ஐம்பெருங் காப்பியங்கள் மணிமேகலை 2 உரையாசிரியன்மார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் (1 - 26 ஆம் காதை வரை) உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை (27 - 30 ஆம் காதை வரை) இளங்கணி பதிப்பகம் சென்னை 600 015. நூற் குறிப்பு நூற்பெயர் : ஐம்பெருங் காப்பியங்கள் - 2 மணிமேகலை உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை பதிப்பாளர் : இ. இனியன் முதற்பதிப்பு : 2009 தாள் : 16 கி. வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 18 + 678 = 696 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 435/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் எண் : 7/2 செம்படத்தெரு, சைதாப்பேட்டை மேற்கு, சென்னை - 600 015. பதிப்புரை மலைகளாலும், ஆறுகளாலும் வரும் வளத்தை விட பெரும் கோயில்களால் தோன்றும் மாண்பைவிட, புலவர் பெருமக்களால் இயற்றப்பட்ட காப்பியங்களால் ஏற்படுகின்ற புகழ் ஒரு இனத்துக்குப் பீடும், பெருமையும் தருவனவாகும். பெருங்காப்பியச் செல்வங்களாக தமிழர் போற்றிக் காப்பவை சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி இவை தமிழருக்குக் கிடைத்த அரும்பெரும் கருவூலங்கள். சிலப்பதிகாரத்தில் சமணக் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தாலும் இது முற்றிலும் தமிழ் தேசியக் காப்பியம். சிந்தாமணியும், வளையாபதியும் சமணக் காப்பியங்கள். மணிமேகலையும், குண்டலகேசியும் புத்த சமயக் காப்பியங்கள். தமிழர் தம் வாழ்வு வளம்பெற அணிகலன்களாக அமைந்தவை. இச்செந்தமிழ்க் காப்பியங்கள். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு நெறிகளும் செவ்வனே அமையப்பெற்றதும், இயற்கை வருணனை, நாடு நகர வருணனை, வேந்தன் முடிசூட்டும் நிகழ்வு, போர்மேற் செல்லுதல், வெற்றி பெற்று விழா எடுத்தல் என்பனவற்றோடு, இன்னும் பல நிகழ்வுகளும் அமையப் பெற்றதே பெருங்காப்பியம் என்பர் தமிழ்ச் சான்றோர். தமிழகம் அன்றும் இன்றும் வேற்றினத்தார் நுழைவால் தாக்குண்டு, அதிர்வுண்டு, நிலைகுலைந்து, தடம் மாறித் தடுமாறும் நிலையில் உள்ளது. தம் பண்பாட்டுச் செழுமையை, நாகரிக மேன்மையை, கலையின் பெருமையை இசையின் தொன்iமயை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் கற்றுணர்ந்து தமிழர் தம் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இவ் வருந்தமிழ்ச் செம்மொழிச் செல்வங் களை மீள்பதிப்பாக வெளியிடுகிறோம். இச் செம்மொழிச் செல்வங்களுக்குச் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர். இரா. இளங்குமரனார் செவிநுகர் கனிகள் என்னும் தலைப்பில் மிகச்சிறந்த ஆய்வுரையும், பதிப்பு வரலாறும் தந்து எம் தமிழ்ப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்துள்ளார். இப்பெருமகனாருக்கு எம் நன்றி என்றும் உண்டு. தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு. அருணாசலம், தி.வை சதாசிவப் பண்டாரத்தார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் இக்காப்பியங்கள் குறித்துக் கூறியுள்ள கருத்துக்களை இந்நூலுள் பதிவாகத் தந்துள்ளோம். அலங்காரங்களும், ஆடம்பரங்களும், படாடோப வாழ்வும் தமிழ் மண்ணில் தலை ஓங்கி ஆட்டம்போடும் காலமிது. விலை வரம்பில்லா இவ் வருந்தமிழ் கருவூலங் களையெல்லாம் தொகுத்துப் பொருள் மணிக்குவியல்களாகத் தமிழர் தம் கைகளுக்குத் தந்துள்ளோம். எம் தமிழ்ப்பணிக்குக் துணைநிற்க வேண்டுகிறோம். - பதிப்பாளர் மணிமேகலை தமிழ்ப் பெரும் புலவர் தண்டமிழ் ஆசான் சாத்தனார் எனும் பெரியோனால் புத்த சமயக் கருத்துகளை நிறுவுவான் வேண்டி எழுதப்பட்ட காப்பியம். இதன் காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு இறுதியில் எழுதப்பட்டது. மணிமேகலை என்னும் அறத்தமிழ்ச் செல்வியைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு எழுதப்பட்ட புரட்சிக் காப்பியம். பசிப்பிணி அறத்தை மையமாகக் கொண்டு (உணவு,உடை, உறைவிடம்) எழுதப்பட்ட வண்தமிழ் நூல். சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக கொண்டு எழுந்த நூல். எப்படிப்பட்டவரையும் திருத்த முடியும் எனும் தன்னம்பிக்கை உணர்வை எழுப்புவதை தனிச்சிறப்பாகக் கொண்டு எழுதப்பட்டது. கணிகை ஒருத்தி தெய்வ நிலைக்கு உயர முடியும் என்பதை எடுத்துச் சொல்லும் இனிய தமிழ்க் காப்பியம். ஆதிரை என்னும் நல்லாளின் கற்பின் மாண்பைக் கூறுவான் வேண்டி எழுதப்பட்ட நூல். பெண்ணின் பெருமைக்கு பெருமை சேர்க்கும் பெருங்காப்பியம். செவிநுகர் கனிகள் “காதைகள் சொரியன செவிநுகர் கனிகள்” என்பது கம்பர் வழங்கிய தொடர்! காலமெல்லாம் செவி வாயாக நெஞ்சுகளனாகத் துய்க்கும் செவ்விலக்கியச் செழுங் காப்பியங்கள் ஐந்து! அவற்றுள் முழுமையாக வாய்த்தவை மூன்று; மற்றை இரண்டோ தமிழர் பேணிக் காவாப் பேதைமையால் ஒழிந்தவை! எனினும், உரையாசிரியர்களால் ஒரு சில ஒளிமணிகள் எய்தப் பெற்றவை. சிலப்பதிகாரம் உருவாகிய மண் சேரலம்! கண்ணகி கோயில் கொண்ட மண் சேரலம்! சிலப்பதிகாரம் இல்லையேல் சேரல மண்ணை இழந்தமைபோல் செங்குட்டுவன் ஆட்சியோ கண்ணகி கோட்டம் உருவாகிய மாட்சியோ உருத் தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கும். நெஞ்சையள்ளும் சிலம்பு நமக்கு வாய்த்தமையால் முத்தமிழ்க் காவியமாம் மூத்த தமிழ்க் காவியம் பெற்றோம்! அதனைத் தொடுத்த கதையாம் மேகலை என்னும் காவியமும் பெற்றோம்! நெட்ட நெடிய காலத்தின் பின்னர்ச் சீவக சிந்தாமணியாம் காவியம் உற்றோம்! முன்னவை இரண்டும் தமிழ்ண்ணின் கொடைவளமாகத் திகழ, இம் மூன்றாம் காவியம் மொழிபெயர்ப்புக் காவியமாகக் கிட்டியது; மற்றவை இரண்டும் வளையாபதி, குண்டலகேசி என்பவை. அவ்வக் காவிய நிலைகளை அவ்வந் நூல்களில் காண்க. மொழிபெயர்ப்பு என்னும் எண்ணமே தெரியாவகையில் பெருங்காப்பியப் பேறெல்லாம் ஒருங்கமைந்த பெருங்கதை எண்ணத்தக்கது; அரிய கலைக்கருவூலக் காப்பியமாம் அது, காப்பிய வகையில் எண்ணப்படாமல் நின்றது ஏன் எனப் புலப்படவில்லை! காப்பிய வகையுள் வைக்கத்தக்க அருங்கலப் பேழை அஃதாம்! ‘காப்பியம்’ என்பதுதான் என்ன? தண்டியலங்காரம் என்னும் அணிநூல் காப்பிய இலக்கணத்தைக் கைம்மேல் கனியாக வழங்குகிறது. அவ்விலக்கணத்தைக் கற்போர் சிலம்பு முதலாம் காப்பியங் களை முழுதுற ஆய்ந்து அமைந்த கட்டளை அஃது என்பதை அறிவர்: பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றின்ஒன் றேற் புடைத் தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிக ரில்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம்என் றினையன புனைந்து நன்மணம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனர்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியில் புலத்தல் கலவியில் களித்தலென்று இன்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரம் தூது செலவு இகல் வென்றி சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையின் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப” என்றும் “ கூறிய உறுப்பில் சிலகுறைந் தியலினும் வேறுபா டின்றென விளம்பினர் புலவர்” என்றும் பெருங்காப்பிய இலக்கணம் பேசுகிறது தண்டியலங்காரம் (8,9) அது காப்பிய இலக்கணம் என, “ அற முதல் நான்கினும் குறைபா டுடையது காப்பியம் என்று கருதப் படுமே” என்றும், அவைதாம், “ ஒருதிறப் பாட்டினும் பலதிறப் பாட்டினும் உரையும் பாடையும் விரவியும் வருமே” என்றும் கூறுகின்றது. (10,11) ஐம் பெருங்காப்பியங்கள் என எண்ணப்பட்டமை போல, ஐஞ்சிறு காப்பியங்கள் என எண்ணப்பட்டனவும் உள. “அறம் பொருள், இன்பம்” என்னும் முப்பொருள் முறையும், அகம் புறம் என்னும் இரு பொருள் முறையும் அகன்று, “அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே” எனவும், “அறம் பொருள் இன்பம் வீடும் பயக்கும் எனவும் அயல்நெறி பற்றிக் கொண்ட வகையால், “அறமுதல் நான்கு உடையது” எனவும், “அறமுதல் நான்கினும் குறைபாடுடையது” எனவும் சுட்டப்பட்டன. முதற்காப்பியமாம் சிலம்பு, முத்தமிழ்க் காவியமாய், வரிப்பாடல் வைப்பகமாய் அமைந்தமை இளங்கோவடிகள்தெரிமாண் தமிழ்க் கலைவளம் காட்டுவதாம்! சாத்தனார் நூலோ, கதையால் தழுவப் பட்டதெனினும் காப்பியப் போக் காலும் யாப்பியல் வளத்தாலும் சிலம்பை நெருங்க முடியவில்லை! சமயச் செறிவும் தருக்கமும் அடிகளார் சால்புப் பார்வையோடு சாராமல் ஒருசார் ஒதுங்கி நிற்கிறது! சிந்தாமணி கலைமலி காப்பியமாகக் கமழ்ந்தாலும் வரிப்பாடல்களோ அவர் காலத்துக் கிளர்ந்து விட்ட வாரப்பாடல்களோ இல்லாமல் நடையிடவே செய்கின்றது! வளையாபதி வரிப்பாடல்களைக் கொண்டமையும் நடைநயம் மல்கி நின்றமையும் கிடைத்த பாடல்களாலும், “வாக்குத் தடையுற்ற ஒட்டக்கூத்தர் வளையாபதியாரை நினைந்தார்” என்னும் உரைக் குறிப்பாலும் புலப்படுகின்றது. குண்டலகேசியின் கதையோ நீலகேசி உரைவழியே அறியக் கிடந்ததாம். அக்கதை நாடகமாய், திரைப்படமாய், அகவலாய், புதுக் காப்பியமாய்ப் பின்னே வடிவெடுக்கத் தூண்டியது. அதன் கதைத்தலைவன் தானே தேடிக்கொணட் தீச்சொல்லின் தீயவிளைவாலேயே யாம்! அதனால், “சொற்பகை காட்டும் கேசி காதை” எனப்படுதலாயிற்று. ஐம்பெருங்காப்பியங்களுள் சிலம்பு பெற்றது அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையுமாம்! முற்றாக வாய்க்க வில்லை எனினும் வாய்த்த அளவில் அவ்வுரைகள் முடிமேல் கொள்ளத் தக்க கலைவளமும் நயமும் உடையவையாம்! சிந்தhமணி பெற்றபேறு நச்சினார்க்கினியர் உரைபெற்ற பெருமையதாம்! மணிமேகலையோ மூலத்தளவே முற்றக்கிடைத்த அமைவினது. உரையாசிரியர் திருக்கண் பார்வை ஏனோ படவில்லை! அதற்குக் குறிப்புரை - கதைச் சுருக்கம் ஆகியவை வரைந்தமை தென்கலைச் செல்வர் உ.வே.சாமிநாதையரையே சாரும். அன்றியும் இம்முப்பெருங் காப்பிய முதற்பதிப்புகளையும் அரும்பாடுபட்டுத் தமிழ உலகக் கொடையாக வழங்கிய பெருமையும் அவரையே சாரும்! முதலிரு பெருங்காப்பியங்களுக்கும் பழைய உரை, குறிப்புரை ஆயவற்றைத் தழுவிய நல்லுரை வழங்கிய பெருமையர் நாவலர் ந.மு.வே. அவர்களும் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்களுமே ஆவர். வளையாபதி, குண்டலகேசிப் பாடல்களைத் தொகுத்து அடைவு செய்து குறிப்புரை வழங்கிய பெருமையர் பேரறிஞர்கள் இரா.இராகவ ஐயங்கார், மு.இராகவ ஐயங்கார், மயிலை சீனி வேங்கடசாமியார் ஆவர்! ஐம்பெருங்காப்பியம் என்பதன் அடையாளம் காட்டுவது போல வளையாபதியும் குண்டலகேசியும் குறிப்புரையோடும் பொழிப்புரையோடும் வெளிவந்துள்ளன. கடலாக விரிந்து கிடக்கும் காப்பியங்களோடு, மணற்கேணி ஊற்றுப்போலவேனும் இணைத்துப் பார்க்க உதவுகின்றன பின்னிருகாப்பியங்கள். இவற்றைப் பற்றிய தனித் தனித் தகவுகளை ஆங்காங்குக் கண்டு மகிழ்க! ஐம்பெருங் காப்பியத் தொகுதிகள் இவை எனவும் எங்கள் முந்தையர் தந்த வளம் இவை எனவும் உவப்போடு தமிழ் உலகம் கொள்ள ஒருங்கே தருபவர் குவை குவையாய்த் தமிழ்க்கொடை தொடர்ந்து வழங்கிவரும் தமிழ்ப் போராளி கோ.இளவழகனார் ஆவர்! எல்லார்க்கும் ஒவ்வோர் இயற்கை! ஒவ்வோர் திறம்! அவற்றைத்தாம் பிறந்த மண்ணுக்கும் பேசும் மொழிக்கும் குiறவற வழங்கும் கொடையாளர் புகழ், அக்கொiடயோடு என்றும் குன்றாமணம் பரப்பும்! வாழிய நிலனே! வாழிய நிலனே! இரா.இளங்குமரன் மணிமேகலை - பதிப்பு வரலாறு மணிமேகலை மூலம் - 1891 மணிமேகலையின் மூலம் 1891 ஆம் ஆண்டில் திருமயிலை சண்முகம் பிள்ளையால் அச்சிடப் பெற்றது என்னும் செய்தியை டாக்டர் சாமிநாதையர் எழுதிய குறிப்புகளால் அறிய முடிகின்றது (என் சரிதம் பக். 1018) அதனைப் பதிப்பிக்கும் காலத்திலேயே அதைப் பற்றி நன்கறிந்த தி.த. கனகசுந்தரம் பிள்ளை 29.3.1891-இல் ஒரு கடிதம் எழுதியுள்ளார். மணிமேகலையில் அச்சிடப் பெற்ற மூன்று படிவங்களைப் பார்த்த பின்னர் அக் கடிதத்தை வரைந்துள்ளார். பின்னர் மணிமேகலைப் பதிப்பை ஐயர் எடுத்துக் கொண்டபோது (1898) “அப்பதிப்பு வெளிவந்து ஏழு வருஷங் களாயினமையின் நான் செய்த ஆராய்ச்சியின் பயனாகப் பலவகைக் குறிப்புகளுடன் மணிமேகலையை வெளியிடுவதில் பிழையில்லை என்று கருதினேன்” என்று குறிப்பிடுகிறார். ஆதலால் 1891-இல் சண்முகம் பிள்ளை மணிமேகலையைப் பதிப்பித்தார் என்பது விளங்குகின்றது. ஆனால் அப்பதிப்பு நூலைக் காண்டற்கு இயலவில்லை. 1894ஆம் ஆண்டில் வெளிவந்த நூலை அறிய முடிகின்றது. அதனை மேலே காண்போம். மணிமேகலை - மூலம் - 1894 கையில் கிடைத்துள்ள அளவில் மணிமேகலையின் முதற்பதிப்பு இதுவேயாகும். புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் மாணவர் திருமயிலை சண்முகம் பிள்ளை தமக்குக் கிடைத்த சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து அச்சு அணியம் செய்தார். கயப்பாக்கம் இரத்தின செட்டியார் மைந்தர் முருகேச செட்டியார் சென்னை ‘ரிப்பன்’ அச்சுக் கூடத்தில் பதிப்பித்தார். வெளியிடப்பெற்ற காலம் ‘விஜயஸ்ரீ தனுர் ரவி’ எனக் குறிப்பிடப் பெற்றுள்ளது. சண்முகம் பிள்ளையின் 1891 ஆம் ஆண்டு மணிமேகலைப் பதிப்பையே முருகேச செட்டியார் பதிப்பாசிரியராக இருந்து மீண்டும் பதிப்பித்திருக்கக் கூடும். இந்நூலின் முற்குறிப்பில் விலை 12 அணா என்றுள்ளது. பிற்குறிப்பில் விலை ரூ.க. என்றுள்ளது. சண்முகனார், மணிமேகலை ஏடுகள் சிலவற்றைக் கொண்டு ஆராய்ந்து மூலத்தை ஒழுங்கு செய்து கொண்டார். பதிகத்திலும். மணிமேகலை முப்பது காதைகளிலுமாகப் பாட வேறுபாடுகள் 21 காட்டியுள்ளார். பின்னேயும் சில சுவடிகள் கிடைத்தன. அச்சுவடிகளால் மேலும் சில திருத்தங்களும் பாட வேறுபாடுகளும் கிடைத்தன. அவ்வகையால் கிடைத்த பாட வேறுபாடுகள் 51 ஆகும். ஆக மொத்தம் 72 பாட வேறுபாடுகள் இவர் பதிப்பில் காட்டப் பெற்றுள்ளன. ஆனால் டாக்டர் சாமிநாதையர் பதிப்பில் 1357 பாட வேறுபாடுகள் காட்டப் பெற்றுள்ளன. இவற்றால் அவர் எடுத்துக் கொண்ட முயற்சியும், சுவடிப் பெருக்கமும் இனிதின் விளங்கும். மணிமேகலை - அரும்பதவுரையுடன் - 1898 இது டாக்டர் சாமிநாதையர் பதிப்பாகும். நான்கு ஆண்டுகளின் முன்னே திருமயிலை சண்முகம் பிள்ளையின் மணிமேகலை மூலப்பதிப்பு வந்ததைச் சாமிநாதையர் அறிவார். அதனை ஆராய்ந்து பார்த்தார். அதில் திருத்தம் பெறவேண்டிய பகுதிகள் மிகுதியாக இருப்பதை உணர்ந்தார். அவர் தொகுத்து வைத்திருந்த சுவடிகள் அவர் செய்ய வேண்டிய திருத்தங்களை எடுத்துரைத்தன. அன்றியும் அறிஞர்கள் சிலரும் மணிமேகலைப் பதிப்பு, உரையுடன் வெளிவருதலை மிக விரும்பி வலியுறுத்தினர். குறிப்பாக யாழ்ப்பாணம் தி.த.கனகசுந்தரம் பிள்ளை “ஏட்டுப் பிரதியில் இருக்கின்றபடியே இருக்கின்றது. ஏட்டுப் பிரதியில் இருப்பது இதிலும் நலமென்று சொல்லலாம். ஏட்டில் சொக்கலிங்கம் என்றிருப்பதை ஒருவர் முழுவதும் கலிங்கமென்று பொருள் பண்ணி வாசித்தபோதிலும், மற்றொருவராவது சந்தர்ப்பம் நோக்கிச் சொக்கலிங்கமென்று வாசிப்பார். இவர்கள் அதனைச் சேரக் கலிங்கமென்று அச்சிலிட்ட தன் பின் ஏட்டைக் காணாதவர்களெல்லாம் சேரக் கலிங்கமென்றுதானே படிக்க வேண்டும்? ‘எட்டி குமரன் இருந்தோன் தன்னை’ என்பது ‘எட்டிரு மானிருந்தோன்’ என்றும், ‘ஆறறியந்தணர்‘ என்பது ஆற்றிஅந்தணர் என்றும் அச்சிடப்படுமாயின் அதனால் விளையும் பயன் யாதென்பதைத் தாங்களே அறிந்துகொள்ளவும் (29.3.1891) என்று எழுதியிருந்தார். தம் வேட்கையும் அன்பர்கள் தூண்டுதலும் மணிமேகலைப் பதிப்பை விரைவு படுத்தின. தமிழ் நூல்களில் பௌத்த சமயம் தொடர்பாக வரும் பகுதிகளைத் தேடித் தொகுத்தார். நீலகேசி உரையில் பௌத்த சமயக் கண்டனமாக வரும் இடங்களில் அமைந்த புத்தர் வரலாற்றையும், புத்த சமயக் கொள்கைகளையும் ஆய்ந்து எழுதிக் கொண்டார். வீரசோழியத்தில் புத்ததேவனைப் பற்றி வரும் வாழ்த்துப் பாடல்களை எழுதி ஆய்ந்தார். சிவஞான சித்தியார் -பரபக்கம், ஞானப் பிரகாசர் உரை இவற்றில் வரும் பௌத்த சமயக் கருத்துக்களை இராவ்பகதூர் மளுர் அரங்காசாரியார் வழியாக அறிந்தார். வடமொழித் தொடர்களில் எழுந்த ஐயங்களை, பெருகவாழ்ந்தான் அரங்காசாரியராலும், திருமலை ஈச்சம்பாடி சதாவதானம் சீனிவாசாசாரியராலும் அகற்றிக் கொண்டார். மணிமேகலை இலங்கைக்குச் சென்றது பற்றிய செய்தியைக் கொழும்பு பொ.குமாரசாமி முதலியார் வழியே ஆங்கிருந்த பௌத்த சமய ஆசிரியர் சுமங்களர் என்பவரால் தெளிவு செய்து கொண்டார். இவ்வாறு பல்வேறு அறிஞர்களின் அருந்துணையாலும், தம் அயராமுயற்சியாலும் மணிமேகலை நூல் நுட்பம் கண்டார். அரும்பதவுரை எழுதி அதனுடன் பதிப்பிக்கத் தொடங்கினார். இப்பதிப்பின் செலவை பொ.பாண்டித்துரைத் தேவர் ஏற்றுக்கொண்டார். உடனிருந்து ஆராய்வார்க்குச் சிறுவயல் குறுநிலமன்னர் முத்துராமலிங்கத் தேவர் மாத ஊதியம் வழங்கினார். கொழும்பு பொ.குமாரசாமி முதலியார் அவ்வப்போது தக்க உதவி புரிந்தார். இதன் முதற்பதிப்பு 1898-ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 1921-ஆம் ஆண்டிலும் வெளியிடப் பெற்றன. இப்பதிப்பு களுக்கு 12 சுவடிகள் ஆராய்வுக்குக் கிடைத்தன. திருவாவடுதுறை ஆதீனத்துச் சுவடி 1 எட்டையபுரம் பெரிய அரண்மனை சுவடி 1 மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயர் சுவடி 1 திருநெல்வேலி திருவம்பலத் தின்னமுதம் பிள்ளை சுவடி 1 சேலம் இராமசாமி முதலியார் சுவடி 1 நல்லூர் சிற்.கைலாசபிள்ளை சுவடி 1 ஆறுமுகமங்கலம் சுந்தரமூர்த்திப் பிள்ளை சுவடி 1 திருமயிலை சண்முகம் பிள்ளை சுவடி 1 சென்னை தி.முத்துக்குமாரசாமி முதலியார் சுவடி 1 சென்னை அரசாங்கக் கையெழுத்துப் புத்தக சாலை சுவடி 1 மதுரைத் தமிழ்ச் சங்கப் பாண்டியன் புத்தகசாலை சுவடி 1 சென்னை பார்சுவநாத நயினார் சுவடி 1 வழக்கம் போலவே முதற் பதிப்பினும் பின்வந்த பதிப்பு களில் பலவகைத் திருத்தங்களும், சீரிய அமைப்புகளும் பெற்று வந்தன. ஆராய்ச்சிக்குக் கிடைத்த சுவடிகளில் மிதிலைப்பட்டிச் சுவடியின் சிறப்பு தன்னிகரற்றதாகும். “மிகப் பழமையானதும் பரிசோதனைக்கு இன்றியமையாததாக இருந்ததும் மற்றைப் பிரதிகளில் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் போகிய பாகங்களை யெல்லாம் ஒழுங்குபடச் செய்ததும் கோப்புச் சிதைந்து அழகுகெட்டு மாசுபொதிந்து கிடந்த செந்தமிழ்ச் செல்வியின் மணிமேகலையை அவளணிந்து கொள்ளும் வண்ணம் செப்பஞ் செய்து கொடுத்ததும் மிதிலைப் பட்டிப் பிரதியே” என்று ஐயர் எழுதுவது இதன் சிறப்பை நன்கு உணர்த்துவதாம். இச்சுவடியிலேதான் ‘பதிகம்’ , ‘கதைபொதி பாட்டு’ எனவும், விழாவறை காதை முதலியன ‘விழாவறைந்த பாட்டு’ முதலியன வாகவும் குறிக்கப் பெற்றிருந்தன.இக்குறிப்பால் காதைகளைப் பாட்டு என்று வழங்குவது உண்டு என்பதும், ‘ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனன்’ என்னும் பதிகக் குறிப்பு விளக்கமும் புலப்படும். இன்னும் சில காதைகளின் தலைப்பை விரித்து விளக்குமாப் போலவும் இச்சுவடித் தலைப்புகள் இருந்தன. பளிக்கறை புக்ககாதை என்பது மணிமேகலை உதய குமாரனைக் கண்டு பளிக்கறை புக்க காட்டு என்றும் ‘மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டு என்றும், சக்கர வாளக் கோட்டமுரைத்த காதை என்பது. மணிமேகலா தெய்வம் சக்கரவாளக் கோட்டமுரைத்து அவளை மணிபல்லவத்துக் கொண்டுபோன பாட்டு என்றும் இவ்வாறே பிறவும் விளக்கம் பெற வந்துள்ளன. பாகனேரி தனவைசிய இளைஞர் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளிவந்தது மணிமேகலை. முழுதுறும் உரைப்பதிப்பு. உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள். வெளியிட்டவர் வெ.பெரி.பழ.மு.காசிவிசுவநாதன் செட்டியார். விற்பனை உரிமை திருநெல்வேலித் தென்னிந்ததிய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பெற்றிருந்தது. கழக அப்பர் அச்சகத்திலேயே பாகனேரித் தமிழ்ச் சங்க வெளியீடுகளாகிய அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, கலித்தொகை என்னும் பழந்தமிழ் நூல்கள் அச்சீட்டுப் பொறுப்பும், விற்பனை உரிமையும் கழகமே கொண்டிருந்தது. விசுவநாதர் கழகத் தலைவராகவும் நெடுங் காலம் இருந்தார் என்பதும் எண்ணத் தக்கதாம். நாவலர் ந.மு.வே. அவர்கள் தம் உடல்நலம் குன்றிய நிலையில் மணிமேகலைக்கு உரை எழுதினார். அறிவறிந்த தம் அருமை மகளார் சிவ.பார்வதியம்மையார் தக்காங்கு உதவினார். எனினும் மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகளுக்கே உரையெழுதி முடிக்கப்பட்ட நிலையில் புகழ்வாழ்வு பெற்றார். ஆதலால் சிலப்பதிகாரத்திற்கு எழுதிய முன்னுரை ஆய்வுரை அருஞ்சொல் அடைவு என்பவை இடம் பெற்றில. எழுதாமல் நின்றிருந்த சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை (27) கச்சி மாநகர் புக்க காதை (28) தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை (29) பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை (30) என்னும் நான்கு காதைகளுக்கும் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள் விரிவான உரையெழுதி நூலை நிறைவு செய்தார்கள். இதுகால் பெருமக்கள் அறிவாக்கம் நாட்டுடைமைப் பொருளாக்கப்படுதல் என்னும் நன்னோக்கால், பொதுமை பூத்துப் பொலியும் வளமாக வெளிப்படுகிறது. அவ்வெளிப் பாட்டைச் செய்பவர், தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திருமலி கோ.இளவழகனார். தமிழ்மண், தமிழ்மொழி, தமிழ் இனம் என்னும் முக்காவல் கடனும் முறையாக ஆக்குவதே நோக்காகக் கொண்டவர் இப்பெருமகனார்! நாவலர் தம் முழுதுறு படைப்புகளையும் தமிழுலகம் கூட்டுண்ண வழங்கும் இத்தோன்றல், தொண்டு வழிவழிச் சிறப்பதாக! இன்ப அன்புடன் இரா. இளங்குமரன் திருவள்ளுவர் தவச் சாலை திருவளர்குடி (அஞ்சல்) அல்லூர், திருச்சிராப்பள்ளி - 620101 தொ.பே. : 0431 2685328 நுழையுமுன் கதை : மணிமேகலை கோவலனுக்கு மாதவியிடம் பிறந்த மகள். பௌத்த மதத்தில் பற்றுக் கொண்ட தன்னைக் காதலிக்கும் சோழ இளங்குமரன் உதயணன் காதலையும் காதல் வழிச் செல்லும் நெஞ்சினையும் மேற்கொள்ளாமல் தவ ஒழுக்கம் பூண்டு அமுத சுரபி கொண்டு சிறைச்சாலையை அறச்சாலையாக்கிச் சமய உண்மைகளை அறிந்து பௌத்தத் துறவியாகின்றாள். பௌத்த புராணக் கதைகள் நிரம்பிய காப்பியம் இது. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளின் தொடரே இக்காப்பியம் எனலாம். பொதுமக்கள் குலத்தில் தோன்றிய பெண் உலகினை உய்விக்கும் துறவியாய் உயர்வதனை இங்கே காண்கிறோம். சாதியை இகழ்தல், பௌத்த அறம் பேசுதல் பிறர் மத இகழ்ச்சி முதலியன இங்கே பொலியக் காண்கிறோம். இதனுள் நாளந்தாப் பல்கலைக் கழகத் தலைவர்களான திந்நாகரும் தருமுபாலரும் கண்ட தருக்க நெறியின் மொழிபெயர்ப்பாக வரும் பகுதிகளும் உண்டு. இவை இடைச்செருகல்கள் போலும். மணிமேகலை என்பது பௌத்தக் காப்பியமானாலும் சமண மதத்தினைப் பற்றி அறியவும் உதவுகின்றது. சிலப்பதிகாரப் பெருங்காப்பியத்தில் கூற வேண்டிய வீட்டு நிலையைக் கூறாததால் அதனைக் கூறும் மணிமேகலை சிலப்பதிகாரத்தோடு ஒன்றாக இயைந்து ஒரு காப்பியமாம் என்பர். சிலப்பதிகாரம் நடுக்கின்றி நிலைநின்ற காவிரிப் பூம்பட்டினத்தினைப் பாட மணிமேகலையோ புகாரின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதைப் பாடுகிறது. எனவே, மணிமேகலை பிந்திய நூலென்று சிலர் கொள்கை. மதம் : அது ஒரு பௌத்த காப்பியம், பிற சமயங்களை இகழும் நோக்கமும் கொண்டது. சமணர்களைப் பற்றிக் கூறுமிடங்களும் இக் காப்பியத்தில் உண்டு. நல்வாழ்வு வாழாத சுதமதி காரணமாகக் குடர் இழந்த அவள் தந்தையைச் சமணர் தம் பள்ளியில் சேர்க்க மறுத்ததைக் கூறிப் பௌத்தர்கள் தம் புத்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டதனைக் கூறுவது சமணர்களைப் பழிப்பதானாலும் கூடா ஒழுக்கத்தினரோடு எந்த வகையிலும் தொடாபு கொள்ளாத சமணரது உயர்வையும் குறிப்பாகத் தம்மையும் அறியாமல் மணிமேகலை ஆசிரியர் புகழுகிறார் எனலாம். சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை, அந்நாளில் தமிழ் நாட்டில் வழங்கிய சமயக்கொள்கைகளைக் கூறி வரும் பொழுது, நிகண்ட வாதமெனச் சமண மதக் கொள்கை களையும் கூறுகின்றது. - “தமிழ் இலக்கிய வரலாறு” தெ.பொ.மீ.காவ்யா வெளியீடு. பொருளடக்கம் பதிப்புரை iii செவிநுகர் v மணிமேகலை - பதிப்பு வரலாறு ஒi நுழையுமுன் ஒiஎ மணிமேகலை பதிகம் 1 1. விழாவறை காதை 13 2. ஊரலருரைத்த காதை 23 3 மலர்வனம் புக்க காதை 33 4. பளிக்கறை புக்க காதை 55 5. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை 71 6. சக்கரவாளக்கோட்ட முரைத்த காதை 89 7. துயிலெழுப்பிய காதை 113 8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை 129 9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை 135 10. மந்திரங் கொடுத்த காதை 144 11. பாத்திரம் பெற்ற காதை 157 12. அறவணர்த் தொழுத காதை 175 13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை 189 14. பாத்திரமரபு கூறிய காதை 203 15. பாத்திரங்கொண்டு பிச்சை புக்க காதை 216 16. ஆதிரை பிச்சையிட்ட காதை 228 17. உலகவறவி புக்க காதை 243 18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை 257 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை 278 20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை 299 21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை 314 22. சிறைசெய் காதை 337 23. சிறைவிடு காதை 361 24. ஆபுத்திரனாடு அடைந்த காதை 379 25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை 399 26. வஞ்சிமாநகர் புக்க காதை 426 27. சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதை 439 28. கச்சிமாநகர் புக்க காதை 494 29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை 527 30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை 610 அருஞ்சொல் பொருள் அகரவரிசை 657 மணிமேகலை உ கடவுள் துணை மணிமேகலை பதிகம் (கதை பொதி பாட்டு) (சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அப் பெயரும், சம்பாபதி யென்னும் பெயரும் உண்டானமை புனைந்துரை வகையாற் கூறப்படுகின்றது. ஆதிப்பிரம சிருட்டியிலேயே அப்பதி சம்பாபதி என்னும் பெயருடன் படைக்கப்பட்டதென்பது அதன் எல்லையற்ற பழமையையும் நாவலந் தீவிற்கே அது முதன்மையான பதி என்பதையும் காட்டுவதாகும். காவிரியானது ‘கோடாச் செங்கோற் சோழர்தம் குலக்கொடி,' என்றும், ‘கோள்நிலை திரிந்து கோடை நீடினும், தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை,' என்றும் அருமை பாராட்டிப் புகழப்படுகின்றது. சம்பாபதி யென்னும் தெய்வத்தானும், காவிரியானும் இருபெயரினைப் பெற்ற அம்மூதூரின்கண் இந்திரவிழா அறைந்தது முதலாகக் காஞ்சி நகரின்கண் பவத்திறம் அறுகெனப்பாவை நோற்றது இறுதியாக உள்ள வரலாற்றினை இளங்கோவடிகள் கேட்டருள, கூலவாணிகன் சாத்தன் என்னும் நல்லிசைப்புலவன் மணிமேகலை துறவு என்னும் காப்பியத்தின் முப்பது பாட்டினுள் யாவருமறிய இயற்றியருளினன்.) இளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து விளங்கொளி மேனி விரிசடை யாட்டி பொன்றிகழ் நெடுவரை உச்சித் தோன்றித் தென்றிசைப் பெயர்ந்தவித் தீவத் தெய்வதம் 5 சாகைச் சம்பு தன்கீழ் நின்று மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு வெந்திற லரக்கர்க்கு வெம்பகை நோற்ற சம்பு வென்பாள் சம்பா பதியினள் செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் 10 கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் றனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை செங்குணக் கொழுகியச் சம்பா பதியயல் பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித் தோன்ற 15 ஆங்கினி திருந்த அருந்தவ முதியோள் ஓங்குநீர்ப் பாவையை உவந்தெதிர் கொண்டாங்கு ஆணு விசும்பின் ஆகாய கங்கை வேணவாத் தீர்த்த விளக்கே வாவெனப் பின்னிலை முனியாப் பெருந்தவன் கேட்டீங்கு 20 அன்னை கேளிவ் வருந்தவ முதியோள் நின்னால் வணங்குந் தகைமையள் வணங்கெனப் பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் 25 தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை தொழுதனள் நிற்பஅத் தொன்மூ தாட்டி கழுமிய உவகையிற் கவாற்கொண் டிருந்து தெய்வக் கருவுந் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள் 30 என்பெயர்ப் படுத்தஇவ் விரும்பெயர் மூதூர் நின்பெயர்ப் படுத்தேன் நீவா ழியவென இருபாற் பெயரிய உருகெழு மூதூர் ஒருநூறு வேள்வி உரவோன் றனக்குப் பெருவிழா அறைந்ததும் பெருகிய தலரெனச் 35 சிதைந்த நெஞ்சிற் சித்திரா பதிதான் வயந்த மாலையான் மாதவிக் குரைத்ததும் மணிமே கலைதான் மாமலர் கொய்ய அணிமலர்ப் பூம்பொழில் அகவயிற் சென்றதும் ஆங்கப் பூம்பொழில் அரசிளங் குமரனைப் 40 பாங்கிற் கண்டவள் பளிக்கறை புக்கதும் பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன் துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின் மணிமே கலாதெய்வம் வந்துதோன் றியதும் மணிமே கலையைமணி பல்லவத் துய்த்ததும் 45 உவவன மருங்கினவ் வுரைசால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயிலெடுப் பியதூஉம் ஆங்கத் தீவகத் தாயிழை நல்லாள் தான்றுயி லுணர்ந்து தனித்துய ருழந்ததும் உழந்தோ ளாங்கணோர் ஒளிமணிப் பீடிகைப் 50 பழம்பிறப் பெல்லாம் பான்மையி னுணர்ந்ததும் உணர்ந்தோள் முன்னர் உயர்தெய்வந் தோன்றி மனங்கவ லொழிகென மந்திரங் கொடுத்ததும் தீப திலகை செவ்வனந் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் களித்ததும் 55 பாத்திரம் பெற்ற பைந்தொடி தாயரொடு யாப்புறு மாதவத் தறவணர்த் தொழுததும் அறவண வடிகள் ஆபுத் திரன்றிறம் நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் அங்கைப் பாத்திரம் ஆபுத் திரன்பால் 60 சிந்தா தேவி கொடுத்த வண்ணமும் மற்றப் பாத்திரம் மடக்கொடி யேந்திப் பிச்சைக் கவ்'d2வூர்ப் பெருந்தெரு வடைந்ததும் பிச்சை யேற்ற பெய்வளை கடிஞையிற் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் 65 காரிகை நல்லாள் காயசண் டிகைவயிற்று ஆனைத் தீக்கெடுத் தம்பலம் அடைந்ததும் அம்பலம் அடைந்தனள் ஆயிழை யென்றே கொங்கலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும் அம்பல மடைந்த அரசிளங் குமரன்முன் 70 வஞ்ச விஞ்சையன் மகள்வடி வாகி மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம் அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும் காயசண் டிகையென விஞ்சைக் காஞ்சனன் ஆயிழை தன்னை அகலா தணுகலும் 75 வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் ஐயரி யுண்கண் அவன்றுயர் பொறாஅள் தெய்வக் கிளவியிற் றெளிந்த வண்ணமும் அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச் 80 சிறைசெய் கென்றதுஞ் சிறைவீடு செய்ததும் நறுமலர்க் கோதைக்கு நல்லற முரைத்தாங்கு ஆய்வளை ஆபுத் திரனா டடைந்ததும் ஆங்கவன் றன்னோ டணியிழை போகி ஓங்கிய மணிபல் லவத்திடை யுற்றதும் 85 உற்றவ ளாங்கோர் உயர்தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியிற் பொருந்திய வண்ணமும் நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச் சமயக் கணக்கர் தந்திறங் கேட்டதும் ஆங்கத் தாயரோ டறவணர்த் தேர்ந்து 90 பூங்கொடி கச்சி மாநகர் புக்கதும் புக்கவள் கொண்ட பொய்யுருக் களைந்து மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப் பவத்திற மறுகெனப் பாவை நோற்றதும் 95 இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திறம் மணிமே கலை துறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென். உரை 1-8. இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து-கதிர்களை யுடைய இளஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடைய, விளங்கு ஒளி மேனிவிரிசடையாட்டி-விளங்குகின்ற ஒளி பொருந்திய திருமேனியும் விரிந்த சடையுமுடையாளும், பொன்திகழ் நெடுவரை உச்சித் தோன்றி-விளங்குகின்ற பெரிய பொன்மலையாகிய மேருவின் உச்சியில் தோன்றி, தென்திசைப்பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்- தென்றிசைக் கண் போந்த நாவலந்தீவின் காவற்றெய்வமும், சாகைச் சம்புதன் கீழ்நின்று-கிளைகளையுடைய நாவன் மரத்தின் கீழிருந்து, மாநில மடந்தைக்கு வருந்துயர் கேட்டு-பெருமை பொருந்திய நிலமகட்கு நேரும் துன்பத்தினைக் கேட்டு, வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற-கொடிய வலியினை யுடைய அரக்கர்கட்கு வெவ்விய பகையாக நோற்றவளுமாய, சம்பு என்பாள் சம்பாபதியினள்-சம்பு என்பவள் சம்பாபதி யினிடத்தே இருந்தனள்; எள்ளும்: உவமவுருபுமாம். பகை நோற்ற-பகையாக நோற்ற. சம்பு வென்பாள்: வட சொல்லாகலின் உடம்படுமெய் பெற்றது. சம்பாபதி-காவிரிப்பூம்பட்டினத்தின் வேறு பெயர். சம்பாபதியினள்: முற்று; ஆக என்பது விரித்து எச்சப்படுத்தலுமாம். 9-14. செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும் கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட - சிவந்த கதிர்களையுடைய ஞாயிற்றின் வழித் தோன்றினோராகிய சோழர் மரபினை விளக்குமாறுதித்த காந்தன் எனப் பெயரிய மன்னவன் நாட்டில் நீர்ப் பெருக்கினை விரும்பி வேண்டிக்கொள்ள, அமரமுனிவன் அகத்தியன் தனாது கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை - தேவ இருடியாகிய அகத்திய முனிவன் தனது கமண்டல நீரைக் கவிழ்த்தலாற் போந்த காவிரியாகிய பாவை, செங்குணக்கு ஒழுகி - நேர்கிழக்கே ஓடி, அச்சம்பாபதி அயல் - அந்தச் சம்பாபதியின் மருங்கு, பொங்குநீர்ப் பரப்பொடு பொருந்தித்தோன்ற-விளங்குகின்ற கடலொடு கலந்து தோன்ற; திருக்குலம் - சூரிய குலம். விளக்கும் காந்தமன் என்க. காந்தமன்-காந்தனாகிய மன்னன் ; காந்தன் - சோழருள் ஒருவன்;1 "காந்த மன்னவன்" என்பர் பின்னும். கஞ்சம் - நீர். வேட்கையினையுடைய மன் என்றுமாம். கரகம் - குண்டிகை; 2"நீரற வறியாக் கரகத்து" என்பது காண்க. கவிழ்த்த வென்னும் பெயரெச்சம் காரியப் பெயர் கொண்டது; காவிரி முன்னரே யுள்ளதாயின் இடப்பெயர் கொண்டதாம். செங் குணக்கு: செம்மை - நேர்மை. நீர்ப் பரப்பு - விரிநீர்: கடல். 15-21. ஆங்கு இனிது இருந்த அருந்தவ முதியோள் - ஆண்டு இனிது அமர்ந்திருந்த அரிய தவமுதியோளாகிய சம்பாபதி, ஓங்கு நீர்ப் பாவையை உவந்து எதிர்கொண்டு-பெருகுகின்ற காவிரிப் பாவையை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டு, ஆணு விசும்பின் ஆகாய கங்கை-வானினை இடமாகக் கொண்ட அன்பினையுடைய ஆகாய கங்கையே, வேணவாத் தீர்த்த விளக்கே வா என - வேட்கையானாகிய அவாவினைத் தீர்த்த விளக்கே வருக என அழைப்ப, பின் நிலை முனியாப் பெருந்தவன் கேட்டு - பின் நிற்றலை வெறுத்தலில்லாத அகத்திய மாமுனிவன் அதனைக் கேட்டு, அன்னை கேள்-அன்னாய் கேட்பாயாக, இவ் அருந்தவ முதியோள் நின்னால் வணங்கும் தகைமையள் - இவ்வரிய தவமூதாட்டி நின்னால் வணங்கப்படும் தகுதியுடையவள், வணங்கு என - ஆகலின் இவளை நீ வணங்குவாய் என்று காவிரியை நோக்கிக் கூற; பின்னிற்றல் - தாழ்ந்து நிற்றல்;1 "பிற்றை நிலை முனியாது" என்பதிற் போல. கொண்டாங்கு, கேட்டீங்கு என்பவற்றில் ஆங்கு, ஈங்கு என்பன அசைகள். ஆணு - அன்பு:2 "ஆணுப் பைங்கிளி" என்பதன் உரை காண்க. விசும்பின் என முன் வந்தமையின், ஆகாய கங்கை என்பது பெயர் மாத்திரையாய் நின்றது. கங்கை வானினின்று வந்ததென்ப ஆகலானும், காவிரி நீர் கங்கை நீர் ஆகலானும் ‘ஆகாய கங்கை' என்றார். "பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்" என்புழி,3 "காவிரி நீர் கங்கை நீராதலிற் கங்கைப் புதல்வரைக் காவிரிப் புதல்வர் என்றார்" என அடியார்க்கு நல்லார் கூறியதும், தொல்காப்பியப் பாயிர வுரையில்4 "கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கி" என நச்சினார்க்கினியர் கூறியதும் ஈண்டு அறியற்பாலன. 22-32. பாடல்சால் சிறப்பிற் பரதத்து ஓங்கிய-பாடுதற்கமைந்த சிறப்பினையுடைய பரத கண்டத்தில் உயர்ச்சி மிக்க, கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி - வளையாத செங்கோலினை யுடைய சோழர்களின் குலமகளாகிய, கோள் நிலை திரிந்து கோடை நீடினும்-கோட்களின் நிலை மாறுபட்டு மழை பெய்யாது கழியுங்காலம் நீட்டிப்பினும், தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை - தான் நிலைதிரியாது எஞ்ஞான்றும் வளங் கொடுக்கும் தண்ணளியுடைய தமிழ்ப் பாவையாங் காவிரி, தொழுதனள் நிற்ப-வணங்கி நிற்க, அத் தொன் மூதாட்டி கழுமிய உவகையில் கவான் கொண்டிருந்து-பழைய தவமுதியோளாகிய அச்சம்பாபதி கலந்த பேரு வகையினோடு காவிரிப் பாவையைத் தன் துடைமீ திருத்திக் கொண்டு, தெய்வக் கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள் - தெய்வலோகம் ஆறினுமுள்ள அறுவகைத் தெய்வகண பிண்டங்களையும் பிரமலோகம் இருபதினுமுள்ள இருபது வகைப் பிரமகண பிண்டங் களையும் செந்தாமரை மலரின் மேவிய முதியோனாகிய பிரமன் படைத்த அந்நாளில், என்பெயர்ப் படுத்த இவ்விரும் பெயர் மூதூர் - என் பெயர்ப்படச் செய்த பெரும் புகழை யுடைய இத் தொன்னகரை, நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழிய என - நின் பெயருடையதாக்கினேன் நீ வாழ்வாயாக என்றுரைத்தலான், இருபாற் பெயரிய உருகெழு மூதூர் - சம்பாபதி காவிரிப்பூம்பட்டினம் என்னும் இருவகைப் பெயரினை யுடையதாய்ப் பகைவர்க்கு அச்சத்தை யுண்டாக்கும் தொல்பதியில்; வேற்று வேந்தர் அணுகாமையாற் சோழர்குலக் கொடியாயுள்ளாள் என்க; கவேரன் புதல்வியாதலிற் சோழர் குலக்கொடியென்றா ரெனலுமாம். கவேரன் புதல்வியாதலை,1"தவாநீர்க் காவிரிப் பாவைதன் றாதை, கவேரனாங் கிருந்த கவேர வனமும்" என மேல் உரைத்தலானறிக. தான் நிலை திரியாமை - என்றும் நீர் வற்றாமை. தமிழ்ப் பாவை யென்றது காவிரியை. தொழுதனள்: முற்றெச்சம். தெய்வலோகம் ஆறு எனவும், பிரமலோகம் இருபது எனவும் புத்த நூல்கள் கூறும். செம் மலர் முதியோன் - பெரும் பிரமன். என் பெயர்ப் படுத்த என்றமையால் சம்பாபதி என்பது சம்புத் தீவத் தெய்வத்திற்கும், காவிரிப்பூம்பட்டினத்திற்கும் உரிய பெயர் என்பது பெற்றாம். உரு - உட்கு, அச்சம். சம்பு என்பாள் சம்பாபதியினள்; அப்பொழுது காவிரிப் பாவை செங்குணக் கொழுகிச் சம்பாபதியின் அயலிற்றோன்ற, ஆங்கிருந்த முதியோள் நீர்ப்பாவையை எதிர்கொண்டு 'வா' என, அதனைப் பெருந்தவன் கேட்டு ‘வணங்கு' என, குலக்கொடி தண்டமிழ்ப் பாவை தொழுது நிற்ப, அம் மூதாட்டி அவளைக் கவானிற் கொண்டிருந்து ‘அந்நாளில் என் பெயர்ப்படுத்த இம்மூதூரை நின்பெயர்ப் படுத்தேன், நீ வாழிய,' என்றமையால் இருபாற் பெயரிய மூதூர் என்க. 33-40. ஒரு நூறு வேள்வி உரவோன் தனக்குப் பெரு விழா அறைந்ததும்- ஒப்பற்ற நூறு வேள்விகளைப் புரிந்த வலியோனாகிய இந்திரனுக்குப் பெரிய விழாக் கொள்ளுமாறு பறை அறைந்ததும், பெருகியது அலர் எனச் சிதைந்த நெஞ்சிற் சித்திராபதிதான் - மாதவி தவத்திறம் பூண்டமையின் நகரில் அலர் பெருகியது என்று அழிந்த உள்ளமுடைய சித்திராபதி, வயந்த மாலையால் மாதவிக்கு உரைத்ததும் - தன் மகளின் தோழி யாகிய வயந்தமாலை வாயிலாக மாதவிக்குக் கூறியதும், மணிமேகலைதான் மாமலர்கொய்ய அணி மலர்ப் பூம்பொழில் அகவயின் சென்றதும்-மணிமேகலை மாசற்ற மலர் கொய்யு மாறு அழகிய மலர்களையுடைய பூஞ்சோலையாகிய உவவனத்தின் உள்ளே சென்றதும், ஆங்கு அப் பூம்பொழில் அரசிளங் குமரனை - ஆண்டு அவ்வழகிய சோலையில் இளமைப் பருவமுடைய அரச குமாரனை, பாங்கில் கண்டு அவள் பளிக்கறை புக்கதும் - அண்மையிற் கண்டு மணிமேகலை பளிக்கறையுட் புகுந்ததும்; ஊரில் அலர் பெருகியதென உரைத்ததும் என்க. சித்திராபதி மாதவியின் நற்றாய். வயந்தமாலை - மாதவியின் தோழி; இவள் கூனியென்றும் கூறப்படுவள். மாதவி - மணிமேகலையின் தாய். பூம்பொழில் - உவவனம். அரசிளங்குமரன் - உதயகுமரன். பளிக்கறை - பளிங்காலாகிய அறை. 41-48. பளிக்கறை புக்க பாவையைக் கண்டவன் - பளிங்கறையுட் சென்ற மணிமேகலையைக் கண்ட உதயகுமரன், துளக்குறு நெஞ்சில் துயரொடும் போயபின் - நிலைகலங்கிய உளத்தில் துயருடன் சென்ற பின்னர், மணிமேகலா தெய்வம் வந்து தோன்றியதும் - அங்கு மணிமேகலா தெய்வம் வந்து வெளிப்பட்டதும், மணிமேகலையை மணி பல்லவத்து உய்த்ததும் - அத்தெய்வம் மணிமேலையை மணிபல்லவமென்னுந் தீவிற்கொண்டு சென்றதும், உவவன மருங்கின் அவ்வுரைசால் தெய்வதம் சுதமதி தன்னைத் துயில் எடுப்பியதூஉம் - புகழமைந்த அத்தெய்வம் பின்னர் மணிமேகலையுடன் துணையாக வந்த சுதமதியை உவவனத்தில் துயில் எழுப்பியதும், ஆங்கத் தீவகத்து ஆயிழை நல்லாள்தான்- மணிபல்லவத்தின் கண் மணிமேகலை, துயில் உணர்ந்து தனித்துயர் உழந்ததும்-உறக்கம் நீங்கித் தனியே துன்புற்று வருந்தியதும் ; கண்டு அவன் எனப் பிரித்தலுமாம். மணிமேகலா தெய்வம்-இராக்கதரால் துன்பமுண்டாகாமல் இந்திரன் ஏவலால் சிலதீவுகளைக் காக்குந் தெய்வம் : கோவலனது குல தெய்வம். மணிமேகலை - கோவலனுக்கு நாடகக் கணிகையாகிய மாதவி வயிற்றிற்பிறந்தவள் ; இக்காப்பியத்தின் தலைவி. மணிபல்லவம் - காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கேயுள்ளதொரு சிறு தீவு. உவவனம் - உபவனம். எடுப்பியது - எழுப்பியது;1 "உரவுநீர்ப் பரப்பி னூர்துயி லெடுப்பி" என்பதும் காண்க. தனித்துயர் - ஒப்பற்ற துயருமாம். 49-58. உழந்தோள் ஆங்கண் ஓர் ஒளிமணிப் பீடிகை - அங்ஙனம் வருந்தினவள் அவ்விடத்தில் ஒளிமிக்க மணிகளானாய ஒரு பாத பீடிகையினால், பழம்பிறப்பு எல்லாம் பான்மையின் உணர்ந்ததும்- முற்பிறப்பு நிகழ்ச்சியை யெல்லாம் முறையால் அறிந்ததும், உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனங்கவல் ஒழிகென மந்திரம் கொடுத்ததும்-அங்ஙனம் அறிந்த மணிமேகலை முன் மணிமேகலா தெய்வம் வெளிப்பட்டு மனம் கவலுதல் ஒழிகவென்று கூறி மந்திரம் அருளியதும், தீப திலகை செவ்வனம் தோன்றி மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அளித்ததும் - தீவதிலகை என்பாள் நன்கு வெளிப்பட்டுப் பெருமை பொருந்திய பாத்திரத்தினை மணிமேகலைக்குக் கொடுத்ததும், பாத்திரம்பெற்ற பைந்தொடி தாயரொடு - அப் பாத்திரத்தினைப்பெற்ற மெல்லியல் தன் தாயராகிய மாதவி சுதமதி என்னும் இருவருடனும், யாப்புறு மாதவத்து அறவணர்த் தொழுததும் - கட்டமைந்த பெருந்தவ முடைய அறவணவடிகளை வணங்கியதும், அறவண அடிகள் ஆபுத்திரன் திறம் - அறவண முனிவர் ஆபுத்திரன் வரலாற்றினை, நறுமலர்க் கோதைக்கு நன்கனம் உரைத்ததும் - நறிய மலர்மாலை போலும் நங்கைக்கு நன்கு மொழிந்ததும்; கவல் - கவலுதல் : முதனிலைத் தொழிற் பெயர். ஒழிகென-ஒழிக என: அகரந் தொக்கது. மந்திரம் - வேற்றுரு அடைவிப்பதும், விசும்பிலே திரியச் செய்வதும், பசியைப் போக்குவதுமாகிய மந்திரங்கள். தீப திலகை - தீவுக்குத் திலகம் போன்றவள்; மணிபல்லவத்திலே புத்தன் பாத பீடிகையை இந்திரன் ஏவலாற் காவல் செய்பவள் இவள். மாபெரும் பாத்திரம்-அமுதசுரபி எனப் பெயரிய பிச்சைப் பாத்திரம். தாயர் - மாதவியும் அவள் தோழியாகிய சுதமதியும்; இக்காப்பியத்திற்பிறாண்டும் இவ்விருவரும் மணிமேகலையின் தாயரென வழங்கப்பெறுவர். யாப்பு - கட்டு; உறுதி. அறவணர் - ஒரு புத்த முனிவர். 59-68. அங்கைப் பாத்திரம் ஆபுத்திரன்பால் சிந்தாதேவி கொடுத்த வண்ணமும்-அகங்கையிலிருந்த பிச்சைப் பாத்திரத்தை ஆபுத்திரனிடம் கலைமகள் அளித்தவாறும், மற்று அப்பாத்திரம் மடக்கொடி ஏந்திப் பிச்சைக்கு அவ்'d2வூர்ப் பெருந்தெரு அடைந்ததும் - மணிமேகலை பிக்குணிக் கோலத்துடன் அப்பாத்திரத்தைக் கையிலேந்திப் பிச்சை யேற்றற்கு அந்நகரின் பெருந் தெருவினை யடைந்ததும், பிச்சை ஏற்ற பெய்வளை கடிஞையில் பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஈத்ததும் - பிச்சை ஏற்ற மணிமேகலையின் தெய்வக் கடிஞையிற் கற்பிற் சிறந்த ஆதிரைநல்லாள் பலர்க்கும் பகுத்துண்ணும் உணவினை இட்டதும், காரிகை நல்லாள் காய சண்டிகை வயிற்று ஆனைத்தீக் கெடுத்து அம்பலம் அடைந்ததும்- அழகின் மிக்க மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சை மகளின் வயிற்றிலுள்ள ஆனைத்தீ யென்னும் தீராப் பசி நோயை அழித்து உலகவறவி என்னும் ஊரம்பலத்தை யடைந்ததும், அம்பலம் அடைந்தனள் ஆயிழை என்றே கொங்கு அலர் நறுந்தார்க் கோமகன் சென்றதும்-தேன் பொருந்திய நறிய மலர் மாலை யினையுடைய அரச குமரன் மணிமேகலை உலகவறவியை அடைந்தாள் என்று ஆண்டுச் சென்றதும்; ஆங்கப் பாத்திரம் என்பதும் பாடம். ஆபுத்திரன் - ஓரந்தணன்; தன்னைப் பெற்றவுடன் தாய் நீங்கிவிட, ஏழுநாள் வரையில் ஓர் ஆவினாற் பாலூட்டிப் பாதுகாக்கப் பெற்றமையின் இவன் இப் பெயரெய்தினன். சிந்தாதேவி-கலைமகள்; கற்றோர் சிந்தையில் இருப்பவள் என்பது பொருள். மற்று: அசை. மடக்கொடி-இளங் கொடி போல்பவள். பெய்வளை-இடப்பட்ட வளையினையுடையாள். அவ்'d2வூர் - காவிரிப்பூம்பட்டினம். பத்தினிப் பெண்டிர் - ஆதிரை: ஒருமை. கடிஞை - பிச்சைப் பாத்திரம். பாத்தூண் - பகுத்துண்டற் குரிய உணவு. பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. ஈத்தது: வலித்தல் விகாரம். காயசண்டிகை: ஒரு வித்தியாதர மாது. ஆனைத்தீ - தணியாத பெரும் பசியைச் செய்வதொரு நோய். 69-78. அம்பலம் அடைந்த அரசிளங் குமரன்முன் வஞ்ச விஞ்சையன் மகள் வடிவாகி-அம்பலத்தினை அடைந்த மன்னவன் சிறுவன் முன் மணிமேகலை விஞ்சையன் மனைவி யாகிய காயசண்டிகையினுருவினைக் கொண்டு வஞ்சித்துச் சென்று, மறஞ்செய் வேலோன் வான்சிறைக் கோட்டம் - வென்றிதரும் வேற்படையினையுடைய சோழனது பெரிய சிறைச்சாலையை, அறஞ்செய் கோட்டம் ஆக்கிய வண்ணமும்-அறச்சாலையாக்கிய திறமும், காயசண்டிகை என விஞ்சைக் காஞ்சனன் - விஞ்சையனாகிய காஞ்சனன் மணிமேகலையைக் காயசண்டிகை என நினைந்து, ஆயிழை தன்னை அகலாது அணுகலும் - உதயகுமரன் அவளை நீங்காது அணுகுதலும், வஞ்ச விஞ்சையன் மன்னவன் சிறுவனை மைந்துடை வாளில் தப்பிய வண்ணமும் - வலிபொருந்திய வாளினால் வஞ்சங் கொண்ட அவ் விஞ்சையன் அரசிளம் புதல்வனை வீழ்த்திய வண்ணமும், ஐயரி யுண்கண் அவன் துயர் பொறாஅள் தெய்வக் கிளவியில் தெளிந்த வண்ணமும் - அழகிய அரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய மணிமேகலை முற்பிறப்பிற் கணவனாயிருந்த மன்னிளம் புதல்வன் இறந்த துக்கத்தினைப் பொறுக்க இயலாதவளாய்த் தெய்வத்தின் மொழியால் தேறிய வண்ணமும்; விஞ்சையன் மகள் - விஞ்சையன் மனைவி;1 "நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம், மனக்கினி யாற்குநீ மகளாயதூஉம்" என்றவிடத்து மகன், மகள் என்பன முறையே கணவன், மனைவி என்ற பொருளில் வந்திருத்தல் காண்க. கருத்து நோக்கி வஞ்சித்துச் சென்றஎன்றுரைக்கப்பட்டது. மன்னவன்சிறுவன் ஆயிழையை அகலா தணுகலும் அவனை என்றியைக்க. வஞ்ச விஞ்சையன் : சுட்டு. உண்கண்: ஆகு பெயர். தெய்வம் - கந்திற் பாவை. 79-90. அறைகழல் வேந்தன் ஆயிழை தன்னைச் சிறை செய் கென்றதும் - ஒலிக்கின்ற வீரக்கழலினை யணிந்த மன்னவன் மணிமேகலையைச் சிறைப்படுத்தியதும், சிறைவீடு செய்ததும் - பின் சிறையினின்று விடுவித்ததும், நறுமலர்க் கோதைக்கு நல்லறம் உரைத்து ஆங்கு - இராசமாதேவிக்குப் புத்த தருமங்களை ஆண்டு எடுத்துரைத்து, ஆய்வளை ஆபுத்திரன் நாடு அடைந்ததும்-மணிமேகலை ஆபுத்திரனுடைய நாட்டினை அடைந்ததும், ஆங்கவன் தன்னோடு அணியிழை போகி-சிறுமுதுக்குறைவி ஆபுத்திரனோடு சென்று, ஓங்கிய மணிபல்லவத்திடை உற்றதும்-பெருமையுடைய மணி பல்லவத்தின்கண் சேர்ந்ததும், உற்றவள் ஆங்கோர் உயர் தவன் வடிவாய்ப் பொற்கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும்-மணிபல்லவமடைந்த மணிமேகலை ஆங்கு ஒரு பெரிய தவத்தினன் வடிவத்தோடு அழகிய கொடிகளை யுடைய வஞ்சி நகரத்திற் சேர்ந்தவாறும், நவை அறு நன் பொருள் உரைமினோ எனச் சமயக் கணக்கர் தந்திறம் கேட்டதும்-குற்றமற்ற நல்ல தத்துவங்களைக் கூறுவீர் என வினாவிச் சமய வாதியர் கூறிய திறங்களைக் கேட்டதும், ஆங்கு அத் தாயரோடு அறவணர்த்தேர்ந்து பூங்கொடி கச்சிமாநகர் புக்கதும் - அங்கே மணிமேகலை தன் தாயருடன் அறவணவடிகளைத் தேடிக் காஞ்சிமாநகரத்தைஅடைந்ததும் வேந்தன் - மாவண்கிள்ளி: உதயகுமரன் தந்தை. செய்கென்றது: அகரந் தொக்கது. அரசன் ஏவும் வினைமுதலாகலின் சிறை செய்ததனைச் சிறை செய்கென்றான் என்றார். வீடு-விடுதல்: முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆங்கவன்: ஒரு சொல். வஞ்சி- சேர மன்னர்களின் தலைநகர். நன்பொருள் - தத்துவம்: நன்மையென்பதன் ஈறுகெட்டது- உரைமினோ, ஓ; இசைநிறை. சமயக் கணக்கர்-சமய வாதியர்; 1"சமயக் கணக்கர் மதிவழி கூறாது", "சமயக்கணக்கர் தந்திறங்கடந்து" என்பர் பிற சான்றோரும். திறம்-இயல்பு, கொள்கை. ஆங்கு-வஞ்சிப்பதியில்; வஞ்சியில் தேர்ந்துபின் கச்சி புக்கதுமென்க; தாயரையும் அறவணரையும் தேர்ந்தென்க. "இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்"1 என்னும் விதியால் அறவணர்த் தேர்ந்து என வலி மிக்கது. 91-98. புக்கவள் கொண்ட பொய்யுருக் களைந்து - கச்சியிற் புகுந்த மணிமேகலை தான் கொண்ட பொய் வேடத்தினை நீக்கி, மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் - அவருடைய அடிகளை வணக்கஞ் செய்தவாறும், தவத்திறம் பூண்டு தருமம் கேட்டு பவத்திறம் அறுக எனப் பாவை நோற்றதும் - தவநெறி பூண்டு அறவுரை கேட்டுப் பிறவியொழிக என்று மணிமேகலை தவம் புரிந்ததும் ஆகியவற்றை, இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப - இளங்கோவடிகள் கேட்டருள, வளங்கெழு கூலவாணிகன் சாத்தன் - வளப்பமிக்க கூலவாணி கனாகிய சாத்தன் என்னும் நல்லிசைப் புலவன், மாவண் தமிழ்த்திறம் மனிமேகலை துறவு ஆறைம்பாட்டினுள் அறிய வைத்தனன் என்-பெருமை மிக்க தமிழிலக்கண நெறியால் மணிமேகலை துறவு என்னுந் தொடர்நிலைச் செய்யுளை முப்பது பாட்டினுள்ளே யாவரும் அறியுமாறு செய்து வைத்தனன் என்க. மற்றவர்: மற்று, அசை, அவர் - அறவணர். தருமம் - புத்த தருமம். மற்றவர் பாதம் வணங்கிய வண்ணமும் என்பதனை நெகிழ விடுத்தும், கேட்டு நோற்றதும் என்பதைக் கேட்டதும் நோற்றதும், என இரண்டாகக் கொண்டும் ஈற்றிலுள்ள இரு காதைகளின் பெயரை முன்னர் யாரோ திரித்து அமைத்துள்ளனர். உம்மை கொடுத்து எண்ணியவற்றுள் ஒன்றை விடுத்தலும் ஒன்றைப் பகுத்தலும் கூடாமையானும், இறுதிக் காதையின் ஈற்றிலும் "தவத்திறம்...பாவை நோற்றனளென்" எனக் கேட்டு நோற்றமை ஒன்றாக உரைத்திருத் தலானும் அங்ஙனம் அமைத்தல் பொருந்தா தென்க. இளங்கோ வேந்தன் - இளங்கோவாகிய வேந்தன்; இளங்கோவடிகள்: இவர் சேரன் செங்குட்டுவனுக்குத் தம்பி; துறவு பூண்டவர்; சிலப்பதிகாரம் இயற்றியவர். அருளிக்கேட்ப-அருள்செய்து கேட்ப என்றுமாம். வளங்கெழு கூலமென்க. கூலம்-நெல்லு, புல்லு, வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இராகி என்னும் எண்வகைத் தானியமாம். கூலம் பதினெட்டென்பர் கூத்த நூலார். சாத்தனார் கூலவாணிகன் சாத்தனார் எனவும் சீத்தலைச் சாத்தனார் எனவும் கூறப்படுவர். இக்காப்பியத்திற்கு மணிமேகலை துறவு என்னும் பெயருண்மை இதனாற் பெற்றாம். நோற்றது ஈறாகவுள்ளவற்றை அறிய வைத்தனன் என்க. என்: அசை. பதிகம் முற்றிற்று. 1. விழாவறை காதை பண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் இயல்பினை மேம்படுத்தக் கருதிய அகத்திய முனிவர் ஆணையின்படி தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் இந்திரனை வேண்டி அவன் உடன் பாடு பெற்று இருபத்தெட்டு நாள் அந்நகரிலேயே நிகழ்த்தியதும், அவன் காலத்திற் போலவே பின்பு அவன் வழியினராகிய சோழர்களால் ஆண்டுதோறும் நிகழ்த்தப்பெற்று வந்ததுமாகிய இந்திர விழாவை நடத்தக் கருதிய சமயக் கணக்கர்களும் ஏனோரும் ஒருங்குகூடி, இந்திரவிழாச் செய்தலை மறப்பின், முசுகுந்தன் துயரைப் போக்கிய நாளங்காடிப்பூதம் இடுக்கண் செய்யும்; நரகரைப் புடைத்துண்ணும் சதுக்கப்பூதமும் பொருந்தாதொழியும் ஆதலின் விழாச்செய்வோமாக' எனத் துணிந்து, அதனை முரசறையும் நீ ; முதுகுடிப் பிறந்தோனுக்கு அறிவித்தனர். அவன் வச்சிரக் கோட்டத்திருந்த முரசை யானையின் பிடரிலேற்றி, நகரையும், மழையையும், அரசனையும் வாழ்த்தி, இந்திரவிழாச் செய்யும் நாட்களில் தேவரனைவரும் பொன்னகர் வறிதாகும்படி இங்கெழுந்தருளுவரென்பது அறிஞர் துணிபாகலின், நகரினுள்ளீர்! வீதி முதலியவற்றை நிறைகுடம், பொற்பாலிகை, பாவைவிளக்கு, கமுகு, வாழை, வஞ்சி, கரும்பு, முத்துமாலை, தோரணம், கொடி முதலிய பலவற்றானும் அணிசெய்ம்மின்; சிவபிரான் முதல் சதுக்கப்பூதம் ஈறாகவுள்ள தெய்வங்கட்குச் செய்யும் வழிபாட்டினை அறிந்தோர் செய்ம்மின்; புண்ணிய நல்லுரை அறிவீர்! பந்தரிலும் அம்பலத்திலுஞ்சென்று அறவுரைகூறுமின்; சமய வாதிகளே! பட்டி மண்டபத்தில் ஏறி முறைமையால் வாது செய்ம்மின்; பகைவருடனாயினும் யாவரும் செற்றமும் கலாமும் செய்யாதொழிமின்,' என்று கூறி விழா வறைந்தனன். உலகந் திரியா ஓங்குயர் விழுச்சீர்ப் பலர்புகழ் மூதூர்ப் பண்புமேம் படீஇய ஓங்குயர் மலயத் தருந்தவ னுரைப்பத் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் 5 விண்ணவர் தலைவனை வணங்கிமுன் னின்று மண்ணகத் தென்றன் வான்பதி தன்னுள் மேலோர் விழைய விழாக்கோ ளெடுத்த நாலேழ் நாளினும் நன்கினி துறைகென அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது 10 கவராக் கேள்வியோர் கடவா ராகலின் மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் இத்திறந் தத்தம் இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கருந் தந்துறை போகிய அமயக் கணக்கரும் அகலா ராகிக் 15 காரந்துரு வெய்திய கடவு ளாளரும் பரந்தொருங் கீண்டிய பாடை மாக்களும் ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள் கொடித்தேர்த் தானைக் கொற்றவன் துயரம் 20 விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின் மடித்த செவ்வாய் வல்லெயி றிலங்க இடிக்குரல் முழக்கத் திடும்பை செய்திடும் தொடுத்தபா சத்துத் தொல்பதி நரகரைப் புடைத்துணும் பூதமும் பொருந்தா தாயிடும் 25 மாயிரு ஞாலத் தரசுதலை யீண்டும் ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்கென வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை யேற்றி ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கின் 30 கூற்றுக்கண் விளிக்குங் குருதி வேட்கை முரசுகடிப் பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன் திருவிழை மூதூர் வாழ்கென் றேத்தி வான மும்மாரி பொழிக மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோ னாகுக 35 தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் ஆயிரங் கண்ணோன் தன்னோ டாங்குள நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில் பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து மன்னன் கரிகால் வளவன் நீங்கியநாள் 40 இந்நகர் போல்வதோர் இயல்பின தாகிப் பொன்னகர் வறிதாப் போதுவ ரென்பது தொன்னிலை யுணர்ந்தோர் துணிபொரு ளாதலின் தோரண வீதியுந் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும் 45 பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும் பூக்கொடி வல்லியுங் கரும்பும் நடுமின் பத்தி வேதிகைப் பசும்பொற் றூணத்து முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் 50 விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணற் பரப்புமின் கதலிகைக் கொடியுங் காழூன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின் நுதல்விழி நாட்டத் திறையோன் முதலாப் 55 பதிவாழ் சதுக்கத்துத் தெய்வமீ றாக வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின் தண்மணற் பந்தருந் தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் 60 ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின் பற்றா மாக்கள் தம்முட னாயினும் செற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும் 65 தண்மணல் துருத்தியுங் தாழ்பூந் துறைகளும் தேவரு மக்களும் ஒத்துடன் றிரிதரு நாலேழ் நாளினும் நன்கறிந் தீரென ஒளிறுவாள் மறவருந் தேரும் மாவும் களிறுஞ் சூழ்தரக் கண்முர சியம்பிப் 70 பசியும் பிணியும் பகையும் நீங்கி வகியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென். உரை 1-10. உலகம் திரியா ஓங்குயர் விழுச்சீர் - நன்மக்களது ஒழுக்கம் வேறுபடாத மிக உயர்ந்த சீரிய புகழையுடைய, பலர் புகழ்மூதூர்ப் பண்பு மேம்படீஇய - பல நாட்டினராலும் புகழ்ந்துரைக்கப்படும் பழமை சான்ற புகார்நகரத்தின் தன்மை மேம்படும் பொருட்டு, ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்ப - மிக மேம்பட்ட பொதியின் மலையில் உள்ள அரிய தவத்தையுடைய அகத்திய முனிவர் உரைத்தருள, தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் - வானத்தில் அசைகின்ற மதில்களை அழித்த வீரவளையணிந்த தோள் களை யுடைமையின் தூங்கெயி லெறிந்த தொடித்தோட் செம்பியன் எனப் பெயர்பெற்ற சோழ மன்னவன், விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று - வானவர்க் கரசனாகிய இந்திரனை வணங்கி நின்று, மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள் - நிலவுலகின்கண் என்னுடைய சிறந்த நகரத்தில், மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த - மேலோரும் விழையுமாறு விழாவெடுத்தலை மேற்கொண்ட, நாலேழ் நாளினும் நன்குஇனிது உறைக என - இருபத்தெட்டு நாளினும் ஆண்டு வந்து இனிதே தங்க வேண்டும் என வேண்ட, அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது - வானவர் தலைவன் அதற்கு உடன் பட்டதனை, கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்- தெளிந்த நூற்கேள்வியினை யுடையார் பிழையார் ஆதலினால்; ஓங்குயர் இரண்டும் ஒரு பொருட் பன்மொழிகள். மேம்படீஇய -மேம்படுத்துவதற்கு என்றுமாம். தூங்கெயில் - அசைகின்ற மதில் ; தேவர்க்குப் பகைவராகிய அவுணருடைய மதில். செம்பியன் - சோழருள் ஒருவன். இவன் எயிலழித்த செய்தி, 1"ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற், றூங்கெயி லெயிந்தநின், னூங்கணோர்." 2"தூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மானை" என்பன முதலியவற்றானும் அறியப்படும். வான்பதி - சிறந்தபதி. மேலோர்- தேவர் முதலாயினோர். நேர்ந்தது: வினைப்பெயர். கவரா - ஐயுறாத, தெளிந்த. அருந்தவன் உரைப்ப, செம்பியன் வணங்கி நின்று உறைகவென, அமரர் தலைவன் நேர்ந்தது என்க. 11-18. மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும் இத் திறம் - மெய்ப் பொருளுணர்த்துகின்ற நூல்வகை, உலகியல், நல்ல தத்துவப் பொருள், முத்தி என்னும் இவ்வகைகளை, தத்தம் இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கரும் - அவரவர் இயற்கைக்கேற்ப உணர்த்துகின்ற சமய வாதியரும், தம் துறைபோகிய அமயக் கணக்கரும் - தம்முடைய நெறியிற் கைதேர்ந்த காலங்களை எண்ணிக் கூறும் சோதிடரும், அகலாராகி - இந் நகரை விட்டு நீங்காதவராய், கரந்து உரு எய்திய கடவுளாளரும்-தமது பேரொளியினை மறைத்து மக்கள் கண்களாற் காணுமளவான வடிவினையாக்கிக் கொண்ட தேவரும், பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும் - பலவிடத்து நின்றும் போந்து ஒருங்குகூடிய மொழி வேறுபட்ட மக்களும், ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் - அரசர்க்குரிய அமைச்சராதி ஐந்து பெருங் குழுவினரும் கரணத்தியலவராதி எண்பெருங் கூட்டத்தினரும், வந்து ஒருங்கு குழீஇ - வந்து ஒன்றாகக் கூடி; மெய்த்திறம்-மெய்ந்நூல் வகை; 1"யாமெய்யாக் கண்டவற்றுள்" என்பதில், மெய்-மெய்ந்நூலென்னும் பொருட்டாதல் அறிக. 2"மெய்த்திறம் வழக்கென விளம்புகின்ற, எத்திறத்தினு மிசையா திவருரை" என மேல் வருவதனாலும் இப் பொருள் அறியப்படும். நன்பொருள் வீடு என்பவற்றை ஒன்றாயடக்கி, 3"அருமறை விதியு முலகியல் வழக்கும், கருத்துறை பொருளும் விதிப்பட நினைந்து" என்றார் கல்லாட ஆசிரியர். அகலாராகி எய்திய கடவுளாளர் என்க. வானவ ருருவினை மக்கள் கண்கள் காணப்பொறா வென்பதனை 4"அந்தரத் துள்ளோ ரறியா மரபின், வந்து காண்குறூஉம் வானவன் விழவும்" "அவளுக்குப், பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன், மூவா விளநலங்காட்டி" என்பவற்றானறிக. ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பவற்றை, 5"அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத்தொழிற்றூதுவர் சாரண ரென்றிவர், பார்த்திபர்க் கைம் பெருங் குழுவெனப் படுமே," 6"கரணத் தியலவர் கரும விதிகள், கனகச் சுற்றங் கடைக்காப்பாளர், நகர மாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீரரிவுளி மறவர், இனைய ரெண்பே ராய மென்ப" என்னுஞ் சூத்திரங்களானறிக. 18-26. வான்பதி தன்னுள் - தேவர் நகரமாகிய அமராபதியில், கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம் விடுத்த பூதம்-கொடியெடுத்த தேர்ப்படையினையுடைய முசுகுந்த மன்னற்குப் பகைவரால் நேர்ந்த துன்பத்தினை நீக்கிய நாளங் காடிப்பூதம், விழாக்கோள் மறப்பின் - விழாவெடுத்தலை மறந்தால், மடித்த செவ்வாய் வல் எயிறு இலங்க - சினத்தான் மடிக்கப்பெற்ற சிவந்த வாயில் வலிய பற்கள் விளங்க, இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும் - இடியொலி போன்ற முழக்கத்துடன் துன்பஞ் செய்யும், தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப் புடைத்து உணும் பூதமும் பொருந்தா தாயிடும் - இம் முதுநகரில் அல்லவை செய்யும் பாவிகளைக் கையிற்கொண்ட பாசத்தாற் பிணித்துப் புடைத்து உண்ணுஞ் சதுக்கப்பூதமும் பகைமை கொள்ளும்; ஆகலின், மாயிரு ஞாலத்து அரசு தலைஈண்டும் - மிகப்பெரிய புவியின்கண் உள்ள அரசரெல்லாரும் வந்து செறிதற் கேதுவாகிய, ஆயிரங் கண்ணோன் விழா - இந்திரனுக்குச் செய்யும் விழாவினை, கால் கொள்க என - தொடங்குகவென்று சொல்ல; துயரம்-அவுணர் விட்ட இருட்கணையால் உண்டாகிய துன்பம். விடுத்த-முசுகுந்தற்கு ஓர் மந்திரத்தை யருளி அவ்விருளைப் போக்கிய. பூதம்-புகார்நகரின் பட்டினப்பாக்கம் மரு'd2வூர்ப்பாக்கம் இரண்டிற்கும் நடுவாகிய நாளங்காடியிடத்துள்ள பூதம். இவ்வரலாற்றினை, 1"கடுவிசை யவுணர்...இடனுங் காண்கும்" என்பதனாலும், "முன் னாளிந்திரன் ...பூதம்" என்னும் உரை மேற்கோளாலும் அறிக. நரகர்- 2"தவ மறைந் தொழுகுந் தன்மையி லாளர், அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர், அறைபோ கமைச்சர், பிறர்மனை நயப்போர், பொய்க் கரியாளர், புறங் கூற்றாளர் என்னுமிவர். பூதம்-சதுக்கப்பூதம். பொருந்தாதாயிடும் - நகரை விட்டு நீங்கும் எனினுமாம். கால் கொள்க வென்று சமயக்கணக்கர் முதலாயினோர் கூறவென்க. 27-34. வச்சிரக் கோட்டத்து மணங்கெழு முரசம்-வச்சிரப்படை நிற்குங் கோயிலின்கணுள்ள விழாமுரசினை, கச்சையானைப் பிடர்த்தலை ஏற்றி-கச்சையை யணிந்த யானையின் பிடரினிடம் ஏற்றி, ஏற்று உரி போர்த்த இடியுறு முழக்கிற் கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை-வென்ற நல்லேற்றின் உரியாற் போர்க்க்கப்பட்டதும் இடியை யொத்த முழக்கத்தை யுடையதும் கூற்றுவனை யழைப்பதும் குருதிப்பலிகொள்ளும் விருப்பத்தினை யுடையதுமாகிய, முரசு கடிப்பிடூஉம் முதுகுடிப் பிறந்தோன் - வீர முரசத்தைக் குறுந்தடிகொண்டு அறைகின்ற தொல்குடிப் பிறந்த வள்ளுவன், திரு விழைமூதூர் வாழ்க என்று ஏத்தி-திருமகளும் விழைகின்ற தொன்னகர் வாழ்க என்று துதித்து, வானம் மும்மாரி பொழிக-மேகம் மாதம் மும்முறை மழை பொழிக, மன்னவன் கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக - அரசன் கோள்கள் நிற்கும் நிலை குலையாமைக்குக் காரணமாகிய செங்கோலை யுடையவனாகுக என வாழ்த்தி; கச்சை - அடி வயிற்றிற் கட்டுங் கயிறு. பிடர்த்தலை - பிடரிடம். வீர முரசிற்கு வென்ற ஏற்றின் தோலை மயிர் கழியாது போர்த்தல் மரபு; இதனை' 3"மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின், அண்ணனல்லே றிரண்டுடன் மடுத்து, வென்றதன் பச்சை சீவாது போர்த்த, திண்பிணி முரசம்" என்பதனாலறிக. இடியுறு: உறு - உவமவுருபு. இடியுரும் என்னும் பாடத்திற்கு இடியேறு என்க. கூற்றுக்கண்: கண் - அசை. கடிப்பிகூஉம் என்னும் பாடத்திற்கும், இகூஉம்-அறையுமென்னும் பொருட்டாம்; 1" முரசுகடிப் பிகுப்பவும்" என்பது காண்க. என்று வாழ்த்தியெனவிரித்துரைக்க. மூதூர் வாழ்க மாரிபொழிக கோலோனாகுக என்று ஏத்தி என்னலுமாம்; ஏத்தி-வாழ்த்தி. அரசனது கோல் கோடின் கோட்கள் நிலை திரியும் என்பது, 2"கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும்" 3"கோணிலை திரிந்து...அரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றாலும் அறியப்படும். முதுகுடிப் பிறந்தோன் முரசம் ஏற்றி ஏத்தி என்றியைக்க. 35-43. தீவகச் சாந்தி செய்தரு நல் நாள் - நாவலந் தீவிற்குச் சாந்தியாகிய இந்திர விழவினைக் கொண்டாடு நாட்களில், ஆயிரங் கண்ணோன் தன்னோடு-ஆயிரங் கண்களையுடைய புரந்தரனோடு, ஆங்குள நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பின் பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து-ஆண்டுள்ள நால்வகையாகப் பிரிக்கப்படும் முப்பத்து மூவராகிய தேவரும் நன்மைசால் சிறப்புடையராகிய பதினெண் கணங்களும் இந்நகரத்தினை நினைந்து, மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள்-கரிகாற் பெருவளத்தான் என்னும் மன்னர் பெருமான் இந்நகரினின்றும் நீங்கி வட திசையிற் போருக்குச் சென்ற ஞான்று, இந்நகர் போல்வதோர் இயல்பினது ஆகி-இப்பதி வறிதாகிய தன்மைபோல, பொன் நகர் வறிதாப் போதுவர் என்பது - பொன்னுலகம் வறிதா குமாறு ஈண்டு அடைவர் என்பது, தொல்நிலை உணர்ந்தோர் துணி பொருள் ஆதலின்-பழமையை அறிந்தோர்களால் துணியப்பட்ட பொருளாகலின்; நாவலந் தீவின் காவற்றெய்வம் முற்காலத்தில் இத்தீவிலுள்ளார்க்கு அவுணரால் வருந்துன்பத்தை ஒழித்தற் பொருட்டாக இந்திரனுக்குச் செய்தமையால் இந்திரவிழா தீவகச்சாந்தி எனப்பட்டது. 4"நாவலோங்கிய மாபெருந் தீவினுட், காவற்றெய்வதந் தேவர் கோற்கெடுத்த, தீவகச் சாந்தி" என மேல் வருதல் காண்க. இனி, இந்நகருக்குளவாகுந் துன்பங்களை யொழித்தற்குச் செய்யப்படும் இவ்விழா தீவிற்குச் செய்வதனை யொக்கு மென்னுங் கருத்தால் தீவகச் சாந்தி யெனப்பட்ட தெனினும் அமையும்; இவ்'d2வூ ரம்பலம் "உலக வறவி" (7:93;17:78,86) என இக்காப்பியத்தும், இவ்'d2வூர் வாயில் 5"உலக விடைகழி" எனச் சிலப்பதிகாரத்தும் கூறப்படுதல் காண்க. நால் வேறு தேவர் - வசுக்கள் எண்மரும் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் ஆகிய முப்பத்து மூவர். பால்-பகுதி. படர்ந்து-நினைந்து. கரிகால் வளவன்-புகாரிலிருந்தரசாண்ட பெரு வீரனாகிய ஓர் சோழ மன்னன்; இவன் வடநாட்டின்மீது படையெடுத்துச் சென்ற செய்தி 1"செருவெங் காதலிற் றிருமா வளவன்,...புண்ணியத் திசை முகம் போகிய வந்நாள்" எனச் சிலப்பதிகாரத்து வருதலான் அறியப் படும். வறிதா-வறுமையுடையதாக; தேவர் பலரும் விழாக்காண இந்நகர்க்கு வந்துவிடுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டது. 44-45. தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்-தோரணங் களையுடைய வீதிகளிலும் குற்றமற்ற மன்றங்களிலும், பூரணகும்பமும் பொலம்பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் - நிறைகுடங்களும் பொற்பாலிகை களும் பாவை விளக்குகளுமாகிய மங்கலப் பொருள் பலவற்றையும் ஒருங்கு பரப்புமின்; 46-47. காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்-காய்த்த குலைகளுடன் கூடிய பாக்கு மரமும் வாழை மரமும் வஞ்சி மரமும், பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் - மலர் களையுடைய கொடியும் கரும்பும் என்னுமிவற்றை நடுவீர்; வஞ்சி - கொடியுமாம். கொடி வல்லி ஒரு பொருளன. 48-49. பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து-வரிசையாகவுள்ள திண்ணைகளிலிருக்கும் பசும் பொன்னாலாகிய தூண்களில், முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் - முத்துமாலைகளை முறையாகத் தொங்க விடுமின்; தூணம் - தூண். பத்தியாகிய தூண் என்றலுமாம். முறையொடு - முறையால். 50-51. விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும் - விழாக்கள் நிறைந்த மூதூரின் வீதிகளிலும் மரத்தடிகளிலும், பழ மணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் - பழைய மணலை நீக்குமின் புதிய மணலைப் பரப்புமின்; மன்றம்-ஊர்க்கு நடுவாய் எல்லாரு மிருக்கும் மரத்தினடி என்பர். 52-53. கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும் மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்-துகிற் கொடிகளையும் காம்பினால் ஊன்றப்படுங் கொடிகளையும் கொடுங்கைகளை யுடைய மாடங்களிலும் வாயில்களிலும் சேர்ப்பீராக; கதலிகைக்கொடி, விலோதம் என்பன துகிற்கொடி வேறு பாடுகள். 54-57. நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக-இமைத்தலில்லாத நெற்றித் திருக்கண்ணையுடைய சிவபெருமான் முதலாக இப்பதியில் வாழ்கின்ற சதுக்கப்பூதம் ஈறாகவுள்ள கடவுளர்கட்கு, வேறு வேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை - வெவ்வேறு வகைப்பட்ட சிறப்புக்களோடு வெவ்வேறாகிய செய்வினை களை, ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்-செய்யும் நெறியினை அறிந்த முறைமையினையுடைய அறிவுடையோர் செய்ம்மின்; விழிநாட்டம்-இமையா நாட்டம்; 1"நுதல திமையா நாட்டம்" என்பது அகம். 2"நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்" என்பர், இளங்கோவடிகளும். இனி, இறைவி கண் புதைத்த பொழுது நெற்றியிற் புறப்படவிட்டகண் என்றுமாம். விழி-விழித்த. சதுக்கம் - நான்கு தெருக் கூடுமிடம்- சிறப்பு - நைமித் திகமும், செய்வினை - நித்தமுமாம்; வெவ்வேறு சிறப்பினுக்கேற்ற செய்வினையுமாம். ஆறு - வேதத்தின் ஆறங்கமுமாம். அறிந்தோர்: முன்னிலை. 58-59. தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும் - குளிர்ந்த மணலையுடைய பந்தர்களிலும் பலரும் தங்கும் அம்பலங் களிலும், புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் -நன்றாகிய அறவுரையை அறிவீர் சேருமீன்; மணப்பந்தர் என்னும் பாடத்திற்கு மணத்தையுடைய தண்ணீர்ப் பந்தர் என்க. தாழ்தல் - தங்குதல். புண்ணிய நல்லுரை - தருமபதம். பொருந்துமின் - பொருந்தி உரைமின் என்று கொள்க. 60-61. ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் - தம்தம் சமயத்திற் பொருந்திய பொருள்களைக் குறித்துச் சபதஞ் செய்து வாதிக்கும் சமயவாதிகள், பட்டி மண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்-வித்தியா மண்டபத்தில் உரிய இடங்களில் அமர்வீர்; ஒட்டல்-சபதஞ் செய்தல், பொருள்-தத்துவம். பட்டிமண்டபம்- கலை யாராய்தற்கும், வாது புரிதற்குமுரிய மண்டபம்; 3"பகைப் புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்" 4"பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம்" என்பன காண்க. ஓலக்க மண்டபமென்றும் கூறுவர். 1"பட்டி மண்டப மேற்றினை யேற்றினை" என்பது திருவாசகம். 62-63. பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்-பகைவரோடாயினும், செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் - சினமும் போரும் செய்யாது நீங்குமின்; செற்றம் - நெடுங்கால நிற்கும் கோபம்; வயிரம். 64-67. வெண்மணற் குன்றமும் - வெள்ளிய மணற் குன்று களிலும், விரிபூஞ் சோலையும் - பரந்த மலர்ப் பொழில்களிலும், தண் மணல் துருத்தியும் - குளிர்ந்த மணலையுடைய யாற்றிடைக் குறைகளிலும், தாழ் பூந்துறைகளும் -ஆழ்ந்த பொலிவினை யுடைய நீர்த் துறைகளிலும், தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும் நாலேழ் நாளினும் - தேவரும் மக்களும் வேற்றுமை யின்றிச் சேர்ந்துலாவும் இருபத்தெட்டு நாட்களிலும், நன்கு அறிந்தீர் என - இவற்றை நன்கு அறிந்தீராய் என்று; அறிந்தீர்: அறிந்தீராகியென வினையெச்சமாக்குக. 68-72. ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும் களிறும் குழ்தர - விளங்குகின்ற வாளினையுடைய வீரரும் தேரும் குதிரையும் யானையும் சூழ்ந்துவர, கண் முரசு இயம்பி-முகத்தையுடைய முரசத்தினை அடித்து, பசியும் பிணியும் பகையும் நீங்கி - மக்கள்பால் பசியும் நோயும் பகைமையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி-நாட்டிலே மழையும் வளமும் பெருகுக என்று வாழ்த்தி, அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கு என் - அகநகரிடத்தே அழகிய விழாவைத் தெரிவித்தனன் என்க. பகை-காமம் முதலிய உட்பகையுமாம். அகநகர்-பட்டினப் பாக்கம். என் : அசை. 2"பசியும் பிணியும் பகையு நீங்கி, வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி" எனச் சிலப்பதிகாரத்தும் இத்தொடர் முழுதும் வந்துள்ளமை காண்க. முதுகுடிப் பிறந்தோன் முரசத்தை ஏற்றி இயம்பி ஏத்திச் சுரக்கென வாழ்த்தித் துணிபொருளாதலின் நாலேழ் நாளினும் நன்கறிந்தீராய்ப் பரப்புமின், நடுமின், நாற்றுமின், மாற்றுமின், பரப்புமின், சேர்த்துமின், செய்யுமின், பொருந்துமின், ஏறுமின், அகலுமின் என அகநகர் மருங்கு விழாவை அறைந்தனன் என்க. விழாவறை காதை முற்றிற்று. 2. ஊரலருரைத்த காதை இந்திரவிழா நடைபெற்றது. அந் நன்னாளில் மாதவியும் மணிமேகலையும் வழக்கப்படி ஆடுதற்கு வாராமையின் மனம் வருந்திய சித்திராபதி மாதவியின் றோழியாகிய வயந்தமாலையை அழைத்து, ‘ஊரார் கூறும் பழிமொழியை மாதவிக்கு உரைப்பாய்' என விடுக்க, அவள் சென்று மாதவியும் மணிமேகலையும் இருந்த மலர்மண்டபத்தை அடைந்து மாதவியின் தவத்தால் வாடிய உடம்பினைக் கண்டு வருந்தி, ‘நாடக மகளிர்க்குரிய கலைகள் பலவும் கற்றுத் துறைபோகிய நீ விழாவிற்கு வாராமலும், மரபிற் கொவ்வாத தவவொழுக்கம் பூண்டுமிருத்தல் பற்றி ஊரார் பலரும் கூடி யுரைக்கும் பழிமொழிகள் நாணுந்தகையன" என்றுரைத்தனள். அதுகேட்ட மாதவி, அவளை நோக்கி, ‘காதலனுற்ற கடுந்துயர் பொறாது, காவலன் பேரூர் கனையெரி யூட்டிய மாபெரும் பத்தினியாகிய கண்ணகியின் மகள் மணிமேகலை தவநெறிச் செல்லுதற் குரியளன்றி, இழிந்த பரத்தமைத் தொழிலுக்குரியளல்லள்; ஆதலின் அவள் அங்கே வாராள்; நான் இங்கு வந்து அறவணவடிகளின் அடிமிசை வீழ்ந்து, காதலனுற்ற கடுந்துயரைக் கூறி வருந்த, அவர், ‘ பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவது அறிக’ என்று நால்வகை வாய்மைகளையும் எனக்கு அருளிச்செய்து, பஞ்சசீலத்தையும், அறிவுறுத்தி, இவற்றைக் கடைப்பிடிப்பாய் என்று அருள்செய்தனர்; ஆதலின் நானும் அங்கு வருதற்குரியே னல்லேன்; இச்செய்தியை ஆயத்தார்க்கும், என் நற்றாய் சித்திராபதிக்கும் சொல்,' என்று கூற, வயந்த மாலை பெறுதற்குரிய மாணிக்கத்தைக் கடலில் வீழ்த்தினோர் போன்று செயலற்றுச் சித்திராபதியிடம் மீண்டனள். (இதன்கண் நாடக மகளிர்க்கு உரிய பல கலைவகைகளும், மூவகைப் பத்தினிப் பெண்டி ரியல்புகளும் கூறப்பட்டுள்ளன.) நாவ லோங்கிய மாபெருந் தீவினுள் காவற் றெய்வதந் தேவர்கோற் கெடுத்த தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் மணிமே கலையொடு மாதவி வாராத் 5 தணியாத் துன்பந் தலைத்தலை மேல்வரச் சித்திரா பதிதான் செல்லலுற் றிரங்கித் தத்தரி நெடுங்கட் டன்மக டோழி வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப் பயங்கெழு மாநக ரலரெடுத் துரையென 10 வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்துமெய் வாடிய அழிவின ளாதலின் மணிமே கலையொடு மாதவி யிருந்த அணிமலர் மண்டபத் தகவயிற் செலீஇ ஆடிய சாயல் ஆயிழை மடந்தை 15 வாடிய மேனி கண்டுளம் வருந்திப் பொன்னே ரனையாய் புகுந்தது கேளாய் உன்னோ டிவ்வூர் உற்றதொன் றுண்டுகொல் வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்துக் கூத்தும் பாட்டுந் தூக்குந் துணிவும் 20 பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலும் தண்ணுமைக் கருவியுந் தாழ்தீங் குழலும் கந்துகக் கருத்தும் மடைநூற் செய்தியும் சுந்தரச் சுண்ணமுந் தூநீ ராடலும் பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமும் 25 காயக் கரணமுங் கண்ணிய துணர்தலும் கட்டுரை வகையுங் கரந்துறை கணக்கும் வட்டிகைச் செய்தியும் மலராய்ந்து தொடுத்தலும் கோலங் கோடலுங் கோவையின் கோப்பும் காலக் கணிதமுங் கலைகளின் றுணிவும் 30 நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரை நூற் கிடக்கையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை நற்றவம் புரிந்தது நாணுடைத் தென்றே அலகின் மூதூர் ஆன்றவ ரல்லது 35 பலர்தொகு புரைக்கும் பண்பில் வாய்மொழி நயம்பா டில்லை நாணுடைத் தென்ற வயந்த மாலைக்கு மாதவி யுரைக்கும் காதல னுற்ற கடுந்துயர் கேட்டுப் போதல் செய்யா உயிரொடு நின்றே 40 பொற்கொடி மூதூர்ப் பொருளுரை யிழந்து நற்றொடி நங்காய் நாணுத் துறந்தேன் காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்கா(து) இன்னுயி ரீவர் ஈயா ராயின் 45 நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர் நளியெரி புகாஅ ராயின் அன்பரோ(டு) உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர் பத்தினிப் பெண்டிர் பரபபுநீர் ஞாலத்து அத்திறத் தாளும் அல்லளெம் மாயிழை 50 கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள் மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீ ராடிய கதிரிள வனமுலை திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக் காவலன் பேரூர் கனையெரி யூட்டிய 55 மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை அருந்தவப் படுத்தல் அல்ல தியாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படாஅள் ஆங்ஙன மன்றியும் ஆயிழை கேளாய் ஈங்கிம் மாதவர் உறைவிடம் புகுந்தேன் 60 மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து மாபெருந் துன்பங் கொண்டுள மயங்கிக் காதல னுற்ற கடுந் துயர் கூறப் பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம் 65 பிறவா ருறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோ ருறுவ தறிகென் றருளி ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி உய்வகை இவைகொளென் றுரவோ னருளினன் 70 மைத்தடங் கண்ணார் தமக்குமெற் பயந்த சித்திரா பதிக்குஞ் செப்பு நீயென ஆங்கவ ளுரைகேட் டரும்பெறன் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று மையல் நெஞ்சமொடு வயந்த மாலையும் 75 கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்தென். உரை 1-9. நாவல் ஓங்கிய மா பெரும் தீவினுள் காவல் தெய்வதம் தேவர் கோற்கு எடுத்த - நாவல் எனப் பெயர் சிறந்த மிகப் பெரிய தீவினுள்ளேஅதன் காவற்றெய்வமாகிய சம்பாபதியால் இந்திர னுக்கு எடுக்கப்பட்ட, தீவகச் சாந்தி செய்தரு நல்நாள் - தீவ சாந்தியாகிய இந்திர விழவினைச் செய்கின்ற நன்னாளில், மணிமேகலையொடு மாதவி வாரா - மணிமேகலையுடன் மாதவியும் வாராமை யாலுண்டான, தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர-ஆறாத்துயர் மேன் மேல் மிகாநிற்க, சித்திராபதிதான் செல்லல் உற்று இரங்கி - சித்திராபதி மிகவுந் துன்பமுற்று வருந்தி, தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி-செவ்வரி படர்ந்து பாய்கின்ற நீண்ட கண் களையுடைய தன் புதல்வி மாதவியின் தோழியாகிய, வயந்த மாலையை வருக எனக் கூஉய்-வயந்தமாலையை வாவென்று அழைத்து, பயங் கெழு மாநகர் அலர் எடுத்து உரை என-நீ சென்று பயன் சிறந்த பெரிய நகரினுள்ளார் கூறும் அலரை மாதவிக்கு எடுத்துக் கூறுவாயாக என்று உரைப்ப; நாவல் மரம் ஓங்கியுள்ளமையால் அப் பெயர்பெற்ற தீவு என்றுமாம். பெருந் தீவுகளுள் ஒன்றாதலின் இது மாபெருந் தீவு எனப்பட்டது. "நால்வகை மரபின் மாபெருந் தீவும்" (6:195) என்பர். மேலும், பண்டு எடுத்தமையால் தீவகச் சாந்தியெனப் பெயர் பெற்ற இந்திர விழாவைச் செய்யும் இந் நன்னாளில் என விரித் துரைக்க. விழாவிற்கு ஆடல் பாடல் நிகழ்த்த வாராமையால் என்க வாராத்துன்பம் தணியாமல் மேல்வர என்றுமாம். தத்துஅரி-அரி படர்ந்த எனலுமாம். 10-17; வயந்த மாலையும் மாதவி துறவிக்கு அயர்ந்து மெய்வாடிய அழிவினள் ஆதலின் - வயந்த மாலையும் மாதவியினது துறவிற்கு மனந்தளர்ந்து உடல் வாடிய வருத்த முடையவள் ஆகலான், மணிமேகலையோடு மாதவி இருந்த அணி மலர் மண்டபத்து அகவயின் செலீஇ - மணிமேகலையுடன் மாதவியிருந்த அழகிய மலர் மண்டபத்தின் உள்ளே சென்று, ஆடிய சாயல் ஆயிழை மடந்தை வாடிய மேனி கண்டு உளம் வருந்தி - அசை கின்ற மென்மையினையுடைய மாதவியினது தவத்தான் வாட்ட முற்ற யாக்கையைக் கண்டு மனம் வருந்தி, பொன்னேரனையாய்- திருமகள் போல் வாய், புகுந்தது கேளாய் - இப்பொழுது நேர்ந்ததனைக் கேட்பாயாக, உன்னோடு இவ்'d2வூர் உற்றது ஓன்று உண்டுகொல் - நின்னோடு இவ்'d2வூர் உற்றதாகிய பகைமை ஒன்றுண்டோ; துறவி - துறவு; "1துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும்" என்பது காண்க. பொன்-திருமகள். நேரனையாய் - நேரொப்பாய்; உவமச்சொல் இரண்டிணைந்தது. ஊரார் அலர் தூற்றுவது பகைமையாலன்றென்பாள் 'உற்றதொன் றுண்டுகொல்' என்றாள். 18-37. வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்துக் கூத்தும் - வேத்தியலும் பொதுவியலும் என்று இருவகைப்பட்ட கூத்தும், பாட்டும்-இசையும், தூக்கும் - தாளங்களின் வழி வரும் செந்தூக்கு முதலிய ஏழு தூக்குக்களும், துணிவும் - தாள வறுதியும், பண்ணியாழ்க் கரணமும்-பண்ணுடன் பொருந்திய யாழின் செய்கைகளும், பாடைப் பாடலும் - அகநாடகம் புறநாடகம் என்பவற்றிற்கு உரிய உருக்களும், தண்ணுமைக் கருவியும் - உத்தமத் தோற்கருவியாகிய மத்தளமும், தாழ் தீங் குழலும் - இனிமை பொருந்திய வேய்ங் குழலும், கந்துகக் கருத்தும்-பந்தாடும் தொழிலும்.மடைநூற் செய்தியும் - பாக சாத்திர முறைப்படி ஆடுதற் றொழிலும், சுந்தரச் சுண்ணமும்-நிறமமைந்த நறுமணப் பொடியும், தூநீர் ஆடலும்-நன்னீராடலும், பாயற்பள்ளியும் - பாயலிடமும், பருவத்து ஒழுக்கமும்-காலங்கட்கேற்ப ஒழுகும் ஒழுக்கமும், காயக் கரணமும்-காயத்தாற் செய்யும் அறுபத்துநான்கு வகைக் கரணங்களும், கண்ணியது உணர்தலும் - பிறர் கருதியதை அறிந்து கொள்ளுதலும், கட்டுரை வகையும் - தொடுத்துக் கூறும் சொல் வன்மையும் , கரந்துறை கணக்கும் - மறைந்துறையும் வகையும், வட்டிகைச் செய்தியும் - எழுதுகோலினால் எழில்பட வரையும் தொழிலும், மலர் ஆய்ந்து தொடுத்தலும் - பூக்களை ஆராய்ந்தெடுத்துக் கட்டுதலும், கோலம் கோடலும் - அவ்வப் பொழுதிற்கேற்ப ஒப்பனைசெய்து கொள்ளுதலும், கோவையின் கோப்பும் - முத்து முதலியவற்றைக் கோவையாகக் கோத்தலும், காலக்கணிதமும் -சோதிடமும்; கலைகளின் துணிவும் - மற்றுமுள்ள கலைகளின் துணிந்த பொருளும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த -நாடகக் கணிகையர்க்கென நன்கு வகுக்கப்பட்ட, ஓவியச் செந்நூல் உரை நூற் கிடக்கையும்- செவ்விய நூலாகிய புகழமைந்த ஓவிய நூலிற் கூறப் பட்டனவும், கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை-கற்று அவைகளிற் கைதேர்ந்த பொன்வளையணிந்த மாதவி, நற்றவம் புரிந்தது நாணுடைத்து என்றே - துறவு பூண்டு நற்றவம் செய்வது நாணமுடைத்தாகும் என்று, அலகில் மூதூர் ஆன்றவர் அல்லது-இம்மூதூரிலுள்ள அறிவானமைந்த அளவற்ற பெரியோர்கள் அல்லாமல், பலர் தொகுபு உரைக்கும் பண்பில் வாய்மொழி-பலருங்கூடிக் கூறும் நலமில்லாத வாய் மொழி, நயம்பாடு இல்லை - இனிதாதல் இல்லை, நாண் உடைத்து என்ற - அதனால் நின்செய்கை நாணுந்தன்மை யுடைத்தாம் என்று கூறிய, வயந்த மாலைக்கு மாதவி உரைக்கும்- தோழியாகிய வயந்தமாலைக்கு மாதவி கூறூவாள்; வேத்தியல் - அரசர்க்காடுங் கூத்து ; பொதுவியல் - எல்லார்க்கும் ஒப்ப ஆடுங் கூத்து ; 1"வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்து... ஆடலும்," என்பது காண்க. தூக்கு ஏழினையும், "ஒருசீர்செந்தூக் கிரு சீர் மதலை, முச்சீர் துணிவு நாற்சீர் கோயில், ஐஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாலே, எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்," என்பதனாலறிக. யாழ்க்கரணம் - பண்ணல் முதலிய எட்டும், வார்தல் முதலிய எட்டுமாம்; இவற்றைச் சிலப்பதிகாரத்துக் கானல் வரியிற் காண்க. தாழ்தல் - தங்குதல். பருவம் - கார்முதலியன. காலக் கணிதம் - சோதிட மாதலை, 2"ஆயுள் வேதரும் காலக் கணிதரும்," என்பதனா லறிக. கலைகள் என்றது பரத்தையர்க் குரியவாகக் கூறப்படும் அறுபத்து நான்கு கலைகளுள் ஈண்டுக் கூறாதொழிந் தனவாகும். பரத்தையர்க்குரிய கலைகள் அறுபத்துநான்கு என்பதனை, 3"பண்ணுங் கிளியும் பழித்த தீஞ்சொல், எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்," 4"எண்ணான் கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியன் மடந்தையர்," 5"யாழ்முதலாக வறுபத் தொருநான், கேரிள மகளிர்க்கியற்கையென் றெண்ணிக், கலையுற வகுத்த காமக் கேள்வி," என்பவற்றானறிக. நன்கனம் - நன்றாக ; இச்சொல், "நன்கன நீத்து," (3:88) "நன்கன நவிற்றி" (13-24) "நன்கன மறிந்தபின்" (13 : 26) என இக் காப்பியத்துட் பயின்று வந்துளது. வாய்மொழி நாணுடைத் தெனினுமாம். 38-41. காதலன் உற்ற கடுந்துயர் கேட்டு - என் காதலனாகிய கோவலன் அடைந்த கொடிய துன்பத்தினைக் கேள்வியுற்று, போதல் செய்யா உயிரோடு நின்றே - உடலைவிட்டு நீங்காத உயிருடன் நின்று, பொற்கொடி மூதூர்ப் பொருளுரை இழந்து - அழகிய கொடிகளையுடைய இத் தொன்னகரத் தாருடைய புகழுரையை இழந்து, நற்றொடி நங்காய் - நல்ல வளையல்களுடைய வயந்தமாலையே, நாணுத் துறந்தேன் - நாணத்தையும் விட்டேன்; கடுந்துயர் - மிக்க துயர்; என்றது கோவலன் கொலையுண்டது, இக்காதையுள்ளே பின்னரும் (2:50-63) கடுந்துயர் என வருதல் காண்க. மூதூர்:ஆகுபெயர். பொருளுரை-புகழுரை. நங்காய் கேட்டு நின்று இழந்து துறந்தேன் என்றாளென்க. 42-49. காதலர் இறப்பின் - கற்புடை மகளிர்க்கு உயிரினுஞ் சிறந்த கணவன் இறந்தால், கனைஎரி பொத்தி - துயரமாகிய மிக்க நெருப்பு மூளப்பட்டு, ஊது உலைக் குருகின் உயிர்த்து -உலையில் ஊதும் துருத்தி மூக்கினைப்போல் வெய்தாக உயிர்த்து, அகத்து அடங்காது - துன்பம் உள்ளத்தே அடங்கப் பெறாது, இன்னுயிர் ஈவர்-உடன் தமது இனிய உயிரைக் கொடுப்பர்; ஈயார் ஆயின் -அங்ஙனம் கொடாராயின், நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்-நல்ல குளிர்ந்த நீரினையுடையபொய்கையில் ஆடுபவர்போலச் செறிந்த நெருப்பின்கட் புகுவர்; நளிஎரி புகாஅர் ஆயின் -அவ்வாறு தீயிடைக் குளியாராயின், அன்பரோடு உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்பு அடுவர்-மறுமைக் கண் தம் அன்பரோடு உடன் உறையும் வாழ்க்கையின் பொருட்டுக் கைம்மை நோன்பினை நோற்று உடம்பினை வருத்துவர்; பத்தினிப் பெண்டிர்-கற்புடை மகளிராவார். பரப்பு நீர் ஞாலத்து - கடல் சூழ்ந்த நிலவுலகிலே, அத்திறத்தாளும் அல்லள் எம் ஆயிழை - எம் கண்ணகியோ அவ்வகையிற் சேர்ந்தவளும் அல்லள்; பொத்தி-மூட்டி; மூளப்பட்டென்க. உயிர் ஈவர் - உடனிறப்பர் என்றபடி; இதனை மூதானந்தம் என்பர்; 1"ஓருயிராக வுணர்க உடன், கலந்தோர்க், கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில், விடனேந்தும் வேலோற்கும், வெள்வளையி னாட்கும், உடனே யுலந்த துயிர்," என்பது காண்க; பாண்டியன் நெடுஞ்செழியன் இறப்ப அவன் மனைவியாகிய பெருங்கோப் பெண்டு 'தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்,' உடனுயிர் நீத்த வரலாறு ஈண்டு அறிதற் குரியது. கணவரை யிழந்த பத்தினிப் பெண்டிர்க்குப் பொய்கையும் தீயும் ஒரு தன்மையின வாதலை, பூதப்பாண்டியன்தேவி தீப்பாய்வாள் கூறிய, 2"பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற, வள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையுந் தீயுமோரற்றே," என்பதனானும் அறிக. கைம்மை நோன்பின் இயல்பு, 3"வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட, வேளை வெந்தை வல்சி யாகப், பாற்பெய் பள்ளிப் பாயின்று வதியும், உயவற் பெண்டிர்," என்பதனானறியப்படும். அத்திறத்தாளும் அல்லள் - அம்மூன்று திறத்தாருள் அடங்குபவளல்லள்; வேறு சிறப்புடையாள் என்றபடி. ஞாலத்துப் பத்தினிப் பெண்டிர் காதலர் இறப்பின் இன்னுயிரீவர், நளியெரி புகுவர், நோற்றுடம்படுவர்; எம் ஆயிழை அத்திறத்தாளுமல்லள் என்க. 50-57. கணவற்கு உற்ற கடுந்துயர் பொறாஅள் - கொழுநனுக்கு நேர்ந்த கொடுந்துயரைப் பொறாதவளாய், மணமலி கூந்தல் சிறு புறம் புதைப்ப - மணம் நிறைந்த கூந்தல் பிடரிடத்தை மறைத்து விரிந்து கிடப்ப, கண்ணீர் ஆடிய கதிர் இள வனமுலை- கண்ணீரால் நனைந்த கதிர்த்த அழகிய இளங்கொங்கையைத் திண்ணிதில் திருகித் தீயழல் பொத்தி-திண்மையுடன் திருகி அழலை மூட்டி, காவலன் பேரூர் கனைஎரி ஊட்டிய - பாண்டியனது பேரூராகிய மதுரையை மிகுந்த நெருப்பினாலுண்பித்த, மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை - மிகச் சிறந்த தெய்வக் கற்பினையுடைய கண்ணகியின் மகளாகிய மணிமேகலை, அருந்தவப் படுத்தல் அல்லது - அரிய தவநெறியிற் சேர்க்கப் படுத லல்லது, யாவதும் - சிறிதும், திருந்தாச் செய்கைத் தீத்தொழில் படாஅள் - இழிந்த செய்கையையுடைய பரத்தமைத் தொழிலிற் சேர்க்கப்படாள்; சிறுபுறம் - பிடர்; முதுகுமாம். சிறுபுறம் புதைப்ப என்றதனால் கூந்தல் அவிழ்ந்து கிடந்ததென்றவாறாயிற்று. தீயழல் - ஒரு பொருளிரு சொல்: கொடிய அழலுமாம். அவள் மாபெரும் பத்தினியாவள்: அவள் மகள் மணிமேகலை தீத்தொழிற் படாள்; என அறுத்துரைக்க. தன் மகளைக் கண்ணகியின் மகளென்று உரிமை பாராட்டிக் கூறினாள்; அதனால் மணிமேகலையின் மாண்பு தெரித்தல் கருதியுமாம். தீத் தொழிற் படா அள் - தீத்தொழிற் படுத்தற்குரியளல்லள் என்க. 58--69. ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும், ஆயிழை கேளாய் - வாயந்தமாலையே கேட்பாயாக, ஈங்கு இம்மாதவர் உறைவிடம் புகுந்தேன்-இங்கு இச்சங்கத்தார் உறையுமிடம் புகுந்த யான், மறவணம் நீத்த மாசறு கேள்வி - பாவத் தன்மைகளைத் துறந்த குற்றமற்ற மெய்யறிவுடையரான, அறவண வடிகள் அடிமிசை வீழ்ந்து- அறவணவடிகளின் திருவடிமீது விழுந்து, மாபெருந் துன்பங்கொண்டு உளம் மயங்கி-மிக்க பெருந் துன்பத்துடன் மனங்கலங்கி, காதலன் உற்ற கடுந்துயர் கூற-என் காதலன் அடைந்த கொடிய துயரத்தைக்கூற, பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் - உலகில் பிறந்தவர் அடைவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேரின்பம்-பிறவாதவர் அடைவது மிக்க பேரின்பம், பற்றின்வருவது முன்னது-முதற்கண் கூறப்பட்ட பிறப்புப்பற்றினால் உண்டாவது, பின்னது அற்றோர் உறுவது - பின்னருரைத்த பிறவாமை பற்றினை அற்றோர் அடைதற்குரியது, அறிக என்று அருளி - இவற்றை அறிவாயாகவென்று நால்வகை வாய்மையையும் அருளிச் செய்து, ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி - காமம், கொலை, கள், பொய்,. களவு என்னும் ஐந்தினையும் முற்றத் துறத்தலாகிய ஐவகைச் சீலங்களையும் உணர்த்தி, உய்வகை இவைகொள் என்று-உய்யும் வழி இவையே இவற்றைக் கொள்க என்று, உரவோன் அருளினன்-திண்ணிய அறிவினை யுடைய அவ்வடிகள் அருளினர்; ஆங்ஙனமன்றியும் கேளாய் என்றது மணிமேகலை பரத்தைமைக் குரியளல்லாக் காரணம் அதுவாம்; யாம் இருவேமும் தவநெறி நிற்றற்குரிய காரணத்தையும் கேள் என்றபடி, மாதவர் - பௌத்த சங்கத்தார். பாவங்கள் பத்துவகைப்படு மென்பர். இவற்றின் விரியை இந்நூலின் 24:30-ஆம் காதைகளானறிக. பிறவார்-பிறப்பினீங்கினோர்; வீடுபெற்றோர், 'பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்', என்பது முதலியவற்றால் துக்கம், துக்க நிவாரணம், துக்கோற்பத்தி, துக்க நிவாரண மார்க்கம் என்னும் நான்கு வாய்மையும் முறையே கூறப்பட்டன; 1"துன்பந் தோற்றம் பற்றே காரணம், இன்பம் வீடே பற்றிலி காரணம், ஒன்றிய வுரையே வாய்மை நான்காவது," என்பதுங் காண்க. சீலம் ஐந்தனையும், 2"கள்ளும் பொய்யுங் காமமுங் கொலையுங், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" என்பதனானறிக. உய்வகை இவை என்றமையால் வீட்டைவார்க்கு வாய்மையும் சீலமும் இன்றியமையாதன வென்ப தாயிற்று,. உரவோன் அருளினன் ஆதலால் யாம் தவநெறி நிற்றற்கே யுரியம் என விரித்துரைக்க. 70-5. மைத்தடங் கண்ணார் தமக்கும்-மையணிந்த பெரிய கண் களையுடைய நம் ஆயத்தார்க்கும், எற் பயந்த சித்திரா பதிக்கும் செப்புநீ என-என்னைப் பெற்ற சித்திராபதிக்கும் இச்செய்தியை நீ கூறுவாயாக என உரைக்க, ஆங்கவள் உரை கேட்டு-அவள் கூறிய மொழியைக் கேட்டு, அரும்பெறல் மாமணி ஓங்குதிரைப் பெருங்கடல் வீழ்த்தோர் போன்று-பெறற்கரிய பெருமை பொருந்திய மாணிக்கத்தை மிகுந்த அலைகளையுடைய பெரிய கடலில் வீழ்த்தியவர்களை ஒத்து, மையல் நெஞ்சமோடு - மயக்கமுற்ற உள்ளத்துடன் வயந்த மாலையும் கையற்றுப் பெயர்ந்தனள் காரிகை திறத்து-வயந்தமாலையும் மாதவி யிடத்தினின்றும், செயலற்று மீண்டனள் என்க. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையின் துறவைக்குறிக்கு மிடத்து, 1"ஆங்கது கேட்ட வரசனு நகரமும், ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர், தம்மிற் றுன்பர் தாநனி யெய்த" என்று கூறியிருப்பது அறியற் பாலது. நன்னாளில் மணிமேகலையொடு மாதவி வாராத் துன்பம் மேல்வரச் சித்திராபதி இரங்கி வயந்தமாலையைக் கூவி அலரினை மாதவிக் குரையென்று கூற, அவன் மாதவியிருந்த மண்டபத்துச் சென்று கண்டு வருந்தி, பண்பில் வாய்மொழி நயம் பாடில்லை, நாணுடைத்து என்ன, அது கேட்ட மாதவி, நாணுத் துறந்தேன்; மணிமேகலை தீத்தொழிற் படாள்; உரவோன் அறிகென் றருளிக் காட்டி, இவற்றைக் கொள்ளென் றருளினன்; இதனை நீ செப்பென்று சொல்ல, வயந்தமாலையும் கேட்டுக் கையற்றுப் பெயர்ந்தனள் என முடிக் க. ஊரலருரைத்த காதை முற்றிற்று. 3. மலர்வனம் புக்க காதை மாதவி வயந்தமாலைக்குக் கூறிய இன்னாவுரையின் வாயிலாக மணிமேகலைக்குப் பரிபாக காலம் (ஏது நிகழ்ச்சி) வந்துற்றது ஆகலின், அவள், தன் தந்தைக்கும் தாயாகிய கண்ணகிக்கும் மதுரையில் நேர்ந்த கொடுந் துன்பம் தன் காதுகளைச் சுடுதலால் அழுது கண்ணீரால் தான் தொடுக்கின்ற மாலையை நனைத்துக் கொண்டிருந்தனள்; மாதவி அது கண்டு அவளது கண்ணீரைத் துடைத்து, அவள் துயரினை ஒருவாறு மாற்றக் கருதி, 'இம்மாலை நின் கண்ணீரால் தூய்மை யொழிந்தது; ஆதலின் வேறு மாலை தொடுத்தற்கு நீயே சென்று நன்மலர் கொணர்வாய்' என்றனள். அப்பொழுது அவளுடன் மலர் தொடுக்கும் சுதமதி அதனைக் கேட்டுத் துயரொடுங் கூறுவாள்: "மணிமேகலையின் கண்ணீரைக் கண்டனனாயின் காமன் தன் படைக்கலத்தை எறிந்து விட்டு நடுங்குவன்; அவளை ஆடவர் புறத்தே காண்பாராயின் விட்டு நீங்குதலுண்டோ? அன்றியும் யான் இந்நகரத்திற்கு வந்த காரணத்தையும் கேட்பாயாக; சண்பை நகரத்துள்ள கௌசிகன் என்னும் அந்தணன் மகளாகிய யான் சோலையில் தனியே மலர் கொய்யும் பொழுது இந்திரவிழாக் காண்டற்கு வந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் என்னை எடுத்துச் சென்று தன் வயமாக்கிப் பின்பு இந்நகரிலே என்னை விட்டு நீங்கினன்; மகளிர் தனியே போய் மலர்கொய்தலால் வரும் ஏதம் இத்தகையது; ஆதலால் மணிமேகலை தனியே சென்று பூப்பறித்தல் தவறாகும்; பூக்கொய்ய இலவந்திகைச் சோலைக்குச் சென்றால் அரசன் பக்கத்திலுள்ளவர் ஆங்கிருப்பர்; உய்யானத்திற் சென்று பறிக்கலா மெனில், வானோராலன்றி மக்களால் விரும்பப்படாதனவும் வண்டு மொய்க்காதனவுமாகிய வாடாத மலர் மாலைகளை மரங்கள் தூக்குதலால், கையிற் பாசமுடைய பூதத்தாற்காக்கப்படுவதென்று கருதி, அதன்கண் அறிவுடையோர் செல்லார்; சம்பாதி வனமும், கவேர வனமும் தீண்டி வருத்தும் தெய்வங்களாற் காக்கப் படுதலின் அவற்றின் கண்ணும் அறிவுடையோர் செல்லார்; புத்த தேவன் ஆணையால் பல மரங்களும் எப்பொழுதும் பூக்கும் உவவனம் என்பதொன்றுண்டு; அவ்வனத்தினுள்ளே பளிங்கு மண்டபம் ஒன்றுளது; அதனுள்ளே சில உண்மைகளைத் தெரிவித்தற் பொருட்டு மயனால் நிருமிக்கப்பட்ட தாமரைப் பீடிகை ஒன்றுளது; அவ் வனத்திலன்றி நின்மகள் வேறு வனங்களிற் செல்லுதற்குரியளல்லள்; அவளுடன் யானும் போவேன்;" என்று கூறிச் சுதமதி மணிமேகலையுடன் வீதியிற் செல்லும்பொழுது, உண்ணாநோன்பி யொருவனைத் தொடர்ந்து கள்ளுண்ணுமாறு வற்புறுத்தும் களிமகன் பின்செல்வோரும், பித்தனொருவனுடைய விகாரச் செய்கைகளைக் கண்டு வருந்தி நிற்போரும், பேடு என்னுங் கூத்தினைக் கண்டு நிற்போரும், மாளிகைகளில் எழுதப்பட்டுள்ள கண்கவர் ஓவியங்களைக் கண்டு நிற்போரும், சிறு தேரின்மேலுள்ள யானையின் மீது சிறுவர்களை ஏற்றி 'முருகன்விழாக் காண்மின்' என மகளிர் பாராட்டுதலைக் கண்டு நிற்போரும் ஆகிய பல குழுவினரும் முன்பு விராடன் பேரூரில் பேடியுருக்கொண்டு சென்ற அருச்சுனனைச் சூழ்ந்த கம்பலை மாக்கள் போல் மணிமேகலையைச் சூழ்ந்துகொண்டு, 'இத்துணைப் பேரழகுடைய இவளைத் தவநெறிப்படுத்திய தாய் கொடியளாவள்; இவள் வனத்திற் செல்லின் ஆங்குள்ள அன்னப் பறவை முதலியன இவள் நடை முதலியவற்றைக் கண்டு என்ன துன்பமுறா' என்று இவை போல்வன கூறி, அவளழகைப் பாராட்டி வருந்தி நின்றனர்; மணிமேகலை சுதமதியுடன் பலவகை மலர்களாலும் வித்தரியற்றிய சித்திரப்படாம் போர்த்தது போல் விளங்கிய உவவனத்தின்கண் மலர் கொய்யப் புகுந்தனள். (இதிற் கூறப்பட்டுள்ள களிமகன், பித்தன் என்போருடைய இயல்புகள் படித்து இன்புறற்பாலன. ஒரு நகர வீதியில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சிகளை இடனறிந்து ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ள திறம் பாராட்டற்குரியது. வயந்த மாலைக்கு மாதவி யுரைத்த உயங்குநோய் வருத்தத் துரைமுன் றோன்றி மாமலர் நாற்றம் போன்மணி மேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாதலின் 5 தந்தையும் தாயுந் தாநனி யுழந்த வெந்துய ரிடும்பை செவியகம் வெதுப்பக் காதல் நெஞ்சங் கலங்கிக் காரிகை மாதர் செங்கண் வரிவனப் பழித்துப் புலம்புநீ ருருட்டிப் பொதியவிழ் நறுமலர் 10 இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட மாதவி மணிமே கலைமுகம் நோக்கித் தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையிற் கண்ணீர் மாற்றித் தூநீர் மாலை தூத்தகை இழந்தது 15 நிகர்மலர் நீயே கொணர்வா யென்றலும் மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும் சுதமதி கேட்டுத் துயரொடுங் கூறும் குரவர்க் குற்ற கொடுந்துயர் கேட்டுத் தணியாத் துன்பந் தலைத்தலை எய்தும் 20 மணிமே கலைதன் மதிமுகந் தன்னுள் அணிதிகழ் நீலத் தாய்மல ரோட்டிய கடைமணி யுகுநீர் கண்டன னாயிற் படையிட்டு நடுங்குங் காமன் பாவையை 25 ஆடவர் கண்டால் அகறலு முண்டோ பேடிய ரன்றோ பெற்றியின் நின்றிடின் ஆங்ஙன மன்றியும் அணியிழை கேளாய் ஈங்கிந் நகரத் தியான்வருங் காரணம் பாரா வாரம் பல்வளம் பழுநிய காராளர் சண்பையிற் கௌசிக னென்போன் 30 இருபிறப் பாளன் ஒருமக ளுள்ளேன் ஒருதனி யஞ்சேன் ஓரா நெஞ்சமோடு ஆரா மத்திடை அலர்கொய் வேன்றனை மாருத வேகனென் பானோர் விஞ்சையன் திருவிழை மூதூர் தேவர்கோற் கெடுத்த 35 பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் தாரன் மாலையன் றமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் எடுத்தனன் எற்கொண் டெழுந்தனன் விசும்பிற் படுத்தன னாங்கவன் பான்மையே னாயினேன் 40 ஆங்கவன் ஈங்கெனை அகன்றுகண் மாறி நீங்கினன் றன்பதி நெட்டிடை யாயினும் மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான் தனித்தலர் கொய்யுந் தகைமைய ளல்லள் பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர் 45 இலவந் திகையின் எயிற்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர் விண்ணவர் கோமான் விழாக்கொள் நன்னாள் மண்ணவர் விழையார் வானவ ரல்லது பாடுவண் டிமிரா பன்மரம் யாவையும் 50 வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் கைபெய் பாசத்துப் பூதங் காக்குமென்று உய்யா னத்திடை உணர்ந்தோர் செல்லார் வெங்கதிர் வெம்மையின் விரிசிறை யிழந்த சம்பாதி யிருந்த சம்பாதி வனமும் 55 தவாநீர்க் காவிரிப் பாவைதன் தாதை கவேரனாங் கிருந்த கவேர வனமும் மூப்புடை முதுமைய தாக்கணங் குடைய யாப்புடைத் தாக அறிந்தோ ரெய்தார் அருளும் அன்பும் ஆருயி ரோம்பும் 60 ஒருபெரும் பூட்கையும் ஒழியா நோன்பிற் பகவன தாணையிற் பன்மரம் பூக்கும் உவவன மென்பதொன் றுண்டத னுள்ளது விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம் பளிக்கறை மண்டப முண்டத னுள்ளது 65 தூநிற மாமணிச் சுடரொளி விரிந்த தாமரைப் பீடிகை தானுண் டாங்கிடின் அரும்பவிழ் செய்யும் அலர்ந்தன வாடா சுரும்பின மூசா தொல்யாண்டு கழியினும் மறந்தேன் அதன்திறம் மாதவி கேளாய் 70 கடம்பூண் டோர்தெய்வங் கருத்திடை வைத்தோர் ஆங்கவ ரடிக்கிடின் அவரடி தானுறும் நீங்கா தியாங்கணும் நினைப்பில ராயிடின் ஈங்கிதன் காரணம் என்னை யென்றியேல் சிந்தை யின்றியுஞ் செய்வினை யுறுமெனும் 75 வெந்திறல் நோன்பிகள் விழுமங் கொள்ளவும் செய்வினை சிந்தை யின்றெனின் யாவதும் எய்தா தென்போர்க் கேது வாகவும் பயங்கெழு மாமல ரிட்டுக் காட்ட மயன்பண் டிழைத்த மரபின ததுதான் 80 அவ்வன மல்ல தணியிழை நின்மகள் செவ்வனஞ் செல்லுஞ் செம்மை தானிலள் மணிமே கலையொடு மாமலர் கொய்ய அணியிழை நல்லாய் யானும் போவலென் றணிப்பூங் கொம்பர் அவளொடுங் கூடி 85 மணித்தேர் வீதியிற் சுதமதி செல்வுழீஇச் சிமிலிக் கரண்டையன் நுழைகோற் பிரம்பினன் தவலருஞ் சிறப்பின் அராந்தா ணத்துளோன் நாணமும் உடையும் நன்கனம் நீத்துக் காணா உயிர்க்குங் கையற் றேங்கி 90 உண்ணா நோன்போ டுயவவி யானையின் மண்ணா மேனியன் வருவோன் றன்னை வந்தீ ரடிகணும் மலரடி தொழுதேன் எந்தம் அடிகள் எம்முரை கேண்மோ அழுக்குடை யாக்கையிற் புகுந்த நும்முயிர் 95 புழுக்கறைப் பட்டோர் போன்றுளம் வருந்தா திம்மையும் மறுமையும் இறுதியி லின்பமும் தன்வயிற் றரூஉமென் தலைமக னுரைத்தது கொலையு முண்டோ கொழுமடற் றெங்கின் விளைபூந் தேறலின் மெய்த்தவத் தீரே 100 உண்டு தெளிந்திவ் யோகத் துறுபயன் கண்டா லெம்மையுங் கையுதிர்க் கொண்மென உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற் றுண்மென இரக்குமோர் களிமகன் பின்னரும் கணவிரி மாலை கட்டிய திரணையன் 105 குவிமுகி ழெருக்கிற் கோத்த மாலையன் சிதவற் றுணியொடு சேணோங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ் பொடித்துக் கட்டிய உடையினன் வெண்பலி சாந்த பெய்ம்முழு துறீ இப் பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு 110 அழூஉம் விழூஉம் அரற்றுங் கூஉம் தொழூஉம் எழூஉஞ் சுழலலுஞ் சுழலும் ஓடலு மோடும் ஒருசிறை யொதுங்கி நீடலும் நீடும் நிழலொடு மறலும் மைய லுற்ற மகன்பின் வருந்திக் 115 கையறு துன்பங் கண்டுநிற் குநரும் சுரியற் றாடி மருள்படு பூங்குழல் பவளச் செவ்வாய்த் தவள வாள்நகை ஒள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் தோட்டுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதல் 120 காந்தளஞ் செங்கை ஏந்திள வனமுலை அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல் இகந்த வட்டுடை எழுதுவரிக் கோலத்து வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி நீணில மளந்தோன் மகன்முன் னாடிய 125 பேடிக் கோலத்துப் பேடுகாண் குநரும் வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச் சுடும ணோங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமங் காட்டி 130 வெண்சுதை விளக்கத்து வித்தக ரியற்றிய கண்கவர் ஓவியங் கண்டுநிற் குநரும் விழவாற்றுப் படுத்த கழிபெரு வீதியிற் பொன்னாண் கோத்த நன்மணிக் கோவை ஐயவி யப்பிய நெய்யணி முச்சி 135 மயிர்ப்புறஞ் சுற்றிய கயிற்கடை முக்காழ் பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழச் செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப அற்றங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் 140 தொடுத்தமணிக் கோவை உடுப்பொடு துயல்வரத் தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப் பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத் திலங்குதொடி நல்லார் சிலர்நின் றேற்றி ஆலமர் செல்வன் மகன்விழாக் கால்கோள் 145 காண்மி னோவெனக் கண்டுநிற் குநரும் விராடன் பேரூர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின் மணிமே கலைதனை வந்துபுறஞ் சுற்றி அணியமை தோற்றத் தருந்தவப் படுத்திய 150 தாயோ கொடியள் தகவிலள் ஈங்கிவள் மாமலர் கொய்ய மலர்வனந் தான்புகின் நல்லிள வன்னம் நாணா தாங்குள வல்லுந கொல்லோ மடந்தை தன்னடை மாமயி லாங்குள வந்துமுன் நிற்பன 155 சாயல்கற் பனகொலோ தையல் தன்னுடன் பைங்கிளி தாமுள பாவைதன் கிளவிக் கெஞ்சல கொல்லோ இசையுந வல்ல என் றிவை சொல்லி யாவரும் இனைந்துகச் செந்தளிர்ச் சேவடி நிலம்வடு வுறாமல் 160 குரவமும் மரவமுங் குருந்துங் கொன்றையும் திலகமும் வகுளமுங் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும் பிடவமுந் தளவமும் முடமுட் டாழையும் குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமும் 165 செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும் எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே ஒப்பத் தோன்றிய உவவனந் தன்னைத் 170 தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென். உரை 1-4. வயந்த மாலைக்கு மாதவி உரைத்த - வயந்த மாலையினிடம் மாதவி கூறிய, உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி - பிறரும் வருந்துதற்குக் காரணமாகிய மிக்க துன்பந்தரும் மொழி யினிடமாக உதித்து, மாமலர் நாற்றம்போல்-சிறந்த மலரிடத்து நாற்றம்போல், மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்-மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ப்பட்டதாதலால்; உரைத்த உரை யென்க. ஏது நிகழ்ச்சி-பயனுக்கு ஏதுவாகிய வினையின் நிகழ்ச்சி; வினை பயன்கொடுத்தற்குத் தோன்றுவது என்ற படி; 1"ஏது நிகழ்ச்சி யீங்கின் றாதலின்" 2"ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள" என இந்நூலுள்ளே பின்னரும் இப்பெயர் பயின்று வருகின்றது. மாமலர் நாற்றம்போல் என்ற உவமையால் நல்வினை பயனளித்தற் கெதிர்ந்துள தென்பது பெற்றாம். மலரின்கண் நாற்றம் அடங்கியிருந்து பின் வெளிப்படுதல் போல் கன்மமும் மறைந்திருந்து பயனளிக்குங் காலம் வந்துழி வெளிப்படு மென்க. 5-10. தந்தையும் தாயும் தாம் நனி உழந்த - தன் தந்தை தாயரான கோவலனும் கண்ணகியும் உற்று மிக வருந்திய, வெந்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப-கொடிய துயரினை விளைக்கும் துன்ப மொழிகள் காதினுள்ளே சுட, காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை - மணிமேகலை அவர்பால் அன்பு மிக்க உள்ளங் கலக்க முற்று, மாதர் செங்கண் வரி வனப்பு அழித்து - அழகிய சிவந்த கண்களில் மை எழுதின அழகினைச் சிதைத்து, புலம்பு நீர் உருட்டி-வருத்தத்தா லுண்டாகிய கண்ணீரை உதிர்த்து, பொதி அவிழ் நறுமலர் இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட - கட்ட விழ்ந்து விளங்குகின்ற இதழ்களையுடைய நறிய மலர் மாலையின் மீது வீழ்த்தி அதனை நீராட்ட; இடும்பை-மாதவி கூறிய துன்ப மொழிகள், மாதர்-காதல்; ஈண்டு அழகு. வரி-மையெழுதிய கீற்று; 1"வரிவனப் புற்ற" என்பது புறம். புலம்புநீர்-தனித்து வீழ்கின்ற நீர்த் துளியுமாம். நீராட்ட - நனைக்க என்றபடி. 11-17. மாதவி மணிமேகலை முகம் நோக்கி-மாதவி மணிமேகலையின் முகத்தினைப் பார்த்து, தாமரை தண்மதி சேர்ந்ததுபோலக் காமர் செங்கையில் கண்ணீர் மாற்றி-செந்தாமரைமலர் குளிர்ச்சி பொருந்திய முழுமதியைச் சேர்ந்ததுபோலத் தன் விருப்பம் பொருந்திய சிவந்தகையினால் மணிமேகலையின் கண்ணினின் றொழுகும் நீரைத் துடைத்து, தூநீர் மாலை தூத்தகை இழந்தது - தூய நீர்மையையுடைய நறுமலர் மாலை கண்ணீரால் நனைந்து தூய தன்மையை இழந்தது ஆகலின், நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்-வேறு மாலை தொடுத்தற்கு ஒளி பொருந்திய மலர்களை நீயே சென்று கொண்டுவருக என உரைத்தலும், மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்-தேன்பொருந்திய மலர் களை யணிந்த கூந்தலையுடைய மணிமேகலையுடன் மலர் தொடுத்துக் கொண்டிருக்கும், சுதமதி கேட்டுத் துயரொடும் கூறும் - சுதமதி யென்பவள் அதனைக் கேட்டுத் துயருடன் கூறுகின்றாள்; மாதவி நோக்கி, மாற்றி, கொணர்வாய் என்றலும், சுதமதி கேட்டுக் கூறுமென்க. போல - போலும்படி, தாமரை மலர் மாதவி கைக்கும், மதி மணிமேகலை முகத்திற்கும் உவமை. காமர் - விருப்பம்; உடையாளது விருப்பம் கையின்மேல் ஏற்றப்பட்டது; அழகுமாம். நிகர்-ஒளி; 2"நீர்வார் நிகர் மலர்" 3“அரும்பவிழ் முல்லை நிகர் மலர்" என்பன காண்க. நீயே கொணர்வாய் என்றது கழுவாய் கூறுவது போன்று அவளது துயரினை மாற்றுவதோ ருபாயங் கருதியாம். 18-25. குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு-தாய் தந்தையர்க்கு நேர்ந்த கொடிய துன்பத்தினைக் கேட்டு, தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்-ஆறாத் துயரினை மேன்மேல் அடையும், மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்-மணிமேகலையினது மதிபோலும் முகத்தினுள், அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய-அழகு விளங்குகின்ற மெல்லிய நீலமலரை வென்ற, கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின் - கண்ணினது கருமணியின் கடையினின்று சிந்துகின்ற நீரைக் கண்டனனாயின், படைஇட்டு நடுங்கும் காமன்-காமன் தன் படையினை எறிந்து நடுங்குவன், பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ - பாவையனையாளை ஆடவர் காணின் விட்டு நீங்குதலும் உண்டோ?, பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின் - அங்ஙனம் தம் இயற்கை திரியாமல் நிற்பரேல் அவர்தாம் பேடியர் அல்லரோ; ஆய்-ஆராய்ந்தெடுத்த என்றுமாம். 1"ஆவின் கடைமணி யுகுநீர்" என்பது ஈண்டு அறியற்பாலது. அவளாற் பகைவெல்லக் கருதியிருந்த காமன் இனி வெல்லுதலரிதென்று படையை எறிந்து நடுங்குவா னென்க. உண்டோ, ஓ ; எதிர்மறை. பெற்றி - இயல்பு. பெற்றியில் நிற்றலாவது - இவளை விரும்பாது நிற்றல். ஆடவர் என்றது ஈண்டு இன்பத்துறை நிற்பாரைக் கருதிற்று. பேடியர் - பெண்ணின்பம் துய்க்குந் தகுதியில்லாதவர். 26-27. ஆங்ஙனம் அன்றியும் - அஃதன்றியும், அணியிழை கேளாய் ஈங்கு இந்நகரத்து யான் வருங் காரணம் - இந்நகரத்தின் கண் யான் வந்த காரணத்தை மாதவி கேட்பாயாக; ஆங்ஙனம்: சுட்டு. ஈங்கு: அசை. 28-32. பாராவாரம் பல்வளம் பழுநிய-கடல் தரும் பல வளங் களும் முதிர்ந்த, காராளர் சண்பையில் - காராளருடைய சண்பை நகரத்தில், கௌசிகன் என்போன் இரு பிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்-கௌசிகன் என்னும் அந்தணனுக்கு ஒரே மகளாயுள்ளயான், ஒரு தனி அஞ்சேன் ஓரா நெஞ்சமோடு - தன்னந்தனியே செல்வதனை அஞ்சாமல் ஒன்றையும் ஆராயாத உள்ளத்தோடு, ஆராமத்திடை அலர் கொய்வேன்தனை-உப வனத்திலே மலர் கொய்வேனாயினேன்; அங்ஙனம் கொய்த என்னை; பாராவாரப் பல்வளம் என்பது மெலிந்து நின்றது. காராளர்-ஓர் சாதியார்; வேளாளருமாம். சண்பை - ஒரு நகரம்; சீகாழியுமாம். 33-41. மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் - மாருதவேகன் என்னும் ஒரு வித்தியாதரன், திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த - திருமகளும் விரும்பும் இக் காவிரிப்பூம்பட்டினம் இந்திரனுக்குச் செய்யலுற்ற, பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் - பெரிய விழாவினைக் காணும் நினைவுடன் வருகின்றவனாகிய, தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர் தொழு படிமையன் - பூமாலையை யுடையவனும் மணிமாலையையுடையவனும் பொற்பூணினை யுடையவனும் பூமியிலுள்ளோர், காணலாகாத பலருந் தொழும் தெய்வ வடிவினை யுடையவனுமாகிய அவன், எடுத்தனன் எற்கொண்டு எழுந்தனன் விசும்பில் படுத்தனன் - என்னை எடுத்துக் கொண்டு விசும்பில் எழுந்து அகப் படுத்திக் கொண்டான்; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன் - அப்பொழுது யான் அவனுடைய இன்பத்தின் பகுதியை யுடையேனாயினேன்; ஆங்கவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும்-அவ்விஞ்சையன் தன் ஊர் சேய்மைக்கண் உள்ளதானாலும் விழித்த கண் இமைக்கும் அளவிலே என்னை இந்நகரில் விட்டு மறைந்து நீங்கினன்; தாரன் மாலையன் பூணினன் படிமையனாய் வருவோனாகிய விஞ்சையன் என்றியைக்க. 1"தாரன் ......படிமையன்," என்னும் இவ்விரண்டடியும் சிலப்பதிகாரத்தும் வந்துள்ளமை அறிக. காணாப் படிமையன் பலர்தொழு படிமையன் என்க. கண்மாறி - கண்ணோட்டமின்றி என்றுமாம். 42-43. மணிப்பூங் கொம்பர் மணிமேகலைதான் - மாணிக்கப் பூங்கொம்பனைய மணிமேகலை, தனித்து அலர்கொய்யும் தகைமையள் அல்லள் - தனியே சென்று மலர் கொய்யும் தகுதி வாய்ந்தவ ளல்லள்; நீங்கினன்; மகளிர்க்கு இங்ஙனம் இடுக்கண் நிகழ்வது உண்டாகலின்தனித் தலர் கொய்யுந் தகைமைய ளல்லள் என விரித்துரைக்க. 44-46. பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் - பல மலர்களை நிரைத்த நல்ல மரநிழலையுடைய, இலவந்திகையின் எயிற்புறம் போகின் - இலவந்திகையின் மதிற்புறத்தே சென்றால், உலக மன்னவன் உழையோர் ஆங்குளர் - சோழ மன்னனது மருங்கிலுள்ளோர் ஆண்டுறைவர் ; மரப் பந்தர் - மரங்களாகிய பந்தர் என்றும், சோலை என்றுமாம். இலவந்திகை - இயந்திர வாவி; 1"நிறைக்குறி னிறைந்து போக்குறிற் போகும், பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை," என்பது காண்க, 2"இலவந்திகை-நீராவியைச் சூழ்ந்த வயந்தச் சோலை; அஃது அரசனும் உரிமையுமாடும் காவற்சோலை," என்பர் அடியார்க்கு நல்லார், உழையோர்-உரிமை மகளிர்; காவலாளருமாம். உழையோர் ஆங்குளர் என்றது அதன்கட் போகலாகாது என்றபடியாம். 47-52. விண்ணவர் கோமான் விழாக்கொள் நல்நாள் - இந்திரனுக்கு விழாச்செய்யும் நல்ல நாட்களில், மண்ணவர் விழையார் வானவர் அல்லது - தேவரையன்றி மக்கள் விரும்பார் ஆதலின், பாடு வண்டு இமிரா-பாடுகின்ற வண்டுகள் ஒலிக்காதனவாய், பன்மரம் யாவையும் -ஆண்டுள்ள பல மரங்களும், வாடா மாமலர் மாலைகள் தூக்கலின் - பெருமை பொருந்திய வாடாத பூமாலைகளைத் தொங்க விடுதலினால், கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று - கையினிடத்துக் கொண்ட பாசத்தினையுடைய பூதம் காக்குமென்று, உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார் - உய்யானத்தின்கண் அறிந்தோர் செல்லமாட்டார்கள்; வானவர் விழைதலன்றி மண்ணவர் விழையார் என்க. வானவர் விரும்புதலால் வண்டு இமிராவாயின; 3"சுரும்பு மூசாச் சுடர்ப்பூங்காந்தள்" என்பது காண்க. வாடாத மலர் மாலைகள் தேவர்களால் நிருமிக்கப்பட்டன. மாலைகள் தூக்கலின் பூதங் காக்குமென்று கருதுவாராவர். உய்யானம் - உத்தியானம் ; அரசர் விளையாடுஞ்சோலை. 53-58. வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த-ஞாயிற்றின் கதிர் வெப்பத்தால் விரிந்த சிறகினை இழந்த, சம்பாதி இருந்த சம்பாதி வனமும்-சம்பாதி என்பவன் இருந்த சம்பாதி வனமும், தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை - அழியாத நீர்ப்பெருக் கினையுடைய காவிரி நங்கையின் தந்தையாகிய, கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும் - கவேரன் எனபவன் இருந்த கவேர வனமும், மூப்புடை முதுமைய தாக்கணங்கு உடைய - மிக்க முதுமையுடை யனவாகிய தீண்டி வருத்தும்பெண் தெய்வங்களை உடையனவாதலின், யாப்புடைத்தாக அறிந்தோர் எய்தார் - அறிவுடையோர் அவற்றை உறுதியுடையவாகக் கருதி அவற்றின்கட் செல்லார்; சம்பாதி - கழுகரசன் ; சடாயுவினுடன் பிறந்தவன்; இவன் வானிலே பறந்து ஞாயிற்று மண்டிலத்தின் அணிமையிற் சென்ற காலை ஞாயிற்றின் வெம்மையாற் சிறை தீயப்பெற்றனன் என்பர். சம்பாதி, சடாயு என்னும் இருவரும் இறைவனைப் பூசித்த இடம் திருப்புள் ளிருக்குவேளூர் என்னும் பதியாகும்; 1"தள்ளாய சம்பாதி சடாயென் பார் தாமிருவர், புள்ளானார்க் கரையரிடம் புள்ளிருக்கு வேளூரே," என்பது காண்க. புகார் நகரம் அப்பதிக்கு அணித்தாகலின் சம்பாதி ஆண்டு வந்திருத்தல் இயல்பேயாகும். வேத்து முனியாகிய கவேரன் என்பவன் பிரமனைக் குறித்து அருந்தவம் புரிந்து அவனருளால் விட்டுணு மாயையைப் புதல்வியாகப் பெற்று முத்தி யெய்தினனென்றும், பின்பு அக்கன்னி பிரமன் கட்டளையால் நதி வடிவுற்றமையால் அந்நதி காவேரியெனப் பெயர் பெற்றதென்றும் புராணங் கூறுமென்பர். யாப்புடைத்தாக-இழுக்கில்லனவாக; யாப்புடைத்தாக அணங் குடைய என்றியைத்தலுமாம். 59-62. அருளும் அன்பும் ஆருயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின் - கருணையும் நேயமும் ஆருயிர்களைப் பாதுகாக்கும் ஒப்பற்ற பெரிய மேற்கோளும் நீங்காத நோன் பினையுடைய, பகவனது ஆணையின் பல்மரம்பூக்கும் உவவனம் என்பது ஒன்று உண்டு - புத்த தேவனது ஆணையால் பல மரங்களும் இடையறாது பூக்கின்ற உவவனம் என்னும் பெயருள்ள சோலை ஒன்றுண்டு; அருள் - அன்பு காரணமாகத் தோன்றும் அளி. அன்பு - அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம். பூட்கை - மேற்கோள். 62-66. அதன் உள்ளது-அச்சோலையின் உள்ளிடத்ததாகிய, விளிப்பு அறை போகாது மெய்புறத்து இடூஉம் பளிக்கறை மண்டபம் உண்டு - ஓசை வெளியே போகாமல் தன்னைச் சார்ந்தாருடம்பை மட்டும் புறத்தே தோற்றுவிக்கும் பளிக்கு மண்டபம் ஒன்று உண்டு; அதன் உள்ளது - அம்மண்டபத்தின் உள்ளிடத்ததாகிய, தூநிற மாமணிச் சுடர்ஒளி விரிந்த தாமரைப்பீடிகை தான் உண்டு- தூய நிறமுடைய மாணிக்கத்தின் மிக்க ஒளிபரந்த பதுமபீடம் ஒன்றுண்டு; அதன் உள்ளதாகிய மண்டபம் என்றும், அதன் உள்ளதாகிய பீடிகை என்றும் ஒட்டுக. அறை போதல்-வெளியே போதல். தன்னுள் எய்தினவரது ஓசையை வெளிப்படுத்தாது, உருவினை மட்டும் வெளிப் படுத்துவதென்று பளிங்கு மண்டபத்தின் இயல்பு கூறியபடி. பளிக்கறை மண்டபம்-பளிங்கறையாகிய மண்டபம்; பளிங்குப் பாறையாலாகிய மண்டபமுமாம். தாமரைப் பீடிகை-புத்தன் பாதபீடம். "புத்தன் பாதத்தை மணிபத்மம் என்றலும், அதனை வழிபடுவோர் அதுபற்றி, ‘ஓம் மணிபத்மே ஹும்' என்ற மந்திரத்தை ஜபித்தலும் பௌத்த சமய மரபு," என்பர். 66-72. ஆங்கு இடின் அரும்பு அவிழ் செய்யும்-அப்பீடத்தில் இட்டால் அரும்புகள் மலரா நிற்கும், அலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா தொல் யாண்டு கழியினும்-அலர்ந்த மலர்கள் பல ஆண்டுகள் சென்றாலும் வாடமாட்டா, அவற்றின் கண் வண்டினங்களும் மொய்க்கா, மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய் - மாதவி அதன் இயல்பு ஒன்றினை நன்கு மறந்தேன் இப்பொழுது அதனைக் கேட்பாயாக, கடம் பூண்டு-காணிக்கை செலுத்தலை மேற்கொண்டு, ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர் - ஒரு தெய்வத்தை மனத்திலே வைத்து, ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்- அப்பீடத்தின்கண் அவரடியின் பொருட்டு மலரை இட்டால் அம்மலர் அத்தெய்வத்தினடியைச் சென்று சேரும்; நீங்காது யாங்கணும் நினைப் பிலராய் இடின் - நினைப் பொன்றுமின்றி இட்டால் அம்மலர் யாண்டும் செல்லாது அவண் தங்கும்; தொல் யாண்டு-பல் யாண்டு; கழிந்த ஆண்டுகள் தொன்மையவாதலின் 'தொல் யாண்டு', என்றார் - தொல்யாண்டு கழியினும் வாடா மூசா வென்க. மறந்தேன் என்றது உலக வழக்குப் பற்றி. கடம் - கடன்; காணிக்கை. வைத்தோர் ; முற்றெச்சம். மலரை இடின் என்க. 73-79. ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்-இதற்குரிய காரணம் யாதென வினவுதியாயின், சிந்தை இன்றியும் செய்வினை உறும் எனும்-மனத்தொடு கூடாத வழியும் செய்தவினை பின்வந்து பயன்றரும் என்கின்ற, வெந்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும் -வலியினையுடைய நோன்பிகள் வருத்தங் கொள்ளவும், செய்வினை சிந்தை இன்றெனில் யாவதும் எய்தாது என்போர்க்கு ஏதுவாகவும்- மனத்தொடு கூடாவிடின் செய்த வினை சிறிதும் வந்து பயனளியாது என்போர்க்குக் கருவியாகவும், பயம்கெழு மா மலர் இட்டுக் காட்ட மயன் பண்டு இழைத்த மரபினது அதுதான் - மலர்களை இட்டுக் காட்டுமாறு மயன் என் போனால் முன்னர்ச் செய்யப்பட்ட பயன் சிறந்த முறைமையை யுடையதாகும் அத்தாமரைப் பீடம்; பயங்கெழு மரபினது எனக் கூட்டுக. மனத்தொடு கூடாவழி வினை பயன்றரா தென்பதனை, 1"இன்னா வெனத்தா ணுணர்ந்தவை துன்னாமை வேண்டும்" 2"மனத்தானாம் மாணா செய்யாமை தலை" என்னுந் திருக்குறள்களானும், அவற்றிற்கு முறையே, "அறமும் பாவமும் உளவாவது மனமுளனாய வழியாகலான் "உணர்ந்தவை என்றார்" எனவும், "ஈண்டு மனத்தா னாகாத வழிப் பாவமில்லை யென்பது பெற்றாம்" எனவும் பரிமேலழகர் கூறிய உரையானும் அறிக. 80-85 அவ்வனம் அல்லது-அச்சோலையின்கணல்லது, அணியிழை - மாதவியே, நின்மகள் செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்- நின்மகள் வேறாகச் செல்லும் தகுதியில்லாதவள்; மணிமேகலை யொடு மாமலர் கொய்ய - மணிமேகலையுடன் மலர் கொய்யுமாறு, அணியிழை நல்லாய் யானும் போவல் என்று-அழகிய அணிகலனையுடைய மாதவி, யானும் செல்வேன் என்று, அணிப்பூங் கொம்பர் அவளொடும் கூடி - அழகிய பூங்கொம்பனைய மணிமேகலையுடன் சேர்ந்து, மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ - மணிகளுடன் கூடிய தேர்கள் செல்லும் வீதியின்கண் சுதமதி செல்லும்பொழுது; செவ்வனம் - வேறாக; 3"திருமக ளிருக்கை செவ்வனங் கழிந்து" என்புழி, செவ்வனம் கழிந்து எனபதற்கு, வேறாகக் கழிந்து என்று அடியார்க்கு நல்லார் பொருளுரைத்துள்ளமை காண்க; நேராக என்றுமாம். செம்மை - ஈண்டுத் தகுதி. 86-103. சிமிலிக் கரண்டையன்-உறியிலே வைத்த குண்டிகையை யுடையவனும், நுழைகோல் பிரம்பினன்-நுண்ணிதாய்த் திரண்ட பிரம்பினை யுடையவனும், தவலரும் சிறப்பின் அராந்தாணத்து உளோன் - கேடில்லாத மேன்மையையுடைய அருகன் கோட்டத்தே யுள்ளவனும், நாணமும் உடையும் நன்கனம் நீத்து - நாணத்தையும் ஆடையையும் அறவே அகற்றி, காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி- கண்களாற் காண வியலாத சிற்றுயிர்க்கும் நடத்தலாதி தன் றொழில்களால் துன்பமுண்டாமோ எனச் செயலற்று ஏங்கி, உண்ணா நோன் போடு - உண்ணா விரதத்துடன், உயவல் யானையின் மண்ணா மேனியன் வருவோன் தன்னை- வருந்து தலையுடைய யானையைப் போல வருவோனுமாகிய கழுவாத உடலை யுடையவனை, வந்தீர் அடிகள் நும் மலரடி தொழுதேன் - வாரும் அடிகேள் நும்முடைய மலர்போலும் திருவடிகளை வணங்கினேன், எந்தம் அடிகள் எம்உரை கேண்மோ- எம்முடைய பெருமானே அடியேன் மொழியைக் கேளும், அழுக்குடை யாக்கையில் புகுந்த நும் உயிர் - அழுக்குச் செறிந்த உடலின்கட் புகுந்த நும்முடைய உயிரானது, புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது - புழுக்கத் தினைத் தரும் அறையில் அகப்பட்டோரைப்போல உள்ளம் வருந்தா வண்ணம், இம்மையும் மறுமையும் இறுதிஇல் இன்பமும் தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது-எம் தலைவருரைத்ததாகிய இம்மையின்பத்தினையும் மறுமை யின்பத்தினையும் முடிவில்லாத முத்தி யின்பத்தினையும் தன்னிடத்திருந்து தருகின்றதான, கொலையும் உண்டோ கொழுமடல் தெங்கின் விளைபூந் தேறலின் - கொழுவிய மடல்களையுடைய தென்னையின் கண் விளைகின்ற இனிய மதுவில் கொலையென்பதும் உண்டோ?, மெய்த் தவத்தீரே - உண்மைத் தவமுடைய அடிகளே, உண்டு தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் - இதனை உண்டு தெளிவு பெற்று இத் தவநெறியில் இதனின் மிக்க பயனைக் கண்டால், எம்மையும் கையுதிர்க் கொண்மென - தேறலையன்றி எம்மையும் அகற்றிவிடும் என்று கூறி, உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று - உண்ணா நோன்பியாகிய சைன முனிவருடன் சபதங் கூறி, உண்ம் என் இரக்கும் ஓர் களிமகன் பின்னரும் - உண்ணும் என்று இரக்கின்ற ஒரு கட்குடியன் பின் நிற்போரும்; சிமிலி-உறி. கரண்டை - கரண்டகம்; குண்டிகை; 1"கல்பொளிந் தன்ன விட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி" என்பது காண்க. அராந்தாணம் - அருகத்தானம். வந்தீரடிகள், எந்தமடிகள், மெய்த்தவத்தீர் எனக் களிமகன் பலகாற் கூறுவது இகழ்ச்சி. மண்ணா மேனியன் ஆகலின் அழுக்குடை யாக்கை என்றான். தலைமகன் - ஆசான். கொலையுமுண்டோ என்றது கொலை யொன்றுமே கடியற்பாலதென்பதனை உடன்பட்டபடி. தெங்கின் விளைபூந் தேறல் என்றது தேறலின் தூய்மை கூறியபடியாம். இவ் யோகத்து - நும்முடைய தவத்தில். இதனினும் உறுபயன் என விரிக்க. இனி, யோகம் - தேறலின் சேர்க்கை யென்றுமாம் : இதற்கு, கண்டால் அகற்றும் என்றது கண்டபின் அகற்றகில்லீர் என்னும் குறிப்பிற்று. கையுதிர் கொள்ளுதல்-கையை.அசைத்து விலக்குதல்; சீலமில்லாரைக் காணின் அவருடன் பேசாது அவரைப் போம்படி கையசைத்துக் குறிப்பித்தல் சைன முனிவர்க்கு இயல்பு. உண்ணா நோன்பி - இரண்டுவாவும் அட்டமியும் பட்டினி விட்டுண்ணும் விரதி; 1"பட்டினி நோன்பிகள்' என்பதனுரையும், 2"ஓவா திரண்டுவவு மட்டமியும் பட்டினிவிட்டொழுக்கங் காத்தல், தாவாத்தவ மென்றார்" என்பதும் காண்க. கரண்டையனும் பிரம்பின்னும் ஆகிய ஆராந்தாணத்துள்ளோன் நோன்போடு மேனியனாய் நீத்து ஏங்கி வருபவனை என்றியைத்துலுமாம். தருவதும் உரைத்ததுமாகிய தேறலில் கொலையுமுண்டோ எனக் கூட்டுக. தரூஉம் தலைமகன் எனலுமாம். கொள்ளும், உண்ணும் என்னும் ஏவல் முற்றுக்களில் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டது. பெருங் கதையிற் களிமகன் இயல்பாகக் கூறப் பட்டுள்ள, 3"துறக்கம் கூடினுந் துறந்திவ ணீங்கும், பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி, ஆர்த்த யாய னூர்க்களி மூர்க்கன், செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி, அவ்வழி வருமோ ரந்தணாளனைச், செல்ல லாணை நில்லிவ ணீயென, எய்தச் சென்று வைதவண் விலக்கி, வழுத்தினே முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப், பழித்துக் கூறு நின் பார்ப்பனக் கணமது, சொல் லாயாயிற் புல்லுவென் யானெனக், கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின்" என்பது ஈண்டு அறியற்பாலது. 104-115. கணவிரி மாலை கட்டிய திரணையன்-அலரிப்பூவால் திரணையாகக் கட்டப்பட்ட மாலையை யுடையனாய், குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன்-எருக்கினது குவிந்த முகைகளாற் கோக்கப் பெற்ற தாரினை யுடையனாய், சிதவல் துணியொடு சேண்ஓங்கு நெடுஞ்சினைத் ததர்வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்-சிதரின துணியோடு வானிலே உயர்ந்த பெரிய மரக் கிளைகளிலுள்ள செறிந்த சுள்ளிகளை ஒடித்துக் கட்டிய உடையை யுடையனாய், வெண்பலி சாந்தம் மெய்முழுது உறீஇ-வெண்ணீறுஞ் சந்தனமும் உடல் முழுதும் பூசிக் கொண்டு, பண்பில் கிளவி பலரொடும் உரைத்தாங்கு - பயனில்லாத சொற்களைப் பலரொடுங் கூறிக் கொண்டு, அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்-அழுதும் விழுந்தும் அரற்றியும் கூவியும், தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும் - தொழுதும் எழுந்தும் சுழலுதலைச் செய்தும்,. ஓடலும் ஓடும் - ஓடியும், ஒருசிறை ஒதுங்கி நீடலும் நீடும்-ஒரு பக்கமாக ஒதுங்கி நெடிது நின்றும், நிழலொடு மறலும்-நிழலுடன் பகைமை கொண்டும் நிற்கின்ற, மையலுற்ற மகன்பின் வருந்திக் கையறு துன்பம் கண்டு நிற்குநரும்- பித்துற்றவனது செயலற்ற துன்பத்தினைக் கண்டு வருந்தி அவன் பின்னே நிற்போரும்; கட்டிய திரள் புயன் என்பதும், மெய் முழுதுரீஇ என்பதும் பாடம். உரீஇ-உருவி; பூசி. ததர்-கொத்துமாம்; 1"சிதர்நனை முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத் ததர்" என்பதும் காண்க. வெண்பலி-வெண் ணீறு; சாம்பல். வெண்பலியாகிய சாந்தமெனக் கொண்டு வல்லொற்று விகாரத்தாற் றொக்க தெனினுமாம். சுழலலும் சுழலும்-சுழலுதலையும் செய்யும்; பின்வருவன வற்றிற்கும் இங்ஙனம் பொருள் கொள்க; 2"இயங்கலு மியங்கு மயங்கலு மயங்கும்" என்பதூஉம் அது. அழூஉம் முதலியவற்றை வினையெச்சப்படுத்து, நிற்கின்ற என ஒரு சொல் விரித்து முடிக்க; இனி, மையலுற்ற மகன் என்பதனை எழுவாயாக்கி, அழூஉம் முதலிய வினைகளோடு தனித்தனி முடித்து, அவன் என ஒரு சொல் வருவித்துரைத்தலுமாம். 116-125. சுரியல் தாடி மருள்படு பூங்குழல் - சுருண்ட தாடியும் இருண்ட அழகிய கூந்தலும், பவளச் செவ்வாய் தவள வாள்நகை-பவளம் போன்ற சிவந்த வாயும் வெண்மை மிக்க ஒள்ளிய பற்களும், ஒள் அரி நெடுங்கண்-ஒளிபொருந்திய அரிபடர்ந்த பெரிய கண்களும், வெள்ளிவெண் தோட்டு-வெள்ளிய சங்கினாற் செய்த காதணியும், கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறை நுதல் - கரியதாய் வளைந்த புருவத்தின் பக்கலில் வளைந்துள்ள பிறை போன்ற நெற்றியும், காந்தள் அம் செங்கை - காந்தள் மலர் போலுஞ் சிவந்தகையும், ஏந்து இள வனமுலை - ஏந்திய அழகிய இளங் கொங்கைகளும், அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல் - பெரிய அல்குலும் அழகிய நுண்ணிய இடையும், இகந்த வட்டுடை - முழந்தாளளவாக உடுக்கப்படும் உடையும், எழுதுவரிக் கோலத்து - தோள் முதலியவற்றில் எழுதப்பட்ட பத்திக் கீற்றும் உடைய, வாணன் பேரூர் மறுகிடைத் தோன்றி-வாணன் என்னும் அசுரனது பெரிய சோநகரத்தின் வீதியில் நின்று, நீணிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய - நிலமளந்த நெடுமாலின் மகனாகிய காமன் முன்னர் ஆடிய, பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்- பேடிக் கோலத்தையுடைய பேடு என்னுங் கூத்தினைக் காண்போரும்: சுரியல் - சுருளல்; தாடி - மோவாய் மயிர். மருள்-இருள். கொடி ஒழுங்குமாம். புருவமும் இரண்டு பக்கத்தும் வளைந்து நுதலும் என்றுரைத்தலும் பொருந்தும். இகந்த-தாள் முழுவதும் இல்லாத. தாடி முதலியவற்றையுடைய கோலம் எனவும், ஆடிய பேடிக் கோலம் எனவும் ஒட்டுக; அன்றி, தாடி முதலிய வற்றையுடைய பேடிக் கோலத்துடன் ஆடிய பேடு என்றுமாம். முன் ஆடிய பேடு இப்பொழுது நடிக்கப்படுவ தனை யென்க. பேடு-பதினோராடலுள் ஒன்று;அப் பதினொன்றையும், அவற்றை நிகழ்த்தியவர்களையும். "கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன், குடைதுடிமால் அல்லியமற் கும்பம் - சுடர் விழியாற், பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம், கொட்டியிவை காண்பதினோர் கூத்து" என்னும் வெண்பாவானறிக. பேடு - உழை காரணமாக வாணனாற் சிறைவைக்கப்பட்ட தன் மகன் அநிருத்தனைச் சிறைமீட்டுக் காமன் சோ நகரத் தாடிய ஆடல்; உழை-வாணன் மகள். 1"ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக், காம னாடிய பேடி யாடலும்" 2"சுருளிடு தாடி மருள்படு பூங்குழல், அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண், விரிவெண்டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச், சூடக வரிவளை யாடமைப் பனைத்தோள், வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப், பாடகச் சீறடி யாரியப் பேடி" என்பன அறியற்பாலன. 126-131. வம்பமாக்கள் கம்பலை மூதூர்-புதியராய் வரும் மக்களின் முழக்கம் மிகுந்த தொன்மையுடைய புகார் நகரில், சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கலாற் கட்டப்பட்டு உயர்ந்த பெரிய மாடங்கள்தோறும், மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி- குற்றமற்ற தெய்வ வடிவினையுடைய விண்ணவர் முதலாக எவ்வகைப்பட்ட உயிர்களையும் ஒப்புமை காட்டி, வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய - விளக்கத்தையுடைய வெள்ளிய சுதையினால் கைதேர்ந்த ஓவியக்காரர் செய்த, கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும் - கண்களைக் கவரும் வனப்புடைய ஓவியங்களைக் கண்டு நிற்போரும் ; சுடுமண்-செங்கல்; 3"சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பு" என்பது பெரும்பாண். படிவம் - தெய்வ வடிவம். உவமம்-ஒப்புமை; 4"எவ்வகைச் செய்தியு முவமங் காட்டி, நுண்ணிதி னுணர்ந்த நுழைந்த நோக்கிற், கண்ணுள் வினைஞரும்," 1"மயனெனக் கொப்பா வகுத்த பாவையின், நீங்கே னியான்" என்பதன காண்க. வித்தகர்-சிற்பாசாரியர்; 2"வித்தக ரியற்றிய" என்பர் பின்னும். 132-145. விழவு ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில் - விழவினைக் கொண்டாடிய மிகப்பெரிய வீதியில், பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை-பொன்னாலாகிய கயிற்றிற் கோத்த நல்ல மணிக் கோவையாகிய, ஐயவி அப்பிய நெய் அணி முச்சி-வெண் சிறு கடுகினை அப்பிய நெய் யணிந்த உச்சியில், மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்-மயிர்ப்புறத்திற் சுற்றப்பட்ட கொக்கியினையுடைய மூன்று சரங்கள், பொலம் பிறைச் சென்னி நலம்பெறத் தாழ - அழகிய பிறை போன்ற அணியினை யணிந்த சென்னியில் அழகு பெறத் தொங்கவும், செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை - வடிவுதிருந்தாத மழலையாகிய இளஞ் சொல்லை யுடைய சிவந்த வாயினின்றும், சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப-சிறிதாகிய நீர்சிந்தி மார்பிலணிந்த ஐம்படைத் தாலியை நனைக்கவும், அற்றம் காவாச்சுற்றுடைப் பூந்துகில் - அற்றத்தினை மறைக் காமற் சுற்றப்பட்ட அழகிய ஆடை, தொடுத்த மணிக்கோவை உடுப்பொடு துயல்வர - தொடுக்கப்பட்ட மணிகளின் கோவையாகிய உடுப்பொடு அசையவும், தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-தளர்ந்த நடையையும் பொறுக்கலாத ஒளி பொருந்திய அணிகலன் அணிந்த புதல்வரை, பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து- பொற்றேரின் மீதுள்ள புள்ளி பொருந்திய முகத்தினை யுடைய யானையின் மேல், இலங்குதொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி-விளங்குகின்ற வளையல்களை யணிந்த மகளிர் சிலர் நின்று ஏற்றி, ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள் காண்மினோ என்-ஆலின் கீழமர்ந்த சிவபெருமான் திருமைந்தனாகிய முருகவேளின் விழாக் கால் கொள்ளுதலைக் காண்பீராக என்று கூற, கண்டு நிற்குநரும்-அதனைக் கண்டு நிற்போரும்; கோவையாகிய முக்காழ் என்க. பேய் தீண்டாவண்ணம் குழந்தைகளின் முடியில் நெய்யணிந்து வெண்சிறு கடுகை அப்புதல் மரபு; அதனாலே வெண்சிறு கடுகிற்குக் கடிப்பகை என்பதும் பெயராயிற்று; கடி-பேய். கயிற்கடை-கொக்கி ; கொக்கின் வாய்போல்வதாகலின் கொக்கி எனப்பட்டது. பிறைச் சென்னி-பிறைவடுவாகிய அணியின் இரு கோடுகளில் என்றுரைப் பாருமுளர். மெய் - சொல்லின் வடிவு, குதலை- இளஞ்சொல்; 1"குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர், முதியோர் மொழியின் முன்றி னின்றழ" என்பது காண்க. சிறிதாய நீரைச் சின்னீர் என்றல் ஓர் இலக்கணை வழக்கு. ஐம்படை - காத்தற் கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐந்து படைகளின் வடிவாகிய அணி; இது தாலி என்றும் வழங்கும்; இதனைச் சிறுவர்க்கு அணிதல் மரபு; 2"தாலி களைந் தன்று மிலனே பால்விட், டயினியு மின்றயின்றனனே" என்பது காண்க. தேர்மிசை யானையை வைத்து ஊர்தல் 3"பொற்சிறு தேர் மிசைப் பைம்பொற் போதகம், நற்சிறா ரூர்தலின்" என்பதனானும் அறியப்படும் கால்கோள்- தொடக்கம். வீதியில் நல்லார் சிலர், கோவையையும் முச்சியையும் குதலையையும் மழலையையும் பூணையுமுடைய புதல்வரை வேழத்து முக்காழ் தாழச் சின்னீர் நனைப்பத் துகில் துயல்வர ஏற்றி எனக் கூட்டி யுரைப்பாருமுளர் 146-150. விராடன் பேரூர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்-விராடனது பெரிய நகரத்தின்கண் அருச்சுனனாகிய பேடியைக் காணுமாறு சூழ்ந்த முழக்கத் தினையுடைய மக்களைப் போல, மணிமேகலைதனை வந்து புறம் சுற்றி - வந்து மணிமேகலையைச் சுற்றிலும் சூழ்ந்து, அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவிலள் - எழிலமைந்த நல்லுருவத்தினை அரிய தவநெறியிற் படுத்திய தாயோ கொடியவளும் தகுதியில்லாத வளுமாவள்; பாண்டவர் ஐவரும் பாஞ்சாலியும் விராடனது நகரத்திற் கரந்துறைந்தகாலை அருச்சுனன் பேடியுருக் கொண்டு பிருகந்நளை என்னும் பெயருடன் ஆண்டிருந்தமை பாரதத்தால் அறியலாவது. கம்பலை மாக்கள் - வேறு சில காட்சி கண்டு முழங்கித் திரியுமவர். அணி அமை தோற்றத்து - அணிகள் இல்லாத தோற்றத்துடன் என்றுமாம். சீவக சிந்தாமணியில் 4"உப்பமை காமத்துப்பின்" "நிகரமைந்த முழந்தாளும்" என்னுமிடங்களில் ‘அமை' என்பதற்கு இப்பொருள் கூறப்படுதல் காண்க. 150-158. ஈங்கிவள் மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகில் - இம் மணிமேகலை சிறந்த மலர் கொய்தற்குப் பூம்பொழிலில் நுழைந்தால், நல் இள அன்னம் நாணாது ஆங்குள வல்லுந கொல்லோ மடந்தை தன் நடை-அங்கேயுள்ள நல்ல இளைய அன்னப் பறவைகள் நாணாமல் இவள் நடைபோல் நடக்க வல்லனவோ, மாமயில் ஆங்குள வந்து முன்நிற்பன சாயல் கற்பன கொலோ தையல் தன்னுடன் - ஆண்டுள்ள அழகிய மயில்கள் இந்நங்கையின் எதிரே வந்து நிற்பனவாகி இவளுடன் சாயலைக் கற்பனவாகுமோ, பைங்கிளி தாம் உள பாவைதன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ - அங்கிருக்கும் பசிய கிளிகள் இம்மங்கையின் மொழிகட்குத் தோற்பன வல்லவோ, இசையுந அல்ல - இவை யாவும் ஒப்பனவல்ல, என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக-என்று இவைகளைக் கூறி அனைவரும் வருந்திக் கெட, ஆங்குள அன்னம் நாணாது வல்லுந கொல்லோ எனவும், ஆங்குள மாமயில் வந்து முன்னிற்பனவாய்க் கற்பனகொலோ எனவும் இயையும். மயில்கள் கற்றற்குத்தானும் முன்வந்து நிற்கமாட்டா என்றபடி. சாயல் - மென்மை. எஞ்சுதல் - குறைதல்; தோற்றல். 159. செந்தளிர்ச் சேவடிநிலம் வடு உறாமல் - சிவந்த தளிர் போலும் சிவந்த அடிகளால் நிலத்திலே வடுவுண்டாகாமற் சென்று; வடு - சுவடு அடியும் நிலமும் வடுவுறாமல் என்றுமாம். சென்று என ஒரு சொல் வருவிக்க. 160-171. குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் - குராவும் வெண்கடம்பும் குருந்தும் கொன்றையும், திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் - மஞ்சாடியும் மகிழும் சிவந்த காலையுடைய வெட்சியும், நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும் - நாரத்தையும் சுரபுன்னையும் பரந்து மலர்கின்ற புன்னையும், பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்-பிடவமும் செம்முல்லையும் வளைந்த முள்ளையுடைய தாழையும், குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்- வெட்பாலையும் மூங்கிலும் பருத்த அடியினையுடைய அசோகமும், செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்- செருந்தியும் வேங்கையும் பெரிய சண்பகமும், எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி-நெருப்பைப்போற் சிவந்த பூக்களையுடைய இலவமும் ஆகியவை விரிந்த மலர்களைப் பரப்ப, வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினை - கைத் தொழிலில் மேம்பட்ட வித்தகரால் இயற்றப்பட்ட, சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய-சித்திரத் தொழிலமைந்த துகிர் போர்த்ததுபோலத் தோன்றிய, உவவனம் தன்னை - உவவனத்தை, தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு - தொழுது காட்டிய சுதமதியுடன், மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை - மணிமேகலை மலர் கொய்தற்கு அடைந்தனள் என்க,. பிடவம்-குட்டிப் பிடவம் என்னும் கொடி; 1"புதன்மிசைத் தளவினிதன்முட் செந்நனை, நெருங்குகுலைப் பிடவமோ டொருங்கு பிணியவிழ" என்பது அகம். பரப்பி - பரப்ப வென்க. புத்தன் பாதபீடிகையுள்ள தாகலின் வனத்தைத் தொழுது காட்டினள் என்க. மாதவி யுரைத்த உரைமுன் றோன்றி மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின், அக்காரிகை வெதுப்பக் கலங்கி உருட்டி ஆட்ட, மாதவி நோக்கி மாற்றிக் கொணர்வாய் என்றலும், அதனைக் கேட்டுத் துயரொடு கூறும் சுதமதி, 'கண்ணீரைக் கண்டனனாயின் காமன் நடுங்கும்; ஆடவர் அகறலுமுண்டோ; நின்றிடிற் பேடிய ரன்றோ ; அன்றியும், யான் வருங் காரணம் கேளாய்; கொய்வேனை விஞ்சையன் எடுத்தனன், எழுந்தனன், படுத்தனன்; ஆயினேன்; அவன் அகன்று நீங்கினன்; ஆதலால் மணிமேகலை தன்மையளல்லள்; போகின், உழையோர் ஆங்குளர்; செல்லார்; எய்தார்; உவவனமென்ப தொன்றுண்டு; உண்டு; உண்டு; மரபினது அதுதான்; செம்மை தானிலள்; யானும் போவல்; என்று கூடிச் செல்வுழி, பின்னரும் நிற்குநரும் காண்கு நரும் நிற்குநரும் நிற்குநரும் மணிமேகலையைச் சுற்றி இனைந்துக, மணிமேகலை சுதமதி தன்னொடு மலர் கொய்யப் புகுந்தனள் என முடிக்க. மலர்வனம் புக்க காதை முற்றிற்று. 4. பளிக்கறை புக்க காதை உவவனத்திலும், அதன்கண் உள்ள பொய்கையிலும் நிகழும் இயற்கைக் காட்சிகளைச் சுதமதி காட்ட மணிமேகலை காண்பாளாயினாள். அவள் ஆங்கு அவ்வாறிருக்க, மதவெறியால் வீதிதோறும் கலக்குறுத்துத் திரிந்த காலவேகமென்னும் யானையின் மதத்தை யடக்கித் தேரிலேறித் தானை சூழ வரும் உதயகுமரன் கணிகையர் தெருவில் ஒரு மாடத்தில் மலரணை மேற் காதற்பரத்தை யொருத்தியுடன் மகர யாழின் கோட்டினைத் தழுவிக் கொண்டு மயங்கிப் பாவைபோல் அசைவற்றிருந்த எட்டிகுமரனைச் சாளர வழியாற் கண்டு, ‘நீ இங்ஙனம் மயங்கி யிருக்கும் காரணம் யாது,' என்று வினவினன். அது கேட்டலும் அவன் விரைந்தெழுந்து அருகணைந்து தொழுது, ‘வாடிய அழகுடன் இவ்வீதி வழியே மலர்வனத்திற்குச் செல்லும் மணிமேகலையைக் கண்டேன்; காண்டலும், அவள் தந்தையுற்ற கொடுந்துயர் என் நினைவிலே தோன்றி என் மனவுறுதியை மாற்றி, இவ்வியாழின் பகை நரம்பில் என் கையைச் செலுத்தியது; இதுவே யானுற்ற துன்பம்,' என்றனன். என்றலும் பல நாளாக மணிமேகலையை விரும்பியிருந்த உதயகுமரன் மகிழ்ச்சியுற்று, ‘அவளை என் தேர்மீதேற்றிக்கொண்டு வருவேன்,' என்று அவனுக்குக் கூறிவிட்டுத் தேருடன் சென்று உவவனத்தின் மதில்வாயிலை அடைந்தான். மணிமேகலை அத்தேரொலியைக் கேட்டுச் சுதமதியை நோக்கி, ‘உதயகுமரன் என்பால் மிக்க விருப்ப முடையனென்று முன்பு மாதவிக்கு வயந்தமாலை கூறியதைக் கேட்டுளேன்; இஃது அவன் தேரொலி போலும்; இதற்கியாது செய்வேன்,' என்றாள். அதைக்கேட்ட சுதமதி அவளை ஆங்குள்ள பளிக்கறையிற் புகுத்தி, உள்ளே தாழிட்டுக்கொண்டு இருக்கச் செய்து, தான் அப் பளிக்கறைக்கு ஐந்து விற்கிடை தூரத்தே நின்றாள். அங்ஙனம் நின்றவளைத் தேரை நிறுத்திச் சோலையினூடே வந்த உதயகுமரன் கண்டு, ‘நீ மணிமேகலையுடன் வந்தாய் என்பதனை அறிந்தேன்,' என்று கூறி, மணிமேகலையைக் குறித்துத் தனது வேட்கை புலப்படப் பலவாறு வினாவினன். அப்பொழுது சுதமதி பொதியறைப்பட்டோர் போன்றுளம் வருந்தி, அவனை நோக்கி, "இளமை நாணி முதுமை யெய்தி, உரை முடிவு காட்டிய உரவோன் மருகனாகிய நினக்கு அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் மகளிர் கூறுமாறும் உண்டோ? ஆயினும் ஒன்று கூறுவேன்; மக்கள் யாக்கை இவ்வியல்பினை உடையது; அதனைப் புறமறியாகப் பாராய்," என்று அதன் இழிவினை யெடுத்துரைத்தாள்; அவ்வுரை உதயகுமரன் செவியை அடையுமுன் பளிக்கறையினுள்ளிருந்த மணிமேகலையின் உருவம் அவன் கண்ணெதிர்ப்பட்டது. (இக்காதையின் முதற்கண் உள்ள இயற்கைப் புனைவுகள் இன்பம் விளைப்பன. இறுதிக்கண் உடம்பின் இழி தகைமை நன்கு விளக்கப்பட்டுள்ளது.) பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில் குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய 5 வெயில் நுழை பறியாக் குயில்நுழை பொதும்பர் மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண் மாசறத் தெளிந்த மணிநீ ரிலஞ்சிப் பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின் றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை 10 அரச வன்னம் ஆங்கினி திருப்பக் கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக் கம்புட் சேவற் கனைகுரன் முழவாக் கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய் இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து 15 வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல் விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடிய திதுகாண் மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து 20 தாதுண் வண்டின மீதுகடி செங்கையின் அஞ்சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு எறிந்தது பெறாஅ திரையிழந்து வருந்தி மறிந்து நீங்கு மணிச்சிரல் காணெனப் 25 பொழிலும் பொய்கையுஞ் சுதமதி காட்ட மணிமே கலையம் மலர்வனங் காண்புழி மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதய குமரன் உருகெழு மீதூர் மீயான் நடுங்க நடுவுநின் றோங்கிய 30 கூம்புமுதன் முறிய வீங்குபிணி யவிழ்ந்து கயிறுகால் பரிய வயிறுபாழ் பட்டாங்கு இதைசிதை தார்ப்பத் திரைபொரு முந்நீர் இயங்குதிசை யறியா தியாங்கணு மோடி மயங்குகால் எடுத்த வங்கம் போலக் 35 காழோர் கையற மேலோ ரின்றிப் பாகின் பிளவையிற் பணைமுகந் துடைத்துக் கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக் குறுத்தாங்கு இருபாற் பெயரிய வுருகெழு மூதூர் 40 ஒருபாற் படாஅ தொருவழித் தங்காது பாகும் பறையும் பருந்தின் பந்தரும் ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக் கால வேகங் களிமயக் குற்றென 45 விடுபரிக் குதிரையின் விரைந்துசென் றெய்திக் கடுங்கண் யானையின் கடாத்திற மடக்கி அணித்தேர்த் தானையொ டரசிளங் குமரன் மணித்தேர்க் கொடிஞ்சி கையாற் பற்றிக் காரலர் கடம்பன் அல்ல னென்பது 50 ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன் நாடக மடந்தையர் நலங்கெழு வீதி ஆடகச் செய்வினை மாடத் தாங்கண் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி வீதிமருங் கியன்ற பூவணைப் பள்ளித் 55 தகரக் குழலாள் தன்னொடு மயங்கி மகர யாழின் வான்கோடு தழீஇ வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டி குமரன் இருந்தோன் றன்னை மாதர் தன்னொடு மயங்கினை யிருந்தோய் 60 யாதுநீ யுற்ற இடுக்கண் என்றலும் ஆங்கது கேட்டு வீங்கிள முலையொடு பாங்கிற் சென்று தன்றொழு தேத்தி மட்டவி ழலங்கன் மன்ன குமரற்கு எட்டி குமரன் எய்திய துரைப்போன் 65 வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல் தகைநலம் வாடி மலர்வனம் புகூஉம் மாதவி பயந்த மணிமே கலையொடு கோவல னுற்ற கொடுந்துயர் தோன்ற நெஞ்சிறை கொண்ட நீர்மையை நீக்கி 70 வெம்பகை நரம்பின் என்கைச் செலுத்தியது இதுயா னுற்ற இடும்பை யென்றலும் மதுமலர்த் தாரோன் மனமகிழ் வெய்தி ஆங்கவள் தன்னையென் அணித்தே ரேற்றி ஈங்கியான் வருவேன் என்றவற் குரைத்தாங்கு 75 ஓடுமழை கிழியும் மதியம் போல மாட வீதியின் மணித்தேர் கடைஇக் காரணி பூம்பொழிற் கடைமுகங் குறுகவத் தேரொலி மாதர் செவிமுதல் இசைத்தலும் சித்திரா பதியோ டுதய குமரனுற் 80 றென்மேல் வைத்த உள்ளத் தானென வயந்த மாலை மாதவிக் கொருநாள் கிளந்த மாற்றம் கேட்டே னாதலின் ஆங்கவன் தேரொலி போலும் ஆயிழை ஈங்கென் செவிமுதல் இசைத்ததென் செய்கென 85 அமுதுறு தீஞ்சொல் ஆயிழை யுரைத்தலும் சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல் பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுகென் றொளித்தறை தாழ்கோத் துள்ளகத் திரீஇ ஆங்கது தனக்கோர் ஐவிலின் கிடக்கை 90 நீங்காது நின்ற நேரிழை தன்னைக் கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்திப் பன்மலர்ப் பூம்பொழிற் பகன்முளைத் ததுபோல் பூமரச் சோலையும் புடையும் பொங்கரும் தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் 95 அரசிளங் குமரன் ஆருமில் ஒருசிறை ஒருதனி நின்றாய் உன்றிற மறிந்தேன் வளரிள வனமுலை மடந்தை மெல்லியல் தளரிடை யறியுந் தன்மையள் கொல்லோ விளையா மழலை விளைந்து மெல்லியல் 100 முளையெயி றரும்பி முத்துநிரைத் தனகொல் செங்கயல் நெடுங்கண் செவிமருங் கோடி வெங்கணை நெடுவேள் வியப்புரைக் குங்கொல் மாதவ ருறையிடம் ஒரீஇமணி மேகலை தானே தமியளிங் கெய்திய துரையெனப் 105 பொதியறைப் பட்டோர் போன்றுளம் வருந்தி மதுமலர்க் கூந்தற் சுதமதி யுரைக்கும் இளமை நாணி முதுமை யெய்தி உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு அறிவுஞ் சால்பும் அரசியல் வழக்கும் 110 செறிவளை மகளிர் செப்பலு முண்டோ அனைய தாயினும் யாதொன்று கிளப்பல் வினைவிளங்கு தடக்கை விறலோய் கேட்டி வினையின் வந்தது வினைக்குவிளை வாயது புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது 115 மூத்துவிளி வுடையது தீப்பிணி இருக்கை பற்றின் பற்றிடங் குற்றக் கொள்கலம் புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை அவலக் கவலை கையா றழுங்கல் தவலா உள்ளந் தன்பா லுடையது 120 மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய் என்றவ ளுரைத்த இசைபடு தீஞ்சொல் சென்றவ னுள்ளஞ் சேரா முன்னர்ப் பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையின் 125 இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்னென். உரை 1-6. பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு - ஆதித்தனது விரிந்த கதிர்களாகிய சேனைக்கு, இருள் வளைப்புண்ட மருள்படு பூம்பொழில்-இருள் முற்றப்பட்டா லொத்த மருட்கையுண்டாகும் அழகிய பொழிலின்கண், குழல்இசை தும்பி கொளுத்திக் காட்ட- தும்பிகள் வேய்ங்குழலினிசையைப் பொருத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய-இளைய வண்டினங்கள் நல்ல யாழினிசையை முரல, வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர்-ஞாயிற்றின் கதிர் தோன்றுங்கால் தொட்டு மறையும் வரை சிறிதும் செல்லுதல் அறியாத குயிலும் நுழைந்து செல்லுமாறு அடர்ந்த இளமரக் காவாகிய, மயில் ஆடு அரங்கில் மந்தி காண்பனகாண் - அரங்கில் மயில்கள் ஆடுவதைக் காண்பனவாகிய மந்தி களைக் காண்பாயாக ; பரிதியாகிய செல்வன் என்க. தானைக்கு-தானையால், ஞாயிற்றின் கதிரால் துரத்தப்பட்ட உலகினிருளெல்லாம் புகுந்திருந்தாற் போலும் இருட்சியையுடைய பொழில் என்க. மருள்-மருட்கை; வியப்பு. தும்பி - வண்டின் ஓர் கிளை. 1"கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப், பொங்கர் வண்டின நல்லியாழ் செய்ய" எனப் பின்னரும் வருதல் காண்க. இலை களின் செறிவாலே குயில்கள் நுழைந்து செல்லும் இளமரக்கா வென்க; 2"வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்" என்பது பெரும்பாண். காண்பன : காண்டல் எனத் தொழிற் பெயருமாம். 7-13. மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சி-மறுவற்றுத் தெளிந்த பளிங்குபோலும் நீரினைடைய பொய்கையில், பாசடைப் பரப்பில் பன்மலர் இடைநின்று-பசிய இலைகளின் பரப்பின் கணுள்ள பல மலர்களினிடையே நின்றும், ஒரு தனி ஓங்கிய விரை மலர்த் தாமரை - தனியே உயர்ந்து விளங்கிய மணம் மிக்க ஒரு தாமரை மலரில், அரச அன்னம் ஆங்கினிது இருப்ப - அன்னப் புள் இனிதாக அரசு வீற்றிருப்ப, கரை நின்று ஆலும் ஒரு மயில் தனக்கு - அவ்விலஞ்சியின் கரையில் நின்று அரசன் முன் ஆடும் மெல்லியல் போல ஆடுகின்ற ஒப்பற்ற அழகினையுடைய மயிலுக்கு, கம்புட் சேவல் கனைகுரல் முழவா - சம்பங் கோழிச் சேவலினது மிக்க குரல் முழவொலியாக, கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய் - கிளையின்கண் உள்ள கரிய குயில் பாடுவதைக் காண் பாயாக; மணி - நீலமணியுமாம். ஒரு தனி - ஒப்பற்ற தனி; தன்னந் தனி; "ஒரு தனி நின்றாய்," "ஒரு தனி யிருந்த, "ஒரு தனி யேறி" (4 : 96 : 16 : 33 ; 17:86.) என இந்நூலுள்ளே ஒரு தனியென்பது பயின்று வருகின்றது. மயில் தனக்கு-மயிலினது ஆட்டத்திற் கியைய. விளித்தல்-பாடுதல்; 1"விளியாதான் கூத்தாட்டு" 2"விளித்தலின்னமிர் துறழ் கீதம்" என்புழி விளித்தல் இப்பொருள்படுதல் காண்க. 14-18, இயங்கு தேர் வீதி எழு துகள் சேர்ந்து - தேர்கள் சஞ்சரிக்கின்ற வீதியினின்றும் எழுந்த துகள் சேர்ந்து, வயங்கு ஒளிமழுங்கிய மாதர் நின்முகம்போல் - விளங்குகின்ற ஒளி மழுங்கப்பெற்ற நினது அழகிய முகத்தைப்போல, விரை மலர்த்தாமரை கரை நின்று ஓங்கிய கோடு உடைத் தாழைக் கொழுமடல் அவிழ்ந்த வால்வெண் சுண்ணம் ஆடியது இதுகாண் - கரையில் நின்று வளர்ந்த கிளைகளையுடைய தாழையினது கொழுவிய மடலினின்றும் அவிழ்ந்த வெள்ளிய மகரந்தப் பொடி அளைந்த மணம் பொருந்திய இத் தாமரை மலரைக் காண்பாயாக; மாதர் - அழகு. 3"கோடுடைத் தாழை" என்னும் பாடத்திற்குச் சங்கு உடைந்தாற் போலும் தாழையின் மடல் என்க; வால் வெண்: ஒரு பொருளிருசொல்; தூய வெள்ளிய என்றுமாம்; 4"ஊர்தி வால் வெள் ளேறே" என்பது காண்க. இது மலர் எனக் கூட்டி இம் மலர் என உரைக்க. 19-26. மாதர் நின்கண் போது எனச் சேர்ந்து தாது உண் வண்டினம் மீது கடி செங்கையின் - நின்னுடைய அழகிய கண்களை நீலமலரென நினைந்து தாதுண்ணுமாறு அடைந்த வண்டினங்களை அகற்றுகின்ற நின் சிவந்த கையைப்போல, அம் சிறை விரிய அலர்ந்த தாமரைச் செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டு ஆங்கு எறிந்து - மலர்ந்த தாமரை மலரிலே பாய்ந்து பிறழ்வனவாகிய செங்கயல்களைக் கண்டு அழகிய சிறகு விரியுமாறு அப்பொழுதே பாய்ந்து, அது பெறாஅது இரை இழந்து வருந்தி - அம் மீன்களைப் பெறாமல் இரையை இழந்து வருந்தி, மறிந்து நீங்கு மணிச்சிரல் காண் - மீண்டும் நீங்குகின்ற நீலமணிபோலும் சிச்சிலியைக் காண்பாயாக; என - என்று சொல்லி, பொழிலும் பொய்கையும் சுதமதி காட்ட - சுதமதி பொழிலையும் பொய்கையையும் காட்டாநிற்க, மணிமேகலை அம் மலர்வனம் காண்புழி - மணிமேகலை அப்பூம்பொழிலின் வளத்திளைக் காணும்பொழுது; அஞ்சிறை விரிய எறிந்து எனவியையும். அது, சாதி யொருமை; பிறழ்வனவென மேல் வந்தமையின். இரை இழந்து - பெறாமையால் அவ்விரையை யிழந்தென்க. மணி - நீலமணி; 1"புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்" என்பது காண்க. சிரல் - சிச்சிலிப்புள்; இது மீன் கொத்தி யென்றும் கூறப்படும். முகம் தாமரைக்கும், கண் செங்கயலுக்கும், கை சிரலுக்கும் உவமம்; 2"பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃதுவம மாகும்" என்பதனால் பொருள்கள் உவமமாகக் கூறப்பட்டன. பொய்கை வனத்தின் உறுப்பாகலின், வனங்காண்புழி யென அதிலடக்கிக் கூறினர். 27-28. மதிமருள் வெண்குடை மன்னவன் சிறுவன் உதயகுமரன் - திங்களை யொத்த வெண்குடையையுடைய அரசன் புதல்வனாகிய உதயகுமரன்; மருள் : உவமவுருபு ; 3"மதிமருள் வெண்குடை" என்பது புறம். மன்னவன் - சோழன். 28-34. உருகெழுமீது ஊர் மீயான் நடுங்க - அச்சம் பொருந்திய மேலிடத்தின் ஊர்ந்திருக்கின்ற மாலுமி நடுங்க, நடுவுநின்று ஓங்கிய கூம்பு முதல் முறிய - நடுவில் நின்று ஓங்கிய பாய்மரம் அடியிலே முறிய, வீங்குபிணி அவிழ்ந்து கயிறு கால் பரிய - இறுகின பிணிப்பு அவிழ்ந்து பாய் கட்டின கயிறு அறுபட, வயிறு பாழ்பட்டாங்கு இதை சிதைந்து ஆர்ப்ப - அப்பொழுது நடுவிடம் பாழாகிப் பாய் பீறுண்டு ஒலிப்ப, திரைபொரு முந்நீர் இயங்கு திசை அறியாது - அலைகள் பொருகின்ற கடலின்கண் செல்லுந் திசை அறியாமல், யாங்கணும் ஓடி மயங்கு கால் எடுத்த வங்கம் போல - எவ்விடத்தும் ஓடி மயங்குகின்ற கடுங்காற்றினாலலைக்கப் பட்ட மரக்கலம் போல; மூதூர் என்னும் பாடத்திற்குப் புகாரின்கண் என்றுரைக்க, மீயான் - மாலுமி ; நீயான் என்பதும் பாடம். நடுங்க - முறியப் பரிய ஆர்ப்ப ஓடியென்க : ஓடி மயங்கு வங்கம் என்றியைக்க ; மயங்கு கால் - சுழல் காற்று எனலுமாம் ; இதற்கு, சுழல் காற்றினால் எடுக்கப்பட்டு ஓடிய வங்கம்போல எனப்பிரித்துக் கூட்டுக. 35-44. காழோர் கையற - குத்துக்கோற்காரர் செயலற, மேலோர் இன்றி - பாகரும் இன்றி, பாகின் பிளவையிற் பணைமுகம் துடைத்து - பாகனாற் குத்தப்பட்ட பிளவையினையுடைய பரிய முகத்தைக் கையாற்றுடைத்து, கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும் பீடிகைத் தெருவும் பெருங்கலக் குறுத்து - அரசர் பெருந்தெருவையும் கொடி யணிந்த தேரோடும் வீதியையும் கடை வீதியையும் பெரிய கலக்க முண்டாக்கி, இருபாற் பெயரிய உருகெழு மூதூர் ஒருபாற்படாது ஒருவழித் தங்காது-இருவகைப் பெயரினையுடையதாய்ப் பகைவர்க்கு அச்சத்தைத் தரும் மூதூரின்கண் ஒரு நெறிப் படாமல் ஓரிடத்திற் றங்காமல், பாகும் பறையும் பருந்தின் பந்தரும் - பாகனும் பறையடிப்போரும் பருந்தின் தொகுதியும், ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப - மிக்க வறுமை யுடையோரும் சுழன்று கூப்பிட, நீல மால்வரை நிலனொடு படர்ந் தெனக் காலவேகம் களிமயக்கு உற்றென - பெரிய நீல மலை நிலத்தின் கண் திரிவதுபோலக் காலவேகம் என்னும் பட்டத்தியானை மத மயக்குற்றுத் திரிந்ததாக; மேலோர் இன்றி-பாகரைவீசி யென்றபடி. பிளவை -அங்குசத் தாற் பிளக்கப்பட்ட புண். பாகின் பிளவை-பாகனுடைய உடற் பிளவு என்றுமாம். இருவகைப் பெயரினை, 1"இருபாற் பெயரிய வுருகெழு மூதூர்" என்பதன் உரையா லறிக. பாகு - பாகன் பறை - பறையடிப் போர்; யானைக்கு முன்பு பறையடிக்கப்படுதல் மரபென்பதனை, 2"நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப். பறையறைந் தல்லது செல்லற்க வென்னா, இறையே தவறுடை யான்" என்பதனாலறிக. ஆதுலமாக்கள் தெருவிலே திரிவராகலின் அவரையுங் கூறினார். பருந்தின் பந்தர் - உணவின்பொருட்டுப் பந்தரிட்டாற்போல் மேலே செல்லும் பருந்தினம், வரை நிலனொடு படர்ந்தென என்பது இல் பொருளுவமம். நிலனொடு - நிலமிசை. களி - மதம். வங்கம்போலக் காழோர் கையறப் பாகன் முதலியோர் அலவுற்று விளிப்ப மூதூரின்கண் மேலோரின்றித் துடைத்துப் பெருங் கலக்குறுத்துப் படாது தங்காது படர்ந்தெனக் காலவேகம் களிமயக்குற்றதாக என முடிக்க; வங்கம்போலக் காலவேகம் களிமயக்குற்றென என வியையும். இவ்வாறே மதுரைக்காஞ்சியில், 3"வீங்குபிணி நோன் கயிறாஇயிதை புடையூக், கூம்புமுதன் முருங்க வெற்றிக் காய்ந்துடன், கடுங்காற் றெடுப்பக் கல்பொரு துரைஇ, நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல, இருதலைப் பணில மார்ப்பச் சினஞ்சிறந்து, கோலோர்க்கொன்று மேலோர் வீசி, மென்பிணி வன்றொடர் பேணாது காழ்சாய்த்துக், கந்துநீத் துழிதருங் கடாஅ யானையும்" என வந்திருந்தல் காண்க. 45-50. விடுபரிக் குதிரையின் விரைந்து சென்று எய்தி-செலுத்து கின்ற விரைந்த செலவினையுடைய குதிரையின்மீது கடிதிற் சென்று சேர்ந்து, கடுங்கண் யானையின் கடாத்திறம் அடக்கி- தறுகண்மையுடைய யானையது மதத்தின் கூறுபாட்டினை அடக்கி, அணித்தேர்த் தானையொடு - அழகிய தேர் முதலிய படையுடன், அரசிளங் குமரன்-, மணித்தேர்க்கொடிஞ்சி கையால்பற்றி - தான் ஏறியுள்ள தேரின்கண் உள்ள அழகிய கொடிஞ்சியைக் கையாற் பிடித்துக்கொண்டு, கார்அலர் கடம்பன் அல்லன் என்பது ஆரங்கண்ணியில் சாற்றினன் வருவோன் - தான் கார்காலத்து மலர்கின்ற கடப்ப மாலையையுடைய முருகவேள் அல்லன் என்பதனைத்தான் அணிந்த ஆத்தி மாலையினால் அறிவித்து வருபவன்; பரி - செலவு, உதயகுமரனாகிய அரசிளங்குமரன் எனக் கூட்டுக. ‘கொடிஞ்சி-தாமரைப்பூ வடிவமாகப் பண்ணித் தேர்த் தட்டின் முன்னே நடுவது,' என்பர் நச்சினார்க்கினியர். 1"கொடிஞ்சி நெடுந்தேர்," என்பதன் உரை காண்க. இது தாமரை மொட்டு வடிவமுள்ளதென்று கூறுவாருமுளர். இச் சொல்லினுருவம் கொடுஞ்சி யெனவும் காணப்படும். அழகு, இளமை, ஆண்மைகளால் இவனை முருகக்கடவுளென்றெண்ணி, கடப்ப மாலையின்மையானும் ஆத்திமாலை யுண்மையானும் இவன் முருகனல்லன், சோழன்மகன் என்று கண்டோர் துணிவரென உதயகுமரனின் அழகு முதலியன சிறப்பிக்கப் பட்டன வென்க. ஆர் - ஆத்தி. 51-58. நாடக மடந்தையர் நலங்கெழு வீதி-நாடகக் கணிகையரது அழகு பொருந்திய வீதியில், ஆடகச் செய்வினை மாடத் தாங்கண் - ஆடகப்பொன்னாற் செய்தொழிலமைந்த மாளிகையின் கண், சாளரம் பொளித்த கால்போகு பெருவழி-காற்று செல்லு கின்ற பெரிய வழியாகியதுளைசெய்யப்பட்ட சாளரத்தினிட மாக, வீதி மருங்கு இயன்ற பூவணைப்பள்ளி - வீதியின் பக்கலில் இயற்றிய மலரணைச் சேக்கையில், தகரக்குழலாள் தன்னோடு மயங்கி - மயிர்ச்சாந்தினை யணிந்த குழலினை யுடைய கணிகையொருத்தியுடன் மயக்கமுற்று, மகரயாழின் வான்கோடு தழீஇ - மகர யாழினது சிறந்த கோட்டைத் தழுவி, வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின் எட்டிகுமரன் இருந்தோன் தன்னை - எழுது கோலினால் எழுதப்பட்ட ஓவியப் பாவை போல அசைவற்று இருந்த எட்டிகுமரனை, ஆடகம்-நால்வகைப் பொன்னுள் ஒன்று.பொளித்த - துளைசெய்த. கால்போகு பெருவழியாகிய பொளித்த சாளரம் என்க. மகரயாழ் - நால்வகை யாழினுளொன்று; பதினேழு நரம்புடையது என்பர். கோடு - யாழ்த்தண்டு. வட்டிகை - எழுதுகோல். எட்டி - வணிகர் பெறும் பட்டப் பெயர்; "எட்டிப் பூப்பெற் றிருமுப் பதிற்றியாண் டொட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன்." (22; 113-4) என்பர். பின்னும்; 1"எட்டி காவிதிப் பட்டந் தாங்கி," என்பதுங் காண்க; 2'எட்டி காவிதியென்பன தேய வழக்காகிய சிறப்புப் பெயர்" என்பர் நச்சினார்க்கினியர். 59-64. மாதர் தன்னொடு மயங்கினை இருந்தோய் யாது நீ உற்ற இடுக்கண் என்றலும் - மாதினோடும் மயக்கமுற்றிருப் போய் நீ அடைந்த துன்பம் யாது என வினவுதலும், ஆங்கது கேட்டு வீங்கிள முலையொடு பாங்கிற்சென்று தான் தொழுது ஏத்தி-அதனைக் கேட்டு அக் காரிகையுடன் அவன் பக்கலிற் சென்று வணங்கித் துதித்து, மட்டு அவிழ் அலங்கல் மன்ன குமரற்கு-தேன் அவிழும் மலர்மாலையினை யுடைய அரச குமரனுக்கு, எட்டி குமரன் எய்தியது உரைப்போன் - தான் உற்ற துன்பத்தின் காரணத்தைக் கூறுகின்ற எட்டி குமரன்; மயங்கினை: எச்சமுற்று. மயங்கி மாதர் தன்னொடும் இருந்தோய் என்க. பாங்கில் - முறைமையால் என்றுமாம். 65-71. வகைவரிச் செப்பினுள் வைகிய மலர்போல் - திறப்பட அமைந்த செப்பின் உள்ளே வைக்கப்பட்ட நறுமலரைப் போல, தகை நலம் வாடி - மிக்க அழகு வாட்டமுற்று, மலர்வனம் புகூஉம் - பூம்பொழிலுக்குச் செல்லும், மாதவி பயந்த மணிமேகலை யொடு கோவலன் உற்ற கொடுந்துயர் தோன்ற - மாதவி பெற்ற மணிமேகலையைக் கண்டதும் கோவலன் அடைந்த கொடிய துன்பம் நினைவில் வர அஃது, நெஞ்சு இறைகொண்ட நீர்மையை நீக்கி - மனம் தங்குதல் கொண்ட தன்மையை நீக்கி, வெம்பகை நரம்பின் என் கைச் செலுத்தியது, கொடிய பகை நரம்பின் கண் என் கையைச் செலுத்தியது - இது யான் உற்ற இடும்பை என்றலும் - இதுவே யான் அடைந்த துன்பம் என்னலும்; செப்பினுள் வைகிய மலர் புழுக்கத்தால் வாடும்; 3"மடைமாண் செப்பிற்றமிய வைகிய, பெய்யாப் பூவின் மெய் சாயினளே," 4"வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம்," 5"வேயாது செப்பினடைத்துத் தமி வைகும் வீயினன்ன, தீயாடி சிற்றம் பலமனையாள்," என்பன காண்க. மணிமேகலையைக் கண்டவுடன் கோவலனுற்ற துன்பம் நினைவிற்கு வந்தமையின், ‘மணிமேகலை யொடு...துயர்தோன்ற,' என்றான் இறைகொண்ட-யாழிலே தங்கிய. பகை நரம்பு-நின்ற நரம்பிற்கு ஆறாவது நரம்பு;ஆறாவதும் மூன்றாவதுமாகிய நரம்புகள் என்று முரைப்பர்; "நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ், சென்று பெற நிற்பது கூடமாகும்," என்பது காண்க. கோவலன் தன் குலத்தோன்றலாகலின் அவனுற்ற துயரை நினைந்து மயங்கினேனென்றானென்க. 72-76. மதுமலர்த் தாரோன் மனமகிழ்வு எய்தி-தேன் பொருந்திய மலர் மாலையினையுடைய உதயகுமரன் உளமகிழ்ச்சியடைந்து, ஆங்கவள் தன்னை என் அணித்தேர் ஏற்றி - அம் மணிமேகலையை என் அழகிய தேரின்மீதேற்றி, ஈண்டு யான் வருவேன் என்று அவற்கு உரைத்தாங்கு-ஈண்டு யான் வருவேன் என்று எட்டி குமரற்குக்கூறி, ஓடு மழை கிழியும் மதியம்போல - ஓடுகின்ற முகில் கிழிதற்குக் காரணமாகிய மதியம்போல, மாடவீதியில் மணித்தேர் கடைஇ - மாடங்களையுடைய வீதியின்கண் அழகிய தேரைச் செலுத்தி, கார் அணி பூம்பொழிற் கடைமுகம் குறுக - வானளாவிய பூஞ்சோலையின் வாயிலினிடம் அடைய; முனிவர் உறைவிடத்தினீங்கி மலர்வனமடைந்த மணிமேகலையை இனி எளிதினெய்தலாமென மனமகிழ்ந்தானென்க. மாடங்கட்கு மழையும் தேருக்கு மதியமும் உவமை; மதியினை உதயகுமரனுக்கு உவமை யாக்கலுமாம் . கலை நிரம்பினமையின்; இதற்கு மதியம் போலக் குறுக வென்றியைக்க. கார் அணி - மேகத்தை மீது அணிந்த. 77-85. அத் தேர் ஒலி மாதர் செவிமுதல் இசைத்தலும் - அந்தத் தேர் ஒலியானது மணிமேகலையின் செவியிடம் சென்று இசைத்தலும், சித்திராபதியோடு உதயகுமரன் உற்று என்மேல் வைத்த உள்ளத்தான்என-உதயகுமரன் என்பால் வைத்த மனமுடையான் என்று சித்திராபதியினிடமாக அறிந்து, வயந்தமாலை மாதவிக்கு ஒருநாள் கிளந்த மாற்றம் கேட்டேன் ஆதலின் - வயந்தமாலை மாதவிபால் ஒருநாள் கூறிய மொழியைக் கேட்டிருக்கின்றேனாகலின், ஆங்கவன் தேர்ஒலி போலும் ஆயிழை ஈங்கு என் செவிமுதல் இசைத்தது-சுதமதி அவ் வுதயகுமரனது தேரோசையே போலும் இப்பொழுது என் செவியிடம் ஒலித்தது, என் செய்கு என அமுதுறு தீஞ்சொல் ஆயிழை உரைத்தலும் - இதற்கு என் செய்வேன் என அமுதினு மினிய மொழியினையுடைய மணிமேகலை கூறுதலும்; சித்திராபதியோடு உற்று எனக் கூட்டிச் சித்திராபதியால் அறிந்து என்றுரைக்க; வயந்தமாலை சித்திராபதியுடன் அடைந்து என்றலுமாம். ஆயிழை: விளி. 86-90. சுதமதி கேட்டுத் துளக்குறு மயில்போல் - சுதமதி அது கேட்டுத் தளர்ச்சியுற்ற மயிலைப்போல, பளிக்கறை மண்டபம் பாவையைப் புகுக என்று ஒளித்து அறை தாழ்கோத்து உள்ள கத்து இரீஇ-மணிமேகலையைப் பளிக்கறை மண்டபத்தின் உள்ளிடத்தே புகுக என்று கூறி ஒளித்து இருத்தி அறையின் தாழைக் கோத்து, ஆங்கது தனக்கு ஓர் ஐவிலின் கிடக்கை நீங்காது நின்ற நேரிழைதன்னை - அப்பளிக்கு மண்டபத்திற்கு ஐந்து விற்கிடை தூரத்தில் நீங்காமல் நின்ற சுதமதியை; ஒளித்து அறை-ஒளியையுடையதாகிய அறையென்றுமாம். பணியாளர் ஐந்துவிற்கிடை தூரத்தே நிற்றல் மரபு; 1"ஐவிலினகல நின்றாங் கடிதொழு தறைஞ்சினாற்கு," என்பது காண்க. நீங்காது நின்றனள்; அங்ஙனம் நின்ற நேரிழையை என அறுத்துரைத்து, நேரிழையைக் கண்டு என ஒரு சொல் விரித்துரைக்க. 91-96. கல்லென் தானையொடு கடுந்தேர் நிறுத்தி - ஒலியினை யுடைய சேனையொடு விரைந்த செலவினையுடைய தேரையும் நிறுத்தி, பன்மலர்ப் பூம்பொழில் பகல் முளைத்தது போல்-பல மலர்களையுடைய பூஞ்சோலையில் ஞாயிறு தோன்றியது போல, பூமரச்சோலையும் புடையும் பொங்கரும் - பூம்பொழிலிலும் பக்கலிலும் கட்டுமலைகளிலும், தாமரைச் செங்கண் பரப்பினன் வரூஉம் அரசிளங்குமரன் - தாமரை மலர் போன்ற சிவந்த கண்களால் நோக்கிவருகின்ற மன்னிளம் புதல்வன், ஆரும் இல் ஒரு சிறை ஒரு தனி நின்றாய் உன் திறம் அறிந்தேன் - யாருமில்லாத ஒரு பக்கத்தில் நீ ஒருத்தியாய் நிற்கின்றாய் நின் இயல்பினை அறிந்தேன் ; பொங்கர் - ஈண்டுச் செய்குன்று. அரசிளங்குமரன் சுதமதியைக கண்டு உன் திறம் அறிந்தேன் என்று கூறியென்க. 97-104. வளர்இள வனமுலை மடந்தை மெல்லியல் - வளர் கின்ற வனப்புடைய இளங் கொங்கைகளையும் மென்மைத் தன்மையையும் உடைய மணிமேகலை, தளர் இடை அறியும் தன்மையள் கொல்லோ - ஆடவர் தளர்ந்த சமயத்தை யறியும் தன்மையை யுடையவளோ, விளையா மழலை விளைந்து மெல்லியல் முளை யெயிறு அரும்பி முத்து நிரைத் தனகொல்-முதிராத மழலைமொழி முதிர்ந்து மெல்லியலுக்கு முளை எயிறுகள் அரும்பி முத்துக்களை நிரைத்தன போன்றனவோ, செங்கயல் நெடுங்கண் செவிமருங்கு ஓடி வெங்கணை நெடுவேள் வியப்பு உரைக்கும்கொல்-சிவந்த கயல் மீன் போன்ற நீண்ட கண்கள் செவியின் பக்கத்தே ஓடிக் கொடிய கணைகளையுடைய காமனின் வியப்பினை உரைக் கின்றனவோ, மாதவர் உறைவிடம் ஒரீஇ மணிமேகலை தானே தமியள் இங்கு எய்தியது உரை என-மணிமேகலை சங்கத்தார் உறைகின்ற விடத் தினின்றும் நீங்கித் தானே தனியளாய் இவண் எய்திய காரணத்தை உரைப்பாயாக என; இடை- செல்வி; 1"உடையார் போல இடையின்று குறுகி" என்பது காண்க. முளை எயிறு - முளைபோலும் எயிறு; முளைத்த எயிறுமாம். வெங்கணை-விருப்பத்தைச் செய்யுங் கணையுமாம். வியப்பு- வியக்குஞ் செய்தி. செவிமருங்கோடுதல் - உரைப்பது போலு மென்றானென்க. சங்கத்தை நீங்கினளாதலைத் தமியள் என்றான். 105-110 பொதியறைப் பட்டோர்போன்று உளம் வருந்தி மது மலர்க் கூந்தற் சுதமதி உரைக்கும் - தேன் பொருந்திய மலர் களையணிந்த குழலினையுடைய சுதமதி சாளரமில்லாத நிலவறையிற் பட்டோர் போல மனம் வருந்திக் கூறுகின்றாள், இளமை நாணி முதுமை எய்து உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு இளமைப் பருவத்தை நாணி முதுமைப்பருவத்தை அடைந்து தம்முள் மாறு கொண்டு வந்தார் இருவருடைய சொல்லை ஆராய்ந்து அறிந்து அவர்கட்கு அவற்றின் முடிவை விளக்கிய பேரறிவுடையோனாகிய கரிகாற் பெருவளத்தானது வழித்தோன்றலாகிய நினக்கு, அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ-நல்லறிவினையும் அமைதியையும் அரசியல் நீதியையும் செறிந்த வளையையுமுடைய மகளிர் கூறுமாறும் உண்டோ; கறிகாற் பெருவளத்தான் உரை முடிவு காட்டிய இவ்வரலாறு 2உரை முடிவுகாணா னிளமையோனென்ற, நரைமுது மக்களுவப்ப - நரை முடித்துச் சொல்லான் முறைசெய்தான் சோழன் குல விச்சை, கல்லாமற் பாகம் படும்" என்னும் பழமொழி வெண் பாவாலும், "தம் முள் மறுதலையாயினா ரிருவர் தமக்கு முறை செய்ய வேண்டி வந்து சில சொன்னால் அச் சொன் முடிவு கண்டே ஆராய்ந்து முறை செய்ய அறிவு நிரம்பாத இளமைப் பருவத்தானென்றிகழ்ந்த நரைமுது மக்க ளுவக்கும்வகை நரை முடித்துவந்து, முறைவேண்டிவந்த இருதிறத்தாரும் சொல்லிய சொற்கொண்டே ஆராய்ந்தறிந்து முறைசெய்தான் கரிகாற் பெருவளத்தானென்னுஞ் சோழன்; ஆதலால் தத்தம் குலத்துக்குத் தக்க விச்சைகள் கற்பதற்கு முன்னே செம்பாக முளவாம் என்றவாறு" என்னும் அதன் உரையாலும் அறியப்படும்: பொருநராற் றுப்படையிலும் 1"முதியோ, ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவும்" என இது கூறப்பட்டுளது. மருகற்கு முன்னிலையிற் படர்க்கை. 111-125. அனையது ஆயினும் யான் ஒன்று கிளப்பல் வினை விளங்கு தடக்கை விறலோய் கேட்டி - அங்ஙனமாயினும் போரின்கண் விளங்குகின்ற தடந்தோள் வலியுடையாய் யான் ஒன்று கூறுவேன் அதனைக் கேட்பாயாக, வினையின் வந்தது வினைக்கு விளைவாயது - கன்மத்தால் உண்டானது கன்மத்திற்கு விளை நிலமாகவுள்ளது. புனைவன நீங்கில் புலால் புறத்து இடுவது - புனையப் படுவனவாகிய மணப் பொருள்கள் நீங்கப் படுமானால் புலால் நாற்றத்தை வெளிக்குக் காட்டுவது, மூத்து விளிவுடையது - முதுமை யடைந்து சாதலையுடையது, தீப்பிணி இருக்கை - கொடிய நோய்கட்கு இருப்பிடமாகவுள்ளது, பற்றின் பற்றிடம் - பற்றுக்களுக்குப் பற்றும் இடமாயது, குற்றக் கொள்கலம் - குற்றங்கட்குக் கொள்கலமாயுள்ளது, புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை - பாம்பு அடங்கியுள்ள புற்றைப்போலச் செற்றத்திற்குத் தங்குமிடமாயது, அவலக் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது-அவலம் முதலிய நான்கும் நீங்காததாகிய உள்ளத்தைத் தன்னிடத் துடையது, மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப்பாராய் - மேலோனே மக்கள் உடம்பு இத்தகையதென்பதனை அறிந்து இதனைப் புறமறியாகப் பார்ப்பாயாக, என்று அவள் உரைத்த-என்று அவள் கூறிய, இசைப்படு தீஞ்சொல்-புகழினையுண்டாக்குகின்ற இனிய மொழிகள், சென்று அவன் உள்ளம் சேராமுன்னர் - உதயகுமரன் உள்ளத்திற் சென்று அடைவதற்கு முன்னரே, பளிங்கு புறத்து எறிந்த பவளப்பாவையின் - பளிங்கறையின் புறத்தே விளங்குகின்ற பவளப்பாவையைப்போல, இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன் என் - இளமை பொருந்திய கொடியனைய மணிமேகலையின் உருவம் இளங்கோவின் முன்னர்த் தோன்றிய தென்க. யாக்கை வினையின் காரியமாயும், வினைக்குக் காரணமாயும் உள்ள தென்றபடி; "பிறவிப் பெருங்கடல்" "என்பதனுரையில், காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கடலென்றார்" எனப் பரிமேலழகர் கூறியது ஈண்டு அறியற்பாலது. புனைவன - சந்தனம், மலர் முதலியன. மூப்பு என்பதும் பாடம். அரவு அடங்கு புற்றின் என மாறுக. செற்றம் - பகைமை நெடுங்காலம் நிகழ்வதாகிய சினம், அவலம் - வருத் தந்தோன்றி நிற்றல்; கவலை - யாது செய்வலென்றல்; கையாறு - மூர்ச்சித்தல்; அழுங்கல் - வாய்விட் டழுதல்; இது அரற்று எனவும் படும். புறமறிப் பாராய் - புறமறியாகப் பார்ப்பாயாக; என்றது, பையை உள்புறமாக மறித்துப் பார்த்தல் போல் உடம்பையும் பார்க்கவென்றபடி; பார்ப்பின் இதன் தூய்து அன்மை விளங்கும் என்றவாறு; 1"மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப்படும்" 2"பைம்மறியா நோக்கப் பருந்தார்க்குந் தகைமைத்து" என்பன காண்க. என்றாள்; என்று அவளுரைத்த சொல் என வேறறுத் துரைக்க. "பளிங்கு......பாவை" என்னுங் கருத்து; 3"பளிக்கறைப் பவழப் பாவை பரிசெனத் திகழுஞ் சாயல்" எனச் சீவக சிந்தா மணியில் வந்துள்ளமை காண்க. சுதமதி காட்ட மணிமேகலை மலர்வனம் காண்புழி, யானையின் கடாத்திறம் அடக்கிவருவோனாகிய உதயகுமரன் எட்டிகுமரனை நோக்கியாது நீ யுற்ற இடுக்கண் என்றலும், அவன் இது யானுற்ற இடும்பை யென்றலும், தாரோன் மகிழ்வெய்திப் பூம்பொழிற் கடைமுகம் குறுக, தேரொலி இசைத்தலும், என்செய்கு என ஆயிழையுரைத்தலும், பாவையை இரீஇ நின்ற, சுதமதியைக் கண்டு அரசிளங்குமரன் மணிமேகலை எய்தியது உரையென, அவள் வருந்தி மக்கள் யாக்கை இது வென உணர்ந்து புறமறிப்பாராய் என்றுரைத்த சொல் அவனுள்ளஞ் சேரா முன்னர் இளங்கொடி இளங்கோமுன் தோன்றும் என முடிக்க. பளிக்கறை புக்க காதை முற்றிற்று. 5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை மணிமேகலையின் உருவத்தை ஓவியமெனக் கருதி ஓவியனது கைத்திறத்தை வியந்த உதயகுமரன் பின்பு அதனை அவள் வடிவெனத் துணிந்து, பளிக்கறையுட் புகுதற்கு அதன் வாயில் காணப் படாமையால் பளிக்குச் சுவரினைக் கையாலே தடவிக் கொண்டு வருபவன் சுதமதியை நோக்கி, ‘மணிமேகலை எத்திறத்தினள் ? கூறுதி' என்றான். என்னலும், சுதமதி, ‘அவள் தவவொழுக்கினள்; குற்றம் புரிந்தாரைச் சபிக்கும் ஆற்றலுமுடையவள்; காம விகாரம் இல்லாதவள் ; நீ அவளை விரும்புதல் தக்கதன்று' என்று கூறினள். கூறலும் அவன், ‘சிறையுமுண்டோ செழும்புனல் மிக்குழி, நிறையுமுண்டோ காமம் காழ்க்கொளின்? அவள் எப்படியும் எனக்குரியவளாவள்' என்று சொல்லிக் கொண்டு செல்பவன், சமண முனிவர்களின் இருப்பிடத்தில் ஓர் வித்தியாதரனால் இடப்பட்டவளென்று கூறப்படும் சுதமதி பௌத்த சங்கத்தைச் சார்ந்த மாதவி மகளுடன் வந்த வரலாற்றை அவளை வினாவித் தெரிந்துகொண்டு, ‘மணிமேகலையைச் சித்திராபதியால் இனி அடைதல் கூடும்' என்று சொல்லிப் போயினன். போனவுடன் மணிமேகலை வெளியே வந்து சுதமதியை நோக்கி, அன்பிலள்; தவவுணர்ச்சியில்லாதவள், பொருள் விலையாட்டி,' என்று என்னை இகழ்ந்தனன் என்னாது அவன் பின்னே என் நெஞ்சு செல்லலுற்றது; ‘இதுவோ காமத்தியற்கை ; இதன் தன்மை கெடுவதாக;' என்று சொல்லிக்கொண்டு நின்றாள். அப்பொழுது இந்திர விழாவைக் காணுதலுற்ற மணிமேகலா தெய்வம் அவர்கட்குத் தெரிந்த ஓர் மடந்தை வேடம் பூண்டு அப்பொழிலையடைந்து, பளிக்கறையிலுள்ள பாதபீடிகையை வலங்கொண்டு மேல் எழும்பி நின்று பலவாறு துதித்தது. அப்பொழுது பகற்பொழுது நீங்க அந்திமாலை வந்துற்றது. (இதன்கண் சுதமதி வரலாறு கூறும் வாயிலாகச் சமணரினும் புத்தர்கள் அருளுடையோ ரென்பது வலியுறுத்தப்படுகின்றது. புத்த தேவனைப் பரவுதல் நன்கமைந் துள்ளது. மேற்றிசையில் ஞாயிறு வீழக் கீழ்த்திசையில் நிறை மதி தோன்றுதலை உருவகப்படுத்தி யிருப்பதும், மாலைப்பொழுதின் நிகழ்ச்சிகள் கூறுவதும் கவியின் கற்பனைத் திறத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாம்.) இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி விளங்கொளி மேனி விண்ணவர் வியப்பப் பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்துத் திருவின் செய்யோள் ஆடிய பாவையின் 5 விரைமல ரைங்கணை மீன விலோதனத்து உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப ஓவிய னுள்ளத் துள்ளியது வியப்போன் காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து தாழொளி மண்டபந் தன்கையில் தடைஇச் 10 சூழ்வோன் சுதமதி தன்முக நோக்கிச் சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன எத்திறத் தாள்நின் இளங்கொடி யுரையெனக் குருகுபெயர்க் குன்றங் கொன்றோ னன்னநின் முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் 15 பருகா ளாயினிப் பைந்தொடி நங்கை ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி காமற் கடந்த வாய்மைய ளென்றே தூமலர்க் கூந்தற் சுதமதி யுரைப்பச் சிறையு முண்டோ செழும்புனல் மிக்குழி 20 நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின் செவ்விய ளாயினென் செவ்விய ளாகென அவ்விய நெஞ்சமோ டகல்வோ னாயிடை அஞ்செஞ் சாய லராந்தா ணத்துளோர் விஞ்சைய னிட்ட விளங்கிழை யென்றே 25 கல்லென் பேரூர்ப் பல்லோ ருரையினை ஆங்கவ ருறைவிடம் நீங்கி யாயிழை ஈங்கிவள் தன்னொ டெய்திய துரையென வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி 30 ஈங்கிவள் தன்னோ டெய்திய காரணம் வீங்குநீர் ஞால மாள்வோய் கேட்டருள் யாப்புடை யுள்ளத் தெம்மனை யிழந்தோன் பார்ப்பன முதுமகன் படிம வுண்டியன் மழைவளந் தரூஉம் அழலோம் பாளன் 35 பழவினைப் பயத்தால் பிழைமண மெய்திய எற்கெடுத் திரங்கித் தன்தக வுடைமையின் குரங்கு செய்கடற் குமரியம் பெருந்துறைப் பரந்துசென் மாக்களொடு தேடினன் பெயர்வோன் கடன்மண்டு பெருந்துறைக் காவிரி யாடிய 40 வடமொழி யாளரொடு வருவோன் கண்டீங் கியாங்ஙனம் வந்தனை யென்மக ளென்றே தாங்காக் கண்ணீ ரென்றலை யுதிர்த்தாங் கோத லந்தணர்க் கொவ்வே னாயினும் காதல னாதலிற் கைவிட லீயான் 45 இரந்தூண் தலைக்கொண் டிந்நகர் மருங்கில் பரந்துபடு மனைதொறுந் திரிவோ னொருநாள் புனிற்றாப் பாய்ந்த வயிற்றுப் புண்ணினன் கணவிரி மாலை கைக்கொண் டென்ன நிணநீடு பெருங்குடர் கையகத் தேந்தி 50 என்மக ளிருந்த இடமென் றெண்ணித் தன்னுறு துன்பந் தாங்காது புகுந்து சமணீர் காள்நுஞ் சரணென் றோனை இவணீ ரல்லவென் றென்னொடும் வெகுண்டு மையறு படிவத்து மாதவர் புறதெமைக் 55 கையுதிர்க் கோடலின் கண்ணிறை நீரேம் அறவோ ருளிரோ ஆருமி லோமெனப் புறவோர் வீதியிற் புலம்பொடு சாற்ற மங்குறோய் மாடம் மனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்ட பாத்திர முடையோன் 60 கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன் பொன்னிற் றிகழும் பொலம்பூ வாடையன் என்னுற் றனிரோ என்றெமை நோக்கி அன்புட னளைஇய அருண்மொழி யதனால் அஞ்செவி நிறைத்து நெஞ்சகங் குளிர்ப்பித்துத் 65 தன்கைப் பாத்திர மென்கைத் தந்தாங் கெந்தைக் குற்ற இடும்பை நீங்க எடுத்தனன் றழீஇக் கடுப்பத் தலையேற்றி மாதவ ருறைவிடங் காட்டிய மறையோன் சாதுயர் நீக்கிய தலைவன் றவமுனி 70 சங்க தருமன் தானெமக் கருளிய எங்கோ னியல்குணன் ஏதமில் குணப்பொருள் உலக நோன்பிற் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் இன்பச் செவ்வி மன்பதை யெய்த 75 அருளறம் பூண்ட ஒருபெரும் பூட்கையின் அறக்கதி ராழி திறப்பட உருட்டிக் காமற் கடந்த வாமன் பாதம் தகைபா ராட்டுத லல்லது யாவதும் மிகைநா வில்லேன் வேந்தே வாழ்கென 80 அஞ்சொ லாழியை நின்திற மறிந்தேன் வஞ்சி நுண்ணிடை மணிமே கலைதனைச் சித்திரா பதியாற் சேர்தலு முண்டென் றப்பொழி லாங்கவன் அயர்ந்து போயபின் பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக் 85 களிக்கயல் பிறழாக் காட்சிய ளாகிக் கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள் வருணக் காப்பிலள் பொருள்விலை யாட்டியென் றிகழ்ந்தன னாகி நயந்தோ னென்னாது புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம் 90 இதுவோ அன்னாய் காமத் தியற்கை இதுவே யாயிற் கெடுகதன் றிறமென மதுமலர்க் குழலாள் மணிமே கலைதான் சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள் இந்திர கோடணை விழாவணி விரும்பி 95 வந்து காண்குறுஉ மணிமேகலா தெய்வம் பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி மணியறைப் பீடிகை வலங்கொண் டோங்கிப் புலவன் றீர்த்தன் புண்ணியன் புராணன் உலக நோன்பின் உயர்ந்தோ யென்கோ 100 குற்றங் கெடுத்தோய் செற்றஞ் செறுத்தோய் முற்ற உணர்ந்த முதல்வா என்கோ காமற் கடந்தோய் ஏம மாயோய் தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ ஆயிர வாரத் தாழியன் றிருந்தடி 105 நாவா யிரமிலேன் ஏத்துவ தெவனென் றெரிமணிப் பூங்கொடி இருநில மருங்குவந் தொருதனி திரிவதொத் தோதியி னொதுங்கி நிலவரை யிறந்தோர் முடங்குநா நீட்டும் புலவரை யிறந்த புகாரெனும் பூங்கொடி 110 பன்மலர் சிறந்த நன்னீ ரகழிப் புள்ளொலி சிறந்த தெள்ளரிச் சிலம்படி ஞாயி லிஞ்சி நகைமணி மேகலை வாயின்மருங் கியன்ற வான்பணைத் தோளி தருநில வச்சிரம் எனஇரு கோட்டம் 115 எதிரெதி ரோங்கிய கதிரிள வனமுலை ஆர்புனை வேந்தற்குப் பேரள வியற்றி ஊழி யெண்ணி நீடுநின் றோங்கிய ஒருபெருங் கோயிற் றிருமுக வாட்டி குணதிசை மருங்கின் நாண்முதிர் மதியமும் 120 குடதிசை மருங்கிற் சென்றுவீழ் கதிரும் வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும் அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப் 125 பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண் டோங்கிருந் தெங்கின் உயர்மட லேற அன்றிற் பேடை அரிக்குர லழைஇச் சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப் பவளச் செங்காற் பறவைக் கானத்துக் 130 குவளை மேய்ந்த குடக்கட் சேதா முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக் கன்றுநினை குரல மன்றுவழிப் படர அந்தி யந்தணர் செந்தீப் பேணப் பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப 135 யாழோர் மருதத் தின்னரம் புளரக் கோவலர் முல்லை குழன்மேற் கொள்ள அமரக மருங்கிற் கணவனை யிழந்து தமரகம் புகூஉம் ஒருமகள் போலக் கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ 140 டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென். உரை 1-6. இளங்கோன் கண்ட இளம்பொற் பூங்கொடி-அரசிளங் குமரன் கண்ணுற்ற அழகிய இளம் பூங்கொடியனைய மணிமேகலை, விளங்கு ஒளி மேனி விண்ணவர் வியப்ப-விளங்குகின்ற பேரொளி பொருந்திய திருமேனியையுடைய வானவர்களும் வியக்குமாறு, பொருமுகப் பளிங்கின் எழினி வீழ்த்து - பளிங்கினாலாய பொருமுக வெழினியை வீழ்த்து, திருவின் செய்யோள் ஆடிய பாவையின் - திருமகளாடிய பாவையைப்போல, விரைமலர் ஐங்கணை மீன விலோதனத்து உருவிலாளனொடு உருவம் பெயர்ப்ப - மணம் பொருந்திய மலராகிய ஐந்தம்புகளையும் மீனக்கொடியையும் உடைய அநங்கனுடன் தன் உருவத்தை வெளிப்படுத்த; பொற்பூங்கொடி - காமவல்லியுமாம்; இது பொன்னுலகத் துள்ள தென்பர். எழினி - திரைச்சீலை; பொருமுக வெழினி-மூவகைத் திரைச் சீலைகளுள் ஒன்று; அரங்கின் வலத்தூண் இரண்டிலும் உருவு திரை யாய் அமைவது; எழினி மூன்றனையும் 1"ஒருமுக வெழினியும் - பொருமுக வெழினியும்; கரந்துவர லெழினியும் புரிந்துடன் வகுத்து"என் பதனாலறிக. திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள்; திருமகள்- இன்: சாரியை. ஆடிய பாவையின் - ஆடுதற்குக் கொண்ட பாவை யுருவைப் போல; கொல்லிப் பாவையுருக்கொண்டு ஆடினமையின் அக் கூத்தும் பாவை யெனப்படும்; அது போர் செய்தற்குச் சமைந்த கோலத்துடன் அவுணர் மோகித்து விழும்படி திருமகளாடியது; பதினோராடலுளொன்று; 2"செருவெங் கோல மவுணர் நீங்கத், திரு வின் செய்யோ ளாடிய பாவையும்' என்பது காண்க. "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" என்பதன் கருத்து இவளுருவைக் கண்டவுடன் இளங்கோவனுக்குக் காமவுபாதை உண்டாயிற் றென்பதாம். 7-12. ஓவியன் உள்ளத்து உள்ளியது வியப்போன் - (மணிமேகலையின் உருவத்தை ஓவியம் என நினைந்து) ஓவியக்காரன் அதனை எழுதுமாறு மனதில் அமைத்ததை வியக்கின்றவனாய் உதயகுமரன், காவியங் கண்ணி யாகுதல் தெளிந்து - அவ்வடிவம் நீலமலரனைய கண்களையுடைய மணிமேகலை யாதலைத் தெளிந்து, தாழ் ஒளி மண்டபம் தன் கையில் தடைஇச் சூழ்வோன் - தங்கிய ஒளியுடைய பளிக்கு மண்டபத்தைத் தன் கையாலே தடவிப் பார்த்துச் சுற்றி வருபவன், சுதமதி தன்முகம் நோக்கி - சுதமதியின் முகத்தைப் பார்த்து, சித்திர கைவினை திசைதொறும் செறிந்தன எத்திறத்தாள் நின் இளங்கொடி உரை என - சித்திரக் கைத்தொழில் எப்பக்கமும் நிறைந்திருக்கின்றன நின் இளங்கொடி போல்பவள் எவ்விடத்தாள் கூறுக என; தாழ்தல்-தங்குதல். வாயில் காண்டற்கு மண்டபத்தைத் தடவிச் சூழ்ந்தனனென்க. சூழ்ந்து வருங்கால் மணிமேகலையின் உருவம் எத்திசையினும் வெளிப்பட்டமையின் "சித்திரக் கைவினை திசைதொறுஞ் செறிந்தன" என்றான் ; மண்டபத்திலுள்ள ஓவியப்பாவை பலவற்றுடன் மணிமேகலையின் உருவம் வேறுபாடின்றி யிருந்தமையின் அங்ஙனம் கூறினானெனலுமாம்; 1"மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃ தோவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்" 2"ஈங்கிம் மண்ணீட்டியாரென வுணர்கேன்" எனப் பின்வருவன காண்க. திறம்-இயல்புமாம். சுதமதி காவற் பெண்டாகலின் 'நின் இளங்கொடி' என்றான். ஓவியன் என்பதற்கு உதயகுமரன் சித்திரம் போன்றவனாய் நின்றென்றுரைத்தல் ஈண்டைக்குப் பொருந்தாமையோர்க. 13-18. குருகு பெயர்க் குன்றங் கொன்றோன் அன்ன நின் முருகச் செவ்வி - கிரவுஞ்ச மலையை எறிந்த முருகவேளை யொத்த நினது இளமை யழகினை, முகந்து தன் கண்ணால் பருகாள் 3ஆயின் பைந்தொடி நங்கை-ஆராயுமிடத்துப் பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை தன் கண்களால் முகந்து பருகாள், ஊழ்தரு தவத்தள் - முறையாகப் பெற்ற தவத்தினையுடையள், சாபசரத்தி-சாபமாகிய அம்பையுடையவள், காமற் கடந்த வாய்மையள் என்றே - காமனை வென்ற மெய்ம்மையை யுடையவள் என்று, தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப-தூய மலரணிந்த கூந்தலையுடைய சுதமதி கூற; குருகு-அன்றில்; கிரவுஞ்சம்; அதன் பெயர் பெற்ற குன்றமென்க; 4"குருகுபெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே" "குருகுபெயர்க்குன் றங்கொன்றான்" என்பன காண்க. முருகு-இளமை; ஈறு திரிந்தது; ஊழ்தரு தவத்தள்- ஊழினாலே தரப் பட்ட தவத்தினள் என்றுமாம்; என்னை? 5தவமுந் தவமுடையார்க் காகும்" என்பவாகலின். சாபசரத்தி - வில்லையும் அம்பையும் உடையாள் என்பதோர் பொருளும் தோன்ற நின்றது; சாபம் - வில். ஆயின், நங்கை பருகாள்; தவத்தள்; சரத்தி; வாய்மையள்; என்று உரைப்பவென்க. 19-27. சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழி- வளவிய நீர் மிகுந்த விடத்து அதனைத் தாங்கும் அரணும் உண்டோ, நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்-அவ்வாறே காமம் அடிப்படின் அதனை நிறுத்தும் தன்மையும் உளதாகுமோ, செவ்வியள் ஆயின் என் செவ்வியள் ஆகென - செவ்வியை யுடையளாயின் என்னை? அவள் செவ்வியளாகட்டும் என்று, அவ்விய நெஞ்சமொடு அகல் வோன்-பொறாமை கொண்ட உள்ளத்தோடும் நீங்குவோன், ஆயிடை-அப்பொழுது, அம்செஞ் சாயல் - அழகிய சிவந்தசாயலையுடையாய் அராந்தாணத்துள்-சமணப் பள்ளியில், ஓர் விஞ்சையன் இட்ட விளங்கிழை என்றே-ஒரு விஞ்சையனாலிடப்பட்ட மெல்லியல் என்றே, கல்லென் பேரூர்ப் பல்லோர் உரையினை-கல்லென்னும் ஒலியினையுடைய நகரின்கண் பல்லோராலுங் கூறப்படுவாய், ஆங்கவர் உறைவிடம் நீங்கி ஆயிழை-ஆயிழாய் நீ அச்சமண முனிவர் வாழ்விடத்தை நீங்கி, ஈங்கிவள் தன்னோடு எய்தியது உரை என - இம் மணிமேகலையுடன் ஈண்டு எய்திய காரணத்தைக் கூறுவாயாக என; சிறை-அணை. நிறை-காமத்தை உள்ளேயடக்கி நிறுத்துதல்; மனத்தை நிறுத்தலுமாம்; காழ்க்கொளின்-வைரமேறின் ; முதிர்ந்தால் என்றபடி; 1 "நீர் மிகிற் சிறையுமில்லை" 2"நீர்மிகினில்லை சிறை" 3"சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் பெருகு மாயின், நிறை யென்ப தில்லைக் காம நேர்நின்று சிறக்குமாயின்" 4"பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே" என்பன ஈண்டு அறியற்பாலன. தவத்தள், சரத்தி, வாய்மையள் என்பவற்றைச் செவ்வியள் என அடக்கிக் கூறினான். ஆகென, விகாரம், அவ்வியம்-பிறர்க் குரியளாதல் கூடா தென்னும் பொறாமை; கோட்டமுமாம். அஞ்செஞ் சாயல், விளி. அராந்தாணம் என்பதற்கு மேல் (3 : 87) உரைத்தமை காண்க. 28-31. வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி - நீண்ட வீரக்கழலை யணிந்த அரசே நின் கண்ணி வாழ்வதாக, தீநெறிப்படரா நெஞ்சினை ஆகுமதி-தீயவழியிற் செல்லாத உள்ளமுடையை ஆவாயாக, ஈங்கிவள் தன்னோடு எய்திய காரணம் வீங்குநீர்ஞாலம் ஆள்வோய் கேட்டருள்-இம் மணிமேகலையுடன் யான் வந்த காரணத்தைக் கடல்சூழ்ந்த நிலவுலகினையாளும் மன்னவனே கேட்டருள் வாயாக; 32-40. யாப்புடை உள்ளத்து எம் அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன்-என் தாயை இழந்தோனும் உறுதிபொருந்திய உள்ளத்தை யுடைய பார்ப்பன முதியோனும், படிம உண்டியன்-பட்டிணிவிட்டுண்ணும் நோன்பினை யுடையோனும், மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன் - மழைவளத்தைத் தரும் முத்தீயோம்பு வோனுமாகிய எந்தை, பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய எற்கெடுத்து இரங்கி-முன் செய்வினையின் பயனால் மாருத வேகனிடம் அகப்பட்டுப் பிழைமணம் எய்திய என்னைக் காணாமையால் வருந்தி, தன் தகவுடைமையின் - தனது தகுதி யுடைமையால், குரங்குசெய் கடல் குமரியம் பெருந்துறைப் பரந்து செல் மாக்க ளொடு-குரங்கு செய்த குமரிக்கடலின் பெரிய துறைக்கண் நீராடுதற்கு மிக்குச் செல்லும் மக்களோடே, தேடினன் பெயர்வோன் - என்னைத் தேடிச் செல்பவனாய், கடல் மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய-இடையே காவிரி கடலிற் கலக்கும் பெரிய சங்க முகத்துறையில் நீராடுதற்கு, வடமொழி யாளரொடு வருவோன்- பார்ப்பனரோடு வருபவன்; மழைவளந் தரூஉம் அழல் என்க; 1"மழைக்கரு வுயிர்க்கு மழற்றிக ழட்டின், மறையோ ராக்கிய வாவுதி நறும்புகை" என்பது காண்க. மாருத வேகனுக்குத் தான் சிலநாள் உரியளானது பற்றி, "பிழைமண மெய்திய" என்றாள். குமரி-கன்னியாகுமரி ; 2"தொடியோள் பௌவமும்" என்பதன் உரை நோக்குக. வடமொழியாளர்-பார்ப்பனர் ; பார்ப்பனியை "வடமொழியாட்டி" (13:73) என்று பின்னர்க் கூறுவர். 40-46. கண்டு ஈங்கு-என்னை இந்நகரத்திற் கண்டு, யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே தாங்காக் கண்ணீர் என்றலை உதிர்த் தாங்கு-என் மகளே ஈண்டு எவ்வாறு வந்தாய் என்று கூறிப் பெருகிய கண்ணீரை என்மீது சொரிந்து, ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன் ஆயினும்-யான் மறையோதும் அந்தணர்களுடனிருத் தற்குத் தகாத வளாயினும், காதலன் ஆதலின் கைவிடலீ யான் - என்மீது மிகுந்த அன்புடையனாதலால் என்னைக் கைவிடானாய், இரந்தூண் தலைக்கொண்டு-இரந்துண்டு வாழ்தலை மேற்கொண்டு, இந்நகர் மருங்கில்-இவ்'d2வூரின் கண், பரந்துபடு மனைதொறும் திரிவோன் - பரந்து தோன்றும் இல்லங்கள் தோறும் சென்று ஏற்போன்; கைவிடலீயான்-கைவிடான்; "காவலன் மகனோ கைவிடலீயான்" (19:32) என்பர் பின்னும்; "காட்டியதாதலிற் கைவிடலீயான்" (13:85) என்பது சிலப்பதிகாரம். 46-52. ஒருநாள் புனிற்றுஆ பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்-ஒரு நாள் ஈன்றணிமையையுடைய பசுவொன்று பாய்ந்தமையால் வயிற்றிலுண்டான புண்ணினை யுடையனாய், கணவிரி மாலை கைக் கொண்டென்ன - அலரிமாலையைக் கையிற் கொண்டாற்போல, நிணம்நீடு பெருங்குடர் கையகத்து ஏந்தி-நிணத்துடன் நீண்ட பெரிய குடரைக் கையில் ஏந்திக் கொண்டு, என்மகள் இருந்த இட மென்று எண்ணி-பண்டு என்மகள் இருந்த இடமாகும் என்று நினைந்து, தன் உறு துன்பம் தாங்காது புகுந்து - தனது மிக்க துன்பத்தினைத் தாங்க வியலாமற் புகுந்து, சமணீர்காள் நும் சரண் என்றோனை - சமணர்களே உம்முடைய அடைக்கலம் என்று கூறியவனை; பாய்ந்த புண்: பெயரெச்சம் காரணப் பொருட்டாயது; ஆறு சென்ற வியர் என்புழிப்போல. 1"நிணவரிக் குறைந்தவதர் தொறுங், கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்னை, புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்" என உவமங் கூறியிருப்பது அறியற்பாலது. இடமென்று-இட மாகலின் புரந்தருள்வரென்று. 53-57. இவண் நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு - இவ் விடத்திற்குரிய தன்மை அன்றென்று கூறி என்னையும் சினந்து, மையறு படிவத்து மாதவர் புறத்து எமைக் கையுதிர்க் கோடலின்- குற்றமற்ற தவவடிவத்தை யுடைய சமண முனிவர்கள் புறத்தே போகுமாறு எம்மைக் கையை அசைத்துக் குறித்தலினால், கண் நிறை நீரேம்-கண்களில் நிறைந்த நீரினையுடையேமாய், அறவோர் உளீரோ ஆரும் இலோம் என - அறம்புரிவீர் இருக்கின்றீரோ பாதுகாப்போர் யாருமில்லாதேம் என்று, புறவோர் வீதியில் புலம்பொடு சாற்ற - புறத்திலுள்ள ஒரு வீதியில் வருத்தத்துடன் கூற; இவணீரல்ல - இவ்விடத்திற்குரியீரல்லீர் என்றுமாம் ; அல்ல என்பது பால்குறியாது வழக்குப்பற்றி நின்றது. என்னொடும் - என்னையும்; உம்மை: எச்சம்; தந்தையை என்னொடும் என்றுமாம். படிவம் - தவ வேடம். ஓர் புறவீதியி லென்க ; புறவோர் - புறத்திலுள்ளோர் என்றுரைப்பாருமுளர். 58-70. மங்குல் தோய் மாட மனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்ட பாத்திரம் உடையோன் - வானளாவிய மாடங்களை யுடைய மனைகள்தோறும் செல்லும் கையிற்கொண்ட பிச்சைப் பாத்திரத்தையுடையவனும், கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்-ஞாயிறு காயும் நண்பகற் பொழுதில் குளிர்ச்சி பொருந்திய மதிபோலும் முகத்தினை யுடைய வனும், பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன்-பொன் போல் விளங்கும் அழகிய ஆடையை உடையவனுமாகி, என் உற்றனிரோ என்று எமை நோக்கி-என்ன துன்பம் எய்தினீர் என்று எங்களை நோக்கி, அன்புடன் அளைஇய அருள் மொழி அதனால் - அன்பொடு கலந்த அருள் மிகுந்த இன் மொழிகளால், அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்து - செவியகத்தை நிறைத்து உள்ளத்தைக் குளிரச்செய்து, தன்கைப் பாத்திரம் என்கைத் தந்து-தன் கையிலுள்ள பாத்திரத்தை என் கையில் கொடுத்துவிட்டு, எந்தைக்கு உற்ற இடும்பை நீங்க - என் தந்தைக்கு எய்திய துன்பம் நீங்குமாறு, எடுத்தனன் தழீஇக் கடுப்பத் தலையேற்றி-விரையத் தழுவி எடுத்துத் தன் உடம்பினிடத்தே சுமந்து சென்று, மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்-புத்த முனிவர்கள் உறைவிடத்தைக் காட்டிய மறையவனாகிய, சாதுயர் நீக்கிய தலைவன்-எந்தையின் இறப்புத் துன்பத்தை நீக்கிக் காப்பாற்றிய தலைவன், தவமுனி சங்கதருமன் - சங்கதருமன் என்னும் தவத்தையுடைய முனிவனாவான்; இல்லறத்தோர் யாவரும் உண்டபின் உச்சிப்பொழுதிற் பிச்சைக்குச் செல்வது புத்தமதத் துறவியர் இயல்பாகலின், "கதிர்சுடுமம யத்து" என்றார் ; "வெங்கதி ரமயத்து வியன்பொழி லகவயின், வந்து தோன்றலும்," "வெயில்விளங் கமயத்து விளங்கித் தோன்றிய, சாது சக்கரன் றன்னையானூட்டிய" (10 : 27 - 8 ; 11 : 102 -3) எனப் பின்னர் வருதலுங் காண்க. மருதந் துவரில் தோய்க்கப்பட்டு மஞ்சள் நிறமுள்ளதாகலின் "பொன்னிற் றிகழும பொலம்பூ வாடை" எனப் பட்டது. அன்பும் அருளுமுடைய மொழியா லென்க. கடுப்ப-விரைய. தலை-இடம். ஆடையனாய் நோக்கி நிறைத்துக் குளிர்ப்பித்துத் தந்து ஏற்றிக் காட்டிய மறையோனாகிய தலைவன் சங்கதருமன் ஆவானென்க. 70-79. தான் எமக்கு அருளிய -அவன் எமக்கு அறிவுறுத்த, எங்கோன் இயல்குணன் ஏதமில் குணப்பொருள் - எம்முடைய இறைவன் இயல்பாகவே தோன்றிய குணங்களை யுடையவன் குற்றமற்ற குணங்களின் பொருளாயுள்ளோன், உலக நோன்பின் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் - உலகசீலத்துடன் பல பிறப்புக்களிலும் பிறந்து பிறந்து உணர்ந்து உயிர்கட்கு நல்லறிவு புகட்டிய தனக்கென்று உயிர் வாழாத பிறர்க்கே உரிமைபூண்டொழுகுபவன், இன்பச்செவ்வி மன்பதை எய்த-நிருவாணமடைதற்குரிய பருவத்தை உயிர்ப்பன்மைகள் அடைய, அருள் அறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின் - அருளாகிய அறத்தினைப்பூண்ட ஒப்பற்ற பெரிய மேற்கோளினாலே, அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய கதிர்களையுடைய ஆழியை உலகத்திற் பலவகையாக உருட்டி, காமற் கடந்த வாமன் பாதம் - மாரனை வென்ற புத்தனது திருவடிகளை, தகை பாராட்டுதல் அல்லது யாவதும் மிகைநா இல்லேன் - பாராட்டித் துதித்தலையன்றி வேறுபொருள்களைப் பற்றிச் சிறிதும் பேசாத நாவினையுடையேன், வேந்தே வாழ்க என-மன்னவ வாழ்வாயாக என்று சுதமதி கூற; உலக நோன்பு-இல்வாழ்க்கையிலிருந்து செய்யும் நோன்பு, ஒழுக்கம்; அதனால் இல்லறத்தார் உலகநோன்பிகள் எனப்படுவர். கதி- பிறப்பு. புத்தன் அருளாலே பலவகைப் பிறப்பும் எடுத்தானெனப் புத்தசாதகக் கதைகள் கூறாநிற்கும்: 1"எறும்புகடை யயன்முதலா வெண்ணிறந்த வென்றுரைக்கப் பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி, எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா லிடரெய்தின், அவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்" 2"வானாடும் பரியாயு மரிண மாயும் வன்கேழற் களிறாயு மெண்காற் புண்மான், தானாயும் பணையெருமை யொருத்தலாயுந் தடக்கையிளங் களிறாயுஞ் சடங்க மாயும், மீனாயு முயலாயு மன்ன மாயு மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க, மானாயுங்கொலை களவு கட்பொய் காமம் வரைந்தவர்தா முறைந்தபதி மானா 'd2வூரே" என்பன காண்க. புத்தன் தனக் கென வாழாப் பிறர்க்குரியாளன் என்ற கருத்து "பிறர்க்கற முயலும் பெரியோய்," "தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பு ; மன்னுயிர் முதல்வன்" (11 ; 45 ;55; 114-7) என இந்நூலுள்ளே பின்ன ரும் வந்துள்ளன; 3"இருட்பார வினைநீக்கி யெவ்வுயிர்க்குங் காவலென, அருட்பாரந் தனிசுமந்த வன்றுமுத லின்றளவும், மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும், பொதுவன்றி நினக் குரித்தோ புண்ணியநின் றிருமேனி," "தீதியல் புலியது பசிகெடு வகைநின திருவுரு வருளிய திருமலி பெருமையை," என்பனவும் காண்க. சிறுகுடிகிழான் பண்ணன் என்பானைச் சிறப்பிக்கு மிடத்து அகப்பாட்டிலே (54) இத்தொடர் முழுதும் வந்துள்ளது; அருளறம்- அருளாகிய அறம் ; அருளே எல்லா அறங்களிலும் மேலாயது என்பது 1"ஒன்றாக நல்லது கொல்லாமை" "அஹிம்ஸா பரமோதர்ம:" என்ப வற்றான் அறியப்படும். கதிர் - திகிரியின் ஆர். அறத்தை ஆழியென்ற தற்கேற்ப ‘உருட்டி' என்றார் ; பலவகை யாலும் அவன் அறவுபதேசஞ் செய்தமையின் ‘திறம்பட' என்றார்; "ஆதி முதல்வ னறவாழி யாள் வோன்" (10 : 31 என்பார் பின்னும்; இதுபற்றியே புத்தனைத் தரும சக்கரப் பிரவர்த்தனாசாரியன் என்பர். காமன் - மாரன்; அறத்திற்கு மாறான விருப்பங்களை மனத்திலுண்டாக்கும் ஒரு தேவன்; மாபோதி விருக்கத்தின் கீழே நோற்றிருக்கையில் இவன் செய்த இடையூறுகளை யெல்லாம் வென்று விளங்கினமையின் "காமற்கடந்த வாமன்" என்றார். வாமன் - அழகுள்ளவன் ; புத்தன். தகைபாரட்டுதல்-துதித்தல்; ஒரு சொல். மிகை நா - மிகைக்கின்ற நா ; 2"காமனை வென்றோ னாயிரத்தெட்டு, நாம மல்லது நவிலா தென்னா" என்பது அறியற் பாலது. 80-83. அஞ்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்-அழகிய மொழியையுடைய ஆயிழாய் நின் வரலாற்றினை அறிந்தேன், வஞ்சிநுண் இடை மணிமேகலைதனை - கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய மணிமேகலையை. சித்திராபதியால் சேர்தலும் உண்டென்று-சித்திராபதியால் அடைதலுங்கூடும் என்று கூறி, அப் பொழில் ஆங்கவன் அயர்ந்து போயபின் - உதயகுமரன் அப் பொழிலினின்றும் காமத்தால் தளர்ச்சி யுடையனாய்ச் சென்ற பின்னர்; 84-93. பளிக்கறை திறந்து-மணிமேகலை பளிக்கு மண்டபத்தைத் திறந்து, பனிமதி முகத்துக் களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகி- குளிர்மதி போலும் முகத்திலே மதர்த்த கயல்போலுங் கண்கள் பிறழாத காட்சியையுடையளாய், கற்புத்தான் இலள் நற்றவ உணர்விலள் வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று-கற்பில்லாதவள் நல்ல தவவுணர்ச்சியில்லாதவள் மரபிற்கேற்ற காவலற்றவள் பொருள் கொடுப்பார்க்குத் தன்னை விற்கும் விலைமகள் என்று இவ்வாறாக, இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது-பழித்துரைத் தவனாய் விரும்பினோன் என நினையாமல், புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம் - ஏதிலான் பின்னே என்னுடைய உள்ளம் சென்றது; இதுவோ அன்னாய் காமத்து இயற்கை - அன்னையே இங்ஙன முள்ளதோ காமத்தின் இயல்பு, இதுவே ஆயின் கெடுக தன்திறம் என-இவ்வாறாயின் இதன்வலி கெடுவதாக என்று, மதுமலர்க் குழலாள் மணிமேகலை தான் சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்-தேனவிழும் மலர்களை யணிந்த கூந்தலையுடைய அவள் சுதமதியோடும் கூறிநின்ற பொழுதில்; சுதமதியை நோக்கிய பார்வை விலகாது நின்றாளென்பர் ‘களிக் கயல் பிறழாக் காட்சியளாகி' என்றார். வருணக் காப்பு - வருண மாகிய காவல் என்றுமாம். மணிமேகலை திறத்து காட்சியளாகிக் கெடுக தன்றிறமென நின்ற வெல்லையுள் என்க. 94-97. இந்திர கோடணை விழாஅணி விரும்பி வந்துகாண்குறூஉம் மணிமேகலாதெய்வம் - இந்திரகோடணையாகிய விழாவின் எழிலைக் காணுதற்கு விரும்பி வந்த மணிமேகலா தெய்வம், பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி - அப்பதியின் கணிருக்கிற ஒரு பெண் வடிவத்துடன், மணியறைப் பீடிகை வலங்கொண்டு ஓங்கி - பளிக்கறையிலுள்ள பீடிகையை வலம்வந்து விசும்பில் உயர்ந்து; கோடணை - முழக்கம்; பலவகை ஆரவாரங்களை யுடைமையின், இந்திர விழா-இந்திர கோடணை யெனப்பட்டது. "இந்திர கோடணை யிந்நகர்க் காண," "இந்திர கோடணை விழவணி வருநாள்" (7. 17, 17; 59) எனப் பின் வருதல் காண்க. மணி-பளிங்கு, 98-108. புலவன்-மெய்யறி வுடையோனே, தீர்த்தன்-தூயோனே, புண்ணியன் - அறவோனே, புராணன் - பழையோனே, உலக நோன்பின் உயர்ந்தோய்-உலக நோன்பினால் மேம் பட்டவனே, என்கோ - என்பேனோ, குற்றம் கெடுத்தோய் - முக்குற்றங்களையும் அழித்தோய், செற்றம் செறுத்தோய் - கடுஞ்சினத்தைக் கடிந்தோய், முற்ற உணர்ந்த முதல்வா-முழுதும் உணர்ந்த முதன்மை யுடையோய், என்கோ-என்பேனோ, காமற் கடந்தோய் - மாரனை வென்றோய், ஏமம் ஆயோய்-இன்ப மயமாய் உள்ளோய், தீ நெறிக் கடும்பகை கடிந்தோய்-தீய நெறியாகிய கடிய பகையை நீக்கினோய், என்கோ-என்பேனோ, ஆயிரஆரத்து ஆழியன் திருந்தடி- ஆயிரம் ஆரங்களைக் கொண்ட அறவாழியினையுடைய நின்செவ்விய திருவடிகளை, நாஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று - ஆயிரம் நாவில்லா யான் எவ்வாறு துதிக்க வியலும் என்று, எரி மணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து-சுடர் விடுகின்ற மாணிக்கப் பூங்கொடியானது பெரிய பூமியின் பக்கலில் வந்து, ஒரு தனி திரிவது ஒத்து-தன்னந் தனியே திரிவதுபோல, ஓதியின் ஒதுங்கி- மெய்ஞ்ஞானத் துடன் ஒதுங்கி, நிலவரை இறந்து ஓர் முடங்குநா நீட்டும்-நிலவெல்லையைக் கடந்து தனது வளைந்த நாவை நீட்டு கின்றாள்; குற்றம்-காம வெகுளி மயக்கங்கள். ஏமம் - பாதுகாவலுமாம். ‘ஆழியந் திருந்தடி' என்ற பாடத்திற்கு ஆயிரம் ஆரங்களையுடைய சக்கர ரேகை பொருந்திய திருந்திய அடி என்றுரைக்க. நாவாயிர மிலேன் ஏத்துவ தெவன் என்றது என் ஒரு நாவில் அடங்குவ தன்று என்றபடி. ஓதி - முக்கால உணர்வு. நிலவரை இறந்து - புவியின் மேலே உயர்ந்து. ஓர்: அசை. நாநீட்டும் - சொல்லும். 109-118. புல வரை இறந்த புகார் எனும் பூங்கொடி - அறிவின் எல்லையைக் கடந்த புகார் என்னும பூங்கொடி, பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப் புள் ஒலி சிறந்த தெள் அரிச் சிலம்பு அடி - பல மலர்களும் சிறந்து விளங்குகின்ற நல்ல நீரினையுடைய புட்களின் ஒலி மிக்க அகழியாகிய சிறந்த தெள்ளிய அரியினையுடைய சிலம் பணிந்த அடியையும், ஞாயில் இஞ்சி நகை மணிமேகலை - ஞாயிலையுடைய மதிலாகிய ஒள்ளிய மணிகளாலாய மேகலையையும், வாயில் மருங்கு இயன்ற வான் பணைத்தோளி - வாயிலின் பக்கலில் அமைந்த பெரிய தோரண கம்பமாகிய தோளையும் உடையாள், தருநிலை வச்சிரம் என இரு கோட்டம் எதிர் எதிர் ஓங்கியகதிர் இளவனமுலை-எதிரெதிர் உயர்ந்த கற்பகத் தரு நிற்கும் கோயில் வச்சிரப்படை நிற்கும் கோயில் என்னுமிரண்டு மாகிய ஒளி பொருந்திய இளைய அழகிய கொங்கை களையும், ஆர் புனை வேந்தற்குப் பேரளவு இயற்றி - ஆத்திமாலை சூடும் சோழனுக்குப் பெரிய அளவினதாக இயற்றப்பட்டு; ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய - எண்ணப்படும் பல ஊழிக்காலமாக நிலைபெற்றுயர்ந்த, ஒரு பெரும் கோயில் திருமுக வாட்டி-ஒப்பற்ற கோயிலாகிய திருமுகத்தினையும் உடையாள்: புல வரை - அறிவின் எல்லை; 1"புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல்" 2"புலவரை யிறந்தோய் போகுதல் பொறேஎன்" என் பன காண்க. மலர் சிலம்பும், புள்ளொளி சிலம்பொலியும், அகழி அடி யுமாம். ஞாயில் - மதிலின் ஓருறுப்பு; ஏப்புழைக்கு நடுவாய் எய்துமறையுஞ் சூட்டென்பர் நச்சினார்க்கினியர்; குருவித் தலையென்பர் அடியார்க்கு நல்லார். பணை - மூங்கில்; ஈண்டுத் தோரண கம்பம். எதிரெதிரோங்கிய இருகோட்டமென்க. வச்சிரலை என விரித்துக் கொள்க. வேந்தற்கேற்பப் பெரிய அளவினதாக இயற்றப்பட்ட கோயில்; 1"பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனை வகுத்து" என்பதுங் காண்க-சிலம்பு, மேகலை என்பவற்றிற்கேற்ப அடைகள் புணர்த்தி யுள்ளார். 119-122. குணதிசை மருங்கில் நாள் முதிர் மதியமும்-கீழ்த்திசையில் நான் நிரம்பிய முழு மதியமும், குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும்-மேற்றிசையில் சென்று படிகின்ற ஞாயிறும், வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடாக-வெள்ளியாலாகிய வெண் தோட்டுடன் பொன்னாலாய தோடுமாக, எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்-இகழ்தலற்ற அழகிய முகம் பொலியுமாறு அணிதலும்; நாள்-கலை. நிறையுவா நாளில் மதி கீழ்த்திசைக்கண் உதித்தும், பரிதி மேற்றிசையிற் படிந்தும் கோயிலின் இரு மருங்கும் ஒருங்கு தோன்றுதலின், அவற்றைப் புகார்ச் செல்வி கோயிலாகிய முகத்தின் இரு மருங்கும் தோடாக அணிந்தனள்; என்றாள்; எனவே அந்திப் பொழுது வந்தமை பெற்றாம்; இது பரியாயவணி. திருமுகவாட்டி பெய்தலும் என்க. 123-141. அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறு பெடையைத் தாமரை அடக்க - அன்னச் சேவலானது மெய்ம்மறந்து விளையாடிய தனது பேடையைத் தாமரை மலர் குவிந்து தன்னுள் அடக்கிக் கொள்ள பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற-பூலினது கட்டு அழியுமாறு கிழித்துப் பேட்டினைக் கொண்டு உயர்ந்த பெரிய தென்னையினது வளர்ந்த மடலிற் சேரவும், அன்றில் பேடைஅரிக் குரல் அழைஇச் சென்று வீழ்பொழுது சேவற்கு இசைப்ப-அன்றிலின் பேடு மெல்லிய குரலால் சேவலை அழைத்து ஞாயிறுசென்று மறையும் அந்திப் பொழுதை உரைக்கவும், பவளச் செங்கால் பறவைக் கானத்துக் குவளை மேய்ந்த குடக்கட் சேதா-பவளம்போற் சிவந்த கால்களையுடைய அன்னப்புட்கள் நிறைந்த கானத்தில் குவளை மலரை மேய்ந்த திரண்ட கண்களையுடைய செவ்விய பசுக்கள், முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்ப - மடியிலிருந்து பொழிகின்ற இனிய பால் நிலத்தினின்றும் எழுகின்ற புழுதியை அவிப்ப, கன்று நினை குரல மன்று வழிப் படா-கன்றுகளை நினைந்த குரலை யுடையனவாய் மன்றுகளின் வழியே செல்லவும், அந்தி அந்தணர் செந்தீப் பேண - அந்தணர்கள் அந்திச் செந் தீயை வளர்க்கவும், பைந்தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப - பசிய வளையலணிந்த மகளிர் பலர் விளக்குகளை ஏற்றவும், யாழோர் மருதத்து இன்னரம் புளர - யாழினையுடைய பாணர் யாழின் நரம்பினை வருடி இனிய மருதப் பண்ணை யெழுப்பவும், கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள - கோவலர் முல்லைப் பண்ணை வேய்ங் குழலினிடமாக இசைப்பவும், அமரக மருங்கில் கணவனை இழந்து-போர்க்களத்தில் கணவனை இழந்து, தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல-தம்மவரிடம் செல்லும் ஒரு மங்கையைப்போல, கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு - ஞாயிற்றினைப் போக்கிய முடிவில்லாத துன்பத்துடன், அந்தி என்னும் பசலை மெய்யாட்டி - அந்திப் பொழுது என்கின்ற பசலை போர்த்த மேனியை யுடையாள், வந்து இறுத்தனளால் மாநகர் மருங்கு என் - பெரிய நகரத்தின் மருங்கே வந்து தங்கினள் என்க. அயர்ந்து - விரும்பி என்றுமாம். அடக்க - அடக்கலால். இரவிற் சிறிதும் பிரிந்திருத்தலருமையின் ‘சேவற் கிசைப்ப' என்றார். கானம் - ஈண்டு நீர்நிலை. சேதா - செவ்விப் பசு ; செந்நிறமுடைய பசுவுமாம். கன்றினை நினைந்தமையாற் பால் பொழிவனவாயின. மன்று-ஆனினங்களை அடைத்து வைக்கும் வேலி நடுவணதாய வெளியிடம்; கொட்டிலுமாம். பகலில் மேயச்சென்ற ஆனினங்கள் மாலைப்பொழுதில் கன்றை நினைந்து அழைக்குங் குரலோடு போந்து மன்றிலே புகுதல் இயல்பு; 1''ஆன்கணம், கன்று பயிர்குரல மன்றுநிறை புகுதர,'' 2"மதவு நடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக், கன்று பயிர் குரல மன்றுநிறை புகுதரு, மாலையும்'' என்பனவுங் காண்க. எடுத்தல் - கொளுத்தல், 'யாழோர்...புளர' - ஈண்டு மருதத்திற்குரிய இயைபு புலப்பட்டிலது; இவ்வடி இடைப்புகுத்துப் போலும். 'முல்லைக் குழல்' என்ற பாடத்திற்கு முல்லையைக் குழலுக்கு அடையாக்குக ; என்னை? 3"முல்லைக் கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க் கட்செறித்தூதலின் முல்லைக் குழலாயிற்று" என அடியார்க்கு நல்லார் உரைத்தலின் என்க. தமர்-தந்தை, தமையன் முதலியோர். முதிர்தல் ஈண்டு முடிதல்; மேல் முதிர்தற்கு இடனில்லாத என்றுமாம். கணவனைப் பிரிந்தாட்கு மெய் பசக்குமாகலின் ‘பசலை மெய்யாட்டி' என்றார்; ஈண்டுப் பசலையாவது அந்திப் பொழுதின் புற்கென்ற நிறம். திருமுக வாட்டி தோடாகப் பெய்தலும் பசலை மெய்யாட்டி மாநகர் மருங்கு வந்திறுத்தனள் என்க. பூங்கொடி உருவம் பெயர்ப்ப, சூழ்வோன் சுதமதி முக நோக்கி உரையென, உரைப்ப, அகல்வோன் எய்தியது உரையென, அவள் சங்கதருமன் அருளிய வாமன் பாதத்தைப் பாராட்டு தலல்லது மிகைநா இல்லேன் என, அவன் போயபின், மணிமேகலை சுதமதியோடு நின்ற வெல்லையுள், மணிமேகலா தெய்வம் பைந் தொடியாகிப் பீடிகையை வலங்கொண்டு ஓங்கி ஒதுங்கி நாநீட்டும் ; நீட்டுழி, திருமுகவாட்டி பெய்தலும், பசலை மெய்யாட்டி முதிராத் துன்பமொடு மாநகர் மருங்கு வந்திறுத்தனள் என்று முடிக்க. மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை முற்றிற்று. 6. சக்கரவாளக்கோட்ட முரைத்த காதை அந்திமாலை வந்து நீங்கியது. திங்கள்மண்டிலம் வெள்ளிக் குடத்தினின்று பால் சொரிவதுபோல் தண்கதிரை எங்கணும் பொழிந்தது; மணிமேகலா தெய்வம் மீட்டும் புத்த தேவனது பாதபீடிகையை ஏத்தி, அங்கு நின்ற சுதமதியை நோக்கி, 'நீங்கள் இங்கே நிற்றற்குக் காரணம் யாது? என்ன துன்பமுற்றீர்கள்?' என வினவ, அவள் உதயகுமரன் வந்து கூறிச் சென்றதைச் சொல்லினள். சொல்லலும், அத்தெய்வம் அவளை நோக்கி, "உதயகுமரனுக்கு மணிமேகலைபாலுள்ள வேட்கை சிறிதும் தணிந்திலது; அறவோர் வனமென்று இதினின்று அவன் அகன்றனனாயினும், இதனைக் கடந்து செல்லின் புறத்துள்ள வீதியில் இவளை அகப்படுத்துவன்; நீங்கள் இவ்வனத்தைச் சூழ்ந்த மதிலின் மேற்றிசைக்கண்ணதாகிய சிறிய வாயில் வழியே சென்று மாதவர் உறையும் சக்கரவாளக் கோட்டத்தை அடையின் யாதொரு துன்பமும் அணுகாது: ஆகலின் அங்கே சென்மின்." என்றுரைத்தது. உரைத்தலும், சுதமதி, 'யாவரும் அதனைச் சுடுகாட்டுக் கோட்ட மென்று கூறாநிற்பர்; மாருத வேகனும் நீயுமே சக்கரவாளக் கோட்ட மென்று கூறுவீர்; அதற்குக் காரணம் யாது? சொல்லுக.' என்றாள். என்றலும் அத் தெய்வம், காவிரிப்பூம் பட்டினம் தோன்றிய காலத்து உடன்றோன்றியதான அப்புறங்காட்டின் இயல்பனைத்தையும் விளங்கக் கூறி, "தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர், முதியோர் என்னான் இளையோர் என்னான், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும், கழிபெருஞ் செல்வக் கள்ளாட்டயர்ந்து, மிக்க நல்லறம் விரும்பாது வாழும், மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ?" என அறஞ் செய்யாதார் பொருட்டு இரங்கி, "அத்தன்மையதான சுடுகாட்டில் தனியே சென்று பேய்கோட்பட்டு இறந்த சார்ங்கல னென்னும் பார்ப்பனச் சிறுவன் தாயாகிய கோதமையின் முறையீட்டைக் கேட்டுவந்த சம்பாபதி யென்னும் தெய்வம், "அணங்கும் பேயும் ஆருயிர் கவரா ; நின் மகனது அறியாமையே பற்றுக்கோடாக இழவூழ் அவனுயிரைக் கவர்ந்துசென்றது; நின் உயிரை வாங்கிக்கொண்டு அவனுயிரை அளித்தல் இயல்பன்று ! உயிர் உடம்பினின்று நீங்கின் அது வினைவழியே சென்று வேறு பிறப்படைவதில் ஐயமில்லை; ‘உலக மன்னவர்க்கு உயிர்க்குயிர் ஈவோர் இலரோ, இந்த ஈமப் புறங்காட்டு, அரசர்க் கமைந்தன ஆயிரங்கோட்டம்' அல்லவோ ? இச் சக்கரவாளத் துள்ள தேவர்களில் யாரேனும் நீ கேட்ட வரம் கொடுப்பாருளராயின் யானும் அதனைத் தருதற் குரியேனாவேன்," என்றுரைத்து, பிரம கணங்கள் முதலாகச் சக்கரவாளத்திலுள்ள வரங்கொடுக்கும் ஆற்றலுடைய தேவர்களை யெல்லாம்வருவித்துக் கோதமைக்கு முன்னிறுத்தி, இவளுற்ற துன்பம் இது ; இவளது வருத்தத்தைப் போக்குவீராக, என்று நிகழ்ந்தவற்றைச் சொல்ல, அத்தேவரனைவரும் சம்பாபதிகூறிய வாறே கூறினர்; அதனைக் கேட்டு உண்மை யறிந்து ஒருவாறு வருத்த மொழிந்த கோதமை மகனைப் புறங்காட்டிலிட்டு இறந்து போயினள். பின்பு சம்பாபதியின் ஆற்றலை யாவர்க்கும் புலப்படுத்தல் வேண்டி, எல்லாத் தேவர்களும் கூடியவிடத்து அவர்கள் கூடியதற்கு அறிகுறியாக, உலகின் நடுவேயுள்ள மேருமலையும், அதனைச் சூழ்ந்த எழுவகைக் குன்றங்களும் நான்கு பெருந்தீவுகளும், இரண்டாயிரம் சிறு தீவுகளும், ஏனைய இட வகைகளும் ஆகிய இவற்றைப் புலப்படுத்தி, ஆங்காங்கு வாழும் உயிர்களையும் மண்ணீட்டினால் வகுத்து மயனால் நிருமிக்கப்பட்ட தாகலின் சக்கரவாளக் கோட்டமெனப் பெயர்பெற்றது; இது சுடுகாட்டைச் சூழ்ந்த மதிற் புறத்துள்ளதாகலின் ‘சுடுகாட்டுக்கோட்ட'மென்று யாவரானும் கூறப்படும்; இதன் வரலாறு இதுவாகும்" என்றுரைக்கக் கேட்டுக்கொண்டிருந்த மணிமேகலை ‘மக்கள் வாழ்க்கை இத்தகையது,' என இரங்கிக்கூறி யிருக்கையில், சுதமதி தூங்குதலுற்றனள். அப்பொழுது மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தழுவி யெடுத்து, ஆகாயவழியே முப்பது யோசனை தெற்கே சென்று, கடல்சூழ்ந்த மணி பல்லவம் என்னும் தீவில் அவளை வைத்தகன்றது. (இதில் புகார் நகரின் புறங் காட்டினியல்புகளும், அக்காலத்தில் இறந்தோரை அடக்கஞ் செய்யுமுறைகளும் கூறியிருப்பன சிறப்பாக அறியத் தக்கவை. அந்தி மாலை நீங்கிய பின்னர் வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம் சான்றோர் தங்கண் எய்திய குற்றம் தோன்றுவழி விளங்குந் தோற்றம் போல 5 மாசறு விசும்பின் மறுநிறங் கிளர ஆசற விளங்கிய வந்தீந் தண்கதிர் வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல் கள்ளவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய உருவு கொண்ட மின்னே போலத் 10 திருவி லிட்டுத் திகழ்தரு மேனியள் ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன் பாத பீடிகை பணிந்தன ளேத்திப் பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகிச் சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி 15 ஈங்கு நின்றீர் என்னுற் றீரென ஆங்கவ ளாங்கவன் கூறிய துரைத்தலும் அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியா நோக்கந் தவிர்ந்தில னாகி அறத்தோர் வனமென் றகன்றன னாயினும் 20 புறத்தோர் வீதியிற் பொருந்துத லொழியான் பெருந்தெரு வொழித்திப் பெருவனஞ் சூழ்ந்த திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி மிக்க மாதவர் விரும்பின ருறையும் சக்கர வாளக் கோட்டம் புக்கால் 25 கங்குல் கழியினுங் கடுநவை யெய்தாது அங்குநீர் போமென் றருந்தெய்வ முரைப்ப வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அஞ்செஞ் சாயல் நீயு மல்லது நெடுநகர் மருங்கின் உள்ளோ ரெல்லாஞ் 30 சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார் சக்கர வாளக் கோட்ட மஃதென மிக்கோய் கூறிய உரைப்பொரு ளறியேன் ஈங்கிதன் காரண மென்னை யோவென ஆங்கதன் காரணம் அறியக் கூறுவன் 35 மாதவி மகளொடு வல்லிருள் வரினும் நீகே ளென்றே நேரிழை கூறுமிந் நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய ஈமப் புறங்கா டீங்கித னயலது ஊரா நற்றேர் ஓவியப் படுத்துத் 40 தேவர் புகுதரூஉஞ் செழுங்கொடி வாயிலும் நெல்லுங் கரும்பு நீருஞ் சோலையும் நல்வழி யெழுதிய நலங்கிளர் வாயிலும் வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத் துள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும் 45 மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் நாற்பெரு வாயிலும் பாற்பட் டோங்கிய காப்புடை யிஞ்சிக் கடிவழங் காரிடை 50 உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர் தலைதூங்கு நெடுமரந் தாழ்ந்துபுறஞ் சுற்றிப் பீடிகை யோங்கிய பெரும்பலி முன்றில் காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும் அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும் 55 ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவு நெடியவுங் குன்றுகண் டன்ன சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் 60 அருந்திறற் கடவுட் டிருந்துபலிக் கந்தமும் நிறைக்கற் றெற்றியும் மிறைக்களச் சந்தியும் தண்டு மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படுக்கும் உறையுட் குடிகையும் தூமக் கொடியுஞ் சுடர்த்தோ ரணங்களும் 65 ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர் தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர் இரவும் பகலும் இளிவுடன் றரியாது வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் 70 எஞ்சியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்த லோசையும் துறவோ ரிறந்த தொழுவிளிப் பூசலும் பிறவோ ரிறந்த அழுவிளிப் பூசலும் நீண்முக நரியின் தீவிளிக் கூவும் 75 சாவோர்ப் பயிருங் கூகையின் குரலும் புல'd2வூண் பொருந்திய குராலின் குரலும் ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும் நன்னீர்ப் புணரி நளிகட லோதையின் இன்னா இசையொலி என்றுநின் றறாது 80 தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலு மோங்கிக் கான்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டும் மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும் வெண்ணிணந் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து 85 புள்ளிறை கூறும் வெள்ளின் மன்றமும் சுடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும் விரத யாக்கைய ருடைதலை தொகுத்தாங் கிருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் 90 பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில் விருந்தாட் டயரும் வெள்ளிடை மன்றமும் அழற்பெய் குழிசியும் புழற்பெய் மண்டையும் வெள்ளிற் பாடையும் உள்ளீட் டறுவையும் பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் 95 நெல்லும் பொரியுஞ் சில்பலி யரிசியும் யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர் முதியோ ரென்னான் இளையோ ரென்னான் 100 கொடுந் தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ 105 ஆங்கது தன்னையோ ரருங்கடி நகரெனச் சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன் என்புந் தடியு முதிரமு மியாக்கையென் றன்புறு மாக்கட் கறியச் சாற்றி வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து 110 அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண் டுலப்பி லின்பமோ டுளைக்கு மோதையும் கலைப்புற அல்குல் கழுகுகுடைந் துண்டு நிலைத்தலை நெடுவிளி யெடுக்கு மோதையும் கடகஞ் செறிந்த கையைத் தீநாய் 115 உடையக் கவ்வி யொடுங்கா வோதையும் சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை காய்ந்தபசி யெருவை கவர்ந்தூ ணோதையும் பண்புகொள் யாக்கையின் வெண்பலி யரங்கத்து மண்கணை முழவ மாக ஆங்கோர் 120 கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள் புயலோ குழலோ கயலோ கண்ணோ குமிழோ மூக்கோ இதழோ கவிரோ பல்லோ முத்தோ வென்னா திரங்காது 125 கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத் தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக் கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி விண்டோர் திசையின் விளித்தனன் பெயர்ந்தீங் கெம்மனை காணாய் ஈமச் சுடலையின் 130 வெம்முது பேய்க்கென் உயிர்கொடுத் தேனெனத் தம்மனை தன்முன் வீழ்ந்துமெய் வைத்தலும் பார்ப்பான் றன்னொடு கண்ணிழந் திருந்தவித் தீத்தொழி லாட்டியென் சிறுவன் றன்னை யாருமில் தமியே னென்பது நோக்காது 135 ஆருயி ருண்ட தணங்கோ பேயோ துறையு மன்றமுந் தொல்வலி மானும் உறையுளுங் கோட்டமுங் காப்பாய் காவாய் தகவிலை கொல்லோ சம்பா பதியென மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ 140 ஈமப் புறங்காட் டெயிற்புற வாயிலில் கோதமை யென்பாள் கொடுந்துயர் சாற்றக் கடிவழங்கு வாயிலிற் கடுந்துய ரெய்தி இடையிருள் யாமத் தென்னையீங் கழைத்தனை என்னுற் றனையோ எனக்குரை யென்றே 145 பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற ஆருமி லாட்டியென் அறியாப் பாலகன் ஈமப் புறங்காட் டெய்தினோன் றன்னை அணங்கோ பேயோ ஆருயி ருண்டது உறங்குவான் போலக் கிடந்தனன் காணென 150 அணங்கும் பேயும் ஆருயி ருண்ணா பிணங்குநூன் மார்பன் பேதுகந் தாக ஊழ்வினை வந்திவன் உயிருண்டு கழிந்தது மாபெருந் துன்பநீ ஒழிவா யென்றலும் என்னுயிர் கொண்டிவன் உயிர்தந் தருளினென் 155 கண்ணில் கணவனை இவன்காத் தோம்பிடும் இவனுயிர் தந்தென் உயிர்வாங் கென்றலும் முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள் ஐய முண்டோ ஆருயிர் போனால் செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல் 160 ஆங்கது கொணர்ந்துநின் ஆரிடர் நீக்குதல் ஈங்கெனக் காவதொன் றன்றுநீ யிரங்கல் கொலையற மாமெனுங் கொடுந்தொழின் மாக்கள் அவலப் படிற்றுரை யாங்கது மடவாய் உலக மன்னவர்க் குயிர்க்குயி ரீவோர் 165 இலரோ இந்த ஈமப் புறங்காட் டரசர்க் கமைந்தன ஆயிரங் கோட்டம் நிரயக் கொடுமொழி நீயொழி யென்றலும் தேவர் தருவர் வரமென் றொருமுறை நான்மறை யந்தணர் நன்னூ லுரைக்கும் 170 மாபெருந் தெய்வ நீயரு ளாவிடின் யானோ காவேன் என்னுயி ரீங்கென ஊழி முதல்வன் உயிர்தரி னல்லது ஆழித் தாழி யகவரைத் திரிவோர் தாந்தரின் யானுந் தருகுவன் மடவாய் 175 ஈங்கெ னாற்றலுங் காண்பா யென்றே நால்வகை மரபி னரூபப் பிரமரும் நானால் வகையி னுரூபப் பிரமரும் இருவகைச் சுடரும் இருமூ வகையிற் பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும் 180 பல்வகை யசுரரும் படுதுய ருறூஉம் எண்வகை நரகரும் இருவிசும் பியங்கும் பன்மீ னீட்டமும் நாளுங் கோளும் தன்னகத் தடக்கிய சக்கர வாளத்து வரந்தரற் குரியோர் தமைமுன் நிறுத்தி 185 அரந்தை கெடுமிவ ளருந்துய ரிதுவெனச் சம்பா பதிதான் உரைத்தஅம் முறையே எங்குவாழ் தேவரும் உரைப்பக் கேட்டே கோதமை யுற்ற கொடுந்துயர் நீங்கி ஈமச் சுடலையின் மகனையிட் டிறந்தபின் 190 சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற எங்குவாழ் தேவருங் கூடிய இடந்தனில் சூழ்கடல் வளைஇய ஆழியங் குன்றத்து நடுவு நின்ற மேருக் குன்றமும் புடையி னின்ற எழுவகைக் குன்றமும் 195 நால்வகை மரபின் மாபெருந் தீவும் ஓரீ ராயிரஞ் சிற்றுடைத் தீவும் பிறவும் ஆங்கதன் இடவகை யுரியன பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி ஆங்குவா ழுயிர்களும் அவ்வுயி ரிடங்களும் 200 பாங்குற மண்ணீட்டிற் பண்புற வகுத்து மிக்க மயனால் இழைக்கப் பட்ட சக்கர வாளக் கோட்டமீங் கிதுகாண் இடுபிணக் கோட்டத் தெயிற்புற மாதலின் சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார் 205 இதன்வர விதுவென் றிருந்தெய்வ முரைக்க மதனின் நெஞ்சமொடு வான்றுய ரெய்திப் பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோ ளுரைப்ப இறந்திருள் கூர்ந்த இடையிருள் யாமத்துத் தூங்குதுயி லெய்திய சுதமதி யொழியப் 210 பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ அந்தரம் ஆறா ஆறைந் தியோசனைத் தென்றிசை மருங்கிற் சென்றுதிரை யுடுத்த மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம் அணியிழை தன்னைவைத் தகன்றது தானென். உரை 1-8. அந்திமாலை நீங்கிய பின்னர் - அந்திப்பொழுதாகிய மாலைக் காலம் கழிந்த பின்னர், வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்- வந்து உதித்த பரந்த கிரணங்களையுடைய திங்கள் மண்டிலம், சான்றோர் தங்கண் எய்திய குற்றம் - உயர்குடித் தோன்றிய மேன்மக்கள்பாலடைந்த குற்றமானது, தோன்றுவழி விளங்கும் தோற்றம்போல - தோன்றுமிடத்து விளங்குமியல் பினைப்போல, மாசு அறு விசும்பில் மறு நிறம் கிளர - விசும்பின்கண் மாசற்ற நிறத்தினிடம் களங்கம் விளங்க, ஆசு அற விளங்கிய அம்தீம் தண் கதிர் - குற்றமற்று விளங்குகின்ற அழகிய தீவிய குளிர்ந்த கதிரினை, வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவதுபோல் - வெள்ளிக் குடத் தினின்று பாலைச் சொரிவதுபோல, கள்அவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய - தேன் அவிழுகின்ற மலர்ச் சோலையில் இடையிடையே பொழிய; அந்திமாலை-அந்தியாகிய மாலை. தோன்றுவழி விளங்கும் என்றது சான்றோர்பால் குற்றம் உண்டாய அப்பொழுதே அது யாவரும் அறிய வெளிப்படும் என்றவாறாம்; அவர் வெளிப்படு மிடத்து அதுவும் வெளிப்படும் என்றுமாம்: திங்கள் தூய்மை உடையதாகலானும் அதன்கண் களங்கம் அதற்கு மாறாக இருத்தலானும் அது விளங்கித் தோன்றிற்று. 1"குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின், மதிக்கண் மறுப்போ லுயர்ந்து" என்பதனாற் சான்றோரிடைக் குற்றம் யாவருமறிய நிற்றல் காண்க. ஈண்டுப் பொருள் உவமமாக்கப் பட்டது; என்னை? 2பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃ துவம மாகும்" என்பவாகலான். சான்றோர் குற்றம் விளங்குந் தோற்றம்போலக் கதிர் மண்டிலம் மறுநிறங் கிளரத் தண் கதிரைப் பால் சொரிவதுபோல் இடையிடைச் சொரிய வென்க. திங்களுக்கு வெள்ளிக்குடமும் தண்கதிர்க்குப் பாலும் உவமை. 9-15. உருவு கொண்ட மின்னே போல-பெண்ணுருவங்கொண்ட மின்னலைப் போலவும், திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - இந்திர வில்லைப்போலவும் ஒளிவிட்டு விளங்குகின்ற திருமேனியை யுடைய அத்தெய்வம், ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன் பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி - அறவாழியினை உருட்டுகின்ற ஆதி முதல்வனது பாதபீடிகையை வணங்கித் துதித்து, பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பதியிலுறைகின்ற ஒரு பெண் வடிவுகொண்டு, சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி - சுதமதியின் முகத்தை நோக்கி, ஈங்கு நின்றீர்என் உற்றீர் என-ஈண்டு நிற்கின்றவர்களே நீவிர் அடைந்த துன்பம் யாது? என வினவ; உருவு கொண்ட மின்:இல்பொருளுவமை. மின்போலவும் திருவில் போலவும் என்க. திருவில் - வானவில். 3திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்" என வருதல் காண்க. கடவுளர் இன்ன காலத்து இவ்வாறு தோன்றுவர் என்பது புலப்படாமையான், அங்ஙனம் தோன்றும் வானவில் அவர்க்கு உவமையாயிற்று. திருவில் - அழகிய ஒளியென்றுமாம். ஆதி முதல்வன் - புத்தன். அறவாழி - அறமாகிய திகிரி. பாதபீடிகை- புத்ததேவன் திருவடி யமைந்த பீடம்; உவவனத்திற் பளிக்கறையில் உள்ளது. பணிந்தனள்: முற்றெச்சம். முன்னரும் 1"பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி" என வந்தமை காண்க. நின்றீர் : வினைப்பெயர்; அது மணிமேகலையையும் உளப்படுத்திற்று. 16. ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்-அக்காலைச் சுதமதி அவ் வுதயகுமரன் மொழிந்ததனைக் கூறிய வளவில்; அவன் கூறியது - சித்திராபதியாற் சேர்தலு முண்டு என்பது. 17-26. அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியாவுள்ளம் தவிர்ந்திலன் ஆகி - மன்னவன் புதல்வன் மணிமேகலையிடத்துக் கொண்ட ஆசை நீங்காத உள்ளத்தினைத் தவிர்ந்திலனாய், அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-தவத்தோர் களுடைய பொழில் என்று இங்கு நின்றும் நீங்கினனாயினும், புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் - புறத் திலுள்ளவர்களது தெரு வின்கண்ணே சேர்தலை நீங்கான், பெருந்தெரு ஒழித்து இப்பெருவனஞ் சூழ்ந்த - ஆதலால் பெருந் தெருவுகளை விட்டு இந்தப் பெரிய சோலையைச் சூழ்ந்துள்ள, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருத்தமுற்ற மதிலின் மேற்றிசையினிடத் தேயுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதவர் விரும்பினர் உறையும்-தவத்தான் மிக்க முனிவர்கள் விரும்பி யுறையும், சக்கரவாளக் கோட்டம் புக்கால் - சக்கரவாளக் கோட்டத்தை யடைந்தால், கங்குல் கழியினும் கடுநவை எய்தாது - அங்கே இரவினைக் கழிப்பினும் கொடிய துன்ப முண்டாகாது, அங்குநீர் போம் என்று அருந்தெய்வம் உரைப்ப - ஆகலின் நீவிர் அங்கே செல்வீராக என்று அரிய தெய்வம் கூறியருள; அறத்தோர் துறவிகளானமையின், புறத்தோர் என்பதற்கு அவர்க்குப் புறமாகவுள்ள இல்லற நெறியினர் என வுரைத்தலும் அமையும்; புறத்து ஓர் வீதியில் என்றலுமாம். புழை-நுழை வாயில். கழியினும் - கழிப்பினும். இனி, ஆண்டே இராக்காலம் கழிவதாயினும் எனலுமாம் கடுநவை - உதயகுமரனாற் பற்றப்படுதல். 27-33. வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அம்செஞ்சாயல் நீயும் அல்லது-வஞ்சமுடைய விஞ்சையனாகிய மாருதவேகன் என்பானும் அழகிய சிவந்த மென்மைத் தன்மையினையுடைய நீயும் அன்றி, நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் - இப் பெரிய நகரின்கண் உள்ளோரனை வரும், சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்டம் என்பதேயன்றி வேறு பெயர் கூறார், சக்கரவாளக் கோட்டம் அஃது என - அதனைச் சக்கர வாளக்கோட்டம் என்று, மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் - மேம்பாடுடைய நீ கூறிய மொழியின் பொருளை அறியேன், ஈங்கு இதன் காரணம் என்னையோ என - இங்ஙனம் கூறுவதன் காரணம் யாதோ என்று சுதமதி கேட்ப; வஞ்ச விஞ்சையன் என்றாள், தன்னைக் 1கவர்ந்து சென்று பின்னர்த் தன்னைவிட்டுப் பிரிந்தமையான். நெடுநகர்-காவிரிப் பூம்பட்டினம். 34-36. ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவல் - அஃது அப்பெயர் பெற்றதன் காரணத்தைத் தெளிய உரைப்பேன், மாதவி மகளொடு வல்லிருள் வரினும் நீகேள் என்றே நேரிழை கூறும் - மிகுந்த இருளையுடைய யாமம் வரினும் நீ மாதவி மகளுடன் அதனைக் கேட்பாயாக என்று மணிமேகலா தெய்வம் கூறுகின்றது; 36-38. இந் நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய - பகைவர்க்கு அச்சத்தை விளைக்கும் இப் பெரிய நகரத்தோடே உண்டாய, ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது - பிணஞ்சுடும் விறகடுக் கினையுடைய சுடுகாடு இவ் வுவவனத்தின் பக்கத்தது; நாமம் - புகழுமாம். இதன் - இவ் வுவவனத்தின். 39-49. ஊரா நல்தேர் ஓவியப்படுத்து - ஓவியம்போல விமானம் விசும்பின்கண்ணே நிற்குமாறு செய்து, தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் - விண்ணவர் நுழைந்து செல்லுஞ் செழுங் கொடியினையுடைய வாயிலும், நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும் - நெற்பயிரும் கரும்பும் பொய்கையும் பொழிலும் நன்கன மெழுதிய நலஞ்சிறந்த வாயிலும், வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்துள் - மிக்க வெண்மை யுடைய சுதையாற் பூசப்பட்ட மாடத்தில், உரு எழுதா வெள்ளிடை வாயிலும்- வடிவங்கள் எழுதப்பெறாத வெளியான இடத்தினையுடைய வாயிலும், மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கில் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து - மடிக்கப்பட்ட சிவந்த வாயையும் சினந்த நோக்கையும் பிறரைத்தொடுத்த பாசத்தையும் கையிற் பிடித்த சூலப்படையையுமுடைய, நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் - நீண்ட தோற்றத்தையுடைய பூதவடிவம் நிற்கின்ற வாயிலும் ஆகிய, நாற்பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய - நான்கு பெரிய வாயில்களும் பகுதிப்பட்டு உயர்ந்த, காப்புடை இஞ்சிக் கடி வழங்கு ஆரிடை - காவலுடைய மதில் சூழ்ந்த பேய்கள் நடமாடுகின்ற அரிய இடத்தில்; ஊராத் தேர்-பாகராற் செலுத்தப்படாது தானே செல்லுந் தேர், விமானம். விமானத்துடன் தேவர் புகுவதாக ஓவியப்படுத்த வாயில் என்றலுமாம். நீர் - பொய்கை முதலியன. மண்ணீடு - சுதையாற் செய்யப்பட்ட பாவை; "மண்ணீட்டிற் பண்புற வகுத்து," "ஈங்கிம் மண்ணீட்டு" (6: 200; 18 - 156.) என மேல் இந்நூலுள் வருதல் காண்க. கடி - பேய். 50-53. உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்-தளராத உள்ளத்தோடு உயிராகிய கடனைக் கொடுத்தோர் களின், தலை தூங்கு நெடுமரம் தாழ்ந்து புறஞ்சுற்றி - தலைகள் தொங்குகின்ற நீண்ட மரங்கள் தாழ்ந்து புறத்தே சூழப்பெற்று, பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்- பெரிய பலிபீடம் ஓங்கிய முன்றிலையுடைய காடுகிழாளின் மிகப் பெரிய கோயிலும்; உயிர்க்கடன் இறுத்தலைச் சிலப்பதிகாரத்து 1இந்திர விழ'd2வூரெடுத்த காதையானும் அறிக. இஃது அவிப்பலி எனப்படும். பலி கொடுப்போர் சிகையை மரத்தில் முடிந்துவிட்டுத் தலையை அரிவராகலின் "தலைதூங்கு நெடுமரம்" என்றார் ; 2"வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறுந் திசைதோறும் விழித்து நின்று, தூங்குதலை, சிரிப்பன கண் டுறங்குதலை மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய்" என்பது காண்க. காடமர் செல்வி - காடுகிழாள் ; துர்க்கை. 54-59. அருந்தவர்க்கு ஆயினும் அரசர்க்கு ஆயினும், ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்-அரிய தவத்தானுயர்ந் தோர்க்கும் அரசர்க்கும் கணவனுடன் ஒருங்கே உயிர்நீத்த கற்புடை மகளிர்க்கும், நால்வேறு வருணப் பால்வேறு காட்டி - நால்வகை மரபின் பகுதி வேறுபாட்டினைக் காட்டி, இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த-இறந்தோர்களின் உடலைப் புதைத்தவிடத்தே அவர்கட்குச் சிறந்தோர் அமைத்த, குறியவும் நெடியவும் குன்று கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்-குறியனவும் நெடியனவும் ஆகிய குன்றுகளைக் கண்டாற்போன்றனவாய்ச் செங்கற்களாற் செய்யப்பட்டு உயர்ந்த கோட்டங்களும்; ஆயினும் என்பது ஓர் எண்ணிடைச்சொல்; 1"பொதியி லாயினும் இமய மாயினும்......புகாரேயாயினும்" என்புழிப்போல. சிறந்தோர் - உரிமையுடையோர். சுடுமண்-செங்கல். கோட்டம்-அறை; கோயிலுமாம். 60-65. அருந்திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் - அரிய திறலையுடைய கடவுளுடைய திருந்திய பலியிடுதற்குரிய தூண்களும், நிறைகல் தெற்றியும் - நிறுத்தப்பட்ட கல்லாலாகிய திண்ணையும், மிறைக்களச் சந்தியும்-வளைந்த இடத்தினை யுடைய பல வழிகளுஞ் சேர்ந்த சந்துகளும், தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டு கண்படுக்கும் உறையுட் குடிகையும் - கையிற் பிடிக்கும் கோலும் உண்ணும் கலமும் பிடித்து ஈமங் காப்போர் உண்டு துயிலும் உறைவிடமாகிய குடில்களும், தூமக்கொடியும் சுடர்த் தோரணங்களும்-புகையொழுங் காகிய கொடியும் சுடராகிய தோரணங்களும், ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து - ஈமத்தில் இட்ட பந்தர்களும் எவ்விடத்தும் பரக்கப்பெற்று; கந்தின்கண் தெய்வமுறைதலை 2"கலிகெழு கடவுள் கந்தங் கைவிட" என்பதனானும் அறிக. மிறை - வளைவு ; 3மிறைக்கொளி திருத்தினானே" என்றார் பிறரும். மண்டை-உண்டற்குரிய மண்கலம்; இரக்குங் கலமுமாம்; 4"ஏலாது கவிழ்ந்த என் இரவன் மண்டை" என்பது புறம். குடிகை-குடிசை. சுடர்-தீக்கொழுந்து; விளக்குமாம். 66-69. சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர் - பிணங்களைச் சுடுவோரும் வாளா இட்டுப்போவோரும் தோண்டப்பட்ட குழியிலிடுவோரும், தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர் - தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் தாழியினாலே கவிப்போரும், இரவும் பகலும் இளிவுடன் தரியாது - இரவும் பகலும் அருவருப்புடன் தங்காமல், வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் - வருவோரும் போவோரு மாகியவர்களின் நீங்காத ஒலியும்; தாழ்வயின் - பள்ளமாகிய இடம். தாழியிற் கவித்தலைப் புற நானூற்றின் 227, 237, 255, 363-ஆம் செய்யுட்களால் அறிக. இது முதுமக்கட் டாழி எனப்படும். சுடுவோர் முதலியோராய் வருவோர் பெயர்வோர் என்க. 70-79. எஞ்சியோர் மருங்கின் ஈமஞ்சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-உயிர் வாழ்ந்திருப்போரிடம் ஈமம் உண்டென்பதைக் கூறி உள்ளம் நடுங்குமாறு புரியும் நெய்தற் பறையின் ஒலியும், துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவியர் இறந்ததனாற் போந்த துதிமுழக்கமும், பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-இல்லறத்தோர் இறந்ததனா லாகிய அழுகை யொலியும், நீள்முக நரியின் தீவிளிக்கூவும்-நீண்ட முகத்தையுடைய நரியின் தீய ஒலியினையுடைய கூப்பீடும். சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்-இறப்போரை யழைக்கும் பேராந்தையின் குரலும், புல'd2வூண் பொருந்திய குராலின் குரலும் - புலாலாகிய உணவைப் பொருந்திய கோட்டானின் ஒலியும், ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் - உணவாகத் தலை மூளையைக் கடித்துண்ட ஆண்டலைப் பறவையின் முழக்கமும், நன்னீர்ப் புணரி நளிகடல் ஒதையின் இன்னா இசைஒலி என்றும் நின்று அறாது-தூநீர்ச் சேர்க்கை யினையுடைய செறிந்த கடல் ஓசையைப்போல் இன்னாதனவாகிய முழக்கம் என்றும் நின்று நீங்காமல்; நெய்தல் - சாப்பறை ; அஃது ஈமஞ்சாற்றுதலை 1"மணங் கொண்டீண், டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே, தொண்டொண்டொண் ணென்னும் பறை" என்பதனாலுமறிக. முன் துறவோர் என்றமையின் பிறவோர் இல்லறத்தாராயிற்று. தொழுவிளியாகிய பூசல், அழுவிளியாகிய பூசல் என்க ; விளி - ஓசை. பயிர்தல் - அழைத்தல், 2"போழ்வாய்க்கூகை, சுட்டுக் குவியெனச் செத்தோர்ப் பயிரும், கள்ளியம் பறந்தலை" என்பதனால் பேராந்தை இறந்தோரை அழைக்குமென்பதும் போதரும். ஆண்டலை - ஆண்மகனது தலை போன்ற வடிவ முள்ள ஒருவகைப் பறவை; இதனை, 3"நீண்ட பலி பீடத்திலரிந்து வைத்த நெடுங்குஞ்சிச் சிரத்தைத்தன் னினமென்றெண்ணி, ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ" என்பதனானறிக. நெய்தலோசை முதலிய இன்னா இசையொலி கடலோதையின் என்றும் நின்றறாதென்க. 80-91. தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் ஓங்கி - தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலும் உயர்ந்து, கான்றையும் சூரையுங் கள்ளியும் அடர்ந்து - கான்றையுஞ் சூரையுங் கள்ளியும் செறிந்து, காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டு ஈண்டும் - காய்கின்ற பசியையுடைய கொடிய பேய்கள் கூட்டமாகத் திரண்டிருக்கும், மால் அமர் பெருஞ்சினை வாகை மன்றமும் - முகில் தங்குகின்ற பெருங் கிளை களையுடைய வாகை மரம் நிற்கும் மன்றமும், வெள் நிணம் தடியொடு மாந்தி மகிழ் சிறந்து - வெள்ளிய நிணத்தினைத் தசையுடன் உண்டு மகிழ்ச்சி மிகுந்து, புள் இறை கூரும் வெள்ளில் மன்றமும்- பறவைகள் தங்குகின்ற விளாமரம் நிற்கும் மன்றமும், சுடலை நோன்பிகள் ஒடியா உள்ளமொடு மடைதீயுறுக்கும் வன்னி மன்றமும் - காபாலிகர் தளராத உள்ளத்துடன் சோறடுகின்ற தீயையுடைய வன்னிமரம் நிற்கும் மன்றமும். விரத யாக்கையர் உடைதலை தொகுத்தாங்கு இருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும் - விரதங் காக்கும் உடம்பினை யுடையோர் உடைந்த தலைகளைத் தொகுத்துப் பெரிய மாலைகளாகச் செய்யும் இலந்தைமரம் நிற்கும் மன்றமும், பிணம் தின் மாக்கள் - பிணத்தினைத் தின்னும் மாக்களாயினார், நிணம்படு குழிசியில் விருந்தாட்டு அயரும் - நிணம் பொருந்திய பானையில் விருந்து செய்கின்ற, வெள்ளிடை மன்றமும் - வெளியான இடத்தையுடைய மன்றமும் ஆகிய இவ்விடங்களில்; ஒடுவை-ஒடுமரம். உழிஞ்சில் - வாகை; உன்னமுமாம். தான்றி முதலிய மூன்றும் மரமும், கான்றை முதலிய மூன்றும் செடியுமாம். மால்-மேகம். இறைகூர்தல்-தங்குதல். சுடலை நோன்பிகள்-மயானத்திலிருந்து நோன்பியற்றுவோர்; காபாலிக சமயத்தோர். விரத யாக்கையர் -மாவிரத சமயத்தோர். பலர் கூடுமிடம் மன்ற மெனப்படும்; பண்டை நாளில் மன்றங்கள் பெரும்பாலும் மரத்தடியில் இருந்தன; பேய்கள் கூடுதலின் வாகையடி மன்ற மாயிற்று; இங்ஙனமே ஏனையவும் கொள்க. 92-96. அழல் பெய் குழிசியும் புழல் பெய் மண்டையும் - தீப்பெய்த பானையும், புழல் என்னும் பண்ணியம் இட்ட கலனும், வெள்ளில பாடையும் உள்ளீட்டறுவையும்-வெள்ளிலாகிய பாடையும் உள்ளே பண்டங்கள் இடப் பட்ட உறியும், பரிந்த மாலையும் உடைந்த கும்பமும் -பாடையிற்கட்டி அறுத்தெறிந்த மாலைகளும் உடைந்த குடங்களும், நெல்லும் பொரியும் சில்பலி அரிசியும்-நெல்லும் பொரியும் சிறுபலியாகிய அரிசியும், யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை - எவ்விடத்தும் பரந்து கிடக்கும் மிகப்பெரிய பாழிடத்தில்; புழல்-ஒருவகைச் சிற்றுண்டி. வெள்ளிற்பாடை: இருபெய ரொட்டு. உள்ளீட்டறுவை-உள்ளீட்டையுடைய கிழியுமாம். சில்பலி - சிறுபலி; 1"தூவெள்ளரிசி, சில்பலிச் செய்து" என்பது காண்க. வாகை மன்றம் முதலிய மன்றங்கள் யாங்கணும் குழிசி முதலியன பரந்த பறந்தலை யென்க. 97-104. தவத்துறை மாக்கள் மிகப் பெருஞ் செல்வர்-தவ நெறியிற் செல்லுந் துறவியர் மிக்க பெருஞ் செல்வ முடையோர், ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப்பாலகர் - ஈன்றணிமையை யுடைய இளமகளிர் ஆற்றாத இளஞ்சிறார், முதியோர் என்னான் இளையோர் என்னான் - ஆண்டில் முதிர்ந்தோர் என்னாமலும் இளையோர் என்னாமலும், கொடுந் தொழிலாளன் கொன்றனன் குவிப்ப - கொடுந் தொழிலை யுடைய காலன் கொன்று குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக்கண்டும் - அழல் வாயினையுடைய சுடலை தின்னக் கண்டும், கழிபெருஞ்செல்வக் கள்ளாட்டு அயர்ந்து - மிக்க பெருஞ்செல்வமாகிய கள்ளையுண்டு விளையாடுதலைச் செய்து, மிக்க நல்லறம் விரும்பாது வாழும் - மேன்மை தரும் நல்லறங்களை விரும்பாமல் வாழ்கின்ற, மக்களில் சிறந்த மடவோர் உண்டோ - மக்களிலுஞ் சிறந்த அறிவிலிகள் உளரோ; என்னான் என்பதனைத் தவத்துறைமாக்கள் முதலிய வற்றோடும் ஒட்டுக. கொன்றனன்; முற்றெச்சம். அழலாகிய வாய் என உருவகம். இகரச்சுட்டு அதன் கொடுமையை உணர்த்திற்று. ஆரிடையில் பறந்தலையில் சுடலை (49, 66, 101) என்க. பறந்தலை யாகிய சுடலை யென்னலுமாம். அறிவை மயக்குதலின் செல்வத்தைக் கள் என்றார். ‘தவத் துறைமாக்கள்......மடவோருண்டோ' என்பது தெய்வங் கூறியது ; கவி கூறியதுமாம். 105-106. ஆங்கது தன்னை ஓர் அருங்கடி நகர் என - அங்ஙனமாகிய புறங்காட்டை ஓர் அரிய காப்பமைந்த நகரமென்றெண்ணி, சார்ங்கலன் என்போன் தனிவழிச் சென்றான் - தனிவழியே சென்ற சார்ங்கலன் என்னும் சிறுவன்; 107-109. என்பும் தடியும் உதிரமும் யாக்கை என்று - என்புந் தசையும் குருதியுமாகியவற்றை உடம்பு என்று, அன்புறு மாக்கட்கு அறியச் சாற்றி - அன்பு வைக்கின்ற மக்களுக்கு அறியக்கூறி, வழுவொடு கிடந்த புழு'd2வூன் பிண்டத்து - வழுவுடன் கிடந்த புழுக்கள் மலிந்த ஊன் பிண்டமாகிய உடலில்; அன்புறு மாக்கள்-உடம்பினிடத்து அன்புமிக்க மாக்கள்; மாக்கள் என்றார் ஐம்புல வுணர்ச்சியன்றி மனவுணர்ச்சி யில்லாதவர் எனற்கு, வழு - வழும்பு. யாக்கை என்பது என்பு முதலியனவே யென மாக்கட்குச் சாற்றிக்கிடந்த பிண்டம் என்க; 1"குடருங் கொழுவுங் குருதியு மென்பும் தொடரு நரம்பொடு தோலும்--இடையிடையே வைத்த தடியும் வழும்புமா மற்றிவற்றுள் எத்திறத்தா ளீர்ங்கோதை யாள்." என்பது ஒத்து நோக்கற்பாலது. 110-119. அலத்தகம் ஊட்டிய அடி நரி வாய்க்கொண்டு - செம் பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற அடிகளை நரி வாயிலே கவ்விக் கொண்டு, உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும் - கேடில்லாத இன்பத்துடன் ஊளையிடுகின்ற ஒலியும், கலைப்புற அல்குல் கழுகு குடைந்துண்டு நிலத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும் - கலையை யொழித்த அல்குலைக் கழுகு குடைந்து உண்டு நிலத்தின் கண் பெரிய கூவுதலைச் செய்யும் ஓசையும், கடகம் செறிந்த கையைத் தீ நாய் உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்-கடகமணிந்த கையைத் தீய நாய் உடையுமாறு கவ்விக்கொண்டு இடும் ஒடுங்காத முழக்கமும், சாந்தம் தோய்ந்த ஏந்திள வனமுலை - சந்தனம் பூசப்பெற்ற நிமிர்ந்த இளங் கொங்கையை, காய்ந்த பசி எருவை கவர்ந்தூண் ஓதையும்-மிக்க பசியையுடைய பருந்து கவர்ந்துண்ணுகின்ற ஓசையும், பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து- இனிமையுடைய உடல்கள் வெந்த சாம்பற் குவையாகிய அரங்கில், மண்கணை முழவம் ஆக - மார்ச்சனை செறிந்த தண்ணுமை முழக்கமாக; கலை - உடை; மேகலையுமாம். நிலைத்தலை என்பது பாடமாயின் தன்னிடத்து நிலைபெற்ற என்க. தீ நாய் - புறங்காட்டிற் றிரியும் ஒரு வகை நாயுமாம். பண்பு - இனிமை ; அழகுமாம். ஓதை பலவும் முழவமாக வென்க. 119-121. ஆங்கு ஓர் கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி - அங்குள்ள ஓர் பெண்பிணத்தின் கரிய தலையைப் பறித்துக் கையிலே ஏந்தி, இரும்பேர் உவகையின் எழுந்து ஓர் பேய் மகள்-ஓர் பெண் பேய் மிக்க பெரிய மகிழ்ச்சியுடன் எழுந்து ; 122-126. புயலோ குழலோ-முகிலோ அன்றிக் கூந்தலோ, கயலோ கண்ணோ - கயல் மீனோ அன்றிக் கண்ணோ, குமிழோ மூக்கோ - குமிழம்பூவோ அன்றி மூக்கோ, இதழோ கவிரோ - உதடோ அன்றி முருங்கை மலரோ, பல்லோ முத்தோ - பற்களோ அன்றி முத்துக்களோ, என்னாது இரங்காது-என்று கருதாமலும் இரங்காமலும், கண்தொட்டு உண்டு - கண்களைத் தோண்டி உண்டு, கவை அடி பெயர்த்து - கவைத்த அடிகளைப் பெயர்த்து, தண்டாக் களிப்பின் ஆடும் கூத்து - தணியாத களிப்புடன் ஆடுகின்ற கூத்தினை; என்னாது - என்று கருதி அதிசயிக்காது ; இஃது ஐயவதி சயத்தின் பாற்படும்: 1"கவையடிப் பேய்மகள்" என்றார் பிறரும். 127-131. கண்டனன் வெரீஇ - கண்டு அஞ்சி, கடு நவை எய்தி - அப் பேயாற் பிடிக்கப்பட்டு, விண்டு - அவ்விடத்தின் நீங்கி, ஓர் திசையின் விளித்தனன் பெயர்ந்து - ஓர் திசையிற் கூப்பிட்டுக் கொண்டு சென்று, ஈங்கு எம்மனை காணாய் - எம் அன்னையே இங்கே காண்பாயாக, ஈமச்சுடலையின் - ஈமமாகிய மயானத்தின் கண் உள்ள, வெம்முது பேய்க்கு என் உயிர் கொடுத்தேன் என - கொடிய முது பேய்க்கு என் உயிரைக் கொடுத்துவிட்டேன் என்று கூறி, தம் அனை தன் முன் வீழ்ந்து மெய் வைத்தலும் - தன் தாயின் முன்னே வீழ்ந்து உயிர் துறக்கவும்; சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன் கண்டனன் வெரீஇ என்க. கடு நவை-மிக்க துன்பம் ; ஆவது-பேய்க் கோட்படுதல். 2"கழல்கட் கூளிக் கடுநவைப் பட்டோர்" என்பதுகாண்க. ஈமச் சுடலை:இருபெயரொட்டு; ஈமத்தையுடைய சுடலையென்றுமாம். ஈமம்- பிணஞ் சுடும் விறகடுக்கு. மெய் வைத்தல் - உடம்பைப் போகடுதல்; இறத்தல். 132-141. பார்ப்பான் தன்னொடு கண் இழந்திருந்த - கணவனோடு கண் இழந்திருந்த, இத் தீத் தொழிலாட்டி என் சிறுவன் தன்னை- இக் கொடுவினையேனுடைய புதல்வனை, யாரும் இல் தமியேன் என்பது நோக்காது - யான் யாருமற்ற ஏழை யென்பதனைக் கருதாமல், ஆர் உயிர் உண்டது அணங்கோ பேயோ - அணங்கோ அன்றிப் பேயோ அரிய உயிரையுண்டது, துறையும் மன்றமும் தொல் வலி மரனும் - நீர்த்துறைகளும் மன்றங்களும் பழைய வலி யுடைய மரங்களும், உறையுளும் கோட்டமும் காப்பாய் - தங்கு மிடங்களும் கோயில்களு மாதியவற்றின்கணிருந்து காத்து வருவோய், காவாய் தகவிலை கொல்லோ சம்பாபதி என-சம்பாபதியே நீ என் மகனுயிரைக் காவாமலிருந்தாய் தகவின்மையை யுடையையோ என அழைத்து, மகன் மெய் யாக்கையை மார்புறத் தழீஇ - மகனது உடலாகிய உயிரற்ற யாக்கையை மார்புடன் தழுவிக்கொண்டு; ஈமப் புறங்காட்டு எயில்புற வாயிலில் - இடு காட்டின் மதிற் புறத்துள்ள வாயிலில் நின்று, கோதமை என்பாள் கொடுந் துயர் சாற்ற - கோதமை என்னும் பார்ப்பனி கொடிய துன்பத்தினைக் கூற; பார்ப்பான் - சார்ங்கலனுடைய தந்தை; அவன் கண்ணிழந் திருந்தமை "கண்ணில் கணவனை" (6:155.) எனப் பின் வருதலானும் துணியப்படும். தீத்தொழிலாட்டி-பார்ப்பனி யென்றுமாம்; 1தீத்திறம் புரிந்தோன்" எனப் பார்ப்பனன் கூறப்படுதல் காண்க; அங்கி காரியம் செய்பவன் என்றபடி. கணவனும் கண்ணிழந் தானாகலின் சிறுவனை யன்றித் தனக்குக் களைகண் இல்லை யென்பாள் ‘யாருமில் தமியேன்' என்றாள். நோக்காது - கருதாது; நோக்கனோக்கம். மன்றம் - பலர்கூடும் வெளியிடம். தகவு இலை கொல்லோ-நின்னிடம் தகவு இல்லையோ என்றுமாம்; தகவு - நடுவு நிலை; எவ்விடத்தும் யாரையுங் காக்குந் தெய்வம் ஈண்டு இவனைக் காவாமையின் ‘தகவிலை கொல்லோ' என்றாள். கோதமை தகவிலை கொல்லோ என மார்புறத் தழீஇ வாயிலிற் சாற்றவென்க. 142-145. கடிவழங்கு வாயிலில் கடுந்துயர் எய்தி இடையிருள் யாமத்து என்னை ஈங்கு அழைத்தனை - இருளையுடைய இடை யாமத்தில் பேய்கள் நடமாடுகின்ற இவ் வாயிலின் கணிருந்து கொடிய துக்கத்தினையடைந்து என்னை இப்பொழுது அழைத்தாய், என் உற்றனை எனக்கு உரை என்றே-நீ என்ன துன்பமெய்தினை அதனை எனக்குக் கூறுவாயாக என்று, பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற -பொன்னைப் போல் விளங்கும் நிறத்தினை யுடைய சம்பாபதி தோன்ற ; கடி - பேய். பொன்-சூரியன் என்பது அரும்பதவுரை. தோன்றி உரையென்று கூற என விகுதி பிரித்தொட்டுதலுமாம். 146-149. ஆருமிலாட்டி என் அறியாப் பாலகன் - ஆருமற்ற வளாகிய என்னுடைய அறியாச் சிறுவன். ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை - ஈமத்தினையுடைய புறங்காட்டின் வழியே வந்தோனை, அணங்கோ பேயோ ஆருயிர் உண்டது-அணங்கோ பேயோ அரிய உயிரை உண்டது, உறங்குவான் போலக் கிடந்தனன் காண் என- இதோ உறங்குபவன் போலக் கிடக்கின்றனன் காண்பாயாக என்று பார்ப்பனி உரைத்து வருந்த ; 150-153. அணங்கும் பேயும் ஆருயிர் உண்ணாத் - அணங்கும் பேயும் அரிய வுயிரை உண்ணமாட்டா, பிணங்கு நூல் மார்பன் பேது கந்தாக -நெருங்கிய முப்புரி நூலை யணிந்த மார்பினையுடையசார்ங்கலனது அறியாமையே பற்றுக் கோடாக, ஊழ்வினை வந்து இவன் உயிருண்டு கழிந்தது - ஊழ்வினையானது வந்து இவனது உயிரை உண்டு நீங்கியது, மாபெருந் துன்பம் நீ ஒழிவாய் என்றலும்-நினது மிகப்பெரிய துயரத்தை நீங்குவாயாக என்று தெய்வமுரைத்தலும்; 154-156. என் உயிர்கொண்டு இவன் உயிர் தந்தருளின்-என்னுடைய உயிரைப் பெற்று என் மகனது உயிரைத் தந்தருள்வாயானால், என் கண்ணில் கணவனை இவன் காத்து ஓம்பிடும்-கண்ணிழந்த என் கணவனை இவன் பாதுகாப்பான் ஆகலின், இவன் உயிர் தந்து என் உயிர் வாங்கு என்றலும்-இவன் உயிரை அளித்து எனது உயிரை வாங்கு வாயாக என்று கோதமை கூறியவளவில் : காத்து ஓம்பிடும்: ஒருபொருட் பன்மொழி. 157-167. முது மூதாட்டி இரங்கினள் மொழிவோள் - சம்பாபதி இரக்கமுற்றுக் கூறுகின்றவள், ஐயம் உண்டோ ஆருயிர் போனால் செய்வினை மருங்கில சென்று பிறப்பு எய்துதல்-அரிய உயிரானது உடம்பை விட்டு நீங்கினால் தான் செய்த வினையின்வழியேசென்று வேறு பிறப்படைதலில் ஐயம் உண்டோ, ஆங்கது கொணர்ந்து நின் ஆரிடர் நீக்குதல்-சென்ற அவனுயிரைக் கொண்டுவந்து நின்னுடைய அரிய துன்பத்தை நீக்குதல், ஈங்கு எனக்கு ஆவ தொன்று அன்று - எனக்கு இயல்வதொரு காரியமன்று, நீ இரங்கல்-நீ வருந்தற்க, கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழில் மாக்கள் அவலப்படிற்று உரை ஆங்கது மடவாய் - மடந்தையே நீ கூறிய அது கொலை புரிவதை அறம் என்று கூறும் கொடுந் தொழிலையுடைய மாக்களின் துன்பத்தைத் தரும் பொய்யுரை யாகும், உலக மன்னவர்க்கு உயிர்க்கு உயிர் ஈவோர் இலரோ - உலகத்தையாள்கின்ற அரசர்கட்கு உயிர்க்கு உயிர் கொடுப் போர் ஒருவருமிலரோ, இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம் - இந்தச் சுடுகாட்டின்கண் அரசர்களுக்கு அமைந்த கோட்டங்கள் அளவற்றன ஆகலின், நிரயக் கொடு மொழி நீ ஒழி என்றலும்-நிரயத்திற்கேதுவாகிய கொடிய மொழிகளை நீ விடுவாயாக என்று தெய்வம் கூறுதலும்; முது மூதாட்டி-மிக்க முதுமையை உடையாள். மருங்கு - வழி; 1"செய்வினை வழித்தா யுயிர்செலு மென்பது, பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பது ஈண்டறியற்பாலது. மன்னவர்க்கு உயிர்க்குயி ரீவோர் - அரசர் உயிருக்கு மாறாகத் தம்முயிரைக் கொடுப்போர். ஆயிரம்-அளவில்லன என்னும்பொருட்டு. கோட்டம்-அறை. 168-171. தேவர் தருவர் வரம் என்று ஒருமுறை நான்மறை அந்தணர் நன்னூல் உரைக்கும் - தேவர்கள் வரந்தருவர் என்று அந்தணர் களது நல்ல நூலாகிய நான்மறை ஒருபெற்றியே கூறா நிற்கும்; அங்ஙனமாகவும், மாபெருந் தெய்வம் நீ அருளாவிடின்- மிகப்பெருந் தெய்வமாகிய நீ அருள்புரியாவிட்டால், யானோ காவேன் என் உயிர் ஈங்கென - யான் என் உயிரை ஈண்டுக் காப்பாற்றாமல் விடுவேன் என்று கோதமை கூற; 172-175. ஊழிமுதல்வன் உயிர்தரின் அல்லது-ஊழிமுதல்வனாகிய இறைவன் உயிரை அளித்தாலல்லது, ஆழித்தாழி அகவரைத் திரிவோர் தாம் தரின்-சக்கரவாளமாகிய தாழியின்கண் திரியுந் தேவர்கள் தர வல்லவராயின், யானும் தருகுவன் மடவாய்- மடவாய் யானும் நின் மகனுயிரைத் தருவேன், ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்று - என்னுடைய ஆற்றலையும் நீ இப்பொழுது காண்பாயாக என்று கூறி; ஊழிமுதல்வன் - உலக முதல்வன்; இவனை மகாப்பிரமா என்பர். தாழிபோற் கவிந்துள தென்பார் தாழி யென்றார். முதல்வன் தரின் அல்லது திரிவோர் தாரார். அவர் தரின் யானுந் தருகுவன் என விரித்துரைக்க. 176-185. நால்வகை மரபின் அரூபப் பிரமரும் - நான்கு வகைப் பட்ட முறைமையினையுடைய அரூபப் பிரமர்களையும், நானால் வகையின் உரூபப் பிரமரும்-பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரமர்களையும், இருவகைச் சுடரும்-ஞாயிறு திங்கள் களையும், இரு மூவகையில் பெருவனப்பு எய்திய தெய்வத கணங்களும் - ஆறு வகையினையுடைய மிக்க அழகு விளங்கு கின்ற தெய்வ கணங்களையும், பல்வகை அசுரரும் படுதுயர் உறூஉம் எண்வகை நரகரும்- பல திறப்பட்ட அசுரர்களையும் மிக்க துன்பத்தை அனுபவிக்கின்ற எண்வகைப்பட்ட நரகர் களையும், இரு விசும்பு இயங்கும் பன்மீன் ஈட்டமும் நாளும் கோளும்-அகன்ற வானின்கண் திரியும் பல மீன்களின் தொகுதிகளையும் நாட்களையும் கோட்களையும், தன் அகத்து அடக்கிய சக்கரவாளத்து - தன் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் சக்கரவாளத்தில், வரந் தரற்குரியோர்தமை முன் நிறுத்தி -வரந்தருவதற் குரியவர்களாகிய தேவர்களைக் கோதமைக்கு முன்னே நிறுத்தி, அரந்தை கெடும் இவள் அருந்துயர் இதுவென - இவளுற்ற அரிய துயர் இது இத்துயரினைப் போக்குவீராக என்று சம்பாபதி கூற; உலகம் முப்பத்தொன்று என்றும், அவற்றுள் முதலா வதாகிய நரக லோகத்தின் பகுதிகளாகிய மகாநிரயம், இரௌரவம், காலசூத்திரம், சஞ்சீவனம், மகாவீசி, தபனம், சம்பிரதாபனம், சங்கதம் என்னும் எட்டு நரகங்களிலும் நரகர்கள் வசிப்பரென்றும், ஆறாவது முதலிய அறுவகை உலகங்களிலும் அறுவகைத் தெய்வகணங்கள் வசிப்பரென்றும், பன்னிரண்டாவது முதலிய பதினாறு உலகங்களில் பதினாறுவகை உருவப்பிரமர்களும், இருபத்தெட்டாவது முதலிய நான்கு உலகங்களில் நால்வகை அருவப்பிரமர்களும் வசிப்பரென்றும் கூறுவர். ஒன்று முதல் மேன்மேலுலகங்களில் வசிப்போர் படிப்படியே உயர்ந்தோராவ ரென்பது அறிக. கெடும் : செய்யுமென்னுஞ் சொல்; ஏவலில் வந்தது. 186-189. சம்பாபதி தான் உரைத்த அம்முறையே - காவற்றெய்வ மாகிய சம்பாபதி கூறிய முறைப்படியே, எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே - உலகெங்கணுமுள்ள தேவர்களும் கூறக் கேட்டு, கோதமை உற்ற கொடுந்துயர் நீங்கி - கோதமை தான் அடைந்த கொடிய துன்பத்தினின்றும் நீங்கி, ஈமச்சுடலையில் மகனை இட்டு இறந்தபின் - இடுகாட்டில் அடுக்கப்பட்ட விறகினை யுடைய அழலின்கண் மகனை இட்டுத் தானும் இறந்த பின்னர்; சம்பாபதி கூறியதாவது ஊழி முதல்வன் உயிர்தரினல்லது ஏனோர் தாரார் என்றது. தேவர் என்றது அருவப்பிரமர் இறுதி யாகவுள்ள மேலுலகத்தவர் அனைவர்க்கும் பொதுப்பெயர். 190-202. சம்பாபதி தன் ஆற்றல் தோன்ற - சம்பாபதியினுடைய பேராற்றல் வெளிப்படுமாறு, எங்கு வாழ் தேவரும் கூடிய இடந்தனில்-எங்குமுறைகின்ற தேவர்க ளெல்லோரும் கூடிய அந்த இடத்தில், சூழ்கடல் வளைஇய ஆழியங்குன்றத்து - பெரும்புறக் கடலாற் சூழப்பட்ட சக்கரவாள மலையின் உட்பட்ட இடத்தில், நடுவு நின்ற மேருக்குன்றமும் - நடு விடத்தே நின்றதாகிய மேருமலையும், புடையின்நின்ற எழு வகைக் குன்றமும் அதன் பக்கத்தே சூழ்ந்து நின்ற எழுவகைக் குலமலைகளும், நால்வகை மரபின் மாபெருந்தீவும்-நான்கு வகைப்பட்ட மரபினையுடைய மிகப்பெரிய தீவுகளும், ஓரீ ராயிரம் சிற்றிடைத்தீவும் - அவற்றைச் சூழ்ந்துள்ள இரண்டாயிரம் சிறு தீவுகளும், பிறவும் ஆங்கதன் இடவகை உரியன-பிறவுமாகிய அதன் உரிய இடவகைகளை, பெறு முறை மரபின் அறிவுவரக் காட்டி-அவை அமைந்த முறைப்படி காண்போர்க்கு அறிவுரை அமைத்துக் காட்டி, ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்-ஆங்கே வாழும் உயிர்களையும் அவை வசிக்கும் இடங்களையும், பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து-அழகு பொருந்த மண்ணீடுகளாக இலக்கணப்படி வகுத்து, மிக்க மயனால் இழைக்கப்பட்ட - அறிவின் மேம்பட்ட தெய்வத் தச்சனால் இயற்றப்பட்ட, சக்கரவாளக்கோட்டம் ஈங்கிதுகாண்-சக்கர வாளக்கோட்டம் என்பது இதுவாகும்: தோன்றக்கூடிய இடம் என்க; தோன்ற இழைக்கப்பட்ட என் றியைத்தலும் பொருந்தும். மேருமலை எண்பத்தீராயிரம் யோசனை உயரமும், அதற்குத் தக்க பருமையும் உள்ளதென்றும், அதனைச் சூழக் குலகிரிகள் ஏழும், அவற்றுள் ஒவ்வொன்றனையும் சூழ்ந்து அவ்வக்கிரி யின் உயரவளவுள்ள ஆழமும் அகலமுமுடைய ஏழு கடல்களும் உள்ளனவென்றும், இவையெல்லாவற்றையும் புறஞ் சூழ்ந்துகிடக்கும் பெரும்புறக்கடலில் சம்புத்தீவு முதலிய நான்கு மாபெருந்தீவுகளும், அவைஒவ்வொன்றையும் ஐந்நூறு ஐந்நூறு ஆகச்சூழ்ந்த இரண்டாயிரம் சிறு தீவுகளும் உள்ளன என்றும், சம்புத்தீவு தெற்கிலுள்ளது என்றும் கூறுவர்; இப்பகுதிக்கு டாக்டர் உ.. வே. சாமிநாதையர் எழுதிய அரும்பதவுரை காண்க. சிறு தீவுகள் அந்தரத்தீவுகள் என்றும் கூறப்படும்; "அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும்" (25 : 224) என்று பின்வருதல் காண்க. உயிர்கள் என்றது அவற்றுக்கு நிலைக்களமாகிய உடம்பு களை. இடம் என்றது நீர், நிலம் முதலியவற்றை. மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை முதலியன. மயன் - அசுரத்தச்சன் என்பாருமுளர். 203-205. இடுபிணக்கோட்டத்து எயிற்புறம் ஆகலின் - பிணங்களை யிடுகின்ற புறங்காட்டின் மதிற் புறத்திலுள்ளது ஆதலால் இதனை, சுடுகாட்டுக்கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்ட மென்றே கூறுவர், இதன்வரவு இது என்று இருந்தெய்வம் உரைக்க - இதனுடைய வரலாறு இஃது என்று மணிமேகலா தெய்வம் மொழிந்தருள; இடுதல், சுடுதல் இரண்டினையும் ஒன்றாக அடக்கிப் பெயர் கூறினார். 206-214. மதன்இல் நெஞ்சமோடு வான்துயர் எய்தி - வலியற்ற மனத்துடனே மிக்க துன்பத்தையடைந்து, பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப-பூமியிற் பிறந்தோர்களது வாழ்க்கையை மணிமேகலை கூற, இறந்திருள் கூர்ந்த இடையிருள், யாமத்து - மிகவுஞ்செறிந்த இருள் மிகுந்த இடையாமத்தில், தூங்குதுயில் எய்திய சுதமதி ஒழிய - மிக்க உறக்கத்தினையடைந்த சுதமதி அவ்விடத்தில் நீங்க, பூங்கொடிதன்னைப் பொருந்தித் தழீஇ - மணிமேகலையைச் சேரத் தழுவிக்கொண்டு, அந்தரம் ஆறா ஆறைந்து யோசனைத் தென்றிசை மருங்கில் சென்று-விசும்பின் வழியாக முப்பது யோசனை தூரம் தென்றிசைக்கட் சென்று, திரையுடுத்த மணி பல்லவத்திடை - கடலாற் சூழப்பட்ட மணிபல்லவ மென்னும் தீவின்கண், மணிமேகலா தெய்வம் அணியிழை தன்னை வைத்து அகன்றதுதான் - மணிமேகலையை வைத்துவிட்டு மணிமேகலா தெய்வம்தான் நீங்கியது என்க. மதன்-செருக்குமாம். கோட்டத்தினியல்பு கேட்டமையின் நெஞ்சம் மதனழிந்ததென்க. வாழ்க்கை யென்றது அதன் நிலையாமையை. மண்டிலம் சொரிய, மேனியள் ஏதீதி நோக்கி என்னுற்றீரென, அவள் அவன் கூறிய துரைத்தலும்; அருந் தெய்வமுரைப்ப, சுதமதி என்னை யோவென, நேரிழை கூறும் ; அங்ஙனம் கூறுகின்ற தெய்வம் இதன் வரவு இதுவென்றுரைக்க, சிறந்தோளுரைப்ப, தெய்வம் இடை யிருள் யாமத்துச் சுதமதியொழியப் பூங்கொடிதன்னைத் தழீஇச் சென்று மணிபல்லவத்தில் வைத்து அகன்றது என முடிக்க. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை முற்றிற்று. 7. துயிலெழுப்பிய காதை மணிபல்லவத்தினின்றும் நீங்கிய மணிமேகலா தெய்வம், ‘இரவு கழிந்தால் மணிமேகலை என்கை யகப்படுவாள்' என்று வேட்கை நோயால் துயிலாதிருந்த உதயகுமரன் முன்தோன்றி, "மன்னவன் மகனே, கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும், மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை, மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிரென்னும் தகுதியின் றாகும், தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த, அவத்திறம் ஒழிக" என்று அவனுக்கு அறிவுரை கூறிவிட்டு, உவவனஞ் சென்று அங்கே துயிலும் சுதமதியை எழுப்பி, "யான் மணிமேகலா தெய்வம்; இந்திர விழாக் காண்டற்கு வந்தேன் ; நீ-அஞ்சாதே, மணிமேகலைக்குப் புத்தன் அற நெறியிற் செல்லும் நற்பொழுது வந்துற்றதாகலின் அவளை யெடுத்துச் சென்று மணிபல்லவத்தில் வைத்தேன்; அவள் தனது பழம் பிறப்பின் நிகழ்ச்சியையும் அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாவது நாளில் இங்கு வந்து சேர்வாள். இந்நகரில் வேறுவடிவம் கொள் வாளாயினும் உனக்கு அவள் ஒளிப்பாளல்லள்; அவள் இப்பதியிற் புகும்நாளில் பல அற்புதங்கள் நிகழும்; நான் வந்ததையும் மணிமேகலை நல்வழியிற் சென்றதையும் மாதவிக்குச் சொல்க: அவள் முன்னரே என்னை யறிவாள்; கோவலன் ‘நமது குல தெய்வத்தின் பெயரை இக்குழந்தைக்கு இடுக' என்று சொல்லி, என் பெயரை இவளுக்கிட்ட நாளின் இரவில் மாதவியின் கனவிற் சென்று, ‘காமன் செயலற்றேங்க மாபெருந் தவக்கொடி யீன்றனை' என்று நனவிற் கூறியதுபோல நான் கூறியதுண்டு; இதனையும் அவளுக்கு நினைப்பூட்டுதி," என்று கூறிப்போயிற்று. பின்பு சுதமதி யெழுந்து மணிமேகலையின் பிரிவால் வருந்தி. அவ்வனத்தைச் சூழ்ந்த மதிலின் மேற்புறத்திலுள்ள சிறிய வாயில் வழியே சென்று, சக்கரவாளக்கோட்டத்தை யடைந்து, ஆங்குள்ள உலகவறவியின் ஒருபுடை யிருந்தாள். அப்பொழுது அவ்விடத்தே கந்தினை இடமாகக்கொண்டுள்ள தெய்வப்பாவையானது சுதமதி மருளும்படி அவளது முற்பிறப்பின் வரலாற்றையும் இப்பிறப்பின் வரலாற்றையும் கூறி விளித்து, ‘மணிமேகலை தனது முற்பிறப்பையும் உனது முற்பிறப்பையும் அறிந்துகொண்டு இற்றைக்கு ஏழாம்நாளிரவில் இந் நகர்க்கண் வருவாள்; அவள் பிரிந்தது பற்றி நீ அஞ்சல்' என்று கூறிற்று. அதனைக் கேட்டு நெஞ்சம்நடுங்கிய சுதமதி, இரவு முழுதும் அவ்விடத்திருந்து, கதிரவன் உதித்தவுடன் எழுந்து வீதிமருங்கிற் சென்று மாதவியை அடைந்து, முதல்நாளிரவு நிகழ்ந்தவற்றைச் சொன்னவுடன் அவள் மாணிக்கத்தை இழந்த நாகம் போன்று மிக்க துயரத் தோடிருந்தாள். சுதமதி மணிமேகலையின் பிரிவால் இன்னுயிரிழந்த யாக்கைபோலச் செயலற்றிருந்தாள். (இதில், இராப்பொழுதின் நிகழ்ச்சிகளும், விடியல் நிகழ்ச்சிகளும் ஆசிரியருடைய உலகியலறிவையும், கற்பனைத்திறத்தையும் புலப்படுத்துகின்றன.) மணிமே கலைதனை மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம் வைத்து நீங்கி மணிமே கலைதனை மலர்ப்பொழிற் கண்ட உதய குமரன் உறுதுய ரெய்திக் 5 கங்குல் கழியிலென் கையகத் தாளெனப் பொங்குமெல் லமளியிற் பொருந்தா திருந்தோன் முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் 10 மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயி ரென்னுந் தகுதியின் றாகும் தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிகென் றவன்வயி னுரைத்தபின் 15 உவவனம் புகுந்தாங் குறுதுயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி இந்திர கோடணை இந்நகர்க் காண வந்தே னஞ்சல் மணிமே கலையான் ஆதிசான் முனிவன் அறவழிப் படுஉம் 20 ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின் விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னையோர் வஞ்சமில் மணிபல் லவத்திடை வைத்தேன் பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்தீங் கின்றேழ் நாளில் இந்நகர் மருங்கே 25 வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள களிப்புமாண் செல்வக் காவற் பேரூர் ஒளித்துரு வெய்தினும் உன்திற மொளியாள் ஆங்கவள் இந்நகர் புகுந்த அந்நாள் ஈங்கு நிகழ்வன ஏதுப் பலவுள 30 மாதவி தனக்கியான் வந்த வண்ணமும் ஏதமில் நெறிமகள் எய்திய வண்ணமும் உரையாய் நீயவள் என்திறம் உணரும் திரையிரும் பௌவத்துத் தெய்வமொன் றுண்டெனக் கோவலன் கூறியிக் கொடியிடை தன்னையென் 35 நாமஞ் செய்த நன்னாள் நள்ளிருள். காமன் கையறக் கடுநவை யறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை யென்றே நனவே போலக் கனவகத் துரைத்தேன் ஈங்கிவ் வண்ணம் ஆங்கவட் குரையென் 40 றந்தரத் தெழுந்தாங் கருந்தெய்வம் போயபின் வெந்துய ரெய்திச் சுதமதி எழுந்தாங் ககன்மனை யரங்கத் தாசிரியர் தம்மொடு வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி ஆடல் புணர்க்கும் அரங்கியன் மகளிரில் 45 கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை கொளைவல் லாயமோ டிசைகூட் டுண்டு வளைசேர் செங்கை மெல்விர லுதைத்த வெம்மைவெய் துறாது தன்மையிற் றிரியவும் 50 பண்பில் காதலன் பரத்தமை நோனாது உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று தெருட்டவுந் தெருளா தூடலொடு துயில்வோர் விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும் தளர்நடை யாயமொடு தங்கா தோடி 55 விளையாடு சிறுதேர் ஈர்த்துமெய் வருந்தி அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்குக் காவற் பெண்டிர் கடிப்பகை யெறிந்து தூபங் காட்டித் தூங்குதுயில் வதியவும் 60 இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும் காவுறை பறவையும் நாவு ளழுந்தி விழவுக்களி யடங்கி முழவுக்கண் துயின்று பழவிறன் மூதூர் பாயல்கொள் நடுநாள் கோமகன் கோயிற் குறுநீர்க் கன்னலின் 65 யாமங் கொள்பவர் ஏத்தொலி யரவமும் உறையுணின் றொடுங்கிய உண்ணா உயக்கத்து நிறையழி யானை நெடுங்கூ விளியும் தேர்வழங்கு தெருவுஞ் சிற்றிடை முடுக்கரும் ஊர்காப் பாளர் எறிதுடி ஓதையும் 70 முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து பழஞ்செருக் குற்ற அனந்தர்ப் பாணியும் அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப் 75 புதல்வரைப் பயந்த புனிறுநீர் கயக்கம் தீர்வினை மகளிர் குளனா டரவமும் வலித்த நெஞ்சின் ஆடவ ரின்றியும் புலிக்கணத் தன்னோர் பூத சதுக்கத்துக் கொடித்தேர் வேந்தன் கொற்றங் கொள்கென 80 இடிக்குரன் முழக்கத் திடும்பலி யோதையும் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் கடுஞ்சூன் மகளிர் நெடும்புண் உற்றோர் தந்துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென 85 நின்றெறி பலியின் நெடுங்குர லோதையும் பல்வே றோதையும் பரந்தொருங் கிசைப்பக் கேட்டுளங் கலங்கி ஊட்டிரு ளழுவத்து முருந்தேர் இளநகை நீங்கிப் பூம்பொழில் திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி 90 மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த சக்கர வாளக் கோட்டத் தாங்கண் பலர்புகழ் திறந்த பகுவாய் வாயில் உலக அறவியின் ஒருபுடை இருத்தலும் கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய 95 அந்தி லெழுதிய அற்புதப் பாவை மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவத் திப்பிய முரைக்குந் தெய்வக் கிளவியின் இரவி வன்மன் ஒருபெரு மகளே துரகத் தானைத் துச்சயன் றேவி 100 தயங்கிணர்க் கோதை தாரை சாவுற மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய் காராளர் சண்பையிற் கௌசிகன் மகளே மாருத வேகனோ டிந்நகர் புகுந்து தாரை தவ்வை தன்னொடு கூடிய 105 வீரை யாகிய சுதமதி கேளாய் இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்துத் தன்பிறப் பதனோடு நின்பிறப் புணர்ந்தீங்கு இலக்குமி யாகிய நினக்கிளை யாள்வரும் அஞ்சலென் றுரைத்த தவ்வுரை கேட்டு 110 நெஞ்சம் நடுக்குறூஉம் நேரிழை நல்லாள் காவ லாளர் கண்டுயில் கொள்ளத் தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப் புலம்புரிச் சங்கம் பொருளோடு முழங்கப் 115 புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப் பொறிமயிர் வாரணங் குறுங்கூ. விளிப்பப் பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப் பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப் பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப் 120 பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பப் கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக் கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக் குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக் கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ 125 ஊர்துயி லெடுப்ப உரவுநீ ரழுவத்துக் காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும் ஏவுறு மஞ்ஞையின் நினைந்தடி வருந்த மாநகர் வீதி மருங்கிற் போகிப் போய கங்குலிற் புகுந்ததை யெல்லாம் 130 மாதவி தனக்கு வழுவின் றுரைத்தலும் நன்மணி இழந்த நாகம் போன்றவள் தன்மகள் வாராத் தனித்துய ருழப்ப இன்னுயி ரிழந்த யாக்கையி லிருந்தனள் துன்னிய துரைத்த சுதமதி தானென். உரை 1-7. மணிமேகலைதனை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி-மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தின்கண் வைத்து அதனைவிட்டு நீங்க, மணிமேகலைதனை மலர்ப்பொழிற் கண்ட உதயகுமரன் - மணிமேகலையைப் பூஞ்சோலையிற் கண்ட உதயகுமரன், உறுதுயர் எய்தி - மிக்க துன்ப முற்று, கங்குல் கழியில்என் கையகத்தாள் என - இரவு நீங்கினால் மணிமேகலை என் கையினிடத்தே உள்ளாள் என்று, பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி- சிறந்த மெல்லிய படுக்கையிடத்துக் கண்டுயிலாது இருக்கின்றவன் முன்னே தோன்றி, மணிமேகலையை எய்தப் பெறாமையான் உறுதுயர் எய்தினான் என்க. பொருந்தாது-கண் பொருந்தாது : உறங்காது. இருந்தோன் முன்னர்த் தோன்றி என்க. 7-14. மன்னவன் மகனே-அரசன் புதல்வனே, கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்-அரசனது கோல் கோடு வதாயின் கோட் களின் நிலை வேறுபடும், கோள்நிலை திரிந்திடின் மாரி வறம்கூரும்- அங்ஙனம் கோட்கள் நிலை தவறினால் மழை பெய்யாமற் கழியுங்காலம் மிகும், மாரி வறங் கூரின் மன்னுயிர் இல்லை - மழை வளங் குறைந்தால் நிலைபெற்ற உயிர்கள் இல்லையாம், மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்- நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் மண்ணுலகத்தை ஆள்கின்ற மன்னவனது உயிர்என்று கூறப்படும் தகைமைஇலதாம் ஆகலின், தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த - தவத்தின் கூறுபாட்டினை மேற்கொண்ட மணிமேகலைபால் வைத்த, அவத்திறம் ஒழி கென்று அவன் வயின் உரைத்தபின்-தீய விருப்பின் தன்மையை ஒழிவாயாக என்று உதயகுமரனிடம் மொழிந்த பின்னர்; கோல்நிலை திரியின் கோள்நிலை திரிதல் முதலியன நிகழுமென் பதனை, 1"கோணிலை திரியாக் கோலோ னாகுக,' 2"கோணிலைதிரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி, நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியு நீடிப், பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி, ஆணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றானும் அறிக. அவத்திறம் - கேடு செய்யும் தீய விழைவு. 15-22. உவவனம் புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும்-உவவனத்திற் புகுந்து ஆண்டு மிகுந்த உறக்கத்துடனிருக்கும், சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி - சுதமதியை உறக்கத் தினின்றும் எழுப்பி, இந்திரகோடனை இந்நகர்க் காண வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்-யான் மணிமேகலா தெய்வம் அஞ்சாதே இந்நகரின் இந்திர விழாக்காண வந்தேன், ஆதிசான் முனிவன் அற வழிப்படூஉம்-புத்த தேவனின் அறநெறியிற் செல்லும், ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்- ஏது நிகழ்ச்சி மணிமேகலைக்கு முற்றியதாகலின் விஞ்சையிற் பெயர்ந்நு நின் விளங்கிழைதன்னை-நின் மெல்லியலை என் வித்தையினாலே பெயர்த்து, ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்-ஒரு வகையான வஞ்சனையும் இல்லாத மணி பல்லவத்தின் கண் வைத்துளேன்; துயிலிடை : உருபு மயக்கம், கோடணை - முழக்கம் ; பல்வகை முழக்கத்தினையுடைய விழாவிற்காயிற்று. வினைகள் தம் பயனையூட்ட எதிர்ப்படுவதனை, ஏது நிகழ்ச்சி அல்லது ஏது என்பது பௌத்தநூல் வழக்கு. 23-29. பண்டைப் பிறப்பும் பண்புஉற உணர்ந்து-முற்பிறவியையும் நன்கறிந்து, ஈங்கு இன்று ஏழுநாளில் இந்நகர் மருங்கே- இற்றைக்கு ஏழாம் நாளிலே இவ்விடத்து இந்நகரத்தின்கண், வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள் - மடப்பம் பொருந்திய கொடிபோலும் மணிமேகலை வந்து தோன்றுவள், களிப்பு மாண் செல்வக் காவற் பேரூர் - செல்வக் களிப்பாற் சிறந்த காவலையுடைய இப் பெரிய நகரத்தில். ஒளித்து உருவு எய்தினும் உன் திறன் ஒளியாள்ச் - தன் வடிவத்தை மறைத்து வந்தாலும் நின்னிடம் மறையாள், ஆங்கு அவள் இந்நகர் புகுந்த அந்நாள் - மணிமேகலை இந்நகரத்திற்கு மீளவந்த அந்நாளில், ஈங்கு நிகழ்வன ஏதுப் பலவுள - ஈண்டு நிகழ்வன வாகிய ஏது நிகழ்ச்சிகள் பலவுண்டு; தோன்றும்: முற்று. களிப்புமாண் செல்வம் என்பதற்குக் களிப்பு மாட்சி யுறுதற்குக் காரணமாய செல்வம் என உரைப்பினும் அமையும். புகுந்த என்பது கால வழுவமைதி. 30-40. மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்-மாதவிக்கு யான் வந்த வகையையும், ஏதம்இல் நெறி மகள் எய்திய வண்ணமும்- மணிமேகலை குற்றமற்ற வழியிற் சேர்ந்த தன்மையையும், உரை யாய் நீ - நீ கூறுவாயாக, அவள் என் திறம் உணரும்-அம் மாதவி என் வரலாற்றை உணருவாள், திரையிரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கோவலன் கூறி இக்கொடியிடை தன்னை என் நாமஞ் செய்த நல்நாள் - கோவலன் அலைகளையுடைய பெரிய கடலினிடத்துத் தெய்வம் ஒன்று உண்டென்று கூறி இப் பெண் மகளுக்கு என் பெயரையிட்ட நல்லநாளில், நள்இருள்-இரவின் நடுயாமத்தே, காமன் கையறக் கடுநவை அறுக்கும் - காமன் செயலற்றுப்போகப் பெரிய துன்பங்களை அறுக்கவல்ல, மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே-மிகப் பெரிய தவமுடைய மகளைப் பெற்றனை என்று, நனவேபோலக் கனவகத்து உரைத்தேன் - நேரிற் கூறுவதைப் போலக் கனவின்கண் மொழிந்தேன், ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று - இவற்றையெல்லாம் மாதவிக்குக் கூறுவாயாக என்றுரைத்து அந்தரத்து எழுந்து ஆங்கு அருந்தெய்வம் போயபின் - விசும்பில் எழுந்து அவ்வரிய மணிமேகலா தெய்வம் போயின பின்னர்; ஏதம் இல் நெறி எய்தியது என்றது புத்தன் அறவழிப்படுதல் என்க; இதனை விசுத்திமார்க்கம் என்ப. தெய்வம்-என்குல முதல்வனைக் கேட்டினின்றும் நீக்கிப் பாதுகாத்த தெய்வம் என விரித்துரைத்துக் கொள்க. கொடியிடை தன்னை-கொடியிடைக்கு; கொடியிடை: மணிமேகலை. நள்ளிருள் என்பது செறிந்த இருளையுடைய இரவினை யுணர்த்திற்று. கடுநவை - அவா முதலியன. நன்னாள் நள்ளிருட் கனவகத்து உரைத்தேன் என்க. 41. வெந்துயர் எய்திச் சுதமதி எழுந்தாங்கு-சுதமதி கொடிய துன்ப மடைந்து எழுந்து; 42-49. அகல்மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு- அகன்ற வீடாகிய அரங்கின்கண் ஆசிரியன்மாரொடு நின்று, வகை தெரி மாக் கட்கு வட்டணை காட்டி-அவினய முதலிய கூறுபாடுகளையறிகின்ற மக்களுக்குக் கமலவர்த்தனை காட்டி, ஆடல் புணர்க்கும் அரங்கியல் மகளிரில்-ஆடல் புரியும் நாடக மகளிரைப்போல, கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று-ஒருங்கியைந்த குரல்யாழ் முதலிய குயிலுவக் கருவி களெல்லாம் கண்டுயின்று, பண்ணுக் கிளைபயிரும் பண்ணி யாழ்த் தீந்தொடை-பண்ணின் வகைகளை இசைக்கும் யாழின் இனிய நரம்புகள், கொளைவல் ஆயமோடு இசை கூட்டுண்டு- பாட்டில் வல்ல மகளிருடன் இசையைச் சேர்ந்தனுபவித்து, வளை சேர் செங்கை மெல்விரல் உதைத்த-வளைகளுடன் கூடிய சிவந்த கைகளின் மெல்லிய விரல்களால் தெறித்த, வெம்மை வெய்துறாது தன்மையில் திரியவும்- வெம்மை நன்கு உறாமையால் இயல்பி னின்று திரியாநிற்கவும்; ஆசிரியர்-இயலாசிரியன், ஆடலாசிரியன், யாழாசிரியன், இசையா சிரியன், குழலாசிரியன், தண்ணுமை யாசிரியன் என்போர். வட்டணை- வர்த்தனை; கமல. வர்த்தனை; ஆவது கைத்தலங் காட்டல். கிளை-திறமு மாம். தீந்தொடை திரியவும் என்க. 50-53. பண்பில் காதலன் பரத்தமை நோனாது. குணமற்ற காதலனுடைய பரத்தமையைப் பொறாமல், உண் கண் சிவந்தாங்கு ஒல்கு கொடிபோன்று - அசைகின்ற கொடி போல மையுண்ட கண்கள் சிவந்து, தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்-தெளி விக்கவும் தெளியாமல் ஊடலுடன் துயில்கின்ற மகளிர், விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும் - மணம் பொருந்திய மலரணையில் தம்மால் விரும்பப்படுகின்ற கொழுநரைத் தழுவவும்; பண்பு - ஈண்டு அன்பு. பரத்தமை-பரத்தன் தன்மை; பரத்தையை மருவி யொழுகுவோன் பரத்தன்; 1"பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு" என்பது காண்க. ஊடலொடு துயில்வோர் தாமே துணையைத் தழுவவு மென்க. 54-59. தளர்நடை ஆயமொடு தங்காது ஓடி விளையாடு சிறுதேர் ஈர்த்து மெய்வருந்தி - தளர்நடைச் சிறார்களுடன் ஓரிடத்தில் தங்காமல் ஓடி விளையாடுஞ் சிறு தேரினை இழுத்து உடல்வருந்தி, அமளித் துஞ்சும்-படுக்கையில் உறங்கு கின்ற, ஜம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு - ஜம்படைத் தாலி யணிந்த மார்பும் மழலைச் செவ்வாயும் தளர்நடையுமுடைய இளம் புதல்வர்க்கு, காவற் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்கு துயில் வதியவும் - செவிலித்தாயர் கடிப்பகை வீசிப் புகை காட்டித் தூங்குகின்ற உறக்கத்திற் பொருந்தவும்; ஐம்படை - திருமாலின் பஞ்சாயுத வடிவமுடைய அணிகலன்; "சிந்துபு சின்னீ ரைம்படை நனைப்ப" (3;138) என்புழி உரைத்தமை நோக்குக. கடிப்பகை - பேய்க்குப் பகை; வேம்பும், வெண்சிறு கடுகும்; இக் காதையுள் மேல்வருதல் காண்க. காவற்பெண்டிர் துயில் வதியவும் என்க. 60-63. இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும் - இறப்புகளில் வாழ் கின்ற புறாக்களும் நிறைந்த நீரிலுள்ள பறவைகளும், கா உறை பறவைகளும நா உள் அழுந்தி-பொழில்களில் உறை கின்ற புட்களும் நா உள்ளே அழுந்தி, விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று- விழாவினாலுண்டாகிய களிப்பு அடங்கி முழவுகளின் கண் துயின்று, பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் - பழைய வலி யினையுடைய தொன்னகரம் துயிலினைக்கொண்ட இடையாமத்தில்; நாவுள்ளழுந்தலாவது : ஒலியாதிருத்தல். அழுந்தி, அடங்கி, துயின்று என்னும் இடத்து நிகழ்பொருளின் றொழில்கள் இடத்தின் மேல் நின்றன; அழுந்தி முதலியவற்றைச் செயவனெச்சமாகத் திரித்தலுமாம். 64-65. கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின் - அரசன் மாளிகையில் குறிய நீரினைக் கொண்ட நாழிகை வட்டிலால், யாமம் கொள்பவர் ஏத்துஒலி அரவமும்-நாழிகைக் கணக்கிடு வோர் ஏத்துகின்ற ஒலியாகிய முழக்கமும்; அரசனை ஏத்தி நாழிகை கூறுவராகலின் ‘ஏத்தொலியரவமும்' என்றார். ஒலியாகிய அரவமென்க ; அரவம் தமிழ்ச்சொல்லே. 66-67. உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து-தங்கு மிடத்தில் நின்று ஒடுங்கிய உண்ணாமையா னுண்டாகிய வருத்தத்தினால், நிறை அழியானை நெடுங்கூவிளியும் - நிறையழிந்த யானையினது நெடிய கூப்பீடாகிய முழக்கமும்; 68-69. தேர்வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் - தேர்கள் செல்லுகின்ற பெரியவீதிகளிலும் சிறிய இடங்களையுடைய முடுக் குத் தெருக்களிலும், ஊர்காப்பாளர் எறிதுடி ஓதையும் - ஊர் காவலர் அடிக்கின்ற துடியொலியும்; 70-72. முழங்கு நீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் - ஒலிக் கின்ற நீரினையுடைய கடற்றுறைகளில் மரக்கலத்திற் சேர்ந்து தொழில் புரிவோர், துழந்தடு கள்ளின் தோப்பியுண்டு அயர்ந்து - துழாவிச் சமைத்த கள் வகைகளில் நெல்லாற் சமைத்த கள்ளையுண்டு தம்மை மறந்து, பழஞ்செருக்குற்ற அனந்தர்ப் பாணியும் - பழைய செருக்கினையடைந்த மயக்கத் துடன் பாடும் பாட்டினோசையும்; கள்ளாகிய தோப்பி யென்றுமாம். தோப்பி - நெல்லாற் சமைத்த கள். பழஞ்செருக்கு-முதிர்ந்த களிப்பு. அனந்தர்-கள்ளுண்ட மயக்கம். 73-76. அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து-அரத்தின் வாய்போன்ற வேம்பாகிய கடிப் பகையும் வெண்சிறுகடுகாகிய கடிப்பகையும் கலந்து இடப்பட்டு மகளிரால் ஏந்தப்பட்ட புகையுடன் சென்று, புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம் தீர்வினை மகளிர் குளன் ஆடு அரவமும் - புதல்வரைப் பெற்ற புனிறு தீருமாறு கயங்குதல் தீர்கின்ற மகளிர் குளங்களில் நீராடுகின்ற ஒலியும்; கடிப்பகை-பேய்க்குப் பகையென்னும் பொருளது, மகளிர் ஏந்திய அரவாய்க் கடிப்பகையுடனும் ஐயவிக் கடிப்பகை விரவிய தூமத் துடனும் என்றுரைத்தலுமாம். புனிறு தீர்ந்த மகளிர் மயக்கந்தீர்ந்த மகளிர் எனத் தனித்தனி முடித்தலுமாம். புதல்வர்ப் பயந்த புனிறு தீர்ந்த மகளிர் இரவிற்சென்று குளத்தில் நீராடுதல் 1"கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து, பணைத்தேந் திளமுலை யமுதமூறப், புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு, வளமனை மகளிர் குளநீ ரயர" என்பதனாலும் அறியப்படும். பத்தாவது இரவில் நீராடவேண்டும் என்பர். 77-80. வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும் - பகைமையைக் கருதிய உள்ளமுடைய வீரர் இல்லாதிருக்கவும், புலிக்கணத்து அன்னோர்-புலிக்கூட்டத்தினை யொத்த வீரர்கள், பூதசதுக் கத்துக் கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்க என-பூதத்தையுடைய நாற்சந்தியிலே கொடியணிந்த தேரினை யுடைய எம் அரசன் வெற்றிபெறுக என்று, இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும் இடியனைய குரல் முழக்கத் துடன் பலியிடுகின்ற ஓசையும்; வலித்த-போரினைக் கருதிய என்றுமாம். ஆடவர்-ஈண்டுப் பகைவர். 81-85. ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் - ஈன்றணிமையை யுடைய இளமகளிர் ஆற்றாச் சிறுவர், கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் - முதற் சூலையுடைய மங்கையர் பெரிய புண்களால் வருந்தினோர், தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள் - ஆகிய இவர்களின் துன்பங்களை நீக்குகின்ற மந்திரவாதிகள், மன்றப் பேய் மகள் வந்து கைக்கொள்க என-மன்றத்தின்கணுள்ள பேய்மகள் வந்து பெறுக என்றுகூறி, நின்று எறி பலியின் நெடுங்குரல் ஓதையும்-நின்று பலி எறிகின்ற நீண்ட குரல் முழக்கமும்; கடுஞ்சூல் - முதற்சூல்; 1"கடுஞ்சூன் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்" என்றார் பிறரும். பலியிடும்பொழுது நெடுங்குர லெடுத்துக்கூப்பிடுவராகலின் ‘பலியினெடுங்குரல்' என்றார்: 86. பல்வேறு ஓதையும் பரந்து ஒருங்கிசைப்ப - ஆகிய பலவேறு வகைப்பட்ட ஓசையும் பரந்து ஒன்றாக முழங்க; 87-93. கேட்டு உளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து-அவற்றை யெல்லாங் கேட்டு மனங்கலங்கி ஊட்டினாற்போன்ற இருட் பரப் பிலே, முருந்து ஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில் - மயிற்பீலியின் முளைபோன்ற அழகிய பற்களையுடைய சுதமதி உவவனத்தினின்றும் நீங்கி, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருந்திய மதிலின் மேற்றிசையிலுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதெய்வம் வியந்து எடுத்து உரைத்த-பெருமைபொருந்திய மணிமேகலாதெய்வம் வியந்து எடுத்துக்கூறிய, சக்கரவாளக் கோட்டத் தாங்கண் - சக்கரவாளக் கோட்டத்திண்கண், பலர் புகத் திறந்த பகுவாய் வாயில்-பலருஞ் செல்லுமாறு திறக்கப் பட்டிருக்கின்ற பெரிய வாய்போலும் வாயிலையுடைய, உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்-ஊரம்பலத்தில் ஒருபக்கத்தில் இருத்தலும்; ஊட்டுதல் - பூசுதல். அறவி - அம்பலம் சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் ஒருங்கிசைப்பக் கேட்டு உளங்கலங்கி நீங்கிப் போகி ஒருபுடை யிருத்தலும் என்க. 94-97. கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய அந்தில் எழுதிய அற்புதப் பாவை - நெடிய தோற்றத்தையுடைய தூணாகிய அவ் விடத்தே பழவினையாகிய காரணத்தை அனைவருக்கும் அறிவிக்கும் பொருட்டு மயன் என்னும் தெய்வத் தச்சனால் எழுதப்பட்டு அனைவருக்கும் வியப்பை யுண்டுபண்ணும் பாவையானது, மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ-சுதமதி அஞ்சி மயங்குமாறு, திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின் - எதிர்காலத்தில் நிகழ் வனவற்றையும் கூறும் திப்பியமாகிய தெய்வக் கிளவியினாலே; நெடுநிலை யுடைக் கந்தாகிய அந்தில் எனக் கூட்டுக. அந்தில்-ஆங்கென்னும் பொருட்டு. காட்டிய : செய்யியவென்னும் வினையெச்சம். வருவதனை உரைப்பது தெய்வத் தன்மையாம் என்று கொண்டு 'திப்பிய முரைக்கும்' என்றார். தெய்வக்கிளவி - தெய்வத்தின் மொழி. 98-105. இரவிவன்மன் ஒரு பெருமகளே - அசோதர நகரத்தரச னாகிய இரவிவன்மனது ஒரு பெருமகளே, துரகத் தானைத் துச்சயன்தேவி - குதிரைச் சேனைகளை யுடையவனும் கச்சய நகரத் தரசனுமாகிய துச்சயனுடைய மனைவியே, தயங்கு இணர்க்கோதை தாரை சாவுற-விளங்குகின்ற பூங்கொத் தினாலாய மாலையையுடைய தாரை இறக்குமாறு, மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய்- யானையின் முன்னே மயங்கி உயிர் துறந்தோய், காராளர் சண்பையில் கௌசிகன் மகளே - காராளருடைய சண்பை நகரத்தில் உள்ள கௌசிகன் என்பவனுடைய புதல்வியே, மாருதவேகனோடு இந்நகர் புகுந்து - மாருதவேகன் என்னும் விஞ்சையனுடன் இந் நகரத்திற் சேர்ந்து, தாரை தவ்வை தன்னொடு கூடிய - தமக்கை யாகிய தாரையுடன் கூடிய, வீரையாகிய சுதமதி கேளாய் - வீரை யாகிய சுதமதியே கேட்பாயாக ; இரவிவன்மன் - சுதமதியின் முற்பிறப்பிலே தந்தையாயிருந்தவன். துச்சயன் - சுதமதியின் முற்பிறப்பிற் கணவனாயிருந்தவன். தாரை- சுதமதியின் முற்பிறப்பில் தமக்கையாயிருந்தவள். வீரை யானையால் இறந்தது கேட்டு இவள் இறந்தமையால் ‘தாரை சாவுற' என்றாள் ; சாவுற : எதிர்காலத்தில் வந்தது. காராளர் - வேளாளர் ; சண்பை - சீகாழி ; சண்பை யென்பது அங்கநாட்டிற் கங்கைக் கரையிலுள்ள தாகிய சம்பா நகரம் என்றும், காராளர் என்பது கராளர் என்பதன் திரிபென்றும் கூறுவாருமுளர்; தாரை, வீரை, இலக்குமி என்னும் மூன்று சகோதரிகளுள், தாரை மாதவியாகவும், இலக்குமி மணிமேகலை யாகவும் காவிரிப்பூம் பட்டினத்திற் பிறந் திருத்தலானும், இந்திரவிழாக் காண்டற்கு வந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் தான் பூக் கொய்யும்பொழுது தன்னை எடுத்தேகினனென்று மேல் (3:28-39) சுதமதி கூறுதலானும் புகார் நகருக்கு அணித்தாகிய சீகாழியென்று கொள்வதே பொருத்தமாம். கௌசிகன் - சுதமதியின் தந்தை. 106-110. இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்து - இற்றைக்கு ஏழாவது நாளில் இருளையுடைய இடையாமத்தில்தன் பிறப்பதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு இலக்குமி யாகிய நினக்கு இளையாள் வரும் - தனது முற்பிறப்புடன் நினது முற்பிப்பினையும் அறிந்துகொண்டு நினக்கு இளை யாளும் இலக்குமியும் ஆகிய மணிமேகலை ஈண்டு வருவாள், அஞ்சல் என்று உரைத்தது - நீ அஞ்சாதே என்று கூறியது, அவ்வுரை கேட்டு - அம்மொழி கேட்டு, நெஞ்சம் நடுக்குறூஉம் நேரிழை நல்லாள் - உள்ளம் நடுங்கிய நேரிழையாகிய சுதமதி; பாவை தெய்வக் கிளவியின் உரைத்தது என்க. 111-126. காவலாளர் கண் துயில்கொள்ள - ஊர்காவலருடைய கண்கள் உறக்கத்தைப் பொருந்த, தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப - தூய மெல்லிய படுக்கையில் துயில்கின்ற ஆடவர் மகளிருடைய கண்கள் விழிப்படைய, வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப-வலம்புரியாகிய சங்குகள் பொருளின்றி, முழங்க, புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்க-அறிவின்மிக்க புலவர் கூட்டம் பொருளொடும் முழங்க, புகர்முக வாரணம் நெடுங்கூவிளிப்ப - புள்ளி பொருந்திய முகத்தையுடைய யானைகள் நீண்ட கூப்பீட் டினைச் செய்ய, பொறி மயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப-பொறிப் பொறியாகிய மயிர்களையுடைய கோழிகள் குறிய கூவுதலைச்செய்ய, பணைநிலைப் புரவி பல எழுந்து ஆல - பந்தியில் நிற்றலையுடைய குதிரைகள் பல எழுந்து ஆட, பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆல-கிளைகளிலுள்ள பல புட்களும் எழுந்து ஒலிக்க, பூம்பொழில் ஆர்கைப் புள்ஒலி சிறப்ப-பூஞ்சோலையில் மதுவுண்ணுதலையுடைய வண்டு களின் ஒலிமிக, பூங்கொடியார் கைப்புள் ஒலிசிறப்ப - பூங்கொடி போன்ற மகளிருடைய கையிலணிந்த வளைகளின் ஒலி மிக, கடவுட் பீடிகை பூப்பலி கடைகொள - கடவுளர்க்குரிய பீடங்களிற் கொடுக்கப்படும் பொலிவுபெற்ற பலிகள் முற்றுப் பெற, கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொள-அணிகலங்கள் விற்கப் படுகின்ற ஆவண வீதியில் மலரால் செய்யப்படும் பூசனையைக் கடையிடங்கள் கொள்ள, குயிலுவர் கடை தொறும் பண்இயம் பரந்து எழ-தோற் கருவிகளைப் பயில் வோர் வாயில்தோறும் இசையுடன் கூடிய இயங்களின் ஒலி பரவி மேம்பட, கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ - கொடையாளர்களுடைய வாயில்தோறும் கொடுத்தற்குரிய பல பண்டங்களும் பரந்து நிறைய, ஊர் துயில் எடுப்ப-ஊரினைத் துயில் எழுப்புமாறு, உரவு நீர் அழுவத்துக் கார்இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்-கடற் பரப்பிலே கரிய இருளைக் கெடுத்து ஞாயிறு தோன்றுதலும்; காவலாளர் இரவிடை விழித்தோராகலின் விடியலில் துயில்வா ராவர். புலம்புரியாகிய சங்கமென்க. புகர்முக வாரணம் கவளம் வேண்டிக் கூப்பிடாநிற்கும். புள்-பறவை. வண்டு, வளையல், தெய்வங்கட்கு இரவிற் பலி கொடுப்பாராகலின் அது முடிவுற்ற தென்றார், பூ - பொலிவு. இல்லுறை தெய்வத்தின் பொருட்டுக் காலையில் பூவிடுதல் மரபாகலின் 'கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொள' என்றார் ; கடை வாயிலுமாம்; 1"பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி" என்பது காண்க. பண்இயம்-பண்ணப்பட்ட வாத்தியம் என்றுமாம். 127-134. ஏவுறு மஞ்ஞையின் இனைந்து - அம்பு பட்டுருவிய மயிலைப்போல உள்ளம் நைந்து, அடி வருந்த மாநகர் வீதி மருங்கில் போகி - அடிகள் வருந்தக் கடந்து பெரிய நகரத்தின் வீதிவழியே சென்று, போய கங்குலில் புகுந்ததை எல்லாம்-சென்ற இரவில் நிகழ்ந்தவற்றை எல்லாம், மாதவி தனக்கு வழுவின்று உரைத்தலும்-மாதவிக்கு வழுவாது கூறுதலும், நன்மணி இழந்த நாகம் போன்று அவள்-மாதவி நல்ல மணியை இழந்த அரவினைப்போல, தன்மகள் வாராத் தனித்துயர் உழப்ப - தன் மகள் வாராததால் ஒப்பற்ற துன்பத்தால் வருந்த, இன்உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள் துன்னியது உரைத்த சுதமதிதான் என் - அவட்கு நேர்ந்ததைக் கூறிய சுதமதிதான் இனிய உயிரையிழந்த உடலைப்போல் அசை வற்றிருந்தனள் என்க. புகுந்ததையெல்லாம்: ஒருமையிற் பன்மை. ‘நன்மணி யிழந்த நாகம் போன்று' (25; 95) என மேல் இந்நூலுள்ளும், 2"இரு நிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும், அருமணி யிழந்த நாகம் போன்றதும்" எனச் சிலப்பதிகாரத்திலும் மணியிழந்த நாகமும், 3"இன்னுயி ரிழந்த யாக்கை யென்னத், துன்னிய சுற்றம் துயர்க் கடல் வீழ்ந்ததும்" எனச் சிலப்பதிகாரத்தில் உயிரிழந்த யாக்கையும் உவமமாக வருதல் காண்க. மணிமேகலா தெய்வம் நீங்கித் தோன்றி அவன்வயி னுரைத்த பின் புகுந்து நீக்கி உரையென்று போயபின், சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் இசைப்பக் கேட்டு உளங்கலங்கி நீங்கிப்போகி ஒரு புடை இருத்தலும், பாவை தெய்வக்கிளவியின் "வரும், அஞ்சல்" என் றுரைத்தது ; அதனைக் கேட்டு நடுக்குறு நல்லாள் கதிரவன் முளைத்தலும் போகி, மாதவிக் குரைத்தலும், அவள் துயருழப்பத் தான் உயிரிழந்த யாக்கைபோல் இருந்தனள் என வினை முடிக்க. துயிலெழுப்பிய காதை முற்றிற்று. 8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை சுதமதி புகாரின்கண் செயலற்றிருக்க, மணிபல்லவத்திற் கடலருகே மணலிற் றுயின்ற மணிமேகலை, துயிலுணர்ந்து தான் முன் பறிந்த பொருள் ஒன்றும் காணப்படாது அறியாத பொருள்களே காணப்படுதலின் வேறிடத்திற் சென்று பிறந்த உயிர் போன்றவளாகித் திகைப்புறும் பொழுது கதிரவன் உதித்தான். உதித்தவுடன் அவள் 'இவ்விடம் உவவனத்தில் முன்னம் கண்டறியாத ஒரு பகுதியோ! இது நனவோ கனவோ என்பதை அறிகின்றிலேன்; மனம் நடுங்கு கின்றது: சுதமதி எங்கொளித்தாய் ? ஓர் மாற்றம் தருகின்றிலை; இருள் கழிந்தது; மாதவி வருந்துவள் ; இது விஞ்சையுடன் தோன்றிய அம் மடந்தை செய்த வஞ்சமோ! ஒன்றும் தெரிய வில்லையே! தனியே இருக்க மிகவும் அஞ்சுகின்றேன்; விரைந்து வருவாயாக,' என்று கூறிக் கொண்டு நீர்த்துறைகளிலும் மணற்குன்று களிலும் எங்கணும் சென்று தேடித் தனக்குப் பாங்காயினார் ஒருவரையும் காணாதவளாகிக் கூவி அழுது வருந்துபவள், தன் தந்தையை நினைந்து 'கோற்றொடி மாத ரொடு வேற்று நாடடைந்து, வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து, ஐயாவோ!' என்று அழுதனள் ; அழுபவள் முன்னர், இந்திரனால் இடப்பட்டதும், தரிசித்தோர்க்குப் பழம் பிறப்பைப் புலப்படுத்துவதுமாகிய புத்த பீடிகை தோன்றியது. ஈங்கிவ ளின்னண மாக இருங்கடல் வாங்குதிரை யுடுத்த மணிபல் லவத்திடைத் தத்துவநீ ரடைகரைச் சங்குழு தொடுப்பின் முத்துவிளை கழனி முரிசெம் பவளமொடு 5 விரைமர முருட்டுந் திரையுலாப் பரப்பின் ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின் ஆம்பலுங் குவளையும் தாம்புணர்ந்து மயங்கி வண்டுண மலர்ந்த குண்டுநீ ரிலஞ்சி முடக்காற் புன்னையும் மடற்பூந் தாழையும் 10 வெயில்வர வொழித்த பயில்பூம் பந்தர் அறல்விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளித் துஞ்சுதுயி லெழூஉம் அஞ்சி லோதி காதற் சுற்றம் மறந்து கடைகொள வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று 15 பண்டறி கிளையொடு பதியுங் காணாள் கண்டறி யாதன கண்ணிற் காணா நீல மாக்கடல் நெட்டிடை யன்றியுங் காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப உவவன மருங்கினில் ஓரிடங் கொல்லிது 20 சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை நனவோ கனவோ என்பதை அறியேன் மனநடுக் குறூஉம் மாற்றந் தாராய் வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும் எல்வளை வாராய் விட்டகன் றனையோ 25 விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் வஞ்சஞ் செய்தனள் கொல்லோ அறியேன் ஒருதனி யஞ்சுவென் திருவே வாவெனத் திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும் எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும் 30 அன்னச் சேவல் அரச னாகப் பன்னிறப் புள்ளினம் பரந்தொருங் கீண்டிப் பாசறை மன்னர் பாடி போல வீசுநீர்ப் பரப்பின் எதிரெதி ரிருக்கும் துறையுந் துறைசூழ் நெடுமணற் குன்றமும் 35 யாங்கணுந் திரிவோள் பாங்கினங் காணாள் குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழ அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி வீழ்துய ரெய்திய விழுமக் கிளவியில் தாழ்துய ருறுவோள் தந்தையை உள்ளி 40 எம்மிதிற் படுத்தும் வெவ்வினை யுருப்பக் கோற்றொடி மாதரொடு வேற்றுநா டடைந்து வைவா ளுழந்த மணிப்பூண் அகலத்து ஐயா வோவென் றழுவோள் முன்னர் விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி 45 உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித் திசைதொறும் ஒன்பான் முழநில மகன்று விதிமா ணாடியின் வட்டங் குயின்று பதும சதுர மீமிசை விளங்கி அறவோற் கமைந்த ஆசன மென்றே 50 நறுமல ரல்லது பிறமரஞ் சொரியாது பறவையும் முதிர்சிறை பாங்குசென் றதிராது தேவர்கோ னிட்ட மாமணிப் பீடிகை பிறப்புவிளங் கவிரொளி அறத்தகை யாசனம் கீழ்நில மருங்கின் நாகநா டாளும் 55 இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி எமதீ தென்றே எடுக்க லாற்றார் தம்பெரும் பற்று நீங்கலும் நீங்கார் செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்துத் தம்பெருஞ் சேனையொடு வெஞ்சமம் புரிநாள் 60 இருஞ்செரு ஒழிமின் எமதீதென்றே பெருந்தவ முனிவன் இருந்தற முரைக்கும் பொருவறு சிறப்பிற் புரையோ ரேத்தும் தரும பீடிகை தோன்றிய தாங்கென் உரை 1-12. ஈங்கு இவள் இன்னணமாக - புகார் நகரிலே சுதமதி இவ்வாறு வருந்த, இருங்கடல் வாங்கு திரை உடுத்த மணி பல்லவத் திடை-பெரிய கடலினது வளைந்த அலைகளாற் சூழப்பட்ட மணிபல்லவத்தின்கண், தத்துநீர் அடைகரைச் சங்கு உழுதொடுப்பின் முத்து விளை கழனி-சங்குகளால் உழுது விதைக்கப்பட்ட முத்துக்கள் விளைகின்ற மோதுநீர் சூழ் அடைகரையாகிய கழனியில், முரி செம்பவளமொடு விரைமரம் உருட்டும் திரை உலாப்பரப்பில்-வளைந்த சிவந்த பவளங்களுடன் சந்தனம் அகில் முதலிய மணம்பொருந்திய மரங்களை உருட்டுகின்ற அலைகள் உலாவும் கடற்கரையில், ஞாழல் ஓங்கிய தாழ்கண் அசும்பின்-புலிநகக் கொன்றை உயர்ந்த தாழ்ந்த இடத்தையுடைய சேற்றில், ஆம்பலும் குவளையும் தாம் புணர்ந்து மயங்கி - அல்லியும் குவளையு மாகிய மலர்கள் சேர்ந்து கலந்து, வண்டு உண மலர்ந்த குண்டு நீர் இலஞ்சி-வண்டுகள் உண்ணுமாறு மலரப்பெற்ற ஆழமாகிய நீரினையுடைய பொய்கைக் கரையில், முடக்கால் புன்னையும் மடற்பூந் தாழையும் - வளைந்த அடியை யுடைய புன்னையும் மடல்களாலாகிய பூவினையுடைய தாழையும், வெயில் வரவு ஒழிந்த பயில் பூம்பந்தர்-வெயிலினது வரவை நீக்கிய அழகிய பந்தரின்கண், அறல் விளங்கு நிலாமணல் நறுமலர்ப் பள்ளி - அறல் விளங்குகின்ற நிலாவைப் போன்ற வெள்ளிய மணலில் நறிய மலர்களாலாகிய படுக்கையி லிருந்து, துஞ்சு துயில் எழூஉம் அஞ்சில் ஓதி - மெய்மறந்த உறக்கத்தினின்றும் எழுந்த அழகிய சிலவாகிய கூந்தலை யுடைய மணிமேகலை; அடைகரைக்கண் கழனியில் என்றுமாம். தொடுப்பு - விதைப்பு; 1"தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய" என்பது காண்க; விளாக் கொண்டு உழுதலுமாம். முரி என்பதற்குச் சிதறிய என்றும், ஒளிவிடு மென்றும் உரைத்தலுமாம். அறல் - நீர் அரித்து ஒழுகுவதால் மணல் அற்று அற்று இருப்பது. மணிபல்லவத் திடைப் பரப்பில் இலஞ்சிக் கரையில் மணலிற் பள்ளியில் துயிலெழுந்த மணிமேகலை யென்க. 13-27. காதற் சுற்றம் மறந்து கடைகொள வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று - அன்பின் மிக்க சுற்றங்களை மறந்து முடிவு கொள்ள வேறிடத்தில் தோன்றிய உயிரைப்போல, பண்டு அறி கிளையொடு பதியும் காணாள்-முன்னர்த் தன்னாலறியப் பட்ட சுற்றத்துடன் நகரத்தையும் காணாதவளாகி, கண்டு அறியாதன கண்ணிற் காணா - முன் கண்டறியப் படாதன வற்றைக் கண்களாற் கண்டு, நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும் - நீலநிறமுடைய பெரிய கடலில் அணிமைக்கண், காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப - இளஞாயிறு கதிர்களை விரித்து உதிக்க, உவவன மருங்கில் ஓரிடம் கொல் இது-இஃது உவவனத்தில் ஓரிடமோ, சுதமதி ஒளித்தாய்- சுதமதீ ஒளிந்து கொண்டாயோ, துயரம் செய்தனை - துன்பம் செய்தனை, நனவோ கனவோ என்பதை அறியேன்-இது நனவோ கனவோ என்பதை அறிகின்றிலேன், மனம் நடுக்குறூஉம் மாற்றம் தாராய்-உள்ளம் நடுங்குதலுறுகின்றது மறுமொழி தருவாய், வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்-வலிதாகிய இருள் நீங்கியது மாதவி மயங்குவாள், எல்வளை வாராய்-ஒளி பொருந்திய வளையினை யுடையாய் வருவாயாக, விட்டு அகன்றனையோ - என்னைவிட்டுச் சென்றனையோ, விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் - விளங்குகின்ற அணிகளுடன் வித்தையினாலே தோன்றியமடந்தை, வஞ்சம் செய்தனன் கொல்லோ அறியேன் - வஞ்சனை செய்தனளோ அறியேனே, ஒரு தனி அஞ்சுவேன் திருவே வா என-ஒப்பற்ற தனிமையை அஞ்சுகின்றேன் திருவனையாய் வருக என்று; கடைகொள - முற்ற; வினைமுடி வெய்த என்றுமாம். நெட்டிடை அன்றியும் - நெடுந்தூரம் அன்றாக; அணிமையில்; உம்: அசை. உவவனம் என்பது முதல் மணிமேகலை கூற்று. ஓரிடங்கொல்-முன் கண்டறியாத ஓரிடமோ வென்க. வாராய் - வருகின்றிலை எனவும், வராது எனவும் உரைத்தலுமாம். மெல்வளை யென்றலுமாம். 28-35. திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்-அலையில் தவழ்கின்ற புட்களும் விரிந்த சிறகினையுடைய பறவைகளும், எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும் - எழுந்து வீழ்கின்ற சில்லையும் ஒடுங்கிய சிறகினையுடைய முழுவலும், அன்னச் சேவல் அரசனாகப் பன்னிறப் புள்ளினம் பரந்து ஒருங்கு ஈண்டி - அன்னச்சேவலை அரசனாகக் கொண்டு பல நிறங்களையுடைய பறவை இனங்கள் பரந்து ஒன்றாகக் கூடி, பாசறை மன்னர் பாடி போல - பகையரசர் இருவருடைய படை வீடுகளில் இருவர் படையும் எதிரெதிர் இருத்தல்போல, வீசுநீர்ப் பரப்பின் எதிர் எதிர் இருக்கும் -வீசுகின்ற நீர்ப்பரப்பின் கண்ணே எதிரெதிரே இருக்கின்ற, துறையும் துறைசூழ் நெடுமணற் குன்றமும் - நீர்த் துறைகளும் துறைகளைச் சுற்றிலுமுள்ள பெரிய மணற் குன்றுகளும் ஆகிய,யாங்கணும் திரிவோன்-எவ்விடத்தும் திரிகின்றவள்; திரைதவழ் பறவை - குளுவை முதலியன. விரிசிறைப் பறவை - போதா முதலியன. எழுந்துவீழ் சில்லை - சிரல் முதலியன. திரை தவழ் பறவை முதலிய நான்கும் நீர்வாழ் பறவைகள். பறவையும் பறவையும் சில்லையும் முழுவலுமாகிய பன்னிறப் புள்ளினம் என்க. பாசறை மன்னர் - போர் குறித்துப் பாசறையிற் சென்று தங்கியிருக்கும் மன்னர். பாடிபோல - பாடியிற் படைகள் எதிரெதிர் இருத்தல்போல - 1"கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும், செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும், கானக் கோழியும் நீலநிறக் காக்கையும், உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும், வெல்போர் வேந்தர் முனையிடம் போலப். பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்" என்பது ஈண்டு ஒத்து நோக்கற்பாலது. 35-43. பாங்கினம் காணாள்-பக்கத்திலுள்ள இனங்களைக் காணாதவளாய், குரல்தலை கூந்தல் குலைந்து பின் வீழ - பூங்கொத்தை இடத்தேயுடைய குழல் அவிழ்ந்து பின்னே வீழ, அரற்றினள் கூஉய் - கூவிப் புலம்பி, அழுதனள் ஏங்கி - ஏங்கி அழுது, வீழ்துயர் எய்திய விழுமக் கிளவியின் தாழ்துயர் உறுவோள் - ஆழமாகிய துன்பத்தின்கண்ணே பொருந்தினோள் மிக்க துயரமடைந்த துன்பத்தைப் புலப்படுத்தும் மொழிகளால், தந்தையை உள்ளி - தந்தையாகிய கோவலனை நினைந்து, எம் இதில் படுத்தும் வெவ்வினை உருப்ப-எம்மை இவ்வகைத் துன்பத்தின்கண் அகப்படுத்தும் கொடிய தீவினையானது வந்து உருப்ப, கோற்றொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து-திரட்சியாகிய வளையல்களை யணிந்த என் அன்னை கண்ணகி யோடு வேறு நாட்டை அடைந்து, வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ என்று அழுவோள் முன்னர் - கூரிய வாளினால் வெட்டுண்டு வருந்திய மணிப்பூண் தாங்கிய மார்பினையுடைய ஐயாவோ என்று அழுகின்றவள் முன்னே; குரல் - கூந்தலின் திரட்சியுமாம். அரற்றினள், அழுதனள் என்பன முற்றெச்சம். உறுவோள் விழுமக்கிளவியின் அழுவோள் எனக் கூட்டுக. உருப்ப - முதிர; வெகுள என்றுமாம். ஓகாரம் புலம்பலில் வந்தது. 44-53. விரிந்து இலங்கு அவிர்ஒளி சிறந்து - விரிந்து விளங்கு கின்ற பேரொளி மிக்கு, கதிர்பரப்பி-கிரணங்களை விரித்து, உரை பெறு மும்முழம் நிலமிசை ஓங்கி - புகழமைந்த நிலத்தின் மீது மூன்று முழ அளவினுக்கு உயர்ந்து, திசைதொறும் ஒன்பான் முழநிலம் அகன்று-நாற்றிசையிலும் ஒன்பதுமுழ அளவினையுடைய இடம் அகன்று, விதிமாண் ஆடியின் வட்டம் குயின்று -விதி மாட்சிமைப்பட்ட பளிங்கினால் வட்டஞ் செய்யப்பட்டு, பதும சதுரம் மீமிசை விளங்கி-பதுமத்தையுடைய சதுரம் மேலிடத்தில் விளங்கப்பெற்று, அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே-புத்தனுக்கு அமைந்த ஆகனம் என்று, நறுமலர் அல்லது பிற மரஞ் சொரியாது - மரங்கள் நறுமலர் களை அன்றி வேறொன்றையும் சொரியா, பறவையும் முதிர்சிறை பாங்கு சென்று அதிராது - பறவைகளும் அப்பீடிகையின் பக்கத்திற் சென்று சிறையொலி செய்யா, தேவர்கோன் இட்ட மாமணிப்பீடிகை - இந்திரனாலிடப்பட்ட பெருமை பொருந்திய மணிகளானாய பீடிகை, பிறப்பு விளங்கு அறத்தகை ஆசனம்-காண்போரது பழம் பிறப்பு விளங்குதற்கு ஏதுவாகிய ஒளி பொருந்திய அறத்தினியல்புடைய ஆசனம்; சிறந்து பரப்பி ஓங்கி அகன்று குயின்று விளங்கி அமைந்த ஆசனம் என்க. விதி - செய்கை. பதுமம் - புத்தன் பாதமும் ஆம். மீமிசை, ஒரு பொருட் பன்மொழி. மரம் பிற சொரியாது, பறவை சிறை அதிராது, அவ்வாறாகத் தேவர் கோன் இட்ட பீடிகையென விரிக்க. 54-63. கீழ்நில மருங்கின் நாகநாடு ஆளும் - கீழ்த் திசைக்கண் உள்ள நாக நாட்டினை ஆளும். இருவர் மன்னவர் ஒருவழித் தோன்றி-மன்னவர் இருவர் ஒருங்கு தோன்றி, எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார் தம் பெரும் பற்று நீங்கலு நீங்கார் - இஃது எம் முடையது எம்முடையது என்று கூறி எடுக்கவும் இயலாதவர்களாய்த் தம்முடைய பெரிய விருப்பம் நீங்கு தலையும் செய்யாதவர்களாய், செங்கண் சிவந்து நெஞ்சுபுகை உயிர்த்து-சிவந்த கண்கள் சினத்தாற் சிவந்து மனங்கொதித்து, தம் பெரும் சேனையோடு வெஞ்சமம் புரிநாள்-தம்முடைய பெருஞ் சேனைகளுடம் கொடிய போர் புரியுநாளில், இருஞ்செரு ஒழிமின் எமது ஈது என்றே - நீவீர் நுமது பெரிய போரை நீங்குமின்; இஃது எம்முடையது என்று கூறி, பெருந்தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும் - பெரிய தவமுனி வனாகிய புத்தன் இருந்து அறம் உரைத்த, பொருவறு சிறப்பில் புரையோர் ஏத்தும்-ஒப்பற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோர்கள் துதிக்கின்ற, தரும பீடிகை தோன்றியது ஆங்கெண் - தரும பீடிகை அவ்விடத்தில் தோன்றியது என்க. நாக இலச்சினை யுடைமையால் நாகரெனப் பெயர்பெற்ற ஒருவகை மக்கள் வாழும் நாடு நாகநாடு என்பர். இந்நாட்டின் பெயர் பின்னரும் இந்நூலிற் பலவிடத்து வந்துளது. தம, அ-ஆறனுருபு. நீங்கலும் நீங்கார் என்னும் அடுக்கினுள் பின்னது பொதுவினையாகும் ; முன்பு, "சுழலலுஞ் சுழலும், ஓடலு மோடும் ஒரு சிறை யொதுங்கி, நீடலும் நீடும்," (3 : 111-3) என வந்தமையுங் காண்க. மாமணிப் பீடிகை, அறத்தகையாசனம், தரும பீடிகை என்பன ஒரு பொருள்மேல் வந்தன. அழுவோள் முன்னர் பீடிகை தோன்றிய தென்க. இவள் இன்னணமாக, மணிபல்லவத்திடைத் துயிலெழும் அஞ்சி லோதி, போன்று காணாளாய்க் கண்டு திருவே வாவென்று அழுவோள் முன்னர்த் தரும பீடிகை ஆங்குத் தோன்றியதென்க. மணிபல்லவத்துத் துயருற்ற காதை முற்றிற்று. 9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை பீடிகையைக் கண்ட மணிமேகலை வியப்பினால் தன்னை யறியாளாயினாள்; அவள் கைகள் தலைமேற் குவிந்தன ; அதனை மும்முறை வலம்வந்து பணிந்து எழுபவள் அதன் காட்சியால் தன் பழம்பிறப்பின் நிகழ்ச்சிகளை யுணர்ந்து, "மாதவ! காயங்கரை யென்னும் நதிக்கரையில் நீ கூறியவெல்லாம் உண்மையாதலை அறிந்தேன்; காந்தார நாட்டின் அரசனாகிய அத்திபதி யென்னும் அரசற்கு மைத்துனனாகிய பிரமதருமனே! நீ அவன்பாற் சென்று அறமுரைக்கையில், ‘இந் நாவலந் தீவில் இற்றைக்கு ஏழாம் நாளிற் பூகம்ப முண்டாகும்; அப்பொழுது இந் நகரும் நாகநாட்டில் நானூறு யோசனைப் பரப்பும் பாதலத்தில் வீழ்ந்து கெட்டொழியும்: ஆதலின் இதினின்றும் நீங்குக,' என்ன, அரசனும் நகரிலுள்ள மக்கட்குப் பறைசாற்றி யறிவித்து இடவயமென்னும் அப்பதியை நீங்கி, வடக்கிலுள்ள அவந்தி நகர்க்குச் செல்வோன் இடையே காயங்கரையின் கரையிற் பாடிசெய்திருப்ப, நீ குறித்த நாளில் அந்நகர் அழிந்தது, அதுகண்ட அரசனும் ஏனையரும் நின்னைச் சூழ்ந்து வணங்க, நீ அவர்கட்கு அருளறத்தைப் போதித்துக் கொண்டிருந்தனை; அப்பொழுது அசோதர நகரத்தரசனாகிய இரவிவன்மன்தேவி அமுதபதி வயிற்றிற் பிறந்து இலக்குமி யென்று பெயரெய்தி, அத்திபதி யென்னும் அரசற்கு நீலபதி யென்பவள்பாற் பிறந்த இராகுலனுக்கு மனைவியாகப் புக்க நான் என் கணவனுடன் வந்து அறங் கேட்டற்கு வணங்கியவுடன், நீ என்னை நோக்கி, "இவ்விராகுலன் இற்றைக்குப் பதினாறாம் நாளில் திட்டிவிடமென்னும் பாம்பால் இறப்பான், நீ இவனுடன் தீயிற்புகுவாய்; பின்பு காவிரிப் பூம்பட்டினத்திற் சென்று பிறப்பாய்; அங்கு நினக்கு ஒரு துன்பம் உண்டாகும்; அப்பொழுது மணிமேகலா தெய்வம் வந்து நள்ளிரவில் உன்னை எடுத்துச்சென்று தென்றிசை மருங்கிலுள்ள தீவு ஒன்றில் வைத்துச்செல்லும்; சென்றபின் ஆங்குள்ள புத்த பீடிகையைக் கண்டு தொழுவாய்; அப்பொழுதே உனது முற்பிறப்பில் நிகழ்ந்த செய்திகளை அறிந்து, இன்று யான் கூறிய உரையினைத் தெளிவாய்,' என்று சொல்ல, "என் காதலன் பிறப்பையும் தெரிவிக்கவேண்டும்" என்று கேட்டேன்; ‘உன்னைக்கொண்டு சென்ற தெய்வம் மீண்டுந் தோன்றி, உனக்கு அவனைப் புலப்படுத்தும்,' என்று கூறினாய்; அத் தெய்வம் வராதோ?" என ஏங்கி அழுதுகொண்டிருந்தனள். ஆங்கது கண்ட ஆயிழை அறியாள் காந்தளஞ் செங்கை தலைமேற் குவிந்தன தலைமேற் குவிந்த கையள் செங்கண் முலைமேற் கலுழ்ந்துமுத் தத்திர ளுகுத்ததின் 5 இடமுறை மும்முறை வலமுறை வாராக் கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன இறுநுசுப் பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு எழுவோள் பிறப்பு வழுவின் றுணர்ந்து தொழுதகை மாதவ துணிபொரு ளுணர்ந்தோய் 10 காயங் கரையினீ யுரைத்ததை யெல்லாம் வாயே யாகுதன் மயக்கற உணர்ந்தேன் காந்தார மென்னுங் கழிபெரு நாட்டுப் பூருவ தேயம் பொறைகெட வாழும் அத்தி பதியெனும் அரசாள் வேந்தன் 15 மைத்துன னாகிய பிரம தருமன் ஆங்கவன் றன்பால் அணைந்தற னுரைப்போய் தீங்கனி நாவல் ஓங்குமித் தீவிடை இன்றேழ் நாளில் இருநில மாக்கள் நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே 20 பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர் நாகநன் னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும் இதன்பா லொழிகென இருநில வேந்தனும் மாபெரும் பேரூர் மக்கட் கெல்லாம் 25 ஆவும் மாவுங் கொண்டுகழி கென்றே பறையிற் சாற்றி நிறையருந் தானையோ டிடவய மென்னும் இரும்பதி நீங்கி வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன் காயங் கரையெனும் பேரியாற் றடைகரைச் 30 சேயுயர் பூம்பொழிற் பாடிசெய் திருப்ப எங்கோன் நீயாங் குரைத்தவந் நாளிடைத் தங்கா தந்நகர் வீழ்ந்துகே டெய்தலும் மருளறு புலவநின் மலரடி யதனை அரசொடு மக்க ளெல்லாம் ஈண்டிச் 35 சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய அருளறம் பூண்ட ஒருபே ரின்பத்து உலகுதுயர் கெடுப்ப அருளிய அந்நாள் அரவக் கடலொலி அசோதரம் ஆளும் இரவி வன்மன் ஒருபெருந் தேவி 40 அலத்தகச் சீறடி அமுத பதிவயிற்று இலக்குமி யென்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன் அத்தி பதியெனும் அரசன் பெருந்தேவி சித்திபுரம் ஆளுஞ் சீதரன் திருமகள் நீல பதியெனும் நேரிழை வயிற்றில் 45 காலை ஞாயிற்றுக் கதிர்போற் றோன்றிய இராகுலன் றனக்குப் புக்கேன் அவனொடு பராவரு மரபினின் பாதம் பணிதலும் எட்டிரு நாளிலிவ் விராகுலன் றன்னைத் திட்டி விடமுணுஞ் செல்லுயிர் போனால் 50 தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை ஏது நிகழ்ச்சி ஈங்கின் றாகலின் கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப் பெய்துதி அணியிழை நினக்கோர் அருந்துயர் வருநாள் 55 மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி அன்றப் பதியில் ஆரிருள் எடுத்துத் தென்றிசை மருங்கிலோர் தீவிடை வைத்தலும் வேக வெந்திறல் நாகநாட் டரசர் சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு 60 அறச்செவி திறந்து மறச்செவி யடைத்துப் பிறவிப்பிணி மருத்துவன் இருந்தற முரைக்கும் திருந்தொளி யாசனஞ் சென்றுகை தொழுதி அன்றைப் பகலே உன்பிறப் புணர்ந்தீங்கு இன்றியா னுரைத்த உரைதெளி வாயெனச் 65 சாதுயர் கேட்டுத் தளர்ந்துகு மனத்தேன் காதலன் பிறப்புங் காட்டா யோவென ஆங்குனைக் கொணர்ந்த அரும்பெருந் தெய்வம் பாங்கிற் றோன்றிப் பைந்தொடி கணவனை ஈங்கிவன் என்னும் என்றெடுத் தோதினை 70 ஆங்கத் தெய்வதம் வாரா தோவென ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தானென். உரை 1-8. ஆங்கது கண்ட ஆயிழை அறியாள் - பீடிகையைக் கண்ட மணிமேகலை தன்னை அறியாளாயினாள், காந்தள் அம்செங்கை தலை மேற் குவிந்தன - காந்தள் மலர்போலும் சிவந்த கைகள் தலைமீது குவிந்தன, தலைமேற் குவிந்த கையள் - தலைமீது குவிந்த கையை யுடையவள், செங்கண் முலைமேற் கலுழ்ந்து முத்தத் திரள்உகுத்து-சிவந்த கண்கள் கலக்கிக் கொங்கைகளின் மேலே நீர்த்துளிகளைச் சொரிந்து, அதின் இடமுறை மும்முறை வலமுறை வாரா - அப்பீடிகையின் இடமாக விருந்து மும்முறை வலமாக வந்து, கொடிமின் முகிலொடு நிலம் சேர்ந்தென்ன-மின்னுக்கொடி முகிலுடன் நிலத்தையடைந்தாற்போல, இறு நுசுப்பு அலச வெறுநிலம் சேர்ந்தாங்கு - இறும்படியான நுண்ணிய இடை வருந்துமாறு வெறு நிலத்திற் சேர்ந்து வணங்கி, எழுவோள் - எழுகின்றவள், பிறப்பு வழுவின்று உணர்ந்து-தன் முற்பிறவியைத் தவறின்றி அறிந்து; அறியாள் - தன்னை மறந்தாள்; இது புதுமைபற்றி வந்த மருட்கை யென்னும் மெய்ப்பாடு. முத்தம் என்றது நீர்த்துளியை. செங்கண் கலுழ்ந்து முலைமேல் உகுத்தென மாறுக. கொடிமின்-மின்னுக்கொடி. மின் உருவத்திற்கும், முகில் கூந்தலுக்கும் உவமை. நிலஞ்சேர்ந்து - வணங்கி யென்றபடி. 9-15. தொழுதகை மாதவ - வணங்குவதற்குத் தக்க பெருந்தவ முடையோய், துணிபொருள் உணர்ந்தோய்-மெய்ந்நூல் களால் துணியப்பட்ட மெய்ப்பொருளை உணர்ந்தோய், காயங்கரையில் நீ உரைத்ததை எல்லாம் - காயங்கரை என்னும் யாற்றங்கரையில் நீ மொழிந்தவை அனைத்தும், வாயே ஆகுதல் மயக்கற உணர்ந்தேன்- மெய்ம்மையாகு தலைத் தெளிவுற அறிந்தேன், காந்தாரம் என்னும் கழிபெரு நாட்டுப் பூருவதேயம்-காந்தாரம் என்னும் மிகப் பெரிய நாட்டில் உள்ள பூருவதேயமானது, பொறைகெட வாழும்-பாவங்களினின்றும் நீங்குமாறு வாழ்ந்த, அத்திபதி என்னும் அரசாள் வேந்தன்-அரசு புரிந்த அத்திபதி எனும் மன்னனுக்கு, மைத்துனன் ஆகிய பிரம தருமன் -மைத்துனனாகிய பிரம தருமனே; "தொழுதகை மாதவ" என்பது முதல் "என்றெடுத் தோதினை" என்பது காறும் உள்ளவை பழம் பிறப்பில் பிரமதருமன் என்னும் முனிவன் தனக்குக் கூறிய வற்றைப் புத்த பீடிகைக் காட்சி யாலறிந்து, மணிமேகலை அவனை எதிர்பெய்து கூறியவை. துணிபொருள் - தெளியப்பட்ட பொருள். உரைத்ததை; ஐ: சாரியை, வாய் - உண்மை. பொறை ஈண்டு பாவச்சுமை. வாழும் வேந்தன் என்க; வாழும் பிரமதருமன் எனினுமாம். பிரமதருமன்: விளி. 16-23. ஆங்கவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய் - அம்மன்னவனிடம் வந்து அறங்கூறும் நீ, தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவிடை - இனிய கனிகளையுடைய நாவல் ஓங்கிய இத்தீவின்கண், இன்றேழ் நாளில்-இன்றைக்கு ஏழாவது நாளில், இருநில மாக்கள் நின்று நடுக்கெய்த நீள்நில வேந்தே பூமி நடுங்குறூஉம் போழ் தத்து - பெரிய நிலத்தையாளும் அரசனே பெரிய பூமியிலுள்ள மக்கள் நின்று நடுக்க மெய்து மாறு பூமி நடுக்குதலுறும் பொழுது; இந்நகர் நாக நன்னாட்டு நானூறு யோசனை - இந்த நகரும் நன்றாகிய நாக நாட்டின்கண் நானூறு யோசனைப் பரப்பும், வியன்பாதலத்து வீழ்ந்து கேடெய்தும்-அகன்ற பாதலத்தின்கண் விழுந்து அழிவுறும். ஆகலின், இதன்பால் ஒழிகென - இந்நகரத்தைவிட்டு நீங்குக என்று கூற; நாவலோங்குந் தீவு - நாவலந் தீவு; சம்புத் தீவு. உரைக்கும் நீ ‘வேந்தே! கேடெய்தும் ஆகலால் இதன்பால் ஒழிக'வென என்க. 23-30. இருநில வேந்தனும் - அதனைக் கேட்ட பெரிய பூமியை ஆளும் அரசனும், மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம் - மிகப் பெரிய நகரத்தின்கணுள்ள மக்களுக் கெல்லாம், ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையிற் சாற்றி - பசுக்களையும் ஏனைய விலங்குகளையும் கொண்டு நகரத்தைவிட்டு நீங்குக என்று பறையறைந்து தெரிவித்து, நிறை அரும் தானையொடு இடவயம் என்னும் இரும்பதி நீங்கி-பகைமேற் செல்லும் போது நிறுத்தலரிய சேனைகளுடன் இடவயம் என்னும் பெரிய நகரத்தினின்றும் நீங்கி, வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன் - வடதிசையிலுள்ள அவந்தி என்னும் பெரிய நகரத்திற்குச் செல்லுகின்றவன்; காயங்கரை எனும் பேரியாற்று அடைகரைச் சேய்உயர் பூம்பொழில் பாடி செய்திருப்ப - காயங்கரை என்னும் பெரிய யாற்றினது அடைகரைக்கண் மிக உயர்ந்த பூஞ்சோலையிற் பாடி செய்து அமர்ந்திருக்க; இடவயம் - அத்திபதியின் நகரம். பாடி -படைவீடு. வேந்தனும் சாற்றிச் செல்வோன் இருப்ப வென்க. 31-37. எங்கோன் நீ ஆங்கு உரைத்த அந்நாளிடை - எம்பெரு மானாகிய நீ அப்போது கூறிய அந் நாளிலேயே, தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும்-தாழாமல் அந் நகரம் வீழ்ந்து அழிந்தொழிதலும், மருள் அறு புலவ நின் மலரடி அதனை - மயக்கமற்ற மெய்யறி வினையுடையோய் நின் மலர் போலும் திருவடிகளை, அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி-அரசனுடன் மக்களனைவரும் கூடி, சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய - சுற்றியவர்களாய் வணங்கிப் பணிந்து பலவாறாகத் துதிக்க, அருளறம் பூண்ட ஒரு பேர் இன்பத்து உலகு துயர் கெடுப்ப அருளிய அந்நாள் - அருளாகிய அறத்தினைக்கொண்ட ஒப்பற்ற பேரின்பத்தை உலக மக்களின் துயரத்தை நீக்கும் பொருட்டு அருளிச் செய்த அந் நாளில்; நகர் கேடெய்தினமை கூறவே நாகநாட்டு நானூறு யோசனைப் பரப்புக் கேடெய்திய தென்பதும் பெற்றாம். ஏத்திய - ஏத்த; ஏத்திய அந்நாள் அருளிய அந்நாள் எனத் தனித்தனி முடித்தலுமாம். இன்பத்து இன்பத்தை: சாரியை நிற்க உருபு தொக்கது. 38-47. அரவக்கடல் ஒலி அசோதரம் ஆளும்-கடல் ஒலிபோன்ற முழக்கத்தையுடைய அசோதர நகரத்தையாளும், இரவிவன்மன் ஒரு பெருந்தேவி - இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெருந்தேவி யாகிய, அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று-செம்பஞ்சிக் குழம்பு தோய்ந்த சிறிய அடிகளையுடைய அமுதபதி என்பவள் வயிற்றில், இலக்குமி என்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்-பிறந்து இலக்குமி என்னும் பெயர் பெற்றேன், அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி -அத்திபதி என்னும் அரசனுடைய பெருந்தேவியும், சித்திபுரம் ஆளும் சீதரன் திருமகள்-சித்திபுரத்தை ஆண்ட சீதரன் என்பவனுடைய அழகிய மகளும் ஆகிய, நீலபதி எனும் நேரிழை வயிற்றில் - நீலபதி என்கின்ற மெல்லியலின் வயிற்றில், காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய-கதிர்களுடைய இளம்பரிதியைப்போல் உதித்த, இராகுலன் தனக்குப் புக்கேன் - இராகுலனுக்கு மனைவியாகப் புகுந்தேன், அவனொடு பராவரு மரபின் நின் பாதம் பணிதலும்-அவ்விராகுலனோடு வழுத்துதற்குரிய நின் அடிகளைப் பணிதலும்; கடல் அரவமென மாறுக. அலத்தகன் - செவ்வரக்கு என்பாருமுளர். பிறந்து பெயர் பெற்றேன் என விகுதி பிரித்துக் கூட்டுக. கதிர் ஞாயிறு என்க. 48-50. எட்டிரு நாளில் இவ்விராகுலன் தன்னைத் திட்டிவிடம் உணும்-பதினாறு நாளில் இந்த இராகுலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பு உண்ணும், செல்லுயிர் போனால் தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை - அவனது உயிர் பிரிந்தால் நீயும் அவனொடு தீயிடைக் குளிப்பாய்; திட்டி - திருஷ்டி; திட்டிவிடம்-கண்ணில் நஞ்சுடைய பாம்பு; அது பார்த்தால் உயிர்கள் சாம் என்பர். இந்நூலின்கண் பின்பு (11; 100 ; 21 ; 11; 21: 40 ; 23 : 69 ; 23 : 84.) பலவிடத்து இது கூறப்பட்டுள்ளமை காண்க. 1"திட்டியின் விட மன்ன கற்பின் செல்வியை" என்றார் கம்பரும். சேயிழை:முன்னிலை. 51-53. ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்றாதலின்-உயர்நிலை எய்துதற்குரிய ஏது நிகழ்ச்சி இவ்விடத்தில் இல்லையாகலின், கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய-காவிரியின் பெயரொடு விளங்கிய (காவிரிப் பூம்பட்டினம் என்னும்), தவாக்களிமூதூர் சென்று பிறப்பு எய்துதி- அழியாத மகிழ்ச்சியினையுடைய மூதூரின் கண் சென்றுபிறப்பினை யடைவாய்; கவேரகன்னி - காவேரி; அரச இருடியாகிய கவேர ரென்பவர் வீடு பெறுதலை விரும்பிப் பிரமனைக் குறித்து அருந்தவஞ் செய்து, அவனருளால், விண்டுமாயையைத் தம் புதல்வியாக அடைந்து முத்திபெற்றன ரென்றும், பின்பு அக் கன்னி பிரமன் கட்டளைப்படி நதி வடிவு கொண்டு சென்றமையால் அந்நதி கவேர கன்னியென்றும் காவேரி யென்றும் பெயர் பெற்ற தென்றும் ஆக்கினேய புராணத்தின் காவேரி மான்மியத்தால் வெளியாகின்ற தென்பர். 54-57. அணியிழை நினக்கு ஓர் அருந்துயர்வரு நாள் - அழகிய அணிகலன்களையுடையாய் நினக்கு ஓர் அரிய துன்பம் உண்டாகின்ற நாளில், மணிமேகலா தெய்வம் வந்து தோன்றி அன்றப் பதியில் ஆரிருள் எடுத்து-அப் பதியின்கண் மணிமேகலா தெய்வம் வந்து வெளிப்பட்டு மிகுந்த இருளில் எடுத்துச் சென்று, தென்றிசை மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் - தென்றிசையிலுள்ள ஒரு தீவின்கண் வைத்தலும்; அருந்துயர் உதயகுமரன் அகப்படுத்தக் கருதி வருதல்; அவனால் மணிமேகலைக்குண்டாகிய மனவேறுபாடுமாம். 58-64. வேக வெந்திறல் நாகநாட்டு அரசர்-மிகக் கடிய வலியினை யுடைய நாகநாட்டு மன்னர்களின், சினமாசு ஒழித்து மனமாசு தீர்த்தாங்கு-சினமாகிய குற்றம் நீங்க அவர்கள் உள்ளத்தின் குற்றங்களை ஒழித்து, அறச்செவி திறந்து மறச்செவி அடைத்து-அறத்தைக் கேட்டற்குரிய காதுகளைத் திறந்து பாவத்தைக் கேட்கின்ற காதுகளை அடைத்து, பிறவிப்பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்-பிறவியாகிய நோயினைத் தீர்க் கின்ற மருத்துவனாகிய புத்தன் அமர்ந்து அறங் கூறுகின்ற, திருந்துஒளி ஆசனம் சென்று கைதொழுதி - திருந்திய ஒளி யமைந்த ஆதனத்தைச் சென்று கைதொழுவாய், அன்றைப் பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தெளிவாய் என - அந்நாளிலே நின் முற் பிறவியினையும் அறிந்து ஈண்டு இப்பொழுது யான் உரைத்த; மொழிகளையும் தெளிந்து கொள்வாய் என்று நீ உரைக்க; வேகமும் வெம்மையும் ஒரு பொருளன. மனமாசு - காம மயக்கங்கள். அறச்செவி - அறங்கேட்டற்குரிய செவி. திறந்து என்றார். 1"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற், றோட்கப் படாத செவி" என்பவாகலின். மறச்செவி அடைத்து-செவி மறவுரையைக் கேளாது அடைத்து. 65-71. சாதுயர் கேட்டுத் தளர்ந்து உகு மனத்தேன் - இராகுலன் இறப்பான் என்ற துன்பத்தைக் கேட்டுத் தளர்ந்து சிந்துகின்ற உள்ளமுடையேன், காதலன் பிறப்பும் காட்டாயோ என - என் கணவனது மறு பிறப்பையும் காட்டாயோ என வேண்ட, ஆங்கு உனைக் கொணர்ந்த அரும்பெரும் தெய்வம் பாங்கில் தோன்றிப் பைந்தொடி கணவனை ஈங்கிவன் என்னும்-அவ்விடத்தில் நின்னைக் கொண்டு சென்ற அரிய பெரிய தெய்வம் பக்கத்தில் தோன்றி நின் கணவனை இன்னான் என்று உரைக்கும், என்று எடுத்து ஓதினை-என எடுத்துரைத் தாய், ஆங்கத் தெய்வம் வாராதோ என ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என் - அத்தெய்வம் இப்பொழும் வாராதோ என்று ஏங்கி அழுது கொண்டிருந்தாள் என்க. சா துயர் - சாகுந் துயர். பைந்தொடி: முன்னிலை. பிறப்பும்; உம்மை இறந்தது தழீஇய எச்சப்பொருளது. அதுகண்ட ஆயிழை தன்னை அறியாளாயினாள்; அப்பொழுது அவள் கைகள் தலைமேற் குவிந்தன. அங்ஙனம் குவிந்த கையினளாய் உகுத்து வந்து சேர்ந்து எழுவோள் பிறப்பை யுணர்ந்து, "மாதவ, உணர்ந்தோய், மயக்கமற உணர்ந்தேன், பிரம தருமனே, உரைப்போய், ‘கேடெய்தும்; இதன்பாலொழிக' என்று சொல்ல, வேந்தனும் சாற்றி நீங்கிச் செல்வோன் இருப்ப, எங்கோன், நீ உரைத்த நாளில் நகர் கேடெய்தலும், நின் மலரடியை எல்லாம் ஏத்த அருளிய அந்நாளில், புக்கேன் அவனோடு நின் பாதன் பணிதலும், ‘மூழ்குவை, எய்துதி, வருநாளில் வைத்தலும், கைதொழுதி, தெளிவாய்; என்று நீ சொல்ல, காட்டாயோ வென்று யான் கேட்ப ஓதினை; அத்தெய்வம் வாராதோ'' என்று இளங்கொடி ஏங்கி அழும் என்க. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை முற்றிற்று. 10. மந்திரங் கொடுத்த காதை மணிமேகலை அழுதுகொண்டிருக்கையில், "புத்த பீடிகைக் காட்சியால் இவள் பழம்பிறப்பை யறிந்தாள்; இவள் இயல்பும் அழகியது" என்றெண்ணி, வானினின்றும் இறங்கிய மணிமேகலா தெய்வம், அவள் கேட்கும்படி, புத்த பீடிகையைப் புத்தராகவே மதித்துத் துதித்து வலம் வந்து வணங்கியது. வணங்கிய தெய்வத்தை மணிமேகலை வணங்கி, "உன் திருவருளால் என் பிறப்புணர்ந்தேன் ; என் கணவன் யாங்குளன்" என்று கேட்டனள்; கேட்டலும் அத்தெய்வம் "இலக்குமி! கேட்பாயாக! நீ ஒரு நாள் ஒரு பொழிலின்கண் இராகுலனோடு ஊடியிருந்தாய்; அவன் ஊடல் தீர்த்தற்கு உன் அடியை வணங்கினான்; வணங்குகையில், இரத்தினத் தீவிற் சென்று தருமசக்கரம் உருட்டி வருவோனாகிய சாதுசக்கரன் என்னும் பௌத்த சாரண முனிவன் நண்பகற் பொழுதில் விசும்பினின்றும் இறங்கி வர, நீ அவனைக் கண்டு மெய்ந் நடுங்கி நாணிப் பணிந்தனை; அதுகண்ட இராகுலன் ‘இங்கு வந்தவன் யார்' என்று வெகுண்டுரைக்க, நீ அவன் வாயைப் பொத்தி, ‘இப் பெரியோனுடைய மலரடியை வணங்கித் துதியாது பிழை செய்தனை, என்றுரைத்து, அவனோடும் அம்முனிவன் அடிகளை வணங்கி, "யாங்கள் நின் தமரல்ல மாயினும் அம் தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்; அமுது செய்தருள்க," என்று வேண்டிக் கொணர்ந்து உண்பித்தாய்; அந்நாள் அவன் உண்டருளிய அவ்வறம் நின் பிறப்பை அறுத்திடும்; அவ் விராகுலனே உதயகுமரன்; அதனாலேதான் அவன் மனம் உன்னை விரும்பியதன்றி உன் மனமும் அவனை மிகப் பற்றியது; அப்பற்று மாற்றி உன்னை நல்வழிப்படுத்த நினைந்து நின்னை இத்தீவிற் கொணர்ந்து வைத்து இப் பீடிகையைக் காட்டினேன். இன்னுங்கேள்; முற்பிறப்பில் உன் தவ்வையராயிருந்த தாரையையும் வீரையையும் அங்க நாட்டிலுள்ள கச்சய நகரத்தரசனாகிய துச்சயனென்பவன் மணஞ் செய்துகொண்டு ஒரு நாள் அவர்களுடன் சென்று மலைவளங்கண்டு கங்கைக்கரையை எய்தி யிருந்தபொழுது, அறவணவடிகள் அங்கே வரக்கண்டு உடன் எழுந்து வணங்கிய அவன், 'இங்கெழுந்தருளிய நீர் யாவிர்' என்று கேட்க., அவர், 'பாத பங்கய மலையைத் தொழுது வணங்க வந்தேன்; முற்காலத்தே புத்ததேவர் அம் மலையின் உச்சியில் நின்று அறமுரைத்த பொழுது அவரது அடிச்சுவடு பொருந்தினமையால் அம் மலை அப் பெயரினதாயிற்று; நீவிரும் அதனைக் கண்டு வழிபடுமின்;' என்று கூறினர். அவர் கூறியவாறு சென்று தொழுதமையால் தாரையும் வீரையும் முறையேமாதவியாகியும் சுதமதியாகியும் வந்து நின்னுடன் கூடினர்; நீ பழம்பிறப்பை யறிந்தாய்; அறத்தினியல்பையும் அறிந்து கொண்டாய்; பிற சமயவாதிகளின் கொள்கைகளையும் இனிக் கேட்பாய்; கேட்குங்கால் உன்னை 'இளம் பிராயமுடைய பெண்' என நினைந்து, அன்னோர் தத்தம் சமயவுண்மைகளைக் கூறார், ஆகலின், அப்பொழுது நீ வேற்றுருக் கொள்ளவேண்டும்' என்று கூறி, வேற்றுரு வெய்துவிப்பதும் வானிலே இயங்கச் செய்வதுமாகிய இரண்டு மந்திரங்களை அவளுக்கு அறிவுறுத்தி, நீ புத்தர் அருளிய திருவறம் எய்துதல் உறுதி யென்றுணர்வாயாக; பீடிகையை வணங்கி நின் பதிக்கண் செல்வாயாக, என்று எழுந்தோங்கி, "யான் மறந்ததும் உண்டு," என்று மீட்டும் இறங்கி, "மக்கள் யாக்கை உணவின் பிண்டம்; இப்பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்," என்று அதனை அருளிச் செய்து, வானில் எழுந்து சென்றது. அறவோ னாசனத் தாயிழை யறிந்த பிறவிய ளாயினள் பெற்றியு மைதென விரைமல ரேந்தி விசும்பூ டிழிந்து பொருவறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென 5 வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம் முந்தைப் பிறப்பெய்தி நின்றோள் கேட்ப உயிர்க ளெல்லாம் உணர்வுபா ழாகிப் பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்தறி விழந்த வறந்தலை யுலகத் தறம்பாடு சிறக்கச் 10 சுடர்வழக் கற்றுத் தடுமாறு காலையோர் இளவள ஞாயிறு தோன்றிய தென்ன நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன் நீயே யாகிநிற் கமைந்த இவ் வாசனம் நரமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன் 15 பூமிசை யேற்றினேன் புலம்பறு கென்றே வலங்கொண் டாசனம் வணங்குவோள் முன்னர்ப் பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி உன்றிரு வருளால் என்பிறப் புணர்ந்தேன் என்பெருங் கணவன் யாங்குள னென்றலும் 20 இலக்குமி கேளாய் இராகுலன் றன்னொடு புலத்தகை யெய்தினை பூம்பொழி லகவயின் இடங்கழி கமாமொ டடங்கா னாயவன் மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழிச் சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன் 25 தெருமர லொழித்தாங் கிரத்தின தீவத்துத் தரும சக்கரம் உருட்டினன் வருவோன். வெங்கதி ரமயத்து வியன்பொழி லகவயின் வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி மெல்லியல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை 30 நல்கூர் நுசுப்பினை நாணினை யிறைஞ்ச இராகுலன் வந்தோன் யாரென வெகுளலும் விராமலர்க் கூந்தல் அவன்வாய் புதையா வானூ டிழிந்தோன் மலரடி வணங்காது நாநல் கூர்ந்தனை என்றவன் றன்னொடு 35 பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங் கமர கேள்நின் தமரல மாயினும் அந்தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேம் உண்டி யாமுன் குறிப்பின மென்றலும் எம்மனை யுண்கேன் ஈங்குக் கொணர்கென 40 அந்நா ளவனுண் டருளிய அவ்வறம் நின்னாங் கொழியாது நின்பிறப் பறுத்திடும் உவவன மருங்கில் உன்பாற் றோன்றிய உதய குமரன் அவனுன் னிராகுலன் ஆங்கவ னன்றியும் அவன்பா லுள்ளம் 45 நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின் கந்த சாலியின் கழிபெரு வித்தோர் வெந்துகு வெங்களர் வீழ்வது போன்மென அறத்தின் வித்தாங் காகிய வுன்னையோர் திறப்படற் கேதுவாய்ச் சேயிழை செய்தேன் 50 இன்னுங் கேளாய் இலக்குமி நீநின் தவ்வைய ராவோர் தாரையும் வீரையும் ஆங்கவர் தம்மை யங்கநாட் டகவயின் கச்சய மாளுங் கழற்கால் வேந்தன் துச்சய னென்போன் ஒருவன் கொண்டனன் 55 அவருட னாங்கவன் அகன்மலை யாடிக் கங்கைப் பேரியாற் றடைகரை யிருந்துழி மறவண நீத்த மாசறு கேள்வி அறவண னாங்கவன் பாற்சென் றோனை ஈங்கு வந்தீர் யாரென் றெழுந்தவன் 60 பாங்குளி மாதவன் பாதம் பணிதலும் ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன் மாதுய ரெவ்வ மக்களை நீக்கி விலங்குந் தம்முள் வெரூஉம்பகை நீக்கி உடங்குயிர் வாழ்கவென் றுள்ளங் கசிந்துகத் 65 தொன்றுகா லத்து நின்றற முரைத்த குன்ற மருங்கிற் குற்றங் கெடுக்கும் பாத பங்கயங் கிடத்தலின் ஈங்கிது பாதபங் கயமலை எனும்பெயர்த் தாயது தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கிப் 70 பழுதில் காட்சியீர் நீயிருந் தொழுமென அன்றவ னுரைத்த அவ்வுரை பிழையாது சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின் மாதவி யாகியுஞ் சுதமதி யாகியும் கோதையஞ் சாயல் நின்னொடு கூடினர் 75 அறிபிறப் புற்றனை அறம்பா டறிந்தனை பிறவற முரைப்போர் பெற்றியுங் கேட்குவை பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம் அல்லியங் கோதை கேட்குறு மந்நாள் இளையள் வளையோ யென்றுனக் கியாவரும் 80 விளைபொரு ளுரையார் வேற்றுரு வெய்தவும் அந்தரந் திரியவும் ஆக்குமிவ் வருந்திறன் மந்திரங் கொள்கென வாய்மையி னோதி மதிநாண் முற்றிய மங்களத் திருநாள் பொதுவறி விகழ்ந்து புலமுறு மாதவன் 85 திருவற மெய்துதல் சித்தமென் றுணர்நீ மன்பெரும் பீடிகை வணங்கினை யேத்தி நின்பதிப் புகுவாய் என்றெழுந் தோங்கி மறந்தது முண்டென மறிந்தாங் கிழிந்து சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் 90 மக்கள் யாக்கை உணவின் பிண்டம் இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்குமென் றாங்கது கொடுத்தாங் கந்தர மெழுந்து நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென் உரை 1-5. அறவோன் ஆசனத்து ஆயிழை அறிந்த பிறவியள் ஆயினள் - மணிமேகலை புத்தனது பாத பீடிகையால் அறியப்பட்ட பிறவியை உடையளாயினாள், பெற்றியும் ஐது என - இவள் பெற்ற பேறும் அழகிது என்று, விரைமலர் ஏந்தி விசும்பூடு இழிந்து - மணம் பொருந்திய மலர்களை ஏந்தி விசும்பினின்றும் இறங்கி, பொருவறு பூங்கொடி பூமியில் பொலிந்தென - ஒப்பற்ற பூங்கொடியானது பூமியின்கண் பொலிவு பெற்றாற்போல, வந்து தோன்றிய மணிமேகலா தெய்வம்-; அறிந்த பிறவியள் - முற்பிறப்பை யறிந்தவள் என்க. பெற்றி - பேறு; 1"பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும்" என்பதிற் போல. பூங்கொடி ஏந்தி இழிந்து பொலிந்தெனத் தோன்றிய தெய்வ மென்க. 6-12. முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப - முற்பிறப் பினையறிந்து நின்ற மணிமேகலை கேட்க, உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி-உயிர்கள் யாவும் உணர்வு பாழடைந்து, பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து-அறம் வழங்கு தற்குரிய செவிகளின் துளை அதனைக் கேளாது தூர்ந்து, அறிவு இழந்த வறுந்தலை உலகத்து - அறிவினை யிழந்த வறுமையைத் தன்னிடத்தே உள்ள உலகின்கண் - அறம் பாடு சிறக்க - அறத்தின் கூறுபாடுகள் சிறப்படையுமாறு, சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன - ஒளி வழங்குதலின்றித் தடுமாறுகின்ற பொழுதில் ஓர் அழகிய இளம் பரிதி தோன்றியதுபோல, நீயோ தோன்றினை நின் அடிபணிந்தேன்-நீயோ உதித்தருளினை நின் திருவடி களைப் பணிந்தேன்; பொருள் - உறுதிப்பொருள்; ஈண்டு அறம்; 2"பொருணீங்கிப் பொச்சாந்தார்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க அறிவிழந்த வறுந்தலை யுலகம் - அறிவின்மையாகிய வறுமையை யுடைய உலகம் என்க. அறம்பாடு என்பதற்கு அறத்தின் தோற்றம் என்றும், சுடர் என்பதற்கு ஞாயிறு என்றும் கூறுதலுமாம். 13-16. நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் வாசனம்-நீயே யாகி நினக்கு அமைந்த இப் பீடிகையை, நாமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன் - நாவாற்றுதித்தேன் தலையால் வணங்கினேன், பூமிசை ஏற்றினேன் - உள்ளத் தாமரையின் மீது இருத்தினேன். புலம்பு அறுக என்று - என் வருத்தம் நீங்குக என்று கூறி, வலங் கொண்டு ஆசனம் வணங்குவோள் முன்னர் - பீடிகையை வலங் கொண்டு பணிகின்ற மணிமேகலா தெய்வத்தின் முன்னே; நீயே யாகி நிற்கமைந்த இவ் வாசனம் என்றமையால் பீடிகையின் வழிபாடு புத்த தேவன் வழிபாடே யென்பது போதரும். பூ - நெஞ்சத் தாமரை. 17-19. பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்துஎனப்பொருந்தி-மணிமேகலை பொற்கொடியானது நிலத்தின் மீது சேர்ந்தாற் போல விழுந்து வணங்கி, உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்- நின்னுடைய திருவருளினாலே என்னுடைய முற்பிறவியை அறிந்தேன், என்பெருங் கணவன் யாங்குளன் என்றலும்-என் பெருங் கொழுநன் எவ்விடத்துப் பிறந்துளான் என்று கேட்பவும் ; பொலங்கொடி - பொற்கொடி; காமவல்லி 20-28. இலக்குமி கேளாய்-இலக்குமியே கேட்பாயாக; இராகுலன் தன்னொடு புலத்தகை எய்தினைபூம்பொழில் அகவயின் - நீ நின் கணவனாகிய இராகுலனோடு பூச்சோலையின் உள்ளிடத்தே ஊடலுற்றனை, இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்-அப்பொழுது அவன் வரம்பு கடந்து எழுதற்குக் காரண மாகிய காமத்தொடு அடங்காதவனாய் மடந்தை மெல்லியல் மலரடிவணங்குழி - மெல்லியல் மடந்தையாகிய நின் மலர்போலும் அடிகளை வணங்கும் பொழுது, சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்-உயர்ந்த வானின் கண் திரிவோனாகிய சாதுசக்கரன் என்னும் முனிவன், தெருமரல் ஒழிந்தாங்கு இரத்தின தீவத்து - மனக்கவற்சி நீங்கி இரத்தின தீவத்தின் கணிருந்து, தருமசக்கரம் உருட்டினன் வருவோன்-அறவாழியை உருட்டிக்கொண்டு வருகின்றவன், வெங்கதிர் அமயத்து-நண்பகற் பொழுதிலே, வியன்பொழில் அகவயின் வந்து தோன்றலும்-அப் பரந்த சோலையினுள்ளே வந்து தோன்றுதலும்; பழம்பிறப் பெய்தி நின்றாளாகலின் அத்தெய்வம் மணிமேகலையை இலக்குமியென் றழைத்தது. புலத்தை - ஊடற்றன்மை; ஊடற் கூறுமாம். இடங்கழி காமம் - வரம்பு கடந்த காமமுமாம்; இடங்கழி என்பதே காமத்தை யுணர்த்தலுமுண்டு. மெல்லியல் மலர் எனக் கொண்டு, மென்மைத் தன்மையுடைய மலர்போலும் அடி யென்னலுமாம். சாதுசக்கரன் - சாதுக்களின் மண்டலத்திலுள்ளவன் எனப் பொருள்படும் காரணப்பெயர்; ஓம் மணிபத்மேஹும் என்னும் மந்திரம் சுற்றிலும் எழுதப்பட்ட உலோகத்தாலாகிய சக்கரத்தை வலக்கையில் வைத்துச் சுழற்றிக் கொண்டிருத்தல் பௌத்தர்களிற் சிலருடைய வழக்கமென்றும், இவனும் அங்ஙனம் செய்பவனாதல் வேண்டுமென்றும் கூறுவர். இரத்தின தீவம்-இது மணிபல்லவத்திற்கு அயலிலுள்ளதோர் சிறு தீவு ; இத் தீவும், இதிலுள்ள சமந்தமென்னும் மலை முதலியவும் வரும் காதையானறியப்படும். தருமத்தைத் தடையின்றிச் செலுத்தினானென்பார், அதனைச் சக்கரமாக உருவகப்படுத்தி, உருட்டினான் என்றார். முன்பு "அறக்கதி ராழி திறப்பட வுருட்டி" (5.76) என்றமையுங் காண்க. சாதுசக்கரன் திரிவோன் வருவோன் வந்து தோன்றுதலுமென்க. 28-31. மயங்கினை கலங்கி மெல்லியல் கண்டனை மெய் நடுக் குற்றனை - மெல்லியலே நீ அவனைக் கண்டு மயங்கிக் கலக்க முற்று உடல் நடுக்கமடைந்த, நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச- வறுமை யெய்திய இடையினை யுடையையாய் நாணமுற்று வணங்க, இராகுலன் வந்தோன் யார் என வெகுளலும் - ஈண்டு வந்தவன் யாவன் என இராகுலன் சினங்கொள்ளலும்; மெலிந்து ஒசிவதனை நல்கூர்ந்ததென்று உபசரித்தார். கணவன் தன் அடியில் வணங்குழிவந்தனனாகலின் நாணு தலுற்றாளென்க. மயங்குதல் முதலியன இறைபொருளாகப் பிறந்த அச்சமென்னும் மெய்ப்பாடு. இராகுலன் வெகுண்டமை குடிகோள் பற்றி வந்த வெகுளி யென்னும் மெய்ப்பாடு. 32-38. விரா மலர்க் கூந்தல் அவன் வாய் புதையா - மணம் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய நீ அவன் வாயைப் புதைத்து, வானூடு இழிந்தோன் மலர் அடிவணங்காது நா நல்கூர்ந்தனை என்று - விசும்பினின்றும் இறங்கிய பெரியோனின் திருவடி மலர்களைவணங்காமல் நா வறுமையுற்றனை என்று கூறி, அவனொடும் பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்கு-பகைகளையறுத்த புத்ததேவன் திருவடிக்கு அன்பனாகிய அம்முனிவனுடைய அடிகளை அவனோடும் வணக்கஞ் செய்து, அமர கேள் நின் தமரலம்ஆயினும்-தேவனே கேட் பாயாக யாம் நினக்குச் சிறந்த அன்பரல்லே மாயினும், அம் தீந்தண்ணீர் அமுதொடு கொணர்கேம் - இனிய குளிர்ந்த நீரும் உணவும் கொண்டு வருவேம், உண்டி - அவற்றை உண்பாய், யாம் உன் குறிப்பினம் என்றலும்-அடியேங்கள் நின் குறிப்பின்வழி ஒழுகுவேம் என்று நீ உரைத்தலும். வானூடிழிந்தமையே அவனது பெருமையை விளக்குமென்று குறிப்பித்தவாறாயிற்று. நாவானது சாரணனைத் துதித்தலாகிய பயன் கொள்ளாமையின் நா வறுமையுற்றாய் என்றாள். பகை - காம வெகுளி முதலிய உட்பகை. பாத்தியன் - அடியான் என்னும் பொருட்டு; நம்பியாண்டார் நம்பிகள் மாணிக்கவாசகரைத் 'திருவாத'd2வூர்ச் சிவ பாத்தியன்,' என்று கூறினமையுங் காண்க. உண்டி - உண்ணுதி: வேண்டிக்கோடலில் வந்தது. 39-41. எம்மனை உண்கேன் ஈங்கு கொணர்கென - தாயே உண்பேன் இங்கே கொண்டு வருக என்று சொல்லி, அந்நாள் அவன் உண்டருளிய அவ்வறம் - அந்நாளில் அம் முனிவன் உண்டமையாலாகிய அந்த அறமானது, நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்-நின்னைவிட்டு நீங்காது நினது பிறப்பை அறுத்தவிடும். 42-49. உவவன மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன் - உவவனத்தில் நின்னிடம் வந்த உதயகுமரனாகிய அவனே நின் கணவன் இராகுலன், ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டாகலின் - அவ் வுதயகுமரன் நின்பால் நீங்காத விருப்பதைச் செலுத்துவதன்றியும் அவனிடஞ் சென்ற உள்ளம் நீங்காத தன்மை நினக்கும் உள்ளமையால், கந்தசாலியின் கழி பெருவித்து-கந்தசாலி என்னும் நெல்லின் மிகச் சிறந்த விதை, வெந்து உகு வெண்களர் வீழ்வது போன்ம் என - வெந்து உருகுகின்ற வெள்ளிய உப்பு நிலத்தில் வீழ்கின்றதுபோலும் என்று, அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு ஏதுவாச் சேயிழை செய்தேன் - சேயிழாய் அறத்தின் விதை யாகிய நின்னை மனம் ஒரு வழிப்படுதற்குக் காரணமாகச் செய்தேன்; குமரனாகிய அவனென்க. அவன் அன்றியும் - அவன் உன்பால் உள்ளம் நீங்காதிருப்பதன்றியும் என விரித்துரைக்க. மணிமேகலை உதயகுமரனை இடைவிடாது நினைத்திருந்தாள் என்பது, அவன் வெட்டுண்டிறந்தபொழுது, 1"உவவன மருங்கி னின்பா லுள்ளம் தவிர்விலேனாதலின்" என்று அவள் அவனைக் குறித்துக் கூறு வதனால் அறியப்படும். சாலி - சிறந்த நெல், கந்தசாலி - மணமுள்ள ஒருவகைச் சிறந்த நெல், அறத்திற்கு மூலமாகிய நீ உதயகுமரனை விரும்பின் நின்னியல்பு கந்தசாலியின் வித்துக் களர் நிலத்து வீழ்ந்ததுபோன்று பயனற்றுப்போம் என்றபடி. மணிமேகலையின் உயர்வுபற்றிக் கந்தசாலியை உவமை கூறினார். போன்ம்: ஈற்று மிசை யுகரங்கெட்டு மயக்க விதியின்மையின் லகரம் திரிந்து வந்தது. 50-56. இன்னும் கேளாய் இலக்குமி நீ-இலக்குமி நீ இன்னும் கேட்பாயாக, நின் தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும்- நின் முற் பிறந்தோர் தாரையும் வீரையும் ஆவர், ஆங்கவர் தம்மை - அவர்களை, அங்கநாட்டு அகவயின் - அங்க நாட்டினுள்ளதாகிய, கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் - கச்சய நகரத்தை ஆண்ட வீரக் கழலணிந்த காலையுடைய வேந்தனாகிய, துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்-துச்சயன் என்னும் பெயருடைய ஒருவன் மணந்தனன், அவருடன் ஆங்கவன் அகன்மலை ஆடி - அம் மன்னவன் அம் மகளிருடன் அகன்ற மலைப்பக்கங்களில் விளையாடி, கங்கைப் பேரியாற்று அடைகரை இருந்துழி - கங்கையாற்றின் அடை கரையில் இருந்தபொழுது; தவ்வை - தமக்கை; 1"செய்யவள், தவ்வையைக் காட்டிவிடும்" என்பது காண்க. 57-60. மறவணம் நீத்த மாசறு கேள்வி அறவணன் ஆங்கவன் பால் சென்றோனை - பாவத்தன்மைகளைத் துறந்த குற்றமற்ற கேள்வியினையுடைய அறவணன் என்னும் மாதவன் துச்சயனிடம் வந்தோனை, ஈங்கு வந்தீர் யார் என்று எழுந்து அவன்பாங்கு உளி மாதவன் பாதம் பணிதலும்-துச்சயன் ஈண்டு வந்தீராகிய நீவிர் யார் என எழுந்து அம்முனிவனுடைய இயல்பினை நினைந்து அவன் திருவடிகளை வணங்குதலும். சென்ற அறவணனையென மாறுதலுமாம். "மறவண நீத்த மாசறு கேள்வி, அறவண வடிகள்" (2:60-1.) என முன்பு வந்தமையுங் காண்க. எழுந்தவன்-எழுந்தோன் என்றுமாம், பாங்கு-இயல்பு, சிறப்பு, உளி-உள்ளி. 61-70. ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன்-ஆதிமுதல்வனும் அறமாகிய திகிரியை உருட்டுவோனுமாகிய புத்தன், மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி-மக்கள் பிறப்பு இறப்புகளாகிய மிக்க துன்பத்தினின்றும் நீக்கி, விலங்கும் தம்முள் வெரூஉம் பகை நீக்கி- விலங்குகளையும் தம்முள்ளே அஞ்சுதற்குக் காரண மாகிய பகைமையை நீங்கச் செய்து, உடங்கு உயிர்வாழ்க என்று உள்ளம் கசிந்து உக - எவ்வுயிரும் தம்முள் ஒற்றுமை யுடையனவாக வாழ்க என்று அருளினாலே உள்ளம் இரங்கி உருக, தொன்று காலத்து நின்று அறம் உரைத்த-முற்காலத்தில் எல்லா உயிர்களும் காணுமாறு நின்று அறங்கூறிய, குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும்பாத பங்கயம் கிடத்தலின் - குன்றத்தின்கண் காமமாதி குற்றங்களை அழிக்கும் திருவடித் தாமரைகள் விளங்கிக் கிடத்தலினால், ஈங்கிது பாதபங்கயமலை எனும் பெயர்த்தாயது - இது பாதபங்கயமலை எனும் பெயரினையுடைத்தாயிற்று, தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கு - யான் இம்மலையை வலங்கொண்டு வணங்குமாறு ஈண்டு வந்தேன், பழுதில் காட்சியீர் நீயிரும் தொழுமென - குற்றமற்ற அறிவினை யுடைய நீவிரும் வணங்குவீராக என்று கூற; துயர் எவ்வம்: ஒரு பொருட் பன்மொழி. கேட்டோர் உள்ளம் கசிந்து உக என்றுமாம். உரைத்த குன்றமாவது மகததேயத்தின் இராசதானியாகிய இராசக்கிருக நகரின் அருகிலுள்ள கிருத்திர கூடம் என்னும் மலையென்பர். பாதபங்கயம் - புத்தனுடைய பாததாமரை. 71-74. அன்று அவன் உரைத்த அவ்வுரை பிழையாது - அந்நாளில் அறவணவடிகள் கூறிய அம்மொழி தவறாமல், சென்று கை தொழுது சிறப்புச் செய்தலின் - சென்று கைகூப்பித் தொழுது விழாச் செய்தமையால், மாதவியாகியும் சுதமதியாகியும் கோதையஞ் சாயல் நின்னொடு கூடினர் - மலர் மாலையை யுடைய மெல்லியலே அவ்விருவரும் மாதவியும் சுதமதியும் ஆகி நின்னொடுகூடினர்; சிறப்புச் செய்தல் - பூசித்தலுமாம். 75-82. அறிபிறப்புற்றனை அறம்பாடு அறிந்தனை - முற்பிறவியை அறிந்தாய் அறத்தின் தோற்றத்தை உணர்ந்தாய், பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை - பிறசமய உண்மை களைக் கூறுவோர் பேற்றையும் கேட்பாய், பல்வேறு சமயப் படிற்றுரை எல்லாம் அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள்-பலவேறு சமயங்களின் பொய்யுரைகளை யெல்லாம் நீ கேட்கப் புகும் அந்நாளில், இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளைபொருள் உரையார் - இளமைத் தன்மையையுடையாள் வளையணிந்த நங்கை என்று நினக்கு எவரும் தம் சமயங்களின் விளைபொருளைக் கூறார் ஆகலின், வேற்றுரு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும் இவ் வருந்திறல் மந்திரம் கொள்க என - வேற்று வடிவங்கொள்ளவும் விசும்பின் வழியாகச் செல்லவும் செய்யும் அரிய ஆற்றலையுடைய இம் மந்திரத்தைக் கொள்வாயாக என்று, வாய்மையின் ஓதி-நால் வகை வாய்மையுடன் கூறியருளி. அறம்பாடு - அறத்தின் கூறென்றும், அறத்தின் இயல்பென்றும் உரைத்தலுமாம். பிற அறம் என்றது பிற சமயக் கொள்கைகளை. பெற்றி - பேறு; இயல்பென்றுமாம். அல்லியங்கோதை - அகவிதழ்களாலாகிய மாலையை யுடையாள்; ஈண்டு முன்னிலை. வாய்மையின் - உண்மையுடன் என்றுமாம். 83-93. மதிநாள் முற்றிய மங்கலத் திருநாள் - நாள்தோறும் ஒவ்வொரு கலையாக வளர்ந்து முற்றுப்பெற்ற அழகிய நிறையுவா நாளில், பொது அறிவு இகழ்ந்து புலம் உறு மாதவன் - பொதுவாகிய அறிவினை வெறுத்துச் சிறப்பாகிய மெய்யுணர்வினைப் பெற்ற புத்தனுடைய, திருஅறம் எய்துதல் சித்தம் என்று உணர் நீ - உயர்வாகிய அறத்தை யடைதல் உண்மை என்பதை நீ அறிவாயாக, மன்பெரும் பீடிகை வணங்கினை ஏத்தி - மிக்க பெருமையுடைய பீடிகையை வணங்கித் துதித்து, நின்பதிப் புகுவாய் என்று எழுந்து, ஓங்கி-நினது பதியின்கட் செல்வாய் என்று கூறி உயர எழுந்து, மறந்ததும் உண்டென மறித்து ஆங்கு இழிந்து - மீட்டும் அவ்விடத்தே இறங்கி யான் மறந்தது ஒன்று உண்டென்று கூறி, சிறந்த கொள்கைச் சேயிழை கேளாய் - சிறந்த விரதத்தையுடைய சேயிழையே அதனைக் கேட்பாயாக, மக்கள் யாக்கை உணவின் பிண்டம்-மக்களின் உடல் உணவாலாகிய தொகுதி, இப்பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும் என்று - இப் பெரிய மந்திரமானது பெரும் பசியை நீக்கவல்லது என்று கூறி, ஆங்கது கொடுத் தாங்கு அந்தரம் எழுந்து நீங்கியது ஆங்கு நெடுந் தெய்வம் தான் என் - அம் மந்திரத்தை அளித்துப் பெருமையுடைய மணி மேகலா தெய்வம் வானிலே எழுந்து நீங்கியது என்க. மங்கலம் - நன்மை. புத்தன் ஞானம்பெற்ற நாள் வைகாசித் தூய நிறைமதி நாள் ஆகலின் அதனை ‘மங்கலத் திருநாள்' என்றார். புத்தன் பிறந்த நாளும் அதுவேயாகும். பொது வறிவு - சிறப்பில்லா அறிவு ; சாமானிய ஞானம் என்பர் வடநூலார். புலம் - மெய்யுணர்வு. நால்வகை வாய்மையும் அறிதற்குரிய சிறப்பறிவு. சித்தம் - உறுதி. கொள்கை- கோட்பாடுமாம். உணவின் பிண்டம்- உணவாலாகிய தொகுதி; 1"உண்டி முதற்றே யுணவின் பிண்டம்" என்றார் பிறரும். ஆயிழை ஆசனத்தால் அறிந்த பிறவியளாயினள்; இவள் பெற்றியும் ஐதென வந்து தோன்றிய தெய்வம், நின்றோள் கேட்ப, ‘நீயோ தோன்றினை; பணிந்தேன்; வைத்தேன்; கொண்டேன்; ஏற்றினேன்; புலம்பு அறுக' என்று வலங்கொண்டு வணங்குவோள் முன்னர்ப் பொருந்தி, என் பிறப்புணர்ந்தேன்; என் கணவன் யாங்குளன் ?' என்று மணிமேகலை கேட்டலும், அத்தெய்வம், "இலக்குமி! கேள். பொழிலில் இராகுலனோடு நீ புலந்தாய்; அப் புலவியை மாற்றவேண்டி அவன் உன்னடியை வணங்கும் பொழுது, சாதுசக்கரன் வந்து தோன்றலும், நீ கண்டு நடுக்குற்று நாணி இறைஞ்ச, இராகுலன் வெகுளலும்; நீ அவன் வாயைப் புதைத்து, ‘நீ வானூடிழிந்தோன் அடியை வணங்காது நாநல் கூந்தனை' என்று சொல்லி, அவனோடு பணிந்து, ‘அமர; கொணர்கேம் ‘உண்டி' என்றலும், அவன் ‘கொணர்க' என்று உண்டருளிய அவ்வறம் பிறப்பை யறுத்திடும்; உதயகுமரன்றான் இராகுலன்; அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கு முண்டாதலின், எண்ணி ஏதுவாச் செய்தேன்; இன்னுங் கேள்; தாரையும் வீரையும் நின் தவ்வையராவோர்; அவர் தம்மைத் துச்சயன் கொண்டனன். அவன் அவருடன் இருந்துழிச் சென்ற அறவணனை அவன், ‘வந்தீர் யார்?' என்று எழுந்து பாதத்தைப் பணிதலும், அவன், ‘பாத பங்கயத்தைத் தொழுது வலங்கொள்ள வந்தேன்; நீரும் தொழும்' என்ற உரை பிழையாது சென்று தொழுது சிறப்புச் செய்தலின், நின்னொடு கூடினர்: உற்றனை; அறிந்தனை; கேட்குவை; உரையார்; ஆதலால் இம் மந்திரங் கொள்க" என ஓதி, உணர்நீ; புகுவாய்," என்று எழுந்தோங்கி, மறந்ததும் உண்டென இழிந்து, "யாக்கை உணவின் பிண்டம் ; இப்பெரு மந்திரம் இரும் பசி யறுக்கும்" என்று அதனைக் கொடுத்து எழுந்து நீங்கியது என வினைமுடிவு செய்க. மந்திரங் கொடுத்த காதை முற்றிற்று. 11. பாத்திரம் பெற்ற காதை (மணிமேகலா தெய்வம் சென்றபின் மணிமேகலை ஆண்டுள்ள மணற்குன்று முதலியவற்றைப் பார்த்துக்கொண்டு மெல்ல உலாவி வருங்கால் தீவதிலகை யென்பாள் தோன்றி, "கப்பல் கவிழப்பெற்ற மகளிர்போல் இத்தீவிலே தனியே வந்த நீ யார்?" எனக் கேட்டனள். கேட்டலும், மணிமேகலை அவளை நோக்கி, "பூங்கொடி போல் வாய்! ‘யார் நீ?' என்றது எனது எப்பிறப்பினைக் கருதி? யான் சென்ற பிறப்பில் இலக்குமி யென்னும் பெயருடையேன்; இராகுலன் என்னுங் கோமனுக்கு மனைவியாயிருந்தேன்; இப் பிறப்பில் நாடகக் கணிகையாகிய மாதவியின் மகளாவேன்; மணிமேகலை யென்னும் பெயருடையேன்; என் பெயர்த் தெய்வம் ஈங்கென்னைக் கொணர, இப்பீடிகையால் என் பழம் பிறப்பை யுணர்ந்தேன்; இங்கு வந்தமையால் யான் அடைந்த பயன் இது; என் வரலாறும் இதுவே" என்றுரைத்து, 'நீ யார்?' என வினாவலும், அவள், "இத்தீவிற்கு அயலதான இரத்தினத் தீவத்தில் உயர்ந்து விளங்கும் சமந்த மலையின் உச்சியிலுள்ள புத்ததேவர் அடியிணைப் படிமைகளைத் தொழுதுகொண்டு முன்னொரு காலத்தில் இங்குவந்தேன்; வந்தது முதல் இந்திரன் ஏவலால் இப் பீடிகையைக் காத்துக் கொண்டிருக்கின்றேன்; என் பெயர் தீவதிலகை யென்பது; இதனைக் கேட்பாயாக: புத்ததேவர் அருளிய அறநெறியில் ஒழுகுவோரே இதனைக் காண்டற் குரியர்; கண்டவர் பழம் பிறப்புணர்ச்சி கைவரப் பெறுவர்; நீ அங்ஙன மாயினமையின் மிகவும் பெரியை; இப் பீடிகைக்கு முன் கோமுகி யென்னும் பொய்கை யொன்றுளது; அதனுள்ளிருந்து அமுதசுரபி யென்னும் அட்சய பாத்திரம் ஆண்டுதொறும் வைகாசித் தூய நிறைமதி நாளிலே தோன்றும் ; இன்று அந்நாளே; தோன்றும் பொழுதும் இதுவே; இப்பொழுது அது நின் கையில் வரும் போலும்; அதில் இடப்பட்ட அடிசில் கொள்ளக் குறையாது வளர்ந்து கொண்டிருக்கும்; அதன் வரலாற்றை நின்னூரில் அறவணவடிகள்பால் இனிக் கேட்பாய்," என்று கூறினள். கூற, மணிமேகலை அதனை விரும்பி, பீடிகையைத் தொழுது, அவளுடன் சென்று கோமுகியை வலஞ் செய்து வந்து நின்றவுடன், அப்பாத்திரம் பொய்கையினுள்ளிருந்து மணிமேகலையின் கையை அடைந்தது. உடனே அவள் அளவற்ற மகிழ்ச்சியடைந்து நின்று, புத்ததேவரைப் பலவாறு துதித்தாள். அப்பொழுது மணிமேகலைக்குத் தீவதிலகை உயிர்களுக் குண்டாம் பசிப் பிணியின் கொடுமையையும், அதனைத் தீர்ப்போரது பெருமையையும், உரைத்து, ‘இனி நீ உணவளித்து உயிர் கொடுத்தலாகிய அறத்தைச் செய்வாய்,' என்றனள். இது கேட்ட மணிமேகலை, "முற்பிறப்பில் என் கணவன் அரவால் இறந்தது பொறாது யான் தீப் பாய்ந்து உயிர் விடுகையில் முன்பு சாது சக்கர முனிவனை உண்பித்த நினைவுடையே னாயினேன்; அதனாலேயே இப்பாத்திரம் என் கையிற் புகுந்ததுபோலும்; இது நிற்க, ஈன்ற குழவியின் முகங்கண்டிரங்கிப் பால் சுரக்கும் தாய் போலவே, பசியால் வருந்தி, வெயிலென்றும் மழையென்றும் பாராமல் எங்கணும் அலைந்துதிரியும் ஏழைகளின் முகத்தைக் கண்டு இரங்கி, இப் பாத்திரம் அவர்கட்கு மேன்மேலும் அமுது சுரந்தளித்தலைக் காணும் வேட்கை யுடையேன்," என்று கூறித் தீவதிலகையை வணங்கி, புத்த பீடிகையைத் தொழுது வலங் கொண்டு, பாத்திரத்தைக் கையின் ஏந்தி வானிலே யெழுந்து சென்று, புகார்நகரிலே தன்னைக் காணாது வருந்தி வழியை நோக்கின வண்ணம் நிற்கும் சுதமதியையும் மாதவியையும் கண்டு, அவர்கள் வியப்படையும் வண்ணம் அவர்களுடைய முற்பிறப்பை அறிவித்தது, "மக்கள் யாக்கையாற் பெறுதற்குரிய தவ வழியை இனி அறவணவடிகள்பாற் பெறக் கடவீர் ; இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யென்னும் பாத்திரமாகும் ; இதனைத் தொழுமின்," என்று சொல்லி, அதனை அன்புடன் தொழுத அவர்களோடும் அறவணவடிகளைத் தரிசித்தற்குச் சென்றனள். (இதன்கண் மணிமேகலை புத்ததேவரை வாழ்த்தும் பகுதியும், பசியின் கொடுமையையும், அதனைப் போக்குதலாகிய அறத்தின் மேன்மையையும் உணர்த்தும் பகுதிகளும் நினைவில் இருத்தத்தக்க சிறப்புடையன.) மணிமே கலாதெய்வம் நீங்கிய பின்னர் மணிபல் லவத்திடை மணிமே கலைதான் வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும் தண்மலர்ப் பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக் 5 காவதந் திரியக் கடவுட் கோலத்துத் தீவ திலகை செவ்வனந் தோன்றிக், கலங்கவிழ் மகளிரின் வந்தீங் கெய்திய இலங்குதொடி நல்லாய் யார்நீ என்றலும் எப்பிறப் பகத்துள் யார்நீ யென்றது 10 பொற்கொடி யன்னாய் பொருந்திக் கேளாய் போய பிறவியில் பூமியங் கிழவன் இராகுலன் மனையான் இலக்குமி யென்பேர் ஆய பிறவியில் ஆடலங் கணிகை மாதவி யீன்ற மணிமே கலையான் 15 என்பெயர்த் தெய்வம் ஈங்கெனைக் கொணரவிம் மன்பெரும் பீடிகை என்பிறப் புணர்ந்தேன் ஈங்கென் வரவிதீங் கெய்திய பயனிது பூங்கொடி யன்னாய் யார்நீ யென்றலும் ஆயிழை தன்பிறப் பறிந்தமை யறிந்த 20 தீவ திலகை செவ்வனம் உரைக்கும் ஈங்கிதன் அயலகத் திரத்தின தீவத் தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை அறவியங் கிழவோன் அடியிணை யாகிய பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் 25 அறவி நாவாய் ஆங்குள தாதலின் தொழுதுவலங் கொண்டு வந்தேன் ஈங்குப் பழுதில் காட்சியிந் நன்மணிப் பீடிகை தேவர்கோன் ஏவலிற் காவல் பூண்டேன் தீவ திலகை என்பெய ரிதுகேள் 30 தரும தலைவன் தலைமையின் உரைத்த பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினர் கண்டுகை தொழுவோர் கண்டதற் பின்னர்ப் பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி அரியர் உலகத் தாங்கவர்க் கறமொழி 35 உரிய துலகத் தொருதலை யாக ஆங்ஙன மாகிய அணியிழை இதுகேள் ஈங்கிப் பெரும்பெயர்ப் பீடிகை முன்னது மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய கோமுகி என்னுங் கொழுநீ ரிலஞ்சி 40 இருதிள வேனிலில் எரிகதி ரிடபத் தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின் மீனத் திடைநிலை மீனத் தகவையின் போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் ஆபுத் திரன்கை யமுத சுரபியெனும் 45 மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய் அந்நா ளிந்நாள் அப்பொழு திப்பொழுது நின்னாங்கு வருவது போலும் நேரிழை ஆங்கதிற் பெய்த ஆருயிர் மருந்து வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது 50 தான்தொலை வில்லாத் தகைமைய தாகும் நறுமலர்க் கோதை நின்னூ ராங்கண் அறவணன் தன்பாற் கேட்குவை யிதன்திறம் என்றவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி மன்பெரும் பீடிகை தொழுதனள் வணங்கித் 55 தீவ திலகை தன்னொடுங் கூடிக் கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும் எழுந்துவலம் புரிந்த இளங்கொடி செங்கையில் தொழுதகை மரபிற் பாத்திரம் புகுதலும் பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் 60 மாத்திரை யின்றி மனமகிழ் வெய்தி மாரனை வெல்லும் வீர நின்னடி தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி பிற்ர்க்கறம் முயலும் பெரியோய் நின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின்னடி 65 எண்பிறக் கொழிய இருந்தோய் நின்னடி கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் நின்னடி தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி 70 உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி வணங்குதல் அல்லது வாழ்த்தலென் நாவிற் கடங்கா தென்ற வாயிழை முன்னர்ப் போதி நீழற் பொருந்தித் தோன்றும் நாதன் பாதம் நவைகெட ஏத்தித் 75 தீவ திலகை சேயிழைக் குரைக்கும் குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும் பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம் நாணணி களையும் மாணெழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் 80 பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக் கென்நா நிமிராது புன்மரம் புகையப் புகையழல் பொங்கி மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின் அரசுதலை நீங்கிய வருமறை யந்தணன் 85 இருநில மருங்கின் யாங்கணுந் திரிவோன் அரும்பசி களைய வாற்றுவது காணான் திருந்தா நாயூன் தின்னுத லுறுவோன் இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் வந்து தோன்றிய வானவர் பெருந்தகை 90 மழைவளந் தருதலின் மன்னுயி ரோங்கிப் பிழையா விளையுளும் பெருகிய தன்றோ ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்க ளரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை 95 மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே உயிர்க்கொடை பூண்ட உரவோ யாகிக் கயக்கறு நல்லறங் கண்டனை யென்றலும் விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன் 100 திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி உயிரொடு வேவே னுணர்வொழி காலத்து வெயில்விளங் கமையத்து விளங்கித் தோன்றிய சாது சக்கரன் றனையா னூட்டிய காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன் 105 ஆங்கதன் பயனே ஆருயிர் மருந்தாய் ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து வித்தி நல்லறம் விளைந்த வதன்பயன் துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து 110 வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி வெயிலென முனியாது புயலென மடியாது புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன் அறங்கடை நில்லா தயர்வோர் பலரால் ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித் 115 தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத் தகன்சுரைப் பெய்த ஆருயிர் மருந்தவர் முகங்கண்டு சுரத்தல் காண்டல்வேட் கையேன்என மறந்தே னதன்திறம் நீயெடுத் துரைத்தனை 120 அறங்கரி யாக அருள்சுரந் தூட்டும் சிறந்தோர்க் கல்லது செவ்வனஞ் சுரவாது ஆங்ஙன மாயினை அதன்பயன் அறிந்தனை ஈங்குநின் றெழுவாய் என்றவள் உரைப்பத் தீவ திலகை தன்னடி வணங்கி 125 மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக் கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு வானூ டெழுந்து மணிமே கலைதான் வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த எழுநாள் வந்த தென்மகள் வாராள் 130 வழுவாய் உண்டென மயங்குவோள் முன்னர் வந்து தோன்றி யவர்மயக் கங்களைந் தந்தில் அவர்க்கோர் அற்புதங் கூறும் இரவி வன்மன் ஒருபெரு மகளே துரகத் தானைத் துச்சயன் தேவி 135 அமுத பதிவயிற் றரிதில் தோன்றித் தவ்வைய ராகிய தாரையும் வீரையும் அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன் வாய்வ தாக மானிட யாக்கையில் தீவினை அறுக்கும் செய்தவம் நுமக்கீங் 140 கறவண அடிகள் தம்பாற் பெறுமின் செறிதொடி நல்லீர் உம்பிறப் பீங்கிஃ தாபுத் திரன்கை அமுத சுரபியெனும் மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத் தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும் 145 பழுதறு மாதவன் பாதம் படர்கேம் எழுகென வெழுந்தெனள் இளங்கொடி தானென உரை 1-5. மணிமேகலா தெய்வம் நீங்கியபின்னர்-மணிமேகலா தெய்வம் மந்திரம் அளித்துச் சென்ற பின்னர், மணிபல்லவத் திடை மணிமேகலைதான்-மணிமேகலை மணிபல்லவத்தின் கண் உள்ள, வெண்மணற் குன்றமும்- வெள்ளிய மணற் குன்றுகளையும், விரிபூஞ் சோலையும்- விரிந்த பூம்பொழில் களையும், தண்மலர்ப் பொய்கையும்- குளிர்ந்த மலர்களை யுடைய பொய்கைகளையும், தாழ்ந்தனள் நோக்கி - மெல்ல நோக்கிக்கொண்டு, காவதம் திரிய - ஒரு காத தூரம் சுற்றிக் கொண்டிருக்க; குன்றம், சோலை, பொய்கை என்பவற்றிற்கு இரண்டனுருபு விரிக்க. பூக்கள் விரிந்த சோலையுமாம். காதம் காவதம் என விரிந்து நின்றது; 1வ, பகுதிப் பொருள் விகுதி யென்பர் அடியார்க்கு நல்லார். 5-8. கடவுட் கோலத்துத் தீவதிலகை செவ்வனம் தோன்றி-தெய்வ வேடமுடைய தீவதிலகை என்பாள் செவ்விதாகத் தோன்றி, கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய - மரக்கலம் கவிழப்பெற்று அதினின்றும் உய்ந்துவந்த மகளிரைப்போல் ஈண்டுவந்து சேர்ந்த, இலங்குதொடி நல்லாய் யார் நீ என்றலும் - விளங்குகின்ற வளையல்களை யணிந்த மெல்லியலே நீ யார் என வினவுதலும்; தீவதிலகை : இந்திரன் ஏவலாற் புத்தன் பாத பீடிகையைப் பாது காத்துக்கொண்டு மணிபல்லவத்தில் இருப்பவள்; தீவுக்குத் திலகம் போன்றவள் என்றது பொருள். தனித்து ஓர் தீவில் வந்திருத்தலின் ‘கலங்கவிழ் மகளிர் போல்' என்றாள். செவ்வனம்-நேரே யென்றுமாம் 9-18. எப்பிறப் பகத்துள் யார் நீ என்றது-யார் நீ யென என்னை வினாவியது எனது எப்பிறப்பின் நிகழ்ச்சி குறித்து, பொற்கொடி அன்னாய் பொருந்திக் கேளாய் - காமவல்லி போல்வாய் யான் கூறுவதனை மனம் பொருந்திக் கேட்பாயாக, போய பிறவியில்- சென்ற பிறவியில், பூமியங் கிழவன் - நிலவுலகினையாண்ட மன்னனாகிய, இராகுலன் மனை யான்-இராகுலனுடைய மனைவியாவேன்யான், இலக்குமி என்பேர் - என்னுடைய பெயர் இலக்குமி என்பது, ஆய பிறவியில்-இப் பிறப்பிலே, ஆடலங்கணிகை மாதவி ஈன்ற மணிமேகலை யான் - நாடகக் கணிகையாகிய மாதவி பெற்ற மணிமேகலை யாவேன் நான், என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர - மணிமேகலா தெய்வம் ஈண்டு என்னைக் கொண்டுவர, இம் மன்பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன்- பெருமை பொருந்திய இப் பெரும் பீடிகையால் என் முற்பிறப்பினை அறிந்தேன், ஈங்கு என் வரவு இது-ஈண்டு நான் வந்த வரலாறு இது, ஈங்கு எய்திய பயன் இது - இவ்விடத்தில் யான் அடைந்த பயன் இதுவாகும், பூங்கொடி அன்னாய் யார் நீ என்றலும் - பூங்கொடி போல்வாய் நீதான் யார் எனக் கேட்டலும்; பூமியங் கிழவன் - தரணிபன். ஆய - இப்பொழுது உளதாகிய, பீடிகை-பீடிகையால்; மூன்றனுருபு தொக்கது. எய்திய-வந்தமையாலாகிய என்றுமாம். பயன் இது என்றது பழம்பிறப் புணர்ந்தமையை. 19-29. ஆயிழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த - மணிமேகலை தன் முற்பிறப்பினை அறிந்த தன்மையை உணர்ந்த, தீவதிலகை செவ்வனம் உரைக்கும்-தீவதிலகை செம்மையாகக் கூறுகின்றாள், ஈங்கிதன் அயலகத்து இரத்தின தீவத்து-இம் மணிபல்லவத்தின் அயலிடத்துள்ளதாகிய இரத்தின தீவத்தின்கண், ஓங்குயர் சமந்தத்து உச்சிமீமிசை-மிக உயர்ந்த சமந்தம் என்னும் மலையின் உச்சிமீது, அறவியங் கிழவோன் அடியிணை ஆகிய-அறத்திற்கு உரிமையுடையோனாகிய புத்தனின் இணையடிகள் என்னும், பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் - பிறவியாகிய பெரிய கடலைக் கடத்துவிக்கும், அறவி நாவாய் ஆங்குளது ஆதலின் - அறத்துடன் கூடிய மரக்கலம் அவ்விடத் துள்ளதாகலின், தொழுது வலங் கொண்டு வந்தேன் ஈங்கு-அதனை வலங்கொண்டு பணிந்து ஈண்டு வந்தேன், பழுதில் காட்சி இந் நன் மணிப் பீடிகை - குற்றமற்ற தோற்றத் தினையுடைய நன்றாகிய இந்த மணிப்பீடத்தை, தேவர் கோன் ஏவலின்காவல் பூண்டேன் - இந்திரன் ஏவலாற் காத்தலை மேற்கொண்டேன், தீவதிலகை என் பெயர் - எனது பெயர் தீவதிலகை என்பதாகும் ; ஓங்குயர், மீமிசை என்பன ஒரு பொருட் பன்மொழிகள். சமந்தம் சமனொளி யெனவும் வழங்குமென்பது, "இலங்கா தீவத்துச் சமனொளி யென்னுஞ் சிலம்பினை யெய்தி" (28 : 107-8) என்று பின் வருவதனா லறியப்படும். சமந்தம் என்பதும், சமனொளி என்பதும் இலங்கையிலுள்ள ‘ஆடம்ஸ் பீக்' என ஆங்கில மொழியில் வழங்கும் மலையையே குறிக்குமென்று கருதுவர். அறவி - அறம். காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவியைப் பெருங்கடல் என்றார். அறவி நாவாய் - அறவுருவினதாகிய நாவாய் என்றுமாம். பிறவியாகிய பெருங்கடலைக் கடத்தும் அடியிணையாகிய நாவாய் என்க; 1"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார், இறைவனடி சேரா தார்" என்பதன் கருத்து இதில் அமைந்துள்ளமை காண்க. 29-35. இது கேள் - இதனைக் கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த-தரும வேந்தனாகிய புத்தன் தலைமை யாகக் கூறிய, பெருமைசால் நல்லறம் பிறழா நோன்பினர்-பெருமை மிக்க நல்லறத்தில் வழுவாத நோன்புடையாரே, கண்டு கைதொழுவோர்-இப் பீடிகையைக் கண்டு கைகூப்பி வணங்குதற் குரியோராவர், கண்டதற் பின்னர்-அவ்வாறு இப் பீடிகையைக் கண்டபின்னர், பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி-பைந்தொடியே அவர் முற்பிறப்பை அறிந்தோராவர். அரியர் உலகத்து- அத்தன்மையர் உலகத்திற் பெறுதற்கரியர், ஆங்கவர்க்கு அற மொழி உரியது உலகத்து ஒருதலையாக - அவர்கட்கு உறுதியாக உலகிலே தருமபதம் உரியது; தருமதலைவன்-தருமராசன்; புத்தன் பெயர்களுள் ஒன்று. நோன்பினராய்க் கண்டு தொழுவோர் என்றலுமாம். அவர்க்கு அறமொழி உரியது என்பது அவர் அறமொழி கேட்டற்குரியர் என்றபடி. 36-39. ஆங்ஙனம் ஆகிய அணியிழை இதுகேள் - அத் தன்மையை உடையையாகிய அணியிழையே இதனைக் கேட்பாயாக ஈங்கு இப்பெரும் பெயர்ப் பீடிகை முன்னது-பெரும்புகழுடைய இப் பீடத்தின் முன்னிடத்தாகிய மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய- அழகிய குவளை மலர்களும் நெய்தல் மலர்களும் கலந்து விளங்கு கின்ற, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி-கோமுகி என்னும் பெயருடைய அழகிய நீரையுடைய பொய்கையின்கண்; ஆங்ஙனமாகிய அணியிழை என்றது அறமொழி கேட்டற்கு உரிமையுடைய என்றபடி பெயர் - புகழ். பெரும் பெயர்ப்பீடிகை - வீடு பயக்கும் பீடிகையுமாம் முன்னதாகிய இலஞ்சியில் என்க. 40-45. இருது இளவேனிலில் எரிகதிர் இடபத்து-இளவேனிற் பரு வத்தில் ஞாயிறு இடபத்தில் உள்ள வைகாசித் திங்களில், ஒருபதின் மேலும் ஒரு மூன்று சென்றபின் மீனத்து இடை நிலை மீனத்து அகவையின் - இருபத்தேழு நாண்மீன்களுள் கார்த்திகையை முதலாகக்கொண்டு எண்ணப்படுகின்ற பதின்மூன்றுநாண்மீன்கள் சென்றபின் இடையில் இருப்ப தாகிய விசாகத்தின்கண், போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் - புத்தனுடன் பொருந்தித் தோன்றாநிற்கும், ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் - ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யென்னும் மிக்க பெருமையுடைய பாத்திரம், மடக்கொடி கேளாய் - இளங் கொடியே கேட்பாயாக; இலஞ்சியில் இடபத்து இடைநிலை மீனத் தகவையில் பாத்திரம் பொருந்தித் தோன்றுமென்க. இளவேனிலாகிய இருதுவில் என மாறுக. இளவேனில் - சித்திரைத் திங்களும் வைகாசித் திங்களும் சேர்ந்த பெரும்பொழுது, எரிகதிர்- வெங்கதிர்: ஞாயிறு இடபத்தி லுள்ள திங்கள் என்க. மீனத்து-மீன்களுள். இடைநிலை மீனத் தகவையில்-இடையில் நிற்கும் மீனின்கண் ; அது விசாகமென்பது "மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள்" (10:83) என முன்புரைத் தமையான் அறியப்படும். புத்தர் பிறந்ததும் ஞானம் பெற்றதும் வைகாசித் தூயநிறைமதி நாளாகலின் அப்பொய்கையில் ஆண்டுதோறும் அந்நாளிற் றோன்றும் அமுதசுரபி 'போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்' எனப்பட்டது. "இருதிள...பொருந்தி" என்பது இவ்வாறே பின்பும் (15:23 - 6) வருதல் காண்க. முன்னொரு காலத்திற் கார்த்திகை முதலாக நாட்கள் எண்ணப்பட்டமையின் இருபத்தேழு நாட்களில் விசாகம் பதினான்காவதாகிய நடுநாளாயிற்று. ஒவ்வோராண்டிலும் பகலும் இரவும் முப்பது முப்பது நாழிகையாகச் சமனுற்ற இரண்டு விழுவ நாட்களுள் சித்திரை விழுவில் ஞாயிற்றுக்கு எந்த நாண்மீனிற் புகுதி ஏற்படுகின்றதோ அதனை நான்மீன்களுள் முதலாக வைத்துக் கூறுவது சோதிடநூற் றுணிபாகலின், முன்னொரு காலத்தில் ஞாயிற்றுக்குக் கார்த்திகையிற் புகுதியிருந்தபொழுது அதனை முதலாகக்கொண்டு எண்ணி வந்தனர். பின்பு, வராகமிகிரர் எனப் பெயர்பெற்ற சோதிட வாசிரியர் தமது காலத்தில் சித்திரை விழுநாளில் ஞாயிற்றுக்கு அச்சுவினியிற் புகுதியுண்டாயிருத்தலை அறிந்து, அச்சுவினி முதலாக எண்ணும் வழக்கத்தை யுண்டாக்கின ரென்பர். போதி - அரசமரம்; போதத்தையுடைய தென்பது பொருள்; போதம்-ஞானம்; இதனடியிலிருந்தபொழுது நால்வகை வாய்மைகளையும் அறிந்து கொள்ளுதற்குரிய ஞானத்தைப் புத்தன் அடைந்தமை யால், இஃது இப் பெயர் பெற்றதென்பர் ; போதியுரவோன், போதித்தலைவன், போதிமாதவன் என்றிங்ஙனம் இந் நூலுட் பல விடத்துப் பின் கூறப்படுதலும்காண்க. அரசு மரங்களுட்சிறந்ததென்பது பகவற்கீதை முதலியவற்றானும் அறியப்படும். போதி என்பது ஞானம் என்ற பொருளில் வருதலும் உண்டு. அமுத சுரபி-அமுதத்தைக் கொடுக்கும் காமதேனுவைப் போன்ற தென்பது பொருள்; சுரபி-பசு; இனி, சுரபி-மணம் எனக் கொண்டு, அமிழ்தம் போன்ற மணமுடைய தென்றும் பொருள் கூறுவர். 46-52. அந்நாள் இந்நாள் அப்பொழுது இப்பொழுது - அந்த நன்னாளும் இந்நாளே அது தோன்றும்பொழுதும் இப்பொழுதே ஆகலின், நின்னாங்கு வருவதுபோலும் நேரிழை-நேரிழாய் அது நின் கையிடத்து வருவதுபோலும், ஆங்கதிற் பெய்த ஆருயிர் மருந்து-அப் பாத்திரத்திலிட்ட அரிய உயிரின் மருந்தாகிய அன்னம், வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது-வாங்குவோர் களுடைய கையிடத்தை வருத்துதல் அன்றி, தான் தொலைவில்லாத் தகைமையது ஆகும்-தான் அழிவில்லாத இயல்பினையுடைய தாகும், நறுமலர்க் கோதை-மணம் மிக்க மலர்மாலையினை யணிந்த நங்காய், நின்னூர் ஆங்கண் - நின் பதியின்கண் அறவணன் தன் பால் கேட்குவை இதன் திறம்-அறவணவடி களிடத்தில் இப்பாத்திரத்தின் வரலாற்றினைக் கேட்பாய்; ஆருயிர்மருந்து-அடிசில்; உயிர்களைப் பாதுகாத்தலின் இங்ஙனம் கூறப்பட்டது; "அகன்சுரைப் பெய்த வாருயிர் மருந்து" (11 : 117) என்பர் பின்னும்; 1"இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்" என்பதனால் சோறும் நீரும் இருமருந்தெனப்படுதல் காண்க. தான் என்றது சோற்றை. 53-60. என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி-என்று தீவதிலகை மொழிதலும் மணிமேகலை அதனை விரும்பி, மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி-பெருமை மிக்க பீடத்தைக் கும்பிட்டு வணங்கி, தீவதிலகை தன்னொடும் கூடி-தீவதிலகை யொடுஞ் சேர்ந்து, கோமுகி வலஞ்செய்து கொள்கையின் நிற்றலும்-கோமுகிப் பொய்கையை வலம் வந்து நியமத்தோடு நிற்றலும், எழுந்து வலம் புரிந்த இளங் கொடி செங்கையில் தொழும் தகை மரபிற் பாத்திரம் புகுதலும்-அனைவரும் தொழத்தக்க மரபினையுடைய மாபெரும் பாத்திரம் பொய்கையினின்றும் எழுந்து வலம் புரிந்து நின்ற மணிமேகலையின் சிவந்த கைகளிற் புகுதலும், பாத்திரம் பெற்ற பைந்தொடி மடவாள் மாத்திரை இன்றி மனமகிழ்வு எய்தி-பாத்திரத்தைப் பெற்ற மணிமேகலை அளவின்றி மனமகிழ்ச்சி யடைந்து; பாத்திரம் எழுந்து செங்கையிற் புகுதலும் என்க. 61-72. மாரனை வெல்லும் வீர நின் அடி-மாரனை வென்ற வீரனே நின் திருவடிகளை, தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின் அடி-தீய வழிகளாகிய மிக்க பகையை நீக்கினோய் நின் திருவடிகளை, பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி-ஏனையோர்க்கு அறம் உண்டாதற்கு முயல்கின்ற பெரியோனே நின் திருவடிகளை, துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின் அடி-சுவர்க்க இன்பத்தை வேண்டாத பழையோனே நின் திருவடிகளை, எண் பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி - மக்களுடைய எண்ணங்கள் எட்டாமற் பின்னே கிடக்குமாறு மேற்பட்ட நிலையிற் சென்றோய் நின் திருவடிகளை, கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய் நின் அடி - உயிர்கட்கு ஞானத்தை அளிக்கும் மெய்யுணர்வுடையோய் நின் திருவடி களை, தீமொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி - தீயமொழிகளைக் கேளாதிருக்குமாறு அடைக்கப்பட்ட காதினை யுடையோனே நின் திருவடிகளை, வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி - மெய்மொழிகள் சிறந்த நாவினை யுடையோய் நின் திருவடிகளை, நரகர்துயர் கெட நடப்போய் நின் அடி-நிரயத்திலிருப்போர்களின் துன்பம் நீங்குமாறு ஆண்டுச்சென்றோய் நின் திருவடிகளை, உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி - நாகர்களின் துன்பத்தை நீக்குவோய் நின் திருவடிகளை, வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது என்ற ஆயிழை முன்னர்-வணங்குதலேயன்றி வாழ்த்துதல் எனது நாவின்கண் அடங்காது என்று பரவிய மணிமேகலையின் முன்னர்; பாத்திரம் பெற்ற மகிழ்ச்சியாலும் அன்பின் ஆராமையினாலும் ‘நின்னடி’ என்பதனைப் பலகால் அடுக்கிக் கூறினளாயினும், வீர, கடிந்தோய் என்றிங்ஙனம் விளியடுத்த பெயர்களை ஒருசேரக் கூறி, அவற்றினிறுதியில் ‘நின்னடி' என்று கூறுதல் அமையும். மாரன் - அறத்திற்கு மாறாய தீயவிருப்பங்களை மனத்தில் உண்டாக்கும் ஒரு தேவன் ; மாபோதியின்கீழ் தவஞ்செய் திருக்கையில் இவன் செய்த இடையூறுகளை யெல்லாம் புத்தன் வென்று மேம்பட்டு விளங்கினன் என்பர். முயலுத லாவது அறத்தினை அறிவுறுத்தல்; பிறர் பொருட்டு அறத்தினை முயன்று செய்யும் என்றுமாம். அழிவற்ற நிருவாணமே (முத்தியே) அவனால் விரும்பப்பட்டமையின் அழியு மியல்புடைய துறக்கம் வேண்டப் படாதாயிற்று. பிறக்கு-பின்; 1"துறைபிறக் கொழியப் போகி" என்பது காண்க. கண்-ஈண்டு ஞானம்; புத்தன் எடுத்த பல பிறப்புக்களுள் ஒன்றில் வந்து இரந்த இந்திரற்குக் கண்ணைக் கொடுத்ததனை என்று இதற்குப் பொருளாகக் கொள்ளுதல் சிறப்பின்று. தீமொழி-பொய், குறளை, வன்சொல், பயனில்சொல் என்பன. நரகர் சிலரது துன்பந் தணித்தற் பொருட்டுப் புத்தன் ஒரு பிறப்பில் நரகலோகத்திற்குச் சென்றான் என்பர். 2"அருவினை சிலர் கெட வொரு பெரு நரகிடை, எரிசுடர் மரைமல ரெனவிடு மடியினை" என்பது காண்க. கருடனுக்கு அருளறம் போதித்து நாகர் துயரினைப் போக்கினா னென்பதும் வீரசோழியத்து அச் செய்யுளுரை மேற்கோள்களால் அறியப்படும். 73-75. போதிநீழல் பொருந்தித் தோன்றும்-அரசமரத்தின் நீழலில் அமர்ந்து விளங்கும், நாதன் பாதம் நவை கெட ஏத்தி-புத்தன் அடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்து, தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும்-மணிமேகலைக்குத் தீவதிலகை மொழியும்; புத்தனை நாதன் எனப் பின்னரும் வழங்குவர். 76-81. குடிப்பிறப்பு அழிக்கும்-தன்னாற் பற்றப்பட்டாருடைய உயர்குடிப் பிறப்பைக் கெடுக்கும், விழுப்பம்கொல்லும்-சிறப்பினை அழிக்கும், பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம் - பற்றிய கல்வியாகிய பெரிய தெப்பத்தை நீக்கும், நாண் அணி களையும்-நாணாகிய அணிகலனைப் போக்கும், மாண் எழில் சிதைக்கும்-மாட்சிமைப்பட்ட அழகைக் குலைக்கும், பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்-பூண் விளங்குகின்ற கொங்கைகளையுடைய மகளிரொடு பிறர் கடைவாயிலில் நிறுத்தும், பசிப்பிணி என்னும் பாவி-பசி நோய் என்று கூறப்படுகின்ற பாவி, அது தீர்த்தோர்-அத்தகைய பசியை நீக்கினோரது, இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது-புகழை அளந்துரைத்தற்கு எனது நா எழாது; குடிப் பிறந்தார்க் கேலாத இழிசெயல்களை உளவாக்கலின் அதனை அழிக்கும் என்றாள். பிடித்த-பற்றுக் கோடாகக் கொண்ட. விடூஉம்-விடுவிக்கும்: பிறவினை; கல்வியும் அழியும் என்றபடி; அவரது சொல் செல்லா தென்றவாறுமாம்; 3"நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார், சொற்பொருள் சோர்வு படும்" என்பது காண்க. அழகு செய்தலின் நாண் அணியெனப்பட்டது ; 4"அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு" என்றார் வள்ளுவனாரும். ஆணெழில் எனப் பிரித்தலுமாம்; 1"பிறந்த குலமாயும் பேராண்மை மாயும், சிறந்த தங் கல்வியு மாயும்" என்பது அறியற்பாலது. பண்பிற்குப் பண்பு இல்லையேனும் தன்னாற் பற்றப்பட்டாருடைய நலங்களை யெல்லாம் அழித்தற் கொடுமைபற்றி, வேறு பண்புள்ளதுபோல் பசியைப் பாவி யென்றார்; 2"இன்மை யெனவொரு பாவி" என்பதுங் காண்க. நிமிராது-எழாது; பேச முயலாது; புகழ் அளவுபடா தென்றபடி. 82-91. புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி-புல்லும் மரமும் கரியுமாறு புகையையுடைய அழல்போலும் வெப்பம் மிகுந்து, மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின்-நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு மழையாகிய செல்வம் மறைந்து போனமையால், அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன்-அரசுபுரிதலினின்றும் நீங்கிய அரிய மறைகளை யுணர்ந்த அந்தணனாகிய விசுவாமித்திர முனிவன், இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன்-பெரிய பூமியிடத்து யாண்டும் சுற்று கின்றவன், அரும்பசி களைய ஆற்றுவது காணான்-அரிய பசியை நீக்க உதவுவதாகிய உணவு ஒன்றையுங் காணாத வனாய், திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன்-சிறிதும் பொருந்தாத நாயின் ஊனைத் தின்னத் தொடங்குவோன், இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர்-உண்ணுமுன் செய்தற் குரிய தேவ பலியினைச் செய்கின்ற பொழுது அவன் முன்னர், வந்து தோன்றியவானவர் பெருந்தகை -வந்து வெளிப்பட்ட அமரர் தலைவன், மழைவளம் தருதலின்-மழைவளத்தை அளித்தலான், மன்னுயிர் ஓங்கி-நிலைபெற்ற உயிர்கள் மிகுந்து, பிழையா விளையுளும் பெருகியது அன்றோ - தப்பாத விளைவும் மிகுந்த தன்றோ; புறவயிரமுடையன புல் எனவும், அகவயிர முடையன மரமெனவும் படுமென்பது தொல்காப்பியத்து மரபியலானறியப் படும்; புல் - அறுகு முதலியனவுமாம். விசுவாமித்திரன் அரசர் மரபிற் பிறந்து புவியை ஆண்டுவருங்கால் வசிட்டருடன் முரணி அவரது தவ ஆற்றலையறிந்து, தானும் அருந்தவம்புரிந்து முனிவனாயினன் என்பது வரலாறு. அவன் பசிக்கொடுமையால் நாயூன் தின்ன முயன்ற செய்தி மனு நூலின் பத்தாம் அத்தியாயத்தினும் கூறப் பட்டுளது. இந்திர சிறப்பு- உண்ணுமுன் செய்யும் பலியீடு; இதனை ‘வைச்சுவதேவம்' என்பர்; பிற தேவர்கட்கும் உரிய தெனினும் தலைமைபற்றி 'இந்திர சிறப்பு' எனப்பட்டது. இது பசியின் கொடுமைக்கு ஒரு வரலாறு காட்டியபடி. 92-98. ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்-பொறுக்கும் வன்மையுடை யோராகிய செல்வர்க்கு அளிக் கின்றவர்கள் அறத்தினை விலை கூறுவோ ரேயாவர், ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை-வறிஞர்களின் தீர்த்தற்கரிய பசியை நீக்குவோரின் கண்ணதே உலகத்தின் உண்மை நெறியாகிய வாழ்க்கை, மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் - அணுக்கள் செறிந்த நிலவுலகில் வாழ்வோர்களில் எல்லாம், உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே - உணவினை அளித்தோரே உயிர்கொடுத்தோராவர், உயிர்க்கொடை பூண்ட உரவோய் ஆகி-உயிரினை அளிக்கும் அறத்தினை மேற்கொண்ட வலிய அறிவினை உடையையாகி, கயக்கறு நல்லறம் கண்டனை என்றலும்-கலங்குதலற்ற நல்லறத்தினை அறிந்தாய் என்று தீவதிலகை உரைத்தலும் ; ஆற்றுநர்க்கு-கைம்மாறு செய்யும் வலியுடையோர்க்கு என்றுமாம். அறவிலை பகர்வோர் - அறமென்னும் பெயரால் வாணிகஞ் செய்வோர் என்றுமாம்; பயன் கருதிச் செய்வோரா கின்றமையின் "அறவிலை பகர்வோர்" என்றாள். 1"இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வாணிகன் ஆஅ யல்லன்" 2"ஏற்றகை மாற்றாமை யென்னானுந் தாம் வரையா, தாற்றாதார்க் கீவதா மாண்கடன்" என்பன ஈண்டு அறியற் பாலன. வாழ்வோர்க்கெல்லாம்- வாழ்வோ ரெல்லாருள்ளும் என்க : வேற்றுமை மயக்கம். 3"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" எனப் புறப்பாட்டில் வந்துள்ளமையும் காண்க. கயக்கு - கயங்குதல்; கலங்குதல்; "கயக்கறுமாக்கள்" (16 : 85) என்பர் பின்னும். 99-106 விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன்-போன பிறவியில் என்னால் விரும்பப்பட்ட கணவன், திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி-திட்டிவிடமெனும் பாம்பு தீண்டப்பெற்று உயிர் நீங்கினவிடத்து, உயிரொடு வேவேன் உணர்வு ஒழிகாலத்து - தீயிற் குளித்து உயிருடன் வேகாநிற்கும் யான் உணர்வு நீங்குந் தறுவாயில், வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய - வெயில் விளங்குகின்ற உச்சிப் பொழுதில் விளக்கமுற்றுத் தோன்றிய, சாது சக்கரன் தனை யான் ஊட்டிய காலம் போல்வதோர் கனாமயக்குற்றேன்-சாது சக்கரனை யான் உண்பித்த பொழுதைப் போல்வதாகிய ஒரு கனாவாகிய மயக்கத்தை யடைந்தேன், ஆங்கதன் பயனே - அக் கனாப்போலும் நினைவின் பயனே, ஆருயிர் மருந்தாய் ஈங்கு இப்பாத்திரம் என் கைப்புகுந்தது - அரிய உயிர்களைக் காக்கும் மருந்தாகி இப் பாத்திரம் ஈண்டு என் கையிற்புக்கது ; உயிருடன் தீயிற் குளித்து வெந்தமையின் 'உயிருடன் வேவேன்' என்றாள். வேவேன் : பெயர். முற்பிறப்பிலே கணவன் திட்டி விடத்தாலிறந்ததும், இவள் தீயிற் குளித்ததும் (9:49--50) முன்னரும் போந்தமை யறிக. வேவேன் உணர்வொழி காலத்துக் கனாமயக் குற்றேன் என்க. ‘அதன் பயனே......என்கைப் புகுந்தது' என்னுங் கருத்து உண்மை நூற் றுணிபாதல், 1"பிறப்பென்னும் பேதைமை" என்னுங் குறளுரையில்; "உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்று மென்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின்" எனப் பரிமேலழகர் கூறியவாற்றானும் அறியப்படும். புகுந்தது அதன்பயனே யாகுமென்க. 107-118. நாவலொடு பெரிய மாபெருந் தீவத்து-மிகப் பெரிய சம்புத் தீவின்கண். வித்தி நல்லறம் விளைந்த அதன் பயன் - நல்லறத்தை விதைத்து அதன்கண் விளைந்த பயனாகிய செல்வத்தை, துய்ப்போர் தம்மனை - அனுபவிக்கும் செல்வருடைய இல்லத்தில், துணிச் சிதர் உடுத்து - கிழிந்த சீரைகளை உடுத்திக்கொண்டு, வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி - வயிற்றினைக் காய்கின்ற பெரிய பசி அலைத்தலால் வருந்தி, வெயில் என முனியாது புயல் என மடியாது - மிக்க வெயில் என்று வெறுப் படையாமலும் மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் சென்று, புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து - தலைவாயிலில் நின்று கொண்டு துன்பமிகுந்து, முன் அறங்கடை - முற்பிறப்பிற் செய்த தீவினையால், நில்லாது அயர்வோர் பலரால்-ஓரிடத்தில் நில்லாமல் அயர்கின்றவர் பலராவர். ஆகலின், ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி-பெற்ற குழவியினது முகத்தைக் கண்டு இரங்கி, தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே - இனிய பாலைச் சுரக்கின்ற தாயின் கொங்கையைப் போல, நெஞ்சுவழிப் படூஉம் விஞ்சைப் பாத்திரத்து - மனத்தின் வழியே ஒழுகும்விஞ்சையையுடைய இப்பாத்திரத்தின்கண், அகன் சுரைப்பெய்த ஆருயிர் மருந்து - அகன்ற உள்ளிடத்திலிட்ட அரியவுயிர் மருந்தாகிய உணவு, அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என - அவ்வறிஞர் களின் முகத்தைக் கண்டு சுரத்தலைக் காணும் விருப்பமுடையேன் என்று மணிமேகலை கூற ; சிதர் - சிதார் எனவும் வழங்கும். வயிறு காய்-வயிறு உணவின்றிக் காய்ந்தமையாலாகிய எனலுமாம். அலைத்தற்கு-அலைத்தலால். அறத்தின் நீக்கப்பட்டமையின், பாவம் அறங்கடை யெனப் பட்டது; 1"அறன் கடை நின்றாரு ளெல்லாம்" என்பதூஉங் காண்க. 2"அகத்தாரே வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப், புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி, மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத் தவத்தாற் றவஞ்செய்யாதார்" என்பது ஈண்டு அறியற்பாலது. மடியாது சென்று என ஒரு சொல்லும், அறங்கடையால் என மூன்றனுருபும் விரித்துரைக்க. சுரை-உட்டுளை; ஈண்டுப் பாத்திரத்தின் குழிந்த உள்ளிடம். 119-123. மறந்தேன் அதன் திறம் நீ எடுத்துரைத்தனை-யான் அதன் இயல் பினை நன்கு மறந்தேன் நீ எடுத்துக் கூறினாய், அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும் - அறமே சான்றாக அருட்பெருக்கால் உண்பிக்கும், சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது-சிறப்புடையோர்கட்கு அன்றி ஏனையோர்க்குச் செவ்வனே சுரவாது, ஆங்ஙனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை-அறம் கரியாக அருள் சுரந்தூட்டும் அத்தன்மையை யுடையை யாயினை அங்ஙனம் ஊட்டுவதின் பயனையும் அறிந்தாய் ஆதலின், ஈங்கு நின்று எழுவாய் என்று அவள் உரைப்ப-ஈண்டு நின்று நின் பதிக்கு எழுவாயாக என்று தீவதிலகை மொழிய ; அறம் கரியாக என்றது பிறரறியச் செய்தல் வேண்டா என்ற படி. அரு ளாவது ஒன்றின் துயர் கண்டவழி வேறு காரணமின்றித் தோன்றும் இரக்கம். ‘அவர் முகங்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என முன்பு கூறியதனால் ‘ஆங்ஙனமாயினை' என்றாள். 124-131. தீவதிலகை தன் அடி வணங்கி-தீவதிலகையினுடைய அடிகளைப் பணிந்து, மாபெரும் பாத்திரம் மலர்க்கையின் ஏந்தி - பெருமை மிக்க அமுதசுரபியை மலர்போலும் கையில் ஏந்தி, கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு-புத்தன் திருவடிப் பீடத்தை வலங்கொண்டு வணக்கஞ்செய்து, வானூடு எழுந்து மணிமேகலைதான் - மணிமேகலை விசும்பின் வழியாக எழுந்து, வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த - வழுவுதலற்ற மணிமேகலா தெய்வம் உறுதியாகக் கூறிய, எழுநாள் வந்தது என் மகள் வாராள் - ஏழாம் நாள் வந்தது என் மகள் வரவில்லை, வழுவாய் உண்டென மயங்குவோள் முன்னர் - தப்புதலும் உண்டு போலும் என்று கலங்குகின்ற மாதவியின்முன், வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து-வந்து தோன்றி அவர்களுடைய கலக்கத்தை நீக்கி; மயங்குவோள் - சுதமதியுமாம். இருவரும் அகப்பட ‘அவர்' என்றார். மணிமேகலை தான் வந்து தோன்றி யென்க. 132-137. அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் - அவ்விடத்தில் அவர்கட்கு ஓர் அற்புதத்தைக் கூறுவாள், இரவிவன்மன் ஒரு பெருமகளே - இரவிவன்மனுடைய ஒப்பற்ற பெரிய மகளே, துரகத்தானைத் துச்சயன் தேவி-குதிரைச் சேனைகளை யுடைய துச்சயனுடைய மனைவியே, அமுதபதி வயிற்று அரிதில் தோன்றி- அமுதபதியின் வயிற்றின்கண் அரிதாகப் பிறந்து, தவ்வையா ஆகிய தாரையும் வீரையும்-எனக்குத் தமக்கையராகிய தாரையும் வீரையுமாய நீவிர், அவ்வையர் ஆயினீர்-இப்பிறப்பில் எனக்குத் தாயர் ஆயினீர், நும் அடி தொழுதேன் - நும்முடைய அடிகளை வணங்கினேன் ; தேவி - மாதவி ; சுதமதியுமாம். தவ்வையர் - தமக்கைமார். அவ்வையர் - தாய்மார் ; மாதவிக்குத் தோழியாகலின் செவிலி யென்பது பற்றிச் சுதமதியையும் தாய் என்றாள். 138-146. வாய்வதாக மானிடயாக்கையில் தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கீங்கு-நுங்கட்கு இப்பொழுது மனித உடலால் தீவினைகளை அறுக்கவல்ல செய்தவம் வாய்ப்புடைத் தாகுக, அறவணவடிகள் தம்பால் பெறுமின் செறிதொடி நல்லீர் உம் பிறப்பு - செறிந்த வளையல்களை யணிந்த மகளிரே உம் பிறப்பினை அறவணவடிகள்பால் அறிந்து கொள்ளுமின், ஈங்கிஃது ஆபுத்திரன் கை அமுத சுரபிஎனும் மாபெரும் பாத்திரம்-இங்கிருக்கின்ற இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பெயருடைய பெருமை மிக்க பாத்திரமாகும், நீயிரும் தொழும் என - இதனை நீவிரும் வணங்குவீர் என்று கூற, தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும் - வணங்கித் துதித்த மாதவி சுதமதியுடன், பழுதறு மாதவன் பாதம் படர்கேம் எழுக என எழுந்தனள் இளங்கொடி தான்என்-குற்றமற்ற பெருந்தவமுடைய அறவண வடிகள் திருவடிகளை வணங்குதற்குச் செல்லுவேம் நீவிரும் எழுக எனவுரைத்து மணிமேகலை எழுந்தனள் என்க. செய்தவம் வாய்வதாக எனவும், பிறப்பு பெறுமின் எனவும் கூட்டுக. தொழுமெனக்கூறி எழுகென எழுந்தனளென்க ; மணிபல்லவத்தில் தெய்வம் நீங்கிய பின்னர் மணிமேகலை நோக்கித் திரிய, தீவதிலகை தோன்றி ‘யார் நீ' என்றலும், ‘கேளாய், என் வரவு ஈது; பயன் இது; அன்னாய், நீ யார்?' என்றலும் தீவதிலகை உரைக்கும்; உரைப்பவள், என்றுரைத்தலும், மணிமேகலை விரும்பிப் பீடிகையைத் தொழுது வணங்கிக் கூடி வலஞ்செய்து நிற்றலும், அவள் கையிற் பாத்திரம் புகுந்தது ; புகுதலும் மகிழ் வெய்தி, ‘வாழ்த்தல் என்னாற்கடங்காது' என்றாள்; என்ற ஆயிழை முன்னர்த் தீவதிலகை உரைக்கும்; உரைப்பவள், ‘கண்டனை' என்றலும், மணிமேகலை ‘சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என, அவளுரைப்ப, மணிமேகலை வணங்கி ஏத்தி வலங்கொண்டு எழுந்து, மயங்குவோள் முன்னர் வந்து தோன்றிக் களைந்து கூறும்; கூறுகின்றவள், தொழுமென, தொழுதேத்திய அவரொடும் இளங்கொடி எழுந்தனள் என வினை முடிவு செய்க. பாத்திரம் பெற்ற காதை முற்றிற்று. 12. அறவணர்த் தொழுத காதை சென்ற மணிமேகலை அறவண வடிகள் இருக்குமிடத்தை அடைந்து, அவர் திருவடியை மும்முறை வணங்கிப் பரவி, தான் உவவனஞ் சென்றதும், உதயகுமரன் ஆங்குவந்து கூறியதும், மணிமேகலா தெய்வம் தன்னை மணிபல்லவத்திற் கொண்டு போய் வைத்ததும், அத் தீவிலே புத்த பீடிகையால் தன் பழம் பிறப்பினை அறிந்ததும் ‘முற்பிறப்பிற் கணவனாயிருந்த இராகுலனே உதயகுமரனாக வந்து பிறந்தான்; அப் பிறப்பில் உனக்குத் தமக்கைய ராக விருந்த தாரையும் வீரையுமே மாதவியும் சுதமதியுமாகத் தோன்றினர்; அவர்கள் வரலாற்றை அறவணவடிகள்பால் அறிந்துகொள்வாய்; என்று மணிமேகலா தெய்வம் கூறி, மூன்று மந்திரங்களை அறிவுறுத்துச் சென்றதும், பின்பு தீவதிலகை வந்ததும், அவளுடன் சென்று கோமுகியில் அமுதசுரபியைப் பெற்றதும், ‘நின்னூரில் அறவணவடிகள்பால் ஆபுத்திரன் வரலாற்றைக் கேள்' என்று அவள் கூறத் தான் போந்ததும் ஆகிய இவற்றையெல்லாம் தெரிவிக்க, அவர் கேட்டு மகிழ்ந்து, முற்பிறப்பிலே துச்சயராசன் மனைவியராயிருந்த தாரையும் வீரையும் இறந்து முறையே மாதவியும் சுதமதியுமான வரலாற்றை அவர்கட்குரைத்து, பின்னும் மணிமேகலையை நோக்கி, 'இவ்வுலகிலே புத்ததேவனருளிய அறங்கள் குறைய மறங்கள் மிகுந்தன ; சலாகை நுழைந்த மணித்துளையினுள்ளே கடல் நீர் ஓடாதாயினும் அத் துளை வழியே உகும் சிறிதாய நீர்போல் மக்கள் செவியில் அறம் சிறிது சிறிது புகுதலுமுண்டென்று கருதி நான் அறஞ் சொல்லுதலுடையேன், சக்கரவாளத்திலுள்ள தேவர்களுடைய வேண்டுகோளால் ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் துடிதலோகத்திலுள்ள தேவன் இவ்வுலகிலே தோற்றஞ் செய்வன். பின்பு, யாவர்க்கும் அருளறத்தில் மனஞ் செல்லும் எனவும், புத்தர் தோன்றும் காலத்தில் ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியவும், உயிர்களும் இன்னின்னவாறு நலமுடன் திகழுமெனவும் கூறி, "இந் நகரிலே உன்னாற்சில நலங்கள் நிகழ்வனவாம்; அவை நிகழ்ந்த பின்பன்றி யான் கூறும் அறவுரை நின் மனத்திற் பொருந்தாது; இவ் விருவரும் முற்பிறப்பிற் பாதபங்கய மலையை வழிபட்டனராதலின் பின்னர் உன்னுடன் கூடிப் புத்தர் திருவடியை வணங்கி வினையினீங்கி வீட்டுநெறிச் செல்வர் ; ஆருயிர் மருந்தாகிய அமுதசுரபியை நீ பெற்றனை ; " மக்கள் தேவர் எனவிரு சார்க்கும், ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்லறஞ் சாற்றினர்" மணிமேகலையும் உயிர்களின் பசித் துயர்கெடப் பாத்திரத்தை யெடுத்தனள். (இதில் புத்தர் தோன்றுங்காலத்து உலகில் இன்னின்ன நிகழுமெனக் கூறியிருப்பன அறிந்து இன்புறத்தக்கவை. ஆங்கவர் தம்முடன் அறவண அடிகள் யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய் நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரைமூ தாளன் உறைவிடம் குறுகி 5 மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி மும்முறை வணங்கி முறையுளி யேத்திப் புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் உதய குமரனாங் குற்றுரை செய்ததும் மணிமே கலாதெய்வமும் மணிபல் லவத்திடை 10 அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும் ஆங்கத் தீவகத் தறவோன் ஆசனம் நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும் அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக் களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும் 15 தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் வெவ்வினை உருப்ப விளிந்துகே டெய்தி மாதவி யாகியுஞ் சுதமதி யாகியுங் கோதையஞ் சாயல் நின்னொடுங் கூடினர் ஆங்கவர் தந்திறம் அறவணன் தன்பால் 20 பூங்கொடி நல்லாய் கேளென் றுரைத்ததும் உரைந்த பூங்கொடி ஒருமூன்று மந்திரம் தனக்குரை செய்துதான் ஏகிய வண்ணமும் தெய்வம் போயபின் தீவ திலகையும் ஐயெனத் தோன்றி யருளொடும் அடைந்ததும் 25 அடைந்த தெய்வம் ஆபுத் திரன்கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் ஆபுத் திரன்திறம் அறவணன் தன்பால் கேளென் றுரைத்தக் கிளரொளி மாதெய்வம் போகென மடந்தை போந்த வண்ணமும் 30 மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் மணிமே கலையுரை மாதவன் கேட்டுத் தணியா இன்பம் தலைத்தலை மேல்வரப் பொற்றொடி மாதர் நற்றிறஞ் சிறக்க உற்றுணர் வாய்நீ யிவர்திறம் உரைக்கேன் 35 நின்னெடுந் தெய்வம் நினக்கெடுத் துரைத்த அந்நா ளன்றியும் அருவினை கழூஉம் ஆதி முதல்வன் அடியிணை யாகிய பாதபங் கயமலை பரவிச் செல்வேன் கச்சய மாளுங் கழற்கால் வேந்தன் 40 துச்சயன் தன்னையோர் சூழ்பொழிற் கண்டேன் மாபெருந் தானை மன்ன நின்னொடும் தேவியர் தமக்கும் தீதின் றோவென அழிதக வுள்ளமோ டரற்றின னாகி ஒளியிழை மாதர்க் குற்றதை யுரைப்போன் 45 புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் ஆங்கது கேட்டோ ரரமிய மேறித் தாங்காது வீழ்ந்து தாரைசா வுற்றதூஉம் கழிபெருந் துன்பங் காவலன் உரைப்ப 50 பழவினைப் பயன்நீ பரியலென் றெழுந்தேன் ஆடுங் கூத்தியர் அணியே போல வேற்றோர் அணியொடு வந்தீ ரோவென மணிமே கலைமுன் மடக்கொடி யார்திறம் துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான் 55 பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் தரும தலைவன் தலைமையில் உரைத்த பெருமைசால் நல்லறம் பெருகா தாகி இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி, 60 அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண்ணடைத்தாங்குச் செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் உண்டென உணர்தல் அல்லதி யாவதும் 65 கண்டினிது விளங்காக் காட்சி போன்றது சலாகை நுழைந்த மணித்துளை அகவையின் உலாநீர்ப் பெருங்கடல் ஓடா தாயினும் ஆங்கத் துளைவழி உகுநீர் போல ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டெனச் 70 சொல்லலும் உண்டியான் சொல்லுதல் தேற்றார் மல்லன்மா ஞாலத்து மக்களே யாதலின் சக்கர வாளத்துத் தேவ ரெல்லாம் தொக்கொருங் கீண்டித் துடிதலோ கத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப 75 இருள்பரந்து கிடந்த மலர்தலை யுலகத்து விரிகதிர்ச் செல்வன் தோன்றின னென்ன ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டில் பேரறி வாளன் தோன்றுமதற் பிற்பாடு பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி 80 இரும்பெரு நீத்தம் புகுவது போல அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம் உளமலி யுவகையொ டுயிர்கொளப் புகூஉம் கதிரோன் தோன்றுங் காலை ஆங்கவன் அவிரொளி காட்டும் மணியே போன்று 85 மைத்திருள் கூர்ந்த மனமாசு தீரப் புத்த ஞாயிறு தோன்றுங் காலைத் திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்கத் தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும் வானம் பொய்யாது மாநிலம் வளம்படும் 90 ஊனுடை உயிர்கள் உறுதுயர் காணா வளிவலக் கொட்கும் மாதிரம் வளம்படும் நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம் கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும் பறவை பயன்றுய்த் துறைபதி நீங்கா 95 விலங்கு மக்களும் வரூஉப்பகை நீங்கும் கலங்கஞர் நரகரும் பேயும் கைவிடும் கூனுங் குறளும் ஊமுஞ் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறாஅ அந்நாள் பிறந்தவன் அருளறங் கேட்டோர் 100 இன்னாப் பிறவி யிகந்தோர் ஆகலின் போதி மூலம் பொருந்திய சிறப்பின் நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் பிறவி தோறும் மறவேன் மடக்கொடி மாதர் நின்னால் வருவன இவ்'d2வூர் 105 ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய் ஆதி முதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங் கயமலை பரசினர் ஆதலின் 110 ஈங்கிவ ரிருவரும் இளங்கொடி நின்னோ டோங்குயர் போதி உரவோன் திருந்தடி தொழுதுவலங் கொண்டு தொடர்வினை நீங்கிப் பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய் ஆருயிர் மருந்தாம் அமுத சுரபியெனும் 115 மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை மக்கள் தேவர் எனஇரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன் பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின் 120 மடுத்ததீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென். உரை 1-6. ஆங்கவர் தம்முடன் அறவணவடிகள் யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய் - மணிமேகலை மாதவியுடனும் சுதமதியுடனும் கூடி அறவணவடிகள் எவ்விடத் திலிருக் கின்றார் என்று வினாவிக் கொண்டு, நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின் உரை மூதாளன் உறைவிடம் குறுகி-நரை முதிர்ந்த உடலையும் நா நடுங்காத மொழிகளையுமுடைய முதியோராகிய அறவணவடிகள் உறைவிடத்தை அடைந்து, மைம்மலர்க் குழலி - மலர்களுடன் கூடிய முகில் போலுங் கூந்தலையுடைய மணிமேகலை, மாதவன் திருந்தடி - அறவண முனிவரது திருந்திய திருவடிகளை, மும்முறை வணங்கி முறையுளி ஏத்தி - மூன்று தரம் பணிந்து முறைப்படி துதித்து; நா நடுங்கா உரையின் என மாறுக. நடுங்காத நாவினையும் முதிர்ந்த உரையினையும் உடையான் எனலுமாம்; நடுங்கா நா - வழுவற்றசொல்; மூதுரை - அறிவு மேம்பட்ட உரை. முறையுளி - முறையால்; உளி: மூன்றனுருபின் பொருட்டு. 7-20. புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் - தான் மலர் கொய்யுமாறு உவவனத்தின்கட் சேர்ந்ததனையும், உதயகுமரன் ஆங்கு உற்று உரை செய்ததும் - உதயகுமரன் ஆண்டு வந்து மொழிந்ததனையும், மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும் - அப்பொழுது மணிமேகலா தெய்வம் தோன்றித் தன்னை மணிபல்லவத்தின்கண் கொண்டு சென்றதனையும், ஆங்கத் தீவகத்து அறவோன் ஆசனம் - அத் தீவின்கணுள்ள புத்தன் பாதபீடம்; நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும்-சென்ற பிறப்பைத் தனக்கு உணர்த்தி யருளினதையும், அளித்த பிறப்பின் ஆகிய கணவனை - அங்ஙனம் உணர்த்திய பழம் பிறப்பிற் கணவனா யிருந்தோனை, களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும் - களிப்பு மிக்க கயல் மீனனைய நீண்ட கண்களையுடைய மணிமேகலா தெய்வத்தான் அறிந்தனையும், தவ்வையராகிய தாரையும் வீரையும் - முன்பிறந்தோராகிய தாரையும் வீரையும், வெவ்வினை உருப்ப விளிந்து கேடு எய்தி - தீவினை உருத்து வந்தூட்டுதலான் இறந்தொழிந்து, மாதவி ஆகியும்சுதமதி ஆகியும் - மாதவியாயும் சுதமதியாயும், கோதை அம்சாயல் நின்னொடுங் கூடினர் - அழகிய கூந்தலையும் மென்மையையுமுடைய நின்னொடும் கூடினர், ஆங்கவர் தம் திறம் அறவணன் தன்பால் - அவர்கள் வரலாற்றினை அறவணவடிகளிடம், பூங்கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் - பூங்கொடி போலும் நங்கையே கேட் பாயாக என்று கூறியதனையும்; தன்னைப் படர்க்கையில் வைத்து, அணியிழை தன்னை என்றும், நேரிழைக்கு என்றும் கூறினாள். ‘நெடுங்கண்' திரியா திருப்பின், மணி மேகலையெனப் பொருள்படும். ‘தவ்வையராகிய' என்பது முதல் ‘கேள்' என்பது காறும் மணிமேகலா தெய்வத்தின் கூற்றினை மணிமேகலை கொண்டு மொழிந்தது. 21-30. உரைத்த பூங்கொடி-அங்ஙனங் கூறிய பூங்கொடி போலும் மணிமேகலா தெய்வம், ஒரு மூன்று மந்திரம் - மூன்று மந்திரங் களை, தனக்கு உரை செய்து தான் ஏகிய வண்ணமும் - தனக்கு அருளிச் செய்து அத்தெய்வம் சென்ற திறத்தையும், தெய்வம் போயபின் - மணிமேகலா தெய்வஞ் சென்ற பின்னர், தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்- தீவதிலகை விரைவாகத் தோன்றி அருளொடும் எய்திய தனையும், அடைந்த தெய்வம்-அடைந்த தெய்வமாகிய தீவதிலகை, ஆபுத்திரன் கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் - ஆபுத்திரன் கையிலிருந்த வணங்குதற்குரிய சிறந்த பாத்திரத்தை நால்வகை வாய்மையுடன் அளித்ததனையும், ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள் என்று உரைத்து - ஆபுத்திரனது வரலாற்றை அறவணவடிகளிடம் கேட்பாயாக என்று கூறி, கிளர்ஒளி மாதெய்வம் -விளங்குகின்ற பேரொளியினையுடைய பெருமை பொருந்திய அத்தெய்வம், போகென மடந்தை போந்த வண்ணமும் - நின் பதியிடைப் போவாய் என உரைப்பத் தான் மீண்டுவந்த தன்மையையும், மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் - அறவண வடிகளை வணங்கி மொழிதலும் ; மூன்று மந்திரம் - வேற்றுரு வெய்தவும், அந்தரய் திரியவும், பசி யொழியவும் செய்யும் மந்திரங்கள் (10 : 80--91:) ஐயென - வியக்குமாறு எனவுமாம். தோன்றி-புலப்பட்டு. வாய்மையின் - வாய்மையோடு. 31-44 மணிமேகலை உரை மாதவன் கேட்டு - அறவணவடிகள் மணிமேகலையின் மொழியைக் கேட்டு, தணியா இன்பம் தலைத்தலை மேல்வர -குறையாத பேரின்பம் மேன்மேல் மிகா நிற்க, பொற்றொடி மாதர் நற்றிடம் சிறக்க-பொன் வளையல் களையணிந்த மாதே நினக்கு நல்ல கூறுபாடுகள் சிறப்பனவாக, உற்றுணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்-இவர்கள் வரலாற்றைக் கூறுவேன் நீ அதனைக் கேட்டு அறிவாயாக, நின்நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த - நின் பெருந் தெய்வம் நினக்கு எடுத்துக் கூறிய, அந்நாள் அன்றியும் - அந் நாளிற் சென்றதல் லாமலும், அருவினை கழூஉம் ஆதி முதல்வன் அடியிணையாகிய - அரிய வினைகளைப் போக்கும் புத்தன் திருவடியிணைகள் பொருந்திய, பாதபங்கயமலை பரவிச் செல்வேன்-பாதபங்கயமலையைப் பணிந்து செல்லுவேன், கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழிற் கண்டேன் - கச்சய நகரத்தை ஆண்டுவந்த வீரக் கழலணிந்த கால்களையுடைய துச்சயன் என்ற மன்னனை ஒரு பொழிலினிடத்துக் கண்டேன், மாபெருந் தானை மன்ன நின்னொடும் தேவியர் தமக்கும் தீதின்றோ என - மிகப் பெரிய சேனைகளையுடைய அரசே நீயும்நின் தேவியரும் தீதின்றி இருக்கின்றீரோ என வினவ, அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி - அழிந்த உள்ளத்தோடு புலம்பியவனாய், ஒளியிழை மாதர்க்கு உற்றதை உரைப்போன் - ஒள்ளிய அணிகலனை யுடைய மனைவியர்க்கு நேர்ந்ததை உரைக்கின்றவன்; மாதர் : விளி. செல்வேன் பெயர். கண்டேன் - கண்டு : முற்றெச்சம். 45-54 புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம் - புதிதாகப் பிடித்துக் கொண்டு வரப்பட்ட யானையின் முன்னே மதுவுண்ட களிப்பினாலாகிய மயக்கத்தால் தன்னைப் பாதுகாவாது சென்ற வீரை இறந்ததுவும், ஆங்கது கேட்டு ஓர் அரமியம் ஏறி தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம் - அவள் இறந்த செய்தி கேட்டு அத் துன்பத்தைத் தாங்காமல் தாரை ஒரு நிலா முற்றத்தில் ஏறி வீழ்ந்து இறப்பினை யடைந்ததுவும் ஆகிய, கழிபெருந் துன்பம் காவலன் உரைப்ப - மிகப் பெருந் துயரத்தை அம் மன்னவன் மொழிய, பழவினைப் பயன் நீ பரியல்என்று எழுந்தேன் - இது முற்செய்த வினையின் பயனாம் நீ வருந்தாதே என வுரைத்து அங்கு நின்றும் எழுந்தேன், ஆடும்கூத்தியர் அணியேபோல வேற்றோர் அணியொடு வந்தீரோ என - அங்ஙனமாகிய நீவிர் நாடக வரங்கில் நடிக்கும் கூத்தியர் கொள்ளுங்கோலம் போல ஈண்டு வேறு வகையான கோலத் துடன் வந்தீரோ என்று, மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம் துணிபொருள் மாதவன் சொல்லியும் அமையான் - துணியப் பட்ட பொருளினையுடைய பெருந்தவன் மணிமேகலையின் முன்னர் மாதவி சுதமதிகளின் வரலாற்றினைக் கூறியும் அமையாதவனாய்; வீரை மயக்கத்தால் போற்றாது சென்று மாய்ந்ததும், தாரை ஏறி வீழ்ந்து சாவுற்றதும் என்க. ஆகிய துன்பம் என ஒரு சொல் விரித்துரைக்க. கூத்த ரென்பதும் பாடம்; 1''ஆடுங் கூத்தர்போ லாருயி ரொருவழிக், கூடிய கோலத் தொருங்குநின் றியலாது'' என்பது ஈண்டு அறியற்பாலது. வந்தீரோ என்றது மாதவியையும் சுதமதியையும் நோக்கி. துணிபொருள் மாதவன் - மெய்ப் பொருளைத் துணிந்தவன் என்னும் கருத்தினது. 55-65. பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த-பழம் பிறப்பையும் அறநெறியையும் முன்னை நல்வினையால் அறிந்த, நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய் - நறிய மலர் மாலையணிந்த நங்கையே உவந்து கேட்பாயாக, தரும தலைவன் தலைமையின் உரைத்த - தரும முதல்வனாகிய புத்தன் முதன்மையாகக் கூறிய, பெருமை சால் நல்லறம் பெருகாதாகி - பெருமையமைந்த நல்லறம் வளர்தலின்றி, இறுதிஇல் நற்கதி செல்லும் பெருவழி - அழிவில்லாத நற்கதியாகிய நிருவாணத்திற்குச் செல்லும் பெருநெறி, அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண் அடைத்தாங்கு - அறுகம்புல்லும் நெருஞ்சியுஞ் செறிந்து இடத்தை யடைத்தாற் போல, செயிர் வழங்கு தீக்கதி திறந்து - துன்பத்தையுடைய தீக்கதிக்கண் செல்லும் வழி திறக்கப்பட்டு நெருக்குதலின், கல்லென்று உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது-ஆரவாரத்துடன் உயிர்கள் செல்லும் பொதுநெறியாகிய ஒரு கூற்றிலே பட்டது (ஆகலின் அப்பெரு வழி), தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம் - குளிர்ந்த பனியால் மூடப் பட்ட சிவந்த ஞாயிற்று மண்டிலம், உண்டுஎன உணர்தல் அல்லது- உண்டு என்று அறிகின்ற அளவினை அன்றி, யாவதும் கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது-சிறிதும் தெளிவாகக் கண்டறியப்படாத காட்சியைப் போன்றது; நிலமிசை நடந்து செல்லும் வழியை அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து அடைந்தாற்போல் நற்கதி செல்லும் பெருவழியைத் தீக்கதியிற் செல்லும் நெறிகள் திறந்து அடைத்தலால் என்க. பெருவழி ஒரு திறம் பட்டதென்க. உயிர் வழங்கு பெருநெறி என்றது பிறந்திறக்கும் உயிர்கள் செல்லும் பொதுவழி; 1''பெரும்பே ரியாக்கை பெற்ற நல்லுயிர், மலர் தலை யுலகத்துயிர்போகு பொதுநெறி......போகுதல் பொறேஎன்'' எனச் செங்குட்டுவனை நோக்கி மாடலன் கூறிற்றாக வுள்ளது காண்க. ஆகலின் அப் பெருவழியென விரித்துரைக்க. இனி, தீக்கதி திறக்கப் பெருநெறி ஒருதிறம் பட்டமையின் பெருவழி காட்சி போன்றது என முடித்தலுமாம். அறுகை - அறுகு. செயிர் - குற்றமுமாம். காட்சி - தன்மை . 66-71. சலாகை நுழைந்த மணித்துளை அகவயின் - சிறிய நாராசம் நுழைந்த மணிகளின் துளையாகிய உள்ளிடத்தே, உலா நீர்ப் பெருங் கடல் ஓடாதாயினும் - பெரிய கடலில் உலாவுகின்ற நீர் முழுவதும் ஓடாதானாலும், ஆங்கத் துளைவழி உகுநீர்போல - அச் சிறிய துளையின் வழியே சிந்துகின்ற நீரைப்போல, ஈங்கு நல்லறம் எய்தலும் உண்டு எனச் சொல்லலும் உண்டுயான் - இவ்வுலகில் நல்ல அறங்களை அடைதலும் உண்டு என்று யான் மொழிவதும் உண்டு, சொல்லுதல் தேற்றார் மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின் - அங்ஙன முரைப்பதை வளப்பம் மிக்க பெரிய பூமியின்கணுள்ள மக்கள் தெளியார் ஆகலின்; மக்கள் தேற்றாராதலின் என்க. ஏ : அசை; தேற்றமுமாம். ஆதலின் - ஆயினும் என்றுமாம். 72-82. சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்-சக்கரவாளத்திலுள்ள தேவரனைவரும், தொக்கு ஒருங்கு ஈண்டித் துடிதலோகத்து மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப - சேர்ந்து ஒன்றாகக் கூடித் துடிதலோகத்துள்ள சிறந்த தேவன் திருவடிகளில் விழுந்து இரக்க, இருள் பரந்து கிடந்த மலர்தலை உலகத்து - இருளாற் பரவப்பட்டுக் கிடந்த அகன்ற இடத்தையுடைய பூமியின்கண், விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன - விரிந்த கிரணங்களையுடைய பரிதிவானவன் தோன்றினாற் போல, ஈரெண்ணூற்றொடு ஈரெட்டாண்டில் பேரறிவாளன் தோன்றும் - ஆயிரத்தறுநூற்றுப் பதினாறாம் ஆண்டில் புத்தன் தோன்றுவான், அதன் பிற்பாடு - அதன் பின்பு, பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி - பெரிய குளத் திலுள்ள மதகாகிய சிறிய வழியில், இரும் பெரு நீத்தம் புகுவது போல - மிகப் பெரிய வெள்ளம் புகுவதைப்போல, அளவாச் சிறுசெவி - பேரளவில்லாத சிறிய செவிகளின் வழியே, அளப்பரு நல்லறம் உளம் மலி உவகையொடு உயிர் கொளப் புகூஉம் - அளத்தற்கரிய நல்லறங்கள் உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியோடு உயிர்கள் ஏற்றுக்கொள்ளும்படி புகாநிற்கும்; துடிதலோகம் - உலகம் முப்பத்தொன்றனுள் ஒன்பதாவது; தெய்வலோகம் ஆறனுள் நான்காவது. மிக்கோன்-சிறந்தவன்; இவன் பெயர் பிரபாபாலன் என்பர். ஈண்டுக் குறிக்கப்பட்ட ஆண்டு இன்ன அப்தத்தைச் சேர்ந்ததென்று தெரியவில்லை. வளவா எனப் பிரித்து வளமில்லாத என்றுரைத்தலுமாம். சிறு செவிப் புகூஉம் என்க. . 83-98. கதிரோன் தோன்றும் காலை ஆங்கவன் அவிர் ஒளி காட்டும் மணியே போன்று - ஞாயிறு தோன்றும் பொழுதில் அஞ் ஞாயிற்றினது விளங்குகின்ற ஒளியினைக் காட்டும் சூரிய காந்தம்போல, மைத்து இருள் கூர்ந்த மனமாசு தீர - கறுத்து இருண்மிக்க மனத்தின்கண் உள்ள குற்றம் நீங்க, புத்தஞாயிறு தோன்றும் காலை - புத்தனாகிய ஞாயிறு தோன்றும்பொழுது, திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்க - மதியும் பரிதியும் தீமையுறாமல் விளங்க, தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும் - ஓரிடத்தில் நிலையுதலில்லாத நாண்மீன்கள் தக்கவாறு நடக்கும், வானம் பொய்யாது - முகில் மழை பெய்வதிற் பொய்படாது, மாநிலம் வளம்படும் - பெரிய பூமி வளஞ்சிறக்கும், ஊன் உடை உயிர்கள் உறுதுயர் காணா - ஊனினையுடைய உயிர்கள் துயரமடைதலைக் காணா, வளிவலம் கொட்கும் - காற்று வலமாகச் சுழலும், மாதிரம் வளம்படும் - திசைகள் செழுமையுறும், நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம் - செறிந்த நீரினையுடைய பெரிய கடல் முத்து முதலிய பல வளங்களைக் கொடுக்கும், கறவை கன்று ஆர்த்திக் கலநிறைபொழியும் - பசுக்கள் கன்று களைஉண்ணச் செய்து கறவைக்கலம் நிறைந்து வழியுமாறு பால் பொழியும், பறவை பயன் துய்த்து உறைபதி நீங்க - பறவைகள் பயனை நுகர்ந்து தாம் வாழ்விடங்களிலிருந்து நீங்கா, விலங்கும் மக்களும் வெரூஉப்பகை நீங்கும் - விலங்கினமும் மக்களினமும் தம்முள் அஞ்சுதற்குக் காரணமா, கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறா குறள் வடிவும் ஊமையும் செவிடும் விலங்குருவமும் அறிவின்றி மயங்கி யிருத்தலுமாதிய பிறப்புக்களை மக்களுயிர் பெறமாட்ட சூரிய காந்தம் கதிரவன் ஒளியைக் காட்டுதல்போலத் திங்கள் முதலியன புத்தனது தோற்றத்தினைப் புலப்படுத்துமென்க. பொருளுக்கேற்ற உவமையில் புறவிருள் நீங்கக் கதிரோன் தோன்றுங்காலை என விரித்துரைக்க. உறா: ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தங்கா என்றும் நடக்கும் என்றும் கூறுதலின் நாண்மீன் என்பதற்கு ஈண்டு ஞாயிறு திங்க ளொழிந்த கோட்கள் என்று பொருள் கொள்ளுதல் பொருந்தும் ; நட்சத்திரங்களையே தோற்றம்பற்றி அங்ஙனம் கூறினாரெனலுமாம். ஊனுடையுயிர்கள்-தேவரல்லாத மக்கள் முதலிய உயிர்கள் : 1"ஊனடைந்த வுடம்பின் பிறவியே" என்பது காண்க. ஊன் உடை-உடம்பு மெலிந்த என்பாருமுளர். மாதிரம் - மலையுமாம். 2"வலமா திரத்தான் வளிகொட்ப," "மாதிரங் கொழுக்க என்றார் பிறரும். நிறை - நிறைய: விகாரம்; சால் என்பாருமுளர். விலங்கு முதலியவற்றை அவ்வவ் வினமெனக் கொள்க; அன்றித் திணை விரவி அஃறிணை முடிபுற்றன என்னலுமாம். அஞர் - துன்புறுதலை; துன் புறுத்தலை என்றலுமாம். கூன் முதலிய ஆறனோடு, குருடு, உறுப்பில் பிண்டம் ஆகிய இரண்டுங்கூட்டி எண்வகை எச்சமென்பர்; 1"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும், கூனுங் குறளு மூமுஞ் செவிடும், மாவு மருளுமுளப்பட வாழ்நர்க், கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்" என்பது காண்க. 99-107. அந்நாட் பிறந்தவன் அருளறம் கேட்டோர் - அந்நாளில் பிறந்த புத்தனது அருளறத்தைக் கேட்டோர்கள், இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின் - துன்பந்தரும் பிறவியைக் கடந்தவர்கள் ஆகலினால்; போதி மூலம்பொருந்திய சிறப்பின்-அரசமரத்தடியிலமர்ந்த சிறப்பினையுடைய, நாதன் பாதம் நவைகெட ஏத்துதல் - தலைவன் திருவடிகளைக் குற்றம் நீங்குமாறு துதித்தலை, பிறவி தோறும் மறவேன் மடக்கொடி - மடக்கொடியே யான் பிறவி தோறும் மறவேன், மாதர் நின்னால் வருவன இவ்'d2வூர் ஏதுநிகழ்ச்சி யாவும் பலவுள-நங்காய் நின்னால் இவ்'d2வூரில் உண்டாவனவாகிய ஏது நிகழ்ச்சிகள் பல உள்ளன, ஆங்கவை நிகழ்ந்த பின்னர் அல்லது - அவை நிகழ்ந்த பின்பன்றி, பூங்கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்-பூங்கொடிபோலும் மாதே அறவுரை கேளாய்; அருளறம் - தயாதன்மம்; அருளிய அறம் என்றுமாம். மறவேல் எனப் பிரித்துரைத்தலுமாம். ஏது நிகழ்ச்சி என்பதுபற்றி முன்னர் (3 : 4) உரைத்தமை காண்க. மாதர் என்பது விளி. பொருளுரை - மெய்யுரை: ஈண்டு அறவுரை; பொருள்-மெய்மை யாதலை 2"பொய்யில் புலவன் பொருளுரை" 3"பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பவற்றானும், 4"பொருள் சேர் புகழ்" என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையானும் அறிக. 108-113. ஆதிமுதல்வன் அருந்துயர் கெடுக்கும் பாதபங்கயமலை பரசினர் ஆதலின்-தீர்த்தற்கரிய துயரத்தை நீக்கும் புத்தனுடைய பாதபங்கய மலையை வணங்கினர் ஆதலின், ஈங்கிவர் இருவரும் இளங்கொடி நின்னோடு-இளங்கொடி போல்வாய இவர் இருவரும் நின்னுடன், ஓங்குயர்போதி உரவோன் திருந்தடி - மிக உயர்ந்த போதியின்கீழ் அமர்ந்த மெய்யறிவுடையோனது திருந்திய அடிகளை, தொழுது வலங்கொண்டு, தொடர் வினை நீங்கி - வலங் கொண்டுதொழுது வினைப்பற்றுக் களினின்றும் நீங்கி, பழுதில் நன்னெறிப் படர்குவர் காணாய் - குற்றமற்ற நல்ல வழியிலே செல்வர் காண்பாய்; உரவோன் - புத்தன் ; உரம் - திண்ணிய அறிவு. பழுதில் நன்னெறி - தூநெறி. 114-121. ஆருயிர் மருந்தாம்-உயிர்களைக் காக்கின்ற அருமருந் தாகிய, அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் மடக்கொடி பெற்றனை - அமுதசுரபி யென்னும் பெருமை பொருந்திய பாத்திரத்தை நீ பெற்றிருக்கின்றாய் ஆகலின், மக்கள் தேவர் என இருசார்க்கும் - மக்கள் தேவர் என்னும் இரு பகுதிகட்கும், ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன் - ஒத்த முடிவினை யுடைய ஓர் அறத்தைக் கூறுகின்றேன், பசிப்பிணி தீர்த்தல் என்றே - அது பசிப்பிணி தீர்த்தலாம் என்று, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆகலின்-அறவணவடிகள் மிகப் பெரிய நல்லறத்தைக் கூறினர் ஆதலால், மடுத்த தீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட -மிகுந்த தீயினாற் கொளுத்தப் பட்டாற் போன்ற உயிர்களின் பசியானது அழியுமாறு, எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென் - மணிமேகலை தெய்வக் கடிஞையைக் கையில் எடுத்தனள் என்க. அவியுணவுடையராகலின் இவ் அறம் தேவர்க்கும் ஒத்த தாயிற்று. அது தீர்த்தலாகும் என விரித்துரைக்க. இளங்கொடி அவர் தம்முடன் அடிகள் யாங்குளரென்று வினாய்க் குறுகி மாதவனடியை வணங்கி ஏத்தி உரைத்தலும் கேட்டு, அவரும் தவப்பெரு நல்லறம் சாற்றினராதலின், இளங்கொடி பாத்திரம் எடுத்தனள் என வினை முடிவு செய்க. அறவணர்த் தொழுத காதை முற்றிற்று. 13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை (அப்பொழுது அறவணவடிகள் மணிமேகலையை நோக்கி, நினக்கு அப்பாத்திரம் அருளிய ஆபுத்திரன் வரலாற்றைக் கூறுவேன்; கேட்பாயாக; வாரணாசிரமத்தில் உள்ள ஆரண உபாத்தியாகிய அபஞ்சிகன் என்னும் அந்தணன் மனைவி சாலியென்பாள் தீயொழுக்கத்தாற் கணவனைப் பிரிந்து குமரியாடச் சென்றவள் சூலால் வருந்தி வழியிடையே ஒரு குழவியை ஈன்று இரக்கமின்றி அக்குழவியை ஒரு தோட்டத்தில் இட்டு நீங்கினள்; நீங்கவே அக்குழவி பசியால் வருந்தியழுதது ; அவ்வழுகை யோசையைக் கேட்ட ஒரு பசு அவ்விடத்து வந்து அதன் வருத்தந் தீரும்படி நாவால் நக்கிப் பாலூட்டி ஏழுநாள் காறும் அப்புறஞ் செல்லாது பாதுகாத்து வந்தது; அங்ஙனம் நிகழுகையில், வயனங்கோடென்னும் ஊரிலுள்ள பூதியென்னும் அந்தணன் பார்ப்பனியோடும் அவ் வழியே வருவோன் அக்குழவியின் அழுகை யொலியைக் கேட்டுச் சென்று, அதனைக் கண்டு மிக்க துன்பத்துடன் கண்ணீர் சொரிந்து, 'இவன் ஆமகனல்லன்; என் மகனே' என்று கூறி எடுத்துச் சென்று ஊரினை அடைந்து மகிழ்வுடன் வளர்த்துத் தன் மரபிற்குரிய கல்விகளைப் பயிற்றி வந்தான்; அவற்றை நன்கனம் பயின்ற அவன் ஒருநாள் அவ்'d2வூரிலுள்ள ஓர் அந்தணன் இல்லிற் புகுந்து, அங்குள்ள வேள்விச் சாலையில் ஓர் ஆன், வேட்டுவர் வலையிற் பட்ட மான் போல் அஞ்சிக் கதறுவதைக் கண்டு உளம் நடுங்கிக் கண்ணீருகுத்து, பகல் முழுவதும் ஒரு பக்கத்தில் மறைந்திருந்து, இரவில் அதனைக் கைப்பற்றி ஊருக்கு வெளியே போய் விட்டான் ; ஆவைக் காணாத அந்தணர் பலர் அதனைத் தேடிச் சென்று வழியிற் பசுவையும் அவனையும் கண்டு அகப்படுத்தி, ''புலைச் சிறுமகனே ! இதனை இரவில் ஏன் கவர்ந்து சென்றனை?'' எனக் கேட்டு, அவனைக் கோலால் ஒறுக்கத் தொடங்கினர். அப்பொழுது அவர்களுள் மிகவும் துன்புறுத்திய உவாத்தியை அப் பசு கொம்பினாற் குத்திக் குடரைப் பறித்துக் காட்டின்கண் விரைந்தோடியது. ஆபுத்திரன் அன்னாரை நோக்கி; ''நோவன செய்யன்மின் ; பயிர் செய்யாது விடப்பட்ட நிலத்தில் தானே முளைத்த புல்லையுண்டு, மக்கள் பிறந்த நாள் தொட்டுத் தன் இனிய பாலை அருள் சுரந்தூட்டும் ஆவினிடத்து நுங்கட்குச் செற்ற முண்டாயது எங்ஙனம்?'' என்று கேட்க, அவர்கள், ''நீ வேதவிதியை அறியாமல் வேள்வியை இகழுகின்றனை; ஆதலின், ஆ மகனாதற்குப் பொருத்தமுடையையே,'' என்றிகழ்ந் துரைத்தலும், ஆபுத்திரன், “ ஆன்மகன் அசலன் ; மான்மகன் சிருங்கி ; புலிமகன் விரிஞ்சி ; புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன் ? ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று ஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்; ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ?'' என்று சொல்ல, அவர்களுள்ளே ஓ ரந்தணன் “இவனது பிறப்பினை யான் அறிவேன்," எனக் கூறி, முன்பு குமரியாடப் போந்த சாலியைத் தான் கண்டு வினாவி யறிந்த வரலாற்றை உரைத்து, “தூயனல்லாத இவனைத் தொடுதல் செய்யாதீர்,'' என்ன, “தேவ கணிகையாகிய திலோத்தமை பெற்ற மைந்தர்கள் பெரிய முனிவர்களாக இருத்தல் கேட்டிலிரோ? சாலிக்குத் தவறு கூறத் துணிந்தீர்களே,'' என்று கூறி, ஆபுத்திரன் அவர்களை நோக்கி நகைத்தான்; அவனை வளர்த்த பூதியும் அவனை இழிந்தவனென நீக்கிவிட்டான்; அப்பால் ஆபுத்திரன் பிச்சை யேற்றுண்ணத் தொடங்கிய பொழுது, அந்தணர் பதியிலெல்லாம் அவனை ஆகவர் கள்வனென்றி கழ்ந்து, அவனது கடிஞையிற் கல்லிடலாயினர் ; அதனால், அவன் வேறு புகலின்றித் தென் மதுரையை அடைந்து சிந்தா தேவியின் கோயிலின் முன்புள்ள அம்பலத்தில் இருந்து கொண்டு, கையிற் கடிஞை யேந்தி மனைதோறும் சென்று வாங்கிவந்த உணவை, “ காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருக என் றிசைத்துட னூட்டி'' அவர்களுண்டு எஞ்சியதனையே தான் உண்டு, பிச்சை யோட்டையே தலையணையாக வத்துக்கொண்டு அவ்வம்பலத்திலே நாள் தோறும் இரவிற் கண்படை புரிந்து காலங் கழிப்பானாயினன். மாபெரும் பாத்திரம் மடக்கொடிக் கருளிய ஆபுத் திரன் றிறம் அணியிழை கேளாய் வார ணாசியோர் மறையோம் பாளன் ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் 5 பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித் தென் றிசைக் குமரி யாடிய வருவோள் சூன்முதிர் பருவத்துத் துஞ்சிருள் இயவிடை ஈன்ற குழவிக் கிரங்கா ளாகித் 10 தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்கத் தாயில் தூவாக் குழவி துயர் கேட்டோர் ஆவந் தணைந்தாங் கதன்றுயர் தீர நாவால் நக்கி நன்பா லூட்டிப் போகா தெழுநாட் புறங்காத் தோம்ப 15 வயனங் கோட்டிலோர் மறையோம் பாளன் இயவிடை வருவோன் இளம்பூதி யென்போன் குழவி யேங்கிய கூக்குரல் கேட்டுக் கழுமிய துன்பமொடு கண்ணீ ருகுத்தாங், காமக னல்லன் என்மகன் என்றே 20 காதலி தன்னொடு கைதொழு தெடுத்து நம்பி பிறந்தான் பொலிகநங் கிளையெனத் தம்பதிப் பெயர்ந்து தமரொடுங் கூடி மார்பிடை முந்நூல் வளைனயா முன்னர் நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி 25 ஓத்துடை யந்தணர்க் கொப்பவை யெல்லாம் நாத்தொலை வின்றி நன்கனம் அறிந்தபின் அப்பதி தன்னுளோர் அந்தணன் மனைவயின் புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில் குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி 30 வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக் கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்றாங் கஞ்சிநின் றழைக்கும் ஆத்துயர் கண்டு நெஞ்சுநடுக் குற்று நெடுங்கணீ ருகுத்துக் 35 கள்ள வினையிற் கடுந்துயர் பாழ்பட நள்ளிருள் கொண்டு நடக்குவன் என்னும் உள்ளம் கரந்தாங் கொருபுடை ஒதுங்கி அல்லிடை யாக்கொண் டப்பதி அகன்றோன் கல்லதர் அத்தம் கடவா நின்றுழி 40 அடர்க்குறு மாக்களொ டந்தண ரெல்லாம் கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி ஆகொண் டிந்த ஆரிடைக் கழிய நீமகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய் புலைச்சிறு மகனே போக்கப் படுதியென் 45 றலைக்கோ லதனால் அறைந்தனர் கேட்ப ஆட்டிநின் றலைக்கும் அந்தண ருவாத்தியைக் கோட்டினில் குத்திக் குடர்புய்த் துறுத்துக் காட்டிடை நல்ஆக் கதழ்ந்து கிளர்ந்தோட ஆபுத் திரன்தான் ஆங்கவர்க் குரைப்போன் 50 நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின் விடுநில மருங்கின் படுபுல் லார்ந்து நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும் 55 இதனொடு வந்த செற்றம் என்னை முதுமறை அந்தணிர் முன்னிய துரைமோ பொன்னணி நேமி வலங்கொள்ளக் கரக்கை மன்னுயிர் முதல்வன் மகனெமக் கருளிய அருமறை நன்னூல் அறியா திகழ்ந்தனை 60 தெருமரல் உள்ளத்துச் சிறியை நீயவ் ஆமக னாதற் கொத்தனை அறியாய் நீமகன் அல்லாய் கேளென இகழ்தலும் ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும் 65 நரிமகன் அல்லனோ கேச கம்பளன் ஈங்கிவர் நுங்குலத் திருடி கணங்களென் றோங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலு முண்டால் ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நன்னூ லகத்தென 70 ஆங்கவர் தம்முளோர் அந்தணன் உரைக்கும் ஈங்கிவன் தன்பிறப் பியானறி குவனென நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் வடமொழி யாட்டி மறைமுறை யெய்திக் குமரி பாதங் கொள்கையின் வணங்கித் 75 தமரில் தீர்ந்த சாலியென் போள்தனை யாது நின்னூர் ஈங்கென் வரவென மாமறை யாட்டி வருதிறம் உரைக்கும் வார ணாசியோர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி யரும்பெறல் மனைவியான் 80 பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுகிக் காப்புக் கடைகழிந்து கணவனை 1யிகழ்ந்தேன் 2எற்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு தெற்கண் குமரி யாடிய வருவேன் பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் 85 காவதங் கடந்து கோவலர் இருக்கையின் ஈன்ற குழவிக் கிரங்கே னாகித் தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் செல்கதி யுண்டோ தீவினை யேற்கென் றல்லலுற் றழுத அவள்மகன் ஈங்கிவன் 90 சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின் புல்லலோம் பன்மின் புலைமகன் இவனென ஆபுத் திரன்பின் பமர்நகை செய்து மாமறை மாக்கள் வருகுலங் கேண்மோ முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய 95 கடவுட் கணிகை காதலஞ் சிறுவர் அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் புரிநூன் மார்பீர் பொய்யுரை யாமோ சாலிக் குண்டோ தவறென வுரைத்து நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப 100 ஓதல் அந்தணர்க் கொவ்வான் என்றே தாதை பூதியுந் தன்மனை கடிதர ஆகவர் கள்வனென் றந்தணர் உறைதரும் கிராம மெங்கணுங் கடிஞையிற் கல்லிட மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் 105 தக்கண மதுரை தான்சென் றெய்திச் சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத், தந்தின் முன்றில் அம்பலப் பீடிகைத் தங்கினன் வதிந்தத் தக்கணப் பேரூர் ஐயக் கடிஞை கையின் ஏந்தி 110 மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக் காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுந ரில்லோர் பிணிநடுக் குற்றோர் யாவரும் வருகவென் றிசைத்துட னூட்டி உண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக் 115 கண்படை கொள்ளுங் காவலன் றானென். உரை 1-10. மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய - பெருமை மிக்க இவ் வமுதசுரபியை நினக்குக் கொடுத்த, ஆபுத்திரன் திறம் அணியிழை கேளாய் - ஆபுத்திரன் வரலாற்றை அணியிழாய் கேட்பாயாக, வாரணாசி ஓர் மறை ஓம்பாளன் - காசித் திருப்பதியின் கண்ணுள்ள ஓர் அந்தணனும், ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன் - மறைகளை ஓதுவிப்போனும் ஆகிய அபஞ்சிகன் என்போனது, பார்ப்பனி சாலி காப்புக் கடைகழிந்து - மனைவியாகிய சாலி என்பவள் காவலின் எல்லையைக் கடந்து, கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சி - கொழுநனுக்குப் பிழைபுரிந்தமையாலுண்டாம் தண்டத்திற்குப் பயந்து, தென்றிசைக் குமரி ஆடிய வருவோள் - தென் திசையிலுள்ள குமரியின்கண் நீராடும் பொருட்டு வருகின்றவள், சூல் முதிர் பருவத்து துஞ்சு இருள் இயவிடை - அனைவரும் உறங்குவதற்குக் காரணமாகிய இருளில் வழியிடத்திலே சூல் முதிர்ந்த பருவத்தில், ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகி - பெற்ற குழந்தைக்குச் சிறிதும் இரங்காதவளாய், தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க - கட்புலனாகாத ஒரு தோட்டத்திலே இட்டுச் செல்ல; திறம்-வரலாறு. மறை ஓம்பாளன்-வேதத்தைப் பாதுகாப்பவன். உவாத்தி - உபாத் தியாயன் என்பதன் சிதைவு ; இஃது உவாத்தியன் ; உவாத்தியான் எனவும் வழங்கும். பார்ப்பனி - பார்ப்பான் மனைவி; மறையோரிற் கணவனைப் பார்ப்பான் என்றும், மனைவியைப் பார்ப்பனியென்றும் கூறுவர். காப்பு-நிறைக்காவல். காப்புக் கடை கழிந்து - கற்பொழுக்கம் நீங்கி யென்றபடி. தண்டம் - மறுமையில் எய்தலாகும் தண்டனை. குமரி-குமரியாறு; கடலுமாம். 1“தொடியோள் பௌவம்'' என்பதன் உரை காண்க. ஆடிய : செய்யிய வென்னும் வினையெச்சம். முதிர் பருவத்து - முதிர்ந்த பொழுதிலே. தோன்றா - மறைவிடத்துள்ள. துடவை - தோட்டம்; 2“தொய்யாது வித்திய துளர்படு துடவை'' என்பது காண்க. 11-14. தாயில் தூவாக் குழவி துயர் கேட்டு - உண்ணாது பசித் துன்பத்தால் அழுகின்ற தாயற்ற குழந்தை ஒலியைக் கேட்டு, ஓர் ஆ வந்து அணைந்து ஆங்கு அதன் துயர்தீர - ஒரு பசு ஆண்டு வந்து சேர்ந்து அக் குழவியின் பசித்துன்பம் நீங்க, நாவால் நக்கி நன்பால் ஊட்டி - நாவினால் நக்குதல் புரிந்து தனது இனிய பாலை உண்பித்து, போகாது எழுநாள் புறம்காத்து ஓம்ப-ஏழு நாள்வரை அக்குழவியை விட்டு நீங்காமல் பாதுகாக்க ; தூவாமை - உண்ணாமை, துயர்-துயரினால் அழுது கூப்பிடும் ஒலி : ஆகுபெயர், 1“தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூஉம்நின்னுடற்றியோர் நாடே'' என்பது அறியற்பாலது. குழவித் துயரென்பதும் பாடம். புறங்காத்தல் - பாதுகாத்தல்; 2“வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப'' என்றார் தொல்காப்பியனாரும். புறங்காத்து ஓம்ப : ஒருபொருட் பன்மொழி. ஆவானது பாதுகாத்தமையின் இவனுக்கு ஆபுத்திரன் என்பது பெயராயிற்று. 15-20. வயனங் கோட்டில் ஓர் மறை ஓம்பாளன் - வயனங்கோடு என்னும் ஊரிலுள்ள ஒரு மறையவன், இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்- இளம்பூதி என்னும் பெயருடையவன் வழியிடை வரும்பொழுது, குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டு-குழந்தை அழுத கூப்பீட்டொலியைக் கேட்டு, கழுமிய துன்ப மொடு கண்ணீர் உகுத்தாங்கு - கலந்த துன்பத்துடன் கண்ணீர் சொரிந்து, ஆமகன் அல்லன் என் மகன் என்றே-இக்குழந்தை பசுவின் மகன் அல்லன் என்னுடைய புதல்வனே என்று கூறி, காதலி தன்னொடு கைதொழுது எடுத்து - தமக்கு மகப் பேற்றினையளித்த கடவுளைக் கைகூப்பி வணங்கி மனைவியுடன் குழந்தையை எடுத்து; பின் காதலி தன்னொடு என்னலால், மனைவியுடன் வருவோன் என்க. இளம்பூதி-இப்பெயர் பூதியெனவே இக் காதையுட் பின்வருகிறது. ஆவானது பாதுகாத்தலைக் கண்டமையின் 'ஆமகனல்லன்' எனக் கூறினான். நாவிடை - நாவினால். நன்னூல்-வேதன் வேதாங்கம் முதலியன. அக் குழவியைத் தனக்களித்தது தெய்வமென்றெண்ணி அத் தெய்வத்தைத் தொழுதன னென்க. 21-26 நம்பி பிறந்தான் பொலிக நம் கிளை என-மகன் பிறந்தனன் இனி நம் கிளை பொலிவுறுக என்று, தம் பதிப் பெயர்ந்து தமரொடுங்கூடி - தம் மூரின்கட் சென்று உறவினருடன் கூடி, மார்பிடை முந்நூல் வனையா முன்னர்-மார்பின்கண் முந்நூல் அணிதற்கு முன்னரே, நாவிடை நன்னூல் நன்கணம் நவிற்றி - நாவினால் மறைகளை நன்கு பயிலச் செய்ய, ஓத்துடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம் - மறையோதும் அந்தணர் கட்குப் பொருந்துவன அனைத்தையும், நாத்தொலைவின்றி நன்கனம் அறிந்தபின் - சொல்வன்மை குன்றாமல் நன்குணர்ந்த பின்னர் ; முந்நூல் - பூணுநூல், விரைவுபற்றி வனையா முன்னர் என்றார். நாவிடை - நாவால். நவிற்றி - கவிற்ற வென்க. நவிற்றுதல் - அடிப்படப் பயில்வித்தல். நாத் தொலைவின்றி-நாவானது தோற்றல் இல்லையாக; பிறிதோர் சொல் வெல்லுஞ் சொல் இன்மையறிந்து சொல்ல வல்லனாக என்றபடி. 27-34. அப் பதி தன்னுள் ஓர் அந்தணன் மனைவயின் புக்கோன்- அவன் அவ்'d2வூரில் ஒரு மறையவன் வீட்டினுட்சென்றவன், ஆங்குப் புலை சூழ் வேள்வியில்-அவ்விடத்தில் ஊனுண்ணு தலைக் கருதுகின்ற வேள்விச் சாலையில், குரூஉத் தொடை மாலை கோட்டிடைச் சுற்றி-தொடுக்கப்பட்ட நிறமமைந்த மாலை கொம்பின்கண் சுற்றப்பட்டு, வெரூஉப் பகை அஞ்சி வெய் துயிர்த்துப் புலம்பி - அச்சத்தைத் தருகின்ற பகைக்கு அஞ்சி வெவ்விதாக மூச்செறிந்து வருத்தமுற்று, கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி - கொலைத் தொழில் புரியும் வேடருடைய வில்லிற்குப் பயந்து, வலையிடைப்பட்ட மானே போன்று - வலையின்கண் அகப்பட்ட மானைப் போல, ஆங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர் கண்டு - ஆண்டு அச்சத்துடன் நின்று கூப்பிடும் பசுவின் துன்பத்தைக் கண்டு, நெஞ்சு நடுக்குற்று நெடுங்கணீர் உகுத்து-உள்ளம் நடு நடுங்கிமிக்க கண்ணீரைச் சொரிந்து; புலை-புன்மை; கீழ்மையுடைய ஊன் தின்றலுக்காயிற்று. வேள்வி யென்பதும் வேள்விச்சாலைக்கு ஆகுபெயர். பகையை அஞ்சியென இரண்டாவது விரித்தலுமாம். புலம்பி - வருத்த முற்று. கொடுமரம்- வில்; அம்பெய்தலை யுணர்த்தி நின்றது. 35-39. கள்ளவினையில் கடுந்துயர் பாழ்பட - இப்பசுவினது மிக்க துன்பம் இல்லையாம்படி திருட்டுத்தொழிலால், நல்லிருள் கொண்டு நடக்குவன் என்னும் - செறிந்த இருளின்கண் இதனைக் கொண்டு செல்லுவேன் என்கின்ற, உள்ளம் கரந்து ஆங்கு ஒருபுடை ஒதுங்கி - தன் எண்ணத்தை மறைத்து அவ்விடத்தில் ஒருபக்கம் மறைந்திருந்து, அல்லிடை ஆக்கொண்டு அப்பதி அகன்றோன் - இரவில் பசுவைப்பற்றி அவ்'d2வூரைவிட்டு நீங்கினோன், கல்அதர் அத்தம் கடவா நின்றுழி-பருக்கைக் கற்கள் பொருந்திய சின்னெறியை யுடைய அருவழியைத் தாண்டிச் செல்லும் பொழுது ; நள்ளிருள் - செறிந்தவிருள் ; நளி யென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. பாழ்பட வினையிற்கொண்டு எனக் கூட்டுக. என்னும் உள்ள முடையனாய் அதனைக் கரந்து என விரித்துரைக்க. 1“கல்லத ரத்தங் கடக்க'' என்றார் இளங்கோவடிகளும். 40-45. அடர்க்குறு மாக்களொடு அந்தனர் எல்லாம்-நெருக்கு தலைச் செய்யும் முழுவலியுடைய மக்களோடு அந்தணர் அனைவரும் கூடி, கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி - அருநெறியில் அவனைப் பசுவொடு பிடித்துக்கொண்டு, ஆ கொண்டு இந்த ஆரிடைக்கழிய- பசுவைத் திருடிக்கொண்டு இந்த அரிய வழியிலே நீங்குமாறு, நீ மக னல்லாய் நிகழ்ந்ததை உரையாய்-மகனல்லையாகிய நீ நிகழ்ந்த காரணத்தைக் கூறுவாயானால், புலைச் சிறு மகனே போக்கப்படுதி என்று - புலைத் தொழிலையுடைய கீழ்மகனே விலக்கப்படுவாய் என்று, அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப-வருத்துதலைச் செய்யும் கோலினால் அடித்துக் கேட்க ; அடர்க்குறு - பகையாயினாரை நெருக்கி வருத்துதலைச் செய்யும். வேள்விப் பசுவைக் கவர்ந்தமையின் புலைச்சிறுமகன் என்றார். உரையாய் உரைப்பின் போக்கப்படுதி யென்க. போக்கப் படுதல்-தண்டத்தினின்றும் அகற்றப்படுதல். மகனல்லாய் - மகனாதற் றன்மை உடையை யல்லாய்; மக்கட்டன்மை யில்லாய்; 2"மகனல்லை மன்ற வினி" 3"மகனல்லான் பெற்ற மகன்" என்பன காண்க. குறுமாக்கள் எனப் பிரித்தலும், நீசமகனல்லாய் எனப் பாடங்கொள்ளலும் ஈண்டைக்குப் பொருந்துவன அல்ல. 46-48. ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை - மிகவும் வருத்திக்கொண்டு நின்ற பார்ப்பன உவாத்தியை, கோட்டினில் குத்திக் குடர் புய்த்துறுத்து - கொம்பினால் குத்திக் குடரைப் பிடுங்கி, காட்டிடை நல் ஆகதழ்ந்து கிளர்ந்துஓட-காட்டின் கண் அந் நல்ல பசுவானது விரைந்தெழுந்து ஓட; ஆட்டி அலைக்கும்: ஒரு பொருட் பன்மொழி. புய்த்துறுத்து -பறித்தலைச் செய்து; 4"புய்த்தெறி கரும்பின் விடுகழை" என்பது காண்க. கதழ்ந்து-விரைந்து; கதழ்வு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்தது. 49-56. ஆபுத்திரன் தான் ஆங்கவர்க்கு உரைப்போன்-ஆபுத்திரன் அம் மறையோர்க்குக் கூறுகின்றவன், நோவன செய்யன்மின் - வருந்துதற் குரியவற்றைச் செய்யாதீர். நொடிவன கேண்மின்- யான் கூறுவதனைக் கேட்பீராக, விடுநில மருங்கின் படுபுல் ஆர்ந்து- அரசனால் விடப்பட்ட மேய்புலத்தில் தானே உண்டாகிய புற்களை மேய்ந்து, பிறந்தநாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால் - நாம் பிறந்தநாள் தொடங்கிச் சிறப்புடைய தனது இனிய பாலை, அறம் தரு நெஞ்சோடு அருள்சுரந்து ஊட்டும் - அறம் பொருந்திய உள்ளத்தோடும் அருண்மிகுந்து உண்பிக்கும், இதனொடு வந்த செற்றம் என்னை - இப் பசுவினிடம் நுமக்குண்டாய சினம் யாது, முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ - தொன்மறை யுணர்ந்த அந்தணர்கள் நும் எண்ணத்தைக் கூறுவீர் என ; விடுநிலம் - பயிர் செய்யாது விட்ட தரிசுநிலமுமாம். இதனொடு: உருபு மயக்கம். செற்றம் - பகைமை நெடுங்காலம் நிகழ்வது; அதனைக் கோறல் துணிந்தனராகலின் ‘செற்ற மென்னை' என்றான். இதன் பொருட்டு மக்கட்கு எத்துணையும் உழைப்பும் கேடும் இல்லை யென்பான், ‘விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து' என்றும், மக்கள் யாவரும் குழவியாய் உதித்த ஞான்றுதொட்டு உயிர் துறக்குங் காறும் என்பான், ‘பிறந்தநாள் தொட்டும்' என்றும், இனிமையினும் உட.ற் குறுதி பயத்தலினும் மேம்பட்டதென்பான் ‘சிறந்த தன் தீம்பால்' என்றும், கைம்மாறு கருதாது இரக்கத்தால் தானே உண்பிப்பதென்பான், ‘அருள் சுரந் தூட்டும்' என்றும், இவ்வாற்றால் தாய் போல்வதாகிய இதனைக் கோறல் கருதிய நும் வன்கண்மை இருந்தவாறென்னென்பான், இதனொடு வந்த செற்ற மென்னை' என்றுங் கூறினான். என வென்று ஒரு சொல் வருவிக்க. 57-62. பொன் அணி நேமி வலங்கொள் சக்கரக் கை-பொன்னா லாகிய அழகிய வட்டத்தினையுடைய சக்கரப் படையை வலக்கையிற் கொண்ட, மன்னுயிர் முதல்வன் மகன் எமக்கு அருளிய- நிலை பெற்ற உயிர்கட்கு முதல்வனாகிய திருமாலினுடையமகனான நான்முகன் எங்கட்கு அருளிச்செய்த, அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை-அரிய மறைநூற் பொருள்களை அறியாமற் பழித்துரைத்தனை, தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ - சுழலுகின்ற உள்ளத்தையுடைய சிறியோனாகிய நீ, அவ் ஆ மகன் ஆதற்கு ஒத்தனை - அப் பசுவின் புதல்வன் ஆதற்கு ஒத்தனை, அறியா நீ மகன் அல்லாய் கேள் என இகழ்தலும்-மகனல்லையாகிய அறிவில்லாத நீ இதனைக் கேள் என்று இகழ்ந்து கூறுதலும்; வலங்கொள் - வெற்றியைக் கொள்ளும் என்றுமாம். தெரு மரல்-சுழற்சி, கலக்கம். நூற்பொருளை யறியும் அறிவிலா னென்பார், ‘ஆ மகனாதற் கொத்தனை' என்றார். அறியா ஆ எனக் கூட்டுதலுமாம். மகனல்லாய் என்பதற்கு இக் காதையுள்முன் உரைத்தமை காண்க. 63-69. ஆன்மகன் அசலன் - அசலன் என்பவன் பசுவின் மகன், மான் மகன் சிருங்கி-சிருங்கி என்பான் மானின் மகன், புலி மகன் விரிஞ்சி - விரிஞ்சி யென்பவன் புலியின் மகன், புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன் -மேலோர் போற்றும் கேசகம்பளன் நரியின் மகன் அல்லனோ, ஈங்கிவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று - இவர்களெல்லாம் நும் குலத்து வந்த முனிவர் கூட்டம்என்று, ஓங்குயர் பெருஞ் சிறப்பு உரைத்தலும் உண்டால் - மிக உயர்ந்த பெருஞ் சிறப்புக் கூறுதலும் உண்டாகலால், ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ நான்மறை மாக்காள் நன்னூல் அகத்து என - நான்மறை யந்தணீர் நும் மறை நூலிடத்து ஆவால் வந்த அழிகுலம் உண்டோ என வினவ;, புரையோர் போற்றும் கேசகம்பளனெனக் கூட்டுக. உண்டால்- உண்டாதலால்; ஆல்: அசையுமாம். ஆவொடு - ஆவால். அழிகுலம் - இழிகுலம். நன்னூலகத்து ஆவினால் அழிகுலமுண்டாயதென்று கூறப்பட்டுள்ளதோ என்றபடி. ‘ஆமகனாதற் கொத்தனை' என அந்தணர் இகழ்ந்தனராதலின், அதனைப் பரிகரித்தற்கு 'ஆவொடு வந்த அழிகுல முண்டோ' என்றான். 70-71. ஆங்கவர் தம்முள் ஓர் அந்தணன் உரைக்கும் ஈங்கிவன் தன் பிறப்பு யான் அறிகுவன் என - அம் மறையவர்களுள் ஒருவன் இவனுடைய பிறப்பை யான் அறிவேன் என்று கூறுவான்; 72-77. நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்-வழிக்கொண்ட வருத்தத்துடன் இளைத்த உடம்பை யுடையவளாகிய, வடமொழி யாட்டி-பார்ப்பனி, மறை முறைஎய்தி-வேத விதிப்படி சென்று குமரிபாதம் கொள்கையின் வணங்கி - குமரித் தெய்வத்தின் திருவடிகளை முறைமையால் வணக்கஞ் செய்து, தமரில் தீர்ந்த சாலி என்போள்தனை - தனக்குச் சிறந்தோரினின்றும் நீங்கிய சாலி என்பவளை, யாது நின் ஊர் ஈங்கு என் வரவு என - நின் ஊர் யாது நீ ஈண்டு வந்த காரணம் என்ன என்று கேட்க, மாமறையாட்டி வருதிறம் உரைக்கும் - அம் மறையவள் தான் வந்த வரலாற்றைக் கூறுபவள்; நடவை - வழி ; வழிச்சேறல். நல்கூர்தல் - ஈண்டு இளைத்தல்; 1''நல்கூர் நுசுப்பினை'' என முன் வந்தமையும் காண்க. குமரி - குமரிக் கடலின் மருங்குள்ள தெய்வம்; கன்னி; பகவதி. கொள்கை - நோன்புமாம். வடமொழியாட்டி - பார்ப்பனி; பார்ப்பனரை ''வடமொழியாளர்'' (6 : 40) என முன் கூறினமையுங் காண்க. தீர்ந்து வணங்கிய என விகுதி பிரித்துக் கூட்டுக. தமரிற் றீர்ந்து வணங்கிய வடமொழியாட்டியாகிய சாலி யென்க. 78-83. வாரணாசி ஓர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும் பெறல் மனை யான் - காசிப்பதியிலுள்ள வேதமோ துவிக்கும் உவாத்தியாகிய அந்தணன் ஒருவனது பெறற்கரிய மனைவி யாவேன் யான், பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகி - அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி, காப்புக் கடை கழிந்து கணவனை இகழ்ந்தேன்-காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தேன், எற்பயம் உடைமையின்-இரவின் அச்சமுடைமையால், இரியல் மாக்களொடு - கெடுதலுற்ற மக்களுடன், தெற்கண் குமரி ஆடிய வருவேன் - தென்றிசைக் குமரியில் நீராடும் பொருட்டு வருவேன்; காப்புக்கடை கழிந்து என்பதற்கு முன்பு (13 : 5) உரைத்தமை காண்க. ‘இழந்தேனெறிபய முடைமையின்' என்றும் பாடம் காணப்படும். இரியல் மாக்கள் என்பதனை இரட்டுறமொழி தலாகக் கொண்டு, விரைந்தேகு மாக்கள் என்றும் உரைத்திடுக 84-91. பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் - பொற்றேரினை யுடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஒரு காவதம் கடந்த பின்னர் ஆயர்களுடைய இருப்பிடத்தில், ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி-ஈன்ற சிறு குழவிக்கு இரங்காதவளாய்; தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் - கண்காணாத தோட்டமொன்றில் இட்டு வந்தேன், செல்கதி உண்டோ தீவினையேற்கு என்று - இத்தகைய தீவினையேனுக்குச் செல்கதியும் உண்டோ என்று, அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கிவன்-துன்பமுற்று அழுத அச் சாலியின் மகன் இவன், சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்-இதனைக் கூறாமலிருந்தேன் அங்ஙனம் கூறுவதால் பயன் இல்லாமையின், புல்லல் ஓம்பன்மின் புலைமகன் இவன் என- இவனைத் தீண்டா தொழிவீராக அசுத்தமுள்ள கீழ் மகனிவன் என்று கூற; ஈன்றேன்; அங்ஙனம் ஈன்ற குழவிக்கு எனவும், அழுதாள்; அங்ஙனம் அழுத அவள் மகன் எனவும் அறுத்துரைக்க. செல்கதி-அடையக் கடவதாகிய நற்கதி. அந்தணன் உரைப்பவன் புலைமகன் இவனென்று கூறவென்க. ஓம்பன்மின் - பாதுகாவாதீர்; செய்யாதீர் என்றபடி. 92-99. ஆ புத்திரன் பின்பு அமர் நகை செய்து - ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் விருப்பத்துடன் சிரித்து, மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ - பெரிய மறைநூலுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைக் கேளும், முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய கடவுட் கணிகை காதலஞ் சிறுவர் - பழமறை முதல்வனாகிய பிரமனுக்குத் தெய்வக் கணிகை யாகிய திலோத்தமை யினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ, அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் - அரிய மறை முதல்வர்களாகிய முனிவர் இருவரும், புரிநூன் மார்பீர் பொய்யுரையாமோ-முப்புரி நூலணிந்த மார்பினை யுடையீர் இது பொய் மொழியோ, சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து - இங்ஙனமிருப்பச் சாலிக்குக் குற்றம் உண்டோ என்று கூறி, நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப - நான்மறை யந்தணரை எள்ளிச் சிரித்து நிற்க ; அமர் நகை-பொருந்திய நகையுமாம். கேண்மோ : கேளும் என்னும் ஏவற்பன்மை உகரங்கெட்டு ஓகாரம் பெற்று வந்தது. அந்தணர் இருவர் - வசிட்டனும் அகத்தியனும் ; பிரமன் திலோத் தமையைக் கண்ட பொழுதில் வசிட்டனும் அகத்தியனும் கலசத்திற் றோன்றின ரென்பர். அந்தண ரிருவரும் காதலஞ் சிறுவர் என்க. 100-108. ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே - மறையோதும் அந்தணர்கட்கு இவன் ஒவ்வாதவன் என்று, தாதை பூதியும் தன் மனை கடிதர - தந்தையாகிய பூதியும் தன் இல்லத் தினின்றும் நீக்க, ஆ கவர் கள்வன் என்று-பசுவைக் கவர்ந்த திருடன் என்று, அந்தணர் உறை தரும் - மறையவர்கள் வாழ்கின்ற, கிராமம் எங்கணும் - ஊர்களிலெல்லாம், கடிஞையில் கல்லிட - இவனது பிச்சைப் பாத்திரத்தில் கற்களை இட, மிக்க செல்வத்து விளங்கி யோர் வாழும் - பெருஞ் செல்வத்தான் விளக்கமுற்றோர் வாழ்கின்ற, தக்கண மதுரை தான் சென்று எய்தி - தெற்கின்கண் உள்ள மதுரையைத் தான் சென்று அடைந்து, சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து அந்தில் முன்றில்-சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள, அம்பலப் பீடிகை தங்கினன் வதிந்து!- அம்பலமாகிய பீடிகையிலே தங்கியிருந்து ; அந்தணர்க்கு-அந்தணருடன் கூடி யிருத்தற்கு. கடிஞை-பிச்சை யேற்கும்கலம். உலகிலே கடிஞையிற் கல்லிடுவார் எஞ்ஞான்றும் இலரென்பர்; அங்ஙனமாகவும் இவர்கள் இட்டனரென இரங்கிய வாறு. யாரும் கடிஞையிற் கல்லிடாரென்பதனை, 1“நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி, மனத்த தறிந்தீவர் மாண்டார் - புனத்த, குடிஞை யிரட்டுங் குளிர்வரை நாட, கடிஞையிற் கல்லிடுவா ரில்'' என்னும் பழமொழி வெண்பாவானறிக. சிந்தா தேவி - கலைமகள்; அவளுறையுங் கோயிலாகலின் அது கலை நியமம் எனப்பட்டது; நியமம் - கோயில். அந்தில் : அசை. பீடிகையையுடைய அம்பலத்தி லென்றுமாம். 108-115 அத் தக்கணப் பேரூர் - அம் மதுரைமா நகரில், ஐயக் கடிஞை கையின் ஏந்தி - பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி, மை அறு சிறப்பின் மனைதொறும் மறுகி - குற்றமற்ற சிறப்பினை யுடைய மாடங்கள்தோறும் சுழன்று, காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்-குருடர்செவிடர் முடவர் பாதுகாப்போர் அற்றோர் நோயால் துன்புறுவோர் ஆகிய, யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி - அனைவரும் வருக என்று கூறி யழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, உண்டு ஒழி மிச்சில் உண்டு - அனைவரும் உண்டு எஞ்சிய உணவை யுண்டு, ஓடு தலை மடுத்து - அவ்வோட்டினைத் தலைக்கு அணையாகக் கொண்டு, கண்படை கொள்ளும் காவலன் தான் என்-உறங்குதல் செய்வான் அவ் வாபுத்திரனாகிய காப்போன் என்க. உண்டொழி மிச்சிலுண்டு என்பது 2''விருந்தோம்பி மிச்சின் மிசைவான்'' என்பதன் பொருளைத் தழுவி வந்துளது. தலை மடுத்து-தலையின்கீழ் அகப்படுத்து. காவலன் - காத்தலை யுடையவன். அணியிழை, ஆபுத்திரன் திறம் கேளாய் ; பார்ப்பனி சாலி கழிந்து அஞ்சி வருவோள் இரங்காளாகிக் குழவியை இட்டு நீங்க ஆ கேட்டு அணைந்து நக்கி ஊட்டிப் போகாது ஓம்ப, பூதி யென் போன் கேட்டு உகுத்து என் மகனென்று எடுத்துப் பெயர்ந்து கூடி நவிற்ற, அறிந்த பின் புக்கோன் ஆதுயர் கண்டு உற்று உகுத்து உள்ளங் கரந்து ஒதுங்கி அகன்றோனாய்க் கடவாநின்றுழி, அந்தணரெல்லாம் மாக்களோடு சென்று கையகப்படுத்திக் கேட்ப, நல்லா குத்திப் புய்த்துறுத்து ஓட, ஆபுத்திரன் உரைப் போன், ‘உரைமோ' என, அந்தணர் இகழ்தலும், ஆபுத்திரன், ‘நன்னூலகத்து ஆவொடு வந்த அழிகுல முண்டோ' என, ஓரந்தணன் உரைக்கும் ; உரைப்பவன், ‘புல்லலோம்பன்மின் ; புலை மகன் இவன்' என, ஆபுத்திரன் நகை செய்து, ‘சாலிக்குத் தவ றுண்டோ' என்றுரைத்து நகுவனன் நிற்ப,பூதி ஒவ்வா னென்று கடி தர, கிராம மெங்கணும் கல்லிட, மதுரை சென்றெய்தி வதிந்து ஏந்தி மறுகி இசைத்து ஊட்டி மிச்சிலுண்டு மடுத்துக் காவலன் கண்படை கொள்ளும் என வினைமுடிவு செய்க. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை முற்றிற்று. 14. பாத்திரமரபு கூறிய காதை (ஆபுத்திரன் அங்ஙனமிருக்கையில் ஒரு நாள் அவனுக்கு நிகழ்ந்ததனைக் கூறுவேன் ; கேட்பாயாக : ஒருநாள் நள்ளிரவில் அவன் துயிலும் பொழுது சிலர் வந்து 'வயிறு காய் பெரும்பசி எங்களை வருத்தா நின்றது' என்றனர். அதனைக் கேட்ட அவன் அத் துன்பத்தை மாற்றுதற்கு ஆற்றலின்றி வருத்த முற்றான் ; அப்பொழுது கலை நியமத்துள்ள சிந்தாதேவி வெளிப்பட்டு வந்து, ‘இதனைக் கொள்க ; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாது வளராநிற்கும்' என்றுரைத்துத் தன் கையினுள்ள அட்சய பாத்திரமொன்றை அவன் கையிற் கொடுத்தனள்; அவன் அதனைப் பெற்று மகிழ்ச்சியுற்று, " சிந்தா தேவி ! செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே ! நாமிசைப் பாவாய் ! வானோர் தலைவி ! மண்ணோர் முதல்வி ! ஏனோ ருற்ற இடர் களைவாய்" என்று பரவிப் பணிந்து, பசியால் வருந்தி வந்தோரை ஊட்டி மகிழ்வித்து, அன்றுமுதல் எல்லா உயிர்க்கும் உணவளிப் பானாயினன்; உண்பதற்காக மக்கள் பலர் அவனைச் சூழ்ந்துகொண்டனர்; விலங்கு களும் பறவைகளும் அவனைப் பிரிவின்றிச் சூழ்ந்துகொண்டன; அவ்வாறு நிகழும்போது, அவனது அறத்தின் மிகுதியைத் தனது பாண்டு கம்பள நடுக்கத்தால் அறிந்த இந்திரன் ஒரு முதுமறையோன் வடிவுகொண்டு வந்து நின்று, "நான் இந்திரன்; நினது பெரிய தானத்தின்பொருட்டு வரங்கொடுத்தற்கு வந்தேன்; நீவிரும்பியது யாது?" என்று கூற, ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும்படி சிரித்து, " அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர் நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரு மில்லாத் தேவர்நன் னாட்டுக் கிறைவ னாகிய பெருவிறல் வேந்தே வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி, அவர்தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை ஒன்றே சாலும்; நின்பாற் பெறத் தக்கது யாது?" என அவனை மதியா துரைத்தனன் ; உரைக்கவே இந்திரன் வெகுண்டு, உலகிலே பசியால் வருந்துவோ ரில்லையாம்படி செய்வேன் என நினைந்து, எங்கும் மழை பெய்வித்து வளமுண்டாகச் செய்தனன் ; அதனால் பசித்து வருவோர் இலராயினர். அதுகண்டு ஆபுத்திரன் அவ் வம்பலத்தினின்றும் நீங்கி ஊர்தோறுஞ் சென்று, ‘உண்போர் யாரேனும் உண்டோ?' என வினவா நிற்க, அதுகேட்டு யாவரும் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். உண்போரைப் பெறாமையால் அவன் பெருஞ் செல்வத்தை யிழந்தோர் போல வருந்தித் தனியே செல்லுகையில், மரக்கலத்தில் வந்த சிலர் அவனைக் கண்டு, ‘சாவக நாட்டிலே மழை யின்மையால் உயிர்கள் பெரும்பாலும் பசியால் இறந்தன' என்று கூறினர். அது கேட்டலும் அந்நாட்டிற்குச் செல்ல நினைந்து அவன் ஒரு கப்பலில் ஏறினன்; அக்கப்பல் சென்று மணி பல்லவத்தினருகே ஒருநாள் தங்கிற்று: அவன் அத்தீவில் இறங்கினன். இறங்கியவன். ஏறிவிட்டானென எண்ணி, மீகான் இருளில் அக்கப்பலை வேறிடத்திற்குச் செலுத்திப்போயினன். அது தெரிந்து ஆபுத்திரன் மிக்க வருத்தமடைந்து, ‘யாருமில்லாதஇத் தீவில் பலர்க்கு உணவளிக்கும் மாபெரும் பாத்திரத்தை வைத்துக் கொண்டு யான் மட்டும் உயிரோம்பி யிரேன்' என எண்ணி அதனைத் தொழுது, ‘ஆண்டிற்கொரு முறை தோன்றுவாயாக' என்று கூறி அதனைக் கோமுகிப் பொய்கையில் விடுபவன், ‘அருளறம் பூண்டு உயிர்களைப் பாதுகாப்போர் யாரேனும் வரின் அவர் கையிற் புகுக' என்று சொல்லி விட்டுவிட்டு, தான் பட்டினியிருந்து உயிர் துறப்பானாயினான். அப்பொழுது அங்கே சென்ற யான் அதனைக் கண்டு, ‘நீ யாது துன்ப முற்றனை' என்று கேட்க, அவன் நிகழ்ந்தவற்றைச் சொல்லி, மணிபல்லவத்தில் உடம்பை வீழ்த்திவிட்டுப் பல்லுயிர்களையும் பாதுகாக்கும் எண்ணத்துடன் சென்று சாவகநாட் டரசனுடைய ஆனின் வயிற்றிலுதித்தனன். ) ஆங்கவற் கொருநாள் அம்பலப் பீடிகைப், பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய் மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத் தாரிடை உழந்தோர் அம்பல மரீஇத் 5 துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி வயிறுகாய் பெரும்பசி மலைக்கும் என்றலும் ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் ஆற்றுவது காணான் ஆரஞர் எய்தக் கேளிது மாதோ கெடுகநின் தீதென 10 யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத் தேவி சிந்தா விளக்குத் தோன்றி ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய் நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது, 15 தான்தொலை வில்லாத் தகைமைய தென்றே தன்கைப் பாத்திரம் அவன்கைக் கொடுத்தலும், சிந்தா தேவி செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே நாமிசைப் பாவாய் வானோர் தலைவி மண்ணோர் முதல்வி 20 ஏனோர் உற்ற இடர்களை வாயெனத் தான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி ஆங்கவர் பசிதீர்த் தந்நாள் தொட்டு வாங்குகை வருந்த மன்னுயிர் ஓம்பலின் மக்களும் மாவும் மரஞ்சேர் பறவையும் 25 தொக்குடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ பழுமரத் தீண்டிய பறவையின் எழூஉம் இழுமென் சும்மை இடையின் றொலிப்ப ஈண்டுநீர் ஞாலத் திவன்செயல் இந்திரன் பாண்டு கம்பளந் துளக்கிய தாகலின் 30 தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வளைந்த யாக்கையோர் மறையோ னாகி மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் ஆருயிர் முதல்வன் தன்முன் தோன்றி இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து 35 உன்பெரும் தானத் துறுபயன் கொள்கென வெள்ளை மகன்போல் விலாஇற நக்கீங் கெள்ளினன் போமென் றெடுத்துரை செய்வோன் ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல் காண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது 40 அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர் நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர் யாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக் கிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர் 45 திருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ, யாவையீங் களிப்பன தேவர்கோன் என்றலும் புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்தீங் 50 கிரப்போர்க் காணா தேமாந் திருப்ப, நிரப்பின் றெய்திய நீணில மடங்கலும் பரப்பு நீரால் பல்வளம் சுரக்கென ஆங்கவன் பொருட்டால் ஆயிரங் கண்ணோன் ஓங்குயர் பெருஞ்சிறப் புலகோர்க் களித்தலும் 55 பன்னீ ராண்டு பாண்டிநன் னாடு மன்னுயிர் மடிய மழைவள மிழந்தது வசித்தொழில் உதவ மாநிலங் கொழுப்பப் பசிப்புயிர் அறியாப் பான்மைத் தாகலின் ஆருயி ரோம்புநன் அம்பலப் பீடிகை 60 ஊணொலி அரவம் ஒடுங்கிய தாகி விடருந் தூர்த்தரும் விட்டேற் றாளரும் நடவை மாக்களும் நகையொடு வைகி வட்டுஞ் சூதும் வம்பக் கோட்டியும் முட்டா வாழ்க்கை முறைமைய தாக 65 ஆபுத் திரன்தான் அம்பலம் நீங்கி ஊரூர் தோறும் உண்போர் வினாஅய் யாரிவன் என்றே யாவரும் இகழ்ந்தாங் கருந்தே மாந்த ஆருயிர் முதல்வனை இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் 70 திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள ஒருதனி வரூஉம் பெருமகன் போலத் தானே தமியன் வருவோன் தன்முன் மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச் சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின், 75 ஊனுயிர் மடிந்த துரவோய் என்றலும் அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது குமரி மூத்தஎன் பாத்திரம் ஏந்தி அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்தென வங்க மாக்களொடு மகிழ்வுட னேறிக் 80 கால்விசை கடுக்கக் கடல்கலக் குறுதலின் மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத் தங்கிய தொருநாள் தானாங் கிழிந்தனன் இழிந்தோன் ஏறினன் என்றிதை எடுத்து வழங்குநீர் வங்கம் வல்லிருள் போதலும் 85 வங்கம் போயபின் வருந்து துயர் எய்தி அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் மன்னுயிர் ஓம்புமிம் மாபெரும் பாத்திரம் என்னுயிர் ஓம்புதல் யானோ பொறேஎன் தவந்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன் 90 சுமந்தென் பாத்திரம் என்றனன் தொழுது கோமுகி என்னுங் கொழுநீர் இலஞ்சியின் ஓரியாண் டொருநாள் தோன்றென விடுவோன் அருளறம் பூண்டாங் காருயி ரோம்புநர் உளரெனில் அவர்கைப் புகுவாய் என்றாங் 95 குண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்ப்புழி அந்நா ளாங்கவன் தன்பாற் சென்றே என்னுற் றனையோ என்றியான் கேட்பத் தன்னுற் றனபல தானெடுத் துரைத்தனன் குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக் 100 குடதிசைச் சென்ற ஞாயிறு போல மணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத் தணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு சாவக மாளுந் தலைத்தாள் வேந்தன் ஆவயிற் றுதித்தனன் ஆங்கவன் தானென உரை 1-2. ஆங்கவற்கு ஒரு நாள் அம்பலப் பீடிகைப் பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்-அந்த ஆபுத்திரனுக்கு அம்பலப் பீடிகையினிடம் ஒரு நாள் நேர்ந்ததைப் பூங்கொடியனைய நங்காய் கேட்பாயாக; ஆங்கவன்: ஒரு சொல். நல்லா யென்றது மணிமேகலையை. 2-8. மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து-மழைத்துளி களையுடைய இடையாமத்தில் வலிய இருட்கலப்பிலே, ஆரிடை உழந்தோர் அம்பலம் மரீஇ - அரிய வழியில் வருந்தி வந்தோர் சிலர் அம்பலத்தையடைந்து, துயில்லோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி - உறங்கிக் கொண்டிருந்த ஆபுத்திரனை யெழுப்பி வணங்கித் துதித்து, வயிறுகாய்பெரும்பசி மலைக்கும் என்றலும் - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது வருத்தும் என உரைத்தலும், ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் - இரந்துண்ணும் உணவினையன்றி வேறு உணவில்லாத ஆபுத்திரன், ஆற்றுவது காணான் ஆரஞர் எய்த - உதவுதற் குரிய வழியைக் காணாதவனாய் மிக்க துயரத்தை அடைய ; உழந்தோர் - கூத்தர் முதலியோர் என்றுரைப்பாரு முளர். வயிறு காய் பெரும்பசிக்கு முன் (11: 110) உரைத்தமை காண்க. மலைக்கும் - மாறுபடுத்தும். நல்லிருளாகலின் ஆற்றுவது காணானாயினான். 1-16. கேள் இது மாதோ கெடுக நின் தீது என - இதனைக் கேள் நின் துன்பம் கெடுக என்று, யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்து - அனைவரும் துதிக்கும் பெரிய கலை நியமத்தில் உள்ள, தேவி சிந்தா விளக்குத் தோன்றி - தேவியாகிய சிந்தாவிளக்குத் தோன்றி, ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் - ஏடா வருந்தாதே எழுந்து இதனைப் பெறுவாய், நாடு வறங் கூரினும் இவ்வோடு வறம் கூராது - நாட்டின்கண் வற்கடம் மிகினும் இந்த ஓடானது வறுமையுறாது, வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது - உணவினை வாங்குவோர் கைகள் வருந்துதலன்றி, தான் தொலை வில்லாத் தன்மையது என்றே - தான் அழியாத தன்மையையுடைத்தாம் என்று, தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும் - தன் கையிலுள்ள ஓட்டினை அவன் கையில் அளித்தலும்; மாது, ஓ: அசைகள். யாவரும்-எச்சமயத்தாரும் என்றுமாம். கலை நியமம் - நாமகள் கோயில். ஏடா: விளி, வறம் - வற்கடம்; பஞ்சம்; 1"ஞாலம் வறந்தீரப் பெய்ய" என்றார் பிறரும். மிகுதியாக அளித்தலின் வாங்குவோர் கை வருந்து மென்றார் ; வருத்துதல் எனப்பாடங்கொள்ளலுமாம். தான் என்றது பாத்திரத்தை. வறங் கூராது - வறுமை யுறாது: முற்று; எச்சமுமாம். 17-21. சிந்தாதேவி - மனத்தின்கண் அமர்ந்திருக்கின்ற மா தெய்வமே, செழுங்கலை நியமத்து - அழகிய கலைக்கோட்டத் தின்கண் மேவிய, நந்தா விளக்கே - அழியாத திருவிளக்கே, நாமிசைப் பாவாய் - நாவின்கண் பொருந்திய நங்கையே, வானோர் தலைவி - விண்ணவர் தலைவியே, மண்ணோர் முதல்வி - மண்ணுள்ளோர் முதல்வியே, ஏனோர் உற்ற இடர் களைவாய் என - ஏனையோரடைந்த துன்பத்தை நீக்குவோய் என்று, தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி - அஞ்சலி செய்து துதித்துத் தலைவியை வணக்கஞ் செய்து ;, அடுக்கிய விளிகள் சிந்தா தேவிபால் ஆபுத்திரனுக்குள்ள அன்பின் ஆராமையைப் புலப்படுத்துகின்றன. 22-29 ஆங்கவர் பசி தீர்த்து அந்நாள் தொட்டு-அவர்களுடைய பசியைத் தீர்த்துஅந்நாள் தொடங்கி, வாங்கு கை வருந்த மன்னுயிர் ஓம்பலின் - வாங்குகின்ற கை வருந்துமாறு மன்னுயிர் களைப் பாதுகாத்தலினால், மக்களும் மாவும் மரஞ்சேர் பறவையும் தொக்கு உடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ - மக்களும் விலங்குகளும் மரங்களிலுள்ள புட்களும் ஒருமிக்கச் சேர்ந்து திரண்டு சுற்றிக்கொண்டு விடாவாய், பழுமரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்-பழுத்த மரத்தின்கண் கூடிய பறவைகளைப் போல் எழுப்பும், இழுமென் சும்மை இடை யின்று ஒலிப்ப - இழுமென்னும் ஓசை இடையீடின்றி ஒலித்துக் கொண்டிருப்ப, ஈண்டுநீர் ஞாலத்து இவன் செயல்-மிகுந்த நீரினையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகில் இவன் புரிந்த அறச்செயல், இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியது ஆதலின்-இந்திரனது வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச்செய்தமையால் அவன்; மக்களும் மாவும் பறவையும் எனத் திணைவிரவிச் சூழ்ந்தன வென அஃறிணை முடிவு பெற்றன. விடா - விடாவாய் : எச்சம். பழுமரம்-ஆலமரமுமாம். எழூஉம்-எழுப்பும் : பிறவினை. இடை - இடையீடு. இவ்வுலகிலே தானம் சீலம் முதலியவற்றில் மேம்பட்ட பௌத்தர் உளராயினும், அவர்கட்கு ஏதேனும் துன்பம் உளதாயினும் இந்திரனுடைய பாண்டு கம்பளம் நடுங்குமென்றும், அக்குறிப்பால் அவற்றையறிந்து வந்து அவர்கட்கு வேண்டிய வரங்களைக் கொடுத்தலும், துன்பத்தை நீக்குதலும் இந்திரனுடைய கடப்பாடென்றும் தெரிகின்றது. 30-35. தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி வளைந்த யாக்கை ஓர் மறையோன் ஆகி-நடை தளர்தலால்தான் பிடித்த தண்டையே காலாக ஊன்றிக்கொண்டு கூனிய உடலை யுடைய ஒரு மறையவனாகி, மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும் - மிகப் பெரிய பூமியில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கும், ஆருயிர் முதல்வன் தன் முன் தோன்றி - ஆருயிர் முதல்வனாகிய ஆபுத்திரன் முன்னர்த் தோன்றி, இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து - யான் இந்திரன் ஈண்டு வந்தேன் நின் எண்ணம் யாது, உன் பெரும் தானத்து உறுபயன் கொள்க என - நினது பெரிய தானத்தினாலாகிய மிக்க பயனைக் கொள்வாயாக என்றுரைப்ப; சிலப்பதிகாரத்துள்ளும் இவ்வாறே 1"தளர்ந்த நடையிற் றண்டு காலூன்றி, வளைந்த யாக்கை மறையோன்." என வந்துளது, 2"உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என்ப வாகலின் ஆபுத்திரனை ‘ஆருயிர் முதல்வன்' என்றார். எல்லாத் தானத்தினும் அன்னதானம் சிறந்ததாகலின் பெருந்தானம் எனப்பட்டது. 36-48. வெள்ளை மகன்போல் விலா இற நக்கு ஈங்கு எள்ளினன் போம் என்று எடுத்துரை செய்வோன்-விரகில்லா மகனைப் போல விலா வெடிக்குமாறு சிரித்து இகழ்ச்சியுடையனாய்ப் போம் என்று எடுத்துக் கூறுகின்றவன், ஈண்டுச் செய்வினை ஆண்டு நுகர்ந்திருத்தல் காண்டகு சிறப்பின் நும் கடவுளர் அல்லது - காணத்தக்க அழகின் சிறப்பினை யுடைய நும் கடவுளர் இவ் வுலகிற்செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்திருத்தல் அல்லது, அறஞ்செய் மாக்கள் புறங்காத்து ஓம்புநர் - அறம் புரியும் மக்களின் எளிய உயிர் களைப் பாதுகாப்போர், நற்றவம் செய்வோர் பற்று அற முயல்வோர் - நல்ல தவங்களைச் செய்கின்றோர் பற்றுக்களை அறுத்தற்கு முயற்சி செய்வோர் ஆகியவருள், யாவரும் இல்லாத்தேவர் நன்னாட்டுக்கு - ஒருவருமில்லாத விண்ணவருலகிற்கு, இறைவன் ஆகிய பெரு விறல் வேந்தே - தலைவனாகிய பெருவலியுடைய தேவர்கோனே, வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து அவர் திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை - எனது கடவுட் கடிஞை வருத்தத் துடன் வந்தோரது பொறுத்தற்கரிய பசியை நீக்கி அவர் இனிய முகத்தை யான் காணுமாறு காட்டும், உண்டிகொல்லோ உடுப்பன கொல்லோ-உண்டபனவோ உடுப்பனவோ, பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ - மகளிரோ வேறு விரும்புவோரோ, யாவை ஈங்கு அளிப்பனதேவர் கோன் என்றலும் - விண்ணவர் தலைவனே நீ இப்பொழுது எமக்கு அளிப்பன யாவை என்றுரைத்தலும்; வெள்ளை மகன் - கரவில்லா மகனுமாம். விலாவிற நகுதல் - பெருகச் சிரித்தல்; 3"வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே" என்றார் திருநாவுக்கரசரும். போம்: ஏவற்பன்மை. நுங் கடவுளர் என்றான் தனக்கு அவர் அயலென்னுங் கருத்தால் 1"நின்றநின் கார்மயி றன்னையும்" என்புழிப்போல. அறஞ்செய் மாக்கள் முதலியோர் இல்லாவெனவே கடவுளர் அறஞ் செய்தல் முதலியன உடையரல்லர் என்றவாறாயிற்று; நுகர்ந் திருத்தலையுடைய கடவுளரல்லது யாவருமில்லா என்றலுமாம். இக் கருத்து, 2"பொலம் பூங் காவி னன்னாட்டோரும், செய்வினை மருங்கி னெய்த லல்லதை, உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும், கடவ தன்மையிற் கையறவுடைத்து" 3"ஈவாருங் கொள்வாரு மில்லாத வானத்து, வாழ்வாரே வன்க ணவர்" என்பவற்றுள் அமைந்துள்ளமை காண்க. நன்னாடு என்பதும், பெருவிறல் வேந்து என்பதும் இகழ்ச்சி. தெய்வம்-தெய்வத்தன்மை. கடிஞை காட்டுமென்க; எனக்கு அதுவே அமையும் என்றவாறாயிற்று. திருந்து முகம் பெற்றோர் உவப்பாலுளதாவது; 4"ஈத்துவக்கு மின்பம்" என்பது காண்க. பேணுநர் - நாட்டார் முதலியோர். திணைவிரவி யாவை என அஃறிணையாயிற்று. ஈங்கு, தன்மை. தேவர் கோன் : விளி. 49-54 புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்தீங்கு - உயிர் களைக் காப்பாற்றுகின்ற ஆபுத்திரனது பாத்திரத்தின்கட் பெய்யப்பட்ட உணவுபெருகி, இரப்போர்க் காணாது ஏமாந்து இருப்ப - அவ் வுணவினை யிடுதற்கு இரப்போரைக் காணாமல் அவன் ஏக்கற்றிருக்குமாறு, நிரப்பின் றெய்திய நீள் நிலம் அடங்கலும் - பெரிய நிலவுலக முழுதிலும் வறுமையின்றாகும் பொருட்டு, பரப்பு நீராற் பல்வளஞ் சுரக்கென - முகில்கள் கடன் முகந்து சொரியும் மழை நீரால் பல வளங்களும் பெருகுக என்று, ஆங்கவன் பொருட்டால் ஆயிரம் கண்ணோன் - ஆபுத்திரன் தன்னை இகழ்ந்தமை காரணமாக ஆயிரங் கண்களையுடைய இந்திரன், ஓங்குயர் பெருஞ் சிறப்பு உலகோர்க்கு அளித்தலும் - மிக வுயர்ந்த பெருவளங்களை உலகினர்க்கு அளித்தலும்; பொருந்தூண் என்பதும் பாடம். இன்று-இன்மை; இன்று நிரப்புற்ற என்னலுமாம். பரப்பு நீர் என்பதற்குக் கடல் எனவும், அதனை முகந்து பொழியும் நீரெனவும் பொருள் கொள்க. ஆயிரங் கண்ணோன் அவன் பொருட்டால் உலகோர்க்குச் சிறப்பளித்தலு மென்க. ஆபுத்திரன் தன்னை இகழ்ந்தனனெனச் சினந்து இந்திரன் அவனது பாத்திரம் பயனின்றாகுமாறு இங்ஙனம் செய்தானென்க. 55-64. பன்னீராண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மடிய மழை வளம் இழந்தது - மிக்க உயிர்கள் மடியுமாறு பன்னீராண்டு மழை வளம் இழந்திருந்ததாகிய பாண்டி நன்னாடு, வசித் தொழில் உதவ மாநிலம் கொழுப்ப - மழை பெய்தற்றொழிலைப் புரியப் பெரிய பூமிகள் எல்லாம் செழித்து விளையாநிற்க, பசிப்பு உயிர் அறியாப் பான்மைத்து ஆகலின் - உயிர்கள் பசி இன்னதென்று அறியாதவாறு சிறப்பெய்திய தன்மையால், ஆருயிர் ஓம்புநன் அம்பலப் பீடிகை - அரிய உயிர்களைக் காக்கும் ஆபுத்திரனது அம்பலப் பீடிகை, ஊண் ஒலி அரவம் ஒடுங்கியதாகி - உணவுண்ணுதலானுண்டாகும் ஆரவாரம் குறைந்ததாய், விடரும் தூர்த்தரும் விட்டேற் றாளரும் - காமுகரும் பரத்தரும் சுற்றத்தினீங்கித் திரிவோரும், நடவை மாக்களும் நகையொடு வைகி - வழிச் செல்லும் மக்களும் நகைப்புடன் தங்கி, வட்டும் சூதும் வம்பக் கோட்டியும் - உண்டையுருட்டுதலும் சூதாடுதலும் பயனில் சொற்களைக் கூறுதலுமுடையோர் கூட்டமும், முட்டா வாழ்க்கை முறை மையதாக-குறையாத வாழ்க்கை முறைமையை யுடையதாக; இழந்ததாகிய பாண்டி நன்னாடு பான்மைத்தாகலின் என்க. ஆபுத்திரன் பலநாளிருந்து அறஞ்செய்தற் கிடனாயினமையின் அம்பலம் அவனதாகக் கூறப்பட்டது. ஒலியரவம் :வினைத் தொகை. விட்டேற்றாளர் என்பதற்கு இகழ்ந்து கடுஞ்சொற் கூறுவோர் என்றுரைத்தலுமாம்; 1"விடருந் தூர்த்தரும் விட்டே றுரைப்ப" என்றார் பிறரும். வட்டு-உண்டை யுருட்டுதல்; 2"கல்லாச் சிறா அர் நெல்லிவட் டாடும்" என்பது காண்க. வம்பக்கோட்டி - வீணர் கூட்டம். வட்டு, சூது என்பவற்றை ஆகுபெயராகக் கொண்டு உண்டை யுருட்டுவோரும் சூதாடுவோரும் என்றும், வம்பக்கோட்டியை விடர் முதலியவற்றோடு சேர்த்து, அவர்கள் வட்டாடுதலும் சூதாடுதலும் முட்டாத என்றும் உரைத்தலுமாம். பீடிகை ஒடுங்கியதாகிய முறைமையதாக வென்க. 65-75. ஆபுத்திரன் தான் அம்பலம் நீங்கி-ஆபுத்திரன் அம்பலத் தினின்றும், நீங்கி, ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்-ஊரூராய் உண்போர் இருக்கின்றனரா என்று வினவிக் கொண்டு, யார் இவன் என்றே யாவரும் இகழ்ந்தாங்கு-இவன் யார் என்று அனைவரும் இகழ்தலால், அருந் தேமாந்த ஆருயிர் முதல்வனை-பிறர் உண்ண ஆவல்கொண்டு ஆபுத்திரனை, இருந்தாய் நீயோ என்பார் இன்மையின் - நீ இருக்கின்றாயோ என்பவர் ஒருவரும் இல்லாமையால், திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள - தனது பெருஞ் செல்வத்தைப் பெரிய கடலானது கொள்ள, ஒரு தனி வரூஉம் பெருமகன் போல - தன்னந்தனியே வரும் அரசனைப்போல, தானே தமியன் வருவோன் தன்முன் - தான் மட்டும் தனியனாய் வருகின்றவன் முன்னே, மாநீர் வங்கம் வந்தோர் வணங்கி-கடலில் மரக்கலத்திலிருந்து வந்தோர்கள் வணங்கி, சாவக நன்னாட்டுத் தண் பெயல் மறுத்தலின்-சாவக நாட்டின்கண் மழைவள மின்மையால், ஊன் உயிர் மடிந்தது உரவோய் என்றலும் - பெரியோய் உடம்பொடு கூடிய உயிர்கள் பல இறந்தன என்று கூறுதலும்; இகழ்ந்து - இகழ்தலால் ; ஆங்கு : அசை. அருந்த என்பது விகாரமாயிற்று. நீ இருக்கின்றாயோ என நலம் வினவுவார் இன்மையால், இகழ்தலால் இன்மையின் என்க. திருவின் செல்வம் - அரசாட்சிக்குரிய செல்வம் பெருமகன்-அரசன். நாளும் உண்போர் பலரிடையே இருந்தவன் இப்பொழுது மிகத் தனிமையுற்றா னென்பார் 'தானே தமியன் வருவோன்' என ஆசிரியர் இரங்கிக் கூறினர். உயிர் : சாதி யொருமை. 76-82. அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது - இந்திரன் ஆணையினால் உண்ணுவோரைப் பெறாமல், குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி - ஒரு கன்னிப்பெண் வறிதே மூத்தாற் போன்ற என் கடிஞையை ஏந்திக்கொண்டு, அங்கு அந் நாட்டுப் புகுவது என் கருத்து என-அச் சாவக நாட்டிற்குச் செல்லுவது என் எண்ணம் என்று, வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறி - உவகையுடன் கலத்திற் செல்வோருடன் ஏறி, கால் விசை கடுகக் கடல் கலக்குறுதலின்-காற்றின் வேகம் மிகுதலினால் கடலானது கலக்க மடைந்தமையின், மால் இதை மணிபல்லவத்திடைவீழ்த்து - பெரிய பாயை மணி பல்லவத்தின்கண் இறக்கி, தங்கியது ஒரு நாள் - கப்பல் ஒரு நாள் தங்கியது, தான் ஆங்கு இழிந்தனன் - ஆபுத்திரன் அவ்விடத்தில் இறங்கினான் ; ஆணையின் பெறாது என்க. குமரி மூத்த - ஒரு கன்னி கணவனின்றி மூத்தாற் போன்ற. கொடுப்போரும் கொழுநனுமே யன்றித் தானும் பயனிழந்து கழிந்த குமரியை உவமை கூறினமையின், தானும் ஏற்பாருமே யன்றிப் பாத்திரமும் பயனின்றிக் கழிந்த தென்றவாறாயிற்று; 1"அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிக நலம், பெற்றாள் தமியள்மூத்தற்று" என்பது ஈண்டு அறியற் பாலது. அங்கு அந்நாடு: ஒருசொல் நீர்மைய. மால் - பெரிய. இதை - கப்பற்பாய். கப்பல் ஒரு நாள் இதை வீழ்த்து மணிபல்லவத் திடைத் தங்கியதென்க. வீழ்த்து என்னும் செலுத்துவோன் வினை நாவாய்மேல் ஏற்றிக் கூறப்பட்டது; பின் இதை யெடுத்து என்பதும் இது. 83-90. இழிந்தோன் ஏறினன் என்று - இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கலத்தில் ஏறினன் என நினைந்து, இதை எடுத்து வழங்கு நீர் வங்கம் வல்லிருள் போதலும் - பாய் உயர்த்தி மரக்கலம் கடலில் இரவிலே செல்லலும், வங்கம் போய பின் வருந்து துயர் எய்தி - ஆபுத்திரன் மரக்கலம் சென்ற பின்னர் மிக்க துன்பத்தையடைந்து, அங்கு வாழ்வோர் யாவரும் இன்மையின் - அம் மணி பல்லவத்தில் வாழ்வோர்கள் ஒருவரும் இல்லாமையால், மன்னுயிர் ஓம்பும் இம் மாபெரும் பாத்திரம் - பல உயிர்களைப் பாதுகாக்கும் இப் பெருமை பொருந்திய கலத்தினை வறிதே வைத்துக் கொண்டு, என் உயிர் ஓம்புதல் யானோ பொறேன் - என்னுயிரைக் காப்பதையான் பொறுக்ககில்லேன், தவம்தீர் மருங்கில் தனித்துயர் உழந்தேன் - இப் பாத்திரத்தைப் பெற்றுப்பல உயிர்களைக் காக்குமாறு முற்செய் தவம் நீங்கியதனால் ஒப்பற்ற துயரத்தால் வருந்துதலுற்றேன், சுமந்து என் பாத்திரம் என்றனன் - ஏற்போரில்லாத இவ்விடத்தில் இப் பாத்திரத்தை யான் சுமத்தலால் வரும் பயன் யாது என்றெண்ணியவனாய்; பாத்திரம் என்னுயிர் மாத்திரை ஓம்புதலை யென்றும், பாத்திரத்தால் ஓம்புதலை யென்றும் உரைத்தலுமாம். 90-95. தொழுது - அதனை வணங்கி, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியில் - நிறைந்த நீரினையுடைய கோமுகி என்னும் பொய்கையில், ஓரியாண்டு ஒருநாள் தோன்றென விடுவோன் - ஓராண்டிற்கு ஒரு நாள் வெளியே தோன்றுவாயாக என்று கூறி விடுகின்றவன், அருளறம் பூண்டாங்கு ஆருயிர் ஓம்புநர் உளரெனில் - அருளாகிய அறத்தை மேற்கொண்டு அரிய உயிர் களைப் பாதுகாப்போர் உளராயின், அவர்கைப் புகுவாய் என்று - அவர் கைப்புகுவாய் என்று கூறி விடுத்து, ஆங்கு உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி -அவ்விடத்தில் உண்ணா நோன்புடனிருந்து உயிர் விடும்பொழுது ; ஓரியாண் டொருநாளென்றது வைகாசித் தூய நிறைமதி நாளை. அருளறம் - தயாதன்மம் பூண்டாங்கு; ஆங்கு; அசை. நோன்போடு - நோன்பால் என்றுமாம். பதிப்பெயர்ப்புழி-உடலினின்றும் நீக்குங்கால். 96-104 அந்நாள் ஆங்கவன் தன்பாற் சென்றேன் என் உற்றனையோ என்று யான் கேட்ப-அந்நாளில் அவனிடம் சென்றயான் நீ எய்திய துன்பம் யாதென வினவலும், தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்-தன்னை அடைந்த துன்பங்கள் பலவற்றையும் தான் எடுத்துக் கூறி, குணதிசைத் தோன்றிக் கார் இருள் சீத்துக் கீழ்த்திசையிலே தோன்றிக் கரிய இருளை அழித்து குடதிசைச் சென்ற ஞாயிறுபோல-மேற்றிசையிற் சென்ற கதிரவனைப் போல, மணிபல்லவத்திடை மன்னுடம்பு இட்டுத் தணியா மன்னுயிர் தாங்கும் கருத்தொடு-நிலை பெற்ற உயிர்களைப் பாதுகாக்கும் நீங்காத எண்ணத்துடன் மணிபல்லவத்தில் தன் உடலை இட்டு, சாவகம் ஆளும் தலைத் தாள் வேந்தன் ஆ வயிற்று உதித்தனன் ஆங்கவன் தான் என் - ஆபுத்திரன் சாவக நாட்டினை யாளும்மிக்க முயற்சியை யுடைய அரசனது ஆவின் வயிற்றில் உதித்தனன் என்க. சென்றேன் யான் என்று கேட்ப எனக் கூட்டுக. யான் என்றது அறவணவடிகள். தாங்குங் கருத்தொடு உதித்தனன் என்றலுமாம்; 1"உயிர் உடம்பின் நீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்குந் துணிபாகலின்" என்னும் பரிமேலழகர் உரை ஈண்டு அறியற்பாலது. தணியாக் கருத்தொடு என்க. பசு மண்முகன் என்னும் முனிவனுடைய தாயினும் பூமி சந்திரனது நாட்டகத்தது ஆகலின் 'வேந்தன் ஆ' எனப்பட்டது. அவன் உரைத்தனன் உடம்பிட்டு உதித்தனன் என்றியையும். உழந்தோர் மலைக்குமென்றலும், இல்லோன் அஞரெய்த, சிந்தா விளக்குத் தோன்றிப் பாத்திரங் கொடுத்தலும், ஆபுத்திரன் ஓம்பலின் விடாவாய் ஒலிப்ப, இந்திரன் கொள்கென, உரைசெய் வோன், ‘யாவை யீங்களிப்பன தேவர் கோன்' என்றலும், ஆயிரங் கண்ணோன் உலகோர்க் களித்தலும், பாண்டி நன்னாடு பான்மைத் தாகலின், பீடிகை முறைமையதாக. ஆபுத்திரன் நீங்கி உண்போரை வினாவி, என்பார் இன்மையின் வருவோன் றன்முன், வந்தோர் மடிந்தது என்றலும், வங்கமேறி இழிந்தனன்ச் ; வங்கம் வல்லிருட் போதலும் துயரெய்தி விடுவோன் புகுவாய் என்று உயிர்பதிப் பெயர்ப்புழி, சென்றேன் கேட்ப, அவன் உரைத்தனன் ஆவயிற்றுதித்தனன் என வினைமுடிவு செய்க. பாத்திரமரபு கூறிய காதை முற்றிற்று. 15. பாத்திரங்கொண்டு பிச்சை புக்க காதை ("மணிமேகலை ! முன்பு ஆபுத்திரனுக்கு ஏழுநாள்காறும் பாலூட்டிய ஆவானது அவ் வறத்தின் சிறப்பான் சாவக நாட்டிலே தவள மலையில் தவஞ் செய்யும் மண்முக முனிவனிடத்தே பொன்னிறமான கொம்புகளுங் குளம்புகளுமுடையதாய்ச் சென்று, ஈனுதற்கு முன்பே பால்சுரந்து எல்லா வுயிர்களையும் உண்பித்துக் கொண்டிருந்தது. அது கண்டு மூன்று காலமும் தோன்ற வுணரும் அம்முனிவன் 'இவ் ஆன் வயிற்றில் உயிர் காவலனொருவன். பொன்மயமான முட்டையினிடம் தோன்றுவன்' என்று கூறினன். அறஞ்செய்தற்பொருட்டே மணிபல்லவத்தில் உயிர் துறந்த ஆபுத்திரன் தன்னைக் குழவிப் பருவத்தே காத்தளித்த பசுவை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்தவனாதலின், மண்முக முனிவன் கூறியவாறே அதன் வயிற்றிலுதித்தனன். அவன் தோன்றிய காலம் வைகாசித் தூய நிறைமதி நாள் (வைசாக சுத்த பூர்ணிமை). அப்பொழுது சில நன்னிமித்தங்கள் நிகழ்ந்தன. அதனை யறிந்த சக்கரவாளக் கோட்டத்துள்ள முனிவர்கள், ‘புத்தன் அவதரிக்குங் காலத்தில் நிகழும் நிமித்தங்கள் இப்பொழுது நிகழ்வதற்குக் காரணம் என்ன' என வியந்து அதனுண்மையைத் தெரிந்து கோடற்குக் கந்திற் பாவையை அடைந்து வினாவினர். அது, ‘மணிபல்லவத்தில் இறந்த ஓர் அறவோன் உயிர்களைப் புரத்தற்காகச் சாவக நாட்டில் உதித்தனன்; அதனாற்றான் நன்னிமித்தங்கள் நிகழ்ந்தன ; அவன் வரலாற்றை அறவணன்பாற் கேண்மின்' என்று கூறி விடுத்து, எனது நாவை வருத்தியது. மகப்பேறின்றி வருந்தும் அந்நாட்டரசனாகிய பூமிசந்திர னென்பவன் மண்முக முனிவனை வணங்கி ஆவீன்ற அருங் குழந்தையை வாங்கிக்கொண்டு சென்று வளர்த்து வந்தான். அச் சிறுவன் இப்பொழுது அரசுரிமை பெற்று வாழ்கின்றான். இது நிற்க, காவிரியானது மாறாது நீர்பெருகி இந் நாட்டை வளமுறச் செய்தும் எக்காரணத்தாலோ உயிர்கள் வறுமையால் வருந்து கின்றன. ஆதலால் பாற்கடல் தந்த அமிழ்தத்தைப் பயன்படுத்தாது வைத்திருப்பதுபோல மிகப் பயன்படுவதான இவ் வமுதசுரபியை நீ சும்மா வைத்திருத்தல் தகுதியன்று," என்று கூறினர். அதனைக் கேட்ட மணிமேகலை அப்பொழுதே அவரை வணங்கித் துதித்துப் பிக்குணிக் கோலம் பூண்டு அப்பாத்திரத்தைக் கையிலேந்திப் பெருந்தெருவடைந்தாள். அடையவே, உச்சயினி நகரத்தரசனாகிய பிரச்சோதன னென்பவன் உதயணனை வஞ்சித்துச் சிறைப் படுத்திய ஞான்று அவனைச் சிறை மீட்டற்கு அவன்றன் அமைச் சனாகிய யூகியென்பவன் வேற்றுருக் கொண்டு வீதியை யடைந்த பொழுது அவனைக் கண்டு பரிவுற்றுப் பற்பலர் சூழ்ந்தாற்போல மணிமேகலையைப் பலருஞ் சூழ்ந்துகொண்டனர். அப்பொழுது மணிமேகலை "கற்புடைய மாதர் இடும் ஐயத்தையே முதலில் ஏற்பது தகுதி,"யென்று சொல்ல, காய சண்டிகை, "மழை வளந் தரும் கற்புடைய மாதர்களுள் மிக மேம்பட்டவளாகிய ஆதிரையின் மனை இது; நீ இதிற் புகவேண்டும்," என்று அவளுக்குக் கூறினள். இன்னுங் கேளாய் இளங்கொடி மாதே அந்நாள் அவனை ஓம்பிய நல்லாத் தண்ணென் சாவகத் தவள மால்வரை மண்முகன் என்னும் மாமுனி இடவயின் 5 பொன்னின் கோட்டது பொற்குளம் புடையது தன்னலம் பிறர்தொழத் தான்சென் றெய்தி ஈனா முன்னம் இன்னுயிர்க் கெல்லாம் தான்முலை சுரந்து தன்பால் ஊட்டலும் மூன்று காலமும் தோன்றநன் குணர்ந்த 10 ஆன்ற முனிவன் அதன்வயிற் றகத்து மழைவளஞ் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர்கா வலன்வந் தொருவன் தோன்றும் குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன் அடர்ப்பொன் முட்டை அகவையி னானெனப் 15 பிணிநோய் இன்றியும் பிறந்தறஞ் செய்ய மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன் தற்காத் தளித்த தகைஆ அதனை ஒற்கா வுள்ளத் தொழியான் ஆதலின் ஆங்கவ் வாவயிற் றமரர்கணம் உவப்பத் 20 தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுக் கொருதா னாகி உலகுதொழத் தோன்றினன் பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள்நீ இருதிள வேனிலில் எரிகதிர் இடபத் தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின் 25 மீனத் திடைநிலை மீனத் தகவையின் போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து மண்ணக மெல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நன்னீர் போதொடு சொரிந்தது போதி மாதவன் பூமியில் தோன்றும் 30 கால மன்றியும் கண்டன சிறப்பெனச் சக்கர வாளக் கோட்டம் வாழும் மிக்க மாதவர் விரும்பினர் வியந்து கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய அந்திற் பாவை அருளு மாயிடின் 35 அறிகுவம் என்றே செறியிருள் சேறலும் மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன் தணியா உயிருயச் சாவகத் துதித்தனன் ஆங்கவன் றன்திறம் அறவணன் அறியுமென் றீங்கென் நாவை வருத்திய திதுகேள் 40 மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி மக்களை யில்லேன் மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை என்றவன் வளர்ப்ப அரைசாள் செல்வம் அவன்பால் உண்மையின் 45 நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான் துறக்க வேந்தன் துய்ப்பிலன் கொல்லோம் அறக்கோல் வேந்தன் அருளிலன் கொல்லோ சுரந்து காவிரி புரந்துநீர் பரக்கவும் நலத்தகை இன்றி நல்லுயிர்க் கெல்லாம் 50 அலத்தற் காலை யாகிய தாயிழை வெண்திரை தந்த வமுதை வானோர் உண்டொழி மிச்சிலை யொழித் துவைத் தாங்கு வறனோ டுலகின் வான்துயர் கெடுக்கும் அறனோ டொழித்தல் ஆயிழை தகாதென 55 மாதவ னுரைத்தலும் மணிமே கலைதான் தாயர் தம்மொடு தாழ்ந்துபல ஏத்திக் கைக்கொண் டெடுத்த கடவுட் கடிஞையொடு பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைதலும் ஒலித்தொருங் கீண்டிய ஊர்க்குறு மாக்களும் 60 மெலித்துகு நெஞ்சின் விடருந் தூர்த்தரும் கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை வஞ்சஞ் செய்துழி வான்தளை விடீஇய உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் 65 உருவுக் கொவ்வா உறுநோய் கண்டு பரிவுறு மாக்களில் தாம்பரி வெய்தி உதய குமரன் உளங்கொண் டொளித்த மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப் பிச்சைப் பாத்திரங் கையினேந் தியது 70 திப்பியம் என்றே சிந்தைநோய் கூர மணமனை மறுகின் மாதவி யீன்ற அணிமலர்ப் பூங்கொம் பகமலி யுவகையில் பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை யேற்றல் பெருந்தக வுடைத்தெனக் 75 குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒருதனி யோங்கிய திருமலர் போன்று வான்தரு கற்பின் மனையுறை மகளிரில் தான்தனி யோங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள் அவள்மனை இம்மனை 80 நீபுகல் வேண்டும் நேரிழை என்றனள் வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித் தென்றிசைப் பொதியிலோர் சிற்றியாற் றடைகரை மாதவன் தன்னால் வல்வினை யுருப்பச் சாபம் பட்டுத் தனித்துயர் உறூஉம் 85 வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும் காயசண் டிகையெனும் காரிகை தானென். உரை 1. இன்னும் கேளாய் இளங்கொடி மாதே-இளமை பொருந்திய கொடி போலும் மாதே இன்னும் யான் கூறுவதனைக் கேட்பாயாக ; இன்னும் - மற்றுமென்னும் பொருட்டு: 2-8. அந்நாள் அவனை ஓம்பிய நல்ஆ-சாலி யென்பாள் ஆபுத்திரனை ஈன்று போகட்டுச் சென்ற அந்நாளில் அவனைப் பாதுகாத்த நல்ல பசுவானது, தண்ணென் சாவகத் தவள மால்வரை - குளிர்ச்சி மிக்க சாவக நாட்டிலுள்ள பெரிய தவளமலைக் கண்ணே, மண் முகன் என்னும் மாமுனி இடவயின் - பெருமை பொருந்திய மண் முகன் என்னும் முனிவனிடத்தில், பொன்னின் கோட்டது பொற்குளம்பு உடையது - பொன்னாலாய கொம்பினையுடையதும் பொன்னா லாகிய குளம்பினையுடையதும் ஆகி, தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி-தனது நலத்தினைக் கண்டு பிறர் எல்லாம் வணங்கும்படி சென்று அடைந்து, ஈனா முன்னம் இன்உயிர்க்கு எல்லாம் தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்-தான் ஈனுதற்கு முன்னமே மடி சுரந்து இனிய உயிர்கட்கெல்லாம் தனது பாலை உண்பித்தலும் ; இடவயின் என்பதில் வயின் ஏழனுருபின் பொருட்டு. நலமாவது ஈண்டு அருள் 9-14. மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த ஆன்ற முனிவன்-முக்காலங்களையும் தெளிவுற நன்கறிந்த தவத்தான் அமைந்த மண்முக முனிவன், அதன் வயிற்று அகத்து-அப் பசுவினது வயிற்றின்கண், மழைவளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும் உயிர்காவலன் வந்து ஒருவன் தோன்றும் - மழைவளம் பெருகவும் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கவும் உயிர்களைக் காப்பவனாகிய ஒருவன் வந்து உதிப்பன், குடர்த்தொடர் மாலை பூண்பான் அல்லன் - அங்ஙனந் தோன்றுவோன் ஊனானாய குடர் மாலையைப் பூண்பானல்லன், அடர்ப் பொன் முட்டை அகவையினான் என - பொற்றகட்டினாகிய முட்டையின் உள்ளிடத்தானாவன் எனவுரைக்க; மூன்று காலம்-இறப்பு நிகழ்வு எதிர்வு; அவற்றில் நிகழ்வன வற்றை உணர்த்திற்று; 1‘,மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியினாற்றிய வறிவன்" என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலுங் காண்க. தோன்ற - விளங்க; புலப்பட. உயிர் காவலன் ஒருவன் வந்து என மாறுக. குடர்த்தொடர்-குடரின் தொடர்ச்சி. அடர்-தகடு. அகவை - அடங்கியது; உள்ளிடம். "குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர், அடர்ப்பொன் முட்டையு ளடங்கிய வண்ணமும்" (25 : 72-3) என்பர் பின்னும். 15-26. பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ-அப்பெரியோன் பிறந்த வியல்பினை நீ கேட்பாயாக, பிணிநோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய-பிணியானுண்டாகும் வருத்தம் இல்லா திருக்கவும் மீண்டும் உலகின்கண்பிறந்து அறஞ்செய்தற் பொருட்டு,மணிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவ மென்னுந் தீவின்கண் தன் ஆருயிர் துறந்த வனாகிய ஆபுத்திரன், தற்காத்து அளித்த தகை ஆ அதனை-தன்னைப் பேணிப் பாதுகாத்த அழகிய பசுவினை, ஒற்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்-தளராத உள்ளத்தின்கண் நீங்காதவனாதலினால், ஆங்கு அவ் ஆ வயிற்று-அம் முனிவன் கூறியவாறே ஆண்டு அப் பசுவின் வயிற்றில், அமரர்கணம் உவப்ப-உம்பர் கூட்டம் உவகை எய்த, தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவினுக்கு-இனிய பழங்களையுடைய நாவல் ஓங்கிய இம் மாபெருந் தீவிற்கு, ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்-தான் ஒரு முதல்வனாய் உலகிலுள்ளோர் வணங்கும்படி பிறந்தனன், இருது இளவேனிலில் - இளவேனிற் பருவத்தில், எரிகதிர் இடபத்து - ஞாயிறு இடப விராசியிலிருக்கும் வைகாசித் திங்களில், ஒரு பதின் மேலும் ஒரு மூன்று சென்ற பின் மீனத்து - இருபத்தேழு நாண் மீன்களில் பதின்மூன்று சென்றபின், இடைநிலை மீனத்து அகவையில் - நடுவண தாகிய விசாக நாண்மீனின் அகத்தே, போதித்தலைவனொடு பொருந்திய போழ்தத்து-புத்ததேவனுடன் பொருந்திய பொழுதின் கண்ணே; தகை - தகுதியுமாம் ; ஒல்கா என்பது வலித்தல் பெற்றது. அம் முனிவன் கூறியவாறே என வருவித்து, பொருந்திய போழ்தத்துத் தோன்றினன் என முடிக்க. இருது - பருவம் ; பெரும் பொழுது. இளவேனில் - சித்திரையும் வைகாசியும். எரிகதிர் - ஞாயிறு. எரிகதிர் இடபம் என்பதனை இடபஞாயிறு என வைகாசிக்குப் பெயராக்குதலுமாம்; என்னை? அவ்வாறு சிலையெழுத்துக்களில் வழங்குதலின் என்க. வைகாசித் திங்களில் பதின்மூன்று பாகை சென்றபின் எனக்கொண்டு, இடைநிலை மீனம் என்பதனால் விசாகம் கோடலுமாம்; இப்பொருட்கு மீன்களுள்ளே இடை நிலைமீன் எனக்கொள்ளுதல் வேண்டும் ; பண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டமையின் விசாகம் நடுமீனாயிற்று; அகவை என்பதனால் விசாகத்தின் இரண்டு மூன்றாங் கால்கள் பெற்றாம். அத்து மூன்றும் சாரியைகள். புத்ததேவன் தோன்றியதும், ஞானம் பெற்றதும் விசாகத்துடன் கூடிய தூய நிறைமதி நாளாகலின் ஆபுத்திரன் பிறந்த அப் பொழுதினைப் போதித் தலைவனொடு பொருந்திய போழ் தென்றார். 27-35. மண்ணகம் எல்லாம் மாரி இன்றியும் புண்ணிய நல்நீர் போதொடு சொரிந்தது - புவிமுழுதும் மழை இல்லாம லிருந்தும் புண்ணியத் தூநீர் மலருடன் பொழிந்தது, போதி மாதவன் பூமியில் தோன்றும் காலம் அன்றியும்-புத்த தேவன் உலகின்கண் தோன்றும் காலமல்லா திருந்தும், கண்டன சிறப்பு என - இத்தகைய சிறப்புக்கள் நிகழ்ந்தன என்று, சக்கரவாளக் கோட்டம் வாழும்-சக்கரவாளக் கோட்டத் திலுறைகின்ற, மிக்க மாதவர் விரும்பினர் வியந்து-மிக்க பெருந்தவமுடைய முனிவர்கள் ஆர்வமுடையராய் வியந்து, கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய அந்தில்பாவை அருளுமாயிடின் அறிகுவம் என்றே - உயரிய தூணின்கண் கடவுளால் எழுதப்பட்ட பாவை உரைத்தருளுமாயின் அறிவோம் என்று, செறிஇருள் சேறலும்-செறிந்த இருளின்கட் செல்லுதலும்; மாரி - மழை, முகில், போதொடு கூடிய நீர் சொரிந்ததென்க. சொரிதல் - பொழிதல், சோர்தல்; சொரியப்பட்டது என்றுமாம். கண்டன- காணப்பட்டன; 1"செயப்படு பொருளைச் செய்தது போலத்' தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" என்பதனாற் போந்த வழுவமைதி : சிறப்பு - வியத்தகு நிகழ்ச்சி; நன்னிமித்தம். புத்தன் தோன்றுங்காலத்துளவாம் சிறப்பு நிகழ்ச்சிகள் முன்னர் அறவணர்த்தொழுத காதையிற் கூறப்பட்டமை காண்க. நெடுநிலை யுடைக்கந்து என மாறுக. அந்தில் : அசை; அவ்விடம் என்று கொண்டு, அந்திற்சேறலும் என்றியைத்தலுமாம். 36-39. மனிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவத் தின்கண் ஆருயிர் துறந்தோனாகிய ஆபுத்திரன், தணியா உயிர் உயச் சாவகத்து உதித்தனன் - குறையாத உயிர்கள் உய்யும்படி சாவக நாட்டில் தோன்றினன், ஆங்கவன் தன்திறம் அறவணன் அறியும் என்று - அவனது வரலாற்றினை அறவண முனிவன் அறிவான் என்று கூறி, ஈங்கு என் நாவை வருத்தியது இதுகேள்-எனது நாவை வருத்தியது இதனைக் கேட்பாயாக; தணியா - குறையாத, நிறைந்த; துன்பம் தணியாத உயிரென்றும் துன்பந் தணிந்து உயிருய்ய வென்றும் உரைத்தலுமாம். பாவை என்று கூறி நாவை வருத்தியதென்க. பாவையின் கூற்றை யுட்கொண்ட மாதவர்கள் தம்பால்வந்து வினாவத் தாம் அவர்கட்கு உரைத்தமை தோன்ற என்நாவை வருத்திய தென்றார்; இதனால் அறவணவடிகள் தாபதப் பக்கத்து வாய்வாளாமையிற் கருத்துடையரென்பதும் தோன்றும். ஆங்கு, ஈங்கு என்பன அசைகள். 40-45. மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும் புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி-அந் நாட்டினையாளும் மன்னனாகிய பூமிசந்திரன் மண்முகன் எனப் பெயரிய தவமுதல்வனது செவ்விய திருவடியை வணக்கஞ் செய்து, மக்களை இல்லேன் - மக்கட்பேறு இல்லாதவனாகிய யான், மாதவன் அருளால் பெற்றேன் புதல்வனை என்று - நுமதருளினாலே அரிய புதல்வனை யடைந்தேன் என்று கூறி, அவன் வளர்ப்ப - அவன் வளர்த்து வர, அரைசு ஆள் செல்வம் அவன்பால் உண்மையின் - அரசாளுதலாகிய செல்வம் அவனிடம் உள்ளமையால், நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான் - அந்த ஆபுத்திரன் மலர்கள் இணைந்த மாலையையுடைய மன்னவனாயினன்; மாதவன்: முன்னிலையிற் படர்க்கை. அரைசு: இடைப்போலி. அவன் என்றது பூமிசந்திரனை; அவன் மகனாகிய ஆபுத்திரன் என்று கொண்டு, அரசாளும் பொறியுண்மையால் என்றுரைத் தலுமாம்; ஆபுத்திரனுக்குப் புண்ணியராசன் என்னும் பெயருண் டென்பது பின்னர் அறியப்படும். நிரைதார்: வினைத்தொகை. இதுகாறும் ஆபுத்திரன் வரலாறு உரைக்கப்பட்டது. 46-50. துறக்க வேந்தன் துய்ப்பு இலன் கொல்லோ-வானுலகின் மன்னனாய இந்திரன் அவிநுகர்ச்சி இலனாயினனோ, அறக்கோல் வேந்தன் அருள் இலன் கொல்லோ - அறநெறியிற் செல்லுங்கோலினையுடைய அரசன் அருள் இல்லாத வனாயினனோ, சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும் - காவிரியில் நீர் பெருகி உயிர்களைக் காத்துப் பரந்து செல்லவும், நலத்தகை இன்றி நல் உயிர்க்கெல்லாம் அலத்தற்காலை ஆகியது ஆயிழை - ஆயிழையே நன்மையுடைய உயிர் கட்கெல்லாம் இன்பம் இல்லையாக வறுமைக்காலம் உண்டாயிற்று, ஆகலின்; துய்ப்பு - அவியூண். துய்ப்பிலன் கொல்லோ என்றதனால் அதனை ஊட்டுவார் இலராயினரோ என்றவாறாயிற்று. மாதவர் வேள்வியும் அரசன் செங்கோலும் மழைக்குக் காரணமாகலின் துய்ப்பிலன்கொல்லோ அருளிலன் கொல்லோ என்றார்; "செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ,...அலத்தற் காலை யாகியது" (28 : 188 - 91) என மேல் வருவதுங் காண்க. அறக்கோல் வேந்தன் - சோழன். "சுரந்து பரக்கவும்" என்றது காவிரியின் சிறப்புக் கூறியபடி. நல்லுயிர் - மக்களுயிர். 51-55. வெண்டிரை தந்த அமுதை வானோர் உண்டொழி மிச்சிலை ஒழித்து வைத்தாங்கு-வெள்ளிய அலைகளை யுடைய பாற்கடலளித்த அமுதினை உம்பர்கள் தாம் உண்டு கழித்த மிகுதியைப் பயன்படுத்தாது வைத்தாற்போல, வறன் ஓடு உலகின் வான்துயர் கெடுக்கும் - வற்கடம் பரந்த உலகினது பெரிய துன்பத்தைப் போக்கவல்ல, அறன் ஓடு ஒழித்தல் ஆயிழை தகாது என - அறத்தின் பெருக்கினையுடைய திருவோட்டைப் பயன்படுத்தாது வைத்தல் நங்காய் தகுதி யுடைத்தன்றென்று, மாதவன் உரைத்தலும் - அறவண முனிவர் கூறலும்; அமுதில் மிச்சிலாகியதனை என்க. ஒழித்து வைத்தல் - வறிதிருக்கும்படி வைத்தல். வறன் - வறுமை, வறட்காலம். ஓடுதல்- பரத்தல்; 1"வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினாள்" என்றார் பிறரும். அறன் ஓடு - அறம் பயக்கும் ஓடு; திருவோடு. "வறனோ டுலகின் மழை வளந் தரூஉம், அறனோ டேந்தி யாருயி ரோம்புவை" (21: 157 - 8) எனப் பின்னரும் இங்ஙனம் வருதல் காண்க. 55-58. மணிமேகலைதான் தாயர் தம்மொடு தாழ்ந்து பல ஏத்தி - மணிமேகலை தன் தாயராகிய மாதவி சுதமதி என்னும் இருவருடனும் அறவணவடிகளை வணங்கிப் பலவாறாகத் துதித்து, கைக்கொண்டெடுத்த கடவுள் கடிஞையொடு - தன் கையிலெடுத்துக் கொண்டுள்ள கடவுட்டன்மை பொருந்திய பிச்சைப் பாத்திரத்துடன்; பிக்குணிக் கோலத்துப் பெருந் தெரு அடைதலும் - பிக்குணிக் கோலமும் பூண்டு அகன்ற வீதியை அடைதலும்; பௌத்த சமயத் துறவிகளில் ஆடவர் பிக்ஷூக்கள் என்றும், மகளிர் பிக்ஷூணிகள் என்றும் கூறப்படுவர். பிக்குணி: வட மொழிச் சிதைவு. 59-66. ஒலித்து ஒருங்கு ஈண்டிய - ஆரவாரித்து ஒருங்கு கூடிய, ஊர்க்குறு மாக்களும்-அறிவில்லாத ஊர்ச்சிறாரும், மெலித்து உகு நெஞ்சின் விடரும் தூர்த்தரும் - காமத்தால் நைந்து கெடும் மனத்தினையுடைய தீயோரும் பரத்தரும், கொடிக் கோசம்பிக்கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை-கொடிகளால் அலங்கரிக்கப் பெற்ற கோசம்பி நகரத்தின் அரசனாகிய திருந்திய தேர்ச் சேனைகளையுடைய உதயணனை, வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய - உஞ்சை மன்னவன் பிரச்சோதனன் வஞ்சித்துச் சிறைப் படுத்தியவழி அவனை விடுவிக்கும் பொருட்டு, உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன் - உச்சயினி நகரில் வேற்று வேடங் கொண்டு தோன்றிய யூகி யென்னும் அந்தணனது, உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு பரிவுறு மாக்களில் தாம் பரிவு எய்தி - வடிவிற்கேலாத மிகுந்த நோயைக் கண்டு துன்புற்ற மக்களைப் போலத் தாமும் இரக்கமுற்று ; ஊரிலே திரியு மியல்பின ரென்பார் 'ஊர்க்குறு மாக்கள்' என்றார். மெலித்து: மெலிந்து என்பதன் விகாரம். விடர் தூர்த்தர் என்பவற்றிற்கு முன்னர் (14: 61) உரைத்தமை காண்க. கோசம்பி - வத்த நாட்டின் தலைநகர். கோமகன் - கோமான் ; அரசன் ; அரசன் குமாரன் என்றுமாம். வத்தவன் - வத்த நாடுடைமையின் வந்த பெயர்; வத்தம்: வத்ஸம் என்பதன் திரிபு. வத்த நாட்டின் கோசம்பி நகரத் தரசனாகிய உதயணனை உச்சயினி நகரத் தரசனாகிய பிரச்சோதனன் சாலங்காயன் என்னும் தன் அமைச்சனால் எந்திர யானையைக் காட்டிப் பிடித்துவரச் செய்து சிறைப்படுத்தினன் என்க. விடீஇய - விடுவிக்க; பிறவினை. உஞ்சை - உச்சயினி ; அவந்தி நாட்டின் தலைநகர்; அவந்தி என்றும் கூறப்படும். யூகி-உதயணனுடைய அமைச்சருளொருவன். மிக்க சூழ்ச்சித்திறம் வாய்ந்தவன். அவன் பெரு நோயுற்றவன் போலவும் மருள்கொண்டவன் போலவும் உஞ்சை நகரின் வீதியில் திரிந்த பொழுது நகரத்தின் மாக்கள் பலரும் அவனைச் சூழ்ந்து பரிவுற்றன ரென்பது உதயணன் கதையால் அறியப்படும். 67-70. உதயகுமரன் உளங்கொண்டு ஒளித்த மதுமலர்க் குழலான் வந்து தோன்றி - உதயகுமரனது உள்ளத்தைக் கவர்ந்து மறைந்திருந்த தேன் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய மணிமேகலை இங்ஙனம் வெளிப்படத் தோன்றி, பிச்சைப் பாத்திரம் கையின் ஏந்தியது திப்பியம் என்றே சிந்தை நோய் கூர - பிச்சைப் பாத்திரமும் கையில் ஏந்தியது வியப்புடைத்தாம் என்று மிகுந்த மனவருத்த மடைய; திப்பியம் - ஈண்டு வியப்பென்னும் பொருட்டு. ஊர்க்குறு மாக்களும் விடரும் தூர்த்தரும், மாக்களிற் பரிவெய்தி, குழலாள் தோன்றி ஏந்தியது திப்பியமென்று நோய்கூர வென்க. 71-74. மணமனை மறுகில்-மங்கல மனைகளையுடைய வீதியில், மாதவி ஈன்ற அணிமலர்ப் பூங்கொம்பு - மாதவிபெற்ற அழகிய மலர்களையுடைய பூங்கொம்பு போலும் மணிமேகலை, அகம் மலி உவகையின் - உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடன், பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம் பிச்சை ஏற்றல் பெருந்தக வுடைத்து என - கற்புடை மகளிர் இனிதின் இடும் பிச்சையை முதலில் ஏற்றல் மிகவும் தகுதியுடைத் தென்று ரைக்க ; மாதவி...பூங்கொம்பு' குருக்கத்தி யீன்ற பூங்கொம்பு என்ப தோர் கயந் தோன்ற நின்றது. 75-80. குளன் அணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒரு தனி ஓங்கிய திருமலர் போன்று-குளத்திற்கு அழகு செய்யும் தாமரைச் செழுமலர்களின் நடுவண் ஒன்றாய் ஒப்பற்றுயர்ந்த அழகிய தாமரை மலரைப்போல, வான் தரு கற்பின் மனை உறை மகளிரில் - மழை வேண்டிற் பெய்விக்குஞ் சிறந்த கற்பினையுடைய இல்லில்வாழ் பெண்டிருள், தான்தனி ஓங்கிய தகைமையள் அன்றோ ஆதிரை நல்லாள் - ஆதிரை யென்னும் மெல்லியல் தான் இணையிலாச்சிறப்புடைய தகுதியுடையள் அல்லளோ? அவள்மனை இம்மனை - அவளது திருமனை இதுவாகும், நீ புகல்வேண்டும் நேரிழை என்றனள்- நங்கையே இதன்கண் நீமுதலிற் செல்லவேண்டும் என்று கூறினள்; "பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின், றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை" (4: 8-9) என்றார் முன்னும். திருமலர் போன்று ஆதிரை நல்லாள் ஓங்கிய தகைமையள் என்க. கற்புடை மகளிர் வேண்டும் பொழுது மழை பெய்விக்கும் ஆற்றலுடையரென்பது, "1தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்னும் பொய்யா மொழியானும், "2வறனோடின் வையகத்து வான்றருங் கற்பினாள்" என்னும் பாலைக் கலியானும் அறியப்படும். இக் கருத்து இந் நூலகத்துப் பின்னரும் (16: 49-50; 22: 68-9) வருதல் காண்க. 81-86. வடதிசை விஞ்ஞை மாநகர்த் தோன்றி - வடதிசையி லுள்ள பெரிய வித்தியாதர நகரமாகிய காஞ்சன புரத்தில் உதித்து, தென்றிசைப் பொதியில் ஓர் சிற்றியாற்று அடைகரை - தென்றிசையிலுள்ள பொதியின் மலையில் ஒரு சிற்றாற்று அடைகரையில், மாதவன் தன்னால் வல்வினை உருப்பச் சாபம் பட்டு - தீவினை உருத்து வந்தூட்ட முனிவர் ஒருவரால் சாபமடைந்து, தனித்துயர் உறூஉம்-ஒப்பற்ற துயரினைச் செய்யும், வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும் - அழியாத கொடிய பசியாகிய வேட்கையுடன் சுழலும், காய சண்டிகை எனும் காரிகை தான்என்-காயசண்டிகை என்னும் விஞ்சை மகள் என்க. உருப்ப - அழல என்றுமாம். உறூஉம் - உறுவிக்கும்; பிறவினை; தன் வினையாகக் கொண்டு உறூஉம், திரிதரும் என்பவற்றைக் காரிகை என்பதனுடன் தனித்தனி முடித்தலுமாம். வேட்கை-உணா வேட்கை. காயசண்டிகை யெனுங் காரிகை நீ புகல் வேண்டும் என்றனள் என்க. "மாதே, கேளாய்; நல்லா எய்தி ஊட்டலும், முனிவன், ‘ஒருவன் தோன்றும்; அவன் பொன்முட்டை அகவையினான்' என, நீத்தோன் ஒழியானாதலின், ஒருதானாகிப் போழ்தத்துத் தோன்றினன்; நன்னீர் போதொடு சொரிந்தது; மாதவர் வியந்து அறிகுவமென்று சேறலும், பாவை, ‘அறவணன் அறியும்' என்று என் நாவை வருத்திற்று; இது கேள்; வேந்தன் வணங்கிப் பெற்றே னென்று வளர்ப்ப, உண்மையில் அவன் வேந்தனாயினன்; அலத்தற் காலை ஆகியது; ஒழித்தல் தகாது" என மாதவன் உரைத்தலும், மணிமேகலை தாயரொடு ஏத்திக் கடிஞையொடு கோலத்தோடு பெருந்தெரு வடைதலும், மாக்களும் விடரும் தூர்த்தரும் பரிவெய்தி நோய்கூர, பூங்கொம்பு, பெருந்தக வுடைத்து' என, அது கேட்டுக் காரிகை ‘நீ புகல் வேண்டும்' என்றனள் என வினை முடிவு செய்க. பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை முற்றிற்று. 16. ஆதிரை பிச்சையிட்ட காதை (அங்ஙனங் கூறிய விஞ்சைமகள் மணிமேகலையை நோக்கி, மீட்டும் ஆதிரையது கற்பின் சிறப்பைக் கூறுவாள் : "இவள் கணவன் சாதுவனென்னும் பெயரினன்; அவன் தீய நெறியிலொழுகிப் பொருளையிழந்து வறுமையுற்று, வேற்றுநாடு சென்று பொருள் தேட வெண்ணிச் சில வணிகருடன் கப்பலேறிச் சென்றான்; செல்லுகையில் கடுங்காற்றால் அக்கப்பல் கவிழ்ந்தது ; கவிழவே சாதுவன் ஒடிந்த மரத்துண்டொன்றைப் புணையாகப் பற்றி நீந்திச்சென்று, உடை யின்றித் திரிவோராகிய நாகருடையமலைப்பக்கத்தை அடைந்தான். அவன் அவ்வாறிருக்க, அக் கப்பலினின்றுந் தப்பிக் காவிரிப் பூம்பட்டினம் வந்தோர் ‘கப்பல் உடைய இறந்தவர்களோடு சாதுவனு மிறந்தான்' என்று ஆதிரைக்குக் கூறினர்; அது கேட்டலும் அவள் தானும் இறக்கத் துணிந்து, சுடலைக் கானிற் குழிதோண்டி அதில் விறகினை யடுக்கித் தீயினை மூட்டி, ‘வினைப்பயனால் என் கணவனடைந்த இடத்தை யானும் அடைவேனாக' என்று சொல்லி அதிற் புகுந்தாள் ; புகுந்தவளை அத்தீயானது சுடா தொழிந்தது; அவள் உடுத்த கூறையும் சூடிய மாலையும் பழைய நிறம் மாறாமல் விளங்கின. அவள் 'தீயுஞ் சுடாத பாவியேன் இனி யாது செய்வேன்' என்று ஏங்குகையில், வான் மொழியானது ‘ஆதிரை! உன் கணவன் மரிக்கவில்லை; அவன் பிழைத்துச் சென்று இப்பொழுது நாகர்மலையில் இருக்கின்றான்; அங்கே பல ஆண்டு தங்கான்; சந்திரதத்தனென்னும் வாணிகனது வங்கத்திலேறி வந்து உன்னை யடைவான் நீ வருந்தாதே' என்று கூறிற்று. அது கேட்ட ஆதிரை வருத்த மொழிந்து வீட்டினை யடைந்து, கணவன் விரைந்து வருதல் கருதி இடையறாது அறங்கள் செய்துகொண்டிருந்தாள். "அங்கே நாகர்மலையை யடைந்த சாதுவன் ஒரு மரநிழலைச் சார்ந்து அயர்ந்து துயில்கொள்ள ஆண்டுள்ள நாகர்கள் வந்து பார்த்து, இவ்வுடம்பு நமக்கு நல்ல உணவாகுமென்றெண்ணி அவனை யெழுப்பினர். அவன் அன்னோர் மொழியை நன்கு கற்றவனாதலின் அம் மொழியாலே பேச, அவர்கள் அவனை வருத்துதல் தவிர்த்து, 'ஈங்கு எங்களாசிரியன் இருக்கின்றனன்; நீ அவனிடம் வரல் வேண்டும்' என்று அழைத்துச் சென்றனர். சாதுவன் அவர்களோடும் போய், கள்ளும் புலாலும் மிடைந்துள்ள இருக்கையில் ஆண்கரடி பெண்கரடியோ டிருப்பது போலப் பெண்ணுடனிருந்த அவர்கள் குருமகனைக் கண்டு, அவனோடு அளவளாவி அவனை வயமாக்கிக்கொண்டான்; கொள்ளவே, அக் குரு மகன் ‘நீ இங்கு வந்தது எதன் பொருட்டு?' என்ன, சாதுவன் நிகழ்ந்ததைக் கூறினன். அவன், ‘பசியால் வருந்திய இந் நம்பிக்கு வேண்டியவளவு கள்ளையும் ஊனையுங் கொடுத்துப் பின் இளையளாகிய நங்கையொருத்தியையும் கொடுமின்' என்றுரைத்தான். சாதுவன் அது கேட்டு அவனுடைய அறியாமைக்கு வருந்தி, ‘எனக்கு அவை வேண்டா' என்றனன். அவன், 'பெண்டிரும் உண்டியுமன்றி மாந்தர்க்கு இன்பந் தருவது வேறே யாதுளது? இருந்தாற் சொல்வாய்' என்று சினந்துரைக்க, சாதுவன், உடம்பிற்கு வேறாக உயிருண்டென்பதையும், மறுபிறப்பும் இருவினைப் பயனும் உளவென்பதையும் அறிவுறுத்தி, அவனுக்கேற்றவாறு அறத் தினைப் போதித்து விடைபெற்று, அவன் அளித்த சந்தனம் அகில்துகில் முதலியவற்றைக் கைக்கொண்டு, அங்குவந்த சந்திரதத் தனது வங்கத்திலேறி இந்நகரை யடைந்து இவளோடு வாழ்வானாகிப் பல அறங்களுஞ் செய்தான். அத்தகைய மேம்பாடுடைய இந்த ஆதிரையின் கையால் முதலிற் பிச்சை பெறுக" என்று சொல்ல, மணிமேகலை அவளது மனையிற் புகுந்து வாய்பேசாமல் ஓவியப் பாவைபோல் நின்றாள்; நின்றவுடன், ஆதிரை தொழுது வலங் கொண்டு, அமுதசுரபியின் உள்ளிடம் நிறைய, ‘பாரக மடங்கலும் பசிப்பிணி யறுக' எனக் கூறி ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை யிட்டனள். ஈங்கிவள் செய்தி கேளென விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள் ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவிலன் ஆகி 5 அணியிழை தன்னை அகன்றனன் போகிக் கணிகை யொருத்தி கைத்தூண் நல்க வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக் கெட்ட பொருளின் கிளைகே டுறுதலின் பேணிய கணிகையும் பிறர்நலங் காட்டிக் 10 காணம் இலியெனக் கையுதிர்க் கோடலும் வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானுஞ் செல்வுழி நளியிரு முந்நீர் வளிகலன் வௌவ ஒடிமரம் பற்றி ஊர்திரை யுதைப்ப 15 நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்தவர் பான்மையன் ஆயினன் நாவாய் கேடுற நன்மரம் பற்றிப் போயினன் தன்னோ டுயிருயப் போந்தோர் இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் 20 உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன் சாதுவன் தானும் சாவுற் றானென ஆதிரை நல்லாள் ஆங்கது தான்கேட்டு ஊரீ ரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீ ரோவெனச் சாற்றினள் கழறிச் 25 சுடலைக் கானில் தொடுகுழிப் படுத்து முடலை விறகின் முளியெரி பொத்தி மிக்கஎன் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்றவன் புகுதலும் படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும் 30 உடுத்த கூறையும் ஒள்ளெரி யுறாஅது ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொன்னிறம் வழாது விரைமலர்த் தாமரை ஒருதனி யிருந்த திருவின் செய்யோள் போன்றினி திருப்பத் 35 தீயும் கொல்லாத் தீவினை யாட்டியேன் யாது செய்கேன் என்றவள் ஏங்கலும் ஆதிரை கேளுன் அரும்பெறற் கணவனை ஊர்திரை கொண்டாங் குய்ப்பப் போகி நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் 40 பக்கஞ் சேர்ந்தனன் பல்லியாண் டிராஅன் சந்திர தத்தன் எனுமோர் வாணிகன் வங்கந் தன்னொடும் வந்தனன் தோன்றும் நின்பெருந் துன்பம் ஒழிவாய் நீயென அந்தரந் தோன்றி அசரீரி அறைதலும் 45 ஐயரி யுண்கண் அழுதுயர் நீங்கிப் பொய்கைபுக் காடிப் போதுவாள் போன்று மனங்கவல் வின்றி மனையகம் புகுந்தென் கண்மணி யனையான் கடிதீங் குறுகெனப் புண்ணிய முட்டாள் பொழிமழை தரூஉம் 50 அரும்பெறல் மரபிற் பத்தினிப் பெண்டிரும் விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்குயர் பிறங்கல் ஒருமர நீழல் மஞ்சுடை மால்கடல் உழந்தநோய் கூர்ந்து 55 துஞ்சுதுயில் கொள்ளஅச் சூர்மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றிப் பக்கஞ் சேர்ந்து பரிபுலம் பினனிவன் தானே தமியன் வந்தனன் அளியன் ஊனுடை இவ்வுடம் புணவென் றெழுப்பலும் 60 மற்றவர் பாடை மயக்கறு மரபிற் கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித் தொழுதுரை யாடி ஆங்கவர் உரைப்போர் அருந்திறல் கேளாய் ஈங்கெங் குருமகன் இருந்தோன் அவன்பால் 65 போந்தருள் நீயென அவருடன் போகிக் கள்ளடு குழிசியுங் கழிமுடை நாற்றமும் வெள்ளென் புணங்கலும் விரவிய இருக்கையில் எண்குதன் பிணவோ டிருந்ததுபோலப் பெண்டுடன் இருந்த பெற்றி நோக்கிப் 70 பாடையிற் பிணித்தவன் பான்மைய னாகிக் கோடுயர் மரநிழற் குளிர்ந்த பின்னவன் ஈங்குநீ வந்த காரணம் என்னென ஆங்கவற் கலைகடல் உற்றதை உரைத்தலும் அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன் 75 வருந்தினன் அளியன் வம்மின் மாக்காள் நம்பிக் கிளையளோர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடுமென அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும் 80 பெண்டிரும் உண்டியும் இன்றெனின் மாக்கட்கு உண்டோ ஞாலத் துறுபயன் உண்டெனில் காண்குவம் யாங்களும் காட்டுவா யாகெனத் தூண்டிய சினத்தினன் சொல்லெனச் சொல்லும் மயக்குங் கள்ளும் மன்னுயிர் கோறலும் 85 கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின் நல்லறஞ் செய்வோர் நல்லுல கடைதலும் அல்லறஞ் செய்வோர் அருநர கடைதலும் 90 உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர் கண்டனை யாகெனக் கடுநகை எய்தி உடம்புவிட் டோடும் உயிருருக் கொண்டோர் இடம்புகும் என்றே எமக்கீங் குரைத்தாய் அவ்வுயிர் எவ்வணம் போய்ப்புகும் அவ்வகை 95 செவ்வனம் உரையெனச் சினவா திதுகேள் உற்றதை உணரும் உடலுயிர் வாழ்வுழி மற்றைய உடம்பே மன்னுயிர் நீங்கிடில் தடிந்தெரி ஊட்டினுந் தானுண ராதெனின் உடம்பிடைப் போனதொன் றுண்டென உணர்நீ 100 போனார் தமக்கோர் புக்கிலுண் டென்பது யானோ வல்லேன் யாவரும் உணர்குவர் உடம்பீண் டொழிய உயிர்பல காவதம் கடந்துசேண் சேறல் கனவினுங் காண்குவை ஆங்கனம் போகி அவ்வுயிர் செய்வினை 105 பூண்ட யாக்கையின் புகுவது தெளிநீ என்றவன் உரைத்தலும் எரிவிழி நாகனும் நன்றறி செட்டி நல்லடி வீழ்ந்து கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறை வாழுயிர் ஓம்புதல் ஆற்றேன் 110 தமக்கொழி மரபின் சாவுறு காறும் எமக்கா நல்லறம் எடுத்தரை என்றலும் நன்று சொன்னாய் நன்னெறிப் படர்குவை உன்றனக் கொல்லும் நெறியறம் உரைக்கேன் உடைகல மாக்கள் உயிருய்ந் தீங்குறின் 115 அடுதொழில் ஒழிந்தவர் ஆருயிர் ஓம்பி மூத்துவிளி மாவொழித் தெவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிகெனச் சிறுமகன் உரைப்போன் ஈங்கெமக் காகும் இவ்வறம் செய்கேம் ஆங்குனக் காகும் அரும்பொருள் கொள்கெனப் 120 பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டோம் அவர்தம் உறுபொருள் ஈங்கிவை விரைமரம் மென்றுகில் விழுநிதிக் குப்பையோ டிவையிவை கொள்கென எடுத்தனன் கொணர்ந்து சந்திர தத்தன் என்னும் வாணிகன் 125 வங்கஞ் சேர்ந்ததில் வந்துடன் ஏறி இந்நகர் புகுந்தீங் கிவளொடு வாழ்ந்து தன்மனை நன்பல தானமும் செய்தனன் ஆங்ஙனம் ஆகிய ஆதிரை கையால் பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென 130 மனையகம் புகுந்து மணிமே கலைதான் புனையா ஓவியம் போல நிற்றலும் தொழுது வலங்கொண்டு துயாறு கிளவியோடு அமுத சுரபியின் அகன்சுரை நிறைதரப் பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென 135 ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென். உரை 1-2. ஈங்கிவள் செய்திகேள் என விஞ்சையர் பூங்கொடி மாதர்க்குப் புகுந்ததை உரைப்போள்-இப்பொழுது இவ்வாதிரையின் அருஞ் செயலைக் கேட்பாயாக என்று விஞ்சையர் மகளான காயசண்டிகை ஆதிரைக்கு நேர்ந்ததை மணிமேகலைக்கு உரைப்பவள். ஈங்கிவள்: ஒரு சொல்லுமாம். மாதர்க்கு உரைப்போளென்க. 2-10. ஆதிரை கணவன் ஆயிழை கேளாய் சாதுவன் என்போன் தகவிலன் ஆகி-நங்காய் கேள் ஆதிரையின் கணவனாகிய சாதுவன் என்பவன் நன்னடக்கையிலனாய், அணியிழை தன்னை அகன்றனன் போகி - அழகிய அணிகலன் களையுடைய ஆதிரையை நீங்கிச் சென்று, கணிகை ஒருத்தி கைத்தூண் நல்க-பொதுமகளொருத்தி தீயொழுக்கத்தால் வந்தவுணவை அளிக்க அதனை உண்டு, வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கி - வட்டாடுதலினும் சூதாடுதலினும் மிகுந்த பொருளைக் கொடுத்து, கெட்ட பொருளின் கிளை கேடு உறுதலின் - கெடுக்கப்பட்ட பொருளின் பகுதி யெல்லாம் அழிந்தமையின், பேணிய கணிகையும் பிறர் நலங்காட்டி-முன்னர்ப் பேணிய பரத்தையும் பொருளுள்ள பிறருடைய சிறப்பினைக் காட்டி, காணம் இலி எனக் கையுதிர்க்கோடலும்-பொன் இல்லாதவன் என்று கையை யசைத்துப் போக்குதலும்; கைத்தூண் - தீயொழுக்கத்தால் வந்த உணவு; கை - ஒழுக்கம்; 1"கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை" என்பது காண்க. கையகத்தாகிய உணவென்றுமாம். நல்க உண்டு என ஒரு சொல் வருவித்துரைக்க. வட்டு - உண்டையுருட்டுதல்; 2"அரங்கின்றி வட்டாடியற்றே" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. வான் பொருள்-மிக்க பொருள். கெட்ட பொருள் - தீயபொரு ளென்பாருமுளர். கையுதிர்க் கோடலும் : உம்; உடனிகழ்ச்சி. 11-16. வங்கம் போகும் வாணிகர் தம்முடன் தங்கா வேட்கையின் தானும் செல்வுழி-கலத்திற் செல்லும் வணிகர்களுடன் பல விடத்தும் செல்ல வேண்டுமென்னும் விருப்பத்தால் சாது வனும் செல்கின்ற விடத்து, நளி இரு முந்நீர் வளி கலன் வௌவ - அகன்ற பெரிய கடலில் காற்று மரக்கலத்தினைக் கவர, ஒடி மரம் பற்றி ஊர்திரை உதைப்ப - கலத்தினின்றும் ஒடிந்த பாய்மரத் துண்டினைப் பிடித்துக் கொண்டு ஊர் கின்ற அலைகள்செலுத்தச் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ்மலைப் பக்கஞ் சார்ந்து-நக்க சாரணர்களாகிய நாகர் உறைகின்ற மலைப்பக்கத்தை யடைந்து, அவர் பான்மையன் ஆயினன் - அவர்கள் வயத்தினனாயினன்; தங்கா வேட்கை - ஓரிடத்திலே தங்கவிடாத வேட்கை. வளி கலத்தை வௌவுதலாவது-நெறியிற் செல்லவிடாது தடுத்துச் சிதைத்தல். ஒடிமரம் - ஒடியாகிய மரமென்றுமாம். உதைத்தல் - உந்தல்; 3"ஓடுந் திரைகளுதைப்ப வுருண்டுருண்டு" என்பது காண்க. நக்கம் - நக்நம் என்ற வடசொற் சிதைவு. சாரணர்-சரிப்பவர். உடையில்லாமற் சஞ்சரிப்பவராகலின் நாகர், ‘நக்க சாரணர்' எனப்பட்டார். நாகர்-நாக இலச்சினையுடைமையால் அப் பெயர் பெற்றன ரென்பர். சாரணராகிய நாகரென்க. 17-21. நாவாய் கேடுற நன்மரம் பற்றிப் போயினன் தன்னோடு உயிர் உயப் போந்தோர் - மரக்கலம் அழியப் பாய்மரத்தைப் பிடித்துச் சென்ற சாதுவனுடன் உயிர் பிழைக்கப் போந் தவர்கள், இடையிருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் - மிக்க இருளையுடைய நள்ளிரவில் வீசுகின்ற அலைகள் செறிந்த பெருங் கடலில், உடைகலப்பட்டாங்கு ஒழிந்தோர் தம்முடன் - உடைந்த மரக்கலத்திலகப்பட்டு ஆண்டு இறந்தோருடன், சாதுவன் தானும் சாவுற்றான் என - சாதுவனும் இறந்தனன் என்று கூற; சாதுவன் மரத்தைப் பற்றிப் போயினாற்போல் இவர்களும் மரங்களைப் பற்றிக்கொண்டு உயிர் உய்யப் போந்தார் என்க. போந்தார் - காவிரிப்பூம் பட்டினத்திற்கு வந்தவர். இருளையுடைய இடையாமம் என்க. யாமம்-இரவு. 22-28. ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்டு-ஆதிரை நல்லாள் அதனைக் கேட்டு, ஊரீரேயோ ஒள்ளழல் ஈமம் தாரீரோ எனச் சாற்றினள் கழறி-ஊரிலுள்ளோர்களே ஒள்ளிய தழல் பொருந்திய ஈமத்தினைத் தருவீர் என்று கூறிப் புலம்பி, சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து முடலை விறகின் முளி எரி பொத்தி-சுடுகாட்டில் தோண்டப்பட்ட குழியின்கண் முறுக்குடைய காய்ந்த விறகுகளால் அழலை மூட்டி, மிக்க என் கணவன் வினைப்பயன் உய்ப்பப் புக்குழிப் புகுவேன் என்று அவள் புகுதலும் - தீவினையேனது கணவன் வினைப்பயன் செலுத்தச் சென்றவிடத்து யானும் புகுவேன் என்று அத் தீயிடைப் புகுதலும்; ஈமம் - பிணஞ்சுட அடுக்கிய விறகடுக்கு. தாரீர் - தருவீர்; ஓ: புலம்பல்; தரமாட்டீரோ என்றுமாம். சுடலையாகிய கான் என்க. மிக்க-தீவினை மிகுந்த. மேன்மையுடைய வென்றுமாம். 29-34. படுத்துடன் வைத்த பாயற் பள்ளியும்-அதனுளகப் படுத்தி ஒருசேர வைத்த படுக்கையிடமும், உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது -- உடுத்திய ஆடையும் ஒள்ளிய அழல் பற்றாமல், ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில் சூடிய மாலையும் தொல் நிறம் வழாது - பூசிய சாந்தமும் அசைகின்ற குழலிற் சூடிய மாலையும் பழைய நிறம் வழுவாமல், விரை மலர்த் தாமரை ஒருதனி இருந்த திருவின் செய்யோள் போன்று இனிது இருப்ப - மணம் பொருந்திய தாமரை மலரில் ஒப்பின்றி வீற்றிருக்கும் திருமகள்போல இனிதே இருப்ப; படுத்து-அடுக்கியென்றுமாம். பாயல் - படுக்கை. பள்ளி - இடம். திருவின் செய்யோள் - திருவாகிய செய்யோள்; இன் சாரியை அல்வழிக் கண்வந்தது. உறாது வழாது என்னும் எதிர் மறை யெச்சங்கள் இனிதிருப்ப என்னும் பிறவினை கொண்டு முடிந்தன. போன்று - போலுமாறு எனலுமாம். எரியும் ஈமத்திற்குச் செந்தாமரை மலரும், அதில் ஊறின்றியிருக்கும் ஆதிரைக்குத் திருமகளும் உவமை. 35-44. தீயுங் கொல்லாத் தீவினை யாட்டியேன் யாது செய்கேன் என்று அவள் ஏங்கலும்-தீயினாலுங் கொல்லப்படாத தீவினை யேன் இனி யாது செய்வேன் என்று அம் மெல்லியல் ஏங்குதலும், ஆதிரை கேள்-ஆதிரையே கேட்பாயாக, உன் அரும்பெறல் கணவனை - உனது பெறற்கருங் கொழுநனை, ஊர் திரை கொண்டாங்கு உய்ப்பப் போகி - தவழ்கின்ற அலைகள் அவ்விடத்திற் செலுத்த அவன் சென்று, நக்க சாரணர் நாகர் வாழ் மலைப் பக்கம் சேர்ந்தனன் - நக்க சாரணராகிய நாகர்கள் வாழ்கின்ற மலைப் பக்கத்தை யடைந்தனன், பல்லியாண்டு இரான் - அவன் அங்கே பலவாண்டுகள் தங்கான், சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன் - சந்திரதத்தன் என்னும் ஒரு வணிகனது, வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்-மரக்கலத்துடன் வந்து தோன்றுவன், நின் பெரும் துன்பம் ஒழிவாய் நீஎன-ஆகலின் நீ நினது பெரிய துயரினின்றும் நீங்குவாய் என்று, அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்-அசரீரி வானிலே தோன்றி மொழிதலும்; அசரீரி - சரீரம் இல்லாதது; அருவமாய் எங்கும் நிறைந்துள்ள கடவுள். இதனை அசரீரி வாக்கு எனவும் ஆகாயவாணி எனவும் கூறுவர். 45-51. ஐ அரி உண்கண் அழுதுயர் நீங்கி - அழகிய செவ்வரி படர்ந்த மையுண்ட கண்களையுடைய ஆதிரைநல்லாள் தான் அழுதுகொண்டிருந்த துன்பத்தினின்றும் நீங்கி, பொய்கை புக்கு ஆடிப் போதுவாள் போன்று-வாவியுட் சென்று நீராடி வருவாள் போல, மனம் கவல்வு இன்றி மனையகம் புகுந்து - மனம் கவலுதலின்றி இல்லுட் சென்று, என் கண்மணி அனையான் கடிது ஈங்கு உறுகென-எனது கண்ணினுள் மணியனைய கணவன் விரைவில் ஈண்டு வருக என்று, புண்ணியம் முட்டாள்-அறம் புரிதல் வழுவா தவளாய், பொழிமழை தரூஉம் அரும்பெறல் மரபின் பத்தினிப் பெண்டிரும்-பொழிகின்ற மழையைத் தரவல்ல பெறற்கரிய ஒழுக்கத்தினையுடைய கற்பிற் சிறந்த மகளிரும், விரும்பினர் தொழூஉம் வியப்பினள் ஆயினள் - வியந்து விரும்பி வணங்குந் தகுதியளாயினள்; முட்டுதல் - குன்றுதல், வழுவுதல். பெண்டிரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. வியந்து விரும்பினர் தொழுமெனப் பிரித்துக்கூட்டுக; வியப்பு-மேன்மை யெனலுமாம். 52-59. ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை ஓங்குயர் பிறங்கல் ஒரு மர நீழல்-அவளின் கணவனாகிய சாதுவன் கடற்கரையில் மிக உயர்ந்த மலையின் கண்ணுள்ள ஒரு மர நிழலில், மஞ்சுடை மால் கடல் உழந்த நோய் கூர்ந்து துஞ்சு துயில்கொள்ள - முகில்களையுடைய பெரிய கடலின்கண் வருந்திய துன்ப மிகுந்து மிக்க உறக்கத்தினையுடைய, அச் சூர்மலை வாழும் நக்க சாரணர் நயமிலர் தோன்றி - அச்சத் தினைத்தரும் அம் மலையிலுறையும் வன்கணாளராகிய நக்கசாரணர்கள் ஆண்டுவந்து, பக்கஞ்சேர்ந்து - சாதுவன் மருங்கடைந்து, பரி புலம்பினன் இவன் - இவன் மிகவும் வருந்தியுள்ளான், தானே தமியன் வந்தனன்-தான் ஒருவனேயாய் ஈண்டு வந்தனன், அளியன் - எளிமையுடையன், ஊனுடை இவ்வுடம்பு உணவு என்று எழுப்பலும் - புலால் பொதிந்த இவனுடம்பு நமக்கு உணவாகும் என்று எழுப்புதலும்; அலைநீர் - கடல் துஞ்சு துயில்-மிக்க துயில். நக்க சாரண ராகிய நாகர் என்க. நயமிலர் - இனிமையில்லாதவர்; வன்கண்மை யுடையர், பரிபுலம்பு - மிக்க வருத்தம்; 1'பக்க நீங்குமின் பரிபுலம் பினரென', என்பது காண்க. 60-71. மற்றவர் பாடை மயக்கறு மரபில் கற்றனன் ஆதலின்-அந்நாகருடைய மொழியைச் சாதுவன் ஐயமறக் கற்றவனா கலின் அவர்களுடன் பேச, கடுந்தொழில் மாக்கள் சுற்று நீங்கித்தொழுது உரையாடி - கொடுந் தொழிலையுடைய அன்னோர் அவனை வருத்தாது மருங்கே விலகிப் பணிமொழி கூறி, ஆங்கவர் உரைப்போர்-அவனுடன் கூறுகின்றவர், அருந் திறல் கேளாய் - அரிய வலியையுடையவனே கேட்பாயாக, ஈங்கு எம் குருமகன் இருந்தோன் - இங்கே எங்களுடைய ஆசிரியன் இருக்கின்றனன், அவன்பால் போந்தருள் நீ என - அவனிடம் நீ வந்தருள் என்ன, அவருடன் போகி - சாதுவன் அவர்களுடன் சென்று, கள் அடு குழிசியும் கழிமுடை நாற்றமும் வெள் என்பு உணங்கலும் விரவிய இருக்கையில் கள்ளைக் காய்ச்சுகின்ற பானையும் மிகுந்த புலால் நாற்ற முடைய தசையும் வெள்ளிய என்புகளின் வற்றலும் கலந்துள்ள இருக்கையின் கண்ணே, எண்கு தன் பெட்டையோடு இருத்தல் போல மனைவியுடன் அவன் இருந்த தன்மையைக் கண்டு, பாடையிற் பிணித்து அவன் பான்மையன் ஆகி - நாகர் மொழியாற் பேசுந் திறத்தால் அவனை வயமாக்கி அவன் பக்கத்தினனாகி, கோடு உயர் மரநிழல் குளிர்ந்தபின் - கிளைகள் ஓங்கிய மரத்தின் நிழலில் வெப்பந் தணிந்தபின்பு. கற்றனனாதலின் அவர்களுடன் பேச என விரித்துரைக்க. மாக்களாகிய. ஆங்கவர் என்க. அருந்திறல் ஆகுபெயர். குருமகன்- குரு; தலை மகன். இருந்தோன்: முற்று. நாற்றம்:ஆகுபெயர். இருக்கை - இருப்பிடம்; கட்டிலுமாம். 1"பன்றி புல்வாய்" என்னுஞ் சூத்திரத்து 'ஒன்றிய' என்னும் இலேசால் பிணவு என்பது கரடிக்குங் கொள்ளப்பட்டது. பெண்டு-மனைவி. அவன் பான்மையனாகி - அவன் அன்புக்குரியனாகி என்றுமாம். 71-79. அவன் ஈங்கு நீ வந்த காரணம் என் என - நாகர் தலைவன் சாதுவனை நோக்கி ஈண்டு நீ வந்த காரணம் யாது என வினவ, ஆங்கவற்கு அலைகடல் உற்றதை உரைத்தலும் - வணிகன் அவனுக்குத் தான் அலை செறிந்த கடலிற் பட்டதைக் கூறலும், அருந்துதல் இன்றி அலை கடல் உழந்தோன் வருந்தினன் அளியன் - அலைகின்ற கடலின்கண் துன்பமுற்ற இவன் உணவொன்றும் இன்றி வருந்தியுள்ளான் இரங்கத் தக்கான் ஆகலின், வம்மின் மாக்காள் - வாருங்கள் மக்களே, நம்பிக்கு இளையள் ஓர் நங்கையைக் கொடுத்து வெங்களும் ஊனும் வேண்டுவ கொடும் என - இவ்வாண்டகைக்கு இளமை பொருந்திய ஒரு நங்கையை அளித்து விருப்பந்தரும் கள்ளும் புலாலும் வேண்டுமளவும் கொடுங்கள் என மொழிய, அவ்வுரை கேட்ட சாதுவன் அயர்ந்து வெவ்வுரை கேட்டேன் வேண்டேன் என்றலும் - அம்மொழி கேட்ட சாதுவன் சோர்ந்து கொடுஞ் சொற்களை என் காதிற் கேட்டேன் யான் அவற்றை வேண்டேன் என்றுரைத்தலும்; வெங்கள் : வெம்மை - விருப்பம்; வெவ்விய கள்ளுமாம். கொடும்: செய்யுமென்னும் வாய்பாட்டு ஏவல். அயர்ந்து-கவலை யுற்று என்றுமாம். 80-83. பெண்டிரும் உண்டியும் இன்றெனில் மாக்கட்கு உண்டோ ஞாலத்து உறுபயன் - மாதரும் உணவும் இல்லையானால் மக்கட்கு உலகத்தில் அடையக்கூடிய பயன் உண்டோ, உண்டெனில் காண்குவம் யாங்களும் காட்டுவாயாக என - அங்ஙன முண்டென்றால் அதனை யாங்களும் காண்போம் காட்டுவாயாக என்று, தூண்டிய சினத்தினன் சொல் என - மிக்க சீற்றமுடையனாய்க் கூறுக என, சொல்லும் - சாது வனுரைக்கும்; இன்று என்பது பொதுவினையாய் நின்றது. உறுபயன்-இன்பம். தூண்டிய சினத்தினன் காட்டுவாயாக சொல்க என்று சொல்ல வென்க. சொல்லென என்பதிலுள்ள என என்பது சொல்ல என்னுந் துணையாய் நின்றது. 84-91. மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்-அறிவை மயக்கும் கள்ளுண்டலையும் நிலைபெற்ற உயிர்களைக் கொல்லு தலையும், கயக்கு அறு மாக்கள் கடிந்தனர்-கலக்கமற்ற அறிவினையுடையோர் விலக்கினர், கேளாய்-கேட்பாயாக, பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்- உலகில் பிறந்தோர்கள் இறத்தலும் இறந்தோர்கள் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்-உறங்குவதும் உறங்கி விழிப்பதும் போல்வதாக உள்ளமையான், நல்லறஞ் செய்வோர் நல்லுலகு அடைதலும்-நல்ல அறங்களைச் செய்கின்றவர்கள் இன்ப மெய்தற்குரிய மேலுலகங்களை யெய்துதலும், அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும் - தீவினைகளை இயற்று கின்றவர் பொறுத்தற்குரிய துன்பத்தைச் செய்யும் நிரயத்தை அடைதலும், உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் - உண்மை என்று உணர்தலினால் அறிஞர்கள் அவற்றை நீக்கினர், கண்டனை யாகென - நீ அறிவாயாக என்றுரைக்க; கோறல் - கொன்றுண்டல் என்றுமாம். கயக்கு-கலங்குதல்; ஈண்டுக் கலக்கமாவது அறிவின் திரிபு. சாதலும் பிறத்தலும், உறங்கலும் விழித்தலும் போலுதல் 1"உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி, விழிப்பது போலும் பிறப்பு" என்னும் வாயுறை வாழ்த்தானும் அறியப்படும். சாதல் உறங்கலும் பிறத்தல் விழித்தலு மென நிரனிறை.அல்லறம்-அறமல்லது; பாவம். 91-95. கடு நகை எய்தி - நாகர் குரவன் பெருஞ் சிரிப்புடை யனாய், உடம்புவிட்டு ஓடும் உயிர் உருக்கொண்டு ஓர் இடம் புகும் என்றே எமக்கு ஈங்கு உரைத்தாய்-உடலை விட்டுப் பிரிகின்ற உயிரானது வேறு வடிவு கொண்டு ஓர் இடத்திற் புகும் என்று எமக்கு இப்பொழுது கூறினாய், அவ்வுயிர் எவ்வணம் போய்ப் புகும் அவ்வகை செவ்வனம் உரை என - அவ் வுயிர் எவ்வாறு சென்று புகும் அத்திறத்தினை நன்கு கூறுவாயாக என மொழிய; எள்ளல் பற்றி நகை பிறந்தது. செவ்வனம் - நேரே. 95-106. (அதனைக் கேட்ட சாதுவன்,) சினவாது இது கேள்-சீற்றங் கொள்ளாது இதனைக் கேட்பாயாக, உற்றதை உணரும் உடல் உயிர் வாழ்வுழி - உயிரானது தன்னிடம் உறைகின்றபொழுது உடல் தன்பால் உறுகின்றதனை உணரும், மற்றைய உடம்பே மன்னுயிர் போனால்-அங்ஙனமாகிய உடலே தன்னிடம் நிலைபெற்ற உயிர் பிரிந்தால், தடிந்து எரி ஊட்டினும் தான் உணராது எனின் - வெட்டித் தீயின்கண் இட்டாலும் தான் அறியாது என்றால், உடம்பிடைப் போனது ஒன்று உண்டென உணர் நீ - அவ்வுடம்பிலிருந்து பிரிந்து சென்றது ஒன்று உண்டு என்பதை நீ அறிவாய், போனார் தமக்கு ஓர் புக்கில் உண்டு என்பது-அங்ஙனம் சென்றோர்க்கு ஒரு புகுமிடம் உண்டு என்பதை, யானோ அல்லேன் யாவரும் உணர்குவர்-யான் மட்டு மன்று எல்லோரும் அறிகுவர். உடம்பு ஈண்டு ஒழிய உயிர் பல காவதம் கடந்து சேண் சேறல் - யாக்கை இவ் விடத்தில் நீங்க உயிர் பல காவதங்கள் கடந்து நெடுந்தூரத்திற் செல்லுதல், கனவினும் காண்குவை-கனவின் கண்ணும் காண்பாய், ஆங்ஙனம் போகி அவ்வுயிர் செய்வினை பூண்ட யாக்கையில் புகுவது தெளி நீ - அங்ஙனம் சென்று அவ்வுயிர் தம் வினைப் பயனை நுகர்தற்குரிய உடலின்கண் புகுவதைத் தெளிவாய் நீ, என்று அவன் உரைத்தலும் - என்று சாதுவன் மொழிதலும்; உற்றதை யுணர்தல்-தட்பம் வெப்பம் முதலிய ஊற்றினை யுணர்தல். மற்றைய-முற்கூறிய என்றபடி; மற்றை என்பதனை அசையாக்கி, அவ்வுடம்பு என்னலுமாம். எனின் - ஆதலால் ஓரிடத்தைவிட்டுப் போனவர்க்குப் பிறிதோரிடம் உண்டென உலகியலாற் கூறினான், பூண்ட-ஏற்றுக்கொண்ட; ஏற்று நுகர் தற்குரிய என்றபடி. 106-111. எரி விழி நாகனும்-தீப்போலுங் கண்களையுடைய நாகனும், நன்று அறி செட்டி நல்அடி வீழ்ந்து - அறத் தினையறிந்த வணிகனது நல்ல அடியில் விழுந்து வணங்கி, கள்ளும் ஊனும் கைவிடின் இவ்வுடம்பு உள்ளுறைவாழுயிர் ஓம்புதல் ஆற்றேன் - கள்ளையும் புலாலையும் கைவிட்டால் இவ்வுடம்பின்கண் தங்கி வாழ்கின்ற உயிரைப் பாதுகாத்த லறியேன், தமக்கு ஒழி மரபின் சாவுறு காறும் எமக்கு ஆம் நல்லறம் எடுத்துரை என்றலும்-தமக்கு அறுதியிட்ட முறை மையால் இறப்பினை எய்துமளவும் எமக்குப் பொருந்திய நல்ல அறங்களை எடுத்துக் கூறுக என்றலும்; எரி விழி-எஞ்ஞான்றும் சினத்தினாற் சிவந்த கண். நன்று - அறம். செட்டி-செட்டு உடையவன்; சிரேட்டி என்பதன் சிதைவுமாம். உறை- உறைந்து என வினையெச்சமாக்குக. தமக்கு - உயிர்கட்டு. 112-117. நன்று சொன்னாய்-நன்குரைத்தாய், நல் நெறிப் படர்குவை. நல்வழியிலே செல்வாய், உன்றனக்கு ஒல்லும் நெறி அறம் உரைக்கேன்-உனக்கு இயலும் வழியால் அறத் தினைக் கூறுவேன், உடை கல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்குறின்-கடலிற் கலமுடையப்பட்ட மக்கள் உயிர் தப்பி ஈண்டுச் சேர்ந்தால், அடுதொழில் ஒழிந்து அவர் ஆருயிர் ஓம்பி-கொல்லுந் தொழிலைவிட்டு அவர்களுடைய அரிய உயிரைக் காத்து, மூத்துவிளி மா ஒழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிகென - முதுமையுற்று இறக்கும் விலங்குகளைத் தவிர வேறு எந்த உயிரினிடத்தும் கொலைத் தொழிலை நீங்குவாயாக என்று சாதுவனுரைப்ப; முதுமையுற்று இறக்கும் விலங்குகளை மட்டும் உண்ணுக என்றான். தீத்திறம் - கொலை. ஓம்பி ஒழிகவென் றியையும். 117-127. சிறுமகன் உரைப்போன் - கீழோனாகிய நாகன் உரைப்பவன், ஈங்கு எமக்காகும் இவ்வறம் செய்கேம் - ஈண்டு எமக்குப் பொருந்திய இவ்வறத்தினைச் செய்யாநிற்பேம், ஆங்கு உனக்கு ஆகும் அரும் பொருள் கொள்கென - நினக் கேற்ற அரிய பொருள்களைக் கொண்டு செல்க வென்று, பண்டும் பண்டும் கலங்கவிழ் மாக்களை உண்டேம் - முன்பெல்லாம் மரக்கலங் கவிழ்ந்து வந்த மக்களைக் கொன்று உண்டோம், அவர் தம் உறுபொருள் ஈங்கிவை- அவர் களுடைய மிக்க பொருள்களாகும் இங்குள்ள இவைகள், விரைமரம் மென்துகில் விழுநிதிக் குப்பையோடு இவை இவை கொள்கென - சந்தன மரங்களும் மெல்லிய ஆடை களும் சிறந்த பொருட்குவைகளுமாகிய இவற்றையெல்லாம் கொள்க என்று கூற, எடுத்தனன் கொணர்ந்து - சாதுவன் அவைகளை எடுத்துக் கொணர்ந்து, சந்திரதத்தன் என்னும் வாணிகன் வங்கஞ் சேர்ந்ததில் - சந்திரதத்தன் என்னும் வணிகனது மரக்கலம் வந்ததில், வந்து உடன்ஏறி - உடன் ஏறிவந்து, இந்நகர் புகுந்து ஈங்கு இவளொடு வாழ்ந்து - இந் நகரத்தை யடைந்து இவ்வாதிரையுடன் வாழ்ந்து, தன் மனை நன் பல தானமும் செய்தனன் - தனது மனையின் கண் பல நல்லறங்களையுஞ் செய்தனன். உரைப்பவன் அரும்பொருள் கொள்கெனப் பொதுவிற் கூறிப் பின்பு அவற்றை விதந்து, இவை யிவை கொள்க வென்றுரைக்க வென்க. விரைமரம் - மணமுடைய சந்தனம் அகில் முதலிய மரங்கள். சேர்ந்ததாகிய வங்கத்திலென்க. 128-135. ஆங்ஙனமாகிய ஆதிரை கையால் - அத் தன்மை யளாகிய ஆதிரையின் கையால், பூங்கொடி நல்லாய் பிச்சை பெறுகென 16. ஆதிரை பிச்சையிட்ட காதை - பூங்கொடியனைய மெல்லியலே நீ பிச்சை பெறுவாயாக வென்று உரைக்க, மனையகம் புகுந்து மணிமேகலைதான் - மணிமேகலை ஆதிரையின் இல்லத்திற் சென்று, புனையா ஓவியம்போல நிற்றலும் - அணி செய்யப்படாத ஓவியப்பாவை போல நிற்றலும், தொழுது வலங்கொண்டு - வலம்வந்து வணங்கி, துயரறு கிளவியோடு - இன்சொற்களோடு, அமுதசுரபியின் அகன்சுரை நிறை தர - மணிமேகலை கையிற் கொண்ட அமுதசுரபியினது அகன்ற உள்ளிடம் நிறையுமாறு, பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக என ஆதிரை இட்டனள் ஆருயிர் மருந்தென் - ஆதிரை நல்லாள் ஆருயிர் மருந்தாகிய அன்னத்தை நிலவுலக முழுவதும் பசி நோய் அறுக என்று கூறி இட்டனள் என்க. பெறுகென - பெறுகவென்று காய சண்டிகை உரைக்க. புனையா ஓவியம் - வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவைக் கோட்டின ஓவியம் எனலுமாம்: 1“புனையா வோவியங் கடுப்ப'' என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. பிச்சை யேற்கும்பொழுது துறவறத்தினர் மோனமாக நிற்றல்வேண்டு மென்பவாகலின், 'புனையா வோவியம் போல நிற்றலும்' என்றார். துயரறுகிளவி - இன்சொல். ஆதிரை தொழுது கிளவியோடு பசிப்பிணியறுகெனக் கூறி நிறை தர இட்டனளென்க. விஞ்சையர் பூங்கொடி மாதர்க்கு உரைப்போள், ‘ஆங்ஙனமாகிய ஆதிரை கையாற் பிச்சை பெறுக' என்று சொல்ல, மணிமேகலை மனையகம் புகுந்து நிற்றலும், ஆதிரை வலங்கொண்டு ஆருயிர் மருந்து இட்டனள் என முடிக்க. ஆதிரை பிச்சையிட்ட காதை முற்றிற்று. 17. உலகவறவி புக்க காதை (ஆதிரை யளித்த பிச்சையை முதலில் மணிமேகலை ஏற்ற பின்பு, அமுதசுரபியிலுள்ள சோற்றுத் திரளை, அறநெறியி லீட்டிய பொருள் வழங்குந்தோறும் குறையாமல் வளர்வதுபோல எடுக்க எடுக்கக் குறைவின்றி வளர்ந்து ஏற்போர் பசியைப் போக்கி விளங்கிற்று. அது கண்ட காய சண்டிகை வியந்து மணிமேகலையை வணங்கி, 'அன்னையே! எனது தீராப் பசியையும் தீர்த்தருள்க'' என்று வேண்ட, உடனே மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒரு பிடி யமுதையெடுத்து அவள் கையிலிட்டாள். அதனை யுண்டு பசி நோய் தீர்ந்து மகிழ்ந்த காயசண்டிகை “வடதிசைக் கண்ணே விஞ்சைய ருலகிலுள்ள காஞ்சனபுரமென்பது என்னுடைய ஊர்; தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்களைக் காண்டற்கு விரும்பிக்கணவனும் யானும் புறப்பட்டுப் போந்து இடையேயுள்ள கான்யாறொன்றின் கரையிலிருந்தோம்; இருக்கையில், விருச்சிகனென்னும் முனிவனொருவன் பாரணஞ் செய்தற்குப் பனங்கனி போன்ற பருத்த நாவற் கனியொன்றைத் தேக்கிலையில் வைத்துவிட்டு நீராடச் சென்றான். அக் கனியின் இயல்பினை யறியாத நான் பழவினையால் அதனைக் காலாற் சிதைத்துக் கெடுத்தேன். நீராடி மீண்டு வந்த முனிவன் அக் கனி என்னாற் சிதைந்தமையை அறிந்து சினந்து, என்னை நோக்கி, 'தெய்வத்தன்மை யுடையதும் பன்னீராண்டிற் கொருமுறை ஒரே கனியைத் தருவதுமாகிய நாவல் மரத்திலுண்டானது இக்கனி; இதனை யுண்டோர் பன்னீராண்டு பசி யொழிந்திருப்பர்; யானோ பன்னிரண்டாண்டு பட்டினியிருந்து ஒருநாளுண்ணும் நோன்புடையேன் ; உண்ணும் நாளும் இந்நாளே; உண்ணக் கருதிய கனியும் இக்கனியே; இதனை நீ யழித்துவிட்டாய்; ஆதலால், நீ வான் வழியே செல்லும் மந்திரத்தை மறந்து, யானைத்தீயென்னும் நோயால் பன்னிரண்டாண்டு தீராப் பசி கொண்டுழந்து, பின்பு இக்கனியை யான் உண்ணும் நாளில் பசியொழியப் பெறுவாய்' என்று கூறி வருந்திப் போயினன். உடனே பெரும் பசி என்னைப் பற்றியது; அதனால் மிக வருந்தினேன்; அது கண்ட என் கணவன் காய் கனி கிழங்கு முதலியவற்றை மிகக் கொணர்ந்து என்னை உண்பிக்கவும் அப்பசி தீராதாயிற்று. அந்தரஞ் செல்லும் மந்திரமும் என் நினைவுக்கு வந்திலது. அதனால் வருந்திய என் கணவன், ‘நீ நடந்து சென்று தமிழ் நாட்டிலே ஆற்றா மாக்கட்கு அருந் துணையாகிச் செல்வர்கள் வாழ்ந்திருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து அங்கே தங்குவாயாக' என்று சொல்ல, நான் அவ் வண்ணமே போந்து இங்கிருக்கின்றேன். ஒவ்வோராண்டிலும் இங்கு இந்திரவிழா நடக்கும்பொழுது என் கணவன் வந்து என் வருத்தத்தைப் பார்த்துத் தானும் வருந்திப் பின்வரும் யாண்டினை எண்ணிச் செல்வன். தணியாத வெம்பசியைத் தணித்தனை. யான் என் பதிக்கேகுவேன். இந் நகரிலே முனிவர்கள் பலர் உறையும் சக்கரவாளக் கோட்டம் என்ப தொன்றுண்டு; அதன் கண் பலரும் வந்து புகுதற்காகவே எப்பொழுதும் வாயிற் கதவு திறந்துள்ள உலகவறவி யென்னும் அம்பலம் ஒன்றுண்டு; “ ஊரூ ராங்கண் உறுபசி யுழந்தோர். ஆரு மின்மையி னரும்பிணி யுற்றோர் இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால். ஆதலின் அவ்விடத்திற்குச் செல்வாயாக'' என்று கூறிவிட்டு, அவள் தன்னூருக்குச் சென்றனள். பின் மணிமேகலை வீதியின் ஒருபக்கத்தே ஒதுங்கிச் சென்று உலக வறவியை அடைந்து மும்முறை வலம்வந்து பணிந்து, அதிலேறிச் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் வணங்கி, வெயிலாற் கரிந்த காட்டிலே மழை தோன்றினாற்போலப் பசியால் வருந்திய மக்கட்கு அமுதசுரபி யோடு தோன்றி, “இஃது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி யாகும் ; உண்ணுதற்கு விருப்பமுள்ள யாவரும் வருக'' என்று கூற, பலரும் வந்து உண்பாராயினர் ; ஆதலின் அவ் வம்பலத்தில் உண்ணு மொலி மிகுந்தது. பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற பிச்சைப் பாத்திரப் பெருஞ்சோற் றமலை அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் திறத்து வழிப்படூஉஞ் செய்கை போல 5 வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத் தான்தொலை வில்லாத் தகைமை நோக்கி யானைத் தீநோய் அகவயிற் றடக்கிய காயசண் டிகையெனுங் காரிகை வணங்கி நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி 10 அடலரு முந்நீர் அடைத்த ஞான்று குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யளக்கர் வயிறுபுக் காங்கு இட்ட தாற்றாக் கட்டழற் கடும்பசிப் பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால் 15 அன்னை கேள்நீ ஆருயிர் மருத்துவி துன்னிய என்னோய் துடைப்பா யென்றலும் எடுத்த பாத்திரத் தேந்திய அமுதம் பிடித்தவள் கையில் பேணினள் பெய்தலும் வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் 20 துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும் மாசில் வாளொளி வடதிசைச் சேடிக் காசில்காஞ் சனபுரக் கடிநக ருள்ளேன் விஞ்சையன் றன்னொடென் வெவ்வினை உருப்பத் தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன் 25 கடுவர லருவிக் கடும்புனல் கொழித்த இடுமணற் கானியாற் றியைந்தொருங் கிருந்தேன் புரிநூன் மார்பில் திரிபுரி வார்சடை மரவுரி யுடையன் விருச்சிகன் என்போன் பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி யனையதோர் 30 இருங்கனி நாவற் பழமொன் றேந்தித் தேக்கிலை வைத்துச் சேணாறு பரப்பிற் பூக்கமழ் பொய்கை யாடச் சென்றோன் தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் காலா லந்தக் கருங்கனி சிதைத்தேன் 35 உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன் சீர்திகழ் நாவலில் திப்பிய மானது ஈரா றாண்டில் ஒருகனி தருவது அக்கனி யுண்டோர் ஆறீ ராண்டு 40 மக்கள் யாக்கையின் வரும்பசி நீங்குவர் பன்னீ ராண்டில் ஒருநா ளல்லது உண்ணா நோன்பினேன் உண்கனி சிதைத்தாய் அந்தரஞ் செல்லும் மந்திரம் இழந்து தந்தித் தீயால் தனித்துயர் உழந்து 45 முந்நா லாண்டின் முதிர்கனி நானீங்கு உண்ணு நாளுன்உறுபசி களைகென அந்நா ளாங்கவன் இட்ட சாபம் இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை வாடுபசி உழந்து மாமுனி போயபின் 50 பாடிமிழ் அருவிப் பயமலை ஒழிந்தென் அலவலைச் செய்திக் கஞ்சினன் அகன்ற இலகொளி விஞ்சையன் விழுமமோ டெய்தி ஆரணங் காகிய அருந்தவன் தன்னால் காரணம் இன்றியும் கடுநோ யுழந்தனை 55 வானூ டெழுகென மந்திரம் மறந்தேன் ஊனுயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்குத் தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவும் ஆற்றே னாக 60 நீங்க லாற்றான் நெடுந்துய ரெய்தி ஆங்கவன் ஆங்கெனக் கருளொடு முரைப்போன் சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் கம்ப மில்லாக் கழிபெருஞ் செல்வர் ஆற்றா மாக்கட் காற்றுந்துணை யாகி 65 நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால் பலநா ளாயினும் நிலனொடு போகி அப்பதிப் புகுகென் றவனருள் செய்ய இப்பதிப் புகுந்தீங் கியானுறை கின்றேன் இந்திர கோடணை விழவணி வருநாள் 70 வந்து தோன்றியிம் மாநகர் மருங்கே என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கிப் பின்வரும் யாண்டவன் எண்ணினன் கழியும் தணிவில் வெம்பசி தவிர்த்தனை வணங்கினேன் மணிமே கலையென் வான்பதிப் படர்கேன் 75 துக்கந் துடைக்குந் துகளறு மாதவர் சக்கர வாளக் கோட்டமுண் டாங்கதில் பலர்புகத் திறந்த பகுவாய் வாயில் உலக வறவி ஒன்றுண் டதனிடை ஊரூ ராங்கண் உறுபசி உழந்தோர் 80 ஆரும் இன்மையின் அரும்பிணி யுற்றோர் இடுவோர்த் தேர்ந்தாங் கிருப்போர் பலரால் வடுவாழ் கூந்தல் அதன்பாற் போகென் றாங்கவள் போகிய பின்னர் ஆயிழை ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி 85 வலமுறை மும்முறை வந்தனை செய்தவ் உலக வறவியின் ஒருதனி யேறிப் பதியோர் தம்மொடு பலர்தொழு தேத்தும் முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக் கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய 90 தந்துணைப் பாவையைத் தான்தொழு தேத்தி வெயில்சுட வெம்பிய வேய்கரி கானத்துக் கருவி மாமழை தோன்றிய தென்னப் பசிதின வருந்திய பைதல் மாக்கட்கு அமுத சுரபியோ டாயிழை தோன்றி 95 ஆபுத் திரன்கை அமுத சுரபியிஃது யாவரும் வருக ஏற்போர் தாமென ஊணொலி அரவத் தொலியெழுந் தன்றே யாணர்ப் பேரூர் அம்பல மருங்கென். உரை 1-6. பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற - கற்பிற்சிறந்த ஆதிரை நல்லாளாற் பகுத்துண்ணும் உணவினைப் பெற்ற, பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை-அமுதசுரபியிலுள்ள பெரிய சோற்றுத்திரளை, அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் - அறநெறியினாலீட்டப்பட்ட ஒள்ளிய பொருள், அறவோன் திறத்து வழிப்படூஉம் செய்கை போல - அறஞ் செய்வோன் கருத்தின் வழியே சென்று பயன்படுமாறு போல, வாங்கு கை வருந்த மன்னுயிர்க்கு அளித்து- ஏற்கும் கைகள் வருந்துமாறு உயிர்கட்கு மிக அளித்தும், தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி-தான் குறைவுபடாத்தன்மையைக் கண்டு; பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. பாத்தூண் - இயல்புடைய மூவர்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துண்டற் குரிய உணவு ; இதனால் ஆதிரையளித்த உணவின் தகுதியும், ஆதிரையின் மனையற மாண்பும் பெறப்பட்டன; 1''பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை, வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்'' என்பது அறியற் பாலது. ஆதிரைபாற் பெற்றதற்கு அறத்தின் ஈட்டியதும், மணிமேகலை கருதியவாறு மன்னுயிர்க்களிக்க அது பயன்படுதற்கு அறவோன் திறத்து வழிப்படுதலும், உவமை யாயின. இனி, அறவோன் என்பதற்குச் சற்பாத்திரம் என்றும், திறத்து வழிப்படும் என்பதற்குப் பெறுவோர் பெருமைக்குத் தக்கபடி பெருகுமென்றும் கருத்துக்கொண்டனர் மகா மகோபாத்தியாய டாக்டர் சாமிநாதையர்; ஈண்டு அது பொருந்து மேற் கொள்க. பிற உயிர்கட்கும் அளிக்கப்படினும் சோறுண்டலை இயல்பாக வுடையர் மக்களாதலின், 'வாங்குகை வருந்த' என்றார். இக் கருத்து முன்னரும் வந்துள்ளமை காண்க. 7-16. யானைத் தீ நோய் அகவயிற்று அடக்கிய காயசண்டிகை எனும் காரிகை வணங்கி - யானைத்தீ என்னும் பெரும்பசி நோயினைத் தன் வயிற்றிற்கொண்ட காயசண்டிகை என்னும் மடந்தை மணிமேகலையை வணங்கி, நெடியோன் மயங்கி நிலமிசை தோன்றி அடலருமுந்நீர் அடைத்த ஞான்று - திருமால் மயக்கத்தால் நிலமிசை இராமனாகத் தோன்றி வெல்லுதற்கரிய கடலை அடைத்த பொழுது, குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்-குரங்குகள் கொண்டுவந்து வீசிய பெரிய மலைகளெல்லாம், அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு - வருத்தந் தரும் கடலின் வயிற்றினுள்ளே புகுந்தாற் போல, இட்டது ஆற்றாக் கட்டழல் கடும்பசி பட்டேன் என்றன் பழவினைப் பயத்தால் - இட்ட உணவுகளால் தணியாத அழல்போன்ற கொடிய பசியை என்னுடைய முன்னை வினைப்பயனால் அடைந்தேன், அன்னைகேள் நீ - தாயே நீ கேட்பாயாக, ஆருயிர் மருத்துவி துன்னிய என்நோய் துடைப்பாய் என்றாலும் - அரிய உயிரைப் பாதுகாக்க வல்ல மருந்தினையுடையாய் நெருங்கிய எனது பசிப்பிணியைக் களைந்தருள்வாய் என வேண்ட; யானைத் தீ நோய் - பெரும்பசியைச் செய்யும் நோய்; பஸ்மக வியாதி எனவும் படும். மயங்கி - அவிச்சையான் மயங்கி; 1‘இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி, மாசறு காட்சி யவர்க்கு'' என்பதனால் அவிச்சை பிறப்பிற்குக் காரணமாத லறிக; நெடியோன் தோன்றி மயங்கி என மாற்றி, திருமால் இராமாவதாரத்தில் பருவத முனிவரும் நாரதரும் அம்பரீடனுக் கிட்ட சாபமாகிய இருளைத் தான் ஏற்றுக் கொண்டமையால் அதனால் மூடப்பட்டுத் தன்னை மாயனென் றறியாது மயங்கி யிருந்தனன் என்னும் இலிங்க புராணக் கதையை ஏற்றியுரைப்பாருமுளர். இனி மயங்கி யென்பதற்குச் சீதையைப் பிரிந்து கையா றெய்தி யென் றுரைத்தலுமாம். முந்நீர் - படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று நீர்மையை யுடையது; கடல். மலைகளால் கடலின் வயிறு நிரம்பாமைபோல உணவுகளினால் என் வயிறு நிரம்பிற்றில்லை யெனத் தானுண்ட உணவின் மிகுதியும் பசியின் கொடுமையும் புலப்பட உவமங் கூறினாள். இட்டது: வினைப்பெயர். ஆருயிர் மருந்து- அடிசில், மருத்துவி - மருந்தினையுடையாள். காரிகை நோக்கி வணங்கி, 'என்னோய் துடைப்பா' யென்றலு மென்க. 17-20. எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம் பிடித்து அவள் கையில் பெய்தலும்-மணிமேகலை தான் கையிற் கொண்ட அமுத சுரபியிலுள்ள அன்னத்தை எடுத்துப் பிடியாக அவள் கையில் இட, வயிறுகாய் பெரும்பசி நீங்கி மற்றவள் துயரம் நீங்கித்தொழுதனள் உரைக்கும்-காயசண்டிகை வயிற்றில் எரிகின்ற கொடிய பசி நீங்கத் தன் துயரமும் நீங்கி மணிமேகலையைத் தொழுது கூறுகின்றாள்; ஏந்திய - பொருந்திய; ஏந்திய கையிலெனக் கூட்டுதலுமாம். பசி நீங்கி - பசி நீங்க: எச்சத்திரிபு. 21-26. மாசு இல் வால் ஒளி வடதிசைச் சேடி - வடதிசையில் மாசற்ற வெள்ளிய வொளியினையுடைய விஞ்சையருலகில், காசு இல் காஞ்சனபுரக் கடிநகர் உள்ளேன் - குற்றமற்ற காஞ்சனபுர மென்னுங் காவல் பொருந்திய நகரத்தில்உள்ள யான், விஞ்சையன் தன்னொடு என் வெவ்வினை உருப்ப-எனது கொடுவினையானது தோற்ற என் கணவனோடு, தென்றிசைப் பொதியில் காணிய வந்தேன்-தென்றிசையிலுள்ள பொதியின் மலையின் வளங்காணும் பொருட்டு வந்தேன், கடுவரல் அருவிக் கடும்புனல் கொழித்த - விரைந்த செலவினை யுடைய அருவியினது வேகமுள்ள நீர் தெள்ளிய, இடுமணல் கானியாற்று இயைந்தொருங்கு இருந்தேன்- இடுமணலை யுடைய கான்யாற்றில் என் கணவனுடன் கூடி ஒருங்கிருந்தேன்; சேடி - வித்தியாதர ருலகு; அது வெள்ளி மலையிலுள்ள தாகலின் வாலொளியையுடையதாயிற்று; 1“வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடி'' என்பது காண்க. உருப்ப - அழலவென்றுமாம். காணிய: செய்யிய வென்னும் வினையெச்சம். வந்தேன் : எச்சமுற்றுமாம். இடு மணல் - எக்கர். 27-32. புரிநூல் மார்பில் திரிபுரி வார்சடை மரவுரி உடையன் விருச்சிகன் என்போன் - அப்பொழுது முறுக்கிய பூணூலணிந்த மார்பும் திரித்து முறுக்கிய நீண்ட சடையும் மரவுரி யாடையு முடைய விருச்சிகன் என்னும் முனிவன், பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி அனையதோர் இருங்கனி நாவற்பழம் ஒன்று ஏந்தி - பெரிய குலையையுடைய பனையினது கரிய கனியை யொத்ததாகிய பெருமை பொருந்திய கனிந்த நாவற்பழம் ஒன்றைக் கையிலேந்தி வந்து, தேக்கிலை வைத்துச் சேண் நாறு பரப்பில் பூக்கமழ் பொய்கை ஆடச் சென்றோன் - அதனை ஒரு தேக்கின் இலையில் வைத்துவிட்டு நெடுந்தூரம் நாறுமியல்புடைய பூக்கள் கமழும் பரப்பினையுடைய பொய்கையில் நீராடச் சென்றானாக; பனங்கனி பருமன் பற்றி உவமையாயது. ஓர் : அசை. நாறு பூ எனவும், பரப்பிற் பொய்கை யெனவும் இயையும். விருச்சிக னென்போன் நாவற்பழமொன்றை ஏந்தி வைத்துப் பொய்கையாடச் சென்றானாக என்க. 33-34. தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன் - தீவினை யானது பயன் கொடுப்பத் தோற்றுதலின் யான் ஆண்டுத் தருக்கொடு சென்று, காலால் அந்தக் கருங்கனி சிதைத்தேன் - காலினாலே அந்த நாவற்பழத்தைச் சிதைத்தேன்; 35-42. உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன் - உண்ணும் வேட்கையுடன் நீராடிப் போந்த விருச்சிக முனிவன், கண்டனன் என்னைக் கருங்கனிச் சிதைவுடன் - அப் பழத்தினைச் சிதைத்த திறத்தினோடு என்னைக் கண்ணுற்றனன், சீர்திகழ் நாவலில் திப்பிய மானது-சிறப்பு விளங்கும் நாவலிலே தெய்வத்தன்மை யுடைய தொன்று, ஈராறு ஆண்டில் ஒரு கனி தருவது - பன்னீராண்டிற்கு ஒரு பழம் கொடுப்பது, அக் கனி உண்டோர் - அப் பழத்தினை யுண்டோர், ஆறீராண்டு மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்- பன்னீராண்டு மக்களுடலி லுண்டாகும் பசி நீங்கப்பெறுவர், பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது உண்ணா நோன்பினேன் - யானோ பன்னீராண்டில் ஒருநாள் உண்பதல்லது பிறநாளில் உண்ணாத நோன்பினையுடையேன், உண்கனி சிதைத்தாய்-அவ்வியல்புடைய யான் இன்று உண்டற்குரிய அக் கனியைக் கெடுத்தாய்; சிதைவு-சிதைத்து நின்றநிலை; சிதைந்தகனியோ டென்றுமாம். திப்பியம்-தெய்வலோகத்திலிருந்து உண்டாய தென்றுமாம். உண் கனி - திப்பியமான நாவல் தந்த கனியாகிய யான் உண்டற்குரிய கனியென்க 43-48. அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து-ஆகலின் விண்மீது செல்லும் மந்திரத்தை இழந்து, தந்தித் தீயால் தனித்துயர் உழந்து - யானைத்தீ யென்னும் பசிநோயால் ஒப்பற்ற துன்ப மடைந்து வருந்தி, முந் நாலாண்டில் முதிர்கனி ஈங்கு உண்ணும் நாள் உன் உறுபசி களைக என - இனி வரும் பன்னிரண்டாவ தாண்டில் முதிர்கின்ற நாவற்கனியினை நான் இங்கு உண்ணுகின்ற நாளில் நினது மிக்க பசியைப் போக்குவாய் என்று, அந்நாள் ஆங்கு அவன் இட்ட சாபம் - யான் அவ் வருங் கனி சிதைத்த அன்று அவ்விடத்தில் அம் முனிவனிட்ட சாபத்தை, இந்நாள் போலும் இளங்கொடி கெடுத்தனை - இளங்கொடி போலும் நீ இன்று கெடுத்தாய்; பன்னீராண்டு தான் பசித்திருக்கச் செய்த தீவினை பற்றி அவ்வகையே துயருழக்குமாறு சாபமிட்டனனென்க. சாபம் கெடுத்தனை யென்றியையும். போலும் : ஒப்பில் போலி. சாப முடிவெல்லையாகிய நாள் இந்நாள் என்றுமாம். 49-55. வாடு பசி உழந்து மாமுனி போயபின் - வாடுதற்கேது வாகிய பசியால் வருந்தி அம் முனிவன் சென்றபின், பாடு இமிழ் அருவிப் பயமலை ஒழிந்து-ஒலி முழங்குகின்ற அருவி களையுடைய பயனுடைய பொதியின் மலையை அடைவதை விடுத்து, என் அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற - மனத்தில் தோன்றியதை ஆராயாது செய்த என் செய்கைக்கு அஞ்சினவனாய் நீங்கிய, இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி-விளங்கும் ஒளியுடைய விஞ்சையன் துன்பமோ டடைந்து, ஆரணங்காகிய அருந்தவன் தன்னால் - அரிய தெய்வத் தன்மையுடைய அருந்தவனால், காரணம் இன்றியும் கடுநோய் உழந்தனை - காரணமில்லாமலும் கடிய நோயால் வருந் தலுற்றனை, வானூடு எழுக என - விசும்பின் மீது எழுவாயாக என்று கூற ; அலவலைச் செய்தி - ஆராயாது செய்த செய்தி; அலமருதலைச் செய்யும்செய்தி யென்றுமாம்; 1"அலவலையுடையை" என்புழி நச்சினார்க்கினியர் உரைத்தமை காண்க. விலகொளி எனப் பிரித்தலுமாம் ; விலகு ஒளி - விட்டு விளங்கும் ஒளி. காரண மின்றியே கனியைச் சிதைத்துக் கடுநோயுழந்தனை என விரித் துரைத்துக்கொள்க. 55-61. மந்திரம் மறந்தேன் - வானிற் செல்லும் மந்திரத்தை மறந்து விட்டேன், ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி - உடம்பினின்றும் உயிர் நீங்குதற்கேதுவாகிய வெப்பத்துடன் தோன்றி, வயிறுகாய் பெரும்பசி வருத்தும் என்றேற்கு - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது மிக வருத்தா நின்றது என்று கூறிய என்பொருட்டு, தீங்கனி கிழங்கு செழுங்காய் நல்லன ஆங்கவன் கொணரவும் ஆற்றேனாக-நல்லனவாகிய இனிய பழங்கள் கிழங்குகள் செழிய காய்கள் முதலியவற்றை அவன் கொணர்ந்து தரவும் எனது பசி தணியேனாக, நீங்கல் ஆற்றான் நெடுந்துயர் எய்தி ஆங்கவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன் - என்னைவிட்டு நீங்கலாற்றாதவனாகிய என் கணவன்மிக்க துயரத்தையடைந்து அவ்விடத்தில் எனக்கு அருளொடும் கூறுகின்றவன்; மறந்தேன் எனவும் வருத்தும் எனவும் கூறினேற்கு என்க. நல்லனவென்பதைக் கனி முதலிய ஒவ்வொன்றோடுங் கூட்டுக. ஆற்றேனாக - பசி தணியப்பெறேனாக. 62-68. சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் - நாவலந் தீவினுள் தமிழகத்திலே, கம்பம் இல்லாக் கழிபெருஞ் செல்வர் - நடுக்கமில்லாத மிக்க பெருஞ் செல்வத்தையுடையோர், ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி - வறியோர்கட்கு வேண்டியன கொடுக்கும் துணைவராகி, நோற்றோர் உறைவ தோர் நோன் நகர் உண்டால் - முற்பிறப்பில் தவம்புரிந்தோர் வாழ்கின்ற பெருமையுடைய நகரமொன்று உண்டு, பல நாளாயினும் நிலனொடு போகி - பலநாட்கழியினும் நீ நடந்து சென்று, அப்பதிப் புகுக என்று அவன் அருள் செய்ய-அந் நகரத்திற் சேர்வாய் என்று அவன் கூறியருள, இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்-யான் அவன் சொல் வழியே இக் காவிரிப்பூம்பட்டினத்தை யடைந்து ஈண்டு வதிகின்றேன்; ஆற்றுதல்-கொடுத்தல்; 1"அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம்" என்பது காண்க. நோற்றோர் பெருஞ்செல்வர் துணையாகி உறைவதென்க. நோன்மை-ஈண்டுப் பெருமை, நிலனொடு போதல் - காலால் நடந்து செல்லுதல். 69-74. இந்திரகோடணை விழவணி வருநாள் - இந்திர கோடணை யாகிய அழகிய விழா நடைபெறும் நாளில், வந்து தோன்றி இம்மாநகர் மருங்கே - இப் பெரிய நகரின் மருங்கே அவ் விஞ்சையன் வந்து தோன்றி, என்னுறு பெரும்பசி கண்டனன் இரங்கி-என்னை வருத்துகின்ற பெரும் பசியினைக் கண்ணுற்று இரங்கி, பின்வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்-பின்னர் எனது சாபம் கழிகின்ற ஆண்டுகளை எண்ணிக்கொண்டு அவன் நீங்குவான், தணிவில் வெம்பசி தவிர்த்தனை - என்னுடைய தணிதலில்லாத கொடிய பசியை நீக்கினாய், வணங்கினேன் - நின்னே வணக்கஞ் செய்தேன், மணிமேகலை என் வான்பதிப் படர்கேன்-மணிமேகலையே இனி எனது சிறந்த பதியின்கட் செல்வேன்; இந்திரகோடணையாகிய விழவு என்க; பல்வகை முழக்க முடைமை பற்றி விழா கோடணை யெனப்பட்டது; "இந்திர கோடணை விழாவணி விரும்பி" (5:94) என முன்னர் வந்தமையுங் காண்க. ஆண்டுதோறும் இந்திரவிழா நடக்கும்நாளில் வந்து கண்டு இரங்கிக் கழியும் என்க. பின்வரும் யாண்டு - சாபம் நிற்கும் பன்னீராண்டில் எஞ்சிய ஆண்டு. மணிமேகலை தவிர்த்தனை வணங்கினேன் படர்கேன் என்றாளென்க. மணிமேகலை: விளி. 75-83. துக்கம் துடைக்கும் துகள்அறு மாதவர் - துக்கத்தைப் போக்கும் குற்றமற்ற பெருந் தவத்தோர்கள் உறைகின்ற, சக்கரவாளக் கோட்டம் உண்டு-சக்கரவாளக் கோட்டம் என்பதொன்றுண்டு, ஆங்கதில் பலர் புகத் திறந்த பகுவாய் வாயில் - அதன்கண் பலரும் செல்லுமாறு திறக்கப்பட்டிருக் கின்ற பிளந்த வாய்போலும் வாயிலினை யுடைய, உலகவறவி ஒன்றுண்டு-உலகவறவி என்னும் ஊரம்பலம் ஒன்று உண்டு, அதனிடை-அதன்கண், ஊரூர் ஆங்கண் உறுபசி உழந்தோர்- ஊர்தோறும் மிக்க பசியால் வருந்தினோரும், ஆரும் இன்மையின் அரும்பிணி உற்றோர் - பாதுகாப்போர் ஒருவரும் இன்மையினால் அரிய நோயுழந்தோருமாய், இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால் - அன்னமிடுவோரை ஆராய்ந்து இருக்கின்றவர் பலராவர், வடு வாழ் கூந்தல் அதன்பாற் போகென்று - வகிர் பொருந்திய குழலினை யுடையாய் அவ்விடம் செல்வாயாக என்று கூறி, ஆங்கவள் போகிய பின்னர்-அக் காயசண்டிகை சென்ற பின்பு; துக்கம் - பிறவித்துன்பம். ஊரூர் ஆங்கண் - பல ஊர்களிலும், ஆங்கு, ஆல்: அசைகள். வடு-வகிர். கூந்தல்: விளி. 83-90. ஆயிழை - மணிமேகலை, ஓங்கிய வீதியின் ஒருபுடை ஒதுங்கி-மாடங்கள் ஓங்கிய தெருவின்கண்ணே ஒரு புறமாக ஒதுங்கிச் சென்று, வலமுறை மும்முறை வந்தனை செய்து - வல முறையாக மூன்றுமுறை வந்து பணிந்து, அவ் வுலகவறவியின் ஒரு தனி ஏறி - அந்த உலக வறவியின்கண் தான் தனியே சென்று, பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும் - நகரிலுள்ளாருடன் பலரும் துதித்து வணங்கும், முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கி-முதியவளாகிய சம்பாபதியின் கோயிலை மனம் மொழி மெய்களால் வணக்கஞ் செய்து, கந்துடை நெடு நிலைக் காரணம் காட்டிய தந்துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி - நெடிய நிலையினையுடைய தூணின் கணிருந்து பழவினையாகிய காரணங் காட்டும் பொருட்டு எழுதப் பட்ட தம் துணையாகிய கந்திற்பாவையை வணங்கித்துதித்து; மும்மையின் வணங்கி-மூன்றுமுறை வணங்கி யென்றுமாம். நெடு நிலையுடைக் கந்து என மாறுக. காட்டுவதற்கு மயனால் எழுதப்பட்டவென விரித்துரைக்க. "கந்துடை நெடுநிலைக் காரணங் காட்டிய, அந்தி லெழுதிய வற்புதப் பாவை" (7:94-5) என்றற் றொடக்கத்தனவாக இந் நூலுட் பிறாண்டு வருவன காண்க. மணிமேகலையுடன் மற்றையோரையும் உளப்படுத்தி, ‘தந்துணைப்பாவை' என்றார். 91-98. வெயில் சுட வெம்பிய வேய்கரி கானத்து - ஞாயிற்றின் கதிராற் சுடப்பட்டு வெம்பிய மூங்கில் கரிந்த காட்டின்கண், கருவி மாமழை தோன்றியது என்ன - தொகுதியாகிய முகில்கள் தோன்றினாற்போல; பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு - பசியானது உடலைத் தின்ன வருந்திய துன்பமுடைய மக்களுக்கு, அமுதசுரபியோடு ஆயிழை தோன்றி - மணிமேகலை அமுதசுரபியோடு தோன்றி, ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது-ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபியாகும் இது, யாவரும் வருக ஏற்போர் தாம் என - ஏற்போர் யாவரும் வருக என்று கூற, ஊண் ஒலி அரவத்துஒலிஎழுந்தன்றே யாணர்ப் பேரூர் அம்பலம் மருங்கென்-உணவுண்ணும் ஆரவாரமாகிய முழக்கம் எழுந்தது புதுவருவா யினையுடைய பேரூரின் அம்பலத்தின்கண் என்க. தின என்றது இலக்கணை வழக்கு. வருகவென அழைத்துச் சொரிய வந்துண்ணும் ஆரவாரம் என விரித்துரைக்க. மழை தோன்றிப் பொழிந்தாற்போல ஆயிழை தோன்றிச் சொரிய வென்க. ஒலியரவம்: ஒருபொரு ளிருசொல். அம்பல மருங்கு ஒலியெழுந்தன்றென்க. காயசண்டிகை யென்னுங் காரிகை, நோக்கி வணங்கி, ‘என்னோய் துடைப்பாய்' என்றலும், மணிமேலலை பெய்தலும், அவள் பசி நீங்கித் தொழுது உரைக்கும்; உரைப்பவள், ‘உலகவறவி யொன்றுண்டு; அதன்பாற் போக' என்று கூறிப் போகிய பின்னர், ஆயிழை ஒதுங்கி வந்து வந்தனை செய்து ஏறி வணங்கித் தொழுது ஏத்தித் தோன்றி, ஏற்போர் யாவரும் வருக' என, அம்பல மருங்கு ஒலியெழுந்தன்று என வினை முடிவு செய்க. உலகவறவி புக்க காதை முற்றிற்று. 18. உதயகுமரன் அம்பலம் புக்க காதை மணிமேகலை பிக்குணிக் கோலங்கொண்டு பாத்திரமேந்தி ஐயமேற்று உலக வறவியிற் சென்றாளென்பதைக் கேட்ட சித்திராபதி உளங்கொதித்து வெய்துயிர்த்துக் கலங்கி, "மணிமேகலையின் இச் செய்கையை ஒழிப்பேன்" என்று எண்ணிக்கொண்டு, கூத்தியல் மடந்தைய ரெல்லாரையும் பார்த்து, "கோவலன் இறந்தது கேட்டு மாதவி முனிவர்களின் பள்ளியை அடைந்து தாபதக் கோலம் பூண்டிருத்தல் நகைக்கத் தக்கது; யாம் கணவனுடன் இறக்கும் பத்தினிப் பெண்டிரல்லேம்; பாணன் இறந்தபொழுது அவனுடன் இறவாத யாழினைப் போல்வேம்; மற்றும் தாதினை யுண்டு பூவைத் துறக்கும் வண்டுபோல்குவம்; தாபதக் கோலந் தாங்குவது நமது குல வொழுக்கத்திற்கு ஒத்ததன்று; மாதவி மகள் மணிமேகலையின் பிக்குணிக்கோலத்தை மாற்றி அவள் கையிலேந்திய ஐயக் கடிஞையைப் பிச்சையேற்பார் பிறர் கையிற் போக்கி, அவளைப் பலநாளாக விரும்பியிருக்கும் உதயகுமரனால் அவனது தேரிலேற்று வித்து வருவேன்; அங்ஙனஞ் செய்யேனாயின், குடிக்குற்றப்பட்டு ஏழு செங்கலைத் தலைமேலேற்றிக் கொண்டு நாடக வரங்கைச் சுற்றிவந்து பழியோடிருக்கும் நாடக மகளிர்போல இனி நான் நாடகக் கணிகையர் மனைகட்குச் செல்லேனாகுக" என்று சூளுறவு செய்து, தன்னைச் சிலர் சூழ்ந்துவரச் சென்று உதயகுமரன் இருப்பிடத்தை யடைந்து, பளிங்கு மண்டபத்திலே தூமலர்ப் பள்ளியில் இருந்தோனைக் கண்டு துதித்து, மணிமேகலை உலகவறவியை அடைந்திருக்கிறாள் என்பதனை அவனுக்குக் குறிப்பிக்க, அவன் உவவனத்தில் மணிமேகலையைக் கண்டது முதல் நிகழ்ந்தவற்றைக் கூறி அவள்பாலுள்ள சிறப்புத் தன்மையைப் பாராட்டினன்; சித்திராபதி அவன் மனத்தை வேறுபடுத்தும் மொழிகள் பலவற்றைக் கூறி முயல அவன் உள்ளம் பிறழ்ந்து தேரேறி உலகவறவியை அடைந்து, பலர்க்கும் உணவளித்துக் கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டு அருகிற் சென்று, "நீ தாபதக் கோலம் பூண்டது யாது கருதி?" என்று வினாவினன்; மணிமேகலை "பழம் பிறப்பிற் கணவனாகவிருந்த இவனை வணங்குதல் முறையாகும்" என்று எண்ணி வணங்கி, “ பிறத்தலு மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும் இறத்தலு முடையது இடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை யிதுவென வுணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்" என்றுரைத்து, வேற்றுருக்கொள்ள நினைத்து அவனை நீங்கிக் கோயிலினுள்ளே சென்று சம்பாபதியை வணங்கி, முன்பு மணிமேகலா தெய்வம் அருளிச் செய்த மந்திரத்தை யோதிக் காயசண்டிகை வடிவ முற்று அமுதசுரபியை ஏந்தி வெளியே வந்து நின்றாள். அவள் அங்ஙனம் வந்ததை அறியாத உதயகுமரன் "உள்ளே சென்ற மணிமேகலை சம்பாபதி கோயிலினுள்ளே ஒளித்துக்கொண்டாள்" என்று நினைந்து சென்று சம்பாபதியை வணங்கி "பிச்சைப் பாத்திரத்தைக் காயசண்டிகையின் கையிற் கொடுத்துவிட்டு ஒளித்துச் சென்ற மணிமேகலையை இங்குள்ள பாவைகளுள்ளே யான் எவ்வாறுணர்வேன்; நீ அவளை எனக்குக் காட்டாயாயின் பன்னாளாயினும் நான் இவ்விடத்திலேயே பாடு கிடப்பேன்; மணிமேகலையை இங்கே விடுத்து நான்மட்டும் போகேன்; உன் திருவடியைத் தொட்டேன்" என்று சூளுரைத்தான். ஆங்கது கேட்டாங் கரும்புண் அகவயின் தீத்துறு செங்கோல் சென்றுசுட் டாங்குக் கொதித்த உள்ளமொடு குரம்புகொண் டேறி விதுப்புறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கித் 5 தீர்ப்பலிவ் வறமெனச் சித்திரா பதிதான் கூத்தியன் மடந்தையர்க் கெல்லாங் கூறும் கோவலன் இறந்தபின் கொடுந்துய ரெய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது நகுதக் கன்றே நன்னெடும் பேரூர் 10 இதுதக் கென்போர்க் கெள்ளுரை யாயது காதலன் வீயக் கடுந்துய ரெய்திப் போதல் செய்யா உயிரொடு புலந்து நளியிரும் பொய்கை யாடுநர் போல முளியெரிப் புகூஉம் முதுகுடிப் பிறந்த 15 பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர்தம் கைத்தூண் வாழ்க்கை கடவிய மன்றே பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையில் யாழினம் போலும் இயல்பினம் அன்றியும் நறுந்தா துண்டு நயனில் காலை 20 வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் வினையொழி காலைத் திருவின் செல்வி அனையே மாகி ஆடவர்த் துறப்பேம் தாபதக் கோலந் தாங்கின மென்பது யாவரும் நகூஉம் இயல்பின தன்றே 25 மாதவி ஈன்ற மணிமே கலைவல்லி போதவிழ் செல்வி பொருந்துதல் விரும்பிய உதய குமரனாம் உலகாள் வண்டின் சிதையா உள்ளஞ் செவ்விதின் அருந்தக் கைக்கொண் டாங்கவள் ஏந்திய கடிஞையைப் 30 பிச்சை மாக்கள் பிறர்கைக் காட்டி மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப் பொற்றேர்க் கொண்டு போதே னாகில் சுடுமண் ஏற்றி அரங்குசூழ் போகி வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர் 35 அனையே னாகி அரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபின னென்றே வஞ்சினஞ் சாற்றி நெஞ்சுபுகை உயிர்த்து வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து செறிவளை நல்லார் சிலர்புறஞ் சூழக் 40 குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் கடுந்தேர் வீதி காலிற் போகி இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும் தருமணன் ஞெமிரிய திருநா றொருசிறைப் 45 பவழத் தூணத்துப் பசும்பொற் செஞ்சுவர்த் திகழொளி நித்திலச் சித்திர விதானத்து விளங்கொளி பரந்த பளிங்குசெய் மண்டபத்துத் துளங்குமா னூர்தித் தூமலர்ப் பள்ளி வெண்டிரை விரிந்த வெண்ணிறச் சாமரை 50 கொண்டிரு மருங்குங் கோதையர் வீச இருந்தோன் திருந்தடி பொருந்திநின் றேத்திப் திருந்தெயி றிலங்கச் செவ்வியி னக்கவன் மாதவி மணிமே கலையுடன் எய்திய தாபதக் கோலந் தவறின் றோவென 55 அரிதுபெறு சிறப்பிற் குருகுகரு உயிர்ப்ப ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி பாடல்சால் சிறப்பிற் பரதத் தோங்கிய நாடகம் விரும்ப நன்னலங் கவினிக் காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது 60 உதய குமரனெனும் ஒருவண் டுணீஇய விரைவொடு வந்தேன் வியன்பெரு மூதூர் பாழ்மம் பறந்தலை அம்பலத் தாயது வாழ்கநின் கண்ணி வாய்வாள் வேந்தென ஓங்கிய பௌவத் துடைகலப் பட்டோன் 65 வான்புணை பெற்றென மற்றவட் குரைப்போன் மேவிய பளிங்கின் விருந்திற் பாவையிஃது ஓவியச் செய்தியென் றொழிவேன் முன்னர்க் காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ ஏந்திள வனமுலை இறைநெரித் ததூஉம் 70 ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த முத்துக்கூர்த் தன்ன முள்ளெயிற் றமுதம் அருந்தே மாந்த ஆருயிர் தளிர்ப்ப விருந்தின் மூரல் அரும்பிய தூஉம் மாயிதழ்க் குவளை மலர்புறத் தோட்டிக் 75 காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண் அறிவுபிறி தாகிய தாயிழை தனக்கெனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும் பளிங்குபுறத் தெறிந்த பவளப் பாவையென் உளங்கொண் டொளித்தாள் உயிர்க்காப் பிட்டென்று 80 இடையிருள் யாமத் திருந்தேன் முன்னர்ப் பொன்றிகழ் மேனி ஒருத்தி தோன்றிச் செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றனள் தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ 85 எய்யா மையலேன் யானென் றவன்சொலச் சித்திரா பதிதான் சிறுநகை எய்தி அத்திறம் விடுவாய் அரசிளங் குரிசில் காமக் கள்ளாட் டிடைமயக் குற்றன தேவர்க் காயினுஞ் சிலவோ செப்பின் 90 மாதவன் மடந்தைக்கு வருந்துதுய ரெய்தி ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும் மேருக் குன்றத் தூறுநீர்ச் சரவணத்து அருந்திறன் முனிவர்க் காரணங் காகிய பெரும்பெயர்ப் பெண்டிர் பின்புளம் போக்கிய 95 அங்கி மனையாள் அவரவர் வடிவாய்த் தங்கா வேட்கை தனையவள் தணித்ததூஉம் கேட்டு மறிதியோ வாட்டிறற் குரிசில் கன்னிக் காவலுங் கடியிற் காவலும் தன்னுறு கணவன் சாவுறிற் காவலும் 100 நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர்தங் குடியிற் பிறந்தாள் அல்லள் நாடவர் காண நல்லரங் கேறி ஆடலும் பாடலும் அழகுங் காட்டிச் 105 சுருப்புநாண் கருப்புவில் அருப்புக்கணை தூவச் செருக்கயல் நெடுங்கட் சுருக்குவலைப் படுத்துக் கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்குப் பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரைப் 110 பான்மையிற் பிணித்துப் படிற்றுரை யடக்குதல் கோன்முறை யன்றோ குமரற் கென்றலும் உதய குமரன் உள்ளம் பிறழ்ந்து விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி ஆயிழை யிருந்த அம்பல மெய்திக் 115 காடமர் செல்வி கடிப்பசி களைய ஓடுகைக் கொண்டுநின் றூட்டுநள் போலத் தீப்பசி மாக்கட்குச் செழுஞ்சோ றீத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும் இடங்கழி காமமொ டடங்கா னாகி 120 உடம்போ டென்றன் உள்ளகம் புகுந்தென் நெஞ்சங் கவர்ந்த வஞ்சக் கள்வி நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவந் தாங்கி ஏற்றூண் விரும்பிய காரணம் என்னெனத் தானே தமியள் நின்றோள் முன்னர் 125 யானே கேட்டல் இயல்பெனச் சென்று நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப என்னமர் காதல னிராகுலன் ஈங்கிவன் தன்னடி தொழுதலும் தகவென வணங்கி 130 அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும் இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும் தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தல் நன்றி யன்றென நடுங்கினள் மயங்கிக் கேட்டது மொழிவேன் கேள்வி யாளரில் 135 தோட்ட செவியைநீ யாகுவை யாமெனில் பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட் டிரங்கலும் இறத்தலு முடைய திடும்பைக் கொள்கலம் மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன் 140 மண்டமர் முருக்குங் களிறனை யார்க்குப் பெண்டிர் கூறும் பேரறி வுண்டோ கேட்டனை யாயின் வேட்டது செய்கென வாட்டிறற் குரிசிலை மடக்கொடி நீங்கி முத்தை முதல்வி முதியாள் இருந்த 145 குச்சரக் குடிகை தன்னகம் புக்காங்கு ஆடவர் செய்தி அறிகுநர் யாரெனத் தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி மாய விஞ்சை மந்திரம் ஓதிக் காயசண் டிகையெனுங் காரிகை வடிவாய் 150 மணிமே கலைதான் வந்து தோன்ற அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்குக் குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப் பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த காயசண் டிகைதன் கையிற் காட்டி 155 மாயையின் ஒளித்த மணிமே கலைதனை ஈங்கிம் மண்ணீட் டியாரென உணர்கேன் ஆங்கவள் இவளென் றருளா யாயிடின் பன்னா ளாயினும் பாடு கிடப்பேன் இன்னுங் கேளாய் இமையோர் பாவாய் 160 பவளச் செவ்வாய்த் தவளவாள் நகையும் அஞ்சனஞ் சேராச் செங்கயல் நெடுங்கணும் முறிந்துகடை நெரிய வளைந்தசிலைப் புருவமும் குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக் கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொளக் 165 கல்விப் பாகரிற் காப்புவலை யோட்டி வல்வா யாழின் மெல்லிதின் விளங்க முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த 170 மதிவாள் முகத்து மணிமே கலைதனை ஒழியப் போகேன் உன்னடி தொட்டேன் இதுகுறை யென்றனன் இறைமகன் றானென். உரை 1-9. ஆங்கது கேட்டு ஆங்கு - மணிமேகலை அறத்தோர் கோலம் பூண்டு பிச்சையேற்று அனைவருக்கும் உணவளிப் பதைக் கேட்டு அப்பொழுதே, அரும்புண் அகவயின் - அரிய புண்ணின் உள்ளே, தீத்துறு செங்கோல் சென்று சுட்டாங்கு - தீயின்கண் பழுக்கக் காய்தலுற்ற செவ்விய கோலானது சென்று சுட்டாற்போல, கொதித்த உள்ளமொடு - கொதிப் புற்ற உள்ளத்துடன், குரம்பு கொண்டு ஏறி - வரம்பு கடந்து எழுந்து, விதுப்புறு நெஞ்சினள் வெய்துயிர்த்துக் கலங்கி - நடுக்க மெய்திய மனத்தளாய்ச் சுடு மூச்செறிந்து மயங்கி, தீர்ப்பல் இவ் அறமெனச் சித்திராதிபதிதான் கூத்தியல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்-சித்திராபதியானவள் மணிமேகலை கொண்ட இவ்வறத்தினை ஒழித்து விடுவேன் என எண்ணி நாடகக் கணிகையர் அனைவர்க்கும் கூறுவாள்; தீ துறு - தீயானது பற்றிய, கோல் சுட்டாங்குத் துன்பத்தாற் கொதித்த உள்ள மென்க. குரம்பு - வரம்பு; கொண்டு - தாண்டி யென்னும் பொருட்டு; 1"குரம்பெழுந்து குற்றங்கொண் டேறார்" என்பது காண்க. விதுப்பு-விரைவுமாம். மேல் வருவன சித்திராபதி கூற்று. 7-15. கோவலன் இறந்தபின் கொடுந்துயர் எய்தி மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி தன் காதலனாகிய கோவலன் கொலையுண்ட பின்னர்க் கொடிய துன்பத்தையடைந்து அறவணவடிகள் உறைவிடத்தை அடைந்ததும், நகுதக்கன்றே நல்நெடும் பேரூர் - மிகச் சிறந்த பேரூரின்கண் சிரிக்கத் தக்கதாயிற்று, இது தக்கு என்போர்க்கு எள்ளுவரை ஆயது - இவ்வுரை தகுதியுள்ளதென்று கூறும் அறிஞர்கட்கு இகழுரை யாகியது, காதலன் வீயக் கடுந்துயர் எய்தி-கணவனிறக்க மிகுந்த துயரத்தை யடைந்து, போதல் செய்யா உயிரோடு புலந்து - நீங்காத உயிருடன் வெறுப்புக் கொண்டு, நளிஇரும் பொய்கை ஆடுநர்போல - குளிர்ந்த நீரினையுடைய பெரிய குளத்தின்கட் சென்று நீராடுவார் போல, முளி எரி புகூஉம் முதுகுடிப்பிறந்த பத்தினிப் பெண்டிர் அல்லேம்-விளக்க மிக்க தீயிடைக் குளிக்கும் பழங்குடியிற் பிறந்த கற்புடை மகளி ரல்லேம் யாம்; கோவலன் கொலையுண்டமை கேட்டு மாதவி அறவணவடி களை யடைந்து துறவு பூண்டதனை, முன்னர் ஊரலருரைத்த காதையிற் கூறினமையானும், 1"போதியின்கீழ் மாதவர் முன் புண்ணியதானம் புரிந்த, மாதவி தன்றுறவுங் கேட்டாயோ தோழீ" என்பதனாலும் அறிக. பேரூர்-பேரூரில். இது-மணிமேகலை பிக்குணிக் கோலம் பூண்டு பிச்சை யேற்கின்றாள் என்னும் உரை. தக்கு-தக்கது: விகாரம். தக்கென்போர் - தகவுடைமையை அறிந்து கூறும் அறிஞர். முளியெரி - காய்ந்த விறகிற் பற்றிய தீ யென்றுமாம். 15-24. பலர் தம் கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே - பலருடைய கையதாகிய உணவையுண்டு வாழ்தலாகிய உரிமையையுடையேம்; பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல் யாழினம் போலும் இயல்பினம்-பாணனிறந்தவிடத்து உடனிறக்குந்தன்மையில்லாத யாழைப் போன்ற இயல்புடை யோம்: அன்றியும்-அஃதன்றியும், நறுந்தாது உண்டு நயன் இல் காலை-மணமுள்ள மகரந்தத்தை நுகர்ந்து பசையாகிய தேன் இல்லாதபொழுது, வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம் - வறிதாகிய பூவை விட்டு நீங்கும் வண்டினையும் போல்வேம்; வினை ஒழி காலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்-மற்றும் நல்வினை நீங்கும் காலத்துத் திருமகளைப் போன்றேம் ஆகி ஆடவரை விட்டு நீங்குவேம்; தாபதக் கோலம் தாங்கினம் என்பது - பிக்குணிக் கோலம் பூண்டேம் என்பது, யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே - யாவரும் நகைக்கும் இயல்பையுடைய தல்லவோ ; நாடகக் கணிகையாதலின் பாண்மகனையும் யாழையும் உவமை கூறினாளென்க. நயன் இல் காலை - ஆடவரிடத்துச் செல்வமில்லாத காலத்தில் என்றுமாம். "வண்டிற் றுறக்குங் கொண்டி மகளிரை" என இக் காதையிற் பின்பும் கூறப் பட்டுள்ளது; மதுரைக் காஞ்சி யுள்ளும் 1"இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி, நுண்டா துண்டு வறும்பூத் துறக்கும், மென்சிறை வண்டின மான" என இவ் வுவமை வந்துள்ளமை அறியற்பாலது. வினை - நல்வினை. திருவின் செல்வி-திருவாகிய செல்வி. நல்வினை யுலந்த பொழுது திருமகள் நீங்குவது போலும் என்னும் இவ் வுவமை 2"தவந்தீர் மருங்கிற் றிருமகள் போலப், பயந்தீர் மருங்கிற் பற்றுவிட் டொரீஇ" எனப் பெருங் கதையுள் வருதல்அறிந்து இன்புறற்பாலது. தாபதக்கோலம் - தவக்கோலம். 25-32. மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி - மாதவி பெற்ற மணிமேகலையாகிய பூங்கொடி, போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய-பூக்கும் பருவ மடைதலை விரும்பிய, உதயகுமரனாம் உலகாள் வண்டின்-உதயகுமரன் என்னும் உலகினையாள் கின்ற வண்டினது, சிதையா உள்ளம் செவ்விதின் அருந்த-வேறொன்றாலும் அழியாத மனமானது நன்றாக அருந்து மாறு, கைக்கொண்டு - மணிமேகலையைக் கையகப்படுத்து, ஆங்கவள் ஏந்திய கடிஞையை - அவள் கையில் ஏந்திய ஓட்டினை, பிச்சைமாக்கள் பிறர்கைக் காட்டி - ஏற்றுண்போராகிய பிற மக்களின் கையிலே காட்டி, மற்றவன் தன்னால் - அவ்வுதயகுமரனால், மணிமேகலைதனைப் பொற்றேர்க் கொண்டுபோதேன் ஆகில் - அவளைப் பொற்றேரின்மீது ஏற்றிக் கொண்டு வாரேனாயின் ; போதவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய என்பதற்குப் பூக்கும் பருவத்தில் அதனை யடைதற்கு விரும்பிய என்றுரைத் தலுமாம். இக்காதையுட் பின்னரும் உதயகுமரன் வண்டாக உருவகிக்கப்படுகின்றனன். தலைவன் மகளிர் நலத்தை யுண்டு துறத்தற்கு வண்டினை உவமை கூறுதலுமுண்டு; 3"பெண்டிர் நலம்வௌவித் தண்சாரற்றாதுண்ணும், வண்டிற் றுறப்பான் மலை" என்பது காண்க. பிறர் கைக்காட்டி - பிறரிடம் பறித்துக் கொடுத்தென்றபடி. 33-42. சுடுமண் ஏற்றி அரங்கு சூழ்போகி - செங்கற்களைத் தலை மீதேற்றி அரங்கினைச் சுற்றி வந்து, வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோ ரனையேன் ஆகி - குற்றத்துடன் கூடி வாழும் மகளிரைப் போன்றவளாகி, அரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினன் என்றே-அரங்கின்கண் ஆடுகின்ற நாடக மகளிருடைய இல்லத்தின் கண் நுழையாத முறைமை யளாவேன் என்று, வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகை உயிர்த்து-வஞ்சினங்கூறி நெஞ்சு புகையெழப் பெருமூச் செறிந்து, வஞ்சக்கிளவி மாண்பொடு தேர்ந்து - வஞ்சம் பொருந்திய சொல்லை நன்கு ஆராய்ந்து, செறிவளை நல்லார் சிலர் புறம் சூழ - நெருங்கிய வளையல்களை யணிந்த பொது மகளிர் சிலர் புறத்தே சூழ, குறுவியர் பொடித்த கோலவாண் முகத்தள் - சிறு வியர்வைநீர் அரும்பிய அழகு பொருந்திய ஒள்ளிய முகத்தையுடையளாய், கடுந்தேர் வீதி காலிற்போகி- விரைந்த செலவினையுடைய தேர்கள் செல்லும் வீதியில் நடந்து சென்று, இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி - அரசிளங் குமரன் இருப்பிடத்தை அடைந்து; ஏற்றி - ஏற்றப்பட்டு என்றுமாம். பதியிலாரிற் குடிக்குற்றப் பட்டாரை ஏழு செங்கற் சுமத்தி அரங்கு சூழ்வித்துப் புறத்து விடுதல் மரபாகலின், சித்திராபதி இங்ஙனம் வஞ்சினஞ் சாற்றின ளென்க ; 'ய ங்குஞ் சூழ்போகி' எனப் பாடங் கொண்டு, ஊரைச் சுற்றி வந்து என்றுரைத்தலுமாம்; 1"சுடும ணேறா வடுநீங்கு சிறப்பின்" என்பதும் அதன் உரைகளும் காண்க. மடந்தையர் தம்மோர்; ஓர்: அசை. மரபினன்: அன்விகுதி, தன்மைக்கண் வந்தது; 'மரபினளன்றென' என்பதும் பாடம் வஞ்சக்கிளவி - மணிமேகலையை உதயகுமரன் வயமாக்கற்கேற்ற சொல். கோல முகத்து வியர்பொடித்தவளாய் எனப் பிரித்துக் கூட்டுதலுமாம். 43-51. அரவ வண்டொடு தேனினம் ஆர்க்கும்-ஒலிக்கின்ற வண்டுகளுடன் தேனினமும் ஆரவாரிக்கும், தருமணல் ஞெமிரிய திருநாறு ஒரு சிறை - கொண்டுவந்திட்ட மணல் பரந்த முன்றிலையுடைய அழகு தோன்றும் ஒரு பக்கத்தில், பவழத் தூணத்துப் பசும்பொன் செஞ்சுவர்-பவளங்களாற் செய்த தூண்களையும் பசிய பொன்னாலாகிய செவ்விய சுவர்களையும், திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து - ஒளி விளங்கும் முத்துக்களாகிய மேற்கட்டியையும் உடைய, விளங்கு ஒளிப் பரந்த பளிங்கு செய் மண்டபத்து-விளங்கு கின்ற பேரொளி பரவிய பளிங்கு மண்டபத்தில், துளங்குமான் ஊர்தித் தூமலர்ப் பள்ளி - ஒளி அசைகின்ற அரியணை யாகிய நறு மலர் இருக்கையில், வெண்திரை விரிந்த வெண்ணிறச் சாமரை - வெள்ளிய அலைகள் போல விரிந்த வெண்ணிறமுடைய கவரிகளை, கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச - மகளிர் கொண்டு இரு பக்கமும் வீச, இருந்தோன் திருந்தடி பொருந்தி நின்று ஏத்தி - அமர்ந்திருந்த உதயகுமரனுடைய திருந்திய அடிகளை வணங்கி நின்று ஏத்த; ஆர்க்கும் ஒரு சிறை யென்க; ஆர்க்கும் என்றதனால் மணமுடைமை பெறப்பட்டது. மணல் பரந்த முற்றத்தை யுடையவென விரித்துரைத்துக் கொள்க ; 1"தருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து" என்பது காண்க. நாறுதல்-தோன்றுதல். முத்தாலாகிய சல்லியையும் தூக்கினையும் உடைய சித்திர விதானம் என்க; 2"ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து, மாலைத் தாமம் வளையுட னாற்றி" என்றார் இளங்கோவடிகளும். மான்-அரிமான். ஊர்தி-ஏறுதற்கிடமாகவுள்ள ஆதனம் என்னும் பொருள் குறித்து நின்றது. மண்டபத்துப் பள்ளியில் இருந்தோன் என்க. ஏத்தி - ஏத்தவெனத் திரிக்க. 52-54. திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன் - உதயகுமரன் அழகிய பற்கள் விளங்குமாறு செவ்வையாகச் சிரித்து, மாதவி மணிமேகலையுடன் எய்திய - மாதவி மணிமேகலையுடன் கொண்ட, தாபதக் கோலம் தவறின்றோ என - தவ வேடம் தவறின்றி யுளதோ வென்று கேட்க ; தாபதக்கோலம்-தவவேடம்; என்றது பிக்குணிக் கோலத்தை. 55-63. அரிது பெறு சிறப்பில் குருகு கரு வுயிர்ப்ப - அரிதிற் பெற்ற சிறப்பினால் பறவைகள் ஈனும் வண்ணம், ஒரு தனி ஓங்கிய திருமணிக் காஞ்சி - ஒப்பற்றுயர்ந்த அழகிய கரிய காஞ்சி மரம், பாடல் சால் சிறப்பில் பரதத்து ஓங்கிய-பாடல் சான்ற சிறப்பினையுடைய பரத கண்டத்தில் உயர்ந்த, நாடகம் விரும்ப நன்னலம் கவினி - நாடுகளினிடம் விரும்புமாறு அழகிய நலங்கள் நிறைந்து. காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது-விரும்பப்படும் செவ்வியையுடைய. நறிய மலர் விரியப் பெற்றது; உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய - அதனை உதயகுமரனாகிய ஒப்பற்ற வண்டு உண்ணும் பொருட்டு, விரை வொடு வந்தேன்-விரைந்து வந்தேன்; வியன்பெரு மூதூர்ப் பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்தாயது - அது மிக்க பெருமையை யுடைய இம் மூதூரின் கண்ணே பாழிடமாகிய புறங் காட்டைச் சார்ந்த உலக வறவியில் உள்ளது ; வாழ்க நின் கண்ணி வாய்வாள் வேந்து என-கூரிய வாய் பொருந்திய வாளினை யுடைய மன்னவ நின் கண்ணி வாழ்வதாக என வுரைப்ப; உதயகுமரன் அவைக் களத்திருந்தா னாகலின் சித்திராபதி தான் கூறுவதனைக் குறிப்பி னுணர்ந்துகொள்ளுமாறு சிலேடையாற் கூறுவாளாயினள். காஞ்சிமரத்தைப் புனைந்துரைப்பது போன்ற இதன்கண், ‘குருகு' என்பது மாதவியையும், 'மணிக்காஞ்சி' என்பது மணிமேகலையையும் குறித்து நின்றன. மாதவிபெற ஓங்கிய மணிமேகலை நாடகம் விரும்பப் பருவ மெய்தினளென்க. குருகு-குருக்கத்தி ; இது மாதவியெனவும் படும். காஞ்சி - மேகலையாதலைத் திவாகரம் முதலியவற்றானறிக, நாடகம் - நாட்டினிடம், நாடகக்கலை. நாடகம் இவளாற் சிறப்பெய்து மாகலின் "நாடகம் விரும்ப" என்றார்; 1"நாடக மேத்து நாடகக் கணிகை" என வருதல் காண்க. நலம் கவினி - நலம் நிறைந்து என்னும் பொருட்டு. காமர்-விருப்பம். ‘உதயகுமரனெனு மொருவண்டு' என்றது முன்னிலைப் புறமொழி. பறந்தலை - புறங்காடு. குருகு கருவுயிர்ப்ப ஓங்கிய காஞ்சி, நலங் கவினிக் கடிமல ரவிழ்ந்தது; அதனை உதயகுமரனாகிய வண்டு உண்ணும் பொருட்டு வந்தேன்; அக் காஞ்சி அம்பலத்தாயது என்க. கண்ணி-தலையிற் சூடும் மாலை. நின் கண்ணி வாழ்க வென்றல் மரபு. 64-65. ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன் வான்புணை பெற்றென - பெரிய கடலிலே கப்பல் உடையப்பட்டவன் சிறந்த தெப்பத்தைப் பெற்றாற்போலக் கருதி, மற்று அவட்கு உரைப்போன்- சித்திராபதிக்குக் கூறுபவனாய். உடைகலப் பட்டோன் - கலம் உடையப் பட்டோன் என மாறுக. "உடைகலப் பட்டாங் கொழிந்தோர் தம்முடன்" (16:20) என முன் வந்தமையுங் காண்க. 66-73. மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது ஓவியச் செய்தி யென்று ஒழிவேன் முன்னர்-பளிக்கறையின்கண் பொருந்திய புதுமையினை யுடைய பாவையாகிய இது சித்திரச் செய்கை என்று நீங்குவேன் முன்னே, காந்தளஞ் செங்கை தளைபிணி விடாஅ ஏந்து இளவனமுலை இறை நெரித்ததூஉம் - காந்தள் மலர் போன்ற சிவந்த கைகள் பிணித்த பிணிப்பு விடாவாய் ஏந்திய இளைய அழகிய முலையை இறையளவு நெரித்த செய்கையும், ஒத்தொளிர் . பவளத்து உள் ஒளி சிறந்த - பவளத்தை யொத்து ஒளிருகின்ற வாயினுள்ளே ஒளிமிக்க, முத்துக் கூர்த்தன்ன முள்எயிற்று அமுதம் - முத்துக்கள் கூர்மையுற்றாலன்ன கூரிய பற்களின் கண் ஊறுகின்ற அமுதினை, அருந்த ஏமாந்த ஆருயிர் தளிர்ப்ப-அருந்து தற்கு ஆசைப்பட்ட அரிய உயிரானது தளிர்க்குமாறு, விருந்தின் மூரல் அரும்பியதூஉம் - புதிய புன்முறுவல் பூத்ததுவும் ; முன்பு மணிமேகலை தன்னைக் கண்டு அஞ்சிப் பளிக் கறையிற் புகுந்த பொழுது அவளை ஓவியமென்று தான் எண்ணியிருந்தானாக உதயகுமரன் கூறினானென்க. விடா அ:எதிர்மறை வினையெச்சமுற்று. இறை - சிறிது. அருந்த என்னும் பெயரெச்சத் தகரம் தொக்கது; "அருந்தே மாந்த வாருயிர் முதல்வனை" (14 : 68) என முன்னரும் இங்ஙனம் போந்தது. 74-80. மாயிதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக் காய்வேல் வென்ற கருங்கயல் நெடுங்கண் - கரிய இதழ்களையுடைய குவளை மலர்களைப் புறத்தே ஓடச்செய்து காய்கின்ற வேலினை வென்ற கரிய கயல்மீனைப் போன்ற நீண்ட கண்கள், அறிவு பிறிதாகியது ஆயிழை தனக்கெனச் செவியகம் புகூஉச் சென்ற செவ்வியும் - மணிமேகலைக்கு அறிவு வேறுபட்டதென்று அறிவிக்குமாறு காதினிடம் ஓடிச் சென்ற அழகும், பளிங்கு புறத்தெறிந்த பவளப்பாவை என் உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு என்று-ஆகிய இவற்றைக்கொண்டு பளிக்கறையின் புறத்தே தோன்றிய பவளப்பாவை உயிரைக் காத்தல் செய்து என் உளத்தில் ஒளித்தாள் என்று, இடையிருள் யாமத்து இருந்தேன் முன்னர்- இருளையுடைய இடையாமத்தில் துயிலாதிருந் தேன் முன்பு; ஓட்டி வென்ற கண், கயல் நெடுங்கண் என்க. செவியில் உரைக்கப் புக்கதுபோற் சென்ற வென்க. கண்ணின் இயல்பாகிய நீட்சியையோ அல்லது மீட்சியையோ இங்ஙனங் கற்பித்துக் கூறுதலால் இதுதற்குறிப்பேற்றம். கொண்டு - நெரித்ததூஉம் அரும்பியதூஉம் செவ்வியுமாகிய இவற்றைக் கொண்டு, பாவை கொண்டு உயிர்க்காப்பிட்டு என் உளத்து ஒளித்தாள் என்க. இருந்தேன் முன்னர் - துயிலாதிருந்தேனுடைய முன்பு; "பொங்கு மெல்லமளியிற் பொருந்தா திருந்தோன், முன்னர்த் தோன்றி" (7: 6-7) என முன்பு வந்திருத்தல் காண்க. இருந்தேன் ; அங்ஙன மிருந்த என் முன்னர் என வேறறுத்துரைக்க. 81-85. பொன்திகழ் மேனி ஒருத்தி தோன்றி - பொன்போல விளங்குகின்ற திருமேனியையுடையஒருத்திதோன்றி, செங்கோல் காட்டி - செங்கோன்மையை அறிவுறுத்தி, செய்தவம் புரிந்த அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றனள் - தவநெறியிற் செல்லும் மணிமேகலையின்மீது கொண்ட எண்ணத்தை மறப்பாய் என்று கூறினள், தெய்வங் கொல்லோ திப்பியங் கொல்லோ. எய்யா மையலேன் யான் என்று அவன் சொல-அங்ஙனங் கூறியது ஒரு தெய்வந்தானோ அன்றி வானவர் உலகில் தோன்றிய வேறு பொருளோ இன்னதென அறியாத மயக்கமுடையேன் என்று உதயகுமரன் கூற; ஒருத்தி என்றது மணிமேகலா தெய்வத்தை- எய்யாமை - அறியாமை: உரிச்சொல், திப்பியங் கொல்லோ - வியப்பினை விளைவிக்கும் வேறொன்றோ என்றுமாம். 86-89. சித்திராபதி தான் சிறு நகை எய்தி - சித்திராபதி சிறுநகையடைந்து, அத்திறம் விடுவாய் அரசிளங்குரிசில்-இளவரசர் பெருந்தகையே நின் கனவிற்றோன்றி ஒருத்தி கூறியதனை விடுவாயாக, காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன தேவர்க்காயினும் சிலவோ செப்பின்-கூறுங்கால் வானவர் களிடத்தும் காமக் கள்ளாட்டின் கண் மயங்கிச் செய்த செய்கைகள் சிலவாமோ; காமக் கள்ளாட்டிடை - காமமாகிய கள்ளை உண்டவழி. அறிவை மயக்குதலானும், வெளிப்படுந்தோறும் விருப்பத்தை யுண்டாக்குதலானும் காமம் கள்ளினை யொப்பதாயிற்று; 1"களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம், வெளிப்படுந் தோறு மினிது" என்பது காண்க. தேவர்களும் மயங்கிச் செய்தன பல வென்றபடி. 90-98. மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி ஆயிரஞ் செங்கண் அமரர்கோன் பெற்றதும் - கௌதம முனிவர் மனைவியாகிய அகலிகையின் மேலுள்ள வேட்கையால் மிக்க துயருழந்து தேவர்க்கரசனாகிய இந்திரன் அம்முனிவரால் ஆயிரஞ் செங்கண் அடைந்த செய்தியும், மேருக் குன்றத்து ஊருநீர்ச் சரவணத்து-இமயமலையிலுள்ள பரந்த நீரினையுடைய சரவணப் பொய்கையில், அருந்திறல் முனிவர்க்கு ஆரணங்காகிய - அரிய வலி பொருந்திய முனிவர் எழுவர்க்கு அரிய அணங்குபோல்வாராகிய, பெரும் பெயர்ப் பெண்டிர் பின்பு உளம் போக்கிய - பெரிய புகழையுடைய அவர் மனைவியர் பின்னே உளத்தைச் செலுத்திய, அங்கி மனையாள் - அக்கினிதேவன் மனைவி, அவரவர் வடிவாய்த் தாங்கா வேட்கைதனை அவண் தணித்ததூஉம் - அம் முனிவர் மனைவியரின் வடிவத்தைத் தனித்தனி கொண்டு அவனது நீங்காத வேட்கையைத் தணித்த செய்தியும், கேட்டும் அறிதியோ வாட்டிறல் குரிசில்- கேட்டும் அறியாயோ வாள்வலியுடைய அரசர் பெருந்தகையே; துயரெய்தி அவளைச் சேர்ந்து அதனாற் பெற்றதும் என விரித்துரைத்துக் கொள்க. இந்திரன் கௌதம முனிவர் மனைவி யாகிய அகலிகையை விரும்பிச் சேர்ந்து அம் முனிவரிட்ட சாபத்தால் ஆயிரங்கண் பெற்றான் என்பது புராணக்கதை. மேரு - இமயம் ; 1"இமையவில் வாங்கிய" என்பது காண்க. ஊர்தல் - பரத்தல். சரவணம் - தருப்பைக் காடு ; அதனை யுடையதொரு பொய்கையை உணர்த்திற்று. முன்னொரு காலத்தில் அங்கிவானவன் எழுமுனிவர் மனைவியரை விரும்பி அவ்வேதனை பொறுக்கலாற்றாது காட்டிற்குச்சென்றபொழுது, அவன் எண்ணத்தை யறிந்த அவன் மனைவியாகிய சுவாகாதேவி எழு முனிவர் மனைவிகளுள் அருந்ததி யொழிந்தோர் வடிவத்தை முறையே எடுத்து, வேறுவேறு காலங்களிற் சேர்ந்து அவன் வேட்கையைத் தணித்தாள் என்பதும் புராணக்கதை. 98-102. கன்னிக் காவலும் கடியிற் காவலும் - கன்னிப் பருவத்திற் காவலும் மணத்தின் பிற்காவலும், தன்உறுகணவன் சாவுறிற் காவலும்-தன்னை அடைந்த கணவன் இறப்பிற் காவலும் ஆகிய இவற்றை, நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது-உளத்தைக் கற்பு நெறியில் நிறுத்தலாற் காத்து அயலாரை நோக்காமல், கொண்டோன் அல்லது தெய்வமும் பேணா - கணவனையன்றித் தெய்வத்தையும் தொழாத, பெண்டிர்தம் குடியில் பிறந்தாள் அல்லள் - குலமகளிர்தம் மரபில் தோன்றியவள் அல்லள் ; குலமகளிர் கன்னி முதலிய முந்நிலையிலும் நிறையாற் றம்மைக்காத் தொழுகுவ ரென்றதனால் பொதுமகளிர்க்கு அந் நிலை வேறுபாடும் காத்தலும் இல்லை யென்றவாறாயிற்று. 2"மகளிர், நிறைகாக்குங் காப்பே தலை," "தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்" என்பன காண்க. 103-111. நாடவர் காண நல் அரங் கேறி ஆடலும் பாடலும் அழகும் காட்டி-இலக்கணப்படி அமைத்த நல்ல அரங்கு களில் ஏறி நாட்டினர் பலரும் காணும் வண்ணம் ஆடலையும் பாடலையும் எழிலையும் புலப்படுத்தி, சுருப்பு நாண் கருப்புவில் அருப்புக்கணை தூவ - வண்டுகளாகிய நாணினையுடைய கரும்புவில்லைக்கொண்ட அநங்கன் அரும்புகளாகிய அம்பு களைப் பொழிய, செருக்கயல் நெடுங்கண் சுருக்கு வலைப் படுத்து-போர்செய்யுங் கயல்மீனை யொத்த நீண்ட கண் களாகிய சுருக்கு வலையால் அகப்படுத்தி, கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம்புக்கு - தமதாடல் முதலியவற்றைக் கண்டோருடைய உள்ளத்தைக் கொள்ளைகொண்டு மனையிற் சென்று, பண்தேர் மொழியிற் பயன்பல வாங்கி - பண்போலும் இனிய மொழிகளால் பொன் ஆடை அணி முதலிய பல பொருள்களையும் வாங்கி, வண்டின் துறக்கும் கொண்டி மகளிரை - தேனையுண்டு மலரைத் துறக்கும் வண்டினைப் போலப் பொருள் கொடுத்தாரைப் பின்பு துறக்கும் பரத்தையரை, பான்மையில் பிணித்துப் படிற்றுரை அடக்குதல் - தன் வய மாகப் பிணித்து அவர்தம் பொய்யுரைகளை அடக்குதல், கோல்முறை அன்றோ குமரற்கு என்றலும் - இளங்கோவுக்குச் செங்கோன்முறைமை அல்லவோ என உரைத்தலும், நல்லரங்கு-1"எழுகோ லகலத் தெண்கோ னீளத், தொரு கோலுயரத் துறுப்பின தாகி, உத்தரப் பலகையோ டரங்கின் பலகை, வைத்த விடை நிலம் நாற்கோ லாக, ஏற்ற வாயி லிரண்டுடன் பொலியத், தோற்றிய வரங்கு." நாடக மகளிர்க்கு ஆடல் முதலிய மூன்றினொன்றுங் குறையலாகா தென்பது, 2"ஆடலும் பாடலு மழகு மென்றிக், கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல்" என்பதனா னறிக ; சுரும்பு, கரும்பு, அரும்பு என்பன வலித்தல் பெற்றன. அரும்பு - மொட்டறாமலர். செருக்கயல் - ஒன்றை யொன்று எதிர்ந்து போர் செய்யுங் கயல். கொண்டி மகளிர்-பொருளைக் கொள்ளும் பரத்தையர், கோன்முறை-அரசநீதி என்றுமாம். குமரற்கு:முன்னிலையிற் படர்க்கை. குடியிற் பிறந்தாளல்லள். கொண்டி மகளிருட் பட்டாள். அவளைப் பிணித்து அடக்குதல் கோன்முறை யன்றோ வென்க. 112-118. உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து - உதயகுமரன் மனம் மாறுதலடைந்து, விரைபரி நெடுந்தேர் மேற்சென் றேறி-விரைந்த செலவினையுடைய குதிரைகள் பூட்டப்பெற்ற பெரிய தேரின்மீது ஏறிச் சென்று, ஆயிழை இருந்த அம்பலம் எய்தி - மணிமேகலையிருந்த அம்பலத்தை யடைந்து, காடமர் செல்வி கடிப்பசி களைய ஓடுகைக் கொண்டு நின்று ஊட்டுநள் போல - பேய்களின் பசியை நீக்குதற்கு ஓட்டினைக் கையிற் கொண்டு நின்று ஊட்டுகின்ற காடு கிழாளைப் போல, தீப்பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப் பாத்திரம் ஏந்திய பாவையைக் காண்டலும் - கொடிய பசியையுடைய மக்களுக்குச் செழுஞ்சோறளித்துக் கடிஞை ஏந்தி நின்ற மணிமேகலையைக் கண்ட வளவில்; கடி - பேய். ஊட்டுநளாகிய செல்வி போல வென்க. 119-127. இடங்கழி காமமொடு அடங்கான் ஆகி - வரம்பின்றிப் பெருகிய காமத்தோடு அடங்காதவனாய், உடம்போடு என்றன் உள்ளகம் புகுந்து என் நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி - உடலுடன் என்னுடைய நெஞ்சினுட் புகுந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த வஞ்சக் கள்வியாகிய மணிமேகலை, நோற்றூண் வாழ்க்கையின் நொசிதவம் தாங்கி - விரதங்களாற் பட்டினி விட்டுண்ணும் வாழ்க்கையையுடைய நுண்ணிய தவத்தைத் தாங்கி, ஏற்றூண் விரும்பிய காரணம் என்என - இரந்துண்ணுதலை விரும்பிய காரணம் யாது என்று, தானே தமியள் நின்றோள் முன்னர் - தானே தனியளாய் நின்றோள்முன், யானே கேட்டல் இயல்பு எனச் சென்று - யானே நேரிற் சென்று கேட்பது நன்று எனப் போய், நல்லாய் என்கொல் நற்றவம் புரிந்தது சொல்லாய் என்று துணிந்துடன் கேட்ப - நங்காய் நீ நற்றவம் செய்ய மேற்கொண்டது என்ன காரணம் அதனைக் கூறுவாயாக என்று துணிந்து கேட்க; இடங்கழி - வரம்பு கடந்த; 1"இடங்கழி நெஞ்சத் திளமை யானை" என்பதன் உரை காண்க, நொசிதவம்-உடல் இளைத்தற் கேதுவாகிய தவமென்றும், மனம் நுண்ணிதாதற் கேதுவாகிய தவமென்றும் ஆம்; 2"நோற்றுணல் யாக்கை நொசிதவத்தீர்'' என்றார் இளங்கோவடிகளும். உதயகுமாரன் அம்பலமெய்திப் பாவையைக் காண்டலும் அடங்கானாகி, யானே கேட்டல் இயல்பெனச் சென்று, ‘புரிந்தது என்கொல் சொல் லாய்' என்று கேட்ப என்க. 128-133. என் அமர் காதலன் இராகுலன் ஈங்கிவன் தன் அடி தொழுதலும் தகவென வணங்கி-இவன் என்னை விரும்பிய கணவனாகிய இராகுலனாகலின் இவனுடைய அடிகளை வணங்குதலும் தகுதியே எனப் பணிந்து, அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணு கினும்-என் உள்ளம் ஓட்டை போய் அவனிடம் கிட்டினும், இறைவளை முன் கை ஈங்கிவன் பற்றினும் - இறையினையுடைய வளை யணிந்த முன் கையை இவன் பற்றினும், தொன்று காதலன்சொல் எதிர் மறுத்தல் - பழம்பிறப்பிற் கணவனுடைய சொல்லை எதிர் மறுத்தல், நன்றி அன்றென நடுங்கினள் மயங்கி-நன்மை யன்று என நடுக்கமுற்று மயங்கியவளாய்; ஈங்கிவன் : ஒரு சொல். அறைபோதல் - கீழறுத்துச் செல்லுதல், அணுகினும் பற்றினும் என்பன எதிர்காலத்தில் வந்தன. மறுத் தலாவது விடைகூறா தொழிதல். 134-139. கேட்டது மொழிவேன் கேள்வியாளரில் தோட்ட செவியை நீ ஆகுவை ஆமெனில்-கேள்வியாளர்போல நீ துளைக்கப் பட்ட செவியுடையை ஆகுவையானால் நீ கேட்ட தற்கு மறுமொழி கூறுவேன்; பிறத்தலும் மூத்தலும் பிணிப் பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது - பிறத்தலும் முதுமை யெய்தலும் நோய்ப்பட்டு வருந்துதலும் இறத்தலும் உடையது; இடும்பைக் கொள்கலம்- துன்பத்திற்குக் கொள் கலமானது; மக்கள் யாக்கை இது என உணர்ந்து - மக்கள் உடம்பாகிய இது என அறிந்து, மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்-மேன்மையுடைய அருளறத்தினை விரும்பு வேனாயினேன்; ஆகுவை யாமெனில் மொழிவேன் என மாறுக. கேள்வி யாளர் - உண்மைப் பொருளைக் கேட்டுணர்பவர்; 1"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி'' என்பது ஈண்டு உணர்தற் பாலது. மக்கள் யாக்கையாகிய இது உடையது கொள்கலம் என வுணர்ந்தென்க. நல்லறம்-அருளறம்: தயாதருமம், 2"வினையின் வந்தது வினைக்கு விளைவாவது,......, மக்கள் யாக்கை யிதுவென உணர்ந்து'' என இந்நூலுள் முன்னர் யாக்கையி னிழிபு கூறப்பட்டிருத்தலும் காண்க. 140-142. மண்டமர் முருக்கும் களிறு அனையார்க்குப் பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ-மிக்குச் செல்லுகின்ற போரை யழிக்கும் களிற்றினை யொத்த ஆடவர்க்கு மகளிர் கூறும் பேரறிவும் உண்டோ, கேட்டனை ஆயின் வேட்டது செய் கென - இதனைக் கேட்டா யாதலின் இனி நீ விரும்பியதைச் செய்க என்று கூறி; அமரின்கண் பகைவரைக் கொல்லும் என்றுமாம். களிறனை யார்க்கு என்றது முன்னிலைப்புறம். "இளமை நாணி முதுமை யெய்தி ......செறிவளை மகளிர் செப்பலு முண்டோ" (4: 107 - 10) என முன்னர்ச் சுதமதி உதயகுமாரனுக்கு நீதி கூறியவாறுங் காண்க. 143-150. வாள்திறல் குரிசிலை மடக்கொடி நீங்கி -மணிமேகலை வாள் வலியுடைய மன்னவன் புதல்வனை நீங்கி, முத்தை முதல்வி முதியாள் இருந்த-அனைவருக்கும் முற்பட்ட முதல்வி யாகிய சம்பாபதி அமர்ந்திருக்கின்ற, குச்சரக் குடிகைதன் அகம் புக்கு ஆங்கு - சிறிய கோயிலினுள் நுழைந்து அவ் விடத்தில், ஆடவர் செய்தி அறிகுநர் யார் என - ஆண்மக்களின் செயலை அறிவோர் யாவர் என்று எண்ணி, தோடலர் கோதையைத் தொழுதனள் ஏத்தி - இதழ் விரிகின்ற மலர் மாலையை யணிந்த சம்பாபதியை வணங்கித் துதித்து, மாய விஞ்சை மந்திரம் ஓதி - மாயவித்தை யுடைய மந்திரத்தை ஓதி, காயசண்டிகை எனும் காரிகை வடிவாய்- காயசண்டிகை என்னும் விஞ்சை மகளின் வடிவங்கொண்டு, மணி மேகலை தான் வந்து தோன்ற - மணிமேகலை வெளியே வந்து தோன்ற; முத்தை: முந்தை யென்பதன் திரிபு. குச்சரம் - கூர்ச்சர நாடு; குச்சரக் குடிகை - கூர்ச்சர நாட்டுப் பணியமைந்த சிறிய கோயில் என்பர். ஆங்கு:அசை. ஆடவர் செய்கையை அறிகுநர் யார் என்றது மணிமேகலை தன் அறிவுரையைக் கேட்ட பின்னும் உதயகுமரன் காமத்தைக் கடக்கலாற்றாது தன்னைப் பற்றுதலுங் கூடுமென எண்ணினாள் என்னும் குறிப்பிற்று. மாயவிஞ்சை மந்திரம் என்றது மணிமேகலா தெய்வம் அருளிய வேற்றுரு எய்துவிக்கும் மந்திரத்தை. 151-158. அணிமலர்த் தாரோன் அவள்பாற் புக்கு - அழகிய மலர் மாலையினையுடைய உதயகுமரன் காயசண்டிகை யுருக் கொண்ட நங்கையிடஞ் சென்று, குச்சரக் குடிகைக் குமரியை மரீ இ-பின்பு கோயிலின்கண் உள்ள சம்புத்தெய்வத்தைப் பொருந்தி நின்று, பிச்சைப் பாத்திரம் பெரும்பசி உழந்த காயசண்டிகை தன்கையில் காட்டி - தன் கையிலிருந்த திருவோட்டைப் பெரும்பசியால் வருந்திய காயசண்டிகையின் கையிற் கொடுத்து, மாயையின் ஒளித்த மணிமேகலைதனை-மாயையினால் மறைந்த மணிமேகலையை, ஈங்கிம் மண்ணீட்டு யார் என உணர்கேன் - ஈண்டுள்ள இப் பாவைகளுள் யார்என்று அறிவேன், ஆங்கவள் இவள் என்று அருளாய் ஆயிடின் -அம் மணிமேகலை இன்னளென அறிவித் தருளாய் ஆயின்,பல்நாள் ஆயினும் பாடுகிடப்பேன் - பலநாட்களாயினும் ஈண்டு வரங்கிடப்பேன் ; மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை. "நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்" (6: 47) என இந்நூலுள் முன்னரும், 1"கண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்" எனச் சிலப்பதிகாரத்தும் வருதல் காண்க. ஆங்கவள்: ஒரு சொல்; 2"தெளிவன் புனற் சென்னி" என்னுஞ் செய்யுளுரையில், "இங்கிவை உங்குவை யென்பன ஒரு சொல்" எனப் பேராசிரியருரைத்தமை காண்க. பாடு கிடத்தல்-வரம் வேண்டிக் கிடத்தல்; கருதியது கைகூடும் வரை எழாது கிடத்தலென்க; 3"பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந் தாளுக்கு" என்பது காண்க. 159-172. இன்னும் கேளாய் இமையோர் பாவாய்-வானோர் தலைவியே இன்னுங் கேட்பாயாக, பவளச் செவ்வாய்த் தவள வாள் நகையும் - பவளம்போற் சிவந்த வாயின்கணுள்ள வெள்ளொளி பொருந்திய பற்களும், அஞ்சனம் சேராச் செங்கயல் நெடுங்கணும்- மையெழுதப்படாத சிவந்த கயல் போலும் நீண்ட கண்களும், முறிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்-கடை நெரியுமாறு வளைந்து வரிந்த வில்லைப் போன்ற புருவங்களும், குவிமுட் கருவியும் கோணமும் கூர்நுனைக் கவைமுட் கருவியும் ஆகிக் கடிகொள களிற்றினை யடக்கும் குவிந்த முள்ளையுடைய கருவியும் தோட்டியும் கூரியமுனையையுடைய கவைத்த முட்களாலாகிய பரிக் கோலுமாகிக் காவல் கொள்ள, கல்விப் பாகரில் காப்புவலை ஓட்டி-கல்வியாகிய பாகரால் காப்பினையுடைய வலையை வீசி, வல்வாய் யாழின் மெல்லிதின் விளங்க - சொல் வன்மையுடைய வாயாகிய யாழினால் இனிதாக விளங்கு மாறு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவை விளக்கும் முதுமொழிகளை எடுத்துக்காட்டி, புதுக்கோள் யானை வேட்டம் வாய்த்தென - புதிதாகக் கொள்ளப்படும் யானை வேட்டத்தின்கண் அகப்பட்டதென்று, முதியாள் உன்றன் கோட்டம் புகுந்த - சம்பாபதீ நின்னுடைய கோயிலிற் புகுந்த, மதிவாள் முகத்து மணிமேகலைதனை ஒழியப் போகேன் - மதிபோலும் ஒள்ளிய முகத்தினையுடைய மணிமேகலையை ஈண்டு விடுத்துச் செல்லேன் ; உன் அடி தொட்டேன் - நின் திருவடிகளைத் தொட்டுச் சூளுற்றேன் ; இது குறை என்றனன் இறைமகன் தான் என் - எனக்கு வேண்டும் காரியம் இதுவென்று உதயகுமரன் கூறின னென்க. ஈண்டு இமையோர் பாவாய் என்றது போலப் பின்னர் "வானோர் பாவாய்" (25-147) எனச் சிந்தாதேவியை விளித்தலுங் காண்க. பிக்குணியாதலின் கண்ணுக்கு மைதீட்டிற்றில ளென்க. வரிந்த சிலை - கட்டமைந்த வில்; நாணேற்றிய வில்லுமாம். கோணம் - தோட்டியென்னுங் கருவி; கவைமுட் கருவி - கவைத்த முள்ளையுடைய பரிக்கோல்: 1"கோணந் தின்ற வடுவாழ் முகத்த" 2"கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றி" என்பன காண்க. நகை குவிமுட் கருவியும், கண் கோணமும், புருவம் கவைமுட் கருவியுமாகி என நிரனிறையாக்குக. காப்பு என்றது வலைக்கு அடை. கலையாகிய வலையென உருவகம் விரித்துரைக்க. தன் கலைத்திறங்களால் புறம்போகாது தடுத்தாள் என்றபடி. வாயை யாழ் என்றதற்கேற்ப முதுமொழியை இசையென உருவகஞ் செய்க ; யாழோசை போல மெல்லிதின்-விளங்க வாயால் முதுமொழி யெடுத்துக் காட்டி என்றலுமாம் ; யானை யாழிசைக்கு வயமாகுமாதலின் இவ்வாறு கூறினான். 3"காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல், யாழ்வரைத் தங்கி யாங்கு" என்பதனால் யானை யாழுக்கு வயமாத லறிக. முதுமொழி - முதுவோர் மொழி; நீதிமொழி. உதயகுமரன் தன்னை யானை யாகவும், மணிமேகலையின் நகை முதலியவற்றை யானையை அடக்குங் கருவிகளாகவும் உருவகஞ் செய்து, அவளால் தான் பிணிப்புண்டமை கூறினனென்க. சூளுறுவார் அடிதொடுதல் வழக்காதலை 4"அறவ ரடிதொடினும்" 5"கோனடி தொட்டேன்" 6"அடல்வலி யெயினர்நின் அடி தொடு கடனிது" என்பவற்றானு மறிக. சித்திராபதி அது கேட்டு எறி வெய்துயிர்த்துக் கலங்கித் தீர்ப்பலென்று கூத்தியன் மடந்தையர் எல்லார்க்குங் கூறும்; அங்ஙனங் கூறுகின்றவள், வஞ்சினஞ் சாற்றி உயிர்த்துத் தேர்ந்து போகிக் குறுகிப் பொருந்தி நின்று ஏத்த, அவன், ‘தவறின்றோ' என, அவள், ‘வேந்தே! நின் கண்ணி வாழ்க; காஞ்சி அம்பலத் தாயது' என, அது கேட்டு அவட்கு உரைப்போன், ‘எய்யா மையலேன்' என்று சொல்ல, சித்திராபதி சிறுநகை யெய்தி, படிற்றுரை யடக்குதல் கோன்முறை யன்றோ குமரற்கு?' என்றலும், உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து ஏறி எய்திக் காண்டலும் அடங் கானாகிச் சென்று துணிந்து கேட்ப, அவர் வணங்கி நடுங்கி மயங்கி, ‘வேட்டது செய்க' என்று கூறி நீங்கிப் புக்குத்தொழுது ஏத்தி ஓதிக் காயசண்டிகை வடிவாய் வந்து தோன்ற, தாரோன் புக்கு மரீஇ, ‘இது குறை' என்றனன் என, வினை முடிவு செய்க. உதயகுமரன் அம்பலம் புக்க காதை முற்றிற்று. 19. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை உதயகுமரன் சம்பாபதியை வணங்கிஇங்ஙனம் வஞ்சினங் கூறுகையில் அவன் கேட்கும்படி, "நீ எம் பெருமாட்டியின் முன் ஆராய்ந்து பாராமற் சூளுறவு மொழிந்தனை ; அதனால் யாதொரு பயனுமில்லை" என்று ஆங்குள்ள சித்திரங்களுள் ஒன்றைப் பொருந்தியுள்ள தெய்வங் கூறிற்று. அவ்வுரை கேட்டு அவன் மனங் கலங்கி வருந்தி, "மணிமேகலையை மறப்பாயென்று முன்னங்கூறிய தெய்வத்தின் மொழியும் வியப்பைத் தருகின்றது ; தெய்வத்தன்மை யுள்ளதாக இருத்தலின் அவள் ஏந்திய பாத்திரமும் வியப்பைத் தருகின்றது ; இச் சித்திரம் பேசியதும் வியப்பை விளைக்கின்றது ; இவற்றையெல்லாம் மணிமேகலையின் செய்தியை அறிந்துகொண்ட பின்பு அறிவோம்" என்று துணிந்து மீண்டு தன் இருப்பிடத்தை யடைந்தான். மணிமேகலை, "நம் வடிவத்தோடு திரிந்தால் உதயகுமரன் விட்டு நீங்கான் ; ஆகலின் நாம் காயசண்டிகை வடிவங்கொள்ளுதலே நன்று" என்று எண்ணி அவ் வடிவுகொண்டு சம்பாபதியின் கோயிலிலிருந்து அமுதசுரபியைக் கையிலேந்திக் கொண்டு யாங்கணும் சென்று பசித்துவந்த யாவருக்கும் உணவளித்து வருபவள், ஒரு நாள் அந் நகரத்துள்ள சிறைக்கோட்டத்திற் புகுந்து, அங்கே பசியால் வருந்துவோரை அருளுடன் பார்த்து இனிய மொழி கூறி உண்பிப்பாளாயினள். அவள் ஒரு பாத்திரத்திலிருந்தே பலருக்கு உணவளித்தலைக் கண்ட காவலாளர் மிக்க வியப்படைந்து, "இப் பாத்திரத்தின் மேன்மையையும் இவள் செய்கை யையும் அரசனுக்குத் தெரிவிப்பேம்' என நினைந்து சென்று, சீர்த்தி யென்னும் இராசமாதேவியுடன் ஒரு மண்டபத்தில் மிக்க சிறப்புடன் வீற்றிருக்கும் வேந்தனுடைய செவ்வியை நோக்கிச் சேய்மையில் வணங்கி நின்று, "மாவண்கிள்ளி ஊழிதோ றூழி ஒளியொடு வாழி" என்று வாழ்த்தி, "யானைத்தீ யென்னும் நோயால் வருந்தி உடல் மெலிந்து இப் பகுதியிலே திரியும் மடந்தை யொருத்தி சிறைக்கோட்டத்துள்ளே வந்து நின்னை வாழ்த்திக் கையின்கண் பிச்சைப் பாத்திரம் ஒன்றே கொண்டு அங்கு வந்து மொய்க்கின்ற யாவருக்கும் உணவு சுரந்தூட்டு கின்றனள்; இவ் வதிசயத்தைத் தெரிவிக்கவே வந்தோம்" என்றார். அதனைக் கேட்ட அரசன், "அம் மங்கையை இங்கே அழைத்து வருக" என்றனன். உடனே காவலாளர் வந்து அதனைத் தெரிவிக்க, அவள் சென்று அரசனைக் கண்டு வாழ்த்தி நின்றனள். அரசன், "அரிய தவமுடையாய் ; நீ யார் ? கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது?" என்ன, அவள், "அரசே! நெடுங் காலம் வாழ்வாயாக; யான் விஞ்சை மகள்; இப் பகுதியிலே வேற்றுருக் கொண்டு திரிந்தேன்; இது பிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது ; இது தெய்வத் தன்மையுடையது; யானைத்தீ யென்னும் தீராப் பசிநோயைத் தீர்த்தது; பசியால் மெலிந்தவர்களுக்கு உயிர் மருந்தாகவுள்ளது" என்று கூறினள். பின், அரசன், "யான் செய்ய வேண்டுவது யாது?" என்று கேட்ப, அவள், "சிறைக்கோட்டத்தை யழித்து அறவோர் வாழுங் கோட்டமாகச் செய்தல் வேண்டும்" என்றாள். அரசன், அவள் விரும்பிய வண்ணமே செய்வித்தனன். (இதன்கண் அரசனது பொழில் விளையாட்டுக் கூறுமிடத்துள்ள இயற்கைப்புனைவு முதலியன மிக்க இன்பம் பயப்பன. முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி மதுமலர்த் தாரோன் வஞ்சினங் கூற ஏடவிழ் தாரோய் எங்கோ மகள்முன் நாடாது துணிந்துநா நல்கூர்ந் தனையென. 5 வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திர மொன்று தெய்வங் கூறலும் உதய குமரன் உள்ளங் கலங்கிப் பொதியறைப் பட்டோர் போன்றுமெய் வருந்தி அங்கவள் தன்றிறம் அயர்ப்பா யென்றே 10 செங்கோல் காட்டிய தெய்வமுந் திப்பியம் பையர வல்குல் பலர்பசி களையக் கையி லேந்திய பாத்திரம் திப்பியம் முத்தை முதல்வி அடிபிழைத் தாயெனச் சித்திர முரைத்த இதூஉந் திப்பியம் 15 இந்நிலை யெல்லாம் இளங்கொடி செய்தியின் பின்னறி வாமெனப் பெயர்வோன் றன்னை அகல்வாய் ஞாலம் ஆரிரு ளுண்ணப் பகலர சோட்டிப் பணையெழுந் தார்ப்ப மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு 20 நீல யானை மேலோர் இன்றிக் காமர் செங்கை நீட்டி வண்டுபடு பூநாறு கடாஅஞ் செருக்கிக் கால்கிளர்ந்து நிறையழி தோற்றமொடு தொடர முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் 25 மகர வீணையின் கிளைநரம்பு வடித்த இளிபுண ரின்சீர் எஃகுளங் கிழிப்பப் பொறாஅ நெஞ்சிற் புகையெரி பொத்திப் பறாஅக் குருகின் உயிர்த்தவன் போயபின் உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட 30 மறுவில் செய்கை மணிமே கலைதான் மாதவி மகளாய் மன்றம் திரிதரின் காவலன் மகனோ கைவிட லீயான் காய்பசி யாட்டி காயசண் டிகையென ஊர்முழு தறியும் உருவங் கொண்டே 35 ஆற்றா மாக்கட் காற்றுந் துணையாகி ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடனவர் மேற்சென் றளித்தல் விழுத்தகைத் தென்றே நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தன ராமென முதியாள் கோட்டத் தகவையின் இருந்த 40 அமுத சுரபியை அங்கையின் வாங்கிப் பதியகந் திரிதரும் பைந்தொடி நங்கை அதிர்கழல் வேந்தன் அடிபிழைத் தாரை ஒறுக்குந் தண்டத் துறுசிறைக் கோட்டம் விருப்பொடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி 45 ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை வாங்கு கையகம் வருந்தநின் றூட்டலும் ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து கோட்டங் காவலர் கோமகன் றனக்கிப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் 50 யாப்புடைத் தாக இசைத்துமென் றேகி நெடியோன் குறளுரு வாகி நிமிர்ந்துதன் அடியிற் படியை யடக்கிய அந்நாள் நீரிற் பெய்த மூரி வார்சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள் 55 சீர்த்தி யென்னுந் திருத்தகு தேவியொடு போதவிழ் பூம்பொழில் புகுந்தனன் புக்குக் கொம்பர்த் தும்பி குழலிசை காட்டப் பொங்கர் வண்டினம் நல்லியாழ் செய்ய வரிக்குயில் பாட மாமயில் ஆடும் 60 விரைப்பூம் பந்தர் கண்டுளஞ் சிறந்தும் புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு மடமயிற் பேடையுந் தோகையுங் கூடி இருசிறை விரித்தாங் கெழுந்துடன் கொட்பன ஒருசிறைக் கண்டாங் குண்மகிழ் வெய்தி 65 மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையிஃ தாமென நோக்கியும் கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச் செம்பொற் றட்டில் தீம்பா லேந்திப் 70 பைங்கிளி யூட்டுமோர் பாவையா மென்றும் அணிமலர்ப் பூம்பொழில் அகவையி னிருந்த பிணவுக்குரங் கேற்றிப் பெருமதர் மழைக்கண் மடவோர்க் கியற்றிய மாமணி யூசல் கடுவனூக் குவது கண்டுநகை எய்தியும் 75 பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு வால்வீச் செறிந்த மராஅங் கண்டு நெடியோன் முன்னொடு நின்றன னாமெனத் தொடிசேர் செங்கையிற் றொழுதுநின் றேத்தியும் ஆடற் கூத்தினோ டவிநயந் தெரிவோர் 80 நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் பண்ணியாழ் நரம்பிற் பண்ணுமுறை நிறுப்போர் தண்ணுமைக் கருவிக் கண்ணெறி தெரிவோர் குழலொடு கண்டங் கொளச்சீர் நிறுப்போர் 85 ஆரம் பரிந்த முத்தங் கோப்போர் ஈரம் புலர்ந்த சாந்தந் திமிர்வோர் குங்கும வருணங் கொங்கையின் இழைப்போர் அஞ்செங் கழுநீர் ஆயிதழ் பிணிப்போர் நன்னெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர் 90 பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர் ஆங்கவர் தம்மோ டகலிரு வானத்து வேந்தனிற் சென்று விளையாட் டயர்ந்து குருந்துந் தளவுந் திருந்துமலர்ச் செருந்தியும் முருகுவிரி முல்லையுங் கருவிளம் பொங்கரும் 95 பொருந்துபு நின்று திருந்துநகை செய்து குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும் பிறழ்ந்துபாய் மானும் இறும்பகலா வெறியும் வம்மெனக் கூஉய் மகிழ்துணை யொடுதன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று 100 மன்னவன் றானும் மலர்க்கணை மைந்தனும் இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும் எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும் வந்துவீ ழருவியும் மலர்ப்பூம் பந்தரும் பரப்புநீர்ப் பொய்கையுங் கரப்புநீர்க் கேணியும் 105 ஒளித்துறை யிடங்களும் பளிக்கறைப் பள்ளியும் யாங்கணுந் திரிந்து தாழ்ந்துவிளை யாடி மகத வினைஞரும் மராட்டக் கம்மரும் அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் 110 கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினைப் பவளத் திரள்காற் பன்மணிப் போதிகைத் தவள நித்திலத் தாமந் தாழ்ந்த கோணச் சந்தி மாண்வினை விதானத்துத் தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பிற் 115 பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபத்து இந்திர திருவன் சென்றினி தேறலும் வாயிலுக் கிசைத்து மன்னவன் அருளால் சேய்நிலத் தன்றியுஞ் செவ்விதின் வணங்கி எஞ்சா மண்ணசைஇ இகலுளந் துரப்ப 120 வஞ்சியி னிருந்து வஞ்சி சூடி முறஞ்செவி யானையுந் தேரும் மாவும் மறங்கெழு நெடுவாள் வயவரு மிடைந்த தலைத்தார்ச் சேனையொடு மலைத்துத்தலை வந்தோர் சிலைக்கயல் நெடுங்கொடி செருவேற் றடக்கை 125 ஆர்புனை தெரியல் இளங்கோன் றன்னால் காரியாற்றுக் கொண்ட காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண் கிள்ளி ஒளியொடு வாழி ஊழிதோ றூழி வாழி யெங்கோ மன்னவர் பெருந்தகை 130 கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர் யானைத் தீநோய்க் கயர்ந்துமெய் வாடியிம் மாநகர்த் திரியுமோர் வம்ப மாதர் அருஞ்சிறைக் கோட்டத் தகவயிற் புகுந்து பெரும்பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி 135 ஐயப் பாத்திரம் ஒன்றுகொண் டாங்கு மொய்கொண் மாக்கண் மொசிக்க'd2வூண் சுரந்தனள் ஊழிதோ றூழி உலகங் காத்து வாழி யெங்கோ மன்னவ என்றலும் வருக வருக மடக்கொடி தானென்று 140 அருள்புரி நெஞ்சமொ டரசன் கூறலின் வாயி லாளரின் மடக்கொடி தான்சென்று ஆய்கழல் வேந்தன் அருள்வா ழியவெனத் தாங்கருந் தன்மைத் தவத்தோய் நீயார் யாங்கா கியதிவ் வேந்திய கடிஞையென்று 145 அரசன் கூறலும் ஆயிழை உரைக்கும் விரைத்தார் வேந்தே நீநீடு வாழி விஞ்சை மகள்யான் விழவணி மூதூர் வஞ்சந் திரிந்தேன் வாழிய பெருந்தகை வானம் வாய்க்க மண்வளம் பெருகுக 150 தீதின் றாக கோமகற் கீங்கீது ஐயக் கடிஞை அம்பல மருங்கோர் தெய்வந் தந்தது திப்பிய மாயது யானைத் தீநோய் அரும்பசி கெடுத்தது ஊனுடை மாக்கட் குயிர்மருந் திதுவென 155 யான்செயற் பாலதென் இளங்கொடிக் கென்று வேந்தன் கூற மெல்லியல் உரைக்கும் சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து அறவோர்க் காக்கும் அதுவா ழியரென அருஞ்சிறை விட்டாங் காயிழை உரைத்த 160 பெருந்தவர் தம்மாற் பெரும்பொரு ளெய்தக் கறையோ ரில்லாச் சிறையோர் கோட்டம் அறவோர்க் காக்கினன் அரசாள் வேந்தென் உரை 1-6. முதியாள் திருந்தடி மும்மையின் வணங்கி - சம்பாபதியின் திருந்திய அடிகளை மும்முறை வணக்கஞ்செய்து, மதுமலர்த் தாரோன் வஞ்சினம் கூற - தேன் பொருந்திய மலர்மாலை களையுடைய உதயகுமரன் வஞ்சினங் கூறுதலும், ஏடு அவிழ் தாரோய் எங்கோமகள் முன் நாடாது துணிந்து நா நல் கூர்ந்தனை என - இதழ்விரிகின்ற மாலையை யுடையவனே எம் தலைமகள் முன்னர் ஆராயாது துணிவுடன் சூளுறவு செய்து நா வறுமை யுற்றனை என்று, வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரம் ஒன்று தெய்வம் கூறலும்-கைவல் சிற்பரால் இயற்றப்பட்டு விளங்கிய தொழில் அமைந்த சித்திரம் ஒன்றிற் பொருந்திய தெய்வம் உரைத்தலும் ; மும்மையின் - உளம் உரை உடல் என்னும் முக் கரணங்களால் என்றுமாம் ; முறைமையின் என்பதும் பாடம். நா நல்கூர்தலாவது பயனில மொழிதல். வித்தகர்-சிற்பம் வல்லோர்; "வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச், சித்திரச் செய்கை" (3: 167-8) என முன்னர் வந்தமையுங் காண்க. ஒன்று-பொருந்திய; அதிட்டித்த. 7-16. உதயகுமரன் உள்ளம் கலங்கி - உதயகுமரன் மனக் கலக்க முற்று, பொதியறைப் பட்டோர்போன்று மெய் வருந்தி - சாளரமில்லாத கீழறையில் அகப்பட்டோரைப் போல உடல் வருந்தி, அங்கவள் தன்திறம் அயர்ப்பாய் என்றே - மணிமேகலைமீது கொண்ட எண்ணத்தை மறப்பாய் என்றே, செங்கோல்காட்டிய தெய்வமும் திப்பியம் - செங்கோன் முறையை எடுத்துக் காட்டிய தெய்வங் கூறியதும் வியப்புடைத்து, பையர வல்குல் பலர் பசிகளையக் கையிலேந்திய பாத்திரம் திப்பியம் - மணிமேகலை பலருடைய பசியையும் நீக்குதற்குக் கையில் ஏந்திய கடிஞையும் வியப்புடைத்து, முத்தை முதல்வி அடிபிழைத்தாய் எனச் சித்திரம் உரைத்த இதூஉம் திப்பியம்-எம் தலைவியின் திருவடியில் பிழை புரிந்தாய் என்று இவ் வோவியங் கூறிய இதுவும் வியப்புடைத்து, இந்நிலை எல்லாம் இளங்கொடி செய்தியின் பின் அறிவாம் எனப் பெயர்வோன் தன்னை - இவற்றின் உண்மையை யெல்லாம் மணிமேகலையின் செயலால் பின்பு அறிவோமென எண்ணி அங்குநின்றும் மீண்ட உதயகுமரனை ; பொதியறை - புழுக்கறை: சிறு துவாரமுமின்றி மூடப்பட்ட கீழறை; 1"போதார் பிறவிப் பொதியறையோர்" என்பது காண்க. தெய்வம்-மணிமேகலா தெய்வம். தெய்வம் கூறியதுமென்க. திப்பியம்- ஈண்டு வியப்பென்னும் பொருட்டு; தெய்வத்தன்மையுமாம். அரவின் பை யென மாறுக. பை-படம். பாத்திரமும் என எண்ணும்மை விரிக்க முத்தை : விகாரம். 17-23. அகல்வாய் ஞாலம் ஆரிருள் உண்ண-இடமகன்ற பூமியை நிறைந்த இருளானது உண்ணுமாறு, பகல் அரசு ஓட்டி - கதிரவனாகிய அரசனை ஓட்டி, பணைஎழுந்து ஆர்ப்ப - பறையெழுந்து ஒலிக்க, மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு- அந்திக் காலமாகிய நெற்றியும் வானிலுள்ள பிறையாகிய மருப்பும் உடைய, நீலயானை- கரிய நிறமுடைய இரவாகிய யானை, மேலோர் இன்றி - பாகர் ஒருவரும் இன்றி, காமர் செங்கைநீட்டி-விருப்பமாகிய துதிக்கையை நீட்டி, வண்டுபடு பூ நாறு கடாஅம் செருக்கி - வண்டு மொய்க்கும் பூவின் மணம் பொருந்திய மதநீரைச் சொரிந்து களித்து, கால் கிளர்ந்து நிறையழி தோற்றமொடு தொடர - காற்றைப் போல எழுந்து காவலைக் கடந்த தோற்றத்துடன் தொடர்ந்து வர ; முன்னுள்ள விசேடணங்களால் ‘நீலயானை' என்றது இரவாயிற்று. இராத்திரியை யானையாக உருவகிப்பவர் அதற் கியைபுபடப் பிறவற்றையும் உருவகஞ் செய்கின்றார். "ஞாலம் ஆரிருள் உண்ண' என்பது 1"உண்டற்குரிய வல்லாப் பொருளை, யுண்டன போலக் கூறலுமரபே" என்பதனான் அமைக்கப்படும். கொல்களிற்றின் செல்கையை அறிவித்தற்குப் பறையறைவித் தலுண்மையின் 'பணையெழுந்தார்ப்ப' என்றார். 2"வெரூஉப் பறை நுவலும் பரூஉப் பெருந் தடக்கை, வெருவரு செலவின் வெகுளி வேழம்" என்பது காண்க; வென்றி முரசுங் கொள்க. மேலோரின்றி என்றது பாகரை வீசி யென்றபடி; 3"மேலோர் வீசி" என்றார் பிற சான்றோரும், காமர் - காமம் என்னும் பொருட்டு. கடக்களிறு கைவீசிச் செல்லுமாகலின் ' காமர் செங்கை நீட்டி' என்றார். பூ - வேங்கைப்பூ ; ஏழிலைப் பாலையின் மலருமாம்; யானையின் மதம். அப்பூக்களின் மணமுடையதாதலை, 4"விலக்கருங் கரிமதம் வேங்கை நாறுவ" 5"பாத்த யானையிற் பதங்களிற் படுமத நாறக், காத்த வங்குச நிமிர்ந்திடக் கால்பிடித் தோடிப், பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப் பொடி யாகக், காத்தி ரங்களாற் றலத் தொடுந் தேய்த்த தோர் களிறு" என்பவற்றானறிக. 6"கால்கிளர்ந் தன்ன வேழமேல் கொண்டு" என்பதனால் யானை காற்றுப்போற் கிளர்ந்தெழு மென்பதறிக. பெயர்வோன்றன்னை நீலயானை தொடர வென்க : இரவு வர என்றவாறாயிற்று. 23-28. முறைமையின் நகர நம்பியர் வளையோர் தம்முடன் - நக ரத்திலுள்ள காதலஞ்செல்வர் மகளிர் தம்மோடு முறைமை யாக, மகர வீணையின் கிளை நரம்பு வடித்த இளிபுணர் இன்சீர் எஃகு உளம் கிழிப்ப - மகரயாழின் கிளைநரம்பு களைத் தெறித்த இசையுடன் சேர்ந்த இனிய தாள வொற்றாகிய வேல் உளத்தைக்கிழிப்ப, பொறாஅ நெஞ்சில் புகைஎரி பொத்தி-பொறுக்கலாற்றாத உள்ளத்தின்கண் புகைகின்ற காமத்தீயானது மூட்டப்பட்டு, பறாஅக் குருகின் உயிர்த்து அவன் போயபின்-கொல்லன் உலை மூக்கினைப் போல வெய்துயிர்த்து இளங்கோ சென்றபின்னர்; வளையோர்-வளையணிந்த மகளிர். நம்பியரும் வளையோரும் வடித்த இளிபுணர் இன்சீர் என்க. மகர வீணை - மகரயாழ்; நால்வகை யாழுளொன்று; பதினேழு நரம்புகளையுடையது. கிளை - ஐந்தாம் நரம்பு; உழை சட்சமாகலின், சட்சக்கிரமத்தில் அதற்கைந்தாவ தாகிய குரல் கிளையாகும்; அங்ஙனமே இளி, துத்தம், விளரி, கைக்கிளை என்பன குரல் முதல் ஒன்றற்கொன்று கிளையாகும்; ஆகலின் இவ்வைந்தனையுமே கிளைநரம் பென்றலுமுண்டு; "கிளையெனப் படுவ கிளக்குங் காலைக், குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யெனவைந் தாகு மென்ப" என்னும் பழைய நூற்பாவுங் காண்க. வடித்தல் - நரம்பை உருவுதல்; தெறித்தலுக் காயிற்று. இளியென்பது ஏழுநரம்பினுள் ஒன்றன் பெயராதலன்றி, இசையைக் குறிக்கும் பொதுப் பெயருமாம், சீருடன்கூடிய இளியாகிய எஃகு என்க. பறாஅக் குருகு - கொல்லன் உலைமூக்கு; பூவா வஞ்சி முதலியன போல வெளிப்படையென்னும் இலக்கணத்தது. அவன் - உதயகுமரன். 29-35. உறையுட் குடிகை உள்வரிக் கொண்ட - உறைவிட மாகிய சிறிய கோயிலின்கண் வேற்றுருவ மெய்திய, மறுவில் செய்கை மணிமேகலைதான் - குற்றமற்ற செய்கையையுடைய மணிமேகலை, மாதவி மகளாய் மன்றம் திரிதரின்-மாதவியின் மகளாகவே உலக அறவியிற் சுற்றிக்கொண்டிருந்தால், காவலன் மகனோ கைவிடலீ யான் - மன்னவன் புதல்வன் கைவிடான் என நினைந்து, காய்பசி யாட்டி காயசண்டிகை என ஊர் முழுதறியும் உருவங்கொண்டே - ஊரிலுள்ளோர் அனைவராலும் நன்கறியப்பட்ட யானைத்தீ நோயினையுடைய காயசண்டிகையைப் போல உருவங்கொண்டு, ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி-வறியோர்க்கு உதவிபுரியும் அருந்துணையாகி ; உள்வரி - வேற்றுரு; பொய்வேடம். விடலீயான்: வினைத்திரி சொல். கைவிடேனென நினைந்து என ஒரு சொல் வருவித்துரைக்க. 36-41. ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன் - வாங்குதலும் கொடுத்தலும் இரப்போர் கடனாம் ஆகலின், அவர் மேற் சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே - அவர் எவ் விடத்தும் வலிந்து சென்று கொடுத்தல் சிறப்புடையது என்று, நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனராமென-நூற்பொருள்களை அறிந்தோர் ஆராய்ந்துரைத்தனர் என்று கருதி, முதியாள் கோட்டத்து அகவயின் இருந்த - சம்பாபதி கோயிலின் உள்ளே இருந்த, அமுதசுரபியை அங்கையின் வாங்கி - அமுதசுரபியை அழகிய கையிற்கொண்டு, பதியகம் திரிதரும் பைந்தொடி நங்கை - நகரத்தின்கண்ணே சுற்றுகின்ற பசிய வளையல்களை யணிந்த மணிமேகலை; மேற்சென்று - வலிதிற் சென்று. நுனித்தல் - நுண்ணிதின் உணர்தல். என - என்று கருதி. பைந்தொடி மடந்தை என்பதும் பாடம். 42-46. அதிர்கழல் வேந்தன் அடிபிழைத்தாரை - ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய மன்னவன் அடிக்குப் பிழை செய்தாரை, ஒறுக்கும் தண்டத்து உறுசிறைக் கோட்டம் - தண்டிக்கும் தண்டத்தினையுடைய சிறைச் சாலையின்கண், விருப்பொடும் புகுந்து - விருப்பத்துடன் சென்று, வெய்துயிர்த்துப் புலம்பி - வெய்தாக உயிர்த்து வருந்தி, ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை-அவ்விடத்திலே பசியுற்றிருக்கும் அரிய உயிரை யுடைய மக்களை, வாங்கு கையகம் வருந்த நின்று ஊட்டலும்- வாங்குகின்ற கையினிடம் வருந்துமாறு நின்று உண்பித்தலும்; இறைவனுக்கும் பெரியார்க்கும் பிழைசெய்தாரைத் திருவடி பிழைத்தாரென்று கூறுதல் மரபு. தண்டத்து உறு - தண்டத் தினைப் பொருந்தி நுகரும். பசியுற்று வெய்துயிர்த்துப் புலம்பும் மாக்களென மாறுக. ஆருயிர் மாக்கள் என்றது, பெறுதற்கரிய மக்களுயிரைப் பெற்றார் இங்ஙனம் வருந்துகின்றனரே யென இரங்கிக் கூறியபடி. ஈண்டுக் கூறியவாறு "வாங்குநர் கையகம் வருத்துத லல்லது" (11 : 49) "வாங்குகை வருந்த மன்னுயி ரோம்பலின்" (14 : 23) "வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்து" (17 : 5) என முன்னர்ப் போந்தமையுங் காண்க. 47-50. ஊட்டிய பாத்திரம் ஒன்றென வியந்து-இங்ஙனம் பலரையும் உண்பித்த பாத்திரம் ஒன்றே என வியப்புற்று, கோட்டங் காவலர் - சிறைக்கோட்டங் காப்பவர், கோமகன் தனக்கு - அரசனுக்கு, இப் பாத்திர தானமும் பைந்தொடி செய்தியும் - இப் பாத்திரத்தின் தானச் சிறப்பையும் இதனைக் கொண்ட இளங்கொடியின் செயலையும், யாப்புடைத்தாக இசைத்தும் என்று ஏகி - உறுதி யுடைத்தாகக் கூறுவோம் எனச் சென்று ; கோட்டங் காவலர் வியந்து தானமும் செய்தியும் கோமகனுக்கு இசைத்துமென் றேகி யென்க, 51-56. நெடியோன் குறள் உருவாகி நிமிர்ந்து தன் அடியிற் படியை அடக்கிய-திருமால் வாமன வடிவங்கொண்டு பின் பேருருவமாய்ப் பூமியைத் தன் திருவடியின்கண் அடக்க, அந்நாள்-அற்றைநாளில், நீரிற்பெய்த - பூமியை நீருடன் அளித்த, மூரி வார் சிலை மாவலி மருமான் சீர்கெழு திருமகள்-வலிய பெரிய வில்லையுடைய மாவலியின் வழித்தோன்றலாகிய அரசனுடைய புகழ்மிக்க திருமகளாகிய, சீர்த்தி என்னும் திருத்தகு தேவியொடு - சீர்த்தி என்னும் பெயருடைய செல்வமிக்க தேவியுடன், போது அவிழ்பூம்பொழில் புகுந்தனன்புக்கு - பூக்கள் விரிந்த அழகிய சோலையிற் சென்று புகுந்து ; குறள் - குறிய வடிவமுடைய வாமனன் ; காசிபனுக்கும் அதிதிக்கும் பிறந்தவன் ; திருமாலின் ஐந்தாவது தோற்றமாயவன்; இவன் மாபலியிடத்து மூன்றடிமண் இரந்து பெற்று, புவியையும் வானையும் ஈரடியால் அளந்து, மூன்றாமடியைப் பலியின் தலையில் வைத்து அவனைப் பாதலத்தில் இருத்தினன் என்பது வரலாறு. அடக்கிய-அடக்க: செய்யிய வென்னும் வினையெச்சம்; பெயரெச்சமாக்கோடலுமாம். நீரிற் பெய்த-நீருடன் பெய்த; தாரை வார்த்தளித்த என்றபடி. மாவலி: மாபலியென்பதன் திரிபு. பாண குலத்தரசர்கள் மாவலியின் வழியினரெனக் கூறப்படுவர். இன்னோர் வாணகப்பாடி முதலிய இடங்களிலிருந்து அரசுபுரிந் தோராவர். அக் குலத்தரசருளொருவன் மகளென்க. 57-60. கொம்பர்த் தும்பி குழலிசை காட்ட - கொம்பு களிலுள்ள தும்பிகள் வேய்ங்குழ லோசையைக் காட்ட, பொங்கர் வண்டினம் நல்லியாழ்செய்ய - சோலையிலுள்ள வண்டினங்கள் நல்ல யாழினி சையை முரல, வரிக்குயில் பாட மாமயில் ஆடும் - வரிகளையுடைய குயில்கள் பாட அழகிய மயில்கள் ஆடுகின்ற, விரைப்பூம் பந்தர் கண்டு உளம் சிறந்தும்-மணம் பொருந்திய மலர்ப்பந்தரைக் கண்டு மனமகிழ்ச்சி மிக்கும்; வரி - கீற்று; வரிப்பாட்டுமாம். பந்தரில் ஆடுதலைக் கண்டு என மாறுதலுமாம். ‘குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பின், மயிலா டரங்கின்' (4 : 3-6) என முன்னர் வந்திருத்தல் அறியற் பாலது. 61-66. புணர்துணை நீங்கிய பொய்கை அன்னமொடு - தன் துணையாகிய பேட்டினைப் பிரிந்த குளத்தில் வாழும் அன்னப்புள்ளுடன், மடமயிற் பேடையும் தோகையும் கூடி - மடப்பம் பொருந்திய மயிற்பேடையும் ஆண் மயிலும் சேர்ந்து, இருசிறை விரித்தாங்கு. எழுந்துடன் கொட்பன-இரண்டு சிறகுகளையும் விரித்து ஒருங்கே எழுந்து சுழல்வனவற்றை, ஒரு சிறைக் கண்டாங்கு உள்மகிழ்வு எய்தி - ஆண்டு ஒரு பக்கத்திற் கண்டு மனக் களிப்புற்று, மா மணி வண்ணனும் தம் முனும் பிஞ்ஞையும் - நீல மணிபோன்ற நிறமுடைய கண்ணனும் அவன் முன்னவனாகிய பலதேவனும் நப்பின்னையும், ஆடிய குரவை இஃதாமென நோக்கியும் - துவரா பதியில் எருமன்றத்தே ஆடிய குரவையாகும் இஃது என்று நோக்கி வியந்தும்; வெண்ணிற முடைமையால் ஆண் அன்னத்திற்குப் பல தேவனும், கருநிறமுடைமையால் ஆண் மயிலுக்கும் பெண் மயிலுக்கும் முறையே கண்ணனும் நப்பின்னையும் உவமைகள். குரவை - வினோதக் கூத்து ஆறினுள் ஒன்று; காமமும் வென்றியும் பொருளாகக் குரவைச் செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது. கண்ணன் முதலியோர் குரவையாடியதனை, 1" மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசோதையார் தொழுதேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே." என்பதனானறிக. 67-70. கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற இருந்த பல்பொறி மஞ்ஞையை - கோங்கம் பூவினுடன் சேர்ந்திருந்த மாங்கனியின் பக்கத்தில் இருந்த பல பொறிகளையுடைய மயிலை, செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்தி-சிவந்த பொற்றட்டில் இனிய பாலை ஏந்திக் கொண்டு, பைங்கிளி ஊட்டும் ஓர் பாவையாம் என்றும் - பசிய கிளியை உண்பிக்கும் ஒரு அழகிய பெண்ணாகும் என்றும்; கோங்கலர்க்குப் பாலையுடைய பொற்றட்டும், மாங்கனிக்குக் கிளியும், மயிலுக்குப் பெண்ணும் உவமைகள். மாங்கனிக்குக் கிளி வடிவும் வண்ணமும் பற்றி உவமையாகும் ; 1"வண்டளிர் மா அத்துக், கிளி போல் காய கிளைத்துணர்" என்பதுங் காண்க. மற்றும், மாவடுவிற்குக் கிளி உவமையாதலும், மகடூஉ ஒருத்தி பொன்வள்ளத்திலே பாலையேந்திக் கிளியை உண்பிப்பதுமாகிய கருத்துக்கள் 2"சேடியல் வள்ளத்துப் பெய்தபால் சில காட்டி, ஊடுமென் சிறுகிளி யுணர்ப்பவள் முகம்போல,...கடிகயத் தாமரைக் கமழ்முகை கரைமாவின், வடிதீண்ட வாய்விடூஉம் வயலணி நல்லூர" என்னுஞ் சான்றோர் செய்யுளில் அமைந் திருத்தல் காண்க. 71-74. அணிமலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த - அழகிய மலர்களையுடைய பூஞ்சோலையில் உள்ளிடத்திருந்த, பிணவுக் குரங்கு ஏற்றிப் பெருமதர் மழைக்கண் மடவோர்க்கு இயற்றிய மாமணி ஊசல் - மதர்த்த நோக்கமுடைய மழை போலும் பெரிய கண்களையுடைய மகளிருக்குச் செய்யப்பட்ட அழகிய மணிகளானாகிய ஊசலில் பெண் குரங்கினை ஏற்றி, கடுவன் ஊக்குவது கண்டு நகை எய்தியும் - ஆண் குரங்கு ஆட்டுவது கண்டு மகிழ்ச்சி யடைந்தும்; பிணவுக் குரங்கு - பெண் குரங்கு; 3"பன்றி புல்வாய் நாயென மூன்றும், ஒன்றிய வென்ப பிணவின் பெயர்க் கொடை" என்னுஞ் சூத்திரத்து, 'ஒன்றிய' என்றதனால், பிணவு என்பது குரங்குக்கும் கொள்ளப்பட்டது. கடுவன் ஊசலில் பிணவுக் குரங்கை யேற்றி ஊக்குவது கண்டு நகையெய்தியும் என்க. 75-78. பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு - பசிய இலைகள் நெருங்கிய பசிய தண்டினையுடைய மூங்கிலுடன், வால் வீசெறிந்த மராஅம் கண்டு-வெள்ளிய பூக்கள் நெருங்கிய வெண்கடம்பினைக் கண்ணுற்று, நெடியோன் முன்னொடு நின்றனன் ஆம்என - கண்ணன் தன் முன்னோனொடு நிற் கின்றனனாம் என்று, தொடிசேர் செங்கையில் தொழுது நின்று ஏத்தியும்-வீரவளை யணிந்த சிவந்த கைகளாற் கும்பிட்டு நின்று துதித்தும் ; முன் - தமையன் ; பலதேவர். கழைக்குக் கண்ணனும் வெண் கடம்பிற்குப் பலதேவரும் உவமைகள். வெண்கடம்பிற்குப் பலதேவர் உவமையாதல் 1"ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்" 2நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச், செங்கான் மராஅந் தகைந்தன" என்பவற்றுள்ளும் காணப்படுமாறறிக. 79-92. ஆடற் கூத்தினோடு அவிநயம் தெரிவோர்-கதை தழுவாது ஆடுதலையுடைய கூத்தினோடு பாட்டின் பொருள் தோன்றக் கை காட்டும் அவிநயத்தினை அறிவோரும், நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர் - நாடகக் காப்பியமாகிய நல்ல நூல்களைக் கூர்ந்து ஆராய்வோரும், பண் யாழ் நரம்பில் பண்ணுமுறை நிறுப்போர் - பண்களையுடைய யாழ் நரம்பில் பண்களை முறையே நிறுத்துவோரும், தண்ணுமைக் கருவிக் கண் எறி தெரிவோர் - தோற் கருவியாகிய மத்தளத்தின் முகத்தில் அடித்தலை ஆராய்வோரும், குழலொடு கண்டம் கொளச்சீர் நிறுப்போர்-வேய்ங் குழலுடன் மிடற்றோசையும் பொருந்தும் வண்ணம் தாளவறுதி செய்வோரும், பழு நிய படால் பலரொடு மகிழ்வோர்-முற்றுப் பெற்ற இசைப் பாடல்களைப் பலருடன் பாடி மகிழ்வோரும், ஆரம் பரிந்த முத்தம்கோப் போர்-மாலைகள்அறுபடுதலாற் சிந்திய முத்துக் களைக் கோப்போரும், ஈரம் புலர்ந்த சாந்தம் திமிர்வோர் - ஈரம் உலர்ந்த சந்தனத்தைத் திமிர்வோரும், குங்கும வருணம் கொங்கையின் இழைப் போர் - சிவந்த தொய்யிற் குழம்பைக் கொங்கைகளில் எழுதுவோரும், அம் செங்கழுநீர் ஆயிதழ் பிணிப்போர்-அழகிய செங்கழுநீர் மலரின் அழகிய இதழ்களைக் கட்டுவோரும், நல்நெடுங் கூந்தல் நறுவிரை குடைவோர் - நல்ல நீண்ட குழலில் நறுமணங்களைப் புகுத்தி அப்புவோரும், பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர் -பொன்னாலாகிய சுற்றுவட்டத்தினையுடைய கண்ணாடியிற் பொருந்திக் கண்டு நிற்போரும் ஆகிய, ஆங்கவர் தம்மோடு - அவர்களுடன், அகலிரு வானத்து வேந்தனிற் சென்று விளையாட்டு அயர்ந்து - அகன்ற பெரிய விண்ணுலகத்து வேந்தனாகிய இந்திரனைப் போலச் சென்று விளையாட்டை விரும்பிச் செய்து; நாடகம் - கதை தழுவிவருங் கூத்து. நாடகக் காப்பியமாகிய நன்னூலென்க; இன்பத் துறையில் நிற்பவராகலின் நாடகக் காப்பியங் கூறினார். முன்னின்ற பண் யாழுக்கு அடை. யாழ்-பேரியாழ் முதலிய நால்வகை யாழ். நரம்பு - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பண் - பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் பெரும்பண்களும், அவற்றின் திறங்களும், அவ்விரு கூற்றின் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் இன வேறுபாடுகளும் ஆகிய பண்கள். எறி: முதனிலைத் தொழிற் பெயர்; 1"பண்ணமை முழவின் கண் ணெறியறிந்து" என்பதுங் காண்க. பழுநிய - இசை முற்றிய. திமிர்தல்-தடவி யுதிர்த்தல்; குடைவோர் - துவரினும் ஓமாலிகையினும் ஊறிய நன்னீரால் கூந்தலை ஆட்டுவோர் என்றுமாம். அவிநயந் தெரிவோர் முதலாகிய அவர்தம்மோடு சென்று விளையாட்ட யர்ந்து என்க. 93-99. குருந்தும் தளவும் திருந்து மலர்ச் செருந்தியும் - குருந்தும் செம்முல்லையும் அழகிய பூக்களையுடைய செருந்தியும், முருகுவிரி முல்லையும் கருவிளம் பொங்கரும் - மணம் விரிகின்ற முல்லையும் கருவிள மரச்செறிவும், பொருந்துபு நின்று திருந்து நகைசெய்து- அமர்ந்திருந்து இன்ப நகை புரிந்து, குறுங்கால் நகுலமும் நெடுஞ்செவி முயலும் - குறிய கால்களையுடைய கீரியையும் நீண்ட காதுகளையுடைய முயலையும், பிறழ்ந்து பாய் மானும் இறும்பு அகலா வெறியும் - துள்ளிக் குதிக்கின்ற மானையும் குறுங்காடுகளினின்று நீங்காத ஆட்டையும், வம்மெனக் கூஉய் மகிழ்துணையொடு தன் செம்மலர்ச் செங்கை காட்டுபு நின்று - வாருமென அழைத்துப் பெருந்தேவியுடன் தன் சிவந்த மலர் போன்ற செவ்விய கையாற் காட்டி நின்று; செருந்தி, கருவிளை யென்பன மர வேறுபாடுகள். பொங்கர்- சோலை; சோலை போலும் மரச் செறிவு. இறும்பு - குறுங்காடு. வெறி- ஆடு. மகிழ்துணை - இராசமாதேவி. மகிழ்துணையொடு பொருந்துபு நின்று நகைசெய்து வம்மெனக் கூஉய்ச் செங்கை காட்டுபு நின்று என்க. 100-106. மன்னவன்தானும் மலர்க்கணை மைந்தனும் - அரசர் பெருமானும் மலராகிய அம்புகளையுடைய காமவேளும், இன்னிள வேனிலும் இளங்காற் செல்வனும் - இன்பம் பயக்கும் இளவேனிலும் தென்றற் காற்றாகிய செல்வனும், எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும் - நீரை நிறைக்க வேண்டுமாயின் நிறைத்துப் போக்க வேண்டுமாயிற் போக்கு தற்குரிய எந்திரம் அமைந்த கிணறும்செய் குன்றும், வந்து வீழ் அருவியும் மலர்ப்பூம்பந்தரும் - வந்து விழுகின்ற அருவியும் மலர்களாகிய அழகிய பந்தரும், பரப்புநீர்ப் பொய்கையும் கரப்பு நீர்க்கேணியும் - நீர்ப்பரப்பினையுடைய வாவியும் மறைந்திருக்கின்ற நீரையுடைய கிணறும், ஒளித்து உறை இடங்களும் பளிக்கறைப் பள்ளியும் - ஒளிந்து வாழ்கின்ற மறைவிடங்களும் பளிக்கறையாகிய இடமும் ஆகிய, யாங்கணும் திரிந்து தாழ்ந்து விளையாடி- எவ்விடத்தும் திரிந்து தங்கி விளையாடி ; இளவேனில் - சித்திரையும் வைகாசியுமாகிய இரு திங்கள்கள். இளங்கால்-இளந் தென்றற்காற்று, மந்தமாருதம். இளவேனிற் காலத்திலே இளந் தென்றல் வீசாநிற்கக் காமவேட்கை விஞ்ச மன்னவன் விளையாடினான் என்பார், 'மன்னவன்றானும் மைந்தனும் வேனிலும் செல்வனும் விளையாடி' என்றார். 1"அந்தக் கேணியு மெந்திரக் கிணறும், தண்பூங் காவுந் தலைத்தோன் றருவிய, வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும், இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த, சித்திரப் பூமி வித்தக நோக்கி" என வருவது ஈண்டு அறியற்பாலது. 107-116. மகதவினைஞரும் மராட்டக் கம்மரும்-மகத நாட்டிற் பிறந்த மணி வேலைக்காரரும் மகாராட்டிரத்திற் பிறந்த பொற்கம்மியரும், அவந்திக்கொல்லரும் யவனத்தச்சரும்-அவந்திநாட்டுக் கொல்லரும் யவனநாட்டுத் தச்சரும், தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி-தண்ணிய தமிழ்நாட்டுத் தோன்றிய தொழில் வல்லாருடன் கூடி, கொண்டினிது இயற்றிய கண்கவர் செய்வினை-உள்ளங் கொண்டு நன்கு செய்தமைத்த கண்களைக் கவரும் தொழிற் சிறப்பினையுடைய, பவளத் திரள்கால் பன்மணிப் போதிகை - பவளத்தாற் சமைத்த திரட்சியுடைய தூண்களும் பல்வகை மணிகளாலாகிய போதிகைக் கட்டைகளும், தவள நித்திலத் தாமம் தாழ்ந்த-வெள்ளிய முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட, கோணச் சந்தி மாண்வினை விதானத்து - கோணமாகிய சந்தினை யுடைய மாட்சிமைப்பட்ட தொழிலமைந்த மேற்கட்டியும் அமைந்த, தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பின்-பொன்னால் வேயப்பெற்ற வகையமைந்த அழகினையுடைய, பைஞ்சேறு மெழுகாப் பசும் பொன் மண்டபத்து-பசிய சாணத்தான் மெழுகப்படாத பசும் பொன் மண்டபத்தின்கண், இந்திர திருவன் சென்று இனிது ஏறலும் - இந்திரச் செல்வத் தினையுடைய மன்னவன் இனிது சென்று ஏறுதலும் ; மராட்டம் : மகாராட்டிரம் என்பதன் மரூஉ. யவனம் என்பது பரத கண்டத்தின் புறத்ததாகிய ஓர் நாடு. இங்ஙனம் ஒவ்வொரு நாட்டு வினைஞர் ஒவ்வொரு தொழிலிற் சிறந்திருந்தன ரென்பது, 1"யவனத் தச்சருமவந்திக் கொல்லரும், மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும், பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞரும், கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும், வத்த நாட்டு வண்ணக் கம்மரும்" என்பதனாலும் அறியப்படும். தமிழ் - தமிழ் நாடு; தமிழ் வினைஞர் எனப் பொதுப் படக் கூறினமையின் அவர் பல தொழிலினும் வல்லுநராதல் பெற்றாம். போதிகை-தூணின் மேல் உத்தரம் முதலியவற்றைத் தாங்குங் கட்டை; கோணச் சந்தி - கூடல்வாய். பைஞ்சேறு - கோமயம்; ஆவின்சாணம். 2"பைஞ்சேறு மெழுகிய நன்னகர்" என்றார் பிறரும். பொன் மண்டப மாகையாற் பைஞ்சேற்றால் மெழுகப் படாதாயிற்று; சந்தனத்தால் மெழுகப்பட்ட தென்னலுமாம்; 3"மங்கல வெள்ளை வழித்து முத்தீர்த்தபின்" என வருதல் காண்க. செய்வினையையுடைய மண்டபம், கால் முதலியவற்றையுடைய பொன் மண்டபமென்க. 117-130. வாயிலுக்கு இசைத்து மன்னவன் அருளால் - வாயில் காப் போர்க்கு உரைத்து அரசன் பணியால். சேய்நிலத்தன்றியும் செவ்வியின் வணங்கி - தூரமான இடத்தில் தாம் நின்ற தன்றியும் முறைமையால் வணக்கஞ்செய்து, எஞ்சா மண் நசைஇ இகல்உளம் துரப்ப - குறையாத நிலத்தை விரும்பி மாறுபாடானது உள்ளத்தைச் செலுத்த, வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி-வஞ்சி நகரத்தின் கண்ணிருந்து வஞ்சிமாலை சூடி, முறஞ்செவி யானையும் தேரும் மாவும்-முறம் போன்ற காதுகளையுடைய யானையும் தேரும் குதிரையும், மறங்கெழு நெடுவாள் வயவரும் மிடைந்த-பெரிய வாட்படையைக் கையிற்கொண்ட ஆண்மைமிக்க வீரரும் செறிந்த, தலைத் தார்ச் சேனையொடு-முதன்மையாகிய தூசிப் படையோடு, மலைத்துத் தலைவந்தோர் - பொருதற்குவந்த இருபெரு வேந்தராகிய சேரபாண்டியருடைய, சிலைக்கயல் நெடுங் கொடி - வில்லும் கயலுமாகிய நெடிய கொடிகளை, செரு வேல் தடக்கை ஆர்புனை தெரியல் இளங்கோன் தன்னால் - போர்புரியும் வேற்படையைக் கொண்ட பெரிய கைகளை யுடைய ஆத்திமலரால் தொடுக்கப்பட்ட கண்ணியையுடைய இளங்கோவினால், காரியாற்றுக் கொண்ட - காரி யாற்றின் கண் கைப்பற்றிய’ காவல் வெண்குடை வலிகெழு தடக்கை மாவண்கிள்ளி - உயிர்களைக் காக்கும் வெண் குடை யினையும் வலிமிக்க பெருங் கைகளையும் உடைய மாவண் கிள்ளி, ஒளியொடு வாழி ஊழிதோ றூழி - நீ பல்லூழி காலம் ஒளியுடன் வாழ் வாயாக, வாழி எங்கோ மன்னவர் பெருந்தகை - எம் தலைவனாகிய அரசர் பெருந்தகையே வாழ்வாயாக, கேளிது மன்னோ கெடுகநின் பகைஞர் - நின் பகைஞர் ஒழிக ! அரசே இதனைக் கேட்பாயாக; (48) கோட்டங் காவலர் (50) இசைத்து மென்றேகி, (117) வாயிலுக்கிசைத்து, மன்னவனருளால் (138) மன்னவ என்றலும்என முடியும் ; மன்னவனருளால் வணங்கி யென்றலுமாம். பகைவர் மண்ணினை விரும்பி வஞ்சிசூடிப் போருக்குச் செல்லுதல் வஞ்சித் திணையாகும் இதனை, 1"எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன், அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே" என்பதனானறிக. வஞ்சியினிருந்து வஞ்சி சூடிச் சேனையொடு தலைவந்தோர் என்க. மலைந்து என்பதனை மலையவெனத் திரிக்க. இளங்கோன்-தம்பியாகிய நலங்கிள்ளி. மாவண்கிள்ளி : பெயர்; மிக்க வண்மையை யுடைய கிள்ளி யென்றுமாம்; இவன் கிள்ளிவளவன் எனப்படு பவன். கிள்ளி : விளி. கிள்ளிவளவன் பகைவனாகிய காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியையும், அவனுக்குத் துணையாக வந்தெதிர்த்த சேர பாண்டியர்களையும் தன் தம்பியாகிய நலங்கிள்ளியால் காரியாறு என்னும் யாற்றின் பாங்கர் வென்றன னென்க. காரியாறு ஓர் நதி என்பதனை, 2"செல்கதிமுன் னளிப்பார்தந் திருக்காரிக் கரைபணிந்து" என்பதனானறிக, ஒளி - கடவுட்டன்மை; 3"உறங்கு மாயினு மன்னவன் றன்னொளி, கறங்கு தெண்டிரை வையகங் காக்குமால்" என்பது காண்க : பரிமேலழகரும் இம் மேற் கோள் கொண்டே 4"இளையரினமுறைய ரென்றிகழார் நின்ற, ஒளியோ டொழுகப் படும்" என்னுங் குறளுரையில் 'ஒளி - உறங்கா நிற்கவும் உலகங் காக்கின்ற அவரது கடவுட்டன்மை,' என்றுரைத்தார். மன்னும் ஓவும் அசைகள். 131-138. யானைத்தீ நோய்க்கு அயர்ந்து மெய் வாடி இம் மாநகர்த் திரியும் ஓர் வம்ப மாதர் - யானைத்தீ என்னும் பசிநோயால் சோர்ந்து உடல் வாட்டமுற்று இப் பெரிய நகரத்தின்கண் சுற்றிக்கொண்டிருந்த ஒரு புதிய மங்கை, அருஞ்சிறைக் கோட்டத்து அகவயிற் புகுந்து - அரிய சிறைச்சாலையின் உள்ளே நுழைந்து, பெரும் பெயர் மன்ன நின்பெயர் வாழ்த்தி - பெரிய புகழுடைய அரசே நினது பெயரை வாழ்த்தி, ஐயப் பாத்திரம் ஒன்றுகொண்டு ஆங்கு மொய்கொள் மாக்கள் மொசிக்க ஊண் சுரந்தனள் - ஒரே பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அங்கு நெருங்குதலையுடைய மக்கள் அனைவரும் உண்ணுமாறு உணவினைச் சுரந்தளித்தனள், ஊழிதோறூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்றலும்- ஊழியூழியளவும் உலகினைக் காத்து எம் தலைவனாகிய அரசே வாழ்வாயாக என வுரைத்தலும்; நோய்க்கு அயர்ந்து - நோயால் அயர்ந்து. வம்பு - புதுமை; ஈறு திரிந்தது. பெரும்பெயர்-மிக்க புகழ். மொசிக்க-உண்ண; 1"மையூன் மொசித்த வொக்கலொடு" என்பது காண்க. 139-145. வருக வருக மடக்கொடிதான் என்று அருள்புரி நெஞ்ச மொடு அரசன் கூறலின் - அங்ஙனமாயின் அவ் விளங்கொடி ஈண்டு வருக வருக என்று அரசன் அருண்மிகுந்த உளத்தி னோடும் உரைத்தலின், வாயிலாளரின் மடக்கொடிதான் சென்று- வாயில் காவலரால் மணிமேகலை அரசன்முன் சென்று, ஆய்கழல் வேந்தன் அருள் வாழிய என - ஆராய்ந்து வீரக் கழலை யணிந்த மன்னவனது அருள் வாழ்க என்று கூற, தாங்கரும் தன்மைத் தவத்தோய் நீ யார் - பொறுத்தற்கரிய தன்மைகளையுடைய தவத்தினை யுடையோய் நீ யார், யாங் காகியது இவ் வேந்திய கடிஞை என்று - நின் கையிலேந்திய இப் பாத்திரம் யாண்டுக் கிடைத்தது என்று, அரசன் கூறலும் - வேந்தன் வினவுதலும், ஆயிழை உரைக்கும் - அவள் கூறுவாள்; அடுக்கு விரைவு பற்றியது. அழைத்து வருக வென்று வாயிலாளர்க்குக் கூற வென்க. தாங்கருந் தன்மை-பிறராற் பொறுத்தற்கரிய தன்மை. 146-154. விரைத்தார் வேந்தே நீ நீடுவாழி - மணம் பொருந்திய மாலையை யணிந்த மன்னவ! நீ நீடூழி வாழ்வாயாக, விஞ்சை மகள் யான் - யான் ஓர் வித்தியாதர மகள், விழவணி மூதூர் வஞ்சந் திரிந்தேன் - விழாவாலாகிய எழில் நிறைந்த இத் தொன்னகரில் வஞ்சத்தால் திரிந்தேன், வாழிய பெருந்தகை - அரசர் பெருந்தகை வாழ்க, வானம் வாய்க்க - மழை தவறாது பொழிக, மண்வளம் பெருகுக - புவியில் வளம்பெருகுக, தீதின்றாக கோமகற்கு - அரசனுக்குத் தீதீன்றி நன்மை யுண்டாகுக, ஈங்கிது ஐயக் கடிஞை-இஃது ஓர் பிச்சைப் பாத்திரம், அம்பல மருங்கு ஓர் தெய்வம் தந்தது - உலக வறவியிலுள்ள ஒரு தெய்வத்தாற்றரப் பட்டது, திப்பிய மாயது - தெய்வத்தன்மை யுடையது, யானைத்தீ நோய் அரும்பசி கெடுத்தது - யானைத்தீ யென்னும் போக்குதற் கரிய பசிநோயைப் போக்கியது, ஊன் உடை மாக்கட்கு உயிர் மருந்து இது என-இஃது உடம்பு மெலிந்த மக்களுக்கு உயிரை நிறுத்தும் மருந்தாவது என்று கூற ; விஞ்சை மகள் என்பதற்கு மந்திரத்தால் உருமாறிய மகள் என்று மணிமேகலைக் கேற்பப் பொருள்கொள்க. வஞ்சத் திரிந்தேன் என்பதற்கும் எனது தீவினையால் திரிந்தேன் என்றும், வேற்றுருக்கொண்டு திரிந்தேன் என்றும் இருபொருள் கொள்க. உடை: வினைத்தொகை; உடையவென்றுமாம்; பிறிதொன்று மில்லாத வென்றபடி 155-158. யான் செயற்பாலது என்இளங்கொடிக்கு என்று வேந்தன் கூற - அரசன் யான் நினக்குச் செய்யவேண்டியது யாது என வினவ, மெல்லியல் உரைக்கும் - அவள் கூறுவாள், சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர்க்கு ஆக்கும் அது வாழியர் என - சிறைச்சாலையை அழித்து அருள் உள்ளமுடைய அறவோர் வாழுங் கோட்டமாக்கும் அச் செயலே வாழ்வாயாக என்றுரைக்க ; இளங்கொடிக்கு முன்னிலையிற் படர்க்கை. ஆக்குமது நீ செயற் பாலதென என்க. 159-162. அருஞ்சிறை விட்டு ஆங்கு ஆயிழை உரைத்த பெருந்தவர் தம்மால் பெரும்பொருள் எய்த - அரிய சிறையிலுள்ளோரை விடுத்து அவ்விடத்தில் மணிமேகலை கூறிய பெருந் தவமுடையோர் களால் பெரும் பொருளை எய்துமாறு, கறையோர் இல்லாச் சிறையோர் கோட்டம் அறவோர்க்கு ஆக்கினன் அரசாள் வேந்து என்-கறைப்பட்டோரில்லாத சிறைக்கோட்டத்தை அறக்கோட்ட மாக்கினான் அரசுபுரியும் வேந்தன் என்க. பெரும் பொருள் - அறம் ; ஞானமுமாம். கறையோர் - கடமை (இறை) செலுத்த வேண்டியவர்கள். கறையோரில்லா என்றமையால் அரசன் கறை வீடு செய்தமை பெற்றாம். செங்கோல் வேந்தர் கறைவீடு செய்வராதலை. 1"சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங், கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்......கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன்" 1"சிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணுங், கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மென" என்பவற்றானறிக. சிறையோர் கோட்டம் - சிறைக் கோட்டம். தாரோன் வணங்கி வஞ்சினங்கூறத் தெய்வங் கூறலும் அவன் உள்ளங் கலங்கி வருந்தி அறிவாமெனப் பெயர்வோன்றன்னை (இரவாகிய) நீலயானை தொடர எஃகு உளங்கிழிப்ப அவன் பொத்தி உயிர்த்துப் போயபின், மணிமேகலை நுனித்தனரென்று கருதி வாங்கிக் கோட்டம் புகுந்து மாக்களை ஊட்டலும், காவலர் வியந்து கோமகனுக்கு இசைத்துமென்றேகி, திருவன் சென்று ஏறலும், வாயிலுக்கிசைத்து வணங்கி, ‘மன்னவ, வம்பமாதர் ஊண் சுரந்தனள்' என்றலும், ‘வருக வருக என்று அரசன் கூறலின், மடக்கொடி வாயிலாளரிற் சென்று, 'நின் அருள் வாழிய' என 'யாங்காகியது" என்று அரசன் கூறலும், ஆயிழை உரைப்பவள் ‘உயிர் மருந்து இது' என, ‘யான் செயற்பாலது என்' என்று வேந்தன் கூற, மெல்லியல் உரைப்பவள், ‘நீ செயற்பாலது அறவோர்க்கு ஆக்குமது' என, வேந்து பெரும்பொரு ளெய்துதற்குக் கோட்டத்தை அறவோர்க்கு ஆக்கினன் என வினை முடிவு செய்க. சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை முற்றிற்று. 20. உதயகுமரனை வாளாலெறிந்த காதை (அரசன் பணியால் சிறைச்சாலை பலவகை அறங்களும் நிகழ்தற்குரிய சாலையாய் விளங்கிற்று. உதயகுமரன் இந் நிகழ்ச்சி களைக் கேட்டு, "மணிமேகலை உலகவறவியை நீங்கி வெளியே வந்தபொழுது, அவளைக் கைப்பற்றிக் கொணர்ந்து தேரிலேற்றி, அவள் கற்ற விஞ்சைகளையும் அவள் கூறும் முதுமொழிகளையும் கேட்பேன்" என்று தன்னுள்ளே எண்ணிக்கொண்டு சென்று அவளிருக்கும் உலகவறவியில் ஏறினன். காஞ்சனனென்னும் விஞ்சையன், "காயசண்டிகைக்கு விருச்சிக முனிவன் இட்ட சாபத்தை அவள் நுகர்தற்குரிய பன்னீராண்டும் சென்றன; அவள் இன்னும் வாராமைக்குக் காரணம் யாதோ" என்று மிக்க கவலை யுற்று, தனது பதியை நீங்கி விசும்பின் வழியே வந்து காவிரிப் பூம்பட்டினத்தில் இறங்கிப் பூதசதுக்கம், பூஞ்சோலைகள், மாதவரிடங்கள், மன்றங்கள், பொதியில்கள் ஆகிய இடந்தோறும் சென்று சென்று தேடித் திரிந்து, காயசண்டிகை வேடம் பூண்டு உணவளித்து மாந்தர் பலருடைய பசியையும் மாற்றிக் கொண்டிருக்கும் மணிமேகலையைக் கண்டு, அவளைக் காயசண்டிகை யென்றே துணிந்து அருகிற் சென்று அவளை நோக்கி, "நின் கையில் ஏந்திய பாத்திரம் ஒன்றேயாயினும் உண்போர் பலராக வுள்ளனர் ; உன்னை வருத்திய யானைத் தீயாகிய நோயை ஒழித்தற்குத் தேவர்கள் இதனை அளித்தார் களோ?" என்று கூறிப், பின்பு, பழைய நட்பினைப் புலப்படுத்தும் மொழிகள் பலவற்றைச் சொல்லிப் பாராட்டவும், அவள் அவற்றைச் சிறிதும் மதியாமல் அவனை நீங்கி உதயகுமரனை அடைந்து அவனருகே நின்று, இளமையின் நிலையில்லாமையை அவனுக்கு அறிவுறுத்த நினைந்து, அங்கே இயல்பாக வந்த நரைமூதாட்டி யொருத்தியைக் காட்டி, முன்பு வனப்புடையனவாயிருந்த அவளுடைய உறுப்புக்கள் பலவும் இயல்பு திரிந்து அழகு கெட்டு வெறுக்கத் தக்கனவா யிருத்தலை நன்கு புலப்படுத்தி, " பூவினுஞ் சாந்தினும் புலால்மறைத் தியாத்துத் தூசினு மணியினும் தொல்லோர் வகுத்த வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனே" என்று கூறினள். அவள் அவ்வாறு கூறுதலைக் கேட்ட காஞ்சனன் "யான் தன்னைப் பாராட்டிக் கூறும் சொற்களின் பொருளை இவள் கொள்கின்றிலள்; என்னைப் பிறன்போல் நோக்குகின்றாள்; அயலான் பின்னே செல்கின்றாள்; காதற் குறிப்புடனே அரசன் மகனுக்கு நீதி யுரைக்கின்றாள்; இவன் காதலனாதலினாலேயே இவள் இங்கே தங்கி விட்டனள் போலும்!" என நினைந்து வெகுண்டு, புற்றிலடங்கும் அரவைப்போல அவ் வுலகவறவியினுள்ளே புகுந்து அற்றம் பார்த்து ஒளித்திருந்தனன். அவன் அங்ஙன மிருத்தலை யறியாத உதயகுமரன், "மணிமேகலைதான் காயசண்டிகை வேடம்பூண்டு கையிலே பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு வந்து நின்று நம்மை மயக்கினள்; அறிந்தவன் போன்று பழமை கூறிப் பாராட்டிய அயலானொருவன் இங்கிருத்தலால் இவள் இன்றிரவில் இவ்விடத்தைவிட்டு நீங்குவாளல்லள்; இவள் செய்தியை இவ்விரவின் இடையாமத்தே வந்து தெரிந்து கொள்வோம்," என்று தன்னுள் எண்ணிக் கொண்டே சென்று தன் இருப்பிட மடைந்தான். மணிமேகலையும் காயசண்டிகை வடிவத்தோடே சம்பாபதி கோயிலை யடைந்து வதிந்தாள். இரவில் எல்லாரும் உறங்கிய பின்பு உதயகுமரன் முன்பு எண்ணிய வாறே செல்லத் துணிந்து தனியே எழுந்து கோயிலை நீங்கி. உலகவறவியை அடைந்து, நச்சரவு கிடந்த புற்றினுள்ளே புகுவான் போல அதனுள்ளே புகுந்தான். உடனே, முன்னம் அவ்விடத்திற் புகுந்து இவன் வரவை நோக்கிக் கொண்டு சினத்துடனிருந்த காஞ்சனன், "இவன் இவள்பாலே வந்தனன்" என்று துணிந்து விரைந் தெழுந்துபோய் அவன் தோளைத் துணித்து வீழ்த்தி விட்டுக், காயசண்டிகையைக் கைப்பற்றிக் கொண்டு செல்வோமென நினைந்து அவளருகே சென்றான். அப்பொழுது அங்குள்ள கந்திற் பாவையானது, "காஞ்சன, செல்லாதே; செல்லாதே; இவள் உன் மனைவியாகிய காயசண்டிகை யல்லள்; இவ் வடிவம் மணிமேகலை கொண்ட வேற்று வடிவம்; காயசண்டிகை கடும்பசி யொழிந்து வானிலே செல்லுகையில் அவளுக்கு நேர்ந்த துன்பத்தைக் கேட்பாயாக; அந்தர சாரிகள் துர்க்கை எழுந்தருளியிருக்கும் விந்தமலைக்கு நேராக மேலே செல்லார்; யாரேனும் அங்ஙனம் செல்லின், அம்மலையைக் காக்கும் 'விந்தாகடிகை' யென்பவள் அன்னோரைச் சாயையினால் இழுத்துத் தன் வயிற்றில் அடக்கிக் கொள்வள்; இதனையறியாத காயசண்டிகை அம் மலைக்கு நேராக மேற்சென்று அவள் வயிற்றில் அடங்கிவிட்டாள். காஞ்சன! இதனையும் கேட்பாயாக; உதயகுமரன் ஊழ்வினையினால் இறந்தானாயினும், நீ ஆராயாது கொன்றமையால் மிக்க தீவினையுடையை ஆயினை; அவ் வினை உன்னை விடாது தொடர்ந்து வருத்தும்," என்றுரைத்தது. அது கேட்டு மனம் கன்றிக் காஞ்சனன் தன் நகரத்திற்குச் சென்றான். அரசன் ஆணையின் ஆயிழை அருளால் நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் தீப்பிறப் புழந்தோர் செய்வினைப் பயத்தான் யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப் 5 பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும் அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும் அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும் கட்டுடைச் செல்வக் காப்புடைத் தாக ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு 10 வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம் சிறையோர் கோட்டஞ் சீத்தருள் நெஞ்சத்து அறவோர் கோட்ட மாக்கிய வண்ணமும் கேட்டன னாகியத் தோட்டார் குழலியை மதியோ ரெள்ளினும் மன்னவன் காயினும் 15 பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று பற்றினன் கொண்டென் பொற்றே ரேற்றிக் கற்றறி விச்சையுங் கேட்டவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே மதுக்கமழ் தாரோன் மனங்கொண் டெழுந்து 20 பலர்பசி களையப் பாவைதான் ஒதுங்கிய உலக வறவியின் ஊடுசென் றேறலும் மழைசூழ் குடுமிப் பொதியிற்குன் றத்துக் கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தான் மாதவன் மாதர்க் கிட்ட சாபம் 25 ஈரா றாண்டு வந்தது வாராள் காயசண் டிகையெனக் கையயுற வெய்திக் காஞ்சன னென்னும் அவள்தன் கணவன் ஓங்கிய மூதூர் உள்வந் திழிந்து பூத சதுக்கமும் பூமரச் சோலையும் 30 மாதவ ரிடங்களும் மன்றமும் பொதியிலும் தேர்ந்தனன் திரிவோன் ஏந்திள வனமுலை மாந்தர் பசிநோய் மாற்றக் கண்டாங்கு இன்றுநின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே யாயினும் உண்போர் பலரால் 35 ஆனைத் தீநோய் அரும்பசி களைய வான வாழ்க்கையர் அருளினர் கொல்லெனப் பழைமைக் கட்டுரை பலபா ராட்டவும் விழையா உள்ளமொ டவன்பால் நீங்கி உதய குமரன் றன்பாற் சென்று 40 நரைமூ தாட்டி ஒருத்தியைக் காட்டித் தண்ணறல் வண்ணந் திரிந்துவே றாகி வெண்மண லாகிய கூந்தல் காணாய் பிறைநுதல் வண்ணங் காணா யோநீ நரைமையிற் றிரைதோற் றகையின் றாயது 45 விறல்விற் புருவம் இவையுங் காணாய் இறவி னுணங்கல் போன்றுவே றாயின கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன குமிழ்மூக் கிவைகாண் உமிழ்சீ யொழுக்குவ நிரைமுத் தனைய நகையுங் காணாய் 50 சுரைவித் தேய்ப்பப் பிறழ்ந்துவே றாயின இலவிதழ்ச் செவ்வாய் காணா யோநீ புலவுப் புண்போற் புலால்புறத் திடுவது வள்ளைத் தாள்போல் வடிகா திவைகாண் உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன 55 இறும்பூது சான்ற முலையுங் காணாய் வெறும்பை போல வீழ்ந்துவே றாயின தாழ்ந்தொசி தெங்கின் மடல்போற் றிரங்கி வீழ்ந்தன விளவேய்த் தோளுங் காணாய் நரம்பொடு விடுதோ லுகிர்த்தொடர் கழன்று 60 திரங்கிய விரல்க ளிவையுங் காணாய் வாழைத் தண்டே போன்ற குறங்கிணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய் ஆவக் கணைக்கால் காணா யோநீ மேவிய நரம்போ டென்புபுறங் காட்டுவ 65 தளிரடி வண்ணங் காணோ யோநீ முளிமுதிர் தெங்கின் உதிர்கா யுணங்கல் பூவினுஞ் சாந்தினும் புலான்மறைத் தியாத்துத் தூசினும் மணியினுந் தொல்லோர் வகுத்த வஞ்சந் தெரியாய் மன்னவன் மகனென 70 விஞ்சை மகளாய் மெல்லிய லுரைத்தலும் தற்பா ராட்டுமென் சொற்பயன் கொள்ளாள் பிறன்பின் செல்லும் பிறன்போ னோக்கும் மதுக்கம ழலங்கன் மன்னவன் மகற்கு முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப் 75 பவளக் கடிகையிற் றவளவாள் நகையுங் குவளைச் செங்கணுங் குறிப்பொடு வழாஅள் ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை ஈங்கொழிந் தனளென இகலெரி பொத்தி மற்றவள் இருந்த மன்றப் பொதியினுள் 80 புற்றடங் கரவிற் புக்கொளித் தடங்கினன் காஞ்சன னென்னுங் கதிர்வாள் விஞ்சையன் ஆங்கவ ளுரைத்த அரசிளங் குமரனும் களையா வேட்கை கையுதிர்க் கொள்ளான் வளைசேர் செங்கை மணிமே கலையே 85 காயசண் டிகையாய்க் கடிஞை யேந்தி மாய விஞ்சையின் மனமயக் குறுத்தனள் அம்பல மருங்கில் அயர்ந்தறி வுரைத்தவிவ் வம்பலன் றன்னொடிவ் வைகிரு ளொழியாள் இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து 90 வந்தறி குவனென மனங்கொண் டெழுந்து வான்றேர்ப் பாகனை மீன்றிகழ் கொடியனைக் கருப்பு வில்லியை அருப்புக்கணை மைந்தனை உயாவுத் துணையாக வயாவொடும் போகி ஊர்துஞ் சியாமத் தொருதனி யெழுந்து 95 வேழம் வேட்டெழும் வெம்புலி போலக் கோயில் கழிந்து வாயில் நீங்கி ஆயிழை யிருந்த அம்பல மணைந்து வேக வெந்தீ நாகங் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல 100 ஆகந் தோய்ந்த சாந்தல ருறுத்த ஊழடி யீட்டதன் உள்ளகம் புகுதலும் ஆங்குமுன் னிருந்த அலர்தார் விஞ்சையன் ஈங்கிவன் வந்தனன் இவள்பா லென்றே வெஞ்சின அரவ நஞ்செயி றரும்பத் 105 தன்பெரு வெகுளியின் எழுந்துபை விரித்தென இருந்தோன் எழுந்து பெரும்பின் சென்றவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசிக் காயசண் டிகையைக் கைக்கொண் டந்தரம் போகுவ லென்றே அவள்பாற் புகுதலும் 110 நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்கக் கடவு ளெழுதிய பாவையாங் குரைக்கும் அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன மணிமே கலையவள் மறைந்துரு வெய்தினள் காயசண் டிகைதன் கடும்பசி நீங்கி 115 வானம் போவுழி வந்தது கேளாய் அந்தரஞ் செல்வோர் அந்தரி இருந்த விந்த மால்வரை மீமிசைப் போகார் போவா ருளரெனிற் பொங்கிய சினத்தள் சாயையின் வாங்கித் தன்வயிற் றிடூஉம் 120 விந்தங் காக்கும் விந்தா கடிகை அம்மலை மிசைப்போய் அவள்வயிற் றடங்கினள் கைம்மை கொள்ளேல் காஞ்சன இதுகேள் ஊழ்வினை வந்திங் குதய குமரனை ஆருயி ருண்ட தாயினும் அறியாய் 125 வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன அவ்வினை நின்னையும் அகலா தாங்குறும் என்றிவை தெய்வங் கூறலும் எழுந்து கன்றிய நெஞ்சிற் கடுவினை யுருத்தெழ விஞ்சையன் போயினன் விலங்குவிண் படர்ந்தென். உரை 1-8. அரசன் ஆணையின் ஆயிழை அருளால் - மணிமேகலையின் அருண்மொழியினையேற்ற மன்னவனது ஆணையினாலே, நிரயக் கொடுஞ்சிறை நீக்கிய கோட்டம் - நிரயத் துன்பத்தைத் தரும் கொடிய சிறை நீக்கப்பெற்ற சாலை, தீப்பிறப் புழந்தோர்-தீக்கதியிற் பிறந்து வருந்தினோர், செய்வினைப் பயத்தால்-முன்செய்த நல்வினைப் பயனால், யாப்புடை நற்பிறப்பு எய்தினர்போல - உறுதியுடைய நற்பிறப்பினை அடைந்தமை போல, பொருள்புரி நெஞ்சில் புலவோன் கோயிலும் - வாய்மை நான்கினையும் விரும்பிய உள்ளமுடைய மெய்யறி வினனாகிய புத்தன் கோயிலும், அருள்புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும் - அருளை விரும்பும் மனத்தையுடைய அறவோர் வாழுமிடமும், அட்டிற் சாலையும் அருந்துநர் சாலையும்- மடைப் பள்ளியும் உணவுண்ணு மிடமுமாகி, கட்டுடைச் செல்வக் காப்புடைத்தாக - உறுதியுள்ள செல்வக் காவலை யுடையதாக; சிறை நீக்கிய - சிறையாந் தன்மையைப் போக்கிய. பொருள் - வாய்மை; 1"பொருள் சேர் புகழ்" என்பதிற்போல. புரிதல்-விரும்புதல். ஆகி யென ஒரு சொல் விரித்துரைக்க. செல்வக் காப்பு-இனிய காவல். கோட்டம் காப்புடைத்தாக வென்க. 9--13. ஆயிழை சென்றதூஉம் ஆங்கவள் தனக்கு வீயா விழுச்சீர் வேந்தன் பணித்ததூஉம்-மணிமேகலை அரசன்முன் சென்ற தனையும் அவளுக்கு மாறாத சிறந்த புகழையுடைய அரசன் கூறியதனையும், சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்-சிறைச்சாலையை அழித்து அருள்புரி உள்ளமுடைய முனிவர் வாழும் அறச்சாலையாக்கிய திறத்தையும், கேட்டனன் ஆகி - உதயகுமரன் கேட்டு ; 13-21. அத்தோட்டு ஆர் குழலியை - மலர்களை யணிந்த கூந்தலை யுடைய அம் மணிமேகலையை, மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும் - என்னை அறிவுடையோர் இழித்துக் கூறினும் அரசன் சினப்பினும், பொதியில் நீங்கிய பொழுதிற் சென்று-அவள் அம்பலத்தினின்றும் வெளிப்படும் போதிற் சென்று, பற்றினன் கொண்டு என் பொற்றேர் ஏற்றி - பிடித்துக் கொண்டு எனது பொற்றேரில் ஏற்றி, கற்றறி விச்சையும் கேட்டு - அவள் கற்றுத் தெளிந்த வித்தையையும் கேட்டு, அவள் உரைக்கும் முதுக்குறை முதுமொழி கேட்குவன் என்றே - அவள் கூறும் பேரறிவுடைய முதுமொழியையும் கேட்பேன் என்று, மதுக்கமழ் தாரோன் மனங்கொண்டு எழுந்து-தேன் கமழும் மாலையையுடைய உதயகுமரன் உள்ளத்திற் கொண்டு எழுந்து, பலர் பசிகளையப் பாவை தான் ஒதுங்கிய- பலருடைய பசியையும் நீக்குமாறு மணிமேகலை ஒதுங்கி யுள்ள, உலக வறவியின் ஊடு சென்று ஏறலும் - உலக வறவியினுள்ளே ஏறிச் செல்லலும்; தோடார் குழலி, தோட்டார் குழலி யென விகாரமாயிற்று. தோடு-இதழ்; பூவுக்கு ஆகுபெயர்; தொகுதி யென்றுமாம். பொதியில்- பொது இல்; பலருக்கும் பொதுவான இடம்; அம்பலம். பொதுவில் எனற்பாலது பொதியில் என மரூஉ வாயிற்று. குழலியைப் பற்றினன் கொண்டு என இயைக்க. பற்றினன் கொண்டு - பற்றிக்கொண்டு. 22-26. மழைசூழ் குடுமிப் பொதியிற் குன்றத்து - முகில் சூழும் முடியையுடைய பொதியின்மலையின் மருங்கே, கழைவளர் கான்யாற்று - மூங்கில் வளர்ந்த கானியாற்றின்கண், பழவினைப் பயத்தால் - முற்செய்த தீவினைப்பயனால், மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் - விருச்சிகன் காயசண்டிகைக்கு இட்ட சாபத்தினது, ஈராறு ஆண்டு வந்தது - பன்னிரண்டாவது ஆண்டு வந்தது' இன்னும் வாராள் காயசண்டிகை எனக் கையறவு எய்தி-காயசண்டிகை இன்னும் வந்திலள் எனத் துன்பமெய்தி; கையறவு - செயலறுதியாகிய துன்பம். 27-32. காஞ்சனன் என்னும் அவள்தன் கணவன் - அவளுடைய கணவனாகிய காஞ்சனன் என்போன், ஓங்கிய மூதூர் ச்உள் வந்து இழிந்து - பெருஞ் சிறப்புடைய இத் தொன்னகரின் உள்ளே வந்திறங்கி, பூத சதுக்கமும் பூமலர்ச் சோலையும்-பூதசதுக்கத்திலும் பொலிவுள்ள மலர்ச்சோலைகளிலும், மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும் - தவத்தோர் உறையுமிடங்களிலும் மன்றங்களிலும் அம்பலங்களிலும், தேர்ந்தனன் திரிவோன்-தேடித் திரிகின்றவன், ஏந்திள வனமுலை மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டாங்கு - மணிமேகலை காய சண்டிகை வடிவத்துடன் மக்களது பசிப்பிணியைக் களையக் கண்டு ; பூத சதுக்கம்-கூடா வொழுக்கினர் முதலிய அறுவகை யோரையும் பாசத்தாற் பிணித்துப் புடைத்துண்ணும் பூதம் நிற்கும் சதுக்கம்; சதுக்கம் - நாற்சந்தி. 1"தவமறைந் தொழுகுந் தன்மையி லாளர், அவமறைந் தொழுகு மலவற் பெண்டிர், அறைபோ கமைச்சர் பிறர்மனை நயப்போர். பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளரென், கைக்கொள் பாசத்துக் கைப்படு வோரெனக், காத நான்குங் கடுங்குர லெடுப்பிப், பூதம் புடைத்துணும் பூத சதுக்கமும்" எனச் சிலப்பதிகாரத்து வருதல் காண்க. கணவன் வாராள் எனக் கையற வெய்தித் தேர்ந்தனன் திரிவோன் கண்டு என்க. 33-37. இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம் ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்-இப்பொழுது நின் கையில் ஏந்தியுள்ள பாத்திரம் ஒன்றாயிருந்தும் அதன்கணுள்ள உணவினை யுண்போர் பலராகலின், ஆனைத்தீ நோய் அரும்பசி களைய-யானைத்தீ யென்னும் தீர்த்தற்கரிய பசிநோயைத் தீர்க்க, வான வாழ்க்கையர் அருளினர் கொல் என - விசும்பில் வாழும் வானவர் நினக்கு இதனை அளித்தனரோ என்று, பழைமைக் கட்டுரை பல பாராட்டவும் - பழைய கேண்மையைப் புலப்படுத்தும் பல கட்டுரைகளைக் கூறிப் பாராட்டவும் ; அருளினர் கொல் என்றும், கட்டுரை பல கூறியும் பாராட்ட வென்க. 38-39. விழையா உள்ளமொடு அவன் பால் நீங்கி - மணிமேகலை விரும்பாத உள்ளத்துடன் அவனிடமிருந்து நீங்கி, உதயகுமரன் தன்பாற் சென்று - உதயகுமரன் நிற்குமிடத்தை யடைந்து ; 40-70. நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி-நரை மிக்க முதுமையுடையாள் ஒருத்தியைக் காட்டி, தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி வெண்மணல் ஆகிய கூந்தல் காணாய் - குளிர்ந்த கரு மணல் போன்ற நிறம் திரிந்து வேறு பட்டு வெள்ளிய மணலைப் போல் நரைத்த கூந்தலைக் காண்பாய், பிறைநுதல் வண்ணம் காணாயோ நீ - நரைமையில் திரைதோல் தகையின்று ஆயது - வெண்மையுடன் திரைந்த தோலினால் அழகின்றி யிருக்கும் பிறைபோன்ற நுதலின் இயல்பை நீ காணவில்லையோ, விறல் விற்புருவம் இவையும் காணாய் இறவின் உணங்கல் போன்று வேறாயின - வெற்றி பொருந்திய விற்படை போன்ற புருவங்களாகிய இவையும் இறால் மீனின் வற்றல் போல் வேறு பட்டன காண்பாய், கழுநீர்க் கண்காண் வழுநீர் சுமந்தன - கழு நீர் மலரனைய கண்கள் வழுவாகிய நீரைச் சுமந்தன காண். குமிழ்மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ-குமிழம் பூப்போலும் மூக்காகிய இவை உமிழுகின்ற சீயைச் சொரிவனகாண், நிரை முத்தனைய நகையும் காணாய் சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து வேறாயின - வரிசைப் படுத்திய முத்துக்களைப் போன்ற பற்களும் சுரைவிதையைப் போலப் பிறழ்ந்து வேறுபட்டன காண்பாய், இலவிதழ்ச் செவ்வாய் காணாயோ நீ புலவுப் புண்போல் புலால் புறத்திடுவது - முருக்கமலர்போன்ற சிவந்த வாய் புலால்நாற்றம் பொருந்திய புண்ணைப்போல் தீநாற்றத்தை வெளியிடுவதை நீ காணோயா, வள்ளைத் தாள்போல் வடிகாது இவை காண்உள்ளூன் வாடிய உணங்கல் போன்றன-வள்ளைத் தண்டுபோல் வடிந்த காதுகளாகிய இவைகள் உள்ளிருந்த ஊன் வாடிய வற்றலைப் போன்றிருப்பன பாராய், இறும்பூது சான்ற முலையும் காணாய் வெறும்பை போல வீழ்ந்து வேறாயின - வியப்பு மிக்க கொங்கைகளும் உள்ளீடில்லாத பையைப் போல வீழ்ந்து வேறுபட்டன காண்பாய், தாழ்ந்து ஒசி தெங்கின் மடல்போல் திரங்கி வீழ்ந்தன இளவேய்த் தோளுங் காணாய் - இளைய மூங்கில் போன்ற தோள்களும் தாழ்ந்து வளைந்த தென்னை மடல் போல் திரைந்து வீழ்ந்தன காணாய், நரம்பொடு விடுதோல் உதிர்தொடர் கழன்று திரங்கிய விரல்கள் இவையும் காணாய்- நரம்புடன் தோலும் நகத்தின் தொடர்ச்சியைக் கழன்று திரைந்த விரல்களாகிய இவற்றையும் காண்பாய், வாழைத் தண்டே போன்ற குறங்கிணை தாழைத் தண்டின் உணங்கல் காணாய் - வாழைத் தண்டு போன்ற துடைகளிரண்டும் தாழைத் தண்டுபோல் வற்றியிருத்தலைக் காண்பாய், ஆவக் கணைக் கால் காணாயோ நீ மேவிய நரம்பொடு என்பு புறங்காட்டுவ- அம்புப் புட்டிலைப் போன்ற கணைக்கால்கள் தம்மிடம் பொருந்திய நரம்பினையும் என்பினையும் வெளியே காட்டுவன வற்றை நீ காணவில்லையோ, தளிரடிவண்ணம் காணாயோ நீ முளி முதிர் தெங்கின் உதிர்காய் உணங்கல்-தளிர்போலும் அடிகளின் வண்ணம் முதிர்ந்த தென்னையில் உலர்ந்து உதிர்ந்த காயின்வற்றல் போன்றிருப்பதை நீ காணாயோ, பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து-மலராலும் சாந்தாலும் புலால் நாற்றத்தை மறைத்து, தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த - ஆடையாலும் அணி கலனாலும் முன்னோர் அமைத்த, வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன் என - வஞ்சத்தைத் தெரிந்துகொள்வாய் இளங்கோனே என்று, விஞ்சை மகளாய் மெல்லியல் உரைத்தலும்- மணிமேகலை காயசண்டிகை வடிவத்துடன் கூறுதலும்; நரைமை - வெண்மை. தகையின்றாயது-தன்மையதாயது என்றுமாம். மூக்கின்றுளை நோக்கி ‘இவை'யெனப்பட்டன. உமிழ்சீ-வெறுக்கத்தக்க சீயுமாம். இறும்பூது சான்ற-புதுமையும் பெருமையும் பற்றிய வியப்பு விளைத்த வென்க. வாழைத்தண்டு - இளவாழையின் தலை நீங்கிய அடிமரம். தாழைத்தண்டின் - தாழையின் அடிமரம்போல். உணங்கல் போல்வன என விரித்துரைக்க. மறைத்தியாத்தல் - மறைத்தல். "புனைவனை நீங்கிற் புலால் புறத்திடுவது" (4 : 114) என முன்னும் வந்தது. 71-81. தன் பாராட்டும் என் சொற்பயன் கொள்ளாள் - தன்னைப் பாராட்டுகின்ற என்னுடைய சொற்களின் பயனைக் கொள்ளாளாய், பிறன்பின் செல்லும் - அயலான் பின்னே செல்லுகின்றனள், பிறன்போல் நோக்கும் - என்னைப் பிறன் போல நோக்குகின்றனள், மதுக்கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு - தேன் மணக்கும் மாலையினையுடைய அரசன் மகனுக்கு, முதுக்குறை முதுமொழி எடுத்துக்காட்டி - பேரறிவுடைய முதுமொழிகளை எடுத்துக்கூறி, பவளக் கடிகையில் தவள வாள் நகையும் குவளைச் செங்கணும் குறிப்பொடு வழா அள்-பவளத் துண்டத்தின்கணுள்ள வெள்ளிய ஒளி பொருந்திய பற்களின் முறுவலும் குவளை மலர் போலும் சிவந்த கண்களின் நோக்கும் காதற் குறிப்புடன் வழுவா தவளாயினள், ஈங்கிவன் காதலன் ஆதலின் ஏந்திழை ஈங்கொழிந்தனள் என - இவன் இவட்குக் காதலனானமையின் இவள் இவ்விடத்திலேயே தங்கினள் என்று, இகல் எரி பொத்தி - மாறுபாட்டா லுண்டாகிய சினத்தீ மூள, மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள் - மணிமேகலை இருந்த மன்றமாகிய பொதியிலின் உள்ளே, புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்த அடங்கினன் - புற்றினுள் அடங்கிய பாம்பைப் போலப் புகுந்து மறைந்திருந்தனன், காஞ்சனன் என்னும் கதிர்கள் விஞ்சையன் - ஒளி பொருந்திய வாட்படையினை யுடைய காஞ்சனன் என்னும் விஞ்சையன் ; பவளக்கடிகை - பவளத்துண்டு போலும் இதழ் ; உதடு. இகல் எரி - பகையாகிய தீ என்றுமாம். மன்றப் பொதியில்: இருபெயரொட்டு. விஞ்சையன் இகலெரி பொத்திப் பொதியிலுட் புக்கொளித் தடங்கினன் என்க. 82-93. ஆங்கவள் உரைத்த அரசிளங்குமரனும் - மணிமேகலை கூறியதைக் கேட்ட மன்னவன் சிறுவனும், களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான் - களையாத விருப்பத்தைக் கை விடானாய்,. வளைசேர் செங்கை மணிமேகலையே-வளைகள் பொருந்திய சிவந்த கைகளையுடைய மணிமேகலையே; காயசண்டிகையாய்க் கடிஞை ஏந்தி - காயசண்டிகையாய்ப் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, மாய விஞ்சையின் மன மயக் குறுத்தனள் - மாய வித்தையினாலே உள்ளத்தை மயக்கமுறச் செய்தனள், அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த - உலக வறவியின் பக்கலில் வருந்திப் பழமைக் கட்டுரை கூறிய, இவ் வம்பலன் தன்னொடு - இவ் வயலானுடன், இவ் வைகு இருள் ஒழியாள்-இருள் தங்கிய இவ் விரவில் நீங்காள், இங்கிவள் செய்தி இடையிருள் யாமத்து வந்தறிகுவன் எனமனங் கொண்டு எழுந்து - இவளதுசெயலை இருளையுடைய இடையாமத்தில் வந்து அறிவேன் என்று உளத்திற்கொண்டு புறப்பட்டு, வான் தேர்ப்பாகனை மீன் திகழ் கொடியனை கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை - வானிலுலாவும் தென்றலந் தேர்ப்பாகனை மீன் விளங்கும் கொடியுடையானைக் கரும்பாகிய வில்லுடையானை அரும்புகளாகிய அம்புகளை யுடையவனை, உயாவுத் துணையாக வயாவொடும் போகி - வினாவுந் துணையாகக்கொண்டு வேட்கை நோயுடன் சென்று ; ஆங்கவள் உரைத்த-மணிமேகலையால் அறிவுறுக்கப் பட்ட. அயர்ந்து-மறந்து என்றுமாம். அறிவுரைத்த - பண்டு அறிந்தவர் போலுரைத்த. வம்பலன் - புதியன் ; ஏதிலான். இவனிருத்தலின் இவ் விரவில் புறம் போகாளெனக் கருதினானென்க. வான்தேர் - வானிலுலாவும் தென்றலாகிய தேர். பாகன் கொடியன் வில்லி மைந்தன் என ஒரு பொருள் மேற் பல பெயர்கள் வந்தன. பாகனும் கொடியனும் வில்லியும் மைந்தனுமாகிய காமனை யென்க. அரும்பு, அருப்பென்றாயது. துணையாக்கொண்டு என விரித் துரைக்க. 94-101. ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து-ஊர் முழுவதும் உறங்கும் நள்ளிரவில் தான் மட்டும் தனியாக எழுந்து, வேழம் வேட்டு எழும் வெம்புலிபோல, - யானையை விரும்பிப் புறப்படும் கொடிய புலியைப்போல, கோயில் கழிந்து வாயில் நீங்கி - அரண்மனையை நீங்கி வாயிலைக் கடந்து, ஆயிழை இருந்த அம்பலம் அணைந்து-மணிமேகலை இருந்த ஊரம்பலத்தை அடைந்து, வேக வெந்தீ நாகம் கிடந்த போகுயர் புற்றளை புகுவான் போல - வேகத்தினையுடைய கொடிய நஞ்சினைக் கொண்ட பாம்பு கிடந்த மிக வுயர்ந்த புற்றின் துவாரத்தில் நுழைகின்றவனைப்போல, ஆகம் தோய்ந்து சாந்து அலர் உறுத்த - மார்பிற் பூசப்பெற்ற சாந்த மானது தனது வரவை ஆண்டுள்ளோருக்கு அறிவுறுத்த, ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்-முறையாக அடியை வைத்து அவ் வம்பலத்தின் உள்ளே புகுதலும் ; வேகம் - விடவேகம். தீ - நஞ்சு. முன்பு ‘புற்றடங் கரவிற் புக் கொளித் தடங்கினன்' என்றதற்கேற்ப, ஈண்டு ‘நாகங்கிடந்த புற்றளை புகுவோன் போல' என்றார். பின் ‘அரவம் பை விரித்தென. எழுந்து' என்பதும் இதுபற்றியே, போகு - நீண்ட; 1"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும், நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள" என்பது காண்க. அலருறுத்த - பலரறியச் செய்ய. 102-109. ஆங்கு முன் இருந்த அலர்தார் விஞ்சையன்-அங்கே முன்பு மறைந்திருந்த மலர்ந்த மாலையினையுடைய விஞ்சையன், ஈங்கிவன் வந்தனன் இவள்பால் என்றே - இவன் இப்பொழுது இவளிடமே வந்திருக்கின்றனன் என்று கருதி, வெஞ்சின அரவம் நஞ்சு எயிறு அரும்ப-நெடுஞ்சினமுடைய பாம்பு நஞ்சு பொதி பற்கள் தோன்றுமாறு, தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென - தனது மிக்க சீற்றத்துடன் எழுந்து படத்தை விரித்தாற்போல, இருந்தோன் எழுந்து - காஞ்சனன் எழுந்து, பெரும்பின் சென்று அவன் சுரும்பறை மணித்தோள் துணிய வீசி - உதயகுமரனது முதுகின் புறமாகச் சென்று அவனுடைய வண்டுகள் ஒலிக்கும் மாலையை யணிந்த அழகிய தோள்கள் துணிபடுமாறு வாளால் எறிந்து, காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம் போகுவல் என்றே அவள்பால் புகுதலும் - காயசண்டிகையைக் கைப் பற்றிக் கொண்டு விசும்பிடைச் செல்லுவேன் என நினைந்து கரந்துரு வெய்திய மணிமேகலையிடஞ் செல்லுதலும்; விஞ்சையன் இருந்தோன் எழுந்தென்க. பெரும்பின் சென்று நெடிது பின் சென்று என்றுமாம்.சுரும்பு அறை மணித்தோள்-மலையையொத்த அழகிய தோள் என்பாருமுளர் ; சுரும்பு-மலை; அறை: உவமவுருபு. 110-115. நெடுநிலைக் கந்தின் இடவயின் விளங்க கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும் - நெடிய நிலையாகிய தூணினிடத்தில் விளங்கும் கடவுட் டச்சனாகிய மயனால் எழுதப்பட்ட பாவை அப் பொழுது கூறும், அணுகல் அணுகல் விஞ்சைக் காஞ்சன- விஞ்சையனாகிய காஞ்சனனே அணுகாதே அணுகாதே, மணிமேகலை அவள் மறைந்துரு எய்தினள் - அவள் மணிமேகலை காயசண்டிகையின் வடிவத்தைக் கொண்டுள்ளாள், காயசண்டிகை தன் கடும்பசி நீங்கி - நின் மனைவி தனது கொடிய பசிநோய் நீங்கப் பெற்று, வானம் போவுழி வந்தது கேளாய் - விசும்பின் வழியே செல்லும்பொழுது நிகழ்ந்த துன்பத்தைக் கேள்; கடவுள் - தெய்வத் தச்சன்; 1"மயனெனக் கொப்பா வகுத்த பாவையின், நீங்கேன்" எனப் பின் வருதலுங் காண்க. வந்தது - நிகழ்ந்த துன்பம்; வினைப்பெயர். 116-122. அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த விந்த மால்வரை மீமிசைப் போகார் - வானிலே செல்வோர் துர்க்கை எழுந்தருளியுள்ள பெரிய விந்த மலையின் மேலே செல்லார், போவார் உளரெனில் பொங்கிய சினத்தள் - அங்ஙனம் போவார் உளராயின் மூண்டெழுஞ் சீற்றமுடையளாய், சாயையின் வாங்கித் தன்வயிற்று இடூஉம் - தன் சாயையினால் இழுத்துத் தன் வயிற்றில் அடக்கும். விந்தம் காக்கும் விந்தா கடிகை - விந்த மலையைக் காவல் புரியும் விந்தாகடிகை எனபவள், அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள் - காயசண்டிகை அம் மலையின்மீது சென்று அவ் விந்தா கடிகையின் வயிற்றில் அடங்கினள் ஆகலின், கைம்மை கொள்ளேல் காஞ்சன - காஞ்சனனே சிறுமையைக் கொள்ளாதே, இது கேள் - இதனைக் கேட்பாயாக; அந்தரி யென்பதும் விந்தாகடிகை யென்பதும் ஒரு பொருட் பெயர்கள். விந்தமலையைக் காத்தலின் விந்தாகடிகை யென்பதும் காரணப்பெயர். விந்தாகடிகை தன் வயிற்றிடூஉம் என்க. கைம்மை - சிறுமை; தனக்குரியளல்லாதாளை விரும்புதல் ; உதயகுமரன் மணிமேகலைக்குப் பழம் பிறப்பின் நாயகனாதலின் அவன் இறந்ததுபற்றி மணிமேகலையைக் கைம்மையாகக் கருதித் தெய்வங் கூறிற்றெனலுமாம் என்பர், டாக்டர் உ. வே. சாமிநாதையர். 123-129. ஊழ்வினை வந்து இங்கு உதயகுமாரனை ஆருயிர் உண்டதாயினும் - இப்பொழுது ஊழ்வினையானது உருத்து வந்து உதயகுமரன் அரிய உயிரை உண்டதாயினும், அறியாய் வெவ்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன - விஞ்சை யானாகிய காஞ்சனனே ஆராயாது கொடிய தீவினையைச் செய்தாய், அவ் வினை நின்னையும் அகலாது ஆங்குறும்-அக் கொடுவினை நின்னையும் நீங்காமல் வந்து பற்றும், என்று இவை தெய்வம் கூறலும் - என்று இவைகளைக் கந்திற்கடவுள் உரைத்தலும், எழுந்து கன்றிய நெஞ்சிற் கடுவினை உருத்து எழ விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என் - காஞ்சனன் துன்புற்ற வுளத்தோடு எழுந்து தான் செய்த கொடிய வினை வெகுண்டெழுந்து பற்ற வானிலே குறுக்காகப் படர்ந்துபோயினன் என்க. கடுவினை - உதயகுமரனைக் கொன்ற தீவினை. உருத்து - உருக்கொண்டு என்றுமாம். கோட்டம் செல்வக் காப்புடைத்தாக, தாரோன் கேட்டு மனங் கொண்டு எழுந்து சென்று ஏறலும், கணவன் கையறவெய்தி வந்து இழிந்து தேர்ந்து திரிவோனாய்க் கண்டு பல பாராட்டவும், நீங்கிச் சென்று காட்டி மெல்லியல் உரைத்தலும், விஞ்சையன் புக்கு ஒளித்து அடங்கினன்; அரசிளங் குமரனும் கொள்ளான் மனங்கொண்டு எழுந்து போகி எழுந்து கழிந்து நீங்கி அணைந்து புகுதலும், விஞ்சையன் எழுந்து சென்று வீசிப் புகுதலும், பாவை உரைக்கும்; அங்ஙனம் உரைப்பது கூறலும், விஞ்சையன் எழுந்து படர்ந்து போயினன் என வினைமுடிவு செய்க. உதயகுமரனை வாளாலெறிந்த காதை முற்றிற்று. 21. கந்திற்பாவை வருவதுரைத்த காதை பின்பு, சம்பாபதியின் கோட்டத்திலிருந்த மணிமேகலை, காஞ்சனன் செய்தியையும் உதயகுமரன் வெட்டுண் டிறந்ததையும் காஞ்சனனுக்குக் கந்திற்பாவை கூறிய வியத்தகு மொழியையும் அறிந்து எழுந்து 'இவ்வுருக் கெடுவதாக' என்று தான்கொண்ட வேற்றுருவை யொழித்து. உதயகுமரன் வடிவினை நோக்கி 'முற்பிறப்பிலே திட்டி விடத்தால் உன் உயிர் போன பொழுதில் நின் பிரிவாற்றாது யானும் தீயிற் பாய்ந்து உயிர் துறந்தேன்; உவ வனத்திற் கண்டபொழுது உன் பால் மனஞ் சென்றமையின், மணிமேகலா தெய்வம் என்னை யெடுத்துச் சென்று மணி பல்லவத்தில் வைத்துப் புத்தபீடிகைக் காட்சியால் என் பழம்பிறப்பை எனக்கறிவித்து உனது முற்பிறப்பையும் கூறிற்று; அதனால், நீ முன்பு கணவனாக இருந்ததை அறிந்து யான் உன் பால் அன்பு கொண்டு, " பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக் காயசண் டிகைவடி வானேன் ;" காதல, வெவ்வினை உருப்ப விஞ்சையன் வெகுளியால் விளிந்தனையோ, என வெய்துயிர்த்துப் புலம்பி, அவ்வுருவினருகே செல்லலுற்றனள். அப்பொழுது ஆண்டுள்ள கந்திற்பாவைத் தெய்வம், 'நீ இவன்பாற் செல்லாதே; செல்லாதே; உனக்கு இவன் கணவனாகியதும் இவனுக்கு நீ மனைவியாகியதும் சென்றபிறப்பில் மட்டும் அல்ல; அதற்கு முன்னும் எத்தனையோ பிறப்புக்களில் நிகழ்ந்தன. இங்ஙனம் தடுமாறும் பிறவித் துன்பத்தை யொழிப்பதற்கு முயல்வோய்! இவன் இறந்ததுபற்றி நீ துன்ப மெய்தாதே' என்று தன்தெய்வ வாக்கால் உரைத்தது. அது கேட்ட மணிமேகலை, 'இவ்வம்பலத்தில் யாவருக்கும் உண்மையை உரைத்துக் கொண்டிருக்கும் தெய்வம் ஒன்றுண்டென்பர்; அத்தெய்வம் நீ தானோ? நின் திருவடியைத் தொழுகின்றேன்; சென்ற பிறவியில் திட்டிவிடத்தாலும் இப் பிறவியில் விஞ்சையன் வாளாலும் இவன் விளிந்ததன் காரணத்தை நீ அறிவையோ? அறிவையாயின் அதனை எனக்கு உரைத்தருளல் வேண்டும்' என்றாள். என்றலும் அத்தெய்வம், "காயங்கரை யென்னும் ஆற்றங்கரையில் இருந்து கொண்டு புத்ததேவனுடைய வருகையைக் கூறி மன்பதைகளின் மனமாசினைப் போக்கி வரும் பிரம தரும முனிவரை இராகுலனும் நீயும் வழிபட்டு, அவருக்கு அமுது செய்விக்க விரும்பி அவருடன் பாடு பெற்று, விடியற்காலையில் அமுதமைக்குமாறு மடையனுக்குக் கூறினீர். அவன் எக்காரணத்தாலோ சிறிது பொழுது தாழ்த்துவந்து அங்ஙனம் வந்த அச்சத்தால் கால் தளர்ந்து மடைக்கலம் சிதையும்படி வீழ்ந்தான்; வீழ்ந்தவனைக் கண்டும் இரங்காமல், ‘இவன் முனிவர்க்குச் செய்ய வேண்டியதனை விரைந்து வந்து செய்யாது தாழ்த்தனன்' என்று சினந்து, அவன் தோளும் தலையும் வேறாகுமாறு இராகுலன் வாளால் அவனைத் துணித்தான். அவ்வல்வினையே அப் பிறப்பிலே நஞ்சுவிழி யரவாலும், இப்பிறப்பிலே விஞ்சையன் வாளாலும் அவன் பொன்றுமாறு செய்தது. வினை தன் பயனை ஊட்டாமலொழி யாதென்பது திண்ணம்" என்றுரைத்து, மற்றும் மணிமேகலை அரசனாற்சிறை வைக்கப்படுதலும், சிறையினின்று நீங்குதலும். சாவகநாடு சென்று ஆபுத்திரனோடு மணிபல்லவத்தை அடைதலும், வேற்றுருக்கொண்டு வஞ்சிநகரம் புகுந்து ஆண்டுள்ள பல சமயவாதி களின் கொள்கைகளையும் கேட்டலும் ஆகிய பின்னிகழ்ச்சி களையும் தெரிவித்து, "யான் தெய்வகணங்களைச் சார்ந்த ஒருவன்; என் பெயர் துவதிகள் என்பது; இந்தப் பழைய தூணில் மயன் எனக்கு ஒப்பாக அமைத்த இப்படிமத்தைவிட்டு ஒரு பொழுதும் நீங்கேன்' என்று தன் வரலாற்றையும் கூறியது. அவற்றைக்கேட்ட மணிமேகலை, ‘அப்பால் என் இறுதிநாள் காறும் நிகழ்பவைகளை உரைத்தருள்க' என வேண்டவே, 'காஞ்சிப் பதியில் மழையின்மையால் உயிர்கள் பசியால் வருந்துதலையும், மாதவி, சுதமதி என்னும் இருவருடன் அறவணவடிகள் ஆண்டுச் சென்று நின் வரவினை எதிர்நோக்கி யிருத்தலையும் வஞ்சி நகரிலே நீ அறிந்து, உடனே அக் கச்சிமாநகரை அடைந்து உணவளித்து எல்லா உயிர்களையும் பாதுகாப்பாய்; அந்நகரிலே உன்னாற் பற்பல அற்புதங்கள் நிகழும்; பின், வஞ்சிநகரிலே கேட்ட பல சமயவாதிகளின் கொள்கைகளையும் அறவணவடிகட்குத் தெரிவித்து, அவர் அறிவுறுத்த நல்லறங்கள் பலவற்றையும் வழுவாது செய்து, இறந்து, மேல்வரும் பிறப்புக்களை உத்தர மகத நாட்டிலேயே பெறுவாய். அவை யாவும் உனக்கு ஆண் பிறப்பாகவே நிகழும்;அப் பிறப்புக்கள் ஒவ்வொன்றிலும் நீ அருளறத்தினின்று நீங்காயாகி, முடிவிற் புத்த தேவனுக்கு முதல் மாணாக்கனாகிய பெரும்பேறெய்திப் பற்றற்று வீடுபெறுவாய்' என்று அத்தெய்வம் உரைத்தது; கேட்ட மணிமேகலை கவலை யொழிந்து மயக்கம் நீங்கியிருந்தாள்; அவ்வளவிலே கதிரவன் தோன்றினான். கடவு ளெழுதிய நெடுநிலைக் கந்தின் குடவயி னமைந்த நெடுநிலை வாயின் முதியாள் கோட்டத் தக வயிற் கிடந்த மதுமலர்க் குழலி மயங்கின ளெழுந்து 5 விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற் குற்றதும் மன்றப் பொதியிற் கந்துடை நெடுநிலைக் கடவுட் பாவை அங்கவற் குரைத்த அற்புதக் கிளவியும் கேட்டன ளெழுந்து கெடுக இவ் வுருவெனத் 10 தோட்டலர்க் குழலி உள்வரி நீங்கித் திட்டி விடமுண நின்னுயிர் போம்நாள் கட்டழ லீமத் தென்னுயிர் சுட்டேன் உவவன மருங்கில் நின்பா லுள்ளம் தவிர்விலே னாதலின் தலைமகள் தோன்றி 15 மணிபல் லவத்திடை யென்னையாங் குய்த்துப் பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி என்பிறப் புணர்ந்த என்முன் தோன்றி உன்பிறப் பெல்லாம் ஒழிவின் றுரைத்தலின பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் 20 அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் யான்நினக் குரைத்துநின் இடர்வினை யொழிக்கக் காயசன் டிகைவடி வானேன் காதல்! வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் வெவ்வினை யுருப்ப விளிந்தனை யோவென 25 விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி அழுதன ளேங்கி அயாவுயிர்த் தெழுதலும் செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண் அல்லியந் தாரோன் தன்பாற் செல்லல் நினக்கிவன் மகனாத் தோன்றி யதூஉம் 30 மனக்கினி யாற்குநீ மகளா யதூஉம் பண்டும் பண்டும் பல்பிறப் புளவால் கண்ட பிறவியே யல்ல காரிகை தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம் விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்வேல் 35 என்றிவை சொல்லி யிருந்தெய்வ முரைத்தலும் பொன்றிதழ் மேனிப் பூங்கொடி பொருந்திப் பொய்யா நாவொடிப் பொதியிலிற் பொருந்திய தெய்வம் நீயோ திருவடி தொழுதேன் விட்ட பிறப்பின் வெய்துயிர்த் தீங்கிவன் 40 திட்டி விடமுணச் செல்லுயிர் போயதும் நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூரயான் விஞ்சையன் வாளி னிவன்விளிந் ததூஉம் அறிதலு மறிதியோ அறிந்தனை யாயின் பெறுவேன் தில்லநின் பேரரு ளீங்கென 45 ஐயரி நெடுங்கண் ஆயிழை கேளெனத் தெய்வக் கிளவியில் தெய்வங் கூறும் காயங் கரையெனும் பேரியாற் றடைகரை மாயமின் மாதவன் வருபொரு ளுரைத்து மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம் 50 பிரம தருமனைப் பேணினி ராகி அடிசிற் சிறப்பியா மடிகளுக் காக்குதல் விடியல் வேலை வேண்டின மென்றலும் மாலை நீங்க மனமகிழ் வெய்திக் காலை தோன்ற வேலையின் வரூஉம் 55 நடைத்திறத் திழுக்கி நல்லடி தளர்ந்து மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனைச் சீல நீங்காச் செய்தவத் தோர்க்கு வேலை பிழைத்த வெகுளி தோன்றத் தோளுந் தலையுங் துணிந்துவே றாக 60 வாளிற் றப்பிய வல்வினை யன்றே விராமலர்க் கூந்தன் மெல்லியல் நின்னோ டிராகுலன் தன்னை யிட்டக லாதது தலைவன் காக்குந் தம்பொருட் டாகிய அவல வெவ்வினை யென்போ ரறியார் 65 அறஞ்செய் காத லன்பினி னாயினும் மறஞ்செய் துளதெனின் வல்வினை யொழிய தாங்கவ் வினைவந் தணுகுங் காலைத் தீங்குறு முயிரே செய்வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும் 70 ஆங்கவ் வினைகாண் ஆயிழை கணவனை ஈங்கு வந்திவ் விடர்செய் தொழிந்தது இன்னுங் கேளா யிளங்கொடி நல்லாய் மன்னவன் மகற்கு வருந்துதுய ரெய்தி மாதவ ருணர்த்திய வாய்மொழி கேட்டுக் 75 காவலன் நின்னையும் காவல்செய் தாங்கிடும் இடுசிறை நீக்கி யிராசமா தேவி கூட வைக்குங் கொட்பின ளாகி மாதவி மாதவன் மலரடி வணங்கித் தீது கூற அவள் தன்னொடுஞ் சேர்ந்து 80 மாதவ னுரைத்த வாய்மொழி கேட்டுக் காதலி நின்னையுங் காவல் நீக்குவள் அரசாள் செல்வத் தாபுத் திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை போனா லவனொடும் பொருளுரை பொருந்தி 85 மாநீர் வங்கத் தவனொடு மெழுந்து மாயமில் செய்தி மணிபல் லவமெனும் தீவகத் தின்னுஞ் சேறலு முண்டால் தீவ திலகையின் தன்திறங் கேட்டுச் சாவக மன்னன் தன்னா டடைந்தபின் 90 ஆங்கத் தீவம்விட் டருந்தவன் வடிவாய்ப் பூங்கொடி வஞ்சி மாநகர் புகுவை ஆங்கந் நகரத் தறிபொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் இறைவன் எங்கோன் எவ்வுயி ரனைத்தும் 95 முறைமையிற் படைத்த முதல்வனென் போர்களும் தன்னுரு வில்லோன் பிறவுருப் படைப்போன் அன்னோன் இறைவ னாகுமென் போர்களும் துன்ப நோன்பித் தொடர்ப்பா டறுத்தாங் கின்ப வுலகுச்சி யிருத்துமென் போர்களும் 100 பூத விகாரப் புணர்ப்பென் போர்களும் பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம் அல்லியங் கோதை கேட்குறு மந்நாள் இறைவனு மில்லை யிறந்தோர் பிறவார் அறனோ டென்னையென் றறைந்தோன் தன்னைப் 105 பிறவியும் அறவியும் பெற்றியி னுணர்ந்த நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங் கொள்ளிய துரையென உன்பிறப் புணர்த்துவை ஆங்குநிற் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்கக் 110 காம்பன தோளி கனாமயக் குற்றனை என்றவ னுரைக்கும் இளங்கொடி நல்லாய் அன்றென் றவன்முன் அயர்ந்தொழி வாயலை தீவினை யுறுதலுஞ் செத்தோர் பிறத்தலும் வாயே யென்று மயக்கொழி மடவாய் 115 வழுவறு மரணும் மண்ணுங் கல்லும் எழுதிய பாவையும் பேசா வென்ப தறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ அறியா யாயின் ஆங்கது கேளாய் முடித்தவரு சிறப்பின் மூதூர் யாங்கணும் 120 கொடித்தேர் வீதியும் தேவர் கோட்டமும் முதுமர இடங்களும் முதுநீர்த் துறைகளும் பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடிக் காப்புடை மாநகர்க் காவலுங் கண்ணி யாப்புடைத் தாக அறிந்தோர் வலித்து 125 மண்ணினுங் கல்லினும் மரத்தினுஞ் சுவரினும் கண்ணிய தெய்வதங் காட்டுநர் வகுக்க ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா ஊன்கணி னார்கட் குற்றதை யுரைக்கும் என்திறங் கேட்டியோ இளங்கொடி நல்லாய் 130 மன்பெருங் தெய்வ கணங்களி னுள்ளேன் துவதிக னென்பேன் தொன்றுமுதிர் கந்தின் மயனெனக் கொப்ப வகுத்த பாவையின் நீங்கேன் யான்என் நிலையது கேளாய் மாந்த ரறிவது வானவ ரறியார் 135 ஓவியச் சேனனென் னுறுதுணைத் தோழன் ஆவதை யிந்நகர்க் காருரைத் தனரோ அவனுடன் யான்சென் றாடிட மெல்லாம் உடனுறைந் தார்போ லொழியா தெழுதிப் பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து 140 நாநனி வருந்தவென் நலம்பா ராட்டலின் மணிமே கலையான் வருபொரு ளெல்லாம் துணிவுட னுரைத்தேன் என்சொல் தேறெனத் தேறே னல்லேன் தெய்வக் கிளவிகள் ஈறுகடை போக எனக்கரு ளென்றலும் 145 துவதிக னுரைக்குஞ் சொல்லலுஞ் சொல்லுவேன் வருவது கேளாய் மடக்கொடி நல்லாய் மன்னுயிர் நீங்க மழைவளங் கரந்து பொன்னெயிற் காஞ்சி நகர்கவி னழிய ஆங்கது கேட்டே ஆருயிர் மருந்தாய் 150 ஈங்கிம் முதியா ளிடவயின் வைத்த தெய்வப் பாத்திரம் செவ்விதின் வாங்கித் தையல்நின் பயந்தோர் தம்மோடு போகி அறவணன் தானும் ஆங்குள னாதலின் செறிதொடி காஞ்சி மாநகர் சேர்குவை 155 அறவண னருளால் ஆய்தொடி ஆவ்'d2வூர்ப் பிறவண மொழிந்துநின் பெற்றியை யாகி வறனோ டுலகின் மழைவளந் தரூஉம் அறனோ டேந்தி ஆருயி ரோம்புவை ஆய்தொடிக் கவ்வூர் அறனொடு தோன்றும் 160 ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள பிறவற முரைத்தோர் பெற்றிமை யெல்லாம் அறவணன் றனக்குநீ யுரைத்த அந்நாள் தவமுந் தருமமும் சார்பிற் றோற்றமும் பவமுறு மார்க்கமும் பான்மையி னுரைத்து 165 மறவிரு ளிரிய மன்னுயி ரேமுற அறவெயில் விரித்தாங் களப்பி லிருத்தியொடு புத்த ஞாயிறு தோன்றுங் காறும் செத்தும் பிறந்துஞ் செம்பொருள் காவா இத்தலம் நீங்கேன் இளங்கொடி யானும் 170 தாயரும் நீயுந் தவறின் றாக வாய்வ தாகநின் மனப்பாட் டறமென ஆங்கவ னுரைத்துலும் அவன்மொழி பிழையாய் பாங்கியல் நல்லறம் பலவுஞ் செய்தபின் கச்சிமுற் றத்து நின்னுயிர் கடைகொள 175 உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம் ஆண்பிறப் பாகி அருளறம் ஒழியாய் மாண்பொடு தோன்றி மயக்கங் களைந்து பிறர்க்கறம் அருளும் பெரியோன் றனக்குத் தலைச்சா வகனாய்ச் சார்பறுத் துய்தி 180 இன்னும் கேட்டியோ நன்னுதல் மடந்தை ஊங்க ணோங்கிய உரவோன் றன்னை வாங்குதிரை யெடுத்த மணிமே கலாதெய்வம் சாது சக்கரற் காரமு தீத்தோய் ஈது நின்பிறப் பென்பது தெளிந்தே 185 உவவன மருங்கில் நின்பால் தோன்றி மணிபல் லவத்திடைக் கொணர்ந்தது கேளெனத் துவதிக னுரைத்துலும் துயர்க்கடல் நீங்கி அவதி யறிந்த அணியிழை நல்லாள் வலையொழி மஞ்ஞையின் மனமயக் கொழிதலும் 190 உலகுதுயி லெழுப்பினன் மலர்கதி ரோனென். உரை 1-4. கடவுள் எழுதிய நெடுநிலைக் கந்தின் - தெய்வத் தன்மையுடைய பாவை எழுதப்பெற்ற நெடிய நிலையாகிய தூணின், குடவயின் அமைத்த நெடுநிலை வாயில் - மேற்றிசைக் கண் அமைக்கப்பட்ட உயர்நிலை பொருந்திய வாயிலையுடைய, முதியாள் கோட்டத்து அகவயின் கிடந்த - சம்பாபதி கோயிலினுள்ளே துயின்ற, மது மலர்க் குழலி மயங்கினள் எழுந்து - மணிமேகலை மயக்கமுற்று எழுந்து ; இரட்டுற மொழிதலால் கடவுளால் எழுதப்பட்ட பாவை யென்றுங் கொள்க; கடவுள் - தெய்வத் தச்சனாகிய மயன். குடவயின் அமைத்த வாயில் என்க: கோட்டமுமாம். அமைந்த என்பது பாடமாயின் பொருந்திய என்க. 5-10. விஞ்சையன் செய்தியும் வென்வேல் வேந்தன் மைந்தற்கு உற்றதும்-காஞ்சனன் செய்தியையும் வென்றி வேலையுடைய மன்னவன் மகனுக்கு நேர்ந்த துன்பத்தையும், மன்றப் பொதியில் கந்துடை நெடுநிலைக் கடவுட்பாவை-மன்றமாகிய ஊரம்பலத்தில் நெடிய நிலையாகிய தூணின்கட் பொருந்திய தெய்வப்பாவை, அங்கவற்கு உரைத்த அற்புதக் கிளவியும்-அவ் விஞ்சையனுக்குக் கூறிய வியப்புடைய மொழிகளையும், கேட்டனள் எழுந்து கெடுக இவ்வுருவெனத் தோட்டலர்க்குழலி உள்வரி நீங்கி - கேட்டவளாய் இவ்வடிவம் கெடுக வென்றெழுந்து அவள் தான் கொண்ட மறைந்த வேடத்தினை ஒழிந்து ; செய்தியும் உற்றதும் அற்புதக் கிளவியும் கேட்டென்றா ரேனும், அற்புதக் கிளவியும் அதனாற் செய்தியும் உற்றதும் கேட்டென்று கொள்க. இவ்வுருவங் காரணமாக உதயகுமாரன் வெட்டுண்டமையின் ‘கெடுக விவ்வுரு' என்றாளென்க. தோட்டலர்க் குழலி ; சுட்டு மாத்திரை. உள் வரி - மறைந்த வுருவம். 11-18. திட்டிவிடம் உண நின் உயிர் போம்நாள் - திட்டிவிடம் என்னும் பாம்பு தீண்ட நின் உயிர் சென்ற முற்பிறவியில், கட்டழல் ஈமத்து என் உயிர் சுட்டேன்-மிக்க நெருப்பினையுடைய ஈமத்தில் எனது உயிரைக் கொளுத்தினேன், உவவன மருங்கில் நின்பால் உள்ளம் தவிர்விலேன் ஆதலின் - உவவனத்தின்கண் நின்னிடம் வைத்த மனந் தவிர்ந்திலேன் ஆதலால், தலைமகள் தோன்றி மணி பல்லவத்திடை என்னை ஆங்கு உய்த்து-அவ்விடத்து மணிமேகலா தெய்வம் தோன்றி என்னை மணிபல்லவத்தின்கட் செலுத்தி, பிணிப்பறு மாதவன் பீடிகை காட்டி-பற்றற்ற நற்றவனாகிய புத்தனது திருவடிப் பீடிகையைக் காண்பித்து, என் பிறப்பு உணர்ந்த என்முன் தோன்றி - எனது பண்டைப் பிறப்பினை யறிந்த என் முன்னே தோன்றி, உன் பிறப்பு எல்லாம் ஒழிவின்றி உரைத்தலின்-நின் பிறப்பு முதலிய அனைத்தையும் தவறாது கூறியருளினமையின் ; திட்டி: திருஷ்டி என்பதன் சிதைவு; திட்டி விடம் - கண்ணில் நஞ்சுடையதொரு பாம்பு; இந்நூலுட் பலவிடத்து இது கூறப் பெற்றுள்ளது. போம் நாள்-போகும் நாள்: காலவழுவமைதி. போநாள் என்னுயிர் சுட்டேன் என்றது முற்பிறப்பின் செய்தி. உவவனத்திற் கண்டபொழுது உதயகுமரன்பால் மணிமேகலைக்கு வேட்கையிருந்ததென்பதனை, "புதுவோன் பின்றைப் போனதென் னெஞ்சம், இதுவோ வன்னாய் காமத் தியற்கை" (5: 89-90) "அவன்பா லுள்ளம், நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்" (10: 44-5) என முன் வந்துள்ளமையாலறிக. பிணிப்பு - கட்டு: பற்று. பீடிகை காட்டி அதனால் என் பிறப்புணர்ந்த என்முன் தோன்றி யென்க. 19-26. பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் - உலகில் பிறந்தோர்கள் இறப்பதனையும் இறந்தோர்கள் பிறப்ப தனையும், அறந்தரு சால்பும் மறந்தரு துன்பமும் - அறம் அளிக்கின்ற அமைதியையும் பாவம் கொடுக்கின்ற துன்பத்தையும், யான் நினக்கு உரைத்து நின் இடர் வினை ஒழிக்கக் காயசண்டிகை வடிவானேன் காதல-நினக்கு எடுத்துக் கூறி நின் தீவினைகளை நீக்கும் பொருட்டுக் காதல யான் கயசண்டிகை வடிவமெய்தினேன், வைவாள் விஞ்சையன் மயக்குறு வெகுளியின் - கலக்கமுற்ற சீற்றத்தினையுடைய விஞ்சையனது கூரிய வாளினாலே, வெவ்வினை உருப்ப விளிந்தினையோ என - கொடிய ஊழ்வினை உருத்தலான் இறந்தனையோ என்று, விழுமக் கிளவியின் வெய்துயிர்த்துப் புலம்பி - துன்ப மொழிகளால் வெவ்விதாக உயிர்த்துப் புலம்பி, அழுதனள் ஏங்கி அயாவுயிர்த்து எழுதலும்-ஏங்கி யழுவோளாய் நெட்டுயிர்ப்புடன் எழுதலும்; சால்பு - அமைதி; அதனாலுண்டாம் இன்பம். வெகுளியை யுடைய விஞ்சையன் வாளாலென மாறுக. உருப்ப - வெகுள. விழுமம்-துன்பம். 27-35. செல்லல் செல்லல் சேயரி நெடுங்கண் - செவ்வரி படர்ந்த நெடிய கண்களையுடையாய் செல்லாதே செல்லாதே, அல்லியந் தாரோன் தன்பால் செல்லல் - அகவிதழ் பொருந்திய மலர்மாலை யினையுடைய மன்னன் மகனிடம் செல்லாதே, நினக்கு இவன் மகனாத் தோன்றியதூஉம்-இவ்வுதயகுமரன் நினக்குக் கணவனாக விருந்ததுவும், மனக்கினியாற்கு நீ மகளாயதூஉம்-மனத்திற்கினிய இவ்விளங்கோவிற்கு நீ மனைவியாக விருந்ததுவும், பண்டும் பண்டும் பல்பிறப்பு உளவால்-முன்னும் பின்னும் பல பிறப்புகளில் உண்டு, கண்ட பிறவியே அல்ல காரிகை-மணிமேகலை நீ அறிந்துகொண்ட முற்பிறப்பில் மட்டுமல்ல, தடுமாறு பிறவித் தாழ்தரு தோற்றம்- துன்பத்தில் அழுந்துதற்கேதுவாகிய தடுமாறும் பிறவியாகிய தோற்றத்தை, விடுமாறு முயல்வோய் விழுமங் கொள்ளேல் - நீக்குமாறு முயல்கின்ற நீ துன்பங் கொள்ளாதே, என்றிவை சொல்லி இருந்தெய்வம் உரைத்துலும்-என்று இவைகளைக் கூறி அப்பெருந் தெய்வம் விளக்குதலும் ; செல்லல்: ஏவன்முற்று; அடுக்கு விரைவு பற்றியது. சேயரி நெடுங்கண்: விளி. மகனா - கணவனாக: 1"நோதக வுண்டோ நும்மகனார்க்கு" என்புழியும் கணவனை மகனார் என்று கூறி யிருத்தல் காண்க. கண்ட பிறவியே அல்ல பல் பிறப்புக்களிலும் உளவென்க. கண்ட - அறிந்துகொண்ட. பிறவியே-பிறவியில் மட்டுமே. தடுமாறுதல் நாற்கதியுள் ஒன்றொன்றில் மாறியும், ஆண் பெண் மாறியும் பிறத்தலும், நரகொடு துறக்கம் நானிலத் திற்சென்று சுழலுதலுமாம். சொல்லி உரைத்தலும் - கூறி விளக்குதலுமென்க. 36-46. பொன்திகழ் மேனிப் பூங்கொடி பொருந்திய-பொன் போல் விளங்குகின்ற திருமேனியையுடைய மணிமேகலை ஆண்டுத் தங்கி, பொய்யா நாவொடு இப்பொதியிலில் பொருந்திய-இவ்வம்பலத்தின் கண் பொய்யாத நாவுடன் அமர்ந்திருக்கின்ற, தெய்வம் நீயோ திருவடி தொழுதேன்-தெய்வமோ நீ நின் திருவடிகளை வணங்கினேன், விட்ட பிறப்பின் வெய்துயிர்த்து ஈங்கிவன் திட்டிவிடம் உணச் செல்லுயிர் போயதும்-முற்பிறப்பில் இவனது உயிரானது திட்டிவிடத்தாலுண்ணப்பட்டு வெவ்வுயிர்ப் பெறிந்து சென்றதும், நெஞ்சு நடுங்கி நெடுந்துயர் கூர யான் விஞ்சையன் வாளின் இவன் விளிந்ததூஉம் - இப்பிறப்பில் யான் உளம் நடுங்கிப் பெருந்துயர் கூருமாறு இவன் விஞ்சையனுடைய வாளினாலே இறந்ததும் ஆகிய தீவினைகளை, அறிதலும் அறிதியோ அறிந்தனையாயின் - அறியலும் செய்தியோ அங்ஙனம் அறிந்திருப்பையானால், பெறுவேன் தில்ல நின் பேரருள் ஈங்கென - நினது பேரருளை இவ்விடத்துப் பெறுவேன் என்று கூற, ஐஅரி நெடுங்கண் ஆயிழை கேள் என - அழகிய அரி படர்ந்த பெரிய கண்களையுடைய ஆயிழாய் கேட்பாயாக என்று, தெய்வக் கிளவியில் தெய்வம் கூறும்-தெய்வ மொழியாலே கந்திற் பாவை உரைக்கும் ; பொருந்தி - செல்லுத லொழிந்து நின்று. செல்லுயிர்-நில்லாது திரியுமியல்புடைய உயிர். போயதும்-போனமைக்குக் காரணமாகிய தீவினையையும். விளிந்ததூஉம் - விளிந்ததற்குக் காரணமாகிய தீவினையையும். அறிதலும் அறிதியோ - அறிதலுஞ் செய்தியோ; இஃது 1"உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்" என்பன போல நின்றது. தில்ல: விழைவுப் பொருட்டு. நல்ல வென்பதும் பாடம். நின் பேரருள் பெறுவேன் என்றது நீ கூறும் விடையைக் கேட்பேன் என்றபடி. தெய்வக் கிளவி - வான் மொழி. தெய்வக் கிளவியிற் றெய்வம் எனக் கொண்டு முக்காலமும் அறிந்துரைக்கும் மொழியினையுடைய தெய்வம் என்றுரைத் தலுமாம்; 47-52. காயங்கரை எனும் பேரியாற்று அடைகரை - காயங்கரை என்னும் பேராற்றின் அடைகரையில், மாயமில் மாதவன் வரு பொருள் உரைத்து-வஞ்சமில் பெருந்தவனாகிய புத்தன் அவதரித்தலைக் கூறி, மருளுடை மாக்கள் மனமாசு கழூஉம் - மயக்கமுற்ற மக்களுடைய மனவழுக்கை நீக்கும், பிரமதருமனைப் பேணினி ராகி-பிரம தருமன் என்னும் முனிவனை வழிபட்டு, அடிசிற்சிறப்புயாம் அடிகளுக்கு ஆக்குதல் விடியல் வேலை வேண்டினம் என்றலும்-யாங்கள் நாள்வெயிற் காலையில் அடிகட்கு அமுதூட்டும் சிறப்புச் செய்தலை வேண்டு கின்றோம் என்றுரைத்து அம்முனிவன் அதற்கிசையலும் நீவிர், மாலை நீங்க மனமகிழ்வு எய்தி - உளத்தில் உவகை யடைந்து இரவு கழிய இருந்து ; மாயம்-மயங்கிய வறிவுமாம். வருபொருள்-தோன்றுதலாகிய செய்தியை; உலகிலே தீவினை மிகுதோறும் அதனைப் போக்கி அருளறத்தை நிலைநிறுத்தி உயிர்களை நிருவாண மடைவித்தற் பொருட்டுப் புத்ததேவன் தோன்றுவனென்பது பௌத்த நூற்றுணிபு; இஃது "ஈரெண் ணூற்றோ டீரெட் டாண்டிற், பேரறி வாளன் றோன்றும்" (12 : 77-8) என்பது முதலாக இந்நூலுட் பலவிடத்தும் வருதல் காண்க. மருள் - காமவெகுளி மயக்கங்கள் என்றலும், நீக்க, தோன்ற என்பவற்றின் பின் வேண்டுஞ் சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. வேண்டினம் என்றலும்-வேண்டின மென்று மடையனை நோக்கிக் கூறுதலும் என்றுரைத்தலுமாம்; இப்பொருட்கு, மாலை நீங்கக் காலை தோன்ற வரூஉ வீழ்ந்த மடையனை என்றியைத்துரைக்க. மாலை-இரவு. 54-62. காலை தோன்ற வேலையின் வரூஉ நடைத்திறந்து இழுக்கி நல்லடி தளர்ந்து - வைகறைப் பொழுது தோன்ற அப்பொழுது தான் வந்து நடைவகையால் வழுக்கி அடிதளர்ந்து, மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை - சோற்றுப் பாத்திரம் அழியுமாறு வீழ்ந்த அடுந் தொழிலோனை, சீலம் நீங்காச் செய்தவத்தோர்க்கு- ஐவகைச் சீலமும் தவறாத பெருந்தவத் தோர்க்கு, வேலை பிழைத்த வெகுளி தோன்ற - காலந் தவறியதனா லுண்டாகிய சினமானது தோன்ற, தோளும் தலையும் துணிந்து வேறாக-தோளும் தலையும் துணிபட்டு வேறாகுமாறு, வாளில் தப்பிய வல்வினை அன்றே - இராகுலன் வாளால் வெட்டிய தீவினையல்லவோ, விராமலர்க் கூந்தல் மெல்லியல் நின்னோடு - மணம் பொருந்திய மலர்களை யணிந்த கூந்தலையுடைய மெல்லியலே நின்னுடன், இராகுலன் தன்னை இட்டு அகலாதது-இராகுலனையும்விட்டு நீங்காத தாகியது; தோன்று அ வேலை யெனப் பிரித்தலுமாம். வரூஉ-வாரா நின்று. மடையன்-சோறுசமைப்போன். சீலம் - கள், பொய், காமம், கொலை, களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தல்; இதனை, 1"ஐவகைச் சீலத் தமைதியுங் காட்டி" 2"கள்ளும் பொய்யும் காமமுங் கொலையும், உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை" எனபவற்றானறிக; இவ்வைந்தும் இல்லறத்தார்க் குரியன வென்றும், இவற்றோடு உயர்ந்த ஆதனத்தில் இருத்தல் கிடத் தலின்மை, சாந்து மாலை முதலியன தரியாமை, பொன் வெள்ளி களைத் தீண்டாமை, பாடலாடல் விரும்பாமை, விடியலுக்குமுன் புசியாமை என்னும் ஐந்துஞ் சேரச் சீலம் பத்து வகைப்படு மென்றும், அவை துறவிகட்குரியன வென்றும் புத்தமத நூல் கூறும். 63-71. தலைவன் காக்கும் தன் பொருட்டு ஆகிய அவல வெவ்வினை என்போர் அறியார்-தம்மாலாகிய துன்பந்தரும் கொடிய வினையை இறைவன் காப்பான் என்போர் அறியா தவராவர், அறஞ்செய் காதல் அன்பினின் ஆயினும் - அறம் புரியும் பெருவிருப் புடனாயினும், மறஞ்செய்துளதெனினும் வல்வினை ஒழியாது-பாவம் செய்யப் பட்டுள்ளதெனின் அது நீங்காது, ஆங்கவ்வினை வந்து அணுகும் காலைத் தீங்குறும் உயிரே-அத்தீவினை வந்து சாரும்பொழுது உயிர் துன்பமுறா நிற்கும், செய்வினை மருங்கின் மீண்டுவரு பிறப்பின் மீளினும் மீளும்-செய்வினை வழித்தாய் மீளவரும் பிறவிகளிலும் அத் தீவினைத் தொடக்கு மீண்டெய்தினும் எய்தும். ஆங்கவ் வினைகாண் ஆயிழை கணவனை ஈங்கு வந்து இவ்விடர் செய்து ஒழிந்தது-முற்பிறப்பில் மடையனை வெட்டிய அத் தீவினையே நின் கணவனுக்கு இப்பிறப்பில் வந்து இத் துன்பத்தைச் செய்து போயது ; காக்கும்-தடுப்பான் என்றபடி. தம்பொருட்டாகிய-தம்மா லாகிய என்க. செய்துளதெனின் - செய்யப்பட்டுள்ள தெனின். வல்வினை: சுட்டு. ஒழியாது - தன் பயனை ஊட்டாது கழியாது. உயிர் தீங்குறும் என்க. மீண்டு வரு பிறப்பு-மேல் வரும் பிறப்புக்கள். வினைப்பயன்பல பிறப்புக்களினும் தொடரும் என்பதனை, 3"எழுமை யெழுபிறப்பும்" என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையானறிக. 72-75. இன்னுங் கேளாய் இளங்கொடி நல்லாய்-இளமை பொருந்திய கொடிபோலும் மெல்லியலே இன்னும் யான் கூறுவதனைக் கேள், மன்னவன் மகற்கு வருந்துதுயர் எய்தி - அரச குமாரன் இறந்தமை குறித்து மிக்க துயரமடைந்து, மாதவர் உணர்த்திய வாய்மொழி கேட்டு - முனிவர்கள் அறிவுறுத்திய மெய்ம்மொழியைக் கேட்டு, காவலன் நின்னையும் காவல் செய்து ஆங்கிடும் - அரசன் நின்னைச் சிறையிலிடுவான்; உணர்த்தியவன் ஒருவனாயினும் உரைக்கவந்தோர் பலராதலின் 'மாதவ ருணர்த்திய' என்றார். 76-81. இடுசிறை நீக்கி இராசமாதேவி-அரசன் பெருந்தேவி நின்னைச் சிறையினின்றும் நீக்கி, கூடவைக்கும் கொட்பினள் ஆகி - தன்னுடன் வைத்துக்கொள்ளும் கொள்கையுடைய வளாய், மாதவி மாதவன் மலரடி வணங்கித் தீது கூற - மாதவி அறவணவடிகள் திருவடி மலர்களை வணங்கி நினக்கு நேர்ந்த தீமையை உரைக்க, அவள் தன்னொடும் சேர்ந்து மாதவன் உரைத்த வாய்மொழி கேட்டு-அறவணவடிகள் மாதவியுடன் வந்து கூறிய மெய்யுரைகளைக் கேட்டு, காதலி நின்னையும் காவல் நீக்குவள் - அவளது அன்புக்குரியளாய நின்னைக் காவலினின்று நீக்குவாள் ; ஈடுசிறை யென்பது பாடமாயின் சிறையீடு என மாறுக. கொட்பு- கொள்கை; திரிபுணர்ச்சியுமாம். இராசமாதேவி நீக்கிவைக்குங் கொட்பினளாகி வாய்மொழி கேட்டு நின்னைக் காவலினீக்குவள் என்க. 82-87. அரசாள் செல்வத்து ஆபுத்திரன்பால் புரையோர்ப் பேணிப் போகலும் போகுவை-அரசாளுஞ் செல்வத்தினை யுடைய ஆபுத்திரனாகிய புண்ணியராசனிடம் அறவணவடி களை வணங்கிச் செல்லுதலுஞ் செய்வை, போனால் அவனொடும் பொருளுரை பொருந்தி - அங்ஙனம் சென்றால் ஆபுத்திரனொடும் அறவுரைகளைக் கேட்டு, மாநீர் வங்கத்து அவனொடும்-பெரிய கடலின்கண் கலத்திற் செல்லும் ஆபுத்திரனோடு, எழுந்து-விசும்பின் எழுந்து, மாயமில் செய்தி மணி பல்லவம் என்னும் தீவகத்து இன்னும் சேறலும் உண்டால்- வஞ்சமில்லாத செயலினையுடைய மணிபல்லவம் என்னும் தீவின் கண் இன்னும் ஒரு முறை அடைதலும் உண்டு; ஈண்டு ஆபுத்திரன் என்றது நாகபுரத்தரசனாகிய புண்ணிய ராசனை: இது, 1"நாக புரமிது நன்னக ராள்வோன், பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்" என மேல் வருவதனால் அறியப் படும். பொருளுரை - நாகபுரத்தின் அயலதாகிய சோலையிலுள்ள தருமசாவகன் ஆபுத்திரனுக்குக் கூறும் தத்துவ மொழிகள், மணிமேகலை நாகபுரத்திலிருந்து வான்வழியே போந்து மணிபல்லவத்தை அடைந்தாளென்றும், அரசன் நாவாயிலேறி அத்தீவினை அடைந்தானென்றும் மேல் 25 ஆம் காதையிற் கூறப்படுதலின், ஈண்டு எழுந்து அவனொடும் சேறலுமுண்டு எனக் கூட்டியுரைக்க ; அன்றி, ஒடுவை வேறு வினையுடனிகழ்வாக்கி, அவன் வங்கத்திற் புறப்படத் தான் வானிலே யெழுந்து என்றுரைத்தலுமாம். 88-91. தீவதிலகையின் தன் திறம் கேட்டுச் சாவகமன்னன் தன் நாடு அடைந்த பின் - சாவக நாட்டரசனாகிய ஆபுத்திரன் தீவ திலகையினால் தன்னுடைய வரலாற்றைக்கேட்டுத் தனது நாட்டை அடைந்த பின், ஆங்கத் தீவம் விட்டு அருந்தவன் வடிவாய்ப் பூங்கொடி வஞ்சிமாநகர் புகுவை - பூங்கொடி போலும் நீ அரிய தவமுடைய ஆடவன் வடிவத்துடன் அத்தீவை விட்டு நீங்கி வஞ்சிமா நகரம் சேர்வை ; 92-93. ஆங்கந் நகரத்து அறிபொருள் வினாவும் ஓங்கிய கேள்வி உயர்ந்தோர் பலரால் - அந் நகரத்திலே ஏனோர் அறிந்த மெய்ப் பொருளை வினவுகின்ற சிறந்த கேள்வி மேம்பட்டோர் பலராவர் ; 94-102. இறைவன் எங்கோன் எவ்வுயிர் அனைத்தும் முறைமையில் படைத்த முதல்வன் என்போர்களும்-எத்தகைய உயிர்த் தொகுதிகள் அனைத்தையும் முறைமையாகப் படைத்த முதல்வனே இறைவனாகிய எம் தலைவன் என்று கூறு வோர்களும், தன் உரு இல்லோன் பிற உரு படைப்போன் அன்னோன் இறைவன் ஆகும் என்போர்களும் - தனக்கென உருவமில்லாதோனும் பிற வுருக்களைத் தோற்றுவிப்போனு மாகிய அவனே முதல்வனாவான் என்றுரைப்போர்களும் துன்ப நோன்பு இத் தொடர்ப்பாடு அறுத்தாங்கு இன்பவுலகு உச்சி இருத்தும் என்போர்களும் - துன்பமாகிய கன்மங்கள் இந்தத் தொடக்கினை அறுத்து இன்பவுலகின் உச்சியில் இருத்தும் என மொழிவோர்களும், பூத விகாரப் புணர்ப்பு என்போர்களும் - பூதங்களின் திரிபாலாயது என்று கூறுவோர் களும் ஆகிய, பல்வேறு சமயப் படிற்றுரை எல்லாம் அல்லியங்கோதை கேட்குறும் அந்நாள் - பலவேறு சமயத்தினரின் பொய்யுரைகளை எல்லாம் நறுமலர்க்கோதை கேட்கலுறும் அந்நாளில் ; துன்ப நோன்பு - துன்ப முழந்து செய்யும் கன்மம்; நோன்பு - விரதமுமாம்; 1"விரத மேபர மாகவே தியரும், சரத மாகவே சாத்திரங் காட்டினர்" என்பது காண்க. அல்லியங்கோதை: முன்னிலையிற் படர்க்கை; நீ கேட்குறும் என்க. உயிரனைத்தும் படைத்த முதல்வன் இறைவன் என்போர் சைவவாதி, வைணவவாதி, பிரமவாதி என்னும் மூவருமாவர். தன்னுருவில்லோன் இறைவனாகு மென்போர் அத்துவிதவாதிகள் என்பர் ; சைவவாதிகட்கும் பொருந்தும். நோன்பு இன்ப வுலகுச்சி இருத்து மென்போர் மீமாஞ்சகர். பூதவிகாரப் புணர்ப்பு என்போர் பூதவாதிகள். இவற்றிற் சிலவற்றின் இலக்கணங்களும், வேறு சில மதங்களின் இலக்கணங்களும் சமயக்கணக்கர்தந்திறங்கேட்ட காதையால் அறியப்படும். 103-108. இறைவனும் இல்லை இறந்தோர் பிறவார் அறனோடு என்னை என்று அறைந்தோன் தன்னை-கடவுளும் இல்லை இறந்தோர் மீண்டும் பிறவார் அறத்தால் வரும்பயன் யாது என மொழிந்தோனை, பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த-மறுபிறப்பு உண்டென்பதனையும் அறநெறியையும் தவப்பேற்றான் அறிந்த, நறுமலர்க் கோதை எள்ளினை நகுதி- நறும்பூங்கோதையாகிய நீ இகழ்ந்து சிரிப்பாய், எள்ளினை போலும் இவ்வுரை கேட்டிங்கு ஒள்ளியது உரை என உன் பிறப்பு உணர்த்துவை - அப்பொழுது அவன் என் இம் மொழிகளைக் கேட்டு இகழ்ந்தனை போலும் ஆயின் சிறந்த பொருளைக் கூறுவாய் என்று அவன் கேட்ப நின் பிறப்பை அவனுக்கு அறிவுறுத்துவை ; அறைந்தோன் - பூதவாதி; உலோகாயதனுக்கும் பொருந்தும். அறவி-அறநெறி; அறத்தின் பயனுமாம். பெற்றியின் - முறைமையால் என்றுமாம். 109-112. ஆங்கு நின் கொணர்ந்த அருந் தெய்வம் மயக்க-மணி பல்லவத்திற்கு நின்னைக் கொண்டு சென்ற மணிமேகலா தெய்வம் மயக்குறுத்த, காம்புஅன தோளி கனா மயக் குற்றனை என்று அவன் உரைக்கும் - மூங்கிலனைய தோள் களையுடையாய் நீ கனவாகிய மயக்கத்தினை யடைந்தாய் என்று அவன்கூற, இளங்கொடி நல்லாய் அன்று என்று அவன் முன் அயர்ந்து ஒழிவாயலை - பூங்கொடி நல்லோய் அன்று என அவன் முன்னே மறந்து ஒழியாய்; கனாமயக்கு - கனவுபோலும் மயக்கென்றுமாம். உன் பிறப்பை நீ உணர்ந்ததாகக் கூறியது மயக்குற்றதனால் என்றுரைப்பான் என்க. தெய்வம் மயக்க மயங்கியதனாலோ கனவில் மயங்கியதனாலோ ஆம் என்றுரைப்பான் என விரித்துரைத்தலுமாம்; என்ன? 1"தெய்வ மயக்கினுங் கனாவுறு திறத்தினும், மைய லுறுவார் மனம்வேறாம்வகை, ஐயமன்றி யில்லை யென்றலும்" என மேலுரைத்தலானென்க. மணிமேகலை தான் பிறப்புணர்ந்த வரலாற்றை முன்னர்க் கூறுதலின் தெய்வம் அவளை எடுத்தேகி யதனை அறிந்து, ‘ஆங்கு நின் கொணர்ந்த அருந்தெய்வம் மயக்க' என்ற பூதவாதி உரைப்பானாவன் என்க. அவன் முன் அயர்ந் தொழியாது அன்றென அவன் கூற்றை மறுப்பாய் என்க. 113-114. தீவினை உறுதலும் செத்தோர் பிறத்தலும் வாயே என்று மயக்கு ஒழி மடவாய் - இளையோய் தீவினை செய்யின் அதனாலே துன்புறுதலும் இறந்தோர் மீண்டும் பிறத்தலும் உண்மையே என்று மயக்கத்தினை விடுவாயாக; வாய் - உண்மை. இதனை முன்னர்க்கூட்டி, அயர்ந்தொழியாயாய் வாயே யென்று கூறி அவன் மயக்கத்தை யொழிப்பாய் என்றுரைத் தலுமாம். 115-118. வழுவறு மரனும் மண்ணும் கல்லும்-குற்றமற்ற மரம் மண் கல் என்பனவும், எழுதிய பாவையும் - எழுதப்பட்ட பாவையும், பேசா என்பது - பேசமாட்டா என்பதனை, அறிதலும் அறிதியோ அறியாய் கொல்லோ-அறிதலும் செய்தியோ அன்றி அறியாயோ, அறியாய் ஆயின் ஆங்கது கேளாய்-அறிகின்றிலையானால் அதனைக் கூறுவேன் கேட்பாயாக ; வழுவறுதலாவது இயற்கையினின்று மாறாமை. கந்திடத் துள்ள பாவையாகிய தான் பேசுதல் கேட்டலின் மரம் மண் கல் பாவையென்பன பேசுமென்னுங் கருத்தினளாதலுங் கூடுமெனக் கொண்டு, அவை பேசுவன வல்லவெனத் தெய்வம் தெருட்டலுற்றதென்க. 119-128. முடித்துவரு சிறப்பின் மூதூர் யாங்கணும்-முடிய வளர்ந்த சிறப்பினையுடைய பழைய நகரெங்கும், கொடித் தேர் வீதியும் தேவர் கோட்டமும்-கொடி யணிந்த தேரோடும் வீதிகளிலும் கடவுளர் கோயில்களிலும், முதுமர இடங்களும் முதுநீர்த்துறைகளும் - பழைய மரங்கள் நிற்கின்ற இடங் களிலும் பழைய நீர்த் துறைகளிலும், பொதியிலும் மன்றமும் பொருந்துபு நாடி-அம்பலங்களிலும் ஊர் நடுவாகிய மரத்தடி களிலும் பொருந்துமாறு ஆராய்ந்து, காப்புடை மாநகர்க் காவலும் கண்ணி - காவலுள்ள பெரிய நகரத்தின் காவலையும் கருதி, யாப்புடைத்தாக அறிந்தோர் வலித்து - அறிஞர்கள் உறுதியுடையதாக எண்ணி, மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினும்-, கண்ணிய தெய்வதம் காட்டுநர் வகுக்க - கருதிய தெய்வத்தை நிறுத்துவோர் அமைக்க, ஆங்கத் தெய்வதம் அவ்விடம் நீங்கா - அங்ஙனம் வகுக்கப்பட்ட தெய்வங்கள் அவ்விடத்தை விட்டு நீங்காவாய், ஊன் கணினார்கட்கு உற்றதை உரைக்கும்-ஊன்கணுடைய மானிடர்க்கு நிகழ்ந்தனை உரைக்கும்; முடித்து - முற்றுப்பெற்று; முடியவெனத் திரிக்க; காப்புடை - மதில் முதலியவற்றின் காவலையுடைய. நகர்க்காவல் - நகரில் வாழ்வாரைப் பாதுகாத்தல். அறிந்தோராகிய காட்டுநர் வலித்து வகுக்கவென்க. காட்டுநர் - நிறுவுவோர் ; பிரதிட்டை செய்வோர். நீங்கா- நீங்காவாய்: வினையெச்சமுற்று. ஊன்கணினார் என்பதனால் ஞானக் கண்ணில்லாதவ ரென்பது அருத்தாபத்தியாற் பெற்றாம். உற்றது என்றதனால் இனம்பற்றி உறுவதுங்கொள்க. மக்கட்கு முன் நிகழ்ந்தவற்றையும் பின் நிகழ்வனவற்றையும் உரைக்கு மென்க. எனவே ஆண்டுறையும் தெய்வம் பேசுதலல்லது மரம் முதலியன பேசா வென்பது கடைப்பிடிக்க வென்றவாறாம். 129-142. என் திறம் கேட்டியோ இளங்கொடி நல்லாய் - இளங்கொடி போல்வாய் அங்ஙனமாய எனது வரலாற்றைக் கேட்பாயாக, மன்பெருந் தெய்வகணங்களின் உள்ளேன் துவதிகன் என்பேன் - மிகப்பெரிய தெய்வகணங்களில் உள்ளேனாகிய யான் துவதிகன் என்னும் பெயருடையேன், தொன்றுமுதிர் கந்தில் மயன் எனக்கு ஒப்பா வகுத்த பாவையின் நீங்கேன் - பழைமை முதிர்ந்த தூணில் மயன் எனக்கு ஒப்பாக அமைத்த பாவையைவிட்டு யான் ஒரு பொழுதும் நீங்கேன், என் நிலையது கேளாய் - எனது நிலைமையைக் கேட்பாயாக, மாந்தர் அறிவது வானவர் அறியார் -மக்களறியு மத்தனை விண்ணவரும் அறியமாட்டார், ஓவியச் சேனன் என் உறுதுணைத் தோழன் ஆவதை - சித்திரசேனன் என்பான் எனக்கு மிக்க - துணை யாகிய தோழனாவதை, இந் நகர்க்கு ஆர் உரைத்தனரோ -இந் நகரத்திலுள்ளோருக்கு யார் கூறினரோ, அவனுடன் யான் சென்று ஆடிடம் எல்லாம் - அவனோடு யான் சென்று விளையாடுமிடங்களிலெல்லாம், உடன் உறைந்தார்போல் ஒழியாது எழுதி - உடன் உறைந்து கண்டவர்போல் விடாமல் எழுதி, பூவும் புகையும் பொருந்துபு புணர்த்து - பூவும் நறும் புகையும் பொருந்துமாறு சேர்த்து, நா நனி வருந்த என் நலம் பாராட்டலின் - நா மிகவும் வருந்துமாறு என் சிறப்பினைப் பலவாறு பாராட்டுதலினால், மணிமேகலை யான் வரு பொருள் எல்லாம் துணிவுடன் உரைத்தேன் - மணிமேகலை! யான் வரும்பொருளனைத்தையும் துணிவுடன் கூறி வந்தேன், என் சொல் தேறு என - என் மொழியைத் தெளிவாயாக என்று உரைப்ப ; தானும் சித்திரசேனனும் ஆடிடமெல்லாம் அறிந்தெழுதினமை கண்ட வியப்பினால், ‘மாந்த ரறிவது வானவரறியார்' என்றும், ‘ஆருரைத்தனரோ' என்றும், ‘உடனுறைந்தோர் போல்' என்றும் தெய்வங் கூறிற்று. வானவரும் என்னும் சிறப்பும்மை தொக்கது. பூவினைத் தூவியும் புகையினை யெடுத்தும் என்க. பொருந்துபு: பொருந்த வெனத் திரிக்க. வருபொருளெல்லாம் - மேல் நிகழுங் காரியமெல்லாம். என் நலம் பாராட்டலின் உரைத்தேன் என்றமையால், மக்கள் கொண்டாடு மளவிற்குத் தெய்வத்தின் அருள் வெளிப்படும் என்பது பெற்றாம். 143-144. தேறேன் அல்லேன் தெய்வக்கிளவிகள் - தெய்வ மொழி களை யான் தெளியேனல்லேன், ஈறு கடைபோக எனக்கு அருள் என்றலும் - எனது முடிபு இறுதியாக யாவற்றையும் எனக்கு உரைத்தருள்வாய் என மணிமேகலை கூறலும் ; தேறேன் அல்லேன் - தெளிவேன் என்றபடி. ஈறு - மரணம்; வீடு பேறுமாம். 145-154. துவதிகன் உரைக்கும்-கந்திற்பாவை கூறும், சொல்லலும் சொல்லுவேன் - சொல்லுதலுஞ் செய்வேன், வருவது கேளாய் மடக்கொடி நல்லாய் - இளங்கொடி நல்லாய் மேல் நிகழ்வதைக் கேட்பாயாக, மன்னுயிர் நீங்க மழைவளம் கரந்து - மிகுதியான உயிர்கள் நீங்குமாறு மழைவளம் மறைந்து, பொன் எயில் காஞ்சி நகர் கவின் அழிய - பொன்மதில் சூழ்ந்த காஞ்சிநகர் அழகுகெட, ஆங்கது கேட்டே ஆருயிர் மருந்தாய்ஈங்கு இம்முதியாள் இடவயின் வைத்த - அதனைக் கேள்வியுற்று ஈண்டுச் சம்பாபதி கோயிலுள் வைத்திருக்கின்ற அரிய உயிர் மருந்தாய, தெய்வப் பாத்திரம்செவ் விதின் வாங்கி-கடவுட் கடிஞையைச் செவ்வனே கையிற்கொண்டு, தையல் நிற் பயந்தோர் தம்மொடு போகி அறவணன் தானும் ஆங்குளன் ஆதலின் - நங்காய் நின் அன்னையருடன் சென்று அறவணவடி களும் அந் நகரத்துள்ளமையான், செறிதொடி காஞ்சிமாநகர் சேர்குவை - நீயும் காஞ்சிமாநகரத்தை அடைகுவாய் ; ஆங்கது கேட்டும், அறவணன் ஆங்குளனாதலானும் காஞ்சிமாநகர் சேர்குவை யென்க. 155-158. அறவணன் அருளால் ஆய்தொடி அவ்'d2வூர்ப் பிறவணம் ஒழிந்து நின் பெற்றியை ஆகி - அறவணவடிகளுடைய அருளினால் அவ் 'd2வூரில் நீ நினது ஆண்வேடத்தை நீங்கி நின் இயல்பினையுடையையாய், வறன் ஓடு உலகின் மழைவளம் தரூஉம் - வற்கடமாகிய காலம் பரந்த உலகின்கண் மழைவளத்தை அளிக்கும், அறன் ஓடு ஏந்தி ஆயிருர் ஓம்புவை - அறவோடாகிய அமுத சுரபியை ஏந்தி அரிய உயிர்களைப் பாதுகாப்பாய் ; பிறவணம் - வேற்றுமதப் பற்றுமாம் வறன் ஓடு : ஓடுதல்- பரத்தல். மழைவளம் - மழையாலுண்டாகும் வளம் ; சோறு. 159-60. ஆய்தொடிக்கு அவ்'d2வூர் அறனொடு தோன்றும் -நினக்கு அவ் 'd2வூரின்கன் அறத்தொடு உண்டாகும், ஏது நிகழ்ச்சி யாவும் பலவுள - ஏது நிகழ்ச்சிகள் மிகப் பல உள்ளன; 161-72. பிறவறம் உரைத்தோர் பெற்றிமை எல்லாம் - வஞ்சி நகரில் பிற சமய உண்மைகளைக் கூறினோர் கொள்கைகள் அனைத்தையும், அறவணன் தனக்கு நீ உரைத்த அந்நாள் - அறவணவடிகளுக்கு நீ கூறிய அந்நாளில், தவமும் தருமமும் சார்பில் தோற்றமும் பவம்அறு மார்க்கமும் பான்மையின் உரைத்து - தவமும் தன்மமும் சார்பினால் தோன்றும் நிதானம் பன்னிரண்டும் பிறவியறும் நெறியும் ஆகியவற்றை முறையால் உரைத்து - மற இருள் இரிய மன்னுயிர் ஏமுற - பாவமாகிய இருளானது ஓடவும் நிலைபெற்ற உயிர்கள் இன்பமுறவும், அறவெயில் விரித்தாங்கு அளப்பில் இருத்தி யோடு - அறமாகிய ஒளியைப் பரப்பி அளவற்ற சித்தி களுடன், புத்த ஞாயிறு தோன்றும்காறும் - புத்தனாகிய ஞாயிறு உதிக்குமளவும், செத்தும் பிறந்தும் செம்பொருள் காவா- இறந்தும் பிறந்தும் அறத்தினைக் காத்து, இத் தலம் நீங்கேன் இளங்கொடி யானும் - இந் நகரத்தை நீங்கேன் யான் இளங்கொடியே, தாயரும் நீயும் தவறின்றாக - நீயும் நின் அன்னையரும் தவறின்றி வாழ்வீராக வாய்வதாக நின் மனப்பாட்டு அறம் என - நின் மனத்தின்கட் டோன்றிய அறம் வாய்ப்புடைத்தாக என்று, ஆங்கவன் உரைத்தலும் - அறவண முனிவன் கூறுதலும் ; சார்பிற்றோற்றம்-பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன்என்னும் பன்னிரண்டுமாம்; இவை பேதைமை சார்பாகச் செய்கையும் செய்கை சார்பாக உணர்வும் இங்ஙனம் ஒன்றை யொன்று சார்ந்து தோன்றுதலின் ‘சார்பிற் றோற்றம்' எனப்பட்டன; இவற்றினியல்பு இந் நூலின் இறுதிக் காதையால் விளக்கமாம். இருத்தி-சித்தி; அணிமா முதலியன. தவம் முதலிய வற்றை உரைத்து, புத்தஞாயிறு தோன்றுங்காறும் யானும் இத்தலம் நீங்கேன், தாயரும் நீயும் தவறின்றாக, அறம் வாய்வதாக என அவன் உரைத்தலுமென்க. 172-179. அவன் மொழி பிழையாய் -அவன் கூறிய சொல்லைத் தப்பாயாய், பாங்கியல் நல்லறம் பலவும் செய்தபின் - இயற்று தற்குரிய நல்லறங்கள் பலவற்றையும் செய்த பின்னர், கச்சி முற்றத்து நின் உயிர் கடைகொள-காஞ்சிமாநகரின்கண் நினது உயிரானது முடிவெய்த, உத்தர மகதத்து உறுபிறப்பு எல்லாம் - வட மகத நாட்டில் நீ அடையும் பிறப்புக் களனைத்தும், ஆண்பிறப்பாகி அருளறம் ஒழியாய்- ஆண் பிறப்பாகத் தோன்றி அருளறம் நீங்காயாய், மாண்பொடு தோன்றி மயக்கம் களைந்து - மாட்சியுடன் தோன்றி மக்களின் மயக்கங்களை நீக்கி, பிறர்க்கு அறம் அருளும் பெரியோன் தனக்கு - பிறருக்கு அறங்கூறும் புத்தனுக்கு, தலைச் சாவகனாய்ச் சார்பு அறுத்து உய்தி-முதன் மாணாக்கனாய்ப் பற்றுக்களை யறுத்து நிருவாணமடைவாய்; ‘உத்தர மகதத் துறுபிறப் பெல்லாம்' என்றமையால் ஆண்டுப் பல பிறப்புண்டாமென்பது உடம்பொடு புணர்த்தலாற் பெற்றாம். ஆகி ஒழியாய் தோன்றிக் களைந்து சாவகனாய் அறுத்து உய்தி என்க; தோன்றிக் களைந்து அருளும் பெரியோன் எனலுமாம். சாவகன் ஸ்ரீவாகன் என்பதன் சிதைவு; கேட்பவன் என்றபடி. 180-190. இன்னுங் கேட்டியோ நன்னுதல் மடந்தை-நல்ல நெற்றியை யுடைய மடந்தையே இன்னும் கேட்பாயாக. ஊங்கண் ஓங்கிய உரவோன்தன்னை - நின் குலத்தில் முன்னர் அறத்தான் மேம்பாடுற்றிருந்த அறிவுடையோன் ஒருவனை, வாங்குதிரை எடுத்த மணிமேகலா தெய்வம்-கடலின் கணிருந்து எடுத்துக் காப்பாற்றிய மணிமேகலா தெய்வம், சாதுசக்கரற்கு ஆரமுது ஈத்தோய் ஈது நின் பிறப்பு என்பது தெளிந்தே - சாதுசக்கரன் என்னும் முனிவனுக்கு உண வளித்த நினது பிறப்பு இஃது என்பதை உணர்ந்தே, உவவன மருங்கில் உன்பால் தோன்றி - உவவனத்தில் நின்னிடம் தோன்றி, மணிபல்லவத்திடைக் கொணர்ந்தது கேள் என - மணிபல்லவமென்னுந் தீவின்கன் கொண்டுசேர்த்தது கேள் என்று, துவதிகன் உரைத்தலும் - துவதிகன் கூறுதலும், துயர்க்கடல் நீங்கி - துன்பக்கடலினின்றும் நீங்கி, அவதி அறிந்த அணியிழை நல்லாள் - எல்லையை அறிந்த மெல்லிய லாகிய மணிமேகலை, வலையொழி மஞ்ஞையின் மனமயக்கு ஒழிதலும் - வழையினின்றும் நீங்கிய மயிலைப்போல மனக் கவலை நீங்குதலும், உலகுதுயில் எழுப்பினன் மலர் கதிரோன்என் - உலகத்தை உறக்கத்தினின்றும் எழுப்பினன் பரந்த கதிர்களையுடைய பரிதிவானவன் என்க. ஊங்கண்-முன்பு; 1''தூங்கெயி லெறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின்'' என்பது காண்க. திரை-கடல்: ஆகுபெயர். முன்னோனொருவனை மணிமேகலா தெய்வம் கடலினின் றெடுத்ததைச் சிலப்பதிகாரத்து அடைக்கலக் காதையில் 2''இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல், உடைகலப் பட்ட வெங்கோன் முன்னாள், புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்,...... விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த, எங்குல தெய்வம்'' என வருவதனாலறிக. சாதுசக்கரனுக்கு அமுது ஈந்ததனை இந் நூலின் மந்திரங் கொடுத்த காதையில் 3''சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்,......அந்நாளவனுண்டருளிய அவ்வறம்'' எனப் போந்தமையா லறிக. கேள் எனப் பின் வந்தது அசை. அவதி - தான் வீடுபெறும் எல்லை. துயிலெழுப்பினன் என்பது பரியாயம்; உதித்தான் என்றபடி. குழலி எழுந்து கேட்டு எழுந்து நீங்கி வெய்துயிர்த்துப் புலம்பி அழுதேங்கி அயாவுயிர்த் தெழுதலும், இருந்தெய்வம் உரைத்தலும், பூங்கொடி பொருந்தி, ‘நின் பேரருள் பெறுவேன்' என, தெய்வங் கூறும் ; அங்ஙனங் கூறுந் தெய்வம். ‘என்சொல் தேறு' என, மணிமேகலை, ‘எனக்கு அருள்' என்றலும் துவதிகன் உரைக்கும்; உரைப்பவன் உரைத்தலும், நல்லாள் நீங்கி மயக்கொழிதலும், கதிரோன் உலகு துயிலெழுப்பினன் என, வினை முடிவு செய்க. கந்திற்பாவை வருவதுரைத்த காதை முற்றிற்று. 22. சிறைசெய் காதை கதிரவன் உதித்தவுடன் கந்திற் பாவையையும் சம்பாபதியையும் வழிபட்டவர்கள் அங்கே உதயகுமரனுக்கு நேர்ந்ததனைச் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள முனிவர்களுக்குக் கூறினர். அம்முனிவர்கள் 'நீ இதனை அறிந்த துண்டோ?' என்று மணிமேகலையைக் கேட்ப, அவள் நிகழ்ந்தவற்றை உரைக்க, அன்னோர் மன்னவன் மகன் உடம்பையும் மணிமேகலையையும் வேறிடத்தில் ஒளித்துவைத்து விட்டு, அரசன் கோயிலை யடைந்து தம்முடைய வரவை வாயில் காப்போரால் அறிவித்து உள்ளேசென்று அரசனைக்கண்டு வாழ்த்தினர். அவர்களுள் ஒரு முனிவர், ‘அரசே! இன்று மட்டு மன்று; இப்பதியிலே காமமாகிய கள்ளினைப் பருகிப் பத்தினிப் பெண்டிரை நெருங்கியும், தவமகளிரை விரும்பியும் ஒறுக்கப் பட்டிறந்தோர் முன்னாளிலும் பலருளர்' என்று தொடங்கி, பண்டு காந்தன் என்னும் சோழமன்னனுக்குக் கணிகை வயிற்றுதித்த ககந்தன் என்பவன், பரசுராமனுக்கு அஞ்சிப் புகார் நகரை விடுத்துச் செல்லலுற்ற தந்தையின் கட்டளையால் அப்பதியைப் பாதுகாத்து வரும் நாளில், ககந்தன் மக்களுள் இளையவன் மருதி என்னும் பார்ப்பனியைக் கண்டு காமுற்றுத் தாதையின் வாளால் தடியப் பட்ட வரலாற்றையும், அந்நகரிலிருந்த விசாகை யென்னும் கற்பிற் சிறந்த வணிகமாதை முன்பு மருதியால் மடிந்தவனுக்கு மூத்தோன் கண்டு காமுற்றுத் தந்தையால் வெட்டுண்டிறந்த வரலாற்றையும் உரைத்தனர். கேட்ட அரசன் 'இன்று மட்டுமன்று என்று தொடங்கிப் பலவற்றையும் கூறினீர் ; முன்பு நிகழ்ந்ததாகக் கூறிய அத் தீய வொழுக்கம் இந்நாளிலும் உளதோ ? இயம்புமின்' என்று கேட்ப, அம்முனிவர்களுள் ஒருவர், ‘தன் கணவனாகிய கோவலன் கொலையுண்டது பொறாமல் மாதவி உலக வாழ்வை வெறுத்து முனிவர்களுடைய தவப்பள்ளியை அடைந்தனள்; அவள் பெற்ற மணிமேகலை யென்பவள், இளம் பருவத்தே தானே தவஞ் செய்யத் துணிந்து இல்லந்தோறுஞ் சென்று ஐயமேற்கொண்டு ஊரம்பலமடைந்தாள்; அவள் அவ்வியல்பினளாகவும், உதயகுமரன் அவளை விழைந்து காமம் காழ்கொள நிழல்போல் விட்டுநீங்காது நள்ளிருளில் அவ் வம்பலத்தையடைந்தான்; அது தெரிந்த மணிமேகலை அவன் தன்னை நலியாதிருக்க வேண்டிக் காயசண்டிகை வடிவம் பூண்டனள்; காயசண்டிகையை அழைத்துச் செல்லுதற்கு வந்து அங்கு முன்னமிருந்த அவள் கணவனாகிய காஞ்சனன் என்னும் விஞ்சையன் கண்டு, அவள் மணிமேகலை யென்பதை அறியாமல், அவளைத் தன் மனைவியாகிய காயசண்டிகை யென்றும், அங்கு வந்த உதயகுமரனைத் தன் மனைவியை விரும்பி வந்தவனென்றும் தானே அறுதியிட்டுக்கொண்டு முறுகிய சினத்துடன் உடனே. அவனை வாளால் எறிந்து வீழ்த்தினன்' என்று கூறினர். அதுகேட்ட அரசன் தன் மகன் மடிந்ததற்குச் சிறிதும் வருந்துதலின்றிச் சோழிக வேனாதியை நோக்கி, 'உதயகுமரனுக்கு யான் செய்யவேண்டிய தண்டனையைத் தான் செய்தமையால் விஞ்சையன் தகவில னாவன். ‘ மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவ லின்றெனின் இன்றால் ;’ ‘தன்மகனைப்புவியிலே கிடத்தி அவன்மீது தேர்க்காலைச் செலுத்தி முறை செய்த மன்னர்பிரான் வழியில் ஒரு தீவினையாளன் பிறந்தான் என்னுஞ் சொல் ஏனை யரசர்களின் செவியில் உறுவதற்கு முன்னம் அவனைப் புறங்கா டடைவித்துக் கணிகைமகளாகிய மணிமேகலையையும் சிறைப்படுத்துக' என்றனன் ; சோழிக வேனாதி அவ்வாறு செய்தான். இதன்கண் மருதி வரலாறும் விசாகையின் வரலாறும் மகளிர்க்குச் சிறந்த ஒழுக்கங்களை அறிவுறுத்துவன ; பின்னது கற்பதற்கு மிக்க சுவை பயப்பதுமாகும் மருதியென்பாளுக்குச் சதுக்கப் பூதம் கூறும் வாயிலாக, 'தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப், பொய்யில் புலவன் பொருளூரை தேறாய்' எனத் திருவள்ளுவரும், திருக்குறளும் பாராட்டப்படுதல் அறிந்து மகிழற்குரியது.) கடவுள் மண்டிலங் காரிருள் சீப்ப நெடுநிலைக் கந்தில் நின்ற பாவையொடு முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர் உதய குமரற் குற்றதை யுரைப்பச் 5 சாதுயர் கேட்டுச் சக்கர வாளத்து மாதவ ரெல்லாம் மணிமே கலைதனை இளங்கொடி யறிவது முண்டோ விதுவெனத் துளங்கா தாங்கவ ளுற்றதை யுரைத்தலும் ஆங்கவள் தன்னை யாருயிர் நீங்கிய 10 வேந்தன் சிறுவனொடு வேறிடத் தொளித்து மாபெருங் கோயில் வாயிலுக் கிசைத்துக் கோயில் மன்னனைக் குறுகினர் சென்றீங் குயர்ந்தோங் குச்சி உவாமதி போல நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிகற்செய 15 வேலுங் கோலும் அருட்கண் விழிக்க தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி நினக்கென வரைந்த ஆண்டுக ளெல்லாம் மனக்கினி தாக வாழிய வேந்தே! இன்றே யல்ல இப்பதி மருங்கில். 20 கன்றிய காமக் கள்ளாட் டயர்ந்து பத்தினிப் பெண்டிர் பாற்சென் றணுகியும் நற்றவப் பெண்டிர் பின்னுளம் போக்கியும் தீவினை யுருப்ப உயிரீறு செய்தோர் பாராள் வேந்தே பண்டும் பலரால் 25 மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் தோன்றல் தகா 1தொழி நீயெனக் கன்னி யேவலின் காந்த மன்னவன் இந்நகர் காப்போர் யாரென நினைஇ நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் 30 காவற் கணிகை தனக்காங் காதலன் இகழ்ந்தோர்க் காயினும் எஞ்சுத லில்லோன் ககந்த னாமெனக் காதலிற் கூஉய் அரசா ளுரிமை நின்பா லின்மையின் பரசு ராமனின் பால்வந் தணுகான் 35 அமர முனிவ னகத்தியின் றனாது துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும் ககந்தன் காத்தல் காகந்தி யென்றே இயைந்த நாமம் இப்பதிக் கிட்டீங் குள்வரிக் கொண்டவ் வுரவோன் பெயர்நாள் 40 தெள்ளுநீர்க் காவிரி யாடினள் வரூஉம் பார்ப்பனி மருதியைப் பாங்கோ ரின்மையின் யாப்பறை யென்றே யெண்ணின னாகிக் காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் நீவா என்ன நேரிழை கலங்கி 45 மண்திணி ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டி ராயின் பிறர்நெஞ்சு புகாஅர் புக்கேன் பிறனுளம் புரிநூன் மார்பன் முத்தீப் பேணும் முறையெனக் கில்லென மாதுய ரெவ்வமொடு மனையகம் புகாஅள் 50 பூத சதுக்கம் புக்கனள் மயங்கிக் கொண்டோற் பிழைத்த குற்றந் தானிலேன் கண்டோன் நெஞ்சில் கரப்பெளி தாயினேன் வான்தரு கற்பின் மனையறம் பட்டேன் யான்செய் குற்றம் யானறி கில்லேன் 55 பொய்யினை கொல்லோ பூத சதுக்கத்துத் தெய்வம் நீயெனச் சேயிழை யரற்றலும் மாபெரும் பூதந் தோன்றி மடக்கொடி நீகே ளென்றே நேரிழைக் குரைக்கும் தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் 60 பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றஅப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் கடவுள் பேணல் கடவியை யாகலின் 65 மடவரல் ஏவ மழையும் பெய்யாது நிறையுடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியு மில்லை ஆங்கவை யொழிகுவை யாயி னாயிழை ஓங்கிரு வானத்து மழையுநின் மொழியது 70 பெட்டாங் கொழுகும் பெண்டிரைப் போலக் கட்டா துன்னையென் கடுந்தொழிற் பாசம் மன்முறை யெழுநாள் வைத்தவன் வழூஉம் பின்முறை யல்ல தென்முறை யில்லை ஈங்கெழு நாளில் இளங்கொடி நின்பால் 75 வாங்கா நெஞ்சின் மயரியை வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலு முண்டென இகந்த பூதம் எடுத்துரை செய்ததப் பூத முரைத்த நாளா லாங்கவன் தாதை வாளால் தடியவும் பட்டனன் 80 இன்னுங் கேளாய் இருங்கட லுடுத்த மண்ணாள் செல்வத்து மன்னவ ரேறே தரும தத்தனுந் தன்மா மன்மகள் பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித் தெய்வங் காட்டுந் திப்பிய ஓவியக் 85 கைவினை கடந்த கண்கவர் வனப்பினர் மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக் 1கொத்தன ளென்றே யூர்முழு தலரெழப் புனையா வோவியம் புறம்போந் தென்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை 90 உலக அறவியி னூடுசென் றேறி இலகொளிக் கந்தின் எழுதியபாவாய் உலகர் பெரும்பழி யொழிப்பாய் நீயென மாநக ருள்ளீர் மழைதரு மிவளென நாவுடைப் பாவை நங்கையை யெடுத்தலும் 95 தெய்வங் காட்டித் தெளித்திலே னாயின் மைய லூரோ மனமா சொழியாது மைத்துனன் மனையாள் மறுபிறப் பாகுவேன் இப்பிறப் பிவனொடுங் கூடே னென்றே நற்றாய் தனக்கு நற்றிறஞ் சாற்றி 100 மற்றவள் கன்னி மாடத் தடைந்தபின் தரும தத்தனும் தந்தையுந் தாயரும் பெருநகர் தன்னைப் பிறகிட் டேகித் தாழ்தரு துன்பந் தலையெடுத் தாயென நாவுடைப் பாவையை நலம்பல ஏத்தி 105 மிக்கோ ருறையும் விழுப்பெருஞ் செல்வத்துத் தக்கண மதுரை தான்சென் றடைந்தபின் தரும தத்தனுந் தன்மா மன்மகள் விரிதரு பூங்குழல் விசாகையை யல்லது பெண்டிரைப் பேணேன் இப்பிறப் பொழிகெனக் 110 கொண்ட விரதந் தன்னுட் கூறி வாணிக மரபின் வருபொரு ளீட்டி நீள்நிதிச் செல்வனாய் நீள்நில வேந்தனின் எட்டிப் பூப்பெற் றிருமுப் பதிற்றியாண் டொட்டிய செல்வத் துயர்ந்தோ னாயினன் 115 அந்த ணாள னொருவன் சென்றீங் கென்செய் தனையோ விருநிதிச் செல்வ பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும் புத்தே ளுலகம் புகாஅ ரென்பது கேட்டு மறிதியோ கேட்டனை யாயின் 120 நீட்டித் திராது நின்னக ரடைகெனத் தக்கண மதுரை தான்வறி தாக இப்பதிப் புகுந்தனன் இருநில வேந்தே! மற்றவ னிவ்வூர் வந்தமை கேட்டுப் பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து 125 நல்லாள் நாணாள் பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பாற் சென்று நம்முணா மறிந்திலம் நம்மை முன்னாள் மம்மர் செய்த வனப்பியாங் கொளித்தன ஆறைந் திரட்டி யாண்டுனக் காயதென் 130 நாறைங் கூந்தலும் நரைவிரா வுற்றன இளமையுங் காமமும் யாங்கொளித் தனவோ உளனில் லாள எனக்கீங் குரையாய் இப்பிறப் பாயின்யான் நின்னடி யடையேன் அப்பிறப் பியான்நின் னடித்தொழில் கேட்குவன் 135 இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தே ளுலகம் புதல்வருந் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது தானஞ் செய்யெனத் தரும தத்தனும் 140 மாமன் மகள்பால் வான்பொருள் காட்டி ஆங்கவ னவளுடன் செய்த நல்லறம் ஓங்கிரு வானத்து மீனினும் பலவால் குமரி மூத்தஅக் கொடுங்குழை நல்லாள் அமர னருளால் அகனக ரிடூஉம் 145 படுபழி நீங்கிப் பல்லோர் நாப்பண் கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல் மருதி பொருட்டான் மடிந்தோன் தம்முன் கருகிய நெஞ்சினன் காமங் காழ்கொளச் சுரியிரும் பித்தை சூழ்ந்துபுறந் தாழ்ந்த 150 விரிபூ மாலை விரும்பினன் வாங்கித் தொல்லோர் கூறிய மணமீ தாமென எல்லவிழ் தாரோன் இடுவான் வேண்டி மாலை வாங்க ஏறிய செங்கை நீலக் குஞ்சி நீங்கா தாகலின் 155 ஏறிய செங்கை யிழிந்தில திந்தக் காரிகை பொருட்டெனக் ககந்தன் கேட்டு கடுஞ்சினந் திருகி மகன்றுயர் நோக்கான் மைந்தன் றன்னை வாளா லெறிந்தனன் ஊழிதோ றூழி யுலகங் காத்து 160 வாழி யெங்கோ மன்னவ என்று மாதவர் தம்முளோர் மாதவன் கூறலும் வீயா விழுச்சீர் வேந்தன் கேட்டனன் இன்றே யல்ல என்றெடுத் துரைத்து நன்றறி மாதவிர் நலம்பல காட்டினிர் 165 இன்று முளதோ இவ்வினை யுரைமென வென்றி நெடுவேல் வேந்தன் கேட்பத் தீதின் றாக செங்கோல் வேந்தென மாதவர் தம்முளோர் மாதவ னுரைக்கும் முடிபொரு ளுணர்ந்தோர் முதுநீ ருலகில் 170 கடியப் பட்டன வைந்துள அவற்றில் கள்ளும் பொய்யுங் களவுங் கொலையும் தள்ளா தாகுங் காமம் தம்பால் ஆங்கது கடிந்தோ ரல்லவை கடிந்தோரென நீங்கின ரன்றே நிறைதவ மாக்கள் 175 நீங்கா ரன்றே நீணில வேந்தே தாங்கா நரகந் தன்னிடை யுழப்போர் சேயரி நெடுங்கண் சித்திரா பதிமகள் காதல னுற்ற கடுந்துயர் பொறாஅள் மாதவி மாதவர் பள்ளியு ளடைந்தனள் 180 மற்றவள் பெற்ற மணிமே கலைதான் முற்றா முலையினள் முதிராக் கிளவியள் செய்குவன் தவமெனச் சிற்றிலும் பேரிலும் ஐயங் கொண்டுண் டம்பல மடைந்தனள் ஆங்கவ ளவ்வியல் பினளே யாயினும் 185 நீங்கா னவளை நிழல்போல் யாங்கணும் காரிகை பொருட்டால் காமங் காழ்கொள ஆரிரு ளஞ்சான் அம்பல மடைந்தனன் காயசண் டிகைவடி வாயினள் காரிகை காயசண் டிகையும் ஆங்குள ளாதலின் 190 காயசண் டிகைதன் கணவ னாகிய வாய்வாள் விஞ்சைய னொருவன் தோன்றி ஈங்கிவள் பொருட்டால் வந்தன னிவனென ஆங்கவன் தீவினை யுருத்த தாகலின் மதிமருள் வெண்குடை மன்ன நின்மகன் 195 உதய குமரன் ஒழியா னாக ஆங்கவள் தன்னை யம்பலத் தேற்றி ஓங்கிருள் யாமத் திவனையாங் குய்த்துக் காயசண் டிகைதன் கணவ னாகிய வாய்வாள் விஞ்சையன் தன்னையுங் கூஉய் 200 விஞ்சை மகள்பால் இவன்வந் தனனென வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி ஆங்கவன் தன்கை வாளா லம்பலத் தீங்கிவன் றன்னை யெறிந்ததென் றேத்தி மாதவர் தம்முளோர் மாதவ னுரைத்தலும் 205 சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி யான்செயற் பால திளங்கோன் தன்னைத் தான்செய் ததனால் தகவிலன் விஞ்சையன் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனின் இன்றால் 210 மகனை முறைசெய்த மன்னவன் வழியோர் துயர்வினை யாளன் தோன்றினன் என்பது வேந்தர் தஞ்செவி யுறுவதன் முன்னம் ஈங்கிவன் தன்னையும் ஈமத் தேற்றிக் கணிகை மகளையுங் காவல்செய் கென்றனன் 215 அணிகிளர் நெடுமுடி யரசாள் வேந்தென். உரை 1-4. கடவுள் மண்டிலம் கார்இருள் சீப்ப-ஞாயிற்று மண்டிலம் கரிய இருளை ஒட்டித் தோன்ற, நெடுநிலைக் கந்தின் நின்ற பாவையொடு- நெடிய நிலையாகிய தூணின்கண் உள்ள பாவையுடன், முதியோள் கோட்டம் வழிபடல் புரிந்தோர்-சம்பாபதி கோயிலையும் வழிபாடு செய்வோர், உதயகுமரற்கு உற்றதை உரைப்ப-உதய குமரனுக்கு நேர்ந்த துன்பத்தைக் கூற: கந்திலும் கோட்டத்திலுமுள்ள பாவையையும் முதியோளையும் வழிபடல் புரிந்தோர் என்க., 5-10. சா துயர் கேட்டுச் சக்கரவாளத்து மாதவர் எல்லாம்-சக்கர வாளத்துள்ள அருந்தவரனைவரும் மன்னவன் புதல்வனிறந்த துயரத்தைக் கேட்டு, மணிமேகலைதனை இளங்கொடி அறிவதும் உண்டோ இது என-மணிமேகலையை நோக்கி இளங் கொடியே நீ இச்செயல்பற்றி அறிந்திருக்கின்றனையோ எனவினவ, துளங்காது ஆங்கவள் உற்றதை உரைத்தலும் - மணிமேகலை நடுங்காமல் நிகழ்ந்தவற்றைக் கூறுதலும், ஆங்கவள் தன்னை ஆருயிர் நீங்கிய வேந்தன் சிறுவனொடு வேறிடத்து ஒளித்து - அவளை இறந்து கிடந்த அரசிளம் புதல்வனுடன் ஓரிடத்து ஒளித்துவைத்து ; தன்பாற் பிழையின்மையின் துளங்காதுரைத்தனள் என்க. வேறிடத்து - வேறு மறைவான இடத்தில். 11-18. மாபெருங் கோயில் வாயிலுக்கு இசைத்து-மிக்க பெருமையுடைய மன்னவன் கோயிலையடைந்து வாயில் காப்போருக்குக் கூறி, கோயின் மன்னனைக் குறுகினர் சென்று ஈங்கு - மாளிகையிலுள்ள வேந்தனுக்கு அண்மையிற் சென்று, உயர்ந்தோங்கு உச்சி உவாமதிபோல-மிகவுயர்ந்த வானின் நடுவேயுள்ள முழுமதியைப் போல, நிவந்தோங்கு வெண்குடை மண்ணகம் நிழல் செய - மிகவுயரிய நினது வெண்கொற்றக்குடை நிலவுலகிற்குத் தண்ணிய நிழலைத் தருக, வேலும் கோலும் அருள்கண் விழிக்க - நீ ஏந்திய வேற்படையும் செங்கோலும் அருள்நோக்க முடையவாக, தீது இன்றி உருள்க நீ ஏந்திய திகிரி - நினது ஆணைச் சக்கரம் இடையூறின்றி இயல்வதாக, நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கு இனிதாக வாழிய வேந்தே - நினக்கு என்று பால்வரை தெய்வத்தான் எல்லையிடப்பட்ட ஆண்டுகளனைத் திலும் மனத்திற்கு இனியவாக வாழ்வாயாக அரசே; வாயில் - வாயில் காவலரை உணர்த்திற்று. உயர்ந்தோங்கு, நிவந்தோங்கு என்பன ஒரு பொருட்பன்மொழிகள். செய, விழிக்க என்பன வியங்கோள்; செயவெனெச்சமாகக் கொண்டு வாழிய வென்பதனோடு முடித்தலுமாம். வேலும் கோலும் அருட்கண் விழிக்க என்றமையால், பகை வேறலும் குடியோம்பலும் அருளால் நிகழ வேண்டுமென்றவாறாயிற்று. ஏந்திய என்பதனை வேல் கோல் என்பவற்றோடு கூட்டுக, மனக்கு; அத்துச்சாரியை தொக்கது. இனிதாக: பன்மை யொருமை மயக்கம். மாதவரெல்லாம் இங்ஙனம் அரசர்க்கு ஓம்படை கூறியபின், அவருளொருவர், உதயகுமரன் கொலையுண்டமை கேட்டு அரசர்க்குச்செற்றம் நிகழாவண்ணம் முன்பு அப் பதியிலே கழிகாமத்தால் தீங்கிழைத்துக் கொலையுண்ட இருவர் வரலாறு களை அரசர்க்குக் கூறுகின்றார். 19-24. இன்றே அல்ல - இன்றுமட்டுமல்ல; இப் பதி மருங்கில்- இந் நகரத்தின்கண், கன்றிய காமக்கள்ளாட்டு அயர்ந்து - அடிப் பட்ட காமமாகிய கள்ளுண்டலைச் செய்து, பத்தினிப் பெண்டிர்பால் சென்று அணுகியும் - கற்புடைய மகளிரிடம் அவரை விரும்பிப் போய் நெருங்கியும், நற்றவப்பெண்டிர் பின் உளம் போக்கியும் - நல்ல தவஞ்செய்யும் மகளிரின் பின்னர் உளத்தைச்செலுத்தியும், தீவினை உருப்ப உயிர் ஈறுசெய்தோர்-ஊழ்வினை சினந்துவந்தூட்ட உயிர் துறந்தோர், பாராள் வேந்தே பண்டும் பலரால் - மண்ணுல காளும் மன்னவர் ஏறே முன்னரும் பலர் இருந்திருக்கின்றனர்; கன்றிய - அடிப்பட்ட; முதிர்ந்த. நற்றவம் - வீடுபெறுதற்குச் செய்யுந் தவமுமாம்; 1"நற்றவஞ்செய் வார்க்கிடந் தவஞ்செய்வார்க்கு மஃதிடம்" என்பது காண்க. இன்றேயல்ல பண்டும் பலரால் என்க. 25-32. மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் தன்முன் - அரசர் குலத்தைப் பொன்றக்கெடுத்த பரசுராமன்முன், தோன்றல் தகாது ஒழி நீ என - நீ வெளிப்படுதல் தகாது இந் நகரை விட்டு நீங்குவாயாக என்று, கன்னி ஏவலில் - சம்பாபதி ஆணையிட்டமையால், காந்த மன்னவன் - காந்தன் என்ற அரசன், இந்நகர் காப்போர் யார் என நினைஇ-தான் நீங்கின். இந் நகரைக் காப்போர் யாவர் என நினைத்து, நாவலந் தண் பொழில் நண்ணார் நடுக்குற - சம்புத்தீவிலுள்ள பகைவர்கள் நடுக்கமடையுமாறு, காவற் கணிகை தனக்கு ஆம் காதலன் - காவற்கணிகையிடத்து தோன்றிய புதல்வனும், இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்- பகைவர் வெகுண்டு எதிர்ப்பினும் அவர்க்கு வலி குறைதல் இல்லாதவனும் ஆகிய, ககந்தன் ஆம் என-ககந்தன் என்பவனே காத்தற்குப் பொருந்தியவனாவான் என்று, காதலின் கூஉய் - அவனை அன்பொடும் அழைத்து; மருங்கு-குலம்; 1"சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி" என்பதன் உரை காண்க. மழுவாள் நெடியோன்-பரசுராமன்; திருமாலின் தோற்றமாகலின் 'நெடியோன்' எனப்பட்டான்: மழுவாள்-மழுவாகிய வாள்; சிவன்பால் தவஞ்செய்து பெற்ற பரசு. இவன் தன்னாற் கொலையுண்ட கார்த்தவீரியன் என்னும் அரசனுடைய புதல்வர்கள் தான் இல்லாதபொழுதில் தன் தந்தையாகிய சமதக்கினி முனிவரைக் கொன்றமைபற்றி எழுந்த செற்றத்தால் இருபத்தொரு தலைமுறைகாறும் அரசர்குலத்தை அழித்தலை நோன்பாகக் கொண்டனனென்பது வரலாறு. நெடியோன்றன் முன் தோன்றல் தகாது என்றமையின் அவன் ஈண்டுப் போந்தமை பெற்றாம். ‘ஒளி' என்பது பாடமாயின் மறைந்து கொள் என்பது பொருளாகும். கன்னி-துர்க்கையுமாம். நடுக்குறத் தோன்றிய காதலன் என்க. காவற் கணிகை-அரங்காடுங் கூத்தி, அரசனுடைய காமக்கிழத்தி. இகழ்ந்தோர்-அவமதித்த பகைவர்-எஞ்சுதலில்லோன்-வலிகுறையாதவன்; தோலாதவன். என-என்றுநினைந்து. 33-39. அரசாள் உரிமை நின்பால் இன்மையின் - அரசு புரியும் உரிமை நின்னிடம் இல்லாமையால், பரசுராமன் நின்பால் வந்து அணுகான் - பரசுராமன் நின்னிடம் போர்புரியுமாறு வாரான், அமர முனிவன் அகத்தியன் தனாது துயர்நீங்கு கிளவியின் யான் தோன்று அளவும் - கடவுண் முனிவராகிய அகத்தியரது அருண்மொழியால் யான் மீண்டு இந் நகரை அடையுமளவும், ககந்தன் காத்தல் - ககந்தனே காப்பாயாக என வுரைத்து, காகந்தி என்று இயைந்த நாமம் இப் பதிக்கு இட்டு - ககந்தனாற் காக்கப்படுதலின் காகந்தி என்று பொருந்திய பெயரை இந் நகருக்கு இட்டு, ஈங்கு உள்வரிக்கொண்டு அவ் வுரவோன் பெயர்நாள் - காந்தன் வேற்றுருக்கொண்டு சென்ற நாளில்; கணிகை மகனாதலின் அரசாளுரிமை யிலனாயின னென்க. துயர் நீங்குகிளவி-துன்பம் ஒழிதற்கேதுவாகிய சொல். ககந்தன்: அண்மை விளி. காத்தல் : வியங்கோள், காக்க 'என்று கூறி' என வருவித்துரைக்க. உள்வரி - வேற்றுரு. இவ் வரசன் அகத்தியரை வேண்டி, அவரது கரகத்திலுள்ள காவிரிநீரைப் பெற்றன னென்பது பதிகத்தால்2 அறியப்படும். 40-44. தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்-தெளிந்த நீரினையுடைய காவிரியில் நீராடி வருகின்ற, பார்ப்பனி மருதியைப் பாங்கோர், இன்மையின் - பார்ப்பனியாகிய மருதியைப் பக்கத்திலுள்ளோர் ஒருவரும் இல்லாமையால், யாப்பறை என்றே எண்ணினன் ஆகி - உறுதியற்றவள் என நினைந்தவனாய், காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன் நீ வா என்ன - காவிரியின் கரையில் ககந்தனுடைய புதல்வன் நீ வா என அழைக்க, நேரிழை கலங்கி - அவள் கலக்கமுற்று ; காவிரி வாயில் - சங்கமுகத் துறையுமாம். பாங்கோரின்மையின் நீ வா என்ன என்றியையும். 45-49. மண்திணி ஞாலத்து - அணுச்செறிந்த நிலவுலகத்தில், மழைவளம் தரூஉம் பெண்டிராயின்-வேண்டுங்கால் மழையினைப் பெய்விக்கும் கற்புடை மகளிராயின், பிறர் நெஞ்சு புகாஅர் - ஏதிலார் உள்ளத்திற் புகுதலிலர், புக்கேன் பிறன் உளம்-யானோ அயலான் உள்ளத்திற் புகுந்தேன், புரிநூல் மார்பன் முத்தீப்பேணும் முறை எனக்கு இல் என - ஆகலின் முந்நூலணிந்த மார்பினையுடைய அந்தணனது முத்தீயைக் காக்கும் தகுதி எனக்கு இல்லை என்று மாதுயர் எவ்வமொடு மனையகம் புகாள் - மிகப் பெரிய துன்பத்துடன் தன் மனையின்கண் செல்லாளாய் ; மழைவளம் - மழையாகிய வளம் ; வளம் - வருவாய். புக்கேன் ஆகலின் என விரித்துரைக்க. புரிநூன் மார்பன் - கணவன். முத்தீ - காருகபத்தியம் ஆகவனீயம் தென்றிசையங்கி என்பன. பேணுதல் - கணவற்குத் துணையாயிருந்து அதனை வளர்த்தல். 50-56. பூத சதுக்கம் புக்கனள் மயங்கி-பூத சதுக்கத்தையடைந்து வருந்தி, கொண்டோன் பிழைத்த குற்றம்தான் இலேன் - கணவனைப் பிழைத்த குற்றமொன்றும் இல்லேன், கண்டோன் நெஞ்சில் கரப்பு எளிதாயினேன் - அயலானுடைய உள்ளத்தில் எளிதில் ஒளித்தேன், வான்தரு கற்பின் மனை யறம் பட்டேன் - மழையைத் தரும் கற்புடைய மகளிர்க்குரிய இல்லறத்திற் பொருந்தினேன், யான் செய் குற்றம் யான் அறிகில்லேன் - நான் செய்த குற்றம் ஒன்றையும் யானறியேன், பொய்யினைகொல்லோ பூதசதுக்கத்துத் தெய்வம் நீ எனச் சேயிழை அரற்றலும் - அல்லவை செய்தோரைப் புடைத் துண்பாய் என்று கூறப்படுகின்ற பூதசதுக்கத்துக் கடவுளாய நீ பொய்ம்மையை யுடையாயோ என மருதி பலவாறு புலம்புதலும்; பூத சதுக்கம் - பூதம் நிற்றலையுடைய சதுக்கம் ; சதுக்கம் - நாற்சந்தி. கொண்டோற் பிழைத்தல் - கற்பிற்கு மாறாக ஒழுகுதல் கற்பின் மனையறம் - கற்புடை மகளிர் புரியும் மனையறம். குற்றந்தான் இலேன், மனையறம் பட்டேன், யானறிகில்லேன்: அங்ஙனமாகவும் கரப்பெளிதாயினேன்; ஆகலின் பொய்யினை கொல்லோ? என்றாள் என்க; பிறனுளம்புக்க தன்னைப் புடைத்துண்ணாமையால் ‘பொய்யினை கொல்லோ' என்றாள். சதுக்கப் பூதத்தின் இயல்பு 1"தவமறைந் தொழுகும்... பூதம் புடைத்துணும் பூதசதுக்கமும்" என்பதனால் அறியப்படும். மனையறம்பட்டேன் என்பதற்கு ‘இல்லறத்திற்குத் துணையாக நிற்றலை யொழிந்தேன்' என்று பொருள் கூறினர் டாக்டர் வே. சாமிநாதையர். 57-58. மாபெரும் பூதம் தோன்றி - மிகப் பெரிய சதுக்கப்பூதம் தோன்றி, மடக்கொடி நீ கேள் என்றே நேரிழைக்கு உரைக்கும் - மடக்கொடியே நீ கேட்பாயாக என்று அவட்குக் கூறும். 59-69. தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற-பிற தெய்வத்தை வணங்காது தன் தெய்வமாகிய கணவனைத் தொழுது எழுகின்ற கற்புடை நங்கை பெய்யென்று சொல்லப் பெரு மழை பெய்யும் எனவுரைத்த, அப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் - தெய்வப் புலவராகிய திருவள்ளுவனாரது அப் பொருண்மொழியைத் தெளியாயாய், பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு-பொருளொடு புணராப் பொய்ம் மொழிகளையும் பொருளொடு புணர்ந்த நகைமொழி களையும் பிறரிடம் கேட்டு, விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பி- கட்டப்பட்ட கட்டினையுடைய முழவுடன்கூடிய விழாக்காண்டலை விரும்பி, கடவுள் பேணல் கடலியை ஆகலின் - வேறு கடவுளை வணங்கும் கடப்பாடுடைய ஆயினையாகலின், மடவரல் ஏவ மழையும் பெய்யாது - நங்காய் நீ ஏவினால் மழையும் பெய்யாது, நிறையுடைப் பெண்டிர் தம்மே போல - நிறையுடைய மகளிரைப் போல, பிறர் நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை - பிறருடைய உள்ளத்தைச் சுடுகின்ற தன்மை யுடையையும் அல்லை, ஆங்கவை ஒழிகுவை ஆயின் - முற்கூறிய நின் செயல் களை நீங்குவாயானால், ஆயிழை ஓங்கிரு வானத்து மழையும் நின் மொழியது - நங்காய் உயர்ந்த வானத்து மழையும் நீ ‘பெய்' என மொழியிற் பெய்யா நிற்கும் ; "தெய்வந் தொழாஅள்...தேறாய்" என்றது இந்நூலாசிரியர் கருத்துத் தெய்வத்தின் கூற்றில் வைத்துணர்த்தப்பட்டது. சாத்தனார் இக் குறளை 1உரையளவையாகக் கொண்டு, வள்ளுவரைப் பொய்யில் புலவன் என்று கூறியது தெய்வப் புலவர்பால் அவருக்குள்ள பெருமதிப்பை இனிது புலப்படுத்தும். பொருளுரை - முனிவர் புரிந்து கண்ட பொருளுடன் கூடியவுரை ; மெய் யுரையுமாம்; பொருள் - மெய்ம்மையாதலைப் 'பொருள்சேர் புகழ்' என்பதனாலறிக. பிசி - பொய்ம்மொழியும் நகைமொழியுமாவது; இது பிதிர் எனவும், விடுகதையெனவும் வழங்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் 2"நொடியொடு புணர்த்த பிசியி னான" என நொடியைப் பிசிக்கு அடையாகவே கூறியுள்ளார். ஈண்டு நொடி என்பதற்கு வறுமொழி என்று கூறுதல் சாலும். மடவரல் : முன்னிலைப் பெயர். 70-79. பெட்டாங்கு ஒழுகும் பெண்டிரைப் போல - விரும்பிய வண்ணம் ஒழுகும் பெண்டிரைக் கட்டுவதுபோல, கட்டாது உன்னை என் கடுந் தொழிற்பாசம் - எனது கொடிய தொழிலையுடைய பாச மானது நின்னைப் பிணியாது, மன்முறை எழுநாள்வைத்து-அரசன் முறை செய்தற்குக் காலவளவாக ஏழுநாள் நிறுத்தி, அவன் வழுஉம் பின் முறை அல்லது - அந்நாட்களுள் அவன் முறை செய்யாது தவறிய பின்பல்லது, என்முறை இல்லை - யான் முறை செய்யு மாறில்லை, ஈங்கெழுநாளில் இளங்கொடி நின்பால் வாங்கா நெஞ்சின் மயரியை - மெல்லியலே இன்றைக்கு ஏழாம் நாளில் நின்னிடம் வைத்த உள்ளத்தை மீட்காத மயக்கமுடையோனை, வாளால் ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டு என - ககந்தன் கேள்வியுற்று வாளினால் ஒறுத்தலும் உண்டு என்று, இகந்த பூதம் எடுத்துரை செய்தது-தீமையைக் கடந்த பூதம் எடுத்துக் கூறியது, அப்பூதம் உரைத்த நாளால் ஆங்கவன் தாதை வாளால் தடியவும் பட்டனன்-அப்பூதங் கூறிய நாளிலேயே அவன் தன் தந்தையின் வாளால் வெட்டப்பட்டனன்; நீ அங்ஙனம் விழாக் காண்டல் முதலியன செய்து போந் தாயாயினும் கற்பு நெறி கடந்து அவமறைந் தொழுகும் அலவற் பெண்டிர் போலாகாயாகலின் என் பாசம் உன்னைக் கட்டா தென்றும், நின்பால் உள்ளத்தைச் செல்ல விடுத்துப் பிறர்மனை நயத்தலாகிய குற்ற மிழைத்தோனைப் புடைத்துண்டல் வழுவன்றாயினும் ஏழுநாளளவில் அரசன் முறை செய்யா தொழியினே அங்ஙனம் செய்யலாகுமென்றும் பூதங் கூறிற்றென்க. முறை செய்தல் - குற்றஞ் செய்தாரை அதற்குத்தக ஒறுத்தல்; 1"முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வவ்வல்" என்றார் பிறசான்றோரும். பின்முறை - பின்பு. எழுநாளில் - ஏழாவது நாளில். மயரி - மயக்கமுடையான். நாளால் - நாளில். 80-81. இன்னும் கேளாய் இருங்கடல் உடுத்த மண்ணாள் செல்வத்து மன்னவர் ஏறே-பெரிய கடலை ஆடையாக வுடைய நிலவுலகினை யாளும் செல்வமுடைய அரசர்களுள் ஏறனையாய் இன்னும் கேட்பாயாக ; 82-87. தருமதத்தனும் தன் மாமன்மகள் பெருமதர் மழைக்கண் விசாகையும் - தருமதத்தன் என்னும் வணிகனும் அவன்றன் மாமன் மகளாகிய அழகிய பெரிய கண்களையுடைய விசாகை என்பவளும், பேணி தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக் கைவினை கடந்த கண்கவர் வனப்பினர்-தெய்வத்தால் விரும்பி வியப்புடைத்ததாக எழுதப்பட்ட செய்தொழிலின் எல்லை கடந்த ஓவியம்போலக் கண்களைக் கவரும் எழிலுடையர், மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனள் என்றே ஊர்முழுது அலர் எழ- அவருள் தருமதத்தன் மைத்துனன் முறைமையுடையனாதலின் விசாகை அவனுடன் காந்தருவ மணத்திற்கு இயைந்தனள் என்று ஊரெங்கும் அலருண்டாக ; தெய்வம் பேணிக் காட்டும் ஓவியம் எனவும், கைவினை கடந்த ஒவியம் எனவும் கூட்டுக; 2"ஆதரித் தமுதிற் கோல்தோய்த் தவயவமமைக்குந் தன்மை, யாதெனத் திகைக்கு மல்லால் மதனற்கு மெழுத வொண்ணாச், சீதை" என்பது ஈண்டு அறியற்பாலது. தருமதத்தனும் விசாகையும் வனப்பினர்; அவருள் அவன் மைத்துனன் முறைமையால் அவள் ஒத்தனள் என விரித்துரைக்க. 88-94. புனையா ஓவியம் புறம்போந்து என்ன மனையகம் நீங்கி வாணுதல் விசாகை-ஒள்ளிய நெற்றியையுடைய விசாகை இல்லத்தினின்றும் நீங்கி வண்ணங்களைக்கொண்டு எழுதாது வடிவம் மட்டும் அமைத்த ஓவியப்பாவை வெளிப்போந்தாற் போல, உலக வறவியின் ஊடுசென்று ஏறி - சென்று உலக வறவியின்கண் ஏறி, இலகொளிக் கந்தின் எழுதிய பாவாய் - விளங்கும் ஒளியையுடைய தூணின்கண் எழுதப்பட்ட தெய்வப்பாவையே, உலகர் பெரும்பழி ஒழிப்பாய் நீ என - இவ்'d2வூரிலுள்ளோர் கூறும் பெரிய பழியை நீ நீக்குவாயாக என்று வேண்ட, மாநகர் உள்ளீர் மழை தரும் இவள் என நாவுடைப்பாவை நங்கையை எடுத்தலும் - நாவுடைய அப் பாவை மாநகரிலுள்ளோர்களேஇவள் மழையைத்தரும் கற்புடையாள் என்று விசாகையை உயர்த்திக் கூறுதலும்; செயற்கை யழகொன்றும் இன்மையானும், அலரெழுந்த வருத்தத்தால் ஒளி மாழ்கினமையானும் ‘புனையாவோவியம்' போல என்றார். மழைதரும் என்றமையால் கற்பின் சிறப்புக் கூறப்பட்டது. எடுத்தல்- உயர்த்தல்; உயர்த்துக் கூறுதல். விசாகை ஒழிப்பாய் நீ என, அப்பாவை நங்கையை எடுத்தலு மென்க. 95-100. தெய்வம் காட்டித் தெளித்திலேன் ஆயின் - இன்னணம் கடவுண் மொழியால் மெய்ம்மை காட்டித் தெளிவிக்கப் பெற்றிலேன் ஆயின், மையல் ஊரோ மனமாசு ஒழியாது - மயக்கங்கொண்ட ஊரவரின் மனவிருள் நீங்காது, மைத்துனன் மனையாள் மறுபிறப்பு ஆகுவேன்-மறுபிறப்பின்கண் மைத்துனற்கு மனைவியாகுவேன், இப்பிறப்பு இவனொடும் கூடேன் என்றே-இப்பிறப்பில் இவனொடு மணம் பொருந்தேன் என்று, நற்றாய் தனக்கு நற்றிறம் சாற்றி - தன் அன்னைக்கு நல்லியல்புகளை எடுத்துக்கூறி, மற்று அவள் கன்னிமாடத்து அடைந்த பின்-விசாகை கன்னிமாடத்திற் சேர்ந்த பின்னர்; மனமாசு - திரிபான எண்ணம், மைத்துனன் - அத்தை மகன் - தருமதத்தன். தான் குமரி மூத்தலால் தாய் துன்புறாவண்ணம் அவட்கு நற்றிறம் மொழிந்தாள் என்க. நற்றிறம் - விரதமுமாம். 101-106. தருமதத்தனும் தந்தையும் தாயரும் - தரும தத்தனும் அவனுடைய தந்தை தாயரும், பெருநகர் தன்னைப் பிறகிட்டேகி- காவிரிபூம்பட்டினத்தைப் பின் வைத்துச் சென்று, தாழ்தரு துன்பம் தலையெடுத்தாய் என - யாங்கள் அழுந்திய துன்பத்தினின்றும் நீக்கியருளினாய் என்று, நாவுடைப்பாவை நலம்பலஏத்தி- கந்திற் பாவையின் சிறப்புகளைப் பலவாறு துதித்து, மிக்கோர் உறையும் விழுப்பெரும் செல்வத்து-மேலோர் வாழ்கின்ற சிறந்த பெருஞ்செல்வத்தினையுடைய, தக்கண மதுரை தான் சென்று அடைந்தபின்-தென்றிசையிலுள்ள கூடற்பதியிற் சென்று சேர்ந்த பின்னர்; பிறகிட்டேகுதல்-பின்னே யிருக்கும்படி கடந்து செல்லுதல். தலையெடுத்தாய்; நீக்கினாய் என்னும் பொருட்டு. 107-110. தருமதத்தனும் தன் மாமன் மகள் விரிதரு பூங்குழல் விசா கையை அல்லது - தருமதத்தனும் தன் அம்மான் மகளாகிய மலர்ந்த பூக்களையணியும் கூந்தலையுடைய விசாகையை அன்றி, பெண்டிரைப் பேணேன்-வேறு மகளிரை விரும்பேன், இப்பிறப்பு ஒழிகென - இப்பிறப்பு இவ்வாறே நீங்குவதாக வென்று, கொண்டே விரதம் தன்னுட் கூறி-மேற்கொண்ட விரதத்தைத் தன்னுள்ளே கூறிக்கொண்டு; தருமதத்தனும் : உம்மை இறந்தது தழீஇய எச்சம். விரிதரு பூங்குழல் - அடர்ந்த பொலிவுள்ள கூந்தல் என்றுமாம். 111-114. வாணிக மரபின் வருபொருள் ஈட்டி - முறைமையாற் செய்யும் வாணிகத்தால் வளரும் பொருளைத் தொகுத்து, நீள் நிதிச் செல்வனாய்-பெருநிதி படைத்த செல்வனாய், நீள்நில வேந்தனின் - பெரிய நிலத்தினை ஆளும் அரசனால், எட்டிப்பூப்பெற்று - எட்டியென்னும் பட்டமும் அதற்குரிய பொற்பூவும் பெற்று, இரு முப்பதிற்று யாண்டு ஒட்டிய செல்வத்து உயர்ந்தோன் ஆயினன் - நீங்காத செல்வத்தில் மேம்பட்டவனாய் அறுபதாம் ஆண்டினை எய்தினன். முறைமையால் வாணிகஞ் செய்தலாவது பிறர் பொருளையும் தம் பொருளை யொப்ப மதித்து மிகையாகக் கொள்ளாதும் குறையாகக் கொடாதும் செய்தலாம்; அங்ஙனஞ்செய்வார்க்கு அந் நல்வாணிகத்தால் மேன்மேற் பொருள் வளருமாகலின் 'வாணிக மரபின் வருபொருளீட்டி' என்றார். வருபொருள்-வளரும் பொருள். அவ்வாறு பெரும் பொரு ளீட்டிய வாணிக வாகையுடையார்க்கு அரசன் எட்டிப் பூ அளிப்பனென்க. 115-122. அந்தணாளன் ஒருவன் சென்று - அப்பொழுது மறைய வனொருவன் அவன்பாற் சென்று, ஈங்கு என்செய்தனையோ இரு நிதிச் செல்வ - பெருநிதிச் செல்வனே நீ என் செய்தனை, பத்தினி இல்லோர் பலறம் செய்யினும் - மனைவி யில்லா தோர் பலதிறப்பட்ட அறங்களைச் செய்தாலும், புத்தேள் உலகம் புகாஅர் என்பது- வானவருலகிற் செல்லுதற் குரியராகார் என்பதனை, கேட்டும் அறிதியோ - கேட்டறிதலும் உடையையோ, கேட்டனையாயின் - அங்ஙனம் கேட்டறிந் தனையானால், நீட்டித்து இராது நின் நகர் அடைக என-இங்கே நெடிது தங்கியிராமல் நின் நகரத்தை அடைவாயாக என்று கூற, தக்கண மதுரை தான் வறிதாக இப்பதிப் புகுந்தனன்-தருமதத்தன் தென்மதுரை வறிதாகுமாறு இப்பதியை அடைந்தனன்; நீட்டித் திராது நின்னகர் அடைக என்றது, விரைவில் நின்பதியை அடைந்து மணஞ்செய்து மனைவியுடன் இல்லறம் நிகழ்த்துக என்னும் குறிப்பிற்று. மதுரை வறிதாக என்றதனால் அவனது செல்வ மிகுதி குறிக்கப்பட்டது. 122-124. இருநில வேந்தே - புவியை ஆளும் அரசே, மற்றவன் இவ்'d2வூர் வந்தமை கேட்டு - தருமதத்தன் இப்பகுதிக்கு வந்தது கேட்டு, பொற்றொடி விசாகையும் மனைப்புறம் போந்து நல்லாள் நாணாள்- பொன்வளையுடைய விசாகையாகிய நல்லாளும் நாணாது மனையின் புறத்தே வந்து, பல்லோர் நாப்பண் அல்லவை கடிந்த அவன்பாற் சென்று - பலர் நடுவே தீயனவற்றை நீங்கிய அவ்வணிகனிடம் சென்று ; இருநில வேந்து - சோழ மன்னன்: மாதவர் இங்ஙனம் விளித் துரைக்கின்றனர். அவன் பலர் சூழ இருந்தமையின் பல்லோர் நாப்பண் அவன்பாற் சென்று என்றார். அல்லவை - பொய் முதலிய தீமைகள். 127-134. நம்முள் நாம் அறிந்திலம்-நாம் நம்முள் ஒருவரை யொருவர் அறிகின்றிலம், நம்மை முன்னாள் மம்மர் செய்த வனப்பு யாங்கு ஒளித்தன - முன்னாளில் நம்மை மருளச்செய்த இருவே முடைய அழகும் எங்கே மறைந்தன, ஆறைந்து இரட்டி ஆண்டு ஆயது-உனக்கு அறுபது யாண்டாயிற்று, என் நாறுஐங் கூந்தலும் நரை விராவுற்றன-நாறுகின்ற என் ஐம்பாலாகிய கூந்தலும் நரை விரவுதலுற்றன, இளமையும் காமமும் யாங்கொளித் தனவோ - இளமைப்பருவமும் அப்பருவத்தில் உண்டாம் வேட்கையும் இப் பொழுது எங்கு ஒளித்தனவோ, உளனில்லாள எனக்கு ஈங்கு உரையாய் - மனத்திட்பம் இல்லாதோய் எனக்கு இப்பொழுது கூறு வாயாக, இப்பிறப்பாயின் யான் நின் அடி அடையேன் - இப் பிறப்பிலே யான் நின் அடிகளை அடைவேனல்லேன், அப்பிறப்பு யான் நின் அடித்தொழில் கேட்குவன் - மறு பிறப்பில் யான் நின் குற்றேவல் கேட்கப் பெறுவேன்; பல்யாண்டின் முன் இருந்த தம் வடிவு பெரிதும் மாறி ஒருவரை யொருவர் கண்டுகொள்ளுதற் கரிதாயினமையின் 'நம்முள் நாம் அறிந்திலம்' என்றாள். கூந்தலும்: உம்மை எச்சப் பொருட்டு. கூந்தலின் ஐவகையுங் கருதி விராவுற்றன வெனப் பன்மை கூறினார். மேல் பத்தினியில்லோர் பல அறஞ் செய்யினும் புத்தேளுலகம் புகார் ஆகலின் விரைவில் நின்னக ரடைகவென அந்தணன் கூறியது கேட்டுப் போந் தான் என்றலின், தருமதத்தன் விசாகையை மணம்புரியும் கருத்துடன் வந்தானாவன் ; அறுபது யாண்டாகித் தலைநரைத்த பின்னும் மனம் நெகிழ்ந்து மணத்தை விரும்பினமையில் விசாகை அவனை 'உளனில் லாள' என விளிப்பாளாயினள். உளன்-ஊக்கம்; மனவுறுதி. ஆயின்: உரைநடை. கற்புடை மனைவி கணவனை வழிபடுமியல் பினளாகலின். நினக்கு மனையாகேன், மனைவியாகுவேன் என்பாள் முறையே நின் அடி யடையேன், அடித்தொழில் கேட்குவன் என்றாள் என்க. 135-142. இளமையும் நில்லா யாக்கையும் நில்லா - இளமையும் நிலை பெறாது உடம்பும் நிலைபெறாது, வளவிய வான் பெருஞ் செல்வமும் நில்லா-வளமுடைய சிறந்த பொருளும் நிலைபெறாது, புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் - உம்பரு லகத்தைப் புதல்வராலும் பெற வியலாது, மிக்க அறமே விழுத்துணையாவது - எவற்றினும் மேம் பட்ட அறமேசிறந்த துணையாகுவது, தானம் செய் என-ஆதலின் அறம்புரிவாய் என்று கூற, தருமதத்தனும் மாமன்மகள்பால் வான் பொருள் காட்டி - தருமதத்தன் விசாகையிடம் தனது சிறந்த நிதிகளைக் காட்டி, ஆங்கவன் அவளுடன் செய்த நல்லறம்-அவன் அவளுடன் சேர்ந்து செய்த நல்லறங்கள், ஓங்கிரு வானத்து மீனினும் பலவால் - மிகப்பெரிய விசும்பின்கணுள்ள மீனினும் பலவாகும் ; நில்லாது எனபன, ஈறு தொக்கன. ‘யாக்கையு நிலையா' எனபதும் பாடம். புதல்வருந் தாரார் என்னும் உம்மை பத்தினியுந் தாராள் என்பதுபடநிற்றலின் எச்சவும்மை; இதுவும், மிக்க அறமே விழுத்துணையாவது என்பது "பத்தினி யில்லோர் பலவறஞ் செய்யினும், புத்தே ளுலகம் புகாஅர்" என்பதற்கு மறுப்பாகும். தருமதத்தனாகிய அவனும் என்க. 143-154. குமரிமூத்த அக்கொடுங்குழை நல்லாள்-மணமின்றிக் கன்னியாகவே மூப்புற்ற அவ்விசாகையானவள், அமரன் அருளால் அகல்நகர் இடூஉம் படுபழிநீங்கி-உலக அறவியிற் கந்திற்பாவையிலுள்ள துவதிகனென்னும் தேவன் அருளினாலே ஊரிலுள்ளோர் கூறிய அலரினின்றும் நீங்கி, பல்லோர் நாப்பண்-பலர் நடுவண், கொடிமிடை வீதியில் வருவோள் குழல்மேல்-கொடிகள் செறிந்த வீதியின் வருகின்றவள் கூந்தல்மேல், மருதி பொருட்டால் மடிந்தோன்தம்முன் - முன்னர் மருதியின்பொருட்டு இறந்தோனின் முன்ன வனாகிய ஒருவன், கருகிய நெஞ்சினன் காமம் காழ்கொள-காமம் வயிரங்கொள்ள இருண்ட உள்ளமுடையவனாய், சுரியிரும்பித்தை சூழ்ந்து புறந்தாழ்ந்த-தனது சுரிந்த கரிய குடுமியைச் சுற்றிப் புறத்தே தாழ்ந்த, விரி பூ மாலை விரும்பினன் வாங்கி-விரிந்த மலர்மாலையை விருப்பத்துடன் எடுத்து, தொல்லோர் கூறிய மணம் ஈது ஆமென - இது பண்டையோர் உரைத்த மணம் ஆகும் என்று, எல் அவிழ்தாரோன் - விளக்க மிக்க மாலையை யணிந்த அவன், இடுவான் வேண்டி - அவட்கு இட விரும்பி, மாலை வாங்க - மாலையை எடுத் தற்குக் கையினைத் தலையி லேற்ற, ஏறிய செங்கை நீலக்குறிஞ்சி நீங்காது ஆகலின்-அங்ஙனம் ஏறிய கையானது கருநிறம் வாய்ந்த குடுமியினின்றும் நீங்கவில்லை யாகலின் ; குமரிமூத்தல்-மணமின்றித் தமியளாய் மூத்தல். படுபழி-மைத்துனன் முறையால் யாழோர் மணவினைக்கு ஒத்தனளென்று ஊர் கூறிய பொய்ப்பழி. விசாகையின் வரலாற்றைக் கூறி முடித்தவர் முன்புதெய் வத்தினருளாற் பழிநீங்கி அவள் வீதியில் வருங்கால் நிகழ்ந்ததனைஈண் டெடுத்துக் கூறுகின்றனரென்க. மடிந்தோன் - ககந்தன் சிறுவன். மாலையை விரும்பினன் வாங்கி இடுவான் வேண்டி யென்க. மாலை வாங்க - மாலையை எடுத்தற்குக் கையினை ஏற்ற என வருவித்துரைக்க. 155-158. ஏறிய செங்கை இழிந்திலது இந்தக் காரிகை பொருட்டு எனக் ககந்தன் கேட்டு-விசாகைக்குச் சூட்டுதற் பொருட்டு மாலை வாங்குவதற்கு ஏறிய கை மீட்டும் இறங்கவில்லை என்பதைக் ககந்தன் கேள்வியுற்று, கடுஞ்சினம் திருகி - கடிய சினம் மிக்கு, மகன் துயர் நோக்கான் மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் - மகன் இறக்கும் துன்பத்தை நோக்கா தவனாய் அவனை வாளால் வெட்டினான்; நோக்கான் : நோக்கல் நோக்கம். 159-165. ஊழிதோ றூழி உலகம் காத்து வாழி எங்கோ மன்னவ என்று-எம்மரசர் பெருமானே நீ ஊழியூழிதோறும் உலகங் காத்து வாழ்வாயாகவென்று, மாதவர் தம்முள் ஓர் மாதவன் கூறலும் - அவணிருந்த அருந்தவர்களுள் ஒருவன் உரைத்தலும், வீயா விழுச் சீர் வேந்தன் கேட்டனன் - மாறாத பெருஞ் சிறப்புடைய மன்னவன் அவற்றைக் கேட்டிருந்து, இன்றே அல்ல என்று எடுத்துரைத்து-இன்று மட்டுமல்ல என எடுத்துக் கூறி, நன்றறி மாதவிர் நலம்பல காட்டினிர் - உறுதியை உணர்ந்த மாதவத்தீர் பல நன்னெறியைக் காட்டினீர் - இன்றும் உளதோ இவ்வினை உரைம் என- இந்நாளிலும் இத்தகைய தீவினை உண்டு கொல்லோ உரைத்தருளும் என; "இன்றே யல்ல" என்று தொடங்கியதனை இக்காதையின் 19-ஆம் அடியிற் காண்க. உரைம்என-உரையுமென் றுரைக்க. 166-168. வென்றி நெடுவேல் வேந்தன் கேட்ப-வெற்றி பொருந்திய பெரிய வேற்படையையுடைய மன்னவன் கேட்குமாறு, தீ தின்றாக செங்கோல் வேந்து என-அரசே நின் செங்கோல் தீ தின்றியிருக்க என்று கூறி, மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைக்கும்-அம்முனி வர்களுள் ஒருவன் உரைப்பான்; 169-176. முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் கடியப்பட் டன ஐந்து உள - தத்துவத்தை யுணர்ந்த பெரியோரால் கடல் சூழ்ந்த உலகில் விலக்கப்பட்டன ஐந்து உள்ளன, அவற்றில் - அவற்றுள்ளே, கள்ளும் பொய்யும் களவும் கொலையும் தள்ளா தாகும் காமம்-கள் பொய் களவு கொலை ஆகிய நான்கு குற்றங்களையும் காமம் நீக்காதாகும், தம்பால் ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் என-ஆகலின் தம்மிடத்து அக்காமத்தை நீக்கினோர் ஏனைய குற்றங்களையும் நீக்கி னோராவர் என்று, நீங்கினர் அன்றே நிறைதவமாக்கள்-காமத்தை ஒழிந்தோரே நிறைந்த தவமுடையவர்கள், நீங்கார் அன்றே நீள்நில வேந்தே தாங்கா நரகம் தன்னிடை உழப்போர்-புவியினை ஆளும் அரசே அத்தகையகாமத்தினின்றும் நீங்காதோரே பொறுக்கவொண்ணாத நிரயத்தின்கண் வருந்துவோராவர் ; முடிபொருள்-வேதாகமங்களால் அறுதியிடப்பட்ட பொருள்: பர தத்துவம். "அவற்றில்...தள்ளாதாகும் காமம்" என்றதனால் கடியப்பட்ட ஐந்தாவன: கள், பொய், களவு, கொலை, காமம் என்பனவாதல் போதரும். கள் முதலிய நான்கினையும் காமம் தள்ளாது. எனவே காம முடையோர் ஏனைய நான்கு குற்றங் களையும் உடையராவ ரென்ப தாயிற்று. 177-183. சேரிய நெடுங்கண் சித்திராபதி மகள் - சிவந்த அரி படர்ந்த பெரிய கண்களையுடைய சித்திராபதியின் மகள், காதலன் உற்ற கடுந்துயர் பொறாஅள் மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தனள்-மாதவி காதலனாகிய கோவலன் இறந்த கொடிய துன்பத்தைப் பொறாதவளாய் அறவோர் சாலையை அடைந்தனள், மற்றவள் பெற்ற மணிமேகலை தான் முற்றாமுலையினள் முதிராக் கிளவியள் - அம்மாதவி பெற்ற மணிமேகலை யென்பவள் முற்றாத கொங்கையும் முதிராத சொல்லும் உடையளாகியும், செய்குவன் தவம் எனச் சிற்றிலும் பேரிலும் ஐயங்கொண்டு உண்டு அம்பலம் அடைந்தனள் - தவம் செய்வேன் என்று சிறிய இல்லங் களிலும் பெரிய மனைகளிலும் பிச்சை யேற்று உண்டு உலக வறவியை அடைந்தனள்; மகளாகிய மாதவி பொறாள் அடைந்தனள் எனக் கூட்டுக. முதிராக்கிளவி - இளஞ்சொல்; மழலைமொழி. முலையினளும் கிளவியளு மாகிய மணிமேகலை என்றலுமாம். 184-189. ஆங்கவள் அவ்வியல்பினளே ஆயினும் - மணிமேகலை அவ் வியல்பினை உடையவளாயினும், நீங்கான் அவளை நிழல்போல் யாங்கணும் - அவளை எவ்விடத்தும் நிழல் போல நீங்காதவனாய், காரிகை பொருட்டால் காமம் காழ் கொள - அவள் பொருட்டுக் காமம் முற்றி, ஆரிருள் அஞ்சான் அம்பலம் அடைந்தனன் - அரிய இருளிலே அஞ்சானாய் அம்பலத்தை அடைந்தனன், காயசண்டிகை வடிவாயினள் காரிகை-மணிமேகலை காயசண்டிகை என்னும் விஞ்சை மாதின் வடிவமெய்தினள், காயசண்டிகையும் ஆங்குளள் ஆதலின் - காயசண்டிகை என்பாள் முன்னர் ஆங்கு இருந்தன ளாதலால் ; அரசனுக்குக் கடிதின் வெகுளியுண்டாகாமைப் பொருட்டு அடைந்தவன் உதயகுமரன் என்பதனை மாதவன் முதற்கண் வெளிப்படக் கூறிற்றிலனென்க. காயசண்டிகை பசிநீங்கி வானிலே செல்வுழி விந்த மலையின் மேற்சென்று விந்தாகடிகையின் வயிற்றில் அடங்கினள் என (20: 114-121) மேல் உரைத்தமையின், ஈண்டு "ஆங்குளளாதலின் கணவனாகிய விஞ்சைய னொருவன்தோன்றி' எனக் கூட்டியுரைத் தலுமாம். 190-193. காயசண்டிகையின் கணவனாகிய வாய்வாள் விஞ்சையன் ஒருவன் தோன்றி - காயசண்டிகையின் கொழுநனாகிய தப்பாத வாளினையுடைய விஞ்சையன் ஒருவன் தோன்றி, ஈங்கிவள் பொருட்டால் வந்தனன் இவன் என! ஆங்கவன் தீவினை உருத்தது ஆகலின் - காயசண்டிகை பொருட்டு இவன் ஈண்டு வந்தனன் என்று கருத அவனது தீவினையானது சினந்து பற்றியதாதலால்; ‘என’ என்பதனை, என்று கருத என விரித்துத் தோன்றி என்பதற்கு முடிபாக்குக. ஆங்கவன் தீவினை - உதயகுமரனது தீவினை; காஞ்சனனது தீவினையுமாம். 194-204. மதிமருள் வெண்குடை மன்ன-திங்கள்போலும் வெண் குடையினையுடைய வேந்தே, நின்மகன் உதயகுமரன் ஒழியானாக - நின் புதல்வனாகிய உதயகுமரன் நீங்காதிருக்க, ஆங்கவன் தன்னை அம்பலத்து ஏற்றி-காயசண்டிகை யுருக் கொண்ட மணிமேகலையை அம்பலத்தில் ஏற்றுவித்து, ஓங்கிருள் யாமத்து இவனை ஆங்கு உய்த்து - மிகுந்த இருளையுடைய இடையாமத்தில் இவனை அவ்விடத்திற் செலுத்தி, காயசண்டிகையின் கணவன் ஆகிய வாய் வாள் விஞ்சையன் தன்னையும் கூஉய் - காயசண்டிகையின் கணவனாகிய கூரிய வாட்படையுடைய காஞ்சனனையும் அழைத்து, விஞ்சை மகள்பால் இவன் வந்தனன் என வஞ்ச விஞ்சையன் மனத்தையும் கலக்கி - அவன் மனைவியாகிய விஞ்சை மகளிடம் இவன் வந்தனன் என்று வஞ்சமுள்ள விஞ்சையனது உள்ளத்தையும் மயக்கி, ஆங்கவன்தன் கை வாளால் அம்பலத்து ஈங்கிவன் தன்னை எறிந்தது என்று - அவனது கைவாளினால் உலகவறவியில் இவனை வெட்டி வீழ்த்தியது என்று, ஏத்தி மாதவர் தம்முள் ஓர் மாதவன் உரைத்தலும்-மாதவருள் ஒருவன் அரசனை வாழ்த்தி உரைத்தவளவில்; ஒழியானாக-அம்பலத்தை விட்டு நீங்காதிருக்க. அத்தீவினை ஏற்றி, உய்த்து, கூஉய், கலக்கி, எறிந்தது என எழுவாய் வருவித்து முடிக்க. இந் நிகழ்ச்சிக்குக் காரணம் பழவினையே யன்றி, காஞ்சனன், மணிமேகலை, உதயகுமரன் என்பவருள் ஒருவரும் அல்லர் என்றபடியாயிற்று. 205-215. சோழிக ஏனாதி தன்முகம் நோக்கி - சோழிக ஏனாதியின் முகத்தை நோக்கி, யான் செயற்பாலது இளங்கோன்தன்னைத் தான் செய்ததனால் தகவிலன் விஞ்சையன்-இளங்கோவை யான் செயற்பாலதனை விஞ்சையன் தான்செய்ததனால் தகுதியிலாதவனா யினான், மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்-அரசனது காவல் இல்லையானால் தாபதர்களின் தவமும் மகளிர் கற்பும் இல்லையாகும், மகனை முறைசெய்த மன்னவன் வழி ஓர் துயர் வினையாளன் தோன்றினன் என்பது-கன்றையிழந்த பசுவின் துயரினைப் பொறாமல் தன் மகனைத் தேர்க்காலிற் கிடத்தி முறைபுரிந்த மனு வேந்தனின் மரபில் ஒரு தீவினை யாளன் தோன்றினன் என்னும் சொல், வேந்தர்தம் செவி உறுவதன் முன்னம்-ஏனைய அரசர்கள் காதில் புகுவதன் முன், ஈங்கிவன் தன்னையும் ஈமத்து ஏற்றி-இவனை ஈமத்தில் ஏற்றி, கணிகை மகளையும் காவல்செய்க என்றனன் அணிகிளர் நெடுமுடி அரசாள் வேந்து என்-கணிகையின் மகளாகிய மணிமேகலையையும் சிறை செய்க என்றுரைத்தனன் அழகு விளங்குகின்ற பெரிய முடியினையுடைய அரசாளும் மன்னன் என்க. சோழிக ஏனாதி என்பதற்குச் சோழனுடைய ஏனாதிப் பட்டம் பெற்ற சேனைத்தலைவன் என்பது பொருளாகும். ஏனாதி- தானைத் தலைவர்க்கு அரசர் அளிக்கும் பட்டப்பெயர் என்பதும், அதனுடன் மோதிரம் ஒன்றும் அளிக்கப்படும் என்பதும் தொல்காப்பியத்தில் 1"மாராயம் பெற்ற நெடுமொழியானும்" என்பதற்கும், சீவகசிந்தாமணியில் 2"ஆழி தொட்டான்" என்பதற்கும் நச்சினார்க்கினியர் எழுதிய உரையால் அறியப்படும். ஒரே வழி அமைச்சராயினார் தானைத் தலைமை பூண்டு படையை நடத்துவரேல் அச்சார்பு பற்றி அவர்க்கும் இப்பட்டப்பெயர் பொருந்துமென்க. விஞ்சையன், மைந்தன், மணிமேகலை என்னும் மூவரிடத்தும் குற்றமில்லையாக மாதவன் தீவினை மேல் ஏற்றி உரைத்திருப்பினும் அரசனுக்கு ஒவ்வோரியல்பு பற்றி அம் மூவர் பாலுமே வெறுப்புளதாயிற் றென்பது "தகவிலன் விஞ்சையன்," "துயர்வினை யாளன் றோன்றினன்", "கணிகை மகளையும் காவல் செய்க," என்னும் அவன் கூற்றால் அறியப்படும். விஞ்சையன் செய்கையால் தான் முறைசெய்தற்கு இடனில்லாமற் போனமையின் "தகவிலன் விஞ்சையன்" என்றானென்க. காவலின்றெனின், நோன்புமின்று கற்புமின்று எனத் தனித்தனி முடிக்க. மனு வேந்தன் மகனை முறை செய்த வரலாறு பெரியபுரா ணத்திலுள்ள திருவாரூர்ச் சிறப்பால் அறியப்படும். இதனை 3"மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான், முறைமைக்கு மூப்பிளமை யில்" 4"வாயிற் கடைமணி நடுநா நடுங்க; ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத் தான்றன், அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன், பெரும்பெயர்ப் புகாரென் பதியே" 5"சிந்தனை யாவிற்குமுற்றத் திருத்தேரின், மைந்தனை யூர்த்த மனுவோனும்" என்பவற்றானு மறிக: துயர்வினை துயருக்கு ஏதுவாகிய வினை; தீவினை. மண்டிலம் சீப்பப் புரிந்தோர் உரைப்பக் கேட்டு, மாதவரெல்லாம் மணிமேகலையை நோக்கி, ‘இதனை நீ அறிவதுமுண்டோ' என, அவள் உரைத்தலும், அவளைச் சிறுவனோடு வேறிடத் தொளித்து இசைத்துச் சென்று குறுகி ஒரு மாதவனுரைத்தலும், கேட்டு வேந்தன், ‘உரையும்' என ஒரு மாதவன் உரைக்கும்; அங்ஙனம் உரைக்கும் மாதவன் ஏத்தி உரைத்தலும் வேந்து காவல் செய்கென்றனன் என, வினைமுடிவு செய்க. சிறைசெய் காதை முற்றிற்று. 23. சிறைவிடு காதை பின்பு மன்னவன் அருளால் வாசந்தவையென்னும் முதியவள் மகன் துயரால் வருந்தும் இராசமாதேவியை அடைந்து அவள் வருத்தம் நீங்குமாறு பல கட்டுரைகள் கூறி ஒருவாறு ஆற்று வித்துச் சென்றனள்; அவள் சென்ற பின்பு, இராசமாதேவி தனது துயர் புறந்தோன்றாவண்ணம் அடக்கிக் கொண்டவளாய், 'மணிமேகலையை வஞ்சித்து வருத்துவேன்' என்று எண்ணி அரசனைச் சார்ந்து, 'செங்கோல் வேந்தே! மணிமேகலையின் பிக்குணிக் கோலத்தைக் கண்டு அறிவு திரிந்த உதயகுமரன் அரசாட்சிக்கு உரியவனல்லன்; அவன்அக்கொடுந் தொழிலால் இறந்தது தக்கதே; தனது இளமையைப் பயனற்றதாகச் செய்த பேரறிவுடையளாகிய மணிமேகலைக்குச் சிறை தக்கதன்று, 'என் றாள். அரசன், ‘நின் கருத்து அவ்வாறாயின் அவளைச் சிறையினின்றும் விடுவி' என்றனன்; என்றலும், மாதேவி அவளைச் சிறையினின்றும் விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அவளைத் துன்புறுத்தல் கருதி மயக்கும் மருந்தூட்டியும், தீங்கியற்றுமாறு கல்லாவிளைஞனொருவனை ஏவியும், பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறையில் அடைவித்தும், அவள் ஒன்றானும் துன்பமின்றி யிருந்தமை கண்டு வியந்து நடுங்கி, அவளைநோக்கி, 'மகனையிழந்த துன்பம் பொறுக்கலாற்றாது இத் தீங்குகளைச் செய்தேன்; இவற்றை நீ பொறுத்தருளவேண்டும்', எனப் பலவாறுவேண்டினள். வேண்டவே மணிமேகலை, 'சென்ற பிறப்பில் நீலபதியின் வயிற்றிற் றோன்றிய இராகுலனை நஞ்சுவிழியரவு உயிருண்ட பொழுது அதனைப் பொறாது தீயிற் பாய்ந்து என்உயிரைவிட்ட நாளில் இளங்கோன் பொருட்டு எங்கிருந்தழுதாய் ? இப்பொழுது நின் மகனுடைய உடற்கழுதனையோ? உயிர்க்கழுதனையோ? உடற்கு அழுதனை யேல் அதனை யெடுத்துப் புறங் காட்டிட்டவர் யார்? உயிர்க்கு அழுதனை யேல் வினையின் வழி அது சென்று புகும் உடம்பினை உணர்தல் அரிது; அவ்வுயிர்க்கு நீ அன்பினையாயின் எவ்வுயிர்க்கும் இரங்குதல் வேண்டும்,' என்றுரைத்து, மற்றும், ‘நின் மகனை விஞ்சையன் வெட்டி வீழ்த்துதற்குக் காரணமாயிருந்தது முற்பிறப்பில் அவன் மடைத்தொழிலாள னொருவனை வெட்டி வீழ்த்திய தீவினையேயாகும்', என்று கூறி, 'இச் செய்திகளை நீ எங்ஙனம் அறிந்தாயோ? என்னில், நடந்தது இவ்வாறாகும்,' என்றுதான் உவவனஞ் சென்றது முதலாகத் தெய்வக் கட்டுரை தெளிந்தது ஈறாக யாவற்றையும் விளங்க வுரைத்தனள். உரைத்தவள் பின்னும், 'நீ மருந்தால் எனக்குப் மத்தேற்றினை; யான் மறுபிறப் புணர்ந் தேனாதலின் சிறிதும் அறிவு பிறழா திருந்தேன்; உன் ஏவலால் கல்லாக்கயவன் என்பால் வந்தகாலை வேற்றுரு வெய்துவிக்கும் மந்திரவலியால் ஆணுருக்கொண்டிருந்தேன்; நோயில்லாத என்னைப் பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறையில் அடைப்பித்தாய்; ஊனொழி மந்திர முடைமையினாலே அத்துன்பத்தினின்றும் தப்பினேன். நீ சென்ற பிறப்பில் எனக்குக் கணவனாயிருந்த இராகுலனுக்கு இப்பிறப்பில் ஈன்ற தாயாதலின் உனது துயரினைக் களைந்து தீவினையைப் போக்கி உன்னை நன்னெறிப்படுத்தற் பொருட்டே வான் வழியே செல்லுதலையும், வேற்றுருக் கொள்ளு தலையும் யான் நினைந்திலேன்; உனது தடுமாற்றம் நீங்கி, யான் கூறும் இன்னுரையைக் கேட்பாயாக; காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்தும் பெருந்துன்பம் விளைப்பனவாகலின், இவற்றைக் கைவிடுதல் வேண்டும்; இவற்றைத் துறந்தோரே சீல முடையோராவர்; செற்றத்தை அடக்கினோரே முற்றவுணர்ந் தோராவர்; வறியோர்க்கு இல்லாதவற்றை அளிப்பவரே வாழ்பவர் எனப்படுவர்; வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கினோரே மறுமை யுலகினை அறிந்தோராவர்; மன்பதைக்கெல்லாம் அன்பு ஒழியாதவரே தத்துவத்தை உணர்ந்தோராவர்,' என்று ஞான மாகிய நீரினை இராசமாதேவியின் செவியில் வார்த்து, அவளது துயரகிய தீயினை மணிமேகலை அவிப்ப, அவள் மனந்தெளிந்து மணிமேகலையை வணங்கினள். மணிமேகலை அதனைப் பொறாளாகி, ‘நீ என் கணவனைப் பெற்ற தாயாதலன்றி, அரசனுடைய மாபெருந் தேவியாகவும் உள்ளாய்; ஆதலால் என்னை வணங்குதல் தகுதியன்று,' என்று கூறித் தானும் அன்புடன் அவளை வணங்கினாள். மன்னவ னருளால் வாசந் தவையெனும் நன்னெடுங் கூந்தல் நரைமூ தாட்டி அரசற் காயினுங் குமரற் காயினும் திருநிலக் கிழமைத் தேவியர்க் காயினும் 5 கட்டுரை விரித்துங் கற்றவை பகர்ந்தும் பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள் இலங்கரி நெடுங்கண் இராசமா தேவி கலங்கஞ ரொழியக் கடிதுசென் றெய்தி 1அழுதடி வீழா தாயிழை தன்னைத் 10 தொழுதுமுன் னின்று தோன்ற வாழ்த்திக் கொற்றங் கொண்டு குடிபுறங் 2காத்தும் 3செற்றத் தெவ்வர் தேஎந்தம தாக்கியும் தருப்பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகன் மன்னர் செல்வழிச் செல்கென 15 மூத்து விளிதலிக் குடிப்பிறந் தோர்க்கு நாப்புடை பெயராது நாணுத்தக வுடைத்தே தன்மண் காத்தன்று பிறர்மண் கொண்டன்று என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது மன்பதை காக்கு மன்னவன் றன்முன் 20 துன்பங் கொள்ளே லென்றவள் போயபின் கையாற் றுள்ளங் கரந்தகத் தடக்கிப் பொய்யாற் றொழுக்கங் கொண்டுபுற மறைத்து வஞ்சஞ் செய்குவன் மணிமே கலையையென் றஞ்சி லோதி யரசனுக் கொருநாள் 25 பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத் தறிவு திரிந்தோ னரசியல் தானிலன் கரும்புடைத் தடக்கைக் காமன் கையற அரும்பெற லிளமை பெரும்பிறி தாக்கும் அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச் 30 சிறைதக் கன்று செங்கோல் வேந்தெனச் சிறப்பின் பாலார் மக்க ளல்லார் மறப்பின் பாலார் மன்னர்க் கென்பது அறிந்தனை யாயினிவ் வாயிழை தன்னைச் செறிந்த சிறைநோய் தீர்க்கென் றிறைசொல 35 என்னோ டிருப்பினு மிருக்கஇவ் விளங்கொடி தன்னோ டெடுப்பினுந் தகைக்குந ரில்லென்று அங்கவள் தனைக்கூஉய் அவள்தன் னோடு கொங்கவிழ் குழலாள் கோயிலுட் புக்காங்கு அறிவு திரித்திவ் வகனக ரெல்லாம் 40 எறிதரு கோலம்யான் செய்குவ லென்றே மயற்பகை யூட்ட மறுபிறப் புணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவின ளாகக் கல்லா விளைஞ னொருவனைக் கூஉய் வல்லாங்குச் செய்து மணிமே கலைதன் 45 இணைவள ரிளமுலை யேந்தெழி லாகத்துப் புணர்குறி செய்து பொருந்தின ளென்னும் பான்மைக் கட்டுரை பலர்க்குரை யென்றே காணம் பலவுங் கைநிறை கொடுப்ப ஆங்கவன் சென்றவ் வாயிழை யிருந்த 50 பாங்கி லொருசிறைப் பாடுசென் றணைதலும் தேவி வஞ்ச மிதுவெனத் தெளிந்து நாவியன் மந்திரம் நடுங்கா தோதி ஆண்மைக் கோலத் தாயிழை யிருப்பக் காணம் பெற்றோன் கடுந்துய ரெய்தி 55 அரச ருரிமையி லாடவ ரணுகார் நிரயக் கொடுமகள் நினைப்பறி யேனென் றகநகர் கைவிட் டாங்கவன் போயபின் மகனைநோய் செய்தாளை வைப்ப தென்னென்று உய்யா நோயி னூணொழிந் தனளெனப் 60 பொய்ந்நோய் காட்டிப் புழுக்கறை யடைப்ப ஊணொழி மந்திர முடைமையின் அந்த வாணுதல் மேனி வருந்தா திருப்ப ஐயென விம்மி யாயிழை நடுங்கிச் செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் 65 என்மகற் குற்ற இடுக்கண் பொறாது பொன்னே ரனையாய் பொறுக்கென் றவள்தொழ நீல பதிதன் வயிற்றிற் றோன்றிய ஏலங் கமழ்தா ரிராகுலன் றன்னை அழற்கண் நாகம் ஆருயி ருண்ண 70 விழித்த லாற்றே னென்னுயிர் சுடுநாள் யாங்கிருந் தழுதனை யிளங்கோன் றனக்குப் பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை உடற்கழு தனையோ வுயிர்க்கழு தனையோ உடற்கழு தனையே லுன்மகன் றன்னை 75 எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே உயிர்க்கழு தனையே லுயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையாற் றெரிந்துணர் வரியது அவ்வுயிர்க் கன்பினை யாயி னாய்தொடி எவ்வுயிர்க் காயினு மிரங்கல் வேண்டும் 80 மற்றுன் மகனை மாபெருந் தேவி செற்ற கள்வன் செய்தது கேளாய் மடைக்கலஞ் சிதைய வீழ்ந்த மடையனை உடற்றுணி செய்தாங் குருத்தெழும் வல்வினை நஞ்சுவிழி யரவின் நல்லுயிர் வாங்கி 85 விஞ்சையன் வாளால் வீட்டிய தன்றே யாங்கறிந் தனையோ ஈங்கிது நீயெனிற் பூங்கொடி நல்லாய் புகுந்த திதுவென மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலாத் தெய்வக் கட்டுரை தெளிந்ததை யீறா 90 உற்றதை யெல்லா மொழிவின் றுரைத்து மற்று முரைசெயும் மணிமே கலைதான் மயற்பகை யூட்டினை மறுபிறப் புணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினே னாயினேன் கல்லாக் கயவன் காரிருட் டான்வர 95 நல்லாய் ஆணுரு நான்கொண் டிருந்தேன் ஊணொழி மந்திர முடைமையி னன்றோ மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும் சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில் 100 காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால் தையா லுன்றன் றடுமாற் றவலத்து எய்யா மையல்தீர்ந் தின்னுரை கேளாய் ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக் 105 காருக மடந்தை கணவனுங் கைவிட ஈன்ற குழவியொடு தான்வே றாகி மான்றோர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப் புதல்வன் றன்னையோர் புரிநூன் மார்பன் பதியோ ரறியாப் பான்மையின் வளர்க்க 110 ஆங்கப் புதல்வன் அவள்திற மறியான் தான்புணர்ந் தறிந்துபின் றன்னுயிர் நீத்ததும் நீர்நசை வேட்கையி னெடுங்கட முழலும் சூன்முதிர் மடமான் வயிறுகிழித் தோடக் கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப 115 மான்மறி விழுந்தது கண்டு மனமயங்கிப் பயிர்க்குரல் கேட்டதன் பான்மைய னாகி உயிர்ப்பொடு செங்க ணுகுத்த நீர்கண்டு ஓட்டி யெய்தோ னோருயிர் துறந்ததுங் கேட்டு மறிதியோ வாட்டடங் கண்ணி 120 கடாஅ யானைமுன் கட்கா முற்றோர் விடாஅது சென்றதன் வெண்கோட்டு வீழ்வது உண்ட கள்ளி னுறுசெருக்காவது கண்டு மறிதியோ காரிகை நல்லாய் பொய்யாற் றொழுக்கம் பொருளெனக் கொண்டோர் 125 கையாற் றவலங் கடந்தது முண்டோ களவேர் வாழ்க்கைய ருறூஉங் கடுந்துயர் இளவேய்த் தோளாய்க் கிடுவென வேண்டா மன்பே ருலகத்து வாழ்வோர்க் கிங்கிவை துன்பந் தருவன துறத்தல் வேண்டும் 130 கற்ற கல்வி யன்றாற் காரிகை செற்றஞ் செறுத்தோர் முற்ற வுணர்ந்தோர் மல்லன்மா ஞாலத்து வாழ்வோ ரென்போர் அல்லன் மாக்கட் கில்லது நிரப்புநர் திருந்தே ரெல்வளை செல்லுல கறிந்தோர் 135 வருந்தி வந்தோ ரரும்பசி களைந்தோர் துன்ப மறுக்குந் துணிபொரு ளுணர்ந்தோர் மன்பதைக் கெல்லா மன்பொழி யாரென ஞான நன்னீர் நன்கனந் தெளித்துத் தேனா ரோதி செவிமுதல் வார்த்து 140 மகன்றுயர் நெருப்பா மனம்விற காக அகஞ்சுடு வெந்தீ யாயிழை யவிப்பத் தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து மாறுகொண் டோரா மனத்தின ளாகி ஆங்கவள் தொழுதலு மாயிழை பொறாஅள் 145 தான்றொழு தேத்தித் தகுதி செய்திலை காதலற் பயந்தோ யன்றியுங் காவலன் மாபெருந் தேவியென் றெதிர்வணங் கினளென். உரை 1-10. மன்னவன் அருளால் வாசந்தவை எனும் நல் நெடுங் கூந்தல் நரை மூதாட்டி-அரசன் ஆணையால் அழகிய நீண்ட கூந்தல்நரைத்த முதியோளாகிய வாசந்தவை என்பாள், அரசற்கு ஆயினும் குமரற்கு ஆயினும் திருநிலக் கிழமைத் தேவியர்க்கு ஆயினும் - அரசற்கும் அரச குமரற்கும் திருவனைய நிலவுரிமைத் தேவியர்க்கும், கட்டுரை விரித்துக் கற்றவை பகர்ந்தும் - பொருள் பொதிந்த சொற்களை விரித்துக் கூறியும் தாங்கற்றனவற்றை எடுத்துரைத்தும், பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள் - அவர்கட்கு உண்டாகிய துன்பங்களை நீக்கும் பயன் சிறந்த மொழி யினையுடையாள் ஆதலின், இலங்கு அரிநெடுங்கண் இராசமாதேவி-விளங்குகின்ற அரிபடர்ந்த பெரிய கண்களை யுடைய அரசன் பெருந்தேவி, கலங்கு அஞர் ஒழியக் கடிது சென்று எய்தி-கலங்குதற்குக் காரணமாகிய துன்பம் நீங்குமாறு விரைவிற் சென்று அவளிருப்பிடத்தையடைந்து, அழுது அடி வீழாது ஆயிழை தன்னைத் தொழுது முன்னின்று தோன்ற வாழ்த்தி-அவள் அடிகளில் வீழ்ந்து அழாமல் மன்னவன் றேவியை அஞ்சலி செய்து முன்னே நின்று நன்கு வாழ்த்தி ; மன்னவனருளாற் கடிது சென் றெய்தி என்க. மொழியினள் ஆகலின் என விரித்துரைக்க ; மொழியினளாகிய மூதாட்டி என்றியைத்தலுமாம். நிலக்கிழமை-அரசாளு முரிமை. ஆயினும் என்னும் இடைச்சொல் எண்ணுப் பொருளில் வந்தது ; விகற்பப் பொருட்டுமாம். ஆயிழை : சுட்டு. 11-16. கொற்றம் கொண்டு குடி புறம் காத்தும்-வெற்றி கொண்டு குடிகளைப் பிறர் நலியாமற் பாதுகாத்தும். செற்றத் தெவ்வர் தேஎம் தமதாக்கியும் - பகைமையை யுடைய மாற்றாரது நாட்டினைத் தம்முடையதாக்கியும் அன்றி, தருப் பையிற் கிடத்தி வாளிற் போழ்ந்து செருப்புகல் மன்னர் செல்வுழிச்செல்க என-தருப்பைப் புல்லிற் கிடத்தி வாளாற் பிளந்து போரில் வெற்றிகொண்டு உயிர் துறந்த மன்னர் செல்லும் உலகத்தின்கட் செல்க என்று கூறுமாறு, மூத்து விளிதல்-வாளா முதுமையுற்று இறத்தல், இக்குடிப் பிறந் தோர்க்கு நாப்புடை பெயராது நாணுத்தகவுடைத்தே - இச்சோழர் குடியிற் பிறந்தோர்க்கு நாணுந் தகுதியை யுடைத்து ஆகலான் இதனைக் கூறுதற்கு எனது நா எழுகின்றிலது ; கொற்றம் - அரச வுரிமையுமாம். செற்ற தெவ்வர் என்பது பாடமாயின் வெகுண்டெழுந்த பகைவர் என்க. தமதாக்கியும் அன்றி என ஒரு சொல் வருவித்துரைக்க; தமதாக்கியும் மூத்து விளிதல் என்றியைத் துரைப்பாரு முளர். மூத்து விளிதலோடு பிணியால் விளிதலுங் கொள்க. போரிலுயிர் துறவாது நோயால் விளிந்த அரசரது யாக்கையை அந்தணர் தருப்பையிற் கிடத்தி வாளாற் பிளந்து அடக்குவரென்பது, 1"ஓடன் மரீஇய பீடின் மன்னர், நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார், அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்; திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி, மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த, நீள்கழல் மறவர் செல்வுழிச்செல்கென, வாள்போழ்ந் தடக்கலு முய்ந்தனர்" என்பதனால் அறியப்படும்: 2"மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவர்..." என்னும் நச்சினார்க்கினியர் உரையும் ஈண்டு அறியற்பாற்று. மேல், ‘தன்மண் காத்தன்று, பிறர்மண் கொண்டன்று' என வருதற் கேற்ப, 'குடிபுறங்காத்தும்' எனப் பாடம் கொண்டாம். 17-20. தன் மண்காத்தன்று பிறர் மண்கொண்டன்று என்னெனப் படுமோ நின்மகன் மடிந்தது-நின் புதல்வ னிறந்தது தன் நிலத்தைக் காத்தமையாலன்று பகைவர் நிலத்தைக் கொண்டமையாலு மன்று காமத்தால் நிகழ்ந்த அவ்விறப்பு யாதென்று கூறப் படும், மன்பதை காக்கும் மன்னவன் தன் முன் துன்பங் கொள்ளேல் என்று அவள் போயபின் - உயிர்ப் பன்மை களைக் காக்கின்ற அரசன் முன்னர்த் துன்பம் கொள்ளாதே என வுரைத்து வாசந்தவை சென்றபின்னர்; காமத்தால் என்பது வருவித்துரைக்கப் பட்டது. என்னெனப் படும் - எத்தகையதென்று கூறப்படும்; இக்குடிப் பிறந்தோர்க்கு ஏலாத இழிவுடைய தென்றபடி. அவள் துன்புறுதல் அரசற்கு வருத்தத்தைச் செய்யுமாகலின் ‘மன்பதை காக்கு மன்ன வன்றன்முன், துன்பங் கொள்ளேல்' என்றாள். 21-30. கையாற்று உள்ளம் கரந்து அகத்து அடக்கி-செயலற வினையுடைய உள்ளத்தை மறைத்து அடக்கி, பொய்யாற்று ஒழுக்கம் கொண்டு புறமறைத்து - பொய்ந் நெறிக்கண் ஒழுகுதலைக் கொண்டு அதனைப் புறத்தே தோன்றாமல் மறைத்து, வஞ்சம் செய்குவன் மணிமேகலையை என்று-மணிமேகலையை வஞ்சித்து வருத்துவேன் என்று கருதி, அஞ்சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெருந்தேவி, அரசனுக்கு ஒரு நாள் - ஒரு நாள், அரசன் பால், பிறர் பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து-மற்றையோர் பின்னே செல்லாத பிக்குணி வடிவத்தைக் கண்டு, அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன் - அறிவு வேறுபட்ட உதயகுமரன் அரசாளும் தகுதியில்லாதவன், கரும்புடைத் தடக்கைக் காமன் கையற - கரும்பு வில்லையுடைய பெரிய கையை யுடைய காமன் செயலறுமாறு, அரும் பெறல் இளமை பெரும் பிறிதாக்கும்-பெறுதற் கரிய இளமைப் பருவத்தைப் பயன்படாது கெடச் செய்த, அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்கு-நல்லறிவு நேர்பட்ட மணிமேகலைக்கு, சிறை தக்கன்று செங்கோல் வேந்து என -செங்கோல் வேந்தே சிறை தக்க தன்று என மொழிய; கையாற்றுள்ளம் - புதல்வ னிறந்த துயருடன் கூடிய உள்ளம். தனது தீய எண்ணம் புறந்தோன்றாம் மறைத்தென்க. பிறர் பின் செல்லா-ஆடவர் விரும்பிப் பின் செல்லலாகாத, இவளால் முனிவருள்ளிட்ட பகையை வெல்லக் கருதியிருந்தானாகலின் காமன் கையறுவானென்க; 1"உருவிலாள னொருபெருஞ் சிலை யொடு, விரைமலர் வாளி வெறுநிலத் தெறிய...; அறம்படுத்தனள்" என்பதுங் காண்க. பெரும் பிறிதாக்கல் - கெடுத்தல். தக்கதன்று என்பது விகாரப்பட்டது. வேந்து: அண்மை விளி. என - என்று சொல்ல; அஞ்சிலோதி ஒரு நாள் அரசனுக்குச் சொல்ல வென்க. 31-34. சிறப்பின் பாலார் மக்கள் அல்லார் மறப்பின் பாலார் மன்னர்க்கு என்பது - அரசர்கட்கு அறிவொழுக்கம் முதலிய சிறப்பியல்புகளை யுடையவரே புதல்வர் ஆவர் அல்லாதார் மறத்தற்குரியர் என்பதனை, அறிந்தனை ஆயின்-உணர்ந்தனை யானால், இவ் ஆயிழை தன்னை - இந் நங்கையை, செறிந்த சிறை நோய் தீர்க்க என்று இறை சொல - நெருங்கிய சிறைத் துன்பத்தினின்றும் நீக்குவாயாக என்று அரசன் கூற; மறப்பின் பாலார்-புதல்வரல்ல ரென மறக்கும் பகுதியின ரென்க. என்பது-என்னுமுண்மையை. நீயே அறிந்தனையாயின் தீர்க்கவென்று சொல்ல வென்க. 35-38. என்னோடு இருப்பினும் இருக்க இவ்விளங்கொடி தன் ஓடு எடுப்பினும் தகைக்குநர் இல்லென்று - இவ்விளங்கொடி போல்வாள் என்னுடன் இருப்பினும் இருக்க அன்றித் தனக்குரிய ஓட்டினை ஏந்திப் பிச்சைக்குச் செல்லினும் தடுப்பவர் இல்லை என்று, அங்கவள்தனைக் கூஉய் - மணிமேகலையை அழைத்து, அவள் தன்னோடு - அவளுடன், கொங்கு அவிழ் குழலாள் கோயிலுட் புக்கு - மணம் விரியும் கூந்தலையுடைய இராசமாதேவி அரண்மனையுட் புகுந்து ; 39-42. அறிவு திரித்து - இவளது அறிவை மருந்தினால் வேறு படுத்தி, இவ்வகல் நகர் எல்லாம் எறிதரு கோலம் யான் செய்குவல் என்றே-இவ்வகன்ற ஊரிலுள்ளோ ரனைவரும் இவளை அடிக்கும் கோலத்தைச் செய்வேன் என்று கருதி; மயற்பகை யூட்ட-பித்தேறுதற்குக் காரணமாகிய மருந்தை யூட்ட, மறு பிறப்பு உணர்ந்தாள் அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக-மறு பிறப்பினை அறிந்த மணிமேகலை மறத்தலில்லா அறிவுடன் விளங்க; எறிதல் - கோலால் அடித்தல்; கல்லெறிதலுமாம். மயல் - மருள்; பித்து. மயலாகிய பகை யென்க. மயலூட்டலாவது - மருளுதற்குக் காரணமாகிய மருந்தை யூட்டல். 1"வஞ்சமுண்டு மயற்பகை யுற்றோர்" என்றார் இளங்கோ வடிகளும். "மயற்பகை யூட்டினை மறுபிறப் புணர்ந்தேன், அயர்ப்பது செய்யா அறிவினே னாயினோன்" என இக்காதையுட் பின் வருதலும் அறியற்பாற்று. 43-48. கல்லா இளைஞன் ஒருவனைக் கூஉய் - கல்வி யில்லாத இளைஞன் ஒருவனை அழைத்து, வல்லாங்குச் செய்து-வல்லமை செய்து, மணிமேகலை தன் இணைவளர் இளமுலை-மணிமேகலை தன் இளங் கொங்கைகள், ஏந்து எழில் ஆகத்துப் புணர் குறி செய்து பொருந்தினள் என்னும்-எனது மிக்க அழகினையுடைய மார்பின்கண் பொருந்தும் குறியினைச் செய்து கூடினள் என்னும், பான்மைக் கட்டுரை பலர்க்கு உரை என்றே-முறைமையுடைய கட்டுரையைப் பலர்க்கும் கூறுவாயாக என்று, காணம் பலவும் கைநிறை கொடுப்ப - பொற்காசுகள் பலவற்றைக் கைநிறையக் கொடுக்க ; அரசன் றேவி கூஉய் உரை யென்று கொடுப்ப வென்க. வல்லாங்கு-வல்லமை; 2"வல்லாங்கு வாழ்து மென்னாது" என்பது காண்க. நிறைய என்பது நிறை என விகாரமாயிற்று. 49-57. ஆங்கவன் சென்று அவ்வாயிழை இருந்த பாங்கில் ஒரு சிறைப் பாடு சென்று அணைதலும்-அறிவற்ற அவ்விளைஞன் மணிமேகலை இருந்த அழகிலாத ஒரு புறத்திலே பக்கலிற் சென்று அடைதலும், தேவி வஞ்சம் இது எனத் தெளிந்து - அரசன் மனைவியினுடைய வஞ்சமாகும் இது என்று உணர்ந்து, நா இயல் மந்திரம் நடுங்காது ஓதி - நாப் புடை பெயருமளவில் கூறும் மந்திரத்தைச் செவ்வனம் ஓதி, ஆண்மைக் கோலத்து ஆயிழை இருப்ப ‘மணிமேகலை ஆடவன் வடிவத்துட னிருக்க, காணம் பெற்றோன் கடுந்துயர் எய்தி - பொன் பெற்ற கயவன் மிகுந்த துன்பத்தை யடைந்து, அரசர் உரிமை இல் ஆடவர் அணுகார் - அரசன் மனைவியரிருக்கும் அந்தப் புரத்தில் ஆண் மக்கள் குறுகார், நிரயக் கொடுமகள் நினைப்பு அறியேன் என்று-நிரயத்தை யடைதற்குரிய கொடுமையை உடைய இவளது தீய எண்ணத்தை யான் அறிந்திலேன் என்று கருதி, அகநகர் கைவிட்டு ஆங்கவன் போய பின் - அவன் ஊரைவிட்டு ஓடிய பின்னர்; மந்திரம் - வேற்றுரு எய்துவிக்கும் மந்திரம். மந்திரம் பிறர் செவிக்குப் புலனாகாவாறு நாப்புடைபெயரும் அளவானே ஓதல் பெறல் வேண்டுமென்பது 1"ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி, நாவியன் மருங்கின் நவிலப் பாடி" என்பதனாலும் அறியப்படும். ஆயிழை தெளிந்து ஓதி இருப்ப வென்க. உரிமை இல்-உரிமை மகளிர் இருக்கும் இல்லம்; இஃது அந்தப்புரம் எனப்படும்; அதன்கண் ஆடவர் எய்தப் பெறார் என்பதனை 2"ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்" என்பதனா னறிக; மகளிராலேயே காக்கப்படுதலின் இதனைக் 3"குழை முகப் புரிசை" என்பர் திருத்தக்கதேவர். 58-66. மகனை நோய் செய்தாளை வைப்பது என் என்று - உதயகுமரனுக்குக் காம நோயை உண்டாக்கி அவனைக் கொல்லுவித்த இவளை உயிருடன் வைத்திருப்பதால் யாது பயன் என்று கருதி, உய்யா நோயின் ஊண் ஒழிந்தனள் என்று பொய் நோய்காட்டிப் புழுக்கறை அடைப்ப - உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய நோயினால் மணிமேகலை உணவுண்டல் நீங்கினாள் என்று அவள்பால் பொய் நோயைக் கூறி அவளைப் புழுக்கமுடைய ஓர் அறையில் அடைத்து வைக்க, ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அந்த வாள் நுதல் மேனி வருந்தாது இருப்ப-மணிமேகலை பசியை ஒழிக்கும் மந்திரம் உடையளாயினமையால் உடல் வாடாது மகிழ்ச்சி யுடன் இருக்க, ஐயென விம்மி ஆயிழை நடுங்கி-அரசன் றேவி விரைவுடன் பொருமி நடுக்கமெய்தி, செய்தவத் தாட்டியைச் சிறுமை செய்தேன் - தவமகளாகிய நினக்குத் துன்பத்தைச் செய்தேன், என்மகன் உற்ற இடுக்கண் பொறாது-என் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவளாய், பொன் னேரனையாய் பொறுக்க என்று அவள் தொழ - திருமகள் போல்வாய் பொறுத்துக் கொள்க என்று பெருந்தேவி வணங்க; மணிமேகலை காரணமாக உதயகுமரன் இறந்தமையின் 'மகனை நோய் செய்தாளை' என்றாள். என்னென்று - பொருந் தாதென்று என்ற படி. புழுக்கறை - புழுங்கச் செய்யும் அறை; 'புழுக்கறைப் பட்டோர் போன்று" (3.95) என முன் வந்தமையுங் காண்க. (இராச மாதேவி) என்னென்று காட்டி அடைப்ப வென்க. செய்தவத்தாட்டியை: முன்னிலையிற் படர்க்கை. சிறுமை - துன்பம், குற்றம்; என்றது மயற்கை யூட்டியது முதலிய மூன்றையும். பொறாது சிறுமைசெய்தேன் எனக் கூட்டுக. 67-79. நீலபதிதன் வயிற்றில் தோன்றிய - நீலபதி என்பவளது வயிற்றிற் பிறந்த, ஏலம் கமழ்தார் இராகுலன் தன்னை - மணங்கமழும் மாலையினையுடைய இராகுலனை, அழற் கண் நாகம் ஆருயிர் உண்ண - நஞ்சுவிழி அரவு உயிரைக் கொள்ள, விழித்தல் ஆற்றேன் என்னுயிர்ச் சுடு நாள் - உயிர் வாழ்தலைப் பொறாமல் யான் என துயிரைத் தீயிலிட்ட ஞான்று, யாங்கிருந்து அழுதனை இளங்கோன் தனக்கு - நீ இளங்கோவிற்கு எங்கிருந்து அழுதாய், பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை-பூங்கொடியனைய தேவி பொருந்தா தனவற்றைச் செய்தாய், உடற்கு அழுதனையோ உயிர்க்கு அழுதனையோ - நீ நின் மகனது உடலுக்கு அழுதாயோ அன்றி உயிரினுக்கு அழுதாயோ, உடற்கு அழுதனையேல் உன் மகன் தன்னை எடுத்துப் புறங்காட்டு இட்டனர் யாரே - உடலின் பொருட்டு அழுதாயானால் நின் மகனைப் புறங் காட்டிலிட்டோர் யாவர், உயிர்க்கு அழுதனையேல் உயிர் புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது - உயிரின் பொருட்டு அழுதாயேல் செய்வினை வழியே அவ்வுயிர் புகுமிடத்தைத் தெளிய அறிய ஒண்ணாது, அவ்வுயிர்க்கு அன்பினை ஆயின் ஆய் தொடி எவ்வுயிர்க்கு ஆயினும் இரங்கல் வேண்டும்-ஆராய்ந்த வளையல்களை யுடையவளே நின் மகனது உயிரினிடம் நீ அன்புடைமை யானால் எல்லாவுயிர்களிடத்தும் இரக்கங் கொள்ளல் வேண்டும்; அழற்கண் நாகம் - திட்டிவிடம் என்னும் பாம்பு; பார்வையால் உயிர் கொல்வது. விழத்தல் என்பது பாடமாயின், இழத்தல் எனப் பிரித்துக் கணவனை யிழந்திருத்தலை ஆற்றேனாய் எனப் பொருள் கொள்க. யாங்கிருந்தழுதனை - அழுதிலாய் என்றபடி, புக்கில்-புகும் இடம்; உடம்பு. வினையால் உயிர் புகும் புக்கில் உணர்வரிய தென்க. ஆய் தொடி: விளி. எவ்வுயிர்க்காயினும் - எல்லாவுயிர் கட்கும். உடம்பிலன்றி உயிரின்கண் வேற்றுமை யின்மையால் அவ்வுயிர்க் கன்பினையாயின் எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் என்றாள் ; அன்றி, எல்லாவுயிர்க்கும் அன்பு செய்வுழி நின் மகனுயிர்க்கும் அன்பு செய்தாயாவை என்றாளுமாம். 80-85. மற்று உன் மகனை மாபெருந்தேவி செற்றகள்வன் செய்தது கேளாய் - அரசமாதேவி, மற்றும் நின்மகனைச் சினந்த காஞ்சனன் கொலைபுரிதற்குக் காரணமான தீவினையைக் கேட்பாயாக, மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்தாங்கு உருத்தெழும் வல்வினை - சோற்றுக் கலம் சிதையுமாறு வீழ்ந்த அட்டிலாளனை உடலைத் துண்டமாக வெட்டியமையால் தோன்றி எழுந்த வலிய வினையானது, நஞ்சு விழி அரவின் நல்லுயிர் வாங்கி-விழியில் நஞ்சினைக் கொண்ட பாம்பினால் அவனது நல்லுயிரைக் கொண்டு, விஞ்சையன் வாளால் வீட்டியது அன்றே-இப்பிறவியில் விஞ்சையனது வாளினால் வீழ்த்தியது ; மாபெருந்தேவி: விளி. கள்வன் - காஞ்சனன். செற்றக் கள்வன் என்பது பாடமாயின், செற்றமாகிய கள்வன் என உருவக மாக்குக. உருத்து - உருக்கொண்டு, சென்ற பிறப்பிலே அரவினால் உயிர் வாங்கி இப்பிறப்பிலே வாளால் வீட்டியது என்க. வீட்டியது - கொன்றது; வீழ்த்தியது என்பதன் மரூஉவுமாம். 86-90. யாங்கறிந்தனையோ ஈங்கிது நீ எனில்-நீ இதனை எங்ஙனம் அறிந்தனை என வினாவின், பூங்கொடி நல்லாய்புகுந்தது இது என - பூங்கொடி போல்வாய் நிகழ்ந்தது இது வென்று, மொய்ம்மலர்ப் பூம்பொழில் புக்கது முதலா-மலர் கொய்யும் பொருட்டுச் சுதமதியுடன் தான் உவவனம் சென்றது முதலாக, தெய்வக் கட்டுரை தெளிந்ததை ஈறா - கந்திற்பாவையின் பொருண்மொழிகளைக் கேட்டுத் தெளிவுற்றது இறுதியாக, உற்றதை எல்லாம் ஒழிவின்று உரைத்து - நிகழ்ந்தன அனைத்தையும் தப்பாமற் கூறி ; ஈங்கிது - இச் செய்தி. கட்டுரையால் தெளிந்ததென்க. தெளிந்ததை: ஐ: அசை. உற்றதை யெல்லாம் ஒருமைப் பன்மை மயக்கம். 91-97. மற்றும் உரை செய்யும் மணிமேகலை தான்-மணிமேகலை பின்னுங் கூறுவாள், மயற்பகை ஊட்டினை மறு பிறப்பு உணர்ந்தேன் அயர்ப்பது செய்யா அறிவினேன் ஆயினேன் - பித்தேற்றும் மருந்தை யுண்பித்தாயாகவும் மறு பிறப்பினை அறிந்தேன் ஆகலின் மறத்தலில்லா அறிவுடையேனாயினேன், கல்லாக் கயவன் கார் இருள் தான்வர நல்லாய் ஆணுரு நான் கொண்டு இருந்தேன் - மெல்லியலே அறிவிலாக் கீழ்மகன் கரிய இருளின்கண் வர யான் ஆண் வடிவங்கொண்டு இருந்தேன், ஊண் ஒழி மந்திரம் உடைமையின் அன்றோ மாணிழை செய்த வஞ்சம் பிழைத்தது-பசி நீக்கும் மந்திரம் பெற்றிருந்தமையாலன்றோ நீ செய்த வஞ்சத்தினின்றும் தப்பியது ; மறுபிறப் புணர்ந்தேன் ஆகலின் என விரித்துரைக்க. வேற்றுரு வெய்துவிக்கும் மந்திரம் உடைமையினால் ஆணுரு நான் கொண்டிருந்தேன் எனவும் ஏது விரித்துரைக்க. மாணிழை: முன்னிலையிற் படர்க்கை. வஞ்சம் - உய்யா நோயின் ஊணொழிந்தனள் எனப் புழுக்கறை யடைத்தது. 98-101. அந்தரஞ் சேறலும் அயலுருக்கோடலும் - விசும்பூடு செல்லுதலையும் வேற்றுருக் கொள்ளுதலையும், சிந்தையிற் கொண்டிலேன் சென்ற பிறவியில் காதலற் பயந்தோய் கடுந்துயர் களைந்து தீதுறு வெவ்வினை தீர்ப்பது பொருட்டால்-முற்பிறப்பில் கணவனாயிருந் தோனைப் பெற்ற நினது கொடிய துன்பத்தை நீக்கித் தீவினைகளை ஒழிக்கும் பொருட்டு உளத்தி லெண்ண வில்லை; வெவ்வினை தீர்ப்பது பொருட்டால் அந்தரஞ் சேறலும் அயலுருக் கோடலும் சிந்தையிற் கொண்டிலேன் என்க. 102-103. தையால்-தையலே, உன்றன்-உனது, தடுமாற்று அவலத்து எய்யா மையல் தீர்ந்து-தடுமாற்றத்துக்குக் காரணமாகிய வருத்தத்தைச் செய்யும் அறியாமையாகிய மயக்கத்தின் நீங்கி, இன்னுரை கேளாய் - யான் கூறும் இவ்வினிய மொழிகளைக் கேட்பாயாக ; எய்யாமை - அறியாமை. மையல் - செல்வச் செருக்குமாம். 104-111. ஆள்பவர் கலக்குற மயங்கிய நன்னாட்டுக் காருக மடந்தை- அரசரது கொடுங்கோன்மையால் அனைவரும் தத்தம் நிலைகலங்கிய நல்ல நாட்டில் இல்லற ஒழுக்கினளாகிய ஒருத்தி, கணவனும் கைவிட-கணவனும் கைவிட்டமையான், ஈன்ற குழவியொடு தான் வேறாகி - தான் ஈன்ற குழந்தையினின்றும் தான் வேறிடத்துப் பிரிவுற்று, மான்று ஓர் திசை போய் வரையாள் வாழ்வுழி - மயங்கி ஒரு திக்கிற் சென்று வரைவின்றி வாழுமிடத்து, புதல்வன் தன்னை ஓர் புரிநூன் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க- அக்குழவியை ஓரந்தணன் ஊரிலுள்ளோர் அறியாதவாறு வளர்த்து வர, ஆங்கப் புதல்வன் அவள் திறம் அறியான் தான் புணர்ந்து அறிந்து பின் தன்னுயிர் நீத்தலும் - அப்புதல்வன் அவள் தன் தாய் என்னுந் தன்மையை அறியானாய் அவளுடன் கூடிப் பின்னர் உணர்ந்து தனது உயிரைத் துறந்ததனையும்; 1"ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடுபோல்" என்பது ஈண்டு அறியற்பாலது. "மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவலின்றெனில் இன்றால்" (22: 208--9) என முன்னரும் இக் கருத்து வந்துள்ளமை காண்க. காருக மடந்தை-நெய்வோர் குலத்துப் பிறந்த மாது எனவும் பொருள் படும். வரையாள் - தனது நலத்தினை நுகர்தற்குரியவர் உரியரல்லாதவர் என்னும் வரையறை யில்லாளாய்; பொருள் கொடுப்பார் யாவர்க்கும் விற்று என்றபடி. இதனால் காமத்தின் தீமை கூறப்பட்டது. 112-119. நீர் நசை வேட்கையின் நெடுங்கடம் உழலும் சூல்முதிர் மடமான் வயிறு கிழித்து ஓட-நீரை நச்சிய விருப்பத்தால் பெரிய காட்டின்கண் வருந்துகின்ற சூல் முதிர்ந்த இளைய மானினது வயிற்றைக் கிழித்துச் செல்லுமாறு, கான வேட்டுவன் கடுங்கணை துரப்ப - காட்டில் வேட்டையாடுவோன் கடிய அம்பினைச் செலுத்த, மான் மறி விழுந்தது கண்டு மனமயங்கி - மான்குட்டி வயிற்றினின்றும் விழுந்தனைக் கண்டு உளங் கலங்கி, பயிர்க்குரல் கேட்டு அதன் பான்மைய னாகி - அதனது விளியோசையைக் கேட்டு அதன் பக்கத் தோனாகி, உயிர்ப்பொடு செங்கண் உகுத்த நீர் கண்டு-நெட்டுயிர்ப்புடன் அதனது சிவந்த கண்களினின்று சிந்து கின்ற நீரினைக் கண்ணுற்று, ஓட்டி எய்தோன் ஓருயிர் துறந்ததும் - அம்பினை வீசி எய்த வேட்டுவன் தன் உயிரைத் துறந்தனையும், கேட்டும் அறிதியோ வாள் தடங் கண்ணி - வாள்போலும் பெரிய கண்களையுடையாய் நீ கேள்வியுற்றும் அறிவாயோ ; தன்னுயிர் நீத்ததும் ஓருயிர் துறந்ததும் கேட்டும் அறிதியோ என்க. மான்மறி - பெண் மானுமாம். பயிர்தல் - அழைத்தல். அதன் பான்மையனாகி - அதன் இயல்பினனாகி என்றுமாம். ஓட்டி எய்தோன் வேட்டுவன்: சுட்டு. இதனால் கொலையின் தீமை கூறப்பட்டது. 120-123. கடாஅ யானைமுன் கட் காமுற்றோர் விடாஅது சென்று அதன் வெண் கோட்டு வீழ்வது-கள்ளை விரும்பி யுண்டோர் மதம் பொருந்திய யானையின் முன்னர் நீங்காமற் சென்று அதன் வெள்ளிய மருப்பிலே வீழ்வது, உண்ட கள்ளின் உறுசெருக்காவது கண்டும் அறிதியோ காரிகை நல்லாய்-அழகிய நங்காய் அவர் கள்ளுண்டதனாற் போந்த பெருங்களிப்பினால் நிகழ்வதனைக் கண்டிருக்கின்றனையோ; கள்ளுண்டு களித்தோர் இங்ஙனம் யானைமுன் சென்று உயிர் துறத்தல் 1"புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று, மதுக்களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்" என்பதனாலும் அறியப்படும். இதனால் கள்ளின் தீமை கூறப்பட்டது. 124-125. பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர்- பொய்ந் நெறிக்கண் ஒழுகுதலைக் காரியமாகக் கொண்டவர்கள், கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ - செயலறவாகிய துன்பத்தினின்றும் நீங்கியதும் உண்டோ ; எஞ்ஞான்றும் துன்புறுவர் என்றபடி. இதனால் பொய்ம்மையின் தீமை கூறப்பட்டது. 126-127. களவு ஏர் வாழ்க்கையர் உறூஉங் கடுந்துயர் - களவாகிய ஏரால் உழுதலைச் செய்து வாழ்வோர் அடையுங் கொடிய துன்பத்தை, இளவேய்த் தோளாய்க்கு இது என வேண்டா - இளைய மூங்கிலனைய தோள்களையுடைய நினக்கு யான் இத்தகைத்து எனக் கூறுதல் வேண்டா; உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவினை யளிப்பது உழவுத்தொழிலாகலின், பிற சில தொழில்களையும் உழவாக உருவகப்படுத்தி, வில்லேருழவர் சொல்லேருழவர் என்றிங்ஙனங் கூறுவர். சான்றோர் களவாகிய ஏரால் உழுது வாழ்தலாவது களவினாற் பிறர் பொருளை வௌவி உண்டு வாழ்தலாம்: 2"கைப்பொருள் வௌவுங் களவேர் வாழ்க்கைக் கொடியோர்" என்றார் பிறரும். களவு செய்தோர் கடுந்துயர் உறுதல் வெளிப் படையாகலின் ‘இதுவென வேண்டா' என்றாளென்க. இதனால் களவின் தீமை கூறப்பட்டது. 128-129. மன்பேருலகத்து வாழ்வோர்க்கு - மிகப் பெரிய உலகத்தில் வாழும் மக்களுக்கு, இங்கிவை துன்பம் தருவன துறத்தல் வேண்டும் - ஈண்டுக் கூறப்பட்ட காமம் முதலிய ஐந்தும் துன்பந் தருவன வாகலின் அவற்றைக் கைவிடல் வேண்டும்; 130-141. கற்ற கல்வி அன்றால் காரிகை-காரிகையே கற்ற கல்வியே மெய்யுணர்வாகாது, செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர் - அகத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கினோரே முழுதும் உணர்ந்தோராவர், மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர் - வறுமைத் துன்பமுடைய மக்களுக்கு வேண்டுவனவற்றை அளிப்போரே வளப்பமுடைய பெரிய பூமியின்கண் வாழ்வோர் எனப்படுவர், திருந்தேர் எல்வளை- திருந்திய அழகமைந்த ஒள்ளிய வளையினையுடையாய். செல்லுலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர் - பசியால் வருந்தி வந்தோரது தீர்த்தற்கரிய பசியை நீக்கினோரே செல்லுலகம் அறிந்தவராவர், துன்பம் அறுக்கும் துணி பொருள் உணர்ந் தோர் மன்பதைக்கு எல்லாம் அன்பு ஒழியார் என - உயிர்ப் பன்மைகட் கெல்லாம் அன்பு நீங்காதோரே துன்பத்தினை யறுக்கும் மெய்ப் பொருளை யறிந்தோராவர் என்று, ஞான நன்னீர் நன்கனம் தெளித்து - ஞானமாகிய நல்ல நீரை நன்றாகத் தெளித்து, தேனார் ஓதி செவி முதல் வார்த்து - வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய இராசமாதேவியின் செவியிடம் வார்த்து, மகன் துயர் நெருப்பா மனம் விறகாக அகம் சுடும் வெந்தீ ஆயிழை அவிப்ப - புதல்வனிறந்த துன்பம் நெருப்பாக மனமே விறகாக உள்ளத்தைச் சுடுகின்ற கொடிய தீயை மணிமேகலை அவிக்க; செற்றஞ் செறுத்தல் முதலியன இல்வழிக் கற்றகல்வி பயனுடைத் தன்று என்றுமாம்; மேலுரைத்த துன்பந்தரும் காம முதலிய வற்றைத் துறவாவழி, கல்வி பயனுடைத் தன்று என்றுரைத் தலுமாம். கல்வி காரிகையன்று எனக் கூட்டி, கல்வி அழகுடைத் தன்று என்றுரைப்பாரு முளர். செல்லுல கறிதலாவது மறுமையுலகம் உண்டென்பதையும் ஆண்டு இன்புறுதற்கு இவண் செய்யற்பாலது இது வென்பதனையும் அறிதல். துணிபொருள்-தத்துவ ஞானம். தெளிந்து - தெளிவித்து என்றுமாம். 142-147. தேறுபடு சின்னீர் போலத் தெளிந்து - தேற்றாங் கொட்டையால் தேற்றப் பெற்ற சிலவாகிய நீரைப் போல மனந் தெளிந்து, மாறுகொண்டு ஓரா மனத்தினள் ஆகி - பகைமை கொண்டு சிந்தியாத மனத்தினை யுடையளாகி, ஆங்கவள் தொழுதலும் - மாதேவி வணங்குதலும், ஆயிழை பொறாஅள் தான் தொழுது ஏத்தி-மணிமேகலை அதனைப் பொறாமல் தான் வணங்கித் துதித்து, தகுதி செய்திலை காதலற் பயந்தோய் அன்றியும் காவலன் மாபெருந் தேவி என்று - என் நாயகனைப் பெற்ற தாய் அன்றியும் அரசனுடைய பட்டத்துத் தேவியாக உள்ளாய் ஆகலின் நீ தக்க தொன்றினைச் செய்திலை என்று கூறி, எதிர் வணங்கினள் என் - மணிமேகலை எதிர் தொழுதனள் என்க. தேறு - தேற்றாம் வித்து, கலக்கமுற்ற சிறிய நீரானது தேற்றாம் வித்தினால் தெளிவடைதல் போல இராசமா தேவியின் கலங்கிய உள்ளம் மணிமேகலையின் அறிவுரையால் தெளிந்த தென்க. முற் பிறப்பில் எனக்குக் கணவனாயிருந்தோனை இப்பிறப்பிற் பெற்றாய் என்க. தகுதி செய்திலை - நீ வணங்கியது தகுதியன்று என்றபடி. வாசந்தவை யென்னும் மூதாட்டி மன்னவனருளாற் சென்றெய்தித் தொழுது முன்னின்று வாழ்த்தி, "மன்னவன்றன்முன் துன்பங்கொள்ளேல்" என்று போயபின் அஞ்சிலோதி கரந்து அடக்கிக்கொண்டு மறைத்து, ஒரு நாள் அரசன்பால் ‘ஆயிழை தனக்கு சிறைதக்கன்று' என, ‘சிறை நோய் தீர்க்க' என்று இறை சொல, குழலாள் அவளைக் கூஉய்க் கோயிலுட்புக்கு மயற்பகை யூட்ட, அறிவினளாக, கொடுப்ப அணைதலும், ஆயிழையிருப்ப, போயபின் அடைப்ப, இருப்ப, அவள் தொழ, மணிமேகலை ஒழிவின்றுரைத்து மற்றும் உரை செய்யும்; அங்ஙனம் உரை செய்பவள் அகஞ் சுடு வெந்தீ அவிப்ப, அவள் தொழுதலும், ஆயிழை பொறாஅளாய் ‘மாபெருந்தேவி என்று எதிர் வணங்கினளென, வினை முடிவு செய்க. சிறைவிடு காதை முற்றிற்று. 24. ஆபுத்திரனாடு அடைந்த காதை உதயகுமரன் விஞ்சையன் வாளால் வெட்டுண்டு துஞ்சிய தனையும், மணிமேகலை சிறையில் வைக்கப் பட்டிருத்தலையும் கேட்டு வருந்தி நடுங்கி, அவளைச் சிறையினின்றும் விடுவிக்க நினைந்த சித்திராபதி அரசன் தேவிபாற் சென்று வணங்கி, 'மாபெருந்தேவி! கோவல னிறந்தா னென்று மாதவி தனது பரத்தமைத் தொழிலை நீத்துத் தவப்பள்ளியை அடைந்ததும், அவள் மகளாகிய அரங்கக் கூத்தி பாத்திர மேந்தி மனைதோறுஞ் சென்று ஐயமேற்றதும் யாவரும் எள்ளி நகுதற்குரிய வாயின. இது நிற்க; உதயகுமரன் இறந்த தன்றி, மணிமேகலையால் இனி, இந் நகரத்திற் குண்டாகும் பெருந்துன்பமும் ஒன்றுண்டு; கேட்பாயாக; "முன்னொருநாள் மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி இந்நகரில் கடற்கரையைச் சார்ந்த புன்னைமரச் சோலையில் பேரழகின ளாகிய ஒரு மங்கையைக் கண்டு காதலித்து அவளோடும் ஒரு திங்களளவும் அச்சோலையில் உறைவானாயினன்; அம்மங்கை அவனிடஞ் சொல்லாது அகன்றனள்; அரசன் இளங்கொடி யாங் கொளித்தனளென்று பலவிடத்தும் தேடுவனாயினன்; அப்பொழுது நிலத்திற் குளித்தல் முதலிய அரிய ஆற்றல் களையுடைய சாரண னொருவன் வந்தனன்; அரசன் அவனை வணங்கி முன்னின்று ‘என் உயிர் போல்வாள் ஒருத்தி ஈங்கு ஒளித்தனள்; அவளை அடிகள் கண்ட துண்டாயிற் கூறுக,' என்று கேட்ப, அந்தச் சாரணன், 'அரச! அம்மடந்தையை யான் இப்பொழுது கண்டிலேனாயினும் முன்பு அறிந்துளேன்; அவள் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பவனுடைய தேவியான வாசமயிலை யென்பவள் வயிற்றிற் றோன்றியவள்; பீலிவளை யென்னும் பெயரினள்; அவள் பிறந்த நாளில் நிமித்திகனானவன் ‘இவள் பரிதிகுலத்தரச னொருவனைக் கூடிக் கருவுற்று வருவாள்,' என்று அரசனுக்குக் கூறினன்; ‘அவளே நீகூறிய மடந்தை; இனி, அவள் வயிற்றிற்றோன்றும் மகனே வருவான்; அவள் வாராள்; நீ கவலாதிருக்கக் கடவை; இன்னு மொன்று கேள்; இந்திர விழாச் செய்யாத நாளில் மணிமேகலா தெய்வத்தின் சொல்லால் உன் நகரினைக் கடல் கொள்ளும்; இந்திர சாப மிருத்தலால் அது தப்பாது; இதனை உண்மை யெனக்கொண்டு இந் நகரைக் கடல் கொள்ளாதபடி ஆண்டுதோறும் இந்திரவிழாவை மறவாது செய்து வருக,' என்று சொல்லி விட்டுப் போயினன்; அந்நாள் தொடங்கி இந்நகருக்கு எப்பொழுது கேடு வருமோ என்று யாவரும் நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்; தன் பெயரைப்பெற்ற மடந்தை துன்பமுறுவாளாயின் அதனைப் போக்குதற்கு அத்தெய்வம் வருதலுங் கூடுமோவென்று யானும் அஞ்சாநின்றேன்,' என்று சொல்லிப் பரவி, ‘நன்மனம் பெற்ற நாடகக் கணிகையை என் மனைக்குப் போதருமாறு கட்டளையிடுக,' என்று கேட்ப, இராசமாதேவி, ‘கள்ளும் பொய்யுங் காமமும் கொலையும், உள்ளக் களவு மென் றுரவோர் துறந்தவை' ஆகும்; அவற்றையே கைக்கொண்ட உனது பரத்தைமைத் தொழிலைப் புலைமை யென் றெண்ணி வந்த இவள் உன்னுடன் போந்து உன் மனையிற் புகுதாள்; என்னுடனேயே இருத்தற்குரியள், ‘என்று சொல்லிக் கொண்டிருக்கையில், மணிமேகலையின் நிலைமையைக் கேட்ட மாதவி அதனைச் சுதமதிக்குக் கூறி வருந்திச்சென்று அறவணவடி களை வணங்கி அறிவித்து அவருடன் அவளைச் சிறை மீட்டற் பொருட்டு இராசமாதேவியிடம் வர, இராசமாதேவி அவரைக் கண்டவுடன் ஏனை இருவரோடும் எழுந்து எதிர் சென்று அவ ரடியை வணங்கினாள்; அவர், ‘அறிவுண்டாக' என்று ஆசி கூறினர்; அப்பால் அவள் அருந்தவர்க் கமைந்த தவிசொன்றில் அவரையிருத்தி அடிவிளக்கிச் சிறப்புச் செய்து, ‘எமது நல்வினையே மிகப் பெரியோராகிய நும்மை இங்கு எழுந்தருளச் செய்தது; நாத்தொலை வில்லா யாயினுந் தளர்ந்து, மூத்தவிவ் யாக்கை வாழ்க பல்லாண்டு,' என்று கூற, அவர், 'யான் இவ்வுடம்பிற் பொருந்தி யிருந்தும் குடக்கில் மறையும் கதிரவனைப் போன்றேன்; பிறந்தார் மூத்தார் பிணிநோயுற்றார் இறந்தா ரென்கை யியல்பே;' என்று உரைத்து, பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களையும் அவருக்கு அறிவுறுத்தி, ‘எப்பொழுதும் நல்லறத்தையே பேணிக் கேட்டு அவ்வா றொழுகுமின்,' என மாதவிக்கும் சுதமதிக்கும் கூறி, மணிமேகலையை நோக்கி, நீ பிற அறங்களை யெல்லாம் கேட்ட பின்பு, இவற்றையும் இவற்றின் பகுதிகளையும் உனக்கு விளங்க உணர்த்துவேன்' என்று கூறித் தம்மிடஞ் செல்லுதற்கு எழுதலும், மணிமேகலை எழுந்து அவரை வணங்கி, பின்பு இராசமாதேவி முதலியோரை நோக்கி, ‘மாதவர் நன் மொழிகளை மறவாது அவர் கூறியவாறே ஒழுகுமின்; யான் இந் நகரிலிருப்பேனாயின், உதயகுமரனுக்கு இவள் கூற்றா யிருந்தன ளென்று யாவருங் கூறுவர்; ஆதலால் இங்கிரேன்; இனி ஆபுத்திரனா டடைந்து பின்பு மணிபல்லவஞ் சார்ந்து புத்தபீடிகையைத் தரிசித்துவிட்டு, அப்பால் வஞ்சிநகரஞ் சென்று பத்தினிக் கடவுளைத் தரிசித்தபின் யாங்கணுஞ்சென்று நல்லறஞ் செய்துகொண்டிருப்பேன்; எனக்கு இடருளதாகுமோ என்று நீர் இரங்கன்மின்,' என்று கூறி அவர் களையும் வணங்கி ஆதவன் மறைந்த அந்திமாலைப் பொழுதிலே சென்று உலகவறவியையும் சம்பாபதியையும் கந்திற்பாவையையும் வலங்கொண்டு துதித்து, விசும்பின் வழியே பறந்து சென்று இந்திரனுடைய வழித்தோன்றலாகிய புண்ணியராசனது நகர்ப் புறத்துள்ள ஓர் பூம்பொழிலில் இறங்கி, ஆங்குள்ள ஒரு முனிவனை வணங்கி, ‘இந்நகரின் பெயர் யாது? இதனை யாளும் அரசன் யார்? என்று கேட்டாள்; அம்முனிவன், ;இதன் பெயர் நாகபுரம் என்பது; இதனை யாள்பவன் பூமிசந்திரன் மகனாகிய புண்ணிய ராசன் என்பான்; இவன் பிறந்தநாள் தொட்டு இந்நாட்டில் மழை பிழைத்தலறியாது; மண்ணும் மரங்களும் பிறவும் பல வளங் களையும் மிகத் தாராநிற்கும்; உயிர்கட்கு ஒருவகையான நோயு மில்லை,' என்று அரசன் பெருமையை அவளுக்குக் கூறினான். மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொன்முது கணிகைதன் சூழ்ச்சியிற் போயவன் விஞ்சையன் வாளின் விளிந்தோ னென்பது நெஞ்சு நடுக்குறக் கேட்டுமெய் வருந்தி 5 மாதவி மகள்தனை வான்சிறை நீக்கக் காவலன் றேவி காற்கீழ் வீழ்ந்தாங்கு அரவே ரல்கு லருந்தவ மடவார் உரவோற் களித்த வொருபத் தொருவரும் ஆயிரங் கண்ணோ னவிநயம் வழூஉக்கொள 10 மாயிரு ஞாலத்துத் தோன்றிய வைவரும் ஆங்கவன் புதல்வனோ டருந்தவன் முனிந்த ஓங்கிய சிறப்பி னொருநூற்று நால்வரும் திருக்கிளர் மணிமுடித் தேவர்கோன் றன்முன் உருப்பசி முனிந்த வென்குலத் தொருத்தியும் 15 ஒன்று கடைநின்ற வாறிரு பதின்மரித் தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாண்முதல் யானுறு துன்ப மியாவரும் பட்டிலர் மாபெருந் தேவி மாதர் யாரினும் பூவிலை யீத்தவன் பொன்றின னென்று 20 மாதவி மாதவர் பள்ளியு ளடைந்ததும் பரந்துபடு மனைதொறும் பாத்திர மேந்தி அரங்கக் கூத்திசென் றையங் கொண்டதும் நகுத லல்லது நாடகக் கணிகையர் தகுதி யென்னார் தன்மை யன்மையின் 25 மன்னவன் மகனே யன்றியு மாதரால் இந்நக ருறூஉ மிடுக்கணு முண்டால் உம்பளந் தழீஇய வுயர்மண னெடுங்கோட்டுப் பொங்குதிரை யுலாவும் புன்னையங் கானல் கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா 30 இளவேனி லிறுப்ப விறும்பூது சான்ற பூநாறு சோலை யாருமி லொருசிறைத் தானே தமிய ளொருத்தி தோன்ற இன்ன ளார்கொ லீங்கிவ ளென்று மன்னவ னறியான் மயக்க மெய்தாக் 35 கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும் உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும் உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன் மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும் பயிலிதழ்க் கமலமும் பருவத் தலர்ந்த 40 மலர்வா யம்பின் வாசங் கமழப் பலர்புறங் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள் பொருவரு பூங்கொடி போயின வந்நாள் யாங்கொளித் தனளவ் விளங்கொடி யென்றே 45 வேந்தரை யட்டோன் மெல்லியற் றேர்வுழி நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச் சலத்திற் றிரியுமோர் சாரணன் றோன்ற மன்னவ னவனை வணங்கி முன்னின்று என்னுயி ரனையா ளீங்கொளித் தாளுளள் 50 அன்னா ளொருத்தியைக் கண்டிரோ வடிகள் சொல்லுமி னென்று தொழவவ னுரைப்பான் கண்டிலே னாயினுங் காரிகை தன்னைப் பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய் நாக நாடு நடுக்கின் றாள்பவன் 55 வாகை வேலோன் வளைவணன் றேவி வாச மயிலை வயிற்றுட் டோன்றிய பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள் இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக் கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன் 60 ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது பூங்கொடி வாராள் புலம்ப லிதுகேள் தீவகச் சாந்தி செய்யா நாளுன் காவன் மாநகர் கடல்வயிறு புகூஉம் மணிமே கலைதன் வாய்மொழி யாலது 65 தணியா திந்திர சாபமுண் டாகலின் ஆங்குப்பதி யழிதலு மீங்குப்பதி கெடுதலும் வேந்தரை யட்டோய் மெய்யெனக் கொண்டிக் காசின் மாநகர் கடல்வயிறு புகாமல். வாசவன் விழாக்கோள் மறவே லென்று 70 மாதவன் போயின வந்நாட் டொட்டுமிக் காவன் மாநகர் கலக்கொழி யாதால் தன்பெயர் மடந்தை துயருறு மாயின் மன்பெருந் தெய்வம் வருதலு முண்டென அஞ்சினே னரசன் றேவியென் றேத்தி 75 நன்மனம் பிறந்த நாடகக் கணிகையை என்மனைத் தருகென விராசமா தேவி கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் களவுமென் றுரவோர் துறந்தவை தலைமையாக் கொண்டநின் தலைமையில் வாழ்க்கை 80 புலைமையென் றஞ்சிப் போந்த பூங்கொடி நின்னொடு போந்து நின்மனைப் புகுதாள் என்னோ டிருக்குமென் றீங்கிவை சொல்வுழிநீ மணிமே கலைதிற மாதவி கேட்டுத் துணிகயந் துகள்படத் துளங்கிய வதுபோல் 85 தெளியாச் சிந்தையள் சுதமதிக் குரைத்து வளியெறி கொம்பின் வருந்திமெய்ந் நடுங்கி அறவண ரடிவீழ்ந் தாங்கவர் தம்முடன் மறவேன் மன்னவன் றேவிதன் பால்வரத் தேவியு மாயமுஞ் சித்திரா பதியும் 90 மாதவி மகளு மாதவர்க் காண்டலும் எழுந்தெதிர் சென்றாங் கிணைவளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணையடி வணங்க அறிவுண் டாகவென் றாங்கவன் கூறலும் இணைவளை நல்லாள் இராசமா தேவி 95 அருந்தவர்க் கமைந்த வாசனங் காட்டித் திருந்தடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் யாண்டுபல புக்கநும் மிணையடி வருந்தவென் காண்டகு நல்வினை நும்மையீங் கழைத்தது நாத்தொலை வில்லா யாயினுந் தளர்ந்து 100 மூத்தவிவ் யாக்கை வாழ்கபல் லாண்டெனத் தேவி கேளாய் செய்தவ யாக்கையின் மேவினே னாயினும் வீழ்கதிர் போன்றேன் பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார் இறந்தா ரென்கை யியல்பே யிதுகேள் 105 பேதைமை செய்கை யுணர்வே யருவுரு வாயி லூறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பீ ராறும் பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர் 110 அறியா ராயி னாழ்நர கறிகுவர் பேதைமை யென்ப தியாதென வினவின் ஓதிய விவற்றை யுணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல் 115 உலக மூன்றினு முயிரா முலகம் அலகில பல்லுயி ரறுவகைத் தாகும் மக்களுந் தேவரும் பிரமரும் நரகருந் தொக்க விலங்கும் பேயு மென்றே நல்வினை தீவினை யென்றிரு வகையால் 120 சொல்லப் பட்ட கருவினுட் டோன்றி வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டும் தீவினை யென்ப தியாதென வினவின் ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய் 125 கொலையே களவே காமத் தீவிழைவு உலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும் வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென்று 130 உள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப் பத்து வகையாற் பயன்றெரி புலவர் இத்திறம் படரார் படர்குவ ராயின் விலங்கும் பேயு நரகரு மாகிக் கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர் 135 நல்வினை யென்ப தியாதென வினவில் சொல்லிய பத்தின் றொகுதியினீங்கிச் சீலந் தாங்கித் தானந் தலைநின்று மேலென வகுத்த வொருமூன்று திறத்துத் தேவரு மக்களும் பிரமரு மாகி 140 மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர் அரசன் றேவியொ டாயிழை நல்லீர் புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் மறுபிறப் புணர்ந்த மணிமே கலைநீ பிறவறங் கேட்ட பின்னாள் வந்துனக் 145 கித்திறம் பலவு மிவற்றின் பகுதியும் முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல் என்றவ னெழுதலு மிளங்கொடி யெழுந்து நன்றறி மாதவ னல்லடி வணங்கித் தேவியு மாயமுஞ் சித்திரா பதியும் 150 மாதவர் நன்மொழி மறவா துய்ம்மின் இந்நகர் மருங்கின்யா னுறைவே னாயின் மன்னவன் மகற்கிவள் வருங்கூற் றென்குவர் ஆபுத் திரனா டடைந்ததற் பின்னாள் மாசின் மணிபல் லவந்தொழு தேத்தி 155 வஞ்சியுட் புக்கு மாபத் தினிதனக் கெஞ்சா நல்லறம் யாங்கணுஞ் செய்குவல் எனக்கிட ருண்டென் றிரங்கல் வேண்டா மனக்கினி யீரென் றவரையும் வணங்கி வெந்தாறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த 160 அந்தி மாலை யாயிழை போகி உலக வறவியு முதியாள் குடிகையும் இலகொளிக் கந்தமு மேத்தி வலங்கொண்டு அந்தர மாறாப் பறந்துசென் றாயிழை இந்திரன் மருமா னிரும்பதிப் புறத்தோர் 165 பூம்பொழி லகவயி னிழிந்து பொறையுயிர்த்து ஆங்குவாழ் மாதவ னடியிணை வணங்கி இந்நகர்ப் பேர்யா திந்நக ராளும் மன்னவன் யாரென மாதவன் கூறும் நாக புரமிது நன்னக ராள்வோன் 170 பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன் ஈங்கிவன் பிறந்த வந்நாட் டொட்டும் ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது மண்ணு மரனும் வளம்பல தரூஉம் உண்ணின் றுருக்கு நோயுயிர்க் கில்லெனத் 175 தகைமலர்த் தாரோன் றன்றிறங் கூறினன் நகைமலர்ப் பூம்பொழி லருந்தவன் றானென். உரை 1-6. மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த தொன்முது கணிகை - அரசன் புதல்வனை வஞ்சனையாற் சேர்த்திய சித்திராபதி, தன் சூழ்ச்சியிற் போயவன் - தனது சூழ்ச்சியாற் சென்ற உதயகுமரன், விஞ்சையன் வாளின் விளிந்தோன் என்பது - விஞ்சையனது வாளினால் இறந்தான் என்பதனை, நெஞ்சு நடுக்குறக் கேட்டு மெய் வருந்தி - உள்ளம் நடுங்கக் கேட்டு மிக வருந்தி, மாதவி மகள்தனை வான்சிறை நீக்க - மணிமேகலையைச் சிறையினின்றும் நீக்கும் பொருட்டு, காவலன் தேவி காற்கீழ் வீழ்ந்து - மன்னவன் தேவியின் அடிகளில் வீழ்ந்து பணிந்து; மணிமேகலையின் தாபதக் கோலத்தை அழித்து அவளை உதயகுமரன் கைப்பற்றி நுகருமாறு செய்வேன் என வஞ்சினங் கூறி வந்து அவனை அவள்பாற் செலுத்தினவள் ஆகலின், மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த கணிகை எனச் சித்திராபதியைக் கூறினார். தொல்முது : ஒருபொருட் பன்மொழி. 7-18. அரவு ஏர் அல்குல் அருந்தவ மடவார் - பாம்பின் படம் போலும் அழகிய அல்குலையுடைய அரிய தவத்தினை யுடைய மடவார், உரவோற்கு அளித்த ஒருபத் தொருவரும் - இந்திரனுக்கு ஈன்ற பதினொருவரும், ஆயிரங் கண்ணோன் அவிநயம் வழூஉக்கொள - இந்திரன்முன் அவிநயம் வழுவினமையால், மாயிரு ஞாலத்துத் தோன்றிய ஐவரும் - புவியிடைத் தோன்றிய ஐவரும், ஆங்கவன் புதல்வனோடு அருந்தவன் முனிந்த - இந்திரன் புதல்வனாகிய சயந்தனோடு அரிய தவத்தினையுடைய அகத்தியனால் முனியப்பட்ட, ஓங்கிய சிறப்பின் ஒரு நூற்று நால்வரும் - மிக்க சிறப்பினை யுடைய நூற்றுநால்வரும், திருக்கிளர் மணி முடித் தேவர்கோன் தன் முன் - அழகு விளங்கும் மணிமுடி யணிந்த இந்திரன் முன், உருப்பசி முனிந்த என் குலத்து ஒருத்தியும்- முனியப்பட்ட உருப்பசியாகிய என் குலத்துத் தோன்றிய ஒருத்தியும், ஒன்று கடை நின்ற ஆறு இருபதின்மர் - என்ற நூற்றிருபத்தொருவர், இத் தொன்றுபடு மாநகர்த் தோன்றிய நாள் முதல் - பழமையாகிய பெரிய இந்நகரிலே தோன்றிய நாள் முதலாக, யான் உறு துன்பம் யாவரும் பட்டிலர் மாபெருந்தேவி மாதர் யாரினும் - அரசமாதேவியே! கணிகையர் யாரினும் யான் அடைந்தது போலும் துன்பத்தை வேறு யாரும் அடைந்திலர் ; ஈண்டுக் கூறிய நூற்றிருபத் தொருவரும் காவிரிப் பூம்பட்டினத்திலே பிறந்து சிறப்பெய்திய நாடகக்கணிகைய ராவரென்க. கண்ணகி வஞ்சின மாலையில், புகார்நகரிலே பிறந்த கற்புடை மகளிர் எழுவருடைய வரலாற்றை எடுத்தியம்பி, 1'மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்' என்று கூறியது போலச் சித்திராபதி ஆண்டுப் பிறந்த நாடகக் கணிகையரை எடுத்துக் காட்டுவாளாயின ளென்க. உர வோன் - இந்திரன். அருந்தவன் - அகத்தியன். முனிந்த - வெகுண்டு சபிக்கப்பட்ட வென்க. இந்திரன் முன் சாபமேற்ற உருப்பசியானவள் புகாரிலே மாதவி யென்னும் பெயருடன் தோன்றி யிருந்தன ளென்பது சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையாலும் கடலாடு காதையாலும் அறியப்படுவது. மாபெருந்தேவி: விளி. 19-26. பூவிலை ஈத்தவன் பொன்றினன் என்று - அற்றைப் பரிசமளித்த கோவலன் இறந்தனன் என்று, மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்ததும் - மாதவி அறவணவடிகள் உறையுளிற் புக்கதும், பரந்துபடு மனைதொறும் பாத்திரம் ஏந்தி அரங்கக் கூத்தி சென்று ஐயங் கொண்டதும் - மணிமேகலை பாத்திரத்தை ஏந்திப் பரவித் தோன்றும் இல்லங்கள்தோறும் சென்று பிச்சை ஏற்றதும், நகுதல் அல்லது நாடகக் கணிகையர் தகுதி என்னார் தன்மை அன்மையின் - பரிகசித்தற்குக் காரணமாவனவேயன்றி நாடக மகளிரின் இயல்பன்மையால் அவர்க்குத் தகுதி என்று கூறார், மன்னவன் மகனே அன்றியும் மாதரால் இந்நகர் உறூஉம் இடுக்கணும் உண்டால் - உதயகுமரனுக்கு நேர்ந்த இடுக்கணே யன்றியும் மணிமே கலையால் இம்முதுநக ரடையும் துன்பமும் உண்டு; பூவிலை - பூவிற்கு விலை; அற்றைப் பரிசம் என்பர்: 1"பூவிலை மடந்தையர்" என்பதன் உரை காண்க. மாதவர் பள்ளியுளடைந்தது என்றதனால் துறவு பூண்டமை பெற்றாம். அரங்கக்கூத்தி - மணிமேகலை; அரங்கிலே கூத்தியற்றுதற் ச்குரியவள் என்றபடி. 27-32. உம்பளம் தழீஇய உயர்மணல் நெடுங்கோட்டு - உப்பளத்தின் மருங்குள்ள உயரிய நெடிய மணற்கரையினை உடைய, பொங்கு திரை உலாவும் புன்னையங் கானல்-மிகுதியான அலைகள் உலாவுகின்ற புன்னைமரச் சோலையின் கண், கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா இளவேனில் இறுப்ப - ஒளிபொருந்திய மணிகளானாய பெரியமுடியினை யுடையகிள்ளி இளவேனிற்பருவத்தில் தங்குதலால் அவன் முன்னாக, இறும்பூது சான்ற பூநாறு சோலை யாருமில் ஒரு சிறை - வியக்குந் தன்மை யமைந்த மலர்மணம் வீசும் பொழிலில் யாருமில்லாத ஒரு பக்கலில், தானே தமியள் ஒருத்தி தோன்ற-தானே தனித்துப் போந்த மெல்லியல் ஒருத்தி தோன்ற; உம்பளம் - உப்பளம்: மெலித்தல் பெற்றது. நெடுமுடிக்கிள்ளி- ஓர் சோழமன்னன்; உதயகுமரன் றந்தை. கிளர்மணி என்பது முடிக்கு அடையாய் வந்தது. முன்னா - முன்னாக; எதிரே. இறும்பூது சான்ற ஒருத்தி யெனக் கூட்டுதலுமாம். நெடு முடிக்கிள்ளி இளவேனிலில் புன்னையங் கானலிலே இறுப்ப, இவன் முன்னாக ஒருத்தி தோன்ற வென்க 33-43. இன்னள் ஆர் கொல் ஈங்கிவள் என்று - இவ்வுழி இருப்பவளாய இத்தன்மையை யுடையாள் யாவளோ என்று, மன்னவன் அறியான் மயக்கம் எய்தா-அரசன் அறியானாய் மயக்க மடைந்து, கண்ட கண்ணினும் கேட்ட செவியினும் - கண்ட கண்களினும் கேட்ட காதுகளினும், உண்ட வாயினும் உயிர்த்த மூக்கினும் - அருந்திய நாவினும் மோந்த மூக்கினும், உற்றுணர் உடம்பினும் - தீண்டி யுணர்ந்த உடம்பினும், வெற்றிச் சிலைக் காமன் - வென்றி வில்லினையுடைய காமவேளின், மயிலையும் செயலையும் மாவும் குவளையும் - மல்லிகையும் அசோகும் மாவும் குவளையும், பயிலிதழ்க் கமலமும் - செறிந்த இதழ்களையுடைய தாமரையுமாகிய, பருவத்து அலர்ந்த - பருவத்தின்கண் மலரப் பெற்ற, மலர் வாய் அம்பின் வாசம் கமழ - மலர்களாகிய அம்பின் மணங் கமழ்தலால், பலர் புறம் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப - பல மன்னரை வென்று புறங்கண்ட அரசன் பணிந்து அவள் ஏவுந் தொழிலைக் கேட்ப, ஒரு மதி எல்லை கழிப்பினும் உரையாள் - ஒரு திங்களளவு அவனுடன் கழித்தாளாயினும் ஒன்றுங் கூறாதே, பொருவரு பூங்கொடி போயின அந்நாள் - ஒப்பற்ற பூங்கொடி போல்வாள் சென்றுவிட்ட அந்தநாளில்; அவளுடைய உருவைக் கண்டும் மொழியைக் கேட்டும் இதழ் முதலியவற்றை உண்டும் உயிர்த்தும் உற்றும் உணர்ந்த அரசனுடைய கண் முதலிய ஐம்பொறிகளிலும் காமனுடைய மலரம்புகள் ஐந்தும் தைத்தன வென்க. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பொருள்களால் நுகரப்படுவன ஒரே காலத்தில் அவள் கண்ணே நுகரப்பட்டன என்றார்; 1"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண் டொடி கண்ணே யுள" என்பது ஈண்டு நினைத்தற்குரியது. மயிலை முதலியன காமன் அம்புகள்; மலர் களாதலின் வாசங் கமழ என்றார். போரிலே பலரைப் புறங்கண்ட வீரனாயினும் ஓர் மெல்லியற்கு எளிய னாயினான் என்பார், ‘பலர் புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப' என்றார். உரையாள்-தன் வரலாற்றினை உரைத்திலளாய். போயினள் என முடித்து, அங்ஙனம் போயின அந்நாளில் என்றுரைக்க. 44-47. யாங்கு ஒளித்தனள் அவ்விளங்கொடி என்றே - அவ்விளங் கொடி போல்வாள் யாண்டுச் சென்று மறைந்தனள் என, வேந்தரை அட்டோன் மெல்லியல் தேர்வுழி - பகை மன்னரை வென்ற வேந்தன் அவளைத் தேடும்பொழுது, நிலத்திற் குளித்து நெடுவிசும்பு ஏறிச் சலத்தில் திரியும் ஓர் சாரணன் தோன்ற-நிலத்துட் புகுந்து நீண்டவானில் இவர்ந்து நீர்மீது திரியும் ஒரு சாரணன் தோன்ற ; நீரிற் குளித்தல்போல் நிலத்திற் குளித்து எனவும், நிலத்தில் திரிதல்போல் சலத்தில் திரியும் எனவும் விரித்துரைத்துக் கொள்க. நிலத்திற் குளித்தல் முதலியன சித்தி எனவும் இருத்தியெனவும் படும்; 2"நீரினிற் பூவில் வானில் நினைத்துழியொதுங்குகின்ற, சாரணரெண்ம ராவார் சமணரி லிருத்தி பெற்றோர்" என்பதுங் காண்க. இனி 3"இருநிலம் புகுதலும் ஒருவிசும் பிவர்தலும், வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும், மந்தர மேந்தலு மென்றிவை பிறவும், பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக், கண்டுமறிதும்" என்பதனால் நிலத்திற் குளித்தல் முதலியன சில வித்தைகளாதலும் பெற்றாம். 48-53. மன்னவன் அவனை வணங்கி முன் நின்று - அரசன் அம் முனிவனை வணக்கஞ் செய்து முன்னே நின்று, என் உயிரனையாள் ஈங்கொளித்தாள் உளள் - என் உயிர்போல்வாள் ஈண்டு நின்றும் மறைந்தாள் உளள், அன்னாள் ஒருத்தியைக் கண்டிரோ அடிகள் சொல்லுமின் என்று தொழ அவன் உரைப்பான் - அத் தன்மை யுடையாளாகிய நங்கை ஒருத்தியை அடிகள் கண்டீரோ கூறுவீராக என்று பணிய அச் சாரணன் மொழிவான், கண்டிலேன் ஆயினும் காரிகை தன்னை-அம் மங்கையை யான் இப்பொழுது கண்டிலேன் ஆனாலும், பண்டறிவுடையேன் பார்த்திப கேளாய் - முன்னர் அவளைப்பற்றி அறிதலுடையேன் அரசனே கேட்பாயாக; அறிவு உடையேன் - அறிதலுடையேன். 54-59. நாக நாடு நடுக்கின்று ஆள்பவன் - நாக நாட்டினை இடுக்கண் நீக்கி அரசு புரிவோனாகிய, வாகை வேலோன் வளைவணன்- வெற்றி பொருந்திய வேற்படை யினையுடைய வளைவணனின், தேவி வாச மயிலை வயிற்றுள் தோன்றிய - மனைவியாகிய வாசமயிலை என்பாளது வயிற்றில் உதித்த, பீலிவளை என்போள் பிறந்த அந் நாள் - பீலிவளை எனப் பெயரிய இம் மங்கை பிறந்த அந்நாளில், இரவிகுலத்து ஒருவன் இணைமுலை தோயக் கருவொடு வரும் எனக் கணி எடுத்து உரைத்தனன் - பரிதி குல மன்னவ னொருவன்பாற் கூடிக் கருப்பத்துடன் வருவாள் என்று சோதிட நூல்வல்லான் எடுத்துக்கூறினன்; நடுக்கு இன்று - நடுங்குதல் இல்லையாக. கணி - நிமித்திகன்., 60-65. ஆங்கு அப் புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள் - அவள் வயிற்றில் தோன்றிய புதல்வன் வருவானே யன்றி அவள் வாராள், புலம்பல் - அதன் பொருட்டு வருந்தாதே, இதுகேள் - இதனைக் கேட்பாயாக, தீவகச்சாந்தி செய்யாநாள் உன் காவல் மாநகர் கடல் வயிறு புகூஉம் - இந்திரவிழவினைச் செய்யாது கைவிட்ட நாளில் நினது காவலமைந்த பெரிய நகரம் கடல் வயிற்றில் புகும், மணிமேகலை தன் வாய் மொழியால் அது - அங்ஙனம் கடல்கோள் நிகழ்வது மணிமேகலா தெய்வத்தின் மெய்ம்மொழியாலாம், தணியாது இந்திர சாப முண்டாகலின் - இந்திரனது சாபமும் உண்மையான் அது தவிராது ; அப் புதல்வன் - அங்ஙனம் அவள் கருவில் உதித்த புதல்வன். தீவகச் சாந்தி - இந்திர விழா. மணிமேகலை - மணிமேகலா தெய்வம் அது - நகர் கடலிற் புகுவது. ஆல் என்பதனை அசையாக்கி, அதுவாய் மொழி என்றுரைத்தலுமாம். இந்திர சாபமும் என உம்மை விரிக்க 66-71. ஆங்குப் பதி அழிதலும் ஈங்குப் பதி கெடுதலும்-அவ்வாறு நகரம் அழிவெய்துதலும் இவ்விடத்து அரசு கேடுறலும், வேந்தரை அட்டோய் மெய்யெனக் கொண்டு-பகை மன்னரை வென்ற பெரு வேந்தே உண்மை என்று கொண்டு, இக் காசு இல் மா நகர் கடல் வயிறு புகாமல்-குற்றமற்ற இப் பெருநகரம் கடல் வயிற்றுட் புகா திருக்கும் பொருட்டு, வாசவன் விழாக் கோள் மறவேல் என்று - இந்திரவிழாக் கொண்டாடுதலை மறவாதே என வுரைத்து, மாதவன் போயின அந்நாள் தொட்டும் - சாரணன் சென்ற அந் நாள் தொடங்கி, இக் காவன் மாநகர்க் கலக்கு ஒழியாதால் - காவலமைந்த இப் பெரிய நகரிலுள்ளார் கலக்கம் நீங்கப்பெறார் ; ஆங்கு - அந்நாளில் என்றுமாம். ஈங்கு: அசையுமாம். மாதவன் போயினன் ; போயின அந்நாள்தொட்டு என வேறு அறுத் துரைக்க. 72-76. தன் பெயர் மடந்தை துயருறுமாயின் - தன் பெயரினைக் கொண்ட மணிமேகலை துன்புறு வாளானால், மன்பெருந் தெய்வம் வருதலும் உண்டு என-நிலைபெற்ற பெரிய மணிமேகலா தெய்வம் தோன்றுதலும் உண்டு என்று, அஞ்சினேன் அரசன் தேவி என்று ஏத்தி-மன்னவன் மாதேவி! அச்சமுற்றேன் எனத் துதித்து, நன் மனம் பிறந்த நாடகக் கணிகையை என்மனைத் தருக என - நல்லுள்ளம் தோன்றிய மணிமேகலையை என தில்லத்தின்கண் தருக என வேண்ட; அரசன் தேவி! அஞ்சினேன் எனத்துதித்து, நாடகக் கணிகையை என் மனைத் தருக என்று சித்திராபதி கேட்ப வென்க. நன்மனம் நன்னெறிக்கண் செல்லும் மனம். 76-82. இராசமாதேவி - மன்னன் மனைவி, கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் உள்ளக் கனவும் என்று உரவோர் துறந்தவை-கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் மனத் திற்றோன்றுங் களவும் தீயனவென்று அறிவுடையோரால் நீக்கப்பட்டவற்றை, தலைமையாகக் கொண்ட நின் தலைமை இல் வாழ்க்கை-முதன்மையாகக் கொண்ட நினது கடையான பரத்தமைத் தொழிலை, புலைமை என்று அஞ்சிப் போந்த பூங்கொடி-புன்மையுடைத்தென அஞ்சி வெளிப்பட்ட மணிமேகலை, நின்னோடு போந்து நின்மனைப் புகுதாள் - நின்னுடன் வந்து நின் மனையை அடைதற் குரிய ளாகாள், என்னோடு இருக்கும் என்று ஈங்கிவை சொல்வுழி-என்னுடன் இருப்பாள் என்று இவ்வாறு கூறும்பொழுது; உரவோர் துறந்தனவாகிய கள் முதலியவற்றைப்புலைமை யென்று அஞ்சிப் போந்த வென்க. தலைமை இல் வாழ்க்கை - கடைப்பட்ட வாழ்க்கை ; 1" மேலோ ராயினும் நூலோ ராயினும், பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும், பிணியெனக் கொண்டு பிறக்கிட்டொழியும், கணிகையர் வாழ்க்கை கடையே" என்பதுங் காண்க. பூங்கொடி புகுதாள் இருக்கும் என்று இராசாமாதேவி சொல்வுழி யென்க,. 83-88. மணிமேகலை திறம் மாதவி கேட்டு-மாதவி மணிமேகலை காவலிலிருக்குஞ் செய்தியைக் கேட்டு, துணி கயம் துகள்படத் துளங்கிய வதுபோல்-தெளிந்த நீரினையுடைய குளம் புழுதி படிதலால் கலங்கிய தன்மைபோல, தெளியாச் சிந்தையள்-கலக்கமுற்ற உள்ளமுடையளாய், சுதமதிக்கு உரைத்து-அதனைச் சுதமதிக்குக் கூறி, வளி ஏறி கொம்பின் வருந்தி மெய்ந்நடுங்கி - காற்றா னலைக் கப்பட்ட பூங்கொம்பு போல வருந்தி உடல் நடுங்கி, அறவணர் அடி வீழ்ந்து ஆங்கவர் தம்முடன்-அறவணவடிகள் அடிமிசை வீழ்ந்து அவருடன், மற வேல் மன்னன் தேவி தன்பால் வர - வெற்றி வேல் வேந்தனது தேவியிடம் வர ; துணி - தெளிந்த. துளங்குதல் - நடுங்குதல்; ஈண்டுக் கலங்குதல். துகள்பட - சேறுண்டாக என்றுமாம். தெளிந்த உள்ளம் கலங்கிய தென்பது உவமையாற் பெற்றாம்: 89-93. தேவியும் ஆயமும் சித்திராபதியும் மாதவி மகளும் மாதவர்க் காண்டலும்-அறவண முனிவரைக் கண்டவளவில் இராசமா தேவியும் சிலதியர் கூட்டமும் சித்திராபதியும் மணிமேகலையும், எழுந்து எதிர் சென்றாங்கு - எழுந்து எதிரே சென்று, இணை வளைக் கையால் தொழுந்தகை மாதவன் துணைஅடி வணங்க - வணங்குந் தகுதியுடைய அறவணர் இணையடிகள் இரண்டு வளைய லணிந்த கைகளாலும் வணக்கஞ் செய்ய அறிவுண்டாக என்று ஆங்கவன் கூறலும் - அடிகள் அறிவுண்டாக என வாழ்த்தலும்; 94-100. இணைவளை நல்லாள் இராசமாதேவி - வளையல் சேர்ந்த கைகளையுடைய அரசன் பெருந்தேவி, அருந்தவர்க்கு அமைந்த ஆசனம் காட்டி-தவத்தோர்க்கு உரிய ஆதனத்தைக் காட்டி, திருந்து அடி விளக்கிச் சிறப்புச் செய்தபின் - அவரது திருந்திய அடியினை விளக்கிச் சிறப்புச் செய்த பின்னர், யாண்டுபல புக்க நும் இணையடி வருந்த என காண்டகு நல்வினை நும்மை ஈங்கு அழைத்தது - காணுதற்குத்தக்க எனது நல்வினையானது யாண்டு பல சென்று மூத்த நும் திருவடிகள் வருந்துமாறு நும்மை ஈண்டு அழைத்தது, நாத்தொலைவு இல்லையாயினும் தளர்ந்து மூத்தது இவ் யாக்கை வாழ்க பல்லாண்டு என - நாமெலிதலில்லை யாயினும் தளர்ந்து முதிர்ந்த இவ்வுடம்பு பன்னெடுநாள் வாழ்வதாக எனத் துதிக்க; காட்டி அதில் இருக்கச்செய்து எனவும், இணையடி வருந்த வருமாறு அழைத்தது எனவும் விரித்துரைத்துக் கொள்க. நாத்தொலை வின்மை- சொற் சோர்வின்மை; சொல்வன்மை. "நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின், உரை மூதாளன்" (12 : 3-4) என முன்னரும் வந்துளது. 101-104. தேவி கேளாய் - அரச மாதேவியே கேட்பாயாக, செய்தவ யாக்கையின் மேவினேனாயினும் வீழ்கதிர் போன்றேன் - தவம் புரியும் உடலிற் பொருந்தினேனாயினும் மறையுங் கதிரவனைப் போன்றேன், பிறந்தார் மூத்தார் பிணிநோ யுற்றார் இறந்தார் என்கை இயல்பே - உலகின்கட் பிறந்தோ ரனைவரும் பிணி மூப்புற்று இறப்பார் என்பது இயற்கையே; தவயாக்கை-தவத்தால் வந்த உடம்பென்றுமாம், இறப்பிற்கு அத்தமிக்கும் ஞாயிற்றை உவமை கூறுதல் பௌத்த நூன் மரபாதலை, "சாக்கா டென்ப தருவுருத் தன்மை, யாக்கை வீழ்கதி ரெனமறைந்திடுதல்" (30: 102-3) என, இந் நூலிற் பின் வருதலானு மறிக. பிணி நோய் - பிணித்துன்பம் என்றும், பிணித்தலையுடைய நோய் என்றும் உரைத்தலுமாம். உலகில் யாவரும் பிறந்தார் மூத்தார் நோயுற்றார் இறந்தார் என்று கூறப்படுதல் இயல்பே என்றலுமாம். பிறப்புப் பிணி மூப் பிறப்புக்கள் உடம்பிற்கு இயற்கை யென்றபடி. இது கேள் - இதனைக் கேட்பாயாக; 105-110. பேதைமை செய்கை உணர்வே அருவுரு வாயில் ஊறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த இயல்பு ஈராறும் - பேதைமை முதல் வினைப்பயன் ஈறாக இவையென வகுக்கப்பட்ட பன்னிரண்டு இயல்புகளையும் பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர் - பிறவியெடுத்தோர்அறிந்திடின் ஒப்பற்ற பெரும் பேற்றினை யறிவர், அறியார் ஆயின் ஆழ் நரகு அறிகுவர் - அவற்றை அறியாரானால் துன்பம் நிறைந்த நிரயத்தினை யறிவர்; பேதைமை-அவிச்சை, செய்கை - கன்மம். உணர்வு - விஞ்ஞானம், அருவுரு - நாமரூபம். வாயில் - ஐம்பொறிகளும் உள்ளமும். ஊறு- பொறிபுலன்களின் இயைபு. நுகர்வு-இன்பதுன்ப நுகர்ச்சி. வேட்கை- அவா. பற்று - புலன்களைப் பற்றிக்கொள்ளுதல் - பவம் - கன்மவீட்டம் பயன்றரு முறைப்படி சார்தல். தோற்றம் - கதிகளிற் பிறத்தல். வினைப் பயன் - கன்மபலம். இவற்றைப் பன்னிரு நிதானம் என்பர். இப் பன்னிரண்டின் இயல்புகளையும் இந்நூலின் 30ஆம் காதையால் அறிக. பெரும்பேறு - நிருவாணம் எனப்படும். நரகு அறிகுவர் என்றது அதனில் அழுந்துவர் என்றபடி. 111-114. பேதைமை என்பது யாது என வினவின் - பேதைமை யெனப்படுவது எத்தகைத்து என வினவினால், ஓதிய இவற்றை உணராது மயங்கி - கூறப்பட்ட இவ்வியல்புகளை யறியாமல் மயங்கி, இயற்படு பொருளால் கண்டது மறந்து - இயற்கையாகத் தோன்றும் பொருள்களால் தாம் கண்டதனை மறந்து, முயற்கோடு உண்டு எனக் கேட்டது தெளித்தல் - முயற்கொம்பு உண்டு என்று கேட்டதனைத் தெளிதலாம்; இவற்றை-இப் பன்னிரண்டினையும். கேட்டது தெளிதல்-கேட்ட தாகிய பொய்யைமெய்யெனத் தெளிதல். பேதைமை என்பது மயங்கிக் கண்டது மறந்து கேட்டது தெளிதல் என்க. 115-122. உலகம் மூன்றினும் உயிராம் உலகம் அலகில - மூன்றுலகின் கண்ணும் உயிராகிய உலகம் அளவிறந்தனவாம், பல்லுயிர் அறுவகைத்து ஆகும் மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் தொக்க விலங்கும் பேயும் என்றே - அப் பல வுயிர்களும் மக்கள் தேவர் பிரமர் நரகர் தொகுதியாய விலங்கு பேய் என்று ஆறு வகையினை யுடையவாம், நல்வினை தீவினை என்ற இருவகையால் சொல்லப்பட்ட கருவினுள் தோன்றி - நல்வினை தீவினை என்ற இருதிறத்தானும் மேற்கூறிய அறுவகைப்பட்ட கருவினுள்ளே தோன்றி, வினைப்பயன் விளையும் காலை உயிர்கட்கு மனப்பேரின்பமும் கவலையும் காட்டும் - வினைகளானாய பயன் உண்டாகும் பொழுது உயிர்களுக்கு உளத்தில் பேரின்பமும் கவலையும் காட்டும்; பௌத்தநூல் கூறும் உலகம் முப்பத்தொன்றும் மேல் கீழ் நடு என்னும் மூன்றனுள் அடங்குதலின் ‘உலகம் மூன்றினும்' என்றார். உயிராம் உலகம் - சேதனப் பிரபஞ்சம் என்றபடி. பல்லுயிர் - அள விறந்த உயிர். அப் பல்லுயிரும் என்று அறுவகைத்தாகு மென்க. செய்கை கூறத் தொடங்கினவர் அதற்கு அங்கமாக உயிர்களை முதலிற்கூறின ரென்க. செய்கை யென்பதனை வருவித்து, செய்கை இருவகையால் தோன்றிக் காட்டும் என முடிக்க. 123-134. தீவினை என்பது யாது என வினவின் ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய் - தீவினை எனப்படுவது யாது என்று வினவினால் ஆராய்ந்த வளையல்களை அணிந்த நங்காய் அதனைக் கேட்பாயாக, கொலையே களவே காமத் தீவிழைவு உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும் - கொலையும் களவும் காமமாகிய கொடிய விருப்பமும் என்று உடலின்கண் தோன்றுவன மூன்றும், பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் எனச் சொல்லில் தோன்றுவ நான்கும்-பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்று சொல்லிற் பிறப்பன நான்கும், வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி என்று உள்ளந்தன்னில் உருப்பன மூன்றும் எனப் பத்து வகையாம் - விரும்பல் சினத்தல் மயக்க மெய்துதல் என மனத்தின்கண் எழுவன மூன்றும் எனப் பத்து வகையாகும், பயன்தெரி புலவர் இத்திறம் படரார் - வினைகளின் பயனை உணர்ந்த அறிஞர் கொலை முதலிய இத் தீய வழிகளிற் செல்லார், படர்குவர் ஆயின் - யாரேனும் அந்நெறிகளிற் செல்வராயின் அங்ஙனம் செல்லுபவர், விலங்கும் பேயும் நரகரும் ஆகிக் கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் - விலங்கும் பேயும் நரகருமாய்க் கலக்கமுற்ற உள்ளக் கவலையின் கட்படுவர்; காமத் தீவிழைவு - இணை விழைச்சு. எனவென ஒரு சொல் வருவிக்க. உலையா உடம்பு - தளராத வுடம்பு. குறளை - கோட் சொல், பயனில் சொல்-அறம் பொருள் இன்பங்களில் ஒன்றும் பயவாத சொல், வெஃகல் - விரும்புதல், பொல்லாக்காட்சி - மயக்க வறிவு. வெஃகல் முதலிய மூன்றும் முறையே காமம் வெகுளி மயக்கம் எனப்படும். படர் குவராயின் அங்ஙனம் படர்வோர் என விரித்துரைக்க. 135-140. நல்வினை என்பது யாது என வினவின் - நல்வினை எனப்படுவது எத்தகைத்து என்று வினவினால், சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி-கூறப்பட்ட பத்துவகைக் குற்றங் களினின்றும் நீங்கி, சீலம் தாங்கித் தானம் தலை நின்று - சீலத்தை மேற்கொண்டு தானம் வழங்குதலில் நிற்றல்; அங்ஙனம் நிற்போர், மேல் என வகுத்த ஒரு மூன்று திறத்து - உயர்வுடையன என்று வகுக்கப் பட்ட மூவகையினை யுடைய, தேவரும் மக்களும் பிரமரும் ஆகி-வானவர் மக்கள் பிரமர் என்போராய், மேவிய மகிழ்ச்சி வினைப் பயன் உண்குவர் - பொருந்திய நல்வினைப் பயனை அனுபவிப்பர். சீலம் - விலக்கியன வொழித்து விதித்தன செய்தல். கள்ளுண்ணாமை முதலிய ஐந்தும் ஐவகைச் சீலம் எனப்படும்; இவை இல்லறத்தார்க்குரியன. ஏனோர்க்கு இவற்றுடன் மூன்றும் ஐந்தும் கூட்டி எட்டும் பத்துமாம் என்பர். தானம் தலை நின்று என்புழித் தலைநின்று என்னும் எச்சத்தைத் தலைநிற்றல் எனத் திரித்தும், அங்ஙனம் நிற்போர் என விரித்தும் உரைக்க. நல்வினை என்பது நீங்கித் தாங்கி நிற்றல் என்க. மகிழ்ச்சிவினை-நல்வினை. செய்கையை நல்வினை தீவினை எனப் பாகுபாடு செய்தவர் பின் அவற்றி னியல்பை எதிர் நிரனிறை வகையால் விளக்கின ரென்க. "பேதைமை செய்கை" என்பது முதல் ஈண்டுக் கூறப்பட்ட முப்பத்தைந்து அடிகளும் இந்நூலின் 30ஆம் காதையில் இவ்வாறே வந்துள்ளமை அறியற்பாலது. 141-147. அரசன் தேவியோடு ஆயிழை நல்லீர் - இராசமாதேவி யுடனிருக்கின்ற மங்கைமீர், புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் - குற்றமற்ற அருளறத்தினைப் போற்றிக் கேட்பீராக, மறு பிறப்பு உணர்ந்த மணிமேகலை நீ - மணிமேகலை! மறுபிறப்பினை யறிந்த நீ, பிறவறங் கேட்ட பின்னாள் - பிறசமய அறங்களைக் கேட்ட பின்னர், வந்து உனக்கு - உன்பால் வந்து, இத்திறம் பலவும் இவற்றின் பகுதியும் - இவ்வறநெறிகள் பலவற்றையும் இவற்றின் பகுதிகளையும், முத்தேர் நகையாய் முன்னுறக் கூறுவல் - முத்துப்போலும் பற்களையுடையாய் முற்படக் கூறுவேன், என்று அவன் எழுதலும் - என்று கூறி அறவண முனிவன் எழுந்தவளவில்; ஆயிழை நல்லீர் என்றது மாதவியையும் சுதமதியையும் ஆயத்தையும், அரசன் றேவியையும் விளித்தலுமாம். மாதவி முதலியோரை நோக்கிப் போற்றிக் கேண்மின் என்றுரைத்துப் பின் மணிமேகலையை நோக்கிப் பின்னாள் வந்து முன்னுறக் கூறுவல் என்றுரைத்து எழுந்தனன் என்க. 147-158. இளங்கொடி எழுந்து நன்று அறி மாதவன் நல்லடி வணங்கி - மணிமேகலை எழுந்து நன்னெறிகளை யுணர்ந்த பெருந்தவன் திருந்தடிகளை வணக்கஞ்செய்து, தேவியும் ஆயமும் சித்திராபதியும் -பெருந்தேவியும் ஆயத்தினரும் சித்திராபதியும், மாதவர் நன்மொழி மறவாது உய்ம்மின் - அறவணவடிகளின் அறமொழிகளை மறவாமல் உய்ப்பீராக, இந்நகர் மருங்கின் யான் உறைவேனாயின் - யான் இந் நகரத்தின்கண் தங்குவேனானால், மன்னவன் மகற்கு இவள் வருங் கூற்று என்குவர் - ஊரோர் இவள் அரசன் புதல்வனுக்குக் கூற்றாய் வந்தவள் என்று கூறுவர்; ஆகலின், ஆபுத்திரன் நாடு அடைந்து அதற்பின்னாள் - யான் ஆபுத்திரனது நாட்டை அடைந்து அதன் பின்னர், மாசில் மணி பல்லவம் தொழுது ஏத்தி-குற்றமற்ற மணிபல்லவத்தை வணங்கித்துதித்து, வஞ்சியுள் புக்கு மாபத்தினி தனக்கு எஞ்சா நல்லறம் யாங்கணும் செய்குவல் - வஞ்சி நகரத்துட் சென்று பத்தினித் தேவியாகிய கண்ணகியின் பொருட்டுக் குறைவில்லாத நல்லறத்தை எவ்விடத்தும் இயற்றுவேன், எனக்கு இடர் உண்டு என்று இரங்கல் வேண்டா - எனக்கு இன்னல் உண்டாகும் என்று நீவிர் வருந்தல் வேண்டா, மனக்கினியீர் என்று அவரையும் வணங்கி - உளத்திற் கினிமையுடையீர் என்று அவர்களையும் பணிந்து; மாதவியையும் சுதமதியையும் ஆயம் என அடக்கி, தேவியும் ஆயமும் சித்திராபதியும் என்றாள். தேவி முதலியன முன்னிலையிற் படர்க்கை. உய்த்தல்-கொண்டு செலுத்தல். மனக்கு: அத்துச்சாரியை தொக்கது. அவரையும் - தேவி முதலியோரையும்; உம்மை இறந்தது தழுவியது. 159-168. வெந்து ஆறு பொன்போல் வீழ்கதிர் மறைந்த அந்தி மாலை ஆயிழை போகி-வெந்து ஆறியபொன்னைப்போல் வீழ்கின்ற கதிர்களையுடைய ஞாயிறு மறைந்த அந்திப் பொழுதில் மணிமேகலை அங்கு நின்றுஞ் சென்று, உலக வறவியும் முதியாள் குடிகையும் - உலக வறவியையும் சம்பாபதி கோயிலையும், இலகொளிக் கந்தமும் ஏத்தி வலங்கொண்டு - விளங்குகின்ற ஒளியினையுடைய கந்திற் பாவையையும் துதித்து வலங்கொண்டு, அந்தரம் ஆறாப் பறந்து சென்று ஆயிழை-இளங்கொடி விசும்பேவழியாகப் பறந்துசென்று, இந்திரன் மருமான் இரும்பதிப் புறத்து-இந்திரன் வழித் தோன்ற லாகிய புண்ணியராசனது பெரிய நகரத்தின். புறத்தில், ஓர் பூம் பொழில் அகவயின் இழிந்து பொறையு ஈர்த்து - ஒரு பூஞ்சோலை யின் உள்ளிடத்தில் இறங்கி இளைப்பாறி, ஆங்கு வாழ் மாதவன் அடியிணை வணங்கி - ஆண்டுறையும் அருந்தவனாகிய தருமசாவகன் திருவடிகளை வணக்கஞ் செய்து, இந்நகர்ப் பேர் யாது இந்நகர் ஆளும் மன்னவன் யார் என - இந் நகரத்தின் பெயர் யாது இப் பதியை ஆளும் அரசன் யாவன் என வினவ ; அந்திப்பொழுதின் செக்கர் வானத்திற்குத் தீயில் வெந்து ஆறிய பொன் உவமம்; 1"வெந்தாறு பொன்னி னந்தி பூப்ப" என்பதுங் காண்க. மருமான் - வழித்தோன்றல். 168-176. மாதவன் கூறும்-அருந்தவனுரைப்பான், நாகபுரம் இது- இந்நகரத்தின் பெயர் நாகபுரம், நன்னகர் ஆள்வோன் - இந் நற்பதியை ஆள்வோன், பூமிசந்திரன் மகன் புண்ணியராசன் - பூமி சந்திரன் புதல்வனாகிய புண்ணியராசன் என்போன், ஈங்கு இவன் பிறந்த அந்நாள்தொட்டு-இங்கு இவன் பிறந்த அந்நாள் தொடங்கி, ஓங்குயர் வானத்துப் பெயல் பிழைப்பு அறியாது - மிகவுயர்ந்த விசும்பின் மழை பிழைத்தலை யறியாது, மண்ணும் மரனும் வளம் பல தரூஉம்-பூமியும் மரங்களும் பல வளங்களையும் அளிக்கும், உள்நின்று உருக்கும் நோய் உயிர்க்குஇல்என-உயிர் கட்கு உள்ளே நின்று உருக்குகின்ற பிணிகள் இல்லை என்று, தகை மலர்த் தாரோன் தன் திறம் கூறினன் நகை மலர்ப் பூம்பொழில் அருந் தவன்தான் என்க-கட்டப்பட்ட மலர் மாலையினையுடைய அரசனது வரலாற்றினை ஒளி பொருந்திய மலர்களையுடைய பூஞ்சோலையின்க ணிருந்த பெருந்தவன் மொழிந்தனன். தகை - கட்டிய. அகை மலர் எனப் பிரித்து, மலர்ந்த மலர் என்றலுமாம். தொன்முது கணிகை கேட்டு வருந்தி வீழ்ந்து, "நகர் கலக்கொழி யாது; அஞ்சினேன்" என்று ஏத்தி, "கணிகையை என்மனைத் தருக" என, இராசமாதேவி ஈங்கிவை சொல்வுழி, மாதவி அறவணவடிகளுடன் வர, காண்டலும், எதிர் சென்று துணையடி வணங்க, அவன் ‘அறிவுண்டாக' என்று கூறலும், இராசமாதேவி காட்டி விளக்கிச் செய்தபின், ‘வாழ்க' என, ‘தேவி கேளாய்; நல்லீர் கேண்மின்; மணிமேகலை, முன்னுறக் கூறுவல்' என்று அவனெழுதலும், இளங்கொடி எழுந்துவணங்கி நின்று வணங்கிப் போகி ஏத்தி வலங்கொண்டு சென்று இழிந்து பொறையுயிர்த்து வணங்கி, "யாது? யார்?" என, மாதவன் கூறும்; அங்ஙனம் கூறும் அருந்தவன் கூறினன் என, வினை முடிவு செய்க. ஆபுத்திரனாடு அடைந்த காதை முற்றிற்று. 25. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை அப்பொழுது புண்ணியராசன் தன் பெருந்தேவியொடு அப் பொழிலிற் புகுந்து, ஆங்குள்ள தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கி, அறன் மறன் அநித்தம் நித்தம் முதலியவற்றைக் கேட்டுப் பின்பு, “பேரழகினளாய்க் கையிற் பாத்திரங்கொண்டு அறங் கேட்கும் இவள் யார்?'' என வினாவ, அருகே நின்ற கஞ்சுகன் அரசனை வணங்கி, “இவளை ஒப்பவர் யாருமில்லை; முன்னொரு காலத்தில் கிள்ளி வளவனோடு நட்புக்கொள்ளுதலை விரும்பிக் காவிரிப்பூம் பட்டினத்திற்குச்சென்ற பொழுது ஆங்குள்ள அறவணவடிகள் இவள் வரலாறுகளை யெல்லாம் கூறினார் என முன்னரே நான் உரைத்துளேன்; அந் நங்கையே இவள்,'' என்று கூறினன். கூறலும், மணிமேகலை அரசனை நோக்கி, ''நின் கையிலிருந்த பாத்திரமே என் கையை அடைந்தது ; செல்வத்தால் மயங்கினை போலும்; நீ முற்பிறப்பை அறிந்திலையாயினும் ஆவின் வயிற்றிற் பிறந்த இப்பிறப்பையாவது அறிந்திலையே ! என் செய்தனை? மணிபல்லவம் சென்று, புத்த பீடிகையைத் தரிசித்தாலன்றி உனது பிறப்பின் இயல்பை அறியாய்; ஆதலால் ஆங்கு வருவாயாக,'' என்று கூறிவிட்டு, வானிலே எழுந்து சென்று, ஞாயிறு குடதிசையில் வீழ்தற்கு முன்பு மணிபல்லவத்தில் இறங்கி, வலங்கொண்டு புத்த பீடிகையைத் தரிசித்தாள். அது பழம் பிறப்பை அவளுக்கு உணர்த்தியது அதனை யறிந்து கண்டு, காயங்கரை யென்னும் ஆற்றின் கரையில் பிரமதருமன் என்னும் முனிவன் உரைத்ததை எண்ணி வியந்து, அவள் அங்கிருக்கப், புண்ணியராசன் அப்பொழிலை விட்டு நகரிற் புகுந்து தன்னை வளர்த்த அன்னையாகிய அமரசுந்தரியை வினவித் தன் வரலாறு முழுவதையும் அவள் கூறக்கேட்டு வருந்தி அரசாட்சியில் வெறுப் புற்றுத் துறத்தற்குத் துணிந்து தன் கருத்தை வெளியிட்டனன். அதனைக்கேட்ட சனமித்திரன் என்னும் அமைச்சன் அவனை வணங்கி, ''அரசே, பூமிசந்திரன் நின்னைப் பெறுவதன்முன் இந்நாட்டில் பன்னீராண்டு மழைவளம் கரந்து வறுமை மிக்கது; அதனால் எல்லா உயிர்களும் வருந்தின; அப்பொழுது காய்கின்ற கோடையில் கார் தோன்றியது போல, நீ தோன்றினை; தோன்றிய பின் இந்நாட்டில் வானம் பொய்யாது; மண் வளம் குறையாது ; உயிர்கள் உறுபசி அறியா; இனி நீ நீங்குவாயாயின், உயிர் களெல்லாம் தாயைப்பிரிந்த குழவிபோலக் கூவாநிற்கும். இத்தகைய உலகத்தைக் காவாமல் உனது பயனையே விரும்பிச் செல்லுதல் தகுதியன்று. புத்ததேவன் அருளிய அறமும் ஈதன்று'' என்று கூற, அரசன் கேட்டு, ''மணிபல்லவத்தை வலங்கொள்ள வேண்டும் என எனக்குண்டாய வேட்கை தணித்தற்கரியது; ஆதலின் ஒரு திங்கள் அளவு இந்நகரைப் பாதுகாத்தல் நினது கடன்,'' என்று கூறிப் புறப்பட்டு, நாவாய்ஏறி மணிபல்லவத்தை அடைந்தான். உடனே மணிமேகலை வந்து அழைத்துச் சென்று அவனோடு அத்தீவை வலம் வந்து, ''பழம்பிறப்பை உணர்விக்கும் தருமபீடிகை இது,'' என்று காட்ட, அரசன் அதனைத் தரிசித்து வலங்கொண்டு ஏத்தினன். அப்பீடிகை பழம்பிறப்பின் செய்தியை அவனுக்கு விளங்கத் தெரிவித்தது. அதனை யறிந்து வியப்புற்றுத் தனக்குப் பழம்பிறப்பில் அமுத சுரபி யென்னும் பாத்திரத்தை யளித்த சிந்தாதேவியை நினைந்து, "தென்றமிழ் மதுரைச் செழுங் கலைப் பாவாய், உணர்விலே தோன்றி உரைப்பொருள் உணர்த்தும் மடந்தையே, நான் பிறந்தபிறவிதோறும் நின்னை வழிபடுதலின்றி மறந்து வாழேன்," என்று துதித்து மணிமேகலையோடும் எழுந்து தென்மேற்கிற் சென்று கோமுகிக் கரையில் ஒரு புன்னைமரத்தின் நிழலிலே இருந்தான். இருக்கும்பொழுது, ஆபுத்திரனோடு மணிமேகலை வந்திருத்தலைக் காவற்றெய்வமாகிய தீவ திலகை அறிந்து வந்து, "ஆருயிர் மருந்தினைக் கையில் ஏந்தி உயிர்களின் பெருந்துயரினைப் போக்கிய பெரியோய்! அக்காலத்தில் மறந்து இத் தீவில் நின்னைத் தனியே விட்டுக் கப்பலேறிச் சென்று பின்பு நின்னை நினைந்து மீண்டு வந்து நீ இங்கு இறந்திருத்தலை யறிந்து உடனே தம் முயிரை நீத்த ஒன்பது செட்டிகளின் உடல் என்புகள் இவைகாண்; அவர்கள் உண்பிக்க உண்டு உடன் வந்தோர்கள், அவர்கள் இறந்தது தெரிந்து தாங்களும் இறந்தார்கள்; அவர் களுடைய என்புகள் இவை காண்; அலைகள் தொகுத்த மணலால் மூடப்பட்டுப் புன்னை நிழலின் கீழே உனது பண்டை உடம்பு இருந்ததனைக் காண்," என்று அரசனை நோக்கிக் கூறி, பின்பு மணிமேகலையைப் பார்த்து, "காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டது. அதற்குக் காரணம் கேட்பாயாக; நாக நாட்டரசன் மகளாகிய பீலிவளை என்பவள் தான் பெற்ற குழந்தையுடன் வந்து இத்தீவையும் புத்த பீடிகையையும் வலம் வந்து துதிக்கும் பொழுது கம்பளச் செட்டியின் கப்பல் வந்து தங்க, பீலிவளை அவனிடஞ்சென்று, "இவன் அரசன் புதல்வன்; இவனை அவனிடம் சேர்ப்பாயாக," என்று சொல்லிக் குழந்தையை அவன் கையிற் கொடுக்க, அவன் பெரு மகிழ்ச்சியடைந்து வாங்கி மரக்கலம் ஏறிச்செல்லுகையில் கலம் உடைந்து போயிற்று; போகவே, அதில் இருந்தோரிற் சிலர் மெல்லப் பிழைத்துச் சென்று காவிரிப்பூம் பட்டினத்தை யடைந்து, புதல்வனைக் கெடுத்த செய்தியை அரசனுக்குத் தெரிவித்தனர். அது கேட்டு அவன் பொறாமல் செயலற்றுக் கடற்கரையை அடைந்து மகனைத் தேடித்திரிந்தமையால் நகரிலே இந்திரனுக்கு விழாச்செய்தல் நின்றுவிட்டது. அதனைப் பொறுக்காமல் மணிமேகலா தெய்வம் ‘இந் நகரைக் கடல் கொள்ளுக,' என்று சபிக்க, கடல் நகரை மூடியது; மூடவே, அரசன் வேறிடஞ் சென்றான். அறவணவடி களோடு மாதவியும் சுதமதியும் யாதொரு வருத்தமும் இன்றிப் போய் வஞ்சி நகரம் புகுந்தனர்," என்று சொல்லிப் போயினள். அவள் போன பின்பு புண்ணியராசன் அவ்விடத்தே மணலைத் தோண்டி, அங்கே தோன்றிய தனது பழைய உடம்பின் என்பைக் கண்டு மயக்கமுற்றான். அதைக் கண்ட மணிமேகலை, "நீ என்ன துன்பமுற்றாய்? யான் நின் நாட்டிற்கு வந்து நின்னை ஈங்கு அழைத்து வந்தது நினக்கு முற்பிறப்பை உணர்த்தி, யாண்டும் நின் பெயரை நிலைநிறுத்துதற் பொருட்டேயாகும். உலகத்தை ஆளும் அரசர் தாமே அருளறத்தை மேற்கொண்டால் உலகில் குற்ற மெல்லாம் அற்றுவிடுமன்றோ? அறமெனப்படுவது யாதெனில் உயிர்களுக்கு உணவையும் உடையையும் உறையுளையும் வழங்குவதே; இதனை யன்றி வேறு இல்லை," என்று சொல்லித்தேற்றினாள். அதனைக் கேட்ட அரசன், "எனது நாட்டிலும் பிறர்நாட்டிலும் நீ கூறிய நல்லறத்தைச் செய்வேன் : நீ என் பிறப்பை உணர்த்தினை, யான் நின்னிடத்தினின்றும் பிரிதல் ஆற்றேனாகின்றேன்," என, மணிமேகலை, "நீ வருந்தற்க :நீ இங்கே போந்ததற்கு வருந்தி நின்னாடுநின்னை யழைக்கும். ஆதலின் மரக்கலம் ஏறி நீ நின்னாட்டிற்குச் செல்லுக ; யான் வஞ்சி நகரத்திற்குச் செல்வேன்," என்று கூறி விசும்பில் எழுந்தான். அரச னுரிமையோ டப்பொழில் புகுந்து தரும சாவகன் றன்னடி வணங்கி அறனு மறனும் அநித்தமு நித்தத் திறனுந் துக்கமுஞ் செல்லுயிர்ப் புக்கிலும் 5 சார்பிற் றேற்றமுஞ் சார்பறுத் துய்தியும் ஆரிய னமைதியு மமைவுறக் கேட்டுப் பெண்ணிணை யில்லாப் பெருவனப் புற்றாள் கண்ணிணை யியக்கமுங் காமனோ டியங்கா அங்கையிற் பாத்திரங் கொண்டறங் கேட்கும் 10 இங்கிணை யில்லாள் இவள்யா ரென்னக் காவலற் றொழுது கஞ்சுக னுரைப்போன் நாவலந் தீவிலிந் நங்கையை யொப்பார் யாவரு மில்லை யிவள்திற மெல்லாம் கிள்ளி வளவனொடு கெழுதகை வேண்டிக் 15 கள்ளவிழ் தாரோய் கலத்தொடும் போகிக் காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன் மாதவ னறவணன் இவள்பிறப் புணர்ந்தாங் கோதின னென்றியா னன்றே யுரைத்தேன் ஆங்கவ ளிவளவ் வகனகர் நீங்கி 20 ஈங்கு வந்தன ளென்றலு மிளங்கொடி நின்கைப் பாத்திர மென்கைப் புகுந்தது மன்பெருஞ் செல்வத்து மயங்கினை யறியாய் அப்பிறப் பறிந்திலை யாயினு மாவயிற் றிப்பிறப் பறிந்திலை யென்செய் தனையோ 25 மணிப்பல் லவம்வலங் கொண்டா லல்லது பிணிப்புறு பிறவியின் பெற்றியை யறியாள் ஆங்கு வருவாய் அரசநீ யென்றப் பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று மையறு விசும்பின் மடக்கொடி யெழுந்து 30 வெய்யவன் குடபால் வீழா முன்னர் வானின் றிழிந்து மறிதிரை யுலாவும் பூநா றடைகரை யெங்கணும் போகி மணிப்பல் லவம்வலங் கொண்டு மடக்கொடி பிணிப்பறு மாதவன் பீடிகை காண்டலும் 35 தொழுதுவலங் கொள்ளவத் தூமணிப் பீடிகைப் பழுதில் காட்சி தன்பிறப் புணர்த்தக் காயங் கரையெனும் பேரியாற் றடைகரை மாயமின் மாதவன் றன்னடி பணிந்து தருமங் கேட்டுத் தாள்தொழு தேத்திப் 40 பெருமகன் றன்னொடும் பெயர்வோர்க் கெல்லாம் விலங்கு நரகரும் பேய்களு மாக்கும் கலங்கஞர்த் தீவினை கடிமின் கடிந்தால் தேவரு மக்களும் பிரமரு மாகுதிர் ஆகலி னல்வினை யயரா தோம்புமின் 45 புலவன் முழுதும் பொய்யின் றுணர்ந்தோன் உலகுயக் கோடற் கொருவன் றோன்றும் அந்நா ளவனறங் கேட்டோ ரல்லது இன்னாப் பிறவி யிழுக்குந ரில்லை மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம் 50 போற்றுமி னறமெனச் சாற்றிக் காட்டி நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்தீர் அவ்வுரை கேட்டுநும் மடிதொழு தேத்த வெவ்வுரை யெங்கட்கு விளம்பினி ராதலின் பெரியவன் றோன்று முன்னரிப் பீடிகை 55 கரியவ னிட்ட காரணந் தானு மன்பெரும் பீடிகை மாய்ந்துயிர் நீங்கிய என்பிறப் புணர்த்தலு மென்னென் றியான்தொழ முற்ற வுணர்ந்த முதல்வனை யல்லது மற்றப் பீடீகை தன்மிசைப் பொறாஅது 60 பீடிகை பொறுத்த பின்ன ரல்லது வானவன் வணங்கான் மற்றவ் வானவன் பெருமகற் கமைத்துப் பிறந்தார் பிறவியைத் தரும பீடிகை சாற்றுக வென்றே அருளின னாதலி னாயிழை பிறவியும் 65 இருளறக் காட்டு மென்றெடுத் துரைத்தது அன்றே போன்ற தருந்தவர் வாய்மொழி இன்றெனக் கென்றே யேத்தி வலங்கொண்டு ஈங்கிவ றின்னண மாக விறைவனும் ஆங்கப் பொழில்விட் டகநகர் புக்குத் 70 தந்தை முனியாத் தாய்பசு வாக வந்த பிறவியு மாமுனி யருளால் குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர் அடர்ப்பொன் முட்டையு ளடங்கிய வண்ணமும் மாமுனி யருளான் மக்களை யில்லோன் 75 பூமிசந் திரன்கொடு போந்த வண்ணமும் ஆய்தொடி யரிவை யமரசுந் தரியெனும் தாய்வாய்க் கேட்டுத் தாழ்துய ரெய்தி இறந்த பிறவியின் யாய்செய் ததூஉம் பிறந்த பிறவியின் பெற்றியு நினைந்து 80 செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க அரைசுவீற் றிருந்து புரையோர்ப் பேணி நாடகங் கண்டு பாடற் பான்மையில் கேள்வி யின்னிசை கேட்டுத் தேவியர் ஊடற் செவ்வி பார்த்துநீ டாது 85 பாடகத் தாமரைச் சீறடி பணிந்து தேமரு கொங்கையிற் குங்கும மெழுதி அங்கையிற் றுறுமலர் சுரிகுழற் சூட்டி நறுமுகை யமிழ்துறூஉந் திருநகை யருந்தி மதிமுகக் கருங்கட் செங்கடை கலக்கக் 90 கருப்பு வில்லி யருப்புக்கணை தூவத் தருக்கிய காமக் கள்ளாட் டிகழ்ந்து தூவறத் துறத்தல் நன்றெனச் சாற்றித் தெளிந்த நாதனென் செவிமுத லிட்டவித் தேத மின்றா யின்று விளைந்தது 95 மணிமே கலைதான் காரண மாகவென் றணிமணி நீண்முடி யரசன் கூற மனம்வே றாயினன் மன்னென மந்திரி சனமித் திரனவன் தாள்தொழு தேத்தி எங்கோ வாழி யென்சொற் கேண்மதி 100 நுங்கோ னுன்னைப் பெறுவதன் முன்னாள் பன்னீ ராண்டிப் பதிகெழு நன்னாடு மன்னுயிர் மடிய மழைவளங் கரந்தீங் கீன்றாள் குழவிக் கிரங்கா ளாகித் தான்றனி தின்னுந் தகைமைய தாயது 105 காய்வெங் கோடையிற் கார்தோன் றியதென நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல் தோன்றிய பின்னர்த் தோன்றிய வுயிர்கட்கு வானம் பொய்யாது மண்வளம் பிழையாது ஊனுடை யுயிர்க ளுறுபசி யறியா 110 நீயொழி காலை நின்னா டெல்லாம் தாயொழி குழவி போலக் கூஉம் துயர்நிலை யுலகங் காத்த லின்றிநீ உயர்நிலை யுலகம் வேட்டனை யாயின் இறுதி யுயிர்க ளெய்தவு மிறைவ 115 பெறுதி விரும்பினை யாகுவை யன்றே தன்னுயிர்க் கிரங்கான் பிறவு யிரோம்பு மன்னுயிர் முதல்வ னறமுமீ தன்றால் மதிமா றோர்ந்தனை மன்னவ வென்றே முதுமொழி கூற முதல்வன் கேட்டு 120 மணிபல் லவம்வலங் கொள்வதற் கெழுந்த தணியா வேட்கை தணித்தற் கரிதால் அரசு முரிமையு மகநகர்ச் சுற்றமும் ஒருமதி யெல்லை காத்தனின் கடனெனக் கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய் 125 இலங்குநீர்ப் புணரி யெறிகரை யெய்திறீ வங்க மேறினன் மணிபல் லவத்திடைத் தங்கா தக்கலஞ் சென்றுசார்ந் திறுத்தலும் புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி அரைசன் கலமென் றகமகிழ் வெய்திக் 130 காவலன் றன்னொடுங் கடற்றிரை யுலாவும் தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து பெருமகன் காணாய் பிறப்புணர் விக்கும் தரும பீடிகை யிதுவெனக் காட்ட வலங்கொண் டேத்தினன் மன்னவன் மன்னவற்கு 135 உலந்த பிறவியை யுயர்மணிப் பீடிகை கையகத் தெடுத்துக் காண்போர் முகத்தை மையறு மண்டிலம் போலக் காட்ட என்பிறப் பறிந்தே னென்னிடர் தீர்ந்தேன் தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் 140 மாரி நடுநாள் வயிறுகாய் பசியால் ஆரிரு ளஞ்சா தம்பல மணைந்தாங்கு இரந்தூண் வாழ்க்கை யென்பால் வந்தோர்க்கு அருந்தூண் காணா தழுங்குவேன் கையின் நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது 145 ஏடா வழிய லெழுந்திது கொள்கென அமுத சுரபி யங்கையிற் றந்தென் பவமறு வித்த வானோர் பாவாய் உணர்விற் றோன்றி யுரைப்பொரு ளுணர்த்தும் அணிதிக ழவிரொளி மடந்தை நின்னடி 150 தேவ ராயினும் பிரம ராயினும் நாமாசு கழூஉ நலங்கிளர் திருந்தடி பிறந்த பிறவிகள் பேணுத லல்லது மறந்து வாழேன் மடந்தையென் றேத்தி மன்னவன் மணிமே கலையுட னெழுந்து 155 தென்மேற் காகச் சென்று திரையுலாங் கோமுகி யென்னும் பொய்கையின் கரையோர் தூமலர்ப் புன்னைத் துறைநிழ லிருப்ப ஆபுத் திரனோ டாயிழை யிருந்தது காவற் றெய்வதங் கண்டுவந் தெய்தி 160 அருந்துயிர் மருந்துமுன் னங்கையிற் கொண்டு பெருந்துயர் தீர்த்தவப் பெரியோய் வந்தனை அந்நாள் நின்னை யயர்த்துப் போயினர் பின்னாள் வந்துநின் பெற்றிமை நோக்கி நின்குறி யிருந்து தம்முயிர் நீத்தோர் 165 ஒன்பது செட்டிக ளுடலென் பிவைகாண் ஆங்கவ ரிடவுண் டவருடன் வந்தோர் ஏங்கிமெய் வைத்தோ ரென்பு மிவைகாண் ஊர்திரை தொகுத்த வுயர்மணல் புதைப்ப ஆய்மலர்ப் புன்னை யணிநிழற் கீழால் 170 அன்புடை யாருயி ரரசற் கருளிய என்புடை யாக்கை யிருந்தது காணாய் நின்னுயிர் கொன்றாய் நின்னுயிர்க் கிரங்கிப் பின்னாள் வந்த பிறருயிர் கொன்றாய் கொலைவ னல்லையோ கொற்றவ னாயினை 175 பலர்தொழு பாத்திரங் கையி னேந்திய மடவரல் நல்லாய் நின்றன் மாநகர் கடல்வயிறு புக்கது காரணங் கேளாய் நாக நன்னா டாள்வோன் றன்மகள் பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள் 180 பனிப்பகை வானவன் வழியிற் றோன்றிய புனிற்றிளங் குழவியொடு பூங்கொடி பொருந்தியித் தீவகம் வலஞ்செய்து தேவர்கோ னிட்ட மாபெரும் பீடிகை வலங்கொண் டேத்துழிக் கம்பளச் செட்டி கலம்வந் திறுப்ப 185 அங்கவன் பாற்சென் றவன்றிற மறிந்து கொற்றவன் மகனிவன் கொள்கெனக் கொடுத்தலும் பெற்ற வுவகையன் பெருமகிழ் வெய்திப் பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனைத் தொழுதனன் வாங்கித் துறைபிறக் கொழியக் 190 கலங்கொண்டு பெயர்ந்த வன்றே காரிருள் இலங்குநீ ரடைகரை யக்கலங் கெட்டது கெடுகல மாக்கள் புதல்வனைக் கெடுத்தது வடிவேற் கிள்ளி மன்னனுக் குரைப்ப மன்னவன் மகனுக் குற்றது பொறாஅன் 195 நன்மணி யிழந்த நாகம் போன்று கானலுங் கடலுங் கரையுந் தேர்வுழி வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது மணிமே கலாதெய்வம் மற்றது பொறாஅள் அணிநகர் தன்னை யலைகடல் கொள்கென 200 விட்டனள் சாபம் பட்ட தி துவால் கடவுண் மாநகர் கடல்கொளப் பெயர்ந்த வடிவேற் றடக்கை வானவன் போல விரிதிரை வந்து வியனகர் விழுங்க ஒருதனி போயின னுலக மன்னவன் 205 அருந்தவன் றன்னுட னாயிழை தாயரும் வருந்தா தேகி வஞ்சியுட் புக்கனர் பரப்புநீர்ப் பௌவம் பலர்தொழக் காப்போள் உரைத்தன கேட்க வுருகுவை யாயினின் மன்னுயிர் முதல்வனை மணிமே கலாதெய்வம் 210 முன்னா ளெடுத்தது மந்நா ளாங்கவன் அறவர சாண்டது மறவணன் தன்பால் மறுபிறப் பாட்டி வஞ்சியுட் கேட்பையென்று அந்தரத் தீவகத் தருந்தெய்வம் போயபின் மன்னவ னிரங்கி மணிமே கலையுடன் 215 துன்னிய தூமண லகழத் தோன்றி ஊன்பிணி யவிழவு முடலென் பொடுங்கித் தான்பிணி யவிழாத் தகைமையை தாகி வெண்சுதை வேய்ந்தவ ணிருக்கையி னிருந்த பண்புகொள் யாக்கையின் படிவ நோக்கி 220 மன்னவன் மயங்க மணிமே கலையெழுந்து என்னுற் றனையோ விலங்கிதழ்த் தாரோய் நின்னா டடைந்தியான் நின்னையீங் கழைத்தது மன்னா நின்றன் மறுபிறப் புணர்த்தி அந்தரத் தீவினு மகன்பெருந் தீவினும் 225 நின்பெயர் நிறுத்த நீணில மாளும் அரசர் தாமே யருளறம் பூண்டால் பொருளு முண்டோ பிறபுரை தீர்த்தற்கு அறமெனப் படுவ தியாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம் 230 உண்டியு முடையு முறையுளு மல்லது கண்ட தில்லெனக் காவல னுரைக்கும் என்னாட் டாயினும் பிறர்நாட் டாயினும் நன்னுத லுரைத்த நல்லறஞ் செய்கேன் என்பிறப் புணர்த்தி யென்னைநீ படைத்தனை 235 நின்றிறம் நீங்க லாற்றேன் யானெனப் புன்கண் கொள்ளனீ போந்ததற் கிரங்கிநின் மன்பெரு நாடு வாயெடுத் தழைக்கும் வங்கத் தேகுதி வஞ்சியுட் செல்வனென்று அந்தரத் தெழுந்தன ளணியிழை தானென். உரை 1-6. அரசன் உரிமையோடு அப் பொழில் புகுந்து - மன்னவன் மனைவியுடன் அச் சோலையின்கட் புக்கு, தருமசாவகன் தன்னடி வணங்கி-தருமசாவக முனிவரின் திருவடிகளை வணக்கஞ் செய்து, அறனும் மறனும் அநித்தமும் நித்தத் திறனும் துக்கமும் செல்லுயிர்ப் புக்கிலும்-அறமும் பாவமும் அநித்தப்பொருளின் வகைகளும் நித்தப்பொருளின் வகை களும் பிறப்புமுதலாய துக்கமும் செல்லுகின்ற வுயிர் புகுமிடமும், சார்பிற்றோற்றமும்சார்பு அறுத்துஉய்தியும் - பேதைமை முதலிய பன்னிரண்டின் தோற்றமும் அவற்றினீங்கி உய்யும் வகையும், ஆரியன் அமைதியும் அமைவுறக் கேட்டு- ஆசிரியனாகிய புத்தனின் இயல்பும் அமைதிபெறக் கேட்டு; அரசன் - புண்ணிய ராசன். தரும சாவகன் என்பது தருமங் கேட்பவன் என்னும் பொருளது. துக்கம் - பிறப்பு, பிணி, மூப்பு சாக்காடு என்பன. சார்பிற்றோற்றம் - ஒன்றினொன்று சார்ந்து தோன்றும் பன்னிரு நிதானம். ஆரியன் - குரவன் ; புத்தன். அரசன் புகுந்து வணங்கிக் கேட்டு என்க. 7-10. பெண் இணை இல்லாப் பெருவனப்பு உற்றாள் - மகளிருள் தனக்கு இணையில்லாத பேரழகுடையளாய், கண்ணிணை இயக்கமும் காமனோடு இயங்கா - கண்களின் இயங்குதலும் அநங்கனோடு இயங்கா நின்று, அங்கையிற் பாத்திரம் கொண்டு அறம் கேட்கும்- அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக்கொண்டு அறவுரை கேட்கின்ற, இங்கிணை இல்லாள் இவள் யார் என்ன - இணையற்ற இம் மங்கை யாவள் என வினவ ; கண்ணிணை இயக்கமும் காமனோடு இயங்கா என்றது இதனைக் கருவியாகக்கொண்டு காமன் போருக்கெழுமாறு இவள் பார்வையின் இயக்கம் உளதென்றபடி: "உருவி லாளனொ டுருவம் பெயர்ப்ப" (5: 6) என முன் வந்திருப்பதனோடு ஒத்து நோக்கற்பாலது. இனி, இயங்கா என முற்றாக்கி இயக்கம் தீநெறியிற் சென்றிலது என்றுமாம். அரசன் கேட்டுப் பின்பு இவள் யாரென்ன வென்க. 11-18 காவலன் தொழுது கஞ்சுகன் உரைப்போன் - அரசனைப் பணிந்து சட்டையிட்ட பிரதானி உரைக்கின்றவன், காவலந் தீவில் இந் நங்கையை ஒப்பார் யாவரும் இல்லை - சம்புத் தீவின்கண் இம்மங்கையை ஒப்பவர் எவரும் இல்லை, இவள் திறமெல்லாம் - இவளுடைய வரலாறு அனைத்தையும், கிள்ளிவளவனொடு கெழுதகை வேண்டி-கிள்ளிவளவனுடன் நட்புக் கொள்ளுதலை வேண்டி, கள் அவிழ் தாரோய்-தேன் பொருந்திய மலர் மாலையினை யுடையோய், கலத்தொடும் போகிக் காவிரிப் படப்பை நன்னகர் புக்கேன்-கலத்துடன் சென்று காவிரியின் பக்கத்ததாகிய புகார்நகரத்தை யடைந்தேன், மாதவன் அறவணன் இவள் பிறப்பு உணர்ந்தாங்கு ஓதினன் என்று - அறவண முனிவன் இவளது பிறப்பினை அறிந்தவாறு மொழிந்தனன் என்று, நான் அன்றே உரைத்தேன்-யான் மீண்டு வந்த அந் நாளிலேயே கூறினேன்; படப்பை - பக்கம்; தோட்டக்கூறுமாம். 1"காவிரிப் படப்பைப் பட்டினம்" என்றார் இளங்கோவடிகளும். தாரோய்! கெழுதகை வேண்டிப் போகி நன்னகர் புக்கேனாகியயான் அறவணன் இவள் பிறப்பு ஓதினன் என்று இவள் திறமெல்லாம் அன்றே யுரைத்தனன் என்க. 19-24 ஆங்கவள் இவள் அவ் அகல் நகர் நீங்கி-அவள் இந்நங்கையே அவ் வகன்ற நகரத்தினின்றும் நீங்கி, ஈங்கு வந்தனள் என்றலும்- ஈண்டு வந்திருக்கின்றனள் என வுரைத்தலும், இளங்கொடி-மணிமேகலை, நின்கைப் பாத்திரம் என் கைப் புகுந்தது - நினது கையிலிருந்த அமுதசுரபியே என் கையில் வந்தடைந்தது, மன்பெருஞ் செல்வத்து மயங்கினை அறியாய் - மிகப் பெருஞ் செல்வத்தால் மயங்கினையாகலின் நீ அதனை அறியாய், அப் பிறப்பு அறிந்திலை ஆயினும்-நினது முற்பிறப்பினை அறிந்திலாயேனும், ஆ வயிற்று இப்பிறப்பு அறிந்திலை என் செய்தனையோ - பசுவின் வயிற்றிலுதித்த இப் பிறப்பினையும் அறிந்திலையே என் செய்தனை ; உரைப்போனாகிய கஞ்சுகன் ‘ஈங்கு வந்தனள்' என்றலும் என்க. அப் பிறப்பு - முற்பிறப்பு; சாலி வயிற்றிற் பிறந்த பிறப்பு. 25-29. மணிப்பல்லவம் வலங்கொண்டால் அல்லது - மணிபல்லவத் தின்கட் சென்று புத்த பீடிகையை வலம் வந்தாலன்றி, பிணிப்புறு பிறவியின் பெற்றியை அறியாய்-பற்றுக்களையுடைய பிறவியினது தன்மையை அறியாய் ஆகலின், ஆங்கு வருவாய் அரச நீ என்று-அரசனே நீ ஆண்டு வருவாயாக என்று, அப் பூங்கமழ் தாரோன் முன்னர்ப் புகன்று - மணங்கமழும் மாலையினையுடைய அம் மன்னவன் முன்னர்க் கூறி, மையறு விசும்பின் மடக்கொடி எழுந்து - இளங்கொடி களங்கமற்ற வானூடு எழுந்து ; பிணிப்பு - பற்று, கட்டு. கமழ் பூந்தாரோன் என்க 30-36. வெய்யவன் குடபால் வீழா முன்னர் - கதிரவன் மேற்றிசையிற் சென்று வீழ்வதன் முன்னம், வானின்று இழிந்து-விசும்பினின்றும் இறங்கி, மறி திரை உலாவும்-வளைந்த அலைகள் உலாவுகின்ற, பூநாறு அடைகரை எங்கணும் போகி - பூக்கள் மணம் வீசுகின்ற அடைகரை'acயெங்குஞ் சென்று, மணிப்பல்லவம் வலங்கொண்டு - மணிப்பல்லவத்தை வலம் வந்து, மடக்கொடி பிணிப்பறு மாதவன் பீடிகைகாண்டலும்- மணிமேகலை பற்றற்ற பெருந்தவனாம் புத்தனது பீடிகையைக் காண்டலும், தொழுது வலங்கொள்ள - வலம் வந்து வணங்க, அத் தூமணிப் பீடிகை-அவ் வழகிய தூய பீடிகையின், பழுது இல் காட்சி - குற்றமற்ற காட்சியானது, தன் பிறப்பு உணர்த்த- தனது பிறப்பினை அறிவிக்க; அடைகரை - அணைந்துள்ள கரை. மடக்கொடி எழுந்து இழிந்து போகி வலங்கொண்டு காண்டலும், பீடிகைக் காட்சி உணர்த்த வென்க. 37-44. காயங் கரையெனும் பேரியாற்று அடைகரை-காயங் கரை என்னும் பேராற்றின் அடைகரையிலுள்ள, மாயம் இல் மாதவன் தன்னடி பணிந்து - வஞ்சனையற்ற பெருந்தவனாகிய பிரமதருமன் திருவடிகளை வணங்கி, தருமம் கேட்டுத் தாள் தொழுது ஏத்தி- அறங்கேட்டு அடியிணை பணிந்து துதித்து, பெருமகன் தன்னொடும் பெயர்வோர்க்கு எல்லாம்-அரசனுடன் அவந்தி நகரஞ் செல்வோரனைவர்க்கும், விலங்கும் நரகரும் பேய்களும் ஆக்கும்- விலங்கினமும் நிரயவாணரும் பேய்களுமாகத் தோற்றுவிக்கும் கலங்கு அஞர்த் தீவினை கடிமின் - கலங்குதற்குக் காரணமாகிய துன்பத்தைத் தரும் தீவினைகளை நீக்குமின், கடிந்தால் - அவற்றை நீக்கினால், தேவரும் மக்களும் பிரமரும் ஆகுதிர்-வானவரும் மக்களும் பிரமரும் ஆவீர், ஆதலின் நல்வினை அயராது ஓம்புமின் - ஆதலின் நல்வினைகளை மறவாது பாதுகாத்திடுமின்; புத்த சமயத்திற் கூறப்படும் கதி ஆறாகுமென்பதும், அவற்றுள் மூன்று நல்வினையானும், மூன்று தீவினையானும் உளவாகும் என்பதும் 1"அலகில் பல்லுயி ரறுவகைத் தாகும், மக்களும் தேவரும் பிரமரு நரகரும், தொக்க விலங்கும் பேயு மென்றே, நல்வினை தீவினை யென்றிரு வகையாற், சொல்லப் பட்ட கருவிற் சார்தலும்" என இந்நூலுட் பின்பு கூறப்படுதலா னறிக. தீவினை - கொலை முதலியன. நல்வினை- கொல்லாமை முதலியன. 45-51. புலவன் முழுதும் பொய்யின்று உணர்ந்தோன் உலகுஉயக் கோடற்கு ஒருவன் தோன்றும்-பேரறிவுடையோனும் அனைத்தையும் வழுவின்று உணர்ந்தோனுமாகிய ஒருவன் உலகினை உய்யக் கொள்ளுமாறு உதித்தருள்வன், அந்நாள் அவன் அறம் கேட்டோர் அல்லது-அந்நாளிலே அவனுடைய அறமொழிகளைக் கேட்டோரை யன்றி, இன்னாப் பிறவி இழுக்குநர் இல்லை-துன்பந்தரும் பிறவியினின்றும் தப்பு வோர் எவரும் இல்லை ஆகலின், மாற்றருங் கூற்றம் வருவதன் முன்னம்-பிறரால் தடுத்தற்கரிய கூற்றுவன் வருவதற்கு முன்னரே, போற்றுமின் அறம் எனச் சாற்றிக்காட்டி-அறம்புரிவீராக என்று விளங்க எடுத்துரைத்து, நா கடிப்பாக வாய்ப்பறை அறைந்தீர்-நாவே குறுந்தடியாக வாயாகிய பறையை அறைந்தீர்: புலவன்-ஞானி; புத்தன் என்பதும் இப்பொருட்டு. இனி, புலவன்- இயற்கை யறிவுடையவன் என்றுமாம். உணர்ந்தோன் ஒருவன் தோன்று மென்க. அவன் அறம் - அவன் கூறும் அறம். கூற்றுவன் எதனாலும் தடுத்தற்கரியன் என்பது, 1"மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும்" 2"மருந்தில் கூற்றத் தருந்தொழில்" எனப் பிற சான்றோர் கூறுமாற்றானு மறிக; அறைந்து சாற்றிக் காட்டினீர் என விகுதி பிரித்துக் கூட்டுக. மாதவன் றன்னடி பணிந்து பெயர்வோர்க்கெல்லாம் வாய்ப்பறை அறைந்தீர் என இடமும் பாலும் மயங்கியுள்ளன; 'மாதவ நின்னடி' எனப் பாடங் கொள்ளுதல் தக்கது. 52-57. அவ்வுரை கேட்டு நும் அடி தொழுது ஏத்த-அவ்வற மொழிகளைக் கேட்டு யாம் நும் திருவடிகளை வணங்கித் துதிக்க, வெவ்வுரை எங்கட்கு விளம்பினிர் ஆதலின்-நீர் எங்கட்குத் துன்பந்தரும் மொழிகளைக் கூறியருளினீர் ஆதலின், பெரியவன் தோன்றுமுன்னர் - புத்தன் தோன்றுதற்கு முன்னரே, இப்பீடிகை கரியவன் இட்ட காரணம் தானும்-இப் பீடிகையை இந்திரன் ஈண்டு இட்ட காரணமும், மன்பெரும் பீடிகை - பெருமைமிக்க இப்பீடிகை, மாய்ந்து உயிர் நீங்கிய என் பிறப்பு உணர்த்தலும்-யாக்கையினின்றும் உயிர் நீங்கி மறைந்த எனது முற் பிறப்பினை உணர்த்தற்குக் காரணமும், என் என்று யான் தொழ - என்னையென்று யான் வணங்க; வெவ்வுரை-பதினாறு நாளில் இராகுலன் நஞ்சுவிழி யரவால் உயிர் துறப்பான், நீ அவனுடன் தீயில் மூழ்குவை என்னும் மொழி. இதனை இந்நூல் கஆம் காதையா னறிக. 58-68. முற்ற உணர்ந்த முதல்வனை அல்லது - எல்லா மறிந்த இறைவனையன்றி, மற்று அப்பீடிகை தன்மிசைப் பொறாஅது- வேறெவரையும் அப்பீடிகை தன்மீது தாங்காது, பீடிகை பொறுத்தபின்னர் அல்லது-அப்பீடம் அறவோன் அடி யிணையைத் தாங்கியபின்னரேயன்றி, வானவன் வணங்கான்-இந்திரன் அதனை வணங்கான், மற்று அவ்வானவன்-அவ் விண்ணவன், பெருமகற்கு. அமைத்து-புத்தனை அறிந்து கொள்ளும்பொருட்டு இயற்றி, பிறந்தார் பிறவியை - பிறந்தோர் களுடைய பழம்பிறப்பின் செய்தியை, தரும பீடிகை சாற்றுக என்றே அருளினன் ஆதலின் - இத் தரும பீடிகை உணர்த்துக என ஆணைதந்தனன் ஆதலின், ஆயிழை பிறவியும் இருளறக்காட்டும் என்று எடுத்து உரைத்தது-நின் பிறவி யினையும் மயக்கமறக் காட்டும் என்று எடுத்துக் கூறியதாகிய, அன்றே போன்றது அருந்தவர் வாய்மொழி இன்று எனக்கு என்றே ஏத்தி வலங்கொண்டு-அன்றுரைத்த நுமது வாய் மொழி எனக்கு இன்று கூறினாற்போன்றது என்று துதித்து வலங்கொண்டு, ஈங்கிவள் இன்னணம் ஆக - இவ்விடத்து மணிமேகலை இப்படியிருக்க; பெருமகற்கு அமைத்து - பெருமகன் எழுந்தருளுதற் பொருட்டமைத்து என்றுமாம். ஆயிழை, அருந்தவர் என்பன முன்னிலைக்கண் வந்தன. உரைத்ததாகிய வாய்மொழி யென்க. வாய்மொழி இன்று எனக்கு அன்று நேரிலே கேட்டாற் போன்றது என்றுரைத்தலுமாம். 68-79. இறைவனும் - புண்ணியராசனும், ஆங்கப் பொழில் விட்டு அகநகர் புக்கு - அச்சோலையை விட்டு நகரத்துள்ளே சென்று, தந்தை முனியா தாய் பசுவாக வந்த பிறவியும், தாதை முனிவனாகவும் தாய் பசுவாகவும் வந்த பிறவியையும், மாமுனி அருளால் குடர்த்தொடர் மாலை சூழாது - தவமுனிவன் திருவருளால் குடராகிய தொடர்மாலையாற் சுற்றப்படாமல், ஆங்கோர் அடர்ப்பொன் முட்டையுள் அடங்கிய வண்ணமும் - பசுவின் வயிற்றினுள்ளே பொற் றகட்டினாலாய ஒரு முட்டையின்கண் அடங்கிய வண்ணத்தினையும், மாமுனி அருளால் மக்களை இல்லோன் பூமிசந்திரன் கொடுபோந்த வண்ணமும் - மக்கட்பே றில்லாதவனாகிய பூமிசந்திரன் முனிவர் திருவருளால் தன்னைக் கொணர்ந்த திறத்தினையும் ஆய்தொடி அரிவை அமரசுந்தரி என்கின்ற, தாய்வாய் கேட்டுத் தாழ்துயர் எய்தி - தாயினிடமாகக் கேட்டு அறிந்து மிக்க துன்பத்தை யடைந்து, இறந்த பிறவியின் யாய் செய்ததூஉம்-சென்ற பிறப்பின்கண் தாய் செய்ததனையும், பிறந்த பிறவியின் பெற்றியும் நினைந்து - இப்பிறப்பின் இயல்பினையும் எண்ணி; முனி - மண்முக முனிவன், 1"மண்முக னென்னு மாமுனி யிடவயின்" என முன் வந்தமை அறிக. அடர்-தகடு. அமர சுந்தரி-பூமி சந்திரன் மனைவி. இறந்த பிறவியின் யாய்-அபஞ்சிகன் மனைவியாகிய சாலி. 80-92. செருவேல் மன்னர் செவ்விபார்த்து உணங்க-போர் புரியும் வேற்படையினையுடைய வேந்தர் தம் குறை கூறுதற் கேற்ற காலத்தினை நோக்கி வாட, அரைசு வீற்று இருந்து புரையோர்ப் பேணி-பெரியோரை விரும்பித் துணைக் கொண்டு அரசு புரிந்து செம்மாந்திருந்து, நாடகம் கண்டு - நாடகத்தினைக் கண்டு, பாடற்பான்மையின் கேள்வி இன்னிசை கேட்டு- பாடுதன் முறைமையுடைய கேள்விபொருந்திய இனிய இசையைக் கேட்டு, தேவியர் - மனைவியரின் ஊடற் செவ்வி பார்த்து - ஊடுஞ் செவ்வியை நோக்கி, நீடாது - அது நீட்டியாவாறு, பாடகத் தாமரைச் சீறடி பணிந்து- பாடகமணிந்துள்ள தாமரை மலரைப் போன்ற சிறிய அடிகளை வணங்கி, தேமரு கொங்கையில் குங்குமம் எழுதி-அழகிய கொங்கைகளில் குங்குமக் குழம்பால் எழுதி, அங்கையில் துறுமலர் சுரிகுழல் சூட்டி - நெருங்கிய மலர்களை அழகிய கையினால் சுரிந்த கூந்தலின் கண் சூட்டி, நறுமுகை அமிழ்து உறூஉந் திருநகை அருந்தி-நறிய முகிழ்போலும் அழகிய பற்களிற் பொருந்திய அமிழ்தினையுண்டு, மதிமுகக் கருங்கண் செங்கடை கலக்க-திங்களனையமுகத்திலுள்ள கரிய கண்களின் சிவந்த கடை கலக்குறுத்த, கருப்பு வில்லி அருப்புக்கணை தூவ - கரும்பினை வில்லாகக்கொண்ட காமன் முகையறா மலராகிய அம்புகளைப் பொழிய, தருக்கிய காமக் கள்ளாட்டு இகழ்ந்து - செருக்குற்ற காமமாகிய கள்ளையுண்டு விளையாடும் விளையாட்டினை இகழ்ந்து, தூ அறத்துறத்தல் நன்று எனச் சாற்றி - பற்றுக்கோடு இல்லையாகத் துறத்தல் நல்லது எனக் கூறி; மன்னர் செவ்விபார்த்தலாவது தம் குறை கூறுதற் கேற்ற மனமொழி மெய்கள் இனியனாங் காலம் பார்த்தல். 1"செவ்வி அறம்பார்க்கும்" என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க. புரையோர் - அறிவில் மேம்பட்ட அமைச்சர் புரோகிதர் முதலாயினர். கேள்வி - சுருதி. ஊடல்-கலவியின்பம் பற்றிப் புலத்தல்; அஃது அளவிற் பெருகலாகா தென்பதை, 2"உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது, மிக்கற்றால் நீளவிடல்" என்பதனாலறிக. ஊடல் நீடாது பணிந்து எழுதிச் சூட்டி யென்க. திரு நகை உறும் அமிழ்து என மாறுக. உணங்க வீற்றிருந்து கண்டு கேட்டு அருந்தித் தருக்கிய காமக் கள்ளாட்டு என முடிக்க. துவரத் துறத்தல் என்னும் பாடத்திற்கு முற்றத் துறத்தல் என்று பொருள் கொள்க. 93-96. தெளிந்த நாதன் என் செவிமுதல் இட்ட வித்து-மெய்யுணர்வுடைய தருமசாவக முனிவன் எனது காதினிடம் விதைத்த வித்தானது. ஏதம் இன்றாய் இன்று விளைந்தது மணிமேகலைதான் காரணமாக என்று - மணிமேகலை காரணமாகக் குற்றமின்றாய் இன்று விளைந்தது என்று, அணிமணி நீள்முடி அரசன் கூற - தொன்று தொட்டுவந்த அழகிய மணிமுடியினையுடைய மன்னவன் மொழிய; நீண்முடி - தொன்று தொட்டு வந்த முடி; குடியின் பழமையும் பெருமையும் கூறியபடி. அரசன் துயரெய்தி நினைந்து இகழ்ந்தது சாற்றிக்கூற வென்க. 97-104. மனம் வேறாயினன் மன் என மந்திரி சனமித்திரன் அவன் தாள் தொழுது ஏத்தி - அரசன் மனம் வேறுபட்டனன் என்று மந்திரியாகிய சனமித்திரன் மன்னவன் அடிகளை வணங்கித் துதித்து, எங்கோ வாழி என்சொல் கேண்மதி - எம்மிறைவனே வாழ்வாயாகஎன் மொழியினைக் கேள், நுங்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள் - நுந் தந்தையாய பூமிசந்திரன் நின்னைப் பெறுவதற்கு முன்னர், பன்னீராண்டு இப் பதிகெழு நன்னாடு மன்னுயிர் மடிய மழைவளம் கரந்து-இந்நகரத்தினையுடைய நல்ல நாடு மிகுதியான உயிர்கள் இறக்குமாறு மழையாகிய செல்வம் பன்னீராண்டு மறைந் தமையால், ஈங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகி-பெற்ற தாய் குழந்தைக்கு இரங்காதவளாய், தான் தனி தின்னும் தகைமையதாயது-தானே தனித்து உண்ணுந் தகுதியினை யுடைத்தாயிற்று; மன் - அரசன். மதி; முன்னிலையசை, கரந்து -கரந்தமையால் என்க; கரந்தது என்பதும் பாடம். நாடு - சாவக நாடு. 105-111. காய் வெங் கோடையில் கார் தோன்றியது என - எரிகின்ற வெப்பமிகுந்த கோடையில் கருமுகில் தோன்றினாற் போல, நீ தோன்றினையே நிரைத்தார் அண்ணல்-வரிசைப் படுத்திய மலர் மாலையினையணிந்த பெருந்தகாய் நீ தோன்றினையே, தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு - நீ உதித்த பின் உலகில் உள்ள உயிர்களுக்கு, வானம் பொய்யா மண்வளம் பிழையாது - மழை பெய்தலிற் பொய்யாமையின் நிலவளம் பிழையாதாயிற்று, ஊனுடை உயிர்கள் உறுபசி அறியா-ஊனுடம்பினையுடைய உயிர்கள் மிக்க பசியை அறியாவாயின ஆகலின், நீயொழிகாலை நின்னாடு எல்லாம் தாயொழி குழவிபோலக் கூஉம்-நீ நீங்கிய காலத்து நினது நாடு முழுவதும் தாயற்ற சிறு குழந்தையைப்போல வாய் விட்ட ழைக்கும்; செங்கோன் மன்னன் குடிகளுக்குத் தாய்போல்வான் என்பது 1" தாயொக்கும் அன்பின்" என்பதனானு மறிக. "தாயொழி குழவி போலக் கூ.உம்' என்னுங் கருத்து 2"தாயில் தூவாக் குழவி போல, ஓவாது கூ.உம்" என்பதனோ டொத்திருத்தலுங் காண்க. 112-119. துயர்நிலை உலகம் காத்தல் இன்றி நீ-நீ துன்புறும் நிலையில் உள்ள உலகத்தினைப் பாதுகாத்தலின்றி, உயர் நிலை உலகம் வேட்டனையாயின்-முத்தியுலக மெய்துதலை விரும்பினையானால், இறுதி உயிர்கள் எய்தவும் இறைவ - அரசே! உயிர்கள் துன்புற்று மரணமடையவும், பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே - நீ நினக்கு ஊதியமாகிய நிருவாணத்தையே விரும்பினாயாவையன்றே, தன் உயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஓம்பும் - தனது உயிர் துன்பத்தால் வருந்துதற்கு இரங்காமல் பிறவுயிர்களைப் பாதுகாக்கும், மன்னுயிர் முதல்வன் அறமும் ஈது அன்றால் - புத்த தேவனது அறமும் இதுவன்று ஆகலான், மதிமாறு ஓர்ந்தனை மன்னவ என்றே - மன்னவனே நீ மாறுபட்ட சிந்தனையைக் கடைப் பிடித்தனை என, முதுமொழி கூற முதல்வன் கேட்டு - அறிவுரைகளைக் கூறப் புண்ணியராசன் அதனைக் கேட்டு; துயர் நிலை யுலகம் என்புழி உலகம் உயிர்களை யுணர்த்திற்று. உயர்நிலை யுலகம் - வீட்டுலகம்; 3"உயர்நிலை யுலகமுஞ் சிறிது" என்பதுங் காண்க. பெறுதி - பேறு; ஊதியம். இரங்குதல் ஓம்புதல் என்னும் வினைகளை ஏனையிடத்துங் கூட்டி, இரங்கிக் காவாமல் என்றும் இரங்கிக் காக்குமென்றும் முறையே பொருள் கொள்க. முதுமொழி - அறிவு வாய்ந்த மொழி. 120-123. மணிபல்லவம் வலங் கொள்வதற்கு எழுந்த-மணி பல்லவத்தினை யடைந்து வலம் வந்து வணங்குவேன் என்றெழுந்த, தணியா வேட்கை தணித்தற்கு அரிதால்-நீங்காத விருப்பமானது தணித்திட அரியதாகும் ஆகலின், அரசும் உரிமையும் அகநகர்ச்சுற்றமும் - அரசாட்சியையும் உரிமையையும் அகநகரிலுள்ள பரிசனங்களையும், ஒருமதி எல்லை காத்தல் நின் கடன் என - ஒரு திங்கள் அளவுங் காத்தல் நின்னுடைய கடமையாகும் என மொழிந்து; உரிமை - அந்தப்புர மகளிர். அகநகர்ச் சுற்றம் - அகப் பரிவாரம். முதலிய பரிசனங்கள். 124-127. கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்-மரக்கலத் தொழிலாளரை வருக என அழைத்துக்கொண்டு. இலங்கு நீர்ப் புணரி எறிகரை எய்தி - விளங்குகின்ற நீரினையுடைய கடல் அலைவீசுகின்ற கரையை அடைந்து, வங்கம் ஏறினன் - மரக்கலத்தின்கண் ஏறினன், மணிபல்லவத்திடைத் தங்காது அக்கலம் சென்று சார்ந்து இறுத்தலும்-அம் மரக்கலம் இடையே தங்காமற் சென்று மணிபல்லவத்தை அடைந்து தங்குதலும்; கலம் செய் கம்மியர் - மரக்கல மியற்றுந் தொழிலாளர்; மரக்கலத்தின் உறுப்புகள் சிதைவுழி அவற்றைச் செம்மை செய் தற்கு அவரையும் உடன்கொண்டு செல்வர். 128-133. புரைதீர் காட்சிப் பூங்கொடி பொருந்தி-குற்றமற்ற மெய்யறிவினையுடைய மணிமேகலை ஆண்டு எய்தி, அரைசன் கலம் என்று அகமகிழ்வு எய்தி - புண்ணியராசனது மரக்கலம் என்று அறிந்து உளமகிழ்ச்சியுற்று, காவலன் தன்னொடும் கடற்றிரை உலாவும் தேமலர்ச் சோலைத் தீவகம் வலஞ்செய்து - அரசனுடன் கடலில் அலைகள் உலாவுகின்றதேன் பொருந்திய மலர்ப்பொழிலையுடைய மணிபல்லவத்தை வலங்கொண்டு, பெருமகன் காணாய் பிறப்பு உணர்விக்கும் தரும பீடிகை இது எனக் காட்ட - அரச! முற்பிறப்பினை யறிவிக்கும் அறத்தவிசு ஈது காண்பாயாக என்று காட்ட; காவலன் றன்னொடும் வலஞ்செய்து பீடிகையைக்காட்ட வென்க. வலங்கொண்டு ஏத்தினன் 134-137. மன்னவன் - வேந்தன் அப்பீடிகையை வலம்வந்து துதித்தனன், மன்னவற்கு உலந்த பிறவியை உயர்மணிப் பீடிகை - உயரிய மணிகளானிழைக்கப்பட்ட அவ்வறத்தவிசு அரசனுக்குச் சென்று பிறப்பின்கண் நிகழ்ந்த செய்தியை, கையகத்து எடுத்துக் காண்போர் முகத்தை மையறு மண்டிலம் போலக் காட்ட-கையிலெடுத்துக் காண்போருடைய முகத்தைத் தெளிவாகக் காண்பிக்கும் குற்றமற்ற கண்ணாடியைப் போல எடுத்துக்காட்ட; பீடிகை உலந்த பிறவியை மண்டிலம்போலக் காட்ட வென்க. 138-157. என் பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் - எனது முற்பிறப்பினை உணர்ந்தேன் எனது இடுக்கணினின்றும் நீங்கினேன், தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் - தென்றமிழ் மதுரையின்கணுள்ள அழகு மிக்க கலைமகளே, மாரிநடுநாள் வயிறு காய் பசியால்-மாரிக்காலத்து நள்ளிரவில் வயிற்றினைக் காய்கின்ற பெரும்பசியினாலே, ஆரிருள் அஞ்சாது அம்பலம் அணைந்தாங்கு இரந்தூண் வாழ்க்கை என்பால் வந்தோர்க்கு - செறிந்திருக்கின்ற இருளையும் அஞ்சாதவராய் அம்பலத்தை அடைந்து இரந்துண்ணும் உணவையே பொருளாகவுடைய என்னிடம் வந்தவர்கட்கு, அருந்து ஊண் காணாது அழுங்குவேன் கையில் - உண்பதற் குரிய உணவொன்றையும் காணாமல் வருந்துவேனுடைய கைகளில், நாடு வறங் கூரினும் இவ்வோடு வறங்கூராது ஏடா அழியல் எழுந்து இது கொள்கென - ஏடா வருந்தற்க நாடெங்கும் மழையின்றி வறுமையுற்றாலும் இந்த வோடு வறுமையுறாது ஆகலின் நீ எழுந்து இதனைக் கொள்வாயாக என்று கூறி, அமுதசுரபி அங்கையில் தந்து என் பவம் அறுவித்த வானோர் பாவாய் - அமுதசுரபி என்னும் அரும்பெறற் பாத்திரத்தை எனது கையின்கண் கொடுத்தருளி என்னுடைய வினைத்தொடர்புகளை அறுவித்த இமையோர் பாவையே, உணர்வில் தோன்றி உரைப்பொருள் உணர்த்தும்- அறிவின் கண்ணே தோன்றிச் சொற்பொருள்களை உணர்த்தியருளும், மணிதிகழ் அவிரொளி மடந்தை - பளிக்குமணி போல விளங்குகின்ற ஒளிவிடும் திருமேனியையுடைய தேவியே, நின்அடி- நின்திருவடிகளை, தேவராயினும் பிரமராயினும் அவர்தம் நாமாசு கழூஉம் நலங்கிளர் திருந்தடி - தேவராயினும் பிரமராயினும் அவர் தம் நாக்குற்றத்தினைப் போக்கும் சிறப்புமிக்க திருந்திய அடிகளை, பிறந்த பிறவிகள் பேணுதல் அல்லது - யான் பிறக்கின்ற பிறவிகள்தோறும் உளத்திற்கொண்டு வழிபடலல்லது, மறந்து வாழேன் மடந்தை என்று ஏத்தி-மறந்து உயிர்வாழேன் மெல்லியால் எனத் துதித்து, மன்னவன் மணிமேகலையுடன் எழுந்து - அரசன் மணி மேகலையுடன் அங்கு நின்றும் எழுந்து, தென்மேற்காகச் சென்று- தென்மேற்றிசையின் கட்சென்று, திரைஉலாம் - அலைகள் உலாவுகின்ற, கோமுகி என்னும் பொய்கையின் கரை - கோமுகி என்ற வாவியின் கரையில், ஓர் தூமலர்ப் புன்னைத் துறை நிழல் இருப்ப துறையினருகே தூய மலர்களையுடைய ஒரு புன்னைமர நிழலின்கண் இருப்ப; பீடிகையாற் பழம் பிறப்பை யுணர்ந்த புண்ணியராசன் சென்ற பிறப்பிலே மதுரையிற் கலைநியமத்தில் சிந்தாதேவி அமுதசுரபியைத் தனக்கு அளித்ததனை அறிந்தானாகலின் அத்தேவியைப் பரவுகின்றான். இங்ஙனம் அவன் அமுதசுரபி பெற்ற வரலாற்றினை மேலே பாத்திர மரபு கூறிய காதையில் அறிக. ஏடா: கெழுதகைச் சொல், பவம் - கன்மக் கூட்டம். நின்னடி, நலங்கிளர் திருந்தடி என ஒருபொருண் மேல் அடுக்கி வந்தன. கழூஉம்-போக்கும். பிறவிகள் - பிறவிகடோறும், மன்னவன் ஏத்தி எழுந்து சென்று கரையில் நிழலில் இருப்பவென்க. என்னிடர் தீர்த்த; ஏடா பரியல்; என்பனவும் பாடம். 158-167. ஆபுத்திரனோடு ஆயிழை இருந்தது காவற்றெய்வதம் கண்டு உவந்து எய்தி - ஆபுத்திரனுடன் மணிமேகலை கோமுகிக் கரையில் இருந்தனை மணிபல்லவத்தின் காவற்றெய்வமாகிய தீவ திலகை கண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டு அடைந்து, அருந்து உயிர் மருந்து முன் அங்கையில் கொண்டு - முற்பிறப்பில் உண்ணப்படும் அரிய உயிர் மருந்தினைக் கையகத்திற்கொண்டு, பெருந்துயர் தீர்த்த அப் பெரியோய் வந்தனை-உயிர்களின் பெரிய துன்பத்தை நீக்கிய பெரியோய் ஈண்டு வந்தாய், அந்நாள் நின்னை அயர்த்துப் போயினர்-அந்நாளில் நின்னை இங்குவிட்டு மறந்து சென்றோர்கள், பின்னாள் வந்து நின் பெற்றிமை நோக்கி - பின்னாட்களில் ஈண்டு வந்து நின் தன்மையைக் கண்டு, நின்குறி இருந்து தம்முயிர் நீத்தோர் - நீ இறந்தவிடத்தில் உண்ணா நோன்புடனிருந்து தம் உயிரை விட்டோராகிய, ஒன்பது செட்டிகள் உடல் என்பு இவைகாண் - ஒன்பது வணிகர்களின் உடல் எலும்புகளாகிய இவற்றைக் காண்பாயாக, ஆங்கு அவர் இட உண்டு அவருடன் வந்தோர் ஏங்கி மெய் வைத்தோர் என்பும் இவைகாண் - அச் செட்டிகள் உணவளிக்க உண்டு அவர்களுடன் வந்தோர்கள் ஏக்கமுற்று உயிர் நீங்கினோர் களுடைய என்புகளாகிய இவற்றையுங் காண்பாயாக; ஆபுத்திரனோடு மணிமேகலை இருந்ததனைக் கண்டு அடைந்த தீவ திலகை முறையே அவ்விருவரையும் நோக்கிப் பின்வருமாறு கூறுவதாயிற்று. கண்டு வந்தெய்தி என்று பிரித்தலுமாம். உயிர் மருந்து-சோறு. அப் பெரியோய் - அத்தகு பெரியோய். குறி - இடம். போயினர், நீத்தோர், வந்தோர், வைத்தோர் வினைப்பெயர்கள். போயினவர் வந்து நீத்தார்; அங்ஙனம் நீத்தவராகிய செட்டிகள் எனவும், வந்தோராகிய வைத்தோருடைய என்பு எனவும் கொள்க. 168-171. ஊர் திரை தொகுத்த உயர் மணல் புதைப்ப-பரந்த அலைகளால் திரட்டப்பட்ட உயர்ந்த மணல் மறைப்ப, ஆய்மலர்ப்புன்னை அணிநிழற் கீழால் - அழகிய பூக்களை யுடைய புன்னை மரத்தின் அழகிய நிழலின் கீழிடத்தே, அன்புடை ஆருயிர் அரசர்க்கு அருளிய என்புடை யாக்கை இருந்தது காணாய் - அன்பினையுடைய அரியவுயிரை அரசனாகிய நினக்குக் கொடுத்த என்பினாலாகிய யாக்கை இருக்கின்றதைப் பாராய்; கீழால்: உருபு மயக்கம். ஆருயிர் என்றது விஞ்ஞான கந்தத்தை. அரசற்கு: முன்னிலையிற் படர்க்கை. 172-174. நின் உயிர் கொன்றாய் - நீ நின் உயிரையுங் கொன்றனை, நின் உயிர்க்கு இரங்கி - நினது உயிருக்கு இரக்கமுற்று, பின்னாள் வந்த பிறர் உயிர் கொன்றாய் - பின்னாளில் ஈண்டுவந்த ஏனோரின் உயிரையுங் கொன்றனை, கொலைவன் அல்லையோ கொற்றவன் ஆயினை-அங்ஙனம் கொலைஞனாக வுள்ள நீ யல்லயோ அரசனாயினை என்று கூறி; நின் உயிர்க்கு - நின்னுயிர் கழிந்தமைக்கு. பிறர் உயிர் விடுதற்குக் காரணமானமையின் ‘பிறருயிர் கொன்றாய்' என்றது. இது பழிப்பது போலப் புகழ்தலின் வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாகும். 175-177. பலர் தொழு பாத்திரம் கையின் ஏந்திய-பலரும் வணங்குந் தகுதியுடைய அமுதசுரபியைக் கையில் ஏந்தியுள்ள, மடவரல் நல்லாய் - மடப்பம் பொருந்திய மெல்லியலே, நின்றன் மாநகர் - நின்னுடைய பெரிய நகரம், கடல் வயிறு புக்கது - கடலின் வயிற்றிற் புகுந்தது, காரணம் கேளாய்-அதன் காரணத்தைக் கேட்பாயாக; மாநகர் - காவிரிப்பூம் பட்டினம். 178-183. நாகநன்னாடு ஆள்வோன்தன் மகள் பீலிவளை யென்பாள் பெண்டிரின் மிக்கோள்-நாகநன்னாட் டரசன் புதல்வியாகிய மகளிருள் எழில் மிகுந்தோளாய பீலிவளை என்பவள், பனிப்பகை வானவன் வழியில் தோன்றிய - ஞாயிற்றுப் புத்தேள் மரபில் உதித்த, புனிற்றிளங் குழவியோடு பூங்கொடி பொருந்தி - மிக்க இளமையுடைய குழவியுடன் அவளும் வந்து, இத் தீவகம் வலஞ்செய்து - இத் தீவினை வலம் வந்து, தேவர்கோன் இட்ட மாபெரும் பீடிகை வலங்கொண்டு ஏத்துழி-இந்திரனா லிடப்பட்ட பெருமை பொருந்திய இவ் வறத் தவிசினை வலஞ்செய்து துதிக்கும்பொழுது; ஆள்வோன் - வளைவணன். பீலிவளை யென்பாளாகிய பூங்கொடி குழவியொடு பொருந்தி யென்க. 184-191. கம்பளச்செட்டி கலம் வந்திறுப்ப - கம்பளச் செட்டி யினுடைய மரக்கலம் ஈண்டுவந்து தங்க, அங்கவன்பாற் சென்று அவன் திறம் அறிந்து-அவ் வணிகனிடம் போய் அவன் காவிரிப்பூம் பட்டினஞ் செல்லுதலை அறிந்து, கொற்றவன் மகன் இவன் கொள்கெனக் கொடுத்தலும்-இவன் அரசன் புதல்வன் இவனைக்கொண்டு செல்க என்று கொடுத்தலும், பெற்ற உவகையன் பெருமகிழ் வெய்தி - உவகைமிக்குடையனாய அவ் வணிகன் அப் புதல்வனைப் பெற்றதனாற் பெருமகிழ்ச்சி யுற்று, பழுதில் காட்சிப் பைந்தொடி புதல்வனை - பீலிவளை தன் குற்றமற்ற காட்சியினையுடைய அப் புதல்வனை, தொழுதனன் வாங்கி - வணங்கி வாங்கிக்கொண்டு, துறை பிறக்கு ஒழிய - இக் கடற்றுறை பின்னொழியுமாறு, கலங்கொண்டு பெயர்ந்த அன்றே - மரக்கலத்திற் கொண்டுசென்ற அன்றைக்கே, கார் இருள் - நள்ளிரவின் இருளில், இலங்குநீர் அடைகரை அக் கலங் கெட்டது - விளங்குகின்ற நீரினையுடைய கரையருகில் அவ் வங்கங் கவிழ்ந்தது; கம்பளச் செட்டி, பெயர்; கம்பள வாணிகஞ் செய்யும் செட்டியுமாம். அரசகுமாரனாகலின் தொழுது வாங்கினான் என்க. பிறக்கு - பின். கெட்டது - சிதைந்தது என்றுமாம். 192-200. கெடுகல மாக்கள் - அழிந்த மரக்கலத்திலிருந்து மீண்டோர், புதல்வனைக் கெடுத்தது-அரசகுமாரனை இழந்த செய்தியை, வடிவேற்கிள்ளி மன்னனுக்கு உரைப்ப - கூரிய வேலினையுடைய கிள்ளியாகிய அரசனுக்கு மொழிய, மன்னவன் மகனுக்கு உற்றது பொறாஅன்-வேந்தன் புதல்வனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறாதவனாய், நன்மணி இழந்த நாகம் போன்று - நல்ல மாணிக்கத்தை இழந்த பாம்பைப்போல வருந்தி, கானலும் கடலும் கரையும் தேர்வுழி -கடற்கானலிலும் கடலிலும் கடற்கரையிலும் தேடிக்கொண்டிருக்குமிடத்து, வானவன் விழாக்கோள் மாநகர் ஒழிந்தது - காவிரிப் பூம்பட்டினம் இந்திரவிழா வெடுத்தலை ஒழிந்தது, மணிமேகலா தெய்வம் மற்றது பொறாஅள்-மணிமேகலா தெய்வம் அக்குற்றத்தினைப் பொறாமல், அணிநகர் தன்னை அலைகடல் கொள்கென இட்டனள் சாபம் - அழகிய நகரத்தை அலைகள் செறிந்த கடல்கொள்வதாக என்று சாபமிட்டனள், பட்டது இதுவால் - கடல் கோள் நேர்ந்த செய்தி இதுவாகும்; 1'நன்மணி இழந்த நாகம்போன்று' என்னும் இவ் வுவமை முன்னரும் இந்நூலுட் போந்தமை காண்க. காரணங்கேளாய் இட்டனள் சாபம் பட்டது இது என ஒட்டுக. 201-208. கடவுள்மாநகர் கடல்கொளப் பெயர்ந்த வடிவேல் தடக்கை வானவன்போல - பெருமை பொருந்திய தனது தேவ நகரம் கடல் கோட்பட ஆண்டுநின்றும் நீங்கிய கூரிய வச்சிரப் படை பொருந்திய பெரிய கையையுடைய இந்திரன்போல், விரிதிரை வந்து வியன் நகர் விழுங்க - விரிகின்ற அலை களையுடைய கடல்வந்து தனது அகன்ற நகரத்தை விழுங்க, ஒருதனி போயினன் உலக மன்னவன்- உலக மன்னவனாகிய நெடுமுடிக்கிள்ளி அங்கிருந்து துணையின்றிச் சென்றனன், அருந்தவன் தன்னுடன் ஆயிழை தாயரும் - அரிய தவமுடைய அறவண வடிகளுடன் நின் தாயாராகிய மாதவியுஞ் சுதமதியும், வருந்தாது ஏகி வஞ்சியுட் புக்கனர் - வருத்தம் ஒன்று மின்றிச் சென்று வஞ்சி நகரம் புகுந்தனர், பரப்புநீர்ப் பௌவம் பலர் தொழக் காப்போள் உரைத்தன - பரந்த நீரினையுடைய கடலைப் பலரும் வணங்குமாறு காக்கின்ற மணிமேகலா தெய்வத்தால் இவை எனக்கு உரைக்கப்பட்டன; " கடவுண்மாநகர்......வானவன்போல" என்றது இல்பொருளுவமம்; 2"வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும் இலங்குநீர்த் துருத்தியும் இளமரக் காவும் அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி ஒருநூற்று நாற்ப தியோசனை விரிந்த பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று" என உவமங் கூறியிருத்தலும் ஈண்டு அறியற்பாலது. 208-213. கேட்க உருகுவையாயின் - இன்னும் கேட்க விரும்பினை யாயின், நின் மன்னுயிர் முதல்வனை - நின் தந்தை மரபில் முந்தை யோனாய ஒரு வணிகனை, மணிமேகலா தெய்வம் முன்னாள் எடுத்ததும் - மணிமேகலை தெய்வம் மரக்கல முடைந்த நாளில் கடலினின்றும் எடுத்துக் காப்பாற்றியதும், அந்நாள் ஆங்கவன் - அந்நாளில் அவ்வணிகன், அறவர சாண்டதும்-புண்ணியதானஞ் செய்தனையும், அறவணன் தன்பால் - அறவண அடிகளிடம், மறுபிறப் பாட்டி வஞ்சியுட் கேட்பை என்று-மறுபிறப் புணர்ந்தோளாகிய நீ வஞ்சி நகரத்தின்கண் கேட்டுணர்வை என்று கூறி, அந்தரத் தீவகத்து அருந்தெய்வம் போயபின் - மணிபல்லவத் தீவினுட் காவல் புரியும் அரிய தெய்வமாகிய தீவதிலகை சென்றபின்னர்; உயிர் என்றது குடியை உணர்த்திற்று. அறவரசு - புண்ணிய தானம். மறுபிறப்பாட்டி-மறுபிறப்பினை அறியும் பெற்றியள். அந்தரத் தீவு - சிறு தீவு. 214-220. மன்னவன் இரங்கி-அரசன் வருத்தமுற்று, மணிமேகலை யுடன் துன்னிய தூமணல் அகழ-மணிமேகலையுடன் புன்னை நீழலில் நெருங்கிய தூய மணலைத் தோண்ட; தோன்றி - வெளிப்பட்டு, ஊன்பிணி அவிழவும் உடல்என்பு ஒடுங்கித் தான்பிணி அவிழாத் தகைமையதாகி - தசையினது பிணிப்பு நீங்கவும் யாக்கையின் எலும்புகள் ஒடுக்கமுற்றுத் தான் கட்டவிழாத தன்மையுடையதாய், வெண்சுதை வேய்ந்து அவண் இருக்கையின் இருந்த பண்புகொள் யாக்கையின் படிவம் நோக்கி - வெள்ளிய சுண்ணத்தினால் வேயப்பட்டு அவ்விடத்து இருத்தலைப் போன்றிருந்த மாண்புமிக்க முற்பிறப்பின் வடிவத்தைப் பார்த்து, மன்னவன் மயங்க - புண்ணிய ராசன் கலக்க மெய்த; தூ - தூய்மை. பிணி - கட்டு. தோன்றித் தகைமயதாகி இருந்த யாக்கையின் படிவமென்க. 220-231. மணிமேகலை எழுந்து - மணிமேகலை உடனே எழுந்து, என்னுற்றனையோ இலங்கிதழ்த் தாரோய் - விளங்குகின்ற இதழ்கள் பொருந்திய மலர்மாலையினை யுடைய மன்னவனேநீ என்ன துன்பம் எய்தினையோ, நின்நாடு அடைந்து யான் நின்னைஈங்கு அழைத்தது - யான் நின்நாட்டினை யடைந்து நின்னை இத் தீவிற்கு அழைத்தது, மன்னா நின்றன் மறு பிறப்பு உணர்த்தி - அரசே நின்னுடைய பழம் பிறப்பினை நினக்கு அறிவித்து, அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும் நின்பெயர் நிறுத்த-இரண்டாயிரஞ் சிற்றிடைத் தீவுகளிலும் நான்கு பெருந் தீவுகளிலும் நினது புகழை நிலைபெறுத்து வதற்கே யாகும், நீணிலமாளும் அரசர் தாமே அருளறம் பூண்டால்- பெரிய நிலவுலகினை ஆள்வோராகிய அரசர்களே அருளாகியஅறத்தினை, மேற்கொண்டால் பொருளும் உண்டோ பிற புரை தீர்த்தற்கு - உலகில் குற்றந் தீர்த்தற்குப் பொருளும் உண்டோ, அற மெனப்படுவது யாது எனக் கேட்பின் மறவாது இதுகேள்-அறம் என்று கூறப் படுவது யாது என்று கேட்பின் யான் கூறுகின்ற இதனை மறவாது கேட்பாயாக, மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்லென - நிலை பெற்ற உயிர்கட்கெல்லாம் உணவும் ஆடையும் தங்குமிடமும் அளித்த லல்லது வேறு யாம் கண்டதில்லை என்று கூற; மறுபிறப்பு என்றது, ஈண்டுச் சென்ற பிறப்பினை. அந்தரத்தீவு பெருந் தீவு என்பவற்றை முன் 1"நால்வகை மரபின் மாபெருந் தீவும், ஓரீ ராயிரஞ் சிற்றிடைத் தீவும்" என உரைத்தமையா னறிக. பொருளு முண்டோ புரைதீர்த்தற்கு என்றது, அரசர் அருளறம் பூண்டால் எல்லா வுயிர்களும் தாமே குற்றமற்றனவா மாதலின், உலகிலே குற்றந் தீர்த்தல் என்பதற்குப் பொருளே யிராதென்றபடி. பிற; அசைச்சொல்; பிறவற்றின் என்றுமாம். உண்டியும் உடையும் உறையுளும் அளித்தலல்லது என விரித்துரைக்க. 2"அற்றார்கட்கு, உண்டியுறையு ளுடுக்கை யிவை யீந்தார்" என்பது அறியற்பாலது. 231-239. காவலன் உரைக்கும் - அரசன் கூறுவான், என் நாட்டா யினும் பிறர் நாட்டாயினும் நன்னுதல் உரைத்த நல்லறம் செய்கேன் - நன்னுதால் என்னுடைய நாட்டிலும் பிறருடைய நாடுகளிலும் நீ மொழிந்த நல்லறங்களைச் செய்வேன், என் பிறப்பு உணர்த்தி என்னை நீ படைத்தனை - என் பழம் பிறப்பினை அறிவித்து அறிவுடையவனாக்கினமையின் நீ என்னைப் படைத்தோயாவை, நின்றிறம் நீங்கல் ஆற்றேன் யான் என - ஆகலின் யான் நின்னிடத்தினின்றும் பிரிதலை ஆற்றேன் என்றுரைக்க, புன்கண் கொள்ளல் - துன்ப மெய்தாதே, நீ போந்ததற்கு இரங்கி-நீ ஈண்டு வந்ததற்கு வருந்தி, நின்மன்பெரு நாடு வாயெடுத்து அழைக்கும்-நினது மிகப்பெரிய நாடு ஓலமிட்டு நின்னையழைக்கும் ஆகலின், வங்கத்து ஏகுதி - மரக்கலத்தினிடமாகச் செல்வாய், வஞ்சியுட் செல்வேன் என்று-யான் வஞ்சிமாநகரஞ் செல்வேன் என்று கூறி, அந்தரத்து எழுந்தனள் அணியிழை தானென்-மணிமேகலை விசும்பின் வழியாக எழுந்தனள் என்க. ஆயினும்: எண்ணிடைச் சொல். பழம்பிறப் புணர்ந்தது நல்லறம் பூண்டற்குரிய சிறப்புணர்வினனாதற்குக் காரணமா யிருந்தமையின் ‘என்னை நீ படைத்தனை' என்றான்; 1"நானவன்றன் மகள்" என்பது போன்றதிது. நின்னாடு வாயெடுத்தழைக்கும் என்னுங் கருத்து 'நீ யொழி காலை ... கூஉம்' என முன் இக் காதையுள் வந்திருத்தல் காண்க. அரசன், புகுந்து வணங்கிக் கேட்டு, ‘இவள் யார்' என்னக் கஞ்சுகன், ‘அன்றே உரைத்தேன்; அவள் ஈங்கு வந்தனள்;' என்றலும், இளங்கொடி, ‘ஆங்கு வருவாய்' என்று புகன்று எழுந்து இழிந்து போகி வலங்கொண்டு பீடிகையைக் காண்டலும், தொழுது அவள் வலங் கொள்ள, அப் பீடிகை உணர்த்த, பணிந்து, ‘அன்றே போன்றது' என்று ஏத்தி வலங்கொண்டு இன்னணமாக, இறைவனும் விட்டுப் புக்குக் கேட்டு எய்தி நினைந்து கள்ளாட்டிகழ்ந்து சாற்றி, ‘வித்து இன்று விளைந்தது' என்று கூற, மந்திரி சனமித்திரன், தொழுதேத்தி, ‘மன்னவ, மதிமாறோர்ந்தனை' என்று முதுமொழி கூற, முதல்வன் கேட்டு, ‘வேட்கை தணித்தற்கரியது; காத்தல் நின்கடன்' என்று கூறிக் கூஉய்க் கரையெய்தி ஏறினன்; அக் கலம் சென்று சார்ந்து இருத்தலும், பூங்கொடி பொருந்தி மகிழ்வெய்தி வலஞ்செய்து, ‘பீடிகை இது' எனக் காட்ட, மன்னவன் வலங்கொண்டு ஏத்தினன்; அவனுக்குப் பீடிகை பிறவியைக் காட்ட, மன்னவன் ‘மறந்து வாழேன்' என்று ஏத்தி, மணிமேகலையுடன் எழுந்து சென்று இருப்ப, தெய்வதம் கண்டு வந்தெய்தி, ‘பெரியோய், வந்தனை; உடலென்பு இவைகாண்; என்பு மிவை காண்; காணாய்; கொன்றாய்; கொன்றாய்; கொற்றவனாயினை; மட வரல்நல்லாய், நகர் கடல் வயிறு புக்கது, காரணங் கேளாய்; மணிமேகலா தெய்வம் சாபமிட்டனள்; இது பட்டது; உலக மன்னவன் போயினன்; தாயரும் புக்கனர்; கேட்க உருகுவையாயின், அறவணன்றன்பால் வஞ்சியுட் கேட்பை' என்று தெய்வம்' போயபின், மன்னவன் இரங்கிப் படிவம் நோக்கி மயங்க, மணிமேகலை எழுந்து ‘கண்டது இல்' என காவலன் உரைக்கும்; அங்ஙனம் உரைப்பவன், ‘நீங்கலாற்றேன் யான்' என, அணியிழை. ‘ஏகுதி; செல்வன்' என்று எழுந்தனள் என, வினை முடிவு செய்க. ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை முற்றிற்று. 26. வஞ்சிமாநகர் புக்க காதை மணிமேகலை வான்வழியாக வஞ்சிமாநகரை யடைந்து அங்கே கண்ணகிக்கும் கோவலற்கும் எடுக்கப்பட்டுள்ள கோயிலை யடைந்து அவர் படிமங்களை வணங்கிப் பரவினாள்; கண்ணகி திருமுன் நின்று கண்ணீர் சொரிந்து, அக் கண்ணகியார் கற்புக் கடன் பூண்டு தன்கடன் முடித்த திறத்தைத் தெரிவிக்குமாறு வேண்டினாள்; அவட்குக் கண்ணகியார், மதுரையைத் தாம் அழற்படுத்திய காலையில், மதுராபதியெனும் அந்நகர்த் தெய்வம் தோன்றித் தமது பண்டைப் பிறப்பு வரலாற்றைக் கூறி அப்போது நேர்ந்த சாபத்தால் தமக்கு இத்தீங்கு நேர்ந்தது என்று சொல்லியும் தாம் அந்நகரைத் தீயிட்ட சினப்பாவம் தம்மை எவ்வகையாலும் பற்றா தொழியாதென்றும், அதனால் தாம் பன்முறையும் பிறந்தும் இறந்தும் முடிவில் கபிலநகரடைந்து, புத்த தருமங் கேட்டுத் தவம் பூண்டு, புத்தன் தோன்றி யறமுரைக்கும் காலத்தே, அவனது, புத்தவிகார மேழனையும் ஏத்தித் துன்பப் பிறவி நீங்கி அறங்கேட்டுப் பிறவிநீத்த பெற்றியினைப் பெறல் கூடுமென்றும், அக்காலத்தே இருத்தியும் பல செய்யப்படுமென்றும் சொல்லி, "நீ இவ் வஞ்சிநகர்க்கண்ணே அவ்வச் சமயத்தவர் கூறும் பொருள் களைக் கேட்டு அவற்றின் மெய்ம்மையின்மையைத் தேர்ந்து, புத்த தருமங் கேட்டுப் பிடகநெறி கடவா தொழுகுவாய்,' என்றும் தெளிவித்து, மேலும்கூறலுற்று, ‘நீ இளையளென்றும் பெண் ணென்றும் கருதிச் சமயக் கணக்கர் பலரும் நின்னொடு உரையாடா திகழ்வராதலால், நீ வேற்றுருக்கொள்க" என்றும் உரைத்தார். மணிமேகலையும் அவ்வாறே தனக்கு மணிமேகலா தெய்வம் தந்த மந்திரத்தை யோதி வேற்றுருக் கொண்டு, முனிவரும் கற்றோரும் புலவரும் கூடியிருக்கும் வஞ்சிநகர்ப் புறச்சேரி யடைந்து தனக்கு அறங்கேட்டற்குரிய ஏது நிகழ்ச்சியும் நால்வகை வாய்மை மேற்கோடற்குரிய பொருத்தமும் அமைந்தமையால் அங்கே தங்கினாள். (கண்ணகி கோவலர்களின் முற்பிறப்பு வரலாறு 11-31 அடிகளிலும், சேரன் செங்குட்டுவன் வடவாரிய மன்னரை வென்ற வெற்றி நலம் 77-90 அடிகளிலும் கூறப்படுகின்றன. அணியிழை யந்தர மாறா வெழுந்து தணியாக் காதற் றாய்கண் ணகியையுங் கொடைகெழு தாதை கோவலன் றன்னையுங் கடவு ளெழுதிய படிமங் காணிய 5 வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து வணங்கி நின்று குணம்பல வேத்தி அற்புக்கட னில்லாது நற்றவம் படராது கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்தது அருளல் வேண்டுமென் 1றழுது முன்னிற்ப 10 ஒருபெரும் பத்தினிக் கடவுளாங் குரைப்போள் எம்மிறைக் குற்ற விடுக்கண் பொறாது வெம்மையின் மதுரை வெவ்வழற் படுநாள் மதுரா பதியெனு மாபெருந் தெய்வம் இதுநீர் முன்செய் வினையின் பயனால் 15 காசில் பூம்பொழிற் கலிங்கநன் னாட்டுத் தாய மன்னவர் வசுவுங் குமரனும் சிங்க புரமுஞ் செழுநீர்க் கபிலையும் அங்காள் கின்றோ ரடற்செரு வுறுநாள் மூவிரு காவத முன்னுந ரின்றி 20 யாவரும் வழங்கா விடத்திற் பொருள்வேட்டுப் பல்கலன் கொண்டு பலரறி யாமல் எல்வளை யாளோ டரிபுர மெய்திப் பண்டக் கலம்பகர் சங்கமன் றன்னைக் கண்டனர் கூறத் தையனின் கணவன் 25 பார்த்திபன் றொழில்செயும் பரத னென்னும் தீத்தொழி லாளன் றெற்றெனப் பற்றி ஒற்ற னிவனென வுரைத்து மன்னற்குக் குற்றமி லோனைக் கொலைபுரிந் திட்டனன் ஆங்கவன் மனைவி யழுதன ளரற்றி 30 ஏங்கிமெய் பெயர்ப்போ ளிறுவரை யேறி இட்ட சாபங் கட்டிய தாகும் உம்மை வினைவந் துருத்தலொழி யாதெனும் மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னுஞ் சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன் 35 மேற்செய்நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம் அவ்வினை யிறுதியி னடுசினப் பாவம் எவ்வகை யானு மெய்துத லொழியாது உம்ப ரில்வழி யிம்பரிற் பல்பிறப்பு யாங்கணு மிருவினை யுய்த்துமைப் போல 40 நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப் பிறந்து மிறந்து முழல்வோம் பின்னர் மறந்து மழைமறா மகதநன் னாட்டுக்கு ஒருபெருந் திலகமென் றுரவோ ருரைக்கும் தரவரும் பெருமைக் கபிலையம் பதியின் 45 அளப்பரும் பாரமிதை யளவின்று நிறைத்துத் துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றிப் போதி மூலம் பொருந்திவந் தருளித் தீதறு நால்வகை வாய்மையுந் தெரிந்து பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும் 50 அந்நிலை யெல்லா மழிவுறு வகையும் இற்றென வியம்பிக் குற்றவீ டெய்தி எண்ணருஞ் சக்கர வாள மெங்கணும் அண்ண லறக்கதிர் விரிக்குங் காலைப் பைந்தொடி தந்தை யுடனே பகவன் 55 இந்திர விகார மேழுமேத் துதலின் துன்பக் கதியிற் றோற்றர வின்றி அன்புறு மனத்தோ டவனறங் கேட்டுத் துறவி யுள்ளந் தோன்றித் தொடரும் பிறவி நீத்த பெற்றிய மாகுவம் 60 அத்திற மாயினு மநேக காலம் எத்திறத் தார்க்கு மிருத்தியுஞ் செய்குவம் நறைகமழ் கூந்த னங்கை நீயும் முறைமையி னிந்த மூதூ ரகத்தே அவ்வவர் சமயத் தறிபொருள் கேட்டு 65 மெய்வகை யின்னும் நினக்கே விளங்கிய பின்னர்ப் பெரியோன் பிடகநெறி கடவாய் இன்னதிவ் வியல்பெனத் தாயெடுத் துரைத்தலும் இளையள் வளையோ ளென்றுனக் கியாவரும் விளைபொரு ளுரையோர் வேற்றுருக் கொள்கென 70 மையறு சிறப்பிற் றெய்வதந் தந்த மந்திர மோதியோர் மாதவன் வடிவாய்த் தேவ குலமுந் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையு மிடைந்து நற்றவ முனிவருங் கற்றடங் கினரும் 75 நன்னெறி காணிய தொன்னூற் புலவரும் எங்கணும் விளங்கிய வெயிற்புற விருக்கையில் செங்குட் டுவனெனுஞ் செங்கோல் வேந்தன் பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் போர்த்தொழிற் றானை குஞ்சியிற் புனைய 80 நிலநா டெல்லைதன் மலைநா டென்னக் கைம்மலைக் களிறினந் தம்முண் மயங்கத் தேரு மாவுஞ் செறிகழன் மறவரும் கார்மயங்கு கடலிற் கலிகொளக் கடைஇக் கங்கையம் பேரியாற் றடைகரைத் தங்கி 85 வங்க நாவியி னதன்வடக் கிழிந்து கனக விசயர் முதற்பல வேந்தர் அனைவரை வென்றவ ரம்பொன் முடிமிசைச் சிமைய மோங்கிய விமைய மால்வரைத் தெய்வக் கல்லுந் தன்றிரு முடிமிசைச் 90 செய்பொன் வாகையுஞ் சேர்த்திய சேரன் விற்றிறல் வெய்யோன் றன்புகழ் விளங்கப் பொற்கொடிப் பெயர்ப்படூஉம் பொன்னகர்ப் பொலிந்தனள் திருந்துநல் லேது முதிர்ந்துள தாதலிற் பொருந்துநால் வாய்மையும் புலப்படுத் தற்கென். உரை 1-9. அணியிழை அந்தரம் ஆறா எழுந்து-மணிமேகலை விசும்பின் வழியாக எழுந்து சென்று வஞ்சி நகரத்தின் புறத்தே இறங்கி, தணியாக் காதல் தாய் கண்ணகியையும்-குறையாத அன்புடையளாகிய அன்னை கண்ணகியையும், கொடைகெழுதாதை கோவலன் தன்னையும்-ஈதற்றன்மை மிக்குடையானாகிய தந்தை கோவலனையும், கடவுள் எழுதிய படிமம் காணிய - தெய்வமாக எழுதியமைக்கப் பட்ட வடிவத்தைக் காணும் பொருட்டு, வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து - ஆசை மேன்மேலுந் தூண்டுதலால் அக் கோயிலிற் புகுந்து, வணங்கி நின்று குணம் பல ஏத்தி - வணக்கஞ் செய்து நின்று அவளுடைய சிறந்த குணங்கள் பலவற்றையும் எடுத்துத் துதித்து, அற்புக்கடன் நில்லாது நற்றவம் படராது - அன்பாகிய கடனிலே நில்லாமலும் நல்ல தவநெறியில் செல்லாமலும், கற்புக் கடன் பூண்டு நுங்கடன் முடித்தது - கற்பினையே கடனாக மேற் கொண்டு நுமது கடனை முடித்ததன் காரணத்தை, அருளல் வேண்டும் என்று அழுது முன்நிற்ப-உரைத்தருள வேண்டும் என்று கூறியழுது கண்ணகி திருமுன் நிற்ப; எழுந்து என்பதன் பின் அவாய் நிலையால் சில சொற்கள் வருவித் துரைக்கப்பட்டன. கடவுள் எழுதிய-தெய்வமாக இயற்றிய. கோவலன் கொடையில் மேம்பட்டவ னென்பது, தான் வளர்த்ததும் தன் மகவின் உயிரைக் காத்ததுமாகிய கீரியைப் பிறழ வுணர்ந்து கொன்ற குற்றத்திற்காகக் கணவனால் துறக்கப்பட்ட பார்ப்பனியின் பாவம் நீங்கத் தானஞ்செய்து, கணவனை அவளுடன் கூட்டி, அவர்கள் வாழ்க்கைக்கு மிக்க செல்வத்தையும் கொடுத்தனன் என்பது முதலிய வரலாற்றானறியப்படும். இதனைச் சிலப்பதிகாரத்து அடைக்கலக் காதையானறிக. படிமம்-படிவம், வடிவம். கண்ணகி கோட்டத்துக் கோவலனுக்குப் படிவம் அமைக்கப்பட்டதென்பது இதனாற்பெற்றாம். அற்புக்கடன்-தலையன்பினால் கணவனிறப்ப உடனிறத்தலும் தீப்பாய்தலுமாம். நற்றவம் படர்தலாவது கைம்மை நோன்பைநோற்று உடம்பைவருத்துதல். கண்ணகி கற்பையே கடனாகக் கொண்டவளென்தபனை, 1"கற்புக்கடம் பூண்ட வித்தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்" 2"கற்புக் கடம்பூண்டு காதலன் பின்போந்த, பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்" என்பவற்றானறிக. ஈண்டுக் கற்பென்றது மறக் கற்பினை. நும் கடன் முடித்தது என்றது மதுரையை அழற்படுத்திப் பதினான்காம்நாளிற் கோவலனைச் சென்று கூடியதை உணர்த்திற்று. "அற்புக் கடனில்லாது... முடித்தது" என்பவற்றின் கருத்து 3"காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி, ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்காது, இன்னுயி ரீவர் ஈயா ராயின், நன்னீர்ப்பொய்கையின் நளியெரிபுகுவர், நளியெரி புகாஅ ராயினன்பரோ, டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர், பத்தினிப் பெண்டிர்" என, இந்நூலுள் முன்பு வந்திருத் தலால் விளக்கமாம். 10-13. ஒரு பெரும் பத்தினிக்கடவுள் ஆங்கு உரைப்போள்-ஒப்பற்ற பெருமையினையுடைய பத்தினிக் கடவுளாகிய கண்ணகி அப்பொழுது கூறுவாள், எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது - என் காதலன் உற்ற கடுந்துன்பத்தைப் பொறாமல், வெம்மையின் மதுரை வெவ்வழல் படுநாள்-யான் சினத்தினால் மதுரை நகரைக் கொடிய எரிமூட்டிய நாளில், மதுராபதி எனும் மாபெருந்தெய்வம் - மதுராபதி யென்று கூறப்படும் மதுரையின் அதிதேவதையாகிய பெரிய தெய்வம் தோன்றி" இடுக்கண் - துன்பம்" ஈண்டுக் கொலை. வெம்மை - வெகுளி. அழற்படுநாள் - அழற்படுத்து நாளில்" படுதல்: பிறவினைப் பொருட்டு- 'எம்மிறைக்கு' என்பது முதலியன கண்ணகி கூற்று. 14-28. இது நீர் முன்செய் வினையின் பயனால்-இதுநீவிர் முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனாகும், காசுஇல் பூம்பொழில் கலிங்க நன்னாட்டு - குற்றமற்ற மலர்ச்சோலை களையுடைய கலிங்கநாட்டில். தாய மன்னவர் வசுவும் குமரனும்-ஞாதியாராகிய வசு குமரன் என்னும் மன்னர்கள், சிங்கபுரமும் செழுநீர்க் கபிலையும் அங்காள்கின்றோர்-சிங்கபுரத்தையும் நீர்வளம் மிக்க கபிலைப்பதியையும் ஆண்டு வருகின்றவர்கள், அடல் செருவுறுநாள் - தம்முட் பகைமை யினால் வலிய போரினைச் செய்துவருநாளில், மூவிரு காவதம் முன்னுநர் இன்றி - ஆறுகாத எல்லை முற்படுவோர் இல்லையாக, யாவரும் வழங்கா இடத்தில் - எவரும் செல்லாத இடத்தில், பொருள் வேட்டு - பொருளீட்டுதலை விரும்பி, பல்கலன் கொண்டு பலரறியாமல் எல்வளையாளோடு அரிபுரம் எய்தி-பல அணிகலன்களையும் கொண்டு பலரும் அறியாமல் ஒளிபொருந்திய வளையினையுடைய மனைவியுடன் சிங்கபுரத்தை யடைந்து, பண்டக்கலம் பகர் சங்கமன் தன்னை - பொன்னாலாகிய அணிகலன் விற்கின்ற சங்கமனை, கண்டனர் கூற - கண்டோர் உரைக்க, தையல் - நங்கையே, நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத் தொழிலாளன் - அரசன் தொழில் புரிவோனும் நின் கணவனுமாகிய பரதன் என்னும் கொடுந் தொழிலையுடையோன், தெற்றெனப் பற்றி-விரைவாகப் பிடித்து, ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு - அரசனுக்கு இவன் மாற்றானின் ஒற்றனாவான் என மொழிந்து, குற்றமிலோனைக் கொலைபுரிந்திட்டனன்-குற்றமற்றவனாகிய அவ் வணிகனைக் கொலை செய்தனன்; இது நீர் என்பது முதலியன, மதுரைமா தெய்வம் தனக்குக் கூறியவற்றைப் பத்தினிக் கடவுள் கொண்டு கூறுவனவாகும். பயனால்: ஆல்: அசை. ‘வினையின் பயன்' எனச் சுருங்க வுரைத்துத் தெய்வம் பின் அதனை விளங்க வுரைக்கின்றது. வசு சிங்கபுரத்தையும் குமரன் கபிலையையும் ஆள்கின்றார் என நிரனிறையாகக் கொள்க. ஆள்கின்றோர், பெயர். அரிபுரம் - சிங்கபுரம். பண்டக்கலம்-பண்டு அக்கலம் எனப் பிரித்துரைத்தலுமாம். தையல்: விளி. தெற்றென - விரைவாக, மன்னற்கு உரைத்து என்க. புரிந்திட்டனன் - புரிவித்தனன். 29-34. ஆங்கவன் மனைவி அழுதனள் அரற்றி-அச் சங்கமன் மனைவியாகிய நீலி என்பவள் அழுது புலம்பிக்கொண்டு, ஏங்கிமெய்பெயர்ப் போள் இறுவரை ஏறி - ஏக்கத்துடன் பெரிய மலையின் மீதேறி விழுந்து உயிர் துறப்பவள், இட்ட சாபம் கட்டியதாகும் - எனக்கு இம்மையில் இன்னல் புரிந்தவர் மறுமையில் இக்கதி யுறுவாராக என்று கூறிய சாபமானது இப்பொழுது பந்தித்ததாகும், உம்மை வினைவந்து உருத்தல்ஒழியாது எனும்-பழவினை வந்து பற்றுதல்நீங்காது என்கின்ற, மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்-உண்மை மொழிகளை உரைத்த பின்னரும், சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன் - சினங்கொண்டு அவ் வள நகரத்தினை அழித்தேன்; மெய் பெயர்த்தல்-உடம்பினின்றும் உயிரை நீக்குதல். இறுவரை-பெரிய மலை; 1“இறுவரை இவர்வதோ ரிலங்கெயிற் றரியென'' என்பது காண்க. உம்மைவினை - பழவினை. உருத்தல் - தோன்றுதல்; ஈண்டுப் பற்றுதல். மாபெருந் தெய்வம் விளம்பிய பின்னும் என்க. இச் சாப வரலாறு 2''கடிபொழி லுடுத்த கலிங்க நன்னாட்டு, வடிவேற் றடக்கை வசுவுங் குமரனும்...வழுவில் சாபம் பட்டனிர்'' என இளங்கோ வடிகள் உரைத்திருத்தலானும் நன்கறியப்படும். 35-53. மேற்செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம் - முன் செய்த நல்வினைப் பயனால் யானும் என் கணவனும் தேவராகச் சென்றோம். அவ் வினை இறுதியின் அடுசினப் பாவம் எவ்வகை யானும் எய்துதல் ஒழியாது-அந் நல்வினையின் முடிவில் கொடிய சீற்றத்தா லுண்டாகிய பாவமானது எவ்வாறாயினும் அடைதலின் நீங்காது, உம்பர் இல்வழி இம்பரில் பல் பிறப்பு யாங்கணும் இருவினை உய்த்து - உம்பருலகினில் நல்வினை நுகர்ச்சி யில்லாதவிடத்து இவ்வுலகில் எல்லாப் பிறப்பின் கண்ணும் இருவினைகளினாலே செலுத்தப்பட்டு, உமைப் போல நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப் பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் - உங்களைப்போலவே பின்பு நீங்குதற் கரிய பிறவிப் பெருங் கடலின்கண் நீந்திப் பிறந்தும் இறந்தும் வருந்துவோம், மறந்தும் மழை மறா மகத நன்னாட்டுக்கு ஒரு பெருந் திலகம் என்று உரவோர் உரைக்கும்-மறந்தும் மழைபெய் தலிற் றவிராத மகத நன்னாட்டிற்கு ஒப்பற்ற பெரிய திலகம் போல்வது என்று அறிஞர்களாற் கூறப்படும், கரவரும் பெருமைக் கபிலையம் பதியில்-மறைத்தற்கரிய பெருமையை யுடைய கபிலை என்னுந் திருப்பதியில், அளப்பரும் பாரமிதை அளவின்று நிறைத்து-அளத்தற்கரிய பாரமிதைகளை அளவில்லாமல் நிரப்பி, துளக்கமில் புத்தஞாயிறு தோன்றி-அசைவற்ற புத்தனாகிய ஞாயிறு உதித்து, போதி மூலம் பொருந்தி வந்தருளி - அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து, தீதறு நால்வகை வாய்மையுந் தெரிந்து - தீமையற்ற நான்கு வகை உண்மைகளையுந் தெளிந்து, பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்-பேதைமை முதலிய பன்னிரு நிதானங்களின் தோற்றத்தையும், அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும் - அப் பன்னிரு சார்பும் கெடும் வகையையும், இற்றென இயம்பிக் குற்ற வீடெய்தி - இத்தன்மைத்து என எடுத்துக் கூறிக் காம முதலிய குற்றங்களினின்றும் 'வீடுபெற்று, எண்ணருஞ் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை - உலகமுழுவதும் தலைமையையுடைய அளவிறந்த அறங்களாகிய கிரணங்களைப் பரப்பும்பொழுது; விண்ணவர்ச் சென்றேம்-விண்ணவராகிச் சென்றே மென்க. அடு சினப் பாவம்-மதுரையை அழித்த சினமாகிய பாவம்; 1 “தன்னையே கொல்லுஞ் சினம்'' என்பவாகலின் அடு சினம் எனப்பட்ட தென்றலுமாம். இருவினை உய்த்து - இருவினையாற் செலுத்தப்பட்டு. திலகம் - திலகம் போல்வது; மேலாயது. கபிலை - கபிலைநகர்; மகதநாட்டின் தலைநகர்; கபிலர் எனப் பெயரிய முனிவரொருவர் முன்பு தவஞ் செய்தற்கு இடமாயிருந்தமையின் இப்பெயர் பெற்றதென்பர். இது கபில வஸ்து எனவும் வழங்கும். பாரமிதை - கரையை அடைவதற்குரியது; பாரம் - கரை; வீடு பேறாகிய கரையை அடைதற்குரிய தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், உணர்ச்சி, உபாயம், அருள்., வலி, ஞானம் என்னும் பத்தும் நிரம்பப் பெறுதல். இவை ஒவ்வொன்றும் தானபாரமிதை முதலிய பெயர்களால் வழங்கும். இவை தசபாரமிதை யெனவும், தசபாரமெனவும் கூறப்படும். 2''தானஞ் சீலம்பொறை தக்கதாய வீரியம், ஊனமிஃறியானமே யுணர்ச்சியோ டுபாயமும், மானமில் லருளினை வைத்தலேவ லிம்மையும், ஞானமீரைம் பாரமிதை நாடுங்கா லிவைகளும்'' 3''தானமே முதலாகத் தசபாரம் நிறைத்தருளி, ஊனமொன் றில்லாமை யொழிவின்றி யியற்றினையே'' என்பன காண்க. போதி - அரசமரம்; என்றது மாபோதியை. நால் வகை வாய்மை - துயரம், துயரத் தோற்றம், துயர நீக்கம், துயர நீக்க நெறி என்பன. பன்னிரு சார்பு - 1''பேதைமை செய்கை உணர்வே அருவுரு, வாயில் ஊறே நுகர்வே வேட்கை, பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்'' என்பன. இற்று என்பதனைத் தோற்றத்தோடும் வகை யோடும் தனித்தனி கூட்டுக. அண்ணல் - தலைமை. புத்தனை ஞாயிறாக உருவகித்ததற்கேற்ப அவன் அறிவுறுத்தும் அறங்களைக் கதிராக உருவகஞ் செய்தார். புத்த ஞாயிறு நிறைத்துத் தோன்றி வந்தருளித் தெரிந்து இயம்பி எய்தி விரிக்குங்காலை யென்க. 54-59. பைந்தொடி தந்தையுடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின் - நின் தந்தையுடனே யான் புத்தனது இந்திர விகாரங்கள் ஏழனையும் வணங்கித் துதித்த நல்வினையினாலே, துன்பக் கதியில் தோற்றரவு இன்றி - இன்னல் தரும் இழி பிறப்பிலே தோன்றுதலின்றி, அன்புறு மனத்தோடு அவன் அறம் கேட்டு - அன்பு மிகுந்த உள்ளத்துடன் புத்தனது அறவுரைகளைக் கேட்டு, துறவி உள்ளம் தோன்றி - உள்ளத்தே துறவு தோன்றி, தொடரும் பிறவிநீத்த பெற்றியம் ஆகுவம் - தொடர்ந்து வரும் பிறவியை நீக்கிய இயல்பினை யுடையே மாவேம்; பைந்தொடி: முன்னிலைப் பெயர். பகவன் - புத்தன். விகாரம் - கையாற்செய்யப்படாது நினைவினால் ஆக்கப்பட்டது. இந்திர விகாரம்- ஏழு - காவிரிப்பூம் பட்டினத்திலே இந்திரனால் நிறுமிக்கப் பட்ட ஏழ் அரங்குகள்; விசும்பிலியங்குவோராகிய சாரணர் இருந்து, பௌத்தாகமப் பொருளை யாவர்க்கும் அறிவுறுத்து தற்கு இடமாக இருப்பவை; இதனை 2“பணையைந் தோங்கிய பாசிலைப் போதி, அணிதிகழ் நீழ லற வோன் றிருமொழி, அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும், இந்திர விகார மேழுடன் போகி'' என்பதனால் உணர்க. ‘ஏத்துதலின்' என ஈண்டுக் கூறியதனால், கோவலனும் கண்ணகியும் புகார்நகரி லிருந்தபொழுது இவற்றை வழிபட்டார்களென்பது போதரும். தோற்றரவு - தோன்றுதல்; தொழிற்பெயர்; துன்பக் கதியில் தோன்றுதலின்றி என்பதனால் நற்கதியிற் பிறத்தல் பெற்றாம். துறவி - துறவு; திருச்சிற்றம்பலக் கோவையார் உரையில் பேராசிரியர் 3'துறவு துறவியென நின்றாற் போல அளவு அளவியென நின்றது'' என எழுதியுள்ளமை காண்க. பெற்றி யென்றது நிருவாணத்தை. 60-61. அத்திறமாயினும் அநேக காலம் எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம் - அவ்வாறு ஆவேமாயினும் பல காலங்கள் எவ் வகைப்பட்டோர்க்கும் சித்தியும் செய்வோம்; இருத்தி - சித்தி. இதனை ரிதி யென்றும், இது பரிணாமிகம், நிருமாணிகமென விருவகைத்தென்றும், ஒவ்வொன்றும் முறையே பதினாறும் இரண்டுமாய் விரியுமென்றும் பௌத்த நூல்கள் கூறுகின்றன. 62-67. நறை கமழ் கூந்தல் நங்கை நீயும் - மணங் கமழும் குழலினை யுடைய மணிமேகலையே நீயும், முறைமையின் இந்த மூதூர் அகத்தே-இத்தொன்னகரின்கண் முறையாக, அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு - சமயவாதிகளிடம் அவரவர் சமயங்களின் அறிந்த பொருள்களைக் கேட்டு, மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய பின்னர் - அவற்றுள் மெய்த்திறம் இல்லாமை நினக்கே விளங்கிய பின், பெரியோன் பிடக நெறி கடவாய் - புத்தனருளிச் செய்த ஆகமங்களின் வழியைக் கடவாயாவாய், இன்னது இவ்வியல்பு என - மேல் நிகழும் முறைமை இதுவாகு மென்று, தாய் எடுத்து உரைத்தலும் - தாயாகிய பத்தினிக் கடவுள் கூறுதலும்; மூதூர் என்றது வஞ்சி நகரத்தை. பிடகம் - பௌத்தாகமம்; இது வினயம், சூத்திரம், சாத்திரம் என மூவகைப்படுதலின் திரிபிடகம் எனவும் படும். மூன்றுள் ஒவ்வொன்றும் பல பகுதி களை யுடையதாம். 68-74. இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளைபொருள் உரையார் வேற்றுருக் கொள்க என - இவள் இளமையுடைய வளை யணிந்த பெண்ணாவாள் என்று நினக்கு யாவரும் தம் சமய உண்மைகளைக் கூறார் ஆதலின் நீ வேற்றுருவங் கொள்க என்று, மையறு சிறப்பின் தெய்வதம் தந்த-களங்கமற்ற சிறப்பினை யுடைய மணிமேகலா தெய்வங் கொடுத்த, மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவாய் - மந்திரத்தை ஓதி ஒரு தாபதன் வடிவாகி, தேவ குலமும் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து-கடவுளர் கோயிலும் வேதிகையும் சாலையும் அழகிய பூஞ்சோலையும் வாவியும் நெருங்கி, நற்றவ முனிவரும் கற்றடங்கினரும்- நற்றவம் புரிந்த முனிவரும் மறைநூல் பயின்று அதனான் அமைந்த அறவோரும், நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்-அறநெறி கடைப்பிடித்த பண்டைநூற் பயிற்சி மிக்க புலவரும், எங்கணும் விளங்கிய-எங்கும் இருந்து விளங்கிய, எயிற்புற இருக்கையில் - புறமதிலின் புறத்துள்ள இருக்கையினையுடைய ; மந்திரம் - வேற்றுருவெய்துவிக்கும் மந்திரம். குலம் - கோயில். பள்ளி - சாலை; இதனைத் 1“திணிமணற் புதுப்பூம் பள்ளி'' என்னும் புறநானூற்றினுங் காண்க. மறுமை கருதித் தவஞ் செய்தலைத் தவம் என்றும், வீடு கருதிச் செய்தலை நற்றவம் என்றும் வழங்குதல், 2“நற்றவஞ் செய்வார்க்கிடம் தவஞ் செய்வார்க்கும் அஃதிடம்'' என்னுஞ் சிந்தாமணியினாற் பெறப்படுதலின், ஈண்டு ‘நற்றவ முனிவர்' என்று விதந்தது பயன் கருதாது தவம் முயலும் முனிவரரை என்க. தேவ குலம் முதலியன மிடைந்து முனிவர் முதலியோர் விளங்கிய இருக்கை என்பது. 77. செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் - செங்குட்டுவன் என்னும் செங்கோலரசனாகிய சேரர் பெருமானும்; செங்குட்டுவன், பெயர்; இவன், ஆசிரியர் இளங்கோவடிகளின் தமையனும் வஞ்சிமாநகரிற் கண்ணகி படிமம் நிறுவியோனுமாவன். 78-90. பூவா வஞ்சியில் - பூவல்லா வஞ்சியாகிய நகரத்தில், பூத்தவஞ்சி போர்த்தொழில் தானை குஞ்சியில் புனைய-போர் வினையை மேற்கொண்ட சேனைகள் வஞ்சிப்பூவைத் தமது முடியிலே சூட, நில நாடு எல்லை தன் மலை நாடு என்ன கைம்மலைக் களிற்றினம் தம்முள் மயங்க-செல்லும் நிலத்தின் கண் உள்ள நாடுகளின் பரப்பு முழுதும் தனது மலை நாடென்று தோற்றும்படி துதிக்கையைப் பொருந்திய மலை களைப் போன்ற யானைகள் தம்முள் ஒருங்கு சேர்ந்து செல்ல, தேரும் மாவும் செறிகழல் மறவரும் கார்மயங்கு கடலின் கலிகொள - தேருங் குதிரையும் நெருங்கிய வீரக்கழ லணிந்த வீரரும் முகிலுடன் கூடிய கடல்போல முழங்க, கடைஇ- அவற்றைச் செலுத்தி, கங்கையம் பேர்யாற்று அடைகரைத் தங்கி- கங்கைப் பெருநதியின் அடைகரையில் தங்கி, வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து-வங்கம் என்னும் ஒருவகை மரக்கலத்தின் உதவியால் அந்நதியின் வடகரையில் இறங்கி, கனகவிசயர் முதற் பல வேந்தர் அனைவரை வென்று - கனகன் விசயன் முதல் உத்தரன் விசித்திரன் முதலிய ஆரிய அரசர் பலராகிய அனைவரையும் வென்று, அவர் அம்பொன் முடிமிசை - அவர்களுடைய அழகிய பொன்முடி யணிந்த தலைமீது, சிமையம் ஓங்கிய இமைய மால் வரை - கொடுமுடி உயர்ந்து பெரிய இமய மலையினின்றும் வெட்டி யெடுத்த, தெய்வக் கல்லும்-தெய்வப் படிமம் அமைத்தற்குரிய கல்லையும், தன் திரு முடி மிசைச் செய்பொன் வாகையும் சேர்த்திய சேரன் - தனது அழகிய முடியின் மீது தனது வெற்றியின் அடையாள மாகப் பொன்னாற் செய்யப்பட்ட வாகை மலரையும் வைத்த சேரனும்; இருக்கையினையுடைய (76) பூவா வஞ்சியில் (78) என்று தொடர்ந்துகொள்க. 'செங்கோல் வேந்தன் (77) சேரன் (90) விற்றிறல் வெய்யோன் (91) றன்புகழ் விளங்க' என மேலுந் தொடர்பு காண்க. பூத்த வஞ்சி-வஞ்சி மலர்; போர்மேற் செல்வோர் அதன் அறிகுறியாக அந்நேரத்தில் அணிந்துகொள்ளும் மலர். பூவா வஞ்சி - வஞ்சி என்னும் செங்குட்டுவனது தலைநகர் ; அது மலரன்றாதலின் பூவா வஞ்சி எனப்பட்டது. 1''பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி, வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து'' எனச் சிலப்பதிகாரத்தின்கண் வருந் தொடர்களாலும் ஈதுணர்ந்து கொள்ளப்படும். சேரன் செங்குட்டுவன் வடக்கே போர்மேற் சென்ற வழியிலிருந்த நாடுகளின் பரப்புகள், அவன் சேனையி லிருந்த மலை போன்ற பெரிய யானைகளின் கூட்டம் அங்கங்குந் திரண்டு சென்றபோது அவன்றன் மலைநாடுபோற்றோன் றின வென்க. அடைகரை - வெள்ளத்தால் மணல் அடைந்த கரை. வங்க நாவி: இருபெயரொட்டு. பல வேந்தரென்றது, கனகன் விசயன் என்பாரொடு கூடிச் செங்குட்டுவனை எதிர்த்த உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் முதலிய ஆரிய அரசர் பலரை. அனைவரை என்றார், அவரனைவரையும் சேரன் ஒருங்கு வென்றமையின் ; உம்மை விரித்துக் கொள்க. ‘அம் பொன் முடிமிசை' என்ற விடத்துப் பொன் ஆகு பெயர். வாகை - வாகைமலர்; போரில் வெற்றி பெற்றோர் அதற்கு அறிகுறியாக அந்நேரத்திற் சூடும் மலர். அரசர் அதனைப் பொன்னாற் செய்து அணிந்து கொள்வ ராதலின், 'செய் பொன் வாகை' எனப்பட்டது. அவரம்பொன் முடிமிசைத் தெய்வக் கல்லும் தன்திரு முடிமிசைச் செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்' என்க. சேரன் செங்குட்டு வனது இவ் வெற்றி வரலாற்றைச் சிலப்பதிகாரத்தின் கால்கோட் காதை நீர்ப்படைக் காதைகளால் அறிக. 91. வில்திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க-வில்வலியை விரும்பினோனாகிய செங்குட்டுவனது புகழ் விளங்குமாறு, திறல் - வலி; வெய்யோன் - விரும்பினோன் ; 1 “வெற்றி விறல் வெய்யோன்'' என்றார் புறப்பொருள் வெண்பா மாலையினும். 92-94. பொற்கொடிப் பெயர்ப் படூஉம் பொன்னகர்ப் பொலிந் தனள் திருந்து நல்லேது முதிர்ந்துளதாதலின் பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கென்-அழகிய கொடி என்னும் பெயரானமைந்த வஞ்சி என்னும் எழில் மிகுந்த நகரத்தில் திருந்திய நல்வினையாகிய காரணம் தனக்கு முற்றியுள்ளமையான் பொருந்திய நால்வகை உண்மைகளையும் அறிவுறுத்தும் பொருட்டுப் புகுந்து பொலிந்தனள், என்க. கொடி, வஞ்சிக்கொடி; 2''பூங்கொடிப் பெயர்ப்படூஉந் திருந்திய நன்னகர்'' என்பர் மேலும். நல் ஏது - நல்வினையாகிய காரணம் ; அது பயன் கருதாத வகையிலும், கருதி யாண்டும் மனத்தாலும் தீமை கருதாத வகையிலும் நிருவாணத்தை நோக்கிப் பக்குவப்பட்டிருந்தமை யின் ‘திருந்து நல் ஏது' என்றார். வாய்மை நான்கும் 3மேல் விளக்கப்பட்டன. இவை உயிர்கட்கு இயல்பாகப் பொருந்தி யிருத்தலின், ‘பொருந்து நால் வாய்மை' எனப்பட்டது. ‘நல் ஏது முதிர்ந்துள தாதலின் நால்வாய்மையும் புலப்படுத்தற்கு (92-4) விற்றிறல் வெய்யோன் றன் புகழ் விளங்கப் (91) பொன்னகர்ப் பொலிந்தனள்' என்பது. அணியிழை எழுந்து புகுந்து நின்று ஏத்தி, ‘அருளல் வேண்டும்' என்று அழுதுநிற்ப, பத்தினிக் கடவுள் உரைப்பாள்; அங்ஙனம் உரைப் பவளாகிய தாய், ‘இன்னது இவ் வியல்பு' என எடுத் துரைத்தலும், மணிமேகலை மந்திரம் ஓதி மாதவன் வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனள் என்று, வினைமுடிக்க. வஞ்சிமாநகர் புக்க காதை முற்றிற்று. மணிமேகலை பதிகமுதல் இக்காதை வரை ஆசிரியர், நாவலர் பண்டித. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களெழுதிய உரை முற்றிற்று. 27. சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதை (மணிமேகலை வஞ்சிநகர்க்கண் இருந்து பல்வகைச் சமய வாதிகளையும் கண்டு, அவரவர் சமயப் பொருட்களைக் கேட்க விரும்பி அவர்பாற் சென்று, அளவை வாதி முதல் பூத வாதி யீறாகவுள்ள அவரனைவரையும் வினவ, அவர்கள் தம் சமயக் கருத்துக்களை யுரைத்தனர். (இதன் கண் 5-85 அடிகளில் அளவை வாதமும், 89-95 அடிகளில் சைவ வாதமும், 96-104 அடிகளில் பிரம வைணவ வேத வாதங்களும், 110-165 அடிகளில் ஆசீவக வாதமும், 171-201 அடிகளில் நிகண்ட வாதமும், 202-239 அடிகளில் சாங்கிய வாதமும், 242-262 அடிகளில் வைசேடிக வாதமும், 264-268 அடிகளில் பூதவாதமும் கூறப்படுகின்றன.) நவையறு நன்பொரு ளுரைமி னோவெனச் சமயக் கணக்கர் தந்திறஞ் சார்ந்து வைதிக மார்க்கத் தளவை வாதியை எய்தின ளெய்திநின் கடைப்பிடி யியம்பென 5 வேத வியாதனுங் கிருத கோடியும் ஏதமில் சைமினி யெனுமிவ் வாசிரியர் பத்து மெட்டு மாறும் பண்புறத் தத்தம் வகையாற் றாம்1பகர்ந் திட்டனர் காண்டல் 2கருத லுவம மாகமம் 10 3ஆண்டைய வருத்தா பத்தி யோடியல்பு ஐதிக மபாவ மீட்சி யொழிவறிவு எய்தியுண் டாநெறி யென்றிவை தம்மாற் பொருளி னுண்மை புலங்கொளல் வேண்டும் மருளில் காட்சி யைவகை யாகும் 15 கண்ணால் வண்ணமும் செவியா லோசையும் நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவாற் சுவையு மெய்யா லூறுமெனச் சொன்ன இவையிவை கண்டுகேட் டுயிர்த்துண் டுற்றுத் துக்கமுஞ் சுகமுமெனத் துயக்கற வறிந்து 20 உயிரும் வாயிலு மனமுமூ றின்றிப் பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச் சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது கிட்டிய தேச நாம சாதி குணக்கிரி யையி னறிவ தாகும் 25 கருத்தள வாவது 1குறிக்கொ ளனுமா னத்தனு மேயத் தகைமை யுணருந் தன்மைய தாகும் மூவகை யுற்றது பொதுவெச்ச முதலாம் பொதுவெனப் படுவது சாதன சாத்தியம் 30 இவையந் நுவய மின்றா யிருந்துங் கடந்திகழ் யானைக் கானவொலி கேட்டோன் உடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல் எச்ச மென்பது வெள்ளவே துவினால் நிச்சயித் தத்தலை மழைநிகழ் வுரைத்தல் 35 முதலென மொழிவது கருக்கொண் முகில்கண் டிதுமழை பெய்யு மெனவியம் பிடுதல் என்னு மேதுவி னொன்றுமுக் காலந் தன்னி லொன்றிற் சார்ந்துள தாகி மாண்ட வுயிர்முதன் மாசின் றாகிக் 40 காண்டற் பொருளாற் கண்டில துணர்தல் உவம மாவ தொப்புமை யளவை கவய மாவாப் போலுமெனக் கருதல் ஆகம வளவை யறிவ னூலாற் போக புவன முண்டெனப் புலங்கொளல் 45 அருத்தா பத்தி யாய்க்குடி கங்கை இருக்கு மென்றாற் கரையிலென் றெண்ணல் 2இயல்பி யானைமே லிருந்தோன் தோட்டிக்கு அயலொன் றீயா ததுவே கொடுத்தல் ஐதிக மென்ப துலகுரை யிம்மரத்து 50 எய்திய தோர்பே யுண்டெனத் தெளிதல் அபாவ மென்ப தின்மையோர் பொருளைத் தவாதவ் விடத்துத் தானிலை யென்றல் மீட்சி யென்ப திராமன்வென் றானென மாட்சியி லிராவணன் றோற்றமை மதித்தல் 60 உள்ளநெறி யென்பது நாராசத் திரிவிற் கொள்ளத் தகுவது காந்தமெனக் கூறல் எட்டுள பிரமா ணாபா சங்கள் சுட்டுணர் வொடுவிரி யக்கோட லையந் தேராது தெளிதல் கண்டுண ராமை 60 எய்து மில்வழக் குணர்ந்ததை யுணர்தல் நினைப்பென நிகழ்வசுட் டுணர்வெனப் படுவது எனைப்பொரு ளுண்மை மாத்திரை காண்டல் திரியக் கோட லொன்றையொன் றென்றல் விரிகதி ரிப்பியை வெள்ளியென் றுணர்தல் 65 ஐய மென்ப தொன்றை 1நிச்சயியா மையற் றறியோ மகனோ வென்றல் தேராது தெளிதல் செண்டு வெளியில் ஓராது தறியை மகனென வுணர்தல் கண்டுண ராமை 2கடுமாப் புலியொன்று 70 அண்டலை முதலிய கண்டுமறி யாமை இல்வழக் கென்பது முயற்கோ டொப்பன சொல்லின்மாத் திரத்தாற் கருத்திற் றோன்றல் உணர்ந்ததை யுணர்த லுறுபனிக் குத்தீப் புணர்ந்திடல் மருந்தெனப் புலங்கொள நினைத்தல் 75 நினைப்பெனப் படுவது காரண நிகழாது நினக்கிவர் தாயுந் தந்தையு மென்று பிறர்சொலக் கருதலிப் பெற்றிய வளவைகள் பாங்குறு முலோகா யதமே பௌத்தஞ் சாங்கியம் நையா யிகம்வை சேடிகம் 80 மீமாஞ் சகமாஞ் சமயவா சிரியர் தாம்பிரு கற்பதி சினனே கபிலன் அக்க பாதன் கணாதன் சைமினி மெய்ப்பிரத் தியமனு மானஞ் சாத்தம் உவமான மருத்தா பத்தி யபாவம் 85 இடையே யிப்போ தியன்றுள வளவைகள் என்றவன் றன்னைவிட்டிறைவ னீசனென நின்ற சைவ வாதிநேர் படுதலும் பரசுநின் றெய்வ மெப்படித் தென்ன இருசுட ரோடிய மானனைம் பூதமென் 90 றெட்டு வகையு முயிரும்யாக் கையுமாய்க் கட்டிநிற் போனுங் கலையுருவி னோனும் படைத்துவிளை யாடும் பண்பி னோனுந் துடைத்துத் துயிர்தீர் தோற்றத் தோனுந் தன்னில் வேறு தானொன் றிலோனும் 95 அன்னோ னிறைவ னாகுமென் றுரைத்தனன் பேருல கெல்லாம் பிரம வாதியோர் தேவ னிட்ட முட்டை யென்றனன் காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதின னாரணன் காப்பென் றுரைத்தனன் 100 கற்பங் கைசந் தங்கா லெண்கண் தெற்றெ னிருத்தஞ் செவிக் கைமூக் குற்ற வியாகர ணமுகம் பெற்றுச் சார்பிற் றோன்றா வாரண 1வேதக் காதி யந்த மில்லையது நெறியெனும் 105 வேதிய னுரையின் விதியுங் கேட்டு மெய்த்திறம் வழக்கென விளம்பு கின்ற எத்திறத் தினுமிசை யாதிவ ருரையென ஆசீ வகநூ லறிந்த 2புராணனைப் பேசுநின் னிறையார் நூற்பொருள் யாதென 110 எல்லையில் பொருள்களி லெங்குமெப் பொழுதும் புல்லிக் கிடந்து புலப்படு கின்ற வரம்பி லறிவ னிறைநூற் பொருள்களைந் துரந்தரு முயிரோ டொருநால் வகையணு அவ்வணு வுற்றுங் கண்டு முணர்ந்திடப் 115 பெய்வகை கூடிப் பிரிவதுஞ் செய்யும் நிலநீர் தீக்காற் றென3நால் வகையின மலைமர முடம்பெனத் திரள்வதுஞ் செய்யும் வெவ்வே றாகி விரிவதுஞ் செய்யும் அவ்வகை யறிவ துயிரெனப் படுமே 120 வற்ப மாகி யுறுநிலந் தாழ்ந்து சொற்படு சீதத் தொடுசுவை யுடைத்தாய் இழினென நிலஞ்சேர்ந் தாழ்வது நீர்தீத் தெறுதலு மேற்சே ரியல்பு முடைத்தாம் காற்று விலங்கி யசைத்தல் கடனிவை 125 1வேற்றியல் பெய்தும் விபரீ தத்தால் ஆதி யில்லாப் பரமா ணுக்கள் தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா 2புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா முதுநீ ரணுநில வணுவாய்த் திரியா 130 ஒன்றிரண் டாகிப் பிளப்பதுஞ் செய்யா அன்றியு மவல்போற் பரப்பதுஞ் செய்யா உலாவுந் தாழு முயர்வதுஞ் செய்யும் குலாமலை பிறவாக் கூடும் 3பலவும் பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும் 135 மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமுமாம் வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும் தேயா மதிபோற் செழுநில4 வரைப்பாம் நிறைந்தவிவ் வணுக்கள் பூதமாய் நிகழிற் குறைந்து மொத்துங் கூடா வரிசையின் 140 ஒன்று முக்கா லரைகா லா5யுறும் துன்று6மிக் கதனாற் பெயர்சொலப் படுமே இக்குணத் தடைந்தா லல்லது நிலனாய்ச் சிக்கென் பதுவும் நீரா யிழிவதும் தீயாய்ச் சுடுவதுங் காற்றாய் வீசலும் 145 ஆய தொழிலை யடைந்திட மாட்டா ஓரணுத் தெய்வக் கண்ணோ ருணர்குவர் 7தேரார் பூதத் திரட்சியு ளேனோர் மாலைப் போதி லொரு8மயி ரறியார் சாலத் திரண்மயிர் தோற்றுதல் சாலும் 150. கருமம் பிறப்புங் கருநீலப் பிறப்பும் பசும்ம் பிறப்புஞ் செம்ம் பிறப்பும் பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும் என்றிவ் வாறு பிறப்பினு மேவிப் பண்புறு வரிசையிற் பாற்பட்டுப் பிறந்தோர் 155 9கழிவெண் பிறப்பிற் கலந்துவீ டணைகுவர் அழியல் வேண்டா ரதுவுறற் பாலார் இதுசெம் போக்கி னியல்பிது தப்பும் அதுமண் டலமென் றறியல் வேண்டும் 1பெறுதலு மிழத்தலு மிடையூ றுறுதலும் 160 உறுமிடத் தெய்தலுந் துக்கசுக முறுதலும் பெரிதவை நீங்கலும் பிறத்தலுஞ் சாதலும் கருவிற் பட்ட பொழுதே 2கலக்கும் இன்பமும் துன்பமும் இவையுமணு வெனத்தகும் முன்னுள 'd2வூழே பின்னுமுறு விப்பது 165 மற்கலி நூலின் வகையிது வென்னச் சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு நிகண்ட வாதியை நீயுரை நின்னாற் புகழுந் தலைவன்யார் நூற்பொருள் யாவை அப்பொரு ணிகழ்வுங் கட்டும் வீடும் 170 மெய்ப்பட விளம்பென விளம்ப லுறுவோன் இந்திரர் தொழப்படு மிறைவனெம் மிறைவன் தந்த நூற்பொரு டன்மாத்தி காயமும் அதன்மாத்தி காயமுங் காலா காயமும் தீதில் சீவனும் பரமா ணுக்களும் 175 நல்வினை யுந்தீ வினையுமவ் வினையாற் செய்வுறு பந்தமும் வீடுமித் திறத்த ஆன்ற பொருடன் றன்மைய தாயும் தோன்றுசார் வொன்றின் றன்மைய தாயும் அநித்தமு நித்தமு மாகி நின்று 180 நுனித்த குணத்தோர் கணத்தின் கண்ணே தோற்றமு நிலையுங் கேடு மென்னும் மாற்றரு மூன்று மாக்கலு முரித்தாம் நிம்ப முளைத்து நிகழ்த னித்தியம் நிம்பத் தப்பொரு ளன்மை யநித்தியம் 185 பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம் இயற்றி யப்பய றழிதலு மேதுத் தருமாத்தி காயந் தானெங்கு முளதாய்ப் பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா அப்படித் தாகிய தன்மாத்தி காயமும் 190 எப்பொருள் களையு நிறுத்த லியற்றும் காலங் கணிக மெனுங்குறு நிகழ்ச்சியும் ஏலுங் கற்பத் தின்னெடு நிகழ்ச்சியும் ஆக்குமா காய மெல்லாப் பொருட்கும் பூக்குமிடங் கொடுக்கும் புரிவிற் றாகும் 195 சீவ னுடம்போ 1டொத்துக் கூடித் தாவில்சுவை முதலிய புலன்களை நுகரும் ஓரணு புற்கலம் புறவுரு வாகும் சீர்சா னல்வினை தீவினை யாவைசெயும் வருவழி யிரண்டையு மாற்றி முன்செய் 200 அருவினைப் பயனனு பவித்தறுத் திடுதல் அதுவீ டாகு மென்றன னவன்பின் இதுசாங் கியமத மென்றெடுத் துரைப்போன் தனையறி வரிதாய்த் தான்முக் குணமாய் மனநிகழ் வின்றி மாண்பமை பொதுவாய் 205 எல்லாப் பொருளுந் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதன் மூலப் பகுதிசித் தத்து மானென் றுரைத்த புத்தி வெளிப்பட் டதன்கணா காயம் வெளிப்பட் டதன்கண் வாயு வெளிப்பட் டதன்க ணங்கி 210 யானது வெளிப்பட் டதன்க ணப்பின் தன்மை வெளிப்பட் டதின்மண் வெளிப்பட் டவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட் டார்ப்புறு மனத்தாங் கார விகாரமும் ஆகா யத்திற் செவியொலி விகாரமும் 215 வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும் அங்கியிற் கண்ணு மொளியுமாம் விகாரமும் தங்கிய வப்பில்வாய் சுவையெனும் விகாரமும் நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும் சொலப்பட் டிவற்றிற் றொக்கு விகாரமாய் 220 வாக்குப் பாணிபாத பாயுரு பத்தமென ஆக்கிய விவைவெளிப் பட்டிங் கறைந்த பூத விகாரத் தான்மலை மரமுதல் ஓதிய வெளிப்பட் டுலகாய் நிகழ்ந்து வந்த வழியே யிவைசென் றடங்கி 225 அந்தமில் பிரளய மாயிறு மளவும் ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாம் அறிதற் கெளிதாய் 1முக்குண மன்றிப் பொறியுணர் விக்கும் 2பொதுவு மன்றி எப்பொரு ளுந்தோன் றுதற்கிட மன்றி 230 அப்பொரு ளெல்லா மறிந்திடற் குணர்வாய் ஒன்றா யெங்கும் பரந்துநித் தியமாய் நின்றுள வுணர்வாய் நிகழ்தரும் புருடன் புலமார் பொருள்க ளிருபத் தைந்துள நிலநீர் தீவளி யாகா யம்மே 235 மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே உறுசுவை யொளியூ றோசைநாற் றம்மே வாக்குப் பாணி பாதபாயு ருபத்தம் ஆக்கு மனோபுத்தி யாங்கார சித்தம் உயிரெனு மான்மா வொன்றொடு மாமெனச் 240 செயிரறச் செப்பிய திறமுங் கேட்டு வைசே டிகநின் வழக்குரை யென்னப் பொய்தீர் பொருளும் குணமும் கருமமும் சாமா னியமும் விசேடமும் கூட்டமும் ஆமாறு கூறா மதிற்பொரு ளென்பது 245 குணமுந் தொழிலு முடைத்தா யெத்தொகைப் பொருளுக்கு மேதுவா மப்பொரு ளொன்பான் ஞாலநீர் தீவளி யாகா யந்திசை கால மான்மா மனமிவற் றுண்ணிலம் ஒலியூறு நிறஞ்சுவை நாற்றமொ டைந்தும் 250 பயில்குண முடைத்து நின்ற நான்கும் சுவைமுத லொரோகுண மவைகுறை வுடைய ஓசை யூறு நிறநாற் றஞ்சுவை மாசில் பெருமை சிறுமை வன்மை மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம் 255 என்னு நீர்மை பக்கமுத லனேகம் கண்ணிய பொருளின் குணங்க ளாகும் பொருளுங் குணமுங் கரும மியற்றற் குரிய வுண்மை தருமுதற் பொதுத்தான் போதலு நிற்றலும் பொதுக்குண மாதலிற் 260 சாதலு நிகழ்தலு மப்பொருட் டன்மை ஒன்றணி கூட்டங் குணமுங் குணியுமென் றொன்றிய வாதியு முரைத்தன னுடனே பூத வாதியைப் புகனீ யென்னத் தாதகிப் பூவுங் கட்டியு மிட்டு 265 மற்றுங் கூட்ட மதுக்களி பிறந்தாங் குற்றிடு பூதத் துணர்வு தோன்றிடும் அவ்வுணர் வவ்வப் பூதத் 1தழிவுகளின் வெவ்வேறு பிரியும் பறையோ சையிற்கெடும் உயிரொடுங் கூட்டிய வுணர்வுடைப் பூதமும் 270 உயிரில் லாத வுணர்வில் பூதமும் அவ்வப் பூத வழியவை பிறக்கும் மெய்வகை யிதுவே வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளு முலோகாயத னுணர்வே கண்கூ டல்லது கருத்தள வழியும் 275 இம்மையு மிம்மைப் பயனுமிப் பிறப்பே பொய்ம்மை மறுமையுண் டாய்வினை துய்த்தல் என்றலு மெல்லா மார்க்கமுங் கேட்டு நன்றல வாயினு நான்மா றுரைக்கிலேன் பிறந்தமுற் பிறப்பை யெய்தப் பெறுதலின் 280 அறிந்தோ ருண்டோ 2வென்றுநக் கிடுதலும் தெய்வ மயக்கினுங் கனாவுறு திறத்தினும் மைய லுறுவோர் மனம்வே றாம்வகை ஐய மன்றி யில்லையென் றலுநின் தந்தைதா யரையனு மானத் தாலலது 285 இந்த ஞாலத் தெவ்வகை யறிவாய் மெய்யுணர் வின்றிமெய்ப் பொருளுணர் வரிய ஐய மல்லதிது சொல்லப் பெறாயென உள்வரிக் கோலமோ டுன்னிய பொருளுரைத்து ஐவகைச் சமயமு மறிந்தன ளாங்கென். உரை 1-4. சமயக்கணக்கர் தம் திறம்சார்ந்து-மாதவன் வடிவு கொண்டுவந்த மணிமேகலை சமயவாதிகள் உறையும் இடத்துக்குச் சென்று, நவையறு நன்பொருள் உரைமினோ என - குற்றமற்ற மெய்ப்பொருளை யுரைப்பீராக என வினவும் கருத்தினளாய், வைதிக மார்க்கத்து அளவை வாதியை எய்தினள்-வேதநெறியை மேற்கொண்டொழுகும் பிரமாணவாதியை யடைந்தாள், எய்தி - அவ்வாறடைந்தவள், நின் கடைப்பிடி இயம்புஎன - நீ கொண்டொழுகும் சமயக் கொள்கையைச் சொல்வாயாக என்று வினவ எ-று. சமயக்கணக்கர் - சமய நுண்பொருள்களை யாராய்ந்துரைக்கும் சமயவாதிகள். மெய்ப்பொருளை "நவையறு பொருள்" என்றும், அதன் விளைவு நன்மையாதல்பற்றி "நன்பொரு" ளென்றும் கருதினாள். வேதத்தை மேற்கொண் டொழுகும் நெறி, வைதிகமார்க்கமெனப் பட்டது. அளவை, பிரமாணம். கொள்கையைக் "கடைப்பிடி" யென்றார், பல்லாற்றானு மாராய்ந்து கைக்கொள்ளப்படுதலின். அளவைவாதி 5-8. வேதவியாதனும் கிருதகோடியும்-வேதத்தைப் பகுத்து முறை செய்த வியாத முனியும் கிருதகோடி முனியும்; ஏதம்இல் சைமினி எனும் இவ்வாசிரியர் - குற்றமில்லாத சைமினிமுனியு மென்னும் இந்த ஆசிரியன்மார்கள்; பத்தும் எட்டும் ஆறும் - அளவைகளை முறையே பத்தென்றும், எட்டென்றும் ஆறென்றும்; தத்தம் வகையால் பண்புறப் பகர்ந்திட்டனர் - தத்தமக்கேற்ற கூறுபாட்டின் படியே அளத்தற்குரிய தகுதியமையக் கூறியுள்ளனர் எ - று. இங்கே கூறிய வேதவியாதரை, வேதம் முறை செய்தவரும் பிரம சூத்திர மெழுதியவருமாகிய வியாதரல்ல ரென்றும், இவர் பௌராணிகரான வியாதராக இருக்கலாமென்றும் ஆராய்ச்சி யாளர் கூறுவர். கிருதகோடி யென்பாரைப் போதாயனரென்றும் கிருதகோடிகவி யென்றும் கூறுப. சைமினி யென்பார் மீமாஞ்சை நூலை யெழுதியவர். இவருள் வியாதர் பத்தளவையும், கிருத கோடி எட்டளவையும், சைமினி ஆறளவையும் கொண்டன ரென்பதாம். பிற்காலத்தே சைமினி யெழுதியது பூருவ மீமாஞ்சை யென்றும், வாதராயண ரெழுதியது உத்தரமீமாஞ்சை யென்றும் வழங்கலாயின வெனக்கொள்க. விரிந்தது தொகுத்தல் அவ்வக் காலத்துக்கும் மக்கள் அறிவு வளர்ச்சிக்கும் பண்பாதலின், "பண்புறப்பகர்ந்திட்டனர்" என்றான் ; முன்னோரை நோக்கப் பின்னோர் ஒரு சில அளவைகளைக் குறைத்துக்கொண்டாராயினும், அளத்தற்குரிய பொருள் எஞ்சாமல் அளக்கப்பட்ட தென்பதும் "பண்புற" என்றதனாற் பெற்றாம். 1. பிரமாணங்கள் 9-13. காண்டல் - காட்சியளவையும்; கருதல்-அனுமான வளவையும்; உவமம்-உவமையளவையும்; ஆகமம்-ஆகம வளவையும்; ஆண்டைய அருத்தாபத்தியோடு-ஆங்கு அவற்றோடு கூறப்படும் அருத்தாபத்தியளவையும்; இயல்பு - இயல்பு அளவையும்; ஐதிகம்-ஐதிக வளவையும்; அபாவம்-அபாவ வளவையும்; மீட்சி ஒழி வறிவு-மீட்சியாலறியும் ஒழிபளவையும்; எய்தி உண்டாம் நெறி- தோன்றியுளதாய் நிகழும் சம்பவ வளவையும்; என்ற இவை தம்மால்-என்று கூறப்பட்ட இப்பத்தாலும்; பொருளின் உண்மை புலங்கொளல் வேண்டும் - பொருளின் உண்மைத் தன்மையையறிதல் வேண்டும் எ -று. காண்டல் முதல் ஆகம மீறாகக் கூறிய நான்கினையும் சிறப்புடையவாகவும் ஏனையவற்றை யத்துணைச் சிறப்பில்லன வாகவும் சில ஆசிரியன்மார் கோடலின், "ஆண்டைய அருத்தா பத்தியோடு" என்று பிரித்தோதினார். ஓடு: எண்ணுப்பொருட்டு. பாரிசேடத்தை, மீட்சி யொழிவு அறிவு என விளக்கினார். சம்பவ வளவை, தோன்றி நின் றியலுவதைக் காட்டலின், "எய்தியுண்டா நெறி" யென்றார். "இவை தம்மாற் பொருளி னுண்மை புலங்கொளல் வேண்டும்" என்றது. இவற்றால் விளையும் பயன் உணர்த்தி நின்றது. காட்சியைப் பிரத்தியக்கமென்றும், கருதலைக் கருத்தென்றும் அனுமானமென்றும், ஆகமத்தைச் சத்தமென்றும், இயல்பைச் சுபாவமென்றும், அபாவத்தை இன்மையென்றும், மீட்சியைப் பாரிசேட மென்றும் கூறுப. புலங்கொளல், ஒரு சொல்லாய் அறிதலென்பது பட நின்றது; பிறாண்டும் இதுவே கூறிக்கொள்க. வியாதன் கூறிய பத்தையும் ஈண்டுக் கூறி, சைமினி கூறிய ஆறினையும் அளவை வாதத்தின் இறுதியிற் (13--4) கூறி யொழிதலின், 1கிருதகோடி கொண்ட எட்டும் தாமே பெறப்படுதலின், அவற்றைக் கூறா தொழிந்தார். எஞ்சி நிற்கும் சுபாவம், ஐதிகம், பாரிசேடம், சம்பவம் என்ற நான்கனுள், அவரால் விலக்குண்ட இரண்டும் இன்னவையெனத் தெரிந்திலவாயினும், சுபாவம், பாரிசேடம் என்ற இரண்டுக்கும் விலக்குண்டனபோலும் எனக் கருதுவதற்கு இடமுண்டு. 1. காட்சியளவை 14-24. மருளில் காட்சி ஐவகையாகும்-மருட்சிக்குச் சிறிதும் ஏதுவாகாத காட்சி யளவை யைந்து வகைப்படும்: கண்ணால் வண்ணமும்-பொறியால் நிறமும்; செவியால் ஓசையும்- செவிப் பொறியால் ஓசையும்; நண்ணிய மூக்கால் நாற்றமும்-பொருந்திய மூக்காகிய பொறியால் நாற்றமும்; நாவாற் சுவையும்-நாக்காகிய பொறியால் சுவையும்; மெய்யால் ஊறும் என - மெய்யாகிய பொறியால் ஊறும் என்று; சொன்ன இவை இவை-சொல்லப்பட்ட இவற்றை; கண்டு கேட்டு உயிர்த்து உண்டு உற்று-முறையே கண்டும்கேட்டும் மோந்தும் உண்டும் மெய்யுற்றும்; துக்கமும் சுகமும் என - துக்கமென்றும் சுகமென்றும்; துயக்கற அறிந்து - குற்றமற வறிந்து; உயிரும் வாயிலும் மனமும் - உயிரும் இந்திரியங்களும் மனமும்; ஊறின்றி - குற்றமின்றி, பயில் ஒளியொடு - உலகிற் பயில நிலவும் ஞாயிறு திங்கள் தீ என்ற இவற்றின் ஒளி துணையாக ; பொருள் இடம் பழுதின்றி-பொருளும் இடமும் குற்றமற இயைய வைத்து, சுட்டல்-பொருண்மை மாத்திரம் காண்டலும்; திரிதல்-பிறிதொன்றாகக் கோடலும்; கவர் கோடல்-ஐயுறுதலும்; தோன்றாது-இல்லாமல்; கிட்டிய தேசம் நாமம் சாதிகுணம் கிரியைபின் அறிவதாகும்-சார்ந்துள்ள இடம் பெயர் சாதி குணம் தொழில் என்பவற்றாற் சிறப்பித் தறிவதாம் எ - று. எனவே, பொறிவாயிலாகப் பொருள்களின் நலந் தீங்கு காண்டல் காட்சி யளவையின் பயனாமென்றும், காட்சி நிகழுமிடத்து, உயிரும் பொறிகளும் மனமும், ஒளிநிலவும் பொருளும் இடமும் நோக்கிக் காணப்படும் பொருளினுடைய பெயர் சாதி குணம் தொழில் முதலியவற்றால் சிறப்புற அறிதற்கண் தொழிற்படு மென்றும், பொதுமையிற் காண்டல், திரியக் காண்டல், ஐயுறல் என நிகழ்தல் கூடாதென்றும் கூறியவாறாம். ஈண்டுக் கூறியனவே கௌதமரால் ஐவகையாகக் கூறப்படுகின்றன: அவை காணப் படும் பொருளும், ஒளியும், பொறியும்; மனமும், உயிரும் என்பனவாம். தெளிவுக்காட்சிக்குத் தடையாவன தோடம், சம்பிரயோகம், சமுசுகாரம் என்று கூறுவர். தோடமாவது பொறிகளிடத்தேயுள்ள குற்றம்; சம்பிரயோக மென்பது ஒரு மருங்கு பற்றிய காட்சி: சமுசுகாரமாவது திரிபுக் காட்சி. இவற்றின் விரிவை நியாய பிந்து, நியாய மஞ்சரி முதலிய நூல்களுட் காண்க. ஈண்டுக் கூறிய தோடத்தையே இவ்வாசிரியரும் "ஊறின்றி" யென்றார். "கிட்டிய தேச நாம சாதி குணங்கிரியை"களைக் கற்பனை யென்பதுடன், இவற்றுள், தேசத்தை நீக்கியும் பொருண்மையைக் கூட்டியும் நியாய மஞ்சரி என்னும் நூல் கூறுகிறது. கற்பனையைக்கழித்துக் காணப்படும் பொருண்மை, உணர்வுருவாய் நின்று உரைக்கு எய்தாதாகலின், அஃது எய்துதற்கு இவை வேண்டப்படுதலின், "கிட்டிய தேட...கிரியையின் அறிவ தாகும்" என்றார். தருமகீர்த்தி முதலாயினார் நாமசாதி குணங்கிரியை களின் வைத்துக் காணும் காட்சியறிவைச் சாமானிய விலக்கண மென்றும், இவையின்றிப் பொருண்மைக்காட்சி யுணர்வைச் சுவிலக் கணமென்றும் கூறுவர். துயக்கு-குற்றம்; தடையுமாம். ஏனையளவை போலாது பொருள்களை நேரிற் கண்டறிதலின் காட்சியை "மருளில் காட்சி" என்றாரென வறிக. சுட்டல் முதலிய வற்றை மேலே "பிரமாணா பாச" மென எடுத்தோதி விலக்கு தலின், ஈண்டு வாளாது தொகுத்தோதினார். இனிக் கண்ணாலொரு பொருளைக் காணுமிடத்தும் நிறமேயன்றி யளவு வடிவு முதலிய பிறவும் காணப்படுமாயினும் சிறப்புப்பற்றி நிறம் கூறினார். இவ்வாறே பிறவற்றிற்கும் கொள்க. அன்றியும், ஒரு பொருளைக் கண்ணாற் காணுமிடத்துக். கட்பொறியும், மனமும், உயிரும், காண்டற்குத் துணையாகும் ஒளியும் ஒருங்கு தொழில் நிகழ்த்துவது போலச் செவி முதலிய வற்றா னிகழும் காட்சிக்கண்ணும் இந்நிகழ்ச்சியுண்மையின் இவ்வாறே கூறிக்கொள்க. மனமும் உயிரும் பொதுவாயினும், பொறிகளும் அவற்றாற் காணப்படும் பொருளும் ஐவகைப் படுவது பற்றி, "காட்சி யைவகை யாகும்" என்றார். நாமதேசக் குணக் கிரியையின் வைத்தறியும் காட்சி சவிகற்பமென்றும்' அவ்வியபதேசமாய்க் காண்பது நிருவிகற்பமென்றும் பிற்காலத் தோர் கூறுவர். வாற்சாயனர், உத்தியோதகரர் முதலாயினோர் காலத்தே இப்பிரிவு இல்லை. அவர்களைப்போலவே இம் மணிமேகலை ஆசிரியரும் சவிகற்ப நிருவிகற்பப் பிரிவு கூறாமை குறிக்கத்தக்கது. 2. கருத்தளவை 25-29. கருத்தளவாவது - அனுமான வளவையாவது, குறிக்கொள் அனுமானத்து அனுமேயத் தகைமை யுணரும் தன்மையதாகும் - ஏதுவுக்கு நிலைக்களமான குறியாகக்கொண்டு அனுமானத்தாலே சாதிக்கப்படும் பொருளின் உண்மைத் தன்மையை உணர்த்தும் தன்மையுடையதாகும், அது - அவ்வனுமானவளவை, மூவகையுற்று - மூன்று வகைப்பட்டு, பொது எச்சம் முதல் ஆம் - பொதுவென்றும் எச்சமென்றும் முதலென்றுமாம் எ - று. ஈண்டு அனுமேயம் என்றது துணியப்படும் மேற்கோளையும். அனுமானமென்றது அதனைத் துணிபு செய்யும் ஏதுவையும் குறித்து நின்றன. குறிகொள் எனற்பாலது எதுகை நோக்கிக் குறிக்கொள் என நின்றது; குறிகொள் என்றும் பாடமுண்டு. இம்மலை தீ யுடைத்து, புகையுண்மையான் என்ற வழி, மலையின் பால் தீயுடைமை துணியப்படும் மேற்கோளாகிய அனுமேயம். புகை யுண்மை, அதனைச் சாதிக்கும் ஏது. அது தீ யுண்மையைத் துணிபு செய்யும் திறம் அனுமானம், அவ்வேதுவுக்கு நிலைக் களமாய புகை, குறி. இக்குறியை இலிங்கமென்ப. அனுமேயப் பொருட்குத் தகுதி சாதிக்கப்படும் உண்மைத்தன்மை யாதலின், "தகைமை"யெனப்பட்டது. இப் பொது முதலிய மூன்றையும் முறையே அளவை நூலார் சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்று கூறுவர். 29-32. பொதுவெனப்படுவது - பொதுக் கருத்தளவை யென்று அளவை நூற்புலவராற் கூறப்படுவது, சாதன சாத்தியம் இவை - ஏதுவும் மேற்கோளுமாகிய இவற்றுக்கு, அந்நுவயம் இன்றாய் இருந்தும் - நியதமான உடனிகழ்ச்சி இலதாகிய வழியும், கானம்- காட்டிடத்தே, கடம் திகழ்யானை ஒலி கேட்டோன்-மதம் பொருந்திய யானையின் பிளிறு குரலைக் கேட்டவன் ; உடங்கு - உடனே, எழில் யானை அங்கு உண்டென உணர்தல்-உயர்ந்த யானையொன்று அவ்விடத்தே யுளது என்று உணர்வது எ - று. பொது முதலிய மூன்றுக்கும் உரிய சாமானியதா திருட்டம், சேடம், பூருவம் என்பனபற்றி நையாயிகர் பலர்க்கும் கருத்து வேறுபாடு பெரிது முண்டாயினும், இவ்வாசிரியர் வாற்சாயனர் கூறியாங்குக் கூறுகின்றா ராதலின், "பொது வெனப்படுவது" எனச் சிறப்பித்தார். அந்நுவயமானது காரண காரியத் தொடர்பு இடையறவின்றிச் சேர அமைவது. கானவொலிக்கும் யானை யுண்மைக்கும் அந்நுவய மில்லாமையின் "அந் நுவயமின்றா யிருந்தும்" என்றும், கேள்வியும் உணர்வும் இடையறவுபடாத உடனிகழ்ச்சி யாதலால், "உடங்குணர்தல்" என்றுங் கூறினார். எழுச்சிப் பொருட்டாய எழில் ஈண்டு உயர்ச்சி குறித்து நின்றது. இனிச் சாமானியதா திருட்டத்துக்கு வாற்சாயனர், ஒலிக் கேள்வியோடு கொம்புள்ள விலங்கொன்றினைக் கண்டோன், அதற்கு வாலுண்டென வுணர்தலும் சாமானியதா திருட்டம் என்று கூறினர். இவருக்குப் பிற்போந்த உத்தியோதகரர், நாரைகள் குழீஇ யிருப்பதைக் கண்டோன், அங்கே நீருண்டெனத் துணிதல் சாமானியதா திருட்டம் என்றார். ஆயினும், அவர் இம் மூன்றனையும் பற்றிக்கொண்ட கருத்து வேறென அறிக. இதனைச் சாமானியாநுமானம் என்றும் கூறுவர். 33-34. எச்சம் என்பது - எச்சக் கருத்தளவையாவது ; வெள்ள ஏதுவினால் - இவண் வருகின்ற வெள்ளமாகிய காரணத்தைக் கொண்டு; அத் தலை மழை நிகழ்வு - அதன் மேலிடமாகிய அவ்விடத்தே மழை பெய்திருத்தலை; நிச்சயித் துரைத்தல்-துணிந்து கூறுவதாம் எ - று. பள்ளத்தை நோக்கி யோடுதல் நீர்க்கியல்பாதலின், அத்தலை யென்றது மேலிடமாகிய அவ்விடமாயிற்று. மழையினது எச்சம் வெள்ளமாதலின், வெள்ளவேது கொண்டு சாதிக்கும் கருத்தளவை, எச்சக் கருத்தளவை யெனப்பட்டமை யறிக. இந்த எடுத்துக் காட்டையே வாற்சாயனரும் காட்டியுள்ளார். இதனைக் காரியானுமான மென்றும் கூறுப. 35--36. முதல் என மொழிவது - முதற் கருத்தளவையென வழங்குவது; கருக்கொள் முகில் கண்டு - நீர் பொருந்திய கருமுகிலைக் கண்டு, இது மழைபெய்யும் என இயம்பிடுதல் - இம்முகில் மழை பொழியும் எனத் துணிந்து கூறுவதாம். எ - று, மழை பெயற்கு முகில் காரணமாதலின், முதலெனப் பட்டது காரணத்தை முதலென்றல் தமிழ் வழக்கு; "ஆயெட்டென்ப தொழின் முதனிலையே" (தொல். சொல். வேற். மயங். 29) என்றும், "அவ்விரு முதலிற் றோன்று மதுவே" (சொல். வேற்று, 10) என்றும் வருதல் காண்க. கமஞ்சூல் மாமழையைக் "கருக்கொள் முகில்" என்றார். இவ் வெடுத்துக் காட்டே வாற்சாயனராலும் காட்டப்பட்டுள்ளது. இதனைக் காரணானுமானம் என்றலும் ஒன்று. 37-40. என்னும் ஏதுவின் ஒன்று - பொது எச்சம் முதல் என்று கூறப்பட்ட ஏது வகைகளில் ஒன்று ; முக்காலம் ஒன்று தன்னிற் சார்ந்துளதாகி தோன்றும் - மூவகைக் காலங்களில் ஒன்றைப் பொருந்தியதாய்த் தோன்றும்; காண்டற் பொருளால்-காணப்படும் பொருளைக்கொண்டு; மாண்ட உயிர் முதல்-மாட்சிமைப்பட்ட உயிராகிய முதல்; கண்டிலது-காணப்படாததனை; மாசின்றாகி - குற்றமின்றி; உணர்தல் - அறிவதாம் எ - று. எனவே, காண்டற் பொருளாற் காணப்படாததனை யுணர்தல் அனுமானவளவை யென்பதாம். "என்னும் ஏதுவின் ஒன்று" என்ற தனால், சாமானியம் சேடம் பூருவம் என்ற மூன்றும் ஏதுவின் வகைமை யுணர்த்தி நிற்பது பெற்றாம். இனி, நையாயிகருட் பலர் பலவேறு கருத்துக்களைக் கூறுவர் ; ஈண்டுக் கூறியது வாற்சாயனர் முதலிய பண்டையாசிரியன்மார் கொண்ட கருத்தாமென அறிக. இவ்வாறே அனுமானமென்பதற்கும் ஆசிரியர் பலரும் பலவாறு கூறுப: நியாயவார்த்திகையென்னும் நூலுடையார், தெரியாத தொரு பொருளையாதல், தெரிந்ததொரு பொருளையாதல் காண்டற்குப் பயன்படுவதன்றி, ஐயப் புலப் பொருளொன்றினைத் துணிதற்குப் பயன்படுவது அனுமானவளவை யென்றும், நியாய சாரமுடையார், பொறிகளின் காட்சியெல்லைக்கப்பாற்பட்டு நிற்குமொரு பொருளை அதனிற் பிரிப்பறத் தொடர்புற்று, அப்பொறிகளின் காட்சிக் ககப்பட்டிருக்கும் பிறிதொன்றின் வாயிலாகக் காண்டற்கு அனுமானம் அளவையாமென்றும், தத்துவசிந்தாமணி யாசிரியரான கங்கேசரும், சத்தபதார்த்தி யாசிரியரான சிவாதித்தரும் ஓரறிவைக் கொண்டு பெறலாகும் பிறிதோரறிவு அனுமான வறிவாம் என்றும் கூறுவர். இது குறித்து ஏனை வைசேடிகர், சாங்கியர், புத்தர், சமணர் முதலாயினோர் வேறு வேறு கூறியுள்ளனர் ; அவற்றை அவ்வவர் நூல்களுட் காண்க. காட்சியளவை போலாது, இக்கருத்தளவை முக்காலத்தும் ஒத்தியலும் இயல்பிற்றாதலின், "முக்காலந்தன்னிலொன்றிற் சார்ந்துளதாகித் தோன்றும்" என்றார்.உத்தியோதகரரும் காட்சி, நிகழ்காலத்துக்கே யுரித்தென்றும், கருதல்முக்காலத்துக்கு முரித் தென்றும் கூறுவர் (நியாய வார்த். வீவீ. 1 - 31). காண்பொருளும், இடைநிற்கும் ஒளி முதலியனவும், பொறியும், மனமும், உயிரும் என்ற ஐந்தனுள், காட்சிப் பயன் கோடற்கும், மனமும் பொறியும் காண்டலைச் செய்தற்கும்,உயிர் இன்றியமையாமையின், "மாண்ட வுயிர் முதல்" என்றும், மனமும் பொறியும் குற்றமுற்ற வழிக் காட்சி நிகழாமையின், "மாசின்றாகி"யென்றும் கூறினார்; "உயிரும் வாயிலும் மனமுமூ றின்றி" (மணி 27; 30) என்றதே மீளவும் கூறியது, வன்புறை. 3. உவமவளவை 41-42. உவமமாவது - உவம வளவையாவது; ஒப்புமை அளவை- ஒன்றோடொன்றனை யொப்புக் கூறியுணர்த்தும் அளவையாகும்; கவயமா - கவயமா வென்பது ஒரு விலங்கென அறியாதானுக்கு அக் கவயமா; ஆப்போலும் எனக்கருதல்-பசுவைப் போலிருக்கும் என்று சொல்லி யுணர்த்துதலாம் எ - று. தானே யுணர்ந்து கோடற்கு உவமை வேண்டாமையின், ஈண்டுக் கருதுதல் பிறவினைப் பொருட்டு. இதனால் தமிழ்நூலார் பொருளிலக்கணத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளும் உவமத்தை அணிநூலார் உவம வணியென்று கொண்டாங்கு, அளவை நூலார் உவமவளவை யென்று கொண்டனரென வறிக. இதுவும் "காண்டற் பொருளாற் கண்டில துணர்த" லாயினும், கருத்தளவை தன் பொருட்டும் பிறர் பொருட்டும் பயன்படுவதாக, இது பிறர் பொருட்டே பயன்படுமென்றும், அது காணப்பட்ட ஏதுவைக் கொண்டு காணப்படாத பொருளை யுணர்த்தி நிற்க, இது காணப்பட்ட பொரு ளொப்புமையாற் காணப்படாத பொருளை யுணர்த்துமென்றும் கொள்க. அறிதற்குரிய பொருளும் அதற்குத் துணையாகும் ஒப்புமையும் உவமவளவைக்கு இன்றியமையாத வுறுப்புக்களாம். இவ் வொப்புமை முழுதுமொத்தல், ஒருபுடை யொத்தல் என இருதிறத்ததாம். முழுதுமொத்தற்கு உவமம் வேண்டா; பசு வென்பது பசுப்போலும் எனக் கூறாராதலின்; உவமமெல்லாம் ஒரு புடை யொத்தேயிருக்கும். மேலும் பொருளும் உவமமும் என்ற இரண்டனுள் உவமத்துக்கும் பொருட்கும் "சாதன சாத்தியபாவம்" இன்றியமையாதது என்று நியாயபாடியம் (வீவீ. 1 - 45) கூறுகிறது. இவ்வளவை நூலாரைப் போலவே சட்தரிசன முச்சய மென்னும் நூலாசிரியரான அரிபத்திரரும் இக் கவயமாவையே உவமவளவைக்குப் பொருளாகக் காட்டுவர். இவ் வளவையை வைசேடிகர் கருதலளவைக் கண்ணும், சாங்கியரும் புத்தரும் காட்சிக்கண்ணும் அடக்கிக்கொள்வர். பூருவமீமாஞ் சகரும் வேதாந்திகளும் இதனை மேற்கொண்டு இலக்கணத்திற் சிறிது வேறுபடக் கூறுவர். 4. ஆகமவளவை 43-44. ஆகமவளவை - உரையளவையாவது, அறிவன் நூலால் - விளங்கிய அறிவினையுடைய பெரியோன் கூறிய நூல் கருவியாக, போகபுவனம் உண்டெனப் புலங்கொளல்-போக நுகர்ச்சிக்கென இந் நிலவுலகத்தின் மேலுங் கீழும் உலகங்கள் உண்டென மேற் கொள்வதாம் எ - று. யாவரும் அறிவுடையரே யெனினும், அதனால் விளக்க முற்றோரே அறிவரெனப்படுப வாதலின், அறிவன் என்பதற்கு விளங்கிய அறிவினையுடைய பெரியோன் என்று பொருள் கூறப்பட்டது. அறஞ்செய்தான் துறக்கம் புகும் என்றும்,அல்லது செய்தான் நிரயம் புகும் என்றும் அறிவர் வழங்குதலின், துறக்க நிரயங்களின் உண்மை கொள்ளப்பட்டமை காண்க; "யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்" எனவும், "அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத், தீயுழி யுய்த்துவிடும்" (குறள். 346,168.) எனவும் அறிவர் கூறுமாறு காண்க. இன்பமும் துன்பமுமாகிய இருவகை நுகர்ச்சியும்போகமெனப் படுதலின், இருவகைப் புவனத்தையும், "போகபுவனம்" என்றார். அறிவனை முதல்வனென்றும் ஆத்தனென்றும், ஆகமத்தை, உரையென்றும் சத்தமென்றும் வழங்குப. இக் கூற்று நிகழ்த்து வோன் "வைதிக மார்க்கத்தளவை வாதி" யாதலின், ஆத்தனாவான் தெளிந்த அறிவுடைய பெரியோனென்ற கருத்தால் "அறிவன்" என ஒருமையாற் கூறினான் என வறிக. நையாயிகருள் தொல்லோர் ஆத்தனாவான் இறைவனொருவனே யென்னாது விளங்கிய அறிவுடைய எவனும் ஆத்தனாகலாம் என்றும், "முனிவரும், ஆரியரும் மிலேச்சரும்"(நியா.பாடி.1. 1. 7.) எல்லாருமடங்க "எவனும்" என்றும் கூறுப. பிற்கால நையாயிகரும் வைசேடிகரும் ஆத்தனாவான் இறைவனென்றே கூறுப. 5. அருத்தாபத்தியளவை1 45-46. அருத்தாபத்தி - அருத்தாபத்தியளவை யென்பது, ஆய்க்குடி கங்கையிருக்கும் என்றால் - ஆயர் குடியிருக்கும் பாடி கங்கையிலிருக்கிறதென்று சொன்னால்,கங்கைக் கரையில் என்றெண்ணல்- கங்கையில் என்றது கங்கையாற்றின் கரையில் என்னும் பொருளதெனக் கோடல் எ - று. ஆயர் குடியிருக்கும் இருப்பு ஆயர்பாடி யெனவழங்கும். ஆயர்பாடி கங்கையிருக்குமென்ற வழி, கங்கையின் இடையே குடியிருத்தல் கூடாமையின், அதன் கரைக்கண் ணிருக்குமென எண்ணியறிந்து கோடல் வேண்டியிருப்பதுபற்றி "எண்ணல்" என்றார். அருத்தாபத்தியாவது ஒரு பொருளைக்கொண்டு, அதனோடியைபுடைய பிறிதொன்றனை யுணர்தல்' அருத்தம்-பொருள்; ஆபத்தி-பிறிதொரு பொருள். "அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாவதுதான், எடுத்த மொழியினஞ் செப்புவ தாகுமிவ் 'd2வூரிலுளார், படைத்தவ ரென்னிற் படையா தவரு முண்டென்றுமிவன், கொடுப்பவ னென்னிற் கொடாதாரு முண்டென்று கொள்வதுவே" (சிவ. சித்தி. அளவை. உரை) என்று மறைஞான தேசிகர் காட்டும் மேற்கோளாலும் இதன் இயல்புணரப் படும். கங்கேசர் முதலிய ஆசிரியன்மார்,இவ் வருத்தாபத்தி வியதிரேக வியாத்தியால் உணரப்படுவதென்றோதி, "பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பான்" என்றவழி, உண்ணாதான் பருத்திருப்பானல்ல னென்பதால் உண்பதுண் டெனத் துணிந்து, "பகலுண்ணா" னெனவே, "இரவிலுண்பான்" எனத் துணிந்து "சாத்தன் இரவில் உண்பன்" எனக் கோடல் என்றுரைத்து இதனைப் பின்வருமாறு விளக்குப, " யாவன் உண்ணாதான் அவன் பருத்திருப்பானல்லன்: இவன் பருத்திருக்கின்றான் ; ஆகவே, இவன் உண்ணாதானல்லன்; உண்போனாவான், " யாவனொருவன் உண்போன் அவன் பகலிலாதல் இரவிலாதல் உண்டல்வேண்டும்; இவன் பகலில் உண்ணான் : ஆகவே, இவன் இரவில் உண்போனாவான்." 6 - இயல்பளவை 47-48. இயல்பு - இயல்பளவையாவது, யானைமேல் இருந்தோன்- யானையின் பிடரி மேலிருப்போன் ஒருவன்; தோட்டிக்கு அயல் ஒன்று ஈயாது-கோலொன்று கொடுப்பதாயின் தன் கையில் உள்ள தோட்டியின் வேறாக ஒன்றும் கொடாது; அதுவே கொடுத்தல்- அத் தோட்டியினையே கொடுப்பதாம் எ - று. யானைமேல் இருப்பவன் கையில் தோட்டியல்ல துபிறிதொரு கோல் இன்மையின், கோல்கேட்டவழி அத்தோட்டியினைக் கொடுத்தல் அவற்கியல்பாதலால், இஃது இயல்பளவை யெனப் பட்டது; இதனைச் சுபாவவளவை யென்றும் கூறுப. இதனையே பிறரும், "மாமே லிருந்தொரு கோறா வெனிற்சுள்ளிக் கோறரலும், சோமே லிருந்தொரு கோறா வெனிற்றரவேதுணிந்து, பூமேவு கண்ணழுத் தங்கோல் கொடுத்தலும் பூதலத்தே, நாமே வியல்பென்று கூறுவர் நல்லசொன் னாவலரே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்று விளக்கினர். வேறு சில ஆசிரியன்மார், இவ்வியல் பளவைக்கு வேறாகச் சட்டையென ஒன்றைத் தொடுத்துரைப்பர். 7. ஐதிகவளவை 49-50. ஐதிகமென்பது - ஐதிகமென்னும் அளவையாவது; உலகுரை - உலகோராற் கேள்வி வழியாகக் கேட்டு வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் சொற்பொருளாகும்; இம்மரத்து எய்தியது ஓர் பேய் உண்டு எனத் தெளிதல்-இம்மரத்தில் வந்திருப்பதாகிய ஒரு பேய் உண்டு என்று உலகவர் கூறுவதை யுடன்பட்டொழிவது எ - று. ஒருவரும் கண்ணிற் காணாராயினும், பலரும் உண்டென்ப தொன்றே பற்றி யுடன்பட்டொழிவது ஐதிகவளவையாயிற்று. "உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத், தலகையா வைக்கப்படும்" (குறள்.850) என்பதும் இதனை யுட்கொண்டிருப்பது காண்க. பிறரும், "கொன்பயில் வேலைக் கடல்புடை சூழுங்குவலயத் தோர், அன்புடனாலிலலகையுண் டென்பர்க ளென்பதுவும், மின்பயில் புற்றில் விடநாக முண்டென்ப ரென்பதுவும், என்பர் கணாவல ரென்பது மைதிக மென்பர்களே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்ப.. நியாயபாடியம், இதனை ஆகமளவைக்கண் ணடக்கி, ஆத்தனொருவனாற் கூறப்பட்ட வழி இதுவும் ஆகமவளவையா (வீவீ. 2 - 2) மென்று கூறுகிறது. 8. அபாவவளவை 51-52. அபாவமென்பது-அபாவவளவை யெனப்படுவது; இன்மை ஒரு பொருளின் இல்லாமையாம்; ஓர் பொருளை - பொருளொன்றினை; அவ்விடத்துத் தவாது இலை என்றல் - கூறப்படும் அவ்விடத்தே பற்றற இல்லையென்று கொள்வது எ - று. எனவே, பொருளொன்றின் இன்மை கூறுவது அபாவவளவை யென்றும், அபாவமென்பது இன்மையென்றும் கூறியவாறாம். பொருளொன்றின் உண்மையின்மைகளைக் குறித்துச் சொல் நிகழுமிடத்து, இடமும் காலமும் முதலிய வியைபு பற்றியே நிகழுமாகலின், அவற்றுள்ளும் இடத்தையே சிறப்பித்து, "அவ்விடத்து" என்றும், சிறிது எஞ்சக் கூறிய வழியும் இன்மை பெறப்படாமையின், "தவாது இல்லை என்றல்" என்றும் கூறினான். என்றுமபாவம், முன்னபாவம், ஒன்றினொன்ற பாவம், அழிவுபாட்டபாவம் எனப் பகுத்து ஆராய்தலுமுண்டு,அவற்றை விரிந்த நூல்களுட் காண்க. உள்ளதொன்றின் உண்மைகொண்டு அதனோடியைபுடைய பிறிதொன்றின் இன்மையுணர்வு அபாவமாகாது; அஃது அனுமானத்தினடங்கு (நியா. பா. வீவீ. 2-2) மென்றும், காரியத் தினுண்மை காரணத்தினுண்மை யுணர்த்துவதுபோலக் காரியத்தின் இன்மை காரணத்தின் இன்மை யுணர்த்துமென்றும், ஆகமவளவை யானும் அபாவம் பெறப்படுமென்றும் -நியாயகந்தலி, குசுமாஞ்சலி. நியாயமஞ்சரி முதலிய நூல்கள் கூறுகின்றன. 9. மீட்சியளவை 53-54. மீட்சி-மீட்சியளவையாவது ; இராமன் வென்றான் என - இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் இராமன் வென்றான் என்ற வழி ; மாட்சியில் இராவணன் தோற்றமை மதித்தல்- அறமாண்பில்லாத இராவணன் தோற்றா னென்பதை யுணர்ந்து கோடலாம் எ - று. மீட்சியாவது "ஒழிவறிவு" (மணி. 27: 11) என்றாராகலின் ஈண்டு வாளாது மீட்சி யென்றொழிந்தார். இராமனோடு பொருதற்கு முன்பு காறும் துணைசெய்து போந்த அறம், இராமனது பகை பெற்ற வழித் துணையின்றிக் கழிந்தமையின், "மாட்சியில் இராவணன்" என்றார். வென்றோன் பாலுளதாகும் மாட்சி தோற்றோன்பால் இலதாதல் பற்றி இவ்வாறு கூறினாரென்றுமாம். இவ்வளவையைப் பாரிசேடமென்றும் ஒழிபென்றும் கூறுப. "சீரா ரொழிபென்று செப்பப் படுவது திண் புவிமேற், போராடி நின்று பொருதா ரிருவர்தம் போர்க்களத்துப், பாராரி ராகவன் வென்றா னெனிற்றன் பரிசழிந்து, நேராமிராவணன் றோற்றசொல் லாகி நிகழ்வதுவே" (சிவ. சித்தி. மறை. மேற்.) என்றார் பிறரும். நன்னூல், சிவஞான போதம், சிவஞானசித்தி முதலிய நூலுரைகளில் சிவஞான யோகிகள் இப் பாரிசேடத்தைப் பலவிடங்களில் எடுத்தாளுதல் காண்க. சில மீமாஞ்சை நூல்களுள் இது தனித்ததோ ரளவையாகக் கொள்ளப்படுகிறது. 10. உள்ளநெறியளவை 55-56. உள்ளநெறி யென்பது - சம்பவ வளவையாவது; நாராசத் திரிவில் - இருப்புத்துண்டின் சுழற்சியால்; கொள்ளத்தகுவது காந்தமெனக் கூறல் - கொள்ளக் கிடப்பது காந்தமென்று சொல்வதாம் எ - று. இதனையே மேலே எய்தியுண்டாநெறி யென்றார். பிறரெல்லாம் சம்பவமென்றும் உண்மையென்றும் வழங்குப. நாராசம் - இருப்புத் துண்டு. காந்தமேறிய இருப்புத்துண்டு சலிப்பது உண்மை; சலிப்பினால் காந்த முண்மை துணிவது சம்பவமாயிற்று. முதலின் கண் சினையுண்மையும், தொகுதிக்கண் பகுதியுண்மையும் ஆயிரத்தில் நூறுண்மையும், நூற்றின்கண் தொண்ணூறுண்மையும் சம்பவமென்றும், இது கருதலளவைக்கண் அடங்குமென்றும் நையாயிகர் கூறுவர். இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்லும் இதன்கண் அடங்குமெனக்கொண்டு, "துயக்கற வுண்மை யெனநா வலர்க டுணிந்துரைப்ப, தியற்கைப் பொருளினை யிற்றென லாமிது தானுரைக்கின், வியக்குற்ற கால்சலிக்கும்தீச் சுடும்விய னீர்குளிரும்,வயக்குற்ற மண்வலி தென்றுபட் டாங்கு வழங்குவதே" (சிவ. சித். மறைஞா. மேற்.) என்று கூறுவாருமுளர். 2. பிரமாணாபாசங்கள் 57-61. பிரமாணாபாசங்கள் எட்டுள - மேலே காட்சி முதல் உள்ள நெறி யீறாகக் கூறிய பிரமாணம் பத்திற்கும் ஆகாவென விலக்கப் பட்ட குற்றங்கள் எட்டு உள்ளன; சுட்டுணர்வு - பொருண்மை மாத்திரம் காணும் சுட்டுணர்வும்; திரியக்கோடல் - திரிபுக் காட்சியும்; ஐயம் - ஐயக்காட்சியும்; தேராது தெளிதல் - தேராத் தேற்றமும்; கண்டுணராமை - அறிவறியாமையும்; எய்தும் இல்வழக்கு- இவற்றோடு பொருந்திய இல்வழக்கும்; உணர்ந்ததை யுணர்தல் மறித்துணர்வும் ; நினைப்பு என - நினைப்பும் என; நிகழ்வ - நிலவு வனவாகும்; மேலே காட்சியளவைக்கு ஆகாவென விலக்கிய சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம் என்றவற்றை ஈண்டும் கூறியது பிரமாணாபாசமாம் இயைபு குறித்து என்க. எட்டுள என்றது, "தொகுத்துச் சுட்டல்"; ஏனைய, "வகுத்து மெய்ந் நிறுத்தல்." தெளிதற்குரிய ஏதுவகையாற் றெளியாது தேறுதல் குற்றமாதலின், தேராத தேற்றத்தைத் "தேராது தெளித" லென்றும், கண்டுணர்தற்குரிய அளவையும் கருவியும்கொண்டு கண்டவழியும் உணராமை அறிவறியாமை யாதலின், அதனைக் "கண்டுணராமை" யென்றும் பண்டேயுணர்ந் திருக்கு மொன்றை மறித்தும் உணர்தல் மிகையாதலின், அதனை "உணர்ந்ததை யுணர்தல்" என்றும் கூறினார். மறதியன் றென்றற்கு "உணர்ந்ததை" என்றார். இது மறித்துணர்வு என்றும் வழங்கும். 61-62. சுட்டுணர் வெனப்படுவது - சுட்டுணர்வு என்பது; எனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல் - எல்லாப் பொருள்களையும் அவற்றின் உண்மை மாத்திரம் கண்டொழிதலாம் எ - று. குற்றியோ மகனோ தோன்றிய வழி, அக்குற்றி மகன்களின்பெயர் சாதி குணம் தொழில் முதலியன காணாது தோற்றமே பற்றி உளதென்னும் உண்மை மாத்திரம் கண்டொழிதல் என்பதாம்; "பிறிதினை விலக்கலு மாட்டலு மின்றாய், ஒருபொரு ளுரைப்பது சுட்டெனப்படுமே" (நீலகே, 120. உரை. மேற்,) என்பது கருதத்தக்கது. பிற்காலத்தே இது நிருவிகற்பக் காட்சி யெனப்படுவதாயிற்று. 63-64. திரியக்கோடல் - திரியவுணர்தலென்பது ; ஒன்றை ஒன்றென்றல் - காணப்பட்டதொரு பொருளைப் பிறிதொன்றாகக் கொள்ளுதல்; விரிகதிர் இப்பியை வெள்ளியென்று உணர்தல் - விரிந்த ஒளிக்கதிர்களையுடைய இப்பியை வெள்ளியென்று உணர்ந்து கொள்வதாம் எ - று. உணர்வின் திரிபு உணரும் செயன்மேனின்றது ; அருணந்தி சிவனாரும் "திரியவே கொண்டல் திரிவாம்" (சிவ. சித்தி. அள. 3) என்பது காண்க. இப்பியை வெள்ளியென்று திரியக் கோடற்கு ஏது அதனது விரிகதிர்த் தோற்றமாதலின், "விரிகதிர் இப்பியை" என்று சிறப்பித்தார். இதனை விபரீதக் காட்சியென்றும் வழங்குப. "ஒன்றை யொன்றென்றல்" இதன் இலக்கணமெனவும், இப்பியை வெள்ளியென் றுணர்தல் எடுத்துக் காட்டெனவும் கொள்க. 65-66. ஐயமென்பது - ஐயமென்னும் பிரமாணக் குற்றமாவது ஒன்றை நிச்சயியா மையல்-காணப்பட்டதொன்றை இன்னதெனத் துணியாமைக் கேதுவாய் நிற்கும் மயக்கம்; தறியோ மகனோ என்றல்-காணப்பட்ட உருவைக் குற்றியோ மகனோ எனக் கவர்வுற்றுத் துணியாதொழிதல் எ - று. ஐயக் காட்சிக் கேதுவாகிய மையலை "ஐய" மென்றார். தறி, குற்றி முன்னர்க் "கவர்கோடல்" (மணி. 27:) என்றதும் காண்க. ஐயத்துக் கேதுவாக மையலாகிய அகக்காரணமொன்றே கூறினாராக, பதார்த்த தரும சங்கிரகமுடையார் ஒளியின்மை, சேய்மை முதலாகப் புறக்காரணமும் கூறுவர். பிற்போந்த அளவைநூலார், ஐயமும் உண்மையுணர்வுக்கு ஊக்கங் கொளுத்துமாற்றால் ஆக்கமாகக் கருதுப. 67-68. தேராது தெளிதல்-ஆராயாது துணிதலென்பது; செண்டு வெளியில் தறியை-செண்டாடும் வெளியிடத்து நிற்குங் குற்றியை; ஓராது-குற்றியோ மகனோ என ஆராயாமலே; மகன் என உணர்தல் - மகனென்றே துணிந்தொழிவது எ - று. செண்டுவெளி-குதிரைவீரர் விளையாட்டயருமிடம்; "செண்டாடுந் தொழில் மகிழ்வம்" (பெரியபு. கழறிற். 155) எனச் சான்றோர் வழங்குவது காண்க. குதிரைவீரரும் குதிரையைப் பிணிக்கும் குற்றியுமிருக்கும் செண்டுவெளியில் நிற்கும் குற்றியைக் குதிரைவீரருள் ஒருவனாக ஆராயாது மேற்கோடல் குற்றமாதல் காண்க. கூற்றுவகையால் தௌத்வு தோன்றினும், ஆராய்ந்த வழி வழுவாதலின், "தேராது தெளிதல்" எனப்பட்டது. தேராத் தெளிவும் தெளிந்ததன் கண் ஐயுறவும் குற்றமென வறிக. 69-70. கண்டுணராமை - கண்டுணராமையென்னும் பிரமாணாபாசமாவது, கடுமாப் புலியொன்று அண்டல் முதலிய - கடிய விலங்காகிய புலியொன்று நெருங்குதல் முதலியவற்றை, கண்டும் - நேரிற் கண்டுவைத்தும், அறியாமை - தம்மைப் பாதுகாவாமைக் கேதுவாகிய அறிவறியாமையாம் எ - று. இரை விழுங்கி யுறங்கும் மாசுணம் எரியாற் சூழப்படினும் இடம் பெயராது கிடத்தல் போல, புலி முதலிய தீங்கு செய்யும் விலங்குகள் நெருங்கி வருதலை யறிந்துவைத்தும் தம்மைப் பாதுகாவாமைக்கு ஏதுவாகிய நல்லறிவின்மை, ஈண்டுக் "கண்டுணராமை" எனப்பட்டது. அறியாமை, அறிந்து பாதுகாத்தலைச் செய்யாமை. இதனை உலகோர் "அலட்சிய புத்தி" யென்றும், அளவை நூலோர், "உபேட்சாத்மக ஞானம்" என்றும் வழங்குவர். அண்டலை யென்புழி ஐ: சாரியை அண்டல், அணுகுதல்; "துயரங்கள் அண்டாவண்ணம் அறுப்பான் எந்தை" (ஞானசம். 197-1) என்புழிப்போல. 71-72. இல்வழக்கென்பது - இல்வழக்கென்று சொல்லப்படுவது, முயற்கோடொப்பன - முயற்கோடு போலவரும் வழக்குகளை, சொல்லின் மாத்திரத்தால் கருத்தில் தோன்றல்-ஓசைவடிவிற்றாய சொல்லே பொருளாகக் கருத்திற் கொண்டொழிதல் எ - று. முயற்கோடு ஒப்பன என்றது, ஆகாயப்பூ, யாமை மயிர்க்கம்பலம் முதலாயினவற்றை உளப்படுத்தற்கு. இவை பொருளல்லவாயினும், சொன்மாத்திரையால் உண்டெனக் கொண்டொழிதலாற் பயனின்மையின் குற்றமாயின. முயற்கோடு முதலாயின தொடராற்றலாற்பொய்ப் பொருள் குறித்து நிற்பனவாதலின், 'சொல்லின் மாத்திரத்தாற் கருத்திற் றோன்றல்' என்றார். கருத்திற் கொள்ளாவழி ஆண்டுத் தோன்று தலின்மையின், கோடல், "கருத்திற் றோன்றல்" எனப்பட்டது. 73-74. உணர்ந்ததை உணர்தல்-உணர்ந்திருந்ததனையே மறித்தும் உணர்தல் என்பது, உறுபனிக்குத் தீப்புணர்ந்திடல் மருந்து என- மிக்க குளிருக்கு நெருப்பருகே சார்தல் மருந்தாமென்று, புலங்கொள நினைத்தல் - அறிவானறிந்து மேற்கோடல் எ -று. தட்பத்துக்கு வெப்பம் மாறாதலையுணர்ந்துவைத்தும் தீயருகே சார்தல் குளிர்க்கு மருந்தாமென ஆராய்ந்து தெளிதல் வேண்டாச் செய்கை யாதலால் குற்றமாயிற்று. எத்துணை மிக்க பனியாயினும், மறித்தும் ஆராய்ச்சி வேண்டா என்றற்கு "உறுபனி" யென்றும், அளவையானாராய்ந்து தெளியுமாறு தோன்றப் "புலங்கொள நினைத்தல்" என்றும் கூறினார். 75-77. நினைப்பு எனப்படுவது - நினைப்பென்னும் பிரமாணா பாசமாவது, நினக்கு இவர் தாயுந் தந்தையு மென்று பிறர் சொல - நினக்கு இவர் தாயுந் தந்தையுமாவர் என்று பிறர் கூறியவழிக் கோடல் போல், காரணம் நிகழாது கருதல் - பிறர் கூறுவனவற்றைக் காரணவாராய்ச்சியின்றி மேற்கொண் டொழிதலாம் எ - று. எனவே, பிறர் கூறும் அனைத்துச் சொற்களையும் காரண காரிய ஆராய்ச்சியின்றி மேற்கோடல் குற்றமென்ற வாறாம். இக்காலத்தும் வெளுத்த தெல்லாம் பாலெனக் கருதி யேமாற்ற மெய்தினோரை நோக்கி, "நுமக்கு யாவரும் தூயவே மொழி குவரென்னும் நினைப்பு" என்று கூறக் காண்டும். தனக்குத் தாயுந் தந்தையுமாவாரைக் காரண வகையா லாராய்தல் கூடாமையின், "காரணம் நிகழாது" என்றும், தாயறிவிக்க அறியுந் தந்தையினும் தாயைப் பிறர் அறிவிக்கவன்றி யறிதல் கூடாமையின், "பிறர் சொல" என்றும், காரண நிகழாது மேற்கோடற்குரியார் தாயுந் தந்தையுமன்றிப் பிறரின்மையின், "நினைக்கிவர் தாயுந் தந்தையு மென்று பிறர் சொலக் கருதல்" என்றும் கூறினார். கருதுதல் போலக் கருதுதலைக் "கருதல்" என்றார்; இஃது "என்னோற்றான் கொல்லெனும் சொல்" (குறள்-70) என்றாற்போல முடிந்தது- 77. (இப்பெற்றிய அளவைகள்) அளவைகள் இப்பெற்றிய - இது காறும் கூறிய பிரமாணங்களும் அவற்றின் ஆபாசங் களும் இத் தன்மையனவாம் எ - று. இது முடிந்தது முடித்தல். 78-85. பாங்குறும்-பகுதிப்படுகின்ற, உலகாயதம் பௌத்தம் சாங்கியம் வைசேடிகம் மீமாஞ்சகமாம்-உலகாயதமும் பௌத்தமும் சாங்கியமும் வைசேடிகமும் மீமாஞ்சையு மாகிய, சமய ஆசிரியர் தாம் - சமயங்கட்கு முறையே ஆசிரியராவார், பிருகற்பதி சினன் கபிலன் அக்கபாதன் கணாதன் சைமினி - வியாழனும் புத்தனும் கபிலனும் அக்க பாதனும் கணாதனும் சைமினியுமாவர், மெய்ப்பிரத்தியம் அனுமானம் சாத்தம் உவமானம் அருத்தாபத்தி அபாவம்-அவருள் வியாழன் காட்சி யொன்றும், 1புத்தன் காட்சியும் அனுமானமுமாகிய இரண்டும், கபிலன் அவ்விரண்டுடன் ஆகமம் சேர மூன்றும், அக்கபாதன் அம்மூன்றோடு உவமானம் கூட்டி நான்கும், கணாதன் அந்நான்குடன் அருத்தாபத்தியைச் சேர்த்து ஐந்தும், சைமினி காட்சி முதல் அபாவ மீறாகவுள்ள ஆறும் அளவைகளாகக் கொண்டனர், இப்போது இவையே இயன்றுள அளவைகள் - இப்போழ்து இவ்வாறுமே அச் சமயிகளால் வழங்கப்பட்டு வரும் அளவைகளாகும் எ - று. பாங்கு - பகுதி. பிரத்தியக்கமென்பது பிரத்தியம் எனச் சிதைந்து வந்தது. காட்சியெனினும் பிரத்தியக்கமெனினு மொக்கும். காட்சிக் கண் பொருளை நேரேயுற்றறிதலின், அதனை "மெய்ப் பிரத்தியம்" என்றார். பிரத்திய முதலிய ஆறுமே பொருள்களின் உண்மை துணிதற்குரியவையாதல்பற்றி இவ்வாறு சிறப்பித் தாரெனினுமாம். எண்ணுக் குறித்தியலும் எண்ணேகாரம் இடை யிட்டு நின்றது. அக்கபாதரைக் கௌதமபுத்தரென்றும், கணா தரைக் கணாசனரென்றும் கூறுவதுண்டு. ஏற்புடைய சொற்கள் இசை எச்ச வகையால் பெய்து கூறப்பட்டன. சைவவாதி 86-95. என்றவன் தன்னைவிட்டு - என்று கூறிமுடித்த அளவை வாதியைவிட்டுநீங்கி, இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி நேர் படுதலும் - எங்கட்கு இறைவனாவான் ஈசன் என்று கொண்டொழுகிய சைவவாதி எதிர்ப்பட்டானாக அவனைக் கண்டு, பரசும் நின் தெய்வம் எப்படித்து என்ன - நீ வழிபடும் நின் தெய்வம் எவ்வியல் பிற்று என மணிமேகலை கேட்க, இரு சுடரொடு இயமானன் ஐம்பூதம் என்று எட்டு வகையும் யாக்கையும் உயிருமாய்க் கட்டி நிற்போனும் - ஞாயிறு திங்கள் இயமானன் மண் நீர் தீ காற்று வான் என்ற எட்டினையும் தனக்கு உடம்பாய்த் தான் அவற்றிற்கு உயிராய் அமைந்து நிற்பவனும், கலையுருவினோனும் - பல்வகைக் கலைகளையும் தனக்கு உருவாக வுடையவனும், படைத்து விளையாடும் பண்பினோனும்- யாவற்றையும் படைத்து அப்படைத்தவை நின்று நிலவச் செய்யும் தன்மை யுடையவனும், துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும்-படைப்புற்று நிற்பவற்றை யொடுக்கு மாற்றால் அவற்றின் இளைப்பைப் போக்கியருளும் சிறப்புடைய வனும், தன்னில் வேறு ஒன்று இல்லோனும்-தன்னின் வேறாய்த் தனக்கு ஒப்பதும் மிக்கதுமாகிய தெய்வ மொன்று மில்லாதவனுமாகிய, அன்னோன் -அத்தன்மையையுடைய முதல்வனே, இறைவனாகும் என்று உரைத்தனன் - எங்கட்கு இறைவனாவான் என்று சொன்னான். இறைவன், முறை செய்து காக்கும் முதல்வன், உயிர்கட்கு உடலும் கருவியும் உலகும் பிறவும் படைத்தளித்துக் காத்தலும், அவ்வுயிர்கட் குண்டாகும் இளைப்பு முதலிய நீங்குதற் பொருட்டு ஒடுக்குதலும் செய்து, அவ்வுயிர்கள் செய்யும் வினைக்கேற்ப இன்பமும் துன்பமுமாகிய பயன்களை முறை செய்து வழங்குதலும் செய்தலின் "இறைவன்" என்றார்: இறு என்னும் சொல்லடியாகக் கொண்டு எப்பொருளினும் தங்குபவன் என்றலு மொன்று. இரு சுடர் முதலிய எட்டினையும் கட்டி நிற்றலாவது, தனக்கென வேறுடம்பின்றி அவற்றையே உடம்பாகவும் அவற்றில்தான் உண்ணிறைந்தியக்குதலின் உயிராகவும் கொண்டு நிற்றல். யாக்கையும் உயிருமாய் என மாறுக. கட்டி நிற்போனெனவே, இவ்வாறு உடம்புமுயிருமாக வமைத்துக் கோடல் அவன் தானாகவே தன் நினைவாற் (சங்கற்பத்தால்) சமைப்பதென்றும், இவ்வாறு கட்டிக் கொள்ளாதே வேறாய் நிற்றலும் அவற்குண்டென்றுங் கூறினானாம். முதல்வன் அட்டமூர்த்தியாயிருத்தலை, நாவரசரும், "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமான னாயெறியுங் காற்று மாகி, அருநிலைய திங்களாய் ஞாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகி" (6:91,1) என்பது காண்க. கற்கப்படும் கலை பலவும் இறைவனே என்பது, "கலையவன் மறையவன் காற்றொடுதீ, மலையவன் விண்ணொடு மண்ணுமவன்" (109:6) என்று ஞான சம்பந்தரும், "கலையாகிக் கலைஞானம் தானே யாகி" (6:94: 2) என நாவரசரும் கூறுவர். படைத்தலும் காத்தலும் அவற்கு மிக எளிதில் அமைவன என்றற்கு "விளையாடும் பண்பினோன்" என்றார்; "காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி" (திருவெம்பாவை) என்று மணிவாசகர் கூறுதல் காண்க. துயர், இளைப்புத் துன்பம். தோற்றம், சிறப்பு, துடைத்தற்கு ஏது கூறுவர், "துயர் தீர்தோற்றத் தோன்" என்றார். "தன்னில்" என்றதனால் ஒப்பும், வேறு என்ற தனால் மிகுதியும் கொள்ளப்பட்டன. பிரமவாதி 96-97. பிரமவாதி-பிரமவாதி யென்பவன், பேருலகெல்லாம்-பெரிய இவ்வண்ட முழுதும், ஓர் தேவன் - ஒப்பற்ற பிரம தேவனிட்ட, முட்டை என்றனன்-முட்டையாகுமென மணிமேகலைக்குச்சொன்னான். எ - று. இது வைதிக நெறியாகிய அறுவகைச் சமயத்துள் கூறப்படாது புராணங்களிற் கூறப்படும் வழக்கு. இப்பிரமவாதி கூற்றே பற்றி, இவ் வண்டமும் பிரமாண்டமெனப்படுகிறதென வறிக. ஈண்டுக் கூறப்படும் கருத்து மனுதரும நூலில் முதல் அத்தியாயத்திலே (சுலோ. 9) கூறப்படுகிறது. வைணவவாதி 98-99. கடல்வணன் புராணம்-கடலின் நிறத்தை யுடைய னாகிய விட்டுணு புராணத்தை, காதல் கொண்டு ஓதினன் - அன்போடு ஓதிப் பயின்றவனாகிய வைணவ வாதி, நாரணன் காப்பு என்று உரைத்தனன் -தங்கட்கு நாராயணனே இறைவன் என்று மணிமேகலைக்குச் சொன்னான் எ - று. காதல் கொண்டோதினன் எனவே, இவன் வைணவ சமயத்திற் பேரன்பும் கடைப்பிடியும் உடையனென்பது பெற்றாம். முறை செய்தலே யன்றிக் காத்தலும் இறைவன் கடனாகும் இயைபுபற்றி, இறையென்பதற்குக் "காப்பு" என்றான். புராணம்: பழமையான வரலாறு. வேதவாதி 100-105. கற்பம் கை சந்தம் கால் எண் கண்-கற்பமென்னும் அங்கம் கையாகவும் சந்தமென்பது காலாகவும் கணித மென்பது கண்ணாகவும், தெற்றென் நிருத்தம் செவி-தெற்றென விளக்கம் செய்யும் நிருத்த மென்னும் அங்கம் காதாகவும், சிக்கை மூக்கு-சிஷை மூக்காகவும், உற்ற வியாகரணம் முகம் பெற்று - இவற்றோடு பொருந்தும் சொல் இலக்கணம் என்னும் அங்கம் முகமாகவும் கொண்டு, சார்பின் தோன்றா - யாதொன்றனையும் சார்ந்து தோன்றுதலில்லாது தான்றோன்றி யாகிய, ஆரணவேதக்கு-ஆரணமாகிய வேதபுருடனுக்கு, ஆதி அந்தமில்லை-தோற்றமும் கேடும் இல்லை, அது நெறி - அவ்வேதம் கூறுவதே எங்கட்குச் சமய நெறியாம். எ - று. சந்தம், சந்தோவிசிதி. வைதிகச் சொற்களை யாராய் தற்குக்கருவி யாதலின், "தெற்றென் நிருத்த" மெனப்பட்டது. வியாகரணம் ஐந்திர முதலிய வடமொழி யிலக்கணம். வேதம் அநாதி யென்றும் அதனை யுருவகத்தாற் புருடனென்றும் கூறுவது வைதிக வேதியர் மரபு. "வேதம் அபௌருஷேயம்" என்பது பற்றி "சார்பிற் றோன்றாது" என்றார். ஊழிதோறும் தொடக்கத்தே இறைவன் இவ்வேதங்களைத் தொகுத் தளிக்கின்றா னென்பான், அதற்கு இறைவன் போல அநாதி யுண்மைத் தன்மை கற்பித்து, 1"வேதக்கு ஆதியந்தமில்லை" என்றான். "மாயா வாய்மொழி" (பரி. 3.47) என்பதற்கும், "முதுமொழி" (பரி 3.47) என்பதற்கும் கூறப்படும் உரையகத்தும், "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதி" (குறள். 543) என்பதன் உரையகத்தும் ஆசிரியர் பரிமேலழகர் வேதம் அநாதி நித்தியம் என்பது காணப்படும். வேத புருடற்குக் கற்ப முதலியன கை முதலிய உறுப்புக்களாகக் கூறுவது பற்றி இக்கற்ப முதலிய ஆறும் வேதாங்கமெனப்படும். இனி, நச்சினார்க்கினியர் சிக்கையையொழித்துப் பிரமத்தைக் கூட்டி ஆறங்கமாவன: உலகியற் சொல்லை யொழித்து வைதிகச் சொல்லை யாராயும் நிருத்தமும், அவ்விரண்டையு முடனா ராய்ந்த ஐந்திரத் தொடக்கத்து வியா கரணமும், போதாயனீயம், பாரத்துவாசம், ஆபத்தம்பம், "ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சி யாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்" (தொல். புறத். 20. உரை) என்றனர். இனி ஈண்டுக் கூறிய எண்ணைச் சோதிடம் என்றும் கொள்ப. "மனக்கினியாற்கு" (மணி. 21.30.) என் புழிப் போல வேதக்கு என்பதும் சாரியை பெறாது முடிந்தது. அவ்வேதம் கூறும் விதி விலக்குகளையே சமயநெறியாகக் கொண் டொழுகுதலின்; "அது நெறி" என்றான். 105-109. எனும்-இவ்வாறு சொல்லும், வேதியன் உரையின் விதியும் கேட்டு - வேதவாதியால் உரைக்கப்படும் பொருள் களைக் கேட்டு, மெய்த்திறம் வழக்கு என விளம்புகின்ற-மெய்யாய நூல் வழக்கு உலக வழக்கு என்று கூறப்படும், எத்திறத்தினும் இவர் உரை இசையாது என - எவ்வகையினும் இவ்வேதியர் முதலாயினோர் கூறுவது பொருந்தாதென்று கருதினவளாய், ஆசீவக நூல் அறிந்த புராணனை-ஆசீவக நூற்பொருளை யோதியுணர்ந்த முதியோனொருவனைக் கண்டு, பேசும் நின் இறை யார் நூற்பொருள் யாது என - நின்னாற் பரவப்படும் இறைவன் யார் நினக்கு மேற் கோளாகிய நூற்பொருள் யாது என்று வினவ எ - று. வேதங்கூறும் பொருள்கள் விதியும் விலக்குமாகிய வடிவி லிருத்தலின் "விதியும் கேட்டு" என்றார். உம்மையால் விலக்கும் தழுவப்பட்டது. "மெய்த்திறம் வழக்கு" என்பவற்றுள், வழக்கு உலக வழக்கு. "வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்" (தொல். பாயி.) என்பது காண்க. எனவே, மெய்த்திறம் நூல் வழக்காயிற்று. "மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடு" (மணி. 1: 11) என்று முன்பும் கூறியிருத்தல் காண்க. நூல்வழக்கும் உலக வழக்குமென்ற இரண்டும் உண்மை யாராய்ச்சிக்கும் வேண்டுவன எனச் சான்றோர் கூறுதல் தோன்ற, "விளம்புகின்ற" என்று மணிமேகலை கருதினாள். இவர் என்றது, அளவைவாதி முதல் வேதவாதி யீறாகக் கூறிய வாதி களை. இவர் கூற்றைக் கேட்ட மணிமேகலை அமையாது மேலும் சமயக்கணக்கர் பலரையும் வினவுதற்கு விழைந்தமையின், ஏதுவொன்றும் கூறாது "எத்திறத்தினுமிசையாதிவர் உரையென" ஒழிகின்றாள். பன்னெடுநாள் ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் அறிவு நிரம்பினமை தோன்றப் "புராணன்" என்றார். பூரண னென்றும் பாடம். பூரணன், ஆசீவக நூலைக்கூறிய மற்கலி. "விரையாவறிவிற் புகழ்பூரணனே" (நீல.673) என்புழி, பூரணன் என்பதற்கு, "பூரணனென்னு மெம்முடைய ஆப்தன்" என்று சமயதிவாகர வாமனமுனிவர் உரை கூறுவதனாலறிக ஆசீவகவாதி 110-119. எல்லையில் பொருள்களில்-எல்லையில்லாத பொருள் களின் இடத்தில், எங்கும் எப்பொழுதும் புல்லிக்கிடந்து புலப்படுகின்ற - எவ்விடத்தும் எப்பொழுதும் நீங்காமற் பொருந்திக் கிடந்து விளங்குவனவாகிய, வரம்பில் அறிவன் இறை-எல்லையில்லாத அறிவினையுடைய மற்கலியாகிய எங்கள் இறைவன் உரைத்த, நூற் பொருள்கள் ஐந்து - நூற்பொருள்கள் ஐந்து வகைப்படும், உரந்தரும் உயிரோடு அணுநால்வகை - (அவை) திண்மைபொருந்திய உயிரும் நால்வகை யணுவகையுமாம் அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திட-அவ்வணுக்கள் தாம் தம்மை உற்றும் கண்டும் உணர்ந்திடுமாறு, பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்-ஒன்று ஒன்றினுட் புகுமாறு செறித்த வழியும் ஒன்றா காவகையிற் கூடுதலும் பிரிதலும் செய்யும், நிலம் நீர் தீ காற்று என நால்வகையின - நிலவணுவும் நீரணுவும் தீயணுவும் காற்றணுவுமென நான்கு வகைப்படுவன வாகிய அவை, மலைமரம் உடம்பு எனத் திரள்வதும் செய்யும் - மலையாகவும் மரமாகவும் உடம்பாகவும் திரண்டு உருவாவது முண்டு, வெவ்வேறாகி விரிவதும் செய்யும் - அவை வேறுவேறாகப் பிரிந்து விரிவதும் உண்டு, அவ்வகை அறிவது உயிர் எனப்படும் - திரள்வதும் விரிவதுமாகிய அணுக்களின் அக்கூறுபாடுகளை யறிவது உயிரென்று கூறப்படும் எ - று. பொருள்கள் எல்லையில்லாதனவாதலின், அவற்றால் விளக்க முறும் அறிவும் எல்லையில்லாது விரிதலின், "வரம்பில் அறிவன்" என்றான். மற்கலி, ஆசீவகநெறியைக்கண்டவர். இவரை, மற்கலி கோசலர் என்றும் கூறுப. இவரெழுதிய நூல் நவகதிர் என்று கூறப்படும். ஆசீவகர்க்கு இறைவன் மற்கலி என்பதை, "மற்கலி நூலின் வகையிது" (மணி.27 : 165) என்பதனால் அறிக. நீலகேசி யுடையாரும், ஆசீவகன் கூற்றில் வைத்து, "மற்கலிதானே இறை இனி, ஒன்பதுவாங் கதிர்நூல் யாமுடையன, மண்பெறு நுண் பொரு ளைந்து" (671) என்று கூறுவது காண்க. உணர்வுடைமைபற்றி, உயிரை வேறுவைத்து, "உரந்தரு முயிரோ டொருநால் வகையணு" என்றார். ஓரணு மற்றோரணு விலடங்கினும், ஒன்று மற்றொன்றினுட் புகுந்தொன்றாகாதென்றும், ஒன்றினொன்றடங்கிக் கூடுவதும் பிரிவதும் செய்யு மென்பவாகலின், "பெய்வகை" யென்றும் "கூடிப் பிரிவதும் செய்யு" மென்றும் கூறினான் பிறரும், "குழுவும் பிரியும்" உணல் மேயினும் உள்புகுதல் உரையேம்" (நீலகே. 677) என்றார். "உயிரோடொரு நால்வகையணு" (மணி.27:113) என்று தொகுத்தோதியதை விரித்துரைத்தலின், நிலநீர் தீக்காற்றென நால்வகையின என்று விரித்துரைத்தார். நால்வகையணுவும் கூடிப் பிரியுமென்ற விடத்துக் கூடிநிற்குந் திறத்தை விளக்கற்கு, "மலை மரம் உடம்பெனத் திரள்வதும் செய்யும்" என்றும், பிரியுந் திறத்தை, "வெவ்வேறாகி விரிவதும் செய்யும்" என்றும் கூறினான். உயிர் எனப்படும் எனச் சிறப்பித்தான், அஃது உணர்வதும் பிறர்க் குணர்த்துவதும் செய்யும் சிறப்புப்பற்றி. பிறரும், "அறித் தலறிதலவை தாமுயிராம்" (நீல. 676) என்றார். அறித்தல்-அறிவித்தல். உயிரெனப் பிரித்துக் கூறினா னாயினும், அதுவும் அணுவென்றே கருதப்படும். "உடங்கே யணுவைந் துருவா யுளதே" (நீல. 674) என்பது காண்க. "அவ்வணு" வென்றது உயிரணுவென்றும், "உற்றுங்கண்டு முணர்ந்திடப் பெய்வகைக் கூடிப் பிரிவதும் செய்யும்" என்றது அவ்வுயிரணுவின் இலக்கண மென்றும் கூறுவாருமுளர். வேறுவேறென்பது வெவ்வேறென மரீஇயிற்று. 120-124. நிலம் வற்பமாகி யுறும் - நிலவணு வன்மையுடைய தாயிருக்கும்; நீர் தாழ்ந்து - நீரணுவானது கீழே வீழ்ந்து, சொற்படு சீதத் தொடு சுவையுடைத்தாய் - இயல்பென்று சொல்லப்படும் குளிர்ச்சியுடன் சுவையுடையதாய், இழின் என நிலம் சேர்ந்து ஆழ்வது - இழினென்னு மோசையுடன் நிலத்தையடைந்து ஆழத்தே சுவறி விடுவதாம், தீ - தீயணு, தெறுதலும் மேற் சேர் இயல்பும் உடைத்தாம் - எரிப்பதும் மேனோக்கி யெழுவதும் இயல்பாக வுடைய தாகும்; காற்று விலங்கி அசைத்தல் கடன் - காற்றணு குறுக்கிட்டசையும் இயல்பினதாகும் எ - று. வற்பம், வன்மை, நிலத்தே தாழ்ந்து ஆழத்தே சுவறுதல் நீரணுவுக்கியல் பென்றும், சுவையுடையை அதன் குணமென்றும் கொள்க. நிலவணுவின் குணம் வற்ப மென்றாராக, நீலகேசியுடையார், "நிலநீர்எரிகாற்றுயிரின் இயல்பும், பலநீ ரிவற்றின் படுபா லவைதாம், புலமா கொலி யொன்றொழிய முதற்காம், சலமாயது தண்மை யையே முதலாம்," "எறித்தல் முதலாயின தீயினதாம், செறித்தலிரை யோடிகை காற்றின வாம், அறித்த லறித லைதா முயிராங், குறித்த பொருளின் குணமாமிவையே" (நீல. 675, 676) என்றும், "மேற்சீர தீயோ டுயிர் காற்று விலங்கு சீராம், பாற்சீர நீரு நிலந்தானும் பனிந்த சீராம், மேற்சீர மேற் போம் விலங் கோடு விலங்கு சீர்கீ, ழாற்சீ ரவிழும் அவையென்னினு மாவ தென்னோ" (நீல. 717) என்றும் கூறுப. 124-137. இவை ஆதியில்லாப் பரமாணுக்கள் இவ்வைவ கையணுக் களும் அநாதியான பரமாணுக்களாதலால், வேற்றியல் பெய்தும் விபரீதத்தால் - வேறாகிய இயல்புகளையும் எய்தும் விகாரமுடைய வாயினும், தீதுற்று யாவதும் சிதைவது செய்யா - கேடுற்றுச் சிறிதும் இல்லையாமாறு அழிவது கிடையா, புதிதாய் ஒன்று பிறந்து ஒன்றிற் புகுதா - புதிதாக ஓரணுத் தோன்றி வேறோ ரணுவுக்குட் புகுவதுமில்லை; முதுநீர் அணுநில வணுவாய்த் திரியா-அநாதியான நீரணுக்கள் அத்தன்மையவான நிலவணுக்களாய் மாறுவதில்லை; ஒன்று இரண்டாகிப் பிளப்பதும் செய்யா - ஓரணு இரண்டணுக் களாய்ப் பிளந்து போவதும் கிடையாது; அன்றியும்-மேலும்; அவல் போல் பரப்பதும் செய்யா-நெல் முதலியவற்றைக் குற்றிப்பெறும் அவல்போல விரிவதுமில்லை; உலாவம் தாழும் உயர்வதும் செய்யும் -உலாவுவதும் தாழ்வதும் உயர்வதும் உண்டு; குலாம் மலை பிறவாக்கூடும் - நிலவணுக் களாற் பொருந்திய மலை கரைந்து மணலாகிப் பிறவற்றோடு கூடும்; பலவும் பின்னையும் பிரிந்து தம் தன்மையவாகும் - பலவாய்த் தம்மிற் செறிந்து கூடியிருக்குமவை பின்னரும் அக்கூட்டத்திற் பிரிந்து தனித்தனி யணுவாகவும் மாறும்; மரம் மன்னிய வயிரமாகச் செறிந்து வற்பமுமாம் - மரமாய்க் கூடிய அணுக்கள் திண்மையுறக்கூடி வயிரமாகி வன்மையுடைய மரமுமாம்; வேயாய்த் துளைபடும் - மூங்கிலாகி உள்ளே புழையுடையதாகும்; பொருளா முளைக்கும் - வித்தாகி முளைக்கும்; தேயாமதிபோல் செழுநில வரைப்பாம் - தேயாத முழுத் திங்கள் போல வட்டமான செழுமை பொருந்திய நிலப் பரப்பாகும் எ - று. விபரீதம் - விகாரம். கூடுதற்குரிய இயல்பு பிரியுமிடத்து வேறுபடுதலின், "வேற்றியல் பெய்தும் விபரீத" மாயிற்று. வேற்றியல் பெய்தும் விபரீத முடைமையின் விகாரியாதலால் அணுக்கள் அழியுங்கொலென்னு மையமறுத்தற்கு, "ஆதியில்லாப் பரமாணுக்கள்" என்றார். ஆதியின்மையை விளக்கற்கு, "புதிதாய்ப் பிறந்தொன் றொன்றிற் புகுதா" என்றும், ஒருவகையணு பிறிதொருவகை யணுவாய்த் திரியா மையை விளக்கலுற்று, "முது நீரணு நிலவணு வாய்த் திரியா" என்றும் கூறினான். முதுமையை நிலவணுவுக்கும் கூட்டுக. ஒன்று மற்றொன்றாதல் இல்லையென்பதையே வேறுபல ஏதுக்களால் விளக்குவானாய், ஒன்றிரண்டாகப் பிளத்தலும் நெல் முதலியவற்றைக் குற்றிப் பெறும் அவலைப்போலப் பரத்தலும் இல்லையென்றான். ஒருவகை யணுக்களே தம்மிற் கூடிச் செறிதலும் பிரிதலும் செய்யுமென்றும் அதனால் தந்தன்மை திரியாவென்றும் கூறியதனை, மலையியல்பும் மரத்தியல்பும் நிலப்பரப்பமைதியும் முறையே கூறி விளக்கினான். மரஞ் செடி கொடிகள் முதலியவற்றால் விளையும் பொருள் வித்தாதலின், அவ் வித்தினைப் "பொருள்" என்றார். வயிரமேறிய மரம் நிலை பெறுதல் தானே யமை தலின், "மன்னிய" என்றான். மதி, முழுத்திங்கள்; அதுதானும் மறுநாளே குறையலுறுதலின், அதனினீக்கத் "தேயாமதி" யென்று சிறப்பித்தார். 138-145. நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழின்-எல்லாப் பொருள்களிலும் நிறைந்திருக்கும் இந்த நிலமுதலிய நால் வகை யணுக்களும் நிலநீர் முதலிய பூதங்களாக நிலவுமிடத்து; வரிசையின் குறைந்தும் ஒத்தும் கூடா - தத்தமக்குரிய அளவிற் குறைதலும் சமமாதலுமின்றி; ஒன்று முக்கால் அரை காலாய் உறும் - நிலமாகிய பூத நிகழ்ச்சிக்கு நிலவணு ஒன்று கூடின் நீரணுவுக்கு முக்காலும் நெருப்புக்கு அரையும் காற்றுக்குக் காலுமாய்ப் பொருந்தும்; துன்றும் மிக்கதனால் பெயர் சொல்லப்படும்-பொருந்தும் அணுக்களுள் மிக்கவற்றால் இன்ன பூதமெனப் பெயர் கூறப் படும்; இக்குணத்து அடைந் தாலல்லது - இவ்வளவாக அணுக்கள் செறிவுற்றாலன்றி; நிலனாய்ச் சிக்கென்பதுவும் - நிலமாய் வன்மை யுற்றிருப்பதும்; நீராய் இழிவதும்-நீராகிப் பள்ளம் நோக்கி யோடுவதும்; தீயாய்ச் சுடுவதும் - நெருப்பாகிச் சுடுவதும்; காற்றாய் வீசலும்-காற்றாய் இயங்குவதும்; ஆய தொழிலையடைத் திடமாட்டா- ஆகிய இத்தொழில்களைச் செய்யா எ - று. இவ்வணுக்கள் பூதமாய் நிகழுமிடத்து ஒவ்வொரு பூதத்துக்கும் வேண்டும் அணுத்திரள் தம் அளவில் குறைந்தோ, தம்மோடு கூடும் பிற அணுக்களின் அளவிற்கொப்பவோ கூடாவென்றற்கு, "வரிசையின் குறைந்தும் ஒத்தும் கூடா" என்றும், அவ்வளவினை, "ஒன்று முக்கால் அரை காலாயுறும்" என்றும் கூறினான். பிறரும், "இரண்டுங்கூடும் நெறி நில நான்கு நீர் மூன், றின்றிரண் டழல்கா லொன்றா விசைந்திடும் பூமியிவ்வா, றென்று நீர் தீ காலாதி யீண்டுவ தென்றியம்பும்" (சிவ. சித். பர. ஆசீவ. 7) என்று கூறுவது காண்க. ஒன்று முக்கால் அரை காலாயுறும் என்பதே பிறிதோர் வாய்பாட்டால் நான்கு மூன்று இரண்டு ஒன்றாகக் கூறப்பட்டதென்க. நிலவணு மிக்கது நிலமென்றும் நீரணுமிக்கது நீரென்றும் இவ்வாறே பிறவுமாதலின், "துன்று மிக்கதனாற் பெயர் சொலப்படுமே" என்றான். 146-149. தெய்வக்கண்ணோர் - ஞானக்கண்ணுடையவர்கள்; ஓர் அணு அறிகுவர் - ஒவ்வோரணுவினையும் கண்டறிகுவர்; ஏனோர் அஃதில்லாத பிறரெல்லாம்; பூதத் திரட்சியுள் ஓரார் - பூதமாய்த் திரண்டு நின்ற வழியும் அணு வுண்மையை யறிகுவாரல்லார்; மாலைப்போதில்-(அஃது எது போல வென்னில்) ஞாயிறு மறைந்த மாலைப் போதில்; ஒரு மயிர் அறியார் - மயிர் ஒவ்வொன்றா யிருத்தலைக் காணாமல்; சாலத்திரள் மயிர் தோற்றுதல் சாலும் - மிகுதியாய்த் திரண்டுள்ள மயிர்க் கற்றையின் பிண்டித்த தோற்றத்தைக் காண்பதை யொக்கும் எ - று. கண் முதலிய பொறிகளால் எளிதில் காணமுடியாத அணுக்களை நுண்ணுணர்வுகொண்டு நுணுகிக்காண்டலின், ஞானவான்களைத் "தெய்வக்கண்ணோர்" என்றார்; "ஐயப் படாஅ தகத்த துணர் வானைத், தெய்வத்தோ டொப்பக் கொளல்" (குறள். 702) என்று சான்றோர் கூறுதல் காண்க. ஏனோர்க்கு அவ்வணு தோற்றப் படாமைக்கு மயிர்த் திரளை யெடுத்துக் காட்டினான். மாலைப் போது கூறியது, அறியாமை சூழ நிற்கும் இயல்புகாட்டி நிற்கிறது. இவ்வணுவாதம் புத்தர், சமணர், வைபாசிகர், சௌத்திராந்திகர் என்ற பலர்க்கும் உடன்பாடு; வைசேடி கரும் இதனை மேற் கொள்வர். "மாலைப் போதிலோர் மயிரு மறியார்" என்றும் பாடம். 150-158. கரும்ம் பிறப்பும் கருநீலப்பிறப்பும் - கரும்பிறப்பென்றும் கருநீலப் பிறப்பென்றும்; பசும்ம் பிறப்பும் - பசும் பிறப் பென்றும்; செம்ம் பிறப்பும் - செம்மைப் பிறப்பென்றும்; பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பு மென்று - பொன்மைப் பிறப்பென்றும் வெண்மைப் பிறப்பென்றும்; இவ்வாறு பிறப்பினும் மேவி-இவ்வறுவவகைப் பிறப்புக்களிலும் பிறந்து; கழிவெண் பிறப்பிற் கலந்து - முடிவில் மிக வெண்மையான பிறப்பிற் பிறந்து வீடுபேறெய்துவர் மக்கள்; அழியல் வேண்டார் - துன்பத்தை விரும்பாதோர்; அது உறற் பாலர்-அவ்வீடு பேற்றிற் குரிய கழிவெண் பிறப்பெய்தும் பான்மை யுடையோராவர்; இது செம் போக்கின் இயல்-இவ்வாறு முறையே பிறந்து வீடெய்தும் நெறி செம்போக் கெனப்படும் நன்னெறி யாம்; இது தப்புமது மண்டலம் என்று அறியல் வேண்டும் - இந் நெறியிற்றவறித் துன்புறுவது மண்டல நெறி யென்று அறிய வேண்டும் எ - று. வீடு பேற்றுக்குரிய முயற்சியுடையோர் முறையே கரும்பிறப்பு முதலிய அறுவகைப் பிறப்பும் பிறந்து படிப்படியாக வுயர்ந்து கழிவெண் பிறப்புற்று வீடுபேறடைவர்என்பதாம். இதனைப் பிறரும் "வெண்மைநன் பொன்மை செம்மை கழிவெண்மை நீலம் பச்சை, யுண்மை யிவ்வா றினுள்ளும் கழிவெண்மை யோங்கு வீட்டின், வண்மைய தாகச் சேரு மற்றிவை யுருவம் பற்றி, யுண்மையவ் வெட்டுத் தீட்டுக்கலப்பினி லுணரு மென்றான்" (சிவ. சித். பர. ஆசீவ. 8) என்றார். இவ்வாறு பல்வகைப் பிறப்புக்கட்கும் நிறங்கூறும் இயல்பு சீவக சிந்தாமணி முதலிய சமணூல்களிலும் காணப்படுகிறது. பெரியாழ்வாரும் முத்திப் பேற்றுக்குரிய ராயினாரை "வெள்ளுயிர்" (திருப்பல்லா.) என்று கூறுகின்றார். செம் போக்கு, நேரியசெலவு; பிறப்புவகையில் மேனோக்கிச் செல்லாது கீழ்ப்பட்டுச் சுழலுவதுபற்றி, பிற்போக்கினை "மண்டிலம்" என்றார். 159-165. பெறுதலும் - நற்பேறுகளைப் பெறுவதும்; இழத்தலும்- பெற்றவற்றை யிழந்துவிடுவதும்; இடையூறுறுதலும் - பல்வகை இடையூறுண்டாதலும்; உறுமிடத்து எய்தலும் - பொருந்திய விடத்தே பொருந்தி யிருத்தலும்; பெரிதவை நீங்கலும் - இடத்தினின்று இடத்தையும் ஒக்கல் பொருள் ஏவல் முதலிய வற்றையும் பிரிந்து நீங்குதலும்; துக்க சுகமுறுதலும் - துன்பமும் இன்பமும் அடைவதும்; பிறத்தலும் சாதலும்-பிறப் பிறப்புக்களும்; கருவிற் பட்ட பொழுதே கலக்கும் - கருவியிற் றோன்றிய போதே உயிர்களைச் சார்ந்துவிடும்; இன்பமும் துன்பமும் இவை அணுவெனத் தகும் - இன்பமும் துன்பமுமாகிய இவைகளும் அணுவென்று கூறப்படும்; முன்னுள ஊழே - முன்னே எய்திய நலந் தீங்குகட் கேதுவாகிய ஊழே; பின்னும் உறுவிப்பது - பின்னரும் அவை யெய்துதற் கேதுவாம்; இது மற்கலி நூலின் வகை என்ன - இக் கூறிய இது 1மற்கலி கோசலர் என்பார் கூறிய நூற்பொருள் வகையாம் என்று ஆசீவகன் சொல்ல எ - று. பெறுதல் என்றதற் கேற்பச் செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. உறுமிடத் தெய்தலோடு இயைபுடைய பெரிதவை நீங்கல் செய்யுளாதலின் மாறி நின்றது. அவை யெனப் பன்மையாற் சுட்டியது இடமேயன்றி நாடும் ஒக்கலும் ஏவலும் பிற வளங்களும் உளப்படுத்தற்கு. இப்பெறுதல் முதலிய பலவும் கருவிலே தொடக் குண்பன என்பதைப் பிறரும், "பேறிழ விடையூ றின்பம் பிரிவிலா திருக்கை மற்றும், வேறொரு நாட்டிற் சேறல் விளைந்திடு மூப்புச் சாதல், கூறிய வெட்டு முன்னே கருவினுட் கொண்ட தாகும், தேறிய 'd2வூழிற் பட்டுச் செல்வதிவ் வுலக மென்றான்" என்றும் "புண்ணிய பாவமென்னு மிரண்டணுப் பொருந்த வைத்தே, எண்ணிய விவற்றி னோடு மேழென வெங்களோடு, நண்ணிய வொருவன் கூறு ஞான மிவ்வாற தென்று, கண்ணிய கருத்தி னோர்கள் கதியினைக் காண்ப ரென்றான்" (சிவ. சித். ஆசீ- 9, 10) என்றும் கூறுதல் காண்க. 166-70. சொல்தடுமாற்றத்தொடர்ச்சியைவிட்டு-முன்னுக்குப் பின் தடுமாறிக்கூறும் ஆசீவகனுடன் தொடர்ந்து சொல் லாடுவதை விட்டகன்று; நிகண்ட வாதியை - ஆங்கேயிருந்த நிகண்டவாதியைக் கண்டு; நின்னாற்புகழும் தலைவன் யார்-நின்னாற் பாராட்டப்படும் இறைவன் யார்; நூற்பொருள் யாவை - நூற்பொருள்கள் யாவை; அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும் மெய்ப்பட விளம்பு என - அப்பொருள்களின் வரலாறும் உயிர்கட்குளவாகும் கட்டும் அதனினின்று விடுதலை பெறுமாறும் நன்கு விளங்கக் கூறுக என்று கேட்க; விளம்பல் உறுவோன் - அவன் சொல்லலுற்றான் எ - று. முன்மொழிந்ததும் பின்மொழிவதும் மாறுபடக் கூறு முகத்தால் உண்மை தோன்றாமற் கூறுவது, சொற்றடுமாற்றம்; "நில நீர் தீக் காற்றென நால்வகையின், மலைமரம் உடம்பெனத் திரள்வதும் செய்யும்" (மணி. 27 : 116-7) என்று முன்னே மொழிந்து, பின்னே "முது நீரணு நிலவணு வாய்த்திரியா" (மணி.27:129) என்பது முதலாகத் தடுமாற்ற மெய்தக் கூறுதல் சொல்தடுமாற்றம். தடுமாற்றமுற்று மொழிவோனுடன் சொல்லாடுவது பயனில் செயலாதலின், "தொடர்ச்சியை விட்டு" என்றார். நிகண்டவாதி, நிக்கந்தவாதி யென்றும், நிர்க்கிரந்தவாதியென்றும் நிர்க்கிரண்டவாதி யென்றும் கூறப்படுவன். நிக்கிரண்டம் - உடையில்லாமை; இந்நிகண்டவாதியர் சைனருள் ஒருவகையினரான திகம்பர ரென்றும், அருகரென்றும், சமணரென்றும், கூறுப. புகழும்: செய்வினை வாய்பாட்டில் வந்த செயப்பாட்டுவினை. விளங்கக் கூறாத வழி மெய்ம்மை தோன்றாதாதலால், "மெய்ப்பட விளம்பு" என்றாள். விளம்பலுறுவோன் என்பது பெயராய் "அது வீடாகும் என்றனன்" (மணி. 27 : 201) என்பதனோடு முடியுமாயினும், ஈண்டு உரை யினிது நடத்தற்கு வினைப்படுத்துப் பொருள் கூறப்பட்டது. நிகண்டவாதி 171-176. இந்திரர் தொழப்படும் இறைவன் எம் இறைவன் - இந்திரர்கள் பலராலும் வணங்கப்படும் அருக பரமேட்டி எங்கட்கு இறைவனாவான், தந்த நூற் பொருள் - அவனுரைத்த ஆகமத்தின் பொருள்கள், தன்மாத்திகாயமும், அதன்மாத்தி காயமும்-, காலாகாயம் - காலமும் ஆகாயமும், தீதில் சீவனும் - குற்றமில்லாத சீவனும், பரமாணு - பரமாணுக்களும்: நல்வினையும் தீவினையும், அவ்வினையாற் செய்வுறு பந்தமும் - அவ்விருவினைகளையும் செய்ய வுண்டாகும் கட்டும், வீடும் - வீடு பேறுமாக, இத்திறத்த - இப்பத்து வகையினவாம் எ - று. இந்திரர், பவணேந்திரர், வியந்தரேந்திரர், கற்பேந்திரர், மிருகேந்திரர் எனப் பலராதலின், "இந்திர" ரெனப் பொதுப்படக் கூறினர். 'எனக் கேட்டாங் கெடுத்துரைப்பான் இந்திரர்கள் தொழப்படுவான், தனக்காய தர்மமு மதர்மமுங் காலமும், கனப்பாட்டிற் காயமே யுயிருருவே புண்ணியமே, நினைக்குங்காற் பாவமே கட்டு வீடென நிறுத்தி" (நீல. 288) என்று பிறரும் இவ்வாறே தொகுத்தோதிக் காட்டுதல் காண்க. நீலகேசி யுரைகாரர், இவ்விந்திரரை, "ருஷீந்திர சுரேந்திர நரேந்திராதிகள்" (1. உரை) என்பது ஈண்டு நோக்கத்தக்கது. உயிர் அநாதிநித்திய மென்பது கொள்கையாதலின், "தீதில் சீவன்" என்றும் இருவினையும் கட்டுண்டற்குக் காரணமாதல்பற்றி, "அவ்வினையாற் செய்வுறுபந்தமும்" என்றும் கூறினான். 177-182. ஆன்ற பொருள் -ஆகமத்தே கூறப்பட்டமைந்த பொருள், தன் தன்மையதாயும் - தன்னியல்பாகிய தன்மையுடைய தாயும், தோன்று சார்வு ஒன்றின் தன்மையதாயும் - சார்பாகத் தோன்றிய பொருளொன்றின் தன்மையையுடையதாயும், ஓர் கணத்தின் கண்ணே நுனித்த குணத்து - ஒரு கணத்தையே கூர்ந்துணரப்படும் குணத்தால், அநித்தமும் நித்தமுமாகி நின்று - நிலையாமைத் தன்மையும் நிலைத்த தன்மையு முடையதாயும், தோற்றமும் நிலையும் கேடு மென்னும் - தோன்றுதல் நிலைபெறுதல் கெடுதல் எனப்படும், மாற்றரும் மூன்றும் ஆக்கலும் உரித்தாம் - மாற்றுதற்கரிய மூவகை யியல்பு முடைத்தாயு மிருத்தற்குரியதாம் எ - று. எனவே, தன் தன்மையும் சார்ந்த தன்மையும் ஆகிய தன்மை யுடைமையும், ஒரு கணத்தே நித்தமாயும் அநித்தமாயும் இருப்பதும், ஒரு கணத்திலேயே தோற்றம் நிலை கேடு மூன்றுமெய்துவதும் பொருட்கு இயல்பென்பதாம். பொருள்களின் நித்தாநித்தா வியல்பை அவற்றின் குணம் கொண்டே காண்பது பற்றி, "நுனித்த குணத்து" என்றார்; பிறரும், "நின்ற குணங்களினித்தியமென்றும் நிலையிலவாம், என்ற குணங்களினியதம் மென்றும் இயம்புதலால்" என்றும், "கேடிலவாய குணத்தினிலையும் கெடுங்குணத்தி, னீடிலவென்பதும் நேர்ந்து" (நீல. 397,80) என்றும் கூறுதல் காண்க. பொருள்களின் தோற்ற முதலிய மூன்றும் குணங்கருவியாகக் காணப்படுதல்பற்றி, "ஓர் கணத்து" என்பது தோற்ற முதலிய வற்றோடும் இயைந்து நின்றது. "மும்மைத் தன்மையதாம் திருவத்த தென்பொருள்" (நீல. உரை. மேற். 387) என்பது இம்மூன்றற்கும் ஆதரவு தருகிறது. 183-186. நிம்பம் முளைத்து நிகழ்தல் நித்தியம் - வேம்பின் முளை முளைத்து வேம்பாகவே தோன்றுவது நித்தியமாம்; நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம்-வேம்பினை நட்டு முளைத்த வழி அதன் விதை யழிவது அநித்தியமாம், பயற்றுத்தன்மை கெடாது-பயறு கும்மாயமாயவழியும் அதன் தன்மை கெடாமையின் நிலைபேறும், கும்மாயம் இயற்றி - கும்மாயத்தை யுண்டுபண்ணுதலின் தோற்றமும், அப்பயறு அழிதலும்-அப்பயறு அழிந்து போதலால் கேடும் கொள்க எ - று. எனவே, நித்தாநித்தங்கட்கு வேம்பும், தோற்றக் கேடுகட்குப் பயற்றது கும்மாயமும் எடுத்துக்காட்டாகக் கொள்க. இனி, நித்தா நித்தங்கட்கு நீலகேசியுரைகாரர், "கல்வியா னல்லனே காமாதி யாற்றீயன், செல்வத் துயர்ந்தான் குலத்தினிற் றாழ்ந்தனனாம், வல்லுவா னொன்றொன்று வல்லா னிதுவன்றோ, நில்லாமை நிற்ற னிலை" (378. உரை மேற்.) என்று காட்டுகின்றார். கும்மாய எடுத்துக்காட்டால் தோற்ற நிலை யிறுதி கூறும் இயல்பை, "கெட்ட திரட்சியுந் தோன்றிய சாந்தும் பொருளெனவும், பட்டன வப்பொருள் பையைகளே யென்னும் பான்மையினால், விட்ட திரள்வினுந் தோன்றிய சாந்தினும் வேற்றுமையாம், நட்டமுந் தோற்றமு நாட்டே னுருவிற்கு நானுமென்றாள்" (நீல.389) என்று நீலகேசியும் கூறுகிறது. கும்மாயம், பயற்றைக் குழையச் சமைத்த குழைவு. 186-188. ஏது-உலகு உயிர் கட்கு வீடு முதலியவற்றிற்கேதுவாகிய, தன்மாத்தி காயம்-தன்மாத்திகாயமாவது, தான் எங்கும் உளதாய்-தான் எல்லாப் பொருளிடத்தும் எப்போதும் உளதாகி, பொருள்களைப் பொருந்த நடத்தும் - வினை முதலிய பொருள்களை உயிர்கள் பொருந்தி யியங்குமாறு செய்யும் எ - று. எனவே, உயிர்கட்குக் கட்டுநீங்கி வீடுபெறுதற்குத் தருமாத்தி காயம் ஏதுவென்றும், இயங்கியற் பொருள்களின் இயக்கத்துக்கும் இதுவே ஏதுவென்றும் கூறியவாறாம். தருமாத்திகாயமும் மேல் வரும் அதருமாத்திகாயமும் இல்வழி, உலகும் உயிரும் கட்டும் வீடும் இலவாமென்பதை, "அளவதாம் பொருளுலகத்துக் கில்லையேல், அளவிலா காயத்திலணுக் களோடுயிர், அளவளா வின்றியே யகன்று போயபின், உளவல கட்டுவீடுலகத் தோடுமே" 89) என்றுமேருமந்தர புராணம் கூறுவது காண்க. 188-190. அதன்மாத்தி காயம் - அதன் மாத்திகாயமாவது, நித்தியமா அப்படித்தாகி - அழியாத அவ் வியல்பினையுடைய தாய், எப்பொருள்களையும் நிறுத்தல் இயற்றும் - எல்லாப் பொருள்களையும் நிற்கப் பண்ணும் எ - று. இதனால், பொருள்களின் இயக்கத்துக்குத் தன்மாத்திகாயம் ஏதுவாதல் போல, அதன்மாத்திகாயம் அவை நிற்றற்குக் காரணமாம் என்பது பெற்றாம். உலகில் உயிர்கள் கட்டுநீங்கி வீடுபெறுதற்கு அதன் மாத்தியும் ஏதுவாகுமென்றற்கு "நித்தியமா அப்படித்தாகி" என்றார். நீலகேசி யுரைகாரரும் "தருமாஸ்தியும் அதர்மாஸ்தியும் பக்ஷிக்குச் சிறகுங் காலும்போல ஜீவபுத்கலங்களுடைய கமனத் திற்கும் ஸ்திதிக்கும் அப்பிரேரக சாதனமென்றவா றாயிற்று" (நீல. 294. உரை) என்பர். 191-193. காலம் - காலமாவது, கணிகமென்னும் குறு நிகழ்ச்சியும் - கணிகமென்னும் குறுகிய காலவளவும், ஏலும் கற்பத்தின் நெடு நிகழ்ச்சியும் - பொருந்திய கற்பமென்னும் நீண்டகால வளவும், ஆக்கும் - உண்டாக்கும் எ - று. கணிகமாவது, க்ஷணிகம்; "க்ஷணிகமென்பது ஏழு செங்கழு நீரிதழை ஒரு குறட்டிலடுக்கிப் பலவானாயினா னொருவன் மிகவும் கூரியதோருளிவைத்துக் கூடமிட்டுப் புடைத்தால், ஆறாம் புரையற்று ஏழாம்புரையிற் செல்லுமளவாம். இனி, "கற்பமாவது, ஓசனையகன்றுயர்ந்ததோர் வஜ்ரமலை கர்ப்பிணி யுடுத்த பட்டாடை தோய்க்கப்பட்டுக் கையறத் தேய்ந்ததாம்" (நீல.297. உரை) என்பர். நிகழ்ச்சியெல்லாம்காலத்தின் மேலன வாதலின், "காலங் கணிகமெனுங் குறு நிகழ்ச்சி" யென்றார். 193-194. ஆகாயம் - ஆகாயமாவது, எல்லாப் பொருட்கும்-பொருள்கள் எல்லாவற்றிற்கும், பூக்கும் இடம் கொடுக்கும் - பொருந்துமாறு விரிந்து இடம் கொடுக்கும், புரிவிற்றாகும் - செயலையுடையதாகும் எ - று. உலகத்தில் உள்ள பொருள்களுள் உயர்வன உயர, விரிவன விரிய அவ்வவற்றிற்கேற்ப இடம் விரிந்து கொடுத்தல் பற்றி, "பூக்குமிடங் கொடுக்கும்" என்றார். இதனை, "உளவென்ற பொருட்கெலா மிடங் கொடுத்துடன், தளர்வின்றி நிற்ப தாகாயம்" (93) என்று மேருமந்தர புராணம் கூறுகிறது. "பரந்திடங் கொடுக்கும் விசும்பு" (மலைபடு. 558) என்று சான்றோரும் கூறுப. 195-196. சீவன் - சீவனாவது, உடம்போ டொத்துக் கூடி-உடம்போடு அதனளவும் கூடிப்பரந்து நின்று, தாவில் சுவை முதலிய புலன்களை நுகரும்-கெடாத சுவை முதலிய ஐவகைப் புலன்களையும் நுகரும் எ - று. உயிர்தான் நின்ற உடம்பு முழுதும் பரவிநிற்பதுபற்றி "உடம்போ டொத்துக்கூடி" என்றார். "குடங்கையில் விளக்கெனக் கொண்ட கொண்டதன், உடம்பின தளவுமாம்" (மேரு மந். 81) என்று பிறரும் கூறுப. சுவை முதலிய புலன்களை நுகருமாற்றால் செய்யும் வினைகட்கு வினை முதலாகும் உயிர், மீட்டும் அவ்வினைப் பயனை நுகர்வது குறித்துப் பிறக்கும் மறுபிறப்பினும் வினை முதலாகி அப்புலன்களை நுகர்வதால், அப்புலன்கள் கெடாது தொடர்ந்து நிற்பதுபற்றி, "தாவில் சுவை" யென்றார். "பொறி களாற் புலத்தெழு போகம் துய்ப்புழி, இறுதியவினைகளுக் கிறைவனாயபின், பிறிதொரு பிறப்பினவ் வினைப்ப யத்தினுக், கிறைவனா மிதுவுயி ரியற்கை வண்ணமே (மேரு மந். 82) என்பதனா லறிக. 197-201. புற்கலம் ஓர் அணு-புற்கலமாவது பரமாணுவும், புறவுரு வாகும் - பொருட்குப் புறவடிவமாகும், சீர் சால் நல்வினை தீவினையவை செயும் - சிறப்புப் பொருந்திய நல்வினையும் அஃதில்லாத தீவினையுமாகிய அவ்விரண்டும் பயக்கும், வருவழி இரண்டையு மாற்றி-இன்பமும் துன்பமும் வரும் வழியை யடைத்துப் போக்கி, முன்னே செய் அருவினைப் பயன்-முன்பே செய்து கொண்ட அரிய பழவினைப் பயன் களை, அனுபவித்தறுத்திடுதல் - ஒருங்கே நுகர்ந்து கழிப்ப தாகிய, அது வீடாகும்-அதுவே வீடுபேறாகும், என்றனன்-என்று நிகண்டவாதி கூறினான் எ - று. பொருளின் புறத்தவாகிய நாற்றம் சுவை ஊறு வண்ணம் முதலிய வியல்புகளை யுடைமைபற்றி, "புறவுருவாகும்" என்றான்; உயிர்களை யுலகவாழ்வில் ஈடுபடுத்தித் துன்ப மெய்துவிப்பதும் அணுவாதலும் இதற்கு இயல்பாதலை, "புற்கலந்தான், மாற்றிடை யுயிரைப்பற்றி வினை முதலாகித் துன்பம், ஆற்றவும் செய்து கந்த மணுவுமாய் நிற்ப தாமே' (மேரு மந். 83) என்று பிறரும் கூறுதல் காண்க. நல்வினை இன்பம் பயக்கும் சிறப்புடையதாதலின், "சீர்சால் நல்வினை" யென்றும், அச்சிறப்பில்லாமையின், தீவினையை வாளாதும் கூறினான். வினைகளைப் பற்றிப் "பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதைக்"' கண்கூறுதலாலும், பந்தத்தின் இயல்பை, "அவ்வினையாற் செய்வுறுபந்தமும்" (மணி, 27; 175-6) என்றமையாலும், அவற்றைக் கூறாது, வீட்டினைமட்டில் ஈண்டுக் கூறினார். வரும் வழியிரண்டையு மடைத்தலாவது," வருகின்ற கர்மங்களைக் குப்தி சமிதி முதலாயினவற்றால் அடைத்து" விடுதல். பழவினை நிற்க வீடுபெறல் கூடாமையின், அவ் வினைப் பயனை முறையே நுகர்ந்து கழிப்பதின்றி, ஒருங்கே நுகர்ந்து கெடுத்தலையே "அனுபவித்தறுத்திடுதல்" என்றான். பிறரும் இக் கருத்தே கொண்டு, "வரும்பாவமெதிர்காத்து மன்னுந்தம் பழவினையும், ஒருங்காக வுதிர்த்தக்கால் உயிர்த்தூய்மை வீடென்றாள்" (நீல 312) என்று கூறினர். சாங்கியவாதி 201-206. அவன் பின்-அந்த நிகண்டவாதி நீங்கிய பின்பு; இது சாங்கிய மதம் என்று எடுத்துரைப்போன்-யான் கூறும் இது சாங்கிய மதக் கொள்கையாமென்று சாங்கியவாதியெடுத்துச் சொல்லுவானாய்; தனை அறிவரிதாய்-தன்னை இத்தன்மைத் தென அறிதற்கரிதாய்; தான் முக்குணமாய் - தானே மூவகைக் குணமுமாய்; மன நிகழ்வின்றி - மனத்தின் நினைவுக்கிட மாகாது; மாண்பமை பொது வாய் - மாட்சிமை பொருந்திய பொது வியல்பினையுடையதாய்; எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடமெனச் சொல்லுதல்-எவ்வகைப் பொருளும் தோன்றுதற்கு இடமென்று சொல்லப்படுவது ; மூலப் பகுதி - மூலப் பகுதியாகும் (என்றான்) எ - று. இன்ன தன்மைத்தென யாவராலும் அறியப்படாமை பற்றி மூலப் பகுதியை, "தனையறிவரிதாய்" என்றும், முக்குணங்களின் விளங்கித் தோன்றா நிலையே மூலப் பகுதியின் இயல்பு என்றற்கு, "தான் முக்குணமாய்" என்றும், மனத்திற்கு விளங்காததாதலின், "மனநிகழ்வின்றி" என்றும், எவ்வகைப் பொருளும் தோன்று வதற்குத் தான் மூலமாவதன்றித் தனக்கொரு மூலமில்லாத தாதலின், "மாண்பமை பொதுவாய்" என்றும் கூறினான். "நின்று பரந்தரு வாய்ப்பொறியேதுமிக், கொன்று கிரிகையின் றப்பியத் தம்மது" (நீல. 737) என்று பிறரும் ஓதுதல் காண்க. மனநினைவுக் ககப்பட்ட வழி மூலப்பகுதிவிளங்கி விடுமாதலின், மனநிகழ்வில தாயிற்றென வறிக. முக்குணங்களும் விளக்கமின்றி யொடுங்கி யிருக்கும் நிலையைச் சாம்யாவத்தை யென்று சாங்கிய பிரவசன பாடிய முடையார் (வீ: 61) கூறுவர். "தெற்றென வில்லது" (நீல. 735) என்று சமயதிவாகரர் எடுத்துக் கூறுகின்றார். 206-226. சித்தத்து - சித்தமாகிய மூலப்பகுதியினின்று ; மான் என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு-மானென்று சொல்லப் பட்ட புத்திதத்துவம் வெளிப்படும்; அதன்கண் ஆகாயம் வெளிப்பட்டு-அந்தப் புத்தியினின்றும் ஆகாயம் வெளிப் படும்; அதன் கண் வாயு வெளிப்பட்டு - அந்த ஆகாயத்தி லிருந்து வாயு வெளிப்படும் ; அதன்கண் அங்கியானது வெளிப்பட்டு-அவ் வாயுவினின்று தீயானது வெளிப்படும்; அதன்கண் அப்பின் தன்மை வெளிப்பட்டு - அத் தீயிலிருந்து நீர் வெளிப்படும்; அதின் மண் வெளிப்பட்டு-அந்நீரிலிருந்து நிலம் வெளிப்படும்; அவற்றின் கூட்டத்தின் மனம் வெளிப் பட்டு - அந்த மண்முதலியவற்றின் கூட்டத்திலிருந்து மனம் வெளிப்படும்; ஆர்ப்புறு மனத்து ஆங்கார விகாரமும் - ஆரவாரம் பொருந்திய அந்த மனதினது ஆங்காரமாகிய விகாரமும், ஆகாயத்திற் செவியொலி விகாரமும் - ஆகாயத் தினுடைய செவிக்குப் புலனாகும் ஒலியாகிய விகாரமும்; வாயுவில் தொக்கும் ஊறு எனும் விகாரமும்-வாயுவினது மெய்க்குப் புலனாகும் ஊறாகிய விகாரமும்; அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும்-நெருப்பினுடைய கண்ணுக்குப் புலனாகும்-ஒளியாகிய விகாரமும்; அப்பில் வாய் தங்கிய சுவையெனும் விகாரமும் - நீரினது வாய்க்குப் புலனாகத் தங்கிய சுவையாகிய விகாரமும்; நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்-நிலத்தினுடைய மூக்குக்குப் புலனாகும் நாற்ற மாகிய விகாரமும் என்று; சொல்லப்பட்ட இவற்றின்-சொல்லப்பட்ட இவற்றுள்; தொக்கு விகாரமாய்-மெய்யினது விகாரமாய்; வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என ஆக்கிய இவை வெளிப்பட்டு-வாய், கால், கை, பாயுரு, உபத்தம் என்று உண்டாகிய இவை வெளிப்படும்; இங்கு அறைந்த பூத விகாரத்தால்-இங்கே ஆகாய முதல் நில மீறாகச் சொல்லப் பட்ட பூதங்களின் கலப்பால்; மலை மரம் முதல் ஓதிய வெளிப்பட்டு - மலையும் மரமும் முதலியவாகச் சொல்லப் பட்டன வெல்லாம் வெளிப்பட்டு; உலகாய் நிகழ்ந்து - உலகமாய்த் தோன்றி நிலவி ; வந்த வழியே இவை சென்றடங்கி - பின்பு தாம் தோன்றிய முறையே சென்று ஒன்றினுள் ஒன்றாயொடுங்கி ; அந்தமில் பிரளயமாய் இறும் அளவும்-ஒழியாத பிரளயமாய் ஒடுங்குங்காறும்; ஒன்றாய் - ஒன்றாகி; எங்கும் பரந்து நித்தியமாம் - எவ்விடத்தும் பரந்து நித்தியப் பொருளாம் எ - று. எனவே, மூலப்பகுதியிலிருந்து மானென்னும்புத்தி தோன்றுமென்றும், அப் புத்தியிலிருந்து ஆகாயமும் அதிலிருந்து ஒன்றன்பின் னொன்றாய்ப் பரம்பரையாய் ஏனைப் பூதங்களும் தோன்றுமென்றும், அவற்றின் கூட்டத்தால் மனமும் அதிலிருந்து ஆங்காரமும் தோன்றுமென்றும், ஆகாய முதலிய பூதங்களிலிருந்து முறையே செவி முதலிய பொறிகளும் ஒலி முதலிய புலன்களும் தோன்றுமென்றும், மெய்யாகிய பொறியின் விகாரமாய் வாக்கு முதலிய கன்மேந்திரியங்களும், பூதங்களின் விகாரமாய் மலை மரம் முதலியனவும் தோன்றி யுலகாய் நிலவுமென்றும், இவ்வுலகம் முடிவில் தோன்றிய முறையே ஒடுங்குமென்றும், அம்மூலப்பகுதி ஒன்றாய் வியாபியாய் நித்தமாய் உள்ளதென்றும் கூறியவாறாம். இம்முறை பரமார்த்த ரென்னும் சீன நாட்டவர் எழுதிய சாங்கியக் கொள்கையுடன் பெரிதும் ஒத்திருப்பது ஆராயத்தக்கது. இனி இச்சாங்கிய நூற்கொள்கையைக் கூறலுற்ற நீலகேசியுரைகாரர், "அந்தப் பிரகிருதியிற் பிறந்த மகானில் அகங்காரமாம்; அந்த அகங்கார தத்துவத்து மனசும் பஞ்சதன்மாத்திரையும், ஞானேந்திரிய மைந்தும், கன்மேந்திரிய மைந்துமாகப் பதினாறும் பிறக்கும் ; பஞ்ச தன்மாத்திரையிற் பஞ்சபூதம் பிறக்கும்" (நீல. 737. உரை) என்பர் ; இனிப் பரிமேலழகர், மூலப்பகுதியின்கண் மானும் அதன்கண் ஆங்காரமும் அதன் கண் தன்மாத்திரையும் தோன்று மென்று கூறி, "அவற்றின்கண் தோன்றிய மனமும் ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் பூதங்களுமாகிய பதினாறும்" விகுதியாகு மென்றும், மானும் ஆங்காரமும் தன்மாத்திரை யைந்துமாகிய ஏழும் விகுதியும் பகுதியுமா மெனவும் கூறுவர். இருவர் கூற்றினும் வேறுபாடுணர்ந்து கொள்க. இனி இச்சாங்கிய நூல்களை ஆராய்ந்துரைக்கும் அறிஞர்கள், மூலப்பகுதியிலிருந்து புத்தி யென்னும் மானும், அதிலிருந்து ஆங்காரமும், அதன்கண் மனமும் ஞானேந்திரியமும் கன்மேந்திரியமும் தன்மாத்திரையும் தோன்றுமென்றும், தன்மாத்திரையிலிருந்து ஐம்பெரும் பூதமும் தோன்றுமென்றும் கூறுகின்றனர். இதுவே நீலகேசி யுரைகார ராலும் கூறப்படுவது. வாசஸ்பதி யென்பாரும் இவ்வாறே கூறினர்; விஞ்ஞானபிஷு என்பார் ஆங்காரமும் தன்மாத்திரைகளும் மானிலிருந்தே தோன்றுகின்றன என்பர். உரையினிது விளங்குதற்பொருட்டு, வெளிப்பட்டென நின்ற எச்சம் முற்றாகப் பொருள் கூறப்பட்டது. 227-232. அறிதற்கு எளிதாய் - எளிதில் அறியப்படுவதாய்; முக்குணமன்றி - முக்குணங்களு மல்லாததாய் ; பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி-மூலப் பகுதியோடு ஒருவகைப் பொதுத் தன்மையுமின்றி; எப்பொருளும் தோன்றுதற்கு இடமன்றி-எவ்வகையான பொருளும் தோன்றுதற் கிடமல்லாததாய்; அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய் - அப்பொருள்வகை யெல்லாவற்றையும் அறிந்து கோடற்குரிய உணர்வாய் ; ஒன்றாய் - ஏகமாய்; எங்கும் பரந்து நித்தியமாய் நின்று - எவ்விடத்தும் வியாபித்து நிற்பதும் நித்தியமானதுமாய் நின்று; உளவுணர்வாய்-உள்ளத்துணர்வு வடிவாய் ; புருடன் நிகழ்தரும் - புருடதத்துவம் நிலவும் எ -று. உடற் கூறுகளைப் பகுத்து நோக்குமிடத்து உடலின் வேறாய் உணர்வு வடிவாய்ப் புருடனதுண்மை எளிதில் உணரப்படுமாறு பற்றி, "அறிதற் கெளிதாய்" என்றும், குணங்கள் மூலப்பகுதியின் இயைபுடையவாதலின், அதனின் வேறாய புருடனை, "முக்குண மன்றி" என்றும், மூலப்பகுதி அசேதனமும் தான் சேதனமு மாதலின், அதற்கும் தனக்கும் பொதுத் தன்மை ஏதுமின்மை தோன்ற, "பொதுவுமன்றி" யென்றும், தானொன்றிற் றோன்றுவதும் தன்னினொன்று தோன்றுவது மின்றி இருத்தலால், "எப்பொருளுந் தோன்றுதற்கிடமின்றி" யென்றும், உணருந் தன்மைத் தென்பது தோன்ற, "அப்பொருளெல்லா மறிந்திடற்குணர்வாய்" என்றும், அவயவப் பகுப்பில்ல தென்றற்கு, "ஒன்றாய்" என்றும், எங்கும் பரந்து நில்லாவழி உணர்வு செல்லாமையின், "எங்கும் பரந்" தென்றும், உடம்பழியினும் தான் அழியாமையின் "நித்தியமாய்" என்றும், உள்ளத்தோடு கூடாவழிச் செயலறுதலின் "உளவுணர்வாய்" என்றும் புருடனைச் சிறப்பித்துக் கூறினார். இவ்வாறே சாங்கிய காரிகையும் சாங்கிய பிரவசன பாடியமும் விளக்கிக் கூறு கின்றன. இனி, நீலகேசியுடையார், "எத்திறத் தின்னும்செய்யான் குணமொன்றிலன், தத்துவ னின்பனபேதனலேபகன், நித்திய னெங்கு முளனெடுங் காட்சியன், துத்த னுடையனென் றோன்றலு மென்றான்: (736) என்று கூறுகின்றார். இவர் கூறுவனவற்றுள் சில சாங்கியநூற் கருத்துக்கு மாறாகக் கூறப்பட்டுள்ளன; அவற்றின் இயல்பை விரிந்த நூல்களுட் கண்டுகொள்க. 233-240. புலமார் பொருள்கள் இருபத்தைந்துள-புருடனால் அறியப்படும் பொருள்கள் இருபத்தைந்தாகவுள்ளன; நிலம் நீர் தீ வளி ஆகாயமே - நிலமும் நீரும் தீயும் காற்றும் ஆகாயமும் என்ற ஐந்தும்; மெய் வாய் கண் மூக்குச் செவி தாமே-மெய்யும் வாயும் கண்ணும் மூக்கும் செவியுமென்ற ஐந்தும்; உறு சுவை யொளி யூறோசை நாற்றம்மே - மெய் முதலிய பொறிகளிலே பொருந்திய சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்ற ஐந்தும் ; வாக்குப்பாணி பாதம் பாயுரு உபத்தம் - வாக்கும் கையும் காலும் பாயுருவும் உபத்தமும் என்ற ஐந்தும்;ஆக்கும் மனோ புத்தி ஆங்கார சித்தம்-இவற்றை ஆக்குவனவாகிய மனமும் மானும் ஆங்காரமும் மூலப் பகுதியுமாகிய நான்கும்; உயிரெனும் ஆன்மா ஒன்றொடுமாம்-உயிரெனப்படும் புருடனென்ற ஒன்றொடுகூட இருபத்தைந் தாம்; எனச் செயிரறச் செப்பிய திறமும் கேட்டு -என்று குற்றமறச் சொல்லியவற்றைக் கேட்டு; சாங்கிய சமயம், பல்வேறு தத்துவப் பொருள்களை ஆசங்கித்து ஆராய்வதுபற்றி, இப்பெயர் பெறுவதாயிற்றென்பர்; வேறு சிலர் இதனை முதன்முதலாகக் கண்டவர் சங்க ரென்றும் அவர் பெயரால் இந்நெறிக்குச் சாங்கியமெனப் பெயரெய்துவதாயிற் றென்றும் கூறுவர்; ஆயினும் இதனை நிலை நாட்டின முதலாசிரியர் கபிலர் என்பதே பெரு வழக்கு. சாங்கிய பிரவசன சூத்திர மென்னும் நூல் இக் கபிலரால் செய்யப் பட்டதென்ப. இஃதொழிய, ஈசுரகிருஷ்ணரெழுதிய சாங்கிய காரிகையே பெரிதும் பலராலும் மேற்கொள்ளப்பட்டுளது. சாங்கிய பிரவசன சூத்திரம் முதன்மூன்று அதிகாரங்களில் சாங்கியநூற் கருத்துக்களையும், நான்காவதில் திருட்டாந் தங்களையும் ஐந்தாவதில் பரபக்க மறுதலையையும், ஆறாவதாகிய இறுதி யதிகாரத்தில் ஏனையவற்றுட் கூறிய வற்றைத் தொகுத்தும் கூறுகிறது. அம்முறையே இம் மணிமேகலையும் முதற்கண் மூலப்பகுதியையும், பின் அதனோடியைபுடைய தத்துவங்களையும், அவற்றிற்குப் பிறகு புருடனையும் கூறி, முடிவில் அவற்றின் தொகை விரிகளைத் தொகுத்துக்கூறுவது குறிக்கத்தக்கது. சருவதரிசன சங்கிரக முரைத்த மாதவர் இச் சாங்கிய தரிசனத்தைக் கூறுதற்குச் சாங்கிய காரிகையையே பெரிதெடுத்துப் பேசுவதால், சிலர் சாங்கிய பிரவசன சூத்திரம் பதினான்காம் நூற்றாண்டிற்குரியதாகக் கூறுகின்றனர்; சிலர் அவ்வாறு கொள்ளாது, சாங்கிய காரிகைக்கு முற்பட்டதென்றும், மாதவர்காலத்தே பெருவழக்கிலிருந்தது பற்றிக் காரிகையே அவராற் கொள்ளப்பட்ட தென்றும் கூறுவர். மானைப் புத்தி யென்றும் மூலப்பகுதியைச் சித்தமென்றும் கூறுவது சாங்கிய நூல் வழக்காதல்பற்றி, அவ்விரண்டினையும் முறையேபுத்தி யென்றும் சித்தமென்றும் கூறினார்; முன்னரும், "சித்தத்து மானென்றுரைத்த புத்தி வெளிப்பட்டு" (மணி. 27: 206-7) என்பது காண்க. புருடன், உயிர், ஆன்மா என்பன ஒரு பொருட் கிளவி; ஆயினும் உயிரது கேவல நிலை புருடன் என்றும், தத்துவத்தொடர்புற்று நிற்கும் நிலை சீவன் என்றும் சாங்கிய நூல்கள் கூறுகின்றன. ஆன்மா வென்பது உபநிடத வழக்கு. உயிரென்பது தமிழ்வழக்கு. ஈண்டுக்கூறியசாங்கிய நெறிக்குரிய கருத்துக்களெல்லாம், அந்நெறி வழங்கும் நூற்பொருளைத் தெளியக் கொண்டு கூறியன வென்றற்கு, "செயிரறச் செப்பியதிறம்" என்றார். "கேட்டு என்றதனால், அக்கேள்வியால் மணிமேகலை யமையாளாயினமை பெறப்பட்டது. இயைபுடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. வைசேடிகவாதி 241-244. வைசேடிக - ஆங்குப்போந்த வைசேடிகவாதியைக் கண்டு வைசேடிகனே; நின்வழக்குரை என்ன - உன்னுடைய நூல்வழக்கினைக் கூறுக என்று மணிமேகலை கேட்க; பொய்தீர் பொருளும் - கெடாத பொருளென்றும்; குணமும் - குணமென்றும்; கருமம் - தொழிலென்றும்; சாமானியமும்-பொதுவென்றும்; விசேடமும் - சிறப்பென்றும்; கூட்டமும் ஆம் ஆறுகூறாம் - சமவாயமென்றும் பொருள்கள் அறுவகைப் படும் எ - று. பொருளைத் திரவிய மென்றும், பொதுவைச் சாமானிய மென்றும், சிறப்பை விசேடமென்றும், கூட்டத்தைச் சமவாய மென்றும் வைசேடிகர் கூறுவர். பிற்கால வைசேடிகர் இவ்வாற னோடு இன்மை கூறும் அபாவத்தைக் கூட்டிப் பொருள் ஏழென் பாராயினர். இவர்கள் கூட்டத்தை அகக் கூட்டம் புறக்கூட்டமெனப் பகுத்து அவற்றைமுறையே சமவாயமென்றும் சம்யோகமென்றும் கூறுப. இவற்றின் விரிவைப் பதார்த்த தரும சங்கிரகம், சத்த பதார்த்தி முதலிய வடநூல்களுட் காண்க. 244-246. அதிற் பொருள் என்பது-அப்பொருட் கூறுபாட்டில் ஒன்றாகிய பொருளெனப்படுவது; குணமும் தொழிலும் உடைத்தாய்-குணஞ் செயல்களையுடையதாய்; எத்தொகைப் பொருளுக்கும் ஏதுவாம் - தொகுதிப் பொருள்வகை யெல்லா வற்றிற்கும் காரணமாம் எ - று. குணஞ்செயல்களின் வேறாய் அவற்றை யவாவி நிற்பதும் எவ்வகைத் தொகுதிப் பொருட்கும் காரணமாய் நிற்பதும் பொருளென்றவாறு. இவற்றின் இயல்பை நித்தியம், அநாசிருதம், அந்தியவிசேடமென மூன்று வகையாகப் பகுத்துக் கூறுவது முண்டு. முதலும் சார்புமெனக் கொண்டு, முதற்பொருள் நித்த மெனவும், சார்பெல்லாம் அழிதன்மாலைய வென்றும் கூறுப. சார்பு, அவயவி திரவியம் எனப்படும். 246-251. அப்பொருள் ஒன்பான் - அப்பொருள்கள் ஒன்பது வகைப்படும்; ஞாலம் நீர் தீ வளி ஆகாயம் திசை காலம் ஆன்மா மனம் - (அவை) நிலமும் நீரும் தீயும் காற்றும் விண்ணும் திசையும் காலமும் ஆன்மாவும் மனமும் ஆம்; இவற்றுள் -இவ்வொன்பதனுள்; நிலம் ஒலி ஊறு நிறம் சுவை நாற்றமொடு ஐந்தும் பயில்குண முடைத்து - நிலமென்பது ஓசையும் பரிசமும் நிறமும் சுவையும் மணமு மென்று பொருந்தும் ஐந்து குணங்களையு முடையது; நின்ற நான்கும் - ஏனை நீரும் தீயும் காற்றும் விண்ணுமாகிய நான்கும்; அவை ஒரோ குணம் குறைவுடைய - அவ்வொலி முதலிய குணமைந்தனுள் முறையே ஒவ்வொரு குணம் குறைவாக வுள்ளனவாகும் எ - று. என்றது, நீர், மண மொழிந்த நான்கும், தீ, சுவையொழித்த மூன்றும், காற்று, நிறமொழிந்த இரண்டும், விண், பரிசமொழிந்த ஒன்றுமாகவுடையன என்பதாம். ஈண்டுக் காலம், திசை, ஆன்மா, மனம் என்ற நான்கின் இயல்பு காணப்படவில்லை. ஆன்மாவும் மனமும் ஏனைப் பூதங்களைப் போலத் தொகுதிப்பொருள் என்றும், இவற்றுள் ஆன்மா ஒழிந்த ஏனையெட்டும் சேய்மை யண்மை செயற்படல் முதலிய வியல்பினவென்றும், மனமும் ஆன்மாவும் ஆகாயமும் திசையும் காலமும் அணுகாரிய மென்றும், காரணமாகிய அணுக்கள் எளிதிற் புலப்படுவன வல்லவென்றும், மனம், அணுவடிவிற் றாயினும் தன்னினின்றும் ஒன்றுந் தோன்றுதற் கேதுவாகாதென்றும், ஆகாயம், வியாபியாயினும் ஒலியைத் தன்னின்றும் தோற்றுவிக்குமென்றும் கூறுவர். மேலும், ஆன்மா ஒன்றல்ல பலவென்றும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனி சிறப்பு (விசேடம்) உண்டென்றும், இஃது உணருந்தன்மைத்தாயினும் மனத்தோடும் உடம்போடும் கூடினாலன்றி ஒன்றையு முணர மாட்டதென்றும், ஒவ்வோரான்மாவும் மனத்தோடு கூடியே பல்வகைப் பிறப்புக்களையு மெடுக்குமென்றும், வடக்கு கிழக்கு முதலியவாகக் கூறப்படும் இடவகைக் கேதுவாகியது திசை யென்றும், காலம் நித்தியமென்றும் "அதீதாதி வியவகாரவேது" (தருக் சங். 15) வென்றும்கூறுகின்றனர். 252-256. ஓசை ஊறு நிறம் நாற்றம் சுவை - ஓசையும் பரிசும் நிறமும் நாற்றமும் சுவையும் என்பனவும்; மாசில் பெருமை சிறுமை வன்மை மென்மை சீர்மை நொய்மை வடிவம் என்னும் நீர்மை- குற்றமில்லாத பெருமையும் சிறுமையும் வன்மையும் மென்மையும் சீர்மையும் நொய்ம்மையும் வடிவமும் எனப்படும் பண்புகளும்; பக்கம் முதல் அநேகம் - இடம் வலம் என்ற பக்கம் மேன்மை கீழ்மை முன்மை பின்மை முதலிய பலவும்; கண்ணிய பொருளின் குணங்களாகும்-சொல்லப்பட்ட பொருள்களின் குணங்களாகும் எ - று. ஓசை முதலியனவும் பெருமை முதலியனவும் பக்கம் முதலியனவும் குணமென ஒன்றாயடங்குமாயினும், சிற்சில வேறுபாடுடைமை பற்றி, இவற்றைப் பகுத்து "மாசில்" என்றும், "என்னும் நீர்மை" யென்றும் சிறப்பித்துரைத்தார். இனி, குணமாவது, "பிறிதொரு பொருளைப்பற்றி நின்று, தான் பிறிதொரு குணத்தை யேலாது, தன்னையுடைய குணப்பொருட்கு ஏதுவாதலும், அதன் யோக விபாகங்களால் திரிதலுமில்லது," என்று கணாதர் (வை. சூ. வீ. 1.16) கூறுகின்றார். இக்கூறிய குணங்களுள் ஓசையாவது ஆகாயத்தின் குணம். ஊறென்பது நிலம் நீர் காற்று என்ற மூன்றன் குணமாம்; இது உடலின் தோலால் உணரப்படும். நிறமென்பது, நிலம் நீர் ஒளியென்ற மூன்றன் குணமாகும்; இந்நிறம் வெண்மை நீலம் பொன்மை செம்மை பசுமை கபிலம் சித்திரம் என எழுவகைப் படும். நாற்றமாவது, நிலத்தின் குணமாய் மூக்கால் உற்றறியப் படுவதாம் ; இது நறு நாற்றம் தீ நாற்றமென விருவகைத்து. சுவை யென்பது, நிலம் நீர் என்ற இரண்டின் குணமாய் நாவால் உணரப்படுவதாம். குண வகைகளுள் ஓசையொழித்த நான்குடன் "சங்கியை, பரிமாணம், பிரதத்துவம், சம்யோகம், விபாகம், பரத்துவம், அபரத்துவம், புத்தி, சுகம், துக்கம், இச்சை, துவேஷம், பிரயத்னம்" என்ற பதின்மூன்றையுங் கூட்டிப் பதினேழாக வைசேடிக சூத்திரம் (வீ. 1. 6) கூறுகிறது; பதார்த்த தர்ம சங்கிரகம் என்னும் நூல், அப்பதினேழுடன், "குருத்வம், திரவத்வம், சிநேகம், தருமம், அதருமம், சத்தம், சம்ஸ்காரம்' (பக். 10) என்ற ஏழையுங் கூட்டி இருபத்து நான்காகக் கூறும். இவற்றிற்குப் பிற்போந்த தருக்கசங்கிரக தீபிகை முதலிய நூல்கள் மேற்கூறிய குணங்கட்கு மறுதலையாயவற்றையும் கூட்டியுரைப்பனவாயின. 257-258. பொருளும் குணமும்-பொருளும் குணமும் என்ற இரண்டும்; கருமம் இயற்றற்குரிய-செயல் நிகழ்த்தற்கு உரியவாம் எ - று. கருமமாவது ஒரு குணமும் பற்றாது பொருளின்கட் டங்கி அதன் புணர்வு பிரிவுகளின் காரியமாய் நிகழ்வதாம் (வை. சூ. வீ7) என்றும், ஆகாயமும் காலமும் திசையும் ஆன்மாவும் பொருளெனப் பட்டனவாயினும் அருவமாதலின் கருமர் இயற்றற்குரிய வல்ல (வை. சூ. ஸ். 2. 21) என்றும் கூறுவர். 258-260. முதற் பொதுத்தான் உண்மை தரும் - முதன்மையான பொதுவாவது பொருள்களின் உண்மைத் தன்மையை யுணர்த்துவதாம்; போதலும் நிற்றலும் பொதுக்குண மாதலின் - போவதும் வருவதும் எல்லாப் பொருட்கும் முதன்மையில்லாத பொதுக் குணமாதல்போல; சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்னை இறத்தலும் இருத்தலும் அவ்வப் பொருள் முதன்மையில்லாத பொதுத்தன்மையாம் எ - று. எனவே, பொதுமை முதற்பொது என்றும் பொதுவென்றும் இருதிறப் படுமென்றும், உள்ளதாந்தன்மை எல்லாப் பொருட்கும் முதற் பொதுத் தன்மை யென்றும், சிலவற்றிற்கே போக்குவரவு பொதுவாதல்போல இறத்தலும் இருத்தலும் முதன்மையில்லாத பொதுத் தன்னை யென்றும் கூறியவாறு. முதற்பொதுவினைப் பரசாமானிய மென்றும், பொதுவினை அபரசாமானிய மென்றும் கூறுப. மரங்கட்குள்ள மரமாந் தன்னையும் குடங்கட்குள்ள குடமாந் தன்னையும் அபரசாமானியம்; மரங்கட்கும் குடங்கட்கு முள்ளஉள்ளதாந் தன்மை பரசாமானியம் என வேறுபடுத் தறியப்படும். சத்தபதார்த்தி யென்னும் நூல் மூன்றாகப் பகுத்துப் பரம் அபரம் பராபரம் என்று கூறுகிறது. இது பிற்கால வழக்கு. பரசாமானியத்தில் பொருள்களையும் அபராசாமானி யத்தில் குணஞ் செயல்களையும் அடக்கிக் கூறுவது முண்டு. குணத்துக்குக் குணமில்லாமை போலப் பொதுமைக்குப் பொதுமையில்லை. 261. ஒன்று அணு - விசேடமாவது ஒன்றாகி அணுவாகும் எ - று எனவே, பல பொருட்கும் பொதுவாகிய தன்மையன்றி ஒன்றிற்கே யுள்ள சிறப்புத் தன்மை விசேடமாம் என்பதாம். அணு வொவ்வொன்றும் விசேடமாம் என்றற்கு, "ஒன்றணு" என்றார். "சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல்" என்பதனால் அணுவைக் கூறினாரேனும், காலமும் இடமும் ஆகாசமும் ஆன்மாவும் மனமும் விசேடப் பொருளாகவே கொள்ளப்படும். அணுக்கள் அளப்பிலவாதலின், விசேடப் பொருள்களும் அளப்பில என்று சந்தபதார்த்தி யுடையார் கூறுகின்றார். 261-263. கூட்டம்-சமவாயமாவது; குணமும் குணியுமென்று ஒன்றிய-குணமும் குணியுமாய் ஒன்றிய ஒற்றுமையா மென்று, வாதியும் உரைத்தனன் - வைசேடிக வாதியும்கூறி முடித் தானாக; உடனே பூதவாதியை நீ புகல் என்ன - உடனே ஆங்குப் போந்த பூதவாதியைக் கண்டு நின்வாதத்தை நீ சொல்லுக வென்று மணிமேகலை கேட்க எ - று. என்றது, குணத்துக்கும் குணிக்குமுள்ள இயைபே சமவாய மென்பது என்றதாம். கணாதர் காரணத்துக்குங் காரியத்துக்கு முள்ள தற்கிழ மைத் தொடர்பு சமவாயம் என்பர்; அவருக்குப் பிற்போந்த வைசேடிகர் பழத்திற் சுவையும் மணியிலொளியும் போல இடமும் இடத்து நிகழ் பொருளுமாகிய தற்கிழமையியைபு சமவாயம் என்றும் வேறுபிறர் அவர்களை மறுத்தும் கூறுவர். பூதவாதி 264-268. தாதகிப் பூவும் கட்டியும் இட்டு-ஆத்திப் பூவையும் கருப்புக் கட்டியையும் பெய்து, மற்றும் கூட்ட-வேறுபிற பொருள்களையும் கலந்தவழி. மதுக்களி பிறந்தாங்கு-கள்ளினிடத்தே களிப்புண் டானாற்போல, உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்-பொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும், அவ்வுணர்வு- அவ்வாறு தோன்றிய உணர்வு தானும், அவ்வப் பூதத்தழிவுகளின்- அவ்வப் பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்குமிடத்து, வெவ்வேறு பிரியும்-வேறு வேறாகப் பிரிந்து, பறைஓசையிற் கெடும் -பறை யிடத்தெழுந்த ஓசையானது சென்று சென்று தேய்ந்து கெடுவது போலத் தேய்ந்து தேய்ந்து தத்தம் முதலொடு ஒன்றிவிடும் எ - று. தாதகிப்பூ-ஆத்திப்பூ. கட்டி-கரும்பின் சாறடுகட்டி. நீலகேசியுரை காரர், "மா முதலாகிய வைந்து திரவியத்தின் கூட்டத்தின் மத்திய சக்தி பிறந்தாற்போல" (858 உரை) என்று கூறுகின்றார். மா முதலாகிய ஐந்தனுள், மாவொடு தாதகியும் கட்டியும் பெறப்படுவதால் ஏனை யிரண்டையும் "மற்றும் கூட்ட" என்பதனால் கொண்டார் என்று கொள்க. அவை இரண்டும் இன்னவெனத் தெரிந்தில. தாதகி முதலிய ஐந்தின் கூட்டத்தால் மதுவிடத்தே களிப்புத் தோன்று மென்றது, ஐம்பூதக் கூட்டுறவால் உணர்வு பிறக்குமென்றற்குவமை. அவ்வப் பூதக் கூறுகள் தத்தம் முதலொடு பிரிந்து சென்று கூடிவிடுதலின், "வெவ்வேறு பிரியு" மென்றும், பூதங்களிற் கூடுந் திறத்தைப் "பறை யோசையிற் கெடும்" என்றும் கூறினான். பூதவாதிகட்கு நிலம் நீர் தீ வளி விசும்பு என்ற ஐம்பூதமும் உடன்பாடு; இதனை, "திண்ணென் றீநில நீர் வளி காயத்தாற், கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய், வண்ண நாற்றஞ் சுவையுனொ டூறொலி, எண்ணுங்காலை யியைந்துழி யெய்துமே" (நீல. 857) என்று பிறரும் எடுத்தோதிக் காட்டுவர். இனி, உலகாயதர் விசும்பொழிந்த பூதநான்கையுமே கொண்டு அவற்றின் கூட்டுறவால் உடலுணர் வுண்டா மென்றும், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும் கலந்தவழிச் செந்நிறம் பிறத்தல்போலப் பூதக்கலப்பால் உணர்வு பிறக்கு மென்றும் கூறுப. மதுவி னிடத்தே களிப்புப்பிறக்கு மாற்றினை இவர் கூறியதுபோலச் சாருவாகரும் கூறுகின்றனர். இதனை மாதவர் எழுதிய சருவ தரிசன சங்கிரகத்துச் சாருவாக தரிசனத்துட் காண்க. 259-277. உயிரொடுங் கூட்டிய உணர்வுடைப் பூதமும் - உயிர்த் தோற்றத்துக் கேதுவாக அதனோடு கூட்டப்பட்ட வுணர் வுடைய பூதக்கூறும்; உயிரில்லாத உணர்வில் பூதமும் - உடம்பினாக்கத்துக் கேதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வில்லாத பூதக்கூறு மாகிய, அவை-அப்பூதக் கூறுகள்; அவ்வப்பூதவழி பிறக்கும்-அவ் வப்பூதங்களின் வழியாகவே தோன்றும்; மெய்வகை இதுவே; உண்மைநெறி இதுவே யாகும்; உரை விகற்பமுன் உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே-இவற்றின் வேறாகக் கூறப் படும் பொருளும் தத்துவங்களும் உலோகாயதர் மேற்கொண்டு கூறுவனவேயாம்; கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்-காட்சி யளவையல்லது வேறே கருத்து முதலியன நிலை பெறாமையின் கொண்டிலம்; இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே-இவ்வாழ்வும் இவ்வாழ்விற் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறப்போடே கழிவனவாம்; மறுமை உண்டாய் வினை துய்த்தல் பொய்யே என்றலும்- மறுபிறப்புண்டென்றும் ஈண்டுச் செய்யப்படும் வினைப் பயனை ஆண்டுச்சென்று நுகர்தல் வேண்டுமென்றும் கூறுவது பொய்யென்றும் பூதவாதி கூறினானாக எ - று. பூதங்களில் உணர்வுடையனவும் இல்லனவுமென இருகூறுள வென்றும், உணர்வுடைய வுயிரும் அஃதில்லாத வுடம்பும் அவ்வப் பூதங்களின் கூட்டத்தால் உண்டாமென்றும் கொள்வதனால் பூதவாதிஉலகாயதரில் வேறுபடுகின்றான். பிற கருத்துள்ளவர் களில் பூதவாதியின் கொள்கை உலகாயதரின் கொள்கையொடு ஒத்ததே என்றற்கு, "வேறுரை விகற்பமும் உண்மைப் பொருளும் உலகாயதன் உணர்வே" என்றான். உண்மைப் பொருள் என்றது தத்துவத்தை, அச்சொற்கு அதுபொருள். நீலகேசியுடையார் காட்டும் பூதவாதத்தில், ஐந்து பூத முங்கூடி அறிவும் இன்பமும் முதலியவற்றைத் தோற்றுவிக்கும்: (858) என்று கூறப்படுகிறதே யன்றி, பூதக்கூட்டத்தை உணர்வுடைப் பூதம், உணர்வில் பூதமென்று பிரித்து இம்மணிமேகலை கூறும் கூற்றுக்கூறப் படவில்லை. 277-289. எல்லா மார்க்கமும் கேட்டு-இங்ஙனம் கூறிவந்த எல்லாச் சமயங்களையும் மணிமேகலை கேட்டு; நன்று அல ஆயினும்-இவர்கள் கூறுவன அறமல்லவாயினும்; நான் மாறு உரைக் கிலேன் - யான் அவர்களை மறுத்து மாறு கூறேன் என நினைப் பவள்; பிறந்த முற்பிறப்பை எய்தப் பெறுதலின்-பிறந்து கழித்த முற்பிறப்பு நிகழ்ச்சியைத் தான் அறிந்திருத்தலால்; அறிந்தோர் உண்டோ என்று - முற்பிறப்பை அறிந்தவர்கள் உண்டோ என்று பூதவாதிகூறியதை நினைந்து; நக்கிடுதலும் - நகைத்துத் தன் வரலாற்றைக் கூறவும், தெய்வமயக்கினும் - தெய்வ மருளாலும்; கனாவுறு திறத்தினும் - கனாக்காணும் வகையாலும்; மையலுறுவோர் - மயங்குபவர்; மனம் வேறாம் வகை-மனம் திரிந்து உரைப்பது போலும் உரைவகையாகும் உனதுரை யாதலால்; ஐயம் அன்றி இல்லை என்றலும் - இஃது ஐயத்துக்கு இடமாவதல்லது உண்மையாகாது என்றானாக; இந்த ஞாலத்து-இந்த நிலவுலகத்தில்; நின் தந்தைதாயரை-உனக்குத் தந்தையுந் தாயுமாகிய பெற்றோரை; அனுமானத்தாலல்லது எவ்வகை அறிவாய் - அனுமான வளவையா லறிதலையன்றி எவ் வகையால் அறிவாய்; மெய்ப் பொருள்கள் - மெய்ம்மையான பொருள்கள் பலவும்; மெய்யுணர் வின்றி உணர்வரிய - உண்மை யுணர்வுக் கேதுவாகிய அனுமான முதலிய வளவைகளாலன்றி அறிதற்கரியனவாகும்; ஐயம் அலது இது சொல்லப்பெறாய் என காட்சியல்லாத பிற அளவைகளாற் கொள்வன. ஐயத்துக்கிட மாவன வென்றும் காட்சியளவாற் கொள்வதொன்றே தெளிவுப் பொருளென்றும் சொல்லாதேகொள் என்று; உள்வரிக் கோல மோடு தன்னை மறைத்த ஆண்வேடத்தோடே நின்று; உள்ளிய பொருள் உரைத்து - தான் கருதிய பொருளை உரைத்துவிட்டு ஆங்கு-அவ் நகரத்தே; ஐவகைச் சமயமும் அறிந்தனள்-இது காறும் கூறிய இவ்வைகைச் சமயங்களின் பொருள்களையும் கேட்டாள் எ - று. நன்று, அறம்; "வீழ்நாள் படாஅமை நன்றாற்றின்" (குறள்; 38) என்றாற் போல. "நன்றல வாயினும் நான்மா றுரைக்கிலேன்" என ஈண்டுக்கூறுவதுபோல அறவணவடிகள்பால் கூறுமிடத்து, "ஐவகைச் சமயமும், செவ்வி தன்னையின் சிந்தையின் வைத்திலேன்" (29:43-4) என மணிமேகலை கூறுவது காண்க. முற்பிறப்பின் வரலாற்றை யறிந்துள்ள தான் கண்ணெதிரே நிற்கவும், "அறிந் தோருண்டோ?" வெனப் பூதவாதி கேட்டது மணிமேகலைக்கு நகையை விளைவிப்ப, அதுகண்ட பூதவாதி நகைத்ததற்குக் காரணம் வினவுவதும், மணிமேகலை முற்பிறப் புணர்ந்த செய்தி கூறுவதும் நகை யேதுவாகப் பிறந்த சொல்லாட்டாதலின், சொற் பல்காமைப் பொருட்டு "நக்கிடுதலும்" என்றதனாற் பெற வைத்தார். தெய்வ மயக்கும் கனவும் உண்மையல்லவென்னுங் கருத்தால், "ஐயமன்றியில்லை" யென்றான்; "கடவுளாயினுமாக, மடவை மன்ற வாழிய முருகே" என்பதனால் தெய்வ மயக்கும், "கன விற் கண்டது நனவின் எய்துதல், தேவர்க் காயினு மிசைதல் செல்லாது" என்பதனால் கனவுநிலையும் உணரப்படும். மெய்யுணர் வென்பது சத்திய ஞானமென்றும், மெய்ப்பொருளென்பன பாரமார்த்திக தத்துவ மென்றும் கூறுப. மணிமேகலை ஆண் வேடந் தாங்கி நிற்றலின் "உள் வரிக்கோல" மென்றார். "உள்வரி யென்ப துணர்த்துங் காலை, மண்டல மாக்கள் பிறிதோ ருருவம், கொண்டுங் கொள்ளாது மாடுதற் குரித்தே" (சிலப். 8: 89 அடி. மேற்) என்பது காண்க. அளவை முதல் வேதவாத மீறாகியவற்றை வைதிகவாதமென வொன்றாகவும், ஆசீவகவாதம் நிகண்டவாத மிரண்டையு மொன்றாகவும் ஏனைச் சாங்கியம் வைசேடிகம் பூதவாத மூன்றாகவும் கொண்டு ஐவகைச் சமயமெனத் தொகுத்து "ஐவகைச் சமயமு மறிந்தனள்" என்றார்; இனி உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்ற சமயங்கள் ஆறனுள், பௌத்த மொழிந்த ஏனையைந்தையும், இங்கே கேட்கின்றாளா தலின் "ஐவகைச் சமயமும் அறிந்தன" ளென்றாரென்றுமாம். இவ்வகையில் அளவை வாதமும், சைவவாதமும், வைணவ வாதமும் நையாகிகத்தும், பிரம வாதமும் வேதவாதமும் மீமாஞ்சகத்தும், பூதவாதம் உலகாயதத்தும், அடங்கும். ஆசீவக வாதமும் நிகண்டவாதமும் ஒன்றாய் இவ்வைந்தனுள் அடங்கா வாயினும் வழக்காற்றுச் சிறப்புப்பற்றி ஐவகைச் சமயமெனத் தொகுத்தெடுத் தோதினாரெனக் கோடலுமாம். "ஆற்றுளிக் கிளந்த வறுவகைச் சமயமும்" (பெருங். 1. 36. 242) என்று கொங்கு வேளிர் கூறுதல் காண்க. இக்கருத்தே பற்றி, சைனமொழிந்த ஏனைய சமயங்களை, "ஐவகைச் சமயமு மறந்தோற் றனவென" (பெருங் 1. 36. 249) ஐவகைச் சமயமென்று அவர் கூறுதல் ஈண்டுக் குறிக்கத்தக்கது. இக் கூறியவற்றால், மணிமேகலை யாசிரியர் காலத்தே தமிழகத்தில் அறுவகைச் சமயங்கள் இருந்தமை விளங்கும். நாவரசர், ஞானசம்பந்தர் முதலாயினர் காலத்தே விளங்கியிருந்த பாசுபதம், காபாலம் முதலிய சமயங்கள், இம்மணிமேகலை யாசிரியர் காலத்தே இருந்தில. வேதவாதத்தின் வேறாகச் சைவமும் வைணவமும் பிரித்துக் கூறப்படுதல் குறிக்கத் தக்கது. அளவை வாதமும் இப்போது மறைந்தொழிந்தன; ஏனைய வற்றுள் நிகண்டவாதம் மட்டில் சைனசமயமென்ற பெயரால் நிலவுகிறது: பௌத்தம் அதனினும் குறைந்து விட்டதே யன்றி, சீனம், சப்பான், சயாம், பர்மா, இலங்கை முதலிய நாடுகளிற் பரவியுள்ளது. பிற சமயங்கள் இருக்குமிடம் தெரியாது நூலளவாய் ஒடுங்கிவிட்டன. இக்காலத்து நிலவும், சைவம், வைணவம், வேதாந்தம் முதலிய சமயங்களில், இச்சமயங்களில் ஏற்புடைய கருத்துக்களும் கொள்கைகளும் கலந்துகொண்ட தனால் மறைந்தன என்று கொள்ளினு மமையும். மணிமேகலை, உரைமினோ வெனச் சார்ந்து, அளவைவாதியை இயம்பென, என்றவன் தன்னைவிட்டு, சைவவாதி நேர்படுதலும், எப்படித் தென்ன, அவன் உரைத்தனன்; பிரமவாதி என்றனன்; கடல் வணன் புராணம் ஓதினன் உரைத்தனன்; வேதியின் உரையின் விதியும் கேட்டு, யாதினும் இசையாது இவர் உரையென, புராணனை யாதென, அவன் வகையிது என்ன, விட்டு, நிகண்ட வாதியை விளம்பென, விளம்பலுறுவான் என்றனன்; அவன்பின் உரைப்போன் செப்பிய திறமும் கேட்டு, வைசேடிக, உரையென்ன, உரைத்தனன்; உடனே பூதவாதி யைப் புகல் நீ என்ன, என்றலும், கேட்டு, உரைக்கிலேன் என்று, நக்கிடுதலும், என்றலும், என, உரைத்து, அறிந்தனள் எனக்கூட்டி, வினை முடிவு செய்க. சமயக்கணக்கர்தந் திறங்கேட்ட காதை முற்றிற்று. 28. கச்சிமாநகர் புக்க காதை மணிமேகலை சமயக்கணக்கர் கூறிய திறங்களைக் கேட்ட பின் வஞ்சி நகரை நோக்கினாள். அவட்குத் தன் தாய் மாதவி சுதமதி அறவணவடிகள் ஆகிய இவர்கள் நினைவும் உண்டாயிற்று. உடனே வஞ்சி நகர்க்குட் சென்று அதன் புறஞ்சேரியும், அகழும், அரணும், பல்வகைத் தெருக்களும், மன்றமும், பொதியிலும், சந்தியும் சதுக்கமும், செய்குன்றமும், விரைமரக்காவும் பிறவும் கண்டு மகிழ்வுற்றாள். பின்னர் பௌத்த ஞானிகள் உறையும் தவப்பள்ளியையடைந்து, அங்கே தவமேற் கொண்டிருந்த மாசாத்துவானைக் கண்டு அவன் திருவடியை வணங்கித் தன் வரலாற்றினை முறையே தெரிவித்தாள். அவனும், தான் கோவலனும் கண்ணகியும் இறந்தமை கேட்டுப் புத்ததருமம் மேற்கொண்ட தாகத் தெரிவித்து, ‘கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்குமுன்பிருந்த கோவலனென்பான் இந்நகரின்கண் கட்டுவித்த புத்தசயித்தியத்தைக் கண்டு வழிபட வந்தேன்; வந்தவிடத்து இங்குள்ள முனிவர்கள் காவிரிப்பூம் பட்டினம் கடல் கோட்படும் என்று அருளினர்; அதனால் யான் இங்கே தங்கினேன்; இனி, அறவணவடிகள் நினக்கு அறங்கூறற் கேற்றவிடம் கச்சிமாநகரென் றெண்ணி அங்கே மாதவியும் சுதமதியும் உடன்வரச் சென்றுள்ளார். மேலும் அக் கச்சிமாநகரும் வறுமையால் வருந்துகிறது; உயிர்கள் பல உணவின்றி இறக்கின்றன; அங்கே நீ சென்று அவற்றைப் பாது காப்பது பேரறம்' என்று இசைத்தான். அதுகேட்ட மணிமேகலையும் வஞ்சிநகரின் மேற்றிசையில் விண் படர்ந்து, வடகிழக்காகக் கச்சிமா நகரடைந்து, அது வறங்கூர்தலால் பொலிவிழந்திருப்பது கண்டு மனமிரங்கினாள். பின்னர், அந்நகர் நடுவே- இளங்கிள்ளி யென்பான் அமைத்திருந்த புத்தசயித்தியத்தை வணங்கி, அதற்குத் தென்மேற்கிலிருந்த பொழிலொன்றை யடைந்தாள். அவள் வரவறிந்த கஞ்சகன்சென்று கச்சிவேந்தற் கறிவிப்ப; அவன் தன் அரசி யற்சுற்றம் உடன்வர வந்து மணிமேகலையின் அறச் செயலைப் பாராட்டி வரவேற்று, தனக்குத் தெய்வமொன்று தோன்றி மணிமேகலையைப் பற்றிக் கூறியதைத் தெரிவித்து, அது தன்னை மணிபல்லவத் துள்ளது போலக் கோமுகிப்பொய்கையும் பொழிலும் பிறவும் சமைக்குமாறு பணித்ததையும், அவ்வாறே தான் செய்தமையும் தெரிவித்து, அவ்விடத்தையும் அவட்குக் காண்பித் தான். மணிமேகலையும் அதனைக் கண்டு வழிபட்டுக் "காணார் கேளார் கால்முட மானார், பேணா மாக்கள் பேசார் பிணித்தோர், படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர்" முதலிய பலரையும் வருவித்துத் தன் அமுதசுரபியால் இனிய அமுதுண்பித்தாள். அக்காலை அறவணவடிகளும் மாதவியும் சுதமதியும் மணிமேகலையது அறச்சாலை யடைந்தனர். அவரைக் கண்டதும் மணிமேகலை அவர்க்குரிய வழிபாடியற்றி, அறுசுவை நால்வகை உணவு தந்து மகிழ்வித்துத் தன் ஆண்வேடத்தை மாற்றிக்கொண்டாள். இதன்கண் வஞ்சிநகரின் சிறப்பு 3-68 அடிகளிலும், மணிமேகலை மாசாத்துவானைக் கண்டதும் அவன் கூறியதும் 69-162 அடிகளிலும், அவள் கச்சிமாநகரடைந்து வேந்தனையும் அவன் சமைத்திருந்த கோமுகிப் பொய்கையையும் பொழிலையும் கண்டது 163-216 அடிகளிலும், அங்கே மணிமேகலை அறச்சாலை யமைத்து உயிர்களை உண்பித்த திறம் 217-234 அடிகளிலும், பின்பு மணிமேகலை அறவணன் முதலியோரை யடைந்தது 235-243 அடி களிலும், அவள் ஆணுரு நீங்கிப் பெண்ணுருக் கொண்டது 244-245 அடிகளிலும் கூறப்படுகின்றன. ) ஆங்குத் தாயரோ டறவணர்த் தேர்ந்து வாங்குவிற் றானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரு முழிஞைவெம் படையும் போற்புறஞ் சுற்றிய புறக்குடி கடந்து 5 சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கலவை நீரும் எந்திர வாவியி லிளைஞரு மகளிரும் தந்தமி லாடிய சாந்துகழி நீரும் புவிகா வலன்றன் புண்ணிய நன்னாட் 10 சிவிறியுங் கொம்புஞ் சிதறுவிரை நீரும் மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல வுபாசகர் செங்கைநறு நீரும் அறஞ்செய் மாக்க ளகின்முதல் புகைத்து நிறைந்த பந்தற் றசும்புவார் நீரும் 15 உறுப்புமுர ணுறாமற் கந்தவுத் தியினால் செறித்தரைப் போர்தஞ் செழுமனை நீரும் என்றிந் நீரே யெங்கும் பாய்தலின் கன்றிய கராமு மிடங்கரு மீன்களும் ஒன்றிய புலவொழி யுடம்பின வாகித் 20 தாமரை குவளை கழுநீ ராம்பல் பூமிசைப் பரந்து பொறிவண் டார்ப்ப இந்திர தனுவென விலங்கக ழுடுத்து வந்தெறி பொறிகள் வகைமாண் புடைய கடிமதி லோங்கிய விடைநிலை வரைப்பில் 25 பசுமிளை பரந்து பஃறொழி னிறைந்த வெள்ளிக் குன்ற முள்கிழிந் தன்ன நெடுநிலை தோறு நிலாச்சுதை மலரும் கொடிநிலை வாயில் குறுகினள் புக்குக் கடைகாப் பமைந்த காவ லாளர் 30 மிடைகொண் டியங்கும் வியன்மலி மறுகும் பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கண்ணெடை யாட்டியர் காழியர் கூவியர் மைந்நிண விலைஞர் பாசவர் வாசலர் என்னுநர் மறுகு மிருங்கோ வேட்களும் 35 செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும் பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் மரங்கொ றச்சரும் மண்ணீட் டாளரும் வரந்தர வெழுதிய வோவிய மாக்களும் தோலின் றுன்னருந் துன்ன வினைஞரும் 40 மாலைக் காரருங் காலக் கணிதரும் நலந்தரு பண்ணுந் திறனும் வாய்ப்ப நிலங்கலங் கண்ட நிகழக் காட்டும் பாண ரென்றிவர் பல்வகை மறுகும் விலங்கரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு 45 இலங்குமணி வினைஞ ரிரீஇய மறுகும் வேத்தியல் பொதுவிய லென்றிவ் விரண்டின் கூத்தியல் பறிந்த கூத்தியர் மறுகும் பால்வே றாக வெண்வகைப் பட்ட கூலங் குவைஇய கூல மறுகும் 50 மாகதர் சூதர்வே தாளிகர் மறுகும் போகம் புரக்கும் பொதுவர்பொலி மறுகும் கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை வண்ண வறுவையர் வளந்திகழ் மறுகும் பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும் 55 பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும் மறையோ ரருந்தொழில் குறையா மறுகும் அரசியன் மறுகு மமைச்சியன் மறுகும் எனைப்பெருந் தொழில்செ யேனோர் மறுகும் மன்றமும் பொதியிலுஞ் சந்தியுஞ் சதுக்கமும் 60 புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும் கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும் சேணோங் கருவி தாழ்ந்தசெய் குன்றமும் வேணவா மிகுக்கும் விரைமரக் காவும் விண்ணவர் தங்கள் விசும்பிட மறந்து 65 நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்களும் சாலையுங் கூடமுந் தமனியப் பொதியிலும் கோலங் குயின்ற கொள்கை யிடங்களும் கண்டுமகிழ் வுற்றுக் கொண்ட வேடமோடு அந்தர சாரிக ளமர்ந்தினி துறையும் 70 இந்திர விகார மெனவெழில் பெற்று நவையறு நாத னல்லறம் பகர்வோர் உறையும் பள்ளிபுக் கிறைவளை நல்லாள் கோவலன் றாதை மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்துதன் பாத்திர தானமும் 75 தானப் பாயத்தாற் சாவக மன்னவன் ஊனமொன் றின்றி யுலகாள் செல்வமும் செல்வற் கொணர்ந்தத் தீவகப் பீடிகை ஒல்காது காட்டப் பிறப்பினை யுணர்ந்ததும் உணர்ந்தோன் முன்ன ருயர்தெய்வந் தோன்றி 80 மனங்கவல் கெடுத்தது மாநகர் கடல்கொள அறவண வடிகளுந் தாயரு மாங்குவிட்டு இறவா திப்பதிப் புகுந்தது கேட்டதும் சாவக மன்னன் றன்னா டெய்தத் தீவகம் விட்டித் திருநகர் புகுந்ததும் 85 புக்கபி னந்தப் பொய்யுரு வுடனே தக்க சமயிகள் தந்திறங் கேட்டதும் அவ்வவர் சமயத் தறிபொரு ளெல்லாம் செவ்வி தன்மையிற் சிந்தைவை யாததும் நாத னல்லறங் கேட்டலை விரும்பி 90 மாதவற் றேர்ந்து வந்த வண்ணமும் சொல்லின ளாதலிற் றூயோய் நின்னையென் நல்வினைப் பயன்கொல் நான்கண் டதுவெனத் தையல் கேணின் றாதையுந் தாயும் செய்ததீ வினையிற் செழுநகர் கேடுறத் 95 துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன் அன்புகொ ளறத்திற் கருகனே னாதலின் மனைத்திற வாழ்க்கையை மாயமென் றுணர்ந்து தினைத்தனை யாயினுஞ் செல்வமும் யாக்கையும் நிலையா வென்றே நிலைபெற வுணர்ந்தே 100 மலையா வறத்தின் மாதவம் புரிந்தேன் புரிந்த யானிப் பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நன்னகர்ச் சேர்ந்தது கேளாய் குடக்கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை விடர்ச்சிலை பொறித்த வேந்தன் முன்னாள் 105 துப்படு செவ்வாய்த் துடியிடை யாரொடும் இப்பொழில் புகுந்தாங் கிருந்த வெல்லையுள் இலங்கா தீவத்துச் சமனொளி யென்னும் சிலம்பினை யெய்தி வரங்கொண்டு மீளும் தரும சாரணர் தங்கிய குணத்தோர் 110 கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோர் அரைசற் கேது வவ்வழி நிகழ்தலின் புரையோர் தாமுமிப் பூம்பொழி லிழிந்து கற்றலத் திருந்துழிக் காவலன் விரும்பி முற்றவ முடைமையின் முனிகளை யேத்திப் 115 பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின் அங்கவர்க் கறுசுவை நால்வகை யமிழ்தம் பாத்திரத் தளித்துப் பலபல சிறப்பொடு வேத்தவை யாரொடு மேத்தின னிறைஞ்சலில் பிறப்பிற் றுன்பமும் பிறவா வின்பமும் 120 அறத்தகை முதல்வ னருளிய வாய்மை இன்ப வாரமு திறைவன் செவிமுதல் துன்ப நீங்கச் சொரியு மந்நாள் நின்பெருந் தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன் கோவலன் மன்னவன் றனக்கு 125 நீங்காக் காதற் பாங்க னாதலின் தாங்கா நல்லறந் தானுங் கேட்டு முன்னோர் முறைமையிற் படைத்ததை யன்றித் தன்னா னியன்ற தனம்பல கோடி எழுநா ளெல்லையு னிரவலர்க் கீத்துத் 130 தொழுதவம் புரிந்தோன் சுகதற் கியற்றிய வானோங்கு சிமையத்து வாலொளிச் சயித்தம் ஈனோர்க் கெல்லா மிடர்கெட வியன்றது கண்டுதொழு தேத்துங் காதலின் வந்தித் தண்டாக் காட்சி தவத்தோ ரருளிக் 135 காவிரிப் பட்டினங் கடல்கொளு மென்றவத் தூவுரை கேட்டுத் துணிந்திவ ணிருந்தது இன்னுங் கேளாய் நன்னெறி மாதே தீவினை யுருப்பச் சென்றநின் றாதையும் தேவரிற் றோற்றிமுற் செய்தவப் பயத்தால் 140 ஆங்கத் தீவினை யின்னுந் துய்த்துப் பூங்கொடி முன்னவன் போதியி னல்லறந் தாங்கிய தவத்தாற் றான்றவந் தாங்கிக் காதலி தன்னொடு கபிலையம் பதியில் நாத னல்லறங் கேட்டுவீ டெய்துமென்று 145 அற்புதக் கிளவி யறிந்தோர் கூறச் சொற்பய னுணர்ந்தேன் றோகை யானும் அந்நா ளாங்கவ னறனெறி கேட்குவன் நின்னது, தன்மையந் நெடுநிலைக் கந்திற் றுன்னிய துவதிக னுரையிற் றுணிந்தனை யன்றோ 150 தவநெறி யறவணன் சாற்றக் கேட்டனன் ஆங்கவன் தானுநின் னறத்திற் கேதுப் பூங்கொடி கச்சி மாநக ராதலின் மற்றம் மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரு மப்பதிப் படர்ந்தனர் 155 அன்னதை யன்றியு மணியிழை கேளாய் பொன்னெயிற் காஞ்சி நாடுகவி னழிந்து மன்னுயிர் மடிய மழைவளங் கரத்தலின் அந்நகர் மாதவர்க் கைய மிடுவோர் இன்மையி னிந்நக ரெய்தினர் காணாய் 160 ஆருயிர் மருந்தே யந்நாட் டகவயின் காரெனத் தோன்றிக் காத்தனின் கடனென அருந்தவ னருள வாயிழை வணங்கித் திருந்திய பாத்திரஞ் செங்கையி னேந்திக் கொடிமதின் மூதூர்க் குடக்கணின் றோங்கி 165 வடதிசை மருங்கின் வானத் தியங்கித் தேவர் கோமான் காவன் மாநகர் மண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய பொன்னகர் வறிதாப் புல்லென் றாயது கண்டுளங் கசிந்த வொண்டொடி நங்கை 170 பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங்கொண்டு நடுநக ரெல்லை நண்ணின ளிழிந்து தொடுகழற் கிள்ளி துணையிளங் கிள்ளி செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப் பைம்பூம் போதிப் பகவற் கியற்றிய 175 சேதியந் தொழுது தென்மேற் காகத் தாதணி பூம்பொழி றான்சென் றெய்தலும் வையங் காவலன் றன்பாற் சென்று கைதொழு திறைஞ்சிக் கஞ்சுக னுரைப்போன் கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் 180 நாவலந் தீவிற் றானனி மிக்கோள் அங்கையி னேந்திய வமுத சுரபியொடு தங்கா திப்பதித் தருமத வனத்தே வந்து தோன்றினள் மாமழை போலென மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பிக் 185 கந்திற் பாவை கட்டுரை யெல்லாம் வாயா கின்றன வந்தித் தேத்தி ஆய்வளை நல்லா டன்னுழைச் சென்று செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ 190 நலத்தகை நல்லாய் நன்னா டெல்லாம் அலத்தற் காலை யாகிய தறியேன் மயங்குவேன் முன்னரோர் மாதெய்வந் தோன்றி உயங்கா தொழிநின் னுயர்தவத் தாலோர் காரிகை தோன்று மவள்பெருங் கடிஞையின் 195 ஆருயிர் மருந்தா லகனில முய்யும் ஆங்கவ னருளா லமரர்கோ னேவலின் தாங்கா மாரியுந் தானனி பொழியும் அன்னா ளிந்த வகநகர் புகுந்த பின்னா ணிகழும் பேரறம் பலவால் 200 கார்வறங் கூரினும் நீர்வறங் கூராது பாரக விதியிற் பண்டையோ ரிழைத்த கோமுகி யென்னுங் கொழுநீ ரிலஞ்சியொடு மாமணி பல்லவம் வந்த தீங்கெனப் பொய்கையும் பொழிலும் புனைமினென் றறைந்தத் 205 தெய்வதம் போயபிற் செய்தியா மமைத்தது இவ்விட மென்றே யவ்விடங் காட்டவத் தீவகம் போன்ற காவகம் பொருந்திக் கண்டுளஞ் சிறந்த காரிகை நல்லாள் பண்டையெம் பிறப்பினைப் பான்மையிற் காட்டிய 210 அங்கப் பீடிகை யிதுவென வறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்துத் தீவ திலகையுந் திருமணி மேகலா மாபெருந் தெய்வமும் வந்தித் தேத்துதற்கு ஒத்த கோயி லுளத்தகப் புனைந்து 215 விழவுஞ் சிறப்பும் வேந்த னியற்றத் தொழுதகை மாதர் தொழுதன ளேத்திப் பங்கயப் பீடிகைப் பசிப்பிணி மருந்தெனும் அங்கையி னேந்திய வமுத சுரபியை வைத்துநின் றெல்லா வுயிரும் வருகெனப் 220 பைத்தர வல்குற் பாவைதன் கிளவியின் மொய்த்த மூவறு பாடை மாக்களில் காணார் கேளார் கான்முட மானோர் பேணா மாக்கள் பேசார் பிணித்தோர் படிவ நோன்பியர் பசிநோ யுற்றோர் 225 மடிநல் கூர்ந்த மாக்கள் யாவரும் பன்னூ றாயிரம் விலங்கின் றொகுதியும் மன்னுயி ரடங்கலும் வந்தொருங் கீண்டி அருந்தியோர்க் கெல்லா மாருயிர் மருந்தாய்ப் பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும் 230 நீரு நிலமுங் காலமுங் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளைவும் பெருகிய தென்னப் பெருவளஞ் சுரப்ப வசித்தொழி லுதவி வளந்தந் ததுவெனப் பசிப்பிணி தீர்த்த பாவையை யேத்திச் 235 செல்லுங் காலைத் தாயர் தம்முடன் அல்லவை கடிந்த வறவண வடிகளும் மல்லன் மூதூர் மன்னுயிர் முதல்வி நல்லறச் சாலை நண்ணினர் சேறலும் சென்றவர் தம்மைத் திருவடி வணங்கி 240 நன்றென விரும்பி நல்லடி கழுவி ஆசனத் தேற்றி யறுசுவை நால்வகைப் போனக மேந்திப் பொழுதினிற் கொண்டபின் பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து வாய்வ தாகவென் மனப்பாட் டறமென 245 மாயைவிட் டிறைஞ்சினள் மணிமே கலையென். உரை 1-4. ஆங்குத் தாயரொடு அறவணர்த் தேர்ந்து - வஞ்சி நகரத்தின் கண் மாதவி சுதமதியுடன் அறவணவடிகளையும் காண நினைந்து, வாங்கு வில்தானை வானவன் வஞ்சியின் - வளைந்த வில்லேந்திய படையினையுடைய சேரனது வஞ்சி நகரத்தில், வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போற் புறஞ் சுற்றிய புறக்குடி கடந்து - பகை மன்னரும் புறமதிலைக் காக்கும் கொடிய படையினரும் போல அரணைச் சுற்றிலு முள்ள புற நகரத்தைக் கடந்து; வஞ்சி நகர்ப்புறத்தே பல்வகைச் சமயவாதிகளைக் கண்டு அவர் திறம் கேட்டுப் போந்த மணிமேகலை தன் தாயரையும் அறவணனையும் நினைந்து புறஞ்சேரி கடந்து, அந்நகர்க்குட் செல்கின்றாளாதலின், "வஞ்சியின் புறக்குடி கடந்து" என்றார். மாதவியோடு சுதமதியையும் உளப்படுத்தி யுரைத்தலின், "தாயர்" என்றார். புறக்குடி, புறநகர். மன்னவ குமரரிருக்கையும் தானைவீரர் இருக்கையும் அரணைச் சூழ்ந்திருத்தலின், "வேற்று மன்னரும் உழிஞை வெம்படையும் போல" என்றார். 5-22. சுருங்கைத் தூம்பின் மனைவளர் தோகையர் கருங்குழல் கழீஇய கலவை நீரும்-இல்லங்களிற் சிந்துகின்ற நீரானது செல்லுமாறு கற்களான் மறைத்தமைக்கப்பட்ட சாக்கடை களின் வழியாக மாடங்களிலுள்ள மகளிர் கரிய கூந்தலை யாட்டிய நறுமணக் கலவையினையுடைய நீரும், எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும் தந்தமில் ஆடிய சாந்து கழி நீரும் - வேண்டுங்காற் பெருக்கியும் வேண்டாக்காற் குறைத்தும் தரவல்ல இயந்திரங்கள் அமைந்த பொய்கைகளில் மைந்தரும் மகளிரும் நீராடுதலால் அவரணிந்த சாந்து கழுவுற்றுக் கலந்தோடும் நீரும், புவி காவலன்தன் புண்ணிய நன்னாள் சிவிறியுங் கொம்பும் சிதறு விரை நீரும்-மன்னவன் பிறந்த நன்னாளில் சிவிறியும் கொம்புமாகிய கருவிகள் கொண்டு ஒருவர்மேலொருவர் வீசிகின்ற நறுமண நீரும், மேலை மாதவர் பாதம் விளக்கும் சீல வுபாசகர் செங்கை நறுநீரும் - மேன்மை பொருந்திய முனிவர் தம் திருவடிகளை ஐவகைச் சீலங்களையுமுடைய உபாசகர்கள் தங்கள் சிவந்த கைகளால் விளக்கும் நன்னீரும், அறஞ்செய் மாக்கள் அகில் முதல் புகைத்து நிறைந்த பந்தல் தசும்புவார் நீரும்- இல்லறம் புரியும் மாந்தர்கள் அமைத்த அகில் முதலியவற்றைப் புகைத்தலா லெழுந்த நறும்புகை கமழும் தண்ணீர்ப் பந்தர்களில் குடங்களி லிருந்து ஊற்றுகின்ற நீரும், உறுப்பு முரண் உறாமல் கந்தவுத்தி யினாற் செறித்தரைப்போர் தஞ்செழுமனை நீரும்-ஊறப் படும் உறுப்புக்கள் மாறுபடாமல் விரைக் கலவைக்குரிய முறைப்படியே சேர்த்து அரைப்பவருடைய வளம் மிக்க மனைகளின் நீரும், என்று இந்நீரே எங்கும் பாய்தலின்-என்ற இவ்வகைப்பட்ட நீரே யாண்டும் பாய்தலினால், கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும் ஒன்றிய புலவொழி உடம்பின வாகி-பகைமையிற் றழும்பிய கராம் இடங்கர் என்ற முதலை யினங்களும் மீன்களும் தம்மீது பொருந்திய புலால் நாற்றம் நீங்கிய உடலினையுடையவாகி, பொறிவண்டார்ப்ப தாமரை குவளை கழுநீர் ஆம்பல் பூ மிசைப் பரந்து - பொறிகளை யுடைய வண்டினங்கள் தேனுண்டாரவாரிக்க, தாமரை குவளை கழுநீர் ஆம்பல் முதலிய பூக்கள் நீர் மேலே பரவப் பெற்று, இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து - வான வில்லைப்போல விளங்குகின்ற அகழியாற் சூழப்பட்டு ; நெய் விரவிய கூந்தலைப் பசை நீங்கக் கலவை தேய்த்தலைத் தலால் மகளிராடிய நீரை, "கருங்குழல் கழீஇய கலவை நீர்" என்றார். எந்திர வாவி, எந்திரத்தால் நீரைப் பெருக்குதலும் குறைத்தலுமுடைய வாவி. பூசிய சாந்தம் நீராட்டில் கழுவப் படுவதுபற்றி, கழுவிய நீர் "சாந்து கழி நீர்" எனப்பட்டது. நாட்டு மன்னனது பிறந்தநாளைக் கொண்டாடும் வழக்கு ‘வெள்ளணி' யென்றும் 'நாண்மங்கல' மென்றும் வழங்கும். உபாசகர், ஐவகைச் சீலத்தை மேற்கொண்டு அறம்புரிவோர். இல்லறத் தாராயினும், சீலமும் தானமும் சிறந்து தோன்ற அறம் புரிவதுபற்றி, உபாசகர் சிறப்பித்துக் கூறப்படுகின்றனர். மேலை, மேன்மை; ஐ: பண்புப் பொருண்மை குறித்து நின்றது; சாரியையுமாம். உறுப்புக்களாவன, "நேர்கட்டி செந்தே னிரியாசம் பச்சிலை, ஆர மகிலுறுப்போ டாறு" (சிலப். 514) என அடியார்க்கு நல்லார் காட்டுமாற்றாலறிக கந்தவுத்தி, விரைப் பொருளைத் தக்காங்குக் கலந்து செய்யும் முறை. ஈண்டுக் கூறிய நீர்வகை பலவும் சுருங்கை வழியே சென்று, கிடங்கிற்குள் வீழ்தல் தோன்றச் "சுருங்கைத்தூம்" பென முதற்கண் நிறுத்திக் கூறினார். கராம், இடங்கர் என்பன முதலை வகை. தாமரை முதலிய பூக்கள் நீர்ப்பரப்பின் மேலே மலர்ந்து நிற்பனவாதலால், "மிசைப் பரந்து" என்றார். பல்வகை வண்ணங்கொண்டு விளங்கலின், இந்திர வில்லை யுவமம் கூறினார். 23-28. வந்தெறி பொறிகள் வகை மாண்புடைய-பகைவர் முற்றிய பொழுதில் முன் வந்து பகையெறியுந் தன்மையுடைய இயந்திரங்களின் வகையால் மாட்சிமையுடைய, ஓங்கிய கடிமதில் இடைநிலை வரைப்பில்-உயர்ந்த காவலையுடைய மதிலின் இடையேயுள்ள நில வெல்லையில், பசுமிளை பரந்து - பசிய காவற்காடு பரவப்பெற்று ; பல்தொழில் நிறைந்த-பலவகைத் தொழிலும் நிரம்பிய, வெள்ளிக் குன்றம் உள்கிழிந்தன்ன நெடு நிலைதோறும் நிலாச்சுதை மலரும் - வெள்ளி மலையை நடுவே பிளந்தாற்போல உயரிய நிலைகள்தோறும் நிலவினைப் போல வெள்ளிய சுதை விளங்கும்; கொடிமிடை வாயில் குறுகினள் புக்கு-கொடிகள் செறிந்த வாயிலை அடைந்து புகுந்து; எந்திரவகைகளாவன: நூற்றுவரைக் கொல்லி, அரிநூல் பொறி விற்பொறி, கொக்குப்பொறி, கூகைப்பொறி முதலியன. இவற்றின் வகையைச் சிலப்பதிகாரம் சிந்தாமணி முதலிய நூல்களுட் காண்க. ஓங்கிய கடிமதில் என மாறுக. பஃறொழில் நிறைந்த நெடுநிலை, வெள்ளிக் குன்றம் கிழிந்தன்ன நெடுநிலை யென வியையும். மலர்தல், ஈண்டு விளக்கங் குறித்து நின்றது. மிடைதல், செறிதல். குறுகினள் : முற்றெச்சம். 29-34. கடைகாப்பு அமைந்த காவலர் மிடைகொண்டு இயங்கும் வியன்மலி மறுகும் - வாயில் காத்தற்கு அமைந்த காவலாளர்கள் நெருங்கி யிருக்கும் அகன்ற பெரிய வீதியும், பன்மீன் விலைஞர் வெள்ளுப்புப் பகருநர் கள் நொடையாட்டியர் காழியர் கூவியர் - பல மீன்களை விற்கும் பரதவரும் வெள்ளிய உப்பு விற்போரும் கள்ளை விற்கும் வலைச்சியரும் பிட்டு வாணிகரும் அப்ப வாணிகரும், மைந்நிண விலைஞர் பாசவர் வாசவர் என்னுநர் மறுகும் - இறைச்சி விற்போரும் வெற்றிலை விற்போரும் பஞ்சவாசம் விற்போரும் என்ற இவர்களையுடைய வீதியும் ; பெருஞ் செல்வருடைய பெருமனைகளில் கடையில் காவல் புரியும் வாயிலாளர்களைக் "காவலாளர்" என்றார். மக்களின் போக்குவரவு மிகுதி தோன்ற, "மிடைகொண்டு" என்றார். மிடைந்து அகன்ற தெருவாதலின், "வியன்மலி மறுகு" எனப் பட்டது. பல்வேறு வகையான மீன்களை விற்போர் பலராதல் தோன்றப் பன்மீன் வினைஞர் என்றார். வெள்ளுப்பு என்புழி வெண்மை இயல்பாய பண்பு குறித்தது. நொடையாட்டியர் - விலைக்கு விற்பவர்; "கள்ளோர் களிநொடை நவில" (மதுரை 662) என்றார் பிறரும். காழியர் - பிட்டு வாணிகர். கூவியர்- அப்ப வாணிகர். மைந்நிண விலைஞர் - இறைச்சி விற்போர். ஈண்டுக் கூறப்படும் வணிகர் வகையை, அடிகளும், "காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர், மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர், பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோ, டோசுநர் செறிந்த 'd2வூண்மலி யிருக்கை" (சிலப். 5. 27-4) என்பது காண்க. 34-43. இருங்கோ வேட்களும் செம்பு செய்ஞ்ஞரும் கஞ்ச காரரும்- குயவரும் செப்புக் கலஞ் செய்வோரும், வெண்கலக் கன்னாரும், பைம்பொன் செய்ஞ்ஞரும் பொன்செய் கொல்லரும் - பொற்பணி செய்வோரும் பொன்னை உருக்குந் தட்டாரும், மரங்கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்-மரத்தை வெட்டுந் தச்சரும், சுதை முதலியன கொண்டு பாவை முதலியன செய்யும் சிற்ப வினைஞரும், வரந்தர எழுதிய ஓவிய மாக்களும் வரந்தருதற்குரிய கடவுள ருருவங்களையும் எழுதவல்ல சித்திரகாரரும், தோலின் துன்னரும் துன்னவினைஞரும்-தோற்பதனிட்டு உறை முதலியன செய்யும் பாணரும் தையல் வேலை செய்யும் செம்மாரும், மாலைக்காரரும் காலக் கணிதரும் - மாலை தொடுப்போரும் சோதிட நூலோரும், நலந்தரு பண்ணும் திறனும் வாய்ப்ப - சிறப்புடைய பண்ணும் திறமும் வாய்க்குமாறு, நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும் பாணர்-மூவகையிடமும் கருவியும் மிடறும் ஒப்பக் காட்டும் திறனுடைய பாணரும், என்றிவர் பல்வகை மறுகும் - என்ற இவர்களுடைய பலதிறப்பட்ட வீதியும்; கோவேளென்பது பிற்காலத்தே வேட்கோவரென வழங்குவ தாயிற்று; ''வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்'' (பெரியபு, நீலக்கண். 1) என்பது காண்க. செய்ஞ்ஞர் என்புழி ஞகரம் பெயரிடைநிலை; அறிஞர் என்புழிப் போல. செம்பினாற் குட முதலியன செய்வோரைச் ''செம்பு செய்ஞ்ஞ'' ரென்றார். மரங்கொல் தச்சர், மரம் வெட்டிப் பலகை வாரை முதலிய செய்யும் தச்சர். மண்ணீட்டாளர், சுதை வேலை செய்யும் கொல்லர். வரந்தரவெழுதிய வோவியம், தெய்வப் படிமம். ஓவிய மாக்கள் சித்திரச் சிற்பிகள். நிலமாவன, வலிவு, மெலிவு, சமம் என்ற மூன்று. கலம், யாழ் முதலிய இசைக்கருவிகள். கண்டம், மிடற்றாற்பாடல். பண், நூற்று மூன்றாகக் காட்டப்படும் பண்கள். திறம், பண்ணுக்கு இன்றியமையாதன வெனக் கூறப்படும் இருபத்தொரு வகைத் திறங்கள். ''குழலினும் யாழினும் குரல் முதலேழும், வழுவின் றிசைந்து வழித்திறங் காட்டும், அரும்பெறன் மரபின் பெரும்பா ணிருக்கை'' (சிலப். 5. 35-7.) என்பதனால் பண்ணுந் திறமும் வாய்க்குமாறும், ''யாழுங் குழலு மேங்கிய மிடறும் இசைவன கேட்ப'' (சிலப். 3.50-1.) என்பதனால் கருவிப் பாடலும் கண்டப் பாடலும் பாடப்படுமாறும் காண்க. 44-47. விலங்கு அரம் பொரூஉம் வெள்வளை போழ்நரோடு இலங்கு மணி வினைஞர் இரீ இய மறுகும் - வாளரத் தினைக் கொண்டு வெள்ளிய சங்குகளை அறுப்போருடன் விளங்குகின்ற முத்துக்களைக் கோப்போர் இருக்கின்ற தெருவும், வேத்தியல் பொதுவியல் என்றிவ் விரண்டின் கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும் - அரசர்க்காடும் கூத்து ஏனோர்க்காடுங் கூத்து என்னும் இருவகையின் இயல்பினையும் அறிந்த நாடக மகளிர் தெருவும்; அரத்தின் தொழில் பொருள்களைக் குறுக்கிட்டறுப்ப தாதலால், “விலங்கரம்'' எனச் சிறப்பித்தார். வளைபோழ்வது வேளாப்பார்ப் பனர்க்கும் தொழிலெனப் பண்டை நூல்கள் கூறுகின்றன: “வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை'' (அகம். 24) என்பதும், “வேளாப் பார்ப்பான் - யாகம் பண்ணாத பார்ப்பான்; இவர்களுக்குச் சங்கறுக்கையுந் தொழில்'' எனவரும் அதன் பழையவுரையும் காண்க. இருக்கையை யுடைய மறுகு, ''இரீ இய மறு'' காயிற்று. கூத்தியல்பு வேத்தியலும் பொதுவியலு மென விரண்டாதலை, முன்னரும் ''வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்துக் கூத்து'' (மணி 2, 18-9) என்று கூறியிருத்தல் காண்க. கூத்தியர், கூத்தாடும் மகளிர். 48-53. எண்வகைப்பட்ட கூலம் பால்வேறாகக் குவைஇய கூல மறுகும் எண்வகையினையுடைய கூலங்கள் வேறுவேறு பகுதி யாகக் குவிக்கப்பெற்ற தானியக் கடைத்தெருவும், மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்-அரசனிடம் நின்றேத்துவோர் இருந்தேத்து வோர் நாழிகை யிசைக்கும் வேதாளிகர் என்போர் வீதியும், போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்-இன்பத்தினை விற்கும் பொதுமகளிர் நிறைந்த வீதியும், கண்ணுழைகல்லா நுண்ணூற் கைவினை வண்ண அறுவையர் வளந்திகழ் மறுகும் - கண்களாற் காண்டற்கும் அரிதாகிய நுண்ணிய நூலினால் கைத்தொழின் மிக்குப் பலநிறங்களுடன் பொருந்திய ஆடைநெய்வோரின்வளப்ப மிக்க தெருவும்; கூலம் பால் வேறாகக் குவைஇய மறுகு என இயைக்க எண்வகைக் கூலமாவன "நெல்லுப் புல்லு வரகு தினை சாமை, இறுங்கு தோரை யொடு கழைவிளை நெல்லே'' (சிலப். 5. 23. அடி. மேற்) இவை தனித்தனியே பகுத்துத் தொகுக்கப் பட்டிருப்பது தோன்ற, “பால்வேறாகக் குவைஇய'' என்றார். இருந்தேத்தல் முதலியவற்றைச் செய்யும் மாகதர் மூவரையும், “சூதர் மாகதர் வேதா ளிகரொடு'' (சிலப். 5 48.) என்று பிறரும் கூறுப. போக வேட்கை மிக்குவரும் ஆடவர்க்கு அதனை நல்கி, அவர் வரம்பிகவாமைக் காத்தலின், “போகம் புரக்கும் பொதுவர்'' எனப் பொதுமகளிரைக் கூறினார். நோக்கு நுழைய மாட்டாத கைவினையும் நுண்ணூலும் பல்வகை, வண்ணமுமுடைய உடையென்பதாம்; ''நோக்கு நுழைகல்லா நுண்மைய'' (பொருந. 82.) என்று பிறரும் கூறுப. வளம், ஈண்டுப் பொன்னின்மேற்று, 54-59. பொன்னுரை காண்போர் நன்மனை மறுகும் - பொன்னைக் கட்டளையில் உரைத்து ஓட்டங் கண்டு மாற்றினை அறுதியிடும் வண்ணக்கர் வாழும் நல்ல மாடங்களையுடைய வீதியும், பன்மணி பகர்வோர் மன்னிய மறுகும் - மாணிக்க முதலிய பலவகை மணிகளை விற்கும் வாணிகர் நிலைபெற்ற வீதியும், மறையோர் அருந்தொழில் குறையா மறுகும் - மறைய வருடைய முத்தீயோம்பல் முதலிய தொழில் குறைவுபடாத அந்தணர் வீதியும், அரசியன் மறுகும் அமைச்சியன் மறுகும் - அரசப் பெருவீதியும் அமைச்சர் பெருந் தெருவும், ஏனைப் பெருந் தொழில் செய்யும் ஏனோர் மறுகும் - ஏனைய பெரிய தொழில்களைச் செய்யும் சேனைத் தலைவர் முதலிய ஏனையர் வீதியும், மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும் - ஊர்நடுவாய மரத்தடிகளும் அம்பலமும் முச்சந்தியும் நாற் சந்தியும்; பொன்னுரை காணும் வண்ணக்கரும் மாணிக்கம் முதலிய விற்கும் மணிவாணிகரும் பெருஞ் செல்வராதலின், அவருறையும் வீதிகளை ஏனை அந்தணர் அரசர் அமைச்சர் முதலாயினர் வீதிகளைச்சேரக்கூறினார். தீயோம்பல் மறையோதல் முதலியன உயர்ந்தனவாகக் கருதப்பட்டமை தோன்ற, "அருந்தொழில்" என்றார். தானைத் தலைமையும், அரசியற் பணியும், நாட்டுக்கு அரணாகும் பிறசெயல்களும் புரவோர் தொழில்களைப் "பெருந் தொழில்" என்றார். மன்றம் முதலிய இடங்கள் சான்றோர் இருந்து அறங் கூறுவதற்கும் கடவுள் வழிபாடு செய்வதற்கும் உரிய வாதலின், இவற்றைப் பிரித்துக் கூறினார். 'சதுக்கமும் சந்தியும் புதுப்பூக் கடம்பும், மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்" (முருகு. 225-6.) முருகனை வழிபடும் திறம் சான்றோராற் குறிப்பிடப்படுமாறு காண்க. 60-68. புதுக்கோள் யானையும் பொற்றார்ப் புரவியும் கதிக்குற வடிப்போர் கவின்பெறு வீதியும்-புதிதாகக் கொணர்ந்த யானைகளையும் பொன்னாலாய கிண்கிணி மாலை களையுடைய குதிரைகளையும் நடையில் மேம்பாடுறப் பயிற்றும் யானைப்பாகரும் குதிரைவாதுவரும் உறையும் அழகுமிக்க வீதியும், சேண் ஓங்கு தாழ்ந்த அருவி செய் குன்றமும் - மிக்க உயரத்திலிருந்து தாழ வீழுமாறமைந்த நீரருவி பொருந்திய கட்டு மலைகளும், வேணவா மிகுக்கும் விரைமரக்காவும் - மிக்க ஆர்வத்தை மேன்மேற் றூண்டும் நறுமணச் சோலையும், விண்ணவர் தங்கள் விசும்பிடம்மறந்து- தேவர்கள் தம்முடைய விண்ணுலகத்தையும் மறந்து, நண்ணுதற் கொத்த நன்னீரிடங் களும் - அடைதற்கு ஏற்புடைய நல்ல நீரினையுடைய பொய்கை களும், சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்-அறச்சாலை களும் பேரகங்களும் பொன்னாலமைந்த அம் பலமும், கொள்கை கோலம் குயின்ற இடங்களும் கண்டு மகிழ்வுற்று - நிதானவகைகளை உருப்படுத்தி ஓவியத்தால் அழகுறுத்தப் பட்ட தவச் சாலைகளும் ஆகிய அனைத்தையும் கண்டு உளம் மகிழ்ச்சியுற்று; குதிரையின் செலவு முதலிய சிறப்பியல்களைக் கூறாது, "பெற்றாரை" விதந்தோதியது, புதிது கொணரப் பெற்றுப் பயிற்சி செய்யப் படாமையுணர்ந்து நின்றது. கதி, செலவு, வடித்தல், குற்றம், போக்கி நற்செலவிற் பயிற்றுதல். திருத்தப்படாத சொல்லை, "வடியாக் கிளவி" (சிலப்பதிகாரம்-புறஞ்சேரி இறுத்த காதை, வரி 88) என்று சான்றோர் வழங்குமாறு காண்க. இயற்கை மலைபோல உயரமாகச் சமைத்து அதன் முடியிலிருந்து விழுமாறு அருவிகள் அமைத்த செய்குன்றங்கள் பண்டை நாளில் செல்வமிக்க நகரங் களில் இருந்தன வெனவறிக. உரோம் நாட்டு வரலாறுகளிலும் இத்தகைய செய்குன்றுகளும் செயற்கைச் சோலைகளும் குறிக்கப் பட்டிருக்கின்றன. அவற்றை உலகின் அற்புதங்களாகவும் குறிக்கின்றனர். துறவியருள்ளத்திலும் இன்ப விழைவு பயக்கும் நலம் பொருந்திய சோலைகள் என்றற்கு, "வேணவா மிகுக்கும் விரைமரக்கா" என்றார். வேட்கை அவா - வேணவா என முடிந்தது. "வேணவாத் தீர்த்த விளக்கே" (பதிகம் 18.) என முன்பும் கூறினர். நீர் நிலைகளில் தெய்வமுறையு மென்பதுபற்றி, "விண்ணவர் "நண்ணுதற் கொத்த நன்னீ ரிடங்கள்" என்றார். "அணங்குடைப் பனித்துறை" (ஐங். 174) எனப் பிறரும் கூறுப. பல மக்களும் ஒருங்கு கூடி இனிதிருக்கும் பேரகத்தைக் கூடமென்றார். பௌத்த முனிவர் இருந்து தவம் புரியுமிடங்களில் பௌத்த நூல்கள் கூறும் நிதானங்கள் ஒவ்வொன்றுக்கும் உருவங் கோலி ஓவியமெழுதி வைப்பது மரபு; இதனை அஜந்தா குகைகளில் குறித்திருப்பது காண்க. கொள்கை - நிதானம் பன்னிரண்டு. இத்தகைய வீதிகளையும் இடங்களையும் காண்போர் எப்பெற்றியராயினும் மகிழ்ச்சி கோடல் ஒருதலை யாதலின், "கண்டு மகிழ்வுற்" றென்றார். 68-74. இறைவளை நல்லாள்-முன் கையில் வளையினையுடைய மணிமேகலை, கொண்ட வேடமொடு-தான்கொண்ட மாதவன் வடிவத்துடன், அந்தரசாரிகள் அமர்ந்து இனிது உறையும் - விசும்பின் வழியாகச் செல்வோர் இனிதாகத் தங்குகின்ற, இந்திர விகாரம் என எழில் பெற்று - இந்திர விகாரத்தைப் போலும் அழகு கொண்டு, நவையறு நாதன் நல்லறம் பகர்வோர் உறையும் - குற்ற மற்ற புத்தனது அருளறத்தைக் கூறுவோராகிய துறவியர் இருக்கும், பள்ளிபுக்கு - தவப் பள்ளியை யடைந்து, கோவலன் தாதை மாதவம் புரிந்தோன் பாதம் பணிந்து - கோவலற்குத் தந்தையும் அவற்குற்றது கேட்டுத் துறவு பூண்டு தவம் புரிவோனுமாகிய மாசாத்து வானைக் கண்டு அவன் அடிகளை வணங்கி; கோவலன் தாதையும் கச்சிவேந்தனும் மணிமேகலையின் உண்மையுரு வுணர்ந் துறையாடுப வாயினும் பிறரெல்லாம் மாதவனென்றே கொள்ளுமாறு மணிமேகலை மாதவன் வேடத் தோடே யிருத்தலின், "கொண்டவேடமொடு" என வற்புறுத்தினார். இவ்வேடம் கச்சிமாநகர்க்கண் அறவணனைக் கண்டு அமுதூட்டிய பின்பே நீங்குகிறதென வறிக. இந்திரவிகாரம், இந்திரனால் மனத்தாற் சமைக்கப்பட்ட அரங்கு. இதன் கண்ணிருந்து வேதசாரணர் அறம் பகர்வர் என்ப. இந்திரவிகார மென எழில் பெற்றுறையும் பள்ளி, அறம் பகர்வோர் உறையும் பள்ளியென வியையும்: மாசாத்துவான் துறவு பூண்ட செய்தி பின்னர் அவனாலேயே கூறப்படுகிறது. 74-80. தன் பாத்திரதானமும் - தன் கையிலுள்ள அமுத சுரபியால் செய்யப்படும் பெருஞ் சோற்றறமும், தானப் பயத்தால் சாவக மன்னவன் ஊனம் ஒன்று இன்றி உலகாள் செல்வமும் - அவ்வாறு சோறளித்த புண்ணியப் பயனால் ஆபுத்திரன் சாவக நாட்டினை யாளும் புண்ணிய ராசன் குறைவொன்றும் இல்லாமல் அரசளிக்கும் பேறு பெற்றதும், செல்வற் கொணர்ந்து அத்தீவகப் பீடிகை ஒல்காது காட்டப் பிறப்பினை உணர்ந்ததும்-அவ்வரசனை அழைத்துப்போய் மணிபல்லவத்தின்கண்ணுள்ள அப்பீடிகை விளங்கக் காண்பிக்க அவனைத் தன் முற் பிறப்பினை உணர்வித்ததும், உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி மனங்கவல் கெடுத்ததும்-பண்டைப் பிறப்புணர்ந்த சாவக மன்னன் முன்னே தீவதிலகை என்னும் உயரிய தெய்வம் வெளிப்பட்டு அவனது மனக்கவற்சியை ஒழித்ததும்; தன் கையிலுள்ள அமுதசுரபியை மாசாத்துவான் வியந்து நோக்கினானாக; அவற்கு முதற்கண் அதன் சிறப்புக் கூறினாளாதலாலும், இந்நூலாசிரியர், அதனைப் பின்னர், (வரி. 217-32) விரியக் கூறுகின்றா ராதலாலும், ஈண்டுப் "பாத்திரதானம்" என்றொழிந்தார். இவ்வறத்தால் விளையும் பயன் இது வென்றற்கு ஆபுத்திரன் சாவக வேந்தனான வரலாற்றைக் கூறுமாற்றால் "உலகாள் செல்வம்" என்றார். வேந்தனாகியும் அவ்வறப்பயனே நுகர்ந்தமை தோன்ற, அவனை, "செல்வன்" என்றார். தீவகம், மணிபல்லவம். ஒல்கல், சுருங்கல். ஆண்டுள்ள புத்தபீடிகை அவன் வரலாற்றை விரியக் கூறினமையின், "ஒல்காது காட்ட" என்றார். உணர்ந்தது: பிறவினைப் பொருட்டு. உயர் தெய்வம்-தீவதிலகை. இந்திரனால் நிறுவப்பட்ட தெய்வமாதலால், "உயர் தெய்வ" மெனச் சிறப்பித்தார். மனங்கவல் - மனக்கவலை. பண்டைப் பிறப்பு வரலாறு கேட்ட புண்ணியராசன் தன் முன்னைப் பிறவியிலெடுத்த உடம்பின் நிலைகண்டு கவன்றானாதலின், (25: 214-20) அதனை "மனங்கவல்" என்றார். கவல்: முதனிலைத் தொழிற் பெயர். 80-91. மாநகர் கடல்கொள அறவணவடிகளும் தாயரும் ஆங்கு விட்டு இறவாது இப்பதிப் புகுந்தது கேட்டதும்-காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல்கொள்ள அறவண முனிவரும் மாதவியும் சுதமதியும் இறந்து போகாமல் அம் முதுநகரை விட்டு இவ் வஞ்சி நகரத்தின்கட் புக்கதைத் தன்னைக் கேட்பித்ததும், சாவக மன்னன் தன்னாடு எய்த அத்தீவகம் விட்டு இத்திருநகர் அடைந்ததும் - புண்ணியராசன் தனது சாவகநாடு சேரத் தான் அம் மணிபல்ல வத்தினை விட்டு இவ்வழகிய நகரத்தைச் சேர்ந்ததும், புக்கபின் அந்தப் பொய்யுருவுடனே தக்கசமயிகள் தந் திறம் கேட்டதும் - இப்பதி புகுந்தபின் முன் கொண்ட மாதவன் வடிவத்துடனேயே பல்வகைச் சமயவாதிகளின் சமயக் கருத்து வகைகளைக் கேட்டதும், அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம் செவ்விது அன்மையிற் சிந்தை வையாததும் - அவரவர் சமயங்களில் அறிந்துரைத்த மெய்ப் பொருள்கள் எல்லாம் செவ்வியன அல்லாமையால் அவற்றைத் தான் மனத்துட் கொள்ளாமையும், நாதன் நல்லறம் கேட்டலை விரும்பி மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும் சொல்லினள் ஆதலின் - புத்தன் அருளறத்தைக் கேட்க விரும்பி அறவணவடி களைத் தேடித் தான் வந்த வரலாற்றையும் கூறினளாகலின்; மாநகர், காவிரிப்பூம்பட்டினம். "இறவாது இப்பதிப் புகுந்தது" என்றதனால், கடல்கோட்காலத்தே பலர் இறந்தமை பெறப்படுகிறது. தீவதிலகை கூறத் தான் கேட்டறிந்தாளாகலின், அத்தெய்வத் தாலென்பது வருவிக்கப்பட்டது. நகரின் செல்வமுற்றும் அறிந்து கூறலின், இந்நகரெனச் சுட்டியொழியாது "இத்திருநகர்" என்றாள். மாவதனுரு, தன்னியற்கையுரு வன்மையின், "பொய்யுரு" வென்றாள். பிறாண்டும், "மாயை" (245) என்பள். கேட்டற்குரிய தகுதியுடையன என்பது தோன்ற, "தக்க சமயிகள் தந்திறம்" என்றாள். செவ்விது: பன்மை யொருமை மயக்கம். பிறாண்டும் "செவ்விதன்மையிற் சிந்தையின் வைத்திலேன் (29 : 44) என்பது காண்க. மாதவன், அறவணன். அவன் கடல்கோட் காலத்தே வஞ்சிநக ரடைந் தானெனத் தெய்வம் கூறின மையின், அவனைக் காண நினைந்து வந்தமை தோன்ற, "மாதவற் றேர்ந்து வந்த வண்ணமும்" என்றார். வஞ்சியினின்றும் அவர்கள் கச்சி மாநகர் சென்ற செய்தியைப் பின்னர்மாசாத்துவான் உரைக்கின்றான். 91-102. தூயோய் நின்னை நான் கண்டது என் நல்வினைப் பயன் கொல் என - தூய குணஞ் செய்கை களையுடையாய், நின்னை யான் காணப்பெற்றது எனது நல்வினைப் பயனாகும் என்று மாசாத்துவான் கூறி மேலும் கூறலுற்று, தையல் கேள், நின் தாதையும் தாயும் செய்த தீவினையில் செழுநகர் கேடுறத் துன்புற விளிந்தமை கேட்டு - நங்காய் கேட்பாயாக, நின் தந்தையும் தாயும் முற்பிறப்பிற் செய்த தீவினையினாலே வளம் மிகுந்த மதுரைமாநகர் தீக்கிரையாகிக் கேடெய்துமாறு துன்புற்று இறந்தமை கேட்டு, சுகதன் அன்புகொள் அறத்திற்கு அருகனேன் ஆகலின் - புத்த தேவனின் அருளறத்தினைப் புரியுந் தகுதியுடையேனாகலின், மனைத்திற வாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து - இல்வாழ்க்கையைப் பொய்யென வறிந்து, செல்வமும் யாக்கையும் தினைத் தனையாயினும் நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே - பொருளும் உடலும் தினையள வேனும் நிலைபெறாதன என்பதனைத் தெளிவாக உணர்ந்து, மலையா அறத்தின் மாதவம் புரிந்தேன் - மாறுபடாத நல்லறத் தினையுடைய பெருந்தவஞ் செய்யலானேன்; புரிந்த யான் இப்பூங்கொடிப் பெயர்ப்படூஉம் திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்-அங்ஙனம் தவமேற்கொண்ட யான் அழகிய வஞ்சிக்கொடியின் பெயரினையுடைய இவ்வழகு மிக்க நகரத் தினை அடைந்த காரணத்தைக் கேட்பாயாக; கோவனையும் கண்ணகியையும் "நின் தாதையும் தாயும்" என்றான். முற்பிறப்பிற் செய்த தீவினைப் பயனாக இப்பிறப்பில் மதுரையில் கோவலனும் கண்ணகியும் துன்புற்றாரென்பான், "செய்த தீவினையின் துன்புற" என்றும் அவர் துன்புறுங் காலம் மதுரை தீக்கிரையாதற்கு உரிய சாபம் பயன் விளைக்குங் காலமாதலின், "செழுநகர் கேடுற" என்றும் கூறினான். புத்தனைச் சுகதனென்ப. அவனுரைத்த அருளறம் அன்பறத்தின் காரியமாகுதல் பற்றி, "அன்புகொள் அறம்" என்றார். புத்தவறங்களை "மலையாவற" மென்றது எத்திறத்தோரும் தவறென மறுத்தற் காகானை பற்றி, எல்லா வுயிர்க்கும் அன்பு செய்ய வேண்டுமென்ற அறம் எம்மதத் தோர்க்கும் சம்மதமானதென்பதை, "தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி, தின்னுயிர் நீக்கும் வினை "(குறள் 327) எனத் திருவள்ளுவர் கூறவது காண்க. உயரிய நாகரிகத்திற்கேற்ற கூறுகளெல்லாம் குற்றமறப் பொருந்திய நகரமென்றற்குத் "திருந்திய நன்னக" ரென்றான். 103-106. குட்டுவர் பெருந்தகை - சூட்ட நாட்டவர்க்குப் பெரிய தகுதியடைந்த தலைவனும், விடர்ச்சிலை பொறித்த வேந்தன் - மலை முடியிலுள்ள சரிவிலே தன் விற்பொறியைப் பொறித்த வேந்தனுமாகிய; குடக்கோச் சேரலன்-குடக்கோச் சேரலாதன் என்பான்; முன் நாள் - முன்பொரு காலத்தே; துப்படு செவ்வாய்த் துடியிடையாரொடு - பவளம் போற் சிவந்த வாயும் துடிபோலு மிடையுமுடைய உரிமை மகளிருடன் போந்து; இப்பொழில் புகுந்து-இச் சோலையை யடைந்து; இனிதிருந்த எல்லையுள் - இன்ப நுகர்ந் திருந்த போழ்து; குட்டுவர் - குட்ட நாட்டவர்; "பல்குட்டுவர் வெல்கோவே" (பத்- மதுரைக் 105) என்பது போல. மிக்க தகுதியுடையாரன்றிப் பிறர் தலைவராதல் கூடாமை தோன்ற, "பெருந்தகை" யென்றார். விடர்-மலை முடியிலுள்ள சரிவு; மலை முடியிடையுள்ள பிளவாய் மக்கள் வழங்கும் வழியைச் சார்ந்ததுமாம்; நவிரமலைப் பிளவில் பல்லவர் தம் வெற்றியைக் குறித்த செய்தியைத் திருவண்ணாமலைக் கல்வெட்டுக் கூறுகிறது. குடக்கோச் சேரலாதன் சேரன் செங்குட்டுவற்கு ஒன்பது தலைமுறை மூத்தவனாதலின், இவனை அச்செங்குட்டுவன் தந்தையான இமயவரம்பனாகக் கோடல் பொருந்தாது; "நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை, முன்னோன் கோவலன் மன்னவன் றனக்கு, நீங்காக் காதற் பாங்கன்" (மணி. 28: 123-5) என்று இவ்வாசிரியர் கூறுதல் காண்க. கோவலன் மதுரையிற் கொலையுண்டிறந்த காலத்து சேர நாட்டு வேந்தன் செங்குட்டுவனென வுணர்க. இப்பொழில் என்றது, மாசாத்துவான் இருந்து தவம் புரிந்த சோலை. ஆங்கு: அசைநிலை; ஓரிடத்தைச் சுட்டி ஆங்கென்றா னென்றுமாம். 107-113. இலங்கா தீவத்துச் சமனொளி என்னும் சிலம்பினை எய்தி வலங்கொண்டு மீளும்-இலங்கைத் தீவின்கணுள்ள சமனொளி என்னும் மலையை அடைந்து வலஞ்செய்து வணங்கி மீள்வோராகிய, தரும சாரணர் தங்கிய குணத்தோர் கருமுகிற் படலத்துக் ககனத்து இயங்குவோர் - தரும சாரணரும் நற்குணங்கள் அமைந்தோரும் கரிய முகிற் கூட்டங்களையுடைய விசும்பின் வழியே திரிவோரும் ஆகிய, புரையோர் தாமும் அரைசற்கு ஏது அவ்வழி நிகழ்தலில்-உயர்ந்தோர்கள் அரசனுக்கு நல்வினையாகிய காரணம் பயனளித்திடற்கு அவ்விடத்தே தோன்றிடலால், இப் பூம்பொழில் இழிந்து - இவ் வழகிய பொழிலின் கண்ணே இறங்கி, கற்றலத்து இருந்துழி - சிலாதலத்தின்கண் அமர்ந்தபொழுது; புத்த தருமத்தை ஆங்காங்குச் சென்று பகரும் தொழிலினரைத் தருமசாரணரென்ப. அசோகமன்னனால் தருமவுரை குறித்து நாடுகட்கு விடுக்கப்பட்டோரைச் சாரணரென்பவென நாட்டு வரலாறுகூறுகிறது. ஈண்டுக் கூறப்படும் சாரணர் இலங்கைக்குச் சென்று மீள்வோராவர். கருமுகிற் படலத்துக் ககனத் தியங்குவோ ரென்றற்குக் கருமுகிற் கூட்டத்தை ஊர்தியாகக் கொண்டு வானவீதியிற் செல்பவரென்றுமாம். புரை யோர் - உயர்ந்தோர். உம்மை: சிறப்பு. இதனால் வான்வழியாகச் செல்லும் சாரணர் இப் பொழிற்கண் இறங்குதற்குக் காரணம் கூறுதலின், "அரசற்கு ஏது அவ்வழி நிகழ்தலின்" என்றார். அவர்கள் இருந்து அறங் கூறுதற்பொருட்டுக் கற்றலம் எடுத்துவைத்தல் மரபு; இதனைச் சிலா தலம் என்றலும் வழக்கு; "இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப், பெருமக னதிசயம் பிறழா வாய்மைத் தருமஞ் சாற்றும் சாரணர்" (சிலப்.10:161-163) என்று அடிகள் கூறுவது ஒப்பு நோக்கத்தக்கது. 114-122. "முற்றவம் உடைமையின் காவலன் விரும்பி முனிகளை ஏத்தி - முற்பிறப்பிற் செய்த நற்றவமுடையோனாகலின் அரசன் அச் சாரணரை விருப்பத்துடன் கண்டு துதித்து, பங்கயச் சேவடி விளக்கிப் பான்மையின் அங்கவர்க்கு அறுசுவை நால்வகை அமிழ்தம் பாத்திரத்து அளித்து - அவருடைய தாமரை மலர்போலும் திருவடிகளை விளக்கி அவர்க்கு ஏற்ற தன்மையினால் அறுசுவை யினையும் உடைய நான்கு வகைப்பட்ட உணவுகளையும் அளித்து, வேத்தவை யாரொடும் பலபலசிறப்பொடு ஏத்தினன் இறைஞ்சலின் -அரசவை யுறுப்பினரோடு கூடிப் பற்பல சிறப்புக்களைச் செய்து துதித்து வணங்கினா னாகலின், பிறப்பில் துன்பமும் பிறவா இன்பமும் - பிறப்பினால்வரும் இன்னலும் பிறவாமை யினாற் பெறும் இன்பமும், அறத்தகை முதல்வன் அருளிய வாய்மைஇன்ப ஆரமுது - அற முதல்வனாகிய புத்தன் அருளிச் செய்த நால்வகை வாய்மையும் ஆகிய இன்பம் பயக்கும் கிடைத்தற்கரிய அமிழ்து போலும் அறவுரைகளை; துன்பம் நீங்க - பிறவித் துன்பம் நீங்குமாறு, இறைவன் செவி முதல் சொரியும் அந்நாள் - மன்னவன் செவிகளிடமாக உரைத்த அந்நாளில்; "தவமும் தவமுடையார்க் காகும்" (குறள்: 262) என்பதுபற்றி, "முற்றவம் உடைமையின்" என்றார். இனிப்பு, புளிப்பு முதலாகச் சுவை ஆறும், தின்னல் பருகல் முதலாக உணவுவகை நான்கும் கொள்க. சாரணர்க்குரிய வழிபாட்டினைத் தனித்த முறையினும் பல்வகைச் சிறப்புக்களை வேத்தவையாருடனும் வேந்தன் ஆற்றினான், அஃது அரசுமுறை யாதலின். பிறப்பிற் றுன்பம்-பிறப்பினானாகுந் துன்பம்; "பிறந்தோருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்" (மணி. 2: 54) என முன்னரும் கூறினர். அறத்தை அமிழ்தென்றராகலின், அதற்கேற்ப, "செவி முதல் சொரிந்து" என்றும், அதனால் விளையும் பயனை, "துன்பம் நீங்க" என்றும் கூறினார். தவமுடைமையின், காவலன் ஏத்தி, விளக்கி, அளித்து, இறைஞ்சலின், அச் சாரணர் வாய்மை யின்பவாரமுது செவி முதற் சொரியு மந்நாள் என இயையும். 123-136. நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழிமுறை முன்னோன் கோவலன் - நின் தந்தையாகிய கோவலனுக்கு ஒன்பதுதலை முறை முன்னோனாகிய கோவலன் என்பான், மன்னவன் தனக்கு நீங்காக் காதற் பாங்கன் ஆகலின்-குடக்கோச் சேரலாதனுக்கு எப்பொழுதும் பிரியாத அன்புடை நண்பனாதலின், தாங்கா நல்லறம் தானும் கேட்டு - தரும சாரணருரைத்த நல்லறத்தினை அரசனுடனிருந்து தானும் கேட்டு, முன்னோர் முறைமையிற் படைத்ததை அன்றித் தன்னால் இயன்ற தனம் பல கோடி-தன் முன்னோர்கள் நல்வழியினாலே படைத்த பெரும் பொருளோடே தன்னால் ஈட்டப்பட்ட அளவிறந்த நிதி களையும், எழுநாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து-ஏழு நாட்களுள் இரப்போர்க் களித்து; தொழுதவம் புரிந்தோன்-யாவரும் வணங்கும் தவம் புரிந்தனன்; சுகதற்கு இயற்றிய வானோங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம் - புத்த தேவனுக்கு வானளாவிய மலையின்கண் அமைத்த வெள்ளிய ஒளியினையுடைய கோயில், ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது - இவ் வுலகின் கணுள்ளோர்கட்கெல்லாம் துன்பம் நீங்கும் பொருட்டு அமைந்தது, கண்டு தொழுது ஏத்தும் காதலின் - யான் அதனைக் கண்டு வணங்கித் துதிக்கும் விருப்பத்தாலாகும்; வந்து - இவண் வந்து, இத் தண்டாக் காட்சித் தவத்தோர் காவிரிப்பட்டினம் கடல்கொளும் என்ற - நீங்காத நல்லறிவினையுடைய இப் பெருந் தேவர்கள் காவிரிப்பூம்பட்டினம் கடல்கோட்படும் எனச் சொல்லி யருளிய; அத் தூவுரை கேட்டுத் துணிந்து இவண்இருந்தது - அந் நன்மொழிகளைக் கேட்டு அங்குப் போதலாகாதெனத் துணிந்தமையால் இவ்விடத்தே யிருப்பேனாயினேன் எ - று. "திருந்திய நன்னகர் சேர்ந்தது கேளாய்" (102) என்றவன் அதற்குக் காரணம் கோவலன் இயற்றிய சயித்தியம் இயன்றது கண்டு தொழுதேத்தும் காதலினால், தூவுரைகேட்டுத் துணிந் தமையால் இவணிருந்தது என்றான் என இயைத்துக்கொள்க. கோவலனோடு அக்குலம் தொடர்பற்றுப் போதலின் "நின் பெருந்தாதை" யென்றான். முன்னோனாகிய கோவலன் வேந்தனொடு கூடியிருந்து அறங்கேட்டற்குக் கரணம் கூறுவான், "மன்னவன் தனக்கு நீங்காக் காதற்பாங்க னாதலின்" என்றும், மலைமேற் கட்டிய சீகோவில் என்றற்கு, "வானோங்கு சிமையத்து வாலொளிச் சயித்தம்" என்றும், அதனைத் தான் வழிபட விரும்பியதற்குக் காரணம் இதுவென்பான், "ஈனோர்க் கெல்லா மிடர் கெட வியன்றது" என்றும் கூறினான். துணிந்து: காரணப்பொருட்டு. 137-146. நன்னெறி மாதே இன்னுங் கேளாய் - தவநெறியில் ஒழுகும் மணிமேகலையே இன்னும் யான் கூறுவதைக் கேட்பாயாக; தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்-தீவினைவந்து தன் பயனை நல்குதலாலே கொலை யுண்டிறந்த நின் தந்தையும், முற்செய் தவப்பயத்தால் தேவரில் தோற்றி - முன்செய்த தவப் பேற்றால் உம்பருலக வாழ்வினை எய்தி, ஆங்கத் தீவினை இன்னுந் துய்த்து - பழவினையின் பயனை நுகர்ந்து, பூங்கொடி முன்னவன் போதியில் நல்லறம் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி-இளங்கொடியே, புத்தர் அரசமரத்தின்கீழ் அருள றத்தைமேற்கொண்டிருக்குங்கால் தானும் தவம் பூண்டு; காதலி தன்னொடு கபிலையம்பதியில் நாதன் நல்லறம் கேட்டு வீடெய்தும் என்று - மனைவி கண்ணகியுடன் கபிலைப் பதியில் புத்தன் அறவுரைகளைக் கேட்டு நிருவாண மடைவான் என்று, அற்புதக் கிளவி அறிந்தோர் கூற-தெய்வக் கிளவிகளை உணர்ந்தோர் கூற, சொற்பயன் உணர்ந்தேன் - அச்சொற்களின் பயனை நான் அறிந்தேன். "நன்னெறி மாதே" யென்றான், கோவலன் இறந்ததற்குக் காரணம் அவனது முன்னைவினை என்பதை யுணர்ந்திருப்பது பற்றி. வினை உருத்தல்-பிறவுருவுடைப் பொருள் வாயிலாக வினையானது தன் பயனையூட்டுதல். பொற்கொல்லன் வேந்தன் முதலாயினார் வாயிலாகக் கொலைத் துன்பமாகிய பயனை நல்குவது. அடிகளும், "ஊழ்வினை யுருத்துவந்தூட்டு" மென்பது காண்க. நல்வினைப் பயன் முன்னரும்தீவினைப் பயன் பின்னரும் துய்க்கப்படுமென்பது சான்றோர் முடிபாதலின், "தேவரிற் றோற்றி" யென்றும், "இன்னும் துய்த்து" என்றும் கூறினான். "மேற் செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம், அவ் வினை யிறுதியின் அடுசினப் பாவம், எவ்வகை யானு மெய்துத லொழியாது" (26:35-7.) எனக் கண்ணகி கூறுதல் காண்க. இது சமண சமயத்துக்கும் உடன்பாடாதலை "நல்வினை கழிதலும் நலியுந் தீவினை, செல்வதே போலிருள் செறிந்து சூழ்ந்தது" (சூளா. கல். 231.) என்பதனாலறிக. "ஆங்கத் தீவினையின்னும் துய்த்து" என்பதனால் கோவலன் முன்னைத் தீவினைப் பயன் முற்றும் நுகர்ந்து கழித்தற் குள்ளாகவே கொலையுண்டா னென்றும், அதனைத் தேவப் பிறப்புக்குப் பின்பு நுகர்வனென்றும் அறிக. கோவலனாயிருந்த காலத்து நல்வினையே புரிந்தானென்ப: "இம்மைச் செய்தன யானறி நல்வினை" (சிலப்.15:61) என்பதனாலறிக. எதிர்கால நிகழ்ச்சியை விளங்க முற்கூட்டிக் கூறலின் "அற்புதக்கிளவி" யென்றும், அது பொய்யா தென்றற்கு, "அறிந்தோர் கூற" என்றும் கூறினான். 146-154. தோகை-மயில் போல்வாய்; யானும் அந்நாள் அறநெறி கேட்குவன்- நானும் புத்தன் போதியின்கீழ் உரைத்தருளும் அறநெறிகளை அப்போது உடனிருந்து கேட்பேன்; நின்னது தன்மை அந் நெடுநிலைக் கந்தில் துன்னிய துவதிகன் உரையில் துணிந்தனை அன்றோ-உன்னுடைய பின்னிகழ்ச்சிகளைக் கந்திற்பாவை மொழியால் தெளிந்தனை யல்லவோ, அறவணன் சாற்றக் கேட்டனன் - அறவண முனிவர் கூற அதனை நான் கேள்வியுற்றேன், ஆங்கவன் தானும் நின் அறத்திற்கு ஏதுப் பூங்கொடி கச்சிமா நகராதலின் - பூங்கொடிபோல்வாய் நின் அறத்திற்குரிய ஏதுநிகழ்ச்சி கச்சி நகரத்தின்கண் உண்டாமா கலான் அறவணவடிகள் ஆண்டுச் சென்றனர், அம் மாநகர் மாதவன் பெயர்நாள் பொற்றொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர் - அம் மாதவர் காஞ்சி நகரத்திற்குச் சென்ற நாளில் நின் அன்னையரும் ஆண்டுச் சென்றனர்; "அறநெறி கேட்குவன்" என்பது மாசாத்துவாற்கு எதிர்காலத்தில் நிகழ்வது கூறியது. மணிமேகலைக்கு எதிர்காலத்து நிகழவிருப் பதனை "நின்னது தன்மை" என்றும், அது கந்திற்பாவை வருவதுரைத்த காதைக்கண், "துவதிக னுரைக்கும் சொல்லாலுஞ் சொல்லுவேன்" என்று தொடங்கிக் கூறுவனவற்றால் விரியக் கூறப்படுதலின், "துவதிகனுரையிற் றுணிந்தனை" யென்றும் கூறினான். மணிமேகலைக்குப் புத்தவறம் கேட்டற்குரிய ஏது நிகழ்ச்சி கச்சிமாநகர்க்கண் எய்துமென அறவணவடிகளால் தனக்கு முன்பே கூறப்பட்டிருப்பதாக மாசாத்துவான் கூறுவது மணிமேகலையைக் கச்சிமாநகர்க்குச் செல்லப் பணிக்கும் குறிப்பிற்று. அதனையே மேலும்வற் புறுத்தற்கு, அவன் கச்சி நகர்க்குச் சென்ற செய்தியைத் தெரிவித்து நீயும் ஆண்டுச் செல்க வென்றற்கு "தாயரும் அப்பதிப் படர்ந்தன" ரென்றான். இனிக் கச்சி மாநகரின் நிலைமையைக் கூறுகின்றான். 155-162. அணியிழை அன்னதை அன்றியும் கேளாய்-புனையிழாய் அதனை அல்லாமலும் இன்னுமொன்று கேள், பொன்னெயில் காஞ்சிநாடு கவின் அழிந்து மன்னுயிர் மடிய மழைவளம் கரத்தலின்- பொன் மதிலையுடைய கச்சி நகரம் அழகு கெடப் பலவுயிர்களும் இறக்குமாறு மழைவளம் இல்லாதொழிந் தமையால், அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய் - அப் பதியில் இருந்த அறவோருக்கு அன்னமிடுவோர் இல்லாமையினால் இப் பதியை அடைந்திருக் கின்றவர்களைக் காண்பாயாக, ஆருயிர் மருந்தே அந் நாட்டு அகவையில் காரெனத் தோன்றி காத்தல் நின்கடன் என அருந்தவன் அருள - ஆகலின் அரிய வுயிரை அளிக்கும் மருந்து போல்வாய்! நீ அந் நகரத்தின்கண் மழைதரும் முகிலெனத் தோன்றி அவ் வுயிர்களைக் காப்பாற்றுதல் நினக்குக் கடமையாம் என்று மாசாத்துவான் கூற; அழிந்து: செயவெனச்சத்திரிபு. மடிய: செயவெனெச்சம் காரியப் பொருட்டு. அந்நகர் மாதவர்க் கென்றான், மாதவர்க்கு யாதும் ஊரே யாவரும் கேளிரேயாயினும், பௌத்த சமயப் பேரறமுணர்ந்த பெரியோர் இருக்கும் சிறப்புப்பற்றி, ஆண்டிருந்து வந்திருந்தோரை, "அந்நகர் மாதவர்" என்றான். அவர்கள் ஈண்டு வந்திருத்தற்குக் காரணத்தை "ஐயமிடுவோர் இன்மையின்" என்பதனால் குறித்தான். ஆருயிர் மருந்தாகிய உணவுதரும் அமுதசுரபியை யுடைமைபற்றி, மணிமேகலையை, 'ஆருயிர் மருந்தே'' என்றான். வரையாது வழங்கவேண்டுமென்ற குறிப்பால், "காரெனத் தோன்றி" என்றும், செய்யாமை குற்றமென்பது தோன்ற, "காத்தல் நின் கடன்" என்றும் குறிப்பாய்ச் சொன்னான் என்பது. 162-176. ஆயிழை வணங்கி - அழகிய இழையணிந்த மணிமேகலை மாசாத்துவானை வணங்கி விடை பெற்றுக் கொண்டு, திருந்திய பாத்திரம் செங்கையின் ஏந்தி-தெய்வத்தன்மை பொருந்திய அமுதசுரபியைத் தன் சிவந்த கைகளில் ஏந்தி, கொடிமதில் மூதூர்க்குடக்கண் நின்று ஓங்கி - கொடிகளையுடைய மதில் சூழ்ந்த பழமையாகிய வஞ்சிநகரத்தின் மேற்றிசையினின்றும் எழுந்து, வடதிசை மருங்கின் வானத்து இயங்கி - வடதிசைப் பக்கமாக விசும்பிற் சென்று, தேவர்கோமான் காவல்மாநகர் மண்மிசை கிடந்தென வளந்தலை மயங்கிய - தேவர் கட்கரசனான இந்திரன் அரசு புரியும் அமராவதியே வந்து நிலவுலகில் இருந்ததுபோல வளஞ்சிறந் திருந்த, பொன்னகர் வறிதாப் புல்லென்று ஆயது கண்டு உளங்கசிந்த ஒண்டொடி நங்கை - அழகிய நகரமான கச்சிமா நகரம், வறுமையாற் பொலிவிழந்து புல்லென்றிருந்த தன்மையைக் கண்டு மனங் கசிந்த மணிமேகலை, பொற்கொடி மூதூர்ப் புரிசை வலங் கொண்டு நடுநகர் எல்லை நண்ணினள் இழிந்து - அழகிய கொடி யினையுடைய அத்தொன்மை நகரத்தின் மதிலை வலஞ் செய்து நடு'd2வூரின் எல்லையை அடைந்து இறங்கி, தொடுகழற்கிள்ளி துணையிளங் கிள்ளி - தொடுகழற் கிள்ளியின் தம்பியாகிய இளங்கிள்ளி, செம்பொன் மாச்சினைத் திருமணிப் பாசடைப் பைம்பூம்போதிப் பகவற்கு இயற்றிய சேதியம் தொழுது - சிவந்த பொன்போன்ற பெரிய கிளை களையும் அழகிய மரகதமணியனைய பசிய இலைகளையும் பசிய பூக்களையுமுடைய போதியின் கீழமர்ந்த புத்ததேவற்குக் கட்டுவித்த கோயிலைப் பணிந்து, தென்மேற்காகத் தாதணிபூம் பொழில் தான் சென்று எய்தலும்-தென்மேற்றிசையிற் சென்று தேன் பொருந்திய அழகிய மலர்ச்சோலையைத்தான் அடைதலும்; மீட்டும் வணக்கம் செய்தது விடைபெறுவது குறித்தலின், வணங்கி யென்பதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. மணிமேகலை கையிலிருக்கும் அமுதசுரபி, அவள் போம்போது உடன்போதல் ஒருதலையாகவும், ''திருந்திய பாத்திரம் செங்கையி னேந்தி'' யென்றார். அதனால் மன்னுயி ரோம்பலும் அறவணனைக் காண்டலும் பின்பு அறங்கேட்டலும் நிகழ்தற் சிறப்புப் பற்றி, இந்திரன் காக்கும் அமராவதி நகரை, ''தேவர் கோமான் காவன் மாநகர்'' என மிகுத்தோதியது, பொலிவற்றுப் புல்லென்று தோன்றும் கச்சிநகர், வளமுற்றிருந்த காலத்திருந்த சிறப்பைப் புலப்படுத்தற்கு. வளந்தலை சிறந்த நகரம் பொலிவிழந்திருப்பது காண்பவள் அருள்மிகுதியால் உளங்கரைந்து இரங்குவது தோன்ற, ''கண்டுளங் கசிந்த'' என்றும், அதனைத் தொடி நெகிழ்ந்து காட்டுமாதலின் ''ஒண்டொடி'' யென்றும் குறித்தார். ஒண்டொடி நங்கை சுட்டுமாத் திரையாய் நின்றது. ''காணுநர் கைபுடைத் திரங்க, மாணா மாட்சிய மாண்டன பலவே'' (பதிற். 19) என்று பிறரும் கூறுப. இழிந்து நண்ணினள் என மாறுக. நண்ணினள்: முற்றெச்சம். சயித்தியம் என்பது சேதியம் என வந்தது. ஆயிழை வணங்கி, கண்டு, உளங் கசிந்தவள் வலங்கொண்டு, இழிந்து நண்ணி, தொழுது, சென்றெய்தலும் என முடிக்க. 177-183. வையங் காவலன் தன்பாற் சென்று கைதொழுது இறைஞ்சிக் கஞ்சுகன் உரைப்போன்-இளங்கொடையைக் கண்ணுற்ற கஞ்சுகன் ஒருவன் மாநிலங் காவல் புரியும் அரசன்பாற் சென்று கைகூப்பி வணங்கிக் கூறுவானாய், கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள் நாவலந்தீவில் தான்நனிமிக்கோள் - கோவலனுடைய புதல்வியும் துறவறம் பூண்டு நற்றவம் புரிபவளும் சம்புத்தீவின்கண் மிகச் சிறந்தவளுமாகிய மணிமேகலை என்பாள், அங்கையின் ஏந்திய அமுத சுரபியொ- தான் கையி லேந்தியுள்ள அமுதசுரபி என்னும் தெய்வக் கடிஞையுடன், தங்காது மாமழைபோல் இப்பதித் தருமத வனத்தே வந்து தோன்றினள் - இந்நகரத்தின்கணுள்ள தருமத வனத்தில் பெருமுகில் போல வந்துதோன்றினள் என மொழிய; கஞ்சுகன் சட்டையிட்ட அரச சேவகன், காவலன், இளங்கிள்ளி, குணவதம், இதனைக் குணவிரதம் என்ப; இச்சொல் சமணூல்களிற் பயில வழங்குவது. பௌத்த நூல்கள், தூதகுணம் என்றும் அது பன்னிருவகை விரதங்களையுடையதென்றும் கூறுதலின், அது குறித்து, ''குணவதம்'' என்றார். அவை பஞ்சகுலிகம், திரிசிவரிகம், நாமாதிகம், வைந்தபாதிகம், ஏகாசநிகம், கலுபச்ச பத்திகம், ஆரணியகம், விருக்க மூலிகம், அபியவாகசிகம், சமச்சானிகம், நைசாதிகம், யதாசமஸ்தாரிகம் எனப் பன்னிரண்டாம். இவற்றை இஷ்ட சகஸ்ர பிரக்ஞ பாரமிதை முதலிய பௌத்த நூல்களிற் கண்டுகொள்க. மழைமுகில் மலை முதலிய வற்றால் தடைப் பட்டுத் தங்கி யொழிவதுபோல தங்காது நேரே தான் குறித்த விடம் போதருதலால் ''தங்காது'' என்றும், மழைவர உயிர்கள் தளிர்த்தல்போல் இவள் வரவால் மக்கள் பசி நீங்கி இன்பம் பெறுமாறு தோன்ற ''மாமழைபோல் வந்து தோன்றினள்'' என்றும், வந்து தங்கியிருக்குமிடந்தானும் இது வென்றற்கு ''தருமதவனத்தே'' யென்றுங் கூறினான். சென்று காண்பது நலம் என்பது குறிப்பு. 184-187. மன்னனும் விரும்பி மந்திரச் சுற்றமொடு - அரசனும் அது கேட்டு ஆவலுடன் அமைச்சர் முதலாயினோர் சூழ்வர, கந்திற்பாவை கட்டுரை எல்லாம் வாயாகின்றன வந்தித்து ஏத்தி-கந்திற்பாவை மொழிந்த பொருளுரை யாவும் உண்மையேயாகின்றன என எண்ணி அதனை நினைத்துத் துதித்து, ஆய்வளை நல்லாள் தன்னுழைச் சென்று - அழகிய வளையணிந்த நற்றவம் பூண்ட மணிமேகலைபாற் சென்று; மணிமேகலையைக் காணச் செல்லும் வேந்தன் அமைச்சர் முதலாயினாருடன் சேறல் சிறப்பாதலின், “மந்திரச் சுற்றமொடு'' என்றார் ; செய்வதும் தவிர்வதும் அவ்வப்போது தெரிந்துரைப்பவ ரவராதலின். மணிமேகலை வரவை முன்னரே கந்திற்பாவை வேந்தற் குரைத்திருத்தலின், அவன் ''கட்டுரை யெல்லாம் வாயாகின்று'' என்று வியந்தான்: பன்மை யொருமை மயக்கம். 188-191. நலத்தகை நல்லாய் செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ கொங்கவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ-நற்குண நற்செய்கைகளையுடையாய்! எனது செங்கோலானது வளைந்ததனாலோ துறவோர் தவநெறியிற் றிறம்பியதாலோ தேன் சொரியும் மலர் சூடிய கூந்தலையுடைய மகளிர் கற்புக் குறைந்ததனாலோ, நன்னாடு எல்லாம் அலத்தற்காலை ஆகியது அறியேன் - நலஞ் சிறந்த நாடெங்கும் எதனால் இவ்வறுமைக் காலம் வந்தெய்தியது என்று அறியாது மயங்கு வேனாயினேன்; மணிமேகலை மாதவனுருவில் தோன்றினாளாயினும் கச்சி நகர்க் கண் இருந்த கந்திற்பாவை யுரைத்திருந்தபடியால், அதுவே வாயிலாக அவளைக் கஞ்சுகனும் வேந்தனும் தெரிந்து கொண்டனரெனக்கொள்க. அதனாற்றான் “நலத்தகை நல்லாய்'' என்றான். அரசு கோல்கோடலும் மாதவர் நோன்பு கெடலும் மகளிர் கற்புக்குறைபடலும் நாடு நலங் குன்றுதற் கேதுவாகலின், ''கோல் கோடியோ தவம் பிழைத்தோ கற்புக் குறைபட்டோ நன்னா டெல்லாம் அலத்தற் காலையாகியது'' என்றும், இக்குறையினைக் காண முயன்றும் அம்முயற்சி பயன்படாமையின், “அறியேன்'' என்றும் கூறினான். அலத்தற் காலை - துன்பக் காலம்: ஈண்டு வறுமை மேற்று. 192-206. மயங்குவேன் முன்னர் ஓர் மாதெய்வம் தோன்றி - கலக்க முறுவேன் முன்னே ஒரு பெரிய தெய்வம் வெளிப்பட்டு, உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர் காரிகை தோன்றும் - வருந்தற்க எனத் தேற்றி நினது பெருந் தவத்தினாலே ஈண்டு ஒரு மங்கை வருவாள் என்று சொல்லி, அவள் பெரும் கடிஞையின் ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்-அவள் கையிற் கொண்ட பெருமை பொருந்திய பாத்திரத்தின் கண்ணுள்ள நிறைந்த உயிர்களின் பசிப்பிணிக்கு மருந்தாகிய உணவினால் பெரிய நிலத்து மக்கள் உய்தி பெறுவர், ஆங்கவள் அருளால் அமரர்கோன் ஏவலில் தாங்கா மாரியும் தான் நனி பொழியும் - அவளது அருளினாலே இந்திரன் ஏவல்பெற்று முகில்கள் மிக்க மழையை மிகவும் பொழியும், அன்னாள் இந்த அகனகர் புகுந்த பின்னாள் நிகழும் பேரறம் பலவால் - அந்நங்கை இந்தப் பெரிய நகரத்திற் புகுந்த பின்பு ஈண்டு நிகழும் பெரிய அறங்கள் பலவாகும், கார் வறம் கூரினும் நீர்வறங் கூராது - மழை பெய்யாது ஒழியினும் நீர் வறுமை யுண்டாகாது, பண்டையோர் இழைத்த - முன்னோரால் அமைக்கப் பெற்ற, கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சியொடு மாமணிபல்லவம் வந்தது ஈங்கென - கொழுவிய நீரினையுடைய கோமுகி என்னும் பொய்கையுடன் பெரிய மணிபல்லவமே ஈண்டு வந்திருக்கின்றது என்னுமாறு, பொய்கையும் பொழிலும் பாரகம் விதியிற் புனைமின் என்று அறைந்து அத் தெய்வம் போயபின் - வாவியுஞ் சோலையும் இந்நிலத்தே முறைப்படி உண்டாக்கி அழகு படுத்துவீராக என்று கூறி அத்தெய்வம் சென்ற பின்னர்; செய்து யாம் அமைத்தது இவ்விடம் என்றே அவ்விடங் காட்ட - யாங்கள் செய்தமைத்த இடம் இதுவாகும் என்று கூறி அவ்விடத்தை மணிமேகலைக்குக் காட்ட; மயங்குவேன் முன்னர்த் தெய்வம் தோன்றி, தோன்றும், நிலம் உய்யும், மாரி பொழியும், அறம் பலவால், வறங்கூராது, புனைமின் என அறைந்து போயபின், அமைத்தது இவ்விடம் என்று காட்ட என, இயையும். மணிமேகலை போதருதற்குக் காரணம் வேந்தனது தவம் என்றற்கு “நின்னுயர் தவத்தால்'' என்றார். ஆருயிர் என்புழி, ஆர்தல்- நிறைதல். மிக்க மழை யென்றற்குத் “தாங்கா மாரி'' என்றார். கோமுகிப் பொய்கையை மணிபல்லவத்தின்கண் பண்டையோர் இழைத்தன ராதலின், கடனடுவணுள்ள தீவின்கண்ணுள்ளது போல நிலத்திடத்தும் முறைப்படி செய்தமைத்தலின், “பாரக விதியின்'' என்றார். பாரக விதியிற் புனைமின் என இயைக்க. செய்தி - செயற்கை ; எனவே மணிபல்லவம் இயற்கையா யமைந்த தென்றும், கோமுகி மட்டில் பண்டையோரிழைத்த தென்றும் கொள்க. பாரக வீதியின் என்றும் பாடம். 206-219. அத்தீவகம் போன்ற காவகம் பொருந்தி கண்டு உளஞ்சிறந்த காரிகை நல்லாள் - மணிபல்லவத்தை ஒத்த அச்சோலையிற் சென்று அதன் சிறப்பினைக் கண்டு மன மகிழ்ந்த மணிமேகலை, பண்டை யெம்பிறப்பினைப் பான்மையிற் காட்டிய அங்கப்பீடிகை இதுவென - எம்முடைய பண்டைப் பிறப்பை அறிவுறுத்திய அத் தீவின்கணுள்ள புத்த பீடிகை இதுவாகும் என்று, அறவோன் பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து - புத்தன் திருவடித் தாமரை பொருந்திய பீடிகை முறைப்படி யமைத்து; வந்தித்து ஏத்துதற்கு தீவதிலகையும் திருமணிமேகலா மாபெருந் தெய்வமும்-தான் வணங்கி வழிபடும் பொருட்டுத் தீவதிலகையையும் மணிமேகலா தெய்வத்தையும், ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து - பீடிகைக்கேற்பவமைந்த கோயிற்குள் ஆண்டைய தகுதியெல்லாமமையச் செய்தமைத்து, விழவுஞ் சிறப்பும் வேந்தன் இயற்ற - அவற்றிற்கு விழாக்களும் வேறு சிறப்புக்களும் அரசனைக்கொண்டு இயற்றுவித்து, தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்தி - வணங்கப்படுந் தகுதியினையுடைய மணிமேகலை பணிந்து துதித்து, அங்கையின் ஏந்திய பசிப்பிணி மருந்து எனும் அமுத சுரபியை - கையில் ஏந்தியுள்ள பசியாகிய நோய்க்கு மருந்து என்னும் அமுதசுரபியை, பங்கயப் பீடிகை வைத்து நின்று எல்லா வுயிரும் வருக என - புத்த பீடிகைக்கண்ணே வைத்து நின்று அனைத்துயிரும் உணவுண்ண வருக என அழைக்க; தன் பிறப்பும் மாதவி சுதமதி முதலாயினார் பிறப்பும் அறிந்து கொண்டமையின், “எம்பிறப்பினை'' யென்றாள். அங்கு அப்பீடிகை - அம் மணிபல்லவத்தே யிருந்த தன் பழம் பிறப்பறிதற் கேதுவாகிய புத்த பீடிகை. பங்கயப் பீடிகை - தாமரைப்பூப்போ லமைக்கப் பட்ட பீடிகை; ஈண்டு அது புத்தனுடைய தாமரைபோலும் திருவடி பொருந்துதற் கமைந்த பீடிகை யென்னுமாறு நின்றது. தீவதிலகை, பீடிகை காக்கும் தெய்வதம். மணிமேகலைக்குப் பெருநலஞ் செய்த தெய்வ மாகலின், “திரு மணி மேகலா மாபெருந் தெய்வம்'' என்று சிறப்பித்தார். பீடிகை யமைந்த பெருங்கோயில், தீவதிலகை மணிமேகலா தெய்வம் என்ற இரண்டும் ஒருங்கு நிறுவுதற்கமையுமாறு செய்யப்பட்டது பற்றி, “ஒத்த கோயி'' லென்றார். உளத்தக என்று கொண்டு, நினைத்தற்குத்தக என்று உரை கூறுவாருமுளர். பசிப்பிணி மருந்து நல்கும் சுரபியை “மருந்தெனும் சுரபி'' யென்றும், இதுகாறும் அங்கையி னேந்தி நின்ற சுரபியை, பீடிகையில் வைத்து வழிபட்டு எடுத்தலின், “அங்கையி னேந்திய அமுத சுரபி'' என்றும் கூறினார். 220-227. பைத்தர வல்குல் பாவை தன் கிளவியின்-படத்தையுடைய பாம்புபோலும் அல்குலையுடைய பாவையைப்போன்ற மணிமேகலை தன் இனிய மொழிகளால், மொய்த்த மூவறு பாடை மாக்களில் - நெருங்கிய பதினெண்வகை மொழியினை யுடைய மாக்களில், காணார் கேளார் கான்முடமானோர் - குருடரும் செவிடரும் முடவரும், பேணாமாக்கள் பேசார் பிணித்தோர் - பாதுகாப்போரற்ற அகதிகளும் மூங்கையரும் நோயுற்றவரும், படிவநோன்பியர் பசிநோயுற்றோர் - தவவேடத்தையும் விரதங்களையு முடையோரும் பசியாகிய பிணியடைந்தோரும், மடிநல்கூர்ந்த மக்கள் யாவரும் - உடையின்றித் துன்பமெய்திய மக்கள் அனைவரும், பன்னூறாயிரம் விலங்கின் தொகுதியும் - பலகோடி விலங்கு களின் கூட்டமும், மன்னுயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி - நிலைபெற்ற உயிர்கள் யாவும் ஒருங்கே வந்து சேரவும்; பைத்தரவல்குலென்றது, பாவைக்கு அடை. பாவை போல் வாளைப் பாவையென்றது ஆகுபெயர். கால் முடமானோர்-காலால் முடமானவர்; பிணித்தோர்-நோயுற்றவர்: இது துச்சாரியைபெற்று முடிந்தது; பிணிக் கப்பட்டோ ரென்றுமாம். மடி - உடை; மடிமையால் வறுமையுறு வோரை யருளுவது அம் மடிமையாகிய தீவினையை வளர்க்குஞ் செய்கையால் அறமாகா தொழிதலின், “சோம்புதலால் வறுமையுற்ற மாக்கள்'' என்றல் பொருந்தாமையறிக. ஈண்டவெனத் திரிக்க; ஈண்டியென்றே கொண்டு, செல்லும் என்பதனோ டியைத்தலுமொன்று. 228-235. அருந்தியோர்க்கு எல்லாம் ஆருயிர் மருந்தாய்-உண்போ ரனைவருக்கும் அரிய உயிரை வளர்க்கும் மருந்தாய், பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும்-பெரியோர் கையிலிட்ட அறத்தின் பயனும், நீரு நிலமும் காலமும் கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளையும் - நீர் நிலம் பொழுது கருவி ஆகிய யாவும் செவ்வே அமைந்த விடத்து விதைக்கப்பட்ட விதையாலுண்டாகிய விளைபயனும், பெருகிய தென்ன - பெருகியவாறு போல; பெருவளம் சுரப்ப - மிக்க வளத்தினை அப் பாத்திரம் சுரந்து கொடுக்க; வசித்தொழில் உதவி வளந்தந்தது என - மழை பெயலைச் செய்து உலகிற்கு வளத்தைத் தந்ததுபோல உணவுதந்து ; பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லுங்காலை - தமது பசி நோயை நீக்கிய பாவைபோலும் மணிமேகலையை வணங்கி வாழ்த்திக் கொண்டு அவரனைவரும் திரும்பிச் செல்லுங் காலத்தில்; தக்கார்க்குச் செய்த அறம் சிறிதாயினும் பெரும்பயன் விளைப்பது போலச்சுரபியிலிட்ட சிறுசோறு கொடுக்கக் குறை படாது மிக்குப்பெருகிற் றென்றற்குப், “பெருந்தவர்கைபெய் பிச்சையின்பய “னை யுவமங் காட்டினார்'' பெருந்தவர் கைபெய் பிச்சை பெருகுதலைப் பிறரும், “அறப் பயனும், தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து விடும்'' (நாலடி : 38) என்பது காண்க. முன்பும் “அறத்தி னீட்டிய வொண் பொருளறவோன், திறத்து வழிப்படூஉஞ் செய்கைபோல, வாங்குகை வருந்த மன்னுயிர்க் களித்துத், தான்தொலை வில்லாத் தகைமை'' (17:3-6) யுடையது இச்சுரபி என்றது காண்க. கருவி, ஏர் முதலாயின வித்துவமம், சுரபியின் தகைமையைக் காட்சியின் வைத்து விளக்கியவாறு. வசி-மழை. மறுவலும் பாவையென்றார், இவ்வாற்றால் உவகையும் வியப்பும் கொள்ளாமை தோன்ற. 235-245. தாயர் தம்முடன் அல்லவை கடிந்த அறவண வடிகளும்- மாதவியும் சுதமதியும் அறனல்லவற்றை நீக்கிய அறவணரும், மல்லல் மூதூர் மன்னுயிர் முதல்வி நல்லறச்சாலை நண்ணினர் சேறலும் - வளமிக்க பழைமை பொருந்திய நகரத்தின்கண் நிலைபெற்ற உயிர்களின் முதல்வியாகிய மணிமேகலை உணவளிக்கும் அறச்சாலையை வந்தடைதலும், நன்றென விரும்பிச் சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி நல்லடி கழுவி - வரவுணர்ந்த மணிமேகலை நன்றென விரும்பி எழுந்து சென்று அவர்தம் திருவடிகளைப் பணிந்து நீரால் அவர் அடிகளை விளக்கி, ஆசனத்தேற்றி அறுசுவை நால்வகைப் போனகம் ஏந்தி - நற்றவிசிலிருத்தி அறுசுவையினை யுடைய நான்குவகைப்பட்ட திருவமுதினை ஏந்தி, பொழுதினிற் கொண்டபின் - உண்டற்குரிய காலமெய்த அவர்கள் உண்ட பின்னர்; பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து - பசிய வெற்றிலையும் பாக்கும் கருப்பூரமும் அளித்து, வாய்வதாக என் மனப்பாட்டு அறம் என மாயைவிட்டு இறைஞ்சினள் மணிமேகலை என் - என் மனத்தின்கணுளதாகிய அறமானது பலித்திடுக என்று கூறி வேற் றுருவினின்றும் நீங்கி அறவணவடிகளை மணிமேகலைவணங்கினள். காண்டல் வேட்கை மிக்குடையரா யிருந்தமையின், “தாயர் தம்முடன்'' என்றார். மணிமேகலை வரவால் நகரம் அல்லல் நீங்கி மல்லலுற்றமை தோன்ற, “மல்லல் மூதூர்'' என்றும், பசி மிகுதியால் உயிராகிய முதல் அது நின்றவுடம்பினின்றும் நீங்கும் நிலையிலிருப்ப, உண்டி தந்து நிற்கப்பண்ணிய மாண்புபற்றி, மணிமேகலையை, “மன்னுயிர் முதல்வி'' யென்றும் சிறப்பித்தார். அறவணன் வரவு தன்னை நோக்கி அறமே வருவதாகக் கருது கின்றாளாதலின், “நன்றென விரும்பி'' எதிர் கொண்டாளெனவறிக. பின்னரும், “வாயவதாக என் மனப்பாட்டறம்'' என்பது காண்க. மாதவனுருவம் மாயமெனப்பட்டது, மணிமேகலையின் உண்மை வடிவமன்மையின். மணிமேகலை, தாயரோடு அறவணர்த்தேர்ந்து, வஞ்சியின் புறக்குடி கடந்து, மறுகும் மன்றமுதலியனவும், விரைமரைக்காவும், இடங்களும் கண்டு மகிழ்வுற்று, கொண்ட வேடமொடு, பள்ளிபுக்கு, மாதவம் புரிந் தோன் பாதம் பணிந்து, சொல்லின ளாதலின், அவட்கு அருந்தவன் நின்கடன் என அருள, ஆயிழை, பாத்திரம் செங்கையினேந்தி, மூதூர்க் கணின்றோங்கி, வடதிசை மருங்கின் வானத்தியங்கி, நகர் புல்லென்றாயது கண்டு உளம் கசிந்த ஒண்டொடி, வலங்கொண்டு, இழிந்து நண்ணி' சேதியந் தொழுது, பொழில் சென்றெய்தலும், கஞ்சுகன் வேந்தற் குரைப்போன் வந்து தோன்றினள் என, மன்னனும் விரும்பிச் சென்று, அவ்விடம் காட்ட, காவகம் பொருந்தி, வருத்து, புனைந்து, இயற்ற, ஏத்தி, சுரபியை வைத்து நின்று, வருகென, கிளவியின், காணார் முதலாகிய மாக்களும் விலங்கின் தொகுதியும், சுரப்பவுண்டு, ஏத்திச் செல்லுங்காலை, தாயரும் அடிகளும் நண்ணினர் சேறலும், விரும்பிச் சென்று, வணங்கி, கழுவி, ஏந்தி, கொண்டபின், படைத்து, வாய்வதாக என மாயை விட்டு இறைஞ்சினள் என, வினை முடிபுகொள்க. கச்சிமாநகர் புக்க காதை முற்றிற்று. 29. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை காஞ்சிமாநகர்க்கண் அறவணவடிகளையும் மாதவி சுதமதி யாகிய இருவரையுங் கண்டு மகிழ்ந்த மணிமேகலை, அறவணனை வணங்கி ''அற முரைத்தருள்க'' வென வேண்டினள். அறவணன் அவளை வாழ்த்தி, காவிரிப் பூம்பட்டினம் கடல் கோட்படுதற்குக் காரணம் நெடுமுடிக் கிள்ளி மகனையிழந்த துயரத்தால் இந்திர விழாவைக் கைவிட்டானாக, இந்திரன் சினந்திட்ட சாபமென்றும் மணிமேகலாதெய்வம் அவன் சாபத்தோடொப்ப இட்ட சாப மென்றும் கூறினான். அவள் இச்செய்திகளைத் தான் முன்பே தீவதிலகைபாற் கேட்டறிந்ததாகத் தெரிவித்துத் தான் சமயக் கணக்கர் தம் திறம் கேட்டதும், அச்சமயங்களைச் சிந்தையிற் கொள்ளாதொழிந்ததும், வேற்றுரு நீங்கி இயற்கையுரு வெய்தியதும் எடுத்தோதி, மெய்ப்பொருள் அருளுக வென அறவணனை மறு படியும் வணங்கினாள். ஆதிசினேந்திரன் அருளிய அளவைகள், பிரத்தியக்கம் அனுமானம் என்ற இரண்டேயாம்; பிரத்தியக்க மாவது சுட்டுணர்வு; அனுமானம்; காரணம் காரியம் சாமானியம் என மூவகை யாகக் கூறப்படுமாயினும் காரியானுமானமே பிழையில்லாதது; இது பக்கம், ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனமென ஐந்துறுப்புக்களை யுடையது; எனினும், இறுதியிற் கூறிய உபநயம், நிகமனம் இரண்டும் திட்டாந்தத்தில் அடங்கும்; எஞ்சி நின்ற பக்கம், ஏது, திட்டாந்தம் என்ற மூன்றனுள் திட்டாந்தம்: சாதன்மியம், வைதன்மியம் என இரு வகைப்படும்; குற்றமில்லாத பக்க முதலியன, நன்பக்கம், நல்லேது. நல்ல திட்டாந்தம் எனவரும்; குற்ற முடையவை பக்கப்போலி, ஏதுப் போலி, திட்டாந்தப் போலி எனப்படும்; பக்கப்போலி பிரத்தியக்க விருத்த முதலாக ஒன்பது வகையும், வைதன்மிய திட்டாந்தப் போலி ஏதுப்போலி அசித்தம் அநைகாந்திகம் விருத்தமென மூவகையும், சாதன்மிய திட்டாந்தப் போலி சாதன தன்ம விகல முதலாக ஐவகையும், சாத்தியா வியாவிருத்தி முதலாக ஐவகையுமாம். இவற்றுள் தீயவற்றாற் காட்டப்படுவனவற்றை யாராய்ந்து மெய்ப்பொருளைஐயமின்றி அறிந்துகொள்க என அறவணன் உரைத்தான். இதன்கண் காவரிப்பூம்பட்டினம் கடல்கோட் படுதற்குரிய காரணம் 2-36 அடிகளிலும், பிரத்தியக்க அளவை 46-51 அடிகளிலும், அனுமானம் 52-56 அடிகளிலும், பக்க முதலிய உறுப்புக்கள் 57-110 அடிகளிலும், நன்பக்கம் முதலிய மூன்றும் 111-142 அடிகளிலும், பக்கப்போலி 143-190 அடிகளிலும், ஏதுப்போலி 191-324 அடிகளிலும், திட்டாந்தப் போலி 325-468 அடிகளிலும் உரைக்கப் படுகின்றன. இறைஞ்சிய விளங்கொடி தன்னை வாழ்த்தி அறந்திகழ் நாவி னறவண னுரைப்போன் வென்வேற் கிள்ளிக்கு நாகநா டாள்வோன் தன்மகள் பீலி வளைதான் பயந்த 5 புனிற்றிளங் குழவியைத் தீவகம் பொருந்தித் தனிக்கலக் கம்பலச் செட்டிகைத் தரலும் வணங்கிக் கொண்டவன் வங்க மேற்றிக் கொணர்ந்திடு மந்நாட் கூரிரு ளியாமத்து அடைகரைக் கணித்தா வம்பி கெடுதலும் 10 மரக்கலங் கெடுத்தோன் மைந்தனைக் காணாது அரைசற் குணர்த்தலு மவனயர் வுற்று விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத் தன்விழாத் தவிர்தலின் வானவர் தலைவன் நின்னுயிர்த் தந்தை நெடுங்குலத் துதித்த 15 மன்னுயிர் முதல்வன் மகர வேலையுள் முன்னிய வங்க முங்கிக் கேடுறப் பொன்னி னூசி பசுங்கம் பளத்துத் துன்னிய தென்னத் தொடுகட லுழந்துழி எழுநா ளெல்லை யிடுக்கண்வந் தெய்தா 20 வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட பான்மையிற் றனாது பாண்டு கம்பளந் தானடுக் குற்ற தன்மை நோக்கி ஆதி முதல்வன் போதி மூலத்து நாத னாவோ னளிநீர்ப் பரப்பின் 25 எவ்வமுற் றான்றன தெவ்வந் தீரெனப் பவ்வத் தெடுத்துப் பாரமிதை முற்றவும் அறவர சாளவு மறவாழி யுருட்டவும் பிறவிதோ றுதவும் பெற்றிய ளென்றே சாரண ரறிந்தோர் காரணங் கூற 30 அந்த வுதவிக் காங்கவள் பெயரைத் தந்தையிட் டனனினைத் தையனின் துறவியும் அன்றே கனவி னனவென வறைந்த மென்பூ மேனிமணி மேகலா தெய்வம் என்பவட் கொப்ப வவனிடு சாபத்து 35 நகர்கடல் கொள்ளநின் றாயரும் யானும் பகருநின் பொருட்டா லிப்பதிப் படர்ந்தனம் என்றலு மறவணன் றாளிணை யிறைஞ்சிப் பொன்றிகழ் புத்த பீடிகை போற்றுந் தீவ திலகையு மித்திறஞ் செப்பினள் 40 ஆதலி னன்ன வணிநகர் மருங்கே வேற்றுருக் கொண்டு வெவ்வே றுரைக்கும் நூற்றுறைச் சமய நுண்பொருள் கேட்டே அவ்வுரு வென்ன வைவகைச் சமயமுஞ் செவ்வி தன்மையிற் சிந்தையின் வைத்திலேன் 45 அடிகள் மெய்ப்பொரு ளருளுக வென்ன நொடிகுவெ னங்காய் நுண்ணிதிற் கேணீ ஆதி சினேந்திர னளவை யிரண்டே ஏதமில் பிரத்தியங் கருத்தள வென்னச் சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி 50 விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள் மற்றவை யனுமா னத்துமடை யும்மெனக் 1காரிய காரண சாமா னியக்கருத் தோரிற் பிழைக்கையு முண்டுபிழை யாதது கனலிற் புகைபோற் காரியக் கருத்தே 55 ஏனை யளவைக ளெல்லாங் கருத்தினில் ஆன முறைமையி னனுமான மாம்பிற பக்க மேதுத் திட்டாந்த முபநயம் நிகமன மென்ன வைந்துள வவற்றிற் பக்க மிம்மலை நெருப்புடைத் தென்றல் 60 புகையுடைத் தாதலா லெனல் பொருந்தேது வகையமை யடுக்களை போற்றிட் டாந்தம் உபநய மலையும் புகையுடைத் தென்றல் நிகமனம் புகையிடைத் தேநெருப் புடைத்தெனல் நெருப்புடைத் தல்லா தியாதொன் றதுபுகைப் 65 பொருத்த மின்று புனல்போ லென்றல் 1மேய விபக்கத்து மீட்சி மொழியாய் வைதன் மியதிட் டாந்த மாகுந் தூய காரிய வேதுச் சுபாவம் ஆயிற் சத்த மநித்த மென்றல் 70 பக்கம் பண்ணப் படுத லாலெனல் பக்க தன்ம வசன மாகும் யாதொன்று யாதொன்று பண்ணப் படுவது அநித்தங் கடம்போ லென்றல் சபக்கத் தொடர்ச்சி யாதொன் றநித்தமல் லாதது 75 பண்ணப் படாத தாகாசம் போலெனல் விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழி யென்க அநன்னு வயத்திற் பிரமாண மாவது இவ்வெள் ளிடைக்கட் குடமிலை யென்றல் செவ்விய பக்கந் தோன்றாமை யில்லெனல் 80 பக்க தன்ம வசன மாகும் இன்மையிற் கண்டில முயற்கோ டென்றல் அந்நெறிச் சபக்கம் யாதொன் றுண்டது தோற்றா வடுக்குங் கைந்நெல்லி போலெனல் ஏற்ற விபக்கத் துரையென லாகும் 85 இவ்வகை யேதுப் பொருள்சா திப்பன என்னைகா ரியம்புகை சாதித்த தென்னிற் புகையுள விடத்து நெருப்புண் டென்னும் அன்னுவயத் தாலு நெருப்பிலா விடத்துப் புகையில்லை யென்னும் வெதிரேகத் தாலும் 90 புகைஇ நெருப்பைச் சாதித்த தென்னின் நேரிய புகையி னிகழ்ந்துண் டான ஊர்த்தச் சாமங் கௌடிலச் சாமம் வாய்த்த நெருப்பின்வரு காரிய மாதலின் மேனோக் கிக்கறுத் திருப்பபகைத் திருப்ப 95 தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும் அன்னு வயஞ்சா திக்கின் முன்னும் கழுதை யையுங் கணிகை யையுந் தம்மி லொருகா லத்தோ ரிடத்தே அன்னு வயங்கண் டான்பிற் காலத்துக் 100 கழுதையைக் கண்ட விடத்தே கணிகையை அனுமிக்க வேண்டு மதுகூ டாநெருப் பிலாவிடத் துப்புகை யிலையென் னேரத் திருத்தகு வெதிரேகஞ் சாதிக்கு மென்னின் நாய்வா லில்லாக் கழுதையின் பிடரின் 105 நரிவாலு மிலையாக் காணப் பட்ட அதனையே கொண்டு பிறிதோ ரிடத்து நரிவாலி னானாய் வாலையனு மித்தல் அரிதா மதனா லதுவு மாகாது ஒட்டிய வுபநய நிகமன மிரண்டுந் 110 திட்டாந் தத்தி லேசென் றடங்கும் பக்க மேதுத் திட்டாந் தங்கள் ஒக்க நல்லவுந் தீயவு முளவதில் வெளிப்பட் டுள்ள தன்மி யினையும் வெளிப்பட் டுளசாத் தியதன் மத்திறம் 115 பிறிதின் வேறாம் வேறுபாட் டினையுந் தன்கட் சார்த்திய நயந்தருத லுடையது நன்கென் பக்கமென நாட்டுக வதுதான் சத்த மநித்த நித்தமென் றொன்றைப் பற்றி நாட்டப் படுவததில் தன்மி 120 சத்தஞ் சாத்திய தன்ம மாவது நித்தா நித்த நிகழுநல் லேது மூன்றாய்த் தோன்று மொழிந்த பக்கத் தூன்றி நிற்றலுஞ் சபக்கத்துண் டாதலும் விபக்கத் தின்றியே விடுதலுஞ் சபக்கஞ் 125 சாதிக் கிற்பொரு டன்னாற் பக்கத் தோதிய பொதுவகை யொன்றி யிருத்தல் சத்த வநித்தஞ் சாத்திய மாயின் ஒத்த வநித்தங் கடாதி போலெனல் விபக்கம் விளம்பில் யாதொன் றியாதொன் 130 றநித்தமல் லாதது பண்ணப் படாதது ஆஅ காசம் போலென் றாகும் பண்ணப் படுதலுஞ் செயலிடைத் தோன்றலும் நண்ணிய பக்கஞ் சபக்கத் திலுமாய் விபக்கத் தின்றி யநித்தத் தினுக்கு 135 மிகத்தரு மேதுவாய் விளங்கிற் றென்க ஏதமி றிட்டாந் தம்மிரு வகைய சாதன் மியம்வை தன்மி யம்மெனச் சாதன் மியமெனப் படுவது தானே அநித்தங் கடாதி யன்னுவயத் தென்கை 140 வைதன் மியதிட் டாந்தஞ் சாத்தியம் எய்தா விடத்தி லேதுவு மின்மை இத்திற நல்ல சாதனத் தொத்தன தீய பக்கமுந் தீய வேதுவுந் தீய வெடுத்துக் காட்டு மாவன 145 பக்கப் போலியு மேதுப் போலியுங் திட்டாந்தப் போலியு மாஅ மிவற்றுட் பக்கப் போலி யொன்பது வகைப்படும் பிரத்தி யக்க விருத்த மனுமான விருத்தஞ் சுவசன விருத்த முலோக 150 விருத்த மாகம விருத்த மப்பிர சித்த விசேடண மப்பிர சித்த விசேடிய மப்பிர சித்த வுபயம் அப்பிர சித்த சம்பந் தம்மென எண்ணிய விவற்றுட் பிரத்தியக்க விருத்தங் 155 கண்ணிய காட்சி மாறுகொள லாகுஞ் சத்தஞ் செவிக்குப் புலனன் றென்னல் மற்றனு மான விருத்த மாவது கருத்தள வையைமா றாகக் கூறல் அநித்தியக் கடத்தை நித்திய மென்றல் 160 சுவசன விருத்தந்தன் சொன்மாறி யியம்பல் என்தாய் மலடி யென்றே யியம்பல் உலக விருத்த முலகின்மா றாமுரை இலகுமதி சந்திர னல்ல வென்றல் ஆகம விருத்தந்தன் நூன்மா றறைதல் 165 அநித்த வாதியா யுள்ளவை சேடிகன் அநித்தி யத்தைநித் தியமென நுவறல் அப்பிர சித்த விசேடண மாவது தத்த மெதிரிக்குச் சாத்தியந் தெரியாமை பௌத்தன் மாறாய் நின்றசாங் கியனைக் 170 குறித்துச் சத்தம் விநாசி யென்றால் அவனவி நாச வாதி யாதலிற் சாத்திய விநாசமப் பிரசித்த மாகும் அப்பிர சித்த விசேடிய மாவ தெதிரிக்குத் தன்மி பிரசித்த மின்றி 175 யிருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற பௌத்தனைக் குறித்தான் மாச்சை தனியவான் என்றா லவன நான்ம வாதி ஆதலிற் றன்மி யப்பிர சித்தம் அப்பிர சித்த வுபய மாவது 180 மாறா னோற்குத் தன்மி சாத்தியம ஏறா தப்பிர சித்தமா யிருத்தல் பகர்வை சேடிகன் பௌத்தனைக் குறித்துச் சுகமுத லியதொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா வென்றாற் சுகமுமான் மாவுந் 185 தாமிசை யாமையி லப்பிரசித் தோபயம் அப்பிர சித்த சம்பந்த மாவ தெதிரிக் கிசைந்த பொருள்சா தித்தல் மாறாம் பௌத்தற்குச் சத்த வநித்தங் கூறி லவன்ன் கொள்கையஃ தாகலில் 190 வேறு சாதிக்க வேண்டா தாகும் ஏதுப் போலி யோதின்மூன் றாகும் அசித்த மநைகாந் திகம்விருத் தம்மென உபயா சித்த மன்னியதரா சித்தஞ் சித்தா சித்த மாசிரயா சித்தம் 195 எனநான் கசித்த முபயா சித்தஞ் சாதன வேது விருவர்க்கு மின்றிச் சத்த மநித்தங் கட்புலத் தென்றல் அன்னியதரா சித்த மாறாய் நின்றாற்கு உன்னிய வேது வன்றா யொழிதல் 200 சத்தஞ் செயலுற லநித்த மென்னிற் சித்த வெளிப்பா டல்லது செயலுறல் உய்த்த சாங்கியனுக் கசித்த மாகுஞ் சித்தா சித்த மாவது ஏதுச் சங்கய மாய்ச்சா தித்தல் 205 ஆவி பனியென வையுறா நின்றே தூய புகைநெருப் புண்டெனத் துணிதல் ஆசிரயா சித்த மாறா னவனுக் கேற்ற தன்மி யின்மை காட்டுதல் ஆகாசம் சத்த குணத்தாற் பொருளா மென்னின் 210 ஆகா சம்பொரு ளல்லவென் பாற்குத் தன்மி யசித்த மநைகாந் திகமுஞ் சாதா ரணமசா தாரணஞ் சபக்கைக தேச விருத்தி விபக்க வியாபி விபக்கைக தேச விருத்தி சபக்க 215 வியாபி யுபயைக தேச விருத்தி விருத்த வியபி சாரியென் றாறு சாதாரணஞ் சபக்க விபக்கத் துக்கும் ஏதுப் பொதுவா யிருத்தல் சத்தம் அநித்த மறியப் படுதலி லென்றால் 220 அறியப் படுதனித் தாநித்த மிரண்டுக்குஞ் செறியுங் கடம்போல் அநித்தத் தறிவோ ஆகா சம்போ லநித்தத் தறிவோ என்ன லசாதா ரணமா வதுதான் உன்னிய பக்கத் துண்டா மேதுச் 225 சபக்க விபக்கந் தம்மிலின் றாதல் சத்த நித்தங் கேட்கப் படுதலின் என்னிற் கேட்கப் படலெனு மேதுப் பக்கத் துள்ள தாயி னல்லது சபக்க விபக்கத்து மீட்சித் தாதலிற் 230 சங்கய மெய்தி யநேகாந் திகமாஞ் சபக்கைக தேச விருத்தி விபக்க வியாபி யாவ தேதுச் சபக்கத் தோரிடத் தெய்தி விபக்கத் தெங்கும் உண்டாத லாகுஞ் சத்தஞ் செயலிடைத் 235 தோன்றா தாகு மநித்த மாகலின் என்றா லநித்த மென்ற வேதுச் செயலிடைத் தோன்றா மைக்குச் சபக்க மின்னினு மாகா சத்தினு மின்னின் நிகழ்ந்தா காசத்திற் காணா தாகலின் 240 அநித்தங் கடாதியி னொத்தலிற் கடம்போல் அழிந்து செயலிற் றோன்றுமோ மின்போல் அழிந்து செயலிற் றோன்றா தோவெனல் விபக்கைக தேச விருத்த சபக்க வியாபி யாவ தேது விபக்கத் 245 தோரிடத் துற்றுச் சபக்கத்தொத் தியறல் சத்தஞ் செயலிடைத் தோன்றும் அநித்த மாதலின் எனின் அநித்த வேதுச் செயலிடைத் தோன்றற்கு விபக்க வாகா யத்தினு மின்னினு மின்னி னிகழ்ந்தா காசத்துக் காணாது 250 சபக்கக் கடாதிக டம்மில் எங்குமா யேகாந்த மல்ல மின்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடம்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்று மோவெனல் உபயைக தேச விருத்தி யேதுச் 255 சபக்கத் தினும்விபக் கத்தினு மாகி ஓர்தே சத்து வர்த்தித்தல் சத்த நித்த மமூர்த்த மாதலி னென்னின் அமூர்த்த வேது நித்தத் தினுக்குச் சபக்கவா காச பரமா ணுக்களின் 260 ஆகா சத்து நிகழ்ந்து மூர்த்தமாம் பரமா ணுவினிக ழாமை யானும் விபக்க மான கடசுகா திகளிற் சுகத்து நிகழ்ந்து கடத்தொழிந் தமையினும் ஏகதே சத்து நிகழ்வதே காந்தமன் 265 றமூர்த்த மாகாசம் போல நித்தமோ அமூர்த்த சுகம்போ லநித்தமோ வெனல் விருத்த வியபிசாரி திருந்தா வேதுவாய் விருத்த வேதுவிற் கும்மிடங் கொடுத்தல் 270 சத்த மநித்தஞ் செயலிடைத் தோன்றலின் சபக்கமா யுள்ள கடாதி நிற்கச் சத்த நித்தங் கேட்கப் படுதலிற் சத்தத் துவம்போ லெனச்சாற் றிடுதல் இரண்டினுஞ் சங்கயமா யேகாந்த மல்ல 275 விருத்தந் தன்னைத் திருத்தக விளம்பின் தன்மச் சொரூப விபரீத சாதனந் தன்ம விசேட விபரீத சாதனந் தன்மிச் சொரூப விபரீத சாதனந் தன்மி விசேட விபரீத சாதனம் 280 என்ன நான்கு வகைய தாகும் அத் தன்மச் சொரூப விபரீத சாதனஞ் சொன்ன வேதுவிற் சாத்திய தன்மத்து உருவங் கெடுதல் சத்த நித்தம் பண்ணப் படுதலி னென்றாற் பண்ணப் 285 படுவ தநித்தமா தலிற்பண்ணப் பட்ட ஏதுச் சாத்திய தன்மநித் தத்தைவிட் டநித்தஞ் சாதித்த லான்விப ரீதந் தன்ம விசேட விபரீத சாதனஞ் சொன்ன வேதுச் சாத்திய தன்மந் 290 தன்னிடை விசேடங் கெடச் சாதித்தல் கண்முத லோர்க்கு மிந்திரி யங்கள் எண்ணிற் பரார்த்தந் தொக்குநிற் றலினாற் சயனா சனங்கள் போல வென்றால் தொக்கு நிற்றலி னென்கின்ற வேதுச் 295 சயனா சனத்தின் பராரத்தம்போற் கண்முதல் இந்தியங் களையும் பரார்த்தத்திற் சாதித்துச் சயனா சனவா னைப்போ லாகிக் கண்முத லிந்தியத் துக்கும் பரனாய்ச் சாதிக் கிறநிர் அவயவமா யுள்ள 300 ஆன்மா வைச்சா வயவ மாகச் சாதித் துச்சாத் தியதன் மத்தின் விசேடங் கெடுத்த லின்விப ரீதத் தன்மிச் சொரூப விபரீத சாதனந் தன்மி யுடைய சொரூபாத் திரத்தினை 305 ஏதுத் தானே விபரீதப் படுத்தல் பாவந் திரவியங் கன்ம மன்று குணமு மன்றெத் திரவிய மாமெக் குணகன் மத்துண் மையின்வே றாதலாற் சாமா னியவிசே டம்போ லென்றாற் 310 பொருளுங் குணமுங் கருமமு மொன்றாய் நின்றவற் றின்னிடை யுண்மைவே றாதலா லென்று காட்டப் பட்ட வேது மூன்றினுடை உண்மை வேறு படுத்தும் பொதுவாம் உண்மை சாத்தியத் தில்லா மையினுந் 315 திட்டாந் தத்திற் சாமானியம் விசேடம் போக்கிப பிறிதொன் றில்லாமை யானும் பாவ மென்று பகர்ந்ததன் மியினை அபாவ மாக்குத லான்விப ரீதந் தன்மி விசேட விபரீத சாதனந் 320 தன்மி விசேட லபாவஞ் சாதித்தல் முன்னங் காட்டப் பட்ட வேதுவே பாவமா கின்றது கருத்தா வுடைய கிரியையுங் குணமுமா மதனை விபரீத மாக்கிய தாதலாற் றன்மி விசேடங் 325 கெடுத்தது தீய வெடுத்துக்காட் டாவன தாமே திட்டாந்த வாபா சங்கள் திட்டாந் தம்மிரு வகைப்படு மென்றுமுற் கூறப் பட்டன விங்க ணவற்றுட் சாதன் மியதிட் டாந்தவா பாசம் 330 ஓதி லைந்து வகையுள தாகுஞ் சாதன தன்ம விகலமுஞ் சாத்திய தன்ம விகலமு முபய தன்ம விகலமு மநன்னு வயம்விப ரீதான் னுவய மென்ன வைதன் மியதிட் 335 டாந்த வாபா சமுமை வகைய சாத்தி யாவி யாவி ருத்தி சாத னாவி யாவி ருத்தி யுபயாவி யாவி ருத்தியவ் வெதிரேகம் விபரீத வெதிரேக மென்ன விவற்றுட் 340 சாதன தன்ம விகல மாவது திட்டாந் தத்திற் சாதனங் குறைவது சத்த நித்த மமூர்த்த மாதலான் யாதொன் றியாதொன் றமூர்த்தமது நித்தம் ஆதலாற் காண்புற்றது பரமாணு விலெனில் 345 திட்டாந் தப்பர மாணு நித்தத் தோடு மூர்த்த மாதலாற் சாத்திய தன்ம நித்தத்துவ நிரம்பிச் சாதன தன்மவமூர்த் தத்துவங் குறையுஞ் சாத்திய தன்ம விகல மாவது 350 காட்டப் பட்ட திட்டாந் தத்திற் சாத்திய தன்மங் குறைவு படுதல் சத்த நித்த மமூர்த்த மாதலால் யாதொன் றியாதொன் றமூர்த்தமது நித்தம் புத்தி போஒ லென்றால் 355 திட்டாந்த மாகக் காட்டப் பட்ட புத்தி யமூர்த்த மாகி நின்றே யநித்த மாதலாற் சாதன வமூர்த்தத்துவ நிரம்பிச் சாத்திய நித்தத்துவங் குறையும் உபய தன்ம விகல மாவது 360 காட்டப் பட்ட திட்டாந் தத்திலே சாத்திய சாதன மிரண்டுங் குறைதல் அன்றியு மதுதான் சன்னு மசன்னும் என்றிரு வகையா மிவற்றுட்சன் னாவுள உபய தன்ம விகல மாவது 365 உள்ள பொருட்கட் சாத்திய சாதனங் கொள்ளு மிரண்டுங் குறையக் காட்டுதல் சத்த நித்த மமூர்த்த மாதலான் யாதொன்றி யாதொன் றமூர்த்தமது நித்தம் கடம்போ லெனிற்றிட் டாந்த மாகக் 370 காட்டப் பட்டகடந் தானுண் டாகிச் சாத்திய மாயுள நித்தத் துவமும் சாதன மாயுள வமூர்த்தத்து வமுங்குறையும் அசன்னா வுள்ள வுபயதன்ம விகலம் இல்லாப் பொருட்கட் சாத்திய சாதனம் 375 என்னு மிரண்டுங் குறையக் காட்டுதல் சத்த மநித்த மூர்த்த மாதலான் யாதொன் றியாதொன்று மூர்த்தமத நித்தம் ஆகாசம் போலெனுந் திட்டாந் தத்துச் சாத்திய தன்மமா யுள்ள வநித்தமுஞ் 380 சாதன தன்மமா யுள்ள மூர்த்தமும் இரண்டு மாகாச மசத்தென் பானுக் கதன்க ணின்மை யானே குறையும் உண்டென் பானுக் காகாச நித்தம் அமூர்த்த மாதலா லவனுக்குங் குறையும் 385 அநன்னுவய மாவது சாதன சாத்தியந் தம்மிற் கூட்ட மாத்திரஞ்சொல் லாதே இரண்ட னுடைய வுண்மையைக் காட்டுதல் சத்த மநித்தங் கிருத்த மாதலின் யாதொன்று யாதொன்று கிருத்தம தநித்தமெனும் 390 அன்னுவயஞ் சொல்லாது குடத்தின் கண்ணே கிருத்த வநித்தங் காணப் பட்ட என்றா லன்னுவயந் தெரியா தாகும் விபரீ தான் னுவயம் வியாபகத் துடைய அன்னுவயத் தாலே வியாப்பியம் விதித்தல் 395 சத்த மநித்தங் கிருத்தத் தாலெனின் யாதொன்று யாதொன்று கிருத்த மநித்தமென வியாப்பியத் தால்வியா பகத்தைக் கருதா தியாதொன் றியாதொன் றநித்தமது கிருத்தமென வியாபகத் தால்வியாப் பியத்தைக் கருதுதல் 400 அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை இன்றியு நிகழ்த லின்விப ரீதமாம் வைதன்மிய திட்டாந் தத்துச் சாத்தி யாவியளா விருத்தி யாவது சாதன தன்ம மீண்டு 405 சாத்திய தன்ம மீளா தொழிதல் சத்த நித்த மமூர்த்தத் தென்றால் யாதொன் றியாதொன்று நித்தமு மன்றது அமூர்த்தமு மன்று பரமாணுப் போலெனின் அப்படித் திட்டாந்த மாகக் காட்டப் பட்ட 410 பரமாணு நித்தமாய் மூர்த்த மாதலிற் சாதன வமூர்த்த மீண்டு சாத்திய நித்த மீளா தொழிதல் சாத னாவியா விருத்தி யாவது சாத்திய தன்ம மீண்டு 415 சாதன தன்ம மீளா தொழிதல் சத்த நித்த மமூர்த்தத் தென்றால் யாதொன் றியாதொன்று நித்த மன்றஃ தமூர்த்தமு மன்று கன்மம்போ லென்றால் வைதன் மியதிட் டாந்த மாகக் 420 காட்டப் பட்ட கன்மம் அமூர்த்தமாய் நின்றே யநித்த மாதலிற் சாத்திய மான நித்திய மீண்டு சாதன மான வமூர்த்த மீளா துபயாவி யாவிருத்தி காட்டப் பட்ட 425 வைதன் மியதிட் டாந்தத்தி னின்று சாதன சாத்தியங்கள் மீளாமை யன்றியும் உண்மையி னுபயா வியாவி ருத்தி இன்மையி னுபயா வியாவி ருத்தி எனவிரு வகை யுண்மையின் 430 உபயாவி யாவிருத்தி யுள்ள பொருட்கட் சாத்திய சாதன மீளா தபடி வைதன் மியதிட் டாந்தங் காட்டல் சத்த நித்த மமூர்த்த மாதலின் என்றாற் கியாதொன் றியாதொன்று நித்தமன் 435 றமூர்த்தமு மன்றா காசம்போ லென்றால் வைதன்மியா திட்டாந்த மாகக் காட்டப்பட்ட ஆகா சம்பொரு ளென்பாற்கு ஆகாச நித்தமு மமூர்த்தமு மாதலாற் சாத்திய நித்தமுஞ் சாதனமா வுள்ள 440 அமூர்த்தமு மிரண்டு மீண்டில வின்மையின் உபயாவி யாவிருத்தி யாவது சத்த மநித்த மூர்த்த மாதலான் என்றவிடத் தியாதொன் றியாதொன் றநித்த மூர்த்தமு மன்றா காசம் போலென 445 வைதன் மியதிட் டாந்தங் காட்டில் ஆகா சம்பொரு ளல்லவென் பானுக்கு ஆகாசந் தானே யுண்மையின் மையினாற் சாத்திய வநித்தமுஞ் சாதன மூர்த்தமும் மீட்சியு மீளா மையுமிலை யாகும் 450 அவ்வெதி ரேக மாவது சாத்தியம் இல்லா விடத்துச் சாதன மின்மை சொல்லாதே விடுத லாகுஞ் சத்தம் நித்தம் பண்ணப் படாமையா லென்றால் யாதொன் றியாதொன்று நித்த மன்று 455 பண்ணப் படுவ தல்லா ததுவும் அன்றெனு மிவ்வெதி ரேகந் தெரியச் சொல்லாது குடத்தின் கண்ணே பண்ணப் படுதலு மநித்தமுங் கண்டே மாதலான் என்னின் வெதிரே கந்தெரி யாது 460 விபரீத வெதிரேக மாவது பிரிவைத் தலைதடு மாறாச் சொல்லுதல் சத்த நித்த மூர்த்த மாதலின் என்றா லென்று நின்ற விடத்து யாதோ ரிடத்து நித்தமு மில்லையவ் 465 விடத்து மூர்த்தமு மில்லை யெனாதே யாதோ ரிடத்து மூர்த்தமு மில்லையவ் விடத்து நித்தமு மில்லை யென்றால் வெதிரேக மாறு கொள்ளு மெனக்கொள்க நாட்டிய விப்படித் தீயசா தனத்தாற் 470 காட்டு மனுமான வாபா சத்தின் மெய்யும் பொய்யு மித்திர விதியால் ஐய மின்றி யறிந்துகொ ளாய்ந்தென் உரை 1-13. இறைஞ்சிய இளங்கொடி தன்னை-தன்னை வணங்கிய இளங்கொடி போன்ற மணிமேகலையை, அறம் திகழ் நாவின் அறவணன் வாழ்த்தி - அறவுரையால் விளக்கமுறும் நாவினையுடைய அறவணவடிகள் வாழ்த்தி, உரைப்போன் - காவிரிப்பட்டினம் கடல் கோட்படுதற்கு நேர்ந்தகாரணம் கூறுவானாய், நாக நாடாள் வோன் தன் மகள் - நாக நாட்டை யாளும் அரசனுடைய மகளாகிய, பீலி வளை - பீலிவளை யென்பவள், தீவகம் பொருந்தி-தான் மணிபல்லவத் தீவிலிருந்து கொண்டு, வென்வேற்கிள்ளிக்கு - சோழன் நெடு முடிக்கிள்ளி யென்பானுக்கு, தான் பயந்த புனிற்றிளங் குழவியை- தான் பெற்ற ஈன்றணிமை தீராத இளங்குழந்தையை, தனிக்கலக் கம்பலச் செட்டி கைத்தரலும்-தனியே கலஞ் செலுத்திப் போந்த கம்பலச் செட்டிபால் கையடைப்படுத்துச் சோழன் பாற் சேர்க்க என விடுத்தாளாக, வணங்கிக்கொண்டவன் - அவளை வணங்கி அக் குழவியை ஏற்றுச் செல்லும் அச் செட்டி, வங்கமேற்றிக் கொணர்ந்திடும் அந்நாள்-தன் தனிக் கலத்தில் கொண்டுவந்த அக்காலத்தில், அடைகரைக்கு அணித்தா-சோழமண்டலக் கரைக்கு அண்மையில் வரும்போது, கூர் இருள் யாமத்து - மிக்க இருள்சூழ்ந்த நடுவியாமத்தே, அம்பி கெடுதலும் - மரக்கலம் சிதைந்து கெட்டதாக, மரக்கலம் கெடுத்தோன்-கலம்கெட்டுத் தான்மட்டில் தனியே தப்பிக் கரையை யடைந்த அச் செட்டி, மைந்தனைக் காணாது அரைசற்குஉணர்த்தலும்-அரசன் மகனைத்தேடியும் காணாமல் சோழ வேந்தனுக்குத் தெரிவித்தலும், அவன் அயர்வுற்று-அரசன் மனம் வருந்தி, விரைவனன் தேடி-விரைந்து சென்று தேடித் திரிந்ததனால், விழாக்கோள் மறப்ப - காவிரிப் பூம்பட்டினத்தில் எடுத்தற்குரிய இந்திரவிழா மறக்கப் பட்டதாக, தன் விழாத் தவிர்தலின்- தனக்குரிய விழாச் செய்யப்படாது கழிதலால், வானவர் தலைவன்-(சினமுற்ற) வானவர்க்கிறைவனான இந்திரன் எ-று. நாக நாட்டு வேந்தனை, "நாக நாடு நடுக்கின் றாள்பவன், வாகை வேலான் வளைவணன்" (மணி. 24:54-5) என்றமையின் ஈண்டுவாளாது "நாக நாடாள்வோன்" என்றொழிந்தார். ஈன்றணிமை தீருமுன்னே தான் பெற்ற குழவியை விடுத்தமையின், "புனிற்றிளங் குழவி" யென்றார். நாகநாட்டரசன் மகளாகிய பீலிவளை மணிபல்லவம் போந்து புத்த பீடிகையை வலஞ் செய்து வணங்க வந்திருந்த காலத்தே ஆங்குப் போந்த கம்பலச்செட்டிபால் தன் குழவியைக்கையடைப்படுத்துத் தான் அம் மணிபல்லவத்தே தவிர்ந்தமையின், "தீவகம் பொருந்தி" யென்றும், அச் செட்டியும் தனியே கலஞ் செலுத்தி வந்தமை தோன்ற, "தனிக் கலக் கம்பலச் செட்டி"யென்றும், தன்பாற் கையடைப்படுத்துவது அரசிளங் குழவியாதலாலும், கையடைப்படுத்துபவள் அரசன் மனைவி யாதலாலும் "வணங்கி"யென்றும் கூறினார். முன்பும், "தொழுதனன் வாங்கி" (25: 189) என்பது காண்க; அரசிளங் குழவி உயிருய்தலின், "அடைகரை யணித்தா" என்றும், அதனைச் செட்டி காணா தல மருதற் கேது கலஞ்சிதை காலமாதலின், "கூரிருள் யாமத்"தென்றும் குறித்தார். தன் குழவியை யிழந்த கொடுந் துயரம் சோழன் உள்ளத்தைக் கவர்ந்து வருத்துதலின், விழாவைப்பற்றிய நினைவு மறைவதாயிற் றென்றற்கு, "அயர்வுற்" றென்றும், விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப" என்றும் தெரித்துரைத்தார். இதனாற் பயன், குழவியின் மறைவுகுறித்து அரசன் உள்ளத்துத் தோன்றிய அயர்ச்சி, காவிரிப்பூம்பட்டினம் கெடுதற் கேதுவாயிற் றென்பதாம். 14-18. நின் உயிர்த் தந்தை நெடுங்குலத்து உதித்த - உனக்கு உயிர் போன்ற தந்தையாகிய கோவலனது நெடியகுலத்திற் பிறந்த, மன்னுயிர்முதல்வன்-மிக்க உயிர்கட்கெல்லாம் அருள் செய்யும் முன்னோனொருவன், மகர வேலையுள் முன்னிய வங்கம்-மகரமீன் வாழும் கடலில் தான் செலுத்திச் சென்ற மரக்கலம், பசுங் கம்பளத்து பொன்னின் ஊசி துன்னிய தென்ன - பசுமையான கம்பளத்தில் இரும்பாற் செய்த ஊசியொன்று எளிதிற்றைத்து இடந் தெரியாது மறைந்தாற் போல, முங்கிக் கேடுற - மூழ்கிக் கெட்டதாக, தொடு கடல் உழந்துழி-ஆழ்ந்த கடற்கண்ணே வருந்தினகாலத்து எ-று. கப்பளத்து ஊசி துன்னியதென்ன, கடலிடத்தே வங்கம் கேடுற என இயைக்க. கோவலன் பெயர் கேட்ட மாத்திரையே உள்ளம் உருகும் பான்மையளாதலின், "நின்னுயிர்த் தந்தை" யென்றும், அவன் குலத்து முன்னோன் எவ்வுயிர்க்கும் அருள் மேவிய அறவோனாதலின் "மன்னுயிர் முதல்வன்" என்றும் சிறப்பித்தார். பிறாண்டும் அவனை, "ஆதி முதல்வன் போதி மூலத்து, நாதனாவோன்" (29:23-4) என்பர். இரும்பைக் கரும்பொன்னென வழங்கும் வழக்குப்பற்றி, "பொன்" னென்றார். பசுங் கம்பளங் கருங் கடற்கும், பொன்னினூசி வங்கத்துக்கும் உவமை. கடலலையால் உதைப்புண்டு ஏழுநாள்காறும் மிதந்து வருந்தினமையின், "தொடுகடல் உழந்துழி" என்பாராயினர். 19-29. ஏழு நாள் எல்லை-இவ்வாறு ஏழுநாள்காறும் வருந்தி, இடுக்கண் வந்து எய்தா-உயிரிழக்குந் துன்பம் வந்து நெருங்கிய எல்லையில், சீலம் வாய்மையின் வழுவாக் கொண்ட பான்மையின்-ஐவகைச் சீலமும் நால்வகை வாய்மையும் குற்றமற மேற்கொண்டொழுகும் இயல்பின னாதலால், தனாது பாண்டு கம்பளம்-இந்திரன் தான் வீற்றிருக்கும் பாண்டு கம்பளமிட்ட இருக்கை, நடுக்குற்ற தன்மை நோக்கி - அசையத் தொடங்கிய வமைதி கண்டு, போதி மூலத்து ஆதிமுதல்வன் நாதனாவோன்-இவ்வணிகன் போதியின் அடியிலிருந்து நோற்ற ஆதி முதல்வனும் நாதனுமாகிய போதி சத்துவனாகும் தகுதியுடையவனாவான், நளி நீர்ப்பரப்பின்-பெரிய கடற் பரப்பிலே, எவ்வமுற்றான் தனது எவ்வம்தீர் என - துன்ப முற்ற இவனது துன்பத்தைப் போக்குவாயாக என ஆங்கிருந்த மணிமேகலா தெய்வத்தைப் பணிக்கவும், அறவரசாளவும்-உலகில் அறம்புரியும் வேந்தரே அரசாளவும், அறவாழிஉருட்டவும்-அவரது அறவாணையே நிலவவும், பிறவிதோறு உதவும் பெற்றியன் - எடுத்த பிறப்புத் தோறும் அவர்கட்கு உதவிபுரியும் தன்மையுடையவளாகிய அவள், பவ்வத்து எடுத்து - கடலினின்றும் அவனையெடுத்து, பாரமிதை முற்றவும் - கரை சேரவும், உதவும் பெற்றியள்-உதவிய செய்கை யுடையளாவாள், என்று - என, அறிந்தோர் சாரணர் - அந்நிகழ்ச்சியை யறிந்த சாரணர் வந்து, காரணம் கூற - நினக்கு மணிமேகலை யென்ற பெயர் வைத்தற்குரிய காரணமிது வென்று கூறவே எ - று. ஏழு நாள் வரையிற் கடலிடை யுழந்தவன் உயிர் இழக்கும் நிலை யெய்திய செய்தியை "இடுக்கண் வந்தெய்தா" என்று குறித்தார். அக்காலமே இந்திரன் இருக்கும் பாண்டு கம்பளம் அசைந்து அவற்கு இவனுறுந் துன்பத்தை யறிவிக்குங் காலம். உலகத்தில் அறவோர் அறச்செயலின் மிகுதியையும் அவர்க்குற்ற கெடுதியையும் பாண்டு கம்பளம் அசைந்து அவ்விந்திரற் கறிவிக்கு மென்பது புத்தர் சமணர்களின் கொள்கை. உடனே இந்திரன் அருகு நின்ற மணிமேகலா தெய்வத்தை நோக்கி, "நீ சென்று அவன் இறப்புத் துன்பத்தைப் போக்குக" வென்று பணிப்பவன். அவன் இயல்பை விரியக் கூறுங் கால மன்மையின் சுருக்கமாக, "ஆதி முதல்வன் போதி மூலத்து நாதனாவோன்" என்று அறிவுறுத்தி, "நளிநீர்ப் பரப்பி னெவ்வ முற்றான்றன் எவ்வந்தீர்" என்று பணித்தான். நாதனாவோரைப் போதிசத்துவர் என்ப- போதி - உண்மை ஞானம்; சத்துவரென்பது பாலி மொழியடியாக வந்து வீரனென்னும் பொருள் படுவது. எனவே, போதி சத்துவ ரென்பது ஞானமே வடிவாக முயலும் சான்றோ ரென்பதாம். நாதனாவோ னென்பதும் இக்கருத்தையே வற்புறுத்துமாறு காண்க. இனி மணிமேகலா தெய்வத்தின் இயல்பினை, அறவரசாளவும் அறவாழியுருளவும் மக்கட்குதவும் மாண்புடையளென்று கூறினான். உதவும் பெற்றியள் என்பதை "பாரமிதை முற்றவும்" என்புழியும் கூட்டுக. பாரமிதை - கரை; இதனின் வேறாக உயிர்நிலை யென்றும் சால்பென்றும் பொருள் கூறுதலுமுண்டு. "நின்னுயிர்த் தந்தை" யென்பது முதல் "பிறவி தோறுதவும் பெற்றியள்" என்பது வரை, சாரணர் கோவலற் குரைத்த கூற்றினைக் கொண்டு கூறியது. 30-37. அந்த உதவிக்கு - அந்த வுதவி குறித்து, ஆங்கு - நினக்குப் பெயரிடும் நாளில், அவள் பெயரை - அம்மணிமேகலையின் பெயரையே, நினைத் தந்தை இட்டனன் - உனக்கு உன் தந்தையாகிய கோவலன் இட்டான்; தையல் நின் துறவியும் - அவன் மகளாகிய உனது துறவினையும்; அன்றே கனவின் நனவென அறைந்த-அன்றிரவே அவன் கனவிற் றோன்றி நனவிற் றெளியப் பேசுவது போலச் சொல்லிய; மென் பூமேனி மணிமேகலா தெய்வம் என்பவட்கு ஒப்ப - மெல்லிய பூப்போன்ற மேனியையுடைய அம்மணிமேகலா தெய்வ மெனப்படும் அவள் கருத்துக்கேற்ப; அவன் இடு சாபத்து - அவ்விந்திரனிட்ட சாபத்தால்; நகர் கடல்கொள்ள, காவிரிப் பூம்பட்டினத்தைக் கடல் கொண்டொழியவே; நின் தாயரும் யானும் - நினக்குத் தாயாகிய மாதவியும் சுதமதியு முதலாயினாருடன் யானும்; பகரும் நின் பொருட்டால் - பலரும் புகழும் உன்னைக் காணும் பொருட்டு; இப்பதிப்படர்ந்தனம் - இக் காஞ்சியம்பதியை யடைந்தேம்; என்றலும் - என்று அறவணவடிகள் கூறினாராக எ - று. வானவர் தலைவன் தன் விழாத் தவிர்தலின். என்பவட்கொப்ப, அவனிடு சாபத்தின் நகர் கடல்கொள்ள, நின் பொருட்டால் இப்பதிப் படர்ந்தனம் என்றலும் என இயைக்க, வானவர் தலைவனாகிய அவன்,. நோக்கி, எவ்வந் தீரென, பவ்வத்தெடுத்துப் பாரமிதை முற்றவும், உதவும் பெற்றியள் என்று சாரணர் காரணம் கூற, அந்த உதவிக்கு அவள் பெயரைத் தந்தை இட்டனன்; அவட்கொப்ப, சாபத்து, கடல்கொள்ள, படர்ந்தனம் எனக் கூட்டிக் கொள்க. விழாக்கோள் மறந்தது காரணமாக இந்திரன் சினங்கொண்டு இட்ட சாபத்தால் நகர் கடல்கொள்ளப்பட்டது கூறுவான் தொடங்கிய அறவணன், மணிமேகலை இட்ட சாபமும் அக் கடல்கோட்கு ஏதுவாதலின் அதனையும் கூட்டி ''மணிமேகலா தெய்வம் என்பவட்கொப்ப அவனிடு சாபத்து'' என்றான். தன் விழாக்கோள் மறந்த சிறு பிழைக்குப் பெருநகர மொன்றை யழிக்குஞ் சினங் கொண்ட இந்திரன்பால் மணிமேகலைக்கு அருவருப்புண்டாகா வண்ணம், அவன் கோவலன் குலத்து முன்னோனுக்குற்ற இடுக்கண் களைந்த வரலாற்றையும், அவனது அருட்பணியை மேற்கொண்டாற்றிய மணிமேகலா தெய்வத்துக்கும் மணிமேகலைக்கும் உள்ள தொடர்பைக் காட்டுதற்குக் கோவலற்குச் சாரணர் உரைத்தவற்றையும் எடுத்தோதினான். இது மணிமேகலை நகரழிவு குறித்து வருந்தாமை விளைவித்தது. நினையென்புழி நான்காவதன்கண் இரண்டாவது மயங்கிற்று. தையல் மகளென்னும் பொருட்டு; இதனை விளியாக்கினுமமையும். துறவு துறவியென நின்றது. பகரும் என்பதை ''இப்பதி'' யென்பதனோடு டியைத்தலுமொன்று. இந்திரவிழாவை மறந்தது குறித்து மணிமேகலா தெய்வம் சாபமிட்ட வரலாற்றை முன்னே, ''வானவன் விழாக்கோள் மாநக ரொழிந்தது, மணிமேகலா தெய்வ மற்றது பொறாஅள், அணி நகர் தன்னை யலைகடல் கொள்கென, இட்டனள் சாபம்'' (மணி. 25: 197-200) என்றமையின். ஈண்டு வாளாது ''என்பவட்கொப்ப'' என்றொழிந்தார். 37-45. அறவணன் தாள் இணை இறைஞ்சி - அது கேட்ட மணிமேகலை அறவணவடிகளின் இரண்டு திருவடிகளிலும் வீழ்ந்து வணங்கி, பொன்திகழ் புத்தபீடிகை போற்றும் தீவதிலகையும் - மணிபல்ல வத்திலுள்ள பொன்போல் ஒளிவிடும் புத்த பீடிகைக்குக் காவல் புரிந்த தீவதிலகை யென்பாளும், இத் திறம் செப்பினள் - நீவிர் கூறிய இச் செய்தியை எனக்குத் தெரிவித் துள்ளாள்; ஆதலின் - ஆதலால் இதிலொரு வியப்பில்லை; அன்ன அணி நகர் மருங்கே - அந்நகரமே போல அழகிய வஞ்சிநகர்ப் புறத்தே; வேற்றுருக்கொண்டு - மாதவனொருவன் உருக்கொண்டு சென்று; வெவ்வேறுரைக்கும் - ஒருவரினொருவர் வேறுபட்டுச் சொல்லும்; நூற்றுறைச் சமய நுண் பொருள் கேட்டு - நூல் நெறியாக வந்த நுண்ணிய சமயப் பொருளைக் கேட்டு; அவ்வுரு என்ன - யான் மேற்கொண்டிருந்த எனக் கொவ்வாத உருவம்போல ; ஐவகைச் சமயமும் - ஐந்து வகைச் சமயத்து நுண் பொருள்கள்; செவ்வி தன்மையின் சிந்தையில் வைத்திலேன்-எனக்குச் செம்மையுடைய வாகத் தோன்றாமையின் மனத்துட் கொள்ளா தொழிந்தேன்; அடிகள்-அடிகளே; மெய்ப்பொருள் அருளுக-உண்மைப் பொருளையடி யேனுக்கு உரைத்தருளுவீராக; என்ன - என்று வேண்டி நின்றாளாக எ - று. அறவணன் கருத்தை யறிந்து கொண்டமையின். மணிமேகலை, நகர்க்குற்ற அழிவினைத் தான்முன்பே அறிந்திருந்த செய்தியை யுரைத்தாள். ஆதலால் என்பது முதலாயின எஞ்சி நின்றன. ஆதலின் அது பற்றிய பேச்சு வேண்டா வென்றலும், தன் கருத்தினைச் சட்டென வெளியிடுதலும் சீலமன்மையின், “ஆதலின்'' என வொழிந்தா ளென்று மாம். வஞ்சி நகரும் காவிரிப் பூம்பட்டினம் போல எல்லா நலங்களும் நிறைந்திருந்தமை தோன்ற, “அன்ன அணிநகர்'' என்றாள். தான் வேற்றுருக் கொண்ட காரணம் கூறிற்றிலள், “இளையள் வளைய ளென் றுனக் கியாவரும், விளைபொரு ளுரையார்" (26;68-9) எனக் கண்ணகி யுரைத்த காரணம் அறவணன் இயல்பாகவே யறிந்தவ னென்று. ஒருவரோ டொருவர் ஒவ்வாமலுரைத்தலின், ''வெவ்வேறுரைக்கும்'' என்றும், ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நூலைப் பின்பற்றி நிலவுதலால், “நூற் றுறைச் சமய'' மென்றும் கூறினாள். தான் காஞ்சிமாநக ரடைந்து அறவணன் முதலாயினாரைக் கண்ட பின்பே அவ்வேற்றுருவைக் களைந்து உண்மையுருவொடு நின்றமையின், “அவ்வுரு'' வெனச் சுட்டியும், தனக்கு ஒவ்வாமை தோன்ற, அதனையுவமித்து முரைத்தாள், செவ்விது என்பதனை ஒவ்வொரு சமய நுண்பொருட்கு மேற்றுக. இனி அவ்வுருவை வையாமை போல இவற்றையும் வைத்திலேன் என்றுமாம். வையாமைக் கேது அவற்றால் மெய்ப்பொருளைத் தெளிய முடிய வில்லை; அதனை நீவிரே யுரைத்தல் வேண்டும் என்றற்கு, “அடிகள் மெய்ப்பொருள் அருளுக'' என வேண்டினாள். 46-48. நங்காய் - நங்கையே; நொடிகுவென் - நீ கேட்கும் மெய்ப் பொருளைக் கேட்டுத் தெளிதற்குரிய நெறியைச் சொல்லுவேன்; நீ நுண்ணிதின் கேள் - நீ அறிவா னுணுகிக் கேட்பாயாக; ஆதி சினேந்திரன் - ஆதி புத்தன் மேற்கொண்டுரைத்த, ஏதம் இல் பிரத்தியம் கருத்தளவு என்ன - குற்றமில்லாத காட்சியும் கருத்து மென்று; அளவை இரண்டே-அளவைகள் இரண்டோயாகும் எ-று. மகளிருள் அறிவாற் சிறந்து நிற்றலின், “நங்காய்'' என்றும், கேட்போர் வேட்கை யறிந்தேற்ப வுரைக்குமாறு தோன்ற, “நொடிகுவென்'' என்றும், சொல்லுந்திறம் பல்வேறு வகையாய்ப் பரந்து சேறலின், கேட்கும் அவள், கேட்கப்படும் பொருளை நுணுகியறியும் மனவொருமை யுடையளாதல் வேண்டுமென்பான், “நுண்ணிதிற் கேள்'' என்றும் கூறினான். பௌத்தம் சினேந்திரனாற் கூறப்பட்ட தென்பது முன்பே கூறப்பட்டதாயினும் ஈண்டுக் கூற்று நிகழ்த்துவோன் வேறாதல் பற்றி, “ஆதி சினேந்திரன்'' என்றான். சினேந்திரர் பலராதல் பற்றி, ஆதிசினேந்திரனெனத் தெரித்து மொழிந்தான். காட்சியைப் பிரத்தியக்ஷமென்றும் கருத்தை அனுமான மென்றும் கூறுபவாதலின், அவற்றைப் பிரத்தியமெனச் சிதைத்தும், கருத்தளவையென மொழிபெயர்த்தும் கூறினான். காட்சி காண்டல் என்பன சவிகற்பக் காட்சிக்கும் பொது வாதலால், பிரத்தியம் “சுட்டுணர்'' வாய் வேறுபடுவது பற்றி மொழி பெயர்க்கா தொழிந்தாரென வுணர்க. ஏதமில் என்பது கருத்தள வோடும் இயையும்; எனவே, ஏதமில் பிரத்தியம். ஏதமில் கருத்து என அளவை இரண்டாதல் பெற்றாம். பிரத்தியக்கத்துக்குரிய குற்றம், “சுட்டல் திரிதல் கவர்கோடல்'' என்றும், “சுட்டுணர் வொடுதிரி யக்கோட லையந் தேராது தெளிதல் கண்டுணராமை'' என்றும் கூறிய வாற்றா லறிக. கருத்தளவைக்குரிய குற்றங்களைப் பின்னர்ப் “பக்கப்போலியு மேதுப் போலியுந் திட்டாந்தப் போலியுமாம்'' என வகுத்துக் கூறுப. மெய்யுணர்வுப் பேறு நேர்முகமாகவும் வழிமுகமாகவும் நிகழ்த்தலின், பௌத்தர்கள் நேர்முகப் பேற்றைப் பிரத்திய மென்றும், வழி முகத்தைக் கருத்தென்றும் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபற்றி “அளவை யிரண்டே'' யென்றார்; ஏகாரம்: தோற்றம்; ஏனைப் பத்தும் எட்டும் ஆறும் என்றவற்றுள், இரண்டை வாங்கிக் கொண்டதாகக் கொள்வார்க்குப் பிரிநிலையுமாம். 49-51. சுட்டுணர்வை - ஒரு பொருளின் பொருண்மை மாத்திரம் கண்டுணரும் உணர்வை; பிரத்தியக்கம் எனச் சொலி - காட்சியளவை யென்று மேற்கொண்டு; நாம சாதி குணக் கிரியைகள் - பிறராற் கொள்ளப்படும் பெயர் சாதி குணம் தொழில் என்பவை, அனுமானத்தும் அடையும் என -கருத்தளவைக்கும் செல்லுமென வாராய்ந்து தெளிந்து; அவை விட்டனர் - அவற்றை இலக்கண மேற்கொள்ளாது நீக்கி விட்டனர் எ - று. காட்சியாவது கண் முதலிய பொறிகளால் வண்ண முதலிய வற்றைப் பற்றிக் காண்டல் முதலியன செய்து, காணப்படும் பொருளின் இயல்பை இடம் காலம் பொருள் ஒளிகளோடு படுத்துக் “கிட்டிய நாம சாதிக் குணக் கிரியையின் அறிவதாகும்'' என அளவை நூலார் கூறுதலின், அவரின் வேறுபடுத்தற்குச் “சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச் சொலி விட்டனர்'' என்றும், நாமசாதிக் குணக்கிரியையின் வைத்தறியும் இலக்கணம் காட்சிக் கேயன்றிக் கருத்தளவைக்குஞ் சேறலின், அஃது அதிவியாத்தியாதல் கண்டு, “அவை விட்டனர்'' என்றும் கூறினார். சுட்டுணர்வு பொருண்மை மாத்திரை கண்டொழித லென்னும் பொருளதாதலை “சுட்டுணர் வெனப்படுவது, ஏனைப் பொருளுண்மை மாத்திரை காண்டல்'' (மணி. 27: 61--2) என்பர். சுட்டுணர்வு நிருவிகற்பக்காட்சி யென்றும், அனுமானத்தும் என்ற எச்ச உம்மையால் நாம சாதிக் குணக் கிரியையின் வைத்துணரும் உணர்வு சவிகற்பக்காட்சி யென்றும் கொள்க; இவற்றை முறையே இந்திரிய ஞானமென்றும் விசிட்ட ஞானமென்றும் கூறுப. நாமசாதி முதலிய வற்றைத் திக்கநாகர் ''பஞ்சவித கற்பனை'' யென்றும், இவை, “யாவும் அனுமான வனுமேய பாவம்'' என்றும் கூறுவரெனத் தருமகீர்த்தி உரைத்த தத்துவபிந்துவின் உரைகாரர் (90.17) குறிக்கின்றார் தத்துவ சங்கிரகம், நியாயபிந்து, பிரமாண சமுச்சமும், நியாயப் பிரவேசம் முதலிய நூலுரைகளில் இவற்றின் இயல்பைப் பரக்கக் காண்க. சுட்டுணர்வு சவிகற்பக் காட்சிக்கு அடிப்படையாகும்; அது சவிகற்பக் காட்சியைப் பயவாவிடின் குற்றமாம். ஆதலாற்றான், அளவை நூலார், அதனைப் பிரமாணாபாசங்கள் எட்டனுள் ஒன்றாகக் கூறுகின்றனர். மற்று : வினைமாற்று. 52-56. காரண காரிய சாமானியக் கருத்து-காரணானுமானம் காரியானுமானம் சாமானியானுமான மெனப்படும் மூன்று; ஓரின் - பொதுப்பட நோக்குமிடத்து; பிழைக்கையுமுண்டு-உண்மையுணர் தற்குதவாது குற்றப்படுதலுமுண்டு; பிழையாதது-அவற்றுள் வழுப் படாதது; கனலிற் புகைபோல் காரியக் கருத்து - கனலும் புகையும் போலக் காரியானுமான மொன்றேயாகும்; ஏனை அளவைக ளெல்லாம் - மற்ற ஆகம முதலாகக் கூறிய அளவைகளெல்லாம்; கருத்தினில் ஆனமுறைமையின் - வழியளவைக்குரியவாகும் முறைமையினையுடையவாதலால்; அனுமானமாம் - கருத்தளவைக்கண் அடங்கும் எ - று. அளவை வாதி “மூவகை யுற்றது பொதுவெச்ச முதலாம்'' என்று கூறிய அனுமான வகையை மறுத்துரைத்தலின் ''ஓரிற் பிழைக்கையு முண்டு'' என்றார். பொது வென்றது சாமானிய கருத்தும், எச்சமென்பது காரியக் கருத்தும், முதலென்பது காரணக் கருத்துமாக அறவணவடிகளாற் கொண்டு கூறப்படு கின்றன. சாமானியக் கருத்தின்கண், சாதனமும் சாத்தியமும் அந்நுவயமாய் இல்லாமையின், ஐயத்துக்கிடமாம்; கானத்தில் எழும் யானையொலி, அக்கானத்தே இன்னவிடமென வரைந்து காட்டாமையின் பிழையாம் என்று நியாயபிந்து (3. 65) கூறுகிறது, கருமுகில் கண்டவிடத்து மழை பெய்யுமெனத் துணியும் காரணானு மானத்தின் சாதனமாகிய முகில் காரணமாகச் சாத்தியமாகிய மழை வரவு ஒருதலையாய்த் துணியப்படாமையின் பிழையாம். காரணமாகிய முகிற்கும் காரியமாகிய மழை வரவுக்கும் இடைக் காரணமாகக் காற்று முதலிய வுண்மையின் அவாந்தர காரணம் சாத்தியத்திற்குக் கட்டுப்பட்டதன்றாதலால் துணிவு ஒரு தலையாய்ப் பெறப்படாதென்பர். இவற்றின் விரிந்த ஆராய்ச்சியைத் திக்கநாகர்1 முதலியோர் கூறிய நுல்களிற் கண்டு கொள்க. காரியானு மானத்தின்கண், ஏதுவாகிய காரியத்தின்கண், காரணமாகிய பொருளுண்மை நியதமாதலின் பிழைத்தற்கு இடமின்மைபற்றி, “பிழையாதது கனலின் புகைபோற் காரியக் கருத்தே'' என்றார். ஆகம மேற்கோள் அதனைக் கூறுவோனும் கூறும் பொருளும் என இருதிறமாக வகுக்கப்பெற்றுக் கூறுவோனாயின் ஆகமம் அனுமானத் தடங்குமென்றும் பொருளாயின் காட்சிக்கண் அடங்குமென்றும் திக்கநாகர் கூறுகின்றார். இவ்வாறே ஐதிகத்தை ஆகமத்தும், அருத்தாபத்தியை யனுமானத்தும் நையாயிகரும் வைசேடி கரும் அடக்கிக் கூறுதலின், காட்சியுங் கருத்து மொழிந்த அளவைகள் யாவும் கருத்தினும் காட்சியினும் அடங்குமாறு கண்டு, காட்சிக்கண் அடங்குவன கருத்தின் கண்ணும் அடங்குமென்று தேர்ந்து ''கருத்தினிலான முறைமையின் அனுமானமாம்'' என்றார். பிற: அசைநிலை. 57-63. பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்துள - மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் உபநயமும் நிகமனமும் என ஐந்து உறுப்புக்கள் கருத்தள வைக்குண்டு; அவற்றிற் பக்கம் இம்மலை நெருப்புடைத்து எனல் - அவ்வைந்தனுள் மேற் கோளாவது இம்மலை நெருப்பை டையது என்று மொழிதல்; பொருந்து ஏது புகையுடைத்தா தலால் எனல் - இம்மேற்கோளைச் சாதித்தற்குப் பொருந்திய ஏதுவாவது புகையுடைமையால் என்பது; திட்டாந்தம் வகையமை அடுக்களைபோல் - எடுத்துக் காட்டாவது பல வகைப்பட்ட அடுக்களை போல என்று சொல்லுதல்; உபநயம் மலையும் புகையுடைத் தென்றல் - உபநயமாவது இம்மலையும் புகையுடையதாம் என்பது; நிகமனம் புகையுடைத்தே நெருப் புடைத்து எனல்-நிகமனமாவது யாது யாது புகையுடையது அது நெருப்புடையது என்று துணிந்து கூறல் எ - று. ஆதி சினேந்திரன் கூறிய இருவகை யளவைகளையும் முறையே கூறுவார், அளவைவாதி அவ்விருவகையையும் பற்றிக் கூறியவற்றை மேற்கொண்டு அவற்றுள் தம் சமயக் கருத்துக் கொவ்வாதனவற்றை விலக்கித் தூய்மை செய்து வந்தாராகலின், இனி அனுமானத்துக்கு உறுப்பாகிய ஐந்தையும் விளக்கிக் கூறுவாராயினார். அனுமானம் தன் பொருட்டென்றும் பிறர் பொருட்டென்றும் இரு வகைப்படும் என எல்லாப் புத்தநூல்களும் கூறியிருப்பவும், இவ்வாசிரியர் கூறாராயினார். இவ்வகைமையை ஏனோரும் மேற்கொண்டிருத்தலின் பதார்த்த தரும சங்கிரக முடையார் சுநிச்சிதார்த்தம் என்றும் பரார்த்தம் (பக். 231) என்றும், நியாயபிந்து டீகையுடையார் ஞானான்மகம், சத்தான்மகம் (பக்.21) என்றும், சத்த பதார்த்தி யுடையார் அருத்தரூபத்வம் சத்தரூபத்வம் (பக். 154) என்றும் கூறுப. புத்தருட் சிலர் பக்க முதலிய வைந் துறுப்பும் பரார்த் தானுமானத்துக்குரிய வென்றும் பக்க முதலிய மூன்று சுவார்த் தானுமானத்துக்குரிய வென்றுங் கூறுபவாயினும் இவ்வகைகள் பெயரால் வேறுபடினும் கருத்து ஒன்றாதல் காண்க. வாற்சாயனர் இவ்வைந்தனோடு, ஜிஞ்ஞாசம், சமுசயம், சக்கிய பிராப்தி, பிரயோசனம், சமுசய வியுதாசம் என்ற ஐந்தும் கூட்டிப் பத்தாகக் கூறுவ (நியாயபாடி 1. 1. 32) "ரென்றும். பத்திரபாகு வென்பார், இப்பத்தையும் பெயர் வேறுபடுத்து, பிரதிஞ்ஞை, பிரதிஞ்ஞா விபத்தி, ஏது, ஏதுவிபத்தி, விபக்கம், விபக்கப் பிரதிசேதம், திருட்டாந்தம், ஆகாங்ஷை, ஆகாங்ஷா பிரதிசேதம், நிகமனம் என்று கூறுவரென்றும் பேராசிரியர் இராதாகிருட்டினனார்1 எடுத்துக்காட்டுகின்றார். பக்கம், தன்பக்கம் மறுதலைப் பக்கம் என வகுக்கப்பட்டுச் சபக்கம்விபக்கம்என மேலே வழங்குபவாதலின், ஈண்டு மேற்கோளென்றாதல் பிரதிஞ்ஞை என்றாதல் கூறாராயினார். பொருந்தேது என்றதனால், பொருந்தாஏது வென்பதுண் டென்றும், அது குற்றமுடைத்தென விலக்கப்படுமெனவும் அறிக. அடுக்களை, ஒரு கிளையும் பல கிளையுமுடையவாய்ப் பல வகைப்படுவதுபற்றி, "வகையமை அடுக்களை" யென்றார் ; இனி, "வகையமை யடுக்களை" யென்றற்கு, "துணிபொருள் வகையும் ஏதுப்பொருள் வகையும் பொருந்தியுள்ள பாகசாலை" யென்றும், "முறையானமைந்த பாகசாலைபோலும் எனக் கொள்வது மொன்" றென்றும், "முறையாவது வியாப்தி வசனத்துடன் கூறுதல்" என்றும் கூறுவர்2 திரு. நாராயணையங்காரவர்கள். பக்கப் பொருளை ஏது திட்டாந்தங்களா லுண்மையெனத் துணிந்தபின் அத்துணிபை யெடுத்தோதுவதுஉபநய மாதலின், "மலையும் புகையுடைத் தென்ற" லென்றார். திட்டாந்தப் பொருளைத் தழுவி நிற்றலின் உம்மை எச்சப் பொருட்டு. 64-67. யாதொன்று நெருப்புடைத்தல்லாது அது புகைப் பொருத்தம் இன்று புனல்போல்-யாதொன்று நெருப் புடைய தன்றோ அது புகையொடு பொருந்துவதன்று புனல்போல; என்றல் - என்று சொல்லுவது; மேவிய பக்கத்து மீட்சிமொழி யாய்-மேற்கோளாய்ப் பொருந்திய பக்கத்து மறு தலையாய்; வைதன்மிய திட்டாந்தமாகும்- வைதன்மிய திட்டாந்தமெனப் படும் எ - று. யாதொன்று புகையுடையது அது நெருப்புடையது. அடுக்களை போல என்பது சாதன்மிய திட்டாந்தம். அதனை "வகையமையடுக் களை போல் திட்டாந்தம்" என்று கூறினாராகலின், அதன் பக்கத்து மீட்சி மொழி நெருப்புடைத் தல்லாதது யாது அது புகைப் பொருத்த முடையதன்று என்பது பெறப்படுவது கொண்டு, "மேவிய பக்கத்து மீட்சி மொழியாய்" என்றும், இதனை வற்புறுத்தும் திட்டாந்தம் இது வென்பார், "வைதன்மிய திட்டாந்தமாகும்" என்றும் கூறினார். பக்க முதலியவற்றை விளக்கி வருபவர், புகையுடைத்தே நெருப்புடைத்தென நிகமனம் கூறிய வழி, அவ்வாறு கூறாது, யாதொன்று நெருப்புடைத் தல்லாது அது புகைப் பொருத்தமின்று புனல்போல் என எதிர்மறை முகத்தால் வற்புறுத்துவது யாண்டடங்கும் என்பார்க்கு, அது பக்கத்து மீட்சி மொழியாய் வைதன்மிய திட்டாந்தமாம் என்றாரெனக் கொள்க; வைதன்மிய திட்டாந்தத்தின் இயல்பைப் பிறாண்டுக் கூறுப. 68-71. தூய காரிய ஏது சுபாவம் ஆயின் - குற்றமற்ற காரிய வியை பிற்றாகிய ஏது சாதிக்கப்படும் பொருட்டு இயல்பாகிய தருமமாவதை யாராயுமிடத்து;பக்க தன்ம வசனமாகும்-அது பக்க தன்ம வசனம் எனப்படும்;சத்தம் அநித்தம் என்றல் பக்கம்-ஒலி அநித்த மாம் என்பது பக்கம்; பண்ணப்படுதலால் - எழுப்பப்படுவதால் என்பது பக்க தன்ம வசனம் எ - று. காரியம் காரணம் பொது என முன்னர்க் கூறிய ஏதுவகை மூன்றனுள், "பிழையாதது காரியக் கருத்தே" (54.5) என்றாராகலின், ஈண்டு அதனைத் "தூய காரிய வேது" என்றும், இயல்பாய தன்மம் என்ற பொருண்மை தோன்றச் "சுபாவம்" என்றும் கூறினார். பக்க தன்ம வசனமாகும் என்பது சுபாவத்தோடும் சென்றியையும். இவ்வாறே திக்க நாகரும், "அநித்ய: ஸப்தைதி பஷ வசனம். க்ருதகத்வாத்இதி பஷதர்ம வசனம்" என்று கூறுவர். 72-76. சபக்கத் தொடர்ச்சி - சபக்கத் தொடர்ச்சி யென்பது; யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது-யாதொன்று செய்யப்படுவதோ; அநித்தியம் கடம்போல் என்றல்-அஃது அநித்தமாகும் குடம் போல் என்று சொல்லுவதாம்; யாதொன்று அநித்தமல்லாதது பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல்-யாது அநித்தமல்லாததோ அது செய்யப்படாததாம் ஆகாயம் போல என்று மறு தலைப்பக்கமாக நின்று சொல்லுவது; விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க - விபக்கத் தொடர்ச்சி யென்னும் மீட்சிமொழி யென்று அறிக எ - று. பக்க தன்மமாகிய பண்ணப்படுதலா லென்பதையே தொடர்ந்து பக்கப் பொருளாக நிறுத்தி மேலே சாதித்த அநித்தத்துவத்தை வற்புறுத்துவது பற்றிச் "சபக்கத் தொடர்ச்சி" யென்றும் சாதிக்கப்பட்ட பொருட்கு மறுதலைப் பொருளைப் பக்கப் பொருளாக நிறுத்தி மறுதலை யேதுவால் ஏற்ற திட்டாந்தங் காட்டிச் சாதித்தலின், "விபக்கத் தொடர்ச்சி" யென்றும், அவ் விபக்கத் தொடர்ச்சியும் பக்க வசனத்தின் மறுதலை யாதலின் "மீட்சி மொழி"யென்றும் கூறினார். சபக்கம்-தன்பக்கம். இதன் மறுதலை விபக்கம். திக்க நாகர் சபக்கத் தொடர்ச்சியை, சபக்கானுகம வசன மென்றும், விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியை வெதிரேக வசன மென்றும் உரைக்கின்றார். 77-84. அநந்நுவயத்திற் பிரமாணமாவது - அந்நுவய வியாத்தி யில்லாத அநந்நுவய அநுமானத்தாற் பொருளை யுணருந் திறமாவது; இவ்வெள்ளிடைக்கண் குடம் இலை என்றல் செவ்விய பக்கம்- இவ் வெற்றிடத்தில் குடம் இல்லை என்பது நல்ல பக்க மொழியாகும்; தோன்றாமையில் எனல் பக்க தன்ம வசனமாகும் - தோன்றாமையால் என்னும் ஏது பக்க தன்ம வசனமாம்; இன்மையின் கண்டில முயற்கோடுஎன்றல் அந்நெறிச் சபக்கம்-யாதொன்று வெள்ளிடை இல்லையோ அதனைக் காண்பது இல்லை, முயற்கோடு போல என்பது அந்நெறியிற் பெறப்படும்சபக்கத் தொடர்ச்சியாம்; யாதொன்று உண்டு அது தோற்றரவு அடுக்கும் கை நெல்லிபோல் எனல் - யாதொன்று வெள்ளிடை யுள்ளதோ அது காணப்படும், கையகத்துற்ற நெல்லிக்கனிபோல என்பது; ஏற்ற விபக்கத்து உரை எனலாகும் - அதற்கேற்ற விபக்கத் தொடர்ச்சி மொழி யாகும் எ - று. ஏற்புடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. வெள்ளிடை யென்றது சபக்க விபக்கங்கட்குக் கூட்டியுரைக்கப்பட்டது. அந்நுவய வியாத்தியில்லாதது அநந்நுவயம் என்றாயிற்று. பிரமாணம், அளத்தற் கருவி மேனின்றது. வெள்ளிடை யென்பதே குடமின்மை உணர்த்து மென்பாரை மறுத்தற்குச் "செவ்விய பக்க" மென்றார். முயற்கோ டென் புழித் திருட்டாந்த வியைபாகிய உவம வுருபு எஞ்சி நின்றது. தோற்றரவடுக்கு மென்பது ஒரு சொல்லாய்த் தோன்றுமென்பது பட நின்றது. வெள்ளிலையை வெற்றிலை யென்பதுபோல வெற்றிடம், வெள்ளிட மென வந்தது. வெண்மை, வெறுமை மேற்று. இல் : ஏதுப்பொருட்டாய ஐந்தாவதனுருபு. காண்டல் இலவென்பது கண்டில வென வந்தது. கண்டில மெனக்கொண்டு காண்ப தில்லே மென்றும், முயற்கோடு கண்டில எனவியைத்து முயற்கோடுகள் காணப்பட்டில வென்றும் கூறலுமொன்று. யாதொன்றுண்டென் புழி, உண்மை, கண் முதற் பொறிகட்குத் தோன்ற வுளதாதல். 85-90. ஏது இவ்வகை பொருள் சாதிப்பன - சாதனமாகிய ஏதுக்கள் இக்கூறிய வகையால் பொருளைச் சாதிப்பனவாம்; காரியம் புகை சாதித்தது - காரியமாகிய புகையே காரணமாகிய நெருப்புண்மையைச் சாதித்தது; என்னை யென்னின்-அது தானும் எங்ஙனம் என்றால்; புகை யுளவிடத்து நெருப்புண்டு என்னும் அந்நு வயத்தாலும் - புகை தோன்றுமிடத்து நெருப்புளதா மென்னும் உடன்பாட்டுட னிகழ்ச்சியாலும்; நெருப்பிலா விடத்துப் புகையில்லை யென்னும் வெதிரேகத் தாலும்-யாண்டு நெருப்பில்லை ஆண்டுப் புகையில்லையா மென்னும் எதிர்மறை யுடனிகழ்ச்சியாலும்; புகைஇ நெருப்பைச் சாதித்தது - புகையாகிய ஏது நெருப்பின் உண்மையைச் சாதித்ததாம் எ - று. ஏதுக்கள் பொருளைச் சாதிக்கு திறத்தை அநுமான வளவையைப் பற்றிக் கூறியவாற்றால் பக்கம் முதலாக விளக்கிப் போந்தமையின் அவற்றை மறுத்துத் தமது கொள்கையைக் கூறுவாராய், "இவ்வகை யேதுப்பொருள் சாதிப்பன" என்று முன் மொழிந்துகொண்டு ஏதுப் பொருளைச் சாதிக்கும் நெறியைப் பல்வேறு தடைகளால் மறுக்கத் தொடங்கி, "காரியம் புகை சாதித்த தென்னை யென்னின்" என்றொரு கடாவை யெழுப்பி, அந்நுவயத்தாலும் வெதிரேகத்தாலும் புகை நெருப்புண்மையைச் சாதித்த தென்பார், "புகைஇ நெருப்பைச் சாதித்தது" என்றார். யாண்டுப் புகையுண்டு ஆண்டு நெருப்புண்டு, அடுக்களை போல என்பது அந்நுவயஞ் சாதித்தல்; எங்கு நெருப்பில்லை அங்குப் புகையில்லை, புனல்போல என்பது வெதிரேகஞ் சாதித்தல். புகை நெருப்பைச் சாதித்தது என்றவிடத்துக் கருவி கருத்தாவாக உபசரிக்கப்பட்டது. அந்நுவயத்தாலும் வெதிரேகத்தாலும் என்புழி, என் என்னும் இடைச்சொற் றொக்கதாகக் கொண்டு, அந்நுவயத்தாலேனும் வெதிரேகத்தாலேனும் என்று உரைப்பர் திரு. நாராயணையங்கார். 90-95. என்னின்-என்று இவ்வாறு ஏதுப்பொருளைச் சாதிக்கு மென்றால்; நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான ஊர்த்தச் சாமம்-நெருப்பின் காரியமாய்ப் பொருந்திய புகையிடத் துண்டாகிய மேனோக்கிய செலவும்; கௌடிலச் சாமம்-வளைந்து படர்ந்தமையும் படலமுமாகிய இரண்டும்; வாய்த்த நெருப்பின் வருகாரியம் ஆதலால்-காரணமாய் அமைந்த நெருப்பினின்று தோன்றிவரும் காரியமாதலால்; மேனோக்கிக் கறுத்திருப்ப-மேனோக்கிச் சென்று கறுத்திருப்பனவும்; பகைத் திருப்ப-மேனோக்காது மாறுபட்டுப் பரந்து படலமாய்ப் படர்ந்திருப்பனவும் ; நெருப்பைச் சாதிக்க வேண்டுமே-தாம் தோன்றியுள்ள விடத்தே நெருப்புண்டெனச் சாதிக்க வேண்டு மல்லவோ எ - று. காரணத்தின் பண்பு காரியத்து முண்டென்னும் அளவைநூற் கருத்தை யுட்கொண்டு, மேனோக்கிய செலவும் படலமாய்ப் படர்தலும் காரணமாகிய நெருப்பின் காரிய மென்றற்கு, "வாய்த்த நெருப்பின் வரு காரியம்" என்றார். "பிழையாதது காரியக்கருத்தே" யென்றதை மேற்கொண்டு, இக்காரியங்களும் காரணமாகிய நெருப்புண்மை சாதிக்க வேண்டுமல்லவோ என்பார், "காரிய மாதலின் மேனோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப தாமே நெருப்பைச் சாதிக்கவேண்டும்" என்றார். தாம்; அசை. எதிர்மறை யேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. இதனாற் பயன், காரியம் காரணஞ் சாதித்தல், அன்னுவயஞ் சாதித்தல், வெதிரேகஞ் சாதித்தல் என்ற மூன்றனுள், காரியவேதுவாய புகை பிழைபடு மாறு காட்டியவாறு. ஊர்த்தஸ் யாம்மன் என்பது ஊர்த்தச் சாமம் என வந்தது. கௌடிலஸ்யாமம், வளைந்து படர்ந்து செல்வது. மேனோக்கிய செலவின் மாறாகப் படர்ந்திருப்பது பற்றிப் "பகைத் திருப்ப" வென்றார். 96-101. அன்னுவயம் சாதிக்கின் - உடன்பாட் டுடனிகழ்ச்சிப் பொருளதாகிய அன்னுவயத்தால் பொருளுண்மை சாதிக்கப் படுமாயின்; முன்னும் ஒரு காலத்து ஓரிடத்தே கழுதையையும் கணிகையையும் தம்மில் அன்னுவயங் கண்டான் - முன்னொரு காலத்தே ஓரிடத்தில் கழுதையும் கணிகை யொருத்தியும் தம்மில் உடங்கிருப்பக் கண்டவ னொருவன்; பிற்காலத்துக் கழுதையைக் கண்டு பின்னொரு காலத்தே கழுதை யிருப்பக் கண்டு; அவிடத்து- அவ்விடத்தே; கணிகையை அனுமிக்க வேண்டுமே - கணிகையும் உடனிருப்பதாகத் துணிய வேண்டுமல்லவோ; அது கூடா-அது கூடாதாம் எ - று. அன்னுவயம் என்புழி மூன்றாவது விகாரத்தாற் றொக்கது. செயப் படுபொருள் வருவிக்கப்பட்டது. நெருப்பும் புகையும் அன்னுவயமாகக் கண்டவன் பிறிதோரிடத்துப் புகை கண்டவழி நெருப்புண்மை சாதிக்கும் திறம் குறித்து முன்னர்ப் "புகையுள விடத்து நெருப்புண்டென்னும் அன்னுவயத்தாலும்" என்று கூறியதை மறுக்கும் குறிப்பினால் "அன்னுவயஞ் சாதிக்கின்" என்றார். அவ்விடத்தெனற்பாலது அவிடத்து என விகாரமாயிற்று. எதிர்மறை யேகாரம் ஈண்டும் பிரித்துக் கூட்டப்பட்டது. கூடா தென்பது ஈறு குறைந்தது. இதனால் அன்னுவ யானுமானம் பிழைபடுமாறு காட்டியவாறு. 101-108. நெருப்பிலா விடத்துப் புகை இலையென நேர் அத்திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின் - நெருப்பில்லாதவிடத்திற் புகையில்லையாம் என மேற்கொள்ளும் அந்தச் சிறப்பமைந் திருக்கின்ற எதில்மறையுட னிகழ்ச்சிப் பொருளதாகிய வெதிரேகம் பொருளுண்மை சாதிக்கு மென்பாயாயின்; நாய்வால் இல்லாக் கழுதையின் பிடரில்-(ஓரிடத்தே) நாய்வால் இல்லாத கழுதையின் பிடரியிலே; நரிவாலும் இலையா - நரியினது வாலும் இல்லையாக; காணப்பட்ட அதனையே கொண்டு-அங்ஙனம் காணப்பட்ட வெதிரேக அறிவே கொண்டு; பிறிதோரிடத்து - பிறிதோரிடத்துக்குச் சென்ற காலை; நரிவாலில் நாய்வாலை யனுமித்தல்-நரிவாலிருப்பக் கண்டு நாய்வாலு முண்டெனத் துணிதல்; அரிதாம் - கூடாதாம்; அதனால் அதுவும் ஆகாது - ஆதலால் வெதிரேகியனு மானமும் கூடாதன்றோ எ - று. "நெருப்பிலா விடத்துப் புகையிலையென நேர் வெதிரேகம்" என்றது, முன்னே "நெருப்பிலா விடத்துப் புகையில்லை யென்னும் வெதி ரேகத்தாலும், புகைஇ நெருப்பைச் சாதித்தது" என்றதைக் கொண்டு கூறியது. நேர்தல்; உடன்பட்டு மேற்கோடல். அவ் வெதிரேக மென்னாது, "திருத்தகு வெதிரேக" மென்றது இழித்தற் குறிப்பு. திரு : துணி பொருளைச் சாதிக்குஞ் சிறப்பு; ஈண்டு அது குறிப்பு மொழியாய்ச் சிறப்பின்மை குறித்தது; தீங்கட்டானை நன்கட்டாய் என்றாற்போல, கழுதையின் பிடரிமயிர் நிலைக் களமாக, நாய்வாலுமில்லை நரிவாலுமில்லை என்று கண்ட வெதிரேகத்தை, "நாய்வாலில்லாக் கழுதையின் பிடரியின் நரிவாலு மிலையாக் காணப்பட்டவது" என்றொழிந்தார். "பிறிதோரிடத்து" என்றமையின் ஓரிடத்தென முன் மொழிந்து கொள்ளப்பட்டது. இதனால் வெதிரேக யனுமானமும் பிழைபடுமாறு காட்டியவா றாயிற்று. 109-110. ஒட்டிய உபநயம் - பக்க முதலிய மூன்றோடு சேரவுள்ளன வாகிய உபநயமும்; நிகமனம் - நிகமனமும்; இரண்டும் - ஆகிய இரண்டும்; திட்டாந்தத்தில் சென்று அடங்கும் - மூன்றாவ தாகிய திட்டாந்தத்தின்கண் அடங்கிவிடும் எ - று. எனவே, அவை எம்மனோர்க் காகா என்பதாம். இந்நூலாசிரியர் காலத்தே அளவை நூலார் பக்க முதலிய ஐந்தனையும் மேற்கொண் டொழுகின ரென்றும், அவற்றுள் உபநயமும் நிகமனமும் திட்டாந்தத்தில் அடங்குமென்றும், எனவே தாம் மேற்கொள்வன பக்க முதலிய மூன்றுமே யென்றும், இதுகாறும் கூறிய வாற்றாற் பெறப்படும். "சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனச் சொலி, விட்டனர் நாம சாதிக் குணக் கிரியைகள்" (49-50) எனப் பிறர்மேல் வைத்துக் கூறியதுபோல, ஈண்டும் திட்டாந்தத்திலே "அடக்கினர்" எனப் பிற ஆசிரியர் மேல்வைத் துரையாது, தாமே தெளிந்து கூறுமாறு தோன்ற, "திட்டாந்தத்திலே சென்றடங்கும்" என்றார். இவ்வாறே இவ்வற வணவடிகள் இருந்து அறங்கூறும் காஞ்சியம் பதியிலிருந்து வடநாடு சென்று சிறந்த திக்கநாகரும் பக்கமுதலிய மூன்றுமே வடமொழி வாயிலாக வடவர்க் கறிவுறுத்தி யிருக்கின்றார். இம்மூன்றனையும் முதன் முதலில் வடிகட்டி யுரைத்த ஆசிரியர் மணிமேகலை யாசிரியரென்ப தறியாது நாகார்ச்சுனரென்பார் தாமெழுதிய உபய கௌசல்ய சூத்திர மென்னும் நூலிற் கூறி யுள்ளார் என்று கூறுவாரும் மூன்றாக வடிகட்டிய முதலாசிரியர் திக்கநாகரே யென்பாரும் உளர். இம்மூன்றும் பக்கம் ஏது திட்டாந்த மென்பனவா மென்றும், இம்மூன்றற்கும் சாதன மென்பது பெயரென்றும், இவற்றால் கேட்போர் அறியப்படாத பொருள் அறிவுறுத்தப்படுகிறதென்றும் தாமெழுதிய நியாயப் பிரவேச மென்னும் நூலில், "பக்ஷாதி வசநாநி ஸாதனம் பக்ஷஹேது த்ருஷ்டாந்த வசநைர்ஹ ப்ராஸ்நி காநாமப்ரதீ தோர்த்த: ப்ரதிபாத்யத இதி" என்று கூறியிருப்பது காண்க. இவர்கட்குப் பிற்போந்த தருமகீர்த்தி யென்பார் நியாயபிந்து வென்னும் தமது நூலில் மூன்றையும் இரண்டாக அடக்கு கின்றார். பிறரெல்லாம் உபநயத்தை ஏதுவின் கண்ணும், நிகமனத்தைப் பக்கத்தின் கண்ணும் அடக்குப. சமணரும் வேதாந்திகளும் மீமாஞ் சகரும் இம்மூன்றையுமே மேற்கொண் டொழுகு கின்றனர்; பௌட்கர முதலிய சைவாகமங்கள் ஐந்தையுமே மேற் கொண்டொழுகுதலால் வாகீசமுனிவர் முதலிய தமிழாசிரியன் மாரும், சிவாக்கிரயோகிகள் முதலிய வடமொழி யுரைகாரரும் ஐந்தையும் மேற் கொண்டனர். இனி, ஞானசம்பந்தர் காலத்தே தமிழகத்து வாழ்ந்த புத்தர்கள் பக்கத்தன்மமாகிய ஏதுவும் பக்கவசனமாகிய எடுத்த மொழியு மாகிய இரண்டுமே கொண்டிருந்தனர். இவையே தருமகீர்த்தி முதலாயினர் மேற்கொண்டனவாம். இதுகாறும் பிறர் மதம் எடுத்தோதி மறுத்த ஆசிரியர் இனித் தம் கொள்கையை யுரைக்கின்றார். 111-112. பக்கம் ஏது திட்டாந்தங்கள் - பக்கமும் ஏதுவும் திட்டாந் தமுமாகிய மூன்றனுள்ளும்; ஒக்க நல்லவும் தீயவும் உள-ஒவ்வொன்றிலும் குற்றமில்லாதனவும் குற்றமுடையனவும் உள்ளன எ-று. மூன்றிலும் ஒப்ப இவ்வேறுபாடிருத்தலின் "ஒக்க நல்லனவும் தீயனவும் உள" என்றும், குற்றமின்மை நன்மையும், குற்றமுண்மை தீமையு மாதலால் அவற்றைப் பயன் குறித்து, "நல்லவும்" என்றும் "தீயவும்" என்றும் கூறினார். நல்லவை நன்பக்கம் என்றும் நல்லேது என்றும், "ஏதமில் திட்டாந்த" மென்றும் வழங்கும்; தீயவை, பக்கப் போலி, ஏதுப்போலி, திட்டாந்தப் போலியென்றும், தீய பக்கம் தீய வேது தீயவெடுத்துக்காட்டென்றும் வழங்கும். இனி, இதற்குத் திரு. நாராயணையங்கார், ‘பக்க முதலிய மூன்றுறுப்புக்களும் முற்றும் நல்லனவாதலால் நல்லனுமானமாதலும், அவற்றுள் ஒரோவொன்று தீயன வாதலானே அனுமானாபாசமாதலும், உள்ளனவா மென்றவாறு" என்றும், "நல்லனவாதற்கு ஒக்கவென்ற தனால் தீயனவாதற் கொரோ வொன்றே சாலுமென்பதாயிற்று" என்றும் கூறுவர். 112-121. நன்பக்கம் - குற்றமில்லாத பக்கமாவது; வெளிப் பட்டுள்ள தன்மியினையும் - வெளிப்படையாகத் தோன்றி நிற்கும்தன்மியையும்; வெளிப்பட்டுள சாத்திய தன்மத்திறம் - அவ்வாறு விளங்கத் தோன்றி நிற்கும் சாத்தியதன்மக் கூறுபாடு; பிறிதின் வேறாம் வேறுபாட்டினையும் - பிறிதொரு பொருளினின்றும் வேறாகவுடையதாகும் வேறுபாட்டையும்; தன் கண் சார்த்திய நயம் தருதலுடையது - தன் கண்ணே சார்த்திக் கூறப்படும் தன்மையுடையதாகும்; என நாட்டுக-எனத் துணிவாயாக; அது - அஃதாவது; சத்தம் அநித்தம் நித்தம் என்ற ஒன்றைப்பற்றி - சத்தம் அநித்த மென்றும் சத்தம் நித்தமென்றும் வரும் இரண்டனுள் ஒன்றை மேற்கொண்டு; நாட்டப்படுவது - ஏது திட்டாந்தங்களால் சாதிப்பதாகும்; அதில் - அப் பக்க வசனத்தில்; தன்மி சத்தம் - தன்மியாவது சத்தம்; சாத்திய தன்மமாவது - அவற்றை முறையே சாதித்தற்குப் பொருந்திய தன்மமாவது; தித்தாநித்தம்- நித்தத்துவமும் அநித்தத்துவமுமாம். எ - று. பக்கத்துட் கூறப்படும் தன்மியும் சாத்தியதன்மமும் வாதிபிரதி வாதிகட்கு நன்கு தெரிந்தவை யென்றற்கு, வெளிப்பட்டுள்ள தன்மி" யென்றும், வெளிப்பட்டுள சாத்தியதன்ம" மென்றும் சிறப்பித்தார். தன்மி யின்னதென்றும் அது நிற்கும் நற்பக்க வசனம் இதுவென்றும் காட்டுவார், "தன்மி சத்தம்" என்றும், "சத்தம் அநித்த நித்தமென் றொன்றைப்பற்றி நாட்டுவது" என்றுங் காட்டினார். பக்கமும் தன்மியுங் காட்டிய வழி இயைபுபடுதலின் சாத்திய தன்மத்தைக் காட்டுவதற்கு, "சாத்தியதன்மமாவது நித்தா நித்தம்" என்றார். சத்தம் அநித்தம் நித்தமென்றதற்கேற்பக் கூறாது, செய்யுளாகலின், நித்தா நித்தமென மாறிக் கூறினார். பக்க வசனத்துத் தன்மி யெழுவாயும் சாத்திய தன்மம் பயனிலையு மாதலின், இவ்விரண்டையு மெடுத்தோதுவது பக்க வசனமென் றொழியாது, தன்மியைக் கூறவே, அதன் சாத்திய தன்மமும் அடங்குமென்ற கருத்தால், "வெளிப்பட்டுள்ள தன்மியினையும்" என்றும், தன்மி வெளிப்படையாய தென்னின், அதன் சாத்திய தன்மமும் அவ்வியல்பிற்றே யென்பது தோன்ற "வெளிப்பட்டுள சாத்தியத் தன்மம்" என்றும், அது தன் படர்ச்சிக்குட்பட்ட ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுக்களாலும் உடம்பாடும் எதிர் மறையுமாகிய பலவகையால் நாட்டப்படுதலின், சாத்திய தன்ம மென்னாது "சாத்திய தன்மத்திற" மென்றும், சத்தம் அநித்த மெனச் சாதிக்குமிடத்து நித்தமாகிய தன்மத்தையுடைய பிற பொருள்களின் வேறாம் இயல்பை, பிறிதின் வேறாம் வேறு பாட்டினையும்" உடைய தென்றும் கூறினார். பக்க தன்மம், திட்டாந்தம், சபக்கத் தொடர்ச்சி முதலிய இயைந்து சாத்திய மாகிய பயனை வற்புறுத்தற்கு நன்பக்கம் இடமாகும். நயத்தின் விளைவு பயனென்பர். அதனை "நயங்க ணான்காற் பயன்க ளெய்தி" (மணி. 30 : 35) என்பது காண்க. சாத்திய தன்மம் - தன்மியோ டின மாயவற்றில் ஒன்றியிருத்தல் ஒற்றுமை நயம் ; பிறிதின்பால் இல்லாது வேறாதல். வேற்றுமை நயம். நற்பக்கமாவது இவ்விருவகை நயங்களையு முடைத்தாதல் பற்றி, "தன்கட் சார்த்திய நயந்தருமலுடைய" வென்றார். இதனால், நற்பக்கமாவது வெளிப் பட்டுள்ள தன்மியையும், வெளிப்பட்டுள்ள சாத்திய தன்மத்தையும், அத்தன்மத்தின் படர்ச்சிக் குட்பட்ட இனப்பொருளின்கண் ஒன்றி நிற்கும் ஒற்றுமையே யன்றிப் பிறிதின் வேறாம் வேறுபாட்டையும் உடையதென்பது கூறப்பட்டதாம். பிறிதின் வேறாம் வேறுபாடுடைமை கூறவே, இனமாயவற்றில் ஒற்றுமையுடைமைதானே எய்துதலின் உம்மையாற்றழீஇக் கொண்டார். "வெளிப்பட்டுள்ள" என ஒருமுறைக்கிருமுறை மிகுத்துக் கூறியதனால், இத் தன்மி தன்மங்கள் பிரிதிவாதி யறியாதனவா யிருத்தல் கூடாதென்றும் பக்க வசனமும், கவர்பொருள் வைப்பு, மாறுகொளக் கூறல், குறிப்பிற் பொருள் தரல் முதலியனவின்றி எடுத்த பொருளை யெளிதினிது காட்டுவதா யிருத்தல் வேண்மென்றும் கொள்க. இது பலரும் அறிந்த செய்தியாதலின், இந்நூலாசிரியர், இலேசினாற் பெறவைத்தார். இனி ஆசிரியர் திக்கநாகர் இலேசினாற்போந்த இவற்றையே யெடுத்துப் பக்க வசனத்துக்கு இலக்கணமாகக் கூறினரேயன்றி, ஈண்டு எடுத்தோதப்படும் நலமுற்றும் கூறிற்றிலர்; பக்கவசனத்தின் சொல்லமைதி தூய்மையுறின் இலக்கணந் தானே யமையு மென்பது கருத்துப்போலும். நியாயப் பிரவேசத்தில், பக்கமாவது வெளிப்பட்டுள்ள தன்மியைத் தன்கண் உடைமையால் சாத்தியமாக விரும்பப்படுவது என்ற கருத்துப்படவே அவர் கூறுகின்றார். இனி, 1திரு நாராயணையங்கார், "பிறிதின் வேறாம் வேறுபாடாவது பக்கம் சபக்கவிபக்கங்களினின்றும் வேறு பட்டிருத்த" லென்றும் இப் "பிறிதின் வேறாம் வேறுபா" டுடைமையைத் திக்கநாதர் பக்கத்துக் கிலக்கணமாகக் கூறாமைக்குக் காரணங் கூறலுற்று, "மணிமேகலை நூன் மரபினர்க்குப் பிறிதின்வேறாம் வேறுபாடும் பக்ஷலக்ஷணத்திற் சேர்க்கப் பட்டிருத்தலால் எல்லாப் பொருளும் அநித்தமென்று பக்ஷவசனங் கூறில், எல்லாமென்னும் சொற்பொருளுக்குப் பிறிதாயொரு பொருளு மில்லாமையால் அதற்குப் பிறிதின் வேறாம் வேறுபாடின்மைபற்றி அதனைப் பக்ஷவசனமாகக் கொள்ளத்தகா தென்பதே யுடன்பாடென்று தோன்றுகிற" தென்றும் "இக் கொள்கை சுத்த தருக்கமுறையுடைய நியாய நூலார்க்கெல்லாம் உடன்பாடா" மென்றும் கூறுகின்றார். பக்க வசனத்துக் கெடுத்துக்காட்டாகச் "சத்த வநித்தம் நித்த மென்றொன்றைப்பற்றி நாட்டப்படுவது" என்று இவ்வாசிரியர் சொன்னதே சிறிது வேறுபாட்டுடன் நியாயப் பிரவேசத்திலும் காணப்படுகிறது. 121-124. நிகழும் நல்லேது மூன்றாய்த் தோன்றும் - நன்பக்கத்துக்குப் பக்கதன்ம வசனமாய் நிலவும் நல்லேது வென்பது மூன்று வகையாகத் தோன்றுகிறது ; மொழிந்த பக்கத்து ஊன்றித் தோன்றலும் - மொழியப்பட்ட பக்கப்பொருளில் நிலை பெற்ற இயைபுடைத்தாதலும்; சபக்கத்து உண்டாதலும் - சபக்கப் பொருளின்கண் இல்லையாகாது உளதாதலும்; விபக்கத்து இன்றியே விடுதலும் - பக்கத்தின் மீட்சியாகிய விபக்கப் பொருளின் கண் அறவே இல்லையாதலுமாம் எ - று. ஏதுவினைப் பக்க தன்ம வசனமென்பது வழக்கு; "சத்தம் அநித்த மென்றல்பக்கம், பண்ணப்படுதலாலெனல் பக்கதன்ம வசனமாகும்" (மணி.29;69-71) என்றமை காண்க. பக்கத்தில் வந்துள்ள தன்மியின் தன்மமே சாதனமாகிய ஏதுவாதலின், "மொழிந்த பக்கத் தூன்றி நிற்றல்" இலக்கணமாயிற்று. மொழிந்த என்பது செயப்பாட்டுவினைப் பொருட்டாய பெயரெச்சம். தன்ம மில்வழித் தன்மியாதல் கூடாமை பற்றி, தன்மம் தன்மிக்கண் இயைந்து நிற்கும் இயல்பை, "ஊன்றித் தோன்றல்" என்றார். பக்கப் பொருட்குரிய பொதுத் தன்மமேயுடைய ஏனைப் பொருளெல்லாம் சபக்கத்தடங்குதலால், அவற்றின் கண்ணும் அத்தன்மம் காணப் படுவதுபற்றி, "சபக்கத் துண்டாதல்" என்றார்; உண்டாதல், உளதாதல், சபக்கப் பொருட்கு மாறாய பொருள் விபக்கப் பொருளாதலின், அதன்பால் உளதாகும் பக்க தன்மம் விபக்கத்து அறவேயில்லையா மென்பது உணரப்படுமாயினும், உய்த்துணர்வு எடுத்தோத்தில்வழி யென்பதுபற்றி, "விபக்கத்தின்றியே விடுதலை" என்றார். நன்பக்கத்துக்குரிய ஏதுவொன்றே, பக்கப் பொருளில் நிலைபேறும், சபக்கத்தில் உளதாதலும், விபக்கத்து இலதா தலுமாகிய மூவகையாய்ப் பகுத்தாராயப்படுவதுபற்றி "மூன்றாய்த் தோன்றும்" என்றார். ஏகாரம்: தேற்றம். உம்மை எண்ணுப் பொருட்டு. இனி, ஈண்டுக் கூறிய வியல்பை எடுத்துக் காட்டுக் களால் முறையே வற்புறுத்துகின்றார். 124-135. சபக்கம் சாதிக்கின்-நல்லேதுவானது சபக்கத்தின் கண் உளதாய் நின்று பக்கத்தோதிய சாத்திய தன்மத்தைச் சாதிக்கு மாயின்; பொருள் தன்னால் பக்கத்து ஓதிய பொதுவகை ஒன்றியிருத்தல்-தான் எடுத்துக் காட்டும் பொருளின் பொதுத் தன்மத்தோடு பக்க வசனத்துட் கூறிய சாத்திய தன்மம் ஒத்திருத்தல் வேண்டும்; சத்த அநித்தம் ஒத்த சாத்தியமாயின் - சத்தம் அநித்த மென்ற பக்க வசனத்துள் அநித்தத்துமாகிய தன்மம் சாதிக்கப் படுமிடத்து; அநித்தம் ஒத்த கடாதிபோல் எனல் - அநித்தத்துவ மாகிய தன்மத்தை யொப்ப வுடைய குட முதலியவற்றைப்போல் என நாட்டுதல்; விபக்கம் விளம்பில் - இதற்கு விபக்க நிலை காட்டுவதாயின்; யாதொன்று யாதொன்று அநித்தமல்லாதது பண்ணப் படாதது ஆகாசம்போல் என்று ஆகும் - தொகுபொருள் அநித்தமன்று, அது பண்ணப்படாததாம், ஆகாசம் போல எனவரும் ; பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் - பண்ணப்படுவதும் பண்ணுஞ் செய்கை யிடத்தே தோன்றுவது மாகிய பொதுத் தன்மமானது; நண்ணிய பக்கம் சபக்கத்திலு மாய் - ஆராய்ச்சிக்குப் பொருந்திய பக்கப் பொருளிலும் சபக்கப் பொருளிலும் உளதாய்; விபக்கத்தின்றி - விபக்கத்தோதும் பொருளிடத்தே அறவே இல்லையாய்; அநித்ததினுக்கு - சத்தமாகிய தன்மி அநித்தத்துவமாகிய தன்மத்தையுடைய தென்பதைச் சாதித்தற்கு ; மிகத்தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க - மிகவும் பொருத்தமான ஏதுவாய் விளங்கிவிட்டது என அறிக. எ - று. ஒத்த அநித்த மென்பதை, அநித்தம் ஒத்த என மாறுக. இனி, திரு. நாராயணையங்கார் கிடந்தபடியே கொண்டு, "எதிரியால் ஒத்துக்கொள்ளப்பட்ட அநித்தியப் பொருளாகிய குட முதலியன போல் என்று கூறுதல்" என்பர். "விபக்கம் விளம்பில்" என்றது, அதனை விளம்புவது ஏதுவின் தூய்மையை விளக்குதற் பயத்த தெனக் குறிப்பித்து நிற்கிறது. பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் எனப் பன்மை யாற் கூறினராயினும், இரு வழியும் ஒத்த நிலையில் பொதுத் தன்மமாயஒருமைப் பொருள்படுதலின், "விளங்கிற்"றென வொருமை முடிவு கூறினார். இவ்வகையால் இவ்வேது தன் பயனைக் குற்றமறச் சாதித்துத் தரும் சிறப்புத் தோன்ற "மிகத்தரும்1 ஏதுவாய் விளங்கிற்"றென்றார். எனக் கொள்க. 136-142. ஏதம்இல் திட்டாந்தம் - குற்றமில்லாத திட்டாந்தம்; சாதன்மியம் வைதன்மியம் என இருவகைய - சாதன்மிய திட்டாந்தமென்றும், வைதன்மிய திட்டாந்தமென்றும் இருவகைப்படுவனவாம்; சாதன்மிய மெனப்படுவது - அவற்றுள் சாதன்மிய திட்டாந்தமெனப்படுவது; அந்நுவயத்து - உடன் பாட்டு நெறிக் கண்; அநித்தம் கடாதி என்கை - சத்தம் அநித்தம், பண்ணப்படுதலால், கடாதிபோல என எடுத்துக் காட்டுதல்; வைதன்மிய திட்டாந்தம் - வைதன்மிய திட்டாந்த மாவது ; சாத்தியம் எய்தாவிடத்தில் ஏதுவும் இன்மை - சாத்திய தன்மம் இல்லாத பொருளிடத்தில் பக்க தன்ம மாகிய ஏதுவும் இல்லையாயொழிதல்; இத்திறம் - நன் பக்கம் நல்லேது நற்றிட்டாந்தமென்ற இவ்வகைகள் மூன்றும்; நல்ல சாதனத்து ஒத்தன - வழுவின்றிச் சாதித்தற்கு ஒப்ப ஏற்புடைய வாகும் எ - று. முன்னே சபக்க விபக்கங்களைத் தனித்தனியே யெடுத்து இலக்கணங் கூறாதொழிந்தார், ஈண்டு இருவகைத் திட்டாந்தங்களில் சாதன் மியத்துக்கு எடுத்துக்காட்டுக் கூறியும் வைதன்மியத்துக்கு இலக்கணங் கூறியும் விளக்கஞ் செய்தார். சாதன்மியத்துக்கு2 இலக்கணம், "எங்கு ஏதுவிற்குச் சபக்கத்தில் மாத்திரம் உண்மை சொல்லப்படுகிறதோ அது" என்றும், வைதன்மியத் திட்டாந்தத்துக்கு எடுத்துக்காட்டு, "யாதொன்று செய்யப்பட்டது அது அநித்த மாகக் காணப்பட்டது குட முதலியன போல" என்றும் நியாயப் பிரவேசம் கூறுகிறது. "பக்கமேது திட்டாந்தங்கள், ஒக்க நல்லவும்...உள" என்று முன்பு கூறினமையின், ஈண்டும் அதற்கேற்ப, "ஒத்தன" என்றார். 143-153. தீயபக்கமும் தீயஏதுவும் தீயஎடுத்துக்காட்டுமாவன - குற்றமுடைய பக்கமும் ஏதுவும் எடுத்துக்காட்டு மென்பவை; பக்கப் போலியும் ஏதுப்போலியும் திட்டாந்தப் போலியுமாம் - பக்கப்போலி ஏதுப்போலி திட்டாந்தப்போலி என வழங்கும்; இவற்றுள்-இம் மூன்றனுள்; பக்கப்போலி என்பது - பக்கப் போலி என்று வழங்குவது; பிரத்தியக்க விருத்தம்...என - பிரத்தியக்க விருத்தமெனவும் அனுமான விருத்தமெனவும், சுவசன விருத்தமெனவும் உலோக விருத்தமெனவும் ஆகம விருத்த மெனவும் அப்பிரசித்த விசேடண மெனவும் அப் பிரசித்த விசேடிய மெனவும் அப்பிரசித்தவுபயமெனவும் அப்பிரசித்த சம்பந்தமெனவும்; ஒன்பது வகைப்படும்-ஒன்பது வகையாகக் கூறப்படும் எ - று. போலிகளை முறையே தீயபக்கம் தீயவேது தீயவெடுத்துக் காட்டென முன்னர்க் கூறியது, பக்கப்போலி முதலியவற்றிற்கு இலக்கணம்; அஃதாவது பக்கப் போலியாவது தீயபக்கம் என்றும், ஏதுப்போலி தீய வேது என்றும் திட்டாந்தப்போலி தீயஎடுத்துக் காட்டென்றும் கொள்க வென்பதாம். நியாயப் பிரவேசம் தீயபக்கம் முதலிய மூன்றையும் முறையே பக்ஷாபாசம் ஏதுவா பாசம் திருஷ்டாந்தாபாசம் என்று கூறி அவற்றிற்கு இலக்கண மாகப் பக்ஷாபாசம் பிரத்தியக்ஷ விருத்த முதலாயினவாமென்றும், ஏதுவாபாசம் அசித்தம் அநைகாந்திக முதலாயினவா மென்றும் திருஷ்டாந்தாபாசம் சாதன்மியம் வைதன்மியமென விருவகைத் தாய்ச் சாதன்மியம் சாதனதன்மாசித்தம், சாத்திய தன்மா சித்தம் உபயதன்மாசித்தம் அநந்நுவயம் விபரீ தாந்நுவயம் என்பனவா மென்றும், வைதன்மியம் ஐவகைத்தாய்ச் சாத்தியா வியாவிருத்தி சாதனா வியாவருத்தி உபயா வியாவிருத்தி அவ்வியதிரேகம், விபரீத வியதிரேகமென்பனவா மென்றும் கூறுகிறது. இப் பக்கப்போலி ஏனைத் தருக்கநூல்களில் பிரதிஞ்ஞாபாசம் என்றும் வழங்கும். ஆராய்ச்சியாளர் பக்கப்போலி முதலிய மூன்றனுள், ஏதுப்போலி யொன்றே பழமையானதென்றும். ஏனையிரண்டும் வாற்சாயனரை யுள்ளிட்ட அறிஞர் காலத்தனவல்லவென்றும் கூறுப, உத்யோதகரர் இவ் விரண்டையும் மறுப்பர். ‘சிலர் பக்கப்போலி திட்டாந்தப்போலி என்பவற்றைப் பொருளாகக் கொள்ளவில்லை. பிரசத்தபாதர் தம்முடைய பதார்த்த தரும சங்கிரகத்தில் பக்கப்போலி ஐந்துவகைப்பட்டு, முறையே பிரத்தியக்க விருத்தம், அநுமான விருத்தம், உலக விருத்தம், ஆகம விருத்தம், சுவவசன விருத்த மென்றியலும் என்பர். மணிமேகலை யாசிரியர் அவ்வைந்தனோடு அப்பிரசித்த விசேடண முதலிய நான்கையும் கூட்டி ஒன்பதாகக் கூறினாராக, அவற்றையே நியாயப்பிரவேச முடையாரும் மேற்கொண்டுள்ளனர். இனி சுலோக வார்த்திக முடையார் இவற்றின் வேறாகக்1 கூறுவர். 154-156. எண்ணிய இவற்றுள் - குற்றமுடையனவென ஆராய்ந்து காணப்பட்டவிவற்றுள்; பிரத்தியக்க விருத்தம் - பிரத்தியக்க விருத்த மென்பது; கண்ணிய காட்சி மாறுகொளலாம் - கண் முதலிய பொறிவாயிலாகத் தெளியக் கண்ட அறிவுக்கு மாறாகக் கொண்டுரைப்பதாம்; சத்தம் செவிக்குப் புலனன்று என்றல் - இதற்கு உதாரணமாவது சத்தம் காதுக்குப் புலப் படுவதில்லை யென்று சொல்லுதல் எ - று. குற்றமுடையனவெனக் கண்டபின், அக்குற்றத்தின் இயல்பை யெண்ணுமிடத்து முன்னர்க் கூறியவாறு பலவகைப் பட்டுத் தோன்றினமை தோன்ற, "எண்ணிய விவற்றுள்" என்றும், சுட்டுணர் வாகிய காட்சி, வாயால் உரைத்தற்ககப்படாமையின், "நாமதேச குணக்கிரியையின்" வைத்தறியும் தெளிவுக் காட்சி யென்றற்குக் "கண்ணிய காட்சி" யென்றும் கூறினார். காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது. சத்தம் செவிக்குப் புலனாதல் கண்ணிய காட்சி, புலனன்று என்றல் அக்காட்சிக்கு மாறுகோளுரை, இனி, "கண்ணிய காட்சி மாறு கொளலாகிய இலக்கணத்தைவிட்டு, ஈண்டுக் காட்டிய உதாரணத்தை மட்டில் நியாயப் பிரவேசம் கூறுகிறது; பதார்த்ததரும சங்கிரகம் ஈண்டுக் கூறிய இலக்கணத்தைக் கூறி, "தீ தண்ணிது" என உதாரணம் காட்டுகிறது. 157-159. அனுமான விருத்தம்-அனுமான விருத்தமாவது; கருத்தள வையை மாறாக்கூறல் - கருதலளவையால் துணியப்பட்ட வொன்றைத் தவறாக எடுத்துக் கூறுதலாம்; அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல் - அநித்தியத்துவமாகிய தன்மத்தையுடைய குடத்தை நித்தியத்துவமுடைய தன்மியாகக் கூறுவது போல்வது எ - று. மற்று: அசை. தீயபக்க மாதலின், தவறாக வென்பது வருவித் துரைக்கப் பட்டது. அநித்தியம் நித்தியமென்பன அவ்வத் தன்மத்தின் மேனின்றன. நியாயப்பிரவேசத்துள் ஈண்டுக் காட்டப்பட்ட வுதாரண மொன்றுமே காணப்படுகிறது. பதார்த்ததரும சங்கிரகம் "கணம் அம்பரம்" என உதாரணமும் ஈண்டுக் காட்டப்படும் இலக்கணமும் கூறுகிறது. 160-161. சுவவசன விருத்தம்-சுவவசன விருத்தமாவது; தன் சொல் மாறி இயம்பல் - தான் சொல்லும் சொற்கள் ஒன்றுக் கொன்று மாறுபடக் கூறுதல்; என் தாய் மலடி என்று இயம்பல் - என்னைப் பெற்ற தாய் மகப்பெறாத மலடி எனச்சொல்வது போல்வது எ - று. ஏ: அசைநிலை. திக்கநாகர் நியாயப்பிரவேசத்துள் இதற்கு இலக்கணங் கூறாது என்தாய் மலடியென்ற இவ்வுதாரணத்தை யேகாட்டுகின்றார். பிரசத்தபாதர் இலக்கணமும், "சொற்கள் ஒருபொருளும் உணர்த்தா" என வுதாரணமும் கூறுவர். 162-163. உலக விருத்தம்-உலக விருத்தமெனப்படும் பக்கப் போலி யாவது; உலகின்மாறாம் உரை - உலகவர் கூறும் கூற்றுக்கு மாறு படக் கூறுவதாம்; இலங்கு மதி சந்திரன் அல்ல என்றல்-விளங்குகின்ற திங்களைச் சந்திரனல்ல என்று சொல்வது போல்வது எ-று. உலகவர், உலகத்தில் வாழும் உயர்ந்தோர். அவர் உரைப்பது மரபு. அதற்கு மாறாகப் பேசுவது மரபு வழு. சந்திரனை மதி யென்பது மரபாதலின், அதனை அன்று என்பது மரபு வழுவாகிய உலக விருத்தமாயிற்று. "எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே" (நன் 388) என்றார் பவணந்தியாரும் ‘மயங்கல் கூடா தம்மர பினவே" (சொல். 11) என்பது தொல்காப்பியம். மதி யென்றது சந்திரனையே யென்பது தோன்ற, "இலங்குமதி" எனச் சிறப்பித்துக் காட்டு கின்றார். இதற்கு நியாயப் பிரவேசம், உலக விருத்தமென்பது "மனிதர் மண்டையோடு தூய்மையுடையது, உயிருடம் பினுறுப்பாதலால், சங்குச் சிப்பிபோலும் என்று கூறுவது" என்று கூறுகிறது; இதனின் வேறே இலக்கணம் கூறப்படவில்லை. இதற்கு இலக்கணமும் உதாரணமும் கூறும் பதார்த்த தரும சங்கிரகம், "மது பார்ப்பானால் உண்ணப்படுவது" என்று உதாரணம் காட்டுகிறது. பார்ப்பான் மது வுண்ணா னென்பது உலகத்து உயர்ந்தோர் உரைக்கும் உரை. உலக விருத்தமுரைப்போன் பேய்எனப்படுவ னென்பாராய்த் திருவள்ளுவர், "உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத், தலகையா வைக்கப்படும்" (குறள். 850) என்பர். இதனைச் சுலோக வார்த்திக முடையார் சருவலோக பிரசித்த விரோத மென்றும், நியாயமுக முடையார் பிரசித்தவிரோதமென்றும் வழங்குப. 164-166. ஆகம விருத்தம் - ஆகம விருத்த மெனப்படுவது; தன் நூல் மாறு அறைதல் - தான் ஆதரவாக மேற்கொள்ளும் நூலுக்கு மாறாகக் கூறுவது; அநித்த வாதியா உள்ள வைசேடிகன் - சத்தம் அநித்த மென்று நூன்முகமாக மேற்கொள்ளும் வைசேடிகவாதி; அநித்தியத்தை நித்தியம் என நுவறல் - சத்தம் அநித்த மென்னாது நித்தம் என்று சொல்லுவது போல்வது எ - று. வைசேடிக நூல்கள் "அவயவதிரவியங்கள்" சார்பு பொருள் களாதலின் அநித்த மென்றும், சத்தமும் அவ்வகையால் அநித்த மென்றும் கூறுவது பற்றி, "அநித்தவாதியாவுள்ள வைசேடிகன்" என்றார் மெய்யுணர்வுப் பேற்றுக்குக் கருத்தும் ஆகமமுமே நேரிய வாயில்கள்1 என்று விதந்து கூறும் இயல்புபற்றி ஏனை அநித்த வாதிகளைக் கூறாது வைசேடிகனை எடுத்தோதினாரென வறிக. நியாயப் பிரவேச முடையாரும் இதற்கு இலக்கணங் கூறிற்றில ராயினும், "வைசேடிகன் சத்தம் நித்த மென்பது" என்றே கூறுகின்றார். இனி, பிரசத்த பாதர் இதற்கு அசற் காரியவாதியாகிய வைசேடிகன் சற்காரிய வாதங்கூறல் ஆகம விரோதம் என்பர். இவ்வைந்தனையும் ஆராய்ந்த ஆசிரியன்மார் உலக விருத்தத்தை ஆகம விருத்தத்திலும் ஆகம விருத்த சுவவசன விருத்தங்களை முதலிரண்டிலும் அடக்கிக் கூறுவோரும், அடக்கலாகாதென மறுத்துக் கூறுவோரும் பலர். அவற்றை நியாய கந்தலி முதலியநூல்களிற் கண்டு கொள்க. 167-172. அப்பிரசித்த விசேடணமாவது-அப்பிரசித்த விசேடண மென்னும் குற்றமாவது; தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை - தத்தமக் கெதிரியாகிய பிரதிவாதிக்குத்தான் சாதிக்கும் பொருள் அறியாததா யிருத்தலாம்; மாறாய் நின்ற சாங்கியனைக் குறித்து - பிரதிவாதியாய் நின்ற சாங்கியனை நோக்கி; பௌத்தன்- புத்தனாகிய வாதி; சத்தம் விநாசி என்றால் - சத்தம் அநித்தம் என்பானாயின்; அவன் அவிநாசி யாதலால் - அச் சாங்கியன் நித்த மென்னும் கொள்கையுடையவனாதலால்; சாத்திய விநாசம் அப் பிரசித்தமாகும் - துணிபொருளாகிய அநித்தத்துவம் அப்பிரசித்தமாய்க் குற்றமாம் எ - று. ஈண்டு விசேடண மென்றது அடைமொழியன்று; துணி பொருளுணர்த்தும் சொல்லும் சொற்றொடருமாகிய "சாத்திய வசனம்." சத்தம் அநித்தம் என்று பக்க மொழியில், அநித்த மென்பது விசேடணம். "தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை" குற்றமெனவே தெரிய நிற்றலே வேண்டுவதென்பது நன்பக்கத்துக் கிலக்கணமாம். சாங்கியன்2சற்காரியவாதி யாதலின், சத்த மநித்த மென்பது அவற்கு உடன்பாடன்று. காரியப் பொருள் தன் பருவுருக் (தூலநிலை) கெட்டு அருவுருவாய காரணநிலை பெறுவதே "விநாச" மென்பது சற்காரிய வாதம். பொருள்கள் கணந்தோறும் அழிவன வென்பது பௌத்த நூற் கொள்கை. ஆதலாற்றான், "மாறாய் நின்ற சாங்கியன்" என்றார். நியாயப் பிரவேசமும், வழக்கம்போல இதனையோர் எடுத்துக் காட்டால் விளக்கலுற்று, ஈண்டுக் கூறியதுபோல "பௌத்தஸ்ய சாங்க்யம் ப்ரதி விநாஸீ ஸப்தைதி" என்று கூறுகிறது. சத்தம் நித்தமென்னும் கொள்கையையுடைய சாங்கியனுக்கு, சத்தம் நித்தமன்று, அநித்த மென்று சாதிப்பது பௌத்தனாகிய வாதிக்கு முறையாதலாலும், வாதி பிரதி வாதிகட் கிடையே துணிபொருள் "பிரசித்த" மாயிருக்குமாயின், ஆராய்ச்சிக் கிடமின்மையாலும் அப்பிரசித்த விசேடணம் குற்றமெனக் கருதுவது பொருத்தமன்று எனக் கூறுவோருமுளர். அவரை மறுத்துப் பிரதிவாதி தான் அதனைக் கல்லாதா னொட்பம்போலக் கொண்ட வழி அவனைத் தெருட்டுங் குறிப்புடைய வாதி அப்பிரசித்த விசேடணங் கூறுதல் குற்றமென நாட்டுவர் 1கமலசீலர். 173-178. அப்பிரசித்த விசேடியமாவது-அப்பிரசித்தவிசேடிய மென்னுங் குற்றமாவது; எதிரிக்குத் தன்மி பிரசித்தமின்றி இருத்தல்- எதிரியாகிய பிரதிவாதிக்குப் பக்கவசனத்து எழுவாயாகிய தன்மி தெரியாததா யிருத்தலாம்; சாங்கியன் - ஆன்மவாதியாகிய சாங்கியன்; மாறாய்நின்ற பௌத்தனைக் குறித்து-மாறுபட்டு நிற்கும் பிரதி வாதியாகிய பௌத்தனை நோக்கி; ஆன்மா சைதன்னியவான்என்றால் ஆன்மா சித்துப் பொருளென்று சொல்வானானால்; அவன் அநான்மவாதி யாதலின் - அப் பௌத்தன் ஆன்மாவென்பதொன்றில்லை யென்னும் வாதியாகையால்; தன்மி அப்பிரசித்தம் - தன்மி பிரதிவாதிக்குப் பிரசித்தமில்லாத தென்னும் குற்றமாயிற்று எ - று. பக்க வசனத்தின் சாத்திய தன்மத்தை விசேடணமென்றும், தன்மியை விசேடியமென்றும் வழங்குவதுண்மை தோன்ற, அப்பிரசித்த விசேடணமென்றும் அப்பிரசித்த விசேடிய மென்றும் உரைக்கின்றார். தன்மியே தெரியாதபோது அதன்பா லுண்டெனச் சாதிக்கப்படும்சாத்திய தன்மம் பிரதிவாதிக்கு விளங்காதாகலின், இம் மேற்கோள்குற்றத்தின்பாற் படுவதாயிற்றென்பர். சாங்கியன் ஆன்மாவென்றொருபொருளு ண்டென்பதை, "மனோபுத்தி யாங்காரசித்தம், உயிரெனுமான்மா வொன்றொடுமாம்" (மணி. 27: 238-9) என்று (சாங்கியன்) கூறுமாற்றாலறிக. சாங்கிய காரிகை முதலிய நூல்களிலும் ஆன்மாவுண்மை வற்புறுத்தப்படுகிறது. நீலகேசி "மன்னுயிர்" (735) என்றும், சிவஞானசித்தியார், "சுத்த புருடன்" (நிரீசுர சாங்கியன். 1) என்றும் இக் கருத்தைத் காட்டு மாறு காண்க. ஐவகைக் கந்தங்கட்கு வேறாக ஆன்மா வென்ப தொன்றில்லை யென்பர் பௌத்தர்; இதனைச் சத சஹஸ்ரிக பிரஞ்ஞை பாரமிதை யென்னும் நூலில் முதல் பன்னிரண்டு அதிகாரங்களுள் வற்புறுத்துமாறு காண்க. இனி இவ் வப்பிரசித்த விசேடி யத்தைப்பற்றிக் கூறலுற்ற நியாயப் பிரவேசம் பௌத்தனை நோக்கிச் சாங்கியனொருவன் ஆன்மா வறிவுடைப் பொருளென்று சொல்வது அப்பிரசித்த விசேடிய மென்பதுபடக் கூறுகிறதேயன்றி இலக்கணமொன்றும் கூறிற்றிலது. 179-185. அப்பிரசித்த வுபயமாவது - அப்பிரசித்த வுபயமென்னுங் குற்றமாவது;மாறானோற்குத் தன்மி சாத்தியம் ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல் - எதிரியாகிய பிரதிவாதிக்கு வாதி கூறும் பக்க வசனத்துப் பொருளின் சாத்தியதன்மம் விளக்கமின்றி யுணரப் படாததா யொழிவது; பகர் வைசேடிகன்-வாதியாய் நின்று பக்க வசனங்கூறும் வைசேடிகன்; பௌத்தனைக் குறித்து - பிரதிவாதியாகும் பௌத்தனை நோக்கி; சுக முதலிய தொகைப் பொருட்கு ஆன்மா காரணம்-சுகம் துக்கம் இச்சை முதலியவாகக் கூறப்படும் தொகைப் பொருட்கு ஆன்மாவே காரணமாம்; என்றால் - என்று சொல்வானாயின்; ஆன்மாவும் சுகமும் தாம் இசையாமையில் - ஆன்மாவைத் தன்மியென்றும் சுக முதலியன அதன் தன்ம மென்றும் தாங்கள் கொள்வதில்லாமையால்; அப் பிரசித் தோபயம் - தன்மியாகிய விசேடியமும் தன்மமாகிய விசேடண முமாகிய இரண்டும் பிரசித்தமில்லாமை யென்னும் குற்றமாம் எ - று. அப்பிரசித்தம், விளக்கமின்மை; உபயம் விசேடண விசேடிய மாகிய இரண்டு. விசேடண விசேடியமிரண்டும் தனித்தனியே அப்பிரசித்தமாகிய வழி, அவை முறையே அப்பிரசித்த விசேடண மென்றும் அப்பிரசித்த விசேடிய மென்றும் வருமென்றவர், பக்க வசன மொன்றின்கண் விசேடண விசேடியமிரண்டும் ஒருங்கே பிரசித்தமில்லாத வழி, அப்பிர சித்த வுபயமாம் என்பது இதனாற் கூறியவாறு. வாதியொடு மாறுபடுதலால் பிரதிவாதி மாறானோன் என்று கூறப்படுகின்றான். விசேடண விசேடிய மிரண்டும் தன் சமய நூல்களில் கூறப்படாதனவாதலின் பிரதிவாதி மனத்தில் கொள்ளப் படாமைபற்றி, “ஏறாது'' என்றும் “அப்பிரசித்தமாயிருத்த'' லென்றும் கூறல் வேண்டிற்று. முன் மொழிபவன் வாதியாதலின், வைசேடிகனாகிய வாதியைப் “பகர் வைசேடிகன்'' என்று விசேடித்தார். தொகைப் பொருளெனப் பட்டவை “சுகம் துக்கம் இச்சை வெறுப்பு முயற்சி அறம் மறம் என்பன; இவை வைசேடிகரால் ஆன்மாவின் கண் நிகழும் காரியமாகிய குணங்களென்று கொள்ளப் பட்டன''1 என்பர் திரு. நாராயணையங்கார். சுகமும் துக்கமும் விருப்பும் வெறுப்பும் முயற்சியும் அறிவும் ஆன்மாவின் குணங்களென வைசேடிக ருரைப்ப2 ஈண்டுக் கூறிய சுக முதலிய தொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா வென்னுங் கூற்றைப் பல ஏதுக்களைக் காட்டி மறுப்பர் 3சாந்த ரக்ஷிதர். இனி, நியாயப் பிரவேசமுடையார், இந்த அப்பிரசித்த வுபயத்துக்கு இலக்கணங் கூறாராயினும், ஆன்மா சுக முதலியவற்றுக்குச் சமவாயி காரணமென்று வைசேடிகன் பௌத்தனை நோக்கிச் சொல்வது அப்பிரசித்த வுபயமெனப்படும் என்ற இதனையே மொழிபெயர்த் துரைக்கின்றார். ஆன்மாவைப் பற்றி வைசேடிகர் கூறுவது நையாயிகர்க்கும் உடன் பாடாதலின், பின் வந்த சாந்தரக்ஷிதர் நையாயிகரை முன்னிலைப்படுத்து மறுப்பு நிகழ்த்துகின்றார். 186-190. அப்பிரசித்த சம்பந்தமாவது அப்பிரசித்த சம்பந்த மென்று சொல்லப்படுவது;எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்- பிரதிவாதிக்கு ஏற்றதாகிய பொருளை வாதியாகிய தானே சாதித்துக் கொடுத்தல்; மாறாம் பௌத்தற்கு-பிரதிவாதி யாகிய பௌத்தனை நோக்கி; சத்த அநித்தம் கூறில் - சத்தம் அநித்தம் என்று சொன்னால்; அவன் கொள்கை அஃது ஆகலின் - அவனுடைய கொள்கையுமதுவே யாதலால்; வேறு சாதிக்க வேண்டாதாகும் - வாதிக்கு வேறே சாதித்தற்கு இடமில்லையாய்க் குற்றம் எ-று. பிரதிவாதியாவான் இசைந்து மேற்கொண்டொழுகும் பொருளை “இசைந்த பொருள்'' என்றும், அதனை மறுக்கும்குறிப்புடைய பொருளை யெடுத்தோதிச் சாதிக்கற்பாலனாகிய வாதி, அது செய்யாது அப்பிரதி வாதிக்குரிய பொருளையே சாதித்துக் கொடுக்குமாற்றால் தோல்வியுறு வதே யன்றி அவனோடொத்த கருத்துடையனாய் இயையும் இயைபு யாண்டும் காணப் படாமையின் “அப்பிரசித்த சம்பந்த'' மென்றும், அச் செய்கை வாதிக்குக் குற்றமாமென்றும் இதனாற் கூறினார். பிரதிவாதி யாவானொருவன் தன் வாதந் தோற்று வாதி கூறும் வாதத்தை யேற்று அவனோடியையும் இயைபு “பிரசித்த '' மேயன்றி வாதி தோற்றுப் பிரதி வாதி பக்கல் இயைதல் அப்பிரசித்தமாமென வறிக, எடுத்துக்கூறும் பக்க வசனமே வாதிக்குத் தோல்வித் தானமும் பிரதிவாதிக்குத் சித்த சாதனமுமாதலின், பக்க போலியுமாயிற்றென்க. நன் பக்கமாவது வெளிப்பட்டுள்ள தன்மியும் வெளிப்பட்டுள்ள சாத்தியதன்மத்திறமும் உடைத் தென்றார் ; அவற்றின் வெளிப்படை பிரதிவாதி யறிந்ததாயி னும், அதனை யுடன்படுதல் மறுத்தல் என்ற இரண்டனுள் ஒன்றைச் செய்தற்பொருட்டுப் பக்கவசனம் கூறப்படுதலின் அஃது இதனின் வேறாதல் அறிக ; என்னை, இஃது அப் பிரதிவாதி துணிந்து கொண்ட பொருளையே சாதித்துக் குற்றப்படுதலின். இனி, நியாயப்பிரவேசமுடையார், இவ்வாசிரியர் கூறியவாறு கூறாது பிரசித்த சம்பந்தமென்று கொண்டு அதற்கேற்பப் பிரசித்த சம்பந்தமென்பது சத்தம் செவிப் புலனாமென்பது என்றனர். இது பக்கப்போலி யாதற்குரிய அமைதி யில்லாதிருப்பதனை யாராய்ந்து கண்ட திரு. நாராயணையங்கார் இதனை அப்பிரசித்தா சம்பந்தம் எனத் திருத்திக் கொண்டுரைப்பர். திபேத்திய மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட இந்நூலில் இந்தப் பிரசித்த சம்பந் தத்துக்குத் தீ வெம்மையுடைய தென்றோரெடுத்துக்காட்டுக் காணப் படுவதாக ஆசிரியர் வித்தியாபூஷணர் மொழிபெயர்த் துள்ளார். இனி, திரு. விதுசேகரனார் இப் பிரசித்த சம்பந்த மென்னும் பக்க போலியின் இயல்பை யாராய்ந்து, நியாயப் பிரவேச சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் கோளாறுண்டெனத் துணிகின்றார். நியாயப்பிரவேச பதிப்பாசிரிய ரான துருவனார் நியாயப்பிரவேச விருத்தியுரை முதல் பல நூல்களை யாராய்ந்து, இதன் சமஸ்கிருத மொழிபெயர்ப்பில் தவறில்லையென்று காட்டுகின்றார். எது எவ்வாறாயினும் நியாயப்பிரவேசமுடையார் கொண்ட பிரசித்த சம்பந்தமும் மணிமேகலையாசிரியர் கொண்ட அப்பிரசித்த சம்பந்தமும் வேறு வேறு நிற்பனவென்றும் இரு நூல்களும் முறையே காட்டும் எடுத்துக்காட்டுகள் அவ்வற்றிற் கேற்பனவென்றும் துணிந்து கோடற்குரியனவாம். தமிழகத்தில் நிலவிய பௌத்தர்களிடையே பக்கப்போலி யொன்பது வகையாகப் பகுப்புண்டு நிலவிய காலத்தே வடநாட்டில் வடமொழி வாணரிடையே பிரத்தியக்க விருத்த முதலிய ஐந்துமே நிலவின; தமிழகத்திலிருந்து வடநாடு சென்ற பௌத்தர்கள் பக்கப்போலி யொன்பது வகையினையும் எடுத்துக் கூறினர். அங்ஙனம் கூறி யோருள் நியாயப்பிரவேச முடையார் தாம் முதன்முதலில் நூல்வாயிலாக வடமொழியில் வெளிப்படுத்தினார். அப்பிரசித்த சம்பந்த மென மணிமேகலையாசிரியர் முதலிய அக்காலப் பௌத்த ஆசிரியன்மார் உரைத்த பக்கப் போலியைப் பிரசித்த சம்பந்தமென பிறழக் கொண்ட பிறழ்ச்சி முன்னுக்குப்பின் முரண்விளைத்து நிற்கின்றதென்றும், நியாயப் பிரவேசத்திற் குறிக்கப்பட்ட பிழை, பின்னே தமிழகத்திற் புலனாகாது திபேத்துக்கும் சீனாவுக்கும் சென்று மறுபடியும் வடமொழிக் குள்ளே சுழலத் தொடங்கினமையின், அதன் விருத்தியுரை காரராதல் அவரிற் பின்வந்தோராதல் ஒருவரும் தமிழ்நூல்களை யாராய்ந்து திருத்தஞ் செய்து கொள்ளாதொழிந்தனரென்றும் அறிக. இவ் வுண்மையை நுனித்துணரும் மதுகையில்லாதார் சிலர், நியாயப்பிரவேசத்தின் வழி வந்த தாகும் இம்மணிமேகலையென்று கொண்டு ஈண்டுக் கூறப்படும். அப்பிரசித்த சம்பந்த முதலியவற்றிற்குத்1 தமிழ்நெறி யல்லாத முறையிற் பொருள் கூற முயன்று குன்றுமுட்டிய குரீஇப்போல இடர்ப்படு வாராயினர். 191-192 ஏதுப்போலி ஓதின் -ஏதுப்போலி யெனப்படும் தீய வேதுவை வகுத்துக் கூறுமிடத்து; அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என - அசித்தமென்றும் அநைகாந்திகமென்றும் விருத்த மென்றும்; மூன்றாகும் - மூவகைப்படும் எ - று. ஏதுப் போலியை அசித்தம் முதலிய மூன்றாக வகுத்துப் பின்னொவ் வொன்றையும் முறையே நான்கும் ஆறும் நான்குமாக விரித்துக் கூறுப வாதலின், அந் நெறிமை தோன்ற, ''ஓதின்'' என்றார். அசித்தமாவது ஏது பொருந்தாமையாற் கருதிய பயன் சித்தியாதொழிதல்; அநைகாந்திகமாவது ஒரு முடிபுமின்றி யொழிவது; விருத்தமாவது ஏதுவானது வேண்டும் பயனைச் சாதியாது முரண்விளைத் தொழிவது. இனி 2நியாயப் பிரவேச முடையாரும் ஏது வாபாசம் அசித்த முதலியமூன்று வகைப்படு மென்றேகூறுகின்றார்; மற்று, கோதமர், சவ்வியபிசாரி, விருத்தம் பிரகரண சமம், சாத்திய சமம். காலாதீதம் என ஐவகையாகவும் பிரசத்தபாதர், அசித்தம், விருத்தம், சந்திக்தம், அனத்தியாவசிதம் என நான்கு வகையாகவும் வேறு சிலர் ஆறுவகையாகவும் கூறுப, ஆராய்ச்சியாளர், அசித்தமென்னும் ஏதுப்போலிவகை வட நாட்டு அளவை நூலார்க்குப்3 பிற்காலத்தே தெரியவந்த தென்பர். ஏனை அநைகாந்திக மும் விருத்தமும் அளவை நூலார் பலர்க்கும் பண்டே தெரிந்தனவாம். 193-195 அசித்தம் - அசித்தமென்னும் ஏதுப்போலி; உபயாசித்தம் என நான்கு - உபயாசித்தமென்றும் அன்யதரா சித்த மென்றும் சித்தா சித்தமென்றும் ஆசிரயா சித்தமென்றும் நான்காய் விரியும் எ - று. நியாயப்பிரவேசமுடையார்4 இவ்வாறே அசித்தவேதுப் போலி நான்குவகைப் படுமென்றும் அவை உபயாசித்தம் அன்னியதராசித்தம் சந்திக்தாசித்தம் ஆசிரயாசித்தம் எனபன வாம் என்றும் கூறுவர்; பிரசத்த பாதர்1 உபயாசித்தம் அன்னிய தராசித்தம், தற்பவாசித்தம் அணுமேயாசித்தம் என நால்வகைப் படுத்துக் கூறுவர். சுலோக வார்த்திக முடையார்,2 அசித்தம் சொரூபாசித்தம் ஆசிரயாசித்தம் என இரண்டா மென்றும், உபயாசித்தம் அன்னியதராசித்தம் சந்திக்தாசித்த மென்ற மூன்றும் இவ்விரண்டின் உள்வகையாமென்றும் கூறுவர்; சந்திக்தாசித்தம் என்பது இந்நூலிற் காணப்படவில்லையாயினும், சித்தா சித்தம் என்பது அதன் நிலையில் நிற்கிறது. 195-197 உபயா சித்தம் - உபயா சித்தமென்னும் ஏதுப் போலி யாவது; சாதனவேது - சாதனமாகிய ஏது; இருவர்க்கும் இன்றி வாதி பிரதிவாதிகளாகிய இருவர்க்கும் சாதன மாதலில்லையாய்; சத்தம் அநித்தம் கட்புலத்து என்றல்-சத்தம் அநித்தம் கண்ணுக்குப் புலனாதலால் என்றாற் போல்வதாம் எ - று. பக்கவசனத்திருக்கும் சாத்திய தன்மத்தைச் சாதித்து கொடுக்கும் சிறப்புப்பற்றி, ஏதுவைச் “சாதனவேது'' என்று சிறப்பித்தார்; சாதனமாதல் ஏதுவிற்கு இயல்பாயினும் ஈண்டு அது சாதனமாதல் இல்லையென்ற குறிப்பால் இவ்வாறு கூறினார் என்றுமாம். சத்தம் அநித்த மென்னும் பக்கவசனத்தில் அநித்த மென்னும் சாத்தியதன்மத்தைச் சாதித்தற்கு ஏதுவாகிய “கட் புலனாதலின்'' என்பது வாதி பிரதி வாதிகளாகிய இருவர்க்கும் பொருந்தாமையாற் பயன்படாமை காண்க. இதுபற்றியே இஃது உபயாசித்தவேதுப் போலியாயிற்று. நியாயப் பிரவேச முடையாரும் இவ்வுபயாசித்தத்துக்கு இவர் காட்டிய உதார ணத்தை மேற்கொண்டு இலக்கணத்தைக் கூறாதொழிந்தார்; பிரசத்த பாதர். “சத்தம் அநித்தம் அவயவமுடைமையால்'' என்று உதாரணம் கூறுகின்றார். கோதமர் இதனைச் சொரூபாசித்தி யென்பர். 198-202 அநித்தியதராசித்தம் - அன்னிய தராசித்த மென்னும் அசித்தப் போலியாவது; மாறாய் நின்றாற்கு-பிரதிவாதியாய் நின்ற ஒருவனுக்கு; உன்னிய ஏது அன்றாய் ஒழிதல் - வாதி யாகிய தான் எடுத்துக்கூறிய ஏது அவனால் ஏன்னுக் கொள்ளப்பட்ட சாதன மாகாது போவதாம்; சத்தம் அநித்தம் செயலுறல் என்னில் - சத்தம் அநித்தம் செய்கையிற் றோன்றுதலால் என்று பிரதிவாதியாய் நிற்கும் சாங்கிய னொருவனுக்குச் சொன்னால் உய்த்த சாங்கியனுக்கு - சொல்லப்பட்ட சாங்கியனுக்கு; சித்தவெளிப்பாடு அல்லது- செயலிடைத் தோன்றுதலென்பது காரணமாகிய மூலப் பகுதி செய்கைக்கண் சத்தமாய்த் தோன்றுகிறதென்று விளங்குமே யின்றி; அசித்தமாகும் - அநித்தியத்துவத்தைச் சாதிக்கும் சாதனமாகாது பயனில் ஏதுவாம் எ - று. அநித்தியதராசித்த மென்பதே உண்மைப்பாடம்; 1அன்னியதாசித்த மென்பது உற்பாத காரணத்துக் கூறப்படும் குற்றமாதலாலும், ஈண்டு அனுமானத்துக்கு வேண்டும் ஏதுக்கட் காகா வென்ற குற்றமே கூறப் படலாலும் ‘இம்மணிமேகலையைப் பின்பற்றி யெழுந்த நியாயப் பிரவே சத்து அன்னியதரா சித்தமென்ற பாடமே காணப்படலாலும், பிரசத்த பாதர் முதலாயினோரும் ஏதுப்போலி வகைகளுள் அன்னியதராசித்தம் என்றே ஏதுப்போலி காட்டுதலாலும் அன்னியதாசித்தம் என்ற பாடம் பொருந்தாமை யறிக. திரு. நாராயணையங்காரும்2 அன்னியதராசித்த மென்றே பாடங்கோடல் நேரி தென்பர். அன்னியதரன், வாதி பிரதிவாதி யிருவரில் ஒருவன். பக்கவசனத்துக் கூறிய பொருளைச் சாதித்தற்குத் தக்கதென மேற்கொண்டு கூறுதலின், "உன்னியஏது" என்றும் அற்றாயினும் அது போலியாயிற்றென்றற்கு இவ்வாறு சிறப்பித்தும் கூறினார். செயலுறல் என்புழி, உறல் என்பது தோன்றுதல் என்னும் பொருட்டு. உறல் என்புழி, ஆனுருபு விகாரத்தாற்றொக்கது. சித்தம், மூலப்பகுதி, சத்தம் முதலிய யாவும் மூலப்பகுதியின் காரிய மென்றும், காரணவடிவில் தோற்றமின்மையும் காரியவடிவில் தோற்றமுடைமையும் பொருட்கியல்பென்னும் சற்காரியவாதி யாதலின், சாங்கியன் செயலிடைத் தோன்று வனயாவும் புதியவல்ல; காரணமாகிய மூலப்பகுதியின் காரியமென்றே கருதுதலால், அவற்கு இச்செயலிடைத் தோன்றலால் என்னும் ஏது, சத்தமாகிய தன்மியின் கண்ணும், அநித்தமாகிய தன்மத்தின்கண்ணும் பொருந்தாதொழிதலால், அசித்தமாம் என்பார், "உய்த்த சாங்கியனுக்குச் சித்த வெளிப்பா"டென்றும், சாதன சாத்திய வகையில் "அசித்தமாகும்" என்றும் கூறினார். சாதனமாகிய ஏதுவைக்கொண்டு பக்க வசனப் பொருளைக் கருதுதற்குச் சமைந்த சாங்கியன் என்றற்கு, "உய்த்த சாங்கியன்" என்றும் உய்த்துணருமிடத்து இது குற்றமென மேற்கொள்ளா னென்றும் கூறியவாறு அறிக. இங்குக் காட்டப்பட்ட எடுத்துக் காட்டே பதார்த்த தரும சங்கிரகத்தும் நியாயப்பிரவேசத்தும் காணப்படுகிறது. இவ்விரண்டும் முறையே மீமாஞ்சகனையும் சாங்கியனையும் பிரதிவாதியாகக் கொள்ளுகின்றன. 203-204. சித்தாசித்தமாவது-சித்தாசித்தமென்னும் அசித்த வேதுப் போலியாவது; ஏது சங்கயமாய்-எடுத்தோதும் ஏதுவே ஐயத்திற்கிடமானதாயிருக்க; சாதித்தல்-அது கொண்டு ஒன்றைச் சாதிப்பதாம்; ஆவி பனி என ஐயுறாநின்றே - புகையோ பனியோ என ஐயுற்றுத் துணியாமலே; தூய புகை - அது தூய புகையாமெனத் தானே ஏறட்டுக்கொண்டு; நெருப்புண்டு எனத் துணிதல்-அங்கே நெருப்புளது என்று துணிந்து சொல்லுதல் எ - று. புகை யென்பதே துணிபாயின் இவ்வேது சித்தமாயும், பனி யென்று துணியப்படின் அசித்தமாயும் திரிதலின், இது சித்தா சித்த மென்னும் குற்றமாயிற்று. சங்கயமாக வென்பது சங்கய மாயென நின்றது. சங்கயம்: சம்சயமென்பதன் திரிபு. இதனை நியாயப்பிரவேச முடையோர், சந்திக்தா சித்தமென்றும், பிர சத்தபாதர் தற்பவாசித்த மென்றும் கொண்டு, ஈண்டுக் காட்டிய உதாரணத்தையே தத்தம் நூல்களிற் காட்டியுள்ளனர். 207-211. ஆசிரயாசித்தம்-ஆசிரயாசித்த மென்னும் அசித்த வேதுப் போலியாவது; மாறானவனுக்கு ஏற்ற தன்மியின்மை காட்டுதல் -வாதியாகிய தன்னோடு மாறுபட்ட பிரதிவாதிக்கு அவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தன்மியல்லாத வொன்றைத் தன்மியாகச் சொல்லி அதற்குரிய ஏதுவொன்றைக் கூறிக் காட்டுவதாம்; ஆகாசம் பொருளாம் - ஆகாசம் பொருளாகும்; சத்த குணத்தால்-சத்தமாகிய குணமுடைமையால்; என்னில்-என்று சொன்னால்; ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு - ஆகாசத்தைப் பொருளாகக் கொள்ளாத பிரதிவாதிக்கு; தன்மி அசித்தம் - அவ்வாகாசமாகிய தன்மி அசித்தமாம்; ஆகவே ஆசிரயமாகிய தன்மி யசித்தமாய் நிற்றலால் அதனைச் சாதித்தற்கு வந்த ஏது ஆசிரயாசித்தமாயிற் றென்க. இன்மை: அன்மைப் பொருட்டாய் அதனையுடைய தன்மிமேனின்றது. காட்டுதல்: அத்தன்மியையும் அதன் சாத்திய தன்மத்தையும் பக்க வசனமாக நிறுத்தி ஏதுவொன்று காட்டிச் சாதித்தலைக் குறித்து நின்றது. ஏதுவொன்று கூறிக் காட்டுத லென்னாதவழி அப்பிரசித்த விசேடிய மென்னும் பக்கப் போலியாய் முடியுமெனவறிக. இனி, நியாயப்பிரவேச முடையார், ஆகாயம் ஒரு பொருளன் றென்பானொருவனை நோக்கி, "ஆகாசம் திரவியம் குணாசிரயத்தையுடைமையால்" என்பது ஆசிரயாசித்த மென்பர்; பதார்த்தசங்கிரக முடையார், இருள் திரவியம் கருமை நிறமாகிய பண்புடைமையால் என்று காட்டுவர்; இவர் இதனை அனுமேயாசித்தமென வழங்குப வாயினும், சீதரர் அனுமேயா சித்த மாவது ஆசிரயாசித்தமென்றே விளக்குவர். ஆசிரயம்: பக்கவசனத்து எழுவாயாகிய பொருள். நியாய சூத்திரமுடையார், ஆசிரயா சித்தத்துக்கு, "கடவுளென்பது இல்லை, அக் கடவுட்குத் தேகமின்மையால்" என்று உதாரணங் காட்டுவர்; வாற்சாயனார் முதலாயினோர், சாத்தியா சமத்துக்குக் காட்டும் உதாரணமும் விளக்கவுரையும் ஆசிரயாசித்த மாகிய ஏதுப்போலிக்கும் ஒத்தவா யிருப்பது ஈண்டு நோக்கத்தக்கது. அவர் "நிழல் ஒரு திரவியம் இயக்க முடைமையால்" என்பர். ஏனை நியாய நூல்களில் இம்மணிமேகலை யாசிரியர் கொண்டதற்குமேலாக ஏகதேசாசித்த மென்றும் வியாப்பியத்துவாசித்த மென்றும் கூறுவாரும் சொரூபா சித்தம், வியாப்பியத்துவாசித்தம், ஆசிரயாசித்தம், ஞானாசித்தம் என நால்வகைப்படுத் துரைப்பாருமெனப் பல திறத்தர் ஆசிரியர். அவற்றையெல்லாம்1 விரிந்த நூல்களுட் கண்டுகொள்க. 211-216. அநைகாந்திகமும் - அநைகாந்திக மென்னும் ஏதுப் போலியும்; சாதாரணம்...என்றாறு - சாதாரணமென்றும் அசாதாரண மென்றும் சபக்கை தேச விருத்தி விபக்க வியாபி யென்றும் விபக்கைக தேச விருத்தி சபக்க வியாபியென்றும் உபயைகதேச விருத்தி யென்றும் விருத்த வியபிசாரியென்றும் ஆறுவகைப்படும் எ - று. சாத்தியதன்மத்தைத் துணிவித்தற்கு வந்த பக்கதன்மவசனம் வாதி பிரதிவாதிகளாகிய இருவர்க்கும் சாதனமாய்ப் பஃறலையான முடிபுகோடற் கிடந்தருவது அநைகாந்திகமென்பதாம். அநேக அந்தத்தைக் கொள்வது அநைகாந்திக மெனவறிக. நையாயிகர் இதனைச் சாதாரணம் அசாதாரணம் அனுபசங்காரி என மூன்று வகையாகப் பகுத்துக் கூறுவர். இம்மணிமேகலையாசிரியர் கூறிய இவற்றையே நியாயப் பிரவேசம் பிரமாண சமுச்சயம்2என்ற நூல்களையுடையாரும் மேற்கொண்டு கூறுகின்றார். ஏனை வைசேடிகர் முதலாயினார் சந்தித்த வேதுவா பாசமென்பது இவ்வநைகாந்திக வேதுப் போலிக்கண் அடங்குமென்ப. 217-223. சாதாரணம் - அநைகாந்திக வேதுப் போலிவகையாகிய சாதாரண அநைகாந்திக மென்பது; ஏது - வாதியாற் கூறப்படும் ஏதுவானது; சபக்க விபக்கத்துக்கும் பொதுவாய் இருத்தல் - சபக்கத்துக்கும் மறுதலையாகிய விபக்கத்துக்கும் பொதுவாய் இருப்பது; சத்தம் அநித்தம் அறியப்படுதலின் என்றால்-சத்தம் அநித்தம் என்ற பக்கவசனத்துச் சாத்திய தன்மமாகிய அநித்துவத்தைச் சாதித்தற்கு அறியப்படுதலால் என்று ஏதுக் கூறினால்; அறியப்படுதல் - அறியப்படுதல் என்னும் அந்த ஏதுவானது; நித்த அநித்தம் இரண்டுக்கும் செறியும் - நித்தமென்று சாதித்தற்கும் அநித்தமென்று சாதித்தற்கும் சென்று பொருந்துதலால்; கடம்போல் அநித்தத்து அறிவோ - கடம்போல அநித்தமென்று அறிவதோ; ஆகாசம்போல நித்தத்து அறிவோ - ஆகாயம்போல நித்தமென்று அறிவதோ; என்னல் - என்று ஐயுறுதற்கு இடமாவது எ - று. சபக்க விபக்கங்கட்குப் பொதுவாய் ஏது நிற்பதனால் துணி பொருள் பெறப்படாது பஃறலைப்பட்ட ஐயத்துக்கு இடனா மென்பதை உதாரணத்தின்கட் குறித்தலால், "பொதுவாய் இருத்தல்" என்றொழிந்தார். சபக்கத்தோடு உண்டாகும் பொருத்தம் எத்துணையோ அத்துணைப் பொருத்தமே விபக்கத்துக்கும் உண்டென்பார், அதனை விளக்கும் உதாரணத்தின்மேல் வைத்து, "நித்தா நித்த மிரண்டுக்கும் செறியும்" என்றார். பக்கத்தோடும் சபக்கத்தோடும் சென்றியைதற்குரிய ஏது மிகை பட விரிந்து விபக்கத்தும் சென் றியைவது பற்றி இதனை முதற்கண் நிறுத்தி யுரைத்துள்ளாரெனவறிக. இனி, நியாயப்பிரவேசமுடையார் இவரைப்போல் இதற் கிலக்கணங் காட்டிலராயினும் இவர் காட்டிய உதாரணமே1 யெடுத்தோதுகின்றார். பிரசத்தபாதரும் சபக்க விபக்கங்கட்குப் பொதுவாய் இயையும் ஏது சாதாரணமாம் என்றும், இஃது ஐயத்துக்கிடனாவதென்றும் கூறி, "இது பசு, கொம்புடைமையால்" என்று உதாரணமும்2 காட்டுகின்றார். 223-230. 3அசாதாரணமாவது-அசாதாரண மென்னும் அநைகாந்திக வேதுப் போலியாவது; உன்னிய பக்கத்து உண்டாம் ஏது - சாதிக்கக் கருதிச் சொல்லும் பக்க வசனத்துக்குப் பொருந்தி நிற்கும் ஏதுவானது; சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல் - அப்பக்க தன்மி யொழிய ஏனைச் சபக்க விபக்கங்களில் முற்றும் பொருந்தா தொழிவதாம்; சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் என்னில்-சத்தம் நித்தம் என்று பக்க வசனமும் அதனிடத்துள்ள கேட்கப்படுதலா லென்னும் ஏதுவும் எடுத்துக் கூறினால்; கேட்கப் படலெனும் ஏது - செவியாற் கேட்கப் படுதலென்னும் ஏது; பக்கத்து உள்ள தாயின் அல்லது - பக்க தன்மியாகிய சத்தத்தின்கண் உளதாவ தேயன்றி; சபக்க விபக்கத்து மீட்சித்து - சபக்க விபக்கங்களில் இல்லையாய்; சங்கயமெய்தி-ஐயத்துக் கிடமாய்; அநைகாந்திகமாம் - அநைகாந்திகமென்னும் குற்றமாம் எ - று. "உன்னிய பக்கத்து" என்பதற்கு, "உன்னிய ஏது" என்புழி உரைத்தது போல வுரைத்துக் கொள்க. "பக்கத்து உண்டாமேது" என்றது அவ்வசாதாரண வேது சபக்க விபக்க மிரண்டினும் பொருந்தாது பக்க தன்மி யிடத்து மட்டிற் பொருந்தி யிருப்பதை யுணர்த்தி நின்றது. "கேட்கப்படுதலின்" என்புழிச் செவியா லென்பது அவாய் நிலையான் வந்தது. மீட்சி: எதிர்மறை; ஈண்டு இன்மை குறித்து நின்றது. சங்கயமாவது: நித்தமும் அநித்தமு முடைய பொருள்களுள் சத்த மொழிந்த பிற எப்பொருளைத் துணிதற்குச் செவியாற் கேட்கப்படுவது ஏதுவாம் என ஐயுறுதல். இவ்வாறே1 நியாயப் பிரவேசமுடையாரும், "கிம் பூதஸ்ய ஸ்ராவணத்வம்" எனக் கூறுதல் காண்க; ஈண்டும் இவ்வட நூலாசிரியர் அசாதாரணத்துக்கு இலக்கணம் கூறிற்றிலர். இனி, இவ் வசாதாரணம் பிரசத்தபாதரால் அனத்தியாவசித்தம் என்று கூறப்படுகிறது. "உன்னிய பக்கத் துண்டா மேது சபக்க விபக்கந் தம்மில் இன்றாதல்" என ஈண்டு மணிமேகலை யாசிரியர் கூறிய இலக்கணமே பிரசத்தபாதரால் அந்த அனத்திய வசித்தத்துக்கும் கூறப்படுகிறது; ஆனால் அவர் "சங்கயமெய்தி அநைகாந்திகமாம்" என்பதை மறுத்து இதன்பால் ஐயத்துக் கேதுவாகிய பொதுத் தன்மை கிடையாதெனக் காட்டுவர்2 சத்தபதார்த்தி யென்னும் நூலில் இந்த அனத்தியா வசித்தத்தைக் கூறுமிடத்துப் பாட வேறுபாடாகச் சந்திக்தா சித்தமும் காணப்படுவதை நோக்கின், அனத்தியாவசித்தத்தின்கண் ஐயத்துக் கிடமுண்டெனக் கருது வோரு முளரென்றற் கெண்ண முண்டாகிறது; பிரசத்தபாதர் நிகழ்த்தும் தடைவிடைகளும் அவ்வெண்ணத்தை வற்புறுத்து கின்றன. ஆதலால், மணிமேகலை யாசிரியர் "சங்கய மெய்தி யநைகாந்திகமாம்" என்பது ஒருசாராசிரியர்க் குடன்பாடென்பது இனிது விளங்கும். ஆயினும் பக்கத்துண்டாமேது, சபக்க விபக்கங் களில் ஒப்பவோ மிக்கோ குறைந்தோ இருந்தாலன்றி, ஐயம் பிறவாதாகலின், பிரசத்தபாதர் கூறுவது பொருத்தமாமென வறிக. பக்க தன்மியின்கண் உள்ள தன்மம் பொதுத் தன்மமாகாது அதற்கே சிறப்பாக வுரியதாயின் அதனிடத்தே ஐயம் நிகழா தென்பர். செவியால் கேட்கப்படுவதாகிய தன்மம் சத்தமொன்றிற் கன்றிப் பிறவெவற்றிற்கும் இல்லாமையும் அறிக. 231-242. 1சபக்கைக தேசவிருத்தி விபக்க வியாபியாவது-சபக்க ஏகதேச விருத்தி விபக்க வியாபியென்னும் ஏதுப்போலி யென்பது; சபக்கத்து ஓர் இடத்து எய்தி-சபக்கப் பொருள் களில் ஏதேனும் ஒன்றிற் பொருந்தி; விபக்கத்து எங்கும் உண்டாதலாகும் - விபக்கப் பொருள்கள் எல்லாவற்றிலும் பொருந்தி யிருப்பதாகும்: சத்தம் செயலிடைத் தோன்றா தாகும் - சத்தம் செயலிடத்துத் தோன்றுவ தன்றெனப் பக்க வசனமும்; அநித்தமாகலின் என்றால் - அநித்தமாதலால் என எதுவும் சொன்னால்; செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம் - செயலிடத்துத் தோன்றாமையாகிய சாத்தியதன்மம் நிலவுதற்குரிய சபக்கமான; மின்னினும் ஆகாசத்தினும் - மின்னும் ஆகாசமுமாகிய இவற்றினுள்; மின்னின் நிகழ்ந்து-மின்னிடத்தே பொருந்தி; ஆகாசத்திற் காணாதாகலின்- ஆகாசத்தினிடத்தே பொருந்தாமையால்; அநித்தம்-அநித்த மென்னும் ஏது; கடாதியின் ஒத்தலின்-விபக்கமான கட முதலிய அநித்தப் பொருள்களில் முழுதும் பொருந்துவதால்; கடம்போல் அழிந்து செயலில் தோன்றுமோ - அக் கட முதலியவை போல அழிதலால் செயலிடத்தே தோன்றுமோ; மின்போல் அழிந்து செயலில் தோன்றாதோ - மின்னுவானது அழிந்து செயலிடத்துத் தோன்றாமை போல அழிதலால் தோன்றாதொழியுமோ; எனல் - என ஐயுற்றுத் துணிவெய்தா தொழிவதாம் எ - று. சபைக்கைகதேச விருத்தி விபக்க வியாபி யென்பதன் இலக்கணம் இதுவென்பார், "ஏது சபக்கத் தோரிடத் தெய்தி விபக்கத் தெங்கு முண்டாதலாகு"மென்றார். எங்கும் உண்டாதலாவது எல்லாப் பொருளிடத்தும் ஒக்க வியாத்தி யுடையதாதல். ஏக தேசப் படர்ச்சியை வியாத்தியென்னாராதலின், "ஏக தேச விருத்தி" யென்றார். விருத்தி2 "படங் குடிலாவதுபோல் விரிவது," இனி, இவ்வேதுப் போலி சபக்கத்து ஏகதேச விருத்தியுடைத்தாதலை விளக்கலுற்று, "அநித்தமென்ற வேது செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம் மின்னினும் ஆகாசத்தினும் மின்னினிகழ்ந்து ஆகாசத்திற் காணாதாகலின்" என்றார். சத்தம் செயலிடைத் தோன்றாது என்ற பக்க வசனத்துச் செயலிடைத்தோன்றாமை சாத்திய தன்மம்; அத்தன்மம் மின்னினும் ஆகாயத்தினும் பொருந்துதலின் அவை யிரண்டும் சபக்கமாதல் தெள்ளிதாதலால், "செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்க மின்னினும் ஆகாசத்தினும்" என்றார்; என்றது மின்னும் ஆகாசமும் செயப்படுபொருளல்ல வென்றவாறு. பக்கதன்மமாகிய அநித்தியத்துவம் சபக்க மிரண்டனுள் மின்னிடத் துளதாதலாலும் ஆகாசத்தில் இல்லையாதலாலும், "மின்னினிகழ்ந் தாகாசத்திற் காணாதாகலின்"என்றார். இது சபக்கைக தேச விருத்தி கூறியது. இனி, சபக்கத்துக்குரிய செயலிடைத் தோன்றாமை யாகிய தன்மத்தின் மறுதலையான செயலிடைத் தோன்றுவதைத் தன்மமாகவுடைய விபக்கப் பொருள் இவையென்பார் கடம் முதலியனவென்று கூறி, அக் கட முதலியவற்றில், சபக்கத்தேக தேச விருத்தியாய் நிற்கும் அநித்தத்துவமாகிய பக்கதன்மம் முழுதும் வியாபித்திருக்கின்ற தென்பார், "அநித்தம் கடாதியின் ஒத்தலின்" என்றார். இதனால் விபக்க வியாபகம் கூறிய வாறாயிற்று. இவ்வாறு சபக்கத்தேக தேச விருத்தியும் விபக்கத்து வியாத்தியுடைமையும் கூறியவர், இவ்வேது அநைகாந்திக வேதுப் போலியாவதும் கூறுவார், "கடம்போலழிந்து செயலிற் றோன்றுமோ மின்போலழிந்து செயலிற் றோன்றாதோ வெனல்" என்றார். விபக்கத்து முழுதும் வியாத்தியுடையதாதலின் அதுபற்றி, 'கடம் போலழிந்து செயலிற் றோன்றுமோ" என்றும், சபக்கத்தேகதேசப் பொருத்தம்பற்றி, "மின்போல் அழிந்து செயலிற் றோன்றாதோ" வென்றும் கூறினார். இவ்வாறு இருதலையும் ஐயத்துக்கிடமாதல் தோன்றவே அநைகாந்திகமாதல் விளங்கிற்று. அழிந்தென்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. 243-253. 1விபக்கைகதேச விருத்தி சபக்க வியாபி - விபக்கத்து ஏகதேச விருத்தியாய்ச் சபக்கத்து முழுதும் வியாபித்திருக்கும் அநைகாந்திக வேதுப் போலியாவது; ஏது - கூறப்படும் ஏதுவானது; விபக்கத்து ஓரிடத்து உற்று - விபக்கத்துள்ள பொருள்களில் ஒன்றிற் பொருந்தி; சபக்கத்து ஒத்து இயறல் - சபக்கத்துள்ள பொருள்களெல்லாவற்றிலும் நன்கு பொருந்தி யிருப்பதாம்; சத்தம் செயலிடைத் தோன்றும் - சத்தம் செய்யப்பட்டுத் தோன்றும் என்று பக்க வசனம் கூறி; அநித்த மாதலின் எனின்- அநித்த மாதலால் எனப் பக்கதன்ம வசன மாகிய ஏதுவைக் கூறினால்; அநித்த வேது - அநித்தமாகிய அந்த ஏது; செயலிடைத் தோன்றற்கு விபக்க ஆகாயத்தினும் மின்னினும்-செய்யப்பட்டுத் தோன்றுவதாகிய தன்மத்துக்கு விபக்கமாகிய ஆகாயம் மின்னென்ற இவற்றுள்; மின்னின் நிகழ்ந்து-மின்னிடத்தே பொருந்தியும்; ஆகாசத்துக் காணாது - ஆகாசத்தின்கண் பொருந்தாமலும்; சபக்கக் கடாதிகள் தம்மில் - அநித்தமாகிய தன்மத்துக்குச் சபக்கப் பொருள் களான கடம் முதலியவற்றில்; எங்குமாய்-எல்லாவற்றிலும் முழுதும் பொருந்துவதாய்; ஏகாந்தம் அல்ல-அநைகாந்திக மென்னும் குற்றமாய்; மின்போல் அநித்தியமாய்ச் செயலிடைத் தோன்றாதோ - மின்போல் அநித்தத் தன்மை யுடைத்தாய்ச் செய்யப்பட்டுத் தோன்றுவதன்றோ எனவும்; கடம்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றுமோ-கடம்போல் அநித்தத் தன்மையுடையதாய்ச் செயப்படு பொருளாய்த் தோன்றுவதோ எனவும்; எனல் - ஐயத்துக் கிடமாய் ஒரு முடிவெய்தா வகையிற் கூறுவது எ - று. இது முன்னர்க்கூறிய சபக்கைகதேச விருத்தி விபக்க வியாபியைப்போல்வதாயினும், ஆண்டுச் சபக்கத்துக் காணப் பட்ட ஏகதேச விருத்தி, ஈண்டு விபக்கத்தும், ஆண்டு விபக்கத்துப் பொருந்தி நின்ற வியாத்தி ஈண்டுச் சபக்கத்தும் நிற்பதே வேறு பாடென்க. ஈண்டும் இதன் இலக்கணத்தை "ஏது விபக்கத் தோரிடத் துற்றுச் சபக்கத்து ஒத்தியறல்" என்றார். வியாபித் திருப்பதை "ஒத்தியறல்" என்றார். ஓரிடம், ஏகதேசம்- இதனை விளக்கற்கு மேற்கொண்ட உதாரண வியல்பை, "சத்தஞ் செயலிடைத் தோன்றும் அநித்த மாதலின் எனில் அநித்த வேது செயலிடைத் தோன்றற்கு விபக்க வாகாயத்தினு மின்னினும் மின்னினிகழ்ந் தாகாசத்துக் காணாது சபக்கக் கடாதிகள் தம்மில் எங்குமாய்" என்றார். சொன்முடிபு நோக்கி, எங்குமாயென எச்ச வாய்ப் பாட்டாற் கூறினார். செயலிடைத் தோன்றலைத் தன்மமாக வுடைய சபக்கத்துக்கு மீட்சியாகிய விபக்கத்தில் செயலிடைத் தோன்றாமை தன்மமாதலின் அதனையுடைய ஆகாய மின்னுக்களை, "செயலிடைத் தோன்றற்கு விபக்க வாகாயத்தினு மின்னினு" மென்றும், அநித்தத்துவ மாகிய தன்மம் மின்னிடத்து உளதாயும் ஆகாயத்தின் கண் இலதாயும் இருத்தல்பற்றி, "மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது" என்றும் கூறுமாற்றால் விபக்கைகதேச விருத்திகூறியவா றாயிற்று. அநித்தத்துவமும் செயலிடைத் தோன்றலுமாகிய தன்மத்தை யுடைய கட முதலியன சபக்கமாதலினாலும், அவற்றின் கண் அது முழுதும் பொருந்தி யிருத்தலினாலும், "சபக்கக் கடாதிகள் தம்மில் எங்குமாய்" என்னுமாற்றால் சபக்கத்து வியாபியாதல் விளக்கியவாறாயிற்று. இனி, இவ்வேது அநைகாந்திகமாதலை விளக்கற்கு "மின்போல்அநித்த" மாய்ச் செயலிடைத் தோன்றாதோ கடல்போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றுமோ" என்றார். 254-266. உபயைகதேச விருத்தி - உபய ஏகதேச விருத்தி யென்னும் அநைகாந்திக ஏதுப்போலியாவது; ஏது - கூறப்படும் ஏதுவானது; சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி - சபக்கம் விபக்கம் என்ற இரண்டிடத்துக்கு முரியதாய்; ஓர் தேசத்து வர்த்தித்தல் - ஒவ்வொன்றினும் ஒரு புடைப் பொருத்தமே யுடையதாய் நிலவுவதாம்; சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்னில் - சத்தம் நித்தமெனப் பக்கவசனமும் அமூர்த்த மாதலால் என ஏதுவும் கூறினால் அமூர்த்த ஏது - அமூர்த்த மாகிய ஏது; நித்தத்தினுக்குச் சபக்க ஆகாச பரமாணுக்களின் - நித்தத்துவமாகிய தன்மத்தையுடைய சபக்கத் தடங்கு வனவான ஆகாசம் பரமாணு என்ற இவற்றினுள்; ஆகாசத்து நிகழ்ந்து - அமூர்த்தமாகிய ஏது ஆகாசத்தின்கட் பொருந்தி; மூர்த்தமாம் பரமாணுவின் நிகழாமையானும் - மூர்த்தப் பொருளாகிய பரமாணுவின்கண் பொருந்தா தொழி வதாலும்; விபக்கமான கட சுகாதிகளில் - நித்தத்துவமும் அமூர்த்தத்துவமுமாகிய தன்மத்தையுடைய வல்லாத விபக்கத் தடங்குவனவான குடம் இன்பம் என்ற இவற்றினுள்; சுகத்து நிகழ்ந்து - அமூர்த்தமாகிய ஏது இன்பத்துக்குப் பொருத்தமாய்; கடத்து ஒழிந்தமையினும் - குடத்துக்குப் பொருந்தாதொழிவதாலும்; ஏக தேசத்து நிகழ்வது - சபக்க விபக்க மிரண்டினும் ஒரு புடைப் பொருத்த முடைத்தாயிற் றென்பதாம்; ஏகாந்தமன்று-அநைகாந்திகமாதல் எவ்வாறெனின்; அமூர்த்தம் ஆகாசம் போல நித்தமோ-அமூர்த்தமான பொருள் ஆகாசம் போல நித்தமானதோ; அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ - அவ்வமூர்த்தப் பொருள் இன்பம் போல அநித்தமோ; எனல் - என்று ஐயுற்றுத் துணி பொருள் காணாது மயங்குதல் எ - று. முன்னர், சபக்கைகதேச விருத்தியும் விபக்கைகதேச விருத்தியு மாகிய இரண்டும் தனித்தனியாகக் கூறியவர், இதன்கண் இரண்டிடத்தும் ஏகதேச விருத்திப்படும் ஏதுப் போலியை யெடுத் தோதுதலின், சொற்சுருங்குதல் பற்றி, உபயைகதேச விருத்தி யென்றார். நியாயப் பிரவேசமுடையார், உபய பக்ஷைகதேச விருத்தி யென்று சிறிது விரியக் கூறினார். தமிழகத்து நிலவக்கண்ட இக்கருத்தை ஏனை நாட்டுப் பௌத்தர்கள் இனிதறிந்து கோடற்கு, சபக்க விபக்க மென்றிரண்டினும் ஒப்பப் பொருந்துதலின், "ஏதுச் சபக்கத்தினும் விபக்கத் தினுமாகி" யென்றும் அப்பொருத்தமும் முழுதும் பொருந்திய பொருத்தமன்று, ஓரொன்றிற் பொருந்தும் ஒருபுடைப் பொருத்த மென்றற்கு, "ஓர் தேசத்து வர்த்தித்தல்" என்றும் கூறினார். ஓர் தேசம் ஏக தேசம். வர்த்தித்தல்-இயலுதல். இவ்வாற்றால் உபயைகதேசவிருத்தி அநைகாந்திக போலிக்கு இலக்கணம் கூறியவாறாம். அமூர்த்தம் - உருவின்மை. இவ்வேதுப் போலி உப யைகதேச விருத்தியாதலை உதாரணத்தாற் காட்டலுற்று, "சத்தம் நித்தம் அமூர்த்த மாதலின் என்னின்" என்பதனால் பக்கவசனமும் ஏதுவும் முதற்கட் கூறிப் பின்னர், "அமூர்த்த வேது நித்தத்தினுக்குச் சபக்க வாகாசபரமாணுக்களின், ஆகாசத்து நிகழ்ந்து, மூர்த்தமாம் பரமாணுவின் நிகழாமையானும், விபக்க மான கட சுகாதிகளிற், சுகத்து நிகழ்ந்து கடத் தொழிந்தமையானும், ஏக தேசத்து நிகழ்வது" என்றார். ஆகாசம், அமூர்த்தம். பரமாணு, மூர்த்தம். இவை அநித்தத்துவ தன்மமுடைமையின். சபக்கமாயின. கடசுகாதிகள் அநித்தத்துவ தன்மமுடைமை பற்றி விபக்கமாயின; இவற்றுள் கடம் மூர்த்தம், சுகம் அமூர்த்தம். ஏகாந்தமன்றெனவே அநைகாந்திகமென்பது தானே பெறப்பட்டது. அநைகாந்திக மாவது இவ் வகையாலென்றற்கு, "அமூர்த்த மாகாசம் போல் நித்தமோ, அமூர்த்தம் சுகம்போ லநித்தமோ" என்றார். 267-274. விருத்த வியபிசாரி-விருத்த வியபிசாரி யென்னும் அநைகாந்திக வேதுப்போலியாவது; திருந்தா ஏதுவாய் - திருந்திய வேதுவன்றாய்; விருத்த வேதுவிற்கும் இடம் கொடுத்தல்-விருத்த வேதுவாகிய ஏதுப்போலிக்கும் இடம் கொடுத்து அதனோடுறைவது; சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின் - பிரதிவாதி யாவான் சத்தம் அநித்தம் செய்யப் பட்டுத் தோன்றுதலால் என்றும்; ஒத்தது எனின் - இஃது ஏதுவுக்குரிய இலக்கண முற்றும் பொருந்தியதென்றும் கூறுவானாயின்; சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் சத்தத்துவம் போல் எனச் சாற்றிடுதல் - சத்தம் நித்தம் செவியாற் கேட்கப் படுவதால் சத்தத் தன்மைபோல என வாதியாகிய தான் அவற்குச் சொல்லுவது; இரண்டினும் சங்கயமாய் - இவ்விரண்டேதுக்களையும் ஒருங்கு காண்பதால் இவை ஐய வேதுவாய்; ஏகாந்தமல்ல - அநைகாந்திகமாம் எ - று. திருந்திய வேதுவாவது ஏதுவுக்குரிய இலக்கணத்திற் குறை பாடிலதாய்ச் சபக்கத்தின்கண் பல பொருளினும் சென்று பொருந்தும் செம்மையுடையது. இவ்வாறு பல பொருட்களிற் சென்று பொருந்தும் செம்மை குறைந்தது திருந்தா ஏதுவாம்; இஃது எடுத்துக்காட்டப்படும் சபக்கப்பொருளொன்றி னன்றிப் பிறவற்றிற் சென்று பொருந்தாதென வறிக. சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் என்ற பக்க வசனமும் ஏதுவாகிய இக் கூற்றின் கண், கேட்கப்படுதலாகிய ஏது பக்கப் பொருளாகிய சத்தத்தின் கண்ணும், சத்தத்துவம் என்று காட்டப்படும் சபக்கத்தின் கண்ணும் பொருந்துகின்றதேயன்றி, சத்தத்துவ மொழிந்த ஏனையவற்றின்கண் சென்று பொருந்தும் செம்மையில்லாமை யறிக; இது பற்றியே இது "திருந்தா வேது" எனப்பட்டது. திருந்தாமை, ஈண்டுப் பயிலப்படாமைமேற்று. விருத்த வேது, துணி பொருளைச் சாதியாது மறுதலை பயப்பது. பிரதிவாதி காட்டிய "செயலிடைத் தோன்றலின்" என்ற ஏது அநித்தமென்னும் பொருளைச் சாதித்து, வாதியின் துணிபொருளாகிய நித்தத்துவத்தைச் சாதியாமையின் விருத்த வேதுவாயிற்று. ஈண்டுக் கூறிய திருந்தா வேதுவானது பிரதிவாதி கூறிய பக்கதன்ம வசனமாகிய "செயலிற் றோன்றலின்" என்ற விருத்தவேதுவுடன், சத்தமாகிய பொருளிடத்தே பொருந்தி உடங்கிருத்தலின் வியபிசாரியாயிற்று. ஆகவே, வாதி கூறும் திருந்தா ஏது வொன்று பிரதிவாதி கூறும் ஏதுவுடன் கூடியிருப்பது விருத்த வியபிசாரி யென்னும் ஏதுப்போலி என்ற வாறாம். இவ்விருத்த வியபிசாரி யென்னுந் தொடர், மூன்றாம் வேற்றுமையுருபும் பயனும் உடன் தொக்க தொகை. "விருத்த வியபிசாரி திருந்தா வேதுவாய், விருத்த வேதுவிற்கும் இடங் கொடுத்த" லென்பது இலக்கணமும், "சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின், ஒத்ததெனின் அச்செயலிடைத் தோன்றற்குச் சபக்கமாயுள்ள கடாதி நிற்கச் சத்த நித்தம் கேட்கப்படுதலின் சத்தத்தவம் போலெனச் சாற்றிடுதல்" என்பது எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமுங் கூறியவாறு. இனி அடுத்து வரும் விருத்த வேதுப் போலிக்கு ஈண்டு விருத்தவேது கூறியது ஓராற்றால் தோற்றுவாய் செய்தவாறுமாயிற்று. இவ்விளக்கத்தில் வரும் வாதி மீமாஞ்சகனென்றும், பிரதிவாதி வைசேடிகனென்றும் கொள்க; கொள்ளவே, சத்தம் நித்தத்துவ முடையதெனச் சாதிக்க முயலும் மீமாஞ்சகன் "கேட்கப்படுதலின்" என்ற ஏதுவைக் காட்டிச் சத்தத்துவத்தைச் சபக்கமாக நிறுத்தி வற்புறுத்தினானா யினும், சத்தம் அநித்தத்துவமுடைய தென்பதனை வைசேடிகன் "செயலிடைத் தோன்றலி" னென்ற திருந்திய ஏதுவும் கட முதலிய சபக்கமுங் காட்டி வற்புறுப்ப, அம்மீமாஞ்சகனது ஏது திருந்தா வேதுவாய், வைசேடிகனது ஏதுவும் உடனிருக்க வமைவது வியபிசாரமாயிற்றெனத் தெளிந்து கொள்ளப்படும். செவியால் என்பது அவாய் நிலை. இனி, இவ்விருத்த வியபிசாரி யேதுப் போலியால், சத்தம் அநித்தமென்றாதல் நித்தமென்றாதல் துணியப்படாமையின் அநைகாந்திகமாயிற்று. சாதாரணம் முதல் விருத்த வியபிசாரி யீறாகக் கூறிய அறுவகை ஏதுப் போலிகளுட் சில, நையாயிகர் வைசேடிகர் முதலியோர் நூல்களினும் காணப்படுகின்றன. அநைகாந்திகம் சவ்வியபிசாரியென்றும் சந்தித்த வேதுப்போலி யென்றும் அநிச்சித வேதுப்போலி யென்றும் வழங்கும். சாதாரணம் அசாதாரணம் என்பன பிரசத்தபாதரால் மேற் கொள்ளப் பட்டிருக்கின்றன. அவர் சாதாரண மொன்றே ஐய வேதுப் போலியாமென்று கூறி, அதன்கண் சபக்கைகதேச விருத்தி விபக்க வியாபி, விபக்கைகதேச விருத்தி சபக்க வியாபி, உபயைகதேச விருத்தி யென்ற மூன்றும் அடங்குமாறு கூறுகின்றார். மேலும், அவர் அசாதாரணம் ஐயவேதுப்போலியாகாதென்று சொல்லி, அதனை அனத்தியாவசித்தம் என்று பெயரிட்டுத் தனியாகக் கொள்வர்; விருத்த வியபிசாரி யேதுப்போலி ஐய வேதுப்போலி யாகாதென மறுப்பர். குமரிலபட்டர் சாதாரணம் அசாதாரணம் விருத்த வியபிசாரி என்ற மூன்றையும் மேற்கொண்டு, விருத்த வியபிசாரிக்குக் "காற்று உருவமுடைத்து, பரிசிக்கப்படுவதால்; காற்று அருவமானது, நிறமின்மையால்" என்று எடுத்துக்காட்டும் கூறுவர். இவ்வாறு பலரும் கூறுவனவற்றை யெல்லாம் நோக்கு மிடத்து அநைகாந்திக முதலிய வேதுப்போலியைப் பலவகையாக வகுத்துக் கூறிய முதன்மை பௌத்தர்கட்கே யுரியதென்று இனிது தோன்றுகிறது. மேலும், இப்பாகுபாடு திக்கநாகரால் முதற்கண் விளக்கிக் கூறப்பட்டதென்று ஆராய்ச்சியாளர் பலரும் ஒரு முகமாக வுரைப்பதனாலும், அத் திக்க நாகர் தொடக்கத்தில் தமிழகத்துக் காஞ்சியம்பதியிலிருந்து புலமை சிறந்த பின்பே வடநாடு சென்றனரென அவர் வரலாறு கூறுவதனாலும், அவருக்கு இத்தெளிவினை நல்கிய நியாயநூற்புலவர் தமிழகத்தே அவர் நாளிலும் அதற்கு முற்காலத்தும் இருந்தமை புலனாதலின், இம்மணிமேகலை யாசிரியர் இவற்றைத் தம் தமிழாசிரியன் மார் கூறிப் போந்த முறையே கூறுகின்றாரென்பது மனங் கொள்ளற்பாற்றுதிக்க நாகர்க்குப் பிற்போந்த தரும கீர்த்தி முதலாயினோர் சாதாரணம் அசாதாரணமென்ற இரண்டையுமே மேற்கொண்டு, பிறவற்றை வேறுவகையிற் றொகுத்துக் கொண்டனர். அவ்வாறு தாம் தொகுத்தும் வகுத்தும் மேற் கோடல் பற்றிக் கூறியவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகுமாதலின் அவற்றை அவரவர் நூல்களிற் கண்டுகொள்க. இனி, சைவாகமங்கள், அநைகாந்திகத்தைச் சவ்வியபிசாரி யென்றும், அது சாதாரணம், அசாதாரணம், அனத்தியாவசித்த மென மூவகைப்படுமென்றும் உரைக்கின்றன. (பௌஷ். பாடி. சு. 890-1) 275-280. விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின்-விருத்த வேதுப் போலியைச் செம்மையாகக் கூறுவதாயின்; தன்மச்சொரூப விபரீத சாதனம்......என்ன - தன்மச் சொரூப விபரீத சாதன மென்றும், தன்ம விசேட விபரீத சாதனமென்றும், தன்மிச் சொரூப விபரீத சாதனமென்றும், தன்மி விசேட விபரீத சாதன மென்றும்; நான்கு வகையதாகும் - நான்கு வகையினை யுடைய தாம் எ - று. இக்கூறிய நான்கும் நியாயப் பிரவேசத்தும் உள்ளன. விருத்த மாவது: ஏது, பக்கம் சபக்கம் விபக்கமென்ற மூன்றனுள் சபக்கத் தின்றிப் பக்கத்தும் விபக்கத்தும் பொருந்தி யிருப்பது என்று சத்தபதார்த்தி யென்னும் நூல் (சு. 159) கூறுகிறது; அஃதாவது பக்க வசனத்துக் கூறப்படும் துணிபொருளைச் சாதியாது மாறு கொளநிற்பது என்பதாம். நியாய நூல்களுள் விருத்தம் ஒன்றாகக் கொள்ளப்பட்டிருப்பினும் இந்நூலில் நான்காக வகுக்கப் பட்டுள்ளது; சுலோக வார்த்திகமுடையார்,1 விருத்த வேதுப் போலியைச் சிலர் அறுவகை யாகவும் சிலர் நால்வகையாகவும் சிலர் ஒன்றாகவும் கொண்டனரென்று கூறி, அறுவகையாவன, தருமச்சொரூப விருத்தம், தருமவிசேட விருத்தம், தருமிச்சொரூப விருத்தம், தருமி விசேட விருத்தம் தருமா தருமச் சொரூப விருத்தம், தருமாதரும விசேட விருத்தம் என்பன வாம் என்பர். அநைகாந்திக வகையைத் தொகுத்து இரண்டாகக் கொண்டது போல, இவ்விருத்த வேதுப்போலியையும் தரும கீர்த்தி யென்பார்2 இரண்டாகவே தொகுத்துக் கொள்ளுகின்றார். 280-287. அத்தன்மச் சொரூப விபரீத சாதனம் - அந்நால்வகை விருத்த வேதுப் போலிகளுள் தன்மச் சொரூப விபரீத சாதன வேதுப்போலியாவது; சொன்ன ஏதுவில் - வாதி தான் கூறிய ஏதுவினாலே; சாத்திய தன்மத்து உருவம் கெடும்-சாத்திய தன்மமாகிய துணிபொருளின் சிறப்பியல்பு கெட மொழிவது; சத்தம் நித்தம் பண்ணப்படுதலின் என்றால் - சத்தம் நித்தம் என்று பக்க வசனம் கூறும் வாதி பண்ணப்படுவதால் என்று ஏதுக் கூறுவானாயின்; பண்ணப்படுவது அநித்தமாதலின் - யாதொன்று பண்ணப் படுவது அஃது அநித்தமாதலால்; பண்ணப்பட்ட ஏது-பண்ணப் படுதலாகிய ஏது ; சாத்திய தன்ம நித்தத்தை விட்டு - சாதிக்கப் பட வேண்டிய தன்மமாகிய நித்தியத்துவத்தைச் சாதிக்காமல் ; அநித்தம் சாதித்தலான் - சத்தம் அநித்தமென்று சாதித்துக் கொடுப்பதால்; விபரீதம் - விருத்தமாயிற்று எ - று. இவ்விருத்தவேது சிறிது சுருக்கமாக நியாயப் பிரவேசத்துட் காணப்படுகிறது. அகரச் சுட்டு, நான்காக வகுத்துக் கூறியதனைக் காட்டிநின்றது. சாத்திய தன்மமாவது, சத்தம் நித்தம் என்ற பக்க வசனத்துள் துணியப்படுவதாய் நின்ற நித்தத்துவ மென்ற தன்மம். உருவம், சொரூப விலக்கணமெனப்படும் சிறப்புத் தன்மம். கெடுதல் ஈண்டுச் சாதிக்கப்படா வகைமொழிதல்; பிரதிவாதிக்கு நல்ல சாதன மாதல் என்றுமாம். பண்ணப்படாமை நித்தத்துவத்துக்குச் சிறப்பியல் பாதலின், அந்நித்தத்துவத்தைச் சாதிப்பான் பண்ணப் படுதலென்று ஏதுக்கூறுதல் அச் சிறப்பியல்புக்கு மாறாதல் காண்க. பண்ணப்படுதலாகிய ஏதுவைப் "பண்ணப்பட்ட ஏது" என்றார் ; பொச்சாவாமையாகிய கருவியைப் "பொச்சாவாக் கருவி" (குறள்-53.7) என்றாற் போல. பக்க தன்மத்தைச் சாதிக்க வந்த ஏது, அதனைச் செய்யாது சபக்கத்தும் நில்லாது விபக்கத்துப் பொருந்தி நிற்றலின், "விபரீதம்" என்றார், இதன்கண் "சொன்ன வேதுவிற் சாத்திய தன்மத் துருவம் கெடுதல்" என்பது இலக்கணம் கூறிற்று. ஏதுவின் இன்; ஏதுப் பொருட்டாய் நின்ற ஐந்தனுருபு சுலோக வார்த்திகமுடையாரும் ஈண்டுக் காட்டிய உதாரணமே காட்டுவராயினும், இவ்விருத்தத்தைத் தருமபாதை என்பர். 288-302. தன்ம விசேட விபரீத சாதனம்-தன்ம விசேட விபரீத சாதன மெனப்படும் ஏதுப்போலியாவது; சொன்ன ஏது -வாதியாற் கூறப்பட்ட ஏதுவானது; சாத்திய தன்மம் தன்னிடை - துணியப்படும் தன்மத்தின் கண்ணுள்ள; விசேடம் கெடச் சாதித்தல் - விசேடம் இன்றாமாறு சாதிப்பதாம்; ஓர்க்கும் கண் முதல் இந்திரியங்கள் - பொருள்களையறிதற்குக் கருவியாகிய கண் முதலிய பொறிகள்; எண்ணின் - ஆராயு மிடத்து; பரார்த்தம் - தம்மின் வேறாயுள்ள ஆன்மாவுக்குப் பயன்படுவனவாம்; தொக்கு நிற்றலினால் - பலவாய்த் தொக்கிருப்பதால்; சயன ஆசனங்கள் போல - படுக்கையும் இருக்கையும் போல; என்றால்-என்று கூறிய வழி; தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது-தொக்குநிற்பதால்என்று கூறிய ஏது; சயனாசனத்தின் பரார்த்தம் போல் - படுக்கையும் இருக்கையு மாகியவைகள் பிறர்க்குப் பயன்படுவனவாதல் போல; கண் முதல் இந்திரியங்களையும் பரார்த்தத்திற் சாதித்து - கண் முதலிய பொறிகளையும் பிறர்க்குப் பயன்படுவனவாதலை யெய்துவித்து; சயனாசனவானைப் போலாகி-படுக்கையிருக் கைகளைப் பயன்கொள்ளும் புருடனுளனாதல் போல ; கண் முதலிய இந்திரியத்துக்கும் பரனாய்ச் சாதிக்கிற - கண் முதலிய பொறிகட்கு வேறாய் அவற்றைப் பயன் கொள்ளு வோனாய் வேறே சாதிக்கப்படுகிற; நிர் அவயவ மாயுள்ள ஆன்மாவை - அவயவப் பகுப்பில்லாத ஆன்மாவை; சாவய மாகச் சாதித்து - சயனாசனவானைப்போல அவயவப் பகுப்புடை யனாகச் சாதிக்கு முகத்தால்; சாத்திய தன்மத்தின்-சாத்திய தன்ம மாகிய பரார்த்தம் என்புழிப் பரனாகிய ஆன்மாவினது; விசேடம் கெடுத்தலின் - சிறப்பியல்பாகிய அவயவப் பகுப் பின்மையைக் கெடுத்து அவயவப் பகுப்புடையனாக்குதலால்; விபரீதம் - விருத்த ஏதுவாயிற்று எ - று. சாத்திய தன்மத்தோடு பிரிப்பின்றி யொன்றாயிருக்கும் சிறப்பியல்பைச் "சொரூபம்" என்றாராதலின், அவ்வாறின்றி அத்தன்மத்தால் உய்த்துணரப்படும் சிறப்பியைபுகளை ஈண்டு 'விசேடம்' என்றார். "கண்முதல் இந்திரியங்க" ளென்னாது "ஓர்க்கு" மென மிகுத்துச் சொன்னதனால், கண் முதலிய பொறிகளேயன்றி அவற்றோடு கூடிய உடம்பும் கொள்க. தான் வேறு தனுகரணாதிகள் வேறு எனப் பகுத்துணர்வார்க்கன்றி, அவை பரார்த்தமென்பது விளங்காமையின், "எண்ணின்" என்றார். வாதியாவான் நிகழ்த்திய கூற்றில், "கண் முதலிய இந்திரியங்கள் பரார்த்த" மென்றது பக்க வசனம்; "தொக்கு நிற்றலினால்" என்றது ஏது; "சயனாசனங்கள் போல" என்றது திட்டாந்தம். தொக்கு நிற்றலினால் என்ற ஏதுவை மறுக்கின்றாராதலின் மீட்டும், "தொக்கு நிற்றலின் என்கின்ற ஏது" என்றார். சயனாசனங்கள் பரார்த்தம் எனவே, அவற்றிற்குப் பரனாய்ப் பயன்கொள்வான் ஒருவன் உண்டெனத் துணியப்படுதலின், "சயனாசனவானைப் போல" என்றார். சயனாசனங்களும் பலவற்றின் தொகுதியாய காரியமாதலின், "சாதித்து" எனச் செய்தெனெச்சத்தாற் கூறினார். 1பரன், வேறானவன் ; தன்னின் வேறாகக் காணப்படுவனவற்றினும் தான் மேம்பட்ட இயல்புடைமை பற்றி ஆன்மாவைப் பரன் என்றார். சாதிக்கிற என்றது செயப்பாட்டு வினைப் பொருட்டு, சாவயவம் - அவயவத்தோடு கூடியது; நிரவயவம்-அவயவ மில்லாதது. சாங்கியனொருவன் பௌத்த னொருவனை நோக்கி, ஆன்மாவினுண்மை சாதிப்பானாய் "கண் முதலிய இந்திரியங்கள் பரார்த்தம். தொக்கு நிற்றலினால், சயனாசனங்கள் போல்" என்று மொழிந்து சயனாசனங்கட்குப் பரமாய்ச் சயனாசனவான் ஒருவன் உளனாதல் போல, கண் முதலிய இந்திரியங்கட்கும் பரமாய் ஆன்மா வென்ப தொன்றுண்டென்று சாதித்தானாக, அவன் கூறிய ஏதுவை மறுக்கப்புக்க பௌத்தன், சாங்கியனால் காட்டப்பட்ட சயனாசனாவான் அவயவத்தோடு கூடியவ னாதலால், ஆன்மாவும் அவயவத்தோடு கூடியவ னாவானென்றும் மற்று ஆன்மா நிர் அவயவி யென்பது சாங்கியன் கொள்கையாதலின் நிர் அவயவியாகிய விசேடவியல்பை இவ்வாதம் கெடுத்தழித் தலின், 1சாங்கியன் கூறிய ஏது தன்ம விசேட விபரீத சாதனமாயிற்று. குமாரிலபட்டர் இத் தன்ம விசேட விபரீத சாதனத்தைத் தருமா தருமி விசேட பாதை என்பர். 303-318. தன்மிச் சொரூப விபரீத சாதனம் - தன்மிச் சொரூப விபரீத சாதனமெனப்படும் விருத்த வேதுப் போலியாவது; தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை - வாதியாற் கூறப்படும் தன்மியின் சிறப்பியல்பை; ஏதுத்தானே - அவன் கூறும் ஏதுவே; விபரீதப்படுத்தல்-விருத்தமாக்கி விடுவது; பாவம் திரவியம் அன்று கண்மமன்று குணமுமன்றாம் - பாவம் திரவியம் குணம் கன்மம் என்பவற்றுள் ஒன்றுமன்று; எத்திரவியம் எக்குணம் கன்மத்து உண்மையின் வேறாதலால் - எல்லாப் பொருள் குணம் தொழில் களிலுமுள்ள உண்மைத் தன்மையின் வேறாய்ப் பொதுவாய வுண்மைத் தன்மையுடைமையால்; சாமானிய விசேடம் போல் - சாமானியமும் விசேடமும் போல ; என்றால் - என்று வைசேடிக வாதி யொருவன் சொன்னால்; பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் நின்றவற்றினிடை யுண்மை வேறாதலால்-பொருள் குணந்தொழி லென ஒருங்கு நின்றவற்றின் கண்ணுள்ள உண்மைத் தன்மையின் வேறாகப் பொதுவுண்மைத் தன்மையுடைமையால் ; என்று காட்டப்பட்ட வேது - என்று வாதியாற் கூறப்பட்ட ஏதுவின்கண் ; மூன்றினுடை யுண்மை வேறுபடுத்தும் பொதுவாமுண்மை - மூன்றின் கண்ணுமுள்ள உண்மைத் தன்மையின் வேறுபட்டு நிற்கும் பொதுவாம் உண்மைத் தன்மை; சாத்தியத்து இல்லாமையினும் - சாதிக்கப்படும் பக்க தன்மியாகிய பாவத்தின் கண் இல்லாமையானும் ; திடடாந்தத்தில்-திட்டாந்தத்தின் கூறப்பட்ட; சாமானிய விசேடம் போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும் - பொதுவுஞ் சிறப்புமாகிய இயல்புடைய பொருள்களுள் ஒன்றில்வழிப் பிறி தொன்றில்லை யாதலானும்; பாவம் என்று பகர்ந்த தன்மியினை - பாவமென்று பக்க வசனத்துள் எடுத்தோதப்பட்ட தன்மியின் சொரூப வியல்பைக் கெடுத்து; அபாவமாக்குதலால் - அபாவமெனச் சாதித்து விடுதலால்; விபரீதம் - விருத்தப் போலியாயிற்று எ-று. ஆமென்பதனை அன்றென்பதனோடும், அன்றென்பதைத் திரவியத் தோடும் ஒட்டி, திரவியமன்றாம், கன்மமன்றாம், குணமுமன்றாமென இயைத்துக்கொள்க. எத்திரவியத்தும் எக்குண எக்கன்மத்தும் எனற் பாலன எத்திரவிய மெக்குண கன்மத்தென நின்றன. எல்லாத் திரவிய குண கன்மங்களிலும் உள்ள பாவத்தின் வேறாதலால் என்பான், பாவத்தை உண்மையென்பதுபற்றி, "உண்மையின் வேறாதலால்" என்றான். சாமானிய விசேடம் போல் என்பது திட்டாந்தம். மூன்றினுடை உண்மையாவது திரவியம் முதலிய மூன்றின்கண்ணுமுள்ள பாவம். இதனை வேறுபடுத்தும் பொதுவாமுண்மை பாவ பதார்த்த மாறினுள்ளும் அமைந்து கிடக்கும் பாவம். சொரூபம் ஈண்டுத் தன்மத்தின் மேற்று. "உண்மை யேதுபடுத்தும்" என்பது "உண்மையின் வேறாதலால்" என்றதனோடு பொருந்தாமையின், "வேறு படுத்தும்" எனத் திருத்திக் கொள்ளப்பட்டது ; திரு. நாராயணையங்கார் "வேறு படுத்துப் பொதுவாமுண்மை" எனத் திருத்திக் கொள்வர். இனி, இவ்வாறு திருத்திக் கொள்ளாது "உண்மை பேதுப் படுத்தும்" என்ற பாடத்தைக்கொண்டு, பேதம்பேது என நின்றதாகக் கோடலுமமையும். திரவியம் குணம் கன்மம் சாமானியம் விசேடம் சமவாயம் என்ற ஆறனையும் பாவ பதார்த்தமென்றும், திரவிய முதலிய மூன்றனையும் சத்துவ சம்பந்தமென்றும், ஏனை மூன்றனையும் சுவான்ம சத்துவமென்றும், இவ்விருவகையினும் இயைந் திருக்கும் பாவத்தைப் பரமசத்தென்றும் வைசேடிகர் கூறுவர். சாமானிய முதலியமூன்றும்பாவபதார்த்தங்களேயாயினும், திரவிய முதலியவற்றைப்போல் இடம்பொருள் காலங்களில் வைத்துணரப்படுவனவல்ல ; அவை "புத்தியபேஷம்" எனப்படும். அதனால், "பாவம் திரவியமன்று கன்மமுமன்று குணமுமன்றாம்" என்று பக்க வசனமும் திரவிய குண கன்மங்களது "உண்மையின் வேறாதலால்" எனப் பக்க தன்ம வசனமும் கூறினான். விசேடத்தின்கண் சாமானியம் உளதாயினும், விசேடத் துண்மையின் சாமானியத் துண்மை வேறாதல்போல என எடுத்துக் காட்டுவான், சாமானிய விசேடம் போல் என்றான். இது வைசேடிகனாகிய வாதி கூற்று. இவ்வைசேடிகன் கூறிய ஏது தன்மிச்சொரூப விபரீத சாதனமென வுரைத்து மறுக்கும் பிரதிவாதி, இவ்வேது, "சாத்தியத்தில்லாமை யானும், திட்டாந்தத்திற் சாமானிய விசேடம் போக்கிப் பிறிதொன்றில்லாமையானும் பாவமென்று பகர்ந்த தன்மியினை அபாவமாக்குதலான் விபரீதம்" என்றுரைக்கின்றான். திரவிய முதலிய மூன்றினிடத்து உள்ள உண்மையின் வேறுபடுத்தும் பொதுவாம் உண்மை சாத்தியமாகிய பாவத்தின்கண் இல்லை யென்பான், "சாத்தியத்தில்லாமையினும்" என்றும் திட்டாந்த மாகக் காட்டப்படும் சாமானிய விசேடங்களுள், சாமானியமில் வழி விசேடப்பொருளும் விசேடமில்வழிச் சாமானியப் பொருளும், இரண்டுமில்வழி எப்பொருளும் இல்லையா யொழி தலால், "சாமானிய விசேடம் போக்கிப் பிறிதொன்றில்லாமையானும்" என்றும் இதனால் தன்மியாகிய பாவத்துக்குச் சொரூபமாகிய திரவிய குண கன்மமன்மை இல்லையாய்ப் பாவமென்ப தொன்றில்லை யென்பதுபட நிற்றல்பற்றி, "பகர்ந்த தன்மியினை அபாவமாக்கு தலான் விபரீத" மென்றும் கூறி மறுக்கின்றான். இனி, இதற்கு நியாயப்பிரவேசமுடையார் காட்டும் காரணமும் கருத்துரையும் வேறாதலை யறிந்து கொள்க. குமாரிலபட்டர் இதனை, தர்மிச் சொரூப பாதையென்று பெயரிட்டு, "சமவாயம் பொருளன்று குண மன்று தொழிலுமன்று, பொருளுண்மை யுணர்வுக்கு இடனாதலால், இங்கே கடமுளது என இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயைபு போல" என்று உதாரணமும் காட்டி, ஈண்டுக் கூறிய எது சமவாயத்தைக் கெடுத்துச் சையோகத்தைச் சாதித்தலின், தன்மிச் சொரூப பாதையா1 மென்றனர். 319-325. தன்மி விசேட விபரீத சாதனம்-தன்மி விசேட விபரீத சாதன மெனப்படும் விருத்தப் போலியாவது; தன்மி விசேட அபாவம் சாதித்தல்-தன்மியின் சிறப்பியைபாகிய பாவத்தை அபாவமாகச் சாதிப்பது; முன்னம் காட்டப்பட்ட ஏதுவே - பாவம் திரவிய குணகன்ம மன்றென முன்னர்க் காட்டிய பக்கவசனத்து ஏதுவாகிய திரவிய குணகன்மத் துண்மையின் வேறாதலால் என்பதே; பாவ மாகின்றது-பாவமானது; கருத்தாவுடைய கிரியையும் குணமுமாம் அதனை - கருத்தாவாகிய வாதியாற் கொள்ளப்படாத தொழிலுங் குணமுமாம் என்பதைச் சாதித்து; விபரீத மாக்கியதாதலால்-அவ்வாதி யெடுத் தோதிய கருத்துக்கு மறுதலை முடிபைப் பயந்தமையால்; தன்மி விசேடம் கெடுத்தது - தன்மியின் சிறப்பியைபைக் கெடுத்தது எ - று. தன்மியையும் அதன் தன்மத்தையுங் கொண்டு, உய்த்துணரப் படும் தன்மியின் சிறப்பியைபு "தன்மி விசேட"மென வறிக. பாவமாகிய தன்மி, திரவியகுண கன்மமன்றெனவே, திரவியகுண கன்ம மன்மை தன்மியின் விசேடமாயிற்று. முன்னங் காட்டப் பட்ட ஏது தன்மிச் சொரூப விபரீத சாதனமாய்கெட்டமையின், பாவமானது திரவியகுண கன்மமாம் என்றாகிப் பாவத்தின் விசேடத்தைக் கெடுத்தலின், "பாவமாகின்றது கிரியையும் குணமுமாமதனைச் சாதித்து விபரீதமாக்கியது" என்றார். இதனால் தன்மியின் விசேடம் கெடுவது பயனாயினமையின், "தன்மி விசேடம் கெடுத்தது" என்றார். பக்கவசனம் கூறிய வைசேடி கனாகிய வாதியைக் "கருத்தா" வென்றும், அவன் மேற்கொள்ளாத கருத்தை அவன் கூறிய ஏதுவே எய்துவித்தலின் "உடைய" என்றும் கூறினார். உடைய என்றது எதிர்மறைக் குறிப்பு. சாத்தனென்பான் எனற்பாலதைச் சாத்தினென்கின்றவன் என்பதுபோல, பாவமாவ தெனற் பாலது "பாவமாகின்ற" தெனப்பட்டது. பாவமாகின்றது கிரியையுங் குணமுமாமது என்பது எழுவாயும் பயனிலையுமா யியைந்து ஒரு சொன்னீர்மைப்பட்டு அன்சாரி'ac யையும் ஐயுருபுமேற்று விபரீதமாக்கிய தென்பதனோடு முடிந்தது. இனி, தன்மிச் சொரூப விபரீத சாதனத்துக்குக் காட்டிய பக்க வசனமும் எதுவுமே கொண்டு, தன்மி விசேட விபரீதசாதனத்தை இம் மணிமேகலை யாசிரியர் விளக்கியதுபோலவே, நியாயப் பிரவேச முடையாரும் விளக்குகின்றார். தன்மி விசேட பாதையெனக் கூறி மேற் கொள்ளும் குமாரிலபட்டரும், இவ்வாறே தன்மிச் சொரூப பாதைக்குக் கூறிய வேதுவையே கொண்டு பொருள்களின் பல்வகை இயைபுகட்கு உண்மை காண்கின்றார். ‘சிவநெறிப் பிரகாச வுரைகாரர், விருத்தத்தைச் சாத்திய விபரீத வியாத்தன் என்றும், சாதன விபரீத வியாத்த னென்றும் இருவகைப் படுத்து, "சாத்திய விபரீத வியாத்தனாவது, சத்தம் அநித்யமாக வேண்டும், காரியமாகையால், ஆகாசம்போல் என்னுமிடத்துக் காரியத்துவம் என்கிற ஏதுவானது தன்னுடைய சாத்தியமான நித்தியமா யிருக்கிற தற்கு விபரீதமான அநித்தியமா யிருக்கிறத னோடே வியாப்த மாகையால் சாத்திய விபரீதமென்னும் ஏத்துவா பாசன், சாதன விபரீத வியாப்தனாவது,மனம் அநித்தியமாகவேண்டும். சேதன மாகையால், ஆன்மாவைப்போ லென்னுமிடத்து; அநித்தியத்துவ மானது சாதனமான சேதனத்துவத்துக்கு விபரீதமான அசேதனத் துடன் வியாப்தமாகையால் சாதன விபரீத வியாப்தன்" என்று விளக் குவர். இவ்வாறே அவரவரும் கூறுவனவற்றை யறிந்து கொள்க. 325-328 திட்டாந்த ஆபாசங்கள் - திட்டாந்தப் போலியென்பன; தீய எடுத்துக் காட்டாவன - குற்றமுடைய எடுத்துக் காட்டுக்களாம், திட்டாந்தம் இருவகைப்படுமென்று முற் கூறப்பட்டன - திட்டாந் தங்கள் இருவகையாகும் என முன்பே கூறியவற்றைக் கடைப் பிடிக்க எ - று. தீய எடுத்துக் காட்டாவன திட்டாந்தப் போலி (143-6) என்றாராகலின், அவையே ஈண்டும் கூறப்படுகின்றன வென்பார், "தீய எடுத்துக் காட்டாவன திட்டாந்த ஆபாசம்" என்றார். தாமே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. திட்டாந்தம் இருவகையா மென்பதை முன்னர், "ஏதமில் திட்டாந்தம் இருவகைய, சாதன்மியம் வைதன்மியமென" (136-7) என்று சொல்லி முறையே இரண்டினையும் விளக்கிக் கூறியுள்ளதை நினைப்பித்தற்கு ‘முற் கூறப்பட்டன' என்றார். திட்டாந்தாபாசம் நிதரிசனாபாதம் எனவும் வழங்கும். 328-339. இங்கண் - இவ்விடத்தே; அவற்றுள்-திட்டாந்தப்போலி வகை இரண்டனுள்; சாதன்மிய திட்டாந்த ஆபாசம் ஓதில்-சாதன்மிய திட்டாந்தப் போலிவகையைக் கூறுமிடத்து; சாதன தன்மவிகலம் ...என்ன-சாதன தன்ம விகலம் சாத்திய தன்ம விகலம் உபய தன்ம விகலம் அநந்நுவயம், விபரீ தாந்நுவயம் என்று; ஐந்து வகையுளாகும் -ஐந்து வகைப்படும்; வைதன்மிய திட்டாந்த ஆபாசம் - வைதன்மிய திட்டாந்தப் போலியும்; சாத்தியாவியா விருத்தி... என்ன - சாத்தியாவியா விருத்தி யென்றும், சாதனா வியாவிருத்தி யென்றும் உபயாவியா விருத்தி யென்றும் அவ்வெதிரேகமென்றும், விபரீத வெதிரேக மென்றும்; ஐவகைய-ஐந்துவகைப்படும் எ - று. நியாயப் பிரவேசமுடையாரும் இவ்வாறே சாதன்மியம் வைதன்மியம் என்ற இரண்டையும் தனித்தனியாக நிறுத்தி அவ்வைந்துவகையாக வகுத்துரைப்பர். ஆயினும் அவர் வகுத் துரைக்கும் பெயர்வகை சிறிது வேறுபடுகிறது. சாதன்மிய திட்டாந்தப் போலியைச் சாதன தன்மா சித்தம், சாத்திய தன்மா சித்தம், உபய தன்மா சித்தம், அநந்நுவயம், விபரீதாந்நுவயம் என்றும், வைதன்மிய திட்டாந்தப் போலிவகையைச் சாத்தியவியா விருத்தம், சாதனவியா விருத்தம், உபயாவியா விருத்தம், அவ் வெதிரேகம், விபரீத வியதிரேகம் என்றும் கூறுகின்றார். பிரசத்த பாதந் 1சாதன்மிய திட்டாந்தப்போலியைச் சாதன்மியநிதரிசனா பாச மென்று கொண்டு, இலிங்கா சித்தம் அனுமேயா சித்தம், உபயா சித்தம், ஆசிரயா சித்தம், அனனுகதம், விபரீதானுகதம் என அறுவகையாகவும், வைதன்மிய நிதரிசனாபாசத்தை, இலிங்கா வியா விருத்தம், அனுமேயா வியா விருத்தம், உபயா வியா விருத்தம், ஆசிரயா சித்தம் அவியா விருத்தம், விபரீத வியா விருத்தம் என அறுவகையாகவும் கூறுவர். தரும கீர்த்தி 1 யென்பார் இம்மணிமேகலை யாசிரியர் கொண்டதனைப் பெருக்கி இனத்துக்கு ஒன்பதாக வகுத்துரைக்கின்றார். பிற்காலத்து நையாயிகரான நியாயசார முடையார் ஒவ்வொன்றையும் பப்பத் தாக வகுத்துரைப்பர். இத் திட்டாந்தப்போலி, நையாயிகருட் சிலரால் உதாகரணாபாசம் என்று வழங்கப்படுகிறது. சைவாகமங்கள், சாதன்மிய திட்டாந்தப் போலியைச் சாதன வைகலியம் சாத்திய வைகலியம், உபய வைகலியம், சொருப வைகலியம் என நான்காகவும், வைதன்மிய திட்டாந்தப் போலியைச் சாத்தியாபாவ விகலம், சாதனாபாவ விகலம், உபயா பாவ விகலம், ஆசிரயாபாவ விகலம் என நான்காகவும் வகுத்துக் கூறும். இவற்றைப் பௌட்கர முதலிய ஆகமங்களுட் காண்க. 339-348. இவற்றுள்-சாதன்மிய திட்டாந்தப் போலி வகை யைந்தனுள்; சாதன தன்ம விகலமாவது-சாதன தன்மவிகல மென்னும் திட்டாந்தப் போலியாவது; திட்டாந்தத்திற் சாதனம் குறைவது - வாதியாவான் காட்டும் திட்டாந்தத்தில் அவன் கூறும் ஏதுவாகிய சாதனம் பொருந்தா தொழிவது; சத்தம் நித்தம் அமூர்த்த மாதலான்-சத்தம் நித்தமாகும் அமூர்த்தமாகையால் எனப் பக்க வசனமும் ஏதுவும் கூறி; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தமாதலால்-யாது யாது அமூர்த்தம் அது நித்தமென வியாத்தி வசனம் காட்டி; பரமாணுவில் காண்புற்றது எனில் - இதற்குத் திட்டாந்தம் பரமாணுவில் காணப்பட்டது என்று சொன்னால்; திட்டாந்தப் பரமாணு-திட்டாந்தமாகிய பரமாணு; நித்தத் தோடு மூர்த்தமாதலால் - நித்தத்துவமும் மூர்த்தமாம் இயல்புடையதாதலால்; சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி- சாதிக்கவேண்டிய தன்மமாகிய நித்தத்துவம் பொருந்தி; சாதன தன்ம அமூர்த்தத் துவம் குறையும்-ஏதுவிற் கூறிய தன்மமாகிய அமூர்த்தத் தன்மை பொருந்திற்றில்லையாம் ஆதலால் இத் திட்டாந்தம் சாதன தன்ம விகலத் திட்டாந்தப் போலியாயிற்று எ - று. இம் மணிமேகலை யாசிரியர் சாதன தன்ம விகல மென்றாராக, நியாயப் பிரவேசமுடையார் சாதன தர்மாசித்தம் என்றனர்; இவர்கட்குப் பிற்போந்த தருமகீர்த்தியார், சாதன தன்ம விகலமென மணிமேகலை யாசிரியர் கூறியாங்குக் கூறுகின்றார். விகலமெனினும் அசித்தமெனினும் ஒன்றே. குறைத்தல், இன்மைப் பொருட்டு. குறைவிற்கு எல்லை இன்மையாதலின், இல்லாமை யெய்தும் நிலையைக் குறைதலென்றார். ஏனையிடத்தும் இதுவே கூறிக்கொள்க. "திட்டாந்தத்திற் சாதனம் குறைவ" தென்றது சாதனதன்ம விகலத்துக்கு இலக்கணம் கூறிற்று. "சத்தம் நித்தம்" என்ற மேற்கோளை "அமூர்த்த மாதலான்" என்ற ஏதுவால் வலியுறுத்துவார், அதன் வியாத்தியை எடுத்தோதிக் காட்டுதலின், "யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்" என்றார். இவ்வியாத்தியைச் சபக்கத்தினும்காட்டவேண்டிப் "பரமாணுப் போல" எனத் திட்டாந்தம் காட்டியவழி, அப் பரமாணு நித்தமாந் தன்மமும் மூர்த்தமாமியல்பும்உடைத்தாதலால், சாதன தன்ம மாகிய நித்தத்துவம் பொருந்தி நிற்ப, அமூர்த்தத்துவம் பொருந் தாமையால், சாதனமாகிய ஏதுவின் 'தன்மமாகிய அமூர்த்தத்துவம் பொருந்தாத திட்டாந்தப் போலியாயிற்று. ஆதலால் என்பது முதலாயின குறிப்பெச்சம். 349-358. சாத்திய தன்ம விகலமாவது-சாத்திய தன்ம விகலமென்னுந் திட்டாந்தப் போலியாவது; காட்டப்பட்ட திட்டாந்தத்தில்- வாதியாவான் தான் கூறிய ஏதுவோடு கூடியபக்க வசனத்தை நாட்டுவதற்குக் காட்டிய திட்டாந்தத்தின்கண்; சாத்திய தன்மம் குறைவு. படுதல்-சாத்தியமாகிய தன்மியின் தன்மம் இல்லையாய் விடுதல் சத்தம் நித்தம் அமூர்த்தமாதலால்-சத்தம் நித்தமாம் அமூர்த்தமாத வினாலே என்று பக்க வசனமும் ஏதுவும்; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அதுநித்தம்-யாதுயாது அமுர்த்தம் அதுநித்தம் என்று வியாத்தி வசனமும் கூறி, புத்திபோல் என்றால்-புத்திபோல எனத் திட்டாந்தம் காட்டினால்; திட்டாந்தமாகக் காட்டப் பட்ட புத்தி - வாதியால் திட்டாந்தமாக எடுத்துக்காட்டப் பட்ட புத்தியானது ; அமூர்த்தமாகி நின்றே-அமூர்த்தத்துவ முடையதாயினும்; சாதன அமூர்த்தத்துவம் நிரம்பி - ஏதுவின் கண்ணுள்ள அமூர்த்தத்துவமாகிய தன்மம் பொருந்த ; சாத்திய நித்தத்துவம் குறையும்-பக்க தன்மியின் தன்மமாகிய நித்தத்துவம் பொருந்தா தொழிகிறது ; ஆதலால் இது சாத்திய தன்ம விகலமாயிற்று எ - று. பக்க வசனத்துக் காட்டப்படும் தன்மியின் தன்மமுடைமையைச் சாதித்தற்குத் திட்டாந்தம் காட்டுமிடத்து, அது சபக்கமாதலின் அதன் பால் சாதித்தற்குரிய தன்மத்துக்கு வியாத்தியில்லை யாயின் குற்றமா மென்று கூறலின், "சாத்திய தன்மம் குறைவு படுதல்" என்று குறித்தார். யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் என ஏதுவுக்கு வியாத்தி வசனம் கூறினும், அதனுட்டுணி பொருளாகக் கூறப்படும் நித்திய தன்மம் திட்டாந்தமாகிய புத்தியின்கண் இன்மையின் இது திட்டாந்தப் போலியாயிற்றென வறிக. இனி உமாபதி சிவாச்சாரியார், இதற்கு, "ஆத்மா நித்தியம், விபுவாகையால், ஆகாசம்போல" என்று கூறி, ஆகாசம் சத்த தன்மாத்திரையின் காரியமாகையால் நித்தியத்துவமுடைய தன்மையின் சாத்திய விகலமாயிற்று 1எனபர். இதற்குச் 2சிவநெறிப் பிரகாசவுரைகாரர். "காரியம் காரியமல்லவென்று சந்தேகப் பட்டிருக்கிற வத்துவானது காரியமாகவேண்டும். பிரத்தியட்சமா கையால், ஆன் மாவைப்போ லென்னுமிடத்துச் சாத்தியமாயிருக்கிற காரியத்துவம் ஆன்மாவினிடத்தில் இல்லாதிருக்கையால் சாத்தியமான இதனிலும் திட்டாந்தாபாசம்" என்று கூறுவர். 359-363. உபய தன்ம விகலமாவது-உபய தன்ம விகலமென்னும் திட்டாந்தப் போலியாவது; காட்டப்பட்ட திட்டாந்தத்திலே வாதியாற் காட்டப்பட்ட திட்டாந்தத்தின்கண்; சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்-சாத்தியத்தின் தன்மமும் சாதனமாகிய ஏதுவின் தன்மமும் என்ற இரண்டும் வியாத்தி யில்லா தொழிவதாம் ; அன்றியும் - மேலும்; அது - அவ் வுபயதன்ம விகலம் ; சன்னும் அசன்னும் என்று இருவகையாம் - சன்னாவுள்ள உபய தன்ம விகலம் அசன்னாவுள்ள வுபய தன்ம விகலம் என்று இருவகைத்தாகும் எ - று. உபய தன்ம விகலம் இவ்வாறு இருவகையாகப் பிறராற் கூறப்பட வில்லை. இம் மணிமேகலை யாசிரியர் போல நியாயப் பிரவேச முடையாரும் சன்னும் அசன்னுமாக இருவகையாகவே கூறியுள்ளார். சன் - உள்ளது; அசன் - இல்லது. இவ்வாறு இருவகையாகக் கொண்டதே யன்றி, உபய தன்ம விகலத்தை உபயாசித்தமென்று வழங்குவதற்கேற்ப இவ்விரண்டினையும் முறையே வித்யமானோபயாசித்த மென்றும் அவித்யமானோபயா சித்தம் என்றும் கூறுவர். 363-372. இவற்றுள் சன்னாவுள உபய தன்ம விகலமாவது-இரண்டாக வகுக்கப்பட்ட இவற்றுள் சன்னாகவுள்ள உபய தன்ம விகலமென்னும் திட்டாந்தப் போலியாவது; உள்ள பொருட்கண்-திட்டாந்தமாகக் காட்டப்பட்ட உள்பொருளின் கண்ணே; சாத்திய சாதனம் கொள்ளும் இரண்டும்-சாத்திய தன்மமும் சாதன தன்மமுமாகிய இரண்டும்; குறையக் காட்டுதல்-பொருந்தா தொழிவது : சத்தம் நித்தம் - சத்தம் நித்தமென்று பக்க வசனமும்; அமூர்த்த மாதலான் - அமூர்த்த மாதலாலெனப் பக்க தன்ம வசனமும் ; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் - யாது யாது அமூர்த்தம் அது நித்தமாமென வியாத்தி வசனமும் கூறி; கடம் போல் எனில்-குடம்போல் என உள் பொருளாகிய வொன்றைத் திட்டாந்த மாகக் கூறிய வழி; திட்டாந்தமாகக் காட்டப்பட்ட கடம்தான்- திட்டாந்தமாகக் காட்டப்பட்டுள்ள குடந்தானும் ; உண்டாகி- உள்பொருளாய்; சாத்தியமாய் உள நித்தத்துவமும் - சாத்திய தன்மமாகிய நித்தத்துவமும்; சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் -சாதன தன்மமாகிய அமூர்த்தத்துவமும்; குறையும்- இல்லையாம் எ - று. "உள்ள பொருட்கண் சாத்திய சாதனம் கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்" என்றது சன்னாவுள்ள உபய தன்ம விகலத்துக்கு இலக்கணம் கூறிற்று. "காட்டுதல்" என்றதனால், உள் பொருள் காட்டுத் திட்டாந்தப் பகுதியாதல் நன்கு பெறப்படுதலால் எடுத்தோதாராயினார். சத்தம் நித்தமென்றது சாத்தியத்தின் தன்மம் நித்தத்துவமென்பதும், அமூர்த்தமாதலால் என்றது சாதன மிது வென்பதும் யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தமென்றது. சாதன தன்மம் அமூர்த்தத்துவமென்பதும் விளக்கி நிற்றல் காண்க. உள்ள தாகியதொரு பொருளென்றற்கு, "உண்டாகி" யென்றார். குடம் அநித்தத் தன்மையும் மூர்த்தமும் (உருவம்) உடையதாதலால் திட்டாந்தப் போலியாத லறிக. உபயாசித்தமெனக் கொண்ட இத் திட்டாந்தப் போலிக்குப் பிரசத்தபாதரும் வித்யாமானோபயா சித்தமெனக் கொண்ட நியாயப் பிரவேசமுடையாரும் "கடம்போ" லென்னும் இத் திட்டாந்தத்தையே யெடுத்துக் காட்டி யுள்ளனர். 373-384. அசன்னாவுள்ள உபயதன்மவிகலம்-அசன்னாவுள்ள வுபய தன்மவிகல மென்னும் திட்டாந்தப் போலியாவது; இல்லாப் பொருட்கண்-பிரதிவாதிக்கு இல்பொருளா மொன்றைக் காட்டுமிடத்து அதன்கண்; சாத்திய சாதனம் இரண்டும் குறையக் காட்டுதல்-சாத்திதன்மம் சாதன தன்மம் என்ற இரண்டும் இல்லையாகக் காட்டுவது; சத்தம் அநித்தம்-சத்தம் அநித்தமானது எனச் சாத்திய வசனமும்; மூர்த்த மாதலான்-மூர்த்த மாகையாலெனச் சாதன வசனமும்; யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் - யாதொன்று யாதொன்று மூர்த்தம் அஃது அநித்தமென வியாத்தி வசனமும் கூறி; ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து - ஆகாசம் போல எனக் காட்டும் திட்டாந்தத்தின் கண்; சாத்திய தன்மமாயுள்ள அநித்தமும்-சாத்தியமாகிய சத்தத்தின் தன்மமான அநித்தத்துவமும்; சாதன தன்மமாயுள்ள மூர்த்தமும் -சாதனமாகிய ஏதுவின் தன்மமான மூர்த்தத்துவமும்; ஆகிய இரண்டும் - இருதன்மங்களும்! ஆகாசம் அசத்து என்பானுக்கு - ஆகாசமென வொன்று கிடையாது (இல்பொருள்) என்னும் வாதிக்கு; அதன்கண் இன்மையானே குறையும்-அத்திட்டாந்தத்தின்கண் இல்லையா யொழியும்; உண்டென்பானுக்கு - உள்பொருளெனக் கருதும் வாதிக்கு; ஆகாசம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்- அவ்வாகாசம் நித்தத்துவமும் அமூர்த்தத்துவமும் ஆகிய விருதன்மங்களை யுடைத்தாதலால்; அவனுக்குங் குறையும்-அவற்கும் உபய தன்ம விகலமாம் எ - று. "இல்லாப் பொருட்கண் சாத்திய சாதன மிரண்டுங் குறையக் காட்டுத" லென்றது அசன்னாபுள்ள வுபயதன்ம விகலத்துக்கு இலக்கணம் கூறியது. "இல்லாப் பொருள் என்றது பிரதிவாதியால் இல்லையெனக் கருதப்படுவதொரு பொருள். ஆகாசத்தை உண்டெனக் கொள்வோரும் இல்லையெனக் கருதுவோரும் வாதிகள் இருதிறத்தர்; இல்லையென்போர் பௌத்த வாதிகள். அசத்து இல்லாதது; சத்து உள்ளது; ந+சத்து என்பது அசத்தென நின்றது; நகரம் அன்மை, இன்மை, மறுதலை என்ற முப்பொருண்மை யுடைத்தாதலின், ஈண்டு இன்மைபற்றி அசத்தென்றதெனக் கொள்க. அசத்துப் பொருளெனச் சைவநூல்கள் கூறுவன சத்துக்கு மாறாயவற்றையென வறிக. சத்தம் அநித்தமென்ற பக்க வசனத்து அநித்தம் சாத்தியமாகிய சத்தத்தின் தன்மமாகக் கூறுதலின், "சாத்திய தன்மமாயுள்ளவநித்தமும்" என்றும், இவ்விருவகைத் தன்மங்கட்கு இடமாகிய ஆகாசம் இல்லையென்ற பௌத்த வாதிக்கு, இரண்டும் இலவாதல் தானே விளங்குதலின், "அதன்கண் இன்மையானே குறையும்" என்றும், ஆகாசத்தை யுண்டெனக் கூறும் வைசேடிகர் அது நித்தமென்றும் அமூர்த்த மென்றும் கூறுபவாதலின் "ஆகாசம் நித்தம் அமூர்த்தமாதலால் அவனுக்குங் குறையும்" என்றும் கூறினார். உம்மை: எச்சப்பொருளது. 385-392. அநன்னுவயமாவது - அநன்னுவயமென்னும் திட்டாந்தப் போலியாவது; சாதன சாத்தியம் தம்மின் - சாதன சாத்தியங் களினுடைய; கூட்ட மாத்திரம் சொல்லாது - அன்னுவயத்தைச் சொல்லிக் காட்டாமல்; இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல் - இரண்டும் பொருந்தியுள்ள திட்டாந்தத்தை மட்டிற் காட்டி யொழிதலாம்; சத்தம் அநித்தம் - சத்தம் அநித்தமென்னும் சாத்திய வசனமும்; கிருத்தமாதலின் - பண்ணப்படுதலால் என்னும் சாதன வசனமும் சொல்லி; யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் அன்னுவயம் சொல்லாது - யதொன்று பண்ணப்படுவது அஃது அநித்தமாம் என அந்நுவய வியாத்தி வசனம் சொல்லாமல்; குடத்தின்கண்ணே கிருத்த வநித்தம் காணப்பட்ட வென்றால் - குடத்தின்கண்ணே சாதன சாத்திய தன்மங்கள் காணப் படுகின்றனவென்று சொன்னால்; அன்னுவயந் தெரியா தாகும்-உடனிகழ்ச்சியாக வியாத்தி தெரியாமையாகிய திட்டாந்தப் போலியாம் எ - று. அன்னுவயத்தின் இல்லாமை அநன்னுவயம், அன்னுவயம், உடனிகழ்ச்சி; அஃது ஈண்டுக் கூட்டம் எனப்பட்டது. இன், தம்மின் என்பன சாரியை: ஆறனுருபு தொக்கது. சாத்திய சாதனவசன மிரண்டும் கூறித் திட்டாந்தம் கூறப்படுதலால், "கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்" என்றார். கூட்டமென்ற அன்னுவயமாவது இது வென்பார், "யாதொன்று யாதொன்று கிருத்தம் அது நித்தம் எனும் அந்நுவயம்" என்றார். அஃதென்னல் வேண்டும் ஆய்தம் தொக்கது. கிருத்தம்: வடசொற்சிதைவு. கிருத்தமென்னும் சாதன தன்மமும் அநித்தமென்னும் சாத்திய தன்மமும் குடமாகிய திட்டாந்தத்திலே உள்ளன என்பான், "குடத்தின் கண்ணே கிருத்த வநித்தம் காணப்பட்ட" வென்கின்றான். "கானந் தகைப்ப செலவு" என்றாற்போல காணப்பட்ட என்பது அன்பெறாது வந்தது. அன்னுவயங் காட்டாதொழியின், காட்டப்பட்ட திட்டாந்தத் தின்கண் சாதன சாத்தியங்கட்கு வியாத்தி யுண்டென் கின்றானோ, இல்லையென்கின்றானோ என எதிரி ஐயுற்று மேலே தடை பல தொடுத்தற்கிடனாய்க் குன்றக்கூறலென்னுங் குற்றப்படுதலின், இதனைக் குற்ற மென்பராயினர். 393-401. விபரீ தான்னுவயம்-விபரீ தான்னுவயமென்னும் திட்டாந்தப் போலியாவது; வியாபகத்துடைய அன்னுவயத்தாலே - வியாபகமாயுள்ள சாத்தியப் பொருளின் தன்மத்தின் அன்னுவய வியைபு கொண்டே; வியாப்பியம் விதித்தல் - வியாப்பியமாகிய சாதன தன்மமும் பொருந்தியிருப்பதாகக் கருதிக் காட்டுவதாம்; சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின்- சத்தம் அநித்தமெனச் சாதிக்கு மாற்றால் பண்ணப் படுதலால் என ஏதுக் கூறினால்; யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என - யாதொன்று பண்ணப்படுவது அஃது அநித்தமென வியாத்தி காட்டி; வியாப்பியத்தால் வியாபகத்தைக் கருதாது - சாதன தன்மத்தின் வியாப்பியத்தைக் கொண்டு சாத்திய தன்மத்தின் வியாபகத்தை அன்னுவயமாகக் கொள்ளாது; யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தமென - யாதொரு பொருள் அநித்தமோ அது பண்ணப் படுவதென; வியாபகத்தால் - சாத்திய தன்மத்தைக் கொண்டு; வியாப்பியத்தைக் கருதுதல் - சாதன தன்மத்தைக் கருதிக்கொள்ளுதல் விபரீதான்னுவயமாம்; அப்படிக் கருதின் - அவ்வாறு கருதிக் கொள்ளுமிடத்து; வியாபகம் வியாப் பியத்தை யின்றியும் நிகழ்தலின்-வியாபகமாயுள்ள பொருள் வியாப்பியமாய்த் தன்கண் அடங்குவதைக் காட்டா தொழிவது முண்மையின் ; விபரீதமாம் - விபரீதமாகிய குற்றமாம் எ - று. "வியாபகத்துடைய அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்" என்றது, விபரீதான் னுவயத்தின் இலக்கணம் கூறிற்று. அன்னுவயம், கூட்டம், உடனிகழ்ச்சி, வியாத்தி யென்பன ஒரு பொருளன. நெருப்பும் புகையுமாகிய இரண்டனுள் நெருப்பில் புகையடங்கித் தோன்றுவதுபற்றி நெருப்பு வியாபகமும் புகை வியாப்பியமுமாம். ஒன்றினொன் றடங்கியுடனிகழும் பொருள்களுள் அடங்கிக் குறைவற உடனிகழ்வது வியாப்பியமென்றும் அடங்காது மற்றதை அகத்திட்டு மிக்கிருப்பது வியாபகமென்றும் வழங்கும். வியாப்பிய மாகிய புகை, வியாபகமான நெருப்புண்மையைக் காட்டல் கூடுமே யன்றி, வியாபகமான நெருப்புண்மையால் புகையாகிய வியாப்பிய முண்மையைக் காட்டல் கூடாது. பழுக்கக் காய்ச்சிய இரும்பினிடத்தே நெருப்புளதாயினும் அது புகையின்றி யிருக்கக் காண்கின்றே மாதலால், வியாபகத்தின் அன்னுவயத்தால் வியாப்பியப் பொருளைத் துணிவதென்பது குற்றமாதலின், "வியாபகத் துடைய அன்னுவயத்தாலே வியாப்பியத்தை விதித்தல்" விபரீ தான்னுவயமாகிய குற்றமா மென்றார். சத்தம் அநித்தம் கிருத்தத் தால் எனில் சாத்திய தன்மமாகிய அநித்தத்துவம் வியாபகமும் சாதன தன்மமாகிய கிருத்தத்துவம் வியாப்பியமுமாம்; புகையுண்மை யாகிய வியாப்பியத்தால் நெருப்புண்மையாகிய வியாபகம் காணப்படுவது போல கிருத்தத்துவமாகிய வியாப்பியத்தால் அநித்தத்துவமாகிய வியாபகம் பெறப்படுவது கண்டு, "யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தமென வியாப்பியத்தால் வியாபகத்தைக் கருதாது" என்றார். வியாபகமாகிய நெருப்புண்மை கொண்டு வியாப்பியமாகிய புகையுண்மை துணிதல் எவ்வாறு குற்றமோ அவ்வாறே வியாபகமாகிய அநித்தத்துவமான சாத்திய தன்மத்தைக் கொண்டு, வியாப்பியமாகிய கிருத்தத்துவமான சாதன தன்மத்தைத் துணிவது குற்றமென்பார், "யாதொன்றுயாதொன்று அநித்தம் அது கிருத்தமென வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்... விபரீதமாம்" என்றார். புகையாகிய வியாப்பியமின்றியும் நெருப் பாகிய வியாபகம் இருத்தலுண்மையின், அதனையே யேதுவாக நிறுத்தி, "வியாபகம் வியாப்பியத்தை யின்றியும் நிகழ்தலின்" என்று கூறினார். வியாப்பியமான சாதனதன்மம் தன்வியாத் தியால் வியாபகமான சாத்திய தன்மத்தைக் காட்டுதல் முறையே யன்றி, சாத்திய தன்மத்தைக் கொண்டு சாதன தன்மத்தைத் துணிவது மாறுகொளலாகிய விபரீத மாதலால், இது விபரீதான் னுவயமாயிற்று. வியாபகம் வியாப்பிய மென்பன அவ்வவற்றிற் குரிய பொருண்மேனின்றன. அநன்னுவயம் விபரீதான்னுவய மிரண்டினையும் பிரசத்த பாதர் அனனுகத நிதரிசனாபாசமென்றும் விபரீ தானுகத நிதரிசனாபாசமென்றும் வழங்குவர். நியாயப் பிரவேசமுடையார் இவ்விரண்டிற்கும்இங்கே கூறிய பெயர்களையே மேற் கொண்டாரேனும் அநன்னுவயத்திற் கிலக்கணங் கூறியதுபோல விபரீ தான்னுவயத்திற் கது கூறாராயினர். 402-412. வைதன்மிய திட்டாந்தத்துச் சாத்தியா வியா விருத்தியாவது - வைதன்மிய திட்டாந்தப் போலிவகையில் கூறப்படும் சாத்தியா வியாவிருத்தி யென்னும் திட்டாந்தப் போலியாவது ; சாதன தன்மம் மீண்டு-வைதன்மிய திட்டாந்தத்துக் கேற்ப மீளுதற்குரிய சாதன சாத்திய மிரண்டனுள் சாதன தன்மம் மீண்டு நிற்க; சாத்திய தன்மம் மீளாதொழில் - சாத்தியப் பொருளின் தன்மம் மாத்திரம் மீளாது வைதன்மிய திட்டாந்தத்தின்கண் பொருந்தி யிருப்பதாம் ; சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்- சத்தம் நித்தத்துவமுடையது அமூர்த்தத்துவமுடையதாகையால் என்று சொல்லி; யாதொன்று யாதொன்று நித்தமு மன்று அது அமூர்த்தமும் அன்று பரமாணுப்போல் எனில் - யாதொரு பொருள் நித்தமன்று அஃது அமூர்த்தமன்று என அதற்கு விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி கூறிப் பரமாணுவைப் போல என வைதன்மிய திட்டாந்தம் காட்டினால், அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட பரமாணு - அவ்வாறு வாதியாவான் வைதன்மிய திட்டாந்த மாகக் காட்டிய பரமாணுவானது; நித்த மாய மூர்த்த மாதலின்-நித்தமாயும் மூர்த்தமாயும் இருத்தலால்; சாதன அமூர்த்தம் மீண்டு - சாதனமாகிய அமூர்த்தத்துவத்துக்கு மீட்சியாகிய மூர்த்தத்துவம் பொருந்தி நிற்ப; சாத்திய நித்தம் மீளாதொழிதல்- சாத்திய தன்மமாகிய நித்தத்தின் மீட்சியான அநித்தத்துவம் இப்பரமாணுவின்கண் இல்லாதொழிதலால் இதுகுற்றமாயிற்று எ-று. மீளுதல், எதிர்மறை முகத்தால் வலியுறுதல்; அஃதாவது சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்றவழி, யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தமெனவரும் வியாத்திக்கு மறுதலையாய் யாதொன்று நித்தமல்லாதது அஃது அமூர்த்த மன்றென வியாத்தி வசனம் கூறி, குடம்போல எனத் திட்டாந்தம் காட்டி, அதன்பால் நித்தமன்மையும் அமூர்த்தமன்மையும் வெளிப்படையாதலால், அவ்வாற்றால் சாத்திய தன்மமான நித்தத்துவத்தையும் சாதன தன்மமான அமூர்த்தத்துவத்தையும் வலியுறுத்துவதாம். உடன்பாட்டாலும் எதிர் மறையாலும் பொருளுண்மை வற்புறுத்துவது நன்றாதலின், இரண்டிற்கும் முறையேயுரிய திட்டாந்தங்கள் சாதன்மிய திட்டாந்தமெனவும் வைதன்மிய திட்டாந்த மெனவும் வழங்கலாயின. சாதன்மியம்-சாத்திய சாதன தன்மங்களை யுடையது; வைதன்மியம் - மறுதலைச் சாத்திய சாதன தன்மங்களையுடையது. இவற்றை அன்னுவய திட்டாந்த மென்றும் வெதிரேக திட்டாந்த மென்றும் பிறரெல்லாம் கூறுப. "சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்பது சாதனத்தோடு கூடிய சாத்திய வசனம். இதன் விபக்கத் தொடர்ச்சி மீட்சிமொழிக் குரியவை சாத்திய சாதனங்களின் மறுதலைத் தன்மிகளாதலின், அது ‘யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்த மன்று" என்பதனால் உரைக்கப்பட்டது. இதனை வற்புறுத் தற்குக் காட்டும் வைதன்மிய திட்டாந்தம் "பரமாணுப்போல்" என்பது இதன்பால் சாத்தியமாகிய சத்தத்தின் தன்மத்துக்கு மீட்சியாய நித்தமன்மையும், சாதனமாகிய அமூர்த்தத்திற்கு மீட்சியாய அமூர்த்தமன்மையும் பொருந்துமாயின், இது குற்ற மில்லாத வைதன்மிய திட்டாந்தமாம். பரமாணுவின்கண் சாதன தன்ம மீட்சியாகிய மூர்த்தத்துவம் மீண்டு நிலை பெறுதலின், "சாதனவமூர்த்தம் மீண்டு" என்றும், சாத்தியமான சத்த தன்மமான நித்தத்தின் மீட்சியாகிய அநித்தத்துவம் காணப் படாமையால், அச் சாத்திய தன்மம் மீட்சிபெறாமையை, "சாத்திய நித்தம் மீளா தொழிதல்" என்றும் கூறினார். எனவே, பரமாணுவாகிய வைதன்மிய திட்டாந்தத்தில் சாத்திய தன்ம மீட்சி பொருந்தாது சாதன தன்ம மீட்சியொன்றே பொருந்துதல் பற்றிக் குற்றமாதலின், வைதன்மிய திட்டாந்தப் போலி யெனப் படுவதாயிற்று. 413-423. சாதனா வியா விருத்தியாவது-வைதன்மிய திட்டாந்தத்துச் சாதனா வியாவிருத்தி யென்னும் திட்டாந்தப் போலியாவது; சாத்திய தன்மம் மீண்டு - மீளுதற்குரியவற்றுள் சாத்தியப் பொருளின் தன்மம் மீள; சாதன தன்மம் மீளாதொழிதல்-சாதனமாகிய ஏதுவின் தன்மம் மீளாது குற்றப்படுதல்; சத்தம் நித்தம்-சத்தம் நித்தத்துவமுடையதெனச் சாத்திய வசனமும்; அமூர்த்தத்து என்றால் - அமூர்த்தத்துவமுடைய தாகையா லெனச் சாதனவசன மும்கூறி; யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமும் அன்று - யாதொன்று நித்தமல்லாதது அஃது அமூர்த்தமு மல்லாதது என மீட்சிக் குரிய வியாத்தி வசனம் காட்டி; கன்மம் போல் என்றால் - கன்மம் போல எனத் திட்டாந்தம் கூறினால்; வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட கன்மம் - எதிர்மறை நெறிக் குரிய திட்டாந்தமாகக் காட்டிய கன்மமானது; அமூர்த்தமாய் நின்று-அமூர்த்தத்துவ முடையதாய் நின்று; அநித்தமாதலின் - அநித்தத்துவம் முடையதாதலால்; சாத்தியமான நித்தியம் மீண்டு - சாத்திய தன்மமான நித்தத்துக்கு மீட்சியாகிய அநித்தத்துவம் எய்திற்றாக; சாதன வமூர்த்தம் மீளாது-சாதன தன்மமான அமூர்த்தத்துக்கு மீட்சியாகிய மூர்த்தத்துவம் எய்தாது அமூர்த்தத்துவமே எய்துதலால் குற்றமாயிற்று எ - று. சத்தம் நித்தம் அமூர்த்தத்துவத்தை யுடைமையால் என்று கூறிய வாதி, இதனை விபக்கத்து வாயிலாக வைதன்மிய திட்டாந்தம் காட்டி வலியுறுத்துவானாய், விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியாக, "யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமுமன்" றென்றும், அதற்கு வைதன்மிய திட்டாந்தமாகக் "கன்மம் போல், என்றும் கூறுவானாயின் என்றார். நித்தமன்மை யாகிய சாத்திய தன்ம மீட்சியும், அமூர்த்த மன்மையாகிய சாதன தன்ம மீட்சியும், விபக்கத் தொடர்ச்சி மொழிக்கண் எய்தியும், கன்மமாகிய திட்டாந்தத்தின்கண், அமூர்த்தத்துவமாகிய சாதன தன்மம் காணப்படுகிறதேயன்றி, அதன் மீட்சி காணப் படாமையின் "சாதனமான வமூர்த்தம் மீளா"தென்றும், கன்ம திட்டாந்தத்தில் நித்தமன்மையாகிய சாத்திய தன்ம மீட்சி காணப்படுதலால், "சாத்தியமான நித்திய மீண்டு" என்றும் கூறினார். 424-429. உபயா வியா விருத்தி - உபயாவியா விருத்தியாவது; காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று - மேற்கோளை எதிர்மறை நெறியாற் சாதிப்பான் தொடங்கி வாதி காட்டும் வைதன்மிய திட்டாந்தத்திலிருந்து; சாதன சாத்தியங்கள் மீளாமை - சாதன சாத்தியங்களின் தன்ம மிரண்டின் மறுதலைத் தன்மங்கள் பொருந்தாதொழிவது; அன்றியும்-மேலும்; உண்மையின் உபயா வியா விருத்தி - உள்பொருளாகிய திட்டாந்தத்தின்கண் இரு தன்மங்களின் மீட்சி பொருந் தாமையும்; இன்மையின் உபயாவியா விருத்தி என - இல் பொருளாகிய திட்டாந்தத்தின்கண் இரு தன்மங்களின் மீட்சி பொருந்தாமையும் என; இருவகை - இருவகைப் படும் எ - று. முன்னர், உபய தன்ம விகலமென்ற சாதன்மிய திட்டாந்தப் போலியை இருவகைப்படுத்துக் கூறினாராகலின், அதன் மீட்சியாகிய வைதன்மியப் பகுதிக்கண் வரும் உபயாவியா விருத்தியையும் அவ்வாறே இரு வகைப்படுத்தி, "உண்மையின் உபயாவியா விருத்தி இன்மையின் உபவாவியா விருத்தியென விருவகை" யென்றார். இவர் உபய தன்ம விகலமாகிய சாதன்மிய திட்டாந்தப் போலியை யிருவகைப்படுத்தோதியதை மேற்கொண்டு தாமும் இருவகைப்படுத்தாதுரைத்த நியாயப் பிரவேசமுடையார், இவ்வுபயாவியா விருத்தியை அவ்வாறு இருவகைப்படுத்தா தொழிகின்றார்; "காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று சாதன சாத்தியங்கள் மீளாமை" யென்பது உபயாவியா விருத்தியின் இலக்கணம். மீளுதல், மறுதலைத் தன்மம் பொருந்த நிற்றல். 429 - 440. உண்மையின் உபயாவியா விருத்தி-உண்மையின் உபயா வியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; உள்ள பொருட்கண் சாத்திய சாதன மீளாதபடி - உள்ளதாகிய பொருளொன்றின்கண் சாத்திய சாதன தன்மங்களின் மீட்சித் தன்மங்கள் பொருந்தாதபடி; வைதன்மிய திட்டாந்தம் காட்டல் - வைதன்மிய நெறிக்குரிய திட்டாந்தம் உரைத்தலாம்; சத்தம் நித்தம் அமூர்த்தமாதலின் என்றாற்கு-சத்தம் நித்தமாம் அமூர்த்தமாதலால் என்றோதிய வாதிக்கு; யாதொன்று யாதொன்று நித்தமன்று அமூர்த்தமு மன்று - யாதொரு பொருள் நித்தமல்லாதது அஃது அமூர்த்தமல்லாதது என்று விபக்கத் தொடர்ச்சி மீட்சி கூறி; ஆகாசம்போல் என்றால் - ஆகாசம்போல என வைதன்மிய திட்டாந்தங் காட்டினால் ; வைதன்மிய திட்டாந்த மாகக் காட்டப்பட்ட ஆகாசம்-வைதன்மிய நெறியால் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட ஆகாசத்தை ; பொருள் என்பாற்கு - பொருளென்று மேற்கொள்ளும் அவ்வாதிக்கு ; ஆகாசம் நித்தமும் அமுர்த்தமும் ஆதலால் -அவ்வாகாசம் நித்தத்துவமும் அமூர்த்தத்துவமுமாகிய தன்மங்களை யுடையதாகையால்; சாத்திய நித்தமும் - சாத்திய தன்மமான நித்தத்துவமும்; சாதனமாவுள்ள அமூர்த்தமும் -சாதன தன்மமான அமூர்த்தத்துவமுமாகிய இரண்டும், மீண்டில - இரண்டிற்கும் மீட்சியாகிய நித்தமன்மையும் அமூர்த் தமன்மையும் பொருந்தா தொழிதலின் குற்றமாயிற்று எ - று. சத்தம் நித்தம், அமூர்த்தமாகலின் என்று கூறும் வாதி பக்கத்துக்கு விபக்க வியாத்தி வசனம் "யாதொன்று யாதொன்று நித்தமன்று அஃது அமூர்த்தமன்று" என்பதாகலின், அதனை யெடுத்தோதினார். இதற்கு விபக்கவாதி காட்டும் திட்டாந்தம் இதவென்பார், "ஆகாசம்போல்" என்றார். எனவே, ஆகாசம் நித்த மன்மையும் அமூர்த்த மன்மையுமாகிய இரண்டு தன்மங்களையு முடைய தென்பது பெறப்படும். சத்தம் நித்தமென்ற வாதி, ஆகாசம் உள்பொருளென்று கொள்ளும் கொள்கை யுடையனாயின், அதன் பால் நித்தத்துவமும் அமூர்த்தத்துவமும் என்ற தன்மங்களுண் டென்ப தெய்துதலின், "ஆகாசம் பொருளென்பாற் காகாசம் நித்தமும் அமூர்த்தமுமாதலால்" என்றும், இவ்விரண்டும் சாத்திய சாதனங்களின் தன்ம மன்மையின், "சாத்திய நித்தமும் சாதன மாவுள்ள வமூர்த்தமும் இரண்டும் மீண்டில" என்றும் கூறினார். ஈண்டு, ஆகாசம் உள்ளதொரு பொருளாகக்கொண்டு கூறுதலின், இஃது உண்மையின் உபயாவியா விருத்தியாயிற்று. 440-449. இன்மையின் உபயாவியா விருத்தியாவது - இன்மையின் உபயாவியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; சத்தம் அநித்தம் மூர்த்தமாதலால்-சத்தம் அநித்தமாம் மூர்த்த மாதலினால்; என்றவிடத்து - என்று பக்க வசனம் கூறிய வழி, யாதொன்று யாதொன்று அநித்தம் அன்று மூர்த்தமு மன்று - யாதொரு பொருள் அநித்தமல்லது அது மூர்த்தமல்லாதது என விபக்கத் தொடர்ச்சி மீட்சி கூறி; ஆகாசம்போல் என வைதன்மிய திட்டாந்தம் காட்டில் - ஆகாசம் போலவென்று வைதன்மிய நெறி பற்றிய திட்டாந்தம் காட்டப்படுமானால்; ஆகாசம் பொருளல்ல வென்பானுக்கு-ஆகாசத்தைப் பொருளாகக் கொள்ளாத வாதிக்கு; ஆகாசம் உண்மையின்மையினால் - ஆகாசம் உள் பொருளன்றாதலால்; சாத்திய வநித்தமும்-சாத்திய தன்மமான அநித்தத்துவமும்; சாதன மூர்த்தமும்-சாதன தன்மமான மூர்த்தத்துவமும்; மீட்சியும் மீளாமையும் இலையாகும் - மீண்டு நிற்றலும் மீளாதே நின்றியைதலும் இல்லையாய்க் குற்றமாம் எ - று. காட்டப்படும் திட்டாந்தம் பொருளாகக் கொள்ளப் படா விடத்து அதன்பால் உளவென்றும் இலவென்றும் கூறற்குரிய தன்மங்களே யில்லையாய் ஒழிதலின், அத்தகைய பொருளைத் திட்டாந்தமாகக் காட்டுதல் குற்றமாம்; ஆதலால் இஃது இன்மையின் உபயாவியா விருத்தியென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலி யெனப் படுவதாயிற்று. உம்மை: இசைநிறை. அன்றென்பதை அநித்தத்துக்கும் கூட்டுக. இனி, நியாயப் பிரவேசமுடையாரைப் போலவே பிரசத்த பாதரும் இவ் வுபயாவியா விருத்தியை ஒன்றாகவே கொண்டு ஆகாசத்தையே திட்டாந்தமாகக் 1காட்டுகின்றார். 450-459. அவ் வெதிரேகமாவது-அவ் வெதிரேகமென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; சாத்தியமில்லாவிடத்து-சாத்திய தன்மம் இல்லாதவிடத்து; சாதனம் இன்மை சொல்லாதே விடுதலாகும் -சாதன தன்மம் இல்லையென்று எடுத்துச் சொல்லா தொழிவதாம்; சத்தம் நித்தம் பண்ணப் படாமையால் என்றால் - சத்தம் நித்தமாகும் பண்ணப் படுவதன்றாதலால் என்ற வழி; யாதொன்று யாதொன்று நித்தமன்று-யாதொரு பொருள் நித்தமன்றோ; பண்ணப் படுவதல்லாததும் அன்று எனும்-பண்ணப்படாததன்று என்னும்; இவ் வெதிரேகம் தெரியச் சொல்லாது - இவ் வெதிரேகக் கூற்றை எதிரிக்குத் தோன்ற எடுத்துச் சொல்லாமல்; குடத்தின் கண்ணே பண்ணப்படுதலும் அநித்தமும் கண்டே மாதலால் - குடமாகிய திட்டாந்தத்தின்கண் செயப்படுந் தன்மையும் அநித்தத்துவமும் கண்டுள்ளேமாதலால்; என்னின்- என்று சொன்னால் ; வெதிரேகம் தெரியாது - குடத்தின்கண் சாத்திய தன்மமான நித்தியத்துவம் இல்லாமையால், பண்ணப் படாமையுமில்லை என்ற வெதிரேக வியாத்தி விளங்கத் தெரிவிக்கப்படாமையின் அவ் வெதிரேக மென்னும் திட்டாந்தப் போலியாயிற்று எ - று. சாத்திய தன்மமில்லாவிடத்துச் சாதன தன்மம் இல்லாமை சொல்வது வெதிரேக வியாத்தி வசனமாகும். வெதிரேகம்-எதிர்மறை. இதனையே முன்னர் விபக்கத் தொடர்ச்சி மீட்சி யென்றார். வைதன்மிய திட்டாந்தங் காட்டுமிடத்து, இதனை எடுத்து விளங்கவுரைத்த பின்பே காட்ட வேண்டுமாதலின், உரையாது காட்டுவது வெதிரேக விலக்கணத்துக்குக் குற்ற மாதலின், "அவ் வெதிரேகம்" என்றும், அஃதாவது, "சாத்திய மில்லாவிடத்துச் சாதனமின்மை சொல்லாது விடுதலாகு" மென்றும் கூறினார். இதனை விளக்குவார், "சத்தம் நித்தம் பண்ணப் படாமையால்" என முதற்கண் பக்க வசனமும் ஏதுவும் கூறி, இதற்கு, கூறற்பாலதாகிய விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழியாகும் வெதிரேக வியாத்திவசனம் இது வென்பார், "யாதொன்று நித்தமன்று பண்ணப் படுவதல்லாததுவுமன்று எனும் இவ் வெதிரேகம்" என்றும், இதனை முன்பே கூறாது, வாளா குடத்தைத் திட்டாந்தமாகக் காட்டல் அவ் வெதிரேக மென்னும் குற்றமாமென்றற்கு, "குடத்தின் கண்ணே பண்ணப் படுதலும் அநித்தமுங் கண்டேமாதலால் என்னின் வெதிரேகம் தெரியாது" என்றும் கூறினார். இனி, நியாயப் பிரவேசமுடையார் சாத்திய சாதனதன்மங்களின் இல்லாமையை யுணர்த்தும் வெதிரேக வியாத்திவசனம் காட்டாமலே விபத்துக்குரிய திட்டாந்தத்தைக் காட்டுவது அவ் வெதிரேகத் திட்டாந்தாபாசம் என்று இலக்கணமும் குடத்தின் கண் மூர்த்தமன்மையும் அநித்தத்தன்மையும் காணப்பட்டனவெனத் திட்டாந்தமும் காட்டுவர். பிரசத்தபாதர் இதனை அவியாவிருத்த நிதரிசனாபாசம் என்று பெயர் கூறி, கடம்போல என இவ்வாறே உதாரணங் காட்டுகின்றார். 460-468. விபரீத வெதிரேகமாவது - விபரீத வெதிரேக மென்னும் திட்டாந்தப் போலியாவது; பிரிவைத் தலை தடுமாறாச் சொல்லுதல்- விபக்கத்து வெதிரேக வியாத்தி வசனத்தைத் தலைதடுமாறச் சொல்லுவதாம் ; சத்தம் நித்தம் மூர்த்த மாதலின் என்றால் சத்தம் நித்தமாம் மூர்த்தமாகையால் என்று சாத்திய சாதன வசனமான பக்கத்தைக் கூறினால்; என்று நின்றவிடத்து - என்று இவ்வாறுநின்றதற்கு விபக்க வெதிரேக வியாத்தி கூறுமிடத்து; யாதோரிடத்து நித்தமு மில்லை அவ்விடத்து மூர்த்தமுமில்லை யெனாது - யாதொரு பொருளிடத்து நித்தத்துவ மில்லையோ அப் பொருளிடத்து மூர்த்தத்துவமும் இல்லையாம் என்று சொல்லாமல் ; யாதோரிடத்து மூர்த்தமும் இல்லை அவ்விடத்து நித்தமும் இல்லை யென்றால் - யாதோர் பொருளிடத்து மூர்த்தத்துவ மில்லையோ அப் பொருளிடத்தே நித்தத்துவமுமில்லை யெனத் தடுமாறிச் சொன்னால்; வெதிரேகம் மாறு கொள்ளும் எனக் கொள்க-வெதிரேக திட்டாந்தம் மாறு பட்டுக் குற்றமாமெனக் கொள்வாயாக எ - று. பக்கத்தின் மறுதலையான விபக்கத் தொடர்ச்சியை மீட்சி யென வழங்குதலின், அதற்கேற்ப, அதன் வியாத்தி வசனத்தைப் பிரிவென்றார். பக்கத்தைப் புலப்படக் கூறினாலன்றி விபக்கம் பெறப்படாமை பற்றி, ''சத்தம் நித்தம் மூர்த்தமாதலினென்றால்'' என்றார். இனி, வழுவின்றிக் கூறற்பாலதாகிய விபக்க வியாத்தி வெதிரேக வசனம் இஃதென்பார், "யாதோரிடத்து நித்தமும் இல்லை அவ்விடத்து மூர்த்தமும் இல்லை' யென்றும், இவ்வாறு கூறாது தலைதடுமாறிக் கூறும் தவறாய முறையைக்காட்டற்கு, ''யாதோரிடத்து மூர்த்தமுமில்லை அவ்விடத்து நித்தமு மில்லை''யென்றும்,இக் கூற்று விபரீத வெதிரேகமாம் என்பார், ''வெதிரேகம் மாறு கொள்ளுமெனக் கொள்க" என்றும் கூறினார். வெதிரேகக் கூற்றை மாறுகொளக் கூறுதலின் விபரீ தமாமென வறிக. என்றால், மாறுகொள்ளும் என இயைத்து, மூர்த்த மாதலின் என்றால் அதற்குரிய வியாத்தி வசனத்தை...என்று தடுமாறிச்சொன்னால் மாறுகொள்ளும் என்றவாறா மென்க. இனி, நியாயப் பிரவேசமுடையார், இவ் வாசிரியர் கூறியது போல இலக்கணங் கூறாது உதாரணமட்டிற் கூறுவர். இதனைப் பிரசத்தபாதர் விபரீத வியாவிருத்த மென்றனர். இதுகாறுங் கூறியவாற்றால், மணிமேகலை யாசிரியர் காலத்தே தமிழகத்து நிலவிய பௌத்தரிடையே பக்கப்போலி ஒன்பதும், ஏதுப்போலி பதினான்கும் திட்டாந்தப்போலி பத்துமாக முப்பத்துமூன்று போலிகள் நிலவின வென்பதும், இவற்றையே நியாயப் பிரவேச முடையார் மேற்கொண்டு வடநாட்டுப் புத்தரிடையே பரப்ப,அவர்கள் ஏனையோர் கூறியவற்றோடு இயைத்துப் பிற்காலத்தே தமக் கேற்றவாறு பெருக்கிக் கொண்டன ரென்பதும்உணரற் பாலனவாம். காட்சி, கருத்து என்ற இருவகை அளவைகளையும்கூறற்கு முன், அளவையின் இன்றியமையாமை, அளத்தற்குரிய கருவிகள், அவை பொருள்களை யளக்குந்திறம், அறிவு, அறியாமை, ஐயம், வழு முதலியனவும், அளவைக்குப் பின் கூறப்படும் வாதவியல், தோல்வி வகை முதலியனவும் இந் நூற்கண் கூறப்படவில்லை. நியாயப் பிரவேசமுடையார். தம் நூற்கண் கூறற்குரியன, முறையே, சாதனாபாசம், சுவார்த்தப் பிரமாணம், பிரத்தியக்கம், அனு மானம்,பிரத்தியக்காபாசம், அனுமானாபாசம், தூஷணம், தூஷணாபாசம் என எட்டு வகையாகக் கூறுதலால், இவ் வெட்டும், மணிமேகலை யாசிரியர் காலத்தே நம் தமிழகத்தே நிலவின வென்பது துணிபாம். ஆயினும், இவர் ஈண்டு அளவை நூல் கூறவந்தா ரல்லராகலின், உண்மை யுணர்வுக்கு இன்றியமையா வெனக் கொண்ட அளவை யிரண்டையுமே கூறலுற்று, அவற்றுட் காட்சியைச்சிறிதும் கருத்தளவையைப் பெரிதுமாகக் கூறினார். மேலும், அளவை நூல் கூறும் கருத்துக்களுட் சிலவற்றைச் சமயக்கணக்கர்தம் திறங்கேட்ட காதைக்கண் அளவை வாதி கூற்றில் வைத்துக் கூறியிருப்பதும் குறிக்கத் தக்கதாம். அவன் கூறிய காட்சியுங் கருத்தும் தமக்கு உடன்பாடாகலின், அவற்றுள் தம் சமயநூற் கருத்துக்கேற்ப விளக்கத்தகுவனவற்றை இக் காதைக்கண் தொடக்கத்தே விளக்கி விடுகின்றார். காட்சிபற்றி அளவைவாதி கூறியவற்றைத் தழீஇக் கொள்பவர், அவற்றைச் "சுட்டுணர்வைப் பிரத்தியக்கமெனச் சொலிவிட்டனர்நாமசாதிக் குணக் கிரியைகள், மற்றவை யனுமானத்தும் அடையும் என"' என்பதனால் செம்மை செய்துகொள்வதும், கருத்துப்பற்றி அவன் கூறுவனவற்றைத் தழீஇக் கொள்பவர், கருத்தளவை பற்றியும் அதன் பக்க முதலிய உறுப்புக்களைப்பற்றியுங் கூறுவனவற்றால் தூய்மை செய்துகொள்வதும் ஈண்டு நினைவுகூரத் தகுவனவாம். எதிரி கூறும் கூற்றிலுள்ள குற்றங்களைக் காட்டுதல் தூடண மென்றும், அவற்றைக் காட்டுமிடத் துண்டாகுங் குற்றங்களைத் தூடணாபாசமென்றும் கூறுப. அத் தூடணாபாசந்தானும் ஆறுவகைப்படும் என்றும், அவை "குறையில்லாத சாதனங்களிற் குறைகூறுதல், குற்றமற்ற பக்கவுறுப்பிற் பக்கக் குற்றங்கூறுதல், சித்தித்திருக்கும் ஏதுவை அசித்தவேது வென்றல், ஏகாந்த வேதுவை அநேகாந்த வேதுவென்றல், அவிருத்தவேதுவை விருத்தவேது வென்றல், குற்றமற்ற திட்டாந்தத்தைக் குற்றமுடைய தென்றல்" என்றும் கூறுப. ஈண்டு, கூற்று நிகழ்த்தும் அறவணவடிகள் மணிமேகலைக்கு உண்மையுணர்ந்து கோடற்கேற்ற கருவியாக இவற்றைக் கூறுகின்றாரேயன்றி, பிறரோடு சொற்போர் நிகழ்த்தற் பொருட்டன்மையின், இவற்றைக் கூறாராயினார். 469-472. இப்படி நாட்டிய தீய சாதனத்தால் - இவ்வாறு காட்டப் பட்ட குற்றமுடைய சாதனங்களால்; காட்டும் அனுமான ஆபாசத்தின்-காட்டப்படும் போலிக் கருத்துக்களின்; மெய்யும் பொய்யும்-மெய்ம்மைத் தன்மையும் பொய்ம்மைத் தன்மையும்; இத்திற விதியால் (விலக்கால்)--இம் மெய்யும் பொய்யுமாகிய கூறுகட்கேற்பக் கொள்ளுவதும் தள்ளுவதும் செய்தற்கமைந்த விதிவிலக்குகளைக் கொண்டு: ஐயமின்றி-ஐயந் திரிபின்றி; ஆய்ந்து அறிந்துகொள் - ஆராய்ந்து அறிந்து கொள்க; என்-என்று கூறினான் எ-று. அளவை நெறிபற்றி இதுகாறுங் கூறியவற்றைத் தொகுத்துச் சுட்டுதலின், "இப்படி நாட்டிய" என்றும், தீய சாதனத்தாற் காட்டுவதே அனுமானாபாசம் என்பதென்றற்கு, "தீய சாதனத்தாற் காட்டும் அனுமானாபாசத்தின்" என்றும் கூறினான். நியாயப் பிரவேசமுடையாரும் "ஹேத்து வாபாஸ பூர்வகம்ஞானம் அனுமானாபாஸம்" என்பது காண்க. பக்கம், ஏது, திட்டாந்தமென்ற மூன்றனுள், ஏது சிறந்தமையின், "தீய சாதனத்தால் காட்டும் அனுமானாபாசம்" என்றான்; ஆயினும், தீய பக்கமும் தீய எடுத்துக் காட்டும் அனுபானாபாசமாம் என்பது கருத்தாகக் கொள்க. 1"மெய்யும் பொய்யும்" கூறியதனால், அவற்றிற்கேற்ப விதியும் விலக்கும் கொள்ளப்பட்டன. இவ் விதி விலக்குகள் மேல்வரும் பவத்திற மறுகெனப் பாவைநோற்ற காதைக் கண் கூறப்படுதலின், அவற்றை யீண்டுத் தோற்றுவாய் செய்தார். இளங்கொடி தன்னை, வாழ்த்தி, உரைப்போன், விழாக்கோள் மறப்ப, தன் விழாத் தவிர்தலின் மணிமேகலா தெய்வம் என்பவட் கொப்ப, அவனிடு சாபத்து,நகர் கடல் கொள்ள, இப்பதிப் படர்ந்தனம் என்றலும்,இறைஞ்சி, வைத்திலேன், அருளுக என்ன, நங்காய் நொடிகுவென் கேள்நீ; அளவை இரண்டே, ஏனை எல்லாம் அனுமானமாம்; பக்கம், ஏது, திட்டாந்தம். உபநயம், நிகமனம் என்ன ஐந்துள; உபநயம் நிகமனம் இரண்டும் திட்டாந்தத்தில் அடங்கும்; பக்கம் ஏது திட்டாந்தங்கள் நல்லவும் தீயவும் உள; நன்பக்கம் என நாட்டுக; நல்லேது ஊன்றி நிற்றலும், உண்டாதலும் இன்றியே விடுதலும், ஏதமில் திட்டாந்தம் இருவகைய,தீய பக்கமும் தீய வேதுவும் தீயவெடுத்துக் காட்டு மாவன பக்கப் போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியுமாம்; பக்கப் போலி பிரத்தியக்க விருத்தம் முதல் அப்பிரசித்த சம்பந்தம் என ஒன்பது வகைப்படும்; ஏதுப்போலி அசித்தம் அநைகாந்திகம், விருத்தம் என மூன்றாகும். நான்கு அசித்தம்; அநைகாந்திகமும் ஆறு; விருத்தம் விளம்பில் நான்கு வகையதாகும்; தீயவெடுத்துக் காட்டாவன திட்டாந்த வாபாசங்கள்;சாதன்மிய திட்டாந்த வாபாசம் ஓதில்,என்ன ஐந்து; வைதன்மிய திட்டாந்தாபாசமும் என்ன ஐவகைய; இப்படி நாட்டிய தீய சாதனத்தால் அனுமா னாபாசத்தின் மெய்யும் பொய்யும் இத்திற விதியால், ஆய்ந்து அறிந்து கொள் என்றான் என, வினைமுடிபு கொள்க. தவத்திறம்பூண்டு தருமங்கேட்ட காதை முற்றிற்று. 30. பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை தருமம் கேட்கப்புக்க மணிமேகலைக்கு மெய்ப் பொருளைத் தேர்ந்துணர்தற்கு வேண்டும் அளவைகளையும், அவற்றுள் தீயவற்றை நீக்கித் தூயவற்றால் பொருளின் மெய்ம்மைத் தன்மையை ஐயமின்றி அறியும் திறத்தையும் அறிவுறுத்த அறவண அடிகள், மேலும் கூறற்குரிய அறங்களைக் கூறச் சமைந்தார். மணிமேகலையும் புத்த தன்ம சங்கமென்னும் மும்மணிகளையும் மும்மையின் வணங்கிப் புத்த தருமத்தைச் சரண்புகுந்தாள். அமரர் வேண்டு கோட்கிரங்கித் துடித லோகத்தினின்றும் தோன்றி, போதி மூலத்திருந்த வாமன் உரைத்த திருவறத்தை அவற்குப் பிற்போந்த எண்ணிலரான புத்தர்கள் வழிவழியாக வுரைத்துப் போந்தனர்; அதனை உனக்குரைப்பேன் என அறவணவடிகள் உரைக்கத் தொடங்கி, பன்னிரு நிதானங்களும், அவற்றின் மண்டிலவகையும், கண்ட வகையும், சந்தி வகையும், தோற்ற வகையும், கால வகையும், பிறவும் தொகுத்தும் விரித்தும் கூறினார். பின்பு, நால்வகை வாய்மையும், ஐவகைக் கந்தமும், அறுவகை வழக்கும், நால்வகை நயங்களும், வினாவிடைகளும் விரித்து விளங்கக் கூறினார். முடிவில் கட்டும் வீடும் ஒவ்வொன்றன் காரணமும் அவரவர் முயற்சியால் விளையுமேயன்றிப் பிறராற் றரப்படுமாறில்லை யென்பதை வற்புறுத்தி, இறுதியாக, மேலே கூறிய பொருள் எல்லாவற்றிற்கும் காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்றுமே காரணமென்றும், காமத்தை அநித்தம் துக்கம் அநான்மா அசுசியெனத் தனித்துப் பார்த்துப் பற்றறுக்கும் அசுப பாவனையால் கெடுத்தல் வேண்டுமென்றும், வெகுளியை மைத்திரி பாவனை, கருணா பாவனை, முதித பாவனைகளால் கெடுத்தல் வேண்டுமென்றும், மயக்கத்தை ஞான நூற் பொருளைக் கேட்டல் சிந்தித்தல் பாவனை தரிசனையெனவரும் உபேக்ஷா பாவனையால் கெடுத்தல் வேண்டுமென்றும் அறிவுறுத் தினாராக, மணிமேகலையும் அவர் காட்டிய ஞானவிளக்கின் துணை கொண்டு தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுப்பேனென நோற்கலானாள். இதன்கண் மணிமேகலை சரண்புகுதல் 1-5 அடிகளிலும், அறவணன் புத்த தருமத்தைத் தொகுத்துரைக்குந்திறம் 6-44 அடிகளிலும், பன்னிருநிதானங்களின் இயல் 45-133 அடிகளிலும், கண்டவியல் 134-147 அடிகளிலும், சந்தியியல் 148-152 அடிகளிலும், பிறப்பியல் 153-158 அடிகளிலும், காலவியல் 159-166 அடிகளிலும், குற்றவியல்பும் வீட்டியல்பும் 167-178 அடிகளிலும், நால்வகை வாய்மைகள் 179-188 அடிகளிலும், ஐங்கந்தங்கள் 189-190 அடிகளிலும், வழக்கியல் 191-216 அடிகளிலும், நால்வகை நயங்களும் பயனும் 217-235 அடிகளிலும், வினாவிடை 236-249 அடிகளிலும், நால்வகைப் பாவனைகள் 250-260 அடிகளிலும்,மணிமேகலை நோற்றலைத் தலைப்பட்டது 263-4 அடிகளிலும் கூறப்படுகின்றன. தானந் தாங்கிச் சீலந் தலைநின்று போன பிறப்பிற் புகுந்ததை யணர்ந்தோள் புத்த தன்ம சங்க மென்னும் முத்திற மணியை மும்மையின் வணங்கிச் 5 சரணா கதியாய்ச் சரண்சென் றடைந்தபின் முரணாத் திருவற மூர்த்தியை மொழிவோன் அறிவு வறிதா யுயிர்நிறை காலத்து முடிதயங் கமரர் முறைமுறை யிரப்பத் துடித லோக மொழியத் தோன்றிப் 10 போதி மூலம் பொருந்தி யிருந்து மாரனை வென்று வீர னாகிக் குற்ற மூன்று முற்ற வறுக்கும் வாமன் வாய்மை யேமக் கட்டுரை இறந்த காலத் தெண்ணில்புத் தர்களுஞ் 15 சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது ஈரறு பொருளி னீந்தநெறி யுடைத்தாய்ச் சார்பிற் றோன்றித் தத்தமின் மீட்டும் இலக்கணத் தொடர்தலின் மண்டில வகையா யறியக் காட்டி 20 எதிர்முறை யொப்ப மீட்சியு மாகி ஈங்கி தில்லா வழியில் லாகி ஈங்கி துள்ள வழியுண் டாகலில் தக்க தக்க சார்பிற் றோற்றமெனச் சொற்றகப் பட்டு மிலக்கணத் தொடர்பாற் 25 கருதப் பட்டுங் கண்டநான் குடைத்தாய் மருவிய சந்தி வகைமூன் றுடைத்தாய்த் தோற்றம் பார்க்கின் மூன்று வகையாய்த் தோற்றற் கேற்ற காலமூன் றுடைத்தாய்க் குற்றமும் வினையும் பயனும் விளைந்து 30 நிலையில வறிய துன்பமென நோக்க உலையா வீட்டிற் குறுதி யாகி நால்வகை வாய்மைக்குச் சார்பிட னாகி ஐந்துவகைக் கந்தத் தமைதி யாகி மெய்வகை யாறு வழக்குமுக மெய்தி 35 நயங்க ணான்காற் பயன்க ளெய்தி இயன்றநால் வகையால் வினாவிடை யுடைத்தாய் நின்மிதி யின்றி யூழ்பா டின்றிப் பின்போக் கல்லது பொன்றக் கெடாதாய்ப் பண்ணுந ரின்றிப் பண்ணப் படாதாய் 40 யானு மின்றி யென்னது மின்றிப் போனது மின்றி வந்தது மின்றி முடித்தலு மின்றி முடிவு மின்றி வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன வெல்லாந் தானே யாகிய 45 பேதைமை செய்கை யுணர்வே யருவுரு வாயி லூறே நுகர்வே வேட்கை பற்றே பவமே தோற்றம் வினைப்பயன் இற்றென வகுத்த வியல்பீ ராறும் பிறந்தோ ரறியிற் பெரும்பே றறிகுவர் 50 அறியா ராயி னாழ்நர கறிகுவர் பேதைமை யென்ப தியாதென வினவின் ஓதிய விவற்றை யுணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கேட்டது தெளிதல் 55 உலக மூன்றினு முயிரா முலகம் அலகில பல்லுயி ரறுவகைத் தாகும் மக்களுந் தேவரும் பிரமரு நரகருந் தொக்க விலங்கும் பேயு மென்றே நல்வினை தீவினை யென்றிரு வகையாற் 60 சொல்லப் பட்ட கருவிற் சார்தலுங் கருவிற் பட்ட பொழுதினுட் டோற்றி வினைப்பயன் விளையுங் காலை யுயிர்கட்கு மனப்பே ரின்பமுங் கவலையுங் காட்டுந் தீவினை யென்ப தியாதென வினவின் 65 ஆய்தொடி நல்லா யாங்கது கேளாய் கொலையே களவே காமத் தீவிழை வுலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும் பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில் சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும் 70 வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சியென் றுள்ளந் தன்னி னுருப்பன மூன்றுமெனப் பத்து வகையாற் பயன்றெரி புலவர் இத்திறம் படரார் படர்குவ ராயின் விலங்கும் பேயு நரகரு மாகிக் 75 கலங்கிய வுள்ளக் கவலையிற் றோன்றுவர் நல்வினை யென்ப தியாதென வினவிற் சொல்லிய பத்தின் றொகுதியி னீங்கிச் சீலந் தாங்கித் தானந் தலைநின்று மேலென வகுத்த வொருமூன்று திறத்துத் 80 தேவரும் மக்களும் பிரமரு மாகி மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர் உணர்வெனப் படுவ துறங்குவோ ருணர்விற் புரிவின் றாகிப் புலன்கொளா ததுவே அருவுரு வென்பதவ் வுணர்வு சார்ந்த 85 உயிரு முடம்பு மாகு மென்ப வாயி லாறு மாயுங் காலை உள்ள முறுவிக்க வுறுமிட னாகும் ஊறென வுரைப்ப துள்ளமும் வாயிலும் வேறு புலன்களை மேவுத லென்ப 90 நுகர்வே யுணர்வு புலன்களை நுகர்தல் வேட்கை விரும்பி நுகர்ச்சியா ராமை பற்றெனப் படுவது பசைஇய வறிவே பவமெனப் படுவது கரும வீட்டந் தருமுறை யிதுவெனத் தாந்தாஞ் சார்தல் 95 பிறப்பெனப் படுவதக் கருமப் பெற்றியின் உறப்புண ருள்ளஞ் சார்பொடு கதிகளிற் காரண காரிய வுருக்களிற் றோன்றல் பிணியெனப் படுவது சார்பிற் பிறிதாய் இயற்கையிற் றிரிந்துடம் பிடும்பை புரிதல் 100 மூப்பென மொழிவ தந்தத் தளவுந் தாக்குநிலை யாமையிற் றாந்தளர்ந் திடுதல் சாக்கா டென்ப தருவுருத் தன்மை யாக்கை வீழ்கதி ரெனமறைந் திடுதல் பேதைமை சார்வாச் செய்கை யாகுஞ் 105 செய்கை சார்வா வுணர்ச்சி யாகும் உணர்ச்சி சார்வா அருவுரு வாகும் அருவுருச் சார்வா வாயி லாகும் வாயில் சார்வா 'd2வூறா கும்மே ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும் 110 நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும் வேட்கை சார்ந்து பற்றா கும்மே பற்றிற் றோன்றுங் கருமத் தொகுதி கருமத் தொகுதி காரண மாக வருமே யேனை வழிமுறைத் தோற்றந் 115 தோற்றஞ் சார்பின் மூப்புப்பிணி சாக்கா டவல மரற்றுக் கவலைகை யாறெனத் தவலில் துன்பந் தலைவரு மென்ப ஊழின்மண் டிலமாச் சூழுமிந் நுகர்ச்சி பேதைமை மீளச் செய்கை மீளுஞ் 120 செய்கை மீள வுணர்ச்சி மீளும் உணர்ச்சி மீள வருவுரு மீளும் அருவுரு மீள வாயின் மீளும் வாயின் மீள 'd2வூறு மீளும் ஊறு மீள நுகர்ச்சி மீளும் 125 நுகர்ச்சி மீள வேட்கை மீளும் வேட்கை மீளப் பற்று மீளும் பற்று மீளக் கருமத் தொகுதி மீளுங் கருமத் தொகுதி மீளத் தோற்ற மீளுந் தோற்ற மீளப் 130 பிறப்பு மீளும் பிறப்புப் பிணிமூப்புச் சாக்கா டவல மரற்றுக் கவலை கையா றென்றிக் கடையில் துன்பம் எல்லா மீளுமிவ் வகையான் மீட்சி ஆதிக் கண்ட மாகு மென்ப 135 பேதைமை செய்கை யென் றிவை யிரண்டுங் காரண வகைய வாத லானே இரண்டாங் கண்ட மாகு மென்ப உணர்ச்சி யருவுரு வாயி லூறே நுகர்ச்சி யென்று நோக்கப் படுவன 140 முன்னவற் றியல்பாற் றுன்னிய வாதலின் மூன்றாங் கண்டம் வேட்கை பற்றுக் கரும வீட்ட மெனக்கட் டுரைப்பவை மற்றப் பெற்றி நுகர்ச்சி யொழுக்கினுட் குற்றமும் வினையு மாக லானே 145 நான்காங் கண்டம் பிறப்பே பிணியே மூப்பே சாவென மொழிந்திடுந் துன்பம் எனவிவை பிறப்பி லுழக்குபய னாதலிற் பிறப்பின் முதலுணர் வாதிச் சந்தி நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம் 150 புகர்ச்சியின் றறிவ திரண்டாஞ் சந்தி கன்மக் கூட்டத் தொடுவரு பிறப்பிடை முன்னிச் செல்வது மூன்றாஞ் சந்தி மூன்றுவகைப் பிறப்பு மொழியுங் காலை ஆன்றபிற மார்க்கத் தாய வுணர்வே 155 தோன்றல் வீடெனத் துணிந்து தோன்றியும் உணர்வுள் ளடங்க வுருவாய்த் தோன்றியும் உணர்வு முருவு முடங்கத் தோன்றிப் புணர்தரு மக்க டெய்வம்விலங் காகையுங் கால மூன்றுங் கருதுங் காலை 160 இறந்த கால மென்னல் வேண்டும் மறந்த பேதைமை செய்கையா னவற்றை நிகழ்ந்த காலமென நேரப் படுமே உணர்வே யருவுரு வாயி லூறே நுகர்வே வேட்கை பற்றே பவமே 165 தோற்ற மென்றிவை சொல்லுங் காலை எதிர்கா லம்மென விசைக்கப் படுமே பிறப்பே பிணியே மூப்பே சாவே அவல மரற்றுக் கவலைகை யாறுகள் குலவிய குற்றமெனக் கூறப் படுமே 170 அவாவே பற்றே பேதைமை யென்றிவை புனையுமடை பவமும் வினைசெய லாகும் உணர்ச்சி யருவுரு வாயி லூறே நுகர்ச்சி பிறப்பு மூப்புப்பிணி சாவிவை நிகழ்ச்சிப்பய னாங்கே நேருங் காலைக் 175 குற்றமும் வினையும் பயனுந் துன்பம் பெற்ற தோற்றப் பெற்றிக ணிலையா எப்பொரு ளுக்கு மான்மா விலையென இப்படி யுணரு மிவைவீட் டியல்பாம் உணர்வே யருவுரு வாயி லூறே 180 நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே அவல மரற்றுக் கவலைகை யாறென நுவலப் படுவன நோயா கும்மே அந்நோய் தனக்குப் பேதைமை செய்கை யவாவே பற்றுக் 185 கரும வீட்டமிவை காரண மாகும் துன்பந் தோற்றம் பற்றே காரணம் இன்பம் வீடே பற்றிலி காரணம் ஒன்றிய வுரையே வாய்மை நான்காவ உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை 190 உள்ள வறிவிவை யைங்கந்த மாவன அறுவகை வழக்கு மறுவின்று கிளப்பிற் றொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந் துரை யென்ற நான்கினு மியைந்த உண்மை வழக்கு மின்மை வழக்கும் 195 உள்ளது சார்ந்த வுண்மை வழக்கும் இல்லது சார்ந்த வின்மை வழக்கும் உள்ளது சார்ந்த வின்மை வழக்கும் இல்லது சார்ந்த வுண்மை வழக்குமெனச் சொல்லிய தொகைத்திற முடம்புநீர் நாடு 200 தொடர்ச்சி வித்து முளைதா ளென்றிந் நிகழ்ச்சியி லவற்றை நெல்லென வழங்குதல் இயல்பு மிகுத்துரை யீறுடைத் தென்றுந் தோன்றிற் றென்று மூத்த தென்றும் மூன்றி னொன்றி னியல்புமிகுத் துரைத்தல் 205 இயைந்துரை யென்ப தெழுத்துப்பல கூடச் சொல்லெனத் தோற்றும் பலநாட் கூடிய எல்லையைத் திங்க ளென்று வழங்குதல் உள்வழக் குணர்வில் வழக்கு முயற்கோடு உள்ளது சார்ந்த வுள்வழக் காகுஞ் 210 சித்தத் துடனே யொத்த நுகர்ச்சி உள்ளது சார்ந்த வில்வழக் காகுஞ் சித்தமுற் பவித்தது மின்போ லென்கை இல்லது சார்ந்த வுண்மைவழக் காகுங் காரண மின்றிக் காரிய நேர்தல் 215 இல்லது சார்ந்த வில்வழக் காகும் முயற்கோ டின்மையிற் றோற்றமு மில்லெனல் நான்கு நயமெனத் தோன்றப் படுவன ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை யியல்பென்க காரண காரிய மாகிய பொருள்களை. 220 ஒன்றா வுணர்த லொற்றுமை நயமாம் வீற்றுவீற் றாக வேதனை கொள்வது வேற்றுமை நயமென வேண்டல் வேண்டும் பொன்றக் கெடாஅப் பொருள்வழிப் பொருள்களுக்கு ஒன்றிய காரண முதவுகா ரியத்தைத் 225 தருதற் குள்ளந் தானிலை யென்றல் புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும் நெல்வித் தகத்து ணென்முளை தோற்றுமெனல் நல்ல வியல்புநய மிவற்றினாங் கொள்பயன் தொக்க பொருளல தொன்றில்லை யென்றும் 230 அப்பொரு ளிடைப்பற் றாகா தொன்றுஞ் செய்வா னொடுகொட் பாடிலை யென்றும் எய்துகா ரணத்தால் காரிய மென்றும் அதுவு மன்றத லாதது மன்றென்றும் விதிமுறை தொகையினால் விரிந்த நான்கும் 235 வினாவிடை நான்குள துணிந்து சொல்லல் கூறிட்டு மொழிதல் வினாவின் விடுத்தல் வாய்வா ளாமையெனத் தோன்றியது கெடுமோ கெடாதோ வென்றாற் கேடுண் டென்றல் துணிந்துசொல லாகுஞ் 240 செத்தான் பிறப்பா னோபிற வானோ என்று செப்பிற் பற்றிறந் தானோ வன்மக னோவெனல் மிகக்கூ றிட்டு மொழிதலென விளம்புவர் வினாவின் விடுத்தன் முட்டை முந்திற்றோ 245 பனைமுந் திற்றோ வெனக்கட் டுரைசெய் என்றா லெம்முட்டைக் கெப்பனை யென்றல் வாய்வா ளாமை யாகா யப்பூப் பழைதோ புதிதோ வென்று புகல்வான் உரைக்கு மாற்ற முரையா திருத்தல் 250 கட்டும் வீடு மதன்கா ரணத்தது ஒட்டித் தருதற் குரியோ ரில்லை யாமே லுரைத்த பொருள்கட் கெல்லாங் காமம் வெகுளி மயக்கங் காரணம் அநித்தந் துக்க மநான்மா வசுசியெனத் 255 தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல் மைத்திரி கருணா முதிதையென் றறிந்து திருந்துநல் லுணர்வாற் செற்றமற் றிடுக சுருதி சிந்தனா பாவனா தரிசனை கருதி யுய்த்து மயக்கங் கடிக 260 இந்நால் வகையான் மனத்திரு ணீங்கென்று முன்பின் மலையா மங்கல மொழியின் ஞான தீப நன்கனங் காட்டத் தவத்திறம் பூண்டு தருமங் கேட்டுப் பவத்திற மறுகெனப் பாவை நோற்றனளென். உரை 1-5. போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள் - தனது முன்னைப் பிறப்பு வரலாற்றை யறிந்தவளான மணிமேகலை; தானம் தாங்கி - தானத்தை மேற்கொண்டு; சீலம் தலைநின்று- சீலங்களின் வழி நின்று; புத்த தன்ம சங்கமென்னும் முத்திறமணியை-புத்தன் தருமம் சங்கமென்னும் கொள்கை களான முக்கூற்று மணிகளையும்; மும்மையின் வணங்கி - மனம் மொழி மெய் என்ற மூன்றாலும் வணங்கி; சரணா கதியாய் - புத்தன் திருவடி யல்லது வேறே புகலில்லாத வளாய், சரண் சென்று அடைந்த பின்-புத்த சங்கத்தே அடைக்கலமாகப் புகுந்த பின்னர் எ - று. சீலந் தாங்கித் தானம் மேற்கொண்டது ஏதுவாகப் போன பிறப்பிற் புகுந்ததை யுணர்ந்தோள் என்றுமாம். பின்பும், "சீலந்தாங்கித் தானம் தலைநின்று" (30: 78) என்பர். எனவே தானமும் சீலமும் ஒப்ப வேண்டுவன வென்பது துணிபாம். பாரமிதை பத்தனுள் முதலாவதாகிய இது தானபாரமிதை யெனவும் வழங்கும்; சீலம் சீல பாரமிதை யெனப்படும். பண்டை நாளிற் பாரமிதை ஆறாகவும் பிற்காலத்தே பத்தாகவும் வகுக்கப் பட்டன. பழைய பாரமிதை ஆறாவன; தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், பிரஞ்ஞை என்னவாம்; பின் சேர்க்கப் பட்டவை உபாயம், துணிவு, வலி, ஞானம் என்ற நான்குமாம். இவற்றுள் முதலிற் கூறிய தானமும் சீலமும் உலகியல் வாழ்விலிருப் போர் தொடக்கத்தே மேற்கொள்ளற்பாலன வென்றும், இவற்றினால் விளையும் பயன், மறுமையில் இன்பப் பிறப்பெய்துவ தென்றும் திக்க நிகாயம் (1: 110-2) கூறுகிறது. இத் தானத்தைப் போதி சத்துவபூமி யென்னும் நூலாசிரியர் ஒன்பது வகையாகக் கூறுவர்; அவை சுபாவதானம், சருவ தானம், துட்கர தானம், சருவதோமுக தானம், சற்புருட தானம், சருவகார தானம், விகதார்த்திக தானம், இகமுத்திர சுக தானம், விசுத்த தான மென்பனவாம். மன மொழி மெய்களை யடக்கி யறநெறிக்கட் செலுத்துவதே சீலமென்றும், அது சம்வரசீலம், குசலதரும சங்கிராஹக சீலம், சத்துவகிரியா சீலம் என மூவகைப் படு மென்றும் தருமசங்கிரக மென்னும் பௌத்த நூல் கூறுகிறது. இனி, இச் சீலத்தைச் சப்த சீல மென்று ஒரு சாராரும், பஞ்சசீல மென்றொரு சாராரும் பகுத்து முடிவில் தசசீலமாகக் கொண்டனரென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தொடக்கமுதல் தசசீலமென்ற பாகுபாடு தோன்றியதுவரை இச்சீலம். மூன்றும், ஐந்தும், ஏழுமாகப் பெருகிவந்து முடிவிற்றான் பத்தாயிற்று என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. பஞ்சசீலமென்பன உபாசகருக் குரிய வென்று விநயபிடகம்1 கூறுகிறது. கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, புறங்கூறாமை, வன் சொலியம்பாமை, பயனில மொழியாமை, வெஃகாமை, வெகுளாமை. நற்காட்சியென்ற பத்தும் தசசீலமாம். நற்காட்சியை "மித்யாத்ருஷ்டி வ்ரத்தி" என்றுகூறுப. புத்தனாந் தன்மையும் புத்த தருமமும் புத்த சங்கமும் மூன்று மணிகளாக உருவகஞ் செய்து 1இரத்தினத்திரய மென்ப வாதலின், இவரும் 'முத்திற மணி" யென்றார். புத்தம் சரணங் கச்சாமி, தருமம்சரணங் கச்சாமி, சங்கம் சரணங் கச்சாமி என்று மூன்றையும் மும்முறைசொல்லி வழிபடுவது பற்றி, "மும்மையின் வணங்கி" யென்றாரென்றுமாம். புத்த தருமத்தை மேற்கொள்வோர் தொடக்கத்தே இம்மூன்றையும் சரண்புகுதல் வேண்டுமென அவதான சதகம் கூறுகிறது; அவ்வாறே மணிமேகலையும். சரண்புகுதலின், "சரணாகதியாய்ச் சரண் சென்றடைந்தபின்" என்றார். புத்த சங்கத்துச் சத்துவராதற்கு இது முதற்படி யெனப்படும். 6-15. முரணாத் திருவறமூர்த்தியை மொழிவோன்-முன்பின் மாறு பாடில்லாத அறங்களின் வடிவாகிய புத்ததேவன் வரலாற்றினைச் சுருங்கக் கூறலுற்ற அறவணன்; உயிர்-உயிர்கள்; அறிவு வறிதாய் நிறை காலத்து - நல்லறிவின்றி நிரம்பியிருந்த காலத்தில்; முடி தயங்கு அமரர் முறைமுறை இரப்ப-முடியணிந்து விளங்குந்தேவர்கள் தன்னை முறைப்படி வணங்கி நிலவுலகிற் றோன்றி அறங்கூற வேண்டுமெனக் குறையிரந்து நின்றதனால்; துடிதலோகம் ஒழியத் தோன்றி - துடித லோகத்தை விட்டு மண்ணுலகிற் றோன்றி; போதி மூலம் பொருந்தி யிருந்து-புத்த கயை யென்னுமிடத்தே அரசமரத்தினடியில் எழுந்தருளியிருந்து; மாரனை வென்று வீரனாகி - மாரனென்னும் தேவனை வென்றதனால் வீரனாக விளங்கி; குற்ற மூன்றும் முற்றவறுக்கும்-மூவகைக் குற்றங்களையும் அறவே கெடுத்து இலவாக்கும்; வாமன் வாய்மை ஏமக் கட்டுரை - புத்த தேவனது மெய்ம்மை நிறைந்ததும் உயிர்கட்குப் பாதுகாப்புமாக எடுத்தோதியதும்; இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும் - அவர்க்குப் பின் தோன்றிய அளவிறந்த புத்த சங்கத்தோர் பலராலும்; சிறந் தருள்கூர்ந்து-உயிர்கள்பால் மிக்க அருள்கொண்டு; திருவாய் மொழிந்தது - மறவாது நிலைபெற வற்புறுத்தப்பட்டது. மாகிய அறம் ஈண்டு யான் கூறலுறுவது எ - று. துடிதலோகத்து அமரர் இரப்ப, தோன்றி, இருந்து, வீரனாகி, அறுக்கும் வாமன் கட்டுரையும் புத்தர்கள் மொழிந்ததுமாகிய அறம் என இயைத்து, ஈண்டு யான் கூறலுறுவதென்பதை இசை யெச்சத்தாற் பெய்துரைத்து முடிக்க. புத்தன், தருமம், சங்கம், என்ற மூன்றனுள், புத்தனையும் சங்கத்தையும் இதனாற் கூறி, தருமத்தை யுரைத்தற்கு முகஞ் செய்கின்றார்; இவ்வாறே சாந்தி தேவரும் தாமெழுதிய போதி சரியாவதார பஞ்சிகை (வீவீ 8) யிலும் கூறுதல் காண்க. இவ்வாறு புத்தனையும் சங்கத்தையும் கூறியபின் தருமங் கூறுபவாயினும் வழிபடுமிடத்து புத்தன், தருமம், சங்கம் என்ற மூன்றையும் இம் முறையே வழிபடுவரென வறிக. புத்தனது உடமபைத் தன்ம காயமென்றும், அவனை அறத்தின் வடிவமென்றும் திவ்வியாவதானம் முதலிய நூல்கள் கூறுதலால், இவரும் திருவறமூர்த்தி" யென்றார். அறிவு, தானந்தாங்கிச் சீலம் தலை நிற்றற்கேதுவாகிய நல்லறிவு. மக்களென்னாது "உயிர்" என்றார். நல்லறிவு வறிதாயினமையின் ; "அவ்வுயிர் போஒ மளவுமோர் நோய்" (குறள்: 848) என்றாற்போல. புத்தன் பிறத்தல் வேண்டித் துடித லோகத்தே தேவர்குறையிரந்து நின்றசெய்தியை, "தேவரெல்லாம்,. தொக்கொருங்கீண்டித் துடிதலோகத்து, மிக்கோன் பாதம் விழுந்தன ரிரப்ப" (12:72-4) என்று முன்னரும் கூறுப. வடநூல்கள், புத்தர் தாமே நிலவுலகிற் றோன்றுதற் கெண்ணி, இடமும் காலமும் குறித்துக்கொண்டு தோன்றுவ ரென்று கூறுகின்றன. போதி - அரசமரம். புத்தர் பலரும் போதி மரத்தையே இருக்கையாய்க் கொள்ளவில்லை; விபாசி யென்னும் புத்தர் பாதிரி மரத்தையும், சிகி யென்பார் பூவரசினையும் கொண்டன ரெனப் பாலிமொழியிலுள்ள நூல்கள் கூறுகின்றன வென்பர். தீ நெறியிற் செலுத்தும் தேவனை மாரனென்றும், அவனுக்கு முப்பத்தாறு கோடி தானை வீரரும், இரதி அரதி திருஷணை என மூன்று பெண்மக்களும். விப்பிரமன், ஹர்ஷன், தருப்பன் என மூன்று ஆண்மக்களு முண்டென்பர். அவன் வரலாற்றை அசுவகோசர், க்ஷேமேந்திரர் முதலியோர் எழுதிய வடநூல்களுட் காண்க. வென்று: காரணப் பொருட்டு. ஆதி புத்தனுக்குப் பின்னர் பல புத்தர்கள் உளராயின ரென்றும். அவர் தொகுதியைப் புத்தசங்கமென்றும் அவர் ஆதிபுத்தன் கூறிய அறங்களை வழிவழியாய்த் தோன்றி யறிவுறுத்துவ ரென்றும் கூறுபவாதலின், "எண்ணில் புத்தர்களும் திருவாய் மலர்ந் தருளியது" என்றார். குற்ற மூன்றாவன மன மொழி மெய் மூன்றானும் உண்டாகும் பத்து வகைக் குற்றம். காம முதலிய மூன்றெனினுமாம். 16-19. ஈரறு பொருளின் ஈந்த நெறி உடைத்தாய் - இப் புத்தன் மொழிந்த கட்டுரைப்பொருள் பன்னிரண்டு பொருள்களாகக் கூறப்படும் நெறியை யுடையதாய்; சார்பின் தோன்றி - ஒன்றினொன்று காரண காரியமாய்ச் சார்ந்து தோன்றி; தத்தமில் மீட்டும்-தம்மில் மீளத் தோன்றுமாற்றால்; இலக்கு அணத் தொடர்தலின் - காரண காரியமா யியையத் தொடர்ந்து தோன்றுதலால்; மண்டில வகையாய் அறியக் காட்டி - மண்டலிக்கும் முறையில் வைத்து விளங்கக் காட்டி எ - று. ஈரறு பொருளாவன: பேதைமை, செய்கை, உணர்வு. அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப்பயன் எனப் பன்னிரு நிதானங்களாகும். அவை சார்பில் தோன்றலாவது பேதைமையிலிருந்து செய்கையும், அச் செய்கையி லிருந்து உணர்வும், உணர்விலிருந்து அருவுருவும், அதிலிருந்து வாயிலும், அதிலிருந்து ஊறும், அதிலிருந்து நுகர்வும், அதிலிருந்து வேட்கையும் அதிலிருந்து பற்றும், அதிலிருந்து பவமும், அதிலிருந்து தோற்றமும், அத் தோற்றத்திலிருந்து வினைப்பயனும் தோன்றுதல், செய்கைக்குப் பேதைமை இலக்கும், உணர்வுக்குச் செய்கையிலக்கும், இவ்வாறே ஒவ்வொன்றும் இலக்காய் நிற்குமென வறிக. அவ்வாறாகுமிடத்து, வினைப் பயனிலிருந்து மீளப் பேதைமையும், அதிலிருந்து செய்கையும் பிறவும் தோன்றுதலின், "இலக்கணத் தொடர்தலின்" என்றார். இவ்வண்ணம் பேதைமை முதலிய பன்னிரண்டும் ஒன்றற்கொன்று காரண காரியமாய் இடையறவின்றிக் கறங்கோலை போலச் சுழன்று தோன்றுமாறு விளங்க, "மண்டில வகையா யறியக் காட்டி" யென்றார். இதனை "இலக்கணத் தொடர்பாற் கருதப்பட்டும்" (24-5) என்று மேலும் கூறுப. 20-25. எதிர்மறை ஓப்ப-இவ்வாறு எதிர்தோன்றுதற் கேதுவாகிய காரணத்தை நீக்கிய வழி; மீட்சியுமாகி-பேதைமை முதலிய வற்றினின்று மீட்சி யுண்டாம்; ஈங்கு இது இல்லா - இவ்வாறு காரணமில்லை யாகவே; வழி இல்லாகி - காரியமாகிய வழிமுறைத் தோற்றம் இல்லையாதலாலும்; ஈங்கு இது உள்ள - இவ்வாறே காரணத்தை விரும்பிய வழி; வழியுண்டாதலின்-காரியமாகிய தோற்ற முண்டாதலாலும்; தக்க தக்க சார்பில் தோற்றம் என - காரணங்களை யுள்ளுதலும் தள்ளுதலு மாகிய தகுதிக் கேற்பச் சார்பில் தோன்றும் காரியத் தோற்றம் உண்டாதலும் இல்லையாதலுமென்று; சொற்றகப்பட்டும் - சொல்லப்பட்டும்; இலக்கணத் தொடர்பால் கருதப்பட்டும் - காரண காரியங்களின் உண்மையின்மைகள் இவ்வியைபால் உணரப்பட்டும் வரும் எ - று. பேதைமையினின்று செய்கையும் செய்கையினின்றுணர்வும் இவ்வாறு பிறவும் தோன்றும் வழிமுறைத் தோற்றத்துக்கு மாறாக, பேதைமை முதலியவற்றை நீக்கியவழித் தோற்றமின்றாதலின் "எதிர் முறையொப்ப" என்றார். ஓப்புதல்-நீக்குதல், இதனையே சிறிது விளக்கலுற்று பேதைமை யில்வழிச் செய்கையின்மையும், செய்கையில்வழி உணர்வின்மையும், இவ்வாறு பிறவற்றின் இன்மையும் பெறப்படுவது பற்றி "ஈங்கிது வில்லா வழியில் லாகி" யென்றும், பேதைமை முதலிய வற்றைக் கொண்ட வழி, செய்கை முதலியன வுளவாதலும் பெறப்படுதலின், "ஈங்கிதுவுள்ள வழியுண்டாதலின்" என்றும் கூறினார். மீட்சிவகையை மேலே "பேதைமை மீளச் செய்கை மீளும்" என்பது முதலியவற்றாலும், வழிமுறைத் தோற்றமுண்டாதலை, "பேதைமை சார் வாச் செய்கை யாகும்" என்பது முதலியவற்றாலும் கூறுப. காண்டல் கருதல் என அளவை யிரண்டாதலின். அவற்றிற் கேற்பக் காட்சியாற் காணப்படுவதை "சார்பிற்றோற்றமெனச் சொற்றகப் பட்டும்" என்றும், கருதலாற் கொள்ளப்படுவதை, "இலக்கணத் தொடர்பாற் கருதப்பட்டும்" என்றும் கூறினார். 25-26. கண்டம் நான்கு உடைத்தாய்-நான்கு வகையான கண்டங் களை யுடையதாய்; மருவிய சந்தி வகை மூன்று உடைத்தாய்-அக் கண்டங்கள் தம்மிற்புணரும் புணர்ச்சியை மூன்று வகையாக வுடையதாய் இந்நிதானம் இயலும் எ - று. பேதைமை முதலிய பன்னிரண்டனையும் நான்காகப் பகுத்து ஒவ்வொன்றையும் கண்டமெனக் கூறுப; அவற்றுள் பேதைமையும், செய்கையும் முதற் கண்டமெனவும், உணர்வு, அருவுரு, வாயில், ஊறு. நுகர்வு என்ற ஐந்தும் இரண்டாங்கண்ட மெனவும். வேட்கை, பற்று, பவம் என்ற மூன்றும் மூன்றாங் கண்டமெனவும், தோற்றமும், வினைப்பயனும் நான்காங் கண்டமெனவும் கூறுப. இவற்றின் இயல்பை, "ஆதிக் கண்டமாகுமென்ப" என்பது முதலியவற்றால் விரியக் கூறுப. முதற் கண்டத்தின் ஈறாகிய செய்கையும் இரண்டாங் கண்டத்தின் முதனின்ற உணர்வும் கூடும் கூட்டத்தை முதற் சந்தியென்றும், இரண்டாங்கண்டத் தீற்று நுகர்வும் மூன்றாங் கண்டத்து முதனின்ற வேட்கையும் கூடும் கூட்டம் இரண்டாஞ் சந்நியென்றும், மூன்றங் கண்டத் தீற்றுப் பவமும் நான்காங் கண்டத்து முதனின்ற தோற்றமும் கூடும் கூட்டம் மூன்றாஞ் சந்தியெனவும் கூறப்படும்; இவற்றின் இயல்பை. "பிறப்பின் முதலுணர்வாதிச் சந்தி" என்பது முதலியவற்றால் விளங்கக் கூறுப. இந்நிதானம் இயலும் என்பது வருவிக்கப்பட்டது. 27-28. பார்க்கின் - ஆராயுமிடத்து; தோற்றம் மூன்று வகையாய்- பிறப்பு மூன்று வகையாயும்; தோற்றற்கேற்ற காலம் மூன்றுடைத்தாய் - அம்மூவகைப் பிறப்பும் தோன்றுதற் கேற்ற காலம் மூன்றுடையதாயும் நிலவும் எ - று. பிறப்பு மூன்றாவன; அருவம், உருவம், காமம் என்பன. காலம் மூன்று; இறப்பு. நிகழ்வு, எதிர்வு என்பன, இவற்றை, "மூன்று வகைப் பிறப்பும் மொழியுங்காலை" (30,158) என்பது முதலிய வற்றாலும் "கால மூன்றுங் கருதுங் காலை" (30-159) என்பது முதலியவற்றாலும் விளக்கிக் கூறுப. 29-31. குற்றமும்-வேட்கையும் பற்றும் பேதைமையுமாகிய குற்றங்களும்; வினையும்-பவமும் செய்கையுமாகிய வினை களும்; பயனும்- இவை யொழிந்த ஏழுமாகிய பயனுமாக; விளைந்து-இப்பன்னிரண்டும் நிலவுதலால்; நிலையில நிலையில்லாதனவென்றும்; வறிய - பயனில்லாதனவென்றும்; துன்பம் என - துன்பமென்றும்; நோக்க- இவற்றைக் கண்டு கழிக்கவே; உலையா வீட்டிற்குறுதியாகி-கெடாத வீடுபேற்றிற்கு உறுதியாகிய நன்ஞானமுண்டாம் எ-று. பேதைமை முதலிய பன்னிரண்டனுள், வேட்கையும், பற்றும், பேதைமையும் குற்றமென்றும், பவமும் செய்கையும் வினை யென்றும், உணர்ச்சி, அருவுரு, வாயில், ஊறு, நுகர்ச்சி, பிறப்பு, வினைப்பயனாகிய ஏழும் பயனென்றும் வகுத்தோதி, இவற்றை "நிலையில வறிய" என நோக்கி யொழிதலால் வீடுபேற்றிற் குறுதியுண்டா மென்பார், "உலையா வீட்டிற் குறுதியாகி" யென்றார். பிறாண்டும், "துன்பம் பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா, எப்பொருளுக்கு மான்மா விலையென இப்படி யுணரும் இவை வீட்டியல்பாம்" என்று கூறுதல் காண்க. 32-34. நால்வகை வாய்மைக்குச் சார்பிடனாகி-நான்கு வகை யாகிய வாய்மைகட்கும் சார்பிடனாகியும்; ஐந்து வகைக் கந்தத்து அமைதியாகி - ஐவகைக் கந்தங்களுக்கும் அமைவுடைய தாயும்; மெய்வகை ஆறு வழக்கு முகம் எய்தி - மெய்ம்மை யுணர்வுக்குரிய அறுவகையான வழக்குகளையுடையதாகியும் இந்நிதானம் நிலவும் எ-று. வாய்மை நான்காவன: துக்கம், துக்க நீக்கம் துக்கத் தோற்றம், துக்க நீக்க நெறியென்பன. ஐவகைக் கந்தமாவன; உருவம், வேதனை, குறிப்பு, பாவனை விஞ்ஞான மென்பன. வழக்கு ஆறாவன: உண்மை வழக்கு, இன்மை வழக்கு, உள்ளது சார்ந்த வுண்மை வழக்கு, உள்ளது சார்ந்த இன்மை வழக்கு, இல்லது சார்ந்த வுண்மை வழக்கு, இல்லது சார்ந்த இன்மை வழக்கு என்பன. இவற்றைப் பிறாண்டும் கூறுப. 35-36. நயங்கள் நான்கால் பயன்கள் எய்தி - நால்வகை நயங் களாலும் நால்வகைப் பான்களை உற்று; இயன்ற-இவற்றோடு ஒப்பிவியலும்; நால்வகை வினாவிடை யுடைத்தாய்-நான்கு வகையான வினாவிடையுமுடைாயதாய் இந்நிதானம் இயலும் எ-று. நயங்கள் நான்காவன: ஒற்றுமை, வேற்றுமை, புரிவின்மை, இயல்பு என்பன. பயன் நான்கினையும் "தொக்க பொருளல தொன்றில்லை யென்றும், அப்பொருளிடைப் பற்றாகா தென்றும், செய்வானோடு கோட்பாடில்லை யென்றும். எய்து காரணத்தாங் காரியம் என்று மதுவு மன்று அலாதது மன்றென்றும், விதிமுறை தொகையினால் விரிந்த" (30-229-34) என்று கூறுதலாலறிக. வினாவிடை நான்காவன; "வினாவிடை நான்குள, துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல், வினாவின் விடுத்தல், வாய்வாளாமையென" (30. 285--37) என வருதல் காண்க. 37-44. நின்மிதி இன்றி - நிருமிக்கப்படுதலின்றி; ஊழ்பாடின்றி - கெடுவதுமின்றி; பின் போக்கல்லது - ஒன்றன் வழியொன்று தொடர்வதல்லது. பொன்றக் கெடாதாய் - முற்றக் கெடு வதில்லையாய்; பண்ணுநர் இன்றிப் பண்ணப்படாதாய் - செய்யும் முதலையின்றித் தானே செயற்படுவதில்லையாய்; யானும் இன்றி என்னதும் இன்றி - யானெனதென்னும் பற்றுக்கோடாவதின்றி; போனதும் இன்றி வந்ததும் இன்றி - போக்கு வரவு இல்லாததாய் முடித்தலுமின்றி முடிவுமின்றி - பிறர் முடிக்க முடிவதும் தானே முடிதலும் இல்லாததாய்; வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையனவெல்லாம் தானேயாகிய - வினையாயும் வினையாற்றோன்றும் பயனாயும் பிறப்புக்கும் வீடுபேற்றுக்கும் காரணமாகியும் இவை போன்ற பிறவற்றிற்கெல்லாம் தானே முதலாகியுமுள்ளன இந் நிதானங்கள் எ-று. நிருமிக்கப்படுவதாகிய நிருமிதி நின்மிதி யெனவந்தது ஊழ்படுதல் - முறையே வளர்ந்து முதிர்ந்து கெடுதல். பேதைமை முதலிய பன்னிரண்டும் நின்மிதி முதலாகக் கூறிய அனைத்தும் உடையவல்ல என்பார், "நின்மிதியின்றி" யென்பது முதலாக விரியக்கூறி. முடிவில், இவற்றின் இயல்பு தானும் இது வென்றற்கு, "வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையன வெல்லாம் தானே யாகிய" என்றார் ஒன்றின்வழி யொன்று தொடர்ந் தொடுங்குதலும் மீளத் தோன்றுதலு முண்டேயன்றி யறக் கெடுவதில்லை யென்றற்கு, "ஊழ்பாடின்றி" என்றதனோ டொழியாது "பின் போக்கல்லது பொன்றக் கெடாதாய்" என்றார். இவை எப்போதும் செய்வோனை யவாவி நிற்குமென்பது தோன்ற, "பண்ணுநரின்றிப் பண்ணப்படாதாய்" என்றும், செய்வோர் செய்திப் பயன் கண்டு "யான் செய்தேன்" என்றும், "இஃது எனது" என்றும், எண்ணுதற் கேதுவாவதல்லது, அவை தாமே யல்ல என்றற்கு, "யானுமின்றி என்னதுமின்றி" யென்றும், இவ்வாறே பிறவும் கூறினார். இங்ஙனம் எதிர்மறை முகத்தாற் கூறியவர், உடன்பாட்டு வாய்பாட்டால் வற்புறுத்தற்கு இவை "வினையும் பயனும் பிறப்பும் வீடும் இனையனவெல்லாம் தானேயாகிய" என்றார், இவ்வளவும் நிதானத்தின் பொதுவியல்பே கூறிற்றென வறிக. திருவாய் மொழிந்தது; நெறியுடைத்தாய். கண்ட நான்குடைத்தாய், மூன்றுடைத்தாய், மூன்றுடைத்தாய், உறுதியாகி, இடனாகி, அமைதியாகி, முகமெய்தி, பயன்களெய்தி, உடைத்தாய் கெடாதாய் பண்ணப்படாதாய், இன்றி , இன்றி இன்றி, தானேயாகிய 'பேதைமை, முதலியனவெனக் கூட்டி முடிவு செய்க. இக்கூறிய கருத்தையே மூலமாத்தியமிக காரிகையில் நாகார்ச்சுனர்1 எட்டு வகையாகக் கூறுகின்றார். 45-50. பேதைமை...ஈராறும் - பேதையையும் செய்கையும் உணர்வும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்வும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் வினைப்பயனுமென இத்தன்மையாக வகுக்கப் பட்ட நிதானங்களின் இயல்பு பன்னிரண்டினையும்; பிறந்தோர் அறியின் - மண்ணில் மக்களாகப் பிறந்தவர்கள் ஆராய்ந்தறிந்து கொள்வார்களாயின்; பெரும்பேறு அறிகுவர் - பெரிய பேறாகிய வீடுபேற்றினை எய்துவர்; அறியாராயின் - அறியா தொழிவாராயின்; ஆழ்நாரகறிகுவர் - கரையேற முடியாத ஆழ்ந்த நரகத்தில் வீழ்ந்து ஆண்டுள்ள துன்பத்தைத் தாம் அறிவர் எ-று. பேதைமை முதலாகக் கூறிய இப்பன்னிரண்டினையும் ஏனைப் புத்த நூல்கள் முறையே, அவிச்சை சம்ஸ்காரம், விஞ்ஞானம், நாமரூபம், சடாயதானம், பரிசம், வேதனை திருஷ்ணை, உபாதானம், பவம் சாதி என்று கூறுகின்றன. இவ்வாசிரியர் வாயில் என்றதனை ஏனையோர் சடாயதனம் என்றற்குக் காரணம், பொறியைந் தனோடு மனத்தையும் கூட்டிக் கோடலேயாகும். இவர் சடாயதன மென்பதை விலக்கிப் பஞ்சேந்திரியங்களையே கோடலின், இவ்வாறு கூறும் தசபூமிக சூத்திர முடையாரோடு இவர் ஒத்த கருத்துடையரென்று காணலாம்; ஆயினும் அவர் வேட்கையை அபிநந்தனை யென்றும், தோற்றத்தைப் பஞ்சஸ்கந்த மென்றும் கூறுதலின், அவரோடு அவர் முழுவதும் ஒவ்வாமை யறிந்துகொள்க. சில நூல்கள் அவிச்சையிற் றொடங்காது, வினைப்பயன் முதலாகத் தொடங்கிப் பேதைமை யீறாகக் கூறுகின்றன. இப் பன்னிரண்டனையும் பகுத்தாராய்ந்தறிதலால் விளையும் பயன் இது வென்பார், "பிறந்தோ ரறியின் பெரும்பே றறிகுவ, ரறியா ராயி னாழ் நர கறிகுவர்" என்றார். பெரும்பேறு - வீடுபேறு; அதனிற் பெரியது வேறில்லை யாதலின். தசபூமிக சூத்திர முடையா (சூ; 48) ரும் இவ்வாறே கூறுகின்றார். 51-54. பேதைமை யென்பது யாதென வினவின் - பேதைமை யெனச் சொல்லப்படுவது யாதென்று கேட்டால்; ஓதிய இவற்றை உணராது-நால்வகையாகக் கூறிய வாய்மை களையும் நிதானங்களையும் உணர்ந்து கொள்ளாமல்; மயங்கி - மயக்கமுற்று; இயற்படு பொருளால் கண்டது மறந்து-காட்சியாலும் கருத்தளவையாலும் அறிந்தவற்றை மறந்து; முயற்கோடு உண்டெனக் கேட்டு அது தெளிதல் - முயற்குக் கொம்பு உண்டோ இல்லையோ என்பதைப் பிறரைக் கேட்டு உண்டெனின் உண்டெனத் தெளிவதாம் எ-று. வாய்மைகளையும் அவற்றை விளக்கும் இயல்புடைய நிதானங்களையும் "இவற்றை" யெனக் குறித்தார். காட்சி கருத்து என்ற இரு வகையளவையாலும் அறியும் பொருள்களை "இயற்படுபொருள்" என்றார். பௌத்தர் காட்சியுங் கருத்து மல்லாத பிறவளவைகள் தூய்மை யுடையவல்ல வென்ப வாகலின், கேள்விக்குரிய "கேட்டது தெளிதல்" பேதைமை எனப்படுவ தாயிற்று. இனி, தம்மசங்கணி யென்னும் நூல் பேதைமையாவது நால்வகை வாய்மைகளையு மறியாமை (1100, 1102), என்று கூறுகிறது. இவ்வாறே, "பேய்மை யாக்குமிப் பேதைமைக் கள்வனோ டுடனாய்க், காமுற்றா மதன் பயத்தினிற் காமனைக் கடந்து, நாம ரூஉம்புகழ் கொடுப்பதோர் நன்னெறி நண்ணும். வாமன் வாய்மையை மறந்திட்டு மறைந்தொழி கின்றாம்" (வீர. யாப். 5 மேற்) என்று பிறரும் கூறுதல் காண்க. திக்க நிகாயத்தின் பகுதியாகிய மகா நியாய சுத்தித்திற் காணப்படும் நிதானங்களுள் இப்பேதைமை காணப்படாமையின், ஒருகால் இது வைதிக சமய நூல்களிலிருந்து மேற்கொண்ட தாகலா மென்றும், திபேத்தி லுள்ள கோயில்களில் இப்பேதைமையாகிய நிதானம், குருடனாக வுருவு கொடுத்தோவிய மெழுதப்பட்டுள தென்றும் ஆராய்ச்சியாளர் கூறுப. 55-63. உலகம் மூன்றினும் - மூவகையுலகங்களிலும்; உயிராம். உலகம் அலகில - உயிர்களின் கூட்டம் அளவில்லாதனவாம்; பல் உயிர் - பலவாகிய உயிர்கள்; மக்களும் தேவரும் பிரமரும் நரகரும் - மக்கள் தேவர் பிரமர் நரகர் என்றும்; தொக்க விலங்கும்பேயும் என்று-புட்களோடு தொக்கிருக்கும் விலங்கும் பேயும் என் றும்; அறுவகைத்தாம்-அறுவகைப்படும்; நல்வினை தீவினை என்று இருவகையால் - நற்செய்கையும் தீச்செய்கையு மாகிய இருவகைச் செய்கைகளால்; சொல்லப்பட்ட கருவிற் சார்தலும்-மக்கள் தேவர் முதலாகச் சொல்லப்பட்ட பிறப்பை யடைவதும் ; கருவிற்பட்ட பொழுதினுள் தோற்றி - அப் பிறப்புக்களில் இயைந்த காலத்தே அவற்றோடே தோற்றி; வினைப்பயன் விளையுங்காலை-செய்வினைப் பயனாகிய கருமம் தோன்றும் காலத்தில்; மனப் பேரின்பமும் - மனத்தின் கண் பெரிய இன்பத்தையும்; கவலையும் - துன்பத்தையும்: காட்டும் - காட்டுவதும் செய்யும் எ - று. உலகம் பாவம் புண்ணியம் என இருவகைப்படுமென்றும், புண்ணிய வுலகம் தேவவுலகம் உருவப்பிரமவுலகம் அருவப்பிரமவுலகமென மூவகையாக நிலவுமென்றும், இவை பொதுவில் முப்பத்தொன்றா மென்றும் கூறுப வாயினும், வினை செய்தற் குரியது நடுவுலக மெனவும், நல்வினைப் பயன் நுகர்தற் குரியது மேலுலக மெனவும், தீவினைப் பயனை நுகர்தற்குரியது கீழுலக மெனவும் முக்கூறுபடுவதுபற்றி, "உலக மூன்றினும்" என்றார். இது தமிழகத்து வழக்குப்போலும். பண்டைத் தமிழ்ப் புத்தநூல்கள் உலக மூன்றென்றே கொண்டுள்ளன வென்பதை, "இவ் வுலகுங் கீழுலகு மிசையுலகு மிருணீங்க, எவ்வுலகுந் தொழு தேத்த வெழுந்த செழுஞ்சுடர்" (வீர. யாப். 11. மேற்.) என வரும் பழம் பாட்டாலு மறியலாம். நரகர், பேய், விலங்கு முதலிய வற்றிற்குரிய வுலகினும் கீழுலகத்தவ ராயினும், அசுரருமகப்பட உயர்திணையாற் கூறப்படும் இயைபு பற்றி, மக்கள் முதலாயினரொடு கூட்டி "மக்களும் தேவரும் பிரமரும் நரகரும்" என்றார். புள் முதலிய பிற வுயிர்களுமடங்க, "தொக்க விலங்கு" என்றார். பெரும்பான்மையான நூல்கள் பிரமரைத் தேவருள் அடக்கி, மக்களும் தேவரும் நரகரும் விலங்கும் பேயுமென உயிர்வகை யைந்தென்றே கூறுகின்றன. வேறு சில நூல்கள் இவ்வைந்தனோடு அசுரரைக் கூட்டி உயிர்வகை யாறென்றும் கூறும் இவ்வாசிரியர் அவ்வசுரரை நரகரோடு அடக்கிக் கொள்கின்றாரென வறிக. ஒரு பிறப்பிற் செய்தவினை மறு பிறப்பிற் கருவிலேயே தோன்றித் தன்பயனை நுகர்விக்குங் காலமெய்துங்காறும் அமைந்திருந்து, வந்ததும் தவறாது நுகர் விப்பதுபற்றி, "கருவிற்பட்ட பொழுதினுட்டோற்றி" என்றும், "வினைப்பயன் விளையுங் காலை உயிர் கட்கு, மனப்பே ரின்பமும் கவலையும் காட்டும்" என்றும் கூறினார். நல்வினைப்பயன் இன்பமும் தீவினைப்பயன் கவலையு மாதலின், இரண்டும் கூறப்பட்டன. சார்தலும் என்றதற்கேற்பக் காட்டும் என்பது காட்டுதல் செய்யும் எனப் பொருளுரைக்கப்பட்டது. இது சொற் பொருள் விரித்தல். 64-75. ஆய்தொடி நங்காய் - அழகிய வளையணிந்த நங்கையே; தீவினை யென்பது யாதென வினவின்-தீவினையென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்; அதுகேளாய்-யான் சொல்லு மதனைக் கேட்பாயாக ; கொலையே களவே காமத் தீ விழைவு - கொலையும் களவும் காமமாகிய தீய வேட்கையுமாகிய; உலையா வுடம்பில் தோன்றுவ மூன்றும் - கெடாத வுடம்பால் உண்டாகும் தீவினைகள் மூன்றும்; பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என-பொய்யுரையும் புறங்கூறலும் கடுஞ்சொற் சொல்லுதலும் பயனில்சொல் சொல்லுதலும் என்று; சொல்லில் தோன்றுவ நான்கும் - வாக்கினிடத்தே யுண்டாகும் தீவினைகள் நான்கும்; வெஃகல் வெகுளல் பொல்லாக் காட்சி யென்று - பிறர் பொருளை வௌவக் *கருதலும் வெகுளுதலும் குற்றம்பட வுணர்தலு மென்று; உள்ளம் தன்னில் உருப்பன மூன்றும் என - மனத்தில் தோன்றுவனவாகிய தீவினை மூன்றுமென; பத்துவகையால் - பத்துவகைப்படுதலால்; பயன்தெரி புலவர்-வினைவகையும் அவற்றால் விளையும் பயனும் ஆராய்ந்தறிந்த அறிவுடையோர்; இத்திறம் படரார்-இப் பத்தினையும் ஒருநாளும் நெஞ்சாலும் நினையார்; படர்குவராயின் - நினைவராயின் ; விலங்கும் பேயும் நரகருமாகி - விலங்கும் பேயும் நரகருமாகிய கதிகளுட் பிறந்து ; கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர் - கலக்கமுற்ற மனத்தோடு கூடிய துன்ப வுடம்புற்று வருந்துவர் எ - று. எனவே, தீவினை, மெய் வாய் மனம் என்ற மூன்றாலும் செய்யப்படு மென்றும், அவ்வகையால் மெய்யில் மூன்றும் வாயில் நான்கும் மனத்தில் மூன்றுமாக வினை பத்தாமென்றும், இவற்றைச் செய்தோர் விலங்கும் பேயும் நரகருமாய்ப் பிறந்து துன்புறுவரென்றும் கூறியவாறாம். பிறரும், "மருடறா மனம்வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத் தாமே" (நீலகே. மேற்.) என்பர். ஆங்க என்பது அசை நிலை. பொதுவாகத் துறவிகளாற் பெரிதும் விலக்கப்பட்டது காமமெனினும், புத்த துறவிகள் ஏனை யெல்லாரினும் விஞ்சினவராவர்; லளிதா விஸ்தரம் என்ற நூல் (பக்: 206) இக் காமத்தின் தீமையை முப்பத்து மூன்று உவமைகளால் விரித்துக் கூறுவதை நோக்கின், "காமத் தீவிழை" வென இவர் கூறுவது பொருத்தமாகவே யுளது. தான் உள்ளளவும் கொலை முதலிய குற்றங்கட் கேதுவாதல் பற்றி, "உலையாவுடம்பு" என்றார். உலைதல் - ஈண்டுக் குற்றத்தின் தொடர்பு கெடுதல். குறளை - கோட் சொல்லுதலுமாம். கடுஞ்சொல் - இன்னாச்சொல். "சொல்லுக சொல்லிற் பயனுடைய" (குறள்.200) என்றமையின், பயனில் சொல் சொல்லுதல் தீவினையாயிற்று. நற்காட்சியின் மறுதலை யாதலின் "பொல்லாக் காட்சி" யென்றார். மனம் சிறிது மறப்பினும், அதற்கிடனாகும் உடம்பின் துன்பநிலை மறவாது கலங்கி யலையச் செய்யுமாறு தோன்ற, "கலங்கிய உள்ளக் கவலையின் தோன்றுவர்" என்றார். எனவே, கலக்கமும் கவலையுமே உள்ளத்திருப்பனவாம் என்றவாறயிற்று. வினையைச் சமஸ் காரம் என்று வழங்கும் க்ஷேமேந்திரரும், இது மன மொழி மெய்களால் தோன்றுவதென்றே தமது போதிசத்துவ அவதானகற்பம் என்ற நூலிற் கூறியுள்ளார். வினையுண்மை கொள்ளும் ஏனைச் சமயத்த வரும் இதனை யுடன்பட்டுரைப்பர். சிலர் இம் மூன்றுடன் அறிவென ஒன்றைக் கூட்டி, நான்காக வுரைத்தலு முண்டு. 76-81. நல்வினை யென்பது யாதென வினவின்-நல்வினை யென்று சொல்லப்படுவது யாதென்று கேட்பாயாயின்; சொல்லிய பத்தின் தொகுதியின் நீங்கி - முன்பு சொல்லப் பட்ட பத்துவகைத் தீவினைத் தொகுதிகளைச் செய்யாது நீங்கி; சீலம் தாங்கி - சீலத்தை மேற்கொண்டு; தானம் தலைநின்று - தானங்கள் பலவற்றையும் செய்து; மேலென வகுத்த ஒரு மூன்று திறத்து - மேற்கதி யென்று சான்றோரால் வகுத்துரைக்கப்பட்ட மூன்றாகிய; மக்களும் தேவரும் பிரமருமாகி-மக்களென்றும் தேவரென்றும் பிரம ரென்றுமுள்ள கதிகளிற் பிறந்து; மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் - தாம் செய்த நல்வினைப் பயனாகிய இன்பத்தை நுகர்வர் எ - று. சொல்லிய பத்துமாவன : "உடம்பிற் றோன்றுவ மூன்றும்," "சொல்லிற் றோன்றுவ நான்கும்,; "உள்ளந்தன்னில் உருப்பன மூன்றுமெனப் பத்து வகை" என அறிக. இப்பத்தினின்றும் நீங்கும் நீக்கத்தைச் சாதித்துக் கொடுக்கும் பாரமிதை பத்தினுள் முதற்கண் வேண்டுவன தானமும் சீலமு மாதலின், இவற்றைச் "சீலந் தாங்கித் தானம் தலைநின்று" எனச் செயன்மேல் வைத்துக் கூறினார். எல்லா வுயிர்க்கும் பொதுவாகக் கூறுதலின், மக்கட் கதியினையும் "மேலென வகுத்த" கதி யென்றார். நல்வினையின் பயன் மகிழ்ச்சி யாதலின், "மகிழ்ச்சி" யெனப்பட்டது. 82-83. உணர்வெனப்படுவது - உணர்வு என்று சொல்லப்படும் நிதானமாவது; உறங்குவோர் உணர்வின் - கண்ணுறங்கு மொரு வர்பாலுள்ள வுணர்வுபோல; புரிவு இன்றாகி - விளக்கமின்றி; புலன் கொளாது - செய்கையின்றி யுண்மை மாத்திரையாய் இருப்பது எ - று. உறங்குவோர்பாலுள்ள வுணர்வு, செய்கைக்கு வினைமுதலாதலும் செய்வினைப் பயனை நுகர்வதாதலும் பிறவுமின்றி உண்மை மாத்திரை யாய் இருப்பது கண்கூடாதலின், அதனை யெடுத்துக் காட்டி விளக்கினார். புலன் கொளல் - இந்திரியங்களாலும் மனத்தாலும்பொருண்மை கண்டு பயன் நுகர்தல். க்ஷேமேந் திரரும் (ii. 599) இவ்வாறே கூறுவர். இவ்வுணர்வை விஞ்ஞான மென்பதே பெரு வழக்கு. இதற்கு மாறாய்ப் புரிவுடைத்தாய்ப் புலன்கொள நிற்கும் உணர்வுநிலை சடாயதன மென்றும், வாயிலென்றும் வழங்கப்படுவது பற்றி, சில பௌத்த நூல்கள் உணர்வையும் வாயிலையும் ஒரு சேரத் தொகுத்துக் கூறுதலும் ஆராய்தலும் செய்கின்றன. இனி, அஜந்தாக்குகை யோவியத்தில், ஒரு வாலில்லாக் குரங்கு மரமேறுவது போலக் காணப்படுவது இந்த நிதானத்தைக் குறிப்பதா மெனக் கூறுப. 84-85. அருவுரு என்பது - அருவுரு வெனப்படும் நிதானமாவது; அவ்வுணர்வு சார்ந்த உயிரும் உடம்பும் ஆகும் என்ப - அவ்வுணர் வொடு கூடிய உயிரும் உடம்புமாகும் என்று புலவர் சொல்லுவர் எ - று. உயிர் அருவமாயும் உடம்பு உருவமாயு மிருத்தலின் இரண்டையும் சேர வைத்து அருவுரு வென்றனர். வட நூல்கள் இதனை நாம ரூப மென்றும், நாமத்தின்கண் காட்சி கருத்து, உணர்வு, செய்கை முதலியன அடங்குமென்றும், ரூபத்தின்கண் நில முதலிய நான்கு பூதங்களின் கூட்டமாகிய உடம்படங்கு மென்றும் கூறுப. திபேத்திற் காணப்படும் ஓவியங்களும், இஃது ஓராற்றைக் கடக்கும் படகு போல வரையப்பட்டுள தென்பர். சாந்தோக்கியம், பிரகதாரணிய முதலிய வுபநிடதங்களிலிருந்தே இந்நிதானம் பௌத்தர்களால் மேற்கொள்ளப் பட்டதாமென ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சொல்லுதற்கேற்ற எழுவாய் வருவிக்கப்பட்டது. 86-87. ஆயுங்காலை - ஆராயுமிடத்து; வாயில் ஆறும்-இந்திரிய மைந்தும் மனமும் ஆகிய வாயில்களாறும்; உள்ளம் உறுவிக்க-உள்ளத் தின்கண் பொருளுணர்ச்சி எய்திப் பொருந்துதற்கு; உறும் இட னாகு மென்ப-உரிய இடமாகுமென்று புலவர் கூறுவர் எ - று. வாயில்களாறாவன : மெய், வாய், கண் மூக்கு, செவி, மனம் என் பனவாம். இவ்வாறினாலும் உணரப்படும் பொருள்களும் அறுவகையாதலின், மெய் முதலியவற்றை அகவாயிலென்றும், மெய்யாலறியப்படும் பொருள் வாயா லறியப்படும் பொருள் முதலியவற்றைப் புறவாயி லென்றும் பகுத்தோதுதலு முண்மையின், "ஆயுங்காலை" யென்றார். வாயிலை வடநூலார் ஆயதனம் என்பவாகலின், இது சடாயதனமென வட நூல்களுட் கூறப்படுகிறது. வாயில், "பொறிவாயி லைந்தவித் தான்" குறள் -6.) என்புழிப்போல நின்றது. இது மனிதெனாருவன் தலைபோலவும், ஆறு சாளரமுள்ள வீடுபோலவும் ஓவிய மெழுதப்பட்டுளது. "மனதில் இல்லை, மனதில் உளது" என்ற வழக்குரையே பொருளுணர்வுக்கு மனம் இடமாதலை வற்புறுத்துதலின், அதனை விதந் தோதாராயினார் என வறிக. 88-89. ஊறென வுரைப்பது - ஊறு எனக் கூறப்படும் நிதான மாவது; உள்ளமும் வாயிலும் - மனமும் இந்திரியங்களும்: வேறு புலன்களை மேவுதல் என்ப - தம்மின் புறமாகிய பொருள்களைப் பொருந்துவதென்று புலவர் கூறுவர் எ - று. இதனை வடநூலார் பரிசம் என்பர். இச் சொல்லிரண்டும் மெய்யாகிய இந்திரியமே யன்றிக் கண் முதலியனவும் மனமும் பொருளை யுணர்தற்குளதாகும் இயைபினை யுணர்த்தும் பொதுச்சொற்களாமெனக் கொள்க. கண்ணுக்கும் காணப்படும் பொருளுக்குமுள தாகும் இயைபும் ஊறெனப்படு மென்பதாம். பொறிகளில், "கோளில் பொறி"யு (குறள் 8.) முளவாதலின், கோடற்குரிய புலன்களை, "வேறு புலன்கள்" என்றும், மெய் முதலிய வாயில்களாற் கொண்டவற்றைத் தன் கண் மேவக் கொள்ளுதலும் தள்ளுதலும் செய்யும் செய்கை வேறுபாடு பற்றி, உள்ளத்தைப் பிரித்து, "உள்ளமும் வாயிலும்" என்றும் கூறினார். புலன் என்றது, புறவாயில்களாகிய பொருள்களை யென்க. மெய் முதலியவற்றால் உணரப்படும் புறப்பொருள்கள் புலன்களில் அடங்கிப் பொறி வாயிலாக உள்ளத்துச் சென்று பொருந்து மாறுபற்றிப் "புலன்கள்" விதந்தோதப்பட்டனவென வறிக. இவ்'d2வூற்றினை நையாயிகர் சந்நிகர்ஷம் என்பர்; வைசேடிகர் சம்பந்தமென்று கொண்டு, சையோகம், சையுக்த சமவாயம், சையுக்த சமவேத சமவாயம், சமவாயம், சமவேத சமவாயம், விசேடண விசேடியமென ஆறாகப் பகுத்துக் கூறுப. மற்று, பௌத்தர் நிதானவகையுள் வைத்து நையாயிகர் முதலியோர் கூறியவற்றுள் சிலவற்றை விலக்கியும் சிலவற்றை மேற்கொண்டும் கூறுப. நையாயிகர் கூறும் இந்திரியம், பொருள், சந்நிகர்ஷம், ஞானம் என்ற நான்கனுள், இந்திரியமும் பொருளும் வாயிலின் கண்ணும், சந்நிகர்ஷம் ஊற்றின் கண்ணும், ஞானம் பிறவற்றின்கண்ணும் அடங்குமா றறிக. இந் நிதானம் கண்ணில் அம்பு தைப்புண்டிருக்கும் ஒருவன்போல ஓவியஞ் செய்யப்படு கிறதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். 90-92. நுகர்வே - நுகர்ச்சி யெனப்படும் நிதானமாவது; புலன் களை யுணர்வு நுகர்தல்-புலன்களாகிய பொருளை யுணர்ந்து அவற்றின் பயனை யடைதல்; வேட்கை - வேட்கை யென்னும் நிதானமாவது; விரும்பி நுகர்ச்சி யாராமை - அப் பயனை விரும்பி நுகர்ந்தவழி அதன்மேற் செல்லும் ஆசையடங் காமையாம்; பற்று எனப்படுவது- பற்றெனப்படும் நிதான மாவது; பசைஇய அறிவு - அடங்கா தெழுந்த ஆசையால் அதனையேபற்றி நிற்பதாம் எ - று. நுகர்வினை வேதனை யென்றும், வேட்கையைத் திருஷ்ணை யென்றும், பற்றினை உபாதானமென்றும் வடநூல்கள் கூறு கின்றன. போதி மூலத்து நாதனாவோர்க்கு இன்றியமையாத நால்வகைச் சுமிருதி யுபத் தானங்கட்கும் இந்நுகர்வு அடிப்படை யென்பர். அந்நான்கும் காயம் வேதனை சித்தம் தன்மம் என வரும். இது காதலிருவர் தம்மிற் றழீஇ யிருப்பது போல ஓவியஞ் செய்யப்படுகிறது. வேட்கை, ஐம்புல நுகர்ச்சி வேட்கை, பிறப்பு வேட்கை, பிறவாமை வேட்கை யென முக்கூறுபடும். நிலையாத வற்றை நிலையுடையவாகக் கருதி விருப்பஞ் செய்தற்கு இதுவே முதல். வேட்கையைத் தாயாகவும், பேதைமையைத் தந்தை யாகவும் உலகியற் றுன்பவாழ்க்கையை அவ்விரண்டின் கான் முளையாகவும் இலங்காவதார சூத்திரமென்னும் நூல் உருவகஞ் செய் துரைக்கின்றது. மாரனென்னும் தேவனுக்கு இவ்வேட்கையை மகனென்பர். இதனைக் கள்ளருந்துமொருவனாக உருவகஞ் செய்து ஓவிய மெழுதியுள்ளனர். பிறப் பிறப்புக்கட்கு முதற்காரணமென்பது பற்றி, பற்றினை உபதானமென்று கூறுகின்றனர். இது, விடயம், புகழ், சம்பிரதாயம், ஆன்மா என நான்கு வகையாள் இயலும் என்பர். விடயமாவது, இந்திரயங்களால் உண்டாகும் இன்பத்திற்கு பற்றுச் செய்வது; புகழாவது, பிறர் புகழ்வதை விரும்பியும் இகழ்வதை யஞ்சியும் பற்றுச் செய்வது; சம்பிரதாயமாவது, வேள்வி செய்தல் முதலிய சடங்குகளிலும், விரத நோன்புகளிலும் பற்றுச் செய்தல்; ஆன்மா, ஆன்மா வுண்டென நினைந்து அதன்மேற் பற்றுச் செய்வது, ஒருவன் பல்வகைப் பூக்களைப் பறித்துத் தொகுப்பது போல இதனை யுருவகப் படுத்தி ஓவியந் தீட்டியுள்ளனர். 93-94. பவம் எனப்படுவது - பவமென்று சொல்லப்படும் நிதானமாவது ; கரும ஈட்டம் - கருமங்களின் தொகுதி; தரும் முறை இது என - தன் பயனை விளைத்துக் கொடுக்கும் முறைமை யிதுவாகு மென்று கருதி; தாம்தாம் சார்தல் - கருமத்தைச் செய்தோர் அப் பயனையுடன்பட்டு என்று கொண்டமைவதாம் எ - று. உடன்பட்டு என்று கொண்டமைவதாவது,1 'நன்றாங்கால் நல்லவாக் காண்பவன் அன்றாங்கால் அல்லற்' படாது அதன் விளைவாய துன்பத்தையும் நுகர்தற்குச் சமைந்தவுள்ள முடையனாதல். இதற்குப் பலரும் பலவாறாகக் கூறுகின்றனர். க்ஷேமேந்திரர் பவமாவது உருவு கோடலென்று கொண்டு, அது காமம், ரூபம், அரூபமென மூவகைப் படுமென்பர். ஒல்டன்பர்க் கென்பார், பிறப் பிறப்புக்களின் இடைய றாமை யென்பர். வடநாட்டுப் பௌத்தர்கள், பவத்தைத் திருமணம் போலவும் தோற்றத்தை மகப்பேறு போலவும் கொள்கின்றனர். இவர் கருத்தை யுணராது பலரும் பலவாறு கூறி இடர்ப்படும் திறத்தை ஹார்தயாள் என்பார் 2தாமெழுதிய ஆராய்ச்சி நூலில் விரியக் கூறுமாற்றா லறிக. முன்னைப் பிறப்புக்களிற் செய்த பற்றுக் காரணமாக வரும் பிறப்புக்கிடையே, பற்றுக் காரணமாக விளைந்த கருமத்தொகுதியில் வரக் கடவ நன்மை தீமைகட்கு இப்பவ மென்னும் நிதானம், இடமும் காலமுமா யமைவ தென்பது பௌத்தநூல்களின் துணிபென வறிக. திபேத்தியர் இதனை ஒரு மணமகளாக வுருவங் கற்பிக்கின்றனர். 95-97. பிறப்பெனப்படுவது-பிறப்பென்னும் நிதானமவது; கருமப் பெற்றியின் - செய்த வினைகளின் தன்மைக் கேற்ப; உறப்புணர் உள்ளம் - ஏனையவற்றோடு மிகவும் சேர்ந் திருக்கும் விஞ்ஞான மானது; சார்பொடு - முன்னும் பின்னு மாய்ச் சாரும் நிதானங்களுடன்; கதிகளில் - பலவகைப் பிறப்புக் களிலும்; காரண காரியவுருக்களில் தோன்றல் - காரண காரியமாய் இயையும் உடம்புகளில் தோன்றுவதாம் எ - று. செய்யப்படும் வினைக்கேற்பப் பிறப்பெய்துதலால் "கருமப் பெற்றியின்: என்றும், உருவம், வேதனை, சஞ்ஞை, சமஸ்காரம் என்ற நான்கு கந்தங்களுடன் பிரிப்பறச் சேர்ந்திருக்கும் இயல்பு பற்றி, விஞ்ஞான கந்தத்தை, "உறப்புணர் உள்ளம்" என்றும், நிதானங்கள் தாமும் ஒன்றை யொன்று சார்வாகக்கொண்டு தோன்றுதலின், "சார் பொடு" என்றும், உருவுடைய உடம்பும், முன்னைய வுடம்புகளின் காரியமாயும், வரும் உடம்புகட்குக் காரணமாயும் இயைதலின், "காரண காரிய வுருக்க"ளென்றும் கூறினார். காரண காரியமாய் இயையும் உடம்பெல்லாம் ஐவகைக் கந்தங்களின் கூட்டமென்பது பௌத்த நூற் றுணிபாதலின் உறப்புணர் உள்ளம் சார்வோடு கதிகளில் உருக்களில் தோன்றல் என்றாற் போலவே, ஐங்கந்தங்களின் தோற்றமே பிறப்பெனப்படும் நிதானமாம் என்று தசபூமிக சூத்திரமுடையார் கூறுகின்றார். கருமப் பெற்றியின் சார்பொடு கதிகளில் தோன்றல் என்ற கருத்தையே வேறு வாய்பாட்டால், பல்வகைப் பிறப்பின் சுழற்சித் தோற்றம் பிறப்பென்பதென்று க்ஷேமேந்திரர் கூறுகின்றார். இப் பிறப்பினை வடநூல்கள் சாதியென்று வழங்குகின்றன. திபேத்தி லுள்ள ஓவியங்கள் இதனை மணஞ் செய்துகொண்டதன் விளை வாக மகற்பெற்ற மனிதனொருவன்போல் உருவந்தீட்டிக் காட்டுகின்றன. 98-103. பிணியெனப்படுவது - நோய் என்று சொல்லப்படுவது; பிறிது சார்பாய் - பேதைமை முதலாகக் கூறியவற்றின் வேறாய சார்பாய், உடம்பு இயற்கையின் திரிந்து-உடம்பின் தன்மையின் வேறுபட்டு; இடும்பை புரிதல் - அதற்குத் துன்பத்தை யுண்டு பண்ணுவதாம்; மூப்பென மொழிவது-மூப்பென்று சொல்லப்படுவது; அந்தத்து அளவும் - சாகும் வரையில்; தாக்கும் நிலையாமையின் - வந்து மோதுகின்ற நிலையாமையால்; தளர்ந்திடுதல்-உடம்பு தளர்ச்சி யெய்து வதாம்; சாக்காடென்பது-இறத்தலென்று சொல்லப்படுவது; அருவுருத்தன்மை யாக்கை-அருவாதலும் உருவாதலு மாகிய தன்மையினையுடைய வுடம்பானது; வீழ்கதிரென மறைந் திடுதல்-மேலைக் கடலில் விழும் ஞாயிறுபோல மறைவதாம் எ - று. பிணியும் மூப்பும் சாக்காடுமென இவர் கூறினாராக வடநூலார் பலரும் திரையும் மரணமுமென்ற இரண்டையே கூறுவர் ; சிலர் பிணியைக் கூட்டித் திரையும் பிணியும் மரணமும் என்பர். சிலர் இவற்றோடு அவலமும் கவலையும் கையாறும் அழுங்கலும் பிறவும் கூட்டிக் கூறுவர். இப் பிணி முதலியன தோற்றம் சார்வாகத் தோன்றுவனவாயினும் தம்முள் ஒன்றற்கொன்று சார்வா காமையின், "சார்பிறிதாய்" என்றார் ; இதனைப் பிறிது சார்பாய் என மாறிக்கொள்க. உடம்பின் இயல்பான தன்மையில் உளதாகும் திரிபே நோய் என்பார். "இயற்கையின் திரிந்து" என்றும், இதனால் விளையும் பயன் இதுவென்பார், "இடும்பை பிரிதல்" என்றும் கூறினார். அந்தம் - சாக்காடு. கணந்தோறும் நிலையாமை யெய்துதலின், "தாக்கும் நிலையாமை"யென்றும், அதன் தாக்குதற் காற்றாது உடம்பு தளர்ச்சியடைகிறதென்பார், "தாக்கும் நிலையாமை யிற்றாந் தளர்ந்திடுதல்" என்றும் குறிப்பித்தார். உருவ வகையால் காயமென்றும், அருவவகையில் தன்மம், சித்தம், வேதனை என்றும் உடம்பானது போதி சத்துவரால் உணரப்படுவது பற்றி "அருவுருத் தன்மை யாக்கை" என்றார். உடம்பு, புறவுடம்பு, அகவுடம்பு, அகப்புற வுடம்பு எனக் காணப்படும் வழக்கும் புத்தர்களிடையே யுண்டு, "இளங் கதிர் ஞாயி றெள்ளுந் தோற்ற" த்தோடு விளங்கும் உடம்பு, இறக்குங்கால் அதன் வீழ்ச்சி போறலின், "வீழ் கதிரென மறைந்திடுதல்" என்றார். திபேத்தியர்களால் இங்கே கூறிய பிணி மூப்பு முதலியன சுடலைக்குக் கொண்டுபோகப்படும் பிணம் போல உருவமெழுதப்பட்டுள்ளன. 104-117. பேதைமை சார்வாச் செய்கை யாகும் - பேதைமையாகிய நிதானத்தைச் சார்பாகக் கொண்டு செய்கையாகிய நிதானம் தோன்றும்; செயற்கை சார்வா உணர்ச்சியாகும்-அச் செய்கையைச் சார்பாகக் கொண்டு உணர்ச்சி யென்னும் நிதானம் தோன்றும் ; உணர்ச்சி சார்வா அருவுருவாகும் - அவ்வுணர்ச்சியைச் சார்பாகக் கொண்டு அருவுருவாகிய நிதானம் தோன்றும்; அருவுரு சார்வா வாயிலாகும் - அவ்வருவுருவைச் சார்பாகக் கொண்டு வாயிலாகிய நிதானம் தோன்றும்; வாயில் சார்வா ஊறாகும்மே-அவ்வாயிலைச் சார்பாகக் கொண்டு ஊறாகிய நிதானம் தோன்றும்; ஊறு சார்ந்து நுகர்ச்சியாகும் - அவ்'d2வூற்றினைச் சார்பாகக் கொண்டு நுகர்ச்சி யாகிய நிதானம் தோன்றும்; நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும் - அந்நுகர்ச்சியைச் சார்பாகக் கொண்டு பற்றாகிய நிதானம் தோன்றும்; பற்றின் கருமத் தொகுதி தோன்றும் - அப்பற்றினைச் சார்பாகக் கொண்டு வினைப்பயன் தோன்றும்; கருமத் தொகுதி காரணமாக - வினைப்பயனைக் காரணமாகக் கொண்டு ; ஏனை வழி முறைத் தோற்றம் வரும்-ஏனைப் பவமும் தோற்றமுமாகிய நிதானங்கள் தோன்றும்; தோற்றம் சார்பின்-அத்தோற்றத்தைச் சார்பாகக் கொண்டு; பிணி மூப்பு சாக்காடு அவலம் அரற்று கவலை கையாறு எனத் தவலில் துன்பம் தலை வரும்-நோயும் முதுமையும் இறப்பும் அவலமும் அழுகையும் கவலையும் செயலறுதியுமென்ற கெடாத துன்பமாகிய நிதானம் தோன்றும்; என்ப-என்று நிதான வியல்பறிந்த புலவர் கூறுவர் எ - று. நிதானமென்னும் சொற்குத் தொடர்ச்சியுறக் கட்டுத லென்பது பொருளாதலின், அவ்வியைபுதோன்றச் "சார்வா" என்றும், "சார்ந்து" என்றும் கூறினார். பௌத்தர்களின் வட நூல்களிலும் இந்நிதானம் பன்னிரண்டின் தோற்றமுறை ஈண்டுக் கூறப்பட்டது போலவே, "அவிச்சையைக் காரணமாகக் கொண்டு சம்ஸ்காரமும், சம்ஸ்காரத்தைக் காரணமாகக் கொண்டு விஞ்ஞானமும், விஞ்ஞானத்தைக் காரணமாகக் கொண்டு நாமரூபமும், நாமரூபத்தைக் காரணமாகக் கொண்டு சடாயதனமும், சடாயதனத்தைக் காரணமாகக் கொண்டு பரிசமும், பரிசத்தைக் காரணமாகக் கொண்டு வேதனையும், வேதனையைக் காரணமாகக் கொண்டு திருஷ்ணையும், திருஷ்ணையைக் காரணமாகக் கொண்டு உபாதானமும், உபாதானத்தைக் காரணமாகக் கொண்டு பவமும், பவத்தைக் காரணமாகக் கொண்டு ஜாதியும், ஜாதியைக் காரணமாகக் கொண்டு பிணி மூப்பு முதலிய துன்பங்களும் தோன்றும்" என்று கூறப்படுமாறு காண்க. பிணி மூப்பு முதலியன இன்பமல்ல வாதலின், "தவலில் துன்பம்" எனப்பட்டன. 118-133. இந்நுகர்ச்சி-பேதமை முதலாக நுகரப்படும் இந்நிதானங் களின் தொடர்பு; ஊழில் மண்டிலமாச் சூழும்-முடிவில்லாத மண்டில முறையாக (வட்டமாய்)ச் சூழ்ந்து நிற்பதாகும்; பேதைமை மீளச் செய்கை மீளும்-பேதைமையாகிய நிதானம் நீங்கின் அதன் காரியமாகிய செய்கை நீங்கும்; செய்கை மீள உணர்ச்சி மீளும் - செய்கையாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய உணர்ச்சி நீங்கும்; உணர்ச்சி மீள அருவுரு மீளும்-உணர்ச்சியாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய அருவுரு நீங்கும்; அருவுரு மீள வாயில் மீளும்- அருவுருவாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய வாயில் நீங்கும்; வாயில் மீள ஊறு மீளும் - வாயிலாகிய நிதானம் நீங்க ஊறாகிய அதன் காரியம் ஒழியும் ; ஊறு மீள நுகர்ச்சி மீளும் - ஊறாகிய நிதானம் நீங்கவே அதன் காரியமாகிய நுகர்ச்சி நீங்கும்; நுகர்ச்சி மீள வேட்கை மீளும்-நுகர்ச்சியாகிய நிதானம் நீங்க அதன் காரியமாகிய வேட்கை நீங்கும்; வேட்கை மீள பற்று மீளும் - வேட்கையாகிய நிதானம் நீங்கவே அதன் காரியமாகிய பற்று நீங்கும் : பற்று மீளக் கருமத் தொகுதி மீளும் - பற்றுநீங்கிய வழி அதன் காரியமாய்த் தோன்றும் வினைப்பயன் நீங்கும்; கருமத் தொகுதி மீள தோற்றம் மீளும்-அவ்வினைப்பயன் நீங்கவே பவமாகிய அதன் காரியம் நீங்கும்; தோற்றம் மீள பிறப்பு மீளும்-பவம் நீங்கிய வழிப் பிறப்பு நீங்கும்; பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடும் அவலம் அரற்று கவலை கையாறு என்று இக்கடையில் துன்பமெல்லாம் மீளும் - பிறப்பு நீங்கிய வழி அதனைச் சார்ந்துண்டாகும் பிணியும் முதுமையும் சாக்காடு அவலமும் அரற்றலும் கவலையும் கையறவும் என்ற இம் முடிவில்லாத துன்பங்களெல்லாம் ஒழியும்; மீட்சி இவ்வகையால் என்ப - துக்க நிவாரணமாகிய மீட்சி இவ்வாறாகும் என்று அறிந்தோர் சொல்லுவர் எ - று. பிறப்பைச் சார்ந்து தோன்றும் பிணி மூப்பு முதலிய துன்பங்க களால் பேதைமையும், அது சார்வாகச் செய்கையும் இவ்வாறே பிறவும் காரண காரியமா யியைந்து கறங்கு போலச் சுழலுதலின், "ஊழின் மண்டிலமாச் சூழும்" என்றும், இவற்றினாக்கம் நுகர்ச்சியாதலின் ‘இந்நுகர்ச்சி"யெனச் சுட்டியும் கூறினார். ஊழ்-முடிவு; காரண காரியமாய் இயையும் முறைமை யென்றுமாம். இவ்வாறு நிதானம் பன்னிரண்டின் தோற்றமும் ஆக்கமும் கூறியது துக்கமும் துக்கத்தோற்றமுமாகிய இருவகை வாய்மை களையும் குறித்து நிற்குமாறறிக. "இவ்வகையால் மீட்சி"யென்றது துக்க நீக்கமாகிய வாய்மை குறித்து நின்றது. நிதானங்களின் ஆக்கமும் நீக்கமும் கூறியவாற்றால், உலகியல் நிகழ்ச்சி யனைத்தும் காரண காரிய வியைபால் நிகழ்வதன்றிப் பிறிதில்லை யென்னும் பௌத்தநூற் றுணிபை வலியுறுத்தி நிற்குமாறு காண்க. முன்னே "தவலில் துன்ப" மென்றமையின், ஈண்டுக் "கடையில் துன்ப" மென்றார். இனி, நிறுத்த முறையானே "கண்ட நான்குடைத்தாய்" என்ற நால்வகைக் கண்டங்களையும் முறையே கூறுகின்றார். 134-136. பேதமை செய்கை என்றிவை இரண்டும் - நிதானம் பன்னிரண்டனுள் பேதமையும் செய்கையுமாகிய இரண்டும்; காரண வகைய வாதலால் - ஏனையவற்றிற்குக் காரணமாகும் கூறுபாடுடைய வாகையால்; ஆதிக்கண்டமாகும் என்ப - முதற் கண்ட மெனப்படும் என்று சான்றோர் கூறுப எ - று. கண்டம் நான்காகப் பகுத்துக் கூறும் முறை வடநுல்களுள் எதன் கண் உளது என்பது தெரியவில்லை. "என்ப" எனப் பிற ஆசிரியர்மேல் வைத்தோதுதலால், இப்பாகுபாட்டினை யுணர்த்தும் நூல்கள் இருந்திருக்க வேண்டுமென்ப தொருதலை. ஏனையவாவன, இரண்டாங் கண்டத்துட் கூறப்படும் உணர்ச்சி முதலிய வைந்துமென வறிக. 137-140. உணர்ச்சி அருவுரு வாயில் ஊறு நுகர்ச்சியென்று நோக் கப்படுவன-உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியு மென்று காணப்படும் நிதானங்கள் ஐந்தும்; முன்னவற்று இயல் பால்-முன்னே முதற் கண்டத்துக் கூறப் பட்ட இரண்டின் இயல்பினாலே; துன்னியவாதலின்-வந்தன வாதலால்; இரண்டாங் கண்டம் ஆகும் என்ப-இரண்டாங் கண்ட மெனப்படும் என்பர் எ - று. பேதைமையும் செய்கையும் ஏனை யுணர்ச்சி முதலிய வைந்துந் தோன்றித் துன்பஞ் செய்தற்கு அடிப்படையிலேயே கோட்டம் விளைப் பதுபற்றி, "முன்னவற் றியல்பால் துன்னிய" வென்றார். இயல்பு - துக்கத்துக் கேதுவாய கோட்டமுடைமை. உணர்ச்சி முதலிய வைந்தும் அறிவால் பகுத்துணரப்படுவதுபற்றி, "நோக்கப் படுவன" என்றார். 141-144. வேட்கை பற்று கரும வீட்டம் எனக் கட்டுரைப்பவை - வேட்கையும் பற்றும் கருமத் தொகுதியு மெனப் பகுத்தோதப் படும் நிதான மூன்றும்; அப்பெற்றி-அம்முறையே; நுகர்ச்சி யொழுக்கினுள் குற்றமும் வினையு மாகலான்-உணர்ச்சி முதல் நுகர்ச்சியீறாக ஐந்தனாலும் நிகழும் நிகழ்ச்சிக்கண் விளையும் குற்றமும் அதற்குரிய வினையுமாதலால்; மூன்றாங் கண்டம்-மூன்றாங் கண்டமெனப்படும் எ - று. செய்கை வினையும்; அதன் பயனாகிய செயப்படுபொருள் கருமமுமாதலால்; அச் செயப்படுபொருட் டொகுதியைக் 'கரும வீட்டம்', என்றார். பிற விடங்களிற் கருமத் தொகுதி யென்றதும் இக்கருத்தே பற்றியென வறிக. கருமத் தொகுதியின் உடன் விளைவு பவ மாதலின், வேட்கை முதல் மூன்றுடன் பவத்தையும் கூட்டி, மூன்றாங் கண்டத்துள் அடக்கிக் கொள்க., இதனாலே நான்காம் கண்டத்தில் பவம் கூறப்படாமை யறிக. வேட்கை முதல் பவம் ஈறாக நின்ற நான்கனுள், வேட்கையும் பற்றும் குற்ற மென்றும், கரும வீட்டமும் பவமும் வினையென்றும் கொள்க. 145-147. பிறப்பு பிணி மூப்பு சாவு என மொழிந்திடுந் துன்பமென இவை-பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடாகக் கூறப்படும் துன்பமும் என்ற இவை; பிறப்பில் உழக்கு பயனாதலின்-பிறந்தவுடம்பின்கண் எய்தி வருந்தும் வினைப்பயனாதலால்; நான்காம் கண்டம் - நான்காம் கண்டமெனப்படும் எ - று. பிணி மூப்பு முதலியனவும் அவற்றிற்குச் சார்பாய பிறப்பும் உடம்பொடு தோன்றிய வழியே வந்து வருத்துவனவாதலால், "பிறப்பில் உழக்கு பயனாதலின்" என்றார். பயன் எனவே, வினைப்பயனாதல் பெற்றாம். மூன்றாங் கண்டத் திறுதியில் வினையைக் கூறலின் இதன் கண் அதன் பயனைக் கூறியவாறு காண்க. இனி, மூவகைச் சந்திகளைக் கூறுகின்றார். 148-152. பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி-பிறப்புக்குக் காரணமாகிய செய்கையும் உணர்ச்சியும் பொருந்துவது முதற் சந்தியாம்; நுகர்ச்சி யொழுக்கொடு விழைவின் கூட்டம்-நுகர்ச்சியாகிய ஒழுக்கமும் வேட்கையும் கூடும் சந்தி; புகர்ச்சி யின்றி அறிவது இரண்டாம் சந்தி - குற்றமின்றி யறியப்படுவதாகிய இரண்டாஞ் சந்தியாகும்; கன்மக் கூட்டத் தொடு வருபிறப்பிடை முன்னிச்செல்வது மூன்றாம் சந்தி-கன்மத் தொகுதியும் மேல்வரும் பிறப்பும் பொருந்திச் செல்வ தாகிய சந்தி மூன்றாஞ் சந்தியாகும் எ - று. நால்வகைக் கண்டங்களும் சொற்புணர்ச்சிபோலத் தம்மிற்புணரு மியல்பினவாதலின், சந்திகள் மூன்றாயினவென வறிக. முதற்கண்டத்திறுதிக் கண்ணதாகிய செய்கையும் இரண்டாங் கண்டத்து முதற் கண்ணதாகிய உணர்ச்சியும் பொருந்தும் சந்தி முதற்சந்தி யாதலின், "பிறப்பின் முதல் உணர்வு ஆதிச்சந்தி" என்றார். ஆதிச்சந்தி யென்பது தமிழ்முடிபு பெற்றது. பிறப்புக் கேதுவாகிய கரும வீட்டத்துக்கு முதலாதலின் செய்கையை, "பிறப்பின் முதல்" என்றார். இவ்வாறே இரண்டாங் கண்டத் தீற்றினின்ற நுகர்ச்சியும் மூன்றாங் கண்டத்து முதலில் வரும் வேட்கையும் பொருந்துஞ் சந்தியை இரண்டாஞ் சந்தி யென்றும், மூன்றாங் கண்டத்தீற்றுக் கருமவீட்டமும் நான்காங் கண்டத்து முதலில் நிற்கும் பிறப்பும் புணரும் புணர்ச்சியை மூன்றாஞ் சந்தி யென்றும் கூறினாரென வறிக. நான்காங் கண்டத்து வரும் பிறப்பு உருவுடைத்தாகலின், அதனை நாடிக்கொள்ளும் இயைபு தோன்ற, "முன்னிச் செல்வது" என்றார். புகர்ச்சி - குற்றம். கன்மத் தொகுதி: ஈண்டுப் பவத்தைக் குறித்து நின்றது. 153-158. மூன்றுவகைப் பிறப்பும் மொழியுங்காலை-மூன்று வகையான பிறப்புக்களையும் கூறுமிடத்து; ஆன்ற மார்க்கத்து ஆய உணர்வே தோன்றல் வீடு எனத் துணிந்து தோன்றியும் - தூய்மை யமைந்த விசுத்தி மார்க்கத்து முடிவாகிய சமாதி ஞானமே வீடுபேறெனத் துணிந்து அதுவேயாய்த் தோன்றி நிற்பதும்; உணர்வுள் அடங்க உருவாய்த் தோன்றியும் - உணர்வாகவே யாகாது அவ் வுணர்வு உள்ளே யடங்க உருக்கொண்டு நிற்பதும்; உணர்வும் உருவும்உடங்கத் தோன்றி - உணர்வும் உருவும் உடனிகழத் தோன்றி; புணர் தரு மக்கள் தெய்வம் விலங்காகையும் - கூட்டமாய் உறையும் மக்களும் தெய்வமும் விலங்குமாகத் தோன்றி நிற்பதுமாம் எ - று. சமாதி ஞானமே வீடெனத் துணிந்து நிற்கும் பிறப்பு அருவப் பிறப்பென்றும், உணர்வுள் அடங்க வுருவாய்த் தோன்றுவது உருவப் பிறப்பென்றும், உணர்வும் உருவும் உடங்கு தோன்றும் பிறப்பு தெய்வப் பிறப்பும் மக்கட் பிறப்பும் விலங்குப் பிறப்புமா மென்றும் கூறும் முறைமைபற்றி இவ்வாறு கூறினார். இவற்றை முறையே அரூபதாது, ரூபதாது, காமதாது என்றும் கூறுப.1 உடங்கு: உடங்கவென வினையெச்சமாயிற்று. புணர்தல்-கூடியுறைதல். இதனைத் தேவர்க்கும் விலங்குக்கும் கூட்டுக. இனி, மேலே கூறிய இருவகைப் பிறப்பும் எய்துதற்குரிமை தோன்ற, "புணர்தரு மக்கள்" என்றாரென்றுமாம். தோன்றியும் என்புழி விலங்காகையும் என்றதற் கேற்ப நிற்பதும் என ஒரு சொல் வருவிக்கப்பட்டது. 159-168. காலம் மூன்றும்-காலவகை மூன்றனையும்; கருதுங்காலை - ஆராயுமிடத்து; மறந்த பேதைமை செய்கையானவற்றை - மறத்தலைச் செய்யும் பேதைமையும் செய்கையும் என்ற இரண்டு நிதானங்களையும்; இறந்தகாலம் என்னல் வேண்டும் - இறந்த காலமென அறியவேண்டும்; உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு வேட்கை பற்று பவம் தோற்றம் என்றிவை-உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியும் வேட்கையும் பற்றும் பவமும் தோற்றமும் என்ற இந் நிதானங் களை; சொல்லுங்காலை - கால வகையிற் கூறுபடுத் துரைக்கு மிடத்து; நிகழ்ந்த காலமென நேரப்படும் - இவை நிகழ்கால மெனக் கொள்ளப்படும்; பிறப்பு பிணி மூப்பு சாவு அவலம் அரற்று கவலை கையாறுகள் - பிறப்பும் பிணியும் முதுமையும் சாக்காடும் அவலமும் அரற்றும் கவலையும் கையாறு மென்ற இவைகள்; எதிர்காலம் என இசைக்கப்படும்-எதிர்காலத் தனவாம் என்று சொல்லப்படும் எ - று. காலம் மூன்றென்று கொண்டு, அவற்றுள் இந்நிதானங்கள் பன்னிரண்டினையும் ஈண்டுக் கூறிய வகையே பகுத்தடக்குந் திறம் பெரும்பான்மை வழக்காகும் என்று1 ஆராய்ச்சியாளர் கூறு கின்றனர். மறத்தலைச் செய்யும் பேதைமையை ஒற்றுமை நயத்தால் "மறந்தபேதைமை" யென்றார். இப் பாகுபாடு தேரவாதத்தை மேற்கொண்டு கூறும் முறை யென்று ஓல்டன்பர்க்கென்பார் கூறுதலால் அறிகின்றோம். மகாயான புத்தர்கள் இக் காலப் பாகுபாட்டை விழைகின்றிலர். இது குறித்து ஆராய்ச்சி நிகழ்த்திய புலவர்கள் பலரும் மாறுபட்ட கருத்துக்களை வழங்கி முரணுவது பற்றி இம் மணிமேகலை கூறும் முறையே ஓரளவிற் கொள்ளற் பாற்றென வமைவர். 169-174. அவா பற்று பேதைமை என்றிவை-வேட்கையும் பற்றும் பேதைமையுமென்ற இம் மூன்றும்; குலவிய குற்றமெனக் கூறப்படும் -வினைக்கும் அதன் பயனாய துன்பத்துக்கும் ஏற்கப் பொருந்திய குற்றமென அறிஞர்களாற் கூறப்படும்; புனையும் பவமும் அடைவினையும் செயலாகும்-உருப்படுத்தும் பவமும் அதனையடுத்து வரும் வினையும் செய்கையாகும்; ஆங்கே நேருங்காலை-அப்பொழுது குற்றம் வினையென்ற இரண்டாலும் விளையும் பயனைக் கருதுமிடத்து; உணர்ச்சி பிறப்பு மூப்பு பிணி சாவு இவை நிகழ்ச்சிப் பயன் - உணர்ச்சியும் பிறப்பும் முதுமையும் நோயும் சாக்காடும் என்ற இவை குற்றவினை நிகழ்ச்சியின் பயனாகும் எ -று. இப் பகுதி பேதைமை முதல் பன்னிரண்டாகக் கூறிய நிதானங் களைக் குற்றமும் வினையும் பயனுமென மூவகைப்படுத்து, பேதைமை பற்று வேட்கை யென்ற மூன்றும் குற்றமென்றும், பவமும் செய்கையும் வினையென்றும், உணர்ச்சி முத லேனை யேழும் பயனென்றும் கூறியவாறாயிற்று. அவாவும் வேட்கையும் ஓரினமாதலின், வேட்கையை அவாவென்றார். வேட்கை மிகுதியாற் பற்றும், பற்றுமிகுதியாற் பேதைமையும் தோன்றி மன முதலிய கருவிகளைக் குற்றப்படுத்தலின், அவ்வியைபு பற்றி, "அவாவே பற்றே பேதைமை யென்றிவை" யென முறை செய்தார். தோற்றத்துக்கு வேண்டுங் காரணங்களைத் தொகுத்தல் பற்றி, பவத்தைப் "புனையும் பவம்" என்றும், தோற்றிய வுருவின் பாலுளவாகும் அசைவும் அசைவின்மையும் வினையாகலின், "அடைவினை" யென்றும் கூறினார். குற்றமும் வினை நேர்பட்ட வழிப் பயனுமுண்டாதல் ஒருதலையாதலின், "ஆங்கே நேருங் காலை" யென்றார். செய்கையின் பயன் "நிகழ்ச்சிப் பயன்" எனப்பட்டது. 175-178. குற்றமும் வினையும் பயனும் துன்பம்-குற்றமும் வினையும் பயனுமாகிய யாவும் துன்பம் பயப்பனவாகும்; பெற்ற தோற்றப் பெற்றிகள் நிலையா - குற்ற முதலியவற்றாற் பெற்ற பிறப்புக் குரிய வுடம்புகள் நிலையில்லாதனவாகும்; எப்பொருளுக்கும் ஆன்மா இலை - உயர்திணையும் அஃறிணையுமாகிய எப்பொருட்கும் ஆன்மா என்பதொன்று கிடையாது; என இப்படி உணரும் இவை-என்று இவ்வாறு உணரப்படும் இவைகள்; வீட்டியல்பாம் - வீடு பேற்றிற்கு உறுதியாம் எ -று. குற்ற முதலிய மூன்றும் துன்பம் பயப்பனவாதலின், "துன்பம்" என்றும், இத் துன்பத்தை நுகர்தற்கு இடனும் கருவியுமாகிய உடம்புகளை, "பெற்ற தோற்றப் பெற்றிகள்" என்றும் அவை வளர்தலும் மூத்தலும் பிணிப்பட் டிறத்தலும் செய்தல் கண்கூடாகலின், "நிலையா" என்றும், எப் பொருளை யாராய்ந்து நோக்கினும் அவை குற்ற முதலிய மூன்றன் துன்பச் சூழலிற்பட்டு ஐவகைக் கந்தக் கூட்டமாய உடம்பொடு கூடி நின்று நிலை பேறின்றி மாயக் காண்பதன்றி, அவற்றின் வேறாகிய ஆன்மா வென வொன்று நிலையுடைத்தாகக் காணப்படாமையின், "ஆன்மா விலை" யென்றும், இவற்றை இவ்வகையாற் பகுத்துணர்ந்த வழி இவற்றின் நீக்கம் தானே யுண்டாதலின், "இவை வீட்டியல்பாம்" என்றும் கூறினார். இப் பகுத்துணர்வே வீடுபேற்றிற் குறுதியா மென்பதை, முன்பும், "நிலையில வறிய துன்பமென நோக்க, உலையா வீட்டிற் குறுதி யாகி" என்றது காண்க. இதனால் வீடுபேற்றிற்கு உறுதி கூறிய அறவணவடிகள், நிறுத்த முறையானே நால்வகை வாய்மைகளையும் நிரலேநிறுத்திக் கூறுகின்றார். 179-182. உணர்வு அருவுரு வாயில் ஊறு நுகர்வு பிறப்பு பிணி மூப்பு சாவு என - உணர்ச்சியும் அருவுருவும் வாயிலும் ஊறும் நுகர்ச்சியும் பிறப்பும் பிணியும் மூப்பும் சாக்காடும் என்றும்; அவலம் அரற்று கவலை கையாறு என - அவலமும் அரற்றலும் கவலையும் கையறவும் என்றும்; நுவலப்படுவன - சொல்லப்படும் நிதானங்களே; நோயாகும் - துக்கமாம் எ று. பிறப்புக்கும் சாக்காட்டிற்கும் இடையே பிணியினும் மூப்பினும் விரவியும் தனித்தும் வந்து துன்புறுத்தலின், அவல முதலிய நான்கினையும் பிரித்துக் கூறினார். பிரித்துக் காட்டும் என வென்னும் இடைச் சொல் எண்ணுப் பொருளில் வந்து பிறாண்டும் சென்றியையுமாறு பிரிந்து நின்றது. நோய் செய்வனவற்றை நோயென்றது உபசாரம். இதனால் துக்க மென்னும் முதல்வாய்மை கூறியவாறு. 183-185. அந்நோய் தனக்கு - அத் துக்கத் தோற்றத்துக்கு; பேதைமை செய்கை அவா பற்றுக் கரும வீட்டம் இவை-பேதைமையும் வினையும் வேட்கையும் பற்றும் வினைப் பயன்களும் என்ற இவையே; காரணமாகும் - காரணமாம், எ - று. அந் நோய் என்ற சுட்டு ஆற்றலால் அதன் தோற்றம் குறித்து நின்றது. வினையும் வினைப்பயனும் வேறு வேறாய்க் காரணமாதல் தோன்ற, "செய்கை" யென்றும், "கரும வீட்ட" மென்றும் கூறினார். துக்கத்தோற்றம் கூறுமாற்றால் அதன் காரணம் பேதைமை முதலிய வைந்துமாமென்று கூறி இரண்டாவது வாய்மை கூறியவாறு. தொக்கு நின்ற ஏகாரம் பிரிநிலை. 186-188. துன்பம் தோற்றம் பற்று காரணம்-துன்பத்துக்கும் பிறப்புக்கும் பற்றுடைமையே காரணமாம்; இன்பம் வீடு பற்றிலி காரணம் - இன்பத்துக்கும் பிறவாத வீடுபேற்றிற்கும் பற்றின்மையே காரணமாம்; ஒன்றிய உரை - ஒருங்கே தொகுத் துரைக்கும் இவ்வுரையே; வாய்மை நான்காவது - நால்வகை வாய்மையாவது எ - று. துன்பம் தோற்றம் பற்றே காரணம் என்றது, மூன்றாவதாகக் கூறப்படும் துக்க நீக்கம். இன்பம் வீடு பற்றிலி காரணம் என்றது. நான்காவதாகக் கூறப்படும் துக்க நீக்க நெறி. துக்கம் துக்கத் தோற்றம் துக்க நீக்கம் துக்க நீக்க நெறியென்னும் இவற்றைத் துக்கம் சமுசயம் நிரோதம் மார்க்கம் என்று கூறி, ஒவ்வொன்றும் தன்மஞான க்ஷாந்தி, தன்மஞானம், அந்வய ஞான க்ஷாந்தி, அந்வய ஞானமென நந் நான்கு வகைப்பட்டுப் பதினாறாக விரிதலின், இவற்றைச் சுருங்க வுரைப்பதை, "ஒன்றியவுரை"யென்றார். முன்பும், "பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறுவது பெரும்பே ரின்பம், பற்றின் வருவது முன்னது பின்னது, அற்றோ ருறுவது" (2: 64-7) என வேறு வகையாற் கூறியிருத்தல் காண்க. 189-190 .உருவு - உருவமும்; நுகர்ச்சி - வேதனையும்; குறிப்பு - குறிப்பும்; பாவனை - பாவனையும்; உள்ள அறிவு - விஞ்ஞானமும் என்ற; இவை ஐங்கந்தமாவன - இவைகள் ஐவகைக் கந்தங்களெனப்படும் எ - று. ஈண்டுக் கூறிய உருவு முதலைந்தையும் "ஓங்குருவம் வேதனை யுளக்குறிப்புப் பாவனைமெய், தாங்குணர்வென் றைந்தாங்கந் தம்" என்று பரமத திமிரபானு வென்னும் நூல் கூறுகிறது. வட நூல்கள் இவ் வைந்தனுள் நுகர்ச்சியை வேதனை யென்றும், குறிப்பினைச் சஞ்ஞை யென்றும், பாவனையைச் சம்ஸ்கார மென்றும் கூறுகின்றன. இவற்றுள் உருவமாவது உடல்; அது பூதம் உபாதாய மென்னும் இரண்டினாலுண்டாம்; வேதனை யாவது துன்பமும் இன்பமும் இரண்டும் விரவுவது மென மூன்றாகும்; குறிப்பாவது ஐம்பொறியும் மனமுமாம்; பாவனை யாவது மெய் வாய் மனம் என்ற மூன்றாலு முண்டாகும் அறமும் பாவமுமாம்; விஞ்ஞானமாவது இந்நான்கினோடும் பொருந்தி யெண்ணும் எண்ணமாம் என்று பரமத திமிரபரனு உடையார் கூறுகின்றார். இவ் வைந்துங் கூடிய கூட்டமே அருவுருவெனப் படும் உயிருமுடம்புமெனக்கொள்க.1 இவற்றின் விரவைச் சிவஞானசித்தி முதலிய தமிழ் நூல்களிலும் சருவதரிசன சங்கிரக முதலிய வட நூல்களிலும் கண்டு கொள்க. 191-198. மறுவின்று கிளப்பின் - குறைவின்றிக் கூறுமிடத்து; அறுவகை வழக்கு - ஆறுவகைப்பட்ட வழக்காவன; தொகையே தொடர்ச்சி தன்மை மிகுத்துரை இயைந்துரை என்ற நான்கினும்- தொகையும் தொடர்ச்சியும் தன்மைமிகுத்துரையும் இயைந் துரையும் என்ற நான்கோடும்; இயைந்த - சேர்ந்து வருவன வாகிய; உண்மை வழக்கு...இல்லது சார்ந்த வுண்மை வழக்கும் என - உண்மை வழக்கெனவும், இன்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த வுண்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த வுண்மை வழக்கெனவும், உள்ளது சார்ந்த வின்மை வழக்கெனவும், இல்லது சார்ந்த வின்மை வழக்கெனவுமாம் எ - று எனவென்பது எங்குஞ் சென்றியைந்தது. ஆம் என்பது வருவிக்கப்பட்டது. தொகை முதலியன இயைந்த வழக்காவது தொகையுண்மை வழக்கு தொகையின்மை வழக்கு என்றாற் போல வருவது. இவ்வாறே பிறவும் ஒட்டிக் கொள்க. இவ்வகையால் வழக்கு இருபத்து நான்காமாயினும், ஈண்டு ஆசிரியர் சுருக்கம் வேண்டித் தொகை முதலிய நான்கையும் தனிப்படக் கூறி, அவற்றின் பின் அறுவகை வழக்கினையும் பொதுப்படக் கூறு கின்றார். சுருங்கக் கூறுமிடத்தும் இன்றியமையாது வேண்டப் படுவனவற்றை யெஞ்சாமற் கூற வேண்டுவது பற்றி, "மறுவறக் கிளப்பின்" என்றார். 199-201. சொல்லிய தொகைத்திறம்-மேலே தொகை முதலாகச் சொல்லப்பட்டவற்றுள் தொகை யென்னும் கூறாவது; உடம்பு நீர் நாடு - உடம்பும் நீரும் நாடுமாகும்; தொடர்ச்சி - தொடர்ச்சியாவது; வித்து முளை தாள் என்று இந்நிகழ்ச்சியில் - நெல்வித்தின் முளையும் முளையில் தாளும் அத்தாளிலிருந்து நெல்லும் எனத் தோன்றி நிலவும் இந்நிகழ்ச்சியால்; அவற்றை நெல்லென வழங்குதல் - அக்காரண காரியங்களை நெல்லென்று வழங்குவதாம் எ - று. பல்வகைத் தாதுக்களின் கூட்டத்தை உடம்பென்றும், பல சிறு துளிகளின் கூட்டத்தை நீரென்றும், பல சிறியவும் பெரியவு மாகிய ஊர்களின் கூட்டத்தை நாடென்றும் வழங்குவது தொகைத் திறம் என்பார், "தொகைத்திறம் உடம்பு நீர் நா"டென்றார். நெல்வித்தினின்று முளையும் அதனினின்று தாளும் அதனினின்று நெல்லும் ஒன்றினொன்று காரண காரியமாய்த் தோன்றித் தொடர்ந்து நின்று நெல்லென வழங்குமாறு போலக் காரண காரியத் தொடர்ச்சியாய் வருவது தொடர்ச்சி யென்பார், "வித்து முளைதாளென்றிந் நிகழ்ச்சியில் அவற்றை நெல்வென வழங்குதல்" என்றார். இனி, இந்நூற்களை யாராய்ந்து கண்ட அருணந்தி சிவனார், தொகையுந் தொடர்ச்சியும் உண்மை வழக்கோடும் இன்மை வழக்கோடும் இயைந்து தொகை யுண்மை வழக்கென்றும், தொகையின்மை வழக்கென்றும், தொடர்ச்சி யுண்மை வழக்கென்றும் தொடர்ச்சியின்மை வழக்கென்றும் வருமென்று கூறித் தொகையுண்மை வழக்காவது, "ஒருவனென் றோதப் பட்டான் உருவாதி யைந்துங்கூடி, வருபவனென்று ரைத்தல் தொகை யுண்மை வழக்க தாகும்" என்றும், தொகையின்மை வழக்காவது, "உருவமங் காதி யாய வைந்தையு மொருவனின்று, தருவது தொகையின் இன்மை வழக்கதாம் சாற்றுங் காலே" என்றும், தொடர்ச்சி யுண்மை வழக்காவது, "காரண காரியத்தின் தொடர்ச்சியாய்க் கால மூன்றின், சோர்வறத் தோன்றுங் கெட்டு வழியென்கை தொடர்ச்சி யுண்மை" யென்றும் தொடர்ச்சியின்மை வழக்காவது "ஒருவனே எக்காலத்து முள்ளா னென்று தேர்வது தொடர்ச்சி யின்மை வழக்கதாம்" (சிவ. சித்தி. பரபக். 70-71) என்று கூறுகின்றார். 202-204. இயல்பு மிகுத்துரை - தன்மை மிகுத்துரையாவது; ஈறுடைத்தென்றும் - ஒரு பொருள் அழிந்ததென்றும்; தோன்றிற்றென்றும் - பிறந்ததென்றும்; மூத்ததென்றும் - முதுமை யுற்றதென்றும் கூறப்படும் தன்மைகள்; மூன்றின்-மூன்றனுள்; ஒன்றின் இயல்பு மிகுத்துரைத்தல் - ஒரு கூற்றின் தன்மையை மிக் கெடுத்துக் கூறுவதாம் எ - று. ஈறுடைமையாகிய தன்மையை "ஈறுடைத்தென்றும்" பிறப்புடைமையைத் "தோன்றிற்றென்றும்" முதுமையுறுந் தன்மையை "மூத்ததென்றுங்" கூறினார். பிறப்பு மூப்பு இறப்பு என்னாது பிறழக் கூறினார். செய்யுளாதலின். தோற்றத்தினும் அழிவு நன்கு விளங்குதலும் முதுமை அவ்வழிவுபோல நன்கு விளங்காமையுங் கண்டு இவ்வாறு கூறினாரெனினுமாம். இதனையும் உண்மை வழக்கோடும் இன்மை வழக்கோடும் இயைக்கும் அருணந்தி சிவனார், இரண்டினையும், "தோற்றிய பொருள்க ளெல்லாம் நாசமா மென்று சொல்லும். மாற்றமூன்றுரைத்தல் மற்றை மிகுத்துரை வழக்கி னுண்மை, போற்றிய பொருள் கண் கட்குப் போனது போன்முதிர்ந்து, வேற்றுமைப்பட்ட தென்கை மிகுத்துரை யில்வழக்கே" (சிவ சித். பரபக். 72) என்று கூறுவர். இதற்கு உரைகண்ட திருவொற்றியூர்த் தத்துவப் பிரகாசத் தம்பிரான் சுவாமிகள் "கண்கட்குப் போனது போன் முதிர்ந்து வேற்றுமைப் படுகை காரியமழிந்து காரணங் கிடக்கை" யென்றும், "மிகுத்துரை மூன்றும் உள்வழக்கு இல்வழக்கு இரண்டினும் வழங்கும் வழியெனக் கொள்க" என்றும் கூறுவது ஈண்டுக் குறிக்கத் தக்கது. இவ்வாசிரியர் மேலே கூறுகின்ற இயைந்துரைத் திறத்தை அருணந்தி சிவனார் விளக்கிற்றிலர். அவர், இதனை மேற்கொள்ளாமையை, தொகை தொடர்ச்சி மிகுத்துரை மூன்றும் உண்மை வழக்கு இன்மை வழக்கு என்ற இரண்டி னோடுறழ ஆறாதலைக் காட்டி, "தொகை தொடர்ச்சி மிகுத்துரை யென்று மூன்றாய், உற்றிடும் வழக் கிரண்டு மொன்றுமூன்றாகி யாறாம்" (சிவ. சித். பரபக் 69) என்பதனாலும் துணியப்படும். படவே, இயைந்துரை யொழித்து ஏனைமூன்றுமே கொண்ட பௌத்த நூல்களும் உண்டென்பது எய்துகிறது. 205-207. இயைந்துரை என்பது-இயைந்துரை என்று சொல்லப் படுவது; எழுத்துப் பல கூடச் சொல்லெனத் தோற்றும் - எழுத்துக்கள் பல கூடிய வழிச் சொல்லென்பது தோற்றுமாறு போலன்றி; பல நாள் கூடிய எல்லையை - பல நாட்கள் கூடிய ஒரு கால வெல்லையை; திங்கள் என்று வழங்குதல் - திங்களென்று வழங்குவது போல்வது எ - று. எழுத்துக்களின் கூட்டத்தால் உண்டாகும் சொல் தொகைத் திறமாதலின், அதனை விலக்கி, இத்துணையென வரையறுக்கப் பட்டவற்றின் கூட்டம் "இயைந்துரை"யென்றார். அன்றி யென்பது அவாய் நிலை. முப்பதும் முப்பத்தொன்றும் முப்பத்திரண்டும் இருபத்தொன்பதுமாய்த் திங்களின் நாளெல்லை வேறுபடுதலின், "பல நாள் கூடிய எல்லை" என்றார். ஆனித்திங்கள் முப்பத்திரண்டு நாட்களும் சித்திரை முதலியன முப்பத்தொரு நாட்களும் ஐப்பசி முதலியன முப்பது நாட்களும் கார்த்திகை இருபத்தொன்பது நாட்களும் கொண்டிருத்தல் காண்க. வரையறைப்படாத பல பொருள்தொகுதி தொகை யெனவும், வரையறைப்பட்ட பல பொருள் தொகுதி இயைந்துரையெனவும் வழங்குப. 208-216. உள்வழக்கு உணர்வு-உள்வழக் கென்பது உள்ளதாகிய உணர்ச்சியை யுளதென்றல்; இல்வழக்கு முயற்கோடு - இல்வழக்காவது இல்லாததாகிய முயற்கோட்டினை இல்லை யென்றல்; உள்ளது சார்ந்த வுள் வழக்கு - உள்ளது சார்ந்து வரும் உள் வழக்காவது; சித்தத்துடனே ஒத்த நுகர்ச்சியாகும் - உள்ளதாகிய உணர்வோடு அதற்கியைந்த நுகர்ச்சியு முண்டென்பதாம்; மின்போல் - மின்னுப்போல; சித்தம் உற்பவித்தது என்கை - உணர்வாகிய உள்பொருள் தோன்றிற்றென இல்வழக்குக் கூறுதல்; உள்ளது சார்ந்த இல்வழக்காகும் - உள்ளதைச் சார்ந்து வரும் இல்வழக்கெனப்படும்; காரணம் இன்றிக் காரியம் நேர்தல்-காரணமில்லையாகக் காரியத்தைக் கொண்டுரைத்தல்; இல்லதுசார்ந்த உள்வழக்காகும் - இல்லாததைச் சார்ந்து வரும் உள்வழக்காகும்; முயற்கோடு இன்மையின் தோற்றமும் இல்லெனல் - முயற்கோடு இல் பொருளாதலின் அதற்குத் தோற்றமில்லை யென்று கூறுதல்; இல்லது சார்ந்த இல்வழக்காகும்-இல்லாததைச் சார்ந்து வரும் இல்வழக் கெனப்படும் எ - று. சித்தமாகிய உணர்வு உள்பொருள் அதனால் உணர்ந்து கொள்ளப் படும் நுகர்ச்சி உள்வழக்காதலின் "சித்தத் துடனேயொத்த நுகர்ச்சி" உள்ளது சார்ந்த வுள் வழக்காயிற்று. உள்பொருட்குத் தோற்றங் கூறல் இல்வழக்காதலால் "சித்தமுற் பவித்தது" என்றும், "மின்போல்" என்றும் அதனை யெடுத்துக் காட்டினார். காரணம் காணப்படாததாகக் காணப்படும் காரியத்தைக் கொண்டு கூறுவது இல்லது சார்ந்த உள்வழக்காகும். முன்பு இல்லாதது பின்பு தோன்றியது கூறல் இவ்வில்லது சார்ந்த வுள்வழக்கின் பாற்படும் என்ப. இனி, அருணந்திசிவனார் இவ்வறுவகை வழக்கு களையும், "உள்வழக் குளதுண்டென்கை முயற்கோடின் றில்வ ழக்கே:" என்றும் "உணர்வுசார்ந்துணர்வு திக்கை யுள்ளது சார்ந்த வுண்மை, உணர்வுபி னின்றா மென்கை யுள்ளது சார்ந்த வின்மை, உணர்வுமுன் பின்றித் தோன்றலில்லது சார்ந்த வுண்மை, உணரினில் லதுசா ரின்மை யுள்ளங்கை யுரோம நாணே" (சிவ. சித்தி. பரபக். 74) என்றும் கூறுவர். 217-228. நான்கு நயமெனத் தோன்றப்படுவன-நால்வகை நயங் களெனத் தெளிய வுணரப்படுபவை; ஒற்றுமை வேற்றுமை புரிவின்மை இயல்பு என்க - ஒற்றுமையும் வேற்றுமையும் புரிவின்மையும் இயல்பும் என்பனவாம் என அறிக; ஒற்றுமை நயம்-அவற்றுள் ஒற்றுமை நயமாவது; காரண காரிய மாகிய பொருள்களை ஒன்றாவுணர்தல் - காரணமும் காரியமுமாய் நிற்கும் பொருள்களை வேற்றுமை கருதாது காரணமா யாதல் காரியமா யாதல் உணர்ந்து கோடலாம்; வீற்று வீற்றாக வேதனை கொள்வது - காரண காரியங்களை ஒன்றாகவுணராது தனித்தனி வேறுபடுத் துணர்ந்து கோடல்; வேற்றுமை நயமென வேண்டல் வேண்டும்-வேற்றுமை நயமென்று கொள்கவென ஆசிரியர் விரும்புவர்; பொன்றக் கெடாப் பொருள் வழிப் பொருள்களுக்கு-முற்றக் கெடுதலில்லாத முதற் பொருள் காரியப் பொருள் என்பவற்றிற்கு; ஒன்றிய காரணம் - பொருந்தியுள்ள காரணம்; உதவுகாரியத்தைத் தருதற்கு உள்ளம் இல்லை என்றல்-விளைத்தற்குரிய காரியத்தைப் பயத்தலை யறிதற்கேற்ற உணர்வுநிலை யில்லை யென்பது; புரிவின்மை நயமெனப் புகறல் வேண்டும் - புரிவின்மை நயமெனக் கூறலை ஆசிரியன் விரும்பும்; நெல்வித் தகத்துள் நெல் முளை தோன்றுமெனல்-நெல் விதையினின்று நெல் முளையே தோன்றுமெனக் கோடல்; நல்ல இயல்பு நயம் - குற்றமற்ற இயல்பு நயமெனப்படும் எ - று. காரியத்தை விரும்புமொருவன் அதற்குரிய காரணம் தோன்றிய வழி, அக்காரணத்தையே காரியமாகக் கூறல் ஒற்றுமை நயம். சோறு வேண்டுங் குறையுடையானொருவன் அரிசி பெற்ற வழிச் சோறு பெற்றேன் என்பது ஒற்றுமை நயம். இவ்வாறே காரியத்துக்கும் கூறிக் கொள்க. இது புகை இது நெருப்பு எனக் காரண காரியங் களை வேறுபடுத்துணர்வது வேற்றுமை நயமென்பார், "வீற்று வீற்றாக வேதனை கொள்வ"தென்றார். வேதனை - உணர்வு. வேதனை கொள்வதென்பது ஒரு சொல்லால் உணர்தலென்னும் பொருளதாயிற்று. பொன்றக் கெடாப் பொருள் - நித்தப் பொருள்; முதற் பொருள் என்றலுமாம் நித்தப் பொருளின் நித்தத்துவத்துக்குரிய காரணங் காண்டலும், அதனால் அத்தன்மை யெய்துதலும் உணர்தலாகாமையானும், வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்புமாகிய காரண மூன்றுங் கூடிச் செம்மை நிறமாகிய காரியத்தைப் பயத்தல் எவ்வாறென வறிதல் கூடாமை யானும், "ஒன்றிய காரணம் உதவு காரியத்தைத் தருதற்குள்ளம் தான் இலையென்றல்" என்றார். புரிவின்மை - உணரவாராமை; புரிதல் - விளங்குதல். உள்ளத்தின் செயல் உணர்தலால் ஒற்றுமை நயத்தால் "உள்ளம்" என்றார், மடவோரும் எளிதினுணர் வதாகலின், இயல்பு நலத்தை, "நல்ல இயல்பு நயம்" என்றார். 228-234. இவற்றின் நாம் கொள்பயன்-இந்நால்வகை நயங் களாலும் நாம் கொள்ளும் பயன்களாவன; தொக்க பொருள் அலது ஒன்று இல்லை என்றும் - எல்லாம் காரண காரியமாய்த் தொக்க பொருள்களேயன்றித் தனியே ஒன்று கிடையா தென்றும்; அப் பொருளிடைப் பற்று ஆகாதென்றும் - அப்பொருள்களிடத்தே பற்று வைத்தல் கூடாதென்றும்; செய்வானொடு கோட்பாடு இலை என்றும் - வினை முதலாகிய கருத்தாவொடு செய்கைக்கு இயைபு கொள்ளுதல் இல்லை யென்றும்; எய்து காரணத்தால் காரியம் என்றும் - பொருந்து கின்ற காரணத்தினால் காரியம் பிறக்குமென்றும்; அதுவும் அன்று அது அலாததுமன்று என்றும் - அது காரண காரியமு மன்று அல்லாதது மன்று என்றும்; விதிமுறை - முறை முறையாக; தொகையினால் நான்கும் விரிந்த - தொகை முதலியவற்றால் நான்காய் விரிந்தன எ - று. காரண காரியமாய்த் தொக்கவற்றை ஒற்றுமை நயத்தால் ஒன்றாய்க் காண்டலின், எல்லாம் தொக்க பொருள் எனத் துணிவது ஒற்றுமை நயத்தாலாம் பயன் என்றார். ஒற்றுமை நயத்தாற் சுகமென்றும் துக்கமென்றும் தோன்றுவன வேற்றுமை நயத்தால் பல்வேறு கூறுகளாய் வேறுபட்டுத் தோன்றுதலின், "அப் பொருளிடைப் பற்றாகா" தென்பது பயனாயிற்று. செய்வோனாகிய காரணத்தால் நிகழும் செய்கையும் கருமமும் புரிவின்மை நயத்தால் உணர வாராமையின், "செய்வானொடு கோட்பாடிலை" யென்பது பயனாயிற்று. நெல்வித்தினின்று நெல் முளை தோன்றக் காணும் இயல்பு நயத்தலால் காரணத்தினின்று காரியம் பிறக்கு மென்ற உணர்வும், வித்து முளையாகாமையும், முளை வித்தின் வேறன்றென்பதும் பயனாயின. இவ்வாறு ஒவ்வொரு நயமும் முறையே பயனை விளைத்தலின், "விதி முறை விரிந்த" என்றார். விரிந்த: அன் பெறாது முடிந்த அஃறிணைப் பன்மை முற்றுவினை. 235-237. வினா விடை நான்குள - வினாக்கட்குரிய விடை நான்கு வகையாக உள்ளன ; துணிந்து சொல்லல் - அவை ஒரு தலையாய்த் துணிந்து கூறலும் ; கூறிட்டு மொழிதல் - பல கூறு செய்து ஒவ்வொன்றாய்க் கூறலும் ; வினாவினை விடுத்தல் - வினா வெதிர் வினவுமாற்றால் விடை யிறுத்தலும்; வாய் வாளாமை யென-வாய் பேசாமையு மென்பனவாகும் எ - று. வினா விடை யென்று இவ்வாசிரியர் கூறியது தொடுக்கும் வினாவிற்கு விடுக்கும் விடை யென்னும் பொருளதாகக் கொண்டு, "செப்பினும் வினாவினும் வழாஅ லோம்பல்" (தொல். சொல். 13) என்புழிச் செப்பின்கண் அடக்கி, "செப்பு நான்கு வகைப் படும், துணிந்து கூறல், கூறிட்டு மொழிதல், வினாவி விடுத்தல், வாய் வாளாதிருத்தல் என" என்று தெய்வச் சிலையார் கூறுகின்றார். வாளாதிருத்தலை வாளாமை யென்றார் ; உண்ணாதிருத்தலை உண்ணாமை யென்றாற் போல "வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே" (தொல். சொல். 14) என்பவாகலின், வினா விடுத்தலினும் வினாவின் விடுத்தலென்பது சீரிதாத லறிக. 238-239. தோன்றியது கெடுமோ கெடாதோ என்றால்-தோன்றிய தொரு பொருள் கெடுமோ கெடாதோ என்று வினாவினால்; கேடுண்டு என்றல் துணிந்து சொலல் ஆகும் - விடை தோன்றியதற்குக் கேடுண்டு என ஒருதலையாய்த் துணிந்து கூறுதல் துணிந்து சொல்லுதலாம் எ - று. தோன்றின் மறைதல் கண்கூடாதலின், தோன்றியது கெடுமோ கெடாதோ என்று வினவுவோர்க்குக் கெடுமெனத் துணிந்து கூறல் செப்பாயிற்று. தெய்வச்சிலையாரும் "துணிந்து கூறலாவது தோன்றியது கெடுமோ என்ற வழி, கெடுமென்றல்" என்பர். தோன்றியது கெடுதற்கு, "தோற்றமுண்டேல் மரணமுண்டு" (7 : 2) என நம்பி யாரூரரும் கூறியருளுதல் காண்க. 240-243. செத்தான் பிறப்பானோ பிறவானோ என்று - செத்த வனைக் குறித்து ஒருவன் இவன் மீட்டும் பிறப்பானோ பிறக்கமாட்டானோ என்று கேட்ட வழி ; செப்பின் - அவற்கிறுக்கும் விடையில் ; பற்றிறந்தானோ அன்மகனோ எனல் - அவன் பற்றறத் துறந்தவனோ அல்லனோ எனப் பகுத்துத் துறந்தவனாயின் பிறவானென்றும், அல்லனாயின் பிறப்பானென்றும் கூறல் ; கூறிட்டு மொழிதல் - கூறு செய்து விடுத்தலென; மிக விளம்புவர்-விளங்கச் சான்றோர் சொல்லுவார்கள் எ -று. பிறப்புப் பிறவாமைகட்கு வேண்டும் காரணம் விளங் காமையின் கூறிடல் வேண்டிற்று. "பற்றிறந்தானோ அன்மகனோ எனல்" கூறிட்டு வினாவிக் காரணம் பெற்று, செவ்விய விடையிறுப் பான் பற்றிறந்தானாயின் பிறவானென்றும், அன்மகனாயின் பிறப்பானென்றும் மொழிவான். கூறிட்டு வினாவி மொழி தலென்னாது, "மொழிதல்" என்றதனால் ஏற்புடைய மொழிகள் வருவிக்கப்பட்டன. இனித் தெய்வச்சிலை யார், "கூறிட்டு மொழி தலாவது செத்தவன் பிறப்பானோ என்ற வழி, பற்றறத் துறந்தானோ பிறனோ என்றல்," என்று வினா வாய்பாட்டாற் கூறிட்டு மொழிதல் கூறுவர். 244-246. வினாவின் விடுத்தல் - வினாவெதிர் வினாவி விடை யிறுத்தலாவது ; முட்டை முந்திற்றோ பனை முந்திற்றோ எனக் கட்டுரை செய் என்றால் - முட்டையாகிய விதை முந்தியதோ பனை முந்தியதோ இன்னது முந்தியது என விடையிறுக்க என்று ஒருவன் வினாவினால்; எம்முட்டைக்கு எப்பனை என்றல்-எந்த முட்டைக்கு எந்தப் பனை காட்டுக என விடையிறுத்தலாம் எ - று. பனையின் விதையை முட்டை யென்றல் வழக்கு. பனை விதையின் கூடு கொண்டு எண்ணெய் விற்பார் அதனை முட்டை யென்று வழங்குமாறு காண்க. முட்டையைக் காட்டியவழி, அதனைப் பயந்த பனை முந்திற்றாதலும், பனையைக் காட்டியவழி முட்டை முந்தியதாதலும் இனிது விளங்குதலின், எதிர் வினாவும் விடையாதல் கண்டு, "வினாவின் விடுத்தல்" என்றார். "வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே" (சொல். 14) என்பது தொல் காப்பியம். தெய்வச்சிலையாரும் இதுவே கூறினர். 247-249. வாய் வாளாமை - ஒன்றும் விடை கூறாதொழி தலாவது; ஆகாயப்பூ பழைதோ புதிதோ என்று புகல்வான் உரைக்கு-ஆகாயப் பூ பழமையானதோ புதியதோ என்று கேட்க விரும்புவோன் வினாவிற்கு; மாற்றம் உரையாதிருத்தல் - விடையொன்றும் கூறாதொழிதலாம் எ -று. ஆகாயத்தில் பூ இல்லாமையின், அது இல் பொருளாதலின் அதனைக் குறித்து வினாதலும் விடுத்தலும் பயனில மொழி தலாய்க் குற்றம் பயத்தலின், வாய் வாளாமை வேண்டுவதாயிற்று. தெய்வச் சிலையாரும் "ஆகாயப் பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை" யென்றார். விடை யொன்றும் கூறாது அவனோடு வேறு உரையாடலும் கூடாதென்றற்கு, "மாற்றம்" என்றும், அவன் பயனில் சொல் பாராட்டுவோ னென்பார், "புகல்வோன்" என்றும் கூறினார். 250-253. கட்டும் வீடும் - கட்டும் வீடுமாகிய இரண்டினையும் ; அதன் காரணத்ததும் - ஒவ்வொன்றன் காரணத்தினையும்; ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை-கூடியிருந்து பெறு வித்தற் குரியவர் பிறர் யாருமில்லை; யாம் மேல் உரைத்த பொருள்கட் கெல்லாம் - யாம் முன்னே சொல்லியுள்ள துக்கங்க ளெல்லாவற்றிற்கும்; காமம் வெகுளி மயக்கம் காரணம் - காமமும் வெகுளியும் மயக்கமும் என்ற மூன்றுங் காரணமாம் எ - று. கட்டு என்பது துக்கமும் அதற் கேதுவு மென்ற இவற்றோடு பிணிப் புண்டிருத்தல். வீடு, இன்பமும், அதற்குரிய ஏதுவுமாம். அதன் காரணத்தது என்பதை இரண்டோடும் இயைக்க. கட்டும் வீடும் எய்துதற்குப் பிறர் காரணரல்லர்; அவரவரே காரணரென்பது கருத்து. கட்டும் அதனைப் பயக்கும் ஏதுவுமாகிய இரண்டிற்கும் அடிப்படை யான காரணம் காமம் வெகுளி மயக்கங்களாதலின், "மேலுரைத்த பொருள் கட் கெல்லாம் காமம் வெகுளி மயக்கங் காரணம்" என்றார் திருவள்ளுவரும், "காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன், நாமங் கெடக்கெடும் நோய்" (குறள். 360) என்றல் காண்க. வீடுபேற்றினைப் புதல்வராற் பெறலாமென்பாரை மறுத்தற்கு, "ஒட்டித் தருதற் குரியோ ரில்லை" யென்றார்; முன்னரும், "புத்தே ளுலகம் புதல்வருந் தாரார், மிக்க வறமே விழுத்துணை யாவது" (22. 137-8) என்றார். 254-255. அநித்தம் துக்கம் அநான்மா அசுசி யெனத் தனித்துப் பார்த்து - பொருள்கள் நிலையில்லாதன வென்றும் துன்பந் தருவன வென்றும் அநான்மா வென்றும் அருவருப் புடையன வென்றும் தனித்தனியாக ஆராய்ந்து கண்டு; பற்று அறுத் திடுதல் - பற்றினை நீக்குமுகத்தால் காமமாகிய காரணத்தைக் கெடுப்பாயாக எ - று. இவ்வநித்த முதலிய நான்கினையும் விபரியாசங்க ளென்றும், அநித்தியம் அநான்மா அசுசிதுக்கமென முறை செய்தும் அசுவகோசரும், வாசபந்துவும், சாந்திதேவரும் கூறுவர். நால்வகைமிருதியுபத்தானங்கட்கும் முன்னர் இன்றியமையாது வேண்டப்படுவன இந்நான்கு மென்றும், இதனாற் காமமாகிய பெருங் குற்றங் கெடுமென்றும் ஆசிரியர் பலரும் வற்புறுத்து கின்றனர். இதனை அசுப பாவனை யென்றலு முண்டு. 256-257. மைத்திரி கருணை முதிதை என்று அறிந்து - மைத்திரி பாவனை கருணைப் பாவனை முதிதைப் பாவனை யென்று சொல்லப் படுகின்ற பாவனைகளை யறிந்து; திருந்தும் நல்லுணர்வால் - அவற்றால் திருந்தப் பெறும் நல்லுணர்வு கொண்டு; செற்றம் அற்றிடுக- வெகுளியைப் போக்குவாயாக எ -று. மைத்திரி பாவனையாவது எல்லா வுயிர்களையும் நட்புற வோடு நினைந்து அவையெல்லாம் துன்பம் நோய் முதலியன வின்றி இன்ப முடையவாகுக என நினைத்தல் என்று சதசஹஸ்ரிக பிரத்ஞபாரமிதை1 யென்ற நூல் கூறுகிறது. இப் பாவனையால் எவ்வுயிர்க்கும் நலஞ் செய்தற்கும், அவற்றிற்கு வேண்டுவனவற்றை யுதவுதற்கு முரிய திருந்திய வுணர்வு பிறக்கிறது. கருணைப் பாவனையாவது பிறவுயிர்கட் குண்டாகுந் துன்பங் கண்டு உள்ளமுருகி அதனை நீக்கற்கு விரையும் விரைவுணர்வு எய்து கிறது. இதனைச் செய்வோர், உயிர்கள் வறுமையின்றியின்பச் செல்வ முடையவாகுக எனப் பாவிப்பர். முதிதைப் பாவனை யாவது பிறவுயிர்கள் பெற்றிருக்கும் ஆக்கமும் இன்பமும் கண்டு மன மகிழ்வும் நிறைவும் அமைதியுங்கொண்டு, அவை அவற்றின் நீங்கா திருப்பனவாகுக என நினைப்பது. இதனால் எப்போதும் செவ்விய உணர்வுடையதாயிருக்கும் செம்மை நிலை யுண்டா கிறது என்பர். இப்பாவனைகளால் உணர்வின் செம்மை குன்றாது விளங்குதலால், "மைத்திரி கருணா முதிதை யென்றறிந்து திருந்தும் நல்லுணர்வால்" என்றும்' இதனால் வெகுளியாகிய குற்றம் எளிதின் நீங்குதலின், 'நல்லுணர்வாற் செற்ற மற்றிடுக" என்றும் கூறினார். 258-259. சுருதி சிந்தனா பாவனை தரிசனை கருதி உய்த்து-சுருதியும் சிந்தனையும் பாவனையும் தரிசனையும் ஆகிய நான்கையும் ஆராய்ந்துணர்ந்து; மயக்கம் கடிக - மயக்கத்தைப் போக்குவாயாக எ-று. சுருதியாவது அறவுரைகேட்டல், சிந்தனையாவது கேட்ட வற்றைச் சிந்தித்தல். பாவனையாவது கேட்டவாறு ஒழுகுதல். தரிசனையாவது உண்மை தெளிதல். இச் சுருதி முதலிய நான்கினையும் உபேக்ஷா பாவனை யென்றும் கூறுப. இதனால் "செத்தினும் போழினும் செஞ்சாந் தெறியினும்" திரியாத மெய்யுணர்வு2 விளைதலால், "கருதியுய்த்து மயக்கம் கடிக" என்றார். கருதியுய்த்தல் - ஆராய்ந்துணர்தல். 260-264. இந் நால்வகையால் - இக் கூறிய சுருதி முதலிய நான்கு நெறியால்; மனத்திருள் நீங்கு என்று - மனமயக்கம் கெடு வாயாக என்று; முன்பின் மலையா-முன்னுக்குப் பின் முரணுதல் இல்லாத; மங்கல மொழியின் - அறமாகிய சொற்களால்; ஞானதீபம் நன் கனம் காட்ட - ஞானமாகிய விளக்கத்தைத் தெளியக் காட்டினாராக; பாவை - பாவைபோலும் மணிமேகலை; தவத்திறம் பூண்டு- உண்மை ஞானத்துக்குரிய தவத்தின் கூறுகளை மேற்கொண்டு; தருமம் கேட்டு - பல்வகை யறநெறிகளையும் தெளிவுறக் கேட்டு; பவத்திறம் அறுகு என நோற்றனள்-பிறப்புக்கேதுவாகிய குற்றங்களின் நீங்குவேனென நோற்கலுற்றாள் எ - று. "இந் நால்வகையால் மனத்திருணீங்" கென்றது, நியமப் பொருட்டாய் வந்த அனுவாதம். இவ்வாறு கொள்ளாது, மைத்திரி, கருணை, முதிதை, உபேக்ஷை யென்ற நால்வகை யெனக் கொண்டு அவற்றால் மயக்கமும் வெகுளியும் காமமும் நீங்குக என்று கோடலு மொன்று; அக் காலை மயக்கத்தோடு ஏனைக் காம வெகுளியும் உபலக்கணத்தாற் கொள்ளப்படும். முன்னுக்குப் பின் மலைவு தோன்றக் கூறுவது குற்றமாதலின், அதனை விலக்கற்கு, "முன்பின் மலையா மொழி" யென்றார். மங்கலமாவது அறமாதலின், அறவுரையை, "மங்கல மொழி" யென்றார். "மலையா வறத்தின்" (28. 100) என்றும் "முரணாத் திருவறம்" (30. 6) என்றும் முன்பும் கூறியிருத்தல் காண்க. அஞ்ஞானத்தை இருளென்ப வாதலின், அவ் வியைபே பற்றிச் சான்றோர் ஞானத்தை ஒளியாகக் கூறும் சிறப்புத் தோன்ற, "ஞானதீபம்" என்றும், அதனை ஐயந்திரிபறக் காண்பிக்கும் சிறப்பினை, "நன்கனம் காட்ட" என்றும் கூறினார். தானம், சீலம் எனப் பத்து வகையான பாரமிதைகளை, தவத்திறமென்றார் எண்வகைப் படுதலின். அறநெறியை, "தருமம்" என்று பொதுப்படக் குறித்தார். அவை, நற்காட்சி, நல்லொழுக்கம், நல் வாய்மை, நல்வாழ்க்கை, நற்செய்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நற்செய்கை என்பன வென்று பரமத திமிரபானு வென்னும் நூல் கூறுகிறது. அறுகு: செய்கென்னும் வாய்பாட்டுத் தன்மை வினைமுற்று. தானந் தாங்கிச் சீலம் தலைநின்று உணர்ந்தோன். வணங்கிச் சென்றடைந்தபின், மொழிவோன், வாமன் ஏமக் கட்டுரை, ஈரறு பொருளின் ஈந்த நெறியுடைத்தாய், தோன்றி மீட்டும் தொடர் தலின் மண்டில வகையா யறியக் காட்டி, கண்ட நான்குடைத்தாய், சந்திவகை மூன்றுடைத்தாய், தோற்றம் மூன்று வகையாய், காலமூன்றுடைத்தாய், உறுதியாகி, இடனாகி, ஆறு வழக்கு முகமெய்தி, நயங்கணான் காற்பயன்களெய்தி, நால்வகை வினாவிடை யுடைத்தாய், எல்லாந் தானேயாகிய பேதைமை முதலிய பன்னிரண்டும் அறியிற் பெரும் பேற்றகுவர் ; அறியார் நரகறிகுவர் ; பேதமை முதலியன இவை ; மண்டில வகை இவை; கண்டம் இவை; நயங்கள் இவை; வினாவிடை யிவை; கட்டும் வீடும் காரணம் தருதற்குரியோரில்லை ; காமம் வெகுளி மயக்கம் காரணம்; பற்றறுத்திடுதல், செற்ற மற்றிடுக, மயக்கங் கடிக, மனத்திருள் நீங்குக என்று காட்ட, தவத்திறம் பூண்டு, பாவை, தருமம் கேட்டு, அறுகென நோற்றனள் என, வினை முடிபு கொள்க. மணிமேகலை 27 ஆம் காதை முதல் இக்காதை வரை ஒளவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் எழுதியவுரை முடிந்தது.  1 ஆம் காதை முதல் 20 ஆம் வரை அருஞ்சொல் பொருள் அகரவரிசை அருஞ்சொல் காதை அடி அகநகர்-உள்நகரம்(நகரில்) 1 72 அகம்மலி உவகை - உள்ளத்தில் நிறைந்த மகிழ்ச்சி 15 72 அகலம்-மார்பு 8 42 அகலம்-மார்பு 19 91 அகல்வாய்-விரிந்த இடம் 19 17 அகவயின் - உள்ளிடம் 2 13 அகவை - உள்ளிடம் 12 66 அகவை - அடங்கியது 15 14 அகன் சுரை-உள்ளிடம் 16 133 அங்கி மனையாள் - அக்கினி தேவன் மனைவி 18 95 அசரீரி - சரீரம் இல்லாதது; உடலுருவற்றது; அருவமாய் எங்கும் நிறைந்துள்ள கடவுள் 16 44 அசும்பு - சேறு 8 6 அஞ்சல் - அஞ்சாதே 7 18 அஞ்சனம் - மை 18 161 அஞ்சில் ஓதி - அழகிய சிலவாகிய கூந்தல்; ஐவகையாக முடிக்கப்படும் சிலவாகிய கூந்தல் 8 12 அடங்கலும்-முழுவதும் 16 134 அடர் - தகடு 15 14 அடர்க்குறு-பகையாயினாரை நெருக்கிவருத்துதலைச் செய்யும் 12 40 அடல்-கொல்லுத் வெல்லுதல் 17 10 அடிதொடுதல் -திருவடி களைத்தொட்டுச் சூளுறுதல் 18 171 அடிபிழைத்தல் - திருவடிக்குப் பிழைசெய்தல் 19 42 அட்டிற்சாலை-மடைப்பள்ளி 20 7 அணங்கு - தீண்டிவருத்தும் தெய்வப்பெண் 6 135 அணங்குடையளக்கர் 17 12 அணிமலர்ப் பூங்கொம்பு 15 72 அணுகல் - நெருங்காதே (எதிர்மறைச்சொல்) 20 112 அதிர்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழல் 19 42 அத்தம் - அரிய வழி 13 39 அந்தரம் - வானம் 20 108 அந்தரி - துர்க்கை 20 116 அந்தி-மாலைப்பொழுது 5 140 அந்தில் -அவ்விடம் 13 107 அருஞ்சொல் காதை அடி அமயம் - பொழுது 10 27 அமரர் கணம் - உம்பர் கூட்டம்;தேவர்குழு 15 19 அமர் அகம்-போர்க்களம்ளு 5 137 அமர்நகை - பொருந்திய சிரிப்பு; விருப்பத்துடன் சார்ந்த சிரிப்பு 13 92 அமலை - திரளை; சோற்று உருண்டை 17 2 அமளி - படுக்கை 7 6 அமுதசுரபி - அமுதத்தைக் கொடுப்பது 11 44 அம்பலப் பீடிகை - அம்பலமாகிய இடம்; பொது இடம் 13 107 அயர்தல் - மறத்தல் 7 71 அயர்ந்து - வருந்தி 20 87 அயாவுயிர்த்தல் - நெட்டுயிர்ப்பு விடுதல்; நெடுமூச்சு விடுதல் 21 26 அரங்கு-அவை; கூத்து நிகழும் இடம் 4 6 அரங்கு - சபை 18 33 அரந்தை - துயர்; துன்பம் 6 185 அரமியம்-நிலாமுற்றம் 12 47 அரவம் - ஆரவாரம்; பேரொலி 14 60 அரவக்கடல் -ஒலியையுடைய கடல் 9 38 அரவாய் - அரத்தின்வாய்; (அரம் - கருவிகளை அராவும் கருவி) 7 73 அராந்தாணம் சமண்பள்ளி 5 23 அரிக்குரல்-மெல்லியகுரல் 5 127 அருந்த ஏமாந்த-பிறர் உண்ணஆவல்கொண்ட 14 68 அருந்துநர் சாலை - உணவுண்ணுமிடம் 20 7 அருப்புக்கணை: அரும்புக்கணை - மலர் அம்பு 18 105 அலகின் மூதூர் 2 34 அலங்கல்-மாலை; அசைதலை யுடையது என்னும் பொருளது 4 63 அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு 6 110 அலத்தற் காலை - வறுமைக் காலம்; துன்பமுடைய காலம் என்பதுபொருள் 15 50 அலர் உறுத்தல் - பலரறியச் செய்தல் 20 100 அலவலைச் செய்தி - ஆராயாமல் செய்த செயல் 17 51 அருஞ்சொல் காதை அடி அலசுதல் - வருந்துதல் 9 7 அல்லல் - துன்பம் 13 89 அல்லி - அகவிதழ்; மலரின் உள்ளிதழ் 21 28 அவதி - எல்லை 21 188 அவத்திறம் தீயவிருப்புத் தன்மை 7 14 அவலப்படிற்றுரை 6 163 அவலம் - துன்பம் 21 94 அவலம் - வருத்தம் 4 118 அவிநயம் - பாட்டின் பொருள் தோன்றக் கை முதலிய உறுப்புக்களால் குறிப்புக்காட்டி ஆடுங்கூத்து 19 79 அவிர் ஒளி - விளங்குகின்ற ஒளி 12 84 அவிழ்தல் - விரிதல்; மலர்தல் 18 59 அவ்வியம் - பொறாமை 5 22 அவ்வையர் - தாய்மார் 11 137 அழிகுலம் - இழி குலம்: கீழ்ப்பிறப்பு 13 68 அழிதகவுள்ளம் - அழிந்த உள்ளம் 12 43 அழிவு - வருத்தம் 2 11 அழுங்கல் - வாய்விட்டழுதல் 4 181 அழுவம்-பரப்பு; விரிவு 7 125 அழுவிளிப்பூசல்-அழுவோர் முழக்கம் 6 73 அளக்கர் - கடல் 17 12 அளை-துவாரம்; துளை 20 99 அளைஇய - கலந்த 5 63 அறந்தரு நெஞ்சோடு அருள் 13 54 அறம் - தருமம்: துன்பங்களை அறுத்தலையுடைய தென்று பொருள் (பதிகம்) 72 அறல் - மணல்: நீரால் அறுத்து இருப்பது என்பது பொருள் 8 11 அறவி - அறநெறி 21 105 அறவி - அறம் 12 55 அறன் ஒடு - அறவோடாகிய அமுதசுரபி 21 158 அறுகை - அறுகம்புல் 12 60 அறுவை - உறி 6 93 அறைதல்-சொல்லுதல் 16 44 அறைபோதல் - ஓட்டையாதல்; உள்ளம் அழிதல் 18 130 அற்புதக்கிளவி - வியப்புடைய மொழி 21 8 அற்புதப் பாவை 7 95 அற்புதம் - வியப்பு 7 95 அனந்தர்-கள்ளுண்ட மயக்கம் 7 72 ஆ - பசு 14 104 ஆகம் - மார்பு 20 100 ஆடி - கண்ணாடி 19 90 ஆடி - பளிங்கு 8 47 அருஞ்சொல் காதை அடி ஆணு - அன்பு (பதிகம்) 17 ஆண்டலை-ஆண்மகன் தலை போன்ற வடிவுள்ள ஒரு வகைப்பறவை 6 77 ஆண்டு - அவ்விடம்: அவ்வுலகம் 14 38 ஆயம் - கூட்டம் 7 54 ஆயிதழ்-அழகிய இதழ் 19 88 ஆயிரங் கண்ணோன் - இந்திரன் 14 53 ஆரங் கண்ணி-ஆத்திமாலை 4 50 ஆரஞர் - மிக்க துயரம் 14 8 ஆரணங்கு-அரிய தெய்வத்தன்மை 17 53 ஆரணம்-மறை; வேதம் 13 4 ஆரம் - மாலை 19 85 ஆராமம்-பொழில்; சோலை; உவவனம் 3 32 ஆரிடை - அரியவழி 13 42 ஆருயிர் மருந்து - சோறு:நிறைந்த உயிருக்கு மருந்து போல் உதவுவதென்பது பொருள் 16 135 ஆருயிர் மாக்கள் - அரியஉயிரையுடைய மக்கள் 19 45 ஆர் - ஆத்திமாலை 19 125 ஆர் இடர் - மிக்க துன்பம் அரிய துன்பம் 6 160 ஆர்த்தல் - அருத்தல்; உண்ணச் செய்தல் 12 93 ஆலமர் செல்வன் - சிவபெருமான் 3 144 ஆவம்-அம்புப் புட்டில் 20 63 ஆழித்தாழி - சக்கரவாளமா கிய வட்ட வடிவமுள்ள இடம் 6 173 ஆழியங் குன்றம் - சக்கர வாளமலை 6 192 ஆறு அறி மரபு - செய்யும் வழியறிந்த முறைமை 1 57 ஆற்றாப் பாலகர் 7 81 ஆற்றா மாக்கள்-வறியவர் 17 64 ஆற்றுதல்-கொடுத்தல் 17 64 ஆற்றுதல்-உதவுதல் 14 8 ஆற்றுநர் - பொறுக்கும் வன்மையுடையோர் 11 92 ஆற்றுப்படுத்தல் - போக்குதல்;வழிச்செலவிடுதல் 5 139 ஆனைத்தீ - தணியாத பெரும்பசியைச் செய்வதோர்நோய் (பதிகம்) 66 ஆன்ற - அமைந்த; பொருந்திய 15 10 இகல் - மாறுபாடு; பகை 19 119 இசைச்சொல் - புகழ் 11 81 இசையுந-ஒத்திருப்பன 3 157 இஞ்சி - மதில் 5 112 இடங்கழி காமம் -வரம்பு கடந்த காமம் 10 22 இடபம் - இடபராசி 15 23 இடபம் - வைகாசி 11 40 அருஞ்சொல் காதை அடி இடமுறை மும்முறை 9 5 இடர் - துன்பம் 4 20 இடர்வினை - தீவினை 21 21 இடவயின் - இடத்தில் 15 4 இடுக்கண் - துன்பம் 14 26 இடுமணல் - எக்கரடித்த மணல் 17 26 இடும்பை - துன்பமொழி 3 6 இடையிருள் யாமம் 6 208 இணர் - பூங்கொத்து 7 100 இதை - மரக்கலப் பாய் 14 81 இந்திர கோடணை - இந்திர விழா 5 94 இந்திர திருவன் - இந்திரன் போன்ற செல்வத்தையுடைய மன்னன் 19 116 இமிர்தல் - ஒலித்தல் 3 49 இமிழ் - முழக்கம் 17 50 இம்மை - இப்பிறப்பு 3 96 இயவு - வழி; பாதை 13 8 இரங்கல் - இரங்காதே; வருந்தாதே (முன்னிலை) 6 161 இரத்தல்-யாசித்தல்; தாழ்ந்து ஒன்றை வேண்டுதல் 3 103 இரத்தி - இலந்தை 6 89 இரிய - கெட; நீங்க 21 165 இரியல் மாக்கள் - கெடுதலுற்ற மக்கள்; விரைந்தேகுவோர் 13 82 இருக்கை - இருப்பிடம் 4 115 இருக்கை - கட்டில் 16 67 இருங்கடல்-பெரிய கடல் 8 1 இருடி - முனிவன்; ('ரிஷி' என்னும் வடசொல் திரிபு) 13 66 இருள் மயக்கம்-இருட்கலப்பு 14 3 இலவந்திகை - இயந்திரவாவி 3 45 இலவு - இலவம்பூ 20 51 இலி - இல்லாதவன் 16 10 இழிதல் - கீழிறங்குதல் 14 83 இழுக்கி-வழுக்கிவீழ்ந்து 21 55 இழும் என் சும்மை - இழும் என்னும் ஒலி: (இழும் என்பது ஒலிக்குறிப்பு) 14 27 இளங்கதிர் ஞாயிறு: (பதிகம்) 1 இளங்கால் செல்வன்- இளந்தென்றற்காற்று 19 101 இளவள ஞாயிறு 10 11 இளி - இசை 19 26 இளிவு - அருவருப்பு 6 68 இறவு - இறால் என்னும் ஒருவகை மீன் 20 46 இறுதி - முடிவு 3 96 இறுத்தல் - தங்குதல் 5 141 இறுத்தோர்-கொடுத்தோர் 6 50 இறும்பு - குறுங்காடு 19 97 இறும்பூது - வியப்பு; ஆச்சரியம் 20 55 அருஞ்சொல் காதை அடி இறை - சிறிது 18 69 இறை - இறப்பு: வீட்டின் தாழ்வாரம் 7 60 இறை கொள்ளுதல் - தங்குதல் 4 69 இனைதல் - வருந்தல் 3 158 இன்சீர் - இனிய தாளவொற்று 19 26 இன்பம் - முத்தியின்பம் 3 96 இன்னணம் - இவ்வாறு 8 1 இன்னாப்பிறவி இகந்தோர் துன்பந்தரும் பிறவியைக் கடந்தவர்கள் 12 100 ஈண்டுதல்-திரளுதல்; ஒன்றுசேர்தல் 14 25 ஈண்டுநீர்-கடல்; மிக்க நீரை யுடையதென்பது பொருள் 14 28 ஈமம் - பிணஞ்சுட அடுக்கிய விறகடுக்கு 16 23 ஈர்த்தல் - இழுத்தல் 7 55 ஈறுகடை - முடிபின் இறுதி 21 144 உகிர் - நகம் 20 59 உகுத்தல் - சொரிதல் 9 4 உச்சி மீமிசை-மேலிடம் 11 22 உஞ்சை-உச்சயினிநகரம் 15 64 உடங்கு-யாவும்; எல்லாம் 10 64 உடம்புவிட்டோடும்உயிர் 16 92 உணங்கல் - வற்றல் 20 46 உதைத்தல் - உந்துதல்; தள்ளிக்கொண்டு செல்லல் 16 14 உதைத்தல் - தெறித்தல் 7 48 உமிழ்சீ - வெறுக்கத்தக்கசீ (சலம்) 20 48 உயக்கம் - வருத்தம் 7 66 உயங்கு நோய் - மிக்க துன்பம் 3 2 உயவல் - வருந்துதல் 3 90 உயா - வினவல் 20 93 உயிர்த்தல் - பெரு மூச்சவிடுதல் 19 28 உயிர்பதிப் பெயர்ப்பு - உயிரைவிடுதல்: இறத்தல்; உடலினின்று உயிரை நீக்குதல் 14 95 உய்தி - உய்வாய்; மேம்படுவாய் (முன்னிலை யொருமை) 21 179 உய்ப்ப-செலுத்த; கொண்டு செல்ல 16 38 உய்யானம் - அரசர் விளையாடுஞ்சோலை 3 52 உரகர் - நாகர் 11 70 உரவுநீர் - கடல் 7 125 உரவோன் - அறிஞன் 4 108 உரவோன் -அறிவுடையோன் 2 69 உருகெழு-அச்சம் பொருந்திய 4 39 உருப்ப - அழல; வருத்த; முதிர 15 83 உருப்பு - வெப்பம் 17 56 உருவிலாளன் - வடிவமற்றவன்: மன்மதன் 5 6 உருவு - வடிவம் 7 27 உரைசால் தெய்வதம் (பதிகம்) 45 அருஞ்சொல் காதை அடி உரைமுடிவு காட்டிய உரவோன் 4 108 உரைமூதாளன் - அறிவுமேம்பட்ட உரையாளன் 12 4 உலப்பு - கெடுதல் 6 111 உலாநீர்ப் பெருங்கடல் 12 67 உவகை - மகிழ்ச்சி 12 82 உவப்பு - மகிழ்வு 15 19 உவவனம் - உவவனம் என்னும் பூம்பொழில் (பதிகம்) 45 உழந்த - வருந்திய 3 5 உழிஞ்சில் - வாகை; உன்னம் 6 80 உழையோர்-உரிமை மகளிர்: பக்கத்திலிருப்போர் என்பது பொருள் 3 46 உளமலி யுவகை 12 82 உளைத்தல் - ஊளையிடல்:நரியின் கூக்குரல் 6 111 உள்வரி-வேற்றுரு; பொய்வேடம் 19 29 உறைபதி - வாழ்விடம்; தங்கியிருக்குமிடம் 12 94 உறையுள் - இருக்குமிடம் 19 29 ஊக்குதல் - ஆட்டுதல் 19 74 ஊங்கண் - முன்பு 21 181 ஊசல் - ஊஞ்சல் 19 73 ஊடு சென்று ஏறல் - நடு விடத்தில் மேலேறிச்செல்லுதல் 20 21 ஊட்டும் - உண்பிக்கும் 19 70 ஊணொலி யரவம் 17 97 ஊண் - உண்ணல் 6 117 ஊரா நற்றேர் - தானேசெல்லும் வான ஊர்தி 6 39 ஊருநீர் - பரந்தநீர் 18 92 ஊர் காப்பாளர் - ஊரைக் காத்துத்திரியும் வினையாளர் 7 69 ஊர்க் குறுமாக்கள் - ஊரிலுள்ள இளஞ்சிறுவர் 15 59 ஊர்திரை-ஊர்கின்ற அலை; செல்கின்ற அலை 16 14 ஊழ் - முறைமை; நியதி 5 16 ஊழ்தரு தவத்தள் : முறையாகப் பெற்ற தவத்தினையுடையள் 5 16 ஊன்-தசை: உட்பொதிந்துள்ள சதை 20 54 ஊண் - உடல் 12 90 எஃகு - வேல் 19 26 எஞ்சா மண் - குறையாத நிலம் 19 119 எஞ்சுதல் - குறைதல்: தோற்றுப்போதல் 3 157 எடுப்ப - ஏற்ற 5 134 எட்டி-வணிகர் பெறும் பட்டப்பெயர் 4 58 எண்கு - கரடி 16 68 எண்பிறக்கு ஒழிய-எண்ணங்கள் எட்டாமல் நீங்க 11 65 அருஞ்சொல் காதை அடி எண்பேராயம்-எண்வகைப் பெருங்குழு 1 17 எம் அனை - எம் தாய் 10 39 எயில் - மதில் 7 89 எயிறு - பல் 18 52 எய்யா - அறியாத 18 85 எரி ஊட்டுதல் - தீயில் இடுதல் 16 98 எரிகதிர் - ஞாயிறு : சூரியன் 15 23 எரிபொத்தி - அழலைமூட்டி 16 26 எருவை-பருந்து; கழுகு 6 117 எல் - இரவு 13 82 எல்வளை-ஒளி பொருந்திய வளையலையுடையவள் 8 24 எழில் - அழகு 11 78 எழினி - திரைச்சீலை 5 3 எழுதுவரி-பத்திக்கீற்று 13 122 எள்ளினை - இகழ்ந்தாய் (முன்னிலை ஒருமை வினை) 21 106 எள்ளுதல்-இகழ்தல்: இழித்துக் கூறுதல் 20 14 எள்ளுரை - இகழ்ச்சிச் சொல் 18 10 என்கோ - என்பேனோ 5 103 என்பு - எலும்பு 6 107 ஏ - அம்பு 7 127 ஏடு-இதழ்; பூவின் மடல் 19 3 ஏதமில் குணப்பொருள் 5 71 ஏதம் - குற்றம் 7 31 ஏது-பயன்தரும் தன்மை 7 20 ஏத்துதல்-வணங்குதல் 12 102 ஏந்தல் - நிமிர்தல் 6 116 ஏமாந்திருத்தல் - ஏக்கற்று இருத்தல் 14 50 ஏமுற - இன்படைய 21 165 ஏற்றூண் - இரந்துண்ணும் உணவு 14 7 ஐ அரி-அழகிய இரேகை 21 45 ஐ என - விரைவுடன்;வியக்குமாறு 12 24 ஐது - அழகுடையது 10 2 ஐம்படை - ஐம்படைத்தாலியென்னும் குழந்தைகட்கு அணியும் அணி 3 138 ஐம்பெருங்குழு - ஐந்துபெரிய கூட்டம்; அமைச்சர்,புரோகிதர், படைத்தலைவர்,தூதுவர், சாரணர் 1 17 ஐயம் - ஐயப்படுதல்; சந்தேகம் 6 158 ஐயரி-அழகிய செவ்வரி 16 45 ஐயவி - வெண் சிறுகடுகு 7 73 ஐவகைச் சீலம் - காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்துவகைப் பாவங்களையும் நீக்கி ஒழுகுவது2 68 ஐவில்-ஐந்துவில்லளவு 4 89 ஒடிமரம் - ஒடிந்த பாய்மரத் துண்டு 16 14 ஒடுவை-ஒருவகைமரம் 6 80 அருஞ்சொல் காதை அடி ஒட்டல்-சூளுரைத்தல் (சபதஞ்செய்தல்) 1 60 ஒத்த முடிவின் ஓரறம் 12 117 ஒரீஇ - ஒருவி : நீங்கி 4 103 ஒருசிறை : ஒரு பக்கம் 19 64 ஒருதலை - உறுதி 11 35 ஒருதனி - தன்னந்தனி 14 71 ஒருதனியோங்கிய திருமலர் 15 76 ஒரு பேரின்பம் - ஒப்பற்ற பெரிய இன்பம் 9 36 ஒல்குதல் - அசைதல் 7 51 ஒளித்தல் - மறைத்தல் 7 27 ஒளிறுவாள்- விளங்குகின்ற வாள் 1 68 ஒளிறுவாள் மறவர் 1 68 ஒளிளியது - சிறப்புடையது 21 108 ஒறுக்கும்-தண்டிக்கும் 19 43 ஒற்கா-ஒல்கா: தளராத 15 18 ஒளிறுதல் - பொருந்துதல்: அதிட்டித்து நிற்றல் 19 6 ஓங்குயர்-மிக உயர்ந்த: (ஒரு பொருட் பன்மொழி) 14 54 ஓங்குயர்-பெருஞ்சிறப்பு 14 54 ஓங்குயர்-விழுச்சீர் 1 1 ஓடுதல்-பரவுதல் 15 53 ஓடுதல்-பரவுதல்: மிகுதியாதல் 21 157 ஓதை - ஓசை: ஒலி 7 69 ஓத்து-மறை:வேதம், உலகியலுக்கு ஏற்ற தன்மையுடையது என்பது பொருள் 13 25 ஒம்புதல்-பாதுகாத்தல் 13 14 ஓம்புவை-பாதுகாப்பாய் 21 158 கங்குல் - இரவு 6 25 கங்கைப்பேரியாறு 10 56 கச்சை - யானை அடிவயிற்றில் கட்டுங் கயிறு 1 28 கஞ்சம் - நீர் (பதிகம்) 10 கடகம் - கைவளை 6 114 கடம் - கடன்:காணிக்கை 3 70 கடம் - அருநெறி: அரியவழி 13 41 கடம்பன் - கடப்பமாலை யணிந்தவன்: முருகவேள் 4 49 கடவுள்-தெய்வத் தச்சன் 20 111 கடாஅம் - மதநீர் 19 22 கடி - காவல்; காப்பு 6 105 கடி - பேய் 6 49 கடிஞை - பிச்சையேற்குங் கலம் (திருவோடு என வழங்குவர்) (பதிகம்) 63 கடிது - விரைவு 16 48 கடிப்பகை-பேய்க்குப்பகை: வேம்பும் வெண் சிறுகடுகும் 7 58 கடியின் காவல்-மணத்தின் பின் பாதுகாப்பு 18 98 அருஞ்சொல் காதை அடி கடுகுதல் - மிகுதல் 14 80 கடுங்கண் - தறுகண்மை: அஞ்சாத தன்மை 4 46 கடுஞ்சூல்-முதற்கருப்பம் 7 82 கடுநவை-கொடியதுன்பம் 6 25 கடுவரல் - விரைந்து செல்லல் 17 25 கடுவன் - ஆண்குரங்கு 19 74 கடைகொள - முடிவெய்த 21 174 கடைமணி - கண் கருமணியின்கடை 3 22 கட்டழற் கடும்பசி கட்டி நெருப்பால் சுடுவது போன்ற கொடும்பசி 17 13 கட்டு - உறுதி 20 8 கட்டு அழல் - தணியாத நெருப்பு 17 13 கணவிரி - அலரிப்பூ 3 104 கணிகை-பொதுமகள் 11 13 கண் எறிதல்-அடித்தல் 19 82 கண்கவர் ஓவியம் 3 131 கண்ட - அறிந்து கொண்ட 21 32 கண்டம்-கழுத்து; கண்டத்தால் பாடுதல்; மிடற்றோசை 19 83 கண்ணடைத்தல்-இடத்தை மறைத்தல் 12 60 கண்ணி - கருதி 21 123 கண்ணி - தலையிற்சூடும் மாலை 18 63 கண்படை - கண்படுதல்;தூங்குதல் 13 115 கண்மணி - கண்ணிடத்துள்ள கருமணி 16 48 கண் மாறுதல்-விழித்த கண்இமைத்தல் 3 40 கண் முரசு - முகத்தையுடைய முரசு 1 69 கதலிகைக் கொடி - துகிற் கொடி 1 52 கதழ்ந்து - விரைந்து 13 48 கதிரோன் - சூரியன் 12 83 கதிர் - ஞாயிறு 5 139 கதிர் - ஒளி 4 1 கந்தசாலி-மணமுள்ள நெல் 10 46 கந்தம் - தூண் 6 60 கந்து - தூண் 15 33 கந்துகக் கருத்து - பந்தாடு தொழில் 2 22 கந்துடை நெடுநிலைக் கடவுள் 15 33 கம்பம் - நடுக்கம் 17 63 கம்பம் - முழக்கம் 3 126 கம்பலைமாக்கள்-வெவ்வேறு காட்சிகள் கண்டு முழங்கித் திரிவோர்; (வேடிக்கை பார்ப்பவர்) 3 147 கயக்கு-கலக்கம் 16 85 கயிற்கடை-கொக்கி; அணிகளைப் பொருத்தும் இடம் 3 135 கரண்டை - கரண்டகம்; குண்டிகை; கரகம் 3 86 கரத்தல் - மறைத்தல் 1 15 அருஞ்சொல் காதை அடி கரந்து-மறைந்து; ஒழிந்து; நீங்கி 21 147 கரப்பு - மறைவு 19 104 கரி - சான்று: சாட்சி 11 120 கருப்புவில் - கரும்பாகியவில் 20 92 கருவி-தொகுதி; சேர்க்கை 17 92 கருவுயிர்த்தல்-ஈனுதல் 18 55 கலக்குறுதல்-கலக்கமடைதல்;கலங்கிப்போதல் 14 80 கலம்-மரக்கலம் 7 70 கலம்-அணிகலம் 7 122 கலாம் - போர் 1 63 கலுழ்தல்-கலங்கல் 9 4 கலை - ஆடை 6 112 கலை நியமம் - நாமகள் கோயில் 14 10 கல்அதர் - பருக்கைக்கல் உடைய குறுவழி 13 39 கவராக் கேள்வி - தெளிந்தநூல்கேள்வி (நற்பொருள்களைக்கேட்டல்) 1 10 கவராக் கேள்வியோர் 1 10 கவல்வு-கவலை; வருத்தம் 16 47 கவான் - துடை (பதிகம்) 27 கவிர் - முள்முருக்கு 6 123 கவின் - அழகு 21 148 கவேர கன்னி - காவிரியாறு 9 52 கவை அடி-கவைத்த அடி; பிளவுள்ள பாதம் 6 125 கழி - மிகுதி 12 49 கழிமுடை நாற்றம்-மிகுந்த புலால் நாற்றம் 16 66 கழுமுதல்-கலத்தல் 13 18 கழூஉம்-போக்கும் 12 36 கழை - மூங்கில் 20 23 களர் - உவர்நிலம் 10 47 களிக்கயல் நெடுங்கண் 12 14 களிறு - ஆண் யானை 18 140 கள் அடு குழிசி - கள்ளைக் காய்ச்சுகின்ற பானை 16 66 கறவை - பசு; ஆ 12 93 கறையோர் - கடமை செலுத்த வேண்டியவர்;அரசருக்கு இறை (வரி)ப் பொருள் கொடுக்க வுரியார் 19 161 கற்குன்றம்-செய்குன்று 19 102 கனாமயக்குறுதல் - கனவினால் மயக்கம் அடைதல் 11 104 கனைஎரி-மிக்க நெருப்பு 2 42 கன்னல்-நாழிகை வட்டில் 7 64 கன்னிக் காவல்-கன்னிப் பருவப்பாதுகாப்பு 18 98 காசு - குற்றம் 17 22 காடமர் செல்வி-காடு கிழாள்; துர்க்கை; காளி 18 115 அருஞ்சொல் காதை அடி காணம்-பொன்: பொருள் 16 10 காண்தகு சிறப்பு - காணத் தக்க அழகு 14 39 காதற் சுற்றம் 8 13 காப்புக் கடை கழிதல்- கற்பொழுக்கம் நீங்குதல் 13 5 காமர் - விருப்பம் 18 59 காமற்கடந்த வாமன் 5 77 காம்பு - மூங்கில் 21 110 காய்தல்-சினத்தல்; வெகுளுதல் 20 14 காராளர் - வேளாளர் 7 102 காரிகை-அழகுடையாள் 21 32 கால் காற்று 14 80 கால் கிளர்தல் - காற்றைப்போல் எழுதல் 19 22 கால்கோள் - தொடக்கம் ; துவங்குதல் 3 144 காவலன் - வேந்தன் 12 49 காவலன் - காத்தல் தொழிலையுடையவன் 13 115 காழோர்-குத்துக்கோற்காரர் 4 35 கிளவி - சொல்;பேச்சு 3 156 கிளைபயிர்தல் - இசை வகைகளை இசைத்தல் 7 46 குங்கும வருணம் - சிவந்த தொய்யிற் குழம்பு 19 87 குச்சரக் குடிகை - சிறிய கோயில் கூர்ச்சர நாட்டுப் பணியமைந்த சிறிய கோயில் 18 145 குடக்கண் - திரண்ட கண் 5 120 குடதிசை - மேற்குத் திசை 5 120 குடபால் - மேல் திசை 4 22 குடர்த்தொடர்மாலை-குடலினால் தொடரப்பட்டமாலை 15 13 குடவயின் - மேற்குத்திசை 21 2 குடிகை - குடிசை 6 63 குடுமி - உச்சி: மலையின் கொடுமுடி 20 22 குடைவோர்-அப்புவோர் 19 89 குணதிசை-கிழக்குத் திசை 5 119 குண்டுநீர்-ஆழமாகிய நீர் 8 8 குப்பை-குவியல் 16 122 குமரி-கன்னியாகுமரி என்னும் யாறு 13 7 குமரி - கன்னி; பகவதி என்னும் தெய்வம் 13 74 குமரி - கன்னிப்பெண் தன்மை 14 77 குமரிமூத்த என்பாத்திரம் - கன்னிப் பெண்மூத்தாற் போன்று பயனற்ற பாத்திரம் 14 77 குமிழ் - குமிழம்பூ 6 123 கும்பம் - குடம் 6 94 அருஞ்சொல் காதை அடி குயிலுவர் - தோற்கருவிகளைப் பயில்வோர் 7 123 குயிற்றல் - செய்தல் 8 47 குரிம்பு-வரம்பு; வரையறை 18 3 குரல் - பூங்கொத்து 8 36 குரவர் - தாய்தந்தையர் 3 18 குரவை - வினோதக் கூத்து ஆறினுள் ஒன்று:காமமும் வெற்றியும் பொருளாகக் குரவைச்செய்யுள் பாட்டாக எழுவரேனும் எண்மரேனும் ஒன்பதின்மரேனும் கைபிணைந்தாடுவது 19 66 குரிசில் - பெருமையுடையோன் 18 87 குருகு-துருத்தி மூக்கு; 2 43 குருகு-பறவை; குருக்கத்தி 18 55 குருகு பெயர்க் குன்றம் - கிரவுஞ்சமலை; (இது அன்றிற் பறவை வடிவுடையது.) 5 13 குரூஉ - நிறம் 13 29 குழலி - கூந்தலையுடையாள் 20 13 குழல் - வேய்ங்குழல் 19 83 குழவியேங்கிய கூக்குரல் 13 17 குழிசி - பானை 6 90 குழுவுதல் - கூடுதல் 1 18 குறங்கு - தொடை 20 61 குறள் - குறுகிய வடிவம் 19 51 குறுநடைப் புதல்வர்- தளர் நடையுடைய இளம்புதல்வர் 7 57 குற்றங் கெடுத்தோய் - முக்குற்றங்களையும்அழித்தோய் 5 100 கூக்குரல் - கூப்பீட்டுஒலி 13 17 கூட்டம்-சமவாயம் 27 243 கூட்டுண்ணல் - ஒன்றுபடல்;சேர்ந்து அனுபவித்தல் 7 47 கூம்பு - பாய்மரம் 4 30 கூவிளி - கூப்பீடாகிய முழக்கம் 7 67 கூறை -புடைவை; ஆடை 16 30 கூற்று-கூற்றுவன் (இயமன்) 1 30 கூற்றுக்கண் விளிக்கும் 1 30 கேள்வி - நற்பொருள்களை அறிந்தார்வாய்க் கேட்டல் 21 93 கைத்தூண்-பலரின் கையால் உணவு பெற்று வாழும் வாழ்க்கை 18 16 கைத்தூண்-தீயவொழுக்கத்ச்தால் கிடைத்த உணவு 16 6 கைம்மை-சிறுமை: தனக்கு உரியளல்லாதாளை விரும்புதல் 20 122 கையறவு - செயல்கெடுதல் 20 26 கையறுதல் - செயலறுதல் 3 115 கையாறு - மூர்ச்சித்தல் 4 118 கையுதிர்க்கோடல்-கையை அசைத்துப் போகச் செய்தல் 16 10 அருஞ்சொல் காதை அடி கைவிடலீயான்-கைவிடான் 5 41 கைவினை - கைத்தொழில் 19 5 கொடிஞ்சி - தேர்த்தட்டு 4 48 கொடித்தேர் வேந்தன் - கொடியணிந்த தேர்iயுடைய அரசன் 7 79 கொடுமரம்-வில்: வளைந்த மரம் என்பது பொருள் 13 31 கொட்பன - சுழல்வன; சுற்றுவன 19 63 கொட்பு - கொள்கை; உணர்வு வேறுபடல் 21 77 கொணர்க-கொண்டு வருக 10 39 கொண்டி மகளிர் - பொருளைக் கொள்ளும் பரத்தையர் 18 109 கொம்பர் - கொம்பு; மரக்கிளை 19 57 கொளுத்துதல்-பொருத்துதல் 4 3 கொளை - பாட்டு 7 47 கொள்கை - முறைமை;கோட்பாடு 13 74 கொற்கை-கொற்கை யென்னும் பெயருடைய ஓர் ஊர் 13 84 கோங்கு - கோங்கமரம்: பாலை நிலக்கருப்பொருள்களுள் ஒன்று 19 67 கோசம்பிக் கோமான்-உதயணன்; கோசம்பி நகரத்து மன்னன் என்பது பொருள் 15 61 கோடணை - முழக்கம் 5 94 கோடு-மருப்பு; கொம்பு; 19 19 கிளை 4 17 கோட்டம் காவலர் - சிறையைப் பாதுகாப்போர் 19 48 கோட்டி-மன்றம்; சபை 1 43 கோணச் சந்தி-கூடல்வாய்; வீட்டின் இறப்பு ஒன்றுபடுத்தி இருக்கும் இடம் 19 113 கோணம் - தோட்டி; யானையை அடக்குங் கருவி 18 163 கோயில் -அரண்மனை 20 96 கோலம் - அழகு 18 40 கோல் தொடி - திரட்சியாகிய வளையல் 8 41 கோல்நிலை - செங்கோலின் நிலைமை 7 8 கோல்முறை - செங்கோன் முறைமை; அரசநீதி 18 111 கோவலர்-இடையர் 13 85 கோள் - கிரகம் 6 182 கோள்நிலை - கோட்களின்நிலை (சூரியன் முதலிய ஒன்பதுவகைக் கிரகங்களும் இருக்கும் இருக்கை) (பதிகம்) 24 கோற்றொடி - மாதர் 8 41 சதுக்கத் தெய்வம் - சதுக்கப் பூதம் 1 55 சந்தி-பலவழி ஒன்று சேருமிடம் 6 61 சமயக் கணக்கர் சமய வாதிகள்; மத ஆசிரியர் (பதிகம்) 88 அருஞ்சொல் காதை அடி சம்பாபதி -காவிரிப் பூம்பட்டினம் (பதிகம்) 8 சம்புத்தீவு-நாவலந்தீவு 17 62 சலம் - நீர் 24 47 சலாகை - இரும்புச்சலாகை 12 66 சாகை - கிளை (பதிகம்) 5 சாந்தம் - சந்தனம் 16 31 சாயல் - மென்மை 2 14 சாயை - நிழல்; வலிமை 20 119 சாரணர் - சஞ்சரிப்பவர் 16 15 சார்பு - பற்று 21 179 சார்பு - அமைதி 4 106 சாளரம்-பலகணி; சன்னல் 4 53 சிதவல் - கந்தல்; சிதைந்த தன்மையது 3 106 சித்தம் - உறுதி 10 85 சித்திரம் - உருவம் 19 6 சிந்தாதேவி - மனத்தின்கண் அமர்ந்திருக்கின்ற மாதெய்வம் 14 17 சிந்தாதேவி - கலைமகள் : கற்றோர் நெஞ்சில் இருப்பவள்(பதிகம்) 60 சிந்தாவிளக்கின் செழுங்கலை நியமம் 13 106 சிந்துபு - சிந்தி: கீழே வழிந்து 3 138 சிமிலி - உறி 3 86 சிரல் - மீன்கொத்தி 4 24 சில்பலி - சிறுபலி 6 95 சில்லை - மீன்கொத்திப்பறவை 8 29 சிறுபுழை-சிறிய வாயில் 7 89 சிறுபுறம் - பிடர், முதுகு 2 51 சிறை - பக்கம் 18 44 சிறை - அணை 5 19 சிறைக்கோட்டம் - சிறைச்சாலை (பதிகம்) 71 சிறைவீடு - சிறையினின்று விடுபடுதல் (பதிகம்) 80 சிற்றிடை முடுக்கர் - சிறிய இடமாகிய குறுந்தெரு 7 68 சீத்தல்-அழித்தல், கெடுத்தல் 14 99 சீத்து - அழித்து 20 11 சீர்நிறுப்போர் - தாளவறுதி செய்வோர் 19 83 சுடர் - தீக்கொழுந்து 6 64 சுடலைக்கான் - சுடுகாடு 16 25 சுடுதல் - கொளுத்துதல் 21 12 சுடுமண் - செங்கல் 3 127 சுண்ணம்-மகரந்தப்பொடி; பூந்துகள் 4 18 சுரத்தல் - பெருகுதல் 14 52 சுரியல் - சுருட்டை ; (சுருண்டதன்மையது) 3 116 சுருங்கை - மதகு 12 79 அருஞ்சொல் காதை அடி சுருப்பு: சுரும்பு-வண்டு 18 105 சுரும்பு-மலை; வண்டு 20 107 சுரை வித்து - சுரையின்விதை 20 50 சூது - சூதாடுதல்; ஆயம் உருட்டுதல் 14 63 சூர் - அச்சம் 16 55 சூல் முதிர்தல் கருமுற்றுதல்; கருவளர்தல் 13 8 சூழ்வோன் - சுற்றுவோன் 5 10 செங்கயல் நெடுங்கண்- செவ்வரி படர்ந்த கெண்டைமீன் போன்ற நீண்டகண்கள் 4 101 செங்குணக்கு - நேர் கிழக்கு (பதிகம்) 13 செங்கோல் - செவ்விய கோல் முறை 16 10 செட்டி - செட்டுடையவன் 19 107 செம்பொருள் - செவ்விய பொருள்: அறம் 21 168 செயிர் வழங்கு தீக்கதி - துன்பம் தரும் தீயபிறப்பு 12 61 செய்யோள் - செம்மை நிறமுடையவள் 16 34 செருக்கி - தருக்குக் கொண்டு; திமிர்மிக்கு 19 22 செருவேல் - போர்புரியும் வேற்படை 19 124 செல்கதி - அடையக்கடவதாகிய நற்கதி; நற்பயன் பெறுதல் 13 88 செல்லல் - போகாதே (முன்னிலை எதிர்மறை) ஏவல் 21 27 செல்வக் காவற்பேரூர் - செல்வக்களிப்பும் காவலும் உடைய பெரிய ஊர் 7 26 செவ்வனம் - செம்மை;நேரிய நிலை 11 20 செவ்வனம் - வேறாக;நேராக 3 81 செவ்வனம் - நன்கு (பதிகம்) 53 செவ்வி-சிறந்ததன்மை 5 21 செவ்வி - பருவம் 18 26 செறி இருள்-மிக்க இருள் 15 35 செற்றம் - சினம் 1 63 செற்றம் - சினம்; பகை நெடுங்காலம்நிகழ்வது 13 55 சேடி-வித்தியாதர ருலகு 17 21 சேண் - உயர்வு 3 106 சேண் - நெடுந்தூரம் 17 31 சேதா - செவ்விய பசு 5 130 சேயரி - சிவந்தவரி 21 27 சேய்நிலம் - தூரமான இடம் 19 118 சேறல்-செல்லுதல்: அடைதல் 21 87 சேறல் - செல்லுதல் 16 103 சொரிதல் பொழிதல் 6 8 சோழர்தம் குலக்கொடி(பதிகம்) 23 அருஞ்சொல் காதை அடி ஞாயில்-மதிலின் ஓருறுப்பு; குருவித்தலை 5 112 ஞாயிறு - சூரியன் (பதிகம்) 1 ஞாலம் - பூமி; உலகம் 19 17 ஞாழல் - புலிநகக் கொன்றை 8 6 ஞெமிர்தல் - பரத்தல்;பரந்து கிடத்தல் 18 44 தகரம் - மயிர்ச்சாந்து 4 55 தகை - நலம் 4 66 தக்கு-தக்கது; சிறந்தது 18 10 தடி-தசை; புலால் துண்டு 6 84 தடிந்து - வெட்டி 16 98 தணியா மன்னுயிர் - நீங்காத நிலைபெற்ற உயிர் 14 102 தண்டமிழ்ப் பாவை - குளிர்ந்த தமிழ்ப்பாவை; காவிரி (பதிகம்) 25 தண்டம்-தண்டனை; ஒறுப்பு 13 6 தண்டாக் களிப்பு 6 126 தண்டு-கைத்தடி 14 30 தண்ணுமை-மத்தளம் 19 82 தண்பெயல் - மழைவளம்; குளிர்ந்த மழை பெய்தல் என்பது பொருள் 14 74 ததர் - கொத்து 3 107 தத்துநீ ரடைகரை - கடற்கரை 8 3 தந்தித்தீ - யானைத்தீ என்னும் கடும்பசி நோய் 17 44 தமர் - தமக்குரியோர்; தமக்குச் சிறந்தோர் 13 75 தமர் - அன்பர் 10 36 தமனியம் - பொன் 19 114 தயங்கல் - விளங்குதல் 7 100 தயங்கிணர்க் கோதை - விளங்குகின்ற பூங்கொத்தினாலாயாவை 7 100 தருநிலை - கற்பகத்தரு நிற்குங்கோயில் 5 114 தலைச்சாவகன் - முதல் மாணாக்கன் 21 179 தலைத்தாள் - மிக்க முயற்சி 14 103 தலைமகன் - ஆசான் 3 97 தலைமடுத்தல்-தலையின்கீழ் வைத்தல்; தலைக்குவைத்துப் படுத்தல் 13 114 தவத்திறம் பூண்டோள் 7 13 தவப்பெரு நல்லறம் 13 119 தவளமால்வரை - வெண்ணிறமுள்ள பெரியமலை 15 3 தவளம் - வெண்மை 3 117 தவளம் - வெண்மை 19 112 தவா - அழியாத 3 55 தவா - அழியாத 9 53 தவ்வை - தமக்கை: முன் பிறந்தவள் 7 104 தவ்வையர் - தமக்கைமார் (பன்மை) 11 136 அருஞ்சொல் காதை அடி தளர்நடையாயம் - தளர்ந்த நடையையுடைய சிறுவர் கூட்டம் 7 54 தளவம் - செம்முல்லை 3 163 தளவு - செம்முல்லை 19 93 தளை-கட்டு: கட்டுப்படுத்தும் சிறைச்சாலை 15 63 தலைபிணி - பிணித்த பிணிப்பு; விடாப்பிடி 18 68 தாக்கணங்கு-தீண்டி வருத்தும் பெண் தெய்வம் 3 57 தாடி - மோவாய் மயிர் 3 116 தாது - பூந்துகள் 4 20 தாது - மகரந்தப்பொடி 18 19 தாபதக்கோலம் - தவக்கோலம் 18 23 தாமம் - மாலை 19 112 தாமரைச் செங்கண் 4 94 தார்ச்சேனை 19 123 தாழைத்தண்டு-தாழையின் அடிமரம் 20 62 தாழ்கண் அசும்பு 8 6 தாழ்தரல் - தங்குதல் 1 58 தாழ்தல் - தங்குதல் 5 9 தானம் - ஏழைகட்குக் கொடுக்கும் கொடை 14 35 திசைமுகக் கரு பிரமகண பிண்டம் (பதிகம்) 28 திட்டிவிடம் - கண்ணில் நஞ்சுடைய பாம்பு; அது கண்ணாற் பார்த்தாலும் உயிர்கள் சாகும் என்பர் 9 49 திப்பியம் - வியப்பு: திவ்ய மென்னும் வடசொற் சிதைவு 15 70 திமிர்வோர்-தடவி உதிர்ப்போர் 19 86 திரணை - உருண்ட வடிவம் 3 104 திரிதரல்-சுழலல்; சுற்றித் திரிதல் 15 85 திரி தருதல் - சுற்றிக்கொண்டிருத்தல் 19 31 திரு - அழகு 18 44 திரு - திருமகள் (இலக்குமி) 1 32 திருந்தாச் செய்கை-இழிந்தசெய்கை 2 57 திருந்துமுகம்-இனியமுகம் 14 45 திருமலர் - அழகிய தாமரைப்பூ:திருமகள் இருத்தற்குரிய பூ என்றுமாம் 15 76 திருவில் - வானவில் 6 10 திருவிழை மூதூர் 3 34 திருவிழை - திருமகளும் விரும்பும் 3 34 திருவின் செய்யோள் 5 4 திரை - அலை 8 5 திரைதவழ்பறவை-குளுவை என்னும் பறவை: நீர் அலைகளில் தவழ்ந்து செல்வது என்பது பொருள் 8 28 திரைதோல் - சுருங்கிய தோல் 20 44 திரையிரும் பௌவம் 7 33 திலகம் - மஞ்சாடி 3 161 அருஞ்சொல் காதை அடி திறம் - இயற்கை 4 96 தீஞ்சொல்-இனியமொழி 4 122 தீத்துறு-தீபற்றிய 18 2 தீபதிலகை-தீவுக்குத் திலகம் போன்றவள்: (மணி பல்லவத்தில் புத்தன்பாத பீடிகையை இந்திரன் ஏவலாற் காவல் செய்பவள்) (பதிகம்) 53 தீர்த்தன் - தூயோன் 5 98 தீவகச் சாந்தி - தீவிற்குச் செய்யும் சாந்தி. (இந்திரவிழா) 1 35 தீவகம்-தீவு: கடல்நடுவில் திட்டாகவுள்ள இடம் 21 87 தீவகம்-நாவலந்தீவு (பதிகம்) 4 தீவகம்-தீவு: தீவம்:(அம்சாரியை பெற்றது) 21 90 தீவினை அறுக்கும் செய்தவம் 11 139 தூகள் - புழுதி 5 131 துகில்-மெல்லியஆடை 16 122 துஞ்சுதல் - தூங்குதல் 13 8 துஞ்சு துயில்-மிக்க தூக்கம் 16 55 துடவை - தோட்டம் 13 87 துடி - இடைசுருங்குபறை:உடுக்கு 7 69 துடிதலோகம் - தெய்வலோகம் ஆறனுள் ஒன்று 12 73 துணிச்சிதர் - கிழிந்த ஆடை 11 109 துணிவு - தாள அறுதி (தாளத்தின் முடிவு) 2 19 தும்பி - வணடு 19 57 துயர் அறு கிளவி - இன் சொல் 16 132 துய்ப்பு-நுகர்ச்சி; உண்டல் 15 46 துரகம் - குதிரை 7 99 துரப்ப செலுத்த 19 119 துருத்தி-ஆற்றிடைக்குறை: (துருத்தி வடிவுபோல் இருத்தலின் இப்பெயர்த்தாயிற்று) 1 65 துழத்தல் - துழாவுதல்; கிண்டுதல் 7 71 துளங்கல் - நிலைகலங்கல்(பதிகம்) 42 துளங்கல் - அசைதல் 18 48 துளங்கல் - நடுங்குதல் 4 86 துறக்கம் - மேலுலகஇன்பம் 11 64 துறக்கம் - வானுலகம் 15 46 துறவு - துறவு: துறத்தல் 2 10 துன்னிய - நெருங்கிய ; சார்ந்த 17 16 துன்னுதல் - நேர்தல் 7 134 தூ பற்று: விருப்பத்துக்குக் காரணமாகவுள்ளது 25 92 தூங்கு எயில்-அசைகின்ற மதில் 1 4 தூங்குதல்-தொங்குதல் 6 51 தூசு - துகில் : ஆடை 20 68 தூணம் - தூண் 1 48 தூபம் - நறும்புகை 7 59 அருஞ்சொல் காதை அடி தூர்த்தர்-பரத்தர் : அயல்மனையாள் இன்பந்துய்க்கும் கழி காமுகர் 14 61 தூவாக்குழவி - உண்ணாத குழந்தை 13 11 தெங்கு - தென்னை 3 98 தெய்வக்கரு-தெய்வக்கண பிண்டம் (பதிகம்) 28 தெய்வக்கிளவி - தெய்வத்தின்மொழி 7 97 தெருட்டல் - தெளிவித்தல் 7 52 தெருமரல் - சுழற்சி; கலக்கம் 13 60 தேர்ந்தனன்-தேடுவோன்; ஆராய்ந்தறிவோன் 20 31 தேறல் - மது; கள் 3 99 தேறுதல் - தெளிதல் 21 142 தொக்குதல் - ஒருமிக்கச்சேர்தல்; ஒன்றுபடல் 14 25 தொடர்ப்பாடு - தொடர்பு; ஒன்றுபடுதல் 21 98 தொடுகுழி-தோண்டப்பட்டபள்ளம் 16 25 தொடுப்பு-விதைப்பு 8 3 தொல் - பழமை 16 32 தொல் நிலை - பழமை 1 42 தொல்லோர் - முன்னையோர் 20 68 தொழுதகை மாதவன் 9 9 தொழுதல் - கும்பிடுதல் 19 78 தொழுவிளிப்பூசல் - துதிப்போர் முழக்கம் 6 72 தொன்னிலை யுணர்ந்தோர் 1 42 தொன்று - பழமை ; முற்காலம் 10 65 தோகை - ஆண்மயில் 19 62 தோடு - பூவிதழ் 20 13 தோட்ட - துளைக்கப்பட்ட 18 135 தோட்ட - காதணி 3 118 தோப்பி-நெல்லாற் சமைத்த கள் 7 71 நகர நம்பியர் - ஊரில் சிறந்த காதலஞ் செல்வர் 19 24 நகுலம் - கீரி 19 96 நகை - பல் 20 49 நஞ்சுஎயிறு-நச்சுப்பல்; விட முள்ள பல் 20 104 நடவை-வழி; வழிச்சேறல் 13 72 நடவை மாக்கள் - வழிச் செல்லும் மக்கள் ; (தற்காலம், பிரயாணிகள் என்பர்) 14 62 நடுக்குறுதல்-நடுங்குதல் 7 110 நடுங்காநா-வழுவற்ற சொல் 12 3 நடுநாள் - நடுஇரவு 7 63 நந்தா விளக்கு - அழியாத திருவிளக்கு 14 18 நயந்தோன்-விரும்பினோன் 5 88 நயம்பாடு - இனிமை 2 36 நரந்தம் - நாரத்தை 3 162 அருஞ்சொல் காதை அடி நரைமை - வெண்மை 20 44 நலத்தகை-நன்மைச்சிறப்பு 15 49 நல்கூர் நுசுப்பு 10 30 நல்கூர்தல்-வறுமையுறுதல் 19 4 நல்கூர்மேனி - இளைத்த உடம்பு 13 72 நவையறு நன்பொருள் (பதிகம்) 87 நளி-செறிவு : சேர்க்கை 12 92 நறுவிரை - நன்மணம் 19 89 நனவு - நேரில் நிகழ்வது 7 38 நன்னீர்ப் புணரி 6 78 நா - நாக்கு : வாயின் நடு இடம் என்பது பொருள் 14 18 நா உள்ளழுந்தல்-இரைச்சல் இடாதிருத்தல் 7 61 நாகநாடு - நாகரெனப்பட்ட ஒருவகை மக்கள் வாழும் நாடு 8 54 நாகம்-அரவு; நல்ல பாம்பு 7 131 நாகம் - சுரபுன்னை 3 162 நாகம் - நாகப்பாம்பு 20 98 நாடகம்-கதை தழுவிவருங் கூத்து 19 80 நாடி - ஆராய்ந்து 21 122 நாநல்கூர்தல் - நாவறுமையுறல் 10 34 நால்வேறு தேவர்-முப்பத்து மூவராகிய தேவர் 1 37 நாவாய்-மரக்கலம்; நீரின் நடுவே இடந்தருவது என்பது பொருள் 16 17 நாறுதல்-தோன்றுதல் 18 44 நாற்றம் - நன்மணம் 3 3 நிகர் - ஒளி 3 15 நித்திலம் - முத்து 19 112 நிரப்பின்று எய்திய நீணிலம் 14 51 நிரப்பு - வறுமை 14 51 நிரயக் கொடுமொழி நரகம் செல்வதற்கு ஏதுவான கொடியமொழிகள் 6 167 நிரயம் - நரகம் 6 167 நிரைதார் - இணைந்த மாலை ஒன்று சேர்ந்த மாலை; 15 45 நிறை-மனத்தை அடக்குதல் 5 20 நிறை அழிதல் - காவலைக் கடத்தல் 19 23 நீத்தம் - வெள்ளம் 12 80 நுசுப்பு-இடை; மருங்குல் 9 7 நுழைபு-நுழைந்து; சென்று 4 5 நுனித்தனர்-ஆராய்ந்துரைத்தனர் 19 38 நெடியோன் - திருமால் 19 51 நெடுநிலை - மிகப்பெரிய 3 127 நெடுநிலை மண்ணீடு - நீண்ட தோற்றத்தையுடைய சுதையால் செய்யப்பெற்றபாவை 6 47 நெய்தல் - சாப்பறை 6 71 நெட்டிடை-நெடுந்தூரம் 8 17 நேமி - வட்டம் 13 57 அருஞ்சொல் காதை அடி நொசி தவம் - நுண்ணிய தவம் 18 122 நொடிதல்-சொல்லுதல் 13 50 நோற்றல்-துன்பம் பொறுத்தல் 2 47 நோற்றூண் வாழ்க்கை - விரதங்களாற் பட்டினி விட்டுண்ணும் வாழ்வு 18 122 நோன்பி - நோன்பையுடையவன் ; தவநெறியுள்ளோன் 3 102 நோன்மை-பெருமை 17 65 நோன்றல்-பொறுத்தல் 7 50 பகர்தல் - விற்றல் 11 92 பகல் அரசு - பகற்பொழுதிற்கு அரசு ; கதிரவன் 19 18 பகுவாய்-பிளந்தவாய் 17 77 பசலை-வேறுபட்ட நிறம் 5 140 பசிப்பு - பசி: உணவின்றி வருந்துகின்ற நிலை 14 58 பசுங்கால் - பசியதண்டு 19 75 படர்தல் - செல்லுதல் 11 145 படி - பூமி 19 52 படிமை-வடிவம்; (தெய்வ வடிவம்) 3 37 படிவம்-தெய்வ வடிவம் 3 128 படிறு - பொய்; உண்மை யல்லாதது 18 110 படிறு உரை - பொய்ச்சொல் 21 101 படுத்து - அடக்கி ; உள்ளடக்கி 16 25 பட்டிமண்டபம் - கலையறி நிலையம் (ஆராய்ச்சிக்கூடம்) 1 61 பணை-பந்தி; கிளை 7 117 பணை-பறை; முரசு 19 18 பணைமுகம்-பெரிய முகம் 4 36 பண்டு - முன்பு 21 31 பண்ணியம் - இசைகளின் பண்ணியம் - பவ லகைப்பண்டம் 7 123 பண்ணியாழ்த் தீந்தொடை 7 46 பண்பில் காதலன் - குணமற்ற காதலன் 7 50 பண்பில் கிளவி - பயனற்ற சொல் 3 106 பண்பு-இனிமை; அழகு 6 118 பண்பு-சிறப்பு; தன்மை 1 2 பண்பு-அன்பு 7 50 பண்புகொள் யாக்கை - அன்புடைய உடம்பு 6 118 பதியகம் - நகரிடம் 19 41 பத்தி - வரிசை 1 48 பந்தர்-பந்தல்; காவணம் 19 60 பயந்தோர்-தாயர்; அன்னையர் 21 152 பயம்-பயன் (பிரயோசனம்) 3 78 பயன் - தமக்குவேண்டும் பொருள்கள் 18 108 பயிர்தல்-அழைத்தல் 6 75 பரசினர்-வணங்கினர் 12 109 பரதம்-பரதகண்டம் 18 57 அருஞ்சொல் காதை அடி பரத்தமை-பரத்தன் தன்மை, பரத்தையை மருவி ஒழுகுவோன் 7 50 பரப்புதல் - பார்த்தல் 4 94 பரப்புநீர்- மிக்க நீர்; மிகுதிப்பட்டுப் பரவியுள்ள நீர் 14 52 பரவுதல் - வணங்குதல் 12 38 பராவல் - வழுத்துதல்; வணங்குதல் 9 47 பரி - குதிரை 18 113 பரிதல்-அறுபடுதல் 19 85 பரிதியஞ் செல்வன்-ஆதித்தன்; ஞாயிறு 4 1 பரிபுலம்பினன்-மிக்க வருத்தங் கொண்டான் 16 57 பரியல்-வருந்தாதே: (முன்னிலை ஏவல் ஒருமை) 12 50 பரிவு - இரக்கம் 15 66 பரிவுறு மாக்கள்-துன்புற்ற மக்கள் 15 66 பலர்தொழு படிமையன் - பலரும் தொழும் தெய்வ வடிவினையுடையவன் 3 37 பலிமுன்றில்-பலிபீட முன் இடம் 6 52 பல்வேறு சமயப் படிறு - பல்வேறு சமயங்களின் பொய்யுரை 10 77 பவளக் கடிகை-பவளத் துண்டம் 20 75 பழஞ்செருக்கு - முதிர்ந்த களிப்பு 7 72 பழுதில்காட்சி-குற்றமற்ற அறிவு 10 70 பழுநிய - முதிர்ந்த 3 28 பழுநிய பாடல்-இசை முற்றிய பாட்டு 19 84 பழுமரம்-ஆலமரம்; பழுத்த மரம் 14 26 பளிக்கறை-பளிங்கு மண்டபம் 5 84 பறந்தலை-பரந்து கிடக்கும்பாழிடம் 6 96 பறந்தலை-புறங்காடு; சுடுகாடு 18 62 பறாஅக் குருகு - பறவாத குருகு: கொல்லன் உலைமூக்கு 19 28 பற்றற முயல்வோர்-அகப் பற்று புறப்பற்றுக்கள் கெடும்படி முயற்சி செய்வோர் 14 41 பற்றா மாக்கள்-பகைவர் 1 62 பன்னிறப் புள்ளினம் 8 31 பாகு - யானைப்பாகன் 4 36 பாங்கு - பக்கம் 8 35 பாங்கு - உரிமை 21 173 பாசடை-பசிய இலை 4 8 பாசடைப் பரப்பு 4 8 பாசறை-பாடிவீடு; போர்க்களம் 8 32 பாடு - ஒலி 17 50 பாடுகிடத்தல்-வரம்வேண்டிக் கிடத்தல் 18 158 பாடை - மொழி 16 60 பாடைமாக்கள் - மொழி வேறுபட்ட மக்கள் (பல்வகை மொழி பேசும் பலவேறு நாட்டினர்) 1 16 அருஞ்சொல் காதை அடி பாண்டு கம்பளம் - வெண்ணிறக்கம்பளம் (பாண்டு-வெண்ணிறம்) 14 29 பாத்தியன் புத்தன் 10 35 பாத்திரம்-கடிஞை; பிச்சை ஏற்கும் கலம் 14 77 பாத்தூண்-பகுத்து உண்டற்குரிய உணவு (பதிகம்) 64 பாயல்கொள் நடுநாள் 7 63 பாயல்கொள்ளல்-தூங்குதல் 7 63 பாயற்பள்ளி-படுக்கை இடம் 16 29 பாரகம் அடங்கலும் பசிப் பிணி அறுக 16 134 பார்ப்பார்க் கொல்வாப் பண்பு 13 80 பாலிகை-முளைப்பாலிகை 1 44 பால் - பகுதி 1 38 பாவை - திருமகள் ஆடல்:பதினொரு வகை ஆடல்களுள்ஒன்று 5 4 பாவை விளக்கு - பாவை கையிற்கொண்டுள்ளதாக அமைத்த விளக்கு 1 45 பான்மை-தன்தன்மை 18 110 பான்மை-வயம்; இயற்கை 16 96 பிக்குணிக்கோலம் - பிச்சை கொண்டு உண்ணும்துறவு வடிவம்; (பிக்ஷுணி என்னும் வடசொற் சிதைவு) 15 58 பிஞ்ஞை-நப்பின்னை 19 65 பிடவம் - குட்டிப்பிடவம் என்னும் கொடி 3 163 பிடித்த கல்விப் பெரும்புணை 11 77 பிணங்குதல்-நெருங்குதல் 6 151 பிணங்கு நூல் மார்பன் 6 151 பிணவு-பெண்; பெட்டை 16 68 பிணவுக் குரங்கு - பெண் குரங்கு 19 72 பிணித்தல் - வசப்படுத்துதல் 16 70 பிணிப்பு-பற்று; பாசம் 21 16 பிணிப்போர்-கட்டுவோர் 19 88 பிழையா விளையுள் 11 91 பிறங்கல் - மலை 16 53 பிறர்க்குரியாளன் 5 73 பிறழ்தல்-மாறுபடுதல் 18 112 பிறை - வளைவு 6 61 பின்நிலை - தாழ்ந்து நிற்றல் (பதிகம்) 19 பீடிகை-பீடம் ; ஆசனம் 3 66 புகார்-காவிரிப்பூம்பட்டினம் 5 109 புகூஉம் - நுழைகின்ற 5 58 புகை எரி - புகைகின்ற காமமாகிய தீ 19 27 புக்கில் - புகுமிடம் 16 100 புணரி - சேர்க்கை 6 78 புணர்துணை - புணர்கின்ற துணை: பேட்டன்னம் 19 61 அருஞ்சொல் காதை அடி புணர்த்து-சேர்த்து; ஒன்றுகூட்டி 21 139 புண்ணிய முட்டாள்- அறம் புரிதலில் 16 49 புதுக்கோள் யானை - புதிதாகக் கொள்ளப்படும் யானை 18 168 புய்த்துறுத்தல்-பறித்தலைச்செய்தல் 13 47 புரந்து - பாதுகாத்து 15 48 புராணன்-பழமையோன் 5 98 புரிநூல் - பூணூல் 17 27 புரையோர் உயர்ந்தோர்; சிறந்தவர் 21 83 புலந்து-வெறுப்புக்கொண்டு 18 12 புலத்தல் - ஊடல் 10 21 புலம் - மெய்யுணர்வு 10 84 புலம்பு - வருத்தம் 3 9 புலம்புரிச்சங்கம்-அறிவான் மிக்க புலவர் கூட்டம் 7 114 புலர்தல் - உலர்தல் 19 86 புலவரை - அறிவின் எல்லை 5 109 புலவரை இறந்த புகார் 5 109 புலவு - புலால் நாற்றம் 20 52 புலவோன் - மெய்யறிவை யுடையோன்: புத்தன் 20 5 புலால் - தீ நாற்றம் 4 114 புலிக்கணம்-புலிக்கூட்டம் 7 78 புல்லல்-தீண்டுதல் 13 91 புழுக்கறை-புழுக்கத்தினைத்தரும் அறை (காற்றோட்ட மில்லாத இருட்டறை) 3 95 புழை - வாயில் 6 22 புள் - பறவை, வண்டு 7 118 புள் - வளையல் 7 119 புறங்காடு - சுடுகாடு 6 38 புறம் மறிப்பாராய் - பின் பக்கமாகத் திருப்பிப் பார்ப்பாயாக 4 121 புனிறு - புதல்வரைப் பெற்ற நிலை 7 75 புனிறுதீர் கயக்கம் 7 75 புனிறுஆ-ஈன்றணிமையையுடைய பசு; அண்மையிற் கன்றீன்ற பசு 5 47 புனையா ஒவியம் - அணிசெய்யப்படாத ஓவியப்பாவை 16 131 புன்கண் - துன்பம் 11 112 பூ - பொலிவு, மலர் 7 120 பூட்கை - மேற்கோள் 3 60 பூட்கை - மேற்கோள் 5 75 பூத விகாரப் புணர்ப்பு-ஐம் பெரும் பொருள்களின் வெவ்வேறுபட்ட தன்மையின் சேர்க்கை 21 100 பூருவம் - பழமை 9 13 பெண்ணை - பனை 17 29 பெருங்குலைப் பெண்ணைக் கருங்கனி 17 29 அருஞ்சொல் காதை அடி பெரும்பேரின்பம் 2 65 பெரும்பொருள் - அறம்: ஞானமும் ஆம் 19 160 பெற்றிமை-தன்மை; இயல்பு 21 161 பேடி - அலி; ஆண் பெண் இயற்கையற்றது 3 125 பேடு-பதினொருவகை ஆடலுள் ஒன்று 3 125 பேடை-பெட்டை;பெண் 19 62 பேது - அறியாமை 6 151 பைஅரவு-படத்தையுடைய நாகப்பாம்பு 19 11 பைஞ்சேறு-பசிய சாணம் 19 115 பைதல்மாக்கள் - துன்பமுடைய மக்கள் 17 93 பொங்கர்-கட்டுமலை; செய் குன்று 4 93 பொங்குநீர் - விளங்குகின்ற கடல் (பதிகம்) 14 பொடித்தல்-அரும்பல் 18 40 பொதியறை - புழுக்கறை; சிறு துவாரமு மின்றி மூடப்பட்ட கீழறை 19 8 பொதியறைப்பட்டோர் - காற்றோட்டம் இல்லாத அறையில் சிறைவைக்கப்பட்டோர் 4 105 பொதியில் - பொதுஇல்: பலருக்கும் பொதுவான இடம்;அம்பலம்: (பொதுவில் என்பது பொதியில் என மருவியது) 20 15 பொதுஇயல் - எல்லோர்க்கும் ஒப்ப ஆடுங்கூத்து 2 18 பொதும்பர் - இளமரக்கா; சோலை 4 5 பொத்துதல்-மூட்டுதல் 2 42 பொய்உரு - பொய்வேடம் (பதிகம்) 91 பொருவறு சிறப்பு - ஒப்பற்ற சிறப்பு 8 62 பொருளுரை - மெய்யுரை; முனிவர் புரிந்து கண்ட பொருளுடன் கூடியவுரை 2 61 பொருள் - தத்துவம் (உண்மைப்பொருள்) 1 60 பொருள் விலையாட்டி - பொருள் தருவார்க்குத் தன்னை விற்கும் விலை மகள் 5 87 பொறி - புள்ளி 19 68 பொறிமயிர் வாரணம் 7 115 பொறை - சுமை; பாரம் 9 13 பொற்றொடி-மாதர் நற்றிறம் 12 33 பொன்வாகை -பொன்னாற் செய்யப்பட்ட வெற்றிமாலை 26 90 பொன்றக்கெடாஅ-முழுதும் கெடாத 30 223 போக்கப்படுதல் - விலக்கப் படுதல் 13 44 போதி - அரச மரம் போதத்தை (அறிவை)த்தருவதென்பது பொருள் 12 101 அருஞ்சொல் காதை அடி போதிகை - தூண் 19 111 போது - மலர் 4 19 போதுவர்-அடைவர்(செல்வார்) 1 41 போந்தோர்-வந்தோர் 16 18 போழ்தத்து-பொழுதின்கண் 15 26 போற்றுதல்-பாதுகாத்தல் 12 45 பௌவம் - கடல் 7 33 மகள் - மனைவி 21 30 மகன் - கணவன் 21 29 மங்கலம் - நன்மை 10 83 மஞ்சு - மேகம் 16 54 மஞ்ஞை - மயில் 19 68 மடல் - இதழ் மட்டை 20 57 மடவோர் - அறிவிலிகள் 6 104 மடிதல் - இறத்தல்; கீழ் விழுதல் 14 75 மடுத்தல் - உட்கொள்ளல்; மிகுதி 12 120 மடை - சோறு 6 87 மடைக்கலம் - சோற்றுப் பாத்திரம் 21 56 மடையன் - சோறுசமைப் போன் 21 56 மட்டு - தேன் 4 63 மணி - பளிங்கு 4 7 மணி - நீலமணி (நீல இரத்தினம்) 4 44 மணிபல்லவம் - காவிரிப்பூம் பட்டினத்துக்குத்தெற்கே யுள்ளதொரு சிறுதீவு(பதிகம்) 44 மண்கணை - மார்ச்சனை: பேரொலி 6 119 மண்டு அமர் - மிக்க போர் 18 140 மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை 18 156 மண்ணுதல் - கழுவுதல் குளித்தல் 3 91 மதலை - கொடுங்கை 1 53 மதனின் நெஞ்சம் - வலிமையில்லாத நெஞ்சம் 6 206 மதியோர் - அறிஞர் 20 14 மந்தி - குரங்கு 4 6 மயக்கு - கலக்கம் 21 23 மயங்குகால்-சுழல் காற்று; கடுங்காற்று 4 34 மரபு - முறைமை 3 79 மரப்பந்தர் - சோலை 3 44 மரவம் - வெண்கடம்பு 3 160 மராஅம்-வெண்கடம்பு 19 76 மருகன் - வழித்தோன்றல் 4 108 மருத்துவி-மருந்தினையுடையாள் 17 15 மருள் - இருட்சி; இருட்டு நிறம்; கருநிறம் 3 116 மருள் - மருட்கை; வியப்பு 4 2 மருள் - ஒத்த: (உவமவுருபு) 4 27 மருள் - மயக்கம்: அறிவு கெட்ட நிலை 12 98 அருஞ்சொல் காதை அடி மலர்கதிரோன்-பரந்தகதிர் களையுடைய பரிதிவானவன்: சூரியன் 21 190 மலர்கதிர் மண்டிலம் 6 2 மலர்க்கணை மைந்தன்-மன்மதன்: மலர்களை அம்பாகவுடையவன் 19 100 மலர்தலை-அகன்ற இடம் 12 75 மலைக்கும் - வருத்தும் 14 6 மலைத்தல் - போர்செய்தல் 19 123 மழலை வண்டினம் - இளைய வண்டினம் 4 4 மழை - மேகம் 20 22 மறம் - பாவம் 21 20 மறம் - வெற்றி (பதிகம்) 71 மறவணம்-பாவத்தன்மை 2 60 மறித்து - மீட்டும் 10 88 மறுகு - தெரு: வீதி 15 71 மறுமை - மறுபிறப்பு 3 66 மனப்பாடு - மனத்திடம் 21 171 மன்றம் - உலகவறவி என்னும் அம்பலம் 19 31 மன்னுயிர் முதல்வன் மகன் - திருமால் புதல்வன்: நான்முகன் 13 58 மா - கருமை 18 74 மா - விலங்கு 9 25 மா - குதிரை 19 121 மாசு - மறு 4 7 மாதர் - அழகு 3 8 மாதிரம் -திசை 12 91 மாத்திரை - அளவு 11 60 மாநீர் - மிக்க நீர்: கருநிற முடைய நீர்-கடல் 14 73 மாந்தர்-மக்கள்:மனிதர் 20 32 மாந்துதல் - உண்ணல் 6 84 மாபெருந்தெய்வம் 6 170 மாமணி வண்ணன்-நீலமணி போன்ற கருநிறமுடைய கண்ணன் 19 65 மாயவிஞ்சை-மாயத்தைச் செய்யும் வித்தை 18 148 மாயிரு - மிகப்பெரிய 14 32 மாரி நடுநாள் - மழைத்துளி களையுடைய இடையாமம் 14 3 மாருதவேகன்-விஞ்சையன் 6 27 மார்க்கம் - நெறி; வழி 21 164 மாலை-அந்திப்பொழுது 19 19 மால் - பெரிய 14 81 மாவண் தமிழ்த்திறம் (பதிகம்) 97 மாற்றம் - மறுமொழி 8 22 மான்ஊர்தி-அரியணை-சிங் காதனம் 18 48 மிகைநா - மிகுதிப்பட்டுப் பேசும் நாவு 5 79 மிக்க நல்லறம் 6 103 அருஞ்சொல் காதை அடி மிச்சில் - மிகுந்திருப்பது; மிச்சப்பட்டிருப்பது; எச்சம் 15 52 மீயான் - மாலுமி; கப்பல் ஓட்டுவோன் 4 29 மீனத்து இடைநிலை-நடுவண தாகிய விசாக நாள் 15 25 மீன் ஈட்டம் - நட்சத்திரத் தொகுதிகள் 6 182 முக்காழ் - மூன்றுசரம் (சங்கிலி) 3 135 முச்சி-உச்சி; தலை நடுஇடம் 3 134 முடக்கால்-வளைந்த அடி 8 9 முடக்காற் புன்னை 8 9 முடலை - முறுக்கு; கரடு முரடு 16 26 முட்டா வாழ்க்கை - குறைவற்ற வாழ்வு 14 64 முட்டுதல்-குன்றுதல்; வழுவுதல் 16 49 முதல் - அடி இடம் 4 30 முதியாள் கோட்டம்-சம்பாபதி கோயில் 19 39 முதிராத் துன்பம் 5 139 முதிர்தல் - முடிவாதல் 5 139 முதுக்குறை - பேரறிவு: பழைய கொள்கைகள் திருந்திப் புதியவைகளைக் கொள்ளுதல் என்னும்பொருட்டு 18 167 முந்தை - பழமை 18 144 முந்நீர் - கடல்: மூன்று தன்மையுடையது 12 92 மும்மை-மூன்றுமுறை 17 88 முரி-வளைவு;சிதறுதல் 8 4 முருகச்செவ்வி 5 14 முருகு - மணம் 19 94 முருக்குதல்-அழித்தல் 18 140 முருந்து-மயிலிறகின் அடிக்குருத்து 7 88 முல்லைக்குழல் - முல்லை என்னும் பண் 5 136 முழவம்-தண்ணுமை : மத்தளம் 6 119 முளிஎரி - காய்ந்த விறகிற் பற்றிய தீ 18 14 முளிதல் - உலர்தல்; வற்றி வறண்டிருத்தல் 20 66 முள்எயிறு - கூரிய பற்கள் 18 71 முறம் - சுளகு 19 121 முறையுளி-முறையால் 12 6 முற்றவுணர்ந்த முதல்வா 5 101 முன்றில்-வாசல்;முற்றம் 13 107 மூசுதல்-மொய்த்தல் 3 68 மூதுரை-அறிவு மேம்பட்ட சொல் 12 4 மூரி - வலிமை 19 53 மூன்று காலம்-இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலங்கள் 15 9 மெய் - உடல் 19 8 அருஞ்சொல் காதை அடி மெய்பெறாமழலை-வடிவு திருந்தாத இளஞ்சொல் 3 137 மெய்வைத்தல்-உடம்பைப் போகடுதல்; இறத்தல் 6 131 மெலித்தல்-மெலிதல்; நைந்து போதல் 15 60 மை - குற்றம் 3 128 மைத்திரி பாவனை - எல்லா வுயிர்களும் இன்பமுடன் வாழ நினைத்தல் 3 256 மைத்து-கரிய நிறமுடையது 12 85 மைந்துடை வாளில் (பதிகம்) 76 மொசிக்க - உண்ண 19 136 யாக்கை - உடல் 7 133 யாணர் - புதுவருவாய் 17 98 யாப்பு-உறுதி; கட்டுப்பாடு 5 32 யாமம் கொள்வோர்-நாழிகை கணக்கிடுவோர் 7 65 யாவதும் - சிறிதும் 2 56 யாழ்க்கரணம் - யாழின் தொழில் 2 20 யூகி அந்தணன்-யூகி என்னும் பெயருடைய உதயணனுக் குரிய அமைச்சன் 15 64 யோகம் - தவம் 3 100 யோசனை - நூறுகல் தொலைவு 6 211 வகுளம் - மகிழமரம் 3 161 வகைவரிச் செப்பு 4 65 வங்க மாக்கள் - கலத்திற் செல்வோர்: கப்பலில் ஏறிப்போவோர் 14 79 வங்கம்-மரக்கலம்: கப்பல் 1 473 வசி - மழை 1 71 வசித்தொழில்-மழை பெய்தலாகிய தொழில் 14 57 வசியும் வளனும் 1 71 வச்சிரம் - வச்சிரப்படை நிற்குங் கோயில் 5 114 வஞ்சி - வஞ்சிநகர்; வஞ்சி மாலைசூடிப் போருக்குச் செல்லல் 19 120 வஞ்சி - வஞ்சி என்னும் ஒருவகைக்கொடி 5 81 வஞ்சினம்-சூளுரை (சபதம்) 19 2 வடவயின்-வடக்குத்திசை 9 28 வடிகாது - வடிந்த காது : வளர்ந்தமெல்லியகாது 20 53 வடு - வகிர் 17 82 வடு - குற்றம் 18 34 வடு - அடிச்சுவடு 3 159 வட்டணை-வர்த்தனை; கைத் தலங்காட்டல் 7 43 வட்டிகை-எழுதுகோல் 4 57 வட்டு-உண்டை உருட்டுதல் 14 63 வட்டுஉடை - வட்ட ஆடை (முழங்கால் அளவு உடுக்கும்ஆடை) 3 122 அருஞ்சொல் காதை அடி வம்பக்கோட்டி - பயனில் சொற்களைப் பேசும் கூட்டம் 14 63 வம்பம் - புதுமை 3 126 வம்பலன்-அயலான் : புதியவன் என்னலுமாம் 20 88 வயவர் - வீரர் : ஆண்மை யுடையவர் 19 122 வயா - வேட்கை 20 93 வயிறுகாய் பெரும்பசி 11 110 வயின் - இடம் 3 97 வரி-மையெழுதிய கீற்று 3 8 வரிச்செப்பு-அழகியசெப்பு; சிமிழ் 4 65 வலம்புரிச்சங்கம்-வலம்புரியாகிய சங்குகள் : (வலப் புறம் முறுக்குண்டு இருப்பது என்பது பொருள்) 7 113 வலித்து - எண்ணி 21 124 வல்லி - பூங்கொடி 18 25 வல்லிருள்-மயக்கம் 14 3 வழங்குநீர் - கடல்: (போவதும் வருவதுமாகிய அலைகளை யுடைய நீர் என்பது பொருள்) 14 84 வழுநீர் வழுவாகிய நீர் : வழு வழுத்தலையுடைய நீர் 20 47 வழுவுதல் - தப்புதல் 11 130 வளை - வளையல் 18 39 வளையோர்-வளையலணிந்த பெண்கள் 19 24 வள்ளை - வள்ளையென்னும் ஒருவகைக்கொடி 20 53 வறங்கூர்தல் - வளங்குறைதல் 7 9 வறந்தலை - வறுமையுள்ளஇடம் 10 9 வறம் - வற்கடம் ; வறிய நிலையை உலகிற்குத் தருவது ; பஞ்சம் 14 13 வறன் - வற்கடம் ; பஞ்ச காலம் 21 157 வாயில் - வீட்டின் முன்இடம் 20 96 வாயில் - வாயில் காப்பவன் ; காவற்காரன் 19 117 வாய் - உண்மை 21 114 வாய்வது-வாய்ப்புடைத்து 21 171 வாரணம் - யானை ; கோழி 7 115 வாரணாசி-காசித் திருப்பதி 13 3 வார்சிலை-பெரிய வில் 19 53 வால் - வெண்மை 19 76 வால்வெண்-சுண்ணம் 4 18 வாளில் தப்புதல்-வாளால் வெட்டுதல் 21 60 வாள் - ஒளி 3 117 வாள் திறல்-வாளின் வலிமை 18 97 வானவாழ்க்கையர் - விசும்பில் இருப்பவர்: தேவர் 20 36 வான்கோடு-சிறந்த யாழ்த் தண்டு 4 56 அருஞ்சொல் காதை அடி வான் தரு கற்பு - மழை வேண்டிற் பெய்விக்கும் சிறந்த கற்புநெறி 15 77 விசும்பு - வானம் 6 5 விசை - வேகம் 14 80 விஞ்சை - வித்தை 8 25 விடர் - காமுகர் 14 61 விடீஇய - விடுவிக்கும் பொருட்டு ; விடுதலைசெய் தற்கு 15 63 விடுநிலம்-பயிர்செய்யாமல் விடப்பட்ட தரிசு நிலம் 13 51 விட்டேற்று ஆளர்-சுற்றத்தி னீங்கித் திரிவோர ச்; தாம் நினைத்தவாறு திரியும் காலி மக்கள் 14 61 விதானம் - மேற்கட்டி 18 46 விதுப்பு-நடுக்கம்; விரைவு 18 4 வித்தகர்-சிற்பம் வல்லோர் 19 5 விராமலர்-மணமுள்ளபூ 10 32 விரிசிறைப் பறவை - பெருநாரை; போதா 8 28 விரை - மணம் 4 16 விரைமரம் - மணமுள்ள மரம் : சந்தனமரம் 8 5 விரைமலர்த்தாமரை 4 16 விரைமலர்-மணமுள்ள பூ 10 3 விலங்கு-மிருகம்: (குறுக்கே வளர்வதென்பது பொருள்) 12 95 விலங்கு - குறுக்கு 20 129 விலா-விலாப்பக்கம்: விலாஎலும்பு 14 36 விலோதம் - கொடி 1 52 விலோதனம் - கொடி 5 5 விருந்து-புதுமை; புதியதன்மை 18 66 விளங்கொளி மேனி - விளங்குகின்ற பேரொளி பொருந்திய திருமேனி 5 2 விளிந்தனை - இறந்தனை 21 24 விளிப்பு - ஓசை 3 63 விளிவு - சாதல் 4 115 விளையா மழலை 4 99 விளையுள் - விளைவு 11 91 விழவு - திருவிழா 7 62 விழுச்சீர் - சிறந்த புகழ் 20 10 விழுத்தகைத்து - சிறப்புடையது 19 37 விழுநிதி - சிறந்த பொருள் 16 122 விழுப்பம் - சிறப்பு 11 76 விழுமக் கிளவி-துன்பமொழி 21 25 விழுமம் - வருத்தம் 3 75 விழைதல்-விரும்புதல் 20 38 விறல்-வெற்றி 20 45 வினாஅய் - வினாவி ; வினவுதல் - உசாவியறிதல் 14 66 வீ - மலர் : பூ 19 76 வீங்குநீர் - கடல் 5 30 அருஞ்சொல் காதை அடி வீவு - அழிவு; கெடுதி 15 85 வீழ்தல் விரும்புதல் 7 53 வீற்று வீற்றாக - வெவ்வேறாக 30 221 வெஃகல் - விரும்புதல் 30 70 வெகுளல் - சினத்தல் 10 31 வெண்சுதை - வெள்ளிய சுண்ணச் சாந்து 3 108 வெண் திரை - பாற்கடல் 15 51 வெண்பலி - வெண்ணீறு; சாம்பல் 3 108 வெந்திறல் - கடிய வலிமை 9 58 வெந்துகு வெங்களர் 10 47 வெம்மை - சினம் 26 12 வெய்யவன் - சூரியன் 25 30 வெய்யவன் - விரும்பினோன் 26 91 வெய்துயிர்த்தல் - நடுக்க மெய்துதல் 18 4 வெய்துயிர்த்தல் - பெருமூச்சு விடுதல் 19 44 வெரீஇ - வெருவி : அஞ்சி 6 127 வெரூஉ - அச்சம் 13 30 வெவ்வினை-கொடுஞ்செயல் 20 125 வெள்ளில் - விளாமரம் 6 85 வெள்ளைமகன் - விரகில்லாதவன் : வஞ்சமற்ற மகன் 14 36 அருஞ்சொல் காதை அடி வெறி - ஆடு 19 97 வேக வெந்திறல் நாகம் 9 58 வேட்டது-விரும்பியது 18 142 வேட்டல்-விரும்புதல் 20 95 வேட்டம் - வேட்டை 18 168 வேணவா வேட்கை; ஆசை மிகுதி (பதிகம்) 18 வேணவாத் தீர்த்த விளக்கே (பதிகம்) 18 வேதிகை - திண்ணை 1 48 வேத்து இயல் - அரசர்க்கு ஆடுங்கூத்து 2 18 வேய் - மூங்கில் 20 58 வேலை - வேளை : பொழுது ; காலம் 21 54 வேலைபிழைத்தல் - காலந் தவறுதல் 21 58 வேழம் - யானை 20 95 வ - கூர்மை 8 42 வைகுஇருள்-தங்கிய இரவு 20 88 வைவாள் - கூரியவாள் 21 23 வௌவ-கவர ; கொள்ள 16 13 1 மணி. 22 : 27. 2. புறம். கடவுள் வாழ்ந்து. 1. புறம். 183. 2. சீவக. 1002. 3. சிலப். 10-148. 4. தொல். பாயிரவுரை. 1. மணி. 3: 55-6. 1 சிலப். 4 : 79. 1. மணி. 21 : 29-30. 1. கல். 17: 65. 1. தொல், தொகை: 15. 1. புறம். 31 2.சிலப் 29 அம்மானை வரி. 1. குறள். 200. 2. மணி. 27: 106-7. 3. கல். 66. 4. சிலப். 6: 72-3. 5. சிலப். 9: 33-5. து 6. திவாகரம். 1. சிலப். 6: 7-13. 2. சிலப். 5: 128-31. 3. புறம். 287. 1. புறம். 157. 2. மணி. 7: 8. 3. சீவக. 255. 4. மணி. 2 : 1-3. 5. சிலப், 10-27. 1. சிலப். 5 : 60-4. 1. அகம். கடவுள் வாழ்த்து 2. சிலப். 14: 7 3. சிலப். 5 : 102. 4. கம்ப. நகர. 62. 1. திருவாசகம், சதகம், 49. 2. சிலப். 5 ; 723 1. சிலப். 27 : 95. 1. சிலப். 14 : 148-50. 2. சிலப். 5:44. 3.சிலப். 14:164-7. 4. சிலப். 22 - 138-9. 5. பெருங். 1. 35 : 84-6. 1. பு.வெ. 262. 2. புறம். 245. 3. புறம். 246. 1. மணி. 3:186-8. 2. மணி. 24 : 77-8. 1. சிலப். 30:29-31. 1. மணி. 9 : 54. 2. மணி. 12 : 105 ; 21 : 160. 1. புறம். 33. 2. அகம்.11 3. சிலப் 9 : 12 1. சிலப், 20 : 54 1. சிலப். 15, 157-8. 1. பெருங். 1. 40:311-2. 2. சிலப். 10:30-1. 3. முருகு. 43. 1. சம்பந்தர் தேவாரம், 2 : 1. 1. திருக்குறள் 316. 2. திருக்குறள் 317. 3. சிலப். 6 : 127. 1. மதுரை, 482-3. 1. சிலப். 15: 164. 2. சீவக. 1547. 3. பெருங். 1. 40: 88-98. 1. சிறுபாண். 254-5. 2 சிலப். 22-154. 1. சில்ப. 6 : 567. 2. சிலப்.27 :181-6. 3. பெரும்பாண். 405. 4 மதுரை. 516-8. 1. மணி. 21: 132-3 2. மணி. 3 :167. 1. சிலப். 30 ; 114-5. 2. புறம். 77. 3. சீவக. 89. 4 சீவக. 107 ; 175. 1. அகம். 23. 1. மணி - 19 ; 57 - 8. 2. பெரும்பாண். 374. 1. திரிகடுகம். 11 2. சீவக. 1641 3. சூளா- நாடு : 14. 4. புறம், கடவுள் வாழ்த்து. 1. சிறுபாண். 181. 2. தொல். உவம. 9. 3. புறம், 174. 1. மணி. பதிகம். 32 2. கலி. 56. 3. மதுரைக். 376-83. 1. மதுரைக். 752. 1. பெருங். 2. 3: 144. 2. தொல். தொகை. 12. 3. குறுந்.1 4. கலி. 68: 15. 5. திருச். 376. 1. சீவக. 1704. 1 புறம். 54. 2. பழமொழி. 21. 1. பொருந. 187-8. 1. நாலடி. 42. 2. இறை சூ. 1. உரை. 3. சீவக. 192, 1. சிலப். 3 : 109-10. 2. சிலப். 6 : 60-1. 1. மணி. 18 : 69-7. 2. மணி. 18 : 156. 3. பா. வே. ஆயினிப் பைந்தொடீ என்பதும் பாடம். 4. சிலப். 34 : ‘சரவண’ : ஆய்வளை. 5. குறள். 262. 1. புறம். 51. 2. பழ.190. 3. சூளா. கல்யாண. 155. 4. குறுந். 17 1. சிலப். 10 : 143-4. 2. சிலப். 8 : 1. 1. அகம். 31. 1. வீர. யாப்பு, 11 எடுத்துக்காட்டு. 2. நீல. சமய. 3. வீர. யாப்பு. 11. எடுத்துக்காட்டு. 1. குறள். 323. 2.. சிலப். 10; 196 -7. 1. புறம். 21. 2. சிலப், 28: 184. 1.. நெடுநல். 78. 1. குறிஞ்சிப். 217-8. 2. அகம். 14. 3. சிலப். 17:கொல்லை 1. குறள். 957. 2. தொல். பொருளதி. 284. 3. சிலப். 15:156. 1. மணி. 5: 96. 1 மணி. 3; 28 - 41 1. சிலப். 5 : 88-4. 2. கலிங்க. கோயில் 21. 1. சிலப். 1:14-6. 2. புறம். 52. 3. சீவக-284. 4. புறம். 189. 1. நாலடி. 25. 2. புறம். 240. 3. கலிங்க. கோயில். 16. 1. முருகு. 233-4. 1. நாலடி. 46. 1. சிறுபாண். 197. 2. சிலப். 5-225. 1. சிலப். 11 : 57. 1. சிலப். 28 : 167-8. 172-5. 1. மணி. 1 : 34. 2. சீவ. 1 : 255. 1 குறள். 1311. 1 மதுரை, 400-3. 2. சிறுபாண். 148. 1. சிலப். 28:231. 2. சிலப். 13 : 57-8. 3. சிலப். 13: 59-60. 1 மதுரைக். 11. 1. சிலப். 10 : 114-9. 1. கம்ப. கும்பகர்ண. 80. 1 குறள். 418. 1 சில்ப். 15 :100. 2. குறள். 246. 1 மணி. 21: 13-4. 1. குறள். 197. 1 புறம். 18. 1 சிலப். 10 : 36. உரை. 1 குறள். 10. 1 புறம். 70. 1 பெரும்பாண், 351. 2 வீர. யாப்பு. 11. மேற்கோள். 3 குறள். 1049. 4 குறள். 1014. 1. நாலடி. 285. 2. குறள். 1042. 1 புறம். 134. 2 நாலடி. 98. 3 புறம். 18. 1. குறள். 358. 1. குறள். 142 2. நாலடி. 98 1 சிலப். 28 : 165-6. 1. சிலப். 28 ; 172-4. 1. பெரியபு. பாயிரம் 2 2. மதுரை. 5. 10. 1. புறம். 28. 2. மணி. 22:61. 3.சிலப். 28 : 168. 4. குறள். 2: 5. 1 இழந்தேன். 2 எறிபயம். 1 சிலப். 8 : 1. 2 மலைபடு. 122. 1. புறம். 4. 2. தொல். செய்.சூ. 110. 1 சிலப். 14 : 57. 2. கலி. பாலை, 19: 6. 3 கலி. மருதம், 19: 13. 4. புறம்.28 1 மணி. 10 : 30. 1. பழ. 246. 2. குறள். 85. 1 கலி. 82. 1 சிலப். 15 : 44-5. 2 புறம் : 18 3. திருநா. தே. 4. 75:3. 1. திருச்சிற். 76. 2. புறம். 38. 3. குறள். 1055. பரி. மேற். 4. குறள். 228. 1. பெருங். 1. 35 : 226, 2. நற். 3. 1 குறள். 1007. 1 குறள். 358-உரை. 1 தொல். புறட். 20. 1 தொல். வினை. 49. 1 கலி 16. 1 குறள் - 55. 2 கலி. 16. 1. சிலப். 15 : 57. 2. குறள். 401. 3. சீவக. 56. 1 சிலப். 10 : 266. 1. தொல். மரபு. 58. 1 குறள். 339. 1 நெடுநல். 147 1 குறள். 44. 1 குறள். 352. 1 சிலப். 6 : 1. 1 கலி. நெய்தல்: 5. 1. குறள். 1007. 1 நாலடி. 153. 2. சிலப். 26: ‘காதலன்றன்.' 1. மதுரைக். 572-4. 2. பெருங்கதை 1, 35: 137-8. 3. கலி. 40 : 24--5. 1. சிலப். 14 : 146. 1. நெடுநல். 90. 2. சிலப். 3: 111-2. 1 சிலப். பதி. 15. 1. குறள். 1145. 1.. கலி. 38. 2 குறள். 57 : 55. 1. சிலப். 3 : 101-6. 2. சிலப். 3 : 8-9. 1 சிலப். 23 : 37. 2 சிலப். 10 : 223. 1. குறள். 418. 2. மணி. 4 : 112 - 20. 1 சிலப். 5: 30. 2 திருச்சிற். 237. 3 சிலப். 9: 15. 1. மதுரைக். 592. 2. முல்லைப். 35 3. கலி. 226-7. 4. பரி. 8 : 98 5. கலி. 94 : 36 6. சிலப். 12 : ‘சுடரொடு’. 1. சிலப். 10:191. 1. தொல். பொருளியல். 19. 2. பொருந. 171-2. 3. மதுரைக். 381. 4. கம்ப. நகர. 58. 5. கம்ப. வரை. 6. 6. முருகு. 82. 1. சிலப். 17. 1. அகம். 37. 2. கலி. மருதம். 7. 3. தொல். மரபு. 58. 1. கலி. 26. 2. கார். 19. 1. சிலப். 3: 61. 1. பெருங். 1, 33: 3-7. 1. பெருங். 1, 58 : 40 - 4. 2. பெரும்பாண், 218. 3. சீவக. 1414. 1. தொல். புறம், 7. 2. பெரிய. திருநா. 343. 3. சீவக. 248. 4. குறள். 698- 1. புறம். 96. 1. சிலப். 23: 126-31. 1. சிலப். 28: 203-4 1 குறள் : 5. 1 சிலப். 5 : 128-34. 1 தொல். உரி: 19. 1 மணி. 21: 132 - 3. 1. சிலப். 16: 17. 1 கலி. 23, 1 மணி. 2 ; 68 2 மணி. 24 ; 77-8 3. திருக்குறள், 107. 1. மணி. 24 : 169 - 70. 1 திருவாசகம். போற்றி. 50-1. 1 மனி. 27 : 281-3.3 1 புறம். 39. 2. சிலப். 15: 28-37. 3. மணி 10: 24-40. 22 ஆம் காதை முதல் 27 ஆம் வரை அருஞ்சொல் பொருள் அகரவரிசை அருஞ்சொல் காதை அடி அகம் - மனம் 23 141 அங்கி - நெருப்பு 27 209 அஞர் - துன்பம் 23 8 அடித் தொழில்-குற்றேவல் 22 134 அண்டல்-நெருங்குதல் 27 70 அநித்தம் - நித்தமல்லாதது: நிலையற்றது 25 3 அந்தணாளன் - மறையவன் 22 115 அந்தம்-ஒழிவு:முடிபு 27 225 அந்தர சாரிகள் - வானின் வழியாகச்செல்வோர் 28 69 அம்பி-நாவாய்; மரக்கலம் 29 9 அயர்த்தல் -மறத்தல் 23 42 அயர்ந்து - செய்து 22 20 அரசர் உரிமைஇல்-அந்தப் புரம் 23 55 அரற்றல் - புலம்பல் 22 56 அருத்தா பத்தி - பொருள் அளவை: ஒன்றைக் கொண்டு மற்றொன்றை அறிதல் 27 45 அருவுரு - உயிரும் உடம்புமாம் வடிவ உண்மையும்,இன்மையும் 30 84 அருள் கண் - அருள் நோக்கம் 22 15 அலர் - பழிச்சொல் 22 87 அல்லவை-அறமல்லாதவை 22 173 அழற்கண் நாகம் - திட்டி விடம்என்னும்பாம்பு 23 69 அழியல் - துன்பம் 27 156 அளவைவாதி - பிரமாணவாதி 27 3 அறுகு - அறுப்பேன்; நீக்குவேன்: (செய்கென் வாய் பாட்டுத் தன்மை யொருமை வினைமுற்று) 30 264 அற்பு - அன்பு 26 7 ஆகம அளவை - உரையளவை: உரைப் பிரமாணம் 27 43 அருஞ்சொல் காதை அடி ஆகமவிருத்தம் - நூலில் கூறும் அற முதலியவற்றை நம்பாது கூறுதல் 29 164 ஆசனம் - இருக்கை 29 295 ஆசீவகம் - ஆசீவகம் என்னும் சமயநெறி 27 108 ஆணு - அன்பு (பதிகம்) 17 ஆயம் - சிலதியர்: பணிப் பெண்கள் 24 89 ஆரியன் - குரவன்; பெரியோன்: ஈண்டுப் புத்தன் 25 6 ஆரிருள்-மிக்க இருள் 22 187 ஆர்ப்பு - ஆரவாரம் 27 213 ஆறு - வழி 26 1 இடங்கர் - முதலை 28 18 இணை - இரண்டு 23 45 இந்திர மருமான் - இந்திரன் வழித்தோன்றல் 24 164 இந்திர விகாரம் - இந்திரனால் ஆக்கப்பட்ட ஏழ் அரங்குகள் 26 55 இப்பி-சிப்பி: கிளிஞ்சில் 27 64 இம்பர் - இவ்வுலகம் 26 38 இயக்கம் - செல்லுதல் 25 8 இயவு - வழி; பாதை 13 8 இயல்பு - இயல்பென்னும் அளவை 27 47 இருங்கோ வேட்கள் - குயவர் 28 34 இருசுடர் - ஞாயிறு திங்கள் ஆகிய இரண்டு ஒளிப் பொருள்கள் 27 89 இருத்தி - சித்தி 26 61 இலஞ்சி - பொய்கை; தடாகம் 28 202 இறுவரை-பெரியமலை 26 30 இற்று - இத்தன்மையுடையது 30 48 இன்மை-ஒரு பொருளின்இல்லாமை 27 51 ஈனோர் - இவ்வுலகத்தில் உள்ளோர் 28 132 அருஞ்சொல் காதை அடி உணர்ந்ததை உணர்தல் - மறித்துணர்வு 27 60 உபத்தம் - பெண் ஆண் உறுப்பு 27 237 உம்பர் - மேலிடம் 26 38 உம்பளம் - உப்பளம்: (மெலித்தல் விகாரம்) 24 27 உம்மைவினை-பழவினை 26 32 உயிர் ஈறு செய்தோர் - உயிரை விட்டு விட்டோர் 22 23 உயிர்த்து - மோந்து 27 18 உயிர்மருந்து - சோறு 25 160 உய்தி - உய்வாய்; மேம்படுவாய் (முன்னிலை யொருமை) 21 179 உய்யா நோய் - உயிர் உய்ய வொண்ணாத நோய் 23 59 உலகவிருத்தம் - உலக இயல்புக்கு மாறுபாடாக உரைப்பது 29 162 உவாமதி - முழுமதி: கலை நிறைந்த சந்திரன் 22 13 ஊட்டினை - உண்ணுமாறு செய்தாய் 23 92 ஊழ்படுதல் - முறையே வளர்ந்து முதிர்ந்து கெடுதல் 30 37 ஊறு - பொறி புலன்களின் இயைபு 24 106 ஊன்பிணி - தசையின்கட்டு 25 216 எட்டிப்பூ - எட்டி என்னும் பட்டமும் அதற்குரிய பொற்பூவும்: வணிகர் பெறும் பட்டம் 22 113 எல் - ஒளி 22 152 எவ்வம் - துன்பம் 22 46 எறிதல்-கோலாலடித்தல் 23 40 ஏகாந்தம் - அநைகாந்திகம்; ஒன்று பட்டது 29 274 ஏமம் - பாதுகாப்பு 30 13 ஏலம் - மணம் 23 68 ஏனாதி-சேனைத்தலைவர்க்கு அரசனால் அளிக்கப் பெறும் பட்டப் பெயர் 22 205 ஒருசிறைப்பாடு - ஒருபுறத்தின் பக்கம் 23 50 ஒற்றன் - உளவறிந்து கூறுவோன் 26 27 ஓதி-கூந்தல் 23 24 கஞ்சகாரர் - வெண்கலக் கன்னார் 28 35 அருஞ்சொல் காதை அடி கஞ்சுகன் - சட்டையிட்ட அரச சேவகன் 28 178 கடம் - காடு 23 112 கடம் - குடம் 29 73 கடல்வணன்-திருமால் 27 98 கடல்வயிறு - கடலில் உள்ளிடம் 24 63 கடவுள் மண்டிலம் - ஞாயிற்று மண்டிலம் 22 1 கடிப்பு - பறையடிக்குங் குறுந்தடி 25 51 கட்டி - கருப்புக்கட்டி 27 264 கட்டுரை - பொருள்நிறைந்த சொல் 23 5 கணி - சோதிடன் 24 59 கண்ணிய - சொல்லப்பட்ட 27 256 கந்தவுத்தி - மணப் பொருளைத் தக்கபடி கலந்து செய்யும் முறை 28 15 கயவன் - கீழ்மகன் 23 94 கராம் - முதலை 28 18 கருகிய - இருண்ட 22 148 கருணாபாவனை - பிற உயிர்கட்கு உண்டாகும் துன்பத்தை நீக்கவிரைதல் 30 256 கலம்-யாழ் முதலிய கருவிகள் 28 42 கவயமா-காட்டுப்பசு 27 42 கவர்கோடல்-ஐயுறுதல் 27 22 கன்றிய - அடிப்பட்ட; முதிர்ந்த 22 20 காதலன் - புதல்வன் 22 30 காருக மடந்தை - இல்லற ஒழுக்கினள் 23 105 காலக் கணிதர்-சோதிடர் 28 40 காழியர்-பிட்டு வாணிகர் 28 32 காழ் - வயிரம் 22 148 கிரியை -தொழில் 22 24 கிருத்தம்-செய்யப்படுவது 29 388 குஞ்சி - குடுமி: ஆண்மக்களின் தலைமயிர் 22 154 குழவி - குழந்தை 29 5 குறி - குறித்த இடம் 25 164 கூஉய் - அழைத்து 22 32 கூவியர்-அப்பவாணிகர் 28 32 கைநிறை - கைகொள்ளும் படி 23 48 அருஞ்சொல் காதை அடி கைம்மலை - கையையுடைய மலைபோல்வது : யானை 26 81 கைவினை - செய்தொழில் 22 85 கொண்டோன்-கணவன் 22 51 கொற்றம் - வெற்றி 23 11 கொற்றவன்-அரசன் 25 186 சங்கயம் - ஐயம்: சந்தேகம் 29 230 சயித்தம் - கோயில் 28 131 சலம் - நீர் 24 47 சாமானியம் - பொது 27 243 சிக்கு - வன்மை; திண்மை 27 143 சிந்தனை - கேட்டவற்றை நினைவு கூர்தல் 30 258 சிமையம் - கொடுமுடி 26 88 சிலம்பு - மலை 28 108 சிவிறி - விசிறி 28 10 சிற்றில் - சிறிய இல்லம் 22 182 சீப்ப - ஒட்ட; போக்க 22 1 சீலம் - ஒழுக்கம்: விலக்கியன ஒழித்து விதித்தன செய்தல் 24 137 சுட்டல் - பொருண்மை காண்டல் 27 22 சுருதி-அறவுரை கேட்டல் 30 258 சூதர் - இருந்தேத்துவோர் 28 50 செம்போக்கு - நேராகச் செல்லுதல் 27 157 செயப்பாட்டுவினை - செய்வினை 23 77 செயலை - அசோகமரம் 24 38 செரு - போர் 23 14 செல்வுழி-செல்லும் இடம் ;வீரசுவர்க்கம் 23 14 செற்றம் - பகைமை 23 12 சேதியம் - கோயில் 28 175 சொல்லின் மாத்திரம் - சொல்லே பொருள் 27 72 சோழர்தம் குலக்கொடி(பதிகம்) 23 ஞானதீபம்-அறிவுவிளக்கு 30 262 தகைக்குநர் - தடுப்பவர் 23 36 தண்டமிழ்ப் பாவை - குளிர்ந்த தமிழ்ப்பாவை; காவிரி (பதிகம்) 25 தருப்பை - தருப்பைப்புல்; நாணற்புல் 23 13 அருஞ்சொல் காதை அடி தலையெடுத்தாய் - நீக்கினாய் 22 103 தாதகிப்பூ - ஆத்திப்பூ 27 264 தாதை - தந்தை; பெற்றவன் 22 79 தாதை - தந்தை; பெற்றவன் 28 123 திகிரி - ஆணைச்சக்கரம் 22 16 திட்டாந்தம் - எடுத்துக் காட்டு 29 57 திணிதல் - சேர்தல் 22 45 திரிதல்-ஒன்று மற்றொன்றாக வேறுபடல் 27 22 திருகி - மிகுந்து 22 157 திருத்தக - செம்மையாக 29 275 திலகம் - திலகம்போல்வது; மேலானது 26 43 துக்கம் - துன்பம்: பிறப்பு பிணி, மூப்பு, சாவு என்பன 25 4 துடைக்கும் - நீக்கும் 23 6 துணிகயம்-தெளிந்த நீரினையுடைய குளம்: ஊருணி 24 84 துணிபொருள் - மெய்ப்பொருள்: தத்துவஞானம் 23 136 துயக்கு - குற்றம் 27 19 துளங்காது-நடுங்காமல் 22 8 துன்ன வினைஞர் - தையல்வேலை செய்வோர் 28 39 தூ பற்று: விருப்பத்துக்குக் காரணமாகவுள்ளது 25 92 தெய்வக் கல் - தெய்வப் படிமம் அமைத்தற்குரியகல் 26 89 தெவ்வர் - பகைவர் 23 12 தெறுதல்-எரித்தல்: அழித்தல் 27 123 தெற்றி-வேதிகை திண்ணை 26 72 தேம் - அழகு 25 86 தேஎம்-தேசம்: நாடு 23 12 தேசம் - இடம் 27 23 தேவகுலம் - கடவுளர் கோயில் 26 72 தேறு-தேற்றாங்கொட்டை, தேற்றா விதை 23 142 தொகுதி - தொகுப்பு; சேர்க்கை 24 136 தோற்றம் - பிறத்தல் 24 107 தோற்றரவு - தோற்றம்; பிறவி 26 56 தோன்றினன் - பிறந்தான்; 22 221 அருஞ்சொல் காதை அடி நகுதல் நகைத்தல்; சிரித்தல் 24 23 நண்ணார் - பகைவர் 22 29 நவை-குற்றம் 27 1 நன்பொருள்-மெய்ப்பொருள் 27 1 நாணுத் தகவு - நாணுந்தகுதி 23 16 நாப்பண்-நடுவண்; நடுவில் 22 145 நாப்புடை-நாக்கின் அடி 23 16 நாமம்-பெயர் 27 23 நிம்பம் - வேம்பு 27 183 நிரப்புநர் - கொடுப்போர் 23 133 நில்லா - நிலைபெறா 22 135 நிவந்தோங்கு-மிகவுயர்ந்த 22 14 நின்மிதி-நியமிக்கப்படுதல் 30 37 நுகர்வு-இன்ப துன்ப நுகர்ச்சி 24 106 நொடி - பொருளொடு புணர்ந்த நகைமொழி 22 62 நோன்பு - தவம் 22 208 பக்கம் - இடம்வலம் என்ற பக்கங்கள் 27 255 பசுமிளை-பசியகாவற்காடு 28 25 படப்பை-பக்கம்; தோட்டம் 25 16 பட்டவை - உண்டாகுந் துன்பங்கள் 23 6 பயந்தோய்-பெற்றோய்: (முன்னிலை யொருமை) 23 100 பயிர்க்குரல்-விளியோசை : கூப்பிடும் ஒலி 23 116 பரசுதல்-வணங்குதல் 27 88 பரம அணு-மிக நுண்ணிய அணு 27 126 பவத்திறம்-பிறப்புக்கு ஏதுவாகிய குற்றம் 30 264 பவம்-நல்வினை தீவினைகளின் பயன் தருகின்ற முறைப்படி சார்தல் 24 107 பளிதம் - கற்பூரம் 28 243 பற்று - புலன்களைப் பற்றிக் கொள்ளுதல் 24 107 பாங்கு - பகுதி: பகுக்கப்படுவது 27 78 பாசவர்-வெற்றிலை விற்போர் 28 33 பாசிலைத் திரையல் - பசிய வெற்றிலை 28 243 அருஞ்சொல் காதை அடி பாடகம்-காலிலணியும் ஒரு வகை அணி 25 85 பாணி - கைகள் 27 237 பாயுரு - எருவாய் 27 237 பாரமிதை - வீடு பேறாகிய கரையை அடைதற்குரிய பத்துவகைகள் 26 45 பாவனை-கேட்டவாறு நடத்தல் 30 258 பாவை - ஓவியம் ; பாவைபோலுள்ள மணிமேகலை 30 264 பான்மை-முறைமை 23 47 பிசி-பொருளொடு புணராப் பொய்ம்மொழி 22 62 பிடகநெறி - புத்தனருளிச்செய்த ஆகமங்களின் வழி 26 66 பித்தை - குடுமி 22 149 பிரத்தியம் - காட்சி; நேரில் அறிவது 27 83 பிரமாண ஆபாசங்கள் -அளவைகட்குப் பொருந்தாதவைகள் 27 85 பிறகிடுதல்-பின்னே இருக்கும்படி கடந்து செல்லுதல் 22 102 பிறர்நெஞ்சு புகாஅர் - ஏதிலார் உள்ளத்தில் புகுதல் இலர் 22 46 பின்நிலை - தாழ்ந்து நிற்றல் (பதிகம்) 19 புகுந்தது-நிகழ்ந்தது: நடந்தது 23 87 புத்தேள் - தேவர் 22 118 புலங்கொளல்-அறிதல் 27 13 புலைமை-புன்மை, கீழ்மை 24 80 புறங்காத்தல்-பாதுகாத்தல் 23 11 புறம் - வௌத்யிடம் 23 22 புன்னை-புன்னைமரம் 25 157 பூவிலை - பூவிற்கு விலை; அற்றைப் பரிசம் 24 19 பெட்டு - விரும்பி 22 70 பெரும்பிறிதாக்கல்-கெடுத்தல் 23 28 பெரும்பேறு-வீடுபெறுதல்: மோட்சம் 30 49 பெற்றி - தன்மை 22 67 பெற்றிமை-தன்மை; இயல்பு 21 161 பேணல்-வணங்குதல் 22 64 பேதைமை-மயங்கிக் கண்டது மறந்து கேட்ட பொய்யை மெய்யெனத் தெளிதல் 24 105 அருஞ்சொல் காதை அடி பொதுவர் - பொதுமகளிர்; கணிகையர் 28 51 பொல்லாக்காட்சி - மயக்க அறிவு 24 129 பொறை யுயிர்த்தல்- இளைப்பாறுதல் 24 165 பொன்வாகை -பொன்னாற் செய்யப்பட்ட வெற்றிமாலை 26 90 பொன்றக்கெடாஅ-முழுதும் கெடாத 30 223 போந்து - வந்து 22 88 போழ்நர்-அறுப்பவர் 28 44 போழ்ந்து-பிளந்து: கீறி 23 13 மகரம் - மகரமீன் 29 15 மங்கலமொழி-நன்மொழி; அறமாகிய சொற்கள் 30 261 மணிவினைஞர் - முத்துக்களைக் கோப்போர் 28 45 மண் - அணு 22 45 மதி - திங்கள்: மாதம் 24 42 மம்மர் - மயக்கம் 22 128 மயரி - மயக்கமுடையோன் 22 75 மயல் - மருள்: பித்து 23 41 மயற்பகை - பித்தேற்றும் மருந்து 23 92 மயிலை-மல்லிகை 24 38 மருங்கு-குலம்; வழிமுறை 22 25 மலைதல்-மாறுபடுதல் 30 261 மல்லல்-வளப்பம் 23 132 மழுவாள் நெடியோன்-பரசுராமன் 22 25 மறவர் - வீரர் 26 82 மனமாசு-மனவிருள்; திரிபான எண்ணம் 22 94 மன்பதை-உயிர்ப்பன்மை: உயிர்ப் பொருள்களின்தொகுதி 23 16 மாகதர்-நின்றேத்துவோர் 28 50 மாண்ட-மாட்சிமைப்பட்ட;சிறந்த 27 39 மாயை - வேற்றுருவம் 28 245 மாறு - பகைமை 23 143 மான்று - மயங்கி 23 107 முங்கி-மூழ்கி; அமிழ்ந்து 29 16 முடிபொருள்-வேதாகமங்களால் அறுதியிட்ட உண்மைப் பொருள் 22 169 அருஞ்சொல் காதை அடி முதிகைப் பாவனை - பிற உயிர்கள் நலங்கண்டு அவை என்றும் நன்கு வாழ எண்ணுதல் 30 256 முதிராக் கிளவி - இளஞ் சொல்: மழலைமொழி 22 181 முதுநீர்-பழமையாகிய நீரையுடையது: கடல் 22 169 மேலை - மேன்மை 28 11 மைந்நிண விலைஞர்- இறைச்சி விற்போர் 28 33 மையறு மண்டிலம் - குற்ற மற்ற கண்ணாடி 25 137 யாப்பறை-உறுதியற்றவன் 22 42 வடிவேல்-கூரியவேல் 25 202 வயிரம் - வைரமணி 27 135 வர்த்தித்தல் - உண்டாதல் 29 256 வல்லாங்கு-வல்லமை 23 44 வழி - மரபு; குலம் 22 210 வளம் - வருவாய் 22 45 வளி - காற்று 24 86 வளையோன்-வளைய லணிந்தவள் 26 68 வற்பம்-வன்மை : திண்மை 27 120 வனப்பு - அழகு 22 128 வாகை - வெற்றி 24 55 வாக்கு - வாய் 27 237 வாசவர் - பஞ்சவாசம் னூ விற் போர் 28 33 வாயில் ஐம்பொறிகளும், உள்ளமும் 24 106 வாய்வாளாமை-வாய்பேசா திருத்தல் 30 237 வாளால் எறிதல் - வாள் கொண்டு வெட்டுதல் 22 158 விசி - கட்டுதல் 22 63 விசேடம் - சிறப்பு 27 243 விபரீதம் - விகாரம்; வேறு பாடு 27 125 வியன் - அகலம் 25 1203 விளிதல் - இறத்தல் 23 15 வீட்டியது - கொன்றது : வீழ்த்தியது 23 85 அருஞ்சொல் காதை அடி வீயா - கெடாத ; மாறாத 22 162 வீற்று வீற்றாக - வெவ்வேறாக 30 221 வெஃகல் - விரும்புதல் 30 70 வெம்மை - சினம் 26 12 வெய்யவன் - சூரியன் 25 30 வெய்யவன் - விரும்பினோன் 26 91 அருஞ்சொல் காதை அடி வேட்டனை-விரும்பினாய் 25 113 வேதாளிகர் - நாழிகைக் கணக்குக் கூறுவோர் 28 50 வேத்தவை - வேந்தவை : வலித்தல் விகாரம். அரசர் பேரவை யென் பது பொருள் 28 118 வைதிக மார்க்கம்-வேதநெறி 27 3 1 தொளி. 1. கொத்தன ரென்றே. 1 சீவக : 77. 1. முருகு : 275. 2. மணி. பதிகம் : 10-12. 1 சிலப். 5; 128 - 34. 1. குறள் : 55. 2. தொல், செய், 165. 1. கலி. நெய்தல்: 16. 2. கம்ப. பால. மிதிலைக். 5. 1. தொல். புறத். 8. 2. சீவக. 2167. 3. பழ. 242. 4. சிலப். 20: 53-9. 5. விக்கிரம சோழனுலா. 4 (பாடம்) 1. அழுதனளடி வீழ்ந்து 2. காத்துச் 3. செற்ற தெவ்வர். 1 புறம். 93. 2 தொல். அகத். 44. உரை. 1. சிலப். 30: 25-8 1. சிலப், 1:122. 2. புறம். 163. 1. முருகு. 186-7. 2. நெடுநல். 107. 3. சீவக. 275. 1 கலி. 5. 1. மணி. 32: 45--6. 2. பெரும்பாண். 40-1. 1. சிலப். 21 : 35. 1. சிலப். 5 : 51. 1. குறள், 1101. 2. சூடா நிகண்டு. 2;4. 3. பெருங்கதை. 3-4:86-90 1 சிலப் 11 : 180-3. 1. அகம்: 71. 1. சிலப். 15: 151 1. மணி. 30: 56-60. 1. தொல். புறத ச்திணை. 24. 2. புறம். 3. 1. மணி. 15:4. 1. குறள். 130. 2. குறள். 1302. 1. கம்ப. பால. அரசியல். 4. 2. புறம். 4. 3. குறுந். 361. 1. மணி. 7: 131. 2. சிலப். 25: 106. 1. மணி. 4 : 195 - 4. 2. ஏலாதி. 9. 1. சிலப். 24. தென்னவன். (பாடம்.) 1 றழுது ணிற்ப. 1. சிலப். 15:163-6. 2. சிலப்.29: ‘தற்பயந்தாள்.’ 3. மணி. 2:42-48. 1. சீவக. 1833. 27. 2. சிலப். 23 :70. 1. குறள். 305: 2. நீல. மொக்கல. 88. 3. வீர. யாப்பு. 11-உதாரணம். 1. மணி. 24 : 105-7. 2. சிலப். 10 : 11-4. 3. திருச்சிற். 10.உரை. 1 புறம். 33. 2 சீவக: 76. 1 சிலப். 26: 50-1. 1. புறப் - வெ. 68. 2. மணி. 28 ; 101-2 3.. மணி. 2 : 4-7 : 26 : 48. 1. பகிர்ந்திட்டனர். 2. கருத்தேயுவம. 3. மாண்டவருத் தாபத் தீயோடியைபு. 1. குறிகொளனு மானத். 2. இயைபியானை. 1. நிச்சயியாது. 2. கடுமருப்புலியி லோர்ந்து. 1. வேதத், தாதியந்தமில்லையதுவே நெறியெனும். 2. பூரணனை. 3. நால்வகையினு. 1. வேற்றியலெய்தும். 2. புத்தாய்ப். 3. மலையும். 4. வரைப்பால். 5. துன்றும். 6. மிக்க வதனிற். 7. நோலா பூதத்திரட்சி. 8. மயிரும். 9. கழிவேய் பிறப்பிற். 1. இறத்தலு மிழத்தலும். 2. பிறக்கும். 1. ஒத்துத் தோன்றி. 1. முக்குணமின்றி. 2. பொருளுமின்றி. 1. தழிவின்; 2. வெனநக்கிடுதலும். 1. இக் கிருதகோடி யென்பாரது வரலாறு இதுகாறும் ஆராய்ச்சிக்கு நன்கு விளங்கவில்லை. 1. இதனைச்சபரர் முதலியோர் திருஷ்டார்த்தாபத்தி, சுருதார்த்தா பத்தி யென இருவகைப் படுத்துரைப்பர். கௌடிலியர் தந்திரவுத்திகளில் ஒன்றாக்குவர் (அதி. 15: அத். 1). 1. தார்க்கிகரட்சையென்னும் நூலாசிரியரான வரதராச ரென்பார், உலகாயதர் காட்சயாகிய ஓரளவையும், புத்தரும் வைசேடிகரும் காட்சியும் கருதலுமாகிய இரண்டளவையும், சாங்கியர் அவ்விரண்டோடு உரையினைக் கூட்டி மூன்றளவையும், நையாயிகருள் ஒரு சாரார் அம்மூன்றோடு உவமையைக் கூட்டி நான்களவையும், மீமாஞ்சகருள் ஒருசாரார் அந்நான்குடன் அபாவத்தைக் கூட்டி ஐந்தளவையும் கொண்டனர் என்பர். சைவருட் பெரும்பாலோர் காண்டல், கருதல், உரையென்ற மூன்றளவையும், பௌட்கர முதலிய ஆகமவழி நின்றோர் அம் மூன்றோடு அருத்தாபத்தியைக் கூட்டி நான்களவையும் கொள்ப. பட்டாசாரியன் நெறி நின்றோர், காட்சி, கருதல், உரை, உவமை, அருத்தாபத்தி, அபாவம் என்ற ஆறுமே கொண்டன ரென்றும், பிரபாகர நெறி நின்றோர் அபாவமொழிந்த ஏனை ஐந்துமே கொண்டன ரென்றும், நையாயிகர் அருத்தாபத்தி யொழிந்த ஏனை நான்குமே கொண்டன ரென்றும், சாங்கியர் உவமை யொழிந்த மூன்றும் கொண்டனரென்றும், வைசேடிகரும், புத்தரும் காட்சியும் கருத்துமே கொள்பவென்றும், உலகாயதர் காட்சியொன்றே கொள்வரென்றும் சாத்திர தீபிகையின் ஆங்கில முன்னுரை கூறுகிறது. 1. வேதம் அநாதி நித்தியமென்பது பற்றி நிகழும் தடை விடைகளை நியாய பாடியத்தும் நியாயவார்த்திக தாற்பரிய டீகை (i. 1. 68)யிலும் நீலகேசி வேதவாதச் சருக்கத்தும் (ix) சாத்திர தீபிகை (அதி. VIII) முதலிய வேறு பல நூல்களிலும் காணலாம். 1. இம்மற்கலி கோசலர் மக்கலி கோசலரென்றும் கூறப்படுவர். இவர் ஆசீவகருள் மூன்றாந் தீர்த்தங்கரரென்றும், அசோகமன்னனுடைய பேரனான தசரதனென்பான் இந்நெறியிற் பேரீடுபாடுடையனென்றும் கூறுவர். ஆசீவகநெறியைக் கண்ட ஆசிரியன் எளிய குடியில் ஆக்களைக் கட்டும் தொழுவத்தில் (கோசாலையில்) பிறந்ததுபற்றி, அவர் நெறி நின்ற தலைவர்கள் கோசலர் எனப் பட்டனர். மக்கலி என்ற சொற்குப் பலரும் பல்வேறு பொருள் உரைப்பர். சிலர் இவர்தந்தை வீடுதோறும் சென்று ஓவியங்கள் காட்டி வயிறு வளர்த்தது பற்றி, அவர் மகனான இவர் மக்கலி யெனப்பட்டாரென்றும, சிலர் இவரைப் பின்பற்றினோர் ஆடையின்றி யம்மணமாய்த் திரிந்தமையின் தம்மைப் பாதுகாத்துக் கோடற்கு மூங்கிற் கோலைக் கையிலேந்தித் திரிந்தமையின் இப்பெயர் பெற்றன ரென்றும், சிலர் "இடறி விழாதே" (மா. கலி.) என்று அடிக்கடி இவர் தம் மாணவர்க்குரைத்ததுபற்றி இவ்வாறு பெயர் பெற்றாரென்றும் கூறுப (History of Indian Philosophy Vol. II. P. 456). "யாதும் செய்யாதே; சும்மா இரு" என்பது ஆசீவகர் குறிக்கோள் என்பர் (பதஞ்சலியார் பாடியம். Vol. III. பக். 96). நீலகேசியும், "மோனாந் திருந்தனன்" (680) என்கின்றது. 1. காரணகாரிய சாமானியக். 1. மேவிய பக்கத்து 1. பிரமாண சமுச்சயம் ii. 30 Buddhistic Logic, Vol. I. P. 266. 1. Indian Philosophy p. 80.(2nd Edn.) 2. செந்தமிழ் Vol. 34. பக். 46. 1 செந்தமிழ் Vol. xxxii. பக் 29-30. 1. நியா. பிர. 2. பதார்த்த.பக். 234. 1. அனுமான பரிச்சேதம் சு, 52-75 1. வைசேடிக சூத்திரம். iii. 2. 8. 12. 2 சாங்கி, சூ. பாடி. i. iii. 123, 1. தத்து. சங்கி. 1484. 1. செந்தமிழ் Vol, XXXii. P. 159. 2. வை, N. v. 1,2 3. 3. தத்துவ சங்கிரகம் Vol. I Chap. VII. 4 217, 218, 219. 1. O. R. J. Vol. XI. P. 125-6. 2. நியா. பிர. பக். 3-8 3. Ind. Logic. P. 190. 4. நியா. பிர. பக். 9-10(3) 1. வைசேடிகபாடியம், பக். 238-9. 2. அனுமானபரிச்சேதம் (75-83). 1. முதல் துணை நிமித்தமெனக் கொண்டு செய்யும் காரணகாரிய வாராய்ச்சிக்கண் அன்னியதாசித்த மென்ற குற்றவாராய்ச்சி நிகழ்த்தப் படுதலை சித்தாந்த முக்தாவளி முதலிய வடநூல்களுட் காண்க. 2. செந்தமிழ் XXXii. பக். 207. 1. பௌஷ்: பாடி, 4. 838. 9 உரை, சிவநெறி. பக். 31.2. 2. Fragments from Dinnaga. P. 29-33. 1. நியா. பிர. பக். 3. 18-21. 2. பிரசத்த. பாடி. பக். 228. 3. நியா. பிர. பக். 3-4. செந்தமிழ் XXXII. பக். 235-9. 1. நியா. பிர. பக். 4-2. 2. பிரசத் பாடி. பக்த. 238-9. 1.. நியா. பிர. பக் 4-2--10. 2. விருத்தியைச் சூக்கும பரிணாமமென்றும் கூறுப. 1. நியா. பிர. பக். 4, 10-16. 1. சுலோக வார்த்திகம், அனுமான. 96. 2. நியாயபிந்து. பக். 115 1. ஒழிபொருளைப் பரன் என்பது தருக்க நெறி. இது ஞானாமிர்த முதலிய தமிழ் நூல்களிலும் மிருகேந்திர முதலிய வடநூல்களிலும் வழங்குவது சித்தார்த்த சைவர் அறிந்தது. 1. இச்சாங்கிய வாதம் சாங்கிய காரிகை (காரிகை 17) யிலும் சுலோக வார்த்திகத்திலும், (அனுமானபரி. 96-107) நியாய ரத்னாகரத்திலும், சாந்த ரஷிதருடைய தத்துவ சங்கிரகத்திலும் (vii 307-10) காணப்படுகிறது 1. சுலோக. வார்த். அனுமான, 100-101. 1. சுலோ, வார்த். அநுமான. 102-103. 1. வைசே. பாடி. பக். 247. 1. நியாயபிந்து. பக், 166-7. 1. பௌட்க, பாடி. (897-898. உரை.) 2. 28 உரை. 1 பிரசத்த பாடி. பக். 247. 1. தீயசாதனமாவது பக்கப் போலி ஏதுப் போலி திட்டாந்தப் போலி யென்பதை நியாயப் பிரவேசம், "ஏஷாம் யக்ஷ ஹேது த்ருஷ் டாந்தா பாஸா நாம் வசநாநி ஸாதனாபாசம்" என்பது காண்க. 1. 83. 1. அவதான சதகம் (1: 301-4). 1. "No destruction. no production; no discontinuity, no per manence; no unity; no diversity: coming (appearance), no going (disappearance)" - (11--13.) 1. பக். 323. 2. Bodhi Sathva Docrine P. 242. 1. Compendium of philosophy by Rys Davids. p. 262. 1. தரும சங்கிரகம். Sec. 127, 128, 129. 1 தரும சங்கிரகம் Sec. 96. 1. 141-1. (i-xii) 2. லலிதா விஸ்தாரம். 35: 9.