வரலாற்றறிஞர் வெ. சாமிநாத சர்மா நூல் திரட்டு - 12 மானிட ஜாதியின் சுதந்திரம், சுதந்திர முழக்கம், சுதந்திரத்தின் தேவைகள் யாவை? ( சன்யாட்சென்னின் உரைகள் ) ஆசிரியர் வெ. சாமிநாத சர்மா தமிழ்மண் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வெ. சாமிநாத சர்மா நூல்திரட்டு - 12 ஆசிரியர் : வெ. சாமிநாத சர்மா பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2005 தாள் : 16 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10.5 புள்ளி பக்கம் : 16 + 320 = 336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 315/- படிகள் : 500 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 அணிந்துரை எழுத்திடைச் செழித்தச் செம்மல் வெ. சாமிநாத சர்மா (1895-1978) அவர்கள் தன்னுடைய எழுத்துப் பணியை, எதிர்காலம் மறக்காது எனும் நம்பிக்கையைத் தமது நாள் குறிப்பு ஒன்றில் (17.9.1960) பின் வருமாறு பதிவு செய்துள்ளார். “ஆங்கிலக் கணக்குப்படி இன்று என்னுடைய 66வது பிறந்த நாள். வாழ்க்கைப் பாதையில் அறுபத்தைந்தாவது மைல் கல்லைக் கடந்து விட்டேன். என்ன சாதித்துவிட்டேன்? அதைச் சொல்ல எனக்கு சந்ததிகள் இல்லை. ஆனால் வருங்காலத் தமிழுலகம் ஏதாவது சொல்லுமென்று நினைக்கிறேன்.” அவருடைய எழுத்துப் பணியோகத்திற்கு உறுதுணையாக வாழ்க்கைத் துணைவியாக, விளங்கிய மங்களம் அம்மையார், மகப் பேறு - சந்ததி - இல்லாததை ஒரு குறையாகக் கருதாமல் சாமிநாத சர்மாவின் நூல்களே குழந்தைகள் எனும் கருத்தை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “இந்தக் குழந்தைகள்தாம் - நூல்கள்தாம் - எங்களுக்குப் பிற்காலத்தில் எங்கள் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்” இறுதிக் காலத்தில் தம்முடைய நூல்கள், கையெழுத்துப் படிகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை எனக்கு வழங்கிய சமயத்தில் அவருடைய நூல்கள் அனைத்தையும் பொருள்வாரி யாகப் பிரித்துப் பல தொகுதிகளாக வெளிவரும் காலம் கைகூடும் என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினேன். அதைக் கேட்டு அவர் புன்னகை பூத்தார். ஆமாம், வெ. சாமிநாத சர்மாவின் நூல்கள் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சி காலத்தில் கி.பி. 2000த்தில் நாட்டுடைமை யாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல பதிப்பகங்கள் போட்டி போட்டுக் கொண்டு அவருடைய நூல்கள் பலவற்றை மறுவெளியீடுகளாகக் கொண்டு வந்துக் கொண்டிருக் கின்றன. இவற்றிற்கெல்லாம் மணிமகுடம் வைப்பது போன்று, வளவன் பதிப்பகம் சாமிசாத சர்மா அவர்களுடைய நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிடுகின்றது. 83 ஆண்டுகால வாழ்க்கையில் சாமிநாத சர்மாவின் இலக்கிய வாழ்க்கை 64 ஆண்டுகாலமாகும். அவருடைய 78 நூல்கள் அவருடைய இலக்கிய வாழ்க்கையின் சுடர் மணிகளாக ஒளிவீசிக் கொண்டிருக் கின்றன. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பேரறிஞர்கள் தம் நூல்கள் அனைத்தையும் பல தொகுதிகளாக வெளியிட்டு தன்னேரில்லாத சாதனைகள் படைத்து வருகின்றது தமிழ்மண் பதிப்பகம். காலத்தேவைக்கேற்றத் தமிழ்த்தொண்டாற்றி வரும் வளவன் பதிப்பகம் சாமிநாதசர்மாவின் நூல்களனைத்தையும் தொகுத்து வெளியிடும் அரிய முயற்சியைத் தமிழர்கள் வரவேற்று வெற்றி யடையச் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். இராமகிருஷ்ணபுரம், 2வது தெரு, மேற்குமாம்பலம், சென்னை - 600 033. பெ.சு. மணி வெ. சாமிநாத சர்மாவின் சாதனைகள் தமிழ் மொழியின் உரைநடை நூல்களின் வளம் பெருகத் தொடங்கியக் காலக்கட்டத்தில், தரமான உயர்ந்த நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட்டதன் மூலம், தமிழ்ப் பணியாற்றிய பெருமக்கள் பலர். இன்றும், என்றும் நாம் நன்றியுடன் நினைவு கூறவேண்டியவர்களில் பெரும் பங்காற்றியச் சிறப்புக்கு உரியவர், திரு. வெ. சாமிநாத சர்மா அவர்கள். சர்மாஜி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என போற்றப்பட்டவர். அவருடன் குரு-சீடர் உறவுப் பிணைப் போடு பணியாற்றியவர்! சுதந்திரமான எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்டதால் அரசுப் பணியை உதறிவிட்டு, இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தவர். 1895ஆம் ஆண்டில் பிறந்த சர்மாஜி தனது பதினேழாவது அகவையில் எழுதத் தொடங்கி, பத்தொன்பதாவது அகவையிலேயே தனது முதல் நூலை (கௌரீமணி) வெளியிட்டார். மூன்று ஆண்டுகள் திரு. வி. க. நடத்திய ‘தேச பக்தன்’ நாளேட்டிலும், பன்னிரண்டு ஆண்டுகள் ‘நவசக்தி’ கிழமை இதழிலும், இரண் டாண்டுகள் ‘சுயராஜ்யா’ நாளேட்டிலும் உதவியாசிரியராகப் பணி யாற்றினார். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்க வெளியீடான ‘பாரதி’யில் ஓராண்டு ஆசிரியராக இருந்தார். திரு. ஏ.கே. செட்டியார் அயல் நாடு சென்றிருந்தபோது அவரது ‘குமரி மலர்’ மாத இதழுக்கு ஆசிரியராய்ப் பொறுப்பேற்றிருந்த பெருமையும் இவருக்கு உண்டு. தமிழ்த் தென்றல் திரு. வி. க., மகாகவி பாரதியார், பரலி சு. நெல்லையப்பர், வீர விளக்கு வ. வே. சு. ஐயர், தியாகச் செம்மல் சுப்பிரமணிய சிவா, அக்ரஹாரத்து அதிசய மனிதர் வ. ரா. பேராசிரியர் கல்கி, உலகம் சுற்றிய தமிழர் திரு. ஏ.கே. செட்டியார் முதலான தமிழ் கூறும் நல்லுலக மேதைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் சர்மாஜி. இவரது இல்லற வாழ்க்கை இலட்சியப் பிடிப்பாலும், தமிழ்ப்பணியாலும் சிறப்பு பெற்றது. தம்பதியர் இருவருமே அண்ணல் காந்தியின் பக்தர்கள். தனது அனைத்து எழுத்துலகப் பணிகளிலும் உறுதுணையாக நின்று, ஊக்கமளித்து, தோழமைக் காத்து, அன்பு செலுத்திய மனையாள் மங்களம் அம்மையாருடன் 1914ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகள் இல்லறத்தை நல்லறமாக்கி நிறைவு கண்டவர் சர்மாஜி. இத்தகைய பாக்கியம் பெற்ற எழுத்தாளர்கள் ஒரு சிலரே! தம்மிருவரின் ஒத்துழைப்பால் தோன்றிய நூல்களையே தங்கள் குழந்தைகளாக எண்ணி மகிழ்ந்தனர் அந்த ஆதர்ச தம்பதியர். ஆங்கிலம், தமிழ், வட மொழி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஆறு மொழிகளை அறிந்திருந்தவர் அம்மையார். தனக்கு உற்றத் துணையாயிருந்த மனையாள் உயிர் நீத்தது சர்மாஜியைத் துயரக் கடலில் ஆழ்த்தியது. தனது ஆற்றாமையைத் தன் நண்பருக்கு எழுதிய கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார். இவைதான் பின்னர் ‘அவள் பிரிவு’ என்று நூலாக்கம் பெற்றது. இரங்கூனுக்குச் சென்ற சர்மாஜி 1937 இல் “ஜோதி” மாத இதழை தொடங்கினார். பத்திரிகை உலகிற்கு ஒரு புதிய வெளிச்சமாக அமைந்தது ‘ஜோதி’. பிற்காலத்தில் பிரபலமான எழுத்தாளர்களில் பலரும் ‘ஜோதி’யில் தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர்கள்தாம். புதுமைப் பித்தனின் ‘விபரீத ஆசை’ முதலான கதைகள் ‘ஜோதி’யில் வெளிவந்தவையே! இலட்சியப் பிடிப்போடு ஒரு முன் மாதிரி பத்திரிகையாக விளங்கிய ‘ஜோதி’யில் ‘வருணன்’, ‘சரித்திரக்காரன்’, ‘மௌத்கல்யன்’, ‘தேவதேவன்’, ‘வ.பார்த்த சாரதி’ முதலான பல புனைப் பெயர்களில் பல துறைகளைத் தொட்டு எழுதியவர் சர்மாஜி. இரண்டாம் உலகப் போரில் இரங்கூனில் பெய்த குண்டு மழைக்கு நடுவிலும் ‘ஜோதி’ அணையாமல் தொடர்ந்து சுடர்விட்டது குறிப்பிடத்தக்கது. போர்க் காலத்தில் குடும்பத்தோடு அவர் மேற்கொண்ட பர்மா நடைப் பயணம் துன்பங்கள் நிறைந்தது. தனது உடமைகளில் எழுது பொருட்களையே முதன்மையாகக் கருதினார். குண்டு மழையால் திகிலும், பரபரப்பும் சூழ்ந்திருந்த போது பாதுகாப்புக் குழிகளில் முடங்கவேண்டிய தருணத்திலும் தன் தமிழ்ப் பணியை மறந்தார் இல்லை. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழலில், உயிர் போவதற்குள் தான் மேற்கொண்டிருந்த மொழிபெயர்ப்புப் பணியை முடித்தே ஆகவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாதுகாப்புக் குழியில் இருந்தபடி மொழிபெயர்த்து எழுதி முடிக்கப்பட்டதுதான் ‘பிளாட்டோவின் அரசியல்’ என்ற உலகம் போற்றும் நூல். சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே இரங்கூனில் தோற்றுவிக்கப்பட்ட பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், பின்னர் புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. வரலாறு என்பது உண்மை களை மட்டுமே தாங்கி நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் சர்மாஜி. உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள், புரட்சி வீரர்கள், தீர்க்கதரிசிகள்; அறிவியல் அறிஞர்கள் முதலானோரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர்தம் சாதனைகளையும் உள்ளது உள்ளபடி, மிகச் சரியானபடி தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இவர். இன்றளவும் இச்சிறப்பில் இவருக்கு இணை இவரே என்பது மிகையல்ல! ஆங்கில மொழி அறியாத அல்லது ஆங்கிலத்தில் போதிய பரிச்சயம் இல்லாத தமிழர்களுக்கு உலக நாடுகளின் அரசியல், தத்துவங்கள், வரலாறு தொடர்பான ஆங்கில நூல்களை எளிய, அழகுத் தமிழில் மொழிபெயர்த்து அளித்தார். மொழி பெயர்ப்புகள் நீங்கலாக மற்ற நூல்களை எழுதும் போதும் தனது விமர்சனங்களையும், அபிப்பிராயங்களையும், கற்பனைகளையும் ஒருபோதும் கலந்து எழுதியவரல்ல! இப்பண்பே அவரது நூல்களின் மிகச் சிறந்த அம்சமாகும். சர்மாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் மக்களிடையே மிகவும் புகழ்ப் பெற்றவை. சாதாரண வாசகனுக்கும் புரியக் கூடியவை. மூல நூலின் வளத்தைக் குறைக்காதவை. ஆக்கியோன் உணர்த்த நினைத்ததை சற்றும் பிசகாமல் உள்ளடக்கி, மொழியின் லாவகத்தோடு சுவைக் குன்றாமல் பெயர்த்துத் தரப்பட்டவை. ‘பிளாட்டோவின் அரசியல்’, ‘ராஜதந்திர யுத்தகளப் பிரசங்கங்கள்’, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, மாஜினியின் ‘மனிதன் கடமை’, இங்கர்சாலின் ‘மானிட சாதியின் சுதந்திரம்’, சன்யாட்சென்னின் ‘சுதந்திரத்தின் தேவைகள் யாவை?’ முதலான நூல்களைப் படித்தவர்களுக்கு இது நன்கு விளங்கும். ‘காரல் மார்க்ஸ்’ வாழ்க்கை வரலாறு பற்றி அநேக நூல்கள் இதுவரை வெளிவந்திருந்தாலும், முதன் முதலாக மிக விரிவாக எழுதப்பட்டதும், மிகச் சிறப்பானதென்று எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டதும் சர்மாஜியினுடையதே! எழுபதுக்கும் மேற்பட்ட மணி மணியான நூல்களை சர்மாஜி எழுதினார். ‘கூhந நுளளநவேயைடள டிக ழுயனோளைஅ’ என்ற ஆங்கில நூலும் அவற்றில் அடங்கும். நாடகங்கள் எழுதுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஆற்றலையும் அவர் எழுதிய ‘லெட்சுமிகாந்தன்’, ‘உத்தியோகம்’, ‘பாணபுரத்து வீரன்’, ‘அபிமன்யு’ ஆகிய நாடக நூல்கள் வெளிப்படுத்துகின்றன. எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்து, தமிழ்ப் பணியாற்றி மறைந்த சர்மாஜியின் நூல்களை இன்றைய தலைமுறையினர் படித்தறிந்து கொள்வது அவசியம். ஏற்கனவே படித்து அனுபவித்த வர்கள் தங்கள் அனுபவத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இவற்றிற்கு ஏதுவாக ‘வளவன் பதிப்பகம்’ மீண்டும் அவற்றை பதிப்பித்துத் தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளும் வகையில் தமிழ்ப் பணியாற்றியுள்ளது போற்றுதலுக்கு உரியது. இதன் பொருட்டு திரு. கோ. இளவழகன் அவர்களுக்கும், அவர்தம் மகன் இனியனுக்கும் நாம், தமிழர் என்ற வகையில் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். பதிப்புத் துறையில் வரலாறு படைத்து வரும் திரு கோ. இளவழகன் வரலாற்றறிஞர் சர்மாவின் நூல்களை வெளியிடுவது பொருத்தமே! 6, பழனியப்பா நகர், திருகோகர்ணம் அஞ்சல், ‘ஞானாலயா’ பி. கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை - 622 002. டோரதி கிருஷ்ணமூர்த்தி பதிப்புரை ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்!’ என்ற தமிழ்ப்பெரும் பாவலர் பாரதியின் கட்டளைக்கேற்ப உலகெங்கும் கொட்டிக் கிடந்த அறிவுச் செல்வங்களைத் தாய்மொழியாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமையர் சாமிநாத சர்மா. பல்துறை அறிஞர்; பன்முகப் பார்வையர்; தமிழக மறுமலர்ச்சி சிந்தனையாளர்களில் ஒருவர்; தமிழ் கூறும் நல்லுலகம் புதியதோர் கருத்துக்களம் காண உழைத்தவர்; தமிழுக்கு உலக சாளரங்களைத் திறந்து காட்டிய வரலாற்று அறிஞர்; இவர் ஆற்றிய பணி வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் பதியத்தக்கது. தம்மை உயர் தகுதி உடையவர்களாக்கிக் கொண்ட மாந்தர்களைத் தான் வரலாற்று ஆசிரியர்கள் உலகுக்கு வரலாறாக வடித்துத் தந்துள்ளனர். மக்களின் மகிழ்ச்சிக்காக உழைத்த உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை, நூல் தொகுப்பாகத் தமிழ் இளம் தலைமுறைக்கும், எதிர்வரும் தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தந்துள்ளோம். தமிழ்க் குமுகாயம் வலிமையும், கட்டமைப்பும் மிக்கப் பேரினமாக வளர வேண்டும்; வாழவேண்டும் என்ற உணர்வோடு இந்நூல் தொகுப்புகளை உங்கள் கைகளில் தந்துள்ளோம். சாதிப்பித்தும், சமயப்பித்தும், கட்சிப்பித்தும் தலைக்கேறி தமிழ்க் குமுகாயத்தைத் தலைநிமிரா வண்ணம் சீரழித்து வருகிறது. மொழி இன நாட்டுணர்வு குன்றிக் குலைந்து வருகிறது. இச்சீரழிவில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும். இழிவான செயல் களில் இளம் தலைமுறையினர் நாட்டம் கொள்ளாத நிலையை உருவாக்குவதற்கும், மேன்மை தரும் பண்புகளை வளர்த்தெடுப்ப தற்கும், அதிகாரப் பற்றற்ற - செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவாவற்ற - செயல்திறமையைக் குறிக் கோளாகக் கொண்ட - பகுத் தறிவுச் சிந்தனையை அறிவியல் கண்கொண்டு வளர்த்தெடுக்கும் உணர்வோடு இந்நூல்களைத் தமிழர்களின் கைகளில் போர்க் கருவிகளாகக் கொடுத்துள்ளோம். தன் மதிப்பும், கடமையும், ஒழுங்கும், ஒழுக்கமும், தன்னல மின்றி தமிழர் நலன் காக்கும் தன்மையும் வளரும் இளந்தலை முறைக்கு வேண்டும். இளமைப் பழக்கம் வாழ்நாள் முழுவதும் உதவும். விடாமுயற்சி வெற்றி தரும்; உழைத்துக் கொண்டே இருப்ப வர்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெறமுடியும் எனும் நல்லுரை களை இளம் தலைமுறை தம் நெஞ்சில் கொள்ள வேண்டும் என்ற மனஉணர்வோடு இந்நூல் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன. சர்மா தாம் எழுதிய நூல்களின் வழியாக மக்களிடம் பேசியவர். மக்கள் இவரின் நூல்களைப் படிக்கும் போது அந்த நூல்களின் கதைத் தலைவனோடு நெருங்கி இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியவர். இவரின் உரைநடை நீரோட்டம் போன்றது. தமிழ் உரைநடைக்குப் புத்துயிர் ஊட்டிப் புதுவாழ்வு அளித்தவர். வேம்பாகக் கசக்கும் வரலாற்று உண்மைகளை இனிப்புப் பொங்கலாகத் தமிழ் குமுகாயத்திற்குத் தந்தவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தம்பி என்று போற்றப்பட்ட இவரின் நூல்கள் தமிழ்க் குமுகாயத்திற்கு வலிவும், பொலிவும் சேர்க்கும் என்ற தளராத உணர்வோடு தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். முன்னோர்கள் சேர்த்து வைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து நூல் திரட்டுகளாக ஒரு சேர வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தொகுப்பு நூல் பதிப்பகம் என்பதை நிலை நிறுத்தி வருகிறோம். சாமிநாத சர்மா 78 நூல்களை எழுதியுள்ளார். இதில் தலைவர்கள், அறிவியல் அறிஞர்களின் வரலாற்று இலக்கியங்கள் 26 ஆகும். இதனை 9 நூல் திரட்டுகளாக வெளியிடுகிறோம். ஏனைய நூல்களையும் மிக விரைவில் தமிழ் கூறும் உலகுக்கு வழங்க உள்ளோம். தமிழர்கள் பொதுவாழ்வில் நாட்டம் கொள்ள வேண்டும்; உலக அரசியல் அறிவைப் பெறவேண்டும் என்னும் பெருவிருப்பால் இந்நூல் களைக் கண்டெடுத்து நூல்திரட்டுகளாக உங்கள் முன் தந்துள்ளோம். வடமொழியின் ஆளுமை மேலோங்கி இருந்த காலத்தில் இவரின் தமிழ் உரைநடை வெளிவந்ததாகும். அந்தக் காலப் பேச்சு வழக்கையே மொழி நடையின் போக்காக அமைத்துக் கொண்டு நூலினை உருவாக்கி யுள்ளார். மரபு கருதி உரை நடை யிலும், மொழிநடையிலும், மேலட்டைத் தலைப்பிலும் மாற்றம் செய்யாது நூலை அப்படியே வெளியிட்டுள்ளோம். அடிமை உணர்வையும், அக்கறையற்றப் போக்கையும் தூக்கி யெறிந்து உலக அரங்கில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இவ்வரலாற்று இலக்கியங்கள் கலங்கரை விளக்காக அமையும் என்று நம்புகிறோம். தலைவர்களின் வரலாற்று இலக்கியங்களைப் படியுங்கள். அவர்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்துங்கள். தமிழின மேன்மைக்கும், வளமைக்கும் தம் பங்களிப்பைச் செய்ய முன் வாருங்கள். நூலாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் எம் நன்றி உணர்வை தனிப்பக்கத்தில் குறித்துள்ளோம். பதிப்பாளர் நுழையுமுன்... மானிட ஜாதியின் சுதந்திரம் இங்கர்சால் பகுத்தறிவுச் செம்மல், அமெரிக்கா ஈன்றெடுத்த அறிஞன் நூலின் மொழிபெயர்ப்பே மானிட ஜாதியின் சுதந்திரம். இவன் ஒரு சிந்தனையாளன். எதனையும் அஞ்சாமல் வெளியிலே சொல்லும் ஆற்றல் உடைய அறிஞன். தான் உழைத்துச் சேர்த்த செல்வத்தைத் துன்பப்பட்ட மக்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தவன். அறிவுப் பெருக்கத்தின் விளைவால் உள்ளத்தில் பட்டதை உலகிற்கு உரைத்த அறிஞர்கள் வரிசையில் வைத்து எண்ணப் படத்தக்கவன். உயிரைத் துரும்பென மதித்தவன். எதிர்ப்பு, இரண்டகம், மரணம் இவற்றைப் பொருட்படுத்தாமல் வாழ்ந்து மறைந்தவன். எதை உண்மை என்று நம்பினார்களோ அதற்காகத் தலைநிமிர்ந்து நின்ற பெறுமை உடையவர்களே மாமனிதர்கள். (பக். 19) எந்த ஒரு வீட்டில் பயனதரும் நூல்கள் அடங்கிய நூலகம் உள்ளதோ அங்கு அறிவுச் செல்வம் குடி கொண்டிருக்கிறது. பழங்காலத் தெப்பத்திற்கும், இக்காலப் போர்க் கப்பலுக்கும், பழங்காலத் தடிக்கும், இன்றைய தகரி(பீரங்கி)களுக்கும் உள்ள அறிவின் முன்னேற்றத்தை இந்நூலில் அறியலாம். அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையை அடியோடு ஒழித்தார். இவர் உலக வரலாற்றில் தனக்குக் கிடைத்த ஆளுமையை வேறு எதற்கும் பயன்படுத்தாது மக்களின் வாழ்வுயர பயன்படுத்தியவர் எனும் குறிப்பும் காணப்படுகிறது. உலகமெலாம் கட்டியாளும் அரசனாக இருப்பதைக் காட்டி லும் ஓர் ஆண்மகனாக, ஒரு பெண்ணின் அன்பிற்குரியவனாக ஒருவன் இருந்தால் அவனே மிக உயர்ந்த மாந்தன். பெண்மை யின்அன்பைப் பெற்ற பேராளன். பெண்மையின் பெருமை பேசப்படும் நூல். குழந்தைகளின் அருமை பேசப்படும் நூல். (பக். 68) அறிஞர்கள் உருவாக வேண்டுமானல் குளிர்காலமும் தேவை, கோடைக்காலமும் தேவை. எந்த நாட்டில் மாந்தனுக்குப் போர்வை தேவையில்லாமல் இருக்கிறதோ, எங்கு முகில்கள் கதிரவனை மறைத்துக் கொண்டிருக்கிறதோ அங்கே தொழில் புரட்சி தோன்றும். பண்படுத்தப்பட்ட மண்ணில்தான் சிறந்த விளைச்சலைக் காண முடியும். அப்படிப் பட்ட நாட்டில்தான் மிகச்சிறந்த அறிஞர்களை உருவாக்க முடியும். சுதந்திரத்தின் தேவைகள் யாவை? சீனப் பெருநிலத்தில் குடும்பப் பற்றும், மரபுப் பற்றும் மிகுந் திருந்ததே தவிர நாட்டுப்பற்று குறைந்திருந்தது. சீனர்கள் மணற் மூட்டை போன்றவர்கள். நமது மக்கள் குடும்பத்திற்கும் மரபிற்கும் பற்று செலுத்தினார்களே தவிர ஏன் தேசத்திற்கு பற்று காட்டவில்லை? என்று வருந்தியவன் சீன குடியரசுத் தந்தை சன்யாட்சென். உலக மக்களோடு சீனாவை ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகுந்த மக்கள் தொகையோடு இருக்கிறோம். பழம்பெருமை வாய்ந்த கலையறிவோடு இருக்கிறோம். பலகோடி மக்கள் வாழ்கிறோம். தேசிய உணர்ச்சி இல்லையே ஏன்? அந்த தேசிய உணர்ச்சியை வலுப்பெறச் செய்ய வேண்டாமா?” என்ற வினாவை எழுப்பி சீனத்தில் தேசிய உணர்ச்சியைக் கட்டி அமைத்தவன். ஒரு நாடு தலைநிமிர்ந்து வாழவேண்டுமானால் அதற்குப் பல துன்பங்கள் வரவேண்டும். எந்த ஒரு நாடு தனக்கு வெளிநாட்டுத் தீங்குகள் இல்லை என்று கருதிக்கொண்டிருக்கிறதோ அது சிதறிப் போவது திண்ணம். ஒரு நாட்டிற்குத் துன்பங்கள் ஏற்பட்டால் அந்தத் துன்பங்களைக் கண்டறிந்து மக்களை ஒன்றுதிரட்டி வீரப்போர் புரிவதே தம் வாழ்விற்கு வழியாகும். சீன மக்களாகிய நாம் சீன மக்களின் இன உணர்ச்சியை தேசிய உணர்ச்சியாக வளர்த்தெடுத்துக் கொண்டோமானால், உலக அரங்கில் நிமிர்ந்து நடைபோடுவோம். பிற நாட்டு அறிஞர்கள் மக்களாட்சியைப் பற்றி பேசுகிறார்கள்; நூல்களும் எழுது கிறார்கள். மக்களாட்சி அங்கே மலர்ந்துவிட்டது. இங்கே அந்த மலர்ச்சிக்கு வழியில்லையே ஏன்? சுதந்திர முழக்கம் ஒருவனுக்குத் தலைவணங்கி முழந்தாளிட்டு உயிரோடு இருப்பதைக் காட்டிலும் நின்று கொண்டே இறப்பது மேல் என்ற உறுதியுடையவனே மானம் உடையவன். எந்த இனம் அடிமைத் தனத்தில் அமைதியைக் காண்கிறதோ அந்த இனம் சிந்தித்தே தீரவேண்டும். இல்லையெனில் அதற்கு வாழ்வே யில்லை. என் சொந்த நாடாகயிருந்தாலும் அந்த நாடு அடிமைநாடாக இருந்தால் அங்கே வாழ்வதைவிட ‘நரக’த்தில் வாழ்வதே மேலானது. வாழ்க்கையின் உயர்ந்த சட்டம் எது? தாய் நாட்டைப் பாதுகாப்பது. ஒரு கொள்கையை நாம் பின்பற்று கிறோம் என்றால் அதன் பொருட்டு சாவதற்கும் அணியமாக இருக்கிறோம் என்பது பொருள். கெட்ட நாற்றம் நிறைந்த சிறையில் என்னை அடைத்துப் போட்டு துன்புறுத்தினாலும் எனது இறுதி மூச்சு இருக்கிறவரை என் தாய் நாட்டை வழிபட்டுக்கொண்டு இருப்பதுதான் என் கடமை. அதுவே என் உயிர் மூச்சு. ஈகம் செய்து பெறாத விடுதலை விடுதலையாகுமா? அந்த விடுதலைதான் நீண்டநாள் உயிர்வாழுமா? தன்மதிப்பு இல்லாத மாந்தர்களோ, இனமோ விடுதலையின் மீது பற்றுக்கொள்ள முடியாது. விடுதலையின் எல்லையை விரித்துக்கொண்டு செல்ப வர்கள் துறவிகள் அல்லர்; யோகிகள் அல்லர்; உழைத்துப் பிழைக்கும் மக்களே. இவர்களால்தான் விடுதலையை வென்றெடுக்க முடியும். நமது எண்ணத்தைச் செயலாக உருவாக்குகிற பட்டறைதான் நாடு. நமக்கென்று நாடு இல்லாவிட்டால் நமக்கென்று கலையேது? இலக்கியமேது? வாழ்வேது? விடுதலை என்பது போர்த்தன்மை வாய்ந்தது. வீரமும், மனச்சான்றும் உள்ளவர்கள் விடுதலைக்காகப் போராடுவார்கள். விடுதலையைப் பெற்ற வர்கள் கோழைகள் அல்ல. அரசியல் மாற்றத்திற்கு அவர்கள் அஞ்சாதவர்கள். விடுதலைக்குப் போரிடுவது என்பது புகழுக்காகவோ, பொருளுக் காகவோ, மதிப்பிற்காகவோ அல்ல. விடுதலை என்பது மக்களை நோக்கி வராது. விடுதலைக்காக நாம்தான் போராடவேண்டும். நாகரிகத்தின் உயர்ந்த பண்பு எது? பிறருக்குத் தன்னை ஈகம் செய்வது. வாழ்க்கையின் ஊற்று எளிய மக்களிடமிருந்துதான் கிளம்புகிறது. மாந்தனாகப் பிறந்து விட்டால் போதுமா? மனிதனாக வாழவேண்டாமா? மற்றவர்களுடைய நன்மையை தன்னுடைய நன்மையாகக் கருதுகிறவன் எவனோ, அவனே! மாந்தர்களுள் சிறந்தவன். பகட்டாக வாழ்பவன் ஒழுக்கமாக வாழ முடியாது. ஒரு நாட்டிற்குப் பெருமை தரக்கூடியவர்கள் வேளாண்பெருங் குடிமக்களே. உயர்ந்த கொள்கை இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல. செடிகொடிகள் வளர்வது போலத்தான் அந்த வாழ்க்கை. நீ செடி கொடியாக - காய்கறியாக இருக்க விரும்புகிறாயா? சோம்பறித்தனத்தினாலோ, பொறுப்பின்மையாலோ, கோழைத் தனத்தினாலோ, பொதுநல உணர்ச்சியின்மை யினாலோ பெற்ற விடுதலையை பேணிகாக்கத் தவறிய நாடுகளின் அவல நிலையைப் படியுங்கள். உனது தாய்நாட்டின் மீது பற்று கொள் உனது முன்னோர்கள் வாழ்ந்து உறைந்தது இந்த மண்ணில்தான். உனது பெயர், புகழ், நீ யார் என்பதற்கு அடையாளம் உனது நாட்டில்தான் அடங்கி உள்ளது. உனது எண்ணங்களை அறிவுரைகளை உனது குருதியை தாய் நாட்டுக்குக்காக பொருளடக்கம் அணிந்துரை iii சர்மாவின் சாதனைகள் எ பதிப்புரை iஒ நுழையுமுன் ஒi மானிட ஜாதியின் சுதந்திரம் இவன் யார்? 2 இங்கஸால் மற்ற இடங்களில் என்ன சொல்லியிருக்கிறான்? 4 1. மனதிற்கும் சுதந்திரத்திற்கும் உள்ள சம்பந்தம் 5 2. ஸ்தீரி சுதந்திரம் 26 3. குழந்தைகள் சுதந்திரம் 37 4. முடிவுரை 51 சுதந்திர முழக்கம் பதிப்புரை 56 எது சுதந்திரம்? 57 பிரார்த்தனை 60 1. சுதந்திரத்தின் சந்நிதானத்தில் 61 2. மனித வாழ்க்கையின் முன்னிலையில் 75 3. சுதந்திர புருஷன் யார்? 81 4. சுதந்திரத்திற்கு யார் அருகரல்லர்? 82 5. சுதந்திர சிந்தனை 83 6. சுதந்திரமே? அழைத்துபோ! 84 7. சுதந்திரத்தின் நான்கு அம்சங்கள் 85 8. அடிமைகள் யார்? 86 9. போர் அல்லது மரணம் 87 10. ஆறுதல் உண்டு 89 11. நான் சாதிக்க முடியும் 90 12. உரிமையுடையர்கள் 91 13. சகோதரா! தைரியங்கொள்! 92 14. தாய்நாடு 93 15. எங்களது உரிமை 94 16. சிறைவாசியின் கூற்று 95 17. எஞ்சியிருப்பது என்ன? 96 18. பிரதிக்ஞை 98 19. சந்தோஷ புருஷன் யார்? 99 20. ஏதோ ஒன்றுக்காக வாழ் 101 21. எனது நேர்மையே சுவாசம் 102 22. நியாயமா? 103 23. மதத்தைப்பற்றித் தவறான கருத்து 104 24. பூமாதேவியே! கேள்! 105 25. நமது சம்பத்து 106 26. நன்னாள் வருக! 107 சுதந்திரத்தின் தேவைகள் யாவை? பிரசுராலயத்தின் வார்த்தை 110 வாசகர்களுக்கு 111 முதற்பகுதி தேசீய தத்துவம் 115 1. சீன சமூகம் 117 2. சீனாவின் நிலைமை சமூகம் 130 3. தேசீய உணர்ச்சி 139 4. சீனாவும் ஐரோப்பிய யுத்தமும் 147 5. பழமையின் மீது புதுமை 155 6. நமது கடமை 165 இரண்டாம் பகுதி ஜனநாயகம் தத்துவம் 179 7. ஜனநாயகத்தின் வளர்ச்சி 181 8. சுதந்திரம் 194 9. சமத்துவம் 205 10. மேலைநாடுகளும் ஜனநாயகமும் 217 11. மேலைநாட்டு நாகரிகம் 233 12. அரசாங்கம் - ஒரு யந்திரம் 250 மூன்றாவது பகுதி வாழ்க்கைத் தத்துவம் 261 13. ஜீவனோபாயம் 263 14. சீனாவும் மார்க்கஸீயமும் 282 15. உணவு 300 16. உடை 312 நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் ‘ஞானாலயா’ கிருட்டிணமூர்த்தி வாழ்விணையர், பெ.சு. மணி, புலவர் கோ. தேவராசன், முனைவர் இராகுலதாசன், முனைவர் இராம குருநாதன், முத்தமிழ்ச் செல்வன் க.மு., ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ——— நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு செ. சரவணன் மேலட்டை வடிவமைப்பு இ. இனியன் அச்சுக்கோப்பு முனைவர் செயக்குமார், மு. கலையரசன், சு. மோகன், ‘குட்வில்’ செல்வி, கீர்த்தி கிராபிக்ஸ் பட்டு, விட்டோபாய் ——— மெய்ப்பு முனைவர் செயக்குமார், வே.மு. பொதியவெற்பன், கி. குணத்தொகையன், உலோ. கலையரசி, அ. கோகிலா, கு. பத்மப்பிரியா, நா. இந்திராதேவி, இரா. நாகவேணி, சே. சீனிவாசன் ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், நா. வெங்கடேசன், மு.ந. இராமசுப்ரமணிய இராசா ——— எதிர்மம் (சூநபயவiஎந) பிராசசு இந்தியா (ஞசடிஉநளள ஐனேயை) அச்சு மற்றும் கட்டமைப்பு வெங்கடேசுவரா மறுதோன்றி அச்சகம் (ஏநமேயவநளறயசய டீககளநவ ஞசiவேநசள) ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . மானிட ஜாதியின் சுதந்திரம் இவன் யார்? இங்கர்ஸால் ஒரு நாஸ்திகன் என்று சிலர் சொல்கிறார்கள். இருக்கலாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் இவன் ஓர் அறிஞன். சுயமாகச் சிந்திக்கிற சக்தி யுடையவன் அப்படி தான் சிந்தித்ததைத் தைரியமாக வெளியிலே சொல்லும் ஆற்றலுடையவன் என்பதில் யாருக்கும் எவ்வித அபிப்பிராய பேதமும் இருக்க முடியாது. ராபர்ட் க்ரீன் இங்கர்ஸால் (சுடிநெசவ ழுசநநn ஐபேநசளடிடட) என்ற இந்தக் கவிஞன் - ஆம்; இவன் ஒரு சிறந்த கவி என்பதில் என்ன சந்தேகம்? - 1833ம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 11ந்தேதி அமெரிக்கா நியூயார்க் மாகாணத்திலுள்ள ட்ரெஸ்டென் (னுசநளனநn) என்ற ஊரில் பிறந்தான். 1862ம் வருஷம் பிப்ரவரி மாதம் 13ந் தேதி ஈவா பார்க்கர் (நுஎய ஞயசமநச) என்ற மாதை மணம் புரிந்தான். 1899ம் வருஷம் ஜுலை மாதம் 21ந் தேதி டாப்ஸ் பெர்ரி (னுடிbb’ள குநசசல) என்ற இடத்தில் இறந்து போனான். இளமையில், இங்கர்ஸால் எப்பொழுதும் சுறுசுறுப்பா யிருப்பான்; ஓடி ஆடிக் கொண்டிருப்பான்; திறந்த மைதானத்தி லேயே இருந்து காலத்தைக் கழிக்க வேண்டுமென்பதில் இவனுக்கு ஒரு விசேஷ ஆவல். 21 வயதிற்குள் இவன் வக்கீல் பரீட்சையில் தேறி ஒரு நியாயவாதியாகப் பதிவு செய்து கொண்டான். சுமார் இருபது வருஷ காலம், தன் சகோதரனுடன் சேர்ந்து கொண்டு வக்கீல் தொழிலை நடத்தினான். இவனுடைய நாவன்மை, இவனை, வக்கீல் தொழிலின் முன்னணிக்குக் கொண்டு வந்தது. கட்சிக் காரர்கள் இவனை நாடி வந்தார்கள். கேட்பானேன்? பணம் ஏராளமாகக் குவிந்தது. வக்கீல் தொழிலில் பிரவேசித்த பத்தாவது வருஷம் இவன் இல்லினாய் (ஐடடinடிளை) மாகாணத்தின் அட்டர்னி - ஜெனரலாக நியமனம் பெற்றான். அமெரிக்காவிலேயே இவன் ஒரு சிறந்த நியாய வாதி என்று நியாயவாதிகளே பாராட்டத் தொடங்கினார்கள். 1868ம் வருஷம் இவன், இல்லினாய் மாகாணத்துக் கவர்னர் பதவிக்கு அபேட்சகனாய் நின்றான். ஆனால் நாஸ்திகன் என்ற காரணத்தி னால் தோல்வியடைந்தான். இங்கர்ஸாலின் பிரசங்கங்களைக் கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு செல்வது அமெரிக்காவில் சர்வசாதாரண சம்பவம். இவன் பிரசங்கங்களை ஜனங்கள் பணங் கொடுத்துக் கேட்பார்கள். பிரசங்கத்தின் மூலமாக மட்டும் வருஷந்தோறும் இவனுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த வருமானம், அமெரிக்க பிரசிடெண்டின் வருஷ வருமானத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமானது. இவனுடைய வருமானத்தை வேறு தினுசாகக் கணித்துப் பார்ப்போ மானால், அமெரிக்காவிலேயே மிகச் சிறந்த பிரசங்கிகளான இருபத்தைந்து பேர் ஒரே சமயத்தில் எவ்வளவு சம்பாதிப் பார்களோ அவ்வளவு வருமானம் இவனுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், இங்கர்ஸால் பணத்தினால் பெருமை கொள்ளவில்லை. வாய்த் திறமையினால் ஏராளமாகச் சம்பாதித்ததைக் கைத்திறமை யினால் தாராளமாகக் கொடுத்துவிட்டான். மற்றவர்கள் துன்பப் பட்டுக் கொண்டிருப்பதை இவனால் பார்த்துச் சகித்துக் கொண் டிருக்க முடியாது. இவனுடைய குடும்பப் பாதுகாப்பின் கீழ் நான்கு குடும்பங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. பலருக்கு இவன் மனோ நிம்மதியைக் கொடுத்த தினாலேயோ என்னவோ, இவனுக்கு நிம்மதியான மரணம் கிட்டியது. மரண வேதனை என்பதை இவன் அநுபவிக்கவே யில்லை. இங்கர்ஸாலைப் பற்றி எவ்வித அபிப்பிராயமும் கொள்ள யாருக்கும் உரிமையுண்டு. ஆனால் இவனுடைய எழுத்தில் ஆழமான கருத்துக்களும் புதிய கருத்துக்களும் அடங்கியிருக்கின்றன வென்பதில் யாரும் கருத்து வேற்றுமை கொள்ள மாட்டார்க ளென்று கருதுகிறேன். இந்த ஒரு காரணத்திற்காகவே இவனுடைய பிரசங்கத்தில் ஒன்றான கூhந டுiநெசவல டிக ஆயn, றுடிஅயn யனே ஊhடைன என்பதனை மொழி பெயர்த்து ‘மானிட ஜாதியின் சுதந்திரம்’ என்ற தொகுப்புப் பெயர் கொடுத்து வெளியிட்டிருக்கிறேன். இதன் மூலமாகத் தமிழ் நாட்டில், சிந்தனை செய்கிற சக்தி உதயமாக வேண்டு மென்பது என் பிரார்த்தனை. விக்ரம ஆனி 30 13-7-40 இங்கர்ஸால் மற்ற இடங்களில் என்ன சொல்லி யிருக்கிறான்? அதிகமான நன்மையைச் செய்யுஞ் சக்தியை மனிதனுக்கு அளிப்பது சத்தியந்தான். சத்தியமே கவசம்; சத்தியமே ஆயுதம்; அதுவே ஆத்மாவின் விளக்கு ஃ ஃ ஃ மனிதனுடைய சிறந்த தொழில், நாணயமான கடவுளைச் சிருஷ்டிப்பது தான். ஃ ஃ ஃ மதமானது, நண்பர்களுக்குப் பதிலாகச் சத்துருக்களைத் தான் சிருஷ்டிக்கிறது. ஃ ஃ ஃ அடிமைத் தனத்தின் மூலமாக மோட்சத்தை யடைவது கேவலமானது. ஃ ஃ ஃ பழமையை அழிக்கிறவர்கள், புதுமையைச் சிருஷ்டிக்கி றார்கள். ஃ ஃ ஃ அறியாமைதான் துயரத்தின் தாய். ஃ ஃ ஃ 1. மனதுக்கும் சுதந்திரத்திற்கும் உள்ள சம்பந்தம் அறியாமையைத் தவிர்த்து வேறொர் அடிமைத்தனம் இல்லை. சுதந்திரம் என்பது அறிவின் குழந்தை. மனிதனுடைய சரித்திரம் என்ன? அடிமைத்தனம், அநியாயம், மிருகத் தன்மை இவைகளின் சரித்திரமும், இவற்றோடு போராடிப் போராடி மெதுவாகவும் அநேக சங்கடங்கள் பட்டுக் கொண்டும் முன்னுக்கு வந்திருக்கிறானே அந்த வரலாறும் சேர்ந்ததுதான் மனிதனுடைய சரித்திரம். இவன் - இந்த மனிதன் - புரோகிதர்க ளுடையவும் அரசர் களுடையவும் விளையாட்டுப் பொருளாகவும் இரையாகவும் இருந்திருக் கிறான். மூட நம்பிக்கையினுடைய, கொடுமை நிறைந்த பலாத்கார சக்தியினுடைய ஆகாரமாக இருந்திருக்கிறான். பலாத்கார சக்தியானது முடிதரித்துக் கொண்டு, பயத்தின் மூலமாக அறியாமையை ஆட்சி புரிந்து வந்திருக்கிறது. நயவஞ்சகம், கொடுங் கோலாதிக்கம் என்ற இரண்டு கழுகுகள் மனிதனுடைய சுதந்திரங்களைத் தின்று வந்திருக்கின்றன. இவை யனைத்தினின்றும் தப்ப ஒரே ஒரு வழி இருந்தது; அஃது இப்பொழுதும் இருக்கிறது. அதுதான் அறிவின் அபிவிருத்தி. மனித னுடைய உழைப்புச் சக்தியின் மீது, கொடுங்கோலாதிக்கம் ஏறிக் கொண்டது; அவனுடைய அறிவு, மூட நம்பிக்கை யென்ற சங்கிலி யால் கட்டப்பட்டிருக்கிறது. சுதந்திரத்தின் விரோதிகள் எதையும் செய்யாமல் விட்டுவிட வில்லை. மனிதனுடைய உரிமைகளை அழிக்க எல்லா முறைகளும், எல்லாத் தந்திரங்களும், எல்லாக் கொடுமைகளும், எல்லா அநியாயங்களும் கையாளப்பட்டிருக் கின்றன; செய்யப்பட்டிருக்கின்றன. இந்தப் பெரிய போராட்டத் திலே, ஒவ்வோர் அட்டூழியமும் சன்மானிக்கப் பட்டிருக்கிறது; ஒவ்வொரு நல்லொழுக்கமும் தண்டிக்கப்பட்டிருக்கிறது. படிப்பது, எழுதுவது, சிந்தனை செய்வது, ஆராய்ச்சி நடத்துவது முதலிய அனைத்துமே குற்றங்களாகக் கருதப்பட்டு வந்திருக்கின்றன. விஞ்ஞான சம்பந்தப்பட்ட ஒவ்வோர் ஆராய்ச்சியும் தீண்டப்படாத பொருளாகவே இருந்து வந்திருக்கிறது. மானி ஜாதியின் முன்னேற்றத்தைத் தடுக்க, எல்லாத் தேவாலய பீடங்களும், எல்லாச் சிங்காதனங்களும் ஒன்று சேர்ந்து கொண்டிருக் கின்றன. மானிட சமூகம் அதனுடைய நன்மைக்காக வேலை செய்யக் கூடாதென்று அரசன் கூறுகிறான். அப்படியே புரோகிதனும், அந்த மானிட ஜாதியானது, தனது நன்மையை முன்னிட்டுச் சுயமாகச் சிந்திக்கக் கூடாதென்று சொல்கிறான். ஒன்று, கைகளுக்கு விலங்கிடுகிறது; மற்றொன்று, ஆத்மாவுக்கு விலங்கிடு கிறது. இந்த இரண்டு பேருடைய கேவலமான நிருவாகத்தின் கீழ், மானிட அறிவு என்னும் கழுகானது, நயவஞ்சகம் என்னும் சர்ப்பமாக மாறி விட்டது. மானிட சமூகமே சிறைப்படுத்தப்பட்டு விட்டது. இந்தச் சிறைக் கம்பிகளின் வழியாகச் சில சந்தர்ப்பங்களில் வெளிச்சத்தின் கிரணங்கள் வந்து கொண்டிருக்கின்றன வென்பது வாஸ்தவம். விஞ்ஞான தேவதை யானவள், வெளுத்துப் போன - ஆனால் சிந்தனை நிறைந்த - தனது முகத்தை, இந்தச் சிறைக் கம்பிகளண்டை பொருத்தி வைத்துக் கொண்டு, மானிட ஜாதியின் முன்னேற்றமாகிய உதயத்தை எதிர்பாத்து நிற்கிறாள். சிறைக் கம்பிகள் ஒவ்வொன்றாக உடைந்து வருகின்றன. ஒரு சில மஹான்கள், இந்தச் சிறைக் கம்பி களினின்றும் வெளியேறி, தங்கள் சகோதரர்களுடைய விடுதலைக் காக ஆயுள் பூராவையும் அர்ப்பணஞ் செய்திருக்கிறார்கள். சென்ற சில வருஷங்களுக்கு முன்னர்தான், மானிட சமூகத்தின் இதயத்தில் ஒரு விழிப்பு ஏற்பட்டிருக்கிறது. ‘ஒரு முடிதரித்த கொள்ளைக் காரன், தனக்காக எங்களை வேலை செய்யச் சொல்ல என்ன அதிகார மிருக்கிற’ தென்று மனிதர்கள் கேட்கத் தொடங்கி னார்கள். இந்த மாதிரி யான கேள்வியை எவனொருவன் கேட்கி றானோ அவன் துரோகி என்று அழைக்கப்பட்டான். இன்னும் சிலர் கேட்கிறார்கள், அலங்கார உடை தரித்த நயவஞ்சகர்கள், எங்கள் சிந்தனா சக்தியின் மீது ஆட்சி நடத்த என்ன உரிமை பெற்றிருக்கி றார்களென்று. அப்படிக் கேட்கிறவர்கள், மத நம்பிக்கையில்லாத வர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இந்த மாதிரி மனிதன் ஆராய்ச்சி செய்து கொண்டு போனால் அஃது எங்கேதான் கொண்டு போய் முடியுமென்று புரோகிதனும் அரசனும் சேர்ந்து கேட்கிறார்கள். இதனால் இவர்கள் அப்பொழுதும் கூறினார்கள், இப்பொழுதும் கூறுகிறார்கள், மனிதன் சுதந்திரமாயிருப்பது ஆபத்து என்று. ஆனால் நான் இதை ஆட்சேபிக்கிறேன். அறிவுக் கடலிலே, எல்லா விதமான கப்பல்களுக்கும் இடமிருக்கிறது. ஞான ஆகாசத்திலே, எந்த விதமான இறக்கைகளோடு கூடிய பறவைகளும் பறக்கலாம். சுயமாகச் சிந்தனைச் செய்யாத மனிதன் அடிமை. அவன், தனக்கு மட்டும் துரோகியல்ல; மற்றவர்களுக்கும் துரோகம் செய்தவனாகிறான். ஒவ்வொரு மனிதனும், நீல ஆகாசத்தின் கீழே, நட்சத்திரப் பிரகாசத்தின் கீழே, எல்லையற்ற இயற்கைக் கொடி மரத்தின் கீழே, சகோதர மனிதனுக்குச் சமதையாகத் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். எல்லோராலும் அறிய முடியாத எந்த ஒரு பரம்பொருள் உண்டோ அந்தப் பரம்பொருளின் முன்னிலையில் நிற்கும் எல்லோருக்கும், சிந்தனை செய்ய உரிமையுண்டு. பிறப்பு இறப் பென்னும் பெரிய பிரச்னை களைப் பற்றி அறிந்து கொள்ளும் விஷயத்தில் எல்லோரும் ஒரே விதமான சிரத்தைதான் கொண்டிருக் கிறார்கள். நான் கோருவதெல்லாம், நான் கேட்பதெல்லாம், எண்ணவும், எண்ணியதை வெளியிலே சொல்லவும் உரிமை வேண்டு மென்பதுதான். இவ்வளவுதான் நான் வேண்டுவது. சரியான உண்மையைத்தான் நான் கூறுகிறேனென்று நான் சாதிக்க வில்லை. எது உண்மை யென்று நான் கருதுகிறேனோ அதையே நான் கூறுவதாகச் சொல்கிறேன். உண்மையின் எல்லா அமிசங்களையும் கூறி விடுவதாக நான் பாசாங்கு செய்ய வில்லை. எண்ணத்தின் சிகரத்தில் நான் ஏறி நிற்பதாகக் கூறவில்லை. அப்படியே நான் விஷய ஆராய்ச்சியாகிற ஆழத்தில் இறங்கிப் போயிருப்ப தாகவும் சாதிக்கவில்லை. என் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகின்றனவோ அவற்றைச் சொல்ல எனக்கு உரிமை இருக்க வேண்டு மென்றுதான் நான் கோருகிறேன். இந்த உரிமையை எவனேனும் எனக்கு மறுப்பானாகில் அவன் அறிவு நிரம்பிய ஒரு திருடன், கொள்ளைக் காரன் என்றுதான் நான் சொல்வேன். ஆத்மாவைச் சுற்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் இந்தச் சங்கிலிகளை எடுத்து விடுங்கள். இவற்றை உடைத்தெறியுங்கள். சிந்தனை செய்யும், உரிமை, சுயமாக எண்ணும் உரிமை எனக்கு இல்லையானால் என்னிடத்தில் ஏன் மூளை இருக்கிறது? எனக்கு, சிந்தனை செய்யும் உரிமை யில்லையானால், மூன்று பேர் அல்லது நான்கு பேர் அல்லது எத்தனை பேரோ சேர்ந்து கொண்டு, ஏதேனும் ஒரு மதக் கோட்பாட்டில் கையெழுத்திட்டு விட்டு, ஒரு வீட்டைக் கட்டி அதன் மீது ஒரு கோபுரத்தை நிறுத்திவைத்து, அதில் ஒரு மணியையும் கட்டித்தொங்க விடுகிறார்களே அவர்களுக்கு மட்டும் இந்தச் சிந்தனை செய்யும் உரிமை உண்டா? உலகத்திலேயே யுள்ள நல்ல மனிதர்கள், எண்ண உலகத்தில் சவுக்கடி கொடுக்கப்படுவதை - அதாவது பலாத்காரம் பிரயோகிக்கப்படுவதை-க்கண்டு சலிப் படைந்து போய் விட்டார்கள். அவர்கள், விலங்குச் சங்கிலியையும் தொழுக்கட்டையையும் நினைக்கிறபோது நடுங்கிப் போகி றார்கள்.அவர்கள் சுதந்திரமா யிருக்கிறார்கள். அதே சுதந்திரத்தை மற்றவர்களுக்கும் அளிக்கிறார்கள். தான் பெற்றிருக்கிற சுதந்திரத்தை மற்றவர்களுக்கு அளிக்க எவனொருவன் மறுக்கிறானோ அவன் அயோக்கியன்; களங்கமுள்ளவன். முற்காலத்தில் நமது முன்னோர்கள், தங்களுடைய சௌகரியத் திற்குத் தகுந்தபடி ஜனங்களை நம்புமாறு செய்ய முடியும் என்று கருதினார்கள். நமது மூதாதையர்கள், பலாத்காரத்தினால் ஒரு மனிதனுக்கு எண்ணத் திருப்தி உண்டாக்கி விட முடியும் என்று உண்மையில் நம்பினார்கள். மூளையிலே ஏற்பட்ட ஒரு முடிவை, அறிவு ஆராய்ச்சி காரணமாக ஏற்பட்ட ஓர் அபிப்பிராயத்தை - தொந்திரவு படுத்தி மாற்ற முடியுமா? அல்லது ஜாதிப் பிரஷ்டம் செய்து தான் மாற்ற முடியுமா? இங்ஙனம் தொந்திரவுகளுக்குட் படுத்துவதன் மூலமாகவும், ஜாதிப் பிரஷ்டம் செய்வதன் மூலமாக வும் உங்களால் என்ன செய்ய முடியும், நீங்கள் என்ன செய்திருக்கி றீர்கள் என்பதை இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். லட்சக்கணக் கான மக்களை நீங்கள் நயவஞ்சகர்களாக்கி விடலாம். ‘என் மனதை நான் மாற்றிக் கொண்டு விட்டேன்’ என்று ஒரு மனிதனைச் சொல்லுமாறு நீங்கள் செய்து விடலாம். ஆனால் அவன் மட்டும் எப்பொழுதும் போல் ஒரே அபிப்பிராயமுடையவனாகத்தான் இருக்கிறான். அவனை இரும்புச் சங்கிலிகளினால் பிணைத்துக் கட்டுங்கள்; அவன் கால்களை இரும்பு பூட்ஸுகளிலே திணித்து நசுக்குங்கள்; வேதனை யளிக்கக் கூடிய அந்தப் புனிதமான யந்திரம் இருக்கிறதே அதில் அவனைக் கடைசி மூச்சு இருக்கிற வரை படுக்க வையுங்கள்; வேண்டுமானால் அவனை நெருப்பிலிட்டுக் கொளுத்துங்கள்; ஆனால் அவனுடைய சாம்பல், முன் போல் ஒரே மாதிரியான அபிப்பிராயத்தையே கொண்டிருக்கும். பழைய காலத்திலிருந்த நமது மூதாதையர்கள் - அவர்களைப் பற்றி நான் என்ன நல்லது சொல்ல முடியும்? அவர்கள் இறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல முடியும். - ஒரு மனிதனைப் பலவந்தப்படுத்தி, தங்களிஷ்டப்படி நினைக்குமாறு செய்யலாம் என்று எண்ணினார்கள். அந்த எண்ணம், இப்பொழுதும் உலகத்தின் சில பாகங்களில் - அமெரிக்காவில் கூட - இருந்து கொண்டிருக் கிறது. ‘அந்த மனிதனோடு நாங்கள் வியாபாரம் செய்ய மாட்டோம்; அவனுக்கு நாங்கள் ஓட் செய்ய மாட்டோம்; அவன் வக்கீலா யிருந்தால் அவனை அமர்த்திக் கொள்ள மாட்டோம்; அவன் ஒரு வைத்தியனா யிருந்தால், அவன் மருந்தை வாங்கி உட்கொள்வதற்கு முன்னர் நாங்கள் இறந்து போய் விடுவோம்; அவனை விருந்துக்கு அழைக்க மாட்டோம்; அவனை ஜாதிப் பிரஷ்டம் செய்வோம்; அவன் எங்கள் தேவாலயத்திற்கு வர வேண்டும்; எங்கள் மதக்கோட் பாடுகளில் அவன் நம்பிக்கை கொள்ள வேண்டும்; எங்களுடைய கடவுளையே அவன் வணங்க வேண்டும்; இல்லாவிட்டால் அவனுக்கு நாங்கள் எவ்விதத்திலும் உதவி செய்ய மாட்டோம்’ என்றெல்லாம் இப்பொழுதும் நமது வைதிகர்கள் சிலர் கூறுகிறார்கள். நான் மேலே சொன்ன பழைய காலத்தவர், எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாகச் சிந்தனை செய்ய வேண்டும், என்ன வேண்டு மென்று கருதினார்கள். உலகத்தில், யந்திர சம்பந்தமாக எவ்வளவோ அபிவிருத்திகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், இரண்டு கடிகாரங்கள் ஒரே மாதிரி ஓடுவதில்லை. அப்படியிருக்க, அறிவிலும் சுபாவத்திலும், கல்வி யிலும் ஆசையிலும், நிலைமை யிலும் சுற்றுப் புறத்திலும் வெவ்வேறா யுள்ள பலரும், ஆசாபாசங்கள் பலவாகக் கொண்டுள்ள மானிடர் பலரும் ஒரே மாதிரியாக உணரவும் எண்ணவும் வேண்டுமென்று நீங்கள் எப்படி வற்புறுத்த முடியும்? எல்லையற்ற ஒரு கடவுள் இருப்பாரானால், அவர் நம்மெல்லோரையும் சிருஷ்டித் திருப்பாரானால், நாமெல்லோரும் ஒரே மாதிரியாகவே நினைக்க வேண்டுமென்பது அவர் விருப்பமா யிருக்குமானால், ஏன் அவர் ஒருவருக்குக் குறைவான அறிவையும் மற்றொருவருக்கு அதிகமான அறிவையும் கொடுத்திருக்க வேண்டும்? எல்லோரும் ஒரே மாதிரியாக எண்ண வேண்டும், உணர வேண்டும் என்பது நோக்கமானால் அறிவு வித்தியாசங்கள் ஏன் ஏற்பட்டிருக்க வேண்டும்? நமது முன்னோர்கள், எப்படி மானிட ஜாதியைத் துன்புறுத்தி னார்கள் என்பதைப் பற்றிப் புஸ்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் அவைகளை நான் பாராட்ட முடியவில்லை. அவை என் ஆத்மாவுக்கு வெளிச்சம் கொடுக்கவில்லை. மதத்தின் பெயரால் செய்யப்பட்ட அட்டூழியங்களை என்னால் பாராட்ட முடிய வில்லை. கட்டை விரல் முறுக்காணி என்பதொன்றுண்டு. அதாவது இரண்டு இரும்புத் துண்டுகள். அவைகள் நழுவி விழக்கூடா தென்பதற்காக உள் பக்கம் குத்தூசிகள் இருக்கும். இந்த இரண்டு இரும்புத் துண்டுகளும் ஒரு முறுக் காணியால் இணைக்கப்பட் டிருக்கும். எந்த ஒரு மனிதனேனும் ஞான ஸ்நானத்தினால் பயனில்லை யென்று சொன்னாலும் அல்லது ‘ஒரு மனிதன் தண்ணீரில் முழுகிப் போகாமல் காப்பாற்றப்பட வேண்டு மென்பதற்காக, ஒரு மீனானது அவனை விழுங்கிவிட்டது என்பதை நான் நம்பவில்லை’ என்று சொன்னாலும், அவனுடைய கட்டை விரல்கள் இந்த இரண்டு இரும்புத் துண்டுகளிடையில் வைக்கப்பட்டு, அன்பின் பெயராலும், சர்வ ஜீவதயையின் பெயராலும், மேற்படி முறுக்காணியைத் திருகி விடுவார்கள். இப்படிச் செய்தவுடன் பெரும்பாலோர் ‘நான் சொன்னது தவறு’ என்று ஒப்புக்கொண்டு விடுவார்கள். நானும் அப்படித்தான் செய்திருப்பேன். ‘நிறுத்துங்கள்; நான் எதை எதை ஒத்துக் கொள்ள வேண்டு மென்று நீங்கள் கூறுகிறீர்களோ அவற்றையெல்லாம் நான் ஒத்துக் கொள்கிறேன். ஒரு கடவுள் என்று சொல்கிறீர்களா, அல்லது லட்சக்கணக்கான கடவுளர்கள் இருக்கி றார்கள் என்று சொல்கிறீர்களா, ஒரு நரகமா அல்லது கோடிக் கணக்கான நரகங்களா எப்படிச் சொல்லச் சொன்னாலும் சொல்கி றேன்; நீங்கள் தொந்திரவு மட்டும் செய்யாதீர்கள்; நிறுத்துங்கள்’ என்று நானும் சொல்லியிருப்பேன். பெரும்பாலோர் இப்படித் தங்கள் அபிப்பிராயத்தில் பின் வாங்கினாலும், ‘ஒரு மயிரிழை கூட எங்கள் அபிப்பிராயத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ என்று சொல்லக்கூடியவர்களும் ஆங்காங்கு இருந்தார்கள். தங்கள் அறிவுப் பெருக்கத்தின் விளை வாகக் கண்ட முடிவுக்காக இறக்கவும் சம்மதித்த புனித ஆத்மாக்கள் எத்தனையோ பேர் இருந்தார்கள். இத்தகைய மகான்கள் இருந்திரா விட்டால், நாம் இன்று காட்டு மிராண்டிகளாகவே வாழ்ந்து கொண்டிருப்போம். ஒவ்வொரு யுகத்திலும் இந்த மாதிரியான வீர புருஷர்கள் உதித்திராவிட்டால், நாம் இப்பொழுது நரமாமிச பட்சணிகளாய், நமது தேகத்தில் காட்டு மிருகங்களின் உருவங் களைப் பச்சை குத்திக் கொண்டு, சர்ப்பங்களைத் தெய்வமாகப் போற்றிய வண்ணம் அவற்றைச் சுற்றி நாட்டியமாடிக் கொண்டிருப் போம். ஆகையால், எதிர்ப்பு, துவேஷம், மரணம் இவைகளை யெல்லாம் பொருட்படுத்தாமல், தாங்கள் எதை உண்மை யென்று நம்பினார்களோ அதற்காகப் பெருமையோடு தலை நிமிர்ந்து நின்ற ஒவ்வொரு மகானுக்கும் நாம் வணக்கஞ் செலுத்துவோமாக. இப்படிப் பட்டவர்கள்தான் வீரர்கள். ஆனால் நமது மூதாதையர் வீர வாழ்க்கைக்கு மதிப்புக் கொடுக்கவில்லை தன் கொள்கையை மாற்றிக் கொள்ள எவனொருவன் மறுத்தானோ அவன் மன்னிக்கப்படவேயில்லை. மேலே சொன்ன அந்தக் கட்டைவிரல் முறுக்காணியை, கடைசி திருகுவரை திருகிவிட்டு, அப்படியும் அவன் இணங்கா விட்டால், ஓர் இருட்டறைக்குள்ளே தள்ளி, அங்குக் குடி கொண்டிருக்கும் மௌனத்திலும் இருட்டிலும் அவனைத் தவிக்க விட்டு விடுவார்கள். அதன்பெயரால் இங்ஙனம் செய்தார்கள்! அன்பின் பெயரால்! தயையின் பெயரால்! கருணை நிறைந்த கிறிஸ்துவின் பெயரால்! கழுத்துக்குத்து யந்திரம் என்ற ஒரு வகை உபத்திரவ யந்திரத்தைப் பார்த்திருக்கிறேன். இரும்பு வளையம் ஒன்றிருக்கும். அதன் உட்புறத்தில் ஊசி போல் நூற்றுக்கணக்கான ஆணிகள் இருக்கும். இதனைக் கழுத்தில் மாட்டி விடுவார்கள். இதனை மாட்டிக் கொண்டு ஒருவன் நடக்கவோ உட்காரவோ முயற்சி செய்வானாகில், இந்த வளையத்து ஆணிகள் அவன் கழுத்தைச் சுறுக்கு சுறுக்கென்று குத்தும். சொற்ப நேரத்திற்குள் அவன் தொண்டை வீங்கிவிடும். மூச்சுவிட முடியாமல் திணறிச் செத்துப் போய் விடுவான். இந்த மனிதன் என்ன விதமான குற்றத்தைச் செய்திருக்கக்கூடு மென்று நினைக்கிறீர்கள்? ‘நமது பரமபிதாவாகிய கடவுள், மனிதர்களின் குழந்தைகளாகிய நம்மை சாசுவதமான நாசத்திற்கு உட்படுத்த மாட்டார்’ என்று இரு கன்னங்களிலும் கண்ணீர் வழிய இவன் சொல்லியிருக்கக் கூடும். அவ்வளவுதான். மற்றொரு வகை உபத்திரவ யந்திரத்தையும் நான் பார்த்திருக் கிறேன். இதற்குத் ‘தோட்டியின் மகள்’ என்று பெயர். கைப் பிடியோடு கூடிய ஒரு கத்தரிக்கோல் இருக்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதுள்ள படி இந்தக் கைப்பிடிகளுக்கு - மேற்புறமாக - அதாவது கத்தரிக்கு இரண்டு இறக்கைகள் இருக் கின்றன. இவற்றின் கீழ்ப் பாகத்தில் கைப்பிடிகள் சாதாரணமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைப் போலவே கத்தரி இறக்கை களின் நுனிப் பாகங்களிலும் - கைப்பிடி அமைக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டு இறக்கைகளையும் இணைக்கிற சந்திப்பில் ஓர் இரும்பு வளையம் சேர்க்கப் பட்டிருக்கும். மேலே யுள்ள இரண்டு கைப் பிடிகளில் இரண்டு கைகளைக் கட்டி விடுவார்கள்; கீழேயுள்ள இரண்டு பிடிகளில் இரண்டு கால்களைக் கட்டி விடுவார்கள். மத்தியிலேயுள்ள இரும்பு வளையத்தில் தலையைப் பலவந்தமாக நுழைக்கச் செய்வார்கள். இந்த மாதிரியான நிலையில் ஒருவனைச் சிறிது நேரம் வைத்தால் அவனுடைய நரம்புகளில் வலியெடுத்து அவனுக்குப் பைத்தியம் பிடித்துப் போய்விடும். கடைசியில் அந்தப் பைத்தியங் காரண மாகவே அவன் இறந்து போவான். மரணத்தோடுதான் அவன் உபாதி களெல்லாம் ஒழியும். ‘உன்னை ஒரு கன்னத்தில் அடித்தால் அவனுக்கு மற்றொரு கன்னத்தையும் காட்டு’ என்று எந்தப் பெரிய மனிதர்கள் உபதேசம் செய்தார்களோ அவர்களாலேயே இங்ஙனம் செய்யப்பட்டு வந்தது. பரண் மாதிரியான ஒரு வகை வேதனா யந்திரமுண்டு. இதற்குச் சங்கிலிகள் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வோர் கோணத்திலும் முறுக் காணிகள் போட்டு முடுக்கியிருப்பார்கள். (கிறிஸ்தவ தர்மத்தை ஏற்றுக் கொள்ளாத) குற்றவாளியை இந்தப் பரண் மீது படுக்க வைத்து தேகத்தின் ஒவ்வோர் அங்கத்தையும் சங்கிலியால் கட்டிவிட்டு, முறுக்காணியைப் போட்டு முடுக்குவார்கள். அப்பொழுது அவன் தேகத்தின் மூட்டுக்கு மூட்டு தளர்ந்து விடும். பக்கத்திலிலேயே ஒரு வைத்தியன் நின்று கொண்டு நாடியைப் பரீட்சித்துக் கொண்டிருப்பான். ஏன்? அவன் உயிரைக் காப்பாற்றும் பொருட்டா? ஆம். மீண்டும் அவனை அந்த வேதனா யந்திரத்தில் படுக்க வைத்து உபத்திரவிப்பதற்காக! நாகரிகத்தின் பெயரால், சட்டம், ஒழுங்கு இவற்றின் பெயரால், கருணையின் பெயரால், மதத்தின் பெயரால், கருணை வள்ளலான கிறிஸ்து நாதரின் பெயரால், இவையெல்லாம் செய்யப்பட்டன வென்பது உங்கள் ஞாபகத்திலிருக்கட்டும். இந்தப் பயங்கரமான சம்பவங்களைப் பற்றி நான் படிக்கிற போதும், எண்ணுகிற போதும் சில சமயங்களில் நானே இத் துன்பங்களை யெல்லாம் அநுபவித்த மாதிரி ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது. தேசப் பிரஷ்டமாகிய கரை மீது நின்று கொண்டு, கண்களில் நீர் தளும்ப, என் வீட்டையும் என் தாய் நாட்டையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; என் கையிலிருந்து நகங்களை உரித்தெடுத்து விட்டு, ரத்தஞ் சொட்டுகிற அந்த இடத்தில் கூர்மையான ஊசிகளைச் சொருகுகிறார்கள்; இரும்பு பூட்ஸ்களில் என் பாதங்களைத் திணித்து விட்டார்கள்; இருட்டறையில் சங்கிலியால் என்னைக் கட்டிப் போட்டு விட்டிருக்கிறார்கள்; அந்தச் சந்தர்ப்பத்தில், என்னை யாரோ விடுதலை செய்வதற்காக வந்து கொண்டிருக்கும் காலடிச் சப்தம் கேட்கிறது; தூக்கு மேடையின் மீது நான் நிறுத்தி வைக்கப் பட்டிருக்க, பிரகாசிக்கின்ற வாளாயுதம் என் கழுத்தின் மீது விழுகிறது; வேதனாயந்திரத்தின் மீது நான் படுத்துக் கொண்டிருக்க, அப்பொழுது நயவஞ்சகர்களான புரோகிதர்களின் வெண்மையான முகங்கள் என்னைக் குனிந்து பார்க்கின்றன; என்னை, என் மனைவி மக்களிடமிருந்து பிரித்து, வீட்டினின்று அப்புறப்படுத்திக் கொண்டு போய், விலங்கிட்டு, நான்கு பேர் கூடும் சதுக்கத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்; என்னைச் சுற்றி விறகுக் கட்டைகளை அடுக்குகிறார்கள்; உடனே என் தேகத்தைச் சுற்றி நெருப்பு எரிகிறது; என் கண்கள் குருடாகி விடுகின்றன; துவேஷமானது, தன் எண்ணிறந்த கைகளால், என் தேகத்துச் சாம்பலை எடுத்து நாற் புறத்துக் காற்றிலும் வீசி விடுகின்றது. இப்படியெல்லாம் நான் உணர் கிறேன். உடனே ‘நாம் வாழ்ந்து கொண்டிருக்குங் காலத்தில் ஆண், பெண், குழந்தை இவர்களின் சுதந்திரங்களைக் காப்பாற்றவும் வலுப்படுத்தவும் நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டு’மென்று பிரதிக்ஞை செய்து கொள்கிறேன். என்னிடத்திலேயுள்ள நியாய புத்தி, கருணை, நேர்மை, அறிவு வளர்ச்சி முதலியவைகளைப் பொறுத்த விஷயங்கள் இவை. தனக்கு இன்ன விதமான உரிமை தேவை யென்று கூறி அதே உரிமையை, மற்றவர்களுக்கு அளிக்க மறுக்கும் ஒருவன் இந்த உலகத்தில் இருப்பானாகில், அவன் காட்டுமிராண்டியின் நிலைக்குச் சமீபத்தி லேயே வசித்தவனாகிறான். என்னுடைய யோக்கியத் தன்மையைப் பொறுத்த விஷயமிது. எவனொருவன், தனக்கென்று சில அறிவு சம்பந்தப்பட்ட உரிமைகள் - அதாவது எண்ண உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன - வேண்டுமென்று பாத்தியங் கொண்டாடிக் கொண்டு, அதே சமயத்தில் அதே உரிமைகளை மற்றவர்களுக்கு வழங்க மறுக்கிறானோ அவன் அயோக்கியன்; சுய நலக்காரன்; மிருகத்தன்மை வாய்ந்தவன். இஃது அறிவு வளர்ச்சியைப் பொறுத்த விஷயமாகும். எவன், தன்னுடைய நேர்மையான எண்ணத்திற்கு மற்றொருவனைப் பொறுப்பாளியாக்குகிறானோ அவனுடைய மூளை சீர்கெட்டிருக் கிறது; குழம்பிப் போயிருக்கிற தென்பதுதான் அர்த்தம். இஃது அறிவு வளர்ச்சியைப் பொறுத்த விஷயமென்பதையே மீண்டும் கூறுகிறேன். சமீபத்தில் நான், மனிதனால் செய்யப்பட்ட எல்லாப் பொருள்களின் மாதிரிகளையும் பார்க்க நேரிட்டது. நீரிலே மிதந்து செல்லக் கூடிய எல்லாக்கருவிகளையும் நான் கண்டேன். நிர்வாணமா யிருந்த ஒரு காட்டு மிராண்டி - ஆம்; அப்படிப்பட்டவர்கள் தான் நமது மூதாதையர்கள்; அவர்கள் இரண்டு அங்குல நீளம் பற்களும், தலைக்குப் பின்புறம் சிறிதளவு மூளையும் உடையவர்களாயிருந் தார்கள் - அந்தக் காட்டுமிராண்டியினால் தள்ளிச் செல்லப்பட்ட ஒரு சிறு தெப்பம் முதல், நூறு பீரங்கிகளையும் மைல் கணக்கான பாய்விரிப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ள பெரிய யுத்தக் கப்பல் வரை பார்த்தேன். அந்தச் சிறிய தெப்பம் முதல், எந்தப் பெரிய கப்பலானது அதன் மனச் சாட்சியாகிற திசையறி கருவியின் துணை கொண்டு நியூயார்க் துறை முகத்தினின்று புறப்பட்டு, மூவாயிரம் மைல் தூரம் எவ்விதத் தங்கு தடையுமின்றிச் செல்கிறதோ அந்தப் பெரிய கப்பல் வரை பார்த்தேன். காட்டு மிராண்டியான மனிதன், தான் வசித்த குகையினின்றும் தவழ்ந்து சென்று தன் ஆகாரத்திற்காக ஒரு பாம்பை அடித்துக் கொல்ல ஒரு தடியை உபயோகித்தானல்லவா அந்தத்தடிமுதல், இரண்டாயிரம் பவுன் நிறையுள்ள குண்டுகளை வீசியெறியக் கூடிய பெரிய பீரங்கி வரையில் பார்த்தேன். நமது மூதாதையர்கள் தங்கள் தாய் நாட்டைக் காப்பாற்று வதற்காகப் போர்க்களத்திற்குச் சென்ற காலையில் ஆமை யோட்டைக் கவசமாக அணிந்து கொண்டார்களே, அந்த ஆமை யோடு முதல், தற்காலத்து இரும்புக் கவசம் வரையில் எல்லாவற்றை யும் பார்த்தேன். அந்தக் காட்டு மிராண்டிகளின் தம்பட்டம் முதல், இனிமை பயக்கும் தற்காலச் சங்கீதக் கருவிகள் வரை பார்த்தேன். அந்தக் காட்டு மிராண்டிகள், மஞ்சள் மண்ணின் மீது எழுதிய சித்திரங்கள்முதல் தற்காலத்துச் சித்திராலயங்களை அலங்கரிக்கும் சித்திரங்களையும், மற்றச் சிற்ப வகைகளையும் நான் பார்த்தேன். அந்தக் காட்டு மிராண்டிகள், மிருகங்களின் தோலின் மீதும், இலைகளின் மீதும், மரப்பட்டைகளின் மீதும் எழுதி வைத்துப் போன புத்தகங்கள் முதல், தற்காலப் புத்தகாலயங்களை அழகு படுத்தும் பெரிய புத்தகங்கள் வரை எல்லாவற்றையும் பார்த்தேன். புத்தகசாலைகளைப் பற்றி நான் பேசுகிற போது, பிளாட்டோ1 என்ற கிரேக்க ஞானி கூறிய ஒரு வாசகம் எனது ஞாபகத்திற்கு வருகிறது. ‘எந்த ஒரு வீட்டில் புத்தகசாலை இருக்கிறதோ அந்த வீட்டில் தான் ஆத்மா இருக்கிறது.’ அந்தக் காட்டுமிராண்டிகள் உபயோகித்த முரட்டு விவசாயக் கருவிகள் முதல் தற்கால நவீன விவசாயக் கருவிகள் வரை எல்லா வற்றையும் பார்த்தேன். இவைகளையெல்லாம் பார்க்கிறபோது, மனிதன் எவ்வாறு முன்னேற்ற மடைந்திருக்கிறா னென்பது நன்கு தெரிகிறது. மனிதன், எதுவரையில் தன் உழைப்போடு எண்ணத்தையும் கலக்க விட்டானோ, எது வரையில் இயற்கைச் சக்திகளோடு பங்கு கொண்டானோ, தனது சுற்றுப் புறத்தினால் ஏற்பட்ட சாதனங் களை எதுவரையில் தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளக் கற்றுக் கொண்டானோ, பயத்தினின்று எது வரையில் விடுதலை யடைந்தானோ, எதுவரையில் தன்னம்பிக்கை கொண்டானோ, தெய்வ நம்பிக்கையை எது வரையில் இழந்தானோ அது வரையி லேயே அவன் - அந்த மனிதன் - முன்னேற்ற மடைந்திருக்கிறான். அதே சமயத்தில், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித னுடைய மண்டை ஓடுகளை - பழைய காலத்து மண்டை ஓடுகளி லிருந்து சென்ற தலை முறையில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் வரை - எல்லா ஓடுகளையும் நான் பார்த்தேன். இந்த மண்டை ஓடுகளிலிருந்து உண்டான பொருள்களிடையே எவ்வளவு வித்தியாசங்கள் ஏற்பட்டனவோ அவ்வளவு வித்தியாசங்கள், இந்த மண்டையோடுகளுக் கிடையிலும் இருக்கின்றன. அப்பொழுது நானே எனக்குள் ‘ஓ! இவையெல்லாம் அறிவு அபி விருத்தியைப் பொறுத்த விஷயங்களே’ என்று சொல்லிக் கொண்டேன். ஆதிகாலத்துத் தெப்பத்துக்கும் தற்கால யுத்தக் கப்பலுக்கும், புராதன காலத்துத் தடிக்கும் நவீன க்ரூப் பீரங்கிக்கும், வெறும் மண் பூச்சாலான சித்திரத்திற்கும் இயற்கையான பூமியழகுக்கும், தம்பட்டத்திற்கும், நவீன இசைக் கருவிக்கும் எவ்வளவு வித்தி யாசங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு வித்தியாசங்கள் முற்கால மண்டையோடுகளுக்கும் தற்கால மண்டையோடுகளுக்கும் இருக் கின்றன. பழைய காலத்து மண்டை யோட்டில் மனிதனுடைய கீழான சுபாவங்கள் குடி கொண்டிருந்தன. தற்கால மண்டை யோடானது, சுகம், சுதந்திரம், அன்பு முதலியன குடி கொண்டுள்ள கோயிலாக விளங்குகிறது. இவையெல்லாம் என்ன? மூளையைப் பொறுத்த விஷயம்; அறிவு அபிவிருத்தியைப் பொறுத்த விஷயம். நமது முன்னோர்களைவிட நாம், விடுபட்ட நிலைமைக் கருகாமையில் வந்திருக்கிறோ மென்று சொன்னால், அதற்குக் காரணம் நமக்கு அதிகமான மூளையும் அதற்குள் அதிகமான அறிவும் இருப்பது தான். இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். நான் எதை நம்புகிறேன் என்பதோ, நான் எதை ரூஜுப்படுத்த வேண்டு மென்று கூறுகிறே னென்பதோ முக்கிய விஷயமல்ல. உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள் என்றுதான் கூறுகிறேன். மத சம்பந்தமான துவேஷ எண்ணங்களை உங்கள் மனத்தினின்று ஒருகணத் திற்கு அகற்றி விடுங்கள். ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்து சில நிமிஷநேரம் நடந்து காட்டுங்கள். ஓர் அரசனோ அல்லது ஒரு புரோகிதனோ இருந்ததாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த அரசனோ அல்லது புரோகிதனோ பழைய காலத்துத் தெப்ப மொன்றில் ஏறிக்கொண்டு தம்பட்டத்தின் ஓசையை இன்னிசை யாகச் செவிமடுத்துக் கொண்டே பின்வருமாறு கூறுகிறாbன்று வைத்துக் கொள்ளுங்கள்:- ‘இந்தத் தெப்பந்தான், மனிதனால் நிர்மாணிக்கப்படக்கூடிய சிறந்த படகு. கடவுளால் அநுக்ரஹிக்கப் பட்ட மாதிரிப்படியே இந்தப் படகு கட்டப்பட்டிருக்கிறது. இதன் மீது ஒரு பாய் மரத்தைக் கட்டியோ அல்லது வேறு விதமாகவோ இதனை அபிவிருத்தி செய்ய முடியுமென்று எவனாவது சொன்னால் அவன் ஒரு நாஸ்திகன்; அவனைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்.’ அப்பொழுது, உலக அபிவிருத்தி எவ்வளவு தூரம் ஏற்பட் டிருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? அப்படியே இன்னொரு தரம், ஓர் அரசனோ அல்லது புரோகிதனோ இருந்தானென்று வைத்துக் கொள்ளுங்கள். அநேக மாக ஒரு புரோகிதன் இருந்தானென்று வைத்துக் கொள்வதுதான் நல்லது. ஏனெனில் அஃது அறியாமை நிரம்பியிருந்த காலம். அந்த அரசனும் புரோகிதனும் சேர்ந்து பின்வருமாறு கூறுகிறார்களென்று வைத்துக் கொள்வோம்:- ‘தம்பட்டத்தைப் போன்றதோர் அற்புதமான கருவியை மனிதனால் எப்பொழுதும் சிருஷ்டிக்க முடியாது. இந்த மாதிரி வாத்தியத்தைத்தான் தேவலோகத்தில்கூட வைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஏதோ ஒரு தேவதை இந்த வாத்தியத்தை வாசித்துக் கொண்டே இதில் லயித்துப் போய், தன்னையுமறியாமல் இதனைத் தெய்வலோகத்திலிருந்து கீழே போட்டு விட்டது. பூலோகத்திற்கு இந்த வாத்தியம் கிடைத்தது இப்படித் தான். இந்தக் கருவியை எவனேனும் அபிவிருத்தி செய்ய முடியுமென்று சொன்னால் அவன் ஒரு கடவுள் துரோகி; அவனை மரண தண்டனைக்குட் படுத்த வேண்டும்.’ இப்படிச் சொல்லிவிட்டால், சங்கீதம் எவ்வளவு தூரம் வளர்ச்சி யடையும் என்று நினைக்கிறீர்கள்? இந்த வழியை நமது முன்னையோர்கள் பின்பற்றி யிருப்பார்களானால், இப்பொழுது நாம் பீத்ஹோவன்1 என்ற சங்கீதப் புலவனுடைய தெய்விக இசையைப் பருகிக்கொண்டிருக்க முடியுமா? இப்படியே ஓர் அரசனோ அல்லது ஒரு புரோகிதனோ கூறுகிறாbன்று வைத்துக் கொள்வோம்:- ‘அந்தக் கோணலான தடியிருக்கிறதே அதுதான், இதுவரை யில் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த உழுபடைச்சால். பக்திமானாகிய ஒரு விவசாயிக்கு இஃது அவனுடைய கனவில் அளிக்கப்பட்டது. இதை இன்னும் அதிகமாக அபிவிருத்தி செய்ய முடியுமென்று எவனேனும் சொன்னானாகில் அவன் ஒரு நாஸ்திகன்.’ இப்படிச் சொல்லி யிருந்தால், உலகத்தில் விவசாய அறிவு எவ்வளவு தூரம் அபிவிருத்தி யடைந்திருக்கு மென்று நீங்கள் கருதுகிறீர்கள்? ஆனால் ஜனங்களும், அரசனும், புரோகிதனும் கூறினார்கள்:- ‘நமது சகோதர கிறிஸ்தவர்களைக் கொல்ல, நமக்கு இன்னும் சிறந்த கலப்பைகள், சிறந்த சங்கீதம், சிறந்த சித்திரங்கள் முதலியன தேவை. எவனொருவன் இந்தச் சிறந்தவைகளைக் கொடுத்து, வசிப்ப தற்கு நல்ல வீடும், உடுப்பதற்கு நல்ல உடையும் கொடுக்கிறானோ, அவனைச் செல்வத்தால் அலங்கரிப்போம்; கண்ணியமாகிற முடியைச் சூட்டுவோம்.’ மேலே சொன்ன இந்தக் கருவிகளை அபிவிருத்தி செய்ய எல்லா மனிதர்களுக்கும் எல்லா விதமான தூண்டுதல்களும் அளிக்கப்பட்டன. இந்தத் தூண்டுதல் இருந்ததனால்தான், குறுந்தடி யானது பெரிய பீரங்கியாகவும், சிறிய தெப்பம் பெரிய நீராவிக் கப்பலாகவும் அபிவிருத்தி யடைந்திருக்கின்றன. இதனால்தான், சாதாரணமான கரடு முரடாயுள்ள ஒரு பாறாங்கல், அழகிய ஓர் உருவச்சிலையாக அமைந்து விடுகிறது. தெப்பத்திலே மிதந்து கொண்டு சென்றானே அந்த மனிதன், தம்பட்ட ஓசையைக் கேட்டுப் புளகாங்கித மடைந்தானே அந்த மனிதன், தன்னுடைய குறுந்தடியின் துணை கொண்டு நிலத்தை உழுது பயிரிட்டானே அந்த மனிதன், அவனுக்கும் ஒரு மதம் இருந்தது. அவன் வைதிகமாகவும் இருந்தான். அவனுக்குச் சந்தேக மென்பதே உதித்தது கிடையாது. அவன் மன நம்பிக்கையுடன் தான்வாழ்ந்தான்; அப்படியேதான் இறந்தான். அவன், நரகமென்ப தொன்றுண்டு என்று நம்பினான். அவனுடைய மத நம்பிக்கையில் யாரேனும் சந்தேகப்பட்டு அந்தச் சந்தேகத்தை வெளிப் படுத்துவார் களானால், அவர்களைத்தான் வெறுப்புடன் பார்ப்பதன் மூலம் தனக்கு மோட்சம் கிடைக்குமென்றும் அவன் நம்பினான். அப்படிப்பட்ட மனிதனுக்கு அறிவு நிரம்பிய சந்ததியார் பலர் ஏற்பட்டனர். இது விசனிக்கத்தக்கதுதான். ஆனால் இஃது உண்மை. புத்திசாலிகளைவிட மூடர்கள்தான் உலகத்திலே அதிவேகமாக அபிவிருத்தி யடைகிறார்களென்பதும் ஒரு துக்ககரமான உண்மை. மேலே சொன்ன அந்தப் பழைய காலத்து மனிதன் - அதாவது தெப்பத்திலே மிதந்து சென்றானே அவன் - பேய் பிசாசுகளிலும் நம்பிக்கை கொண்டிருந்தான். அவன் கற்பனை செய்து கொண்ட பேயானது, பிளவுபட்ட குளம்புகளை யுடையதாகவும், நீண்ட வாலுடையதாகவும், கூர்மையான பாணத்தைத் தாங்கியதாகவும் இருந்தது. கடவுளுக்குச் சமதையான அந்தஸ்திலேயே இந்தப் பேயும் இருக்கிற தென்றும், ஆனால் கடவுளைப் போல் அவ்வளவு பரும னுடையதல்லவென்றும், ஆனால் கடவுளை விட அதி புத்திசாலி யென்றும் அவன் கருதினான். இப்படிப்பட்ட பேயானது, சென்ற ஆறாயிர வருஷ காலமாக எந்த விதத்திலும் அபிவிருத்தியடைய வில்லை யென்பது உங்களுக்குத் தெரியுமா? தெப்பத்திலே மிதந்து சென்ற அந்த மனிதன், கடவுளை ஒரு கொடுங் கோலனாகவே கருதிவந்தான். எந்த ஒரு மனிதன், தான் வகுத்துக் கொண்ட ஒரு லட்சியத்தின் படி நடந்து வருகிறானோ அவனுக்குச் சாசுவதமான நரகந்தான் கிடைக்குமென்று அவன் நம்பினான். உலகம் தட்டையா யிருக்கிறதென்று அவன் நம்பினான். நரக மென்பது, அக்கினி மயமாயிருக்கு மென்று அவன் நம்பினான். பலாத்காரத்தினால்தான் நியாயத்தை நிலை நிறுத்த முடியு மென்பதுவே, அரசியல் சம்பந்தமாக அவன் கொண்டிருந்த கொள்கை. உலகத்தில் இந்தக் கொள்கைமாற இன்னும் ஆயிரக் கணக்கான வருஷங்கள் பிடிக்குமென்று தோன்றுகிறது! நான் கேட்பதெல்லாம் என்னவென்றால், அந்தப் பழைய காலத்து மனிதன், எப்படி தன் இசைக் கருவியைத் தம் பட்டத்தி லிருந்து அபிவிருத்தி செய்து கொண்டானோ, அப்படியே அவனுடைய தத்துவ ஞானத்தையும் அபிவிருத்தி செய்து கொள்ள இடங் கொடுங்கள் என்பது தான். தன்னுடைய தெப்பத்தை அவன் எப்படி பெரிய நீராவிக் கப்பலாக விருத்தி செய்து கொண்டானோ அப்படியே அவனுடைய அரசியலையும் அபிவிருத்தி செய்து கொள்ள இடங் கொடுங்கள் என்பதுதான். இவ்வளவு தான் நான் கேட்பது. மனிதனுடைய ஆத்மாவுக்கு எல்லா வழிகளிலும் சுதந்திரம் இருக்க வேண்டுமென்றுதான் நான் கோருகிறேன். இந்த ஒரு குற்றத்தைத்தான் நான் செய்திருக்கிறேன். நாம் சிந்தனை செய்வோம் என்பதுதான் என் வேண்டுகோள். ஒவ்வொருவனும் அவனவனுடைய எண்ணத்தை வெளியிடட்டும். நாம் புதிய விஷயங்களை ஆராய்ச்சி செய் கிறவர்களாக இருக்க வேண்டும். எப்பொழுதும் பிறரைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்களாகவோ, கெஞ்சுகிறவர்களாகவோ, மற்றவர்கள் எதிரில் ஊர்ந்து செல்கிற வர்களாகவோ இருக்க வேண்டாம். தேவலோகத்தில் எல்லையற்ற பரம்பொருளான கடவுள் ஒருவர் இருப்பாரானால், அவர், கோழை களின் வணக்கத்தையும், நயவஞ்சகர் களின் வணக்கத்தையும் ஏற்றுத் திருப்தி யடையவே மாட்டார். அவநம்பிக்கை கொள்கிறீர்களா, மனப் பூர்வமாக அவநம்பிக்கை கொள்ளுங்கள்; கடவுளிடத்தில் விசுவாசம் ஏற்பட வில்லை யென்று சொல் கிறீர்களா, அல்லது ‘நான் நாஸ்திகன்’ என்று சொல்கிறீர்களா அதைத் தைரியமாகவும் மனப் பூர்வமாகவும் சொல்லுங்கள். அப்படிச் சொல்வது தான் தெய்வ லோகத்தில் மணக்கும்; பக்தி யென்னும் போர்வையினால் மூடப் பெற்ற நயவஞ்சகம், அது வெளிப்பார்வைக்கு எத்தகைய சமயச் சார்புடையதா யிருந்தாலும், தெய்வலோகத்தில் துர்நாற்றத்தையே உண்டுபண்ணும். இதுதான் என் கோட்பாடு. உங்களுக்கென்று என்ன உரிமை கொண்டாடுகிறீர்களோ அதே உரிமையை எல்லா மனிதர்களுக்கும் வழங்குங்கள். இயற்கையின் சுபாவங்கள் உள்ளே புகுமாறு உங்கள் மனதைத் திறந்து வையுங்கள். புதிய எண்ணங்களுக்கு முகமன் கூறி வரவேற்புக் கொடுங்கள். அப்பொழுதுதான் நாம் முன்னேற முடியும். இன்றைய சமயவாதி, தனது ஆத்மாவாகிய கப்பலை, வைதிகம் என்னும் துறை முகத்தில் கட்டிப்போட்டு வெயிலிலே உலர்ந்து போகுமாறு விட்டு வைக்க விரும்புகிறான்; பழைய கொள்கைக ளாகிற பாய் மரத்தின் மீது, பழைய அபிப்பிராயங்களாகிற கப்பற் பாய் அடிபட்டு அலறும் சப்தத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதிலே திருப்தி யடைகிறான். கப்பலின் இணைப்புகளும் பக்கங்களும் சந்துவிட்டு வெயிலியே காய்ந்து போவதைக் காண்பதிலே சந்தோஷம் கொள்கிறான். ‘நான்கொண்டிருக்கிற அபிப்பிராயங் களைக் கலைக்காதீர்கள்; என் மனதை நிலை குலைத்து விடாதீர்கள்; ஏற்கனவே நான் ஒரு வித அபிப்பிராயங் கொண்டு விட்டேன்; எனக்கு நாஸ்திக வாதம் வேண்டாம். நான் பின்னோக்கிப் போவேனே தவிர, முன்னோக்கிச் செல்ல மாட்டேன்’ என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருப்பதில்தான் அவன் இன்பம் நுகர்கிறான். என்னைப் பொறுத்த மட்டில், பரந்த சமுத்திரத்தில் செல்ல வேண்டுமென்றுதான் விழைகிறேன். காற்று, அலை, நட்சத்திரம் முதலிய வற்றோடு என் அதிர்ஷ்டத்தையும் பிணைத்துக் கொண்டு போகவே விரும்புகிறேன். புயற் காற்றுடன், பெருமையாகவும் புகழோடும் நான் அடித்துக்கொண்டு போகப்படுவதில் திருப்தி யடைவேனே தவிர, வைதிக மென்னும்துறை முகத்தில் சீரழிந்து கிடக்க மாட்டேன். எப்படியும், யுகத்திற்கு யுகம் நாம் முன்னேறிக் கொண் டிருக்கிறோம். இப்பொழுது இந்த நாட்டிலேயுள்ள பரம வைதிகர் களாயிருக்கப் பட்டவர்கள் இருநூறு வருஷத்திற்கு முன் வாழ்ந் திருந்தார்களானால், அவர்களை வேதப் புரட்டர்களென்று சொல்லித் தீயிட்டுக் கொளுத்தி யிருப்பார்கள். இப்பொழுது நான் வெளியிடும் இந்த எண்ணங்களை எந்தப் பாதிரிமார்கள் கண்டிக் கிறார்களோ, அதே பாதிரிமார்கள் அப்பொழுது குற்ற விசாரணைக் குட்பட்டிருப்பார்கள். எந்த இடத்தில் முன்னேற்றச் சேனையானது தங்கி நெருப்புப் போட்டுக் குளிர் காய்ந்ததோ அதே இடத்தில் தேவாலயத்தின் பலி பீடங்கள் இப்பொழுது இருக்கின்றன. நூறு வருஷத்திற்கு முன்னால் நாஸ்திகர்கள் எந்த ஸ்தானத்தில் இருந்தார் களோ அதே இடத்தில்தான், இன்றைய சமயவாதிகள் இருக்கி றார்கள். தெய்வ சபை - அதாவது ஆலய ஸ்தாபனம் - தன்னையும் மீறி முன்னேறிக் கொண்டு வந்திருக்கிறது. கண்டனஞ் செய்து கொண்டும், தூஷித்துக் கொண்டும், அது, மேற்படி முன்னேற்றச் சேனையைப் பின் தொடர்ந்தே வந்திருக்கிறது. அந்த முன்னேற்றச் சேனைக்குச் சிறிது எட்டிய தூரத்திலேயே அஃது இருந்துகொண்டு வர வேண்டியிருக்கிறது. அப்படி இந்தத் தெய்வசபையானது, முன்னேற்றமடைந்திராவிட்டால் நான் இப்பொழுது என் எண்ணங் களை வெளியிட்டிருக்க முடியாது. மனிதன் எந்த அளவுக்குத்தன் உழைப்புச் சக்தியோடு எண்ணத்தின் சக்தியையும் கலந்துவிட்டிருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் முன்னேற்றமடைந்திருக்கிறான். ஒரு கப்பல் மாலுமி, காற்றையும் அலையையும் கட்டுப் படுத்தத் தெரியாமல், சமுத்திரத்தின் சுழல்களையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தானாகில், அவனை மூடநம்பிக்கை கொண்டவன் என்று தான் சொல்ல வேண்டும். விவசாயியின் நிலைமையும் இப்படித்தான். அவனுடைய வாழ்வெல்லாம், அவனால் கட்டுப்படுத்தமுடியாத ஒன்றைப் பொறுத்திருக்கிறது. ஆனால் ஒரு யந்திரத்தில் வேலை செய்கிறவன் அப்படியல்ல. தான் வேலை செய்யும் யந்திரத்தில் ஏதேனும் ஒரு சக்கரம் சரியாக ஓடவில்லை யென்றால் அதற்காக அவன் தெய்வ சக்தியின் துணைநாடி முழந்தாளிட்டுப் பிரார்த்தனை செய்வதில்லை. சக்கரம் ஓடாமலிருப்பதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். தன்னுடைய யந்திரத்தில் ஏதோ கோளாறு இருக்கிறதென்பதை அவன் தெரிந்து கொண்டிருக்கிறான். ஓடாத சக்கரம் ஓடுகிறவரை, அவன் சிறியதைப் பெரிதாக்கியோ பெரியதைச் சிறிதாக்கியோ ஏதோ ஒன்றைச் செய்கிறான். அதுபோலவே, மனிதனும் எவ்வளவுக் கெவ்வளவு, தனது சுற்றுப்புறத் திற்கு அடிமையாகாமலிருக்கிறானோ, எவ்வளவுக் கெவ்வளவு பஞ்ச பூதங்களின் சுபாவத்திற்கு வசப்படாமலிருக் கிறானோ அவ்வளவுக் கவ்வளவு அவன், தன் விதி நியமத்தையும் கட்டுப்படுத்திக் கொண்ட வனாகிறான். இயற்கையால் ஏற்படும் முட்டுக் கட்டைகளை எந்த அளவுக்குச் சமாளிக்கிறானோ அந்த அளவுக்கு தேக பலத்திலும் அறிவு வளர்ச்சியிலும் முன்னேற்ற மடைந்தவனாகிறான். மனிதன் வளர வளர, அவன், தனது சுய உரிமைகளுக்கு அதிக மதிப்புக் கொடுக்கிறான். அப்பொழுது சுதந்திரம் என்பது ஒரு கம்பீரமான பொருளாகவும் தெய்விகப் பொருளாகவும் அவனுக்கு ஆகிவிடுகிறது. அப்பொழுது, அவன் தன்னுடைய சுய உரிமைக்கு எவ்வளவு மதிப்புக்கொடுக்கிறானோ அவ்வளவு மதிப்பு பிறருடைய உரிமைக்கும் கொடுக்க ஆரம்பிக் கிறான். எப்பொழுது எல்லா மனிதர்களும் தங்களுக்கிருக்கும் உரிமைகளைப்போல் மற்றெல்லாருக்கும் இருக்க வேண்டுமென்று கருதத் தொடங்கி விடுகிறார்களோ அப்பொழுது இந்த உலகம் நாகரிக மடைந்த தாகிவிடும். சில வருஷங்களுக்கு முன்னால் வரை, ஜனங்கள், அரச னிடமோ, புரோகிதனிடமோ எதிர்த்துப் பேச பயந்தார்கள். ஒரு சமயக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், ஒரு நூலை மறுக்கவும், ஒரு கோட்பாட்டைக் கண்டிக்கவும், தர்க்கரீதியாகப் பேசவும், சுயமாகச் சிந்திக்கவும் பயந்தார்கள். செல்வத்திற்கு முன்னே தலை குனிந்தார்கள். பட்டங்களுக்கு முன்னே பணிந்தார்கள். ஆனால் இவையெல்லாம் இப்பொழுது மெது மெதுவாக, ஆனால் நிச்சயமாக மாறிக் கொண்டு வருகின்றன. பணக்காரன் என்ற காரணத்திற்காக ஒரு மனிதனை நாம் இப்பொழுது வணங்குவ தில்லை. இப்பொழுது, மனிதனுடைய ஆவலானது அரச பதவியையோ சக்ரவர்த்திப் பதவியையோ அடைவதில் திருப்தி பெறுவதில்லை. பிரெஞ்சு ராஜாங்கத்தின் சக்ரவர்த்தியாக இருந்து விடுவதோடு மட்டும் (கடைசி) நெப்போலியன் திருப்தி யடையவில்லை தன் தலையில் பொற் கிரீடம் தரித்திருந்ததினாலும் அவன் திருப்தி யடையவில்லை. தன் தலைக்குள் ஏதோ மதிப்புப் பெறக்கூடிய ஒன்று இருக்கிறதென்று நிரூபிக்க அவன் ஆசை கொண்டான். பிரெஞ்சு அறிவுக்கழகத்தில் ஓர் அங்கத்தினனாக வேண்டுமென்பது அவன் விருப்பம். எனவே ஜூலியஸ் சீஸரைப்1 பற்றி ஒரு சரித்திரம் எழுதினான். சக்ரவர்த்திகள், அரசர்கள், போப்பாண்டவர்கள் முதலியோர், மற்ற மனிதர்களை விட உயர்ந்தவர்களல்லர். வில்லியம்2 மன்னனையும் ஹெக்கல்3 என்ற தத்துவ ஞானியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அரசன், மிக மேன்மையானவர்கள் என்று கருதப்படுகிறவர் களால் (புரோகிதர்களால்) அபிஷேகம் செய்யப் படுகிறவன். அவனுடைய சிரசின் மீது அதிகாரமென்னும் தெய்விக (பெட்ரோல்) எண்ணெயை அபிஷேகம் செய்கிறார்கள். இப்படிப் பட்ட அரசனுடைய ஹெக்கலை ஒப்பிட்டுப் பாருங்கள். முடிதரித்த அந்தச் சாதாரண மனிதனுக்கு மேலே, அந்தப் புலவன் எப்படி ஞான விராட்ஸ்வரூபனாக விளங்குகிறான்! அறிவுக்கும், திறமைக்கும் தூய மனத்திற்கும் இப்பொழுது உலகம் வணக்கஞ் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. நாம் முன்னேறி யிருக்கிறோம். புனிதமான, வீரம் நிறைந்த ஒவ்வொரு தியாகத்தினுடைய தெய்வத்தன்மை பொருந்திய, வீரம் செறிந்த ஒவ்வொரு செயலினுடைய சாதகத்தை நாம் அடைந்திருக் கிறோம். சாதகம் நிறைந்த இந்த வெளிச்சத்திற்கு, செறிவும் புகழும் நிறைந்த இந்த வெளிச்சத்திற்கு இன்னும் சிறிது சேர்த்து, அடுத்த தலைமுறையினருக்கு இதனை நாம் வழங்க வேண்டும். இந்த உலகம் எவ்வளவு துன்பத்தை அநுபவித்திருக்கிறது? நமது மூதாதையர்கள் எவ்வளவு காலம் அடிமைகளாயிருந்திருக் கிறார்கள்? சிங்காதனத்தின் அடியிலும், தேவாலய பலி பீடத்தின் புழுதியிலும் எப்படி கெஞ்சியும் பணிந்தும் கிடந்தார்கள்? அவர்கள் தங்களை எப்படி இழிவு படுத்திக் கொண்டார்கள்? அலங்கார உடையும் முடியும் தரித்த மூட நம்பிக்கையின் சந்நிதானத்தில் அவர்கள் எப்படித் தங்களைத் தாழ்வு படுத்திக் கொண்டு நின்றார்கள்? இவைகளைப் பற்றியெல்லாம் நினைக்கிறபோது, நான் ஆச்சரியமே அடைகிறேன். ஐம்பது வருஷ காலத்திற்கு முன்னர் வரை, மனிதர் வசிக்க லாயக்கில்லாதபடி இந்த உலகம் இருந்தது. கிரேட் பிரிட்டன், 1808ஆம் வருஷம் வரை அடிமை வியாபாரத்தை ஒழிக்கவில்லை. அதுவரை யில் அந்த நாட்டின் நீதிபதிகள், நியாய மன்றத்தில் உட்கார்ந்து கொண்டு நீதியின் பெயரால், அந்த நாட்டின் பாதிரிமார்கள் பிரசங்க மேடையின் மீது அமர்ந்து விசுவப் பிரேமையின் பெயரால், அடிமை வியாபாரத்திலிருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு ஆடம்பர வாழ்க்கையை நடத்தினார்கள். அதுவரையில் - 1808ஆம் வருஷம் வரையில் - அமெரிக்கா, பிற நாடு களுடன் அடிமை வியாபாரம் செய்வதை நிறுத்தவில்லை. பிறகு அமெரிக்காவுக்குள்ளேயே ஒரு மாகாணத்திற்கும் மற்றொரு மாகாணத்திற்கும் இந்த வியாபாரம் நடந்து வரலாமென்ற வழக்கத்தை மட்டும் அநுஷ்டித்து வந்தது. மனிதர்கள், அடிமைகளாக நடத்தப்படும் வழக்கம் தனது குடியேற்ற நாடுகளில் இருக்கக் கூடாதென்று கிரேட் பிரிட்டன் 1833ஆம் வருஷம் ஆகஸ்ட் மாதம் 28ந் தேதி யன்றுதான் தீர்மானித்தது. 1863ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி அப்ரஹாம் லிங்கன்1 அமெரிக்காவின் அடிமை வியாபாரத்தை அடியோடு ஒழித்து அமெரிக்காவின் தேசீயக் கொடியை, எந்த ஆகாசத்தில் அது பறக்கிறதோ அந்த ஆகாசத்தைப் போல் தூய்மைப் படுத்தினான். அமெரிக்காவின் பிரசிடெண்டுகளாயிருந்தவர்களில் அப்ரஹாம் லிங்கன்தான் தலைசிறந்தவன் என்பது என்னுடைய அபிப்பிராயம். அவனுடைய ஞாபகச் சின்னத்தின் மீது கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதவேண்டும்:- ‘சர்வாதிகாரத்தைப் பெற்றிருந்தும், அதைக் கருணைக்காகத் தவிர வேறு விதங்களில் துஷ்பிரயோகப் படுத்தாத ஒரு மனிதன், உலக சரித்திரத்திலேயே இவன் ஒருவன்தான். அப்படிப்பட்டவன் இதோ இங்கு நித்திரை செய்கிறான்.’ கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அடிமை வழக்கத்தை எவ்வளவு காலம் வரை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தோம்? உழைத்த உழைப்புக்குத் திறந்த முதுகின் மீது சவுக்கடி கொடுப்பதுவே சட்ட ரீதியான முத்திரை யென்று எவ்வளவு காலம் அங்கீகரித்துக் கொண்டிருந்தோம்? இந்த நாட்டின் பிரசங்க பீடமானது (புரோகிதக் கூட்டமானது) வேண்டுமென்றே, இஷ்டப்பட்டே நூறு வருஷம் வரை கிறிஸ்து நாதரின் சிலுவையை, சவுக்கடி கொடுக்கும் ஸ்தம்ப மாக மாற்றி வைத்தது என்பதைச் சிறிது நினைத்துப் பாருங்கள். எனது தேகத்திலுள்ள ஒவ்வொரு துளி ரத்தமும் எந்தவிதமான கொடுங் கோன்மையையும் எந்த விதமான அடிமைத் தனத்தையும் சபிக்கிறது; அதனைத் துவேஷிக்கிறது. பிறர் அதிகாரஞ் செய்து கற்பிப்பதை நான் துவேஷிக்கிறேன். சுதந்திரத்தை நான் விரும்பு கிறேன். சுதந்திரம் என்றால் நான் எதைக் கூறுகிறேன்? தேக சம்பந்தப் பட்ட சுதந்திரம் என்று சொன்னால் பிறர் சந்தோஷத்திற்குப் பாதகம் ஏற்படாதபடி நான் எதைச் செய்யவும் எனக்கு உரிமை வேண்டும். அது தான் நான் கோரும் தேக சம்பந்தப்பட்ட சுதந்திரம். அறிவு சம்பந்தப்பட்ட சுதந்திரம் என்று சொன்னால் சரியாக நினைக்கும் சுதந்திரமும், தவறாக நினைக்கும் சுதந்திரமும் எனக்கு வேண்டும். சத்தியத்தை அடைவதற்குச் சாதனமா யிருப்பது சிந்தனை. ஏற்கனவே, நமக்குச் சத்தியம் இன்னதென்று தெரிந் திருந்தால், நாம் சிந்திக்க வேண்டிய அவசியமேயில்லை. தேவையான தெல்லாம் நமது எண்ணத்திலே தூய்மையிருக்க வேண்டுமென்பதுதான். ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் என் அபிப்பிராயத்தைக் கேட்கி றீர்கள். அதை நான் பரிசோதித்துப் பார்க்கிறேன். பிறகு நான் என்ன செல்வது? நான் அந்த விஷயத்தைப் பற்றி என்ன எண்ணுகிறேனோ அதைச் சொல்ல வேண்டாமா? என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்து அது தெய்வ கிருபையினால் அருளப்பட்டதென்று சொல்கிறார்களென்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதை நான் நம்பவில்லை. நம்பவில்லை யென்றுதானே நான் சொல்ல வேண்டும்? என் மனதிலிருப்பதை நான் தைரியமாக எடுத்துச் சொல்லத் தேவை யில்லையா? அப்படியில்லாமல், நான் ஒரு நய வஞ்சகனாகி, எதை என் மனம் ஒப்புக் கொள்ளவில்லையோ அதை ஒப்புக் கொண்டு விட்டதாகக் கூறி, பணிந்து போகக் கூடிய ஒரு கோழையாக என்னை ஆக்கிக் கொள்வது நல்லதா? மனதில் பட்டதைச் சொல்லும் மனிதத் தன்மையைத் தான் விரும்புகிறேன். என்னைப் பொறுத்தமட்டில், மனிதத் தன்மையில்லாத ஆஸ்திகனை விட, மனித்தன்மையோடு கூடிய நாஸ்திகனாகவே நான் இருக்கப் பிரியப்படுவேன். கடைசி தீர்பபு நாளென்று ஒன்று இருக்கு மாயின், அப்பொழுது எல்லோரும் ஒரு பரம் பொருளின் முன்னிலையில் போய் நிற்பார்களாயின், தான் நம்பாத ஒன்றை நம்புவதாகப் பாசாங்கு செய்து கொண்டு பதுங்கி பதுங்கி வாழ்கிறானே அவனைக் காட்டிலும் நான் சிறிது தலைதூக்கியே நிற்பேன். என் கட்சிக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கிடைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமும் எனக்கு உண்டாகும். நான் சொல்ல வேண்டியதைச் சொல்வதாகவே தீர்மானித்து விட்டேன். ஆனால் அதை அன்பாகவும் தெளிவாகவும் சொல்வேன்; சொல்லியே தீர்வேன். இப்படி நான் சொல்வதை அங்கீகரிக் கிறவர்கள் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை வெளியிலெடுத்துச் சொல்லும் நிலைமையில் இல்லை. அவர்களிற் பலர் ஏழைகள்; இன்னுஞ் சிலர் வியாபாரிகள். தாங்கள் எதை உண்மையாக நினைக்கிறார்களோ அதை வெளியிலே சொன்னால், தங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள், தங்களோடு யாரும் வியாபராஞ் செய்யமாட்டார்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்கள், தங்கள் குழந்தை களுக்கு ஆகாரம் தேடிக் கொடுக்க வேண்டியிருக்கிறது; தங்கள் மனைவிமார்களைக் காப்பாற்ற வேண்டுமென்று அவர்கள் விரும்பு கிறார்கள்; வீடு வாசலோடு, வாழ்க்கையின் சௌகரியங்களை அநுபவிக்க வேண்டுமென்பது அவர்கள் ஆவல். அப்படிப்பட்ட ஒவ்வொரு மனிதனும், அவன் எந்த சமுதாயத்தில் வசிக்கிறானோ அந்தச் சமுதாயத்தின் இழிதகைமைக்கு ஒரு ‘சர்டிபிகேட்’ மாதிரி. ஆனால், இவர்கள் தங்கள் எண்ணங்களை வெளியிட்டுச் சொல்ல வில்லையே யென்பதற்காக இவர்களை நான் குறை கூறவில்லை. இவர்களுக்கு நான் என்ன சொல்கிறே னென்றால் ‘உங்களுடைய அபிப்பிராயங்களை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாரை நேசிக்கிறீர்களோ அவர்களுக்கு உணவும் உடையும் அளியுங்கள். உங்களுக்காக நான் பேசுகிறேன். தெய்வத் திருச்சபை யானது, என்னைத் தீண்டாது; என்னை நசுக்காது; என்னைப் பட்டினி போடாது; என்னைத் தடைப்படுத்தவுஞ் செய்யாது. உங்க ளுடைய எண்ணங்களை நான் வெளியிடுகிறேன்’ என்பதுதான். கொடுங் கோலாதிக்கத்திற்கு மன்னிப்புக் கேட்பது போல், அடிமை வழக்கத்திற்குச் சமாதானம் கூறுவது போல், தெய்வத் திருச் சபையானது ‘மனிதன் நீச குணமுடையவன்’ என்ற போதனையைப் போதித்து வந்திருக்கிறது.இந்தத் தத்துவத்திற்கு ஆதாரமாக மேற்படி தெய்வத் திருச் சபையானது ஒரே ஓர் ஆதாரத்தைத்தான் எடுத்துக் காட்டி யிருக்கிறது. உண்மையென்ன வென்றால், மனிதர்களாகிய நாம் நல்லவர்களாகவும் இருக்கிறோம்; கெட்டவர்களாகவும் இருக்கிறோம். மனிதர்களிலே கேவல மானவர்கள், சில நல்ல காரியங்களைச் செய்யக் கூடியவர்களாகவும், மேலானவர்கள் சில கெட்ட காரியங்களைச் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கீழானவர்கள் மேலுக்கு உயரலாம்; மேலானவர்கள் கீழே விழலாம். மானிட சமூகத்தை, பாவிகளென்றும் ஞானிகளென்றும் இரண்டு பெரும் பகுதியினராகப் பிரிக்கலாம் என்று சொல்வது சுத்த அபத்தமாகும் பெரிய ஆபத்துகள் ஏற்படுகிறபொழுது - பெண்களே அப்படி ஆபத்தேற்பட்டு விட்டதென்று ஏக்கத்துடன் கூறுவதா யிருக்கலாம் - எந்த மனிதர்களை, தெய்வத் திருச் சபையானது இழிகுணம் வாய்ந்தவர்கள் என்று கூறியதோ அதே மனிதர்கள், ஒரு திருவிழாவுக்கு உற்சாகத்துடன் செல்கிறமாதிரி, மரணத்தை நோக்கிச் செல்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களால், தன்னலத்தியாகமும், அசாதாரண துணிச்சலும் நிறைந்த பல காரியங்கள் செய்யப்படு கின்றன. அவர்களை லட்சக்கணக்கான மக்கள் வியந்து பாராட்டு கிறார்கள்; அவர்களுக்குத் தங்கள் கண்ணீரையே காணிக்கை யாகச் செலுத்துகிறார்கள். எல்லா மதங்களுக்கும் மேலே அந்தத் தெய்விக வஸ்து ஒன்று இருக்கிறது. அதுதான் மானிட சமுதாயம். இந்த மானிட சமுதாயம். என்னும் பரந்த கோஷமிடுகிற கடலிலே, எப்பொழுதேனும் ஒவ்வொரு சமயம் கப்பலானது கரையிலோ கற்பாறையிலோ மோதுவதுண்டுதான். அந்தச் சமயம் பார்த்து அக்கினி மயமான பாம்புகள் சீறவும் கூடும். அப்பொழுது ஒரு விசாலமான ஹிருதயம், ஒரு வீர ஆத்மா, நட்சத்திரம் போல் பிரகாசமுடைய ஒரு வீரச் செயலைச் செய்து விட்டுப் போகும். அந்த வேளையில்தான் மூடக் கொள்கைகளெல்லாம் பொய்ப்பட்டு போகின்றன. மானிட சமுதாயத்தை இழிவுபடுத்தவும் அடிமைப் படுத்தவுமே பயங்கரமான இந்த மூடக் கொள்கைகளெல்லாம் உபயோகிக்கப் பட்டிருக்கின்றன. ஆத்மாவினின்று, சுதந்திரத்தையும் நியாய புத்தியையும்பிரித்து எடுத்துவிடுகிற மதக் கோட்பாடுகளை, நூல்களை, உருவங்களை, சட்டங்களை, மதங்களை, எல்லாவற்றையும் விலக்கி விடுங்கள். சிந்தனை செய்வது ஆபத்து என்கிற அபிப்பிராயத்தை அடியோடு நசுக்குங்கள். ஒரு மனிதன், மற்றொரு மனிதனுடைய ஆஸ்தியாக இருக்க முடியுமென்ற அந்தக் களங்கம் நிறைந்த கொள்கையை அழித்துப் போடுங்கள். நமது மனதுக்கு விலங்குபோடும் முயற்சியைக் கோபத்தோடு கண்டிப்போமாக. கடவுள் இல்லையானால், அதற்காக நாம் பணிந்து போவதோ, பல்லிளிப்பதோ, ஊர்ந்து செல்வதோ கூடாது. கடவுள் உண்டானால், இந்த உலகத்தில் அடிமைகளே இருக்கக்கூடாது. 2. ஸ்திரீ சுதந்திரம் ஸ்திரீகள், அடிமைகளுக்கு அடிமைகளாயிருந்திருக்கிறார்கள். என்னுடைய அபிப்பிராயத்தில், ஸ்திரீகள், கேவலமான அடிமைத் தனத்திலிருந்து, விவாகம் செய்து கொள்ளக் கூடிய சுதந்திர நிலைமைக்கு வர எத்தனையோ லட்சக்கணக்கான வருஷங்கள் பிடித்திருக்க வேண்டும். மானிட சமுதாயத்திலேயே மிகவும் புனித மான சடங்கு விவாகந்தான் என்பதை இங்கே தெளிவுபடுத்திச் சொல்ல விரும்புகிறேன். அடுப்பங்கரை யின்றி, மானிட சமுதாயத் தின் முன்னேற்ற மில்லை; குடும்பச் சுற்றமின்றி, வாழ்க்கையும் பிரயோஜனப்பட்ட தாகாது. அநேக நல்ல குடும்பங்கள் சேர்ந்தது தான் ஒரு நல்ல அரசாங்கம். ஒரு நல்ல அரசாங்கத்தின் கிளையாக இருப்பது குடும்பம். இந்தக் குடும்பத்தைச் சீரழிக்கச் செய்யப்படுகிற எந்த முயற்சியும் பேய்த் தன்மை வாய்ந்தது; களங்க முடையது. எனக்கு விவாக வழக்கத்திலே நம்பிக்கையுண்டு. இந்த மணச் சடங்கை - விவாக மென்னும் ஸ்தாபனத்தை - தூஷிக்கிற நீண்ட கேசமுள்ள புருஷர்களுடையவும் குறைந்த கூந்தலுடைய ஸ்திரீகளி னுடையவும் அபிப்பிராயங்களை நான் கேவலமாகக் கருதுகிறேன். மனிதனுக்கு ஏதேனும் உயர்ந்த ஆசையொன்று இருக்கு மானால் அஃது என்ன? ‘யாரேனும் உயர்தன்மை வாய்ந்ததொரு ஸ்திரீயின் காதலைப் பெறக்கூடியவாறு என் இருதயத்தை விசாலப் படுத்திக் கொண்டு அறிவை விருத்தி செய்து கொண்டும் வாழ்க்கையை நடத்த வேண்டும்’ என்பதுதான் அந்த ஆசை. அப்படியே ஒரு பெண்ணின் உயர்ந்த ஆசையும், யாரேனும் ஒரு புருஷனுடைய அன்பையும் மதிப்பையும் பெற்று வாழவேண்டு மென்பதுதான். இதுவே என்னுடைய அபிப்பிராயம். காதலும் விவாகமும் இல்லாமல், வாழ்க்கையில் வெற்றியென்பதே கிடையாது. உலகமெல்லாம் கட்டியாளும் ஓர் அரசனாயிருப்பதைக் காட்டிலும், நீ - ஆண் மகனாகிய நீ - ஒரு ஸ்திரியின் மென்மையான, அன்பு நிறைந்த ஹிருதயத்தின் சக்ரவர்த்தியா யிருப்பது மேல். அப்படியே அவளும் - அந்த ஸ்திரீயும் - உன் ஹிருதயத்தின் சக்ரவர்த்தினியா யிருப்பதே சிலாக்கியமாகும். ஒரு நல்ல ஸ்திரீயின் பூரண அன்பை ஒருவன் இந்த உலகத்தில் பெற்று விட்டானாகில், அவன் சாக்கடையில் பிச்சைக் காரனாக மரித்தாலும் பாதகமில்லை; அவன் வாழ்க்கை வெற்றி யடைந்து விட்டதென்றுதான் நான் கூறுவேன். ஸ்திரீகள் கேவலமான அடிமைத் தனத்திலிருந்து, விவாகம் செய்து கொள்ளக் கூடிய நிலைமைக்கு வர, லட்சக்கணக்கான வருஷங்கள் பிடித்தனவென்று ஏற்கனவே நான் கூறினேன். சகோதரி களே! உங்கள் தேகத்தின் மீது நீங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்கள், தாய்மார்களின் அன்புத்தளைகளாகும். உங்கள் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆபரணங்களும், அன்புக் கரங்களால் அணிவிக்கப் பெற்ற கங்கணங்களும், நாகரிகமென்னும் மாத்திரைக் கோலால், இரும்பிலிருந்து பிரகார மயமான தங்கமாக மாறியிருக்கின்றன. ஆனால், ஒவ்வொரு மதமும், உலகத்தில் நிலவுகின்ற எல்லாப் பேய்க் குணங்களுக்கும் காரணம் ஸ்திரீகள் இழைக்கிற குற்றமே யென்று கூறியிருக்கிறது. எவ்வளவு வீரத்தனமான செய்தி இது? இஃது உண்மையாயிருக்குமானால், நான், துன்பம் நிறைந்த ஓர் உலகத்தில், என்னால் நேசிக்கப்படுகிற ஒரு ஸ்திரீயுடன் வசிப்பேனே தவிர, வேறொருவரு மில்லாமல் ஆண்கள் மட்டும் நிறைந்துள்ள தெய்வலோகத்தில் வசிப்பதை விரும்ப மாட்டேன். நான் ஒரு புஸ்தகத்தில் படித்தேன் - அதனுடைய நேரான வாசகத்தை இங்கு நான் உங்களுக்கு எடுத்துச் சொல்ல முடியா விட்டாலும் அதன் கருத்தை உங்களுக்குத் தெரிவிக்கிறேன். - கடவுள், ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து இந்த உலகத்தைச் சிருஷ்டித்து அதில் ஒரு மனிதனையும் சிருஷ்டித்தாராம். அந்த மனிதனை ஒரு தோட்டத்தில் விட்டு வைத்தார். அவன், சிறிது நேரத்திற்கெல்லாம் தனது தனிமையை உணர்ந்தான். ஏதோ ஒரு வண்டியில் ஏறிச் செல்வதற்குக் காத்துக் கொண்டிருப்பது போல் அவன் அங்குமிங்குமாகத் திரிந்து கொண்டிருந்தான். அவனுக்குச் சுவை தரத்தக்க எதுவும் அங்கு அகப்பட வில்லை. செய்தியா, பத்திரிகையா, அரசியலா, கொள்கையா ஒன்றும் அங்கு இல்லை. அங்கு இன்னும் சாத்தான் ஆஜராகவில்லையாதலினால் அதனோடு சமரஸம் செய்து கொள்ளவும் அவனால் முடியவில்லை. உத்தியோகச் சீர்திருத்தம் கூடச் செய்ய முடியவில்லை. இந்த மாதிரியான நிலைமையில், அந்த மனிதன் தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந் தான். கடவுள் பார்த்தார். இந்த மனிதனுக்கு ஒரு துணையைத் தேடித்தர வேண்டுமென்று தீர்மானித்தார். ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து இந்த உலகத்தையும் மனிதனையும் ஏற்கனவே அவர் சிருஷ்டித்து விட்டாராதலின், இந்த மனிதனிடமிருந்து ஒரு ஸ்திரீயைச் சிருஷ்டிக்க வேண்டியதாயிற்று. எனவே அந்த மனிதனைத் தூங்கும்படி செய்தார். அவனுடைய விலா எலும்பொன்றை எடுத்து அதிலிருந்து ஒரு ஸ்திரீயை சிருஷ்டித்தார் - இங்கே ஒரு வார்த்தை. இந்தக் கதையை நான் நம்புவதாக நீங்கள் கருத வேண்டாம். - இங்ஙனம் ஒரு பெண்ணைச் சிருஷ்டித்து அந்த மனிதனிடத்திலே கொண்டு விட்டார். அந்த ஸ்திரீ, அந்த மனிதனை எப்படி விரும்புகிறாளென்று பார்ப்பதற்காக வல்ல; அந்த மனிதன் அந்த ஸ்திரீயை எப்படி விரும்புகிறானென்று பார்ப்பதற்காக. அந்த மனிதனும் அவளை விரும்பினான். இரண்டு பேரும் குடும்பம் நடத்தத் தொடங்கினார்கள். ஒரே ஒரு காரியம் தவிர மற்றெல்லாக் காரியங்களையும் செய்யலா மென்றும் அவர் களுக்குக் கூறப்பட்டது. ஆனால் அவர்கள், எதைச் செய்ய வேண்டா மென்று சொல்லப்பட்டார்களோ அதைச் செய்தார்கள். நானும் பதினைந்து நிமிஷத்திற்குள் அப்படியே செய்திருப்பேன். அன்றி லிருந்து அவர்கள் வசித்த தோட்டத்தில் ஓர் ஆப்பில் பழம் கூட இல்லை. உடனே அவர்கள் தோட்டத்தினின்று அப்புறப்படுத்தப் பட்டார்கள். அவர்கள் தோட்டத்திற்குள் திரும்பி வராதபடி சில போலீஸ்காரர்களும் பாதுகாவலாக வைக்கப் பட்டார்கள். உடனே பேய்த்தன்மை, உலகில் பரவத் தொடங்கியது. அம்மை, கக்குவாய், இருமல், ஜுரம் முதலியனவெல்லாம் ஒன்றன் பின்னொன்றாக ஆரம்பித்தன. மனிதனுக்குப் பல்வலி ஏற்பட்டது; ரோஜா புஷ்பங் களுக்கு முள்ளும், பாம்புக்கு விஷமும் உண்டாயின. மத விஷயத் திலும் அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டன. அது முதற் கொண்டு இது வரையில் உலகத்தில் தொந்திரவுகள் ஏற்பட்ட வண்ணமா யிருக்கின்றன. உலகத்தில் துன்பம் நிறைந்திருந்த தென்பதற்கு அத்தாட்சியாக எல்லா மதங்களும் இந்த மாதிரியான கட்டுக் கதைகளையே கட்டி விட்டிருக்கின்றன. இதே சம்பவத்தைப் பற்றிக் கூறும் வேறொரு புஸ்தகத்தையும் நான் படித்தேன். முதலிற் சொன்ன புஸ்தகத்திற்கு நாலாயிரம் வருஷங்களுக்கு முந்தியே இஃது எழுதப்பட்டதாம். பிந்திய புஸ்தகந்தான் அசலென்றும், முந்திய புஸ்தகம் நகலென்றும் இந்தப் புஸ்தகங்களுக்கு வியாக்கியானஞ் செய்திருக்கிற எல்லா வியாக்கியான கர்த்தர்களும் கூறுகிறார்கள். இந்த நாலாயிர ஐயாயிர வருஷ வித்தியாசத்தை ஒரு பொருட்டாக மதித்து, உங்கள் மதக் கோட்பாடுகளைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்தஇரண்டாவது புஸ்தகத்திலுள்ள கதைப் பிரகாரம், ப்ரஹ்மா, இந்த உலகத்தையும் அதில் ஓர் ஆணையும் பெண்ணையும் சிருஷ்டிக்கத் தீர்மானித்து விட்டார். அப்படியே சிருஷ்டித்து, இந்த ஆணையும் பெண்ணையும் இலங்கையில் கொண்டு போய் வைத்தார். மனிதன் நினைக்க கூட முடியாத அவ்வளவு அழகான தீவு அந்த இலங்கை. அழகான பட்சிகள்! அழகான பாட்டுகள்! அழகான் புஷ்பங்கள்! அழகான வண்ணங்கள்! அங்குள்ள மரங்களின் மீது காற்று வீசுமானால், இனிய வாத்திய மொன்று ஒலிப்பது போல இருக்கும். இந்த மாதிரியான அழகுகளை யெல்லாம் சேர்த்து அந்தத் தீவில் ஏற்படுத்தி வைத்த பிறகு, ப்ரஹ்மா கூறினார், ‘இந்த ஆண் மகனும் பெண் மகளும் ஒருவர்க்கொருவர் முதலில் காதல் கொள்ளட்டும்; ஏனென்றால் விவாகத்திற்கு முன்னர் உண்மையான அன்பு முகிழ்க்க வேண்டுமென்பது என் விருப்பம்’ என்று, பின்னர், இவர்கள் காதல் கொண்டார்கள். பறவைகள் இன்னிசை முழக்கின; நட்சத்திரங்கள் பிரகாசித்தன; மலர்கள் மலர்ந்தன; இந்தக் காதலைச் சிறிது கற்பனைக் கண்ணால் பாருங்கள். மாமனார், மாமியார்களின் உபத்திரவமில்லை; அண்டை அயலார்களின் வம்புப் பேச்சுகள் இல்லை. ‘இளைஞனே! நீ எப்படி உன் காதலியை வைத்துக் காப்பாற்றப் போகிறாய்?’ என்று கேட்பாரும் இல்லை. இந்த மாதிரியான சங்கடங்களே இல்லை. ப்ரஹ்மாவானவர் இந்த இரண்டு பேருக்கும் பின்னர் விவாகம் நடத்தி வைத்தார். ‘இங்கே இருங்கள்; இந்தத் தீவை விட்டு வெளியிலெங்கும் செல்ல வேண்டாம்’ என்றும் இவர்களுக்கு ஆக்ஞாபித்தார். சிறிது காலம் வரை இருவரும் அப்படியே வசித்தார்கள். பின்னர், அந்த ஆண் மகன், - அவன் பெயர் ஆதம் - தன் பத்தினியான அந்தப் பெண்ணைப் பார்த்து - அவள் பெயர் ஏவாள் - ‘நான் சிறிது வெளியில் போய் சுற்றி வருகிறேன்’ என்று கூறினான். அப்படியே அவன் தீவின் வட பாகத்திற்குச் சென்று பார்த்தான். அங்கு ஒரு குறுகிய பூப்பிரதேசம் மிகவும் செழிப்புள்ளதாக இவன் கண்களுக்குப் புலப்பட்டது. உடனே ஏவாளைக் கூப்பிட்டு, ‘நாம் அந்த அழகிய நாட்டுக்குச் செல்வோம். இந்த நாட்டை விட அஃது எவ்வளேவா சிறப்புடையதா யிருக்கிறது’ என்று கூறினான். அவள் முதலில் மறுத்தாள். ஆயினும் ஆதமின் வற்புறுத்தலுக் கிணங்கி, அவன் பின்னால் சென்றாள். இருவரும் மேற்படி குறுகிய பிரதேசத்தைக் கடந்து சென்றதும், அந்தோ! அந்தப் பக்கத்தில் இருந்தது ஒரு நாடல்ல; சமுத்திரம். ஆதமின் கண்ணுக்கு அது செழிப்புள்ள பிரதேசமாகப் பட்டது. இருவரும் சமுத்திரத்தில் விழுந்துவிட்டார்கள். ப்ரஹ்மா, இவர் களைப் பார்த்து ‘கீழான நரகம் உங்களுக்குக் கிடைப்பதாக’ என்று சபித்தார். அப்பொழுது ஆதம் என்ற அந்த மனிதன் கூறினான்:- ‘ப்ரஹ்மாவே! என்னைச் சபியுங்கள்; அவளைச் சபிக்காதீர்கள். குற்றம் என்னுடையது; அவளுடையதல்ல’ இப்படிக் கூறிய அந்த மனிதனை நான் பாராட்டுகிறேன். இப்படிப்பட்ட மனிதனை வைத்துக் கொண்டு தான் உலகம் தொடங்கப் பட்டது. ப்ரஹ்மா அந்த மனிதனைப் பார்த்து ‘ஏவாளைக் காப்பாற்றுவேனே தவிர உன்னைக் காப்பாற்ற மாட்டேன்’ என்று கூறினார். அப்பொழுது ஏவாள், ஹிருதய பூர்வகமாக ப்ரஹ்மாவைப் பார்த்து ‘அவரை (ஆதமை) காப்பாற்றா விட்டால் என்னையும் காப்பாற்ற வேண்டாம். அவரை விட்டு விட்டு வாழ எனக்கிஷ்ட மில்லை. அவரை நான் நேசிக்கிறேன்’ என்று கூறினாள். இதைக் கேட்ட ப்ரஹ்மா, சந்தோஷ மடைந்தவராகி, ‘உங்கள் இரண்டு பேரையுமே சபிக்காமல் விட்டு விடுகிறேன். உங்களையும் உங்கள் சந்ததியாரையும் காப்பாற்றி வருகிறேன்’ என்று சொன்னார். ‘ஹீதன்கள்’ என்று சொல்லப்பட்ட இந்தப் புற சமயத்தின ரிடம் இன்னும் என்னென்ன உயரிய கருத்துக்கள் இருந்தன வென்பதை மேற்படி புஸ்தகத்திலிருந்து இன்னும் சில உதாரணங் களால் எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இந்தப் புற சமயவாதிகளை, (கிறிஸ்தவ மதத்திற்கு) மாற்ற நாம் தூர தேசங்களுக்குப் பாதிமார் களை அனுப்புகிறோம்; போர் வீரர்களையும் அனுப்புகிறோம். நமது சமீபத்திலிருப்பவர்களை நாம் மாற்றக்கூடாதா? இது கிடக்கட்டும். நாம் யாரை மத மாற்றவேண்டுமென்று விரும்பு கிறோமோ அவர்களுடைய புஸ்தகத்தில் என்ன கூறியிருக்கிற தென்று பார்ப்போம். ‘ஆண், பலம்; பெண், அழகு. ஆண், வீரம்; பெண், அன்பு; ஒரு புருஷன் ஒரு ஸ்திரீயையும், ஒரு ஸ்திரீ ஒரு புருஷனையும் பரஸ்பரம் நேசிக்கிற குடும்பத்தில், தேவதை களெல்லாம் தெய்வலோகத்தை விட்டு, மேற்படி குடும்பத்தில் வந்து தங்கிச் சந்தோஷமாகப் பாட்டிசைக்கிறார்கள்.’ இப்படிப்பட்ட உயர் கருத்துக்களைக் கொண்ட ஜாதியாரையே நாம் மதமாற்றப் பார்க்கிறோம். இதைச் சிறிது நினைத்துப் பாருங்கள். அன்பு என்பது ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல; பெருந்தன்மை யென்பது ஒரு ஜாதிக்கு மட்டும் உரிமைப் பொருளல்ல. அன்பும் கருணையும் நிறைந்த பலர், ஒவ்வொரு யுகத்திலும் எல்லா நாடுகளிலும் தோன்றியிருக்கிறார்கள். என்னுடைய அபிப்பிராயத்தில், புருஷனுக்குச் சமதை யானவள் ஸ்திரீ. ஆண் மகனாகிய எனக்கிருக்கும் எல்லா உரிமை களும் அவளுக்கு இருக்கின்றன. இன்னும் அதிகமான ஓர் உரிமையும் அவளுக்கு உண்டு. ஆண்களால் காப்பாற்றப்பட வேண்டிய உரிமையும் அவளுக்கு உண்டு. இதுதான் என் கொள்கை. நீங்கள் விவாகம் செய்து கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் நேசிக்கும் மனைவியைச் சந்தோஷமாக இருக்குமாறு செய்யுங்கள். தன்னுடைய சுகத்திற்காக மட்டும் எவனொருவன் விவாகம் செய்து கொள்கிறானோ அவன் தவறு செய்தவனாகிறான். ஆனால் எவனொருவன், ‘நான் காதலிக்கும் பெண்ணைச் சந்தோஷிப்பிக் கிறேன்’ என்று சொல்லி விவாகஞ் செய்து கொள்கிறானோ அவன் சரியான காரியத்தைச் செய்தவனாகிறான். நீ சந்தோஷமாயிருக்க வேண்டுமானால் பிறரைச் சந்தோஷப் படுத்து. குறுக்கு வழியாகச் சென்று விடுவதால் மட்டும் நீ சந்தோஷமடைய முடியாது. மற்றவர் களையும் அணைத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும். ‘நான் ஒரு குடும்பத்திற்குத் தலைவன்; எஜமானன்’ என்று நினைக்கிறானே அவனை நான் வெறுக்கிறேன். வாலிபர்களான தம்பதிகள் இருவர், நிலவொளியிலே, காதல் பேச்சுக்களைப் பேசிக் கொண்டும், பறவைகள் இன்னிசை பாடுவதைக் கேட்டுக் கொண்டும் செல்கிறார்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். போகும்போது அவர்கள் திடீரென்று ஓரிடத்தில் ‘நம்மிலே யார் எஜமானன் என்பதை இங்கேயே முடிவு கட்ட வேண்டும்’ என்று பேச்சுத் தொடங்குவார்களானால், அஃது எவ்வளவு கேவலமா யிருக்கும்! அந்த எண்ணமே எவ்வளவு இழிவுபட்டது! தனது குடும்பத்தை ஆள்வதாகச் சொல்கிற ஒரு மனிதனை, தான் பேசுகிற போது எல்லோரும் மௌனமாயிருக்க வேண்டு மென்று கட்டளை யிடுகிற ஒரு மனிதனை, தன்னை எஜமானனாகக் கருதிக் கொண் டிருக்கும் மனிதனை நான் வெறுக்கிறேன். சொல்ல முடியாத அவ்வளவு வெறுப்பு அவன் மீது எனக்கு ஏற்படுகிறது. சிடு சிடுத்த முகமுடைய மனிதனையும் நான் வெறுக்கிறேன். ஒரு நாளின் சூரியப் பிரகாசத்தைக் கொலை செய்ய அவனுக்கு என்ன உரிமையிருக்கிறது? வாழ்க்கையின் இன்பத்தைக் கொலை செய்ய அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? நீ வீட்டுக்குப்போகும் போது, பிரகாசமுள்ள ஒரு வெளிச்சம் போல் போக வேண்டும். அப்படி நீ கொண்டு செல்லும் வெளிச்சமானது, இரவில்கூட, ஜன்னல்களையும் நுழைவாயில் களையும் கடந்து சென்று இருட்டைப் பிரகாசப்படுத்த வேண்டும். சிலர் வீட்டுக்கு வரும் போதே, ‘என் மூளை குழம்பிக் கிடக்கிறது’ என்று சொல்லிக் கொண்டு வருகிறார்கள். இன்னுஞ் சிலர், ‘ஐந்தாவது வட்டத்திற்கு யாரை ஆல்டர் மென்னாகத் தெரிந்தெடுப்பது’ என்று நினைத்துக் கொண்டே வருகிறார்கள். வேறு சிலர், அரசியலைப் பற்றி எண்ணிக் கொண்டு வருகிறார்கள். மற்றுஞ் சிலர், ஐந்து அல்லது ஆறு சதத்திற்கு வாங்கின காலிகோ துணியை எப்படி ஏழு சதத்திற்கு விற்பதென்று சிந்தித்த வண்ணம் வருகிறார்கள். இப்படிப்பட்டவர் களுக்கு எவ்வளவு அறிவுச் சோர்வு ஏற்பட்டிருக்குமென்பதை நீங்களே நினைத்துப் பாருங்கள். இத்தகையவர்கள், வீட்டுக்குள் நுழைந்தவுடன், வீட்டிலுள்ளார் அத்தனை பேரும் தங்களுடைய சுகத்தைக் கவனிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். வீட்டிலே ஐந்தாறு குழந்தைகள். அவைகளில் ஓரிரண்டுக்கு நோய் வேறே. இவைகளுக்கு ஆகாரங் கொடுத்து, விளையாட்டுக் காட்ட வேண்டி யிருக்கிறது; பாட வேண்டியிருக்கிறது. ஒரு கஜம் துணியை எவ்வளவு அதிகமான உபயோகத்திற்குக் கொண்டு வர முடியுமென்பதைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவெல்லாம் செய்கிற ஒரு ஸ்திரீ, சோர்வு காட்டிக் கொள்ளாமல், இனிய முகத்துடன் இந்தப் பெரிய மனிதன் இருக்கிறானே - குடும்பத்து எஜமானன் - இவனுக்கு சிசுருஷை செய்ய வேண்டியிருக்கிறது! இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? கை நீளாத கருமியை நான் வெறுக்கிறேன். ஐந்து கோடி டாலர் அல்லது பத்து கோடி டாலர் பெறுமான ஆஸ்தியுடைய ஒரு பணக்காரன் இருக்கிறானென்று வைத்துக் கொள்ளுங்கள். அவன், தேவைகள் நிரம்பிய ஒரு நகரத்தில் - அதாவது ஏழைகள் வசிக்கும் ஒரு நகரத்தில் - வசித்துக் கொண்டு, தினந்தோறும், பிச்சைக்காரர்களுடைய சோர்ந்து போன கைகளையும், பஞ்சத்தினால் வெளுத்துப்போன உதடுகளையும் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியு மென்பது எனக்குத் தெரியவில்லை. இவைகளையெல்லாம் சகித்துக் கொண்டு எப்படி ஒரு மனிதன், தனது ஆசைப்பிடியில் இரண்டு அல்லது மூன்று கோடி டாலர்கள் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமென்பது என் சிந்தனைக்கு எட்டாத விஷயமாயிருக்கிறது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மனிதர்கள் சமுத்திரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிற போது, சமுத்திரக் கரையில் தட்டு முட்டுச் சாமான்களை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிற ஒருவனுடைய செய்கையைப் போலவே இந்தப் பணக்காரனுடைய செய்கையும் இருக்கிறதென்றுதான் நான் எண்ணிக் கொள்வேன். இன்னும் சில பேர்வழிகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவிமார்களிடம் தங்களுடைய ஹிருதயத்தையும், கண்ணியத்தையும் ஒப்புக் கொடுத்து விடுவார்கள். ஆனால், தங்களுடைய வரவு செலவுக் கணக்குப் புஸ்தகத்தையோ, அல்லது ஒரு டாலர் நாணயத்தையோ ஒப்புக் கொடுக்க மாட்டார்கள். இத்தகையவர் களை நான் பார்க்கிறபோது, இவர்களுக்கு எந்தப் பொருள் சிறந்த தென்பது தெரிந்திருக்கிற தென்றே கருதுகிறேன். உங்கள் மனைவி, பிச்சைக்காரி போல் நிற்பதை நினைத்துப் பாருங்கள்! தினந்தோறும் அவள் உங்கள் எதிரில் வந்து நின்று ‘ஒரு டாலர் கொடுங்கள், இரண்டு டாலர் கொடுங்கள், ஐம்பது சதம் கொடுங்கள்’ என்று கேட்பதாக எண்ணிப் பாருங்கள்! ‘சென்ற வாரம் ஒரு டாலர் கொடுத்தேனே, அதை என்ன செய்தாய்?’ என்று நீங்கள் கேட்கிற போது, உங்கள் மனைவி உங்கள் எதிரில் நடுங்கி நிற்பதாக நினைத்துப் பாருங்கள்! பிச்சைக்கார சுபாவமும், கோழைத்தனமும் நிறைந்த ஒரு தாய் வயிற்றிலிருந்து என்ன மாதிரியான குழந்தைகள் பிறக்கு மென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? இந்த உலகத்திலே உங்களுக் கிருக்கும் ஆஸ்தியெல்லாம் ஒரு டாலர்தானா? அதனையும் செல வழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதா? அப்படியானால் அந்த ஒரு டாலரையும், ஓர் அரசனைப் போல் செலவழியுங்கள். அதனை, உலர்ந்துபோன ஒரு சருகு மாதிரியும், நீங்கள் எண்ணிறந்த காடுகளுக்குச் சொந்தக்காரன் மாதிரியும் நினைத்துச் செல வழியுங்கள். இப்படித்தான் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். நான், ஒரு பிச்சைக்காரனாக யிருந்து, அரசன்மாதிரி என்னிடமுள்ள கடைசி நாணயத்தைச் செல வழிப்பேனே தவிர, ஓர் அரசனாயிருந்து கொண்டு, பிச்சைக்காரன் மாதிரி என் பணத்தைச் செலவழிக்க விரும்ப மாட்டேன். அந்தப் பணம், என் கையிலிருந்து போக வேண்டியிருந்தால் அது தாராளமாகத்தான் போகட்டுமே. எது சிறந்ததென்று கருதுகிறாயோ அதை உனது குடும்பத் திற்குக் கொண்டு கொடு. நீ எப்படி பார்வைக்கு லட்சணமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறாயோ அப்படியே உன் குடும்பத்தினரை யும் லட்சணமாக இருக்கும்படி செய். விவாகத்தின் போது உன் மனைவி மீது நீ காதல் கொண்ட சமயத்தில், ஆ! உன் கண்கள் எவ்வளவு பிரகாசமாயிருந்தன! உனது நடையில் எவ்வளவு கம்பீரம்! ஓர் அரச குமாரன் போலல்லவோ நீ காணப்பட்டாய்! அப்படிப் பட்ட நீ, இப்பொழுது துப்புக் கெட்டவன் போல் அழுக்கடைந் திருந்தாலும் ‘என் மனைவி என்னை நேசிக்க வேண்டும்’ என்று கருதுவாயானால், உன்னிடத்திலுள்ள அகம்பாவந்தான் என்ன? இந்த உலகத்திலே பிறந்த எந்த ஸ்திரீயும், அவளுக்கு நீ ஹிதத்தைச் செய்வாயாகில், அவள் உன்னிடம் உண்மையாகவே நடந்து கொள்வாள். ‘உங்களுடைய காதல் தத்துவம், மனைவிமார்களைப் பற்றிய விஷயம் முதலியன வெல்லாம் பணக்காரர்களுக்குத்தான் ஏற்றதே யொழிய, ஏழைக்கு முடியாது’ என்று சிலர் எனக்குக் கூறுகிறார்கள். பணக்காரர்களின் மாளிகையைவிட, ஏழைகளின் குடிசைகளில் தான் அதிகமான அன்பு இருக்கிறது. வெளிப் பார்வைக்குக் கேவலமாயுள்ளதும் ஆனால் உள்ளே அன்பு நிறைந்ததுமான ஒரு குடிசைதான், கடவுளர்கள் வசிப்பதற்கு லாயக்காயுள்ள ஒரு மாளிகை; அன்பில்லாத ஒரு மாளிகையோ, வன விலங்குகள் வசிப்பதற்கு யோக்கியமாயுள்ள ஒரு குகை. இதுதான் என்னுடைய கொள்கை. யாரேனும் ஒருவனுக்குக்கூட உதவி செய்ய முடியாதபடி அவ்வளவு பரம ஏழையாக நீ இருக்க முடியாது. உலகத்திலே மிகவும் மலிவான சரக்கு நல்ல சுபாவம் தான். அன்பு ஒன்றே, வாங்குகிற வனுக்கும் கொடுக்கிறவனுக்கும் ஒன்றுக்குப் பத்து சதவிகிதம் அதிகமான லாபத்தைத் தரக்கூடியது. ‘நான் பணக்காரனாக இருந்தே தீர வேண்டியிருக்கிறது’ என்று சொல்லாதே. அமெரிக்காவில் நாம் பெருந்தன்மைக்கு ஒரு பொய் மதிப்பு ஏற்படுத்தி வைத்திருக்கிறோம். இங்கே நாம், ஒருவன் பெரிய மனிதனாயிருக்க வேண்டுமானால் அவன் பெயர் பிரசித்தையுடையதாயிருக்க வேண்டும்; அல்லது பெரும் பணக்காரனாக இருக்க வேண்டும்; அல்லது அவன் பெயர், ஊர் வம்புப் பேச்சுகளில் அடிபட வேண்டும் என்று கருதுகிறோம். இப்படியெல்லாந் தான் நாம் ஒரு பெரிய மனிதனை அளந்து பார்க்க விரும்புகிறோம். இவையெல்லாம் தவறு ஒருவன் சந்தோஷமா யிருப்பதற்கு அவன் பணக்காரனாயிருக்க வேண்டியதில்லை; பெரிய மனிதனாயிருக்க வேண்டியதில்லை; அதிகாரமுள்ளவனாகவும் இருக்க வேண்டியதில்லை. சந்தோஷமுள்ள மனிதன்தான் வெற்றியுள்ள மனிதனுங்கூட. ஆத்மாவின் சட்டரீதியான பாதுகாவலன் சந்தோஷம். அந்தச் சந்தோஷந்தான் ஒருவனுடைய ஆஸ்தி. சமீப காலத்தில் நெப்போலியனுடைய1 சமாதி முன்னர் போய் நின்றேன். இறந்து போன ஒரு கடவுளுக்குத் தகுதியுடையது போல் அந்தச் சமாதி, பொன்னாலும் மெருகாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. பெயர் சொல்ல முடியாத அவ்வளவு அருமையான அந்தச் சலவைக்கல் சமாதியில், உயிரோடிருந்த போது ஒரு கணமேனும் ஓய்வு கொள்ளாத அந்த மனிதனுடைய சாம்பல் அடக்கம் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்தேன். அந்தச் சமாதிக் கட்டிடத்தின் மீது சிறிது சாய்ந்துகொண்டு, தற்கால உலகின் மிகப் பெரிய போர் வீரனாகிய அவனுடைய வாழ்க்கையின் மீது சிந்தனையைச் செலுத்தினேன். அவன் - அந்த நெப்போலியன் - தற்கொலை செய்து கொள்ளலாமா கூடாதா வென்று சிந்தித்த வண்ணம் சீன் நதிக்கரை யில் உலவிக் கொண்டிருக்கிறான்; ஒரு சமயம் டூலோன் நகரத்திலே இருக்கிறான்; மற்றொரு சமயம், பாரிஸ் நகரத்தில் ஜனக் கூட்டத்தை அடக்கும் வேலையில் முனைந்திருக்கிறான்; இன்னொரு சமயம் இத்தாலிய சேனையின் தலைவனாயிருந்து போரை நடத்துகிறான்; வேறொரு சமயம், மூவர்ணக் கொடியைக் கையில் பிடித்துக் கொண்டு லோடி வாராவதியைக் கடந்து செல்கிறான்; எகிப்தில் பிரமிட் கோபுரங்களின் நிழலில் அவன் நிற்கிறான்; ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்று பிரான்சின் கொடியை நிலை நாட்டு கிறான்; மாரெங்கோ என்ன, உல்ம் என்ன, ஆஸ்டெர்லிட்ஸ் என்ன முதலிய நகரங்களில் அவனைப் பார்க்கிறேன்; ருஷ்யாவில் அவ னுடைய காலாட்படையானது, உதிர்ந்த இலைகள் போல் சிதற அடிக்கப்படுகின்றது; அவன் லட்சக்கணக்கான துருப்புகளால் துரத்தப்பட்டு பாரிஸுக்கு ஓடிவருகிறான்; அவனை எல்பா நகரத் திற்குத் தேசப் பிரஷ்டம் செய்கிறார்கள்; ஆனால் அவன் தன் திறமையினால் தப்பியோடி வந்து மீண்டும் ஓர் ஏகாதிபத்தியத்தை ஸ்தாபிக்கிறான்; அந்தப் பயங்கரமான வாட்டர்லூ2 யுத்தத்திலே அவனைப் பார்க்கிறேன். அவனைக் கடைசியாக எங்கே பார்த்தேன்? செயிண்ட் ஹெலீனா தீவில், தன்னிருகைகளைப் பின்புறமாகக் கட்டிக் கொண்டு, துக்கம் நிறைந்த சமுத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன். அவனை - அந்த நெப்போலியனை - பார்த்த அதே சமயத்தில் அவன் காரணமாக உண்டான அநாதைகள் எத்தனை பேர்? விதவைகள் எத்தனை பேர்? இவர்களுடைய நினைவும் எனக்கு உண்டாயிற்று. அவனுடைய கீர்த்திக்காக எவ்வளவு கண்ணீர் சொரியப் பட்டது? அவனைக் காதலித்த அந்த ஒரே பெண்,1 எப்படி பேராசை காரணமாக அவனால் திரஸ்கரிக்கப் பட்டாள்? அவளுடைய நினைவும் வந்தது. அப்பொழுது எனக்குள்ளேயே நான் என்ன சொல்லிக் கொண்டேன் தெரியுமா? பலாத்காரமும் கொலை யும் சேர்ந்து ஏகாதிபத்திய உருவெடுத்தாற் போன்ற நெப்போலியன் என்ற அந்த பெரிய மனிதனைக் காட்டிலும், கிழிந்து போன செருப்புடன் கூடிய ஒரு பிரெஞ்சு குடியானவனாகவே இருக்க நான் விரும்புகிறேன்; திராட்சைக் கொடிகள் எந்தக் குடிசையின் கூரை மீது படர்ந்திருக் கின்றனவோ அந்தக் குடிசையில் வாழவே நான் பிரியப்படுகிறேன். தன் மனைவி பக்கத்திலே அமர்ந்து நூல் நூற்றுக் கொண்டிருக்க, தன் குழந்தைகள் தாளிலும் தோளிலும் விளையாட சந்தோஷகரமாக வாழ்க்கையை நடத்துகிறானே அந்தக் குடியானவ னாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். கனவு நனவுகளிலில்லாத புழுதி மண்ணின் மௌனத்தில் அடைக்கலம் புகுந்து கொள்ளவே நான் இச்சை கொள்கிறேன். சந்தோஷமநுபவிக்க, பெரிய மனிதனாயிருக்க வேண்டு மென்பது அவசியமில்லை. நியாயமாகவும் தாராள சிந்தையுடனும் நடந்து கொள்ளவும், தெய்விக அன்பு நிறைந்த ஹிருதயத்தோடு கூடியிருக்கவும், பணக்காரனாக இருக்க வேண்டுமென்பது நியதியில்லை. நீ பணக்காரனா யிருந்தாலும், ஏழையாயிருந்தாலும், உன் மனைவியை, சிறந்ததொரு புஷ்பம் போலப் பாராட்டு. அப்பொழுதுதான் அவள் உன் வாழ்க்கையை மணத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நிரப்புவாள். ஒரு விஷயம் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் எந்த ஸ்திரீயை உண்மையில் நேசிக்கிறீர்களோ, அவள், உங்கள் பார்வைக்கு எப்பொழுதும் வயோதிகமே அடைவதில்லை. காலம், அவள் முகத்தில் கோடுகளை இடலாம், வருஷங்கள், அவள் முகத்தில் திரை விழுமாறு செய்யலாம். ஆனால் நீங்கள் அவளை உண்மையில் நேசிப்பீர்களாயின், உங்களால் முதலில் காதலிக்கப்பட்டு உங்கள் ஹிருதயத்தைக் கவர்ந்து கொண்டவளாகவே அவள் எப்பொழுதும் இருக்கிறாள். அப்படியே ஒரு ஸ்திரீ, ஒரு புருஷனை உண்மையில் நேசிப்பாளாயின், அவனுடைய வயோதிகம் அவளுக்குப் படுவதே யில்லை; அவன் தளர்ச்சியுற்ற வனாகவோ கிழவனாகவோ அவள் பார்வைக்குப் புலப்படுவதே இல்லை. விவாகத்தின்போது தன் கையைப் பிடித்த வீர புருஷனாகவே அவன் அவளுக்குப்படுகிறான். காதல் நித்தியமானதல்லவா? இங்ஙனம் காதல் கொண்டு, தம்பதிகள் இருவரும் வாழ்க்கையாகிற பர்வதத்தின் மீது ஏறுகிறார்கள். பின்னர் இருவருமாக அங்கிருந்து இறங்குகிறேபாது - அதாவது வயோதிக காலத்தில் - காலமென்னும் விருட்சத்தின் இலை துளிர்க்காத கிளை களின் மீது இன்பமும் அன்பும் உள்ள பட்சிகள் மீண்டும் பாட் டிசைக்க, பேரப்பிள்ளைகளின் சிரிப்பை மகிழ்ச்சியுடன் கேட்கிறார்கள். அடுப்பங்கரையில் நம்பிக்கையுடையவன் நான். வீட்டின் ஜனநாயக வாழ்விலே நம்பிக்கையுடையவன் நான். குடும்பத்தின் குடியரசு வாழ்விலே நம்பிக்கையுடையவன் நான். சுதந்திரம், சமத்துவம், அன்பு ஆகியவற்றில் நம்பிக்கையுடையவன் நான். 3. குழந்தைகளின் சுதந்திரம் ஸ்திரீகளே அடிமைகளென்று சொன்னால், குழந்தைகளைப் பற்றி - சந்துகளிலும் பொந்துகளிலும் வசிக்கிற சிறு குழந்தைகளைப் பற்றி - தனங்கள் தகப்பனாருடைய காலடி ஓசையைக் கேட்டதும் முகம் வெளுத்துப் போகின்ற குழந்தைகளைப் பற்றி - தங்கள் தாயார், பெயர் சொல்லி அழைத்தவுடன், ஓடி ஒளிந்து கொள்கின்ற குழந்தைகளைப் பற்றி - கொந்தளிப்புள்ள, பைத்தியக்காரத்தனம் வாய்ந்த வாழ்க்கையாகிற கடல் இருக்கிறதே அதில் மிதக்க விடப்படுகிற, தூக்கி யெறிப்படுகிற குழந்தைகளைப் பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன்? என் ஹிருதயத்தையே அவர்களுக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறேன். அவ்வளவுதான். உங்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். நமக்குள்ள உரிமை களைப் போல் குழந்தைகளுக்கும் இருக்கின்றன. அவைகளை, மனிதப் பிறவிகள் என்று கருதி நாம் நடத்த வேண்டும். அவைகளை நாம் மிருகத்தனமாக நடத்தக் கூடாது. அன்பாக, இனிமையாக அவைகளை நடத்த வேண்டும். குழந்தைகளைப் பற்றி என்னுடைய அபிப்பிராயம் இது தான். உங்கள் குழந்தை ஒரு பொய் சொல்லி விட்டதென்று வைத்துக் கொள்ளுங்கள். உலகமே ஏதோ முழுகிவிட்டதுபோல், உடனே அவைகளை நோக்கி ஓடாதீர்கள். அவைகளிடம் கண்ணிய மாக நடந்து கொள்ளுங்கள். கொடூரம் வாய்ந்த ஒரு தகப்பனாரின் குழந்தைகள், பொய் சொல்கிறவர் களாகத்தான் இருப்பார்கள். இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா? கொடூரமும் பலஹீனமும் ஒன்று சேர்ந்த இடத்தில் பொய் பிறக்கிறது. நீங்கள் கடுகடுத்துக் கொண்டு, கையில் ஒரு தடியுடன் உங்கள் சிறு குழந்தையை நாடி ஓடினீர்க ளாயின், அது பொய்யைத் தானே சொல்லும். இயற்கை அன்னையே! ஒரு குழந்தையின் மூளையில் என்ன விதமான சாகஸத்தை வைத்திருக்கிறாய்? மிருகத்தனமுள்ள பெற்றோரால் தாக்கப் படுகிற போது, அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பொய் யென்னும் அணையை ஏற்படுத்திக் கொள்கிறது. உங்கள் குழந்தை பொய்வார்த்தை சொல்லிவிட்டால், அவை களிடம் சரளமாகப் பேசுங்கள். ‘குழந்தாய்! நான் கூட உன்மாதிரி நூற்றுக்கணக்கான பொய்கள் சொல்லி யிருக்கிறேன். ஆனால் அது நல்லதல்ல; அதனால் பிரயோஜன மொன்றுமில்லை’ என்று இனிய வார்த்தைகளால் சொல்லுங்கள். உங்களை விட உருவத்தில் பெரியவனாயுள்ள ஒருவன், நீண்ட கழியொன்றெடுத்துக் கொண்டு உங்கள் எதிரே வந்து நின்று, ‘இந்தத் தட்டை உடைத்தது யார்?’ என்று இடிபோன்ற குரலில் கேட்டால், ‘நான் எடுக்கும் போது உடைந்து விட்டது’ என்று சொல்வீர்களா? மாட்டீர்கள். ‘நான் பார்க்கவில்லை’ யென்றுதான் சொல்வீர்கள். ஒரு வர்த்தகன், தன் மகன், வீண் வதந்திகளைக் கிளப்பி விட்டான் என்று சொல்லி அவனைச் சவுக்காலடித்தால் எப்படி யிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வக்கீல், தன் குழந்தைகள் உண்மையை மறைக்கின்றன வென்று சொல்லி - உண்மையை மறைத்துப் பேசியே அவனுடைய பிழைப்பு நடக்கிற போது - அவைகளை அடித்தால் எப்படியிருக்கும் என்று கருதிப்பாருங்கள். ஒரு மந்திரி, தான் நினைத்திருப்பதை யெல்லாம் தன் குழந்தை சொல்லவில்லை யென்பதற்காக அதனை அடித்தால் எப்படி யிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். உங்கள் குழந்தை ஒரு குற்றஞ் செய்துவிட்டால், அதனை உடனே கையாலெடுத்து அணைத்து கொள்ளுங்கள். அதன் ஹிருதயத்தோடு உங்கள் ஹிருதயமும் சேர்ந்து அடிப்பதாக அது உணரட்டும். நீங்கள் உண்மையாகவும் மனப்பூர்வமாகவும் அதனை நேசிக்கிறீர்கள் என்பதை அது தெரிந்து கொள்ளட்டும். ஆனால் கிறிஸ்தவ மத்தை அநுஷ்டிக்கிற சிலர் - அவர்கள் நல்லவர்கள் தான் - தங்கள் குழந்தை யொன்று, ஏதேனும் தவறு செய்து விட்டால், அந்தக் குழந்தையை, ‘மறுபடியும் இந்த வீட்டுக்குள் நுழைந்து இதனைக் களங்கப்படுத்தாதே’ என்று சொல்லி வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார்கள். இதனைப் பற்றிக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! பின்னர், இவர்களே, எந்தக் குழந்தையை வீட்டினின்று விரட்டி விட்டார்களோ அதே குழந்தையைக் காப்பாற்றுமாறு கடவுளை நோக்கி முழந்தாளிட்டுப் பிரார்த்தனை செய்கிறார்கள். என் குழந்தைகளைப் காப்பாற்றும் பொறுப்பை நான் ஒழுங்காக நிறைவேற்றாத வரை, கடவுளை நோக்கி என் குழந்தைகளைக் காப்பாற்றுமாறு கேட்க மாட்டேன். என்னுடைய குழந்தைகளைப் பார்த்து நான் என்ன சொல்கிறேன் என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். ‘நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்கள்; எந்த விதமான குற்றத்தையும் செய்யுங்கள்; எவ்வளவு கீழான நிலைமைக்கும் செல்லுங்கள்; என்ன விதமான தப்புக் காரியங்களை நீங்கள் செய்த போதிலும், என் வீட்டு வாசற்கதவோ, என் கைகளோ, என் ஹிருதயமோ உங்களுக்காக மூடப்பட்டு விடாது. என் உயிர் இருக்கிற வரை, உங்களுடைய உண்மையான தோழனாக நான் ஒருவன் இருப்பேன்.’ கிறிஸ்துநாதர் கூறினார்:- ‘சிறிய குழந்தைகளை என்னிடம் வரச் செய்யுங்கள். அப்படிப்பட்டதுதான் மோட்ச ராஜ்யம்.’ அப்படி அவர் கூறியபோது, தனது உடையின் கீழ் ஒரு சாட்டையை ஒளித்து வைத்துக் கொண்டிருந்தா ரென்றும், குழந்தைகளை அடிப்பதற்காகத் தம்மிடம் நெருங்கி வரச்சொன்னாரென்றும் சிலர் எண்ணிக் கொண்டு, தங்கள் குழந்தைகள் விஷயத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சாட்டையடி அரசாங்கத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. உங்களில் யாராவது சவுக்கு எடுத்துக் கொண்டு உங்கள் குழந்தையை அடிக்கிற தருணத்தில், உங்களையே போடோ பிடிக்கச் சொல்லுங்கள். உங்கள் முகம் சிவந்திருக்க, உங்கள் குழந்தை கண்ணீர் வடிக்க, அதன் மோவாய்க் கட்டை பயத்தினால் குழி விழுந்து போக என்ன காட்சி! அவசியம் போடோ எடுக்கச் சொல்லுங்கள்! இப்படி உங்களால் அடிக்கப்படுகிற குழந்தை இறந்து விட்ட தென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அதன் சமாதியினருகிற் சென்று உட்கார்ந்து கொள்ளுங்கள். நீங்கள் குழந்தையை அடித்தபோது எடுத்த போடோ இருக்கிறதே அதனையும், எந்தச் சதையை அடித்தீர்களோ அந்தச் சதை இப்பொழுது மண்ணோடு மண்ணாகிக் கிடப்பதையும் ஒன்று சேர்த்துப் பாருங்கள். ஓ! இப்படியெல்லாம் செய்வது தவறு. குழந்தைகளை வளர்ப்பதற்கு இது சரியான வழி யில்லை உங்கள் வீட்டில் எப்பொழுதும் சந்தோஷம் நிறைந்திருக்கச் செய்யுங்கள். அவர்களிடம் நாணயமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கையின் எல்லா அமிசங்களிலும் சம பங்கெடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குக் கொஞ்சம் சுதந்திரம் கொடுங்கள்; சிறிது அன்பு காட்டுங்கள். உங்கள் வீட்டை விட்டு அவர்களைத் துரத்த முடியாது. அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று ஆவல் கொள்வார்கள். அவர்கள் குதூகலமா யிருக்கிற மாதிரி வீட்டை வைத்திருங்கள். அவர்கள் எந்த மாதிரியான விளையாட்டை வேண்டுமானாலும் விளையாடட்டும். ‘அந்தத் தரையிலே பந்து விளையாடுங்கள்; ஆனால் அந்தப் பச்சைத் துணி மீது பந்து விளையாடக் கூடாது. அந்தச் சாமான்களை நீங்கள் சுத்தியெடுத்து அடிக்கலாம்; ஆனால் அவைகளைச் சிறிய பிரம்பெடுத்துத் தள்ளக் கூடாது. சிறிய காகிதத் துண்டுகளை வைத்துக் கொண்டு விளையாடுங்கள்; ஆனால் அந்தக் கார்டுகளை மட்டும் எடுக்கக் கூடாது’ என்று இப்படி யெல்லாம் குழந்தைகளைப் பார்த்துச் சொல்லாதீர்கள். ‘தங்களை விடக் கீழானவர்களைப் போல் நடித்துக் காட்டும் பொம்மலாட்டத்திற்கு நீங்கள் போகலாம். ஆனால் சிறந்த அறிஞர்களால் எழுதி நடிக்கப் பெறுகிற நாடகங்களுக்கு மட்டும் நீங்கள் போகக் கூடாது’ என்று உங்கள் குழந்தைகளைப் பார்த்துச் சொல்வதாக நினைத்துப் பாருங்கள். எவ்வளவு கேவலம்? குழந்தைகள் வீட்டிலேயே தங்கி யிருக்க வேண்டுமென்பது உங்கள் விருப்பமானால், அவர்களுக்கு அந்த வீட்டில் சிறிது பிரகாசம் இருக்குமாறு செய்யுங்கள். குழந்தை தொட்டிலில் படுத்திருக்கிற காலத்திலிருந்தே, ‘அதைச் செய்யாதே; இதைச் செய்யாதே’ என்று கட்டு திட்டம் போட ஆரம்பித்து விடாதீர்கள். தொட்டிற் பருவத்திலிருந்து இருபத்தோரு வயது வரை இந்தச் ‘செய்யாதே’ பாடந்தான் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கப் படுகிறது. இருபத்தோரு வயதான பிறகு மற்றவர்கள் ‘செய்யாதே’ பாடத்தைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அதன் பிறகு மதம்; அதன் பின்னர் அவன் எந்த அரசியல் கட்சியில் சேர்ந்திருக்கிறானோ அந்த அரசியல் கட்சி. இப்படியெல்லாருமே வரிசையாகச் ‘செய்யாதே’ வாசகத்தையே திருப்பித் திருப்பிப் படிக்கிறார்கள். உலகத்தில் இந்த மாதிரியான வாழ்க்கை நடத்துவதை நான் வெறுக்கிறேன். நாம் சுதந்திரத்தோடு இருப்போம். சிறிதளவாவது சுதந்திரம் இருக்கட்டும். என்னை மத விரோதி யென்று சொல்லுங்கள்; நாஸ்திகன் என்று சொல்லுங்கள்; வேறென்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்; எனக்குக் கவலையில்லை. என்னுடைய குழந்தை களை நான் எப்படி நடத்துவேன் தெரியுமா? நான் இறந்துபோன பிறகு, என்னுடைய சமாதியினருகில் அவர்கள் வந்து நின்று ‘இதோ இங்கே யார் நித்திய நித்திரை செய்கின்றாரோ அவர், எங்களுக்கு ஒரு நிமிஷ நேரமேனும் வருத்த முண்டு பண்ணியதில்லை. அவருடைய வாயிலிருந்து - அந்தோ! அஃது இப்பொழுது மண்ணாகி விட்டது - ஒரு கடுமையான வார்த்தைகூட வெளி வந்ததில்லை’ என்று சொல்லக் கூடிய மாதிரி நான் அவர்களை நடத்துவேன். குழந்தைகள் கொடூரமாக நடத்தப்படுவதை ஆட்சேபித்தால் ‘அவர்கள் சீர்கெட்டுப் போயிருக்கிறார்கள்; அவர்களைத் திருத்த வேண்டியது அவசியம்’ என்று சிலர் சமாதானங் கூறுகிறார்கள். குழந்தைகள் சீர்கெட்டுப் போயிருக்கிறார்களென்று சொல்லப் படுகிற இந்த விஷயமிருக்கிறதே அது யுகக்கணக்காகச் சொல்லப் படுகிற விஷயந்தான். மதமானது, குழந்தையை, குற்றமே நிறைந்த ஓர் உருவமென்றும், எல்லையற்ற சாபமென்றும், நித்திய நரகாக்கினி யிலே அழிய வேண்டிய பொருளென்றும் கருதுகிறது. குழந்தைகள், சில நாட்களில் சந்தோஷமாயிருக்கக் கூடாது, சிரிக்கக் கூடாது என்று முன் காலத்தில் சிலர் நினைத்திருந்தார்கள். நான் சிறு பையனாயிருந்த போது, ஞாயிற்றுக்கிழமை ஒரு புனித மான நாளென்றும் அன்று சிரிப்பும் விளையாட்டுமாக இருக்கக் கூடாதென்றும் பெரியோர்கள் எடுத்துச் சொல்வார்கள். அப்பொழு தெல்லாம், சனிக்கிழமை சாயந்திரம் சூரியன் அஸ்தமித்தவுடன், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவிடும். சனிக்கிழமை மாலையான வுடன், இரவை விட பதினாயிரம் மடங்கு கொடுமையான துக்க இருள் சூழ்ந்து கொண்டு விடும். ஒரு சந்தோஷ வார்த்தை கூட யாரும் பேச மாட்டார்கள். யாரும் சிரிக்க மாட்டார்கள். யார் முகத்திலாவது புன்சிரிப்பு காண வேண்டுமே; இல்லவே இல்லை. எந்தக் குழந்தை நோயாளி போல் தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறதோ அந்தக் குழந்தைதான் தெய்வ பக்தியுள்ள குழந்தை யென்று கருதப்பட்டது. யாரும் பாக்குக் கூட கடிக்கக் கூடாது. சும்மாவாகவாவது வாயை மென்று கொண்டிருந்தால் அது கூட மனதின் இழி தன்மையைக் காட்டுவதாக எண்ணப்படும். அன்று இரவு எல்லோரும் மௌனமாயிருந்து கழிக்க வேண்டும். மூச்சு விடுகிற காற்றிலே கூட அஜீரண ரோகம் காணப்பட்டது. ஒவ்வொருவரும் துக்கம் நிறைந்தவராகக் காணப்பட்டனர். யாருக்கு அஜீர்ணரோகம் அதிகமாகப் பாதிக்கிறதோ அவர்களுக்கு அதிகமான மதபக்தி இருக்கிறதென்று சிலர் கருதுகிறார்கள். இந்த அஜீர்ண ரோகத்திற்கு ஏதேனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டால், அது, தெய்வத் திருச் சபையைப் பலமாகத் தாக்கி விட்டது போலாகும். ஞாயிற்றுக்கிழமை உதயமானதும் இந்த தெய்வ பக்தியானது அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. நாங்கள் எல்லோரும் தேவாலயத் திற்குச் செல்வோம். பாதிரியார், இருபது அடி உயரமுள்ள ஒரு மேடையின் மீது நின்று கொண்டு உபதேசம் செய்வார். முதலாவது இரண்டாவது என்று வரிசையாக இருபத்து மூன்றாவது வரை சொல்லிக் கொண்டு போய், பின்னர் நடைமுறையில் கொணர வேண்டிய சில விஷயங்களைப் பற்றிப் பேசுவார். சுமார் இரண்டு மணி நேரம் பேசி, கடைசியில் கடவுள் அவதரித்து உண்மைகளைச் சொன்ன வரலாற்றோடு முடிப்பார். அந்தக் காலத்தில் - அதாவது நான் சிறு குழந்தையாயிருந்த போது - தேவாலயத்தில் எவ்வளவு குளிராயிருந்த போதிலும், கணப்புச் சட்டி வைத்துக் கொள்வது கிடையாது. ஏனென்றால் கடவுளைத் தொழுகின்ற சமயத்தில் நாம் சௌக்கியமாயிருக்கக் கூடாதாம். எந்தத் தேவாலய மானது, முதன் முதலாகக் கணப்புச் சட்டியை வைத்துக் கொண்டதோ அந்த ஆலயத்தில் கட்சிப் பிளவுகள் ஏற்பட்டன. அப்படியே, இசைக் கருவியோடு பிரார்த்தனை செய்த தேவாலயத்திலும் பிளவுகள் ஏற்பட்டன. இந்த முதல் உபதேசம் முடிந்தவுடன் சிறிது ஓய்வு இருக்கும். மீண்டும் உபதேசம் நடக்கும். ‘நீங்களெல்லாரும் நரகத்திற்குப் போகத் தானே லாயக்குள்ளவர்கள்’ என்று பாதிரியார் கேட்பார். ‘ஆம்’ என்று நாங்கள் பதில் கூறுவோம். ‘நீங்களெல்லோரும் நரகத்திற்குப் போக வேண்டுமென்பது கடவுளின் ஆக்ஞையா யிருந்தால் அதற்குச் சம்மதிக் கிறீர்களா?’ என்று மீண்டும் பாதிரியார் கேட்பார் ‘ஆம்’ என்று, எல்லோரும் உரக்கக் கூச்சல் போடுவோம். மறுபடியும் பழைய மாதிரி உபதேசம் நடக்கும். எல்லாம் முடிந்த வுடன் வீட்டுக்கு வருவோம். பின்னர், மாலையில், பெரியோர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் சமாதி இடங் களுக்கு எங்களை அழைத்துச் செல்வார்கள். அப்படி அழைத்துச் சென்றது, எனக்கு உண்மையிலேயே சந்தோஷமாயிருந்தது. மௌனமாயிருக்கும் கல்லறைகளைப் பார்த்ததும், நான் சிறிது மன ஆறுதலே பெற்றேன். வீட்டுக்குத் திரும்பி வந்ததும், சில புஸ்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள். இப்படி ஞாயிற்றுக்கிழமை ஒரு விதமாகக் கழியும். அன்று சூரியன் அஸ்தமித்ததும் எங்களுக்கு விடுதலைதான். மாலை மூன்று அல்லது நான்கு மணிக்கெல்லாம், சூரியன் எப்படி மலைவாயிலில் விழுகிறான் என்று பார்க்க நாங்கள் வெளியே செல்வாம். சூரியன், சீக்கிரமாக மறையாமல் அப்படியே நின்று விட்டானோ என்று கூட எங்களுக்குத் தோன்றும். கடைசியில் சூரியாஸ்தமனம் ஆகும். உடனே நாங்கள் குதூகலத்தோடு கூத்தாடுவோம். ஓய்வு நாட்கள் என்று சொல்லப்படுகிற இந்தப் புனித தினங்கள் எங்களுக்குச் சிறைச்சாலை மாதிரி தான். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அன்று சிறைக் காவலன்தான்; ஒவ்வொரு குழந்தை யும் அன்று ஒரு கைதிதான். இந்த இருட்டுச் சிறையிலே சிரிப்பது கூட ஒரு குற்றம். இந்த புனித நாளில் ஒரு குழந்தை சிரித்தால் அது குற்றமாகக் கருதப்பட்டது. இதைச் சிறிது நினைத்துப் பாருங்கள். ஒரு சிறு குழந்தை, புஷ்பித்திருக்கிற ஒரு மரத்தின் அருகிற் சென்று அதன் மீது சாய்ந்து கொண்டிருக்கிற தென்று வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அந்த மரத்துக் கிளைகளின் மீது சில பட்சிகள் உட்கார்ந்து அழகாகப் பாடுகின்றன. அந்தச் சமயத்தில் அந்தக் குழந்தை நரகத்தை பற்றி நினைக்கத் தொடங்குமாகில் அந்தோ! என்ன பரிதாபம்! கிறிஸ்தவ மதத்தில் சேராதவர்கள் கதி என்னவாகும் என்பதைப் பற்றிப் பாதிரிமார்கள் செய்கிற உபதேசங்களை நான் கேட்டிருக்கிறேன். ‘கோடிக்கணக்கான வருஷங்களுக்கு ஒரு முறை ஒரு பறவையானது, தனது மூக்கின் நுனியால் ஒவ்வொரு மணலாக எடுத்துச் சென்றால், இந்த உலகத்தையெல்லாம் இந்தவிதமாக எடுத்துச் செல்ல எத்தனை வருஷங்கள் பிடிக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்’ என்று சொல்வார்கள். குழந்தைகளுக்கு இந்த மாதிரியான கருத்துக்களைச் சொல்வது எவ்வளவு சரியென்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு குழந்தையினுடைய சிரிப்புத்தான், புனிதமான நாளை இன்னும் அதிகமாகப் புனிதப்படுத்தும். ஓ! பாடகனே! நீ எவ்வளவு இனிமையாக வேண்டுமானாலும் பாடலாம். குழல் ஊதுவோனே! சந்திர கிரணங் களையும் குளிர்விக்கும்படி நீ குழல் ஊதலாம். உன் இசை கேட்டுக் காதலர்கள் பரவச மடையலாம். ஆனால், பாடகனே! ஊதுகுழலோனே! உங்களுடைய இன்னிசையெல்லாம், குழந்தை யின் புன்சிரிப்புக்கு முன்னர் அபஸ்வரமல்லவோ? அந்தச் சிரிப்புத் தான், கண்களில் ஒளியைக் கொடுக்கிறது; இருதயத்தைச் சந்தோஷப் படுத்துகிறது. ஓ! சிரிப்பாகிற நதியே! நீதான் மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலே யுள்ள எல்லை. உன்னிடத்திலிருந்து உதிக்கின்ற ஒவ்வோர் அலையும் கவலையை ஒழிக்கும் சக்தியைப் பெற்றிருக்கின்றது. நீ கன்னத்தில் ஒளி கொடுத்துப் பிரகாசிக்கிற போது, அங்கே கண்ணீர் தங்கி யிருந்தால் அது தானாகவே மறைந்து விடுகிறது. இப்படியெல்லா மிருந்தும், சாசுவத தண்டனை என்ற கொள்கை, குழந்தைகளின் மனத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கையை நான் பலமாகக் கண்டிக்கிறேன். ஆண் களுக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சாசுவத தண்டனை உண்டு என்ற கொள்கை எங்கிருந்து வந்தது, பழைய காலத்தில் காட்டு மிராண்டிகளாகக் குகையில் வசித்துக் கொண்டிருந்தார் களே அவர்களுடைய மூளையிலிருந்து வந்தது. மிருக ஜாதியின் அடையாள மிது. தன் ஆகாரத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கும் பாம்பின் பிரகாசமான கண்களிலிருந்து பிறந்தது இந்தக் கொள்கை. காட்டு மிருகங்களின் ஊளையினின்றும், உறுமலினின்றும் பிறந்தது இந்தக் கொள்கை. காட்டு மிருகங்களின் ஊளையினின்றும், உறுமலினின்றும் பிறந்தது இந்தக் கொள்கை. என்தேகத்து ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தக் கொள்கையைக் கண்டிக்கிறது. தான் மனப் பூர்வமாகக் கொண்டிருக்கிற ஒரு நம்பிக்கையை வெளியிட்டுச் சொல்கிற தன் குழந்தைகளைத் தண்டிக்கிற ஒரு கடவுள் கம்பீரமான அந்த மோட்ச லோகத்தில் உட்கார்ந் திருக்கிறார் என்று எனக்குச் சொல்லுங்கள்! உங்களுடைய வைதிக நம்பிக்கைப் பிரகாரம் பார்த்தால், உலகத்தில் எத்தனை நாடுகள் இருக்கின்றனவோ அந்தக் காடுகளில், எத்தனை மரங்கள் இருக் கின்றனவோ அந்த மரங்களில், எத்தனை இலைகள் இருக்கின் றனவோ அத்தனை இலைகளை விட பதினாயிரக்கணக்கு அதிக மான ஜனங்கள், தங்கள் பாவச் செய்கைக்காக இறந்து போயிருக்க வேண்டும். இத்தனை பேரும் நரகத்திலேயே இருக்கிறார்களா? இவர்களெல்லோரும் துன்ப மநுபவித்துக் கொண்டேயிருக்கிறார் களா? இந்தக் குழந்தைகள் சாசுவத தண்டனைக்குட் படவேண்டிய வர்கள்தானா? இந்தக் கொள்கையானது, பொய்களிலே மிகக் கேவலமான பொய் யென்று நான் கூறுவேன். மானிட சமுதாயத்தின் நம்பிக்கைகளென்ன, ஆவல்களென்ன இவை யெல்லாவற்றையும் ஏற்றிக் கொண்டும், மானிட ஜாதி யென்னும் மூட்டையைச் சுமந்து கொண்டும் செல்கிற கப்பலானது, மரணம், துன்பம், அழிவு ஆகியவற்றின் இராக்காலமாகிற ஆழத்தில் மூழ்கிப் போகுமானால், அந்தக் கப்பலோடு நானும் மூழ்கிவிட விரும்புகிறேன். ஏதாவது ஒரு வைதிகப் படகைப் பிடித்துக் கொண்டு, எப்படியாவது தப்பித்துக் கொள்ள வேண்டுமென்ற கேவல புத்தி எனக்குக் கிடையாது. என்னை யார் நேசிக்கிறார்களோ அவர்களுட னும், நான் யாரை நேசிக்கிறேனோ அவர்களுடனும் அந்தக் கப்பலோடு கப்பலாக நான் மூழ்கிப் போகவே விரும்பு கிறேன். தமது குழந்தைகளைச் சாசுவதமான துன்பத்திற்கு உட் படுத்துகிற பரம பிதாவான ஒரு கடவுள் இருப்பாரானால், அந்தக் கொடிய கடவுளோடு நான் மோட்ச லோகத்திலிருப்பதைக் காட்டிலும் நரகத்திலேயே வசிக்க விரும்புவேன். இப்பொழுது என்னுடைய வழியைத் தெளிவுப் படுத்திக் கூறுகிறேன். மேலே சொன்ன கொள்கை கேவலமான தென்றே நான் கருதுகிறேன். இந்தக் கொள்கையானது, அநேக மனிதர்களுடைய கன்னங்களில் கண்ணீரை நிரப்பி விட்டிருக்கிறது; குழந்தைகளின் இருதயத்தைக் களங்கப்படுத்தி விட்டிருக்கிறது. இந்தக் கொள்கையானது, ஒவ்வோர் ஆண், பெண், குழந்தைக்கும் சதா அச்சத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. நல்லவர்களின் மனத்தில் பயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ஆனால் கீழ் மக்களிடத்தில் இந்தக் கொள்கை எவ்வித மாற்றத்தையும் உண்டு பண்ணவில்லை. இந்தக் கொள்கை யானது, மென்மையான சுபாவமுடையவர்களின் இருதயத்தை உடைத்து விட்டது; நல்லவர்களின் கன்னங்களில் கோடுகள் இட்டு விட்டது. இந்தக் கொள்கை மீண்டும் உபதேசிக்கப்படவே கூடாது. புரோகிதரே! சமாதியின் நுழைவாயிலில், நித்தியத்துவத்தின் நுழைவாயிலில் நின்றுகொண்டு, எதிர்காலத்தைப் பயங்கரமான தாகவும் அச்சத்தோடு கூடியதாகவும் செய்ய உங்களுக்கு என்ன உரிமைஇருக்கிறது? இந்தக் கொள்கையை நானும் நம்பவில்லை; நீங்களும் நம்பவில்லை. அப்படி நீங்கள் நம்புவீர்களானால், உங்களால் ஒரு கண நேரமும் தூங்கமுடியாது. களங்கமற்ற இருதய முடையவன், இந்தக் கொள்கையை நம்புவானாகில், அவன் பைத்தியக்காரனாகப் போய்விடுவான். அப்படி எவனொருவன் இந்தக் கொள்கையில் நம்பிக்கை கொண்டு விட்ட பிறகுகூட பைத்தியக்காரனாக மாறவில்லையோ அவன் பாம்பின் இருதயமும், கழுதைப் புலியின் மனச் சாட்சியுமுடையவன். இந்தக் கொள்கையானது, மதத்தில் பெயரால், விசுவப் பிரேமையின் பெயரால், எல்லையற்ற அன்பின் பெயரால் பிரசாரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்தக் கொள்கையைப் புகுத்தி, உங்கள் குழந்தைகளின் மனத்தை அசுத்தப்படுத்த வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். அவர்கள், தங்களுக்குத் தாங்களே படிக்கட்டும்; தங்களுக்குத் தாங்களே சிந்திக்கட்டும். ஏதோ வரிசைப் படுத்தி நிறுத்த வேண்டிய வைதிக ஸ்தம்பங்கள் என்கிற மாதிரி உங்கள் குழந்தைகளை நடத்தாதீர்கள். வெளிச்சம், சூரியப் பிரகாசம், காற்று இவை தேவையாயுள்ள மரங்களைப் போல் நடத்துங்கள். அவர்களிடம் நியாயமாகவும் நாணயமாகவும் நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள். அவர்களுடைய உரிமைகளும் உங்களுடைய உரிமை களும் சமமானவை தான். நீங்கள் அவர்களை அதிகாரஞ்செலுத்த வேண்டுமென்றும், அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டு மென்றும் எண்ணாதீர்கள். ஆண்டான் அடிமை எண்ணத்தையே அகற்றி விடுங்கள். பழைய காலத்துப் பெரியோர்கள் என்ன செய்வது வழக்க மென்றால், குழந்தைகளுக்குத் தூக்கம் வராதிருக்கிற போதே, அவர்களைப் படுக்கைக்குப் போகுமாறு சொல்வார்கள்; தூங்கிக் கொண்டிருக்கிற போது அவர்களை எழுப்பி விடுவார்கள். நான் சொல்வது என்னவென்றால், தூக்கம் வருகிற போது குழந்தைகள் படுக்கச் செல்லட்டும்; தூக்கம் வராதிருக்கிற போது விழித்துக் கொள்ளட்டும் என்பது தான். ‘ஓ! இந்தத் தத்துவங்களை யெல்லாம் பணக்காரர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள்; ஏழைகளுக்கு வேண்டாம்’ என்று நீங்கள் சொல்லலாம். ஏழை மக்கள், அதிகாலையிலேயே தங்கள் குழந்தை களை எழுப்ப வேண்டியவர்களானால், அப்படி எழுப்புகிற போது, அடித்து எழுப்புவதை விட ஒரு முத்தங்கொடுத்து எழுப்பக் கூடாதா? உங்கள் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுங்கள்; அவர்கள் தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளட்டும். உங்கள் குழந்தைகள், விரும்பியதைத் தின்னட்டும். எதைத் தின்ன வேண்டுமென்பது அவர்களுடைய வேலையல்லவா? உங்களுடைய வேலையல்லவே. தங்களுக்கு எது விருப்பமானது என்பது அவர் களுக்குத் தெரியும். அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே சுதந்திரத்தைக் கொடுத்து விட்டோமானால், தங்களுக்கு எது தேவை யென்பதை, வைத்தியர்களைவிட நன்றாக நிர்ணயித்துக் கொள்வார்கள். வைத்திய சாஸ்திரத்திலே ஏற்பட்டுள்ள அபிவிருத்திக் கெல்லாம் காரணமென்ன தெரியுமா? நோயாளிகளின் அஜாக்கிரதைதான்; வைத்தியர்களின் அஜாக்கிரதையல்ல. அநேக காலமாக ஒருவன் ஜுரத்தோடு படுத்துக் கொண்டிருப்பானாகில் அவனுக்கு ஒரு பொட்டுத் தண்ணீர்கூட கொடுக்ககூடா தென்று வைத்தியர்கள் சொல்வார்கள். ஏனென்றால் அது விஷமாம். ஆனால் எவனாவது ஒரு ஜுரக்காரன், ‘இந்த தாகத்தைச் சகித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் இறந்து விடுவதே மேல்’ என்று சொல்லி, ஒரு குவளைத் தண்ணீரைக் குடித்து விடுவான். அவனுக்குச் சௌக்கியமும் ஆகிவிடும். வைத்தியர்களுக்கு இதை எடுத்துச் சொன்னால், அவர்கள் ஆச்சரியப்பட்டு, இந்த அபாயத்திலிருந்து தப்பின நோயாளியின் தேக வலிமையைப் பாராட்டுவார்கள். அந்த நோயாளியோ, தண்ணீரைக் குடித்தே சொஸ்தமடைந்து விடுவான். கடைசியில் தான் வைத்தியர்கள் சொல்வார்கள். ‘ஜுரத்தின் போது தண்ணீரைக் குடிப்பது நல்லது’ என்று, ஆகையால் இந்த மாதிரியான விஷயங் களில், வைத்தியர் களின் முடிவுகளைக் காட்டிலும், இயற்கையின் வாசகத்தில்தான் எனக்கு நம்பிக்கை யிருக்கிறது. குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுங்கள்; அவர்கள் உங்கள் வழிக்கு வருவார்கள். நீங்கள் செய்கிற மாதிரியே அவர்களும் செய்வார்கள். ஆனால், இன்னதைத்தான் செய்யவேண்டுமென்று வற்புறுத்துவீர் களானால், மானிட ஹிருதயத்தில் குடிகொண் டிருக்கும் ஏதோ ஒரு அபார சக்தி, பிறரால் ஏவப்படுவதை எதிர்த்து நிற்குமாறு செய்கிறது. இந்தச் சக்தி மனிதர்களுக்கு இருக்கிற தென்பது, உலகத்திலேயே மிகவும் அதிருஷ்டம் வாய்ந்ததாகும். ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னர், எல்லா ஜனங்களும் வைத்தியர் களுடைய யோசனைப்படி நடந்திருப்பார்களானால், அவர்க ளுடைய கதி என்னவாயிருக்கும்? எல்லோரும் இறந்து போயிருப் பார்கள். உலக சரித்திரத்தின் எந்த யுகத்திலேனும், ஜனங்கள் தெய்வத் திருச் சபையின் வழி பற்றி நடந்திருப்பார்களானால், அவர்கள் எல்லோரும் மூடர்களாகப் போயிருப்பார்கள். எந்தக் காலத்திலும், எந்த யுகத்திலும், தனக்குத்தானே சிந்திக்கிற ஒரு மகான் அவதரித்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் ஒரு நிம்மதியைத் தருகிறது. குழந்தைகளுக்கு, தங்களுக்குத் தாங்களே சிந்திக்கின்ற உரிமையைக் கொடுப்பது நல்லதென்று நான் கருதுகிறேன். குடும்பத்திலே ஜனநாயகம் நிலவ வேண்டுமென்பது என் நம்பிக்கை. இந்த உலகத்தில் மகத்தானது ஏதேனு மொன்றிருக்குமானால், அதுதான் எல்லோரும் சமமாக இருக்கிற ஒரு குடும்பம். சமீப காலம் வரையில், பெற்றோர்கள், குழந்தைகள் சாப்பிடுகிற போது ‘வாய்திறவாமல் சாப்பிடுங்கள்’ என்று சொல் வார்கள். சாப்பிடுவது ஏதோ வைதிகச் சடங்கு என்கிற மாதிரி அவர்கள் சாப்பிடுவார்கள். வாழ்க்கையை, பயபக்தியோடு நாம் பார்க்கவே கூடாது. குழந்தைகள் சாப்பிடுகிற பொழுது, ஒருவர்க் கொருவர், தாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கவே நான் விரும்புகிறேன். சங்கீதத்தை விட, குழந்தைகளின் இந்தப் பேச்சுக்கள் தான் என் செவிக்கு இனிமை பயக்கின்றன. குழந்தைகள் சுதந்திரமாயிருக்கட்டும். அவர்களிடம் நியாய மாகவும் நாணயமாகவும் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். அவர் களிடம் இனிமையாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்க ளுடைய அன்பையும் சந்தோஷத்தையும் அதிகப்படுத்துவார்கள். ஆண்கள் விருட்சங்கள்; பெண்கள் அந்த விருட்சங்களைத் தழுவி யிருக்கும் கொடிகள்; குழந்தைகள், அந்தக் கொடிகளில் மலரும் மலர்கள். மானிட சமுதாயம் எத்தனையோ எண்ணிறந்த குற்றங்களைச் செய்திருக்கிறது. அதற்காக மானிட சமுதாயத்தை நான் மன்னித்து விடவும் தயார். இந்த உலகம், நல்லவர்களை உயர்த்தக் கூடிய விதமாக அமைக்கப்படவில்லை. பூவுலகில் பெரும்பாகம் நீர்ப் பரப்பாயிருக்கிறது. இதனால், மீன் உற்பத்தித் தொழிலுக்கு இங்கு சௌகரியமே தவிர, மனித உற்பத்தித் தொழிலுக்குச் சௌகரிய மில்லை. நிலப்பரப்பில் எட்டில் ஒரு பாகங் கூட, பெருமை வாய்ந்த ஸ்தீரி புருஷர்களை உற்பத்தி செய்யக் கூடிய விதமான மண்ணையும் சீதோஷ்ணத்தையும் கொண்டதாயிருக்க வில்லை. வட கடலிலுள்ள பனப் பிரதேசத்தில் கோதுமை முதலிய தானியங்களை விளைவிக்க முடியாதது போல் பக்குவமான மண்ணும் சீதோஷ்ணமும் இருந்தாலொழிய சிறந்த அறிஞர்களை நீங்கள் உற்பத்தி செய்ய முடியாது. நிலைமையும் சுற்றுப்புறமும் சரியானதா யமைய வேண்டும். மனிதன் ஓர் உற்பத்திப் பொருள். அந்தப் பொருள் விளைய, சரியான மண்ணும் உரமும் வேண்டும். தைரியமாகவும் தீவிரமாகவும் மனிதன் போராடுவானாகில், இயற்கைச் சக்திகளி னால் ஏற்படக் கூடிய தடைகளை அவன் சமாளித்து விடக்கூடும். அறிவு நிரம்பிய ஸ்தீரி புருஷர்கள் பிறக்கக் கூடிய இடம் இந்த உலகத்திலே ஒரு சிறு பாகந்தான். பூமியின் தெற்குப் பாகத்தில், மனிதனுக்குத் தேவையான சீதோஷ்ணம் இருக்கிறது. ஆனால் இதன் பெரும் பாகம் சமுத்திரத்தில் போய் படிகிறது. இதன் விளைவு என்னவென்றால், பூமியின் தெற்குப் பாகத்தில் பேரறிஞர்கள் யாரும் தோன்றவே யில்லை. பூமியின் வட கோடியில் பெரிய அறிஞர்கள் கிடையாது. ஏனென்றால் அங்கு அதிகமான குளிர். அப்படியே தென் கோடியிலும் அறிஞர்கள் இல்லை. ஏனென்றால் அங்கு அதிக மான உஷ்ணம். எனவே, அறிஞர்கள் உற்பத்தியாக வேண்டுமானால் குளிர்காலமும் தேவை; கோடை காலமும் தேவை. எந்த தேசத்தில், மனிதனுக்குப் போர்வை தேவையில்லாமல் இருக்கிறதோ, எங்கு மேகங்கள் சூரியனை மறைத்துக் கொண்டிருக்கின்றனவோ, அங்கு மனிதனுடையஸ்வாபாவிகமான தொழில் புரட்சிதான். கைத் தொழிலுக்கும் அறிவுக்கும் தாயாயிருப்பது எது? குளிர் காலந்தான். அப்படியே குடும்ப சம்பந்தத்திற்கும் இந்தக் குளிர் காலந்தான் தாயாயிருக் கிறது. குளிர் காலமானது, குளிர்ச்சி பொருந்திய தன் கைகளுக்குள்ளே புருஷனையும் மனைவியையும், இனிமையான குழந்தைகளையும் ஒன்று சேர்த்து அணைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பூலோகத்திலேயே நாம் மோட்சலோகத்தைக் காணவேண்டு மானால் அஃது எங்கே கிடைக்கும்? குளிர் காலத்து இரவு ஒன்றில் ஒரு வீட்டினுள் நுழைந்து பாருங்கள். ஜன்னல்கள் திறந்திருக்க, கணப்புச் சட்டியைச் சுற்றிக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்திருப்பார்கள்; கிழவி ஒருத்தி தையல் தைத்துக் கொண் டிருப்பாள்; பூனை யென்று விளையாடிக் கொண்டிருக்கும்; குழந்தைகள், ‘எனக்கு இந்தப் பொம்மை; உனக்கு அந்தப் பொம்மை’ என்று சொல்லி விளையாடிக் கொண்டிருக்கும்; தகப்பனாரோ, படித்துக் கொண்டும் சுருட்டுப் பிடித்துக் கொண்டும் இருப்பார்; அவருடைய வாயிலிருந்து வரும் புகையானது, குடும்ப சந்தோஷம் என்கிற பீடத்திலிருந்து உண்டாகிற தூபம் போலிருக்கும். இந்த மாதிரியான ஒரு வீட்டை நான் பார்க்கிற போது, ஆசீர்வதிக்கப் பட்டவனாகவே என்னைக் கருதிக் கொள்கிறேன். நாகரிகம், சுதந்திரம், நீதி, தருமம், அறிவு அபிவிருத்தி முதலியன வெல்லாம், மிதந்து செல்கிற பனிக் கட்டியிலிருந்து மலர்ந்த மலர்கள். செழுமை நிறைந்த கணவாய்ப் பிரதேசங்களிலும், மலைப் பிராந்தியங்களிலும் செடி கொடிகள் எப்படி உற்பத்தியாகின்றன வென்பதைப் பாருங்கள். கணவாய்ப் பிரதேசங்களிலும், உயர்ந்தன வும் கனிதருவனவுமான விருட்சங்கள் உண்டாகின்றன. ஆனால் உயர, உயர மலைச் சிகரங்களில் புதர்கள் தான் காணப்படுகின்றன. இவை என்ன காட்டுகின்றன? சரியான மண்ணும் சீதோஷ்ணமும் தேவை யென்பதைக் காட்டுகின்றன. இப்படியே, அறிஞர்கள் உற்பத்தியாவதற்குச் சரியான மண்ணும் சீதோஷ்ணமும் தேவை. சில வருஷங்களுக்கு முன்னால் அமெரிக்காவுடன், ஸாண்டோ டாமிங்கோ1 பிரதேசத்தைச் சேர்த்து விடுவதைப் பற்றிப் பேச்சு வார்தைகள் நடைபெற்றன. அப்பொழுது நான் வாஷிங்க்டன்2 நகரத்தில் இருந்தேன். ஸாண்டோ டாமிங்கோ, அமெரிக்காவுடன் சேர்க்கப்படுவதை நான் ஆட்சேபித்தேன். அந்த ஸாண்டோ டாமிங்கோ சௌகரியமான சீதோஷ்ண ஸ்திதியுடைய தென்றும், அங்கு எல்லாப் பொருள்களும் விளையு மென்றும் நான் கேள்விப் பட்டிருந்தேன். அதனால் தான், அந்தப் பிரதேச ஆக்ரமிப்பை நான் ஆட்சேபித்தேன். ‘அந்தப் பிரதேசம் நமக்கு வேண்டாம். அங்குத் திறமை வாய்ந்தஅமெரிக்கப் பிரஜைகளை உற்பத்தி செய்ய முடியாது. அங்குள்ள சீதோஷ்ணம் நம்மைக் கெடுத்துவிடும். வேண்டு மானால் ஐயாயிரம் பாதிரிமார்களையும், ஐயாயிரம் முதலாளிகளையும், ஐயாயிரம் கல்லூரி போதகாசிரியர்களையும், ஐயாயிரம் பலசாலி களையும் அங்கு அனுப்பிப் பாருங்கள். அவர் களுடைய இரண்டாவது தலைமுறையினர், வெறுங் காலுடன் கோவேறு கழுதைகளின் மீது ஏறிக் கொண்டு, ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, கோழிச் சண்டையைப் பார்க்கச் செல்வார்கள்’ என்று நான் கூறினேன். ஒரு தேசத்தின் சீதோஷ்ண ஸ்திதியானது, மனிதனை மாற்றிவிடும் சக்தியுடையது. ஆனால் விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்டு வருகிறது. இதனால் அறிஞர்கள் உண்டாகும் இடமும் விசாலிக்கப்பட்டு வருகிறது. வடதுருவப் பிரதேசத்தில் வீடுகள் கட்டிக் கொள்ளலாம்; சாதாரண உடைஉடுத்திக் கொள்ளலாம்; நல்ல ஆகாரம் சாப்பிடலாம்; அடுப்பு எரிப்பதற்குத் தேவையான பொருள்களும் கிடைக்கின்றன. இங்ஙனமே தெற்குப் பிரதேசத்தின் உஷ்ணத்தையும் நாம் சமாளித்துக் கொண்டு வருகிறோம். மறு உலகத்தை விட இந்த உலகத்தின் மீது இன்னும் அதிகமான கவனஞ் செலுத்தத் தொடங்குவோமானால், காலா காலத்தில் நாம் இந்த உலகத்தில் பலஅறிஞர்களை உற்பத்தி செய்துகொண்டு போகலாம். மனிதன், மிருக ஜாதியிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந் தவன் என்பது என் நம்பிக்கை. இதுதான் உண்மை யென்று நான் சொல்ல வில்லை. இஃதுண்மை யென்று நான் நம்புவதாகவே சொல்கிறேன். இந்த விஷயத்தில் எட்டுக்கு ஏழு மடங்கு என் அபிப்பிராயம் சரியென்று நான் நம்புகிறேன். ஆரம்பத்தில் இந்தக் கொள்கை எனக்குச் சொல்லப்பட்டபோது, எனக்குப் பிடிக்கவே யில்லை. நமது மூதாதையர்களைப் பற்றிப் பெருமை கொள்ளக் கூடிய விஷய மொன்று மில்லையே யென்று நான் வருந்தினேன். ஆனால் இதைப் பற்றிப் பின்னர் சிந்தனை செய்து பார்த்ததில் இந்தக் கொள்கை சரியென்றே எனக்குப்பட்டது. எனவே, புராதன காலத்து மனிதர்களுடைய எலும்புகளைப் பற்றியும் தசை நார்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். அந்தப் புராதன காலத்து மனிதர்களின் செவிகளிலிருந்து கன்னம் வரையில் ஒரு வித நரம்பு ஓடிக் கொண்டிருந்ததென்பதைக் கண்டேன். நமது முன்னோர் களுக்கு, செவித் துவாரங்களை மூடிக்கொள்ளும்படி செவிகள் விரிந்து பரந்து இருந்தனவென்றும் அவை, நாளா வட்டத்தில் குறுகிப் போய் விட்டன வென்றும் தெரிந்து கொண்டேன். இப்பொழுது, நமக்குக் காதுகள் பெரிதாக இல்லாமலிருப்பதே நல்லதென்று தோன்றுகிறது. மூளையே யில்லாமல் வெறும் உருவமாகி, அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து கடைசியில் மனிதனாகி, அந்த மனிதரிலே ஷேக்ஸ்பியர் போன்ற மேதாவிகளை உற்பத்தி செய்து கொடுத்தது எந்த வமிசவழியோ அந்த வமிசவழியைச் சேர்ந்தவன் நான் என்று சொல்லிக் கொள்வதில் எனக்குப் பெருமை ஏற்படுகிறது. கடவுள், எல்லாம் நிறைந்த எந்த தம்பதிகள் மீது தன்னுடைய பணத்தை யெல்லாம் தோற்று விட்டாரோ, அந்தத் தம்பதிகளின் வமிசத்தைச் சேர்ந்தவன் என்று என்னைச் சொல்லிக் கொள்வதை விட, படிப்படியாக நம்பிக்கையிலேயே வளர்ச்சி யடைந்த மானிட வமிசத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்வதிலேயே நான் பெருமை யடைகிறேன். 4. முடிவுரை என் மனதிலெழுந்த எண்ணங்களை உங்களுக்குத் தெரிவித் திருக்கிறேன். சிந்தனை செய்யாமல் நம்புவதை விட, ஆராய்ச்சி செய்வது நல்லதல்லவா? அச்சத்தைவிட அறிவு தகுந்த வழி காட்டியல்லவா? இந்த உலகம் உயிருள்ளவர்களால் நடத்தப்பட வேண்டுமே தவிர, இறந்து போனவர்களால் நடத்தப் படக் கூடாது. சவக்குழி, சிங்காதனமாகாது. பிணம், அரசனாகாது. மனிதன், வெறும் சாம்பல் மீது வாழ்க்கையை நடத்தக்கூடாது. இப்பொழுது உயிரோடுள்ள தத்துவஞானிகளைக் காட்டி லும், இறந்து போன தத்துவ ஞானிகளுக்கு அதிகம் ஒன்றும் தெரிந்திருக்க முடியாது. இதைவிட அதிகமாக ஒன்றுஞ் சொல்வதற் கில்லை. இந்த உலகத்தைப் பற்றித் தெரிந்திருப்பதே சொற்பந்தான்; அடுத்த உலகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. நமது தந்தையர், அறிவுள்ள அடிமைகளாயிருந்தார்கள். அவர் களுடைய தகப்பன்மார்கள் வெறும் அடிமைகளாயிருந் தார்கள். நாம் எந்தக் கொள்கைகளை இப்பொழுது அநுஷ்டிக்கி றோமோ அந்தக் கொள்கை களைச் சிருஷ்டித்தவர்கள், அறிவில்லாத வர்கள்; மிருகத்தன்மை வாய்ந்தவர்கள். இப்பொழுது நாம் அநுஷ்டிக்கிற ஒவ்வொரு கொள்கையின்மீதும் சாட்டையின் அடையாளம் இருக்கிறது; இருப்பு விலங்கின் துரு ஏறியிருக்கிறது; தொழுக்கட்டையின் சாம்பல் படிந்துகிடக்கிறது. மூட நம்பிக்கை யிருக்கிறதே, அஃது அடிமைத் தனத்தின் குழந்தை. சுயமாகச் சிந்தனை செய்தால் தான் நமக்கு உண்மை புலப்படும். எல்லோரும், சுயமாக எண்ணவும், எண்ணியதை வெளியிலே சொல்லவும் உரிமை பெற்று விடுவார்களேயானால் ஒவ்வொருவருடைய மூளையி லிருந்தும் சிறந்த கருத்துக்கள் தாமே வெளியாகும். அப்பொழுது உலகத்தில் ஞான பொக்கிஷம் நிரம்பியிருக்கும். ஆண்களும் பெண்களும் தெய்வத் திருச்சபைக்குப் பயப்படு கிறவரை, புரோகிதன் பயத்தை உண்டு பண்ணுகிறவரை, ஒரு விஷயம் புரியவில்லை யென்பதற்காக ஜனங்கள் அதனை வணங்கிக் கொண்டிருக் கிற வரை, தங்களுடைய சுயமரியாதையை இழந்து நிற்பதுதான் மரியாதை என்று ஜனங்கள் நினைத்துக் கொண்டிருக் கிறவரை, தெய்வத் திருச்சபைக்கு ஆதிக்கம் இருக்கிறவரை, மானிட ஜாதி வெறும் புஸ்தக மொன்றைத் தொழுது கொண்டிருக்கிறவரை, உலகத்தில் ஞான சூனியர் களும், நாடோடிகளும், மூட நம்பிக்கை என்ற கந்தைகளை உடுத்திக் கொண்டு உலவி வருவார்கள். விவிலிய நூல் ஒன்றுதான், தனது உரிமைகளை வரையறுத்துக் கொடுக்கும் சாஸனம் என்று ஸ்திரீகள் நினைத்துக் கொண்டிருக்கிற வரை, அவர்கள் புருஷர்களின் அடிமைகளாகத்தான் இருப்பார்கள். அந்த விவிலிய நூல், ஒரு ஸ்திரீயினால் எழுதப்படவில்லை. அத னுடைய ஏட்டிலே, அவள் அவமானமடையக் கூடிய விஷயங்கள் தானிருக்கின்றன. மனிதனுடைய சொத்தாகவே ஸ்திரீ அதில் கருதப்பட்டிருக்கிறாள். தாயாக இருக்கும் குற்றத்திற்காக அவள் மன்னிப்புக் கேட்கும்படி கூறப்படுகிறாள். கிறிஸ்து நாதருக்கு எப்படி தன் புருஷன் கீழ்ப்படிந்தவரோ அப்படியே தானும் தன் புருஷனுக்குக் கீழ்ப்படிந்தவள் என்று அவள் எண்ணுகிறாள். அவள் பேசவும் அநுமதிக்கப்படுவதில்லை. அவளுடைய அழுக்கப் படிந்த நாவிலிருந்து வேதம் வெளிவரக்கூடாது. அவள், மௌனத்திலே தான் கற்கவேண்டியதை யெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும். பைபிளிலே, நாகரிகம் வாய்ந்த ஒரு குடும்பத்தின் வருணனையைப் பார்க்க முடியாது. சுதந்திரமுள்ள ஒரு தாய், அவளைச் சுற்றிச் சுதந்திரமாக விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள், அவளோடு சுதந்திரமாகப் பேசிக் கொண்டிருக்கும் கணவன் இவையெல்லாம், பைபிளை எழுதினவர் களுக்குத் தெரியாது. குடும்பத்தின் ஜனநாயத்திலே, அடுப்பங்கரையின் குடியரசு வாழ்க்கையிலே அவர்களுக்கு நம்பிக்கை யில்லை. இந்தப் பெரிய மனிதர்களுக்கு, குழந்தைகளின் உரிமைகளைப் பற்றி ஒன்றுமே தெரியாது. இவர்கள் பலாத்காரத்தை ஆதரிக்கிறவர்க ளாகவும், சாட்டையின் சிஷ்யர் களாகவும் இருந்தார்கள். இப்படிப் பட்டவர்களின் கொள்கைகள், கோடிக் கணக்கான குடும்பங்களை மிருகத்தன்மையாக்கிவிட்டன; குழந்தைகளின் கண்களிலே கண்ணீரை நிரப்பிவிட்டன. சுதந்திர ஸ்திரீ புருஷர்கள் நிறைந்த ஒரு தலைமுறை இந்த உலகத்திலே இருந்ததே கிடையாது. ஒரு கொள்கையை நிர்ணயித்து எழுத இன்னும் காலம் வரவில்லை. விலங்குகள் உடைபடுகிற வரையில், குகை களைக் கோயில்களாகக் கருதாத வரையில் காத்திருங்கள். முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு மௌனமா யிருப்பதுதான் ஞானத்தின் அறிகுறியென்று கருதப்படுகிற வரை, கோழைத்தனம் பக்தி யென்று எண்ணப்படுகிற வரை காத்திருங்கள். இறந்து போனவர்களுக்குச் சமமாக உயிருள்ளவர்கள் கருதப்படுகிற வரை, சவப் பெட்டியைவிட, தொட்டிலுக்கு முதல் ஸ்தானம் கொடுக்கப்படுகிற வரை பொறுத்திருங்கள். மற்றவர்கள் என்ன நம்புகிறார்கள் என்பதைக் கவனியாமல் நமக்குத் தெரிந்ததை நாம் சொல்கிற உரிமை நமக்குக் கிடைக்கிற வரையில் பொறுத்திருங்கள். உபதேசங்களுடைய ஸ்தானத்தில் ஆசிரியர்கள் அமர்கிற வரையில், பின்பற்றுவோரெல்லாரும் ஆராய்ச்சியாளர்களாக மாறுகிறவரை பொறுத்திருங்கள். உலகம் சுதந்திரமடைந்த பிறகு நீங்கள் உங்கள் கொள்கையை வரையறுக்கலாம். அது வரையில் பொறுத் திருங்கள். இந்தக் கொள்கையில் ஒரே ஒரு வார்த்தைதான் இருக்கும் அஃதென்ன? அதுதான் சுதந்திரம். ஓ! சுதந்திரமே! எட்டி யிருக்கும் ஆகாயத்தில் மிதந்து கொண்டிராதே. ஓர் உற்சாகியினுடைய, கொடையாளியினுடைய, கவிஞனுடைய கனவிலே வாழ்ந்து கொண்டிராதே. கீழே இறங்கி வந்து, மனிதர்களுடைய குழந்தைகளின் மத்தியில் உன் இருப் பிடத்தை ஏற்படுத்திக் கொண்டு வாசஞ்செய். உலக அறிஞர்களின் மூளையிலிருந்து என்னென்ன புதிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்படுமோ, என்னென்ன எண்ணங்கள் உதிக்குமோ எனக்குத் தெரியாது. வருங்காலத்தில் என்னென்ன புகழ் ஆடைகள் நெய்யப்படுமோ எனக்குத் தெரியாது. எண்ணம் என்கிற மைதானத்திலே என்னென்ன வெற்றிகள் காணப்படுமென்பது என்னால் கனவு கூடக் காணமுடியாது. ஆனால் ஒன்றும் மட்டும் எனக்கு நிச்சய மாகத் தெரியும். எதிர்காலமென்னும் எல்லையற்ற சமுத்திரத்திலிருந்து, ஆண், பெண், குழந்தை ஆகியோர் அடங்கிய மானிட ஜாதியின் சுதந்திரம் என்ற நன்கொடையை விடச் சிறந்தது. ஆசீர்வாதத்தை விட அருமை யானது வேறொன்று வந்து நிகழ் காலமென்னும் கரையைத் தொடாது. சுதந்திர முழக்கம் பதிப்புரை இச்சைபோல் இருந்து வாழ ஈ, புழு, எறும்பும் கோரும், உச்சமாம் மனித ஜென்மம், சுதந்திர உணர்ச்சியின்றி நச்செனும் அடிமை வாழ்வை நயந்திட ஞாயமுண்டோ? நிச்சய சபதம் பூண்டு சுதந்திரம் நிலைக்கச் செய்வோம். அதற்கு இந்நூல் ஒரு தூண்டுகோல். செப்டம்பர் 1943 சென்னை தமிழ்ப் பண்ணையார் எது சுதந்திரம்? சுதந்திரமென்பது ஸ்தூலமான ஒரு பொருளன்று; சூட்சமமான ஒரு சக்தி. அது கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆனால் அஃதில்லாமல் வாழ்க்கை யில்லை. காற்றை அனுபவிக்க முடிகிறதே தவிர, பார்க்க முடிவதில்லை. அதைப் போன்றதுதான் சுதந்திரமும். சுதந்திர மென்பது, ஒருவர் கைநீட்டிக் கொடுக்க மற்றொருவர் கையேந்தி வாங்கிக் கொள்ளும் நன்கொடைப் பொருளன்று; அவரவரும், தமது முயற்சியாலும் உழைப்பாலும் சம்பாதித்துச் சேர்த்துக்கொள்ள வேண்டிய சேமநிதி. சதா விழிப்புடனிருந்து அதனைக் காப்பாற்றி வரவேண்டும். சிறிது அயர்ச்சி ஏற்பட்டால் கூட அது கை நழுவிப் போய்விடும். சுதந்திரமென்பது, சீக்கிரம் அழிந்து போகக்கூடிய உடலல்ல; நித்தியமாயுள்ள ஆத்மா; அந்த ஆத்மாவின் பிரகாசம். அது பகற் கனவல்ல; நனவின் ஊற்று; செயலின் மையம். அஃது, அறிவுக்குத் தாய்; அன்புக்கு ஊன்று கோல்; தியாகத்திற்குப் பரிசு. மனிதன் சுதந்திரத்தோடு பிறக்கிறான் என்று சொன்னால் சுதந்திர உணர்ச்சியோடு பிறக்கிறான் என்பது தான் அர்த்தம். இந்த உணர்ச்சி, மனிதனுக்கு மட்டுமல்ல, எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. பொற் கூட்டிலே பாலுஞ் சோறுமாக உண்டு வளர்கின்ற கிளி, எந்த நிமிஷத்திலே கூடு திறக்கப்படும் என்றுதான் காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சுதந்திர உணர்ச்சியை வளர்த்து இதனின்று அதிகமான பயனை நுகர்வதும், பிறர்க்கு நுகர்விப்பதும், பகுத்தறிவு படைத்த மனிதனுடைய இன்றியமை யாத கடமை. இந்தக் கடமையைச் செய்யாதவன் மனிதனல்ல; மாமிசப் பிண்டம்; உயிரில்லாமல் உலவுன்ற நிழல். ரூஸ்ஸோ என்ற பிரெஞ்சு அறிஞன் கூறுகிறான்: ``ஒரு மனிதன், தன்னுடைய சுதந்திரத்தைத் துறந்த விட்டானென்று சொன்னால், அவன் தன்னுடைய மனிதத் தன்மையையும் துறந்து விட்டா னென்பது அர்த்தம். அது மட்டுமல்ல; மானிட ஜாதியின் ஓர் அம்சத்தினன் என்ற முறையில் அவனுக்கு ஏற்பட்டிருக்கிற உரிமை களையும் கடமைகளையுங் கூடத் துறந்துவிட்டான் என்று கொள்ள வேண்டும். அவன் எல்லாவற்றையும் துறந்து விட்டவனாகிறான். அவனிடத்தில் எந்த விதமான நற்குணங்களையும் கொண்டு புகுத்தி அவனுடைய மனிதத் தன்மையை நிரப்ப முடியாது. சுருக்கமாகச் சொல்லப் போனால் அவன் மனிதனேயல்ல.'' இதனின்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தென்ன வென்றால், ஒரு மனிதன் ஒழுக்க முடைய வனாக இருக்க வேண்டுமானால், சீல புருஷனாக வாழ வேண்டுமானால், அவன் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்ப தாகும். இந்தச் சுதந்திரத்திற்காக, உலகத்திலே அநேக போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன; அநேக மகான்கள், தங்களுடைய சர்வத்தையும் பலிகொடுத்திருக்கிறார்கள். காட்டிலும் மேட்டிலு மாக அலைந்து திரிந்தான் மகாராணா பிரதாப சிம்மன். ஏன்? மற்றொருவனுக்குத் தலை வணங்கக்கூடா தென்பதற்காகவே. `முழந்தாளிட்டுக் கொண்டு உயிரோடிருப்பதைக் காட்டிலும், நின்று கொண்டு இறப்பதே மேல்' என்ற ஒரே உறுதியுடன் தான், சிவாஜி மகாராஜன், டெல்லியில், தன்னைக் காவற் படுத்தியிருந்த இடத்தி லிருந்து வெளியேறி விட்டான். இப்படி இவர் களுடைய வாழ்க்கை முழுவதும் ஒரே போராட்டமாக இருந்தபோதிலும், அந்தப் போராட்டத்தில்தான் இவர்கள் இன்பம் கண்டார்கள். ஏனென்றால், `சந்தோஷமாயிருப்பதன் ரகசியம் சுதந்திரமாயிருப்பது' என்ற நுட்பத்தை இவர்கள் நன்கு தெரிந்து கொண்டிருந்தார்கள். உலக சரித்திரத்தை ஒரு தொகுப்பாக எடுத்துக் கொள்வோ மானால், அதில் அநேகவிதமான கறைகள் படிந்திருப்பதைக் காண்கிறோம். ஆனால் இந்தக் கறைகளை, சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட வீரர்களின் புனிதமான வாழ்க்கை மறைத்து விடுகின்றது. பிரதியொரு நாட்டுச் சரித்திரமும் இவர்களால்தான் பிரகாசித்தது; அமரத்துவம் அடைகிறது. இவர்கள் - இந்தச் சுதந்திர வீரர்கள் - தங்கள் சொல்லாலும் செயலாலும், மற்றவர்களை ஊக்கப்படுத்தியும் நல்வழிப்படுத்தியும் வந்திருக்கிறார்கள். இவர்களுடைய பொருள் சொறிந்த சொல்லும், லட்சியம் வாய்ந்த செயலும் எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் பொது வானவை. இந்த நூலில், உலகத்துப் பல அறிஞர்கள், சுதந்திரத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் அவ்வப்பொழுது சொன்ன வாசகங் களைத் திரட்டிக் கொடுத்திருக்கிறேன். இவர்கள் யார், எந்நாட்டார், எக்காலத்தார் என்பன போன்ற விவரங்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. எந்நாட்டவரா யிருந்தாலென்ன, எக்காலத்தவரா யிருந்தாலென்ன, இவர்களுடைய கருத்துக்கள் தான் முக்கியம். அவைகளே நமக்குத் தேவை. எமர்ஸன் என்னும் அறிஞன் கூறுகிற மாதிரி, சிந்தனை செய்வது கடினந்தான். என்றாலும் சிந்தித்தேயாக வேண்டும். சிறப்பாக, எந்த ஜாதி அடிமைத்தனத்திலே அமைதியைக் காண்கிறதோ அந்த ஜாதி சிந்தித்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் அதற்கு விமோசனமே கிடையாது. ஏனென்றால் செயலுக்குத் தூண்டுவது சிந்தனை யல்லவா? ஆதலின், எனது தமிழ்நாடே! இச் சிறிய நூலிலுள்ள சிந்தனை மலர்களை ஏற்றுக்கொள். வந்தே மாதரம். சென்னை 22-6-43 பிரார்த்தனை பொருளை நான் பொருட்படுத்துவதில்லை. காதலா? அதனை நான் கேவலமாகக் கருதுகிறேன். புகழ் என்பது ஒரு பொய்க் கனவு. என்னுடைய பிரார்த்தனை யெல்லாம் ஒன்றுதான். அந்த ஒரு பிரார்த்தனைக்காகவே என் உதடுகள் அசைகின்றன. அந்தப் பிரார்த்தனை என்ன? “கடவுளே! என் இருதயத்தினின்று நீ விலகிப் போனாலும் போ. எனக்குச் சுதந்திரத்தை மட்டும் கொடு. வாழ்விலும் சாவிலும் நான் கோருவது பந்தமற்ற ஆத்மா ஒன்றுதான். எந்தத் துன்பம் வந்தாலும் சகித்துக் கொள்ள கூடிய தைரியத்தை எனக்குக் கொடு” சுதந்திரத்தின் சந்நிதானத்தில் சுதந்திரமுள்ள இடந்தான் எனது நாடு. சுதந்திரமில்லாத நாடு காற்றில்லாத வீடு. வார்த்தைகளிலே புனிதமான வார்த்தை எது? சுதந்திரம் சுதந்திரம் என்றால் என்ன? அது தேவையின் எல்லை. உடலைச் சிறையில் இடலாம்; ஆனால் உள்ளத்தை இட முடியுமா? எவனொருவன் சுதந்திரமாக வாழ்கிறானோ அவன் தான் சுகமாக வாழ்கிறான். அதிகார சக்தியோடு நீதி போராடினால் விளைவது சுதந்திர வெற்றி. இறந்து போன சிங்கத்தைக் காட்டிலும் உயிருள்ள நாய் மேலானது. நான் ஓர் ஈயினுடைய தலையாக இருக்க விரும்புவேனே தவிர சிங்கத்தின் வாலாக இருக்க விரும்ப மாட்டேன். எவன் தனக்குத்தானே எஜமானனாக இல்லையோ அவன் சுதந்திர புருஷனல்ல. தூக்கு மேடையில் ஏற்றுகிறவனைக் காட்டிலும் ஏறுகிறவனே மேலானவன். சுதந்திரமில்லாத நாடு சிறைக் கூடம். செல்வங்கொழிக்கும் அடிமை நாடாயிருப்பதைக் காட்டிலும், வறுமை நிறைந்த சுதந்திர நாடாயிருப்பது மேல். இந்த உலகத்தில் மனிதர்கள் ஏன் போராடுகிறார்கள்? ஏன் உழைக்கிறார்கள்? ஏன் துன்பம் அனுபவிக்கிறார்கள்? எல்லாம் சுதந்திரத்திற்காகத்தான். என் சொந்த நாடாயிருந்தாலும், அஃது அடிமை நாடாயிருந் தால், அதில் வசிப்பதைவிட நரகத்தில் வசிப்பதே மேலானது. தாய் நாடென்கிற சப்தம் கேட்கிறபோதே, நம்மிடத்திலேயுள்ள வீர உணர்ச்சி, கிரியா சக்தி எல்லாம் கொழுந்துவிட் டெரியத் தொடங்கு கின்றன. கற்சிலைகளில் கடவுள் இருக்கிறார் என்று நீ நினைத்திருக் கிறாய்; ஆனால் எனக்கோ, தாய்நாட்டு மண்ணின் ஒவ்வோர் அணுவும் கடவுள். வாழ்க்கையின் உயர்ந்த சட்டம் எது? தாய் நாட்டைப் பாதுகாப்பது. உலக மனைத்தும் சுதந்திரக்கோயில். ஆகாயமே அந்தக் கோயிலின் கோபுரம். தாய் நாட்டை நேசிப்பது, பிரதியொரு மனிதனும் அவசியம் செய்யவேண்டிய கடமையாகும். சுதந்தரம் குன்றிப்போய் விட்டதனால்தான் உலகத்தில் நாகரிகம் சீர் கெட்டு விட்டது. சுதந்திரம், நீதி இரண்டினையும் பிறருக்கு நாங்கள் விற்கமாட் டோம்; அவைகளைப் பிறருக்கு மறுக்கவும் மாட்டோம். சுதந்திர மில்லாமல் எந்த விதமான கலைகளும் நீடித்து நிற்க முடியாது. மற்றவர்களுடைய அநுதாபத்திற்கும் பரிகாசத்திற்கும் மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசத்திற்காகத் துயரப்படுவது, துன்பமனுபவிப்பது, மரண மடையவது, எல்லாம் புனிதமாகின்றன. சுதந்திரத்தின் நண்பர்கள், நமது நண்பர்கள்; சுதந்திரத்தின் விரோதிகள், நமது விரோதிகள். நல்ல ஆட்சியைவிட சுய ஆட்சியே மேலானது. சுதந்திரத்தைக் காகிதத்தில் அச்சிட்டு ஜனங்களுக்கு வழங்குவது அவர்களைப் பரிகசிப்பதாகும். நமது மனச்சாட்சியைச் சட்டங்கள் ஸ்தம்பிக்கச் செய்துவிடு கின்றன. சுதந்திரம், அதனை வளர்க்கிறது. எந்த அரசாங்கம், குறைவாக ஆட்சி புரிகிறதோ அந்த அரசாங்கமே சிறந்த அரசாங்கம். சுதந்திரத்திற்காகவும் சத்தியத்திற்காகவும் போராடப் புறப்படு கிறவன், நல்ல உடைகளை அணிந்து கொண்டு புறப்பட்டால் வெற்றி யடைவானா? பொதுவாக ஒரு ஜாதியார் ஒழுக்க ஹீனர்களாகி விட்டால் அவர்களிடத்தில் சுதந்திரம் நிலைத்து நிற்காது. பருமனான அடிமைத் தனத்தைக் காட்டிலும், ஒல்லியான சுதந்திரமே மேலானது. சுதந்திரத்தின் விலை என்ன? சதா விழிப்புடன் இருப்பது தான். சுதந்திரம் என்பது ஆபத்தானதுதான். ஆனால் அதுதான் நம்மிடத்திலேயுள்ள பத்திரமான பொருள். சுதந்திரம் என்றால் பொறுப்பு. இதனால்தான், அநேகர் அதைக் கண்டு, அதாவது சுதந்திரத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். சுதந்திர தேசி இறந்துபோய்க் கொண்டிருக்கிறபோழ்து, நீங்கள் உயிர்வாழ்ந்து கொண்டிருப்பதிலே ஏதேனும் அர்த்த மிருக்கிறதா? இப்பொழுது நம்மைச் சுற்றி என்ன காண்கிறோம்? சிறிய மனிதர்களிடத்தில் நிறைய பணம், அதிகப் பாவம், குறைந்த பக்தி. கீழான மக்களுக்கு மேலான பதவி. நல்ல ஊழியத்திற்குக் குறைந்தஊதியம். மகான்கள் சிறையிலே உழன்று கொண்டிருக்கிறார்கள்; அவர் களுடைய தியாகத்தினால் தேசம் சுதந்திரம் அடைகிறது. மனிதனுக்கு அநேக கடைமைகள் உண்டு. அவற்றில் முக்கிய மானது, தன் கையினால் உழைத்துப் பிழைப்பது. நெற்றி வியர்வையிலே உன் ரொட்டியைச் சாப்பிடு என்பதன் அர்த்தம் இதுதான். தேசபக்தி என்பது, யாரோ ஒரு மனிதனுக்கு ஏக தேசமாக அமைகிற பண்பு என்று யாரும் நினைக்க வேண்டாம். அது பிரதியொரு மனிதனிடத்தும் இயற்கையாகவே அமைந்துள்ள பிறவித்தன்மை. போர் வீரர்கள் கோழைகளாயிருந்தால் அவர்களுக்குப் பின்பல மாக ஆயுத பல மிருந்து என்ன பயன்? உனக்கு அதிகார மிருக்கலாம். அந்த அதிகாரத்தைப் பிரயோகம் செய்வதைக் காட்டிலும், உனது கடமையை நிறைவேற்றுவதில் நீ கருத்துள்ளவனாயிரு. அன்பில்லாத அதிகாரம், பயங்கரமான விளைவுகளுடையது. அந்த அன்பில்லாத அதிகாரத்திற்கு யாரேனும் பக்தி செலுத்துவார்களானால், அது பேய் பிசாசுகளுக்கு பயத்தினால் செலுத்துகிற பக்தி மாதிரிதான். ஒரு ஜாதியார், சுதந்திர ஸ்தாபனங்களுக்குத் தயாராயில்லாத வர்களாயிருக்கலாம். ஆனால் அவர் அவர்களிடத்தில் சுதந்திர ஆவலைத் தூண்டி விடுதல் அவசியமாகும். சுதந்திரத்தினால் உண்டாகிற அனுகூலங்களை அனுபவிக்க விரும்புகிறவர்கள், அதனைக் காப்பாற்றி வைத்துக் கொள்ளும் சிரமத்தை அனுபவிக்கத் தயாராயிருக்க வேண்டும். ஒரு ஜாதியை அடிமைப் படுத்துவதற்காக நாம் போராட வில்லை. ஒரு நாட்டை விடுதலை செய்வதற்காகவே போராடு கிறோம். கண்ணியமான புருஷர்கள் அந்த நாட்டிலே வசிக்க வேண்டு மென்ப தற்காகவே போராடுகிறோம். பந்தமில்லாத மனதின் நிரந்தரமான சக்தியே! குகைகளில் நீ பிரகாசிக்கிறாய்! சுதந்திரம் என்பது உனது பெயர். யார் உன்னை அதிகமாக நேசிக்கிறார்களோ அவர்கள், மேற்படி குகைகளில் வசிக்கிறார்கள். அவர்களுடைய இருதயத்தில் நீ வசிக்கிறாய். ஒரு லட்சியத்தை நான் நேசிக்கிறேன் என்பதற்கு என்ன அடையாளம்? அதன் பொருட்டு இறக்கச் சித்தமாயிருப்பது தான். அரசாங்கம் நிலைபெறுவது, தர்க்க அறிவினாலுமல்ல, நாவன்மை யினாலுமல்ல, பலாத்காரத்தினாலேயே. அது நெருப்பைப்போல், ஆபத்தான வேலையாள்; பயங்கரமான எஜமானன். எந்த நாட்டில் அரசாங்கம், ஜனங்களை அநியாயமாகச் சிறையி லடைக்கிறதோ அந்த நாட்டில், நியாய புருஷன் இருக்க வேண்டிய இடம் சிறைதான். எனக்கு மற்றெல்லாச் சுதந்திரங்களைக் காட்டிலும், விஷயங் களைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்து கொண்டதைப் பற்றிப் பேசவும், மனச்சாட்சியின் படி அபிப்ராயம் கூறவும் சுதந்திரம் வேண்டும். எந்த ஓர் அரசாங்கமும் எல்லாச் சுதந்திரங்களையும் கட்டுப் படுத்தி விடலாம். ஆனால், மனிதர்களுடைய எண்ண சுதந்திரத்தை மட்டும் யாரும் கட்டுப்படுத்த முடியாது. சுதந்திரமில்லாத நாட்டின் மக்கள், உணர்ச்சியில்லாத கற்சிலைகள்; அல்லது களிமண் பொம்மைகள். அவர்களை அடிமைப் படுத்திவிட்டு அந்த நாட்டில் எல்லோரும் உலவு கிறார்கள். இன்று மலர்ந்து நாளை வாடும் தன்மையது புஷ்பம். மனித வாழ்க்கையும் அதைப் போன்றதே. ஆனால், அந்த வாழ்க்கை, சுதந்திரத் தினால் மணம் பெறுகிறது; பிரகாசிக்கிறது. சுதந்திரம் இல்லாத வாழ்க்கை, கட்டாந்தரைப் புல்தான். எப்படி இனிப்பாயிருப்பது சர்க்கரையின் இயற்கையோ, புளிப்பாயிருப்பது புளியின் இயற்கையோ, அப்படியே சுதந்திரமாயிருப்பது மனிதனுடைய இயற்கை. ஒரு மனிதனிடத்தில் எத்தனை குறைகள் இருந்தபோதிலும் அத்தனையையும், அவனுடைய தேச பக்தி, மூடிபோட்டு மறைத்து விடுகிறது. மனிதனுடைய சுயமதிப்புக்குப் பங்கம் ஏற்படாமல், வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து வைப்பது எதுவோ அதுதான் சுதந்திரம். எங்களுக்கு லஞ்சம் கொடுத்து, அல்லது எங்களிடம் அன்பு செலுத்தி, எங்களை, நீங்கள் வசப்படுத்தலாம்; ஆனால் எங்களை அச்சுறுத்தி வசப்படுத்த உங்களால் முடியவே முடியாது. வேண்டுமானால் எனது பெயர்மீது ஆயிரக்கணக்கான சாபங் களை இடுங்கள்; எனது தாய் நாடு விடுதலை அடைந்தால் போதும். ஒவ்வொரு ஜாதிக்கும் ஆளும் உரிமை உண்டு. அந்த ஜாதியினர், தங்களுக்கு எந்தவிதமான அரசியல் அமைப்புப் பிடிக்கிறதோ அந்த விதமான அரசியல் அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளப் பரிபூரண உரிமை யுடையவர்கள். அந்த அரசியல் அமைப்பை அவ்வப்பொழுது மாற்றிக் கொள்ளவும் அவர்களுக்கு உரிமை யுண்டு. ஒரு சமுதாயத்திற்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்கிறவர்கள் யாரோ அவர்களுக்குத் தான், அந்தச் சமுதாயத்திற்கு வேண்டிய சட்டங்களை இயற்றும் உரிமை இருக்க வேண்டும். துர்நாற்றம் நிறைந்த சிறையிலே என்னை அடைத்துப் போட்டுத் துன்புறுத்தலாம். ஆனால் என் கடைசி மூச்சு இருக்கிறவரை, எனது தாய்நாட்டை ஆசீர்வதித்துக் கொண்டிருக்குமாறு கடவுளைப் பிரார்த்திப்பேன். தியாகம் செய்து பெறாத சுதந்திரத்தை யாரேனும் மதிப்பார் களா? அது சுதந்திரமாகுமா? அந்தச் சுதந்திரம், நீண்ட காலந்தான் உயிர் வாழுமா? தன்மதிப்புணர்ச்சி யில்லாத மனிதர்களோ, ஜாதியரோ, சுதந்திரத்தின்மீது காதல் கொள்ளவே முடியாது. எப்படி நமது சாதாரண உலகத்திற்கு, புயற்காற்று அவ்வப் பொழுது தேவையாயிருக்கிறதோ அதைப் போல், அரசியல் உலகத்திற்கும் சிறுசிறு புரட்சிகள் தேவையாயிருக்கின்றன. அரசாங்கங்கள் ஆரோக்கியத் துடனிருப்பதற்கு இவை ஒரு மருந்து மாதிரி. சுதந்திரத்தின் எல்லையை விசாலித்துக் கொண்டு போகிற வர்கள், மடத்திலேயிருக்கும் துறவிகளல்லர்; குகையிலே தவஞ் செய்யும் யோகிகளல்லர்; உழைத்துப் பிழைக்கிறவர்கள். இவர்களால்தான் ஆபத்தை எதிர்த்து நிற்க முடியும். பத்து, இருபது கணக்கில் கிளர்ச்சிகள் செய்வதனால் உண்டாகிற பலனைக் காட்டிலும், உருப்படியான ஒரு காரியத்தினால் உண்டாகிய பலனே அதிகமாயிருக்கும். விஷயங்களைப் பகுத்து பார்ப்பதிலே நாம் வல்லவர்களா யிருக்கிறோம்; ஆனால் தொகுத்துப் பார்க்கத் தான் நமக்குத் தெரிய வில்லை. நீங்கள் மனம் வைத்தால் ஒரு புதிய உலகத்தையே சமைத்து விடலாம். உங்களிடத்திலே சக்தி இருக்கிறது; ஆனால் அந்தச் சக்தியினிடத்திலே உங்களுக்கு நம்பிக்கையில்லை. உங்களது நாட்டின் புராதனச் சின்னங்களென்ன, சரித்திர சம்பவங்கள் என்ன, இவையாவும், உங்களை வழிகாட்டி அழைத்துச் செல்ல முன் வந்திருக்கும் உங்களுடைய தலைவர் களுக்குக் கொஞ்சங்கூட உணர்ச்சி ஊட்டவில்லையா? சாதாரணமாக, ஜனங்கள், தங்களுக்குச் சுதந்திரம் மறுக்கப் படுகிற போதுதான், அதன் உண்மையான மதிப்பு இன்ன தென்று அறிய ஆவல் கொள்கிறார்கள். மனிதனிடத்திலேயுள்ள சக்திகளெல்லாம் பரிபூரணமாக வெளிப்பட வேண்டுமானால் அவனுக்குச் சுதந்திரம் அவசிய மானது. பொருளாதார சமத்துவமில்லாமல், உண்மையான சுதந்திர மவோ, ஜனநாயகமோ இருக்கமுடியாது. சுதந்திரம் என்ற பெயரிட்டழைக்கப்படக் கூடியது எது? நமது நலனை, நமது இஷ்டப்படி நாடுவதுதான். அப்படி நாடுகிற போது, மற்றவர்கள், தங்களுடைய நலனை தங்கள் இஷ்டப்படி நாடுவதற்கு நாம் தடையாயிருக்ககூடாது. ஒருவன், தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொண் டிருப்பதோடு, தனது சத்துருக்களின் சுதந்திரத்தையும் காப்பாற்றிக் கொடுக்கவேண்டும். நீ சொல்வதை நான் அங்கீகரிக்கவில்லை. ஆனால் உனக்குச் சொல்ல உரிமையுண்டு என்பதை நான் அங்கீகரிக்கிறேன். உன்னுடைய அந்த உரிமைக்காக நான் எனது உயிருள்ள வரையில் போராடுவேன். சுதந்திரமென்பது, வேறோர் உயர்ந்த அரசியல் லட்சியத்தை அடைவதற்குரிய சாதனமல்ல; அதுவே சிறந்த அரசியல் லட்சியம். அடக்குமுறை யென்பது சுதந்திர அரசாங்கத்தின் விரோதி மட்டுமல்ல; புரட்சிகளுக்கெல்லாம் தாயாகவும் இருக்கிறது. அஃது, அந்த அடக்கு முறை, மானிட ஜாதியின் முன்னேற்றத் திற்கும், சந்தோஷத்திற்கும் சத்துரு. நமது எண்ணத்தைச் செயலாக உருவாக்குகிற பட்டரையே நமது தேசம். நமக்கென்று தேச மில்லாவிட்டால், நமக்கென்று சுலையேது? இலக்கியமேது? வாழ்வேது? தேசத்தை மையமாகக் கொள்ளாத இலக்கியத் தொண்டோ, கலாசேவையோ, அர்த்த மில்லாத வார்த்தைகள். பாமர ஜனங்கள் என்று யாரை நாம் நினைத்துக் கொண் டிருக்கிறோமோ அவர்களிடத்தில் மகத்தான சக்திகள் இருக் கின்றன. ஆனால் அந்தச் சக்திகளை அறியாமை என்பது மூடிக்கொண்டிருக்கிறது. இதனால்தான் அவர்கள், யாரை முதலில் சந்திக்கிறார்களோ அவர்களை நம்பி விடுகிறார்கள். உங்களுடைய தேசபக்தி உங்களைப் பழைமையிலே பெருமை கொள்ளச் செய்யட்டும்; நிகழ்காலத்திலே உங்களுக்கு உபயோகமா யிருக்கட்டும்; எதிர்காலத்துக்கு வழிகாட்டியா யிருக்கட்டும். நாம் இப்பொழுது சுதந்திரமாயிருக்கிறோமென்று சொன்னால் அதற்கெல்லாம் காரண புருஷர்கள் யார்? தங்கள் மனச் சாட்சியின் கட்டளைக்கிணங்க தேசத்தின் சட்டங்களைமீறி நடந்த மகா புருஷர்கள்தான். ஓ! எனக்குச் சுதந்திரம் கொடு! நான் இருக்கும் சிறை, சொர்க்க லோகமாயிருந்த போதிலும், அதனுடைய பளிங்குச் சுவர் களைத் தாண்டிகொண்டு வெளியேறி விடவே நான் விரும்பு கிறேன். சுதந்திரமே! உன் சந்நிதானத்தில், நித்திய இன்பம் ஆட்சி புரிகிறது. செழுமை, உன்னைப் பின்பற்றி நடக்கிறது. உன் முன்னர், வறுமை கூட, சந்தோஷம் தருவதாய் இருக்கிறது. சுதந்திரத்தை அங்குலம் அங்குலமாக முயன்று சம்பாதிக்க வேண்டும். பஞ்சணையில் படுத்துக் கொண்டே, சுயேச்சாதிகார சக்தியின் பிடிப்பிலிருந்துவிடுபட்டு, சுதந்திர சக்தியின் சந்நிதானத்தை அடைந்துவிட முடியாது. சுதந்திரத்தை முயன்று சம்பாதிக்க வேண்டும்; ஜாக்கிரதை யுடனிருந்து காப்பாற்றி வரவேண்டும். இந்த இரண்டையும் செய்ய மனமில்லாமல்தான், அநேக ஜனங்கள், அடிமைத் தனத்திலே திருப்தி யடைந்து விடுகிறார்கள். எவனொருவனுக்குப் பேசும் சக்தி யிருக்கிறதோ அவன் பேசுதற்கு உரிமை அளிக்கப்படவேண்டும். ஒருவன், தன் அபிப்பிராயங்களைத் தாராளமாகச் சொல்ல வொட்டாதபடி எந்தச் சமுதாயம் தடை செய்கிறதோ அந்தச் சமுதாயம் சமுதாயமல்ல அடிமைக் கூட்டம். சுதந்திரத்தின் அருமையான பாகம் எது? சுயமாகச் சிந்திக்கும் உரிமை; சிந்திப்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை; தெரிந்துகொண்டதைச் சொல்லும் உரிமை. சுதந்திரமென்பது, பிறரிடமிருந்து பெறக்கூடிய ஓர் உரிமை யல்ல; மானிட முன்னேற்றத்திற்கு இன்றியமையாத ஒரு நிலைமை. அதுமட்டுமல்ல; அந்த முன்னேற்றம், சுதந்திரத்தின் மூலமாகத் தான் பூரணத்துவம் அடைகிறது. சுதந்திரத்தை வைத்துக்கொண்டு வாழ யாருக்குத் தெரிந்திருக் கிறதோ, யார் அதைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண் டிருக்கத் தயாராயிருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் கடவுள் சுதந்திரத்தை அருள்கிறார். பிரஜைகளின் உயிரையும் பொருளையும், சட்டங்களின் மூலமாகக் காப்பாற்றுகிற கடமையைச் செய்வதற்காகவே அரசன் நியமிக்கப் பட்டிருக்கிறான். இந்தக் கடமையைச் செய்வதற்கான அதிகாரத்தை அவன் ஜனங்களிடமிருந்து பெறுகிறான். இந்த அதிகாரத்தைத் தவிர அவனுக்கு வேறு அதிகாரம் கிடையாது. சுதந்திரத்தை ஒரு வார்த்தையாக எல்லோரும் அடிக்கடி உச்சரிக்கிறார்கள். ஆனால் அதனை யாரும் அறிந்து கொள்ள வில்லை. உலக ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில்தான் உண்மையான சுதந்திரம் நிலவும். அரசாங்க நிருவாகம் ஒழுங்கா நடைபெறுகிறதா என்னும் விஷயத்தில், ஜனங்கள் எந்த அளவுக்குக் கவனஞ் செலுத்து கிறார்களோ அந்த அளவுக்கே அந்த ஜனங்கள் சுதந்திர முடையவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் பிறந்த தாய் நாட்டைப்பற்றி யாரும் அவமானப் படவேண்டாம். பெற்ற தாய், எவ்வளவு குரூபியாக இருந்தாலும் அவளைக் கண்டு அவமானமடைகிற ஒரு மகன் இந்த உலகத்தில் இருக்கிறானா? அப்படியிருந்தால் அவன் மனிதப் பிறவியல்ல. ஒருவன் தன் சகோதர மனிதர்களை நேசிக்கிறான் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நீதியை நேசிக்கிறான் என்பது தான். அப்படியே ஒருவன், தனது தாய்நாட்டை நேசிக்கிறான் என்று சொன்னால், சுதந்திரத்தை நேசிக்கிறான், சமுதாய நன்மையை நாடுகிறான் என்பதுதான் அர்த்தம். சுதந்திரமென்பது போர்த்தன்மை வாய்ந்தது வீரமும் மனச்சாட்சியு முள்ளவர்கள் சுதந்திரத்திற்காகவே போராடு வார்கள். சுதந்திரமென்பது வருங்காலத்து மதம். சுதந்திரமா யிருப்பதுதான் வீர புருஷர்களின் லட்சணம். நமது பெருமையெல்லாம் சுதந்திரத்தினின்று பிறந்ததுதான். ஜனநாயகத் தொட்டிலில்தான் நமது வியாபாரம் வளர்ந்தது. அப்படியிருக்க, தாயாகிய சுதந்திரத்திற்குப் பங்கம் உண்டு பண்ணினால், அதன் குழந்தையாகிய நமது பெருமைக்கும் பங்கம் உண்டாகுமல்லவா? ஒருநாடு, மற்றொரு நாட்டை ஆக்கிரமித்துக் கொள்கிறபோது, இரண்டு நாடுகளும் சந்தோஷமாயிருக்க முடிவதில்லை. ஆக்கிரமிப்புக் குட்பட்ட நாடு, இழந்துபோன தனது புராதனப் பெருமையை நினைத்து வருத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது. ஆக்கிரமித்துக் கொண்ட நாடோ, தனக்கு விரோதமாக எப்பொழுது கலகங்கள் முதலியன நடைபெறுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாங்கள் துன்பமனுபவிக்கத் தயாராயிருக்கிறோம்; சுதந்திரப் போராட்டத்தை விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. இந்தப் போராட்டத்திலே நாங்கள் இறந்து போகலாம். அதனால் போராட்டம் நின்றுவிடும் என்று கருதவேண்டாம். எங்கள் சந்ததியார் அதனைத் தொடர்ந்து நடத்துவார்கள். நாங்கள் பட்ட கஷ்டங்கள் வீண் போகா. விடுதலை, விடுதலை என்று முழக்கம் செய்கிறோம். சுதந்திரம், சுதந்திரம் என்று முழக்கம் செய்கிறோம். கடவுள், எங்களுக்கு வழிகட்டி யாயிருக்கிறார். நாங்கள், கத்தி யெடுக்க மாட்டோம்; யுத்த நெருப்பு மூட்ட மாட்டோம். நியாயம், ஒற்றுமை ஆகிய இவைகளைக் கொண்டுதான் எங்கள் பிறப்புரிமையைப் பெறுவோம்; சுதந்திரத்தைப் பெற்றே தீருவோம். கடவுளே! அறிவும், வலிமையும், ஆண்மையும் நீயேயென்று சொல்கிறார்கள். அப்படியானால், உனது மக்களின் அழு குரலைக்கேள்; அவர்கள் வறுமையிலே உழன்று கொண்டிருப் பதையும், அடிமைத் தனத்திலே திணறிக் கொண்டிருப்பதையும் பார். பிரதியொரு மனிதனும் சுதந்திரமாயிருக்க வேண்டு மென்று ஆசீர்வாதம் செய். சுதந்திரம் என்பது, ஓர் அரசாங்கத்தினிடமிருந்து எப் பொழுதுமே தோன்றியது கிடையாது. அந்த அரசாங்கத்தின் பிரஜைகளிடமிருந்தே அது தோன்றுகிறது. சுதந்திரத்தின் சரித்திரம் போராட்டத்தின் சரித்திரமாகவே இருக்கிறது. அரசாங்கத்தின் அதிகாரங்களை ஒரு வரம்புக்குட்படுத்துவது தான் சுதந்திரத்தின் நோக்கமாயிருக்கிறதே தவிர, அந்த அதிகாரிகளை அதிகப் படுத்திக் கொடுப்பது அல்ல. என்ன, உயிர் அவ்வளவு அருமையானதா? அமைதி அவ்வளவு இனிமையானதோ? இரும்புச் சங்கிலிகளுக்காகவும், அடிமைத் தனத்திற்காகவும் இவைகளை விலைகொடுத்து வாங்குவதா? முடியாது. கடவுளே! முடியாது. மற்றவர்கள் எந்த வழிவேண்டு மானாலும் போகட்டும். என்னைப் பொறுத்த மட்டில், எனக்குச் சுதந்திரத்தையாவது கொடு; அல்லது மரணத்தை யாவது கொடு. சுதந்திரத்தினுடைய சாரம் என்ன? சாதாரண ஜனங்கள் நினைக்கிற படி, நமது சுய உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டிருப்பது மட்டுமா? இல்லை. மற்றவர்களுடைய உரிமைகளுக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும். உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, எவனாயிருந்தாலும் அவனுக்குத் தீங்கு உண்டாகும் படியோ அவனுடைய உரிமைகள் நசுங்கும் படியோ நாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. உங்களுடைய குழந்தைகளின் தொட்டில்மீது ஆணை! உங்க ளுடைய முன்னோர்களின் சவக்குழிமீது ஆணை! இன்றைய தினமே மனிதராகுங்கள்; இல்லாவிட்டால் சாசுவதமான அடிமைகளா யிருப்பீர்கள். ஒரு தனி மனிதனுக்கு எப்படித் தேகாரோக்கியம் முக்கியமானதோ அதைப்போல் ஒரு ஜன சமுதாயத்திற்குச் சுதந்திரம் இன்றியமையாதது. தேகாரோக்கிய மில்லாத மனிதன் எப்படிச் சுகத்தை அனுபவிக்க முடியாதோ அதைப்போல், சுதந்திரமில்லாத ஜன சமுதாயம் இன்பதைத் அனுபவிக்க முடியாது. ஒரு தேசத்தில் அதிருப்தி ஏற்படாதிருக்கவேண்டுமானால், ஜனங் களுக்கு, தங்கள் கருத்துக்களை வெளியிடும் உரிமையை அளிக்க வேண்டும். அரசாங்கத்தைச் சீர்திருத்த வேண்டுமென்று சொல்லவோ, அரசாங்க ஸ்தாபனங்களையும் அரசாங்க உத்தியோகஸ்தர்களையும் கண்டித்துச் சீர்த்திருத்தவோ ஜனங்களுக்குச் சுதந்திரம் இருக்கவேண்டும். சுதந்திரத்தை சம்பாதித்தவர்கள் கோழைகளல்லர். அரசியல் மாற்றத்திற்கு அவர்கள் பயப்படவில்லை. சுதந்திரத்தை இழந்து விட்டு அமைதியாயிருப்பதை அவர்கள் போற்றவில்லை. வேண்டுமானால், அவர்கள், சமுத்திர அலைகளுக்கு விலங் கிடட்டும்; காற்று, மேகம், மழை இவைகளின் வாயை அடக் கட்டும்; எங்களுடைய சுதந்திரத்தை யாரும் பறி முதல் செய்ய முடியாது. எங்களை யாரும் கட்டுகளுக்குட்படுத்த முடியாது. நாங்கள், சமுத்திரத்தை நோக்கிச் செல்லும் ஆறுகளைப் போல், எங்கள் மீது தவழ்ந்து செல்கிற மந்த மாருதத்தைப் போல், சுதந்திரமாகச் செல்வோம். இதுவரையில், உண்மையை முணு முணுத்துக் கொண்டு வந்தோம். இனி, அதனை உரத்துச் சொல்லுவோம்; உறுதியாகச் சொல்லுவோம். ஏன்? இப்பொழுது நாம் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டிருக்கிறோம். யாருக்கு, மத உணர்ச்சிகளைக் காட்டிலும் கீழான ஆசைகள் அதிகமா யிருக்கின்றனவோ அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை. யாரிடத்தில் அறிவைக் காட்டிலும் அறியாமை அதிகமாகக் குடிக்கொண்டிருக்கிறதோ அவர்களுக்குச் சுதந்திரம் இல்லை. தங்களை அடக்கி ஆண்டுகொள்ளத் தெரியாதவர்களுக்கும் சுதந்திரம் இல்லை. யாரொருவர் தங்களுடைய நிகழ்காலப் பாதுகாப்பிற்காகச் சுதந்திரத்தைவிட்டுக் கொடுத்துவிடுகிறார்களோ அவர்கள், சுதந்திரத் திற்கும் உரியவர்களல்லர்; பாதுகாப்புக்கும் உரியவர் களல்லர். நல்ல பண்பட்ட நாடு என்று ஒரு தேசத்தைப் பார்த்து சொல்கிறார்கள். அந்த நாட்டின் செழுமையான மண்ணைப் பார்த்துச் சொல்கிறார்களா? இல்லை. இல்லை. அந்த நாட்டு ஜனங்கள், எவ்வளவு தூரம் சுதந்திரம் அடைந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் சொல்கிறார்கள். ஓர் அரசாங்கம், தனது அதிகார எல்லைக்குள், வாழும் ஏழை மக்களுக்கும் பிரஜா உரிமை உண்டு என்ற எண்ணத்தோடு சட்டங்களைச் செய்யவேண்டும். சொத்துரிமை சம்பந்தமாக அஃதியற்றும் சட்டங் களுக்குக் கொடுக்கிற சலுகைகளா யிருக்க வேண்டுமே தவிர, ஏழைகளிட மிருந்து பறித்து பணக் காரர்களுக்குக் கொடுக்கிற நிர்பந்தங்களா யிருக்கக்கூடாது. ஒரு மனிதனை மேல் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டு மானால் முதலில் அவனை விடுதலை செய்; உனக்குச் சமதை யானவன் என்று கருது; அவனுடைய தனித்தன்மையை ஒப்புக் கொள் அடிமையா யிருக்கப்பட்ட ஒருவன் கீழானவனாகவே இருப்பான். நாம் புகழுக்காகப் போர் புரியவில்லை; பொருளுக்காகப் போர் புரியவில்லை; சுதந்திரத்திற்காகப்போர் புரிகிறோம். அந்தச் சுதந்திரத்தை எந்த ஒரு நல்ல மனிதனும் பிறரிடம் ஒப்புக் கொடுப்பதில்லை. அப்படி ஒப்புக்கொடுக்கிற நிலைமை ஏற்பட்டால் உயிரைக் கொடுத்த பிறகே ஒப்புக்கொடுக்கிறான். இனிய சுதந்திரமே! சவக்குழிகளிலே, வீரர்களின் சாம்பலிலே நீ பிறக்கிறாய்; எந்த இருதயத்திலே ரத்தம், தன்னிச்சையாக ஊற்றெடுத்து ஓடுகிறதோ, அங்கே நீ வசிக்கிறாய்; எந்த நாட்டிலே சண்டை சச்சரவுகள் இல்லையோ அந்த நாட்டிலே நீ nக்ஷமமாயிருக்கிறாய்; உலக சமாதானத்திலே நீ புகழுடன் பிரகாசிக்கிறாய். சுதந்திரமே! நீ கிட்டாத பொருளன்று சொல்லியார் வேண்டு மானாலும் உன்னைக் கைவிட்டு விடட்டும்; நானென்னவோ கைவிட மாட்டேன். உனது வீடு பூட்டப்பட்டிருக்கிறதா? நீ வெளியே போயிருக் கிறாயா? இருக்கட்டும்; நான் காத்துக் கொண்டிருக்கிறேன்; உன் வருகைக் காகத் தயாராயிருக்கிறேன். நீ சீக்கிரமாக வந்து விடுவாயல்லவா? ஏனென்றால் உன்னுடைய ஆட்கள் வந்து விட்டார்களே! சுதந்திரமில்லாமல், மத பக்தியானது, மூட நம்பிக்கையாகி விடுகிறது. விஞ்ஞானமானது, வறட்டுத் தத்துவமாகி விடுகிறது; கலை யானது, ஒரு நமூனாவாகச் சுருங்கி விடுகிறது; செல்வம் உற்பத்தியாவது குறைந்துபோகிறது; மனித வாழ்வு, மிருக வாழ்வுக்கு இறங்கிவிடுகிறது. சுதந்திரத்தை நாம் தினந்தோறும் துலக்கிப் பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் அது கெட்டுப் போகும். செல்வச் செழிப்பானது, சுதந்திரத்தைக் கறைப் படுத்தாதிருக்கும் பொருட்டு, ஒரு ஜாதியார் சதா விழிப்புடன் இருக்க வேண்டும். எவனொருவன், வறுமைக்கு அஞ்சி, சுதந்திரத்தைப் பறி கொடுத்து விடுகிறானோ அவன், சாசுவதமான அடிமைத் தனத்திற்கே தகுதி யுடையவன். குவியல் குவியலாகப் பணத்தை வைத்துக் கொண்டு அடிமை யாயிருக்கிறானே அவனைக் காட்டிலும், தரித்திரத்திலே உழன்று கொண்டிருக்கிற சுதந்திர புருஷனே மேலானவன். மலிவாகக் கிடைக்கிற ஒரு பொருளை நாம் அதிகமாகப் பாராட்டுவதில்லை. அதைப்போல் சுதந்திரம் சுலபமாகக் கிடைத்து விடுமானால் அதனை நாம் அலட்சியமே செய்வோம். ஆனால் சுதந்திரம் என்பது தெய்வத்தன்மை நிரம்பியதல்லவா? அதனை நாம் சுலபமாக அடைந்துவிட முடியுமா? ஒரு தேசத்திற்கு ஆபத்து ஏற்படுகிறபோதுதான் அதனுடைய பெருமையோ, சிறுமையோ வெளிப்படுகிறது. சமாதான காலத்தில் உண்டாகிற நன்மைகளைப்போல் யுத்த காலத்திலும் அநேக நன்மைகள் உண்டாகின்றன. உலகமுழுவதையும் நான் சுற்றிப் பார்த்திருக்கிறேன். ஆனால், நமது நாட்டில் நம்பிக்கை இழந்திருப்போர்களைப்போல் நான் எங்கும் பார்த்தது கிடையாது. இந்த அரசன், நமக்குச் சுதந்திர சாஸனம் அளித்திருக்கிறா னென்பது வாஸ்தவம். ஆனால் அது மெழுதுப் பொம்மை; ஜனசக்தி என்கிற அனலிற் பட்டவுடன் உருகி விடுந்தன்மையது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன் கூறுகிறான்: சகோதரப் பிரஜைகளே! நீண்டகாலம் நீங்கள் பந்தத்திற் குட்பட்டிருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஓரளவு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கண்டு பயப்பட்டு விடாதீர்கள். ஏனென்றால் சுதந்திரத்திற்காகவே நான் இறக்கிறேன். இஃதெனக்கு அதிக மகிழ்ச்சியையே அளிக்கிறது. நாம் இஷ்டப்பட்டதைச் செய்வது சுதந்திரமல்ல. எந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்வது தான் சுதந்திரம். அதற்கு எத்தனை விதமான எதிர்ப்புகள் இருந்தாலும் அதை லட்சியம் செய்யக் கூடாது. அதில்தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது. சுதந்திரம், ஜனங்களை நோக்கி இறங்கி வராது. ஜனங்கள் தான் சுதந்திரத்திற்காகத் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதனை அனுபவிப்பதற்கு முன்னர், அதனை முயன்று சம்பாதிக்க வேண்டும். பேச்சுரிமை, பலவிதமாக துஷ்பிரயோகம் செய்யப் படலாம். அதற்காக அந்த உரிமையை யாருக்கும் மறுக்கவேண்டும். ஒரு நாளில்லா விட்டால் ஒரு நாள், துஷ்பிரயோகம் செய்வது நின்றுபோகக் கூடும். ஆனால் அந்த உரிமையை மறுத்து விடுவதனால், ஜனங்களுடைய வாழ்க்கையே சிதறுண்டு போகிறது; அந்த ஜாதியின் வருங்கால நல்வாழ்வு, மண்ணிலே புதைந்து போகிறது. ஜனப் பிரதிநிதி சபைகளுக்கு அங்கத்தினர்களைத் தெரிந் தெடுத்தனுப்பும் உரிமை மட்டும் இருந்தால் போதாது. சட்டத் திற்கு முன் எல்லோரும் சமம் என்று சொன்னால் மட்டும் போதாது. நல்வாழ்க்கையை நடத்துவதற்கான சாதனங்களை யும் சந்தர்ப்பங்களையும் அனைவரும் பெறவேண்டும். இயற்கை அன்னையின் சிருஷ்டிப் பொருள்களை அனு பவிக்கிற விஷயத்தில் எல்லோருக்கும் சம அந்தஸ்து இருக்க வேண்டும். இவை இல்லாவிட்டால், சுதந்திரம், தானாகவே ஒதுங்கி விடுகிறது. மனித வாழ்க்கையின் முன்னிலையில் வெற்றியென்பது என்ன? முயற்சியின் வடிவம். ஒரு ஜாதியை ஐக்கியப் படுத்தக் கூடியது எது? அதனுடைய பரம்பரை. ஆடம்பரமாக வாழ்கிறவன் ஒழுக்கமாக இருக்க முடியாது. நாகரிகத்தின் உயர்ந்த பண்பு எது? பிறருக்காகத் தன்னைத் தியாகம் செய்வது. வாழ்க்கையின் ஊற்று, பாமர மக்களிடமிருந்துதான் கிளம்பு கிறது. நாம் மனிதர்களாகப் பிறந்துவிட்டால் மட்டும் போதுமா? மனிதர்களாக வாழவும் வேண்டும். ஒரு மனிதனுக்குச் சக்தியை அளிப்பவை மூன்று. தன் மதிப்பு, சுய அறிவு, புலனடக்கம் ஆகிய இவைதான். நல்ல மனிதர்கள், சட்டங்களுக்கு அதிகமாகக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடாது. அதிகார ஆசையைக் காட்டிலும் அடிமைப்படும் ஆசைதான் உலகத்திலேயே மகா கேவலமானது. தன்னலத்திலே சந்தோஷங் காண்பது வாழ்க்கையா? இல்லை. பிறர் நலத்திலே சந்தோஷங் காண்பதுதான் வாழ்க்கை. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது நமக்கு முக்கிய மல்ல; நமது மனச்சாட்சி என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம். ஒரு தேசத்திற்கு ஆபத்தில்லாத காலத்தில்தான் அந்தத் தேசத்தி லுள்ளவர்கள் அதிகமாகப் பேசத் தொடங்குகிறார்கள். எல்லோரையும் சகோதரர்களாகக் கருதுவதே கடவுள் வணக்க மாகும். மற்றவர்களுடைய நன்மையைத் தன்னுடைய நன்மையாகக் கருதுகிறவன் எவனோ அவனே, மனிதர்களில் சிரேஷ்ட மானவன். உண்மையான வீரன் யார்? வாழ்க்கையிலே வெற்றி பெறு கிறவன் தான். மனிதர்களை அவர்களுடைய செயல்களிலிருந்து தான் மதிப்பிடுகிறோம்; வார்த்தைகளிலிருந்து அல்ல. நமது வாழ்நாள் முழுவதும் மற்றவர்களை நேசித்துக் கொண் டிருப்போமாக. அந்த நேசத்துடனேயே நாம் மரிப்போமாக. ஏனென்றால் மறுபிறப்பில் நாம் சிநேகிதர்களையே சந்திப்போம். இந்த உலகத்திலே நீ தனி யொருவனாக நின்று விட்டபோதிலும், உனது மனச்சாட்சிக்கு மட்டும் பொய்யனாகி விடாதே. மனச்சாட்சிப்படி நடக்கிறவனை உலக விவகாரம் தெரியாதவ னென்று கூறுகிறோம். என்ன அறியாமை! வாழ்க்கை யென்பது சந்தோஷத்தின் போக்கு அல்ல; கடமையின் பாதை. உலகமே எனது வீடு. உலகத்திலுள்ள அத்தனை பேரும் எனது நண்பர்கள். பிறர்க்கு இதஞ் செய்து கொண்டிருப்பதே எனது மதம். நமது வார்த்தைகளிலிருந்து அல்ல, நமது வாழ்க்கையிலிருந்தே நமது மதம் இன்னதென்று மற்றவர்கள தெரிந்துகொள்ள வேண்டும். மற்றவர்களிடம் நீ அன்பு செலுத்த வேண்டுமானால், முதலில் உன்னிடம் நீ அன்பு செலுத்திக்கொள்வதை மறந்து விடு. இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம்? பழமையாகிற சவக் குழிக்கும், புதுமையாகிற தொட்டிலுக்கும் மத்தியில். சத்தியம், நமது பக்கத்திலே இருக்கிறது. ஆதலின் நாம் வெற்றி யடைவோம் என்பது நிச்சயம். எப்பொழுது என்று கேளாதீர்கள். இறுதி வெற்றி நம்முடையதுதான். நமது பிரயத்தனங்கள் ஒவ்வொன்றிலும் எண்ணமும் செயலும் கலந்திருக்க வேண்டும்; வெற்றி யடைவோம் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். ஒருவன், மற்றவர்களுக்கு உதவி செய்கிற விஷயத்தில் கோடை காலத்து நிழலாகவும், குளிர்காலத்து உஷ்ணமாகவும் இருக்க வேண்டும். மகத்தான வெற்றிகளை யடையவேண்டுமானால் மகத்தான ஆபத்துகளைக் கடக்க வேண்டும். ஆகாயத்தில் பட்சிகளைப்போல் பறக்கலாம்; இவையெல்லாம் சுலபம். ஆனால் பூமியில் மனிதனாக நடந்து கொள்வது மிகக் கடினம். நீர் கலங்கி இருக்கிறபோது அதில் உன் முகத்தைச் சரியாகக் காணமுடியாது. அதைப்போல் தேசத்தில் அமைதி குலைந் திருக்கிறபோது உண்மையைக் காணமுடியாது. உலகத்தைநாம் எப்படிப் பார்க்கிறாமோ அப்படித்தான் உலகமும் நம்மைப் பார்க்கிறது. ஒரே சத்துருவுடன் அடிக்கடி போராடும்படியாக வைத்துக் கொள்ளாதே. ஏனென்றால் அவன் உனது யுத்த தந்திரங்களை யெல்லாம் தெரிந்து கொண்டு விடுவான். மற்றவர்களிடத்தில் குற்றங் குறைகள் காண்கிற விஷயத்தில் நீ குருடனாகி விடு. அவர்களிடத்தில் காணப்படும் நற்குணங் களைப் பாராட்டு. உனது தகப்பனார் உயர்ந்த ஸ்திதியில் இருந்தாரென்று சொன்னால் அதில் உனக்கென்ன கௌரவம்? அவரைவிட மேலான நிலையை யடைய வேண்டுமென்று பிரயத்தனப்பட வேண்டாமா? நாம் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யாததனால் உலகம் கெட்டுப்போய் விடவில்லை. எதைச் செய்ய வேண் டாமோ அதைச் செய்வதனால் தான் உலகம் கெட்டுப் போகிறது. புதிய சந்தர்ப்பங்களை புதிய கடமைகளை நமக்குக் கற்பிக் கின்றன. ஒரு காலத்தில் நன்மையாயிருந்தது, பின்னொரு காலத்தில் தீமையாகக் கருதப்படுகிறது. விஞ்ஞான சாஸ்திரங்கள் அனைத்திலும் அவன் பயிற்சி பெற்றிருக் கிறான்; பல பாஷைகள் அவனுக்குத் தெரியும்; அநேக நூல்களைப் படித்திருக்கிறான். ஆனால் அவன் இன்னும் சிந்திக்கத்தான் தொடங்கவில்லை. ஒருவனை விட மற்றொருவன் மேலானவன் என்ற முத்திரை யிட்டு, கடவுள் யாரையும் பிறப்பிக்கவில்லை.. ஒருவன், சேணத்தை முதுகிலே மாட்டிக் கொண்டு பிறக்கவில்லை; மற்றொருவன், அந்தச் சேணத்தின் மீது ஏறி உட்காரப் பிறக்கவில்லை. உணவுப் பொருள்களின் விலை ஒன்றுக்கு மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. ஆனால் ஏழைத் தொழிலாளர்களாகிய எங்களுடைய கூலி விகிதமோ ஒரு பைசாகூட உயரவில்லை. ஒரு போர் வீரனுடைய உயர்வோ தாழ்வோ, அதன் எந்த லட்சியத்திற்காகப் போராடுகிறானோ அந்த லட்சியத்தின் உயர்வு தாழ்வுகளையே பொறுத்திருக்கிறது. ஒரு காரியத்திலே பிரவேசிப்பதற்கு முன்னர் அதனுடைய சாதக பாதகங்களைப் பற்றி யோசித்து அந்தக் காரியத்திலே பிரவேசியாமலிருப்ப வனைக் காட்டிலும், இறங்கி அதில் தோல்வியடைகிறவனே மேலானவன். ஒருநாளில் ஏதோ ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் சந்தோஷத்தினால் துள்ளிக் குதித்து விட்டுப் பிறகு சோர்ந்து போவதைக் காட்டிலும் நாள் முழுவதும் ஒரே நிதானமாகச் சந்தோஷத்துடன் இருப்பது நல்லதல்லவா? வாழ்க்கை முழுவதும் இந்தக் கோட்பாட்டை ஒருவன் கடைப்பிடித்தால் நல்லது. இரக்கமில்லாமல் சதா சுழன்று கொண்டிருக்கும் ஒரு சக்கரத்தோடு பிணைக்கப்பட்டுக் கிடப்பதற்காக மனிதன் பிறக்கவில்லை. அவன், தன்னுடைய சரித்திரத்தைத் தானே நிர்மாணஞ் செய்துகொள்ளும் ஆற்றல் படைத்தவன். மனிதன், இயற்கையைத் தன் நோக்கத்திற்கிணங்க இயக்கு விக்கக் கூடும். அதுமட்டுமல்ல; அவன் தன்னையே ஒரு புதிய மனிதனாக ஆக்கிக்கொண்டு விடலாம். செல்வத்தின் குழந்தைகள் இரண்டு. ஒன்று பயம்; மற்றொன்று வியாதி. அப்படியே வறுமையின் குழந்தைகள் இரண்டு. ஒன்று தைரியம்; மற்றொன்று நம்பிக்கை. செல்வம், சீலமற்றவை எவையோ அவற்றையே நாடும் இயல்புடையது; வறுமை, சீலம் எதுவோ அதனையே கண்டு பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது. உயர்ந்ததொரு லட்சியமில்லாத வாழ்க்கை, அந்த லட்சியத்திற் காக உழைக்காத வாழ்க்கை, வாழ்க்கையல்ல; அது, செடி கொடிகள் வளர்கிறமாதிரிதான். மகனே! நீ செடி கொடியாக, காய் கறியாக இருக்க விரும்புகிறாயா? அவ்வப்பொழுது உண்டாகிற ஓர் உற்சாகத்தினால் ஏதோ ஒரு காரியத்தைச் செய்துவிட்டப் பிறகு ஓய்ந்து போவதில் பிரயோஜன மில்லை. நமது உற்சாகத்தை ஒழுங்குபடுத்தி நிதானமாகச் செலுத்திக் கொண்டு போவோமானால், உருப்படியான காரியங்களைச் செய்ய முடியும். சரித்திரப் பிரசித்தி பெற்ற மகான்கள் அனைவரையும் பாருங்கள்! உலகத்திற்கு யார்யார் நன்மை செய்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும், துன்பமயமான வாழ்க்கையே நடத்தி இருக்கி றார்கள். அவர் களுடைய வாழக்கை முழுதும் ஒரே போராட்ட மயமாக இருந்திருக்கிறது. அவர்கள் ஒன்று, மனிதர்களோ டாவது போராடி இருக்கிறார்கள்; அல்லது இயற்கைச் சக்தி களோடாவது போராடி இருக்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்வதில்தான் அவர்கள் திருப்தி அடைந்திருக்கின்றனர் பணமே! உன்னுடைய உருவம் சிறியது. ஆனால் உலகத்தை நீ ஆள்கிறாய் சிறியவர்களும் பெரியவர்களும் உனக்கு வணக்கஞ் செலுத்துகிறார்கள். அரசர்களும் புரோகிதர்களும் உனக்கு அடி பணிகிறார்கள். மோட்சத்தையும் நரகத்தையும் சேர்த்து வாங்கக் கூடிய சக்தி உனக்கு இருக்கிறது. என்ன விந்தை! இப்பொழுது உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது மகா ஆபத்தா யிருக்கிறது. அப்படிப்பட்ட காலமாயிருக்கிறது இது. ஒரு குழந்தை, எவ்விதக் களங்கமுமில்லாமல் சிரித்துக்கொண்டிருப் பதைப் பார்த்தால், ``ஐயோ, இந்தக் குழந்தை, என்னென்ன அவஸ்தைகள் படப்போகிறதோ? இப்பொழுது இஃது, அமைதியாக இறந்து போய்விடக்கூடாதா?'' என்று நான் சிந்திப்பதுண்டு. என் ஒருவனுக்கு மட்டும் விமோசனமோ பரம சாந்தியோ கிடைக்கவேண்டுமென்று நான் பாடுபடமாட்டேன். உலகத்திலுள்ள எல்லா ஜீவராசிகளின் விமோசனத்திற்கும் பரம சாந்திக்கும் நான் பாடுபடுவேன்; அதற்காக உயிர்வாழ்வேன். முடியுடைய வேந்தனைக் காட்டிலும், மனோ நிம்மதி யுடையோன் தான் மேலோன். பூர்ணிமை நிலவிலே பணக்காரன், தன் படுக்கையில் புரண்டுக் கொண்டு தானிருக்கிறான். ஆனால் ஏழையோ, அமாவாசை இருட்டில்கூட அமைதியாகத் தூங்கு கிறான். காரணம் என்ன? பின்னவனுடைய மனோ நிம்மதிதான். கடவுள், பூமியைப் படைத்தார்; ஆகாயத்தைப் படைத்தார்; எல்லா வற்றையும் படைத்தார்; அடிமையை மட்டும படைக்க வில்லை. கடவுள், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்படிச் செய்திருக்கிறார். அவருடைய சந்நிதானத்தில் ஏற்றத் தாழ்வுகளே கிடையாது. ஐயா! எங்களுடைய பூர்வீகத்தைக் கொண்டு, எங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதீர்கள் இரண்டுக்கும் நடுவே பெரிய பள்ளம் இருக்கிறது. மற்றவர்களுடைய செயல்களினால் நாம் விமோசனம் அடைய முடியுமா? ஒருநாளும் முடியாது. நமது விமோசனம், நமது கையிலே, நமது முயற்சியிலே இருக்கிறது. இந்த உலகத்திலே நாம் செய்கிற காரியங்கள், உடனே பலனைக் கொடுக்கும் என்பதில்லை. அப்படி எதிர்பார்த்து நாம் செய்யக் கூடாது. அதுபோலவே, மற்றவர்கள் நம்மிடத்தில் அன்பு செலுத்துவார்கள், நன்றி காட்டுவார்கள் என்பதற்காகவும் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது. நமது மனச்சாட்சி என்ன ஆணையிடுகிறதோ அதனையே செய்ய வேண்டும். அப்படிச் செய்வது நமது கடமை என்று கருத வேண்டும். அந்தக் காரியத்தின் பலாபலன்கள் என்னவென்பதைப் பற்றி நாம் கவலைப் படக்கூடாது. எந்த நாட்டில் செல்வம் கொழிக்க, அது காரணமாக மனிதர்கள் சீரழிந்து போகிறார்களோ அந்த நாடு, அநேக தீங்குகளுக்கும் நோய் களுக்கும் இரையாவது நிச்சயம். சிற்றரசர்களும், பிரபுக்களும் அங்குத் தோன்றலாம்; மறையலாம். ஒரு மூச்சினால் அவர்கள் சிருஷ்டிக்கப் பட்டுவிடலாம். ஆனால் ஒரு நாட்டிற்குப் பெருமையைத் தரக்கூடிய விவசாயிகளை ஒரு முறை அழித்து விட்டோமானால், மீண்டும் அவர்களை உயிர்ப்பிக்க முடியாது. சமுதாயம் வேறு; அரசாங்கம் வேறு. இரண்டினுடைய உற்பத்தி வரலாறுகளும் வேறு. நம்முடைய தேவைகள் காரணமாகச் சமுதாயம் தோன்றுகிறது. நம்முடைய கெட்ட சுபாவங்கள் காரணமாக அரசாங்கம் தோன்றுகிறது. சமுதாயம், எந்த நிலையில் இருந்தாலும் நமக்கு நன்மை தருவதுதான். ஆனால் அரசாங்கம் அப்படியில்லை. அஃது எவ்வளவு பண்பட்ட நிலையிலிருந்தும், இன்றியமையாத ஒரு தீங்காகவே இருக்கிறது. சுதந்திர புருஷன் யார்? சுதந்திர புருஷன் யார்? எவனொருவன், தன்னைத் தானே அடக்கியாளும் ஆற்றல் பெற்றிருக்கிறானோ, எவனை, வறுமை, மரணம், பந்தங்கள் முதலியன பயமுறுத்த வில்லையோ, எவன், தனது ஆசாபாசங்களை எதிர்த்து நிற்கிறானோ, எவனை, புறச்சக்திகள் எவையும் வந்து தாக்க முடியாமல் பலவீனப் பட்டுப்போய் விடுகின்றனவோ, எவன் முன்னிலையில் அதிருஷ்டம் என்பது தோல்வியடைந்து போகிறதோ அவன் சுதந்திர புருஷன். சுதந்திரத்திற்கு யார் அருகரல்லர்? சுதந்திர அரசு வேண்டுமென்று ஒரு ஜாதியார் ஆசைப்படலாம். ஆனால் சோம்பேறித் தனத்தினாலோ, அஜாக்கிரதையினாலோ, கோழைத்தனத்தினலோ, பொதுநல உணர்ச்சியின்மையாலோ மேற்படி சுதந்திர அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்ய முடியாதவர்களாயிருந்தால், அந்தச் சுதந்திர அரசு தாக்கப்படுகிறபோது அதனைக் காப்பாற்றப் போராடமலிருந்தால், அந்தச் சுதந்திர அரசை அவர்களிட மிருந்து பறிப்பதற்கு யாரேனும் முயற்சி செய்கிறபோது அந்த ஏமாற்றத்திற்கு உட்பட்டு விடுகிறதா யிருந்தால், திடீரென்று ஏற்பட்ட ஒரு சோர்வினாலோ, பீதியினாலோ, அல்லது உற்சாகக் குறைவினாலோ ஒரு தனி மனிதன் எவ்வளவு பெரிய மனிதனாயிருந்தாலும் அவனிடம் தங்களுடைய சுதந்திரங் களைப் பராதீனப்படுத்தி விடுவார்களானால், அல்லது தங்களுடைய பரம்பரையான ஸ்தாபனங்களைக் கவிழ்த்து விடக்கூடிய மாதிரியான அதிகாரங்களை அவனிடம் ஒப்புவித்து விடுவார்களானால், அவர்கள் சுதந்திரத்திற்குத் தகுதியுடையவர்களல்லர். அப்படி அவர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தாலும் அதை அவர்கள் நீண்டகாலம் அனுபவித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சுதந்திர சிந்தனை மேலதிகாரி யொருவனுடைய விருப்பப்படியும் இச்சைப் படியும் பெறுகிற சுதந்திரம் உண்மையான சுதந்திரமாகாது. பலவித பந்தங் களுக்குட் பட்டு எவன் வாழ்கிறானோ, எவன் அந்த வாழ்க்கையினால் சலிப் படையாமலிருக்கிறானோ, அவன் உண்மையான வாழ்க்கையை நடத்தியவனாக மாட்டான். அவன், மேற்படி பந்தங்களினால் கட்டுண்டு கிடப்பதற்கே தகுதியுடையவன். ஒரு நாடு, சுதந்திரத்திற்காக முயற்சி செய்து தோல்வியுற்றுப் போனாலும் பாதகமில்லை. அதன் முயற்சிக்காக அதனை நாம் பாராட்ட வேண்டும். அதன் முயற்சி வெற்றி பெற வில்லையோ யென்பதற்காக அதனிடத்தில் அநுதாபஞ் செலுத்த வேண்டும். அதிகார சக்தி, பிறரால் எதிர்க்கப் படுகிறபோது பலஹீனமடை கிறது. தன் குற்றத்தை அது நன்கு உணர முடிகிறதாதலால், ஒரு சிறிய எதிர்ப்பைக் கண்டும் அஃது ஓடப்பார்க்கிறது. அடிமைகளாயிருக்கப் பட்டவர்கள், எந்த க்ஷணத்தில் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்களோ அந்தச் சிந்தனையிலேயே, சுதந்திரம் கிடைக்கப் போகிறது என்ற நம்பிக்கையிலேயே, ஊக்கம், உணர்ச்சி, ஆபத்தைத் துச்சமாகக் கருதுதல், ஒற்றுமை யான மனப்பான்மை முதலியன வெல்லாம் ஏற்படுகின்றன. சுதந்திரமே! அழைத்துப்போ! சுதந்திரமே! உனக்காக கொடி தூக்குகிறோம். நாங்கள் செய்த யுத்தங்களெல்லாம் உன் பொருட்டுத்தான். நாங்கள் நடத்திய பிரார்த்தனை யெல்லாம் உன்னை முன்னிலைப்படுத்தித்தான். எங்களுடைய ஒவ்வொரு காரியமும் உனக்காகத்தான். ஆதலின், ஓ சுதந்திரமே! எங்களை அழைத்துக்கொண்டுபோ! நீ எங்கே அழைத்துக்கொண்டு போகிறாயோ அங்கே நாங்கள் வர அஞ்சமாட்டோம். எங்களுடைய இருதயத்தை உன்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். நீ, விளக்கின் ஒளியாயிருக்கிறாய், அந்த ஒளியின் மூலம் எங்களுக்கு என்ன காட்டுகிறாயோ அதைக் காண நாங்கள் தயார். எங்களைச் சுற்றி எவ்வளவு இருட்படலம் சூழ்ந்து கொண்டிருந்தாலும் அவற்றை விலக்கிக் கொண்டு உன்னைப் பின்பற்றிவர நாங்கள் தயார். சுதந்திரத்தின் நான்கு அம்சங்கள் சுதந்திரத்தைத் தனி நபரின் சுதந்திரமென்றும், தேசீய சுதந்திர மென்றும், அரசியல் சுதந்திரமென்றும், பொருளாதார சுதந்திர மென்றும் நான்கு அம்சங்களாகப் பிரித்துக் கூறுவதுண்டு. எந்த நாடு சுதந்திர நாடாயிருக்கிறதோ, எந்த நாட்டில் ஜன ஆட்சி நிலவுகிறதோ, எந்த நாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் இருக்கின்றனவோ, எந்த நாட்டில் எல்லோருக்கும் ஜீவனோபாயத்திற்கும், ஓய்வு கொள்வதற்கும், அவரவருடைய திறமையினால் முன்னுக்கு வருவதற்கும் ஒரே மாதிரியான சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவோ அந்த நாட்டில் வசிக்கிறவன் தான், பூரண சுதந்திரம் பெற்ற பிரஜையாவான். அடிமைகள் யார்? சகோதரர்களே! வீரம் நிறைந்த, சுதந்திரமுள்ள தந்தையருக்குப் பிறந்ததாக நீங்கள்பெருமை பேசிக்கொள்கிறீர்கள். ஆனால் பூலோகத்தில், ஓர் அடிமை மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிற வரையில் நீங்கள் சுதந்திர புருஷர்கள் என்றும் வீரபுருஷர் களென்றும் உங்களைச் சொல்லிக் கொள்ள முடியுமா? உங்களுடைய சகோதர்களில் ஒரு சிலரேனும் அடிமை பந்தத் தின் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்க, அதை நீங்கள் உணராமலிருக்கிற வரை, நீங்களும் கேவலமான அடிமைகள் தான்; விடுதலை பெறத் தகுதி யுடையவர்களில்லைதான். நம்முடைய நன்மைக்காக நமது கட்டுக்களை மட்டும் அறுத்துக் கொண்டு, மானிட ஜாதிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையை மறந்து விட்டிருப்பது உண்மையான சுதந்திரமாகுமா? இல்லை. நமது சகோதரர்கள் என்னென்ன பந்தங்களுக்குட்பட்டிருக் கிறார்களோ அவைகளில் நாமும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். மனப்பூர்வமாக, செயல் முறையில் மற்றவர் களுடைய விடுதலைக்காக நாம் உழைக்கவேண்டும். வீழ்ந்து பட்டவர்களுக்கும் பலஹீனர்களுக்கும் பரிந்துபேச அஞ்சுகிறவர்கள் அனைவரும் அடிமைகளே. தாங்கள் உண்மை என்று எதைக் கருதுகிறார்களோ அதைத் தைரியமாக வெளி யிட்டு, அது காரணமாக, துவவேஷம், திட்டு, பரிகாசம் முதலிய வற்றைச் சம்பாதித்துக் கொள்ளப் பயந்து, அந்த உண்மையை மனதில் அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் அத்தனை பேரும் அடிமைகளே. ஒரு கட்சியில் இரண்டு அல்லது மூன்று பேர்தான் இருந்த போதிலும், அந்தக் காட்சியில் நியாயம் இருக்கும் பட்சத்தில், அதனை ஆதரித்துப் பேச முன்வராத வர்கள் எல்லோரும் அடிமைகளே. போர் அல்லது மரணம் ஸ்காத்லாந்துப் படைகளுக்கும் இங்கிலாந்துப் படைகளுக்கும் 1314ஆம் வருஷம் பான்னக்பர்ன் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. அப் பொழுது ஸ்காத்லாந்து படைத் தலைவனாகிய ராபர்ட் ப்ரூஸ்1 தன் போர் வீரர்களைப் பார்த்துச் சொல்கிறான் : எனது ஸ்காத்லாந்து வீரர்களே! நமது தலைவன் ஸர் வில்லியம் வாலஸ்,2 யாருக்காக ரத்தம் சொரிந்தான்! உங்களை எத்தனை முறை நான் போர்களத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்! இந்தத் தடவை நீங்கள், ஒன்று மரணப்படுக்கையாவது கொள்ள வேண்டும்; அல்லது வெற்றியாவது அடையவேண்டும். இன்றுதான் நல்ல நாள்! இதுதான் நல்ல சமயம்! உங்களுக்கு முன்னே போர்க்களத்தைப் பாருங்கள்! அதோ, எட்வர்ட்டின்3 திமிர்பிடித்த அதிகார சக்தி நம்மை நெருங்குகிறது. அதன் அர்த்தமென்ன? விலங்கும் அடிமைத் தனமும்! இங்கே எந்தக் கீழ்மகன் துரோகியா யிருக்கப் போகிறான்? யார் இங்கே கோழையினுடைய சவக்குழியை நிரப்பப்போகிறான்? இங்குள்ள வர்களில் யாரார் அடிமைத்தனத்தில் இச்சை கொண்டிருக்கிறார்கள்? அவர்களெல்லோரும் இப்பொழுதே, போர்க்களத்திற்குப்புறமுதுகு காட்டட்டும்; பறந்து ஓடட்டும். எவன் ஸ்காத்லாந்தினுடைய அரசனுக்காகவும், ஸ்காத்லாந்தி னுடைய தர்மத்திற்காகவும் சுதந்திர வாளைத் தனது உறையி லிருந்து வேகமாக உருவுகின்றானோ, எவன் சுதந்திர புருஷனாக வாழ்வது அல்லது சுதந்திர புருஷனாக வீழ்வது என்று பிரதிக்ஞை செய்து கொண்டிருக் கிறானோ அவன். என்னைப் பின்பற்றி வரட்டும். கொடுங்கோன்மையின் துன்பங்களென்ன, துயரங்களென்ன, இவைகளின்மீது ஆணை! அடிமை விலங்கினால் தளையிடப் பட்டிருக்கிற உங்களுடைய மக்கள் மீது ஆணை! முறுக்கேறி நிற்கும் எங்கள் ரத்தக் குழாய்களைக் காலிசெய்வோம். ஏன்? நமது எதிர்கால சந்ததியார் சுதந்திரமாயிருக்க வேண்டுமென்ப தற்காக. பிறருடைய சுதந்திரத்தைப் பறிமுதல் செய்து அது காரணமாகக் கர்வம் படைத்திருக்கிறவர்கள் கீழே விழுந்து போவார்கள். நம் எதிரே நிற்கும் சத்துருப் படையில் ஒருவனை வீழ்த்துவது, ஒரு கொடுங்கோலனை வீழ்த்துவது போலாகும். நாம் கொடுக்கிற ஒவ்வோர் அடியும் சுதந்திர நாதமாகவே கிளம்புகிறது. ஆதலின் போர் புரிவோம்; அல்லது இறப்போம். ஆறுதல் உண்டு இப்பொழுது நமக்கு ஆத்ம பரிசோதனை ஏற்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியான காலத்தில் வீரர்களென்றும், தேச பக்தர் களென்றும் சொல்லிக் கொள்கிறவர்கள் தேச சேவையிலிருந்து ஒதுங்கி விடுதல் கூடும். ஆனால் எவனொருவன், இந்தச் சமயத் தில் தேசத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருக்கி றானோ, அவனுக்கு ஆண் பெண் அனைவருடைய நன்றியும் விசுவாசமும் கிட்டும். நரகத்தை வெற்றி கொள்வது எப்படிக் கடினமோ அப்படியே கொடுங்கோன்மையை வெற்றி கொள்வது கடினம். ஆனால் நமக்கு ஓர் ஆறுதல் உண்டு. போராட்டம் எவ்வளவுக் கெவ்வளவு கடினமாயிருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு நமது வெற்றியும் சாசுவதமானதா யிருக்கும் என்பதுவே அந்த ஆறுதல். நான் சாதிக்க முடியும் நான் ஏன் அடிமையாயிருக்க வேண்டும்? ஓர் எஜமானனுடைய சேவையில் நான் இருக்க வேண்டுமென்ற தேவையென்ன? இந்த இரண்டு கைகளைக் கொண்டேதான் நான் அநேக அற்புதங் களைச் செய்வேன். எஜமானன் வீற்றிருக்கிற ஆசனத்தைக் காட்டிலும் சிறந்ததோர் ஆசனத்தைச் சமைக்க எனக்கு ஆற்றலுண்டு. அப்படியிருக்க, அவனுடைய தயவு எனக்கு எதற்கு? அவனுக்கு நான் ஏன் வணங்கி நிற்கவேண்டும்? கடவுளைப்போல் ஆக என்னால் முடியும். ஆதலின் உறுதியான நெஞ்சுபடைத்த எனது தோழர்களே! என்னோடு சேர்ந்து நில்லுங்கள். தட்டுத் தடுமாறி நில்லாதீர்கள். புகழ்பெற்ற வீரர் களாகிய நீங்கள் என்னைத் தலைவனாகத் தெரிந்தெடுத்திருக் கிறீர்கள். என்னிடம் பூரண நம்பிக்கை வைத்திருக்கிற உங்களை வைத்துக்கொண்டு நான் அநேக காரியங்களைச் சாதிக்க முடியும். எல்லோரும் சம உரிமையுடையவர்கள் ஏழையோ பணக்காரனோ, வெள்ளையனோ கறுப்பனோ, சிறியவனோ பெரியவனோ, அறிஞனோ முட்டாளோ, யாரா யிருந்தாலும் அவனுக்குத் தன் அபிப்பிராயத்தைச் சொல்ல உரிமையுண்டு. அவன் தப்பாகச் சொல்லட்டும், சரியாகச் சொல்லட்டும், எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சொல்லட்டும், அவனுக்குத் தன் கருத்தை வெளியிட உரிமை யுண்டு. விருப்பமுள்ளவர்கள் அதைக் கேட்க உரிமையுடைய வர்கள். மற்றவர்களுடைய உரிமைகளைப் பற்றித் தீர்ப்புக் கூற, தங்களுக்கு அதிகாரம் இருக்கிறதென்று யாரும் கருத வேண்டாம். இந்த விஷயத்தில் எல்லோரும் சம உரிமை யுடையவர்களே. சகோதரா! தைரியங்கொள்! சகோதரா! தைரியங்கொள்; உற்சாகமாயிரு. என்ன நேரிட்ட போதிலும் நாம் சுதந்திரத்தைக் காப்பாற்றியே ஆகவேண்டும். நமக்கு ஒரு முறை, இரண்டு முறை, இன்னும் எத்தனை முறையானாலும் தோல்வி ஏற்படட்டுமே, என்ன பிரமாதம்? சுதந்திரத்திற்காகப் பாடுபடுகிற நம்மை, ஜனங்கள், அசட்டை செய்யலாம்; நம் விஷயத்தில் நன்றி கெட்டவர்களாக நடந்து கொள்ளலாம்; வேறு விதமான துரோகங்களையும் நமக்குச் செய்யலாம். அதிகார சக்தி என்ன, போர்ச் சேவகர்களென்ன, பீரங்கி களென்ன, குற்ற விவகாரச் சட்டங்களென்ன, எல்லாம் சேர்ந்து நம்மைப் பயமுறுத்தலாம். ஆயினும் சகோதரா! தைரியங் கொள்; உற்சாகமாயிரு. சுதந்திரத்தை நாம் காப்பற்றியேயாக வேண்டும். தாய்நாடு உனது தாய் நாட்டை நேசி. உனது முன்னோர்கள் நித்திய நித்திரை செய்து கொண்டிருப்பது இங்குதான். உன் இருதயத் தில் நிரந்தர வாசம் செய்கிற உனது மனைவி, முதன் முதலாக உன்னிடம் வந்து காதல் மொழி பேசியது இங்குதான். உனது நாடு கடவுளால் உனக்கு அருளப்பட்ட வீடு. உனது பெயர், உனது புகழ், நீ யாரென்பதற்கு அடையாளம் ஆகிய இவை யாவும் உனது நாட்டில் அடங்கி இருக்கின்றன. உனது எண்ணங்களை, யோசனைகளை, உனது ரத்தத்தை, தாய் நாட்டுக்குக் கொடு. நமது முன்னோர்களுடைய நோக்கப்படி அதனை முன்னுக்குக் கொண்டுவா. அதனை அழகு படுத்து. பொய்மையினாலோ, அடிமைத்தனத்திலோ அதனைக் கறைப் படுத்தாதே. எங்களது உரிமை உலகத்தின் சட்ட திட்டங்களெல்லாம் ஒடிந்து விழுந்தாலும் சரி, நாங்கள் என்ன எண்ணுகிறோமோ அதைச் சொல்லியே தீருவோம். நாங்கள் கேட்கப் படல் வேண்டும். நாங்கள், ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லாமல் விடமாட்டோம்; ஓர் எழுத்தைக் கூடத் திரும்பப் பெற்றுக் கொள்ள மாட்டோம். பொய்யர்கள் பயப்படட்டும், கோழைகள் கூசிக் குலையட்டும், துரோகிகள் பின் செல்லட்டும், நாங்கள் எதை எண்ணு கிறோமோ அதைச் சொல்லியே தீருவோம். சுதந்திர உதயத்தின் ரேகைகள் எங்களுக்குப் புலப்படுகின்றன அப்படியிக்க, பிறருடைய ஏச்சுப் பேச்சுகளுக்கு நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். நாங்கள் உயிரோடிருக்கிறவரை, நாங்கள் தாராளமாக மனம் விட்டுப் பேசவேண்டும். ஐரோப்பாவின் எல்லாப் பாகங்களிலு மிருந்தும் புயற்காற்று வந்து அடித்தால் தானென்ன? நாங்கள் வாய்விட்டுப் பேசியே தீருவோம். இன்றோடு நாம் என்ன கூறினோமென்பதாவது பிற்காலத்தில் ஏடுகளில் பதிந்திருக்கு மல்லவா? சிறைவாசியின் கூற்று விசுவாசம், நம்பிக்கை, பொறுமை ஆகிய இவையே எனக்கு வழிகாட்டிகள். எனது மனச்சாட்சி மகா பரிசுத்தமாயிருக்கிறது. ஆண்டவன் என் பக்கத்திலிருக்கிறான். நான் எந்தச் சத்துருவுக்கு இனி அஞ்ச வேண்டும்? எனது ரணங்களை, பொறுமையானது ஆற்றுகிறது. அன்போ, கட்டுக் குட்படாமல் சஞ்சாரம் செய்கிறது. எனது தேகத்தை அவர்கள் இந்த அறைக்குள் பூட்டி வைக்கிறார்கள். ஆனால் என் ஆத்மாவை அவர்கள் பூட்டிவைக்க முடியாதே! சிறைக்காவலனுடைய கொடுமையோ சொல்ல முடியாது. எல்லோர் விஷயத்திலும் அவன் ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்கிறான். ``உங்கள் தேகத்துச் சதையைத் தின்னுங்கள்; அல்லது உங்களைச் சுற்றியிருக்கும் சுவர்களிலுள்ள கற்களைத் தின்னுங்கள்'' என்று எங்களுக்குக் கூறுகிறான். அதிகமான பணம் வைத்துக் கொண்டிருப்போர் உலகப் பற்று நிரம்பியவர்களாய் இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருப்தியே உண்டாவதில்லை. மேலும் மேலும் சுரண்டப் பார்க்கிறார்கள். நானோ, எல்லோரைக் காட்டிலும் ஏழை. உலகக் கவலைகளி லிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன். எனவே, பணக்காரர்கள் பந்தத்திலே வாழ்கிறார்கள், நான் சுதந்திரமாயிருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு வலுத்திருக்கிறது. எஞ்சியிருப்பது என்ன? பூமி, என்னுடையதென்று சொல்கிறான் நிலச் சுவான்தாரன். சமுத்திரம், என்னுடையதென்று கூறுகிறான் வியாபாரி, பூமியின் கீழ்க் கிடக்கும் சுரங்கப் பொருள்கள், லேவாதேவித் தொழில் செய்கிறவனுடைய பைகளில் சென்று நிரம்புகின்றன. எனக்கென்று எஞ்சி யிருப்பது என்ன? எஜமானனுடைய வேலைக்காக, சக்கரம் சுழல்கிறது. தொழி லாளர்கள், எதை உற்பத்தி செய்தார்களோ அதைப் பாதுகாக்க, தொழிலாளர் களால் தயாரிக்கப்பட்ட எஃது ஆயுதம் மின்னு கின்றது. படை வீடென்ன, புரோகிதர்களின் பிரசங்க மேடைக ளென்ன, நீதி ஸ்தலங்களென்ன. இவை யாவும், பணக்காரர் களுடைய பிள்ளைகளுக்குத் தாராளமாகத் திறந்து விடப்படு கின்றன. கல்வி, கலை, ஆயுதம் முதலிய யாவும் அவர்களுடை யனவே; அவர்களுக்காகவே. எனக்கென்று எஞ்சியிருப்பது என்ன? அவர்களுடைய படிப்புக்கு நான் பணங்கொடுக்கிறேன். அவர்கள் சௌக்கியமாயிருக்கும் பொருட்டு நான் உழைக் கிறேன். இவைகளுக்குப் பதிலாக எனக்கு கிடைப்பது என்ன? எப்பொழுதும் பொருள் முட்டுப்பாடு, அறியாமை, வியாதி இவைதான். உழைப்பு! உழைப்பு! உழைப்புக்குப் பிறகு? சந்தோஷ மற்ற வீடு! அங்கே, அந்த வீட்டிலே, பசிக் கொடுமை யினால், கீழான உணர்ச்சிகள் பல தாண்டவம் செய்கின்றன. எனக்கு யார் சாசுவதமான நஷ்டத்தைக் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நான் சாசுவதமான லாபத்தைக் கொடுக்கிறேன். சந்தோஷகரமான ஓய்வை, பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கலாம். விளையாடுகிற குழந்தை, சிரிக்கிற மனைவி, எல்லாம் அவர்களுக்குத் தான். எனக்கென்று எஞ்சி யிருப்பது என்ன? அவர்கள், அந்தப் பணக்காரர்கள், என்க்கு என்ன கொடுக்கி றார்கள்? கஞ்சத்தனமான சில காசுகள்! அல்லத சிறைவாசம்! கடைசியில் சவக்குழி! அதனோடு, என்னுடைய சம்பந்தம் அற்றுப்போய் விட்டதாக அவர்கள் கருதுகிறார்கள். எனது காதலியின் உடைந்துபோன இருதயத்தை, அவர்கள் செப்பனிட்டுக் கொடுப்பதில்லை. இறந்து போகும். தறுவாயி லுள்ள குழந்தையை உயிரோடு கொடுப்பதில்லை. நாங்கள், அதாவது என் போன்றவர்கள், எங்களுடைய பள்ளமான கன்னங்களைக் கொண்டும், குழிவிழுந்த கண்களைக் கொண்டும் அவர்கள்மீது எப்படி வெற்றி காணமுடியும்? நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கிறபோது, எங்கள் நிலைமையைப் பரிசீலனை செய்து பார்க்கிறபோது, ஒருவருக்கொருவர் என்ன கேட்டுக்கொள்கிறோம்? `பணக்காரர்களுக்கு நிலம் இருக்கிறது. எனக் கென்று எஞ்சி யிருப்பது என்ன?'' எங்களுக் கிழைக்கப்படும் கொடுமைகளை நாங்கள் மௌன மாக பொறுத்துக் கொண்டிருக்கிறோம். அவற்றை எங்களுடைய மூளையில் பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள், அந்தப் பணக்காரர்கள், எங்களை மந்த புத்தி யுள்ளவர்களென்று கருதுகிறார்கள். நாங்கள் இறந்துபோனவர் களென்று நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் மறுபடியும் புத்துயிர் பெற்றெழுவோம். அப்பொழுது ஒரு முழக்கம், நாட்டை ஊடுருவிச் செல்லும்; ஜன சக்தியினிடையே ஒரு பெருமூச்சு ஓடும்.............................. பிரதிக்ஞை ஒருவன் மனப் பூர்வமாக, உள்ளுணர்ச்சியுடன் ஒரே ஒருமுறை பின்வருமாறு பிரதிக்ஞை செய்து கொண்டால் போதுமானது:- ``சுதந்திரம், எனது தேசம், மானிட சமுதாயம் ஆகிய இம் மூன்றினிடத்திலும் நான் பரிபூரண நம்பிக்கை கொண்டிருக் கிறேன். அவைகளுக்காக நான் உயிருள்ள வரையில் போராடு வேன்; எந்த ஆயுதம் அகப்பட்டாலும் அதைக் கொண்டு போராடுவேன். மரணம் நேரிட்டாலும் சரி, துவேஷம், உல்லங்ஙனம் இவைகளுக்குட்படுத்தப் பட்டாலும் சரி, எதனையும் நான் பொருட்படுத்த மாட்டேன். ஏனென்றால் அப்படிப் போராடுவது எனதுகடமை.'' சந்தோஷ புருஷன் யார்? மற்றவர்களுடைய இஷ்டத்தை எதிர் பார்த்து எவனொருவன் காரியங்கள் செய்யாமலிருக்கிறானோ, எவனுக்கு, அவனுடைய தூய எண்ணமே கவசமாயிருக்கிறதோ, எவன், உண்மையாக நடந்து கொள்வதன் மூலம் தன் திறமையைக் காட்டுகிறானோ அவனே சந்தோஷ புருஷன். எவன், கீழான் இச்சைகளின் ஆட்சிக்கு உட்படாமலிருக் கிறானோ, எவனுடைய ஆத்மா மரணத்தை எதிர்பார்த்துத் தயாராயிருக்கிறதோ, எவன், உயர்ந்த காதலுக்கோ இழிவான பேச்சுக்கோ தன்னை பந்தப்படுத்திக் கொள்ளாமலிருக் கிறானோ? அவனே சந்தோஷ புருஷன். எவன், பொய் வதந்திகளினின்று தன்னை விடுதலை செய்து கொண்டிருக்கிறானோ, எவன், தான் சாந்தி பெறுவதற்குரிய இடமாகத் தன் மனச் சாட்சியை வைத்துக் கொண்டிருக் கிறானோ, எவனுடைய ராஜ்யத்தில் முகஸ்துதிக்காரர்கள் ஆதரிக்கப்படமாட்டார்களோ, அல்லது குற்றவாளிகள் பெரிய மனிதர்களாக்கப்பட மாட்டார்களோ அவனே சந்தோஷ புருஷன். அதிர்ஷ்ட வசத்தினால் முன்னுக்கு வருகிறவர்களைக் கண்டு எவன் பொறாமைப் படாமலிக்கிறானோ, தீயொழுக்கம் என்றால் என்ன வென்பது எவனுக்குத் தெரியாமலிருக்கிறதோ, அரசாங்கச் சட்டதிட்டங்களுக் கல்லாமல், நற்குண மென்பதற் காக எவன், மற்றவர்களுக்கு, அவர்களுடைய நன்மையை முன்னிட்டு, அதிகமான சகாயத்தை உண்டு பண்ணுகிறானோ அவனே சந்தோஷ புருஷன். எவன், கடவுளின் நன்கொடைகளை இரவல் கேளாமல், அவருடைய திருவருளுக்குமட்டும் பிரார்த்திக்கிறானோ, எவன், ஒரு நல்ல புஸ்தகத்துடனோ அல்லது சிநேகிதனுடனோ தன் பொழுதைப் போக்குகிறானோ அவனே சந்தோஷ புருஷன். இப்படிப்பட்டவன், கீழான சக்திகளினின்று விடுதலை யடைந்த வனாயிருக்கிறான். இவனுக்கு, மேலே ஏறுவோம் என்ற நம்பிக்கையு மில்லை; கீழே விழுந்துவிடுவோம் என்ற அச்சமுமில்லை. இவன், எந்த ராஜ்யத்திற்கும் அரசனாயில்லா விட்டாலும், தனக்குத் தானே அரசன். இவனுக்கென்று ஒன்று மில்லை; ஆனால் எல்லாம் உடையவனா யிருக்கிறான். ஏதோ ஒன்றுக்காக வாழ் உலகத்திலே ஆயிரக்கணக்கான மனிதர்கள் மூச்சு விடுகிறார்கள்; அங்கும் இங்குமாக நடமாடுகிறார்கள்; ஆம், உயிர்வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். கடைசியில் வாழ்க்கை மேடையி னின்று மறைந்து விடுகிறார்கள். பிறகு அவர்களைப் பற்றி யாரும் கேள்விப்படுவதில்லை. ஏனிப்படி? உலகத்திற்காக ஒரு சிறு நன்மையைக் கூட அவர்கள் செய்ய வில்லை. அவர்க ளுடைய நல்லாசியை ஒருவர்கூடப் பெறவில்லை. யாருடைய விமோசனத்திற்கும் அவர்கள் துணை செய்யவில்லை. அவர்கள், ஒரு வரி எழுதவில்லை; ஒரு வார்த்தை பேசவில்லை. இப்படி இருந்து அவர்கள் இறந்து விட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கை விளக்கு அணைந்துவிட்டது. அவர்களைப் பற்றி இப்பொழுது யாருக்கும் நினைவே கிடையாது. அமரத்துவம் வாய்ந்த ஓ மனிதனே! நீயும் அப்படியே இருந்து இறந்துவிடப் போகிறாயா? அப்படிச் செய்யாதே. ஏதோ ஒன்றுக்காக வாழ் நன்மை செய். உனது சீலத்தின் ஞாபகச் சின்னமாக ஏதேனும் ஒன்றை ஸ்தாபித்து விட்டுப்போ. அந்த ஞாபகச் சின்னம் உனது பிற்காலத்தில் எவ்வித புயற்காற்றி னாலும் அலக்கழிக்கப் படாமல் இருக்கட்டும். உனது வாழ் நாளில் எத்தனையோ பேரை நீ சந்திக்கிறாய் அல்லவா? அத்தனை பேருடைய இருதயத்திலும் உனது பெயரை அன்பிலே தோய்த்து எழுதிவிடு. பிறகு உன்னை எப்பொழுதும் எப்படி நட்சத்திரங்கள் ஸ்திரமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கின் றனவோ அப்படியே உனது பெயரும் அவர்களுடைய இருதயத் தில் சதா பிரகாசித்துக் கொண்டிருக்கும். நேர்மையே எனது சுவாசம் தண்டனையை எதிர்பார்த்து நிற்கும் ஒருவன் கூறுவது! நீதிபதிகளே! என்னுடைய முடிவு என்ன வென்பதைப்பற்றி எனக்குக் கவலையே இல்லை. நான் எந்தவிதமான ஆபத்தையும் எதிர்த்து நிற்பேன்; மரண தேவதையின் முகத்தை நேரிலே பார்ப்பேன். ஏனென்றால் நேர்மையை நான் கவசமாக அணிந்து கொண்டிருக்கிறேன். இருட்டுச் சிறையிலே நான் தவிக்குமாறு எனக்கு நீங்கள் தண்டனை விதிக்கலாம்; அல்லது தூக்கு மேடையின் மீது என்னை ஏற்றுவிக்கலாம். ஆனால் கடமையைச் செய்துவிட்டதாக எனக்கு ஒருவித மனச்சாந்தி உண்டா யிருக் கிறதே அதை யாரும் கலைக்க முடியாது; அழிக்க முடியாது. நியாயமா? குளிர்ந்த நிழலில் இருந்து கொண்டு, வாழ்க்கையின் எல்லாச் சௌகரியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறவர்கள் `இப்பொழுதுள்ளதே சரி; இருக்கிறபடியே எல்லாம் இருக்கட்டும்; எவ்விதமான புதிய சீர்திருத்தமும் தேவையில்லை' என்று சொல் கிறார்கள். இதைவிடப் பெரிய தவறு வேறொன்று மில்லை. இவர்கள், சீர்திருத்த வாதிகளைப் பார்த்து, `கற்பனை உலகத்திலே சஞ்சரிக் கிறவர்கள்' என்று பரிகசிக்கிறார்கள். இது நியாயமா? சமுதாயத்திலுள்ள பெரும்பாலோர், வறுமையிலும் அறியாமையிலும் அழுந்திக் கிடப்பதைப் பார்த்துக் கொண் டிருப்பது நியாயமா? இப்பொழுதுள்ள நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமென்று சொல்வது குற்றமாகுமா? நாம் சௌக்கியமா யிருக்கிறோம் என்ற காரணத்தினால், உலகமெல் லாம் சௌக்கியமா யிருக்கிறதென்று கருதுவது சரியா? மதத்தைப்பற்றித் தவறான கருத்து பாரமார்த்திகத்தைப்பற்றி அவ்வளவாகப் பேசாமல் வெளகிகத்தைப்பற்றியே அதிகமாகப் பேசுவோர் பலர் இருக் கின்றனர். அவர்களனைவரையும் கெட்ட மனிதர்களென்று கருதி, துச்சமாகப் பேசிவிடுவதா? கூடவே கூடாது. அவர்கள் நல்ல காரியங்களைச் செய்யவேண்டு மென்பதற்காகவே பிறந்தார்கள். ஆனால், அவர்கள், தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறபோது, புரோகிதர்கள், அரசாங்கத்தோடும் பிரபுக்களோடும் சேர்ந்து கொண்டு, தங்களுக்கு விரோதமாகக் காரியங்கள் செய்வதையும், நியாயமாக நடக்கிறவர்களைப் பரிகசித்து வருவதையும் பார்த்தார்கள். பிறகுதான் அவர்கள், மதத்தைப் பற்றிக் கேவலமாகப் பேச ஆரம்பித்தார்கள். பூமா தேவியே! கேள்! கொடுங்கோலர்களுடைய சூழ்ச்சிகளுக்கு இனிதயை தாட்சண்யமே கிடையாது. மேல் பதவியிலிருக்கும் கீழ் மக்களை இனி நாங்கள் சட்டை செய்யப் போவதே இல்லை. அடிமைகள் நிறைந்த நாட்டை இனிக் கண்ணெடுத்துப் பாராதபடி அதற்குத் தாளிட்டு விட்டோம். பூமா தேவியே! கேள். இந்தச் செய்தி வானுலகத்திலும் பரவட்டும். என்ன அந்தச் செய்தி? ``எங்கள் நாடு விழித்துக் கொண்டு விட்டது. அதன் சக்தி இதுகாறும் உறங்கிக் கொண்டிருந்ததே தவிர இறந்து போவதில்லை. நமது சம்பத்து இத்தாலிய வீரனாகிய மாஜினி (1805-1872) தன் தாய்க்கு எழுதுகிற கடிதத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறான்; தாயே! இந்த உலகத்தில் உன்னுடைய வாழ்க்கை மிகக் கடினமான வாழ்க்கையாகிவிட்டது. என்னுடைய வாழ்க்கை யும் அப்படித்தான். நாம் விரும்பினால், இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் இன்னும் அதிக சந்தோஷத்துடன் இருக்கலாம். ஆனால் இந்த நெருக்கடியான காலத்தில், நமது ஒழுக்க முறைகளில் ஒரு புரட்சி ஏற்பட்டிருக்கிற இந்தச் சமயத்தில், மற்றவர்களிடத்தில் இல்லாத ஒரு சம்பத்து நம்மிடத்தில் இருக்கிறது. அஃதென்ன? குன்றாத நம்பிக்கை. கடவுள், ஏதோ யதேச்சையாக அல்லது தமது ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு நம்மைப் படைக்கவில்லை. தமது எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொள்தவற்கான ஒரு கருவியாகவே நம்மைப் பிறப்பித்திருக்கிறார். கடவுள், பரம கருணாநிதி என்ற நம்பிக்கை யுடையவர்கள் நாம். ஏதோ காரணமில்லாமல், நாம் கஷ்டப்படும்படி பார்த்துக்கொண் டிருக்கமாட்டார் அவர். நன்னாள் வருக! எந்த நாளில், அடிமைகள் தங்கள் விலங்குகளை அறுத் தெறிகிறார்களோ, எந்த நாளில், அடிமைகள் கொடுங் கோன்மைக்குப் பயந்து மண்டியிட்டுப் பணிய மறுக்கிறார் களோ, எந்த நாளில், அடிமைகள் மிருகங்களைப்போல் நடத்தப் படாமலிக்கிறார்களோ அந்த நன்னாள் விரைவிலே வருக! உலகனைத்தும் அந்நான்னாளைக் கொண்டாடுக! அந்த நாள் வரும்; நிச்சயமாக வரும். அப்பொழுது, மனிதனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உரிமைகள் மீண்டும் அவனிடம் வந்து சேரும். மானிட ஜாதியின் ரத்தம் சிந்தாதிருக்கும் நாள் விரைவிலே வரும். மானிட சகோரத்துவம் என்பது எல்லோராலும் அங்கீ கரிக்கப் படுமாக! அடிக்கு அடியே பதில் என்று இல்லாமல், தீமைக்கு நன்மையே செய்கிற காலம் வருமாக! உலகத்தில் சண்டை சச்சரவுகள் ஒழியுமாக! பரம சத்துருவா யிருந்தவனும் சிறந்த நண்பனாக மாறும்படியான காலம் வருமாக! உலகத்திலே யாரும் யார்மீதும் ஆதிக்கஞ் செலுத்தாதபடியும், கொடுங்கோன்மைக்கு முன்னர் தலை வணங்காதபடியும் இருக்கிற காலம் வருமாக! அப்பொழுது, பிறப்பினால் அனைவரும் ஒன்றுபட்டவரே, அவரவரும், தங்கள் தங்கள் மனிதத் தன்மையினால் உயரவேண்டும் என்ற உண்மை அங்கீகரிக்கப்படுமாக! அந்த நாள் வரப்போகிறது. அப் பொழுது சிறைகளிலிருந்து ஒரு பெரு முழக்கம் கிளம்பும். அந்த நாள், அந்த நேரம், அந்தச் சந்தர்ப்பம் வருகிற வரை என் உயிர் இருக்குமானால், என்னுடைய அறிவு இதயம், கைகள் இவைகளைக் கொண்டு, அடிமைச் சங்கிலிகளை உடைத் தெறிவேன். பிறர் பொருளைச் சுரண்டி வாழ்கிறானே அவனுக்கு அந்தச் சுரண்டும் சக்தி யில்லாமற் செய்து விடுவேன். ஆகாய வாணியே இதற்குச் சாட்சி. என்ன துன்பம் நேரிட்டாலும், என்ன ஆபத்து வந்தாலும், இந்த என் கடமையினின்று ஓடமாட்டேன். சுதந்திரத்தின் தேவைகள் யாவை? பிரசுராலயத்தின் வார்த்தை ஸன் யாட் ஸென்னின் சொற்பொழிவுகளை முதன் முதலாக வெளிக்கொணர்ந்த பெருமை, இந்திய மொழிகளில் தமிழ் மொழிக்கே உண்டு. இவை, எங்கள் ஆசிரியர் சர்மாஜி, ரங்கூனில் நடத்திவந்த “ஜோதி” பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்தன. பிறகு இவற்றை நூல் வடிவாக்கித் தரவேண்டுமென்று அன்பர் பலர் கோரினர். அப்படியே 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திரத் தின் தேவைகள் யாவை? என்ற தலைப்புடன் நூல் வெளியாயிற்று. இதனை அன்பர் பலரும் பாராட்டினார். துரதிருஷ்ட வசமாக இதன் மறு பதிப்பு பிறகு வெளிவராமல் நின்று விட்டது. அன்பர்கள் பலர், இதனை மறு பதிப்பாக வெளிக்கொணருமாறு எம்மை நேரிலும் கடித வாயிலாகவும் விடாது வற்புறுத்திவந்தனர். இப்பொழுதே - முதற்பதிப்பு வெளியான சுமார் இருபது ஆண்டு களுக்குப் பிறகே - இந்த இரண்டாம் பதிப்பை வெளியிடக் கூடிய வாய்ப்பு எமக்குக் கிட்டியது. இதனையொட்டி ஸன் யாட் ஸென்னின் வாழ்க்கை வரலாறும், சீனாவின் வரலாறும் வெளியிடப் பெறுகின்றன. இந்த மூன்று நூல்களையும் சேர்ந்தாற்போல் படிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம். முதற் பதிப்பைக் காட்டிலும் இந்த இரண்டாம் பதிப்பு அநேக அமிசங்களில் செப்பனிடப் பெற்று, உரிய இடங்களில் தேவையான அடிக்குறிப்புக்களுடன் வெளிவருகிறது. எப்பொழுதும்போல் அன்பர்கள் எமக்கு ஆதரவு தருவார்களென்று நம்புகிறோம். அரு. சொக்கலிங்கன் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் வாசகர்களுக்கு ஸன் யாட் ஸென், 1866ஆம் வருஷம் நவம்பர் மாதம் பன்னி ரண்டாந்தேதி ஓர் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தான். சீன மக்களுக்கு நல்வாழ்வு நல்க வேண்டுமென்ற நன்னோக்கத்துடன், மஞ்சூ ஆதிக்கத்தை எதிர்த்துச் சுமார் பதினேழு பதினெட்டு ஆண்டுகள் இடைவிடாது போராடினான். கடைசியில் வெற்றி கண்டான். 1912ஆம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதி குடியரசு அமைந்தது. ஸன் அதன் முதல் பிரசிடெண்டானான். ஆனால் அந்தப் பதவியை நீடித்து வகிக்கவில்லை. நாட்டின் ஒற்றுமைக்காக அதனை - பதவியை - யுவான் ஷி காய் என்ற தந்திரம் மிக்க ஒருவனுக்கு விட்டுக் கொடுத்தான். பிறகு, சீனாவைப் பல துறைகளிலும் புனர் நிர்மாணம் செய்யக் கருதி திட்டங்கள் பலவற்றை வகுத்தான்; அவற்றைச் செயல்படுத்த முனைந்தான். கிடைத்த கைம்மாறு என்ன? ஆசாபங்கமும் நோயுந்தான்! இவனைப் பற்றிக்கொண்ட நோய், 1925ஆம் வருஷம் மார்ச்சு மாதம் பன்னிரண்டாந்தேதி இவனை வானுலகுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது. இந்தச் சில வரிகளில் ஸன் யாட் ஸென்னின் வாழ்க்கை முழுவதும் அடங்கிவிட்டது. ஆனால் இவனுடைய சுருங்கிய கால வாழ்க்கையைச் சுற்றி, கோமிண்ட்டாங் கட்சி என்ற ஒரு கட்சி மட்டுமல்ல, சீனாவின் சுமார் அரை நூற்றாண்டுச் சரித்திரத்தின் பெரும் பகுதியுமல்லவோ இயங்குகிறது? சீனாவைப் புனர் நிர்மாணம் செய்யக் கருதி இவன் வகுத்த திட்டங்களில் ஒன்றாகவே இங்குத் தரப்பட்டுள்ள பதினாறு சொற் பொழிவுகளையும் கருதவேண்டும். இந்தச் சொற்பொழிவு களின் தொகுப்பு ஸான் மின் சூயி என்ற சீனப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஸான் மின் சூயி, கட்சி வேற்றுமை களுக்கப்பாற்பட்ட ஒரு பொதுத்தன்மையைப் பெற்று சீன மக்கள் எல்லோருடைய மதிப்புக்குமுரியதாய் இருந்து வருகிறது. 1924ஆம் வருஷம் காண்ட்டன் நகரத்திலுள்ள குவாங்டுங் தேசீய சர்வகலாசாலையில் ஸன் யாட்ஸென், இந்தச் சொற்பொழிவு களை வாரத்திற்கொன்றாக - இடையில் சில வாரங்கள் விட்டு - தொடர்ந்து நிகழ்த்தினான். நிகழ்த்திய தேதியை அந்தந்தச் சொற்பொழிவுத் தலைப்பின்கீழ் கொடுத்திருக்கிறேன். ஸன், முதலில் பதினெட்டு பிரசங்கங்கள் செய்வதாகத் திட்ட மிட்டிருந்தான். ஆனால் பதினாறு பிரசங்கங்களே இவனால் செய்ய முடிந்தது. இவனுக்கேற்பட்டிருந்த உடல் நலக் குறைவுதான் இதற்குக் காரணம் சுமார் ஒரு வருஷத்திற்கு முந்தியிருந்தே நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். தவிர, இந்தச் சொற்பொழிவுகளுக்காக இவன் சேகரித்து வைத்திருந்த குறிப்புக்களில் பல, 1922ஆம் வருஷம் காண்ட்டன் நகரத்தில் இவன் வசித்துக் கொண்டிருந்த அரசாங்க மாளிகை தாக்கப்பட்ட காலத்தில் தீக்கிரையாயின. மற்றும், தன் நினைவுகளி லிருந்தவைகளை எழுத்திலே கொண்டு வரவும், தேவையான நூல் களைப் பார்வையிட்டு விஷயங் களைச் சேகரிக்கவும் இவனுக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் இவன், கையில் எவ்விதக் குறிப்புக்களும் வைத்துக்கொள்ளாமல், முதுகுப்பக்கம் ஒரு தடியை ஊன்றிக் கொண்டு, நின்ற வண்ணம் இந்தப் பிரசங்கங்களைச் செய்தான். இது மிகவும் சிரம சாத்தியமான காரியமென்பது, இந்தப் பிரசங்கங் களைப் படித்த பிறகு ஒருவாறு புலனாகும். ஏனென்றால், இந்தப் பிரசங்கங்களில் உலக சரித்திரத்தையே ஒருவாறு அளந்து காட்டியிருக்கிறான்; அந்த உலக சரித்திரத்தைச் சீனாவின் வாழ்க்கை யோடு பொருத்திப் பார்த்திருக்கிறான். இவைகளைக் கொண்டு இவனுடைய பரந்த அறிவை நாம் ஒருவாறு அறிந்து அனுபவிக்க முடிகிறது. ஸன் யாட் ஸென்னுக்குச் சீன மொழியிலும் ஆங்கில மொழியிலும் நல்ல புலமை யுண்டு; ஜப்பானிய மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் நல்ல பயிற்சி யுண்டு. தவிர எதையுமே சிந்தித்துப் பேசுவான். இருந்தாலும் இந்தப் பிரசங்கங்களைப் படிப்போர், இவற்றில் சில குறைகள் இருப்பதாகச் சொல்லலாம். கூறியது கூறல், சிற்சில இடங்களில் மாறுபடக் கூறல், சில நுண்ணிய விஷயங்களை விளக்கிக் கூறாமை முதலிய சில குறைகள் காணப்படுவது ஓரளவுக்கு உண்மையே. ஆனால் இந்தப் பிரசங்கங்களைச் செய்த போது ஸன் யாட் ஸென்னின் உடல நிலையும், மனோ நிலையும் எப்படி இருந்தன, யார் பொருட்டு இந்தப் பிரசங்கங்கள் செய்யப்பட்டன என்பவைகளை நாம் கவனிக்கவேண்டும். தவிர, ஒவ்வொரு பிரசங்கத்திற்கும் தலைப்புக் கொடுத்து அந்தத் தலைப்புக்குட் பட்டுப் பேசவேண்டுமென்ற நியதியை இவன் கடைப்பிடிக்க வில்லை. பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது; பேசினான். கடமை உணர்ச்சியானது இவனைப் பேசுமாறு செய்தது. ஏற்கனவே சொன்னபடி, உடல் நலமின்மை, ஓய்வின்மை முதலிய காரணங் களினால், ஒரு திட்டமிட்டுக் கொண்டு, ஒரு வரம்பு கட்டிக் கொண்டு பேசுவதென்பது இவனால் இயலாமற் போய்விட்டது. இத்தகைய காரணங்களினால், இந்தப் பிரசங்கங்களில் மேலே கூறப் பெற்ற சில குறைகள் புகுந்தன வென்று சொல்லலாம். இந்நூலிலுள்ள ஒவ்வொரு பிரசங்கத்திற்கும் நான் தலைப்புக் கொடுத்திருக்கிறேன். இதற்குப் பொறுப்பு நானே. இதே பிரகாரம், நூலுக்குச் சுதந்திரத்தின் தேவைகள் யாவை? என்று பெயர் சூட்டியிருக்கும் பொறுப்பும் என்னுடையதே. சீன மொழியில் செய்யப்பட்ட இந்தப் பிரசங்கங்களுக்கு மொழி பெயர்ப்பாகவும் விரிவுரைகளாகவும் ஆங்கிலத்தில் அநேக நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு, இந்தப் பிரசங்கங்களைத் தமிழில் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு மரபு உண்டு. இதனைத் தெரிந்துகொள்வது ஒரு மொழி பெயர்ப்பாசிரியனுடைய முதற் கடமையாகும். இந்தக் கடமையை ஒருவாறு உணர்ந்த நிலையில் இருந்துகொண்டு, இந்தப் பிரசங்கங் களுக்குத் தமிழுடை அணிவித் திருக்கிறேன். கூடிய வரை, ஸன் யாட் ஸென்னின் கருத்துக்களுக்கு ஊனம் ஏற்படாதபடி கவனித்து என் எழுதுகோலை ஓட்டியிருக் கிறேன். இந்தப் பதினாறு சொற்பொழிவுகளைக் கொண்டு மட்டும் ஸன் யாட் ஸென்னினுடைய அரசியல் அறிவைப் பற்றி எவ்வித தீர்ப்பும் கூறிவிட வேண்டா மென்று வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், இவன், வேறு சில நூல்களை எழுதியிருக்கிறான்; சில திட்டங்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறான். அவைகளையெல்லாம் தெரிந்து கொள்கிற வரையில், இவனுடைய அரசியல் அறிவைப் பற்றிய தீர்ப்பைத் தள்ளி வைக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரசங்கங்களைப் படித்துச் செல்கிறபோது, வாசகர்கள், ஒரு விஷயத்தை மனத்தில் முக்கியமாகக் கொள்ள வேண்டும். அதாவது, ஸன், 1924ஆம் வருஷத்தில் இந்தப் பிரசங்கங் களைச் செய்தான். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இவை களைப் படிக்கிறோம். இடையே உலகத்தில் எத்தனையோ சம்பவங்கள், எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவையெல்லாம், இந்தப் பிரசங்கங்களைப் படிக்கிற போது நடுநடுவே வந்து நிற்கும். அவைகளைச் சிறிது ஒதுக்கி வைத்து விட்டு இந்தப் பிரசங்கங்களைப் படிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஸன் யாட் ஸென், தன் வாழ்க்கையின் முற்பகுதியில் சில ஆண்டுகள், மக்களின் உடல் நோயைக் குணப்படுத்தும் டாக்டரா யிருந்தான்; பிற்பகுதியாகிய பெரும் பகுதியில், சீன சமுதாயத்தைப் பொதுவாக அரித்துக் கொண்டு வந்த பல்வேறு நோய்களை அகற்றும் டாக்டராகப் பணியாற்றினான். இரண்டிலும் வெற்றியே கண்டான். ஆக, தனி மனிதர்களுடைய நோயையோ, சமுதாயத்தி னுடைய நோயையோ, ஏதோ ஒரு நோயை அகற்றும் பணியிலேயே இவன் வாழ்நாள் பூராவும் செலவழிந்தது. டாக்டர் ஸன் யாட் ஸென் என்று இவன் அழைக்கப்பட்டு வந்ததும் வருவதும் மிகவும் பொருத்தமாயிருக்கிறதல்லவா? பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முதலிலும் ஐரோப்பிய வல்லரசுகளின் ஆசைப்பசிக்கு இரையாகி, அடியோடு இல்லா தொழியுமோ என்ற துரதிருஷ்ட மான நிலைமையில் இருந்த சீனாவை, அந்த நிலைமையிலிருந்து மீட்டு, புத்துயிர் அளித்துப் புதுவாழ்வு நல்க முனைந்தவன் ஸன். உயிர்கொடுக்கும் தகுதி படைத்தவன் யார்? நல்வாழ்வு நல்க வல்லவன் யார்? ஒரு தந்தையே யன்றோ? இந்தத் தந்தை ஸ்தானத்திலேயே இவனை வைத்துப் போற்றுகிறார்கள் சீனர்கள். 1940ஆம் வருஷம் மார்ச்சு மாதம் இருபத்தோராந் தேதி நடைபெற்ற கோமிண்ட்டாங் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், ஸன் யாட் ஸென்னை “சீனக் குடியரசின் தந்தை” என்றே எல்லோரும் அழைக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் நிறைவேறியது. அதுமுதற் கொண்டு சீனமக்களின் இதயத்தில், ஸன் யாட் ஸென் ஒரு தந்தையாகவே இருந்து வருகிறான். கோமிண்ட்டாங் கட்சியைப் பொறுத்த மட்டில், ஸன் யாட் ஸென், “ஸூங்க்லி” என்று அழைக்கப்பட்டு வந்தான். இந்தச் சீன வார்த்தைக்குத் “தலைவன்” என்பது பொருள். இவனைப் பின்பற்றிய அனைவரும் தலைவன் என்றே அழைத்து வந்தார்கள். இங்ஙனம் டாக்டராகவும், தந்தையாகவும், தலைவனாகவும் வாழ்ந்த ஸன் யாட் ஸென்னை முழுவதுமாகப் பார்க்க வேண்டு மானால், அதாவது இவனுடைய முழு வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டுமானால், இவனுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய நூலையும், அந்த வாழ்க்கைக்குப் பின்னணியாக இருந்த சீனாவின் வரலாற்றையும், இந்த நூலோடு சேர்த்துப் படிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். என் எழுத்துக்களுக்கு ஆதரவுதரும் அன்பர்களுக்கு நன்றி. தியாகராயநகர், சென்னை - 17 1 - 9 - 1961 முதற் பகுதி தேசீய தத்துவம் மின் - த்ஸு சூரியோதய மானதும் நான் வேலை செய்கிறேன்; சூரியாஸ்தமனமானதும் நான் ஓய்வு கொள்கிறேன்; குடிநீருக் காகக் கிணறு தோண்டுகிறேன்; உணவுக்காக நிலம் பயிரிடுகிறேன்; மன்னர் பிரானின் அதிகாரம் என்னை என்ன செய்ய முடியும்? 1 சீன சமூகம் (27- 1 - 1924) ஸான்மின்1 கோட்பாடுகளைப் பற்றி உங்களுக்குச் சொல்லவே இன்று இங்கு வந்திருக்கிறேன். ஸான்மின் கோட்பாடுகள் யாவை? சுருக்கமாக, அவை நமது தேசத்தின் விமோசனத்திற்கான கோட்பாடுகள். கோட்பாடு என்றால் என்ன? அஃதோர் எண்ணம்; ஒரு நம்பிக்கை; ஒரு சக்தி. ஒரு பிரச்னையைப் பற்றி நாம் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்கிறபோது, முதலில் ஓர் எண்ணம் உண்டாகிறது. அந்த எண்ணம் தெளிவுபட தெளிவுபட அதில் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. அந்த நம்பிக்கையிலிருந்து ஒரு சக்தி பிறக்கிறது. ஆகை யால் எந்த ஒரு கோட்பாடும் ஓர் எண்ணத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அந்த எண்ணமானது, நம்பிக்கையை உண்டு பண்ண வேண்டும். அந்த நம்பிக்கையிலிருந்து சக்தி உதயமாக வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் கோட்பாடு ஸ்திரமாக அமையும். ஸான்மின் கோட்பாடுகள் நமது தேசத்திற்கு விமோசனம் அளிக்கும் என்று நாம் ஏன் சொல்லுகிறோம்? ஏனென்றால், அந்தக் கோட்பாடுகள், சீனாவை உலக வல்லரசுகளுடன் சம அந்தஸ்தில் நிற்கும்படி செய்யும்; சர்வதேச விஷயங்களிலும், அரசாங்க நிருவாக விஷயத்திலும், பொருளாதார வாழ்க்கையிலும் சீனாவை மேலான நிலையில் வைக்கும். அப்பொழுதுதான் சீனா இந்த உலகத்தில் நிரந்தரமாக வாழ முடியும். ஸான்மின் கோட்பாடுகள் நமது தேச விமோசனத்திற்காக ஏற்பட்ட கோட்பாடுகள். சீனாவுக்கு இப்பொழுது விமோசனம் தேவையில்லையா வென்று உங்களை நான் கேட்கிறேன். அப்படித் தேவையானால் ஸான்மின் கோட்பாடு களில் நாம் நம்பிக்கை வைப்போமாக! அந்த நம்பிக்கையானது, சீனாவைக் காப்பாற்றக் கூடிய ஒரு மகத்தான சக்தியை உற்பத்தி செய்யும். இன்று, தேசீயம் என்ற கோட்பாட்டைப் பற்றிச் சொல் கிறேன். சமீபத்தில் கோமிண்ட்டாங்1 கட்சியானது சீர்த்திருத்தி யமைக்கப் பட்டபோது, தேசீய விமோசனத்திற்குப் பிரசாரம் அவசியம் என்று வற்புறுத்தப்பட்டது. ஜனங்களிடத்தில் பிரசாரஞ் செய்ய வேண்டுமானால், அவர்களுக்கு நமது கோட்பாடுகளைப் பற்றி விஸ்தரித்துச் சொல்ல வேண்டும். சென்ற பத்து வருஷங்களுக்கு மேலாக, ஜனங்களுடைய மூன்று கொள்கைகள் (ஸான்மின் கோட்பாடுகள்) சில அறிஞர்களுக்குத் தெரிந்திருந்தாலும், பொது வாக இவைகளைப் பற்றிப் பலரும் இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை யென்றுதான் சொல்ல வேண்டியிருக் கிறது. ஆகையால், தேசீயம் என்ற கோட்பாட்டைப் பற்றி உங்களுக்குச் சிறிது விரிவாக எடுத்துச் சொல்கிறேன். தேசீயத்தின் கோட்பாடு என்ன? சீனாவின் சமுதாய வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் இவற்றின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தோமானால் தேசீயக்கோட்பாடானது ராஜ்யத்தின் கோட்பாடாகவே இருந்திருக்கிறது. தாங்கள் எந்தக் குடும்பத்தில் பிறந்தவர்களோ அந்தக் குடும்பத்திற்கும், எந்த வமிசத்தைச்2 சேர்ந்தவர்களோ அந்த வமிசத்திற்குமே சீனர்கள் அதிகமான பக்தி விசுவாசத்துடன் நடந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இதனால் சீனாவில், குடும்ப பக்தியும் வமிசபக்தியும்தான் காணப்பட்டனவே தவிர, தேசபக்தியென்பது இல்லாமலே போய்விட்டது. சீனர்கள் மணல் மூட்டை மாதிரி என்று அந்நியர்கள் கூறுகிறார்கள். ஏன்? நமது ஜனங்கள் குடும்பத்திற்கும் வமிசத்திற்கும்தான் பக்தி செலுத்தினார்களே தவிர தேசத்திற்குப் பக்தி செலுத்தவில்லை. இதனால் தேசீயம் என்பது நமக்கு இல்லாமலே இருந்தது. நம்மில் பலரையும் ஒன்று படுத்தக் கூடிய சக்தி குடும்பத்திற்கும் வமிசத் திற்குமே இருந்திருக்கிறது. சீனர்கள், தாங்கள் எந்த வமிசத்தைச் சேர்ந்தவர்களோ, அந்த வமிசத்தின் நலனுக்காக, தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். ஆனால் தேச நலன் பொருட்டு, தியாகம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் சீனர்களுக்கு ஏற்பட வில்லை. சீனர்களின் ஒற்றுமை உணர்ச்சியானது, வமிச அளவோடு தான் நின்றதே தவிர தேச அளவுக்கு விரிவடையவில்லை. தேசீயக் கோட்பாடே ராஜ்யத்தின் கோட்பாடென்று நான் மேலே சொன்னது சீனாவுக்குத்தான் பொருந்துமே தவிர, மேனாடு களுக்குப் பொருந்தாது. மேனாட்டார், ஜாதி வேறே, ராஜ்யம் வேறே என்று பிரிக் கிறார்கள். மின் - த்ஸு என்ற சீன வார்த்தைக்கு நேஷன் என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.1 நேஷன் என்ற வார்த்தைக்கு இரண்டு பொருள்கள் உண்டு. ஒன்று இனம்; மற்றொன்று ராஜ்யம்.2 இவ்விரண்டும் வேறுவேறு. ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக் குழப்பிக் கொண்டுவிடக் கூடாது. அநேக சீன வார்த்தைகளுக்கு இரு பொருள்கள் உண்டு. உதாரணமாக ஷே - ஹுயி என்ற வார்த்தைக்கு, ஒன்று திரண்டிருக்கிற ஜனக்கூட்டம் என்றும், ஒழுங்காக அமைந் துள்ள ஓர் அமைப்பு என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. ஜாதி என்பதும் ராஜ்யம் என்பதும் நெருங்கிய தொடர்பு கொண்டவை தான்; ஆனால் வேறு வேறானவை. ஜாதியும் ராஜ்யமும் தொடர் புடையவை என்பது, சீனாவைப் பொறுத்த மட்டில் மிகவும் உண்மையானது. எப்படியென்றால், பூர்வ காலந்தொட்டு, சீனாவில் ஒரே இனத்தினரிடமிருந்து ஒரு ராஜ்யம் தோன்றி முன்னடைந் திருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் ஒரே இனத்தினரிடமிருந்து பல ராஜ்யங்கள் தோன்றியிருக்கின்றன. உதாரணமாக, உலகத்தின் மிக வலுவுள்ள (சாம்) ராஜ்யமாகிற இங்கிலாந்தை எடுத்துக் கொள்வோம். வெள்ளை நிறத்தவரை அடிப்படையாகக் கொண்ட இந்த ராஜ்யமானது, கறுப்பு நிறத்தவர், பழுப்பு நிறுத்தவர் முதலிய வர்களையும் தன்னகத்தே கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமாகப் பரிணமித்திருக்கிறது. எனவே, இனமும் ராஜ்யமும் ஒன்று எனச் சொல்வது இங்கிலாந்தைப் பொறுத்த மட்டில் சரியாகாது. இன்னும் பிரிட்டிஷாருக்குச் சொந்தமான ஹாங்காங் தீவை3 எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஆயிரக்கணக்கான சீனர்கள் வசிக்கிறார்கள். எனவே, ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ராஜ்யம் நடைபெறுகிற தென்று சொன்னால், பிரிட்டிஷ் ஜாதியைக் குறிப்பதாகுமா? அல்லது இந்தியாவைப் பாருங்கள். அது பிரிட்டிஷ் ராஜ்யத்தைச் சேர்ந்தது. ஆனால் அதில் முப்பத்தைந்து கோடி இந்தியர்கள் வசிக்கிறார்கள். இந்தியா, ஒரு பிரிட்டிஷ் ராஜ்யம் என்று சொன்னதனால் பிரிட்டிஷ் ஜாதியினரைச் சொன்னதாகிவிடுமா? ஆங்கிலோ - சாக்ஸன் இனத்தினர், இங்கிலாந்தின் பூர்வகுடிகள் என்பது நம்மெல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த இனத்தினர் இங்கிலாந்தோடு மட்டும் நிற்கவில்லையே? அமெரிக்கா ஐக்கிய நாடுகளிலுமல்லவோ வெகுவாகப் பரவி நிலைபெற்றிருக் கிறார்கள்? இங்ஙனமே பிறநாடுகளிலும் இனமும் ராஜ்யமும் ஒன்று என்று சொல்லமுடியாதபடி பிரிந்திருக்கின்றன. சமூகம் வேறு, ராஜ்யம் வேறு என்று எப்படி நாம் பிரிப்பது? இவ்விரண்டையும் எந்தெந்த சக்திகள் உருவப் படுத்தினவோ அவை களைக் கொண்டுதான் நாம் இதனைப் பார்க்க வேண்டும். வமிசம் அல்லது சமூகம் என்பது இயற்கைக் சக்திகளின் துணை கொண்டு அபிவிருத்தி யடைந்தது. ராஜ்யமோ, ஆயுதபலத்தைக் கொண்டு விருத்தியடைந்தது. சீனர்கள் ‘வாங் - டோ’ என்ற ஒரு சொல்லை உபயோகிப்பார்கள். அதாவது இயற்கையாகச் செல்வது தான் ராஜபாட்டை என்பது இதன் பொருள். ஆயுத பலத்திற்கு ‘பா -டோ’ என்று பெயர். இந்த பலத்தைக் கொண்டு அமைவதுதான் ராஜ்யம். உதாரணமாக, ஹாங்காங் தீவுவாசிகள், அந்தப் பிரதேசத்தை நன்றாக அமைக்குமாறு பிரிட்டிஷாரைக் கேட்டுக் கொண்டதன் பயனாக அஃது அமைக்கப்படவில்லை. ஆயுத பலத்தினால், பிரிட்டிஷார் ஹாங்காங்கைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தியாவை, இங்கிலாந்து, முன்னேற்ற மார்க்கத்தில் செலுத்திக் கொண்டு வருவதும் இதே கதைதான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வளர்ச்சியடைந்ததெல்லாம் ஆயுத பலத்தை அடிப்படையாகக் கொண்டேயாகும். ஆதிகாலத்தி லிருந்தே எந்த ராஜ்யமும்பலாத்கார சக்தியில்லாமல் ஸ்தாபிக்கப்பட வில்லை. ஆனால் ஒரு ஜாதி அல்லது வமிசம் அல்லது சமூகம் வளர்ச்சி யடைவது இயற்கை வழியினால்தான். ஹாங்காங்கிலுள்ள ஆயிரக் கணக்கான சீனர்கள் ஒரே வமிசத்தினர் என்ற முறையில் ஒற்றுமைப் பட்டவர்கள்; இந்த ஒற்றுமையானது, இயற்கை வழியாக ஏற்பட்டது. இங்கிலாந்து, எந்த விதமான பலாத்காரத்தை உபயோகித்தாலும், இந்த உண்மையை மாற்ற முடியாது. ஆக, இயற்கை வழியாக ஒன்றுபட்டு அபிவிருத்தி யடைந்த ஒரு கூட்டத்தைச் சமூகம் என்றும், மனித சக்தி களால் அல்லது பலாத்கார சக்திகளால் ஒன்றுபட்டு அபிவிருத்தி யடைந்த ஒரு கூட்டத்தை ராஜ்யம் என்றும் சொல்லுகிறோம். சமூகத்திற்கும் ராஜ்யத்திற்கும் இதுதான் வித்தியாசம். வமிச உற்பத்தியைக் கவனிப்போம். ஆதியில், மனிதன் பிராணி வர்க்கத்தைச் சேர்ந்தவனாகவே இருந்தான். ஆயினும், நாம் இப்பொழுது சந்திக்கிற பிராணிகளினின்றும் அவன் வேறு பட்டவனே. எல்லாப் படைப்புக்களுக்கும் ஆத்மா போலிருக்கிறான் மனிதன் என்று சொல்லலாம். மானிட சமூகத்தை ஐந்து முக்கிய பிரிவினராகப் பிரித்திருக் கிறார்கள் அறிஞர்கள். வெண்மை நிறத்தவர், கறுப்பு நிறத்தவர், சிவப்பு நிறத்தவர், மஞ்சள் நிறத்தவர், பழுப்பு நிறத்தவர். இவர்களை இன்னும் உப பிரிவினராகப் பிரித்திருக்கிறார்கள் அறிஞர்கள். வெண்மை நிறத்தவர், கறுப்பு நிறத்தவர், சிவப்பு நிறத்தவர், மஞ்சள் நிறத்தவர், பழுப்பு நிறத்தவர். இவர்ளை இன்னும் உபபிரிவினராகப் பிரிக்கலாம். இந்த வமிசங்கள் அபிவிருத்தியடைவதற்கு முக்கிய காரணமாயிருந்தது இயற்கைச் சக்திதான். ஆனால் இவைகளைச் சிறிது பரிசீலனை செய்து பார்த்தோ மானால் மிகச் சிக்கலாயிருக்கும். இந்த வமிசங் களின் அபிவிருத்திக்கு அடிப்படையாயிருப்பது ஒரே ரத்தம். சீனர்கள், மஞ்சள் நிற வமிசத்தைச் சேர்ந்தவர்கள். மஞ்சள் நிறத்தவரின் ரத்தக் கலப்பு இவர்களுக்கு இருக்கிறது. மூதாதையர் களின் ரத்தமானது, வமிசபாரம்பர்யமாக ஒவ்வொரு தலைமுறைக் கும் புகுத்தப்படுகிறது. ஆகையால் ரத்தக் கலப்பினால் ஏற்படுகிற ஒற்றுமையானது, மிகவும் வலுவுள்ள சக்தியாகும். மற்றொரு முக்கிய சக்தியானது, அந்தந்தச் சமூகத்தினரும் கையாண்ட ஜீவனோபாய முறைகள். மங்கோலியர்கள், எங்கெங்குப் புல்லும் நீரும் இருந்தனவோ அவற்றையெல்லாம் தங்கள் வாசஸ் தலமாகக் கொண்டார்கள். இவர்கள் நாடோடி வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். இவர்களிடமிருந்துதான் மங்கோலிய ஆதிக்கம் ஏற்பட்டது. இந்த ஆதிக்கம் ஆசியா, ஐரோப்பா ஆகிய இரண்டு கண்டங்களிலும் விஸ்தரித்திருந்தது. வேறு எந்த சாம்ராஜ்யத்தி னுடைய ஆதிக்கமும் இவ்வளவு தூரம் விஸ்தாரமடையவில்லை. இங்ஙனம் விஸ்தார மடைந்து இவ்வளவு வலுப்பெற்று நின்றதற்குக் காரணம், மைல் கணக்கைப் பாராமல் நீண்ட தூரம் செல்லும் சுபாவமுடைய நாடோடி வாழ்க்கைதான். வமிச பாரம்பர்யங்கள் ஏற்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் பாஷை. நமது பாஷையை அந்நிய ஜாதியினர் கற்றுக் கொண்டால், நாம் நம்மை அவர்களுடன் எளிதில் கலக்கவிட்டுக் கொள்கிறோம். அதேமாதிரி, நாம் அந்நிய பாஷைகளைக் கற்றுக் கொண்டால், நம்மையும் பிறர் கலக்கவிட்டுக் கொள்கிறார்கள். ஆகவே, ஒரே ரத்தக் கலப்பும் ஒரே பொதுப்பாஷையும் உடைய இரண்டு சமூகத்தினர் ஒன்று சேர்வது மிகவும் சுலபமல்லவா? ஆகையால், ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு பாஷையும் ஒரு முக்கிய காரணம். நான்காவது மதம். ஒரே மாதிரியான கடவுளர்களையோ, அல்லது ஒரே விதமான மூதாதையர்களையோ வணங்குகிறவர்கள் ஒரே சமூகத்தினராகிறார்கள். சமூகங்களின் அபிவிருத்திக்கு மதம் ஒரு முக்கிய துணையாயிருக்கிறது. அரேபிய சாம்ராஜ்யமும் ஜூடியா சாம்ராஜ்யமும்1 எப்பொழுதோ அழிந்து போயின; ஆனால் அரேபியர்களும் யூதர்களும் இப்பொழுதும் இருந்து கொண்டிருக் கிறார்கள். இவர்களுடைய சாம்ராஜ்யம் அழிந்து போனாலும் இவர்கள் நிரந்தரமாக வாழ்வதற்குக் காரணம் இவர்களுடைய மதந்தான். யூதர்கள், இப்பொழுது உலகத்தின் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். உலகத்திற் சிறந்த மேதாவிகளான கார்ல் மார்க்ஸ்2 ஐன்ஸ்டின்3 போன்றவர்கள் யூதர்களே. இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளில் பணப் புழக்கம் யூதர்களிடந்தான் அதிகம். யூதர்களுக்கு, அவர்களுக்கு இயற்கையாயமைந்த கூர்மையான அறிவோடு மத நம்பிக்கையும் அதிகமாயுண்டு. அதனால்தான், அவர்கள் தங்களுடைய வமிசப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது. இங்ஙனமேதான் அரேபியர்களுக்கும் இந்தியர் களுக்கும் மத உணர்ச்சி நிரம்ப இருக்கிறது. சமூக அபிவிருத்திக்கு, பழக்க வழக்கங்கள் முக்கிய சாதன மாகும். ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களுடைய பல ஜாதி யினரும் ஒரே சமூகத்தினராக ஒற்றுமைப் படுவார்கள். ஆக, மேற்பார்வைக்கு வெவ்வேறு ஜாதியினர் போல் தெரியும் பல கூட்டத்தினர் ஒன்றுபடுவார்களானால் அதற்குக் காரணம், மேலே கூறப்பட்ட ஐந்து சக்திகளான ரத்தக் கலப்பு, ஒரே மாதிரி யான ஜீவனோபாயம், பொதுவான பாஷை, பொதுவான மதம், பொதுவான பழக்க வழக்கங்கள் ஆகிய இவற்றுள் ஏதேனும் ஒன்று இருக்கவேண்டும். இவை யாவும் இயற்கையான சக்திகளைச் சேர்ந்தவை. சீனாவையும், சீன சமூகத்தையும் நாம் காப்பாற்ற வேண்டு மானால், நாம் தேசீயத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதனை நடை முறையில் கொணரச் செய்வதற்கு முன்னர், இதனைப் பற்றி நாம் நன்கறிந்து கொள்ள வேண்டும். சீனாவில், மொத்தம் நாற்பது கோடி சீனர்கள் வசிக்கிறார்கள். மங்கோலியர்கள், திபேத்தியர்கள் போன்ற அந்நியர்கள் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள். எனவே, சீனாவில், சீனர்கள் என்ற தூய்மையான வமிச பரம்பரைப் பெருமை கொண்ட ஒரே ஜாதியினர் வசிக்கிறார்கள் என்பது தெளிவாயிற்று. ஆனால் நம்முடைய நிலைமை என்ன? மற்றச் சமுகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், நாம், அதிகமான ஜனத்தொகை யுடையவர்களாகவும், சுமார் நாலாயிரம் வருஷத்துப் புராதனப் பெருமை நிறைந்த கலைஞானத்தை யுடையவர்களாகவும் இருக்கிறோம். அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளிலுள்ள ஜாதியாரைப் போல் நாமும் முன்னேறிச் சென்றிருக்க வேண்டும். ஆனால் என்ன காண் கிறோம்? சீனர்களிடத்தில் தேசீய உணர்ச்சியே இல்லை. எனவே, நமது ஜனத்தொகை நாற்பது கோடியாயிருந்தாலும் நாம் கட்டுவிட்ட மணல் மூட்டை மாதிரி யிருக்கிறோம். உலகத்திலுள்ள எல்லா நாடுகளைக் காட்டிலும் நமது நாடுதான் ஏழ்மையான நாடு; பலவீனமான நாடு, சர்வ தேச விவகாரங்களில் நாம் கீழான அந்தஸ்தில் இருக்கிறோம். மற்ற நாட்டார், சோற்றை அள்ளும் கரண்டியாகவும் சோற்றுக் கலயமாகவும் இருந்தால் நாம் அவர்களுக்கு ஆகாரமாயிருக்கிறோம். நமது தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தாயிருக்கிறது. நாம் உடனே, நம்மிடையில் தேசீய உணர்ச்சியை வலுக்கச் செய்து, நாற்பது கோடி மக்களையும் ஒன்று சேர்க்கா விட்டால், நமது நாட்டை இழந்து விடுவோம்; நமது சீன சமூகம் அழிந்துவிடும். இந்த ஆபத்தை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி, அதனைத் தடுக்க வேண்டுமானால், அவர்களுக்கு, மற்ற நாட்டு ஜனங்களோடு அவர்களை ஒப்பிட்டுக் காட்ட வேண்டும். ஐரோப்பிய மகா யுத்தத்திற்கு முன்னர், வல்லரசுகள் என்று சொல்லப்பட்ட ஏழெட்டு நாடுகள் இருந்தன. இவற்றில் மிக விஸ்தீரணமாயிருந்தவை ஜெர்மனி, ஆஸ்திரியா, ருஷ்யா ஆகிய மூன்றும்; செல்வத்தோடு இருந்தது அமெரிக்கா; பாலிய தசையிலே இருந்தவை ஜப்பானும் இத்தாலியும். இவற்றில்,மேற்படி மகா யுத்தத்திற்குப் பின்னர், மூன்று நாடுகள் விழுந்து போயின. முதல் தரத்து வல்லரசுகளில் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ருஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரே ஜாதியினரிடமிருந்து உற்பத்தியான நாடுகள். ஆங்கிலோ - சாக்ஸன் ஜாதியாரிடமிருந்து கிரேட் பிரிட்டன் தோன்றியது.1 இங்கிலாந்திலும் வேல்ஸிலும், இந்த ஆங்கிலோ - சாக்ஸன் ஜாதியார் முந்நூற்று எண்பது லட்சம் பேரேயிருக்கின்றனர். ஆயினும், இந்த ஜாதியார் உலகத்திலே மிகச் சக்திவாய்ந்தவர்களாகவும், பலம் பொருந்திய ஒரு சாம்ராஜ்யத்தைச் சிருஷ்டித்தவர்களாகவும் இருக்கிறார்கள். நூறு வருஷத்திற்கு முன் இவர்கள் நூற்றிருபது லட்சம் பேராகவே இருந்தார்கள். இப்பொழுது முந்நூற்று எண்பது லட்சம் பேரா யிருக்கிறார்கள். கீழ்நாட்டுக் கிரேட் பிரிட்டன் என்று சொல்லத் தக்க ஜப்பான், ‘யமாட்டோ’1 என்ற ஒரு வமிசத்தினரிடமிருந்து தோன்றியதாகும். இந்த ஜப்பானிய சாம்ராஜ்யம் ஆரம்பத்திலிருந்து இதுவரை அந்நியர் களுடைய ஆதீனத்திற்குட்படவில்லை. ஜப்பானுடைய ஜனத்தொகை தற்போது ஐந்நூற்று அறுபது லட்சம். நூறு வருஷத்திற்கு முன்னர், இதன் ஜனத்தொகை எவ்வளவு இருந்ததென்று தெரியாது. ஆனால் சென்ற நூறு வருஷத்திற்குள் ஒன்றுக்கு மூன்றாக ஜனத்தொகை அபிவிருத்தி யடைந்திருக்கிறதென்று சொல்லலாம். இந்த ‘யமாட்டோ’ ஜாதியினர் - ஜப்பானியர் - கால வேகத்திற்குத் தகுந்தபடி தங்களைச் சமாளித்துக் கொண்டு, மேனாட்டு விஞ்ஞான முறை களையெல்லாம் கற்று இப்பொழுது மேனாட்டாரோடு போட்டி போடுகின்றனர். ஐரோப்பியர்களோ, அமெரிக்கர்களோ, ஜப்பானி யர்களைக் கேவலமாக மதிப்பதில்லை. ஜப்பானுடைய ஜனத் தொகையைக் காட்டிலும், நமது நாட்டு ஜனத் தொகை அதிகம். ஆயினும் நாம் இகழப்படுகிறோம். ஏன்? ஜப்பானியருக்குத் தேசீய உணர்ச்சி இருக்கிறது. நமக்கு இல்லை. ஜப்பானியர்கள் கூட, ஒரு காலத்தில், மேனாட்டாருடைய ஆதிக்கத்தினால் தலை குனிந்து நின்றார்கள். இப்பொழுது - சுமார் ஐம்பது வருஷ காலத்திற்குள் - தேசீய உணர்ச்சி காரணமாக வலுவுள்ள சாம்ராஜ்யமாகத் தங்களை ஆக்கிக் கொண்டுவிட்டனர். நாம் பலமுள்ள நாடாக வேண்டுமானால், ஜப்பானை முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும். ஐரோப்பியர்களையும் ஆசியாக்காரர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். வெள்ளையர்களுக்குத்தான் எல்லாவித அறிவும் திறமையும் இருக்கிறதென்று நாம் கருதிவந்ததனால், அவர்கள் எல்லாவற்றின் மீதும் ஆதிக்கம் கொண்டு விட்டார்கள். இதனால் ஆசியாக்காரர்களாகிய நாம் மனமுடைந்து விட்டோம். திடீரென்று ஜப்பான் தலை தூக்கி நின்றதனால், ஆசிய சமூகங்களுக்கே ஒரு வித நம்பிக்கை ஏற்பட்டது; பெருமையும் உண்டாயிற்று. வார்சேல் சமாதான மகாநாட்டில்1 ஐந்து வல்லரசுகளில் ஒன்றாக ஜப்பானும் அமர்ந்திருந்தது. ஆசியாவின் பிரதிநிதியாக அது பேசியது. இதனால் வெள்ளையர்களைப் போல் ஆசியாக்காரர்களுக்கும் திறமையுண்டு என்பது நிரூபிக்கப்பட்டதல்லவா? ஐரோப்பிய யுத்த காலத்தில், ருஷ்யாவில் ஒரு பெரிய புரட்சி உண்டாயிற்று. இதன் விளைவாக ஜார் ஆட்சி வீழ்ந்தது.2 ருஷ்யர்கள், ஸ்லாவிய ஜாதியைச் சேர்ந்தவர்கள். நூறு வருஷத்திற்கு முன், இந்த ஸ்லாவிய ஜாதியினர், நான்கு கோடி பேராயிருந்தனர். இப்பொழுது பதினாறு கோடி பேராயிருக்கின்றனர். இப்பொழுது ருஷ்யா, உலக வல்லரசுகளில் ஒன்றாயிருக்கிறது. ருஷ்ய - ஜப்பானிய யுத்தத்தின்போது,3 சீனா முழுவதையுமே ருஷ்யா ஆக்கிரமித்துக் கொண்டு விடுமோவென்று அஞ்சப்பட்டது ஆனால் ஆங்கிலோ ஜப்பானிய ஒப்பந்தம்4 இதனைத் தடுத்து விட்டது. ஐரோப்பிய யுத்தத்தின்போது ருஷ்யாவில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டு, அதன் பயனாக அதனுடைய பழைய ஏகாதிபத்திய அரசாங்கமே விழுந்து விட்டது. அதன் ஸ்தானத்தில் சோவியத் அரசாங்கம் ஏற்பட்டது. இந்த அரசாங்கம் ஏற்பட்டு ஆறு வருஷமே யானாலும், அங்கே மகத்தான மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. தற்போதைய சோவியத் ருஷ்ய அரசாங்கத்தின் கொள்கையானது, பலசாலிகளைத் தடுத்து, பலவீனர்களைப் பாதுகாப்பதாயிருக்கிறது. நியாயமாகவே எல்லாரிடத்திலும் நடந்து கொள்ள வேண்டு மென்று விரும்புகிறது. ஆனால் ருஷ்யாவின் தற்போதைய கொள்கைகளைக் கண்டு, வல்லரசுகள் வேறொரு காரணத்திற்காக அஞ்சுகின்றன. ஏனென் றால் உலகத்திலேயே ஏகாதிபத்தியக் கொள்கையும், முதலாளித்துவ மும் நிலவக் கூடாதென்று ருஷ்யா கருதுகிறது. இதற்கான முறை களையும் அது கையாள்கிறது. இதனால் உலக நிலைமையிலேயே ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பிய சரித்திரத்தை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், சர்வதேச யுத்தங்கள் பல நடைபெற்றிருப்பதைக் காணலாம். 1914 - ஆம் வருஷத்து ஐரோப்பிய யுத்தத்தில், ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, பல்கேரியா ஆகிய நாடுகள் ஒரு கட்சியாகவும், இங்கிலாந்து, பிரான்ஸ், ருஷ்யா, ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வேறொரு கட்சியாகவும் இருந்து சண்டை போட்டன. நான்கு வருஷ யுத்தத்திற்குப் பிறகு, இரண்டு கட்சியினரும் சலித்துப் போய் விட்டார்கள். இனிமேல் இத்தகைய மகத்தான யுத்தம் ஏற்படா தென்றும், அப்படி ஏற்படுமானால் ஒரு நிறத்தவருக்கும், மற்றொரு நிறத்தவருக்கும் - உதாரணமாக வெள்ளையர்களுக்கும், மஞ்சள் நிறத்தவர்களுக்கும் - ஏற்படுகிற போராட்டமாகவே இருக்கு மென்றும் சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் உலக சரித்திரத்தை நான் ஆராய்ந்து பார்க்கிற வரையில், எதிர் காலத்தில் சர்வதேசப் போராட்டங்கள் இன்னும் மும்முரமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் போராட்டங்கள், ஒரு ஜாதியினருக்கும் மற்றொரு ஜாதியினருக்குமோ, ஒரு நிறத்தவருக்கும் மற்றொரு நிறத்தவருக்குமோ ஏற்படுகிற போராட்டங்களாயிரா. ஒரு ஜாதிக்குள்ளேயே, ஒரு நிறத்தவருக் குள்ளேயே ஏற்படுகிற போராட்டங் களாயிருக்கும். வெள்ளை நிறத்தவரும் மஞ்சள் நிறத்தவரும் தனித் தனியாக அடங்குகிறவர் என்றும், அடக்கப் பட்டவர் என்றும் வலுவுள்ளோர் என்றும் வலுவிழந்தோர் என்றும் இரண்டு பகுதியினராகப் பிரிந்து போராடுவார்கள். ருஷ்யப் புரட்சிக்குப் பிறகு, ஸ்லாவிய சமூகத்தினர், பலமுள்ளவர்களைத் தடுத்து பலவீனர்களை ஆதரித்தும், பணக்காரர்களை அடக்கி ஏழை மக்களை ஆதரித்தும் வருகிற கொள்ளைகளைப் பரப்பி வருகின்றனர். இந்த எண்ணங்கள், மெதுவாக ஐரோப்பாவில் புகுந்து, பலவீனமுள்ள ஜனங்களால் வரவேற்கப்பட்டு வருகின்றன. இங்ஙனம் வரவேற்கிறவர்களில், துருக்கியர்களை முக்கியமானவர் களென்று சொல்லலாம். ஐரோப்பிய யுத்தத்திற்கு முன்னர், துருக்கி, மிகப் பலவீன முள்ளதாயும், மீண்டும் தலையெடுக்க முடியாதென்ற நிலையிலும் இருந்தது. ‘கீழ் நாட்டின் நோயாளி’ என்று ஐரோப்பியர்கள் அதனைக் கூறிவந்தார்கள்; துருக்கியைப் பங்கு போட்டுக் கொள்ளவும் விரும்பினார்கள். இந்தச் சமயத்தில், ருஷ்யா, துருக்கியின் உதவிக்கு வந்து கிரேக்கர்களை விரட்டி யடிக்கும்படி செய்தது. இப்பொழுது, துருக்கி எல்லாராலும் மதிக்கப்படக் கூடிய ஒரு தேசமாக இருக்கிறது. இதற்குக் காரணம் ருஷ்யாவின் உதவிதான். ஆகையால், இனி உலகத்திலேயே, ஒடுக்கப் பட்ட தேசத்தின ரெல்லாரும் ஒன்றுசேரக் கூடிய சந்தர்ப்பங்கள் பல ஏற்படும். அந்தக் காலத்தில் - ஐரோப்பிய யுத்தத்தின் போது - எந்த நாடு ஒடுக்கப்பட்ட நாடாயிருந்தது? இங்கிலாந்தும், பிரான்ஸும் சேர்ந்து, ஜெர்மானிய ஏகாதிபத்தியத்தை ஒழித்துவிட வேண்டு மென்று தீர்மானித்தபோது, ருஷ்யா அவர்களுடன் சேர்ந்து கொண்டு அநேக விதமான தியாகங்களைச் செய்தது. ஆனால் யுத்தத்தின் நடுவில், அது - ருஷ்யா - தன் சைந்நியங்களைப் பின்னுக்கு வாங்கிக் கொண்டு, ஒரு புரட்சியை ஆரம்பித்தது. ஏனென்றால் ருஷ்ய ஜனங்கள், அவ்வளவு தூரம் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் கஷ்டப்பட்டு விட்டார்கள். எனவே, பொதுவுடைமை அரசாங்க முறையை ஏற்படுத்த புரட்சி செய்தார்கள். ஆனால் இந்தப் புரட்சித் தத்துவத்தை ஐரோப்பிய வல்லரசுகள் எதிர்த்தன. ருஷ்யாவை எதிர்த்துப் போராடச் சில சைந்நியங்களையும் அனுப்பின. ஆனால் ருஷ்யா, இவைகளை யெல்லாம் எதிர்த்து நின்றது. எனவே, ஐரோப்பிய வல்லரசுகள், ருஷ்யாவை நேர்முகமாக எதிர்த்துத் தாக்க முடியாமையினால், மறைமுகமாக அதனைத் தாக்குகின்றன. அதாவது ருஷ்ய அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுக்கின்றன. (பின்னர், இங்கிலாந்து ருஷ்யாவை அங்கீகரித்தது.) ருஷ்யாவின் புதிய தத்துவத்தை ஏன் ஐரோப்பிய வல்லரசுகள் எதிர்க்கின்றன? ஏனென்றால், வல்லரசுகள் பலாத்காரத்தை ஆதரிக் கின்றவை. ருஷ்யாவோ பலாத்காரத்தை எதிர்த்து நிற்கிறது. இதனால் தான், ருஷ்யாவுக்கு எதிர்ப்பு பலமாயிருக்கிறது. இதனால்தான், எதிர்கால யுத்தங்கள், பலாத்காரத்திற்கும் நியாயத்திற்குமாக நடைபெறும் என்று நான் கூறுகிறேன். சென்ற நூற்றாண்டில் உலகத்திலுள்ள நாடுகளின் ஜனத் தொகை எவ்வாறு பெருகிய தென்பதை ஈண்டுக் குறிப்பிட விரும்புகிறேன். அமெரிக்காவில் நூற்றுக்கு ஆயிரம் சத விகிதமும், இங்கிலாந்தில் முந்நூறு சத விகிதமும், ஜப்பானில் முந்நூறு சதவிகிதமும,ருஷ்யாவில் நானூறு சத விகிதமும், ஜெர்மனியில் இருநூற்றைம்பது சதவிகிதமும். பிரான்ஸில் இருபத்தைந்து சதவிகிதமும் ஜனத்தொகை பெருகியிருக்கிறது. இந்த ஜனத்தொகைப் பெருக்கத்திற்குக் காரணம் என்ன வென்றால், விஞ்ஞான சாஸ்திரத்தின் அபிவிருத்தி, வைத்திய சாஸ்திரத்தின் அபிவிருத்தி, சுகாதார வசதிகள் அதிகமாயிருப்பது முதலியவைகள். இந்த ஜனப்பெருக்கத்தை நோக்குகிற போது, சீனாவின் நிலைமை யென்ன? நூறு வருஷங்களுக்கு முன்னே, அமெரிக்காவின் ஜனத் தொகை தொண்ணூறு லட்சமாயிருந்தது. இப்பொழுது பத்து கோடியாயிருக்கிறது. இதே பிரகாரம் ஜனத்தொகை பெருகிக் கொண்டு போனால், இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் நூறு கோடி யாகிவிடும். சீனர்களாகிய நாமோ, ஜனத்தொகை பெருத்தவர்கள் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். இதனால், யாரும் நம்மை அழித்து விட முடியாதெனறும், வேறு எந்த ஜாதியார் வந்தாலும், அவர்களை நாம் ஐக்கியப்படுத்திக் கொண்டு விடுவோம் என்றும் பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். ஆனால் நூறு வருஷங் கழித்து, அமெரிக்கா, சீனாவை ஆக்கிரமித்துக் கொள்ளு மானால், பத்து அமெரிக்கர்களுக்கு நான்கு சீனர்கள் விகிதந்தான் இருப்பார்கள். அப்பொழுது அமெரிக்காவுடன், சீனா ஐக்கியமாக வேண்டியதுதான். சீனாவின் ஜனத்தொகை நாற்பது கோடி யென்று எப்பொழுது ஜன கணிதம் எடுக்கப்பட்டது தெரியுமா? கி. பி. 1735 - லிருந்து 1795ஆம் வருஷம் வரை ஆண்ட சின் - லுங் என்ற மன்னனுடைய காலத்தில். இதற்குப் பிறகு ஜன கணிதமே எடுக்கப்படவில்லை சென்ற இருநூறு வருஷ காலமாக, சீனாவின் ஜனத்தொகை ஒரே நாற்பது கோடியாக இருந்து வந்திருக்கிறது. இன்னும் நூறு வருஷம் கழித்தால் கூட, இந்த நாற்பது கோடி தான் இருக்கும்!1 பிரான்ஸின் ஜனத்தொகை மிகக் குறைவாயிருப்பதால், அந்த நாட்டு அரசாங்கம், குழந்தைகளை அதிகமாகப் பெறுவோருக்குச் சன்மானம் அளிக்கிறது. விவாகஞ் செய்து கொள்ளாதவர்கள் அபராதம் விதிக்கப்படுகிறார்கள். ஆகவே, சீனர்களாகிய நாம், நமது ஜனத்தொகை பெருகுவதற்கு வேண்டிய முறைகளைக் கையாள வேண்டும். அடுத்த நூற்றாண்டுக்குள் உலகத்தின் ஜனத்தொகை பன் மடங்கு பெருகி நிற்கும். ஐரோப்பிய யுத்தம் காரணமாகத் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களினின்று மீட்டுக் கொள்ளும் பொருட்டு, ஜெர்மனியும் பிரான்ஸும் தங்கள் ஜனத்தொகையைப் பெருக்க அநேக உபாயங்களைக் கையாளு கின்றன. உலகத்தின் நில விஸ்தீரணத்தை நாம் எடுத்துப் பார்த்தோ மானால். விஸ்தீரணத்தின் விகிதாசாரப்படி ஜனப்பெருக்கம் அதிகமா யிருக்கிற தென்பது நன்கு தெரியவரும். ஐரோப்பிய வல்லரசுகளில் பெரும்பாலானவை, சீதளப் பிரதேசத்திலேயே இருக்கின்றன. தங்களுக்கு உஷ்ணப் பிரதேசத்தில் இடம் வேண்டுமென்பதற்குத்தான் இவை, ஐரோப்பிய யுத்தத்தில் கலந்து கொண்டன. ஐரோப்பிய யுத்தத்திற்கு இஃதொரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ‘சூரியன் கீழே இடம் வேண்டும்’ என்று ஐரோப்பிய வல்லரசுகள் சென்ற மகா யுத்த காலத்தில் கூறியது இதனால்தான் போலும். சீனாவில், சம சீதோஷ்ணமும், இயற்கை வளமும் நிரம்பியிருக்கின்றன. வெறெந்த நாட்டிலும் இப்படி யில்லை. சீனவை மற்ற நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ளாததற்குக் காரணம், அந்த நாடுகளின் ஜனக் குறைவுதான். இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து, மற்ற நாடுகளின் ஜனத்தொகை பெருக, நமது நாட்டின் ஜனத்தொகை பெருகாமல் அப்படியே இருக்குமானால் நமது நாடு வெகு சுலபமாக விழுங்கப்பட்டு விடும். அப்பொழுது சீன சாம்ராஜ்யம் மட்டுமல்ல, சீனஜாதியே அழிந்து விடும். பின்னொரு காலத்தில் மற்ற நாடுகள் சீனாவை அடிமைப்படுத்திக் கொள்ளுமானால், பெரிய எண்ணிக்கை சிறிய எண்ணிக்கையை அடக்கிக் கொண்டதுவே அதற்குக் காரணமாயிருக்கும். அந்தக் காலம் வருமானால், நம்முடைய தேவை யாருக்கும் அவசியமிராது. அப்பொழுது, நாம் அடிமைகளாயிருப்பதற்குக்கூட தகுதியுடைய வர்களல்லர். 2. சீனாவின் நிலைமை சமூகம் (3- 2 - 1924) ஒரு தேசத்தின் ஜனத்தொகை பெருகுவதற்கும் சுருங்குவதற்கும் ஏற்றாற்போலவே அந்தத் தேசத்தின் வாழ்வும் தாழ்வும் இருந்து கொண்டு வந்திருப்பதைப் பூர்விக காலந் தொட்டு நாம் கண்டு வருகிறோம். இதுவே இயற்கை நியதியாகவும் இருந்திருக்கிறது. நமது சீனாவும் பூர்விகப் பெருமையுடையது. நாலாயிரம் வருஷ சரித்திரத்தையுடையது. எனவே ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் வருஷங்களுக்கு முந்தியிருந்தே நமது தேசம் இருந்திருக்க வேண்டும். இந்தக் காலத்தில் இயற்கைச் சக்திகள் நம்மைப் பாதித்திருந்த போதிலும், அந்த இயற்கைச் சக்திகள் நமக்குத் துணை செய்யாமலு மில்லை. நமது ஜனத்தொகை நாற்பது கோடி. உலகத்திலே ஜனத் தொகை மிகுந்த நாடு நமது நாடுதான். ஆயினும் நாம் அழிவுறா திருக்குமாறு இயற்கை, நமக்குத் துணை செய்திருக்கிறது. தலைமுறை தலைமுறையாக நமது வமிசம் மாறிக் கொண்டு வந்த போதிலும், இன்னும் கலைஞானம் நிரம்பிய ஒரு சமூகத்தினராகவே நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இதனாலேயே, ஒரு சிலருக்கு, இனி என்ன வந்தாலும் சீனா அழியாது என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக் கிறது. இஃது அசட்டு நம்பிக்கை என்பது என் கருத்து. இயற்கைச் சக்திகளினால் மட்டும் மனித சமுதாயம் மாறிக் கொண்டு வந்திருந் தால் இந்த நம்பிக்கை சரிதான். ஆனால் மனித சக்திகளும், சமுதாய மாற்றத்திற்குத் துணை செய்கின்றன. இந்த மனித சக்திகளிலே முக்கியமானவை, அரசியல் சக்தி களும் பொருளாதார சக்திகளுமாகும். ஒரு சமுதாயத்தின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் இந்த இரண்டு சக்தி களும் பெரிதும் துணை செய்கின்றன. தற்கால உலகச் சுழற்சியிலே அகப்பட்டுக் கொண்டிருக்கும் நமது தேசமானது இந்த இரண்டு சக்திகளாலும் தாக்கப்படுகிறது. நமது நாடு, சென்ற ஆயிர வருஷ காலத்திற்குள் இரண்டு முறை - அதாவது மங்கோலிய அரச பரம்பரையும் மஞ்சூ அரச பரம்பரை யும் ஆண்டு கொண்டிருந்த போழ்து-1 அரசியல் சக்திகளினால் நசுக்கப்பட்டிருக் கிறது. இந்த இரண்டு தடவையும், நம்மிலும் எண்ணிக்கையில் குறைந்த ஒரு ஜாதியாரிடத்தில் நமது நாட்டை விட்டுக் கொடுத்து விட்டிருக்கிறோம். இந்த இரண்டு தடவையும், இந்த ஜாதியார் நம்மிலேயே ஐக்கியமாகி விட்டிருக்கின்றனர். இரண்டு முறை, சீனாவில் அரசியல் ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருந்த போதிலும் நமது ஜாதிக்கு அழிவு ஏற்படவில்லை. ஆனால் இப்பொழுது வல்லரசுகளின் ஜனத் தொகை எவ்வாறு பெருகி யிருக்கிற தென்பதையும் அந்த வேகத் தொடு நாம் போட்டி போட முடியாத நிலையிலிருக்கிறோமென் பதையும் சென்ற பிரசங்கத்தில் கூறினேன். மனிதச் சக்திகளின் துணை இல்லாமலே, இயற்கைச் சக்தி களின் துணை கொண்டே நாம் அழிந்து விடக்கூடும் என்பதைச் சுட்டிக் காட்டினேன். அதாவது ஜனத்தொகையைப் பெருக்க வேண்டுவது எவ்வளவு அவசியமாயிருக்கிற தென்பது இதனால் நன்கு தெரிகிறது. இயற்கைச் சக்திகள் மெதுவாக வேலை செய்தாலும், அவை ஒரு ஜாதியை நிர்மூலப்படுத்திவிடும் சக்தி வாய்ந்தவை அமெரிக்காவி லிருந்த சிவப்பு ஜாதியாருடைய நிலைமையே இதற்குத் தகுந்த சான்றாகும். இருநூறு, முந்நூறு வருஷங்களுக்கு முன்னே, அமெரிக்காவில் பெரும் பாலும் சிவப்பு ஜாதியினரே இருந்தனர். பிறகு வெள்ளை ஜாதியினர் வந்து சேர்ந்தவுடன், இந்தச் சிவப்பு ஜாதியே இல்லாமல் போய்விட்டது. இயற்கைச் சக்திகள், ஒரு ஜாதியை அழித்து விடுகின்றன வென்பதற்கு இது சிறந்த உதாரணம். நான் மேலே சொன்னபடி, இயற்கைச் சக்திகளை விட மனித சக்திகள் ஒரு ஜாதியை, விரைவில் அழித்துவிடக்கூடும் ஆகையால் அடுத்த தலைமுறை, சீனாவுக்கு ஒரு நெருக்கடியான காலமாகும். அதற்குள், அரசியல் பொருளாதார நிர்ப்பந்தங்களிலிருந்து சீனாவை விடுதலை செய்வோமானால் சீனா அழிந்து போகாமலிருக்கும். இல்லாவிட்டால் வல்லரசுகளால் நாம் அழிக்கப்பட்டு விடுவோம். சென்ற ஒரு நூற்றாண்டாக, சீனா, மேனாட்டு அரசியல் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது. இதற்கு முன்னர் மஞ்சூ அரச பரம்பரையினர், நம் மீது ஆதிக்கஞ் செலுத்திக் கொண்டிருந்த போது, நமது நாடு மிகவும் பலமுள்ள நாடாயிருந்தது. அப்பொழுது தான் இந்தியாவை இங்கிலாந்து ஜெயித்துக் கொண்டிருந்தது. இந்தியா மீது அது படையெடுக்கத் துணியவில்லை. ஏனென்றால், சீனா, இந்தியாவில் ஏதேனும் குழப்பத்தை உண்டு பண்ணிவிடுமோ வென்ற அச்சம் இருந்தது. ஆனால் சென்ற ஒரு நூற்றாண்டில், சீனா, தன் பிரதேசத்தின் பெரும் பாகத்தை இழந்துவிட்டது. சமீப கால சம்பவங்களைக் கவனிப்போம். வெய் ஹய் வெய், போர்ட் ஆர்தர், ஸிங்டோ, கௌலூன், குவாங்சௌ முதலிய பிரதேசங்களை நாம் இழந்து விட்டோம். 1914ஆம் வருஷத்து ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு இவற்றில் சில, உதாரணமாக ஸிங்டோ, வெய் ஹய் வெய் முதலியவை நமக்குத் திருப்பிக் கொடுத்து விடப்பட்டன. ஆனால் இவையெல்லாம் மிகச் சிறிய இடங்கள்.1 சீனாவைப்பற்றி வல்லரசுகள் என்ன நோக்கம் கொண்டிருந்தன வென்றால், சீனா விழிப் படைந்து, தன்னைத் தானே ஆளும் திறமை படைத்திராமலிருப்பதால், கடலோரமாயுள்ள சில நகரங்களைப் பிடித்துக் கொண்டு சீனாவைப் பங்கு போட்டுக் கொள்வோம் என்பதுதான். பின்னர் சீனாவில் புரட்சி ஏற்பட்டபோது, ‘ஓ! சீனாவுக்கும் உயிர்இருக்கிற’ தென்று நினைத்து, அதனைப் பங்கு போட்டுக் கொள்வதினின்றும் பின்வாங்கின. வல்லரசுகளுக்குச் சீனாவின் மீது இந்த ஆசைப் பார்வை இருந்த சமயத்தில், சீனாவில் புரட்சி ஏற்படக் கூடா தென்ற கட்சியைச் சேர்ந்தவர்கள், ‘புரட்சி ஏற்பட்டால் சீனா இன்னும் பல துண்டுகளாகிவிடும்’ என்று கூறினார்கள். ஆனால் அதற்கு மாறாகப் புரட்சியினால்தான், சீனாவின் மீது அந்நிய வல்லரசுகள் கொண்டிருந்த எண்ணம் சிதறுண்டு போய்விட்டது. இதற்கு முன்னர், சீனாவின் ஆதிக்கத்தின் கீழிருந்த கொரியா, போர்மோஸா, பெஸ்காடோரெஸ் முதலிய பிரதேசங்கள், சீன - ஜப்பானிய யுத்தத்தின் விளைவாக, ஜப்பானுக்கு அளிக்கப்பட்டன. இதிலிருந்து தான் சீனாவைப் பங்கு போட்டுக் கொள்வ தென்ற வார்த்தை வல்லரசுகளிடையே ஆரம்பித்தது. இதற்கு முந்தின நூற்றாண்டில் பர்மா, அன்னாம் முதலிய நாடுகளை நாம் இழந்துவிட்டோம். அன்னாம் பிரதேசத்தை விட்டுக் கொடுப்பதற்கு, முன்னர், கொஞ்சம் எதிர்ப்புக்காட்டத்தான் செய்தோம். பிரான்சினால் பயமுறுத்தப்பட்டு, நாம் பிரான்சுக்கு அன்னாமைக் கொடுப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர்தான், சீனாவின் தெற்கெல்லையில் பிரெஞ்சு ராணுவத்தை முறியடித்தோம். ஆனால் அந்த வெற்றி ஏற்பட்டவுடனேயே, நாம் பிரெஞ்சுக்கார ரோடு சமாதானம் கோரினோம். வெற்றியடைந் தவர்கள், தோல்வி யடைந்தவர்களிடம் சமாதானம் கோருவதைக் கண்டு பிரெஞ்சுக் காரர் ஆச்சரியப்பட்டார்கள். இப்படியும் ஒரு தேசத்தார் இருப்பரோ என்று திகைத்துப் போனார்கள். சரித்திரத்திலேயே இல்லாத இந்தச் சம்பவத்திற்குக் காரணம், மஞ்சூ அரசாங்கத்தின் முடடாள் தனந்தான். அன்னாமும பர்மாவும் முன்னர் சீனாவைச் சேர்ந்தனவாக இருந்தன. அன்னாமை பிரான்ஸ் ஆக்கிரமித்துக் கொண்டதும், பர்மாவை பிரிட்டன் ஸ்வீகரித்துக் கொண்டு விட்டது. சீனா இதனை ஆட்சேபிக்க வில்லை. இப்படியே, தனக்குச் சொந்தமா யிருந்த பல நாடுகளை அது - சீனா - கூப்பிய கையோடு கொடுத்து விட்டது. ஒரு காலத்தில் நேபாளம், பூட்டான், இலங்கை முதலிய நாடுகள் சீனாவுக்குக் காணிக்கை செலுத்தின. ஆனால் அவையெல் லாம் இப்பொழுது நமது கை நழுவிப் போய்விட்டன. சீனா, செல்வாக்காக இருந்த காலத்தில், வடக்கே ஆமூர் நதி வரையிலும், தெற்கே இமயமலை வரையிலும், கிழக்கே பசிபிக் சமுத்திரம் வரையிலும் மேற்கே ஸுங் - லின் வரையிலும் பரவி யிருந்தது. அந்தக் காலத்தில் சீனாவைக் கண்டு எல்லாருக்கும் நடுக்கம் ஏற்பட்டிருந்தது. அப்பொழுது ஐரோப்பிய ஏகாதிபத்தியம், ஆசியாவின் மீது ஆதிக்கங் கொள்ளவில்லை. சீனா ஒன்றுதான் ஏகாதிபத்திய நாடாக இருந்தது. ஆனால், இப்பொழுது மேற்கு ஏகாதிபத்திய நாடுகள், சீனாவைப் பொருளாதாரத் துறையிலும் அரசியல் துறையிலும் சீரழித்து வருகின்றன. இதனால் சீனாவின் எல்லைப்புறமும் வரவரச் சுருங்கிக் கொண்டு வருகிறது. 1911ஆம் வருஷம் சீனாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு, சீனாவைத் துண்டு துண்டாக்கி விடுதல் அவ்வளவு சுலபமான காரியமல்ல வென்பதை வல்லரசுகள் தெரிந்து கொண்டு விட்டன. மஞ்சூ அரச பரம்பரையை வீழ்த்தி விட்ட சீனாவுக்கு, வல்லரசுகளின் அரசியல் ஆதிக்கத்தையும் எதிர்த்து நிற்கத் தெரியும். இதைத் தெரிந்து கொண்டு தான், மேற்படி வல்லரசுகள், தங்கள் அரசியல் விவகாரங்களை நிறுத்திக் கொண்டு பொருளாதார சம்பந்தமான நெருக்கடியைச் சீனா விஷயத்தில் உண்டு பண்ணி வருகின்றன. சீனாவைப் பங்கு போடும் விஷயத்தில் அரசியல் முறைகளைக் கையாளாதிருப்பதன் மூலமாக வல்லரசுகளிடையே போர் நிகழாமல் காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் மேற்படி வல்லரசுகளின் பிரதிநிதிகள் கருதலாம். ஆனால் சீனாவில் இந்தப் போராட்டத்தை நிறுத்தலாமே தவிர, ஐரோப்பாவில் இது நிகழ்ந்தே தீரும். ஐரோப்பிய மகா யுத்தம் கிளம்பியதற்குக் காரணம் பால்கன் பிரச்னை.1 இந்த மகா யுத்தத்தின் விளைவாக பலத்த சேதம் உண்டா யிற்று. ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் வீழ்த்தப்பட்டன. ஆயினும் ஏகாதிபத்தியக் கொள்கையில் எவ்வித மாற்றமும் உண்டாகவில்லை. இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி முதலிய நாடுகள் ஏகாதிபத்தியக் கொள்கையை அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றன. இவை ஐரோப்பாவைப் பொறுத்த மட்டில், தங்கள் ஏகாதிபத்தியக் கொள்கையைச் சிறிது காலம் தள்ளிவைத்தாலும் தள்ளி வைக்கக் கூடும். ஆனால் சீனாவிஷயத்தில் இவை ஏகாதிபத்தியக் கொள்கையை தொடர்ந்தே அனுஷ்டித்து வருகின்றன. சமீபத்தில் கூட காண்ட்டன் துறைமுகத்தில், வல்லரசுகளின் நாசகாரிப் படகுகள் அணிவகுத்து நின்றதை யார் மறந்திருக்கக் கூடும்? அரசியல் ஆதிக்கத்தைவிட பொருளாதார ஆதிக்கம் மிகக் கடுமை யானது. சீனாவில் இப்பொழுது ஒரு தேசத்தாருடைய ஆதிக்கம் மட்டும் இல்லை; பல தேசத்தாருடைய ஆதிக்கம் இருந்து கொண் டிருக்கிறது. ஒரு தேசத்தாருடைய ஆதிக்கத்திலிருப்பது நல்லதா? பல தேசத்தாருடைய ஆதிக்கத்திலிருப்பது நல்லதா? ஒரு தேசத்தின் ஆதிக்கத்தில் இருந்தால், ஏதேனும் இயற்கை விபத்துக்கள் ஏற்படு மானால், ஆதிக்கம் பெற்றுள்ள தேசத்தார், தயை பாராட்டியாவது கஷ்ட நிவாரணத்திற்கு ஏற்பாடு செய்வர். ஆனால் சீனா விஷயத்தில் இதைக்கூட எதிர்பார்க்க முடியாது. க்வாங்டுங் என்ற மாகாணத்தில், சுங்கவரி சம்பந்தமாக அந்நிய அதிகாரிகளுக்கும் சீன அதிகாரிகளுக்கும் ஒரு சச்சரவு இருந்து கொண்டிருக்கிறது. நியாயமாக, இந்தச் சுங்க வரி வருமானம் நம்முடையதுதான். அப்படியிருக்க ஏன் தகராறு? ஏனென்றால், இந்தச் சுங்கவரி வருமானத்தை இதுவரை மற்ற நாட்டார் அனுபவித்துக் கொண்டு வந்திருக்கின்றனர். இந்தச் சுங்க வரியைப் பற்றி நமக்குத் தெரியா திருந்த ஒரு காலமும் உண்டு. நமது துறை முகங்களை நாம் அந்நியர்களிடம் கொடாமல், நமது வியாபாரத்தை நாமே கவனித்து வந்தோம். பின்னர், இங்கிலாந்து, சீனாவுக்கு வியாபார நிமித்தம் வந்தது. சீனா இடங் கொடுக்கவில்லை. ஆனால் இங்கிலாந்து பலவந்தமாகவே நுழைந்தது. நுழைந்ததும், பிரிட்டிஷ் ராணுவமானது, காண்ட்டன் நகரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. அங்கு, சமாளிக்க முடியாமல் போய் பின்னர் ஹாங்காங் தீவுக்கு வந்து அதைக் கைப்பற்றிக்கொண்டது. இதற்காக தங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டு மென்று பிரிட்டிஷார் கேட்டனர். அப்பொழுது சீனாவினிடத்தில் பணம் இல்லை. எனவே, சுங்கவரிகளை வசூலித்துக் கொள்ளும் உரிமையைப் பிரிட்டனிடம் கொடுத்தது. பிரிட்டிஷாருடைய நஷ்டத்தை, இந்தச் சுங்கவரி ஈடுபடுத்தாதென்று மஞ்சூ அரசாங்கத்தார் நினைத்தனர். ஆனால் பிரிட்டிஷார் சொற்ப காலத்திற்குள் இந்த வரிகளை வசூலித்து நஷ்ட ஈடு செய்து கொண்டதோடு கூட, அதிக லாபத்தையும் அடைந்தனர். அப்பொழுதுதான், தன்னுடைய நிருவாகம் எவ்வளவு ஊழலாயிருக்கிறதென்பதை மஞ்சூ அரசாங்கம் நன்கு உணர்ந்து கொண்டது. இதன் பிறகு மற்ற மேனாட்டு வல்லரசுகள், இந்தச் சுங்க வரி வசூலில் தங்களுக்கும் பங்கு வேண்டு மென்று கேட்டன. பிரிட்டனும் இதற்குச் சம்மதித்தது. எனவே இப்பொழுது சீனாவின் சுங்கவரி வருமான மெல்லாம் அந்நியர்கள் வசம் இருக்கிறது. அந்நிய வல்லரசுகளோடு நிறைவேற்றிக் கொள்கிற ஒவ்வோர் உடன் படிக்கையும் சீனாவின் ஒரு பிரதேசத்தையோ அல்லது அதன் உரிமையையோ இழந்து விடக்கூடியதாக இருக் கிறது. மற்ற வல்லரசுகள், இந்தப் பொருளாதார நெருக்கடியை எப்படிச் சமாளிக்கின்றன? சுங்கவரிச் சுவர்கள் எழுப்பிக் கொள் கின்றன. துறைமுக வாயில்களில் கோட்டைகள் கட்டி, எப்படி அந்நிய சத்துருக்களின் வரவைத் தடுக்கிறோமோ, அப்படியே அந்நிய நாட்டுச் சரக்குகளின் இறக்குமதிமீது சுங்கவரிகள் போட்டு ஒரு தேசத்தின் வருமானம் அதிகப்படுத்திக் கொள்ளப்படுகிறது. இதனால் உள்நாட்டுக் கைத்தொழில்கள் அபிவிருத்தி யடைகின்றன. உதாரண மாக, அமெரிக்கா அரசாங்கம், அந்த நாட்டுப் பூர்விகக் குடிகள் அழிக்கப்பட்ட பிறகு, ஐரோப்பிய நாடுகளுடன் வியாபார சம்பந்தம் வைத்துக்கொண்டது. அப்பொழுது அமெரிக்கா ஒரு விவசாய நாடு. ஐரோப்பிய நாடுகளோ கைத்தொழில் நாடுகள். சாதாரணமாகச் சர்வதேச வியாபார விஷயத்தில், விவசாய நாடுகளின் மீது கைத் தொழில் நாடுகள் சில சலுகைகள் பெற முடியும். இதனால் அமெரிக்காவானது, தனது உள்நாட்டுக் கைத்தொழிலை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, சுங்க வரிகளை, அந்நிய நாட்டுச் சரக்கு களின் மீது விதித்தது. சுங்க வரிகள் விதிப்பதென்றால், இறக்குமதித் தீர்வையை விதிப்பது. உதாரணமாக, அந்நியநாட்டுப் பொருள் ஒன்று நூறுடாலர் பெறுமான முள்ளாதா யிருந்தால் அதற்கு எழுபது அல்லது எண்பது டாலர் இறக்குமதித் தீர்வையாக விதிக்கப்படும். இதனால் உள்நாட்டுப் பொருள்களைவிட வெளிநாட்டுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், வெளி நாட்டுப் பொருள்களின் புழக்கம் குறைகிறது; உள்நாட்டுப் பொருள்களின் புழக்கம் அதிகமாகிறது. இப்பொழுதைய சீனாவின் நிலைமையென்ன? சீனாவில் அந்நிய நாட்டு வியாபாரம் தொடங்கப்படுவதற்கு முந்தி, ஜனங்கள், கையினால் தயாரிக்கப்பட்ட பொருள்களை உபயோகித்து வந்தார்கள். ‘ஆண்கள் நிலங்களைப் பயிரிடுவார்கள்; பெண்கள் நெசவு நெய்வார்கள்’ என்பது சீனாவில் வழங்கப் பட்டுவரும் ஒரு பழமொழி. இதனால் சீனாவில் முக்கியமான தொழில்களாக விவசாயமும் நெசவுத்தொழிலும் இருந்தன வென்று தெரிகிறது. இதன் பிறகு. அந்நியச் சரக்குகள் வர ஆரம்பித்தன. இறக்குமதித் தீர்வை மிகக்குறைவாயிருந்தமையால், அந்நியத் துணிகள் மலிவான விலைக்குக் கிடைத்தன. தவிர நாசூக்கான அந்நியத் துணிகளையே ஜனங்களிற் பலர் விரும்பி உபயோகித்தனர். இதனால் உள்நாட்டுக் கைத்தொழில்கள் நசித்துப்போயின. இதன் விளைவு என்ன? வேலை யில்லாத் திண்டாட்டம். இதற்குக் காரணம் அந்நியர்களுடைய பொருளாதார ஆதிக்கம். இன்றுகூட, சீனாவில் கைத்தறி நெசவு நடைமுறையில் இருக்கிற தாயினும், அதற்கு உபயோகிக்கப்படுகிற நூல் அந்நிய நூல். சென்ற சில வருஷங்களாகத்தான், உள்நாட்டு நூல் உபயோகிக்கப்படுகிறது. ஷாங்காயில் எத்தனையோ பருத்தி மில்கள் இருக்கின்றன. ஆனால் இறக்குமதி வரி காரணமாக, அந்நிய நாட்டுமில் உற்பத்திப் பொருள்களோடு இவை போட்டிபோட முடியவில்லை. தவிர, சீனாவில் உற்பத்தியாகும் துணிகளுக்கு அதிகமான ஏற்றுமதி வரி விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய யுத்தத்தின் போது, ஷாங்காய் மில்கள், நல்ல விலைக்குத் தங்கள் சரக்குகளை விற்றன. மில் முதலாளிகள் நூறு சத விகிதம் பங்குகள் பிரித்துக் கொடுத்தார்கள். ஆனால் யுத்தத்திற்குப் பிறகு அந்நியச் சரக்குகள், சீனா மார்க்கெட்டில் வந்து குவிந்தன. ஷாங்காய் மில்கள் கடனாளி களாகி விட்டன. சீனாவின் சுங்கவரி முறையானது, அந்நியச் சரக்குகளுக்குப் பாதுகாப்பளிப்பதா யிருக்கிறது! இவைகளினால் விளங்குவதென்னவெனின். அரசியல் ஆதிக்கத்தை விட பொருளா தார ஆதிக்கம் மிகக் கடுமையான தென்பதேயாகும். சீனாவில் அந்நிய வியாபாரம் தொடங்கப்பட்டவுடனே, வெளிநாட்டுப் பொருள்களின் இறக்குமதி பெரிதும் விருத்தி யடையத் தொடங்கியது. 1921ஆம் வருஷத்தில் எடுத்த ஒரு கணக்குப் படி, ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களின் பெறுமானத்தைவிட இறக்குமதி செய்யப்பட்ட பொருள் களின் பெறுமானம் ஐம்பது கோடி டாலர் அதிகமாயிருந்தது. இந்த மாதிரி போய்க்கொண் டிருந்தால் பத்து வருஷங்களுக்குப் பிறகு வியாபாரத்தின் மூலமாக மட்டும், சீனா, அந்நிய நாடுகளுக்கு நூற்றிருபத்தைந்து கோடி டாலர் காணிக்கைபோல் செலுத்தவேண்டியிருக்கு மென்று தெரிகிறது. தவிர, சீனாவில் அந்நிய பாங்கிகளின் ஆதிக்கம் அதிகமாயிருக் கிறது. சீனர்களுக்கு, சுதேசி பாங்கிகளில் அவநம்பிக்கையும் அந்நிய பாங்கிகளில் நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கின்றன. சுதேசி பாங்கிகள் வெளியிடும் நோட்டுகளைவிட அந்நிய பாங்குகள் வெளியிடும் நோட்டுகளுக்கு அதிக மதிப்பு இருக்கிறது. அந்நியர்கள் அனை வரும் பெரிய பணக்காரர்கள் என்ற நம்பிக்கை நம்மவரிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் பொருளைக் கொடுத்து காசிதத்தை வாங்குகிறோம் என்பதை அறிந்து கொள்வதே யில்லை. அந்நியர்கள், அதிகமான பணத்தை வைத்துக்கொண்டு வியாபாரம் ஆரம்பிக்கவில்லை. அவர்களிடத்தில் இருக்கப்பட்ட பண மெல்லாம் நாம் கொடுத்ததுதான். லட்சக்கணக்கான பாங்கி நோட்டுகளை அச்சிட்டு அவர்கள் விநியோகிக்கிறார்கள். நாம் அவைகளை வாங்கி வைத்துக்கொண்டு டாலர் நாணயங்களைக் கொடுக்கிறோம். பாங்கி நோட்டுச் செலாவணியைத் தவிர, நாணய மாற்று விகிதம் வேறே இருக்கிறது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பாங்கி உண்டியல் வாங்கினோமானால், அதற்காகக் கமிஷன் என்று ஒரு தொகை வாங்கி விடுகிறார்கள். தவிர, ஒரு நாணயமாக நாம் இங்குக் கொடுக்க அதை வேறொரு நாணயமாக வேறோர் இடத்தில் கொடுக்கச் சொல்கிற போது, அதனால் ஏற்படும் மதிப்பு வித்தியாசத்தில், பாங்கிகளுக்கு அதிக லாபம் ஏற்படுகிறது. தவிர, சீனர்கள் அந்நிய பாங்கிகளில்தான் தங்கள் பணங்களை ஜமால் செய்து வைக்கிறார்கள். அவர்கள் குறைந்த வட்டி கொடுக்கிறார் களா, அல்லது வட்டியே கொடுப்பதில்லையா வென்பன வற்றைப் பற்றியெல்லாம் கவனிப்பதேயில்லை. நாம் ஜமால் செய்து வைக்கிற பணத்தைக் கொண்டே, அந்நியப் பணக்காரர்கள், சீனர்களுக்கு அதிகமான வட்டிக்குக் கடன் கொடுத்து லாபஞ் சம்பாதிக்கின்றன. ஜப்பான் துறைமுகங்களிலிருந்து ஐரோப்பியத் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள் எவ்வளவு கட்டணம் விதிக்கின்றனவோ, அதைவிட அதிகமான கட்டணத்தைச் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே சென்று கொண்டிருக்கும் வியாபாரக் கப்பல்கள் வசூலிக் கின்றன. இங்ஙனம் கப்பல் கேழ்வையின் மூலமாக மட்டும், சீனா வுக்கு வருஷத்தில் பத்து கோடி டாலர் விகிதம் நஷ்ட மேற்பட்டுக் கொண்டு வருகிறது. இவை தவிர, நிலவரி, நிலவிக்கிரயச் செலவு, அந்நியர்கள் வசிப்பதற்கென்று ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட பிரதேசங்கள் ஆகிய இந்த மூன்றின் மூலமாகவும் சீனாவுக்கு அதிக நஷ்ட மேற்பட்டிருக் கிறது. உதாரணமாக, ஹாங்காங், போர்மோஸா, ஷாங்காய், டீண்ட்ஸின் முதலிய பிரதேசங்களில் வசிக்கும் சீனர்கள், அந்நியர்களுக்கு வருஷந்தோறும் வரி செலுத்துவதன் மூலமாக மட்டும் இருபது கோடி டாலர்கள் கொடுக்கிறார்கள். சீனாவில் ஏராளமான அந்நியக் கம்பெனிகள் இருக்கின்றன. இவை, ஒப்பந்தத்தின் மூலமாகச் சில விசேஷ உரிமைகள் பெற்றிருக்கின்றன. இவைகளும், நம்மிடத்திலிருந்து ஏராளமான லாபத்தைச் சம்பாதிக் கின்றன. உதாரணமாக, தெற்கு மஞ்சூரியா ரெயில்வே கம்பெனி ஒன்று மட்டும் வருஷத்தில் நிகரலாபமாக ஐந்து கோடி டாலர் லாபம் சம்பாதிக்கிறது. இவையெல்லாம் போக, சீனாவின் பல பாகங்களிலும் அந்நியர்கள் சூதாட்ட நிலையங்கள் பலவற்றை ஏற்படுத்தி அவற்றின் மூலம் ஏராளமான லாபஞ் சம்பாதிக்கிறார்கள். இனி இவற்றையெல்லாம் தொகுத்துச் சுருக்கமாகக் கூறுவோம். பிரதி வருஷமும் இறக்குமதியாகும் அந்நியச் சரக்குகள் மூலமாக ஐம்பது கோடி டாலரும், அந்நிய பாங்கிகளில் ஜமால் செய்து வைக்கும் பணத்திற்கு வட்டி முதலியவை மூலமாக பத்து கோடி டாலரும், கப்பல் கேழ்வை மூலமாக பத்து கோடி டாலரும், அந்நியர் வசிக்கும் பகுதிகள், குத்தகைப் பிரதேசங்கள் இவற்றில் விதிக்கப்படும் வரி முதலியவை மூலமாக நாற்பது கோடி டாலரும், அந்நியர்களுக்குக் காட்டப்படும் சலுகைகள். அவர்கள் செய்யும் வியாபாரம் இவை மூலமாக பத்து கோடி டாலரும். சட்டா வியாபாரம், சூதாட்டங்கள் முதலியவை மூலமாக லட்சக் கணக்கான டாலர்களும் சீனாவுக்கு நஷ்ட மேற்பட்டு வருகிறது. ஆக, பிரதி வருஷமும் நமக்கேற்பட்டு வருகிற மொத்த நஷ்டம் சுமார் நூற்றிருபது கோடி டாலருக்கு மேலாகும். இதற்கு ஏதேனும் பரிகாரந் தேடாவிட்டால் இந்த நஷ்டம் இன்னும் அதிகப்பட்டுக் கொண்டே வரும். சீனா, இனியும் இந்த நஷ்டத்தைத் தாக்குப் பிடித்துக்கொண்டிருக்க முடியுமா? மேலே சொல்லப்பெற்ற இந்த நஷ்டத் தொகை. நமக்கு வருமானமாயிருந்தால் நாம் எவ்வளவு செழிப்புள்ளவர்களாயிருப்போம்? இந்த நஷ்டத் தினாலல்லவோ, நாம் முன்னேற முடியாதவர்களாயிருக்கிறோம். லட்சக் கணக்கான போர்வீரர்கள் சேர்ந்து நம்மைக் கொலை செய்து விடுவதை விட, இந்தப்பொருளாதார ஆதிக்கம் மிகக் கொடுமையானது. சென்ற அநேக நூற்றாண்டுகளாக, சீனாவானது ஜனத் தொகைப் பிரச்னை காரணமாகத் துன்பப் பட்டுக் கொண் டிருக்கிறது. இது தவிர, அரசியல் விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும் அந்நியர்களுடைய ஆதிக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மூன்று கஷ்டங்களுக்கும் நாம் பரிகாரம் தேடாவிட்டால், இன்னும் ஒரு நூறு வருஷத்தில், சீன ஜாதியே இல்லாமற் போய்விடும். 3. தேசீய உணர்ச்சி (10 - 2 - 1924) ஒரு ராஜ்யம் முன்னுக்கு வருவதற்கும், அந்த ராஜ்யம் தனது வாழ்க்கையை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கும் தேசீய உணர்ச்சி அவசியமானதாகும். அந்த உணர்ச்சி இருப்பது ஒரு பொக்கிஷம் இருப்பது போலாகும். இன்று, சீனா இந்த அரிய பொக்கிஷத்தை இழந்துவிட்டது. ஏன்? இன்றைய பிரசங்கத்தில், இந்தக் கேள்விக்கே நான் விடையளிக்க விரும்புகிறேன். இந்தத் தேசீய உணர்ச்சியை ஒரு நாளில் நாம் இழந்துவிட வில்லை. அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னரே இழந்து விட்டோம். (1911ஆம் வருஷ) புரட்சிக்கு முன்னர், தேசீயத்தை எதிர்த்துப் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை யெல்லாம் பாருங்கள். நூற்றுக்கணக்கான வருஷங்களாகச் சீனாவில் தேசீய உணர்ச்சி இறந்து போய் விட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் தோன்றிய நூல்களில் எவ்விதமான தேசீய உணர்ச்சியும் காணப்படவில்லை. அவை மஞ்சூ அரச பரம்பரையின் புகழையே பாடி நிற்கின்றன. மஞ்சூ அரச பரம்பரையினருக்கு விரோதமாக ஒரு வரிகூட எழுத யாருக்கும் தைரியம் பிறக்கவில்லை. சமீபகாலத்தில் புரட்சி எண்ணங்கள் எழுந்த சமயத்தில் கூட, தாங்களே புலவர்களென்று பெருமைப்படுத்திக் கொண்ட பலர், தினந்தோறும் மஞ்சூக்களின் புகழைப் பாடிய வண்ணமாயிருந்தார்கள். நாங்கள் டோக்கியோ நகரத்தில் ‘ஜனப்பத்திரிகை’ என்ற பெயருடன் ஒரு தினசரி நடத்தி வந்தோம். அதன் மூலமாகத் தேசீயப் பிரசாரஞ் செய்து கொண் டிருந்த போழ்து, மஞ்சூக்கள் சீனாவை ஆண்டுவந்ததால், நாம் அடிமைப் பிரஜைகளாகவில்லை யென்று சிலர் கூறிக்கொண்டு வந்தார்கள். பிரிட்டிஷ் சுங்கவரி உத்தியோகஸ்தர் ஒருவர், சீனாவை வெற்றிகொள்ள வேண்டு மென்ற நோக்கத்துடன் வந்து அதனை ஆக்கிரமித்துக் கொள்வாரானால், அப்பொழுதுகூட, நாம் அடிமைப் பிரஜைகளாகவில்லை யென்றுதான் சொல்லிக் கொண் டிருப்போம். இங்ஙனம் கூறிக்கொண்டிருப்போர், மஞ்சூ அரச பரம்பரையின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக ஒரு சங்கத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்ல; சீனாவின் தேசீய உணர்ச்சியை நசுக்கவும் இவர்கள் கங்கனம் கட்டிக்கொண் டிருக்கின்றனர். இவர்கள் சீனாவில் வசிப்பவர்களல்லர்; சீனாவுக்குப் புறம்பான நாடுகளில் வசிக்கும் சீனர்கள். ஆனால் சீனாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு, இவர்கள் புரட்சியை ஆதரித்தனர். சீனாவில் தேசீய உணர்ச்சி இறந்துபோனதற்கான சில காரணங் களைக் கூற விரும்புகிறேன். இந்தக் காரணங்கள் பல. இவற்றில் முக்கிய மானது, நாம் அந்நிய ஜாதியினருடைய ஆதிக்கத்திற்குட் பட்டிருப்பதுதான். ஒரு ஜாதி, மற்றொரு ஜாதியை ஆதிக்கங் கொண்டு விட்டதேயானால், ஆதிக்கப் படுத்தப்பட்ட ஜாதி சுதந்திர எண்ணத்தோடு வாழும்படி அந்த ஆதிக்கம் கொண்ட ஜாதி விடுவதில்ல. ஜப்பான் இப்பொழுது கொரியா தேசத்தின்மீது ஆதிக்கங் கொண்டிருப்பதனால், கொரியர்களுடைய மனத்தை மாற்ற அது முயற்சி செய்து கொண்டிருக்கிறது. கொரியாவின் பள்ளிக்கூட பாட புத்தகங்களிலிருந்து எல்லாத் தேசீய எண்ணங் களையும் அகற்றிவிட அது முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இதனால் இன்றி லிருந்து முப்பது வருஷங்கழித்துப் பார்ப்போ மானால், கொரியர்களுக்கே கொரியா என்ற ஒன்று இருக்கிறதென்று தெரியாமற்போய் விடும்; அல்லது தாங்கள் கொரியர்கள் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லாமற் போய்விடும். மஞ்சூரியா வுக்கும், சீனா விஷயத்தில் இதே எண்ணந்தான் இருந்தது. வெற்றி கொண்ட ஜாதியார், எப்பொழுதுமே ஆளப்படுகிற ஜாதியாரின் தேசீய உணர்ச்சியை நசுக்கப் பார்க்கின்றனர். இந்த எண்ணத்தை மனத்தில் வைத்துக் கொண்டுதான், மஞ்சூக்கள் அநேகவித மான தந்திரங்களைக் கையாண்டனர். காங் ஹ்ஸி1 என்ற மன்னன், சில சீனப் புத்தகங்களின் மீது தடையுத்தரவு போட்டான். ஆனால் சின் லுங்2 என்ற மன்னனோ, தேசீய உணர்ச்சியை நசுக்க இன்னும் சில தந்திர முறைகளைக் கையாண்டான். காங் ஹ்ஸி, தான் தெய்வ லோகத்தி லிருந்து பிறந்ததாகவும், சீனாவின் சக்ரவர்த்தியாக இருந்து ஆள்வதற் காகவே தான் ஜன்மமெடுத்ததாகவும், ஆகையால் தெய்வ இச்சையை யாரும் தடுக்க முடியாதென்றும் கூறிவந்தான். ஆனால் சின் லுங் மன்னனோ, மஞ்சூக்களுக்கும் சீனர்களுக்கும் எவ்வித வித்தியாசமு மில்லாமற் செய்துவிட்டான். இதனால், படித்த வகுப்பாருக்கு எவ்வித தேசீய உணர்ச்சியும் இல்லாமற் போய் விட்டது. ஆனால் இந்த எண்ணம் அதாவது தேசீய உணர்ச்சி - கீழ் வகுப்பாரிடையில் பரவியது. தார்த்தாரியர் களைக் கொலை செய்ய வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டதே தவிர, அவர் களை ஏன் கொலை செய்ய வேண்டு மென்ற காரணம் இவர் களுக்குப் புலனாகவில்லை. இதனால் - அதாவது மஞ்சூக்கள் கையாண்ட தந்திரத்தினால் - சீனாவின் தேசீய எண்ணங்கள் நூற்றுக் கணக்கான வருஷங்களாகவே மறைந்து போய்விட்டன. அந்நியர்களுடைய ஆதிக்கத்தினால், சீனாவின் தேசீயம் நசுக்கப்பட்டுவிட்டது. ஆனால் சீனர்களை விட அடிமைப்பட்டுப் போன ஜாதியார் இன்னும் பலர் இருக்கின்றனர். உதாரணமாக யூதர்கள், இயேசுவின் திருநாளைக்குமுன்பே, தங்கள் நாட்டை இழந்து, பிறரால் வெற்றிகொள்ளப்பட்ட ஜாதியாராகி விட்டனர். இயேசுநாதர் பிரசங்கம் செய்து கொண்டிருந்த காலத்தில், அவருடைய சிஷ்யர்கள் அவரை ஒரு புரட்சிக்காரர் என்றே கருதினார்கள். அவர் ‘யூதர்களின் அரசன்’ என்று கருதப்பட்டார். அவருடைய இரண்டு சிஷ்யர்களின் பெற்றோர்கள் அவரைப் பார்த்து ‘ஆண்டவரே! எங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றி வைப்பீர்களாயின், எமது மூத்த மகன் தங்களது இடப்பக்கத்திலும் இளைய மகன் வலப் பக்கத்திலும் அமரட்டும்’ என்று கூறினார்கள். அதாவது இயேசுவின் சிஷ்யர்கள் அவரை ஒரு புரட்சிக்காரர் என்றே கருதினார்கள் என்று தெரிகிறது. அரசியல் புரட்சி சம்பந்தமான சில எண்ணங்கள், இயேசுவின் மதத்தில் இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய சிஷ்யர்களில் ஒருவர், அரசியல் புரட்சி தவறிவிட்டதென்று கருதி, தனது குருநாதரை - இயேசுவை காட்டிக் கொடுத்து விட்டார்: இவர், இயேசு ஒரு மதப் புரட்சிக்காரர் என்பதையும், அவர் தமது நாட்டை ஒரு தெய்வ நாடு என்று சொல்லிக்கொண்டு வந்தாரென்பதையும் மறந்துவிட்டார். எனவே யூதர்களுடைய ராஜ்யம் அழிந்துபோன போதிலும், அவர்களுடைய ஜாதி, இயேசுவின் காலம் வரையில் இருந்து கொண்டு வந்தது. இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஜெயிக்கப்பட்ட நாடுதான். ஆனாலும், அங்கு அந்நிய ஆதிக்கம் ஏற்பட்டவுடனேயே, அதன் தேசீய உணர்ச்சி அழிந்து போகவில்லை. போலந்தைப் பாருங்கள். சென்ற நூறு வருஷ காலமாக, அஃது அந்நிய ஆதிக்கத்தி லிருந்த போதிலும், குன்றாத தேசீய உணர்ச்சி அதனிடம் இருக்கிறது. இதனாலேயே, சென்ற ஐரோப்பிய யுத்தத்திற்கப் பிறகு, போலிஷ்காரர்கள், தங்களுடைய நாட்டை மீண்டும் பெற்று, இப்பொழுது ஐரோப்பாவில் மற்ற வல்லரசுகளுக்குச் சமதையான அந்தஸ்தில் இருக்கிறார்கள். எனவே, ஜூடியா, இந்தியா, போலந்து முதலிய நாடுகள் அந்நிய ஆதிக்கத்திலிருந்தது போல் சீனாவும் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கிறது. அப்படியிருந்தும், முந்திய நாடுகளில் தேசீய உணர்ச்சி குன்றாமலிருக்க, சீனாவில் மட்டும் இந்த உணர்ச்சி குன்றிப் போவானேன்? இது மிகவும் ஆச்சரியப்படத்தக்க விஷய மாகும். இதன் காரணங் களென்ன? சீனா அந்நிய ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கு முன்னர், அது ஒரு செல்வாக்குள்ள நாடாகவும் அறிவுள்ள ஜனங்களைக் கொண்டதாகவும் இருந்தது. அப்பொழுது இந்த நாட்டை எல்லாரும் புகழ்ந்தார்கள். இந்தக் காலத்தில் தேசீய உணர்ச்சி போய், ஏகாதிபத்திய எண்ணம் சீனாவில் துளிர்க்க ஆரம்பித்தது. ஹான்வமிசத்தைச் சேர்ந்த சாங்போ - வாங் என்ற மன்னனும், பான் டிங் - யுவான் என்ற மன்னனும், சுமார் முப்பது சிறிய ராஜ்யங்களை அழித்தார்கள்.1 எப்படி இந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியா கம்பெனியின் மானேஜரான கிளைவ்,2 சுதேச சமஸ்தானங்களை ஒன்று சேர்ப்பித்து பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தானோ, அப்படிப்போல மேற்படி இரண்டு சீன மன்னர்களும், பல நாடுகளைச் சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. ஆசியாவிலுள்ள எல்லாச் சிறிய நாடுகளையும் தன் சுவாதீனத்திற்குள் வைத்துக்கொள்ளப் பார்த்தது. ஆனால், சீனா, மற்ற ஐரோப்பிய நாடுகளைப்போல் கொடுமை யான முறைகளைக் கையாளவில்லை. சீனா, தன்னை விடச் சிறியவையும் பலவீன முள்ளவையுமான நாடுகளைத் தன் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வருவதற்காக, சமாதான முறைகளைக் கையாண்டது. இந்தக் கண்கொண்டு நீங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்தீர்களானால், இரண்டாயிரம் வருஷகாலமாக நாடில்லாமலிருக்கும் யூதர்கள் ஏன் தங்கள் தேசீய உணர்ச்சியை இழக்காமல் காப்பாற்றிக்கொண்டு வந்திருக் கிறார்களென்பதும், ஆனால் முன்னூறு வருஷ காலமாக அடிமைப் பட்டிருக்கிற சீனாவில் ஏன் தேசீய உணர்ச்சி அழிந்து போய்விட்ட தென்பதும் நன்கு தெரிய வரும். இந்தக் காரணங்களை ஆராய்வது ஒரு நோயாளியின் வியாதியைக் கண்டுபிடிப்பது போலாகும். ஒரு மனிதனுக்கு எந்த விதமான வியாதி வந்தாலும், அதற்கு அவனுடைய பலவீனமான சரீரம் ஒரு காரணமா யிருக்கலாம்; அல்லது அவன் நோயாகப்படுப் பதற்கு முன்னர் அவனிடத்தில் அதிகமான பலவீனம் இருந்திருக்க வேண்டும். சீனா, தனது சுயஅரசை இழப்பதற்கு முன்னரேயே, அதன் அரசாங்க அமைப்பின் அடி வேரிலேயே அநேக வியாதிகள் மண்டிக் கிடந்தன. எனவே, அஃது அந்நியரால் ஆதிக்கங் கொள்ளப் பட்டவுடனேயே, அதன் தேசீய எண்ணமானது அழுக ஆரம்பித்தது. இவற்றிற் கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்றால், சீனா ஓர் ஏகாதிபத்தியமாக ஒரு காலத்தில் இருந்து வந்ததுதான். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காட்டிலும், ருஷ்ய ஏகாதிபத்தி யத்தைக் காட்டிலும், சீன ஏகாதிபத்தியம் ஒரு காலத்தில் வலுவுள்ள தாயிருந்தது. இங்கிலாந்திலும், ருஷ்யாவிலும் சில அறிஞர்கள் சேர்ந்து, தேசீயமானது குறுகிய மனப்பான்மை கொண்டதாகுமென்றும், நவீன நாகரிக உலகத்திற்கு இது பொருந்தா தென்றும் கூறுகி றார்கள். இவர்களோடு சில சீன இளைஞர்களும் சேர்ந்து கூச்சல் போடுகிறார்கள். ‘ஓ! ஸான் மின் கொள்கைகளா! தற்காலத்திற்குப் பொருந்தாதவை களல்லவா? உலக சகோதரத்துவந்தான் இப்பொழுது சிறந்தது’ என்று சில இளைஞர்கள் கூறுவதை அடிக்கடி நான் கேள்விப் படுகிறேன். இஃது உண்மைதானா? அப்படியானால், சீனா, ஏன் பிறரால் ஆதிக்கங் கொள்ளப்பட்டவுடனேயே, தேசீய உணர்ச்சியை இழந்து விட்டது? சீனா, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னர், உலக ஏகாதிபத்தியக் கனவைக் கண்டு வந்தது. அதைத்தான் இப்பொழுது உலக சகோதரத்துவம் என்று சொல்லுகிறார்கள். இந்த உலக சகோதரத்துவம் நல்லதா? பேச்சளவில் இது நல்ல தத்துவந்தான். ஒரு நாட்டை ஆதிக்கங்கொள்ள விரும்புவோர், இந்த உலக சகோதர தத்துவத்தைச் சொல்லிக் கொண்டு தான் வருகி றார்கள். ஆனால் ஓர் எண்ணம் அல்லது தத்துவம் நல்லதா கெட்டதா என்று தீர்மானிப்பதற்கு முன்னர், அனுஷ்டானத்தில் அஃது எப்படியிருக்கிற தென்று பார்க்கவேண்டும். அந்த எண்ணம் அல்லது தத்துவம் நமக்கும் உலகத்திற்கும் செயலளவில் நன்மையை அளித்துக் கொண்டிருக்கிற தென்று தெரிந்தால் அது நல்லதுதான். அஃது அனுபவ சாத்தியத்திற்குக் கொண்டு வரப்படக்கூடாமல் போனால் நல்லதில்லை. மற்றவர்களை வெற்றி கொள்ள, ஏகாதிபத்திய முறையைக் கையாளும் தேசத்தினர்தான், சலுகையோடு கூடிய தங்கள் பதவியை யும் செல்வாக்கையும் ஸ்திரப்படுத்திக் கொள்ளும் பொருட்டு இந்த உலக சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஒரு காலத்தில், சீனாவுக்கு உலகத்தையெல்லாம் கட்டியாள வேண்டுமென்ற ஆசை இருந்தது. இந்த எண்ணம் பரவி விட்டதால், மஞ்சூ ஜாதியினர் சீனாவுக்குள் சுலபமாக நுழைந்து ஆதிக்கங் கொண்டு விட்டனர். ஆரம்பத்தில் மஞ்சூக்கள் ஒரு லட்சம் பேர்தான் வந்தார்கள். இவர்கள் எப்படி கோடிக் கணக்கான பேரை ஆதிக்கங் கொண் டார்கள்? எப்படியென்றால் சீனர்கள் தேசீயத்தை மறந்தார்கள்; உலக சகோதரத்துவத்திலே நம்பிக்கை கொண்டார்கள்; யாரையும் தங்கள் சக்ரவர்த்தியாக வரவேற்றார்கள். இன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய நாடுகள் கிரேட் பிரிட்டனும் அமெரிக்காவும். இவை தவிர, உலகத்தில் இன்னும் பல வல்லரசுகள் இருக்கின்றன. இவற்றின் தன்மையும் கொள்கை யும் எவ்வித அதிகமான மாற்றத்தையும் அடையவில்லை. ஆனால் வருங்காலத்தில், கிரேட் பிரிட்டனும் அமெரிக்காவும் சேர்ந்து மற்ற வல்லரசுகளின் ஆதிக்கத்தை உடைத்துப்போட்டு உலகத்திலேயே மிகப் பெரிய வல்லரசுகளாகலாம். அந்த மாதிரி, தான் முக்கிய வல்லரசான சமயம் பார்த்து கிரேட் பிரிட்டனானது, சீனாவை ஆக்கிரமித்துக்கொண்டு, நம்மெல்லோரையும் ஆங்கிலேயர்களாக்கி விட்டதென்று வைத்துக் கொண்டால், அப்பொழுது நமக்கு நன்மை ஏற்படுமா? சீனர்களெல்லோரும் பிரிட்டிஷ் பிரஜைகளாகவோ, அமெரிக்கப் பிரஜைகளாகவோ ஆகி, சீனாவை அழிக்குந்தொண்டில் பிரிட்டனுக்கோ, அமெரிக்காவுக்கோ உதவிசெய்வார்களானால் - அதாவது யார் ஆண்டாலென்ன, யார் பிரஜைகளாயிருந்தாலென்ன என்ற உலக சகோதரத்துவ எண்ணத்திற்கு உதவி செய்வார்களானால் - நமது மனச்சாட்சி சும்மாயிருக்குமாவென்று உங்களைக் கேட்கின் றேன். அப்படிச் சும்மா இராமல், நமது மனச்சாட்சிக்கு ஏதோ பங்கம் ஏற்பட்டு விட்டதாக நாம் கருதுவோமானால், நமக்குத் தேசீய உணர்ச்சி இருக்கிறதென்று அர்த்தம். இதனால்தான், மனித சமூகத்தின் அரிய பொக்கிஷமாயிருப்பது இந்தத் தேசீய உணர்ச்சி என்று நான் வற்புறுத்திக் கூறுகிறேன். எப்படி ஒரு நூலாசிரியன், தனது ஜீவனோபாயத்திற்குத் தனது எழுது கோலை ஒரு கருவியாக உபயோகித்துக் கொள்கிறானோ. அதைப் போலவே, மானிட சமூகமானது, தான் உயிர்வாழும் பொருட்டு தேசீயத்தை ஒரு கருவியாக உபயோகிக் கிறது. தேசீயம் அழிந்து போய் அதனுடைய ஸ்தானத்தில் உலக சகோதரத்துவம் என்பது ஏற்பட்டு விடுமானால், நாம் உயிர் வாழ முடியாது. இயற்கைச் சக்திகளின் துணை கொண்டு மற்ற ஜாதியினர் நம்மை அடக்கிவிடுவர். இயற்கை விதிகளின் நியதிப்படி, பலசாலிகள்தான் வாழ்கி றார்கள்; பலவீனர்கள் இறந்து போகிறார்கள். பலசாலிகள்தான் வெற்றியடை கிறார்கள்; பலவீனர்கள் தோல்வியடைகிறார்கள். நாம் பலமுள்ள ஜாதியா, பலவீனமான ஜாதியாவென்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் வாழத் தகுதியுள்ளவர்களா, தகுதியில்லாத வர்களா வென்பதைப் பரிசீலனை செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய ஜாதி அழிந்து போக வேண்டுமென்று நம்மிலே யாரும் விரும்ப மாட்டார்கள். ஒவ்வொருவரும் தத்தமது ஜாதிதான் வாழவேண்டு மென்று பார்ப்பார்கள். இப்படி நினைப்பது சகஜந்தான். நமது நாடு இன்று மிக ஆபத்தான நிலையில் இருக்கிறது. அழிவுக்குரிய மூன்று காரணங்களினால் நமது ஜாதி அழிந்துவிடும் போலிருக்கிறது. அந்த மூன்று காரணங்கள் யாவை? முதலாவது மற்ற ஜாதியினர் மற்ற நாடுகளிலே அதிகமாகப் பெருகிக் கொண்டு வருகி றார்கள்; இரண்டாவது அந்நியர்களுடைய அரசியல் ஆதிக்கம்; மூன்றாவது அந்நியர்களுடைய பொருளாதார ஆதிக்கம் இந்தப் பின்னிரண்டும் நம்மை இறக்கு முகத்தில் தள்ளிக்கொண்டிருக் கின்றன. நமது நாடு மிகவும் விசால முடையதாதலால், உலகத்தின் மற்றப் பாகங்களில் ஜனப் பெருக்கம் அதிகமாகிக் கொண்டு வருவது நம்மை அதிகமாகப் பாதிக்க வில்லை. ஆனால் இன்னும் நூறு வருஷங்கள் கழித்து, இந்த ஜனப் பெருக்க விஷயம் நம்மைக் கட்டாயம் பாதிக்கும். தேசீய உணர்ச்சியை நாம் இழந்து விட்ட காரணத்தினாலேயே, அந்நியர்களுடைய அரசியல் சக்திகளும் பொருளாதார சக்திகளும் நமது நாட்டிற்குள் பிரவேசிக்க நாம் தாராளமாக இடங் கொடுத்து விட்டோம். நமது தேசீயத்தை நாம் காப்பாற்றிக்கொண்டிருந்தோமானால் இவைகளுக்கெல்லாம் நாம் இடமே கொடுத்திருக்க மாட்டோம். நமது தேசீயத்தை நாம் எப்படி இழந்து விட்டோம் என்பதை விஸ்தரித்து கூறுவது கஷ்ட சாத்தியமானதாகும். ஆனால் இங்கு ஒரு கதையை உதாரணமாகக் கூறுகிறேன். இந்தச் சம்பவத்தை நான் நேரில் பார்த்தேன். ஹாங்காங்கில் ஒரு கூலி இருந்தான். இவன், கப்பல் பிரயாணிகளின் சாமான்களைத் தூக்கிச் சென்று கூலி சம்பாதித்து அதன் மூலமாகத் தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். சாமான்களைத் தூக்கிச் செல்லும் பொருட்டு, ஒரு மூங்கில் தடியையும் இரண்டு கயிறுகளையும் இவன் உபயோகித்து வந்தான். இவைகளே இவனுடைய ஆஸ்தி. இவனுடைய அன்றாட சம்பாத்தியத்திற்கு இவைதான் மூலகாரணங் களாயிருந்தன. இவன் எப்படியோ தனது சம்பாத்தியத்திலிருந்து பத்து டாலர் மிகுத்தி வைத்தான். அப்பொழுது லாட்டரி சீட்டு ஒன்று போடப்பட்டு வந்தது. இந்தக் கூலியும் ஒரு லாட்டரி சீட்டு வாங்கினான். இவனுக்கு வீடுவாசல் ஒன்றுமில்லையாதலினால், இந்த லாட்டரி டிக்கெட்டை வைத்துக் கொள்ள இடமில்லை. எனவே தன்னுடைய மூங்கில் தடிக்குள்ளேயே இந்த லாட்டரி சீட்டை இவன் பத்திரப் படுத்தி வைத்திருந்தான். தனது லாட்டரி நெம்பரை மனத்தில் பதித்துக் கொண்டான். லாட்டரி குலுக்கப்பட்டது. இவனுக்கு முதல் பரிசு கிடைத்தது. அதாவது ஒரு லட்சம் டாலர் இவனுக்கு ஆஸ்தியாக வந்து சேர்ந்தது. உடனே இவனுக்குச் சந்தோஷம் பொங்கியது. கூலிப் பிழைப்பு இனி தனக்கு அனாவசிய மென்று சொல்லிக்கொண்டே இவன், தன்னுடைய மூங்கில் தடியையும் கயிற்றையும் சமுத்திரத்தில் எறிந்து விட்டான். மேற்படி கூலியின் மூங்கில் தடியை தேசீயத்திற்கு ஒப்பிடலாம். நமது உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாயிருப்பது இந்தத் தேசீயந்தான். லாட்டரியில் முதற் பரிசு கிடைத்தது எப்படியிருக்கிறதென்றால், புராதன காலத்தில் சீனா ஓர் ஏகாதிபத்தியமாக வாழ்ந்தபோது உலக சகோதரத்துவ உணர்ச்சி பெற்று, எல்லாரும் சீனாவிடம் மரியாதை செலுத்துவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்ததைப் போலிருக் கிறது. இப்படி எண்ணிக் கொண்டிருந்த காலத்தில்தான், நமது முன்னையோர், அந்தக் கூலி தனது உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமான மூங்கில் தடியையும் கயிற்றையும் சமுத்திரத்தில் எறிந்து விட்டது போல, தேசீயத்தைக் கை நழுவ விட்டனர். பின்னர் சீனாவை மஞ்சூ ஜாதியினர் ஆக்கிரமித்துக்கொண்ட காலத்தில், அது - சீனா - உலக ஆதிக்கத்தை வகிக்கமுடியவில்லை. சீனாவின் தேசீய உணர்ச்சியும் அழிக்கப் பட்டுவிட்டது. இனியாவது வருங்காலத்தில் நமது தேசீய உணர்ச்சியைப் புதுப்பிக்க ஏதேனும் ஒரு மார்க்கத்தைக் கண்டு பிடித்துக் கொண்டோமானால்தான் நம்மை வேறுவிதமான அரசியல் சக்திகளோ பொருளாதார சக்திகளோ அழுத்தினால்கூட நாம் வாழ்ந்து கொண்டிருக்க முடியும். நாம் இன்னும் நாற்பது கோடி மக்களாக வாழ்ந்து கொண்டிருப்பதொன்றே, கடவுள் நம்மை அழித்துவிட விரும்ப வில்லையென்பதை வலியுறுத்துகிறது. சீனா அழிந்து போகுமானால் அதற்குக் குற்றவாளிகள் நாம்தான். நாம்தான் உலகத்திலே பெரிய பாவத்தைச் செய்தவர்களாவோம். சீனர்களாகிய நம்மீது கடவுள் பெரிய பொறுப்பைச் சுமத்தியிருக் கிறார். நம்மை நாமே நேசிக்க வில்லையானால் நாம் கடவுளுக்கு விரோதிகளாவோம். நம்மிலே ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பொறுப்பை வகித்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு இன்று சீனா வந்திருக்கிறது. நம்மை அழித்துவிட கடவுளுக்கு மனமில்லை யானால், உலக முன்னேற்றத்திற்கு நாமும் துணை செய்ய வேண்டு மென்பதற்காக நம்மை இன்னும் உயிரோடு வைத்திருக்கிறார் என்றே அர்த்தம். சீனா அழியுமானால் அது வல்லரசுகளின் கையி னாலேயே அழியும். இதனால் இந்த உலக வல்லரசுகள் உலக முன்னேற்றத்தைத் தடை செய்ததாகும். நேற்று ஒரு ருஷ்யன் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது பின் வருமாறு கூறினான்:- “எல்லா வல்லரசுகளும் ஏன் லெனினை1 எதிர்த்தன தெரியுமா? அவர், உலகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறதென்றும், ஒரு பக்கம் நூற்றிருபத்தைந்து கோடிமக்களும் இன்னொரு பக்கத்தில் இருபத்தைந்து கோடி மக்களும் இருக்கிறார்களென்றும், பின்னவர் முன்னவரை அடக்கியாண்டு, அதன் மூலமாக இயற்கைக்கு மாறுபட்டுச் செல்கிறார் களென்றும், இந்த அடக்கு முறையை அடக்குவதே இயற்கை நியதிப்படி நடப்பதாகும் என்றும் சொல்லிக் கொண்டு வந்தார்.” எனவே சீனர்களாகிய நாம், உலக அடக்குமுறையை எதிர்த்து நிற்க வேண்டுமானால், மேலே கூறப்பட்ட நூற்றிருபத்தைந்து கோடி மக்களுடனும் சேர்ந்து கொள்ள வேண்டும். முதலில் நாம் தேசீயத்தை வலியுறுத்தி, நமக்குள்ளேயே ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, மற்றவர்களுக்கு உதவி செய்வதைப் பற்றி யோசித்துக்கொள்ளலாம். சுய நல சக்திகளை உலகத்தினின்று விரட்டியடித்து விட்ட பிறகு, நாம் உலக சகோதரத்தவத்தைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம். 4 சீனாவும் ஐரோப்பிய யுத்தமும் (17 - 2 - 1924) இன்றைய உலகத்தின் ஜனத்தொகை ஏறக்குறைய நூற்றைம்பது கோடி.1 இந்தத் தொகையினரில் நான்கில் ஒரு பங்கினர் சீனாவில் வசிக் கின்றனர். அதாவது நாலில் ஒருவர் சீனாக்காரர் என்பது அர்த்தமாகிறது. ஐரோப்பாவிலுள்ள வெள்ளை ஜாதியினரின் மொத்த ஜனத்தொகை ஏறக்குறைய நாற்பது கோடி. இந்த வெள்ளை நிறத்தவர்கள்தான் இப்பொழுது உலகத்தில் சுபிட்சமா யிருக்கின்றனர் என்று சொல்லலாம். இந்த வெள்ளை நிறத்தவரில் நான்கு ஜாதியினர் அடங்கியிருக்கின்றனர். அதாவது ஐரோப்பா வின் மத்திய பாகத்திலும் வட பாகத்திலும் வசிக்கும் ட்யூட்டானிய ஜாதியினர்; ஐரோப்பாவின் கிழக்குப் பாகத்தில் வசிக்கும் ஸ்லாவிய ஜாதியினர்; ஐரோப்பாவின் மேற்குப்பாகத்தில் வசிக்கும் சாக்சன் ஜாதியினர்; ஐரோப்பாவின் தெற்குப் பாகத்தில் வசிக்கும் லத்தீன் ஜாதியினர்; ஆக நான்கு ஜாதியினர். இவர்களில் ட்யூட்டானியர்கள், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்வீடன், நார்வே, ஹாலந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். ஸ்லாவியர்கள், ருஷ்யா, ஜெக்கோ - ஸ்லோவேகியா. யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். சாக்சன் ஜாதியார், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வசிக் கிறார்கள். லத்தீனியர்கள், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துகல் முதலிய நாடுகளிலும், தென்னமெரிக்காவிலும் வசிக் கின்றனர். இந்த வெள்ளை ஜாதியினர் அத்தனை பேருக்கும் தேசீய உணர்ச்சி மிகுந்திருப்பதனால்தான், இந்த சாக்ஸன் ஜாதி, ஐரோப்பாவில் தோன்றிய போதிலும், அந்த ஐரோப்பா கண்டத்தில் இதன் ஆதிக்கத்துக் குட்பட்டிருக்கும் இடம் மிகச் சொற்பந்தான். அதாவது, இங்கிலாந்து, ஸ்காத்லாந்து, ஐர்லாந்து என்ற பிரிட்டிஷ் தீவுப் பிரதேசந்தான். எப்படி பசிபிக் மகாசமுத்திரத்தில் ஜப்பான் ஒரு சிறிய தீவாயிருந்து கொண்டு அதிக ஆதிக்கம் செலுத்துகிறதோ அதைப் போலவே, அத்லாந்திக் மகா சமுத்திரத்திலும், இந்தப் பிரிட்டிஷ் தீவு அதிகமான ஆதிக்கஞ் செலுத்துகிறது. சாக்சன் ஜாதியினர், தங்களுடைய ஆதிக்கத்தை வட அமெரிக்காவிலும் கிழக்கில் ஆஸ்திரேலியா, நியூஜீலந்து முதலிய பிரதேசங்களிலும், தெற்கில் ஆப்ரிக்கா முதலிய பிரதேசங்களிலும் பரப்பிக் கொண்டு, அதிகமான செல்வத்தையும் செல்வாக்கையும் அடைந்து விட்டனர். 1914ஆம் வருஷத்து ஐரோப்பிய யுத்தத்திற்கு முன்னர், ட்யூட்டானி யர்களும் ஸ்லாவியர்களுமே வலுவுள்ள ஜாதியினரா யிருந்தனர். ட்யூட்டானியர்கள், தங்களுடைய அறிவினாலும், திறமை யினாலும் சிதறிப்போயிருந்த சுமார் இருபது நாடுகளை ஒன்றாக்கி, ஜெர்மானிய ஏகாதிபத்தியமொன்றைச் சிருஷ்டி செய்தனர். ஆரம்பத்தில் விவசாய நாடாக இருந்த ஜெர்மனியை ஒரு கைத் தொழில் நாடாக ஆக்கி அதன் மூலமாகத் தங்கள் ராணுவத்தையும் கடற் படையையும் அபிவிருத்தி செய்து கொண்டனர். ஐரோப்பிய யுத்தத்திற்கு முன்னர், ஐரோப்பாவிலுள்ள எல்லா நாடுகளுக்கும் ஏகாதிபத்திய விஷம் ஏறியிருந்தது. ஏகாதிபத்தியம் என்றால் என்ன? ஒரு நாடு, தனது அரசியல் அதிகார பலத்தைக் கொண்டு மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் கொள்கையே ஏகாதி பத்தியம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இதனையே, சீன பாஷையில் ‘நீண்ட தூர ஆக்கிரமிப்பு’ என்று சொல்வார்கள். ஐரோப்பிய ஜாதியினர் அத்தனை பேருக்கும் இந்த எண்ணம் குடிகொண்டிருந்ததனாலேயே, அடிக்கடி சண்டைகள் உண்டாகிக் கொண்டிருந்தன. பத்து வருஷங்களுக் கொரு முறை ஒரு சிறிய சண்டையும் முறையே ஒரு நூற்றாண்டுக்கு ஒருமுறை ஒரு பெரிய சண்டையும் ஏற்பட்டுக்கொண்டுவந்தன. இவற்றில் மிக மிகப் பெரிய சண்டையானது 1914ஆம் வருஷத்து ஐரோப்பிய யுத்தம் உலகிலுள்ள எல்லா நாடுகளையும் யுத்தத்திலே கொண்டு வந்து முட்ட வைத்ததால், இதற்கு உலக யுத்தம் என்று பெயர் வந்தது. இந்த யுத்தத்திற்கு முக்கியமான சில காரணங்களைச் சொல்லலாம்:- 1. சமுத்திரத்தில் தங்களுக்கே ஆதிக்கம் இருக்க வேண்டு மென்று சாக்ஸன் ஜாதியினருக்கும் ட்யூட்டானிய ஜாதியினருக்கும் எற்பட்டபோட்டி. ஜெர்மனி, தன் கடற்படையை விருத்தி செய்து கொண்டு போனது, கிரேட் பிரிட்டனுக்குப் பிடிக்க வில்லை. இதனால் ஜெர்மனியை நசுக்க முயன்றது. 2. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் தனக்கு அதிகமான நாடுகள் வேண்டுமென ஆசை கொண்டன. ஐரோப்பாவின் கிழக்குப் பாகத்தில் துருக்கி என்ற பலவீனமான நாடு ஒன்று இருந்தது. சென்ற நூறு வருஷமாக, இதற்கு ‘ஐரோப்பாவின் நோயாளி’ என்று பெயர். ஐரோப்பிய வல்லரசுகள் இதனைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்பின. சென்ற ஐரோப்பிய யுத்தம், உலக சரித்திரத்திலேயே மிகவும் பயங்கரமான யுத்தம் என்று சொல்லலாம். நான்கு அல்லது ஐந்து கோடி ஜனங்கள், சுமார் நான்கு வருஷகாலம் சதா ஆயுதபாணி களாக இருந்தார்கள். நான்கு வருஷ காலம் யுத்தம் நடந்தபிறகு கூட, வெற்றி யடைந்தவர் யார், தோல்வியடைந்தவர் யார் என்று நிர்ணயித்துச் சொல்ல முடியவில்லை. யுத்தத்தின் முதல் இரண்டு வருஷ காலம் ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவுக்கு வெற்றி ஏற்படும் போலிருந்தது. பிரிட்டிஷாருக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது. எனவே, கிரேட் பிரிட்டன், சுய ஜாதி அபிமானத்தை முன்னிட்டு, அமெரிக்காவை யுத்தத்தில் இறங்குமாறு தூண்டியது. அமெரிக்கா வும், தன் சுய ஜாதியைச் சேர்ந்த இங்கிலாந்துக்கு எவ்வித சேதமும் ஏற்படக் கூடாதென்று கருதி, யுத்தத்தில் இறங்கியது. அது மட்டு மல்லாமல், நடு நிலைமை வகித்த எல்லா நாடுகளையும், தன்னோடு சேர்ந்து கொண்டு ஜெர்மனிக்கு விரோதமாகப் போர் புரியும்படி தூண்டியது. யுத்தத்தின் போது, பிரசிடெண்ட் வில்ஸன்,1 மகத்தானதொரு வாக்கியத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டு வந்தார். அதுதான், ‘அந்தந்த ஜாதியினருக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு’ என்பது, ஜெர்மனியானது, தனது ஆயுத பலத்தின் துணைகொண்டு சிறிய நாடுகளை நசுக்க முற்பட்டிருப்பதைக் கண்ட வில்ஸன், எல்லாச் சிறிய நாடுகளும் சுய நிர்ணய உரிமை பெற வேண்டுமென்று கூறினார். உலகத்திலுள்ள அனைவரும் இதனை ஆதரித்தனர். இதனால் சிறிய தேசத்தினர் பலரும், நேசக் கட்சியினருக்கு உதவி செய்தனர். சீனாவும் அமெரிக்காவின் தூண்டுதல் பேரில், யுத்தத்தில் இறங்கியது. சீனா பெரிய ராணுவத்தை அனுப்பி உதவி செய்யா விட்டாலும், லட்சக்கணக்கான தொழிலாளர்களை அனுப்பி சேனைக்கு உதவி புரியச் செய்தது. உயர்ந்த லட்சியத்திற்காகவே நேசக் கட்சியினர், யுத்தத்தில் இறங்கியிருக்கின்றனர் என்ற எண்ணத் துடனேயே, உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் நேசக் கட்சி யினருக்கு உதவி புரிந்தன. தவிர, பிரசிடெண்ட் வில்ஸன்,உலகத்தில் நிரந்தரமான சமாதானத்தை நிலை நிறுத்த வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்துடன் பதினான்கு நியதிகளைக் கிளத்தினார்.2 இவற்றில் ஒன்று, ஒவ்வொரு நாடும் சுய நிர்ணய உரிமை பெற வேண்டு மென்பது. வெற்றியா, தோல்வியா என்று நிர்ணயிக்கப் படாத நிலை யில், இங்கிலாந்தும், பிரான்ஸும் இந்தப் பதினான்கு நியதிகளையும் அப்படியே ஏற்றுக் கொண்டன. ஆனால், நேசக் கட்சியினருக்கு வெற்றி ஏற்பட்டு, சமாதான மகாநாடு கூடினவுடனேயே, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி முதலிய நாடுகள், தங்களுடைய ஏகாதிபத்தியக் கொள்ளைக்கு இந்தச் சுய நிர்ணய உரிமைக் கொள்கை முரணா யிருக்குமேயென்று யோசிக்கலாயின. இதனால், சமாதான மகா நாட்டின் போது, வில்சனுடைய பதினான்கு நியதிகளுக்கும் வேறு வேறு வியாக்கியானஞ் செய்யலாயின. விளைவு என்ன? அநீதமான ஒரு சமாதான உடன்படிக்கை சிறிய நாடுகள், ஏற்கனவே சொல்லப் பட்டபடி சுய நிர்ணய உரிமை பெறவில்லை. இதனால் என்ன தெரிகிறதென்றால், பலமுள்ள நாடுகள் பூலோகத்தின் பெரும் பாகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது மன்றி, மற்ற நாடுகளின் உரிமைகளையும் தங்களுக்குச் சுவாதீனப்படுத்திக் கொண்டிருக் கின்றன. தாங்கள் இந்த நிலைமையிலேயே சாசுவதமாக இருக்க வேண்டுமென்பதற்காகவும், சிறிய நாடுகள் மறுபடியும் தலை யெடுக்கக் கூடாதென்பதற்காகவும், இந்த வல்லரசுகள், தேசீயம் என்பது குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிற தென்றும், சர்வதேச சகோதரத்துவமே சிறந்த தென்றும் சொல்ல முற்பட்டன. உண்மையில், இந்தச் சர்வ தேச சகோதரத்துவமானது, ஏகாதி பத்தியத்தின் மற்றோர் உருவமாகும். நான்கு வருஷ காலம் யுத்தம் நடைபெற்ற போதிலும், ஏகாதிபத்தியக் கொள்கை யென்னவோ ஒழியவில்லை. ஏனென்றால், மேற்படி யுத்தமானது ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்குமோ, தருமத்திற்கும் அதருமத்திற்குமோ ஏற்பட்ட யுத்தமாயில்லை. ஓர் ஏகாதிபத்தியத்திற்கும் மற்றோர் ஏகாதிபத்தியத்திற்கும் ஏற்பட்ட யுத்தமாகவே இருந்தது. முடிவு என்ன? ஓர் ஏகாதிபத்தியம் போனால் மற்றோர் ஏகாதிபத்தியம் நிலை பெற்றது. அனால் மேற்படி ஐரோப்பிய யுத்தத்தின் விளைவாக, மானிட சமூகத்தின் இதயத்தில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. அதுதான் ருஷ்யப் புரட்சி. ருஷ்யப் புரட்சியானது, 1905ஆம் வருஷத்திலேயே தொடங்கி விட்டது.1 ஆனால் அப்பொழுது அது வெற்றி பெறவில்லை. ஐரோப்பிய யுத்தத்தின்போதே வெற்றிபெற்றது. இந்த ருஷ்யப் புரட்சிக்குக் காரணம் என்ன? யுத்தத்தினால் ஏற்பட்ட அனுபவங்களின் பயனாக, ஜனங்களுக்கு ஒரு விழிப்பு ஏற்பட்டதேயாகும். முதலில் நேச தேசங் களோடு ஜெர்மனியை எதிர்த்து நின்ற ருஷ்யா, பிறகு யுத்தத்தினின்று விலகிக் கொண்டு ஜெர்மனியுடன் தனியாகச் சமாதானம் செய்து கொண்டுவிட்டது. பதினைந்து கோடி ருஷ்யர்கள், வெள்ளை ஜாதியைச் சேர்ந்தவராயிருந்தபோதிலும், மற்ற வெள்ளை ஜாதியைச் சேர்ந்தவரினின்று விலகிக் கொண்டுவிட்டனர். ஏனென்றால் மற்ற வெள்ளை ஜாதியினருடைய ஏகாதிபத்தியக் கொள்கை இவர் களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் இவர்கள், ஆசியா கண்டத்தி லுள்ள பலவீனமான சிறிய ஜாதியினருடன் சேர்ந்து கொண்டு, மற்ற வெள்ளை இனத்தாருடன் போராடுகின்றனர். இதனால் பிறரை அடக்கியாளும் சுபாவமுடைய வெள்ளை ஜாதியினர் மொத்தம் இருபத்தைந்து கோடி பேரே இருக்கின்றனர். இவர்கள் மற்றவர்களை அடக்கியாளப் பலவிதமான முறைகளைக் கையாளுகின்றார்கள். இனி மனித சமூகமானது, இரண்டு பிரிவாகப் பிரிந்துவிடும். அதாவது ஒரு பிரிவில் நூற்றிருபத்தைந்து கோடி பேரும், மற்றொரு பிரிவில் இருபத்தைந்து கோடி பேரும் இருப்பர். பின்னவர், சிறுபான்மையினராயிருந்த போதிலும், இவர்களுடைய அரசியல் பலமும் பொருளாதார பலமும் மிக அதிகமாயிருக் கின்றன. இந்த இரண்டு பலங்களையும் கொண்டே, இவர்கள் மற்றவர்களை நசுக்கப் பார்க்கிறார்கள். இவர்கள், தங்கள் அரசியல் பலம் குறைந்து போயிருக்கிற தென்று தெரிந்தால் பொருளாதார பலத்தை உபயோகிக்கிறார்கள். பொருளாதார பலம் குறைகிற போது, அரசியல் பலத்தை உபயோகிக் கிறார்கள். மனிதனுக்கு, எப்படி இரண்டு கைகளும் மாறி மாறி உபயோகப் படுகின்றனவோ, அதைப்போல், இந்தச் சிறுபான்மையினர், தங்கள் இரண்டு பலங்களையும் மாறி மாறி உபயோகிக்கின்றனர். ஆனால் எல்லாம் மனிதனுடைய விருப்பப்படியே நடைபெறுகிறதில்லை யல்லவா? ருஷ்யாவில் ஸ்லாவிய ஜாதியினர், ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித் துவத்திற்கும் விரோதமாகப் புரட்சி செய்தனர். ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்குச் சுய நிர்ணய உரிமை கொடுக்க வேண்டுமென்று லெனின் தைரியமாகச் சொன்னதனாலேயே அவனை எல்லோரும் தூஷிக்கத் தலைப்பட்டனர். இப்பொழுது சீனர்களாகிய நமது கடமை என்ன? இழந்து போன சீனாவின் தேசீயத்தை மறுபடியும் புதுப்பிக்க வேண்டும். நாற்பதுகோடி மக்களாகிய நாம், மனித சமூகத்திற்கு இழைக்கப் பட்டு வரும் தீங்கை எதிர்த்துப் போராடவேண்டும். இந்த எண்ணம் நமக்கு இருக்கிற தென்று தெரிந்துதான், மற்ற வல்லரசுகள், உலக சகோதரத்துவ எண்ணத்தைப் பரப்பி வருகின்றன. மானிட சமூகத்தின் எண்ணமானது விரிந்து வருகிற தென்றும் இந்த நிலையில் தேசீயமாகிய குறுகிய பாதையில் செல்லக் கூடாதென்றும் இவை உபதேசம் செய்கின்றன. சீன இளைஞர்கள் சிலர், இந்த உபதேசத்தில் மயங்கிப்போய் தேசீயத்தை எதிர்த்துப் போராடு கிறார்கள். ஒடுக்கப்பட்ட ஜாதியினர் சர்வ தேச சகோதரத்து வத்தைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லை. நாம், முதலில் தேசீய சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய முயற்சி செய்ய வேண்டும். பிறகு, இந்தச் சர்வ தேச சகோதரத்துவத்தைப் பற்றிப் பேசலாம். நம்மிடத்திலே தேசீய உணர்ச்சி வலுத்திருந்தால்தான், சர்வதேச சகோதரத்துவ உணர்ச்சியும் வலுத்து நிற்கும். சீன சரித்திரத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால், சீனர்களாகிய நாமும் ஏகாதிபத்திய வழியையே பின் பற்றி வந்திருக்கிறோம் என்பது நன்கு தெரியும். நம்முடைய முன்னோர்கள், பலவீனமுள்ள தேசங் களை, தங்களுடைய அரசியல் பலத்தைக் கொண்டு நசுக்கி வந்தார்கள். ஆனால் அந்தக் காலத்தில் பொருளாதார சக்திகள் அவ்வளவு வலுவாயில்லை. அதனால் நாம் அப்பொழுது நமது பொருளாதார பலத்தைக்கொண்டு யாரையும் நசுக்கவில்ல. இன்னும் ஐரோப்பாவின் கலை ஞானத்தையும் சீனாவின் கலை ஞானத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஐரோப்பியக் கலை ஞானத்தின் உன்னத மான காலம் கிரீஸும் ரோமாபுரியும் உயர்ந்த ஸ்திதியிலிருந்த காலத்தில்தான். ரோமாபுரி உன்னத ஸ்திதியிலிருந்த காலத்தில், சீனாவில் ஹான் வமிசத்தினர் மிகச் செல்வாக்குடன் ஆட்சி புரிந்து வந்தனர். அப்பொழுது சீனாவில் பிரபல ஞானிகள் பலர் தோன்றி, ஏகாதிபத்திய எண்ணங்களை எதிர்த்து வந்திருக்கின்றனர். சீனாவில் ஸுங் வமிசத்தினர் ஆண்டு கொண்டிருந்த போது, மற்றவர்களைத் தாக்குகிற நிலைமை போய் மற்றவர்களால் தாக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. மிங் வமிசத்தினர், ஆட்சி முறையை ஏற்றுக் கொண்ட பிறகு, சீனா மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தது. தெற்குச் சீனக் கடலில் இருந்த சிறிய நாடுகள், சீனாவுக்கு அடங்கியிருப்பதாக உறுதிகொடுத்து அப்படியே காணிக்கை செலுத்தி வந்தன. சீனாவுடன் சேர்ந்து வாழ்வது பெரிய கௌரவமாக இவை நினைத்தன. ஆனால் இன்றைய வல்லரசுகள், இநத மாதிரியான புகழை மற்ற நாடுகளிலிருந்து ஏற்றுக் கொண் டிருக்கின்றனவா? பிலிப்பைன் தீவு விஷயத்தில், அமெரிக்கா செலுத்திக் கொண்டு வரும் ஆதிக்கம் ஒன்றே சரியான உதாரண மாகும். இந்தியாவில் நேபாள தேசத்தை எடுத்துக கொள்ளுங்கள். இந்த ராஜ்யத்திற்கு பிரிட்டிஷார், பிரதி வருஷமும சன்மானம் அனுப்பிக் கொண்டு வருகின்றனர். ஏனென்றால் நேபாள தேச வாசி களாகிய கூர்க்கர்களைக் கண்டு யாருக்குமே அச்சம் ஏற்பட்டிருக் கிறது. இப்படி யெல்லாம் இருந்தும், இந்த நேபாள ராஜ்யத்தினர், சீனாவில் குடியரசு ஸ்தாபிதமாவதற்கு முந்தின வருஷம் வரை, சீனாவுக்குக் காணிக்கை அனுப்பிக்கொண்டு வந்தனர். சையாம் தேசம், சீனாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிற தென்பதை நான் அறிவேன். புரட்சி என்றாலே ரத்தச் சிந்துதல்தான். ஆயினும் சீனர்கள், ரத்தச் சிந்துதலிலே அவ்வளவு பிரியமுள்ளவர்களில்லை. 1911 - ஆம் வருஷத்துப் புரட்சியின் போது, சீன அரச பரம்பரையினராகிய மஞ்சூ வமிசத்தினரைச் சிங்காதனத்தினின்று இறக்கி விட்டோம். அந்தக் காலத்தில், அதிகமான ரத்தஞ் சிந்தாமலே புரட்சியை நடத்தினோம். இதற்குக் காரணம் நாம் சமாதானப் பிரியர்களாக இருப்பதுதான். சீனாவின் உதாரணத்தைப் பின்பற்றுமாறு நான் உலகத்தினருக்குப் பல முறை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இப்பொழுது, ருஷ்யர்கள் இதனை உணரத் தலைப்பட்டிருக் கிறார்கள். நாற்பது கோடி சீனர்களாகிய நாம் மிகவும் நாகரிக முள்ள ஜாதியார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இப்பொழுது பொதுவுடைமைத் தத்துவம் என்று எதைச் சொல்லுகிறார்களோ அதைச் சீனா, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே அடைந் திருந்தது. சீன நாகரிகம் முன்னேற்ற மடைந்திருக்கிற தென்று சொன்னால் அது லௌகிக விஷயத்தில்தான். ஐரோப்பிய நாகரிகம் விருத்தியடைய விருத்தியடைய நமது அன்றாடத் தேவைகளை அனுபவிப்பது சுலபமாகிவிட்டது. யுத்தக் கருவிகள் பண்பட்ட நிலைமையில் தயாராக்கப் படுகின்றன. விஞ்ஞான அறிவு வளர வளர, இவைகளும் அபிவிருத்தி யடைந்திருக்கின்றன. இந்த விஞ்ஞான அபிவிருத்தி யென்பதெல்லாம் இருநூறு வருஷ காலத் திற்கு முற்பட்டதுதான். ஆனால் சீனாவின் விஞ்ஞான அபிவிருத்தி யானது, பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது. இப்பொழுது உலகத்தில், கலை ஞானத்தில் தலைசிறந்து நிற்பது ஜெர்மனி. ஆயினும் ஜெர்மானியர்கள், சீனாவின் கலை ஞானத்தைப் பற்றி இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சர்வதேச சகோதரத்துவம் என்ற எண்ணமானது இந்தத் தலைமுறையிலே தான் ஐரோப்பாவில் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாலேயே இது சீனாவில் ஏற்பட்டிருந்தது. நமது முன்னோர்கள், உலக நாகரிகத்தையே தங்கள் லட்சியமாகக் கொண்டிருந்தார்கள். உலக சமாதானத்திற்காகவே அவர்கள் பாடு பட்டு வந்திருக்கிறார்கள். இடையில் நாம் நமது தேசீய எண்ணத்தை மறந்து விட்டோமாதலினால் நமது நாகரிகத்தின் மேன்மை முதலியன ஒன்றுந் தெரியாமல் போய்விட்டன. ஆதலின் முதலில் நமது தேசீய எண்ணத்தை அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும். சர்வதேச சகோதரத்துவத்திற்கு அஃது அஸ்திவாரம் போன்றது. ‘உலகத்தை ஆளவேண்டுமென்று விரும்புகிறவர்கள், முதலில் தங்கள் நாட்டைச் சரியாக ஆளப்பார்க்க வேண்டும்’ என்ற பழமொழியொன்றுண்டல்லவா? ஆதலின் இழந்துபோன நமது தேசீய உணர்ச்சியை மீண்டும் பெறுவோமாக! 5. பழமையின்மீது புதுமை (24 - 2 - 1924) நமது தேசீய உணர்ச்சியைத் தட்டியெழுப்ப நாம் என்னென்ன முறைகளைக் கையாளலாம்? இரண்டு வழிகள் எனக்குப் புலப்படு கின்றன. முதலாவது, நமது நாற்பது கோடி ஜனங்களுக்கும், ‘நாம் எந்நிலையில் இருக்கிறோம்’ என்று விழித்துப் பார்க்கக்கூடிய உணர்ச்சியை உண்டு பண்ணவேண்டும். சீனர்களாகிய நாம் இப் பொழுது ஒரு நெருக்கடியில் இருக்கிறோம். இந்தத் துன்பத்திலிருந்து இன்பத்தைக் காணவேண்டும்; மரணத்திலிருந்து வாழ்க்கையைக் காணவேண்டும். முதலில் நாம் தெளிவாகப் பார்க்கிற சக்தியைப் பெற வேண்டும். பிறகுதான் ஏதேனும் காரியங்கள் செய்யத் தொடங்கவேண்டும். ‘விஷயங்களைத் தெரிந்து கொள்வதுதான் கஷ்டம்; காரியங்கள் செய்வதென்னவோ சுலபம்’ என்ற வாசகத்தின் உண்மையை நீங்கள் உணரவேண்டுமானால், எனது பிரசங்கங் களைத் தொடர்ந்து படிக்கவேண்டும். ஆதியில், சீனா, நாம் சறுக்குப் பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளாமலே இருந்தது. அதனால் அஃது அழிந்துபடத் தொடங்கியது. சிறிது முன்னோக்கிப் பார்த்திருக்குமானால் அஃது இந்த ஸ்திதிக்கு வந்திராது. ‘எந்த தேசத்திற்கு அந்நிய நாட்டுச் சத்துருக்கள் இல்லையோ, வெளிப்புறத்து ஆபத்துக்கள் இல்லையோ அந்த நாடு அழிந்து போவது நிச்சயம்’ என்ற பழமொழியொன் றுண்டு. ‘ஒரு நாடு தலைநிமிர்ந்து வாழவேண்டுமானால் அதற்குப் பல துன்பங்கள் வரவேண்டும’ என்பது மிகவும் அனுபவ பூர்வமான வாசகம். எந்த ஒரு நாடு, தனக்கு வெளி ஆபத்துக்கள் இல்லை யென்றும் தான் மிகவும் பந்தோபஸ்துடனேயே இருப்பதாகவும், தான் உலகத்திலுள்ள நாடுகளில் மிகவும் பலமுள்ள நாடென்றும், அந்நியர்கள் தன்மீது படையெடுக்கத் துணியார்களென்றும், அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையில்லை யென்றும் கருதிக் கொண்டிருக்கிறதோ அந்த நாடு சிதறிப்போவது திண்ணம். ஒரு நாட்டுக்குத் துன்பங்கள் ஏற்பட்டால், அந்தத் துன்பங்கள் இன்னின்னவை யென்று ஜனங்களுக்குத் தெரிந்ததும் அவர்க ளுடைய சக்திகளெல்லாம் எழுப்பப்படுகின்றன. வீரச் செயல்கள் பல புரிவதற்கு அவை நம்மை உந்துகின்றன. ஆகையால் இப்பொழுது நாம் எந்நிலையில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இப்பொழுதுள்ள நிலைமையைத் தெரிந்துகொள்ளாமல் தேசீய உணர்ச்சியைப் புதுப்பிக்கத் தொடங் கினோமானால் வருங்காலத்திலே நமக்கிருக்கிற நம்பிக்கையையும் நாம் இழந்து விடுவோம்; சீன ஜாதியே அழிந்துபட்டுப் போகும். நம்மைப் பயமுறுத்திக்கொண்டிருக்கிற அழிவுச் சக்திகள் தாமென்ன? அவை எந்தெந்தத் திசையிலிருந்து நம்மை நோக்கி வரு கின்றன? அவை, வல்லரசுகளிடமிருந்தே நம்மை நோக்கி வருகின்றன. முதலாவது அரசியல் ஆதிக்கம்; இரண்டாவது பொருளாதார ஆதிக்கம்; மூன்றாவது வல்லரசு நாடுகளில் ஜனத் தொகை பெருகிக் கொண்டிருத்தல்; ஆக வெளிப்புறத்திலிருந்து வரும் இந்த மூன்று அழிவுச் சக்திகளும் ஏற்கனவே நம் தலைமீது வந்து அமர்ந்திருக்கின்றன. நமது ஜனங்கள் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருக்கிறார்கள். முதல் ஆபத்து - அதாவது அரசியல் ஆதிக்கம் பெற்று ஒரு தேசத்தை அழித்து விடுவது என்பது - நமக்கு எந்த நாளிலும் ஏற்படலாம். இந்த அரசியல் ஆதிக்கம் இரண்டு வழிகளில் ஒரு தேசத்தை அழித்துவிடும். ஒன்று, இராணுவ பலத்தின் மூலம்; மற்றொன்று, ராஜதந்திரத்தின் மூலம். இராணுவ பலத்தைக் கொண்டு ஒரு தேசத்தை எப்படி அழித்து விட முடியும் என்று நீங்கள் கேட்பீர்களானால் சரித்திரத்தைப் பாருங்கள் என்று சொல்வேன். யய்மென் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரே யுத்தத்தில் மங்கோலியர்கள், ஸுங் அரச வமிசத்தை அழித்துவிட்டனர்.1 யாங்சௌ யுத்தத்தில் மிங் ராஜ வமிசம் அழிந்துபட்டது.2 அந்நிய நாட்டுச் சரித்திரங்களைத் தான் பாருங்களேன். வாட்டர்லு யுத்தத்தில் நெப்போலியனுடைய ஏகாதிபத்தியமே சிதறுண்டு போய்விட்டது.3 ஸெடான் என்ற இடத்தில் ஏற்பட்ட யுத்தத்தில் மூன்றாவது நெப்போலியனுடைய ஏகாதிபத்தியம் இல்லாமற் போய்விட்டது.4 இப்படி ஒரு யுத்தத்திலே ஒரு தேசம் வீழ்ந்துபடு மானால், சீனாவுக்குத் தினந்தோறும் ஆபத்து ஏற்பட்டுக் கொண் டிருக்கிற தென்று நான் சொல்வேன். ஏனென்றால் நமது ராணுவம், கப்பற்படை, பாதுகாப்பு ஸ்தலங்கள் முதலியன, சத்துருக்களின் எதிர்ப்புக் களைச் சமாளித்துக் கொள்ளக்கூடிய ஸ்திதியில்இல்லை. அந்நியத் துருப்புக்கள் பிரவேசித்து எந்த நிமிஷத்திலும் நம்மைத் தோற்கடித்து விடலாம். நம்மை அழித்து விடக் கூடிய தேசம் சமீபத்தில் இருக்கும் ஜப்பான்தான். சமாதான காலத்தில் அங்குப் பத்து லட்சம் சைந்நியம் இருக்கிறது. யுத்த காலத்தில் முப்பது லட்சம் துருப்புக்களை அது திரட்டக் கூடும். ஜப்பானுடைய கப்பற்படை பலமும் மிக அதிகம். கிரேட் பிரிட்டன், அமெரிக்கா முதலிய வல்லரசுகளுக்குச் சமதையாக அது தன் கப்பற்படை பலத்தைப் பெருக்கிக் கொள்ளக்கூடும். ஆனால் 1922ஆம் வருஷத்தில் நடைபெற்ற வாஷிங்டன் மகா நாட்டில்1 மூன்று லட்சம் டன் நிறையுள்ள கடற்படையையே ஜப்பான் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப் பட்டது. ஜப்பான் வசம் தற்போது இருக்கும் யுத்தக் கப்பல்கள் மிகவும் பலமுள்ளவை. உதாரணமாக, சீனாவிலுள்ள காண்ட்டன் நகரத்திற் கருகிலிருக்கும் பய் - வூ - தான்2 என்ற துறைமுகப் பட்டினத்திற்கு இரண்டு நாசகாரிக் கப்பல்களை ஜப்பான் அனுப்பியது. அவை களை எதிர்த்து நிற்கவல்ல கப்பற்படை சீனாவின் வசத்திலில்லை. இந்த மாதிரியான நாசகாரிக் கப்பல்கள் ஜப்பான்வசம் நூறுக்குமேல் இருக்கின்றன. இந்தக் கப்பற்படை பலத்தோடு, ஜப்பான் சீனாவை நோக்கி வருமானால் நம்முடைய பாதுகாப்பு ஸ்தலங்கள் தூள் தூளாகிவிடும், இறந்து போகும்படியாக நாம் அடிக்கப்படுவோம். தவிர, கடற்கரையோரமாக நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள பாதுகாப்பு ஸ்தலங்கள் போதுமான பந்தோபஸ் துடையனவா யில்லை. எனவே, நமது கிழக்குப் புறத்துச் சிநேகித நாடாகிய ஜப்பான், ஒரு நிமிஷத்தில் நம்மை வந்து தாக்கக் கூடிய ராணுவ பலமும் கடற்படை பலமும் பெற்றிருக்கிறது. இப்பொழுது அது நம்மைத் தாக்கவில்லை. ஏனென்றால் தகுந்த காலம் வரவில்லை போலிருக்கிறது. ஆனால் அது தாக்குமானால் எந்த நாளிலும் சீனா, அழிந்துபோக வேண்டியதுதான். ஜப்பானில் ராணுவத்தைத் திரட்டி சீனாவின் மீது படை யெடுப்பதற்குப் பத்து நாட்களுக்கு மேல் பிடிக்காது. எனவே, சீனா ஜப்பானுடைய அரசியல் தொடர்பை நிறுத்திக் கொள்ளுமானால், பத்து நாட்களில் அது ஜப்பானால் அழிக்கப்பட்டுவிடும். பசிபிக் மகா சமுத்திரத்திற்குக் கிழக்குப் பக்கமாகவுள்ள அமெரிக்காவை எடுத்துக் கொள்வோம். வாஷிங்டன் மகா நாட்டிற்கு முந்தி, ஜப்பானுடைய கப்பற் படையைவிட மூன்று மடங்கு அதிக மான கப்பற்படை அதற்கு இருந்தது. ஆனால் மேற்படி மகா நாட்டிற்குப் பிறகு அதன் யுத்தக் கப்பல்களின் நிறை ஐந்து லட்சம் டன்னுக்குமேல் இருக்கக் கூடாதென்று வரையறுக்கப்பட்டிருக் கிறது. அமெரிக்காவில் எல்லாருக்கும் கல்வி போதிக்கப்படுகிறது. அங்கு ஆரம்பக்கல்வி கட்டாய மாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் அங்குக் கட்டாயம் பள்ளிக்கூடம் போயாக வேண்டும். பெரும்பாலோர் உயர்தரக் கல்வி பெற்றவராயிருக்கின் றனர். உயர்தரப் பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளுக்கு, இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசாங்கத்தார் எப்பொழுது வேண்டு மானாலும் தங்கள் ராணுவ பலத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். 1914ஆம் வருஷ ஐரோப்பிய யுத்தத்தில் அமெரிக்கா சேர்ந்து கொண்டபோது, அஃது ஒரு வருஷ காலத்திற்குள் இருபது லட்சம் படை வீரர்களை யுத்தகளத்திற்கு அனுப்ப முடிந்தது. சமாதான காலத்தில் அமெரிக்காவின் படைபலம் மிகக் குறைவுதான். ஆனால் யுத்த காலத்தில் அஃது ஏராளமான படைகளைத் திரட்ட முடியும். சீனாவும் அமெரிக்காவும் அரசியல் தொடர்பை அறுத்துக் கொள்ளுமானால், படை திரட்டிக் கொண்டு சீனாவைத் தாக்க அமெரிக்காவுக்கு ஒரு மாதம் தேவையாயிருக்கும். எனவே, அமெரிக்கா சீனாவை ஒருமாத காலத்தில் அழித்து விடமுடியும். இனி, அத்லாந்திக் மகா சமுத்திரத்திலுள்ள பிரிட்டனை எடுத்துக் கொள்வோம். ‘கடலரசி’ என்று பிரிட்டனுக்குப் பெயர். அதாவது அதன் கப்பற்படை பலம் அவ்வளவு அதிகம் என்று அர்த்தம். ஆனால் வாஷிங்டன் மகாநாட்டுக்குப் பிறகு, அதன் யுத்தக் கப்பல்கள் ஐந்து லட்சம் டன் நிறையுள்ளனவாயிருக்க வேண்டுமென்று வரையறுக்கப் பட்டிருக்கிறது. சீனாவிலிருந்து நாற்பது, ஐம்பது நாள் தூரப் பிரயாணத்தில் இங்கிலாந்து இருக் கிறது. தவிர, சீனாவிலேயே, ஹாங்காங் போன்ற துறைமுகப் பட்டினங்கள் அதன் சுவாதீனத்தில் இருக்கின்றன. ஹாங்காங் துறைமுகத்தைப் பிரிட்டிஷார் பலப்படுத்தி வருகின்றனர். இந்தத் துறைமுகத்திலிருந்து கொண்டு, பிரிட்டிஷார் சீனாவின் தெற்கு மாகாணங்களில் தங்கள் செல்வாக்கை உபயோகிக்கலாம். தவிர, ஹாங்காங்கிலேயே பிரிட்டிஷாருடைய ராணுவப் படையும், கப்பற் படையும் நிரந்தரமாக இருக்கின்றன. இந்தச் சிறு படையைக் கொண்டு சீனாவை அழித்துவிட முடியாதாயினும், இந்தச் சிறு படையையும் எதிர்த்து நிற்கக் கூடிய சக்தி நம்மிடத்தில் இல்லையே. சீனாவுக்குச் சமீபத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளிலிருந்தும் பிரிட்டன் படை திரட்டிக் கொண்டு வரலாம். ஆதலின் இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் அரசியல் தொடர்பு அற்றுப் போகுமானால், இரண்டு மாத காலத்திற்குள், இங்கிலாந்து சீனாவை அழித்துவிட முடியும். ஐரோப்பாவின் மற்றொரு வல்லரசாகிய பிரான்சை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் ராணுவ பலம் மிக அதிகம். சுமார் மூவாயிரம் ஆகாய விமானங்கள் அதற்கு இருக்கின்றன. பிரெஞ்சுக்காரருக்கும், சீனாவுக்குச் சமீபத்தில் அன்னாம் என்ற பிரதேசம் சொந்தமா யிருக்கிது பிரெஞ்சுக்காரர், அந்த அன்னாம் பிரதேசத்திலிருந்து யுன்னான் மாகாணத்தின் தலைநகரத்திற்கு ரெயில் போட்டுக் கொண்டு வருகின்றனர். எனவே, பிரான்சுக்கும் சீனாவுக்கும் அரசியல் தொடர்பு அற்றுப் போகுமானால், பிரெஞ்சுத் துருப்புகள் நாற்பது ஐம்பது நாட்களில் சீனாவுக்குள் பிரவேசிக்க முடியும். அதாவது, இங்கிலாந்தைப் போலவே, பிரான்சும் சீனாவை இரண்டு மாதத்திற்குள் அழித்து விட முடியும். மேலே கூறியவற்றால் என்ன தெரிகிறதென்றால், எந்த ஒரு வல்லரசும், ராணுவ பலத்தைக் கொண்டுதான் சீனாவை உடைக்க முடியும் என்று தெரிகிறது. அப்படியிருந்தும் சீனா இன்னும் ஏன் உயிரோடு வைக்கப் பட்டிருக்கிறது? சீனா, மிகுந்த தற்காப்புடைய தாக இருக்கிறதென்ற காரணத்தினாலா? இல்லவே இல்லை. எல்லா வல்லரசுகளும் சீனாவைச் சுரண்ட வேண்டுமென்று ஆசைப் படுகின்றன. எல்லா நாடுகளும் சீனாவைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருக்கினறன. ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு விட்டுக் கொடுக்க மறுக்கின்றது. ஒவ்வொரு வல்லரசும், சீனாவில் தங்கள் பலத்தை எடை போட்டுப் பார்க்க விரும்பு கின்றன. அதனால் தான் சீனா அப்படியே விட்டு வைக்கப்பட்டிருக்கிறது. சீனாவில் தங்களுக்கு இருக்கவேண்டிய உரிமைகளைப்பற்றி வல்லரசு களுக் கிடையே பரஸ்பரம் போட்டியும் பொறாமையும் இருப்பதாலும், இவைகளின் பலம் சீனாவில் சமன் வயப்பட்டு இருக்குமாதலாலும், சீனா விஷயத்தில் வல்லரசுகள் ஒற்றுமைப்பட்டிராததாலும், அதுவரை, சீனா யாரையும் எதிர்த்துப் போராட வேண்டிய முயற்சியில் இறங்க வேண்டிய அவசியமில்லை யென்றும் சிலர் கருதுகின்றனர். இங்ஙனம் தன்னம்பிக்கையை இழந்துவிட்டு மற்றவர்களை நம்பி வாழ்வது, வானத்தைப் பார்த்துக் கொண்டே அதிருஷ்டத்தைப் பரிசோதனை செய்வது போலில்லையா? இங்ஙனம் சர்வானுகூல நம்பிக்கை கொள்வதனால் எவ்வித பயனும் ஏற்படாது. சீனாவை அழித்து விட வேண்டுமென்ற எண்ணம் என்னவோ, வல்லரசுகளுக்கு இருக்கத் தான் செய்கிறது. ஆனால் இதற்காக ராணுவ பலத்தை உபயோகித்தால், 1914ஆம் வருஷத்து யுத்தத்தைப்போல் மற்றொரு யுத்தம் ஏற்பட்டு, அதனால் பல தரப்பினருக்கும் தோல்வியும் நஷ்டமும் உண்டாகி இறுதியில் ஒருவிதமான லாபமும் ஏற்படா தென்பதற்காகவே, வல்லரசுகள் தயங்குகின்றன. அந்நிய வல்லரசு களின் ராஜதந்திரிகள் இதனை நன்றாகத் தெரிந்துகொண்டிருக் கிறார்கள். ராணுவ பலத்தை உபயோகித்தால் மற்றோர் உலகயுத்தம் உண்டாகும் என்பது அவர்களுக்குத் தெரியும் சீனாவில் தங்க ளுடைய உரிமைகள் என்னென்ன என்பதைப் பற்றி, வல்லரசு களுக்குள் ஒரு சமரசம் ஏற்படுகிற தென்று வைத்துக் கொண்டாலும் சீனாவை எந்த விதமாக ஆள்வது என்னும் விஷயத்தைப் பற்றி, வல்லரசுகளுக்குள் அபிப்பிராய பேதங்கள் உண்டாகும். இதனால் அனாவசியமான சச்சரவுகள் உண்டாகி சேதங்கள் ஏற்படும். இதனை யறிந்தே, வல்லரசுகள், தங்களுடைய யுத்த தளவாடங் களைக் குறைத்துக் கொள்ளத் தீர்மானித்தன. வாஷிங்டன் மகா நாட்டில் ஜப்பான் இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய வல்லரசுகள், தங்கள் கப்பற் படையின் நிறையைக் குறைத்துக் கொண்டன. யுத்த தளவாடங்களைக் குறைத்துக் கொள்வதற்காகவே இந்த (வாஷிங்டன்) மகாநாடு கூட்டப்பட்ட தானாலும், உண்மையில் சீனப் பிரச்னையைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்காகவே இந்த மகாநாடு கூடியது. சீனாவில் தங்களுடைய உரிமைகளையும் சலுகைகளையும் பங்கு போட்டுக் கொள்ளும் விஷயத்தில், வல்லரசுகள் எப்படித் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள் ளாமல் இருக்க முடியும்? ஒரு நாட்டை அழிப்பதற்கு இரண்டு முறைகள் கையாளப் படுகின்றனவென்று நான் மேலே கூறினேன். ஒன்று ராணுவ பலம் மற்றொன்று ராஜதந்திரம் ராணுவ பலத்தை உபயோகிப்பது என்றால், பீரங்கி, குண்டு, துப்பாக்கி முதலியவைகளை உபயோகிப்பது. இவற்றை எப்படி எதிர்த்து நிற்ப தென்பதைப் பற்றி நமக்கு ஒருவாறாகத் தெரிந்திருக்கிறது. ராஜதந்திர முறையைக் கையாள்வதென்றால், காகிதத்தையும் எழுது கோலையும் கொண்டு சீனாவைத் தகர்த்தெறிவது. இதனை எதிர்த்துப் போராட நாம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. உதாரணமாக, வாஷிங்டன் மகாநாட்டுக்குச் சீனாவும் தன் பிரதிநிதிகளை அனுப்பியது. அந்த மகா நாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சீனாவுக்குச் சாதகமானவை யென்று கூறப்பட்டன. ஆனால் மகாநாடு முடிந்த வுடன், அந்நிய நாட்டுப் பத்திரிகைகள் யாவும் ஒரே குரலில், சீனா, சர்வதேசங்களின் ஆதிக்கத்தில் இருக்க வேண்டு மென்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்தன. இந்தப் பேச்சு வர வர வலுக்கும் என்பதைப் பற்றிச் சந்தேக மில்லை. இங்ஙனம் வல்லரசுகள் ஒரே முகமாக நினைப்பதன் பயனாக, சீனாவை வீழ்த்துவதற்கு ஏதேனும் ஒரு முறை காணப்படும். இனி வல்லரசுகள், சீனாவுக்காக, ராணுவத்தை நகர்த்த வேண்டாம்; அல்லது கப்பற் படையைக் கொண்டு வர வேண்டாம்; காகிதமும் எழுது கோலும்தான் தேவை. வல்லரசுகள் ஒன்று சேர்ந்து பரஸ்பர ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்த ஒப்பந்தத்தில் கை யெழுத்திட்டு விடுமானால், ஒரே நாளில் சீனாவை அழித்துவிடக்கூடும். இந்த மாதிரி சம்பவங்கள் இதற்குமுன் நடை பெற்றிருக்கின்றன. ஜெர்மனி, ருஷ்யா, ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்று கூடி ஒரே நாளில் செய்து கொண்ட முடிவின் விளைவாக போலந்தைப் பங்கு போட்டுக் கொள்ளவில்லையா?1 அதே மாதிரி கிரேட்பிரிட்டன். பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நான்கு வல்லரசுகளும் ஒன்று சேர்ந்து ஒரே நாளில் ஒரு தீர்மானத்தைச் செய்துகொண்டு சீனாவைப் பங்கு போட்டுக் கொள்ளக்கூடும். ஒரு தேசத்தை, அரசியல் சக்திகள் சேர்ந்து அழிக்கக்கூடும் என்ற திருஷ்டியில் நாம் பார்க்கிறபோது, சீனா, இப்பொழுது பெரிய ஆபத்திலிருக்கிறது. இரண்டாவது ஆபத்து பொருளாதார ஆதிக்கம். இதைப் பற்றி ஏற்கனவே நான் குறிப்பிட்டிருக்கின்றேன். பிரதி வருஷமும் நூற்றிருபது கோடி டாலர்கள், சீனாவிலிருந்து அந்நியர்கள் கொண்டு போகிறார்கள். இந்த நஷ்டமோ ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. சீனாவின் அந்நிய நாட்டு வியாபாரம் பத்து வருஷத்திற்கு முந்தி இருபது கோடி டாலரா யிருந்தது. இப்பொழுது ஐம்பது கோடி டாலராயிருக்கிறது. அதாவது பத்து வருஷத்திற்கொருதரம் நூற்றுக்கு இருநூற்றைம்பது சத விகிதம் அதிகப்பட்டுக் கொண்டு வருகிறது. அடுத்த பத்து வருஷத்தில் முந்நூறு கோடி டாலரை நாம் இழந்து நிற்போம். இதனை நமது நாற்பது கோடி ஜனத்தொகைக்கு ஈவு போட்டுப் பார்த்தால், வருஷத்திற்குத் தலைக்கு ஏழரை டாலர் ஆகிறது. அதாவது ஒவ்வொரு சீனாக்காரரும் அந்நிய நாடுகளுக்கு வருஷத் திற்கு ஏழரை டாலர் கொடுக்க வேண்டிய தாயிருக்கிறது. அதாவது தலைவரி ஏழரை டாலர். நமது ஜனத் தொகையில் இருபது கோடி எண்ணிக்கையுடைய பெண் மக்களை விலக்கி விட்டோமானால், ஒவ்வோர் ஆண் மகனும் பதினைந்து டாலர் விகிதம் கொடுக்க வேண்டியவனாயிருக்கிறான். இந்த ஆண்மக்களிலேயோ, வயதான வர்களையும், இளைஞர்களையும் நீக்கிவிட்டால், மத்திய வயதினரா யுள்ளவர் மட்டும், வருஷத்திற்கு சராசரி நாற்பத்தைந்து டாலர் விகிதம் அந்நிய நாடுகளுக்குத் தலைவரி கொடுக்க வேண்டியதா யிருக்கிறது. இந்தத் தலைவரி, வருஷத்திற்கு வருஷம் அதிகப்படுமே தவிர குறையாது. இனியும் நாம் விழித்துக்கொள்ளாமல், இப்பொழுது இருக்கிற மாதிரியே இருந்துகொண்டிருந்தோ மானால் அந்நிய ராஜதந்திரிகள் நம்மைப் பற்றிக் கவலைப்படா விட்டாலும், நாம் பத்து வருஷ காலத்திற்குள் நிச்சயம் அழிந்து போவோம். இப்பொழுது நமது ஜனங்கள் ஏழைகளாயிருக்கிறார்கள்; சோர்வடைந்து கிடக்கிறார்கள். இன்னும் பத்து வருஷத்திற்குப் பிறகு ஜனங்களுடைய ஏழ்மை எவ்வளவு அதிகமாகிவிடும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. இப்பொழுதுள்ள கடன் சுமையைவிட இரண்டரை மடங்கு அதிகமான கடன் சுமை நம் தலைமீது ஏறுமானால், நாம் உயிர் வாழ முடியும் என்று கருது கிறீர்களா? 1914ஆம் வருஷத்திற்குப் பிறகு ஐரோப்பிய வல்லரசுகள், அமைதியாயிருக்கவே விரும்புமென்றும், அப்பொழுது சீனர் களாகிய நாம் வல்லரசுகளின் ராணுவ ஆதிக்கத்தினின்று தப்பித்துக் கொள்ளலா மென்றும் சிலர் கருதலாம். ஆனால் அரசியல் ஆதிக்கத்தினின்று தப்பித்துக்கொள்ள முடியாதே. அதிலிருந்து தப்பித்துக்கொண்டாலும் கொள்ளலாமென்றே வைத்துக் கொள் வோம். நமத ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் பொருளாதார ஆதிக்கத்தினின்று விடுதலை செய்துகொள்ள முடியுமா? நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் மூன்றாவது ஆபத்தைப் பற்றிச் சிறிது கூறுகிறேன். சென்ற நூறு வருஷங்களாகச் சீனாவின் ஜனத்தொகை அதிகப்படவேயில்லை. ஜனப்பெருக்கத்திற்கு நாம் ஏதேனும் ஏற்பாடு செய்தாலன்றி, இன்னும் நூறு வருஷத்தில் ஜனத் தொகை பெருகும் என்று சொல்ல முடியாது. சென்ற நூறு வருஷத் தில் ஜனத் தொகை அமெரிக்காவில் ஒன்றுக்குப் பத்து மடங் காகவும், ருஷ்யாவில் ஒன்றுக்கு நான்கு மடங்காகவும், இங்கிலாந்தி லும் ஜப்பானிலும் ஒன்றுக்கு மூன்று மடங்காகவும், ஜெர்மனியில் ஒன்றுக்கு ஒன்றரை மடங்காகவும், பிரான்சில் ஒன்றுக்குக் கால் மடங்காகவும் அதிகப்பட்டுக் கொண்டிருக்க நம்முடைய ஜனத் தொகையோ அதே நிலையில் இருக்கிறது. சீனாவின் புராதன ஜாதியினர் அனைவரும் அழிந்து போய்விட்டனர். எனவே, ஜனத்தொகைப் பெருக்க விஷயத்திலும், நமது எதிர்காலம் மிகவும் சூனியமாகவே இருக்கிறது. மூன்று விதமான ஆபத்துக்கள் நம்மைச் சூழ்ந்து கொண் டிருக்கின்றன. இந்த ஆபத்துக்கள் வெகுசமீபத்திலேயே இருக் கின்றன வென்பதையும், இவைகளினால் நமக்கு என்னென்ன சீர்கேடுகள் ஏற்படமென்பதையும் நமது ஜனங்கள் நன்றாக உணர வேண்டும். இவைகளைத் தெரிந்து கொண்ட பிறகு, நாம் செய்ய வேண்டியதென்ன? ‘நம்பிக்கையிழந்த மிருகம், இன்னும் சண்டை செய்யும்’ என்ற பழமொழி யொன்றுண்டு. ஆதலால் நமது சத்துருக் களுடன் கடைசிப் போராட்ட மொன்றை நடத்த வேண்டும். நம்மால் சண்டை போட முடியுமா? நிச்சயம் போட முடியும். அந்தச் சக்தி இருக்குமானால், நமது மரணத்தின் கடைசி நேரமும் சமீபித்திருக்கிற தென்ற நம்பிக்கையும் நமக்கு ஏற்பட வேண்டும். நமது தேசீய உணர்ச்சியைத் தட்டி யெழுப்ப வேண்டுமானால், நாற்பது கோடி மக்களுக்கும், அவர்களுடைய மரண காலம் சமீபித்து விட்டது என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்களுக்குச் சண்டை போடவேண்டு மென்ற துணிவு உண்டாகும். நாற்பதுகோடி ஜனங்களும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உணர்வார்களானால், நமது தேசீய உணர்ச்சியைப் புதுப்பித்துக் கொள்வதில் எவ்வித கஷ்டமும் இராது. சீனர்கள் மணல் மூட்டை மாதிரி என்று அந்நியர்கள் கூறுகிறார்கள். தேசீய உணர்ச்சி விஷயத்தில் இது சரிதான். ஆனால் குடும்ப ஒற்றுமை, வகுப்பு ஒற்றுமை முதலியன நம்மிடத்தில்தான் வேரூன்றியிருக்கின்றன. உதாரணமாக, இரண்டு சீனர்கள் தெருவிலே சந்தித்துப் பேசுகிற போது, பரஸ்பரம் குடும்பப் பெயரை விசாரித்துக் கொள்வார்கள். ஒரே வகுப்பினரா யிருந்தால் அவர் களுக்குள்ளே ஏற்படும் பரஸ்பர அன்பு எவ்வளவு அருமையானது! இந்த வகுப்புணர்ச்சியையே தேசீய உணர்ச்சியாக விருத்தி செய்து கொண்டோமானால் எவ்வளவு நன்றாயிருக்கும். மேனாட்டில் தனிப்பட்டவர்களுடைய உரிமைகள் முக்கிய மாகக் கருதப் படுகின்றன. சட்டங்களும், தனிப்பட்டவர்களுடைய, உரிமை களைப் பாதுகாப்பதற்கே ஏற்பட்டிருக்கின்றன. வழக்கு களில் ஒருவனுடைய குடும்ப அந்தஸ்து என்ன வென்று கேட்கப் படுகிறது. இந்தத் தனி மனிதனே பின்னர் நாட்டின் முக்கிய அமிசமாகிறான். இந்தத் தனி மனிதனுக்கும் நாட்டுக்கும் தொடர்பு ஏற்படுத்தக் கூடிய அமிசம் என்ன? அதுதான் தேசீய உணர்ச்சி. சீனாவுக்குள்ளே பல வகுப்புக்கள் இருக்கின்றன. இந்த வகுப்புக் களுக்குள் அடிக்கடி பல போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த வகுப்புப் போராட்டங்களை ஒழித்து, இவற்றில் உபயோகிக் கப்படும் சக்தியை அந்நியர்களை எதிர்த்து நிற்கும் போராட்டச் சக்தியாக மாற்றியமைத்தோமானால் எவ்வளவோ நன்றாயிருக்கும். நமக்குள்ளே ஒற்றுமை இருந்தால், எதிரிகளைச் சுலபமாக நாம் எதிர்க்க முடியும். உதாரணமாக, இந்தியா இப்பொழுது பிரிட்டனுடைய ஆதிக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஷாரின் அரசியல் ஆதிக்கத்தை எதிர்க்க இந்தியர் களால் முடியவில்லை. ஆனால் பிரிட்டிஷாரின் பொருளாதார ஆதிக்கத்தை, காந்தியின் ஒத்துழையா இயக்கத்தின் மூலமாக எதிர்த்து நிற்கிறார்கள். ஒத்துழையாமை என்பது என்ன? பிரிட்டிஷாருக்கு என்ன தேவையோ அதை இந்தியர்கள் கொடுக்க மாட்டார்கள். பிரிட்டிஷார் என்ன அளிக்கிறார்களோ அதை இந்தியர்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். உதாரணமாக, ஒரு பிரிட்டிஷ்காரர், ஓர் இந்தியக் கூலி தேவை யென்று கூறினால் எந்த இந்தியக் கூலியும் போய்வேலை செய்ய மாட்டான். பிரிட்டிஷார், இந்தியர்களுக்கு எல்லாச் சாமான்களையும் வழங்குவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்தியர்களோ, உள்நாட்டுப் பொருள் களையே உபயோகிப்பதாகச் சொல்கிறார்கள். காந்தி, முதலில் தமது திட்டத்தை வெளியிட்ட போது, பிரிட்டிஷார் அதனை அலட்சியம் செய்து விட்டார்கள். பின்னர், ஒத்துழையா இயக்கம் வலுக்க வலுக்க, பிரிட்டிஷாருடைய வியாபாரம் தடைப்பட்டது. எனவே, பிரிட்டிஷ் அரசாங்கத்தார் காந்தியைச் சிறையில் வைத்தனர். ஒத்துழையா இயக்கத்தில் இந்தியர்கள் ஏன் வெற்றி பெற்றார்கள் என்றால், இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையா யிருந்து மேற்படி இயக்கத்தை நடைமுறையில் கொணர்ந்த தனாலேயே. அடிமை நாடாயிருக்கிற இந்தியா, ஒத்துழையா இயக்கத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமானால், சீனாவிலும் அதனை ஏன் அமுலுக்குக் கொண்டுவரக் கூடாது? உள்நாட்டுப் பொருள்களையே உபயோகித்தும், சீனாவின் நாணயத்தையே புழங்கியும், அந்நியர்களுடன் பொருளாதார சம்பந்தத்தை வைத்துக் கொள்ளாமலும் இருந்தால் நாம் எவ்வளவோ சீக்கிரத்தில் முன்னுக்கு வரலாமல்லவா? இந்தியாவைப் போலவே நாமும் ஒத்துழையா இயக்கத்தைத் தொடங்கி நடத்தினால், நாம் யாருக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. ஆகையால் இப்பொழுது நமக்குத் தேவையா யிருப்பது ஒற்றுமைதான். சீனாவிலுள்ள முந்நூறு நானூறு வகுப்புப் பிரிவுகளும், தேசம் என்ற ஒன்றினைக் குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யுமானால், நம் விடுதலைக்கு ஒரு வழி ஏற்படும். அப்பொழுது எந்தத் தேசமும் நம்மை எதிர்த்து நிற்க முடியாது. ஓர் அந்நிய அரசாங்கத்தை எதிர்த்து நிற்க இரண்டு வழிகள் உண்டு. ஒன்று உடன் பாட்டு முறை; மற்றொன்று எதிர்மறை முறை. உடன்பாட்டு முறையாவது, தேசீய உணர்ச்சியைத் தட்டியெழுப்பி அரசாங்கத்தோடு போராடுவதாகும். எதிர்மறை வழியாவது, அந்நிய ஆதிக்கம் பலவீன மடையும்படி ஒத்துழையாமை, சட்டமறுப்பு முதலிய இயக்கங்களை ஆரம்பித்து தேசீய கௌரவத்தைக் காப்பதாகும். 6 நமது கடமை (2 - 3 - 1924) நம்முடைய தேசத்தின் தன்மதிப்பை எப்படிக் காப்பாற்றுவது என்பதுதான் இன்று நான் பேசப்போகும் விஷயம். நமது தேசத்தின் இன்றைய அந்தஸ்து என்ன? இன்றைய உலகத்தில் நமது நாடு, அரசாங்கம் இவற்றின் நிலைமை யென்ன? நமது அரசியல் அறிஞர் களிற் சிலர், சீனா ஒரு பாதி குடியேற்ற நாடு என்று கூறுகின்றனர். அதாவது, அன்னாம் தேசம், பிரான்சின் குடியேற்ற நாடாகவும் இருக்கின்றன. இவைகளை முழுக் குடியேற்ற நாடுகள் என்று சொல்லலாம். ஆனால் சீனா அப்படியில்லை. எல்லா நாட்டினரும் இங்குச் சலுகையோடு வாழ்கிறார்கள். எல்லாரையும் திருப்தி செய்ய வேண்டிய நிலைமையில் சீனர்கள் இருக்கிறார்கள். இதனால் சீனாவை ஒரு பாதிக் குடியேற்ற நாடு என்று கூறுவது பொருந்தும் என்பதுதான் மேற்படி அரசியல் அறிஞர்களுடைய வாதம். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தில் மேற் கண்ட அன்னாம், கொரியா முதலிய முழுக்குடியேற்ற நாடுகளைவிட சீனா ஒருபடி கீழாகவே இருக்கிறது. இதனால் தான் இதற்குக் ‘கலப்புக் கூடியேற்ற நாடு’ என்று நான் புதுப்பெயர் கொடுத்தேன். ஏனென்றால் எல்லோ ருடைய அதிகாரமும இங்கே செல்லுபடி யாகிறதல்லவா? ஒரு காலத்தில் சீனா, உலக வல்லரசுகளிலேயே, செல்வாக்கும், நாகரிகமும் நிறைந்த ஒரு நாடாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இப்பொழுது பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் முதலிய தேசங்கள் உலக அரசியலில் எந்த ஸ்தானத்தை வகித்திருக்கின் றனவோ, அந்த ஸ்தானத்தை முன்காலத்தில் நமது சீனா வகித் திருந்தது. அப்படி உன்னத ஸ்தானத்தில் நமது நாடு இருந்தமை யாலும், நமது மூதாதையர்கள் அவ்வளவு புகழ் பெற்று விளங்கி வந்ததனாலுந்தான் இப்பொழுது நாம் குடியேற்ற நாடாகக்கூட இல்லையென்று நான் சொல்லுகிறேன். உச்ச நிலையிலேயிருந்த சீனா எப்படி ஒரே சறுக்கலில் பதினாயிரம் அடிபள்ளத்திலே விழுந்து விட்டது? இதற்கு ஒரே ஒரு காரணந்தான் உண்டு. அதுதான் நமது தேசீய உணர்ச்சியை நாம் இழந்து விட்டது. அப்படி இழந்து விட்டதனால்தான் நம்முடைய ராஜ்யமும் நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டு வந்து விட்டது. ஆகையால் நமது தேசீய அந்தஸ்தை நாம் மீண்டும் பெற வேண்டுமானால் நமது தேசீய உணர்ச்சியைக் கிளப்ப வேண்டும். அப்படி தேசீய உணர்ச்சியைக் கிளப்புவதற்குச் சோபானமாக இரண்டு முக்கிய நிபந்தனைகளையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும். முதலாவது, நாம் இப்பொழுது மிக ஆபத்தான நிலையிலிருக் கிறோம் என்பதை ஜனங்களுக்கு உணர்த்த வேண்டும். இரண்டா வது, அந்த ஆபத்தை உணர்ந்து நமது புராதன சமுதாய அமைப்புக் களாகிய குடும்பம், ஜாதி, இவைகளை ஒன்று சேர்ப்பித்து ஒரு பெரிய தேசீய ஸ்தாபனமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இதை நாம் நிறைவேற்றி விட்டோமானால் நமது நாற்பது கோடிமக்களும் ஒற்றுமையாக இருந்து போராடுவார்கள். இப்பொழுது நாம் எவ்வளவு கீழான நிலைமையிலிருந்த போதிலும் இந்த ஒற்றுமையின் விளைவாக மேலுக்கு வந்து விடுவோம். ஆகையால் தற்போதைய நமது நாட்டின் நிலையை உணர வேண்டும்; பின்னர் ஒற்றுமைப்பட வேண்டும். நமது தேசீய உணர்ச்சியைத் தூண்டுவதற்கு இவை யிரண்டும் முக்கியமானவை. இந்த முக்கியத்துவத்தை நீங்கள் மட்டும் உணர்ந்தால் போதாது; நமது நாற்பது கோடி மக்களுக்கும் இதனை உணர்த்த வேண்டும். ஒவ்வொருவரும் இதனை உணர்கிற வரை நீங்கள் இந்த வேலையைச் செய்ய வேண்டும். நமது பழைய தேசீய உணர்ச்சி இப்பொழுது தூங்கிக் கிடக்கிறது. அதனை நாம் விழிப்பித்தல் வேண்டும். அப்படி விழிக்கச் செய்தால்தான் நாம் ஒருபடி முன்னேறலாம். அதாவது நம்முடைய தேசீய அந்தஸ்தை - தன்மதிப்பை - எப்படி நிலை நிறுத்துவது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். ஒரே ஒரு வழியைப் பின்பற்றி மட்டும் சீனா முற்காலத்தில் உன்னத ஸ்தானத்தை அடையவில்லை ஒரு தேசம் எப்படி மேன்மையடைகிறது என்று பார்த்தோமானால், சாதாரணமாக முதலில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கிக் கொண்டு, பின்னர் தனது கலைஞானத்தை விருத்தி செய்து கொள்வதினாலேயேதான். ஆனால் அந்த நாடும் அந்த நாட்டின் அரசாங்கமும நிரந்தரமான ஓர் அந்தஸ்தை அடைய வேண்டுமானால், அந்த நாட்டு மக்கள் ஒழுக்கமுடையவர்களாயிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களுடன் அது சமாதானமாக வாழ முடியும். முற்காலத்தில் ஆசியாக் கண்டத்தில் மங்கோலியர்கள் மிகவும் வலிமை யுள்ளவர் களாயிருந்தார்கள். கிழக்கில் சீனாவையும் மேற்கில் ஐரோப்பாவை யும் அவர்கள் தங்கள் சுவாதீனப் படுத்திக் கொண்டார்கள். ஆயினும் அந்த மங்கோலிய ஜாதி நிலைத்து வாழவில்லை. ஒழுக்கக் குறைவு தான் இதற்குக் காரணம். மங்கோலியர்களைவிட சீனர்களின் ஒழுக்கநிலை மேம்பாடுடையதாக இருந்தது அதனால்தான் மங்கோலியர்கள் சீனாவை ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் சீன ஜாதிக்குள்ளேயே ஐக்கியமாகி விட்டார்கள். இதே மாதிரிதான மஞ்சூ ஜாதியினரும். இவர்கள் இரண்டு முறை மிங்வமிசத்தினரால் முறியடிக்கப் பட்ட போதிலும் சீனஜாதிக்குள் ஐக்கியமாகி விட்டார்கள். நம்முடைய ராஜ்யாதிகாரம் வீழ்ந்துபட்ட போதிலும், நமது ஜாதியின் மகத்தான ஒழுக்க முறையின் காரணமாக நமது ஜாதி அழிந்து படவில்லை. ஆனால், மற்ற அந்நிய ஜாதிகளையும் நமது ஜாதிக்குள் ஐக்கியப் படுத்திக் கொண்டு விட்டோம். ஆதலின் நமது ஜாதியின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நமது புராதன ஒழுக்க முறையைப் பின்பற்றி நடக்க வேண்டும். அப்பொழுதுதான் நமதுதேசீய அந்தஸ்து உயரும். சீனாவின் புராதன ஒழுக்க முறைகளைச் சீனர்கள் இன்னும் மறந்து விடவில்லை. அந்த ஒழுக்கமுறைகள் யாவை? (1) ராஜபக்தி; பெற்றோரிடம் பக்தி; (2) தயையும் அன்பும்; (3) நன்றி மறவாமை, நியாய மனப்பான்மை; (4) ஒத்து வாழ்தல், சமாதான நோக்கம். இப்பொழுதுகூட சீனர்கள் இந்தப் புராதன ஒழுக்க முறைகளைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள். ஆனால் அந்நிய ஜாதியினர் நம்மை ஆதிக்கங்கொண்டு விட்ட பிறகு அந்த அந்நியருடைய கலைஞானத் தின் செல்வாக்கு சீனா வெங்கணும் பரவத் தொடங்கியது. இதன் விளைவாகச் சிலர் பழைய ஒழுக்க முறைகளைப் புறக்கணிக்கத் தொடங்குகின்றனர். நமது பழமையில் என்னென்ன நல்ல அமிசங்கள் இருக்கின்றனவோ அவற்றைக் கிரகித்துக்கொண்டு தீயனவற்றை ஒதுக்கி விடவேண்டு மென்பதை இவர்கள் உணரவில்லை. தற்போதைய சீனாவில் பழமைக்கும் புதுமைக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான மக்கள் எந்த வழியை யும் பின்பற்ற முடியாமல் திகைக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் ஓர் ஊருக்கு நான் சென்றிருந்தேன். அங்குப் புராதனமான கோயிலொன்றிருக்கிறது. அந்தக் கோயிலின் உள்ளே நுழைந்து சுற்றிப் பார்த்து வருகையில் வலது புறத்திலிருந்த ஒரு சுவரின் மீது ‘பெற்றோர்களிடம் பக்தி’ என்ற வாக்கியம் காணப் பட்டது. ஆனால் இடது புறச் சுவரின் மீது ஒன்றும் காணப்பட வில்லை. அந்த இடத்தில் ஏதோ ஒன்று எழுதப்பட்டிருந்து அழிக்கப்பட்டிருப்பதாய்த் தென்பட்டது. ‘ராஜபக்தி’ என்றிருந்த வாக்கியம் கலைக்கப்பட்டிருக்க வேண்டு மென்பதாய்த் தெரிந்தது. இதே மாதிரி பல கோயில்களில் நான் பார்த்திருக்கிறேன். அதாவது நம்மவரிலே ஒரு சிலர் நினைக்கிறார்கள், ‘நமக்குத்தான் குடியரசு ஏற்பட்டுவிட்டதே; இனி ராஜபக்தி எதற்கு? என்று முற்காலத்திலே அரசர்கள் இருந்தமையால் அவர்களிடம் பக்தி செலுத்த வேண்டுவது அவசியமாயிருந்த தென்றும் இப்பொழுது அரசர்கள் இல்லாமையால் நமக்கு ராஜபக்தி தேவையில்லையென்றும் இவர்கள் வாதம் செய்கிறார்கள். இது தவறான வாதம். நமக்கு அரசர்கள் தேவையில்லாமலிருக்கலாம். ஆனால் ராஜபக்தி தேவையில்லையா? அஃதின்றி நாம் வாழ முடியாதே. ராஜபக்தி யென்பதை ராஜாங்கத்துக்குப் பக்தியென்று நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய ஜனநாயகத்திற்கும் நம்முடைய கடமைகளுக்கும் பக்தி செலுத்த வேண்டாமா? ஏதேனும் ஒரு காரியத்தைத் தொடங்கி விட்டோமானால் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அதனின்றும் நாம் பிறழக் கூடாது. அந்தக் காரியத்தில் நாம் வெற்றி பெறா விட்டால் நமது உயிரையே அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். இதைத்தான் பக்தியென்று கூறுகிறோம். நமது பெரியோர்கள், பக்தியின் எல்லை மரணந்தான் என்ற முடிவுக்கு வந்தனர். அரசர்களிடம் செலுத்துவதுதான் பக்தி யென்றும், மற்றவை யெல்லாம் பக்தியல்ல வென்றும் சொல்வது தவறு. தற்போது ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுகிற எல்லோரும் சீனாவின் இந்தப் பழைய ஒழுக்க முறைகளை அலட்சியப் படுத்துகின்றனர். ஜனநாயகத்தின் கீழ் நாம் அரசர்களுக்குப் பக்தி செலுத்த வேண்டுவது இல்லையானால் ஜன சமுதாயத்திற்கும் குடி மக்களுக்கும் பக்தி செலுத்த வேண்டுவது அவசிய மாகும். ஒரு தனி மனிதனிடத்தில் செலுத்துகிற பக்தியைக் காட்டிலும் நாற்பது கோடி மக்களிடம் செலுத்துகிற பக்தி மிக உயர் தன்மையுடையது. இதனாலேயே நாம் ராஜாங்கத்துக்குப் பக்தி யுடையவர்களாயிருக்க வேண்டுமென்று வற்புறுத்திக் கூறுகிறேன். பெற்றோர்களிடம் பக்தி செலுத்துதல் என்னும் குணமானது சீனாவுக்கே தனிச் சிறப்புடையதாகும். மற்றச் சமூகத்தினரைவிட நாம்தான் இதனை நடைமுறையில் கொண்டுவந்து காட்டி வந்திருக் கிறோம். பெற்றோர்களிடம் பக்தி செலுத்துதல் என்றும் இந்த ஒழுக்க முறையானது மானிட சமூகம் அனைத்தையுமே தழுவி நிற்பதாயிருக் கிறது. இது சம்பந்தமான நூல்கள் நமது பாஷை யிலும் ஏராளமாயிருக் கின்றன; வேறு எந்த பாஷையிலும் இவ்வளவு இல்லை. தயை, அன்பு இவை இரண்டும் சீனாவின் பிரதானமான ஒழுக்க முறைகள். மோத்ஸே என்ற சீன ஆறிஞன் இதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறான். ‘எவ்வித வேற்றுமையும் பாராட் டாமல் எல்லாரிடமும் அன்பு செலுத்தி’ என்ற அவனுடைய தத்துவம் யேசு நாதருடைய விசுவ பிரேமைத் தத்துவத்திற்கு இணைந்ததாயிருக்கிறது. நமது முன்னோர்கள் அன்பு செலுத்து தலாகிற இந்தக் குணத்தை அரசாங்க விஷயத்திலும் அனுஷ்டித்துக் காட்டினார்கள். ‘உன் குழந்தைகளைப் போல் ஜனங்களையும் நேசி’, ‘எல்லா ஜனங்களிடத்திலும் அன்பாக நடந்துகொள்,’ ‘எல்லா ஜீவப் பிராணிகளையும் நேசி’ என்பன நமது புராதனகாலத்து வாசகர்கள். ஆனால், அந்நியர்களுடைய ஆதிக்கம் சீனாவில் ஏற்பட்ட பிறகு சீனர்களுடைய அன்பு, தயைமுதலிய, அந்நியர் களுடைய அன்பு, தயை இவைகளுக்குத் தாழ்ந்தவை என்ற எண்ணம் பரவலாயிற்று. ஏனென்றால் சீனாவில் அந்நியர்கள் வந்து ஆங்காங்கு ஆஸ்பத்திரிகளையும், பள்ளிக்கூடங்களையும் ஏற்படுத்தித் தங்களிடத்திலேயுள்ள அன்பு, தயை முதலிய குணங்களைச் செயலில் காட்டி வருகிறார்கள். சீனர்கள் வெளிப்படையகா இங்ஙனம் தங்கள் அன்பையும் தயையையும் தெரியப்படுத்திக் கொள்ளாததன் காரணமாக இவர்களுக்கு இவ்விரண்டு குணங்களும் அறவே இல்லையென்று அந்நியர்களும் நம்மவர்களிற் சிலரும் கருதி விடுகிறார்கள்.ஆனால் சீனர்கள் தங்கள் அன்பையும், தயையையும் செயல்பூர்வமாகக் காட்ட வில்லை யென்றுதான் சொல்ல வேண்டும். ஆதலின் நாம் அந்நியர்களைப் பற்றி அதிக மாகத் தெரிந்து கொண்டு அவை, இவ்விரண்டு சுபாவங் களையும் எப்படிச் செயல் பூர்வமாகக் காட்டியிருக்கின்றன என்பதை அறிந்து நம்மிடத்திலே மங்கிக் கிடக்கும் இந்த இரண்டு குணங்களையும் பிரகாசிக்கச் செய்வோமாக. அடுத்தது நன்றி மறவாமையும் நியாய மனப்பான்மையும், பிற நாடுகளுடனாகட்டும், நண்பர்களுடனாகட்டும் சம்பந்தம் வைத்துக் கொள்கிறபோது நன்றி மறவாமை வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறிப் போந்தார்கள். அந்நியர்களைக் காட்டிலும் சீனர்கள்தான் நன்றி மறவாமலிருக்கும் தன்மையர்கள் என்பது என் அபிப்பிராயம். வியாபார விஷயங்களில் இதை நிதரிசனமாகக் காணலாம். சீனர்கள் பரஸ்பரம் வியாபார சம்பந்தங்கள் வைத்துக் கொள்கிறபோது எழுத்து மூலமான ஒப்பந்தங்கள் செய்து கொள்வது வழக்கமில்லை. வாய் மொழியால் சொன்ன வாக்கைத்தான் அனை வரும் நம்பினார்கள். அவரவர்களுடைய கணக்குப் புத்தங்களில் அந்த வியாபார சம்பந்தமான விவரங்கள் பதிவு செய்து கொள்ளப் படும். அவ்வளவுதான். ஆனால் ஒரு சீன வியாபாரி ஓர் அந்நிய வியாபாரியிடம் சரக்கு கொள்முதல் செய்வானேயாகில் அதற்கு எழுத்து மூலமான ஒப்பந்தம் தேவையா யிருக்கிறது. சீனாவின் உட் பிரசேங்களில் வியாபாரம் நாணயத்தை மிகவும் பெருமைப்படுத்திப் பேசுகிறார்கள். ஆனால் ஜப்பானில் வியாபாரம் செய்யும் அந்நியர்கள் ஜப்பானியர்களுடைய வியாபார நாணயத்தைப் பற்றி அவ்வளவு பெருமையாகப் பேசுவதில்லை. சீனாவின் நியாய மனப்பான்மை. சீன ஏகாதிபத்தியம் மிகச் செல்வாக்காக இருந்த காலத்திலும் மற்றொரு நாட்டை அழித்ததே கிடையாது கொரியா தேசத்தைப் பாருங்கள். பெயரளவில் அது சீனாவுக்கு உட்பட்டிருந்த போதிலும் உண்மையில் அது சுதந்திர நாடாகவே இருந்தது. இருபது வருஷங்களுக்கு முன்னர் வரையில் அது சுதந்திரமாகவே இருந்தது. சென்ற பத்து வருஷங்களுக்குள் தான் அது சுதந்திரத்தை இழந்து விட்டது. சென்ற ஐரோப்பிய மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில ஒரு நாள் ஜப்பானிய நண்பர் ஒருவருடன் உலகப் பிரச்னைகள் பலவற்றைப் பற்றி நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஜப்பான், ஜெர்மனிக்கு விரோதமாக நேசக் கட்சியின ருடன் ஜெர்மனிக்கு விரோதமாக நேசக் கட்சியினருடன் சேர்ந்து கொண்டு யுத்தம் தொடுத்திருப்பதைத் தாம் அங்கீகரிக்க முடிய வில்லையென்றும், ஆனால் ஜப்பானும், இங்கிலாந்தும் ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டிருக் கிறபடியால் அந்த ஒப்பந்தப்படி இது நடந்தாக வேண்டியிருந்த தென்றும் கூறினார். அப்பொழுது நான் கேட்டேன் - “சீனாவும் ஜப்பானும் ஒரு சிநேக ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கவில்லையா? அந்த ஒப்பந்தப்படி கொரியா வின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமில்லையா?” என்று. இங்கிலாந்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மட்டும் காப்பாற்ற வேண்டும்; சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைப் புறக்கணித்து விடலாமென்று ஜப்பான் ஏன் கருதுகிறது தெரியுமா? பிரிட்டன் பலமுள்ள நாடு; சீனா பலவீனமான நாடு; இதுதான் காரணம். ஐரோப்பிய யுத்தத்தில் ஜப்பான் தலையிட்டது. நேச வல்லரசுகளின் பலவந்தத்தின் பேரில்தான்; நியாயமனப் பான்மை கொண்டல்ல. ஆயிரக் கணக்கான வருஷங்களாகச் சீன ஏகாதி பத்தியம் வலுவுள்ளதா யிருந்தது. ஆயினும் அந்த ஏகாதிபத்தியத் திற்குட்பட்டிருந்த கொரியாவின் சுதந்திரம் அழிக்கப்பட வில்லை. சென்ற இருபது வருஷங்களாகத்தான் ஜப்பான் வலுத்து வருகிறது. ஆனால் அதற்குள் கொரியாவின் சுதந்திரம் ஜப்பானால் அழிக்கப் பட்டு விட்டது. இஃதொன்றைக் கொண்டே ஜப்பானுடைய நியாய புத்தியைக் காட்டிலும் சீனாவின் நியாய புத்தி எவ்வளவோ சிறப்பு வாய்ந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். எல்லோருடனும் சமாதானமாக வாழவேண்டும் என்ற குணம் சீனாவுக்கு மட்டுமே சிறப்புடையதாகும். இன்றைய உலகில் சீனா ஒன்றுதான் சமாதான உபதேசம் செய்கிறது. மற்ற நாடுகள் யுத்த தொனியிலேயே பேசுகின்றன; ஏகாதிபத்திய முறைகளைக் கையாண்டு மற்ற நாடுகளை அழிக்கப் பார்க்கின்றன. சமீப காலமாகத்தான் பல யுத்தங்கள், பல மரணங்கள், எண்ணிலாத துன்பங்கள் இவைகளை யெல்லாம் அனுபவித்தபிறகு, யுத்தமுறைகளைக் கைவிட்டுவிட வேண்டு மென்று அந்த மேனாடுகள் யோசிக்கின்றன. சமாதான மகாநாடுகளா! ஹேக் மகாநாடென்ன1 வார்சேல்மகா நாடென்ன2 ஜினீவா மகாநாடென்ன3 வாஷிங்க்டன் மகாநாடென்ன4 லாஸேன் மகாநாடென்ன5 இப்படி எத்தனையோ மகாநாடுகள் கூடிக் கூடிக் கலைந்தன. ஆனால் இந்தமகாநாடுகளிலே கூடும் வல்லரசுப் பிரதி நிதிகள் யுத்த பயத்தினால் சமாதானத்தைப் பற்றிப் பேசுகிறார்களே தவிர, உலகம் சமாதானமாக இருக்க வேண்டும் என்ற இயற்கை ஆவலினால் சமாதான நிபந்தனை களைப் பற்றிப் பேசுகிறார் களில்லை. எல்லாம் அவசியத்தை முன்னிட்டுத் தான். ஆனால் சீனர்களுடைய இயற்கையான சுபாவத்திலேயே இந்தச் சமாதான எண்ணம் நிரம்பியிருக்கிறது. சீனாவின் சென்ற ஆயிர வருஷ கால சரித்திரமே இதற்குச் சான்று பகரும். ‘தனிப்பட்டவர்களுடைய சம்பந்தத்தில் அடக்கத்தையும் மரியாதையையும் காட்டு,’ ‘அரசாங்க விஷயத்திலே எவனோருவன் மற்றொருவனைக் கொன்று அதனால் ஆனந்தம் அடையாமல் இருக்கிறானோ அவனால்தான் ஜனங்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்த முடியும்’ என்ற வாசகங்கள் சீனாவில் பரம்பரையாக அனுஷ்டிக்கப்பட்டுவந்தன. ஆனால் இவை யெல்லாம் அந்நியர்களின் கோட்பாடுகளுக்குப் புறம்பானவை. நமது பழைய ஒழுக்க முறைகளைப் புதுப்பிக்க வேண்டுவதோ டல்லாமல் கல்வி முறையையும் புதுப்பிக்க வேண்டுவது அவசிய மாகும். மஞ்சூ அரச பரம்பரையினருக்கு நாம் அடிமைப்பட்டு விட்டபிறகு, நமது நாற்பது கோடி மக்களும் தூங்குகிறார்கள்; நமது பழைய ஒழுக்க முறை களும், நமது கல்வி முறையும் தூங்குகின்றன நாம் நமது தேசீய உணர்ச்சியை மீண்டும் பெற வேண்டுமானால் அந்த ஒழுக்க முறை களையும், கல்வி முறையையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பழைய கல்வி முறைதான் யாது? ஓர் அரசாங்கம் எப்படி இருக்கவேண்டு மென்பதைப் பற்றி நமது மூதாதையர்கள் கூறியுள்ளதைப் போல் யாரும் நமது மூதாதையர்கள் கூறியுள்ளதைப் போல் யாரும் கூறிவில்லை. ஐரோப்பாவும் அமெரிக்காவும் சமீப காலத்தில் முன்னேறியிருக்கின்றன வென்று சொல்லப்பட்டதேயானாலும், அவை, சீனா அரசியல் தத்துவத்தைப் போல் பூரணத்துவம் பெறவில்லை. சீனாவின் அரசியல் தத்துவந்தானென்ன? பொருள்களின் இயற்கையை ஆராய்ச்சி செய்; அறிவின் எல்லையை விசாலமாக்கு; உனது நோக்கத்தில் சிரத்தை ஊட்டு; மனத்தை ஒழுங்கு படுத்து; தன் மதிப்பை விருத்தி செய்துகொள்; குடும்பத்தை ஆட்சி செய்; ராஜாங்கத்தை நிருவாகம் பண்ணு; உலகத்தைச் சமாதானப்படுத்து. இந்தத் தத்துவமானது, மனிதன், முதலில் உள்முகமாக நோக்கித் தன்னைப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டு மென்றும், உலகனைத்திலும் அமைதி ஏற்படுகிறவரையில் அவன் உழைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும் கூறுகிறது. இந்த உயர்ந்த கோட் பாட்டை, வேறு எந்த அரசியல் தத்துவத்திலும் நீங்கள் காணமாட்டீர்கள். ஆனால் இந்த உயர்ந்த தத்துவத்தை இப்பொழுது நாம் மறந்துவிட்டோம். நம்மிலே படித்தவர்கள், மேலே நான் எடுத்துக் காட்டின வாக்கியத்தை ஒரு சம்பிரதாய மாகத்தான் எடுத்துச் சொல்கிறார்களே தவிர, அதன் ஆழ்ந்த கருத்தை அறிகிறார்களேயில்லை. மனிதனுடைய தன்மதிப்பை உயர்த்திக் கொள்வது, குடும்பத்தை ஆள்வது, ராஜாங்கத்தை நிருவாகம் செய்வது முதலிய புறச் சீர்திருத்தங்களை நாம் அனுஷ் டானத்தில் கொண்டு வரவேயில்லை. சென்ற நூறு வருஷ காலமாக, இவ்விஷயத்தில் நாம் ஒன்றுமே செய்யவில்லை யென்றுதான் சொல்லவேண்டும். இதன் பயன் என்ன? அந்நியர்கள், நமது நாட்டில் வந்து நிருவாகம் செய்யப் பார்க்கிறார்கள். சீனாவை நம்மால் ஏன் ஆளமுடியவில்லை? அந்நியர்கள் நம்மிடத்திலே என்ன குறையைக் காண்கிறார்கள்? நமது குடும்பங் களைச் சரியாக ஆள்கிறோமா இல்லையா வெண்பது அந்நியர் களுக்குத் தெரியாது. அதை அவர்கள் தெரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பமும் கிடைத் திராது. ஆனால் நம்மிடத்திலே, தன்மதிப்பைக் கொடுக்கக்கூடிய நாகரிகம் இல்லையென்பதை அந்நியர்கள் நன்கு தெரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சீனன் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையிலும், செய்கிற ஒவ்வொருகாரியத்திலும் மரியாதைக் குறைவு காணப்படுகிறது. ஒரு சீனனுடன் ஒரே ஒரு முறை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் இந்தக்குறை நன்கு வெளிப்பட்டுவிடும். இதனால், சீனர்கள் படிப்பில்லாதவர்களென்றும், நாகரிக மற்றவர் களென்றும், அந்நியர்கள் கருதுவதற்கு ஏதுவாகிற. சீனாவிலேயே இருபது அல்லது முப்பது வருஷ காலம் வசித்து, சீனர்களோடு நெருங்கிப் பழகியவர்கள், சீன நாகரிகம் மிகச் சிறந்ததென்று கருதுகிறார்களேயாயினும், பொதுவாக ஓர் அந்நியன் சீனாவை முதல் முதலாக வந்து பார்க்கிறபோது, சீனர்களைப் பற்றி அவன் தவறாகவே நினைக்கிறான். இதற்குக் காரணம் நாம் நமது சொந்த நடவடிக்கைகளில் நாகரிகமாக நடந்தகொள்ளாததாகும். அதாவது நமது தினசரி நடவடிக்கைகளில் மிகக் கவலையீனத்துடன் நாம் நடந்துகொள்கிறோம். சீனர்கள் முதன் முதலாக அமெரிக்கா சென்றபோது, அமெரிக்கர்கள் சீனர்களை சம அந்தஸ்துடனும் மரியாதையுடனும் நடத்தினார்கள். ஆனால் பின்னர், சீனர்கள் நாகரிகமாக நடந்தகொள்ளாததன் காரணமாக, ஹோட்டல்களிலே கூட அனுமதி மறுக்கப்பட்டார்கள். நான் கப்பலில் பிரயாணஞ்செய்து கொண்டிருந்த ஒரு சமயம், அந்தக் கப்பல் காப்டனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஓர் அமெரிக்கர். அவர் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். அதாவது அந்தக் கப்பலின் முந்திய பிரயாணத்தில் சீன அரசாங்கத்தின் மந்திரியொருவர் சென்றாராம். அவர்கப்பலின் மேல்தளத்தில் - பலரும் நடமாடுகிற இடத்தில் - மூக்கைச் சிந்தியும் எச்சில் துப்பியும் வந்தாராம். எவ்வளவு வெட்கக்கேடான காரியம்! ‘இதற்கு என்ன செய்தீர்களென்று’ நான் காப்டனைக் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார். - ‘வேறு ஒரு வழியும் எனக்குத் தோன்றவில்லை. என் னுடைய பட்டுக்கைக்குட்டையை எடுத்து அவர் எச்சிலுமிழ்ந்ததை யெல்லாம் துடைத்தேன். ஆயினும் அவர் இதைக் கவனிக்கவே யில்லை.’ இந்த மந்திரியைப் போல்தான் எல்லாச் சீனர்களும் இருக்கிறார்கள். அதாவது நமது நாகரிகக் குறைவையே இது காட்டுகிறது. நமது நாட்டின் பெரியஞானியாகிய கன்பூஷியஸ் கூறினார், ‘நீ உட்காருகிற பாய் முடங்கியதாயிருந்தால் அதன் மீது உட்காராதே’ யென்று. அதாவது, உட்காருதல், எழுந்திருந்தல் முதலிய சில்லரை விஷயங்களில் கூட நமது முன்னோர்கள் எவ்வளவு கவனஞ் செலுத்தி வந்தார்களென்பது நன்கு புலப்படும். இப்பொழுது நம்மவரிலே பலர், நகத்தை நீளவளர்த்துக்கொள்கிறார்கள். அப்படி வளர்த்துக் கொள்வதுதான் நாகரிகமென்றும் கருதுகிறார்கள். பிரெஞ்சுக் காரர்களுக்கிடையிலேகூட இந்தப் பழக்கம் இருக்கிறது. அதாவது தாங்கள் தொழிலாளர்கள் இல்லை யென்பதைக் காட்டுக் கொள்வதற்காக இங்ஙனம் வளர்த்துக்கொள்வதாகச் சொல்கி றார்கள். ஆனால் நமது ‘கோமிண்ட்டாங்’ கட்சியின் முக்கிய நோக்கமே, தொழில் செய்வதிலே சிறுமை பெருமை இல்லை யென்பதுதான். இன்னம் சீனர்கள் பற்களைத் துலக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்வதில்லை. இந்த மாதிரியான சில்லரை விஷயங் களை நாம் கவனித்து ஒழுங்கு படுத்திக்கொண்டோமானால் எவ்வளவோ நல்லது. ஆனால் சீனர்களாகிய நாம் இவைகளைப் பற்றிக் கவனிப்பதேயில்லை. அந்நியர்களிடத்தில் நாம் நாகரிகமாக நடந்து கொண்டால் அந்நியர்களும் நம்மிடத்தில் மரியாதை யாக நடந்து கொள்வார்கள். இளைஞர்களாகிய நீங்கள், அந்நியர்களின் தற்கால நாகரிகத்தினின்று அநேக அமிசங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். முதலில் உங்கள் சொந்த நடவடிக்கைகளைச் சீர்திருத்திக் கொள்ளவேண்டும். உலகத்திலுள்ள எல்லா நாடுகளும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. சீனாமட்டும் ஏன் பிற்போக்கடைந்திருக் கிறது? அந்நியர்களுடைய அரசியல் பொருளாதார ஆதிக்கத்தி லிருப்பது ஒரு காரணம். மற்றொரு காரணம், நமது சொந்த விஷயங்களில் நாகரிகமாக நடந்தகொள்ளாமை. ஆகையால் இந்த நாகரிகத்தை நாம் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். நமக்குப் பூர்விகக் கல்வி ஞானம் அதிகரித்திருந்த தோடு, நமது சக்திகளும் அதிகரித்திருந்தன. இப்போது, அந்நிய நாடுகளில் யந்திரங் களின் பெருக்கத்தையும் நவீன விஞ்ஞான சாஸ்திர அபிவிருத்தியையும் சீனர்கள் பார்க்கிறபோது, தங்களுடைய திறமை, அந்நியர்களின் திறமையைக் காட்டிலும் குறைவான தென்று கருதிவிடுகிறார்கள். ஆனால் ஆயிரம் வருஷங்களுக்கு, முன்னர், சீனர்கள் எவ்வளவு திறமைசாலி களாயிருந்தார்கள்! இப்பொழுது மேனாட்டினரால் வியந்து பாராட்டப்படும் அநேக விஷயங்கள் முதன்முதலாகச் சீனர்களால் கண்டுபிடிக்கப் பட்டவை யாகும். உதாரணமாக, மேனாட்டுக் கப்பல்களில் பெரிதும் உபயோகிக்கப்படும் திசையறி கருவியை எடுத்துக்கொள்ளுங்கள். சீனர்களால் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னரேயே இது கண்டு பிடிக்கப்பட்டது. அச்சுயந்திரத்தைக் கண்டுபிடித்ததும் சீனர்கள் தான். பீங்கான் சாமான்களை உற்பத்தி செய்யும் முறையைக் கண்டுபிடித்து அதனைப் பண்பட்ட நிலைக்குக் கொண்டு வந்தது சீனர்களல்லாமல் வேறு யார்? துப்பாக்கி மருந்தையும் சீனர்கள்தான் முதன் முதலாகக் கண்டு பிடித்தார்கள். இங்ஙனமே மானிட சமுதாயத்திற்குத் தேவையான உணவு, உடை, வசிக்க இடம், போக்குவரத்து வசதிகள் முதலியவற்றைக் கண்டுபிடித்து உதவிபுரிந்ததிலும் சீனர்கள் அதிக பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நாகரிக உலகத்தினரால் மிகவும் அவசியமான உணவுப் பொருளாகக் கருதப்படுகிற தேயிலை, முதன் முதலில் சீனாவில்தான் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தத் தேயிலைப் பானப்பழக்கம் ஏற்பட்ட பிறகு, உலகத்தில் மதுபானப் பழக்கம் குறைந்திருப்பதை யாவருமே அங்கீகரிப்பர். இதே மாதிரி, பட்டாடை தரிப்பது இப்பொழுது நாகரிக மென்று கருதப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்பட்டுப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில்தான். தற்காலத் தில் பல மாடிகள் கொண்ட வீடுகள் கட்டப்படுகின்றன. ஆனால் முதன் முதல் மனையடி சாஸ்திரம் சீனாவிலிருந்துதான் பிறந்தது. இதேமாதிரி, போக்குவரத்து வசதிகள் விஷயத்திலும் சீனர்கள் அநேக புதிய சௌகரியங்களைக் கண்டு பிடித்திருக்கின்றனர். உயர்ந்த மலைகளையும் ஆழ்ந்த பள்ளத் தாக்குகளையும்,அகன்ற நதிகளையும் கடப்பதற்கு உபயோகமான தொங்கும் பாலங்களைக் கண்டுபிடித்தது சீனர்கள்தான். இத்தகைய உதாரணங்களால் நாம் தெரிந்துகொள்ளுவதென்னவென்றால், புராதன சீனர்கள் திறமை சாலிகளாக இருந்தார்கள்; ஆனால் பின்னர் இந்தத் திறமையை இழந்துவிட்டார்கள்; இதனால் நமது தேசீய அந்தஸ்தும் வீழ்ச்சி யுற்றது என்பதுதான். எனவே நமது பழைய அந்தஸ்தை மீண்டும் பெற வேண்டுமானால், பழைய சக்திகளையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆனால் இப்படிப் பழைய சக்திகளை மீண்டும் பெறுவத னால் மட்டும் தற்கால உலக வல்லரசுகளோடுபோட்டி போட்டு ஒரு ஸ்தானத்தைச் சீனா பெறமுடியுமா? முடியாது. அந்நிய நாட்டு நாகரிகங்களில் என்னென்ன நல்ல அமிசங்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்; இல்லா விட்டால் நாம் பின்னடைந்துதான் போவோம். அந்நிய நாட்டு யந்திர வகைகள் சிக்கலானவை யென்றும் அவைகளைக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறோம். மேனாடுகளில் ஆகாய விமானங்களைச் செலுத்துவது மிகவும் கடினமென்று கருதப்படுகிறது. தவிர, ஆகாய விமானங்கள் சமீப காலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது தினந்தோறும் காண்ட்டன் நகரத்திலிருந்து ஏராள மான ஆகாய விமானங்களைச் செலுத்தும் கஷ்டமான காரியத்தைத் தெரிந்துகொண்டுவிட்டபோது மற்ற எந்தக் காரியந்தான் அவர் களுக்குக் கடினமானது? நமது புராதன நாகரிகம், கல்வி முறை முதலியவற்றைத் துணையாகக்கொண்டு வெளிநாட்டு நல்ல அமிசங்களையெல்லாம் நாம் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். மேனாட்டார் தங்களுடைய விஞ்ஞான அறிவைக் கொண்டு தான் பெருமை பாராட்டிக்கொள்கின்றனர். சென்ற முந்நூறு வருஷ காலமாகத்தான் இந்த விஞ்ஞான அறிவு வளர்ச்சிபெறத் தொடங்கி யிருக்கிறது. சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவைகளில் மின்சாரமும் ஒன்று. ஆரம்பத்தில் நிலக்கரியிலிருந்தும் யந்திரங் களை இயக்கும் சக்தி உற்பத்தி செய்யப்பட்டது; இப்பொழுது மின்சாரத்திலிருந்து அதே சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. அமெரிக்காவில் தற்போது ஒரு புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது அந்த நாட்டிலுள்ள எல்லாத் தொழிற்சாலை களையும் ஒரே மின்சார ஸ்தாபனத்தினின்று உண்டாகும் மின்சார சக்தியைக் கொண்டு இயக்குவதாகும். சீனாவும், நவீன முறைகளைக் கற்றுக் கொள்ளவேண்டுமானால் அது நிலக்கரியிலிருந்து ஆரம்பிக்கக்கூடாது; மின்சாரத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அதாவது முற்போக்கான சக்திகளை மட்டும் நாம் கிரகித்தக் கொண்டுவிட்டோ மானால் இன்னும் பத்து வருஷகாலத்திற்குள் நாம் மற்ற வல்லரசுகளுடன் சம அந்தஸ்துக்கு வந்துவிடுவோம். இதற்கு ஜப்பான் தான் சிறந்த உதாரணம். ஜப்பானுடைய நாகரிகம் முதன் முதலில் சீனாவிலிருந்துதான் நகல் செய்யப்பட்டது. அதாவது சீனாவின் நாகரிகத்தைவிட ஜப்பானிய நாகரிகம் மிகக் குறைவானது. ஆனால் சமீப காலத்தி லிருந்து, ஜப்பான், ஐரோப்பிய அமெரிக்க நாகரிகங்களைப் பின்பற்றத் தொடங்கி, மிகச் சுருக்கமான காலத்தில், உலக வல்லரசு களில் ஒன்றாவிட்டது. ஜப்பானியர்களைவிட நமது அறிவு எவ்விதத் திலும் குறைந்ததாக மாட்டாது. ஆகையால், நமக்கு மேனாட்டு நல்ல அமிசங்களைக் கிரகித்துக் கொள்வது மிகவும் சுலபமாகும். எனவே, அடுத்த பத்து வருஷ காலம், நமக்குப் பெரிய சோதனை காலமாகும். ஜப்பானைக் காட்டிலும் சீனாவின் ஜனத்தொகை பத்து மடங்கு அதிகமாகவும், விஸ்தீரணத்தில் முப்பது மடங்கு பெரிதாகவும் இருக்கிறது. எனவே, ஜப்பான் தற்போது அடைந்திருக்கும் நிலைமைக்குச் சீனா வந்துவிடுமானால் அப்பொழுது பத்து வல்லரசு களுக்குச் சமமாகும் ஒரு சீனா. உலகத்திலே இப்பொழுது பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான் ஆகிய ஐந்து வல்லரசுகள்தான் இருக்கின்றன. ஜெர்மனியையும் ருஷ்யாவையும் வருங்கால வல்லரசு களுடன் சேர்த்துக் கொண்டால் ஏழு வல்லரசுகள் தானாகின்றன. எனவே, ஜப்பானுடைய நிலைமைக்குச் சீனா வருமானால், தன்னுடைய ஒரே ராஜ்யத்தில் பத்து வல்லரசு களின் சக்தியைப் பெற்றதாயிருக்கும். அப்படிப்பட்ட மேலான நிலையை அடைந்துவிட்ட பிறகு சீனாவின் கடமை என்ன? புராதன சீனாவில் ஒரு பழமொழி வழங்கி வந்தது. ‘பலவீனர்களைக் காப்பாற்று; விழுந்தவர்களை எழுப்பு’ என்பதுதான் அந்தப் பழமொழி. இந்த உயர்ந்த கொள்கையைக் கொண்டிருந்ததனால்தான் சீனா, ஆயிரக்கணக்கான வருஷங்களாக சுபிட்சமாயிருந்தது. இதனைத் தழுவியிருந்த அன்னாம், பர்மா, கொரியா சையாம் முதலிய நாடுகள் சுவாதீனமாயிருந்தன. கீழைப் பிரதேசத்தில் ஐரோப்பியருடைய செல்வாக்குப் பெருகப் பெருக, அன்னாம் பிரதேசத்தை பிரான்ஸும், பர்மாவை கிரேட் பிரிட்ட னும், கொரியாவை ஜப்பானும் முறையே ஆக்கிரமித்துக் கொண்டன. சீனா, முழுச் சக்தியையும் பெறவேண்டு மானால், நமது தேசீய அந்தஸ்தை மீட்டுக் கொள்வோதடல்லாமல், உலகத்திற்கும் ஒரு பொறுப்பைச் செலுத்த வேண்டும். இந்தப் பொறுப்பை, சீனா ஏற்றுக் கொள்ளாவிட்டால் உலகத்திற்கு அதனால் தீமையே உண்டாகும். அப்படியானால் சீனா செய்ய வேண்டிய கடமையென்ன? இன்று, கிரேட் பிரிட்டன் முதலிய ஐரோப்பிய வல்லரசுகள் செல்லுகின்ற பாதை, சிறிய நாடுகளின் அழிவிலேதான் கொண்டு விடும். சீனாவும் பலம் பெற்று ஏகாதிபத்திய முறைகளைக் கையாளு மானால் அதுவும் மேற்படி வல்லரசு களின் வழியைத்தான் பின்பற்றிச் செல்லும். ஆகையால் முதலில் நமது கொள்கை இன்னதென்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். பலவீனர் களைக் காப்பாற்றி, விழுந்தவர்களை எழுப்பினால், நாம் - பலவீனமான நாம் - ஒரு தெய்வீகக் கடமையைச் செய்தவர்களாவோம். நம் பலவீனமான நாடுகளுக்கு உதவி செய்து வல்லரசுகளை எதிர்த்து நிற்கவேண்டும். நமது நாட்டு ஜனங்களனைவரும் இந்த விதமாகத் தீர்மானித்துக் கொண்டால், நம்முடைய ஜனசமூகம் nக்ஷமமடையும். ஆகையால், சீனவின் வளர்ச்சி ஆரம்பமாவதற்கு முன்னர், விழுந்தவர் களை எழுப்பி விடுவதாகவும், பல வீனர்களைக் காப்பாற்றுவதாகவும் நாம் சங்கல்பம் செய்து கொள்வோமாக. அப்பொழுதுதான் நாம் நமது ராஜ்யத்தை ஆண்டு, உலகத்தைச் சமாதானத்திற்குட்படுத்தினவர் களாவோம். இரண்டாவது பகுதி * ஜனநாயக தத்துவம் * (மின் - ஷுவான்) நான் தினந்தோறும் மூன்று விதமாக ஆத்ம பரிசோதனை செய்து கொள்கிறேன். முதலாவது, என்னைத் தவிர்த்த மற்றவர்களிடத்தில் நான் ஒழுங்காக நடந்து கொள்கிறேனா என்பது; இரண்டாவது, நண்பர்களிடத்தில் நன்றி விசுவாசத்துடன் நடந்து கொள்கிறேனா என்பது; மூன்றாவது, என்னுடைய நடவடிக்கைகளில் என் குருநாதரின் உபதேசங்களைக் கடைப் பிடிக்கிறேனோ என்பது. - கன்பூஷியஸ் 7 ஜனநாயகத்தின் வளர்ச்சி (9 - 3 - 1924) கனவான்களே! இன்று ஜனாதிக்கம் என்பதைப் பற்றிப் பேசப் போகிறேன். ஜனாதிக்கம் என்றால் என்ன? இதனைத் தெரிந்து கொள் வதற்கு முன்னர், ஜனம் என்றால் என்னவென்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும். பல மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒழுங்காக இருக்கும் கூட்டத்திற்கு ஜனம் என்று பெயர். அப்படியே ஆதிக்கம் என்ற சொல்லுக்கு ஒரு நாட்டின் எல்லைக்குள் செலுத்தப்படும் அரசியல் அதிகாரத்திற்குப் பெயர். இந்த அரசியல் அதிகாரம் எந்த நாட்டுக்கு அதிகமாயிருக்கிறதோ அதற்கு வல்லரசு என்று அந்நிய நாட்டார் பெயரிட்டு அழைக்கின்றனர். ஒரு யந்திரத்திற்கு எவ்வளவு சக்தியிருக்கிறதென்று நாம் கூறுகிறபோது ‘இத்தனை குதிரைபலம் இருக்கிற’ தென்றுதான் கணக்கிட்டுக் கூறுவோம். அந்நிய பாஷையில் இதனையே ‘இத்தனை குதிரை வேகமுடையது’ என்று கூறுகிறார்கள். அதாவது பலமும் சக்தியும் ஒரே அர்த்தத்தில் உபயோகிக்கப்படுகிற தென்று சொல்லலாம். உத்தரவுகளை நிறை வேற்றவும், பொதுஜன வாழ்க்கையை ஒழுங்கு படுத்தவும் உள்ள அதிகாரத்திற்கே ‘அரசியல் ஆதிக்கம்’ என்று பெயர். ஜனங்களும் இந்த அரசியல் ஆதிக்கமும் ஒன்று படுமானால் ஜனங்களுக்கு அரசியல் ஆதிக்கம் ஏற்பட்டு விட்டதென்று நாம் கூறு கிறோம். இந்த அரசியல் ஆதிக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள் வதற்கு முன்னர், அரசாங்கம் என்றால் என்ன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தைப் பற்றிய பிரச்னை மகா கடினமான பிரச்னையென்றும் அதனை எல்லா ஜனங்களும் சுலபமாகத் தெரிந்துகொள்ள முடியா தென்றும் பலர் கருதுகின் றனர். சீனாவின் இராணுவத் தலைவர்கள் ‘நாமெல்லோரும் போர் வீரர்கள்; நமக்கு அரசியலைப் பற்றி ஒன்றும் தெரியாது’ என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை கொள்கிறார்கள். அரசியல் விஷயமானது மிகவும் தெளிவான விஷய மென்றும், அதனை எல்லோரும் கிரகித்துக் கொள்ளலாமென்றும் அவர்களுக்குத் தெரிவ தில்லை. அரசாங்க நிருவாகம் துரிதமாகவும் ஒழுங்காகவும் நடைபெறு வதற்கு முக்கிய காரணமாயிருப்பவன் போர் வீரனே யாதலால், அவன் அரசாங்க நிருவாகத்தைப் பற்றி அவசியம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். சுருக்கமாகக் கூறப்போனால், அரசாங்கம் என்பது ஜனங்களுக் கான விஷயம், ஜனங்களுடைய விஷயம்; ஜனங்களுடைய விஷயங் களைப் பற்றிக் கவனிக்கிற நிருவாகம். இந்த நிருவாகத்தை ஜனங்கள் கைப்பற்றிக் கொண்டு நடத்துகிறபோதுதான் ஜனாதிக்கம் அல்லது குடியரசு என்று நாம் சொல்லுகிறோம். இந்த ஜனாதிக்கத்தின் வேலைகளென்ன வென்பதைச் சிறிது கவனிப்போம். பூர்வகால சரித்திரத்தை நாம் ஆராய்ந்து பார்த்தோ மானால், மானிடசமுதாயம் நிலைத்து வாழ்வதற்காக, மனித உழைப்பு உபயோகப் பட்டிருக்கிற தென்பது நன்கு தெரியும். மானிட சமூகத்திற்கு, பாதுகாப்பும் உயிர்வாழ்க்கைக்குரிய பொருள் களும் தேவையாயிருக்கின்றன. மனிதன் எப்படித் தற்காப்பையும், ஆகாரத்திற்குரிய பொருள்களையும் தேடுகிறானோ அப்படியே மற்ற ஜீவப்பிராணிகளும் தங்களுடைய பாதுகாப்பையும் ஆகார வகைகளையும் தேடிச் செல்கின்றன. இதனால் மனிதனுக்கும் மற்ற ஜந்துக்களுக்கும் அடிக்கடி சச்சரவும் போட்டியும் ஏற்படுகின்றன. இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற மனிதன் தன் பலமனைத்தை யும் உபயோகிக்கிறான். இதனால், மனிதன், ஆதிகாலத்திலிருந்து தற்காலம் வரையில் போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்துகொண்டு வந்திருக்கிறான் என்பது தெரியப்படும். மானிட ஜாதியின் போராட்ட சரித்திரத்தைப் பல பகுதி களாகப் பிரிக்கலாம். உலகம், மனிதன் தோன்றுவதற்கு முன்னர் ஒரே சூனியமா யிருந்ததென்றும், இதுவே சரித்திரத்தின் முதற் பகுதி யென்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்தப் பகுதி எவ்வளவு காலம் நீடித்திருந்த தென்பது நமக்குத் தெரியாது. ஆனால் நிலப் பரப்பு ஏற்படுவதற்கு முன்னர், நீர்ப்பரப்பு இருந்ததென்றும், அதற்கு முன்னர் வாயுமண்டலமே இருந்ததென்றும் பூமிசாஸ்திர நிபுணர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். இந்த நிலப்பரப்பு ஏற்பட்டது, அநேக லட்சம் வருஷங்களுக்கு முந்திய கால மென்றும், இந்த நிலப்பரப்பு, மண்ணாகிக் கல்லாகிப் பாறையாக இறுகி அநேக ஆயிரக்கணக் கான வருஷங்கள் கழிந்த பிறகுதான், மனிதன் இந்தப் பூலோகத்தில் உற்பத்தியானான் என்றும் அறிஞர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். மனிதன் உற்பத்தியானதெல்லாம் இருபது லட்சம் வருஷங் களுக்கு முந்திய காலமென்றும், இதற்கு அநேக லட்சம் வருஷங்கள் கழித்து - இற்றைக்கு ஏறக்குறைய இரண்டு லட்சம் வருஷங்களுக்கு முன்னர் - மானிட ஜாதியின் நாகரிக தசை ஆரம்பித்திருக்கக் கூடுமென்றும் சரித்திரக்காரர்கள் துணிகிறார்கள். மனிதன் தோன்றிய காலத்தி லிருந்து அவன் நாகரிக தசையின் ஆரம்ப நிலைக்கு வந்தானே அதுவரையில், அவன் - அந்த மனிதன் - மிருகங்களைப் போலவே வாழ்க்கையை நடத்தினானென்றும், இந்த மிருக நிலையிலிருந்து தான் மனித நிலைக்கு வந்தானென்றும் அறிஞர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். இங்ஙனம் படிப்படியாக விருத்தி யடைந்துதான் இப்பொழுது நாம் ஜனாதிக்கக் காலத்திற்கு, ஜனநாயக யுகத்திற்கு வந்திருக்கிறோம். ஜனநாயகத் தத்துவத்தின் வித்துக்கள் இரண்டாயிரம் வருஷங் களுக்கு முன்னர், கிரீசிலும் ரோமாபுரியிலும் முளைத்தன வென்பது உண்மை யானாலும், சென்ற நூற்றைம்பது வருஷகாலமாகத்தான் இந்தத் தத்துவம் உலகத்தில் நன்றாக வேரூன்றியிருக்கிற தென்று சொல்ல வேண்டும். இந்த நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னர், உலகத்தில் சுயேச்சாதிகாரம் நிலவியிருந்தது. அதற்கு முன்னர் ஒரு தனிப்பட்ட சமூகத்தினருடைய ஆட்சி. அதற்கு முன்னர் மனிதன் காட்டுமிராண்டி யாகத் திரிந்து மிருகங்களோடு போராடிக் கொண்டிருந்தான். அந்தக் காலத்தில், மனிதனுக்கும் மிருகத்திற்கும் அடிக்கடி சண்டைகள் நடந்து வந்ததாகத் தெரிகிறது. மனித னுக்கும் மனிதனுக்கும் கூட்டுறவு இல்லை. அவனவனும் தனித் தனியே வாழ்க்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தான். மனிதன் ஆரம்பத்தில் எங்கிருந்து பிறந்தான்? சில சில இடங்களிலிருந்தே மனிதன் ஆதியில் தோன்றியிருக்க வேண்டு மென்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பூமி சாஸ்திரிகள், மனிதன் தோன்றின காலத்திலிருந்தே அவன் பூமி முழுவதும் பரவியிருக்க வேண்டுமென்றும், பூமியை இப்பொழுது எங்குத் தோண்டிப் பார்த்தாலும் மனிதனுடைய சின்னங்கள் அகப்படுகின்றன வென்றும் கூறுகிறார்கள். மனிதனுக்கும், காட்டு மிருகங்களுக்கும் தொடங்கின போராட்டம் இன்னும் நின்ற பாடில்லை. மலேயா முதலிய தென்கோடிப் பிரதேசங்களின் காட்டுப் பாங்காயுள்ள இடங்களுக்கு நாம் இப்பொழுது சென்று பார்த்தாலும் கூட இந்தப் போராட்டம் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாகவே தெரியும். உயர்ந்த மலைகளின் நடுவிலும், வறண்ட பாலைவனங் களின் மத்தியிலும் இப்பொழுது நாம் பிரவேசித்துப் பார்ப்போ மானால், பூர்வ காலத்தில் மனிதர்களும் மிருகங்களும் எந்தச் சுற்றுச் சார்புகளின் மத்தியில் வசித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை ஒருவாறு கற்பனை செய்து கொள்ளலாம். புராதன காலத்து நிகழ்ச்சிகளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்குத் துணை செய்வது சரித்திரம் ஒன்றுதான். ஆனால் நாகரிக வளர்ச்சியைப் பற்றிய சரித்திரமோ, எழுத்துகள் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் தொடங்கியது. சீனாவினுடைய சரித்திரம், ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் வருஷங் களின் புராதனத்தை யுடையது. எகிப்தினுடைய சரித்திரம் பதினாயிர வருஷங்களின் பழைமையுடையது. அறிவின் பல துறை களையும் ஆராய்ச்சி செய்வதற்குச் சீனா, புத்தகத்தின் துணையை நாடியிருக்கிறது. ஆனால் மற்ற நாட்டார், மலைகள், குகைகள், மிருகங்கள் மூலமாகத் தங்கள் அறிவை அபிவிருத்தி செய்து கொள்ளு கிறார்கள். தவிர ஆப்ரிக்கா. மலேயா முதலிய தீவுப் பிரதேசங்களில் தற்போது வசிக்கும் புராதன குடிமக்களைக் கொண்டு நமது முன்னை யோர்களான பூர்விகக் குடிகள் எப்படி வாழ்ந்து வந்தார்களென்பதையும் நன்கு தெரிந்து கொள்ளலாம். இதனால் தற்கால ஆராய்ச்சிக்காரர்கள் வெறும் நூல்களை மட்டும் ஆதாரமாகக் கொள்வதில்லை; தாங்கள் சுயமாகவும் ஆராய்ச்சி செய்கிறார்கள்; இந்த ஆராய்ச்சியின் மீது ஒரு முடிவும் கட்டு கிறார்கள். ஆரம்பத்தில் மனிதன், தன்னுடைய தேக பலத்தைக் கொண்டுதான் மிருகங்களின் மீது வெற்றி கண்டான். அப்பொழுது அவன் தற்காப்பினிமித்தம் தனது இரண்டு கைகளையும் கால்களை யும் மட்டுமே உபயோகித்தான். ஆனால், மிருகங்களைவிட மனிதனுக்குக் கூர்மையான புத்தியிருந்தபடியால் சில ஆயுதங்களைக் கண்டுபிடித்து அவைகளின் துணைகொண்டு, காட்டு மிருகங்களின் மீது வெற்றி கொண்டான். காட்டு மிருகங்களோடு இவன் போராடிக் கொண்டிருந்த காலத்தில் இவனுடைய வாழ்க்கை மிகவும் ஆபத்தாயிருந்தது. காட்டு மிருகங்களின் பயம் மனிதனுக்கு விட்டுப் போன தருணத்தில், பூமியின் பல பாகங்களிலும் மனிதன் குடியேற ஆரம்பித்தான். எந்த மாதிரியான இடங்களில் இவன் குடியேறி னான்? காற்று மழைகளினால் பாதிக்கப்படாத பிரதேசங்களிலேயே இவன் குடியேறினான். அதாவது நைல் கணவாய்1 மெஸொபொ டோமியா பிரதேசம்2 முதலிய இடங் களையே இவன் முதல் முதலில் தெரிந்தெடுத்துக் கொண்டான். தவிர இந்தப் பிரதேசங்கள், விவசாயத்திற்கு மிகவும் சௌகரியமான பிரதேசங்களாயிருந்தன. இதனால், இந்த இரண்டு பிரதேசங்களையும், உலக நாகரிகத்தின் தொட்டில்கள் என்று சரித்திரக்காரர்கள் கூறுகிறார்கள். இங்குக் குடியேறிய ஜனங்களும் சுக வாழ்க்கையை நடததினார்கள். இதனால் இவர்களுக்கு மனஉழைப்போ, தேக உழைப்போ அதிகம் இல்லாமலிருந்தது. இவர்களுடைய சந்ததியார் நாளா வட்டத்தில் அதிகமாகப் பெருகினர். இதனால் இவர்களிற் சிலர், வேறு வேறு இடங்களுக்குக் குடியேறினார்கள். இப்படிக் குடியேறிச் சென்ற இடங்களில் இவர்களுக்கு இயற்கையாலான தொந்தரவுகளால், அதாவது, மழை காற்று வெள்ளம் முதலியவைகளால் பாதகம் ஏற்பட்டன. சீனாவிலுள்ள மஞ்சள் நதிப்1 பிரதேசந்தான், சீன நாகரிகத் தின் உற்பத்தி ஸ்தானமாயிருந்தது. ஆனால் இங்கு வசித்தவர்கள் சீனாவின் பூர்விக ஜனங்கள் என்று சொல்ல முடியாது. இவர்களின் முன்னோர்கள் மெசொபொடேமியாவிலிருந்து வந்து குடியேறி யிருக்க வேண்டும். இங்ஙனம் குடியேறியவர்கள் புயற்காற்று, வெள்ளம் முதலியவை களினின்று தடுத்துக் கொள்ளும் பொருட்டு வீடுகள் கட்டிக் கொண்டும், வேறு பல சௌகரியங்களைச் செய்து கொண்டும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். இதன் காரணமாக, நாகரிகம் வரவர வளர்ச்சியடையத் தொடங்கியது. ஜனங்களும் ஒன்றுபட ஆரம்பித்தார்கள். நிலம் அதிகமா யிருக்க ஜனங்கள் குறைவாயிருந்த படியால், ஆகாரம் அகப்படுவது மிகவும் சுலபமாயிருந்தது. இயற்கையினால் ஏற்படுகிற சேதங்களைத் தடுப்பதுதான் முக்கிய பிரச்னையாய் இருந்தது. தங்களால் தடுக்க முடியாத சக்திகளையெல்லாம் தெய்வீக சக்தியென்று ஜனங்கள் கருதினார்கள். சில அறிஞர்கள் ஒன்று கூடி, கடவுள் தன்மையைப் பற்றிப் பிரசாரஞ் செய்ய ஆரம்பித்தார்கள். இந்தப் பிரசாரத்தின் விளைவாகக் கடவுளின் கோபத்தினாலேயே வெள்ளம், புயற்காற்று முதலியன உண்டாகின்றன வென்றும், இவைகளினின்று தடுத்துக் கொள்ள, பிரார்த்தனைகள் முதலியன செய்ய வேண்டு மென்றும், கடவுளுக்கு விண்ணப்பித்துக் கொள்வதன் மூலமாகத்தான் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்றும் ஜனங்கள் எண்ணத் தொடங்கினார்கள். இந்த எண்ணம் நாளாவட்டத்தில் வலு வடைந்தது. பின்னர், தெய்வத்திற்குப் பிரார்த்தனை செய்வதற் கென்றே, தீர்க்க திருஷ்டியுள்ள ஒருவனை ஜனங்கள் தெரிந்தெடுத் தார்கள். இவனிடத்தில் தெய்வீகத் தன்மை நிரம்பியிருப்பதாக ஜனங்கள் கருதி, இவனுக்கு மரியாதை செலுத்தி வந்தார்கள். இப்பொழுதும் மங்கோலியாவிலும் திபேத்திலும் ஜனங்கள் புத்தரின் திருஅவதாரம் என்று சொல்லி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரையே அரசராக ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த இரண்டு நாடுகளிலும் மதஅரசாங்கமே இருக்கிற தென்று சொல்லலாம். ஆக, முற்காலத்தவர், கடவுளைத் தொழுவதும், சண்டை போடு வதுமே அரசாங்கத்தின் இரண்டு கடமைகள் என்று கருதிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது சீனாவில் குடியரசு ஏற்பட்டு பதின்மூன்று வருஷங்களாகின்றன2. நாம் முடியாட்சியையும் சுயேச்சாதிகாரத்தை யும் உதறித் தள்ளி விட்டோம். ஜப்பான், இன்னும் முடியாட்சிக்கு குட்பட்டே இருக்கிறது. ஜப்பானியர்கள், தங்கள் அரசனை ‘டென்னோ’ என்று அழைக் கிறார்கள். அதாவது ‘தெய்வீக அரசன்’ என்று அர்த்தம். சீனர்களாகிய நாம் சக்ரவர்த்தியை ‘தெய்வ லோகத்து மகன்’ என்று அழைத்து வந்தோம். முற்காலத்தில், ரோமசக்ரவர்த்திகள், தங்கள் நாட்டின் மதத் தலைவர் களாகவும் இருந்தார்கள். ரோமாபுரி வீழ்ச்சியடைய, அதன் சக்ரவர்த்திகள் சிங்காதனத்தினின்று இறக்கப்பட்டதும், ரோம ஏகாதிபத்தியத்தின் அரசியல் செல்வாக்கே போய்விட்ட தென்று சொல்லலாம். ஆனால் ரோமாபுரியின் மதச் செல்வாக்கு மட்டும் அப்படியே இன்னும் இருக்கிறது. ரோமாபுரி யிலுள்ள போப்பரசருக்குப் பலரும் வணக்கஞ் செலுத்தவில்லையா? இங்ஙனமாக, மதத் தலைமையும் அரசியல் அதிகாரமும் ஒருவரிடமே சேர்ந்திருக்க, சில காலம் உலக விவகாரங்கள் நடைபெற்றுக் கொண்டு வந்தன. பின்னர், போர் வீரர்களும் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து, மதத் தலைவர்களிடமிருந்து ராஜாங்க அதிகாரத்தைத் தாங்களே கைப்பற்றிக் கொண்டார்கள்; அல்லது தாங்களே மதத் தலைவர் களானார்கள். இதன் காரணமாக, மனிதனுக்கும் மிருகத்திற்கும் சண்டை நடப்பது போய், மனித னுக்கும் மனிதனுக்கும் சண்டை ஏற்பட்டது. எனவே, மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், தான் ஒழுங்காக வாழவும் தெய்வ பலம் மட்டும் இருந்தால் போதாதென்றும், இராணுவ பலமும் ஒழுங்கான அரசாங்கமும் தேவை யென்றும் உணர ஆரம்பித்தான். இது காரணமாக, அரசர்களுடைய பலம் அதிகரித்தது. அதாவது சுயேச்சாதி காரம் வலுப்பெற்றது. இப்படியிருந்த நிலையில் விஞ்ஞான சாஸ்திரம் தோன்றியது. மனிதனுடைய அறிவு விசாலமடைந்தது. இதனால் ஜனங்களிடை யில் ஒரு புதிய உணர்ச்சி உண்டாயிற்று. எனவே, சுயேச்சாதிகார மானது, பலருடைய துன்பங்களைப் பரிகரிக்கவில்லையென்றும் எனவே அதற்கு அழிவு தேடவேண்டு மென்றும் ஜனங்கள் கருதி விட்டார்கள். இந்த எண்ணத்தைத்தான் புரட்சி என்று சொல்லு கிறார்கள். இந்தப் புரட்சி எண்ணம், சென்ற ஒரு நூற்றாண்டு காலமாக உலகெங்கும் பரவியிருக் கிறது. இந்த நூற்றாண்டில், ஒவ்வொரு நாட்டிலும் அரசர்களுக்கும் பிரஜைகளுக்கும் போராட்டங்கள் நிகழ்ந்து வருவதைப் பார்க்கலாம். ஜனநாயகம் எப்படி ஆரம்பித்தது, என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்குத் துணையாக, மானிட ஜாதியின் வளர்ச்சியைப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்ப்பது பொருந்தும். முதற் பகுதியில் மனிதன் மிருகங்களோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தான்; வேறெந்தச் சக்தியையும் உபயோகியாமல், தன்னுடைய தேக பலத்தை மட்டும் இந்தப் போராட்டத்தில் உபயோகித்தான். இரண்டாவது பகுதியில் மனிதன், இயற்கைச் சக்திகளோடு போராடினான். அப்பொழுது தெய்வசக்தியின் துணையை நாடினான். மூன்றாவது பகுதியில் மனிதர்களோடு மனிதர்கள், ராஜாங்கங்களோடு ராஜாங்கங்கள். ஜாதிகளோடு ஜாதிகள் இப்படியாகச் சண்டைகள் நடைபெற்றன. இந்தக் காலத் தில் சுயேச்சாதிகாரந்தான் முக்கிய கருவியாயிருந்தது. இப்பொழுது நாமெல்லாம் நான்காவது பகுதியில் இருக்கிறோம். அதாவது ஒரு ராஜ்யத்திற்குள்ளேயேதான் தற்போதைய சண்டைகளெல்லாம் நடைபெறுகின்றன. ஒரு ராஜ்யத்திலுள்ள ஜனங்கள், அந்த நாட்டு அரசர்களோடு போராடுகிற காலமிது. இப்பொழுதைய பிரச்னை என்னவென்றால் நன்மைக்கும் தீமைக்கும் போராட்டம்; நியாயத்திற்கும் அநியாயத்திற்கும் போராட்டம் இப்படியாக நடை பெறுகிறது. இதைத்தான் ஜனநாயக காலம் என்று நாம் சொல்லி வருகிறோம். அதாவது இப்பொழுது ஜனாதிக்கத்திற்கு அதிகமான சக்தி இருக்கிறது. இந்த ஜனாதிக்க காலத்திற்குள் இப்பொழுதுதான் நாம் பிரவேசித்திருக்கிறோம். இந்த ஜனநாயக ஆட்சி முறைக்கு, தற்போதைய சீனா தகுதியுடைய தாயிருக்கிறதா? இதுதான் இப்பொழுது முக்கியமான பிரச்னை. சிலர் சொல்கிறார்கள், சீனர்களுடைய வாழ்க்கை அந்தஸ்து மிகவும் தாழ்வாயிருக்கிறது; அதனால் அவர்கள் ஜனநாயக ஆட்சி முறைக்குத் தகுதி யுடையவர்களாயில்லை யென்று. அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடுதான். ஆனால் சீனாவில் யுவான் - ஷி - காய் என்பவர், சக்ரவர்த்தியாக வேண்டுமென்று விரும்பின காலத்தில், குட்நௌ1 என்ற ஓர் அமெரிக்கர், சீனர்கள் முற்போக் கான எண்ணங்களையுடையவர்களில்லை யென்றும், அவர் களுடைய கலைஞானம் மிகவும் பிற்போக்குடையதாயிருக்கிற தென்றும், ஆதலால் ஜனநாயக அரசியல் பரீட்சையைச் சீனாவைப் பொறுத்த மட்டில் நடத்த வேண்டாமென்றும் மேற்படி யுவான் - ஷி - காய்க்கு யோசனை கூறினார். இந்த வாதங்களை ஏற்றுக் கொண்டு, யுவான் - ஷி - காய், சீனாவில் குடியரசு ஏற்படவிடாமல் தடுத்து, தாமே சக்ரவர்த்திப் பட்டஞ் சூட்டிக் கொண்டார். சீனாவின் ஜனநாயக ஆட்சி முறையை அமுலுக்குக் கொண்டு வர வேண்டுமானால் அதன் பூரணப் பொறுப்பையும் நாம் நன்கு உணர வேண்டும். சீனா, ஆரம்ப காலத்திலிருந்தே ஜனநாயகத்தைத் தனது ஆட்சி முறை அமிசமாகப் புகுத்தினதாகத் தெரியவில்லை. சென்ற நாலாயிரம் வருஷங்களாகச் சீனாவில் யதேச்சாதிகாரந்தான் நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது. இந்த யதேச்சாதிகார முறை, சீனாவிற்கு நன்மையை உண்டு பண்ணியதா தீமையை உண்டு பண்ணியதாவென்று ஆராய்ச்சி செய்து பார்த்தால் பாதி நன்மையும் பாதி தீமையும் உண்டாயிருக்கிறது. ஆனால் ஜனங்களுடைய நன்மையை நாடக்கூடியது ஜனாதிக்கந்தான். கன்பூஷியஸ் என்ற அறிஞரும், மென்ஷியஸ் என்ற அறிஞரும் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னரே, ஜனங்களுடைய உரிமைக்காகப் பரிந்து பேசியிருக்கிறார்கள். சுதந்திரமாகவும் சகோதர வாஞ்சையுடனும் எல்லா ஜனங்களும் வாழக்கூடிய ஓரு யுகம் ஏற்பட வேண்டுமென்றும், அந்த யுகத்தில் ஜனங்களே அரசாங்க நிருவாகத்தை ஏற்று நடத்த வேண்டுமென்றும் கன்பூஷியஸ் கோரினார். மென்ஷியஸ் என்ற அறிஞர், ஒரு தேசத்திலுள்ள ஜனங்களையும் பொருள்களையும் பாகுபடுத்திப் பேசுகிறபோது, முதல் வரிசையில் ஜனங்களையும் இரண்டாவது வரிசையில் தெய்வங்களையும் தானியங்களையும் மூன்றாவது வரிசையில் அரசர்களையும் வைத்துப் பேசினார். ‘ஜனங்கள் எப்படிப் பார்க்கி றார்களோ, அப்படியே தெய்வலோகமும் பார்க்கிறது. ஜனங்கள் எப்படிக் கேட்கறார்களோ அப்படியே தெய்வலோகமும் கேட்கிறது’ என்பது மென்ஷியசின் திருவாசகம். இவர், தம்முடைய காலத்திலேயே அரசர்கள் அவசியம் தேவைப் பட்டவர்களில்லை யென்றும், அப்படி அவர்களுடைய தேவை நீடித்து நில்லா தென்றும், யார் ஜனங்களுக்குச் சந்தோஷத்தையளிக்கிறார்களோ அவர்கள்தாம் உண்மையான அரசர்களென்றும், ஜனங்கள் விஷயத்தில் ஒழுக்கத் தவறாகவும் கொடூரமாகவும் யார் நடக்கிறார் களோ அவர்களை எல்லாரும் எதிர்த்துப் போராடவேண்டு மென்றும் தெளிவாகக் கூறியிருக் கிறார். இதனால் தெரிவதென்ன வென்றால், சீனா, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னரேயே, ஜனநாயகத்தைப் பற்றிச் சிந்தனை செய்திருக்கிறது; ஆனால் அதனைச் செயலில் கொணரவில்லை. ஜனநாயகம் என்றால் அஃது ஒரு கற்பனை உலகம் என்று பலரும் அப்பொழுது கருதினர். அந்நியர்கள், சீனர்களைப் பற்றியும் சீன நாகரிகத்தைப் பற்றியும் சரியாகத் தெரிந்து கொள்ளாமையினால், சீனாவுக்கு ஜனநாயக அரசியல் முறை தகுதியுடையதல்லவென்று அபிப்பிராயப் படுகிறார்கள். அந்நிய நாடுகளுக்குச் சென்று கல்வி பயின்ற சீன இளைஞர்கள் கூட, சீனா, ஜனநாயக ஆட்சிமுறைக்குத் தகுதியுடை யதாயில்லை யென்று இதே ஸ்வரத்தில் பாடுகிறார்கள். இவை யெல்லாம் தவறான அபிப்பிராயங்கள். சீனாவின் சரித்திரத்தை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஜனநாயகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்ததற்கு ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்னரேயே, சீனா, இந்த ஜனநாயகப் பிரச்னையில் அநேக முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த முன்னேற்றம், பேச்சளவில் இருந்ததென்பது உண்மைதான். ஆனால் ஐரோப் பாவிலும் அமெரிக்காவிலும் குடியரசுகள் ஏற்பட்டுச் சுமார் நூற்றைம்பது வருஷ காலமாகத்தான் ஜனநாயக முறை அனுஷ் டானத்தில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதே ஜனநாயகத்தைப் பற்றி நமது முன்னோர்கள் கனவு கண்டு கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சந்ததியாராகிய நாம், தற்கால உலகப் போக்கை அனுசரித்து நமது மூத்தோர்களின் எண்ணங்களை - கனவுகளை - அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டாமா? நமது ஜனங்கள் சந்தோஷத்தை அனுபவிக்குமாறு செய்ய வேண்டாமா? இங்கிலாந்தில் தான் முதன் முதல் ஜனநாயகம் நடைமுறையில் வந்தது. சீனாவில் மிங் ராஜ வமிசம் வீழ்ந்து, மஞ்சூ அரச பரம்பரை ஏற்பட்ட காலத்தில் (அதாவது கி. பி. பதினேழாவது நூற்றாண்டின் மத்தியில்) இங்கிலாந்தில் கிராம்வெல்1 என்ற ஒருவனுடைய தலைமையின் கீழ் ஜனங்கள் ஒன்று கூடிப் புரட்சி செய்தார்கள். இதன் விளைவு என்ன? முதலாவது சார்லஸ்2 மன்னன் மரண தண்டனை விதிக்கப்பட்டான். இந்தச் செயல், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஓர் அதிர்ச்சியை உண்டு பண்ணியது. இந்த விபரீதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அரசனுடைய மரணத் திற்குக் காரணமாயிருந்தவர்கள் துரோகிகளாகவும் கலகக்காரர்க ளாகவும் கருதப்பட வேண்டுமென்று ஜனங்கள் கூச்ச லிட்டார்கள். இந்தக் காலத்தில் எல்லா நாடுகளிலும் அரசர்களை ரகசிய மாகக் கொலை செய்வது சகஜமான காரியமாக நடைபெற்று வந்தபோதி லும் சார்லஸ் மன்னனைத் தூக்கிலிட்டது பகிரங்கமாகவே நடை பெற்றது. சார்லஸ் மன்னன், தேசத்தினிடத்திலும் ஜனங்களிடத் திலும் விசுவாசமில்லாமல் நடந்து கொண்டானென்று பகிரங்க மாகவே குற்றஞ் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டான். இதனால் ஐரோப்பாவிலுள்ளவர்கள், ஜனங்களுடைய உரிமைகளை இங்கிலீஷ் காரர்களே காப்பாற்றப் போகிறார்களென்றும், ஜனநாயக சக்தி யானது இனி அதிவேகமாக முன்னேறக் கூடுமென்றும் கருதினார்கள். ஆனால் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக, ஆங்கிலேயர், ஜனநாயகத்தை விட சுயேச்சாதிகாரத்தையே அதிகமாக விரும்பி னார்கள். சார்லஸ் மன்னன் இறந்துவிட்ட போதிலும், வேறோர் அரசனை ஆங்கிலேயர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். மேற்படி சார்லஸ் மன்னன் இறந்து போன பத்து வருஷத்திற்குள் இரண் டாவது சார்லஸ்3 மன்னன் சிங்காதனத்தில் ஏற்றுவிக்கப்பட்டான். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது. இந்த இருநூறு வருஷங்களுக்கு முன்னர், ஆங்கிலேயர்கள், ஒரு சிறிது காலம் ஜனநாயக ஆட்சி முறையைச் சுவைத்தார்கள்; மீண்டும் சுயேச்சாதிகாரம் தலை தூக்கிவிட்டது. இதற்கு நூறு வருஷங்கள் கழித்து, இங்கிலாந்தைச் சேர்ந் திருந்த குடியேற்ற நாடுகள், அதனின்றும் விலகிப் போய் சுதந்திரக் கொடி தூக்கி விட்டன. இதைத்தான் அமெரிக்கப் புரட்சி1 என்பார்கள். இந்தப் புரட்சியின் விளைவாக அமெரிக்க சமஷ்டி அரசு ஏற்பட்டது. அமெரிக்கா ஒன்றுதான், சென்ற நூற்றைம்பது வருஷ காலத்தில், ஜனநாயக தத்துவத்தை அனுஷ்டானத்தில் கொண்டு காட்டியிருக்கிறது. அமெரிக்கப் புரட்சி ஏற்பட்ட பத்து வருஷங் கழித்து பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டது.2 அப்பொழுது பிரான்சின் நிலைமை எப்படி இருந்தது? பதினான்காவது லூயி மன்னன்3 அரசாங்க அதிகாரங்களனைத்தையும் தானே கைப்பற்றிக் கொண்டு சுயேச்சாதிகாரமாகக் காரியங்களை நடத்தி வந்தான். இதனால் பிரெஞ்சு ஜனங்கள் எண்ணிறந்த கஷ்டங்களை அனுப வித்தார்கள். லூயி மன்னனுக்குப் பின்னர் பட்டத்துக்கு வந்த அவனுடைய சந்ததியார், ஜனங்களுக்கு அதிகமான கொடுமைகளை இழைத்தனர். இந்தக் கொடுமைகளைச் சகிக்க முடியாமல் ஜனங்கள் கலகத்திற்குக் கிளம்பினர். அப்பொழுது சிங்காதனத்தில் வீற்றிருந்த பதினாறாவது லூயி4 மன்னனைக் கொலை செய்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மற்ற ஐரோப்பிய நாடுகள், பிரெஞ்சு மன்ன னுடைய கொலைக்குப் பழி தீர்க்க வேண்டுமென்ற நோக்கத்துடன் யுத்தந் தொடுத்தன. சுமார் பத்து வருஷ காலம் யுத்தம் நடை பெற்றது. கடைசியில் புரட்சி தோல்வியடைந்தது. முடியாட்சி மீண்டும் தலை தூக்கியது. ஆனால் இந்தக் காலத்திலிருந்து பிரெஞ்சு ஜனங்களிடையே ஜனநாயக எண்ணங்கள் துளிர்க்க ஆரம்பித்தன. ஜனநாயகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற யாருக்கும், பிரெஞ்சு அறிஞனான ரூஸ்ஸோ5 என்பவனைப் பற்றி நன்கு தெரியும். இவன் ஜனங்களுக்குப் பூரண உரிமைகள் இருக்க வேண்டு மென்ற கொள்கை யுடையவன். இவன் கிளத்திய ஜனநாயக தத்து வங்கள்தான் பிரெஞ்சுப் புரட்சிக்கு விதைபோட்டன. இவனுடைய ஆராய்ச்சியானது சமுதாய ஒப்பந்தம்1 என்ற ஒரு சிறந்த நூலாகப் பரிணமித்தது. இந்த நூலின் முக்கிய கருத்துக்கள் வருமாறு:- மனிதன், சுதந்திர உரிமையோடும் சமத்துவ உரிமையோடுமே பிறக்கிறான். இந்த உரிமைகள் அவனுக்கு இயற்கையால் அளிக்கப் பட்டவை. ஆனால் அவன் இவற்றை எறிந்து விட்டான். ராஜ்யாதிகார உரிமைகள், ஜனங்களுக்கு இயற்கையிலேயே அளிக்கப்பட்டிருக் கின்றன. ரூஸ்ஸோவின் கருத்து இப்படியிருந்தாலும், சரித்திரத்தை நாம் ஆராய்ந்து பார்க்கிறபோது, ஜனநாயகம் என்பது திடீரென்று தெய்வலோகத்திலிருந்து வந்து விழுந்த ஒரு பொருளல்ல வென்பதும். இடம் பொருள் ஏவலுக் கிசைந்தாற்போல் ஜனங்கள் இந்த ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடினார்களென்பதும் நன்கு புலப்படும். சரித்திரக் கண்கொண்டு பார்த்தால், ரூஸ்ஸோவின் கொள்கைக்கு அஸ்திவார மில்லை யென்பது தெரியும். ஆனால், ஜனநாயகத்திற்கு விரோதமா யிருக்கப் பட்டவர்கள், தங்கள் கட்சிக்குச் சாதகமாக ரூஸ்ஸோவின் வாதங்களை உபயோகிக் கின்றனர். ஆனால் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் இந்த வாதங்களில் தலையிட வேண்டாம். உலக தத்துவங்கள் அனைத்தும் சில உண்மைகளை அடிப்படையாகக் கொண்டே எழுந்தன; கொள்கைகளைக் கொண்டல்ல. ரூஸ்ஸோவின் கொள்கைகள் சரித்திரப் போக்குக்கு முரண் பட்டவையாயிருந்தபோதிலும், இவற்றை ஏன் ஜனங்கள் வரவேற் றார்கள்? சமுதாய ஒப்பந்தம் என்ற ஒரு நூலை அவனால் எப்படி எழுத முடிந்தது? இந்த மாதிரி சந்தேகங்கள் சில பேருக்கு உண்டா கலாம். ரூஸ்ஸோ, தன்காலத்து ஜனங்களின் உணர்ச்சியையும் மனப்பான்மையையும் நன்கு அறிந்து கொண்டான். ஜனங் களுடைய உரிமைகளுக்காக வாதாடினான். ஜனங்களிடத்திலே அந்தக் காலத்தில் பரவியிருந்த ஜனநாயக எண்ணமானது, இவனுடைய கொள்கைகளுக்கு நல்வரவு கொடுத்தது. இன்னொரு விஷயத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டும். அரசியல் தத்துவங் களைப் பற்றி நடைபெற்று வந்திருக்கிற ஆராய்ச்சிகளிலே, ரூஸ்ஸோ வின் கொள்கைக்கு எப்பொழுதும் ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு. மானிட சமூகத்தின் சரித்திரத்தை நாம் ஆராய்ந்து பார்க்கை யில் அந்தந்தக் காலத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் தகுந்தாற்போல் ஆட்சி முறையும் மாறியிருக்கிற தென்பது நன்கு தெரியும். ஆகையால் தற்போதைய காலத்திற்கு ஜனநாயக ஆட்சி முறைதான் சிறந்ததென்று அறிஞர்கள் கருதுகிறார்கள். இதனாலேயே சீனாவி லுள்ள புரட்சியாளர் களாகிய நாம், சீனாவில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டுமென்று கூறினோம். இந்த மாதிரி நாம் சொல் வதையே அந்நியர்கள் மட்டுமல்ல, நம்மவர்களும் ஆட்சேபித் தார்கள். சீனர் புரட்சி இயக்கம் ஆரம்ப தசையிலிருந்துபோது ஐரோப்பாவில் யதேச்சாதிகார அரசாங்கங்கள் பல நிலவியிருந்தன. இதனாலேயே சீனாவில் புரட்சி இயக்கம் வெற்றி பெறாமல் போய்விட்டது. தவிர, சீனாவில் முடியாட்சி ஏற்பட இருந்தது. ஆனால் ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு ஜெர்மனியிலும் ருஷ்யா விலும் முடியாட்சிகள் வீழ்ந்து பட்டன. அது மட்டுமல்ல, அவை குடியரசு நாடுகளும் ஆயின. இதனால் இப்பொழுது உலகத்தின் எண்ணமானது ஜனநாயக பாதையில் போய்க் கொண்டிருக்கிற தென்பது நன்கு புலனாகிறது. ஜனநாயகத் தத்துவத்தை எதிர்த்து நின்ற சீன அறிஞர்களில் பலர் ‘மஞ்சூ ஏகாதிபத்தியத்தை வீழ்த்தக் கூடிய சக்தி உங்களிடம் என்ன இருக்கிறது’ என்று புரட்சிக் கட்சியைச் சேர்ந்த நம்மைப் பார்த்துக் கேட்டனர். 1911ஆம் வருஷம், உலகத்தின் பல பாகங்களிலும் ஏற்பட்ட மாறுதல்களின் எதிரொலி போல் ஒரே தாக்குதலில் அந்த மஞ்சூ ஏகாதிபத்தியம் வீழ்ந்து போயிற்று. இப்படி உலகத்தின் பல பாகங்களிலும் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களின் விளைவாகத்தான் நமக்கடுத்தாற் போலுள்ள மங்கோலியாவில் கூட ஜனநாயக இயக்கம் வலுத்து வருகிறது. திபேத்திலும் இந்தச் சலசலப்பு ஏற்படாமல் இருக்கப் போவதில்லை. ஐரோப்பாவிலேகூட இப்பொழுது யதேச்சாதிகார சக்தி வலு விழந்து நிற்பதை நீங்கள் நன்றாகப் பார்க்கலாம். இவைகளி னின்றும் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால் தற்போதைய காலம் ஜனநாயக காலம் என்பதாகும். நமது புரட்சியில் ஜனநாயகத்தை முக்கிய அமிசமாகக் கொண்டதன் முதல் காரணம் என்னவென்றால், உலக சக்திகளோடு நாமும் ஒன்று சேர்ந்து போகவேண்டுமென்பது, சீனாவில் புராதன காலத்திலிருந்தே முக்கியஸ்தர்களாயிருந்தவர்களுக்கு ஒரே ஓர் ஆசை இருந்தது. அதாவது ஒவ்வொருவரும் தாங்களே அரசராக வந்துவிட வேண்டுமென்ற எண்ணமுடையவர்களாயிருந்திருக்கி றார்கள். இந்த அதிகார மோகம் ஒவ்வொருவரையும் பிடித்து ஆட்டி வந்திருக்கிறது. நான் புரட்சி இயக்கத்தை ஆரம்பித்தவுடனே நமக்கு ஆதரவு தருவதாகச் சொல்லி நமது கட்சியில் வந்து சேர்ந்த பத்து பேரில் ஆறு அல்லது ஏழு பேர் ஏகாதிபத்திய வாதிகளாகவே இருந்தார்கள். நமது புரட்சியின் நோக்கம் ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவது மட்டுமல்ல, குடியரசை ஏற்படுத்துவது மாகும் என்று நான் அவர்களுக்கு எடுத்துச் சொன்ன பிறகுதான் அவர்கள் தங்கள் சுயநலக் கொள்கையை விட்டார்கள். இப்பொழுதுகூட, குடியரசு ஏற்பட்ட பதின்மூன்றாவது வருஷத்தில் கூட, நம்மிலே சிலருக்கு அரசராக வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. இதனாலேதான் நமக்குள்ளே கட்சிச் சண்டைகள் ஏற்படுகின்றன. நாம் புரட்சி இயக்கத்தைப் பகிரங்கப் படுத்தியபோது பிரஜா உரிமையை அஸ்திவாரமாகக் கொண்டுதான் நமது குடியரசு ஸ்தாபிக்கப் படும் என்று கூறினேன். அப்படிக் கூறியதற்குக் காரணம் என்ன வென்றால், ஏகாதிபத்திய ஆசைகளினால் ஒருவருக் கொருவர் போட்டி போடக் கூடாதென்பதுதான். ஆனால் அந்தோ, நம்மிலே இன்னும் சில மூடர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் திருத்தவே முடியாது. நமது குடியரசானது ஊர்ஜிதமாகி ஸ்திரப் பட்டு விட்டால் அப்பொழுது யார் அரசராயிருப்பர் என்று இன்னும் சிலர் கேட்கின்றனர். நமது நாற்பது கோடி ஜனங்களும் அரசர்கள்தானே என்று நான் அவர்களுக்குப் பதில் சொல்லுகிறேன் இங்ஙனம் ஜனாதிக்கத்தை அஸ்திவாரமாகக் கொண்டு அரசாங்க அமைப்பை நாம ஏற்படுத்தி விட்டோமானால், பின்னர் அதிகார மோகம் யாரையும் பிடித்து அல்லல் படுத்தாது. சீனாவின் சரித்திரத்தை நீங்கள் ஆராய்ந்து பார்த்தீர்களானால் ஒரு வமிசாவளி மாறி மற்றொரு வமிசாவளி சிங்காதனத்தைக் கைப்பற்றிக் கொள்ளுகிற போராட்டம் நடைபெற்றிருப்பதை நன்றாகப் பார்க்கலாம். அந்நிய நாடுகளில் மதத்திற்காகவும், சுதந்திரத்திற் காகவும் யுத்தங்கள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற யுத்த மெல்லாம் சிங்காதனத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்குத்தான். இந்த மாதிரியான போராட்டங்கள் இனியும் நடை பெறாமலிருக்க வேண்டு மென்பதற்காகவே, குடியரசு ஸ்தாபிதத்தை புரட்சியின் லட்சியமாக நாம் கொண்டோம். இப்பொழுது குடியரசு ஏற்பட்டு விட்டது. இனியும் சிலர், தாங்கள் அரசராக வேண்டுமென்று ஆசை கொண்டு சூழ்ச்சி செய்யலாம். முற்காலத்தில், அதிகமான படை பலத்தைக் கொண்டவர்கள் அரசர்களாகவும், குறைவான படை பலத்தைக் கொண்டவர்கள் பிரபுக்களாகவும் ஆக வேண்டு மென்று ஆசைப்பட்டார்கள். இப்பொழுது இந்த மாதிரியான எண்ணங்கள் குறைந்துவருகின்றன வென்று கருதுகிறேன். ஏனென்றால் தற்போதைய ராணுவத் தலைவர்களிற் பலர் அரசர்களாகவோ பிரபுக்களாகவோ ஆக வேண்டுமென்ற நோக்க முடையவர்களல்ல. இதனால் நாம் ஓரளவு முன்னேறியிருக்கிறோ மென்பது தெரிய வில்லையா? 8. சுதந்திரம் (16 - 3 - 1924) பிற நாட்டறிஞர்கள், ஜனநாயகத்தோடு சுதந்திரத்தையும் சேர்த்தே பேசுகிறார்கள். அப்படியே நூல்கள் பலவும் வெளியாகி யிருக்கின்றன. ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டு களில் சுதந்திரத்திற்காகவே போராடி யிருக்கிறார்கள். இதன் பயனாக இப்பொழுதுதான், ஜனநாயகம் என்பது துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது. நமது புரட்சிக்கு, ஜனங் களின் தேசீயம், ஜனங்களின் ஆதிக்கம், ஜனங்களின் வாழ்க்கை என்று சொல்லப்பட்ட மின் - த்ஸு, மின் - ஷுவான், மின் - ஷெங்க் என்னும் வாசகங்கள் எப்படி அடிப்படையாயிருக்கின்றனவோ, அப்படியே பிரெஞ்சுப் புரட்சிக்குச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் அடிப்படையாயிருந்தன. ஜனாதிக்கத்தை அடிப்படை யாகக் கொண்டுதான், இந்தச் சுதந்திரம் , சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் இருக்கின்றன. அல்லது இந்தச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றிலிருந்தும் ஜனாதிக்கம் பிறக்கிறதென்று சொல்லலாம். எனவே, ஜனநாயகத்தைப்பற்றி நாம் வாதிக்கிற போது, இந்த வாசகத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் நடைபெற்றிருக்கிற போராட்டமெல்லாம் இந்தச் சுதந்திரத்திற் காகத்தான். இதனால்தான் மேனாட்டு அறிஞர்கள் இந்தச் சுதந்திரத்தை ஒரு முக்கிய விஷயமாகக் கருதுகிறார்கள். இதைப் பற்றி ஆராய்ச்சியும் செய்கிறார்கள். ஆனால் இந்த வாசகம், சீனா வுக்குக் கொண்டு வரப்பட்ட பிறகு ஒரு சில அறிஞர்கள்தான் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். சாதாரண சீன ஜனங்களைப் போய்க் கேட்டால், அவர்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்பதே தெரியாது. மேனாடுகளுக்குச் சென்று கல்வி பயின்று வந்த இளைஞர்களுக்குக்கூட சுதந்திரத்தைப் பற்றிச் சரியாகத் தெரியாது. இதனால் அந்நியர்கள் சீன நாகரிகம் மிகவும் மட்டமானதென்றும், சீனர்களுக்குச் சரியான சிந்தனா சக்தி கிடையாதென்றும் கூறுவதோடு சீனர்கள் மணல் மூட்டை மாதிரி என்றும் சொல்லி விடுகிறார்கள். சீனர்கள் மணல் மூட்டை மாதிரி ஒற்றுமையில்லாமலிருக் கிறார்கள் என்று அந்நியர்கள் கூறுவதன் அர்த்த மென்ன? ஒவ்வொரு வரும் அவரவர் இஷ்டப்படி காரியங்களைச் செய்வதனாலும், வாழ்க்கையின் எல்லா அமிசங்களிலும் சுதந்திரமாயிருப்பதனாலும், சீனாவை ஒரு மணல் மூட்டை யென்று சொல்லி விடுவதா? கையிலே ஒரு பிடி மணலை எடுத்துக் கொள்ளுங்கள். அஃது ஒன்று சேராமல் உதிர்ந்து போய் விடுகின்றது. ஆனால் அதனுடன் கொஞ்சம் சிமிட்டியைச் சேர்த்து விடுங்கள். அப்பொழுது பாறைமாதிரி கெட்டியாகப் போய்விடுகிறது. அதில் மணலுக்கு எவ்வித சுதந்திரமு மில்லை. மணலையும் பாறையையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கிற போது, மணலின் சேர்க்கைதான் பாறை என்பது நன்கு தெரிய வரும். ஆனால் மணலே பாறையாகக் கெட்டிப்பட்டு விட்ட பிறகு, மணலானது அப்படியும் இப்படியும் அசைய முடிகிறதில்லை. இப்படியே சுதந்திரம் என்றால் என்ன வென்று நாம் பார்க்கிறபோது, ஒழுங்குபட்ட ஒரு வரம்புக்குள், இஷ்டப்படி நடந்து கொள்ளும் உரிமைக்குத்தான் சுதந்திரம் என்று பெயர். சீன பாஷையில் இந்தக் கருத்தைத் தெரிவிக்கக்கூடிய ஒரு பதம் இல்லையாதலினால், சீனர்களுக்கு இந்தச் சுதந்திரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதென்று அந்நியர்கள் அபிப்பிராயப்பட்டு விட்டார்கள். ஆனால் சீனர்கள் மணல் மூட்டை என்று சொல்வதனால், அவர்களுக்கு அதிகமான சுதந்திரம் இருக்கிறதென்று அர்த்தப்பட வில்லையா? மேனாட்டார் கருத்துப்படி ஒற்றுமையாயிருந்தால் நாம் மணல் மூட்டை மாதிரி எப்படி இருக்க முடியும்? இந்த வாதமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது. மேனாட்டார் இந்தச் சுதந்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள். ‘சுதந்திரத்தைக் கொடு; அல்லது மரணத்தைக் கொடு’ என்பதுதான் அவர்களுடைய வாசகம். இந்தச் சுதந்திரத்திற்காக ஏராளமான ரத்தம் செலவழிக்கப்பட்டது. இந்தச் சுதந்திரப் போராட்டத்தின் விளைவுதான் ஜனநாயகம். இதுவே அறிஞர்களுடைய அபிப்பிராயம். ரோம ஏகாதிபத்தியமும், கிரேக்க ஏகாதிபத்தியமும் செழித் திருந்த காலத்திலேயே இந்த ஜனநாயகம் உதயமாகி விட்டது. மேற்படி இரண்டு ஏகாதிபத்தியங்களும் விழுந்துபட்ட பிறகு, இந்த வார்த்தையும் வழக்கொழிந்தது. சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக ஐரோப்பாவில் நடைபெற் றிருக்கிற போராட்டமெல்லாம், ஜனநாயகத்தை லட்சியமாகக் கொள்ளாமல் சுதந்திரத்தையே லட்சியமாகக் கொண்டிருக் கின்றன. பணஞ் சம்பாதிக்கப் புறப்படு’ என்று சொன்னால் சீனர்கள் எப்படிச் சுலபமாக அர்த்தம் புரிந்து கொள்கிறார்களோ, அப்படியே ஐரோப்பியர்களும் சுதந்திரம் என்றால் உடனே அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள். சீனர்களைப் பார்த்து ‘சுதந்திரத்திற்காக யுத்தஞ் செய்யுங்கள்’ என்று சொன்னால் அவர்களுக்கு அர்த்தம் புரியாது. ஆனால் ‘பணஞ் சம்பாதிக்கப் புறப்படுங்கள்’ என்று சொன்னால் ஏராளமான கூட்டம் உங்களைப் பின்தொடர்ந்து வரும். இதே மாதிரி தான் மேனாட்டிலும் சுதந்திர தேவதையை எல்லாரும் தொழுகிறார்கள். இங்ஙனம் ஐரோப்பியர்கள் சுதந்திரத்தைத் தெய்வமாகக் கொண்டாடுவதற்கும், சீனர்கள் பணத்தைத் தெய்வமாகக் கொண்டாடுவதற்கும் காரணமென்ன? சீனர்கள் பரம ஏழைகளாயிருப்பதனாலேயே அவர்கள் பணத்தை தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். வறுமையினின்று விடுதலையடைவ தென்பது துன்பத்தினின்று விடுதலை பெறுவதாகுமல்லவா? ஏழ்மைத்தனத்தினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்கள், பணக்காரர்களாவதெப்படி என்னும் விஷயத்தைப் பற்றி யாராவது பேசக் கேட்டுக் கொண்டிருப் பார்களானால், உடனே அவர்கள் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல் பணஞ் சம்பாதிக்கும் மார்க்கத்தில் இறங்கி விடுவார்களல்லவா? இங்ஙனமே, மேனாடுகளில் சுயேச்சாதிகாரம் மிகவும் வலுத்திருந்த படியால் அங்கு ஜனங்கள் சுதந்திரப் போராட்டத்தில் இறங்கினார்கள். ரோம ஏகாதிபத்தியம், முதலில் ஒரு முடியரசாக இருந்தது. பின்னர் ஒரு குடியரசாக மாறியது. இதற்குப் பிறகு வீழ்ந்து பட்டது. இதிலிருந்து சிறுராஜ்யங்கள் பல முளைத்தன. இதன் பிறகு நிலச்சுவான்தார்கள் ஆட்சி ஏற்பட்டது. பலமுள்ளவர்கள் அரசர்களானார்கள். இவர்களெல்லாரும் யதேச்சாதிகாரிகளாகவே இருந்தார்கள். இவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். இதனால்தான், போராடிச் சுதந்திரம் பெற வேண்டுமென்று தீர்மானித்தார்கள். சீனாவில் மன்னராதிக்கம் வலுத்திருந்த போதிலும் அவர்களுடைய சுயேச்சாதிகாரமானது ஜனங்களை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. தங்களுடைய சிங்காதனத்திற்கு எவ்வித ஆட்டமும் ஏற்படாதிருக்கிற வரையில், ஜனங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலா மென்கிற மாதிரியாகவே மன்னர்கள் இருந் தார்கள். ஜனங்களுடைய நலனைப் பற்றி அவர்கள் சிறிதுகூடக் கவலை கொள்ளவில்லை. இப்பொழுது சீனாவில் குடியரசு ஏற்பட்டு ஏறக்குறைய பதின்மூன்று வருஷங்களாகின்றன. இன்னும் நமது அரசாங்கம் ஒழுங்கு பட அமைய வில்லை. ஒழுங்கான நிருவாகத்தை ஏற்படுத்த நமக்கு அவகாசம் இல்லை. இதனாலேயே அரசாங்கத்திற்கும் ஜனங்களுக்கும் எவ்வித தொடர்பு இருக்க வேண்டுமென்பதைப் பற்றிச் சரியாக நாம் நிர்ணயிக்கக் கூடவில்லை. ஆனால் 1911ஆம் வருஷத்திற்கு முன்னர், மஞ்சூ பரம்பரை யினர் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் சீனாவின் நிலைமை என்னவா யிருந்தது? இதைப்பற்றிச் சிறிது கவனிப்போம். தேசம் பல மாகாணங் களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாகாணத் திற்கும் ஒவ்வொரு கவர்னர். இந்த கவர்னருக்குக் கீழ் ஜில்லா அதிகாரி. நகர அதிகாரி முதலியோர். இந்த அதிகாரிகளின் கீழ் மாஜிஸ்ட்ரேட்டுகள் முதலிய சில்லரை உத்தியோகஸ்தர்கள். மன்னருக்கும் பிரஜைகளுக்கும் எவ்வித நேரான தொடர்பும் இருக்கவில்லை. ஜனங்கள் தானியங்கள் மூலமாக வரி செலுத்துவ தோடு திருப்தி யடைந்து விட்டார்கள். இதனால் ஜனங்களுக்கு அரசியல் உணர்ச்சியே இல்லாமலிருந்தது. யார் சக்ரவர்த்தியா யிருக்கின்றனர் என்பதைப்பற்றி அவர்கள் கவலையே கொள்ள வில்லை. தங்களுடையவரியை செலுத்தியவுடன் தங்களுடைய கடமை முடிந்து விட்டதாகவே கருதினார்கள். மன்னர்களும், ஜனங்கள் ஒழுங்காக வரியைச் செலுத்துகிறார்களா வென்பதை மட்டும் பார்த்து கொண்டு மற்றப்படி ஜனங்களிஷ்டம் போல் வாழவும் இறந்து போகவும் விட்டு விட்டார்கள். இதனால் சீனாவில், ஜனங்கள் யதேச்சாதிகாரத்தினால் நேர்முகமாகப் பாதிக்கப்பட வில்லை யென்பது நன்கு தெரியவரும். இப்பொழுது நமது ராஜ்யம் பலவீனமடைந்து விட்டது. அந்நிய நாடுகளின் அரசியல், பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் நாம் வந்து விட்டோம் இந்த ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட நம்மால் முடியவில்லை. இப்பொழுது நமது செல்வம் குன்றி விட்டது. ஜனங்கள் மறை முகமான ஒரு கொடுங்கோலாதிக்கத்தினால் வறுமையுற்றுத் துன்பப்படுகிறார்கள். ஐரோப்பாவில் நிலவியிருந்த சுயேச்சாதிகாரம், வேறுமாதிரி. ரோம ஏகாதிபத்தியம் வீழ்ச்சியுற்ற காலத்திலிருந்து சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகள் வரையில் ஐரோப்பாவில் நிலவியிருந்த சுயேச்சாதி காரமானது வர வர முற்றிக் கொண்டே வந்தது. ஜனங்கள் சகிக்க முடியாத துன்பத்தை அனுபவித்தார்கள். அநேக விதமான சுதந்திரங்கள் அவர் களுக்கு மறுக்கப்பட்டன. சிறப்பாக எண்ணும் சுதந்திரம், பேசும் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், முதலியன ஜனங்களுக்கு இல்லாம லிருந்தன. ஆனால் ஐரோப்பாவைப் பொறுத்த மட்டில் இந்த நிர்ப்பந்தங்களெல்லாம் இறந்த கால சம்பவங்களாகி விட்டன. நடமாடும் சுதந்திரமில்லாமை என்பதைக் குறித்துச் சீனர் களாகிய நாம் சிறிது சொல்ல முடியும். எப்படியென்று கேளுங்கள். டச்சுக்காரருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் சொந்தமான குடியேற்ற நாடுகளில் சீனர்கள் சென்றால் அங்கு என்னென்ன விதமான நிர்ப்பந்தங்களுக்குட்படுத்தப் படுகிறார்களென்பது நமக்கு நன்கு தெரியும். உதாரணமாக ஜாவாவை எடுத்துக் கொள்ளுங்கள். அஃதொரு காலத்தில் சீனருக்குச் சொந்தமா யிருந்தது. இப்பொழுது டச்சுக்காரருக்குச் சொந்தமாயிருக்கிறது. அங்குச் செல்லும் ஒவ்வொரு சீன வியாபாரியும் அல்லது தொழிலாளியும், கப்பல், துறைமுகத்தில் நின்றவுடன் டச்சு போலீசாரால் பரிசோதிக்கப்பட்டு, உயரம், பருமன் முதலியவைகளை அளவெடுத்துக் கொண்டு, கைவிரல் அடையாளங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். பிறகுதான் கரையில் இறங்க முடியும். அப்படி இறங்கின பிறகு, பெயரைப் பதிவு செய்து கொள்வதோடு, ஓரிடத்திலிருந்து மற்றோ ரிடத்திற்குப் போக வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மேல் எங்கேயாவது வெளியே செல்வதென்றால் விசேஷ அனுமதிச்சீட்டு ஒன்று பெற்றுக் கொள்ள வேண்டும். கையில் விளக்கொன்று கொண்டு போக வேண்டும். தனி மனிதர்களுடைய சுதந்திரம் இங்ஙனம் கட்டுப் படுத்தப்படும் வழக்கம் ஐரோப்பாவில் நீண்ட காலமாக அனுஷ்டானத்தில் இருந்து வந்திருக்கிறது. இந்த வழக்கத்தை இப்பொழுது டச்சுக்காரர்கள், சீனர்கள் விஷயத்தில் அனுஷ்டித்துக் காட்டு கிறார்கள். இந்த ஓர் உதாரணத்தைக் கொண்டு, ஐரோப்பாவில் பழைய காலத்தச் சுயேச்சாதிகாரம் எப்படி இருந்திருக்குமென்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். மனிதர் களின் நடமாட்டச் சுதந்திரம் இங்ஙனம் கட்டுப்படுத்தப்பட்டது போலவே, எண்ணத்தின் சுதந்திரம், மத நம்பிக்கையின் சுதந்திரம், வியாபார சுதந்திரம் முதலியவைகளும் கட்டுப்படுத்தப்பட்டன. உதாரணமாக, குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் ஜனங்கள், இன்ன விதமான மதத்தைத்தான் அனுஷ்டிக்க வேண்டு மென்று சொன்னால் ஜனங்களுடைய நிலைமை எவ்வளவு பரிதபிக்கத்தக்க தாயிருக்கு மென்பதைச் சிறிது ஊகித்துப் பாருங்கள். இந்தவிதமான சங்கடங்கள் பலவற்றை ஐரோப்பிய ஜனங்கள் அனுபவித்திருக் கிறார்கள். இதனால்தான், சுதந்திரப் போராட்டமென்றால் அதில் அவர்கள் உடனே துள்ளிக் குதிக்கிறார்கள். ஐரோப்பாவில் புரட்சி எண்ணங்கள் இந்த விதமாகவே ஆரம்பமாயின. ஐரோப்பாவில் ஏற்பட்ட புரட்சிகளெல்லாம் சுதந்திரத்தை முன்னிட்டுத்தான். இந்தச் சுதந்திரத்திற்காக வரம்பின்றி ரத்த ஆறு ஓடியிருக்கிறது; எண்ணிறந்த உயிர்களும் குடும்பங்களும் பலி வாங்கப் பட்டிருக்கின்றன. இதனால் தான், சுதந்திரம் பெற்றவுடன் ஜனங்கள் அதனை ஒரு தெய்வமாகத் தொழுகிறார்கள். இந்தச் சுதந்திர எண்ணமே, சீனாவிலும் சமீபகாலத்தில் புகுத்தப்பட்டிருக் கிறது. இதனால்தான் நம்மவரிலும் பலர் சுதந்திரத்திற்காகச் சண்டை போடவேண்டுமென்று சொல்லுகிறார்கள். மேனாட்டார், சுதந்திரம் பெற்ற பிறகு, அவர் களிடையில் ஜனநாயக எண்ணங்கள் வளரத் தொடங்கின. ஆகையால் ஜனநாயகத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அதற்கு அடிப்படையாயிருந்த சுதந்திரப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லதல்லவா? இங்கே சீனாவில் சுதந்திரத்திற்காகப் போராடவேண்டு மென்று சொல்லுகின்ற நம்மவர்கள், ஜனநாயகத்தைப் பற்றியோ சுதந்திரத்தைப் பற்றியோ பூரணமாக ஆராய்ச்சி செய்யாதவர்கள் என்பதே என் அபிப்பிராயம். இதனால்தான் இவர்களை, ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்’ என்று நான் சொல்லு கிறேன். ஆழ்ந்த கருத்துடன் தான், நமது புரட்சிக்கு அடிப்படை யான அமிசங்கள் ஸான் மின் சூயி’ என்ற மூன்று கொள்கைகளும் இருக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்திருக் கிறேன். பிரெஞ்சுப் புரட்சிக்குச் ‘சுதந்திரம்’ குறிக்கோளாயிருந்தது; நம்முடைய புரட்சிக்கு ‘ஜனங்களின் மூன்று கொள்கைகள்’ (ஸான் மின் சூயி) குறிக்கோளாயிருக்கின்றன. இந்தக் குறிக்கோளை நிர்ணயிக்கும் விஷயத்தில் நாம் பிறரைப் பின் பற்றவில்லை. நாம் ஒரு போராட்டத்தின் லட்சியத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டுமானால், அந்த லட்சியமானது, நமது தற்போதைய துன்பங் களினின்று பரிகாரந் தேடிக் கொடுப்பதாயிருக்க வேண்டும். அப்பொழுது தான் இந்தப போராட்டத்தில் எல்லா ஜனங்களும் கலந்து கொள்வார்கள். ஐரோப்பாவிலுள்ள ஜனங்கள் சுயேச் சாதிகாரத்தினால் மிகவும் துன்புற்றார்கள். எனவே, சுதந்திரக் கொடி தூக்கப்பட்டவுடனே, லட்சக் கணக்கான மக்கள் ஒரே மனத்துடன் அந்தக் கொடியின் கீழ்ப்போய்ச் சேர்ந்தார்கள். ஆனால் சீனாவி லுள்ள ஜனங்கள், சுயேச்சாதிகாரம் காரணமாக, மேனாட்டாரைப் போல் அவ்வளவு கஷ்டப்படவில்லை. இந்த நிலைமையில் நாம் சுதந்திரத்தைப் பற்றிப் பேசனோமானால், ஜனங்கள் கவனிக்கவே மாட்டார்கள். அதற்குப் பதிலாக ‘எல்லாரும் பணம் குவிக்க வாருங்கள்’ என்று சொன்னால் அனைவரும் வருவார்கள். நமது புரட்சிக்கு அடிப்படையாக அமைந்திருக்கிற ‘ஜனங்களின் மூன்று கொள்கைகள்’ பணம் சேகரிக்கும் மார்க்கத்தைத் தேடுவது போலத்தான். அப்படியானால் பணம் சேகரிப்ப தென்பதைப் பற்றி நேரடியாகச் சொல்லி விடுவதுதானே என்று சிலர் கேட்கலாம். நியாயந்தான். ஆனால் பணம் சேகரிப்பது என்ற ஒரு கொள்கையிலே, ‘ஜனங்களின் மூன்று கொள்கைகள்’ அடங்கவில்லை. ஜனங்களின் மூன்று கொள்கை’களிலே பணம் சேகரிப்பது அடங்கியிருக்கிறது. ருஷ்யப் புரட்சிக்குப் பின்னர் பொதுவுடைமைத் தத்துவம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டதல்லவா, அது பணம் சம்பாதிப்பது மாதிரி. ஆனால் நமது புரட்சிக் கட்சியின் கொள்கையோ பணம் சம்பாதிப்பது முதலிய இன்னும் பல நோக்கங் களையும் கொண்டது. சீனாவைப் பற்றி அபிப்பிராயம் சொல்கிற ஐரோப்பிய நிபுணர்கள், சீன நாகரிகம் பிற்போக்கானதென்றும், நமது அரசியல் உணர்ச்சி பலவீன மடைந்திருக்கிறதென்றும், நமக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்பது கூடத் தெரியவில்லையென்றும் வாதம் செய்கிறார்கள். நாம் சுதந்திரத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதில்லை யாதலினால் நமக்கு அரசியல் உணர்ச்சி குறைவு என்று சொல்வது சரியான வாதமாகாது. ஐரோப்பியர்கள், சுதந்திரத்திற்கு அதிகமான மதிப்புக் கொடுத்திருப்பது உண்மையானால் அவர்கள் சீனர்களை ஏன் மணல் மூட்டை என்று சொல்ல வேண்டும்? ஐரோப்பியர்கள், சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்த காலத்தில், அந்தச் சுதந்திரத்தைப் பற்றி அவர்கள் உயர்வான கருத்துக் கொண்டிருந் தார்கள். ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு, அந்தச் சுதந்திரத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்து பலவீனமடைந்து விட்டது. இப்பொழுது ஐரோப்பாவில் சுதந்திரக் கொடி தூக்கப்பட்டால், இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஜனங்களுக்கு இருந்த உற்சாகம் இராது என்று கருதுகிறேன். மற்றும், இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர். சுதந்திரத்திற்காக எந்தப் புரட்சி முறை கையாளப்பட்டதோ அந்த முறையை இப்பொழுது கையாள முடியாது. ஐரோப்பியர்கள், போராடிச் சுதந்திரம் பெற்ற பிறகு, ஒவ்வொருவரும் தனிப் பட்டவர்களுடைய சுதந்திரத்தை மீறி நடக்கலானார்கள். இதனால் அநேக துன்பங்கள் விளைந்தன. இதனால்தான் ஆங்கிலேயே அறிஞனாகிய ஜான் ஸ்டூவர்ட் மில்1 என்பவன், மற்றவர்களுடைய சுதந்திரத்தைப் பாதிக்காத சுதந்திரந் தான் உண்மையான சுதந்திரம் என்று கூறினான். இதன் பிறகுதான் மேனாட்டில் சுதந்திரம் என்பது ஒரு வரம்புக்குட்படுத்தப்பட்டது. சீனர்களுக்குச் சுதந்திரம் என்றால் இன்னதென்று தெரியா தென்றும், ஆனால் அதே சமயத்தில் அவர்கள் கட்டுவிட்ட மணல் மூட்டை மாதிரி இருக்கிறார்களென்றும் சொல்வது முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. சீனர்கள் உதிரி மணலாயிருக்கிறார் களென்றால் அவர்கள் ஏற்கனவே சுதந்திரத்தையடைந்து விட்டார் களென்று அர்த்தம் உண்டாக வில்லையா? அப்படி நாம் உதிரி மணல் போலில்லாமல் தண்ணீரும் சிமிட்டியும் கலக்க விட்டு அந்த உதிரி மணலைப் பாறையாக ஆக்கி விடுவோமானால், நாம் சுதந்திர மற்றவர்களாக வல்லவோ ஆகி விடுவோம்? இறுகிப் போன மணல் அப்படியும் இப்படியும் அசைய முடியுமா? இதில் சங்கடமான விஷயமென்ன வென்றால், சீனர்கள் சுதந்திரமில்லாமல் கஷ்டப்பட வில்லை; சுதந்திரம் என்பதற்குச் சரியான சீன வார்த்தையில்லாமல் தான் கஷ்டப்படுகிறார்கள். இதனால்தான் அவர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியில்லையென்று சொல்லப்படுகிறது. ஆனால் அரசாங்கத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? சீனர்கள் மணல் மூட்டை, ஒற்றுமையின்றி இருக்கிறார்களென்று சொன்னால் அவர்கள் எவ்வளவு சுதந்திர முள்ளவர்களாயிருந்தார்களென்பதை நாம் நன்கு உணர்கிறோம். இந்தச் சுதந்திரம் நமக்கு மிகவும் அதிகமாயிருந்த தினாலேயே, நாம் இதைப் பற்றி அதிக கவனஞ் செலுத்தவில்லை. ஏன் அப்படி? இதை ஒரு சிறிய உதாரணத்தினால் விளக்குகிறேன். நமது அன்றாடத் தேவைகளில் மிகவும் முக்கியமானவை உணவும் உடையுமாகும். தினம் இரண்டு வேளை ஆகாரமும், வருஷத்திற்கு இரண்டு ஜதை சட்டையும் அவசியம் நமக்குத் தேவை யாயிருக்கின்றன. இந்த இரண்டையும்விட முக்கியமானதொன்று இருக்கிறது. ஆனால் மனிதன் இதைப்பற்றி அவ்வளவு விசேஷ சிரத்தை கொள்வதில்லை. தினம் இரண்டு வேளை ஆகாரம் கிடைக்கா விட்டால் இறந்துவிடப் போகிறோமே யென்றுதான் இவன் கவலைப்படுகிறானே தவிர, மற்றொரு முக்கியமான அமிசத்தைப் பற்றி இவன் கவலைப்படுவதே யில்லை. இந்த உணவை விட மற்றொரு விஷயம் பதினாயிரம் மடங்கு முக்கிய மானது. இதுதான் நல்ல காற்றைச் சுவாசிப்பது இதனை நாம் நேரடியாக அறிய வில்லையாதலால், இதன் முக்கியத்துவத்தை உணரவில்லை. தினத் திற்கு இரண்டு வேளை ஆகாரம் சாப்பிடாமல், ஒரு வேளை ஆகாரம் சாப்பிட்டாலும் நமது உயிர் போகாது. ஆனால் ஒரு நிமிஷத்திற்குப் பதினாறு தடவை மூச்சு விடா விட்டால் நமது பிராணன் போய் விடும். எனவே ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 23,040 தடவை மூச்சுவிட வேண்டியிருக்கிறது. அப்படி மூச்சு விட்டுக் கொண்டிருந்தால்தான் அவன் பிழைத்திருக்க முடியும். ஆகையால், உணவைக் காட்டிலும் மூச்சு விடுவது தான் முக்கியமென்று நான் சொல்வேன். ஆனால் இந்த முக்கியத்துவத்தை நாம் அறிவதில்லை. ஏனென்றால், நம்மைச் சுற்றிச் சுத்தமான காற்று ஏராளமாக வீசிக் கொண்டிருக்கிறது. நமது உழைப்பின்றியும் பணச் செலவின்றியும் தினந்தோறும் சுத்தமான காற்றை நாம் பெற்றுக் கொண்டிருக் கிறோம். சுலபமாக இது கிடைத்து விடுகிறபடியால், இதனுடைய அருமையை நாம் அறிவதில்லை. ஆனால் ஆகாரத்திற்காக உழைக்கிறோம்; பணச் செலவிடுகிறோம். இதனால் ஆகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதைப் போல, சீனர்கள் அதிகமான சுதந்திரத்தைப் பெற்றிருந்தபடியால், அவர்கள் அதைப் பற்றிப் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஐரோப்பியர்களுக்கு இந்தச் சுதந்திரம் இல்லாதிருந்தபடியால், இதற்காக அவர்கள் அதிகமான போராட்டத்தை நடத்தினார்கள். சீனர்கள் எவ்வளவு சுதந்திரமுள்ளவர்களாக முற்காலத்தில் இருந்தார்கள் என்பதற்குப் புராதன காலத்துச் சீன சுதந்திர கீதமே சிறந்த சாட்சியாகும். சூரியோதய மானதும் நான் வேலை செய்கிறேன்; சூரியாஸ்தமனமானதும் நான் ஓய்வு கொள்கிறேன்; குடிநீருக்காகக் கிணறு தோண்டுகிறேன்; உணவுக்காக நிலம் பயிரிடுகிறேன்; மன்னர் பிரானின் அதிகாரம் என்னை என்ன செய்ய முடியும்? இந்த ஒரு பாட்டைக் கொண்டு பார்த்தால் சீனர்கள், பெயருக்குச் சுதந்திரமில்லாதவர்களாயிருந்தாலும் நூற்றாண்டுகள் கணக்காகச் சுதந்திரத்தை அனுபவித்து வந்தார்களென்பது நன்கு புலப்படும். ஜனநாயகமானது, சுதந்திரத்தினின்றுமே பிறப்பதால், அந்தச் சுதந்திரப் போராட்டத்தில் தலையிடுவதை முக்கிய லட்சியமாகக் கொண்டிருந்தனர் மேனாட்டார். ஆனால் இப்பொழுது இந்த உற்சாகம் குறைந்திருக்கிறது. இதனால் சுதந்திரத்திற்கு, நல்ல அமிசங்களும் கெட்ட அமிசங்களும் உண்டு என்பது நன்கு தெரிகிறது. அந்நியர்கள், சீனர்களை ஒரு மணல் மூட்டை என்று சொன்னால் அஃது உண்மையென்பதை நாம் ஏற்றுக்கொள்வோம். ஆனால் இந்த ஓர் ஆதாரத்தை வைத்துக்கொண்டு, சீனர்களுக்குச் சுதந்திரம் என்றால் என்ன வென்பது தெரியாது, அவர்களுக்கு அரசியல் உணர்ச்சியே கிடையாது என்று சொன்னால் அதை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏன் சீனா, ஒரு மணல் மூட்டை மாதிரி ஆகிவிட்டது? தனி மனிதர்களின் சுதந்திரம் அதிகப்பட் டிருந்தபடியால். இதனால் சீனப் புரட்சிக்கும் அந்நியப் புரட்சி களுக்கும், அடிப்படையிலேயே வித்தியாசம் உண்டு. எனவே நாம் அனுஷ்டிக்கிற முறைகளும் வித்தியாசப்பட வேண்டும். சீனாவிலே ஏன் புரட்சி ஏற்பட வேண்டுமென்று சிலர் கேட்கலாம். இதற்குச் சுருக்கமாக விடை கூற வேண்டுமானால், ஐரோப்பியப் புரட்சிகள் எந்த லட்சியத்தைக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டனவோ அதற்கு நேர்மாறான லட்சியத்தையே சீனப் புரட்சி கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எப்படி? சீனாவில், தனிப்பட்ட மனிதர்களுடைய சுதந்திரம் அதிகமாயிருக்கிறபடியால், சுதந்திரத்தின் தீய அமிசங் களெல்லாம் நன்கு வெளியாகின்றன. நமது நாட்டின் பள்ளிக்கூடங்களில் மட்டுமல்ல, நமது புரட்சிக் கட்சியில்கூட இந்தத் தீய அமிசங்கள் தலையெடுத்திருக்கின்றன. மஞ்சூ அரச பரம்பரையை வீழ்த்திவிட்ட பிறகு, நாளது வரையில் நாம் நிலையானதோர் அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாம லிருப்பதற்கு இந்தச் சுதந்திரத்தின் துஷ்பிரயோகந்தான் காரணம். யுவான் ஷி-காய்1 என்பவன் கையில் நமது கட்சி தோல்வி யுற்றுப் போனதற்கு இதுதான் காரணம். குடியரசு ஆரம்பித்த இரண்டாவது வருஷம் யுவான் ஷி-காய், பார்லிமெண்ட்டின் அங்கீகாரமில்லா மலே அந்நிய நாடுகளிலிருந்து ஏராளமான கடன் வாங்கிவிட்டான். பார்லிமெண்ட்டின் தலைவனாக நியமிக்கப்பட் டிருந்த ஸுங் ஷியோ-ஜென்1 என்பவனைக் கொல்வித்தான். குடியரசுக்கு என்னென்ன விதத்தில் கெடுதல் உண்டு பண்ணலாமோ அவை யெல்லாவற்றையும் உண்டு பண்ணினான். நான், எல்லா மாகாணங்களையும் புரட்சி செய்யும்படி தூண்டினேன். யுவான் ஷி-காயை தண்டிக்க வேண்டுமென்று சொன்னேன். ஆனால் நமது கட்சியிலுள்ள எல்லாரும் சுதந்திரத்தைப் பற்றி அதிகமாகப் பேசினார்கள். ஒற்றுமை என்பது இல்லாமலே போய்விட்டது. தென்மேற்கு மாகாணங்களில் ராணுவத்தைச் சேர்ந்த படைத் தலைவர்கள் முதல் சாதாரண போர் வீரர்கள் வரையில் எல்லாரும் தனி மனிதர்களின் சுதந்திரத்தைப் பற்றி அதிகமாகப் பேசினார்கள். யாரும் ஒற்றுமை யுடன் வேலை செய்யவில்லை. தனி மனிதர்களின் சுதந்திரத் தத்துவமானது, மாகாணங்களுக்குப் பரவியது. ஒவ்வொரு மாகாணமும் தன்னுடைய சுதந்திரத்தை வற்புறுத்தியதே தவிர, மற்ற மாகாணங்களுடன் ஒத்துழைக்க முன்வரவில்லை. 1911ஆம் வருஷத்துப் புரட்சிக்குப் பிறகு, தெற்குப் பிரதேசத்திலுள்ள மாகாணங்கள் சிறிதளவு உற்சாகத்தைக் காட்டின. ஆனால் இந்த உற்சாகம் மேலெழுந்த வாரியான உற்சாகந்தான். கட்சிக்குள் பல பிளவுகள் ஏற்பட்டிருந்தன. யுவான் ஷி-காயைப் பொறுத்த மட்டில் ஆறு படைகள் அவன் வசம் இருந்தன. இதனைக்கொண்டு அவன் புரட்சிக் கட்சியைத் தோல்வியடையச் செய்ய முடிந்தது. இதனால் என்ன தெரிகிறதென்றால், மற்றத்தேசங்களுக்குப் பொருந்துகிற ஒரு தத்துவம், சீனாவுக்குப் பொருந்தாது என்பதுதான். ஐரோப்பியர்கள், தனிப்பட்ட மனிதர்களுடைய சுதந்திரத்திற் காகப் புரட்சி நடத்தினார்கள். ஆனால் இன்று அந்தச் சுதந்திரத் திற்கு வேறு விதமான உபயோகம் ஏற்பட்டிருக்கிறது. அப்படி யானால் இப்பொழுது இந்தச் சுதந்திரத்தை எவ்வாறு பிரயோகிப்பது? ஒரு தனி மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கவேண்டுமென்று சொன்னால், நாம் கட்டு விட்ட மணல் மூட்டை மாதிரியாகிவிடுகி றோம். எப்படியும் தனி மனிதர்களுக்கு அதிக மான சுதந்திரம் கொடுக்கக் கூடாது. இந்தச் சுதந்திரத்தைத் தேசத்திற்குச் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். தனிப்பட்ட மனிதனுக்கு அத்து மீறிய சுதந்திரம் இருக்கக் கூடாது. ஆனால் ஒரு தேசத்திற்கு அதிகமான சுதந்திரம் இருக்க வேண்டும். சீனா சுதந்திர நாடாக இயங்கத் தொடங்கு மானால்தான் அது பலமுள்ள நாடாகப் பிரகாசிக்கும். அப்படித் தேசத்திற்குச் சுதந்திரம் சம்பாதிக்கத் தொடங்குமானால் தான் அது பலமுள்ள நாடாகப் பிரகாசிக்கும். அப்படித் தேசத் திற்குச் சுதந்திரம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டுமானால், ஒவ்வொருவரும் தங்கள் தங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்தைச் சிறிது தியாகம் செய்துதானாக வேண்டும். மாணாக்கர்கள், படிப்பிலேயே கவனஞ் செலுத்தி அறிவை விருத்தி செய்து கொள்வார்களானால், அப்பொழுதுதான் அவர்கள் தங்களுடைய சக்திகளின் துணைகொண்டு தேசத்திற்கு அதிகமான சேவை செய்ய முடியும். போர் வீரர்கள் தங்களுடைய சொந்த சுதந்திரங்களைத் தியாகஞ் செய்தால்தான், மேலதிகாரிகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க முடியும்; தங்களுடைய தேசபக்தியைச் செயலளவில் காட்டி, தேசத்திற்குச் சுதந்திரத்தைச் சம்பாதித்துக் கொடுக்க முடியும் மாணாக்கர்களும் போர் வீரர்களும், தனிப்பட்ட சுதந்திரத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்களானால் தன்னடக்கமற்ற செயல்கள் தான் நிகழும்; பள்ளிக்கூடங்களில் ஒழுங்கு இராது; ராணுவத்திலே கட்டுப்பாடு இராது. சீனா, ஏன் விடுதலை பெற வேண்டுமென்று விழைகிறது? மற்ற வல்லரசுகளின் ஆதிக்கத்தினால், சீனா, தனது தேசீய அந்தஸ்தை இழந்துவிட்டது. பர்மா, அன்னாம், கொரியா முதலிய நாடுகளை விடத் தாழ்ந்த அந்தஸ்தே இதற்கு ஏற்பட்டிருக்கிறது. இதர நாடுகள் ஏதோ ஓர் எஜமானனுக்குக் கட்டுப்பட்டவையாயிருக்கின்றன. ஆனால் சீனாவோ எல்லாருக்கும் அடிமையாயிருக்கிறது. உண்மை யில் நாம் பத்து எஜமானர்களுக்கு அடிமைகளாயிருக்கிறோம். நமது தேசீய சுதந்திரம், மிகவும் பயங்கரமாகக் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. சீனாவின் சுதந்திரத்தை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டுமானால், நாம் ஒன்று பட்டவர்களாக வேண்டும். புரட்சிகர மான கொள்கைகள், இல்லாமற் போனால் நாம் வெற்றிபெற முடியாது. இந்தப் புரட்சிகரமான கொள்கைகள் தான், நம்மை ஒன்று சேர்க்கும் சிமிட்டி மாதிரி. நமது நாற்பது கோடி ஜனங் களையும் ஒன்று சேர்ப்பித்து ஜனங்களிடம் ஒற்றுமை உணர்ச்சியை ஊட்ட வேண்டும். அப்பொழுதுதான் சீனா விடுதலை பெற்ற தாகும். பிரெஞ்சுப் புரட்சியின் அடிப்படையான தத்துவங்களில் ஒன்றான ‘சுதந்திரம்’ என்ற வாசகத்திற்குச் சமமான நமது புரட்சியின் வாசகம் ‘ஜனங்களின் தேசீயம்’ என்பதாகும். இந்தத் தேசீயக் கொள்கைகள்தான், நமது தேச விமோசனத் திற்கு வழி காட்டிக் கொடுப்பது. ‘சமத்துவம்’ என்பது ‘ஜனாதிக்க’மாகும். இந்த ஜனாதிக்கமானது, சுயேச்சாதிகாரத்தைத் தகர்த்தெறிந்து, எல்லா ஜனங்களுக்கும் சம அந்தஸ்தை அளிக்கிறது ‘சகோதரத்துவம்’ என்பது ‘ஜனங்களின் வாழ்க்கை’ என்பதற்குச் சமமாகும். இந்த வாழ்க்கைத் தத்துவமானது, நமது நாற்பது கோடி மக்களுக்கும், வயிறு நிறைய உணவை அளிக்கிறது. 9. சமத்துவம் (30 - 3 - 1924) நமது புரட்சி கோஷத்தின் இரண்டாவது அமிசமாக எப்படி மின்-ஷுவான் என்து, அதாவது ஜனாதிக்க மென்பது இருக்கிறதோ அப்படியே பிரெஞ்சுப் புரட்சி கோஷத்தின் இரண்டாவது அமிச மாக சமத்துவமென்பது இருந்தது. எனவே இன்று சமத்துவத்தைப் பற்றி ஆராய்வோம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் முந்தி நடைபெற்ற பல புரட்சி களிலும், ஜனங்கள், சுதந்திரத்திற்காக எவ்வளவு பலத்தைச் செலவழித் திருக்கிறார்களோ, எவ்வளவு தியாகங்களைச் செய்திருக் கிறார்களோ அவ்வளவு பலத்தைச் சமத்துவத்திற்காகச் செலவழித் திருக்கிறார்கள்; தியாகங்கள் செய்திருக்கிறார்கள். இதனால் சுதந்திரத்திற்கு என்ன மதிப்பு வைத்தார்களோ அதே மதிப்பை சமத்துவத்திற்கும் வைத்துப் போற்றினார்கள். மற்றும், சுதந்திரம் கிடைத்துவிட்டால், சமத்துவத்தை நிச்சயமாக அடைந்துவிடலா மென்று உணர்ந்தார்கள். சமத்துவம் பெறா விட்டால், தாங்கள் பெற்ற சுதந்திரத்தை நிலைநாட்ட முடியாதென்றும் கண்டார்கள். இந்தக் காரணங்களினால், சுதந்திரத்தைக் காட்டிலும் சமத்துவத் திற்கு அதிக உயர்வே கொடுத்தார்களென்று சொல்ல வேண்டும். சமத்துவம் என்றால் என்ன? அஃது எங்கிருந்து பிறக்கிறது? அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தோன்றிய புரட்சித் தத்துவத்தின்படி மனிதனுக்குச் சுதந்திரமென்பது இயற்கையினால் அளிக்கப்பட்டது. உதாரணமாக, அமெரிக்க சுதந்திர உறுதி மொழிப் பத்திரத்திலும், பிரெஞ்சுப் புரட்சி உறுதி மொழிப் பத்திரத்திலும், சுதந்திரமும் சமத்துவமும் மனிதனோடு இயற்கை யாகப் பிறந்தவையென்றும், இந்த உரிமைகளை மனிதனிடத்தி லிருந்து பிரிக்க முடியாதென்றும் வற்புறுத்திக் கூறப்பட்டிருக் கின்றன. உண்மையில் மனிதர்கள் சமத்துவம் என்ற விசேஷ உரிமை யோடு கூடவே பிறந்தார்களா? இதைச் சற்று ஆராய்வோம். உலகம் எங்கும் சமமாக இருப்பதில்லை. அதாவது தரை மட்டத்தில் மேடு பள்ளங் களையோ ஏற்றத் தாழ்வுகளையோ நாம் காண்கிறோம். தண்ணீரின் மேல் பரப்பின் மீதுதான் சமமட்டத்தைப் பார்க்கி றோம். ரெயில்வே பிரயாணத்தின் போது நீங்கள் பார்ப்பீர்களா னால் சுற்று முற்றிலும் உள்ள மேடு பள்ளங்களைச் சமன்படுத்த மனித உழைப்புத் தேவையா யிருக்கிறதென்பதை நன்கு உணர்வீர்கள். சமபூமி என்று நாம் சொல்வதெல்லா கூட சம தரையாயிருப்ப தில்லையல்லவா? அதைச் சமன்படுத்த மனித உழைப்பு அவசியம் தேவையாக இருக்கிறது. இதோ, இந்த மேஜை மீதிருக்கும் புஷ்பக் கொத்தைப் பாருங்கள். இது மேற்பார்வைக்கு ஒரே மாதிரியான புஷ்பங்களைக் கொண்டதாகவும் ஒவ்வொரு புஷ்பத்திலும் ஒரே மாதிரியான இதழ்கள் அடங்கி யிருப்பதாகவும் உங்களுக்குத் தோன்றும். ஆனால் தூரதிருஷ்டிக் கண்ணாடியின் மூலமாக இதனைச் சிறிது நுணுகி ஆராய்ந்து பார்த்தீர் களானால் ஒரே மாதிரியாயுள்ள இரண்டு புஷ்பங்களையோ அல்லது இரண்டு இதழ்களையோ காணமாட்டீர்கள். ஒரு மரத்தில் லட்சக் கணக்கான இலைகள் இருக்கின்றன. ஆனால் அந்த இலைகள் பார்வைக்கு ஒரே மாதிரியாகத் தோன்றியபோதிலும் உண்மையில் ஒன்றுக்கொன்று வித்தியாசத்தை நீங்கள் இடத்திற்கும் காலத்திற்கும் பொருத்தி வைத்துப் பார்க்க வேண்டும். இங்கேயுள்ள இலையைப் போல் வேறொரிடத்திலுள்ள இலை இருப்பதில்லை. சென்ற வருஷத்தில் உண்டாகி உதிர்ந்துபோன இலையைப் போல் இந்த வருஷம் உற்பத்தியாகி உதிரப் போகும் இலை இருப்பதில்லை. இதனால் என்ன தெரிகிறதென்றால் இந்த உலகத்தில் உண்டாகிற எந்தப் பொருளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதுதான். இப்படி ஒரே மாதிரியாக இருக்கின்றன என்று எப்படிச் சொல்ல முடியும்? இயற்கை உலகத்திலேயே இந்த வேற்றுமைகள் காணப்படுகிறபோது மானிட சமத்துவம் எப்படி ஏற்பட முடியும்? இயற்கையில் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாகப் பிறக்க வில்லை. ஆனால் மானிட சமுதாயத்தின் சரித்திரத்தில் சுயேச்சாதிகாரம் தோன்றி நிலைத்த காலத்தில், சுயேச்சாதிகார மன்னர்கள், மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள வேற்றுமைகளை அதிதீவிரத்திற்குக் கொண்டு போனார்கள். இயற்கையினால் ஏற்படுத்தப்பட்ட வித்தியாசங்கள் காட்டிலும் இவர்கள் ஏற்படுத் தின வித்தியாசங்கள் அதிகமாகிவிட்டன. இங்ஙனம் சுயேச்சாதி காரிகளால் வகுக்கப்பட்ட இந்த வேற்றுமைகள் செயற்கை யானவை; இயற்கைக்கு முரணானவை. இந்தச் செயற்கையான வித்தியாசத்தின் விளைவாகச் சமுதாயத்தின் மேல் படியிலிருந்த வர்கள், மற்றவர்கள் விஷயத்தில் கொடுமையாகவும் பாரபட்ச மாகவும் நடந்து வரத் தலைப்பட்டார்கள். இவர்களால் ஒடுக்கப் பட்ட ஜனங்களோ, தங்களாலும் சமாளிக்க முடியாத நிலைமையில் கலகத்திற்குக் கிளம்பினார்கள். சமுதாய வித்தியாசங்களை எதிர்த்துப் போராடினார்கள். ஆதிகாலத்துப் புரட்சியின் நோக்கம் என்னவா யிருந்திருக்கிறதென்பது இதனால் தெரிகிறது. அதாவது மனிதனாலேற் படுத்தப்பட்ட வித்தியாசங்களை ஒழிப்பதுதான் நோக்கமாயிருந் திருக்கிறது. இந்த வித்தியாசத்தை ஒழித்து விட்டோமானால் புரட்சியின் நோக்கம் முடிந்து விட்டதென்று கருதப்பட்டது. ஆனால் அரச பீடத்தில் அமர்ந்திருந்தவர்கள், தாங்கள் தெய்விக சக்தி நிரம்பியவர்கள் என்று சொல்லி அதனைத் தங்கள் பதவிக்குப் பாதுகாப்பாக ஏற்படுத்திக்கொண்டார்கள். கடவுளா லேயே தாங்கள் இந்த ஸ்தானத்திற்கு நியமிக்கப் பட்டிருப்பதாகவும். இதனால் தங்களை எதிர்க்கிறவர்கள் கடவுளை எதிர்க்கிறவர் களாவார்களென்றும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். பாமர ஜனங்களோ இந்த வாசகத்தில் எவ்வளவு உண்மை யிருக்கிற தென்பதைச் சிறிது கூடக் கவனித்துப் பாராமல், தங்கள் அரசர் களுக்கு இன்னும் அதிகமான உரிமையை வாங்கிக் கொடுப்பதற் காகப் போராடினார்கள். இது மட்டுமின்றி, சமத்துவத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் யாராவது அறிஞர்கள் பேசினால் அப்படிப்பட்ட அறிஞர்களையும் எதிர்த்தார்கள். இதனால் இந்த அறிஞர்கள் என்ன செய்ய வேண்டியிருந்ததென்றால், சமத்துவமும் சுதந்திரமும் இயற்கையால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட உரிமை களென்ற தத்துவத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. இவர் களுடைய நோக்கம், மனிதனால் சிருஷ்டிக்கப் பட்ட ஏற்றத் தாழ்வு களை உடைக்க வேண்டுமென்பதுதான். ஆனால் எந்த விஷயத் திலும் ‘வேலை செய்வது சுலபம்; விஷயத்தைப் புரிந்துகொள்வது கடினம்’ அல்லவா? அந்தக் காலத்தில் ஐரோப்பாவிலிருந்த பாமர ஜனங்கள், சக்ரவர்த்திகளும், அரசர்களும் தேவலோகத்திலிருந்து வந்தவர் களென்றும், இவர்களுக்குத் தெய்விக உரிமைகள் உண்டென்றும் நம்பி, தங்கள் அரசர்களுக்காக அநேக தியாகங் களைச் செய்தார்கள். இதனால் அறிஞர்கள் எவ்வளவு முயன்றும் அரசர்களின் சுயேச்சாதிகாரத்தை அழிக்க முடியவில்லை. பின்னர், மனிதன் சுதந்திரத்தோடும் சமத்துவத்தோடும் பிறந்தான் என்ற நம்பிக்கையும், சுதந்திரத்திற்காகவும் சமத்துவத்திற் காகவும் போராடுவது ஒவ்வொருவருடைய கடமையாகுமென்ற எண்ணமும் பாமர ஜனங்களிடையே உதயமாயின. விளைவு என்ன? சக்ரவர்த்திகளும் அரசர்களும் தங்கள் உயர் பதவிகளிலிருந்து விழுந்துவிட்டார்கள். இவர்களுடைய வீழ்ச்சிக்குப் பிறகு, பொது ஜன சமத்துவத்திற்காகப் பலரும் போராடினார்கள். ஆனால் இஃது அசாத்தியம் என்பது அவர் களுக்குத் தெரியவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட விஞ்ஞான அறிவு வளர்ச்சியின் பயனாகத்தான், மனித சமுதாயத்தில் இயற்கையான சமத்துவம் இல்லையென்பதை ஜனங்கள் கண்டுகொண்டார்கள். பிரதி மனிதனும் தனித் தனியான அறிவும் திறமையுமுடையவனாயிருக் கிறான். அவனவனுடைய அறிவுக்கும் திறமைக்கும் தகுந்தபடி அவன் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவனுடைய வேலையும் விதவிதமாக இருப்பதால் எல்லோரும் சமத்துவமான நிலைமையில் வேலை செய்ய முடியாதல்லவா? பிரதி மனிதனுடைய தனித்தனி அறிவையும் உழைப்புத் திறனையும் நாம் பொருட்படுத்தாமல், மேலான படிக்கு ஏறிச் செல்ல விரும்பும் மக்களைக் கீழ்ப்படிக்கு இழுத்துத் தள்ளி எல்லோரையும் சமத்துவ நிலையிலே வைக்க வேண்டுமென்று சொன்னால் உலகம் பிற்போக்கான நிலைமைக்குத்தான் போய்க் கொண்டிருக்கும். நாம் ஜனநாயகத்தைப் பற்றியும் சமத்துவத்தைப் பற்றியும் பேசிவிட்டு, அதே தொனியில் உலகமும் முன்னேற வேண்டுமென்று சொல்வதற்கு என்ன அர்த்த மென்றால், உலகத்தில் அரசியல் சமத்துவம் வேண்டுமென்பதுதான், சமத்துவமானது இயற்கையான தல்ல; செயற்கையானது. ஆதலின் அரசியல் விவகாரங்களிலேயே சமத்துவத்தை உண்டு பண்ண முடியும். பெற்றவுடன் சீனாவிலுள்ள ஒவ்வொருவனுக்கும் சமத்துவமான அரசியல் அந்தஸ்து இருக்க வேண்டுமென்பதுதான் நமது கோரிக்கை. அதுவே உண்மையான சமத்துவமாகும். ஐரோப்பாவில் ஏற்பட்ட புரட்சிகளின்போது, ஜனங்கள் சுதந்திரத் திற்காகவும் சமத்துவத்திற்காகவும் அதிகமான தியாகங்களைச் செய்தார்களென்று சொன்னோம். அப்படியானால், இந்தப் புரட்சிகளுக்கு முன்னர் நிலவியிருந்த சமத்துவமின்மையைப் பற்றி, அதாவது ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிப் சிறிது தெரிந்து கொள்வது நல்லதல்லவா? ஐரோப்பாவில் பரம்பரை பாத்திரம் அதிகமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. அதாவது, சக்ரவர்த்திகள், அரசர்கள் முதலாயினோர், தங்கள் அந்தஸ்து, பதவி முதலியவைகளைப் பரம்பரை பாத்தியமாகக் கொண்டாடினார்கள். எவரும் தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டதேயில்லை. சாதாரண ஜனங்க ளுடைய தொழில்களும் இப்படியே பரம்பரை பாத்தியமுடையன வாயிருந்தன. ஒரு மனிதன் விவசாயியாயிருந்தால், அவனுடைய பிள்ளை, பேரப் பிள்ளை முதலிய எல்லாத் தலை முறையினரும் விவசாயத் தொழிலையே நடத்திக் கொண்டு வந்தார்கள். ஒரு தொழிலாளியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மிகவும் கஷ்டப் பட்டு உழைக்க வேண்டி வந்தது. பாட்டனார் செய்து வந்த தொழிலை மாற்றிக்கொண்டு,பேரன் வேறு தொழிலைச் செய்ய முடியாது. ஒருவனுடைய தொழிலை மாற்றிக் கொள்ள முடியாம லிருப்பதுதான் அந்தக் காலத்து ஐரோப்பாவில் ஏற்பட்டிருந்த சமத்துவமின்மை. சீனாவில் ஜமீன்தாரி முறை ஒழிந்ததுமே, தொழில் சம்பந்த மாக ஏற்பட்டிருந்த ஏற்றத் தாழ்வுகள் இல்லாமற் போய்விட்டன. சக்ரவர்த்தியின் பரம்பரை பாத்திய மொன்றுதான் அமுலில் இருந்தது. சமுதாயத்தின் சாதாரண படியிலிருந்தவர்கள், மந்திரிமார் களாகவும் வேறு உயர்ந்த அந்தஸ்துக்கும் வந்திருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் இங்ஙனம் சாதாரண பிரஜைகளாயிருந்தவர்கள், மந்திரிகள் முதலிய உயர் பதவிகளை வகித்திருக்கிறார்களாயினும் அப்படிப்பட்டவர் ஒரு சிலர்தான். தங்கள் விருப்பப்படி தொழில் களைத் தெரிந்தெடுத்துக்கொள்ள முடியாமலிருந்ததால்தான், இவர்கள் சமத்துவத்தை இழந்து விட்டார்கள். இங்ஙனம் அரசியல் அந்தஸ்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்ததோடல்லாமல், சாதாரண ஜனங்களின் சமுதாய அந்தஸ்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. இந்த ஏற்றத் தாழ்வுகளை ஜனங்கள் சகித்துக்கொண்டிருக்க முடியாமல் போய்தான் புரட்சிக்குக் கிளம்பினார்கள்; சுதந்திரத்திற் காகப் போராடினார்கள்; தங்களிஷ்டப்படி தொழில் நடத்த விடாமல் தடுத்து நிற்கிற முறைகளைத் தகர்த்தெறியக் கங்கணங் கட்டிக்கொண்டார்கள். ஆனால் சீனாவில் இந்த மாதிரியான சுதந்திரப் போராட்டமோ, வகுப்பு வித்தியாசங்களை ஒழிக்க வேண்டுமென்ற கிளர்ச்சியோ ஏற்பட்டதேயில்லை. சீனர்களிடத்தில் சமுதாய வேற்றுமைகளிருந்தன வென்பது ஓரளவு உண்மைதான். ஆயினும் சுதந்திரத்திற்காகவோ சமத்துவத்திற்காகவோ தங்கள் உயிரையும் குடும்பத்தையும் சீனர்கள் தியாகம் செய்யவில்லை. இதற்குக் காரணம், சீனாவில் அமுலில் இருந்த ஆட்சி முறையானது, ஐரோப்பாவிலிருந்ததைப் போல் அவ்வளவு கடுமையானதாக இராமலிருந்ததுதான். ஐரோப்பிய நாகரிகம் கீழ்த் திசையில் பரவப் பரவ, ஐரோப்பிய அரசியல், பொருளாதார, விஞ்ஞானமுறைகள் முதலிய யாவும் சீனாவில் பரவத் தொடங்கின. சீனர்கள், ஐரோப்பிய அரசியல் தத்துவங்களைப் பற்றிக் கேட்டவுடன், அவற்றை அப்படியே எவ்வித மாற்றமுமின்றி நகல் செய்து பார்க்கிறார்கள். இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்தவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடவேண்டும். ஐரோப்பியர்கள் சமத்துவத் திற்காகப் போராடினார்கள்; நாமும் அதே சுதந்திரத்திற்காக போராடவேண்டும். இதுதான் இவர்கள் வாதம். சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவிலுள்ள ஜனங்கள், சுதந்திரமின்மையாலும் சமத்துவ மின்மை யாலும் அதிகம் கஷ்டப்பட்டார்கள். இதனால் அவர்கள், இவை யிரண்டிற்காகவும் கிளர்ச்சி செய்தார்கள். இந்தக் கிளர்ச்சியின் பயனாகச் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் மூன்று புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று இங்கிலாந்தில்; மற்றொன்று அமெரிக்காவில்; இன்னொன்று பிரான்சில். இங்கிலாந்தில் ஏற்பட்ட புரட்சியானதுதோல்வி யடைந்து விட்டதென்று சொல்ல வேண்டும். இதனால் ஆங்கில அரசியல் முறை அதிகமான மாற்றத்தை யடையவில்லை. ஆங்கிலேயர்கள் கிளர்ச்சி செய்து, தங்கள் மன்னரைச் சிங்காதனத்தினின்று இறக்கிக் கொன்று விட்டார்கள். ஆனால் சில வருஷங்களுக்குள் முடியாட்சி அங்கு நிலைத்து விட்டது. இந்தக் காலத்தில் சிலர் இங்கிலாந்தினின்று பிரிந்து சென்று அமெரிக்காவில் குடியேறினார்கள். இவர்கள் அங்குச் சுதந்திரம் பெற்றவர் களாகிக் குடியரசு அரசாங்க முறையை ஏற்படுத்திக்கொண்டார்கள். பிரான்சும் இவர்களைப் பின்பற்றிக் குடியரசுமுறையை அனுஷ்டானத் திற்குக் கொண்டு வந்தது. ஆறு வருஷங்களுக்கு முன்னால் - 1918ஆம் வருஷம் - ருஷ்யாவிலும் புரட்சி ஏற்பட்டு, குடியரசு முறை அனுஷ்டானத் திற்குக் கொண்டுவரப் பட்டது. இப்பொழுது அமெரிக்கா, பிரான்சு, ருஷ்யா முதலிய நாடுகளெல்லாம் வல்லரசுகளாயிருக்கின்றன. இதற்குக் காரணம் இந்தத் தேசங்களில் ஏற்பட்ட புரட்சிகள்தான். அமெரிக்கர்கள் புரட்சி செய்த காலத்தில், அவர்களுக்கு அடிப்படையான நோக்கமாயிருந்தது சுதந்திரம் பெற வேண்டு மென்பது. ஏன் இந்த நோக்கம் அவர்களுக்கு ஏற்பட்டது? அவர் களுடைய பதின்மூன்று மாகாணங்களும் பிரிட்டிஷாருடைய நிர்வாகத்தின் கீழ் இருந்தன. பிரிட்டிஷார், அமெரிக்கர்களை அடக்கி ஒடுக்கி வந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் தாங்களும் பிரிட்டிஷாரும் ஒரே மாதிரியான பிரஜைகளாயிருந்தும், தாங்கள் மட்டும் வேறுவிதமாக நடத்தப்படுவதைப் பார்த்து அமெரிக்கர்கள் ஆத்திரங் கொண்டார்கள். இதனால் பிரிட்டனினின்றும் விலகிக் கொள்ளத் தீர்மானித்தார்கள். எனவே பிரிட்டனுக்கும் அமெரிக்கா வுக்கும் எட்டு வருஷகாலம் யுத்தம் நடைபெற்றது. கடைசியில் அமெரிக்கா, பிரிட்டனுடைய ஆதிக்கத்தினின்று விடுதலை பெற்றது.1 அமெரிக்க அரசாங்கம், வெள்ளை நிறத்தவரனைவரையும் ஒரேமாதிரியாக நடத்தியது. ஆனால் கறுப்பு நிறத்தவரான நீக்ரோவர்களை வேறு விதமாக நடத்தியது. அரசியல் அந்தஸ்தில் வெள்ளை நிறத்தவரும் கறுப்பு நிறத்தவரும் சமமாக வைக்கப்பட வில்லை. அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்திற்கும், அதன் அரசியல் சட்டத்திற்கும் இது நேர் விரோதமானது. அமெரிக்கர்கள், நீக்ரோவர்களை அடிமைகளாகக் கருதி நடத்தினர். அவர்களைக் கேவலம் மாடுகள் போலவும் குதிரைகள் போலவும் வேலை வாங்கினார்கள். அவர்களுக்குக் கஷ்டமான வேலைகளைக் கொடுத் தார்கள். இப்படி அவர்கள் வேலை செய்தாலும், அவர்களுக்குக் கூலி கொடுக்கப் படவில்லை; சாப்பாடு மட்டுந்தான் போடப்பட்டது. இந்த நிலைமையைப் பார்த்தசில அறிஞர்கள், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தங்கள் அரசியல் திட்டத்திற்கும் நீக்ரோவர்களை நடத்தும் இந்த நடவடிக்கைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிற தென்பதைக் கண்டுகொண்டு இந்த வித்தியாச நடவடிக்கைகள் ஒழிய வேண்டுமென்று கிளர்ச்சி செய்தார்கள். இந்தக் கிளர்ச்சிக்குப் பலர் ஆதரவும் காட்டினர். இன்னும் சில அறிஞர்கள், நீக்ரோவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பல அறிக்கைகள் வெளியிட்டார்கள். இவை ஜனங்களுக்குப் புதியதொரு விழிப்பைக் கொடுத்தன. அமெரிக்கா வின் வடபாகத்திலிருந்த மாகாணங்களெல்லாம் அடிமைகளை வேலைக்க மர்த்திக் கொள்ளும் வழக்கத்தை அனுஷ்டிக்கவில்லை. எனவே, இந்த மாகாணங்கள் ஒன்று சேர்ந்து, அடிமைகளாகிய நீக்ரோவர்களுக்கு விடுதலையளிக்க வேண்டுமென்று கிளர்ச்சி செய்தன. தெற்கு மாகாணங்களிலுள்ளவர்கள், இந்தக் கிளர்ச்சிக்கு விரோதமாயிருந்தனர். ஏனென்றால் இவர்கள் அடிமை வியா பாரத்தை அதிக தாராளமாக நடத்தி வந்தார்கள். இதனால், அடிமை வியாபாரம் பரம்பரையாக நடைபெற்று வந்த தென்றும், அதனைத் திடீரென்று ரத்து செய்து அடிமைகளுக்குச் சுதந்திரம் கொடுக்கக் கூடாதென்றும் கிளர்ச்சி செய்தார்கள். அடிமைகள் விலைமதிப்புள்ள பொருள்களென்றும், அவர்களுக்கு விடுதலை யளிப்பதானால், அதற்கு நஷ்ட ஈடாகத் தங்களுக்கு ஒரு தொகை தரவேண்டுமென்றும் வாதித்தார்கள். அந்தக் காலத்தில் ஓர் அடிமையினுடைய மார்க்கெட் விலை ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் டாலராயிருந்தது. இந்தக் காரணத்தினால் வட மாகாணத்தவருக்கும் தெற்கு மாகாணத்தவருக்கும் பலத்த சண்டை நடைபெற்றது.1 தெற்கு மாகாணத்தவர் தோல்வியடைந்தனர். உடனே வட மாகாணங்களைச் சேர்ந்த ஐக்கிய அரசாங்கத்தார் எல்லா அடிமைகளையும் விடுதலை செய்வதாக உத்தரவு பிறப்பித்தனர். தெற்கு மாகாணத்தவர் இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்களானார்கள். ஆனால் இவர்கள் இதுகாறும் தங்கள் பொறுப்பில் போஷித்து வந்த நீக்ரோவர்களை, வெளியே துரத்தி விட்டார்கள். அவர்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுக்க மறுத்து விட்டார்கள். இதனால் விடுதலை கண்ட நீக்ரோ வர்கள் வயிற்றுப் பசியினால் உழன்றார்கள்; தங்கள் விடுதலைக்காக உழைத்த வடஅமெரிக்கர்களை வெறுக்கலானார்கள். சிறப்பாக இவர்களுடைய வெறுப்பானது, வடஅமெரிக்க குடியரசின் பிரசிடெண்ட் மீது திரும்பியது. அந்தப் பிரசிடெண்ட் யார்? அமெரிக்காவில் இரண்டு பிரசிடெண்டுகள் பிரசித்தி யடைந்திருந்தார்களென்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவன் குடியரசின் முதல் பிரசிடெண்டாகிய வாஷிங்க்டன்.1 உலக ராஜ தந்திரிகளின் பிதா மகன் என்று இவனைச் சொல்வதுண்டு. சம உரிமைக்காக மனிதன் போராடி வந்திருக்கிற சரித்திரத்தில் இவருக்குப் பிரகாசமான தொருஸ்தானம் எப்பொழுதும் உண்டு. மற்றொரு பிரசிடெண்ட் அப்ரஹாம்லிங்கன்.2 என்பவன். அடிமை நீக்ரோவர்களுக்கு விடுதலையளிக்கவேண்டுமென்று போராடிய வர்களில் இவன் தலை சிறந்தவன். மானிட சமத்துவத்தை நிலை நாட்டியதற்காக இவன் வரம்பிலாப் புகழடைந்தான். இப்பொழுதும் இவனுக்கு உலகம் வணக்கஞ் செலுத்துகிறது. ஆனால் இவன் எந்த அடிமைகளுக்கு விடுதலையளித்தானோ அந்த அடிமைகளாலேயே அந்தக் காலத்தில் வெறுக்கப்பட்டான். யுகப் பிரளயத்தைப் போல் இவன் நம்மை அழிக்கத் தோன்றினானென்றும், இவன் ஒரு காட்டு மிருகம் என்றும் விடுதலை பெற்ற அடிமைகள் தூஷித்தார்கள். இப்பொழுது கூட, அறிஞர்களான சில நீக்ரோவர்கள் இவனைப் புகழ்கிறார்களோயாயினும், இவனைத் துவnஷிக்கிற நீக்ரோவர் களும் இல்லாமல் இல்லை. அமெரிக்காவின் சரித்திரத்திலேயே குறிப்பிடத் தக்க சம்பவங்கள் இரண்டு. ஒன்று பிரிட்டிஷாருக்கு விரோதமாகக் கிளம்பிய சுதந்திரயுத்தம். இது எட்டு வருஷகாலம் நடைபெற்றது. இன்னொன்று அடிமைகளின் விடுதலையை முகாந்தரமாகக் கொண்டு வடமாகாணங்களுக்கும் தெற்கு மாகாணங் களுக்கும் நடைபெற்ற யுத்தம் இது மேற்படி சுதந்திர யுத்தத்திற்கு அறுபது வருஷங் கழித்து நடைபெற்றது. இந்த உள் நாட்டுச் சண்டை ஐந்து வருஷகாலம் நடைபெற்றது. சுருக்கமாகக் கூறப் போனால் முதலாவதுயுத்தத்தில், அமெரிக்கர்கள் தங்களுடைய சுதந்தரத்திற்காகப் போராடினார்கள்; இரண்டாவது யுத்தத்தில் நீக்ரோவர்களுக்குச் சமத்துவ உரிமை வாங்கிக் கொடுக்கும் பொருட்டுப் போராடினார்கள். ஆனால் இந்த இரண்டாவது யுத்தத்தில்தான் அதிகமான உயிர்ச் சேதம் ஏற்பட்டது. உலக சரித்திரத்தில் எத்தனையோ சுதந்திரப் போராட்டங்கள் நடை பெற்றிருக் கின்றன. அவற்றில் அமெரிக்காவில் சுதந்திரத்திற்காக நடைபெற்ற போராட்டங்கள் மிகப் பிரகாசமான பாகங்கள். அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திர யுத்தத்திற்குப் பிறகு பிரான்சில் ஒரு புரட்சி ஏற்பட்டது. இந்தப் புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகள் சுமார் எண்பது வருஷங்களுக்கு அதிகமாகச் சமுதாயத்தின் மீது படிந்து நின்றன. பின்னரே ஜனங்களுக்குச் சமஉரிமை ஏற்பட்டது. ஆனால் இந்தச் சம உரிமையை ஜனங்கள் வரம்பு மீறி உபயோகிக்கத் தலைப்பட்டார்கள். இதனால் மீண்டும் முடியாட்சி தலையெடுத்தது. சீனாவில் ஏற்பட்ட புரட்சி எண்ணங்கள் ஐரோப்பாவி லிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் வந்தவை. சமஉரிமைக்காகப் போராடவேண்டு மென்ற எண்ணமும் அங்கிருந்து வந்ததுதான். ஆனால் நம்முடைய புரட்சிக் கட்சியானது, சுதந்திரத்திற்காகவும் சமத்துவத் திற்காகவும் போராடவில்லை. ஜனங்களுக்கு இன்றியமை யாது தேவைப்படுகிற மூன்று கோட்பாடுகளை (ஸான்மின் கோட்பாடுகளை) அனுஷ்டானத்தில் கொண்டு வருவதுதான் நமது புரட்சியின் லட்சியம். இந்த மூன்று கோட்பாடுகளையும் அமுலுக்குக் கொண்டு வருவோமானால் நமக்குச் சுதந்திரமும் சமத்துவமும் தாமாகவே ஏற்படும். சீனா, இதற்கு முன் எப்பொழுதுமே சுதந்திரத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடிய தில்லை. இந்த நாட்டிலே நடைபெற்றிருக்கிற போர்களெல்லாம் அரச பதவிக்குத்தான். இந்தப் போராட்டங்களிலே கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தாமே அரசராகவேண்டுமென்ற விருப்பமுடைய வராக இருந்தனர். இந்த விருப்பம் இன்னும் நமது ஜனங்களிடத்தில் குடி கொண்டிருப்பதனால் தான் சீனாவில் புரட்சி வெற்றி பெறவில்லை. உலகத்திலே இப்பொழுது ஒழுங்காக அமைக்கப்பட்ட ஸ்தாபனங்கள் எவையென்றால் அவைதான் தொழிலாளர் சங்கங்கள். புரட்சி ஏற்பட்டுச் சுதந்திரம் உதயமான பிறகுதான் இந்தத் தொழிற் சங்கங்கள் ஏற்பட்டன. இந்தத் தொழிற் சங்கங்கள் எவ்வாறு வளர்ந்தனவென்பதைச் சுருக்கமாகத் தெரிந்து கொள் வோம். முதலில், தொழிலாளர்கள் ஒன்றுந்தெரியாதவர் களாயிருந் தார்கள். இவர்களிடத்தில் கட்டுப்பாடான உணர்ச்சி ஏற்பட வில்லை. தாங்கள், சமுதாயத்தின் கீழ்ப்படியில் வைக்கப்பட்டிருக் கிறார் களென்பதையோ, அல்லது தாங்கள் முதலாளிகளால் கஷ்டப்படுத்தப் படுகிறார்களென்பதையோ இவர்கள் உணர வில்லை. தங்களுடைய நிலைமையை இவர்களுக்குத் தெரிய வில்லை. உலகத்திலுள்ள எல்லாத் தொழிலாளர்களுடைய நிலைமையும் இப்படித்தானிருந்தது. தொழிலாளர் அல்லாதார் சிலர், இவர்களின் நன்மையை முன்னிட்டுக் கிளர்ச்சி செய்யத் தொடங்கியபிறகுதான் தொழிலாளர்கள், தங்களை ஒரு கட்டுப் பாடான ஸ்தாபனமாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணங் கொண்டார்கள். அநேக தொழிலாளர் சங்கங்கள் ஏற்பட்டன. முதலாளி களை எதிர்த்துப் போராடும் நிலைமைக்கு வந்தார்கள். இங்ஙனம் இவர்கள் போராடியதற்கு எந்த விதமான ஆயுதத்தைத் துணையாக் கொண்டார்கள்? அதுதான் முதலாளி களுடன் ஒத்துழையாமை செய்வது. அதாவது வேலை நிறுத்தம் செய்வது. இந்த வேலை நிறுத்தத்தினால் விளையும் பலா பலன்கள் ராணுவ பலத்தினால் விளையும் பலாபலன்களைவிடக் கடுமை யாகவே இருந்தன. இப்படி இவர்கள் வேலைநிறுத்தம் செய்ததானது தொழிலாளர்களை மட்டும் பாதிப்பதில்லை. தேசம் முழுவதையுமே பாதிப்பதாயிருந்தது. தொழிலாள ரல்லாதார் பலர் தொழிலாளர் இயக்கத்திற்குத் தலைமை பூண்டு நடத்தி வந்த வரையில், தொழி லாளர் இயக்கத்திற்கு ஒருவித சக்தியும் அதனால் ஒருவித மதிப்பும் ஏற்பட்டிருந்தன. தொழிலாளர்கள் தன்மதிப்பு உணர்ச்சி பெற்றார்கள்; சமஉரிமையைப் பற்றிப் பேசலானார்கள். பின்னர் பிரிட்டிஷ் தொழிலாளர்களும், பிரெஞ்சுத் தொழிலாளர்களும் தங்களுடைய இயக்கத்தில் தொழிலாளரல்லாத பல அந்நியர்கள் இருப்பதை விரும்பாத வர்களாய், அவர்களைத் தங்கள் இயக்கத்தி னின்று வெளியேற்றி விட்டார்கள். இங்ஙனம் வெளியாரைத் தங்கள் இயக்கத்தில் கலக்க விடாமல் வெளியேற்றுகிற முயற்சிகள் சென்ற சில ஆண்டுகளாக மேனாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதற்குக் காரணம், தொழிலாளர்கள் சம உரிமையைத் தேடுகிற முயற்சியில் வழி தவறிச் சென்று விட்டதுதான். இதனால் அநேக தொழிலாளர் சங்கங்கள் அறிவு நிரம்பிய தலைவர்களை இழந்து விட்டன. சங்கங்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தபோதிலும், பொதுவாக மேனாட்டில் தொழிலாளர் இயக்கம் அதிகமான முன்னேற்றத்தையடையவில்லை யென்றுதான் சொல்ல வேண்டும். சென்ற ஒரு தலைமுறையாகச் சீனாவிலும் தொழிலாளர் ஸ்தாபனங்கள் அமைந்து வருகின்றன. புரட்சிக்குப் பிறகு ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்தவர்களும் தனித்தனியாகச் சங்கங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களுக்குத் தலைவராயிருக்கும் பலர், தொழிலாளர் அல்லாதாராயும் இருக்கின்றனர். இவர்களிற் சிலர் சுய நன்மைக்காக இந்த ஸ்தாபனங்ளில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும். ஆயினும் ஒரு சிலர், தொழிலாளர் நலன் ஒன்றினை மட்டும் கருதி உழைத்த வந்திருக்கிறார்களென்பதையும் மறுக்க முடியாது. ஆதலின் தொழிலாளர்கள், தங்கள் தலைவர்கள் விஷயத்தில் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். சீனத் தொழிலாளர்களும் சம உரிமையைத் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்களென்றே நான் கருதுகிறேன். சமீபத்தில் தொழிலாளர் பத்திரிகை யொன்றை நான் படித்துக் கொண் டிருந்தேன். அதில் ‘நீண்ட அங்கி தரித்த தலைவர்கள் எங்களுக்குத் தேவையில்லை’ - ‘தொழிலாளர் களாகிய நாங்கள் எங்கள் வயிற்று ஆகாரத்திற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறோம்; அரசியலைப் பற்றி எங்களுக்கு அக்கரையில்லை’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த மாதிரியான வசை மொழி களை மேனாட்டுத் தொழிலாளர் தலைவர்களும் பெற்றிருக் கிறார்கள். ஆனால், மேனாட்டுத் தொழிலாளர்கள், தங்கள் நாட்டு அரசியல் விவகாரங்களிலிருந்து ஒதுங்கியிருக்கவில்லை; அதில் கலந்து கொண்டார்கள். இந்த விஷயத்தில் மட்டும் நாம் மேனாட்டாரைப் பின்பற்ற வேண்டாம் போலிருக்கிறது! ஒரு நாட்டின் ஜனங்கள் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழ்வது, அந்த நாட்டு அரசாங் கத்தைப் பொறுத்திருக்கிறது; அந்த அரசாங்கம் ஒழுங்கீனமா யிருந்தால், ஜனங்களின் எந்தப் பிரச்னையும் சரிவரத்தீராது. உதாரணமாக இன்றைய சீனா, அந்நிய வல்லரசுகளின் பொருளாதார ஆதிக்கம் காரணமாக, வருஷத்தில் நூற்றிருபது கோடி டாலரை இழந்து வருகிறது. இதற்குக் காரணம் சீன அரசாங்கத்தின் ஒழுங்கீனந்தான். இந்த நஷ்டத்தின் பெரும் பாகத்திற்குக் காரணம், ஏற்றுமதி வியாபாரத்தை விட இறக்குமதி வியாபாரம் அதிகமாயிருப்பதுதான். வருஷத்தில் சுமார் ஐம்பது கோடி டாலர் பெறுமான சரக்குகள் நம்நாட்டிலிருந்து ஏற்றுமதி யாகிக் கொண்டிருக்கின்றன என்று சொன்னால் நம்முடைய தேச மக்களின் அதிகமான உழைப்பு நம் நாட்டுக்குப் பயன்படாமற் போகிறது என்பதுதானே அர்த்தம்? இதற்குக் காரணம் நமது தொழில்கள் சோர்வுற்றுக் கிடப்பதுதான். சீனத் தொழிலாளர்கள் குறைந்த கூலிபெற்று அதிகமாக உழைக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள். இதனால் இவர்கள் எந்த விதமான அந்நிய நாட்டுப் போட்டிக்கும் ஈடு கொடுக்க முடியும். அப்படி யிருந்தும் நமது நாட்டுத் தொழில்கள் விருத்தியடையவில்லை. இதற்குக் காரணம் சீன அரசாங்கத்தில் ஒழுக்க வீனம் நிலவியிருப்பதுதான். மற்றும் அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை. அதிகாரம் இருந்திருந்தால் அந்நிய நாட்டுச் சாமான்களுக்கு அதிகமான இறக்குமதித் தீர்வை போட்டு, சீனச் சாமான்களுக்குக் கிராக்கியை உண்டு பண்ணி யிருக்கும். அப்பொழுது சுதேசத் தொழிலாளர்கள் அந்நிய நாடு களுக்குச் செல்லும் மேற்கண்ட ஐம்பது கோடி டாலரையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் நிலைமையிலிருப்பர். தொழி லாளர்கள், அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாதென்று சொல்லுவது தவறு. அரசியலும் பொருளாதாரமும் சங்கிலிபோல் பின்னிக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் அரசாங்க நிருவாகத்தில் சம்பந்தப்பட்டுக் கொள்ளா விட்டால் அவர்கள் தங்களுடைய உணவுப் பிரச்னையை எப்படித் தீhத்துக் கொள்ள முடியும்? மனிதர்கள் பிறக்கும்பொழுது அறிவிலும் திறமையிலும் வேறுபட்டவர்களாவே பிறக்கிறார்கள். ஆயினம் மானிட இதயமானது எல்லா மனிதர்களும் சமத்துவ வாழ்க்கையை வாழ வேண்டுமென்ற உணர்ந்த லட்சியத்தையே கொண்டிருக்கிறது. இந்த லட்சியத்தை நாடியே மானிட சமூகம் செல்ல வேண்டும். அப்படிச் செல்வதற்கு வாழ்க்கைத் தத்துவத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கைத் தத்துவமோ இரண்டுகூறாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று தனக்காக வாழ்வது; மற்றொன்று பிறருக்காக வாழ்வது. தனக்காக மட்டும் வாழ்கிறவர்கள் பிறரைத் துன்புறுத்துகிறவர் களாகிறார்கள். இந்தச் சுயநலத்தத்துவம் பரவியிருந்த காலத்தில் திறமைசாலிகள் அதிகார பதவிகளைக் கைப்பற்றிக்கொண்டு அவற்றின் உரிமைகளையும் சமுதாயத்தில புகுத்திவிட்டார்கள் ஜனநாயகத்தை உத்தேசித்து உலகத்தில் எத்தனையோ புரட்சிகள் நடைபெற்றன. இந்தப் புரட்சிகளுக்கு முந்திய காலத்தில் இந்தச் சுயநலத் தத்துவந்தான் எங்கணும் அமுலில் இருந்தது. பிறர் நலத்துக்காக வாழ வேண்டுமென்ற லட்சியத்தைக் கொண்டவர்கள் அந்த நலத்திற்காகத் தங்களைத் தியாகம் செய்து கொண்டார்கள். இந்தத் தத்துவம் பரவி நின்ற காலையில்தான் அறிஞர்கள் பலர்தோன்றி அன்பையும் விசால திருஷ்டியையும் ஜனங்களுக்குப் போதித்தார்கள். ஆனால் மதத்தின் பெயரால் பிரசாரம் செய்யப் பட்ட அன்பும் தாராள மனப்பான்மையும் மட்டுமே மனித சமுதாயத்தின் தீமைகளை அகற்றி விடாது. ஆதலின் அடிப்படையானதொரு மாற்றத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். புரட்சியை உண்டு பண்ணி சுயேச்சாதிகாரத்தை வீழ்த்தி ஜனநாயகத்தைத் தலைநிமிரச் செய்து வேற்றுமைகளை அறவே ஒழிக்க வேண்டும். ஒவ்வொருவரும் பிறருக்குத் தொண்டு செய்வதையே தங்களுடைய லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டுமேயல்லாது பிறரைச் சுரண்டுவதைத் தங்களுடைய லட்சியமாகக் கொண்டிருக்கக்கூடாது. அறிவும் திறமையும் நிரம்பியவர்கள் ஆயிரக்கணக்கான பேரை மகிழ்விக்க முயலவேண்டும். குறைந்த அறிவும் திறமையும் உடையவர்கள் பத்துக் கணக்கான பேரையோ நூற்றுக்கணக்கான பேரையோ மகிழ்விக்கப் பிரயத்தனப்படவேண்டும். ஆகவே அறிவிலும் திறமை யிலும் மனிதர்கள் வெவ்வேறு பட்டவர்களாயிருந்தாலும் உயர்ந்த லட்சிய முடையவர்களா யிருப்பதில் ஒரே தன்மை யுடையவர் களாகவே இருக்கிறார்கள். இந்தச் சமத்துவத்தையே நாம் நாட வேண்டும். இதுதான் சமத்துவத்தின சாரம். 10 மேலைநாடுகளும் ஜனநாயகமும் (13 - 4 - 1924) ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் வரை, ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண் டிருந்தார்களென்பதை, முந்திய பிரசங்கங்களிலிருந்து தெரிந்து கொண்டோம். இந்தக் காலத்தில், பிரஜா உரிமைகளை இவர்கள் எவ்வளவு தூரம் சம்பாதித்துக் கொடுத்தார்கள், ஜனநாயகத்தின் கீழ் இவர்கள் எவ்வளவு தூரம் முன்னேற்ற மடைந்தார்கள் என்பதை இங்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே, சீனாவில் ஜனநாயக எண்ணங்கள் பரவியிருக் கின்றன. நவீனன புத்தகங்கள் மூலமாகவும் பத்திரிகைகள் மூலமாகவும் ஜனங்களுடைய மனத்தில் இந்த எண்ணங்கள் ஒருவித முத்திரையை இட்டிருக்கின்றன. இந்தப் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் நாம் படிக்கிறபோது, நமக்கு உண்மையிலேயே ஒருவித உணர்ச்சி உண்டா கிறது. மேனாட்டார் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி மகத்தான வெற்றிகள் அடைந்திருப்பதனால்,நமக்கும் அந்த ஜனநாயக எண்ணங்கள் உதிக்கின்றன. தவிர, உலகத்தின் எல்லா நாடுகளிடையிலும் ஜனநாயக மானது மலர்ந்துகொண்டு வருகிறதென்றும் உலகப் போக்கையொட்டி சீனாவும் இதில் ஈடுபடவேண்டுமென்றும் நாம் கூறுகிறோம். சிலர், தற்போது மேனாட்டில் ஜனநாயக எண்ணம் எவ்வளவு தூரம் முன்னேற்ற மடைந்திருக்கிறதோ அவ்வளவு தூரம் அந்த எண்ணம் சீனாவிலும் முன்னேற்ற மடைந்து விடுமானால், அப்பொழுது, சீனா தன் லட்சியத்தை அடைந்து விடுமென்றும், நாகரிகம் வாய்ந்த, முற்போக்கான நாடாகிவிடுமென்றும் கருது கின்றனர். ஆனால் புத்தகங்களிலே காணப்படுகிற ஜனநாயகத்திற்கும் நடைமுறையிலே காணப்படுகிற ஜனநாயகத்திற்கும் அதிகமான வேற்றுமைகள் இருக்கின்றன. மேனாட்டில் ஜனநாயக அரசாங்கத் திற்கு அடிகோலிய அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய நாடுகளைப் பாருங்கள். அந்த நாடுகளிலேயுள்ள ஜனங்கள் எவ்வளவு அரசியல் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள்? மிகக் குறைவான உரிமை களையே பெற்றிருக் கிறார்களென்றுதான் ஜனநாயகத்தில் நம்பிக்கை யுள்ளவர்களெல்லோரும் கருதுகிறார்கள். பிரஜா உரிமைக்காகப் போராடிய அனைவரும், ஜனநாயக லட்சியத்தை விரைவிலே அடையக் கூடுமென்று, கருதி, தங்களுடைய சக்தியனைத்தையும் இந்தப் போராட்டத்தில் பிரயோகித்திருக்கிறார்கள். போராட்டத் தில் வெற்றியடைந்தபிறகு, தாங்கள் எதிர்பார்த்ததைவிடக் குறை வான அதிகாரத்தையே பெற்றிருப்பதாகக் காண்கிறார்கள். இவர்கள், பூரண ஜனநாயக லட்சியத்தையடையவில்லை. பிரிட்டனுக்கு விரோதமாக நடைபெற்ற அமெரிக்க சுதந்திர யுத்தத்தைச் சிறிது கவனிப்போம். அமெரிக்கா, சுதந்திரம் பெற எட்டு வருஷகாலம் யுத்தத்தை நடத்த வேண்டி யிருந்தது. இந்த யுத்தத்திற்குப் பிறகு, வெளியிடப் பெற்ற சுதந்திரப் பிரதிக்ஞையின் படி, சுதந்திரமும் சமத்துவமும், மனிதனின் இயற்கையான பிரிக்க முடியாத உரிமைகள். அமெரிக்க சுதந்திர யுத்தத்தை நடத்திய வர்கள், பூரணசுதந்திரமும் சமத்துவமும் பெற்றுவிடுவோமென்று தான் கருதினார்கள். ஆனால் எட்டு வருஷத்துப் போராட்டத்திற்குப் பிறகு, அவர்கள் என்ன கண்டார்கள்? பிரஜா உரிமைகளில் பல அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஏன்? சுயேச் சாதிகாரம் வீழ்த்தப் பட்ட பிறகு, ஒரு ஜனநாயக அரசாங்கத்தை எப்படி நிருவாகம் செய்வதென்பதைப்பற்றி அபிப்பிராய வேற்றுமைகள் ஏற்பட்டன. இதனால் இரண்டு கட்சிகள் உண்டாயின. அமெரிக்கப் புரட்சியை நடத்திய தலைவனைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும். அவன்தான் வாஷிங்க்டன். அவனுக்குத் துணையாக வேறு சிலரும் இருந்தனர். அவரில் முக்கியமானவர்கள் ஹாமில்ட்டன்1 என்ப வனும், ஜெப்பர்ஸன்2 என்பவனும். இந்த இரண்டு பேரும், நிருவாகம் நடத்துவதைப்பற்றித் தீவிரமான அபிப்பிராய பேத முடையவர் களாயிருந்த படியால், இருவரும் தனித்தனியாகக் கட்சிகள் ஏற்படுத்தி, பலரைத் தங்களுக்குப் பின் பலமாகச் சேர்த்துக் கொண்டார்கள். ஜெப்பர்ஸனுடைய கட்சியினர் என்ன அபிப்பிராயப் பட்டார் களென்றால், ஜனங்களுக்கு இயற்கையிலேயே சில உரிமைகள் இருக்கின்றன; அவர்களுக்குப் பூரண ஜனநாயக அதிகாரம் கொடுத்தால், அவர்கள் சுதந்திரத்தை உபயோகிக்கும் விஷயத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருப்பார்கள்; தங்கள் சக்திக ளனைத்தையும் பெரிய காரியங்கள் சாதிப்பதில் பிரயோகம் செய்வார்கள்; அப்பொழுது சமுதாயம் பல படித்தாக முன்னேற்ற மடையும் என்பதாகும். இந்த ஜெப்பர்ஸன் கட்சியினரின் கொள்கைப்படி, மனித சுபாவம் இயற்கையில் நல்லதாகவே இருக்கிறது பூரணஜனநாயக ஆட்சியில் கீழ் இருக்கும் ஜனங்கள், தங்களுடைய இயற்கையான இந்தச் சுபாவத்தை வெளிப்படுத்தி, நல்லது செய்யாமல் தங்களுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வார்களானால், அதற்குக் காரணம், அவர்களுடைய முற்போக்கில் ஏதோ தடை ஏற்பட்டிருக்க வேண்டும். அந்தத் தடையை அப்புறப்படுத்தவே அவர்கள் மேற்கண்ட விதமாகத் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்திருக்க வேண்டும். இதை வேறு விதமாகச் சுருக்கிக் கூறப்போனால், ஒவ்வொரு மனிதனும் இயற்கையிலேயே சுதந்திரமும் சமத்துவமும் பெற்றிருக் கிறானாதலின், அவனுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் அறிவு உண்டு. அவனுக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டால், சமுதாயத்திற்கு அவன் பல நன்மைகளைச் செய்வான். நல்ல அரசாங்கம் நடைபெறுவதற்கு எல்லா ஜனங்களும் சேர்ந்து பொறுப்பு ஏற்றுக் கொள்வார் களானால், தேசம் செழிப்படைந்து சமாதானமாக வாழும். ஜெப்பர்ஸன் கட்சியினர். பிரஜா உரிமையைப் பற்றி இந்த மாதிரி யான கருத்துக்களைத்தான் கொண்டிருந்தனர். ஹாமில்ட்டன் கட்சியினரின கருத்துக்கள், இவற்றிற்கு நேர் விரோதமாயிருந்தன. மனிதசுபாவம் எப்பொழுதுமே நல்லதாயிருக்க வில்லை யென்றும், எல்லா ஜனங்களுக்கும் சமமாக ஜனநாயக அதிகாரம் கொடுக்கப்பட்டால், கெட்ட சுபாவமுள்ள மனிதர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு, கெட்ட லட்சியங்களுக் காகத் தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வார்களென்றும், அப்பொழுது நியாயம், தர்மம், நல்லொழுக்கம் முதலியன ஒன்றுமே இல்லாமற்போய விடுமென்றும், இதன் விளைவாகத் தேசத்தில் ஒற்றுமையின்மையோ அல்லது பாமர ஜனங்களின் ஆதிக்கமோ ஏற்பட்டுக் கலகமும் குழப்பமும் உண்டாகுமென்றும், இத்தகைய ஜனநாயக முறைகளைக் கைப்பற்று வதினால் சமுதாயம் எந்த விதத்திலும் முன்னேற்றமடையா தென்றும் ஹாமில்ட்டன் கட்சி யினர் கருதினர். எனவே தேசத்தின் அரசியல் அதிகாரமானது ஜனங் களிடத்தில் பூராவும் ஒப்படைக்கப் படக்கூடா தென்றும், மத்திய அரசாங்கம் ஒன்றினிடத்திலேதான் ஒப்படைக்கப் படவேண்டு மென்றும் ஜனங்களுக்கு வரம்பிட்ட ஒரு ஜனநாயகமே கொடுக்கப் பட வேண்டுமென்றும் இந்தக் கட்சியினர் வாதித்தனர். கொடுங் கோலனாயுள்ள ஓர் அரசனுக்காவது மேற்பார்வை செய்யவும் அவனைக் கட்டுப் படுத்தவும் ஒரு சிலர் இருக்கின்றனர். ஆனால் ஜனங்களிடத்திலேயே வரம்புக்குட்படாத - எல்லையற்ற - அதிகாரத்தைக் கொடுத்துவிட்டால் அவர்களைக் கட்டுப்படுத்து வது யார்? இதனாலேயே சுயேச்சாதிகாரம் எப்படி ஒரு வரம்புக் குட்படுத்தப்பட வேண்டுமோ அப்படியே ஜனநாயகமும் ஒரு வரம்புக்குட்படுத்தப்பட வேண்டும் என்று ஹாமில்ட்டன் கட்சி யினர் சாதித்தனர். இந்த நோக்கத்துடன் ‘பெடரலிஸ்ட் கட்சி’1 என்ற ஒரு கட்சியை ஹாமில்ட்டன் ஆரம்பித்தான். அமெரிக்காவில், சுதந்திர யுத்தம் நடைபெறுவதற்கு முன்னர், தனித்தனியாகப் பிரிந்திருந்த பதின்மூன்று மாகாணங்களும் பிரிட்டனின் நேரான ஆட்சிக்குட்பட்டிருந்தன. ஆனால் நாளாக ஆக, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சுயேச்சாதிகாரத்தை இந்த மாகாணங்களினால் சகிக்க முடியவில்லை. இதனால் இவை பிரிட்டனை எதிர்த்துப் போராடவேண்டு மென்ற உணர்ச்சி பெற்று, அப்படியே போராட்டத்தையும் நடத்தின. யுத்தத்திற்குப் பிறகு, இந்த மாகாணங்களுக்குள் மறுபடியும் அபிப்பிராய வேற்றுமைகள் ஏற்பட்டன. சுதந்திரப் போராட்டத்தின்போது, இந்தப் பதின்மூன்று மாகாணங்களின் மொத்த ஜனத்தொகை சுமார் முப்பது லட்சம். இந்த முப்பது லட்சம் பேரில், இருபது லட்சம் பேரே பிரிட்டனை எதிர்த்துப் போராடினர்; பாக்கியிருந்த பத்து லட்சம் பேரும் பிரிட்டிஷ் மன்னரின் விசுவாசிகளாகவே இருந்தனர். அதாவது ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் புரட்சிக்காரர்களா கவும், ஒரு பங்கினர் ராஜ விசுசாசிகளாகவும் இருந்தனர். இப்படி இரண்டு பிரிவுகள், ஏற்பட்டுவிட்டதனாலேயே, சுதந்திர யுத்தம் எட்டு வருஷ காலம் நீடித்தது. யுத்தம், இங்கிலாந்துக்கு விரோத மாகவும் புரட்சிக்காரருக்குச் சாதகமாகவும் முடிந்து பிறகு, இங்கிலாந்துக்கு ஆதரவளித்தவர்கள், நாட்டிலே தங்க முடியாத வர்களாகி, செயிண்ட் லாரென்ஸ்2 நதியைக் கடந்து ஓடிப் போனார்கள். இவர்கள் சென்று குடியேறிய பிரதேசந்தான் கானடா. இப்பொழுதுகூட இது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த ஒரு நாடாகவே இருக்கிறது. சுதந்திர யுத்தமும் ஒருவாறு முடிந்துவிட்டது. ஆனால் மேலே குறிப்பிடப் பெற்ற பதின்மூன்று மாகாணங்களும் சமரஸப் பான்மை கொண்டு வாழவில்லை இதனால் ஒற்றுமையின்மை வளரத் தொடங்கியது. எந்த நிமிஷத்திலும் ஓர் ஐரோப்பிய வல்லரசு, இந்தப் பதின் மூன்று பிரதேசங்களையும் ஒன்று சேர்த்து விழுங்கிவிடலா மென்று நிலைமை ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில், முக்கியமான சில ராஜதந்திரிகள் ஒன்று கூடி யோசித்து, எல்லா மாகாணங்களும் ஒன்று சேர்ந்து நிருவாகம் நடத்தக் கூடிய சமஷ்டி அரசியலை ஏற்படுத்தினார்கள். இங்கிருந்துதான், அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்தின் அரசியல் ஆரம்பிக்கிறது. இந்தச் சமஷ்டி அரசியல் முறை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரப்பட்டதன் காரணமாகவே, அமெரிக்கா இப்பொழுது பெரிய பணக்கார தேசமாயிருக்கிறதென்று பலரும் அபிப்பிராய முடையவர்களாய், சீனாவிலும் சமஷ்டி அரசியலை ஏற்படுத்த வேண்டுமென்றும், அப்பொழுது சீனாவும் பணக்கார தேசமாகிவிடு மென்றும் கருதுகிறார்கள். இப்படிக்கருதுகிறவர்கள். அமெரிக்கா வுக்கும் சீனாவுக்கும் உள்ள அடிப்படையான வேற்றுமைகளைப் பற்றிக் கவனிக்கவில்லை. அமெரிக்காவில் இந்தச் சமஷ்டி அரசியல் ஏற்படுவதற்கு முன்னரேயே, சமஷ்டியில் சேர்க்கப்பட்ட பதின் மூன்று மாகாணங்களும் தனித்தனியான ஆட்சி முறையை வகுத்துக் கொண்டுத சுயமாக இயங்கி வந்தன. இதனால் இவைகளைச் சுலபமாக ஒன்று இயங்கி வந்தன. இதனால் இவைகளைச் சுலபமாக ஒன்று சேர்க்க முடிந்தது. அமெரிக்காவின் மாதிரியையே சீனாவும் பின் பற்றுவதாயிருந்தால், ஏற்கனவே ஒற்றுமைப்பட்டிருக்கும் சீனாவை, சுமார் இருபது மாகாணங்களாகப் பிரித்து, அவை களுக்குத் தனித்தனி ஆட்சி முறைகளை வகுத்துக் கொடுத்து, பிறகு அவற்றை ஒன்று சேர்க்க வேண்டும். இது சாத்தியமா? இந்த மாதிரியெல்லாம் நினைப்பதே தவறு என்று நான் கருதுகிறேன். பிறர் சொல்வதைக் கேட்டு அப்படியே திருப்பிச் சொல்வது கிளிப் பிள்ளைகளின் வேலை. நாம் அப்படி நடந்துகொள்ளலாமா? சீனாவின் நிலைமையென்ன? சீனா தற்போழ்து பதினெட்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றோடு, மஞ்சூரி யாவிலுள்ள மூன்று மாகாணங்களையும் ஸிங்கியாங் மாகாணத்தை யும் சேர்த்துப் பாருங்கள். மொத்தம் இருபத்திரண்டு மாகாணங்க ளாகின்றன. இவை தவிர, ஜிஹோல், ஸுயியுவான், கோகோனோர், மங்கோலியா, திபேத்து முதலிய பிரதேசங்கள் சீனாவின் ஆதிக்கத் துக்குட்பட்டிருக் கின்றன. மஞ்சூ அரச பரம்பரையின் இருநூற் றறுபது வருஷ ஆட்சி காலத்தில், மேலே கூறப்பட்ட பிரதேசங்கள் யாவும் மத்திய அரசாங்கத்தின் - அதாவது மஞ்சூ அரசாங்கத்தின் - நிருவாகத்தின் கீழேயே இருந்தன. இப்படியே, மிங், யுவான், ஸுங், டாங்முதலிய அரச பரம்பரைகளின் காலத்திலே. சீனாஒற்றுமைப் பட்ட ஒரு தேசமாக, மத்திய அரசாங்கத்திற் குட்பட்டு இருந்து வந்திருக்கிறது. ஒற்றுமைப்பட்ட ஆட்சியின் கீழ் வாழ்ந்திருப்பது தான் சீனாவின் சுபாவமாயிருந்து வந்திருக்கிறது. இந்த ஒற்றுமைப்பட்ட ஆட்சி காலம், சீனாவின் நற்காலமாகவும் இருந்து வந்திருக்கிறது. எவ்வளவுக்கெவ்வளவு ஒற்றுமை குறைந்ததோ அவ்வளவுக்கவ்வளவு தேசத்தில் குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாம் அறிந்துகொள்ள வேண்டிய தென்ன? ஒற்றுமைப் பட்டுள்ள சீனாவை மீண்டும் பிரிக்கக்கூடா தென்பதுதான். இப்பொழுது சீனாவில் ஒற்றுமைக் குறைவு ஏற்பட்டிருக்கிற தென்று சொன்னால், அது தற்காலிக அமிசந்தான். ராணுவத் தலைவர்கள், சில பிரதேசங்களைத் தங்கள் ஆதிக்கத்துக்குட் படுத்திக் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம். இவர்களுடைய ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைய வேண்டி, சமஷ்டி அரசியலை நாம் ஒரு ரட்சையாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. ராணுவத் தலைவர்கள், சீனாவைத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டுமென்று ஏதேனும் காரணத்தைச் சொல்லி அப்படியே பிரிப்பார் களானால், மீண்டும் சீனா தலையெடுக்க முடியாது. அமெரிக்காவில் சமஷ்டி அரசியல் திட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டதால்தான், அந்த நாடு சீரும் செழிப்பு மடைந்தது என்று சொல்லி அதே பிரகாரம் சீனாவிலும் அனுஷ்டிக்கப்பட வேண்டுமென்று சொன்னால், அது, காரணத்திற்கு முன்னர் காரியத்தை வைத்துப் பார்ப்பது போலாகும். சீனாவில் சர்வதேச ஆதிக்கத்தை ஸ்தாபிக்க ஏன் வல்லரசு களெல்லாம் முயல்கின்றன? நம்முடைய பலவீனத்தை அவை எவ்வாறு கண்டு கொண்டன? சீனாவிலுள்ள அறிஞர்கள், காலத்திற் கொவ்வாத அபிப்பிராயங்களை வெளியிடுகிறார்களென்று காரணங் கூறி, அவை சீனாவைப் பரிகாசப் பார்வையோடு பார்க்கின்றன. சீனர்கள், தங்களுடைய விவகாரங்களைத் தங்களால் கவனித்துக் கொள்ள முடியா தென்றும், இதனாலேயே அவர்களுக்கு வெளி நாட்டாருடைய மேற்பார்வை தேவை யிருக்கிறதென்றும் இந்த வெளிநாட்டரசுகள் கூறுகின்றன. கீழ் நாட்டிலேயுள்ள நாம், எல்லா மாகாணங்களும் சேர்ந்த ஒரு சமஷ்டி அரசியல் ஏற்படுத்த வேண்டுமென்று சொல்வோ மானால், சீனாவையும் ஜப்பானையும் சேர்த்த ஒரு சமஷ்டி ஏற்படுத்த வேண்டும்; அல்லது, சீனா, அன்னாம், பர்மா, இந்தியா, பர்ஷியா, ஆப்கனிஸ்தானம் முதலிய நாடுகளைச் சேர்ந்த ஒரு சமஷ்டியை ஏற்படுத்த வேண்டும். இந்த நாடுகள் எப்பொழுதுமே ஐக்கிய நாடுகளாயிருந்ததில்லை. இவை யனைத்தையும் ஒன்று படுத்தி, ஆசியா கண்டத்தைப் பணக்கார கண்டமாகச் செய்வதோடு ஐரோப்பாவையும் எதிர்க்கலாம் என்று சொன்னால் அதில் அர்த்தமிருக்கிறது. ஏற்கனவே, சீனாவிலுள்ள பதினெட்டு மாகாணங் களும், மஞ்சூ அரச பரம்பரையின் கீழ் ஒன்றுபட்ட நாடாக ஐக்கியப்பட்டிருந்தன. இந்த மஞ்சூ அரச பரம்பரையை வீழ்த்தி, அதன் ஆதிக்கத்திலிருந்து பிரதேசங்களைச் சுவாதீனப்படுத்திக் கொண்ட பிறகுதான், நாம் சீனாவில் குடியரசை ஸ்தாபிக்க முடிந்தது. அப்படி யிருக்க மீண்டும் ஏன் சீனாவைப் பல மாகாணங் களாகப் பிரிக்க வேண்டும்? சீனாவைப் பிரிக்க வேண்டுமென்று சொல்கிறவர்கள், ஒவ்வொரு மாகாணத்தையும் தங்கள் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறவர்கள் தான். இந்த நோக்கத்துடன் பல மாகாணங்களைப் பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பது நாட்டை ராணுவ ஆதிக்கத்திற்குட்படுத்துவதாகும். இதனால் சீனாவுக்கு எவ்வித நன்மையுமுண்டாகாது. அமெரிக்காவிலுள்ள பதின் மூன்று மாகாணங்களும் பிரிட்ட னிடமிருந்து விடுதலை பெற்றுச் சுதந்திரமடைந்த காலத்தில், அவைகளுக்குள் எவ்வித அரசியல் ஒற்றுமையுமில்லை. இதனால் ஐக்கியப்பட்ட ஒரு ராஜாங்கத்தைச் சிருஷ்டிப்பது மிகவும் கடின மான காரியமாயிருந்தது. இது காரணமாகவே ஹாமில்ட்டன் கட்சி யினருக்கும் ஜெப்பர்ஸன் கட்சியினருக்கும் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. தேசத்தின் அரசியல் திட்டம் தயாரிக்கப்பட்ட பிறகு, அது விஷயமாக ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதனதன் இஷ்டப் படி வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது. கடைசியில் ஹாமில்ட்டன் கட்சிதான் வென்றது. மேற்படி அரசியல் திட்டம் தயாரிக்கப்பட்ட காலத்தில் தேசத்து மகாஜனங்கள் ஹாமில்ட்டன் கட்சியென்றும் ஜெப்பர்ஸன் கட்சியென்றும் பிரிந்திருந்தார்க ளாதலினால், மேற்படி அரசியல் திட்டம், இரண்டு கட்சியினரும் சமரஸமாகப் போகக் கூடிய ஓர் அரசியல் திட்டமாக இருந்தது. மத்திய அரசாங்கத்திற்கு என்னென்ன அரசியல் அதிகாரங்கள் உண்டு என்பது அரசியல் திட்டத்திலேயே வரையறுக்கப்பட்டு விட்டது. மேற்படி திட்டத்தில் நிர்ணயிக்கப்படாத அதிகாரங்க ளெல்லாம் மாகாண அரசாங்கங்களைச் சேர்ந்தவை யென்று கூறப் பட்டன. உதாரணமாக, நாணயங்களை அச்சிடும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு அளிக்கப் பட்டது இது விஷயத்தில் மாகாண அரசாங்கங்கள் தலையிடாதபடி செய்யப்பட்டன. இங்ஙனமே, அந்நிய நாட்டு விவகாரங்கள், தேசப் பாதுகாப்பு முதலியவைகளெல்லாம் மத்திய அரசாங்கத்தின்வசம் ஒப்புவிக்கப்பட்டன. இங்ஙனம் அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுத்தது, மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் ஒரு சமரஸம் ஏற்படுத்தி வைக்க வேண்டு மென்பதற்காகத் தான். இந்தச் சமரஸ ஏற்பாட்டினால் ஜனங்கள் என்ன விதமான சாதகத்தையடைந் தார்கள்? ஒரு வரம்புக்குட்பட்ட ஓட்டளிக்கும் சுதந்திரம். காங்கிரஸூக்கு - அதாவது பார்லிமெண்ட்டுக்கு - அங்கத்தினர்கள் தெரிந்தெடுக்கவும், அப்படியே ஸ்தல ஸ்தாபன உத்தியோகஸ்தர்களைத் தெரிந்தெடுக்கவு மட்டுமே ஓட்டர்களுக்கு உரிமை இருந்தது. நிருவாக அரசாங்கத்தின் தலைவரான பிரசிடெண்டும் மற்ற செனெட்டர்களும், மறைமுகமான தேர்தலின் மூலமாகவே தெரிந்தெடுக்கப்பட்டார்கள். நாளாவட்டத்தில்தான், ஜனங்களின் வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்டது; ஜனங்கள் நேரடியாகத் தேர்தலில் கலந்து கொண்டு உத்தியோகஸ்தர்களைத் தெரிந்தெடுக்கும் உரிமை பெற்றார்கள். இதைத்தான் சர்வ ஜன வாக்குரிமை யென்று நாம் அழைக்கிறோம். இதனால், அமெரிக்காவில் சர்வஜன வாக்குச் சுதந்திரம் ஏற்பட்டது படிப்படியாகத்தான் என்பது நன்கு தெரிகிறது. முதலில் ஆண்களுக்கு மட்டுந்தான் ஓட்டுரிமை இருந்தது. இருபது வருஷங் களுக்கு முன்னால் வரை பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லாமலே இருந்தது. அப்போது, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும், ஸ்திரீ களுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டு மென்ற கிளர்ச்சி பலமாக நடைபெற்றது. ஸ்திரீகள் இந்தக் கிளர்ச்சியில் வெற்றிபெற மாட்டார்கள் என்று அப்பொழுது பலரும் நினைத்தார்கள். ஸ்திரீகளே இந்தக் கிளர்ச்சிக்கு விரோதமாயிருந்தார்கள் கடைசியில் ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னர்தான், இவர்கள் வெற்றி பெற்றார்கள். இதற்குக் காரணம் முதல் ஐரோப்பிய மகாயுத்தம். ஏனென்றால், யுத்தத்தின் பொழுது, ஆண்களிற் பெரும்பாலோர் ராணுவத்தில் சேர்ந்து யுத்தகளத்திற்குப் போய் விட்டார்கள் இதனால், ஆண்கள் என்னென்ன வேலைகளைப் பார்த்து வந்தார் களோ அவைகளை யெல்லாம் ஸ்திரீகள் பார்க்கும்படியாக நேரிட்டது. ஆண்டுகள் பார்க்கிற எல்லாக் காரியங்களையும் ஸ்திரீ களும் பார்க்க முடியு மென்ற நிலைமை ஏற்பட்டவுடன், ஆண் களுடைய உரிமைகள் ஸ்திரீகளுக்கும் இருக்க வேண்டுமென்ற அவசியம் ஏற்பட்டது. இவைகளினின்று நாம் தெரிந்து கொள்ளக் கூடியது என்ன வென்றால், மேனாடுகளில் ஏற்பட்ட புரட்சிகளுக்கெல்லாம் ஜன நாயகமே லட்சியமாயிருந்த தென்பது நன்கு புலப்படுகிறது. அப்படி இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக இந்த மேனாடுகள் ஜனநாயகத் திற்காகச் சண்டை போட்டபோதிலும், இவற்றின் இறுதியான விளைவு என்ன வென்றால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை கிடைத்ததுதான். பிரெஞ்சுப் புரட்சி கூட, ஜனநாயகத்தை லட்சியமாகக் கொண்டுதான் தொடங்கப்பட்டது. ஜனநாயகவாதிகளான ரூஸ்ஸோ முதலிய அறிஞர்கள், எல்லா மனிதர்களும் பிறக்கும்போதே சில உரிமைகளோடு தான் பிறக்கிறார்களென்றும், இவற்றை அரசர்கள் பறித்துக் கொள்ள முடியாதென்றும் சொன்னார்கள். பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டதற்கு இந்த மாதிரியான எண்ணங்கள் பரவியது தான் காரணம் புரட்சிக்குப் பிறகு, ஜனநாயக தத்தவத்தை நடை முறையில் கொணர்ந்த போது, பிரபுக்களும் அரச வமிசத்தினரும் பிரான்ஸில் தங்க முடியாமல் வெளி நாடுகளுக்கு ஓடிப்போய் விட்டார்கள். இந்தக் காலத்தில்தான், பிரெஞ்சு ஜனங்கள், பூரண ஜனநாயக தத்துவத்தைப் பரிசோதனை செய்யத் தொடங்கியிருக் கிறார்கள். ஜனங்களுக்கு அறிவோ அதிகாரஞ் செலுத்தும் ஆற்றலோ இல்லையென்று சொல்ல யாருக்கும் துணிவு ஏற்படவில்லை. அப்படி யாராவது சொன்னால், அவர்கள் புரட்சிக்கு விரோதி களென்று கருதப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்கள். இதன் விளைவாகப் பாமர ஜனங்களின் கொடுங்கோலாதிக்கம் ஏற்பட்டது. எங்கணும் கலகமும் குழப்பமும் தொடங்கின. அரச வமிசத்தினர் முதலியோர் மட்டுமல்ல, புரட்சிவாதிகளாகிய டாண்ட்டன்1 முதலியோர் கூடஉயிரிழந்தனர். இத்தகைய சம்பவங் களினால், பொதுஜனங்கள் சலித்துப் போய், ஜனநாயகத்தை எதிர்க்குமுகத்தான், நெப்போலியன்2 சக்ரவர்த்தியாக வருவதை ஆதரித்தார்கள். இதனால் ஜனநாயகத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. ஆனால் சுயேச்சாதிகாரம் முட்டுக்கட்டை போட வில்லை யென்பதும், ஜனநாயகவாதிகளிலேயே சில குறுகிய மனப்பான்மை யுடையவர்களால் முட்டுக்கட்டை போடப்பட்ட தென்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கன. இவர்களால் கூட ஜன நாயகத்திற்கு அதிகமான தீங்கு ஏற்படவில்லை. பூரண ஜனநாயகம் வேண்டுமென்று சொன்னார்களே அவர்களால்தான் ஏற்பட்டது. எப்படியென்றால், பாமர ஜனங்கள், தங்களிடம் அதிகாரம் வந்த வுடன் தங்களுக்குத் தலைவர்கள் வேண்டிய தில்லை யென்றுசொல்லி அவர்களை யெல்லாம் கொலை செய்து விட்டார்கள். தலைவர்கள் போய் விடவே, ஜனங்களுக்குச் சரியான வழியில் போகத் தெரிய வில்லை. இதை இவர்கள் நாளாவட்டத்தில் தெரிந்து கொண் டார்கள். இதனால்தான் ஜனநாயகத்தை மீண்டும் இவர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. பிரான்சிலே புரட்சி ஏற்பட்ட பிறகு, ஐரோப்பாவிலுள்ள சிறியநாடுகளாகிய டென்மார்க், ஹாலந்து, ஸ்பெயின், போர்த்துகல் முதலிய நாடுகளிலும் ஜனநாயக இயக்கங்கள் ஏற்பட்டன. இங்ஙனம் தோன்றிய இயக்கங்கள் பல எதிர்ப்புக்களைச் சமாளித்துக் கொண்டு சென்றன. இந்த ஜனநாயக வேகத்தின் முன்னர், அநேக சுயேச்சாதிகார நாடுகள் விழுந்து போயின. அப்படி விழுந்து போகாத நாடுகள் காலத்துக் கேற்றாற்போல் தங்கள் அரசாங்க முறைகளை மாற்றிக் கொண்டன. உதாரணமாக, இங்கிலாந்திலே கூட ஒரு புரட்சி யேற்பட்டது. ஓர் அரசன் கொலை செய்யப்பட்டான்3 ஆனால் பத்து வருஷத்திற்குப் பிறகு முடியாட்சியே அங்கு ஸ்தாபிதமாயிற்று. பிரிட்டிஷ் உயர்தர வகுப்பார் சந்தர்ப்பவாதிகள். ஜனநாயக எழுச்சியைத் தங்களால் தகைய முடியா தென்று கண்டுகொண்டு அதனோடு சமரசம் செய்து கொண்டு விட்டார்கள். நவீன ஜனநாயக தத்துவத்தின் ஆரம்பம் இங்கிலாந்தில்தான். அங்கு முடியாட்சி மீண்டும் ஸ்தாபிதமான பிறகு உயர்தர வகுப்பினரே அரசாங்க நிருவாகத்தை நடத்திக் கொண்டு வந்தனர். 1832ஆம் வருஷத்திற்குப் பிறகுதான் சாதாரண ஜனங்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது.1 முதல் ஐரோப்பிய மகா யுத்தத்திற்குப் பிறகே ஸ்திரீகள் வாக்குரிமை பெற்றார்கள்.2 குடியேற்ற நாடுகளை நடத்தும் விஷயத்தில்கூட, கிரேட் பிரிட்டன், ஜனநாயக எழுச்சியானது முன்னேறி வர வர, அதற்கு விட்டுக்கொடுத்து வரும் முறையில்தான் நடந்து வந்திருக்கிறது. உதாரணமாக ஐர்லாந்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் பிரிட்டன், ராணுவ பலத்தைக் கொண்டு அதை அடக்கப்பார்த்தது. ஆனால் அங்கு ஜனநாயக எழுச்சியானது வளர்ச்சியடைந்து வருவதைக் கண்டு அடக்குமுறையை நிறுத்திவிட்டு ஐரிஷ்காரர்களின் கோரிக்கைக்கு இணங்கி அவர்களுக்குச் சுதந்திரமும் அளித்தது.3 எகிப்திலும் இப்படித்தான். ஐரோப்பிய யுத்தத்தின் போது எகிப்தியர்கள் கிரேட்பிரிட்டனுக்குப் பெரிதும் துi™ செய் தார்கள். தன்னுடைய சார்பில் நின்று யுத்தம் செய்யும்படி அவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு, யுத்தம் முடிந்த பிறகு அவர்களுக்குப் பல உரிமைகளை வழங்குவதாகவும் கடைசியில் சுதந்திரத்தைக் கொடுத்து விடுவதாகவும் பிரிட்டன் வாக்களித்தது. ஆனால் யுத்தம் முடிந்த பிறகு, தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. உடனே எகிப்தில் பெரிய கிளர்ச்சி யுண்டாயிற்று. அதன் பின்னரே கிரேட் பிரிட்டன் இணங்கிக் கொடுத்தது. எகிப்தும் சுதந்திரம் பெற்றது.4 இந்தியாவும் இப்பொழுது பொதுஜன ஓட்டுரிமை விஸ்தரிக் கப்பட வேண்டுமென்று கேட்கிறது. பிரிட்டனும் கொடுப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் அரசாங்க நிருவாகத்தில் தற்போது தொழிற் கட்சியினர் பங்கெடுத்துக் கொண்டிருப்ப தொன்றைக் கொண்டே உயர்தர வகுப்பினர், ஜனநாயகத்திற்கு மெது மெதுவாக விட்டுக்கொடுத்து வருகின்றனர் என்பது நன்கு புலப்பட வில்லையா? பிரிட்டிஷ் உயர்தர வகுப்பினர் காலத்தையொட்டி நடந்துகொள்ளும் சுபாவமுடையவர்களாதலினால் தான் இங்கி லாந்தில் விபரீதமான ஆபத்துக்கள் ஒன்றும் ஏற்படாமல் பழைய முறையில் ஒரே மாதிரியான அரசாங்கம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சிகளுக்குப் பிறகு ஜனநாயக லட்சியங்கள் உலகத்தின் பல பாகங்களிலும் பரவியிருக்கின்றன. ஆனால் இந்த ஜனநாயகத்தைப்பற்றிய புதிய கோட்பாடுகளெல் லாம் ஜெர்மனியிலிருந்துதான் தோன்றின. ஜெர்மனியில்தான் ஜனநாயக எண்ணங்கள் செழித்து வளர்ச்திருக்கின்றன. அங்குத் தொழிலாளர் சங்கங்கள் அதிகம். இப்பொழுதுகூட உலகத்திலே மிகப்பெரிய தொழிற் கட்சியானது ஜெர்மனியில்தானிருக்கிறது. ஆதியிலிருந்தே ஜெர்மனியில் இந்த ஜனநாயக தத்துவம் வேரூன்றி விட்டது. ஆனால் ஐரோப்பியயுத்தம் வரையில் அது சரியான பலனைக் கொடுக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன வென்றால் ஜனநாயக எழுச்சியை எதிர்த்து நிற்க ஜெர்மானிய அரசாங்கம் கையாண்ட முறைகள் வேறே; மற்ற அரசாங்கங்கள் கையாண்ட முறைகள் வேறே. இதனால் பயனும் வேறாகவேயிருந்தது. அப்படி யானால் ஜெர்மானிய அரசாங்கம் என்ன முறைகளைத்தான் கையாண்டது? பிஸ்மார்க்1 காலத்திலிருந்தே ஜெர்மனியில் ஜனநாயக எழுச்சி தகையப்பட்டு வந்த தென்று சிலர்கூறுகிறார்கள். முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்னால் இந்த பிஸ்மார்க்தான் உலக வல்லரசு களின் அரசியல் கொள்கைகளை நிர்த்தாரணம் செய்துவந்தான். அவ்வளவு செல்வாக்கு இவனுக்கிருந்தது. இதனால் ஜெர்மனிக்கு, ஒரு பலமுள்ள நாடு என்ற பெயர் வந்தது. இவன், அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக்கொள்ளு முன்னர், ஜெர்மனிக்குள் சுமார் இருபது நாடுகள் சுயேச்சையாக வாழ்ந்து வந்தன. ஒன்றுக்கொன்று ஒற்றுமையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இந்த நிலைமையில் நெப்போலியன், ஜெர்மனியயைத் தன் ஆதிக்கத் திற்குட்படுத்திக் கொண்டான். ஜனங்கள் சகிக்க முடியாத துன்பத்தை அனுபவித்தார்கள். அப்பொழுது பிஸ்மார்க் தோன்றி எல்லா ஜெர்மானிய நாடுகளையும் ஒன்று சேர்த்து ஒருஜெர்மானிய ஏகாதிபத்தியமாக உருவப்படுத்தினான். அதிலிருந்துதான் ஜெர்மனிக்குச் சீரும் சிறப்பும் ஏற்பட்டன. பத்து வருஷங்களுக்கு முன்னால் உலகத்திலேயே பலம் பொருந்திய நாடாக ஜெர்மனியும், பணக்கார நாடாக அமெரிக்கா வும் முறையே இருந்தன. இந்த இரண்டு நாடுகளிலும் சமஷ்டி அரசாங்க முறை நடைபெறுவதால் சீனாவிலும் சமஷ்டி அரசாங் கத்தை ஏற்படுத்தி அதனை ஒரு பலம் பொருந்திய நாடாகவும் பணக்கார நாடாகவும் ஏன் செய்யக்கூடா தென்று சிலர் கேட்கி றார்கள். ஆனால் முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்னர் ஜெர்மனி யென்பது ப்ரஷ்யா மாகாணம் மட்டுமாகத்தானிருந்தது என்பதையும், பிஸ்மார்க் தோன்றி அரசியல் நிருவாகத்தை ஏற்றுக் கொண்டு ப்ரஷ்யா மாகாணத்தை ஓர் அஸ்திவாரமாக அமைத்து அதன் மீது ஜெர்மானிய ஏகாதிபத்தியம் என்னும் கட்டடத்தை அமைத்தான் என்பதையும் இவர்கள் மறந்து விடுகிறார்கள். ஜெர்மானிய ஐக்கிய ராஜ்யத்தை பிஸ்மார்க் அமைத்துக் கொண் டிருந்த போது அவனை, பிரான்ஸும் ஆஸ்திரியாவும் எதிர்த்த தற்கும் என்ன காரணம்? ஆஸ்திரியர்களும் ஜெர்மானியர்களும் ஒரே ட்யூட்டானிய ஜாதியைச் சேர்ந்தவர்கள். அப்படியிருந்தும் ஆஸ்திரியா ஏன் எதிர்த்தது? ஏனென்றால் அப்பொழுதைய ஆஸ்திரிய சக்ரவர்த்தி1 ஐரோப்பிய அரசியல் அரங்கத்தில் தனக்குத் தலைமைப் பதவி கிடைக்க வேண்டுமென்று போராடிக் கொண்டிருந்தான். எனவே, ஜெர்மனி ஒன்று சேர்ந்து தன்னைவிட ஒரு பலசாலியான நாடாகி விடுவதை அவன் பார்க்க விரும்பவில்லை. இதை உணர்ந்த திறமைசாலியான பிஸ்மார்க் 1866ஆம் வருஷம் ஆஸ்திரியா மீது படையெடுத்து அதனைத் தோற்கடித்தான். தனது வெற்றியின் பெருமிதத்தில் பிஸ்மார்க், ஆஸ்திரியாவை பூகோள படத்திலேயே இல்லாமற் செய்துவிட்டிருக்க முடியும். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனென்றால், ஜெர்மனியர்களும் ஆஸ்திரியர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களென்றும் ஆஸ்திரியர்களால் ஜெர்மனிக்குத் தொந்தரவு உண்டாகா தென்றும் பிஸ்மார்க் தெரிந்து கொண்டிருந்தான். பிஸ்மார்க், தீர்க்க தரிசனமுள்ள ஒரு ராஜதந்திரி. எதிர்காலத்தில் ஜெர்மனிக்கு ஏதேனும் தொந்தரவு உண்டாகு மானால், அது பிரிட்டனாலும் பிரான்சினாலும்தான் உண்டாகு மென்று நிர்ணயித்து வைத்திருந்தான். இந்த எண்ணத்துடன்தான், அவன் ஆஸ்திரியாவுக்குத் தாராளமான சமாதான நிபந்தனைகளை வழங்கினான். ஆஸ்திரியாவும் இந்த நிபந்தனைகளை நன்றியுடன் ஏற்றுக்கொண்டது. இந்த உடன் படிக்கை ஏற்பட்ட நான்கு வருஷங் கழித்து - 1870 ஆம் வருஷம் - ஜெர்மனி, பிரான்ஸின் மீது யுத்தம் தொடுத்து, மூன்றாவது நெப்போலியனைத்2 தோற்கடித்து பாரிஸை யும் கைப்பற்றிக்கொண்டது. சமாதானம் ஏற்பட்டதும் பிரான்ஸை சேர்ந்திருந்த ஆல்சேஸ் - லோரெயின்3 பிரதேசம் ஜெர்மனிக்குப் போய்ச் சேர்ந்தது. இந்த இரண்டு யுத்தங்களுக்குப் பிறகு, ஜெர்மனி யில் ஒற்றுமை உணர்ச்சி வலுத்தது. தனித்தனியாகப் பிரிந்திருந்த எல்லா மாகாணங்களும் ஒன்று சேர்ந்தன. இங்ஙனம் ஐக்கியப்பட்ட பிறகு, ஐரோப்பிய யுத்தம் வரையில் உலகத்திலேயே மிகவும் வல்லமை பொருந்திய அரசாங்கமாக ஜெர்மனிதான் இருந்தது. இதற்கெல்லாம் காரணம் பிஸ்மார்க்தான். பிஸ்மார்க், தான் நிருவாகத்தை ஏற்றுக்கொண்ட இருபது வருஷங்களுக்குள், ஜெர்மனியை ஒரு வல்லரசாக மாற்றிவிட்டான். பிஸ்மார்க் அதிகார பதவியிலிருந்த வரையில், ஜெர்மனியில் ஜனநாயக இயக்கம் வெற்றியடைய முடியவில்லை. பத்தொன்ப தாவது நூற்றாண்டில் இடைக்காலத்திலிருந்தே, ஜனநாயக இயக்கம் ஐரோப்பாவில் அவ்வளவு உரம் பெறவில்லை. அதற்குப் பதிலாக அபேதவாதம்1 தலையெடுக்க ஆரம்பித்தது. இந்த இயக்கம் தோன்றி யதும், ஜனங்கள் பொருளாதார சுதந்திரத்திற்காகப் போராடத் தொடங்கினார்கள். இந்தப் போராட்டமானது, தொழிலாளர் களுக்கும் முதலாளிகளுக்கும் ஏற்பட்ட போராட்டமாகும். எப்படித் தொழிலாளர் சங்கங்கள் முதன் முதலாக ஜெர்மனியில் தான் உற்பத்தியாயினவோ அதைப்போல் அபேதவாதமும் அந்த நாட்டில்தான் தோன்றியது. அபேதவாத தத்துவத்தைப் பற்றிச் சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்திருக்கிற அறிஞர்கள் எல்லோரும் ஜெர்மானியர்களே. கார்.ல் மார்க்ஸ் என்ற அபேதவாத அறிஞனைப் பற்றி உங்களெல்லோருக்கும் தெரியும். அவன் ஒரு ஜெர்மானியன். ருஷ்யாவில் புரட்சியைக் கிளப்பியவர்கள் எல்லோரும் மார்க்ஸின் சிஷ்யர்கள். ஆரம்பத்தில் ஜனநாயகத்திற்கும் அபேதவாதத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் இருந்தது. இரண்டும் ஒரு படித்தாகவே வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இங்கே ஒரு விஷயத்தைக் கவனிக்கவேண்டும். ஐரோப்பாவில் ஜனநாயக எண்ணங்கள் பரவியதன் காரணமாக, ஜனநாயகப் புரட்சிகள் ஏற்பட்டிருக் கின்றன. ஆனால் அபேதவாத எண்ணங்கள் பரவிய காலத்தில் பொருளாதாரப் புரட்சிகள் ஏற்படவில்ல. இதற்குக் காரணம் என்ன? ஜெர்மனியில் அபேதவாதம் பிறந்த காலமும் பிஸ்மார்க் அதிகாரம் வகித்து ஆட்சி நடத்திய காலமும் ஒன்றாக இருந்தன. பிஸ்மார்க்கைத் தவிர வேறு யாராவது இருந்திருந்தால், இந்த அபேதவாதத்தை, அரசியல் அதிகாரங்கொண்டு அடக்கியிருப் பார்கள். ஆனால் பிஸ்மார்க் அப்படிச் செய்யாமல் வேறு முறை களைக் கையாண்டான். அபேதவாதிகள், எல்லா உற்பத்திச் சாதனங் களும் தேசீய மயமாக வேண்டுமென்று கூறி வந்தார்கள். பிஸ்மார்க், ரெயில்வே முதலிய சாதனங்களை, அரசாங்கத்தின் சொத்தாக ஆக்கிவிட்டான். உதாரணமாக, பிஸ்மார்க் ஆட்சிக்கு வருமுன்னர், பிரான்சிலும் ஜெர்மனியிலும் இருந்த எல்லா சொத்துக்களும் பணக்காரர்களின் கையில் போய்ச் சேர்ந்தன. இந்த நிலைமையை பிஸ்மார்க் மாற்றியமைத்தான். ரெயில்வே முதலியவைகளை அரசாங்கச் சொத்தாக்கினான். தொழிலாளர் களின் வேலை நேரத்தை நிருவாகத்தின் கீழ் வந்த ரெயில்வேக்கள், பாங்கிகள் முதலியவைகளிலிருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு, தொழிலாளர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொடுத்தான். இதனால் தொழிலாளர்கள் திருப்தியடைந்தார்கள். இதற்கு முன்னர், தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கில் வெளிநாடுகளுக்கு வேலை தேடச் சென்றார்கள். ஆனால் பிஸ்மார்க் தோன்றிய பிறகு, வெளி நாடுகளி லிருந்து பலர் ஜெர்மனிக்குத் தொழில் பார்க்க வந்தார்கள். அபேதவாதம் வருமென்று எதிர்பார்த்து, அதற்கு முன்னாடியே பிஸ்மார்க் ஜாக்கிரதையாயிருந்து பல காரியங்களைச் செய்தான். அதனால் ஜனங்கள் புரட்சியில் மனஞ் செலுத்தவில்லை. ஜெர்மனி முதலிய நாடுகளில் பொருளாதாரப் புரட்சிகள் ஏற்படாததற்கு இதுதான் காரணம். ஆக, ஜனநாயக முன்னேற்றத்தின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தோமானால், அதற்குப் பல தடைகள் ஏற்பட்டு வந்திருக் கின்றன வென்பது நன்கு தெரியும். முதலாவது தடை, அமெரிக்கப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் ஜனநாயக வாதிகள் ஜெப்பர்ஸன் கட்சி யென்றும், ஹாமில்ட்டன் கட்சி யென்றும் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து விட்டது. இரண்டாவது தடை, பிரெஞ்சுப் புரட்சியின் போது ஏற்பட்டது. இந்தப் புரட்சியின் விளைவாக ஜனங்கள், அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் உரிமை பெற்றார்கள். ஆனால் இதனைத் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கினார்கள். எனவே கலகமும் குழப்பமும் ஏற்பட்டன. மூன்றாவது தடை, ஜெர்மனியில், பிஸ்மார்க்கினுடைய ராஜ தந்திரத்தினால் ஏற்பட்டது. ஜனாதிக்கத்தை இவன் நிரம்பச் சாமர்த்திய மாகச் சமாளித்து விட்டான். இங்ஙனம் தடைகள் பல ஏற்பட்ட போதிலும், ஜனநாயக மானது தன்னிச்சையாக முன்னேறிக் கொண்டுதான் செல்கிறது. இப்பொழுது இஃது ஓர் உலகப் பிரச்னையாகிவிட்டது. இதன் போக்கை இனித் தடைசெய்ய முடியாதென்று அறிஞர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். ஆனால் ஜனநாயகம் வளர வளர, சுதந்திரமும் சமத்துவமும் முன்னர் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டனவோ அவ்வாறே இதுவும் - ஜனநாயகமும் - துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடும். மேனாடுகளில் ஜனநாயக முறையானது எப்படி நடை முறையில் கொணரப்பட்ட தென்பதைச் சிறிது கவனிப்போம். அமெரிக்கர்கள், சுதந்திர யுத்தத்திற்குப் பிறகு ஓட்டுரிமை பெற்றார்கள். பணம், அறிவு, சமுதாய அந்தஸ்து முதலிய விஷயங் களில் எவ்வித வேற்றுமையுமின்றி, எல்லாரும் ஓட்டளிக்கும் உரிமை பெற்று விட்டால், அதனோடு ஜனநாயகம் முடிவு பெற்று விட்டதென்று பலரும் கருதினார்கள். ஆனால் 1914 - ஆம் வருஷம் ஐரோப்பிய யுத்தம் தொடங்கிமூன்று நான்கு வருஷங்கள் கழிந்ததி லிருந்து உலகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருவதென்ன? பல தடைகள் ஏற்பட்ட போதிலும் ஜனநாயக மானது முன்னேறிக் கொண்டு செல்வதைக் காண்கின்றோம். சமீபத்தில் ஸ்விட்ஜர் லாந்துவாசிகள், ஓட்டளிக்கும் உரிமை தவிர, சட்டங்களைச் செய்யும் உரிமையும், ஒரு சட்டம் தீமை பயப்பதாயிருந்தால் அதனைத் திருத்தும் உரிமையும் பெற்றிருக்கிறார்கள். அமெரிக்காவி லுள்ள சில மாகாணங்களில், உத்தியோகஸ்தர்களை உத்தியோகத்தி னின்று விலக்கி விடும் அதிகாரத்தையும் ஜனங்கள் பெற்றிருக் கிறார்கள். ஆனால் இந்த உரிமைகள் ஜனநாயக லட்சியத்தைப் பூர்த்தி செய்கின்றனவா? இல்லை. நாளா வட்டத்தில் தான் இது பூர்த்தியடைய முடியும். ஜனநாயகத்தின் உயர்ந்த அமிசங்கள் நிலவியுள்ள நாடுகளில், ஜனங்கள் அரசாங்க நிருவாகத்தில் என்ன விதமான பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களுக்கு என்னவிதமான அதிகாரங்கள் இருக்கின்றன? சென்ற ஒரு நூற்றாண்டில் ஜனங்களுக்குக் கிடைத் துள்ள அதிகாரங்களெல்லாம் பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கவும், பிரதிநிதிகளாகத் தெரிந்தெடுக்கப்படவுமேயாகும். ஜனப் பிரதிநிதி களாக யார் தெரிந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்கள் பார்லி மெண்ட்டில் அமர்ந்து அரசாங்கக் காரியங்களைக் கவனிக்கி றார்கள். தேச நன்மைக் குகந்த எல்லாச் சட்டங்களும் பார்லி மெண்ட்டினால் அங்கீகார மின்றி இவற்றை அமுலுக்குக் கொண்டு வர முடியாது இதற்குத்தான் ‘பிரதிநிதித்துவ அரசாங்கம்’ அல்லது ‘பார்லிமெண்ட்டரி அரசாங்கம்’ என்று பெயர். ஆனால் இந்த மாதிரியான அரசாங்க முறையினால், ஜனநாயகம் பூரணவளர்ச்சி பெறுகிறதா? ‘பிரதிநிதித்துவ அரசாங்க’ முறைஏற்பட்ட தனால் தாங்கள் பூரண திருப்தியடைந்து விட்டதாக ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் நினைத்தார்கள். 1911ஆம் வருஷத்துப் புரட்சிக்குப் பிறகு, சீனர்களாகிய நாம் பிரதிநிதித்துவ அரசாங்கத்தைப் பெறவில்லையா? அப்படியானால், இந்தப் ‘பிரதிநிதித்துவ அரசாங்க’த்தின் கீழ் என்னென்ன விதமான சாதகங்களை நாம் பெற்றிருக்கிறோம்? நம்முடைய ஜனப்பிரதிநிதிகளின் நிலைமை நமக்கு நன்கு தெரியும். ஏதேனும் கொஞ்சம் பணம் கிடைத்தால், அதற்காகத் தங்களை விற்று விடவும் அவர்கள் தயார். அப்படிப் பட்டவர்கள் எல்லா ஜனங்களாலும் தூற்றப்படுகிறார்கள். எந்த ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் கீழும் சில தீமைகள் உண்டா யிருக்கின்றன. ஜனங்கள் இதைக் கவனித்துச் சீர்திருத்தா விட்டால் தேசம் பாழ்தான். இதனால் நாம் தெரிந்துகொள்ள வேண்டுவது என்ன? ஒரு நாட்டில் ‘பிரதிநிதித்துவ அரசாங்கம்’ ஏற்பட்டு விட்டால், அந்த நாடு அரசியல் வாழ்க்கையில் ஸ்திரப்பட்டு விட்ட தென்றும், அங்குச் சமாதானம் நிலவுமென்றும் மேனாட்டார் கொண்டுள்ள கருத்து தவறு என்பதாகும். ஜனநாயகம் பிறந்த காலத்திலேயே அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. அதனைப் பின்னர் நடைமுறையில் கொண்டுவந்த காலத்தில் அஃது அநேக அவமானங்களை யடைந்தது. ஆயினும் அது வளர்ந்து கொண்டு தானிருக்கிறது. இது வரையில் ஜனநாயகத்தினால் கிடைத்த பலன் ‘பிரதிநிதித்துவ அரசாங்க’ந்தான் ஜனநாயகத்தின் எல்லையென்று ஜனங்கள் கருதுகிறார்கள். ருஷ்யாவில் சமீப காலத்தில் புதிய மாதிரியானதோர் அரசாங்க முறை ஏற்பட்டிருக்கிறது. அது ‘பிரதிநிதித்துவ அரசாங்க’ மல்ல; ஜனங்களுடைய நேர்முகமான அரசாங்கம். இந்தப் புதிய அரசாங்க முறைஎப்படி வேலை செய்கிற தென்பதை மதிப்பிட்டுப் பார்க்க நமக்குப் போதிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனால் ‘பிரதிநிதித்துவ அரசாங்’ கத்தை விட ஜனங்களுடைய நேர்முகமான அரசாங்கம் மேலான தென்றுதான் யாருமே கருதுவர். நமது ‘ஸான் மின்’ கோட்பாடுகளில் கூறப்பட்டுள்ள ஜனநாயக மானது, மேனாட்டு ஜனநாயகத்தினின்று வித்தியாசப் பட்டது. மேனாட்டுச் சரித்திரத்தை நமது ஆராய்ச்சிக்குரிய கருவி யாக உபயோகித்துக கொள்வதால் மட்டும், மேனாட்டை அப்படியே நகல் செய்தவர்களாக மாட்டோம். நாம் ஜனாதிக்க முறையை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து சீனாவையே புனர் நிர்மாணம் செய்வோம். இந்த லட்சியத்தையடைய நாம் ஜன நாயகத்தை நன்றாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். 11. மேலை நாட்டு நாகரிகம் (16 - 4 - 1924) ஜனநாயக அரசியலைப் பற்றிச் சீனர்களாகிய நாம் கொண்டிருக்கும் கருத்தெல்லாம் மேனாட்டிலிருந்து வந்தவை. இதனாலேயே நாம், நமது புரட்சியை நடத்தும் விஷயத்திலும் நமது அரசாங்கத்தை நிருவாகம் செய்யும் விஷயத்திலும் மேனாட்டு முறைகளைப் பின்பற்றி வருகிறோம். ஏனென்றால், மேனாட்டு நாகரிகம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டு வருகிறதென்பது நமது எண்ணம். யுத்த தளவாடங்களை அபிவிருத்தி செய்து கொள்ளும் விஷயத்தில், சீனாவைவிட மேனாடு எவ்வளவு முன்னேற்ற மடைந்திருக்கிறது என்று நம்மில் சிலர் எடுத்துக் காட்டு கிறார்கள். ஆயிரக்கணக்கான வருஷங்களாக, ஏன்? இருபது முப்பது வருஷங்களுக்கு முந்தி வரை, சீனர்களுடைய ஆயுதங்கள் என்னவாயிருந்தன? வில்லும், அம்பும், கத்தியும், ஈட்டியுந்தான். 1900ஆம் வருஷம் சீனாவில் பாக்ஸர் கலகம்1 தோன்றியது. பாக்சர் களுடைய நோக்கமென்ன வென்றால், எல்லா அந்நியர்களையும் சீனாவிலிருந்து வெளியே துரத்திவிட வேண்டுமென்பது. இவர் களை எட்டு அந்நிய நாடுகள் எதிர்த்து நின்றன. ஆனால் இந்த பாக்சர்கள் உபயோகித்த ஆயுதங்கள் என்ன? நீண்ட கத்திகள்! எட்டு வல்லரசுகளின் யந்திர பீரங்கிகள், சாதா பீரங்கிகள் இவைகளின் முன்னிலையில் சீனர்களுடைய வாளாயுதங்கள்! மேனாட்டு லௌகிக நாகரிகத்தை எதிர்த்து நிற்கச் சீனர்கள் கையாண்ட முறை இதுதான். பாக்சர் கலகக்காரர்கள், சீன நாகரிகத்தைவிட மேனாட்டு நாகரிகம் சிறந்ததல்லவென்று கருதினார்கள். பாக்சர்கலகம் தோன்றியதன் முக்கிய காரணம் இதுவே, இந்தப் பாக்சர் கலக காலத்தில்தான், சீனர்களுக்கும் தேசீய உணர்ச்சி என்பது இருக்கிற தென்று அந்நியர்கள் கண்டு கொண்டார்கள். இந்த 1900ஆம் வருஷ கலகத்தில் கலந்து கொண்ட பாக்சர்கள், மேனாட்டு நாகரிகத்தைத் தங்களால் எதிர்க்க முடியு மென்று கருதிய கூட்டத்தினரில் கடைசியானவர். ஆனால் இந்தப் பாக்ஸர் கலகம் தோல்வியுற்றுப் போனபிறகு, மேனாட்டு யுத்த தளவாடங்களை நம்மால் எதிர்த்து நிற்க முடியாதென்று சீனர்கள் நிச்சயமாகக் கண்டு கொண்டார்கள். இதன் பிறகுதான், மேனாட்டு முறைகளைப் பின்பற்றத் தொடங்கினார்கள். மேனாட்டாரிட மிருந்து பௌதிக ஞானத்தை மட்டும் கற்றுக் கொண்டால் போதா தென்றும், அவர்களுடைய அரசியல் ஞானத்தையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தீர்மானித்தார்கள். இதன் விளைவு என்னவாயிற்றென்றால், பாக்ஸர் கலகத்துக்குப் பிறகு, சீனர்கள் தங்கள் சக்தியில் நம்பிக்கை இழக்கலானார்கள்; அந்நிய நாட்டா ரிடம் அதிக மதிப்பு வைக்கத் தொடங்கினார்கள். சீனாவில் அந்நிய எண்ணங்கள் பல புகத் தொடங்கின. இந்த எண்ணங்கள் எப்படிப் பட்டவையென்றால், அந்நியர் களால் நடைமுறையில் கொணரப் படாதவை. ஆனால் அப்படிப்பட்ட எண்ணங்களை நாம் நடை முறையில் கொணர ஆரம்பித்தோம். பதின்மூன்று வருஷங்களுக்கு முன்னர் நாம் நடத்திய புரட்சியில், மேனாட்டு முறைகளையே பின் பற்றினோம்; ஒரு ஜனநாயக அரசாங்கத்தை ஸ்தாபித்தோம். உயர்ந்தமாதிரியைப் பின்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன், நாம் மேனாட்டு அரசியல் தத்துவங்களில் எது சிறந்த தென்று கருதப் பட்டதோ அதையும் பின்பற்றினோம். சீன சரித்திரத்தின் அரசியல் விழிப்பிலேயே இது முக்கியமான சம்பவமாகும். இதனால் சீனர்கள் பழைமையெல்லாவற்றையும் அகற்றி விட்டு, புதுமையையே மேற்கொண்டார்கள். இப்படியேதான், மேனாட்டு அரசியல் ஜன நாயகத்தையும், அதனுடைய நன்மை தீமைகளை உணராமல் சீனர்கள் பின்பற்றினார்கள். இதற்கு முன் நான் நிகழ்த்திய சில பிரசங்கங் களில், மேனாட்டில் எப்படி ஜனநாயக ஆட்சி சீர்பெற நடைபெறவில்லை யென்பதையும், அதற்கு அநேக தடைகள் ஏற்பட்டன வென்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இப் பொழுதோ, சீனா, ஜனநாயக முறை களைப் பின்பற்ற வேண்டு மென்று விரும்புகிறது. நாம் மேனாட்டைப் பின்பற்றினோமானால், அதன் முறைகளையும் பின்பற்றவேண்டும். ஆனால் மேனாட்டி லேயே, ஜனநாயகமானது ஒரு முடிவுபெற்ற பிரச்னையாக இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், நாம் மேனாட்டு ஜனநாயக தத்துவத்தை ஒரு முன் மாதிரியாகக் கொள்ள முடியாது. மேனாட்டார், பௌதிக சாஸ்திரத்தில் அதிகமான முன்னேற் றத்தை யடைந்திருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. உதாரணமாக, ராணுவ சம்பந்தமான முறைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவை நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டு வருகின்றன. நூறு வருஷத்திற்கு முன்னர் யுத்தகளத்தில் கையாண்ட முறைகள் இப்பொழுது கையாளப் படுவதில்லை. பத்த வருஷத் திற்கு முன்னாடி அனுஷ்டிக்கப்பட்ட ராணுவ முறைகள் இப் பொழுது புராதனமானவை யென்று கருதப்படுகின்றன. மேனாட்டு யுத்த ஆயுதங்களில் மிகச் செலவுள்ள ஆயுதமானது யுத்தக்கப்பல். ஒவ்வொரு யுத்தக் கப்பல் கட்டுவதற்கும் ஐந்து கோடி டாலர் முதல் பத்துகோடி டாலர்வரையில் பிடிக்கும். இப்படிப்பட்ட யுத்தக் கப்பல் கூட, பத்துவருஷங்களுக்குப் பின்னாடி பழைய மாதிரியில் அமைந் திருக்கிற தென்று சொல்லும்படியான நிலைமைக்கு வந்து விடுகிறது. 1914ஆம் வருஷத்து யுத்தத்திற்கு முன்னால் கட்டப்பட்ட யுத்தக்கப்பல்கள் இப்பொழுது பழைமையாகப் போய் அழிக்கப் பட்டுவிட்டன. இப்பொழுது நாம் சீனாவிலே எந்த மாதிரியான துப்பாக்கியை உபயோகித்துக் கொண்டிருக்கிறோமோ அந்தத் துப்பாக்கி, மேனாட்டில் பழைய ரகத்தைச் சேர்ந்தது. இதே மாதிரி எல்லாச் சாமான்களும் புதிய புதிய மாதிரியாக மாறிக்கொண்டு வருகின்றன; புதிய புதிய மாதிரிகள் கண்டு பிடிக்கப் படுகின்றன. ஆனால் அரசியல் நிருவாக விஷயத்தில், சீனாவை விட மற்ற நாடுகள் எவ்வளவு தூரம் முன்னேற்ற மடைந்திருக்கின்றன? சென்ற இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பாவிலும் அமெரிக்கா விலும் அநேக புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தப் புரட்சிகளின் பலனாக, மேனாடுகள் பல, அரசியல் துறையில், சீனாவைவிட முன்னேறியிருக் கின்றன. ஆயினும் மேனாட்டாருடைய அரசியல் நூல்கள், பழைமை யினின்று எவ்விதத்திலும் முன்னேற்றமடைய வில்லை. உதாரணமாக இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் கிரீஸ் தேசத்தில் பிளேட்டோ1 என்ற ஒரு தத்துவ ஞானி இருந்தான். இவனுடைய அரசியல் என்ற நூலை, இன்றைய அரசியல்வாதிகள் படித்து, அதிலிருந்து அநேக விஷயங்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கூறுகிறார்கள். யுத்தக் கப்பல்களைப் போல, துணிமணிகளைப் போல, அரசியல் தத்துவங்களும் பழைமையாகி விடவில்லை. இவை இன்றைக்கும் பிரயோஜனப்படும்படியே இருக் கின்றன. இதனால் மேனாட்டில் அரசியல் தத்துவங்கள் அவ்வளவு துரிதமாக முன்னேற்ற மடையவில்லையென்பது தெரிகிறது. இரண்டாயிர வருஷ காலமாக மேனாட்டு அரசியல் தத்துவம் ஏறக் குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆதலின் மேனாட்டு அரசியல் முறையை நாம் பின்பற்றுவோமானால், பெரிய தவறு செய்தவர்களாவோம். அமெரிக்காவில் சென்ற நூற்றைம்பது வருஷ காலமாக ஜன நாயக ஆட்சி முறை நிலவி வருகிறது. ஆனால் சென்ற நூற்றாண்டில் நிலவி வந்தமுறைக்கும் இன்றைய முறைக்கும் எவ்வித வேற்றுமையும் காணப்படவில்லை. இப்படியேதான் பிரெஞ்சு ஜனநாயக ஆட்சியும் முன்னேற்றத்தை யடையவில்லை. மேனாடு களில் ஏன் ஜனநாயக முறை வெற்றிகரமாக நடைபெறவில்லை யென்றால், மேற்கு வல்லரசுகள், இந்த ஜனநாயக தத்துவத்தை எப்படி அமுலுக்குக் கொண்டு வருவதென்ற பிரச்னையைச் சரி வரத் தீர்த்து வைக்காததுதான். மேனாடுகளில் ஜனநாயக தத்துவம் வளர்ச்சி பெற்றிருக்கிற தென்று சொன்னால், அஃது ஏதோ அறிஞர்கள் சிந்தித்து ஏற்படுத்தி யதன் விளைவு என்று சொல்வதற்கில்லை. ஜனங்கள் இயற்கை உணர்ச்சி வழியைப் பின்பற்றியதன் விளைவு என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரையில் மேனாட்டார் ஜனநாயக வழியில் பாதி யளவுதான் போயிருக்கின்றனர். ஜனநாயகத்தை எப்படி நடத்துவ தென்பதைப் பற்றி ஒரு திட்டம் போட்டுக் கொண்டு அதன் பிரகாரம் அவர்கள் நடக்கவில்லை. இதனால்தான் மேனாட்டார் களுக்கு அதிகமான தடைகளும் சிக்கல்களும் ஜனநாயக பாதையில் ஏற்பட்டன. சீனாவில் புரட்சி ஏற்பட்ட காலத்திலிருந்து, ஐரோப்பா, அமெரிக்கா இவைகளின் முன் மாதிரியைப் பின்பற்றி ஜனநாயக முறைகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டு மென்று விரும்பினர் சிலர். மேனாட்டில் ஜனப் பிரதிநிதித்துவ அரசாங்கம் இருப்பது போலவே சீனாவிலும் இருக்க வேண்டுமென்று கூறினர் இன்னுஞ் சிலர். ஆனால் மேனாட்டு ஜனப்பிரதிநிதித்துவ அரசாங் கத்தின் தீய அமிசங்களைத் தான் இவர்கள் எடுத்துக் கொண்டார் களே தவிர நல்ல அமிசங்களை எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் சீன பார்லிமெண்ட்டின் ஜனப்பிரதிநிதிகள் ஒழுக்கவீனர் களாகி விட்டார்கள். ஜனப் பிரதிநிதித்துவ அரசாங்கத்தில் இந்த ஒழுக்கக் குறைவு மிகவும் மோசமான அமிசமாகும். மேனாட்டு ஜனநாயக முறையிலிருந்து, சீனா, நல்ல அமிசங்களைக் கற்றுக் கொள்ளத் தவறிய தோடல்லாமல் ஒழுக்க வீனத்தையும் அடைந்துவிட்டது. அப்படியானால் சீனா, எந்த அரசியல் முறையைத் தழுவுவது? நமது நாட்டிலும் அநேக பிற்போக்கு வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் குடியரசை யகற்றி விட்டு, சுயேச்சாதிகார அரசாங்கத்தை நிறுவவேண்டு மென்று கூறுகின்றனர். இப்படிச் செய்தால்தான் சீனாவைக் காப்பாற்ற முடியுமென்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால் உலக விவகாரங்களை நன்கு அறிந்து கொண்டிருக்கிற நமக்கு இது தவறு என்று படுகிறது. இதனால் இந்தக் கொள்கையை எதிர்க்க வேண்டியதும் அவசியமாகிறது. உலகப் போக்கோடு ஒட்டி நடந்து ஜனநாயக அரசியலைச் சீனாவில் சரியான முறையில் கொண்டு செலுத்துவது நமது கடமையாகும். அரசாங்க நிருவாகத்தைச் சரியாக நடத்த வேண்டுவது அவசியமானால், முதலில் அரசாங்கம் இன்னதென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா ஜனங்களுடைய விவகாரங்களையும் கட்டுக் குட்படுத்தி நடத்தும் ஸ்தாபனத்திற்குத்தான் அரசாங்கம் என்று பெயர். ஆயிரக்கணக்கான வருஷங்களாக, சீனர்களுடைய பழக்க வழக்கங்கள், ஆசார விவகாரங்கள் முதலியன, மேனாட்டுப் பழக்க வழக்கங்களினின்று மாறுபட்டவையாயிருந்து வந்திருக் கின்றன. இதனால் சீன சமுதாயத்தை ஒழுங்கான கட்டுப் பாட்டுக் குட்படுத்த வேண்டிய நிருவாகயந்திரமும், மேனாட்டினின்று மாறுபட்டதாயிருக்க வேண்டும். மேனாட்டுயந்திர உற்பத்தி முறை களை நாம் கற்றுக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, மின்சார பல்புகளை எந்தச் சீனனும் உபயோகிக்கலாம். அதே மாதிரி நாம் மேனாட்டுப் பழக்க வழக்கங் களையும் அனுஷ்டிக்க முடியுமா? அப்படி அனுஷ்டிக்க முற்படுவோ மானால் அது தவறாகவல்லவோ ஆகும்? ‘அரசாங்க நிருவாகமும் ஒரு யந்திரம் போலத்தானே? மேனாட்டு யந்திர உற்பத்தி முறைகளை நாம் பின்பற்றுகிற போது, நிருவாக விஷயத்திலும் பின்பற்றினாலென்ன’ என்று சிலர் கேட்கலாம். இஃதொரு விதத்தில் உண்மைதான். கண்ணால் காண முடியாத ஒரு யந்திரந்தான் அரசாங்க நிருவாகம். கண்ணுக்குத் தெரிகிற - அதாவது பொருள்களை உற்பத்தி செய்கிற - யந்திர மானது பௌதிக சாஸ்திரத்தை அடிப்படை யாகக் கொண்டு அமைக்கப்படுகிறது; அரசாங்க நிருவாகம் என்கிற யந்திர வகையோ, மனோதத்துவ சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் படுகிறது. பௌதிக சாஸ்திர ஆராய்ச்சி நூற்றுக்கணக்கான வருஷங் களாக நடைபெறுகிறது. ஆனால் மனோதத்துவ சாஸ்திர ஆராய்ச்சி யானது, சென்ற இருபது முப்பது வருஷங்களாகத்தான் நடைபெறு கிறது. இதனால் இஃது அதிகமான முன்னேற்றத்தையடைய வில்லை. ஆகையால் நாம் இந்த இடத்தில் நிரம்ப ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். பௌதிக சக்திகளை உபயோகித்துக் கொள்ளும் விஷயத்தில் மேனாட்டு முறைகளை நாம் அப்படியே பின்பற்றலாம். ஏனென்றால் இந்த விஷயத்தை அவர்கள் - மேனாட்டார் - நன்றாக ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறார்கள். இதனால் அதனைக் கண்மூடித்தனமாகக் கூடப் பின்பற்றலாம். ஆனால் அரசாங்க நிருவாக விஷயத்தில் மேனாட்டார் பூரணமாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எனவே ஜனநாயக அரசியல் விஷயத்தில் மேனாட்டு முறைகளை நாம் அப்படியே பின்பற்றக் கூடாது. நாம் புதிய முறையொன்றைப் பற்றியே சிந்திக்க வேண்டும். மற்றவர்களை நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றினோமானால், தேசீய நன்மைக்கும் ஜனங்களுடைய ஜீவனோபாயத்திற்கும் நாம் பெரிய தீங்கு செய்தவர்களாவோம். மேனாட்டு ஜன சமுதாயப் பழக்க வழக்கங்களும் நம்முடைய ஜன சமுதாயப் பழக்க வழக்கங் களும் ஒரே மாதிரியில்லை. நவீன உலகப் போக்கை யொட்டியும், நம்முடைய சமுதாய நிலைமையை அனுசரித்தும் நமது தேசத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும். இப்படி உலகப் போக்கையும் சமுதாய நிலைமை யையும் அனுசரியாமற் போனால், நமது தேசம் சீரழிந்து போவதோடு ஜனங்களும் ஆபத்துக்குள்ளாவார்கள். சீனா முன்னேற்றமடைய வேண்டு மென்பது நமது விருப்பமாயிருக்குமானால், நாமே ஜனநாயக முறையை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து, அதன் லட்சியங் களை எப்படி அடைவது என்பதற்கு வழிகோலிக் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தைச் சரித்திர ரீதியாக ஆராய்ந்து பார்த்திருக்கிற மேனாட்டு அறிஞர்கள் பலர், அநேக புதிய தத்துவங்களைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஓர் அமெரிக்க அறிஞன் புதிதாக ஒரு கொள்கையை வகுத்திருக்கிறான். அதாவது தற்கால ஜனநாயக வல்லரசுகள், எல்லா வழிகளிலும் ஆதிக்கம் பெற்ற அரசாங்கங் களாகி விடுகின்றன வென்றும், இவைகளைத் தணிக்கை செய்ய ஜனங்களால் முடியாமற் போகிற தென்றும் கூறி இதற்கு ஒரு பரிகார மும் சொல்கிறான். அதாவது எல்லா ஜனங்களாலும் நியமனம் செய்யப் பட்டு எல்லா ஜனங்களுடைய நன்மைக்காகவும் உழைக்கிற சர்வசக்தியுள்ள ஓர் அரசாங்கத்தை அமைப்பது என்பதுதான் இவன் கூறும் பரிகாரம். இஃது ஒரு புதிய கொள்கைதான். மேனாட்டார் சர்வசக்தியுள்ள ஓர் அரசாங்கம் தேவை யென்றும் சொல்கிறார்கள். ஆனால் அதே சமயத்தில் அதைக்கண்டு அஞ்சவும் செய்கிறார்கள். இந்த கொள்கையை மூன்று அமிசங்களாகப் பிரிக்கலாம். முதலாவது, தங்களுடைய கட்டுப் பாட்டுக்குட்படாத சர்வ சக்தியுள்ள ஓர் அரசாங்கத்தைக் கண்டு ஜனங்கள் பயப்படுகிறார்கள் என்பது; இரண்டாவது, சர்வசக்தியுள்ள ஓர் அரசாங்கத்தை எப்படி ஜனங்களுடைய நன்மைக்காக உழைக்கும்படி செய்விக்கலாம் என்பது; மூன்றாவது, அந்த அரசாங்கத்தை ஜன விருப்பத்திற் கிசைந்தாற் போல் எப்படி நடக்குமாறு செய்விக்கலாம் என்பது. எந்தெந்த தேசங்களில் ஜனநாயகம் வளர்ச்சியடைந்து கொண்டு வருகிறதோ அங்கு அரசாங்கங்கள் அதிகார பலமிழந்து வரு கின்றன; எந்தெந்த தேசங்களில் ஜனநாயகம் பலவீனமாயிருக் கின்றதோ அங்கு அரசாங்கங்கள் அதிகாரபலத்துடன் கூடியிருக் கின்றன. சென்ற சில தலைமுறைகளாக ஐரோப்பிய அரசாங்கங் களின் நிலைமையை நாம் ஆராய்ச்சி செய்து பார்க்கிறபோது, ஏற்கனவே நான் கூறியுள்ளபடி ஐரோப்பாவிலேயே பலம் பொருந்திய ஜனநாயக அரசாங்கம் ஜெர்மனியிலிருந்த பிஸ்மார்க் அரசாங்கந்தான். உண்மையில் இந்த பிஸ்மார்க்கினுடைய அரசாங்கம் சர்வசக்தியுள்ள ஓர் அரசாங்கமாகவே இருந்தது. இது ஜனநாயகத்தை ஆதரிக்கவில்லை. அதற்கு மாறாக ஆரம்பத்தில் ஜனநாயகத்தை எதிர்க்கவும் செய்தது. பின்னர் சர்வ சக்தியுள்ள அரசாங்கமாக ஆகிவிட்டது. ஜனநாயகத்தை ஆதரித்த அரசாங்கங் களில் ஓர் அரசாங்கமாவது சர்வ சக்தியுள்ள ஓர் அரசாங்கமாக அமையவில்லை. ஸ்விட்சர்லாந்துவாசியான ஓர் அறிஞனுடைய கருத்தென்ன வென்று கவனிப்போம். ‘அநேக நாடுகள் ஜனநாயக தத்துவத்தை நடை முறையில் கொணர்ந்திருப்பதால், அந்த நாடுகளிலுள்ள அரசாங்கங்களின் அதிகார பலம் குறைந்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? தங்களால் கட்டுப்படுத்த முடியாதபடி அவ்வளவு வல்லமை தங்களுடைய அரசாங்கங்களுக்கு ஏற்பட்டு விட்டால் என்ன செய்வதென்ற அச்சம் ஜனங்களுக்கு ஏற்பட்டிருப்பதுதான்’ என்று இந்த அறிஞன் கூறுகிறான். இதனால் ஜனங்கள் எப்பொழு துமே தங்கள் அரசாங்கங்களின் விஷயத்தில் உஷாராக இருந்து வருகிறார்கள். ஏனென்றால் தங்கள் அரசாங்கங்களுக்கு அதிக சக்தி ஏற்பட்டு விடப்போகிறதேயென்று அச்சம் அவர்களுக்கு. எனவே, முதலில் ஜனநாயக நாடுகள், இந்தப் பிரச்னைக்குப் பரிகாரம் தேடவேண்டும். ஆனால் ஜனங்கள், தங்கள் அரசாங்க விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டாலொழிய இதற்குப் பரிகாரம் ஏற்படாது. ஜனங்கள் ஏன் அரசாங்கத்தை எதிர்க்கிறார்கள்? ஏனென்றால் மேனாட்டில் புரட்சிகள் ஏற்பட்ட பிறகு, கிடைத்த சுதந்திரம் சமத்துவம் முதலியன அதிகமான அபிவிருத்தி யடைந்து ஒரு சிலரால் துர்விநியோகப்படுத்தப்பட்டன. இதனால் சில விபரீதங்கள் விளைந்தன. சில நாடுகளில் அரசாங்கங்கள் இருந்த போதிலும், அரசாங்கங்கள் இல்லாத நாடுகள் போலவே ஆயின. இவைகளை யெல்லாம் முன் கூட்டியே தெரிந்த கொண்டுதான், மேற்படி ஸ்விட்சர்லாந்து நிபுணன், ஜனங்கள் அரசாங்க விஷயத்தில் கொண்டுள்ள அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று கூறினான். அப்படி அவன் சொன்னதின் கருத்தென்ன? ஜனங்களுடைய மனோபாவத்திற்கும் அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? சீன சரித்திரத்தை நாம் ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், அநேக சக்ரவர்த்திகள் ஜனங்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்திருக்கிறார் களென்பது தெரியும். ஜனங்களின் நன்மையிலேயே கண்ணுங் கருத்தையும் செலுத்தி இவர்கள் ஆண்டு வந்திருக் கிறார்கள். இப்படிப்பட்ட சக்ரவர்த்திகளின் நிருவாகத்தில் நாம் வாழ மாட்டோமா என்று ஜனங்கள் ஆவலோடு இருந்தார்கள். மேனாட்டு ஜனநாயக எண்ணங்கள் சீனாவில் பிரவேசிப்பதற்கு முன்னர், முற்காலத்துச் சீன சக்ரவர்த்திகளின் கீழ் எப்படி நமது முன்னோர்கள் நிம்மதியாகவும் சௌக்கியமாகவும் வாழ்ந்து வந்தார்களோ அப்படிப்பட்ட ஆட்சிமுறையே நமக்கும் தேவை யென்று ஜனங்கள் ஆவலுடையவர்களாயிருந்தார்கள். அரசாங்க விஷயத்தில் ஜனங்கள் கொண்டிருந்த மனப்பான்மை இது தான், ஆனால் சீனப் புரட்சி ஏற்பட்ட பிறகு, ஜனங்களுக்கு ஜனநாயக எண்ணங்கள் ஏற்பட்டுவிட்டன. பழைய கால சக்ரவர்த்திகளின் ஆட்சி முறையை அவர்கள் விரும்ப வில்லை. இந்தச் சக்ரவர்த்திகள், சுயேச்சாதிகாரம் வாய்ந்தவர்களா யிருந்தார் களென்பதற்காகத்தான் இவர்களை ஜனங்கள் விரும்பவில்லை. இதனால் தெரிவது என்ன வென்றால், ஜனநாயக எண்ணம் வலுக்க வலுக்க, ஜனங்களுக்கு, அரசாங்கத்தை எதிர்க்க வேண்டுமென்ற எண்ணமும் வலுத்து வருகிறது. அந்த அரசாங்கம் எவ்வளவு நல்ல அரசாங்கமாயிருந் தாலும் ஜனங்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவ தில்லை. ஜனங்க ளுடைய இந்த எண்ணத்தை நாம் மாற்றவில்லை யானால், அரசாங்க நிருவாகமானது எவ்வித முன்னேற்றத்தையும் அடைய முடியாமல் தடைப்படும். இந்த எண்ணத்தை நாம் எப்படி மாற்றுவது? மேனாட்டு அறிஞர்கள் இந்த எண்ணத்தை மாற்றவேண்டு மென்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர அதை எப்படி மாற்றுவதென்பதைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. நாம் புரட்சியைத் தொடங்கிய காலத்தில் ஜனநாயகத்தை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவர வேண்டுமென்று சொன்னோம். இதற்கு ஒரு வழியுண்டென்று நான் சிந்தித்து வைத்திருக்கிறேன். என்னுடைய வழி ஏறக்குறைய ஸ்விட்சர்லாந்து நிபுணனுடைய வழியைப் போன்றதாயிருக்கும். அதாவது அரசாங்க விஷயத்தில் ஜனங்கள் கொண்டுள்ள மனப்பான்மையை மாற்ற வேண்டும். இப்பொழுது மேனாட்டு அறிஞர்கள் கிளத்துகிற அநேக அரசியல் முடிவுகள், ஏறக் குறைய என்னுடைய முடிவுகளை ஒத்தனவாகவே இருக்கின்றன. அதாவது அதிகாரத்திற்கும் உரிமைகளுக்கும் வித்தியாசம் ஏற்படுத்தப் படவேண்டுமென்பது என் கருத்து. இந்தக் கருத்தை மேனாட்டு அறிஞர்கள் வெளியிடவில்லை. இதைச் சரியாக விளக்குவதற்கு முன்னர், மானிட சமுதாயம் எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப் படவேண்டு மென்பதைப் பற்றி என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். மானிட சமுதாயத்தை நான் மூன்று பிரிவாகப் பிரிக்கிறேன். முதற் பிரிவினர், ஒரு விஷயத்தைப் பார்த்தவுடனேயே கிரகிக்கக் கூடியவர்கள். இவர்கள் சிறந்த அறிவுடையவர்கள். இவர்கள் ஒரு விஷயத்தைப் பார்த்தவுடன். அதில் அநேக பிரச்னைகள் அடங்கி யிருக்கின்றன வென்பதைக் கண்டுகொண்டு விடுகிறார்கள். எதிர் காலத்தைப் பற்றி தூர திருஷ்டியுடைய வர்களாயிருக்கிறார்கள். இவர் களுடைய பல திறப்பட்ட செயல்களால் உலகம் முன்னேற்ற மடைகிறது; மானிட சமுதாயம் நாகரிக அபிவிருத்தியடைகிறது. இவர்களைச் சிருஷ்டி கர்த்தர்களென்றும், மானிட சமுதாயத்தைக் கண்டு பிடித்தவர்களென்றும் சொல்லலாம். இரண்டாவது பிரிவினர், சிறிது காலந் தாழ்ந்து விஷயங் களைக் கிரகிக்கக் கூடியவர்கள். இவர்கள் முதற் பிரிவினரைக் காட்டிலும் அறிவிலும் திறமையிலும் சிறிது குறைந்தவர்கள். இவர்களால் புதிதாக ஒன்றையும் சிருஷ்டிக்க முடியாது; புதிதாக ஒன்றையும் கண்டு பிடிக்க முடியாது; ஆனால் பிறரைப் பின்பற்றவே முடியும். முதற்பிரிவினர் என்ன பாடங் கற்றுக் கொடுக்கின்றனரோ அதன்படி இவர்களால் நடக்க முடியும். மூன்றாவது பிரிவினர் இருக்கின்றனரே இவர்கள் ஒரு விஷயத்தைப் பார்க்கவும் முடியாது. இவர்களுக்குப் பிறர்சொல்லிக் கொடுத்தாலும் தெரியாது. ஆனால் இவர்கள் செய்யென்று சொன்னால் செய்வார்கள். அரசியல் பாஷையில் முதற்பிரிவினரைச் சிருஷ்டிகர்த்தர்கள் என்றும், இரண்டாவது பிரிவினரை அபிவிருத்தி செய்கிறவர் களென்றும், மூன்றாவது பிரிவினரைச் செயல் புரிவோர் என்றும் பிரித்துக் கூறுவர். முன்னேற்றத்தின் அளவானது, செயலாற்றும் திறனைக் கொண்டே கணிக்கப்படுகிறது. ஆகையால் உலக முன்னேற்றமானது, மூன்றாவது பிரிவினரைப் பொறுத்தே இருக்கிறது. இதை ஓர் உதாரணத்தினால் விளக்குவோம். ஒரு வீடு கட்ட ஏற்பாடு செய்கிறோமென்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் இஞ்சினீர் ஒருவன் வந்து, கட்டடத்திற்கு ஒரு ‘பிளான்’ போடு கிறான். அதனைக் கட்டி முடிக்க எவ்வளவு சாமான்கள் தேவை யென்பதற்கு ஒரு ஜாபிதாவையும் கட்டட மேஸ்திரியிடம் ஒப்புவிக்கிறான், மேஸ்திரியோ, ‘பிளானை’ நன்றாகக் கவனித்துக் கொண்டு, அதற்குத் தகுந்தாற் போல் வேலையாட்களை நியமித்து வேலை வாங்குகிறான். வேலையாட்களோ மேஸ்திரி சொன்ன படி செங்கற்களை அடுக்கவும் அல்லது கீழே இறக்கவும் செய்கிறார்கள். இந்த உதாரணத்தைக் கொண்டு பார்த்தோமானால் கட்டட இஞ்சினீர் முதற்பிரிவினர்; மேஸ்திரி இரண்டாவது பிரிவினர்; வேலை யாட்கள் மூன்றாவது பிரிவினர். உலகத்தில் இதுகாறும் நிகழ்ந்திருக்கிற அரும்பெரும் செயல்களெல்லாம் இந்த மூன்று பிரிவினராலேயே நடை பெற்றிருக்கின்றன. இவர்களில் மூன்றாவது பிரிவினர் தான் பெரும் பாலோர். முதலாவது பிரிவினர்மிகக் குறைவானவர். ஜனநாயகத்தைச் செயல் முறையில் கொண்டு புகுத்தி அரசாங்கத்தைச் சீர்திருத்தம் செய்ய வேண்டு மென்று விரும்பும் எந்த நாட்டினரும் மேலே கூறப்பட்ட மூன்று பிரிவினருக்கும் வேலை யிருக்குமாறு செய்ய வேண்டும். அரசியல் ஜனநாயகமானது, இயற்கைச் சக்தியினால் மானிட சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட ஒரு பொருளல்ல; மனிதமுயற்சியினால சிருஷ்டிக்கப் படுவது. ஆதலால் நாம் ஜனநாயகத்தைக் சிருஷ்டி செய்து அதை ஜனங்களுக்குக் கொடுக்க வேண்டும். ஜனங்கள் அதற்காகப் போராடிப் பெறப்படும் என்ற நிலைமைக்கு வைக்கக் கூடாது. சமீபத்தில், கொரியா நாட்டில் உத்தியோகம் பார்த்து வரும் ஒரு ஜப்பானிய உத்தியோகஸ்தனைச் சந்தித்துப் பேசிக்கொண் டிருந்தேன். பல விஷயங்களைப் பற்றிப் பேசிவிட்டுக் கடைசியில், கொரியாவில் நடைபெறுகிற புரட்சி எந்த ஸ்திதியிலிருக்கிற தென்றும், அது வெற்றி பெறுமாவென்றும் அவனைக் கேட்டேன். அவன் இதற்குச் சரியான பதில் சொல்லவில்லை உடனே நான். ‘கொரிய ஜனங்களுடைய அரசியல் உரிமைகளைப் பற்றி ஜப்பானிய உத்தியோகஸ்தர்களுடைய அபிப்பிராயந் தானென்ன’ வென்று அவனைக் கேட்டேன். அவன் கூறினான்:- “கொரியர்களுக்கு எந்த விதமான ஜனநாயக உரிமைகள் தேவை யென்பதை நாங்கள் பொறுத்துப் பார்ப்போம். அவர்கள், தங்களுடைய உரிமை களுக்காகப் போராடத் தெரிந்து கொண்டு விட்டார்களானால், அவர்களுக்கு அரசியல் ஆதிக்கத்தைத் திருப்பிக்கொடுத்துவிட வேண்டியதுதான். ஆனால் கொரியர்கள் இன்னும் தங்களுடைய உரிமை களுக்காகப் போராடத் தெரிந்துகொள்ளவில்லை. ஆகவே கொரியாவை, ஜப்பானியர்களாகிய நாங்கள் நிருவாகம் செய்யாமல் வேறென்ன செய்வது?” இந்த மாதிரி சொல்வது, பேச்சளவில் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் புரட்சிக்காரர்களாகிய நாம், நமது ஜனங்களை, ஜப்பானியர்கள் கொரியர்களை நடத்துகிற மாதிரி நடத்தக்கூடாது. ஜனநாயகத்திற்காக ஜனங்கள் போராடட்டுமே என்று காத்திருக்கவும் கூடாது. ஏனென்றால், சீனாவில் விஷயங் களைக் கிரகித்து அதன்படி நடக்கக் கூடியவர்கள் மிகச் சொற்பமான பேரே இருக்கிறார்கள். இவர்களுக்கு தங்களுடைய உரிமைகளுக்காகப் போராட வேண்டுமென்று எப்படித் தெரியும்? ஆகையால் தூர திருஷ்டியுள்ளவர்கள் என்று தங்களைப் பெருமைப் படுத்திக்கொள்வோர், அதாவது மேலே கூறப்பட்ட முதல் பிரிவினர், தங்களுடைய சுயநலத்தை மட்டும் கவனிக்கக் கூடாது; மற்ற ஜனங்களுடைய நலத்தையும் கவனிக்க வேண்டும். முற்காலத்தில் சீனர்கள் அரசர்களைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டு வந்தார்களென்றும், இந்த அரசர்களிற் பலர் கொடுங்கோலர் களாயிருந்தமையால், ஜனங்கள் நாளாவட்டத்தில் இந்தச் சயேச்சாதி காரத்தை வெறுக்கத் தொடங்கினார்களென்றும் ஏற்கனவே நான் எடுத்துக் காட்டியிருக்கிறேன். இந்த வெறுப்புதான் பின்னர் அரசாங்கத்தை அடியோடு துவேஷிக்கும்படியான எண்ணத்தை ஜனங்களிடத்தில் கிளப்பியது. பழைய மாதிரி அரசர்களைத் தெய்வமாகப் போற்றுவதும் தவறு; தற்போதைய மாதிரி அரசாங்கத்தை துவேஷிப்பதும் தவறு. இந்த தவறான எண்ணத்தை எப்படிப் போக்குவது? இதற்குச் சீனாவின் புராதன சரித்திரத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும். சீனாவில் சுயேச்சாதிகாரம் வாய்ந்த சக்ரவர்த்திகள் தோன்றுவதற்கு முன்னர் யாவோ, ஷுன்1 என்ற பிரபல மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். இந்த இரண்டு மன்னர்களும், அரச பீடத்தைத் தங்கள் குடும்பச் சொத்தாகக் கருதாமல், தகுதிவாய்ந்த வெளியாகும் இதற்குரியவர்கள் என்ற ஏற்பாட்டைச் செய்தார்கள். அரசாங்க நிருவாகத்தை ஒழுங்காக நடத்தி ஜனங்களுடைய நன்மையைக் கவனிக்கிற திறமைசாலிகள் மட்டுமே சக்ரவர்த்திகளாக நியமனம் பெற்றார்கள். முற்காலத்தில், அன்றாட ஜீவனோபாயத்திற்காக மனிதனும் மிருகமும் போராடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சரியான அரசாங்க அமைப்பு கிடையாது. ஜனங்கள் கூட்டங் கூட்டமாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். இப்படி வாழ்ந்தவர்கள், தங்களுடைய பாதுகாப்புக்காக ஒரு பலசாலியைத் தலைவனாக நியமித்துக் கொண்டார்கள். அப்பொழு தெல்லாம் ஜனங்களுக்குக் காட்டு மிருகங்களைக் கண்டும் விஷ ஜந்துக் களைக் கண்டும் பயம் அதிகம். எனவே இவைகளினின்றும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஜனங்கள் பலசாலியான ஒருவனையே தலைவனாகத் தெரிந் தெடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அப்படிப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவன், சண்டை போடவும் தெரிந்த வனாயிருக்கவேண்டியிருந்தது. இதனால்தான் இவர்களையே ஜனங்கள் அரசர்களாகத் தெரிந்தெடுத்தார்கள். ஆனால் சீனாவில், இந்த வீரர்களைத் தவிர வேறு சிலரையும் அரசர்களாகத் தெரிந் தெடுத்திருக்கிறார்கள். ஸூயி - ஜென் - ஷி என்பவன், மரத்தைத் துளைத்து நெருப்பைக் கண்டுபிடித்தான். அதனோடு, நெருப்பின் உதவியைக் கொண்டு எப்படி ஜனங்களுக்குச் சமையல் செய்வ தென்பதையும் கற்றுக் கொடுத்தான். இதனால் ஜனங்கள் சுவைதரும் பதார்த்தங்கள் பலவற்றைச் சமைத்துச் சாப்பிடச் சௌகரியங்கள் ஏற்பட்டன. எனவே, ஜனங்கள் ஸூயி - ஜென் - ஷியை அரசனாகத் தெரிந்தெடுத்தார்கள். ஷென் - நுங் என்பவன் அநேக மூலிகை களைக் கண்டு பிடித்து அவைகளின் மூலமாக ஜனங்களுடைய வியாதிகள் பலவற்றைப் போக்கினான். இதனால் ஜனங்கள் இவனை அரசனாகத் தெரிந்தெடுத்தார்கள். ஸீன் - யுவான் என்பவன் ஆடைகளை எப்படி நெய்வது என்று கண்டுபிடித்தான். யு - சாவோ - ஷி என்பவன் வீடுகள் கட்டும் விதத்தைக் கண்டுபிடித்தான். இவர்களெல்லாரும் பிற்காலத்தில் அரசர்களானார்கள்.1 இவைகளி னின்று தெரிவது என்னவென்றால், சீனாவில் சண்டை போடுகிற வர்கள் மட்டும் அரசர்களாகக்கப் படவில்லை; பல துறைகளிலும் பயின்ற திறமைசாலிகளும் அரசர்களாக்கப் பட்டார்கள் என்பது தெரிகிறது. மேலே சொன்ன யாவோ, ஷுன் என்ற சக்ரவர்த்திகளுக்குப் பின்னர் சீனாவில் ஆதிக்கஞ் செலுத்தின சக்ரவர்த்திகளெல்லாரும் சுயேச்சாதிகாரி களாகவே இருந்தார்கள். இவர்கள் அரச பீடத்தைத் தங்களுடைய சுவாதீனத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டு மென்று விரும்பினார்கள். இப்பொழுது நமது நாற்பது கோடி ஜனங்களும் ஒரு சக்ரவர்த்தியைத் தெரிந்தெடுக்கும்படி கூறப் பட்டால், அவர்கள் யாரைச் சக்ரவர்த்தியாகத் தெரிந்தெடுப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அந்த யாவோவும் ஷூன்னும் மீண்டும் உயிருடனெழுந்து வந்தால், அவர்களைத்தான் தெரிந் தெடுப்பார்கள். மேனாட்டார், தங்களுடைய அரசர்களின் கீழ் எவ்வளவு கஷ்டப்பட்டர்களோ அவ்வளவு கஷ்டங்களைச் சீனர்கள் தங்களுடைய அரசர்களிடத்தில் அனுபவிக்கவில்லை. ஐரோப்பாவில் இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர், அரசர்களைக் கண்டு ஜனங்கள் அதிகமான துவேஷத்தை யடைந் திருந்தார்கள். இதனால் ஜனங்கள் அரசர்களை மட்டும் துவேஷிக்க வில்லை; அரசர்கள் சம்பந்தப்பட்ட எதனையும், அரசாங்கமுள்பட எல்லா வற்றையும் துவேஷிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது அங்கு ஜனநாயக எண்ணம் பரவியிருப்பதனாலும், ஜனங்களுக்கு அதிகாரம் கிடைத்திருப்பதனாலும் அரசாங்கத்தை நிராகரிப்பது ஜனங்களுக்குச் சுலபமாக இருக்கிறது. நிராகரிக்க வேண்டுமென்ற எண்ணம் இவர்களுக்கு ஏன் ஏற்பட்டதென்றும், அரசியல் ஆதிக்கத்திற்கும் திறமைக்கும் உள்ள வேறுபாட்டை இவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. நாம் இதைத் தெரிந்துகொண்டு நடக்காவிட்டால், மேனாட்டார் போகிற பாதையிலேயே நாமும் போய்க்கொண்டிருப்போம். சென்ற காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் ஓப்பிட்டுச் சில விஷயங்களைக் கூறுகிறேன். பழைய காலத்தில். நனறாகச் சண்டை போடுஞ் சக்தியுடையவர்கள் அரசர்களாக்கப் பட்டார்கள். இப்பொழுதோ பணக்காரர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, சண்டை போடுஞ் சக்தியுடையவர்களைச் சம்பளத்திற் கமர்த்திக் கொள்கிறார்கள். உதாரணமாக, சீனாவில் ராணுவ உத்தியோகஸ்தர்களாக ஊழியஞ் செய்தவர்கள், செல்வத்தைக் குவித்துக் கொண்டு அந்நியர்களுடைய ஆதிக்கத்திலிருக்கும் ஷாங்காய் போன்ற நகரங்களில் குடியேறி விடுகிறார்கள். ஜனங்கள் எங்கே தங்களைத் தாக்கித் தங்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு போகப் போகிறார்களோ வென்று பயந்து சீக்கியர் பலரைக் காவலாளிகளாக அமர்த்திக் கொள்கிறார்கள். பழைய கால முறையை நாம் அனுசரிக்கத் தொடங்குவோமானால், ஒவ்வொரு சீக்கியனும் ஒவ்வொர் அரசனாயிருக்க வேண்டியதுதான்! ஆனால் தற்போதைய சீன ராணுவ உத்தியோகஸ்தர்கள், இந்தச் சீக்கியர்களை அரசர்களாக மதிப்பதில்லை; தங்களுடைய அடிமைகளாகவே மதித்து நடத்துகிறார்கள். பெரிய பணக்கார முதலாளியொருவன், ஒரு கம்பெனியையோ தொழிற்சாலையையோ ஆரம்பிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன், திறமையுள்ள ஒருவனை மேற்படி ஸ்தாபனத் தின் காரியஸ்தனாக நியமித்துக் கொள்கிறான். இந்தக் காரியஸ்தன், தன் தொழிலில் நிபுணத்துவமும் திறமையும் கொண்டவனாயிருக் கிறான். கம்பெனியின் பங்குதாரர்கள், மேற்பார்வை செய்யும் பொறுப்பை மட்டும் ஏற்று கொள்கிறார்கள். அப்படியே ஒரு குடியரசு நாட்டிலுள்ள ஜனங்கள், கம்பெனியின் பங்குதாரர்களைப் போன்றவர்கள். குடியரசின் தலைவன் தான், கம்பெனியின் காரியஸ்தன். அரசாங்கத்தைத் திறமை வாய்ந்த ஓர் அதிகாரியாகவே ஜனங்கள் கருதவேண்டும். கம்பெனியின் பங்குதாரர்கள், காரியஸ்தனுடைய திறமையின் மூலமாகத் தொழிற்சாலையை விருத்தி செய்யலாம்; குறைந்த மூலதனத்தில் அதிக பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளலாம்; கம்பெனிக்கு அதிகமான லாபத்தைச் சம்பாதித்துக் கொடுக்கலாம். ஆனால் எந்த மேனாட்டு ஜனநாயக நாடுகளிலும், ஜனங்கள், தங்கள் அரசாங்க விஷயத்தில் இந்த விதமான மனப் பான்மை கொள்ளவில்லை. இதனால் தான், திறமையானவர்களைக் கொண்டு அரசாங்க நிருவாகத்தை நடத்த அவர்களால் முடிய வில்லை. இதன் விளைவு என்ன? திறமைசாலிகள் அரசியல் வாழ்க்கையில் பிரவேசிக்க வேயில்லை. ஜனநாயக அரசியல், தாமதமாகவே வளர்ந்து கொண்டு வருகிறது. சுயேச்சாதிகார நாடுகளாகிய ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடு களைக் காட்டிலும் ஜனநாயக நாடுகள் கொஞ்சம் மெதுவாகவே முன்னேறிக் கொண் டிருக்கின்றன வென்று சொல்ல வேண்டும். சென்ற சில வருஷங்களுக்கு முன்னர்தான், ஜப்பான், தன்னை நவீன முறையில் அமைத்துக் கொண்டது. இப்பொழுது அது பணக்கார தேசமாகவும் பலமுள்ள தேசமாகவும் இருக்கிறது. ஜெர்மனியும், ஒருகாலத்தில் ஏழையாகவும் பலவீனமுடையதாகவும் இருந்தது. ஆனால் முதலாவது வில்லியம்1 என்ற மன்னனும், பிஸ்மார்க் என்ற ராஜ தந்திரியும் அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொண்டு, எல்லா ஜெர்மானிய மாகாணங்களையும் ஐக்கியப் படுத்தி, தைரியமாகச் சில அரசியல் திட்டங்களை வகுத்து, ஜெர்மனியைச் சில ஆண்டுகளுக்குள் ஐரோப்பாவிலேயே செல்வாக் கான ஒரு நாடாகச் செய்து விட்டனர். ஆனால் ஜனநாயகத்தை ஆதரிக்கிற மற்ற வல்லரசுகள், ஜப்பானைப் போலவோ, ஜெர் மனியைப் போலவோ வேகமாக முன்னேறிச் செல்ல முடியவில்லை. இதற்குக் காரணம் என்ன வென்றால், இந்த வல்லரசுகள் ஜன நாயகத்தின் அடிப்படையான சில பிரச்னைகளை இன்னும் சரியாகச் சீர்திருத்தி அமைத்துக் கொள்ளவில்லை. அப்படிச் சீர்திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டுமானால், தேசத்தின் முக்கிய நிருவாக விஷயங்களைத் திறமையானவர்களிடம் ஒப்புவிக்க இவை சம்மதப்படவேண்டும். மேனாட்டார் இப்பொழுது எதற்கெடுத்தாலும் நிபுணர்களை உபயோகிக்க வேண்டு மென்று பேசகிறார்கள். போர் வீரர்களைப் பயிற்சி செய்விக்க வேண்டுமா? தொழிற்சாலைகளைத் திறம்பட நடத்த வேண்டுமா? எல்லாவற்றிற்கும் நிபுணர்களை நியமிக் கிறார்கள். இப்படியே அரசாங்க நிருவாகத்திற்கும் நியமிக்க வேண்டுமென்பது இவர்களுக்குத் தெரியும் ஆனால் அப்படி நியமித்துக் கொள்வதில் இவர்கள் வெற்றி பெறவில்லை. ஏனென் றால் ஜனங்களுடைய மனத்தில் ஆழ்ந்து பதிந்து போயிருக்கிற பழக்கங்களை இவர்களால் மாற்ற முடியவில்லை ஆனால் இந்தப் புதிய யுகத்தில் ராஜ்யாதிகாரத்தையும் திறமையையும் பிரித்துப் பார்க்க வேண்டும். அநேக விஷயங்களில் நாம் நிபுணர்களை நம்பவே வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு நாம் எவ்வித வரம்பை யும் இட்டுக் கொடுக்கக் கூடாது. உதாரணமாக, சமீப காலத்தி லேயே கண்டுபிடிக்கப் பட்ட மோட்டார் வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள்.1 முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன், இந்த மோட்டார் வண்டி புழக்கத்திற்கு வந்த போது, இவைகளைத் திறமையாகச் செலுத்தக் கூடிய மோட்டார் ஓட்டிகளோ, அல்லது பழுது பார்க்கக் கூடிய தொழிலாளர்களோ இல்லை. இப்பொழுது இந்தத் துறைகளில் பல நிபுணர்கள் ஏற்பட்டுவிட்டார்கள். நாம் சம்பளம் கொடுத்து அவர்களை அமர்த்திக் கொள்ள வேண்டியது தான். மோட்டார் சொந்தக்காரனே இந்த வேலைகளை யெல்லாம் செய்வதென்றால் எவ்வளவு சிரமம் பாருங்கள்! நாம் எப்பொழுது மோட்டார் வாங்கிக் கொண்டு விட்டோமோ, அப்பொழுது மோட்டார் ஓட்டியும் தேவைதான்; அவ்வப்பொழுது பழுது பார்க்கக் கூடிய நபரும் தேவைதான். இதே மாதிரி, ஒரு தேசம் ஒரு மோட்டார் வண்டிமாதிரி; அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மோட்டர் ஓட்டிகள் மாதிரி. இருபது வருஷங்களுக்கு முன்னால் மோட்டார் வாங்கின ஒரு பணக்காரன், எப்படித் தானே மோட்டார் ஓட்டியாகவும் பழுது பார்ப்போனாகவும் இருந்தானோ, அதே நிலைமையில்தான் அரசியல் ஆதிக்கம் பெற்ற மேனாட்டார் ஆரம்பத்தில் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது அரசாங்க நிருவாக விஷயத்தில் பல நிபுணர்கள் ஏற்பட்டு விட்டார்கள். சுயாதிகாரம் பெற்ற ஜனங்கள், இந்த நிபுணர்களுடைய சேவையை உபயோகித்துக் கொள்ள வேண்டுவது அவசியமாகும். ஜனங்களே எல்லா வேலைகளையும் பார்ப்ப தென்பது முடியாத காரியம். இந்த உவமையில் மற்றொரு நுண்மையான வேற்றுமையையும் நாம் கவனிக்கவேண்டும். மோட்டாரை இயக்கும் மோட்டார் ஓட்டி இருக்கிறானே அவனுக்கு, மோட்டாரை ஓட்டுவதில்தான் திறமை இருக்கிறது; மோட்டாரின் உரிமை அவனுக்குக் கிடையாது. அப்படியே மோட்டாரின் சொந்தக்காரனுக்கு அந்த மோட்டாரின் மீது எல்லாவித உரிமை களும் உண்டு; அனால் அதனை ஓட்ட அவனுக்குத் தெரியாது. எனவே, ஒரு மோட்டாரின் சொந்தக்காரன், தன் வண்டியை ஓட்டுவிக்க நிபுணர்களின் உதவியைப் பெறவே வேண்டியிருக்கிறது. இதே உவமையை, ராஜ்ய நிருவாக விஷயத்திலும் பொருத்திப் பார்க்கலாம். ராஜ்யத்தின் சொந்தக்காரர்கள் ஜனங்கள். அந்த ராஜ்யத்தை நடத்தும் அரசாங்கத்தார்தான் நிபுணர்கள. இவர்கள் திறமைசாலிகளாவும் சாமர்த்திய முடையவர்களாகவும் இருக்க வேண்டும். ஆக, எல்லா அரசாங்க உத்தியோகஸ்தர்களும் - பிரதம மந்திரி முதல் இலாகா தலைவர்கள் வரையில் எல்லாரும் - மோட்டார் ஓட்டிகள் மாதிரிதான். அவர்கள் திறமைசாலிகளாக வும் தேசவிசுவாசிகளாகவும் இருந்தால் அவர்களிடத்தில் ராஜ்ய நிருவாகத்தை ஜனங்கள் ஒப்புவித்து விடத் தயாராயிருக்க வேண்டும். அவர்களுடைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கூடாது; செயலாற்றும் துறையில் அவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும. அப்பொழுதுதான் ஒரு ராஜ்யம் வேகமாக முன்னேற முடியும். இப்படிக்கின்றி, ஜனங்களே அரசாங்க நிருவாகத்தை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிக் கொண்டு, அரசாங்க உத்தியோகஸ்தர் களின் காரியங்கள் ஒவ்வொன்றிலும் தலையிடுவார்களானால், தேசமானது வேகமாக முன்னேற்றத்தை யடையமுடியாது. என்னுடைய அனுபவத்திலிருந்து ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். நான் ஷாங்காய் நகரத்தில் வசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது, அடுத்தாற் போலிருந்த ஹாங்கியு என்ற இடத்தில் வசித்துக் கொண்டிருந்த ஒரு நண்பரைச் சந்திக்க ஒரு தினத்தைக் குறிப்பிட்டிருந்தேன். குறிப்பிட்ட தினத்தன்று அந்தச் சந்திப்பைப் பற்றி எனக்கு ஞாபகமே இல்லை. எத்தனை மணிக்கு அந்த நண்பரைச் சந்திக்க வேண்டுமென்று நான் ஏற்பாடு செய்து கொண்டிருந்தேனோ, அதற்கு ஒரு பதினைந்து நிமிஷத்திற்கு முன்னர்தான் எனக்கு ஞாபகம் வந்தது. உடனே ஒரு மோட்டாரை அழைப்பித்து, அதில் ஏறி உட்கார்ந்து, இன்னும் பதினைந்து நிமிஷத்திற்குள் ஹாங்கியுவுக்குப் போக முடியுமா வென்று, மேற்படி மோட்டார் ஓட்டியைக் கேட்டேன். அவன், கொஞ்சங் கூட யோசனை செய்யாமல் ‘போக முடியும்’ என்றான் வேகமாக ஓட்டினான் வண்டியை. ஆனால் குறுக்கு வழியில் செல்லாமல் எங்கேயோ பதினைந்து நிமிஷத்திற்குள் ஹாங்கியுவுக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டான். வண்டியிலிருந்து இறங்கின பிறகு, ‘ஏன் குறுக்கு வழியாக வராமல் சுற்றிக் கொண்டு வந்தாய்’ என்று கேட்டேன். ‘குறுக்கு வழியாக வந்தால் அநேக தெருச் சந்திகளைத் தாண்ட வேண்டும்; அங்கெல்லாம் வண்டிப் போக்கு வரத்து அதிகம் வண்டி நின்று நின்று வரவேண்டியிருக்கும். இதனால்தான சுற்றிக் கொண்டு வந்தேன். கொஞ்சம் சுற்றினாலும் சீக்கிரத்தில் வந்த விட்டேனல்லவா?’ என்று அந்த மோட்டார் ஓட்டி எனக்குச் சமாதானம் கூறினான். இதே மாதிரிதான் அரசாங்க நிருவாக விஷயத்திலும். அரசாங்க நிருவாக விஷயத்தில் ஜனங்கள் அடிக்கடி தலையிட்டார்களானால் தேசம் சீக்கிரத்தில் முன்னேற்ற மடையாது. நான் எப்படி மேற்படி மோட்டார் ஓட்டி விஷயத்தில நடந்து கொண்டேனோ அதே மாதிரிதான் ஜனங்களும் அரசாங்க நிருவாக விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டும். ஜனங்கள் அரசாங்கத்தின் சொந்தக்காரர்கள் தான். ஆனால் அதற்காக அதன் நிருவாகத்தில் அடிக்கடி தலையிடலாமா? மேனாட்டு ஜனங்கள், தங்களுடைய அரசாங்கங்களின் மீது துவேஷங் கொண்டதற்குக் காரணம் என்ன வென்றால், ராஜ்யாதி காரத்தையும் திறமையையும் வேறு வேறாகப் பிரித்துப் பார்க்க முடியாமைதான். இதனால்தான், ஜனநாயக பாதையிலுள்ள சிக்கல்களை இவர்களால் தீர்க்க முடியவில்லை. ஜனநாயக விஷயத்தில் நாம் அப்படியே மேனாட்டைத் தழுவவேண்டாம். ராஜ்யாதிகாரத்திற்கும் திறமைக்கும் வேற்றுமை யுண்டு என்பதை நாம் தெரிந்து கொள்வோமாக. ஜனநாயக எண்ணங்கள் நமக்கு ஐரோப்பாவிலிருந்தும் அமெரிக்காவி லிருந்தும் வந்தனவே யானாலும், அந்த நாடுகளில் ஜனநாயக நிருவாகம் ஒழுங்காக நடை பெறவில்லை. நமக்கோ, ஜனநாயகத்தை எப்படி உபயோகித்துக் கொள்வது, அரசாங்க விஷயத்தில் ஜனங்களிற் பெரும் பாலோருக்கு தூரதிருஷ்டி இல்லை. கொஞ்சம் தூர திருஷ்டியுள்ள நாம்தான் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அரசாங்க விஷயத்தில் ஜனங்கள் கொண்டிருக்கும் மனப்பான்மை தவறு, அதை மாற்ற வேண்டுமென்றுதான் மேனாட்டு அரசியல் வாதிகள் நினைக்கிறார் களே தவிர, அதை எப்படி மாற்றுவ தென்பது அவர்களுக்குத் தெரிய வில்லை. இதற்கு வழிஒன்றுதான். அது, ராஜ்ய நிருவாகத்தையும் திறமையையும் பிரித்துப் பார்ப்பது. ஒரு தேசத்தின் அரசாங்கம், ஜனங்களின் உரிமைகள் மீதுதான் ஸ்தாபிக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்க நிருவாகம் நிபுணர்கள் வசத்தில் விடப்பட வேண்டும். அப்பொழுதுதான் ஒரு தேசம் முன்னேற்றமடைய முடியும். 12. அரசாங்கம் - ஒரு யந்திரம் (25 - 4 - 1924) இதற்கு முந்திய பிரசங்கங்களிலிருந்து மேனாட்டு நாகரிகமும் கலைஞானமும் அதிக தூரம் முன்னேறியிருக்கின்றன வென்று தெரிந்து கொண்டோம். ஆனால் இந்த முன்னேற்றத்தை நாம் பரிசீலனை செய்து பார்த்தோமானால், யந்திர நாகரிகம் வேகமான முன்னேற்றத்தை யடைந்திருக்கிறதே தவிர, மானிட நாகரிகமானது, அதாவது அரசியல் நாகரிகமானது மெதுவான முன்னேற்றத்தையே அடைந்திருக்கிற தென்பது தெரியும். இதற்குக் காரணம் என்ன? ஒரு யந்திரத்தை நாம் நிர்மாணம் செய்தவுடன் அதனை உபயோகித்துப் பார்க்கிறோம். அதனிடத்தில் ஏதேனும் குறைகளிருந்தால் அந்தக் குறைகளை உடனே அகற்ற முயல்கிறோம் இதே மாதிரி அரசியல் ஸ்தாபனம் ஒன்றை நிறுவுவோமானால், யந்திரத்தைப்போல் அதனை அவ்வளவு சுலபமாகப் பரீட்சித்துப் பார்க்க முடிவதில்லை; அபிவிருத்திகளும் செய்ய முடிவதில்லை. புரட்சி ஏற்பட்டால்தான் சில அபிவிருத்திகள் காணப்படு கின்றன. இப்படிப் புரட்சிகளை ஏற்படுத்த முடியாவிட்டால், உபயோக மாகாத யந்திரத்தை எப்படித் தூர எறிந்து விடுகிறோமோ அப்படியே இந்த அரசியல் ஸ்தாபனத் தையும் எறிந்து விடலாம். ஆனால் இது முடியாத காரியம். இதனால்தான் மேனாட்டில் யந்திர நாகரிகம் விருத்தி யடைந் திருப்பதைப் போல அரசியல் நாகரிகம் விருத்தியடையவில்லை. மேனாட்டில் ஜனநாயக வெள்ளம் புரண்டெழுந்து வந்தபோது, எல்லா நாடுகளும் ஜனநாயகத்தை நடை முறையில் கொணர்ந்தன. முதன் முதலாகக் கொணர்ந்தது அமெரிக்கா ஐக்கிய நாடுகள் அமெரிக்கக் குடியரசு ஏற்பட்டு இன்றைக்குச் சரியாக நூற்றநாற்பது வருஷங்களாகின்றன. என்றாலும், ஜனங்களுக்கு ஆரம்பத்திலிருந்த அரசியல் உரிமைகள்தான் இப்பொழுதும் இருக்கின்றன. ஆரம்பத்தில் அரசாங்க முறை எப்படி இருந்ததோ அப்படியேதான இப்பொழுதும் இருக்கிறது. ஆனால் நூறு வருஷங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட யந்திரங்கள் இப்பொழுது பழைமையாகித் துருப்பிடித்த இரும்புத் துண்டுகளாகி விட்டன. பத்து வருஷங் களுக்கு முன்னாடி கண்டுபிடிக்கப்பட்ட யந்திரங்கள் பிரயோஜன மற்றவைகளாகி விட்டன. ஆனால் அரசியல் யந்திரம் நூறு வருஷத் திற்கு முன்னர் எப்படியிருந்ததோ அப்படியேதான் இப்பொழுதும் இருக்கிறது. ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட யந்திரங்களுக்கும் இப்பொழுதுள்ள யந்திரங்களுக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஓர் இஞ்சினை எடுத்துக் கொள் ளுங்கள். ஆரம்பத்தில் இவை ஒரு திசையாகத்தான் ஓடிக்கொண் டிருந்தன. இப்பொழுது முன்னும் பின்னுமாக ஓடுஞ் சக்தி பெற்றிருக் கின்றன. இந்த இஞ்சின் ஓடுவதற் குரிய சக்தி எப்படி உற்பத்தி செய்யப்படுகிற தென்றால், ஓர் இரும்பு ‘பாய்லரில்’ தண்ணீர் ஊற்றி அதனை நிலக்கரி கொண்டு கொதிக்க வைக்கிறார்கள். இதிலிருந்து ஆவி உண்டாகிறது. இந்த ஆவியானது ஒரு குழாய் வழியாக ஒரு ‘சிலிண்டரில்’ கொண்டு செலுத்தப்படுகிறது. அதில் ‘பிஸ்டன்’ என்று சொல்லப்படுகிற தாம்பியம் இருக்கிறது. இதுதான் இஞ்சினை இயக்குவிக்கிறது. ‘சிலிண்டரி’லுள்ள ‘பிஸ்டனா’னது ஆவியினால் உந்தப் பட்ட முன்னுக்குச் செல்கிறது. ஆவி கழிந்த வுடன், ‘சிலிண்டரி’ன் மற்றொரு பாகத்தில ஆவி பிரவேசித்து மீண்டும் முன்னுக்குத் தள்ளுகிறது. இப்படி முன்னுக்கும் பின்னுக்கும் விடாமல் ‘பிஸ்டன்’ போய்க் கொண்டிருக்கிறது. இஞ்சின் இயங்கு வதற்கு ஆதியில் தண்ணீர்தான் முக்கிய காரணப் பொருளா யிருந்தது. இப்பொழுது எண்ணெய் முதலியன உபயோகப்படுத்தப் படுகின்றன. யந்திர உதவி கொண்டு ஆயிரக் கணக்கான மைல் தூரம் கப்பல்கள் செல்கின்றன; ரெயில்வண்டிகள் செல்கின்றன. மனிதர் களும் சாமான்களும் சுலபமாகச் செல்வதற்கு இவை பெரிதும் துணையாயிருக்கின்றன. இப்பொழுது இவை ஆச்சரியகரமான விஷயங்களாயிருக்கின்றன. ஜனநாயக அரசாங்க யந்திரமானது, சென்ற நூறு வருஷமாக எவ்வித மாற்றத்தையும் அடையவில்லை. இந்த அரசாங்க யந்திர முன்னேற்றத்தைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால், ஜனங்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை ஒன்றுதான் கிடைத்திருக்கிறது. அதாவது ஜனங்களுக்கு ஒரு பக்கமாகச் செல்லும் சக்திதான் கிடைத் திருக்கிறது. தங்கள் அதிகாரத்தை அவர்கள் உபயோகிக்கத் தான் முடியுமே தவிர, அதைத் திரும்பவும் எடுத்துக்கொள்ள முடியாது. இதனுடைய வியாக்கியானம் என்னவென்றால், அரசாங்க நிருவாகத்தை நடத்துமாறு ஒரு சிலரிடத்தில் பொறுப்பை ஒரு முறை கொடுத்து விட்டோமானால், அவர்கள் பொறுப்பறிந்து நடந்து கொண்டாலும் நடந்து கொள்ளா விட்டாலும் அவர்களை அவர்கள் பதவிகளிலிருந்து விலக்க முடியாது. இதற்குக் காரணம் ஜனநாயகயந்திரத்திலுள்ள கோளாறுகள் சீர்திருத்தப் படாமைதான். அப்படிச் சீர்திருத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? முந்திய பிரசங்கங்களில் நான் கூறிய மாதிரி ஜனாதிக்கத்தையும் திறமையை யும் நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். யந்திர உதாரணத்தை மறுபடியும் கொண்டு பார்ப்போம். ஒரு யந்திரத்தில் இயக்கம் வேறாகவும் அந்த இயக்கத்திற்குக் காரணமா யுள்ள சக்தி வேறாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பாகம் இயங்கும் வேலையைச் செய்கிறது; மற்றொரு பாகம் அந்த இயக்கத்தை உண்டு பண்ணுகிறது. இங்ஙனம் தனித்தனியாகவே அவை வேலை செய்கின்றன. ஒரு கப்பலிலுள்ள யந்திரத்தை எடுத்துக்கொள்வோம். தற்காலக்கப்பல் களிற் சில, ஐம்பதினாயிரம் அல்லது அறுபதி னாயிரம் டன் நிறை யுள்ளவையாயிருக்கின்றன. இவைகளை ஓட்டு வதற்கு ஒரு லட்சம் குதிரை வேகமுடையயந்திரங்கள் தேவையா யிருக்கின்றன. ஆயினும் இவ்வளவு பெரிய இஞ்சினைக் கொண்டு ஒரு மனிதன், கப்பலைச் செலுத்தவும் செய்யலாம்; நிறுத்தவும் செய்யலாம். அவ்வளவு தூரம் யந்திர நாகரிகம் இப்பொழுது விருத்தியடைந்திருக்கிறது. யந்திரங்களின் ஆரம்ப தசையில் ஓராயிரம் குதிரை வேகமுடைய யந்திரங்களையே மனிதர்கள் உபயோகித்து வந்தார்கள். அதற்கு மேற்பட்டுப் போனால் தங்களால் கட்டுக் குட்படுத்த முடியாதென்று அவர்கள் அஞ்சினார்கள். ஒரு யந்திரத்தை இத்தனை குதிரை வேகமுடைய தென்று கணித்துக் கூறுகிறோம். எட்டு மனிதர்களின் சக்தி ஒரு குதிரைச் சக்திக்கு சமமானது. பதினாயிரம் குதிரை பலம் என்று சொன்னால் எண்பதி னாயிரம் ஆள் பலம். தற்கால யுத்தக் கப்பல்கள் முதலியன ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் குதிரை வேகமுடையவை. யந்திரத்தைச் சரியான கட்டுப் பாட்டுக்குட்படுத்த முடியாமல் போனால், அதனை ஓட்டச் செய்யலாமே தவிர நிறுத்த முடியாது இது விஷயமாகப் பரிசோதனை செய்து செய்து எத்தனையோ பேர் ஆதியில் உயிரிழந்திருக்கிறார்கள். ஒரு யந்திரத்தை ஆரம்பித்த ஓட்டிவிடலாம். ஆனால் அதனை நிறுத்த முடியாது. இத்தகைய யந்திரத்திற்கு அந்நியர்கள் ‘ப்ராங்கென்ஸ்டீன்’1 என்று சொல் வார்கள். ஆனால் இப்பொழுது இவையெல்லாம் மாறிவிட்டன. ஒரு லட்சம் இரண்டு லட்சம் குதிரை வேகமுடைய யந்திரத்தையும் ஒரு மனிதனே இப்பொழுது கொண்டு செலுத்த முடியும். ஒரு லட்சம் குதிரை பலம் என்றால் எட்டு லட்சம் ஆள் பலம்; இரண்டு லட்சம் குதிரை பலம் என்றால் பதினாறு லட்சம் ஆள் பலம் பதினாறு லட்சம் பேரை ஒரு மனிதன் கட்டுப்பாட்டுக்குட்படுத்தி நடத்திச் செல்ல முடியுமா? ஆயினும் ஒரு யந்திரத்தால் இப்படிச் செய்ய முடியும். இதனால் தற்கால யந்திர நாகரிகம் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறதென்பது நன்கு தெரிய வரும். அரசாங்கத்தை ஒரு யந்திரமாகவும், சட்டத்தை அதன் கருவியாகவும், ஜனங்கள், மேற்படி யந்திரத்தை இயக்கும் சக்தி யாகவும் ஒப்பிட்டுத் தற்கால அறிஞர்கள் பேசுகிறார்கள். உலகத் தில் யதேச் சாதிகாரம் நிலவியிருந்த காலத்தில் மன்னன்தான் இயக்குஞ் சக்தியாக இருந்தான். இந்தச் சக்தியை அவன் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகப் பிரயோகப்படுத்தி வந்தானோ அவ்வளவுக் கவ்வளவு அவன் சிங்காதனத்தின் பெருமையும் அதிகப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஜனநாயக காலத்தில், அரசாங்கத்தை இயக்குஞ் சக்தி ஜனங்களிடத்தில் தான் இருக்கிறது. அப்படி யானால், ஜனங்கள் தற்போதைய அரசாங்கத் தனிடம் அதிகமான அதிகாரமிருக்கக்கூடா தென்று ஏன் கருதுகிறார்கள்? ஏனென் றால், அரசாங்கத்தினிடம் அதிகமான அதிகாரம் இருந்தால், அந்த அதிகாரத்தைக் கொண்டு அஃது - அரசாங்கம் - ஜனங் களைத் துன்புறுத்தும் என்று பயப்படுகிறார்கள். இப்படிப் பயப் படுவதற்கும் ஒரு காரணம் உண்டு. முற்காலத்தில் அரசாங்கத் தால் ஜனங்கள் அதிக கஷ்டப்பட்டு விட்டார்கள். அந்தப் பயம் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. இதனால்தான் அரசாங் கத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று கூறு கிறார்கள். தங்களுடைய சக்திக்கு மீறி அரசாங்கத்தின் பலம் அதிகரித்து விடுமேயானால், அந்தப் பலத்தை ஒடுக்க முடியா தல்லவா? அரசாங்க யந்திரத்தை எப்படி ஒழுங்கு படுத்துவது என்பதைப் பற்றி இவர்கள் யோசிக் காமல், அதற்கு அதிக சக்தி ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வதென்று பயப்படுகிறார்கள். தற்போதைய உலகப் போக்கை நாம் பார்க்கிறபோது, ஜனநாயக எண்ணங்கள் முன்னேற்றமடைந்திருக்கின்றனவாகக் காணப் படுகின்றனவே தவிர, ஜனநாயக அரசாங்கத்தை எப்படி நிருவாகம் செய்வதென்னும் விஷயத்தில் எவ்வித முன்னேற்ற மும் காணப் படவில்லை. இதனால் மேனாட்டு ஜனநாயக அரசாங்கங்களில் ஒரே மாதிரியான அனுஷ்டான முறை யில்லை. முந்திய பிரசங்கங்களில் நான் கூறிய மாதிரி அதிகாரத்தையும் திறமையையும் நாம் தனித் தனியாகப் பிரித்துப் பார்ப்போம். யந்திரத்திற்குச் சக்தி அல்லது திறமை இருக்கிறது. போதுமான கரியும் நீரும் அதற்குக் கொடுக்கப்படுமானால் அதற்கு அதிகமான சக்தி உண்டாகும். ஆனால் அதற்கு அதிகாரம் எங்கிருக்கிறது? யந்திரத்தை இயக்குகிற இஞ்சினீர் இருக்கிறானே அவனிடத்தில் தான் அதிகாரம் இருக்கிறது. அந்த யந்திரம் எவ்வளவு குதிரை வேகமுடையதாக இருந்தாலும, அந்த இஞ்சினீர் கை தொட்டால் தான் யந்திரம் இயங்கும்; அல்லது நிற்கும். இதனால் தெரிவதென்ன வென்றால், யந்திரத்திற்குச் சக்தி இருக்கிறது; அந்தச் சக்தியை உபயோகிக்கிற அதிகாரம் இஞ்சினீரிடத்தில் இருக்கிறது. ஜனநாயக மானது அபிவிருத்தியடைந்து ஒழுங்கு படுத்தப்பட்டால் அதற்கு அதிகமான சக்தி ஏற்படும். அப்பொழுது ஜனங்கள், அரசாங்க நிருவாகத்தைப்பற்றித் தாங்கள் கொண்டுள்ள கருத்துக்களை, தங்களால் ஸ்தாபிக்கப் பட்டிருக்கும் தேசீய ஸ்தாபனங் களின் மூலமாக வெளியிட வேண்டும். அவர்கள், அரசாங்கத்தைத் தாக்கி அதனை வீழ்த்தவும் செய்யலாம்; அல்லது அதனைப் புகழ்ந்து பலப்படுத்தவும் செய்யலாம். ஆனால் அரசாங்கமானது வரம்பு மீறிச் செல்லுமானால் அதனைக் கட்டுப்படுத்த ஜனங்களுக்கு எவ்வித அதிகாரமுமில்லை ஜனங்கள் என்ன குறை கூறினாலும் அல்லது என்ன விதமாகப் புகழ்ந்தாலும் அதனால் அரசாங்கம் விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தமில்லை இதனால் இன்றைய நிலைமையில், அரசாங்க முறைகள் முன்னேற்றமடைய வில்லை. ஆனால் ஜனநாயக எண்ணங்கள் வலுத்து வருகின்றன. உலகத்திலுள்ள எல்லா நாட்டு ஜனங்களும், தற்கால அரசிய லமைப்புக்கள், தங்களுடைய எண்ணங் களுக்கும் நோக்கங் களுக்கும் இசைந்தனவாயில்லை யென்பதை நன்கு உணர்கிறார்கள். இப்பொழுது சீனா, புரட்சியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் ஜனநாயக அரசாங்க அமைப்பு வேண்டுமென்கிறோம். இந்த ஜனநாயக எண்ணங்கள் மேனாட்டிலிருநது வந்தவை. இந்த எண்ணங்களை நமது எண்ணங்களோடு எப்படிக் கலப்பதென்பதைப் பற்றியும், பொதுஜன ஆதிக்கத்தின் கீழ் நமத தேசத்தை எப்படி அபிவிருத்தி செய்வதென்பதைப் பற்றியும் நாம் யோசனை செய்து கொண்டிருக்கிறோம். இப்படி யோசிக்க ஆரம்பித்த காலத்தில், மேனாட்டு அரசியல் முறைகளை நாம் அப்படியே தழுவிக்கொள்ள வேண்டுமென்று சிலர் கூறினார்கள். இது, மேலாகப் பார்க்கிறபோது நல்ல தென்றேபடும். ஆனால் மேனாட்டார், தங்களுடைய தற்போதைய தேசீய, சமுதாய நிலைமையைக் கண்டு திருப்தியடைந் திருக்கிறார்களா? இல்லையே, முதன் முதலாகப் புரட்சி ஆரம்பித்த அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள ஜனங்கள், தங்கள் தங்கள் அரசாங்கத்தில் சீர்த்திருத்தங்கள் பல செய்யப்பட வேண்டுமென்று இன்னும் கூறிக்கொணடிருக்கவில்லையா? மற்றொரு புரட்சி நடத்த வேண்டுமென்று சொல்லிக்கொண்டிருக்கவில்லையா? ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்தான் புரட்சி செய்த இவர்கள், மீண்டும் புரட்சி செய்ய வேண்டுமென்று ஏன் கோருகிறார்கள்? இதனால் இவர்களுடைய அரசாங்கங்களில் ஏதோ கோளாறு இருக்கிறது தென்பது நன்கு தெரிய வில்லயா? அமெரிக்காவையும் பிரான்ஸை யும் நாம் அப்படியே பின்பற்று வோமானால், நமது நாட்டிலும் இன்னும் நூறு வருஷங்கழித்து புரட்சி ஏற்படுந்தானே? ஆகவே, மேனாட்டு அரசியல் முறைகளை நாம் அப்படியே தழுவுவதனால் நாம் பூரண வளர்ச்சி அடைந்துவிட முடியாதென்பது பெறப்படு கிறது. மேனாட்டு நாகரிகத்தை அப்படியே பின்பற்றியதற்குச் சில உதாரணங்களை நாம் எடுத்துக் கொள்வோம். மேனாட்டு ரெயில்வேக்கள் மாதிரி தங்கள் நாட்டிலும் ரெயில்வேக்கள் போடவேண்டுமென்று முதன் முதலாக ஜப்பானியர்கள்தான் ஏற்பாடு செய்தார்கள். சீனாவும், ரெயில்வேக்களின் அவசியத்தை உணர்ந்து, அந்நிய ரெயில்வே திட்டத்தை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தது.1 ஆனால் சீனாவின் ரெயில்வேக்களையும் ஜப்பானின் ரெயில்வேக்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஜப்பானில் ரெயில்பாதை குறுகலாயிருக்கும். சீனாவில் அகன்றிருக்கும். ஏன் இப்படி? சீனா, மேனாட்டில் ரெயில்வே சம்பந்தமாகச் சமீபகாலத் தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தது ஜப்பானில் அனுஷ்டிக்கப்பட்டது மேனாட்டுப் பழைய முறை. ஆரம்பத்தில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குறுகலான ரெயில் பாதைகள்தான் போடப்பட்டிருந்தன. ஜப்பான், தன்னையறியாமல் இந்த மாதிரியைப் பின்பற்றிவிட்டது. நாமும் இதே மாதிரி பின்பற்றிக் குறுகலான பாதைகளைப் போட்டுக் கொள்ள வேண்டுமா? இந்த மாதிரியே நமது அரசியல் விஷயங் களிலும், மேனாட்டில் பழைய காலத்தில் இருந்த சம்பிரதாயங்களை அனுஷ்டிக்கக்கூடாது. அவை என்னென்ன முறைகளைக் கண்டு பிடித்துப் பின்பற்றியிருக்கின்றன வென்பதைக் கவனித்து, அவை களையே நாம அனுஷ்டானத்திற்குக் கொண்டு வரவேண்டும். நான் முந்திக் கூறிய மாதிரி, மேனாட்டில் ஜனநாயக எண்ணங்கள் தான் வலுத்திருக்கின்றனவே தவிர, ஜனநாயக அரசியல் அமைப்புக்கள் வளர்ச்சியடையவேயில்லை. நாம் இதற்குப் பரிகாரத் தேடவேண்டு மானால் அதிகாரம் வேறே, திறமை வேறே என்று பிரிக்க வேண்டும். ஜனங்களிடத்தில் அதிகாரமும் அரசாங்கத்தி னிடத்தில் திறமையும் இருக்க வேண்டும். ஆகையால், நமக்குத் தேவையானபடி புதிய முறைகளையே கண்டுபிடிக்க வேண்டம். நமக்கு அந்தத் திறமை இருக்கிறதா? பாக்ஸர் கலகத்திலிருந்து, சீனர்கள் தன்னம்பிக்கை இழந்து விட்டார்கள். தங்களால் சுயமாக ஒன்றுஞ் செய்ய முடியாதென்றும் எதற்கெடுத்தாலும் மேனாட்டு முறைகளையே தழுவ வேண்டு மென்றும் கருதுகிறார்கள். மேனாட்டார் ஒருவகையிலே கெட்டிக்காரர்களா யிருக்கலாம். அதனால் அவர்கள் எல்லாத் துறைகளிலும் நிபுணர்கள் என்று நாம் அபிப்பிராயப்பட்டு விடுவதா? அவர்களுடைய பௌதிக சாஸ்திர அபிவிருத்தி, பாராட்டத்தக்க முறையில் முன்னேற்றமடைந் திருக்கிற தென்பது உண்மைதான். ஆனால், அதே மாதிரி அரசியல் துறையிலும் அவர்கள் முன்னேற்றமடையவில்லையே. சென்ற இரண்டு மூன்று நூற்றறாண்டுகளாகவே மேனாட்டார் விஞ்ஞானத் துறை ஒன்றில்தான் முன்னேறி யிருக்கிறார்கள். விஞ்ஞானிகள் தங்களுடைய சொந்தத் துறையிலே மட்டுந்தான் நிபுணர்களாக இருக்கலாமே தவிர, மற்ற எல்லாத் துறைகளிலும் நிபுணர்களா யிருப்பார்களென்று நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன? நியூட்டன்1 என்ற ஒரு விஞ்ஞான சாஸ்திரி இருந்தான். இவன்தான் ஆகர்ஷண சக்தியைக் கண்டு பிடித்தவன். இவன் விஞ்ஞானத் துறை ஒன்றில் மட்டுந்தான் நிபுணனாயிருந்தானே தவிர உலக விவகாரங்கள் இவனுக்கு ஒன்றும் தெரியாது. இவன் இரண்டு பூனைகளை வளர்த்துக் கொண்டிருந்தான். ஒன்று பெரியது; மற்றொன்று சிறியது இவை களிடத்தில் இவனுக்கு அதிக ஆசை. இவனுடைய பரிசோதனை அறைக்கு இவை அடிக்கடி வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும் இதற்காகத் தன்னுடைய ஆராய்ச்சியைவிட்டு விட்டாவது இவன் தன் அறைக் கதவைத் திறப்பதும் சாற்றுவதுமாயிருப்பான். இதனால் இவன் ஆராய்ச்சிக்குத் தடையேற்பட்டது. இதனால் தன்னுடைய ஆராய்ச்சிக்குப் பங்கமேற்படாமல், இந்தப் பூனைகளை எப்படிப் போகவும் வரவும் விடுவது என்று யோசித்தான். தன் அறைச்சுவரில் பெரிய பூனைக்குப் பெரிய துவாரமொன்றும், சிறிய பூனைக்குச் சிறிய துவாரமொன்றும் ஏற்படுத்தினான். இவைகளின் வழியாக அந்தப் பூனைகள் வந்து போய்க் கொண்டிருக்கட்டுமென்பது இவன் எண்ணம். என்ன வேடிக்கை பாருங்கள்! பெரிய பூனை நுழையக் கூடிய துவாரத்தில் சிறய பூனை நுழைய முடியாதா? சிறிய பூனைக் கென்று தனியாக ஒரு துவாரம் உண்டு பண்ண வேண்டுமா? இந்தப் பெரிய விஞ்ஞானி யின் புலமை இந்தச் சிறிய விஷயத்தைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் நியூட்டனை எல்லாத் துறை களிலும் வல்லுநன் என்று நாம் சொல்லிவிட முடியுமா? அதைப் போல மேனாட்டார் விஞ்ஞானத் துறையில் அபிவிருத்தி யடைந் திருக்கிறார்கள். அதனால் அவர்களை மேற்படி விஞ்ஞானத் துறை யில் நாம் பின்பற்றுவோம். அரசியல் துறையில் அவர்கள் இன்னும் எவ்வித முன்னேற்றம் காணாத அவர்களுடைய அரசியல் வழிகளை நாம் பின்பற்றாமல் ஒரு புதிய வழியைக் கண்டு பிடிப்போம். இந்தப் புதிய வழிதான். முன்னேநான் சொன்ன மாதிரி, அதிகாரம் வேறே, திறமைவேறே என்று பிரிப்பது. சீனாவில் இப்பொழுது ஜனநாயக எண்ணம் பரவியிருக்கிறது. ஆனால் இந்த எண்ணத்தைச் செயல் முறையில் கொண்டுவர நாம் இன்னும் எந்த விதமான கருவியையும் கண்டு பிடிக்கவில்லை. தீர்க்க திருஷ்டியுள்ள நாம்தான் இந்த அரசாங்க யந்திரத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். அப்படிக் கண்டு பிடிக்கப்பட்ட இந்தயந்திர மானது எல்லா ஜனங்களாலும் சாதாரணமாக, சுலபமாகக் கையாளப் படக்கூடியதாக இருக்க வேண்டும். ஜனநாயக எண்ணங்களைத் தழுவிக்கொண்டு செல்வதில், சீனா, மேனாடுகளை விடப் பிந்தியது தான். இந்த ஒரு காரணத்திற்காகவேனும், நாம் அந்த ஜனநாயகத் தில் எந்தெந்த அமிசங்கள் பயன்படாதன வென்று மேனாட்டின ரால் ஒதுக்கித் தள்ளப்பட்டு அவைகளுக்குப் பதில் புதிய முறைகள் கையாளப்படுகின்றனவோ அந்த முறைகளை மட்டும் அனுஷ் டானத்திற்குக் கொண்டு வரவேண்டும். வேறெந்த நாடேனும் ஜனநாயகத்தை நடைமுறையில் கொணர்ந்து பரீட்சித்துப் பார்த்திருக்கிறதா? ஆம்; ஸ்விட்சர்லாந்து ஓரளவுக்குப் பரீட்சித்துப் பார்த்திருக்கிறது. ஸ்விட்ஜர்லாந்து வாசிகளுக்கு அரசியல் அதிகாரம் - அதாவது ஜனாதிக்கம் - இருக் கிறது. ஆனால் பூரணமாக இல்லை. இப்படிப்பட்ட அரைகுறை யான ஜனாதிக்க முறைகளைக் கூட மற்றப் பெரிய வல்லரசுகள் பரீட்சித்துப் பார்க்கவில்லை. இதற்குக் காரணம் என்னவாயிருக்கக் கூடும்? ஜப்பானில் எப்படி முதலில் குறுகிய ரெயில் பாதைகளை அமைத்து விட்டு, பிறகு அதனை மாற்றியமைப்பது அதிகச் செலவு பிடிக்குமென்றும் கடினமான காரியமென்றும் கருதுகிறார்களோ அதைப் போல் மேனாட்டு அறிஞர்கள் தங்கள் நாடுகளில் ஏற்கனவே யுள்ள ஜனநாயக முறைகளை மாற்றியமைப்பது கடினமான காரியமாகு மென்றும், பொருளாதாரத் துறையில் நன்மை ஏற்படா தென்றும் கருதுகிறார்கள். ஜனநாயகத்தின் புதிய முறைகள் இவர் களுக்குத் தெரியும். ஆனால் அவைகளை உபயோகிக்கப் பயப்படு கிறார்கள். சீனாவிலுள்ள நமக்கு எந்தவிதமான பழைய ஜனநாயக முறை களையும் இழந்துவிடப் போகிற பயமில்லை. எனவே புதிய முறைகளை, சௌகரியமான முறைகளை அனுஷ் டானத்திற்குக் கொண்டுவர வேண்டும். ஜனநாயகத்தின் இந்தப் புதிய முறைகள்தான் யாவை? முதலாவது ஓட்டுரிமை. இது, முதல் முதலாகக் கண்டு பிடிக்கப் பட்ட யந்திரம் போல; அதாவது யந்திரம் முன்னுக்குப் போக முடியுமே தவிர பின்னுக்குப் போக முடியாது. அதாவது ஜனங்கள் தங்களுடைய ஓட்டுரிமையைக் கொண்டு ஓர் அரசாங்கத்தை நிறுவலாம்; ஆனால் அப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தை விலக்க முடியாது. இரண்டாவது, அரசாங்கத்தை நீக்கும் உரிமை. அதாவது முன்னுக்குச் செல்லும் யந்திரத்தைப் பின்னுக்கிழுக்கும் சக்தி இருப்பது போல. இந்த இரண்டு உரிமைகளும் ஜனங்களுக்கு இருந்தால்தான் அவர்கள் ஓர் அரசாங்கத்தை நியமிக்கவும் விலக்கவும் அதிகார முடையவர்களாக இருப்பார்கள். மூன்றாவது, சட்டமியற்றும் உரிமை. எல்லா ஜனங்களும் சேர்ந்து, தங்களுக்கு ஒரு சட்டம் சாதகமாயிருக்குமென்று அபிப் பிராயப்பட்டால் அந்தச் சட்டத்தை இயற்றும் உரிமை அவர் களுக்கு இருக்க வேண்டும். நான்காவது, ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்யும் உரிமை. ஒரு சட்டம் அனுஷ்டானத்தில் தீமை பயப்பதா யிருந்தால் அதனை ரத்து செய்துவிட்டு, அதனுடைய ஸ்தானத்தில் வேறொரு சட்டத்தை இயற்றி அனுஷ்டானத்திற்குக் கொண்டு வர வேண்டுமென்று அரசாங்கத்திற்குச் சொல்லும் உரிமையும் ஜனங்களுக்கு இருக்க வேண்டும். எந்த நாட்டில் இந்த நான்கு உரிமைகளும் ஜனங்களுக்கு இருக்கின்றனவோ அந்த நாட்டில்தான் பூரணஜனநாயகம் நிலவி யிருக்கிறதென்று சொல்லலாம். ஆனால் ஜனங்களுக்கு இந்த உரிமைகள் இருப்பதாகச் சட்ட புத்தகத்தில் இருந்தால் மட்டும் போதாது. இந்த உரிமைகளை ஜனங்கள் அனுஷ்டிக்கும்படி செய்யப்படுவார்களானால் தான் அந்த நாட்டில் பூரணமான, நேர்முகமான ஜனாதிக்கம் ஏற்பட்டிருக்கிற தென்று சொல்ல முடியும். அதாவது எல்லா ஜனங்களும் சேர்ந்து அரசாங்கத்தை நடத்துகிறார்களென்று சொல்ல முடியும். இதன்படி பார்த்தால், நமது நாற்பது கோடி மக்களும் அரசர்கள். எல்லோருக்கும் அரச உரிமை உண்டு. அரசாங்கத்தைத் தாங்களே நேரே இருந்து நடத்தும் உரிமைடையவர்களாயிருப்பார்கள். இந்த ஜனாதிக்கத்திற்குட்பட்ட ஓர் அரசாங்க மானது, தன்னுடைய வேலையைத் திறம்படச் செய்ய என்னென்ன முறை களைக் கையாள வேண்டும்? ஓர் அரசாங்கமானது, ஜனங்களுடைய விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு ஒழுங்காகத் தன் காரியங்களைச் செய்து கொண்டு போக வேண்டுமானால் அதற்கு ஐந்து விதமான அதிகாரங்களைக் கொடுக்க வேண்டும். அவை முறையே (1) நிருவாக பரிபாலனம், (2) சட்ட பரிபாலனம், (3) நீதி பரிபாலனம் (4) உத்தியோகஸ்தர்கள் நியமனம் (5) கண்காணிப்பு என்பவையாம். இதன்படி, ஜனங்களுக்கு நான்கு விதமான உரிமைகளும், அந்த ஜனங்களுடைய அரசாங்கத்திற்கு ஐந்துவிதமான அதிகாரங்களும் இருக்கின்றன. ஜனங்களுடைய நான்கு உரிமைகளும், அரசாங்கத் தின் ஐந்து அதிகாரங்களைக் கட்டுப்பாட்டுக்குட்படுத்தி நடத்திச் செல்லுமானால் அப்பொழுதுதான் ஒரு நாட்டில் பூரண ஜனநாயக அரசாங்கம் இருப்பதாகச் சொல்ல முடியும். இதனை இன்னும் தெளிவுபடுத்தும் பொருட்டு ஒரு படம் போட்டுக் காட்டுவோம். மேலேயுள்ள நான்கு உரிமைகளும் ஜனங்களுடையது; கீழேயுள்ள ஐந்து அதிகாரங்களும் அரசாங்கத்தினுடையது. ஸ்விட்சர்லாந்தில் ஜனங்களுக்கு மூன்று விதமான உரிமைகள் மட்டும் இருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தை நீக்கும் உரிமை இல்லை. அமெரிக்காவிலுள்ள சில வட மேற்கு மாகாணங்களில் ஜனங்களுக்கு நான்கு விதமான உரிமைகளும் இருக்கின்றன. ஆனால் பொதுவாக உலகத்திலுள்ள பெரும் பாலான நாடுகளில் ஜனங்களுக்கு ஓட்டுரிமை மட்டுந்தான் இருக்கிறது. ஜனங்களுக்கு எந்த நாட்டில் நான்கு உரிமைகளும் இருக்கின்றனவோ அந்த நாடு சௌக்கியமாக இருக்கிறது. அஃது அனுபவத்தில் கண்ட உண்மை; ஆராய்ச்சியால் கண்ட விஷயமல்ல. அரசாங்கத்தின் அதிகாரங்கள் யாவும் - அதாவது மேலே சொன்ன ஐந்து அதிகாரங்கள் - முற்காலத்தில் அரசர்கள் கையி லேயே இருந்தன. ஆனால் புரட்சிகள் ஏற்பட்ட பிறகு அங்கு - மேனாட்டில் - அரசாங்க அதிகாரங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. உதாரணமாக மூன்று விதமான இலாகாக்களாக அரசு பிரிக்கப்பட்டு நல்ல பலன் பெற்று வருகிறது. அமெரிக்காவையே மற்ற நாடுகளும் பின்பற்றியிருக்கின்றன. அவை முறையே நிருவாக பரிபாலனம், சட்ட பரிபாலனம், நீதி பரிகாலனம் ஆனால் நான், இந்த மூன்று அதிகாரங்களோடுயிருக்கிறேன். பிந்திய இரண்டு அதிகாரங்கள் - அதாவது உத்தியோகஸ்தர்கள் நியமன அதிகாரம், கண்காணிப்பு அதிகாரம் - எங்கிருந்து வந்தன வென்று நீங்கள் கேட்கலாம். சீன அரசியல் சரித்திரத்தின் புராதன அமிசங்கள் இவை. புராதன காலத்துச் சீனாவில் அரசாங்க உத்தியோகஸ்தர் களை நியமிப்பதற் கென்று பரீட்சைகள் நடத்தப்பட்டன. இதே மாதிரி, ஒழுங்கான முறையில் கண்காணிப்பு அதிகாரமும் அரசாங் கத்திற்கு இருந்து வந்தது. இந்தக் கண்காணிப்பு அதிகாரத்தில், தவறிப்போன அதிகாரிகளைத் தண்டிக்கும் அதிகாரமும் சேர்ந் திருந்தது. சீனாவில், சிறந்த நிபுணர்கள்தான், திறமைசாலிகள்தான் அரசாங்க சேவைக்கென்று நியமிக்கப்பட்டார்கள். இந்த முறையையே இப்பொழுது மேனாட்டார் பின்பற்றியிருக்கின்றனர். புராதன சீனாவில், சக்ரவர்த்தியினிடத்தில் நிருவாக பரிபாலனம், சட்ட பரிபாலனம், நீதிபரிபாலனம் ஆகிய மூன்று அதிகாரங்களும் இருந்தன. பிந்திய இரண்டு அதிகாரங்களாகிய உத்தியோகஸ்தர்கள் நியமனமும், கண்காணிப்பும் சக்ரவர்த்தியினின்றும் பிரிக்கப்பட் டிருந்தன. இந்த இரண்டு அதிகாரங்களைக் கொண்டு பழைய சீன அரசாங்கங்கள் சில தீமைகளையும் உண்டு பண்ணின. மேனாட்டு அரசாங்கங்களிடத்தில் நிருவாக பரிபாலனம், நீதி பரிபாலனம், சட்ட பரிபாலனம் ஆகிய மூன்று அதிகாரங்கள் மட்டுமே இருந்தன. இவற்றை அந்த நாட்டு அரசாங்கங்கள் துஷ்பிரயோகம் செய்தன. ஆக, நம்முடைய கடமை என்னவென்றால், மேனாட்டிலும் சீனாவிலுமிருந்த அரசாங்க அதிகாரங்களில் தீயனவற்றை விலக்கி நல்லனவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாம், ஜனங்களுக்காக, ஜனங்களால், ஜனங்களுடைய அரசாங்க மொன்றை அமைக்க முடியும். மூன்றாவது பகுதி * வாழ்க்கைத் தத்துவம் * (மின் - ஷெங்க்) நேற்றைய தினம் மரண காலம் இன்றுதான் வாழ்க்கைக் காலம்; ஆகையால் பழைய தீமைகளை அகற்றி, புதிய ஜாதியை நாம் அமைப்போம். தேசத்தைப் புனர் ஜீவனத்திற்குக் கொண்டு வரும் மகத்தான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்வோம். நாம் விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்போம். நமக்கு நம்பிக்கை, நாணயம், அவமானம் ஆகிய மூன்றும் தேவை. நமது உடை, உணவு, வாழ்க்கை முதலியன எளிமை யாகவும், ஒழுங்காகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். நாம் கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சீனப் பிரஜைகள் என்ற ஹோதாவில் நாம் போதிய அறிவுடையவர்களாகவும் ஒழுக்க முடையவர்களாகவும் இருக்க வேண்டும். நமது செயல்கள் வீரமுள்ளனவாகவும் துரிதமாகவும் இருக்க வேண்டும். நாம் சொன்னபடி செய்ய வேண்டும்; அல்லது சொல்லாமலே செய்ய வேண்டும். - சீன நவ ஜீவன இயக்கத்தின் எட்டு கோட்பாடுகள். 13. ஜீவனோபாயம் (3 - 8 - 1924) மின் - ஷெங்க் அல்லது ஜனங்களின் வாழ்க்கை என்பதைப் பற்றி இன்று பேசப் போகிறேன். மின்ஷெங் என்ற இந்தச் சொற்றொடர் சீனாவில் மிகப் பழமையானதுதான். ஆனால் இதற்கு நாம் வாயளவில் தான் மதிப்புக் கொடுக்கிறோமே தவிர, இதன் உள்அர்த்தத்தைத் தெரிந்து கொள்கிறோ மில்லை. இதனால்தான் இன்று இதனைப் பற்றி வியாக்கியானஞ் செய்ய விரும்புகிறேன். மின் - ஷெங் என்பதை நான் அபேதவாதம் (சோஷலிசம்) என்ற அர்த்தத் தில் உபயோகப் படுத்துகிறேன். வாழ்க்கைத் தத்துவத்தைத் தான் சோஷலிசம் என்றும், கம்யூனிசம் என்றும், உட்டோபியானிசம் என்றும் பல படித்தாக அறிஞர் கூறுவர்.1 ஜனங்களுடைய வாழ்க்கைப் பிரச்னையைப் பற்றி இப்பொழுது பல நாடுகளிலும் பேசப்படுகிறது. ஆனால் சென்ற ஒரு நூற்றாண்டாகத்தான் ஜனங்கள் இது விஷயத்தில் கவலை செலுத்தி வருகிறார்கள். ஏன் சென்ற ஒரு நூற்றாண்டாக இந்தக் கவனம் ஜனங்களுக்கு? உலகத்தின் பல பாகங்களிலும் யந்திர நாகரிகம் அபிவிருத்தி யடைந்துவிட்டது. இதனால் தொழில்கள் பெருகியிருக்கின்றன. ஜனங்களுடைய உற்பத்தி சக்தியும் அதிகமா யிருக்கிறது. இதுதான் காரணம். யந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டு, மனித உழைப்புக்குப் பதில் இயற்கைச் சக்தி உபயோகிக்கப் பெற்ற காலத்திலிருந்தே இந்த வாழ்க்கைப் பிரச்னை - ஜீவனோபாயப் பிரச்னை - ஆரம்பித்துவிட்ட தென்று சொல்லலாம். யந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளின் மூலமாகப் பொருள்கள் உற்பத்தி செய்யப் பெறத் தொடங்கிய காலத்திலிருந்து நூறு அல்லது ஆயிரம் பேர் செய்கிற வேலையை ஒரு மனிதன் செய்யத் தொடங்கினான். மனித உற்பத்தி சக்திக்கும் யந்திரஉற்பத்தி சக்திக்கும் விபரீத வித்தி யாசங்கள் ஏற்பட்டன. நல்ல தேச பலமுள்ளவனும் சுறுசுறுப் புள்ளவனாகவும் உள்ள ஒரு தொழிலாளி, இரண்டு அல்லது மூன்று தொழிலாளிகளுடைய வேலையைச் சாதாரண மாகச் செய்ய முடியும். மிஞ்சிப் பார்த்தால் பத்து பேருடைய வேலையைச் செய்யமுடியும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ஒரு யந்திர மானது, திறமை சாலிகளும் திடசாலிகளுமான நூறு அல்லது ஆயிரம் தொழிலாளர்களுடைய வேலையைச் செய்ய முடியுமே? இந்த யந்திரத்தை நடத்திச்செல்ல, திறமையில்லாத ஒரு சோம்பேறித் தொழிலாளி போதும். எனவே, உற்பத்தி சக்தி என்னும் பிரச்னையே சமீபகாலத்தில் அதிகமான மாற்றத்தை யடைந்திருக்கிறது. நமது கண் முன்னேயே நடக்கிற சில சம்பவங்களை உதாரண மாக எடுத்துக்கொள்வோம். காண்ட்டன் நகரத்து வீதிகளில் சாதாரணமாக மூட்டை தூக்கும் கூலிகளை நீங்கள் அதிகமாகப் பார்க்கலாம். இவர்களிலே பலசாலியான ஒருவன் சுமார் இருநூறு வீசை கனத்தைத் தூக்கிகொண்டு சில மைல் தூரம் நடந்து செல்வான். இதைவிட அதிகமாக இவனால் சுமக்கவும் முடியாது; சுமந்துகொண்டு நடக்கவும் முடியாது. இத்தகைய கூலிகளோடு, சாமான்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்லும் யந்திர சாதனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். ஆயிரக் கணக்கான டன் நிறையுள்ள சாமான்களைத் தூக்கிக்கொண்டு இருபது அல்லது முப்பது ரெயில் வண்டிகள், ஓர் இஞ்சின் உதவியால் நூற்றுக் கணக்கான மைல் தூரம் செல்கின்றன. சுமார் எண்ணூறு கிலோ மீட்டர் (ஐந்நூறு மைல்) தூரத்திற்கு ரெயில்வே சாமான் வண்டி செல்ல எட்டு மணி நேரத்திற்கு மேல் பிடிக்காது. இதனை நடத்திச் செல்ல சுமார் பத்து மனிதர்கள் போதும். ஆனால் இதே சாமான்களை இவ்வளவு தூரம் மனிதர்களே தூக்கிச் செல்வ தென்றால் குறைந்தது பதினாயிரம் பேராவது தேவைப்படும்; பத்து நாட்கள் பிடிக்கும். அதாவது என்ன அர்த்தப்படுகிற தென்றால், பதினாயிரம் பேர் பத்து நாளில் செய்த வேலையை இப்பொழுது ஒரு யந்திரத்தின் உதவியைக்கொண்டு பத்து பேர் எட்டு மணி நேரத்தில் செய்ய முடியும். எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்! தவிர, இந்த யந்திர வசதியினால் பணச் செலவும் குறைகிறது. இதே மாதிரி வாழ்க்கையின் எல்லா அமிசங்களிலும் நமக்கு யந்திரங்களினால் அதிக சாதகம் எற்பட்டிருக்கின்றது. யந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்ட காலந்தொடங்கி, உலகத் தில் பொருளுற்பத்தி முறையில் பெரிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது. யந்திர வசதி யாருக்கு இருக்கிறதோ அவர்கள், அந்த வசதி இல்லா தவர்களுடைய பொருளை எடுத்துக் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டது. இதனால், கூலி வேலை செய்து பிழைத்து வந்த பெரும் பாலான மக்களுக்கு வேலையில்லாமற் போய்விட்டது. இவர் களுக்கு வேலையும் கிடைக்க வில்லை; ஆகாரமும் கிடைக்கவில்லை. இதைத்தான் மேனாட்டு அறிஞர்கள் ‘தொழிற் புரட்சி’1 என்பார்கள். இந்தப் புரட்சி காரணமாகத் தொழிலாளர்கள் அதிகக் கஷ்டப் பட்டார்கள். இந்தக் கஷ்டத்தை எவ்வாறு தீர்ப்பதென்று ஒரு சமுதாயப் பிரச்னைதான் சென்ற சில தலைமுறை களாக மேனாட்டு அறிஞர்களுடைய கவனத்தின் முன்னணியில் இருந்து வருகிறது. இந்தச் சமுதாயப் பிரச்னையைப் பற்றி இன்று உங்கள் முன்னிலையில் ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன். அப்படியானால், மேனாட்டு முறையைப் பின்பற்றி சோசலிசம் என்ற வார்த்தையை நேரடியாக உபயோகியாமல் மின் - ஷெங் என்ற வார்த்தையை ஏன் உபயோகிக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். வாஸ்தவம். ஆனால் இதற்கு ஒரு காரணம் உண்டு. ‘தொழிற் புரட்சி’க்குப் பிறகு, யந்திரமானது ஒரு பெரிய சமுதாயப் பிரச்னையாகிவிட்டது. இந்தக் காலத்திலிருந்து சமுதாய தத்துவங்கள் பல தோன்றியிருக்கின்றன. சென்ற சில தலைமுறைகளாக சோசலிசம் என்பது ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து கொண்டு வருகிறதேயாயினும், இதில் சம்பந்தப் பட்ட பல பிரச்னைகளுக்கு மேனாட்டார் இன்னும் எவ்விதமான முடிவையும் காணவில்லை; பலத்த வாதப் பிரதிவாதங்கள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மேனாட்டு எண்ணங் களும், கொள்கைகளும், தத்துவங்களும் சீனாவில் இப்பொழுது தாராளமாக இடம்பெற்று வருகின்றன. சிலர் இவற்றைப் பற்றி ஆராய்ச்சியும் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்தக் கொள்கைகள் உற்பத்தியான மேனாட்டிலேயே இவற்றிற்குப் பரிகாரம் காணப்பட வில்லை யென்றால், நாம் இவற்றிற்கு ஒரு முடிவு காண்பதென்பது கஷ்டமே. 1914ஆம் வருஷத்திற்குப் பிறகு மேனாட்டில் சோசலிசத்தைப் பற்றி ஜனங்கள் அதிக கவனஞ் செலுத்தத் தொடங்கினார்கள். சமுதாயப் பிரச்னைகள் பல சிக்கலறுந்து போகுமென்றும் ‘சோஷலிஸ்ட் கட்சி’யினர்1 இதற்கான வேலைகளைச் செய்வ ரென்றும் பலரும் நம்பினர். ஆனால் ‘சோசலிஸ்ட் இயக்க’த்திற் குள்ளேயே பல சச்சரவுகள் ஏற்பட்டுவிட்டன. ‘கம்யூனிஸ்ட்’டுகள் என்றும், ‘ஸ்டேட் சோஷலிஸ்ட்’டுகள் என்றும், ‘சோஷல் டெமோகிராட்ஸ்’ என்றும் பலகட்சிகள் ஏற்பட்டுவிட்டன.2 1914ஆம் வருஷயுத்தத்திற்கு முன்னர் சோஷலிஸத்தை ஆதரிப்பவர் ஒரு கட்சியினராகவும், சோஷலிஸத்தை எதிர்க்கிறவர்கள் ஒரு கட்சியின ராகவும் பிரிந்திருந்தார்கள். சோஷலிஸத்தை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் முதலாளிகள். ஆனால் யுத்தத்திற்குப் பிறகு, சோஷ லிஸத்தின் விரோதிகள், சோஷலிஸ சக்திக்குச் சிறிது இணங்கிக் கொடுக்க முன் வந்தார்கள். சோஷலிஸ்ட்டுகள். இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொள்ள வேண்டுமென்றும், சோஷலிஸ விரோதி களுடன் சமரஸமாகப் போய், அந்தச் சமரஸத்தின் மீது சமுதா யத்தைப் புனர் நிர்மாணஞ் செய்யவேண்டுமென்றும் தீர்மானித் தார்கள். ஆனால் இப்படிச் சமரஸமாகப் போவதற்கு என்னென்ன முறைகளைக் கையாள வேண்டுமென்கிற விஷயத்தில் சோஷலிஸ்ட்டு களுக்குள் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு விட்டன. இதனால், யுத்தத்திற்கு முன்னிருந்ததைவிட அதிகமான பிளவுகள், யுத்தத் திற்குப் பிறகு சோஷலிஸ்ட் கட்சிக்குள் ஏற்பட்டு விட்டன. முன்னர், சோஷலிஸத்தை, முதலாளிகள், தொழிலாளர்கள், அறிஞர்கள் பலரும் சேர்ந்து எதிர்த்துக் கொண்டிருந்த காலத்தில், சோஷலிஸ்ட்டுகள் பலரும், அவர்கள் எந்த நாட்டில் வசித்துக் கொண்டிருந்த போதிலும் எல்லோரும் சகோதரர்களாகவே கருதி நடந்து வந்தார்கள். ஆனால் இப்பொழுது, ஜெர்மன் சோஷலிஸ்டுகள், ருஷ்ய சோஷலிஸ்ட்டுகளை துவேஷிக்கிறார்கள். ருஷ்ய சோஷலிஸ்ட்டுகள், பிரிட்டிஷ் அமெரிக்க சோஷலிஸ்ட்டுகளை வெறுக்கிறார்கள். இது தவிர, ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சோஷலிஸ்ட்டுகளுக்குள்ளேயே பலவித மான பிணக்குகள் இருக்கின்றன. இதனால் இந்த சோஷலிஸ பிரச்னையே ஒரு சிக்கலான பிரச்னையாகப் போய்விட்டது. நான் இன்று பேசுகிற மின் - ஷெங் தத்துவம் - அதாவது வாழ்க்கைத் தத்துவம் - சோஷலிஸத்தினின்று மாறுபட்டதா? சோஷலிஸமானது, ஒரு சமுதாயத்தின் பொருளாதாரப் பிரச்னை களைப் பற்றிச் சொல்வது; அதாவது வாழ்க்கையை நடத்தும் உபாயத்தைக் கூறுவது. பொருளுற் பத்திக்கு யந்திரசாதனங்களை உபயோகிக்கத் தொடங்கிய பிறகு, அநேகம் பேருக்கு வேலை யில்லாமற் போய்விட்டது. வாழ்க்கையை நடத்து வற்கான வழி ஒன்றும் அவர்களுக்கு ஏற்படவில்லை. இதனால் இந்த வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே சோஷலிஸத்தின் முக்கிய அமிசம். ஆனால் இப்பொழுது ஒவ்வொர நாட்டிலும் ஒவ்வொரு விதமான சோஷலிஸ கொள்கை நடைமுறையில் இருக்கின்றது. இதனா லேயே, நமது மின் - ஷெங் தத்துவத்தின் ஓர் அமிசந்தான் சோஷ லிஸமா, அல்லது சோஷலிஸத்தின் ஓர் அமிசந்தான் சோஷலிஸமா, அல்லது சோஷலிஸத்தின் ஓர் அமிசந்தான் மின் - ஷெங் தத்துவமா வென்பதைப் பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கிறது. தொழிற் புரட்சி ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு சமுதாயப் பிரச்னை களைப் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கிய அறிஞர்கள் ஆயிரக் கணக்கில் அதிகமாயினர். இவர்களில் தலை சிறந்தவன் மார்க்ஸ் என்ற அறிஞன். ஜனநாயக இயக்கத்திற்கு எப்படி ரூஸ்ஸோ வின் எண்ணங்கள் விதை போன்றிருந்தனவோ. அப்படியே மார்க்ஸின் எண்ணங்கள் சோஷலிஸ்ட் இயக்கத்திற்கு விதை போன்றிருந்தன எப்படிச் சீனர்கள் கன்பூஷியஸை போற்றி வந்தார்களோ அப்படியே மேனாட்டார், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ரூஸ்ஸோவைப் போற்றி வந்தனர். அப்படியே இப்பொழுது சோஷலிஸ்ட்டுகள் மார்க்ஸை ஒரு மகானாகப் போற்றி வருகிறார்கள். மார்க்ஸுக்கு முனனர் சோஷலிஸத்தைப் பற்றிய கொள்கைகள், அனுஷ்டானத்தில் கொண்டுவர முடியாதனவாய், வாழ்க்கைக்குப் பிரயோஜனப்படாமல் இருந்தன. மார்க்ஸ், சில உண்மைகளையும் சரித்திரத்தையும் ஆதாரமாகக் கொண்டு, சமுதாயப் பிரச்னையை ஒட்டினாற் போலுள்ள பொருளாதார அமிசங்களை நன்கு விளக்கிக் காட்டினான். இதன் விளைவாக, மார்க்ஸுக்குப் பின்னால் வந்த அறிஞர்கள் சோஷலிஸ்ட்டுகளை இரண்டுவிதமாகப் பிரித்தார்கள் ‘உட்டோ பியன் சோஷலிஸ்ட்டு’கள் ஒரு பிரிவினர்; மற்றொருபிரிவார் ‘சாஸ்திரீய சோஷலிஸ்ட்’டுகள்1 ஒரு பிரிவார்; மற்றொருபிரிவார் ‘சாஸ்திரீய சோஷலிஸ்ட்’டுகள்.2 உட்டோபியன் சோஷலிஸ்ட்’டுகள் தங்களுடைய கற்பனையில் ஒரு சமுதாயத்தை சிருஷ்டி செய்து அதில் எல்லா ஜனங்களும் சௌக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாக நினைக் கிறவர்கள். இவர்களிடத்தில் தயையும் ஜீவ காருண்யமும் நிறைய உண்டு. உலகத்தில் மனிதர்கள் கஷ்டப் படுவதைக் கண்டு இவர்களால் சகிக்க முடியாது. அதற்காக இவர்கள் மனமிரங்குவார்கள். ஆனால் மனிதர் களுடைய துன்பங்களை எவ்வாறு பரிகரிப்பது என்பதற்கு இவர்களால் மார்க்கம் மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இவர்கள் சில உயர்ந்த லட்சியத்திலேதான் இவர்கள் மனத் திருப்தியடைந்தார்கள்; அதில் தஞ்சம் புகுந்துகொண்டார்கள் என்றும் சொல்லலாம். இவர் களுடைய நிலைமையை விளக்க, சீனப் பழ மொழி ஒன்றுண்டு. ‘மோட்ச லோகமானது, ஒரு புழுவைக் கொண்டு வந்தால் பூலோக மானது ஓர் இலையைக் கொண்டு வரும்; மோட்சலோகமானது ஒரு பறவையைக் கொண்டு வந்தால் பூலோகமானது ஒரு புழுவைக் கொண்டு வரும்.’ இதன் அர்த்த மென்ன? ஒரு புழுவுக்கு ஆகாரமாக இலை இருக்கிறது. , அப்படியே ஒரு பறவைக்கு ஆகாரமாக ஒரு புழு இருக்கிறது என்பதுதான். இது சாசுவதமான உண்மை. ஆனால் இயற்கையானது, மனிதனுக்குப் பூரணமான ஒரு தேகத்தை அளிக்க வில்லை. ரோமம் அடர்ந்து தேகத்துடனோ, சிறகுகள் நிறைந்த தேகத்துடனோ அவன் பிறக்கவில்லை. குளிரினின்றும் தடுத்துக் கொள்ள அவனுக்கு உடைகள் தேவை; அப்படியே வாழ்க்கையை நடத்த ஆகாரம் தேவை. ஆதிகாலத்து மனிதன் பழங்களை மட்டும் ஆகாரமாகப் புசித்துக் கொண்டிருந்தான். இடம் விசாலமாயும், ஜனங்கள் கொஞ்சம் பேராகவும் இருந்தார்கள். ஆகையால் ஒவ்வொரு வருக்கும் ஆகாரம் தேடிக் கொள்வது சுலபமாயிருந்தது. மனிதன் அதிகமான பிரயாசையின்றி வாழ்க்கையை நடத்த முடிந்தது. மனிதர்கள் மிருகங்களை வேட்டையாடிக் கொன்று தின்று வந்த காலத்தில், வேட்டை யாடுவதும் மீன்பிடிப்பதும் அவர்களுடைய ஜீவனோபாயங்களாயிருந்தன, அதாவது, உயிர் வாழ்க்கையை நடத்த ஏதோ ஒரு தொழிலைச் செய்ய வேண்டியிருந்தது. அப்படிக் கஷ்டப்பட்டுத் தொழில் செய்தால்தான் அவனுக்கு ஆகாரம் கிடைத்துக்கொண்டிருந்தது. பின்னர் மனிதன், கால் நடைகளை வளர்த்து அவற்றை மேய்த்து அவைகளின் மூலமாகத் தன் வாழ்க்கையை நடத்தி வந்தான். இதனால் எங்கெங்குப் புல்லும் நீரும் அகப்பட்டனவோ அங்கெல்லாம் மனிதன் குடியேற வேண்டிய தாயிற்று. எந்த இடத்தில் புல்லும் நீரும் குறைந்தனவோ அந்த இடத்திலிருந்து வேறோரிடத்திற்கு அவன் பெயர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. இந்தக் காலத்தில் இவனுடைய வாழ்க்கை சிறிது கடின மாகியது. பின்னர் விவசாய காலம். இந்தக் காலத்தில் மனிதன் நிலத்தை உழுது, தானியங்களைப் பயிரிட்டு பின்னர் சாகுபடி செய்து, அதிலிருந்து தன் வாழ்க்கையை நடத்த வேண்டி யிருந்தது. இவன் வாழ்க்கை இன்னும் சிக்கலாகப் போய்விட்டது. கடைசியில் யந்திர சாதனங்களின் மூலமாகப் பொருள் உற்பத்திநடை பெறத் தொடங்கிய காலத்திலிருந்து மனிதனுடைய வாழ்க்கை இன்னும் மோசமாகப் போய் விட்டது. இவனுக்குத் தேகபலம், மூளைபலம் எல்லாம் இருந்தன. ஆனால் அவற்றை உபயோகிக்கும் மாhக்கம் மட்டும் தூர்ந்து போயிருந்தது. எனவே இவன், தன் உழைப்புச் சக்தியை விற்கத் தயாராக இருந்தான்; ஆனால் வாங்குவாரில்லை. இந்த நிலைமையில்தான் லட்சக்கணக்கான ஜனங்கள் பட்டினி கிடக்க வேண்டியவர்களானார்கள். இவர்கள் பட்ட துயரங்களை ஒரு வாக்கியத்தில் அடக்கிவிட முடியுமா? இப்படி இவர்கள் துன்பத்தில் உழன்றுகொண்டிருந்தபோது சில மகான்கள் தோன்றினார்கள். உலகத்திலே பிறந்த எல்லா ஜீவ ஜந்துக்களும், அதிகப் பிரயாசையில்லாமல் உண்ண உணவும் உடுக்க உடையும் பெற்றிருக்க, மனிதன் கஷ்டப்பட்டு உழைத்தும். வயிற்றுக்குச் சொற்ப ஆகாரமும், உடுக்க ஒரு முழத்துண்டும் அகப்படுவது அருமையாகப் போய்விட்டதைப் பார்த்து இவர்கள் மனம் இளகியது. மானிட சமுதாயத்தின் துன்பங்களைக் குறைத்து எல்லோருக்கும் உணவும் உடையும் கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன், இவர்கள் சோஷலிஸ கொள்கையைக் கிளத்தி னார்கள். இவர்கள் இருதய சுத்தமுடையவர்கள்; ஒழுக்க சீலர்கள். இவர்களைப் பின்பற்றியவர்களும் பரிசுத்தமானவர்கள் இந்த சோஷலிஸ கொள்கையை எதிர்த்தவர்கள் அல்லது புறக்கணித்த வர்கள் சுயநலத்தில் மூழ்கிக்கிடந்த முதலாளிகள். இவர்கள், பாமர ஜனங்களின் வாழ்க்கை நிலையைப் பற்றிக் கவலை கொள்ளாதவர் களாயிருந்தார்கள். சோஷலிஸ கொள்கையை உபதேசித்தவர்களுக்குப் பொது ஜனங்களிடமிருந்த அதிகமான ஆதரவுகிடைத்தது. எல்லா நாடு களிலும் இந்த இயக்கம் பரவியது; கட்சிகள் தோன்றின. இந்த ஆதி சோஷலிஸ்ட்டுகள், துன்பமே அனுபவியாத மனிதர்களடங்கிய ஓர் உலகத்தைத் தாங்கள் சிருஷ்டிக்கப்போவதாக நம்பினார்கள். ஆனால் மனிதர்களின் துன்ப நிவாரணத்திற்கு என்ன வழி யென்பதை மட்டும் இவர்கள்கண்டு பிடிக்க வில்லை. பின்னர் மார்க்ஸ் தோன்றினான். இந்த சோஷலிஸ பிரச்னையைப் பற்றி ஆராய்ச்சி செய்தான். தனது அறிவு, ஆற்றல், அனுபவம் அனைத்தை யும் இந்த ஆராய்ச்சியில் செலவழித்தான். இதுவரையில் அறிஞர் களால் விளக்கப்படாமலிருந்த அநேக விஷயங்களை இவன் விளக்கிக் காட்டினான். வெறும் உணர்ச்சி மேலீட்டால் மட்டும் இந்தச் சோஷலிஸ பிரச்னைகளைத் தீர்த்துவிட முடியாதென்றும், உண்மைகளை அடிப்படையாகக் கெககாண்ட ஆராய்ச்சியின் மூலந்தான் இவற்றைத் தீர்க்க முடிவு மென்றும் இவன் சித்தாந்தப் படுத்தினான். இவன் காலத்திற்குப் பின்னர்தான், சோஷலிஸ்ட்டுகள், ‘உட்டோபியன் சோஷலிஸ்ட்டுகள்’ என்றும் ‘சாஸ்திரீய சோஷ லிஸ்ட்டுகள்’ என்றும் இரு கட்சியினராகப் பிரிந்தார்கள். ‘உட்டோ பியன் சோஷலிஸ்ட்’ டுகளைப் பற்றி நான் கூறியிருக்கிறேன். ‘சாஸ்திரீய சோஷலிஸ்ட்டு’கள் யாரென்றால், சமுதாயப் பிரச்னைகளுக்குப் பரிகாரங் காண வேண்டுமானால் சாஸ்திரீய முறைகளை அனுஷ்டிக்க வேண்டுமென்று கூறியவர்கள். லௌகிக நாகரிகம் மிக வேகமாக முன்னேற்றமடைந்து வரும் இந்தக் காலத்தில் விஞ்ஞானத்திற்கு ஒருமகத்தான சக்தி ஏற்பட்டிக்கிற இந்தக் காலத்தில், எல்லா ஆராய்ச்சிகளும் சாஸ்திர ரீதியாகத்தான் செய்யப்படவேண்டும். அப்பொழுது தான் திருப்திகரமான முடிவுகள் நமக்குக் கிடைக்கும். சாஸ்திரீய முறையில் ஆராய்ச்சி செய்தாலன்றி, சமுதாயப் பிரச்னைகளுக்குத் திருப்திகரமான பரிகாரம் ஏற்படாது. மார்க்ஸ், சமுதாயப் பிரச்னைகளை சாஸ்திர ரீதியாக ஆராய்ச்சி செய்தான். இந்த ஆராய்ச்சி காரணமாக அவன் உடல் நலம் கூடக்குன்றி விட்டது. அவன் அப்பொழுது இங்கிலாந்தில் ஒரு தேசப்பிரஷ்டனாக வசித்துக்கொண்டிருந்தான். இங்கிலாந்து தான் அந்தக் காலத்தில் நாகரிகம் நிறைந்த நாடாயிருந்தது. இதனால் சிறந்த நூல் நிலையங்கள் பல அங்கு இருந்தன. அப்படிப்பட்ட நூல் நிலையமொன்றிற்கு மார்க்ஸ் தினந்தோறும் சென்று படித்து வந்தான். சுமார் இருபது முப்பது வருஷ காலம் இந்த ஆராய்ச்சி யிலேயே ஈடுபட்டிருந்தான். சோஷலிஸத்தைப் பற்றி யார் யார் என்னென்ன எழுதியிருக்கிறார்களோ அவைகளையெல்லாம் நன்றாக ஆராய்ந்து ஒரு முடிவு காண முயற்சி செய்தான். இதனால் மார்க்ஸின் சோஷலிஸத்திற்கு ‘சாஸ்திரீய சோஷலிஸம்’ என்று பெயர் வந்தது. தன்னுடைய ஆராய்ச்சியின் விளைவாக மார்க்ஸ் சில முடிவு களை வகுத்தான். அவை யாவை? மனிதன், இந்த உலகத்தில் தலை முறை தலைமுறையாக என்ன காரியங்களைச் செய்துகொண்டு வந்தானோ அவையெல்லாம் சேர்ந்ததுதான் சரித்திரம். இந்த மானிட சரித்திரம், லௌசிக சக்திகளை மையமாகக் கொண்டு தான் இயங்குகிறது. வாழ்க்கையின் லௌகிக அடிப்படை மாறினால் உலகமும் மாறுதலடை கிறது. மற்றும், மனிதனுடைய நடவடிக்கை கூட அவனுடைய லௌகிக சுற்றுப்புறத்தையொட்டியே அமை கிறது. எனவே, மானிட நாகரிகத்தின் சரித்திரமானது, மனிதன் தன்னுடைய லௌகிக சுற்றுப்புறத்தோடு எப்படித் தன்னை இயைபுபடுத்திக் கொள்கிறான் என்பதைவிளக்கிக்கூறும் கதைதான். இதுவே மார்க்ஸின் ஆராய்ச்சி முடிவு. மார்க்ஸினுடைய இந்தச் சாஸ்திரீய சோஷலிஸ சித்தாந்தம், நியூட்டனுடைய ஆகர்ஷண சித்தாந்தத்திற்குச் சமமானது என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். சோஷலிஸத்தை எதிர்த்துக்கொண்டு வந்தவர்கள், மார்க்ஸின் சித்தாந்தத்தைப் படித்து விட்டு அதனை ஆதரிக்கத் தொடங்கி னார்கள். சிறப்பாக 1914ஆம் வருஷ ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு, சோஷலிஸத்தை யாரும் அதிகமாக எதிர்க்க வில்லை. ஆனால் சோஷலிஸ்ட்டுகளுக்குள்ளேயே பல பிளவுகள் ஏற்பட்டுவிட்டன. இதனால், சோஷலிஸ்ட்டுகளால் சமுதாயத்தைப் புனர் நிர்மாணம் செய்ய முடியவில்லை. உலக சரித்திரமானது, பொருளாதார தத்துவத்தின் மீது வளர்ச்சி யடைந்திருக்கிறதென்ற மார்க்ஸின் சித்தாந்தத்தைச் சிறிது கவனிப்போம். 1848ஆம் வருஷம் மார்க்ஸின் சிஷ்யர்கள், அகில உலக சோஷலிஸ்ட் மகாநாடொன்றைக் கூட்டுவித்தார்கள்; சில திட்டங்களையும் வகுத்துக் கொண்டார்கள். இந்தத் திட்டங் களையே மார்க்ஸீய சோஷலிஸ்ட்டுகள் இப்பொழுதும் அனுஷ்டித்து வருகிறார்கள். 1914ஆம் வருஷ ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு, ருஷ்யாவில் மார்க்ஸின் சித்தாந்தங்கள் அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரப்பட்டன. ஆனால் சமீபத்தில் அந்த நாடு - ருஷ்யா - மேற்கண்ட கொள்கைகளில் அநேக மாற்றங்களைச் செய்திருக் கிறது. ஏன்? இன்றைய ருஷ்யாவைப் பற்றி நமக்குச் சரியான விவரங்கள் ஒன்றும் தெரியாது. அதனால் அதைப்பற்றி ஒன்றுந் தீர்ப்புக் கூறுவதற்கில்லை. ஆனால் ருஷ்யர்கள், ருஷ்யாவைப் பற்றிக் கூறுங்காலை, ருஷ்யப் புரட்சியின் போது அங்கு அனுஷ்டிக்கப் பட்ட கொள்கை மார்க்ஸீயக் கொள்கையே தவிர யுத்தக் கொள்கை யல்ல என்கிறார்கள். ருஷ்யா மட்டும் இந்த யுத்தக் கொள்கையை அனுஷ்டிக்க வில்லை. பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா முதலிய நாடுகள், யுத்த காலத்தில், ரெயில்,ரோட், கப்பற்போக்குவரத்து முதலிய பெரிய தொழில் ஸ்தாபனங்களை அரசாங்க நிருவாகத்திற் குட்படுத்திக் கொண்டன. அப்படியிருக்க, பிரிட்டன், அமெரிக்கா முதலிய நாடுகளில் அனுஷ்டிக்கப் பட்ட முறை மட்டும் யுத்த முறைகள் என்றும், ருஷ்யாவில் அனுஷ்டிக்கப் பட்ட முறைகள் மார்க்ஸீய முறைகளென்றும் வேறுபடுத்திச் சொல்வானேன்? ருஷ்யப் புரட்சிக் கட்சியினர். மார்க்ஸ் சித்தாந்தத்தைச் செயல் முறையில் கொணரவேண்டுமென்று கூறிவந்தார்கள். இதுதான் ருஷ்யக் கொள்கையை மார்க்ஸீயக் கொள்கை யென்று சொல்லி வந்ததற்குக் காரணம். ஆனால் ருஷ்யாவின் தற்போதைய தொழில், பொருளாதார அமைப்புக்களானது, மார்க்ஸின் சித்தாந்தத்தை நடைமுறையில் கொணரக்கூடிய அவ்வளவு தூரம் வளர்ச்சி பெற வில்லை யென்றும், பிரிட்டனும் அமெரிக்காவும் இப்பொழுது தொழில் விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும் எந்த நிலைமையை யடைந்திருக்கின்றனவோ அந்த நிலைமையில்தான் மார்க்ஸின் சித்தாந்தத்தை அனுஷ்டானத்தில் கொண்டுவர முடியு மென்றும் ருஷ்யர்கள் கூறுகிறார்கள். இதனால், ஐரோப்பிய யுத்தத் திற்குப் பிறகு, மார்க்ஸின் சிஷ்யர்கள், சோஷலிஸ கொள்கையைப் பற்றிச் சச்சரவிட ஆரம்பித்தார்கள். ஜெர்மனி, பிரான்ஸ், ருஷ்யா ஆகிய நாடுகளில் வசித்த சோஷலிஸ்டுகள் இப்பொழுது ஒருவரை யொருவர் தாக்கிக்கொள்ள ஆரம்பித்தார்கள். உண்மையிலேயே, சரித்திரத்தின் மையமாயிருந்தவை லௌகிக சக்திகள் தானா? ஐரோப்பிய யுத்தத்திற்குப் பிறகு அநேக அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சியில் இந்தக் கொள்கை தவறான தென்று முடிவு கட்டியிருக்கிறார்கள். அப்படியானால் சரித்திரத் தின் மையமான சக்தி எது? நம்முடைய கோமிண்ட்டாங்’ கட்சி யானது, சென்ற இருபது வருஷ காலமாக வாழ்க்கைத் தத்துவத்தைப் பற்றிப் பிரசாரம் செய்து வந்திருக் கிறது. நாம் சோஷலிஸத்தைப் பிரசாரம் செய்யாமல், மின் -ஷெங் கொள்கையைப் பிரசாரம் செய்து வந்திருக்கிறோம். சமுகத்தில், மார்க்ஸின் சிஷ்யனாகிய வைட்டிங் வில்லியம்ஸ்1 என்ற ஓர் அமெரிக்கன், சோஷலிஸ்ட்டுகளுக்குள் அபிப்பிராய வேற்றுமைகள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், மார்க்ஸீய சித்தாந்தத்திலேயுள்ள குறைபாடுதான் என்று கூறியிருக்கிறான். சரித்திரத்தை லௌகிக திருஷ்டியோடு பார்ப்பது தவறென்றும், சரித்திரப் போக்கானது, சமுதாயப் பிரச்னையைத் தொடர்ந்துதான் செல்கிறதென்றும், இந்தச் சமுதாயப் பிரச்னைக்கு இருதய ஸ்தானம் போலிருப்பது ஜீவனோபாயந்தான் என்றும் இவன்வைட்டிங் வில்லியம்ஸ் - கூறுகிறான். இந்த அமெரிக்க அறிஞ னுடைய கொள்கை. நமது கட்சியின் மூன்றாவது கொள்கையோடு ஒத்திருக்கிறது. சமுதாயப் பிரச்னையை, சோஷலிஸம், கம்யூனிஸம் முதலிய சொற்றாடர்கள் விளக்கிக் காட்டுவதை விட மின் - ஷெங் என்ற சொற்றொடர்தான் சரியாக விளக்கிக் காட்டுகிறது. மேற்கண்ட அமெரிக்க நிபுணனுடைய ஆராய்ச்சிப்படி, மானிட சமுதாயத்தின் சக்திகளெல்லாம், ஜீவனோபாயப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்காகத்தான் செலவழிக்கப் பட்டிருக்கின்றன. சமுதாய முன்னேற்றத்தின் முக்கியமான சட்டம் வாழ்க்கைப் போராட்டம் ஆனால் மாhக்ஸினுடைய லௌகிக சித்தாந்தமானது, சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்விதமான சட்டத்தையும் நிர்ணயிக்கவில்லை. மார்க்ஸ், தன்னுடைய ஆராய்ச்சியில் லௌகிகத்தைப் பற்றியே அதிகமாக வற்புறுத்திப் பேசியிருக்கிறான். இந்த லௌகிக சக்திகளைப் பற்றி ஆராய்ச்சி செய்கிற போது, உற்பத்திப் பிரச்னைக்கு முதலில் வரவேண்டியிருக் கிறது. எங்கு அதிக பொருள் உற்பத்தி இல்லையோ அங்குத் தொழிற் புரட்சியுமில்லை. ஆகையால் தற்காலப் பொருளாதார உலகத்தில் உற்பத்திக்கு ஒரு முக்கிய இடம் ஏற்பட்டிருக்கிறது. தற்காலப் பொருளாதார நிலைமையை நாம் தெரிந்துகொள்ள வேண்டு மானால், உற்பத்தி விவரங்களை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். தற்காலத்தில் பெருவாரியான பொருள்கள் உற்பத்தி செய்யப் படுவதற்குச் சாத்தியமாயிருப்பது எதனால்? உழைப்பும் யந்திரமும் சேர்வதனால், அதாவது மூலதனம், யந்திரம், தொழிலாளர்களின் உழைப்பு ஆகிய மூன்றினுடைய பொருளுற்பத்தியின் நன்மைகளை முதலாளிகளே அனுபவிக்கிறார்கள். இந்த நன்மைகளின் ஒரு சிறு பகுதியையே தொழிலாளர்கள் அனுபவிக்கிறார்கள். இதனால் முதலாளிகளின் உரிமை களுக்கும் தொழிலாளர்களின் உரிமை களுக்கும் எப்பொழுதுமே முரண்பாடு இருக்கிறது. இதற்கு ஒரு பரிகாரம் காணப்படாவிட்டால், வர்க்கப் போராட்டம் நிகழ்கிறது. மார்க்ஸின் கொள்கைப்படி, வர்க்கப் போராட்ட மென்பது, தொழிற் புரட்சியின் விளைவாக ஏற்பட்டதல்ல, ஆரம்பத்திலிருந்தே உலக சரித்திரமானது, வர்க்கப் போராட்டத்தின் கதையாகத்தா னிருக்கிறது. ஆண்டான் - அடிமைப் போராட்டம்; நிலச்சுவான்தார் - விவசாயி போராட்டம்; பிரபுக்களுக்கும் சாதாரண ஜனங்களுக்கும் போராட்டம்; நிலச்சுவான்தார் - விவசாயி போராட்டம்; பிரபுக் களுக்கும் சாதாரண ஜனங்களுக்கும் போராட்டம்; இப்படியாகப் போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சுருக்கமாகக் கூறப்போனால், ஒடுக்குகிறவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எப்பொழுதுமே போராட்டம் நடைபெற்று வந்திருக்கிறது. சமுதாயப் புரட்சி, பூரணமாக வெற்றி பெற்றால்தான் இந்த வர்க்கப் போராட்டம் நின்று போகும். இதனால் என்ன தெரிகிறதென்றால் சமுதாய முன்னேற்றத்திற்கு வர்க்கப் போராட்டம் அவசியமென்பது மார்க்ஸின் கொள்கை என்பது தெளிவாகிறது. வர்க்கப் போராட்டத்தைக் காரணமாகவும், சமுதாய முன்னேற்றத்தைக் காரியமாகவும் மார்க்ஸ் கொண்டான். இந்தக் காரண காரியக் கூட்டுறவு, உண்மையிலேயே சமுதாய முன்னேற்றத்தின் ஒரு சட்டமா வென்பதை நாம் பார்க்க வேண்டும். சென்ற சில ஆண்டுகளில் மானிட சமுதாயமானது பல வழிகளிலும் முன்னேற்றத்தை யடைந்திருக்கிறது. இந்தச் சமுதாய முன்னேற்றத் தின் பொருளாதாரத்துறையை மட்டும் இங்குக் கவனிப்போம். இந்தப் பொருளாதார முன்னேற்றமானது, நான்கு கிளைகளாகப் பிரிந்திருக்கிறது. முதலாவது, சமுதாய, தொழில் சீர்திருத்தம்; இரண்டாவது, போக்குவரத்து சாதனங்களைப் பொதுவுடைமை யாக்குதல்; மூன்றாவது, நேர்முகமான வரிவிதிப்பு; நான்காவது, அபேதவாத முறையில் பொருள் வினியோகம். இந்த ஒவ்வொரு சீர்திருந்த அமிசத்தையும் நான் சிறிது விளக்கிக் கூறுகிறேன். முதலாவது, சமுதாய-தொழில் சீர்திருத்தம். தொழிலாளர் களுடைய கல்வி ஞானத்தை அபிவிருத்தி செய்தல், அவர்களுடைய தேகசுகத்தைக் காப்பாற்றுதல், அவர்கள் சௌகரிய மாக வேலை செய்வதற்குத் தகுதியாகத் தொழிற்சாலைகளையும் யந்திர வசதி களையும் அபிவிருத்தி செய்தல் முதலியவைகள் விஷயத்தில் அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தை உபயோகப் படுத்தவேண்டும். இந்த மாதிரியான சீர்திருத்தங்களினால் தொழிலாளிகளுக்கு வேலை செய்யப் போதிய பலம் உண்டாகும். அவர்கள் விருப்பத்துடனும் வேலை செய்வார்கள். தவிர, பொருள் களின் உற்பத்தியும் அதிகப்படும். ஜெர்மனி தான் முதன் முதலாக இந்த மாதிரியான சீர்திருத்தங்களைக் கையாண்டது; அதனால் நல்ல பலனையும் அடைந்தது. சமீப காலத்தில் பிரிட்டனும் அமெரிக்கா வும் இந்தச் சீர்திருத்தத்தை அனுஷ்டித்து நல்ல பயனைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது சீர்திருத்தம் என்ன வென்றால், ரெயில்வே, கப்பல் போக்கு வரத்து, தபால் தந்திப் போக்கு வரத்து முதலிய அனைத்தையும் அரசாங்க நிருவாகத்திற்குட்படுத்துவது, இந்தப் பெரிய ஸ்தாபனங்களை நடத்த அரசாங்கத்தின் அதிகாரம் உபயோகிக்கப்படுமானால் சாமான்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சௌகரியமாக அனுப்ப முடியும்; கொண்டு வர முடியும். மூலப் பொருள்களை மார்க்கெட்டுகளுக்கும், மற்ற இடங்களுக்கும் குறைந்த செலவில் சீக்கிரமாக முறையே அனுப்ப முடியும். இந்த மாதிரியான பொதுஜன உபயோக ஸ்தாபனங்களைத் தனிப்பட்ட நபர்கள் எடுத்து நடத்துவார்களானால், ஒன்று அவர் களிடம் போதிய பணம் இருப்பதில்லை; அல்லது தங்களுக்கே இவை உரிமைப் பொருள்காள இருக்கவேண்டு மென்பதற்காக இவைகளை வளர விடாமல் தடை செய்கின்றனர். இதனால் போக்குவரத்து தடைப்படுகிறது. தேசத்தின் பொருளாதார வேலை களுக்கு முட்டு ஏற்படுகிறது. அதிக நஷ்டந்தான் கண்ட பலன். தனிப்பட்டவர்களிடத்தில் இந்த மாதிரியான ஸ்தாபனங் களை ஒப்புவிப்பதனால் தெரிந்துகொண்ட பின்னரே இவையெல்லா வற்றையும் அரசாங்க நிருவாகத்திற்குட்படுத்தியது. ஐரோப்பிய யுத்த காலத்தில் அமெரிக்காவும் இந்த முறையைத் தழுவியது. மூன்றாவது சீர்திருத்தம் என்னவென்றால், நேர்முகமான வரிவிதிப்பது. அதாவது முதலாளிகளுக்கு வருமான விகிதாசாரப் படி வருமான வரி விதிப்பது, வார்சு பாத்திய வரி விதிப்பது முதலியன. இதன் மூலமாக முதலாளிகளிடமிருந்து அரசாங்கத் திற்கு நேர்வழியில் பணங் கிடைக்கிறது. இதனை யாரும் கடுமை யானதென்று நினைக்க முடியாது. இதற்கு முன்னர் நிலவரி, சுங்கவரி இவைகளின் மூலமாகத்தான் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைத்துக்கொண்டிருந்தது. இதனால் ஏழைகளுக்குத்தான் அதிக துன்பம் ஏற்பட்டது. பணக்காரர்கள் எவ்வித பணப் பொறுப்பு மின்றி எல்லா உரிமைகளையும் அனுபவித்து வந்தார்கள். இந்த அநீதியை ஜெர்மனியும் பிரிட்டனும் நன்கு உணர்ந்த, மேலே சொன்ன நேர் வரி விதிப்பு முறையை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தன. ஜெர்மனியின் மொத்த வருமானத்தில் நூற்றுக்கு அறுபது முதல் எண்பது சத விகிதம், ஏறக்குறைய இந்த நேர் வரி விதிப்பு முறை யினால் கிடைத்தது. இதே மூலமாக பிரிட்டனுக்கு, ஐரோப்பிய யுத்தத்திற்கு முன்னர் கிடைத்துக்கொண்டிருந்தது வருமானம் நூற்றுக்கு ஐம்பத்தெட்டு சத விகிதமாகும். 1918ஆம் வருஷம் அமெரிக்கா அரசாங்கத்திற்கு வருமான வரியாக மட்டும் நானூறு கோடி டாலர் கிடைத்தது. இந்த வருமானத்தைக் கொண்டுதான். மேற்கண்ட அரசாங்கங்கள் அநேக சமுதாய சீர்திருத்தங் களைச் செய்தன. நான்காவது சீர்திருத்தம், எல்லாருக்கும் எல்லாப் பொருள் களும் குறைந்த விலையில் கிடைக்குமாறு செய்தல். இதற்குச் சமுதாய வினியோக முறை என்று பெயர். சாதாரணமாக ஜனங்கள், தங்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் வியாபாரிக ளிடத்திலேயே வாங்குகிறார்கள். வியாபாரிகள் பொருள்களை விளைவிக்கிறார்களே அல்லது உற்பத்தி செய்கிறார்களே அவர்க ளிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதன் மீது லாபம் வைத்து விற்கிறார்கள். இதனால் அவர்கள் ஏராளமான லாப மடைகி றார்கள். ஆனால் இதற்குப் பிரதியாக, ஜனங்கள், அதாவது பொருள் களை வாங்கி உபயோகப் படுத்துகிறவர்கள் தாங்கள் அறியாமலே அதிக நஷ்டமடைகிறார்கள். இப்பொழுது அநேக நாடுகளில் என்ன செய்கிறார்களென்றால், கூட்டுறவு முறையில் பண்டக சாலை களை ஏற்படுத்தியோ அல்லது அரசாங்கமோ பொருள்களை வாங்கி ஜனங்களுக்குக் குறைந்த விலைக்கு விற்கிறார்கள். உதாரணமாக, இங்கிலாந்தில், பொருள் வினியோகக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் பல ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள அநேக நகர சபைகள், தண்ணீர், மின்சாரம், ரொட்டி, பால், வெண்ணெய் முதலிய பல பொருள்களைத் தாங்களே ஜனங் களுக்குக் குறைந்தசெலவில் வினியோகிக்கும் அதாவது விற்கும் முறையைக் கையாண்டு வருகின்றன. இந்த முறையினால், வியாபாரி களுக்கு லாபம் சம்பாதிக்க முடியாமல் போகிறது. வாங்குகிறவர்கள் சிரமப்படாமல் இருக்கிறார்கள். இதற்குத்தான் சமுதாய வினியோக முறை என்று பெயர். வர்க்கப் போராட்டம் இருந்தால்தான் ஒரு சமுதாயம் முன்னேற்ற மடைய முடிவு மென்பது மார்க்ஸின் கோட்பாடு. ஆனால் சென்ற சில தலைமுறைகளாக மேனாட்டில் ஏற்பட் டிருக்கும் சமுதாய முன்னேற்ற சம்பந்தமான சில உண்மைகளைப் பாருங்கள். இவற்றி லெல்லா வற்றையும் விட சமுதாய வினியோக முறைதான் சிறந்தது. முதலாளி களுக்கு வரிவிதிப்பதன் மூலம், அரசாங்கத்தின் செல்வ நிலை உயருகிறது. இந்த அதிக வருமானத்தைக் கொண்டு அரசாங்க மானது, போக்குவரத்து ஸ்தாபனங்களைத் தன்சுவாதீனப் படுத்திக் கொண்டு நடத்துகிறது. தொழிலாளர்களுக்குக் கல்வி வசதியையும் சுகாதார வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதன் மூலமாகச் சமுதாயத்தின் உற்பத்திச் சக்தியையும் அதிகப் படுத்திக் கொடுக்கிறது. உற்பத்தி பெருகி, பொருள் களும் அதிகமான விற்பனை யாகுமானால், முதலாளிகள் அதிக லாபத்தை யடைகிறார்கள். அதற்கு ஈடாகத் தொழிலாளர்கள் அதிகக் கூலி பெறு கிறார்கள். இங்ஙனம் முதலாளிகள், தொழிலாளர்களுடைய வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்திக் கொடுப்பார்களானால், தொழிலாளர்கள், முதலாளி களுக்காக அதிக பொருள்களை உற்பத்தி செய்து கொடுப்பார்கள். முதலாளிகள் பக்கத்தில் அதிகப் பொருள் உற்பத்தி. தொழிலாளர்கள் பக்கத்தில் அதிகக் கூலி விகிதம். இதனால் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பிணக்கு ஏற்படுவது போய் சமரஸம் ஏற்படு கிறது. இதனால் சமுதாயமும் முன்னேற்றத்தையடைகிறது சமுதாயத்தின் பொருளாதார உரிமைகளையும் சக்திகளையும் சமரஸப்படுத்திக் கொண்டு செல்வோமானால், ஜனங்களிற் பெரும் பாலோர் சௌக்கிய மடைவர்; சமுதாயமும் முன்னேற்றமடையும். ஆதிகாலத்திலிருந்து மனிதன், தன்னுடைய ஜீவனோபாயத் திற்காhகத் தன் உழைப்புச் சக்தியனைத்தையும் உபயோகப்படுத்தியிருக் கிறான். மனிதனுடைய இந்த ஜீவனோபாயப் போராட்டந் தான், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்குத் தூண்டுதலாயிருக்கிறது. வர்க்கப் போராட்டம், சமுதாய முன்னேற்றத்திற்குக் காரணமில்லை. அது, சமுதாய இந்த வியாதியினுடைய விளைவுதான் யுத்தம். இதனால் மார்க்ஸை, சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் வியாதிஇன்ன தென்று வரையறுத்துக் கூறும் நிபுணனாகக் கொள்ளலாமே தவிர, வியாதியைக் குணப்படுத்தும் நிபுணனாகக்கூற முடியாது. மார்க்ஸின் வர்க்கப் போராட்டத்தின் தத்துவப்படி, முதலாளி அனுபவிக்கிற ‘மிஞ்சிய மதிப்பு’1 என்பது இருக்கிறதே அது, தொழிலாளியின் உழைப்பிருந்தே பெறப்படுகிறது. பொருள் உற்பத்திக்கு முக்கிய காரணமாயிருக்கிறவன் தொழிலாளி என்று, தொழிலாளிக்கே எல்லா மதிப்பும் கொடுத்துப் பேசியிருக்கிறான் மார்க்ஸ். ஆனால், இந்த உற்பத்திக்கு வேறு பலரும் காரணர்களா யிருக்கிறார்கள் என்பதை மார்க்ஸ் மறந்து விட்டான். உதாரணமாக, சீனாவிலுள்ள அநேக நெசவு மில்கள், 1914ஆம் வரஷயுத்தத்தின் போது ஏராளமாக லாபஞ் சம்பாதித்தன. இந்த ‘மிஞ்சிய மதிப்பு’க்கு - அதாவது லாபத்திற்கு - யார் காரணம்? அந்தந்தத் தறிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்தானா? இல்லை. இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். பருத்தி விளைவிக்கிற விவசாயி, விவசாயிக்குத் தேவையான கருவிகளை உற்பத்தி செய்து கொடுக் கிறவன், விளைந்த பருத்தியைத் தொழிற்சாலைப் பக்கம் கொண்டு வந்து சேர்ப்பிக்கும் போக்குவரத்து வசதிகளை நடத்திச் செல்கிற வர்கள் முதலிய எல்லாரும் இந்த ‘மிஞ்சிய மதிப்பு’க்குக் காரணர் களாயிருக் கிறார்கள். எனவே, ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டும் மேற் கூறப்பட்ட ‘மிஞ்சிய மதிப்பு’க்குக் காரணர்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சமுதாயப் பிரச்னையைப் பற்றி மார்க்ஸ் செய்த ஆராய்ச்சியில், சமுதாயத்தின் வியாதி இன்னதென்று மட்டும் கண்டு பிடித்தான். ஆனால் சமுதாய முன்னேற்றத்தின் சட்டத்தை அவன் கண்டு பிடிக்க வில்லை. மேலே சொன்ன அமெரிக்க நிபுணனாகிய வைட்டிங் வில்லியம்ஸ் என்பவன் கூறியபடி, வாழ்ககைப் போராட்டந்தான், சமுதாய முன்னேற்றத்தின் மையமான சக்தியாயிருக்கிறது. மார்க்ஸினுடைய சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே சில முரண்பாடுகள் இருந்தபடியால்தான் அவனுடைய கொள்கைகளை நடை முறையில் கொணர்கிற. போது அநேக சச்சரவுகள் நிகழ்ந்தன. உதாரண மாக 1848ஆம் வருஷம் மார்க்ஸின் சிஷ்யர்கள், சர்வதேச காங்கிரஸ் ஒன்று கூட்டி, சில திட்டங்களை வெளியிட்டார்கள். இந்தச் சமயத்தில் அமைக்கப் பட்ட ‘சர்வதேச கம்யூனிஸ்ட் சங்கம்’ பிரான்சுக்கும் ப்ரஷ்யாவுக்கும் நடைபெற்ற யுத்தத்தில் போது கலைக்கப்பட்டுவிட்டது. பின்னர், இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் கூட்டப்பட்டது. இது, முதல் சர்வதேச காங்கிரஸி னின்றும் வேறு பட்டதாயிருந்தது. முதல் காங்கிரஸ், சமுதாயத்தைப் புனர் நிர்மாணம் செய்வதற்குப் புரட்சி முறைகளைக் கையாள வேண்டுமென்றும், முதலாளிகளுடன் எந்த விதத்திலும் சமரஸம் செய்து கொள்ளக் கூடாதென்றும்,இந்தக் காங்கிரஸின் அங்கத்தி னர்கள் அந்தந்த நாட்டின் சட்டசபைகளில் அங்கத்தினர்களாகக் கூடா தென்றும் சில திட்டங்களை வகுத்தது. ஆனால் பின்னர் ஜெர்மனியிலுள்ள கம்யூனிஸ்டுகள், அவர்களுடைய தேசீய பார்லி மெண்ட்டாகிய ‘ரய்க்ஸ்டாக்’1 சபையில் அங்கத்தினர்களாகிக் கிளர்ச்சி செய்தார்கள். இங்கிலாந்திலுள்ள தொழிற்கட்சியினர், முடியாட்சியின் கீழ் அரசாங்க நிருவாகத்தைச் சமீபகாலத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவைகளினால் தெரிவதென்ன வென்றால், முதல் காங்கிரஸில் வகுத்த திட்டப்படி காரியங்கள் நடைபெற வில்லை யென்பதுதான். மார்க்ஸ், தன்னுடைய ஆராய்ச்சியில், எதிர் காலத்தில் முதலாளித்துவமானது, தானே அழிந்து போய்விடுமென்றும், முதலாளித்துவமானது செழிக்கச் செழிக்க அந்த முதலாளித்துவத் திற்குள்ளேயே பலத்த போட்டி ஏற்படுமென்றும், அப்பொழுது பெரிய முதலாளிகள் சிறிய முதலாளிகளை விழுங்கி விடுவார் களென்றும், கடைசியில் சமுதாயத்தில் இரண்டு பிரிவினரே இருப்ப ரென்றும், ஒரு பிரிவார் முதலாளிகளும் மற்றொருபிரிவார் கேவல ஏழைகளுமா யிருப்பார்களென்றும், அப்பொழுதுதான் முதலாளித் துவமானது உச்ச ஸ்தானத்தையடைந்து விட்டதாகச் சொல்லப் படலாமென்றும், உடனே அதற்கு அழிவு ஏற்பட வேண்டியது தானென்றும், பின்னர் சோஷலிஸம் தானாகவே நடை முறைக்கு வந்து விடுமென்றும் முடிவு கட்டினான். ஆனால், மார்க்ஸ், தன்னுடைய சித்தாந்தத்தை வெளியிட்ட பிறகு, ஏறக்குறைய எழுபது வருஷ காலத்தில் மேனாட்டில் நடைபெற்றிருக்கிற சம்பவங்களைப் பார்த்தால், அவைமார்க்ஸின் சித்தாந்தத்திற்கு நேர் முரணாயிருக் கின்றன. உதாரணமாக, மார்க்ஸின் காலத்தில் இங்கிலாந்தி லுள்ள தொழிலாளர்கள் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு எட்டு மணி யாகக் செய்ய வேண்டு மென்று கிளர்ச்சி செய்தார்கள்; இதற்காக வேலை நிறுத்தம் முதலியனவும் செய்தார்கள். ஆனால் மார்க்ஸ், பிரிட்டிஸ் தொழிலாளர்களின் இந்த முறைகளைக் கண்டித்து முதலாளிகள் இதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டார்களென்றும், அவர்களைச் சம்மதிக்கச் செய்வதற்குப் புரட்சி முறைகளையே கையாள வேண்டுமென்றும் கூறினான். ஆனால் பின்னர் நடைபெற்ற தென்ன? எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென்பது அனுபவ சாத்தியமாகியதோடு சட்ட பூர்வமாகவும் அங்கீகரிக்கப் பட்டு விட்டது. இதே மாதிரி மார்க்ஸ் எதிர் பார்த்திராத அநே விஷயங்கள் நடைபெற்றிருக்கின்றன. தான் எதிர்பார்த் தற்கு விரோதமாகக் கூட சில சம்பவங்கள் நடை பெற்றிருக்கின்றன வென்று மார்க்ஸ் ஒப்புக் கெண்டிருக்கிறான். உதாரணமாக, முதலாளித்துவத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முதலாளித்துவ மானது விருத்தியடைய விருத்தி யடைய, முதலாளிகளே ஒருவரை யொருவர் விழுங்கி விடுவார்களென்றும், இதன் மூலமாக முதலாளித்துவம் அழிந்து போகுமென்றும் மார்க்ஸ் கூறினான். ஆனால் நாம் காண்பது என்ன? முதலாளிகள் முன்னை விட அதிகமாகப் பெருகிக் கொண்டுதான் வருகிறார்கள். இவர்க ளுடைய அபிவிருத்திக்கு முடிவே இல்லை போலிருக்கிறது. ஜெர்மனியில் தொழிலாளர்களுடைய துன்பத்தைப் போக்க, அரசாங்கத்தின் அதிகாரத்தை உபயோகப் படுத்தினான் பிஸ்மார்க். தொழிலாளர்களுடைய வேலை நேரம் எட்டு மணி யாக்கப்பட்ட தோடு, இன்னவயதுக்குட்பட்டவர்களைத்தான் வேலைக்கமர்த்திக் கொள்ளலாம் என்பன போன்ற நிபந்தனைகள் ஏற்படுத்தப் பட்டன. தொழிலாளர்கள் வயோதிகமடைந்து விட்டால் அவர்களுக்கு உபகாரச் சம்பளம், இன்ஷ்யூரன்ஸ் சௌகரியங்கள் முதலியன ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டன. இதற்கான செலவுகளெல்லாம் முதலாளிகளின் தலை மீது சுமத்தப்பட்டது. முதலில் முதலாளிகள் இந்தமாதிரி சீர்திருத்தங்களுக்கு ஆட்சேபித்தார்கள். ஆனால் பிஸ்மார்க் மிகவும் கண்டிப்பான ராஜ தந்திரி. பலவந்தமாகவே தன்னுடைய சீர் திருத்தங்களை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தான். தொழிலாளர்களுடைய வேலைநேரத்தைக் குறைத்து விட்டதனால் தொழிலாளர்களுக்கு லாபமே தவிர, முதலாளி களுக்கு நஷ்டம் என்று சிலர் ஆட்சேபம் கிளப்பினார்கள். பதினாறு மணி வேலை நேரத்தில் அதிக பொருளுற்பத்தி செய்ய முடிவு மென்றும், எட்டு மணி நேரத்தில் என்னநடை பெறமுடியுமென்றும் சிலர் கேட்டார்கள். மேற் போக்காகப் பார்க்கிற போது இந்த ஆட்சேபம் நியாயமென்றுதான் படும். ஆனால் எட்டு மணி நேரத்தில் தொழிலாளர்கள் அதிகமாகக் களைப் படைந்த போகாம லிருக்கிறார்கள். இதனால் இவர்கள் தேகபலம் நாளா வட்டத்தில் விருத்தி யடைகிறது. இவர்கள் உற்பத்தி செய்வதும் அதிகமா கிறது. அதிக பலம் அதிக உற்பத்திதானே? தவிர, எட்டு மணி வேலை செய்வதனால், யந்திரங்களும் சீக்கிரத்தில் சீர் கெட்டுப் போவ தில்லை. ஜெர்மனியில் தொழிலாளர்களின் வேலை நேரம் எட்டு மணியாகக் குறைக்கப்பட்டதிலிருந்து, அங்குப் பொருளுற்பத்தியும் அதிகப்பட்டது. இதைப் பார்த்து பிரிட்டனும் அமெரிக்காவும் ஆச்சரியமடைந்தன; ஜெர்மனியின் மாதிரியைப் பின்பற்றத் தொடங்கின. மார்க்ஸின் மற்றொரு சித்தாந்தத்தையும் ஆராய்வோம். முதலாளிகள் ‘மிஞ்சிய மதிப்பை’ அதிகம் பெறுவதற்காக, அவர்கள் மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறதென்பது மார்க்ஸின் கட்சி. முதலாவது, தொழிலாளர்களின் கூலி விகிதத்தைக் குறைத்தல். இரண்டாவது வேலை நேரத்தை அதிகப்படுத்துதல், மூன்றாவது செய்பொருளின் விலையைக் கூட்டுதல். இந்த மூன்றும் தர்க்க ரீதிக்கு ஒவ்வாதன என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டு கிறேன். நீங்களெல்லாரும் அமெரிக்காவில் போர்ட்1 மோட்டார் தொழிற் சாலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகம் பூராவும் போர்ட் மோட்டார்கள் ஓடுகின்றன இந்தத் தொழிற் சாலையின் முதலாளிக்குக் கோடிக் கணக்கான டாலர் லாபமாகக் கிடைக்கிறது. அப்படியானால் இந்தத் தொழிற்சாலையின் நடை முறை எப்படி. இந்தத் தொழிற்சாலையின் பட்டரையிலோ அல்லது காரியாலத்திலோ வேலை செய்வோர் அத்தனைபேருடைய தேக சுகத்திற்குப் பாதகம் ஏற்படாதபடி எல்லா ஏற்பாடுகளும் செய்யப் பட்டிருக்கின்றன. எட்டு மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்கள் வேலை செய்வதில்லை. சாதாரண தொழிலாளர்கள் குறைந்த பட்சம் தினத்திற்கு ஐந்து டாலர் விகிதம் கூலி பெறுகிறார்கள். திறமை வாய்ந்த தொழிலாளர்கள் அதிகமான கூலிபெறுகிறார்கள். தவிர, தொழிலாளர் களுக்கு விளையாடவும், பொழுது போக்கவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு வைத்திய வசதிகள் இலவசமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. அவர் களுடைய குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி போதிக்கப்படு கிறது. இன்ஷ்யூரன்ஸ் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தொழிலாளி இறந்து விட்ட பிறகு அவனுடைய குடும்பத்தார் இன்ஷ்யூரன்ஸ் பணமோ, உபகாரச்சம்பளமோ பெற்றுக்கொள்ள லாம். இந்த நிலைமையில், போர்ட் மோட்டார் வண்டிகளின் விலையென்ன? மற்ற வண்டிகளின் சராசரி விலை ஐயாயிரம் டாலராயிருந்தால் போர்ட் வண்டியின் விலை ஆயிரத்தைந் நூறு டாலர்தான். இவ்வளவு விலை குறைவாயிருந்தும், இந்த வண்டியின் இஞ்சின் மிகப் பல முள்ளது; மலைப் பாதைகளுக்கு ஏற்றது; நீண்ட நாளைக்கும் உபயோகிக்கலாம் உலக முழுவதிலும் இந்தக் கார்கள் பரவியிருப்பதனால், இந்தத் தொழிற்சாலைக்கு நல்ல லாபம். மார்க்ஸ் சொன்ன மூன்று நிபந்தனைகளும், போர்ட் தொழிற்சாலை விஷயத்தில் மாறுபடுகின்றனவல்லவா? மார்க்ஸின் ‘மிஞ்சிய மதிப்பு’ சித்தாந்தத்தின் மற்றோர் அமிசம் என்ன வென்றால், முதலாளிகளின் பொருள் உற்பத்தி யானது, தொழிலாளர் களைப் பொறுத்திருக்கிறது. தொழிலாளர்கள் உற்பத்தி செய்வதானது? சாமான்களைப் பொறுத்திருக்கிறது. சாமான்களை விற்பதும் வாங்குவதும் வியாபாரிகளைப் பொறுத் திருக்கிறது. இங்ஙனமே உற்பத்தி அமிசங்கள் எல்லாவற்றிலும், முதலாளிகளும் வியாபாரிகளும் அதிகமான லாபம் எடுத்துக் கொண்டு, தொழிலாளிகள் வியர்வை சொட்ட உழைத்துச் சம்பாதித்த பணத்தைச் சுரண்டுகிறார்கள். இதனால் முதலாளிகளும் வியாபாரி களும் தொழிலாளர்களுக்கு விரோதிகள்; எனவே அவர்கள் அழிக்கப்படவேண்டும், இதிலும், மார்க்ஸ் என்ன முடிவு கட்டினா னென்றால், முதலில் முதலாளிகளும் பின்னர் வியாபாரிகளும் அழிக்கப் படுவார்களாம். ஆனால் இப்பொழுது உலகம் பல வழி களிலும் முன்னேறியிருக்கிறது. புதிய புதிய சீர்திருத்தங்களைக் கண்டுவருகிறது. உதாரணமாகக் கூட்டுறவு முறையில் ஸ்தாபிக்கப் பட்டிருக்கிற பண்டகசாலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். இவை களினால் தொழிலாளர்களுக்குப் பல நன்மைகள் உண்டாகின்றன வல்லவா? இந்த அமிசத்திலும் மார்க்ஸின் சித்தாந்தம் பிசகிவிட்டது. மார்க்ஸின் மற்றொரு சித்தாந்தப்படி, உலகத்துப் பல்வகைத் தொழில்கள், உற்பத்தியைப் பொறுத்திருக்கின்றன; உற்பத்தியானது முதலாளிகளைப் பொறுத்திருக்கிறது. அதாவது நல்ல உற்பத்தி சக்தியும் முதலும் இருந்தால், ஒரு தொழிலானது விருத்தியடையும், அதிக லாபமும் சம்பாதிக்க முடியும் என்பது தான் இந்தச் சித்தாந்தத்தின் அடிப்படை. ஆனால் சீனாவின் தொழில்கள் இந்தச் சிந்தாந்தத்திற்கு முரணாயிருக்கின்றன. சீனாவில் பெரிய எஃகுத் தொழிற்சாலை யான் - யெ - பிங் - கம்பெனி1 என்பது. இங்கு உற்பத்தி செய்யப்படும் எஃகானது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்படு கிறது. ஆனால் சீனாவுக்குத் தேவையாயுள்ள எஃகு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன? சீனாவிற்கு மென்மையான எஃகு தேவையாயிருக் கிறது. கட்டடவேலை, ஆயுதங்கள் முதலியன செய்வதற்கு இந்த மெல்லிய எஃதுதான் தேவை. ஆனால் சீனாவில் உற்பத்தியாகிற எஃகு, முரட்டு எஃகு. இந்த முரட்டு எஃகை மெல்லிய எஃகாக மாற்றக்கூடிய வசதியான யந்திரங்கள் சீனாவில் இல்லை. இதனால் சீனாவில் உற்பத்தியாகிற முரட்டு எஃகை அந்நிய நாடுகளுக்கு அனுப்பிவிட்டு, அந்நிய நாடுகளிலிருந்து மென்மையான எஃகை வரவழைத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இதனால் என்ன தெரிகிறதென்றால், ஒரு தொழிலின் அபிவிருத்தியானது, மூல தனத்தையும் உற்பத்திச் சக்தியையும் மட்டும் பொறுத்திருக்க வில்லை. வாங்குகிறவர்களின் கூட்டுறவும் தேவையாயிருக்கிறது. மேற்சொன்ன ஹான் - யெ - பிங் கம்பெனிக்கு ஏராளமான மூலதனம் இருக்கிறது. ஆயினும் அஃது உற்பத்தி செய்கிற எஃகானது, சீனாவில் வாஙகப்படுவ தில்லை. அதனால் அது தன் மார்க்கெட்டை விஸ்தரிக்க முடியவில்லை; லாபமும் சம்பாதிக்க முடியவில்லை. ஒரு தொழிலானது அபிவிருத்தி யடைவது அந்தத் தொழிற் பொருளை வாங்குவோரைப் பொறுத்திருக் கிறது. இதனால்தான், தற்காலத் தொழிற்சாலைகள், வாங்குவோருடைய தேவையை அனுசரித்துப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. தொழிலாளர்களும், பொருள் வாங்குவோருடன் ஒத்துழைக்கிற மாதிரியே பொருள் களை உற்பத்தி செய்வதில் ஆசை கொள்கிறார்கள். எனவே, ஜனங்களுடைய வாழ்க்கையை அனுசரித்துத்தான் எந்த ஒரு தொழிலும் நடைபெற வேண்டியிருக்கிறது. ஜீவனோபாயப் பிரச்னைதான் எல்லா அரசாங்கங்களுக்கும், எல்லாப் பொருளாதார நிலைமைகளுக்கும், எல்லாச் சரித்திர நிகழ்ச்சிகளுக்கும் மையமாயிருப்பது. லௌகிக சக்திகள்தான், சரித்திரத்தின் மையம் என்று சொல்ல முடியாது. சரித்திரத்தின் அரசியல் பிரச்னையோ, சமுதாயப் பிரச்னையோ, பொருளாதாரப் பிரச்னையோ எல்லாமுமே ஜீவனோபாயப் பிரச்னையைத்தான் சுற்றிச் சுழல்கின்றன. மத்தியமாயுள்ள இந்தப் பிரச்னையை நாம் பூரணமாக ஆராய்ச்சி செய்து விட்டோமானால், சமுhயப் பிரச்னைக்கும் நாம் பரிகாரங் கண்டுபிடித்துவிடுவோம். 14. சீனாவும் மார்க்ஸீயமும் (10 - 8 - 1924) வாழ்க்கைத் தத்துவத்தை நடைமுறையில் கொணர வேண்டு மானால், இரண்டுவிதமான முறைகளைக் கையாளவேண்டுமென்று ‘கோமிண்ட்டாங்’ கட்சி தீர்மானித்திருக்கிறது. முதலாவது, நில பாத்தியதையை சமப்படுத்தி விடுவது; இரண்டாவது, மூலதனத்தை ஒழுங்குபடுத்திவிடுவது. இந்த இரண்டு வழிகளையும் நாம் பின்பற்று வோமானால், சீனாவின் ஜீவனோபாயப் பிரச்னையைத் தீhத்துவைத்து விட்டவர்களாவோம். இது விஷயத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான முறையைப் பின்பற்றியிருக்கின்றது. மேனாட்டு முறைகளை அப்படியே பின்பற்ற வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். அதாவது புரட்சியை உண்டுபண்ணி, தொழிலாளர் களின் சர்வாதிகாரத்தை ஏற்படுத்திவிட்டால் எல்லாச் சமுதாயப் பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று இந்தச் சிலர் - மார்க்ஸியர்கள் - கூறுகிறார்கள். வேறு சில சோஷலிஸ்ட்டுகள், சமாதான முறை களையே பின்பற்ற வேண்டு மென்றும், அரசியல் நடவடிக்கைகள் எடுத்துக்கொள்வது, சமரஸம் பேசுவது முதலயவைகளின் மூலமாகச் சமுதாயப் பிரச்னைகளைத் தீர்க்கலாமென்றும் கூறுகிறார்கள். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இந்த இரண்டு கட்சியினருக்கும் அடிக்கடி பிணக்குகள் நிகழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு வழியைப் பின்பற்றி வருகின்றனர். ருஷ்யா, தனது அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளப் புரட்சி முறையைக் கையாண்டது. ஆனால் சென்ற ஆறு வருஷத்தில் அந்நாட்டில் நடைபெற்றிருக்கிற சம்பவங் களைப் பார்த்தால், புரட்சி முறையானது அரசியலில்தான் வெற்றி பெற்றிருக்கிறதே தவிர, பொருளாதாரத் துறையில் வெற்றிபெற வில்லையென்று தெரிகிறது. சோவியத்ருஷ்யாவின் பொருளாதாரத் திட்டம் இன்னும் பரிசோதனை நிலைமையில் தானிருக்கிறது. இதனால் தெரிவதென்னவென்றால், புரட்சித் திட்டங்களானது, பொருளாதாரக் கஷ்டங்களை அடியோடு நிவர்த்தித்துவிட முடியாது. இதனாலேயே மேனாட்டு அறிஞர்கள் பலர்ருஷ்யாவின் புரட்சி முறைகளை எதிர்க்கிறார்கள்; அரசியல் முறையைப் பின்பற்றுமாறு கூறுகிறார்கள். அரசியல் முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று சொல்கிறவர்கள், மெதுவாக முன்னேறிவேண்டு மென்ற மனப்பான்மை கொண்டவர்கள். சமாதான முறைகளில் தான் எல்லாப் பிரச்னைகளும் தீரும் என்ற கருத்துக் கொண்ட வர்கள் இவர்கள். இந்தச் சமாதான முறைகள்தான் யாவை? மேலே நான் சொன்ன நான்கு. அவைதான், சமுதாய, பொருளாதார சீர்திருத்தம்; போக்குவரத்து சாதனங்களைத் தேசீய மயமாக்குதல்; வருமான வரி போன்ற நேர்முகமான வரிகளை விதித்தல்; கூட்டுறவு நாணயச் சங்கங்கள் மூலமாகப் பொருள்களை வினியோகம் செய்தல். மேனாடுகள் பல, ஒன்றன் பின்னொன்றாக இந்த முறை களைப் பரீட்சித்துப் பார்த்து வருகின்றன. இவற்றில் பூரண வெற்றி யடையவில்லையானாலும், இறுதியில் சமுதாயப் பிரச்னை தீர்ந்து விடுமென்று இவை நம்புகின்றன. ருஷ்யா, புரட்சியை ஆரம்பித்த காலத்தில், முதலில் சமுதாயப் பிரச்னையைத் தீர்த்துவிட முடியுமென்று கருதியது. அரசியல் பிரச்னையை இரண்டாம் பட்சமாகத்தான் அது கருதியது. ஆனால் புரட்சியின் விளைவு என்னவாயிற்று? அரசியல் பிரச்னை தீர்ந்தது. சமுதாயப் பிரச்னை தீரவேயில்லை. இதனால்தான் மார்க்ஸீயத் திற்கு விரோதிகள், மார்க்ஸ் முறைகள் வெற்றி பெற முடியாது என்று கூறுத் தொடங்கினார்கள். ஆனால் மார்க்ஸீயர்கள் என்ன கூறு கிறார் களென்றால், ருஷ்யா, சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்ப தற்குப் புரட்சி முறைகளைக் கையாண்டு தோல்வியடையவில்லை யென்றும், ருஷ்யாவின் தொழிலும் வியாபாரமும் மற்ற நாடுகளைப் போல் அவ்வளவு தூரம் முன்னேற்றத்தை யடையவில்லையென்றும், ருஷ்யாவின் பொருளாதார அமைப்பு பாலிய தசையிலேயே இருக்கிற தென்றும், இதனால் தான் மார்க்ஸின் முறைகளை வெற்றிகரமாகக் கையாள முடியவில்லையென்றும் கூறுகிறார்கள். தொழில் பெருகியுள்ள நாடுகளில் இது வெற்றிபெறுமென்றும் இவர்கள் கூறுகிறார்கள். சோஷலிஸ்ட்டுகளுக்குள்ளேயே புரட்சி முறையைக் கையாள் வோரென்றும், சமாதான முறைகளைக் கையாள்வோ ரென்றும் இரண்டு கட்சிகள் இருக்கின்றன. ஆனால் இந்த இரண்டு கட்சிகளையும் முதலாளிகள் எதிர்க்கிறார்கள். மேனாட்டில் இப்பொழுது தொழிலும் வியாபாரமும் அதி வேகமாக முன்னேற்ற மடைந்து வருகின்றன. முதலாளித்துவமானது கண்ணுக்கெட்டாத உயரத்திற்கு வளர்ந்திருக் கிறது. முதலாளிகளின் கொடுமை ஓர் எல்லைக்கு வந்துவிட்டது. ஜனங்கள் இந்த நிலைமையைச் சகிக்க முடியாமல் தத்தளிக்கிறார்கள். முதலாளித்துவ ஆதிக்கத்திலிருந்து ஏழை ஜனங்களை விடுவிக்க வேண்டுமென்று பாடுபடுகிற சோஷலிஸ்ட்டுகள் - அவர்கள் சமாதான முறைகளைக் கையாள் கிறவர்களாயிருந்தாலும், புரட்சி முறைகளைக் கையாள்கிறவர்களா யிருந்தாலும் - முதலாளிகளால் எதிர்க்கப் படுகிறார்கள். மேனாடுகள் தங்கள் சமுதாயப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள எந்த முறையைக் கடைசியில் பின்பற்றும் என்பதை இப்பொழுது சொல்ல முடிய வில்லை. சமாதான முறைகளைப் பின்பற்றினாலுங்கூட முதலாளிகள் எதிர்ப்பதைப் பார்க்கும் சோஷலிஸ்ட்டுகள் பலர், இப்பொழுது தீவிர முறைகளைக் கையாளவேண்டுமென்று கட்சி மாறிக் கொண்டு வருகிறார்கள். பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் தொழில்கள் மிகவும் உச்ச நிலையையடைந்திருப்பதால். அந்த நாடுகளில் புரட்சி முறைகளைக் கையாண்டால் உடனே வெற்றி கிடைக்குமென்று மார்க்ஸீயர்கள் கூறுகிறார்கள். ஆனால் பிரிட்டனிலும் அமெரிக்கா விலும் உள்ள அரசாங்கங்கள் சுயேச்சாதிகார அரசாங்கங்களைப் போல், சோஷலிஸ்ட்டுகளின் எல்லா முயற்சிகளையும் தகைந்து நிற்கின்றன. ஏனென்றால் இந்த இரண்டு நாடுகளிலும் முதலாளி களின் செல்வாக்கு அதிகம். ஆதிகாலத்திலிருந்தே பொதுவுடைமையானது உலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்த முறை எப்பொழுது குலைந்து போய்விட்டது? என்னுடைய ஆராய்ச்சிப் படி, பணம் எப்பொழுது புழக்கத்திற்குவர ஆரம்பித்ததோ அப்பொழுதிருந்தே இந்தப் பொது வுடைமைக் கொள்கை நிலை குலைந்துவிட்டது. எல்லா ஜனங்களும் பணத்தைச் சேமிக்கத் தொடங்கியதும் அவரவர்களும் இஷ்டப்படி விற்கவும் வாங்கவும் தலைப்பட்டார்கள். பண்டமாற்றல் நின்றுவிட்டது. இதற்குப் பதில் பணத்தைக் கொடுத்துப் பொருள் வாங்கவும், பணத்தைப் பெற்றுப் பொருள் பெறவும் ஏற்பட்டது. பணப் புழக்கத்தினால் வியாபாரம் தாராளமாக நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் தலையெடுக்க ஆரம்பித்தார்கள். இந்த வியாபாரிகள்தான் பழைய காலத்து முதலாளிகள். பின்னர் தொழில்கள் பெருகி, யந்திரங்களின் மூலமாகப் பொருளுற்பத்தி நடைபெறத் தொடங்கியது முதல், யந்திரங்களின் சொந்தக்காரர்கள் முதலாளிகளாகி விட்டார்கள். தற்காலத்தில் புத்திசாலிகளான முதலாளிகள் சிலர், உலகத்தி லுள்ள முக்கியமான பொருள்களை, சுயலாபத்தை முன்னிட்டுத் தங்களுடைய உரிமைப் பொருள்களாக்கிக் கொண்டுவிட்டார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களுக்கு அடிமைகளைப்போல் உழைக்க வேண்டியதாயிற்று. இதனால்தான் இப்பொழுது மனிதருக்கும் மனிதருக்கும் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டம் எப்பொழுது நிற்கும்? புதிய தொரு கம்யூனிஸ சகாப்தத்தை நாம் ஏற்படுத்தினால் தான். மனிதன், எதற்காகப் போராடு கிறான்? தனது ஆகாரத்திற்காக. கம்யூனிஸ சகாப்தத்தில், எல்லோருக்கும் வயிற்றுக்குப் போதிய ஆகாரம் கிடைக்கும். அப்பொழுது மனிதருக்கும் மனிதருக்கும் போராட்டம் நடைபெறாது. எனவே, கம்யூனிஸம் என்பது சிறந்த தொரு லட்சியம். அதுதான் சமுதாயத்தைச் சிறந்த முறையில் புனர் நிர்மாணஞ் செய்வது. ‘கோமிண்ட்டாங்’ கட்சியினுடைய ‘வாழ்க்கைத்தத்துவ’ மானது, சிறந்ததொரு லட்சியம் மட்டுமல்ல; சமுதாயத்தை முன்னுக்கு உந்தும் ஒரு சக்தி; எல்லாச் சரித்திர இயக்கங்களக்கும் ஒரு மையம். இந்தத் தத்துவத்தை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்தால் சமுதாயப் பிரச்னைகளெல்லாம் தாமே தீரும். சமுதாயப் பிரச்னைகள் தீர்ந்தால் தான், மானிட சமுதாயம் அநேக நன்மைகளை அடைய முடியும். ஆகவே, கம்யூனிஸத்திற்கும் நமது மின் - ஷெங் தத்துவத்திற்கும் - அதாவது வாழ்க்கைத் தத்துவத்திற்கும் - உள்ள வித்தியாசத்தைச் சுருக்கமாகக் கூறுகிறேன். கம்யூனிஸம் என்பது வாழ்க்கையைப் பற்றிய ஒரு லட்சியம்; மின் - ஷெங் என்பது அனுபவ கம்யூனிஸம். பார்க்கப் போனால் அடிப்படையில் இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை; அனுஷ்டானத் திற்குக் கொண்டுவருகிற முறைகளில்தான் வித்தியாசம் இருக்கிறது. சீனாவின் வாழ்க்கைப் பிரச்னையை ‘கோமிண்ட்டாங்’ கட்சியினராகிய நாம் எப்படித் தீர்த்துவைப்பது? சீனா எந்த நிலைமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறது; நாம் எந்தவிதமான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; இவைகளையெல்லாம் உத்தேசித்துத்தான் நாம் இந்த வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்க்க முயலவேண்டும். வெறும் தத்துவங்களை வைத்துக்கொண்டு நாம் நமது முறைகளை வகுக்கக் கூடாது. சீனாவுக்குப் பொருத்தமான உண்மை ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் வகுக்க வேண்டும். அப்படியானால் சீனாவுக்குப் பொருத்தமான இந்த உண்மை ஆதாரங்கள் யாவை? சீனாவின் ஏழ்மைத்தனத்தில் எல்லோருக்கும் பங்கு உண்டு. அதாவது சீனாவில், பெரும் பணக்காரர்கள், மேனாட் டில் இருப்பதைப் போல் இல்லை. ‘ஏழைக்கும் பணக்காரனுக்கு முள்ள வித்தியாசம்’ என்று நாம் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொள்கிறோமே, அஃது ஏழ்மைத்தனத்திலேயுள்ள பல படிகளைக் குறிப்பததான். மற்ற நாட்டுப் பனக்காரர்களை உத்தேசிக்கையில், சீனாவிலுள்ள பணக்காரர்கள், ஏழைகள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருக்க, சீனாவிலுள்ள எல்லோருமே ஏழைகள் என்ற முடிவுக்குத்தானே வரவேண்டியிருக்கிறது. இந்த ஏழைகளிலே, அதிக ஏழ்மைத்தனமுடையவர்கள் யார். குறைந்த ஏழ்மைத்தன முடையவர்கள் யார் என்றுதான் நாம் பார்க்கவேண்டி யிருக்கிறது. இந்த நிலைமையை எப்படிச் சரிப்படுத்தலாமென்பதே நாம் ஆராயவேண்டியபிரச்னை. முதலில் நிலச்சுவான்தாரர்கள் ஆதிக்கம்; பின்னர் வியாபாரிகள் ஆதிக்கம்; இப்பொழுது முதலாளிகள் ஆதிக்கம். இப்படிப் படிப்படியாக வளர்ச்சிகள் நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால் ஐரோப்பாவில் நிலச்சுவான்தாரர்களின் ஆதிக்கம் இன்னும் நின்ற பாடில்லை. சீனவிலோ இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னரேயே இந்த நிலச்சுவான்தாரர் களின் ஆதிக்கம் நின்றுபோய் விட்டது. ஆனால் இங்குத் தொழிலோ வியாபாரமோ அதிகமாக விருத்தியடையவில்லை. இதனால் சமுதாய நிலைமையும் அதிகமாக மாறுதலடையவில்லை. சீனாவில் பெரிய பெரிய நிலச்சுவான் தாரர்கள், இல்லையானாலும், சிறிய சிறிய நிலச்சு வான்தாரர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தச் சிறிய நிலச்சுவான்தாரர்களின் ஆதிக்கத்தின் கீழ் ஜனங்கள் எவ்விதக் குறைபாடுமின்றி நிம்மதி யாகவே காலங் கழித்து வருகிறார்கள். ஆனால் சமுப காலமாக மேனாட்டுப் பொருளாதார சக்திகள் பல நமது நாட்டிற்குள் பிரவேசிக்கத் தொடங்கியதி லிருந்து, நமது பழைய முறைகளெல் லாம் பல வித மாற்றங்களை யடைந்திருக்கின்றன. மேனாட்டு ஆதிக்கத்தினால் முதன்முதலாகத் தாக்கப்பட்டது நிலப் பிரச்னை தான். உதாரணமாக, காண்ட்டன் நகரத்தில் வீதிகளை அகலப் படுத்தியதற்குப் பிறகு, அங்கு நிலத்தின் மதிப்பு எவ்வளவு உயர்ந்து விட்டதென்பதைப் பாருங்கள். முன்னர் - ஏறக்குறைய எண்பது வருஷங்களுக்கு முன்னர் - பத்து சதுர அடி விஸ்தீரணமுள்ள நிலத்தின் விலை ஒரு டாலாராயிருந்தது. இப்பொழுது அதே நிலத்தின் விலை பதினாயிரம் டாலர். இதனால் சொற்ப நிலம் வைத்துக் கொண் டிருந்தவர்களெல்லோரும் பெரிய பணக்காரர்களாவிட்டார்கள். அனால் சீனாவில் மட்டும் இந்த நிலத்தின் மதிப்பு அதிகப்பட வில்லை; மற்ற நாடுகளிலும் அதிகப்பட்டுத்தானிருக்கிறது. ஆஸ்திரேலியாவிலே நடைபெற்ற ஒரு விநோத சம்பவத்தைச் சொல்லுகிறேன், கேளுங்கள். ஓர் ஊரில் பெரிய பெரிய வியாபாரக் கம்பெனிகள் செழிப்பாக நடைபெற்று வந்தன. இந்த வியாபாரக் கம்பெனிகள் ஏற்படுவதற்கு முன் இந்த ஊரில் நிலத்தின் மதிப்பு மிகக் குறைவாயிருந்தது. ஒரு சமயம், அரசாங்கத்தார், தரிசாகக் கிடந்த ஒரு சிறிய நிலத்தை ஏலம் போட்டனர். யாரும் அதை விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை. ஏலம் போடுகிற சமயத்தில், நூறு டாலர், இருநூறு டாலர், இரு நூற்றைம்பது டாலர் என்று இப்படி ஏலங் கேட்டனர். ஆனால் அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஏலங் கூறியவன் முந்நூறு டாலருக்குக் குறைந்து நிலத்தை விற்பனை செய்ய மனமொப்பவில்லை. எனவே, ‘முந்நூறு டாலருக்கு யாராவது ஏலம் கேட்கிறார்களா?’ என்று கூவினான். அந்தச் சமயத்தில் ஒரு குடிகாரன் கூட்டத்திற்குள் நுழைந்து ‘முந்நூறு டாலர் நான் கொடுக்கிறேன்’ என்றான். உடனே கூட்டம் கலைந்துவிட்டது. குடிகாரனுக்கு நிலம் சுவாதீனமாக்கப்பட்டது. குடிகாரனுக்கு நிலம் அவன், தன் குடிமயக்கத்தில் முந்நூறு டாலர் கேட்டு விட்டோமெயென்று பின்னர் வருந்தினான். ஆயினும் என்ன செய்வது? தன்னிடத்திலுள்ள சொத்து பற்று எல்லாவற்றையும் விற்று முந்நூறு டாலரைக் கட்டினான். பிறகு அந்த நிலத்தைப் பற்றி இவன் கவனிக்கவேயில்லை. தரிசாகவே கிடந்தது. அதைச் சீர்திருத்த இவன் கையில் பணமுமில்லை. இப்படிப்பத்து வருஷ காலத்திற்கு மேல் சென்றது. நிலத்தின் விலை வரவர ஏறிக்கொண்டு வந்தது. ஏனென்றால் அந்த ஊரில் பெரிய பெரிய வியாபாரக் கம்பெனிகள் திறக்கப்பட்டன. எந்த நிலத்தை மேற்படி குடிகாரன் முந்நூறு டாலர் கொடுத்து வாங்கினானோ, அதே நிலம் இப்பொழுது லட்சக் கணக்கான டாலர் பெறுமானமுள்ளதாகிவிட்டது. அந்தக் குடிகாரன், ஆஸ்திரேலியாவிலேயே ஒரு லட்சாதிபதியாகிவிட்டான். தன்னுடைய உழைப்பு ஒரு சிறிது கூட இல்லாமலேயே அவன் பெரிய பணக்hரனாகி விட்டான். ஆனால் அவனுடைய பணமெல்லாம் யாருடையது? என் னுடைய அபிப்பிராயத்தில் அஃது எல்லாருடைய பணமுந்தான். எப்படி யென்றால், ஜனங்களெல்லோரும் சேர்ந்துதானே, ஜனங் களுடைய முயற்சியால்தானே, மேற்படி நகரம் பெரிய வியாபார ஸ்தலமாயிற்று? இதனால் நில விலை கூடியற்கு ஜனங்கள் தானே காரணம்? இப்படியே தான் சீனாவில் காண்ட்டன், ஷாங்காய் முதலிய நகரங்கள பெரிய வியாபார ஸ்தலங்களாக மாறியதற்கு நாமே காரணர்கள். இதனால் நிலவிலை ஏறுவதற்கும் இறங்கு வதற்கும் காரணமாயிருக்கப்பட்டவர்கள் நிலச் சொந்தக்காரர்கள் மட்டுமல்ல எல்லாருடைய உழைப்பும் முயற்சியுந்தான் இதற்குக் காரணம். நில விலை ஏற்றத்தின் மூலமாக ஒரு நிலச்சவான்தாரர் சம்பாதிக்கிற லாபத்தை, மேனாட்டுப் பொருளாதார நிபுணர்கள் ‘சம்பாதியாத பண வருவாய்’ என்று சொல்கிறார்கள், தொழில் முதலாளிகளோ, வியாபாரிகளோ, தங்களுடைய தேக உழைப்பு, மன உழைப்பு முதலியவை மூலமாகச் சம்பாதிக்கிற லாபத்திற்கும் இந்த ‘சம்பாதியாத பண வருவாய்’க்கும் வித்தியாசம் உண்டு. மேலே சொன்ன தொழில் முதலாளிகளும் வியாபாரிகளும் சம்பாதிக்கிற லாபம் நியாயமான லாபமல்ல வென்று ஏற்கனவே நாம் கூறியிருக்கிறோம். ஆனால் அவர்கள் கஷ்டப்பட்டாவது உழைக்கிறார்கள். நிலச்சுவான்தாரர்களோ, எவ்விதமான உழைப்பையும் மேற்கொள்ளாமல் ஏராளமான லாபத்தைச் சம்பாதிக்கிறார்கள். இதற்குக் காரணமென்ன ஒரு நிலச்சுவான் தாரருடைய நிலத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களை ஜனங்கள் பல விதங்களிலும் அபிவிருத்தி செய்துவிடுகிறார்கள். இதனால் அவனுடைய நிலத்திற்குக் கிராக்கி ஏற்படுகிறது. எனவே போட்டியில் நிலத்தின் விலை உயர்கிறது. நிலத்தின் விலை உயர்ந்தால் மற்றெல்லாப் பொருள்களின் விலையும் உயர்கின்றது. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தென்னவென்றால், ஜனங்கள், தங்கள் உழைப்பினால் சம்பாதிக்கிற பணத்தை நிலச்சுவான்தாரர்கள் மறைமுகமாகக் கொள்ளை கொண்டு போகிறார்கள் என்பதுதான். மேனாட்டு வல்லரசுகள், இந்த நிலப் பிரச்னைக்குச் சரியான பரிகாரம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. சீனாவிலுள்ள நாம் இந்தப் பிரச்னையை இப்பொழுதே தீர்த்து வைக்க வேண்டும். தொழிலும் வியாபாரமும் அபிவிருத்தியான பிறகு பார்த்துக் கொள்வோமென்று சொன்னால் அது முடியாத காரியம். எனவே, இப்பொழுது நாம் எந்த விதமான முறையைக் கையாள வேண்டும்? ‘கோமிண்ட்டாங்’ கட்சியினர் என்ன உத்தேசித்திருக்கின்றனர் என்றால், அவசியமானால் எல்லா நிலங்களையும் அரசாங்கத்தார் திருப்பி வாங்கிவிட வேண்டும் என்றும், நிலத்தின் தீர்வை என்ன? நிலத்தின் மதிப்பு எவ்வளவு இவைகளை உத்தேசித்து அந்தந்த நிலத்துக்குள்ள கிரயத்தைச் தீர்மானித்திருக் கின்றனர். அப்படி யானால் நிலத்தின் விலையை எப்படி நிர்ணயிப்பது என்ற கேள்வி பிறக்கலாம். நிலத்தின் சொந்தக்காரனே, நிலத்தின் கிரயம் இவ்வளவு தான் என்று நிர்ணயிக்கும்படி விட்டுவிட வேண்டும். சாதாரணமாக எல்லா நாடுகளிலும், நிலத்தின் மதிப்பு எவ்வளவோ அதில் நூற்றில் ஒரு பங்கு விகிதந்தான் நில வரி விதிக்கப்படுகிறது. நம்முடைய திட்டமும் இந்த வரி விதிப்பு முறையை அனுசரித்துத்தான் இருக்கும். நிலச்சொந்தக்காரன், தன்னுடைய நிலத்தின் மதிப்பு இவ்வளவுதானென்று அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறான். அரசாங் கமும் அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு வரி விதிக்கிறது. நிலவிலையை நிர்ணயிக்கிற உரிமையை நிலச் சொந்தக்காரர் களுக்கே விட்டு விட்டால், அவர்கள் குறைந்தமதிப்பேபோட்டுக் காட்டுவார்களென்றும், இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டமே யென்றும் சிலர் சொல்கிறார்கள். இது சரியான ஆ!ட்சேபந்தான். இதற்காகவே, அரசாங்கம் இரண்டு விதமான திட்டங் களை அமுலுக்குக் கொண்டுவர வேண்டு மென்று கூறுகிறேன். ஒன்று நிலத்தின் மதிப்பை உத்தேசித்து நிலவரி போட்டு அதனை வசூலிக்கும்; மற்றொன்று, அதே மதிப்பைக் கொடுத்து அந்த நிலத்தைத் திரும்பவும் வாங்கிக்கொள்ளும். இந்தத் திட்டங் களினால் நிலச் சொந்தக்காரன் தன் நிலத்தின் விலையை அதிகப் படுத்தியும் சொல்ல மாட்டான்; குறைத்தும் சொல்லமாட்டான். ஏனென்றால் அதிக விலை சொன்னால், அந்த விகிதாசாரம் நில வரியும் அதிகமாகும். அதே பிரகாரம், நிலத்தின் விலையைக் குறைத்துச் சொன்னால், அந்தக் குறைந்த விலை கொடுத்து அரசாங்கம் அதனைத் திருப்பி வாங்கிக் கொண்டு விடமுடியும். எனவே, அவன் நியாயமான மதிப்பையே தெரிவிக்கக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் நிலச் சொந்தக்காரனுக்கும் நஷ்டமில்லை; அரசாங்கத்திற்கும் நஷ்டமில்லை. நிலங்களின் மதிப்பை நாம் நிர்ணயித்து விட்ட பிறகு, அந்த வருஷத்திலிருந்து, அதிகப்படுகிற நிலமதிப்புத் தொகையெல்லாம் பொதுஜனங்களைச் சார்ந்ததாகும் என்ற ஒரு சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் நிலத்தின் மதிப்பு அதிகப்படுமானால் அதற்குக் காரணம், சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் செய்திருக்கிற பலவித அபிவிருத்திகள் தான். மற்றும் தொழிலும் வியாபாரமும் அபிவிருத்தி யடைந்திருப் பதும் ஒரு காரணம். எனவே, நிலத்தின் அதிக மதிப்புத் தொகையைச் சமுதாயத்திற்குக் கொடுத்து விடவேண்டுமென்ற இந்தத் திட்டத்தைத் தான், ‘நிலஉரிமையின் சமத்துவம்’ என்று சொல்கிறோம் இதைத் தான் ‘கோமிண்ட்டாங்’ கட்சியும் வலியுறுத்துகிறது. மின் - ஷெங் தத்துவமும் இதுதான். கம்யூனிஸமும் இதுவே. ‘கோமிண்ட்டாங்’ கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்கள் ‘ஸான்மின்’ கோட்பாடுகளை அங்கீகரிப்பதனால் அவர்கள் கம்யூனிஸத்தை எதிர்க்கக் கூடாது. சொத்துரிமையிலே எல்லாருக்கும் பங்கு இருக்க வேண்டு மென்பது தான் மின் - ஷெங் தத்துவத்தின் முக்கியமான அமிசம். இதனாலேயே இதனை - மின் ஷெங் தத்துவத்தை - கம்யூனிஸம் என்று சொல்கிறோம் ஆனால் நமக்கு வேண்டிய கம்யூனிஸமல்ல. நம்முடைய கம்யூனிஸம்; நிகழ் கால கம்யூனிஸ மல்ல. நம்முடைய கம்யூனிஸ திட்டப்படி, இந்தத் திட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் சொத்து வைத்துக் கொண்டிருந்தவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மேனாட்டில் சொல்லப்படுகிற ‘சொத்துக்களைத் தேசீய மயமாக்குவது’ என்கிற விஷயம் வேறே; நாம் உத்தேசிக்கிற திட்டம் வேறே. நிலபாத்தி யதையைச் சமப்படுத்தி விடுவது என்ற நமது திட்டத்தை நிலச் சொந்தக்காரர்கள் நன்கு தெரிந்துகொண்டு விடுவார்களானால் அவர்கள் சிறிதும் அச்சங் கொள்ள மாட்டார்கள். இப்பொழுது நாம் எந்தெந்த நிலங்களுக்கு மதிப்புப் போடுகிறோமோ அவை யெல்லாம் தனிப்பட்டவர் களுடைய சொத்துக்களாகவே இருக்கும். இந்த நிலப் பிரச்னையை நாம் தீர்த்து விட்டோமானால், ஜீவனோபாயப் பிரச்னையும் பாதி தீர்ந்து விட்டது போலத்தான் நவீன நாகரிகம் நிறைந்த நகரங்களில், நிலவரியை நாம் விதிப்போமானால், சாதாரண ஜனங்களுடைய வரிச்சுமை குறையும்; இன்னும் பல சௌகரியங்களும் உண்டாகும். சில்லரை வரிகளை யெல்லாம் ரத்து செய்துவிடலாம். தண்ணீர் வசதிகள், விளக்கு வசதிகள் மூதலியன ஜனங்களுக்கு இலவசமாகவே அளிக்கலாhம். இந்த நிலவரி வருமானத்தைக் கொண்டே பாதைகள் செப்ப னிடுவது, போலீஸ் பந்தோபஸ்து செய்து கொடுப்பது முதலியன வற்றையும் ஜனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம். இப்பொழுது நிலத்திலிருந்து கிடைக்கிற வருமான மெல்லாம் நிலச்சுவான்தாரர் களுக்கே போகிறது. இதனால் அரசாங்கத்திற்குச் சரியான வருமானம் கிடைக்கிறதில்லை. இதனால் சாதாரண ஜனங்கள் மீது பலவிதமான வரிகளைவிதிக்க வேண்டியிருக் கிறது. சீனாவிலோ ஏழைகள் அதிகம்; இவர்கள் மீது அதிகமான வரிச்சுமை சுமத்தப் படுவதற்குக் காரணம் நேர்மையற்ற வரிவிதிப்புமுறைதான். இந்த நேர்மையற்ற வரி விதிப்புக்குக் காரணம் அதிகக் குறைவான நிலப் பங்கீடு முறைதான். இதனால் சீனாவில் நிலப் பிரச்னை, ஒரு தீராத பிரச்னையா யிருக்கிறது. ஆக, இந்தப் பிரச்னையை தீர்த்து வைப்ப தற்கு, நிலவரித் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவேண்டும். சீனாவில் நில முதலாளிகள்தான் அதிகம். எனவே, நிலபாத்தியதை உரிமையைச் சமப்படுத்தி வைப்பது இப்பொழுது சிரம சாத்திய மான காரியமல்ல. நிலமதிப்பின் மீது வரி விதிப்பது அதே மதிப்பைக் கொடுத்துத் திருப்பி விலைக்கு வாங்கி விடுவது என்கிற விஷயத்தில் மற்றொரு விஷயத்தில் கவனிக்க வேண்டும். நில மதிப்பு என்று சொன்னால் பூமியின்மதிப்பு என்றுதான் அர்த்தமே யொழிய, மனித உழைப்பி னால் அந்தப் பூமியை அபிவிருத்தி செய்ததற்காக ஏற்படுகிற விளைவுவகைகளோ, அல்லது, அதன் மீதுள்ள கட்டடங்களின் மதிப்போ முதலியன சேரா. உதாரணமாக, பதினாயிரம் டாலர் பெறுமான ஒரு பூமியின் மீது பத்து லட்சம் டாலர் பெறுமான கட்டடம் கட்டப் பட்டிருந்தால், பதினாயிரம் டாலருக்குத்தான் வரி விதிக்கப்படுமே தவிர, பத்து லட்சம் டாலர் கணக்குச் செய்து வரி விதிக்கப்படமாட்டாது. ஆனால் அரசாங்கத்தார் அந்தப் பூமியைத் திருப்பி விலை கொடுத்து வாங்குவதாயிருந்தால், அந்தக் கட்டடம், அங்குள்ள மாவடை, மரவடை முதலியன அனைத்திற்கும் சேர்த்தே விலை கொடுக்க வேண்டும். சீனாவில், ஜனங்களின் வாழ்க்கைப் பிரச்னையை நாம் தீர்த்து வைக்க வேண்டுமானால், தேசத்தின் மூலதனத்தை ஒழுங்கு படுத்தி விடுவது மட்டும் போதாது. மற்ற நாடுகளில் வருமானவரி விதித்து, அதன் மூலமாக மூலதனத்தை ஒழுங்கு படுத்துகிறார்கள். ஆயினும் இந்த நாடுகளில், ஜனங்களின் வாழ்க்கைப் பிரச்னை தீரவேயில்லை. மற்ற நாடுகளோடு சீனாவை ஒப்பிட முடியாது. மற்ற நாடுகள் பணக்கார நாடுகள். சீனாவோ ஏழை நாடு. மற்ற நாடுகளில் ஏராள மான பொருள்கள் உற்பத்தி யாகின்றன. சீனாவில் அப்படியில்லை. ஆதலின், சீனாவில், தனிப்பட்டவர்களின் மூலதனத்தை ஒழுங்கு படுத்துவதோடு கூட, அரசாங்க மூலதனத்தையும் விருத்தி செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது நமது நாடோ பல துண்டுகளாகப் பிரிந்து கிடக்கிறது. அப்படியிருக்க, நமது அரசாங்கத்திற்கு எப்படி மூலதனத்தைச் சேர்த்துவைக்க முடியும்? இதற்கு வழி கூடத் தென்படுவதாகக் காணோம். ஆனால் நமது நாடு தற்போது பல பகுதிகளாகவும் பல கட்சிகளாகவும் பிரிந்திருப்பது தற்காலிக அமிசந்தான். வருங்காலத்தில் நாம் ஒற்றுமைப் பட்டவர்களாகி விடுவோம். அப்பொழுது ஜனங்களின் வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கு நாம் பல முறைகளைக் கையாள வேண்டும். முதலாவது, சீனாவில் ரெயில் ரோட்டுகள், கப்பல் வியாபாரப் போக்கு வரத்துக்கள் முதலியவற்றைப் பெரிய திட்டத்தில் அமைக்க வேண்டும். இரண்டாவது, நாடெங்கணும், சுரங்கங்கள் தோண்டி உலோகப் பொருள்களை எடுக்க வேண்டும். சீனாவில் உலோகப் பொருள்களை எடுக்க வேண்டும். சீனாவில் உலோகப் பொருள்கள் மிக அதிகம். ஆனால் அந்தோ! எல்லாம் பூமியில் புதைந்து கிடக் கின்றன. மூன்றாவது, பொருள் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். சீனாவில் ஏராளமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆயினும் போதிய யந்திர வசதிகள் இல்லை. இதனால் மற்ற வெளி நாடு களுடன் நம்மால் போட்டி போட முடிய வில்லை. சீனாவில் ஜனங் களால் உபயோகிக்கப் படும் பொருள் களில் பெரும்பா லானவை அந்நிய நாடுகளிலிருந்து வரவேண்டியிருப்ப தால், நமது பொருளா தார உரிமைகளும் சலுகைகளும் வரவரக் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த உரிமைகளையும் சலுகைகளையும் நாம் மீண்டும் பெறவேண்டுமானால், அரசாங்கத்தின் மூலமாகத் தொழில்களை அபிவிருத்தி செய்யவேண்டும். இந்தப் பொருள் உற்பத்திக்கு யந்திர வகைகளை உபயோகிக்க வேண்டும். அப்பொழுது தான் சீனாவின் பொருளாதார பலம் விருத்தி யடையும். தொழில் முயற்சிகளை அரசாங்கம் எடுத்துக் கொள்ளாமல், தனிப்பட்டவர்களுடைய மூலதனந்தான் விருத்தியடையும் புதிய மாதிரியில் ஒரு பணக்காரக் கூட்டம் தோன்றும். இதனால் சமுதாயத்தில் இன்னும் அதிகமான ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும். ஆகவே, சீனாவில் ஜனங்களுடைய வாழ்க்கைப் பிரச்னையை நாம் தீர்த்து வைக்க வேண்டுமானால், மார்க்ஸின் முறைகளை அப்படியே கையாள முடியாது. மார்க்ஸின் போதனைகளுக்கு நாம் அதிக மதிப்புக் கொடுத்த போதிலும் கூட, அவனுடைய முறைகளைச் சீனாவில் அனுஷ்டிக்க முடியாது. இதன் காரணத்தை நான் விளக்கிக் கூற வேண்டுவதில்லை. ருஷ்யாவில் புரட்சி முறைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வரவே முயற்சிகள் செய்யப்படுகின்றன. ஆயினும் அங்குப் புதிய தொரு பொருளாதார முறையைக் கையாள வேண்டி ஆஸ்திரேலி யாவிலே நடைபெற்ற ஒரு விநோத சம்பவத்தைச் சொல்லுகிறேன், கேளுங்கள். ஓர் ஊரில் பெரிய பெரிய வியாபாரக் கம்பெனிகள் செழிப்பாக நடைபெற்று வந்தன. இந்த வியாபாரக் கம்பெனிகள் ஏற்படுவதற்கு முன் இந்த ஊரில் நிலத்தின் மதிப்பு மிகக் குறைவா யிருந்தது. ஒரு சமயம், அரசாங்கத்தார், தரிசாகக் கிடந்த ஒரு சிறிய நிலத்தை ஏலம் போட்டனர். யாரும் அதை விலை கொடுத்து வாங்க விரும்பவில்லை. ஏலம் போடுகிற சமயத்தில், நூறு டாலர், இருநூறு டாலர், இரு நூற்றைம்பது டாலர் என்று இப்படி ஏலங் கேட்டனர். ஆனால் அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஏலங் கூறியவன் முந்நூறு டாலருக்குக் குறைந்து நிலத்தை விற்பனை செய்ய மனமொப்ப வில்லை. எனவே, ‘முந்நூறு டாலருக்கு யாராவது ஏலம் கேட்கிறார் களா?’ என்று கூவினான். அந்தச் சமயத்தில் ஒரு குடிகாரன் கூட்டத் திற்குள் நுழைந்து ‘முந்நூறு டாலர் நான் கொடுக்கிறேன்’ என்றான். உடனே கூட்டம் கலைந்துவிட்டது. குடிகாரனுக்கு நிலம் சுவாதீன மாக்கப்பட்டது. அவன், தன் குடிமயக்கத்தில் முந்நூறு டாலர் கேட்டு விட்டோமெ யென்று பின்னர் வருந்தினான். ஆயினும் என்ன செய்வது? தன்னிடத்திலுள்ள சொத்து பற்று எல்லா வற்றையும் விற்று முந்நூறு டாலரைக் கட்டினான். பிறகு அந்த நிலத்தைப் பற்றி இவன் கவனிக்கவேயில்லை. தரிசாகவே கிடந்தது. அதைச் சீர்திருத்த இவன் கையில் பணமுமில்லை. இப்படிப்பத்து வருஷ காலத்திற்கு மேல் சென்றது. நிலத்தின் விலை வரவர ஏறிக்கொண்டு வந்தது. ஏனென் றால் அந்த ஊரில் பெரிய பெரிய வியாபாரக் கம்பெனிகள் திறக்கப் பட்டன. எந்த நிலத்தை மேற்பட குடிகாரன் முந்நூறு டாலர் கொடுத்து வாங்கினானோ, அதே நிலம் இப்பொழுது லட்சக்கணக் கான டாலர் பெறுமானமுள்ளதாகி விட்டது. அந்தக் குடிகாரன், ஆஸ்திரேலியாவிலேயே ஒரு லட்சாதிபதியாகிவிட்டான். தன்னுடைய உழைப்பு ஒரு சிறிது கூட இல்லாமலேயே அவன் பெரிய பணக் காரனாகிவிட்டான். ஆனால் அவனுடைய பணமெல்லாம் யாருடையது? என் னுடைய அபிப்பிராயத்தில் அஃது எல்லாருடைய பணமுந்தான். எப்படி யென்றால், ஜனங்களெல்லோரும் சேர்ந்துதானே, ஜனங் களுடைய முயற்சியால் தானே, மேற்படி நகரம் பெரிய வியாபார ஸ்தலமாயிற்று? இதனால் நில விலை கூடியற்கு ஜனங்கள் தானே காரணம்? இப்படியேதான் சீனாவில் காண்ட்டன், ஷாங்காய் முதலிய நகரங்கள பெரிய வியாபார ஸ்தலங்களாக மாறியதற்கு நாமே காரணர்கள். இதனால் நிலவிலை ஏறுவதற்கும் இறங்கு வதற்கும் காரணமாயிருக்கப்பட்டவர்கள் நிலச் சொந்தக்காரர்கள் மட்டுமல்ல எல்லாருடைய் உழைப்பும் முயற்சியுந்தான் இதற்குக் காரணம். நில விலை ஏற்றத்தின் மூலமாக ஒரு நிலச்சவான்தாரர் சம்பாதிக்கிற லாபத்தை, மேனாட்டுப் பொருளாதார நிபுணர்கள் ‘சம்பாதியாத பண வருவாய்’ என்று சொல்கிறார்கள், தொழில் முதலாளிகளோ, வியாபாரிகளோ, தங்களுடைய தேக உழைப்பு, மன உழைப்பு முதலியவை மூலமாகச் சம்பாதிக்கிற லாபத்திற்கும் இந்த ‘சம்பாதியாத பண வருவாய்’க்கும் வித்தியாசம் உண்டு. மேலே சொன்ன தொழில் முதலாளிகளும் வியாபாரிகளும் சம்பாதிக்கிற லாபம் நியாயமான லாபமல்ல வென்று ஏற்கனவே நாம் கூறியிருக்கிறோம். ஆனால் அவர்கள் கஷ்டப்பட்டாவது உழைக்கி றார்கள். நிலச்சுவான்தாரர்களோ, எவ்விதமான உழைப்பையும் மேற் கொள்ளாமல் ஏராளமான லாபத்தைச் சம்பாதிக்கிறார்கள். இதற்குக் காரணமென்ன ஒரு நிலச்சுவான்தாரருடைய நிலத்தைச் சுற்றியுள்ள பிரதேசங்களை ஜனங்கள் பல விதங்களிலும் அபி விருத்தி செய்து விடுகிறார்கள். இதனால் அவனுடைய நிலத்திற்குக் கிராக்கி ஏற்படுகிறது. எனவே போட்டியில் நிலத்தின் விலை உயர் கிறது. நிலத்தின் விலை உயர்ந்தால் மற்றெல்லாப் பொருள்களின் விலையும் உயர்கின்றது. இதன் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தென்னவென்றால், ஜனங்கள், தங்கள் உழைப்பினால சம்பாதிக்கிற பணத்தை நிலச்சுவான் தாரர்கள் மறைமுகமாகக் கொள்ளை கொண்டு போகிறார்கள் என்பதுதான். மேனாட்டு வல்லரசுகள், இந்த நிலப் பிரச்னைக்குச் சரியான பரிகாரம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. சீனாவிலுள்ள நாம் இந்தப் பிரச்னையை இப்பொழுதே தீர்த்து வைக்க வேண்டும். தொழிலும் வியாபாரமும் அபிவிருத்தியான பிறகு பார்த்துக் கொள்வோமென்று சொன்னால் அது முடியாத காரியம். எனவே, இப்பொழுது நாம் எந்த விதமான முறையைக் கையாள வேண்டும்? ‘கோமிண்ட்டாங்’ கட்சியினர் என்ன உத்தேசித்திருக் கின்றனர் என்றால், அவசியமானால் எல்லா நிலங்களையும் அரசாங்கத்தார் திருப்பி வாங்கிவிட வேண்டும் என்றும், நிலத்தின் தீர்வை என்ன? நிலத்தின் மதிப்பு எவ்வளவு இவைகளை உத்தேசித்து அந்தந்த நிலத்துக்குள்ள கிரயத்தைச் தீர்மானித்திருக்கின்றனர். அப்படி யானால் நிலத்தின் விலையை எப்படி நிர்ணயிப்பது என்ற கேள்வி பிறக்கலாம். நிலத்தின் சொந்தக்காரனே, நிலத்தின் கிரயம் இவ்வளவு தான் என்று நிர்ணயிக்கும்படி விட்டுவிட வேண்டும். சாதாரணமாக எல்லா நடுகளிலும், நிலத்தின் மதிப்பு எவ்வளவோ அதில நூற்றில் ஒரு பங்கு விகிதந்தான் நில வரி விதிக்கப்படுகிறது. நம்முடைய திட்டமும் இந்த வரி விதிப்பு முறையை அனுசரித்துத்தான் இருக்கும். நிலச்சொந்தக்காரன், தன்னுடைய நிலத்தின் மதிப்பு இவ்வளவுதானென்று அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறான். அரசாங் கமும் அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு வரி விதிக்கிறது. நில விலையை நிர்ணயிக்கிற உரிமையை நிலச் சொந்தக் காரர்களுக்கே விட்டு விட்டால், அவர்கள் குறைந்தமதிப்பேபோட்டுக் காட்டுவார் களென்றும், இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டமே யென்றும் சிலர் சொல்கிறார்கள். இது சரியான ஆ! சேபந்தான். இதற்காகவே, அரசாங்கம் இரண்டு விதமான திட்டங்களை அமுலுக்குக் கொண்டுவர வேண்டு மென்று கூறுகிறேன். ஒன்று நிலத்தின் மதிப்பை உத்தேசித்து நிலவரி போட்டு அதனை வசூலிக்கும்; மற்றொன்று, அதே மதிப்பைக் கொடுத்து அந்த நிலத்தைத் திரும்பவும் வாங்கிக்கொள்ளும். இந்தத் திட்டங்களினால் நிலச் சொந்தக்காரன் தன் நிலத்தின் விலையை அதிக்ப்படுத்தியும் சொல்ல மாட்டான்; குறைத்தும் சொல்ல மாட்டான். ஏனென்றால் அதிக விலை சொன்னால்,அந்த விகிதாசாரம் நிலவரியும் அதிகமாகும். அதே பிரகாரம், நிலத்தின் விலையைக் குறைத்துச் சொன்னால், அந்தக் குறைந்த விலை கொடுத்து அரசாங்கம் அதனைத் திருப்பி வாங்கிக் கொண்டு விடமுடியும். எனவே, அவன் நியாயமான மதிப்பையே தெரிவிக்கக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் நிலச் சொந்தக்காரனுக்கும் நஷ்டமில்லை; அரசாங்கத்திற்கும் நஷ்டமில்லை. நிலங்களின் மதிப்பை நாம் நிர்ணயித்து விட்ட பிறகு, அந்த வருஷத்திலிருந்து, அதிகப்படுகிற நிலமதிப்புத் தொகையெல்லாம் பொது ஜனங்களைச் சார்ந்ததாகும் என்ற ஒரு சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் நிலத்தின் மதிப்பு அதிகப்படுமானால் அதற்குக் காரணம், சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் செய்திரக்கிற பலவித அபிவிருத்திகள் தான். மற்றும் தொழிலும் வியாபாரமும் அபிவிருத்தி யடைந்திருப் பதும் ஒரு காரணம். எனவே, நிலத்தின் அதிக மதிப்புத் தொகையைச் சமுதாயத்திற்குக் கொடுத்துவிடவேண்டுமென்ற இந்தத் திட்டத்தைத் தான், ‘நில உரிமையின் சமத்துவம்’ என்று சொல்கிறோம் இதைத்தான் ‘கோமிண்ட்டாங்’ கட்சியும் வலியுறுத்துகிறது. மின் - ஷெங் தத்துவமும் இதுதான். கம்யூனிஸமும் இதுவே. ‘கோமிண்ட்டாங்’ கட்சியைச் சேர்ந்த அங்கத்தினர்கள் ‘ஸான்மின்’ கோட்பாடுகளை அங்கீகரிப்பதனால் ‘ஸான்மின்’ கோட்பாடுகளை அங்கீகரிப்பதனால் அவர்கள் கம்யூனிஸத்தை எதிர்க்கக் கூடாது. சொத்துரிமையிலே எல்லாருக்கும் பங்கு இருக்க வேண்டு மென்பதுதான் மின் - ஷெங் தத்துவத்தின் முக்கியமான அமிசம். இதனாலேயே இதனை - மின் ஷெங் தத்துவத்தை - கம்யூனிஸம் என்று சொல்கிறோம் ஆனால் நமக்கு வேண்டிய கம்யூனிஸமல்ல. நம்முடைய கம்யூனிஸம்; நிகழ் கால கம்யூனிஸ மல்ல. நம்முடைய கம்யூனிஸ திட்டப்படி, இந்தத் திட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் சொத்து வைத்துக் கொண்டிருந்தவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். மேனாட்டில் சொல்லப்படுகிற ‘சொத்துக்களைத் தேசீய மயமாக்குவது’ என்கிற விஷயம் வேறே; நாம் உத்தேசிக்கிற திட்டம் வேறே. நில பாத்தியதையைச் சமப்படுத்தி விடுவது என்ற நமது திட்டத்தை நிலச் சொந்தக்காரர்கள் நன்கு தெரிந்துகொண்டு விடுவார்களானால் அவர்கள் சிறிதும் அச்சங் கொள்ள மாட்டார்கள். இப்பொழுது நாம் எந்தெந்த நிலங்களுக்கு மதிப்புப் போடு கிறோமோ அவை யெல்லாம் தனிப்பட்டவர்களுடைய சொத்துக்களாகவே இருக்கும். இந்த நிலப் பிரச்னையை நாம் தீர்த்து விட்டோமானால், ஜீவனோபாயப் பிரச்னையும் பாதி தீர்ந்து விட்டது போலத்தான் நவீன நாகரிகம் நிறைந்த நகரங்களில், நிலவரியை நாம் விதிப்போமானால், சாதாரண ஜனங்களுடைய வரிச்சுமை குறையும்; இன்னும் பல சௌகரியங்களும் உண்டாகும். சில்லரை வரிகளை யெல்லாம் ரத்து செய்துவிடலாம். தண்ணீர் வசதிகள், விளக்கு வசதிகள் மூதலியன ஜனங்களுக்கு இலவச மாகவே அளிக்கலாhம். இந்த நிலவரி வருமானத்தைக் கொண்டே பாதைகள் செப்பனி டுவது, போலீஸ் பந்தோபஸ்து செய்து கொடுப்பது முதலியன வற்றையும் ஜனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம். இப்பொழுது நிலத்திலிருந்து கிடைக்கிற வருமான மெல்லாம் நிலச்சுவான்தாரர் களுக்கே போகிறது. இதனால் அரசாங்கத்திற்குச் சரியான வருமானம் கிடைக்கிறதில்லை. இதனால் சாதாரண ஜனங்கள் மீது பலவிதமான வரிகளைவிதிக்க வேண்டியிருக்கிறது. சீனாவிலோ ஏழைகள் அதிகம்; இவர்கள் மீது அதிகமான வரிச்சுமை சுமத்தப் படுவதற்குக் காரணம் நேர்மையற்ற வரிவிதிப்புமுறைதான். இந்த நேர்மையற்ற வரி விதிப்புக்குக் காரணம் அதிகக் குறைவான நிலப் பங்கீடு முறைதான். இதனால் வீனாவில் நிலப் பிரச்னை, ஒரு தீராத பிரச்னையாயிருக்கிறது. ஆக, இந்தப் பிரச்னையை தீர்த்து வைப்ப தற்கு, நில வரித்திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவேண்டும். சீனாவில் நில முதலாளிகள்தான் அதிகம். எனவே, நில பாத்தியதை உரிமையைச் சமப்படுத்தி வைப்பது இப்பொழுது சிரம சாத்தியமான காரியமல்ல. நிலமதிப்பின் மீது வரி விதிப்பது அதே மதிப்பைக் கொடுத்துத் திருப்பி விலைக்கு வாங்கி விடுவது என்கிற விஷயத்தில் மற்றொரு விஷயத்தில் கவனிக்க வேண்டும். நில மதிப்பு என்று சொன்னால் பூமியின்மதிப்பு என்றுதான் அர்த்தமே யொழிய, மனித உழைப்பி னால் அந்தப் பூமியை அபிவிருத்தி செய்ததற்காக ஏற்படுகிற விளைவுவகைகளோ, அல்லது, அதன் மீதுள்ள கட்டடங்களின் மதிப்போ முதலியன சேரா. உதாரணமாக, பதினாயிரம் டாலர் பெறுமான ஒரு பூமியின் மீது பத்து லட்சம் டாலர் பெறுமான கட்டடம் கட்டப் பட்டிருந்தால், பதினாயிரம் டாலருக்குத்தான் வரி விதிக்கப்படுமே தவிர, பத்து லட்சம் டாலர் கணக்குச் செய்து வரி விதிக்கப்படமாட்டாது. ஆனால் அரசாங்கத்தார் அந்தப் பூமியைத் திருப்பி விலை கொடுத்து வாங்குவதாயிருந்தால், அந்தக் கட்டடம், அங்குள்ள மாவடை, மரவடை முதலியன அனைத்திற்கும் சேர்த்தே விலை கொடுக்க வேண்டும். சீனாவில், ஜனங்களின் வாழ்க்கைப் பிரச்னையை நாம் தீர்த்து வைக்க வேண்டுமானால், தேசத்தின் மூலதனத்தை ஒழுங்கு படுத்தி விடுவது மட்டும் போதாது. மற்ற நாடுகளில் வருமானவரி விதித்து, அதன் மூலமாக மூலதனத்தை ஒழுங்கு படுத்துகிறார்கள். ஆயினும் இந்த நாடுகளில், ஜனங்களின் வாழ்க்கைப் பிரச்னை தீரவேயில்லை. மற்ற நாடுகளோடு சீனாவை ஒப்பிட முடியாது. மற்ற நாடுகள் பணக்கார நாடுகள். சீனாவோ ஏழை நாடு. மற்ற நாடுகளில் ஏராள மான பொருள்கள் உற்பத்தி யாகின்றன. சீனாவில் அப்படியில்லை. ஆதலின், சீனாவில், தனிப்பட்டவர்களின் மூலதனத்தை ஒழுங்கு படுத்துவதோடு கூட, அரசாங்க மூலதனத்தையும் விருத்தி செய்ய வேண்டும். ஆனால் இப்பொழுது நமது நாடோ பல துண்டுகளாகப் பிரிந்து கிடக்கிறது. அப்படியிருக்க, நமது அரசாங்கத்திற்கு எப்படி மூலதனத்தைச் சேர்த்துவைக்க முடியும்? இதற்கு வழி கூடத் தென்படுவதாகக் காணோம். ஆனால் நமது நாடு தற்போது பல பகுதிகளாகவும் பல கட்சிகளாகவும் பிரிந்திருப்பது தற்காலிக அமிசந்தான். வருங்காலத்தில் நாம் ஒற்றுமைப் பட்டவர்களாகி விடுவோம். அப்பொழுது ஜனங்களின் வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கு நாம் பல முறைகளைக் கையாள வேண்டும். முதலாவது, சீனாவில் ரெயில் ரோட்டுகள், கப்பல் வியாபாரப் போக்கு வரத்துக்கள் முதலயவற்றைப் பெரிய திட்டத்தில் அமைக்க வேண்டும். இரண்டாவது, நாடெங்கணும், சுரங்கங்கள் தோண்டி உலோகப் பொருள்களை எடுக்க வேண்டும். சீனாவில் உலோகப் பொருள்கள் எடுக்க வேண்டும். சீனாவில் உலோகப் பொருள்கள் மிக அதிகம். ஆனால் அந்தோ! எல்லாம் பூமியில் புதைந்து கிடைக் கின்றன. மூன்றாவது, பொருள் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். சீனாவில் ஏராளமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆயினும் போதிய யந்திர வசதிகள் இல்லை. இதனால் மற்ற வெளி நாடுகளுடன் நம்மால் போட்டி போட முடியவில்லை. சீனாவில் ஜனங்களால் உபயோகிக்கப்படும் பொருள் களில் பெரும்பா லானவை அந்நிய நாடுகளிலிருந்த வரவேண்டி யிருப்பதால், நமது பொருளாதார உரிமைகளும் சலுகைகளும் வரவரக் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த உரிமைகளையும் சலுகை களையும் நாம் மீண்டும் பெறவேண்டுமானால், அரசாங்கத்தின் மூலமாகத் தொழில்களை அபிவிருத்தி செய்யவேண்டும். இந்தப் பொருள் உற்பத்திக்கு யந்திர வகைகளை உபயோகிக்க வேண்டும். அப்பொழுதுதான் சீனாவில் பொருளாதார பலம் விருத்தியடையும். தொழில் முயற்சிகளை அரசாங்கம் எடுத்துக் கொள்ளாமல், தனிப்பட்ட நபர்களுடைய முயற்சிக்கு விட்டு விடுமேயானால், தனிப்பட்டவர்களுடைய மூலதனந்தான் விருத்தியடையும் புதிய மாதிரியில் ஒரு பணக்காரக் கூட்டம் தோன்றும். இதனால் சமுதாயத்தில் இன்னும் அதிகமான ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும். ஆகவே, சீனாவில் ஜனங்களுடைய வாழ்க்கைப் பிரச்னையை நாம் தீர்த்து வைக்க வேண்டுமானால், மார்க்ஸின் முறைகளை அப்படியே கையாள முடியாது. மார்க்ஸின் போதனைகளுக்கு நாம் அதிக மதிப்புக் கொடுத்த போதிலுங் கூட, அவனுடைய முறை களைச் சீனாவில் அனுஷ்டிக்க முடியாது. இதன் காரணத்தை நான் விளக்கிக் கூற வேண்டுவதில்லை. ருஷ்யாவில் புரட்சி ஏற்பட்ட பிறகு நாளது வரையில் அங்கு மார்க்ஸ் முறைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வரவே முயற்சிகள் செய்யப்படுகின்றன. ஆயினம் அங்குப் புதிய தொரு பொருளாதார முறையைக் கையாள வேண்டியிருக்கிறது. ஏனென் றால் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் ஜனங்களின் பொருளாதார வாழ்க்கை அந்தஸ்து உயர்ந்திருப்பதைப் போல் ருஷ்யாவில் உயரவில்லை. இதனால் தான் அங்கு மார்க்ஸின் முறைகளை அப்படியே அனுஷ்டானத்திற்குக் கொண்டு வர முடியவில்லை. ருஷ்யாவின் பொருளாதார அந்தஸ்தே இவ்வளவு குறைவாயிருக்கு மானால், அதைவிடக் குறைவான பொருளாதார அந்தஸ்தையுடை யது சீனாவில் எப்படி மார்க்ஸின் முறைகளை அனுஷ்டானத்திற்குக் கொணடுவர முடியும்? மார்க்ஸின் சிஷ்யர்களே, சீனாவில் மார்க்ஸீய முறைகளைப் பின்பற்ற முடியாதென்று சொல்கிறார்கள். முப்பது வருஷங்களுக்கு முன்னால் நான் காண்ட்டன் நகரத் தில் படித்துக் கொண்டிருந்தபோது பார்த்த ஒரு சம்பவம் இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. சில பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள், குளிர்காலம் வந்தவுடன் கம்பளிச் சட்டையை அணிந்து கொள்வார்கள். தாங்கள் பணக்காரப் பிள்ளைகள், தங்களுக்குக் கம்பளிச் சட்டை அணியக் கூடிய அந்தஸ்து இருக் கிறது என்பதை எல்லாருக்கும் காட்டிக் கொள்ள வேண்டுமென்பது இவர்கள் ஆசை குளிர், அதிகமாயிருந்தாலும் குறைவாயிருந்தாலும் குளிர் காலத்தில் கம்பளிச் சட்டை அணிய வேண்டுமென்பதை இவர்கள் ஒரு சம்பிரதாயமாகக் கொண்டிருந்தார்கள் ஒரு நாள் இவர்களிற் சிலர், தங்கள் கம்பளிச் சட்டைகளுடன் ஒரு கூட்டத் திற்குப் போயிருந்தார்கள். அப்பொழுது நல்ல வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது. இவர்களால் புழுக்கம் சகிக்க முடியவில்லை. உடனே இவர்கள் ‘ஐயோ, நிரம்பப் புழுக்கமாயிருக்கிறதே; வடக்குப் பக்கம் காற்றடிக்கத் தொடங்கினாலன்றி, ஜனங்களுடைய தேக சுகம் நிரம்பக் கெட்டுவிடும்’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இவர்களுடைய எண்ணம் என்ன? ‘எல்லா ஜனங்களும் இந்தக் குளிர் காலத்தில் கம்பளிச் சட்டை அணிந்து கொண்டிருக்கிறார்கள்; சீதோஷ்ணம் மாறினாலன்றி ஜனங்கள் அதிகக் கஷ்டப்படுவார்கள்’ என்றெல்லாம் இவர்கள் எண்ணுகிறார்கள். உண்மையில் எல்லா ஜனங்களும் கம்பளிச் சட்டை அணிந்து கொள்வது சாத்தியமா? இல்லை. இதைப் போல்தான், மார்க்ஸ் தத்துவத்தைப் படித்து விட்ட சில சீன இளைஞர்களுடைய உற்சாகம் இருக்கிறது. சோஷலிஸம் என்ற வார்த்தையை உச்சரித்தாலே, இவர்கள் உடனே மார்க்ஸ் முறைகளைக் கையாள வேண்டுமென்று கூறத் தொடங்கி விடுகிறார்கள். சீனாவின் பொருளாதார, சமுதாயப் பிரச்னைகளுக் கெல்லாம் பரிகாரம் மார்க்ஸ் முறைதான் என்பது இவர்கள் அபிப்பிராயம். இவர்கள் சீனாவின் தற்போதைய நிலைமையைச் சிறிது கூடக் கவனிப்பதில்லை. சீனா, இப்பொழுது ஒரே தரித்திரத் தினால் கஷ்டப்படுகிறது. எங்கு ஏற்றத் தாழ்வான பண வினியோகம் இருக்கிறதோ அங்கு மார்க்ஸின் முறை களைக் கையாளலாம்; இந்த ஏற்றத்தாழ்வுகளைத் தொலைக்கவர்க்கப் போராட்டத்தை ஆரம்பிக்கலாம். ஆனால் தொழில் முன்னேற்ற மில்லாத சீனாவில் இவையெல்லாம் அனாவசியம். ஆகையால் மார்க்ஸின் எண்ணங் களை நாம் ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாமே தவிர, அவன் முறைகளை அப்படியே அனுஷ்டிக்க முடியாது. நான் மேலே சொன்னமாதிரி, அரசாங்கத்தின் மூலதனத்தை அபிவிருத்தி செய்யவேண்டும். இதற்குப் போக்குவரத்து வசதிகள், தொழிலுற்பத்தி, சுரங்கங்கள் தோண்டி உலோகப் பொருள்க ளெடுத்தல் முதலியவற்றைச் செய்ய வேண்டுமென்றும் சொன்னேன். இவற்றை யெல்லாம் செய்ய, நம்மிடத்திலேயுள்ள மூலதனம், அறிவு, அனுபவம் முதலியன மட்டும் போதாது. மற்ற நாட்டாருடைய மூலதனம், அறிவு, அனுபவம் முதலியனவும் தேவை. இப்பொழுது சீனாவில் அந்நியர்களால் போடப்பட்டிருக்கும் மூலதனத்தை வைத்துக்கொண்டு, வருங்காலச் சீனாவின் பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைக்க முயலுவோ மானால், நாம் பாதி வேலை செய்வதற்குள்ளேயே இரட்டிப்பு மடங்கு பலன் கிட்டிவிடும். அந்நிய மூலதனத்தின் உதவி தேவையின்றி, நம்முடைய மூல தனத்தைக் கொண்டே நாம் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வோம் என்று காத்திருப்போமானால், நாம் வெகு மெதுவான முன்னேற்றத்தையே காண்போம். சீனாவில் இப்பொழுது யந்திர வசதிகளே இல்லை யென்றுதான் சொல்லவேண்டும். ஏறக்குறைய ஆறாயிரம் அல்லது ஏழாயிரும் நீளமுள்ள ரெயில் பாதைகள்தான் இருக்கின்றன. இன்னும் குறைந்தது அறுபதினாயிரம் அல்லது எழுபதினாயிரம் மைல் நீளமுள்ள ரெயில் பாதைகளாவது தேவை. எனவே, இதற்காக அந்நியர்களுடைய மூலதனத்தை எதிர் பார்க்க வேண்டியது தான்; அந்நியர்களுடைய உதவியும் தேவைதான். இதே மாதிரிதான் சுரங்கங்களின் விஷயத்திலும், அமெரிக்காவை விட சீனா விஸ்தீரணத்திலும் ஜனத்தொகையிலும் பெரிது. ஆயினும் அமெரிக்காவில் வருஷந்தோறும் சராசரி அறுபது கோடி டன் நிலக்கரி தோண்டி யெடுக்கப் படுகிறது; ஒன்பது கோடி டன் எஃகு உற்பத்தி செய்யப் படுகிறது. சீனாவில் இவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட உண்டாக வில்லை. நமது நாட்டிலுள்ள சுரங்கப் பொருள்களை நாம் தோண்டி யெடுக்க வேண்டுமானால் நாம் அந்நிய மூலதனத்தை உபயோகிக்க வேண்டும். எனவே, மேலே சொன்ன மூன்று தொழில்களையும், அதாவது போக்கு வரத்து வசதிகளை அதிகப்படுத்துதல், தொழிற் சாலை களை ஏற்படுத்துதல், சுரங்கங்களைத் தோண்டியெடுத்தல் என்ற மூவகைத் தொழில்களையும் நாம் அபிவிருத்தி செய்வோமானால் நமது அரசாங்கத்தின் வருஷவருமானம் அதிகப்படும். இந்தத் தொழில்களை அரசாங்கமே ஏற்று நடத்துமானால் இவைகளினால் ஏற்படுகிற நன்மை களை எல்லா ஜனங்களும் சேர்ந்து அனுப விப்பார்கள். ஒரு சிலரிடத்தில் மட்டும் பணம் சென்று குவியாது; வர்க்கப் போராட்டமும் ஏற்படாது. ஆதலின், கம்யூனிஸம் வேறே, நமது மின் - ஷெங்தத்துவம் வேறே என்று சொல்ல முடியாது. எல்லா ஜனங்களுக்கும் உரிமையா யுள்ள அரசாங்கத்தை, எல்லா ஜனங்களாலும் நிருவாகம் செய்யப் படுகின்ற ஓர் அரசாங்கத்தை, எல்லா ஜனங்களுக்கும் நன்மை யளிக்கக் கூடிய ஓர் அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பதே நமது ‘ஸான் - மின்’ கோட்பாடுகளின் நோக்கம். இப்படி அமைந்து விடுமேயானால், ஜனங்களுக்குப் பொருளுற்பத்தியில் மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் சமபங்கு இருக்கும். அப்பொழுதுதான், மின் - ஷெங்லட்சியத்தை நாம் அடைந்தவர்களாவோம் 15 உணவு (17 - 8 - 1924) உணவுப் பிரச்னையைப் பற்றி இன்று நான் பேசப்போகிறேன். வயிற்றுக்கு ஆகாரம் சாப்பிடுவதென்பது தினந்தோறும் செய்கிற காரியந்தானே, சுலபமான காரியந்தானே என்று நீங்கள் நினைக்க லாம். வாஸ்தவந்தான். அப்படியிருக்குமானால், இதைப்பற்றி ஒரு பிரச்னை உண்டாவானேன்? இதைத்தான் நான் இங்கு விளக்கிக் கூற விரும்புகிறேன். நமது மின் - ஷெங் தத்துவத்தில், இந்த உணவுப் பிரச்னை ஒரு முக்கியமான பிரச்னை. சீனாவில் புராதன காலத்தி லிருந்து வழங்கப்பட்டு வரும் ஒரு பழமொழியை இங்கு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். ‘ஒரு ஜாதிக்கு அஸ்திவாரம் ஜனங்கள்; ஜனங் களோ தங்கள் ஆகாரத்திற்கு மோட்ச லோகத்தை எதிர்ப்பார்க் கிறார்கள்.’ இதனால் நமது முன்னோர்கள் ஆகாரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்களென்பது நன்கு புலனாகிறது. 1924ஆம் வருஷத்து ஐரோப்பிய யுத்தத்திற்கு முன்னர், உலக ராஜ தந்திரிகள், இந்த உணவுப் பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேசவில்லை. ஆனால், அந்த ஐரோப்பிய யுத்தத்தைச் சிறிது எட்டியிருந்து பார்த்துக்கொண்டிருந்த நாமோ, ஜெர்மனி, அந்த யுத்தத்தில் தோல்வியுற்ற தென்பதைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறோம். மேற்படி யுத்தத்தில்,ஜெர்மனி, எல்லாவித போராட்டங்களிலும் அதாவது தரைப் போர், கடற்போர், ஆகாயப் போர் முதலிய எல்லாப் போர்களிலும் வெற்றி யடைந்து கொண்டே வந்தது. யுத்த ஆரம்பத்திலிருந்து கடைசிவரையில் நடைபெற்ற பல போர்களில், ஒரு போரில் கூட ஜெர்மனி தோல்வியடைய வில்லை. ஆயினும் இறுதியாக அதுதான் தோல்வியடைந்து விட்டது. ஏன்? உணவுப் பொருள் கஷ்டந்தான் காரணம். ஜெர்மனியின் எல்லாத் துறைமுகங்களிலும் நேசக்கட்சியினர் முற்றுகை போட்டு ஜெர்மனிக்குள் எவ்வித உணவுப் பொருள்களும் செல்லவொட்டாத படி தடுதது விட்டனர். இதனால் போர் வீரர்களும் சாதாரண ஜனங்களும் பட்டினி கிடந்து சாகவேண்டியதாயிற்று. கடைசியில் போர் முகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஜெர்மனி தோல்வி யடைந்து போயிற்று. இதனால் ஒரு ராஜாங்கத்தின் உயிர் வாழ்க்கைக் கும் அதன் nக்ஷமத்திற்கும் உணவு மிகவும் இன்றியமையாத தென்று தெளிவாகிறது. உணவுப் பொருள்களை வினியோகிக்கும் விஷயத்தில் அமெரிக்கா தான் இப்பொழுது உலகத்திலேயே தலை சிறந்த நாடாயிருக்கிறது. ஐரோப்பாவிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு அமெரிக்காவுக்கடுத்தபடி ருஷ்யாவிலிருந்து அதிகமான உணவுப் பொருள்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. இப்படியே, ஆஸ்திரேலியா, கானடா, தென்னமெரிக்கா விலுள்ள அர்ஜண்ட் டைனா முதலிய நாடுகளின் அரசாங்கங்கள், வெளிநாடுகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிகப் பணஞ் சம்பாதிக்கின்றன. ஆனால் ஐரோப்பிய யுத்த காலத்தில், சாதாரண மாக உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கப்பல்கள், ராணுவ உபயோகத்திற்கென்று எடுத்துக் கொள்ளப் பட்டு விட்டன. வியாபாரக் கப்பல்கள் அகப்படுவது அருமையாகி விட்டது. இதனால் வெளிநாடுகளிலிருந்து ஐரோப்பாவுக்கு அதிகமான உணவுப் பொருள்கள் வர முடியவில்லை. எனவே, ஐரோப்பாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதிருஷ்டவசமாக, மேற்படி யுத்த காலத்தில், சீனாவில் வெள்ளப்பாழோ, உணவுப் பஞ்சமோ ஏற்படவில்லை. சீன விவசாயிகள் நல்ல மகசூல் கண்டு சௌக்கியமாயிருந்தார்கள். இது சீனாவுக்கு ஓர் அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். உலகத்திலே சில நாடுகள்தான், தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து கொள்கின்றன. பெரும்பாலான நாடுகள், தங்கள் ஆகார வகைகளுக்கு வெளி நாடுகளை எதிர் பார்க்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, பிரிட்ஷ் தீவுகளில், வருஷத்தில் மூன்று மாதங்களுக்குக் காணும் படியான உணவுப் பொருள்கள் தான் உண்டாகின்றன. மற்ற ஒன்பது மாதத் தேவைக்கு வெளிநாடுகளிலிருந்து தான் வரவேண்டியிருக்கிறது. ஐரோப்பிய யுத்த காலத்தில், பிரிட்டிஷ் துறைமுகங்களை ஜெர்மானி யர்கள் அடைத்து விட்டதன் பயனாக, பிரிட்டன் வாசிகள் ஏறக் குறைய பட்டினியாகவே கிடந்தார்கள் என்று சொல்ல வேண்டும். ஜப்பானிலும் உணவுப் பொருள் விளைவு குறைவு தான். ஆனால் பிரிட்டனைப் போல் அவ்வளவு மோசமான நிலைமை அங்கில்லை வருஷத்தில் பதினோரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருள்கள் ஜப்பானில் உண்டாகின்றன. ஒரு மாதத்திற்குத்தான் வெளிநாடுகளின் தயவை எதிர்பார்க்க வேண்டும். ஜெர்மனியில், வருஷத்தில் பத்து மாதத்திற்குப் போதுமான உணவுப் பொருள்கள் விளைகின்றன. இரண்டு மாதங்களுக்குத் தான் தேவை. சாதாரண காலங்களில் ஜெர்மனியின் நிலைமை இப்படியிருந்தது. யுத்த காலத்தில், விவசாயிகளில் பெரும்பாலோர் போர் வீரர்களாக மாறி விட்டார்கள். இதனால் விளைவுக் குறைவு ஏற்பட்டது. உணவுப் பஞ்சம் உண்டாவது சகஜந்தானே. ஜெர்மனி தோல்வி யுற்றதற்கு இது தான் காரணம். இனி, சீனாவை எடுத்துக் கொள்வோம். சீனாவில் விளைகிற உணவுப் பொருள்கள் சீனர்களுக்குப் போதுமா? சீனர்களுக்குப் போதுமான ஆகாரம் கிடைக்கிறதா? க்வாங்டுங் மாகாணம் மட்டும் ஏழுகோடி டாலர் பெறுமான உணவுப் பொருள்களை வருஷந் தோறும் இறக்குமதி செய்கிறது. ஒரு மாதம் அரிசி இறக்குமதியாகா விட்டால், க்வாங்டுங் மாகாணம் முழுவதிலும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு விடும். இதே மாதிரி தான் இன்னும் பலமாகாணங்களிலும் போதிய உணவுப் பொருள்கள் விளைவதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், பிரான்சின் உணவுப் பொருள் தேவையையும், சீனாவின் உணவுப்பொருள் தேவையைம் ஒப்பிட்டுப் பார்ப்போம். பிரான்சில். அந்த நாட்டு ஜனங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் விளைகின்றன. பிரான்சின் ஜனத்தொகை நான்குகோடி; சீனாவின் ஜனத் தொகை நாற்பது கோடி பிரான்சின் விஸ்தீரணம், சீனாவின் விஸ்தீரணத்தில் இருபதில் ஒரு பாகம். எனவே, பிரான்சின் விஸ்தீரணத்தைக் காட்டிலும் சீனாவின் விஸ்தீரணம் இருபது மடங்கு அதிகம். பிரான்சின் ஜனத் தொகையைக் காட்டிலும் சீனாவின் ஜனத்தொகை பத்து மடங்கு அதிகம். அப்படியிருக்க, நான்கு கோடி பிரெஞ்சுக்காரர், சீனாவின் நிலப்பரப்பில் இருபதில் ஒரு பாகத்தில், முன்னேற்றகரமான சில விவசாய முறைகளைக் கையாண்டு, தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை விளைவித்துக் கொள் கின்றனர். பிரான்ஸை விட இருபது மடங்கு விஸ்தீரணமுள்ள சீனாவில், நவீன விவசாய முறைகளைக் கையாண்டு, உற்பத்தியை அதிகரிக்கச் செய்வோ மானால், பிரான்ஸை விட இருபது மடங்கு அதிகமான உணவுப் பொருள் விளையும். பிரான்ஸானது, தனது உணவுப் பொருள் உற்பத்தியைக் கொண்டு நான்கு கோடி மக்களைப் போஷிக்க முடியு மானால், சீனா, எண்பது கோடி மக்களைப் போஷிக்க முடியும் அப்பொழுது சீனாவில் உணவுப் பஞ்சம் என்பதே ஏற்படாது. அது மட்டுமல்ல; நமது தேவை போக, மிஞ்சிய பொருள் களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கூடும். ஆனால் இன்றைய சீனா, வறுமையால் வாடிக்கிடக்கிறது. அதனுடைய செல்வம் சுரண்டப்படுகிறது. வருஷந்தோறும் பதினாயிரக் கணக்கான மக்கள் பட்டினியால் மடிகிறார்கள். பஞ்சமோ,வெள்ளப் பெருக்கோ ஏற்பட்டு விட்டால் இன்னும் அதிக மான ஜனங்கள் மடிய ஏது உண்டாகிறது. அந்நியர்களின் கணக்குப்படி இப்பொழுது சீனாவின் ஜனத்தொகை முப்பத்தோரு கோடிதான். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை, நமது ஜனத்தொகை நாற்பது கோடியாயிருந்தது. இதனால், சென்ற வருஷங்களுக்கும் நாம் ஒன்பது கோடிபேரை இழந்து விட்டோம். இதைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்தனை செய்ய வேண்டும் போதிய உணவுப் பொருள் களில்லாமையால் தான் இந்த ஒன்பது கோடி மக்களையும் நாம் இழந்து விட்டோம் ஏன் சீனாவில், போதிய உணவுப்பொருள்கள் கிடைக்கவில்லை? இதற்கு இரண்டு காரணங்கள் முதலாவது, விவசாய சாஸ்திரத்தை நாம் அபிவிருத்தி செய்து கொள்ளவில்லை. இரண்டாவது, அந்நியர்கள் சீனாவின் மீது கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கம். அந்நிய வல்லரசுகள் எப்படித் தங்கள் பொருளாதார சக்தி களைக் கொண்டு சீனாவை நசுக்குகின்றன வென்பதைப் பற்றி முந்திய பிரசங்கங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். வருஷந்தோறும் நூற்றிருபது கோடி டாலர் பெறுமான உரிமைகளும் சலுகைகளும் வெளி நாடுகளுக்குச் செல்கின்றன. எல்லாம் பணமாகவே செல் கின்றனவா? இல்லை; உணவப் பொருள்வகையிலும் செல்கின்றன. இஃதென்ன, சீனாவிலேயே போதுமான உணவுப் பொருள்கள் இல்லாதிருக்க, வெளி நாடுகளுக்கு எப்படி ஏற்றுமதி செய்ய முடிவு மென்று நீங்கள் கேட்கலாம். இது சரியான கேள்விதான். ஆனால், சீனாவில் வியாபாரம் செய்யும் கேள்விதான். ஆனால், சீனாவில் வியாபாரம் செய்யும் அந்நிய நாட்டு வியாபாரக் கம்பெனிகளின் அறிக்கைகளை எடுத்துப் பாருங்கள். அமெரிக்காவுக்கும், ஜப்பா னுக்கும், இங்கிலாந்துக்கும் வருஷந்தோறும்,சீனாவிலிருந்து கோடிக்கணக்கான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீனாவிலிருந்து, பலவிதமான இறைச்சி வகைகள் பக்குவம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வட சீனாவில் விளையும் பார்லி, கம்பு, மொச்சை முதலியன வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மூன்று வருஷங்களுக்கு முன்னே வட சீனாவில் பெரிய பஞ்சம் ஏற்பட்டது. ஆயிரக்கணக் கில் ஜனங்கள் மடிந்து கொண்டிருந்தார்கள். ஆயினும் அதே சமயத்தில சீனாவிலிருந்து வெளி நாடுகளுக்குக் கோதுமையும், மொச்சையும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதற்குக் காரணம் என்ன? அந்நியர்களின் பொருளாதார ஆதிக்கந்தான். ஜீவனோபாயப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டு மென்று நாம் சொன்னால் அதன் அர்த்தமென்ன? நமது நாற்பது கோடி ஜனங்களுக்கும் போதிய ஆகாரம் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்க வேண்டிய ஆகாரமும் மலிவாகக் கிடைக்க வேண்டும். அப்படியானால் இதனை எப்படி நிறைவேற்றி வைப்பது? நாமெல்லோரும் உண்கிறோம்; உறங்கு கிறோம். இதில் எவ்வித கஷ்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இஃதொரு முக்கியமான பிரச்னை. சீனாவில் ஒரு பழமொழி வழங்குவதுண்டு. ‘காலையில் கதவைத் திறந்தவுடன் ஒரு மனிதன் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் ஏழு. அவை விறகு, அரிசி, எண்ணெய், உப்பு, மொச்சை, திராட்சை ரசம், தேயிலை ஆகிய ஏழுமே’ யென்பது தான் அந்தப் பழமொழி. அப்படியானால், இந்த உணவுப் பிரச்னை ஒரு முக்கியமான பிரச்னையல்லவா? மனிதன் உயிர்வாழ வேண்டுமானால், அவன் ஆகாரம் சாப்பிடவேண்டும். இந்த ஆகாரம் நான்கு வகைப்படும். முதலா வது காற்று; இரண்டாவது தண்ணீர்; மூன்றாவது மாமிசம்; நான்காவது கறிகாய், பழவகைகள். இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்து ஆராய்வோம். முதலாவது காற்று. காற்று ஒருவகை ஆகாரம் என்று சொன்னால் நீங்கள் என்னைப் பரிகசிக்கக் கூடும். ஆனால் ஒரு நிமிஷம் மூச்சடைத்துப் பாருங்கள். காற்று உட்கொள்ளாததன் கஷ்டம் அப்பொழுது தெரியும். சாதாரணமாக, நம்மிலே பெரும் பாலோர் ஒரு நாளைக்கு நான்கு தடவைக்கு மேல் ஆகாரம் உட்கொள்வதில்லை. ஆனால் காற்றை ஒரு நாளைக்கு இரு பதினாயிரத்து நாற்பது தடவை ஆகாரமாக உட்கொள் கிறோம். ஆகவே இந்த ஆகாரம் எவ்வளவு முக்கியமானதென்பதைப் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. இரண்டாவது தண்ணீர். ஒரு மனிதன், ஐந்தாறு நாள் வரை சாப்பிடாமல் உயிரோடிருக்கலாம். ஆனால் ஐந்தாறு நாட்கள் தண்ணீரின்றி இருந்தால் அவன் உயிர் போய்விடும். மூன்றாவது மரக்கறி உணவு மனிதன், நாகரிகத்தில் கொஞ்சம் முன்னேறிய பிறகு தான், அவன் மரக்கறி உணவை உட்கொள்ள ஆரம்பித்தான். சீனா, புராதன நாகரிகம் படைத்த ஒரு நாடாதலால், சீனர்களுக்கு மரக்கறி ஒரு முக்கிய உணவுப் பொருளாயிருக்கிறது. காற்றும் நீரும் எங்கும் கிடைக்கின்றன. இதற்காக மனிதன் அதிகமான சிரமத்தை மேற்கொள்ள வேண்டியதில்லை. இதனால் இவை முக்கிய பிரச்னைகளாகக் கருதப்படுவதுமில்லை. ஆனால் மாமிச உணவும், மரக்கறி உணவும் முக்கியமான பிரச்னைகள். ஆதிகாலத்திலிருந்தே சீனா ஒரு விவசாய நாடாக இருந்து வந்திருக்கிறது. இந்த விவசாயத் தொழிலின் மூலமாகத்தான் ஜனங்கள் மரக்கறி ஆகார வகைகளைத் தேடிக்கொண்டார்கள். அப்படியானால் இந்த விவசாயத் தொழிலை எப்படி அபிவிருத்தி செய்வது? சீனாவில் மனித உழைப்பைக்கொண்டுதான் விவசாயம் நடைபெற்று வந்ததாயினும், நல்ல மாதிரியான விவசாயப் பொருள்கள் நமது நாட்டில் உற்பத்தியாகிக் கொண்டுவந்தன. அந்நியர்களும் சீனாவின் விவசாய முறையைப் புகழ்ந்திருக் கிறார்கள். சீனாவில், உணவுப் பொருள்கள் உற்பத்தியாவது விவசாயிகளைப் பொறுத்திருக்கிறது. அந்த விவசாயிகளோ அதிக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருக்கிறது. ஆகையால், உணவுப் பொருள் வகைகளை அதிகமாக உற்பத்தி செய்துகொள்ள வேண்டு மானால், விவசாயிகளின் தேகசுகம், உரிமை முதலியவற்றைக் காப்பாற்றக்கூடிய சட்டங்களை இயற்றி அமுலுக்குக் கொண்டுவர வேண்டும். சீனாவில் பத்தில் ஒன்பது பேர் விவசாயிகள். ஆயினும் இவர்கள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்கிற உணவுப் பொருள்களை நிலச்சுவான்தாரர்கள் எடுத்துக்கொண்டு விடுகிறார்கள். இவர் களுக்கு மிஞ்சுவதும் மிகவும் சொற்பந்தான். இந்த அநியாயத்தைப் போக்கி, விவசாயிகளின் உரிமைகளையும் நன்மைகளையும் பாதுகாக்கக் கூடிய சட்டங்களை இயற்றி நடைமுறையில் கொணர வேண்டும். அப்பொழுதுதான் விவசாய உற்பத்தியும் அதிகப்படும். சீன விவசாயிகளின் நிலைமை யென்ன? சீனாவில் பெரிய பெரிய நிலச்சுவான்தாரர்கள் இல்லை யென்பது வாஸ்தவம். ஆயினும், விவசாயிகளின் பத்தில் ஒன்பது பேர் நிலச் சொந்தக்காரர் களாயில்லை. நிலத்துக்குடைய நிலச்சுவான் தாரர்களோ, தாங்களே நிலத்தை உழுது சாகுபடி செய்வதில்லை. ஒரு விவசாயி, தன்னுடைய நிலத்தில் தானே உழுது பயிரிட்டுப் பெறும் சாகுபடியைத் தானே அனுபவிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயந்தான். ஆனால் சீனாவிலுள்ள விவசாயிகள், தங்கள் உழைப்பின் பலனைத் தாங்களே அனுபவிப்ப தில்லை. ஆகையால்,இக்குறையைச் சட்டத்தின் மூலம் சீர்திருத்த வேண்டுவது மிகவும் அவசியமாகும். விவசாயப் பிரச்னை தீர்ந்தால்தான், ஜீவனோபாயப் பிரச்னையும் தீரும். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரப்படி, நிலத்தில் விளைகிற உணவுப் பொருள்களில் நூற்றுக்கு அறுபது விகிதம் நிலச்சுவான்தாரருக்கும் நாற்பது விகிதம் விவசாயிக்கும் போகிறது. இந்த முறையற்ற நிலைமை எத்தனை நாள் நீடித்துக்கொண்டு போகும்? விவசாயிகளுக்கு, அவர்களுடைய உழைப்பின் பெரும் பாலான பகுதி கிடைக்குமானால் அவர்கள் இன்னும் அதிகமான உற்சாகத்துடன் உழைத்து, பொருள் உற்பத்தியை அதிகப் படுத்துவார்களல்லவா? இந்த உற்சாகம் அவர்களுக்கு இப்பொழுது இல்லை யாதலினால் தான், அநேக விவசாயிகள், நிலங்களைப் புறக்கணித்துவிட்டு வேற்றிடங்களுக்குச் செல்கிறார்கள். விவசாயிகளின் பிரச்னையோடு, விவசாயப்பொருள்களை எப்படி அதிகமாக உற்பத்தி செய்வதென்கிற பிரச்னையைப் பற்றியும் நாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். உற்பத்தியை அதிகப் படுத்துவதற்கு ஏழு வழிகளுண்டு. அவை முறையே, யந்திர வகை களை உபயோகப் படுத்துதல், எருவகைகளை உபயோகித்தல், தொடர்ந்து சாகுபடி செய்தல், பூச்சி புழுக்களை அகற்றல், அதிக மாக உற்பத்தி செய்தல், போக்கு வரத்து சாதனங்களை அதிகப் படுத்துதல், வெள்ளம் முதலியவைகள் வரவொட்டாமல் தடுத்தல் ஆகியவை யாகும். முதலாவது, யந்திர வகைகளை உபயோகித்தல். சீனாவில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக மனித உழைப்பைக்கொண்டு தான் விவசாயம் நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கிறது. யந்திர வகைகளை உபயோகப் படுத்துவோமானால் உற்பத்தி இரண்டு மடங்கு அதிகமாகும். அதுமட்டும் மின்றி, உற்பத்தி செய்வதற்காக ஏற்படும் செலவுகளும் குறையும். மனித உழைப்பைக் கொண்டு நாற்பது கோடி மக்களுக்கு உணவிட முடியுமானால் யந்திர உழைப்பைக் கொண்டு, மட்டுப் பாங்கான பூமிகளையும் நாம் சாகுபடி செய்ய முடியும். இன்னும் ‘பம்பு’1 வைத்துத் தண்ணீர் பாய்ச்சிக் கரம்பு நிலங்களையும் செழிப்புள்ள நிலங்களாக்கலாம். இப்பொழுதும், சீனாவில் சில இடங்களில் விவசாயத்திற்கென்று யந்திர வகைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. இவையனைத்தும் வெளிநாடு களிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. நாம் யந்திர வகைகளை இன்னும் அதிகமாக உபயோகப்படுத்துவோமானால் நாமே இவைகளை உற்பத்தி செய்துகொள்ள முடியும். இதனால் வெளி நாடுகளுக்குச் செல்லுகிற பணமும் நம்மிடத்திலேயே தங்கும். இரண்டாவது, நல்ல எருக்களை உபயோகப்படுத்துதல். சாதாரணமாக, சீன விவசாயிகள் சாணிமுதலியவற்றைத்தான் உரமாக உபயோகிக்கிறார்கள். ஆனால் ரசாயன உரங்களை அதிகமாக உபயோகிக்கிறார்களில்லை. க்வாங்டுங் மாகாணத்திலும் ஹோனான் மாகாணத்திலுமுள்ள கரும்பு உற்பத்தி செய்வோர் மட்டும் (தென்னமெரிக்காவிலுள்ள) சிலிநாட்டிலிருந்து வெடியுப்பை இறக்குமதி செய்து அதை உரமாக உபயோகிக்கிறார்கள். இதனால் கரும்பு உற்பத்தி இரட்டிப்பு மடங்கு அதிகரிக்கிறது. தவிர, கரும்பும் செழித்து ஓங்கி வளர்கிறது. ஆனால் தென்னமெரிக்காவிலிருந்து இந்த உரத்தை வரவழைப்பதென்றால் அதற்கு அதிகமான மூலதனம் தேவை யாயிருக்கிறது. ஒரு சிலர்தான் அதிக மூலதனம் போட்டு வரவழைக்க முடியும். நமது நாட்டு மலைப்பிரதேசங்களில் கந்தகம் போன்ற ஏராளமான ரசாயனப்பொருள்கள் கிடைக்கின்றன. இவைகளை யெல்லாம் நாம் எடுத்து உரமாக உபயோகிக்க முயலவேண்டும். காடிக்காரம் என்பது ஒரு சிறந்த எருவாகும். இதையும் நாம் உபயோகிக்கலாம். இவையெல்லாம், செயற்கை உரங்கள் என அழைக்கப்படும். மின்சார சக்தியைக்கொண்டு இந்தச் செயற்கை உரங்களை நாம் உற்பத்தி செய்து உபயோகிக்க வேண்டும். சீனாவில் ஏராளமான நீர்வீழ்ச்சிகளும், நீரோட்டங்களும் இருக்கின்றன. மின்சார சக்தியை உற்பத்தி செய்துகொள்வதற்கு இவை சிறந்த சாதனங்கள். ஆகையால் மின்சார சக்தியை உற்பத்தி செய்து கொள்வதற்கோ, அதனின்று செயற்கை உரங்களைத்தயார் செய்து கொள்வதற்கோ நம் நாட்டில் அதிகமான சாதனங்களிருக் கின்றன. இவற்றை உபயோகித்துக்கொள்ள வேண்டியது. நமது கடமை. மூன்றாவது, மாறிமாறிப் பயிர் செய்யும் முறை. அதாவது, ஒரே நிலத்தில் ஒவ்வொரு வருஷமும, ஒவ்வொரு விதமான விதையை விதைத்துச் சாகுபடி செய்தல். உதாரணமாக, இந்த வருஷம் க்வாங்டுங் மாகாணத்து விதையை விதைத்தல்; அடுத்த வருஷம் ஹ்யூனான் மாகாணத்து விதையை விதைத்தல்; மறு வருஷம் ஷெக்வான் மாகாணத்து விதையை விதைத்தல். இப்படி மாறி மாறி விதைப்பதனால் நிலத்திற்கு ஒருவித ஓய்வு ஏற்படுவதுகூட பயிரும் செழிப்பாக வளர்கிறது. இதனால் உற்பத்தியும் அதிகப்படுகிறது. நான்காவது, பூச்சி புழுக்கள் வராமல் தடுத்தல். குடியானவன் எவ்வளவு கஷ்டப்பட்டுப் பயிரிட்ட போதிலும் பூச்சிகள் வந்து அவன் பயிரை அரித்து விடுகின்றன. இவைகளைத் தடுக்கும் முறையை விவசாயிக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அமெரிக்காவில், இந்தப் பூச்சி புழுக்கள் வராமல் தடுப்பதற்காக அரசாங்கத்தார் அதிகமான பணத்தைச் செலவழித்திருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு அதிகமான பலனும் கிடைத்திருக்கிறது. இந்த முறையை நாம் பின்பற்றலாம். ஐந்தாவது, உற்பத்தியான பொருளைப் பண்படுத்தி வைத்தல். உணவுப் பொருள்களை நீண்ட காலம் நாம் பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமானால அதற்குச் சில சாஸ்திரீய முறைகளிருக்கின்றன. இவைகளையெல்லாம் நாம் கற்று அனுஷ்டானத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஆறாவது, போக்குவரத்து சாதனங்களை விருத்தி செய்து அதன் மூலமாகப் பொருள் உற்பத்தியை அதிகப்படுத்துதல். உதாரணமாக, ஓரிடத்தில் ஒருவித பொருள் அதிகமாக உற்பத்தி யாகிறது. அதேபொருள் மற்றொருரிடத்தில் குறைவாக உற்பத்தி யாகிறது. இதனால், எந்த இடத்தில் அதிகமான பொருள் உற்பத்தி யாகிறதோ அந்த இடத்திலிருந்து தேவைக்கு மிஞ்சின பொருளை, குறைவான பொருள் உற்பத்தி யாகிற இடத்திற்கு அனுப்பப் போக்குவரத்து வசதிகளிருக்கவேண்டும். ஓர் உதாரணம் சொல்லுகிறேன் கேளுங்கள், மஞ்சூரியாவி லும், வட சீனாவிலும் கோதுமையும் மொச்சையும் அதிகமாக விளைகின்றன. ஆனால் நெல்வினைவதில்லை. தெற்கு மாகாணங் களில் நெல் அதிகமாக உற்பத்தி யாகிறது. கோதுமையும் மொச்சை யும் கிடையாது. இதனால் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பொருள்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிற தல்லவா? இதற்குத்தான் போக்குவரத்து வசதிகள் இருக்க வேண்டு மென்று சொல்கிறோம். மேலே சொன்ன ஆறு முறைகளில் முதல் ஐந்து முறைகளை மட்டும் நாம் கையாண்டு பொருள் உற்பத்தியை அதிகப்படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆறாவது முறையாகிய போக்கு வரத்துவசதிகளைச் சரியாக நாம் அமைத்துக் கொள்ளா விட்டால் என்ன பயன்? சமீபத்தில் யுன்னான் மாகாணத்திலிருந்து ஒரு நிலச்சுவான்தாரருடன் நான் பேசிக்கொண் டிருந்தேன். அவர் வருஷத்தோறும், ஆயிரக்கணக்கான கூடை தானியங்களை எரித்துப்போடுவதாகச் சொன்னார். நான் ஆச்சரியப்பட்டு, ஏனென்று கேட்டேன். அதற்கு அவர் பதில் சொன்னார்:- “எனக்கோ வருஷந் தோறும் அதிகமான தானியங்கள் கிடைக்கின்றன. அவையனைத்தும் எனக்குத் தேவையில்லை. என் பக்கத்திலுள்ள ஜனங்களுக்கும், போதிய ஆகாரமிருக்கிறது. மிஞ்சிய தானியங்களை நான் என்ன செய்வது? வெளியிலிருந்து வந்து வாங்கிக் கொண்டு போகிறவருமில்லை. இங்கிருந்து அனுப்பப் போதிய வசதிகளுமில்லை. அதனால்தான் எரித்து விடுகிறேன்.” இதைக்கொண்டு நாம் என்ன அறிகிறோமென்றால் போதிய பொருள்கள் விளைந்தாலும், அவைகளை வினியோகிக்கச் சரியான போக்கு வரத்து வசதிகள் இல்லை என்பதுதான். இதற்காகவே இந்தப் பிரச்னைக்கு நான் முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறேன். சீனாவில் போக்குவரத்து வசதிக்கு லாயக்காயுள்ள கால்வாய்கள் பல இருக்கின்றன. இவைகளைப் புதுப்பித்துச் சரியான நிலைமை யில் வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தபடி, ரெயில் வசதி களையும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். தவிர, புதிய மோட்டார் பாதைகள் போட்டுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே உள்ள பாதைகளை நல்ல முறையில் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவைகளின் மூலமாக - அதாவது, வாய்க்கால்கள் மூலமாகவே, ரயில் பாதைகள் மூலமாகவோ, மோட்டார் பாதைகள் மூலமாகவோ - செல்ல முடியாத பிரதேசங்களில் கூலிகளை வைத்து அவர்களின் மூலமாகச் சாமான் பரிவர்த்தனைகள் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாய உற்பத்தியை அதிகப் படுத்துவதற்குக் கையாள வேண்டிய ஏழாவது முறை யென்னவென்றால், இயற்கைச் சக்தி களினால் ஏற்படுகிற வெள்ளப்பாழ். பஞ்சம் முதலியவைகளினின்று தடுத்துக் கொள்வதாகும். சீனாவில் அடிக்கடி வெள்ளப் பெருக் கெடுத்துச் சேதங்கள் பல உண்டாகின்றன. இதனால் லட்சக்கணக் கான டாலர்கள் நஷ்டம் ஏற்படுகிறது. முற்காலத்தில் இவ்வளவு வெள்ளப் பாழ்கள் ஏற்பட வில்லை. இப்பொழுது மட்டும் ஏற்படு வானேன்? இதற்கு முக்கியமான காரணம் ஒன்றுண்டு. முற்காலத்தில், சீனாவில் ஏராளமான காடுகள் இருந்தன. அவைகளினின்று, அதிகமான மரங்களை நாம் வெட்டிஎடுத்துக் கொண்டுவிட்டோம். திரும்பவும் அந்தக் காடுகளைப் புதுப்பிக்கவில்லை. இதனால் மழை பெய்து நீர்ப் பெருக்கெடுத்து, மேட்டுப் பிரதேசங்களிலிருந்து வேகமாக ஓடி வருகிறபோது அதனைத் தடுத்துக் கொள்ள இடை யிலே மரங்கள் நிறைந்த காடுகள் இல்லை. இதனால்தான, வெள்ளப் பெருக்கினால் ஏற்படுகிற சேதத்தை நாம் தடுத்துக்கொள்ள வேண்டு மானால் காடுகளைச் செழிப்பாக வைத்துக்கொள்ள வேண்டு மென்று கூறுகிறேன். காடுகள் குறைந்து போனதன் காரணமாக மேகங்கள் குவிகிறதற்குச் சந்தர்ப்ப மில்லாமற் போகிறது. இதனால் காலா காலத்தில் மழை பொழிவதில்லை. பஞ்சம் ஏற்படுகிறது. ஆகவே பஞ்சத்தைத் தடுத்துக் கொள்வதற்கும் காடுகளை நல்ல நிலைமையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேலே சொன்ன ஏழு முறைகளையும் நாம் கையாண்டு விடுவதனால் மட்டும் நம்முடை ஜீவனோபாயப் பிரச்னை தீர்ந்து விடுமா? விடாது. அமெரிக்காவில் விவசாயப் பிரச்னை ஒவ்வொன் றையும், மிகநுணுக்கமான ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். நிபுணர்கள் பலரை வெளி நாடுகளுக்கனுப்பி ஆங்காங்குள்ள விவசாய முறை களைப் பரிசீலனை செய்துவரும்படி செய்து அவைகளையும் அனுஷ்டானத் திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். போக்குவரத்து வசதிகளுக்கு அந்நாட்டில் குறைவே இல்லை. வெள்ளப் பாழ், பஞ்சம் முதலியவை களினின்று தடுத்துக்கொள்ள சாஸ்திரீயமான முறைகளையும் அவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள். இவையெல் லாம் போக அந்நாட்டிலிருந்து வருஷந்தோறும் ஏராளமான உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அப்படியிருந்தும் அந்நாட்டு ஜீவனோபாயப்பிரச்னை தீரவில்லையென்றால் இதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியமே படுவீர்கள். இதற்குக் காரணமென்ன? அமெரிக்காவில் விவசாய உற்பத்தியானது முதலாளிகளின் நிருவாகத்திலிருக்கிறது. தனிப்பட்டவர்களுடைய முதலைக் கொண்டு, தேவைக்கு அதிகமாகப் பொருள்கள் உற்பத்தி செய்யப் படுகின்றன. அப்படி உற்பத்தியாகிற பொருள்கள் சரியான முறை யில் வினியோகிக்கப் படுவதுமில்லை. இதனாலேயே ஜீவனோபாயப் பிரச்னை தீராமலே இருக்கிறது. பொருள் உற்பத்தி முறையை மட்டும் நாம் ஆராய்ச்சி செய்தால் போதாது. வினியோக முறை யையும் ஆராய வேண்டும். ஆனால், முதலாளித்துவ ஆதிக்கத்தின் கீழ் சரியானபடி பொருள் வினியோகம்நடைபெறவே பெறாது. ஏனென்றால், முதலாளித்துவப் பொருள் உற்பத்தியின் ஓரே நோக்கம், லாபம் சம்பாதிப்பதுதான். ஒரு நாட்டில் உணவுப் பொருள்களின் விலை குறைவாயிருக்குமானால், எந்த நாட்டில் அதிகமான விலை கிடைக்கிறதோ அந்த நாட்டிற்குப் பொருள் களை ஏற்றுமதி செய்து விடுகிறார்கள் முதலாளிகள். அதாவது எங்கு, தங்கள் பொருள்களுக்கு அதிகமான லாபம் கிடைக்கிறதோ அங்கு விற்பனை செய்ய வேண்டுமென்பதே அவர்கள் குறி. தங்கள் சொந்த ஊரிலேயோ சொந்த நாட்டிலேயோ ஜனங்கள் பட்டினி கிடந்து செத்தாலும் சரி, இந்த முதலாளிக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. இதனால்தான் முதலாளித்துவ ஆதிக்கம் நிறைந்த நாடுகளில் இந்த ஜீவனோபாயப் பிரச்னை தீராமலேயே இருக்கிறது. நமது மின் - ஷெங் தத்துவத்தை நடை முறையில் கொண்டு வரவேண்டுமானால், லாபத்தை நோக்கமாகக் கொண்டு பொருள் வினியோகம் செய்யக் கூடாது. ஜனங்களுடைய தேவையைத்தான் நாம் கவனிக்க வேண்டும். சீனாவில் போதுமான ஆகாரம் இல்லை. ஆயினும் வருஷந்தோறும், முட்டை, மொச்சை முதலிய பல பொருள்களை ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இஃது இந்தியாவிலுள்ள நிலைமையைப்போலிருக்கிறது. இந்தியாவில் போதிய உணவுப் பொருள்கள் கிடைப்பதில்லை. இது தவிர வருஷந்தோறும் பஞ்சம். ஆயினும் ஐரோப்பாவுக்கு, உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது நாடாக இருக்கிறது. இதற்குக் காரணமென்ன? இந்தியாமீது ஐரோப்பா கொண்டுள்ள பொருளாதார ஆதிக்கந்தான். இந்தியாவில் முதலாளித்துவ நோக்கத்தோடுதான் விவசாயம் நடைபெறுகிறது. அங்குள்ள முதலாளிகள், பட்டினி கிடைக்கும் லட்சக் கணக்கான மக்களுக்கு ஆகாரம் கொடுத்தால் தங்களுக்கு லாபம் கிடைக்காதென்று தெரிந்து அதிக லாபத்திற்காக ஆகாரப் பொருள்களை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அவர்கள், தங்கள் சொந்த தேசத்து மக்கள் பட்டினி கிடந்து செத்தாலும் வெளி நாடுகளுக்குப் பொருள்களை ஏற்றமதி செய்வதை நிறுத்த மாட்டார்கள். நமது மின் - ஷெங் தத்துவமானது, முதலாளித்துவ முறையை அடியோடு மாற்றம் நோக்கமுடையது. இதற்காக நாம் என்ன செய்ய வேண்டுமென்றால், ஒரு வருஷத்தில் தேவை போக மிச்சமாகும் உணவுப் பொருள்களை, ஆங்காங்குச் சேகரித்து வைக்க வேண்டும். இப்படி மூன்று வருஷம் பார்த்து விட்டுப் பிறகு பொருள்கள் மிஞ்சுமானால் அவற்றை மட்டுந்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவேண்டும். ஆக முதலாளித்துவ முறைக்கும் மின் - ஷெங் தத்துவத்திற்கும் அடிப்படையான நோக்கத்தில் வித்தியாசமுண்டு. முதலாளித்துவ மானது, லாபத்தை லட்சியமாகக் கொண்டது. மின் - ஷெங் தத்துவமானது ஜனங்களின் வாழ்க்கை, செம்மையாக நடைபெற வேண்டுமென்பதை லட்சியமாகக் கொண்டது. ஆனால் இந்த மின் - ஷெங் தத்துவத்தைச் சீனாவில்நடைமுறையில் கொணர வேண்டு மானால் படிப்படியாகத் தான் செய்ய வேண்டும். முதலாளித்துவ முறையை ஒரே நாளில் ஒழித்துவிட வேண்டுமென்று ஆரம்பிக்கக் கூடாது. முதலாவது, சீனாவுக்கு ஏராளமான உணவுப் பொருள்கள் கிடைக்கச் செய்ய வேண்டும். இது நிறைவேறி விடுமானால் பின்னர் மெது மெதுவாகப் பொருள்களின் விலையைக் குறைத்து விடலாம். வாழ்க்கையின் தேவைகள் மூன்று எனப் பொருளாதார நிபுணர்கள் கூறிப் போயிருக்கிறார்கள். அவைமுறையே உணவு, உடை, இருப்பிடம் என்பனவாம். இவற்றோடு நான்காவது ஒன்றையும் நான் சேர்த்துக் கொள்வேன். அதுதான் போதக்குவரத்து சாதனம். நமது ஜீவனோ பயப் பிரச்னையைத் தீர்க்க வேண்டு மானால் இந்த நான்கு தேவைகளும் ஜனங்களுக்கு மலிவாகக் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, எல்லாருக்கும் கிடைக்குமாறும் செய்ய வேண்டும். இதற்கு அரசாங்கம் பொறுப் பேற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக ஜனங்களுக்கும் சில பொறுப்புக்கள் ஏற்படும். குடியானவன், உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வான். தொழிலாளி, தேவையான கருவிகளைச் செய்து கொடுப்பான். வியாபாரி, ஜனங்களின் தேவைக்குத் தகுந்தாற்போல் பொருள்வினியோகம் செய்வான். படிப்பாளி, தன் அறிவையும் திறமையையும் சமுதாய நன்மைக்குச் செலவிடுவான். ஆக, அவரவரும் அவரவர்களின் கடமையை நிறைவேற்றுவார்களானால் எல்லாருக்கும் எல்லாவிதமான பொருள்களும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கும். 16. உடை (24 - 8 - 1924) மின் - ஷெங் தத்துவத்தின் முக்கிய பிரச்னையாயிருப்பது உணவு; அதுவே ஜனங்களின் ஜீவனோபாயப்பிரச்னை. இதற் கடுத்தபடி முக்கிய பிரச்னையாயிருப்பது உடை. இதைப் பற்றியே இன்று பேச விரும்புகிறேன். உலகத்திலே மனிதனைத் தவிர்த்த மற்ற எல்ல ஜீவராசிகளுக்கும் ஆகாரம் தேடுவதென்ற ஒரு பிரச்னை மட்டுந்தான் உண்டு. ஆனால் மனிதனுக்கு உடையும் ஒரு பிரச்னையாயிருக்கிறது. அதுவும் தற்கால நாகரிக மனிதனுக்கு இது முகவும் முக்கியமான விஷயமாயிருக்கிறது. ஆப்பிரிக்காவிலும் மலேயா தீபகற்பகம் முதலிய பகுதிகளிலும் உள்ள காட்டு மிராண்டி ஜாதியாரில் பலர் இப்பொழுதும் நிர்வாணமாக இருந்தே காலங் கழிக்கின்றனர். நமது முன்னோர்களும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். நாகரிகம் விருத்தியடைய விருத்தியடைய மனிதனுடைய உடைகளும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில மனிதனுக்கு, அவன் தேகத்தின் மீது வளர்ந்திருந்த உரோமங்களே பெரிய பாதுகாப்பாயிருந்தன. பின்னர் வேட்டையாடவும் மீன் பிடிக்கவும் அவன் கற்றுக்கொண்டபோது, மிருகங்களைக் கொன்று, அவைகளின் மாமிசத்தை உணவாகவும், அவைகளின் மேல் தோலை உடையாகவும் உபயோகித்துக் கொண்டான். இப்படி இவன் நாகரிகத்தில் முன்னேற முன்னேற, இவனுடைய தேகத்து உரோமங்களுக்கு வேலையில்லாமல் போய் விட்டது. இதனால் இவைகளின் வளர்ச்சியும் குன்றி விட்டது. இப்பொழுது கூட நீங்கள் சீனர்களையும் ஐரோப்பியர்களையும் ஒப்பிட்டுப்பார்ப்பீர் களாயின், சீனர்களுக்குக் குறைவான உரோமங்களும், ஐரோப்பியர்களுக்கு அதிகமான உரோமங்களும் இருப்பதைக் காணலாம். இதனால் சீனர்களுடைய புராதனத் தன்மை நன்கு வெளியாகிறது. நாகரிகம் விருத்தியடைந்திருக்கிற வரலாற்றைப் பார்க்கிற போது, மனிதனுடைய வாழ்க்கை அந்தஸ்தானது; மூன்று படி களைத் தாண்டி யிருக்கிறதென்பது நன்கு தெரிகிறது. முதலாவது, தேவைகள், உணவு விஷயத்திலோ, உடை விஷயத்திலோ மனித னுக்குச் சில அவசியமான தேவைகள் வேண்டியிருக்கின்றன. இவை யில்லாவிட்டால் மனிதன் இருப்பதும் இறப்பதும் ஒன்றுதான். இந்தத் தேவைகள் பூர்த்தியானதும், மனிதன் சில சௌகரியங் களைத் தேடுகிறான். இஃது இரண்டாவது படி. இந்தச் சௌகரியங் களை இவன் சுலபமாக அடைய முடிந்ததும் ஆடம்பரத்துக்குப் போகிறான். இது மூன்றாவது படி. எனவே, தேவை, சௌகரியம், ஆடம்பரம் என்ற மூன்று படிகளைக் கடக்கிறான். உடை விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மனிதன் தன்னுயை தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிற நிலையிலிருந்த காலத்தில், கோடை காலத்தில் புல்லினால் தயாரிக்கப்பட்ட ஆடை யோடும், குளிர் காலத்தில் உரோமங்களினால் தயார் செய்யப்பட்ட ஆடையோடும் திருப்தியடைந்தான். இதற்குப் பிறகு, சௌகரியங் களைத் தேட முற்படுகிறபோது, தனது தேகத்தை உஷ்ணம், குளிர் இவைகளினின்று காப்பாற்றிக்கொள்ளக் கூடிய உடையோடு மட்டும் திருப்தியடையாமல், தன் தேகத்திற்கு எது பொருத்தமா யிருக்கிறது, எது சௌகரிய மாயிருக்கிறது என்று பார்த்து அந்த மாதிரி உடைகளையே உபயோகித் தான். இதற்குப் பிறகு ஆடம்பர வாழ்க்கை ஏற்பட்ட போது மனிதன், தன் தேகத்திற்கு எந்த உடை அணிந்தால் அழகாயிருக்குமென்று பார்த்து ஆத்தகைய உடை களை அணிய ஆரம்பித்தான். இந்தக் காலத்தில் தான் பட்டாடைகள் முதலியன தோன்றின. இப்படித்தான், உணவு வகையிலும் மனிதன் தேவை, சௌகரியம், ஆடம்பரம் என்ற மூன்று படிகளைத் தாண்டியிருக்கிறான். இங்கே நாம் உடைப் பிரச்னையைக் குறித்து ஆராய்ச்சி செய்கிறபோது, சௌகரியம், ஆடம்பரம் என்பவைகளை விடுத்து விட்டு, தேவையைப் பற்றித் தான் குறிப்பிட விரும்புகிறோம் நமது நாற்பது கோடி ஜனங்களும் வயிறார உண்ணவும், உடம்பு மறைய உடைகளை அணிந்து கொள்ளவும் வேண்டும். இதுதான் நமது நோக்கம். ஆகவே, இத்தனை ஜனங்களுக்கும் உடைகள் கிடைக்க எப்படி ஏற்பாடு செய்வது என்பதைப் பற்றி ஒரு திட்டம் வகுக்க வேண்டும். மனிதனுடைய உடைக்குத் தேவையான பொருள்கள் நான்கு. சணல், பருத்தி, பட்டு, கம்பளம், முதலிரண்டும் தாவர வர்க்கத்தி னின்றும் பின்னிரண்டும் பிராணி வர்க்கத்தினின்றும் உண்டா கின்றன. பட்டு, முதன் முதலில் சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மேனாட்டார் வனவிலங்குகள் போல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த காலத்தில், சீனர்கள் பட்டாடை உடுத்தி வந்தார்கள். மேனாடுகளுக்கும் சீனாவுக்கும் வியாபாரத் தொடர்பு ஏற்பட்ட காலத்தில், முதன் முதலில் பட்டும் தேயிலையுந்தான் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து ஒரு சில பொருள்களே சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டுவந்தன. ஆனால் இப்பொழுது அந்நிய நாடுகள் பல, பட்டு உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கின்றன. பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் முதலிய நாடுகளில் நல்ல மாதிரியான பட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. இவை களைக் காட்டிலும் சீனப் பட்டு மட்டமாகவே இருக்கிறது. இதனால் நமது சரக்குகள் சர்வதேச மார்க்கெட்டுகளில் செலவாவதில்லை. எனவே, நமது பட்டு ஏற்றுமதி குறைந்து போகிறது. நமது தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய மற்ற இறக்குமதிச் சாமான்கள் அதிகப்பட்டு வருகின்றன. இறக்குமதியாகும் சாமான்கள் அளவுக்குப் பட்டையோ, தேயிலை யையோ நாம் ஏற்றமதி செய்ய முடியவில்லை யாதலினால் இறக்கு மதிப் பொருள்களை நாம் பணங் கொடுத்தே வாங்க வேண்டி யிருக்கிறது. இதைத்தான் வியாபார நஷ்ட மென்று சொல்லி முந்திய பிரசங்கங்களில் எடுத்துக் காட்டியிருக்கிறேன். சீனர்களாகிய நாம், ஆரம்ப காலத்தில் பட்டு உற்பத்தித் தொழிலில் அதிக கவனஞ் செலுத்திக் கொண்டு வந்தோம். ஆனால் அதனோடு திருப்தியடைந்துவிட்டோம். அதனை மேன்மேலும் எப்படி விருத்தி செய்து, உலகச் சந்தைகளில் எப்படிப்பரப்புவ தென்பதைப் பற்றி யெல்லாம் சிந்திக்கவேயில்லை. அந்நிய நாட்டார், இந்தப் பட்டுஉற்பத்தி விஷயத்தில் சாஸ்திரீய முறை களைக் கையாண்டு அதிக முன்னேற்றத்தை யடைந்து விட்டனர். ஆகையால் நாமும் பட்டு உற்பத்தி விஷயத்தில் சாஸ்திரீய முறை களைக் கையாள வேண்டும். பட்டுப் பூச்சிகள் கூடுகள் கட்டுகிற போது அவைகளை வேறு பூச்சிகள் அரித்து விடா வண்ணம் பாதுகாத்துக்கொள்ளும் முறைகளைக் கையாள வேண்டும். பழைய முறைகளே சரியானவை என்று நாம் திருப்தியடைந்து விடக் கூடாது. உடைக்கு அவசியமான அடுத்த பொருள் சணல். முதன் முதலாகச் சணலைக் கண்டு பிடித்து அதனை ஆடையாக உபயோகித்தது சீனாதான். அந்தப் பழைய உற்பத்தி முறையைத்தான் இப்பொழுதும் நாம் கையாண்டு கொண்டிருக்கிறோம். ஆனால் வெளிநாட்டார், இந்தச் சணலைப் பல விதமாகப் பக்குவப்படுத்திப் பட்டோடு சேர்த்து அழகான உடைகளைத் தயாரிக்கிறார்கள். இவை சர்வதேச மார்க்கெட்டுகளில் நன்றாக விலையாகின்றன. ஆகையால் இந்தத் தொழிலில் நாம் முன்னேற்ற மடைய முயற்சி செய்ய வேண்டும். நல்ல மாதிரியான சணல் உற்பத்தியாக வேண்டு மென்றால், என்னென்ன உரங்களைப் போட வேண்டும், என்னென்ன யந்திர வகைகளைக் கொண்டு இவைகளைப் பதன்படுத்த வேண்டு மென்பன போன்ற விஷயங்களை யெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்து நடைமுறையில் கொணர வேண்டும். இனி பருத்தி விளைவைப் பற்றிக் கவனிப்போம். பருத்தி விதைகள் முதன்முதலாக இந்தியாவிலிருந்து இங்குக் கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்டன. இப்பொழுது சீனாவெங்கணும் பருத்தி உற்பத்தி செய்யப் படுகிறது. உலகத்திலேயே பருத்தியை அதிகமாக விளைவிக்கிற நாடுகள் மூன்றுதான். முதலாவது அமெரிக்கா; இரண்டாவது இந்தியா; மூன்றாவது சீனா. இவ்வளவு அதிகமான பருத்தி சீனாவில் உற்பத்தி யாகியும், அதன் யந்திரத் தொழில் அபிவிருத்தியடையாத காரணத்தினால், எல்லாப் பருத்தி யும் வெளிநாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்பட்டு விடுகின்றன. வெளி நாடுகளோ, சீனாவிலிருந்து பருத்தியை வாங்கி, அதனுடன் தங்கள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகிற பருத்தியையும் ஒன்று சேர்த்துக் கூட்டி, ஆடைகளாக நெய்து சீனாவிலேயே கொண்டு வந்து லாபத்திற்கு விற்கின்றன. சீனாவில் கூலி வேலை செய்வோர் ஏராளமான பேர் இருக்கின்றனர். இவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலி விகிதமும் மிகச் சொற்பந்தான். அப்படியிருந்தும், நமது நாட்டில் விளைகிற பஞ்சைக் கொண்டு, நமக்குத் தேவையான ஆடைகளை நாம் நெய்துகொள்ளாமல், வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கிறோம். இதற்குக் காரணம் நமது தொழில்கள் சரியானபடி வளர்ச்சியடையாமையே. நமது தேவைகளில் எவை எவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோமென்று பார்ப்பீர்களாயின், பஞ்சினால் நெய்யப்பட்ட ஆடைகள்தான் அதிகமாயிருக்கும். சமீபத்தில் எடுத்த ஒரு புள்ளி விவரப்படி, சீனாவிலுள்ள ஒவ்வொரு நபரும் வருஷத் தில் ஒரு டாலர் பெறுமான அந்நியத் துணிகளை உபயோகிக்கின் றனர். ஆகவே, நமது வாழ்க்கையின் முக்கியமான தேவைகளில் ஒன்று அந்நியர்கள் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இப்படி வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறவரை, நமது உடைப் பிரச்னை தீரவே தீராது. வழக்கமாகச் சீனாவுக்குப் பருத்தி ஆடைகளை அனுப்பிக் கொண்டு வந்த ஐரோப்பிய நாடுகள், 1914 -ஆம் வருஷ மகா யுத்தத்தின்போது அனுப்ப வில்லை. ஜப்பானிலிருந்துதான் துணிகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. இதுவும் சொற்பந்தான். ஏனென் றால், அப்பொழுது ஜப்பான் நேசக் கட்சியாருக்கு யுத்த தளவாடங் களை அனுப்புவதில்தான் முனைந் திருந்ததே தவிர, மற்ற ஏற்றுமதி களில் அதிக கவனஞ் செலுத்தவில்லை. சீனாவில் துணிகளுக்கு நல்ல கிராக்கி இருக்கிறதென்று தெரிந்து சில சீன முதலாளிகள், அநேக நெசவு மில்களை ஆரம்பித்தார்கள். நல்ல லாபம் இவர் களுக்குக் கிடைத்தது. அநேகர் கோடீசுவர்களானாhகள். ஆனால் இப்பொழுதைய நிலைமை. என்ன? அநேக மில்கள் மூடப்பட்டு விட்டன. முன்னம் கோடீசுவரர்களாயிருந்தவர்கள் இப்பொழுது பரம தரித்திரர் களாகிவிட்டார்கள் இந்த நிலைமை ஏற்பட்டதற்கு என்ன காரணம்? அந்நியர்களுடைய அரசியல் ஆதிக்கந்தான் காரணம். சீனாவில் மஞ்சூ அரச பரம்பரை ஆட்சி புரிந்து கொண்டிருந்தபோது, அந்நிய வல்லரசுகளுக்கும் சீனாவுக்கும் பல போர்கள் நடைபெற்றன. இவற்றில் சீனா தோல்வியடைந்தது. இதனால், பல அநீதியான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்படி நேரிட்டது. அந்நிய வல்லரசுகள். சீனாவைக் கட்டுப்படுத்தி வைக்க, இந்த ஒப்பந்தங்களையே அடிக்கடி உபயோகிக்கின்றன. இதனால் தான், சீனாவில் எந்த முயற்சி தொடங்கப் பெற்றாலும் அது தோல்வி யடைந்து போகிறது. ஜவுளி இறக்குமதியைப் பற்றி மட்டும் இங்கு எடுத்துக் கொண்டு பேசுவோம். அந்நிய நாடுகளிலிருந்து பருத்தி ஜவுளி தினுசுகள், சீனத் துறைமுகங்களில் இறக்குமதியாகிற போது, அதற்கு ஐந்து சதவிகிதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. உள் நாட்டிலுள்ள மாகாணங்களுக்கு அனுப்பப்படுகிறபோது இரண்டரை சத விகிதம் வேறொரு வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. ஆக, அந்நிய ஜவுலி தினுசுகள் ஏழரை சதம் தீர்வை செலுத்தி விட்டு, ஏராளமான மார்க்கெட்டுகளை அனுபவிக் கின்றன. உள்நாட்டுத் தொழிற்சாலை களில் தயாரிக்கப்படுகிற ஜவுளி தினுசுகளுக்கும், மஞ்சூ அரசாங்க நிருவாகத்தின் போது ஐந்து சத விகிதம் வரிவிதிக்கப்பட்டது. இது தவிர, உள்நாட்டு ஜவுளி தினுசுகள் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்கு அனுப்பப்படுகிற போது தனித் தனித் தீர்வைகள் கட்டவேண்டுமென்று கட்டளையிடப்பட்டது. இதனால் அந்நிய நாட்டுத் துணிகளை விட, உள் நாட்டுத் துணிகளுக்கு அதிக விலை வைத்து விற்கும் படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் உள் நாட்டுத்துணிகளுக்கு அதிகமான கிராக்கியில்லை. இவைகளை உற்பத்தி செய்யும் மில்கள் நாளா வட்டத்தில் மூடப்பட்டன சீனாவில் மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களின் ஷரத்துப்படி அந்நியத் துணிகளின் மீது விதிக்கப்பட்டிருக்கும் சுங்க வரியை உயர்த்த சீன அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடையாது. ஆனால், அந்நியர்களுக்கு, சீனத் துணிகளின் மீது எந்த விதமான வரியை விதிக்கவும் அதிகாரமுண்டு இந்த மாதிரியான முறைகளினால்தான், சீனாவில் நெசவுத் தொழில் சீரழிந்து போய்விட்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள சுதந்திர நாடுகள், வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்குச் சுங்கவரி விதிக்கின்றன. சுதேசச் சரக்குகளின் செலாவணிக்குப் பாதகம் உண்டாகும் படியான முறைகளின் வெளி நாட்டுப் பொருள்கள் இறக்குமதியாகு மானால் அவற்றைத் தடுக்கவும், உள்நாட்டுப் பொருள்களைப் பாதுகாக்கவும் விதிக்கப்படும் வரிக்கே பாதுகாப்பு வரியென்று பெயர். உதாரணமாக, சீனாவி லிருந்து ஜப்பானுக்குச் செல்லும் சாமான்களுக்கு முப்பது சத விகிதம் சுங்க வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஜப்பானியச் சரக்குகள் சீனாவில் எவ்விதத் தடையுமின்றிப் புழங்குகின்றன. ஆகையால், சீனா மற்ற நாடுகளுடன் வியாபாரப் போட்டியிட வேண்டு மானால், இந்தப் பாதுகாப்பு வரி முறையை அனுஷ்டிக்க வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்தின் பல பாகங்களுக்கும் பிரிட்டன் தான் சாமான்கள் சப்ளை செய்து வந்தது. அப்பொழுது அமெரிக்கா ஒரு விவசாய நாடாகவே இருந்தது அங்கிருந்த சில தொழில்கள், பிரிட்டிஷ் வியாபாரப் போட்டியினால் க்ஷீண தசையடைந்தன. இதனால், அஃது என்ன செய்த தென்றால், பிரிட்டனிலிருந்து இறக்குமதியாகும் எல்லாப் பொருள் களுக்கும் பாதுகாப்பு வரி விதித்தது. இதனால் பிரிட்டிஷ் சாமான்களின் விலை அதிகப் பட்டது. அமெரிக்காச் சமான்கள் விலை மலிவாயின. பிரிட்டிஷ் சாமான்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப் படுவது குறைந்து விட்டது. இதன் மூலமாக அமெரிக்கத் தொழில்கள் வளர்ந்தன. அமெரிக்காவைப் போல்தான் ஜெர்மனியின் நிலைமையும் இருந்தது. அதுவும் பாதுகாப்பு வரி விதித்துத் தன் தொழில்களை அபிவிருத்தி செய்து கொண்டது. ஆகையால், சீனாவும் இந்த மாதிரி பாதுகாப்புவரி முறையை அனுஷ்டித்துத் தன் தொழில்களை விருத்தி செய்து கொள்ள வேண்டும். தவிர, சீனா, சுதேசியத்தை ஆதரிக்க வேண்டும்; அந்நியச் சரக்கு களைப் பகிஷ்கரிக்க வேண்டும். இதற்காக நாம் பல முறை கிளர்ச்சி செய்திருக்கிறோம். ஆயினும் நாம் வெற்றி பெறவில்லை. ஒற்றுமை யுடன் நாம் காரியங்களைச் செய்த போதிலும், நாம் வெற்றியடைந்திருக்க முடியாது. ஏனென்றால் நமது அரசாங்கம் பலவீனமுள்ள அரசாங்கமா யிருந்தது. சுதேசத்துணிகளை விட அந்நியத் துணிகள் விலைமலிவா யிருக்கிற போது, சுதேசத் துணிகளையே வாங்க வேண்டுமென்று சொன்னால் அது நடவாத காரியம். ஜனங்கள் எவ்வளவு தேசபக்தி யுடையவர்களாகவு மிருக்கலாம். ஆனால் ‘அந்நியத் துணிகளை உடுத்தாதே; சுதேசத் துணிகளையே உபயோகி’ என்று சொல்வது, அவ ர்களுடைய பொருளாதாரத்தைப் பாதிப்பதாயிருக்கிற படியால் சுதேசியத்தை அனுஷ்டானத்தில் கொண்டுவரவே முடியாது. உதாரணமாக ஒரு குடும்பத்தினர் வருஷத்திற்கு முப்பது டாலர் பெறுமான அந்நியத் துணிகளை வாங்குகிறார்களென்று வைத்துக் கொள்ளுங்கள். அதே குடும்பத்தினர் சுதேசித் துணிகளை வாங்குவதாயிருந்தால் ஐம்பது அல்லது அறுபது டாலர் செவவழிக்க வேண்டும். அதாவது பிரதி வருஷமும் அந்தக் குடும்பத்தினர், இருபது அல்லது முப்பது டாலர் அதிகமாகச் செலவழிக்க வேண்டும். ஏதோ ஒருவித தேசீயவெறியில் ஓரிரண்டு வருஷந்தான் இப்படி அதிகப் பணத்தைச் செலவழிப் பார் களென்று நாம் எதிர் பார்க்கலாமே தவிர, பிரதி வருஷமும் அந்தக் குடும்பத்தினர் இப்படியே செலவழித்துக் கொண்டிருப் பார்களென்று நாம் எதிர் பார்க்கலாமா? அப்படி அவர்கள் செலவழிப்பது, அவர்களுடைய பொருளாதாரத்தைப் பாதிக்காதா? பொருளாதார தத்துவத்திற்கு முரண்பாடு இல்லாமல், நமது லட்சியத்தை நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டு மானால், முதலாவது, வெளி நாட்டாருடன் செய்து கொள்ளப்பட்டிருக்கும் அநீதமான ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்; சுங்கவரி விதிக்கும் அதிகாரத்தை நாம் கைக்குக் கொண்டுவர வேண்டும்; நமதிஷ்டப்படி வரியைக் கூட்டவோ குறைக்கவோ செய்ய வேண்டும்; அந்நியச் சரக்குகளின் விலையும் சீனக் சரக்குகளின் விலையும் ஒன்றாயிருக்கு மாறு செய்ய வேண்டும்; இதற்கடுத்தபடி, அந்நியச் சரக்குகளைவிட சுதேசிச்சரக்குகள் மலிவான விலைக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் சுதேசித் தொழில்கள் விருத்தியடையும். உடையின் மற்றோர் அவசியப் பொருளாகிய கம்பளி நூல் சீனாவில் ஏராளமாகக் கிடைக்கிறது. இங்குக் கிடைக்கிற கம்பளி நூல், அந்நியச் சரக்குகளை விட எவ்வளவோ விதங்களில் உயர்வானது. ஆயினும் சீனாவில் கம்பளத்தொழில் செழித்தோங்கி வளரவில்லை. அந்நிய நாடுகளிலிருந்து கம்பளச் சரக்குகள் சீனாவில் இறக்குமதி யாகின்றன. இவைகளைத் தடுத்து நமது நாட்டுக் கம்பளச்சரக்குகள் அதிகமாகச் செலவழிய வேண்டுமானால், மேலே சொன்ன மாதிரி, வரிவிதிப்பு முதலிய சில முறைகளைக் கையாள வேண்டும். உடையணிவது மூன்று காரணங்களுக்காக வென்று சிலர் கூறினர். முதலாவது தேகப் பாதுகாப்பு; இரண்டாவது தேக அழகு; மூன்றாவது வகுப்பு அந்தஸ்து. இந்த மூன்றோடு நான்காவது ஒன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது சௌகரியம். சமுதாயத்திலுள்ள எல்லோரும் சம அந்தஸ்து பெற்றவர்களாகவே இருக்க வேண்டுமென்று நாம் விரும்புகிறோம். தவிர, தொழில் செய்வதில் எவ்வித கௌரவக் குறைவுமில்லை யென்று நம்புகிறோம். ஆகவே, நமது ஜனங்கள் அணிந்து கொள்ள வேண்டிய உடை யானது, தேகத்தைப் பாதுகாக்கக் கூடியதாகவும், பார்வைக்கு லட்சணமாகவும், வேலை செய்வதற்கு இடையூறாயில்லாமல் சௌகரியமுள்ளதாகவும் இருக்க வேண்டும். இந்த நோக்கங்களை நிறைவேற்றக் கூடிய மாதிரி துணிகளை உற்பத்தி செய்ய ஆங்காங்கு அரசாங்கத்தார் தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும். ஜனங்களுக்கு எந்தெந்தக் காலத்தில் என்னென்ன தேவை யென்பதை அனுசரித்து, இந்தத் தொழிற்சாலைகள் துணி களை உற்பத்தி செய்ய வேண்டும். எல்லாருக்கும் துணி கிடைக்கு மாறு செய்ய வேண்டும். இங்ஙனம் செய்வது அரசாங்கத்தாருடைய கடமையாகும். ஆனால் இதே சமயத்தில் ஜனங்களும், பிரஜாஉரிமையின் பொறுப்புக்களை அறிந்து நடக்க வேண்டும். அப்படிச் செய்யாத வர்கள் பிரஜா பாத்தியதையிலிருந்து விலக்கப்பட வேண்டும். சோம்பேறிகளை வேலை செய்யுமாறு அரசாங்கம் கட்டாயப் படுத்த வேண்டும். அப்படிக் கட்டாயப் படுத்தி, கௌரவமான பிரஜை களாக வாழுமாறு அவர்களைச் செய்ய வேண்டும். தேசத்தின் பொருளுற்பத்தியில் எல்லாருக்கும் பங்கு இருக்குமானால், அனை வரும் போதிய அளவு உண்ணவும் உடுக்கவும் வசதிகள் ஏற்படும். குடும்பங்கள் சௌக்கியமடையும்; ஜனங்கள் திருப்தி யுடன் வாழ்வார்கள்; வாழ்க்கைப் பிரச்னையும் தீர்ந்து விடும்.