ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7 இலக்கியமும் கல்வெட்டுக்களும் கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் ஆசிரியர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 7 ஆசிரியர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 24 + 224 = 248 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 230 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் 116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960 தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு உலக அரங்கில் உயர்வும் பெருமையும் ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு... தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு... ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு... பத்தாம் வகுப்பு வரை தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு.... தலைமைச் செயலக ஆணைகள் தமிழில் மட்டுமே வரவேண்டும் என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு... தமிழ்மண் அறக்கட்டளை நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறது. நுழைவுரை முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி தமிழ் இணைப் பேராசிரியர் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருப்புறம்பயம் என்னும் ஊரில் திரு.வைத்தியலிங்கப் பண்டாரத் தாருக்கும் திருமதி மீனாட்சி அம்மையாருக்கும் 15.8.1892 அன்று ஒரேமகனாராகப் பிறந்தவர் சதாசிவப் பண்டாரத்தார். பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்ற இவருக்கு இவருடைய ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வகுப்பறைகளில் கல்வெட்டுகள் பற்றிக் கூறிய செய்திகள் கல்வெட்டாய்வின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வரலாற்றறிஞர் து.அ.கோபி நாதராயர் எழுதிய சோழ வமிச சரித்திரச் சுருக்கம் என்ற நூலைக் கண்ணுற்ற பண்டாரத்தார், சோழர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென எண்ணினார். இதன் காரணமாகப் பண்டாரத்தார் அவர்கள் தம்முடைய 22ஆம் வயது முதற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட ஆரம்பித்தார். 1914 - செந்தமிழ் இதழில் இவரெழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரை இவருடைய முதல் கட்டுரையாகும். அதன்பிறகு அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நாட்டார் அவர்களின் பரிந்துரைக் கடிதத்தோடு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்களைச் சந்தித்த பண்டாரத்தாருக்குத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அதனால் சங்கத்தின் தமிழ்ப்பொழில் இதழில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார். இதற்கிடையில் 1914ல் தையல்முத்து அம்மையார் என்னும் பெண்மணியைப் பண்டாரத்தார் மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவ்வம்மையார் இயற்கை எய்தவே சின்னம்மாள் என்னும் பெண்மணியை இரண்டாந் தாரமாக ஏற்றார். இவ்விணையர் திருஞானசம்மந்தம் என்னும் ஆண்மகவை ஈன்றெடுத்தனர். அறிஞர் பண்டாரத்தார் தம்முடைய தொடக்கக் காலத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகவும், குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் ஒரு சில மாதங்கள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1917 முதல் 1942 வரை 25 ஆண்டுகள் குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் மற்றும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், 1942 முதல் 2.1.1960 இல் தாம் இயற்கை எய்தும் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். குடந்தையில் இவர் பணியாற்றியபோது, அந்நகரச் சூழல் இவருடைய கல்வெட்டாய்விற்குப் பெருந்துணையாக அமைந்தது. குடந்தையைச் சுற்றியுள்ள கோயில்களையும் குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி நூலகத்தையும் தம் ஆய்விற்கு இவர் நன்கு பயன்படுத்திக் கொண்டார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைத் தனியாகக் கற்றறிந்த அறிஞர் பண்டாரத்தார் 1930இல் முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இஃது இவரெழுதிய முதல் நூலாகும். பலருடைய பாராட்டையும் பெற்ற இந்த நூல், அந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழக இண்டர்மீடியேட் வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தப் பெருமைக்குரியதாகும். இந்த நூல் வெளிவருவதற்கு முன்பாகத் தம்முடைய ஆசிரியர் வலம்புரி அ.பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன் இணைந்து சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலை இவரே எழுதியிருக்கிறார். அது போன்றே இவர் தனியாக எழுதியதாகக் குறிப்பிடப் பெறும் பிறிதொரு நூல், தொல்காப்பியப் பாயிரவுரை என்பதாகும். இவ்விரண்டு நூல் களும் இவருடைய மகனாருக்கே கிடைக்கவில்லை. இவர் குடந்தையி லிருக்கும் போது 1940இல் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதினார். அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இவருடைய ஆய்வுகள் பல வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தன. அவ்வகையில் இவருடைய தலைசிறந்த ஆய்வாக அமைந்த பிற்காலச் சோழர் சரித்திரம் மூன்று பகுதிகளாக முறையே 1949, 1951, 1961 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக் கழக வெளியீடுகளாக வெளிவந்தன. அதுபோன்றே இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600), தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) என்னும் இரண்டு நூல்களையும் 1955இல் அப்பல்கலைக் கழகம் வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது. தாம் பிறந்த மண்ணின் பெருமைகள் பற்றித் திருப்புறம்பயத் தலவரலாறு (1946) என்னும் நூலை இவரெழுதினார். இவருடைய செம்பியன்மாதேவித் தல வரலாறு (1959) என்ற நூலும் இங்குக் கருதத் தக்க ஒன்றாகும். பூம்புகார் மாதவி மன்றத்தினரின் வேண்டுகோளை ஏற்று இவரெழுதிய காவிரிப்பூம்பட்டினம் (1959) என்ற நூல் அம் மாநகர் பற்றிய முதல் வரலாற்று ஆய்வு நூல் என்னும் பெருமைக்குரியதாகும். அறிஞர் பண்டாரத்தார் தம் வாழ்நாள் முழுமையும் உழைத்துத் திரட்டிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து அவர் இயற்கையெய்திய பிறகு அவருடைய மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்மந்தம் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் , கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் தலைப்புகளில் 1961இல் நூல்களாக வெளிவர வழிவகை செய்தார். பின்னர், இந்த நூல்களில் இடம்பெறாத அரிய கட்டுரைகள் பல வற்றைப் பண்டாரத்தார் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் காணும் வாய்ப்பைப் பெற்ற நான், அவற்றைத் தொகுத்து அதன் தொகுப்பாசிரியராக இருந்து 1998இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் பெயரில் நூலாக வெளிவருவதற்கு உதவியாக இருந்தேன். மிக்க மகிழ்ச்சியோடு அந்த நூலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற நூல் சோழர் வரலாறு குறித்துத் தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியதாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களுடைய வரலாற்று நாவல்களைப் படைத்தனர். உத்தம சோழனின் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்ற திரு.கே.ஏ.நீலகண்ட சாத்திரியாரின் கருத்தை அறிஞர் பண்டாரத்தார் உடையார்குடி கல்வெட்டுச் சான்றின் மூலம் மறுத்துரைத்ததோடு அவனது கொலைக்குக் காரணமாக அமைந்தவர்கள் சில பார்ப்பன அதிகாரிகளே என இந்த நூலில் ஆய்ந்து உரைக்கிறார். இந்த ஆய்வுத் திறத்தைக் கண்ட தந்தை பெரியார் இவரைப் பாராட்டியதோடு தொடர்ந்து ஊக்கப் படுத்தி வந்தார். அறிஞர் பண்டாரத்தார், தானுண்டு தன் வேலை உண்டு என்ற கருத்தோடு மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பணியாற்றியவர்; விளம்பர நாட்டம் இல்லாதவர். எனவேதான், இவரால் இவ்வளவு பெரிய வேலைகளைச் செய்ய முடிந்தது. தம் வயது முதிர்ந்த நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில், தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன நிறைய இருப்பதாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்பவில்லை எனக் குறிப்பிட்ட பெருமைக்குரியவர் பண்டாரத்தார். இப்படிப்பட்ட காரணங்களால்தான் தமிழுலகம் அவரை ஆராய்ச்சிப் பேரறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், சரித்திரப் புலி, கல்வெட்டுப் பேரறிஞர் எனப் பலவாறாகப் பாராட்டி மகிழ்ந்தது. இன்றைய தலைமுறையினருக்குப் பண்டாரத்தாரின் நூல்கள் பல அறிமுகங்கூட ஆகாமல் மறைந்து கொண்டிருந்தன. இச்சூழலில்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் பண்டாரத்தார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, தமிழ்த் தென்றல் திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வரலாற்றறிஞர் வெ. சாமிநாதசர்மா, நுண்கலைச் செல்வர் சாத்தன் குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலான பெருமக்களின் நூல்களையெல்லாம் மறுபதிப்புகளாக வெளிக் கொண்டாந்ததன் மூலம் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழ்மொழிக் காவலர் ஐயா கோ.இளவழகனார் அவர்கள் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்களைத் தமிழ்மண் அறக் கட்டளை வழி மறு பதிப்பாக வெளிக்கொணர்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அறிஞர் பண்டாரத்தாரின் நூல்கள் அனைத்தையும் வரலாறு, இலக்கியம், கட்டுரைகள் என்னும் அடிப்படையில் பொருள் வாரியாகப் பிரித்து எட்டுத் தொகுதிகளாகவும், அவரைப்பற்றிய சான்றோர்கள் மதிப்பீடுகள் அடங்கிய இரண்டு தொகுதிகள் சேர்த்து பத்துத் தொகுதிகளாகவும் வடிவமைக்கப்பட்டு தமிழ் உலகிற்கு தமிழ்மண் அறக்கட்டளை வழங்கியுள்ளனர். தொகுதி 1 1) முதற் குலோத்துங்க சோழன் 1930 2) திருப்புறம்பயத் தல வரலாறு 1946 3) காவிரிப் பூம்பட்டினம் 1959 4) செம்பியன் மாதேவித் தல வரலாறு 1959 தொகுதி 2 5) பாண்டியர் வரலாறு 1940 தொகுதி 3 6) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 1949 தொகுதி 4 7) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 1951 தொகுதி 5 8) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 1961 தொகுதி 6 9) தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600) 1955 10) தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) 1955 தொகுதி 7 11) இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் 1961 12) கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் 1961 தொகுதி 8 13) தொல்காப்பியமும் பாயிரவுரையும் 1923 14) சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் 1998 தொகுதி 9 15) தி.வை.சதாசிவப்பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு 2007 தொகுதி 10 16) சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் 2007 அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் நூல்களை நாட்டுடைமை யாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், நூல்களை மறுபதிப்பாக வெளிக் கொணர்ந்து தமிழுலகில் வலம் வரச் செய்திருக்கும் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் ஐயா கோ.இளவழகனார் அவர்களுக்கும், தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை. தமிழ்மண் அறக்கட்டளையின் இந்த அரிய வெளியீட்டைத் தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் வாழ்த்தி வரவேற்கும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு. அணிந்துரை க.குழந்தைவேலன் 21.12.2007 தமிழ்க்கல்வி, தமிழ் அறிவு, தமிழ்ப்புலமை என்பனவெல்லாம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிப்பது, பாப்புனையும் ஆற்றல் கைவரப்பெறுவது, எதுகை மோனைகளோடு எடுத்து மொழிவது, அடுக்குமொழிகளை அள்ளிவீசி அரங்கம் அதிர முழங்குவது என்பது பொருளன்று. அது தமிழ் மொழியை, அம் மொழி பேசும் மக்களின் வாழ்வியலை, வரலாற்றியலை, பண்பாட்டியலை, ஆழ அகலக் கற்றல், நாளும் வளர்ந்துவரும் அறிவியலை அறிதல், கற்றவற்றையும் அறிந்தவற்றையும் உணர்ந்து உலகியலோடு ஒட்ட ஒழுகி வாழ்ந்து காட்டல், தம் வாழ்க்கையையே பாடமாக்கித் தம் மக்களுக்குக் கற்பித்தல் என்பது பொருளாகும். அங்ஙனம் வாழ்வோரே தமிழ் கற்றோர் - தமிழ்ப்புலமையர் - தமிழாசிரியர் ஆவர். அதுவன்றித் தமிழ் கற்றோம், தமிழ்ப் புலமையோம் என்பனவெல்லாம் வெற்று ஆரவாரமேயன்றி வேறன்று. அத்தகைய தமிழ் கற்றுவல்ல நல்ல தமிழாசிரியர்க்கோர் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த பேராசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆவர். அண்ணாமலையார்தமிழ்க்கெனஅமைத்த பண்ணார் பல்கலைக் கழகம் எனப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் ஒருகாலத்தில் பாராட்டப் பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி அப் பல்கலைக் கழகத்திற்கே பெருமை சேர்த்த பெருமையர். தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்த தகைமையாளர். கி.பி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியும் இணைந்த காலப்பகுதி வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழும் தமிழனும், தமிழ்க் கல்வியும் எழுச்சி பெற்ற காலம். அக்காலக் கட்டத்தில் தோன்றிய இப் பெருமகனார் வெறும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக மட்டும் நில்லாது தமிழ், தமிழர், தமிழ்நாட்டு வரலாற்றை மீட்டெடுக்கும் பெரும் பணியில் தம்மைத் தலைப்படுத்தி வெற்றி வாகை சூடியவர். பாவேந்தர் சொன்னது போல அவர் ஒரு, செந்தமிழ்ப் பேராசிரியர், வரலாற்று ஆய்வாளர், புலவர் முந்து பேரிலக்கியத்து முழங்குகடல் ஒழுக்கத்தின் எடுத்துக்காட்டு புலவர் குழு மணி விளக்கு... எனப் பல்வேறு சிறப்புக் குரியவர். இவர் இலக்கிய இலக்கண உரை கூறுவதோடு நின்றுவிட வில்லை. ஓர் இன மக்களின் வாழ்க்கை நிலைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் அம் மக்களின் வரலாறே உயிர்ச்சாரம்; ஆதலால் அம்மக்கள் தங்கள் வரலாற்றை அறிந்த தெளிதல் இன்றியமையாதது; அத் தெளிவே அவர்களை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர். தமிழ்நாட்டின் பழைய வரலாற்றை எழுதுவதற்குத் தக்க சான்றுகள் (சாதனங்கள்) இல்லை எனவும் அதனால்தான் வரலாற்று (சரித்திர) நூல்கள் மிகுதியாக எழுதப்பெற வில்லை எனவும் சிலர் குறைகூறுகின்றனர். அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணம் உண்மையான தாய்நாட்டுப் பற்றும் ஊக்கமும் உழைப்பும் இல்லாமையேயாம். ஒரு நாட்டினர் தம் பழைய வரலாறுகளை இவ்வாறு புறக்கணித்து விட்டால் அன்னோர் தம் பண்டைய பெருமையை இழந்தவராகக் கருதப்படுவர்" எனக் கூறியதோடமையாது தாமே வரலாற்றுச் சான்றுகளைத் தேடித் தொகுத்துப் பிற்காலச்சோழர் வரலாற்றையும், பாண்டியர் வரலாற்றையும் மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்தார். அக்காலக் கட்டத்தில் தமிழக வரலாற்றை எழுதப் புகுந்த சிலர் வரலாற்றை ஆங்கிலத்திலேயே எழுதினர். அவை ஆங்கில மொழி கற்றுவல்ல ஒரு சில்லோர்க்கே பயன்படுவதன்றி தமிழ் மக்கட்குப் பயன்படாது என்பதை தமது வாணாளில் கண்கூடாகக் கண்டவர். வரலாற்றை நாம் அறிந்து கொள்ளுமாறு நம் மொழியில் எத்தனை வரலாற்று நூல்கள் எழுதப் பெற்றுள்ளன என்று பார்ப்போமானால் அவை விரல்விட்டெண்ணக் கூடிய நிலையில்தான் இருக்கின்றன. எனினும் நம் முன்னோர் வரலாறுகளையும் நம் தாய் மொழியில் படித்தறிந்துக் கொள்வதைக் காட்டிலும் நமக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கத் தக்கது வேறொன்றுமில்லை. ஆனால், ஆராய்ச்சி முறையில் எழுதப்பெற்ற அத்தகைய நூல்கள் நம் தமிழ்மொழியில் மிகுதியாக வெளிவரவில்லை" எனக் கூறியதோடு நில்லாது நல்ல தமிழ்மொழியில் ஆராய்ச்சி முறைகளோடு வரலாற்று நூல்களைத் தாமே எழுதி வழிகாட்டியவர். ஆனால் அவ் வழியைப் பின்பற்றிச் சிறந்த வரலாற்று நூல்களை எழுதாது அப்பெருமையை அவருக்கே சேரட்டும் என நம் தமிழ், வரலாற்று ஆய்வாளர்கள் எல்லோரும் விட்டுக் கொடுத்து விட்டனர் போலும்? இலக்கிய வரலாறுகளை எழுதிய அவர் இலக்கியங்களின் காலமும், அவற்றை எழுதிய ஆசிரியர்களின் காலமும் தெரியாவிடில் அவ்விலக்கியங்களின் பொருளும் சரியாக உணரப்படாது. வரலாற்று உண்மை கண்முன் இல்லாவிட்டால் ஆராய்ச்சி உண்மை காண முடியாது என்பதை நன்குணர்ந்தவர் எனவே இலக்கண இலக்கியங் களின் காலமும் அவற்றின் ஆசிரியர் காலமும் நமது வரலாற்றை, வாழ்வியலை ஆராய இன்றியமையாததாகிறது. இதனை உளங் கொண்ட பேராசிரியர் அவர்களது காலங்களை இலக்கியத் துணை யோடு அக்காலத்து வெளிப்படுத்தப்பட்ட கல்வெட்டுகளையும் துணை கொண்டு ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய ஆராய்ச்சியைப் பரவலாகச் செய்தார் இவர்போலும் பேராசிரியர் அரியர். இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்ற பல ஊர்களின் இருப்பிடங்களையும் அவற்றின் பெயர்ப்பொருளையும் ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இந்நாட்டுக்கும் மக்களுக்கும் தேவை யான பழைய வரலாறுகளைப் பற்றிய சான்றுகள் கிடைக்க கிடைக்க அவற்றை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தார். தெளிவான வரலாறு கிடைக்காதனவற்றுக்கும் வகையான சான்று கிடைக்குங்கால் எழுத மனங்கொண்டிருந் ததைத் தூங்கானைமாடத்தைப் பற்றிய பிற செய்திகளும் கரக்கோயில் மணிக்கோயில் இவற்றின் வரலாறும் பின்னர் எழுதப்படும் என்பன போல வரும் வரிகளால் அறியலாம். இவர் தம் காலத்தில் கிடைத்த அனைத்துவகைச் சான்றுகளையும் உள்வாங்கிக் கொண்டு எழுதிய வரலாற்றுக் கட்டுரைகள் செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி தமிழ்ப்பொழில் போன்ற அக்காலச் சிறந்த தமிழ் ஆய்விதழ்களில் வெளிவந்தன. அன்றைய தமிழ் மக்களும் அவற்றைப் படித்துப் பயன்படுத்தினர். அவற்றைப் பயன்படுத்திக் கல்விக் கழகப் பாடநூல்களில் ஏற்றி தமிழுலகம் அறியச் செய்தனர். அவ்வழக்கம் இன்று முற்றிலும் கைவிடப்பட்டதால் பண்டாரத்தார் காலத்திற்குப் பின் வெளிவந்த ஆயிரக்கணக்கானக் கல்வெட்டுகளையும் அவற்றின் வழி நமது நாடு மொழி இனம் பற்றிய கிடைத்தற்கரிய செய்திகளையும் கற்று மக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்வார் எவரும் இன்மையால் நம்மை நாம் அறியாமல் அறியாப்புதைகுழியில் ஆழப் புதைந்து கொண்டுள்ளோம். பண்டாரத்தார் அக்காலத்தில் வெளிவந்த, வந்து கொண்டிருந்த கல்வெட்டுகளைக் கற்றுணர்ந்து இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆய்ந்து தமிழுலகுக்கு அளித்த அளவுக்கு அக்கால, இக்காலக் கல்வெட்டாய்வாளர்கள் ஆய்ந்தளித்திருப்பார்களா என்பது ஐயமே. அவர்களும் பண்டாரத்தார் ஆய்ந்த அளவுக்கேனும் நமது இலக்கியங் களையும் கல்வெட்டுகளையும் கண்டுணர்ந்து நமது கலை பண்பாட்டு வரலாறுகளை ஆய்ந்தளித்திருப்பாரேல் நமது நாடும் மொழியும் இனமும் நன்னிலை எய்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. பண்டாரத்தாரது ஆராய்ச்சியைப் போற்றும் அதே வேளையில் அகத்தியர் போன்ற தொல்கதை மாந்தரையும் ஆராய்ந்து உண்மை போல வெளிப்படுத்தியுள்ள அவரது ஆய்வுப் போக்கு நம்மால் ஏற்றுக் கொள்ளதக்கதாகத் தோன்றவில்லை. அகத்தியர், வெள்ளையர் காலத்தில் கிறித்தவ மதம் பரப்ப வந்த வீரமாமுனிவரான பெசுக்கிப் பாதிரியார் போல வைதீக மதம் பரப்ப வந்த ஒரு வைதீகர். வடநாடு தாழ்ந்தது, தென்னாடு உயர்ந்தது என்ற கட்டுக் கதைகள் வடக்கில் சமண பவுத்த செல்வாக்கால் வைதீகம் தாழ்ந்ததையும் தெற்கில் அதற்கு வாழ்வு கிடைத்து உயர்ந்ததையும் காட்டுவதாகும். அகத்தியர் பற்றிக் கூறப்பட்டன யாவும் வைதீகத்திற்கு வாழ்வளிப்பதற்காக கட்டிவிடப் பட்ட கதைகளேயன்றி வேறன்று என்பதைத் தெள்ளிதின் ஆய்வார் உணர்வர். அதே போன்று அவரது ஆய்வு முடிவுகளில் சிற்சில இன்று மாற்றங்களுக்கு ஆளாக்கப்பட வேண்டியனவாக உள்ளன. வரலாற்றில் இத்தகைய திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே. அன்றைய அவரது ஆய்வில் ஏற்பட்டுள்ள குறைகள் அப்பெரியாரது பிழையன்று. அன்று அவருக்குக் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் சரியானவையே. இன்று கிடைக்கும் சான்றுகளின் வழி அவை திருத்தம் பெற வேண்டியனவாக உள்ளன. பண்டாரத்தார் பல்வேறு இதழ்களில் எழுதி வெளிவந்தவற்றில் சிலவற்றைத் தொகுத்துச் சற்றேறக் குறைய 47 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மகனாரால் 1) இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும், 2)கல்வெட்டுகளால் அறியப்பெறும் உண்மைகள் என இருநூல்களாக வெளியிடப்பட்டன. இவற்றைத் தமிழ் மக்கள் படித்துப் பயனுற வேண்டும் என்பதற்காக மீண்டும் அவை தமிழ்மண் அறக்கட்டளை வாயிலாக அவரது எல்லாப் படைப்புகளோடும் சேர்த்து ஒருசேர வெளியிடப்படுகின்றன.. இவற்றைப் படித்துணர்ந்து தமிழ் மக்கள் நம் அருமை பெருமைகளை அறிந்து உயர வழி காணவேண்டும். அறிஞர் பெருமக்கள், பண்டாரத்தார் காலத்தில் வெளிவராது இன்றுவரை வெளிவந்துள்ளனவும், வெளிவந்து கொண்டுள்ளனவுமான பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக்களைக் கற்றுணர்ந்து அன்று போதிய சான்று கிடைக்காமையால் இன்று குறைபாடாகக் காணப்படும் அவரது வரலாற்று முடிவுகளின் குறைகளைக் களைந்து புதுக்க வேண்டுவதும் புதிய ஆய்வுகளை மேற்கொண்டு நம் நாட்டின் கலை பண்பாட்டு வாழ்வியல் வரலாறுகளை வெளிக்கொணர்ந்து தமிழர் வாழ்வும் வளமும் உலகறியச் செய்து நாம் உயர்வதும் நமது இன்றைய தலையாய கடனாகும். அப்பணியைத் தமிழ்மண் அறக்கட்டளையும் அதன்பால் பற்றுக் கொண்டோரும் செய்து முடிப்பர். செய்து முடித்தல் வேண்டும். பதிப்புரை கோ. இளவழகன் நிறுவனர் தமிழ்மண் அறக்கட்டளை தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும், கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதிகளாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம். சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் , அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள் உமாமகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழாராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர். பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும் , ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார். புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்திகளெல்லாம் புனைந் துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஊற்றுக்கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவு படுத்தியவர். பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே. தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள். நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ்மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன. பண்பாட்டுத் தமிழர்க்கு நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப் பண்டாரத் தார்க்கும்; ஒரு மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள் கொண்டாடும் சோமசுந் தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக், கண்டார்க்க ளிக்கும் வகை உருவக்கல் நாட்டுவது கடமையாகும். எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம். தமிழர் இல்லந் தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங்களை கண்போல் காக்க முன்வருவீர் ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள் பெரும்புலவர் இரா. இளங்குமரனார் கோ. விசயவேணுகோபால் பி. இராமநாதன் முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி க.குழந்தைவேலன் ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது. நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா மெய்ப்பு க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு, ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . உள்ளடக்கம் இலக்கியமும் கல்வெட்டுக்களும் 1. சுந்தரமுர்த்திகளது காலம் 3 2. கம்பர் காலம் 12 3. நம்பியாண்டார் நம்பி காலம் 16 4. தமிழ்முனிவர் அகத்தியர் 22 5. வாதவூரடிகள் காலம் 35 6. இளம்பூரண அடிகளும் மணக்குடவரும் 41 7. தேவாரம் என்னும் பெயர் வழக்கு 47 8. தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற சில கோயில்களின் பெயர்க்காரணம் 55 9. கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று நூல்கள் 64 10. தமிழ்நாடும் விநாயகர் வழிபாடும் 67 11. புறநானூறும் கல்வெட்டுக்களும் 76 12. பத்துப்பாட்டும் கல்வெட்டுக்களும் 97 13. பதிற்றுப்பத்தும் பதிகங்களும் 102 14. கூத்தராற் குறிக்கப் பெற்ற சில தலைவர்கள் 110 கல்வெட்டுக்களால் அறிப்பெறும் உண்மைகள் 1. தமிழ்க் கல்வெட்டுக்கள் 125 2. கல்வெட்டுக்களிலே காணப்படும் சில குழுவின் பெயர்கள் 131 3. கல்வெட்டுக்களில் நாட்டோடு இணைந்து வழங்கப்பெறும் எண்கள் 136 4. தமிழ் எழுத்துக்கள் 141 5. மிழலை நாடும் மிழலைக் கூற்றமும் 146 6. பழையாறை நகர் 152 7. நந்தனாரது ஆதனூர் 159 8. மாற்பிடுகு பெருங்கிணறு 161 9. இராசராசன் கிணறு 166 10. கொல்லம் ஆண்டு 170 11. திருக்கைக் கோட்டி 176 12. தஞ்சாவூர் 180 13. திருச்சிராப்பள்ளி 187 14. சோழர்களும் இராஷ்டிரகூடர்களும் 193 15. தூங்கானை மாடம் 200 16. சொல் வரலாறு 207 17. சம்புவராய மன்னன் 215 இலக்கியமும் கல்வெட்டுக்களும் 1. சுந்தரமுர்த்திகளது காலம் சைவ சமய குரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகள் அறுபான் மும்மை நாயன்மார்களுள் இறுதியில் வாழ்ந்தவரென்பது அவர் திருவாய்மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையால் நன்கு விளங்குகின்றது. அப்பெரியார் இந்நிலவுலகில் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதி என்று தஞ்சை, ராவ்பகதூர் மு.ளு. சீநிவாசபிள்ளை அவர்கள் தமது ‘தமிழ் வரலாறு’ என்னும் நூலில் கூறியுள்ளார். திருவாங்கூரில் கல்வெட்டிலாகா விற்குத் தலைவராயிருந்து காலஞ் சென்ற கூ.ஹ. கோபிநாதராயர் அவர்கள் அவ்வடிகளது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகுமென்று ‘செந்தமிழ்’ மூன்றாந் தொகுதியில் வரைந்துள்ளார். ஆகவே, இவ்விரு ஆராய்ச்சியாளரும் சற்றேறக் குறைய ஒத்த கொள்கையினர் ஆவர் என்பது வெளிப் படை. இனி, அடிகள் காலத்தை ஆராய்ந்து காண்டற்கு இன்னோர் எடுத்துக் கொண்ட கருவிகளை நிரலே ஆராய்ந்து அவற்றின் வன்மை மென்மைகளைக் காண்போம். சேரமான் பெருமாள் நாயனார் என்று வழங்கும் கழறிற்றறிவார் காலத்தில் பாண்டி நாட்டில் அரசு புரிந்தவன் வரகுணபாண்டியன் என்பதும், கழறிற்றறிவார்க்குப் பெருநட்பினராகிய சுந்தரமூர்த்திகளும் அப்பாண்டியன் காலத்தவரே யாதல் வேண்டும் என்பதும் அவர்கள் கூறும் கருவிகளுள் முதன்மையானவைகளாம். கழறிற்றறிவார் சுந்தரமுர்த்திகளுக்கு நட்பினராக விருந்து அவருடன் திருக்கைலை சென்றவர் என்பது பெரிய புராணத்தால் அறியக் கிடக்கும் உண்மையாகலின், அதிற் சிறிதும் ஐயமில்லை. ஆனால், கழறிற்றறிவார் காலத்தில் மதுரைமாநகரில் வாழ்ந்த பாண்டிய மன்னன் வரகுணன் ஆவன் என்று அன்னோர் கூறுவது தக்க வலியுடைத்தன்று. பெரியபுராணத்தின் ஆசிரிய ராகிய சேக்கிழார், சுந்தரமூர்த்திகளும் கழறிற்றறிவாரும் பாண்டி நாட்டில் உள்ள திருக்கோயில்களை வணங்கு வதற்கு மதுரைக்குச் சென்றி ருந்தபோது பாண்டிய அரசனும், அவனது மகளை மணந்து அங்குத் தங்கியிருந்த சோழ மன்னன் ஒருவனும் அவ்விரு பெரி யாரையும் வரவேற்றுத் திருக்கோயிலுக்கு அழைத்துப்போயினர் என்று கூறியுள்ளார். ஆனால், அந்நாளில் ஆட்சி புரிந்து வந்த பாண்டிமன்னன் இன்னவன் என்றாதல், அங்கிருந்த சோழன் இன்னவன் என்றாதல் அவ்வடிகள் வெளிப்படையாகக் கூறிச் சென்றாரில்லை. எனவே, புலவர் பெருமானாகிய சேக்கிழாருக்கு அன்னோர் யாவர் என்றுரைத்தற்குரிய கருவிகள் அப்போழ்தே கிடைக்கவில்லை என்பது நன்கு புலப்படுகின்றது. இனி, அந்நாளில் பாண்டிய நாட்டில் அரசு செலுத்தியவன் வரகுண பாண்டியன் என்று தெரிவித்தவர், திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியராகிய பரஞ்சோதி முனிவர் ஆவர். அவர் கூறுவது: மன்றலந் தெரியல் மார்பன் வரகுணன் செங்கோல் ஓச்சிப் பொன்றலங் காவாலானிற் பொலியுநாள் ஏம நாதன் என்றொரு விறல்யாழ்ப் பாணன் வடபுலத் திருந்தும் போந்து வென்றிகொள் விருதினோடும் விஞ்சைசூழ் மதுரை சார்ந்தான். என்பது. (திருவிளை, விறகுவிற்ற, 2.) பரஞ்சோதிமுனிவர் சேக்கிழாரடிகட்குப் பல நூற்றாண்டு கட்குப் பின்னர் இருந்தவர், கி.பி பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நம் சேக்கிழார்பெருமான் அறிந்து கொள்ள முடியாமலிருந்த செய்திகளை மிக அண்மைக் காலத்தில் நிலவிய பரஞ்சோதி முனிவர் எங்ஙனம் கூறவல்லராயினரோ அறியேம். இங்ஙனம் இம்முனிவர் கூறும் செய்திகள் பலவும், வரலாற்றுண்மைக்கு முரண்பட்டிருத்தலை ஆராய்ச்சியாளர் பலரும் நன்குணர்வர். இனி, திருஞானசம்பந்தரால் வெப்புநோயினின்று காப்பாற்றப் பட்டவன், கூன்பாண்டியன் என வழங்கும் சுந்தர பாண்டியன் ஆவன் என்று பரஞ்சோதி முனிவர் கூறியுள்ளார். இம்முனிவரே அரிமர்த்தன பாண்டியனிடத்தில் திருவாதவூரர் அமைச்சரா யிருந்தனர் என்று உணர்த்தியுள்ளார். சுந்தர பாண்டியற்குப் பத்துத் தலை முறைகட்கு முந்தியவன் அரிமர்த்தன பாண்டியன் என்பது அத்திருவிளையாடற் புராணத்தால் அறியக் கிடக் கின்றது. இவ்வரிமர்த்தன பாண்டியற்கு நாற்பத்து மூன்று தலைமுறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் வரகுண பாண்டியன் என்றும், கழறிற்றறிவாரும் அவரது நண்பராகிய சுந்தரமூர்த்தி களும் இவ்வரகுணன் காலத்தினராவர் என்றும் அப்புராணம் கூறுகின்றது. ஆகவே, திருஞானசம்பந்தர் காலத்தினனாகிய சுந்தர பாண்டியற்கு ஐம்பத்து மூன்று தலைமுறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் வரகுணபாண்டியன் என்றும், கழறிற்றறிவாரும் அவரது நண்பராகிய சுந்தரமூர்த்திகளும் இவ்வரகுணன் காலத்தினராவர் என்றும் அப்புராணம் கூறுகின்றது. ஆகவே, திருஞானசம்பந்தர் காலத்தினனாகிய சுந்தர பாண்டியற்கு ஐம்பத்து மூன்று தலைமுறைகட்கு முன்னர் வாழ்ந்தவன் சுந்தர மூர்த்திகள் காலத்தினனாகச் சொல்லப்படும் வரகுண பாண்டியன் என்பது, திருவிளையாடற் புராணமுடையாரது முடிபாகும். தலைமுறை ஒன்றிற்கு முப்பது ஆண்டுகளாகக் கொண்டு காலத்தைக் கணக்கிடுவதுதான் பொருத்த முடைத்து என்று வரலாற்று நூல் வல்லார் கூறுகின்றனர். எனவே, சுந்தரமூர்த்திகள் திருஞான சம்பந்தருக்கு 1590 ஆண்டுகட்கு முன்னர் இந்நிலவுலகில் வாழ்ந்தவர் என்பது திருவிளையாடற் புராணத்தால் அறியக் கிடக்கும் செய்தியாகும். திருஞானசம்பந்தர் திருக்கோலக்காவிற் பொற்றாளம் பெற்றதையும்1, திருவீழி மிழலையில் படிக்காக பெற்றதையும்1 சுந்தர மூர்த்திகள் தாம் பாடியுள்ள தேவாரப் பதிகங்களில் குறித்திருத்தலோடு திருத்தொண்டத் தொகையில் அவ்வடிகட்கு வணக்கமுங் கூறியுள்ளனர். எனவே சுந்தர மூர்த்திகள், திருஞான சம்பந்தருக்குப் பல ஆண்டுகட்குப் பின்னர் வாழ்ந்தவராதல் வேண்டுமென்பது, அகச்சான்று கொண்டு நன்கு துணியப்படும். இத்துணைச் சிறந்த ஆதாரங்கட்கு முரணாகத் திருவிளையாடற் புராண முடையார் கூறுவது சிறிதும் உண்மை யுடைத்தன்று. ஆகவே, சுந்தர மூர்த்திகள் வரகுண பாண்டியன் காலத்தினர் அல்லர் என்பது வெளியாதல் காண்க. அன்றியும் திருவிளையாடற் புராணம் செந்தமிழ் வளஞ் செறிந்த சிறந்த நூலாதலின் தமிழ் மொழிப் பயிற்சிக்குப் பயன்படுமேயன்றி, வரலாற்று ஆராய்ச்சிக்குச் சிறிதும் பயன் படா தென்றுணர்க. இவ்வுண்மையைத் ‘தமிழ் வரலாற்’றின் ஆசிரியரும் நன்குணர்ந் துரைத்திருப்பது பெரிதும் பாராட்டற் பாலதாகும். இனி, சுந்தரமூர்த்திகள் பாடியுள்ள- கருமையாந் தருமனார் தமர்நம்மை கட்டியகட் டறுப்பிப் பானை யருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங் காவல் பூண்ட உரிமையார் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையாற் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே. என்னும் திருப்பாட்டால் அடிகள் காலத்தில் பல்லவரது ஆட்சி தளர்ச்சியுறத் தொடங்கிற்றென்றும், அதனால் அன்னோர்க்குக் குறுநில மன்னர்கள் திறை செலுத்த மறுத்தனர் என்றும், பல்லவர்களுள் நந்திவர்மன் (780-830) ஆட்சிக்காலத்தில் தான் இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்றும், ஆகவே அடிகள் நந்திவர்மனது ஆட்சியின் இறுதிக் காலமாகிய கி.பி. 825-ல் வாழ்ந்தவராதல் வேண்டுமென்றும் அன்னோர் கூறுகின்றனர். அடிகள் தம்காலத்துப் பல்லவ மன்னன் போர் வலிமை யற்றவன் என்றாதல் அவனுக்குக் குறுநில மன்னர்கள் திறை கொடுக்க மறுத்தனர் என்றாதல் அப் பாடலில் கூறினாரில்லை; ஆனால் தம் காலத்துப் பல்லவ அரசனைச் சார்ந்தோர்க்குத் திருச்சிற்றம்பலத்தெம் பெருமான் அருள் புரிபவராகவும், அவ னோடு முரணிப் பகைஞராயினார்க்கு அருள் புரியாது தண்டனை விதிப்பவராகவும் இருந்துள்ளமையை நன்கு விளக்கி அம் மன்னனது ஒப்புயர்வற்ற சிவபக்தியின் மாட்சியைத் தெரிவித் துள்ளார். ஆகவே அடிகளது திருப்பாடலுக்கு அன்னோர் கொண்ட பொருள் சிறிதும் பொருந்தாமையின் அப்பெரியார் நந்திவர்மப் பல்லவன் காலத்தினர் அல்லர் என்பது தெளிவாதல் காண்க. இனி, சுந்தரமூர்த்திகள் வாழ்ந்த காலம் யாதென ஆராயலாம். அடிகள் தாம் திருவாய்மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையில், ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்கனடியார்க் குமடியேன்’ என்று கூறியிருக்கின்றனர்; இவ்வடியில் வந்துள்ள ‘காக்கின்ற’ என்னும் நிகழ்காலப் பெயரெச்சம், காடவர்கோனாகிய கழற்சிங்கன் அடிகள் காலத்து மன்னன் என்பதை இனிது உணர்த்துகின்றது. காடவர் என்பது பல்லவர்களுக்குரிய பெயர்களுள் ஒன்றாகும். ஆகவே, இக்கழற்சிங்கன் பல்லவ அரசனாயிருத்தல் வேண்டும். அன்றியும் இவ்வேந்தன் அறுபத்து மூன்று அடியார்களுள் வைத்துச் சுந்தர மூர்த்திகளால் போற்றப் பட்டிருத்தலின் சிறந்த சிவபக்தனாகவும் இருத்தல் வேண்டும். இனி, நம் தமிழகத்தில் அரசாண்ட பல்லவ மன்னர்களுள் கழற்சிங்கன் என்ற பெயருடையவன் ஒருவனுமில்லை. ஆனால் நரசிங்கவர்மன், இராசசிங்கவர்மன் என்ற பல்லவ வேந்தர்கள் இருந்துள்ளனர். அவர்களுள் முதல் நரசிங்க வர்மன் திருஞானசம்பந்தர் காலத்தின னாதலின் சுந்தரமூர்த்திகள் அவ்வரசன் காலத்தினரல்லர் என்பது திண்ணம். ஆகவே, அடிகள் இராசசிங்கன் காலத்தின ராதல் வேண்டும். இவ்வேந்தனை இரண்டாம் நரசிங்கவர்மன் என்றும், முதல் இராசசிங்கவர்மன் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர் கூறுவர். இவனே காஞ்சியிலுள்ள கைலாய நாதர் கோயிலை எடுப்பித்தவன். இஃது அக்காலத்தில் இராசசிம்ம பல்லவேச்சுரம் என்னும் பெயருடையதாயிருந்தது. இக்கோயிலில் இவனது கல்வெட் டொன்று வடமொழியில் வரையப் பட்டுள்ளது. அஃது இவ்வேந்தனைச் ‘சிவசூடாமணி’ என்று புகழ்கின்றது. (ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிளே ஏடிடரஅந ஐ சூடி. 24). இங்ஙனமே மகாபலிபுரம் என வழங்கும் மாமல்லபுரத்தில் இவனெடுப்பித்த இராசசிம்ம பல்லவேச்சுரம் என்ற திருக் கோயிலிலுள்ள கல்வெட்டும் பனைமலைக் கோயிலிலுள்ள கல்வெட்டும் இவனைச் ‘சிவசூடாமணி’ என்று புகழ்தல் ஈண்டு அறியத் தக்கது. காசாக்குடிச் செப்பேடுகள் பரமேச்சுரனே இராசசிங்கப் பல்லவனாக அவதரித் துள்ளாரென்று சிறப்பித்துக் கூறுகின்றன (ளு.ஐ.ஐ.ஏடிடரஅந ஐஐ சூடி. 73). உதயேந்திரஞ் செப்பேடுகள் இவனைப் ‘பரமமாகேச்சுர’னென்று புகழ்ந்துரைக்கின்றன (ளு.ஐ.ஐ.ஏடிடரஅந ஐஐ சூடி. 74). வேலூர்ப் பாளையம் செப்பேடுகள் இவன் சிவபெருமானுக்குக் காஞ்சி மாநகரில் கைலாயத்தை யொத்த திருக்கோயிலொன்றை எடுப்பித்த பெருமையுடையவன் என்றுணர்த்துகின்றன (ளு.ஐ.ஐ.எடிடரஅந ஐஐ சூடி. 98). இக் கைலாயநாதர் திருக் கோயிலில் நரசிங்கவர்மனுக்கு அந்நாளில் வழங்கிய இரு நூற்றைம்பது பட்டங்கள் பொறிக்கப் பட்டிருத்தலை இன்றும் காணலாம். அவற்றுள், ‘சங்கரபக்தன்,’ ‘ஈசுவர பக்தன்’, ஆகிய பட்டங்கள் இவ்வேந்தன் சிறந்த சிவபக்தியுடையவனாய்த் திகழ்ந்தனன் என்பதை நன்கு விளக்குகின்றன (ளு.ஐ.ஐ.ஏடிடரஅந ஐ சூடி. 25 ஏநசளந 55). பல்லவர் சரித்திரம் எழுதிய அறிஞராகிய துப்ரே துரை மகனார் இவ்வரசனைப் பற்றிக் கூறுவது: “நெடுங் காலம் குடிகளை எவ்வகை இன்னல்களுமின்றிக் காத்து வந்த பல்லவ அரசன் இவன் ஒருவனேயாவன். இவன் தன் ஆட்சிக்காலத்தில் காஞ்சியில் கைலாயநாதர் கோயிலையும், மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயிலையும் விழுப்புரந் தாலுகாவிலுள்ள பனை மலையில் ஒரு கோயிலையும் எடுப்பித்துச் சிவனடியார்களைப் போற்றி அன்னோர்க்குப் பல நலங்கள் புரிந்தனனேயன்றி வேறு ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை” என்பது. இதனாலும் இவன் சிறந்த சிவபத்தன் என்பது இனிது புலப்படுதல் காண்க. இவ்வேந்தன் தன் மனைவியோடு திருவாரூருக்குச் சென்று புற்றிடங் கொண்ட முக்கட் பெருமானை வணங்கித் திருக்கோயிலில் வலம் வருங்கால் இவனது மனையாள் பூக்கள் தொடுக்கப்படும் இடத்திற்குச் சென்று ஒரு மலரை எடுத்து மோந்து பார்க்க, அங்கிருந்த சிவனடியாராகிய செருத்துணையா ரென்பார் அதனைப் பொறாது அவளது மூக்கை வாள்கொண்டு அறுத்தலும், பின்னர் அங்கு வந்த அரசன் தன் மனைவி செய்த குற்றம் மிகப்பெரிது என்று அவ்வடியாரிடம் கூறியதோடு அவள் அம்மலரை எடுத்தமைக்குக் காரணமாயிருந்த கையினையும் வெட்டி வீழ்த்தினான் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இவ்வரலாற்றால் இவனது சிவபக்தி எத்தகைய சிறப்புடைய தென்பது ஒருவாறு நன்கு புலப்படும். இவன் காஞ்சியில் கைலாயநாதர் கோயில் எடுப்பித்த நாளில்தான் திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் சிவபெருமானுக்கு மனக் கோயில் கட்டினாரென்பது ஆராய்ச்சியாளரது கொள்கையாகும். சிவபெருமான் தாம் பூசலாரது மனக் கோயிலுக்கு முதலில் எழுந்தருள வேண்டியிருந்தமையின், அரசன் எடுப்பித்த கற்கோயிலுக்குக் கடவுண்மங்கலஞ் செய்யக் குறிப்பிட்டிருந்த நாளை மாற்றி அதனை வேறொரு நாளில் செய்யுமாறு அவன் கனவில் கூறியருளினாரென்பதும் பிறவும் பெரியபுராணத்தில் காணப்படுஞ் செய்திகளாம். ஆகவே, இவ்வேந்தன் எடுப்பும் இணையுமற்ற சீரிய சிவபத்தனாய் அந்நாளில் நிலவினானென்பது திண்ணம். இத்துணைச் சிறந்த சிவபக்தியுடைய பல்லவவேந்தன் வேறு ஒருவனும் இலனாதலின், சுந்தரமூர்த்திகள் திருத்தொண்டத் தொகையிற் கூறியுள்ள “காடவர்கோன் கழற்சிங்கன்” இவனே யாதல் வேண்டும். இனி, அடிகள் இவனை இராசசிங்கன் என்றாதல் நரசிங்கன் என்றாதல் வழங்காமல் கழற்சிங்கன் என வழங்கியுள்ளாரேயெனின், சிங்கன் என்பது அவ்விரு பெயர் கட்கும் பொதுவாயிருத்தலின் அரசர்க்குரிய பெருமையையும் வீரத்தையும் உணர்த்துங் கழல் என்னும் மொழியை அதற்கு முன்பெய்து கழற்சிங்கன் என்று சிறப்பித்துக் கூறிப் பாராட்டி யுள்ளாரென்று உணர்க. இனி, அடிகள் காலத்துப் பேரரசன் நரசிங்கவர்மனே என்பது வேறொரு சிறந்த சான்று கொண்டும் உறுதியெய்துகின்றது. அடிகளை இளமையில் வளர்த்தவன் திருநாவலூரில் வாழ்ந்த நரசிங்க முனையரையன் என்ற சிற்றரசன் என்பது பெரிய புராணத்தால் அறியப்படுகின்றது. முற்காலத்தில் பேரரசர்கள் தமக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களுக்கும், அமைச்சர் களுக்கும், படைத் தலைவர்களுக்கும் பட்டங்கள் வழங்குங்கால் தம் பெயர் களோடு இணைக்கப்பெற்ற பட்டங்களையே கொடுப்பது பெரு வழக்காயுள்ளது. இவ்வுண்மை கல்வெட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இனிது புலப்படும். உதாரணமாக, இராசராச மூவேந்த வேளான், உத்தம சோழப்பல்லவராயன், முடிகொண்ட சோழமூவேந்த வேளான், சயங்கொண்ட சோழ விழுப்பரையன் என்னும் பட்டங்கள் நெடுமுடி வேந்தர்களுடைய பெயர்களோடு இணைக்கப் பட்டிருத்தல் காண்க. முனையரையன் என்ற பட்டத்திற்கு முன் பேரரசனது நரசிங்கன் என்னும் பெயர் இணைக்கப்பட்டு நரசிங்க முனையரையன் என்று சுந்தரமூர்த்திகளது வளர்ப்புத் தந்தையாகிய குறுநில மன்னன், வழங்கப் பட்டுள்ளான். ஆகவே, சுந்தர மூர்த்திகளை வளர்த்த நரசிங்க முனையரையன் என்பான் பல்லவ அரசனாகிய இரண்டாம் நரசிங்கவர்மனுக்குத் திறை செலுத்திய ஒரு சிற்றரச னாதலின் இவ்வடிகள் இப்பல்லவ அரசன் காலத்தின ரென்பது உறுதியாதல் உணர்க. இனி, இவ்வேந்தன் பேரரசனென்பது, ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் - கழற்சிங்க னடியார்க்கு மடியேன்’ என்னும் அடிகளது திருவாக்கினால் நன்கு துணியப் படும். இதற்கேற்பச் சேக்கிழாரும் இவனைக் ‘கோக்கழற்சிங்கர்’ என்று கூறுகின்றார். ‘கோ’ என்னும் ஓரெழுத்தொருமொழி பேரரசனையே உணர்த்துமென்பது ‘கோக்கண்டு மன்னர் குரைகடற்புக்கிலர்’ என்ற அடியாலும் ‘கோஇராசகேசரி வர்மன்,’ ‘கோப்பரகேசரிவர்மன்’, ‘கோச்சடையவர்மன்’, ‘கோமாறவர்மன்’, என்னும் கல்வெட்டுத் தொடர் மொழி களாலும் பெறப்படுகின்றது. ஆகவே, நம் இரண்டாம் நரசிங்கவர்மன் பேரரசனாதல் காண்க. உமாபதி சிவாசாரியார் இதனை நோக்காது இவ்வேந்தனைக் குறுநில மன்னர்களுட் சேர்த்திருப்பது பொருந்தா தென்க. இனி, இரண்டாம் நரசிங்கவர்மனது ஆட்சிக் காலம் கி.பி. 690-க்கும் 710-க்கும் இடைப்பட்டதாதலின் சுந்தர மூர்த்கிளும் அக்காலத்தில் வாழ்ந்தவராதல் வேண்டும். எனவே, நம் சுந்தர மூர்த்திகள் கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நம் தமிழகத்தில் வாழ்ந் தருளிய பெரியாரென்பது வெளியாதல் காண்க. இவ்வடிகள் காலத்தினர்களான சோமாசிமாறர், விறன்மிண்டர், மானக் கஞ்சாறர், ஏயர்கோன் கலிக்காமர், பெருமிழலைக்குறும்பர், கோட்புலியார், பூசலார், செருத்துணையார் என்னுஞ் சிவனடியார்கள் வாழ்ந்த காலமும் இதுவேயாகும். 2. கம்பர் காலம் இராமாயணப் பிரதிகளில் ஒரு தனிப்பாடல் காணப்படு கிறது. எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில் கண்ணிய அரங்கர் முன்னே கவியரங் கேற்றி னானே. என்பதாகும். இத்தகைய பாடலை வைணவர்கள் தனியன் என்று வழங்குவர். இப்பாட்டில் சகம் 807 ஆம் ஆண்டில் இராமாயணம் கம்பரால் அரங்கேற்றப் பெற்றது என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. எனவே கி.பி. 885-ல் இவ்வரங்கேற்றம் நடைபெற்றதாதல் வேண்டும். இக் காலத்தை ஏற்றுக் கொள்வதற்கு இப்பாடலைத் தக்க ஆதாரமாகக் கொள்ள முடியவில்லை. கம்பரைக் குறிக்கு மிடத்து இப்பாடல் “கம்பநாடன்” என்று கூறுகின்றது. இவரை இராமாயணத் தனியன்களில் ஒன்று கம்பநாடுடைய வள்ளல்” என்றும் அரசகேசரியார் தம் இரகுவமிசத்தின் பாயிரத்தில் ‘கம்பநாடன்’ என்றும் கூறியிருப்பன வெல்லாம் பிற்காலத் தெழுந்த வழக்கேயாம். கம்பநாடு என்ற பெயருடன் முற்காலத்தில் ஒரு நாடு இருந்தது என்பதற்குக் கல்வெட்டுக் களிலாதல் செப்பேடுகளிலாதல் சிறிதும் ஆதார மின்மை அறியத்தக்கது. எனவே இப்பாடல் பழைமை வாய்ந்ததும் அன்று; உண்மைச் செய்தியைக் கூறுவதும் அன்று. கம்பரது இராமயணத்தில் சீவகசிந்தாமணியிலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துக்களும், சூளாமணி விருத்தமுறைகளும், ஓசை நயங்களும் அமைந்திருப்பதைக் காணலாம். ஆகவே, இவ்விரு காப்பியங்களுக்கும் பிற்பட்ட காலத்தவர் கம்பர் என்பது தேற்றம். இவ்விரு நூல்களும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலாதல், பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலாதல், இயற்றப் பட்டிருத்தல் வேண்டும் என்பது அறிஞர்களது முடிபாகும். ‘எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழு’ என்னும் பாடலை ஏற்றுக் கொண்டால், கம்பர் சிந்தாமணிக்கும் சூளாமணிக்கும் முற்பட்ட காலத்தவர் ஆவர். இஃது உண்மைக்கு முரண்பட்ட முடிவு என்பது யாவரும் அறிந்ததே. ஆகவே, இப் பாடலின் துணை கொண்டு கம்பர் காலத்தைக் காண முயலுவது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று. இனி, இராமாயணத்திற் காணப்படும் அகச்சான்றுகளின் துணைகொண்டு இவர் காலத்தை ஆராய்ந்து துணிவது பொருத்த முடையதேயாம். மருத்துமலைப்படலத்திற் காணப்படும். ‘வன்னிநாட் டியபொன் மௌனி வானவன் மலரின்மே லோன் கன்னிநாள் திருவைச் சேர்ந்த கண்ணனும் ஆளுங் காணிச் சென்னிநாள் தெரியல் வீரன் தியாகமா விநோதன் தெய்வப் பொன்னிநாட் டுவமை வைப்பப் புலன்கொள நோக்கிப் போனான்.’ என்னும் பாடலில் ‘தியாகவிநோதன்’ என்ற சிறப்புப் பெயரால் ஓர் அரசன் குறிக்கப்பட்டுள்ளனன். இவ்வேந்தன் கி.பி 1178 முதல் 1218 வரையில் ஆட்சி புரிந்த மூன்றாங்குலோத்துங்க சோழனே யாவன் என்று ராவ்சாகிப் திரு. மு. இராகவையங்கார் அவர்களும், அவர்களைப் பின்பற்றி ராவ்சாகிப் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களும் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டும் சான்றுகள் இரண்டினுள், இம்மன்னன் தியாகவிநோதன் என்ற சிறப்புப் பெயருடையவனாயிருந் தமையோடு ‘வீரக்கொடியொடு தியாகக் கொடி யெடுத்து’ ஆட்சி புரிந்தவன் என்றும் இவன் மெய்க்கீர்த்தி இவனைப் புகழ்ந்து கூறுவது ஒன்று; மற்றொன்று ‘ஆவின் கொடைச்சகன் ஆயிரத்து நூறொழித்த - தேவின்’ என்ற பழம் பாடற்பகுதியால் அறியப்படும் காலக்குறிப்பாகும். இவற்றுள் முன்னையது; எல்லாச் சோழ மன்னர்க்கும் பொதுவான சிறப்புடையச் செயலேயா மென்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. முதல் இராசாதிராச சோழன் ‘தியாகமே அணியாகக்’ கொண்டவன் என்றும்,1 வீர ராசேந்திரன் சோழன் ‘வீரத் தனிக்கொடி தியாகக் கொடியோடும்’ அரசாண்டவன் என்றும், 2அதிராசேந்திர சோழன் ‘தியாகக்கொடி’ யுடையவன் என்றும், 3முதற் குலோத்துங்க சோழன் ‘வீரமுந் தியாகமும் விளங்கப் பார்மிசை’ ஆண்டவன் என்றும் 4கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. ஆகவே, சோழமன்னர்கள் எல்லோருமே தியாக விநோதர்களாக இருந்தனர் என்பதில் ஐயப்பாடு சிறிதும் இல்லை. ஆதலால் தியாகவிநோதன் என்ற தொடர் மூன்றாங் குலோத்துங்க சோழனையே குறிக்குமென்று கொள்வதற்கு இடமின்மை அறியற் பாலதாம். இரண்டாவது சான்றாகக் காட்டப்படும் பழம் பாடலில் குறிக்கப்பெற்ற ‘ஆயிரத்து நூறொழித்த’ சகம் ஆண்டு தொள்ளாயிரம் ஆகுமேயன்றி ஆயிரத்து நூறாகாது. எனவே, அதிற்கண்ட காலக் குறிப்பு, கி.பி. 978-ஆம் ஆண்டைக் குறிக்கு மேயல்லாமல் கி.பி. 1178-ஆம் ஆண்டைக் குறிக்காது என்பது தேற்றம். ஆகவே, இரண்டாவது சான்றும் பொருந்தாமை காண்க. இதுகாறும் கூறியவற்றால் கம்பர் இராமாயணம் பாடியது மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலமாகிய கி.பி. 1178-ஆம் ஆண்டன்று என்பது நன்கு தெளியப்படும். இனி, கம்பர், பிலநீங்குபடலத்திலுள்ள, ‘ புவிபுகழ் சென்னிபே ரமலன் தோள்புகழ் கவிகள் தம் மனையெனக் கனக ராசியும் சவியுடைத் தூசுமென் சாந்து மாலையும் அவிரிழைக் குப்பையு மளவி லாதது.’ என்ற பாடலில் ‘அமலன்’ என்னும் பரியாய நாமத்தால் ஒரு சோழ மன்னனைக் கூறியுள்ளனர் என்று தெரிகிறது. இவ்வேந்தன் யாவன் என்று ஆராயுமிடத்து, சிவஞானியாகிய கண்டராதித்த சோழர்க்கும், செம்பியன் மாதேவியார்க்கும் புதல்வனாகத் தோன்றிய உத்தமசோழனாக இருத்தல் வேண்டும் என்று துணிதற்கு இடமுளது. உத்தமன் என்ற பெயரையே அமலன் என்னும் பரியாயப் பெயரால் கம்பர் குறித்துள்ளாராதல் வேண்டும். இவன் கி.பி. 970 முதல் 985 வரையில் ஆட்சி புரிந்தவன். ‘ஆவின் கொடைச்சகன்’ என்று தொடங்கும் பழம் பாடலில் சொல்லப்பட்டுள்ள சகம் ஆண்டு தொள்ளாயிரம் ஆகும் என்பது முன்னரே விளக்கப்பட்டது. இவ்வாண்டு கி.பி. 978 ஆகும். எனவே, கம்பர் இராமாயணம் பாடிய காலமாக அறியப்படும் கி.பி. 978-ஆம் ஆண்டு உத்தம சோழன் ஆட்சியின் நடுவில் அமைந்திருத்தல் அறியத் தக்கது. ஆகவே, கி.பி. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பர் இருந்தனர் என்பது தெள்ளிது. தமிழ்த்தாயின் அருந்தவப் புதல்வர்களாய், கவிச்சக்கர வர்த்திகள் என்ற சிறப்புப் பெயருடன் விளங்கியவர்கள், கம்பர், சயங் கொண்டார், ஒட்டக்கூத்தர், கச்சியப்பமுனிவர் என்ற நால்வருமே யாவர். இவர்களுள் கம்பரே காலத்தால் எல்லோருக்கும் முற்பட்ட கவிச்சக்கரவர்த்தியாவர் என்பது தேற்றம். 3. நம்பியாண்டார் நம்பி காலம் நம்பியாண்டார் நம்பியென்பார் சிதம்பரத்திற்கு மேற்கேயுள்ள திருநாரையூரிலிருந்த ஓர் ஆதிசைவ அந்தணராவர். இவர் இளமையிற் பொல்லாப் பிள்ளையாரை வழிபட்டு அருள்பெற்றவர் என்பதும் இராசராச அபயகுலசேகரன் வேண்டிக் கொண்டவாறு சைவசமய குரவர்களும் பிற சிவனடியார்களும் பாடியருளிய பதிகங்கள் எல்லாவற்றையும் தேடிப் பதினொரு திருமுறைகளாக வகுத்துத் தொகுத்தவர் என்பதும் திருமுறை கண்ட புராணத்தால் அறியப்படுகின்றன.1 அந்நூலிற் குறிப்பிடப்பெற்ற இராசராச அபயகுலசேகரன் என்பான் முதல் இராசராசசோழனாவன் என்றும் அவ்வேந்தனே நம்பியாண்டார் நம்பியின் துணைகொண்டு திருமுறைகளைத் தேடிக்கண்டு, பின்னர் அவற்றைத் தொகுப்பித்தவன் என்றும் ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். அதுபற்றியே அம்மன்னனும் திருமுறைகண்ட சோழன் என்று வழங்கப் படுகின்றனன். தமிழகச் சைவ சமய வரலாற்றில் உறுதிப்படுத்தப் பட்டதாகக் கருதப்படும் இக்கொள்கையிற் சில ஐயங்கள் தோன்றுவதால் இதனை மீண்டும் ஆராய்வது இன்றியமையாததாகும். நம்பியாண்டார் நம்பி இயற்றிய பத்து நூல்கள் பதினோராந் திருமுறையிற் காணப்படுகின்றன. அவற்றுள் திருத்தொண்டர் திருவந்தாதி என்பதும் ஒன்றாகும். அது, சேக்கிழாரடிகள் திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் பாடுவதற்கு ஆதாரமாகக் கொண்ட நூல்களுள் ஒன்று. அவ்வுண்மையை, “ அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை நந்த நாதனாம் நம்பியாண்ட டார்நம்பி புந்தி யாரப் புகன்ற வகையினால் வந்த வாறு வழாமல் இயம்புவாம்”2 என்னும் அவ்வடிகளது திருவாக்கினால் நன்கறியலாம். எனவே, திருத்தொண்டர் வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறும் வழி நூலாகிய திருத்தொண்டர் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பியினால் இயற்றப் பெற்றது என்பதிற் சிறிதும் ஐயமில்லை. அந்நூல், தொகையடியார் ஒன்பதின்மர், தனியடியார் அறுபத்து மூவர் ஆகிய எழுபத்திரண்டு சிவனடியார் வரலாற்றையும் எண்பத்தொன்பது இனிய பாடல்களிற் கூறுகின்றது. தனியடி யார்களை அறுபத்து மூவர் என்று கணக்கிட்டு முதலில் உணர்த்தியவர் நம்பியாண்டார் நம்பியேயாவர். இப்பெரியார் தமது திருத்தொண்டர் திருவந்தாதியில், புகழ்ச்சோழர், இடங்கழியார், கோச்செங்கட்சோழர் ஆகிய அடியார்களைப் பற்றிய பாடல்களில் தம் காலத்துச் சோழ மன்னன் ஒருவனைக் குறிப்பிட்டுள்ளனர். தம்மை அன்புடன் ஆதரித்துப் போற்றிவந்த அரசர், வள்ளல் முதலானோரின் பெயர்கள் என்றும் நின்று நிலவுமாறு அவர்களைத் தம் நூல்களிற் புகழ்ந்து பாடிவைப்பது நம் தமிழ் நாட்டில் முற்காலத்தில் வாழ்ந்த புலவர் பெருமக்களின் வழக்கம் என்பது தொன்னூலாராய்ச்சி யுடையார் யாவரும் அறிந்த தொன்றாம். அத்தகைய செயல் புலவர்களின் நன்றி மறவாமையாகிய அருங்குணத்தை உணர்த்தும் எனலாம். பாரதவெண்பாவின் ஆசிரியர் பல்லவ அரசனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மனையும், கவிச்சக்கர வர்த்தியாகிய கம்பர் வெண்ணெய் நல்லூர்ச் சடைய வள்ளலையும், சேக் கிழாரடிகள் மூன்றாங் குலோத்துங்க சோழனையும், புகழேந்திப் புலவர் முரணை நகர்ச் சந்திரன் சுவர்க்கியையும், வில்லிபுத்தூ ராழ்வார் கொங்கர் கோமானாகிய வரபதி யாட்கொண்டானையும், அருணகிரிநாதர் விசயநகரவேந்தனான இரண்டாம் தேவராயனையும், துறைமங்கலம் சிவப்பிரகாச முனிவர் அண்ணாமலை ரெட்டியாரையும் நன்றிபாராட்டு முறையிற் புகழ்ந்து பாடியிருத்தலை அப்புலவர் பெருமான் இயற்றியுள்ள நூல்களிற் காணலாம். சைவப் பெரியாராகிய நம்பியாண்டார் நம்பியும் தம்மை அன்புடன் ஆதரித்து வந்த ஆதித்தன் என்ற சோழமன்னன் ஒருவனைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியியல் மூன்று பாடல்களிற் பாராட்டியுள்ள செய்தியை அந்நூலை ஒருமுறை படிப்போரும் உணர்ந்து கொள்ளலாம். அப்பாடல்கள், ‘ புலமன்னிய மன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த குலமன்னிய புகழ்க் கோகன நாதன் குலமுதலோன் நலமன்னிய புகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள் வலமன்னிய எறிபத்தனுக் கீந்ததொர் வண்புகழே’ (திரு அ. 50) ‘ சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கனக மணிந்த ஆதித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வமெனப் பறைபோக் கெங்கட் கிறைவன் இருக்குவே ளூர்மன் இடங்கழியே’ (திரு. அ. 66) ‘ செம்பொன் அணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி நம்பன் கழற்கீ ழிருந்தோன் குலமுதல் என்பர்நல்ல வம்பு மலர்த்தில்லை ஈசனைச் சூழ மறைவளர்த்தான் நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்க ணானெனும் நித்தனையே’ (திரு. அ. 82) என்பனவாம். இவற்றில் அச்சோழன் கொங்குநாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தவன் என்றும், ஈழநாட்டை வென்றவன் என்றும், புகழ்ச்சோழர் கோச்செங்கட்சோழர் ஆகிய அடியார்களைத் தன் முன்னோர்களாகக் கொண்டவன் என்றும் இவ்வாசிரியர் கூறியது உணரற்பாலதாகும். ஆகவே இப்புலவர் பெருமான் அவ்வரசன் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி, அவ்வேந்தன் யாவன்? என்பது ஆராயற்பாலதாம். சோழ மன்னருள ஆதித்தன் என்னும் பெயருடையார் இருவர் உள்ளனர். அவர்களுள் முதல்வன், பரகேசரி விசயாலய சோழன் புதல்வனாகிய முதல் ஆதித்த சோழன் என்பான். மற்றையோன் சுந்தரசோழன் மூத்தமகனும் முதல் இராசராச சோழன் தமையனுமாகிய இரண்டாம் ஆதித்த சோழன் ஆவன். அவனை ஆதித்த கரிகாலன் என்றும் அந்நாளில் வழங்கியுள்ளனர். அவன் தன் தந்தையினாட்சியில் இளவரனாகவிருந்த நாட்களிற் சில அரசாங்க அலுவலாளர்களாற் கொல்லப்பட்டுப் போனான் என்பது தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரந் தாலுகாவிலுள்ள உடையார்குடியிற் காணப்படும் ஒரு கல்வெட்டால்1 அறியப்படுகின்றது. எனவே அவ்வரசிளங்கோ தன் இளமைப் பருவத்திற் கொலையுண் டிறந்தமை தெள்ளியது. ஆகவே, அவன் சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்து சிவலோக மெய்தினான் என்று கூறவதற்குச் சிறிதும் இடமில்லை. இந்நிலையில், சிற்றம்பலதைப் பொன்வேய்ந்ததாக நம்பியாண்டார்நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிப்பிட்டுள்ள ஆதித்தன் என்பான், விசயாலய சோழன் புதல்வனும் முதற்பராந்தகசோழன் தந்தையும் கி.பி.870 முதல் 907 வரையில் சோழமண்டலத்தை ஆட்சி புரிந்த பெருவேந்தனுமாகிய. முதல் ஆதித்த சோழனே யாவன். இவன் பல்லவ அரசனாகிய அபராசித வர்மனைப் போரில் வென்று தொண்டை மண்டலத்தைக் கைப் பற்றிய காரணம் பற்றித் ‘தொண்டைநாடு பரவின சோழன் பல்யானைக் கோக்கண்டனாயின ராசகேசரிவர்மன்2’ என்று வழங்கப்பெற்றுள்ளனன். இவன் ஆட்சியிலேதான் சோழராச்சியம் உயர்நிலையை எய்தியது. இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் தலைக்காடு என்ற நகரையும் பிடித்துக் கொண்டான் என்று ‘கொங்கு தேச ராஜாக்கள்’ என்னும் வலாற்று நூல் கூறுகின்றது3. ஆகவே, கொங்குநாட்டைக் கைப்பற்றிய இம்மன்னர் பிரான்4 அந்நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச்சிற்றம்பலத்தைப் பொன்வேய்ந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். இவன் காவிரியாற்றின் இரும ருங்கும் பல சிவாலயாங்களைக் கற்றளிகாளக அமைத்த சிவ பக்தன் என்று அன்பிற் செப்பேடுகள்5 கூறுவது ஈண்டு அறியத்தக்கது. இனி, இவ்வாதித்தன் புதல்வன் முதற்பராந்தக சோழன் என்பான் தில்லைச்சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகளும்1 திருவாலங்காட்டுச் செப்பேடு களும்2 உணர்த்துகின்றன. கொங்குதேச ராசாக்கள் சரிதமும் இச்செய்தியை உறுதிப்படுத்திகின்றது. எனவே, முதற் பராந்தக சோழனது ஆட்சிக்காலத்திலும் தில்லைச்சிற்றம்பலம் மீண்டும் பொன்வேயப்பட்டது என்று கொள்வதே பொருத்தமுடைய தாகும். அங்ஙனமே, முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 44- ம் ஆண்டாகிய கி. பி. 1114ல் அவன் தங்கை குந்தவை யென்பாள் தில்லைக்கோயிலைப் பொன் வேய்ந்தனள் என்று அக்கோயிற் கல்வெட்டொன்று3 அறிவிக்கின்றது. அவன் மகன் விக்கிரமசோழன் என்பான் கி.பி. 1128-ல் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்றுமாளிகையையும் திருக்கோபுரத்தையும் பொன்வேய்ந்தான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.4 அவன் படைத்தலைவனாகிய மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பவன் தில்லையிற் பொன்னம்பலத்தைப் பொன்வேய்ந்தான் என்று அங்குள்ள கல்வெட்டுகளுள் ஒன்று தெரிவிக் கின்றது.5 விக்கிரமசோழன் மகனாகிய இரண்டாம் குலோத்துங்கசோழன் தில்லைச் சிற்றம்பலத்தையும் பிறவற்றையும் பொன்வேய்ந்தான் என்று இராசராசசோழனுலா உணர்த்துகின்றது.6 இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்குமிடத்து, சோழ மன்னர் ஆட்சிக்காலங்களில் தில்லைச் சிற்றம்பலம் பன்முறை பொன்வேயப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகும். ஆனால், அதனை முதலில் பொன்வேய்ந்த சோழ மன்னன் விசயாலயன் புதல்வனாகிய முதல் ஆதித்தனேயாவன். அவ்வரும் பணியாற்றிய காரணம் பற்றி அச்செயலைத் தம் திருத் தொண்டர் திருவந்தாதியிற் பாராட்டியுள்ளனர் என்பது தெள்ளியது. இவர் சிதம்பரத்திற்கு அண்மையிலுள்ள திருநாரையூரி லிருந்தவராதலின் இவ்வரசன் தில்லையிற் புரிந்த அத் திருத் தொண்டில் தாம் நேரிற் கலந்து கொண்டு அதனை அறிந்திருந் தலும் இயல்பேயாம். ஆகவே நம்பியாண்டார் நம்பி இவன் ஆட்சிக்காலமாகிய கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவராதல் வேண்டும். இக் கவிஞர் பெருமான் அந்நூலிலுள்ள 82-ம் பாடலில் இவன் சிவபெருமான் திருவடி நீழலெய்திய செய்தியையும் குறிப்பிடுவதால் இவனுக்குப் பிறகு கி. பி. 907-ல் பட்டம்பெற்ற இவன் புதல்வன் முதற் பராந்தக சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சில ஆண்டுகள் வரை இருந்திருத்தல்கூடும்.1 4. தமிழ்முனிவர் அகத்தியர் தமிழ் முனிவராகிய அகத்தியனாரின் படிமங்கள் நம் தமிழகத்தில் கருங்கற் கோயில்களாகவுள்ள சிவன்கோயில்கள் எல்லாவற்றிலும் இருத்தலை இன்றுங் காணலாம். அக் கோயில்களைக் கட்டுவித்த பண்டைத் தமிழ் வேந்தர்கள், அவற்றில் அகத்தியனாரின் படிமங்களை முற்காலத்திலேயே எழுந்தருளி வித்தமைக்குக் காரணம், இம் முனிவர் பெருமானுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டிருந்த தொன்மைத் தொடர்பே எனலாம். அத்துணைத் தொன்மைத் தொடர்புடைய வராகிய இவர், வடக்கினின்றும் தெற்கே வந்து நம் தமிழகத்தில் தங்கியிருந்தனர் என்பதுதான் வடநூல்களின் முடிபு. ஆக்கவும் அழிக்கவும் வல்லவராய் முக்காலங்களும் உணர்ந்து நிறை மொழி மாந்தராக நிலவும் இருடிகள் யாண்டும் எளிதிற் போதற்கும் இருத்தற்கும் ஆற்றல் படைத்தவர் ஆவர். எனவே, இவர் வடபுலத்திலிருந்து தென்புலம் வந்திருக்கலாம்; தென்புலத்திலிருந்து வடபுலஞ் சென்று மறுபடியும் தென்புலத்திற்குத் திரும்பி யிருக்கலாம்; கடல் கடந்து கீழ்புலஞ் சென்றிருக்கலாம். ஆகவே, இவர்நாடு யாது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டு வேண்டப்படுவதன்று. இனி தொன்னூல்கள் இவரைப் பற்றிக் கூறும் வரலாறு களை ஆராய்ந்து காண்போம். 1. அகத்தியனாரும் தமிழ்நாடும் சிவபெருமான் மலைமகளை மணந்த காலத்தில் எல்லோரும் இமயத்தில் கூடியிருந்தனராக, அப்பொறை யாற்றாமல் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்து விடவே, இறைவன் அகத்தியனாரைத் தெற்கின்கண் சென்று பொதியின் மலையில் இருக்குமாறு கூறியருளினர். இவரும் அங்ஙனமே போய்ப் பொதியிலில் இருத்தலும் புவியும் சமநிலை எய்தியதாம். இது கந்தபுராணத்திற் கண்ட வரலாறாகும். இனி, அகத்தியனார் தென்றிசைக்கு வந்த வரலாற்றைத் தொல்காப்பியச் சிறப்புப் பாயிரவுரையில் ஆசிரியர் நச்சினார்க் கினியர் கூறியுள்ளனர். அது ‘தேவரெல்லாருங்கூடி யாம் சேர இருத்தலின் மேருத்தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர் என்று அவரை வேண்டிக் கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் கங்கை யாருழைச் சென்று காவிரியாறை வாங்கிக் கொண்டு பின்னர் யமதங்கி யாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினி யாரை வாங்கிக் கொண்டு புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண்குடி வேளிருள்ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிலின்கண் இருந்து, இராவணனைக் கந்தவருவத்தாற் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கினர் என்பதாம். அகத்தியனாரைப் பற்றித் தமிழ்நாட்டில் தம் காலத்தில் வழங்கிவந்த செய்திகள் சிலவற்றையே ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பியப் பாயிர உரையில் இவ்வாறு குறிப்பிட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, இத் தமிழ் முனிவரைப் பற்றிய செய்திகள் நம் தமிழகத்தில் அந்நாளில் யாண்டு பரவியிருத்தன வாதல் வேண்டும். ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ள அகத்தியனார் வரலாற்றில் சிவபெருமான் திருமணம் சொல்லப் படவில்லை; எனினும், வடதிசையின் தாழ்வு நீங்க இவர் தென்னாடு போந்தமையும் வேறு சில செய்திகளும் அதில் கூறப்பட்டிருத்தல் அறியத்தக்கது.’ இம் முனிவர்பிரான், தென்றிசை வந்தபோது காவிரியைக் கொணர்ந்தனர் என்று சமதக்கினி முனிவர் புதல்வர் திரண தூமாக்கினியாரை அழைத்து வந்தனர் என்றும் புலத்திய முனிவரின் தங்கையார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப மணந்து வந்தனர் என்றும் திருமால் வழியினரான அரசர் பதினெண்மரோடு பதினெண்குடி வேளிரையும் அழைத்து வந்து காடுகளை யழித்து நாடாக்கிப் பொதியிலின் கண் இருந்தனர் என்றும் பிறகு இராவணனை இசையில் வென்று அவனைச் சார்ந்தோர் அப் பக்கங்களில் இயங்காதவாறு செய்து விட்டனர் என்றும் நச்சினார்க்கினியர் அவ்வுரைப் பகுதியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாம். 2. அகத்தியனார்க்குத் தமிழ் அறிவுறுத்திய ஆசிரியர் அகத்தியர் இறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டிற்குப் புறப்படுங்கால், தென்னாடு தமிழ்மொழி வழங்கும் நாடு என்றும் அங்குள்ள மக்கள் அம்மொழியில் வல்லவர்கள் என்றும் அவர்கள் கேட்பவற்றிற்குத் தாம் விடை கூறுதல் வேண்டும் என்றும் ஆதலால் தமக்குத் தமிழ் இலக்கணத்தை அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறினராம். இறைவனும் இவர் வேண்டியவாறு இவர்க்கு அவ்விலக்கணத்தைக் கற்பித்தனர் என்று திரு விளையாடற் புராணம் உணர்த்துகின்றது. இவ் வரலாற்றால் சிவபெருமானே அகத்தியர்க்கு முதல் ஆசிரியர் என்பது நன்கு புலப்படுதல் காண்க. காஞ்சிப் புராணமும் இங்ஙனமே கூறுவது நோக்கற்பாலது. கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பரும் இராமாயணத்துள் அகத்தியப் படலத்திலுள்ள “உழக்குமறை நாலினும் உயர்ந்துலக மோதும் வழக்கினு மதிக்கவியி னும்மரபி னாடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண் தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்.” என்ற பாடலில் சிவபெருமான் அகத்தியர்க்குத் தமிழ் அறிவுறுத்திய செய்தியைக் குறிப்பிட்டிருத்தல் உணரற்பாலதாம். இனி, தொல்காப்பியப் பாயிர விருத்தியில் ஆசிரியர் சிவஞான முனிவர் ‘தமிழ்நாட்டிற்கு வடக்கட் பிற எல்லையும் உளவாக வேங்கடத்தை எல்லை யாகக் கூறினார்; அகத்தியனார்க்குத் தமிழைச் செவியறிவுறுத்திய செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது’ என்று கூறியுள்ளனர். இதனால், அகத்தியர் குன்றமெறிந்த குமரவேலிடத்தும் ஒரு காலத்தில் தமிழ் இலக்கணம் கற்றிருத்தல் வேண்டும் என்பது அறியக் கிடக்கின்றது. பழனித்தல புராணமும் இதனை வலியுறுத்தல் காண்க. பௌத்த சமயத்தினரான பொன்பற்றிக் காவலன் புத்தமித்திரன் என்பார், தாம் இயற்றிய வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கணத்தில் அகத்தியர் அவலோகி தன்பால் தமிழ் கேட்டனர் என்று கூறியுள்ளனர். அச் செய்தியை “ ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ்.” என்ற பாடற் பகுதியால் நன்கறியலாம். இவற்றால் அகத்தியர்க்குத் தமிழறிவுறுத்திய ஆசிரியர் யாவர் என்பதுபற்றி நம் தமிழ்நாட்டில் அக்காலத்தில் வழங்கிய சில செய்திகள் வெளியாதல் காண்க. 3. அகத்தியனாரின் இல்லக்கிழத்தியாரும் புதல்வரும் அகத்தியரின் மனைவியார் உலோபமுத்திரையார் ஆவர். இவ்வம்மையார் புலத்திய முனிவரின் தங்கையார் என்றும் அவர் கொடுப்ப, இவர் தமிழ்நாடு போதருங்கால் மணம் புரிந்து கொண்டு வந்தனர் என்றும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியுள்ளமை முன்னர் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளது. கந்தபுராணத்துள் அகத்தியப் படலத்தில் இவ்வுலோபமுத்திரை யார் விதர்ப்ப நாட்டு மன்னன் ஒருவனுடைய புதல்வியார் என்று சொல்லப் பட்டிருக்கின்றது. இத்தகைய வேறுபாடுகள் எல்லாம் அவ்வரலாறுகளின் பழமையையே வலியுறுத்துவனவாகும். காலஞ் செல்லச் செல்ல வரலாறுகள் சிறிது வேறுபட்டும் புனைந்துரை வகையாற் பெருகிக் கொண்டும் போதல் இயல்பேயாம். இனி, அகத்தியர்க்கு உலோபமுத்திரையார் பால் மெய்யறிவு வாய்ந்த புலவர் ஒருவர் பிறந்தனர் என்றும் அவர்க்குச் சித்தர் என்னும் பெயரிடப்பெற்றது. என்றும் கந்தபுராணம் கூறுகின்றது. இச் செய்திகளை, “அத்தனங் கொருவ அன்னான் அருளடைந் தங்கணீங்கி மெய்த்தகு மதலை வேண்டி விதர்ப்பகோன் பயந்தலோபா முத்திரை தனைமுன் வேட்டு முதுக்குறைத் திண்மைசான்ற சித்தனை யளித்த வள்ளல் தென்றிசை நோக்கிச் சென்றான்.” என்ற கந்த புராணப் பாடலால் நன்கறியலாம். 4. அகத்தியனார் தமிழ் நாட்டில் புரிந்த செயல்கள் பண்டைக் காலமுதல் சோழவளநாடு ‘சோறுடைத்து’ என்று பாராட்டப் பெற்றுவருகின்றது. அதற்குக் காரணம், அந்நாடு வானம் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரியால் வளம்பெற்றுச் சிறப்பெய்தியிருப்பதுதான். அது பற்றியே அந்நாடு காவிரிநாடு எனவும், பொன்னிநாடு எனவும் அறிஞர் களால் புகழப் பெற்றுள்ளது. அத்தகைய பெருமை வாய்ந்த காவிரியாறு, அகத்தியர் தென்னாட்டிற்கு வந்து, மேற்குத் தொடர்ச்சி மலையாகிய இமயமலையில் தங்கியிருந்த காலத்தில் காந்தன் என்ற ஒரு சோழ மன்னன் வேண்டிக் கொண்டவாறு இம்முனிவரது அரும்பெரு முயற்சியினால் தான் வெட்டப் பெற்றது என்பது அறியற்பாலதாம். அகத்தியர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு வந்தார் என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறியிருப்ப இவ்வரலாற்றையே குறிப்பாக உணர்த்துவதோடு தென்னாட்டில் ஓடுங் காவிரியாறு வடநாட்டிலுள்ள கங்கையைப்போல் பெருமையும் சிறப்பும் வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்துவது ஆகும். அன்றியும் புலவர் பெருமானாகிய மதுரைக் கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார் தாம் இயற்றிய மணிமேகலையில், “ செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளங்குங் கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனாது கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை.” என்று இவ்வரலாற்றைச் சிறிது வேறுபடக் கூறியுள்ளமை நோக்கத்தக்கது. எனினும், அகத்திய முனிவர்க்கும் காவிரியாற்றிற்கு முள்ள தொடர்பை அவ்வாசிரியர் எடுத்துரைத்திருப்பது நினைவில் வைத்தற்குரியது. பிறகு, இம்முனிவர் பெருமான் பாண்டிநாடு சென்று பாண்டி வேந்தர்க்குக் குலகுருவாக அமர்ந்தனர். இச்செய்தி கி.பி. பத்தாம் நூற்றாண்டில் மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் ஆட்சிக் காலத்தில் வரையப் பெற்ற சின்னமனூர்ச் செப்பேடுகளின் வட மொழிப் பகுதியில் ‘அகஸ்த்ய சிஷ்ய:’ என்றும், தமிழ்ப் பகுதியில் ‘பொருவருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனாகப் பெற்றது’ என்றும் குறிக்கப் பட்டுள்ளவற்றால் நன்கு வெளியாகின்றது. இறையனார் அகப்பொருளுரையில் மேற் கோளாகக் காட்டப் பெற்ற பாண்டிக் கோவைப் பாடல் ஒன்று, உசிதன் என்ற பாண்டி வேந்தன் ஒருவன் அகத்தியர்பால் தமிழிலக்கணம் கேட்டனன் என்று உணர்த்துகினற்து. இதனை, ‘ அரைதரு மேகலை யன்னமன்னாயன் றகத்தியன்வாய் உரைதரு தீந்தமிழ் கேட்டோ னுசிதன்’ என்னும் பாடற்பகுதியால் அறியலாம். இனி, வீரபாண்டியன் கல்வெட்டொன்று, பாண்டி மன்னன் ஒருவன் ‘திடவாசகக் குறுமுனிபாற் செந்தமிழ் நூல் தெரிந்தருளினான்’ என்று கூறுவது குறிப்பிடத்தக்கதாகும். அன்றியும் காளிதாசர் என்ற மாபெருங் கவிஞர், அகத்தியருடைய சிஷ்யன் பாண்டியன் எனத் தம் இரகுவமிசத்தில் கூறியுள்ளார் என்று தெரிகிறது. இவற்றால் அகத்தியர்க்கும் பாண்டியர்க்குமுள்ள தொடர் பினைத் தமிழ் நூல்களும் வடமொழி நூல்களும் கல்வெட்டுக் களும் செப்பேடுகளும் நன்கு விளக்கி நிற்றல் காண்க. இனி, இம்முனிவர்பிரான் தலைச்சங்கப் புலவருள் ஒருவராயமர்ந்து தமிழ் ஆராய்ந்தனர் என்று இறையனாரகப் பொருளுரை அறிவிக்கின்றது. அவ்வுரையிற் காணப்படும் தலைச் சங்க வரலாறு, தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீஇயனார் பாண்டியர்கள். அவருள், தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகனாரும் நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களாற் பாடப்பட்டன, எத்துணையோ பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியாவிரியும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பத்திற்றியாண்டு சங்கமிருந் தாரென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத் தொன்பதின்மர் என்ப, அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவர்க்கு நூல் அகத்தியம் என்பதாம். இதில் கண்ட செய்திகள் நம் அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டு நிற்றலின் இவற்றை ஆராய்ந்து முடிவு கூறுதல் எளிதன்று. எனினும், பாண்டிவேந்தர்கள் தம் தலைநகரில் நிறுவி நடத்தி வந்த தமிழ்க் கழகத்தில் அகத்தியனார் முதற் புலவராயமர்ந்து தமிழாராய்ந்தனர் என்பதும் இவர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் அக்கழகத் தார்க்கு இலக்கண நூலாக இருந்தது என்பதும் நன்கு துணியப்படும். 5. அகத்தியனாரின் மாணவர்கள் அகத்தியர் புலவர்களுடன் தமிழாராய்ச்சி செய்தமையோடு மாணவர் பலர்க்கும் தமிழ் அறிவுறுத்தினார். இம் முனிவரிடத்து இயற்றமிழ் நூல் கேட்ட மாணவர் பன்னிருவர் ஆவர். அவர்கள், தொல்காப்பியனார், அதங் கோட்டாசான், துராலிங்கனார், செம்பூட்சேய், வையாபிகனார், வாய்ப்பியனார், பனம்பாரனார், கழாரம்பனார், அவிநயனார், காக்கைபாடினியார், நற்றத்தனார், வாமனனார் என்போர். இன்னோர் பன்னிருவரும் தனித்தனி நூல் இயற்றியமையோடு எல்லோருஞ் சேர்ந்து புறப்பொருள் பன்னிருபடலம் என்னும் நூல் ஒன்று இயற்றியுள்ளனர் என்றும் தெரிகிறது. இதனை, ‘ மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலையிருந்த சீர்சால் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன்’ என்ற புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தினால் நன்குணரலாம். அந்நூல் இந்நாளில் யாண்டும் கிடைக்காமை யால் அழிந்து போயிற்று என்பது ஒருதலை. எனினும் அதன் வழிநூலாக இக்காலத்தில் கிடைத்திருப்பது, சேரமன்னராகிய ஐயனாரிதனார் என்பார் இயற்றிய புறப்பொருள் வெண்பா மாலை என்னும் அரிய நூலேயாம். மேலே குறிப்பிட்டுள்ள மாணவர் பன்னிருவருள், தொல்காப்பியனார் இயற்றிய தொல்காப்பியம் என்னும் நூல் ஒன்றுதான் இந்நாளில் உளது. மற்றையோர் எழுதிய நூல்கள் கிடைக்கவில்லை. எனவே இப்போதுள்ள நூல்களுள் இத்தொல்காப்பியமே மிகப் பழமை வாய்ந்தது என்று கூறலாம். இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் இயற்றியவர், அகத்தியரின் மாணவருள் ஒருவரும் தொல்காப்பி யனாரின் ஒரு சாலை மாணவரும் ஆகிய பனம்பாரனார் ஆவர். இனி, ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதி காரத்தின் உரைப்பாயிரத்தில் ‘தேவ இருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருள் சிகண்டி என்னும் அருந்தவமுனி... செய்த இசை நுணுக்கமும்’ என்று அடியார்க்கு நல்லார் கூறியுள்ளமையால் அகத்தியருடைய மாணாக்கருள் சிகண்டியார் என்பவர் ஒருவர் என்பதும் அவர் ‘இசை நுணுக்கம்’ என்னும் இசைத் தமிழ் இலக்கணம் ஒன்று இயற்றியவர் என்பதும் தெள்ளிதிற் புலனாகின்றன. பிற ஆசிரியர்கள் கூறியுள்ள அகத்தியர் மாணவர் பன்னிருவருள் சிகண்டியார் பெயர் காணப்படவில்லை. ஆகவே, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்றுக்கும் வெவ்வேறாகப் பன்னிரண்டு மாணாக்கர்கள் இருந்திருத்தல் வேண்டும் என்று எண்ணுவதற்கு இடம் உளது. அன்றியும், இம் முனிவர் பெருமான்பால் மருத்துவம், சோதிடம், முதலானவற்றைக் கற்ற மாணவர் பலர் இருந்தனர் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். இவர் சித்தர் கூட்டத்திற்குத் தலைவராக இருந்தனர் என்றும் தெரிகிறது. எனவே, தமிழ்நாட்டில் சித்தர் மருத்துவமும் சோதிடக் கலையும் இம்முனிவராலும் இவரது மாணவராலும் யாண்டும் பரவி வளர்ச்சி யெய்தி வந்தமை குறிப்பிடத் தக்கதொரு நிகழ்ச்சியாகும். 6. அகத்தியனாரது சமயக் கொள்கை இம் முனிவர்பிரான் சிவபெருமானையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபாடு புரிந்துள்ளமைக்கு நம் தமிழகத்தில் எத்துணையோ ஆதாரங்கள் கிடைக்கின்றன. சிவபெருமானிடத்தும் முருகவேள்பாலும் இவர் தமிழ் இலக்கணம் கற்றனர் என்று தொன்னூல்கள் கூறுஞ் செய்தி முன்னர் விளக்கப்பட்டுள்ளது. தென்பாண்டி நாட்டிலுள்ள திருக்குற்றாலத்தில் திருமால் வடிவத்தைச் சிவலிங்கமாக்கி இவர் வழிபட்டனர் என்பது பண்டைநாள் முதல் வழங்கிவரும் ஒரு வரலாறு ஆகும். இச்செயலால் இவரது சிவபக்தியின் மாண்பு எத்தகையது என்பது இனிது புலப்படுதல் காண்க. வேதாரண்யம் என்று வழங்கும் திருமறைக்காட்டிற்கு அண்மையில் அகத்தியான் பள்ளி என்னும் சிவஸ்தலம் ஒன்றுளது. அது, சைவசமயகுரவராகிய திருஞான சம்பந்தரால் பாடப் பெற்ற பெருமையுடையதாகும். திருமறைக்காட்டில் சிவபெருமானது திருமணக் கோலத்தைத் தரிசிக்க வந்த அகத்தியனார் தங்கியிருந்த இடமாதல் பற்றி அத்திருப்பதி அகத்தியான்பள்ளி என்ற பெயர் பெற்றது என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அங்கு அகத்தியர் திருவுருவமும் இருத்தல் அறியத் தக்கது. பொதியின்மலையிலும் சிவபெருமானது திருமணக் கோலத்தை ஒருமுறை இவர் தரிசித்தனர் என்று சொல்லப்படுகிறது. அதற்கேற்ப பொதியின் மலையிலும் அகத்தியாச்சிரமம் என்ற பெயருடன் ஒரு கோயிலும் உளது. தமிழ் நாட்டில் பல சிவன் கோயில்களில் அகத்தியர் வந்து வழிபட்ட வரலாறுகள் ஆங்காங்குக் கூறப்படுகின்றன. அவ்விடங்களில் அகத்தியர் திருவுருவங்களும் வைக்கப் பட்டிருக்கின்றன. கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சிமாநகரில் பல்லவமன்னனாகிய இரண்டாம் நரசிம்ம வர்மனால் எடுப்பிக்கப் பெற்ற கைலாயநாதர் ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் உள்ள அகத்தியர் கோயிலே தமிழ்நாட்டு அகத்தியர் கோயில்களுள் பழமை வாய்ந்ததாகும் ஆகவே, இவரது திருவுருவம் சிவாலயங் களில் எழுந்தருளிவித்து வழிபாடு செய்யப்பட்டிருத்தல் ஒன்றே இவரது சிவபக்தியையும் பெருமையையும் நன்கு புலப்படுத்தும் எனலாம் . இனி, சைவ சமயாசாரியருள் ஒருவராகிய சுந்தர மூர்த்திகள், சிவபெருமான் அகத்தியர்க்கு அருள் புரிந்த சிறப்பைத் திருநின்றியூர்ப் பதிகத்திலுள்ள ஒரு பாடலில் கூறியுள்ளனர். அது, “ வந்தோ ரிந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடுநீ யாள்கென அருளிச் சந்திமூன்றிலுந் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச் சிந்துமாமணி யணுதிருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன் செந்தண் மாமலர்த்த திருமகள் மருவுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.” என்பதாம். 7. அகத்தியனார் இயற்றிய அகத்தியம் என்னும் நூலைப்பற்றிய சில குறிப்புகள்; இம்முனிவர்பிரான் இயற்றிய ‘அகத்தியம்’ என்ற நூல் இப்போது காணப்படவில்லை. எனவே அந்நூல், ஒன்று இருந்ததோ இல்லையோ என்ற ஐயப்பாடு நிகழ்வது இயல்பே யாம். ஆனால் அந்நூல், தலை இடை கடை என்னும் மூன்று சங்கத்தார்க்கும் இலக்கண நூலாயிருந்ததென்று இறையனாரகப் பொருளுரை கூறுகின்றது. இடைச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் இலக்கண நூலாயிருந்தது என்று அவ்வுரை கூறுகின்ற தொல்காப்பியம் இப்போதும் இருப்பது யாவரும் அறிந்ததேயாம். அவ்வாறிருக்க , அவ்வுரையால் அறியப்படும் அகத்தியம் என்னும் நூல் இப்போதில்லாமையால் முன்பும் இருந்திலது என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. தொல்காப்பியத்திற்கு உரைகண்ட ஆசிரியர் பலரும் தம் உரைகளில் அகத்தியத்தைக் குறிப்பிட்டுள்ளனர். யாப்பருங்கல விருத்தியிலும் நன்னூல் மயிலைநாதர் உரையிலும், அந்நூல் கூறப்பட்டிருக்கின்றது. அன்றியும், அவ்வுரையாசிரியர் எல்லோரும் தம் உரைகளில் பல அகத்தியச் சூத்திரங்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ளனர். புறப்பொருள் பன்னிரு படலப் பாயிரமும், ‘ வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை அகத்திய னென்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்’ என்று அகத்தியத்தைக் குறிப்பிடுவது உணரற் பாலதாகும் எனவே, அந்நூல் முற்காலத்தில் வழங்கி வந்தமை தெள்ளிதிற் புலனாதல் காண்க. இனி, தொல்காப்பிய வுவமை யியல் இறுதிச் சூத்திரத்தின் உரையில், ‘அகத்தியனாராற் செய்யப் பட்ட மூன்று தமிழினும்’ என்று பேராசிரியர் கூறியிருப்பதால், அந்நூல் இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழ்க்கும் இலக்கணமாயிருந்தது என்பது நன்கு பெறப்படும். அன்றியும், சிலப்பதிகார உரைப்பாயிரத்தில்,` நாடகத் தமிழ்நூலாகிய பரதம் அகத்தியம் முதலாயுள்ள தொன்நூல்களும் இறந்தன’ என்று அடியார்க்கு நல்லார் உரைத் திருப்பதால் அவ்வுண்மை வலியுறுதல் காண்க. அகத்தியர்பால் இசைத் தமிழ் கற்ற சிகண்டியார் என்பார் ‘இசை நுணுக்கம்’ என்னும் நூல் எழுதியுள்ளனர் என்பது முன்னர் விளக்கப் பெற்றது. ஆகவே, அகத்தியனார் முத்தமிழிலும் புலமையுடையவர் என்பது வெளிப்படை எனவே, இம்முனிவர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல் இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் என்பது நன்கு துணியப்படும் 8. அகத்தியனாரும் கீழ்நாடுகளும். இந்தியாவிற்குக் கிழக்கேயுள்ள காம்போசம் (கம்போடியா), இந்துசீனம், ஜாவா என்ற நாடுகளில் அகத்தியரைப் பற்றிய செய்திகள் கிடைத்தலால் அந்நாடுகளுக்கும் இம்முனிவர்க்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது. கி.பி.. 732- ஆம் ஆண்டில் சஞ்சயன் என்ற வேந்தன் ஒருவன் ஜாவாவிலுள்ள ஒரு குன்றின் உச்சியில் சிவாலயம் ஒன்று உலகிற்கு நலமுண்டாகுமாறு கட்டினான் என்று அந்நாட்டிற் காணப்படும் ஒரு கல்வெட்டு உணர்த்து கின்றது. ஜாவாவில் ஏற்பட்ட சிவவழிபாடு குஞ்சர குஞ்ச நாட்டிலிருந்து வந்தது என்று அக்கல்வெட்டு அறிவிக்கின்றது. குஞ்சரகுஞ்சநாடு என்பது பாண்டிநாடு என்றும் அந்நாட்டி லிருந்த அகத்திய முனிவரே ஜாவாவில் சிவவழிபாட்டையுண்டு பண்ணியவர் என்றும் பிறகு அந்நாட்டரசர்கள், சிவன் கோயில்கள் கட்டத் தொடங்கினர் என்றும் கி.பி. 760- ல் ஜாவாவில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த ஒரு அரசன் அகத்தியருக்குக் கோயில் ஒன்று கட்டி அதில் இம்முனிவருடைய கருங் கற்படிமத்தை எழுந்தருளுவித்தான் என்று உணர்த்துவதோடு அங்கு இவரது மரப்படிமம் ஒன்று முன்னர் இருந்ததென்றும் கூறுகின்றது. ஆகவே ஜாவாவில் சிவன் கோயில்களும் அகத்தியர் கோயில்களும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சிறப்புற்றிருந்தன என்பதும், அவற்றை அந்நாட்டு வேந்தர்கள் பெரிதும் போற்றி வந்தனர் என்பதும் கல்வெட்டுகளால் நன்கு வெளியாகின்றன. கி.பி.889-ல் காம்போச நாட்டில் வரையப் பெற்ற கல்வெட் டொன்று அந்நாட்டு மன்னர்களின் முன்னோருள்அகத்தியர் ஒருவர் என்றும் இவர் கம்போச மன்னனுடைய மகள் யசோமதியை மணந்தனர் என்றும் இவ்விருவருக்கும் பிறந்த புதல்வனே நரேந்திரவர்மன் என்ற அரசகுமாரன் என்றும் கூறுகின்றன. அந்நாட்டிலுள்ள மற்றொரு கல்வெட்டு அந்நாட்டைப் பல வகையாலும், சீர்திருத்தி உயர்நிலைக்குக் கொணர்ந்தவர் அகத்தியரே என்றும் இவர் அங்கு இரண்டு சிவன்கோயில்கள் கட்டுவித்தார் என்றும் இவர்தம் மாணாக்கரை அந்நாட்டிற்குக் குருவாக அமர்த்தி விட்டு அதனைவிட்டுப் புறப்பட்டார் என்றும் உணர்த்துகின்றது. இங்ஙனமே இந்துசீனம், மலேயா என்ற நாடுகளிலும் அகத்தியர் சிவவழிப்பாட்டை ஏற்படுத்தியதோடு அந்நாடுகளை நாகரிக நிலையில் அமையச் செய்தனர் என்றும் தெரிகிறது. எனவே, பாண்டிநாட்டிலிருந்து புறப்பட்டுக் கடலைக் கடந்து கிழக்கே சென்று ஜாவா, காம்போசம், இந்துசீனம், மலேயா ஆகிய நாடுகளில் தங்கிப் பல சீர்திருத்தங்கள் செய்து, அந்நாடுகளை உயர்நிலைக்குக் கொணர்ந்தவர் அகத்தியரே என்பது அந்நாடு களில் கிடைக்கும் பல ஆதாரங்களால் தெளிவாகப் புலப்படு கின்றது. கம்போச நாட்டுக் கல்வெட்டொன்று அகத்தியரைக் கடலை வென்றவர் என்று கூறுவதற்குக் காரணம் இவர் கடக்க முடியாத கடலைக் கடந்து கீழ்நாடுகட்குச் சென்ற மையே என்பது அறியற்பாலது. 5. வாதவூரடிகள் காலம் சில அறிஞர்கள் மணிவாசகப் பெருமான் தேவாரம் பாடிய மூவர்க்கும் முன் வாழ்ந்தவர் என்று கருதுகின்றனர். திருநாவுக்கரசர் திருவாரூர்ப் பதிகத்தில் ‘நரியைக் குதிரை செய்வானும்’ எனவும், திருவிசய மங்கைப் பதிகத்தில் ‘குசையும் அங்கையிற் கோசமுங் கொண்ட வவ்வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே’ எனவும், திருப்பூவணப் பதிகத்தில் ‘வையைத்திருக் கோட்டில் நின்றதோர் திறமுந்தோன்றும்!’ எனவும், தனித்திருத் தாண்டகத்தில் ‘குடமுழநந் தீசனை வாசனாகக் கொண்டார்’ எனவும் கூறியிருப்பவை மாணிக்கவாசகர் வரலாற்றுப் பகுதிகளை யுணர்த்தும் என்பது அவர்கள் முடிபாகும். திருவாரூர்ப் பதிகத்தில் திருநாவுக்கரசர் தம் காலத்திற்கு முன் நிகழ்ந்ததோர் அரிய நிகழ்ச்சியை உணர்த்துவதாயிருந்தால் ‘நரியைக் குதிரை செய்வானும்’ என்று கூறாமல் ‘நரியைக் குதிரை செய்தானும் தானும்’ என்றுரைப்பதோடு மணிவாசகப் பெருமானது பெருமை புலப்படுமாறு அடிகளது பெயரையும் கூறியிருப்பர். அங்ஙனம் சொல்லாமையால், ‘நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்’ என்பன முதலாக அத்திருப்பாட்டில் சொல்லப் பெற்றவை எல்லாம் திருவாரூர்ப் பெருமானது முடிவி லாற்றலுடைமையை உணர்த்துவனவே யன்றி நிகழ்ந்த வரலாறுகளை எடுத்துரைப்பன அல்ல என்பது தேற்றம். எனவே, இத்தொடர்கள் அடிகளைக் குறிக்கவில்லை என்பது தெள்ளிது. திருவிசய மங்கைப் பதிகத்தில் ‘மங்கல வாசகர்’ என்ற தொடர் மாணிக்கவாசகரைக் குறிக்கும் எனல் பொருந்தாது. மங்கல வாசகர் ‘குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவர்’ என்பது திருநாவுக்கரசரது திருவாக்கினால் அறியப்படுகிறது. அடிகள் அவற்றைக் கொண்டவர் என்பதற்குச் சான்று இல்லை. அன்றியும் ‘மங்கல வாசகர்’ மாணிக்க வாசகர் என்று கொள்வது எங்ஙனம் ஏற்புடையதாகும்? மாணிக்கவாசகர் என்ற பெயர் வழக்கே கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தான் முதலில் காணப்படுகின்றது. அதற்கு முன்னர் அடிகள் திருவாதவூரடிகள், திருவாதவூர்ச் சிவ பாத்தியன், திருவாதவூரளியார், பெருந் துறைப்பிள்ளை என்றே வழங்கப் பெற்றுள்ளனர். ஆதலால், மங்கலவாசகர் என்ற தொடர் அடிகளை உணர்த்தாது என்பது திண்ணம். திருப்பூவணப் பதிகத்தில் ‘வையைத் திருக்கோட்டில் நின்றதோர் திறமுந்தோன்றும்’ எனத் திருநாவுக்கரசர் கூறியிருப்பது திருப்பூவணத்தில் வையையாற்றங்கரையில் திருக்கோயில் கொண்டு சிவபெருமான் எழுந்தருளியிருப்பதை உணர்த்துவதே யாகும். மதுரையில் வையையாற்றங் கரையில் சோமசுந்தரக் கடவுள் பிட்டுக்கு மண்சுமந்த வரலாற்றை அது உணர்த்து வதாயிருந்தால் அச்செய்தி தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும் என்பது ஒருதலை. ஆதலால் அடிகள் வரலாற்றோடு அதனை இணைத்துப் பொருள் காண்பது சிறிதும் பொருந்துவதன்று. திருநாவுக்கரசரது தனித்திருத் தாண்டகத்திலுள்ள ‘குடமுழ நந்தீசனை வாசகனாகக் கொண்டார்’ என்ற தொடருக்கு நந்தியெம் பெருமான் மாணிக்கவாசகராக அவதரித்தனர் என்று பொருள் கொள்வது எவ்வாவற்றானும் ஏற்றுக் கொள்ளத் தக்கதன்று. இதிலுள்ள வாசகன் என்ற சொல் மாணிக்கவாசகர் என எங்ஙனம் பொருள்படும்? மாணிக்கவாசகர் என்ற பெயர் வழக்கே பிற்காலத்தது என்பது முன்னர்க் காட்டப்பட்டுள்ளது. மாணிக்க வாசகர் வரலாறு கூறும் தமிழ் நூல்கள் எல்லாம் நந்திகேச்சுரர் அடிகளாக அவதரித்தனர் என்று கூறவில்லை. ஆனால் கணநாதர் ஒருவர் அங்ஙனம் அவதரித்தனர் என்று கூறுகின்றனர். எனவே, நந்திதேவர் மாணிக்கவாசகராகத் தோன்றவில்லை என்பது தெளிவு. ஆகவே, திருநாவுக்கரசர் தம் திருப்பதிகங்களிற் மாணிக்கவாசகரைப்பற்றி ஒன்றும் சொல்ல வில்லை என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. சுந்தரமூர்த்திகள் தம் திருத்தொண்டத் தொகையில் ‘பொய்யடிமை யில்லாப் புலவர்’ என மாணிக்க வாசகரைக் குறித்துள்ளனர் என்பது அன்னோர் எடுத்துக் காட்டும் ஒரு சான்றாகும். பொய்யடிமையில்லாப் புலவரை மாணிக்கவாசகர் என்று கொண்டால் தனியடியார் அறுபத்து மூவரையும் அறுபத்து நால்வர் எனவும் தொகையடியார் ஒன்பதின்மரையும் எண்மர் எனவும் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு கொள்வது சிவாநுபூதிச் செல்வர்களும் புலவர் பெருமான்களு மான நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், உமாபதி சிவாசாரியார் என்போர் கூறியுள்ள வரலாற்றுண்மைக்கு முற்றிலும் முரண் பட்டிருத்தல் காணலாம். அன்றியும் தொன்றுதொட்டு வழங்கி வரும் முறைக்கும் அது மாறுபடுகின்றது. மூவரும் பொய்யடிமை யில்லாப் புலவர் மாணிக்கவாசகர் என்று யாண்டும் குறிப்பிடாமை அறியத்தக்கது. இவர்களுள் காலத்தால் முற்பட்டவராய்க் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் விளங்கிய நம்பியாண்டார் நம்பி அத்தொடர் களைச் சங்கப் புலவரைக் குறிக்குமெனக் கருதியுள்ளமை திருவந்தாதியால் உணரப்படும். எனவே, இக்கொள்கையும் தவறாதல் காண்க. மாணிக்கவாசகர் திருஞானசம்பந்த சுவாமிகட்கு முற்பட்டவர் என்பது பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணத்தாலும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தாலும் நன்கறியக் கிடக்கின்றது என்பர். இவ்விரு புராணங்களும் சிறந்த தமிழ் நூல்களே; ஆனால் சரித்திர கால ஆராய்ச்சிக்குப் பயன்படுவன அல்ல என்பது அறிஞர் பலரும் உணர்ந்ததேயாம். இதுகாறும் விளக்கியவற்றால் திருவாதவூரடிகளாகிய மாணிக்கவாசகர் மூவருக்குப் பிந்தியவர் என்பது நன்கு புலனாதல் காண்க. அடிகள் தாம் இயற்றியருளிய திருச்சிற்றம்பலக் கோவையாரில் 306, 327 ஆம் பாடல்களில் முறையே ‘வரகுணனாந் - தென்னவனேத்து சிற்றம்பலத்தான்’ எனவும், ‘புயலோங்கலர் சடையேற்றவன் சிற்றம்பலம் புகழும் மயலோங்கிருங்களியானை வரகுணன்’ எனவும் வரகுண பாண்டியனைப் பாராட்டியிருத்தலால் அவ்வேந்தன் காலத்தவரா யிருத்தல் வேண்டும். கடைச் சங்க காலத்தில் வரகுணன் என்ற பெயருடைய பாண்டியன் ஒருவனும் இல்லை. அக்காலத்திற்குப் பிறகு கி.பி 575 வரையில் பாண்டி நாட்டில் நடைபெற்ற களப்பிரர் ஆட்சிக்காலத்தில் அடிகளால் புகழப் பெற்ற பெரும்புகழ் படைத்த வரகுண பாண்டியன் இருந்தனனெனல் சிறிதும் ஏற்புடைத்தன்று. எனவே, அவர்க்குப் பின்னர் நிகழ்ந்த பாண்டியரது முதற் பேரரசில்தான் அடிகள் குறித்துள்ள வரகுண பாண்டியன் இருந்தனனாதல் வேண்டும். அப்பேரரசும் கி.பி. 575 முதல் கி.பி. 900 வரையில் நிலை பெற்றிருந்தது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது. அக்காலப்பகுதியில் வரகுணன் என்ற பெயருடைய பாண்டியர் இருவர் பாட்டனும் பேரனுமாக இருந்தனர் என்பது சின்னமனூர்ச் செப்பேடுகளால் புலப்படுகின்றது. அவர்களுள் கி.பி. 862 முதல் கி.பி. 880 வரை அரசாண்ட இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்திருத்தல் வேண்டும் என்பது சிலர் கொள்கை. இதனை ஏற்றுக் கொள்வதில் சில தடைகள் உள்ளன. ஆதலால் இதனையும் ஈண்டு ஆராய்தல் இன்றியமையாததாகும். அடிகளால் பாராட்டப் பெற்ற வரகுண பாண்டியன் காலத்தில் சோழநாடு அவன் பேரரசுக்கு உட்பட்டிருந்தது என்பது திருச்சிற்றம்பலக் கோவையாலும் பட்டினத்தடிகளது திருவிடைமருதூர் மும்மணிக் கோவையாலும் நன்கறியக் கிடக்கின்றது. இரண்டாம் வரகுணன் தந்தையாகிய ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்பான் தன் ஆட்சியின் இறுதியில் கி.பி. 862ல் அரிசிற்போரில் தோல்வியெய்திச் சோழநாட்டையிழந்து விட்டான். அவனுக்குப் பிறகு அவ்வாண்டில் முடிசூடிய இரண்டாம் வரகுணன் தன் தந்தை இழந்த சோழ நாட்டை மீண்டும் பெறும் பொருட்டுப் படையுடன் சென்று கி.பி. 880-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருவிடை மருதூருக்கு வடக்கே மண்ணி நாட்டிலுள்ளதும் தன் பாட்டன் முதல் வரகுணனது அரண்மனையிலிருந்ததுமாகிய, இடவை நகரையும் அதனைச் சூழ்ந்த பகுதியையும் கைப்பற்றினான். அவன் சோழ நாட்டில் ஒரு பகுதியைக் கைப்பற்றியதையறிந்த பல்லவ அரசனாகிய அபராஜிதவர்மனும் சோழ மன்னனாகிய முதல் ஆதித்தனும் கங்க நாட்டு வேந்தனாகிய முதல் பிருதுவிபதியின் துணை கொண்டு வரகுண வர்மனை எதிர்த்துப் போர் புரிந்தனர். இறுதியில் கும்பகோணத்திற்கு வடமேற்கே எட்டு கி.மீ. தொலைவில் மண்ணியாற்றங் கரையில் உள்ள திருப்புறம்பயத்தில் கி.பி. 880 ல் நிகழ்ந்த பெரும் போரில் வரகுண வர்மன் தோல்வியுற்றுச் சோழ நாட்டில் தான் கைப்பற்றிய பகுதியை இழந்து தன் நாட்டிற்குத் திரும்புமாறு நேர்ந்தது. இந்நிகழ்ச்சியால் இரண்டாம் வரகுணபாண்டியன் காலத்தில் சோழ நாடு பாண்டியராட்சிக்கு உட்பட்டிருக்கவில்லை என்பது தெள்ளியது. ஆகவே மாணிக்கவாசகர் அப்பாண்டியன் காலத்தவர் அல்லர் என்பது தேற்றம். அவ்வேந்தன் கி.பி. 792 முதல் கி.பி. 835 வரையில் பாண்டி நாட்டில் அரசாண்டவன்; சோழநாடு, நடு நாடு, தொன்டை நாட்டின் தென்பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்படுத்திய பேரரசன் அவன் தொண்டை நாட்டில் பெண்ணை யாற்றங் கரையிலுள்ள அரசூரில் தங்கியிருந்தபோது திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரக் கோயிலுக்கு நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக 290 பொற்காசு வழங்கிய செய்தி அவ்வூர்க் கல்வெட்டொன்றில் காணப்படுகின்றது. ஆகவே, அவனது ஆட்சிக் காலத்தில் பாண்டியரது பேரரசு மிக்க உயர் நிலையில் இருநதது என்பது திண்ணம். எனவே, அவனைத்தான் மாணிக்கவாசகர் தம் திருச்சிற்றம்பலக் கோவையாரில் பாராட்டி யிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. பட்டினத்தடிகளும் நம்பியாண்டார் நம்பியும் முறையே திருவிடைமருதூர் மும்மணிக் கோவையிலும் கோயிற்றிருப்பண்ணியர் விருத்தத்திலும் அவனது சிவபத்தியின் பெருமையினை விளக்கியிருத்தல் காணலாம். இனி, மாணிக்கவாசகர் தம் போற்றித் திருவகவலில் ‘ மிண்டிய மாயா வாத மென்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து’ என்று கூறியிருப்பது அடிகள் சங்கராச்சாரியார் காலத்தில் இருந்தவர் என்பதை உணர்த்துதல் காணலாம். வேதாந்த சூத்திரத்திற்குச் சங்கரபாடியம் என்ற பேரூரை வரைந்து அச்சமயத்தை யாண்டும் பரப்பிய ஆதிசங்கரர் கி.பி. 788 முதல் 820 வரையில் இருந்தவர் என்பது அறிஞர்களது கருத்தாகும். எனவே, ஆதி சங்கரரும் அடிகளும் ஒரே காலப் பகுதியில் இருந்தவர்கள் என்பது வலியுறுதல் அறியத்தக்கது. இதுகாறும் விளக்கியவாற்றால் முதல் வரகுண பாண்டியன் ஆட்சிக் காலத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் மாணிக்கவாசகர் இருந்திருத்தல் வேண்டும் என்பது புலப்படுதல் காண்க. 6. இளம்பூரண அடிகளும் மணக்குடவரும் தொல்காப்பியம் என்னும் பண்டைத் தமிழிலக் கணத்திற்கு நல்லுரைகண்ட தொல்லாசிரியராகிய இளம்பூரண அடிகளின் அருமை பெருமைகளைப் புலவர் பெருமக்கள் நன்கறிவர். இவ்வடிகள், தொல்காப்பியமாகிய கருவூலத்துள் முதலிற் புகுந்து பண்டைத்தமிழ் மக்களின் வழக்க ஒழுக்க நாகரிகங்களாகிய அரும்பெறன் மணிகளை நம்மனோர்க்கு வழங்கிய பெரியார் ஆவர். சேனாவரையார், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், அடியார்க்கு நல்லார் ஆகிய மற்ற உரை யாசிரியன் மாரெல்லாம் இவரது பெருமையினை நன்குணர்ந்து இவர்பால் எத்துணை மதிப்பு வைத்திருந்தனர் என்பது அவர்கள் உரைகளால் இனிது அறியக்கிடக்கின்றது. அத்துணைப் பெருமையும் ஆற்றலும் வாய்ந்த இவ்வடிகள், தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளுக்கு ஓர் உரையும் கொங்கு வேளிரால் இயற்றப்பெற்ற பெருங்கதைக்கு ஒரு குறிப்புரையும் எழுதியுள்ளனர் என்பது இவரது உரைப்பாயிரச் செய்யுள் ஒன்றால் புலனாகின்றது. அது, ‘ தண்கட லசைவளி யுறுப்பத் திரைபிதிர்ந் தூங்கலின் பொருட்குவைப் புணரியி லையுற 1 “அலைவமன் மயரினை யகற்ற”’ லெழுத்தால் திணைதுறை யுட்கோள் இயற்றிற னறியாக் கவர்பொருண் மாக்கண் மயக்கினுக் கிரங்கிப் பாயிருங் காப்பியச் சுவைபல வுணர்ந்தகந் தோய மடுத்தோர் தொல்காப்பியனுரை முத்திற வோத்தினுக் கொத்தசீர்க் காண்டிகை சொன்னிலை மேற்கொள் தொகு1 பொருள் துணிபுடன் இயல்நூற் பாமுடி பிணைத்தபடி2 காட்டித் தலைகடை கூட்டித் தந்தனன் பண்டே கொங்குவேண் மாக்கத்தை குறிப்புரை கண்டோன் தன்னறி யளவையில் நல்லுரை தேவர் பன்மணிக் குறட்பான் மதிப்பிடப் பொறித்தோன் குணகடற் செல்லூர்3 மண்குடி பரியான் தண்முலை முகையென வெண்ணூல் சூடி யந்தணன் துறவோன் அருமறை யுணர்ந்த இளம்போதி பயந்த புனிதன் இளம்பூ ரணனுரை யினிதுவாழ்4 கீங்கென்’ என்பதாம். அடிகள் தொல்காப்பியத்திற்கு உரை யெழுதுவதற்கு முன்னரே கொங்குவேண் மாக்கதைக்குக் குறிப்புரையும் திருக்குறளுக்கு உரையும் எழுதி முடித்து விட்டனர் என்பது இவ்வுரைப் பாயிரத்தால் வெளியாதல் காண்க. இனி, திருக்குறளுக்கு, முற்காலத்தில் பதின்மர் உரை கண்டுள்ளனர் என்பது, ‘ தருமர் மணக்குடர் தாமத்தர் நச்சர் பரிமே லழகர் பருதி-திருமலையர் மல்லா பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற் கெல்லையுரை செய்தா ரிவர்’ என்னும் பழைய பாடலொன்றால் அறியப்படுகின்றது. இப்பாடலிற் குறிப்பிடப்பெற்ற பதின்மருள் இளம்பூரண அடிகள் பெயர் காணப்படவில்லை. உரையாசிரியன்மாருள் மிக முந்தியவராகிய இவ்வடிகள் திருக்குறளுக்கு ஓர் உரை யெழுதியிருப்பதை அவ்வெண்பாவைப் பாடியவர் அறிந்திருக்க மாட்டார் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்தாது. அன்றியும், திருக்குறளுக்கு உரையெழுதிய அறிஞர் எல்லோரையும் கூற வந்த அப்பெரியார், அன்னோருள் இறுதியிலிருந்த பரிமேலழகரைக் கூறிவிட்டு மிகப் பழைய உரையாசிரி யராகிய இளம்பூரண அடிகளைக் குறிப்பிடாமற் போகார் என்பது திண்ணம். ஆகவே, அவ்வெண்பா இயற்றப் பெற்ற காலத்தில் திருக்குறளுக்கு இளம்பூரணர் எழுதிய உரை வேறு பெயரோடு வழங்கியதாதல் வேண்டும். அங்ஙனமாயின் அவ்வுரை எப்பெய ரோடு வழங்கியிருத்தல் வேண்டும் என்பது ஈண்டு ஆராயற் பாலதாகும். மேலே காட்டப்பெற்ற தொல்காப்பிய இளம்பூரணர் உரைப்பாயிரத்தில் அடிகள், கீழ்கடலைச் சார்ந்த செல்லூரிற் பிறந்தவர் என்பதும், மறையில் வல்ல இளம்போதி என்பாரின் புதல்வர் என்பதும், துறவறநெறியில்நின்ற அந்தணரென்பதும், இளம்பூரணர் என்ற இயற்பெயருடையவர் என்பதும், மணக்குடி புரியான் என்ற தொல் குடியில் தோன்றியவர் என்பதும் சொல்லப் பட்டிருக்கின்றன. மணக்குடியுடையான் என்னுங் குடிப்பெயரே மணக்குடிபுரியான் என்று பாயிரத்திற் கூறப் பட்டிருக்கின்றது. இனி, நாகன்குடியுடையான், அண்டக்குடியுடையான், கடுவங் குடியுடையான், இளையான்குடியுடையான், என்னும் குடிப்பெயர்கள் முறையே நாகன்குடையான்,1 அண்டக் குடையான்,2 கடுவங்குடையான்,3 இளையான் குடையான்4 என்று முற்காலத்தில் வழங்கி வந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. எனவே, மணக்குடியுடையான் என்பதும் மணக்குடையான் என்று அக்காலத்தில் வழங்கியிருத்தல் வேண்டும். ஆகவே, இளம்பூரண அடிகள், மணக்குடையார் என்ற தன் குடிப்பெயராலும் தொடக்கத்தில் வழங்கப் பெற்றிருத்தல் கூடும்.5 அங்ஙனம் வழங்கிய நாளில் இவர் திருக்குறளுக்கு எழுதிய உரை, மணக்குடையாருரை என்று பெயர் எய்தியிருப்பதும் இயல்பேயாம். பிறகு இவர் தொல் காப்பியத்திற்கு உரை எழுதிய காலத்தில் துறவுபூண்டு சிறப்புற் றிருந்தமையின் இளம்பூரண அடிகள் என்று இயற்பெயராலேயே பாராட்டப் பெற்றிருத்தல் வேண்டும். எனவே, இளம்பூரணர் என்னும் இயற் பெயரும், மணக்குடையார் என்னும் குடிப் பெயரும் ஒருவரையே குறிப்பனவாகும். இனி, சில ஏட்டுப்பிரதிகளில் இவர் பெயர் மணக்குடையார் என்று குறிக்கப்பட்டுள்ளதாம். அன்றியும், திருக்குறளுக்கு உரை கண்ட பதின்மர் பெயர் கூறும் பழைய வெண்பா விலும் மணக்குடையார் என்றும் பாடபேதம் காணப்படுகிறது. ஆனால், இந்நாளில் மணக்குடவர் என்னும் பெயர் வழங்கு கின்றது; எனினும் மணக்குடையார் என்று வழங்குவதுதான் பொருத்த முடையது என்பது உணரற்பாலதாகும். இனி, இளம்பூரண அடிகளது தொல்காப்பிய உரையையும் மணக் குடையாரது திருக்குறள் உரையையும் ககூர்ந்து ஒப்பு நோக்கிப் பார்த்தால் இரண்டுரை நடைகளும் ஒத்திருத்தலை யாவரும் எளிதில் அறியலாம். அன்றியும், தொல்காப்பியம் - புறத்திணையியலிலும் திருக்குறளிலும் ஒழுக்க முடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, அழுக்காறாமை என்பவற்றை விளக்கியுள்ள உரைநடைப் பகுதிகள் ஒன்றாகவே அமைந்திருப்பது அறியற் பாலதாகும். தீவினையச்சம், கள்ளுண்ணாமை, கொல்லாமை, கள்ளாமை, அருளுடைமை என்பவற்றின் விளக்கவுரைகளும்இரண்டிலும் பெரும்பாலும் ஒத்திருப்பதோடு உரைநடைப் போக்கு வேறுபடாமல் ஒன்றாக அமைந்திருப்பதும் உணரத்தக்கது. அவ்வுண்மைகளை அடியிற் காண்க. இளம்பூரணர் உரை மணக்குடையார் உரை அதிகாரம் 1. ஒழுக்கமுடைமை ஒழுக்கமுடைமையாவது தம் ஒழுக்கமுடைமையாவது தம் குலத்திற்கும் இல்லறத்திற்கும் குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஒத்த ஒழுக்கமுடையராதல். ஒத்த ஒழுக்கமுடையராதல் அதிகாரம் 2. நடுவுநிலைமை நடுவுநிலைமையாவது பகைவர் நடுவுநிலைமையாவது நட்டார் மாட்டும் நட்டார் மாட்டும் மாட்டும் பகைவர் மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை ஒக்கநிற்கும் நிலைமை. அதிகாரம் 3. வெஃகாமை வெஃகாமையாவது பிறர் வெஃகாமையாவது பிறர் பொருளை விரும்பாமை பொருளை விரும்பாமை. அதிகாரம் 4. தீவினையச்சம் தீவினையச்சமாவது தீவினையச்சமாவது தீவினையைப் பிறர்க்குச் தீவினைகளைப் பிறர்க்குச் செய்தலை யஞ்சுதல் செய்யாமை அதிகாரம் 5. அழுக்காறாமை அழுக்காறாமையாவது அழுக்காறாமையாவது பிறராக்கம் முதலாயின கண்டு பிறராக்கம் முலாயின கண்டு பொறாமையால் வரும் பொறாமையால் வருகின்ற மனக் கோட்டத்தைச் செய் மனக் கோட்டத்தைச் செய் யாமை யாமை. அதிகாரம் 6. கள்ளுண்ணாமை கள்ளுண்ணாமையாவது கள் கள்ளுண்ணாமையாவது உண்டலைத் தவிர்த்தல் கள்ளுண்டலைத் தவிர வேண்டுமென்று கூறுதல் அதிகாரம் 7. கொல்லாமை கொல்லாமையாவது கொல்லாமையாவது யாதொன்றையுங் கொல்லாமை யாதோருயிரையுங் கொல்லாமை அதிகாரம் 8. கள்ளாமை கள்ளாமையாவது கள்ளாமையாவது யாதொரு பிறர்க்குரிய பொருளைக் பொருளையுங் களவிற் கொள்ளா களவினாற் கொள்ளாராதல் ராதல். அதிகாரம் 9. அருளுடைமை அருளுடைமையாவது அருளுடைமையாவது யாதானும் ஓருயிர் இடர்ப்படு யாதானும் ஓருயிர் இடர்ப்படின் மிடத்துத் தன்னுயிர் வருந்தி அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற னாற் போல வருந்தும் துன்பத்தினால் வருந்துமாறு ஈரமுடைமை. போல வருந்தும் ஈரமுடைமை. இதுகாறும் கூறியவாற்றால் திருக்குறளுக்கு இளம் பூரண அடிகள் எழுதிய உரை, மணக்குடையாருரையே யாதல் வேண்டும் என்பதும், அஃது இக்காலத்தில் மணக்குடவருரை என்று வழங்குகின்றது என்பதும், அங்ஙனம் வழங்குவது தவறு என்பதும் நன்கு விளங்குதல் காண்க. 7. தேவாரம் என்னும் பெயர் வழக்கு சைவ சமய குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநா வுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவரும் பாடியருளிய திருப்பாடல்கள் இக்காலத்தில் தேவாரம் என்று வழங்கப்படு கின்றன. பத்து அல்லது பதினொரு பாட ல்களைக் கொண்ட அவர்களுடைய பதிகங்களும் தேவாரம் பதிகங்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால் தேவாரம் என்ற பெயரை மூவர் பாடல்கள் எப்போது பெற்றன என்பதும் அவை அப்பெயர் எய்தியமைக்குக் காரணம் யாது என்பதும் இதுகாறும் ஆராய்ந்தறியப் படவில்லை. எனினும், தேவாரம் என்பதன் பொருள் யாது என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. அது, தேவாரம் என இருமொழிகளாகப் பிரிந்து கடவுள் மீது பாடப்பெற்ற சொல்லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் என்று பொருள்படும் என்பர் சிலர். அன்னோர் இப்பொருளுக்கு ‘வாரம் பாடுந் தோரிய மடந்தையும்’ 1 என்ற சிலப்பதிகாரவரியை மேற்கோளாக எடுத்துக் காட்டுவர். வேறுசிலர், வாரம் என்பது அன்பு எனப் பொருள்படும் என்றும், ஆகவே அத்தொடர் கடவுளிடத்து அன்பை உண்டு பண்ணுவது என்ற பொருளைத்தரும் என்றும் உரைப்பர். மற்றுஞ் சிலர் அதனையே தே+ஆரம் எனப்பிரித்து அது கடவுளுக்குச் சூட்டப் பெறும் பாமாலை என்ற பொருளையுணர்த்தும் என்று கூறுவர். ஈண்டு ஆரம் என்பது ஹாரம் என்ற வடசொல்லின் திரிபென்பது அன்னோர் கருத்து. இவையெல்லாம் சொல் கிடந்த முறையில் அவர்கள் கண்ட பொருளே எனலாம். அதன் முதற்காலத்தில் எப்பொருளில் வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆரய்வது இன்றியமையாத தாகும் . சமயகுரவர்களாதல், ஒன்பதாந் திருமுறையாசிரியர்களாதல், பட்டினத்தடிகள் நம்பியாண்டார் நம்பி ஆகிய பெரியோர்களாதல் தேவாரம் என்னும் சொல்லைத் தம் பாடல்களில் யாண்டும், குறித்தாரில்லை. சேக்கிழாரும் தம் பெரியபுராணத்தில் அச்சொல்லை எடுத்தாளவில்லை. ஆகவே பட்டினத்தடிகள், நம்பியாண்டார்நம்பி, சேக்கிழார் ஆகிய சைவப் பெரியார் காலங்களில் மூவர்பாடல்கள் தேவாரம் என்று வழங்கப்படவில்லை என்பது தெள்ளியது. எனவே சேக்கிழார் காலத்திற்குப் பிறகே அவை தேவாரம் என்ற பெயரை எய்தி யிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி அப்பாடல்களைத் தேவாரம் என்ற பெயருடன் தமிழ் நூலில் முதலில் வழங்கியவர் யாவரெனின் அன்னோர் புலவர் பெருமக்களாகிய இரட்டையரேயாவர்அவ்வுண்மையை அவர்கள் பாடிய ஏகாம்பரநா தருலாவிலுள்ள, ‘ மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்த திருப்பாட்டும்’ என்ற அடிகளால் அறியலாம். அவர்கள் தம் உலாவில் மல்லிநாத சம்புவராயனைப் பாராட்டியிருத்தலால் அவ்வேந்தன் காலத்தில் இருந்தவராதல் வேண்டும். அவன் தொண்டை மண்டலத்தில் படைவீட்டு இராச்சியத்தில் கி.பி.1321 முதல் 1339 முடிய அரசாண்ட வென்றுமண் கொண்ட சம்புவ ராயனுடைய புதல்வன்; இராச நாராயண மல்லிநாத சம்புவராயன் என்ற பெயருடன் கி. பி. 1336 முதல் 1373 வரையில் அங்கு ஆட்சி புரிந்தவன்1; வீரசம்பன் என்ற சிறப்புப் பெயருடையவன். அவ்வரசனைத் தம் உலாவில் புகழ்ந்துள்ள இரட்டையரும் அவன் ஆட்சிக்காலமாகிய கி.பி.பதினான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் நம் தமிழகத்தில் வாழ்ந்தவர் ஆவர். ஆகவே கி.பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கப்பெற்று வருகின்றன என்பது நன்கு தெளியப்படும். இனி, கி.பி. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் அரசாண்ட சோழமன்னர்களின் கல்வெட்டுக்களில் தேவாரம் என்ற சொல் காணப்படுகின்றது. அக்காலத்தில் அச்சொல் எப் பொருளில் வழங்கப் பெற்றுள்ளது என்பது ஆராய்தற்குரியதாகும். முதல் இராஜேந்திரசோழன் ஆட்சியில் தஞ்சைப் பெரிய கோயிலில் வரையப்பெற்றுள்ள ‘பெரிய பெருமாளுக்குத் தேவார தேவராக எழுந்தருளு வித்த தேவர் பாதாதிகேசாந்தம் ஐவிரலே இரண்டுதோரை உசரத்து நாலு ஸ்ரீஹஸ்தமும் உடையவராகக் கனமாகப் பித்தளையால் எழுந்தருளு வித்த சந்திரசேகரதேவர் திருமேனி ஒன்று1’ என்ற கல்வெட்டுப் பகுதியில் தேவாரம் என்னும் சொல் வந்துள்ளது. முதல் இராசராசசோழன் அரசியலதி காரிகளில் ஒருவனும் பொய்கை நாட்டுத் தலைவனும் ஆகிய ஆதித்தன் சூரியன் தென்னவன் மூவேந்த வேளான் என்பான், அப்பெருங்கோயிலில் அதனை எடுப்பித்த இராசராசசோழன் படிமத்தையும், அவனுடைய வழிபடுகடவுள் சந்திரசேகரர் திருமேனியையும் கி.பி. 1015- ஆம் ஆண்டில் எழுந்தருளுவித்த செய்தியை அக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதில் பயின்றுவரும் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் வந்திருத்தல் அறியத்தக்கது. அவ்வேந்தனது மற்றொரு கல்வெட்டிலும் தேவாரம் என்ற சொல் காணப்படுகிறது; அஃது ‘உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலுனுள்ளால் முடிகொண்ட சோழன் திருமாளிகையில் வடப்பக்கத்து தேவாரத்துச் சுற்றுக் கல்லூரியில் தானஞ் செய்தருளாயிருந்து உடையார் ஸ்ரீ இராஜராஜ ஈசுவரமுடையார் கோயிலில் ஆசார்ய போகம் நம் உடையார் சர்வசிவபண்டித சைவாசாரியர்க்கு’2 என்ற கல்வெட்டுப் பகுதியில் இருத்தல் காண்க. இக்கல் வெட்டில் குறிக்கப் பெற்ற கோயில் என்பது அரண்மனையாகும். தேவாரம் என்பது அரசன் நாள்தோறும் தன் வழிபடு கடவுளைப் பூசித்தற்கு அரண்மனையில் அமைத்திருந்த வழிபாட்டறையாகும். ஆகவே, இக்கல்வெட்டில் வந்துள்ள தேவாரம் என்ற சொல் வழிபாடு நிகழ்ந்து வந்த இடத்தைக் குறித்தல் உணரத்தக்கதாம். அம் முதல் இராசேந்திh சோழனது ஆட்சிக்காலத்தில் கி.பி1017 ஆம் ஆண்டில் நாங்கூருடையான் பதஞ்சலிபிடாரன் என்பவன் தேவார நாயகம் செய்பவனாயிருந்தான் என்று கும்பகோணம் தாலூகா மானம்பாடியிலுள்ள கல்வெட் டொன்று1 கூறுகின்றது. அக் கல்வெட்டில் தேவாரநாயகம் என்ற தொடரைக் கண்ட ஆராய்ச்சியாளர் எல்லோரும், கோயில் களில் தேவாரம் பாடுவோரைக் கண்காணித்தற் பொருட்டு முதல் இராசேந்திர சோழன் அமர்த்தியிருந்த ஓர் அதிகாரியே தோவாரக நாயகம் ஆவன் என்று உறுதி செய்து விட்டனர்.2 சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சமயகுரவர் மூவர் பதிகங்களும் கோயில்களில் வழிபாடு நடைபெற்றபோது இசையுடன் பாடப்பெற்று வந்தன என்பது ஆங்காங்குக் காணப் படும் பல கல்வெட்டுக் களால் நன்கறியப்படுகிறது. ஆனால், தேவாரநாயகம் என்ற அதிகாரி ஒருவன் கோயில் தோறும் சென்று அந்நிகழ்ச்சிகளைக் கண்காணித்த செய்தியாதல் அவன் அங்ஙனம் கண்காணித்த ஞான்று கண்ட குறைபாடுகளை நீக்கியமை யாதல் அவன் செய்த பிற சீர்திருத்தங்களாதல் அவ்வேந்தர்களின் கல்வெட்டுக் களில் யாண்டும் காணப்பட வில்லை. கோயில்களில் நாள் வழிபாடு, திங்கள் விழா, ஆண்டுவிழா முதலானவற்றை நடத்துவதற்கு ஸ்ரீகாரியஞ் செய்வான் என்ற அதிகாரி ஒருவன் அந்நாளில் அரசனால் அமர்த்தப் பெற்றிருந்தான் என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது.3 அவனே அவ்வக் கோயிலில் திருப்பதிகம் பாடுவோரை மேற்பார்க்கும் கடமையுடையவன் ஆவன். எனவே, அதன் பொருட்டுத் தனி அதிகாரி ஒருவன் அரசனால் அமர்த்தப் பெற்றிருந்தான் என்று உறுதி செய்துவிடல் ஏற்புடைத்தன்று. அன்றியும் ஸ்ரீகாரியஞ் செய்வோரையும் கண்காணித்தற் பொருட்டு ‘ஸ்ரீ காரியக் கண்காணிநாயகம்’ என்ற தலைமையதிகாரி ஒருவன் அக்காலத்தில் இருந்தமை குறிப்பிடத் தக்கது.4 இனி, தேவார நாயகம் என்போன் சிவன் கோயில்களில் திருப்பதிகம் பாடுவோரைத்தான் கண்காணித்தல் கூடும். அங்ஙனமாயின் திருமால் கோயில்களில் திருவாய்மொழி முதலானவற்றைப் பாடிவந்தவர்களைக் கண்காணித்தவன் ஒருவன் இருத்தல் வேண்டுமன்றோ? சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திருமால் கோயில்களில் திருவாய்மொழி பாடப்பெற்று வந்தமை பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக் கின்றது. ஆனால், அந்நிகழ்ச்சகிளைக் கண்காணித்தற்குத் திருவாய்மொழி நாயகம் என்ற அதிகாரி இருந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, தேவாரநாயகம் என்பவன் வேறோர் அலுவல் புரிந்து வந்த அதிகாரியாயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அரசன் நாள்தோறும் தன் அரண்மனையில் நிகழ்த்தி வந்த வழிபடு கடவுள் பூசையில் அதற்குரிய பணிகளைச் செய்து வந்த பணி மக்களைக் கண்காணிக்கும் அலுவல் பார்த்த அதிகாரியே தேவார நாயகம் என்று வழங்கப் பெற்றனன் என்பது நுணுகியாராயு மிடத்து நன்கு புலனாகிறது. எனவே, அரசனது நாள்வழி பாட்டிற்குரிய பணிகளை மேற்பார்ப்பவன் என்பதே அத் தொடரின் பொருளாகும். அதிலுள்ள ‘தேவாரம்’ என்ற சொல் வழிபாடு என்று பொருள்படுதல் அறிக. தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருக்களர்க் கல்வெட்டொன்றிலும் திருச்சிராப்பள்ளி ஜில்லாவிலுள்ள அல்லூர்க் கல்வெட்டொன்றிலும் தேவாரம் என்ற சொல் காணப் படுதலால் அவற்றையும் ஆராய்தல் இன்றியமையாத தாகும். அக்கல்வெட்டுப் பகுதிகள். ‘நம் தேவாரத்துக்குத் திருப்பதிகம்பாடும் பெரியயோன் மறைதேடும் பொருளான அகளங்கப்பிரியனுக்கும்.......... வம்சத் தார்க்கும் காணியாக..... செய்யக்கடவன எல்லாம்....... செய்யப் பண்ணி இப்படிக் கல்வெட்டப் பண்ணுக - இது திருவாய்மொழிந் தருளின திருமுகப்படி1 (திருக்களர்க் கல்வெட்டு)’ ‘உரையூர்க்கூற்றத்து திருவடகுடி மகாதேவர் ஸ்தானமடம் தேவாரத்துககுத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக்கரையனுக்கும் இவன் வர்க்கத்தாருக்கும் தான நிமித்தமாகக் கொடுத்தோம். மடபோகமாக நித்தம் தூணிநெல் கொள்ளச் சொன்னோம்1’ (அல்லூர்க்கல்வெட்டு) என்பனவாம். இவ்விரு கல்வெட்டுக்களிலும் ‘நம் தேவாரத்துக்குத் திருப்பதியம்பாடும் பெரியான் மறைதேடும் பொருளான அகளங்கப்பிரியன்’ எனவும் ‘ஸ்தானமடம் தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பஞ் செய்யும் அம்பலத்தாடி திருநாவுக் கரையன்’ எனவும் அமைந்துள்ள தொடர்கள் கூர்ந்து நோக்கற் பாலவாகும். அவை அரண்மனையிலும் கோயிலைச் சார்ந்த மடத்திலும் நடைபெற்றுவந்த நாள் வழிபாடுகளில் திருப்பதிகம் பாடியவர் இருவர் பெயர்களைக் கூறுகின்றன. அன்றியும், ‘தேவாரத்துக்குத் திருப்பதியம்’ என்ற தொடரே தேவாரம் வேறு திருப்பதியம் வேறு என்பதை நன்கு வலியுறுத்துதல் அறியத் தக்கது. கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பெற்ற இக் கல்வெட்டுக்களில் பயின்றுவரும் தேவாரம் என்ற சொல் வழிபாடு என்னும் பொருளில் அமைந்துள்ளமை காண்க. இனி முதற்குலோத்துங்க சோழன் கி.பி. 1110-ஆம் ஆண்டில் தொண்டை நாட்டிலுள்ள தக்கோலத்தில் திருவூறலிறைவனை வழிபட்டபிறகு அவ்வூர் மண்டபம் ஒன்றில் பகலில் தங்கியிருந்த செய்தி காஞ்சிமாநகரில் உள்ள கல்வெட்டொன்றில்2 காணப் படுகிறது. அதில் வேந்தன் ‘திருவூறலிறைவனை வழிபட்ட நிகழ்ச்சி’யை உணர்த்தும் பகுதி ‘திருவூறல்பெருமானைத் தேவாரஞ் செய்து’ என்று குறிக்கப்பெற்றுள்ளது. ஆகவே சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தேவாரம் என்ற சொல் வழிபாடு (பூசை) என்னும் பொருளில் வழங்கி வந்தது என்பது நன்கு துணியப்படும். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் திருமுனைப்பாடி நாட்டில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த பல்லவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டொன்றில் தேவாரம் என்னுஞ் சொல் வழிபாடு என்னும் பொருளில் வந்துளது. செய்யுள் வடிவத்திலுள்ள அக்கல்வெட்டு,3 ‘ பொன்னி நாடனு முரிமையு மமைச்சரு மிருப்பதுன் சிறைக்கோட்டம் பொறுப்பிரெண்டன வளர்ந்ததோள் வலியினாற் கொண்டது சோணாடு கன்னி காவிரி பகிரதி நின்பரி யாடுதண் துறைவாவி காவல் மன்னவர் திறையுடன் வணங்குவது உன்பெருந் திருவாசல் வென்னி டாதபோர்க் கன்னடர் வென்னிடப் பொருததுன் பெருஞ்சேனை விளங்கு செம்பொனின் அம்பலக் கூத்துநீ விரும்பிய தேவாரம் பின்னி காவல அவனிநா ராயண பேணு செந்தமிழ் வாழப் பிறந்த காடவ கோப்பெருஞ் சிங்கனின் பெருமையார் புகழ்வாரே’ என்பதாம். இதுகாறும் விளக்கியவாற்றால் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் கல்வெட்டுக்களில் வந்துள்ள தேவாரம் என்பது வழிபாடு என்னும் பொருளில் வழங்கப் பெற்றுள்ளமை தெள்ளிதிற் புலனாகும். கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த கொற்றங்குடி உமாபாதிசிவாசாரியார் தம் கோயிற் புராணத்தில் ‘தப்பற்றுயர் தவ மூவா யிரவர்கள் தாவா மறையொடு தேவாரங், கைப்பற்றிய பணிமுற்றப் புலிமுனி கழலான் விழவெழு தொழில் செய்வான்’ என்று கூறியிருத்தலால் அவர்காலத்திலும் தேவாரம் என்பது வழிபாடு என்னும் பெருளில் வழங்கியுள்ளமை உணரற்பாலது. ஆகவே கல்வெட்டுக்களால் அறியப்பெற்ற இப்பொருள் நூல் வழக்காலும் உறுதியெய்துதல் காண்க. எனவே இறைவழி பாட்டில் (தேவாரத்தில்) ஓதப்பெற்று வந்தமைபற்றி மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கப் பெற்றனவாதல் வேண்டும். அவ்வருட்பாடல்களைத் தேவாரம் என்று தம் நூலில் முதலில் குறிப்பிட்டோர் இரட்டையரே என்பது முன்னர் விளக்கப் பெற்றது. ஆகவே, அப்புலவர்களின் காலமாகிய கி.பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கி வருகின்றன என்பது தேற்றம். இதுகாறும் கூறியவாற்றால் முற்காலத்தில் தோவாரம் என்பது வழிபாடு என்ற பொருளில் வழங்கியது என்பதும் வழிபாட்டில் பாடப்பெற்று வந்தவைப் பற்றி, கி.பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் மூவர் பாடல்கள் தேவாரம் என்று வழங்கப் பெற்று வருகின்றன என்பதும் அதற்கு முன்னர் அப்பாடல்கள் அப்பெயரால் வழங்கப்பெற்றமைக்குக் கல்வெட்டுச் சான்று களாதல் இலக்கியச் சான்றுகளாதல் கிடைக்கவில்லை என்பதும் நன்கு புலப்படுதல் காண்க. 8. தேவாரப் பதிகங்களிற் குறிக்கப்பெற்ற சில கோயில்களின் பெயர்க்காரணம் பண்டைத் தமிழ் நூல்களை ஆராயுங்கால் சிவபெருமான், முருகவேள், கண்ணன், பலதேவன் ஆகிய கடவுளர்க்குத் தமிழகத்திலுள்ள பல ஊர்களிலும் கடைச்சங்க நாளில் ஆலயங்கள் இருந்தன என்பது இனிது புலனாம். இந்நாற்பெருந் தெய்வங்களையும் ‘ஞாலங்காக்குங் கால முன்பிற் - றோலா நல்லிசை நால்வர்’ என்று ஆசிரியர் நக்கீரனார் புகழ்ந்து கூறியுள்ளனர். காவிரிப் பூம்பட்டினம், மதுரை ஆகிய தலை நகரங்களிலிருந்த கோயில்களைக் கூறத் தொடங்கிய ஆசிரியர் இளங்கோவடிகள் முறையே ‘பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்’ எனவும் ‘நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும்’ எனவும், சிவபெருமானது கோயிலையே முதலில் குறித்திருப்பது அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுள் பெரும்பகுதியினர் சைவசமயத்தைக் கைக்கொண் டொழுகினர் என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்தும். அன்றியும், மணிமேகலையின் ஆசிரியராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் காவிரிப்பூம் பட்டினத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருந்த தெய்வங் களைக் கூறுமிடத்து, ‘நுதல்விழி நாட்டத் திறையோன் முதலா-பதிவாழ் சதுக்கத்துத் தெய்வ மீறாக’ என்று சுருக்கச் சொல்லி விளங்க வைத்துள்ளனர். பௌத்தக் கொள்கையினரான இவ்வாசிரியரும் சிவபெருமானையே முதலில் வைத்துக் கூறியிருப்பது ஈண்டு அறியத்தக்கது. எனவே, கடைச்சங்க காலத்தில் சைவசமயம் மிகச் சிறந்த நிலையிலிருந்தது என்பது தேற்றம். ஆனால், அக்காலத்திய சிவாலயங்களை இந்நாளில் காண்பது அரிதாகும். ஆதலின், அப்பழங்காலத்துக் கோயில்களின் அமைப்பு எவ்வாறிருந்தது என்பது புலப்படவில்லை. ஆயினும், அக்கோயில்கள் செங்கற்களினால் எடுப்பிக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது மாத்திரம் அறியப்படுகின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நம் தமிழகத்தின் வடபகுதியை ஆட்சிபுரிந்த முதல் மகேந்திரவர்மன் என்னும் பல்லவ மன்னனே சிறு குன்றுகளைக் குடைந்தும் கற்பாறைகளைக் கொண்டும் நம் நாட்டில் கருங்கற் கோயில்களை முதலில் அமைப்பித்தவன். சைவசமய குரவருள் ஒருவராகிய அப்பரடிகள் இவ்வேந்தன் காலத்தில் விளங்கியவர். அமண் சமயத் தொடர்புடையவனாய் அவ்வடிகளைப் பல்வகையானும் துன்புறுத்திய இம்மன்னன் பின்னர்ச் சைவசமயத்தைச் சார்ந்து சிவபெருமானுக்குக் கோயில்கள் எடுப்பித்து வழிபட்டமை அறிதற்குரியது. இவன் புதல்வனும் மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் உடையவனும் ஆகிய முதல் நரசிங்கவர்மன் ஆட்சிக் காலத்தில்தான் திருஞானசம்பந்த அடிகள் திகழ்ந்தனர். ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த பல்லவ அரசனாகிய இரண்டாம் நரசிங்கவர்மன் காலத்தில் நிலவியவர் சுந்தரமூர்த்திகள். எனவே சைவ சமய குரவர் மூவரும் வாழ்ந்த காலம் பல்லவ மன்னர்கள் அரசாண்ட ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளேயாம். இப் பல்லவ வேந்தர்களே சில கற்றளிகளை எடுப்பித்தனர். பிறகோயில்களெல்லாம் செங்கற் கோயில்களாகவே இருந்தன. அவற்றை யெல்லாம் ஆராய்ந்தால் கோயில்களின் அமைப்பும், சிற்ப நுட்பங்களும், அவற்றின் வளர்ச்சியும் பிற வரலாறுகளும் நன்கு விளங்கும். இனி, சமயகுரவர்கள் அருளிய தேவாரப் பதிகங்களில் சில திருப்பதிகளிலுள்ள கோயில்களுக்குப் பெயர்கள் குறிக்கப் பெற்றிருத்தல் அறியற்பாலது. அப்பெயர்கள் சில ஏதுக்கள் பெற்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். அவற்றுள் சிலவற்றை அடியிற் காண்க: திருப்பதிகளின் அங்குள்ள கோயில்களின் பெயர் பெயர் 1. காவிரிப்பூம்பட்டினம் பல்லவனீச்சுரம் 2. பழையாறை பட்டீச்சுரம் 3. திருப்பனந்தாள் தாடகேச்சுரம் 4. திருநறையூர் சித்தீச்சுரம் 5. கொட்டையூர் கோடீச்சுரம் 6. உறையூர் மூக்கீச்சுரம் 7. நன்னிலம் பெருங்கோயில் 8. குடவாயில் பெருங்கோயில் 9. கீழ்வேளூர் பெருங்கோயில் 10. அம்பர் பெருங்கோயில் 11. நல்லூர் பெருங்கோயில் 12. தண்டலை நீணெறி பெருங்கோயில் 13. தலைச்சங்காடு பெருங்கோயில் 14. திருக்கச்சூர் ஆலக்கோயில் 15. திருக்கடம்பூர் கரக்கோயில் 16. திருக்கடம்பூர் ஞாழற்கோயில் 17. திருக்கருப்பறியலூர் கொகுடிக்கோயில் 18. திருமீயச்சூர் இளங்கோயில் 19. திருமீயச்சூர் மணிக்கோயில் 20. பெண்ணாகடம் தூங்கனைமாடம் 1. ஈச்சுரம் :- இங்குக் குறிக்கப்பெற்ற கோயிற் பெயர்களுள் ‘ஈச்சுரம்’ என்று முடிவன சில. அவற்றுள், காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சுரம் என்பது பல்லவ மன்னன் ஒருவன் திருப்பணி புரிந்து வழிபட்டதாகும். இங்ஙனமே பட்டி, தாடகை என்போர் வழிபட்ட கோயில்கள் முறையே பட்டீச்சுரம், தாடகேச்சுரம் என்று வழங்கப் பெற்றன. பிறவும் இத்தகையவே. பதி னொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் முதல் இராசராசசோழனும் அவனது மகனும் எடுப்பித்து வழிபட்ட கோயில்கள் முறையே இராசராசேச்சுரம், கங்கை கொண்ட சோழேச்சுரம் என்று வழங்கப்பட்டு வருதல் இதற்குச் சான்றாகும். குறுநில மன்னர் அமைச்சர் முதலானோர் தம் அரசர் பெயரால் கோயில் எடுப்பித்து நிபந்தங்கள் விடுவதும் பழைய வழக்கமாகும். முதற் குலோத்துங்க சோழன் காலத்திய தலைவர்களுள் ஒருவனான இலங்கேசுவரன் ஆகிய உத்தமசோழ வாண கோவரையன் என்பான் கீழைப்பழுவூரில் கி.பி 1102ல் ஒரு கற்றளி எடுப்பித்து அதற்குக் குலோத்துங்க சோழேச்சுரம் என்று பெயரிட்டு நாள் வழிபாட்டிற்குத் தில்லைக்குடி என்ற ஊரையும் இறையிலியாக அளித்துள்ளான். (ஐளே. சூடிள. 390, 392 & 393 டிக 1924). இவ்வாறு எடுப்பிக்கப்பெற்ற கோயில்கள் நம் நாட்டில் பல உள்ளன. அன்றியும், இறந்த வேந்தர்களை நினைவு கூர்தற்குக் கோயில்கள் எடுப்பித்தலும் உண்டு. அவை ‘பள்ளிப் படை’ என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இங்ஙனம் எடுப்பிக்கப்பெற்ற கோயில் ஒன்று பட்டீச்சுரத்திற்கு அண்மையில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் உள்ளது. அதனை இப்போது இராமநாதன் கோயில் என்று வழங்குகின்றனர். அது ‘பஞ்சவன் மாதேவீச்சுரம்’ என்ற பெயருடையது என்பது அக்கோயிலிலுள்ள ஒரே கல்வெட்டால் புலப்படுகின்றது. பஞ்சவன் மாதேவி என்ற அரசி இறந்த பின்னர், பள்ளிப் படையாக அங்கு அது எடுப்பிக்கப்பெற்றது என்பது அக்கல் வெட்டால் அறியப்படும் மற்றொரு செய்தியாகும். (ஐளே. சூடிள. 271 டிக 1924) வட ஆர்க்காடு சில்லா மேற்பாடியிலுள்ள ஒரு கோயில் ‘அரிஞ்சயேச்சுரம்’ என்ற பெயருடன் உள்ளது. அதனை இக்காலத்தில் ‘சோழேச்சுரம்’ என்று வழங்குகின்றனர். அது முதல் இராசராசசோழன் பாட்டனாகிய அரிஞ்சயன் இறந்த பிறகு அவனுக்குப் பள்ளிப்படையாக எடுப்பிக்கப் பெற்றது என்பதை அடியில் வரும் கல்வெட்டினால் அறியலாம். (1) ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந்த (2) னக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சா (3) லை கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியும் நுளம்ப (4) பாடியுந் தடிகை பாடியுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும் (5) எண்டிசை புகழ்தர வீழமண்டலமுந் திண்டி (6) றல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் வளர ரூழி யெல்லாம் (7) யாண்டுந் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொ (8) ள் ஸ்ரீ கோராஜ ராஜ ராஜகேசரி வன்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு (9) 29-ஆவது ஐயங் கொண்ட சோழ மண்டலத்துப் பெரும்பாணப்பாடித்து ஞாட்டு (10) மேற்பாடியான் ராஜாஸ்ரயபுரத்து ஆற்றூர்த்துஞ் சின தேவற்குப் பள்ளிப்படை (11) யாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜ தேவர் எடுப்பித்தருளின திருவரிஞ்சீஸ்வரத்து (12)1மகாதேவற்கு வெண்குன்றக் கோட்டத்து மருதநாட்டு வெள்ளாளன் அருவாக் (13) கிழான் முத்திகண்ட நேன் வைத்த திருநந்தாவிளக்கு ஒன்றினுக்கு (14) வைத்த சாவா மூவாப் பேராடு தொண்ணுற்றாறுங் கைக் கொண்டு (15) நிசதம் உழக்கு நெய் ராஜகேசரியால் சந்திராதித்தவல் அட்டுவதானேன் இராஜா சிரயபுரத்து (16) இடையன் ஏணி கெங்காதிரனேன். ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஐஐ சூடி. 17 . 2. பெருங்கோயில் :- சில கோயில்கள் பெருங்கோயில்கள் என்று தேவாரப் பதிகங்களில் குறிக்கப் பெற்றுள்ளன. அவற்றையே மாடக் கோயில்கள் என்று கூறுவதும் உண்டு. இப் பெருங்கோயில்களெல்லாம் அறுபத்து மூன்று நாயன்மார் களுள் ஒருவரும் பழைய சோழமன்னருமாகிய கோச்செங்கட் சோழரால் எடுப்பிக்கப் பெற்றனவாகும். இதனை, ‘எண்டோளீ சர்க்கெழின் மாடம் எழுபது செய் துலகாண்ட செங்கட்சோழர்’ என்னுந் திருமங்கை மன்னன் திருவாக்கினால் உணரலாம். அன்றியும், ‘ வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசை செம்பியன் கொச்செங் கணான்செய் கோயிலே’ எனவும் ‘ அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க் குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே’ எனவும் ‘ செருவ ருந்திய செம்பியன் கோச்செங்கண் நிருபர் தண்டலை நீணெறி காண்மினே’ எனவும் ‘ கோடுயர் வெங்களிற்றுத் திகழ்கோச் செங்கணான் செய்கோயில் நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனை’ எனவும் போதரும் சைவசமய குரவர்களது திருவாக்குகளினாலும் இச்செய்தி வலியுறுத்தல் காண்க. பெருங்கோயில்களெல்லாம் செய்குன்றுகள் மேல் எடுப்பிக்கப் பெற்றவை. எனவே, இவற்றை மலைக் கோயில்கள் என்றும் கூறலாம். திருஞானசம்பந்தப் பெருமான் திருநல்லூரிலுள்ள பெருங் கோயிலை ‘மலைமல்கு கோயில்’ என்று கூறியிருப்பது அதன் அமைப்பை ஒருவாறு உணர்த்துவதாகும். அப்பரடிகள் காலத்தில் நம் தமிழ் நாட்டில் எழுபத்தெட்டுப் பெருங்கோயில்கள் இருந்தன வென்பது, ‘ பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் பெருங்கோயி லெழுபதினோ டெட்டு மற்றும் கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில் இருக்கோதி மறைவர்கள் வழிப்பட் டேத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில் திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீ வினைகள் தீருமன்றே. என்னும் அவ்வடிகளது திருவாக்கினால் அறியப்படுகின்றது. சமயகுரவர்கட்குப் பின்னர் வாழ்ந்த தமிழ் வேந்தர்களாக எடுப்பித்த பெருங்கோயில்களும் நம் நாட்டில் பல உண்டு. 3. ஞாழற்கோயில் :- மேற்குறித்த பாடலில் வந்துள்ள கோயில்களுள் ஞாழற் கோயிலும் ஒன்றாகும். இக் கோயில் எங்குளது என்பதைத் தேவாரப் பதிகங்களின் துணைக் கொண்டு அறிய இயலவில்லை. ஆயினும், சில கல்வெட்டுக்கள் இச்செய்தியை உணர்த்துகின்றன. அவற்றுள் ஒன்றை அடியிற் காண்க: ஸ்வஸ்திஸ்ரீ மதுரைகொண்ட கோப்பரகேசரி வன்மாக்கி யாண்டு பதினெட்டாவது வடகரைத் தேவஸ்தானம் பாதிரிப் புலியூர்த் திருக்கடை ஞாழற் பெருமானடிகளுக்கு (2) த் திருவுண்ணாழிகைக் கணப்பெருமக்கள் வழி தென்கரைத் தேவதானம் பெருமாக்களூர் ஆஸ்வலாயன சூத்தரத்து... கோத்தரத்து நாராயணஞ் (3) சேந்தனிடை யொருதிருவமிர்துக்கு வேண்டும் முதலிவனிடைக் கொண்டோம் இது சந்திராதித்தவல் செலுத்துவோமானோந் திருவுண்ணாழிகைக் கணப் (4) பெருமக்களோம். (ளு.ஐ.ஐ. ஏடிட. ஏஐஐ சூடி. 744) இக்கல்வெட்டினால் திருப்பாதிரிப்புலியூரிலுள்ள கோயில் முற்காலத்தில் ஞாழற்கோயில் என்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டு மென்பது வெளியாகின்றது. அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானும் ஞாழற் பெருமானடிகள் என்று இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டிருப்பது உணரற்பாலது. ஞாழல் என்பது ஒரு மரத்தின் பெயர். அம்மரத்தினடியில் எழுந்தருளியுள்ள பெருமான் ஞாழற்பெருமான் என்று வழங்கப் பெற்றனராதல் வேண்டும். ‘திருவாழுங்கடை ஞாழற்சினை யமரும்’ என்ற மற்றொரு கல்வெட்டுப் பகுதியினாலும் இச்செய்தி வலியுறும். எனவே, ஞாழல் மரத்தின் கீழ் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலை ஞாழற்கோயிலென்றும் வழங்கியிருப்பது சாலப் பொருந்துமென்க. 4. கொகுடிக்கோயில் :- சமய குரவர்களால் குறிக்கப் பெற்ற மற்றொரு கோயில் கொகுடிக் கோயிலாகும். இது திருக்கருப்பறியலூரின்கண் உள்ள கோயில் என்பது தேவாரப் பதிகங்களால் அறியக் கிடக்கின்றது. இவ்வூர் இந்நாளில் தலைஞாயிறு என்று வழங்கப் பெறுகின்றது.இதனை மேலைக்காழி என்றுங் கூறுவர். இது சீர்காழிக்கு மேற்கே 9 கி.மீ. தூரத்திலுள்ளது. கொகுடி என்பது ஒருவகை முல்லையாதலின் அம்முல்லை செறிந்துள்ள ஓரிடத்தில் அமைந்த பெருங்கோயில் கொகுடிக் கோயில் என்று வழங்கப் பெற்றது. நேரிற் சென்று பார்த்தபோது இவ்வுண்மை புலப்பட்டது. 5. இளங்கோயில் :- தேவாரப்பதிகத்தில் குறிக்கப் பெற்ற வேறொரு கோயில் இளங்கோயில் ஆகும். இது திருமீயச்சூரின்கண் உள்ளது. பழைய கோயிலைப் புதுக்குங்கால் அதற்கு அண்மையில் இறைவனை எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்த கோயில் இளங்கோயில் ஆகும். சேய்மையிலுள்ளார் தாம் வழிபடும் கடவுளைத் தம்மூர்க் கணித்தாக எழுந்தருளுவித்து எடுப்பித்த கோயிலும் இளங்கோயில் என்று வழங்கப் பெறும். இனி, கோயில்களிலுள்ள திருச்சுற்று மாளிகைகளில் சில சிவலிங்கங்கள் இருத்தலை என்றும் காணலாம். அவற்றை அகத்தியர், வசிட்டர், விசுவாமித்திரர் முதலான முனிபுங்கவர்கள் எழுந்தருளுவித்துப் பூசித்துச் சென்றனர் என்று கூறுவது இற்றைநாள் வழக்கும்; தல புராணங்களும் இங்ஙனமே கூறுகின்றன. உண்மைச் செய்தியோ இதற்கு மாறாக உளது. எடுத்துக் காட்டாகச் சிலவற்றை அடியிற் காணலாம். கும்பகோணத்திற்கு வடமேற்கே 8 கி.மீ.யில் உள்ள திருப்புறம்பயம் சிவாலயத்தில் திருச்சுற்று மாளிகையில் சில சிவலிங்கங்கள் உள்ளன. அவற்றை அகத்தியர், புலத்தியர் முதலானோர் எழுந்தருளுவித்து வழிபாடு புரிந்தனர் என்பது புராணத்திற் காணப் பெறுஞ் செய்தியாகும். ஆனால், அக்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு விழுப்பரையன் என்ற தலைவன் ஒருவன் வன்மீகமுடையாரையும் திருவலஞ்சுழியுடை யாரையும் முதற் பிரகாரத்தில் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிபந்தம் விட்டனன் என்று கூறுகின்றது. எனவே, ஆரூரிறை வனிடத்தும் வலஞ்சுழிப் பெருமானிடத்தும் பேரன்பு பூண்டு ஒழுகி வந்த அத்தலைவன் புறம்பயத்துள்ள ஆலயத்தில் அக் கடவுளரை எழுந்தருளுவித்தனன் என்பது நன்கு வெளியாதல் காண்க. கும்பகோணத்தில் நாகேசுவரர் ஆலயம் என்று வழங்கபெறும் குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் முதற் பிரகாரத்தில் செம்பியன் பல்லவராயன் என்ற தலைவன் திருப்புறம்பயமுடைய பெருமானை எழுந்தருளுவித்து வழி பாட்டிற்குப் பதினேழாயிரம் பொன் அளித்தனன் என்று அங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. புறம்பயமுடைய பெருமானுக்கு அத்தலைவன் கட்டுவித்த சிறுகோயிலை நாகேசுவரர் ஆலயத்தில் இன்றும் காணலாம். இத்தகைய கோயில்களையும் இளங்கோயில்கள் என்று கூறுவது பொருத்த முடையதேயாம். 6. ஆலக்கோயில் :- தேவாரப் பதிகங்களில் குறிக்கப் பெற்ற பிறிதொரு ஆலக்கோயில் ஆகும். இது திருக்கச்சூரின்கண் உளது. சிவபெருமானை ஆலமர் செல்வன் என்று அறிஞர் கூறுவர். எனவே, இறைவன் ஆலமர நீழலில் எழுந்தருளியுள்ள கோயில் ஆலக்கோயில் என்று வழங்கப் பெற்றிருத்தல் வேண்டு மென்பது உய்த்துணரப்படுகின்றது. திருக்கச்சூர் செங்கற் பட்டிற்கு வடக்கேயுள்ள சிங்கபெருமாள் கோயில் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகட்கு நண்பகலில் சிவபெருமான் அன்னம் அளித்த தலம் இதுவேயாகும். 7. தூங்கானைமாடம் :- இது - பெண்ணாகடத்திலுள்ள கோயிலின் பெயரென்பது ‘துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே’ என்னும் அப்பரடிகள் திருவாக்கினால் அறியப்படுகின்றது. கடந்தை என்பது பெண்ணாகடத்தைக் குறிப்பதாகும். இவ்வூரிலுள்ள கோயிலின் கருப்பக்கிரகத்தின் மேலுள்ள விமானத்தின் அமைப்பு தூங்கும் யானையைப் போன்றிருத்தலின் இக்கோயில் தூங்கானைமாடம் என்று வழங்கப் பெற்றது போலும். இதனை வடமொழியாளர் ‘கஜபிரஷ்டவிமானம்’ என்பர். இத்தகைய விமானமமைந்த கோயில்கள் கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள இன்னம்பரிலும் முருகப்பிரானது தலங்களுள் ஒன்றாகிய திருத் தணிகையிலும் உள்ளன.தூங்கானைமாடத்தைப் பற்றிய பிறசெய்திகளும் கரக்கோயில், மணிக்கோயில் இவற்றின் வரலாறும் பின்னர் எழுதப் பெறும். 9. கல்வெட்டுக்களால் அறியப்பெறும் மூன்று நூல்கள் நம் தமிழகத்திலுள்ள திருக்கோயில்களில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களை ஆராயுங்கால் முற்காலத்தில் நிலவிய சில தமிழ் நூல்களின் பெயர்களும் அந்நூல்களை இயற்றிய புலவர் பெருமக்கள் செய்திகளும் வெளியாகின்றன. அவற்றையெல்லாம், ராவ்சாகிப் திருவாளர் மு. இராகவையங் காரவர்கள், சாசனத்தமிழ்க் கவிசரிதம் என்னும் அரிய ஆராய்ச்சி நூலில் வெளியிட்டுள்ளார்கள். அரசாங்கத்தார் அண்மையில் வெளியிட்ட கல்வெட்டிலாகாவின் ஆண்டு அறிக்கைகளின் மூலம் அறியக்கிடக்கும் மூன்று தமிழ் நூல் களைப் பற்றிய செய்திகள், தமிழ் இலக்கிய வரலாற்றா ராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்று கருதி, அவற்றை அடியிற் குறிக்கின்றேன். 1. திருப்பாலைப்பந்தல் உலா :- திருப்பாலைப்பந்தல் என்பது தென்னார்க்காடு ஜில்லா திருக்கோவலூர்த் தாலூகாவிலுள்ள ஓர் ஊர். அவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது எல்லப்ப நயினார் என்னும் புலவர் பெருமானால் பாடப்பெற்றது இவ்வுலா என்பது அவ்வூர்க் கோயிற் கருப்ப இல்லின் தென்சுவரில் வரையப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டாற் புலப்படுகின்றது. (ஐளேஉசiயீவiடிn சூடி. 401 டிக 1938). உலா இயற்றி அரங்கேற்றிய இவ்வாசிரியர்க்குக் கோயில் அதிகாரிகள் சில நிலங்களும் ஒரு மனையும் அளித்ததோடு இறைவர்க்குப் படைக்கப்பெறுந் திருவமுதில் ஒரு பகுதியை நாள்தோறும் வழங்கி வருமாறு செய்திருந்தமையும் அக்கல்வெட்டால் அறியப்படுகின்றது. அன்றியும், அக் கல்வெட்டு இவ்வாசிரியர் உண்ணாமுலை நயினார் என்பவருடைய புதல்வர் என்றும் காலிங்கராயர் என்ற பட்டமுடையவர் என்றும் கூறுகின்றது. இவர் இயற்றிய வேறு நூல்கள், திருவாரூர்க் கோவை1 அருணாசல புராணம், திருவருணையந்தாதி என்பன. அன்றியும், வீரைக் கவிராசபண்டிதர் இயற்றிய சௌந்தரியலகரிக்குச் சிறந்ததோர் உரையும் இவர் எழுதியுள்ளனர். இவர் வட மொழியிலும் சிறந்த புலமையுடையவராயிருந்தனர் என்பது அவ்வுரையால் புலனாகின்றது. இவர் திருவண்ணாமலைக்கு மேற்கேயுள்ள தாழையூரினர் என்பது கி.பி 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பதும் ஈண்டு அறியத்தக்கன. 2. இறைசைப் புராணம் :- இறைசை என்பது இந்நாளில் எலவானாசூர் என்னும் பெயருடன் தென்னார்க்காடு ஜில்லா திருக்கோவலூர்த் தாலுகாவில் உளது. அது முற்காலத்தில் இறைவானரையூர் என்னும் பெயருடையதாயிருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. அவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் இயற்றியருளிய திருவிளை யாடல்களைக் கூறும் தலபுராணமே இறைசைப்புராணமாகும். இந்நூலின் ஆசிரியர் திருமலை நயினார் சந்திரசேகரர் என்னும் புலவர் ஆவர். எனவே இவர் சந்திரசேகரர் என்ற இயற்பெருயடையவர் என்பதும் திருமலை நயினாருடைய புதல்வர் என்பதும் அறியக்கிடத்தல் காண்க. இவ்வாசிரியர் மெய்கண்ட சந்தானத்தைச் சேர்ந்த திருவண்ணாமலைச் சத்திய ஞானதரிசினி களின் மாணவர். இவர் இறைசைப் புராணம் பாடி அரங்கேற்றியபோது, கோயில் அதிகாரிகள் இவருக்குச் சில நிலங்களும், ஆனந்த தாண்டவன் திருவீதியில் ஒரு மனையும் கி.பி. 1510-ஆம் ஆண்டில் அளித்துள்ளனர். இச்செய்தி களெல்லாம் எலவானாசூர்க்கோயில் முதற் பிரகாரம் மேலைச் சுவரில் வரையப் பட்டுள்ள ஒரு கல்வெட்டினால் நன்கு புலனாகின்றன. (ஐளே. 485 டிக 1938). இந் நூலாசிரியர் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவர். 3. ஓங்குகோயிற்புராணம்:- இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள திருப்புத்தூரில் திருத்தளியாண்ட நாயனார் கோயிலில் எழுந்தருளியுள்ள ஓங்கு கோயிலுறைவார் என்னுஞ் சிவபெருமான் புரிந்தருளிய திருவிளையாடல்களைக் கூறுவது இப்புராணமாகும். இது, திருவம்பல முடையார் மறைஞான சம்பந்தர் என்னும் பெரியாரால் இயற்றப் பெற்றது. இவ்வாசிரியர் திருப்புத்தூரிலிருந்த சிறுமடம் என்னும் பெயருடைய ஒரு மடத்தில் வசித்தவர்; மெய்கண்ட சந்தானத் தைச் சேர்ந்தவர்; கி.பி. 1484-ஆம் ஆண்டில் புராணம்பாடி அரங்கேற்றியவர். இவர் தம்நூலை அரங்கேற்றிய போது கோயிலதிகாரிகள், மேல் திருமங்கலம் என்ற மண்ணி மங்கலத்தில் இவருக்கும் ஐந்து மாநிலம் அளித்தனர் என்று தெரிகிறது. இச்செய்திகள் திருப்புத்தூர்க் கோயிற் கீழைப் பிரகாரத்திற் காணப்படும். ஒரு கல்வெட்டிற் பொறிக்கப் பெற்றுள்ளன. (ஐளே. 180 டிக 1936) இவ்வாசிரியர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவராவர். மேலே குறிப்பிட்ட திருப்பாலைப்பந்தல் உலா, இறைசைப் புராணம், ஓங்குகோயிற் புராணம் என்னும் நூல்கள் இக்காலத்தில் உள்ளனவா என்பது புலப்படவில்லை. 10. தமிழ்நாடும் விநாயகர் வழிபாடும் வடவேங்கடம் தென்குமரிக் கிடைப்பட்ட தமிழகத்தில் பண்டைக் காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களாகிய தமிழ் மக்கள் கடவுள் உண்டு என்ற கொள்கையினராக இருந்திருத்தல் வேண்டும் என்பது அச்சொல் உண்மையாலேயே பெறப்படு கின்றது. அச்சொல்லின் பொருளும் கடவுள் இலக்கணத்தை ஒருவகையில் உணர்த்துவதாக அமைந்திருப்பது மகிழ்தற்குரிய தாகும். அன்றியும் ‘கொடிநிலை, கந்தழி, வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் - கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே’ என்ற தொல்காப்பியச் சூத்திரமும் தமிழ் மக்கள் தெய்வக் கொள்கையுடையவர் என்பதை வலியுறுத்துதல் காண்க. எனவே, கடவுட் கொள்கையுடைய நம்முன்னோர் தாம் கடவுளை வழிபடுவதற்குரிய கோயில்களை நகரங்களிலும் பேரூர்களிலும் சிற்றூர்களிலும் எடுப்பித்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. சேர சோழ பாண்டியரது தலைநகரங்களிலும் குறுநில மன்னர் வாழ்ந்து வந்த நகரங்களிலும் பல கோயில்கள் அக்காலத்தில் இருந்தன என்பது சங்கத்துச் சான்றோர் அருளிய பாடல்களாலும் தொடர்நிலைச் செய்யுள்களாலும் நன்கு உணரப்படுகின்றது. அவற்றை நோக்கின் அந்நாளில் கோயில்களில் மக்களால் வழிபடப் பெற்ற தெய்வங்கள் எவை என்பது எளிதில் புலப்படும். சோழரது தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் தம் காலத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருந்த தெய்வங்களை ஆசிரியர் இளங்கோவடிகள் தாம் இயற்றியுள்ள சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளார். அதனை, ‘ பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபிற் றீமுறை யொருபால் நால்வகைத் தேவரு மூவாறு கணங்களும் பால்வகை தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால் அறவோர் பள்ளியு மறனோம் படையும் புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் துறவோ ருரைக்குஞ் செயல்திறந் தொருபால்’ என்னும் இந்திரவிழவூரெடுத்த காதைப் பகுதியினால் உணரலாம். இங்ஙனமே, பாண்டியரது தலைநகராகிய மதுரையம் பதியில் அந்நாளிலிருந்த கோயில்கள், ‘நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச்சேவல் கொடியோன் கோட்டமும்’ என்று அவ்வடிகளால் குறிக்கப் பெற்றிருத்தல் அறியற் பாலது. ஆகவே, கடைச்சங்க நாளில் காவிரிப்பூம்பட்டினம், மதுரை ஆகிய இருபெரு நகரங்களிலும் சிவபெருமான், முருகவேள், திருமால், பலதேவர் என்னும் நாற்பெருங் கடவுளர்க்கும் கோயில்கள் இருந்தன என்பது பெறப்படுதல் காண்க. அன்றியும் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரன் கோயிலும், அருகர் பள்ளியும், புத்தர் பள்ளியும் இருந்தமை மேலே குறித்துள்ள அடிகளது திருவாக்கினால் வெளியா கின்றது. ஆனால், பிள்ளையார் எனவும் விநாயகர் எனவும் கணபதி எனவும் வழங்கப்பெறும் யானைமுகக் கடவுளைப் பற்றிய குறிப்பு அதில் காணப்பெறா திருத்தல் ஆராய்தற் குரியதாகும். இதனைக் கூர்ந்து நோக்கின், கடைச்சங்க நாளில் பிள்ளையார் வழிபாடு நம் தமிழகத்தில் இருந்திலது என்பது தெள்ளிதிற் புலனாகும். இனி, காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாலதி என்னும் பார்ப்பனப் பெண் ஒருத்தி தன் மாற்றாள் மகவை எடுத்துப் பாலருந்த, அப் பால் விக்கினமையில் அஃது உயிர் துறந்தது. அதனைக் கண்ட மாலதியும் நடுக்கமுற்றுத் தன்மீது சுமத்தப் பெறும் அடாப்பழிக்கு அஞ்சியவளாய், அம்மகவை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்திலுள்ள எல்லாக் கோயில் களுக்கும் சென்று, அதற்கு உயிரளிக்குமாறு வரம் வேண்டினள். எத்தேவரும் அவ்வரம் கொடாமற் போகவே, இறுதியில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாசாத்தனார் அவள்பால் இரக்கங் கொண்டு தாமே அம்மகவாகத் தோன்றி அவளது இன்னலைப் போக்கியருளினார். இது சிலப்பதிகாரத்திற் காணப்பெறும் ஒரு வரலாறாகும் இதனைக் கூறவந்த அடிகள், அம் மாலதி என்பாள் இறந்த மகவைக் கைகளில் ஏந்தி வரம் வேண்டி நின்ற கோயில்கள் எல்லாவற்றையும் குறித்துள்ளனர். அதனை, ‘- மேலோர் நாள் மாலதி மாற்றாள் மகவுக்குப் பாலளிக்கப் பால்விக்கிப் பாலகன் றான்சோர மாலதியும் பார்ப்பா னொடுமனையா ளென்மேற் படாதனவிட் டேற்பன கூறாரென் றேங்கி மகக்கொண் டமரர் தருக்கோட்டம் வெள்யா னைக்கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் உச்சிக்கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக்கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும் தேவிர்கா ளெம்முறுநோய் தீர்மென்று மேவியோர் பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு;-’ என்னும் கனாத்திற முரைத்த காதைப் பகுதியினால் நன் கறியலாம். இப்பகுதியில் விநாயகர்க்கு ஒரு கோட்டம் குறிக்கப் பெறாதிருத்தல் அறியத்தக்கது. அன்றியும், இந்திரனது கற்பகத் தருவிற்கு ஒரு கோயிலும் ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்கு ஒரு கோயிலும் கூறியுள்ள அடிகள், விநாயகர்க்கு அந்நகரில் ஒரு கோயிலிருந்திருப்பின் அதனையும் கூறியிருப்பர் அன்றோ? அடிகள் அதனைக் கூறாமையொன்றே கடைச்சங்க நாளில் தமிழ்நாட்டில் இல்லை என்பதை நன்கு புலப்படுத்தா நிற்கும். ஆசிரியர் நக்கீரனார் பாடியுள்ள 55-ஆம் புறப்பாட்டில், ஏற்றுவல னுயரிய எரிமருள் அவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் கடல்வளர் புரிவளை புரையு மேனி அடல்வெந் நாஞ்சில் பனைக்கொடி யோனும் மண்ணுறு திருமணி புரையுமேனி மணிமயி லுயரிய மாறா வென்றி பிணிமுக வூர்தி வொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வர் என்று கூறியுள்ளனர். இதில், சிவபெருமான், பலதேவன், திருமால், முருகவேள் என்னும் நாற்பெருந் தெய்வங்கள் மாத்திரம் குறிக்கப் பெற்றிருத்தல் காண்க. எட்டுத் தொகை நூற்களுள் அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, ஐங்குறு நூறு என்பவற்றிலுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவ பெருமானைப் பற்றியனவாக உள்ளன. நற்றிணை, குறுந்தொகை என்னும் இரண்டு நூற்களிலுமுள்ள கடவுள் வாழ்த்துக்கள் முறையே திருமாலுக்கும் முருகவேளுக்கும் உரியவாயிருக் கின்றன. எனவே, சங்கத்துச் சான்றோர் இயற்றி யுள்ள நூல்களில் விநாயகரைப் பற்றிய குறிப்பு இல்லாதிருப்பது அவ்வழிபாடு அந்நாளில் நம்நாட்டில் இருந்திலது என்பதையே வலியுறுத்து வதாகும்.1 இனி, விநாயகர் வழிபாடு நம்நாட்டில் எவ்வாறு எக்காலத்தில் தொடங்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது ஆராய்தற்குரிய தாகும். விநாயகர் வழிபாடு மிகச் சிறப்பாகத் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் நாடு மகாராட்டிர தேசம் என்பது யாவரும் அறிந்ததொன்றாம். அங்கிருந்தே அது நம்நாட்டிலும் பரவியிருத்தல் வேண்டுமென்பது உய்த் துணரப்படும் செய்தி யாகும். சோழமண்டலத்தில் தஞ்சை ஜில்லா நன்னிலந் தாலூகா வில் திருச்செங்காட்டங்குடியிலுள்ள கோயில் கணபதீச்சுரம் என்ற பெயருடன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நிலவியது என்பது, ‘பொன்னம்பூங் கழிக்கானற் புணர்துணையோ டுடன்வாழும் அன்னங்காள் அன்றில்காள் அகன்றும்போய் வருவீர்கள் கன்னவில்தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய இன்னமுதன் இணையடிக்கீழ் எனதல்லல் உரையீரே’ என்னும் திருஞானசம்பந்தப் பெருமான் திருவாக்கினால் அறியப்படுகின்றது. அக்கோயிலிலுள்ள விநாயகரது பெயர் வாதாபி விநாயகர் என்பதாம். தமிழ்நாட்டிலுள்ள விநாயகரது படிமங்களுள் கணபதீச்சுரத்திலுள்ளதே மிகத் தொன்மை வாய்ந்தது எனலாம். முதன்முதலில் விநாயகர் எழுந்தருளுவிக்கப் பெற்ற கோயிலானமையின் திருச்செங்காட்டங்குடி ஆலயம் கணபதீச்சுரம் என்று வழங்கப்பெற்றது போலும். இனி, வாதாபிக்கும் திருச்செங்காட்டங்குடி விநாயகருக்கும் ஒரு தொடர்பு இருத்தல் ஈண்டு உணரற்பாலதாகும். வாதாபி என்பது மேலைச் சளுக்கியரது தலைநகரம்; இக்காலத்தில் பம்பாய் மாகாணத்திலுள்ள பீஜப்பூர் ஜில்லாவில் உள்ளது. அங்கிருந்து அரசாண்ட மேலைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் புலிகேசிக்கும், காஞ்சிமா நகரிலிருந்த பல்லவ வேந்தனாகிய முதல் நரசிம்மவர்மனுக்கும் கி.பி. 642-ல் ஒரு பெரும்போர் நிகழ்ந்தது. முதல் நரசிம்மவர்மனது படைக்குத் தலைமை வகித்துப் போர் நடத்தியவர், திருச்செங்காட்டங் குடியிற் பிறந்தவரும் பரஞ்சோதி என்ற இயற் பெயருடையவரும் அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவரும் திருஞானசம்பந்த சுவாமிகளால் தேவாரப் பதிகத்தில் பாராட்டப் பெற்றவரும் ஆகிய சிறுத்தொண்ட நாயனாரே ஆவர். அப்பெரியார் புலிகேசியைப் போரிற் புறங்கண்டு அவனது தலைநகராகிய வாதாபியையும் அழித்து அங்கு வெற்றித்தூண் நிறுவி அதில் தம் வீரச் செயல்களையும் எழுதுவித்தனர் அக் கல்வெட்டின் ஒருபகுதி இன்றும் அந்நகரில் உளது. இச்செய்திகளுள் சிலவற்றை, ‘மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனவெண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.’ என்னும் பெரிய புராணச் செய்யுளிலும் காணலாம்.இவ்வாறு வெற்றிவீரராகத் திரும்பிய சிறுத்தொண்டர், சேய்மையிலுள்ள வாதாபி நகரில் தாம் எய்திய வெற்றிக்கடை யாளமாகத் தம்மால் அழிக்கப் பெற்ற அந்நகரிலிருந்து சில விநாயகர் படிமங்களைக் கொண்டு வந்து, அவற்றுள் ஒன்றைத் தம் ஊராகிய திருச்செங்காட்டங்குடியிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளுவித்து அதற்கு வாதாபி விநாயகர் என்ற பெயரும் இட்டிருத்தல் வேண்டும். அன்றியும், அந்நாயனார் தாம் கொணர்ந்த விநாயகர் படிமங்களைத் தமதூருக்கு அண்மையிலுள்ள திருப்புகலூரிலும் திருவாரூரிலும் எழுந்தருளு வித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். இதனை அத்தலங்களிலுள்ள ஒவ்வொரு விநாயகர் வாதாபி விநாயகர் என்று வழங்கப் பெறுதலால் அறியலாம். திருவாரூரிலுள்ள வாதாபி விநாயகர் படிமம் கலிங்க நாட்டிலிருந்து கொண்டு வரப்பெற்றது என்று மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் கூறியுள்ளனர். இதனை, ‘மேதவியருக்கிடமாய் மிளிர் திருவாரூர்த் தளியில் போதாவி தொறுமலர்ந்து பொலிகலிங்கம் நின்றும்போந்து ஓதாவி யனைத்துமினிது உவந்தேத்த வுவந்துதவும் வாதாவி மழகளிற்றை மலர்தூவி யிறைஞ்சுவாம்’ என்ற தியாகராசலீலையிலுள்ள செய்யுளால் உணரலாம். ஆனால், கலிங்கத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற விநாயகர் வாதாவி விநாயர் என்று கூறப்பெற்றமைக்குக் காரணம் புலப் படவில்லை. எனினும், இச்செய்தி அவ்விநாயகர் படிமம் வெளிநாட்டிலிருந்து ஒருகாலத்துக் கொண்டுவரப் பெற்றிருத்தல் வேண்டுமென்ற உண்மையை வலியுறுத்துதல் காண்க. இனி, புறநாடுகளின் மேல் படையெடுத்துச் சென்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் தமது வெற்றிக்கு அடையாளமாகத் தாம் வெற்றி பெற்ற நாடுகளில் அழிந்த ஊர்களிலிருந்து கடவுட் படிமங்கள் கொண்டுவந்து தம் நாட்டில் எழுந்தருளுவிப்பது ஒரு பழைய வழக்கமாகும். இவ்வரிய செய்தி சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. கம்பன் மணியனாகிய விக்கிரமசிங்க மூவேந்த வேளான் என்னும் சோழநாட்டுப் படைத் தலைவன் சேர மண்டலத்தின்மேற் படையெடுத்துச் சென்று அதனை வென்ற திரும்பியபோது, அங்கிருந்து கொணர்ந்த மரகத தேவரை முதல் இராஜ ராஜ சோழன்பால் பெற்றுத் திருப்பழனத்திலுள்ள ஆலயத்தில் கி.பி 999-இல் எழுந்தருளுவித்தான் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.1 கங்கைகொண்ட சோழன் மகனாகிய விஜயராஜேந்திர சோழன் மேலைச் சளுக்கியரது நகரமாகிய கலியாணபுரத்தை வென்று அங்கிருந்து துவார பாலகர் படிமம் ஒன்று கொண்டு வந்துள்ளானென்பது, கும்பகோணத்திற்கு அண்மை யிலுள்ள தாராசுரம் (இராஜராஜபுரம்) கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது. அப் படிமத்தினடியில், ‘கலியாணபுரம் எறிந்து உடையார் விஜய ராஜேந்திர சோழதேவர் கொடு வந்த துவாரபாலகர்’ என்று வரையப் பெற்றுள்ளது. பேரழகு வாய்ந்த அப்படிமம் மூன்று ஆண்டுகட்கு முன்னர்த் தாராசுரம் கோயிலிலிருந்து, தஞ்சை அரண்மனை ஆலயக் கண்காணிப் பாளரும் கரந்தைத் தமிழ்ச் சங்க அமைச்சருமான திருவாளர் து.ஆ.சோமசுந்தரம் பிள்ளையவர்களால் தஞ்சைக்குக் கொண்டுபோகப் பெற்றுப் பெரிய கோயிலிலுள்ள ‘சோழர் பொருட்காட்சி நிலையத்’தில் வைக்கப் பெற்றுள்ளது. மூன்றாம் குலோத்துங்க சோழனது படைத் தலைவர்களுள் ஒருவனான அரையன் தேவுந் திருவும் உடையான் பொத்தப்பிச் சோழன் என்பான், வீரபாண்டியனுக்கு உதவும் பொருட்டுப் பாண்டி மண்டலத்தின் மீது படையெடுத்துச் சென்று வெற்றியுடன் திரும்புங்கால், அந்நாட்டில் அழிந்த ஊர்களிலிருந்து தன் வெற்றிக்கு அறிகுறியாகக் கொண்டுவந்த கூத்தாடுந் தேவரையும் (நடராசப் பெருமான்) நாச்சியாரையும் சீகாழியிலுள்ள திருத்தோணியப்பர் ஆலயத்தில் எழுந்தருளு வித்தனன் என்பது அங்கேயுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது. அக்கல்வெட்டு, ‘ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் மதுரையும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளின ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு பதினொன்றாவது சுத்தமலி வளநாட்டு வெண்ணிக் கூற்றத்து குண நாடரான உடையான் அரையன் தேவுந்திருவு முடையானான பொத்தப்பிச் சோழன், வீரபாண்டியன் வினைசெய்து பாண்டியன் மண்டலத்து அழிந்த ஊர்களில் நின்றும் ஜெயதம்பமாக எழுந்தருளுவித்துக் கொண்டு போந்த கூத்தாடுந் தேவரையும் நாச்சியாரையும் ராஜாதிராஜ வளநாட்டு திருக்கழுமல நாட்டு உடையார் திருத்தோணி புரமுடையார் கோயிலில் திருநடை மாளிகையிலே எழுந்தருளி இருந்து பூசைகொண்டருளப் பண்ணுக வென்று இக்கூத்தாடுந் தேவர்க்கும் நாச்சியாருக்கும் வேண்டு நிபந்தங்களுக்கு இறுப்பதாக இட்ட எண்வேலி ஆக்கூரில் தேவதானம் இரண்டு வேலி இட்ட நிலம் இருவேலி இன்னிலம்... வேலியும் கைக்கொண்டு பூசைசெலுத்தப் பண்ணுக வென்றும் இப்படியே இன்னாயனார் கோயிலிலே கல்வெட்டப் பண்ணுக வென்றும் பிரசாதஞ் செய்தருளின திருமுகம் வந்தமையால் இந்நிலம் இருவேலியும் கொண்டு இந்நாயனார்க்கு நாச்சியார்க்கும் பூசைசெ... பண்ணுவது 11-பன் மகேசுரரெbக்ஷ’-1 என்பதாம். ஈண்டு எடுத்துக் காட்டப் பெற்ற மூன்று செய்திகளாலும் பண்டைத் தமிழ்வேந்தர் தாம் வென்ற நாடுகளிலிருந்து தம் வெற்றிக் கறிகுறியாகக் கடவுட் படிமங்கள் கொண்டு வந்து எழுந்தருளுவித்தமை வெளியாதல் காண்க. எனவே, சிறுத்தொண்ட நாயனாரும் தாம் வென்ற மேலைச் சளுக்கியர் தலைநகராகிய வாதாபியிலிருந்து சில விநாயகர் படிமங்கள் கொண்டுவந்து நம் தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் எழுந்தருளுவித்து நாள் வழிபாட்டிற்கு நிபந்தங்களும் விட்டிருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப்படும். அன்றியும், நாயனார் தம் காலத்திலேயே அவ்வழிபாட்டைப் பரப்ப வேண்டுமென்று முயன்றிருத்தல் இயல்பேயாம். ஒவ்வோர் ஊரிலுமுள்ள பல தெருக்களிலும் ஆற்றங்கரைகளிலும், குளக்கரைகளிலும் பெருவழிகளிலும் விநாயகராலயம் அமைக்கப் பெற்றிருப்பது அப்புதிய கடவுள் யாரும் வழிபாட்டை யாண்டும் பரவச்செய்தற்குக் கையாண்ட முறையே யாகும். பிற்காலச் சைவநூற்களிலும் பிறவற்றிலும் முதலில் விநாயகர் வணக்கம் அமைந்திருப்பது யாவரு மறிந்ததே. விநாயகர் வணக்கத்தை முதலில் கொண்டுள்ள நூற்கள் பலவற்றுள்ளும் மிகத் தொன்மை வாய்ந்தவை புறப்பொருள் வெண்பாமாலை, நந்திக் கலம்பகம் என்பனவேயாகும். இவற்றிற்கு முந்திய காலத்தியவான தேவாரத் திருப்பதிகங்களில் விநாயகரைப் பற்றிய மிகச் சில குறிப்புக்களே காணப்படுகின்றன. ஆகவே, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தான் நம் நாட்டில் விநாயகர் வணக்கம் தோன்றியிருத்தல் வேண்டுமென்பது தேற்றம்.1 இதுகாறுங் கூறியவற்றால், நம் தமிழகத்தில் கடைச்சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இருந்திலது என்பதும் கி.பி. 642-ல் சிறுத்தொண்ட நாயனார் மேலைச் சளுக்கியரது தலைநகராகிய வாதாபியிலிருந்து விநாயகரைக் கொண்டுவந்து நம்நாட்டுச் சிவாலயங்கள் சிலவற்றில் எழுந்தருளுவித்தனர் என்பதும் அது முதல் விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டில் பரவிச் சிறப்புற்றது என்பதும் பிறவும் நன்கு விளங்குதல் காண்க. 11. புறநானூறும் கல்வெட்டுக்களும் 1. தோற்றுவாய் புறநானூறு என்பது சங்கத்துச் சான்றோர் பலரால் இயற்றப் பெற்றுக் கடைச்சங்கத் திறுதிக் காலத்தில் தொகுக்கப் பட்ட எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இஃது அறமும் பொருளும் நுதலிய புறத்திணைகளுக்குரிய துறைப் பொருள் அமைந்த நானூறு பாடல்களைத் தன்னகத்துக் கொண்டுள்ளமையின், ‘புறநானூறு’ என்னும் பெயர் எய்திற்று. இதனைப் ‘புறப்பாட்டு’ எனவும் ‘புறம்’ எனவும் வழங்குவதுண்டு. இந்நூலின் கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவனாரால் இயற்றப்பட்டது. மற்றப் பாடல்கள் முரஞ்சியூர் முடி நாகராயர் முதல் கோவூர் கிழார் இறுதியாகவுள்ள புலவர் பலரால் பாடப் பெற்றவை. இந்நூலைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் யாவர் என்பது தெரியவில்லை. இந்நூலிலுள்ள பாடல்கள் எல்லாம் அகவற்பாக்கள் ஆகும். மதுரைமா நகரிலிருந்த கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பது அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட உண்மை யாதலின், அக்காலப் பகுதியில் தொகுக்கப் பெற்ற புறநானூற்றிலுள்ள பாடல்களும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் இயற்றப் பெற்றவை என்பதில் ஐயமில்லை. இத்துணைத் தொன்மை வாய்ந்த இவ்வரிய நூல் நம் முன்னோர் வரலாறுகளையும் வழக்க ஒழுக்கங்களையும் நம்மனோர்க்கு நன்குணர்த்தும் ஒப்பற்ற கருவூலமாக அமைந்திருப்பது பெறற்கரும் பேறேயாம். பண்டைக்காலத்தில் இத்தமிழகத்தில் செங்கோ லோச்சிய சேர சோழ பாண்டியராகிய முடியுடை வேந்தர்கள், குறுநில மன்னர்கள், அமைச்சர், படைத் தலைவர், கடையெழு வள்ளல்கள், சங்கப் புலவர்கள் முதலானோர் வரலாறுகளையும், பண்டைத் தமிழ் மக்களுடைய கொள்கை, நாகரிகம், கல்வி, வீரம் முதலானவற்றையும் உணர்ந்து கொள்வதற்குப் புறநானூறு என்னும் இச்சீரிய நூல் ஒன்றே போதும் எனலாம். உண்மைத் தமிழராகவுள்ள ஒவ்வொருவரும் இந்நூல் ஒன்றையாவது கற்றல் வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இனி கல்வெட்டுக்கள் என்பன, கோயிற் சுவர்கள், கற்பாறைகள், மலைக்குகைகள், வெற்றித் தூண்கள், மண்டபங்கள், படிமங்கள், நடுகற்கள் முதலானவற்றில் வரையப் பெற்றிருக்கும் கல்லெழுத்துக்களேயாம். செப்பேடுகள் எல்லாம் கல்வெட்டுக் களின் படிகளேயாதலின் அவற்றையும் கல்வெட்டுக்கள் என்ற தலைப்பின் கீழ் ஈண்டு அடக்கிக் கொள்வது பொருந்தும். நம் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் எல்லாம் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலேயே உள்ளன. சிற்சில வடமொழிக் கல்வெட்டுக் களும் நம் நாட்டில் உண்டு. கல்வெட்டுக்களில் காணப்படுஞ் செய்திகள் எல்லாம் வெறும் கற்பனைச் செய்திகள் அல்ல, பயனற்ற செய்திகளும் அல்ல, அவையனைத்தும் நம் முன்னோர் களுடைய உண்மை வரலாறுகளை யுணர்த்தும் பழைய வெளியீடுகளே சேர சோழ பாண்டியராகிய முடியுடைத் தமிழ் வேந்தரும், பல்லவரும், குறுநில மன்னரும், பிற தலைவர்களும் புரிந்த அறச் செயல் களும், வீரச் செயல்களும், அன்னோர் செய்து கொண்ட உடன்படிக்கைகளும் அக்கால அரசியல் முறைகளும், போர் நிகழ்ச்சிகளும் பழைய புலவர்களைப் பற்றிய செய்திகளும், மண்டலம், வளநாடு, கோட்டம், நாடு, கூற்றம் என்பவற்றின் வரலாறுகளும், பல ஊர்களின் உண்மைப் பெயர்களும், முற்கால வழக்கங்களும், சமயநிலையும், மற்றும் பல அரிய நிகழ்ச்சிகளும் நம் நாட்டுக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் நன்கறியக் கிடக்கின்றன. சுருங்கச் சொல்லுமிடத்து நம் நாட்டின் பழைய சரிதங்களை உள்ளவாறு உணர்ந்து கொள்வதற்குத் தக்க கருவிகளாயிருப்பன, கல்வெட்டுக்களும் செப்பேடுகளுமேயாம். ஆகவே, புறநானூறும் கல்வெட்டுக் களும் உணர்த்துவன, நம் தமிழகத்தின் பண்டை வரலாறுகளே என்பது இனிது விளங்குதல் காண்க. இவற்றுள், புறநானூறு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் நிகழ்ந்த வரலாறுகளையே கூறும். நம் தமிழ் நாட்டுக் கல்வெட்டுக்களோ கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவை. எனவே, புறநானூறும் கல்வெட்டுக்களும் தம்முள் எங்ஙனம் இயைபுடையனவாதல் கூடும் என்ற ஐயப்பாடு எவர்க்கும் நிகழ்தல் இயல்பே. ஆதலால், இதுபற்றிச் சில கூறி விளக்குவேன். இலக்கியச் செய்திகள் எல்லாம் புனைந்துரை சிறிது கலந்த நூல் வழக்கில் அமைந்தவை. கல்வெட்டுச் செய்திகள் எல்லாம் புனைந்துரை கலவா உலக வழக்கில் அமைந்தவை. ஆதலால், வரலாற்று ஆராய்ச்சியாளர் கல்வெட்டுக்களையே தக்க சான்றுகளாகக் கொண்டு ஆராய்ந்து உண்மை காண்பாராயினர். அன்னோர் இலக்கியங்களைச் சிறந்த சான்றுகளாக மதித்து ஏற்றுக் கொள்வதில்லை. இலக்கியச் செய்திகளுள் சில, புனைந்துரையாக இருத்தல் ஒப்புக் கொள்ளத் தக்கதேயாயினும், அவற்றை அத்துணை எளியனவாகக் கருதித் தள்ளி விடுதல் எவ்வாற்றானும் ஏற்புடையதன்று. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவாய்ப் புறநானூற்றில் காணப்படும் செய்திகள் செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் தாங்கப் பட்டு உறுதியெய்துகின்றன. அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் நாம் எங்ஙனம் தள்ளுதல் கூடும்? ஆகவே, செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் தாங்கப்படும் உண்மைச் செய்திகளைத் தன்னகத்துக் கொண்டு சங்க நூல்களின் சிறப்பிற்கும் மாசற்ற தன்மைக்கும் ஓர் எடுத்துக் காட்டாக விளங்குவது புறநானூறு எனலாம். 2. உறுதிப்பாடு புறநானூற்றுச் செய்திகளுள் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் உறுதிப்படுவன: 1. புறநானூற்றில் காணப்படும் கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்களான பெருநற்கிள்ளி. சோழன் கரிகாலன், சோழன் செங்கணான் என்போர், கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆனைமங்கலச் செப்பேடுகள்,1 திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,1 கன்னியாகுமரிக் கல் வெட்டுக்கள்2 என்பவற்றில் மிகச் சிறப்புடன் குறிக்கப்பட்டுள்ளனர். 2. காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் என்ற புலவர் பெருமக்களால் புறநானூற்றில் பாடப் பெற்றவனும், பல பகைஞர்களையும் வென்று மறக்கள வேள்விகள் புரிந்தவனும், வேண்டிய வேண்டியாங்கு புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் ஈந்த பெருங்கொடை வள்ளலும், சிவபெரு மானிடத்தில் பெரிதும் ஈடுபாடுடையவனுமாகிய பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வரையப் பெற்ற வேள்விக்குடிச் செப்பேடுகளில், “ கொல்யானை பலவோட்டிக் கூடா மன்னர் குழாந் தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி யெனும் பாண்டியாதிராசன்” என்று பாராட்டப்பட்டிருப்பது உணரற்பாலது 3. இம் முதுகுடுமி அரசர்க்குரிய பல வேள்விகள் செய்து சிறப்புற்றவன் என்பது, இவன் இயற்பெயருக்கு முன்னருள்ள ‘பல்யாகசாலை’ என்ற அடை மொழிகளாலும், “ அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண் வீயாச் சிறப்பின் கேள்வி முற்றி யூபநட்ட வியன் களம் பலகொல்” என்ற 15-ஆம் புறப்பாட்டடிகளாலும் நன்கறியக் கிடக்கின்றது. இச்செய்தி,‘பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியா திராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக் கிடக்கை நீர் நாட்டுச் சொற்கணாளர் சொல்லப்பட்ட சுருதி மார்க்கம் பிழையாத கொற்கைக் கிழான் நற்கொற்றன் கொண்ட வேள்வி முற்றுவிக்க கேள்வியந்தணாளர் முன்பு கேட்க வென்றெடுத் துரைத்து வேள்விச் சாலை முன்பு நின்று வேள்விக்குடி யென்றப் பதியைச் சீரோடு திருவளரச் செய்தார் வேந்தனப் பொழுதே நீரோடட்டிக் கொடுத்தமையால் நீடு புக்தி துய்த்த பின்’ என்ற வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதியினால் வலியுறுதல் காண்க. 4. இனி, கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியன் நெடுஞ் செழியன் என்பவன், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி, சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை என்ற பேரரசர் இருவரையும் குறுநில மன்னர் ஐவரையும் தலையாலங்கானத்தில் வென்ற செய்தி, புறப்பாட்டுக் களால் உணரப்படுகின்றது.1 இப்போர் நிகழ்ச்சி கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வரையப்பட்ட சின்னமனூர்ச் செப்பேட்டில்,2 “தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற் றலைதுமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும்” என்று சொல்லப்பட்டிருத்தல் காண்க. 5. மேற் குறித்த சின்னமனூர்ச் செப்பேடுகளில் காணப் படும் ‘மாபாரதந் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்ற தொடர்களில் பாண்டியரின் அருஞ் செயல்கள் இரண்டு கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பாண்டியன் ஒருவன், கடைச்சங்க நாளில் மாபாரதத்தை நம் தமிழ் மொழியில் செய்யுட்களாகப் பாடுவித்தமை ஒன்று. அப்பாண்டியன் வேண்டு கோளின்படி மாபாரதத்தைத் தமிழில் பாடியவர் புறநானூற்றின் முதற் பாடலான கடவுள் வாழ்த்து இயற்றிய பெருந்தேவனார் ஆவர். அதுபற்றி அவ்வாசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அந்நாளில் வழங்கப் பெற்றனர் என்பது பலரும் அறிந்ததே. மற்றொன்று, பாண்டியர்கள் மதுரைமா நகரில் தமிழ்ச் சங்கம் நிறுவிப் புலவர்களைப் போற்றி வந்தமையேயாம். இச்செய்தியைப் புறநானூறு முதலான தொகை நூல்களால் நன்குணரலாம். 6. “வடதிசை யதுவே வான்றோய் இமயம் தென்றிசை ஆஅய் குடியின் றாயிற் பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே” (புறம் : 132) என்று புறப்பாட்டில் புகழப்பட்டவனும் கடையெழு வள்ளல்களுள் ஒருவனும் ஆகிய வேள் ஆய் என்பான் பொதியில் மலையைச் சார்ந்த வேணாட்டை ஆட்சி புரிந்த குறுநிலமன்னன் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களால் அறியலாம். பாண்டி நாட்டிற்குத் தென்மேற்கில் பேரியாற்றுக்கும் குமரிமுனைக்கும் இடைப்பட்ட திருவாங்கூர் இராச்சியத்தின் தென்பகுதிக்கு முற்காலத்தில் ‘வேணாடு’ என்ற பெயர் இருந்தது என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. வேள் ஆயின் மரபினர் கி.பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுகளிலும் அங்கு அரசாண்டனர் என்பதும் அன்னோர் கோச்சடையன் ரணதீரன், அவன் பேரன் நெடுஞ்சடையன் பராந்தகன் என்ற பாண்டி வேந்தர்களால் வென்று அடக்கப்பட்டனர் என்பதும் வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படு கின்றன. இச்செய்திகளை, “பொருதூருங் கடற்றானையை மருதூருள் மாண்பழித்து ஆய்வேளை யகப்படவே யென்னாமை யெறிந்தழித்து” எனவும், “தீவார அயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த ஆய்வேளையுங் குறும்பரையும் அடலமருள் அழித்தோட்டி” எனவும் போதரும் வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதிகளால் உணர்க. 7. கடையெழுவள்ளல்களுள் ஒருவனும், உண்டோர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்திருப்பதற்கு ஏதுவான கருநெல்லிப் பழம் ஒன்றை ஒளவையாருக்கு அளித்தவனும், “ஒருநாட் செல்லலம் இருநாட் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ” (புறம் : 101) என்று ஒளவையாரால் மனமுருகிப் பாராட்டப் பெற்றவனும் ஆகிய அதியமான் நெடுமானஞ்சி என்பான் கொங்கு மண்டலத்தில் தகடூரிலிருந்து அரசாண்ட ஒரு குறுநில மன்னன் என்பது புறநானூற்றால் அறியப்படுவதொன்று. வட ஆர்க்காடு கோட்டத் (சில்லாவில் போளூருக் கணித்தாகவுள்ள) திருமலையில் காணப்படும் கல்வெட் டொன்று அதியமான் நெடுமானஞ்சியைக் குறிப்பிடுகின்றது. செய்யுள் வடிவத்தில் உள்ள அக்கல்வெட்டு, “வஞ்சியர் குலபதி யெழினி வகுத்த வியக்க ரியக்கியரோ டெஞ்சியவழிவு திருத்தி யெண்குண விறைவனை மலைவைத்தான் அஞ்சிதன் வழிவருமவன்முத லிகலதிகன வகனநூல்(?) விஞ்சையர் தகைமையர் காவலன் விடுகாதழகிய பெருமாளே” என்பது, இதில் புறநானூற்றில் வந்துள்ள எழினி, அஞ்சி என்ற அரசர் பெயர்கள் பயின்று வருவதோடு அன்னோர் வஞ்சியர் குலபதி என்று குறிப்பிடப் பட்டிருப்பதும் அறியற் பாலதாகும். இதில் கூறப்படும் விடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியமான் நெடுமானஞ்சியின் வழித்தோன்றல் என்பதும் கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்த ஒரு குறுநில மன்னன் என்பதும் ஈண்டு உணரத்தக்கன. வஞ்சியர் குலபதி என்பதும் வஞ்சி மாநகரத்தில் வீற்றிருந்து அரசாண்ட சேரமன்னனைக் குறிக்கும் தொடராகும். 8. ‘அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்’ என்று தொடங்கும் 99-ஆம் புறப்பாட்டில் அதியமான் நெடுமானஞ்சிக் குரிய அடையாள மாலையாகப் பனந்தார் கூறப்பட்டுள்ளது. அப்பாடலின் விசேடவுரையில் ‘இவனுக்குப் பனந்தார் கூறியது உதிய வேந்தாதலின்’ என்று உரையாசிரியர் விளக்கியுள்ளனர். இச்செய்தி திருமலையிலுள்ள ‘சேரவம்சத்து அதிகமான் எழினி செய்த தர்மம்’1 என்ற மற்றொரு கல்வெட்டால் வலியுறுத்து கின்றது. எனவே மழவர் தலைவர்களான அதியமான், எழினி என்போர் சேரரின் மற்றொரு கிளையினர் என்பது பெறப்படுதல் காண்க. 9. இனி, கடைச்சங்க நாளில் வேள் நன்னன் என்ற குறுநில மன்னன் ஒருவன் இருந்தனன் என்பது 151ஆம் புறப்பாட்டால் அறியப்படுகின்றது. இவன் பல்குன்றைக் கோட்டத்திலுள்ள செங்கைமா1விலிருந்து அரசாண்டவன். இரணிய முட்டத்துப் பெருங் குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற புலவர் பெருமானால் பாடப்பட்ட மலைபடுகடாம் என்ற நூல் கொண்டு புகழ் கொண்டவன். திருவண்ணாமலைக்கு மேற்றிசையிலுள்ள செங்கைமா என்பது இவன் தலைநகர். இஃது இந்நாளில் செங்கம் எனவும், செங்கமா எனவும் வழங்குகின்றது. இந்நகர்க்கு அண்மையில்தான் இவனது நவிரமலை உளது. திருவண்ணாமலையிலுள்ளதும் அகவற்பா வடிவத்தில் அமைந்ததும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வரையப் பெற்றதுமாகிய கல்வொட்டொன்று “நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில் வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன் வாகையுங் குரங்கும் விசையமுந்தீட்டிய அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்” என்று கூறுகின்றது. இக்கல்வெட்டிலுள்ள ‘நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பு’ என்ற பகுதி, புறநானூற்றில் வந்துள்ள நன்னனையும், அவன் மீது பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனாரால் பாடப் பட்ட மலைபடுகடாம் என்ற நூலையும் அவனது வெற்பினையும் குறிப்பிடுதல் காண்க. 10. “பூந்தலை யறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர்! கொள்கெனக் கொடுத்த” (புறம் 200) பெருங்கொடை வள்ளலாகிய வேள்பாரியின் வரலாற்றை யுணர்த்தும் பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். பாண்டி மண்டலத்தில் திருப்புத்தூர்ப் பக்கத்தில் பாரீச்சுரம் என்ற கோயில் ஒன்று இருந்தது என்பது பிரான்மலையிலுள்ள மங்கை பாகரது கோயிலில் காணப்படும் ‘சுரபி நாட்டு அறுநூற்றவனேரிப் பற்றில் பாரீசுவரமும்1 என்ற கல்வெட்டுப் பகுதியினால் அறியக்கிடக்கின்றது. பாரி எடுப்பித்து வழிபாடு புரிந்த கோயில் பாரீசுவரம் ஆகும். அக்கோயிலைத் தன்னகத்துக் கொண்ட ஊரும் பிரான்மலையே என்பது ஈண்டு உணரற்பாலது. இப்பாரீசுவரம் பிரான்மலையின் அடிவாரத்திலுள்ள மற்றொரு கோயிலாகும். எனவே பெருங்கொடை வள்ளலாகிய வேள்பாரி அமைத்த கோயிலொன்று கல்வெட்டுக்களால் புலப்படுதல் காண்க. 11. இனி, கடைச்சங்கப் புலவராகிய கபிலரும் வேள் பாரியும் இன்னுயிர்த் தோழர்களாக வாழ்ந்து வந்தனர் என்பது புறநானூற்றால் அறியப்படுகின்றது. கபிலர் பிறந்த ஊர், மணிவாசகப் பெருமான் தோன்றியருளிய பாண்டி நாட்டுத் திருவாதவூரேயாம் என்பது பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடற் புராணத்தால் உணரப்படுகின்றது. ‘தென்பரம்பு நாட்டுத் திருவாதவூர் என்று ஒரு கல்வெட்டு2 கூறுவதால் இத்திருவாதவூர் வேள்பாரியின் ஆட்சிக்குட்பட்ட பறம்பு நாட்டில் இருந்தது என்பது வெளியாகின்றனது. எனவே, புலவராகிய கபிலரும் புரவலராகிய வேள்பாரியும் ஒரே நாட்டினர் ஆவர். ஆகவே, அன்னோர் இருவரும் ஒரே தேயத்தினராகவும் ஒத்த உணர்ச்சியுடைய வராகவும் இருந்தமையின் நட்பிற் சிறந்து விளங்கினர் என்பது தெள்ளிது.’ 12. மூவேந்தர் சூழ்ச்சியினால் பாரி இறந்த பின்னர் அவன் மகளிரைத் தக்கார்க்கு மணஞ் செய்விக்க விரும்பி அழைத்துச் சென்ற புலவர் பெருமானாகிய கபிலர், விச்சிக்கோன், இருங்கோவேள் என்பவர்களை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்ட, அவர்கள் மறுக்கவே, அம்மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, பிறகு பாரியின் பிரிவுக்காற்றாது வடக்கிருந்து உயிர் நீத்தனர் என்பது புறநானூற்றில் கண்ட வரலாறாகும். இச்செய்திகளைத் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று1 சிறிதுவேறுபடக் கூறுகின்றது. முதல் இராசராசசோழன் ஆட்சியில் கி.பி. 1012ல் வரையப் பெற்றதும் அகவற்பாவில் அமைந்ததுமாகிய அக்கல்வெட்டில் பாரி மகளிரையும், கபிலரையும் பற்றிக்கூறும் பகுதி அடியில் வருமாறு:- “வன்கரை பொருது வருபுணற் பெண்ணைத் தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப் பெண்ணை மலையுற் குதவிப் பெண்ணை அலைபுன லழுவத் தந்தரிட் சஞ்செல மினல்புகும் விசும்பின் வீடுபே றெண்ணிக் கனல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர் பேரெட்டான வீரட்டானம் அனைத்தினு மநாதி யானது இதனால் முத்தமிழ்ப் புலவராகிய கபிலர், பாரி மகளிருள் ஒரு பெண்ணைத் திருக்கோவலூர் மலைமானுக்கு மணஞ் செய்து கொடுத்தனர் என்பதும், பிறகு அந்நகரில் பெண்ணை யாற்றங்கரையில் தீப்பாய்ந்து உயிர் துறந்தனர் என்பதும் அவரை நினைவு கூர்தற்கு அங்கு ஒரு கல் நடப்பெற்றது என்பதும், அது ‘கபிலக்கல்’ என்று வழங்கப்பட்டு வந்தது என்பதும் நன்கு வெளியாதல் காண்க. கடைச்சங்க நாளில் நிகழ்ந்த இவ்வரலாறு கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டொன்றில் இவ்வாறு குறிக்கப்பட்டிருப்பது அறியற் பாலதாகும். கபிலர், பாரி மகளிர் இருவருள் ஒரு பெண்ணை மலையமானுக்குத் தாமே வாழ்க்கைப் படுத்திய பிறகு, மற்றொரு பெண்ணைத் தமக்கு வேண்டிய பார்ப்பாரது பாதுகாவலில் வைத்துவிட்டு, உயிர் துறந்திருத்தல் வேண்டும் என்பது புறநானூற்றையும், இக்கல்வெட்டையும் கொண்டு உய்த்துணரப் படுகின்றது. புறநானூற்றுச் செய்திகளுள், கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் உறுதி யெய்துவன இதுகாறும் விளக்கப் பட்டன. 3. பழந்தமிழ் நாடுகள் சில புறநானூற்றில் காணப்படும் நாடுகளைப் பற்றிக் கல்வெட்டுக்களால் அறியப்பெறுவன: 1. கோனாடு : இது புறநானூற்றிலுள்ள 54, 61, 167 முதலான பாடல் களைப் பாடிய மாடலன் மதுரைக் குமரனாரது நாடாகும். இது பாண்டி மண்டலத்திற்கும் சோழ மண்டலத்திற்கும் நடுவில் அமைந்திருந்த சிறு நாடு, ‘இக்கோனாடு இருபத்து நாற்காத வட்டகையும்’1 என்று கூறும் கல்வெட்டொன்றால் இந்நாட்டின் சுற்றளவை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். சோழ மன்னர் ஆட்சிக் காலங்களில் இந்நாடு கடலடையாதிலங்கை கொண்ட சோழவளநாடு என்று வழங்கி வந்தது என்பது கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது2 இந்நாட்டில் ஒல்லையூர்க் கூற்றம், அண்ணல்வாயில் கூற்றம், உறத்தூர்க் கூற்றம், கூடலூர் நாடு என்ற உள்நாடுகள் இருந்தன என்று சில கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.3 கொடும்பாளூர் என்பது இந்நாட்டின் தலை நகரமாகும். புதுக்கோட்டை இராச்சியத்திலுள்ள திருமெய்யம் குலத்தூர்த்தாலுக்காக்களில் இக்கோனாடு இருத்தல் அறியத்தக்கது. 2. ஒல்லையூர் நாடு: ‘ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே’ (புறம் 242) என்ற புறப்பாட்டில் இந்நாடு கூறப்படுகின்றது. திரு மெய்யந் தாலுகாவிலுள்ள ஒலியமங்கலம் என்ற ஊர் முற்காலத்தில் ஒல்லையூர் மங்கலம் என்ற பெயருடையதாயிருந்தது என்பது அவ்வூரிலுள்ள வரகுணீசுவரர் கோயிற் கல்வெட்டால் தெரிகிறது; அக்கல்வெட்டு, “கோனாடான கடலடையா திலங்கை கொண்ட சோழ வளநாட்டு ஒல்லையூர்க் கூற்றத்து ஒல்லையூர் மங்கலத்து உடையார் வரகுணீசுவர முடைய நாயனார் கோயில்1” என்று கூறுகின்றது. எனவே, ஒல்லையூர் மங்கலத்தைத் தலைநகராகக் கொண்டது ஒல்லையூர்க் கூற்றமாகும். இக்கூற்றமே சங்கநாளில் ஒல்லையூர் நாடென்று வழங்கியதாகும். கோனாட்டி லிருந்த இவ் வுள்நாடு திருமெய்யந் தாலுகாவில் உளது. 3. பறம்பு நாடு: இது வேள்பாரி அரசாண்ட நாடு. ‘முந் நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு’2 என்ற புறம்பாட்டடியொன்றால் இது முன்னூறு ஊர்களைத் தன்னகத்துக் கொண்ட நாடு என்று தெரிகிறது. இது, தென் பறம்பு நாடு, வட பறம்பு நாடு என்ற இரு பிரிவுகளை உடையதாக அந்நாளில் இருந்தது என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகிறது.3, இதன் தலைநகர் பறம்பு எனப்படும். இஃது இந்நாளில் பிரான்மலை என்று வழங்குகின்றது. இதன் பழைய பெயர் கொடுங்குன்றம் என்பது. பறம்பு என்னும் மொழி, மலை என்று பொருள்படுதலால் பிற்காலத்தில் பறம்புநாடு திருமலைநாடு எனவும் வழங்கப் பெற்றுள்ளது. இதனைத் ‘திருமலை நாட்டுத் திருக்கொடுங்குன்றத்து நாயனார் நல்ல மங்கை பாகற்கு4 என்னும் பிரான்மலை’க் கல்வெட்டுப் பகுதியினால் நன்கறியலாம். வேள் பாரியின் தலைநகராகிய பறம்பு இந்நாளில் பிரான்மலை என்ற பெயருடன், இராம நாதபுரம் ஜில்லாவில் திருப்புத்தூர்த் தாலுகாவிலும், தென்பறம்பு நாட்டுத் திருவாதவூர் மதுரை ஜில்லாவில் மேலூர்த் தாலுகாவிலும் இருத்தலால் பறம்பு நாடு அவ்விரு தாலுக்காவிலும் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். 4. மிழலைக் கூற்றம்: இது வேள் எவ்விக்குரியதாய்க் கடற்கரையைச் சார்ந்திருந்த நாடு என்பது 24 ஆம் புறப்பட்டால் அறியப்படுகிறது. ‘பாண்டி மண்டலத்து மிழலைக் கூற்றத்து ஒக்கூர்’ 1 எனவும், ‘மிழலைக் கூற்றத்து மணமேற்குடி’ 2 எனவும், ‘மிழலைக் கூற்றத்துக் கீழ்க் கூற்றுப் பொன்பற்றி’ 3 எனவும், ‘மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றுப் புல்லுக்குடி’4 எனவும் கல்வெட்டுக்களில் வரும் தொடர்களால் இக்கூற்றம் பாண்டி மண்டலத்தில் இருந்தது என்பது இதில் கீழ்க்கூறு, நடுவிற்கூறு, மேற்கூறு என்ற மூன்று உட்பிரிவுகள் இருந்தன என்பதும் நன்கறியக்கிடக்கின்றன. இக் கூற்றத்திலுள்ள மணமேற்குடி, பொன்பற்றி முதலான ஊர்கள் தஞ்சாவூர் சில்லாவில் அறந்தாங்கித் தாலுகாவிலும், பராந்தக நல்லூர், வாளவர் மாணிக்கம் முதலான ஊர்கள் புதுக்கோட்டை இராச்சியத்தில் திருமெய்யந் தாலுகாவிலும் இருத்தலால் இம் மிழலைக் கூற்றம் அத்தாலுக்காக்களில் இருந்தது என்பது தேற்றம். இனி, சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவரும் நெல்வேலி வென்ற நின்ற சீர்நெடுமாறனார்க்கு அமைச்சரும் ஆகிய குலச்சிறை நாயனாரது மணமேற்குடியும் வீரசோழியத்தின் ஆசிரியராகிய புத்தமித்திரனாரது பொன்பற்றியும் மேற்கூறிய மிழலைக் கூற்றத்தூர்களேயாம். 5. முத்தூற்றுக் கூற்றம் இது முத்தூர்க் கூற்றம் என்றும் வழங்கப்படுவதுண்டு. 24-ஆம் புறப்பாட்டால் இது பழைய வேளிர்க் குரியதென்பதும் நெல் விளைவிற் சிறந்தது என்பதும் இனிது புலப்படுகின்றது. ‘பாண்டி மண்டலத்து முத்தூர்க் கூற்றம்’ 1 என்றும், முத்தூற்றுக் கூற்றத்துப் பொய்கை நல்லூர்2 என்றும், முத்தூற்றுக் கூற்றத்து திருப்புனவாயில்3 என்றும், ‘முத்தூற்றுக் கூற்றத்துத் தித்தானம்’4 என்றும் கல்வெட்டுக்கள் கூறுவதால், முத்தூற்றுக் கூற்றம் அவ்வூர்களைத் தன்னகத்துக் கொண்டு பாண்டி மண்டலத்தி லிருந்த ஓர் உள்நாடு என்பது பெறப்படுகின்றது. அவ்வூர்களுள் திருப்புனவாயிலும் பொய்கை நல்லூரும் தஞ்சாவூர் ஜில்லாவில் அறந்தாங்கித் தாலுகாவிலும், தித்தாண்ட தானபுரம் என்று வழங்கும் தித்தானம் இராமநாதபுரம் ஜில்லாவில் திருவாடானைத் தாலுகாவிலும் இருததலால் இக்கூற்றம் அறந்தாங்கி திருவாடானை தாலுகாக்களில் இருந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. 4 பழந்தமிழ் ஊர்கள் சில. புறநானூற்றில் காணப்படும் ஊர்களுள் கல்வெட்டுக் களால் விளக்கமுறுவன: இனி, புறநானூற்றில் காணப்படும் ஊர்களுள் தெரியாதனவும் வேறு பெயர்களால் வழங்குவனவும் உள. அவற்றுள், கல்வெட்டுக்களின் துணைகொண்டு அறியப் பெறும் ஊர்களுள் சிலவற்றை விளக்குவேன். 1. ஒல்லையூர் : (புறம். 71) இது புதுக்கோட்டை இராச்சியத்தில் திருமெய்யம் தாலுகாவில் ஒலியமங்கலம் என்ற பெயருடன் இக்காலத்தில் உளது என்பது ஒல்லையூர்க் கூற்றம் என்ற பகுதியில் முன்னர் விளக்கப்பட்டது. 2. அழும்பில் : (புறம் 283) இது புதுக்கோட்டை இராச்சியத்தில் ஆலங்குடி தாலுகாவில் அம்புகோவில் என்ற பெயருடன் இந்நாளில் உளது. இச்செய்தி, அவ்வூர்க் கோயிலிலுள்ள ‘ராஜராஜ வளநாட்டுப் பன்றியூர் நாட்டு அழிம்பில் நாயனார் வீரராஜேந்திர சோழீசுவர முடைய நாயனார்க்கு’1 என்ற கல்வெட்டுப் பகுதியினால் அறியப்படு கின்றது. 3. பிடவூர் : (புறம் 395) ‘நெடுங்கை வேண்மாள் அருங்கடிப் பிடவூர்’2 என்று புறப்பாட்டில் குறிப்பிடப் பெற்ற இவ்வூர், சோழ நாட்டு வைப்புத் தலங்களுள் ஒன்று. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கயிலாய ஞானஉலா என்னும் நூல் இவ்வூரில் மாசாத்தனாரால் முதலில் வெளியிடப்பட்டது என்பர் சேக்கிழாரடிகள். திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் முசிறி தாலுகாவிலுள்ள திருப்பட்டூர் என்பது முற்காலத்தில் திருப்பிடவூர் என்ற பெயருடைய தாயிருந்தது என்பது இவ்வூர்க் கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது.3 எனவே இத் திருப்பட்டூரே சங்க காலத்துப் பிடவூராதல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். 4. மாறோக்கம்: இது, நப்பசலையார் என்ற நல்லிசைப் புலமை நங்கையாரின் ஊராகும். இவருடைய பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. தொல்காப்பியச் சொல்லதிகாரத்துப் பெயரியல் 10-ம் சூத்திரத்தின் விசேடவுரையில் ஆசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப” என்று கூறியுள்ளனர். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்த நாடு என்பர் அதன் பதிப்பாசிரியர். எனவே, மாறோக்கம் என்பது மாறோக்கம் என்னும் நாட்டின் ‘தலைநகராய்த்’ தென்பாண்டி நாட்டில் கொற்கைப் பக்கத்தில் இருந்ததோர் ஊராதல் வேண்டும். ஆனால் மாறோக்கம் என்ற நாடு ஒன்றிருந்தது என்பதைக் கல்வெட்டுக்களின் துணை கொண்டு அறிய இயலவில்லை. கொற்கையைச் சூழ்ந்த நாட்டைக் குடநாடு என்றே கல்வெட்டுக்கள் குறிப்பிடு கின்றன. குடநாடே முற்காலத்தில் மாறோக்கம் நாடு என்று வழங்கியதோ என்ற ஐயம் நிகழ்கின்றது. 5. பூங்குன்றம் : படிக்குந் தோறும் மிக்க இன்பத்தை விளைவிக்கும் இயல்பு வாய்ந்த ‘யாதுமூரே யாவருங் கேளிர்’ என்ற 192-ஆம் புறப்பாட்டை இயற்றிய புலவர் பெருமான் இவ்வூரினர் ஆவர். இது பாண்டி மண்டலத்தின் உள்நாடுகளுள் ஒன்றாகிய பூங்குன்ற நாட்டிற்குத் தலைநகர் என்பது ‘பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றமும்’1 என்ற கல்வெட்டுப் பகுதியினால் பெறப்படுகின்றது. இராமநாதபுரம் சில்லா திருப்புத்தூர் தாலுகாவிலுள்ளதும், இருபெரு மொழி யினும் நுண்மாணுழை புலம் படைத்த புலவர் பெருமானாகிய மகாமகோபாத்தியாய - பண்டிதமணி அவர்கள் தோன்றியதுமாகிய மகிபாலன்பட்டியே இப்பூங்குன்றம் என்பது அங்குள்ள குகைக்கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால் புலப்படுகிற அது, ‘ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடைய வர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ சுந்தர பாண்டிய தேவர்க்கு யாண்டு 10-வது சிங்க நாயிற்று அமர பக்ஷமும் துதியையும் திங்கட்கிழமையும் பெற்ற பூரட்டாதி நாள் உடையார் குலசேகர ஈஸ்வரமுடைய நாயனார் தேவதானம் பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றத்துடையார் திருப்பூங்குன்றமுடைய நாயனார் ஆதிசண்டேசுவர நாயனார்க்கு இந்நாட்டு நாட்டவரோம் பிரமாணம் பண்ணிக் கொடுத்த பரிசாவது’ என்பதாம்.2 6. வஞ்சிமாநகர் : இது சேரர் தலைநகர்; சேரநாட்டில் தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது. தாராபுரத்திற்கும் கொங்கு நாட்டுக் கருவூர்க்கும் வஞ்சி என்ற பெயருண்டு என்பது3 கல்வெட்டுக் களால் தெரிகிறது. திருவனந்தபுரத்துக்கு அண்மையிலும் ஒரு வஞ்சியூர் உளது என்பது அப்பக்கத்துக் கல்வெட்டால் அறியப் படுகிறது. சேரநாட்டுக் கொடுங்கோளூரே வஞ்சி என்று வழங்கிற்று என்பது சேக்கிழாரடிகளும் அடியார்க்கு நல்லாரும் கூறுவனவற்றால் புலனாகின்றது. எனவே, வஞ்சி என்ற பெயருடன் நான்கு ஊர்கள் இருந்தமை அறியத்தக்கது. இச்செய்தி, ‘வஞ்சி நகர் நாலும் வளமையா ஆண்டருளும், கஞ்ச மலர்க்கையுடையான் காண்’ எனவும் ‘நாலு வஞ்சி சேரப் படைத்த சேரமான் பெருமாள்’ எனவும் போதரும் செப்பேட்டுப் பகுதிகளாலும் உறுதியெய்து கின்றது (தமிழ்ப் பொழில், துணர் 7, பக்கம் : 576). இவற்றுள் புறநானூற்றிலுள்ள வஞ்சி யாதென ஆராய்தல் வேண்டும். செங்குட்டுவன் முதலான கடைச்சங்க காலத்துச் சேரர்கள் வீற்றிருந்து அரசாண்டதும் தண்பொருநை ஆற்றங் கரையிலுள்ளதும் ஆகிய வஞ்சியே புறநானூற்றில் காணப்படுவது. வஞ்சி என்று தற்காலத்தில் வழங்கிய கொங்கு நாட்டுக் கருவூர் ஆன்பொருநை ஆற்றங் கரையில் உள்ளது. தண் பொருநையும் ஆன்பொருநை ஆற்றங் கரையில் உள்ளது. தன் பொருநையும் ஆன் பொருநையும் இருவேறு ஆறுகளாகும். இவ்வுண்மையை, ‘யாறுங் குளனும்’ என்று தொடங்கும் தொல்காப்பியம் கற்பியற் சூத்திரத்துக்குக் ‘காவிரியும் தண்பொருநையும், ஆன்பொருநையும், வையையும் போலும் யாற்றிலும்’ என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரைப் பகுதியால் நன்குணரலாம். புறநானூற்றுரையாசிரியர் இவ்விரண்டு ஆறுகளையும் ஒன்றென மயங்கி உரைகண்டமையின், கொங்கு நாட்டுக் கருவூரே சங்க காலத்து வஞ்சி என்று சிலர் கூறுவராயினர். வஞ்சி குடமலை நாட்டில் உள்ளது: கருவூர் கொங்கு நாட்டில் உள்ளது. வஞ்சி தண்பொருநை ஆற்றங்கரையில் உள்ளது: (புறம் 11, 387) கருவூர் ஆன்பொருநையாற்றங் கரையில் உள்ளது. (அகம் 93) வஞ்சி கடற்கரைப் பட்டினம் (சிலப்பதிகாரம், கால்கோட்காதை 80, 81), கருவூர் உள் நாட்டிலுள்ளதோர் ஊர். எனவே, கருவூர் சங்ககாலத்து வஞ்சி எனல் பொருந்தாது. கொங்குநாடு குடமலை நாட்டுச் சேரன் ஆட்சிக்குட்பட்டிருந்த தாயினும், அவன் தலைநகர் குடமலை நாட்டில் தானே இருந்திருத்தல் வேண்டும்: கொங்கு நாட்டில் இருந்தது எனக் கோடல் எங்ஙனம் பொருந்தும்? இங்கிலாந்து மன்னரின் தலைநகராமாகிய ‘இலண்டன்’ மாநகர் இங்கிலாந்திலே தான் இருக்கின்றது. அவரது ஆட்சிக்குட்பட்ட ஸ்காட்லாந்திலும் அயர்லாந்திலும் இல்லை. ஆகவே, குடமலை நாட்டிலுள்ள திருவஞ்சைக் களத்தைத் தன்னகத்துக் கொண்ட கொடுங்கோளூரே சங்க காலத்து வஞ்சி என்பது திண்ணம். 7. தகடூர் : கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய அதியமான் நெடுமானஞ்சி என்பான் வீற்றிருந்து அரசாண்ட நகரம் தகடூர் என்பது முன்னர்க் கூறப்பட்டது. சேலம் ஜில்லாவிலுள்ள தர்மபுரித் தாலுக்காவின் தலைநகராகிய தர்மபுரியே முற்காலத்தில் தகடூர் என்ற பெயருடன் விளங்கியது என்பது அவ்வூரிலுள்ள மல்லிகார்ச்சுனரது கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டால் புலப்படுகிறது. இதனை,1 ‘ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு பன்னிரண்டாவது நிகரிலி சோழ மண்டலத்து கங்க நாட்டுத் தகடூர் நாட்டுத் தகடூரில்’ என்ற ஒரு கல்வெட்டுப் பகுதியினால் நன்குணரலாம். 5. சில வழக்கங்கள் புறநானூற்றிலும் கல்வெட்டுக்களிலும் பொதுவாகக் காணப்படும் சில வழக்கங்கள். பண்டைத் தமிழ் வேந்தருள் சிலர், சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோவாழியாதன், கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், இலவந் திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி, குறாப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், கூடகாரத்து துஞ்சிய மாறன் வழுதி, சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்று புறநானூற்றில்2 குறிப்பிடப்பட்டுள்ளனர். இதனால், அரசர்கள் இறந்த பின்னர் அவர்கள் இறந்த இடங்களை அன்னோர் பெயர்களுக்கு முன்னர்ச் சேர்த்து வழங்குவது பண்டை வழக்கு என்பது புலப்படுகின்றது. கல்வெட்டுக் களில் காணப்படும் ‘தொண்டைமானாற்றூர்த் துஞ்சிய உடையார்1, ஆற்றூர்த் துஞ்சிய உடையார் அரிஞ்சய தேவர்2, பொன் மாளிகைத் துஞ்சிய சுந்தரசோழ தேவர்’ என்ற தொடர்களால் இவ்வழக்கம் கி.பி. 10, 11-ம் நூற்றாண்டுகளிலும் சோழ மண்டலத்தில் இருந்தது என்பது நன்கு வெளியாகின்றது. இனி, கற்புடை மகளிர் தம் கணவர் இறந்த பின் தீப்பாய்ந் துயிர் நீத்தல், வீரங்காட்டிப் பொருது போர்க் களத்தில் உயிர் துறந்த வீரர்களை நினைவு கூர்தற் பொருட்டுக் கல் நடுதல் ஆகிய செயல்கள் முற்காலத்தில் இருந்தன என்பது புறநானூற்றால் புலனாகின்றது. இவை கி.பி. 10, 11, 12-ஆம் நூற்றாண்டுகளிலும் நம் தமிழகத்தில் வழக்கில் இருந்தன என்பது பல கல்வெட்டுக் களாலும் செப்பேடுகளாலும் அறியப்படுகின்றது. இவற்றை எடுத்துக்காட்டுகளால் விளக்கப்புகின் இக்கட்டுரை மிக விரியுமாதலின் இந்த அளவில் நிறுத்திக் கொண்டேன். 6. சில குறிப்புகள் புறநானூற்றில் காணப்படும் சில சொற்றொடர்களையும் சொற்களையும் பற்றிய குறிப்புகள்,. 1. முதுகண் : உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன. உறையூர் என்பது அப்புலவரது ஊர்; சாத்தனார் என்பது அவரது இயற்பெயர். எனவே முதுகண்ணன் என்பது எதனை உணர்த்தும் என்று ஈண்டு ஆராய்வது இன்றியமையாததாகும். முதுகண் என்பது தமது நெருங்கிய கிளைஞராயுள்ள இளைஞர்க்கும் பெண்டிர்க்கும் அவர்கள் பொருள்களுக்கும் பாதுகாவலராக நிலவிய, ஆண்டில் முதிர்ந்த ஆண்மக்கட்குரிய பெயராக முற்காலத்தில் வழங்கியுள்ளது என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. இதனை, இச் சுந்தரப்பட்டனையே முதுகண்ணாக வுடைய இப்பொன்னார் மேனி பட்டன் மாதா உமை யாண்டாளும்1 எனவும், ‘இவனையே முது கண்ணாகவுடைய இவன் பேரன் சொக்கன் ஆராவமுதும்’2 எனவும் போதரும் கல்வெட்டுத் தொடர்களால் உணரலாம். இந் நாளில் அத்தகையார் ‘கார்டியன்’ என்றும் ‘போஷகர்’ என்றும் வழங்கப்படுகின்றனர். அவற்றுள் ‘கார்டியன்’ ஆங்கில மொழியிலிருந்து வந்து வழங்கும் திசைச் சொல்: ‘போஷகர்’ என்பது வடசொல். ஆகவே இச் சொல்லின் பொருளை யுணர்த்துவதாய் முற்காலத்தில் நம் நாட்டில் வழங்கி வந்தது முதுகண் ஆகும். எனவே, பிறர்க்கு முதுகண்ணாக இருப்பவன் முதுகண்ணன் என்பது வெளிப்படை. 2. மண்டை : சங்க காலத்தில் பாணர்களிடத்திலிருந்த ஒருவகை உண்கலம் மண்டை என்ற பெயருடையதாயிருந்தது என்பது புறநானூற்றிலுள்ள பல செய்யுட்களால் அறியப்படு கின்றது.3 தஞ்சை மாநகரில் இராசராசேச்சுரம் என்ற பெருங் கோயிலை எடுப்பித்த முதல் இராசராச சோழனும் அவன் உரிமைச் சுற்றத்தினரும் அக்கோயிலுக்குப் பொன்னாலும் வெள்ளியாலும் செய்தளித்த கலங்களுள் மண்டைகளும் உள்ளன என்பது, ‘நாளதினாலே கொடுத்த பொன்னின் மண்டை ஒன்று, மேற்படி கல்லால் நிறை முந்நூற்றுத் தொண்ணூற்றொன் பதின் கழஞ்சே முக்கால்’4 ‘மண்டை ஒன்று, வெள்ளி இருநூற்றிருபத்தேழு கழஞ்சு5’ என்ற அக்கோயிற் கல்வெட்டுப் பகுதிகளால் புலனாகின்றது. எனவே, கி.பி.11 ஆம் நூற்றாண்டிலும் இப்பெயருடைய கலங்கள் நம் தமிழ் நாட்டுக் கோயில்களில் இருந்தமை அறியத்தக்கது. வட மொழியாளர் மண்டையை கபஸம் என்று கூறுவர். 3. முடிநாகராயர் : சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனைப் பாடிய புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்பது புறநானூற்றால் அறியப்படுவது. இப்பெயருடைய தலைச்சங்கப் புலவர் பலர் இருந்தனர் என்று இறையனார் அகப்பொருள் உரை கூறுகின்றது. பிற்காலச் சோழர் காலத்துக் கல்வெட்டுக் களில் காணப்படும் கச்சிராயர், காலிங்கராயர், சம்புவராயர், காடவராயர், சேதிராயர் போன்ற தொடர்கள் சங்கநாளில் வழக்கில் இல்லை. அன்றியும், ரகரத்தை மொழி முதலாகக் கொண்ட ‘ராயர்’ என்ற சொல் சங்க காலத்தில் வழங்கவில்லை என்பது முடிநாகனார் என்றிருந்திருக்குமோ என்ற ஐயப்பாடு உண்டாகின்றது இதனை அறிஞர்கள் ஆராய்ந்து விளக்குவார்களாக. 4. கழஞ்சு : ‘ஏருடைய விழுக் கழஞ்சிற் - சீருடைய இழை பெற்றிசினே’ என்னும் புறப்பாட்டடிகளில் கழஞ்சு பயின்று வருகிறது. மணி, பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள் கழஞ்சு, மாஞ்சாடி, குன்றி என்பவற்றாலும், செம்பு, பித்தளை, வெண்கலம் முதலான தாழ்ந்த பொருள்கள் பலம், கஃசு என்றும் நிறைகற்களாலும் முற்காலத்தில் நிறுக்கப்பட்டு வந்தன என்பது பல கல்வெட்டுக்களால் புலப்படுகிறது. இரண்டு குன்றி கொண்டது ஒரு மாஞ்சாடியாகும்: 20 மாஞ்சாடி கொண்டது ஒரு கழஞ்சு எனவே, 40 குன்றி கொண்டது ஒரு கழஞ்சு என்பது வெளிப்படை. ஆகவே, ஒன்றேகால் வராகனெடைகொண்டது ஒரு கழஞ்சு என்பது நன்கு துணியப்படும். இதுகாறும் கூறியவற்றால் புறநானூற்றுச் செய்திகளுள் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் உறுதி எய்துவனவும், அந்நூலில் கூறப்படும் நாடுகளையும் ஊர்களையும் பற்றிக் கல்வெட்டுக்களால் புலப்படுவனவும், புறநானூறு, கல்வெட்டுக்கள் இவற்றுள் பொதுவாகக் காணப்படும் சில வழக்கங்களும், சில சொற்களையும் சொற்றொடர்களையும் பற்றிய செய்திகளும் நன்கு விளக்குதல் காண்க. 12. பத்துப்பாட்டும் கல்வெட்டுக்களும் பத்துப்பாட்டு என்பது சங்கத்துச் சான்றோர் எண்மரால் இயற்றப்பட்டுக் கடைச்சங்கத் திறுதிக் காலத்தில் தொகுக்கப் பெற்ற பத்துப்பாடல்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு நூலாகும். இது பண்டைத் தமிழ்மக்களுடைய வரலாறுகளையும் வழக்க ஒழுக்கங்களையும் நம்மனோர்க்கு நன்குணர்த்தும் பெருமை உடையது. காலஞ்சென்ற பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை அவர்கள் தம் மனோன்மணீயம் என்னும் நாடகத்தில், “பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே” என்று இவ்வரிய நூலைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது. இதில் ஆற்றுப்படைகளாக வுள்ளவை, திருமுருகாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்பன. எஞ்சியவை முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை ஆகிய ஐந்தும் ஆகும். இப்பாடல்களைத் தன்பாற் கொண்ட பத்துப்பாட்டு கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலாதல் அதற்கு முன்னராதல் தோன்றியிருத்தல் வேண்டும் என்பது அறிஞர்களது கொள்கை. தமிழ் நாட்டில் கோயில் சுவர்களில் பொறிக்கப் பெற்றுள்ள தமிழ்க் கல்வெட்டுக்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல்தான் காணப்படுகின்றன. ஆகவே, தமிழ்க் கல்வெட்டுக்கள் எல்லாம் பத்துப்பாட்டிற்குக் காலத்தால் மிகப் பிற்பட்டனவே யாம். எனினும், பத்துப்பாட்டும் கல்வெட்டுக் களும் தமிழ் மக்களுடைய வரலாறுகளை யுணர்த்துவதில் தம்முள் ஒற்றுமையுடையனவேயாம். இனி, கல்வெட்டுக்களால் விளக்கமுற்று உறுதி யெய்தும் பத்துப்பாட்டுச் செய்திகளுள் சிலவற்றைக் காண்போம். 1. கடைச்சங்கப் புலவருள் ஒருவரும் குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியரும் ஆகிய கபிலர், திருக்கோவலூரில் பெண்ணை யாற்றங்கரையில் தீப்பாய்ந்து உயிர் நீத்தனர் என்று அப் புலவர் பெருமானை நினைவுகூர்தற் பொருட்டு அவ் விடத்தில் ஒரு நடுகல் நிறுவப் பெற்றது என்றும், அக்கல், ‘கபிலக்கல்’ என்று அந் நாளில் வழங்கப்பட்டது என்றும் திருக்கோவலூர் வீரட்டா னேசுவரர் கோயிலில் முதல் இராசராசசோழன் ஆட்சியில் கி.பி. 1012-ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்று கூறுகின்றது. அகவற் பாவில் அமைந்துள்ள அக் கல்வெட்டுப் பகுதி. “வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத் தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது மொய்வைத் தியலு முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப் பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை அலைபுன லழுவத் தந்தரிட் சஞ்செல மினல்புகுங் கபிலக் கல்லது புனல்வளர் பேரெட் டான வீரட் டானம் அனைத்தினு மநாதி யாயது” (ளு.ஐ.ஐ. ஏடிட. ஏஐஐ, சூடி. 863) என்பதாம், 2. கிபி. 1216 முதல் 1238 முடிய மதுரை மாநகரில் வீற்றிருந்து பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்த முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டொன்று, கடியலூர் உருத்திரங் கண்ணனாரையும் அப் புலவர்பிரான் சோழன் கரிகாற் பெரு வளத்தான் மீது பாடிய பட்டினப் பாலையையும் குறிப்பிடுவது அறியத்தக்க தொன்றாம். திருவெள்ளடையில் கட்டளைக் கலித்துறையாக வுள்ள அக் கல்வெட்டு, ‘வெறியார் தளவத் தொடைசெய மாறன் வெகுண்ட தொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன் செய் பட்டினப் பாலைக்கன்று நெறியால் விடுந் தூண் பதினாறு மேயங்கு நின்றனவே’ (செந்தமிழ் - தொ.41, பக். 215) என்பது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-ல் சோழ நாட்டின் மேல் படையெடுத்துத் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி, மாடமாளிகைகளையும், ஆடரங்குகளையும், மணிமண்டபங்களையும் இடித்து அழித்தனன் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. அப் படையெழுச்சியில் பாண்டிவேந்தனால் சோழநாட்டில் இடிக்கப்படாமல் விடப்பெற்றது முற்காலத்தில் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குச் சோழன் கரிகாற்பெருவளத்தான் பரிசிலாக வழங்கியிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் என்று மேலே குறிப்பிட்ட சுந்தரபாண்டியன் கல்வெட்டு உணர்த்துவது காண்க. 3. திருவண்ணாமலையில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் வரையப் பெற்ற கல்வெட்டொன்று, தொண்டை மண்டலத்தில் பல்குன்றக்கோட்டத்தி லுள்ள செங்கைமாவிலிருந்து அரசாண்ட வேள்நன்னன் என்பவனையும் அவன்மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் பாடிய மலைபடுகடாம் என்ற நூலையும் குறிப்பிடுதல் அறியற்பாலதாகும். அக் கல்வெட்டுப்பகுதி, ‘நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில் வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன் வாகையுங் குரங்கும் விசையமுந் தீட்டிய அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்’ என்பதாம். (ளு.ஐ.ஐ. ஏடிட. ஏஐஐ, சூடி. 69) இதில், ‘நல்லிசைக் கடாம்புனை நன்னன்’ என்ற தொடர் ‘இனிய ஓசையமைந்த மலைபடுகடாம் என்னும் நூல் கொண்டு புகழ் எய்திய நன்னன்’ என்று பொருள்படுதல் அறிக. அன்றியும், இதில் குறிக்கப் பெற்ற நன்னன் வெற்பு என்பது மலைபடு கடாத்தில் ‘நீரகம் பனிக்கம் அஞ்சுவரு கடுந்திறற் - பேரிசை நவிரம்’ எனவும், ‘வாய்வளம்பழுநிக்-கழைவளர்நவிரம்’ எனவும் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ள நவிரமலையாதல் வேண்டும். இந் நவிரமலை இக்காலத்தில் திருவண்ணாமலைக்கு வடமேற்கே திரிசூலகிரி, பர்வதமலை என்ற பெயர்களுடன் உளது. மலை படுகடாத்தில் நன்னன் ‘குன்றுசூழ் இருக்கை நாடு கிழவோன்’ என்று பெருங்கௌசிகனார் என்ற புலவர் பெருமானால் பாராட்டப் பெற்றுள்ளனன். அக்குன்றுசூழ் இருக்கைநாடு என்பது முற்காலத்தில் தொண்டைமண்டலத்திலிருந்த இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய பல்குன்றக் கோட்டத்தையே குறிக்கும் என்பது பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. மலைபடுகடாத்தின் ஆசிரியராகிய பெருங்கௌசிகனாரது பெருங் குன்றூர் இரணியமுட்ட நாட்டிலுள்ளதோர் ஊராகும். இரணியமுட்டநாடு என்பது பாண்டி மண்டலத்திலிருந்த உள்நாடுகளுள் ஒன்று என்பதும் அந்நாடு மதுரை மாநகர்க்கு வடகிழக்கேயுள்ள ஆனைமலை, அழகர்கோயில் (திருமாலிருஞ் சோலை) முதலான ஊர்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு பெருநிலப் பரப்பு என்பதும் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றன. (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஐஐ, சூடி. 106). எனவே, பெருங்கௌசி கனாருடைய பெருங்குன்றூரும் அப்பதியில்தான் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அக் கவிஞர் கோமான் பாண்டி நாட்டுப் புலவர் என்பது உணரற்பாலதாம். 4. சிறுபாணாற்றுப்படையின் தலைவனாகிய நல்லியக் கோடனுடைய ஒய்மானாடு என்பது தொண்டை மண்டலத்தில் திண்டிவனம் புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கேயுள்ள கடற்கரையில் பரவியிருந்த ஒரு பெரும் நிலப்பரப்பாகும். திண்டிவனம், கிடங்கில், திருஅரைசிலி முதலான ஊர்கள் ஓய்மானாட்டில் இருந்தவை என்பதும் அந்நாடு சோழர்களது ஆட்சிக் காலங்களில் விசையராசேந்திர வளநாடு என்று வழங்கப் பெற்று வந்தது என்பதும் பல கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன. இதுகாறும் பத்துப்பாட்டுச் செய்திகளுள் சில, கல்வெட்டுக்களின் துணைகொண்டு விளக்கப் பெற்றமை உணர்க. 13. பதிற்றுப்பத்தும் பதிகங்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழாராய்ச்சிப் பகுதியில் விரிவுரையாளராகவுள்ள என்னுடைய அரிய நண்பர், திருவாளர் ஓளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்துக்குச் சிறந்த புத்துரை யொன்று எழுதி வந்தார்கள். ஒப்பற்ற சங்க நூற் பயிற்சியும் நுண்மாண் நுழைபுலனும் ஒருங்கே படைத்துத் தமிழகத்திலுள்ள அறிஞர் பலராலும் பராட்டப் பெறும் அவர்களது பேருரையைக் கையெழுத்துப் பிரதியில் யான் படிக்க நேர்ந்த போது, அவ்வுரை விரைவில் வெளியிடப் பெறின், மிகக் கடினமான பதிற்றுப்பத்தை யாவரும் எளிதில் படித்துணர்ந்து கொள்ளலாம் என்று எண்ணினேன். அதற்கேற்ப, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் செயற்றலைவரும் என்னுடைய நண்பருமாகிய திருவாளர் வ. சுப்பையாப்பிள்ளை யவர்கள் அந் நூலைப் பிள்ளையவர்களது உரையுடன் வெளியிடும் பணியை ஏற்றுக் கொண்டு அதனை நிறைவேற்றினார்கள். இந் நிலையில் நாடோறும் என்னோடு ஆராய்ச்சித் துறையில் அளவளாவிக் கொண்டும் புதிய புதிய உண்மைகளை ஆராய்ந்துணர்ந்து வெளியிட்டுக்கொண்டும் வரும் என் நண்பர் திரு. பிள்ளையவர்கள் பதிற்றுப்பத்தின் பதிகங்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைந்து தருமாறு கூறினார்கள். அதனை ஏற்றுக் கொண்ட யான் அடியிற் காணும் கட்டுரையை எழுதியுள்ளேன். சங்கத்துச் சான்றோர் இயற்றியுள்ள தொகை நூல்களுள் பதிற்றுப்பத்தும் புறநானூறும் தனிச் சிறப்புடையனவாகும். அவை பண்டைக் காலத்தில் நம் தமிழகத்தில் நிலவிய முடியுடைத் தமிழ் வேந்தர், குறுநில மன்னர், பிற தலைவர்கள், புலவர் பெரு மக்கள், நல்லிசைப்புலமை நங்கையர் முதலானோரின் அரிய வரலாறுகளையும் தமிழருடைய பழைய நாகரிக நிலையினையும் மற்றும் பல உண்மைகளையும் நம்மனோர்க்கு அறிவுறுத்தும் பெருங் கருவூலங்கள் எனலாம். சுருங்கச் சொல்லுமிடத்து, அவை தமிழ்நாட்டின் பழைய வரலாற்று நூல்கள் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்தும். புறப்பொருளைப் பற்றுக் கோடாகக் கொண்டெழுந்த அவ்விரு நூல்களுள் பதிற்றுப்பத்து எனப்படுவது, சேரமன்னர் பதின்மர்மீது பாடிய ஒரு தொகை நூல். ஒவ்வொரு பத்தும், பத்துப் பாடல்களைத் தன்னகத்துக் கொண்டது. இந்நூலின் முதற் பத்தும் இறுதிப் பத்தும் இக்காலத்தில் கிடைக்காமையின் இதனை இன்னார் வேண்ட இன்ன புலவர் தொகுத்தார் என்பது தெரியவில்லை. இதனைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் தாம் ஒவ்வொரு பதிகம் இயற்றிச் சேர்த்திருத்தலை நோக்குங்கால் அவர் சிறந்த புலவராயிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். ஒவ்வொரு பதிகத்திலும் அப்பத்தின் பாட்டுடைத் தலைவன் இன்ன வேந்தன் என்பதும், அவன் அருஞ் செயல்கள் இன்ன என்பதும் சொல்லப் பட்டுள்ளன. பதிகத்தைச் சார்ந்த உரைநடைப் பகுதியில் அப் பத்தினைப் பாடிய புலவர் பெற்ற பரிசிலும், வேந்தன் ஆட்சி புரிந்த யாண்டின் தொகையும் கூறப்பட்டிருக்கின்றன. ஆகவே ஒவ்வொரு பத்தின் இறுதியிலுள்ள பதிகமும், உரைநடைப் பகுதியும் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் என்பதும் ஒருதலை. பதிற்றுப்பத்தினைத் தொகுத்துதவிய புலவர் பெருந்தகை, பதிகங்களையும், உரைநடைப் பகுதிகளையும் சேர்க்காமலிருந்தால் இவ்வரிய நூலின் வரலாற்றினையும் அருமை பெருமைகளையும் பின்னுள்ளோர் அறிந்து கொள்வது இயலாததாகும். இனிப் பதிகங்களின் அமைப்பினைப் பார்க்குங்கால் அவை பிற்காலச் சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் வரைந்துள்ள மெய்க்கீர்த்திகளை ஒருவாறு ஒத்துள்ளன எனலாம். கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி எழுதத் தொடங்கியவன், முதல் இராசராச சோழன் ஆவன். அந்நிகழ்ச்சியும் அவ்வேந்தனது எட்டாம் ஆட்சியாண்டாகிய கி.பி. 993ல் தான் முதலில் நிகழ்ந்துள்ளது. எனவே மெய்க் கீர்த்தியைப் பின்பற்றிப் பதிற்றுப்பத்தில் பதிகங்கள் அமைக்கப் பெற்றிருந்தால் அவை கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு இயற்றப்பட்டனவாதல் வேண்டும். ஆனால் பதிற்றுப் பத்தில் பதிகங்கள் இறுதியிலுள்ளன; கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்திகள் தொடக்கத்தில் உள்ளன. இவ் வேறுபாட்டை நுணுகியாராயு மிடத்து முதல் இராசராச சோழனுக்குத் தன் கல்வெட்டுக்களில் முதலில் மெய்க்கீர்த்தி யொன்று அமைக்கும் விருப்பத்தை யுண்டு பண்ணியவை, பதிற்றுப்பத்திலுள்ள பதிகங்களே என்று கருதுவதற்கு இடம் உளது. அவன் தன் ஆட்சியின் நான்காம் ஆண்டு முதல் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய கோ இராசகேசரிவர்மன்’ என்று தன்னைக் கூறிக் கொள்வதை அவன் கல்வெட்டுக்களில் காணலாம். எனவே, கி.பி. 989 முதல் சேர நாட்டின் தொடர்பினைக் கொண்டிருந்த முதல் இராசராச சோழன், சேர மன்னர்களின் வீரச் செயல்களைப் பதிற்றுப்பத்தின் பதிகங்களில் கண்டு, அவற்றைப் பின்பற்றித் தன் கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி அமைத்திருத்தலும் கூடும். இக் கொள்கை உறுதியெய்துமாயின் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முன்னரே பதிகங்கள் இயற்றப் பெற்றுப் பதிற்றுப்பத்தும் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும். பதிகங்களுக்கும் உரை காணப்படுகின்றமையால் அவை உரையாசிரியர் காலத்திற்கு முற்பட்டவை என்பது திண்ணம். பதிற்றுப்பத்தில் இக் காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பதிகங்களையும் ஆராயுங்கால், கடைச்சங்க காலத்தில் உதியன் மரபினர், இரும்பொறை மரபினர் ஆகிய இருசேரர் குடியினர், சேர மண்டலத்தைத் தனித்தனிப் பகுதிகளிலிருந்து அரசாண்டனர் என்பது நன்கு புலனாகின்றது. அவ்விரு மரபினரும் தாயத்தினர் ஆவர். அவர்களுள் எண்மரே இப்பொழுது கிடைத்துள்ள எட்டுப் பத்துக்களின் பாட்டுடைத் தலைவர்கள் என்பது உணரற்பாலதாம். அவ்வெண்மருள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய ஐவரும் உதியன் மரபினர் ஆவர்; செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, இளஞ் சேரலிரும்பொறை ஆகிய மூவரும் இரும்பொறை மரபினர் ஆவர். இரண்டாம் பத்தின் தலைவன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் உதியஞ் சேரலுடைய மகன் என்பது பதிகத்தால் அறியப் படுகிறது. ஆகவே, இந்நாளில் கிடைக்காத முதல்பத்து, நெடுஞ்சேரலாதன் தந்தையாகிய உதியஞ்சேரலின் மீது பாடப் பட்டதாயிருத்தல் வேண்டும். மூன்றாம் பத்தின் தலைவன் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்போன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பியாவன். நான்காம் பத்தின் தலைவன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஐந்தாம் பத்தின் தலைவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், ஆறாம் பத்தின் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய மூவரும் நெடுஞ்சேரலாதனுடைய மக்கள் ஆவர். எனவே, பதிற்றுப்பத்துள் முதல் ஆறு பத்துக்களும் உதியஞ்சேரல், அவன் புதல்வர் இருவர், அவன் பேரன்மார் மூவர் ஆகிய அறுவர் மீதும் பாடப் பெற்றவை எனலாம். ஏழாம்பத்தின் தலைவன் செல்வக் கடுங்கோவாழி யாதன் என்பான், அந்துவஞ்சேர லிரும்பொறையின் மகன் ஆவன். எட்டாம் பத்தின் தலைவன் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை என்பவன், செல்வக் கடுங்கோவின் புதல்வன் ஆவன். ஒன்பதாம் பத்தின் தலைவன் இளஞ்சேரலிரும்பொறை என்போன் பெருஞ்சேரலிரும்பொறையின் மகன் ஆவன். எனவே, இறுதி யிலுள்ள மூன்று பத்துக்களும் செல்வக்கடுங்கோ வாழியாதன் அவன் புதல்வன், அவன் பேரன் ஆகிய மூவர்மீதும் பாடப் பட்டவையாகும். இதுபோது கிடைக்காத இறுதிப் பத்து, யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையின் மீது பாடப் பெற்றிருத்தல் வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். அதனை ஒருதலையாகத் துணிதற்கு இயலவில்லை. ஆகவே, அஃது இன்னும் ஆராய்தற்குரிய தொன்றாகும். இனி, அச் சேரமன்னர் தம்மைப் பாடிய புலவர் பெரு மக்கட்கு வழங்கியுள்ள பரிசில்களை நோக்குவாம். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குமட்டூர் கண்ணனார்க்கு உம்பற் காட்டில் ஐந்நூறு ஊர்களைப் பிரமதாயமாக வழங்கியதோடு தென்னாட்டு வருவாயுள் சில ஆண்டுகள் வரையில் பாகமும் அளித்தனன். அந்தணர்க்குக் கொடுக்கப்படும் இறையிலி நிலங்களே பிரம தாயம் என்று சொல்லப்படும். அவை பிரமதேயம் எனவும் பட்டவிருத்தி எனவும் முற்காலத்தில் வழங்கப்பட்டன என்பது பல கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. செல்வக் கடுங்கோவாழியாதன், கபிலர்க்குச் சிறு புறமாக நூறாயிரம் பொற்காசும், நன்றா என்னும் குன்றின்மேல் ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடுகளையும் வழங்கினான். அவ் வேந்தனுடைய பேரன் இளஞ்சேரலிரும் பொறையைப் பாடிய பெருங் குன்றூர்கிழார், ‘உவலைகூராக் கவலையி னெஞ்சின் - நனவிற் பாடிய நல்லிசைக் - கபிலன் பெற்ற வூரினும் பலவே’ என்று பதிற்றுப்பத்தின் எண்பத்தைந்தாம் பாடலில் கூறியிருத்தலால் புலவர் பெருமானாகிய கபிலர் சேரநாட்டில் பிரமதேயமாகப் பெற்ற ஊர்கள் பலவாதல் தெள்ளிது. ஒரே காலப் பகுதியில் சேர நாட்டிலிருந்த இவ்விரு வேந்தர்களின் பெருங்கொடைத்திறம் யாவர்க்கும் இறும்பூதளிக்கும் இயல்பின தாகும். பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பாலைக் கௌதமனார் விரும்பிய வாறு பத்துப் பெருவேள்விகள் செய்வித்து அப்புலவர் தம் மனைவியுடன் விண்ணுலகம் புகச் செய்தான். இவ் வரசனுடைய தமையன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய அரும்பெறற் புதல்வராகிய இளங்கோவடிகள் தாம் பாடிய சிலப்பதிகாரத்தில் ‘நான்மறையாள’ன் செய்யுட் கொண்டு, ‘மேனிலையுலகம் விடுத்தா னாயினும்’ என்ற அடிகளில் இந் நிகழ்ச்சியைக் குறித்திருத்தல் காணலாம். இவ்வேந்தன் இறுதியில் துறவுபூண்டு காடு போந்தனன் என்பர். களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், காப்பியாற்றுக் காப்பியனார்க்கு நாற்பது நூறாயிரம் பொன்னும் தான் ஆளுவதிற் பாகமும் அளித்தான். இவன் தம்பி ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், காக்கைபாடினியார் நச்செள்ளையார்க்கு அணிகலனுக்காக ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் வழங்கினான். இவர்களுள் பின்னோன் மேல் கடற்கரையிலிருந்த தொண்டியைத் தலைநகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பை ஆட்சி புரிந்தனன் என்று தெரிகிறது. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், பரணர்க்குத் தன் ஆட்சிக் குட்பட்ட உம்பற் காட்டு வருவாயையும் தன் மகன் குட்டுவன் சேரலையும் கொடுத்தனன். இவன் தன் புதல்வன் அப்புலவர் பெருமான்பால் கற்று வல்லனாதலை விரும்பி அங்ஙனம் அளித்தனன் போலும். தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, அரிசில் கிழார்க்கு ஒன்பது நூறாயிரம் பொற்காசும், தன் அரசு கட்டிலையும் வழங்கினான். அப் புலவர்பிhரன் அரியணையை ஏற்றுக் கொள்ளாமல், ‘நீ அரசு வீற்றிருந்தாளுக’ என்று கூறி, இவனுக்கு அமைச்சுரிமை பூண்டனர். இளஞ்சேர லிரும்பொறை, பெருங்குன்றூர் கிழார்க்கு முப்பத்தீராயிரம் பொற்காசும், அவர் அறியாமல் ஊரும் மனையும் வளமுற அமைத்துக் கொடுத்தான். புறநானூற்றிலுள்ள 210, 211 ஆம் பாடல்களை நுணுகி ஆராயுங்கால், இவன் தன்னைப் பாடிய பெருங்குன்றூர் கிழாரைப் பன்னாள் காத்திருக்கும்படி செய்து பின்னர் ஒன்றுங்கொடாமல் அனுப்பி விட்டான் என்பதும், அதுபற்றி அவர் மனம் வருந்திச் செல்ல நேர்ந்தது என்பதும் நன்கு வெளியாகின்றன. இதனால் புலவர் பெருமானது நல்வாழ்விற்கு வேண்டியன எல்லாம் அவருடைய ஊரில் அவர் அறியாமலே வைத்துவிட்டுப் பிறகு அவரை வெறுங்கை யினராக இவ்வேந்தன் அனுப்பியிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவ்வுண்மை ஒன்பதாம் பத்தின் இறுதியிலுள்ள உரைநடைப் பகுதியால் உறுதியெய்துதல் அறியத்தகக்து. இதுகாறும் கூறியவற்றால், பதிற்றுப்பத்தின் பாட்டுடைத் தலைவர்களாகிய பண்டைச் சேரமன்னர்களின் வரையா வண்மையும் அன்னார் புலவர் பெருமக்களிடம் காட்டிய பேரன்பும் நன்கு புலனாதல் காண்க. இனி, மேலே குறிப்பிட்ட சேரமன்னர்களின் செயல்கள் வெறும் புனைந்துரைச் செய்திகள் அல்ல என்பதும், அவை வரலாற்றுண்மைகளேயாம் என்பதும் சேரநாட்டில் ஆங்காங்கு கிடைக்கும் சான்றுகளால் தெள்ளிதிற் புலனாகின்றன. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன்னைப் பாடிய பாலைக் கௌதமனார் பொருட்டுப் பத்துப் பெருவேள்விகள் நடப்பித்து அவர்க்கு விண்ணுலகம் அளித்த வரலாறு மலைநாட்டில் இக்காலத்தும் செவிவழிச் செய்தியாக வழங்கி வருகின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்பால் குமட்டூர் கண்ணனார் பிரமதேயமாகப் பெற்ற ஐந்நூறு ஊர்களை தன்னகத்துக் கொண்டதும் செங்குட்டுவன்பால் பரணர் வருவாய் பெற்றதும், ஆகிய உம்பற்காடு பிற்காலத்தில் வேழக்காடு என்ற பெயருடன் நிலவியது என்பது செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் அறியக் கிடக்கின்றது. அன்றியும், சேரநாட்டிலுள்ளனவாகச் செப்பேடுகள் கல்வெட்டுக்கள் முதலானவற்றால் உணரக் கிடக்கும் பரணன் கானம், கண்ணன்காடு, காக்கையூர் ஆகிய ஊர்கள், பரணர், குமட்டூர்க் கண்ணனார், காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்ற புலவர்பெருமக்களுக்கும் மலை நாட்டிற்கும் ஏற்பட்டிருந்த பண்டைத் தொடர்பினை நன்கு விளக்கி நிற்றல் காண்க. இனி, பதிற்றுப்பத்திலுள்ள பாடல்களுக்குப் பெயர்கள் இடப் பெற்றிருத்தலைப் பதிகங்களின் இறுதியிற் காணலாம். அப்பெயர்கள் எல்லாம் ஒவ்வொரு பாட்டிலும் காணப்படும் பொருள் நயம் பொருந்திய அருந் தொடர்களாக இருத்தல் அறியத்தக்கது. இங்ஙனமே, சங்கத்துச் சான்றோர் சிலர், தம் செய்யுட்களில் அமைத்துப் பாடியுள்ள சில அருந்தொடர் களைத் தம் பெயர்களாகக் கொண்டு விளங்கியமை, புறநானூறு, குறுந்தொகை முதலான சங்க நூல்களால் நன்கு புலனாகின்றது. அவர்களுள் தொடித்தலை விழுத்தண்டினார். இரும்பிடர்த் தலையர், கழைதின்யானையார், குப்பைக்கோழியார், அணிலாடு முன்றிலார், கங்குள் வெள்ளத்தார், கல்பொரு சிறுநுரையார், நெடுவெண்ணிலவினார் முதலானோர் குறிப்பிடத் தக்க வராவார். அவர்கள் பாடல்களில் காணப்படும் அருந்தொடர்கள் அன்னோரின் இயற்பெயர்களை மறக்கும்படி செய்து விட்டமை உணரற்பாலதாம். எனவே, பொருள் வளமிக்க அருந் தொடர் களைக் கொண்ட பதிற்றுப்பத்துப் பாடல்களுக்கு அத் தொடர் களையே பெயர்களாக அமைத்திருப்பது மிகப் பொருத்த முடையதேயாம். ஆனால் பிற்காலத்தில் அவ்வழக்கம் மாறிவிட்டது என்பது, சமயச்சார்பில் தோன்றிய பதிகங்களுக்கு அவற்றின் முதலில் அமைந்துள்ள தெடர்களையே பெயர்களாக வழங்கி யுள்ளமையால் தெரிகின்றது. பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து எட்டாம் பத்துக்களின் பதிகங்களின், ‘வேளாவிக் கோமான் பதுமன்தேவி’ என்றும் ஆறாம் பதிகத்தில் ‘வேளாவிக் கோமான் தேவி’ என்றும் பயின்று வரும் தொடர்கள் வேளாவிக் கோமன் பதுமன் என்பவனுடைய மகள் எனவே பொருள்படும் என்பது ஈண்டறியத்தக்க தொன்றாகும். சோழ மன்னர்களின் மனைவியருள், பாண்டியன் மகள் தென்னவன் மாதேவி, பஞ்சவன் மாதேவி எனவும், சேரன் மகள் சேரன் மாதேவி, வானவன் மாதேவி எனவும் வழங்கப் பெற்றனர் என்பது சோழமன்னர் கல்வெட்டுக்களால் நன்குணரப்படும். தேவி என்னும் சொல் மனைவியென்ற சிறப்புடைப் பொருளில் வழங்குவதாயினும் இடைக்காலத்தில் அச்சொல் மகள் என்ற பொருளிலும் பெருக வழங்கினமை மேற்காட்டிய பதிற்றுப்பத்துப் பதிகங்களின் தொடராலும் சோழ மன்னர் கல்வெட்டுக்களாலும் இனிது புலனாகும். இதுகாறும் கூறியவாற்றால் பதிற்றுப்பத்தின் பதிகங்கள் நம் தமிழகத்தின் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவன வாகும் என்பதும், அப்பதிகங்களே சோழ மன்னர்கள் தம் கல்வெட்டுக்களிலும் மெய்க்கீர்த்திகள் வரைவதற்கு ஓர் ஏதுவாக இருந்திருத்தல் கூடும் என்பதும், சேரமன்னர்கள் தம்மைப் பாடிய புலவர் பெருமக்களைப் பாராட்டிப் போற்றிய முறைகள் இவை என்பதும், பதிகங்களில் காணப்படுவன உண்மைச் செய்திகளேயாம் என்பதும் அவற்றை உறுதிப்படுத்துவதற்குரிய சான்றுகள் கல்வெட்டுக்கள் செப்பேடுகள் முதலானவற்றில் இக்காலத்தும் உள்ளன என்பதும் நன்கு விளங்குதல் காண்க. 14. கூத்தராற் குறிக்கப் பெற்ற சில தலைவர்கள் கவிஞர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர், விக்கிரம சோழன் இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகிய மூவேந்தர்களது ஆட்சிக்காலங்களிலும் அன்னோரது அவைக்களப் புலவராக விளங்கிய பெரியார் என்பது யாவரும் அறிந்ததொன்றாம். அவ்வேந்தர்கள் பால் அமைச்சர்களாகவும், படைத்தலைவர்களாவும் பிற அதிகாரி களாகவும் திகழ்ந்து நாட்டிற்கு நலம் புரிந்தவர்கள் பலர் ஆதல் வேண்டும். அவர்களது வீரச் செயல்களும் கொடைச்சிறப்பும் அருந்தொண்டுகளும் நம் தமிழகத்திலுள்ள கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுக்களால் இன்றும் அறியக் கிடக் கின்றன. அவர்களது வள்ளன்மையால் மாண்புடன் வாழ்ந்து வந்த புலவர் பெருமக்கள் அன்னோரைப் பாhட்டிப் பாடியுள்ள பல பிரபந்தங்களும் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். வச்சத் தொள்ளயிரம், அரும்பைத் தொள்ளாயிரம், புதுவைக் காங்கேயன் நாலாயிரக்கோவை முதலியன இவ்வகையைச் சேர்ந்தனவேயாம். இப்போது இவை கிடைக்கவில்லை யாயினும் அம் முடி மன்னர்கள் மீது பாடப்பெற்ற சில பிரபந்தங்கள் இந்நாளில் கிடைத்துள்ளமை ஓரளவு ஆறுதல் அளிக்கின்றது. அத்தகைய பிரபந்தங்களுள் விக்கிரமசோழன் உலாவும் ஒன்றாகும். இதனை இயற்றியவர் கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் ஆவர். இது முதற் குலோத்துங்க சோழன் புதல்வனாகிய விக்கிரமசோழன்மீது பாடப்பெற்றது. இவ்வேந்தன், படைத் தலைவர், அமைச்சர், குறுநில மன்னர், மண்டலிகர் முதலானோர் இருமருங்கும் சூழ்ந்து வர உலாப்போந்தான் என்று அந்நூலில் கூத்தர் கூறியுள்ளனர். அங்ஙனம் கூறுமிடத்துச் சில அரசியல் தலைவர்களின் பெயர்களை நிரல்பட வைத்து அன்னோரது வீரச்செயல்களையும் பெருமைகளையும் மிகப் பாராட்டிச் செல்கின்றனர். அவர்கள் கலிங்கம் வென்ற தொண்டைமான், முனையர்கோன், சோழகோன், மறையோன் கண்ணன், வாணன், காலிங்கர்கோன், செஞ்சியர்கோன் காடவன், வேணாடர் வேந்து, அநந்த பாலன், வத்தவன், சேதி நாடன், காரானை காவலன், அதிகன், வல்லவன், திரிகர்த்தன் என்போர். இதனை, - முன்னங் “ குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி மலையத் தருந்தொண்டை மானும் - பலர் முடிமேல் ஆர்க்குங் கழகா லனகன் றனதவையுள் பார்க்கு மதிமந்திர பாலகரிற்-போர்க்குத் தொடுக்குங் கமழ்தும்பை தூசினெடுஞ் சூடிக் கொடுக்கும் புகழ்முனையர் கோனும்-முடுக்கரையுங் கங்கரையு மாராட் டரையும் கலிங்கரையுங் கொங்கரையு மேனைக் குடகரையும்-தங்கோன் முனியும் பொழுது முரிவுருவத் தோடு குனியுஞ் சிலைச் சோழகோனும் - சனபதிதன் தோறுங் கவசமுஞ் சுற்றமுங் கொற்றப் போர் வாளும் வலியு மதியமைச்சு - நாளுமா மஞ்சைக் கிழித்து வளரும் பெரும் புரிசைக் கஞ்சைத் திருமறையோன் கண்ணனும்-வெஞ்சமத்துப் புல்லாத மன்னர் புலாலுடம்பு பேய்வாங்க ஒல்லாத கூற்ற முயிர்வாங்க-புல்லார்வந் தாங்கு மடமகளிர் தத்தங் குழைவாங்க வாங்கும் வரிசிலைக்கை வாணனும்-வேங்கையினும் கூடார் விழிஞத்துங் கொல்லத்துங் கொங்கத்தும் ஓடா விரட்டத்து மொட்டத்தும் - நாடா தடியெடுத்து வெவ்வே றரசிரிய வீரக் கொடியெடுத்த காலிங்கர் கோனு-கடியரணச் செம்பொற் பதணச் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன் கம்பக் களியானைக் காடவனும்-வெம்பிக் கலக்கிய வஞ்சக் கலியாணர் போரில் விலக்கிய வேணாடர் வேந்துந்-தலைத்தருமம் வாரிக் குமரிமுதன் மந்தாகினி யளவும் பாரித் தவனைந்த பாலனும்-பேரமரின் முட்டிப் பொருதார் வடமண்ணை மும்மதிலு மட்டித்த மால்யானை வத்தவனு-மட்டையெழக் காதிக் கருநாடர் கட்டரணங் கட்டழித்த சேதித் திருநாடர் சேவகனும் - பூதலத்து முட்டிய தெவ்வர் சடைகட்ட மொய்கழல் கட்டிய காரானை காவலனும் - ஒட்டிய மான வரச ரிரிய வடகலிங்கத் தானை துணித்த அதிகனும் - மீனவர்தங் கோட்டாறுங் கொல்லமுங் கொண்ட கொடைநுளம்பன் வாட்டார் மதயானை வல்லவனு-மோட்டரணக் கொங்கைக் குலைத்துக் குடகக் குவடொடித்த செங்கைக் களிற்றுத் திகத்தனும் ........................................... .............................................................................................................................................. .............................................................................................................................................. என்னும் பெரும்போர் இகல்வேந்தர் மண்டலிகர் முன்னு மிருமருங்கு மொய்த்தீண்ட --” என்னும் விக்கிரம சோழனுலாவடிகளிற் காண்க. இதில் குறிக்கப்பெற்ற தலைவர்கள் எல்லோரும் விக்கிரம சோழன் ஆட்சிக்காலத்தில் விளங்கியவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அவர்களைப் பற்றி இந்நூலால் அறியக்கூடியது இவ்வளவேயாகும். ஆயினும், விக்கிரமசோழன் காலத்திய கல்வெட்டுக்களின் துணை கொண்டு அவர்களைப் பற்றிய செய்திகளை நாம் ஆராய்தல் அமைவுடையதேயாம். இனி, இவ்வுலா எழுதப் பெற்ற காலத்தை ஒருவாறு உய்த்துணர்வதற்கு இடமுண்டு. இவ்வுலாவிற் குறிக்கப் பெற்ற தலைவர்களுள் காலிங்கர்கோன் என்பானும் ஒருவன் என்பதும் மேலே காட்டியுள்ள பகுதியினால் நன்கு விளங்கும். இவன் மணவிற்கூத்தனான காலிங்கராயன் எனவும் அரும்பையர் கோன் எனவும் அரும்பாக்கிழான் எனவும் வழங்கப் பெற்றனன் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. இவன், முதற் குலோத்துங்க சோழனது படைத்தலைவர்களுள் ஒருவனாக விளங்கியதோடு விக்கிரம சோழனது ஆட்சியின் முற் பகுதியிலும் அத்தகைய உயர்நிலையில் இருந்துள்ளனன். அதுபற்றியே, கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தரும் இத் தலைவனைத் தாம் பாடிய உலாவில் உரிய இடத்தில் வைத்துப் பாராட்டு வாராயினர். இவனது கல்வெட்டுக்கள் விக்கிரம சோழனது ஆட்சியின் ஆறாம் ஆண்டிற்குப் பின்னர் நம் நாட்டில் காணப்பட வில்லை. யாதலின் அவ்வாண்டிற்குப் பிறகு இத்தலைவன் இருந்திலன் என்பது ஒரு தலை. ஆகவே, இக் காலிங்கர் கோனைச் சிறப்பித்துக் கூறும் இந்த உலாவும் அச்சோழ மன்னனது ஆட்சியின் ஆறாம் ஆண்டிற்கு முன்னரே பாடப் பெற்றிருத்தல் வேண்டுமென்பது திண்ணம். விக்கிரம சோழன் கி.பி. 1118 முதல் 1136 முடிய பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தனன் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் செய்தியாகும். எனவே, விக்கிரம சோழனது ஆட்சியின் ஆறாம் ஆண்டாகிய கி.பி. 1124-க்கு முன்னரே விக்கிரம சோழனுலா இயற்றப்பட்டிருத்தல் வேண்டு மென்பது நன்கு துணியப்படும். இனி, அத்தலைவர் களைப் பற்றிய செய்திகளை ஆராய்வோம். 1. தொண்டைமான் :- இவன் கலிங்கம் வென்ற கருணாகரத் தொண்டைமானே யாவன் என்பது ‘பரணி மலையத் தருந்தொண்டைமான்’ என்ற சொற்றொடர்களால் பெறப்படுகின்றது. இவன் உலா இயற்றப் பெற்ற காலத்தில் அரசியல் துறையிலிருந்து விலகியிருத்தல் வேண்டுமென்பது உய்த்து உணரப்படுகின்றது. விக்கிரம சோழனது ஆட்சியில் அமைச்சுரிமை பூண்டு அரசியல் நடத்திவந்த தலைவர்களைக் கூறத் தொடங்கிய கவிஞர் பெருமான், கருணாகரத் தொண்டை மானை முதலில் தனியாக வைத்துப் பாராட்டியிருப்பது ஆராய்தற்குரியதாகும். ஆகவே, இந்நாளில் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அரசாங்க அலுவல்களினின்றும் நீங்கி ஓய்வு பெற்றிருப்பாரைப் போல் இக் கருணாகரத் தொண்டை மானும் உலா இயற்றப்பெற்ற காலத்தில் அரசியல் துறையினின்றும் விலகி ஓய்வுற்ற நிலையில் இருந்திருத்தல் வேண்டுமென்பது தெள்ளிது. இவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் சிறந்த தலைவனாக விளங்கியவன். அவ் வேந்தனது ஆட்சியில் பிற் பகுதியில் இவன் முதலமைச்ச னாகவும் படைத்தலை வனாகவும் இருந்தவன். இவனது கலிங்க வெற்றியைப் பாhரட்டித்தான் கலிங்கத்துப்பரணி என்னும் நூல் முதற்குலோத்துங்க சோழன் மீது கவிச்சக்கரவர்த்தியாகிய சயங் கொண்டாரால் பாடப் பெற்றது. அந்நூல், இவனை, அபயன் மந்திரி முதல்வன் எனவும் ‘வண்டையராசன் அரசர்கள் நாதன் மந்திரி உலகுபுகழ் கருணாகரன்’ எனவும், கலிங்கத்துப் பரணி ‘நம் காவலனைச் சூட்டிய தோன்றல்’ எனவும், ‘தொண்டையர் வேந்தன்’ எனவும் புகழ்தல் காண்க. இவன், கருணாகரன் என்னும் பெயரினன்; தொண்டைமான் என்னும் பட்டம் பெற்றவன்; பல்லவர் தோன்றல், ஒப்பற்ற வீரமும் ஆற்றலும் படைத்தவன்; தமிழர்களது வீரச் செயல்களைப் பிறநாட்டினர் உணரச் செய்தவன்; சோழ மண்டலத்தில் நாச்சியார் கோயிலுக்குத் தெற்கேயுள்ளதும் வண்டுவாஞ்சேரி என்று இந்நாளில் வழங்கப்படுவதுமாகிய வண்டாழஞ்சேரி என்னும் ஊரில் வாழ்ந்தவன். இவனது மனைவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் எனப்படுவர். இவ் வம்மையார் காஞ்சியிலுள்ள அருளாளப் பெருமாளுக்கு நுந்தாவிளக்கு ஒன்று வைத்துள்ளமை ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது. அஃதிலதேல் இவனைப் பற்றிய சில செய்திகள் மறைந் தொழிந்திருக்கு மென்பது திண்ணம். அக் கல்வெட்டை அடியிற் காண்க. “ஸ்வஸ்திஸ்ரீ கோ இராஜகேசரிவன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்து மூன்று ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற்கோட்டத்து எயில்நாட்டுத் திருவத்தியூர் ஆழ்வார்க்குச் சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டுத் திருநறையூர் நாட்டு வண்டாழஞ்சேரி யுடையான் வேளான் கருணா கரனாரான தொண்டைமானார் தேவியார் அழகிய மணவாளனி மண்டையாழ்வார் வைத்த திருநுந்தா விளக்கு ....................” (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஏ, சூடி. 862) 2. முனையர்கோன் :- இவன் விக்கிரம சோழனது அமைச்சர்களுள் ஒருவன். இவனைப் பற்றிய செய்திகள் இதுகாறும் அச்சிடப்பெற்று வெளி வந்துள்ள கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. இவன் முனையரையன் முனையதரையன் என்ற பட்டங்களுள் ஒன்றைப் பெற்றவனாதல் வேண்டும். 3. சோழகோன் :- இவன் விக்கிரம சோழனது அமைச்சனும் படைத்தலைவனுமாக விளங்கியவன். இவன் அரசனால் கொடுக்கப் பட்ட ‘சோழகோன்’ என்ற பட்டம் பெற்றவன். இவனது இயற்பெயர் பூபால சுந்தரனென்பது. இவனது மனைவியார் கற்பகம் இராசேந்திர சோழியார் என்பவர். இவ் வம்மையார் கி.பி. 1115ல் கொள்ளிடத்தின் வடகரையில் திருமழபாடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கும் திருநுந்தா விளக்கு ஒன்று வைத்து அதற்காகத் தொண்ணூறு ஆடுகள் வாங்கி விட்டனர் என்று அக்கோயிலிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. இதனால் இச்சோழகோன் முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியிலும் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக இருந்திருத்தல் வேண்டுமென்பது தேற்றம். இவன் கங்கர் மாகராட்டியர்,கலிங்கர், கொங்கர் முதலானோயைரப் போரில் வென்று வாகை சூடியவன் என்பது விக்கிரம சோழன் உலாவினால் அறியப்படுகின்றது. இவனைப் பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை. இவன் மனைவியார் திருமழபாடி எம்பெருமானுக்கு நுந்தாவிளக்கு வைத்த செய்தியை யுணர்த்தும் கல்வெட்டின் ஒரு பகுதியைக் கீழே காண்க. “ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ்மாது விளங்க ஐயமாது விரும்ப நிலமகள் வளர மலர்மகள் புணர உரிமை சிறந்த மணிமுடி சூடி மீனவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனை மன்னவர் இரியலுற் றிழிதரத் திக்கனைத்துந்தன் சக்கரநடாத்தி வீரசிம்மாசனத்து உலகுடையாளோடும் வீற்றிருந்தருளிய கோவிராஜ கேசரி வன்மரான சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 45- ஆவது தியாகவல்லி வளநாட்டுப் பொய்கை நாட்டு உடையார் திருமழுவாடி உடைய மகாதேவர்க்கு இரவு பகல் சந்திராதித்தவல் திருநுந்தாவிளக்கு எரியக் கடவதாக வைத்தார் பூபால சுந்தரனான சோழகோனார் தேவியார் இராசேந்திர சோழவளநாட்டு வண்டாழைக் கூற்றத்துச் சிற்றாமூர் சிற்றாமூர் உடையான் பெருமாள் கற்பகமான களப்பாளராஜர் மகள் கற்பகம் இராஜேந்திர சோழியார் யாண்டு 45- வது நாள் 260 முதல் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்கும் விட்ட செவ்வரி ஆடு 90”- (ளு.ஐ.ஐ. ஏடிஐ. ஏ, சூடி.640) 4. மறையோன் கண்ணன்:- இவன் விக்கிரம சோழனது அமைச்சர்களுள் ஒருவன்; மறையவர் குலத்தினன்: கண்ணன் என்னும் பெயரினன்; பெரும்புரிசை சூழ்ந்த ‘கஞ்சை’1 என்னும் ஊரில் வாழ்ந்தவன் ‘கஞ்சை’ என்பது கஞ்சனூர், கஞ்சாறு என்ற பெயர்களின் மரூஉவாதல் வேண்டும். கஞ்சனூர் என்பது காவிரியாற்றின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற ஒரு சைவத் திருப்பதியாகும். கஞ்சாறு என்பது அறுபத்து மூன்று நாயன் மார்களுள் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் வாழ்ந்து முத்தி எய்திய தலம். இஃது இந்நாளில் ஆனந்ததாண்டவபுரம் என்று வழங்கப்படும் புகைவண்டி நிலையமாகும். இவ்விரண்டனுள் மறையோன் கண்ணன் எவ்வூரினன் என்பது புலப்படவில்லை. வெளிவந்துள்ள கல்வெட்டுக்களும் இவனைப்பற்றி ஒன்றும் உணர்த்தவில்லை. 5. வாணன்:- இவன் முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் பிற்பகுதியிலும் விக்கிரம சோழனது ஆட்சியின் முற்பகுதியிலும் நிலவிய படைத்தலைவன்; வாணர் மரபினன்; வாணகப்பாடி நாட்டினன்; விருதராஜ பயங்கர வாண கோவரையன் என்ற பட்டமெய்தியவன்; கருணாகரத் தொண்டமானோடு கலிங்கப் போர்க்குச் சென்று புகழ் படைத்தவன். அதுபற்றிக் கலிங்கத்துப் பரணியில் ஆசிரியர் சயங்கொண்டாரால் பாராட்டப் பெற்றவன். இதனை, ‘வாசிகொண் டரசர் வாரணங்கவர வாணகோ வரையன் வாண்முகத் தூசிகொண்டு துடிகொண்ட சோழனாடு சூழிவே ழமிசை கொள்ளவே’ என்னும் தாழிசையால் அறியலாம். கி.பி. 1124- ல் இவ் வாணகோவரையன் கண்டராதித்தச் சதுர்வேதி மங்கலத்திற்கு அண்மையிலுள்ள வாணவிச்சாதர நல்லூர் முடி கொண்ட சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு நாள் வழிபாட்டிற்கும் பிறவற்றிற்கும் நிபந்தமாக மூன்றே கால் வேலி நிலம் இறையிலியளித்த செய்தியை யுணர்த்தும் கல்வெட்டு ஒன்று கீழைப் பழுவூரிலுள்ள கோயிலில் வரையப்பட்டுள்ளது. இதனை அடியிற் காண்க. “ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரமசோழதேவர் யாண்டு ஆறாவது வாணகோவரையர்களில் சுத்தமல்லன் முடி கொண்டானான விருதராஜ பயங்கர வாணகோவரையனேன் ஸ்ரீ கண்டராதித்த சதுவேதி மங்கலத்து வேறு பிரிஞ்சூர்க் காணியான வாகுமை வாண விச்சாதரநல்லூர் முடிகொண்ட சோழேச்சுரமுடைய மகாதேவர்க்கு போது நாநாழி அரிசியாக மூன்று சந்திக்கும் உட்பட நிசதம் நெல் தூணியும் மாண் மூன்றுக்கு நெல் நிசதம் குறுணியாக மாண் இரண்டுக்கு நெல் பதக்கும் சந்திவிளக் கெரிக்க நெய் உழக்கும் நிசதம்நெல் குறுணியும் திருமஞ்சனம் வைக்கும் திருச்சிற்றம்பலப் பிச்சனுக்கு நெல் குறுணியும் நந்தவனம் செய்வானுக்கு நெல் அறு நாழியும் நித்த நிபந்தம் சந்திராதித்தவல் செல்வதாக நான் இறையிலிவிட்ட நிலமாவது வேட்டபற்குடி எல்லைக்குத் தெற்கும் தேவி கோயிலுக்கு மேற்கும் விட்ட நிலம் முக்காலும் இதற்குத் தெற்கு ஊருக்கு மேற்கு குழலுடையான் பற்று உட்பட நிலம் அரைவேலியும் தெற்கில் குளத்தின் கீழ்க்கரை நிலத்தில் கீழ்வாரி வாய்க்காலுக்குக் கிழக்கு வார்மடைக்கு மேற்கு நாலாங் கண்ணாற்றுக்குத் தெற்கு ராஜேந்திர சோழப் பேராற்றுக்கு வடக்கு நிலம் ஒருவேலியும் குளத்தில் இடைக்காட்டுக்குக் கிழக்கு சுடுகாட்டுக்குத் தெற்கு புஞ்சை நிலம் ஒருவேலியும் ஆக நிலம் மூன்றேகாலும் இறையிலியாக சந்திராதித்தவல் செல்ல நீர் வார்த்துக் கல்வெட்டிக் கொடுத்தேன் சுத்தமல்லன் முடி கொண்டனான விருதராஜ பயங்கர வாண கோவரையனேன்”- (ளு.ஐ.ஐ.. எடிi.எ, nடி. 673) 6. காலிங்கர் கோன்:- இவன் தொண்டை மண்டலத்தி லுள்ள இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற் கோட்டத்து மணவில் என்ற ஊரின் தலைவன், இவன் முதற் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், ஆகிய இருவரது ஆட்சிக் காலத்திலும் படைத் தலைவனாக இருந்தவன் என்பது முன்னரே விளக்கப்பட்டது. இவன் குலோத்துங்க சோழன் வேணாடு, மலைநாடு, வடநாடு முதலியவற்றோடு நிகழ்த்திய போர்களில் படைத் தலைமை பூண்டு வெற்றியெய்தி அதனால் தன் அரசனுக்குப் பெரும் புகழை யுண்டுபண்ணியவன்; பொன்னம்பலக் கூத்தன், அருளாகரன், அரும்பாக்கிழான்; முதலான பெயர்களையுடையவன்; அரசனால் அளிக்கப் பெற்ற காலிங்கராயன் என்ற பட்டம் உடையவன்; சிவபத்திச் செல்வம் வாய்க்கப்பெற்றவன்; தில்லையம்பதியிலும் திருவதிகை வீரட்டானத்திலும் திருப்பணிகள் புரிந்து பல நிபந்தங்கள் விட்டவன்: சமய குரவர்கள் அருளிய தேவாரப் பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பலத்திற் சேமித்து வைத்தவன். இவன் கோயில்களுக்குத் திருப்பணி புரிந்ததையும் நிபந்தங்கள் விட்டதையும் அறிவிக்கும் கல்வெட்டுக்கள் பல உண்டு அவற்றுள் ஒன்று அடியில் வருமாறு:- “ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 31- வது மலாடான ஜனநாதவள..............திருக்கோவலூர்............ கொண்................ல் அரும்பக்கிழான் ஸ்ரீ மதுராந்தகன் பொன்னம்பலக் கூத்தனான கலிங்கராஜனேன் இத்திருக்கோவலூரான மதுராந்தகச் சதுர்வேதி மங்கலத்து சபையார் பக்கம் நான் விலை கொடுத்துக் கொண்டுடைய தெங்கந் தோட்டந் திருவீரட்டான முடையார்க்குத் திருநந்தா வனமாக நான் விட்டுக்கொண்டு”................ (எஞ்சிய பகுதி சிதைந்து போயிற்று.) (ளு.ஐ.ஐ. ஏடிட.ஏஐஐ, சூடி. 891) 7.செஞ்சியர்கோன் காடவன்:- இவன் செஞ்சியின் கண் வாழ்ந்த ஒரு குறுநிலமன்னன். காடவன் என்பது பல்லவனைக் குறிக்கும் ஒரு பெயராகும். இவ்வுண்மையைக் ‘காடவர் கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்’ என்னும் திருத்தொண்டத்தொகையடியாலும், ‘ஐயடிகள் காடவர் கோனாயனார் என்னும் பெயராலும் உணரலாம். பல்லவர்கள், காடவர்கள் எனவும் வழங்கப் பெற்றனர் என்று துப்ரேல் துரைமகனார் தமது பல்லவர் சரித்திரத்தில் கூறியிருப்பது ஈண்டு அறியத் தக்கது1. எனவே,இத் தலைவன் பல்லவர் மரபினன் என்பது வெளியாதல் காண்க. விக்கிரம சோழனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டாகிய கி.பி.1129- ல் கும்பகோணத்திற்குத் தென்கிழக்கில் உள்ள ஆலங்குடியில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டொன்றில்1 அவ்வேந்தன் காலத்திய அதிகாரிகளுள் சிலர் குறிக்கப் பெற்றுள்ளனர். அவர்களுள் செஞ்சி நாங்கொற்றன் ஆடவல்லான் கடம்பனும் ஒருவன் ஆவன். ஆகவே, ஒட்டக் கூத்தர் விக்கிரம சோழ னுலாவில் கூறியுள்ள செஞ்சியர்கோன் காடவனும், ஆலங்குடிக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ள செஞ்சிநாங் கொற்றனும் ஒருவனேயாதல் வேண்டும். 8. வேணாடர் வேந்து:- இவன் சேர மண்டலத்தின் உள் நாடுகளுள் ஒன்றாகிய வேணாட்டிலிருந்த ஒரு குறுநில மன்னன்; சேரர்மரபினன். முதற் குலோத்துங்க சோழன் காலத்திலேயே சேர வேந்தர் சோழ மன்னர்க்குத் திறை செலுத்தும் சிற்றரசர் ஆயினர் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படும் உண்மையாகும். அவன் புதல்வன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் சேரர் அந் நிலையிலேயே இருந்தனர். அவர்களுள் கூத்தரால் உலாவிற் குறிக்கப் பெற்ற வேணாடர் வேந்து ஒருவனாவன். இவனது இயற்பெயரும் பிறவும் இக்காலத்தில் புலப்படவில்லை. வேணாடு என்பது திருவாங்கூர் நாட்டின் தென்பகுதிக்குரிய பெயராகும். 9. அநந்த பாலன் :- இவன் முதற்குலோத்துங்கன் விக்கிரமன் ஆகிய இருவர் காலத்திலுமிருந்த ஒரு தலைவன். இளங்காரிக் குடையான் என்ற குடிப்பெயரும், சிவலோக நாயகன் என்ற இயற்பெயரும், கங்கை கொண்ட சோழ அநந்தபாலன் என்ற பட்டப் பெயரும் உடையவன். இவன் கி.பி. 1122-ல் திருவிடை மருதூரில் ‘பெருந்திருவாட்டி’ என்னும் பெயருடைய மடம் ஒன்று அமைத்துத் தைப்பூச நாளில் சிவனடியார்க்கும் பிறர்க்கும் உணவளிக்குமாறு மடப்புறமாக இறையிலி நிலம் விட்டனன் என்பது அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டினால் புலப்படுகின்றது. (ளு.ஐ.ஐ. ஏடிட. ஏ, சூடி. 702) இவனே, முதற் குலோத்துக சோழனது ஆட்சியின் 47-ஆம் ஆண்டாகிய கி.பி. 1117-ல் திருவாவடுதுறையில் தன் பெயரால் ஒரு மடமெடுப்பித்து அதற்கு ஊர்ச் சiயாரிடம் பொருளளித்து நிலம் வாங்கிவிடும்படி ஏற்பாடு செய்துள்ளனன் (ஐளே.சூடி. 148 டிக 1925). அது சிவலோக நாயகன் திருமடம் என்று வழங்கப்பெற்று வந்தது இங்ஙனம் இவன் சோறிடுசாலை, மடம் முதலான அறநிலையங்கள் அமைத்துப் புரந்து வந்தமை, “ ...... தலைத்தருமம் வாரிக் குமரிமுதல் மந்தாகினி யாவும் பாரித் தவனநந்த பாலனும்....” என்று கவிச் சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தராலும் பாராட்டப் பெற்றுள்ளது. இனி, திருவாவடுதுறையில் ‘சங்கரதேவன் திருமண்டபம்’ என்னும் பெயருடைய மண்டபம் எடுப்பித்தவனும், ‘பெருந்திரு வாட்டி’ என்னும் சோறிடுசாலை அமைத்தவனும் ஆகிய சேனாதிபதி சங்கரன் அம்பலங் கோயில் கொண்டான் என்பவன் ஒருவன் விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில் இருந்துள்ளனன் என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. இவனும் அநந்த பாலன் என்ற பட்டமுடையவன். திருவாவடுதுறை மடத்தில் மருத்துவம், இலக்கணம் முதலியவற்றைக் கற்போர்க்கு இவன் பொருளும் விளைநிலமும் கொடுத்துள்ளான் என்பது அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. (ஐளே. சூடிள. 158, 159, 160, 161, 162 டிக 1925 யனே 171 டிக 1926). இவன் சிவலோக நாயகனான கங்கை கொண்ட சோழ அநந்த பாலனுக்குத் தந்தையோ அன்றி உடன் பிறந்தானோ என்னும் ஐயப்பாடு உண்டாகின்றது. ஒட்டக்கூத்தரால் உலாவிற் குறிக்கப் பெற்ற அநந்தபாலன் இவ்வம்பலம் கோயில் கொண்டானாக ஒருகால் இருத்தலுங் கூடும்; ஒரு தலையாகத் துணிதற்கு இயலவில்லை. 10. வத்தவன் :- இவன் முதற் குலோத்துங்கன், விக்கிரமன் ஆகிய இருவர் காலத்திலுமிருந்த படைத்தலைவர்களுள் ஒருவன்; திருவிந்தளூர்1 நாட்டுக்கஞ்சாறு என்னும் ஊரினன். முடிகொண்டான் என்ற இயற்பெயரை யுடையவன்; வத்தராய னென்ற பட்டமுடையவன். இது வத்ஸராஜன் எனவும் வச்சராயன் எனவும் வழங்கப்படும். வச்சத் தொள்ளாயிரம் என்ற நூல் இத்தலைவன் மீது பாடப்பட்ட ஒரு பிரபந்தமா யிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுண்டு. இவன் மண்ணையில் பகைவர்களை வென்று வாகைசூடினான் என்று கூத்தர் கூறியுள்ளனர். மண்ணை என்பது பங்களூர் ஜில்லா நிலமங்கலந் தாலுகாவில் உள்ள ஒரு நகரமாதலின் இங்கே நிகழ்ந்தது மேலைச் சளுக்கியருடன் நடத்திய போராதல் வேண்டும். (நுயீபைசயயீhயை ஐனேயை ஏடிட. சூடி. 9 ஞயபந 230) கோதாவரி ஜில்லா இராமச்சந்திரபுரம் தாலுகாவைச் சேர்ந்த திராட்சாரமம் என்ற ஊரிலுள்ள பீமேசுவரமுடைய மகாதேவர்க்கு முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 25ம் ஆண்டில் இவன் ஒரு நுந்தா விளக்கு வைத்தனன் என்று அங்கேயுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது. அக் கல்வெட்டு ஒரு செய்யுள் வடிவத்தில் உள்ளது அது, “புயன்மேவு பொழிற் கஞ்சை1 முதற்பஞ்ச நதிவாணன் புதல்வன் பூண்ட வயமேவு களியானை முடிகொண்டான் மாநெடுவேல் வத்தர் வேந்தன் இயன்மேவு தோளபயற் கிருபத்தை யாண்டதனி லிடர்க் கரம்பைச் செயன்மேவு மீச்சிரற்குத் திருநந்தா விளக்கொன்று திருத்தினானே.” என்பதாம் (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஏ, சூடி. 1338). இவனே அக் கோயிலில் மற்றொரு விளக்கு தன் பெற்றோர்கள் நற்கதியெய்து மாறு வைத்தனன் என்பது. “ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்பத்தாறாவது திருவிந்தளூர் நாட்டுக் கஞ்சாறன் பஞ்சநதி முடி கொண்டா னான வத்தராயன் மாதா பிதாக்களைச் சா(ர்)த்தி இடர்க் கரைம்பை மூல ஸ்ரீவீமநாத உடையார்க்கு.............. தா விளக் கொன்று ......... இடையன்” (ளு.ஐ.ஐ.ஏடிட. ஐஏ, சூடி. 1339) என்னும் கல்வெட்டினால் அறியக் கிடக்கின்றது. சோழமண்டலத் தலைவர்கள் வேங்கை, கங்கம், கலிங்கம், முதலான வடநாடுகளில் வென்றி மாலை சூடி இத்தகைய பல அறங்கள் புரிந்துள்ளமை கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது. 11. சேதியர் கோன் :- இவன் சேதிராயன் என்ற பட்ட முடையவன்; சேதிநாடு எனவும் மலையமாநாடு எனவும் வழங்கப்பெறும் நிலப்பரப்பைத் திருக்கோவலூரிலிருந்து ஆட்சிபுரிந்த குறுநில மன்னன்; விக்கிரம சோழனுக்குத் திறை செலுத்தி வந்தவன்; கருநாடரோடு போர் புரிந்து வெற்றி யெய்தியவன். இவனைப் பற்றிய மற்றைச் செய்திகள் புலப்பட வில்லை. இனி, காரானைகாவலன், அதிகன், வல்லவன், தித்தன் இவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவர்களைப் பற்றிய செய்திகள் கிடைக்குமாயின் அவை பின்னர் வெளியிடப் பெறும். கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள் 1. தமிழ்க் கல்வெட்டுக்கள் கோயில் முதலிய பொதுக் கட்டடங்களின் சுவர்களிலும், பாறைகளின் மீதும், கல்தூண்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருப்பதைப் பல இடங்களில் காணலாம். அவ்வாறு எழுதப்பட்டிருப்பதுதான் சிலாசாசனம் அல்லது கல்வெட்டு எனப்படும். கல்லில் எழுதியிருப்பது போலவே சாசனங்கள் சில சமயங்களில் செப்பேடுகளிலும் எழுதப்படுவதுண்டு. இப்படிப் பட்ட சாசனங்கள் நமது நாட்டு வரலாற்று ஆராய்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஆதாரங்கள் ஆகும். இந்த உண்மையை உணர்ந்து நம்மனோர்க்கு அறிவுறுத்திய இராபர்ட்சிவெல், டாக்டர் கில்ஹார்ன், டாக்டர் பர்னல், டாக்டர் பூலர், டாக்டர் ஹுல்ட்ஷ் ஆகியோர் குறிப்பிடத் தக்க பேரறிஞர் ஆவர். அவர்களுடைய ஊக்கமும் உழைப்பும் இல்லையேல் அவைகள் காலப்போக்கில் அழிந்து மறைந்து போயிருக்கும் என்பது திண்ணம். கல்வெட்டுக்களின் தோற்றமும் வளர்ச்சியும் பண்டைத் தமிழ் மக்கள், பகைவர் முன் வந்து அஞ்சாமல் ஆற்றலோடு போர்புரிந்து இறந்துபட்ட வீரர்களுக்கு, அவர்கள் இறந்த இடங்களிலாதல் வேறிடங்களிலாதல் நடுகல் ஒன்றமைத்து விழா நடத்திப் பாராட்டி வந்தனர். அவ்வுண்மையைத் தொல்காப்பியத்திலுள்ள, ‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் -சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தலென் - றிருமூன்று வகையிற் கல்லொடு புணர’ என்னும் வெட்சித்திணைச் சூத்திரப் பகுதியால் உணரலாம். அந் நடுகல்லின் மேல் இறந்த வீரர்களின் பெயரும் பெருமையும் பொறிக்கப்படும் வழக்கம் கடைச்சங்க நாளில் இருந்தது என்பது சங்கத்துச் சான்றோர் பாடல்களால் புலப்படுகிறது. அதனை, ‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் - பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் - பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என்னும் அகநானூற்றுப் பாடலாலும், (அகம். 67) ‘அணிமயிற்பீலி சூட்டிப் பெயர் பொறித்தினி நட்டனரே கல்லும்’ என்னும் புறநானூற்றுப் பாடலாலும் (புறம். 264) அறியலாம். அந்நூல்களில் காணப்படும் ஆதாரங்களைக் கூர்ந்து நோக்குங்கால், கடைச்சங்க காலத்தில் பகைவரோடு அஞ்சாது போர் புரிந்து புகழுடன் இறந்த வீரர்களின் நடுகற்களின் மேல் வரையப்பெற்ற அவர்களுடைய பெயரும் பீடுமே நம் நாட்டில் முதலில் தோன்றிய தமிழ்ச் சாசனங்கள் என்று ஐயமின்றிக் கூறலாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய சேரமான் பெருமாள் நாயனார், தாம் இயற்றிய திருவாரூர் மும்மணிக்கோவையில், ‘பட்டோர் பெயரும் ஆற்றலு மெழுதி - நட்ட கல்லும் மூதூர் நத்தமும்’ என்று கூறியிருத்தலால் அவ்வழக்கம் கடைச்சங்க காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து வந்துள்ளது என்பது தேற்றம். அக்காலப் பகுதியில் தமிழ் நாட்டில் சமணமுனிவர் பலர் தங்கித் தம் சமயங்களைப் பரப்பி வந்தமை சரித்திரம் வல்லார் அறிந்ததே. அவர்கள் நோன்பியற்றி உயிர்துறந்த இடங்களில் அவர்களைப் பற்றிய செய்திகளை அவர்களுடைய மாணாக்கர்கள் பொறித்து வைத்துள்ளனர். அத்தகைய சமாதிச் சாசனங்களை மலைப் பாறைகளிலும் குன்றுகளிலும் குகைகளிலும் காணலாம். திருச்சிக்கடுத்த திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கழுகுமலையிலும் மதுரை ஜில்லாவிலுள்ள ஆனைமலை யிலும் திருச்சிராப்பள்ளிக் குன்றிலும் அச்சாசனங்கள் இக்காலத்தும் உள்ளன. இனி, கோயில்களில் சாசனங்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பார்ப்போம். கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் தமிழ் நாட்டில் அரசாண்ட பல்லவ அரசர்கள் முதலில் கருங்கற் கோயில்கள் அமைத்தார்கள். அவர்கட்குப் பிறகு சற்றேறக்குறைய நானூற்று முப்பது ஆண்டுகட்குமேல் ஆட்சி புரிந்த சோழர்களும் பல்லவர்களைப் போல் யாண்டும் கருங்கற்கோயில்கள் எடுப்பித் தார்கள். அங்ஙனமே பாண்டியர்களும் செய்தார்கள். அவ்வேந்தர்கள் தாம் எடுப்பித்த கோயில்களில் நாள் வழிபாடும் திங்கள் விழாக்களும் ஆண்டு விழாக்களும் நடைபெறும் பொருட்டு அவற்றிற்கு நிபந்தமாகப் பொன்னும் நிலமும் வழங்கினர். அவர்களைப் போல் பிற அன்பர்களும் பல நிபந்தங்கள் அளித்தனர். அவர்கள் எல்லோரும் தாம் அவ்வாறு அளித்தவற்றைச் செப்பேடுகளில் வரைந்து அவ்வக் கோயிலுக்குக் கொடுத்தனர்; அன்றியும், அவற்றையே அந்த கோயில் சுவர்களில் பொறித்தும் வைத்தனர். அவர்கள் அவ்வாறு செய்தமைக்கு அவ்வறங்கள் இடையில் நின்று போகாமல் எக்காலத்தும் நன்கு நடைபெற்று வருதல் வேண்டும் என்ற பேரார்வமும் அவை கோயில்களுக்குரிய ஆதாரமாக அமைதல் வேண்டும் என்ற எண்ணமுமே காரணங்கள் ஆகும். கோயில்களுக்கு விடப்பெற்ற நிபந்தங்களைப் பலரும் உணர்ந்து அங்கு நடைபெற வேண்டியவை எல்லாம் தவறாமல் நாள்தோறும் நிறைவேறி வருகின்றனவா என்று ஆராய்வதற்குப் பயன்படுமாறு எல்லோரும் பார்க்கக்கூடிய புறச்சுவர்களின் மேல் சாசனங்கள் வரையப்பட்டுள்ளன. சாசனங்களில் குறிக்கப் பெற்றுள்ள செய்திகள் கோயில்களில் நாள்தோறும் நிகழும் வழிபாடுகளும். விழாக் காலங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளும், பகலும் இரவும் இடையீடின்றி எரிக்கப்படும் நந்தா விளக்குகளும், வழிபாட்டு நேரங்களில் ஏற்றப்பெறும் சந்தி விளக்குகளும், அங்குப் பணிபுரியும் தேவகன்மிகளின் கடமைகளும், அங்குள்ள அணிகலன்கள், வெள்ளிக்கலங்கள், செப்புக்கலங்கள் முதலியவைகளும்; கோயில், கோபுரம், மண்டபம், திருச்சுற்று மாளிகை, படிமம் முதலியவற்றின் பெயர்களும், அவற்றைஅமைத்தோர் பெயர்களும் சாசனங்களில் விளக்கமாகக் குறிக்கப்பட்டிருத்தல் காணலாம். இவ்வாறு கோயில்களுக்குத் தொடர்புடைய செய்தி களைக் கூறும் சாசனங்களும் கோயில்களில் காணப்படுகின்றன. அவற்றில் அரசர்களின் திருமுகங்களும் அரசாங்க அறிக்கை களும் குறுநில மன்னர்களின் உடன்படிக்கைகளும் விதிமுறை களும் முடிபுகளும் அரசியல் தலைவர்களைப் பற்றிய பாடல் களும் அவர்களுக்கும் புலவர், மருத்துவர் முதலானோர்கள், கல்லூரி, புத்தகசாலை முதலியவற்றிற்கும் அரசர்கள் வழங்கிய இறையிலி நிலங்களும் வரையப்பட்டிருக்கின்றன. சாசனப் பகுதிகள் பொதுவாக சாசனங்களை நோக்கின், ஒவ்வொன்றையும் ஐந்து பகுதிகளாகப் பிரித்துவிடலாம் . அவை, மங்கலவாசகம், சாசனம் தோன்றிய காலம், சாசனச் செய்திகள், கையெழுத்துக்கள், ஓம்படைக்கிளவி என்பனவாம். இவற்றுள் சில குறைந்துள்ள சாசனங்களும் உண்டு. இனி, மங்கலவாசகம் என்பது கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் சாசனங்களின் தொடக்கத்தில் காணப்படும் ‘ஸ்வஸ்திஸ்ரீ ’ என்னுந் தொடரேயாம். அதனையடுத்துச் சாசனம் தோன்றிய காலம் குறிக்கப் பெற்றிருக்கும். அப்பகுதியில் அப்போது நாட்டில் அரசாண்ட முடிவேந்தனது ஆட்சியா ண்டும் நாளுமே காணப்படும். அவ்வாறு ஆட்சியாண்டு குறிப்பது தான் பழைய வழக்கம். சிற்சில சாசனங்களில் அரசனது ஆட்சியாண்டோடு கலியப்தமும் சகாப்தமும் கொல்லம் ஆண்டும் வரையப்பட்டிருக்கின்றன. இவ்வழக்கு மிக அருகியே காணப்படுகிறது. அரசனது ஆட்சியாண்டிற்கு முன் அவனது வீரச் செயலை யுணர்த்தும் அடைமொழிகளும், சிறப்புப் பெயரும் இயற்பெயரும் பொறிக்கப்பெற்றிருக்கும். இதனை, ‘மதுரையும் ஈழமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மர்க்கு யாண்டு நாற்பது ஆவது’ எனவும், ஸ்ரீகோமாறவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு கொண்டு முடிக்கொண்ட சோழபுரத்து வீராபிஷேகம் பண்ணியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்க்குயாண்டு பதினேழாவது எனவும் போதரும் சாசனப் பகுதிகளால் நன்கறியலாம். அதனோடு நில்லாமல், மெய்க்கீர்த்தி அமைத்து ஆட்சியாண்டு வரையும்முறை முதலாம் இராசராசசோழனால் கி.பி. 993 -ஆம் ஆண்டில் முதலில் தொடங்கப் பெற்றது. அவனைப் பின்பற்றித் தமிழ் நாட்டிலிருந்த மற்ற அரசர்களும் மெய்க்கீர்த்தி அமைத்துச் சாசனங்களில் எழுதத் தொடங்கினர். அம்மெய்க்கீர்த்திகளில் அவ்வவ்வேந்தர்களுடைய வீரச் செயல்களும் புகழுக்குரிய பிற செயல்களும் ஆட்சியின் சிறப்பும் பட்டத்தரசிகளின் பெருமைகளும் கூறப்பட்டுள்ளன. அரசனுடைய ஆட்சியாண்டு ஏற ஏற மெய்க்கீர்த்தியும் புதிய புதிய செய்திகளோடு வளர்ந்துகொண்டே போகும். அதன் துணை கொண்டு ஒவ்வொரு வேந்தனுடைய ஆட்சியிலும் எவ்வெவ் வாண்டில் எந்த எந்த நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன என்பதை ஆராய்ந்துணர்ந்து கொள்ளலாம் .ஆகவே, மெய்க்கீர்த்திகள் எல்லாம் வரலாற்றாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படும் சிறந்த ஆதாரங்கள் ஆகும். சாசனம் தோன்றிய காலக் குறிப்பிற்குப் பின்னர்ச் சாசனச் செய்திகள் வரையப்பட்டிருக்கும். இன்ன நாட்டில் இன்ன ஊரிலுள்ள இன்னார்,இன்ன அறம் என்றும் நடைபெற்று வருமாறு. இவ்வளவு நிலமும் பொன்னும் பிற பொருள்களும். இன்னாரிடத்தில் அளித்தனர் என்பதையும் அதனைப்பற்றிய மற்றைச் செய்திகளையும் அப்பகுதியில் விளக்கமாகக் காணலாம். சாசனச் செய்திகளுக்குக் கீழ் அவ்வறச் செயல்களுக்குத் தொடர்புடையவர்களின் கையெழுத்துக்களும் அவற்றிற்குச் சான்றாக அமைந்தோர் கையெழுத்துக்களும் அதனை எழுதிய ஊர்க்கரணத்தான் அல்லது மத்தியஸ்தன் கையெழுத்தும் அதனைக் கல்லில் வரைந்தவன் கையெழுத்தும் பொறிக்கப் பெற்றிருக்கும். இவர்களுள் சிலருடைய கையெழுத்துக்களின்றிப் பொறிக்கப்பட்ட சாசனங்களும் உண்டு. சாசனங்களின். இறுதியில் காணப்படுவது ஓம்படைக் கிளவியாகும். அப்பகுதியில் ‘இது பன்மாகேச்வர ரiக்ஷ’ ‘இது ஸ்ரீவைஷ்ணவ ரiக்ஷ’ ‘இவ்வறங் காத்தாரடி என் தலைமேலன’ ‘அறம் மறவற்க’ ‘அறமல்லது துணையில்லை’ ஆகிய தொடர் களும் அவற்றுள் ஒன்றாவது சிலவாவது காணப்படும். சில சாசனங்களில் இத்தொடர் இல்லாமலிருத்தலும் உண்டு. சில சாசனங்களில் ஓம்படைக் கிளவியோடு அவ்வறத்தைச் சிதைத்தார் அச்செயலால் அடையும் பழி பாவங்களும் சேர்ந்து வரையப்பட்டிருக்கின்றன. அவை, ‘இது இறக்குவான் கங்கையிடை குமரியிடை எழுநூற்றுக்காதமும் செய்தார் செய்த பாவமும் எய்துவான்’ ‘இதற்குத் தீங்கு வேண்டுவான் வழி அறுக’ இதுவிலக்குவான் கங்கையிடை குமரியிடை குரால் பசுகொன்றான் செய்த பாவங் கொள்வான் என்பனவும் பிறவுமாம். மேலே குறிப்பிட்ட ஓம்படைக்கிளவிகளுள் முதலிரண்டும் ‘இதனைச் சிவனடியார் பலரும்காப்பாராக’ எனவும் ‘இதனைத்திருமாலடியார் பலரும் காப்பாராக’ எனவும் பொருள்படும் பிறதொடர்களின் பொருள் வெளிப்படை. கோயில் சுவர்களில் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள் எல்லாம் அக்கோயில் கண்காணிப்பிற்கு இன்றியமையாத சாதனங்களாகவும் பொதுமக்களும் ஊர்ச் சபையாரும் உணர்ந்து நடத்தற்குரிய செய்தி களை உடையவனவாகவும் இருத்தலால், அக்காலத்தரசர்கள் அவற்றைச் சிதையாமல் பாதுகாத்து வந்தனர். அந்நாட்களில் கோயிலைப் புதுப்பிக்க விரும்புவோர் முதலில் அரசாங்க உத்தரவு பெற்று, சாசனங்கள் எல்லாவற்றையும் படியெடுத்து வைத்துக் கொண்டு, திருப்பணி நிறைவேறிய பின்னர் அரசியல் அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் அவற்றை மீண்டும் பொறித்து வைத்தல் வேண்டும். இது பண்டைத் வேந்தர்களின் ஆணையாகும். இங்ஙனம் இரண்டாம் முறை வரையப் பெற்ற சாசனங்களைத் திருமழபாடி, திருவிடைமருதூர், ஆடுதுறை, திருவையாறு, திருப்புகலூர் முதலான ஊர்களில் இக்காலத்தில் காணலாம். இதுகாறும் கிடைத்துள்ள தமிழ்ச் சாசனங்களில் மிக்க பழமை வாய்ந்தது செஞ்சிக்கடுத்துள்ள திருநாதர் குன்றில் உள்ளதேயாமென்றும், மிகப் பெரியது செங்கற்பட்டு ஜில்லாவில் திருமுக்கூடலிலுள்ள வீரராசேந்திர சோழன் காலத்துச் சாசனமேயாமென்றும் அறிஞர்கள் கூறுகின்றனர். பொதுவாகத் தமிழ்ச் சாசனங்கள் எல்லாம் கிடைத்தற்கரிய பல வரலாற்றுண்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையன எனக் கொள்ளலாம். 2. கல்வெட்டுக்களிலே காணப்படும் சில குழுவின் பெயர்கள் அஞ்சுவண்ணம் நம் நாட்டிலுள்ள தமிழ்க் கல்வெட்டுக்களிற் சில குழுவின் பெயர்கள் காணப்படுகின்றன.அவற்றுள் அஞ்சுவண்ணம், மணிக்கிராமம், பஞ்சாசாரியார், சங்கரபாடியார், வளஞ்சியர் என்பன குறிப்பிடத்தக்கனவாம். அவற்றை முறையே ஈண்டு ஆராய்வோம். கடற்கரை நகரங்களில் அங்சுவண்ணம் என்ற குழு ஒன்று இருந்தது என்பது கோட்டயச் செப்பேடுகளாலும் கொச்சிச் செப்பேடுகளாலும் அறியப்படுகின்றது. அன்றியும் இராமநாத புரம் ஜில்லாவைச் சேர்ந்த திருவாடானைத் தாலுகாவிற் கடற்கரை யிலுள்ள தீர்த்தாண்டதானபுரத்திற் காணப்படும் கல்வெட் டொன்றிலும் அக்குழுவின் பெயர் பயின்று வருகின்றது அவற்றை அடியிற் காண்க. 1. ‘இவ்வாண்டு வேணாடு வாழ்கின்ற அய்யனடிகள் திருவடியும் அதிகாரமும் பிரகிருதியும் .......அஞ்சு வண்ணமும் புன்னைத் தலைப்பதியும் உள்வைத்து’ (கூசயஎயnஉடிசநசஉhயநடி-டடிபiஉயட ளநசநைள எடிட. 11,யீயபந67) 2 (ய) ‘அஞ்நூற்றுவரும் அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இரட்சிக்கக்கடவர்’. ‘பள்ளியையும் பூமியையும் உலகும் சந்திராதித்தரும் உள்ள நாளெல்லாம் செலவு பத்திரத்தில் பட்ட வண்ணம் செய்து கொள்ளக்கடவர். அஞ்சு வண்ணமும் மணிக்கிராமமும்`(1bனை, வரிகள் 21-25) (b) `அன்றன்றுபடும் உல்கு அஞ்சுவண்ணமும் மணிக் கிராமமும் இலக்கிச் சுவைப்பதாகவும்,’ (1bனை, வரிகள் 34-35) (உ)‘அஞ்சுவண்ணமும் மணிக்கிராமமும் இவைகளுக்கு அன்னியாய முண்டாயில் உல்கு துலாக்கூலி தடுத்தும் தங்கள் அன்னியாயம் தீர்த்துக்கொள்ளக் கடவர்’ (1bனை, வரிகள் 45-46) (ன) `இந்நகரத்துக்குக் காராளராக நீரேற்றார் அஞ்சு வண்ணமும் மணிக்கிராமமும் - இவருள் இரண்டு தலையாருங் கூடிச் செய்வதே கருமமாகவும்’ (1bனை, வரிகள் 48-49) 3. `ஈசுப்பு இராப்பனுக்கு அஞ்சுவண்ணமும்..... அஞ்சு வண்ணப்பேறும்...... கொடுத்தோம்’ (நுயீபைசயயீhயை ஐனேiஉய எடிட. யீயபந, 68.) 4. `இவ்வூரில் இருக்கிற அஞ்சுவண்ணமும் மணிக்கிராமத் தோமும் ஆரியரில் சாமந்தபண்ட சாலையும் பட்டாரியரும் தோயாவத்திரச் செட்டிகளும் தென்னிலங்கை வளஞ்சியமும் கைக்கோளரும் தூசுவரும் வாணியரும் நீண்ட கரையாருங்கூடி.... கோயில் திருமுன்பிலே நிறைவுறக் கூடியிருந்து’ (ஐளே 598 டிக 1926. தீத்தாண்டதானபுரக் கல்வெட்டு.) மேலே குறிப்பிடப்பெற்ற செப்பேடுகளுள், கோட்டயச் செப்பேடுகள் சேரமான் தாணுரவியின் ஆட்சிக் காலத்தில் தமிழ்மொழியில் வரையப் பெற்றுள்ளன. எனவே மலையாள மொழி தோன்றுவதற்குமுன் சேர நாட்டில் தமிழே தாய் மொழியாக இருந்த காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அச்செப்பேடுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பது தேற்றம். கொச்சிச் செப்பேடுகள் பாஸ்கர ரவிவர்மன் காலத்தன வாகும். அச்சேரமன்னன் முதல் இராசராசசோழன் காலத் திருந்தவனாவன். எனவே, அச்செப்பேடுகளும் தொன்மை வாய்ந்தவையென்பதில் ஐயமில்லை. தீத்தாண்டதானபுரக் கல்வெட்டு, சடையவர்மன் வீர பாண்டியன் ஆட்சியில் கி.பி.. 1269- ல் பொறிக்கப் பெற்றதாகும் டாக்டர் குண்டர்ட். டாக்டர் பர்னல் என்ற இரு பேராசிரியரும் அது, சேர நாட்டில் யூதர்கள் வாழ்ந்து கொண் டிருந்த இடமாக இருத்தல் வேண்டும் என்று கூறியுள்ளனர். எல்லிஸ் என்ற அறிஞர் அஃது ஐவகை உரிமைப் பட்டங்களை உணர்த்தும் என்பர். கல்வெட்டு இலாகாவின் தலைவர் ஒரு வகையில் சுயேச்சை பெற்றிருந்த வணிகர்குழு என்று எழுதியுள்ளனர். டாக்டர் ஹூல்ட்ஸ் என்றபேராசிரியர் அஃது ஓர் ஊரின் பெயர் என்று கருதியுள்ளார். வேறு சிரலர் அஃது ஐவகைச் சாதியாரைக் குறிக்கும் என்பர். (வசயஎயnஉடிச யசஉhயநடிடடிபiஉயட ளநசநைள எடிட. 11 யீயபநள 73&74) இவற்றை நோக்குமிடத்து, அதன் உண்மைப்பொருள் ஒரு தலையாகத் துணியப்பட வில்லை என்பது தெள்ளிது. கோட்டயம் என்பது மேல் கடலோரத்திலுள்ள ஒரு சிறந்த பட்டினமாகும். தீத்தாண்டதானபுரம் என்பது கீழ்க்கடற்கரையிலுள்ளதோர் ஊர். இவை முற்காலத்தில் வாணிகத்திற் சிறந்த கடற்றுறைப்பட்டினமாக இருந்தன என்று தெரிகிறது. ஆகவே அவ்வூர்களிலிருந்து அஞ்சுவண்ணம் என்பது ஒரு வகை குழுவாக இருத்தல்கூடும் என்று கருதுவதற்கு இடம் உளது. அன்றியும், `அஞ்சுவண்ணமுடைய ஈசப்பு இராப்பனுக்கும்’ என்ற தொடரால், அவ்வஞ்சுவண்ணம் என்பது கிருத்துவ வணிகர்குழுவின் பெயராக இருத்தல் கூடுமோ என்ற ஐயம் நிகழ்கின்றது. மேல் கடலோரத்திலுள்ள பட்டினங்களில் மேனாட்டுக் கிருத்துவ வியாபாரிகள் பண்டைக் காலத்தில் வாணிகத்தின் பொருட்டு வந்து தங்கியிருந்த செய்தியைச் சரித்திரம் வல்லார் அறிவர். ஆகவே, அக்கொள்கைக்கும் சிறிது இடமுளது எனலாம். இந்நிலையில், தென்வட்டக் கல்வெட்டிலாகாவின் தலைவர் அஞ்சுவண்ணம் என்பது அஞ்சுமான் என்ற உருது மொழியின் திரிபாக இருக்கலாமோ என்று ஐயுறுகின்றனர். (ஹ.சு.நு கடிச 1926-27.யீயசவ11.) பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் வெளி யிட்டுள்ள களவியற்காரிகை என்ற நூலில் அதன் உரையாசிரியர் இறந்தொழிந்த தொன்னூல்களிலிருந்து பல பாடல்கள் மேற்கோள்களாக எடுத்துக்காட்டியுள்ளனர். அவற்றுள் பல்சந்தமாலை என்ற நூலிலிருந்து எடுத்தாளப் பெற்றுள்ள சில பாடல்கள் அஞ்சுவண்ணம் என்பதைப் பற்றி அறிந்து கோடற்குப் பெரிதும் உதவுகின்றன. அவை, `கலைமதி வாய்மைக் கலுழ்பா வழிவருங் கற்பமைந்த தலைமைய ரேழ்பெருந் தேரங்க மும்பெற்ற கநதசச1 மலையன மாமதில் வச்சிர நாடன்ன வாணுதல்தன் முலையினை தோய்ந்ததெல் லாங்கன வேயென்று முன்னுவனே’ (1) `இயவன ராசன் கலுபதி தாமுத லெண்ணவந்தோர் அயன்மிகு தானைய ரஞ்சுவண் ணத்தவ ரஞ்சலென்னாக் கயவர்கள் வாழ்பதி போலத் தினைப்புனங் காய்கொய்துபோம் பயன்விளை வாம்பாடி பூத்தது வேங்கை பணிமொழியே’ (2) `பிறையார் நறுநுதற் பேதைதன் காரணத் தாற்பெரும மறைநா ளிரவில் வருவது நீயொழி வச்சிரநாட் டிறையா கியகலு பாமுத லானவர் யானைகணின் றறைவாரும் விஞ்சத் தடவிகள் சூழு மணிவரையே’ (3) `வானது நாணக் கொடையா லுலகை வளர்த்தருளும் சோனகர் வாழுஞ் செழும்பொழில் சூழ்ந்து பாரனையாள் தானணிவாணுதல் கண்டும் பகலே தனித்தனியே மானமி லாதிரை தேரும் பறவைக டாமகிழ்ந்தே’ (4) `வில்லார் நுதலிய நீயுமின் றேசென்று மேவுதிர்சூ தெல்லா முணர்ந்தவ ரேழ்பெருந் தேரங்கத் தியவனவர்கள் அல்லா எனவந்து சத்தியுந நதாரவகை தொழுஞ்சீர் நல்லார் பயிலும் பழனங்கள் சூழ்தரும் நாட்டகமே’ (5) என்பனவாம். இவற்றுள் இரண்டாம் பாடலால் யவனராசனாகிய கலிபாவின் வழியினர் அஞ்சுவண்ணத்தவர் என்பதும் ஐந்தாம் பாடலிலுள்ள “யவனர்கள் அல்லா எனவந்து” என்ற தொடரால் அன்னோர் முகம்மதியராயிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு வெளியாகின்றன. எனவே முஸ்லிம் மரபினரே அஞ்சு வண்ணத்தவர் என்று வழங்கப் பெற்றுள்ளனர் என்பது தெள்ளிது. இச்செய்தியை நான்காம் பாடலில் பயின்றுவரும் ‘சோனகர்’ என்ற சொல் உறுதிப்படுத்துதல் அறியத்தக்கது. மேலே குறித்துள்ள பாடல்களிலே காணப்படும் கலுழ்பா, கலபதி, கலுபா என்பன முன்னே துருக்கிவேந்தனாக விளங்கிய காலிபைக் (உயடiயீh) குறிப்பன வாகும் இனி, தஞ்சைமா நதரிலுள்ள ‘சரஸ்வதிமகால்’ என்ற புத்தகசாலையிற் காணப்படும் பழைய பாடற்றிரட்டொன்றில், ` குடக்கினிற் றுரங்கமும் வடக்கினிற்க லிங்கமும் குணக்கினிற் பசும்பொனும் குளித்ததெற் கிலாரமும் அடிப்பரப் படைக்கலத் தனேகலண்ண மாகவந் தஞ்சுவண்ண முந்தழைத் தறத்தின்வண் ணமானவூர் கடற்கரைக் குவித்திடு சந்தனத்தை யிந்துடன் கலந்திறைக்கு மந்தியைக் களன்றுமு சுவின்குலம் புடைப்பதற் கெழுந்துகை முறுக்கலு மிழுக்கிவாய் புக்கமுத்தை விட்டெறிந்து பூகமேறு நாகையே` என்ற பாடல் காணப்படுகிறது. இதிற் பயின்றுவரும் அஞ்சுவண்ணம் என்பது கீழ்க் கடற்கரையிலுள்ள நாகப்பட்டினத்தில் வாணிகத்தின் பொருட்டு தங்கியிருந்த முகம்மதியர் தன்னகத்து மிகுதியாகக் கொண்டு விளங்குவது யாவரும் அறிந்ததே. ஆகவே கோட்டயம் தீத்தாண்டதானபுரம் நாகப்பட்டினம் முதலான கடற்றுறைப் பட்டினங்களில் முற்காலத்தில் நிலவிய முஸ்லிம் வணிகர் குழுவே அஞ்சுவண்ணம் என்று செப்பேடுகளிலும் கல்வெட்டுக் களிலும் குறிக்கப் பெற்றுள்ளது என்பது நன்கு புலப்படுதல் காண்க. முஸ்லிம் மரபினர் அஞ்சுவண்ணத்தவர் என்னும் பெயர் எய்தியமைக்குரிய காரணம் யாது? என்பது தெளிவாகத் தெரியவில்லை. ‘எது இஸ்லாம்?’ (றுhயவ ளை ஐளடயஅ?) என்ற ஆங்கில நூலில் இஸ்லாம் மார்க்கத்திற்குரிய ஐம்பெருங் கொள்கைகள் கூறப்படுகின்றன. அவை(1)கடவுள் ஒருவரே; அவருடைய தூதர் முகம்மது என்பார் (2) கடவுள் வழிபாடு (3) உண்ணாவிரதம் (4) ஏழைகட்கு அறஞ்செய்தல் (5) மெக்காயாத்திரை என்பன. இவ்வைந்தையும் தம் சமயக் கொள்கைகளாகக் கொண்டு ஒழுகிவந்த காரணம் பற்றி முஸ்லிம் மரபினர் அஞ்சுவண்ணத்தவர் என்று முற்காலத்தில் வழங்கப்பெற்றிருப்பார்களோ என்ற ஐயம் நிகழ்கின்றது; ஒரு தலையாகத் துணிதற்கியலவில்லை. 3. கல்வெட்டுக்களில் நாட்டோடு இணைந்து வழங்கப்பெறும் எண்கள் பண்டைத் தமிழ் மக்களின் சிற்பக் கலைக்கும் ஒவியக் கலைக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இக்காலத்தில் தஞ்சை மாநகரில் நிலவுகின்ற ‘இராசராசேச்சுரம்’ என்ற திருக் கோயிலை எடுப்பித்தவனும் சிவபாதசேகரன் என்ற சிறப்புப் பெயர் எய்தியவனும் ஆகிய முதல் இராசராச சோழனது கல்வெட்டுக்களில் காணப்படும் மெய்க்கீர்த்தியில், `இரட்டபாடி ஏழரையிலக்கமும்’ `முந்நீர்ப்ழந்தீவு பன்னீராயிரமும்’ என்ற தொடர்கள் பயின்று வருதலை வரலாற்று ஆராய்ச்சி யாளர் யாவரும் அறிவர். அங்ஙனமே, கங்கபாடி தொண்ணூற் றாறாயிரம் நுளம்பாடி முப்பத்தீராயிரம் ` பிரட்னை யேபட்டங் கட்டழித்து பேரே ழரையிலக் கம்புரக்க இரட்டனை யேபட்டங் கட்டிவிட்ட இராசகம் பீரனை வாழ்த்தினவே’ என்ற தக்கயாகப்பரணிச் செய்யுளிலும், ` ........ ....... ....... ஏழரையிலக்கமு மிரியச் சீறிய அபயன் குலோத்துங்கசோழன் உருட்டுக சிறு தேரே’ என்ற குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்ச் செய்யுளிலும் இது பயின்று வருதல் காண்க. வனவாசி பன்னீராயிரம் இடைத்துறைநாடு இரண்டாயிரம் வேங்கைநாடு ஆறாயிரம் என்ற முற்காலத்தில் வழங்கப் பெற்றுவந்தமை கல்வெட்டு களாலும் செப்பேடுகளாலும் அறியக் கிடக்கின்றது. இத்தொடர்களின் பொருளை ஆராயத் தொடங்கிய அறிஞர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிடுவராயினர். ஒரு சாரார், அவ் வெண்கள் அவ்வந்நாட்டில் அடங்கியிருந்த ஊர்களின் தொகையாகும் என்றனர். மற்றொரு சாரார், அவை நாட்டின் வருவாயை யுணர்த்தும் என்றுரைத்தனர். பிறிதொரு சாரார், அவை, நாட்டிலுள்ள குடிகளின் தொகையைக் குறிக்கும் என்று கூறினர். எனவே, அவ்வெண்கள் எதனை உணர்த்துகின்றன என்பது இதுகாறும் ஒரு தலையாகத் தெளிவுறுத்தப்பட வில்லை. ஒரு நாட்டின் வருவாயும் குடிகளின் தொகையும் ஆண்டு தோறும் மாறிக்கொண்டே போகும் இயல்புடையனவாகும். ஆதலால், அவ்வெண்கள் நாட்டின் வருவாயையாதல் குடிகளின் தொகையையாதல் குறிக்கும் என்று கொள்வது எவ்வாற்றானும் ஏற்புடையதன்று. வடவிமயம் முதல் தென்குமரிகாறும் பரந்து கிடக்கும் நம் இந்தியாவிலுள்ள ஊர்களின் தொகையே ஏழரை யிலக்கம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், பம்பாய் மாகாணத்தின் தென்பகுதியும் நைசாம் இராச்சியத்தின் மேல் பகுதியும் தன்னகத்துக்கொண்டு நிலவிய மேலைச்சளுக்கிய நாடாகிய இரட்டபாடி நாடு மாத்திரம் ஏழரை யிலக்கம் ஊர்களைத் தன்பாற் கொண்டாதாக இருத்தல் வேண்டும் - என்று கொள்வது எங்ஙனம் பொருந்தும்? ஆகவே, மேலே எடுத்துக் காட்டப்பெற்ற முத்திறக் கொள்கைகளும் வலியுடையனவாகாமை காண்க. இனி, திருக்கோவிலூரில் திருமால் கோயிலிற் காணப்படும் கல்வெட்டொன்று அவ்வெண்களின் பொருளை ஓரளவு உணர்ந்துகோடற்கு உதவுகின்றது. அது, ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் மருவிய செங்கோல்வளரத் தன் திருத்தமயனொடும் போய் இரட்டபாடி ஏழரையிலக்கமுங்கொண்டு கொல்லாபுரத்து ஐயஸ்தம்பம் நாட்டி மீண்டுபோந்து பேராற்றங் கரைக் கொப்பத்து ஆகவமல்லனை யஞ்சுவித்து அங்கவன் ஆனையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும் கைக்கொண்டு விஜயாபிஷேகமும் செய்து வீரசிம்மாசனத்து வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிவன்மரான உடையார் ஸ்ரீஇரா ஜேந்திரதேவர்க்கு யாண்டு ஆறாவது மிலாடான ஜனநாத வள நாட்டுக் குறுக்கைக் கூற்றத்துப் பிரமதேயம் திருப்கோவலுரான ஸ்ரீமதுராந்தகச் சதிர்வேதி மங்கலத்துத் திருவிடைக்கழி ஆழ்வார் ஸ்ரீவிமானம் முன்பு இட்டிகைப் படையாய்ப் பலகைப் பிளந்தமை கண்டு பார்க்கவ வம்சத்து மிலாடுடையார் இரணகேசரி இராமரான நரசிங்க வன்மர் கோயிலை இழிச்சிக் கருங்கற்கொண்டு ஸ்ரீவிமா னமும் மண்டபமும் எடுப்பித்துப் பூரண பொற்குடம் அஞ்சு வைப்பித்துத் திருச்சுற்று மாளிகையும் முன்பில் மண்டபமும் எடுப்பித்து முத்துப் பந்தலுங் கொடுத்து முன்பு கல்வெட்டுப்படியுள்ள நிபந்தங் கள் எல்லாம் இந்த ஸ்ரீவிமானத்தே கல்லுவெட்டு வித்தார் நரசிங்கவன்மரென்று அபிஷேகம் பண்ணி முடிகவித்து மிலாடு இலண்டாயிரம் பூமியும் ஆண்ட மிலாடுடையார் நரசிங்கவன்மர் நரசிங்கவன்மர் சந்திராதித்த வல் எரிக்க வைத்த திருநுந்தா விளக்கு இரண்டு இவைக்கு விளக்கெரிக்கக் கொடுத்த சாவாமூவாப் பெரும் பசு அறுபத்துநாலு’1 என்பதாம். இக்கல்வெட்டில் ‘மிலாடு இரண்டாயிரம் பூமியும்’ என்று காணப்படும் ஓர் அரிய செய்தி ஈண்டு அறியத்தக்கது. மிலாடு என்பது மலாடு என்ற நாட்டைக் குறிப்பதாகும். மலாடு என்பது மலையமான்நாடு என்ற தொடரின் மரூஉவாகும் இந்நாடு திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு பண்டைக் காலத்தில் விளங்கியது. இது. செந்தமிழ் நாட்டைக் சூழ்ந்திருந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளுள் ஒன்று என்பது உரையாசிரியர் கருத்து. கடைச்சங்க நாளில் இந்நாளடு கடையெழுவள்ளல் களுள் ஒருவனாகிய மலையமான் திருமுடிக் காரிக் குரியதா யிருந்தது என்பது புறநானூற்றால் அறியப்படுகின்றது.1 சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவராகிய மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட நாடும் இதுவேயாம். இத்துணைத் தொன்மை வாய்ந்த இந்நாடு இரண்டாயிரம் பூமிகளையுடையதாயிருந்தது என்று திருக்கோவலூர்க் கல்வெட்டு உணர்த்துவதால், நாட்டுடன் இணைத்து வழங்கப் பெற்றுள்ள எண் அதிலடங்கியுள்ள பூமிகளின் தொகையேயாம் என்பது நன்கு பெறப்படுகின்றது. அன்றியும், மைசூர் இராச்சியத்திலே கோலார் ஜில்லாவிலுள்ள இரண்டு கல்வெட்டுகளில்2 `ஐயங் கொண்ட சோழமண்டலம்3 நாற்பத்தெண்ணாயிரம் பூமியும்’3 என்று வரையப் பெற்றிருத்தலால் அச்செய்தி உறுதியாதல் காண்க. இனி, ஒரு பூமி என்பது எத்தனை வேலிகளை (அல்லது நிலத்தின் வேறு சிறு பிரிவுகளை)த் தன்னகத்துக் கொண்டது என்பது இப்போது புலப்படவில்லை. இந்நாளிலே சில ஊர்களில் உட்கிடை, பங்கு என்ற உட்பிரிவுகள் உள்ளன. இவற்றுள், ஒவ்வொன்றும் சில அல்லது பல வேலி நிலங்களைத் தன்பாற்கொண்ட ஓர் உட்பிரிவாகும். எனவே, சில அல்லது பல வேலி நிலங்களைத் தன்னகத்துக்கொண்டு நிலவிய ஒரு கிராம உட்பிரிவிற்குப் பூமி என்ற பெயர் முற்காலத்தில் வழங்கி வந்தது என்று கொள்வதே அமைவுடத்து. மைசூர் இராச்சியத்திலுள்ளஆதகூரிலிருந்து கொண்டு வரப்பட்டு பங்களூர்ப் பொருட்காட்சி நிலையத்தில் வைக்கப் பெற்றுள்ள ஒரு கல்வெட்டினால் ஆதகூர் என்ற கிராமம் பன்னிரண்டு பூமிகளை யுடையதாயி ருந்தது என்னும் உண்மை வெளியாகின்றது.4 இனி, தொண்டைமண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலம் இருபத்துநான்கு கோட்டங்களையும் எழுபத்தொன்பது நாடுகளையும் ஆயிரத்துத் தொள்ளாயிரம் நத்தங்களையும் முற்காலத்தில் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று என்பது, `கோட்டமோ ரிருபா னான்கு கூறுநா டெழுபத் தொன்பான் தோட்டெழி லாயிரத்துத் தொளாயிர நத்த மாகும்`1 என்னும் பழைய பாடல் ஒன்றால் அறியக்கிடக்கின்றது. சயங்கொண்ட சோழமண்டலம் நாற்பத்தெண்ணாயிரம் பூமிகளை யுடையதாயிருந்தது என்பது முன்னர் விளக்கப்பட்டது எனவே, ஆயிரத்துத் தொள்ளாயிரம் நத்தங்களையுடைய சயங் கொண்ட சோழமண்டலம் நாற்பத்தெண்ணாயிரம் பூமிகளுடைய தாயிருந்தமை ஈண்டு அறியத்தக்கது. இதனால் ஒரு கிராமம் சற்றேறக்குறைய இருபத்தைந்து பூமிகளைத் தன்பாற்கொண்டு சயங்கொண்ட சோழ மண்டலமாகிய தொண்டை மண்டலத்தில் முன்னாளில் இருந்திருத்தல் வேண்டும் என்பதை நன்கு புலப்படுத்துகின்றது.இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து ஒரு பூமி என்பது இரண்டு வேலி முதல் பத்துவேலி வரையிலுள்ள ஒரு நிலப்பரப்பாக அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்று கொள்ளலாம். இதுகாறும் கூறியவற்றாற் கல்வெட்டுகளிலே நாட்டோடு இணைத்து வரையப்பெற்றுள்ள எண்கள் பூமியைக் குறிக்கும் என்பதும், ஒரு பூமி என்பதும் சில வேவி நிலங்களைத் தன்னகத்துக் கொண்ட ஒரு நிலப்பரப்பாயிருத்தல் கூடும் என்பதும் நன்கு விளங்குதல் காண்க. 4. தமிழ் எழுத்துக்கள் தமிழ் நூல்கள் அச்சிடத் தொடங்கப் பெற்ற காலத்தே தான் தமிழ் எழுத்துக்கள் எல்லாம் இப்போது காணப்படும் நிலையான வரிவடிவங்களைப் பெற்றன. ஆகவே சற்றேறக் குறைய இரு நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள வரிவடிவ அமைப்பை அடைந்தன என்று கூறலாம். அதற்குமுன் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வெழுத்துக்களின் வரி வடிவங்கள் சில மாறுதல்களுக்கு உள்ளாகி வளர்ச்சியடைந்து வந்திருக் கின்றன. தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களைக் கோயில்களிலுள்ள கருங்கற் சுவர்களிலும் செப்பேடுகளிலும் வரையப்பெற்ற பழைய தமிழ்ச் சாசனங்களில்தான் பார்க்கலாம். தமிழ்ச் சாசனங்கள் எல்லாம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலாகவே இக்காலத்தில் கிடைக்கின்றன. அவற்றை நோக்குங்கால், தமிழ் மொழிக்கு இரண்டு வகையான வரிவடிவங்கள் வழங்கி வந்தன என்று தெரிகிறது . அவை தமிழ் எழுத்துவட்டெழுத்து எனப்பெறும். அவற்றுள் தமிழ் எழுத்து என்பது இந்நாட்களில் வழங்கிவரும் தமிழ் எழுத்துகளின் பழைய வரிவடிவங்களேயாம். இத்தகைய எழுத்துக்களால் வரையப்பெற்ற தமிழ்ச் சாசனங்கள் தொண்டைமண்டலம், சோழமண்டலம் ஆகிய நாடுகளில் பல்லவர்களின் ஆட்சிக்காலமுதல் காணப்படுகின்றன. வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்தாகும். வட்டெழுத்தால் பொறிக்கப் பெற்ற தமிழ்ச் சாசனங்கள் எல்லாம் பாண்டிமண்டலம் சேர மண்டலம் ஆகிய நாடுகளில் 8- ஆம் நூற்றாண்டு முதல் 11- ஆம் நூற்றாண்டு வரையில் அகப்படுகின்றன. பாண்டியரது முதற் பேரரசில் பாண்டிய மண்டலத்திலும் சேர மண்டலத்திலும் வழங்கிவந்த எழுத்துக்கள் வட்டெழுத்துக்கள் என்பது அவ்வேந்தர்களுடைய கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் நன்கு அறியப்படுகிறது. பாண்டி மண்டலத்தை வென்று தன் ஆட்சிக்குட்படுத்திய முதல் இராசராச சோழன், அதற்குமுன் அந்நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்துக்களை நீக்கித் தொண்டை மண்டலத்திலும் சோழமண்டலத்திலும் வழங்கிய தமிழ் எழுத்துக்களையே பயன்படுத்துமாறு செய்தனன். இச்செய்தி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குற்றாலத்தில் காணப்படும் இரண்டு கல்வெட்டுக்களால் இனிது புலனாகிறது. எனவே, 11- ஆம் நூற்றாண்டு முதல் பாண்டி மாண்டலத்தில் இப்போதுள்ள தமிழ் எழுத்துக்கள் வழங்கிவருகின்றன. இத்தமிழ் எழுத்துக்களைப் பல்லவர்கள் கிரந்த எழுத்துக்களிலிருந்து அமைத்துக்கொண்டு, தம் ஆட்சிக் குட்பட்ட தொண்டை மண்டலம் சோழ மண்டலங்களில் வழங்கி வருமாறு செய்தனர் என்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுக்கின்றனர். பல்லவர்கள் அமைத்த தமிழ் எழுத்துக்கள் வழக்கிற்கு வருமுன் அந்நாடுகளில் வழங்கி வந்த எழுத்துக்கள் வட்டெழுத்துக்ளேயாம். எனவே பண்டைக் காலத்தில் தமிழ் நாடு முழுமையும் வட்டெழுத்துக்களே வழங்கியுள்ளன என்பது உணரற்பாலது. கடைச்சங்க காலத்தில் சேரமண்டலத்திலும் சோழமண்டலத்திலும் வழங்கி வந்த தமிழ் எழுத்துக்கள் கண்ணெழுத்துக்கள் என்ற பெயருடையன வாயிருந்தன என்பது சிலப்பதிகாரத்தால் அறியக் கிடக்கின்றது இவ்வுண்மையைக் ‘கண்ணெழுத் தாளன் காவல் வேந்தன் மண்ணுடைய முடங்கலம் மன்னவர்க் களித்து’ (சிவப். கா. 26 அடிகள் 170-1 ) எனவும், ` இருபதினாயிரம் -கண்ணெழுத்துப்படுத்தன கைபுனை சகடமும்’ (சிலப். கா.26.அடிகள் 135-36) எனவும், `வம்பமாக்கள் தம்பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’(சிலப். கா.5.அடிகள் 11-12) எனவும் போதரும் இளங்கோவடிகளது வாக்கினால் நன்குணரலாம். இவ்வடிகள் குறித்துள்ள கண்ணெழுத்துக்கள் முற்காலத்தில் தமிழகம் முழுவதும் வழங்கி வந்த வட்டெழுத்துக்களாகும். இவ்வெழுத்துக்கள் கண்போன்றிருந்ததால் கண்ணெமுத்துக்கள் என்றும் வழங்கப்பட்டனவாதல் வேண்டும். இவ் வட்டெழுத்துக்களிலிருந்துதான் பல்லவர்கள், கிரந்த எழுத்துக்களையும் இக்காலத்துள்ள தமிழ் எழுத்துக் களுக்கு அடிப்படையா யுள்ள பழைய தமிழ் எழுத்துக்களையும் அமைத்துக் கொண்டனர் என்பது அறியத்தக்கது. தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்கள் பண்டைக் காலமுதல் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்துள்ளன என்பதை நன்காராய்ந்து அறிந்துள்ள கல்வெட்டிலாகா அறிஞர்கள் பழைய வட்டெழுத்துகளிலிருந்தே இப்போது வழங்கும் தமிழ் எழுத்துக்கள் தோன்றியுள்ளன என்று கூறியிருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. இவ்வட்டெழுத்துக்கள், அசோகச் சக்கரவர்த்தியின் பிராமி எழுத்துக்களிவிருந்து தோன்றி வளர்ச்சியடைந்தவை என்று டாக்டர் பூலர் கூறுகின்றார். (ஐனேயைn ஞயடயநடிபசயயீhல யீ.73.) தமிழ் நாட்டிற்கு ஆரியர்கள் வந்து தம் நாகரிகத்தைப் பரப்புவதற்கு முன்னரே இவ்வெழுத்துக்கள் தோன்றியிருத்தல் வேண்டும் என்றும் அதனால் இவை பிராமியின் வழித்தோன்றியனவாக இருத்தற்கு இடமில்லை என்றும் பிராமி எழுத்துக்களுக்கு ஆதாரமாகக் கருதப்படும் பீனிஷிய எழுத்துக்களிலிருந்து பண்டையக் காலத் தமிழ் மக்கள் இவ் வட்டெழுத்துக்களை அமைத்துக் கொண்டிருத்தல் வேண்டும் என்றும் டாக்டர் பர்னல் கூறுகின்றனார் .(நடநஅநவேள டிக ளடிரவா iனேயைn யீயடயநடிபசயயீhலயீ.49). இவ்வறிஞர்களின் கருத்துக்கள் ஈண்டு ஆராயற்குரியன. இந்தியாவில் வழங்கும் பழைய மொழிகளும் தமிழ் மொழியும் ஒன்று. இதற்குரிய இலக்கண நூல்களுள் மிக்க பழமை வாய்ந்தது தொல்காப்பியம். அந்நூலின் ஆசிரியராகிய தொல்காப்பியனார் வடமொழி வியாகரண ஆசிரியராகிய பாணினி முனிவர்க்கு முற்பட்டவர் என்பது அறிஞர்கள் கண்ட முடிவு. அத்துணைப் பழங்காலத்தே விளங்கிய அவ்வாசிரியர் வடசொற்கள் தமிழில் வந்து வழங்கும்போது வட எழுத்துக் களை நீக்கித் தமிழ் எழுத்தாலே எழுத வேண்டுமென்று, `வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ- எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே’ என்ற எச்சவியற் சூத்திரத்தில் கூறியுள்ளனர். மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களோடு கூடிய வழி வரி வடிவில் உருவுதிரிதலைப் ‘புள்ளியில்லா எல்லாமெய்யும்’ என்று தொடங்கும் சூத்திரத்தில் அவ்வாசிரியர் குறித்துள்ளனர் அன்றியும்,ஆசிரியர் தொல்காப்பியனார், மெய்யெத்துக்களும் எகர ஒகர எழுத்துக்களும் புள்ளி பெற்று நிற்றல் வேண்டும் என்பதையும் மகரக்குறுக்கம் மெய்ப்புள்ளியோடு உள்ளே மற்றொரு புள்ளியும் பெறுதல் வேண்டும் என்பதையும் ‘மெய்யின்இயற்கை புள்ளியொடு நிலையல்’ ‘எகர ஒகரத் தியற்கையு மற்றே’ ‘உட்பெறு புள்ளி உருவா கும்மே’ என்ற சூத்திரங்களில் கூறியுள்ளனர். இவற்றால் தொல்காப்பியனார் காலத்திற்கு முன்னரே தமிழ் எழுத்துக்களின் வரிவடிவம் வழக்கில் இருந்தமை தெள்ளிதிற் புலப்படும். அசோகச் சக்கரவர்த்தியின் பிராமி எழுத்துக்கள் கி.மு. முதல் நூற்றாண்டில் தான் சமண முனிவர்களின் மூலமாகத் தமிழ் நாட்டில் தோன்றிப் பரவியிருத்தல் வேண்டும். ஆகவே. பிராமி எழுத்துக்கள் தமிழகத்தில் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழ்மொழிக்குரிய தனி எழுத்துக்கள் இருந்தன என்பது தொல்காப்பியச் சூத்திரங்களால் பெறப்படுக்கின்றது அவ்வெழுத்துக்கள் வட்டெழுத்துக்களே என்பது தோற்றம். எனவே, பிராமி எழுத்துக்களிலிருந்து வட்டெழுத்துக்கள் தோன்றியிருத்தல் வேண்டும் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. வலக்கைப் புறத்திலிருந்து இடக்கைப் புறமாக எழுதப்பட்ட பீனிஷிய எழுத்துக்களிலிருந்து இடக்கைப் பக்கத்திலிருந்து வலக்கைப் பக்கமாக எழுதப்பட்ட வட்டெழுத்துக்கள் தோன்றியிருக்க முடியாது என்பது திண்ணம். ஆகவே, பண்டைத் தமிழ் எழுத்துக்களாகிய வட்டெழுத்துக்கள், தமிழ் மக்களாலேயே முற்காலத்தில் அமைக்கப் பெற்றவை என்பதும், அவ்வட்டெழுத்தின் திருந்திய வடிவங்களே இப்போதுள்ள தமிழ் எழுத்துக்கள் என்பதும் உணரற்பாலவாம். எனவே, தமிழ் எழுத்துக்கள் தமிழ் நாட்டிலேயே தோன்றிய தனி எழுத்துக்கள் ஆகும். தமிழ் இலக்கணங்களில் ஒன்றாகிய நன்னூலில் ஒலியைக் கொண்டு சொல்லப்பட்ட முதல் எழுத்துக்கள் சார்பெழுத்துகள் ஆகியவற்றின் தொகை முந்நூற்றறுபத்தொன்பது. வரிவடிங்களைக் கொண்டு நோக்குமிடத்து உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டும் உயிர் மெய் இருநூற்றுப் பதினாறும் ஆய்தம் ஒன்றுமாகத் தமிழ் எழுத்துக்களின் தொகை இருநூற்று நாற்பத்தேழாகும். தமிழ் எழுத்துக்கள் அகர முதல் னகர இறுதியாக இக்காலத்து நெடுங்கணக்கினுள் காணப்படுவது போன்றே தொல்காப்பியனார் காலத்தும் முறைப்பட முதற் சூத்திரத்தால் நன்கு விளங்கும். அகர முதலிய பன்னிரண்டு உயிரெழுத்துக் களும் பிற எழுத்தின் உதவியின்றித் தனித்து ஒலிப்பனவாதலாலும், ககர முதலிய பதினெட்டு மெய்களும் அகர முதலிய உயிரெழுத்துக்ளோடு கூடி ஒலிப்பதல்லது தனித்தொலிக்கும் ஆற்றல் இல்லாதனவாதலாலும், உயிரெழுத்துக்கள் முன்னும் மெய்யெழுத்துக்கள் பின்னுமாக வைக்கப்பட்டுள்ளன. உயிரெழுத்துக்கள் அகர முதல் ஒளகாரம் இறுதியாக எழுதப்படுதற்கும், மெய்யெழுத்துக்கள் ககர முதல் னகர இறுதியாக எழுதப்படுதற்கும், ஏற்ற காரணங்களை ஆசிரியர் சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தியுள் விளங்கக் கூறியுள்ளனர். ஒலியின் பிறப்பு முறைக்கு ஏற்பத் தமிழ் எழுத்துக்கள் அகர முதல் னகரம் ஈறாக வரிசைப்படுத்தப் பட்டிருக்கின்றன. 5. மிழலை நாடும் மிழலைக் கூற்றமும் நம் தமிழகம், சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம், கொங்குமண்டலம், தொண்டைமண்டலம் என்னும் ஐந்து மண்டலங்களாக முற்காலத்திற் பிரிக்கப் பட்டிருந்தது என்பதைக் கற்றார் பலரும் அறிவர். அவற்றுள் ஒவ்வொன்றும் பல உள்நாடுகளையுடைய தாயிருந்தது. அவ்வுண்ணாடுகளுள் பல நாடுகள் எனவும் சில கூற்றங்கள் எனவும் அக்காலத்தில் வழங்கப்பெற்றன. நாடும் கூற்றமும் தற்காலத்துள்ள தாலுகாவைப் போன்றன எனலாம்.ஆனால் நாட்டிற்கும் கூற்றத்திற்கும் உள்ள வேறுபாடு யாது என்பது இப்போது புலப்படவில்லை. இனி, பண்டைத் தமிழ் நூல்களை ஆராயுமிடத்து மிழலைக்கூற்றம் என்ற கூற்றம் ஒன்றும் அந்நாளில் நம் தமிழகத்தில் இருந்தன என்பது நன்கு புலப்படுகிறது. சைவசமய குரவருள் ஒருவராகிய சுந்தரமூர்த்திகள் தாம் அருளிய திருநாட்டுத் தொகையில் ‘மிழலை நாட்டு மிழலையே வெண்ணிநாட்டு மிழலையே’1 என்ற பாடற்பகுதியில் மிழலை நாட்டைக் குறித்திருப்பது அறியத்தக்கது. அன்றியும் சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்தில், ‘சூதநெருங்கு குலைத்தெங்கு பலவு பூகஞ் சூழ்படைத்தாய் வீதி தோறும் நீற்றினொளி விரிய மேவி விளங்குபதி நீதி வழுவா நெறியினராய் நிரவுங் குடியால் நெடுநிலத்து மீது விளங்குத் தொன்மையது மிழலை நாட்டுப் (பெருமிழலை`2) என்ற பாடலில் மிழலை நாட்டைக் கூறியிருப்பது உணரற் பாலதாகும் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் மீது மாங்குடிகிழார் பாடியுள்ள ‘நெல்லரி யுமிருந் தொழுவர்’ என்று தோடங்கும் 24-ஆம் புறப்பாட்டில் மிழலைக்கூற்றம் கூறப்பெற்றுள்ளது. மிழலை நாடும் மிழலைக் கூற்றமும் ஒரே நாடுதான் என்பது ஆராய்ச்சியில் வல்ல சில அறிஞர் கருத்து. அன்னோர் கொள்கை வலியுடைத்தா என்பதை ஈண்டு ஆராய்வோம். 1. மிழலைநாடு மிழலைநாடு எனப்படுவது சோழமண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள் ஒன்றாகிய இராசேந்திரசிங்கவள நாட்டின் உள்நாடுகளுள் ஒன்று என்பது கல்வெட்டுக்களாற் புலனாகின்றது.1 வளநாடு என்பது இந்நாளிலுள்ள ஜில்லாவைப் போன்றதாகும். இராசேந்திரசிங்கவளநாடு என்பது காவிரியாற்றின் வடகரையிலிருந்த ஒரு பெரு நிலப்பரப்பாகும். இவ் வளநாட்டில் சற்றேறக்குறைய இருபது உள் நாடுகள் இருந்தன என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. அவற்றுள் மிழலை நாடு என்பதும் ஒன்று அது, சோழகேரளபுரம், சேய்ஞலூர், திருவாப்பாடி, திருந்துதேவன்குடி முதலான ஊர்களைத் தன்னகத்துக் கொண்டு நிலவிய ஒரு நாடாகும். இவ்வுண்மைகளை இராஜேந்திரசிங்க வளநாட்டு மிழலை நாட்டுச் சோழகேரள புரத்து வியாபாரி’2 எனவும், ‘இராஜேந்திர சிங்க வளநாட்டுப் சபையார் இடக்கடவ திருமெய்க்காப்பு ஓன்று’3 எனவும் போதரும் கல்வெட்டுக்களால் நன்கறியலாம். மிழலை நாட்டிலுள்ளதாகக் கல்வெட்டால் உணர்த்தப்படும் சோழ கேரளபுரம் என்பது இக்காலத்தில் சோழபுரம் என்று வழங்கப் படுகிறது . இது கும்கோணத்திற்கு வடகிழக்கே ஆறு மைல் தூரத்தில் திருப்பனந்தாள் செல்லும் பெருவழியில் உள்ளது. சேய்நல்லூர் என்பது சோழபுரத்திற்கு வடக்கே இரண்டு மைல் தூரத்தில் இருக்கின்றது. சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவராகிய சண்டேசுவர நாயனார் தோன்றியருளிய பெருமை வாய்ந்தது. இதற்கண்மையிலுள்ள திருவாப்பாடி சண்டேசுவரர் பூசித்த சிவலிங்கப் பெருமான் உள்ளதலமாகும். மிழலை என்பது சோழபுரத்திற்குத் தெற்கே ஒன்றரை மைலில் உள்ளது. இது மிழலை நாட்டின் தலைநகரம்; முற்காலத்தில் பெருமிழலை என்ற பெயருடன் நிலவியது; அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவரும் சுந்தரமூர்த்திகள்பால் பேரன்பு பூண்டொழுகியவரும் ஆகிய பெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி வாழ்ந்து வீடெய்திய திருப்பதியாகும். திருந்துதேவன்குடி என்பது மிழலைக்குத் தெற்கே ஒன்றரை மைலிலுள்ள ஒரு பாடல் பெற்ற தலமாகும். மிழலைநாட்டூர்களான சோழபுரம், சேய்நல்லூர்1, திருவாப்பாடி, மிழலை, திருந்துதேவன்குடி என்பவை இப்போது கும்பகோணம் தாலூகாவில் காவிரியாற்றிற்கு வடக்கே யுள்ளன இவற்றுள் திருவாப்பாடியும், சோழபுரமும் சேய்ஞலூரும் மண்ணியாற்றிற்குத் தெற்கே அண்மையில் இருக்கின்றன. மிழலைநாட்டிற்கு மேற்கே இன்னம்பர்நாடும் கிழக்கிலும் வடக்கிலும் மண்ணிநாடும் இருந்தன. எனவே, மிழலைநாடு எனப்படுவது தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம் தாலூகாவில் காவிரியாற்றிற்கு வடக்கே மண்ணி யாற்றின் தென்கரை வரையில் அமைந்திருந்ததோர் உள்நாடு என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. ஆகவே, இது சோழ மண்டலத்திலிருந்த ஒரு நாடு என்பது தேற்றம். 2. மிழலைக்கூற்றம் மிழலைக்கூற்றம் என்பது முற்காலத்திற் பாண்டி மண்ட லத்தில் இருந்த உள்நாடுகளுள் ஒன்றாகும் அவ்வுண்மையை, ‘கோச்சடையவன்மரான திரிபுவனச் சக்ர வர்த்திகள் சீவல்லபதேவற்கு யாண்டு இருபத்தஞ்சா வது மேஷ நாயிற்றுப் பூர்வபக்ஷத்து ஏகாதசியும் சனிக்கிழமையும் பெற்ற மகத்துநாள் பாண்டி மண்டலத்து மிழலைக்கூற்றத்து ஒக்கூருடையார்.’ என்ற திருக்களர்க் கல்வெட்ட்hலும் 1 வேறு சில கல்வெட்டுக் களாலும் 2 இனிதுணரலாம். இம்மிழலைகூற்றம் கீழ்க்கடலைச் சார்ந்திருந்த ஒரு பெரு நிலப்பரப்பு என்பதும், கடைச்சங்ககாலத்தில் வேள் எவ்விக்குரிய தாயிருந்தது என்பதும் 24-ஆம் புறப்பாட்டால் நன்கு வெளியா கின்றன. வீரசோழியம் என்ற இலக்கணநூலின் ஆசிரியராகிய புத்தமித்தரன் என்பார், மிழலைக் கூற்றத்திலுள்ள பொன் பற்றியில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு குறுநிலமன்னர் என்பது, ‘ஈண்டுநூல் கண்டான் எழின்மிழலைக் கூற்றத்துப் பூண்டபுகழ்ப் பொன்பற்றி காவலனே - மூண்டவரை வெல்லும் படைத்தடைக்கை வெற்றிபுனை வீரன்றன் சொல்லின் படியே தொகுத்து’3 என்ற பாடலால் அறியப்படுகிறது கி.பி.1063 முதல் 1070 வரையில் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து ஆட்சி புரிந்தவனும் கங்கை கொண்டசோழன் புதல்வனும் ஆகிய வீரராசேந்திர சோழனே, பொன்பற்றி காவலன் புத்திமித்திரனைக் கொண்டு வீரசோழியம் என்ற நூலைச் செய்வித்தவன் என்பது, `மேவிய வெண்குடைச் செம்பியன் வீர ராசேந்திரன்றன் நாவியல் செந்தமிழ்ச்சொல்’1 `தேர்வீரசோழன் திருப்பெயரால் பூமேலுரைப்பன். என்னும் அவ்வாசிரியரது கூற்றுக்களால் தெள்ளிதிற் புலனா கின்றது. அவரது ஊராகிய மிழலைக்கூற்றத்துப் பொன்பற்றி என்பது இந்நாளில் பொன் பேத்தி என்றபெயருடன் தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கித் தாலூகாவில் உளது இம்மிழலைக்கூற்றத்தில் மணமேற்குடி என்ற ஊர் ஒன்று உளது என்பது ‘மிழலைக்கூற்றத்துக் கீழ்கூற்று மணமேற்குடி’ என்ற மாறமங்கலக் கல்வெட்டொன்றால்2 அறியப்படுகிறது. இது கீழ்க்கடலையடுத்துள்ளதோர் ஊராகும். சிவனடியார் அறுபத்துமூவருள் ஒருவரும், மதுரையம்பதியில் நெல்வேலி வென்ற நெடுமாறன் என்ற பாண்டியற்கு அமைச்சராக விளங்கிய வரும் ஆகிய குலச்சிறைநாயனார் பிறந்த திருப்பதி இம்மணமேற்குடியே யாகும். அதனைக் ‘குருந்தவிழ்சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே’3 என்னும் நம்பியாண்டவர் நம்பியின் திருவாக்கினால் அறியலாம். அன்றியும் சேக்கிழார் மணமேற் குடியைப் பாண்டி நாட்டூர் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூர் இக்காலத்திற் பாண்டி நாட்டின் வட எல்லையாகிய வெள்ளாற்றிக்குத் தெற்கே அறந்தாங்கித் தாலூகாவில் உளது. எனவே, மிழலைக்கூற்றத்தூர்களான பொன்பற்றியும் மணமேற்குடியும் இந்நாளில் அறந்தாங்கித் தாலூகாவில் இருத்தல் உணரற்பாலாதாம். மணிவாசாகப் பெருமானை இறைவன் ஆட்கொண்டருளிய தலமாகிய திருப்பெருந்துறை மிழலைக்கூற்றத்திலிருந்ததோர் ஊர் என்பது கல்வெட்டுக் களாலும்1 பெரும் புற்றப்புலியூர் நம்பியின் திருவிளையாடற்புராணத்தாலும் அறியப்படுகின்றது. அவ்வூர் இக்காலத்தில்ஆவுடையார் கோவில் என்ற பெயரோடு அறந்தாங்கித் தாலூக்காவில் வெள்ளாற்றிற்குத் தெற்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது. ஆகவே பொன்பற்றி, மணமேற் குடி, திருப்பெருந்துறை ஆகிய ஊர்களைத் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் நிலவிய மிழலைக்கூற்றம் எனப்படுவது சோழ மண்டலத்திற்குத் தென்னெல்லையாக வுள்ள வெள்ளாற்றிற்குத் தெற்கும் திருப்புவனவாசலுக் கண்மையில் கடலோடு கலக்கும் பாம்பாற்றிற்கு வடக்கும் பாண்டிமண்டலத்தி லிருந்த ஓர் உள்நாடு என்பது தெள்ளிது. இம் மிழலைக்கூற்றம் , புதுக்கோட்டை நாட்டில் ஒரு பகுதியையும் தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கித் தாலுகாவின் தென்பகுதியையும் இராமநாதபுரம் ஜில்லாவில் ஒரு பகுதியையும் தன்பாற் கொண்டு மேற்கூறு, நடுவிற்கூறு, கீழ்க்கூறு என்னும் முப்பிரிவுகளையுடைய பெரு நாடாகப் பாண்டிமண்டலத்தின் வடபகுதியில் அமைந்திருந்தது என்பது கல்வெட்டுக் களால் அறியக் கிடக்கின்றது. இதனையே பிற்காலத்தார் மிழலைநாடு எனவும் வழங்கியுள்ளனர். சர்க்கரைப் புலவர் வழியினராய சர்க்கரைமுத்து முருகப்புலவர் என்பார் இதன்மீது மிழலைச் சதகம் என்ற நூலொன்று பாடியிருத்தல் அறியத்தக்கது. இதுகாறும் விளக்கியவற்றால் மிழலைநாடும் மிழலைக் கூற்றமும் ஒன்றிற்கொன்று மிகச் சேய்மையி லிருந்த வெவ்வேறு நாடுகள் என்பதும், அவற்றுள் முன்னது, சோழமண்டத்திலே கும்பகோணந் தாலூகாவில் காவிரி யாற்றிற்கு வடக்கும் மண்ணியாற்றிற்குத் தெற்குமுள்ள நிலப்பரப்பில் இருந்தது என்பதும், பின்னது பாண்டி மண்டலத்திலே புதுக்கோட்டை நாட்டிலும் அறந்தாங்கித் தாலூகாவிலும் ஒடும் வெள்ளாற்றிற்குத் தெற்கும் பாம்பாற்றிற்கு வடக்குமுள்ள நிலப்பரப்பில் இருந்தது என்பதும், பிற்காலத்தார் இவ்விரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் மிழலைநாடு என்ற பெயரால் வழங்கியுள்ளனர் என்பதும் நன்கு புலனாதல் காண்க. 6. பழையாறை நகர் கடைச்சங்கநாளில் அரசாண்ட சோழமன்னர்க்குக் கடற்கரை நகரமாகிய காவிரிர்பூம்பட்டினமும் உள்நாட்டு நகரமாகிய உறையூரும் சிறந்த தலைநகர் களாக விளங்கியமை போலப் பிற்காலச் சோழர்க்குத் தஞ்சைமாநகரும் கங்கை கொண்ட சோழபுரமும் பழையாறை நகரும் தலைநகர்களாக நிலவின. அவற்றுள், பழையாறை நகரைப் பற்றிய செய்திகள் இதுகாறும் ஆராய்ந்து விளக்கப்படவில்லை. ஆதலால். இத் தொன்னகரைப்பற்றி ஈண்டு ஆராய்வோம்.இருக்கும் இடம் - இது, கும்பகோணத்திற்குத் தென்மேற்கே மூன்று மைல் தூரத்தில் பழையாறு என்னும் பெயருடன் இந்நாளில் ஒருசிற்றூராக உளது. இது முற்காலத்தில் ஐந்து மைல் நீளமும் மூன்றுமைல் அகலமும் உள்ள ஒரு பெரிய நகரமாயிருந்தது. ‘தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து - பாரில் நீடிய பெருமை சேர்பதி பழையாறை’ என்று பெரியபுராண ஆசிரியராகிய சேக்கிழாரடிகள் கூறியிருப்பதும் இச்செய்தியை வலியுறுத்துவாதாகும். தொன்மை - கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிலவிய திருநாவுக்கரசு சுவாமிகள் பழையாறை வடதளியைப் பாடியிருத்தலாலும்1 அவர் காலத்திலிருந்த திருஞானசம்பந்த சுவாமிகள் பழையாறையிலுள்ள பட்டீச்சுரத்தைப் பாடியிருத் தலாலும்2 இந்நகர் கி. பி. ஏழாம் நூற்றாண்டிலேயே சிறந்து விளங்கியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். வரலாறு - திருநாவுக்கரசர் பழையாறை வடதளியை வணங்கச் சென்றபோது, அங்கிருந்த சிவலிங்கத்தைச் சமணர்கள் மறைத்து விட்டனர் என்றும், அதுபற்றி அடிகள் வருந்தினாராக, இந்நகரிலிருந்த அரசன் அதனையறிந்து அடிகள் துன்பத்தைப் போக்கி வடதளிப் பெருமானுக்குச் சிறந்த விமானம் எடுப்பித்து வழிபாட்டிற்கு நிவந்தமும் அளித்தான் என்றும் சேக்கிழாரடிகள் தம் பெரியபுராணத்திற் கூறியுள்ளனர். எனவே, ஏழாம் நூற்றாண்டில் அப்பர் சுவாமிகள் காலத்தில் இந்நகரில் ஓர் அரசன் இருந்தனன் என்று தெரிகிறது. அவன் பல்லவ அரசனாகிய முதல் மகேந்திரவர்மனுக்குக் கீழ் அரசாண்ட ஒரு சோழர்குலக் குறுநில மன்னனாதல் வேண்டும். கி.பி. எட்டாம் நூற்றாண்டிலிருந்த நத்திவர்ம பல்லவ மல்லன் என்னும் இரண்டாம் நந்திவர்மன் பழையாறையில் ஓர் அரண்மனையும் நந்திபுர விண்ணகரம் என்னும் திருமால் கோயிலும் கட்டி இந்நாகரை, மாமல்லபுரமும் காஞ்சியும் போலத் தனக்குரிய சிறந்த நகரமாக வைத்துக் கொண்டான். அன்றியும் இந்நகரின் பெயரை நந்திபுரம் என்றும் மாற்றிவிட்டான். பிற்காலத்தில் சோழர் ஆட்சிக் காலத்திலும், இந்நகர் பழையாறையாகிய நந்தியும் என்று வழங்கப்பட்டுள்ளது. (ஐளே. 30 டிக 1931, 365 யனே 267 டிக 1924). இந்நகரில் இரண்டாம் நந்திவர்மன் கட்டிய நந்திபுரவிண்ணகரம் இவன் காலத்திருந்த திருமங்கை மன்னனால் பாடப்பட்டுள்ளது. இவ்வேந்தன் இந்நகரில் தங்கியிருந்த போது தமிழ் வேந்தர்களாலும் சித்திரமாயன் என்னும் பல்லவ அரசகுமாரனாலும் முற்றுகையிடப்பட்டான் என்றும், அந்தநாட்களில் இவன் படைத் தலைவன் உதயசந்திரன் என்பான் பெரும்போர் புரிந்து இவனை விடுவித்தான் என்றும் உதயேந்திரச் செப்பேடுகள் கூறுகின்றன. (ளு.ஐ.ஐ.ஏடிட. ஐஐ. சூடி. 74) எனவே சோழர்குலக் குறுநிலமன்னன்பா லிருந்த இந்நகரை, இரண்டாம் நந்திவர்மன் கைப்பற்றிக் கொள்ளவே தமிழ் வேந்தர்கள் ஒன்று சேர்ந்து இதனை மீட்க முயன்றும் இயலவில்லை போலும். இவன் பேரனாகிய தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலும் பழையாறு என்னும் இந்நகரில் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன என்று நந்திக் கலம்பகம் கூறுகின்றது. பிற்காலச் சோழர்களின் முதல்வனாகிய விசயாலயன் முன்னோர் அங்கிருந்திருத்தல் வேண்டும். அவன் தஞ்சையைக் கைப்பற்றிச் சோழ நாட்டின் தலைநகராக வைத்துக் கொண்ட பின்னரும் சோழ அரச குடும்பத்தினர் இந்நகரில் இருந்து வந்தனர். முதற் பராந்தகச் சோழன் பேரனாகிய இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரசோழன் கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் நடுவில் இந்நகரிலிருந்து அரசாண்டான் என்று தெரிகிறது. வீரசோழியவுரையிற் காணப்படும் பழைய பாடல்கள் ‘மேதகு நந்திபுரி மன்னர் சுந்தரச்சோழர்’ (வீரசோ-யாப்பு. 11) என்றும், ‘பழையாறை நகர்ச் சுந்தரச்சோழர்’ (வீரசோ- அலங்.10) என்றும் கூறுவதால் இவ்வுண்மையை உணரலாம். முதல்இராசராசசோழன் தமக்கையாகிய குந்தவைப் பிராட்டியார் தஞ்சைமாநகரில் கி.பி. 1015-ல் சுந்தரசோழ விண்ணகர் ஆதுரசாலை என்னும் மருத்துவ நிலையம் ஒன்று நிறுவி, அதற்கு மருத்துவபோகமாக நிலமும் பொருளும் அளித்து, அவ்வுத்தரவைப் பழையாறையிலுள்ள அரண்மனை யிலிருந்து அனுப்பிய செய்தி ஒரு கல்வெட்டிற் காணப்படுகிறது. (ஐளே. 248 டிக 1923). கங்கை கொண்ட சோழன் என்று வழங்கும் முதல் இராசேந்திர சோழன், பழையாறையில் தன் அரண்மனையிலிருந்து கொண்டு கி.பி. 1015-ல் கோயிலுக்குரிய நிலங்களை யெல்லாம் அளக்குமாறு உத்தரவனுப்பினான் என்று உய்யக் கொண்டான் திருமலையிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்து கின்றது, (ஐசூனள 463 டிக 1908). கி.பி. 1017-ல் இவ்வேந்தன் இந் நகரிலிருந் தனுப்பிய மற்றோர் உத்தரவு வடஆற்காடு ஜில்லாவிலுள்ள எம்பாடி என்ற ஊரில் வரையப்பெற்றுள்ளது (585 டிக 1906). இவன், பழையாறை நகர்க்கு முடிகொண்ட சோழபுரம் என்று பெயரிட்டு, கங்கைகொண்ட சோழபுரம் அமைப்பதற்கு முன் அங்கிருந்து அரசாண்டான் என்று தெரிகிறது (271 டிக 1927). சோழ மன்னர்களின் சரிதங்களை ஆராய்வதற்குப் பயன்படுவனவாய்ச் சென்னைப் பொருட்காட்சிச் சாலையிலுள்ள திருவாலங் காட்டுச் செப்பேடுகள், இவன் பழையாறையாகிய முடிகொண்ட சோழபுரத்திலிருந்து கி.பி. 1019-ல் அளித்தனவேயாம்.(ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஐஐ சூடி. 205) இம்மாநகரின் தெற்கெல்லை யில் ஓடும் முடிகொண்ட சோழப் பேராறும் இவ்வரசன் வெட்டுவித்ததே. கி.பி. 1112-ல் முதற் குலோத்துங்கசோழன் இந்நகரிலிருந்த தன் அரண்மனையில் வாணாதிராசன் என்ற சிங்காசனத்தில் வீற்றிருந்தபோது தேவாதானங்களைப் பற்றி அனுப்பி ஓர் உத்தரவு அம்பர்மகாளாத்தில் வரையப்பட்டுள்ளது.1 இவன் மகன் வீக்கிரமசோழன் கி.பி. 1122-ல் முடிகொண்ட சோழ புரத்தில் தன் அரண்மனையிலிருந்து தென் ஆற்காடு ஜில்லாவி லுள்ள எலவாணாசூர்க் கோவிலுக்கு நிவந்தம் அளித்த செய்தி அவ்வூரில் வரையப்பட்டுள்ளது. (ஐளே. 168 டிக 1906). இவன் பேரன் இரண்டாம் இராசராசன் இந்நகரின் பெயரை இராசராசபுரம் என்று மாற்றித் தன் தலைநகராக வைத்துக் கொண்டான் என்று தெரிகிறது. விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவேந்தர் காலத்தும் வாழ்ந்த புலவர் பெருமானாகிய ஒட்டக்கூத்தர், அம் மூவருள் இரண்டாம் இராசராசன் ஆட்சிக்காலத்தில் தாம் பாடிய தக்கயாகப்பரணி என்னும் நூலில் கடைதிறப்பு என்ற பகுதியில், “உம்ப ராளும் அமராபு ரந்தவிர லோக பாலரெயில் காவல்கூர் செம்பொன் மாடநிரை ராச ராசபுரி வீதி மாதர்கடை திறமினோ” என்பது முதலான தாழிசைகளிற் பாராட்டியிருக்கும் இராசராசபுரி என்பது இப்பழையாறை நகரேயாம். இஃது அந்நாளில் இரண்டாம் இராசராசனுக்குத் தலைநகராயிருந்ததா லன்றி இங்ஙனம் கடைதிறப்பில் பாராட்டப் பெற்றிராது என்பது ஒருதலை. அன்றியும் இறுதியில் தக்கனுக்கு அருள் புரியும் பொருட்டு இராசராசபுரியிலுள்ள இறைவன் இடபாரூடராய் எழுந்தருளினார் என்று அப் புலவர் கூறியிருப்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்க தொன்றாம். தக்கயாகபரணியின் பதிப்பாசிரியர், கடைத்திறப்பில் உள்ள ஒரு தாழிசையின் அடியில் இராசராசபுரி என்பது தஞ்சாவூர் என்று குறிப்பெழுதி யுள்ளனர். இதுகாறும் எடுக்கப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் தஞ்சாவூருக்கு இராசராசபுரி என்ற மற்றொரு பெயர் இருந்தது என்பது புலனாகவில்லை. ஆனால் பழையாறையாகிய இராசராபுரம் என்ற தொடர் கல்வெட்டுகளிற் காணப்படுகிறது. தஞ்சாவூரிலுள்ள கோயிலுக்கு இராசராபுரி என்று வழங்கியிருத்தல் வேண்டும் எனக் கருதி அங்ஙனம் குறிப்பெழுதினர் போலும்.எனவே, பழையாறையே இராசராசபுரி என்றும் இராசராசபுரம் என்றும் வழங்கப்பெற்றது என்க. பதிமூன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மூன்றாம் இராசராச சோழனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிய முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் சோழ நாட்டில் முடிகொண்ட சோழபுரத்தில் விசயாபிடேகமும் செய்து கொண்டு பழையாறையாகிய முடிகொண்ட சோழபுரத்தையும் சோணாட்டையும் தன்பால் வந்து அடைக்கலம் புகுந்த சோழ மன்னனுக்கு மீண்டும் வழங்கினானென்று உணர்த்துகின்றது. சோழ மன்னனை வென்று சோழநாட்டைத் தன்னடிப்படுத்திய பாண்டிவேந்தன் இம்மாநகரில் வெற்றிமுடி சூடிக் கொண்டான் என்ற செய்தி, இது முற்காலத்திலே சோழர்க் குரிய தலைநகரங்களில் ஒன்றாயிருந்திருத்தல் வேண்டு மென்பதை நன்கு வலியுறுத்துவதாகும். எனவே, கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையில் இம்மாநகர் பழையாறை, நந்திபுரம், முடிகொண்ட சோழபுரம், இராசராசபுரம்,1 என்னும் பெயர்களை சிலவேந்தர்களின் ஆட்சிக்காலங்களில் எய்தி அன்னோர்க்குரிய இரண்டாவது தலைநகராகச் சிறப்புடன் விளங்கிக் கொண்டிருந்தது எனலாம். அன்றியும் சோழர்கள் முடிசூட்டிக் கொள்ளும் நகரங்களுள் ஒன்றாகவும் இது நிலவிற்று என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்க தாகும். இந்நகரிலிருந்த கோயில்கள் - (1) பழையாறை வடதளி. (2) பழையாறை மேற்றளி. (3) பழையாறைத் தென்றளி (4) பட்டீச்சுரம் (5) திருச்சத்திமுற்றம் (6) அருண்மொழிதேவச்சுரம் (7) பஞ்சவன்மாதேவீச்சுரம் (8) அரிச்சந்திரம் (9) இராசராசேச்சுரம் (10) கோபிநாதப் பெருமாள் கோயில் (11) நந்திபுரவிண்ணகரம் (12) சுந்தரப் பெருமாள் கோயில் என்பன. இவற்றுள் வடதளி, மேற்றளி, திருச்சத்திமுற்றம், பட்டீச் சுரம் என்னுந் தலங்கள் சைவசமயகுரவர்களால் பாடப் பெற்றவை; நந்திபுரவிண்ணகரம் திருமங்கை யாழ்வாரால் பாடப்பெற்றது. இதன் தற்காலநிலை - காலச்சக்கரத்தின் சுழற்சியினால் உலகில் எத்துணையோ மாறுதல்கள் ஏற்படுகின்றன. பெரிய நகரங்கள் போர், பூகம்பம், கடல்கோள் முதலான நிகழ்ச்சிகளால் அழிவெய்திச் சிற்றூர்களாக மாறிவிடு கின்றன. பல சிற்றூர்கள் ஒன்றாகச் சேர்க்கப்பெற்றுப் பெரியதொரு நகரமாக அமைதலும் உண்டு. தலைநகரங்கட்குப் பிறவேந்தர் படை யெழுச்சிகளால் ஆபத்தும் அழிவும் ஏற்படுவது இயல்பு என்பது அண்மையில் முடிவுற்ற மாபெரும் உலகப்போரால் நன்கறியக் கிடக்கின்றது. அத்தகைய போர் நிகழ்ச்சி யொன்றால் பழையாறை மாநகர் அழிவிற்குள்ளாகி இந்நாளிற் சில சிற்றூர்களாகச் சிதறிக் கிடக்கின்றது. அவ்வூர்கள் பழையாறை, முழையூர், பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம், திருமத்தடி, சோழமாளிகை, ஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், சுந்தரப்பெருமாள் கோயில், தாராசுரம், நாதன்கோயில், இராசராசேந்திரப் பேட்டை, அரிச்சந்திபுரம், கோணப்பெருமாள் கோயில் என்பனவாம். இவற்றுள், திருமத்தடி என்பது திருமேற்றளி என்பதன் மரூஉ. சோழமாளிகை என்பது சோழமன்னர்களின் அரண் மனையிருந்த இடம். இது, சுமார் ஒரு மைல் நீளமும் முக்கால் மைல் அகலமும் உடையது. இதில் எஞ்சியிருந்த மதிற்சுவரின் ஒருபகுதி 75 ஆண்டுகட்கு முன் நம் அரசாங்கத் தினரால் இடிக்கப்பெற்றது என்று முதியோர்கள் கூறுகின்றனர். இதன் நிலப்பரப்பு முழுமையும் செங்கற்களாகவே இன்றும் உளது. சுந்தரப் பெருமாள்கோயில் என்பது கும்பகோணத்திற்கு மேற்கே புகைவண்டி நிலையமுள்ள ஓர் ஊராக இருக்கின்றது. தாராசுரம் என்பது இராசராபுரம் என்பதன் மருஉ. இது கும்பகோணத்திற்கு மேற்கே புகைவண்டி நிலையமுள்ள ஊர். நாதன்கோயில் என்பது நந்திபுர விண்ணகரம் அமைந்துள்ள இடம். இராசராசேந்திரப்பேட்டை என்பது கும்பகோணத்தின் மேற்பகுதி. இவ்விடத்திற் சோழர்களின் நாணயங்கள் அடிக்குமிடம் ஒன்றிருந்தது என்று தெரிகிறது. கோணப் பெருமாள் கோயில் என்பது கோபீநாதப் பெருமாள் கோயில் என்பதன் மரூஉ. பம்பைப்படை, ஆரியப்படை, புதுப்படை, மணப்படை என்னும் நான்கு படைவீடுகள் இருந்த இடங்கள் அப்பெயர்களோடு நான்கு சிற்றூர்களாக இன்றும் உள்ளன. இந்நிலப்பரப்புக்களெல்லாம் அரிசிலாற்றுக்குத் தெற்கும் முடிகொண்டான் ஆற்றிற்கும் வடக்கும் வளம்பொருந்திய இடங்களாகவே இன்றும் இருக்கின்றன.பழையாறை என்னும் இம்மாநகரின் தொன்மைச் சிறப்புக்களெல்லாம் எடுத்துணர்த்துவன இதிலுள்ள கோயில்களும் அவற்றில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களுமேயாம். இதில், சோழமாளிகை என்ற பகுதியையாவது அரசாங்கத்தார் தோண்டுவித்தால் எத்துணையோ உண்மைச் செய்திகள் வெளியாகும் என்பது திண்ணம். 7. நந்தனாரது ஆதனூர் சிவனடியார் அறுபத்து மூவருள் ஒருவரும், நந்தனார் என்று வழங்கப் பெறுபவரும் ஆகிய திருநாளைப் போவார் நாயனாரது வரலாற்றை, நம் தமிழகத்தில் அறியாதார் யாவர்? அப்பெரியார் பிறந்து வாழ்ந்த திருப்பதி ஆதனூர் என்பர், திருத்தொண்டர் திருவந்தாதியின் ஆசிரியராகிய நம்பி யாண்டார் நம்பிகள். ஆதனூர் என்று வழங்கும் ஊர்கள் நம் நாட்டில் பல இருத்தல் யாவரும் அறிந்ததே. அன்பினாலோ, ஆராய்ச்சியின் மையாலோ, பலரும் தம் தம் ஊருக்கு அண்மையிலுள்ள ஆதனூரே, நந்தனாரது ஊர் என்று கூறி வருகின்றனர். எனவே, உண்மையில் நந்தனார் பிறந்த பேறு எய்திய பதி யாது என்பது ஆராய்தற் குரியதாகு மன்றோ? அறுபான் மும்மை நாயன்மார்களது வரலாறுகளைக் கூறும் திருத் தொண்டர் புராணம், நத்தனாரது ஆதனூர் யாண்டையது என்பதை அறிந்து கோடற்குப் பெரிதும் உதவுகின்றது. சேக்கிழாரடிகள், அப்புராணத்தில் ஆதனூரைப் பற்றிக் கூறியிருப்பது, பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகும் திகழ்ந்தபுனற் கொள்ளிடம்பொன் செழுமணிகள் திரைக்கரத்தால் முகந்துதர இருமருங்கும் முளரிமலர்க் கையேற்கும் அகன்பணைநீர் நன்னாட்டு மேற்கா நாட்டாதனூர் என்பது. இவ்வரிய செய்யுளால், ஆதனூர் என்பது சோழ மண்டலத்தின் உள்நாடுகளுள் ஒன்றாகிய மேற்காநாட்டில் உளது என்னும் செய்தி வெளியாகின்றது. சோழ மண்டலத்திருந்த உள் நாடுகள் எல்லாவற்றையும் கல்வெட்டு களின் துணைக்கொண்டு துருவி நோக்குங்கால், மேற்காநாடு என்ற பெயருடைய நாடு ஒன்று கொள்ளிடத்தின் வடகரையில் முன்னர் இருந்தது என்று தெரிகிறது. கொள்ளிடத்தின் வட கரையிலுள்ள பாடல் பெற்ற தலமாகிய ஓமாம்புலியூர், அம் மேற்கா நாட்டில் உள்ள ஒரு திருப்பதி என்பது கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.1 எனவே, சிதம்பரந் தாலூகாவிலுள்ள ஓமாம்புலியூர் என்னும் தலத்திற்கு அண்மையில் நந்தனாரது ஆதனூர் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, ஓமாம்புலியூர்க்கு மேற்கே, ஒன்றரை மைல் தூரத்தில் கொள்ளிடக்கரையிலுள்ள ஆதனூரே, நந்தனார் பிறந்தருளிய பெருமையுடையது என்பது வெளிப்படை. கொள்ளிடத்தின் அலைகள் வந்து அடிக்குமாறு, அதற்கு அத்துணை அண்மையில் ஆதனூர் அமைந்துள்ளது என்று சேக்கிழாரடிகள் குறித்திருப்பது ஈண்டு அறியத்தக்கது. இவ்வாதனூர்க்கு அண்மையிலுள்ள பாடல்பெற்ற தலமாகிய கடம்பூரும், மேற்கா நாட்டில் உள்ளதோர் திருப்பதி என்று அப்வூர்க் கல்வெட்டுக்கள் கூறுவது, ஆதனூரைப்பற்றிய எனது கொள்கையை வலியுறுத்தல் காண்க. எனவே, மேற்கா நாட்டிலுள்ள பாடல்பெற்ற தலங்களாகிய ஓமாம்புலியூர்க்கும், கடம்பூர்க்கும், இடையிலுள்ள ஆதனூரே, நந்தனாரது ஊர் என்பது நன்கு துணியப்படும். இனித் திருப்பனந்தாளுக்கு வடக்கேயுள்ள கீழை அணைக் கட்டுக்குக் கிழக்கே, ஏழு மைல் தூரத்தில், கொள்ளிடத்தின் வடகரையிலுள்ளது இவ்வாதனூர் என்பது அறியற்பாலதாகும். 8. மாற்பிடுகு பெருங்கிணறு மாற்பிடுகு பெருங்கிணறு என்பது, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே பன்னிரண்டு மைல் தூரத்தில் உள்ள திருவெள்ளறைப் புண்டரீகாட்சப் பெருமாள் கோயிலின் தென் பக்கத்தில் உள்ளது. ஈண்டுக் குறிக்கப்பெற்ற திருமால் கோயில் ஆழ்வார் களாற் பாடப்பெற்ற பெருமையுடையதாகும். அவ்வூரிலே சிவாலயம் ஒன்றும் உளது. அது மலையிற் குடைந்ததொரு கோயில் என்பது பார்ப்போர்க்கு நன்கு புலப்படும். அக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனை இந்நாளில் சம்புநாதர் என்று வழங்குகின்றனர். ஆனால் அங்குக் காணப்படும் கல்வெட்டுக்கள் திருவானைக்கல் பெருமானடிகள் என்று கூறுகின்றன. அவ்விருகோயில்களிலும் சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களும் பல்லவர்களின் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அவற்றுள், இரண்டு கல்வெட்டுக்கள் ஒருகிணற்றின் மேற்பக்கத்தில் வரையப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கிணற்றை வெட்டுவித்தவன் யாவன்? என்பதையும், அதற்கு இடப்பெற்ற பெயர் யாது? என்பதையும், கிணறு வெட்டப் பெற்ற காலத்தையும் அறிவிக்கின்றது. மற்றொன்று அறுசீர்விருத்தமாக உள்ளது. இக்கல்வெட்டுக்கள் இரண்டையும் அடியிற் காண்க. I (1) ஸ்வஸ்திஸ்ரீ பாரத்வாஜ கோத்திரத்தின் வழித் தோன்றிய பல்லவதிலக குலோத்பவன் தந்திவர்மற்கு யாண்டு நான்காவதெடுத்துக் கொண்டு ஐந்தாவது முற்றுவித்தான், ஆலம்பாக்க விசைய நல்லூழான் (2) தம்பி கம்பன் அரையன் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணறு; இதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறென்பது. இது ரட்சிப்பார் இவ்வூர் மூவாயிரத் தெழுநூற்றுவரும். II (1) கண்டார் காணா வுலகத்திற் காதல் செய்து நில்லாதேய் பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று நையாதேய் (2) தண்டார் முப்பு வந்துன்னைத் தளர்ச்செய்து நில்லாமுன் உண்டே லுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மினேய் 1 இவற்றுள், முதற்கல்வெட்டு வரலாற்றுண்மைகள் சிலவற்றை நன்குணர்த்துகின்றது. இது, பல்லவகுலத்தினர் பாரத்துவாசகோத்திரத்தினர் என்பதையும் அக்குலத்திலே தந்திவர்மன் என்னும் வேந்தன் ஒருவன் இருந்தான் என்பதையும் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணறு அம் மன்னனது ஆட்சியின் நான்காமாண்டில் தோண்டத் தொடங்கப் பெற்று ஐந்தாமாண்டில் முடிவெய்தியது என்பதையும், அப்பெருங் கிணற்றைத் தோண்டுவித்தவன் ஆலம்பாக்க விசையநல்லூழான் தம்பியான கம்பன் அரையன் என்பதையும், அதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிணறு என்பதையும் இனிது புலப்படுத்துதல் அறியற்பாலதாம். நந்திவர்மப் பல்லவமல்லனது உதயேந்திரச் செப்பேடு களிலும் காசாக்குடிச் செப்பேடுகளிலும் பரத்துவாசமுனிவர், பல்லவமன்னர்களின் முன்னோர்களுள் ஒருவராகக் குறிக்கப்பட்டுள்ளனர். (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஐ. சூடிள. 73 & 74). எனவே, பல்லவர்கள் பாரத்துவாச கோத்திரத்தினர் என்று இக்கல் வெட்டு உணர்த்துவது மிகப் பொருத்தமேயாம். இதிற் கூறப்பெற்றுள்ள தந்திவர்மன் என்பான் நந்திவர்மப் பல்லவ மல்லனுடைய மகன்; கி.பி. 775 முதல் கி.பி. 826 முடிய நம் தமிழகத்திற் சோழமண்டலத்தையும் தொண்ட மண்டலத்தையும் ஒருங்கே ஆட்சிபுரிந்த நெடுமுடிவேந்தன். ஆகவே இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டாகிய கி.பி. 780-ல் திருவெள்ளறைத் தென்னூர்ப் பெருங்கிணற்றின் வேலை முடிவெய்தி, அது மக்கட்குப் பயன்படும் நிலையில் இருந்தது என்பது ஒருதலை. இப்பெருங்கிணற்றைத் தோண்டுவித்தவன் கம்பன் அரையன் என்பான். இவன் ஆலம்பாக்கவிசைய நல்லூழானுக்குத் தம்பி என்று இக்கல்வெட்டு உணர்த்துவது குறிப்பிடத்தக்க தாகும். ஆலம்பாக்க விசைய நல்லூழான் என்பவன் தந்திவர்மன் தந்தையாகிய நந்திவர்மப் பல்லவ மல்லனது ஆட்சியின் பிற்பகுதியில் அவனுக்கு அமைச்சனாக விளங்கியவன். இச்செய்தி, அவ்வேந்தனது ஆட்சியின் 62-ம் ஆண்டாகிய கி.பி 772-ல் வெளியிடப்பெற்ற பட்டத்தாள் மங்கலச் செப்பேடுகளால்1 அறியப்படுகின்றது. பெருங்கிணறு தோண்டுவித்த கம்பன் அரையனும், தன் தமையனைப் போலவே பல்லவ வேந்தர்களது ஆட்சியில் உயர்நிலையில் இருந்தவனாதல் வேண்டும். அரையன் என்பது அரசனால் வழங்கப்பெற்ற பட்டமாகும். கம்பன் என்பது இத்தலைவனது இயற்பெயர். எனவே, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கம்பன் என்பது இயற்பெயராக வழங்கிவந்தமை உணரற்பாலது. உடன் பிறப்பினராய் நிலவிய இவ் விரு தலைவர்களும் ஆலம்பாக்கம் என்னும் ஊரில் பிறந்து, கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பல்லவ வேந்தர்களின் அரசாங்கத்தில் உயர்நிலையில் அமர்ந்து பெருவாழ்வு எய்தியவர்கள் என்பது கல்வெட்டுக்களாலும் செப்பேடு களாலும் வெளியாகின்றன. இவற்றுள் சில செய்திகளை முதற் கல்வெட்டிலும் காணலாம். இனி, ஆலம்பாக்கம் என்பது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் லால்குடி என்று இந்நாளில் வழங்கும் திருத்துவத் துறையிலிருந்து அரியலூருக்குச் செல்லும் பெருவழியில் 12-ஆவது மைலில் உள்ளது. இது, பல்லவர்களது ஆட்சிக் காலங்களில் தந்திவர்ம மங்கலம் என்னும் பெயரெய்தி யிருந்தது; சோழ மன்னர்களது ஆட்சிக்காலங்களில் மதுராந்தச் சதுர்வேதி மங்கலம் என்று வழங்கி வந்தது. சோழ மண்டலத்தில் அக்காலத்திலிருந்த வளநாடுகளுள் ஒன்றாகிய இராசேந்திர சிங்க வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய பொய்கை நாட்டிலிருந்த ஊர்களுள் ஒன்று. திருவெள்ளறையிலுள்ள மாற்பிடுகு பெருங்கிணற்றைப் போல இவ்வாலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரி என்னும் ஏரி ஒன்றிருந்தது என்பது கல்வெட்டுக்களாற் புலப்படுகின்றது. இருவேறு ஊர்களில் ஒரு பெருங்கிணறும் ஓர் ஏரியும் மாற்பிடுகு என்னும் பெயரால் வழங்கப்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்க தொன்றாம். இதனைக் கூர்ந்து நோக்குமிடத்து, திருவெள்ளறையில் பெருங்கிணறு தோண்டுவித்த கம்பன் அரையன் என்பவனே தன் ஊராகிய ஆலம்பாக்கத்திலும் மாற்பிடுகு ஏரியை வெட்டுவித்திருத்தல் கூடும் என்று கருதுவதற்கு இடமுளது. ஒருகால் இவன் தமையன் ஆலம்பாக்க விசையநல்லூழான் என்பவன் அவ்வேரியை அமைத்திருப்பினும் இருக்கலாம். ஆலம்பாக்கத்திற்குத் தந்திவர்ம மங்கலம் என்னும் பெயரொன்று அக்காலத்தில் வழங்கி வந்தமையை நுணுகி யாராயுங்கால், இவ்வூர், பல்லவ வேந்தனாகிய தந்திவர்மனால், உடன் பிறப்பினராய இவ்விரு தலைவர்க்கும் முற்றூட்டாக அளிக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இனி, திருவெள்ளறையில் தோன்டுவிக்கப்பெற்ற கிணற்றின் பெயர் ஆராயற்பாலதாம். முதற்கல்வெட்டு, ‘இதன் பெயர் மாற்பிடுகு பெருங்கிண றென்பது’ என்று கூறுவதால், நாகரிகம் மிகுந்துள்ளதாகக் கருதப்படும் இந்நாளில் ஆற்றின் பாலங்களுக்கும் பிற கட்டிடங்களுக்கும் அரசர்கள், வள்ளல்கள், அறிஞர், பெரியோர் முதலியோர்களுடைய பெயர்களை இட்டு வழங்குவது போல, அந்நாளிலும் வழங்கிவந்தனர் என்பது நன்கறியக் கிடக்கின்றது. மாற்பிடுகு என்பது பல்லவர்ட்கு முற்காலத்தில் வழங்கிய ஒரு சிறந்த பட்டமாகும். மால் பிடுகு என்னும் இத்தொடரின் பொருள் பேரிடி என்பதேயாம். இப்பட்டத்தையும் விடேல்விடுகு, பகாப்பிடுகு, பெரும்பிடுகு என்னும் பட்டங்களையும் உடைய சில முத்தரையர்களின் கல்வெட்டுக்கள், செந்தலை, திருச்செந்துறை, திருமெய்யம் என்னும் ஊர்களில் உள்ளன. அன்னோர், பல்லவ வேந்தர்கட்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த குறுநிலமன்னர் ஆவர். எனவே, இப்பட்டங்கள் பல்லவர்களால் அவர்கட்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். செங்கற்பட்டு ஜில்லா வல்லங் குகைக் கோயிவிலுள்ள கல்வெட் டொன்று, பல்லவ வேந்தனாகிய முதல் மகேந்திர வர்மன் என்பான் பகாப்பிடுகு என்னும் பட்டமுடையவனா யிருந்தனன் என்றுணர்த்துகின்றது. இவன் வழித் தோன்றல்களுள் ஒருவனாகிய முதல் பரமேசுவரவர்மன் பெரும்பிடுகு என்னும் பட்டத்துடன் விளங்கினானென்று கூரத்துச் செப்பேடுகள் கூறு கின்றன. (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐ. ஞயபந. 154). தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்பவன் விடேல்விடுகு என்னும் பட்டமுடையவன் என்பது நந்திக் கலம்பகத்தால் அறியப்படுகின்றது. இவன் தந்தையாகிய தந்திவர்மன் என்னும் பல்லவ வேந்தனே மாற்பிடுகு என்னும் பட்டத்துடன் நிலவியவன். எனவே, கி.பி. 780-ஆம் ஆண்டில் திருவெள்ளறையில் கம்பன் அரையன் என்னும் தலைவனால் அமைக்கப்பெற்ற பெருங்கிணறு கி.பி. 775 முதல் 826 முடிய அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தந்திவர்மனது பட்டப்பெயரால் மாற்பிடுகு பெருங்கிணறு என்று பெயரிடப்பெற்று அந்நாளில் விளங்கியது என்பது நன்கு துணியப்படும். மண்ணில்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப் பெண்ணுட் பெருந்தகையாட் பெற்றோனும் - உண்ணுநீர்க் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா வுடம்பெய் தினார். 9. இராசராசன் கிணறு இராசராசன் கிணறு என்பது காஞ்சிமா நகரிலிருந்து வந்தவாசிக்குச் செல்லும் பெருவழியில் மாமண்டூருக்குத் தெற்கே ஐந்து கல் தூரத்திலுள்ள உக்கல் என்ற ஊரில் மேலைப் பெருவழியிலுள்ளது. இக்கிணற்றின் வரலாற்றை அவ்வூரிலுள்ள புவனி மாணிக்க விஷ்ணுகிரகம் என்னும் பெயருடைய திருக்கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு நன்கு விளக்குகின்றது. அது பின்வருமாறு- 1. ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியுந் தடிகை பாடியும். 2. குடமலைநாடும் கொல்லமுங் கலிங்கமும் முரட்டொழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டப்பாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல் வென்றித் தண்டாற் 3. கொண்ட தன்னெழில் வளரூழியு ளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ ராஜகேஸரி வன்மரான ஸ்ரீராஜராஜ தேவர்க்குயாண் 4. டு 29 ஆவது ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் காலியூர்க் கோட்டத்துத் தனியூர் உக்கலாகிய ஸ்ரீவிக்கிரமாபரணச் சதுர்வேதி மங்கலத்து மேலைப் 5. பெருவழியில் ஸ்ரீ ராஜராஜ தேவர் திருநாமத்தால் கிணறுந் தொட்டியும் சமைப்பித்தான் உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவர் பணிமகன் சோழ மண்டலத்து தென்கரை நாட்டு நித்த 6. விநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்து ஆவூருடையான் கண்ணனா ரூரன் இவனே ஸ்ரீ ராஜராஜ கிணற்றில் தொட்டிக்கு நீரிறைப்பார்க்கு அருமொழிதேவன் மரக்காலால் நிசதம் நெல் 23 குறுணி ஆ 7. கத் திங்கள் 6-க்கு நெல் 30 கலமும் ஸ்ரீராஜ ராஜன் தண்ணீரட்டுவார்க்கு நிசதம் நெல்1 23 (குறுணி) ஆக திங்கள் 6-க்கு நெல்லும் 30 கலமும் இப் பந்தலுக்கு குசக்கலம் இடு 8. வார்க்கு திங்கள் 1-க்கு நெல்லு ¾ இருதூணி ஆக திங்கள் 6-க்கு நெல்லு 4கலமும் ஸ்ரீராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதத்துக்கும் ஆண்டாண்டு தோறும் புதுக்குப் புறமாக வைச்ச 9. நெல்லு 2 கலம் ¾ (இருதூணி) ஆக நெல் 66 கலம் ¾ (இருதூணி) இந்நெல்லுக்கு இவன் பக்கல் இவ்வூர் ஸபையோம் இறைத்ரவியமும் கிரையத்ரவியமும் கொண்டு இறை இழிச்சி...1 இக்கல்வெட்டினால் பல செய்திகள் அறியக் கிடக்கின்றன. இதில் குறிக்கப்பெற்றுள்ள கோராஜகேசரி வர்மன் இராஜராஜன் சுந்தரசோழன் என்று வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனது மகன், தஞ்சை மாநகரிலுள்ள இராசராசேச்சுரம் என்னும் திருக்கோயிலை எடுப்பித்த பெருமையுடையவன்; கி.பி. 985 முதல் கி.பி. 1014 வரையில் சோழ மண்டலத்தையும் பிற மண்டலங்களையும் சிறப்புடன் ஆட்சி புரிந்த பெருந்தகை யாளன்; இவ்வேந்தனது திருப்பெயரால் இராஜராஜன் கிணறு அமைக்கப்பட்டது. இக்கிணற்றைச் செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற ஊரில் தன் அரசன் பெயரால் அமைப்பித்துத் தண்ணீர் இறைத்தற்கு நிபந்தம் விட்டவன் முதல் இராஜராஜ சோழனது பணி மகனும் சோழ மண்டலத்தில் நித்த விநோத வளநாட்டிலுள்ள ஆவூர்க் கூற்றத்து ஆவூரில் வாழ்ந்த தலைவனு மாகிய கண்ணன் ஆரூரன் என்பான். நித்த விநோத வளநாடு என்பது முதல் இராஜராஜ சோழன் காலத்தில் சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள் ஒன்றாகும். சோழ மண்டலம் முதல் இராஜராஜ சோழனது ஆட்சிக் காலத்திற்கு முன்னர், பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்ததேயன்றி வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருக்க வில்லை. முதல் இராஜராஜனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில்தான் சோழ மண்டலம் இராஜேந்திர சிங்க வளநாடு, இராசாச்ரய வளநாடு, நித்த விநோத வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, உய்யக் கொண்டார் வளநாடு, அருண்மொழி தேவ வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசராச வளநாடு, பாண்டிய குலாசனி வளநாடு என்ற ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு வளநாடும் பல நாடுகளைத் தன்னகத்துக் கொண்டு விளங்கிற்று. வளநாட்டைத் தற்காலத்தி லுள்ள ஜில்லாவுக்கும் நாட்டைத் தாலூகாவிற்கும் ஒப்பாகக் கூறுதல் பொருந்தும். வளநாட்டின் உட்பகுதிகளுள் சிலவற்றைக் கூற்றங்கள் என்று வழங்குவதும் உண்டு. மேலே குறித்துள்ள ஒன்பது வளநாடுகளின் பெயர்களும் இராஜராஜ சோழனது இயற்பெயரும் புனை பெயர்களுமேயாம். பெரும்பான்மையாக நோக்குமிடத்து ஒவ்வொரு வளநாடும் இரண்டிரண்டு பேராறுகளுக்கும் இடையில் அமைத்திருந்த நிலப்பரப்பேயாகும். மேலே வரைந்துள்ள கல்வெட்டில் குறிக்கப்பெற்ற நித்த விநோத வளநாடு என்பது தஞ்சாவூர் தாலூகாவின் கீழ்ப் பகுதியும் பாவநாசத் தாலூகாவின் மேற்பகுதியும் மன்னார்குடித் தாலூகாவின் வடபகுதியும், அடங்கிய நிலப்பரப்பாகும். ஆவூர் கூற்றம், கிழார்க் கூற்றம், வெண்ணிக் கூற்றம், பாம்புணிக் கூற்றம், நல்லூர் நாடு, கரம்பை நாடு, முடிச் சோணாடு என்பவை நித்த விநோத வளநாட்டின் உட்பகுதிகளாகவுள்ள சில நாடுகள் ஆகும். இனி, ஆவூர்க் கூற்றத்து ஆவூர் என்பது தற்காலத்தில் தஞ்சை ஜில்லா பாவநாசந் தாலூகாவிலுள்ளதும் சைவசமயா சாரியர்களால் பாடப்பெற்ற சிறப்புடையதும் பசுபதீச்சுரம் என்னும் திருக்கோயிலைத் தன்னகத்துக் கொண்டு விளங்குவது மாகிய ஆவூரேயாகும். ஆவூர்க் கூற்றம் என்பது இவ்வாவூரைத் தலைநகராகத் கொண்டு இதனைச் சூழ்ந்திருந்த ஒரு சிறு நாடாகும். இரும்புதலை, விளத்தூர் முதலான ஊர்கள் இக்கூற்றத்திலிருந்தன என்று கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. எனவே, தஞ்சாவூர் ஜில்லா பாவநாசந் தாலூகா ஆவூரில் வாழ்ந்த தலைவனும் முதல் இராஜராஜ சோழனது பணிமகனாகிய கண்ணன் ஆரூரன் என்பவனே செங்கற்பட்டு ஜில்லாவிலுள்ள உக்கல் என்ற ஊரில் தன் அரசனாகிய இராஜராஜன் பெயரால் கிணறு தோண்டுவித்துத் தண்ணீர் இறைப்பார்க்கு நிபந்தம் விட்டவன் என்றுணர்க. இக்கல்வெட்டில் காணப்படும் அருமொழி தேவன் மரக்கால் அரசாங்க முத்திரையிடப் பெற்ற மரக்கால் ஆகும். அருமொழி தேவன் என்பது முதல் இராஜராஜனுக்குரிய பெயர்களுள் ஒன்றாம். இவ்வேந்தன் காலத்திருந்த அரசாங்க மரக்காலுக்கு ‘இராசகேசரி’ என்ற பெயர் வழங்கிற்று என்றும் இம்மன்னர் பெருமானால் எடுப்பிக்கப் பெற்ற தஞ்சை இராசராசேச்சுரம் திருக்கோயிலிலிருந்த மரக்காலுக்கு ஆடவல்லான் என்ற பெயர் வழங்கிற்று என்றும் கல்வெட்டுக் களால் அறியப்படுகின்றன. இங்குக் குறிக்கப்பெற்ற அருமொழி தேவன் இராசகேசரி, ஆடவல்லான் என்ற மூன்று மரக்கால் களும் ஒரே அளவுள்ளவை என்பது ஈண்டு உணர்தற்குரியது. நாள்தோறும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பவனுக்கு நாள் ஒன்றுக்குக் கூலி இரண்டு மரக்கால் நெல்லும் கொடுக்கப் பட்டு வந்தது என்பது இக்கல்வெட்டால் புலப்படுகின்றது. அன்றியும், திங்கள் தோறும் மட்பாண்டங்கள் இடுவோனுக்குத் திங்கள் ஒன்றுக்கு எட்டு மரக்கால் நெல் கூலியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம் நேருமாயின் அவற்றைப் புதுக்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு இரு கலனே எட்டு மரக்கால் நெல் நிபந்தமாக வைக்கப் பட்டுள்ளது. இனி, இக்கல்வெட்டில் காணப்படும் பெருவழி (சுடியன) பணிமகன் (ளுநசஎயவே) புதுக்குப்புறம் (ஊடிளவ கடிச சநயீயசைiபே) என்ற செந்தமிழ்த் தொடர்மொழிகள் நமது உள்ளத்தைப் பிணிக்குந் தன்மை யனவா யிருக்கின்றன. ‘மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில் சீர்ப் பெண்ணுப் பெருந்தகையாள் பெற்றானும் - உண்ணுநீர்க் கூவல் குறைவின்றித் தொட்டானும் இம்மூவர் சாவா வுடம் பெய்தினார்’ - ஒரு வெண்பா 10. கொல்லம் ஆண்டு இந்நாளில் கிறிஸ்தவாப்தம் நம் நாட்டில் வழங்கி வருதல் போல முற்காலத்தில் சகாப்தம் கலியப்தம் என்பன வழங்கி வந்தன என்பது கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறியப்படுகின்றன. மலை மண்டலமாகிய மலையாள தேயத்தில் மாத்திரம் கொல்லம் ஆண்டு முன்னர் வழங்கி வந்தமையோடு இக்காலத்தும் வழங்கி வருகின்றது. இக் கொல்லம் ஆண்டு, எப்போது எங்ஙனம் தொடங்கியது என்பதைப் பற்றி ஆராய்ச்சிகள் நிகழ்த்திய அறிஞர்கள் ஒரு முடிவிற்கு வந்துள்ளனர். அஃது அறுபத்துமூன்று அடியார்களுள் ஒருவரும், சேரநாட்டில் திருவஞ்சைக் களத்தில் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய முடிமன்னரும், சிவபெருமான்மீது திருக்கைலாய ஞானஉலா, பொன் வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை என்னும் பிரபந்தங்கள் இயற்றியவரும் ஆகிய சேரமான் பெருமாள் நாயனார் தம் ஆட்சியை விட்டு நீங்கிக் கயிலாயஞ் சென்ற ஆண்டாகிய கி.பி. 825 முதல்தான் கொல்லம் ஆண்டு மலைமண்டத்தில் வழங்கத் தொடங்கியது என்பதேயாம். ஆனால், அந்நாட்டிற் காணப்படும் கல்வெட்டுக்களை ஆராயுமிடத்து, கொல்லம் ஆண்டின் வரலாறு அன்னார் முடிபிற்கு முரணாக உளது. அன்றியும் அக்கல்வெட்டுக்களில், கொல்லம் ஆண்டு வரையப் பெற்றிருப்பதோடு அது தோன்றியமைக்குக் காரணமும் காணப்படுகின்றது. அவற்றுள், இரு கல்வெட்டுக்களை அடியிற் காண்க. I (1) ஸ்வஸ்திஸ்ரீ கொல்லந்தோன்றி இருநூற்றைம் பத்திரண்டாமாண்டு நாஞ்சிநாட்டதியனூரான அழகிய பாண்டியபுரத்து கண்ணன் தேவனான உத்தம பாண்டியச் சிலை செட்டியேன் இந்நகரத்(2)தே... விலை கொண்டுடைய பூமி கொட்டியார் குளத்தில் தெற்கடைந்த நெடுங்கண்ணும் மேலைத் தடியும் பேய் காட்டில் நீர் பாய்கின்ற காலுக்கு வடக்குப் பிராயோடு குழிக்குமே(3) ற்கும் மாப்பாண்டி வயக்கலுக்குத் தெற்கும் இந்நான்கெல்லைக் குட்பட்ட பூமி இந்நகரத்துப் பவித்திரமாணிக்க விண்ணகரெம் பெருமானுக்கு நித்தம் நானாழியரிசி திருவமுதுக்குச் சந்திராத்தவரை செல்வதாக வைச்சுக் கொடுத்தேன் கண்ணன்(4) தேவனான உத்தம பாண்டியர் சிலை செட்டியேன்1 II (1) ஸ்வஸ்திஸ்ரீ கொல்லந்தோன்றி இருநூற்றுத் தோண்ணூற் றொன்பதாமாண்டு மிதுனத்தில் வியாழன் நின்ற ஆண்டு நாஞ்சிநாட்டதியனூரான அழகியபாண்டியபுரத்து நகரத்தோம் இந்நகரத்துத் திருமேற்கோயில் பவித் (2) திரமாணிக்க விண்ணகரெம் பெருமானுக்கு இந்த நகரத்தோம் சந்திராதித்த வரை செல்வதாக நீர்வார்த்துக் கொடுத்த நிலமாவது,2 இக்கல்வெட்டுக்களால் புதிய கொல்லம் அமைக்க பெற்ற ஆண்டு முதல்தான் கொல்லம் ஆண்டு வழங்கத் தொடங்கியது என்பது நன்கறியக் கிடக்கின்றது. இனி, ‘செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலத்தும் தங்குறிப்பினவே திசைச் சொற்கிளவி’ என்னுந் தொல்காப்பியச் சூத்திரத்தின் உரையில் தெய்வச் சிலையார் கூறியிருப்பது கொல்லத்தைப் பற்றிய சில செய்திகளை இனிது புலப் படுத்துகின்றது. அது, ‘பன்னிரு நிலமாவன - குமரியாற்றின் தென் கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடசமும் குன்றகமும், கிழக்குப் பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப்படுதலின் குமரியாற்றிற்கு வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினார் போலும்’ என்பதாம். நம் தமிழ்மொழியில் கலந்து வழங்கும் திசைச்சொற்கள் எவ்வெந்நாடு களிலிருந்து வந்துள்ளன என்பதை விளக்க வந்த உரையாசிரியர் தெய்வச் சிலையார், குமரியாற்றின் தென்கரையில் கொல்லம் என்ற நாடு முன்னர் இருந்தது என்றும், அதனைக் கடல்கொண்ட பிறகு அவ்வாற்றிற்கு வடக்கே புதிய கொல்லத்தை அமைத்து மக்கள் அங்குக் குடியேறினர் என்றும் நுண்ணிதின் ஆராய்ந்து எழுதியிருப்பது அரிய உண்மைச் செய்தியாகும். எனவே, பழைய கொல்லம் அழிந்த பிறகு இக்காலத்துள்ள கொல்லத்தைப் புதிதாக அமைத்து மக்கள் குடியேறிய காலத்தில் தான் கொல்லம் ஆண்டு முதலில் தொடங்கியது என்பது உறுதியாதல் காண்க. இவ்வுண்மையைக் ‘கொல்லந் தோன்றி இருநூற்றுத் தொண்ணூற் றொன்பதாமாண்டு மிதுனத்தில் வியாழன் நின்ற ஆண்டு’ எனவும் போதரும் கல்வெட்டுத் தொடர் மொழிகள் வலியுறுத்தி நிற்றல் அறியற்பாலதாகும். கி.பி. 822-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு கடல் கோளால் பழைய கொல்லம் அழிந்து விட்டது என்றும் கி.பி. 825-ஆம் ஆண்டில் புதிய கொல்லம் அமைக்கப் பெற்றது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, கி.பி. 825-ல் புதிய கொல்லம் அமைக்கப்பெற்ற காலந்தான் கொல்லம் ஆண்டின் தொடக்கமாகும். இனி, சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு கயிலாயஞ் சென்றனர் என்பது பெரிய புராணத்தால் அறியப்படும் செய்தியாகும். ஈண்டு அவ் யாண்டு யாது என்பது ஆராயற்பாலதாகும். சுந்தரமூர்த்திகள் தாம் திருவாய் மொழிந்தருளிய திருத் தொண்டத் தொகையில் ‘கடல் சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் சுற்சிங்கனடியார்க்கு மடியேன்’ என்று கூறியிருக்கின்றனர். இவ் வடியில் வந்துள்ள ‘காக்கின்ற’ என்னும் நிகழ்காலப் பெயரெச்சம் காடவர் கோனாகிய சுழற்சிங்கன் நம் சுவாமிகள் காலத்து மன்னன் என்பதை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. காடவர் என்பது பல்லவர்களுக் குரிய பெயர்களுள் ஒன்று. ஆகவே, இக் கழற்சிங்கன் பல்லவ மன்னனாக இருத்தல் வேண்டும். அன்றியும், இவ்வேந்தன் அறுபத்துமூன்று அடியார்களுள் வைத்துச் சுந்தரமூர்த்திகளாற் போற்றப்பட்டிருத்தலாற் சிறந்த சிவபக்தனாக இருத்தல் வேண்டும். நம் தமிழகத்தில் அரசாண்ட பல்லவ மன்னர்களுள் சுழற்சிங்கன் என்ற பெயருடையவன் ஒருவனும் இல்லை. ஆனால் நரசிங்கவர்மன் என்ற பெயருடைய பல்லவ அரசர்கள் இருவர் இருந்துள்ளனர். அவர்களுள், முதல் நரசிங்கவர்மன் சிறுத்தொண்ட நாயனாரைத் தன் படைத் தலைவராகக் கொண்டவன்; அவரை வடபுலத்திற்கு அனுப்பி மேலைச்சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் புலிகேசியைப் போரில் வென்று கி.பி. 642-ல் அவனது தலை நகராகிய வாதாபியைக் கைப்பற்றி அங்குவெற்றித் தூண் நிறுவியவன்; அதுபற்றி ‘வாதாவி கொண்ட நரசிங்கவர்மன்’ என்று அந்நாளில் வழங்கப் பெற்றவன். எனவே, இவ்வீரச் செயல்களை நிகழ்த்திய முதல் நரசிங்கவர்மன் திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தினன் என்பது தெள்ளிது. ஆகவே, சுந்தர மூர்த்திகள் அவ்வரசன் காலத்தவரல்ல என்பது திண்ணம். இனி, இரண்டாம் நரசிங்கவர்மன், இராசசிங்கவர்மன் என்னும் பிறிதொரு பெயரும் உடையவன். காசிமா நகரிலுள்ள இராசசிம்ம பல்லவசேச்சுரம் என்னும் கைலாய நாதர் கோயிலை எடுப்பித்தவன். அக்கோயிலிற் காணப்படும் இவனது வட மொழிக் கல்வெட்டொன்று இவனைச் ‘சிவ சூடாமணி’ என்று புகழ்ந்து கூறுகின்றது. (ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிளே. ஏடிட. ஐ. சூடி. 24) இவ் வேந்தனது பெருமையை உணர்த்தும் இருநூற்றைம்பது சிறப்புப் பெயர்கள் அக்கோயிலில் வரையப்பட்டுள்ளன. அவற்றுள், ‘சங்கர பக்தன்’ ‘ஈசுவர பக்தன்’ என்ற சிறப்புப் பெயர்கள் குறிப்பிடத்தக்கனவாகும். (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐ. சூடி. 25 ஏநசளந 55). அன்றியும், மகாபலிபுரம் என்று வழங்கும் மாமல்லபுரத்தில் இவ்வரசன் எடுப்பித்துள்ள இராசசிம்ம பல்லவேச்சுரம் என்ற கோயிலிலுள்ள கல்வெட்டும் பனைமலைக் கோயிலிலுள்ள கல்வெட்டும் இவனைச் ‘சிவசூடாமணி’ என்று புகழ்ந்து கூறுதல் அறியத்தக்கது. காசாக்குடிச் செப்பேடுகள் பரமேசுவரனே இராசசிங்க பல்லவனாக அவதரித்தனர் என்று சிறப்பித்துக் கூறுகின்றன. உதயேந்திரச் செப்பேடுகள் இவனைப் ‘பரம மாகேசுவரன்’ என்று புகழ்ந்துரைக்கின்றன (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஐ. சூடி. 74). வேலூர்ப் பாளையச் செப்பேடுகள் இவ்வேந்தன் காஞ்சிமா நகரில் சிவபெருமானுக்குக் கயிலாயத்தை ஒத்த கோயில் எடுப்பித்த பெருமையுடையவன் என்றுணர்த்து கின்றன. (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐ.ஐ. சூடி. 98). எனவே, இவன் சிறந்த சிவபக்தி யுடையவனாய்த் திகழ்ந்தவன் என்பது நன்கு வெளியாதல் காண்க. இம்மன்னன் காஞ்சியில் கயிலாயநாதர்கோயில் எடுப்பித்த காலத்தில்தான் திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் நாயனார் சிவபெருமானுக்கு மனக்கோயில் கட்டினாரென்பது ஆராய்ச்சி யாளர்களின் முடிபாகும். சிவபெருமான் தாம் பூசலாhரது மனக்கோயிலுக்கு முதலில் எழுந்தருள வேண்டியிருந்தமையின் அரசன் எடுப்பித்த கற்றளிக்குக் கடவுண் மங்கலஞ்செய்யக் குறிப்பிட்டிருந்த நாளை மாற்றி வேறொரு நாளில் அதனைச் செய்யுமாறு கனவிற் கூறியருளினார் என்பதும், பிறவும் பெரியபுராணத்தில் காணப்படுஞ் செய்திகளாம். அக்கோயிலிலுள்ள கல்வெட்டொன்று, நற்குணங்கள் விலகி நிற்கும் கலியுகத்தில் இவன் அசரீரி வாக்கினைக் கேட்ட பெருமையுடையவன் என்று கூறுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐ. சூடி. 24 ஏநசளந 7). ஆகவே, இவன் ஈடும் எடுப்புமற்ற சிவபக்தனாக அந்நாளில் இருந் திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இத்துணைச் சிறந்த சிவபக்தி வாய்ந்த இப்பல்லவ வேந்தனே, சுந்தர மூர்த்திசுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் கூறப்பெற்ற காடவர்கோன் சுழற்சிங்கனாதல் வேண்டும். இனி, இவ்வேந்தன் இயற்பெயரால் குறிக்கப்படாமல் ‘சுழற்சிங்கன்’ என்று அடிகளால் கூறப்பெற்றமைக்குக் காரணம் யாது என்பது ஆராய்தற்குரியதாகும். மாமல்லபுரத்தில் இவ்வரசன் எடுப்பித்த கோயில்களுள் ஒன்று க்ஷத்திரிய சிம்மபல்லவேச்சுரம் என்ற பெயருடைய தாயிருந்ததால் இவனுக்கு க்ஷத்திரியசிம்மன் என்னும் பெயரும் இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. எனவே, இவன் நரசிம்மன், இராசசிம்மன், க்ஷத்திரியசிம்மன் என்ற பெயர்களை யுடையவனாயிருந்தமை உணரற்பாலது. சிம்மன் அல்லது சிங்கன் என்பது அம்மூன்று பெயர்களிலும் இறுதியில் பொதுவாக அமைந்திருத்தலால், அரசர்க்குரிய பெருமையையும் வீரத்தையும் அறிவிக்கும் கழல் என்னும் மொழியை அதற்குமுன் பெய்து கழற்சிங்கன் என்று சுந்தரமூர்த்திகள் கூறியுள்ளனர் என்பது தெளிவாகப் புலப்படுதல் காண்க. ஆகவே, அடிகளால் பாராட்டப் பெற்ற ‘காடவர் கோன் கழற்சிங்கன்’ என்பான் காஞ்சி மாநகரிலிருந்து கி.பி. 680 முதல் 705 வரையில் ஆட்சிபுரிந்த பல்லவ வேந்தனாகிய இரண்டாம் நரசிங்கவர்மனே என்பது நன்கு துணியப்படும். அடிகளோடு கயிலாயஞ்சென்ற சேரமான் பெருமான் நாயனார் வாழ்ந்த காலமும் அதுவேயாகும். எனவே, கொல்லம் ஆண்டு தொடங்குவதற்குச் சற்றேறக் குறைய நூற்றிருபது ஆண்டுகட்கு முன்னரே சேரமான் பெருமாள் நாயனார் தம் ஆட்சியை நீத்துக் கயிலாயஞ் சென்றிருத்தல் வேண்டும். ஆகவே, அப் பெரியார் தம் நாட்டை விட்டுக் கயிலாயஞ் சென்ற ஆண்டில் கொல்லம் ஆண்டு தொடங்கியது என்று கூறுவது பொருந்தாதென்க. இதுகாறும் விளக்கியவற்றால், பழைய கொல்லம் கடல் கோளால் அழிவெய்திய பிறகு புதிய கொல்லம் அமைத்து மக்கள் அங்குக் குடியேறிய ஆண்டில் தான் கொல்லம் ஆண்டும் தொடங்கப்பெற்றது என்பது நன்கு புலனாதல் காண்க. 11. திருக்கைக் கோட்டி பண்டைக் காலத்தில், நம் முன்னோர்கள் நூல்கள் எல்லாவற்றையும் பனையேடுகளில் எழுதிப் படித்து வந்தனர் என்பது யாவரும் அறிந்ததே. ஏட்டுச் சுவடிகள் பழுதுற்று அழிந்து போகுந் தன்மையவாகும். ஆதலால், அரியநூல்கள், இறவாது என்றும் நின்று நிலவுமாறு, அவற்றைச் செப்பேடு களில் எழுதிவைக்கும் வழக்கமும், முற்காலத்தில் நம் நாட்டில் இருந்து வந்தது. ‘அன்பினைந்திணை’ என்று தொடங்குவதும், அறுபது சூத்திரங்களைத் தன்னகத்துக் கொண்டுள்ளதுமாகிய, ‘இறையனார் அகப்பொருள்’ என்னும் நூல், மூன்று செப்பிதழ கத்து வரையப்பெற்று, ஆலவாய் அவிர்சடைக் கடவுள் பீடத்தின் கீழ் இடப்பெற்றிருந்தது என்னும் வரலாறும் ஈண்டு உணரற்பாலது. இலண்டன் மாநகரிலுள்ள பொருட்காட்சிச் சாலையில் வெள்ளி யேடுகளில், பாலி மொழியில் எழுதப்பெற்ற சிறு நூல் ஒன்று உளதாம். அன்றியும், ஈயத் தகட்டில் எழுதப்பெற்ற பௌத்த நூல் ஒன்றும் அங்கிருக்கின்றதாம்.1 கி.பி. 1070 முதல் 1120 வரையில் ஆட்சி புரிந்த முதற் குலோத்துங்க சோழனது படைத் தலைவர்களுள் ஒருவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பான், சைவ சமய குரவர் மூவரும் பாடிய தேவாரத் திருப்பதிகங்களைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம்பதியிலுள்ள கோயிலில் வைத்தனன் என்று ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.2 அக்கல்வெட்டு இனிய வெண்பாவாக அமைந்துள்ளது. அது, 1 முத்திறத்தார் ஈசன் முதற்றிறத்தைப் பாடியவர் ஒத்தமைத்த செப்பேட்டின் உள்ளெழுதி - இத்தலத்து எல்லைக் கிரிவாய் இசையெழுதி னான்கூத்தன் தில்லைச் சிற்றம்பலத்தே சென்று என்பதாம். எனவே, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவரும் பாடியருளிய தேவாரப் பதிகங்களை நம்பியாண்டார் நம்பிகள் தேடிக் கொணர்ந்து, திருமுறைகளாகத் தொகுத்த பின்னர், அப் பதிகங்கள் அழிந்து போகாதவாறு, தில்லை மாநகரில் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் செப்பேடுகளில் எழுதிவைக்கப்பட்டன என்பது இங்கு அறியத்தக்க தாகும். அன்றியும், தேவாரத் திருமுறைகள் சிவாலயங்களில் வைத்துப் பூசிக்கப்பட்டு வந்தன என்பதும், அவற்றைக் கண்காணிப்பதற்கு ஒரு தமிழ் விரகரும், இறைவன் திருமுன் திருப்பதிகம் விண்ணப்பஞ் செய்வார் சிலரும், அந்நாளில் ஆலயங்களில் இருந்து வந்தனர் என்பதும், திரு முறைகள் வைத்துப் பூசிக்கப் பெற்ற கோயில் மண்டபம் திருக்கைக் கோட்டி என்று வழங்கப்பட்டு வந்தது என்பதும் சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றன. அத்தகைய கல்வெட்டுக்களுள் ஒன்று, சீர்காழியிலுள்ள திருஞான சம்பந்த மூர்த்திகள் கோயில் கருப்பகிரகத்தின் தென்புறத்தில் உள்ளது. அது, ‘திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4ஆவது இராஜதி ராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேயம் திருக்கழுமலம் கற்கடக நாயிறு முதல் கிராம காரியஞ் செய்கிற பெருமக்களோம் ஆளுடைய பிள்ளையார்த் திருமாளிகைத் தமிழ்விரகர் கண்டு இக்கோயிற் திருக்கைக் கோட்டியில் எழுத்தருளியிருக்கிற திருமுறைகள் திருக்காப்பு நீக்கி அழிவுள்ளன எழுதருளிவித்தும் மற்றும் புதிதாக எழுந்திருளிவிக்கும் திருமுறைகள் எழுந்தளி வித்தும் திருமுறை பூசித்துமிருக்கைக்கு இவ்வூர் காசுகொள்ளா இறையிலியாக இட்ட நிலம் இவ்வூர் சண்டேஸ்வரவதிக்குக் கிழக்கு நீரோடு வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று இரண்டாஞ் சதுரத்துகீழ் இறையான் குடிபால் பாரத்துவாசி ஸ்ரீகாழி நாடுடையான் திருபெண்காடுயுடையான் நிலத்து விளைநிலம்... இந்நிலம் இருமாவரை அரைக்காணி முந்திரிகை... ..இனினிலஞ் சூழ்ந்த குலையும் திடலும் குளமும் கிழக்கடைய கொழ.... மேற்கடைய குன குடியிருப்புத் திடர் நிலமும் சுத்தமலி வதிக்கு மேற்கு நின்ற.. வாய்க்காலுக்கு வடக்கு முதற் கண்ணாற்று மூன்றாம் சதுரத்துப் பாலாசிரியன் மாதேவன் ..நிலத்து வடமேற்கடைய புன்செய் நிலத்து உடைப் புன்செய் நிலம் அரை மாவும் உட்படக் கைக்கொண்டு சந்திராதித்த வரை காசுகொள்ளா இறையிலியாகவும் சில்வரி பெருவரி வெட்டி கொள்ளாதோமாகவும் சொன்னோம் இந்நிலங் கைக்கொண்டு அனுபவித்துத் திருமுறை திருக்காப்பு நீக்கி இப்படியேம் திருமாளிகையிலே கல்லிலும் செம்பிலும் வெட்டிக் முட்டையாள் கொள்க. பணியால் ஊர்க்கணக்குப் பிரியன் எழுத்து,’ என்பதாம். இஃது அரிய செய்திகளை அறிவிக்கும் ஒரு சிறந்த கல்வெட்டாகும். சீர்காழிக் கோயிலிலுள்ள திருக்கைக் கோட்டியில் தேவாரத் திருமுறைகள் வைத்து வழிபாடு செய்யப் பெற்று வந்தன என்பதும், அத் திருமுறை ஏடுகள் பழுதுற்ற போது, அற்றைப் புதுக்குதற்கு ஒரு தமிழ் விரகர் இருந்தனர் என்பதும், அவ்வூர்ச் சபையார், அவற்றின் வழிபாடு முதலியவற்றிற்கு, இறையிலி நிலம் அளித்துப் போற்றி வந்தனர் என்பதும், இக் கல்வெட்டினால் நன்கு அறியக் கிடக்கின்றன. இங்ஙனம் சிவாலயங்களில் வைத்துப் போற்றப்பட்டு வந்த தேவாரத் திருமுறைகள் செப்பேடுகளாகவும், ஏட்டுச் சுவடி களாகவும் இருந்திருத்தல் வேண்டுமென்பதில் ஐயமில்லை.’ இனி, நாகப்பட்டினம் தாலூகாவிலுள்ள திருக்காராயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டு, அவ்வூர் ஆலயத்துத் திருக்கைக் கோட்டியில் திருப்பதிகம் ஓதுவார் சிலர்க்கு உணவளிக்க இறையிலி நிலம் விடப்பட்ட செய்தியை உணர்த்துகின்றது.1 திருஞான சம்பந்தருக்கும் திருநாவுகரசருக்கும் சிவபெருமான் பொற்காசு அளித்தருளிய தலமாகிய திருவீழிமிழலையில், நரசிங்கதேவன் என்ற தலைவன் ஒருவனால், திருக்கைக் கோட்டி மண்டபம் கட்டப் பெற்றது என்பது, அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியப்படு கின்றது.2 இந் நாளில் கோவிலூர் என்று வழங்கப்பெறும் திருவுசாத்தானம் என்னுந் திருப்பதியிலுள்ள திருக்கைக்கோட்டி ஓதுவார்க்கு இராஜகம்பீர சோழியவரையன் என்பான் இறையிலி நிலம் அளித்தனன் என்று அவ்வூரிலுள்ள கல்வெட்டு ஒன்று கூறுகிறது.3 எனவே, தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூசிக்கப் பெற்ற கோயில் மண்டபம் திருக்கைக் கோட்டி என்று முற்காலத்தில் வழங்கப்பெற்று வந்தமை காண்க. 12. தஞ்சாவூர் சென்னை இராச்சியத்திலுள்ள பெரிய நகரங்களுள் தஞ்சாவூரும் ஒன்றாகும். இம்மாநகர் இந்நாளில் தஞ்சை மாவட்டத்திற்குத் தலைநகராகச் சிறப்புடன் விளங்குவதை யாவரும் காணலாம். இப்போதுள்ள சில பெரிய நகரங்கள் முன்னே சிற்றூர்களாயிருந்து ஆங்கிலேயர் ஆட்சியில் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் மாநகர்களாகிப் பெருமை பெற்றுள்ளன என்பது வரலாற்றாராய்ச்சியால் வெளியாகின்றது. தஞ்சாவூரோ அவ்வாறு அண்மையில் தோன்றி வளர்ச்சி எய்திய நகரமன்று, இது மிக்க பழமை வாய்ந்த நகரம் ஆகும். ஏழாம் நூற்றாண்டில் நிலவிய சைவசமய குரவர்களுள் ஒருவராகிய அப்பரடிகளை தம் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் ‘தஞ்சைத்தளிக் குளத்தார்’ எனவும், nக்ஷத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் ‘தஞ்சை’ எனவும் கூறிச் சிறப்பித்திருத்தலால் இந்நகர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே புகழுடன் விளங்கியதாதல் வேண்டும். முத்தரையர் என்ற பட்டத்துடன் எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டு களில் சோழ மண்டலத்தில் அரசாண்ட சிற்றரசர்களுக்கு இது தலைநகரமாக இருந்தது என்பது திருக்காட்டுப்பள்ளியின் பக்கத்திலுள்ள செந்தலைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக் களாலும் பிற ஆதாரங்களாலும் அறியப்படுகின்றது. முத்தரையர் என்பார் முதலில் பாண்டியர்கட்கும் பிறகு பல்லவர்கட்கும் திறை செலுத்திக் கொண்டு அவர்கட்குக் கீழிருந்த குறுநில மன்னர் குடியினர் ஆவர். எட்டாம் நூற்றாண்டிலிருந்த பெரும் பிடுகு முத்தரையனான சுவரன்மாறன் என்பவனைத் தஞ்சைக் கோன்’ எனவும், ‘தஞ்சை நற்புகழாளன்’ எனவும் செந்தலைக் கல்வெட்டுக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும். அந்நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ சமயப் பெரியாராகிய திருமங்கை யாழ்வார் தம் தஞ்சைப் பாசுரத்தில் ‘வம்புலாஞ் சோலை மாமதின் தஞ்சை’ என்று குறித்துள்ளமையால், அக்காலத்தில் இந்நகர் சிறந்த மதில் அரண் உடையதாக இருந்தது என்பது தெள்ளிது. முத்தரையர் ஆட்சிக்குப் பிறகு நிகழ்ந்த பிற்காலச் சோழர் பேரரசில்தான் இது பல்வகைச் சிறப்புகளும் எய்தி மாபெருந் தலைநகராகிப் புகழுடன் விளங்குவதாயிற்று. பல்லாண்டுகளாகத் தாழ்ந்த நிலையில் புகழ் குன்றிக் கிடந்த சோழ இராச்சியத்தை மீண்டும் நிறுவி அதனை உயர்நிலைக்குக் கொண்டுவர அடிகோலியவனும் பிற்காலச் சோழர்களுள் முதல் மன்னனும் ஆகிய விஜயாலயசோழன் என்பான், முத்தரையர் மரபினனாகிய குறுநில மன்னனைப் போரில் வென்று தஞ்சை மாநகரைக் கைப்பற்றித் தன் தலைநகராக வைத்துக் கொண்டான். இது 846-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகும். இச்செய்தி கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடு களிலும் வீராராசேந்திர சோழனது கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் சொல்லப்பட்டுள்ளது. அன்றியும், தென்னார்க் காடு மாவட்டத்தில் திருக் கோவிலூர்க் கண்மையிலுள்ள வீர சோழ புரத்திலிருந்து கிடைத்த கல்வெட்டொன்று, விஜயாலய சோழனைத் ‘தஞ்சை கொண்ட கோப்பரகேசரி வர்மர்’ என்று குறிப்பிடுவதும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துவதாகும். தான் நிகழ்த்திய போர்களில் வெற்றி பெறுமாறு அருள் புரிந்த துர்க்கைக்குத் தன் தலைநகராகிய தஞ்சாவூரில் இவ்வேந்தன் ஒரு கோயில் அமைத்து வழிபாடு புரிந்தனன் என்று திருவாலங் காட்டுச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. அவ்வம்மையின் பெயர் நிசும்பசூதனி என்று தெரிகிறது. இப்பெயருடைய துர்க்கையின் கோயில் இப்போது தஞ்சை மாநகரில் காணப்பட வில்லை. எனினும், தஞ்சை மாநகரின் மேலைக் கோட்டை வாயிலில் இந்நாளிலுள்ள கோடியம்மன் கோயிலே அந்தத் துர்க்கையின் கோயிலாக இருத்தல் வேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர் சிலர் கருதுகின்றனர். கோடியம்மன் கோயில் காளியின் கோயிலாகவே காணப்படுவதால் அன்னோர் கருத்து ஒருவாறு பொருந்தும் எனலாம். விஜயாலய சோழன் பேரனும் ஆதித்த சோழன் புதல்வனும் ஆகிய முதற் பாராந்தக சோழனது ஆட்சிக் காலத்தேதான் தஞ்சை மாநகரின் வடபால் ஓடும் வடவாறு என்ற ஆறு வெட்டப் பெற்றது. அதற்கு வீரசோழ வடவாறு என்று இவ்வேந்தனது சிறப்புப் பெயர் அந்நாளில் இடப்பட்டிருந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. பொது மக்கள் நலங்கருதித் தன் தலைநகர்க்கு அணித்ததாக அவ்வாற்றை இவன் வெட்டுவித்திருப்பது குறிப்பிடத்தக்கதோர் அரிய செயலாகும். கருவூர்த்தேவர் தஞ்சை இராச ராசேச்சுரமுடைய சிவபெருமான் மீது பாடியுள்ள திருவிசைப்பாப் பதிகத்தில் ‘மறிதிரை வடவாற்றிடு புனல் மதகில் வாழ்முதலை எற்றுநீர்க் கிடங்கு’ என்று அவ்வாற்றைச் சிறப்பித் துள்ளமை உணரற்பாலது. முதற்பராந்தக சோழனுடைய புதல்வராகிய கண்டராதித்த சோழர் தில்லையம்பலவாணர் மீது பாடியுள்ள திருவிசைப்பாப் பதிகத்தின் இறுதிப்பாடலாகிய திருக்கடைக் காப்பில் தம்மை ‘தஞ்சையர் கோன் கலந்த ஆராவின் சொற் கண்டாதித்தன்’ என்று குறித்துள்ளமை காணலாம். 985 முதல் 1014 வரையில் ஆட்சிபுரிந்த முதல் இராசராச சோழன் ஆளுகையில்தான் தஞ்சை மாநகரம் பல்வகைச் சிறப்புக்களும் ஒருங்கே எய்தி மிக்க உயர்நிலையில் அமைந்தது என்பது தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள பல கல்வெட்டுக் களால் நன்கறியப்படுகின்றது. இவ்வேந்தன் சிறந்த சிவபக்தன்; சிவபாத சேகரன் என்ற சிறப்புப் பெயர் எய்தியவன். இவன் தன் பெயராகிய இராசராசன் என்பது, என்றும் நின்று நிலவுமாறு தலைநகராகிய தஞ்சாவூரில் மாபெருங்கோயில் ஒன்றை எடுப்பித்து, அதற்கு இராசராசேச்சுரம் என்று பெயரிட்டு, நாள் வழிபாட்டிற்கும் விழாக்களுக்கும் பொருளும் நிலமும் மிகுதியாக வழங்கிச் சிறப்பித்துள்ளனன். அம்மாடக் கோயில், பிற்காலச் சோழர்காலச் சிற்பத் திறத்திற்கு எடுத்துக் காட்டாகவும், இராசராச சோழனுடைய பெருமைக்கும் புழுக்கும் சிவபத்திக்கும் ஒரு கலங்கரை விளக்க மாகவும், காண்போர் கண்களைப் பிணித்து யாவரும் வியந்து நோக்குமாறு வானளாவ நின்று நிலவுவதும் பலரும் அறிந்த தொன்றாகும். அப்பெருங் கோயில் கல்வொட்டொன்றில் இவ்வரசர் பெருமான் ‘பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பித்த திருக்கற்றளி இராஜ ராஜஸ்வரம்’ என்று பெருமிதமும் பேரன்பும் தொனிக்குமாறு குறிப்பிட்டுள்ளமை அறியத்தக்கதாகும். இக்கல்வெட்டுப் பகுதியினால் தஞ்சை மாநகர், சோழ மண்டலத்தில் பாண்டிய குலாசனி வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய தஞ்சாவூர்க் கூற்றத்தில் இருந்தமை நன்கு புலப்படுதல் காண்க. இம்மன்னர் பிரான் எடுப்பித்துள்ள இராசராசேச்சுரம் என்ற திருக்கற்றளி, 216 அடி உயரமுள்ள நடு விமானத் தோடு 793 அடி நீளமும் 397 அடி அகலமுமுள்ள பெருங்கோயிலாய்த் தமிழ் மக்களின் பண்டைப் பெருமையையும் நாகரிகத்தையும் உலகத்தார்க்கு உணர்த்திக் கொண்டு தஞ்சை மாநகர்க்கு அணி செய்யும் ஒப்பற்ற ஒரு முடிமணியாய் இன்றும் விளங்குகிறது. சோழர்கால ஓவியத்தின் சிறப்பினையும் இத்திருக்கோயிலி லிருந்து நன்கறியலாம். முதல் இராசராச சோழன் காலத்தவரான கருவூர்த் தேவர் இராசராசேச்சுரமுடைய பெருமான்மீது பாடியுள்ள திருவிசைப் பாப் பதிகத்தில், ‘குடைகெழு நிருபர் முடியோடு முடிதேய்ந்து உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்கு இடைகெழு மாடத்திஞ்சி சூழ் தஞ்சை’ என்று தம் காலத்தில் தஞ்சை மாநகர் எய்தியிருந்த பெருஞ் சிறப்பினைக் கூறியுள்ளனர். இதன் பொருள் குடைகளையுடைய அரசர்களின் முடிகள் ஒன்றோடொன்று மோதுவதால் உதிர்ந்த ஒள்ளிய மணிகள் குவிந்து கிடக்கும் இடங்களையுடைய மாடங்கள் நிறைந்ததும் மதில் சூழப்பெற்றதுமாகிய தஞ்சையம்பதி என்பதாம். இதில் குறிக்கப்பட்டுள்ள அரசர்கள் இராசராச சோழனுக்குத் திறை செலுத்தும் பொருட்டுத் தஞ்சை மாநகர்க்கு வந்து தங்கியிருந்த குறுநில மன்னராவர். கடல் போன்ற ஆரவாரம் மிகுந்த தெருக்களையும் நெடு நிலை மாடங்களையும், யாழ் பயில் இடங்களையும், நாடகசாலைகளையும் கழுநீர்ப் பொய்கைகளையும், நந்தவனங்களையும் தன்னகத்துக் கொண்டு சிறந்து விளங்கியது என்பது திருவிசைப்பாப் பாடல்களால் நன்கு புலப்படுகின்றது. இனி, தஞ்சை இராசராசேச்சுரத்திலுள்ள கல்வெட்டுக் களை ஆராயுமிடத்து, தஞ்சை மாநகர், அக்காலத்தில் ‘உள்ளாலை’ ‘புறம்படி’ என்ற இரு பெரும் பகுதிகளை யுடையதா யிருந்தது என்று தெரிகிறது. அவற்றுள், உள்ளாலை என்பது உள் நகராகும். புறம்படி என்பது புற நகரமாகும். இம்மாநகரில் வீர சோழப் பெருந்தெரு, ஜயங் கொண்ட சோழப் பெருந் தெரு, சூர சிகா மணிப் பெருந்தெரு, வானவன் மாதேவிப் பெருந்தெரு, கந்தர்வத் தெரு, வில்லிகள் தெரு, ஆனையாட்கள் தெரு, ஆனை கடவுவார் தெரு, மடைப்பள்ளித் தெரு, சாலியத் தெரு முதலான பல்பெருந் தெருக்களும், திரிபுவன மாதேவிப் பேரங்காடி, கொங்காள்வாரங்காடி, இராசராச பிரம்மராயன் அங்காடி முதலான கடை வீதிகளும், உய்யக் கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளம், பஞ்சவன் மாதேவியார் வேளம், உத்தமசீலியார் வேளம், அருமொழி தேவத் தெரிந்த திருப்பரிகலத்தார் வேளம் முதலான அரண்மனைப் பணிமக்கள் இடங்களும் அந்நாளில் இருந்தன என்பது பல கல்வெட்டுக்களால் புலனாகின்றது. ஆகவே, இஃது எத்துணைப் பெரிய நகரமாக அப்போது இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். முதல் இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தைச் சோழ இராச்சியத்திற்குத் தலைநகரமாக அமைத்துக் கொண்ட பின்னரும் தஞ்சை மாநகரில் பெருமையும் சிறப்பும் குன்றாமலே இருந்தன. முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1219-ல் சோழ மண்டலத்தின் மேல் படையெடுத்து வந்தபோது இம்மாநகர் பேரழிவிற்கு உள்ளாயிற்று. கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் இடையில் தோன்றிய தஞ்சை நாயக்கர் ஆட்சியில்தான் இது மீண்டும் பழைய சிறப்பை எய்துவதாயிற்று. தஞ்சையிலிருந்து அரசாண்ட நாயக்க மன்னர்களில் முதல்வனாகிய சேவப்ப நாயக்கனால் சிவகங்கைக் கோட்டையும் சேவப்பன் ஏரியும் அமைக்கப்பட்டன. இப்போதுள்ள தஞ்சை அரண்மனையும் இராசகோபால சுவாமி கோயிலும் இறுதியிலிருந்த விஜயராகவ மன்னனால் கட்டப்பெற்றனவாகும். தஞ்சை யிலிருந்த கோட்டையும் அகழியும் இவ்வேந்தனால் புதுப்பிக்கப்பட்டனவே யாம். நாயக்க அரசர்கள் பரம வைஷ்ணவர்களாதலின் வெண்ணாற்றின் கரையில் நீல மேகப் பெருமாள் கோயில், தஞ்சையாள் விண்ணகர், மணிக்குன்றப் பெருமாள் கோயில் ஆகிய மூன்று திருமால் கோயில்கள் கட்டி அவற்றிற்கு நிலமும் பொருளும் வழங்கியுள்ளனர். நீலமேகப் பெருமாள் கோயில் முன்னர் வடவாற்றின் தென்கரையில் வம்புலாஞ் சோலையில் இருந்தது. அதனை இடித்துக்கொண்டு போய் இரண்டு மைலுக்கு வடக்கே வெண்ணாற்றங் கரையில் கோயில் அமைத்துள்ளவர்கள் நாயக்க அரசர்களே ஆவர். நாயக்கர் ஆட்சிக்குப் பின்னர் கி.பி. 1676-ல் இம் மாநகர் மராட்டிய மன்னர்கட்குத் தலைநகராக விளங்கியது. இவர்கள் ஆட்சிக் காலத்தில் தம் குல தெய்வமாகிய சந்திர மௌலீஸ்வரர்க்கு ஒரு கோயிலும் திருவோலக்க மண்டபம் ஒன்றும் அரண்மனைக்குள் அமைந்துள்ளமை அறியத்தக்கதாகும். திருவோலக்க மண்டபத்தின் சுவர்களில் மராட்டிய மன்னர்களின் உருவங்கள் பல வண்ணங் களோடு வரையப்பட்டிருத்தலை இன்றும் காணலாம். இவ்வேந்தர் களுள் இரண்டாம் சரபோஜி மன்னன் சிறந்த ஆங்கிலப் பயிற்சியும் பல்வகைக் கலைகளில் பற்றும் உடையவன். இவ்வரசன் தஞ்சை இராசராசேச்சுரத் திருக்கோயிலுக்குப் புரிந்த திருப்பணிகள் எல்லாம் அங்குள்ள கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டில் மராட்டிய மன்னர்களின் பரம்பரை வரையப் பெற்றிருத்தல் குறிப்பிடத் தக்கதாகும். இவன் இம் மாநகரில் புரிந்துள்ள அருஞ்செயல் ஒன்றுளது. அது, தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு. மகாராஷ்டிரம் முதலான மொழிகளிலுள்ள ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கொணர்ந்து அரண்மனையில் சரஸ்வதிமால் புத்தகசாலை அமைத்தமையே யாம். இவன் உருவச்சிலையை அரண்மனைக் கொலு மண்டபத்தில் இன்றும் பார்க்கலாம். மராட்டிய மன்னர் ஆளுகைக்குப் பிறகு ஏற்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியிலும் அம் மாநகர் தஞ்சை மாவட்டத்திற்குத் தலைநகராகிய பல்வகைச் சிறப்புகளுடன் விளங்குவதாயிற்று. இவ்வாறு, முத்தரையர், சோழர், நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் பெருமையுடன் திகழ்ந்த இம் மாநகர், இக் காலத்தில் பல பல புதிய சிறப்புகளைப் பெற்று உயர் நிலையில் இருப்பதை யாவரும் நன்குணர்வர். இத்தஞ்சை மாநகர் புகழுடன் என்றும் நின்று நிலவுவதாக! 13. திருச்சிராப்பள்ளி தென்னிந்தியாவிலுள்ள புகைவாண்டி நிலையங்களுள் முதன்மை பெற்று விளங்கும் திருச்சிராப்பள்ளியைப் பலரும் அறிவர். நம் அரசாங்கத்தார், சுதந்திர இந்தியாவில் ஊர் களெல்லாம் தம் பழைய பெயர்களோடு நின்று நிலவ வேண்டு மென்ற கருத்தினராய் இப்போது சில ஊர்களின் பெயர்களை மாற்றியுள்ளனர். அவற்றுள் திருச்சிராப்பள்ளி என்பது ஒன்றாகும். அப்பெரு நகரின் பண்டைப் பெயர் யாது என்பதை ஈண்டு ஆராய்வோம். கடைச் சங்க நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றில், ‘கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது - நெடும் பெருங்குன்றம்’1 என்று உறையூர்க்குக் கிழக்கே ஒரு குன்று கூறப்பட்டுள்ள தேயன்றி, அதன் பெயராதல் அஃது அமைந்துள்ள ஊரின் பெயராதல் அப்பாடலிற் குறிக்கப்படவில்லை. சைவசமய குரவர்களாகிய திஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அக்குன்றின்மேல் திருக்கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமான்மீது பாடியுள்ள பதிகங்களிலேதான் சிராப்பள்ளி என்ற பெயர் காணப்படுகின்றது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டையும் சோழ நாட்டையும் ஒருங்கே ஆட்சி புரிந்த பல்லவ வேந்தனாகிய முதல் மகேந்திரவர்மன் என்பவனே சிராப்பள்ளிப் பெருங்குன்றைக் குடைந்து அங்கே சிவபெரு மானுக்குத் திருக்கோயில் அமைத்தவன் என்பது ஆராய்ச்சியால் அறியப்படுகின்றது. வடமொழியிலே சிறந்த புலமை பெற்றிருந்த அவ் வேந்தன் எட்டுச் சுலோகங்கள் இயற்றி அவற்றைத் தான் எடுப்பித்த சிராப்பள்ளி சிவன் கோயிலில் பொறித்துள்ளனன். அச்சுலோகங்களிலே தான் புறச்சமயத்தி லிருந்து திரும்பிச் சிவநெறியைக் கடைப்பிடித்துச் சைவனாகியதையும் சிராப்பள்ளிக் குன்றின்மேற் குகைக் கோயிலிற் சிவலிங்கத்தை எழுந்தருளி வித்ததையும் குறிப்பிட்டுள்ளான்.1. அச் செய்திகளை நுணுகி நோக்குமிடத்து, அம் மன்னனது ஆட்சியின் பிற்பகுதியிலேதான் சிராப்பள்ளிக் குன்றிற் சிவாலயம் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் அதற்கு முன்னர் அவன் சமண சமயத்தைக் கைக்கொண்டொழுகிய காலத்தில் அங்கே சிவாலயம் இருந்திலது என்பதும் நன்கு புலனாகின்றன. சமணர்களாற் கருங்கல்லிற் பிணித்துக் கடலில் போடப்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் சிவபெருமான் திருவருளால் அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலைக் கடந்து,2 திருப்பாதிரிப் புலியூரையடைந்து திருக்கோயிலுக்குட் சென்று, ‘ஈன்றாளுமாய்’ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி இறைவனை வணங்கினர் என்பது பெரிய புராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணத்தால் அறியப்பெறும் ஓர் வரலாறாகும். அந்நிகழ்ச்சிகள்தான் மகேந்திரவர்மன் சமண சமயந் துறந்து சைவனாகும்படி செய்துவிட்டது என்பது தேற்றம். அந் நாட்களில், திருப் பாதிரிப்புலியூர் என்று வழங்கும் பாடலி புரத்திலிருந்த ஓர் அமண் பள்ளியை இடித்து, திருவதிகை நகரில் தன் பெயரால் குணபரேச்சுரம் என்ற சிவன் கோயிலோன்று அவ்வரசன் அமைந்ததனன். இச்செய்தியைச் சேக்கிழார் தம் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.3 அவனுக்குக் குணபரன் என்னும் சிறப்புப் பெயர் உண்டு என்பது அவனுடைய சிராப்பள்ளி கல்வெட்டுக்களாலும் செங்கற்பட்டிற்கு அண்டையிலுள்ள வல்லத்திற் காணப்படும் அவன் கல்வொட் டொன்றாலும் நன்கறியக் கிடக்கின்றது.4 ஆகவே, சேக்கிழார் கூறியுள்ள அச்செய்தி பெரிதும் உறுதியெய்தல் உணரற்பால தாகும். அங்ஙனமே, அவன் தன் நாட்டிலிருந்த பல அமண் பள்ளிகளை இடித்து அவ்விடங்களிற் சிவன் கோயில்கள் அமைந்திருத்தல் வேண்டும். அவற்றுள் சிராப்பள்ளிக் குன்றின் மேலுள்ள சிவாலயமும் ஒன்றாகும். அவ்வுண்மை, அக்கோயிலிற் காணப்படும் அவனுடைய வட மொழிக் கல்வெட்டுக்களாலும் அக் குன்றின் உச்சியில் வரையப்பெற்றுள்ள வேறு சில கல்வெட்டுக்களாலும்1 வலியுறுகின்றது. இனி, சிராப்பள்ளிக் குன்றின்மேலுள்ள உச்சிப் பிள்ளை யார் கோயிலுக்குப் பின்புறத்தில் பல சமண முனிவர்களின் கற்படுக்கைகள் தலையணைகளோடு இருத்தலை இன்றும் காணலாம். அத்தலையணைகளில் அவற்றை உபயோகித்த சமண முனிவர்களின் பெயர்கள் வரையப் பெற்றிருக்கின்றன. அவ்வெழுத்துக்களைக் கொண்டு அவற்றின் காலத்தை ஆராய்ந்த கல்வெட்டிலாகா அறிஞர்கள், அவை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர்.2 எனவே, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குன்றின்மெற் சில சமண முனிவர்கள் தங்கித் தவம் புரிந்து கொண்டிருந்தனர் என்பது நன்கு தெளியப்படும். அவர்களுள் ‘சிரா’ என்ற முனிவர் ஒருவர் இருந்தமை அங்குள்ள கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. அம்முனிவர் அத்தவப் பள்ளியின் தலைவராயிருந்தமை பற்றி அது சிராப்பள்ளி என்று முதலில் வழங்கத் தொடங்கி, அவர் காலத்திற்குப் பின்னரும் அப்பெயரோடு நின்று நிலவுவதாயிற்று. முதல் மகேந்திரவர்மனும் தன் ஆட்சியின் முற்பகுதியில் அத்தவப் பள்ளியை ஆதரித்துப் போற்றி வந்திருத்தல் வேண்டும் என்பது அவனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று அங்கே பொறிக்கப் பெற்றிருத்தலால் நன்கு துணியப்படும். திருநாவுக்கரசர் பொருட்டுச் சிவபெருமான் நிகழ்த்திய அரிய நிகழ்ச்சிகளை அறிந்த அப்பெரு வேந்தன் அமண் சமயத்தை வெறுத்துச் சைவனாயினமை முன்னர் விளக்கப்பெற்றது. அந்நாட்களிலே தான் அவன் சிராப்பள்ளி என்னும் அமண் பள்ளியை இடித்து அக் குன்றின் மேல் சிவன்கோயில் எடுப்பித்திருத்தல் வேண்டும். அச் சிவாலயமும் சிராப்பள்ளி என்னும் பழைய பெயருடன் வழங்கி வருவதாயிற்று. சைவவமய குரவர்களாகிய திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் தம் காலத்தில் வழங்கி வந்த சிராப்பள்ளி என்ற அப்பெயரைத் தாம் அக்கோயிலிற் பாடியருளிய பதிகங்களில் குறிப்பிட்டுச் செல்லுவாராயினர். ஆகவே சிரா என்ற சமண முனிவரது தவப்பள்ளியின் பெயராயிருந்த சிராப்பள்ளி என்பது பின்னர் முதல் மகேந்திரவர்மன் அங்கு எடுப்பித்த சிவன் கோயிலின் பெயராக மாறிவிட்டமை அறியத்தக்கது. தமிழ் நாட்டிலே சில ஊர்களிலுள்ள திருக்கோயில்களுக்குத் தனிப்பெயர்கள் முதற்காலத்தில் வழங்கி வந்தன என்பது சமய குரவர் அருளிய தேவாரப் பதிகங்களாலும் கல்வெட்டுக்களாலும் புலப்படுகின்றது. உறையூரிலுள்ள கோயில் மூக்கிச்சுரம் எனவும், கருவூரிலுள்ள கோயிலை ஆனிலை எனவும், பழையாறையிலுள்ள கோயில்கள் பட்டீச்சுரம் திருச்சத்திமுற்றம் எனவும், திருநறை யூரிலுள்ள கோயில் சித்தீச்சுரம் எனவும், கொட்டையூரிலுள்ள கோயில் கோட்டீச்சுரம் எனவும், கோவந்த புத்தூரிலுள்ள கோயில் விசயமங்கை எனவும், சாத்தனூரிலுள்ள கோயில் ஆவடுதுறை எனவும், சாத்தமங்கையிலுள்ள கோயில் அயவந்தி எனவும், காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள கோயில் பல்லவனீச்சுரம் எனவும், பெண்ணாகடத்தி லுள்ள கோயில் தூங்கானைமாடம் எனவும், திருவெண்ணெய் நல்லூரிலுள்ள கோயில் அருட்டுறை எனவும், தஞ்சாவூரிலுள்ள கோயில் இராசராசேச்சுரம் எனவும், திருப்புறம்பயத்திலுள்ள கோயில் ஆதித் தேச்சுரம் எனவும் பெயர் எய்தியிருந்தன என்பதைத் தேவாரப்பதிகங்களாலும் அவ்வூர்களிலுள்ள கல்வெட்டுக்களாலும் அறியலாம். அம் முறையிற் சிராப்பள்ளி என்பது கோயிற்பெயரா யிருத்தலால், அக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயர் யாது என்பது இனி ஆராய்தற்குரியதாகும். திருச்சிராப்பள்ளியில் முதல் இராசராசசோழனது ஆட்சியின் பதினாறாம் ஆண்டாகிய கி.பி. 1000-ல் வரையப்பட்டுள்ள கல்வெட்டொன்று1 விக்கிரமசிங்க மூவேந்த வேளான் என்பவன் ஒருவன் விளத்தூர் நாட்டு ஆலங்குடியில் நிலம் விலைக்கு வாங்கி, அதனை உறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பரிலுள்ள சிராப்பள்ளிக் கோயிலுக்கு அளித்தனன் என்று கூறுகின்றது. அதனை ஆராயுமிடத்து, அத்தலைவனால் இறையிலிநிலம் வழங்கப்பெற்ற சிவன் கோயில் சிராப்பள்ளி என்னும் பெயருடையது என்பதும் அக்கோயில் அமைந்துள்ள நகர் சிற்றம்பர் என்னும் பெயருடையது என்பதும் அந்நகர் உறையூர்க் கூற்றத்தில் உள்ளது என்பதும் நன்கு புலனாதல் காண்க. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் முதல் வரகுண பாண்டியனது ஆட்சியின் பதினொன்றாம் ஆண்டில் அக்கோயிலிற் பொறிக்கப்பெற்றுள்ள வேறாரு கல்வெட்டொன்றும்1 அவ்வுண்மையை உறுதிப்படுத்துதல் உணரத்தக்கது. அது, ‘கோமாறஞ்சடையற்கு யாண்டு நான்கு நாள் ஈராயிரத் தைந்நூற்றொன்று வேம்பில் மதிளழித்துப்போந்து நியமத்திருந்தருளி சோம சூர்யாந்வயத்வ யதிலகாலங்காரயி யினபாண்டி யாதிராஜர் வரகுணதேவர் திருமலை படாரர்க்குக் கொடுத்த பொன் பாடிக்கல்லால் 125 நூற்றிருபத் தைங்கழஞ்சும் - இப்பொன் முதனிற்க பொலி கொண்டு முப்பதின் கழஞ்சு பொன்னின் பொலியால் ஒரு நொந்தாவிளக்காக நூற்றிருபதின்கழஞ்சு பொன் னால் நாலு நொந்தா விளகெரியக் காண நாழியால் நிசதி அட்டகடவ நெய் இருநாழி, நின்ற ஐங்கழஞ்சு பொன்னாலும் திங்கடொறும் திங்கட்டிருவாதிரை நான் றவ்விராப் புலருமளவும் ஐந்து விளக்கெரிய அட்டக்கடவ நெய் இருநாழியுரி இவ்வாட்டின பரிசு நெய் அட்டி இத்திரு விளக்கெரிப்பான் இப் பொன் நூற்றிருபத்தைங் கழஞ்சுங் கொண்டோம்; சிற்றம்பர் நகரத்தோம் - இவ்வொட்டின பரிசு நெய் அட்டுவிப்பதற்கு அமைந்து புணைப்பட்டோம் சிற்றம்பர் புதியும் பாதமூலத்தோமும்; இது பன் மாகேசுவரர் இரiக்ஷ’ - என்பதாம். இக் கல்வெட்டில் அவ்வூர், சிற்றம்பர்நகர் எனவும் சிற்றம் பர்பதி எனவும் குறிக்கப்பட்டிருத்தல் காண்க. நம் தமிழ்நாட்டில் அம்பர், இன்னம்பர், நல்லம்பர் என்ற ஊர்கள் இருத்தலைப் பலர் அறிந்திருத்தல் கூடும். அவ்வூர்களைப் போற் சிற்றம்பர் என்ற ஊரும் இருந்துளது. இக்காலத்தில் அவ்வூரின் பெயர் மறைந்தொழிந்தது எனினும், அவ்வூர் திருச்சிராப்பள்ளி என்னும் பெயருடன் இஞ்ஞான்று எல்லோர்க்கும் காட்சி யளித்துக்கொண்டு பெருமையுடன் விளங்குவது மகிழ்தற் குரியதாகும். இதுகாறும் ஆராய்ந்து கூறியவாற்றால் பண்டைக் காலத்தில் சிராப்பள்ளி என்பது சிரா என்ற சமணமுனிவரது தவப்பள்ளியின் பெயராயிருந்தது என்பதும், பிறகு பல்லவ வேந்தனாகிய முதல் மகேந்திரவர்மன் அதனை இடித்துவிட்டு அங்கு எடுப்பித்த சிவன் கோயில் பெயராயிற்று என்பதும், அதன் பின்னர் அத்திருக் கோயில் அமைந்துள்ள நகரின் பெயராக வழங்கி வருகின்றது என்பதும், கோயிலின் பெயர் நகரின் பெயராகப் போய் விட்மையின்1 சிற்றம்பர் என்னும் அந்நகரின் பழைய பெயர் மறைந்து விட்டது என்பதும் நன்கு விளங்குதல் காண்க. 14. சோழர்களும் இராஷ்டிரகூடர்களும் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழ மண்டலத்தில் பழையாறை நகரிலிருந்த விசயாலய சோழன் என்பான், முத்தரையர் குடியினனாகிய ஒரு குறுநில மன்னனிட மிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றி அதனைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை அரசாளத் தொடங் கினான். அவன் தன் புதல்வன் முதல் ஆதித்த சோழனுக்குக் கி.பி. 871-ல் இளவரசுப் பட்டங் கட்டி அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடும்படி செய்தான். அவன் இளவரசனாயிருந்த காலத்தில் கி.பி. 880-ஆம் ஆண்டில் இரண்டாம் வரகுண பாண்டியன் சோழ நாட்டின் மேல் படையெடுத்து அதனைப் பல அல்லல்களுக்கு உள்ளாக்கினான். அந்நாட்களில் சோழ நாட்டின் மற்றொரு பகுதி பல்லவ வேந்தனாகிய அபராஜித வர்மன் ஆட்சிக் குட்பட்டிருந்தது. அதனால், அப் பல்லவன் ஆதித்த சோழனுக்கு உதவி புரிந்து, வரகுண பாண்டியனைச் சோழ நாட்டை விட்டுத் துரத்துவது இன்றியமையாததாயிற்று. எனவே, அபராஜித வர்மன் பாண்டியனோடு போர் புரிவதற்குப் பெரும்படையோடு புறப்பட்டான். அக்காலத்தில் அவனுக்கு நண்பனாயிருந்த மேலைக்கங்க அரசன் முதல் பிருதுவிபதியும் அவன் நண்பனாகிய இராஷ்டிரகூட வேந்தன் இரண்டாங் கிருஷ்ணதேவனும் அபாராஜித வர்மனுக்கு உதவி புரியப் படைகளுடன் வந்தனர். எனவே, முதல் ஆதித்த சோழன், அபராஜிதவர்மன், முதல் பிருதுவிபதி, இரண்டாம் கிருஷ்ண தேவன்1 ஆகிய நான்கு அரசர்களும் இரண்டாம் வரகுண பாண்டியனை எதிர்த்துப் போர் புரிந்தனர். கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையிலுள்ள திருப்புறம்பயம் என்ற ஊரில் பெரும்போர் நடைபெற்றது.1 அப் போரில் வரகுண பாண்டியன் தோல்வியெய்திச் சோழ நாட்டை விட்டோடிவிட்டான். வெற்றி பெற்ற அபராஜிதவர்மன் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழ நாட்டுப் பகுதியை முதல் ஆதித்த சோழனுக்கு அளித்தனன். ஆகவே, அப்போரின் பயனாகச் சோழ நாடு முழுவதும் சோழ மன்னனாகிய முதல் ஆதித்த சோழனின் ஆளுகைக்குள் வந்து விட்டது எனலாம். அப்போர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மன்னர்களில் முதல் பிருதுவிபதி என்ற கங்க அரசன் போர்க்களத்தில் உயிர் துறந்தான். முதல் ஆதித்த சோழன் இளம் பருவத்தினனா யிருந்தும் பேராற்றலோடும் பெருவீரத்தோடும் போர் புரிந்தமை, இரண்டாம் கிருஷ்ணதேவன் உள்ளத்தைப் பெரிதும் பிணித்து விட்டது. திரும்புறம்பயப் பெரும்போரில் அவன் புரிந்த வீரச் செயல்களாலும் அடைந்த வெற்றியாலும் எதிர்காலத்தில் சோழ இராச்சியத்தைப் பேரரசுகளில் ஒன்றாக விளங்குமாறு செய்யும் ஆற்றல் படைத்தவன் அவ்வரசிளங் குமரன் என்பது எல்லோருக்கும் நன்கு புலப்பட்டது. ஆகவே, இரண்டாம் கிருஷ்ணதேவன் அவன்பால் பெரிதும் ஈடுபட்டுத் தன் அருமை மகள் இளங்கோப்பிச்சியை அவனுக்கு மணஞ் செய்து கொடுக்க விரும்பினான். அத் திருமணமும் விரைவில் நிறைவேறியது. முதல் ஆதித்தசோழனும் இளங்கோப்பிச்சியும்,2 சோழ நாட்டின் தலைநகராகிய தஞ்சை மாநகரில் இனிது வாழ்ந்து வருவாராயினர். இதுவே, பம்பாய் மாகாணத்தின் தென் பகுதியில் ஆட்சி புரிந்த இராஷ்டிரகூடருக்கும் சென்னை மாகாணத்தின் தென் கிழக்குப் பகுதியில் சோழ நாட்டில் அரசாண்ட சோழருக்கும் முதலில் ஏறப்பட்ட திருமணத் தொடர்பாகும். இனி கிருஷ்ணதேவன் என்பது கன்னட மொழியில் கன்னரதேவன் என்று வழங்கும். ஆதித்த சோழன் தன் புதல்வன் ஒருவனுக்குக் கன்னரதேவன் என்று பெயரிட்டிருந்தனன் என்பது திருநெய்த்தானத்துக் கல்வெட்டொன்றால் அறியக் கிடக்கின்றது.1 ஆகவே, அச்சோழமன்னன் தன் மாமனாகிய இராஷ்டிரகூட மன்னன் பெயரை இட்டு வழங்கி வந்தனனாதல் வேண்டும். கன்னரதேவன் என்ற அச்சோழ அரசகுமாரன் இராஷ்டிரகூட வேந்தனாகிய இரண்டாம் கிருஷ்ணதேவனுடைய மகள் வயிற்றுப் பேரனாய் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். முதல் ஆதித்த சோழனுக்குப் பிறகு சோழ நாட்டில் அரசாண்ட அவன் புதல்வன் முதல் பராந்தக சோழன் இராஷ்டிரகூடர் உறவும் நட்பும் தன் காலத்தும் நிலை பெற்றிருத்தல் வேண்டும் என்று கருதினான். எனவே, வடபுலத்தில் பேரரசாக நிலவிய இராஷ்டிரகூட இராச்சியத்தின் வலிமையை அவன் நன்குணர்ந்திருந்தான் என்பது தேற்றம். ஆகவே, அவன், இரண்டாம் கிருஷ்ணதேவனுடைய பேரன் மூன்றாம் இந்திரன் மகன் நான்காம் கோவிந்தனுக்கு தன் மகள் வீரமாதேவியை மணஞ் செய்து கொடுத்து2 அவ்வரச குடும்பத்தின் உறவை நிலைபெறச் செய்தனன். குந்தள நாட்டின் மூன்றாம் இந்திரன் இறந்த பின்னர் அவன் மூத்த மகன் இரண்டாம் அமோக வர்ஷன் ஓராண்டு ஆட்சி புரிந்து இறந்தான். அவனுக்குப் பிறகு அவன் தம்பியும் முதற் பராந்தக சோழன் மருமகனுமாகிய நான்காம் கோவிந்தன் என்பான் கி.பி. 898-ல் முடிசூட்டப் பெற்று, கி.பி. 934 வரையில் அந்நாட்டில் அரசாண்டான். அவன் தன் ஆட்சிக் காலத்தில் குடிமக்களின் வெறுப்பையும், அரசியல் அதிகாரிகளின் பற்றின்மையும் தேடிக் கொண்டான்; அந்நிலையில் கீழைச் சளுக்கிய வேந்தனாகிய யுத்த மல்லனுக்கு உதவிபுரிய வேண்டி கி.பி 934-ல் இரண்டாம் வீமனை எதிர்த்து போர் புரிந்து தோல்வியுற்றான்.1 அந்நாட்களில் உள் நாட்டில் நிகழ்ந்த அரசியல் குழப்பத்தினால் அவ்வேந்தன் தன் இராஜ்ஜியத்தை இழந்து மனைவி வீரமாதேவியோடு தஞ்சைமாநகருக்கு வந்து மாதுலன் பராந்தக சோழன்பால் தங்கியிருந்தான்.1 இவ்வாறு கோவிந்தன் தன் இராச்சியத்தை இழந்தமைக்குக் காரணம், அவன் செயலும் உள் நாட்டுக் குழப்பமும் ஒருபுறமிருக்க அவன் சிறிய தந்தை மூன்றாம் அமோகவர்ஷன் மகன் மூன்றாங் கிருஷ்ணதேவன் செய்த சூழ்ச்சியும் ஒன்று எனலாம். அவன் தன் சூழ்ச்சித் திறத்தால் பயன் எய்தியவுடன் மக்கள் நலத்தையே பெரிதெனக் கருதி நடப்பவன்போல் தான் பட்டம் பெற விரும்பவில்லை என்று கூறி வயது முதிர்ந்த தன் தந்தை மூன்றாம் அமோக வர்ஷனுக்கு கி.பி. 935-ல் முடி சூட்டினன். அவ்வேந்தனும் கி.பி. 940-ல் இறந்தான். ஐந்து ஆண்டுகள் தஞ்சையில் தங்கிக் காலங் கருதிக் கொண்டிருந்த நான்காம் கோவிந்தன் என்பான் தான் இழந்த ராச்சியத்தைத் தன் மாதுலன் பாராந்தக சோழன் துணைகொண்டு அப்போது கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தான். ஆகவே முதற் பராந்தக சோழன் தன் மருமகன் கோவிந்தனுக்கு இராஷ்டிரகூடச் சிங்கானத்தனத்தைக் கைப்பற்றிக் கொடுத்தற் பொருட்டுக் குந்தள நாட்டிற்குப் பெரும் படையனுப்பி, மூன்றாங் கிருஷ்ண தேவன் முடிசூடுங் காலத்தில் அவனோடு போர் நிகழ்த்துவது இன்றியமையாததாயிற்று. மூன்றாங் கிருஷ்ண தேவனுக்கு அவன் தமக்கையின் கணவனும் மேலைக்கங்க மன்னனுமாகிய இரண்டாம் பூதுகன் என்பான் தக்க சமயத்தில் பெரும் படையுடன் வந்து உதவி புரிந்தான்.1 இரு பகுதியினர்க்கும் நடைபெற்ற பெரும் போரில் நான்காம் கோவிந்தனும் அவனுக்கு உதவும் பொருட்டுச் சென்ற சோழ நாட்டுப் படையும் தோல்வி எய்தவே, மூன்றாங் கிருஷ்ணதேவன் வெற்றி பெற்று அரியணை ஏறினான். இப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு நான்காம் கோவிந்தனைப் பற்றிய செய்தி ஒன்றுமே தெரியவில்லை. ஆகவே அவ்வேந்தன் இப் போரில் உயிர்துறந்திருத்தல் கூடும் என்று கருதற்கு இடமுள்ளது. இராஷ்டிகூடரது நாட்டில் மூன்றாம் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்கள் கி.பி. 940 முதல் கி.பி. 968 வரையில் காணப்படுகின்றன. எனவே, அவன் இருபத்தெட்டு ஆண்டுகள் அந்நாட்டில் ஆட்சி புரிந்தனன் என்பது தேற்றம். முதற் பராந்தக சோழன் செய்த முயற்சி இங்ஙனம் தோல்வியுறவே அதன் பயனாகவும் அவன் கருத்திற்கு முரணாகவும் வடபுலத்தில் மூன்றாங் கிருஷ்ணதேவன் அவனுக்குப் பெரும் பகைஞன் ஆயினன். கிருஷ்ணதேவன் தமக்கையின் கணவன் இரண்டாம் பூதுகனும் பராந்தக சோழனுக்குப் பகைவன் ஆயினான். அந்நிலையில் மூன்றாம் கிருஷ்ணதேவன் தனக்குப் பராந்தக சோழன் புரிந்த தீங்கினைச் சிறிதும் மறவாமல் அவன் நாட்டின் மேல் படையெடுத்துத் தன் ஆற்றலை அவனுக்குப் புலப்படுத்த எண்ணினான். அவ்வெண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டுச் சுமார் எட்டு ஒன்பது ஆண்டுகள் வரையில் தன் படைகளைப் பெருக்கிக் கொண்டு கி.பி. 949-ல் அவ்வேந்தன் சோழ இராச்சியத்தின் மேல் படையெடுத்தான். அவனுக்கு உதவி புரிய வேண்டி மேலைக்கங்க மன்னனாகிய இரண்டாம் பூதுகனும் பெரும் படையுடன் வந்து சேர்ந்துகொண்டான். திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரிலிருந்து1 சோழ இராச்சியத்தின் வடபகுதியைப் பாதுகாத்துக் கொண்டிருந்த இளவரசனாகிய இராசாதித்த சோழன், அவ்வடவேந்தரின் படை யெழுச்சியைத் தடுத்துப் போர் புரிவானாயினன். வடஆர்க்காடு ஜில்லாவில் அரக்கோணத்திற்குத் தென்கிழக்கே ஆறுமைல் தூரத்திலுள்ள தக்கோலத்தில் பெரும் போர் நடைபெற்றது. அப்போரில் இருபக்கங்களிலும் பல்லாயிரவர் உயிர் துறந்தனர். வெற்றித்திரு எவர்க்குரித்தாகுமோ என்ற ஐயப்பாடு நிகழ்ந்த நிலையில் இரண்டாம் பூதுகன் விடுத்த அம்பொன்று யானைமேல் வீற்றிருந்த இராசாதித்த சோழன் மார்பில் தைக்கவே, அவன் விண்ணுல கடைந்தான். இச்செய்தி, திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும்2ஆனமைங்கலச் செப் பேடுகளிலும்3 சொல்லப்படுகிறது. பங்களூர் பொருட்காட்சிச் சாலையிலுள்ள ஆதகூர்க் கல்வெட்டொன்று4 பூதுகன் இராசாதித்தனைக் கொன்ற வீரச்செயல் பாராட்டி மூன்றாங் கிருஷ்ணதேவன் வனவாசி பன்னீராயிரம் என்ற நாடும் மற்றுஞ் சிலவும் அவனுக்கு வழங்கினான் என்று கூறுகின்றது. திருவெள்ளறை, கும்பகோணம், திருவிடை மருதூர் என்ற ஊர்களிலுள்ள சில கல்வெட்டுக்கள்5 இராசாதித்த சோழனை ‘ஆனைமேற்றுஞ்சின தேவர்’ என்று கூறுவதால் அவர் யானைமேல் வீற்றிருந்த போது இறந்த செய்தி வலியுறுதல் காண்க. தக்கோலப் போரில் வெற்றி யெய்திய மூன்றாங் கிருஷ்ண தேவன் தொண்டை மண்டலத்தையும் திருமுனைப்பாடி நாட்டின் வடபகுதியையும் கைப்பற்றித் தன் ஆளுகையின் கீழ் வைத்துக் கொண்டான். எனவே, அப்போரின் பயனாக முதற் பராந்தக சோழன் தன் ஆட்சியின் இறுதியில் சோழ இராச்சியத்தின் வட பகுதியை இழக்கும்படி நேர்ந்தது. இராஷ்டிரகூடர் ஆட்சியும் தொண்டை மண்டலத்திலும், திருமுனைப்பாடி நாட்டின் வட பகுதியிலும் நிலைபெற்றது எனலாம். புதுச்சேரிக்கு அண்மையிள்ள வரகூருக்கும் பண்ணுருட்டிக் கருகிலுள்ள திருவதிகைக்கும் தெற்கே மூன்றாம் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்கள் காணப்பட வில்லை. எனவே அவனது ஆட்சியும் அவ்வூர்கட்குத் தெற்கே பரவாமல் அவ்வெல்லையோடு நின்றுவிட்டது என்பது வெளிப் படை. அவன் பிரதிநிதிகளாகிய சில தலைவர்கள் வென்ற நாடுகளை ஆட்சி புரிந்து வந்தனர். அவன் ‘கச்சியும் தஞ்சையுங் கொண்ட கன்னர தேவன்’1 என்று தன் கல்வெட்டு களில் கூறிக்கொள்வதைப் பல ஊர்களில் காணலாம். அவ்வேந்தன் கச்சியாகிய காஞ்சீபுரம் கொண்டதே உண்மை நிகழ்ச்சியாகும். தஞ்சை கொண்டது வெறும் புனைந்துரையேயாம். முதற் பராந்தக சோழன் புதல்வன் அரிஞ்சயனும் அவன் மகன் இரண்டாம் பராந்தக சோழனும் தம் ஆட்சிக் காலங்களில் இராஷ்டிரகூடரைப் போரில் வென்று தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முயன்றனர்; அம் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் எனலாம். இரண்டாம் பராந்தகசோழன் கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு ஜில்லாக்களில் காணப்படுவதால் அச்செய்தி உறுதி யெய்துகின்றது.2 அந்நிலையில் இராஷ்டிர கூடப் பேரரசனாகிய மூன்றாங் கிருஷ்ணதேவனும் கி.பி. 968-ல் இறந்தான். ஆகவே, இராஷ்டிரகூடர் ஆட்சியும் தொண்டை மண்டலத்திலிருந்து முற்றிலும் ஒழிந்தது. அம்மண்டலம் முழுதும் மீண்டும் சோழ மன்னர்களின் ஆட்சிக்குள்ளாயிற்று. மூன்றாம் கிருஷ்ண தேவனுக்குப் பிறகு இராஷ்டிரகூட இராச்சியம் சீர் குலைந்து மேலைச்சளுக்கியர் ஆளுக்கைக்குட் பட்டுப் போயிற்று. 15. தூங்கானை மாடம் பண்டைக்காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த நம் முன்னோர் களாகிய தமிழ் மக்கள் தெய்வக்கொள்கை யுடையவர்களாக விளங்கினர் என்பது, நம் தாய் மொழியாகிய தமிழில் கடவுள், இயவுள் முதலான தனித் தமிழ்ச் சொற்கள் தொன்று தொட்டு வழங்கி வருதலால் நன்கறியக் கிடக்கின்றது. தமிழ் நூல்களுள் மிகப் பழமை வாய்ந்ததாகவுள்ள தொல்காப்பியத்தில் காணப் படும் சில சூத்திரங்களாலும் இவ்வுண்மை வலியுறுதல் உணரற் பாலதாகும். கடவுட் கொள்கையினராய் வாழ்ந்துவந்த அன்னோர் தம் கடவுளர்க்குக் கோயில்கள் அமைத்து நாள் வழிபாடும் திங்கள் விழாக்களும் ஆண்டு விழாக்களும் மிகச் சிறப்பாக நடத்தி வந்தனர் என்பது பத்துப்பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலான கடைச்சங்க காலத்து நூல்களால் தெள்ளிதிற் புலப்படுதல் காணலாம். ஆனால், அத்திருக்கோயில்களின் அமைப்பும் சிற்பத்திறனும் பிறவும் எத்தகையன என்பதை இக்காலத்தில் ஆராய்ந்தறிந்து கொள்வது இயலாததொன்றே யாம். எனினும், அக் கோயில்கள் எல்லாம் செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் மரங்களாலும் கட்டப்பெற்றவை என்பதை மாத்திரம் உறுதியாகக் கூறலாம். இவ்வுண்மையினைச் ‘சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பு’1 எனவும், ‘இட்டிகைப் புரிசை’2 எனவும், ‘இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம்’3 எனவும் போதரும் சங்கத்துச் சான்றோர் பாடல்களிலுள்ள தொடர்களால் அறிந்து கொள்ளலாம். அறுபத்து மூன்று அடியார்களுள் ஒருவராகிய கோச்செங்கட் சோழர் பல சிவன் கோயில்கள் எடுப்பித்துள்ளனர் என்பது சைவசமய குரவர்களின் திருப்பதிகங்களால் புலப்படுகின்றது. கடைச்சங்க நாளில் நிலவிய அவ்வரசர் பெருமான் எடுப்பித்த அக்கோயில்கள் எல்லாம் செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் அமைந்தனவேயாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் நம் தமிழகத்தில் முதலில் கருங்கற் கோயில்கள் தோன்றின என்பது அறிஞர்கள் ஆராய்ந்து கண்டதோர் உண்மையாகும். அக்கோயில்களும் குன்றுகளைக் குடைந்து அமைக்கப் பெற்றவையே. அவற்றை முதலில் அமைக்கத் தொடங்கி வெற்றி கண்டவன், நம் தமிழ்நாட்டின் வட பகுதியைக் காஞ்சிமா நகரிலிருந்து கி.பி. 600 முதல் 630 வரை அரசாண்டவனும், திருநாவுக்கரசு அடிகள் பொருட்டு இறைவன் நிகழ்த்திய அருஞ்செயல்களைக் கண்டு சைவ சமயத்திற்குத் திரும்பியவனும், பல்கலைச் செல்வனு மாகிய முதல் மகேந்திரவர்மன் என்ற பல்லவ வேந்தனேயாவன். அவன் அமைத்த கோயில்கள் குடைவரைக் கோயில்கள் எனவும் வழங்கப்படுகின்றன. அவற்றில் கருவறையின்மேல் விமானமின்மை அறியத் தக்கது. அவன் மகனும் ‘வாதாவி கொண்ட நரசிங்கப் போத்தரையர்’ என்று பாராட்டப்பட்டவனும் சிறுத்தொண்ட நாயனாரைத் தன் படைத்தலைவராகக் கொண்ட பெருமையுடையவனும் திருஞானசம்பந்தர் காலத்தில் இருந்தவனும் ஆகிய முதல் நரசிம்மவர்மன் (கி.பி. 630-668) என்ற பேரரசனே, சிறு குன்று களைக் குடைந்து கருவறையும் அதன்மேல் விமானமும் அவற்றின் முன்னர் முகமண்டபமும் பொருந்திய கோயில்களாக அமைத்தவன். அவற்றில் காணப்படும் சிற்ப நுட்பங்களும் பிற சிறப்புக்களும் காண்போர் கண்களைக் கவர்ந்து தன்வயமாக்கும் இயல்பினவாகும். அக்கோயில்களிலுள்ள விமானங்கள் இரண்டு நிலை மூன்று நிலைகளையுடையன வாயிருத்தல் குறிப்பிடத்தக்கதாகும். அன்றியும், நிமிர்ந்து உட்கார்ந்த சிங்கங்களின் மேல் அமைக்கப் பெற்ற சிங்கத்தூண்கள் முதல் நரசிம்மவர்மனுடைய கோயில்களில்தான் முதலில் காணப்படுதல் உணரற்பாலது. கருங்கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கருங்கற் கோயில் முதலில் எடுப்பித்தவன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ மன்னனேயாவன். அவன் மேலே குறிப்பிட்ட முதல் நரசிம்மவர்மனின் பேரனாகிய முதல் பரமேசுவரவர்மனுடைய மகன். அவன் கருங்கற்களால் அமைத்த பெருங்கோயில் காஞ்சி மாநகரிலுள்ள கைலாயநாதர் ஆலயமேயாகும். முற்காலத்தில் அக்கோயில் அவன் சிறப்புப் பெயரால் இராசசிம்ம பல்லவேச்சுரம் என்று வழங்கி வந்தது. அவன் சிவபெருமானிடத்தில் ஒப்பற்ற பக்தியுடையவனாய்த் திகழ்ந்ததைப் பற்றி அவனைச் ‘சிவசூடாமணி’1 எனவும், ‘சங்கர பக்தன்’2 எனவும், ‘ஈசுவரபக்தன்’ எனவும், ‘பரம மகேசுவரன்’3 எனவும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் புகழ்ந்துரைக்கின்றன. வேலூர்ப் பாளையச் செப்பேடுகள், அவன் காஞ்சி மாநகரில் சிவபெருமானுக்குக் கயிலாயத்தை யொத்த கோயில் எடுப்பித்த பெருமையுடையவன்4 என்று பாராட்டிக் கூறுகின்றன. சைவசமய குரவருள் ஒருவராகிய சுந்தர மூர்த்திகள், தம் காலத்தில் பரம மகேசுவரனாக வாழ்ந்த அப் பேரரசனை அறுபத்துமூன்று சிவனடியார்களுள் ஒருவராக வைத்துத் தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் ‘கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்’ என்று வணக்கம் கூறியிருத்தல் அறியற்பால தொன்றாம். கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நிலவிய அவ்வேந்தனே முதன் முதல் கருங்கற் கோயில் கட்டியவன் என்பது நன்கறியப் படுவதால், சைவ சமய குரவர்கள் மூவரும் ஊர்தோறும் சென்று இறைவனை வணங்கித் திருப்பதிகங்கள் பாடியருளியபோது இருந்த சிவன் கோயில்கள் எல்லாம் செங்கல்லால் கட்டப் பெற்ற கோயில்களே என்பது தெள்ளிது. இரண்டாம் நரசிம்மவர்மனும் அவனுக்குப் பிறகு ஆட்சி புரிந்த மன்னர்களும் எடுப்பித்த கருங்கற் கோயில்கள் மிகச் சிலவேயாம். அவற்றுள், சித்தூர் ஜில்லாவிலுள்ள திருத்தணிகை வீரட்டானேசுவார் கோயில் அமைப்பு, ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் ஒரு முடிந்த முடிபிற்கு வருமாறு செய்துள்ளமை ஈண்டுக் குறித்தற்குரியதாகும். அக் கோயில் கருங்கல்லால் கட்டப்பெற்றது. அதன் கருவறையின் மேலுள்ள விமானம் யானை படுத்திருப்பது போன்ற அமைப்பு உடையது. அது ‘தூங்கானைமாடம்’ என்று வழங்கப்படும். அதனை வட மொழியாளர் ‘கஜபிருஷ்ட விமானம்’ என்பர். அவ்விமானத் துடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தணிகைக் கற்றளியில், ‘திருந்து திருத்தணியற் செஞ்சடையீ சற்குக் கருங்கல்லாற் கற்றளியா நிற்க - விரும்பியே நற்கலைக ளெல்லா நவின்றசீர் நம்பியப்பி பொற்பமையச் செய்தான் புரிந்து’1 என்ற வெண்பா ஒன்றும் அதன் கீழ் ‘இவ்வெண்பா பெருமானடிகள் தாம் பாடி அருளித்து’ என்ற குறிப்பும் வரையப்பட்டுள்ளன. இவற்றால் திருத்தணிகைக் கோயிலைக் கற்றளியாக அமைத்தவன் நம்பி அப்பி என்ற தலைவன் என்பதும், இச்செய்தியைக் குறித்த இப்பாடலை இயற்றியவன் ஓர் அரசனாயிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். அக்கோயிலிலுள்ள மற்றொரு கல்வெட்டு2 அபராஜித விக்கிரவர்மனது ஆட்சியின் 18-ம் ஆண்டில் நம்பி அப்பி என்பான், அங்கு நடைபெறவேண்டிய நாள் வழிபாடு முதலானவற்றிற்கு நிவந்தமாக நிலம் அளித்ததை உணர்த்துகின்றது. எனவே, நம்பி அப்பி என்பவனது திருத்தணிகைக் கோயில் திருப்பணியைப் புகழ்ந்து வெண்பா இயற்றியவன் பல்லவ வேந்தனாகிய அபராஜிதவர்மன் என்பது தேற்றம். இவன் தன் நண்பர்களாகிய முதல் ஆதித்த சோழன், கங்கமன்னன், முதல் பிருதுவிபதி ஆகியோர் துணைகொண்டு, இரண்டாம் வரகுண பாண்டியனைத் திரும்புறம் பயப் பெரும் போரில் கி.பி. 880 - ஆம் ஆண்டில் வென்று வாகை சூடியவன்.3 ஆகவே பல்லவ அரசர்களுள் இறுதியில் இருந்தவன் இவனேயாவன். இவனது ஆட்சிக் காலமாகிய கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் திருத்தணிகையில் அமைக்கப் பெற்றுள்ள தூங்கானை மாடக் கோயில், பல்லவர் ஆட்சியின் இறுதிக் காலத்தில் தோன்றிய ஒரு புதிய அமைப்பைக் கொண்டது என்பது ஆராய்ச்சியாளர்களாகிய அறிஞர்களது கருத்து.1 எனவே தூங்கானை மாடக் கோயில்கள் எல்லாம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் கட்டப் பெற்றவை என்பதும் அவை அபராஜிதவர்மன் காலத்துக் கோயில் அமைப்பு என்ற ஒருவகைத் தனி அமைப்புடையவை என்பதும் அவர்கள் கண்ட முடிவுகளாகும்.2 இனி, சைவ சமய குரவர்களுள் ஒருவராகிய திருநாவுக்கரசு அடிகள் பாடியருளிய திருப்பதிகங்களுள் திருத்தூங்கானை மாடப் பதிகம் ஒன்று உளது. அப்பதிகத்துள் ஏழு பாடல்கள் கிடைக்காமையால், இப்போது மூன்று பாடல்களே இருக்கின்றன. அப்பாடல்களால் பெண்ணாகடம் என்னும் கடந்தையிலிலுள்ள திருக்கோயில் ‘தூங்கானை மாடம்’ என்ற பெயருடையது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவற்றுள் ஒன்று, ‘பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றி செய்யும் என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகல மின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல் துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே’ என்பதாம். ஆகவே, திருநாவுக்கரசு அடிகள் விளங்கிய காலமாகிய கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே நடுநாட்டுத் தலங்களுள் ஒன்றாகிய பெண்ணாகடத்திலிருந்த திருக்கோயில் தூங்கானைமாட அமைப்பினை யுடையதாக இருந்தது என்பது தெள்ளிது. எனவே, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் அபராஜிதவர்மன் என்ற பல்லவ மன்னர் ஆட்சிக் காலத்தில்தான் தூங்கானை மாடக் கோயில் முதலில் அமைக்கப்பட்டது என்பது எவ்வாற்றானும் ஏற்றுக் கொள்ளத் தக்க தன்று. அன்றியும், பல மாடக் கோயில்கள் திருநாவுக்கரசர் காலத்திற்கு முன்னரே நம் தமிழகத்தில் இருந்தன என்பது பல சான்றுகளால் உறுதியாதல் காணலாம். இனி, மாடக்கோயில்கள் எக்காலத்தில் தோன்றின என்பது ஆராய்தற்குரியதாகும். கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நந்திவர்மப் பல்லவமல்லன் ஆட்சிக் காலத்தில் நிலவிய வைணவ சமய குரவராகிய திருமங்கை யாழ்வார், தம் திருநறையூர்ப் பதிகத்தில் கோச்செங்கட் சோழர் சிவபெருமானுக்கு எழுபது மாடக் கோயில்கள் எடுப்பித்து உலகமாண்ட செய்தியைக் கூறியுள்ளனர். திருநாவுக்கரசரும் தம் காலத்தில் எழுபத்தெட்டு மாடக் கோயில்கள் இருந்தமையை அடைவு திருத்தாண்டகத்தில் குறிப்பிட்டுள்ளமை அறியத்தக்கதாகும். அக்கோயில்கள் எல்லாம் கோச்செங்கட் சோழர் எடுப்பித்தவையே என்பது தேவாரப் பதிகங்களால் தெளிவாகப் புலப்படுகின்றது. அவைகள் செய்குன்றுகள் மேல் அமைக்கப்பெற்றவை யாதலின் அவற்றைப் பெருங்கோயில் எனவும் மலைக் கோயில் எனவும் சைவசமய குரவர் மூவரும் தாம் பாடியருளிய திருப்பதிகங்களில் குறித்துள்ளமை உணரற் பாலது. அவ்வகையைச் சேர்ந்ததே தூங்கானைமாடமும் ஆகும். எனவே, மாடக் கோயில்களுள் ஒன்றாகிய தூங்கானை மாடம் கோச்செங்கட்சோழர் கடைச் சங்க காலத்தில் செங்கற்களாலும் சுண்ணாம்பினாலும் எடுப்பித்த கோயிலேயாகும். ஆகவே, அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே கோச்செங்கட் சோழரது ஆட்சியில் ஏற்பட்ட கோயில் அமைப்பு என்று உறுதியாகக் கூறலாம். அவ்வமைப்பைப் பின்பற்றியே பல்லவ வேந்தனாகிய அபராஜிதவர்மன் ஆட்சிக் காலத்தில், திருத்தணிகையிலுள்ள வீரட்டானேசுவரின் தூங்கானை மாடக்கோயில் கருங்கற்களால் எடுப்பிக்கப் பெற்றுள்ளது என்பது திண்ணம். எனவே, அஃது அப் பல்லவ அரசன் காலத்தில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய புதிய கோயில் அமைப்பு என்று கூறுவது சிறிதும் பொருந்தாமை காண்க. இனி, பல்லவர் ஆட்சிக்குப் பிறகு கி.பி. பத்தாம் நூற்றாண்டு முதல் நடைபெற்ற சோழர் பேரரசில்தான் தமிழகத்திலுள்ள செங்கற் கோயில்களுள் பல, கருங்கற் கோயில்களாக அமையப் பெற்றன என்பது அவ்வக் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றன. அவற்றுள், கோச்செங்கட்சோழர் முற் காலத்தில் செங்கற்களால் எடுப்பித் திருந்த மாடக் கோயில்களைப் பிற்காலத்தில் ஆட்சி புரிந்த பேரரசர்களாகிய சோழர்கள் கருங்கற்கோயில்களாக அமைத்திருத்தலை இன்றும் காணலாம். கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள இன்னம் பரிலும் பேரளத்திற்கு அண்மையிலுள்ள திருமீயச்சூரிலும் தூங்கானைமாடக் கோயில்கள் இருத்தல் அறியத்தக்கதாகும். 16. சொல் வரலாறு நம் தென்னாட்டு மொழிகளுள் தமிழ் மொழியே மிகப் பழமை வாய்ந்தது என்பது யாவரும் அறிந்ததோர் உண்மை. இம்மொழிக்குரிய இலக்கண நூலே தொல்காப்பியம் என்பது. இக்காலத்தில் கிடைத்துள்ள தமிழ் நூல்களில் இதனினும் பழமை வாய்ந்தது வேறொன்று மில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் மரபாதலில் இத்தொல்காப்பிய இலக்கண நூல் தோன்றுவதற்கு முன்னர் எத்தனையோ இலக்கிய நூற்கள் தமிழ் மொழியில் இருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். அவ்விலக்கிய நூல்கள் எல்லாம் காலப் போக்கில் அழிந்தொழிந் தமையால் எஞ்சிநின்ற பழந்தமிழ் நூல் இத்தொல்காப்பிய மேயாம். இந்நூல் எழுத்து, சொல், அகப்பொருள், புறப்பொருள் ஆகியவற்றின் இயல்புகளையும் வரலாற்றையும் நன்கு விளக்கு கின்றது. இதன் ஆசிரியர், சொல்லானது தன்னை உணர்த்துதலும் பொருளை உணர்த்துதலும் ஆகிய இருவகை இயல்பினையுடையது என்று, “பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர்” என்ற சூத்திரத்தில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, சொல்லானது பொருளை அறிவிப்பதாயிருத்தல் வேண்டும் என்பது அவர் கருத்து. அப்புலவர் பெருமான், தமது நூலுள் சொல்லதிகாரத்தில் தமிழ்ச் சொற்களுக்குரிய இலக்கணங்கள் எல்லாவற்றையும் கூறியுள்ளராயினும் அச்சொற்கள் எவ்வாறு பிறந்தன என்பதை ஆராய்ந்து அவற்றையெல்லாம் பகுத்து, பகுதிகளில் அடக்கிக் காட்டி விளக்கவில்லை. எனினும் ஒவ்வொரு சொல்லும் காரணம் பற்றியே தோன்றியுள்ளது என்றும், அக்காரணம் அறியுடையோர்க்கு மாத்திரம் தெளிவாகப் புலப்படும் என்றும், மற்றை யோர்க்குப் புலப்பட மாட்டாதென்றும் “மொழிப் பொருட்காரணம் விளிப்பத் தோன்றா” என்ற சூத்திரத்தில் அவ்வாசிரியர் உணர்த்தியிருத்தல் அறியற் பாலதாகும். எனவே, சொற்கள் காரணத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டே பொருள்களை உணர்ந்துகின்றன என்பதும், ஆகவே, எல்லாச் சொற்களும் காரணப்பெயர்களே என்பதும் அக்காரணங்கள் அறியமாட்டாதார் இடுகுறிப் பெயர்களும் மரபுப் பெயர்களும் கொள்ள நேர்ந்தது என்பதும் நன்கு புலப்படுதல் காண்க. வடமொழி இலக்கண ஆசிரியராகிய பாணினி முனிவர் என்பவர், தம் காலத்தில் வழங்கிய பல்லாயிரம் வடமொழிச் சொற்களை எல்லாம் பகுதி விகுதிகளாகப் பகுத்து அவற்றைத் தாதுபாதத்தில் சில்லாயிரம் பகுதிகளில் அடக்கியுள்ளனர். அவர் கையாண்ட முறை சொல் வரலாற்றாராய்ச்சிக்கு இன்றியமையாச் சிறப்பினதாகும். எனவே அம்முறை சொற்களின் வரலாறுகளை எளிதில் அறிந்து கொள்ளுவதற்குப் பெரிதும் பயன்படுவதொன்றாம். கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டிலிருந்த பொன்பற்றிக் காவலன் புத்தமித்திரன் - என்பார் தாம் இயற்றிய வீரசோழியம் என்னும் தமிழ் இலக்கண நூலில் வடமொழி வியாகரணத்தைப் பின்பற்றித் தாதுப் படலம், கிரியாப்படலம் அமைத்துச் சொல் வரலாற்றைக் கூற முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதில் அவ்வாசிரியர் வெற்றி பெறவில்லை யென்றே சொல்ல வேண்டும். எனினும் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டி லிருந்த பவணந்தி முனிவர் என்பார் தமிழ் இலக்கண நூலாகிய நன்னூலில் சொற்களைப் பகுதி விகுதிகளாகப் பகுத்துச் சொல் வரலாற்றை ஓரளவு விளக்கியுள்ளனர். ஆனால் அவரது நூல் தமிழ் மொழியிலுள்ள பல்லாயிரக்கணக்கான சொற்களுக்கு வரலாறு கூறாமல் சிலவற்றிற்கு மாத்திரம் வரலாறு உரைத்து அவ்வளவில் அமைந்துவிடுகின்றது. அவருக்குப் பிறகு தமிழ் இலக்கணம் எழுதிய ஆசிரியர்கள் அவர் கூறியவற்றைத் தாமுங் கூறினரேயன்றி, அம்முறையைப் பின்பற்றி ஆராய்ச்சி செய்து புதிதாக ஒன்றுஞ் சொல்லவில்லை. மேனாட்டறிஞருள் சிலர் அம் முயற்சியில் ஈடுபட்டுத் தம் பேருழைப்பினால் வெற்றி எய்தியுள்ளனர். அவர்களுள், பிஷப் கால்டுவெல், கிரையர்சன் என்போர் குறிப்பிடத்தக்கவராவர். அவர்கள் தென்னாட்டு மொழிகளை நன்கு பயின்றவர்களாதலின் தாம் நடுநிலையுடன் ஆராய்ந்து கண்ட உண்மைகள் பலவற்றை வெளியிட்டுள்ளனர். அவற்றை யெல்லாம் ஊடிஅயீயசயவiஎந ழுசயஅஅயச டிக வாந னுசயஎனையைn டுயபேரயபநள, டுiபேளைவiஉ ளுரசஎநல டிக ஐனேயை என்ற ஆராய்ச்சி நூல்களுள் காணலாம். அவை அனைத்தும் பல நூற்றாண்டுகளாக மறைந்து கிடந்த அரிய செய்திகள் என்பதில் ஐயமில்லை. தென்னாட்டில் இப்பொழுது வழங்கும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழ் மொழியிலிருந்து தோன்றியவை என்பது அந்நூல்களில் அன்னோர் கூறியுள்ள முடிபாகும். வடமொழிப் புலமையும் மொழி நூற் புலமையும் ஒருங்கே பெற்றிருந்த காலஞ்சென்ற சேடகிரி சாத்திரியார் அவர்கள் தாம் எழுதியுள்ள “ஆந்திர சப்த தத்துவம்” என்ற நூலில் தெலுங்கிற்குத் தாய் மொழி தமிழே என்று கூறியிருப்பது அறியத்தக்கது. அன்றியும், காலஞ்சென்ற பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் “மனோன்மணீயம்” என்னும் நாடக நூலில் தமிழ்த் தெய்வ வணக்கம் கூறுமிடத்து, “கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலை யாளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்” என்று அவ்வுண்மையை வலியுறுத்தல் காண்க. உலகில் பேசப்படும் மொழிகள் எல்லாம் மக்களால் உண்டுபண்ணப்பட்ட ஆக்கப் பொருள்களேயாம். மக்கள் எல்லோரும் ஒருங்குகூடி வாழ வேண்டியிருத்தலால் அவர்கள் தத்தம் எண்ணங்களை ஒருவருக்கொருவர் வெளியிட்டுக் கொள்வது இன்றியமையாததாயிற்று. அவர்கள் முதலில் உறுப்புக்களின் சைகைகளாலும் பிறகு ஒலிக் குறிப்புகளாலும் தம் கருத்துக்களைப் பிறருக்கு அறிவித்தனர். அதன் பின்னர், சில சில காரணம்பற்றிச் சொற்கள் வழங்கத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் வழங்கத் தொடங்கிய சொற்களுள், வெறுப்பு, வெகுளி, உவகை, வியப்பு, அவலம், அச்சம் முதலான சுவைகளைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றிய சில குறிப்புச் சொற்களும், அம்மை, அப்பன் முதலான முறைச் சொற்களும், ஒன்று, இரண்டு, முதலான எண்களை உணர்த்துஞ் சொற்களும், தலை, கண், வாய், கை, கால் முதலான உறுப்புக்களை உணர்த்துஞ் சொற்களும், யான், யாம், நீ, நீவிர் முதலான தன்மை முன்னிலைப் பெயர்களும் முதலில் தோன்றிப் பிறகு அவற்றின் அடியாகப் பற்பல சொற்கள் உண்டாகி வழக்காற்றில் வந்திருத்தல் வேண்டும் என்பது மொழிநூல் வல்லார் துணிபாகும். பொதுவாக மக்கள் எல்லோரும் சுவையுணர்ச்சி வாய்க்கப் பெற்றவர்களாதலின் அவ்வுணர்ச்சி விளைக்கத் தக்க பொருள்கள் தம் எதிரே தோன்றும்போது சில குறிப்புச் சொற்களைத் தாமாகக் கூறத் தொடங்குவர். அவ்வாறு வெறுப்புச் சுவையில் “சீ” என்ற சொல்லும், வெகுளிச் சுவையில் “போ” என்ற சொல்லும், உவகைச் சுவையில் “வா” என்ற சொல்லும் எழுந்தன எனலாம். அங்ஙனமே, “ஐ” என்பது வியப்பினாலும், “ஓ” என்பது அவலத் தினாலும் “ஐயோ” என்பது அச்சத்தினாலும் தோன்றியவை என்றுணர்க. இனி, முறையை உணர்த்தும் சில சொற்களைப் பார்ப்போம். தந்தையைக் குறிக்கும் அத்தன் என்ற சொல் இக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் அரிய சொல்லாகப் போய்விட்டது. “அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே” என்று அப்பர் அடிகளும், “அத்தாவுனக் காளாய்இனி அல்லேன் எனலாமே” என்று சுந்தரமூர்த்திகளும், “அத்தன் எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” என்று மணிவாசகப் பெருமானும் கூறியிருத்தல் காண்க. முற்காலத்தில் அத்தன் என்ற இச்சொல் பொதுமக்கள் எளிதிற் கையாண்ட உலக வழக்குச் சொல்லாக இருந்திருத்தல் வேண்டும் என்பது சில ஏதுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. தமிழிலிருந்து பிரிந்த வழிமொழியாகிய மலையாளத்தில் தந்தை என்ற பொருளிலேயே இச்சொல் “அச்சன்” என்று இந்நாளில் வழங்குகிறது. அன்றியும் இவ்வொரு சொல்லே தமிழ்மொழி வெவ்வேறு முறைச் சொற்கள் தோன்றுவதற்குக் காரணமாக நிற்றல் அறியற்பாலது. அத்தன் என்பது தந்தையை உணர்த்தும் பழந்தமிழ்ச் சொல் என்பது முன்னர்க் கூறப்பட்டது. அத்தனுடைய மனைவி ஆத்தாள் எனப்பட்டனள். தாயை ஆத்தாள் என வழங்குவதை இந்நாளிலும் காணலாம். “அப்பன் மலைக்குறவன், ஆத்தாள் மலைநீலி” என்று புலவர் பெருமக்கள் பழந்தமிழ்ப் பாடலிலும் இச்சொல் பயின்று வருதல் உணர்க. அத்தனுடைய உடன் பிறந்தாள் அத்தை என்று வழங்கப் பெற்றனள். அத்தையின் மகன் அத்தான் எனப் பட்டான். அவ்வத்தையின் கணவர் அத்தையன்பர் ஆயினார். அத்தையன்பர் என்ற சொல்லே இக்காலத்தில் அத்திம்பேர் என்று சிதைந்து வழங்குகின்றது. அத்தையின் மகளும் அத்தாச்சி என்று கூறப்பட்டள். தாயை உணர்த்தும் அம்மை என்பது ஒரு பழந் தமிழ்ச் சொல். அஃது இந்நாளில் அம்மா எனவும், அம்மாள் எனவும் வழங்குகிறது. முற்காலத்தில் பொதுமக்களிடையே வழங்கி வந்த அம்மை என்னும் சொல் இக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் காணக்கூடிய அருஞ் சொல்லாயிற்று. ஆயினும், இச் சொல்லின் அடியாகத் தோன்றிய முறைப் பெயர்கள் இன்றும் உலக வழக்கில் இருந்து கொண்டிருக்கின்றன. அம்மையின் உடன் பிறந்தான் அம்மான் என்று கூறப்பெற்றனன். அம்மானுடைய மனைவி அம்மாமி என்று வழங்கப் பெற்றனள். அம்மானுடைய மகன் அம்மான் சேய் என்று சொல்லப்பட்டனன். அம்மான் சேய் என்ற சொல் இந்த நாளில் அம்மாஞ்சி என்று சிதைந்து இடுகுறிப் பெயர் போல் வழங்குகின்றது. அம்மாமி என்ற சொல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப் பெற்ற ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் “அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி” என்ற அடியில் பயின்று வருதல் காண்க. இனித் தந்தையைக் குறிக்கும் தகப்பன் என்ற சொல் இந்நாளில் எவ்விடத்தும் மிகுதியாக வழங்கி வருதலை யாவரும் அறிவர். இச்சொல் இப்பொருளில் எவ்வாறு வழங்கத் தொடங்கியது என்பதைப் பார்ப்போம். அப்பன் என்ற சொல் உலக வழக்கிலும் நூல் வழக்கிலும் தந்தையை உணர்த்தி வருதலை நாம் அறிவோம். தம் அப்பன் என்ற இரு சொற்கள் சேர்ந்து தமப்பன் என்றாகி, முற்காலத்தில் தந்தையைக் குறிக்கும் நிலையில் உலகவழக்கில் வந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது. தமப்பன் என்ற சொல்லே கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டுகளிலே தமிழ்நாட்டில் யாண்டும் பெருக வழங்கி வந்தது என்பது ஆங்காங்குக் காணப்படும் கல்வெட்டுக்களால் நன்கு வெளியாகின்றது. பிறகு, நாளடைவில் தமப்பன் என்பது தகப்பன் எனறு பேச்சு வழக்கில் மாறிப்போய் பின்னர் அச்சொல் நூல்களிலும் ஏறிவிட்டது. அங்ஙனமே தம் ஆய் என்பது தாய் என்று மருவி வழங்குகிறது. தமக்கு முன் பிறந்தாளைத் தமக்கை என்றும் அக்காள் என்றும் வழங்குவர். தம் + அக்கை என்பதே இப்பொழுது தமக்கை என்று வழங்குவது உணரற்பாலது. ஐயன் என்ற சொல் உடன் பிறந்தாருள் மூத்தோனைக் குறிக்கும் என்பது, “கன்னின்றான் எந்தை களப்பட்டா ரென்னையர் முன்னின்று மொய்விந்தான் என் கணவன்” என்ற புறப்பொருள் வெண்பமாலைப் பாடலால் நன்கு தெளியப்படும். தந்தைக்குப் பிறகு தமையன் குடும்பத் தலை வனாயினமை பற்றி அவன் அண்ணல் என்று பின் பிறந்தோரால் கூறப்பட்டன. அச்சொல் பின்னர் அண்ணன் என வழங்கு வதாயிற்று. அண்ணல் என்பது தலைவனை உணர்த்தும் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களிற் காணலாம். தம்+பின் என்பதில் இறுதியிலுள்ள னகர வொற்றுப் போய்த் தம்பி என்றாகித் தமக்குப்பின் பிறந்தவனை உணர்த்துதல் காண்க. இனிச் சில சொற்கள் தாம் குறிக்கும் பொருள்களின் பழைய வரலாற்றை உணர்த்துவனவாய் அமைந்துள்ளன. அத்தகைய சொற்களுள் சிலவற்றை ஆராய்வோம். குறுணி என்ற அளவினைக் கொண்ட கருவி முற்காலத்தில் மரத்தால் செய்யப் பட்டிருந்தமையால் அது மரக்கால் என்னும் பெயர் பெற்றது. இரும்புத் தகட்டினாலும் பித்தளைத் தகட்டினாலும் செய்யப் பெற்று, இக்காலத்தில் மக்களால் கையாளப்படும் குறுணி யளவுக் கருவியும் மரக்கால் என்றே சொல்லப்பட்டு வருதல் குறிப்பிடத்தக்கது. எனினும், மரக்கால் என்ற சொல் அக்கருவியின் பழையநிலையை அறிவித்தல் காண்க. ஓலை, தோடு என்ற சொற்கள் தமிழ்நாட்டு மகளிர் அணிந்து கொள்ளும் காதணிகளாகும். அவர்கள் பனையோலைச் சுருளையும் தென்னையோலைச் சுருளையும் முன்னாளில் காதணிகளாகக் கொண்டிருந்த காரணம் பற்றி அவை ஓலை எனவும், தோடு எனவும் சொல்லப்படுகின்றன. இக்காலத்தில் பொன்னாலும் மணியாலும் செய்யப் பெற்ற காதணிகளும் ஓலை எனவும் தோடு எனவும் சொல்லப்படுகின்றன. ஆகவே, ஓலை, தோடு என்னுஞ் சொற்கள் அவ்வணிகளின் பழைய வரலாற்றை உணர்த்துதல் அறியத்தக்கது. அவ்வாறு வழங்குஞ் சொற்கள் பல உள்ளன. அவற்றை யெல்லாம் நுணுகி ஆராய்ந்து பார்ப்போர் எளிதிற் கண்டு கொள்ளலாம். அரசாங்க மாறுதல்களால் நாட்டில் பேசப்படும் மொழியில் பிறமொழிச் சொற்கள் கலத்தலும் உண்டு. நம் தமிழ் மொழியில் எத்தனையோ சொற்கள் அவ்வாறு கலந்து விட்டன. நம் நாட்டில் முகம்மதியர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் பல உருதுமொழிச் சொற்கள் பேச்சு வழக்கிலும் அரசாங்க நிலையங் களிலும் நிலையற்றுப் போயின. அவற்றுட் சில, தமிழ் இலக்கியங்களிலும் இடம் பெற்று விட்டமை வியப்பிற்குரியதாகும். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த புலவர் பெருமானாகிய அருணகிரிநாதர் என்பவர், தாம் இயற்றிய திருப் புகழில் “சபாஷ்” என்ற சொல்லை, ‘கற்பகந் திருநாடுயர் வாழ்வுறச் சித்தர் விஞ்சையர் மாகதர் சபாசெனக் கட்ட வெங்கொடு ஆர்கிளை வேரற விடும்வேலா’ என்ற வரியில் எடுத்தாண்டிருத்தல் அறியற்பாலதாம். அன்றியும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டிலிருந்த குமர குருபர சுவாமிகள் என்ற பெரியார், தாம் இயற்றிய மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழில், “குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு குமரனை முத்துக் குமரனைப் போற்றுதும்” என்று “சலாம்” என்ற சொல்லை அமைத்துப் பாடியிருத்தல் காண்க. எனவே ‘சலாம்’ ‘சபாஷ்’ என்ற உருது மொழிச் சொற்கள் புலவர் பெருமக்கள் மூலமாக இற்றைக்கு 300,400 ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்த தமிழிலக்கியங்களில் இடம் பெற்றமை உணரற்பாலதாம். இனிப் பேச்சு வழக்கிலுள்ள மொழி, மக்கள் நாகரிகம் வளர வளரத் தானும் புதிய புதிய சொற்களை ஏற்று வளர்ந்து கொண்டே போகும் இயல்புடையதாகும். அன்றியும், ஆட்சி மாறுதலால் ஏற்பட்ட அரசியல் முறை களுக்கு ஏற்றவாறு பற்பல சொற்கள் புதியவையாக அமைக்கப் பெறுதலும் உண்டு. அவ்வாறு நம் தமிழ் மொழியிலும் பல சொற்கள் தோன்றியுள்ளன எனலாம். அத்தகைய சொற்களைக் கடிந் தொதுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பண்டைத் தமிழ் இலக்கண ஆசிரியர்களின் கருத்தாகும். “கடிசொ லில்லை காலத்துப் படினே” என்று ஆசிரியர் தொல்காப்பியனாரும், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று நன்னூலாசிரியராகிய பவணந்தி முனிவரும் கூறியிருப்பது இக்கருத்தில் உட்கொண்டேயாம். அத்தொல் லாசிரியர்களின் விரிந்த மனப்பான்மையும் பேரறிவுடைமையும் பெரிதும் போற்றற்குரியவனவாம். நம் தமிழ்மொழியானது காலநிலைக்கேற்பப் புதிய புதிய சொற்களை ஏற்றுக் கொண்டு பெரிதும் வளர்ச்சி யெய்தி வருகின்றது என்பது நன்கு விளங்குதல் காண்க. 17. சம்புவராய மன்னன் வடக்கில் திருமால் எழுந்தருளியுள்ள வேங்கட மலையையும் தெற்கில் குமரி முனையையும் கிழக்கிலும் மேற்கிலும் இரு பெருங்கடலையும் எல்லைகளாக உடைய இவற்றின் பரப்பு முற்காலத்தே தமிழகம் என்னும் பெயரினை உடையதாக இருந்தது. இத்தமிழகம் சேரமண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுச் சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தர்களால் ஆளப்பெற்று வந்தது. இற்றைக்கு ஆயிரத் தொண்ணூறு ஆண்டுகட்கு முன்னர், சோழ மண்டலத்தின் ஒரு பகுதி, ஒரு தனி மண்டலமாகப் பிரிக்கப்பட்டுத் தொண்டை மண்டலம் என்னும் பெயர் எய்தியது. இத்தொண்டை மண்டலத்தை அந்நாளில் அரசாண்டவர் தொண்டைமான் மரபினர் ஆவர். இவர்கள் சோழரின் வழியினர். இவர்கள் தம் குடி முதல்வராகிய சோழரைப் போல் ஆத்தி மாலையைத் தம் அடையாளமாகக் கொள்ளாமல் ஒரு காரணம் பற்றித் தொண்டை மாலையைத் தம் அடையாள மாகக் கொண்டமையின் ‘தொண்டை மான்கள்’ என்று அழைக்கப் பெற்றனர். இவ் வேந்தர்களுள் முதல்வன் தொண்டைமான் இளந்திரையன் என்பவன்; இவன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆட்சி புரிந்த கரிகாற் பெருவளத்தானது பெயரன்; சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனது மகன்; கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் பெருமானால் பாடப்பெற்ற ‘பெரும் பாணாற்றுப் படை’ என்னும் பிரபந்தங் கொண்டவன்; செந்தமிழ்ப் புலமையில் சிறந்தவன்; திருமால் பக்தியில் ஒப்பற்றவன்; இவனும் இவனது வழித் தோன்றல்களும் காஞ்சி மாநகரைத் தலை நகரமாகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் மக்களாகப் பிறந்தோர் உலகில் அடையக்கூடிய உயர் நிலைக்கு எல்லையாகத் ‘தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’ என்னும் பழமொழியில் வைத்து இன்னும் பாரட்டப் பட்டு வருதல் காண்க. இவர்களது ஆட்சி, கி.பி. நான்காம் நூற்றாண்டு வரையில் தொண்டைமண்டலத்தில் நடைபெற்றது. அந் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர் விருப்பம் வாய்ந்த பல்லவர்கள் வடக்கேயுள்ள ஆந்திர நாட்டிலிருந்த தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர். அவர்கள் முதலில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். பின்னர் தொண்டை மண்டலத்தையும் பிடித்துக் கொண்டு அரசாளத் தொடங்கினர். பல்லவர்களும் தொண்டை மண்டலத்தை அரசாண்ட காரணம் பற்றித் தொண்டைமான்கள் என்றழைக்கப்பெற்றனர். கி.பி. 844 முதல் 867 வரை யாண்ட தெள்ளாற்றெறிந்த நந்திவர்மப் பல்லவன்மேற் பாடப்பட்ட நந்திக் கலம்பகத்திலும் அவ் வேந்தன் ‘தொண்டையந்தார்’ மன்னன் என்றும் ‘தொண்டைமான்’ என்றும் புகழப்பெற்றிருத்தலுக்குக் காரணம் இதுவேயாகும். பல்லவர்களது ஆளுகையும் தொண்டை மண்டலத்தில் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவெய்தியது. ஆயினும் ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் நிகழ்ந்த அவர்களது ஆட்சிக் காலம் தமிழ் நாட்டுச் சரித்திரத்தில் ஒரு சிறந்த பகுதியாகும். அக்காலத்தில் தமிழக வேந்தர்களுள் ஒரு பகுதியினராகிய சோழர்கள் தம் நாட்டை இழந்து தாழ்ந்த நிலையை எய்தினர். பல்லவர்கள் நெடுமுடி வேந்தர்களாகவும் உள்நாட்டுத் தலைவர்களிடத்தும் திறை வாங்கும் பெருமை யுடையவர்களாகவும் விளங்கினர். அவர்களது ஆட்சிக் காலத்தேதான் சைவ சமய ஆசாரியர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் முதலான பெரியோர்களும் பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை யாழ்வார் முதலான வைணவ சமய ஆசாரியர்களும் நம் தமிழகத்தில் வாழ்ந்தனர். ஆகவே அப்பெரியோர்கள் எல்லாம் அரிய பெரிய அற்புதங்களை நிகழ்த்திச் சைவ வைணவ சமயங்களை வேரூன்றுமாறு செய்து அவற்றை எங்கும் பரவச் செய்த ஒரு கால விசேடமென்று அப்பகுதியைக் கூறுவது சாலப் பொருந்துமென்க. இனி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவர்களது தொண்டை மண்டலம் பிற்காலச் சோழர்களிள் முதல்வனாகிய விஜயாலயனது புதல்வன் முதலாம் ஆதித்த சோழனால் வென்று கொள்ளப்படவே, பல்லவர்களும் குறுநில மன்னர் ஆயினர். தொண்டை மண்டலமும் சயங்கொண்ட சோழமண்டலம் என்னும் புதியதோர் பெயரைப் பெற்றது. அந்நாளில் சோழ மன்னர்களுக்குத் திறை செலுத்தி வந்த பல்லவர்குலச் சிற்றரசர் களும், தலைவர்களும் தொண்டை மண்டலத்தில் பல பகுதிகளில் வசித்து வந்தனர். அவர்களுள் பெரும்பாலோர் சோழ மன்னர்களின் அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் நிலவியதோடு நில உண்ணாடுகளையும் தனியூர்களையும் ஆட்சி புரியும் உரிமையும் பெற்றிருந்தனர். இங்ஙனம் வாழ்ந்து வந்த பல்லவர் குலச் சிற்றரசர்களுள் சம்புவராயர் என்ற பட்டப் பெயருடன் விளங்கியவர்களும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தனர் என்பது தெரிகிறது. இவர்களது ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி செங்கற்பட்டு, வட ஆற்காடு ஜில்லாக்களைக் கொண்டுள்ளதாயிருந்தது. இவர்கள் சோழ மன்னர்களுக்குத் திறை செலுத்தி வந்தனர். கல்வெட்டுக்களால் அறியப்படும் சம்புவராய மன்னர்களுள் செங்கேணி மிண்டான் அத்திமல்லன் சம்புவராயன் என்பவனே மிகப் பழமையானவன். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 8-ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1186) திருவல்லமுடைய மாகதேவருக்கு குற்றத் தண்டம், திரிசூலக் காசு இவற்றால் கிடைக்கும் வருவாய்களைக் கொடுத்தனன் என்று ஒரு கல்வெட்டு கூறுகின்றது.1 இக் கல்வெட்டின் இறுதியில் செங்கேணிகள் வம்சம் உள்ளவரைக்கும் இத் தர்மத்தைச் செய்யாமல் நிறுத்துவோர் கங்கைக் கரையிலும் குமரிக் கரையிலும் குரால் பசுவைக் கொன்றவனது பாவத்தையடைவர் என்று வரையப் பட்டுள்ளது. இதனால் செங்கேணி என்பது குடிப் பெயர் என்பது வெளியாகிறது. மூன்றாம் குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டில் (கி.பி. 1189) செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைய பெருமானான விக்கிரம சோழச் சம்புவராயன் பல வரிகளால் கிடைக்கும் வருவாய்களைத் திருவல்ல முடையார்க்கு அளித்தனன்.1 முன்னவனுக்குப் பின்னவன் யாது முறையுடை யான் என்பது இப்போது புலப்படவில்லை. ‘சோழச் சம்புவராயன்’ என்னும் சொற்றொடர் இம் மரபினர் அப்போது சோழ மன்னர்க்குக் கப்பம் செலுத்தி வந்த சிற்றரசராயிருந்தனர் என்பதைப் புலப்படுத்துகின்றது. அன்றியும் பல வரிகளால் கிடைக்கும் வருவாய்களை அவன் திருவல்லமுடையார்க்கு அளித்திருப்பது அப்பகுதி அவனது ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதை நன்கு விளக்குகின்றது. இவ்வரசனது புதல்வன் செங்கேணி விராசனி அம்மையப்பன் தனி நின்று வென்றான் தன்வசி காட்டுவான் அழகிய சோழனான எதிரிலி சோழச் சம்புவராயன் என்போன். இதனைக் காஞ்சி புரத்திலுள்ள அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டொன்று ‘அம்மையப்பன் மகன் சோழப் பிள்ளையான அழகிய சோழச் சம்புவராயன்’ என்றுரைப்பதால் நன்குணரலாம்.2 இவனது கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 27-ஆம் ஆண்டாகிய கி.பி. 1205-ல் தான் இவன் ஆட்சி புரியத் தொடங்கியிருத்தல் வேண்டும். இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் ஆட்சியுரிமையைப் பற்றிய விவாதம் உண்டாயிற்று. பராக்கிரம பாண்டியனுக்கு இலங்கை மன்னனாகிய பராக்கிரமபாகு என்பான் துணைப்படை அனுப்பினான். இலங்கைப் படைக்குத் தலைவனாக வந்தவன் இலங்காபுரித் தண்டநாயகன். குலசேகர பாண்டியனுக்கும் சோழ மன்னர்கள் உதவிபுரிந்தனர். சோழர்களது படைக்குத் தலைமை வகித்து மகாசாமந்தனாகச் சென்றவன் நமது எதிரிலி சோழச் சம்புவராயனது புதல்வனாகிய திருச்சிற்றம் பல முடையான் பிள்ளைப் பல்லவராயன் என்பவனேயாம். பாண்டிய நாட்டில் இராமேச்சுரம், திருக்கானப்பேர், தொண்டி, பொன்னமராவதி, மணமேற்குடி முதலான இடங்களில் இவ்விரு படைக்கும் பெரும் போர்கள் நிகழ்ந்தன. முதலில் சிங்களப்படை வெற்றி பெற்றது. அதன் பயனாகப் பல நகரங்களும், கோயில்களும் இடிக்கப்பட்டன. இச்செய்திகளைக் கேள்வியுற்ற எதிரிலி சோழச் சம்புவராயன் பெரிதும் வருந்திக் காஞ்சிபுரத்திற் கருகிலுள்ள ஆரப்பாக்கத்தில் எழுந்தருளியிருந்த உமாபதி தேவராகிய ஞானசிவ தேவரிடம் சென்று இச்செய்திகளை விண்ணப்பித்துச் ‘சிங்களப்படை நம் சோழ நாட்டிற் புகுந்தால் பல ஆலயங்கள் அழிக்கப்பட்டு விடுமே; அந்தணர் துன் புறுவரே; ஆதலால் அச்சிங்களப்படை தோற்றோடுமாறு தாங்கள் எவையேனும் உபாயங்கள் செய்தருள வேண்டும்’ என்று கூறினார். இதனைக் கேட்ட அப்பெரியார் ‘அன்னோர் இராமேச்சுரம் கோயில் வாயிலை இடித்துச் சிவபெருமானுக்கு நித்திய பூசை நடைபெறாதவாறு இடையூறு புரிந்தனர் என்று கேள்வியுற்றேன்; எனவே அவர்கள் சிவாபராதம் செய்தவர் ஆவர். ஆகவே அவர்கள் போரில் தோல்வி யெய்தி ஓடுமாறு தக்கவழி தேடுவேன்’ என்றுரைத்து இருபத்தெட்டு நாட்கள் இரவும் பகலும் தவம் புரிந்தனர். அப்போது திருச்சிற்றம்பல முடையான் பிள்ளைப் பல்வராயனிடமிருந்து ‘இலங்காபுரித் தண்ட நாயகனும் சகத் விசயதண்ட நாயகனும் தோல்வியுற்று இலங்கைக்கு ஓடிப்போயினர்’ என்று எதிரிலி சோழச் சம்புவராயனுக்கு ஒரு திமுகம் வந்தது. இதனைக் கண்ட சம்புவராயன் பெரிதும் மகிழ்ந்து ஆரப்பாக்கத்தி லிருந்த சுவாமிகளிடம் கொண்டுபோய்க் காட்டவே, அவரும் உவகையுற்றனர். பின்னர் இவ்வேந்தன் ஆரப்பாக்கம் என்னும் கிராமத்தை அப்பெரியாருக்கு அளித்தனன். இச்செய்திகளை ஆரப் பாக்கத்திலுள்ள கல்வெட்டுக்களில் விளக்கமாய்க் காணலாம்.1 இவ்வேந்தன் மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தும் அவனது சிற்றரசர்களுள் ஒருவனாயிருந்தனன். விருஞ்சிபுரத்திற் கருகிலுள்ளதும் பொய்கை என்று தற்காலத்தில் அழைக்கப்படுவது மாகிய இராஜேந்திர சோழநல்லூர் சித்திரமேழி மலை மண்டல விண்ணகரான அருளாளப் பெருமாளுக்குக் குமாரமங்கலம், புத்தூர், அத்தியூர் ஆகிய கிராமங்களைக் கி.பி. 1238, 1239, 1243ஆம் ஆண்டுகளில் மலைமண்டலத்து வணிகன் இராம கேரளச்செட்டியிடம் இம்மன்னன் பொன் பெற்றுக் கொண்டு தேவதானமாகவிட்டான் என்று பொய்கையிலுள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.1 அத்தி மல்லன் சம்புக்குலப் பெருமாளான இராஜகம்பீரச் சம்புவராயன் என்பானும் மூன்றாம் இராஜ ராஜ சோழனது ஆட்சியின் 20-ஆம் ஆண்டாகிய கி.பி. 1236-ல் ஆட்சி புரிந்து கொண்டிருந்தான் என்று தெரிகிறது. இவன் எதிரிலி சோழச் சம்புவராயனது தம்பியாயிருத்தல் வேண்டுமென்று ஊகிக்கப் படுகிறது. இவ்விரு வேந்தரும் ஒரே காலத்தில் ஆட்சி புரிந்து வந்துள்ளனர் என்பது பல கல்வெட்டுக்களால் நன்கறியக் கிடக்கின்றது. நமது இராஜ கம்பீர சம்புவராயன் குன்றத்தூரை இராஜகம்பீர நல்லூர் என்னும் பெயருடன் நிலவுமாறு பங்களராயர்க்குக் காணியாகக் கி.பி. 1236-ல் அளித்தான். இச்செய்தியை உணர்த்தும் கல்வெட்டொன்று வைகவூர்த் திருமலையிற் காணப்படுகின்றது. அதனை அடியில் குறிக்கின்றேன். “ஸ்வஸ்தி ஸ்ரீ திருபுவனச் சக்ரவர்த்திகள் ஸ்ரீ இராஜராஜ தேவர்க்கு யாண்டு இருபதாவது முதல் ஜயங்கொண்ட சோழ மண்டலத்துத் தமனூர் நாட்டு வீரன் பாக்கத்து இலாலப் பெருமான் மகள் ஆண்டான்கள் பங்களராயர்க்குப் பல்குன்றக் கோட்டத்துப் பங்களநாட்டு நடுவில்... க் குன்றத்தூரான ராஜகம்பீரநல்லூர் இவர்க்குக் காணியாகக் கீழ் நோக்கின கிணறும் மேனோக்கின மரமும் நாற்பாலெல்லையும் விற்றொற்றிப் பரிக்கிரயத்துக்கு உருத்தாவதாகக் கொடுத்தோம். அத்திமல்லன் சம்புகுலப் பெருமாளான ராஜ கம்பீரச் சம்புவராயனேன்.”2 இக்கல்வெட்டால், இராஜ கம்பீரச் சம்புவராயன் மூன்றாம் இராஜராஜ சோழனது ஆட்சிக்குட்பட்டிருந்த, ஒரு குறுநில மன்னன் என்பதும், ‘சம்புகுலப் பெருமாள்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவன் என்பதும் நன்கு விளங்குகின்றது. இராஜ கம்பீரச் சதுர்வேதி மங்கலம் எனவும் சம்புகுலப் பெருமாள் அகரம் எனவும் அழைக்கப்படும் ஊர்கள் இம் மன்னன் பெயரால் அமைக்கப்பெற்ற ஊர்கள் போலும். இராஜகம்பீர நல்லூரும் இராஜகம்பீரச் சதுர்வேதி மங்கலமும் வேறு வேறு ஊர்களாதல் உணர்க. இனிச் சம்புவராய மன்னர்களுள் இராஜகம்பீரச் சம்புவராயனே மிகவும் பெருமையுற்றவன். இவ்வேந்தன் காலத்தில் இவனது இராச்சியம் பெருகியதோடு ‘இராஜ கம்பீரவிராஜ்ஜியம்’ என்னும் பெயரையும் எய்தியது. இவன் படை வீட்டில் ஒரு மலைக்கோட்டை அமைத்து அதனைத் தனக்கு உறைவிடமாகவுஞ் செய்து கொண்டான். கி.பி. 1258ல் படை வீட்டில் வெட்டப் பெற்றுள்ள ஒரு கல்வெட்டு இவன் சோழர்களுக்குக் கப்பஞ் செலுத்தாமல் தனி அரசு புரிந்தான் என்று கூறுகின்றது. இதனால் இவன் காலத்தேதான் சம்புவராயர்கள் நெடு முடிவேந்தராய் ஆட்சிபுரியும் பெருமையை அடைந்தனர் என்பது நன்கு வெளியாகின்றது. இவர்களது இராச்சியமும் ‘தொண்டை மண்டலத்துப் படை வீட்டி ராஜ்யம்’ என்று புகழப்படும் சிறப்பையும் அடைந்தது. படை வீட்டினுள் அம்மையப்பேச்சுரர் ஆலயம் எடுப்பித்து அதற்கு நிபந்தங்கள் விட்டவனும் இவ்வேந்தனேயாவன். இவனது தந்தையாகிய அம்மையப்பன் கண்ணுடைய பெருமாளான விக்கிரம சோழச் சம்புவராயனது பெயரே இவ்வாலயத்திற்கு இடப்பட்டது போலும். சோழ மன்னர்களது ஆட்சிக் காலங்களில் எடுக்கப்பெற்ற இராஜராஜேச்சுரம், கங்கை கொண்ட சோழேச்சுரம், விக்கிரம சோழேச்சுரம் என்ற ஆலயங்கள் எய்தியுள்ள பெயர்களையும் ஆராய்ந்து நோக்குங்கால் இவ்வுண்மை நன்கு புலப்படும். இனி இவனுக்குப் பின்னர் அரசுரிமை எய்தியவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. ஆனால் இவனுக்குப் பின்னர்ப் பட்டம் பெற்றவன், தனது சயேச்சையை இழந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கேற்ப, காஞ்சீபுரத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள சில இடங்களிலும் தெலுங்கு நாட்டுச் சோழர்களது கல்வெட்டுக்களும் சேந்தமங்கலத்துப் பல்லவனாகிய கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுக்களும், அக்காலத்தில் காணப்படுகின்றன. எனவே, சம்புவராயர்களும் சில காலம் இவர்களுக்குத் திறை செலுத்தும் நிலையிலிருந்தனரோ என்று ஐயுற வேண்டியிருக்கின்றது. ஆயினும் கி.பி. 1314-15-ல் வீரசோழச் சம்புவராயன், வீரசம்புவராயன் என்போரது கல்வெட்டுக்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. இன்னோர் சுயேட்சையுற்று வாழ்ந்து வந்தனர் என்று தெரிகிறது. அன்றியும் கி.பி. 1322-ல் சகலலோக சக்கரவர்த்தியென்று மண் கொண்ட சம்புவராயன் பட்டம் சூட்டப்பெற்று அரசாளத் தொடங்கினான். இவன் சக்கரவர்த்தி என்ற பட்டம் பெற்றிருந்தாலும் ‘வென்று மண் கொண்ட’ என்ற அடைமொழிகளோடு விளங்குவதாலும் இவனே தெலுங்கு நாட்டுச் சோழர் முதலானோரைப் போரில் வென்று மீண்டும் சுயேட்சையுற்றுத் தனியரசு புரிந்தவனாதல் வேண்டும் என்பது நன்கு புலப்படுதல் காண்க. இவன் கி.பி. 1338 வரை ஆட்சி புரிந்தான். இவன் காலத்தில் படை வீட்டு ராஜ்யம் மகோன்னத நிலையிலிருந்தது. இவனுக்குப் பிற வேந்த ரெல்லாம் அஞ்சுவாராயினர். விஜயநகர வேந்தர்களும் தமக்குத் தெற்கிலுள்ள சம்புவராயர்களைக் கண்டு அஞ்சி அவர்களை எவ்வாறாயினும் தம் சிற்றசர்களாக்கித் திறை செலுத்தச் செய்ய வேண்டுமென்று காலங்கருதிக் கொண்டிருந்தனர். இன்னோரது முயற்சி வென்று மண் கொண்ட சம்புவராயர் என்பானது ஆட்சியுள்ள வரையில் பயன்படவில்லை. கி.பி. 1338-ல் அவ்வேந்தன் விண்ணுலகெய்தவே அவனது புதல்வன் இராஜ நாராயண சம்புவராயன் முடி சூட்டப் பெற்றான். இவன் நாடாட்சியை எய்திய பின்னர்ச் சகலலோக சக்கரவர்த்தி இராஜ நாராயண சம்பவுராயன் என்று அழைக்கப்பெற்றான். இவன் கி.பி. 1339 முதல் 1366 வரை ஆட்சி புரிந்தான். இவனது கல்வெட்டுக்கள் காஞ்சி, மாமல்லபுரம், படை வீடு, வேலூர், திருப்புக்கொளி, போளூர்த் திருமலை முதலான இடங்களில் காணப்படுகின்றன. இவனும் தனது முன்னோர்கள் போலவே பல கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருக்கின்றான். இவனது ஆட்சிக்காலத்தில் தான் விஜயநகர வேந்தனாகிய குமார கம்பண்ணன் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்தனன். இது கி.பி. 1365 க்கு முன்னர் நிகழ்ந்தது. பெருமையுடன் தென்னாடு போந்த விஜய நகர வேந்தன் முதலில் படை வீட்டிராஜ்ஜியம் எனப்படும் “இராஜநாராயண சம்புவராயன் ராஜ்ஜியத்தை” தாக்கினான். தாக்கவே இராஜ நாராயண சம்புவராயனும் தன் பகைவரை எதிர்த்துப் போர் புரிந்தான். இறுதியில் விஜயநகர வேந்தன் வெற்றியடைந்தமையின் சம்புவராயன் தன் நாட்டை இழந்தான். ஆயினும், குமாரகம் பண்ணன் தான் கைப்பற்றிய நாட்டைத் திரும்ப அச் சம்புவராய மன்னனுக்கே யளித்து அவனைத் தனக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தி வருமாறு கட்டளையிட்டுவிட்டுப் பாண்டிய நாடு நோக்கிச் சென்றான். பிறகு கி.பி. 1366-ல் இராஜ நாராயண சம்புவராயனும் இறந்தான். அவன் வழியில் தோன்றிய சம்புவராயர்களும் குறுநில மன்னராக விஜயநகரத் தரசர்களுக்குக் கப்பஞ் செலுத்தி வந்தனர். பின்னர் அவர்களது ஆட்சியும் ஒழிந்தது. ஒழியவே அவர்களும் செல்வங் குன்றியவர்களாய்த் தாழ்ந்த நிலையை எய்தினர். வட ஆர்க்காடு ஜில்லாவில் வேலூருக்கண்மையிலுள்ள படைவீடு என்ற இடத்தில் இன்னும் அவர்களது வழியினர் வகிக்கின்றனர். படைவீடு என்னும் அவர்களது தலைமை நகரம் இப்போது ‘படவேடு’ என்றழைக்கப்படுகிறது. அங்கு அழிந்து கிடக்கும் அரண்களையும் கோட்டையையும் அம்மையப்பேச்சுரர் ஆலயத்தையும் இன்றும் காணலாம். இனி இரட்டைப் புலவர்களால் பாடப் பெற்ற கலம்பகம் கொண்டவனும் காஞ்சியைத் தலைமை நகராகக் கொண்டு அதனைச் சூழ்ந்துள்ள பகுதியை அரசாண்டவனும் காஞ்சியில் எழுந்தருளியுள்ள ஏகாம்பர நாதருக்கு அரிய பெரிய திருப்பணிகள் பல புரிந்தவனுமாகிய ஏகாம்பரச் சம்புவராயன் என்பானும் அச் சம்புவராய மன்னர்களின் வழித் தோன்றல்களுள் ஒருவன் என்பது ஈண்டு அறிந்து கோடற்குரியதாகும். 1.நாளுமின்னிசை யாற்றமிழ்பரப்பு ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளுமீந்தவன் பாடலுக்கிரங்குத் தன்மையாளனை யென்மனக் கருத்தை யாளும் பூதங்கள் பாட நின்றாடும் அங்கணன்றனை யெண்கணமிறைஞ்சும் கோளிலிப்பெருங் கோயில் உள்ளானைக் கோலாக்காவின்றி கண்டுகொண்டேனே. - திருக்கோலக்கா, 8 2.* பரந்தபாரிட மூரிடைப்பலிபற்றிப் பார்த்துணுஞ் சுற்றமாயினீர் தெரிந்தநான்மறையோர்க் கிடமாய் திருமிழலை இருந்துநீர் தமிழோடிசை கேட்குமிச்சையாற் காசுநித்தனல்கினீர் அருந்தண் வீழிகொண்டீரடியேற்கு மருளுதிரே - திருவீழிமிழலை, 8 S.I.I. Vol. V. No. 465 Epigraphia Indica Vol. XVI, No. 38. S.I.I. Vol. VIII. NO. 4 S.I.I., Vol. V. No. 1003. திருமுறைகண்ட புராணம், பாடல்கள் 24-29 பெரியபுராணம் திருமலைச் சிறப்பு பா.39 Epigraphia Indica. Vol. XXI. No. 27. South Indian Inscriptions. Vol. III. No. 89. செந்தமிழ் - தொகுதி 16, பக். 394. முதற்பராந்தகன் கல்வெட்டுக்கள் கொங்குநாட்டிற் காணப்படு தலாலும் அவன் அதனைக் கைப்பற்றியதாகக் கூறிக் கொள்ளாமையாலும் அந்நாடு அவன் தந்தை முதல் ஆதித்தனால் கைப்பற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். Ep.Ind Vol. XV, No. 5. Verse 18. Ibid Vol. XXII, No. 34. Verse 17. S.I.I. Vol. III. No. 205. Verse 53. Ep. Ind. Vol. V. No. 13.C S.I.I. Vol. V. No. 458 Ibid. Vol. IV. No. 225. 6.** இராசராசசோழன் உலா, 59-66 இவர் முதல் இராசராச சோழனைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிப்பிடாமை யொன்றே இவர் அவ்வேந்தன் காலத்தவரல்லர் என்பதை நன்கு புலப்படுத்துவதாகும். வலைவமன், (மூன்றாமடியின் இறுதிச்சீரும் நான்காம் அடியின் முதற்சீரும்) லெழுத்தா றிணைதுறை: என்பவை செந்தமிழ் 20-ஆம் தொகுதியின் 503-ஆம் பக்கத்தில் வெளிவந்த இச்செய்யுளிற் காணப்படும் பிரதி பேதங்கள். பொரு டுணிபுடன், காட்டி, மணக்குடபுரியான். கீங்கென: என்பவை, செந்தமிழ் 20-ஆம் தொகுதியின் 503-ஆம் பக்கத்து வெளிவந்த இச் செய்யுளிற் காணப்படும் பிரதிபேதங்கள். South Indian Inscriptions, Vol III No. 73. S.I.I. Vol III. No. 73 S.I.I. Vol III. No. 2 Ibid, No. 57 பெரியபுராணம் என்று வழங்கும் திருத்தொண்டர் புராணம் பாடியருளிய புலவர் பெருமான் அருண்மொழித் தேவர், இயற்பெயரால் வழங்கப் பெறாமல் சேக்கிழார் என்னும் குடிப்பெயரால் வழங்கப் பெற்று வருகின்றனர் என்பதும் அறியத்தக்கதாகும். ஊர்காண், வரி, 155. Ins. 86 of 1921. Ins. 424 of 1095. Ins. 390 of 1905 South Indian Inscriptions. Vol. II No. 38 Ibid No. 20 Ins. 97 of 1932 The Colas, Vol, II. pp, 476 and 477. South Indan Inscriptions. Vol II Nos, 40 and 60 Ibid. No. 36 South Indian Inscription. Vol. VIII.i No. 260 Ibid No. 675 Annual report on South Indian Epigraphy for 1921, part II, para 33 Epigraphia Indica, Vol. XXIII, No. 27. திருவரிஞ்சிகை ஈசுவரத்து இக்கோவை, காலஞ்சென்ற மகாமகோபாத்தியாய டாக்டர். ஐயரவர்களால் வெளியிடப் பட்டுள்ளது. பதினோராந் திருமுறையிலுள்ள மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, கடைச்சங்கப் புலவராகிய கபிலர் இயற்றியதன்று. அதன் ஆசிரியர் கபிலதேவநாயனார் என்ற பிற்காலப் புலவர் ஆவர். Ins. No. 135 fo 1927-28 இக்கல்வெட்டு, சீகாழியிலுள்ள தமிழ்ப்பேராசிரியரும், தருமபுர ஆதீன வித்துவானுமாகிய திருவாளர் ப.அ. முத்துத் தாண்டவராயப் பிள்ளை அவர்கள் வெளியிட்டுள்ள ‘காழிக் கல்வெட்டுக்கள்’ என்னும் புத்தகத்தில் உள்ளதாகும். விநாயகரைப் பற்றிய புராணக் கதைகளும் பின்னரே தோன்றியுள்ளன. Epigraphia Indica Vol. XXII, No. 34. South Indan Inscriptions Vol. III. No. 205 Travancore Archaeological Series Vol. III Ins. No. 34. òw«, 19, 23 South Indian Inscription Vol. III. No. 206 South Indian Inscriptions Vol. I. No. 75. புறம், 19, 23 ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிn ஏடிட. ஐஐஐ. சூடி. 206 ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிளே ஏடிட. ஐ. சூடி. 75. இவ்வூரின் பெயர் செங்கைமா என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகிறது. (ளு.ஐ.ஐ.ஏடிட. ஏஐஐ. சூடி.ள ஐஐ 126) செங்கண்மா என்று கூறுவது தவறு. ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிளே ஏடிட ஏஐஐஐ. சூடி. 69 ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிளே ஏடிட. ஏஐஐ. சூடிள. 427, 423 யனே 435 ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிளே ஏடிட ஏஐஐஐ. சூடி. 423 ளுடிரவா ஐனேயைn ஐளேஉசiயீவiடிளே ஏடிட. ஏஐஐ. சூடி. 863 ஐளேஉசiயீவiடிளே டிக வாந ஞரனரமமடிவவயi ளுவயவந சூடி. 285 னுடி சூடிள. 168, 169 யனே 185 னுடி சூடிள. 301, 342, 358 யனே 382 ஐளேஉசiயீவiடிளே டிக வாந ஞரனரமமடிவவயi ளுவயவந, சூடிள. 845 புறம். 110. South Indian Inscriptions Vol VIII. No. 69 South Indian Inscriptions Vol. VII. Nos. 427, 423 and 435 South Indian Inscriptions Vol VIII. No. 423 South Indian Inscriptions Vol. VII. No. 863 Inscriptions of the Pudukkottai State No. 285 Do Nos. 168, 169 and 185 Do Nos. 301, 342, 358 and 382 Inscriptions of the Pudukkottai State, Nos. 845 òw«. 110. South Indian inscriptions Vol. VIII. No. 423; Ns. No. 17 of 1931-32 Epigraphia Indica Vol. XXI, No. 19. South Indian Inscriptions Vol. VIII. No. 247 South Indian Inscriptions Vol VIII. No. 448. South Indian Inscriptions Vol. IV. No. 372. South Indian Inscriptions Vol. IV. No. 372 South Indian Inscriptions Vol. VII. No. 429 South Indian Inscriptions Vol. VII. No. 1042 South Indian Inscriptions Vol. VIII. No. 210, 213 Ins. No. 599 of 1326-27 Inscriptions of the Pudukkottai State Nos. 369 and 468 òw« 395 Ins No. 369 of 1907-08 Inscriptions of the Pudukkottai State No. 588. கலைமகள் - தொகுதி 3, பக்கங்கள் : 226-27 S.I.I. Vol. VIII, No. 441. Ep. Indi. Vol. XVII P. 298 South Indian Inscriptions Vol. VIII, No. 534 புறம் : 387, 245, 41, 61, 58, 47, 196, 51, 59 1 S.I.I. Vol. III. No. 142. -do- Nos. 15, 16. S.I.I. Vol. V, No. 649 -do- Vol. No. 34 புறம் : 103, 115, 384, 398 S.I.I. Vol. II. No. 2 S.I.I. Vol. II. No. 91 “......................... கூந்தலரிந்தளித்தான் மலை செய் மதிற் கஞ்சை மானக் கஞ்சாறன் எனும் வள்ளலே” என்னும் திருத்தொண்டர் திருவந்தாதிப் பாடலடியினால் கஞ்சாறு என்ப கஞ்சை என்று வழங்கப் பெற்றமை அறிக... (திருத்தொண்டர் திருவந்தாதி... பாடல் 13) 1 The Pallavas- by J. Dubreuil page 69 S.I.I. Vol. v. No. 458 திருவிந்தளூர் என்னும் இவ்வூர் இந்நாளில் திருவழுந்தூர் என்று வழங்கப் படுகின்றது; மாயூரத்திற்கு அண்மையில் காவிரியின் வடகரையில் உள்ளது. கஞ்சாறு என்பது இப்போது ஆநந்த தாண்டவபுரம் என்று வழங்கப்படுகின்றது என்பது முன்னரே கூறப்பட்டது. கஞ்சை என்பது தஞ்சை என்று தவறாகக் கல்வெட்டுப் புத்தகத்தில் அச்சிடப் பெற்றுள்ளது. இதன் உண்மையை மேலேயுள்ள இரண்டாம் கல்வெட்டால் உணரலாம். நூல்கள் : : South Indian Inscriptions; Epigraphia Indica; Travancore Archeological Series. Epigraphia Indica Vol. VII. No. 19K இவ்வுடுக்குறியிட்ட இடங்களிற் சரியான பாடம் புலப்படவில்லை. Epigraphia Indica Vol. VII No. 19 K புறம் 126 Epigraphia Carnatica Vol. X Malbagal, Nos. 49 & 119 ஜயங்கொண்ட சோழ மண்டலம் என்பது தொண்டை நாடாகும். Epigraphia Indica Vol. VI, No. 6. Pages 50-57 ஏரெழுபது உரைமேற்கோள் - பக்கம் 51. திருநாட்டுத் தொகை, பா5. பெருமிழலைக்குறும்பநாயனார் புரா. பா.1, முதல் இராசராசசோழன் ஆட்சியிலேதான் சோழநாடு ஒன்பது வள நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. அதற்குமுன் வளநாடு என்ற பிரிவு சோணாட்டில் இல்லை. Inscription of Puthukkottai State No. 113. South Indian Inscriptions Vol. II, No. 70. சேய்நல்லூர் என்பது சேய்ஞல்லூர் எனவும் முற்காலத்தில் வழங்கப்பெற்றுள்ளது. இந்நாளில் இதனைச் சேங்கனூர் என்று கூறுகின்றனர். இங்குள்ள மாடக்கோயில் கோச்செங்கட் சோழர் எடுப்பித்ததாகும். இக்கோயிலில் வரையப் பெற்றுள்ள மூன்றாம் இராசராசசோழன் காலத்துக் கல்வொட்டொன்று ‘மிழலை நாட்டுச் சேய்ஞலூருடையார் விசுவேசுவர தேவர் கோயில்’ என்று கூறுவதால் இவ்வூர் மிழலை நாட்டிலுள்ளது என்பது உறுதியாதல்காண்க. நாலாயிரப் பிரபந்தத்திற்கு இருபத்து நாலாயிரபடி என்னும் உரையெழுதிய பெரியவாச்சான் பிள்ளை இவ்வூரில் பிறந்தவரே யாவர். South Indian Inscriptions, Vol. VIII. No. 247 Ibild. Vol. IV, 372 Ibid, Vol. V, No. 301 வீரசோழியம் சந்திப்படலம், 7. 1.. இது, வீரசோழியத்திற்கு உரைகண்ட பேருந்தேவனார் என்பார் தம் உரையில் எடுத்துக் காட்டியுள்ள வெண்பாவாகும்; இப்பாடலிலுள்ள ‘மிழலைக்கூற்றம்’ என்பது ‘மாலைக்கூற்றம்’ எனவும்’வீரன்’என்பது ‘மாறன்’ எனவும் வீரசோழிய அச்சுப் பிரதியிற் காணப்படுகின்றன. ‘மிழலைக்கூற்றத்துக் கீழ் கூற்றுப் பொன்பற்றி உடையான் ‘என்ற கல்வெட்டுத் தொடரும் ‘தேர்வீர சோழன் திருப்பெயராற் பூமேலுரைப்பன்’ என்ற வீரசோழியப் பாயிரப் பாடற்பகுதியும் மேற்கண்டவாறு திருத்துவதற்குப் பெரிதும் துணைபுரிதல் காண்க (ளு.ஐ.ஐ. ஏடிட. ஐஏ. சூடி : 372 வரிகள் 103, 104, வீர சோழியப் பாயிரம் பா.3) S.I.I. Vol. VIII. No. 448. திருத்தொண்டர் திருவந்தாதி, பா. 26. பெரிய புராணம், குலச்சிறை நாயனார் புராணம் பா. 1. Ins. Nos. 502 and 503 of 1925 ‘ஆதியைப் பழையாறை வடதளிச், சோதியை தொழு வார்துயர் தீருமே’ - (அப்பர் சுவாமிகள் பழையாறை வட தளிப் பதிகம் பா.6) ‘காலை மடவார்கள் புனலாடுவது கவ்வை கடியறார் மறுகெலாம் மாலை மணநாறு பழையாறை பாடியழ காய மலிசீர்ப் பாலையன நீறுபுனைமார்பனுறை பட்டிசரமே பரவுவார்’ (திருஞானசம்பந்தர், பட்டீச்சுரம். பா.3) Ins, 93 of 1910 Ins, 495, of 1957; INs. 392 of 1908. Inscriptions 504 & 506 of 1926 இப்பாடலில் மொழியிறுதியில் வரும் ஏகாரத்திற்குப் பிறகு யகரமெய் வந்திருத்தல் காண்க. இங்ஙனமே கல்வெட்டுக்களிற் காணப்படுவதால் இஃது ஆராய்தற்குரிய தொன்றாகும். Epigraphia Indica, Vol, XVIII. No. 14 இவ்விடத்தில் நெல்லையுணர்த்தும் குறியுள்ளது. Travancore Archaeological Series, Vol. III. P. 57 Ibid, P.58 1 Indian Autiquary - Vol 33, P. 96. South Indian Inscriptions - Vol. IV, No. 225. ‘வித்தகப் பாடல் முத்திறத் தடியரும், திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்’ (திருவிடைமருதூர், மும்மணிக் கோவை - 28) என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கினால் முத்திறத்தார் சைவ சமய குரவர் மூவருமே யாவர் என்பது வெளியாதல் காண்க. திருப்புறம்பயத்திலுள்ள விக்கிரமசோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று. ‘திருப்புறம்பயமுடையார் கோயிலிலே முத்திறத் தடியார் அமுது செய்தருள’ என்று கூறுவதும் இதனை வலியுறுத்தல் ஈண்டு அறியற்பாலது. 1 3. Vallam Cave Inscriptions of Mahendrpotaraya S.O.O. Vol II No. 72. S.I.I. Vol. I. Nos 33 and 324 Annual Report on South Indian Epigraphy for 1937 - 38, part II. para 3. Ibid. Page 78. Ins. 412 of 1904; Archaeological Survey of India Annual Report for 1903 - 04. Page 271. 1 Archaeologocal Survey of India. Annual Report for 1903-1904, P. 275. இந்நிகழ்ச்சியைத் திருநாவுக்கரசரும் தான் பாடிய திருநீலக்குடிப் பதிகத்தில், ‘கல்லி னோடெனைப் பூட்டிய மண்கையர் ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வளல் நீலக் குடியரன் நல்ல நாம நவிற்றியுய்ந் தேனன்றே’ என்ற திருப்பாட்டிற் குறிப்பிடுதல் காண்க. பெரிய புராணம், திருநாவுக்கரசு நாயனார், பா.146. Inscription No. 454 of 1908 Inscription No. 414 of 1908 Inscription No. 202 of 1908 அங்ஙனமே பட்டீச்சுரம், திருவாடுதுறை என்னுங் கோயிற் பெயர்கள் இக்காலத்தில் ஊர்களின் பெயர்களாக வழங்கி வருதல் அறியத்தக்கது. ஜைன நூலாகிய உத்தர புராணத்தில் அகால வர்ஷனாகிய இரண்டாம் கிருஷ்ணதேவன் யானைகள் தென்கடற்கரையில் தங்கி இளைப்பாறின என்று குணபத் திராசிரியர் கூறியிருப்பது அவன் அபராஜிதவர்மனுக்கு உதவி புரியும் பொருட்டுத் தெற்கே வந்து வரகுண பாண்டியனோடு போர் புரிந்த செய்தியையே குறிப்பதாகும். (ளடிரசஉநள டிக முயசயேவயமய ழளைவடிசல, யீ.யீ. 109 யனே 110.) Udayendiram plates of Prithvipathi, South Indian Inscriptions Vol. II. No. 76. இவ்விளங்கோப்பிச்சி தஞ்சையம்பதியில் தன் கணவனோடு வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் கி.பி. 897-ல் திருமழபாடிக் கோயிலுக்கு ஒரு குத்து விளக்கிற்கு 10 கழஞ்சு பொன்னும் அளித்தனள் என்று அவ்வூர்க் கல்வெட் டொன்று கூறுகின்றது. (ஐளே. 14 டிக 1920) அக் கல்வெட்டில் ‘சோழபெருமான டிகளுக்கு முன்னம் புகுந்த மூத்த தேவியார் இளங்கோப்பிச்சி’ எனவும், ‘வல்லவரையர் மகளார் இளங்கோப்பிச்சி’ எனவும் போதரும் தொடர்கள் நோக்கற்பாலனவாம். வல்லவரையர் எனப்படுவோர் இராஷ்டிகூடர் ஆவர். இவ்விளங்கோப்பிச்சியை முதல் இராசராச சோழன் மனைவி என்பர் சிலர். அக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட காலம் கி.பி. 897 அக்டோபர் 15 ஆகும். நுயீபைசயயீhயை ஐனேiஉய, ஏடிட. ஓஐஓ யீ. 85. ஆதலால் அவர்கள் கொள்கை பொருத்தமுடையதன்று. South Indian Inscriptions, Vol. No. 595. ‘மதுரை கொண்ட கோப்பர கேசரிவர்மற்கு யாண்டு முப்பத் தொன்றாவது தாமற் கோட்டத்துத் தன் கூற்றச்சம் மழலையூரோம் கையெழுத்து - சோழ பெருமானடிகள் பராந்தக தேவர் திருமகளார் கோவிந்த வல்லவரையர் மாதேவியார் தக்கோலத்துத் திருவூறல் மகாதேவர்க்கு நந்தா விளக் கொன்றினுக்கு வைத்த பொன் முப்பதின் கழஞ்சு’ எனவும் ‘சோழ பெரு மானடிகள் பராந்தக தேவர் திருமகளார் கோவிந்த வல்லவரையர் மாதேவியார் வீர மாதேவியார் தக்கோலத்துத் திருவூறல் மகாதேவர்க்கு நுந்தா விளக்கொன்றினுக்கு வைத்த பொன் 30 கழஞ்சு’ எனவும் போதரும் கல்வெட்டுக்களால் இச் செய்தியை உணரலாம்«. (Ins. Nos. 245 and 246 of 1921. Ep. Ind., Vol XX VI pp. 230-235) Ep. Ind. Vol. III. pp. 179 and 180 The Rashtrakutas and their times by Altekar, 107; Ep. Ind. Vol. VIII. p. 127. நான்காம் கோவிந்தன் சோழ இராச்சியத்தில் தங்கியிருந்த காலத்தில் அவன் மனைவி வீரமாதேவியார் தக்கோலத்திறைவர்க்குத் திரு நுந்தா விளக்கிரண்டு வைத்து அவற்றிற்கு 60 கழஞ்சு பொன் அளித்துள்ளமை அவ்வூர்க் கல்வெட்டுகளால் புலப்படுகின்றது. (ஐளே. சூடிள. 245 யனே 246 டிக 1921.) திருநாவலூர் என்பது தென்னார்க்காடு ஜில்லா திருக் கோவலூர்த் தாலூக்காவிலுள்ள ஓர் ஊராகும். அவ்வூர்க் கோயிலுக்கு இராசாதித்தேச்சுரம் என்று பெயர். அக்கோயில் இராசாதித்த சோழன் எடுப்பித்ததாகும். அவனுடைய பணி மக்கள் பலர் அதற்கு நிபந்தம் அளித்துள்ளமை அங்குள்ள கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. S.I.I. Vol. 205, Verse 54. Larger Leiden Grants - Ep. Ind. Vol XXII, No. 34. Ep. Ind, pp. 50-57 S.I.I. Vol III. Nos: 132 and 201, Ibid. Vol. V. No. 720 S.I.I. Vol VII. Nos 802, 803, 804, 810 & 811, Ibid, Vol. VIII, No 300. Ep. Ind. Vol IV. p. 331; S.I.I. Vol III Nos. 114, 115 & 116. பெரும்பாணாற்றுப்படை - 405 அகநானூறு - 287 அகநானூறு - 167. 1 South Indian Inscriptions, Vol. I. Nos. 24 and 31. Ibid, No. 25 Verse 55. Udayendiram Plates of Nandivarman II. S.I.I. Vol II. No. 74. Ibid. No. 98 S.I.I., Vol. XII. No. 94 S.I.Vol. XII. No. 95 பிற்காலச் சோழர் சரித்திரம், (முற்பகுதி இரண்டாம் பதிப்பு) பக். 24. Pallava Architecture, Part III by A. H. Longhurst. Pallava Antiquities by G.Jouveau - Dubreuil. Vol. II, pp. 18 and 24. 1 South Indian Inscription Vol III No. 60 South Indian Inscription Vol X No. 61 Ins 36 of 1893 1 Ins 20 of 1899. S.I.I. Vol. VI No. 456. III Vol VII, Nos. 59, 61, 62 & 64. S.I.I. Vol. No. 74. Ins 36 of 1893.