ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1  பாண்டியர் வரலாறு ஆசிரியர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் தமிழ்மண் அறக்கட்டளை சென்னை - 17. நூற் குறிப்பு நூற்பெயர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 ஆசிரியர் : தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எ.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 12 புள்ளி பக்கம் : 24 + 192 = 216 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 200 /- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : செல்வி வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு : தமிழ்மண் அறக்கட்டளை பெரியார் குடில் பி.11, குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் 116 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு தோற்றம் : 15.08.1892 - மறைவு : 02.01.1960 தொன்மைச் செம்மொழித் தமிழுக்கு உலக அரங்கில் உயர்வும் பெருமையும் ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வருக்கு... தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அறிவித்து உவப்பை உருவாக்கித் தந்த தமிழக முதல்வருக்கு... ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் அருந்தமிழ்ச் செல்வங்களை நாட்டுடைமையாக்கி பெருமை சேர்த்த தமிழக முதல்வருக்கு... பத்தாம் வகுப்பு வரை தாய்மொழித் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய முத்தமிழறிஞர் தமிழக முதல்வருக்கு.... தலைமைச் செயலக ஆணைகள் தமிழில் மட்டுமே வரவேண்டும் என்று கட்டளையிட்ட தமிழக முதல்வருக்கு... தமிழ்மண் அறக்கட்டளை நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறது. நுழைவுரை முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி தமிழ் இணைப் பேராசிரியர் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கும்பகோணம் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அண்மையிலுள்ள திருப்புறம்பயம் என்னும் ஊரில் திரு.வைத்தியலிங்கப் பண்டாரத் தாருக்கும் திருமதி மீனாட்சி அம்மையாருக்கும் 15.8.1892 அன்று ஒரேமகனாராகப் பிறந்தவர் சதாசிவப் பண்டாரத்தார். பள்ளிப் படிப்பு மட்டுமே பயின்ற இவருக்கு இவருடைய ஆசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வகுப்பறைகளில் கல்வெட்டுகள் பற்றிக் கூறிய செய்திகள் கல்வெட்டாய்வின்மீது ஈடுபாட்டை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வரலாற்றறிஞர் து.அ.கோபிநாதராயர் எழுதிய சோழ வமிச சரித்திரச் சுருக்கம் என்ற நூலைக் கண்ணுற்ற பண்டாரத்தார், சோழர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டுமென எண்ணினார். இதன் காரணமாகப் பண்டாரத்தார் அவர்கள் தம்முடைய 22ஆம் வயது முதற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட ஆரம்பித்தார். 1914 - செந்தமிழ் இதழில் இவரெழுதிய சோழன் கரிகாலன் என்னும் கட்டுரை இவருடைய முதல் கட்டுரையாகும். அதன்பிறகு அறிஞர் ந.மு.வேங்கடசாமி நாட்டாரைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. நாட்டார் அவர்களின் பரிந்துரைக் கடிதத்தோடு கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரம் பிள்ளை அவர்களைச் சந்தித்த பண்டாரத்தாருக்குத் தமிழ்ச் சங்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அதனால் சங்கத்தின் தமிழ்ப்பொழில் இதழில் இவர் தொடர்ந்து எழுதி வந்தார். இதற்கிடையில் 1914ல் தையல்முத்து அம்மையார் என்னும் பெண்மணியைப் பண்டாரத்தார் மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவ்வம்மையார் இயற்கை எய்தவே சின்னம்மாள் என்னும் பெண்மணியை இரண்டாந் தாரமாக ஏற்றார். இவ்விணையர் திருஞானசம்மந்தம் என்னும் ஆண்மகவை ஈன்றெடுத்தனர். அறிஞர் பண்டாரத்தார் தம்முடைய தொடக்கக் காலத்தில் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகவும், குடந்தை நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் ஒரு சில மாதங்கள் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து 1917 முதல் 1942 வரை 25 ஆண்டுகள் குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் மற்றும் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், 1942 முதல் 2.1.1960 இல் தாம் இயற்கை எய்தும் வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். குடந்தையில் இவர் பணியாற்றியபோது, அந்நகரச் சூழல் இவருடைய கல்வெட்டாய்விற்குப் பெருந்துணையாக அமைந்தது. குடந்தையைச் சுற்றியுள்ள கோயில்களையும் குடந்தை அரசினர் ஆடவர் கல்லூரி நூலகத்தையும் தம் ஆய்விற்கு இவர் நன்குப் பயன்படுத்திக் கொண்டார். தமிழ் இலக்கிய, இலக்கணங்களைத் தனியாகக் கற்றறிந்த அறிஞர் பண்டாரத்தார் 1930இல் முதற் குலோத்துங்க சோழன் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இஃது இவரெழுதிய முதல் நூலாகும். பலருடைய பாராட்டையும் பெற்ற இந்த நூல், அந்தக் காலத்தில் சென்னைப் பல்கலைக் கழக இண்டர்மீடியேட் வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டிருந்தப் பெருமைக்குரியதாகும். இந்த நூல் வெளிவருவதற்கு முன்பாகத் தம்முடைய ஆசிரியர் வலம்புரி அ.பாலசுப்பிரமணிய பிள்ளை அவர்களுடன் இணைந்து சைவ சிகாமணிகள் இருவர் என்ற நூலை இவரே எழுதியிருக்கிறார். அதுபோன்றே இவர் தனியாக எழுதியதாகக் குறிப்பிடப் பெறும் பிறிதொரு நூல், தொல்காப்பியப் பாயிரவுரை என்பதாகும். இவ்விரண்டு நூல்களும் இவருடைய மகனாருக்கே கிடைக்கவில்லை. இவர்குடந்தையிலிருக்கும் போது 1940இல் பாண்டியர் வரலாறு என்ற நூலை எழுதினார். அறிஞர் பண்டாரத்தார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் இவருடைய ஆய்வுகள் பல வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தன. அவ்வகையில் இவருடைய தலைசிறந்த ஆய்வாக அமைந்த பிற்காலச் சோழர் சரித்திரம் மூன்று பகுதிகளாக முறையே 1949, 1951, 1961 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக்கழக வெளியீடுகளாக வெளிவந்தன. அதுபோன்றே இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250-600) , தமிழ் இலக்கிய வரலாறு (13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) என்னும் இரண்டு நூல்களையும் 1955இல் அப்பல்கலைக் கழகம் வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தியது. தாம் பிறந்த மண்ணின் பெருமைகள் பற்றித் திருப்புறம்பயத் தலவரலாறு (1946) என்னும் நூலை இவரெழுதினார். இவருடைய செம்பியன்மாதேவித் தல வரலாறு (1959) என்ற நூலும் இங்குக் கருதத் தக்க ஒன்றாகும். பூம்புகார் மாதவி மன்றத்தினரின் வேண்டுகோளை ஏற்று இவரெழுதிய காவிரிப்பூம்பட்டினம் (1959) என்ற நூல் அம்மாநகர் பற்றிய முதல் வரலாற்று ஆய்வு நூல் என்னும் பெருமைக்குரியதாகும். அறிஞர் பண்டாரத்தார் தம் வாழ்நாள் முழுமையும் உழைத்துத் திரட்டிய குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பலவாகும். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்து அவர் இயற்கையெய்திய பிறகு அவருடைய மகனார் பேராசிரியர் ச.திருஞானசம்மந்தம் இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் , கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் என்னும் தலைப்புகளில் 1961இல் நூல்களாக வெளிவர வழிவகை செய்தார். பின்னர், இந்த நூல்களில் இடம்பெறாத அரிய கட்டுரைகள் பலவற்றைப் பண்டாரத்தார் அவர்களின் நூற்றாண்டு விழா நேரத்தில் காணும் வாய்ப்பைப் பெற்ற நான், அவற்றைத் தொகுத்து அதன் தொகுப்பாசிரியராக இருந்து 1998இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் என்னும் பெயரில் நூலாக வெளிவருவதற்கு உதவியாக இருந்தேன். மிக்க மகிழ்ச்சியோடு அந்த நூலை வெளியிட்ட அந்த நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் முனைவர் ச.சு.இராமர் இளங்கோ அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். பண்டாரத்தார் அவர்களின் பிற்காலச் சோழர் சரித்திரம் என்ற நூல் சோழர் வரலாறு குறித்துத் தமிழில் முறையாக எழுதப்பட்ட முதல் நூல் என்ற பெருமைக்குரியதாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு கல்கி, சாண்டில்யன் போன்றோர் தங்களுடைய வரலாற்று நாவல்களைப் படைத்தனர். உத்தம சோழனின் சூழ்ச்சியால் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டான் என்ற திரு.கே.ஏ.நீலகண்ட சாத்திரியாரின் கருத்தை அறிஞர் பண்டாரத்தார் உடையார்குடி கல்வெட்டுச் சான்றின் மூலம் மறுத்துரைத்ததோடு அவனது கொலைக்குக் காரணமாக அமைந்தவர்கள் சில பார்ப்பன அதிகாரிகளே என இந்த நூலில் ஆய்ந்து உரைக்கிறார். இந்த ஆய்வுத் திறத்தைக் கண்ட தந்தை பெரியார் இவரைப் பாராட்டியதோடு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். அறிஞர் பண்டாரத்தார், தானுண்டு தன் வேலை உண்டு என்ற கருத்தோடு மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் பணியாற்றியவர்; விளம்பர நாட்டம் இல்லாதவர். எனவேதான், இவரால் இவ்வளவு பெரிய வேலைகளைச் செய்ய முடிந்தது. தம் வயது முதிர்ந்த நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு அளித்த நேர்காணலில், தமிழ் நாட்டிற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் நான் செய்ய வேண்டியன நிறைய இருப்ப தாகவே நினைக்கிறேன். அந்தத் தொண்டு என்னை மகிழ்வித்தும், அதுவே பெருந்துணையாகவும் நிற்பதால் அதினின்றும் விலக விரும்ப வில்லை எனக் குறிப்பிட்ட பெருமைக்குரியவர் பண்டாரத்தார். இப்படிப் பட்ட காரணங்களால்தான் தமிழுலகம் அவரை ஆராய்ச்சிப் பேரறிஞர், வரலாற்றுப் பேரறிஞர், சரித்திரப் புலி, கல்வெட்டுப் பேரறிஞர் எனப் பலவாறாகப் பாராட்டி மகிழ்ந்தது. இன்றைய தலைமுறையினருக்குப் பண்டாரத்தாரின் நூல்கள் பல அறிமுகங்கூட ஆகாமல் மறைந்து கொண்டிருந்தன. இச்சூழலில்தான் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் பண்டாரத்தார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. bkhÊüš PhÆW njtnea¥ ghthz®, m¿P® e.á.fªijah ãŸis, jÄœ¤ bj‹wš âU.É.f., நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வரலாற்றறிஞர் வெ. சாமிநாதசர்மா, நுண்கலைச் செல்வர். சாத்தன் குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலான பெருமக்களின் நூல்களையெல்லாம் மறுபதிப்புகளாக வெளிக்கொண்டாந்ததன் மூலம் அரிய தமிழ்த் தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழ்மொழிக் காவலர் ஐயா கோ.இளவழகனார் அவர்கள் வரலாற்றுப் பேரறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்களைத் தமிழ்மண் அறக்கட்டளை வழி மறு பதிப்பாக வெளிக்கொணர்வது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அறிஞர் பண்டாரத்தாரின் நூல்கள் அனைத்தையும் வரலாறு, இலக்கியம், கட்டுரைகள் என்னும் அடிப்படையில் பொருள் வாரியாகப் பிரித்து எட்டுத் தொகுதிகளாகவும், அவரைப்பற்றிய சான்றோர்கள் மதிப்பீடுகள் அடங்கிய இரண்டு தொகுதிகள் சேர்த்து பத்துத் தொகுதிகளாகவும் வடிவமைக்கப்பட்டு தமிழ் உலகிற்கு தமிழ்மண் அறக்கட்டளை வழங்கியுள்ளனர். தொகுதி 1 1) முதற் குலோத்துங்க சோழன் 1930 2) திருப்புறம்பயத் தல வரலாறு 1946 3) காவிரிப் பூம்பட்டினம் 1959 4) செம்பியன் மாதேவித் தல வரலாறு 1959 தொகுதி 2 5) பாண்டியர் வரலாறு 1940 தொகுதி 3 6) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1 1949 தொகுதி 4 7) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2 1951 தொகுதி 5 8) பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 1961 தொகுதி 6 9) தமிழ் இலக்கிய வரலாறு ( கி.பி.250-600) 1955 10) தமிழ் இலக்கிய வரலாறு ( 13,14,15 ஆம் நூற்றாண்டுகள்) 1955 தொகுதி 7 11) இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும் 1961 12) கல்வெட்டுக்களால் அறியப்பெறும் உண்மைகள் 1961 தொகுதி 8 13) தொல்காப்பியமும் பாயிரவுரையும் 1923 14) சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள் 1998 தொகுதி 9 15) தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் வாழ்க்கை வரலாறு 2007 தொகுதி 10 16) சான்றோர்கள் பார்வையில் பண்டாரத்தார் 2007 அறிஞர் பண்டாரத்தார் அவர்களின் நூல்களை நாட்டுடைமை யாக்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், நூல்களை மறுபதிப்பாக வெளிக் கொணர்ந்து தமிழுலகில் வலம் வரச் செய்திருக்கும் தமிழ்மண் அறக்கட்டளை நிறுவனர் ஐயா கோ.இளவழகனார் அவர்களுக்கும், தமிழ்கூறு நல்லுலகம் என்றும் நன்றியுடையதாக இருக்கும் என்பதில் எள்முனை அளவும் ஐயமில்லை. தமிழ்மண் அறக்கட்டளையின் இந்த அரிய வெளியீட்டைத் தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் வாழ்த்தி வரவேற்கும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு. அணிந்துரை பி. ïuhkehj‹ f.K., r.ï., உலகில் மிக நீண்ட காலம் அரசாண்ட அரச பரம்பரையினருள் பாண்டியரும் ஒருவர். கி.மு. 5 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைப் பாண்டியப் பரம்பரையினர் ஆண்டு வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. சில நூற்றாண்டுகள் ஒடுங்கியும் (வரலாற்றுப் பதிவில்லாத) குறு நிலப்பகுதிகளின் சிற்றரசர்களாகவும் இருந்த போதிலும், மொத்தத்தில் இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறுடையது பாண்டிய அரசர் பரம்பரை. (இவர் களுக்கு அடுத்த தொன்மையுடையது கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்த சோழர் பரம்பரையாகும்.) தமிழகத்தில் அரசாண்ட பாண்டியர் உட்பட்ட பல்வேறு அரச பரம்பரையினர் ஆட்சிக் கால வரம்பைப் பின்வரும் படம் தோராயமாகக் காட்டுகிறது. கி.மு. 300 0 கி.பி300 600 900 1200 1500 1800 2000 பாண்டியர் சோழர் சேரர் பல்லவர் களப்பிரர் விசயநகரம் மதுரை நாயக்கர் தஞ்சை நாயக்கர் ஆங்கிலேயர் ஆட்சி 2. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் முன்னர் பாண்டிய அரச பரம்பரையிடமிருந்து கிளைத்தவர்களே சேரரும் சோழரும் என்ற தொன்மக் கருத்துக்களும் உள்ளன. அவ்விருவரும் பாண்டியர் குடியினரே என்பார் தேவநேயப்பாவாணர். (தமிழர் வரலாறு 1972. பக். 72) பாண்டியன் என்ற பெயர் வரலாறு பற்றிய பாவாணர் கருத்து: பண்டி = வண்டி (சக்கரம், சகடம்) பண்டி - பாண்டி = வட்டமான விளையாட்டு அதைக்கொண்டு விளையாடும் வட்டாட்டு,மாட்டுவண்டி (உருண்டு திரண்ட) எருது ( பரிபாடல் 20;17 குறிப்பு) ஒநோ குண்டு - குண்டை - எருது பாண்டி - பாண்டியம் = எருது ( செஞ்சுவற்பாண்டியம் , பெருங்கதை உஞ்சைக் காண்டம் 38:32) பாண்டி - பாண்டில் = வட்டம் காளை மறம் விஞ்சியது; கடைப் பிடியுடையது. எனவே போர் மறவன் காளை எனப்பட்டான். ( மடுத்த வாயெல்லாம் பகடு அன்னான் - குறள் 624. பெருமிதப்பகடு - புறம் 90 ஔவை பாடல்). அரசன் போர் மறமும் ஆட்சித்திறனும் ஒருங்கேயுடையவன் என்பதை உணர்த்தற்கு, முதல் தமிழ் வேந்தன் பாண்டியன் எனக் குடிப்பெயர் பெற்றான். பண்டு (=பழமை) - பாண்டியன் எனத் திரிப்பதைப் பாவாணர் ஏற்றிலர். பாண்டியன் நமக்குப் பழைமையானவனேயன்றித், தோன்றிய பொழுது ஒருவருக்கும் பழமையானவன் அல்லன் என்பார் பாவாணர். எனினும் பண்டு - பாண்டியர் என்னும் (காரணப்) பெயரானது வழக்குக்கு வந்த பின், அதற்கு முன்னர் வழங்கிய வேறு பெயர் மறைந்தும் இருக்கலாம். நம் காலத்திலேயே பல தலைவர்களுக்குப் பட்டப் பெயரே பெருக வழங்கி, இயற்பெயர் ஏறத்தாழ மறக்கப்படும் நிலையைக் காணலாம். 3. பாண்டியர் வரலாற்றை எழுதியவர்களுள் க.அ. நீலகண்ட சாத்திரி ( 1929: The Pandyan Kingdom ) தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ( 1940; III 1956 பாண்டியர் வரலாறு) கே.வி. இராமன் ( 1977: பாண்டியர் வரலாறு) ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். 4. பண்டாரத்தார் இந்நூல் ஏழாம் இயலில் பாண்டிய மன்னர் பலர் ஒரே சமயத்தில் ஆண்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் சேர சோழ மன்னர் ஆட்சியும் இவ்வகையில் தான் இருந்திருக்கலாம் என்பர் நீலகண்ட சாத்திரி ( 1976 பக்.120) The Chera (as well as Chola and Pandya) Kingdoms must have been a sort of family estate in which all the grown up males had a share and interest. 5. கி.பி. 7-9 நூற்றாண்டுகளில் ஆண்ட பாண்டியர்கள் கொடிவழி பற்றியும் ஆட்சியாண்டுகள் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. அவர்கள் கொடிவழியை கே.வி.இராமன்(1977) பின்வருமாறு தந்துள்ளார். அது பண்டாரத்தார் (1956) கொடிவழியிலிருந்து சற்றே மாறுபடுகிறது. கடுங்கோன் (575-600) மாறவர்மன் அவனிசூளாமணி ( 600-620) செழியன் சேந்தன் ( 620 - 642) (இவன் திருநெல்வேலி மாவட்டம் மலையடிக் குறிச்சி குகைக் கோயிலை அமைத்தவன்) மாறவர்மன் அரிகேசரி ( 642 - 700) (திருஞானசம்பந்தர் காலம்) கோச்சடையன் ரணதீரன் ( 700 -730) (சுந்தரர் காலம்) மாறவர்மன் அரிகேசரி ராசசிம்மன் I ( 730 - 768) (நம்மாழ்வார் காலம்) நெடுஞ்சடையன் பராந்தகன்(வரகுணன் I)768 - 815 (சங்கராச்சாரியார் காலம்) [ntŸÉ¡Fo, சீவரமங்கலம், சின்னமனூர் (சிறியது) செப்பேடுகள் நெடுஞ்சடையன் காலத்தவை.நெடுஞ்சடையன் பராந்தகன் வேறு; வரகுணன் I வேறு என்பார் பண்டாரத்தார். பராந்தகனுக்கும் சிரிவல்லபனுக்கும் இடையில் இராசசிம்மன் II, வரகுணன் I என இருவர் ஆண்டிருக்க வேண்டும் என்பார் பண்டாரத்தார்.) ஸ்ரீமான் சிரிவல்லபன் 815-862 (தெள்ளாறு போரில் பல்லவன் நந்திவர்மன் III இடம் தோற்றான்.) வரகுணன் II 862 -885 பராந்தக வீரநாராயணன் 862 - 905 திருப்புறம்பயம் போரில் சோழன் தளவாய்புரம் செப்பேடு ஆதித்தன் I இடம் தோற்றான்.) ராச சிம்மன் II - 900-920 (பண்டாரத்தார் கருத்துப்படி இராசசிம்மன் II ) 6. தமிழக அரச பரம்பரையினர் அனைவரினும் தொன்மை வாய்ந்த பாண்டியர் பரம்பரையே பண்டைய அரசர் பரம்பரையினருள் கடைசியாக ( கி.பி.17ஆம் நூற்றாண்டு) மறைவுற்றதும் ஆகும். அணையப் போகும் தீயானது அதிக ஒளியுடன் எரியும்;அதுபோல பாண்டியர் ஆட்சி முதன்மையுடன் வழங்கிய மூன்று கால அளவுகளில் கடைசியான கி.பி. 1200-1311இல் தான் தமிழகத்தின் தலைமை அரசாக விளங்கியது. அக்கால அரசர்களுள் முதன்மை வாய்ந்தவர்கள் வருமாறு: சடையவர்மன் குலசேகரன் ( - 1216) மாறவர்மன் சுந்தரபாண்டியன் ( 1216 - 1238) (1218இல் சோழன் மூன்றாம் இராசராசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றி தஞ்சையையும் உறையூரையும் சூறையாடினான்; சோழர் பாண்டியர்க்கு அடிபணிந்து ஆண்டனர்.) மாறவர்மன் சுந்தரபாண்டியன் II ( 1238 - 1251) சடையவர்மன் சுந்தரபாண்டியன் I ( 1251 - 1268) ( இவன் அதிகாரம் வடக்கே நெல்லூர் வரைச் சென்றது) மாறவர்மன் குலசேகரன் ( 1268 - 1308) (மார்க்கோ போலோ 1296இல் பாண்டிய நாட்டுக்கு வந்தான். வழக்கம் போல இவன் காலத்திலும் இவனுக்கு அடங்கிய பாண்டிய குல அரசர் நாட்டின் பகுதிகளை ஆண்டு வந்ததை போலோ குறிப்பிடுகிறான்.) சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் (இவனுக்கும் வீரபாண்டியனுக்கும் நடந்த போரில் தனக்கு உதவ அலாவுதீன் தளபதி மாலிக்காபூரை 1311 ஏப்ரல் மாதம் மதுரைக்கு அழைத்து வந்தான்.) 7. மார்கோ போலோ தமிழ் நாட்டைப் பற்றி எழுதிய குறிப்புகளில் ( Yule and codier (1921) The Book of Ser Marco Polo; 3 மடலம்) தமிழ்நாடு சார்ந்தவற்றை தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தமது பிறந்தது எப்படியோ (1951) நூலில் தமிழாக்கித் தந்துள்ளார். 8. பாண்டிய வரலாற்றுக் காலமாகிய கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை என்பது ஈராயிரம் ஆண்டுக் காலமாகும். இந்த நெடிய கால அளவில் தமிழகத்திலும் ( இந்தியாவிலும், உலகிலும்) மக்கள் தொகை இன்று உள்ள அளவில் அன்றி மிகக் குறைவாகவே இருந்திருக்கும் என்பதையும் மக்கள் தொகையும் 20ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிக மந்தமாகவே வளர்ந்து வந்தது என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். வருடம் இன்றைய இந்தியா உலகம் தமிழகம் (கோடிகளில்) (கோடிகளில்) கி.மு.500 30 லட்சம் 1 10 கிறித்துவுக்குப் பின்னர் 1 40 லட்சம் 2 20 300 50 லட்சம் 2.50 22 1000 50 லட்சம் முதல் 5 27 1300 80 லட்சம் வரை 6 40 1600 80 லட்சம் 15 65 1800 1 கோடி 18 100 1871 (முதல் 1.47 கோடி 21 120 இந்திய சென்ச) மக்கள்தொகை பண்டைக் காலங்களில் மிக மிகக் குறைவாக இருந்ததுடன் போக்குவரத்து, செய்தித் தொடர்பு வசதிகளும் அவ்வாறே இருந்திருக்க வேண்டும். அக்காலங்கள் பற்றி நமக்கு இன்று எஞ்சியுள்ள ஆதாரங்களும் மிகக் குறைபாடுடையவையே. எனவே பண்டைக் காலச் சமூகம் மற்றும் பிற நிலைமைகளைப் பற்றி எண்ணிப் பார்த்து எச்சரிக்கையுடன் எழுதுவதே பொருத்தமாகும். ஜே.எம்.இராபர்ட் உலக வரலாறு (1992) நூலில் பழங்காலத்தில் இருந்த ஐரோப்பிய மக்கள் அன்றாட வாழ்க்கை, சமூக உறவுகள் பற்றியெல்லாம் பொதுவான ஆனால் அபத்தமான கருத்தோட்டங்களைக் கூறுவது எளிது என்று கூறியது தமிழகத்துக்கும் பொருந்துவதாகும். வரலாற்றில் பெரும்பகுதி உன்னிப்பு வேலை; மீதி விருப்பு வெறுப்பின்படியான கூற்று “Most history is guessing and the rest is prejudice” என்றனர் வில் & ஏரியல் டூராண்ட்இணையர். 9. கி.மு. 10-13 ஆம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றில் சோழன் தலைக் கொண்ட பாண்டியன்; பாண்டியன் தலைக் கொண்ட சோழன்; பாண்டியன் தலைக் கொண்டு அவன் மடக்கொடியை வேழம் ஏற்றிய சோழன்; மதுரையை எரித்து அழித்துச் சூறையாடிய சோழன்; சோழர் தலைநகரை அழித்துச் சூறையாடிய பாண்டியன் ஆகிய சாதனை வீரர் பலரை காண்கிறோம். இறுதி முடிவு என்ன? கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பண்டைத் தமிழரசக்கால் வழியினர் அனைவரும் அழிந்து பல்வேறு அயலார் ஆட்சிக்குத் தமிழகம் தொடர்ந்து அடிப்பட்டது. இது போன்ற நிலைதான் இந்தியாவெங்கும். இதைத்தான் அறிஞர் டான்லி வால்பர்ட் பின்வருமாறு விவரித்தார்: இந்தியா தனது நெடிய வரலாற்றில் தொடர்ந்து அயலாரிடம் தோற்று அவர்களால் ஆளப்பட்டு வரும் அவலநிலையிலேயே இருந்து வந்துள்ளது. இதற்கு ஒரு காரணம் இந்நாடோ அதன் பெரும்பகுதிகளோ ஒரே ஆட்சியின் கீழ் / ஒரு சில ஆட்சிகளின் கீழ் இருப்பது நாட்டுமக்கள் அனைவர் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் உகந்தது என்ற உணர்வின்மையேயாம். அதைவிட அடிப்படையான காரணம் இந்தியருடைய ஒரு வகை மனநிலை; அது என்ன? தங்களுக்கு மிக நெருங்கிய சொந்தங்களாக, உறவுடையவர்களாக இருந்தாலும் அவர்களை நம்பாமல் அவர்களைச் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனுமே பார்க்கும் பார்வைதான்! (முற்றிலும் அயலாரிடம் பழகும்போது இந்தப் பார்வையை இந்தியர் மேற்கொள்வதில்லை!!) “Indian disinterest in political unification or perhaps it is rather Indian “suspicion” and “mistrust” of neighbouring strangers, no matter how close they may actually be, compared to other foreigners, has left India vulnerable to conquest througout her long history. AN INTRODUCITON TO INDIA: 1991 வால்பர்ட் கூற்றின் உட்கருத்து ஏதிலார் ஆரத்தமர் பசிப்பர் பேதை பெருஞ் செல்வம் உற்றக்கடை என்ற குறளின் கருத்தேயாகும். வரலாற்றை மறப்போர் தாங்கள் பட்ட இன்னல்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பெறுவர். “Those who disregard the past are bound to repeat it” என்று ஜார்ஜ் சந்தயானா கூறியது இந்தியர் அனைவரும் உளம் கொள்ளத் தக்கது ஆகும். முன்னுரைக்கான நூற்பட்டியல் கிருஷ்ணமூர்த்தி. இரா (1987) பாண்டியர் பெருவழுதி நாணயங்கள் Maloney, Clarence ( 1970) The beginnings of civilisation in South India p 603-16 of The Journal of Asian Studies Vol 29. Nilakanta Sastri K.A (1929) The Pandyan Kingdom “ (1976 IV Edn.) A History of South India ராஜசேகர தங்கமணி எம் (1978) பாண்டியர் வரலாறு பாகம் I பக். 712 தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் இராமன், கே.வி. (1977) பாண்டியர் வரலாறு பக்.337 தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். Ramana Ayyar A.S. Edr (1962) - South Indian inscriptions Vol XIV Pandya inscriptions pp VI; 166 XXV - (267 inscriptions copied between 1904 - 1935: Early Pandyas 130; Chola - Pandya Viceroys 67 JatavarmanSrivallabha 70) சதாசிவப் பண்டாரத்தார் தி.வை (1940/ III 1956) பாண்டியர் வரலாறு சண்முகம் பிள்ளை இ. மு (1998) சங்கத் தமிழர் வாழ்வியல் சீனிவாச ஐயங்கார் (1929) History of the Tamils from the earliest times to 600 AD ( தமிழாக்கம் முன்னுரையுடன் 2007:- பி.இராமநாதன்; தமிழர் வரலாறு (கி.பி. 600 வரை) தமிழ்மண் பதிப்பகம்; சென்னை 17) Subrahmanian N (1966; II 1980) Sangam Polity தமிழ் வரலாற்றுக் கழகம் (1967) பாண்டியர் செப்பேடு பத்து; சென்னை 14 தமிழக அரசு வரலாற்றுக் குழு ( 1983) சங்ககாலம் I அரசியல் பக்.700 [gh©oa® g¡.343-387] II வாழ்வியல் ; பக்.530 (1990):தமிழ்நாட்டு வரலாறு : பல்லவர்- பாண்டியர்காலம் (கி.பி.500-900) பகுதி I பக்.434 ( வரலாறு ; ஆட்சிமுறை) பகுதி II பக்.538 ( சமுதாயம், பொருளியல், சமயம், இலக்கியம், கலைகள்,கட்டடம், ஓவியம், செப்புத் திருமேனிகள்; சிற்பம், ஆடல், இசை) (2000) பாண்டியப் பெருவேந்தர் காலம் (1190-1310) பக். 327 (அரசியல் ஆட்சிமுறை, சமுதாயம், பொருளியல், சமயம், இலக்கியம், கலைகள்.) பதிப்புரை கோ. இளவழகன் நிறுவனர் தமிழ்மண் அறக்கட்டளை தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் எனும் சிற்றூரில் 15.8.1892ல் பிறந்தார். இவர் 68 ஆண்டுகள் வாழ்ந்து 02.01.1960 ல் மறைந்தார். பண்டாரம் என்னும் சொல்லுக்குக் கருவூலம் என்பது பொருள். புலமையின் கருவூலமாகத் திகழ்ந்த இம்முதுபெரும் தமிழாசான் இலக்கியத்தையும் வரலாற்றையும் இருகண்களெனக் கொண்டும் கல்வெட்டு ஆராய்ச்சியை உயிராகக் கொண்டும், அருந்தமிழ் நூல்களைச் செந்தமிழ் உலகத்திற்கு வழங்கியவர். இவர் எழுதிய நூல்களையும், கட்டுரைகளையும் ஒருசேரத் தொகுத்து 10 தொகுதிகளாக தமிழ் கூறும் உலகிற்கு வைரமாலையாகக் கொடுக்க முன்வந்துள்ளோம். சங்கத் தமிழ் நூல்களின் எல்லைகளையும் , அதன் ஆழ அகலங் களையும் கண்ட பெருந்தமிழறிஞர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரிடம் தமிழ்ப்பாலைக் குடித்தவர்; தமிழவேள்உமாமகேசுவரனாரால் வளர்த்தெடுக்கப்பட்டவர்; பண்டிதமணி கதிரேசன் செட்டியார் தலைமையில் தமிழ்ப்பணி ஆற்றியவர்; நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அய்யா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர். திருப்புறம்பயம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிற்றூர்; திருஞான சம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர் நால்வராலும், திருத்தொண்டர் புராணம் படைத்தளித்த சேக்கிழா ராலும், தேவாரப் பதிகத்தாலும் பாடப்பெற்ற பெருமை மிக்க ஊர்; கல்வி, கேள்விகளில் சிறந்த பெருமக்கள் வாழ்ந்த ஊர். நிலவளமும், நீர்வளமும் நிறைந்த வளம் மிக்க ஊர்; சோழப் பேரரசு அமைவதற்கு அடித்தளமாய் அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். பண்டாரத்தாரின் ஆராய்ச்சி நூல்களான சோழப் பெருவேந்தர்கள் வரலாறு - பாண்டியப் பெருவேந்தர்கள் வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு - ஆகிய நூல்கள் எழுதப்பட்ட பிறகு அந்நூல்களை அடிப் படையாகக் கொண்டுதான் வரலாற்று நாவலாசிரியர்களான கல்கி - சாண்டில்யன் - செகசிற்பியன் - விக்கிரமன் - பார்த்தசாரதி - கோவி.மணிசேகரன் ஆகியோர் வரலாற்றுப் புதினங்களை எழுதித் தமிழ் உலகில் புகழ் பெற்றனர். பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டு ஆராய்ச்சியும் , வரலாற்று அறிவும் , ஆராய்ச்சித் திறனும், மொழிப் புலமையும் குறைவறப் பெற்ற ஆராய்ச்சிப் பேரறிஞர். பிற்கால வரலாற்று அறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர். வரலாற்று ஆசிரியர்கள் பலர் முன்னோர் எழுதிய நூல்களைக் கொண்டுதான் பெரும்பாலும் வரலாறு எழுதுவது வழக்கம். ஆனால், பண்டாரத்தார் அவர்கள் கல்வெட்டுக்கள் உள்ள ஊர்களுக்கெல்லாம் நேரில் சென்று அவ்வூரில் உள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்து முறைப்படி உண்மை வரலாறு எழுதிய வரலாற்று அறிஞர் ஆவார். புலமை நுட்பமும் ஆராய்ச்சி வல்லமையும் நிறைந்த இச் செந்தமிழ் அறிஞர் கண்டறிந்து காட்டிய கல்வெட்டுச் செய்திகளெல்லாம் புனைந்துரைகள் அல்ல. நம் முன்னோர் உண்மை வரலாறு. தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காக, பண்டாரத்தார் நூல்கள் அனைத்தையும் ஒரு சேரத் தொகுத்து வெளியிடுகிறோம். பல துறை நூல்களையும் பயின்ற இப்பேரறிஞர், தமிழ் இலக்கிய வரலாற்று அறிஞர்களில் மிகச் சிறப்பிடம் பெற்றவர்.இவர் எழுதிய ஊர்ப் பெயர் ஆய்வுகள் இன்றும் நிலைத்து நிற்பன. இவரது நூல்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஊற்றுக்கண்ணாய் அமைவன. வரலாறு, கல்வெட்டு ஆகிய ஆய்வுகளில் ஆழ்ந்து ஈடுபட்டுப் பல வரலாற்று உண்மைகளைத் தெளிவுபடுத்தியவர். பண்டாரத்தார் நூல்களும், கட்டுரைகளும் வட சொற்கள் கலவாமல் பெரிதும் நடைமுறைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. தமிழ் மன்னர்கள் வரலாறு - தமிழ்ப் புலவர்கள் வரலாறு - தமிழக ஊர்ப்பெயர் வரலாறு - தமிழ் நூல்கள் உருவான கால வரலாறு ஆகிய இவருடைய ஆராய்ச்சி நூல்கள் அரிய படைப்புகளாகும். தாம் ஆராய்ந்து கண்ட செய்திகளை நடுநிலை நின்று மறுப்பிற்கும் வெறுப்பிற்கும் இடமின்றி, வளம் செறிந்த புலமைத் திறனால், தமிழுக்கும் தமிழர்க்கும் பெரும்பங்காற்றிய இவரின் பங்களிப்பு ஈடுஇணையற்றது. தென்னாட்டு வரலாறுதான் இந்திய வரலாற்றுக்கு அடிப்படை என்று முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் சதாசிவப் பண்டாரத்தார் அவர்களே. தமிழரின் மேன்மைக்கு தம் இறுதிமூச்சு அடங்கும் வரை உழைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர் ஆராய்ச்சிப் பேரறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் ஆவார். தமிழ் - தமிழர் மறுமலர்ச்சிக்கு உழைத்த பெருமக்கள் வரிசையில் வைத்து வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் தமிழர் தம் பெருமைக்கு அடையாளச் சின்னங்கள். நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் வெளியீட்டு விழா கடந்த 29.12.2007இல் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் - தமிழர் நலங்கருதி தொலைநோக்குப் பார்வையோடு தமிழ்மண் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடக்கத்தின் முதல் பணியாக தென்னக ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒருசேரத் தொகுத்து முதன்முதலாக தமிழ்மண் அறக்கட்டளை வழி வெளியிடுகின்றன. இப்பேரறிஞரின் நூல்கள் தமிழ முன்னோரின் சுவடுகளை அடையாளம் காட்டுவன. அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க இவ்வருந்தமிழ்க் கருவூலத்தை பொற்குவியலாக தமிழ் உலகிற்குத் தந்துள்ளோம். இவர் தம் நூல்கள் உலக அரங்கில் தமிழரின் மேன்மையை தலைநிமிரச் செய்வன. பண்பாட்டுத் தமிழர்க்கு நான் விடுக்கும் விண்ணப்பம்; சதாசிவத்துப் பண்டாரத் தார்க்கும்; ஒரு மறைமலைக்கும், மணவழகர் தமக்கும், மக்கள் கொண்டாடும் சோமசுந் தர பாரதிக்கும், நம் கொள்கை தோன்றக், கண்டார்க்க ளிக்கும் வகை உருவக்கல் நாட்டுவது கடமையாகும். எனும் பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை நெஞ்சில் நிறுத்துங்கள். இப்பேரறிஞர் எழுதிய நூல்களில் சைவசிகாமணிகள் இருவர் என்னும் நூல் மட்டும் எங்கள் கைக்கு கிடைக்கப்பெறா நூல். ஏனைய நூல்களை பொருள்வாரியாகப் பிரித்து வெளியிட்டுயுள்ளோம். தமிழர் இல்லந் தோறும் பாதுகாத்து வைக்கத்தக்கச் செந்தமிழ்ச் செல்வத்தை பிற்காலத் தலைமுறைக்கு வாங்கி வைத்து தமிழர் தடயங்களை கண்போல் காக்க முன்வருவீர். ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வு நூல்களுக்கு மதிப்புரை அளித்து மணம் கமழச் செய்த தமிழ்ச் சான்றோர்கள் பெரும்புலவர் இரா. இளங்குமாரனார் கோ. விசயவேணுகோபால் பி. இராமநாதன் முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி க.குழந்தைவேலன் ஆகிய பெருமக்கள் எம் அருந்தமிழ்ப்பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து பெருமைப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எம் நன்றி என்றும் உரியது. நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் நூல் கொடுத்து உதவியோர் பெரும்புலவர் இரா. இளங்குமரனார், முனைவர் அ.ம.சத்தியமூர்த்தி நூல் உருவாக்கம் நூல் வடிவமைப்பு - மேலட்டை வடிவமைப்பு செல்வி வ.மலர் அச்சுக்கோப்பு முனைவர் கி. செயக்குமார், ச.அனுராதா, மு.ந.இராமசுப்ரமணிய ராசா மெய்ப்பு க.குழந்தைவேலன், சுப.இராமநாதன், புலவர் மு. இராசவேலு, அரு.அபிராமி ——— உதவி அரங்க. குமரேசன், வே. தனசேகரன், ரெ. விசயக்குமார், இல.தருமராசு, ——— எதிர்மம் (Negative) பிராசசு இந்தியா (Process India) அச்சு மற்றும் கட்டமைப்பு ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ——— இவர்களுக்கு எம் நன்றியும் பாராட்டும் . . . உள்ளடக்கம் பாண்டியர் வரலாறு முகவுரை 1 1. முன்னுரை 3 2. கடைச்சங்ககாலத்திற்கு முந்திய பாண்டியர்கள் 6 3. கடைச்சங்ககாலத்துப் பாண்டியர்கள் 9 4. பாண்டிநாட்டிற் களப்பிரர் ஆட்சி 28 5. கி. பி. 575 முதல் கி. பி. 900 வரை ஆட்சிபுரிந்த பாண்டியர்கள் 31 6. கி.பி. 900 முதல் கி.பி. 1190 வரையில் ஆண்ட பாண்டியர்கள் 64 7. கி. பி. 1190 முதல் கி. பி. 1310 முடிய ஆட்சிபுரிந்த பாண்டியர்கள் 83 8. கி. பி. 1310-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சிபுரிந்த பாண்டியர்கள் 114 9. தென்பாண்டிநாட்டில் ஆட்சிபுரிந்த பிற்காலப் பாண்டியர்கள் 121 10. பாண்டியர் அரசியல் 130 சேர்க்கை 1 150 சேர்க்கை 2 176 சேர்க்கை - 3 179 சொற்குறிப்பு அகராதி 180 பாண்டியர் வரலாறு (கடைச்சங்ககாலத்திற்கு முந்திய பாண்டிய மன்னர்கள்) முகவுரை உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பலவகையாலும் ஆய்ந்து, உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லோரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாறுகள் நமக்கு மகிழ்ச்சியும் உணர்ச்சியும் அளிக்க வல்லன என்பது யாவரும் அறிந்ததொன்றாகும். கல்வெட்டுக் களையும் செப்பேடுகளையும் தமிழ் நூல்களையும் பிற ஆராய்ச்சி நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றது பாண்டியர் வரலாறு என்னும் இந்நூலாகும். இது கடைச்சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி.பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டிநாட்டில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் சரிதங்களைச் சுருக்கமாகக் கூறுவதாகும். இந்நூல் மூன்றாம் பதிப்பாக இப்பொழுது வெளியிடப் பெறுகின்றது. எனது ஆராய்ச்சியிற் புதியனவாகக் கண்ட கருத்துக்கள் பலவும் முன்னரே இடம்பெற்றுள்ளன. இதன் பிற்சேர்க்கையாக வேள்விக்குடிச் செப்பேடுகள் சின்னமனூர்ச் செப்பேடுகள் என்பவற்றின் பகுதிகளும் மெய்க்கீர்த்திகளும் பாண்டியரைப் பற்றிக் கல்வெட்டிற்கண்ட பாடல்களும் சேர்க்கப் பெற்றுள்ளன. ஆராய்ச்சித்துறையிற் கருத்து வேறுபாடுகள் நிகழ்தலும் புதியனவாகக் கிடைக்கும் ஆதாரங்களால் சில செய்திகள் திருத்த மெய்துதலும் இயல்பாகும். இந்நூல் எழுதுவதற்குக் கருவிகளாகவுள்ள தமிழ் நூல்களையுங் கல்வெட்டுக்களையும் பிறநூல்களையும் முறையே வெளியிட்டுதவிய புலவர் பெருமக்களுக்கும் கல்வெட்டு இலாகா அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் எனது நன்றி யுரியதாகும். இந்நூலை எழுதத் தூண்டி இதற்கு அணிந்துரையும் வரைந்துதவிய கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர், செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் காலஞ்சென்ற இராவ்சாகிப், த.வே. உமாமகேசுவரம் பிள்ளையவர்களது தமிழ்த்தொண்டு என்றும் நினைவு கூர்தற்குரியதாகும். சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் தமிழ்ப்பாடக் குழுவினர் இந்நூலைப் புலவர் தேர்விற்குரிய பாட நூல்களுளொன்றாகத் தெரிந்தெடுத்துள்ளனர். அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனைக் கண்கவர் முறையில் அச்சிட்டுதவிய சென்னைச் சாது அச்சுக் கூட நிர்வாகி திரு. மு. நாரயணசாமி முதலியார் அவர்களுக் கும் புரூப் திருத்தி உதவிய என் அரிய நண்பர், தமிழாராய்ச்சித் துறை விரிவுரையாளர் வித்வான் - க. வெள்ளைவாரணர் அவர்கட்கும் எனது நன்றியுரியதாகும். அண்ணாமலை நகர், இங்ஙனம், 20 - 7 - 1956 T. V. சதாசிவ பண்டாரத்தார் 1. முன்னுரை அமிழ்தினுமினிய நம் தமிழ்மொழியைத் தாய்மொழி யாகக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று வழங்கப்பெற்றதென்பது தொன்னூலாராய்ச்சியுடையார் யாவரும் அறிந்ததொன்றாம். இப்போது இதனைத் தமிழ்நாடு என்றே யாவரும் கூறுவாராயினர். இது வடக்கில் வேங்கடமும் தெற்கிற் குமரிமுனையும் கிழக்கிலும் மேற்கிலும் இரு பெருங்கடலும் உடையதாயிருக்கின்றது. இத் தமிழகத்தைக் குடபுலம் குணபுலம் தென்புலம் என்ற மூன்று பெரும் பகுதி களாகப் பிரித்துப் பண்டைக்காலமுதல் ஆட்சி புரிந்துவந்தோர், சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தரேயாவர். இன்னோர் ஆட்சிபுரிந்த பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் எனப்படும். இவற்றுள் பாண்டிய மண்டலத்தின் அரசுரிமை யுடையராய்ப் பண்டைக்காலத்தே விளக்க முற்றிருந்த பாண்டிய அரசர்களின் வரலாறே ஈண்டு யாம் ஆராயப்புகுந்தது. இப்பாண்டியர் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டு வரும் தொல் குடியினரென்பது அறிஞர்களது கொள்கை. இக்குடியினர் எக்காலத்து இப்பாண்டி மண்டலத்தை ஆட்சி புரியும் உரிமையெய்தின ரென்றாதல், எவ்வேந்தரால் இதன் ஆட்சி முதன்முதலாகக் கைக்கொள்ளப்பட்ட தென்றாதல் அறிந்துகொள்ளக் கூடவில்லை. ஆகவே, எவரும் ஆராய்ந்து அளந்து காண்டற்கரிய அத்துணைத்தொன்மையுற்ற குடியினர் இன்னோர் என்பது பெறப்படுகிறது. இனி, வடமொழியாளர் ஆதி காவியமெனக் கொண்டாடும் வான்மீகி ராமாயணத்தில் தமிழ் நாட்டைப் பற்றிய உயரிய செய்திகள் பல காணப்படுதலோடு, பாண்டி வேந்தரது தலைநகர் பொன்னாலும் முத்துக் களாலும் அலங்கரிக்கப் பெற்ற கோட்டை வாயிலையுடையதாய் இருந்தது எனவும் சொல்லப்பட்டுள்ளது. அன்றியும், வியாசமுனிவரது மகாபாரதத்தே, பாண்டவருள் ஒருவனாய அருச்சுனன் ஒரு பாண்டியர் குலப் பெண்மணியை மணந்த செய்தி காணப்படுகின்றது. இங்ஙனமே வடமொழியிலுள்ள புராணங்களிலும் தமிழரசர்களைப் பற்றிய செய்திகள் காணப்படாமலில்லை. கி.மு. நான்காம் நூற்றாண்டின ரெனக் கருதப்படும் காத்தியாயனர்; பாணினிவியாகரணத்திற்குத் தாம் வரைந்த வார்த்திகம் என்ற உரையுள் பாண்டிய என்னும் மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளனர். அன்றியும் கிறித்து பிறப்பதன் முன்னர் மகதநாட்டில் ஆட்சிபுரிந்த மௌரிய மன்னனாகிய அசோகனுடைய கல்வெட்டுக்களிலும் பாண்டியர்களைப் பற்றிய செய்தி கூறப் பெற்றுள்ளது. இலங்கையின் பழைய சரித்திரத்தை விளக்கும் மகாவம்சம் என்ற சரித நூல் அவ்விலங்கையின் முதற்றமிழ் வேந்தனும் புத்தரது நிர்வாண காலமாகிய கி.மு. 478 - ல் அதனை ஆட்சிபுரியும் உரிமை அடைந்தவனுமாகிய விசயனென்பான், ஒரு பாண்டியர்குலப் பெண்மணியை மணந்தனனென்றும், ஆண்டு தோறும் தன் மாமனாகிய பாண்டியற்குச் சிறந்த பரிசில் அனுப்பினனென்றும் கூறுகின்றது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரீ தேயத்தினின்றும் சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவன தூதனாகிய மெகதனி என்பான் பாண்டி நாட்டின் வரலாற்றைப்பற்றிக் கூறுவது: ஹெர்க்கிளிசுக்குப் பண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தது. அவன் அப்பெண்ணிற்குத் தெற்கிற் கடலைச் சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தனன். அவளது ஆட்சிக்குட்பட்டவர்களை முந்நூற்றறுபத்தைந்து ஊர்களில் பகுத்துவைத்து ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குத் திரை கொணரவேண்டுமென்று கட்டளையிட்டான் என்பது, இனி கி.பி.79 - ஆம் ஆண்டில் இறந்தவராகிய பிளைனி என்ற மற்றொரு மேனாட்டு வரலாற்று ஆசிரியரும் மெகதனி கூறியதைப் போன்றுள்ள தோர் கதை கூறியிருக்கின்றார். அஃது இந்தியாவிற் பண்டோவென்ற ஒரேசாதி பெண்ணரசுக்கு உட்பட்டது. ஹெர்க்கிளிசுக்கு ஒரே பெண்ணிருந்தமையின் அவன் மிக்க அன்புடன் ஒரு பெரியநாட்டை. அவளுக்கு அளித்ததாகச் சொல்லுகிறார்கள். அவள் வழியினர் முந்நூறு ஊர்களை ஆட்சிபுரிந்தனர். அன்னோர் பெருஞ்சேனைகளை உடைய வராயுமிருந்தனர் என்பது. யவனாசிரியர் இருவரும் கூறியுள்ள கதை, பாண்டியர், மலையத்துவச பாண்டியனுடைய புதல்வியாகிய மீனாட்சியம்மையின் வழித் தோன்றியவராய்க் கௌரியர் என்றழைக்கப் பெற்ற செய்தியையாதல், அன்னோர் பாண்டியன் சித்திராங்கதனுடைய மகள் சித்திராங்கதையின் வழித் தோன்றல்களாயுள்ள செய்தியையாதல் குறித்ததாகக் கொள்ளல் வேண்டும். இதுகாறும் யாம் கூறியவாற்றால் பாண்டியர் மிக்க தொன்மை வாய்ந்தனரென்பது நன்கு விளங்கு கின்றதன்றோ? இனி, இப்பாண்டியர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவ ரென்றும் வேப்பம்பூ மாலையைத் தமக்குரிய அடையாள மாலையாகவும் கயல் மீனுருவத்தைக் கொடியாகவும் இலச்சினையாகவும் கொண்டவர்கள் என்றும் பண்டைத் தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் கூறுகின்றன. இனி, புறநானூறு, பத்துப்பாட்டு முதலிய சங்க நூல்களில் எத்துணையோ பல பாண்டிய மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆயினும் அவர்களது வரலாறு நன்குணரப் படவில்லை. கடைச்சங்க காலத்திற்கு முந்திய நாட்களில் நிலவிய அரசர்களுள் வடிம்பலம்ப நின்ற பாண்டியனும், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியுமே சிறந்தோராவர்.  2. கடைச்சங்ககாலத்திற்கு முந்திய பாண்டியர்கள் வடிவம்பலம்பநின்ற பாண்டியன் இவன் நிலந்தரு திருவிற் பாண்டியனெனவும் பாண்டியன் மாகீர்த்தி யெனவும் வழங்கப் பெறுவன். தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பெரியாருள் ஒருவராகிய நச்சினார்க்கினியர் இவ் வேந்தன் இருபத்து நாலாயிரம் யாண்டு அரசு வீற்றிருந்தன னென்றும் இவனது பேரவை யின்கண்ணேதான் தொல்காப்பியம் அரங்கேற்றப் பெற்றதென்றும் கூறியுள்ளார்.1 ஆசிரியர் கூறியுள்ள ஆண்டின்தொகை புனைந்துரை யாயிருத்தல் வேண்டு மென்பதில் ஐயமில்லை. ஆயினும் இவன் முடிசூடி நெடுங்காலம் ஆட்சி புரிந்தோனாதல் வேண்டு மென்பது சங்கத்துச் சான்றோர் இவனை, நெடியோன்2 என்று பல்லிடத்தும் குறித்துள்ளமை யானே வெளியாகின்றது. இவன், கடற்பிரளயத்தால் குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த குமரிநாடு முதலியன அழிதற்கு முன்னர் அக்குமரிநாட்டில் பஃறுளி என்றதோர் ஆற்றை வெட்டுவித்துக் கடற்றெய் வத்திற்கு விழ வெடுத்தனன். இச்செய்தி புறநானூற்றிலுள்ள ஒன்பதாம் பாடலால் நன்கறியப்படுகின்றது. ஆகவே இவன் தலைச்சங்கத்தி னிறுதியில் வாழ்ந்தவனென்க.3 பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இவ்வேந்தன் வடிம்பலம்பநின்ற பாண்டியனது வழியில் தோன்றியவன். இவனது இயற்பெயர் குடுமியென்பது. இவன் அரசர்க்குரிய பரிமேதம் முதலிய வேள்விகள் செய்து சிறப்புற்றவனாதலின் இவனது இயற்பெயருக்கு முன்னர்ப் பல்யாகசாலை என்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பாண்டியருடைய முன்னோர்களிலொருவன் ஆயிரம் வேள்வி களியற்றிப் புகழ்பெற்றன னென்று சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. இஃது இவ்வேந்தனையே குறிக்கின்றது போலும். இவனைக் கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந் தவிர்த்த-பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதி ராசன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பது ஈண்டு அறியத்தக்கது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் மீது அவனது அவைக்களப்புலவர் தலைவராகிய மாங்குடி மருதனாரால் பாடப் பெற்ற மதுரைக் காஞ்சியென்ற நூலிலுள்ள பல்சாலை முதுகுடுமித் தொல்லாணை நல்லாசிரியர்-புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் (759,61,62) என்ற அடிகளில் இவ்வேந்தன் புகழப் பட்டிருத்தல் காண்க. இதனால் சங்கச் செய்யுட்களிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் பிற்காலத்துச் செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் உறுதியெய்துதல் நன்குணரத் தக்கது. நம்முடைய முதுகுடுமியின் சிறப்பை விளக்கக் கூடிய ஐந்து பாடல்கள் புறநானூற்றிற் காணப்படுகின்றன. அவற்றைப் பாடினோர், காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் என்ற புலவர் களேயாவர். அவர்களுடைய பாடல்களால் அறிந்து கோடற்குரியவை; இம்மன்னர் பெருமான் அக்காலத்தில் நிலவிய அரசர் பலரையும் புறங்கண்ட பெருவீரன்; வேண்டிய வேண்டியாங்குப் புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் ஈந்த பெருங் கொடைவள்ளல்; அரசர்க்குரிய பல வேள்விகளை முடித்துப் பெருமை யெய்தியவன்; சிவபெருமானிடத்தும் பெரியோர்களிடத்தும் பேரன்புடையோன்-என்பன. இவனை நெட்டிமையார் பாடிய பாடல்களுள் ஒன்றைக் கீழே தருகின்றோம். பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறன்மாண் குடுமி இன்னா வாகப் பிறர்மண்கொண்டு இனிய செய்திநின் ஆர்வலர் முகத்தே. (புறம் - 12)  3. கடைச்சங்ககாலத்துப் பாண்டியர்கள் பாண்டியரது தலைநகராகிய மதுரையில் விளங்கிய கடைச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் முடிவெய்தியது என்பது ஆராய்ச்சியாளரது கொள்கையாகும். ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஆட்சி புரிந்த பாண்டிய அரசர்களது வரலாறே இப்பகுதியில் எழுதப் படுகின்றது. இறையனார் களவியற்கு உரைகண்ட தொல்லா சிரியர் கடைச் சங்கத்தைப் புரந்து வந்த பாண்டி மன்னர்கள் நாற்பத் தொன்பதின்மர் ஆவர் என்று அவ்வுரையிற் கூறியுள்ளார்1 சிலப்பதிகாரத்தின் உரைப்பாயிரத்திற்கு மேற் கோளாகக் காட்டப்பெற்ற வேங்கடங் குமரி தீம்புனற் பௌவம் என்று தொடங்கும் ஆசிரியப்பாவும் அங்ஙனமே உணர்த்து கின்றது.2 எனவே, கடைச்சங்க நாட்களில் அரசு செலுத்திய பாண்டிய அரசர்கள் நாற்பத்தொன்பதின்மர் ஆவர் என்பது நன்கு புலப்படுகின்றது. அன்னோர் ஆட்சிபுரிந்த காலம் ஆயிரத் தொண்ணூற்றைம்பது ஆண்டுகள் என்பர் களவியலுரை கண்ட பெரியார். ஆகவே ஒவ்வொரு மன்னனது சராசரி ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டாண்டுகளாகும். கடைச் சங்ககாலத்துப் பாண்டியர் நாற்பத்தொன் பதின்மருள் சிலர் பெயர்களே நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு என்னும் நூல்களால் அறியப் படுகின்றன. அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிக்க பழைமை வாய்ந்தவன் என்பது களவிய லுரையால் பெறப்படுகின்றது. எனவே, அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம். பாண்டியன் முடத்திருமாறன் குமரிநாடு கடல் கோளால் அழிந்தபின்னர், குமரி யாற்றிற்கும் தாம்பிரபருணியாற்றிற்கும் இடையிலுள்ள நிலப்பரப்பில் தங்கியிருந்த தமிழ்மக்களுக்குத் தலைநகராய் இருந்த கபாடபுரத்தில் வீற்றிருந்து அரசாண்ட பாண்டிய அரசர் ஐம்பத்தொன்பதின்மருள் இவ்வேந்தனே இறுதியில் வாழ்ந்தவன் ஆவான். ஆகவே, இவன் இடைச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் ஆதல் வேண்டும். இவன் காலத்தில் நிகழ்ந்த ஒரு கடல் கோளால் பாண்டிய நாட்டின் பெரும்பகுதியும் அதன் தலை நகராகிய கபாடபுரமும் அழிந்தொழிந்தன.1 இக்கடல் கோளினால் எண்ணிறந்த தமிழ் நூல்கள் இறந்தன. இச்செய்தியை, ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதஞ் சாலந் தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம் மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள என்னும் பழைய பாடலும் உணர்த்துதல் காண்க. தமிழ்மக்கள் செய்த உயர்தவப்பயனால் எஞ்சிநின்ற நூல் தொல்காப்பியம் ஒன்றேயாகும். இக்கடல் கோளுக்குத் தப்பியுய்ந்த பாண்டியன் முடத்திருமாறனும் செந்தமிழ்ப் புலவர்களும் சிறிது வடக்கே சென்று மணலூர் என்னும் ஒரு சிறு நகரத்தில் தங்கினார்கள். இவர்கள் சிலகாலம் அந்நகரில் தங்கியிருந்து, பின்னர் மதுரை மாநகரை யடைந்தனர். இப்பாண்டியனும் அந்நகரை வளம்படுத்தித் தனக்குரிய தலைநகராகக் கொண்டு கடைச் சங்கத்தை அங்கு நிறுவினான்.2 பல நல்லிசைப் புலவர்கள் தமிழ் ஆராய்ச்சி செய்யத் தொடங்கிப் பற்பல அரிய செந்தமிழ் நூல்கள் இயற்றுவராயினர். இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழும் உயர்நிலை எய்தின. எனவே, கடைச்சங்கத்தை மதுரைமாநகரின் கண் நிறுவி அதனைப் போற்றி வளர்த்துவந்த பாண்டியன் முடத்திருமாறன் நம் தமிழ்த்தாயின் பொருட்டு ஆற்றிய அரும்பணி அளவிட்டு உரைக்குந்தரத்ததன்று. இம்மன்னனே தண்டமிழ்ப் புலமையிற் சிறந்த ஒண்டிறற் குரிசில் ஆவன். இவன் பாலைத்திணையையும் குறிஞ்சித் திணையையும் இன்சுவை பொருந்தப் பாடுவதில் வன்மை உடையவன். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய நற்றிணையில் இவன் பாடிய இரண்டு பாடல்கள் காணப்படுகின்றன (நற்றிணை 105; 228). இவன் மதுரைநகரை அமைத்ததையும் கடைச்சங்கத்தை அங்கே நிறுவி யதையும் பராந்தக பாண்டியனுடைய செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.1 இவனைப் பற்றிய பிற செய்திகள் இக்காலத்திற் புலப்படவில்லை. பாண்டியன் மதிவாணன் இவன் கடைச்சங்கத்தைப் புரந்து வந்த பாண்டிய அரசர்களுள் ஒருவனாவன். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் இவன் கடைச்சங்கம் இரீஇய பாண்டியருள் கவியரங்கேறியவன் என்று தம் உரைப்பாயிரத்திற் கூறியுள்ளார். ஆகவே இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கிய வேந்தனாவன். இவன் ஒரு நாடகத் தமிழ் நூல் இயற்றியுள்ளான். அது மதிவாணர் நாடகத் தமிழ் நூல் எனப்படும். அந்நூல், நூற்பாவாலும் வெண்பாவாலும் இயற்றப்பெற்றது என்பர். அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரத் திற்கு உரையெழுதுவதற்கு மேற் கோளாகக்கொண்ட2 ஐந்து இசைநாடக நூல்களுள் மதிவாணர் நாடகத் தமிழ்நூலும் ஒன்றாகும். அது முதனூலிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க்கூத்தின் இலக்கணத்தை உணர்த்தும் சிறப் புடையது என்று சிலப்பதிகார உரையாளர் குறித்துள்ளார். இம்மன்னன் இயற்றிய அத்தகைய பெருமைவாய்ந்த நாடகத்தமிழ் நூல் இந்நாளிற் கிடைக்கப்பெறாதிருத்தல் பெரிதும் வருந்தத்தக்கதாகும். சிற்சில சூத்திரங்களே சிலப்பதிகார உரையிற் காணப்படுகின்றன. பொற்கைப்பாண்டியன் இவன் கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். கண்ணகி முன் தோன்றிய மதுரைமாதெய்வம் பாண்டியர்களது செங் கோற் பெருமையை அவளுக்குணர்த் துங்கால், இவன் செய்தியையும் எடுத்துரைத்துப் புகழ்ந்துள்ளது. அவ்வரலாறு அடியில் வருமாறு: ஒரு நாள், கீரந்தை என்னும் வேதியனொருவன் தன் மனைவியை மன்றத்தின்கண் இருத்தி, அரசனது செங்கோல் அவளைக் காக்கும் என்று கூறிவிட்டு வெளியே சென்றனன். மற்றொருநாள், அவன் தன் இல்லாளுடன் மனையகத் திருக்குங்கால், பாண்டிய அரசன் ஒருவன் கதவைப்புடைத்தனன். உடனே அம்மறையோன் தன் மனைவிபால் ஐயமுற்று அவளை நோக்க, அதனை யுணர்ந்த அந்நங்கை ‘முன்னொரு நாள் அரசனது செங்கோல் என்னைக் காக்கும் என்று கூறி, மன்றத்திருத்திச் சென்றீர்களே; இன்று அச்செங்கோல் காவாதோ? என்றுரைத்தனள். அதனைப் புறத்தே கேட்டுக் கொண்டு நின்ற அரசன், தன் செய்கைக்குப் பெரிதும் வருந்தி, விரைவில் அரண்மனைக்குச் சென்று, அது தனக்குத் தகவன்று என்றெண்ணித் தன் செய்கைக்குத் தானே சான்றாகி, வாளால் தன் கையைக் குறைத்துக் கொண்டனன்; பிறகு, பொன்னாற் பொற்கை யமைத்துக்கொண்டு, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்தான். இது பற்றியே, இவன் பொற்கைப் பாண்டியன் என்று வழங்கப் பெற்றான். இது சிலப்பதிகாரம், பழமொழியாகிய இரு நூல்களாலும் அறியப் படுவது. இஃது இப்பாண்டியன் கோல் கோடாது முறை செய்த மாட்சியை உணர்த்துகின்றது. கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி இவ்வேந்தன் கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியர் களுள் ஒருவனாவன். இளம்பருவத்திலேயே பேரறிவினனாக இருந்தமை பற்றி இவன் இளம்பெருவழுதி என்ற பெயர் பெற்றனன் போலும். கடலுண் மாய்ந்த என்னும் அடை மொழிகளால் இவன் கடலிற் கலமிவர்ந்து சென்ற போது அங்கு மூழ்கியிறந்திருத்தல் வேண்டுமென்பது புலப்படுகின்றது. இவன் தண்டமிழ்ப் புலமையிற் சிறந்த பெருந்தகை மன்னனாவன். இவன் இயற்றிய இரண்டு பாடல்கள் பரிபாடலிலும் புறநானூற்றிலும் உள்ளன. (பரிபாடல் 15, புறநானூறு-182) இவன் தான் இயற்றிய பரிபாடலில் 1 சிலம்பாற்றால் அழகு பெற்றுள்ள திருமாலிருஞ் சோலை மலையின் சிறப்பையும் அங்கு எழுந்தருளியிருக்கும் கண்ணபிரான் பலதேவன் ஆகிய இருவரது பெருமையையும் நன்கு விளக்கியுள்ளான். இனி, அக்குன்றம் திருமாலையொக்கும் என்றும், தன்னைக் கண்டோருடைய மயக்கத்தைப் போக்கும் பெருமையுடையதென்றும், ஆதலால் சென்றேனும் கண்டேனும் திசைநோக்கியேனும் அதனைக் குடும்பத்துடன் வழிபடுமின் என்றும் உலகத்தாரை நோக்கி இவ்வேந்தன் அப்பாடலில் கூறியிருத்தலும், அக்குன்றத்தின் அடியின்கண் உறைதலே தான் எய்த விரும்புவது என்று முடித்திருத்தலும் இவன் திருமாலிடத்துக் கொண்டிருந்த பேரன்பினை இனிது புலப் படுத்தாநிற்கும். இவன் புறநானூற்றில் பாடியுள்ள பொருண் மொழிக்காஞ்சி2 இவனுடைய பேரறிவினையும் உள்ளக் கிடக்கையினையும் தெள்ளிதினுணர்த்தும் இயல்புடையதா யிருத்தலின் அப்பாடலை ஈண்டுத் தருகின்றோம். உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமிய ருண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந ருண்மை யானே3 (புறம் - 182) பாண்டியன் அறிவுடை நம்பி இவன் பாண்டியர் குடியில் தோன்றிய ஒரு மன்னன் ஆவன். இவன் இருவேறு நல்வினைகளின் பயன்களாயுள்ள அரிய கல்வியும் பெரிய செல்வமும் ஒருங்கே எய்தி அதற்கேற்றவாறு பேரறிவுடைய பெருங் கொடை வள்ளலாக வாழ்ந்தவன். கோப்பெருஞ்சோழற்கு உயிர்த் தோழரும் பாண்டிநாட்டினரும் பேரறிஞருமாகிய பிசிராந்தையார் இவ்வரசன் மீது பொருண்மொழிக் காஞ்சி பாடியிருத்தலின் இவன் அச்சோழன் காலத்தில் நிலவியவன் என்பது பெறப்படுகின்றது. (புறம்-184).இவன் பாடிய பாடல்களாக நற்றிணையில் ஒன்றும் குறுந்தொகையில் ஒன்றும் அகநானூற்றில் ஒன்றும் புறநானூற்றில் ஒன்றும் உள்ளன. (நற்றிணை - 15; குறுந்தொகை - 230; அகம் - 28; புறம் - 188) எனவே, இவனது செந்தமிழ்ப் புலமை அறிஞர்கள் பெரிதும் மதித்துப் போற்றுற்குரியதாகும். இவன், மக்களாலுண்டாகும் இன்பம், இம்மையின்பம் எல்லாவற்றினும் சிறந்ததென்றும் அத்தகைய மக்கள் இல்லாதவர்கட்கு இம்மைப்பயன் ஒரு சிறிதும் இல்லை என்றும் கூறியிருக்கும் அரிய பாடல் எல்லோரும் படித்துணரத் தக்க தொன்றாகலின், அதனைப் பின்னே காண்க. படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லொர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழும் நாளே.1 (புறம்-188) ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் இவன் நல்லிசைப் புலமைவாய்ந்த செல்வப் பாண்டியருள் ஒருவன். புறநானூற்றிலும் அகநானூற்றிலும் காணப்படும் இவனுடைய பாடல் களும், ஒல்லையூர் தந்த என்னும் அடைமொழிகளும் இவனுடைய புலமையையும் வீரத்தையும் நன்கு விளக்கும். இவன் பெரிய போர்வீரனென்பதும், கல்வியறிவு வாய்ந்த பட்டத்தரசியைச் சிறிதும் பிரிதலாற்றாப் பேரன்புடை யவனென்பதும், சிறந்த செங்கோல் வேந்தனென்பதும், வையை சூழ்ந்த வளம் மிக்க மையல் என்னும் ஊரில் வாழ்ந்த மாவன், எயில் என்னும் ஊரிலிருந்த ஆந்தை, புகழ்வாய்ந்த அந்துவஞ் சாத்தன், ஆதன் அழிசி, இயக்கன் என்பவர்களைத் தன் உயிர் நண்பர்களாகக் கொண்டு ஒழுகியவனென்பதும், தனக்குரிய பாண்டி நாடாளும் அரசுரிமையை எவற்றினும் சிறந்ததாகக் கருதியிருந்தவ னென்பதும், மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத்து (புறம் - 71) என்று தொடங்கும் இவனது பாடலால் இனிது புலப்படுகின்றன. இவனுடைய மனைவியாகிய பெருங்கோப்பெண்டு என்பாள் நல்லிசைப்புலமை வாய்ந்த மெல்லியல் நங்கையாவள். அருங்கற்பு வாய்ந்த இவ்வம்மையின் பெருமையை உரைக்கவல்லார் யாவர்? செல்வமும் கல்வியும் ஒருங்கே அமையப்பெற்ற இவ்விருவரும் காதலனும் காதலியுமாக அன்புற்று ஆற்றிய இல்வாழ்க்கையே வாழ்க்கை யாகும். அதுவே துறக்க வின்பமும் ஆகும். அறிவு வீற்றிருந்த செறிவுடை நெஞ்சினராகிய பூதப்பாண்டியனும் இவனுடைய காதலியாகிய பெருங் கோப்பெண்டும் இனிது வாழ்ந்து வரும் நாட்களில் கொடுங்கூற்றம் பூதப்பாண்டியன் ஆருயிரைக் கவர்ந்து சென்றது. இந்நிலையிற் பெருங் கோப்பெண்டு எய்திய இன்னல் இத்தகைய தென்று இயம்பவும் இயலுமோ! தாய் தந்தை முதலானோரை இழந்தோர்க்கு அம்முறை சொல்லிப் பிறரைக் காட்டி அவர்களது துயரை ஆற்றலாம்; கணவனை இழந்தார்க்கு அங்ஙனம் காட்டுவது இல்லை யன்றோ? ஓவாத விதவை யிடும்பை உயிருள்ளவரை ஒழிவதன்றே! இவற்றை நன்குணர்ந்துள்ள பெருந்தேவி ஆற்றொணாத் துன்பத்துள் ஆழ்ந்திருக்குங்கால் அரசனுடைய உரிமைச் சுற்றத்தினர் அவனது திருமேனியைப் பெருஞ் சிறப்புடன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று ஈமத்து ஏற்றுவாராயினர். அதனைக் கண்ட பெருந்தேவி சிறிதும் ஆற்றாது அன்புடையாரைப் பிரிதலினும் அனலிற் புகுந்து ஆருயிர் துறத்தலே நலம் என்று துணிந்து தம் உயிர்க்காதலனோடு ஈமத்தீயிற் பாய்ந்து மாயக்கருதினாள். அச்சமயத்தில் அங்கிருந்த மதுரைப் பேராலவாயார் முதலான சான்றோர்கள் தம்மையொத்த பேரறிவுடைய வேந்தனை இழந்ததோடு அத்தகைய பேரறிவு வாய்ந்த அரசியையும் இழக்க மனம் பொறாதவர் களாய் அவ்வம்மையைத் தீப்புகாமல் விரைவில் தடை செய்வாராயினர். அது கண்ட அரசன் பெருந்தேவியும் தீயின் புறத்தே நின்றுகொண்டு அச்சான்றோரை நோக்கி, பலசான்றவிரே! பலசான்றவிரே! நின் தலைவனோடிறப்ப நீ போ வென்று கூறாது அதனைத் தவிர்க்க என்று சொல்லி விலக்கும் பொல்லாத விசாரத்தையுடைய பலசான்றவிரே! அணிலினது வரிபோலும் வரியையுடைய வளைந்த வெள்ளரிக்காயை அரிவாளால் அரிந்திடப்பட்ட விதைபோன்ற நல்ல வெள்ளிய நறிய நெய் தீண்டாமல் இலையிடையே பயின்ற கையாற் பிழிந்து கொள்ளப்பட்ட நீர்ச் சோற்றுத் திரளுடனே வெள்ளிய எள்ளரைத்த விழுதுடனே புளிகூட்டி அடப்பட்ட வேளையிலை வெந்த வேவையுமாகிய இவை உணவாகக் கொண்டு பருக்கைகளாற் படுக்கப்பட்ட படுக்கையின்கண் பாயுமின்றிக் கிடக்கும் கைம்மை நோன்பால் வருந்தும் பெண்டிருள்ளேம் அல்லேம் யாம்; புறங்காட்டின்கண் உண்டாக்கப்பட்ட கரிய முருட்டால் அடுக்கப்பட்ட பிணப்படுக்கை உங்களுக்கு அரிவதாகுக; எமக்கு எம்முடைய பெரிய தோளையுடையனாகிய கொழுநன் இறந்து பட்டானாக, முகை யில்லையாக வளவிய இதழ் மலர்ந்த தாமரையையுடைய நீர்செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து என்னும் பொருள் கொண்ட பல்சான்றீரே பல்சான்றீரே1 என்று தொடங்கும் பாடலைக் கூறித் தீயிற் பாய்ந்து உயிர் துறந்தனள். இதனால் இவ்வம்மை தன் பெருங்கற்பினால் நிகழ்த்திய அருஞ்செயல் வெளியாதல் காண்க. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச் சங்கநாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டியர்களுள் ஒருவனாவன். இவன் ஆட்சிக் காலத்திலேதான் காவிரிப் பூம்பட்டினத்து வணிகர்களுள் ஒருவனாகிய கோவலன் தன் மனைவியாகிய கண்ணகியுடன் வாணிகஞ் செய்யக் கருதி மதுரைக்குச் சென்றனன். அவன் அங்கு ஆயர் பாடியிலுள்ள இடைச்சியர் தலைவியாகிய மாதரியின் இல்லத்தில் தன் மனைவியை இருத்தி, அவளது சிலம்பொன்றை வாங்கிக் கொண்டு, அதனை விற்பதற்கு அகநகர்க்குட் சென்றபோது எதிரில் வந்த அரசாங்கப் பொற்கொல்லனது சூழ்ச்சியினால் கோப்பெருந்தேவியின் சிலம்பு கவர்ந்த கள்வனென்று இப்பாண்டியனால் கருதப்பட்டுக் காவலாளனால் வெட்டி வீழ்த்தப் பட்டான். இத்துன்பச் செய்தியை யுணர்ந்த கண்ணகி, தன் நாயகனை ஆராயாமல் அநீதியாகக் கொல்வித்த இவ்வரசன் பாற் சென்று தன் வழக்கை எடுத்துரைத்துத் தன் நாயகனாகிய கோவலன், கோப்பெருந் தேவியின் சிலம்பு கவர்ந்த கள்வனல்லன் என்று மெய்ப்பித்தாள். உண்மையை யுணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன், தான் ஒரு கற்புடைமகளின் கணவனை ஆராயாது கொல்வித்தமைக்குப் பெரிதும் கவன்று, அத்தீச் செயலை உன்னியுன்னி நெஞ்சம் நடுக்குற்றுத் தாழ்ந்த குடையனாய்த் தளர்ந்த செங்கோலனாய்ப், பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்! மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது; என் ஆயுள் கெடுக என்றுரைத்து அரசுகட்டிலில் மயங்கி வீழ்ந்து உயிர் துறந்தனன். தன் கணவன் இறந்த செய்தியையறிந்த கோப்பெருந்தேவியும் அத்துன்பத்தை ஆற்றாது சிறிது நேரத்திற்குள் உயிர் நீத்தனள். தான் அறியாது புரிந்த ஒரு பிழைக்காகத் தன் ஆருயிரையே இவ்வரசன் போக்கிக் கொண்டன னெனில், இவனது ஆட்சிக் காலத்திற் குடிமக்கள் எல்லோரும் எத்தகைய இன்னல்களும் எய்தாது இன்புற்று வாழ்ந்திருத்தல் வேண்டு மென்று கூறுவது சிறிதும் புனைந்துரையாகாது. இப்பாண்டியனுக்கு நேர்ந்த தீவினைத் திறங்களைக் கேட்ட சேர மன்னனாகிய செங்குட்டுவன் பெரிதும் வருந்தித் தன்பால் வந்திருந்த சங்கப் புலவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரை நோக்கி, புலவீர்! அவன் செங்கோலினின்று தவறிய செய்தி என்னை யொத்த அரசர்க்கு எட்டு முன்னர் உயிர் துறந்தமை, தீவினையால் வளைக்கப்பட்ட கோலை உடனே செங்கோலாக்கியது; அரசராயுள்ளார்க்குத் தம் நாட்டிற் காலத்தில் மழை பெய்யாதாயின் அச்சம்; உயிர்கள் தவறிழைக்கு மாயின் அச்சம்; கொடுங்கோற்கஞ்சிக் குடிகளைப் பாதுகாத்தற் குரிய அரசர் குலத்திற் பிறத்தல் துன்பமல்லது தொழுதக வில்லை என்று மிகவும் இரங்கிக் கூறிய அரிய மொழிகள் ஈண்டு அறிந்துகோடற்கு உரியனவாகும். அன்றியும், மதுரைமாநகரம் தீப்பற்றியெரிந்த ஞான்று, கண்ணகி முன்னர்த்தோன்றிய மதுரைமாதெய்வம் நெடுஞ் செழியனது செங்கோற் சிறப்பையும் கோவலனது ஊழ்வினை உருத்துவந்து தன் பயனை நுகர்வித்ததென்னும் உண்மை யினையும் விளக்கிக் கூறிய வரலாற்றைச் சிலப்பதிகாரத்திலுள்ள கட்டுரை காதையிற் பரக்கக் காணலாம். இதனாலும் இவனது செங்கோலினது மாண்பு ஒருவாறு இனிது புலனாகும். இனி, இவனது செங்கோற்பெருமையோடு ஒருங்குவைத்துப் புகழ்தற்குரியனவாய் அடுத்து நிற்பன இவனுடைய வீரமும் செந்தமிழ்ப் புலமையுமாகும். இவன் வடநாட்டிலிருந்த ஆரிய மன்னர்களைப் போரிற் புறங்கண்டு புகழெய்தியவன் என்பது, வடவாரியர் படைகடந்து தென்றமிழ்நா டொருங்கு காணப் புரைதீர்கற்பிற் றேவிதன்னுடன் அரசுகட்டிலிற் றுஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் இளங்கோவடிகளது அருமைத் திருவாக்கினாலும், இவனது இயற்பெயருக்கு முன்னர் அமைந்துள்ள ஆரியப்படை கடந்த என்னும் அடைமொழிகளாலும் நன்கு வெளியாகின்றது. இவன் கற்றோர்பால் மிக்க மதிப்புடையவன் என்பதும், கல்வி கற்றலையே பெரும்பயனாகக் கருதியவன் என்பதும் இவன் பாடியுள்ள 183ஆம் புறப்பாட்டினால் அறியப்படுகின்றன. அப்பாடல் அடியில் வருமாறு:- உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.1 பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின்னர், கொற்கைநகரத்தில் இளவரசராயிருந்து ஆட்சிபுரிந்து வந்த வெற்றி வேற்செழியன் என்பான் பாண்டியநாட்டை அரசாளும் உரிமையை எய்தினான். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் படிமம் அமைத்தற்கு இமயத்தினின்றும் கல்கொணர வடநாட்டிற்குச் சென்றிருந்த போது இவ்வரசிளங் குமரனுக்கு மதுரைமாநகரில் முடிசூட்டுவிழா நடை பெற்றது.2 இவன் முடிசூடிக்கொண்ட பின்னர் நன்மாறன் என்ற வேறு பெயருடை யவனாய்த் திகழ்ந்தனன் என்று தெரிகின்றது. இவனது ஆட்சிக்காலத்திற் பாண்டி நாடு மழைவளமிழந்து வறுமை யுற்றிருந்தது. அவ்வறுமை நீங்கிக் குடிகள் இன்புற்று வாழுமாறு இவ்வேந்தன் கண்ணகியின் பொருட்டுப் பெருவிழா ஒன்று நடத்தினன். இதனாற் கண்ணகியின் சினம் தணியவே, நாடு நன்னிலையை எய்திற்று; குடிகளும் இனிது வாழ்ந்தனர். புறநானூற்றில் இவனைப் பாடியுள்ள புலவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனார் என்பவரே யாவர். அப் பாடலால் (புறம் - 59) இவனுடைய அருங்குணங்கள் பலவும் வெளியாகின்றன. இவன் சித்திரமாடத்து இறந்தனன் போலும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இவன் கடைச்சங்கநாளில் விளங்கிய பாண்டியர்களுள் ஒருவன். இவன் சித்திரமாடத்துத்துஞ்சிய நன்மாறனுடைய புதல்வன் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவன் தந்தை சின்னாட்களே அரசுசெலுத்தியமையின் இவன் இளமையிலேயே அரசு கட்டிலேறல் இன்றியமையாததாயிற்று. இவன் ஆட்சி புரிந்துவரும் நாட்களில், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்னும் வேளிர் ஐவரும் இந்நெடுஞ் செழியனை இளைஞன் என்று இகழ்ந்து கூறிப் பாண்டி நாட்டைக் கைப்பற்றக்கருதி மதுரைமாநகரை முற்றுகை யிட்டார்கள். இதனை யுணர்ந்த நெடுஞ்செழியன், பெருஞ்சினங் கொண்டு, புல்லிய வார்த்தை களைக் கூறிய சினம்பொருந்திய அரசரைப் பொறுத்தற்கரிய போரின் கண்ணே சிதறப்பொருது, முரசத்தோடு கூட அவரைக் கைக்கொண்டிலே னாயின், பொருந்திய எனது குடைநிழற்கண் வாழ்வோராகிய குடிமக்கள், தாங்கள் சென்றடையும் நிழற் காணாதே கொடியன் எம்முடைய வேந்தன் என்று கருதிக் கண்ணீரைப் பரப்பிப் பழிதூற்றும் கொடுங்கோலை உடையேனாகுக; உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட கேள்வியை யுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழுந் தலைமையையுடைய புலவர் பாடாது நீங்குக எனது நிலவெல்லையை; என்னாற் புரக்கப்படுங்கேளிர் துயரம்மிக இரக்குமவர் கட்குக் கொடாத வறுமையை யானுற என்று வஞ்சினங்கூறிப் போருக்கெழுந்து உழிஞைசூடிப் போர் புரியத் தொடங்கினன். இவன் மிக்க இளைஞனாயினும் சிறிதும் அஞ்சாமற் கடும்போர் புரிந்து அன்னவர் எழுவரும் புறங்காட்டி ஓடச் செய்தனன். தோல்வியுற்ற எழுவரும் ஓடிச்சென்று சோழ நாட்டிற்புகும் போது நெடுஞ்செழியன் அவர்களை விடாது பின் தொடர்ந்து சென்று தலையாலங்கானத்து மறித்துப் பெரும் போர் நடத்தி வாகைமிலைந்தனன். (புறம்-19,23) இவன், இதனோடு நில்லாமற் பகைஞர்களை அவர்களுடைய உறையூர், வஞ்சி முதலான நகரங்கள் வரையிற் போர்ப்பறை யொலிப்பத் துரத்திச்சென்று அன்னோரின் உரிமை மகளிர் நாணமுற்று உயிர்துறக்குமாறு அவர் களைக் கொன்றனன். (புறம்-78) வேள்எவ்வி முன்னர் ஆட்சி புரிந்ததும் இருங்கோவேண்மானுக்குரியது மாகிய மிழலைக் கூற்றத்தையும் அதற்கடுத்துள்ளதும் வேளிர்களுக் குரியதுமாகிய முத்தூர்க் கூற்றத்தையும்1 இப்போரின் இறுதியிற் கைப்பற்றிப் பாண்டிநாட்டோடு சேர்த்துக்கொண்டான். (புறம். 24). இப்போர் நிகழுங்கால், இவன் மிகவும் இளைஞனாயி ருந்தனன் என்பது, சதங்கை வாங்கப்பட்ட காலிலே ஒள்ளிய வீரக் கழலினைச் செறித் துக் குடுமியொழிக்கப்பட்ட சென்னிக் கண்ணே வேம்பினது ஒள்ளிய தளிரை நெடிய கொடியாகிய உழிஞைக் கொடியோடு சூடிக் குறிய வளைகளை யொழிக்கப் பட்ட கையின்கண்ணே வில்லைப் பிடித்து நெடிய தேரினது மொட்டுப் பொலிவு பெற நின்றவன் யாரோதான்? யாரேயா யினும் அவன் கண்ணி வாழ்வதாக; தாரை யணிந்து ஐம்படைத் தாலி கழித்ததுமிலன்; பாலை ஒழித்து உணவும் இன்றுண்டான்; முறை முறையாக வெகுண்டு மேல்வந்த புதிய வீரரை மதித்ததும், அவமதித்ததும் இலன்; அவரையிறுகப் பிடித்துப் பரந்த ஆகாயத்தின்கண்ணே ஒலியெழக் கவிழ்ந்து உடலம் நிலத்தின் கண்ணே பொருந்தக் கொன்றதற்கு மகிழ்ந்ததுவும், இவ்வாறு செய்தே மென்று தன்னை மிகுத்ததுவும் அதனினும் இலன் என்னும் பொருள்கொண்ட கிண்கிணி களைந்தகால் என்று தொடங்கும் இடைக்குன்றூர் கிழாரது பாடலால் தெளிவாகப் புலப்படுகின்றது.(புறம் -77) இவ்வேந்தன், இரவிற் பாசறையின்கண் போரிற் புண்பட்ட வீரர்களைப் படைத்தலைவன் முன்னே காட்டிச் செல்லத் துயில் சிறிதுமின்றித் தானே அவர்களை நேரிற்கண்டு அன்புடன் இன்சொற் கூறிப் பாராட்டுவது வழக்கம் என்பது, வேப்பந் தாரைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே முன்செல்கின்ற சேனாதிபதி புண்பட்ட வீரரை அடைவே அடைவே காட்ட . . .செருக்கின குதிரைகள் கரிய சேற்றையுடைய தெருவிலே தம் மேலே வீசுந் துளிகளை யுதற, இடத்தோளினின்றும் நழுவி வீழ்ந்த அழகினையுடைய ஒலியலை இடப்பக்கத்தே யணைத்துக் கொண்டு, வாளைத் தோளிலே கோத்த தறுகண்மையுடைய வாளெடுப்பான் தோளிலே வைத்த வலக்கையை யுடையவனாய்ப் புண்பட்ட வீரர்க்கு அகமலர்ச்சி தோன்ற முகம் பொருந்தி, நூலாலே சட்டத்தைக் கட்டின முத்தமாலையையுடைய கொற்றக்குடை தவ்வென்னும் ஓசைப்பட்டு அசைந்து பரக்கின்ற துளியைக்காக்க நள்ளென்னும் ஓசையையுடைய நடுயாமத்தும் பள்ளி கொள்ளானாய்ச் சில வீரரோடு புண்பட்டோரைப் பரிகரித்துத் திரிதலைச் செய்யும் அரசன் என்று பொருள்படும் வேம்புதலை யாத்த நோன்கா ழெஃக மொடு என்னும் நெடுநல்வாடைப் பாடற்பகுதியால் நன்கறியக் கிடக்கின்றது. இங்ஙனம் பெருவீரனாகிய இந்நெடுஞ்செழியன் தான் ஒருவனாக நின்று பேரரசர் இருவரையும் தலையாலங்கானத்துப் போரில் வென்ற செய்தி மூன்றாம் இராசசிங்க பாண்டியனது சின்னமனூர்ச் செப் பேட்டிலும்1 குறிக்கப்பெற்றுள்ளது. இச்செய்தியைப் பராந்தக பாண்டியனின் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன.1 இனி,நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் என்ற 72-ஆம் புறப்பாட்டினால், இம்மன்னன் கற்றுத்துறைபோய காவலன் என்பதும், கற்றோர்பாற் பேரன்பும் பெருமதிப்பும் உடையவன் என்பதும் நன்கு விளங்குகின்றன. இவன் புலவர் பெரு மக்களிடத்து எத்தகைய மதிப்பு வைத்திருந்தனன் என்பது, ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவ னாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் நிலவரை என்னும் புறப்பாட்டடிகளில் இவன் கூறியுள்ள உயர் மொழிகளால் ஒருவாறு புலப்படும். பத்துப்பாட்டிலுள்ள மதுரைக் காஞ்சியும் நெடுநல் வாடையும் இவ்வேந்தன் மீது பாடப்பட்ட நூல்களே யாகும். இவ்வரிய நூல்களைப் பாடிய புலவர் பெருமக்கள் முறையே மாங்குடி மருதனாரும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாருமே யாவர். நெடுஞ்செழியன் போர்விருப்பு மிக்குடையவனாய், ஒளிறிலைய வெஃகேந்தி அரசுபட வமருழக்கி முடித்தலை யடுப்பாகப் புனற்குருதி யுலைக்கொளீஇத் தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்டு வாணாட்களைக் கழித்து வந்தமையின், இவன் அவைக்களப் புலவர் தலைவராகிய மாங்குடிமருதனாரென்பார் வீடடைதற் கேதுவான அறநெறியைக் கடைப்பிடித் தொழுகுமாறு இவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தல் கருதியே மதுரைக்காஞ்சி என்றதோர் அரிய நுலை இயற்றியுள்ளார். இந்நூலால் இவனுடைய முன்னோரது பெருமையும் இவனுடைய செங்கோற் சிறப்பும் வீரமும் பாண்டிய நாட்டின் வளமும் மதுரைமாநகரின் வனப்பும் பிறவும் இனிதுணரப்படும். இஃது எழுநூற்றெண்பத்திரண்டு அடிகளையுடையது. தென்னவற் பெயரிய துன்னருந் துப்பிற் றொன்முது கடவுட் பின்னர் மேய வரைத்தா ழருவிப் பொருப்பிற் பொருந என்னும் மதுரைக் காஞ்சியடிகளிற் பாண்டியராக மதுரையில் வீற்றிருந்து அரசாண்ட சோமசுந்தரக் கடவுளின் வழியில் தோன்றியவன் இந்நெடுஞ்செழியன் என்று மாங்குடிமருதனார் குறித்திருப்பது ஈண்டு அறியத் தக்கது. பாண்டியன் கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி கடைச்சங்கத்தைப் புரந்துவந்த பாண்டிய மன்னர்களுள் இவனே இறுதியில் இருந்தவன். இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் புதல்வன் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவன் தன் பகைஞனாகிய வேங்கை மார்பனைப் போரில் வென்று அவனுக்குரிய கானப் பேரெயில் (காளையார் கோயில்) என்னும் ஊரைக் கைப்பற்றி யவனாதலின் கானப்பே ரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதி என்று வழங்கப்பட்டனன். (புறம்-21) மாரிவெண்கோ என்னும் சேரமன்னனும் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனும் இவனுக்குச் சிறந்த நண்பர்களாக இருந்தனர். (புறம்-367) இவன் சங்கப்புலவர்களோடு ஒப்பப்பாடும் ஆற்றலுடைய பெரும் புலவனாக விளங்கியமை ஈண்டு உணரத்தக்கது. மதுரை உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மரைக் கொண்டு அகநானூறு தொகுப்பித்தோன் இவ்வேந்தனேயாவன். இவன் தலைமையிலேதான் கடைச் சங்கத்தில் திருக்குறள் அரங்கேற்றப் பெற்றது என்று ஒரு கதை வழங்குகிறது; இஃது உண்மையன்று என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இவன் குறிஞ்சியையும் மருதத்தையும் புனைந்து பாடுவதில் வன்மை யுடையவன். இவன் பாடியனவாக நற்றிணையில் ஒரு பாடலும் அகநானூற்றில் ஒரு பாடலும் உள்ளன. (நற்றிணை-98; அகநானூறு-26) இவன் காலத்திற்குப் பின்னர், கடைச்சங்கம் நடைபெறாமல் அழிவுற்றது என்பது களவியலுரையால் உணரப்படுகின்றது. ஆனால், அச்சங்கம் அழிந்தமைக்குச் சொல்லப்படுங் காரணங்கள் உண்மை என்று தோன்றவில்லை. இவனுக்குப் பிறகு, பாண்டி நாட்டில் அக்காலத்தில் ஆட்சிபுரிந்த மன்னன் யாவனென்பது இப்போது புலப்படவில்லை. இனி, இவ்வேந்தர்களேயன்றிக் கடைச்சங்க நாளில் வேறு சில பாண்டிய மன்னர்களும் இருந்தனர் என்பது சங்கத்துச் சான்றோர் அருளிய எட்டுத்தொகை நூல்களால் அறியப் படுகின்றது. அன்னோர் கருங்கையொள்வாட் பெரும் பெயர்வழுதி, பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி, நல்வழுதி, கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி, இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, நம்பி நெடுஞ்செழியன், குறுவழுதி என்போர். அவர்களைப் பற்றிய வரலாறுகள் நன்கு புலப்படாமையின், சிற்சில குறிப்புக்களே ஈண்டு எழுதப்படுகின்றன. கருங்கையொள் வாட் பெயர்வழுதி இவன் சோழன் கரிகாற் பெருவளத்தான் காலத்தில் இருந்தவன். அவ்வளவனுடைய மாமன் இரும்பிடர்த்தலையார் என்ற புலவராற் பாடப்பெற்றவன்; மிக்க வீரமும் கொடையும் உடையவன். (புறம் - 3) பன்னாடுதந்த பாண்டியன் மாறன்வழுதி இவன் சிறந்த செந்தமிழ்ப் புலவன்; (குறுந்தொகை-270) எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணையைத் தொகுப்பித் தோன் இம்மன்னனே யாவன். (நற்றிணை இறுதிக் கட்டுரை) நல்வழுதி இவன் வையையாற்றைச் சிறப்பிக்கும் பன்னிரண்டாம் பரிபாடலை இயற்றியவன். இப்பாடலிற் கூறப்பெற்றுள்ள புதுநீர் விழாவும் வையையின் சிறப்பும் படித்தின் புறத்தக்கன. கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி இவன் வடபுல மன்னர்களைப் போரிற் புறங்கண்டு வெற்றிப் புகழை எங்கும் பரப்பிய பெருவீரன். (புறம்-51,52) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் இவன் வண்மையும் வீரமும் உடையவன் என்பது புலவர் தலைவராகிய நக்கீரனார் பாடிய 56-ஆம் புறப்பாட்டினால் நன்கு விளங்குகின்றது. இப்பாட்டினாற் கடைச்சங்க காலத்தில் மேனாட்டு யவனர்கள் நம் தமிழகத்தில் மது வகைகளைக் கொணர்ந்து விற்று வந்தனர் என்பது இனிதுணரப்படுகின்றது. குறுவழுதி இவன் அகநானூற்றிலுள்ள 150-ஆம் பாடலை இயற்றிய வேந்தனாவன். வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இவன் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவராற் புகழ்ந்து பாடப்பெற்றவன்; (புறம்-58) சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனுக்குச் சிறந்த நட்பினன். நம்பி நெடுஞ்செழியன் இவன் அரசர்கட்குரிய எல்லா இன்பங்களையும் துய்த்து, வண்மை வீரம் நடு நிலைமை முதலான அருங்குணங்களெல்லாம் ஒருங்கே யமையப்பெற்றுப் பெருமையோடும் புகழோடும் வாழ்ந்தவன். இவன் இறந்தஞான்று பேரெயின் முறுவலார் என்னும் புலவர் பாடியுள்ள கையறுநிலை எத்தகையோருடைய மனத்தையும் உருகச்செய்யும் இயல்பு வாய்ந்ததாகும். (புறம்-239) இனி, கடைச்சங்கம் இரீஇய பாண்டிய மன்னர் நாற்பத் தொன்பதின்மருள் கவியரங்கேறினார் மூவர் என்று இறையனாரகப் பொருளுரை உணர்த்துகின்றது. சங்க நூல்களை ஆராய்ந்து பார்க்குங்கால், தண்டமிழ்ப் புலமை சான்ற ஒண்டிறற் பாண்டிய மன்னர்கள் பன்னிருவர், கடைச்சங்கநாளில் இருந்து பாடியுள்ளனர் என்பது நன்கு புலப்படு கின்றது. இப் பன்னிருவரும் இயற்றியுள்ள சிறந்த செந்தமிழ்ப் பாக்கள் நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு ஆகிய ஐந்து தொகை நூல்களிலும் காணப்படுகின்றன. எனவே சங்கப்புலவர்களோடு ஒப்பப் பாடும் புலமையும் பெருமையும் வாய்ந்துள்ள இப்பன்னிரு பாண்டி மன்னர்களும் கவியரங் கேறியவர்களாதல் வேண்டுமன்றோ? அங்ஙன மாயின், கடைச்சங்கம் இரீஇய பாண்டியர்களுள் கவியரங்கேறினார் மூவர் என்று இறையனாரகப் பொருளுரை உரைப்பது சிறிதும் பொருந்தவில்லை. இனி, இம்மன்னர்களின் ஆட்சிக் காலங்களை வரையறுத் துரைப்பதும் எவனுக்குப்பின் எவன் பட்டத்திற்கு வந்தனன் என்பதையும், ஒருவனுக்கு மற்றொருவன் என்ன முறையினன் என்பதையும் சங்க நூல்களைக் கொண்டு ஆராய்ந்து கூறுவதும் இயலாதவையாயுள்ளன. நுணுகி யறிந்தவற்றை ஆங்காங்குக் குறித்துள்ளோம். கடைச்சங்க காலத்தின் பிற்பகுதியில் ஆட்சிபுரிந்த பாண்டிய அரசர்களைச் சில ஆராய்ச்சியாளர் அடியில் வருமாறு முறைப்படுத்தி எழுதியுள்ளனர். 1. ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன். 2. வெற்றிவேற்செழியன் என்ற சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன். 3. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். 4. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.  4. பாண்டிநாட்டிற் களப்பிரர் ஆட்சி கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டி யருள் வலிகுன்றிய ஓரரசன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தபோது, களப்பிரர் மரபைச் சேர்ந்த மன்னன் ஒருவன் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அதனைக் கவர்ந்து கொண்டு அரசாளத் தொடங்கினன். அதனால், பாண்டியர் தொன்று தொட்டு ஆட்சி புரிந்து வந்த தம் நாட்டை இழந்து பெருமை குறைந்து பாண்டி நாட்டில் ஓரிடத்தில் ஒடுங்கி வதிந்து வருவா ராயினர். ஆகவே, அந்நாடு களப்பிரர் ஆட்சிக்குட்பட்டி ருந்த காலத்தில் அங்கு உயிர் வாழ்ந்துகொண்டிருந்த பாண்டியர்களைப் பற்றிய செய்திகள் இந்நாளில் தெரியவில்லை. சங்க நூல்களில் களப்பிரர் என்ற பெயர் காணப்படாமையானும் வராகமிகிரர் என்பார் தென்னாட்டவரின் வரிசையில் களப்பிரரைக் கூறாமையானும் அன்னோர் பிராகிருதம், பாலி ஆகியவற்றைத் தமக்குரிய மொழிகளாகக்கொண்டு ஆதரித்துள்ளமை யானும் அம்மரபினர் தமிழர் அல்லர் என்பதும் வடபுலத்தினின்றும் போந்த ஏதிலார் ஆவர் என்பதும் நன்கு தெளியப்படும். எனவே, களப்பிரர் தென்னிந்தியாவினரே என்னும் சில ஆராய்ச்சியாளரின் கொள்கை1 பொருந்தாமை காண்க. அன்றியும், தமிழ் நாட்டுக் குறுநில மன்னர் குடியினராகிய முத்தரையர் என்போர் களப்பிரரேயாவர் என்று சிலர் கூறுவது2 சிறிதும் ஏற்புடைத்தன்று. களப்பாள் என்ற சோணாட்டூ ரொன்றில், முற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரசியல் தலைவன் ஒருவன் களப்பாளன் என்று சிறப்பித்து வழங்கப்பெற்றமையால், அவன் வழியினர் களப்பாளர் எனவும், களப்பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வருவராயினர். எனவே, தமிழராகிய களப்பாளரும் ஏதிலாராகிய களப்பிரரும் ஒருவரேயாவரென்னும் முடிவு1 எவ்வாற்றானும் ஒத்துக் கொள்ளத்தக்கதன்று. இதுகாறும் விளக்கிய வாற்றால் களப்பிரர் தமிழர் அல்லர் என்பது தேற்றம். இனி, கி.பி. 6,7- ஆம் நூற்றாண்டுகளிலிருந்த பல்லவ மன்னர்களாகிய சிம்மவிஷ்ணு, முதல் நரசிம்மவர்மன் என்போரும்,2 கி. பி. 7, 8 - ஆம் நூற்றாண்டுகளிலிருந்த மேலைச் சளுக்கிய வேந்தர்களாகிய முதல் விக்கிரமாதித்தன், விசாயதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன் என்போரும்3 களப்பிரரைப் போரிற் புறங்கண்டவர்கள் என்று கூறப் பட்டுள்ளனர். ஆகவே, கி.பி.ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே களப்பிரர் பல்லவரால் துன்புறுத்தப் பட்டு வலிகுன்றிய நிலையை எய்தினர் எனலாம். அந்நாட்களில், பாண்டி நாட்டின் ஒரு புறத்தில் வாழ்ந்து வந்தவனும், கடைச் சங்ககாலப் பாண்டியரின் வழித்தோன்றலுமாகிய பாண்டியன் கடுங்கோன் என்பான், பேராற்றல்படைத்த பெருவீரர்களுடன் வந்து, களப்பிர அரசனைப் போரில்வென்று தன் நாட்டைக் கைப்பற்றி மதுரையம்பதியில் வீற்றிருந்து அரசாளத் தொடங்கினான். இது வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படும் வரலாறாகும். இவ்வாறு பாண்டிவேந்தன் ஆட்சி, மதுரைமாநகரில் மீண்டும் நிறுவப்பெற்ற காலம் கி.பி. 575-ஆம் ஆண்டாதல் வேண்டும். அன்றேல், அதற்குச் சில ஆண்டுகட்கு முன்னரும் அந்நிகழ்ச்சி நடைபெற்றிருத்தல் கூடும். ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் பாண்டி நாட்டில் களப்பிர வேந்தர்களின் ஆட்சி நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. இனி, பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணமும்1 கல்லாடமும்2 கருநாட வேந்தன் ஒருவன் பாண்டி மண்டலத்தைக் கவர்ந்து அரசாண்டனன் என்றும், அவன் காலத்தில் சைவநெறி அழியவே, சமணசமயம் மிகச் செழித்த தென்றும், பின்னர் ஓர் இரவில் அவன் கொல்லப்பட்டான் என்றும் கூறுகின்றன. இவ்விருநூல்களும் கூறும் கருநாட வேந்தன் களப்பிரனாகத்தான் இருத்தல் வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பிறமொழியாளரான களப்பிரரின் படையெடுப்பும் ஆளுகையும் பாண்டிநாட்டில் பலப்பல மாறுதல்களையும் புரட்சியையும் உண்டு பண்ணி, அவை என்றும் நின்று நிலவுமாறு செய்துவிட்டன. அரசாங்க மொழி, வேறொரு மொழியாகப் போய்விடவே, நம் தாய்மொழியாகிய தமிழ் ஆதரிப்பாரற்று வீழ்ச்சி எய்தியது. தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம், பிற சிறந்த பண்புகள் ஆகிய எல்லாம் சிதைந்தழிந்து போயின. தமிழ் நாட்டில் முன்னோர்களால் நிறுவப்பெற்று இடையீடின்றி நடைபெற்று வந்த அறச்செயல்கள் பலவும் அழிக்கப்பட்டுப் போயின. பௌத்தம், சமணம் ஆகிய பிற சமயங்களும் பிறமொழியில் எழுதப்பெற்ற நூல்களும் அரசாங்கத்தின் பேராதரவு பெற்றுவிளங்கின. இக்களப்பிரரது படை யெழுச்சி யினால் மதுரைமாநகரில் தமிழராய்ச்சி செய்துகொண்டிருந்த கடைச்சங்கமும் அழிந்துபோய்விட்டமை அறியத் தக்கது. களப்பிரர் ஆட்சியால் ஏற்பட்ட தீமைகளுள் இதனினுங் கொடியது வேறில்லை என்று கூறலாம். எனவே, இவர்களது ஆட்சிக்காலம் ஓர் இருண்ட காலமாகும். 5. கி. பி. 575 முதல் கி. பி. 900 வரை ஆட்சிபுரிந்த பாண்டியர்கள் பாண்டியன் கடுங்கோன் இம்மன்னன் கி. பி. 575 முதல் கி. பி. 600 வரையில் ஆட்சி புரிந்தனன் என்று தெரிகிறது. பாண்டி நாட்டைக் களப்பிரரிட மிருந்து முதலில் கைப்பற்றி மீண்டும் பாண்டியரது ஆட்சியை மதுரையில் நிலைபெறுமாறு செய்தவன் இவ்வேந்தனே யாவன். இவன் களப்பிரரைப் போரிற் புறங்கண்டு அன்னோரது ஆளுகைக்குட்பட்டிருந்த தன் நாட்டைக் கைப்பற்றி அரசு செலுத்திய வரலாற்றை வேள்விக்குடிச் செப்பேடுகள் நன்கு விளக்குகின்றன. அப்பகுதி, களப்ரனென்னுங் கலியரசன் கைக்கொண்டதனை யிறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து வேலைசூழ்ந்த வியலிடத்துக் கோவுங் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோ லோச்சி வெண்குடை நீழற் றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பா லுரிமை திறவிதி னீக்கித் தன்பா லுரிமை நன்கனம் அமைத்த மானம் போர்த்த தானை வேந்தன் ஒடுங்கா மன்னர் ஒளிநக ரழித்த கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன் என்பது. இதனையே அண்மையில் கிடைத்த பராந்தக பாண்டியனின் தளவாய்புரச் செப்பேடுகள் இரண்டிடங்களில் சுருக்கமாகக் கூறுகின்றன.1 இதனால் இவனுடைய வீரமும் புகழும் இனிது புலப்படுதல் காண்க. இனி, தென்மதுரையின்கண் விளங்கிய முதற் சங்கத்தைப் புரந்த பாண்டியருள் இறுதியிலிருந்தவன் கடுங்கோன் என்று இறையனாரகப் பொருளுரை உணர்த்துகின்றது. இவன் மிகப் பழையகாலத்தில் நிலவிய முதற் சங்கத்தைப் புரந்தவன்; களப்பிரரை வென்ற கடுங்கோன் கடைச்சங்கத் திறுதிக் காலத்திற்குச் சுமார் நானூறு ஆண்டுகட்குப் பின்னர் இருந்தவன். எனவே, கடுங்கோன் என்னும் பெயர்கொண்ட இவ்விருவரும் வேறுவேறு காலத்தில் வாழ்ந்த வெவ்வேறு மன்னராவர். ஆகவே, பெயரொற்றுமை ஒன்றையே கண்டு இவ்விருவரையும் ஒருவர் என்று கூறுதல் உண்மையும் பொருத்தமும் உடையதன்று. மாறவர்மன் அவனி சூளாமணி இவன் பாண்டியன் கடுங்கோனுடைய மகன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் கி. பி. 600 முதல் 625 வரை ஆட்சிபுரிந்த பாண்டியனாவன். இவன் காலத்தில் நிகழ்ந்த செய்திகளுள் ஒன்றும் புலப்படவில்லை. இவன் காலம்முதல் பாண்டியர்கள் மாறவர்மன் சடைய வர்மன் என்ற பட்டங்களை ஒருவர்பின் ஒருவராக மாறிமாறிப் புனைந்து வருவாராயினர். மாறவர்மன் என்ற பட்டத்தை முதலிற் புனைந்து வாழ்ந்தவன் இவ்வேந்தனே யாவன். இவர்களைப் போல் சோழமன்னர்களும் இராசகேசரி பரகேசரி என்ற பட்டங்களை ஒருவர்பின் ஒருவராக மாறி மாறிப் புனைந்து வந்தமை ஈண்டு அறியத்தக்கதாகும். செழியன் சேந்தன் இவன், மாறவர்மன் அவனிசூளாமணியின் புதல்வன்; சடைய வர்மன் என்ற பட்டம் புனைந்து கி. பி. 625 முதல் கி. பி. 640 வரையில் பாண்டிநாட்டில் அரசாண்டவன். இவனைச் சிலைத்தடக்கைக் கொலைக் களிற்றுச் செழியன் எனவும், மண் மகளை மறுக்கடிந்த வேந்தர் வேந்தன் எனவும், செங்கோற் சேந்தன் எனவும் வேள்விக்குடிச் செப்பேடுகள் புகழ்கின்றன. இவனது ஆட்சியின் இறுதிக் காலத்தேதான் சீன தேயத்தின னாகிய யுவான்சுவாங் என்பான் பல்லவர்களது தலைநகராகிய காஞ்சிக்கு வந்தனன். இவன் அந்நகரிலிருந்து பாண்டி நாட்டிற்குச் செல்லப் புறப்படுங் கால், பாண்டிமன்னன் அப்போதுதான் இறந்தனன் என்றும், அந்நாட்டிற் பஞ்சம் மிகுந்திருந்தது என்றும் தனக்குக் காஞ்சியிலுள்ளவர்கள் அறிவித்த செய்திகளைத் தன் வரலாற்றுக் குறிப்பில் வரைந் துள்ளான். எனவே, கி. பி. 640-ஆம் ஆண்டில் இறந்ததாக இவனாற் குறிக்கப்பெற்ற பாண்டியன், இச்செழியன் சேந்தனே யாவன். இவனைப்பற்றிய பிற செய்திகளை யுணர்த்தும் ஆதாரங்கள் இக்காலத்துக் கிடைத்தில. மாறவர்மன் அரிகேசரி செழியன் சேந்தன் இறந்த பின்னர் அவனுடைய புதல்வ னாகிய அரிகேசரி என்பான் கி. பி. 640 - ஆம் ஆண்டிற் பட்டம் எய்தினன். இவன் மாறவர்மன் என்ற பட்டம் புனைந்தவன். இவனைச் சுந்தர பாண்டியன் எனவும், கூன் பாண்டியன் எனவும் திருவிளையாடற் புராணம் கூறா நிற்கும். இவன் முதலில் சமணமதப் பற்றுடையவனாயிருந்து அம்மதத்தைப் பெரிதும் ஆதரித்து வந்தான்; பிறகு சைவ சமய குரவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தமூர்த்திகளாற் சைவனாக்கப்பட்டான். இவன் முன்னிலையிற்றான் திருஞானசம்பந்தருக்கும் சமணமுனிவர் எண்ணாயிரவர்க்கும் அனல் வாதமும் புனல்வாதமும் நிகழ்ந்தன. இவனுடைய மனைவியார் மங்கையர்க்கரசி எனப்படுவர். இவ்வம்மை யார் மணிமுடிச்சோழன் என்ற ஒரு சோழ மன்னன் புதல்வியார் என்று திருஞானசம்பந்தர் கூறியுள்ளார். இவர்கள் காலத்திற் பாண்டி நாட்டில் அமைச்சராயிருந்தவர் குலச் சிறையார் என்பவர். இவர்கள் மூவரும் சைவசமயத்திற் பெரிதும் ஈடுபாடுடையவர்களாக விளங்கியவர்கள். சிவபிரானிடத்துப் பேரன்பு பூண்டொழுகிய பாண்டியன் அரிகேசரி1 மங்கையர்க் கரசியார், குலச்சிறையார் ஆகிய இம்மூவரும் சிவனடியார் அறுபத்து மூவருட் சேர்க்கப் பெற்றுள்ளனர். இவர்கள் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காணலாம். இவ்வேந்தனது ஆட்சிக்காலத்திற் பாண்டிநாடு உயர் நிலையை அடைந்தது. இவன், சேரர்களையும், பரவரையும், குறுநிலமன்னர் சிலரையும் பாழி, நெல்வேலி, செந்நிலம் முதலான இடங்களில் வென்றனன் என்றும், ஒரு பகலிற் சோழர்க்குரிய உறையூரைக் கைப் பற்றினனென்றும் வேள்விக்குடிச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. எனவே, இவன் முதலில் சோழ மன்னனை வென்று உறையூரைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பதும், பிறகு அவ்வளவன் வேண்டிக் கொண்டவாறு அவன் மகளார் மங்கையர்க்கரசியாரை மணந்து பகைமை யொழித்து உறவும் நட்புங் கொண்டிருத்தல் வேண்டும் என்பதும் உய்த் துணரக் கிடக்கின்றன. இவன் வென்றடக்கிய பரவர் என்பார், தென்றிசைக் கண்ணிருந்த குறுநிலமன்னர் ஆவர். தென்பரதவர் மிடல்சாய என்னும் 378-ஆம் புறப்பாட்டடியாலும், தென்பரதவர் போரேறே என்னும் மதுரைக் காஞ்சியடியாலும் கடைச்சங்ககாலத்திலும் பாண்டி நாட்டிற்குத் தெற்கே அன்னோர் இருந்தமை தெள்ளிதிற் புலனாதல் காண்க. இவன் புரிந்த இப்போர்களை இறையனாரகப் பொருளுரையிலுள்ள மேற்கோட் பாடல்களும் எடுத்தியம்பு கின்றன. (பாடல்கள் 22, 106, 235, 309) சைவசமயாசாரியருள் ஒருவராகிய சுந்தர மூர்த்திகளும் நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறனடியார்க்கும் அடியேன் என்ற திருத் தொண்டத் தொகைப் பாடற் பகுதியில் நெல்வேலிப் போரில் இவன் வெற்றியெய்திய செய்தியைக் குறித்துள்ளார். எனவே, சேரர்களும் குறுநில மன்னர்களும் இவனுக்குத் திறைசெலுத்த, இவன் வேந்தர் வேந்தனாய்ச் சிறப்புற்று வாழ்ந்தவன் என்பது நன்கு புலப்படு கின்றது. இவனது ஆளுகையின் தொடக்கத்தில்தான் சீனதேயத்தின னாகிய யுவான்சுவாங் என்பான் பாண்டிநாட்டிற்குச் சென்றனன். அவன் தன் வரலாற்றுக் குறிப்பில் பாண்டி நாட்டில் முத்தும் உப்பும் மிகுதியாகக் - கிடைக்கின்றன; பக்கத்துத் தீவுகளிற் கிடைக்கும் முத்துக்களும் இங்குக் கொண்டுவதப்படுகின்றன; இந்நாட்டில் வேறு விளை பொருள்கள் மிகுதியாக இல்லை. இங்கு வெப்பம் மிகுந்துள்ளது; இந்நாட்டு மக்கள் எல்லோரும் கறுத்த மேனியுடையவர்களாயும் உறுதியும் போர் வலிமையும் மிக்கவர்களாயும் இருக்கின்றனர்; இந்நாடு வணிகத்தால் வளம்பெற்றுச் செல்வத்தாற் சிறந்துள்ளது என்று பாண்டிநாட்டைப் பற்றித் தான் நேரில் அறிந்தவற்றை எழுதியுள்ளான். இதனால் மாறவர்மன் அரிகேசரியின் காலமாகிய கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியிற் பாண்டிநாடு எத்தகைய நிலையிலிருந்தது என்பதை ஒருவாறு உணரலாம். இவ்வேந்தன் இரணிய கர்ப்பதானமும் துலாபார தானமும் பலப்பல செய்து பெருமையுற்றனன் என்று வேள்விக் குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. துலாபாரதானஞ் செய்தல் கடைச் சங்க காலத்திலும் வழக்கத்திலிருந்ததென்பது சிலப்பதி காரத்தால் அறியப்படுகிறது. (சிலப்பதிகாரம்-நீர்ப்படை, 173-176) இவனைப் போலவே, கி. பி. பத்தாம் நூற்றாண்டினின் இறுதியிலும் பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நம் தமிழகத்திற் பேரரசனாக வாழ்ந்த முதலாம் இராசராச சோழன் தன் மனைவியுடன் இரணிய கர்ப்பதானமும் துலாபாரதானமும் செய்தனன் என்று திருவிசலூர்க் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கின்றது. இனி, கடைச்சங்க நாளில் விளங்கிய தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே இவனுடைய தந்தையாகிய செழியன் சேந்தன் எனவும், அந்நாளில் நிலவிய இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறனே இவ்வரிகேசரி எனவும் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் வரைந்துள்ளார்.3 இஃது ஒரு சிறிதும் உண்மையன்று. கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள் எல்லோரும் தூய தமிழ்ப் பெயரை உடையவர்கள்; சங்ககாலத்திற்குப் பின்னர் அவர்களது பாண்டி நாடு களப்பிரராற் கைப்பற்றப்பட்டது. களப்பிரரது ஆட்சி யொழிந்த பின்னர் அந்நாட்டின் அரசுரிமையை எய்தி ஆட்சிபுரிந்த இப்பாண்டியர் இருவரும் சேந்தன், அரிகேசரி என்ற வடமொழிப் பெயர்களை யுடையவர்கள்; அன்றியும் வடநாட்டு ஆரிய மன்னர்களைப் போல் வர்மன் என்ற வடமொழிப் பட்டம் புனைந்து கொண்டவர்கள். சங்க காலத்துப் பாண்டி மன்னர்கள் இப்பட்டம் புனைந்து கொண்டவர்கள் அல்லர் என்பது பத்துப்பாட்டு, புறநானூறு, அகநானூறு முதலான நூல்களைக் கற்றுணர்ந் தவர்கள் நன்கறிந்த தொன்றாம். சங்க காலத்துப் பாண்டியர்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் வாழ்ந்தவர்கள்; வடமொழிப் பெயர்களையும் பட்டங்களையும் உடையவர்களாகிய இப்பாண்டியர்கள் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தவர்கள். எனவே, தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், இல வந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்போரும், செழியன் சேந்தன், மாறவர்மன் அரிகேசரி என்போரும் ஒன்றுக்கொன்று சேய்மையுற்ற வெவ்வேறு காலங்களில் விளங்கிய பாண்டி மன்னர்கள் என்பது நன்கு வெளியாதல் காண்க. கோச்சடையன் ரணதீரன் மாறவர்மன் அரிகேசரி என்பான் கி. பி. 670-ஆம் ஆண்டில் சிவபெருமான் திருவடிநீழல் எய்தவே, அவன் மகனாகிய கோச்சடையன் ரணதீரன் அரியணை ஏறினன். இவனைச் செங்கோற்றென்னன் எனவும், வானவன் எனவும், செம்பியன் எனவும், மதுர கருநாடகன் எனவும், கொங்கர் கோமான் எனவும், மன்னர்மன்னன் எனவும் வேள்விக்குடிச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. இச்சிறப்புப் பெயர்களை நோக்கு மிடத்து, இவ்வேந்தன் சேர நாட்டையும் சோழ நாட்டையும் கருநாட தேயத்தையும் கொங்கு நாட்டையும் கைப்பற்றித் தனக்குத் திறை செலுத்துமாறு செய்திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றன. இவன் கடல்போன்ற பெரும்படையையுடைய ஆய்வேளை மருதூரில் போரில் வென்றனன் என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் உணர்த்து கின்றன. ஆய்வேள் என்பான் பொதியின் மலைத் தலைவன் ஆவன். மருதூர் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் அம்பாசமுத்திரத் திற்கண்மையிலுள்ள திருப்புடை மருதூரா யிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அன்றியும், மங்கலபுரத்தில் மாரதரைப் பொருதழித்த புகழுடையான் இம்மன்னன் என்பதும் வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. அப்போரில் இவன்பால் தோல்வியுற்றோடியவன், மேலைச்சளுக்கிய அரசனாகிய முதல் விக்கிரமாதித்தனாய் இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் திரு. துப்ரே என்பாரது முடிவு.1 பேராசிரியர் திரு. K.A.நீலகண்ட சாதிரிகள், மங்கலபுரம் என்பது இப்போதுள்ள மங்களூரேயா மென்றும் அங்குத் தோற்றவன் கொங்கு நாட்டரசனா யிருத்தல் வேண்டும்2 என்றும் கூறியுள்ளனர். மிகச் சேய்மையில் மேற்குத் தொடர்ச்சிமலைக்கு மேல்பாலுள்ள தென்கன்னடம் ஜில்லாவி லிருக்கும் மங்களூரில் கொங்கு மன்னனை இவன் போரில் வென்றான் என்று கூறுவது பொருந்தவில்லை. அன்றியும், நம் கோச்சடையன், ரணதீரன் என்ற சிறப்புப்பெயர் பெற்றமைக்குக் காரணம், ரணரசிகன் என்ற சளுக்கிய விக்கிரமாதித் தனைப் போரிற் புறங்கண்டமையேயாகும். மங்கலபுரம் என்பது திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் கொள்ளிடத்திற்கு வடகரையிலுள்ள மங்கலம் என்னும் ஊராதல் வேண்டும். ஆகவே, மேலைச்சளுக்கிய வேந்தனாகிய முதல் விக்கிரமாதித்தனையே கி. பி. 674 - ஆம் ஆண்டில் இவன் மங்கலபுரத்தில் போரில் வென்றனன் என்று கொள்ளுவது தான் மிகப் பொருத்தமுடையது. அவ் விக்கிரதமாதித்தன், பாண்டி வேந்தனோடு போர்புரிந்த செய்தி, அவனுடைய கேந்தூர்க் கல்வெட்டுக் களாலும்3 உறுதி யெய்துகின்றது. இம்மன்னன் காலத்தில்தான் சைவசமய குரவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமாள் நாயனாருடன் மதுரைக்கு வந்து இம் மன்னனாலும் இவன் மகளை மணந்து மதுரையில் தங்கியிருந்த சோழ மன்னனாலும் உபசரிக்கப்பெற்றுத் திருவால வாயிறைவரையும் திருப்பரங்குன்றப் பெருமானையும் வழிபட்டனர்.4 ஒப்பற்ற பெரு வீரனாக நிலவிய இவ்வரசன் கி. பி. 710 -ஆம் ஆண்டில் விண்ணுல கடைந்தான். அரிகேசரி பராங்குச மாறவர்மன் இவன் கோச்சடையனுடைய புதல்வன் ஆவன். இவன் தன் பாட்டன் பெயராகிய அரிகேசரி என்ற பெயருடையவன்; மாறவர்மன் என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன். இவனை முதலாம் இராசசிம்மன் எனவும் தேர்மாறன் எனவும் வழங்குவ துண்டு. இவன் கி. பி. 710 முதல் 765 வரை ஆட்சி புரிந்தவன். இவன் காலத்தில் சோணாடு பல்லவர்களது ஆட்சிக்கு உட் பட்டிருந்தது. அந்நாளில் தொண்டை மண்டலத்திற்கும் சோழ மண்டலத்திற்கும் அரசனாக வீற்றிருந்து செங்கோல் செலுத்தியவன் நந்திவர்மப் பல்லவமன்னன் என்பான். மாறவர்மனுக்கும் அப் பல்லவமன்னனுக்கும் பல போர்கள் நிகழ்ந்தன. குழும்பூர், நெடுவயல், குறுமடை, மன்னிக்குறிச்சி, திருமங்கை, பூவலூர், கொடும்பாளூர், பெரியலூர் என்னும் ஊர்களில் நடைபெற்ற போர்களில் இவன் பல்லவ மன்னனையும் அவனுடைய படைத்தலைவர்களையும் தோல்வியுறச் செய்தனன் என்று தெரிகின்றது. இவ்வூர்களுட் பல, புதுக்கோட்டை இராச்சியத்தில் உள்ளன. எனவே, பல்லவர்கள் பாண்டி நாட்டையும் கைப்பற்றுவதற்குத் தெற்கே பெரும்படையுடன் செல்ல, அதனையுணர்ந்த இப் பாண்டியன் பகைஞர்களைப் பாண்டி நாட்டின் வட எல்லையிலே தோற்றோடச் செய்தனன் போலும். நென்மேலி, மண்ணை முதலிய இடங்களில் நிகழ்ந்த போர்களில் பாண்டியனைப் பல்லவமன்னன் வென்றனன் என்று திருமங்கையாழ்வார், கச்சிப் பரமேச்சுர விண்ணகரப் பதிகத்திற் கூறியிருக்கின்றனர். அச்செய்தி, நந்திவர்மப் பல்லவமல்லனது உதயேந்திரச் செப்பேடுகளிலும் சொல்லப் பட்டுள்ளது.1 ஆகவே சில இடங்களிற் பல்லவர்களும் வெற்றி யடைந் திருக்கலாம். இவன் மழ கொங்குநாட்டைக் கைப்பற்றி அந்நாட்டு மன்னன் தனக்குக் கப்பஞ் செலுத்திவருமாறு செய்தனன் என்றும், கங்க அரசன் மகள் பூசுந்தரியை மணந்து கொண்டனன் என்றும் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் கொங்குநாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற போது திருப்பாண்டிக் கொடுமுடி என்னுந் திருப்பதிக்குப் போய் அங்கு எழுந் தருளியுள்ள சிவபெருமான் திருவடிகளை வணங்கிப் பொற்குவியலும் நவமணித்திரளும் மனமகிழ்ந்து கொடுத்தனன் என்பது வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. இதனால் இவனது சிவபக்தியின் மாட்சி ஒருவாறு விளங்கும். இவன் தன் பாட்டனைப் போல் இரணிய கர்ப்பதானங்களும் துலாபாரதானங்களும் செய்து புகழெய்தியவன். இறையனாரகப் பொருளுரை மேற்கோட் பாடல்களும் இவன் பெருமையையும் வீரத்தையும் நன்கு புலப்படுத்தா நிற்கும். நெடுஞ்சடையன் பராந்தகன் இவன் அரிகேசரி பாராங்குச மாறவர்மனுக்குக் கங்க அரசன் மகள் பூசுந்தரிபால் பிறந்த புதல்வன் ஆவன்; சடையவர்மன் என்னும் பட்டம் புனைந்து கி. பி. 765 முதல் கி. பி. 790 வரையில் ஆட்சிபுரிந்தவன். இவனுக்கு முன்னர் அரசாண்ட பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளாதல் கல் வெட்டுக்களாதல் யாண்டும் கிடைக்கவில்லை. ஆகவே, இதுகாறும் கிடைத்துள்ளவற்றுள், இவ் வேந்தனுடைய செப்பேடுகளும் கல்வெட்டுக் களும் மிக்க பழமை வாய்ந்தவையாகும். அவை, இலண்டன் பிரிட்டிஷ் பொருட்காட்சிச்சாலையிலுள்ள வேள்விக்குடிச் செப்பேடுகளும்1 சென்னைப் பொருட்காட்சிச் சாலையிலுள்ள சீவரமங்கலச் செப்பேடு களும்2 ஆனைமலைக் கல்வெட்டுகளும், திருப்பரங்குன்றத்துக் கல்வெட்டுக்களுமேயாம். இவ்விரு செப்பேடுகளும் கிடைக்காமற் போயிருப்பின், கடைச்சங்க காலத்திற்குப் பிறகு பாண்டி நாட்டில் நடைபெற்ற களப்பிரர் ஆட்சியைப் பற்றிய செய்தியும், கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி. பி. எட்டாம் நூற்றாண்டு முடிய அரசாண்ட பாண்டி மன்னர்களின் வரலாறுகளும் எவரும் தெரிந்துகொள்ள இயலாதவாறு மறைந்து போயிருக்கும் என்பது திண்ணம். எனவே, பாண்டியரது முதற் பேரரசின் வரலாற்றை அறிந்து கோடற்கு இச் செப்பேடுகளே உறுதுணையாயிருத்தல் உணரற்பாலதாம். இனி, இவற்றின் துணைக்கொண்டு இவ் வேந்தன் காலத்து நிகழ்ச்சிகளை ஆராய்வாம். இவன் நாற்பெரும் படையுடன் வந்தெதிர்த்த பல்லவ அரசனைக் காவிரியின் தென்கரையிலுள்ள பெண்ணாகடத்தில் நிகழ்ந்த போரில் புறங்காட்டியோடும்படி செய்தனன் என்றும், ஆய் வேளையும் குறும்பரையும் போரில் வென்றான் என்றும் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.1 அப்போர் நிகழ்ச்சிகள் இரண்டும் இவனது மூன்றாம் ஆட்சி யாண்டிற்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது அச்செப்பேடுகளால் அறியக் கிடக்கின்றது. ஆகவே, அவை கி.பி.767-ஆம் ஆண்டிலாதல் அதற்கு முன்னராதல் நிகழ்ந் திருத்தல் வேண்டும். எனவே, பெண்ணாகடப் போரில் இவன்பால் தோல்வியுற்ற பல்லவ வேந்தன் நந்திவர்மப் பல்லவமல்லன் என்பது ஐயமின்றித் துணியப்படும். பெண்ணாகடம் என்பது தஞ்சாவூர்க் கூற்றத் திலுள்ளதோர் ஊர் என்று திருவிசலூர்க் கல்வெட்டொன்று உணர்த்து கின்றது.2 ஆகவே, அப்போர் தஞ்சாவூர்க் கண்மையிலுள்ள அவ்வூரில் நிகழ்ந்ததாதல் வேண்டும். இவ்வேந்தன் வென்றடக்கிய ஆய்வேள் என்பான், பொதியின் மலைத் தலைவனும், கடையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய வேள் ஆயின்வழியில் தோன்றி, கி. பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அம் மலையைச் சார்ந்து தென்கடற் பக்கத்திருந்த நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆவன். இவனுடைய சீவரமங்கலச் செப்பேடுகள்,1 வெள்ளூர், விண்ணம், செழியக்குடி என்ற ஊர்களில் இவன்தன் பகைஞர்களை வென்றழித்தனன் என்றும், காவிரியாற்றின் வடகரையிலுள்ள ஆயிரவேலியயிரூர், புகழியூர் என்ற இடங்களில் அதியமானைப் போரிற் புறங்கண்டனன் என்றும், அவனுக்கு உதவிபுரியும் பொருட்டுக் குடபாலும் குணபாலும் பெரும் படைகளுடன் வந்து போர்புரிந்த சேரனையும் பல்லவனையும் தன் வேற்படையால் வென்று துரத்தினன் என்றும், தோல்வியெய்திய கொங்கர் கோமானைக் களிற்றொடும் பிடித்துக் கொணர்ந்து மதுரைமா நகரில் சிறையில் வைத்து, அவனுக்குரிய கொங்கு நாட்டைத் தன்னடிப் படுத்தினன் என்றும்; இலங்கையைப் போல் அரணாற் சிறந்து விளங்கிய விழிஞத்தை அழித்து வேணாட்டரசனை வென்று அவனுடைய களிறும் மாவும் பெருநிதியும் கவர்ந்துகொண்டு நாட்டையும் கைப்பற்றினன் என்றும் கூறுகின்றன. வெள்ளூர் முதலான மூன்றூர்களிலும் இவனோடு பொருது தோல்வியுற்ற பகைஞர் யாவர் என்பது இப்போது புலப்பட வில்லை. இவன் போரிற் புறங்கண்ட அதியமான் என்பான், சேலம் ஜில்லாவில் இந்நாளில் தர்மபுரி என்று வழங்கும் தகடூரிலிருந்து2 கொங்கு நாட்டை ஆட்சி புரிந்தவனும் கடையெழுவள்ளல்களுள் ஒருவனுமாகிய அதியமான் நெடுமானஞ்சியின் வழியில் தோன்றி, கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்நாட்டை யாண்டு கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆவன்; தன் நாட்டை இழந்து மதுரையில் சிறை யிலிருந்த கொங்குமன்னனும் அவ்வதியமானே என்பதில் ஐயமில்லை.3 நம் நெடுஞ்சடையன் பராந்தகன் பேராற்றல் படைத்த பெரு வேந்தனாய்த் தன் பாண்டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பி உயர்நிலைக்குக் கொணர்வதைக் கண்ட சேரனும் பல்லவனும் பெரிதும் அச்சமுற்று, இவன் செய்கையைத் தடைசெய்யவேண்டி, அதியமானுக்கு உதவிபுரிய வந்திருத்தல் கூடும். தம் படையுடன் வந்து பொருத அவ்விரு வேந்தரும் இப்பராந்தகன் பால் தோல்வியுற்றோடியிருத்தலும் இயல்பேயாம். இவனிடம் தன் நாட்டை இழந்த வேணாட்டரசன், வேள்விக்குடிச் செப்பேடுகளில் கூறப்பெற்ற ஆய்வேளாதல் வேண்டும். சேரனுக்குரிய அரணுடைப் பெருநகராய் மேலைக்கடற் கரையிலிருந்தது விழிஞமாகும். இவன் தென்றிசையில் தான் வென்ற நாடுகளைப் பாதுகாத்தற் பொருட்டும், அவற்றில் வாழ்ந்துகொண்டிருந்த குறுநில மன்னர்களைக் கண்காணித்தற் பொருட்டும், கரவந்தபுரம் என்ற நகரில் சிறந்த அகழும் மதிலுமுடைய ஒரு கோட்டை அமைத்து, அதில் பெரிய நிலைப்படையொன்று வைத்திருந்தனன். அவ்வூர் களக்குடி நாட்டுக் களக்குடியான கரவந்தபுரம்1 என்று கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. அஃது இந்நாளில் திருநெல்வேலித் தாலுகாவில் உக்கிரன் கோட்டை என்னும் பெயருடன் அழிந்த நிலையிலிருத்தல் அறியத்தக்கது.2 பாண்டியர் எல்லோரும் சிவநெறியைக் கடைப்பிடித் தொழுகிய சைவர் ஆவர். இவ்வேந்தன் ஒருவனே வைணவ சமயப்பற்று மிக்குடையவனாயிருந்தனன். இவனைப் பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு. மணிநீண்முடி நிலமன்னவன் என்று சீவரமங்கலச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. அத்தகைய நிலையை இவன் அடைந்திருந்தமைக்குக் காரணம், இவன் ஆட்சிக் காலத்தில் வைணவ சமய குரவருள் ஒருவராகிய பெரியாழ்வார் பாண்டி நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்தமையேயாம். இவன் அவ் வாழ்வாரிடத்தில் பெரிதும் ஈடுபட்டு வைணவனாக மாறியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அப் பெரியார் இவனுக்கு ஞானகுரவராக இருந் திருத்தலும் கூடும். இவன், அதியமானது கொங்குநாட்டைக் கைப்பற்றிய பிறகு அங்குள்ள காஞ்சி3 வாய்ப்பேரூர்க்குச் சென்று, அவ்வூரில் திருமாலுக்குக் குன்ற மன்னதோர் கோயில் எடுப்பித்தானென்று அச் செப்பேடுகள் உணர்த்துவதும் ஈண்டு அறியத்தக்கது. அன்றியும், இவனுடைய வேள்விக்குடிச் செப்பேடுகளின் இறுதியில் வைணவ தர்ம சுலோகங்கள் வரையப்பெற்றிருத்தல், இவன் அச் சமயத்தின்பால் வைத்திருந்த பெரும் பற்றினைத் தெள்ளிதிற் புலப்படுத்தும் எனலாம். இவனுடைய செப்பேடுகளில் இவனுக்கு அக்காலத்தில் வழங்கிய பல சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. அவை தென்னவானவன், சீவரன், சீமனோகரன், சினச்சோழன், புனப் பூழியன், வீதகன்மஷன், விநயவிச்ருதன், விக்கிரம பாரகன் வீரபுரோகன், மருத்பலன், மானிய சாசனன், மநூபமன், மர்த்தித வீரன், கிரிதிரன், கீதகின்னரன், கிருபாலயன், கிருதாபதானன், கலிப்பகை, கண்டக நிஷ்டூரன், கார்ய தக்ஷிணன், கார்முக பார்த்தன், பண்டித வத்சலன், பரிபூர்ணன், பாபபீரு, குணக் ராகியன், கூடநிர்ணயன் என்பனவாம், இவற்றுள் மூன்றொழிய, எஞ்சியன வெல்லாம் வடமொழிப் பெயர்கள் ஆகும். தூய தமிழ்ப் பெயர்களையும் பட்டங்களையும் உடையவர்களாக வாழ்ந்துவந்த பாண்டி மன்னர்கள் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் இத்தகைய பட்டங்களைப் பெரு விருப்புடன் புனைந்து கொண்டமை பெரியதோர் வியப்பேயாம். இவ்வேந்தன் காலத்திருந்த அரசியல் தலைவர் சிலர், இவன் செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் குறிக்கப் பெற்றுள்ளனர். அன்னோர் மாறன்காரி, மாறன் எயினன், சாத்தன் கணபதி, ஏனாதி சாத்தஞ்சாத்தன், தீரதரன் மூர்த்தி எயினன், சங்கரன், சீதரன் என்போர். அவர்களைப்பற்றிய செய்திகளையும் ஈண்டு ஆராய்ந்து காண்போம். 1. மாறன்காரி இவன் திருநெல்வேலித் தாலுகாவில் இந்நாளில் உக்கிரன் கோட்டை என்று வழங்கும் கரவந்தபுரமாகிய களக்குடியில் மாறன் என்பவனுக்குப் புதல்வனாகத் தோன்றியவன்; காரி என்ற இயற்பெயருடையவன்; வைத்தியகுலத்தினன்; மதுரகவி என்னுஞ் சிறப்புப் பெயருடையவன். நெடுஞ்சடையன் பராந்தகன் ஆட்சியின் முற்பகுதியில் முதல் அமைச்சனாக நிலவியவன். இவன் மதுரைக்கு வடகிழக்கே ஆறு மைல் தூரத்திலுள்ள ஆனைமலையில் திருமாலுக்கு ஒரு கற்றளி அமைத்து, அதில் நரசிங்கப் பெருமாளை, கி. பி. 770-ஆம் ஆண்டில் எழுந்தருளுவித்தான்.1 அன்றியும் அக்கோயிற் கண்மையில் அந்தணர்க்கு ஓர் அக்கிரகாரம் அளித்துள்ளனன். இந் நிகழ்ச்சிகளை நோக்குமிடத்து இவன் வைணவ சமயப்பற்று மிகுதியாயுடையவன் என்று தெரிகிறது. இவன் பாண்டி வேந்தனால் வழங்கப்பெற்ற மூவேந்தமங்கலப் பேரரையன் என்ற பட்டம் பெற்றவன் ஆவன். வேள்விக்குடிச் செப்பேடு களில் இவனே ஆணத்தியாகக் கூறப்பெற்றுள்ளான். 2. மாறன் எயினன் இவன் மாறன் காரிக்குத் தம்பியாவன்; எயினன் என்னும் இயற்பெயருடையவன்; அக்காரி இறந்த பின்னர்ப் பராந்தகனுக்கு முதல் அமைச்சனாக இருந்தவன்; அரசனால் அளிக்கப்பெற்ற பாண்டி மங்கல விசையரையன் என்னும் பட்டம் எய்தியவன். இவன் தன் தமையன் ஆனைமலையில் எடுப்பித்த நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு முக மண்டபம் ஒன்றமைத்துக் கடவுண் மங்கலஞ் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.2 இவன் தமையன் அமைச்சனாயிருந்த நாட்களில் எடுப்பிக்கப்பெற்ற அக் கோயிலுக்குக் கடவுண் மங்கலஞ் செய்யாமல் அவன் இறந்த செய்தியை ஆனைமலைக் கல்வெட்டால் அறியலாம். 3. சாத்தன் கணபதி இவன் கரவந்தபுரத்தில் வாழ்ந்த சாத்தன் என்பவனுடைய மகன்; வைத்திய குலத்தினன்; கணபதி என்னும் இயற் பெயருடையவன்; பராந்தக பாண்டியனது ஆட்சியின் முற்பகுதியில் எல்லாப் படைகட்கும் மாசாமந்தனாக விளங்கியவன்; இவ்வேந்தனால் வழங்கப் பெற்ற பாண்டி அமிர்தமங்கல வரையன் என்னும் பட்டமுடையவன். இவன் திருப்பரங் குன்றத்திலுள்ள கோயிலுக்குத் திருப்பணி புரிந்து அங்குள்ள திருக்குளத்தையும் திருத்தி அறச் செயல்களையும் ஒழுங்குபடுத்தினான் என்று அவ்வூரிலுள்ள பராந்தகனது ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட் டொன்று உணர்த்துகின்றது.1 அன்றியும், இவனுடைய மனைவி நக்கன்கொற்றி என்பாள் அவ்வூரில் துர்க்கைக்கும் சேட்டைக்கும் வெவ் வேறு கோயில் அமைத்தனள் என்பது அக் கல்வெட்டின் பிற்பகுதியால் அறியப்படுகின்றது. 4. ஏனாதி சாத்தஞ்சாத்தன் இவன் சாத்தன் கணபதியின் உடன்பிறந்தான் ஆவன்; வேள்விக் குடிச் செப்பேடுகளின் தமிழ்ப் பகுதியைப் பாடியவன்; ஏனாதி என்னும் பட்டம் பெற்றவன். ஆகவே, இவன் மாசா மந்தனுக்குக்கீழ் ஒரு படைக்குத் தலைவனாயிருந்திருத்தல் வேண்டும், பெருவீரனான இத்தலைவன் தமிழ்ப் புலமையுடை யவனாகவுமிருந்து பாண்டி வேந்தர் பலருடைய வரலாறுகளைப் பாடி அச் செப்பேடுகளில் சேர்த்த பெருமை வாய்ந்தவன். எனவே, அறம்புரிந்த அரசனுடைய முன்னோர்கள் வரலாற்றைச் செப்பேடுகளில் வரைந்துவைக்கும் வழக்கத்தைப் பாண்டி நாட்டில் முதலில் தோற்றுவித்தவன் இவனேயாவன். 5. தீரதரன்மூர்த்தி எயினன் இவன் பராந்தகனது 17-ஆம் ஆட்சி யாண்டில் வெளியிடப்பெற்ற சீவரமங்கலச் செப்பேடுகளில்2 ஆணத்தியாகக் குறிக்கப்பெற்றவன். இவ்வேந்தன் ஆட்சியின் பிற்பகுதியில் பாண்டிப்படைகட்கு மாசா மந்தனாக நிலவியவன். அரசனால் அளிக்கப்பெற்ற வீரமங்கலப் பேரரையன் என்னும் பட்டம் எய்தியவன். இவனைப் பற்றிய பிற செய்திகள் புலப்படவில்லை. 6. சங்கரன் சீதரன் இவன் பாண்டி நாட்டுக் கொழுவூரின்கண் பிறந்தவன்; பராந்தகனது யானைப் படைக்குத் தலைவன்; பாண்டியனால் வழங்கப்பெற்ற பாண்டி இளங்கோமங்கலப் பேரரையன் என்னும் பட்டம் உடையவன்.1 இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் இவன் நெடுஞ்சடையன் பராந்தகனுடைய புதல்வன்; சின்னமனூர்ச் செப்பேடுகள் இவன் பெயரை மாத்திரங் கூறுகின்றனவேயன்றி இவனைப் பற்றிய செய்திகளை உணர்த்த வில்லை. எனவே, இவன் ஆட்சிக்காலம் மிகச் சுருக்கமாய் இருந்திருத்தல் வேண்டும்; அன்றியும், இவன் காலத்தில் வரலாற்றில் குறிக்கத்தக்க நிகழ்ச்சிகள் இல்லாமலும் இருக்கலாம். இவன் கி. பி. 790 முதல் 792 வரை இரண்டாண்டுகள் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது சில ஏதுக்களால் உணரக் கிடக்கின்றது. இவன் மாறவர்மன் என்ற பட்டம் புனைந்து அரசாண்டவன். வரகுண மகாராசன் இவன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியனுடைய மகனாவன்; சடையவர்மன் என்ற பட்டம் புனைந்து பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்தவன். இவனைக் கொற்றவர்கள் தொழு கழற்காற் கோவரகுண மகாராசன் என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. அதன் உண்மையை ஈண்டு ஆராய்வோம். வரகுண மகாராசனது ஆட்சியின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக் கள் சோழநாட்டிலுள்ள திருவியலூர்,2 திருநெய்த் தானம்3 என்னும் ஊர்களிலும் ஆறு, எட்டு, பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் முறையே ஆடுதுறை,4 கும்பகோணம்,5 செந்தலை,6 ஆகிய ஊர்களிலும் பதினொன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் திருச்சிராப்பள்ளி,7 திருக்கோடிகா8 என்ற ஊர்களிலும் ஆண்டழிந்துபோன கல்வெட்டொன்று திருச் சோற்றுத்துறை1 யிலும் இருத்தலால் சோழமண்டலம் முழுவதும் இவனது ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பது நன்கு புலனாகின்றது. இம்மன்னன் பல்லவ வேந்தனைக் கருவூரில் வென்றிகொண்ட செய்தி பராந்தக பாண்டியனுடைய ஏழாவது ஆண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகளினால் அறியப்படுகின்றது2 அன்றியும், கி. பி. 795 முதல் 846 வரையில் அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் கல்வெட்டுக்கள் சோழ மண்டலத்தில் காணப்படவில்லை. எனவே, அப்பல்லவ அரசனது ஆட்சியில்தான் வரகுண மகாராசன் சோழ நாட்டின்மேல் படையெடுத்து அதனைத் தன் ஆளுகைக் குள்ளாக்கி யிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. திருச்சிராப்பள்ளியிலுள்ள இவனது பதினோராம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டொன்று இவன் வேம்பில் மதிலையழித்து நியமத்தில் தங்கியிருந்தபோது சிராப்பள்ளி இறைவற்குத் திருவிளக்குகள் எரிப்பதற்கு நிவந்தமாக 125 கழஞ்சு பொன் அளித்தனன் என்று கூறுவதால் இவன் சோணாட்டின் மீது படையெடுத்து வந்து அதனைக் கைப்பற்றிய செய்தி உறுதியாதல் காண்க. வேம்பிலும் நியமமும் சோழநாட்டூர்களாகும். அவற்றுள், வேம்பில் என்பது இந்நாளில் வேப்பத்தூர் என்று வழங்குகிறது. இனி, இவ் வேந்தனது பதினாறாம் ஆட்சியாண்டுக் கல்வெட் டொன்று திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள அம்பாச முத்திரத்தி லிருக்கின்றது. அதில் இம் மன்னன் தொண்டை மண்டலத்தில் பெண்ணை யாற்றங்கரையிலுள்ள அரசூரில் வீற்றிருந்தபோது அம்பாசமுத்திரத்துக் கோயிலுக்கு 290 பொற்காசுகள் நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக வழங்கிய செய்தி சொல்லப்பட்டுள்ளது.3 எனவே, தொண்டைமண்டலத்தின் தென் பகுதியும் இவனது ஆளுகைக்குட்பட்டிருந்தது என்பது நன்கு வெளியா கின்றது. இவன் காலத்திலிருந்த பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் என்பான் சோழ மண்டலத்தையும் தொண்டை மண்டலத்தின் தென்பகுதியையும் இழந்து, எஞ்சிய பகுதியையே ஆண்டுவந்தவனாதல் வேண்டும். ஆகவே, சோழ மண்டலத்தையும் தொண்டை மண்டலத்தையும் பாண்டி மண்டலத்தோடு சேர்த்து ஒருங்கே ஆட்சி புரிந்த பெருமை யுடையவன் வரகுண மகாராஜன் என்பது இனிது புலப்படுதல் காண்க. இனி, இவ்வரசர் பெருமானது சிவபக்தியின் மாண்பு இத்தகையது என்று அளவிட்டுரைக்குந் தரத்ததன்று. இவன் ஆட்சிக் காலத்திற்றான் திருவாதவூரடிகளாகிய மணிவாசகப் பெருமான் இருந்தனர் என்பது ஆராய்ச்சியால் அறியப்படுகிறது. இவ்வடிகள் தாம் இயற்றியருளிய திருச்சிற்றம்பலக்கோவை யாரில் இவ் வேந்தனை இரண்டு பாடல்களில் பாராட்டி யுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவை, மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே றன்னவன் தேர்புறத் தகல்செல் லாது வரகுணனாந் தென்னவ னேத்துசிற் றம்பலத் தான்மற்றைத் (தேவர்க்கெல்லா முன்னவன் மூவலன் னாளுமற் றோர்தெய்வம் முனலைளே (306) புயலோங் கலர்சடை யேற்றவன் சிற்றம் பலம்புகழும் மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோபமுங் காட்டிவருஞ் செயலோங் கெயிலெரி செய்தபின் இன்றோர் (திருமுகமே - 327) என்பனவாம். அன்றியும், ஒட்டுடன் பற்றின்றி உலகைத் துறந்த செல்வராகிய பட்டினத்தடிகள் தாம் பாடிய திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில் ஒரு பாடலில் இவன் சிவபக்தியின் மேலீட்டால் ஆற்றிய அரும்பெருந் தொண்டுகளெல்லா வற்றையும் எடுத்துக் கூறியுள்ளனர். அவை, வெள்ளை நீறு மெய்யிற் கண்டு கள்ளன் கையிற் கட்டவிழ்ப் பித்தும் ஓடும் பன்னரி யூளைகேட் டரனைப் பாடின வென்று படாம்பல வளித்தும் குவளைப் புனலிற் றவளை யரற்ற ஈசன் றன்னை யேத்தின வென்று காசும் பொன்னுங் கலந்து தூவியும் வழிபடு மொருவன் மஞ்சனத் தியற்றிய செழுவிதை யெள்ளைத் தின்னக் கண்டு பிடித்தலு மவனிப் பிறப்புக் கென்ன இடித்துக் கொண்டவ னெச்சிலை நுகர்ந்தும் மருத வட்டத் தொருதனிக் கிடந்த தலையைக் கண்டு தலையுற வணங்கி உம்மைப் போல வெம்மித் தலையுங் கிடக்க வேண்டுமென் றடுத்தடுத் திரந்துங் கோயின் முற்றத்து மீமிசைக் கிடப்ப வாய்த்த தென்று நாய்க் கட்ட மெடுத்துங் காம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும் விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த பெரிய அன்பின் வரகுண தேவரும் என்பன. கி. பி. பத்தாம் நூற்றாண்டில் நம் தமிழகத்தில் வாழ்ந்த வரும் சைவத் திருமுறைகளைத் தொகுத்தவருமாகிய நம்பி யாண்டார் நம்பி என்னும் பெரியார் தாம் பாடிய கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில் பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லார் அடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்றன் முடியே தருகழ லம்பலத் தாடிதன் மொய்கழலே என்று இவன் சிவபெருமான்பால் வைத்திருந்த பேரன்பினைப் புகழ்ந்து கூறியுள்ளார். இதனாலும் இவன் சிவபக்தியின் மாட்சியை நன்குணரலாம். திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள அம்பாசமுத்திரம்1 தளபதி சமுத்திரம்,2 கழுகுமலை,3 ஏர்வாடி,4என்ற ஊர்களில் இவனது ஆட்சியின் 39, 41, 42,43-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. எனவே, இவன் நாற்பத்துமூன்று ஆண்டு ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, கி.பி. 792ல் முடிசூடிய இவ் வேந்தன் கி. பி. 835-ஆம் ஆண்டில் இறைவன் திருவடியை எய்தியிருத்தல் வேண்டும்; இவனை முதல் வரகுண பாண்டியன் என்று வரலாற்றாராய்ச்சியாளர் கூறுவர். இனி, நெடுஞ்சடையன் பராந்தகனும் இவ் வரகுண மகாராசனும் ஒருவனாயிருத்தல் வேண்டும் என்பது சில அறிஞர்களது கொள்கை5. அஃது எவ்வாற்றானும் பொருந்துவ தன்று. நெடுஞ்சடையன் பராந்தகன் பரம வைணவன் என்பது அவனுடைய வேள்விக்குடிச் செப்பேடுகளாலும் சீவர மங்கலச் செப்பேடுகளாலும் உறுதி யெய்துகின்றது. வரகுண மகாராசன் பரம சைவன் என்பது திருச்சிராப்பள்ளி, அம்பாசமுத்திரம் முதலான ஊர்களிலுள்ள கல்வெட்டுக்களாலும் மணிவாசகப் பெருமான், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி ஆகிய சைவப் பெரியோர்களின் அருட்பாடல்களாலும் நன்கு அறியப்படுகின்றது. நெடுஞ்சடையன் பராந்தகனுடைய சிறப்புப் பெயர்கள் பல வற்றையும் எடுத்துரைக்கும் அவனுடைய செப்பேடுகள் வரகுணன் என்ற பெயரையே யாண்டும் கூறவில்லை. வரகுண பாண்டியன் கல்வெட்டுக் களில் நெடுஞ்சடையன் பராந்தகனுக்கு வழங்கிய பல சிறப்புப் பெயர்களுள் ஒன்றாவது காணப்பட வில்லை. இந்நிலையில் இவ்விரு வேந்தரும் ஒருவனாதல் எங்ஙனம்? வரகுண மகாராசனுடைய பேரன்மார் இருவரும் வரகுணன், பராந்தகன் என்ற பெயர்களையுடையவர் களாயிருத்தல் உண்மையே. அதனால் நெடுஞ்சடையன் பராந்தகனையும் வரகுண பாண்டியனையும் ஒருவனெனக் கோடல் எவ்வாறு ஏற்புடைய தாகும்? பாட்டன் பெயரையே யன்றி முன்னோர்களின் பெயரையும் மக்கட்கு இட்டு வழங்குவது தொன்றுதொட்டு வரும் வழக்கமன்றோ? பேரன்மார் பலராயின் அவரெல்லார்க்கும் பாட்டன் பெயரிடுதல் வழக்கமுமன்று. ஆகவே, நெடுஞ்சடையன் பராந்தகனும் வரகுண மகாராசனும் ஒருவராகார் என்பதும் வெவ்வேறு வேந்தரேயாவர் என்பதும் முன்னவனுக்குப் பின்னவன் பேரன் ஆவன் என்பதும் அறியற் பாலனவாம். சீமாறன் சீவல்லபன் முதல் வரகுணபாண்டியன் இறந்த பின்னர், அவன் மகனாகிய இம் மன்னன் கி. பி. 835-ஆம் ஆண்டில் முடி சூடி ஆட்சிபுரியத் தொடங்கினான். இவன் மாறவர்மன் என்னும் பட்டம் உடையனாவன். இவனுக்கு ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அவனிபசேகரன் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. புதுக்கோட்டை நாட்டிலுள்ள சிற்றண்ணல் வாயிலில் சமணரது குகைக்கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்று,1 பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் - ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன் - சீர்கெழு செங்கோல் சீவல்லவன் என்று இவனைப் புகழ்ந்து கூறுகின்றது. இவன் வரலாறு சின்னமனூர்ச் செப்பேடுகளாலும், தளவாய்புரச் செப்பேடு களாலும் சில கல்வெட்டுக்களாலுமே அறியப்படுகின்றது. இவ்வேந்தன், குண்ணூ ர், சிங்களம், விழிஞம் என்னும் இடங்களில் போர் நிகழ்த்தி வாகை சூடினன் என்றும் குடமூக்கில் வந்தெதிர்த்த கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாகதர் ஆகிய அரசர்களை வென்று ஆற்றலோடு விளங்கினன் என்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. ஈண்டுக் குறிக்கப் பெற்ற இடங்களுள் விழிஞம் என்பது திருவனந்த புரத்திற்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் மேலைக் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினமாகும்.2 எனவே, விழிஞத்துப் போரில் இவன் சேரனை வென்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். விழிஞத்துப் போரில் சேரமன்னன் தோல்வியுற்று உயிரிழந்திருத்தல் வேண்டு மென்பது விண்ணாள வில்லவற்கு விழிஞத்து விடைகொடுத்தும் என்ற தளவாய்புரச் செப்பேட்டுப் பகுதியால் அறியக் கிடக்கின்றது, சேர மன்னன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. குண்ணூரில் இவன் யாரோடு போர்புரிந்தான் என்பதும் தெரியவில்லை. ஈழநாட்டில் முதல்சேனன் (கி. பி. 822-842) ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் இப் பாண்டி வேந்தன் அந்நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று, பல நகரங்களைக் கொள்ளை யிட்டு, புத்த விகாரங்களிலிருந்த பொற்படிமங்களையும் விலையுயர்ந்த பிறபொருள்களையும் கைப்பற்றி வந்தனன் என்றும் அதனால் சிங்களதேயம் தன் செல்வமெல்லாம் இழந்து சிறுமையுற்றதென்றும் மகாவம்சம் என்னும் இலங்கை வரலாறு கூறுகின்றது. அந் நாட்களில், சிங்கள மன்னன் பேராற்றல் படைத்த பாண்டிப் படையோடு போர்புரிய முடியாமல் தன் நாட்டைவிட்டு மலேயாவிற்கு ஓடிவிட்டான் என்றும் இளவரசனாகிய மகிந்தன் உயிர் துறந்தான் என்றும் காசபன் என்பான் போர்க்களத்தை விட்டோடிப் போயினான் என்றும் தெரிகின்றன.1 பிறகு, இவன் தன்னைப் பணிந்து உடன்படிக்கை செய்துகொண்ட முதல் சேனனுக்கு அந்நாட்டை வழங்கினான். ஆகவே, சீவல்லபன் சிங்களத்தை வென்றா னென்று சின்னமனூர்ச் செப்பேடுகள் உணர்த்துவது உண்மையாதல் காண்க.2 இச்செய்தி இவன் புதல்வன் பராந்தக பாண்டியன் வெளியிட்ட செப்பேடு களாலும் உறுதி யெய்துகின்றது. முதல் சேனனுக்குப் பின்னர் ஈழநாட்டில் முடிசூடிய இரண்டாம் சேனன் என்பான் (842-877) சீவல்லபனுக்குத் தாயத்தினன் என்று கூறிக்கொண்டு இவனோடு முரண்பட் டிருந்த மாய பாண்டியனைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பாண்டி நாட்டின் மேல் படையெடுத்து வந்தான். நம் சீவல்லபன் அன்னோர் இருவரையும் ஒருங்கே போரிற் புறங்கண்டு பாண்டி நாட்டைவிட்டு ஓடுமாறு செய்தனன். இப்போர் நிகழ்ச்சியைப் பற்றி மகாவம்சம் கூறுவன எல்லாம் வெறும் புனைந்துரை களேயன்றி உண்மைச் செய்திகள் ஆகமாட்டா. எனவே, சிங்கள மன்னனுடைய பாண்டி நாட்டுப் படையெடுப்பில் வெற்றி பெற்றவன் சீவல்லபனே என்பது தேற்றம். இனி, இவ் வேந்தன் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த போர்களுள் இவன் பல்லவருடன் நடத்திய போர்கள் நான்காகும். அவை, ஆனூர்ப் போர், தெள்ளாற்றுப் போர், குடமூக்குப் போர், அரிசிற்கரைப் போர் என்பன. அவற்றுள் தெள்ளாற்றுப் போர்1 பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்த தொண்டைமண்டலத்தின் தென்பகுதியைக் கைப்பற்றும் பொருட்டுப் பல்லவ வேந்தனாகிய மூன்றாம் நந்திவர்மன் என்பான் சீவல்லபனோடு கி. பி. 854-ஆம் ஆண்டில் நடத்திய போராகும். இப் போரில் நந்திவர்மன் வெற்றி எய்தினன் என்பது அவன் தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டிருத்தலால் நன்குணரக் கிடக்கின்றது. அன்றியும், திருச்சிராப்பள்ளி ஜில்லா சென்னி வாய்க்காலிலுள்ள கல்வெட்டொன்று2 தெள்ளாற்றெறிந்து ராஜ்யமுங் கொண்ட நந்தி போத்ரையர் என்று கூறுவதால், அவன் தன் தந்தை பாண்டியரிடம் இழந்த தொண்டைமண்டலத்தின் தென்பகுதியைக் கைப்பற்றியிருத்தல் வேண்டும் என்பது புலனாகின்றது. ஆகவே, தெள்ளாற்றுப் போரில் தோல்வியுற்ற சீவல்லபன் தொண்டைநாட்டில் தன் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதியை இழந்து விட்டமை தெள்ளிது. பல்லவ வேந்தனுக்கும் ஸ்ரீமாறனுக்கும் ஆனூர் என்னுமிடத்தில் போர் நிகழ்ந்த தென்றும். அதில் பல்லவ வேந்தன் தோல்வியுற்றான் என்றும் தளவாய்புரச் செப்பேடுகள் கூறுகின்றன.3 சில ஆண்டுகட்குப் பிறகு குடமூக்குப் போர் நிகழ்ந்தது. குடமூக்கு என்பது இந்நாளில் கும்பகோணம் என்று வழங்கும் நகரமாகும். கும்பகோணத்திலுள்ள கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களும் சைவசமய குரவர்கள் திருப்பாடல்களும் அந் நகரைக் குடமூக்கு என்றே கூறுகின்றன. சீவல்லபன் தெள்ளாற் றெறிந்த நந்திவர்மனையும் அவனுக்கு உதவி புரியவந்த கங்கர், சோழர், காலிங்கர், மகாதர் ஆகியோரையும் குடமூக்குப் போரில் புறங்காட்டி ஓடும்படி செய்து தன் பெருஞ்சினத்தை ஒருவாறு தணித்துக்கொண்டான். பாண்டி வேந்தன் இப் போரில் வெற்றிப்பெற்ற செய்தி, தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் மகனாகிய நிருபதுங்கவர்மனுடைய வாகூர்ச் செப்பேடுகளிலும்,1 இவன் இரண்டாவது புதல்வன் பராந்தக பாண்டியன் வெளியிட்ட தளவாய்புரச் செப்பேடுகளிலும்2 சொல்லப்பட்டுள்ளது. இதில் குறிக்கப்பெற்ற அமர்வல்லான் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. பிறகு, இவனது ஆட்சியின் இறுதிக்காலத்தேதான் அரிசிற் கரைப் போர் நடைபெற்றது. இப்போர், கும்பகோணத் திற்குத் தென்புறமாக ஓடிக் காரைக்காலுக்கு அண்மையில் கடலில் கலக்கும் அரிசிலாற்றின் கரையில் ஓர் இடத்தில் நம் சீவல்லபனுக்கும் பல்லவ அரசனாகிய நிருபதுங்கவர்மனுக்கும் நிகழ்ந்ததாகும். இதில் சொல்லப்பட்ட அரிசிலாற்றங்கரை, கும்பகோணத்திற்குத் தென்கிழக்கே நான்கு மைல் தூரத்தில் அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அரிசிற்கரைப் புத்தூரா யிருப்பினும் இருக்கலாம். இப்போரில் நிருபதுங்கவர்மன் வெற்றி எய்தவே, சீவல்லபன் தோல்வியுற்றனன். இச் செய்தி நிருபதுங்க வர்மன் வாகூர்ச் செப்பேடுகளிலும் காணப்படுகின்றது. இந்நிகழ்ச்சியினால் சோணாட்டின் வடபகுதி, பல்லவர் ஆட்சிக் குள்ளாயிற்று என்று தெரிகிறது.3 இவன் தன்னுடைய இறுதிக்காலத்தில் சிங்கள மன்னன் இரண்டாம் சேனன் (கி. பி. 851-885) பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்து வந்தன னென்றும் நிகழ்ந்த போரில் ஸ்ரீமாறன் தோல்வியுற்றதோடு உயிரையும் இழந்தானென்றும் வெற்றி யெய்திய சிங்களப் படைத்தலைவன் ஸ்ரீமாறனுடைய புதல்வன் வரகுணனுக்கு முடிசூட்டினான் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்1 பராந்தக பாண்டியன் செப்பேடுகள் இவன் பேராற்றல் காட்டிப் போர்புரிந்து போர்க்களத்தில் உயிர் துறந்தான் என்று கூறுகின்றன.2 பாண்டியர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோழநாட்டின் வட பகுதியிலுள்ள சில ஊர்களில் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் கல்வெட்டுக்களும் நிருபதுங்கவர்மன் கல்வெட்டுக்களும் காணப்படுவதால் சோழநாட்டில் எல்லைப்புறங்களில் பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் பல போர்கள் நிகழ்ந் திருத்தல் வேண்டும் என்பதும், அவற்றுள் சிலவற்றில் பாண்டியரும் சிலவற்றில் பல்லவரும் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் உய்த்துணரக் கிடக்கின்றன. ஆகவே, சீவல்லபனுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறிக் கிடைத்துள்ளன எனலாம். எனினும் இவன் பேராற்றல் படைத்த பெருவேந்தன் என்பதில் ஐயமில்லை. இவன் மயிலையிலிருந்த பொத்தப்பிச் சோழன் ஸ்ரீகண்டராஜன் என்பானோடு நட்புக் கொண்டிருந்தான். அவன் மகள் அக்களநிம்மடி என்பாள் இவன் அரசியருள் ஒருத்தியாவள். அவள் புதல்வனே ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பாண்டிய நாட்டை ஆண்ட பராந்தக பாண்டியனாவன்.3 இவன் தன் தந்தையிடம் பெற்று ஆட்சிபுரிந்துவந்த பாண்டிய இராச்சியத்தைப் பல இன்னல்களுக் கிடையில் அஞ்சாமல் காத்துவந்தமையும் இறுதியில் ஊழ்வலியால் போர்க்களத்தில் தோல்வியுற்று உயிர் துறந்தமையும் அறியத்தக்கது. இவன் கி. பி. 862-ஆம் ஆண்டில் இறந்திருத்தல் வேண்டும் என்பது ஐவர் மலையிலுள்ள ஒரு கல்வெட்டால் புலனாகின்றது.1 இவனுடைய முதல் மகன் வரகுணவர்மன் ஆவன். இவன் சிறப்புப் பெயரால் அவனிப சேகரமங்கலம் என்னும் ஊர் ஒன்று திருச்செந்தூர்க் கண்மையில் இருந்தது என்பது அவ்வூர்க் கல்வெட்டொன்றால் அறியப்படுகின்றது.2 இவன் ஆட்சிக்காலத்தில் அவனிப சேகரன் கோளகை என்னும் பொற்காசு ஒன்று பாண்டிநாட்டில் நாணயமாக வழங்கியது என்று தெரிகிறது.3 எட்டி சாத்தன் இவ்வேந்தன் ஆட்சியில் நிலவிய அரசியல் அதிகாரிகளுள் எட்டிசாத்தன் என்பான் பெரும்புகழ் படைத்த தலைவன் ஆவன். இவன் சங்கப் புலவர் ஒருவர் வழியில் தோன்றியவன். இவன் சாத்தன் என்று இயற்பெயரும் எட்டி என்னும் சிறப்புப் பெயரும் உடையவனாயிருத்தலை நோக்குமிடத்து, இவனுடைய முன்னோராகக் கூறப்படும் சங்கப்புலவர் மணிமேகலையின் ஆசிரியராகிய கூலவாணிகன் சாத்தனாராயிருத்தல் கூடுமோ என்ற ஐயம் நிகழ்கின்றது. இத்தலைவன் தென்பாண்டி நாட்டில் செய்துள்ள பெருந் தொண்டுகளும் அறங்களும் பலவாகும். இவனுக்கு இருப்பைக்குடி கிழவன் என்னும் பட்டம் பாண்டி வேந்தனால் வழங்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கது. இவன் முதலூர், தென் வெளியங்குடி என்னும் ஊர்களில் இரு சிவன் கோயில்களும் இருப்பைக்குடியில் ஓர் அமண்பள்ளியும் அமைத்துள்ளனன். எனவே இவனது சமயப் பொறை பெரிதும் போற்றத்தக்கதாகும். தென் வெளியங்குடி, கும்மணமங்கலம் என்ற ஊர்களில் இவன் தன் சிறப்புப் பெயர் என்றும் நின்று நிலவுமாறு கிழவன் ஏரி என்னும் பெயருடைய இரண்டு ஏரிகள் வெட்டியுள்ளனன். மற்றும் இவன் வெட்டியுள்ள ஏரிகளும் குளங்களும் கால்வாய்களும் இராமநாதபுரம் ஜில்லா சாத்தூர்த் தாலுகாவிலுள்ள எருக்கங்குடிக் குன்றில் காணப்படும் அகவல் நடையில் அமைந்த கல்வெட்டொன்றில்1 குறிக்கப்பட்டுள்ளன. இவன், பல நீர் நிலைகளால் வளம்படச் செய்த அந் நிலப்பரப்பு இருஞ்சோழநாடு என்னும் பெயருடையதாய்ச் சிறப்புற்றி ருந்தமை உணரற்பாலதாம். வரகுணவர்மன் இவன் சீமாறன் சீவல்லபனுடைய முதல்மகன் ஆவன்; சடைய வர்மன் என்னும் பட்டமுடையவன். இவனை இரண்டாம் வரகுண பாண்டியன் என்றும் கூறுவதுண்டு. இவனது ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய சகம் 792-ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்று2 மதுரை ஜில்லாவிலுள்ள ஐவர்மலையில் உள்ளது. அக்கல்வெட்டு கி. பி. 870-ல் பொறிக்கப் பெற்றதாதல் வேண்டும். எனவே, இவ் வேந்தன் கி.பி.862-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவனைக் குரைகழற்கா லரை சிறைஞ்சக் குவலயதலந் தனதாக்கின-வரைபுரையு மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுண வர்மன் என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் நடைபெற்று வந்த போர்கள் இவன் ஆட்சிக்காலத்தில்தான் ஒருவாறு முடிவுற்றன எனலாம். தென்னார்க்காடு ஜில்லா திருவதிகை வீரட்டானத்தி லுள்ள நிருபதுங்கவர்மனது பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றால்3 அப்பல்லவ வேந்தனும் இவ் வரகுண பாண்டியனும் நண்பர்களா யிருந்தனர் என்று தெரிகிறது. அப் பல்லவ மன்னன் இறந்த பின்னர், அவன் மகன் அபராஜித வர்மன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், நம் வரகுண வர்மனுக்குத் தன் தந்தை இழந்த சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதற்கேற்ப அக்காலத்தில் சோழநாட்டில் ஒரு பகுதியை அரசாண்டு கொண்டிருந்த விசயாலய சோழனும் முதுமை யெய்தித் தளர்ச்சி யுற்றிருந்தான். பாண்டி வேந்தனும் தன் கருத்தை நிறைவேற்றிக் கோடற்கு உரிய காலம் அதுவே என்று கருதி, கி. பி. 880-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும்படையுடன் சோணாட்டிற் புகுந்து, அம் மண்டலத்தில் காவிரியாற்றிற்கு வடக்கேயுள்ள மண்ணி நாட்டிலிருந்த இடவை என்ற நகரைக் கைப்பற்றினான். அந்நாட்களில் இளவரசனா யிருந்த ஆதித்த சோழன் இப்பாண்டியனை எதிர்த்துப் போர்புரிந்தும் வெற்றிபெற இயலவில்லை. எனவே, இடவை நகரும் அதனைச் சூழ்ந்த நிலப்பரப்பும் வரகுணவர்மன் ஆட்சிக்குள்ளாயின. இவன் சோணாட்டு இடவை மீது படையெடுத்த செய்தி, திண்டுக்கல்லுக் கண்மையிலுள்ள இராமநாதபுரத்தில் காணப்படும் ஒரு கல்வெட்டால்1 அறியப்படுகின்றது. இடவை நகரில் இவன் பாட்டன் முதல் வரகுணபாண்டியன் கட்டிய பாண்டியரது அரண்மனை இருந்த காரணம் பற்றியே இவன் முதலில் அதன்மீது படையெடுத்துச் சென்று, அதனையும், அதனைச் சூழ்ந்த பகுதியையும் கைப்பற்றிக் கொண்டான் என்க. இவ்வாறு பாண்டி வேந்தன் சோழ நாட்டில் ஒரு பகுதியைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள்ளாக்கியதை யுணர்ந்த பல்லவ மன்னனாகிய அபராஜிதவர்மன் என்பான், சில திங்கள் களில் தன் படையைத் திரட்டிக் கொண்டு பாண்டியனை எதிர்த்துப் போர்புரிய ஆதித்த சோழனோடு புறப்பட்டான். அந்நாட்களில் கங்க நாட்டரசனாகிய முதல் பிருதிவிபதியும் தன் நண்பனாகிய அபராஜித வர்மனுக்கு உதவி புரிய வேண்டிப் பெரும்படையுடன் சோணாட்டிற்கு விரைந்து வந்தனன். ஆகவே, பல்லவன், சோழன், கங்கன் ஆகிய மூவரும் சேர்ந்து வரகுணவர்மனை எதிர்த்துப் பொருதனர். அப்போது இடவையிலும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் கும்பகோணத்திற்கு வடமேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணி யாற்றங்கரையிலுள்ள திருப்புறம்பயத்தில் கி. பி. 880-ஆம் ஆண்டில் ஒரு பெரும்போர் நடைபெற்றது. பல்லவ அரசனுக்கு உதவி புரியும் பொருட்டுத் துணைப் படையுடன் வந்து பெருவீரத்துடன் போர்புரிந்த கங்க மன்னனாகிய முதல் பிருதிவிபதி என்பான் இப் போரில் கொல்லப்பட்டான்.1 எனினும், வரகுணபாண்டியன் தோல்வி யெய்திச் சோழ நாட்டில் தான் கைப்பற்றியிருந்த பகுதியை விட்டுவிட்டுப் போகும்படி நேர்ந்தது. அபராஜிதவர்மனும் ஆதித்த சோழனும் போரில் வெற்றிபெற்று வாகை சூடினர். இப்போரின் பயனாக ஆதித்த சோழனுக்குச் சோணாடு முழுமையும் ஆட்சிபுரியும் தனி உரிமை கிடைத்தது. இப்போர் நிகழ்ச்சியினால் பாண்டியரது முதற்பேரரசின் வலிமை குன்றியது; வெற்றிபெற்ற அபராஜிதன் படைப்பெருக்கம் சுருங்கி விட்டமையின் பல்லவரது பேரரசின் வலிமையும் குறைந்து போயிற்று; பரகேசரி விசயாலயன் புதல்வனாகிய இராஜகேசரி ஆதித்த சோழன் தஞ்சை மாநகரில் முடிசூடி, சோழமண்டலம் முழுமையும் ஆட்சி புரியும் பெருமை எய்தினான். சோழ மண்டலத்தில் பாண்டியரது ஆட்சியும் பல்லவரது ஆட்சியும் ஒருங்கே ஒழிதற்கும், சோழரது ஆட்சி மீண்டும் நிலை பெறுதற்கும் காரணமாயிருந்த இத்திருப்புறம்பயப் பெரும்போர் தமிழக வரலாற்றில் குறித்தற்குரிய ஒரு பெரிய நிகழ்ச்சியாகும். இப்போரில் இறந்த முதல் பிருதிவிபதியின் நடுகற்கோயில் ஒன்றும், உதிரப்பட்டி என்னும் பெயருடைய நிலப்பரப்பும், கச்சியாண்டவன் கோயில் என்ற நடுகற்கோயிலும் திருப்புறம் பயத்தில் இன்றும் உள்ளன. கச்சி யாண்டவன் கோயில் என்பது போரில் இறந்த ஒரு பல்லவ அரசனது நடுகல் இருந்த இடமாயிருத்தல் வேண்டும். அப்பல்லவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. ஆயினும், இவையெல்லாம் முற்காலத்தில் அங்கு நடைபெற்ற பெரும்போரை இக் காலத்தினர்க்கு உணர்த்தும் அடையாளங்கள் என்பது அறியற்பாலதாம். இப்போர் நிகழ்ச்சிக்குப் பிறகு இவ் வேந்தன் பாண்டி நாட்டில் எத்தனை யாண்டுகள் ஆட்சிபுரிந்தனன் என்பது இப்போது புலப்பட வில்லை. இவனுடைய இறுதிக்காலத்தில் நிகழ்ந்த உள் நாட்டுப் போரில் இவன் தம்பி பராந்தக பாண்டியன் வெற்றியடைந்து தனது தமையனை அரியணை யிலிருந்து நீக்கிவிட்டுத் தானே அரசாளத் தொடங்கிய செய்தி அவனுடைய செப்பேடுகள் வாயிலாக அறியப்படுகின்றது.1 இவ்வரகுணன் திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள முருகவேள் திருவடிகளில் பெரிதும் ஈடுபாடுடையவன். இவன், அப்பெருமானுக்கு ஆண்டு முழுவதும் நாள் வழிபாடு நடத்துவதற்கு ஆயிரத்து நானூறு பொற்காசுகளை நிவந்தமாக வழங்கி அவற்றைப் பன்னிரண்டு ஊர் களுக்குப் பிரித்துக் கொடுத்து, காசு ஒன்றுக்கு ஆண்டொன்றிற்கு நெற் பொலிசை இரண்டு கலமாக அப்பன்னிரு ஊரினரும் திருச்செந்தூர்க் கோயிலுக்கு இரண்டாயிரத் தெண்ணூ று கல நெல் ஆண்டு தோறும் அளந்து வருமாறு ஏற்பாடு செய்துள்ளனன். இச்செய்தி, நாள் வழிபாட்டுத் திட்டங்களுடன் அக்கோயிலிலுள்ள ஒரு கருங்கற் பாறையில் இவ் வரகுண பாண்டியனது பதின்மூன்றாம் ஆட்சி யாண்டில் வரையப்பட்டுள்ளது.2 இவனைப் பற்றிய பிறசெய்திகள் இப்போது தெரியவில்லை. இவன் காலத்திலிருந்த அரசியல் தலைவர்களுள் ஒருவனைப் பற்றிச் சில செய்திகள் கிடைத்துள்ளன. அவற்றை அடியிற் காண்க. பராந்தகப் பள்ளிவேளான் நக்கம்புள்ளன் இவன் நக்கன் என்பவன் புதல்வன்; புள்ளன் என்னும் இயற் பெயருடையவன்; பாண்டியன் வழங்கிய பராந்தகப் பள்ளிவேளான் என்ற பட்டமுடையவன்; வரகுணவர்மன் இடவைமீது படையெடுத்துச் சென்றபோது படைத்தலைவனா யிருந்து போரில் வெற்றிகண்டவன். இவன், திண்டுக்கல்லுக் கண்மையிலுள்ள இராமநாதபுரம் என்னும் ஊரில் பொது மக்கட்குப் பயன்படுமாறு ஒரு குளம் வெட்டுவித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது.3 பராந்தக பாண்டியன் இவன் சீமாறன் சீவல்லபனுடைய இரண்டாம் புதல்வன் ஆவன்; சடையவர்மன் என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன். இவன் தன் தமையன் இரண்டாம் வரகுண பாண்டியன் இறந்த பின்னர் பட்டம் பெற்றுள்ளமையால் இவன் கி.பி. 880-ஆம் ஆண்டிற்குப் பிறகு அரியணை யேறியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. ஆனால், அவ்வாண்டை இப்போது அறிதற்கியலவில்லை. தளவாய்புரச் செப்பேடுகள் எனப்படு பவை இம்மன்னனுடைய ஏழாவது ஆட்சியாண்டில் வெளிப்பட்டவை. அவை இவனுடைய வெற்றிச் செயல்களையும் அறச் செயல்களையும் நிரல்படக் கூறுகின்றன. அப்பகுதி பின்வருமாறு: கொந்தகபூம் பொழிற்குன்றையுங் குடகொங்கினும் பொக்கரணியும் தென்மாயனுஞ் செழுவெண்கையு பராந்த கன்னுஞ் சிலைக்கணீர்ந்த மன்மாய மாமிகுத்தவர் வதுவா ஹனங்கொண்டும் ஆறுபல தான்கண்டும் அமராலையும் பலசெய்துஞ் சேறுபடு வியன்கழனித் தென்விழிஞ நகர் கொண்டுங் கொங்கினின்று தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய வெங்கதிர் வேல் வலங்கொண்டும் வீரதுங்கனைக் குசைகொண்டும் எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங்களும் இரு நிலத்திலியற்று வித்தும் நிலமோங்கும் புகழாலுந் நிதிவழங்கு கொடையாலும் வென்றிப்போர்த் திருவாலும் வேல் வேந்தரில் மேம்பட்ட கதிரார்கடுஞ் சுடரிலை வேல் கலிப்பகை கண்டகோன்.1 சின்னமனூர்ச் செப்பேடுகளும் இவ்வேந்தன் கரகிரியில் உக்கிரனைப் போரில் வென்று அவனையும் அவன் களிற்றினங் களையும் கைப்பற்றிக்கொண்டான் என்றும், பெண்ணாகட நகரை அழித்தான் என்றும், கொங்கர்களைப் போரில் வென்று வாகை சூடினான் என்றும், பல தேவதானங்களும் பிரம தேயங்களும் பள்ளிச் சந்தங்களும் அளித்துப் புகழெய்தினான் என்றும் கூறுகின்றன. பாண்டியர்க்குத் திறைசெலுத்தி வந்த கொங்கு நாட்டரசன் முரண்பட்ட காரணம் பற்றி இவன் கொங்கர்களோடு போர் புரிந்திருத்தல் வேண்டும். இவன் பெண்ணாகடத்தை அழித்தமைக்குக் காரணம் யாது என்பது இப்போது புலப்படவில்லை. கரகிரி என்பது கரவந்தபுரமாயிருத்தல் வேண்டும். அவ்வூர் உக்கிரன் கோட்டை என்னும் பெயருடன் தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலித் தாலூகாவில் இந்நாளில் உள்ளது. அவ்வூரில் நெடுஞ்சடையன் பராந்தகன் ஒரு பெருங்கோட்டை அமைத்திருந்தனன் என்பதும், அவ் வேந்தனுடைய அமைச்சர்களும் மாசாமந்தரும் பிறந்த இடம் அவ்வூரேயாம் என்பதும் பிறவும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. அவ்வூர் உக்கிரன்கோட்டை என்று வழங்கப் பெற்று வருவதற்குக் காரணம் அங்கிருந்த தலைவன் ஒருவன் உக்கிரன் என்ற பெயருடைய வனாயிருந்திருத்தல் வேண்டும். அவனும் இப்பராந்தகன் ஆட்சிக் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும். அத்தலைவன் இவ்வேந்தனோடு முரணிச் சில அடாச்செயல்கள் புரிந்திருத்தல் கூடும். அதுபற்றியே, இப் பாண்டி மன்னன் அவ்வுக்கிரனோடு போர்புரிந்து அவனையும் அவன் களிற்றினங்களையும் கைப்பற்றிக் கொணர்ந்தனனாதல் வேண்டும். கரவந்தபுரம் என்னும் ஊரின் பழைய பெயர் மறைந்து அவ்வூர் உக்கிரன்கோட்டை என்று அத்தலைவன் பெயரால் பிற் காலத்தில் வழங்கப் பெற்று வருதலை நோக்குமிடத்து, தோல்வி யுற்றுச் சிறை பிடிக்கப்பட்ட அத்தலைவன், பாண்டியனைப் பணிந்து மீண்டும் அக் கோட்டையைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு தெளியப்படும். இக்காலத்தும் அவ்வூர் உக்கிரன்கோட்டை என்று வழங்கப்பட்டு வருதல் அறியத்தக்கது. அவ்வூரில் இம் மன்னனுக்கு அரண்மனையொன்று இருந்தது என்று தெரிகிறது. இனி, இவன் தமையன் வரகுணவர்மனும் இவனும் ஒருவனுக்குப் பின் ஒருவன் ஆட்சிபுரிந்தும் இருவரும் சடைய வர்மன் என்றே பட்டம் புனைந்து கொண்டிருத்தல் குறிப்பிடத்தக்கதொன்றாம். இது, சோழ மன்னர்கள் பின்பற்றிய முறைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். அவர்களுள், உடன் பிறந்தோர் ஒருவர்பின் ஒருவர் ஆண்டகாலத்தும் இராசகேசரி, பரகேசரி என்ற பட்டங்களை மாறிமாறிப் புனைந்து கொண்டமை உணரற்பாலதாம். இவனுக்கு வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயர் அந்நாளில் வழங்கியது என்று தெரிகிறது. இவனுடைய செப்பேடுகளில் இவனுக்கு அக்காலத்தில் வழங்கிய பல சிறப்புப் பெயர்கள் காணப்படுகின்றன. அவை கலிப்பகை கண்டகோன், மதுராபுர பரமேவரன், மாநிநீ மகரகேதநன்மன், வசுதாதிப வாசுதேவன், அசலாசலன், நவர்ஜ்யன், கூடற்கோன், குருசரிதன், செந்தமிழ்க்கோன், ஸ்ரீநிகேதனன் என்பனவாம். இவனுடைய பட்டத்தரசி வானவன் மாதேவி என்பாள். இவ்வரசி, சேரமன்னன் மகள் ஆவள். திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சேரமாதேவி என்னும் நகர் இவ்வரசியின் பெயரால் அமைக்கப் பெற்றதேயாம். பராந்தக பாண்டியற்கு இப் பட்டதரசியின்பால் பிறந்த புதல்வனே மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் ஆவன். கி. பி. 900-க்கு அணித்தாக இப்பராந்தகன் இறந்தனன் என்று தெரிகிறது. எனவே, சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் வரையில் இவன் ஆட்சிபுரிந்தனாதல் வேண்டும்.  6. கி.பி. 900 முதல் கி.பி. 1190 வரையில் ஆண்ட பாண்டியர்கள் மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் இவ்வேந்தன் சடையவர்மன் பராந்தகனுடைய புதல்வன்; சடையன் மாறன், இராசசிகாமணி, சீகாந்தன், மந்தர கௌரவ மேரு முதலான பட்டங்களையுடையவன்; எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் - எண்ணிறந்த பள்ளிச் சந்தமும் எத்திசையும் இனிதியற்றிப் புகழ்பெற்றவன். இவன், கி. பி. 900-த்தில் பட்டம் எய்தியவன் ஆவன். இம்மன்னனது பதினாறாம் ஆட்சியாண்டில் வரைந்து அளிக்கப்பெற்றனவே சின்னமனூர்ச் செப்பேடுகள்1 என்பது உணரற்பாலது. இக்காலத்தில் சின்னமனூர் என்று வழங்கும் நற்செய்கைப் புத்தூர்க்கு மந்தர கௌரவ மங்கலம் எனப் பெயரிட்டு அதனை இவ்வரசன் ஓர் அந்தணற்குப் பிரமதேயமாக வழங்கிய செய்தியையும் இவ்வேந்தற்கு முன்னர்ப் பாண்டி நாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டி மன்னர் சிலர் வரலாறுகளையும் அத்தொல்குடியின் பண்டைப் பெருமை களையும் அச்செப்பேடுகள் நன்கு அறிவிப்பனவாகும். எனவே, கி. பி. எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் அரசாண்ட பாண்டி வேந்தர்களின் வரலாறுகளை அறிந்து கோடற்கு அச் செப்பேடுகள் சிறந்த ஆதாரங்களாக இருப்பது வரலாற்றா ராய்ச்சியாளர் பலரும் உணர்ந்ததோர் உண்மையாகும். இவன் உலப்பிலிமங்கலத்தில் தன்னை எதிர்த்த பகைஞர்களை வென்றமையும், கொடும்பாளூர் மன்னனது பெரும் படையைப் புறங்காட்டியோடச் செய்தமையும், வஞ்சிமாநகரில் பெரும்போர் புரிந்தமையும், தஞ்சை மன்னனை வைப்பூரிலும் நாவற்பதியிலும் தோல்வியுறச் செய்தமையும் அச்செப்பேடுகளால் நன்கு அறியக்கிடக் கின்றன. அவற்றுள் உலப்பிலி மங்கலத்தில் இவனை எதிர்த்துத் தோல்வி எய்தியவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. இவனோடு போர் நிகழ்த்திப் புறங்காட்டி யோடிய கொடும்பாளூர் மன்னன், சோழ அரசர் குடும்பத்தோடு நெருங்கிய உறவினால் பிணிக்கப் பட்டிருந்த பூதிவிக்கிரம கேசரியாயிருத்தல் வேண்டும். வஞ்சி மாநகரில் இவனோடு பொருதவன் யாவன் என்பது தெரிய வில்லை. ஒருகால், இவனுடைய தாய்ப்பாட்டனாகிய சேர மன்னனது தலைநகராகிய வஞ்சியின்மீது படையெடுத்துவந்த ஒரு பகைவனோடு இவன் போர்புரிந்து அவனை வென்றி ருத்தலும் கூடும். அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் விளக்கக்கூடிய கருவிகள் இந்நாளில் கிடைத்தில. இனி, சோழ மண்டலத்தில் கி. பி. 907-ல் முடிசூடிக் கொண்ட முதற்பராந்தக சோழன், அவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், மதுரைகொண்ட கோப்பரகேசரி என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளான். இதனால் முதற் பராந்தக சோழன் கி. பி. 910-ல் இம்மூன்றாம் இராசசிம்ம பாண்டியனோடு போர் புரிந்து அவனை வென்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகின்றது. தோல்வியுற்ற இராசசிம்மபாண்டியன் இலங்கை மன்னனாகிய ஐந்தாம் காசிபனைத் தனக்குத் துணைப்படை யனுப்புமாறு கேட்டுக் கொண்டனன். அவ் வேந்தனும் பாண்டியனது வேண்டுகோட் கிணங்கித் தன் படைத்தலைவன் சக்க சேனாதிபதியின் கீழ் சிறந்த யானைகளும், குதிரைகளும், வீரர்களும் அடங்கிய பெரும்படை யொன்றை அனுப்பினான். இலங்கைப் படையும் பாண்டிப் படையும் ஒருங்குசேர்ந்து முதற் பராந்தகசோழனோடு போர் புரிவதற்குப் புறப்பட்டன. வெள்ளூர் என்னுமிடத்திற் பெரும்போர் நடைபெற்றது.1 அவ்விருபடைகளும் பராந்தகன் படையுடன் போர்புரியும் ஆற்றலின்றிப் புறங்காட்டியோடத் தலைப்பட்டன. இராசசிம்மன் இம் முறையும் தோல்வியுற்றான். எனவே, பாண்டிநாடு பராந்தக சோழனது ஆட்சிக்குள்ளாயிற்று. இது நிகழ்ந்தது கி. பி. 919-ஆம் ஆண்டாகும். இச்செய்திகளுள் சில, இரண்டாம் பிருதிவிபதியின் உதயேந்திரச் செப்பேட்டிலும் சொல்லப்பட்டன.1 சின்னமனூர்ச் செப்பேடுகள், இராசசிம்ம பாண்டியன் தஞ்சை வேந்தனை வைப்பூரிலும் நாவற்பதியிலும் போரில் வென்றானென்று கூறுவதால் இப்பாண்டியனுக்கும் முதற் பராந்தக சோழனுக்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும் அவற்றுள் சிலவற்றில் பாண்டியனும் சிலவற்றில் சோழனும் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதும், இறுதியில் வெள்ளூரில் நிகழ்ந்த போரில் இராச சிம்மன் தோல்வியுற்றுப் பராந்தகன்பால் பாண்டி நாட்டை இழக்கும்படி நேர்ந்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு தெளியப்படும். தனக்குரிய நாட்டை இழந்த இராசசிம்ம பாண்டியன் சிங்களத்திற்குச் சென்று அந்நாட்டரசனது உதவி பெறுமாறு அங்குத் தங்கியிருந்தனன்; தன் நாட்டைப் பெறுவதற்கு அவ்வேந்தன் உதவாமை கண்டு, அங்குத் தங்கியிருப்பதால் ஒரு பயனும் இல்லை யென்பதை நன்குணர்ந்து, தன் முன்னோர் களிடமிருந்து தனக்குக் கிடைத்துள்ள சுந்தரமுடியையும் பிற அரச சின்னங்களையும் அம் மன்னனிடத்தில் வைத்துவிட்டு, தன் தாய் வானவன் மாதேவியின் பிறந்தகமாகிய சேரநாட்டிற்குச் சென்று வசித்து வந்தான். பின்னர் இவனைப் பற்றிய செய்திகள் புலப்படவில்லை. ஆகவே, பாண்டியரது ஆட்சி இம்மன்னன் காலத்தேதான் மிகவும் தாழ்ந்த நிலையை யடைந்து வீழ்ச்சி யெய்திற்று; பாண்டிநாடும் சோழரது ஆளுகைக் குள்ளாயிற்று. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் முதலான ஜில்லாக் களிலும் திருவாங்கூர் நாட்டின் சில பகுதிகளிலும் காணப்படும் முதற்பராந்தகசோழன் கல்வெட்டுக்கள் இவ்வுண்மைகளை நன்கு விளக்குங் கருவிகளாக உள்ளன. வீரபாண்டியன் இவ்வேந்தன் இராசசிம்ம பாண்டியன் புதல்வன் என்பது திருநெல்வேலி ஜில்லா திருப்புடைமருதூரிலுள்ள ஒரு கல்வெட்டால் உய்த்துணரப் படுகிறது.1 இவன் பாண்டி மார்த்தாண்டன், சோழாந்தகன் என்ற சிறப்புப் பெயர்களை யுடையவன்;2கி. பி. 946 முதல் 966 வரையில் பாண்டி நாட்டில் அரசாண்டவன்;3 இவன் கல்வெட்டுக்கள் திருநெல்வேலி, இராமநாதபுரம் ஜில்லாக்களிலும் திருவாங்கூர் நாட்டின் தென் பகுதியிலும் உள்ளன.4 அன்றியும், இவனது ஆட்சியின் ஒன்பது பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் மதுரை ஜில்லா திருமங்கலந் தாலூகாவிலுள்ள கீழ்மாத்தூர்க் கோயிலிலும் காணப் படுகின்றன.5 அக் கல்வெட்டுக்களை நோக்குமிடத்து, இவன் தனக்குரிய பாண்டி மண்டலத்தைச் சோழ மன்னனிட மிருந்து கைப்பற்றி ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும் என்பது வெளி யாகின்றது. இவன் பாண்டி நாட்டைக் கைப்பற்றித் தன் ஆளுகைக்குட்படுத்தியது, முதற்பராந்தக சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்திலாதல் அவன் மகன் முதற் கண்டராதித்த சோழன் ஆட்சியின் தொடக்கத்திலாதல் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அந்நாட்களில் இராட்டிரகூட மன்னன் மூன்றாங் கிருஷ்ணதேவன் என்பான் சோழ இராச்சியத்தின்மேல் படை யெடுத்துவந்து அதன் வடபகுதியைக் கைப்பற்றிக் கொண்ட மையால் சோழ மன்னர்கள் தம் ஆளுகையின் கீழ் வைத்துக் கொண்டிருந்த பாண்டி நாட்டைப் பாதுகாக்க முடியாத நிலையில் இருந்தனர். காலங்கருதிக் கொண்டிருந்த வீர பாண்டியனும் முடிசூடிக்கொண்டு பாண்டிநாட்டின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அதற்கேற்ப, முதற் பராந்தக சோழனுக்குப் பின்னர் அரசாண்ட கண்டராதித்தன், அரிஞ்சயன் முதலான சோழமன்னர்களின் கல்வெட்டுக்கள், மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக் களில் காணப்பட வில்லை. ஆனால், வீரபாண்டியன் கல்வெட்டுக்கள் மாத்திரம் அவ்விடங்களில் உள்ளன என்பது முன்னர் விளக்கப் பட்டுள்ளது. எனவே, வீரபாண்டியன் பாண்டி நாட்டில் முடிமன்னனாக வீற்றிருந்து சோழர்க்குத் திறை செலுத்தாமல் அதனை ஆட்சி புரிந்து வந்தனனாதல் வேண்டும். இனி, வீரபாண்டியன் தன் கல்வெட்டுக்களில் ஆறாம் ஆட்சி ஆண்டு முதல் சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன்1 என்று தன்னைக் குறித்துள்ளமையின், இம் மன்னன் ஒரு சோழனைப் போரில் கொன்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகிறது. வீரபாண்டிய னாற் கொல்லப்பட்டவன் அரிஞ்சயன் புதல்வனும் முதல் இராசராச சோழன் தந்தையுமாகிய சுந்தரசோழனாயிருத்தல் வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர்.2 அன்னோர் கொள்கைக்குச் சில சான்றுகள் முரணாக உள்ளன. சுந்தர சோழனுக்குப் பொன்மாளிகைத் துஞ்சின தேவர் என்ற பெயர் அவன் இறந்த பிறகு வழங்கியுள்ளது என்பது சில கல்வெட்டுக்களால்3 அறியப்படுகின்றது. பொன்மாளிகை என்பது சோழ மன்னரது ஆட்சிக் காலங்களில் காஞ்சி மாநகரிலிருந்த அரண்மனைகளுள் ஒன்று என்பது கலிங்கத்துப் பரணியாலும்4 கல்வெட்டுக்களானும்5 நன்குணரக் கிடக்கின்றது. எனவே, சுந்தரசோழன் காஞ்சியிலிருந்த அம்மாளிகையில் இறந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. ஆகவே, அவன் வீர பாண்டியனால் போரில் கொல்லப்பட்டான் என்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை என்க. அன்றியும், கி.பி. 962-ஆம் ஆண்டில் சுந்தரசோழன் வீரபாண்டியனைச் சேவூர் என்ற இடத்தில் போரில் வென்றா னென்று ஆனைமங்கலச் செப்பேடு கூறுகின்றது.1 சுந்தர சோழன் கல்வெட்டுக்கள் அவனை மதுரை கொண்டகோ இராசகேசரி வர்மன்2 எனவும் பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் ஸ்ரீ சுந்தர சோழதேவர்3 எனவும் குறிப்பிடுவதால் அவன் வீரபாண்டியனைச் சேவூர்ப் போரில் வென்ற செய்தி உறுதியாதல் உணரத்தக்கது. எனவே, வீரபாண்டியன் சுந்தர சோழனைப் போரிற் கொன்றனன் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருத்தமுடைய தன்று. ஆகவே, வீர பாண்டியனால் கொல்லப்பட்ட சோழன் யாவன் என்பது தெரியவில்லை. எனினும், அவன் சோழ அரச குமாரர்களுள் ஒருவானாயிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. இனி, சுந்தரசோழன் முதல் மகனும் முதல் இராசராச சோழன் தமையனுமாகிய ஆதித்த கரிகாலன் என்பான், வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பர கேசரி வர்மன் என்று பல கல்வெட்டுக்களில்4 குறிக்கப்பட்டி ருத்தலால் அவன் வீரபாண்டியனைப் போரிற் கொன்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகின்றது.5 வீரபாண்டியன் சோழ அரசகுமாரன் ஒருவனைக் கொன்ற காரணம்பற்றி ஆதித்த கரிகாலனும் கொடும்பாளூர் மன்னன் பூதி விக்கிரமகேசரியும்6 ஒருங்கு சேர்ந்து இப்பாண்டி வேந்தனோடு போர்புரிந்து இவனைக் கொன்றிருத்தல் வேண்டும். இந்நிகழ்ச்சி ஆதித்த கரிகாலனது இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றிருத்தலால்7 இவ்வீரபாண்டியன் கி.பி.966 ஆம் ஆண்டில் போரில் இறந்தனன் எனலாம். இவன் கல்வெட்டுக்கள் இருபதாம் ஆட்சியாண்டிற்குப்8 பிறகு காணப்படாமையால் இவன் அவ்வாண்டில் இறந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவ் வீரபாண்டியற்குப் பின்னர், பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம்வரையில் ஆட்சிபுரிந்த பாண்டியர்கள் சோழர்களுக்குத் திறை செலுத்தும் சிற்றரசர்களாக இருந்தமையின் அவர்கள் வரலாற்றை அறிந்து கொள்ளுதற்குரிய கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டிற் கிடைக்க வில்லை. முதல் இராசராசசோழன், முதல் இராசாதிராச சோழன் முதலான சோழ மன்னர்கள் கல்வெட்டுக்களில் அவர்களால் வென்றடக்கப்பட்டவர்களாகக் குறிக்கப்பெற்றுள்ள பாண்டியர் பெயர்கள் மாத்திரம் காணப்படுகின்றன. அத்தகைய பாண்டியர் வரலாற்றையும் அக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு தொடர்பாக அறிய இயலவில்லை. இதுகாறும் ஆராய்ந்து கண்ட சில செய்திகளே அடியில் எழுதப் பெறுவன. அமரபுயங்கன் இப்பாண்டி வேந்தன் முதல் இராசராச சோழனால் வென்றடக்கப் பெற்றவன் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால்1 அறியப்படு கின்றது. இவன் யாருடைய புதல்வன் என்பதும் எப்போது பட்டத்திற்கு வந்தனன் என்பதும் புலப்படவில்லை. இராசராசசோழன் சேரநாட்டின் மேல் படை யெடுத்துச் சென்றபோது அவனை இவ்வமரபுயங்கன் இடையில் தடுத்துப் போர் புரிந்தான். அக்காரணம் பற்றியே அவன் தன் திக்குவிசயத்தின்போது முதலில் இப்பாண்டியனை வென்று இவனது நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். பிறகு அச் சோழமன்னன், பாண்டிநாடு சேரநாடு ஆகிய இரண்டிற்கும் இராசராசமண்டலம் என்று பெயரிட்டுத் தன் ஆட்சிக் குள்ளாக்கினான். அது முதல், இராசராச சோழனுக்குப் பாண்டியகுலாசனி என்னுஞ் சிறப்புப் பெயர் வழங்கியது. அவன் கல்வெட்டுக்களும் பாண்டிநாட்டில் யாண்டும் காணப்படுகின்றன.2 அவன் தன் மெய்க்கீர்த்தியில் செழியரைத் தேசு கொள் கோவிராசகேசரி வர்மன் என்று கூறிக் கொள்வதோடு தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டுக்களில் மலைநாட்டுச் சேரமானையும் பாண்டியர்களையும் எறிந்து3 என்று குறித்தும் இருத்தலால் அவன் பாண்டியர் சிலரைப் போரில் வென்றி ருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது. எனவே, இராசராசசோழன் காலத்தில் பாண்டியர் சிலர் இருந்தனர் என்பதும், அவர்களை அவன் வென்று அடக்கிவிட்டனன் என்பதும், திருவாலங் காட்டுச் செப்பேடுகளிற் கூறப்பெற்ற பாண்டியன் அமரபுயங்கன் என்பான் அன்னோர்க்குத் தலைவனாயிருத்தல் வேண்டும் என்பதும் தெள்ளிதிற் புலனாதல் காண்க. முதல் இராசராசசோழன் மகனாகிய முதல் இராசேந்திர சோழன் தன் ஆட்சியின் தொடக்கத்தில் தன் புதல்வர்களுள் ஒருவனுக்குச் சோழபாண்டியன் என்ற பட்டமளித்துப் பாண்டிநாடாகிய இராசராச மண்டலத்திற்கு அரசப் பிரதிநிதியாக மதுரையில் வீற்றிருந்து ஆண்டுவருமாறு அனுப்பினான்.1 அவன் இங்ஙனம் செய்தமைக்குக் காரணம் தோல்வியுற்ற பாண்டியர் சிறிது வலிமையெய்தியவுடன் சோழர்க்குத் திறை செலுத்தாது முரண்பட்டு வந்தமையேயாம். சோழ மன்னர்களின் பிரதிநிதிகளாகச் சோழபாண்டியர் என்ற பட்டத்தோடு மதுரையிலிருந்து ஆட்சி புரிந்தோர், முதல் இராசேந்திர சோழன் மகன் சுந்தரசோழ பாண்டியன், விக்கிரம சோழ பாண்டியன் பராக்கிரம சோழ பாண்டியன் என்போர்.2 அவர்கள் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் காணப்படுகின்றன. எனவே, சோழ பாண்டியரது ஆளுகை பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் ஒருங்கே நடைபெற்ற தென்பது நன்கு துணியப்படும். அந்நாடுகளில் அன்னோரது ஆட்சியும் கி. பி. 1020 முதல் 1070 வரையில் நிலைபெற்றிருந்தது என்பது அறியற்பாலதாகும். மானாபரணன், வீர கேரளபாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன், வீர பாண்டியன் இவர்கள், முதல் இராசாதிராச சோழன் காலத்திற் பாண்டி நாட்டிலிருந்த மன்னவர்களாவர். சோழர்களால் அனுப்பப்பெற்ற அரசப் பிரதிநிதிகளுக்கு அடங்காது உள் நாட்டிற் கலகம் விளைத்த காரணம் பற்றி இவர்களோடு இராசாதிராசசோழன் போர் நிகழ்த்துவது இன்றியமை யாறித தாயிற்று. அப்போரில் மானாபரண பாண்டியனும் வீரகேரள பாண்டியனும் கொல்லப்பட்டனர்; சுந்தர பாண்டியன் தோற்றோடி முல்லையூரில் ஒளிந்துகொண்டான்; விக்கிரம பாண்டியன் ஈழ மண்டலத்திற்கு ஓடிவிட்டான். வீரபாண்டியன் என்பான் இராசாதிராச சோழனால் கி. பி. 1048 -ல் கொல்லப் பட்டானென்று கோலார் ஜில்லாவில் மிண்டிக்கல் என்னு மிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.1 இச் செய்தி இராசாதிராச சோழனது திருக்களர்ச் செப்பேட்டிலும் குறிக்கப் பட்டுள்ளது.2 இங்குக் குறிக்கப்பெற்ற பாண்டியர் ஐவர் வரலாற்றையும் உணர்த்தக்கூடிய கருவிகள் கிடைக்கவில்லை. சீவல்லப பாண்டியன் இவன் இரண்டாம் இராசேந்திர சோழன் காலத்திலிருந்த ஒரு பாண்டி வேந்தன் ஆவன். இவன் சோழ மன்னனுக்குத் திறை செலுத்திக் கொண்டு பாண்டிநாட்டில் ஒரு பகுதியை ஆட்சி புரிந்து கொண்டிருந்த வனாதல் வேண்டும். கி. பி. 1054-ல் இவன் பட்டத்தரசி, சோழ நாட்டிலுள்ள திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள் வழங்கிய செய்தி அவ்வூர்க் கல்வெட் டொன்றால் அறியப்படுகிறது.3 பாண்டியன் வீரகேசரி இவன் சீவல்லப பாண்டியனுடைய மகன் ஆவன். இவன் வீரராசேந்திர கோழனோடு கி.பி. 1065-ல் போர் புரிந்து உயிர் துறந்தானென்று அச்சோழ மன்னன் மெய்க்கீர்த்தியால் தெரிகிறது. சோழ நாட்டில் வீரராசேந்திர சோழன் இறந்த பின்னர், அவன் புதல்வன் அதிராசேந்திர சோழன் சில திங்கள் ஆட்சி புரிந்து கி. பி. 1070-ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்டு இறந்தனன். அக்காலத்தில் சோழ மண்டலத்தில் பட்டத்திற்குரிய சோழ அரசகுமாரன் ஒருவனும் இல்லை. அதனால், சோழ இராச்சியம் பெருங்குழப்பத்திற்குள்ளாகி அல்லலுற்றது. அந்நாட்களில் சோழ மன்னர்களின் பிரதிநிதிகளாகப் பாண்டி நாட்டி லிருந்து அரசாண்டு வந்த சோழ பாண்டியரின் ஆட்சியும் அங்கு நடைபெறாமல் ஒழிந்தது. அச்சமயத்தில் பாண்டியர் சிலர், இழந்த தம் நாட்டைக் கைப்பற்றி, கி. பி. 1081 வரையில் அமைதியாக ஆண்டுவந்தனர். பிறகு, சோழ மண்டலத்தின் அரசுரிமை எய்தி அதன் முடிமன்னனாக வீற்றிருந்து ஆட்சிபுரிந்த முதற் குலோத்துங்க சோழன் கி. பி. 1081-ல் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கு ஆண்டு கொண்டிருந்த பாண்டியர் ஐவரையும் போரில் வென்று அந்நாட்டைக் கைப்பற்றி வெற்றித் தூண்களும் நிறுவினான். அச்செய்தி, முதற் குலோத்துங்க சோழனது மெய்க்கீர்த்தியில்1 சொல்லப்பட்டிருப்பதோடு அவன் மீது ஆசிரியர் சயங்கொண்டார் பாடியுள்ள கலிங்கத்துப் பரணியிலும்2 கூறப்பட்டுள்ளது. அச் சோழ மன்னன்பால் தோல்வியுற்ற பாண்டியர் ஐவர் யாவர் என்பது இப்போது புலப்படவில்லை. எனினும், அவன் காலத்திலிருந்த பாண்டியர் சிலர் செய்திகளை அடியிற் காணலாம். சடையவர்மன் சீவல்லபன் இவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்திலிருந்த பாண்டிய அரசர்களுள் ஒருவன்.3 இவன் மெய்க்கீர்த்தி திரு மடந்தையும் சய மடந்தையும் என்று தொடங்குகிறது. இவன் கல்வெட்டுக்கள், திருநெல்வேலி மதுரை ஜில்லாக்களில் காணப்படுகின்றன. மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரமபாண்டியன் இவன் முதற்குலோத்துங்க சோழன் காலத்திலிருந்த பாண்டியருள் ஒருவன் என்றும், சடையவர்மன் சீவல்லபனுக்குப் பின்னர் ஆட்சி புரிந்தவன் என்றும் தெரிகின்றது.1 இவன் மெய்க்கீர்த்தி, திருமகள்புணர என்று தொடங்குவதாகும். விக்கிரமங்கலத்திலுள்ள இவனது இருபத்து மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றில் குலோத்துங்க சோழனது நாற்பதாம் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டுள்ளமை உணரற் பாலதாம்.2 சடையவர்மன் பராந்தக பாண்டியன் இவன் குலோத்துங்க சோழன் ஆட்சியின் பிற்பகுதியிலும் அவன் மகன் விக்கிரம சோழன் ஆளுகையின் முற்பகுதியிலும் பாண்டி நாட்டிலிருந்த வேந்தன் ஆவன். இவன் பராக்கிரம பாண்டியனுக்கு எம்முறையினன் என்பது தெரியவில்லை. இவனது மெய்க்கீர்த்தி திருவளரச் செயம் வளரத் தென்னவர்தங் குலம் வளர3 என்னுந் தொடக்கத்தையுடையது. அம் மெய்க்கீர்த்தி, இவன் சேர மன்னனை வென்று திறை கொண்டதையும், காந்தளூர்ச் சாலையில் கலமறுத் ததையும், விழிஞம் என்ற நகரைக் கைப்பற்றியதையும், தெலுங்க வீமனது தென் கலிங்கநாட்டைத் தன்னடிப்படுத்தியதையும், திருவனந்தபுரத்தில் எழுந்தருளியுள்ள திருமாலுக்குப் பத்து மணி விளக்குகள் அமைத்ததையும், கூபகத்தரசன் மகளை மணந்து கொண்டதையும், அளப்பனவும் நிறுப்பனவுமாகிய கருவிகளிற் கயல் முத்திரையைப் பொறித்து அவற்றை ஒழுங்குபடுத்தியதையும் உணர்த்துகின்றது. இவன் வென்ற தெலுங்க வீமனை விக்கிரமசோழனும் வென்றானென்று அவன் மெய்க்கீர்த்தி அறிவிப்பதால் இவ்விரு வேந்தரும் சேர்ந்து அத்தென் கலிங்க மன்னனை வென்றிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். பாண்டியருடைய குலதெய்வமாகிய கன்னி பகவதிக்கு ஆண்டுதோறும் தைப்பூசவிழா நடத்துவதற்கும் அவ்விழாவிற்கு வரும் அடியார்களை உண்பித்துப் பொருளுதவி புரிதற்கும் நிவந்த மாகப் புறத்தாய நாடு முழுவதையும் இவன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.1 மாறவர்மன் சீவல்லபன் இவன் கி. பி. 1132-ஆம் ஆண்டில்2 பட்டம்பெற்ற ஒரு பாண்டிய மன்னன் ஆவன். இவன் மேலே குறித்துள்ள சடைய வர்மன் பராந்தகனுக்கு என்ன முறையினன் என்பது புலப்பட வில்லை. இவன் மெய்க்கீர்த்தி பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப என்று தொடங்கும்.3 திருவாங்கூர் நாட்டையாண்ட வீரரவிவர்மன் என்ற சேரமன்னன் இவனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தான் என்று தெரிகிறது.4 இப் பாண்டிவேந்தன் கல்வெட்டுக்கள் திருநெல்வேலி ஜில்லாவில் பல ஊர்களில் உள்ளன. இவன் கி. பி. 1162 வரையில் தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்தமை அறியற்பாலதாகும். சடையவர்மன் குலசேகரபாண்டியன் இவன் மாறவர்மன் சீவல்லனுடைய புதல்வன். கி. பி.1162-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்றவன். இவன் மெய்க்கீர்த்தி, பூதலமடந்தை5 என்று தொடங்குவதாகும். இவன் திருநெல்வேலியிலிருந்து பாண்டிநாட்டின் தென்பகுதியை ஆட்சிபுரிந்து கொண்டிருந்த நாட்களில், பராக்கிரம பாண்டியன் என்பான் மதுரையிலிருந்துகொண்டு பாண்டிய நாட்டின் வடபகுதியை ஆண்டுவந்தனன். தாயத்தினராகிய இவ்விரு வேந்தர்க்கும் பாண்டியநாடு முழுவதையும் அரசாளும் உரிமை பற்றிப் பகைமை யுண்டாயிற்று. குலசேகர பாண்டியன் மதுரைமாநகர்மீது படையெடுத்துச் சென்று அதனை முற்றுகையிட்டான். பராக்கிரம பாண்டியன் இலங்கையரசனாகிய பராக்கிரம பாகுவைத் தனக்குப் படையனுப்பி உதவிபுரியுமாறு வேண்டிக்கொண்டான். அம்மன்னனும் பராக்கிரம பாண்டியன் வேண்டுகோட்கிணங்கி இலங்காபுரித் தண்ட நாயகன் தலைமையில் பெரும்படை யொன்றை அனுப்பினான். அச்சிங்களப்படை பாண்டி நாட்டிற்கு வருவதற்குள் மதுரையை முற்றுகையிட்டிருந்த குலசேகர பாண்டியன், பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவி மக்களையும் கொன்று அத்தலைநகரைக் கைப்பற்றி அங்கிருந்து கொண்டு ஆட்சிபுரிவானாயினன். அந் நிகழ்ச்சியை அறிந்த இலங்காபுரித் தண்டநாயகன் பெருஞ் சினங்கொண்டு, பாண்டி நாட்டை வென்று கொலையுண்ட பராக்கிரம பாண்டியனைச் சேர்ந்தோர்க்கு அளிக்கக்கருதி, அந் நாட்டிலுள்ள இராமேச்சுரம் குந்துகாலம் என்ற ஊர்களைக் கைப்பற்றினான். அங்ஙனம் பாண்டி நாட்டைச் சிறிது சிறிதாகப் பிடித்துக் கொண்டுவந்த சிங்களப் படைக்கும் குலசேகர பாண்டியன் படைக்கும் பல ஊர்களில் கடும்போர்கள் நடைபெற்றன. அப் போர்களில் குலசேகரன் படைத் தலைவர்களாகிய சுந்தர பாண்டியன், பாண்டியராசன் என்போர் தோல்வியுற்றனர்; மற்றொரு படைத்தலைவன் ஆளவந்தான் என்போன் உயிர் துறந்தான். ஆகவே, இலாங்காபுரித் தண்ட நாயகன் பெருவெற்றி எய்தினான். அதனையறிந்த குலசேகர பாண்டியன், கொங்கு நாட்டிலிருந்த தன் மாமன் படைகளையும் சிதறிக்கிடந்த பராக்கிரம பாண்டியன் சேனைகளையும் தன் படைகளையும் ஒருங்கு சேர்த்துக்கொண்டு தானே இலாங்கா புரித் தண்டநாயகனை எதிர்த்துப் போர் புரிவானாயினன். அப்போரிலும் இப் பாண்டியவேந்தன் தோல்வி எய்தவே, இலாங்காபுரித் தண்டநாயகன் வெற்றி பெற்று, மதுரை மாநகரைக் கைப்பற்றி, கொலையுண்ட பராக்கிரம பாண்டியன் கடைசி மகனும் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்தவனுமாகிய வீர பாண்டியனை அழைத்துப் பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு செய்தான். அச்சிங்களப் படைத்தலைவன், கீழைமங்கலம், மேலை மங்கலம் முதலான ஊர்களைப் பிடித்து அவற்றைக் கண்ட தேவமழவராயன் என்பான் ஆண்டு வருமாறு அளித்தனன்; தொண்டி, கருந்தங்குடி, திருவேகம்பம் முதலான ஊர்களைக் கைப்பற்றி அவற்றை மழவச்சக்கரவர்த்தி ஆளும்படி வழங்கினான். இவ்வாறு பாண்டிநாட்டுத் தலைவர் சிலர்க்கு ஆட்சியுரிமை நல்கி அன்னோரை இலங்காபுரித்தண்ட நாயகன் தன் வயப்படுத்தி வைத்திருந்த காலத்தில் குலசேகரபாண்டியன் படை திரட்டிக் கொண்டு மறுபடியும் போர்க்குத் தயாராயினன். அந்நாட்களில் அத்தலைவர்களும் இப் பாண்டிவேந்தனோடு சேர்ந்து கொள்ளவே, எல்லோரும் சேர்ந்து வீரபாண்டியனைப் போரிற் புறங்கண்டு மதுரைமா நகரை விட்டோடும்படி செய்து விட்டனர். அந்நிகழ்ச்சிகளை யுணர்ந்த இலங்காபுரித் தண்ட நாயகன், ஈழநாட்டிலிருந்து தனக்குத் துணைப்படை அனுப்புமாறு பராக்கிரம பாகுவுக்கு ஒரு கடிதம் விடுத்தனன். அவ்வேந்தன் சகத்விசயதண்டநாயகன் தலைமையில் ஒரு பெரும்படை அனுப்பினான். சிங்களப் படைத்தலைவர் இருவரும் சேர்ந்து குலசேகர பாண்டியனைப் போரில் வென்று, தம் அரசன் ஆணையின்படி வீரபாண்டியனை மீண்டும் மதுரையில் அரியணையேற்றி முடிசூட்டு விழா நிகழ்த்தினர்.1 மற்றுமொருறை சீவில்லிபுத்தூரில் நடைபெற்ற போரில் குலசேகரபாண்டியன் தோல்வி எய்தித் திருநெல்வேலிப் பக்கஞ்சென்று அங்குத் தங்கியிருந்தான். இவ்வாறு சிங்களவர்பால் பன்முறை தோல்வியுற்று இன்னலுக் குள்ளாகிய குலசேகர பாண்டியன் இறுதியில் கி. பி. 1167 ஆம் ஆண்டில் சோழநாட்டிற்குச் சென்று, அப்போது ஆட்சிபுரிந்து கொண்டிருந்த இரண்டாம் இராசாதிராச சோழனைத் தனக்கு உதவி புரியுமாறு கேட்டுக் கொண்டான். அவ்வேந்தனும் இவன் வேண்டுகோளுக்கிணங்கித் திருச்சிற்றம் பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் பெரும்படை யொன்றை இவனுக்குதவுமாறு பாண்டி நாட்டிற் கனுப்பினான். சோழநாட்டுப் படைக்கும் சிங்களப்படைக்கும் தொண்டி, பாசிப்பட்டினம் முதலான ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன. அப்போர்களில் சிங்களப் படைத் தலைவர்களாகிய இலாங்காபுரித் தண்டநாயகனும் சகத்விசய தண்டநாயகனும் வெற்றி எய்தினர். பகைஞர்களாகிய சிங்களவரின் வெற்றி, அந்நாட்களில் சோழ மண்டலத்திலும் பிறநாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்குப் பேரச்சத்தையும் பெருங்கலக்கத்தையும் உண்டுபண்ணி விட்டது என்பது காஞ்சிமா நகரையடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட் டொன்றால்1 அறியப்படுகிறது. எனினும், இருபடைகட்கும் பிறகு நடைபெற்ற போர்களில் இராசாதிராச சோழன் படைத்தலைவனாகிய திருச்சிற்றம்பல முடையான் பெருமானம்பிப் பல்லவராயன் சிங்களப் படைகளை வென்று புறங்காட்டி யோடும்படி செய்தமையோடு சிங்களப் படைத் தலைவர் இருவரையுங் கொன்று, அவர்கள் தலைகளை யாவரும் காணும் நிலையில் மதுரைக் கோட்டைவாயிலில் வைக்கும் படியும் செய்தனன்.2 அதன் பின்னர் அச்சோழர் படைத் தலைவன் மதுரையம் பதியை இக்குலசேகர பாண்டியனுக்கு அளித்து, அங்கு வீற்றிருந்து பாண்டிநாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு ஏற்பாடு செய்தான். இவனது ஆட்சியும் சில ஆண்டுகள் வரையில் பாண்டி நாட்டில் அமைதியாக நடைபெற்று வந்தது எனலாம். சிங்கள மன்னன் பராக்கிரமபாகு என்பான், இப்பாண்டி வேந்தனையும் இவனுக்கு உதவிபுரிந்த சோழ அரசனையும் மறுபடியும் தாக்கிப் போர்புரிய முயன்றான். அம்முயற்சி பயன்படாமற் போகவே,3 அவன் மதுரையிலிருந்து அரசாண்ட குலசேகரனைப் பாண்டிவேந்தனாக ஏற்றுக்கொண்டு நண்ப னாக வைத்துக் கொள்வது நலமெனக்கருதி, இவனுக்குச் சில பரிசில்கள் அனுப்பினான். இப்பாண்டி மன்னன், இராசாதிராச சோழன் தனக்குச் செய்த உதவிகள் எல்லாவற்றையும் மறந்து, சிங்கள அரசன் அனுப்பிய பரிசில்களைப் பெற்றுக் கொண்டு அவனோடு நட்பும் மணத்தொடர்பும் கொள்ள உடன்பட்டு விட்டான்.4 அன்றியும், இவன் சோழ இராச்சியத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்யத் தொடங்கியதோடு சோழ மன்னனிடத்தில் அன்புடையவர்களாய் நிலவிய இராசராசக் கற்குடிமாராயன், இராச கம்பீர அஞ்சுகோட்டை நாடாழ்வான் முதலான பாண்டிநாட்டுப் படைத்தலைவர்களை அந்நாட்டை விட்டு வெள்ளாற்றுக்கு1 வடக்கே போகுமாறும் செய்தனன். மதுரைக் கோட்டை வாயிலிலிருந்த சிங்களப் படைத் தலைவர் களின் தலைகளையும் எடுத்துவிடும்படி செய்தனன். இந் நிகழ்ச்சிகளை யறிந்த இராசாதிராச சோழன், தான் செய்த பேருதவிகளை மறந்து பகைஞனோடு சேர்ந்து கொண்ட குலசேகர பாண்டியனை அரியணையினின்று நீக்கி, பராக்கிரம பாண்டியன் புதல்வன் வீரபாண்டியனுக்குப் பாண்டிநாட்டை அளிக்குமாறு தன் அமைச்சன் வேதவனமுடையான் அம்மை யப்பன் அண்ணன் பல்லவராயனுக்கு ஆணை யிட்டனன். உடனே, அவன் மதுரைமா நகர்மீது படையெடுத்துச் சென்று மிகச் சுருங்கிய நாட்களில் குலசேகரபாண்டியனை வென்று, வீரபாண்டியனுக்குப் பாண்டிநாட்டை யளித்து அதனை யாண்டுவருமாறு செய்தான்.2 எனவே, கி. பி. 1168-ஆம் ஆண்டில் இராசாதிராசசோழன் பேருதவியினால் பாண்டி நாட்டைப் பெற்று அரசாண்டுவந்த இக் குலசேகர பாண்டியன், கி. பி. 1175 - ஆம் ஆண்டில் தன்னுடைய தகாத செயல்களால் அதனை இழந்துவிட்டமை குறிப்பிடத் தக்கது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவனைப்பற்றி ஒன்றுந் தெரியவில்லை. செய்ந்நன்றி மறந்து இவன் புரிந்த அடாச் செய்கைகள் இம்மையிலேயே இவனுக்குப் பேரின்னலை விளைத்து இவனைக் கரந்துறையுமாறு செய்தமை அறியத்தக்கதாகும். சடையவர்மன் வீரபாண்டியன் இவன் மதுரையில் குலசேகரபாண்டியனால் கொல்லப் பட்ட பராக்கிரம பாண்டியனுடைய மகன். இவனது மெய்க் கீர்த்தி பூமடந்தையும் சயமடந்தையும் என்று தொடங்கும்.3 இவன் சிங்களப் படைத் தலைவர்களின் உதவியினால் பாண்டியநாட்டைப் பெற்றுச் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்து, சோழர் படையெடுப்பினால் கி. பி. 1168-ஆம் ஆண்டில் அதனை இழந்து விட்டமையும், பிறகு குலசேகர பாண்டியன், சோழர்படைத் தலைவன் திருச்சிற்றம்பல முடையான் பெரு மானம்பியின் உதவியால் நாடுபெற்று மீண்டும் மதுரையில் ஆட்சிபுரிந்தமையும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. குலசேகர பாண்டியன் இராசாதிராச சோழனுக்குப் பகைஞனாகிப் பாண்டி நாட்டை இழந்த நாட்களில், சோழர்படைத் தலைவனாகிய வேதவன முடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் என்பான் தன் அரசன் ஆணையின்படி இவனுக்கு அப்பாண்டி நாட்டை அளித்தனன். ஆகவே, கி. பி. 1175-ஆம் ஆண்டில் இவ்வீரபாண்டியன் மறுபடியும் பாண்டிநாட்டைப் பெற்று அரசாளத் தொடங்கினான். இவனது ஆட்சியும் கி. பி. 1180 வரையில் அங்கு நடைபெற்று வந்தது எனலாம். இவனுக்குப் பாண்டிநாட்டை வழங்கிய இரண்டாம் இராசதிராச சோழன் ஆளுகையும் சோழநாட்டில் கி.பி. 1178 ஆம் ஆண்டில் முடிவெய்தியது. அவனுக்குப் பிறகு மூன்றாங் குலோத்துங்க சோழன் அவ்வாண்டில் முடிசூட்டப் பெற்றான். வீரபாண்டியன், இராசாதிராச சோழன் தனக்குப் பாண்டி நாட்டை அரசாளும் உரிமை அளித்ததை மறந்து, சிங்கள மன்னனோடு சேர்ந்து கொண்டு, குலோத்துங்க சோழனோடு முரண்பட்ட நிலையில் இருந்தனன். அந்நாட்களில் சடைய வர்மன் குலசேகர பாண்டியனுடைய புதல்வன் விக்கிரம பாண்டியன் என்பான், தன் தந்தையின் நன்றிமறந்த செயலையும், அதன் பயனையும் எண்ணி எண்ணி மிகவருந்தி, இறுதியில் மூன்றாங் குலோத்துங்க சோழன் பால் அடைக்கலம் புகுந்து, தன் நாட்டைத் தான்பெற்று அரசாளும்படி செய்தல் வேண்டு மென்றும் கேட்டுக் கொண்டான்.1 ஆகவே, இவ்வீர பாண்டியனோடு குலோத்துங்க சோழன் போர் தொடங்குவது இன்றியமையாததாயிற்று. எனவே, கி.பி. 1180-ஆம் ஆண்டில்1 அச்சோழ மன்னன் பாண்டிநாட்டின் மேல் படையெடுத்துச் சென்று வீர பாண்டியனோடு போர் புரிவானாயினன். அப் போரில் இப்பாண்டி வேந்தனுடைய புதல்வன் ஒருவன் இறந்தனன். இவனுடைய ஏழகப்படைகளும் மறவர் படைகளும் எதிர்நின்று போர் புரிய முடியாமல் புறங்காட்டி ஓடின. இவனுக்கு உதவிபுரிய வந்த ஈழநாட்டுப் படைகளும் தோல்வியுற்று இலங்கைக்கு ஓடிவிட்டன. குலோத்துங்க சோழன் பெரும் வெற்றி எய்தி, மதுரையும் அரசும் நாடுங்கொண்டு அவற்றைத் தன்பால் அடைக்கலமடைந்த விக்கிரம பாண்டியனுக்கு அளித்தனன்.2 கி. பி. 1180 - ல் வீரபாண்டியன் தன் நாட்டை இழந்த பின்னர் மலைநாட்டிற்குச் சென்று, சேரமன்னன் உதவிபெற்று அதனை மீட்க முயன்றான்; அவன் அனுப்பிய சேரநாட்டுப் படையோடு சிதறிக்கிடந்த தன் படையையும் சேர்த்துக் கொண்டு மதுரைமீது படையெடுத்துச் சென்றான். அதனை யறிந்த குலோத்துங்க சோழன் பெரும் படையோடு சென்று மதுரைக்குக் கிழக்கேயுள்ள நெட்டூரில் இவ் வீரபாண்டியனைத் தடுத்துப் பெரும்போர் புரிந்தான். அப்போரில் பாண்டியன் படையும் சேரன் படையும் தோல்வி எய்திச் சிதறிப் போயின. வெற்றிபெற்ற குலோத்துங்க சோழன் பாண்டியர்க்குரிய முடியைக் கைப்பற்றிக் கொண்டான்.3 வீரபாண்டியன் தன் முயற்சி பயன்படாமை கண்டு பெரிதும் வருந்தித் தன் உரிமைச் சுற்றத்தினரோடு மலைநாடு சென்று சேரன்பால் அடைக்கலம் புகுந்தனன். வீரபாண்டியனுக்கு உதவிபுரிந்தமைபற்றிக் குலோத்துங்க சோழன் தனக்கு ஏதேனும் தீங்கிழைத்தல் கூடும் என்றஞ்சிய சேரமன்னன், இவனையும் இவன் மக்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு சோணாட்டிற்குச் சென்று, எல்லோரும் ஒருங்கே குலோத்துங்க சோழன்பால் அடைக்கலம் புகுந்தனர். அவன் எல்லோரையும் அன்புடன் ஏற்றுக்கொண்டு, அவர்களுள் வீரபாண்டியனுக்குப் பாண்டிநாட்டில் ஒரு பகுதியும் முடியும் வழங்கினான். இவன் புதல்வர்களான வீரகேரளனுக்கும் பருதிகுலபதிக்கும் தன்பக்கமிருந்துண்ணும் சிறப்புச் செய்தமையோடு இருநிதியும் பரிசட்டமும் இலங்கு மணிக்கலனும் நல்கினான். இந்நிகழ்ச்சிகள் எல்லாம் எப்போது நிகழ்ந்தன என்பது தெரியவில்லை. எனினும், கி. பி. 1180-ஆம் ஆண்டிற்குப் பின்னர் இரண்டு ஆண்டுகளில் இவை நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது திருவக்கரை, திட்டைக்குடி என்ற ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களால்1 அறியப் படுகின்றது. பிறகு, இவ்வீரபாண்டியனைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. இவன் மூன்றாங் குலோத்துங்க சோழன் தனக்களித்த பாண்டி நாட்டின் ஒரு பகுதியைத் தன் இறுதிக் காலம் வரையில் ஆட்சிபுரிந்து இறந்தனனாதல் வேண்டும். தன் வாழ்நாட்களுள் பெரும்பகுதியை அல்லல் வாழ்க்கையில் நடத்திய இப்பாண்டிவேந்தன் இறுதியில் சிலகாலம் அமைதி யாயிருந்து இறந்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் இவன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுடைய புதல்வன் மூன்றாங் குலோத்துங்க சோழன் பேருதவியினால் கி. பி. 1180-ஆம் ஆண்டில் பாண்டியநாட்டைப் பெற்று இவன் ஆட்சிபுரியத் தொடங்கியமை முன்னர் விளக்கப்பட்டது. வீரபாண்டியன் சேரமன்னன் உதவிபெற்று மறுபடியும் மதுரைமீது படையெடுத்துச் சென்ற போது, இவன் அச்சோழ அரசன் துணைகொண்டு தன் நாட்டைக் காத்துக் கொண்டான். இவ்வேந்தன் தன் வாணாள் முழுமையும் குலோத்துங்க சோழன்பால் பேரன்புடையவனாய் ஒழுகியதோடு பாண்டி நாட்டில் சில ஆண்டுகள் அமைதியுடன் ஆட்சிபுரிந்தும் வந்தமை குறிப்பிடத்தக்கது. இவன் கி. பி. 1190-ஆம் ஆண்டில் இறந்தனன் என்று தெரிகிறது.  7. கி. பி. 1190 முதல் கி. பி. 1310 முடிய ஆட்சிபுரிந்த பாண்டியர்கள் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டியரது ஆட்சி மீண்டும் உயர்நிலையை அடையத் தொடங்கியது. ஆயினும், அந்நாட்களில் பெருவீரனாகிய மூன்றாங் குலோத்துங்க சோழன் சோழ இராச்சியத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தமையால், பாண்டி வேந்தன் அவனுக்கு அடங்கி நடத்தல் இன்றியமையாததாயிற்று. அவன் கி. பி. 1218 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், பாண்டியர் சோழச் சக்கரவர்த்திகளுக்குத் திறை செலுத்தாமல் தனியரசு புரியும் பேரரசர் ஆயினர். அதற்கேற்ப அக்காலத்தில் சோழநாட்டில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த மூன்றாம் இராசராச சோழனும் வலிகுன்றிய வேந்தனாயிருந்தான். ஆகவே, பாண்டியர் பேராண்மையும் பெருவீரமு முடையவர்களாகிப் பிற நாடுகளை வென்று, பாண்டிய இராச்சியத்தை நெல்லூர் கடப்பை ஜில்லாக்கள் வரையில் வடபுலத்திற் பரப்பி, மிக்க உயர்நிலையை எய்தி வாழ்ந்த காலம் இதுவே என்று ஐயமின்றிக் கூறலாம். எனவே, இக்காலப்பகுதி பாண்டியரது இரண்டாம் பேரரசு நிலைபெற்றிருந்த சிறப்புடையதாகும். இப்பகுதியில் ஆட்சிபுரிந்த பாண்டி மன்னர்களின் கல்வெட்டுக்கள் யாண்டும் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றால் அவ்வேந்தர்களும் பிறரும் புரிந்த அறச்செயல்களும், வேறுபல செய்திகளும் நன்கறியப் படுகின்றன. ஆனால் அக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு, அப்பாண்டி வேந்தர்களின் தந்தைமார் உடன்பிறந்தார் முதலானோர் யாவர் என்பதை ஆராய்ந்தறிய இயலவில்லை. அவர்களுடைய செப்பேடுகளும் அச்செய்திகளை உணர்த்துவனவாயில்லை. அன்றியும், எவ் வரசனுக்குப் பின்னர் எவ்வரசன் அரசாண்டான் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கும் அவை பயன்பட வில்லை. ஆயினும், அக்கல்வெட்டுக் களில் காணப்படும் ஸ்ரீகோச்சடைய வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீவிக்கிரம பாண்டிய தேவற்கு யாண்டு 4 - ஆவது மிதுன நாயிற்றுப் பூர்வபட்சத்து நவமியும் வியாழக்கிழமையும் பெற்ற சோதிநாள்1 ஸ்ரீகோச்சடைய வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீகுலசேகர தேவற்கு யாண்டு பதின்மூன்றாவதின் எதிரா மாண்டு மீனநாயிற்று நாலாந்தியதியும் அமரபட்சத்துத் தசமியும் வியாழக்கிழமையும் பெற்ற பூராடத்து நாள்2 ஸ்ரீகோமாறவன்ம ரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் எம்மண்டலமுங் கொண் டருளிய ஸ்ரீகுலசேகர தேவற்கு யாண்டு 2107-ஆவது தநுர் நாயிற்று 104-தியதியும் வெள்ளிக்கிழமையும் அமரபட்சத்து சப்தமியும் பெற்ற உத்திரநாள்3 என்பன போன்ற காலக் குறிப்புக்கள் அவ்வேந்தர்கள் ஆட்சிபுரிந்த காலங் களை உணர்ந்து கோடற்குப் பெரிதும் பயன்படுகின்றன. அவற்றை ஆராய்ந்து அவற்றால் அறியக்கிடக்கும் ஆண்டுகள் இன்னவை என்று உலகத்திற்கு உணர்த்திய பேரறிஞர்கள், டாக்டர் கீல்ஹார்ன், எல். டி. சுவாமிக்கண்ணுப் பிள்ளை, இராபர்ட்சி வெல், ஜாகோபி என்போர். அவர்களுடைய ஊக்கமும் உழைப்பும் இல்லையாயின் வரலாற்றா ராய்ச்சி இருள்சூழ்ந்த நிலையில்தான் இருந்துகொண்டிருக்கும் என்பது திண்ணம். அவர்கள் ஆராய்ந்து கண்ட ஆண்டுகளுள் சில, ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பினும், அன்னோருடைய ஒத்த முடிபுகள் வரலாற்றா ராய்ச்சிக்குப் பெருந்துணையா யிருத்தல் மறக்கற்பாலதன்று. இக்காலப் பகுதியில் பாண்டிய இராச்சியத்தில் வெவ்வேறு இடங்களில் பாண்டி மன்னர் பலர் ஒரே சமயத்தில் அரசாண்டுள்ளனர். அவர்கள் பேரரசர் போல் தம் பெயர்களால் கல்வெட்டுக்களும் வரைந்துள்ளனர். எனினும், அவர்களுள் ஒருவன் வழியினரே தலைமை பூண்டு அரசர்க் கரசராக இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அன்றியும், ஒரே பெயருடைய பாண்டிவேந்தர் பலர் இக்காலப் பகுதியில் இருந்துள்ளனர். அன்னோரைப் பற்றி ஆராய்ந்து உண்மையான வரலாற்றை உணர்ந்துகொள்வதும் அத்துணை எளிதாக இல்லை. படி எடுக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் எல்லாம் அச்சிடப்பட்டு வெளிவந்தாலன்றி இத்தகைய ஐயங்களும் குழப்பங்களும் நீங்கமாட்டா என்பது ஒருதலை. முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் இவன் கி. பி. 1190-ல் முடிசூட்டப்பெற்று, கி. பி. 1218 வரையில் மதுரையம்பதியிலிருந்து பாண்டிநாட்டை ஆட்சி புரிந்தவன். இவன் மூன்றாங் குலோத்துங்க சோழனது பேராதரவிற் குள்ளாகி, அவன் அளித்த பாண்டிநாட்டைப் பெற்று, அங்கு அரசாண்டு கொண்டிருந்த மாறவர்மன் விக்கிரம பாண்டியனுடைய புதல்வன் ஆவன். இவன் மெய்க்கீர்த்தி பூவின் கிழத்தி1 என்று தொடங்கும். அஃது இவனைப் புகழ்ந்து கூறுகின்றதே யன்றி இவன் வரலாற்றை விளக்குவதாயில்லை. இவன் கல்வெட்டுக்கள், மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களில் காணப்படுவதால் இவனது ஆட்சி பாண்டி நாடு முழுமையும் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்று ஐயமின்றிக் கூறலாம். இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில், சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தியாக விருந்து அரசாண்ட மூன்றாங் குலோத்துங்க சோழன், கொங்குநாட்டுக் கருவூரைக் கைப்பற்றி அங்குச் சோழ கேரளன் என்ற பெயருடன் விசயமாமுடிசூடிய பின்னர், பாண்டியரும் தனக்குத் திறை செலுத்தி வருவதால் மதுரைமாநகரில் வீராபிடேகம் செய்துகொள்ள வேண்டுமென்று கருதினான். அந்நாட்களில் இக்குலசேகர பாண்டியன் அதற்குடன்படாமல் அச்சோழ மன்னனோடு வெளிப்படையாகப் பகைமை கொள்ளவுந் தொடங்கிவிட்டான். இவன் தந்தை விக்கிரம பாண்டியனுக்குத் தான் நாடும் அரசும் வழங்கி, உள்நாட்டில் குழப்பத்தை ஒழித்து, அமைதி நிலவுமாறு செய்ததை இவன் முற்றிலும் மறந்து, தனக்கு முரண்பட்டு நிற்றலை உணர்ந்த குலோத்துங்க சோழன், பெருஞ் சினங் கொண்டு பாண்டி நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். குலசேகர பாண்டியன் தன் மறப்படை ஏழகப்படைகளுடன் வந்து அவனை எதிர்த்துப் போர் புரிந்தான். மட்டியூர்,1 கழிக்கோட்டை என்ற ஊர்களில் பெரும் போர்கள் நடைபெற்றன.2 பாண்டிப்படைகள் பேரழிவிற்குள்ளாகிப் புறங்காட்டி ஓடிவிடவே, குலசேகர பாண்டியன் தோல்வியுற்றுத் தன் உரிமைச் சுற்றத்தினருடன் மதுரையை விட்டு வேறிடஞ் சென்று ஒளிந்துகொள்ளும்படி நேர்ந்தது. குலோத்துங்க சோழன் தன் படையுடன் அந்நகருக்குள் புகுந்து அரண்மனையில் சில மண்டபங்களை இடித்தும் சிலவற்றை அழித்தும், தன் பெருஞ்சினத்தை ஒருவாறு தணித்துக் கொண்டான். பிறகு, அவ்வேந்தன் தான் எண்ணியவாறு அத்தலைநகரில் சோழ பாண்டியன் திரிபுவன வீரதேவன் என்னும் பட்டங்களுடன் வீராபிடேகஞ் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகள் கி. பி. 1202-ஆம் ஆண்டிலாதல்3 அதற்கு முன்ன ராதல் நடைபெற்றிருத்தல் வேண்டும். சோழமன்னன், தான் வென்று கைப்பற்றிய பாண்டி நாட்டைச் சில ஆண்டுகளுக்குப் பிறகு இக்குலசேகர பாண்டியனுக்கே அளித்து விட்டனனென்று தெரிகிறது. குலோத்துங்க சோழனது ஆட்சியின் 39, 40 ஆம் ஆண்டுகளில் வரையப்பெற்ற கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில் காணப்படுவதால் இப்பாண்டி வேந்தன் அவனுக்குக் கீழ்ப்படிந்து அந்நாட்டை ஆட்சிபுரிந்து வந்தனனாதல் வேண்டும். எனவே, கி.பி. 1218 ஆம் ஆண்டுவரையில் இவன் சுயேச்சையாகத் தனியரசு செலுத்த இயலாத நிலையில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இம்மன்னன் தன் தலைநகராகிய மதுரையம்பதியிலிருந்த சிங்காதனங்களை மழவராயன்,4 காலிங்கராயன்,5 என்னும் பெயர்களால் வழங்கிவந்தனன் என்பது இவன் கல்வெட்டுக் களால் புலப்படுகின்றது. இவ்வேந்தன் தன்னுடைய ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டில் சில பழைய ஊர்களை ஒன்றாகச் சேர்த்து, இராச கம்பீரச் சதுர்வேதி மங்கலம் என்ற பெயருடன் 1030 அந்தணர் களுக்குப் பிரமதேயமாகவும் திருப்பூவணத் திறைவர்க்குத் தேவதானமாகவும் அளித்துள்ளமையால்,1 இவனுக்கு இராச கம்பீரன் என்னும் சிறப்புப் பெயர் அந்நாளில் வழங்கியிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகின்றது. இவனது இருபத் தெட்டாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு இவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படாமையால், இவன் கி. பி. 1218 ஆம் ஆண்டில் இறந்தனனாதல் வேண்டும். இவன் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் என்பான் இளவரசுப்பட்டம் கட்டப் பெற்றான் என்று தெரிகிறது. சயங்கொண்ட சோழ சீவல்லபன் இவன் குலசேகர பாண்டியனுடைய ஆட்சியில் சிறப்புற்று விளங்கிய அரசியல் அதிகாரியாவன்;2 இவன் பாண்டி மண்டலத்தின் உள்நாடுகளுள் ஒன்றாகிய களவழி நாட்டின் தலைமை அதிகாரியா யிருந்தமைப் பற்றிக் களவழி நாடாள்வான் என்னும் பட்டம் பெற்றவன். இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள குலசேகர பாண்டியன் கல்வெட்டுக்களில் இவனைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவன் கி. பி. 1216 முதல் கி. பி. 1238 முடிய மதுரை மாநகரில் முடிமன்னனாக வீற்றிருந்து பாண்டிநாட்டை ஆட்சிபுரிந்தவன்;3 மாற வர்மன் என்ற பட்டமுடையவன்; தன்னுடைய ஆற்றலாலும் வீரத்தாலும் பாண்டிய இராச்சியத்தை நன்னிலைக்குக் கொணர்ந்து பேரரசு நிறுவிய பெருந்தகை வேந்தன். இவனுக்கு முன் அரசாண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பான் தன் ஆட்சிக் காலத்திலேயே இவ் வரசகுமாரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியிருத் தலை நோக்குமிடத்து, இவன் அவனுடைய புதல்வன் அல்லது தம்பியாயிருத்தல் வேண்டும் என்று கருதற்கு இடமுளது. ஆனால், ஒருதலையாகத் துணிவதற்குத் தக்க சான்றுகள் கிடைக்கவில்லை. குலசேகர பாண்டியன் தன் தந்தை விக்கிரம பாண்டியனைப் பெரியதேவர் என்று கல்வெட்டுக்களில் குறித்திருப்பது போல் இச்சுந்தர பாண்டியனும் தன் கல்வெட்டில் குறித்துள்ளமை யாலும்,1இவ் விரு பாண்டிவேந்தரும் அழகப்பெருமாள் என்ற தலைவன் ஒருவனைத் தம் மைத்துனன் என்று கல்வெட்டுக்களில் கூறியுள்ளமை யாலும்2 இவ்விருவரும் உடன்பிறந்த சோதரர்க ளாகவே இருத்தல் வேண்டும் என்றும், எனவே, சுந்தர பாண்டியன் குலசேகர பாண்டியனுக்குத் தம்பியாவன் என்றும் ஆராய்ச்சியில் வல்ல அறிஞர்கள் கருதுகின்றனர்.3 தமிழ் மன்னர்கள் தமக்குமுன் அரசாண்டவர்களைப் பெரியதேவர் எனவும், பெரியநாயனார் எனவும், பெரிய பெருமாள் எனவும் பொதுவாகக் கூறிக்கொள்ளும் வழக்கம் பண்டைக் காலத்திலிருந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது. ஆகவே, முதலில் எடுத்துக் காட்டப்பெற்ற காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாயில்லை. எனினும், இரண்டாம் காரணம் ஓரளவு வலியுடையதாயிருத்தலால் அதனை எளிதாகத் தள்ளிவிட இயல வில்லை. ஆதலால், சுந்தரபாண்டியன் குலசேகர பாண்டியனுக்குத் தம்பியாகவும் இருத்தல் கூடும். பாண்டியர்களின் கல்வெட்டுக்கள் எல்லாம் வெளிவந்தால் இத்தகைய ஐயங்கள் நீங்கலாம். திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரந் தாலூகாவி லுள்ள திருவாலீசுவரத்திற் காணப்படும் கல்வெட்டொன் றாலும்4 இராமநாதபுரம் ஜில்லா திருப்புத்தூரிலுள்ள கல்வெட் டொன்றாலும்1 இப்பாண்டி வேந்தன் புரட்டாசித் திங்கள் அவிட்ட நாளில் பிறந்தவன் என்பது நன்கு புலனாகின்றது. இவனது மெய்க்கீர்த்தி பூமருவிய திருமடந்தையும் புவி மடந்தையும் புயத்திருப்ப2 என்று தொடங்குவதாகும். அஃது இனிய செந்தமிழ் நடையில் அமைந்த நீண்ட மெய்க்கீர்த்தி யாகும். அதனால் இம்மன்னன் காலத்து நிகழ்ச்சிகள் பலவற்றை அறிந்து கொள்ளலாம். அதன் துணைகொண்டு இவன் காலத்துப் போர் நிகழ்ச்சிகளை ஆராய்வாம். இவ்வரசன் ஆட்சிக்காலத்தில் சோழ இராச்சியத்தில் சக்கர வர்த்தியாக வீற்றிருந்து அரசாண்டவன் மூன்றாங் குலோத்துங்க சோழன் மகன் மூன்றாம் இராசராசசோழன் ஆவன். அச் சோழமன்னன் தன் நாட்டைக் காத்தற்கேற்ற ஆற்றலும் ஆண்மையும் அற்றவனாயிருந்தான். அதனையறிந்த இச் சுந்தரபாண்டியன், சோழநாட்டின் மேல் படையெடுத்துச் சென்று தன் வெற்றிப்புகழை யாண்டும் பரப்ப வேண்டும் என்று கருதினான். அதற்கேற்ப, இவன் முன்னோர்களாகிய பாண்டி வேந்தர்கள் பல ஆண்டுகளாகச் சோழர்க்குத் திறை செலுத்திக் கொண்டு குறுநில மன்னராக வாழ்ந்து வந்தமையும், இவன் இளமைப்பருவத்தில் மூன்றாங் குலோத்துங்க சோழன் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்து அங்குப் பல அழிவு வேலைகள் நிகழ்த்திச் சென்றமையும் இவன் உள்ளத்தை உறுத்திக் கொண்டிருந்தன. இந்நிலையில், தன் முன்னோர்கள் பாண்டி நாட்டை ஆட்சிபுரியும் உரிமையை இராசராசசோழன் முன்னோர் களது பேருதவியினால் பெற்றனர் என்பதையும் இவன் அறவே மறந் தொழிந்தான். ஆகவே, சோழ நாட்டின்மேல் படையெடுப்பதற்கு இப்பாண்டி மன்னன் தக்க காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் என்பது தெள்ளிது. பேராற்றல் படைத்த பெருவீரனாகிய மூன்றாங் குலோத்துங்க சோழனும் கி. பி. 1218-ஆம் ஆண்டில் சோணாட்டில் இறந்து விடவே, காலங்கருதிக் கொண்டிருந்த சுந்தரபாண்டியன் சில திங்களில் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு கி. பி. 1219-ல் அந்நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று மூன்றாம் இராச ராசசோழனைப் போரில் வென்று அந்நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். இப்படையெழுச்சியில் சோழரின் பழைய தலைநகராகிய உறையூரும் தஞ்சாவூரும் பாண்டி நாட்டுப் போர் வீரர்களால் கொளுத்தப்பட்டுப் போயின. பல மாடமாளிகை களும் கூடகோபுரங்களும் ஆடரங்குகளும் மணிமண்டபங்களும் இடிக்கப்பட்டு நீர்நிலைகளும் அழிக்கப்பெற்றன. முற்காலத்தில் சோழன் கரிகாற்பெருவளத்தான் என்பான் தன்மீது பட்டினப் பாலைபாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர்க்குப் பரிசிலாக வழங்கி யிருந்த பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் சோழநாட்டில் இடிக்கப் படாமல் விடப்பட்ட தென்றும் பிற எல்லாம் அழிக்கப் பட்டுவிட்டன என்றும் திருவெள்ளறையில் செய்யுளாகவுள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டொன்று1 கூறுகின்றது. இதனால் இப்பாண்டி வேந்தன் படை யெடுப்பில் சோணாடு எத்தகைய அழிவிற்குள்ளாயிற்று என்பதை நன்கறியலாம். போரில் தோல்வியெய்திய இராசராசசோழன் தன் உரிமைச் சுற்றத்தினருடன் தலைநகரை விட்டு நீங்கி வேறிடஞ் சென்றனன். வாகைசூடிய சுந்தர பாண்டியன், சோழர்க்கு இரண்டாந் தலைநகராக நிலவிய பழையாறை2 நகர்க்குச் சென்று, அங்கு ஆயிரத்தளி அரண் மனையில் சோழரது முடிசூட்டுவிழா நிகழும் மண்டபத்தில் வீராபிடேகஞ் செய்து கொண்டான். பிறகு, இவ்வேந்தன் தில்லையம்பதிக்குச் சென்று பொன்னம்பல வாணரை வணங்கி மகிழ்கூர்ந்தான். பின்னர், இப்பாண்டி மன்னன் தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் போது பொன்னமராவதியிலிருந்த தன்னுடைய அரண்மனையில் சில நாட்கள் வரையில் தங்கியிருந்தான்; அந்நாட்களில் நாட்டை இழந்த இராசராசசோழனை அழைப் பித்து, தனக்கு ஆண்டுதோறும் கப்பஞ் செலுத்திக் கொண்டு சோணாட்டை ஆட்சிபுரிந்து வருமாறு ஆணையிட்டு அந் நாட்டை வழங்கினான். இராசராசசோழனும் தன் நாட்டிற்குச் சென்று முன்போல் ஆட்சிபுரிந்து வருவானாயினன். இனி, சுந்தரபாண்டியனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், இவனைச் சோணாடு கொண்டருளிய சுந்தர பாண்டிய தேவர்1 எனவும் சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டிதேவர்2 எனவும் கூறுவதால், இவன் இராசராச சோழனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றியமை, பிறகு அந்நாட்டை அவனுக்கு வழங்கியமை ஆகிய இரு நிகழ்ச்சிகளும் கி. பி. 1219-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. இச்செய்திகள் எல்லாவற்றையும், பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப் பொன்னிசூழ் நாட்டிற் புலியாணை போயகலக் கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர வெஞ்சின விவுளியும் வேழமும் பரப்பித் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக் காவியு நீலமும் நின்று கவினிழப்ப வாவியு மாறு மணிநீர் நலனழித்துக் கூடமு மாமதிலுங் கோபுரமு மாடரங்கும் மாடமு மாளிகையும் மண்டபமும் பலவிடித்துத் தொழுதுவந் தடையா நிருபர்தந் தோகையர் அழுத கண்ணீ ராறு பரப்பிக் கழுதைகொண் டுழுது கவடி வித்திச் செம்பியனைச் சினமரியப் பொருதுசுரம் புகவோட்டிப் பைம்பொன் முடிபறித்துப் பாணருக்குக் கொடுத்தருளிப் பாடருஞ் சிறப்பிற் பருதி வான்றோய் ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற் சோழ வளவன் அபிஷேக மண்டபத்து வீராபி ஷேகஞ் செய்து புகழ்விரித்து நாளும் பரராசர் நாமத் தலைபிடுங்கி மீளுந் தறுகண் மதயானை மேற்கொண்டு நீராழி வைய முழுதும் பொதுவொழித்துக் கூராழியுஞ் செய்ய தோளுமே கொண்டுபோய் ஐயப் படாத வருமறைதே ரந்தணர்வாழ் தெய்வப் புலியூர்த் திருவெல்லை யுட்புக்குப் பொன்னம் பலம்பொலிய ஆடுவார் பூவையுடன் மன்னுந் திருமேனி கண்டு மனங்களித்துக் கோல மலர்மே லயனுங் குளிர்துழாய் மாலு மறியா மலர்ச்சே வடிவணங்கி வாங்குசிறை யன்னந் துயிலொழிய வண்டெழுப்பும் பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில் ஒத்துலகந் தாங்கு முயர்மேருவைக் கொணர்ந்து வைத்தனைய சோதி மணிமண்ட பத்திருந்து சோலை மலிபழனச் சோணாடுந் தானிழந்த மாலை முடியுந் தரவருக வென்றழைப்ப மானநிலை குலைய வாழ்நகரிக் கப்புறத்துப் போன வளவ னுரிமை யொடும்புகுந்து பெற்ற புதல்வனைநின் பேரென்று முன்காட்டி வெற்றி யரியணைக்கீழ் வீழ்ந்து தொழுதிரப்பத் தானோடி முன்னிகழ்ந்த தன்மையெலாங் கையகலத் தானோதகம் பண்ணித் தண்டார் முடியுடனே விட்ட புகலிடந்தன் மாளிகைக் குத்திரிய விட்டபடிக் கென்று மிதுபிடிபா டாகவென பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள்விளங்குஞ் செங்கயல் கொண்டூன்றுந் திருமுகமும் பண்டிழந்த சோளபதி யென்னு நாமமுந் தொன்னகரும் மீள வழங்கி விடைகொடுத்து விட்டருளி என்னும் இவனது மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதியினால் நன்கு உணரலாம். இப்பாண்டி வேந்தன் தான் கைப்பற்றிய சோழ நாட்டைச் சில திங்களுக்குள் இராசராசசோழனுக்கு அளித்து விட்டமைக்குக் காரணம், போசள மன்னனாகிய இரண்டாம் வல்லாளதேவனும் அவன் மகன் வீரநரசிம்மனும் அச்சோழ அரசனுக்குப் பல்வகையாலும் உதவி புரிய வந்தமையேயாம். அன்னோர் உதவியும் முயற்சியும் இல்லையாயின் இவ்வாறு சுந்தரபாண்டியன் சோழநாட்டை அவனுக்குத் திரும்பக் கொடுத்திருக்கமாட்டான் என்பது தேற்றம். இச் செய்தியை உருத்திரப் பட்டர் இயற்றிய சகநாதவிசயம் என்ற கன்னட நூலாலும் அப்போசள அரசர்களின் கல்வெட்டுக்களாலும் நன்குணரலாம். பாண்டி நாட்டில் இச்சுந்தரபாண்டியன் அரசாண்டு கொண்டிருந்த காலத்தில் கொங்கு நாட்டு வேந்தர்களுக்குள் பகைமை யுண்டாயிற்று. அதனால், பல இன்னல்களுக் குள்ளாகிய வட கொங்கு மன்னன் நம் சுந்தரபாண்டியன்பால் அடைக்கலம் புகுந்து தனக்கு உதவி புரியுமாறு வேண்டிக் கொண்டான். பிறகு தென்கொங்கு மன்னனும் தன் பெரும் படையுடன் வந்து இப்பாண்டியனை வணங்கவே, இவன் இருவரையும் அன்புடன் வரவேற்று, சில நாட்களுக்குப் பின்னர் அன்னோரை அச்சுறுத்தித் தன் முடிபினை ஏற்றுக் கொள்ளும் படி செய்து அவர்கள் முரண்பாட்டை ஒழித்தனன். இந் நிகழ்ச்சிகளை விரிவாக அறிய இயலவில்லை. எனினும், கொங்கு வேந்தர்கட்கும் பாண்டியர்கட்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் உறவும் நட்பும் நிலைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.1 இனி, சில ஆண்டுகட்குப் பிறகு இப் பாண்டி வேந்தனுக்கும் மூன்றாம் இராசராசசோழனுக்கும் முரண்பாடு தோன்றியது. அதற்குக் காரணம் அச் சோழமன்னன் இவனுக்குத் திறை கொடுக்காமல் மறுத்தமையேயாம். அதுபற்றிச் சினங்கொண்ட சுந்தர பாண்டியன் கி. பி. 1231-ஆம் ஆண்டில் சோழ நாட்டின் மேல் மீண்டும் படையெடுத்துச் சென்று இராசராச சோழனோடு பெரும் போர் புரிந்து வெற்றி எய்தினான். தோல்வியுற்ற சோழ மன்னன் தன் நாட்டை இழந்து உரிமைச் சுற்றத்தினருடன் வடபுலஞ் சென்றபோது வடஆர்க்காடு ஜில்லா வந்தவாசித் தாலூகாவிலுள்ள தெள்ளாறு என்ற ஊரில் பல்லவர் குலக் குறுநில மன்னனாகிய முதற் கோப் பெருஞ்சிங்கனால் பிடிக்கப் பெற்றுச் சேந்தமங்கலத்திலிருந்த கோட்டையில் சிறையில் வைக்கப்பட்டான்.1 வாகைமாலை சூடிய சுந்தரபாண்டியன், சோழர்க்குரிய இரண்டாம் தலைநகராகிய முடிகொண்ட சோழபுரத்திற்குச்2 சென்று அங்கு வீராபிடேகமும் விசயா பிடேகமும் செய்து கொண்டான். இவனது பதினைந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களுள் சில, சோணாடு வழங்கி யருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்,3 எனவும் அவ்வாண்டில் வரையப்பெற்ற வேறு சில கல்வெட்டுக்கள் சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்து வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணியருளிய வீரசுந்தர பாண்டிய தேவர்4 எனவும் கூறுவதை நோக்குமிடத்து, இப் பாண்டியனது இரண்டாம் படையெழுச்சி, இவனது பதினைந்தாம் ஆட்சி யாண்டின் பிற்பகுதியில் தான் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதிற் புலனாகின்றது. இவனது மெய்க்கீர்த்தியில் இவன் இரண்டாம் முறை சோழ நாட்டின் மேல் படை யெடுத்துச் சென்று நிகழ்த்திய வீரச்செயல்கள் எல்லாம் குறிக்கப் பட்டிருக்கின்றன. இவன் கல்வெட்டுக்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களிலும் புதுக்கோட்டை நாட்டிலும் காணப்படுகின்றமையின், இவை இவனது ஆட்சிக்குட்பட்டி ருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது. கி. பி. 1232 - ல் போசள மன்னனாகிய வீர நரசிம்மன் என்பான் பெரும்படையுடன் சென்று, கோப்பெருஞ் சிங்கனைப் போரிற் புறங்கண்டு இராசராச சோழனைச் சிறை மீட்டான்.1 அன்றியும் அவன் காவிரி யாற்றங்கரையிலுள்ள மகேந்திர மங்கலத்தில் சுந்தரபாண்டியனைப் போரில் வென்று,2 இவன் கைப்பற்றியிருந்த சோழ நாட்டை இராசராச சோழனுக்கு அளித்தனன். சோழநாட்டில் நிகழ்ந்த போரொன்றில் போசள வீரசிம்மன்பால் சுந்தரபாண்டியன் தோல்வியுற்று அவனுக்குத் திறை செலுத்தினான் என்று கத்திய கர்ணாமிர்தம் என்னும் கன்னட நூல் கூறுவதும் அதனை உறுதிப்படுத்துதல் அறியற் பாலதாம். ஆகவே, இப் பாண்டிவேந்தன் ஆட்சிக் காலத்தில் சில ஆண்டுகள் வரையில் சோணாடு இவனுக்கு உட்பட்டிருந்தது எனலாம்.3 இனி, இவ்வரசனுடைய பட்டத்தரசி உலகமுழுதுடையாள் என்று வழங்கப்பெற்றனள் என்பது இவன் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறது. இவன் அவைக்களப் புலவராக விளங்கியவர் காரணை விழுப்பரையர் என்பார். இஃது இராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர்த் தாலூக்காவிலுள்ள பெருச்சிக் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்றால்4 புலப்படு கின்றது. இவ்வேந்தன் காலத்தில் நிலவிய அரசியல் தலைவர்களுள் சோழன் உய்யநின்றாடுவானான குருகுலத்தரையன், கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன், திருக்கானப் பேருடையான் மழவச் சக்கரவர்த்தி என்போர் குறிப்பிடத் தக்கவராவர். அவர்களைப்பற்றிய சில செய்திகளை அடியிற் காண்க. 1. சோழன் உய்ய நின்றாடுவானான குருகுலத்தரையன் இவன் சுந்தரபாண்டியனிடத்தில் அமைச்சனாக விளங்கிய பெருமையுடையவன்; தடங்கண்ணிச் சிற்றூரில் பிறந்து வளர்ந்தவன்; இராமநாதபுரம் ஜில்லா திருத்தங்காலிலுள்ள திருமால் கோயிலையும் சிவன் கோயிலையும் கி. பி. 1232-ல் கற்றளிகளாக எடுப்பித்தவன்.1 அன்றியும், திருமால் கோயிலில் சுந்தரபாண்டியன் சந்தி என்ற வழிபாடு நாள்தோறும் நடை பெறும் பொருட்டு, இவன் தென்னவன் சிற்றூர் என்ற ஊர் ஒன்றை இறையிலியாக அளித்திருத்தல் அறியத்தக்கது. இவன் அரசனால் வழங்கப்பெற்ற குருகுலத்தரையன் என்னும் பட்டம் பெற்றவன் ஆவன். 2. கண்டன் உதயஞ்செய்தான் காங்கேயன் இவன் சுந்தரபாண்டியனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; தேனாற்றுப் போக்கிலுள்ள நியமம் என்ற ஊரில் பிறந்தவன்;2 சிறுபெருச்சியூர்க் கொடிக்கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் என்ற புலவன் பாடிய பிள்ளைத்தமிழ் பெற்றவன். அது காங்கேயன் பிள்ளைத் தமிழ் எனப்படும். அதற்குப் பரிசி லாகச் சாத்தனேரி என்ற ஊரில் அப்புலவர்க்கு இவன் இறையிலி நிலம் வழங்கியிருத்தல் குறிப்பிடத் தக்கதாகும்.3 3. திருக்கானப் பேருடையான் மழவச் சக்கரவர்த்தி இவன் சுந்தர பாண்டியனுடைய அரசியல் அதிகாரிகளுள் ஒருவன்; இந்நாளில் காளையார்கோயில் என்று வழங்கும் திருக்கானப்பேர் நகரில் வாழ்ந்தவன்; மழவர் மாணிக்கம் என்று மக்களால் பாராட்டப்பெற்ற சிறப்புடையவன். இவனுக்குக் குருவாக விளங்கியவர் கவிராயர் ஈசுவரசிவ உடையார் என்பவர். இவருக்குக் காணிக்கையாக இவன் நிலம் அளித்துள்ள செய்தி ஒரு கல்வெட்டால் அறியப்படுகின்றது.4 இவன் அரசனால் அளிக்கப்பெற்ற மழவச்சக்கரவர்த்தி என்னும் பட்டம் பெற்றவன் ஆவன். இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் இவன் முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்று, அவன் இறந்த பிறகு சில திங்கள் ஆட்சி புரிந்து இறந்தனன். சுந்தரபாண்டியனுக்குப் பிறகு இவன் அரசாண்ட செய்தி திருத்தங் காலிலுள்ள ஒரு கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.1 எனினும், அவனுக்கு இவன் என்ன முறையினன் என்பது தெரியவில்லை. இவன் மெய்க்கீர்த்தி பூதல வனிதை2 என்று தொடங்குவதாகும். இவனைப் பற்றிய பிற செய்திகள் இப்போது புலப்படவில்லை. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவன் இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் பின்னர், கி. பி. 1239-ல் முடிசூட்டப்பெற்று, கி. பி. 1251 வரையில் அரசாண்டவன். இவன் மெய்க்கீர்த்தி, பூமலர்த்திருவும் பொருசய மடந்தையும் என்று தொடங்கு கின்றது. இஃது3 இவனைப் புகழ்ந்து கூறுகிறதேயன்றி இவன் வரலாற்றை உணர்த்தக் கூடியதாயில்லை. இவ்வேந்தனுக்குப் போசளமன்னனாகிய வீரசோமேச்சுரனும் கொங்குச் சோழனு மாகிய விக்கிரமசோழனும் முறையே மாமனாகவும் மைத்துன னாகவும் இருந்தனர் என்பது இவன் கல்வெட்டுக்களால்4 அறியப்படு கின்றது. எனவே, அன்னோர் உறவும் நட்பும் இவன் ஆட்சிக்குப் பெருந் துணையாயிருந்தமை உணரற்பாலதாம். இவன் காலத்தில் சோணாட்டில் அரசாண்டவன் மூன்றாம் இராசேந்திர சோழன் ஆவன். அவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்று இப்பாண்டியனைப் போரில் வென்று இவன் நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான்.5 அந்நாட்களில் இராசேந்திர சோழனோடு போர்புரிந்து அவனை வென்று இவன் பாண்டிநாட்டை முன்போல் ஆட்சிபுரிந்து வரும்படி உதவி புரிந்தவன் போசள மன்னனாகிய வீரசோமேச்சுர னேயாவன். இவ்வுண்மையை, அப்போசள வேந்தன் தன்னைப் பாண்டியகுல சம்ரட்சகன் 1 எனவும், இராசேந்திரனைப் போரில் வென்றவன்2 எனவும் தன் கல்வெட்டுக்களில் கூறிக் கொள்வதால் நன்குணரலாம். அதற்கேற்ப, இவ்விரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் போசளரின் ஆதிக்கமும் செல்வாக்கும் பாண்டிநாட்டில் மிகுந்திருந்தன என்பதை அந் நாட்டில் காணப்படும் சில கல்வெட்டுக்களால்3 அறிந்து கொள்ளலாம். இனி, இவன் தன் தலைநகராகிய மதுரையிலிருந்த சிங்காதனங் களுக்கு மழவராயன், பல்லவராயன் என்னும் பெயர்கள் வைத்திருந்தனன் என்பது கல்வெட்டுக்களால்4 அறியப்படுகின்றது. இவனுடைய பட்டத்தரசி உலக முழுது டையாள் என்னுஞ் சிறப்புப் பெயருடையவள் என்று தெரிகிறது. முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இவன் கி. பி. 1251-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்று, இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறந்த பிறகு பாண்டி நாட்டை ஆட்சிபுரிந்தவன்; சித்திரைத் திங்கள் மூல நாளிற் பிறந்தவன்;5 எடுப்பும் இணையுமற்ற பெருவீரன்; பாண்டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பி மிக்க உயர் நிலைக்குக் கொணர்ந்த பெருவேந்தன். இவன் கல்வெட்டுக்கள் வடக்கேயுள்ள நெல்லூர், கடப்பை ஜில்லாக்கள் முதல் தெற்கே யுள்ள குமரிமுனை வரையில் பரவியுள்ள பெருநிலப் பரப்பில் எங்கும் காணப்படுகின்றன. எனவே, நம் தமிழகத்திலும் அதற்கப்பாலும் வாழ்ந்த அரசர் பலர் இவனைப் பணிந்து திறை செலுத்த இவன் வேந்தர் வேந்தனாய் வீற்றிருந்து செங்கோல் செலுத்தியவனாதல் வேண்டும். அதுபற்றியே, எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர் என்று இவன் வழங்கப் பெற்றனன். இவன் மெய்க்கீர்த்தி பூமலர்வளர் திகழ் திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப1 என்று தொடங்குகின்றது. சிறந்த இம்மெய்க்கீர்த்தி இவனுடைய வீரச்செயல்களையும் இவன் வென்ற நாடுகளையும் செய்த திருப்பணிகளையும் கூறுவதால் இவன் வரலாற்றை ஆராய்வதற்கு இது பெரிதும் பயன்படுவதாகும். திருவரங்கத்தில் வடமொழிச் சுலோகங்களில் வரையப் பெற்றுள்ள இவன் கல்வெட்டொன்று,2 இவனுடைய அறச்செயல்களையும் வீரச்செயல் களையும் நன்கு விளக்குகின்றது. சமத ஜகதாதார சோமகுலதிலக என்று தொடங்கும் இவன் கல்வெட்டுக்களில்3 இவனுடைய வீரச் செயல்களும் சிறப்புப்பெயர்களும் குறிக்கப்பட்டிருத்தல் அறியத்தக்கது. இவன் புரிந்த திருப்பணிகளையும் அறங்களையும் விளக்கும் சில செந்தமிழ்ப்பாக்கள் சிதம்பரம் திருப்புட்குழி முதலான ஊர்களிலுள்ள கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ளன.4 இவற்றையெல்லாம் துணையாகக் கொண்டு இவன் ஆட்சியில் நிகழ்ந்தவற்றை ஆராய்வோம். இவ்வேந்தன் முதலில் சேரநாட்டின்மேல் படை யெடுத்துச் சென்று சேரமன்னனோடு போர் புரிவானாயினன்; அவன் இவனை எதிர்த்துப் போர்புரியும் ஆற்றலின்றிப் புறங்காட்டியோடவே, மலைநாட்டைக் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள்ளாக்கினான். இவன் காலத்தில் சேரநாட்டில் அரசாண்ட வீர ரவி உதயமார்த்தாண்ட வர்மன் என்பவனே இவன்பால் தோல்வியுற்ற சேரமன்னனாக இருத்தல் கூடும்.5 தக்க சான்றுகள் கிடைக்காமையால் ஒருதலையாகத் துணிதற் கியலவில்லை. பிறகு, இவன் சோழ அரசனை வென்று, தனக்கு ஆண்டு தோறும் திறை செலுத்திவருமாறு செய்தான். இவன் காலத்தில் சோழ மண்டலத்தில் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் மூன்றாம் இராசராச சோழன் மகனாகிய மூன்றாம் இராசேந்திர சோழன் ஆவன். அவன் ஆற்றலும் வீரமும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற வனெனினும், நற்காலமும் ஆகூழும் இன்மையின் இத்தகைய நிலையை யடைந்து சிறுமை யுற்றனன் எனலாம். அவனோடு சோழர் ஆட்சியும் சோணாட்டில் முடிவெய்தியது. அவன் இறந்த பின்னர், சோழமண்டலம் பாண்டியர் ஆளுகைக்குட் பட்டுப் போயினமை குறிப்பிடத்தக்க தொன்றாம். பின்னர், இப் பாண்டிமன்னன் போசளரைத் தாக்கி அன்னோர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோணாட்டுப் பகுதியைத் தன்னடிப்படுத்த எண்ணினான்; அதனை நிறைவேற்றும் பொருட்டுப் பெரும் படையுடன் சென்று, அப் போசளர்க்குரிய நகரமாகத் திருச்சிராப்பள்ளிப் பக்கத்தி லிருந்த கண்ணனூர்க் கொப்பத்தை1 முற்றுகையிட்டான். அங்கு நடைபெற்ற பெரும் போரில் போசளத் தண்டநாயகன், சிங்கணன் முதலானோரும் மற்றும் போசள வீரர் பலரும் கொல்லப்பட்டனர். போசளரும் மூன்றாம் இராசராசசோழன் காலமுதல் தமக்குரியதாக வைத்திருந்த கண்ணனூர்க் கொப்பத்தை இழந்து விட்டனர். அந்நாட்களில் ஆட்சிபுரிந்த போசளமன்னன் வீரசிம்மன் மகனாகிய வீரசோமேச்சுரன் ஆவன். திருவரங்கத்திலுள்ள சுந்தரபாண்டியனது வடமொழிக் கல்வெட்டு2 இவன் கர்நாடகதேயத்துச் சோமனை விண்ணுலகிற்கு அனுப்பினன் என்று கூறுகின்றது. அதில் சொல்லப்பட்ட சோமன், போசள வீரசோமேச்சுரனாக இருப்பினும் இருக்கலாம். அதனை உறுதிப் படுத்தற்குரிய ஆதாரங்கள் இப்போது கிடைக்கவில்லை. கண்ணனூர்க் கொப்பத்தில் நடைபெற்ற போரில் சேமன் என்பவன் ஒருவன் புறத்தே நண்பன்போலிருந்து உட்பகை, கொண்டிருந் தானென்றும் சுந்தரபாண்டியன் அவனைக் கொன்று சினந்தணிந் தானென்றும் இவன் மெய்க்கீர்த்தி உணர்த்துகின்றது.1 இவ்வரலாறும் புலப்படவில்லை. வடஆர்க்காடு ஜில்லா திருப்பாற்கடலில் வரையப் பெற்றுள்ள இவனது பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றால்2 இப் போர் நிகழ்ச்சிக்குப் பிறகு கண்ணனூர்க் கொப்பம் இவன் ஆளுகைக் குட்பட்டிருந்தது என்பது நன்கறியக் கிடக்கின்றது. இனி, இப்பாண்டி வேந்தனுக்குக் களிறுகளைத் திறை யாகக் கொடுத்த கருநாடராசன் வீரசோமேச்சுரன் மகன் வீரராமநாதனாக இருத்தல்வேண்டும். ஆகவே, அவன் சுந்தர பாண்டியனுக்குக் கப்பஞ் செலுத்திக் கொண்டு சோணாட்டில் ஒரு பகுதியை ஆண்டுவந்தனன் போலும். பிறகு இச் சுந்தரபாண்டியன் இலங்கை யரசனை வென்று, அவன்பால் யானைகளையும் பலவகை மணிகளையும் கப்ப மாகப் பெற்றான். அதன் பின்னர், இவ்வேந்தன் பல்லவ மன்ன னாகிய கோப்பெருஞ்சிங்கன் அனுப்பிய திறைப் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் அவனது தலைநகராகிய சேந்தமங்கலஞ்3 சென்று அதனை முற்றுகை யிட்டுக் கைப்பற்றியதோடு அவனுடைய யானை குதிரைகளையும் பிற செல்வங்களையும் கவர்ந்துகொண்டான். பிறகு அவற்றை யெல்லாம் அவனுக்கே யளித்து அவனைத் தன் ஆணைக்கடங்கி நடக்கும் குறுநில மன்னனாக்கித் திரும்பினான். இப் போர்கள் எல்லாம் இவனது ஆட்சியின் ஏழாம் ஆண்டாகிய கி. பி. 1258-க்கு முன்னர் நிகழ்ந்தவையாதல் வேண்டும்.4 ஆனால் எவ்வெவ்வாண்டில் ஒவ்வொன்றும் நடைபெற்றது என்பது இப்போது புலப்பட வில்லை. பின்னர், இவ் வேந்தன் வாணர்களுடைய மகத நாட்டையும், கொங்கு மன்னர்களின் கொங்கு நாட்டையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குள்ளாக்கினான்.1 மகதநாடு எனப் படுவது சேலம் ஜில்லாவின் கீழ்ப்பகுதியும் தென்னார்க்காடு ஜில்லாவின் மேற்பகுதியும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் நிலவிய ஓர் உள்நாடாகும். இப்போது ஆறகளூர் என்று வழங்கும் ஆறகழூரே அதன் தலைநகராகும். அந்நாட்டை அரசாண்டவர்கள் வாணகோவரையர் எனவும், வாணாதிராசர் எனவும் வழங்கப்பெற்ற குறுநிலமன்னர் ஆவர். பிறகு, நம் சுந்தரபாண்டியன் தெலுங்குச் சோழனாகிய விசயகண்ட கோபாலனைப் போரிற் கொன்று அவன் ஆட்சிக் குட்பட்டிருந்த காஞ்சிமா நகரைக் கைப்பற்றினான்; அதன் பின்னர் வடபுலஞ் சென்று காகதீய மன்னனாகிய கணபதி என்பவனைப் போரில் வென்று, நெல்லூரைக் கைப்பற்றி அந்நகரில் வீராபிடேகஞ் செய்து கொண்டான்.2 விசயகண்ட கோபாலன் தம்பியார் வந்து வணங்கவே, அவர்கட்குரிய நாட்டை யளித்து ஆண்டுதோறும் தனக்குக் கப்பஞ் செலுத்திக் கொண்டு அரசாண்டு வருமாறு பணித்தனன்.3 இங்ஙனம் பல நாடுகளை வென்று தன்னடிப்படுத்தித் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி முடிமன்னனாக விளங்கிய சுந்தரபாண்டியன், மகா ராசாதிராச ஸ்ரீபரமேசுரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன், எல்லாந் தலையான பெருமாள் என்ற பட்டங்களைப் புனைந்து கொண்டு ஆட்சிபுரிந்து வந்தனன் என்பது நம் தமிழகத்தில் ஆங்காங்குக் காணப்படும் இவன் கல்வெட்டுக்களால் நன்கு புலனாகின்றது. இவ்வரசர் பெருமான், சைவர்களுக்கும் வைணவர்கட்கும் கோயில் என்னும் பெயருடன் சிறந்து விளங்கும் தில்லை யம்பதியிலும் திருவரங்கத்திலும் செய்துள்ள திருப்பணிகள் பலவாகும். முதலில் இவன் தில்லையம்பலத்தில் எழுந்தருளி யுள்ள இறைவனை வணங்கிப் பல துலாபாரதானங்கள்1 செய்தமையோடு அப்பெருமான் திருக்கோயிலைப் பொன் வேய்ந்துஞ் சிறப்பித்தனன்.2 அக்கோயிலிலுள்ள மேலைக் கோபுரம் சுந்தர பாண்டியன் கோபுரம் என்னும் பெயரால் முற் காலத்தில் வழங்கப் பெற்று வந்தது என்பது கல்வெட்டுக்களால் அறியக்கிடக்கின்றது.3 எனவே, அக் கோபுரத்தைக் கட்டியவன் இச் சுந்தரபாண்டியனே யாவன்.4 பின்னர், இவ்வேந்தன் திருவரங்கத்திற்குச் சென்று திருமாலை வணங்கிக் கோயிலையும் பொன்வேய்ந்து அங்கு முடிசூடிக் கொண்டமை யோடு பல துலாபாரதானங்களும் செய்தான். திருவரங்கத்தில் இவன் செய்த திருப்பணிகளும் விட்ட நிவந்தங்களும் அளித்த அணிகலன்களும் பலவாகும். அவற்றை யெல்லாம் அக்கோயிலில் வரையப்பெற்றுள்ள ஒரு பெரிய வடமொழிக் கல்வெட்டிலும்,5 கோயிலொழுகு என்ற வைணவ நூலிலும் விளக்கமாகக் காணலாம். இங்ஙனம் தில்லையிலும் திருவரங்கத்திலுமுள்ள திருக் கோயில்களைப் பொன் வேய்ந்தமைபற்றி இவன் கோயில் பொன்வேய்ந்த பெருமாள் என்று வழங்கப் பெற்றனன். கோயில் பொன்வேய்ந்த பெருமாள் என்னும் பெயருடன் திருவரங்கப் பெருங்கோயிலிலும்6 பிற இடங்களிலும்7 படிமங்கள் அமைப் பித்து, அவற்றிற்குத் திங்கள்தோறும் தன் பிறந்தநாளாகிய மூலத்தன்று திருவிழாக்கள் நடத்திவருமாறு இவன் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க தொன்றாம். இவன், தான் பிறந்த சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்காத் திருக்கோயிலில் சேரனை வென்றான் திருநாள் என்னுந் திருவிழாவொன்று ஆண்டுதோறும் நிகழ்த் துவதற்கு (முட்டை பாடி வீர தொங்கபுரம் பாகன்குடி) ஆகிய மூன்று ஊர்களை நிவந்தமாக அளித்துள்ளமையால்1 இவனுக்குச் சேரனை வென்றான் என்ற சிறப்புப் பெயர் ஒன்று அந்நாளில் வழங்கியுள்ளது என்று தெரிகிறது. தெலுங்கச் சோழனாகிய கண்டகோபாலனைப் போரில்வென்று காஞ்சிமா நகரைக் கைப்பற்றிய காரணம்பற்றி இவன் காஞ்சீபுர வராதீசுவரன் காஞ்சீபுரங் கொண்டான் என்னும் பட்டங்கள் பெற்றனன் என்பது அறியற்பாலதாகும்.2 அன்றியும், இவன் பல நாடுகளை வென்று எல்லாவற்றிற்கும் தலைவனாக விளங்கியமைபற்றி எல்லாந் தலையான பெருமாள் என்னுஞ் சிறப்புப்பெயர் ஒன்றும் எய்தியுள்ளனன்.3 இவன் ஆட்சிக்காலத்தில் வழங்கிய நாணயம் எல்லாந்தலையானான் என்ற பெயருடையதா யிருந்தமை உணரற்பாலது. இவ்வேந்தன் பாண்டிய இராச்சியத்தை யாண்டும் பரப்பித் தன் ஆணை எங்குஞ் செல்லுமாறு கி. பி. 1271 வரையில் ஆட்சிபுரிந்து இறைவன் திருவடியை யடைந்தான். இவன் தான் இறப்பதற்கு மூன்று ஆண்டுகட்கு முன்னரே முதல் மாறவர்மன் குல சேகரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் கட்டி ஆட்சி யுரிமை நல்கினான். அதனை நோக்குமிடத்து, அவ்வரசகுமாரன் இவனுடைய புதல்வனாயிருத்தல் வேண்டும் என்று கருதற்கிட முளது. செங்கற்பட்டு ஜில்லா காஞ்சீபுரந் தாலூகாவிலுள்ள திருப்புட்குழித் திருமால் கோயிலில் நம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் மீது பண்டைப் புலவர் ஒருவர் பாடிய வாழ்த்துப்பா ஒன்று வரையப் பெற்றுள்ளது.4அது, வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையுங் கொண்டவன் வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே என்பதாம். இனி, இவ்வேந்தன் காலத்ததில் நிலவிய பிற பாண்டி மன்னர்கள், சடையவர்மன் வீரபாண்டியன்1, சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்போர்.2 இவர்கள் சுந்தர பாண்டியனுக்கு என்ன முறையினர் என்பது தெரிய வில்லை; ஒருகால் உடன்பிறந்தோராக இருப்பினும் இருக்கலாம். இவர்களைப் பற்றிய சில செய்திகளை அடியிற் காண்க. சடையவர்மன் வீரபாண்டியன் இவன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் கி. பி. 1253 முதல் 1268 வரையில் சோழ நாடு நடுநாடு தொண்டைநாடுகளில் பிரதிநிதியாயிருந்து அரசாண்டவன். இவன் மெய்க்கீர்த்திகளுள் திருமகள் வளர்3 என்று தொடங்குவது மிகப் பெரியது; கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்து4 என்று தொடங்குவது மிகச்சிறிய தொன்றாம். அவை, இம் மன்னன் கொங்குநாடு, ஈழநாடு, தெலுங்கச் சோழனாகிய விசயகண்ட கோபாலன் நாடு, சோழநாடு இவற்றை வென்றதையும் பல்லவ அரசனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனிடம் திறை கொண்டதையும், தில்லைமாநகரில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டதையும் உணர்த்துகின்றன. இவன் மெய்க்கீர்த்திகளில் இவனால் வெல்லப்பட்டவராகச் சொல்லப்பட்டுள்ள கொடு வடுகும் வல்லானும் முறையே தெலுங்கச் சோழனாகிய விசயகண்ட கோபாலனும் பல்லவ அரசனாகிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனும் ஆவர் என்பது அறியற்பாலதாகும். இவன் தில்லைமாநகரிலுள்ள திருக்கோயிலில் சிவகாமக் கோட்டத்திற்குத் தென்புறமும் சிவகங்கைக்கு மேற்புறமுமுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் கி. பி. 1267-ஆம் ஆண்டில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டமை பற்றி அம் மண்டபம் வீரபாண்டியன் திருமண்டபம் என்னும் பெயர் எய்துவதாயிற்று. அம் மண்டபத்தின் முன்புறத்தில் அப்பெயர் வரையப் பெற்றிருத்தலை இன்றுங் காணலாம்.1 இனி, திருமகள் வளர் என்று தொடங்கும் மெய்க் கீர்த்தியில் இவன் ஈழநாட்டில் போர் புரிந்து அந்நாட்டரசருள் ஒருவனைக் கொன்று மற்றொருவனுக்கு முடிசூட்டியதும் திருக் கோணமலை, திரிகூடகிரி என்பவற்றில் கயற்கொடி பொறித்ததும் சோழ மன்னனோடு காவிக்களம் என்ற ஊரில் போர் செய்ததும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தெளிவாக விளக்கக்கூடிய வேறு ஆதாரங்கள் இதுகாறுங் கிடைக்க வில்லை. இவன் நிகழ்த்திய போர்களுள் பல, சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்களிலும் குறிக்கப்பட்டுள்ளன. எனவே, முடிமன்னனாகிய சுந்தரபாண்டியனது ஆணையின்படி வீரபாண்டியன் படைத்தலைமை பூண்டு அப் போர்களைப் புரிந்திருத்தல் வேண்டும் என்று கொள்வதே பொருத்த முடையதாகும். இச்சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சியின் இருபத்து மூன்றாம் ஆண்டு முடியவுள்ள பல கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை நாட்டிலும் இருபத்தெட்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்று திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள கல்லிடைக் குறிச்சியிலும் இருத்தலால்2 இவ்வேந்தன் கி. பி. 1281 வரையில் உயிர் வாழ்ந்திருந்தனனாதல் வேண்டும். சடையவர்மன் விக்கிரம பாண்டியன் இவன் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலிருந்த ஒரு பாண்டி மன்னன் ஆவன். இவன் கல்வெட்டுக்கள் அச்சிறு பாக்கம், திருப்புட்குழி, திருமாணிகுழி, திருக்கோவலூர் முதலான ஊர்களில்1 காணப்படுகின்றமையின் இவன் தொண்டை மண்டலத்திலும் நடுநாட்டிலும் சில ஆண்டுகள் அரசப் பிரதிநிதியா யிருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு வெளியாகின்றது. தில்லைத் திருக்கோயிலில் வரையப் பெற்றுள்ள சில பாடல்கள் இவன் புரிந்த போர்களையும், அடைந்த வெற்றிகளையும் எடுத்துக் கூறுகின்றன.2 அவற்றை நோக்குமிடத்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் நடைபெற்ற போர்களுள் சிலவற்றை இவன் படைத்தலைமை வகித்து நேரில் நடத்தியிருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரக் கிடக்கின்றது. இவனுக்குப் புவனேகவீரன் என்னும் சிறப்புப் பெயர் ஒன்று அந்நாளில் வழங்கியது என்பது சில கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது 3 இவன் கல்வெட்டுக்கள் கி.பி. 1249 முதல் கி. பி. 1258 வரையில் கிடைக்கின்றன. இவனைப் பற்றிய பிற செய்திகள் இப்போது புலப்படவில்லை. முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் இவன் கி. பி. 1268 முதல் கி. பி. 1311 வரையில் அரசாண்டவன். இவனைக் கொல்லங்கொண்ட பாண்டியன் 4 எனவும், புவனேகவீரன் 1 எனவும் வழங்குவர். தேர்போல் என்று தொடங்கும் இவனது மெய்க்கீர்த்தி இவனது வரலாற்றை யறிதற்குச் சிறிதும் பயன்படாததாக இருக்கின்றது. இவன் ஆட்சிக்காலத்தில் பாண்டிய இராச்சியம் செழிப் புற்று உயர்நிலையிலிருந்தது. இவன் அரசாண்ட காலத்தில் இத்தாலிய நாட்டு வெனிசு நகரத்தானாகிய மார்க்க போலோ என்பவன் பாண்டிநாட்டில் பல நகரங்களைச் சுற்றிப் பார்த்து இவனது ஆளுகையைப் பெரிதும் புகழ்ந்து தன் நூலில் எழுதியுள்ளான். அவன், பாண்டிநாட்டிற்குத் தான் சென்ற போது அங்கு பாண்டியர் ஐவர் ஆண்டு வந்தனர் என்றும், அவர்களுள் குலசேகர பாண்டியனே மூத்தவன் என்றும், அவன் தன் தலைநகரில் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தான் என்றும், அவனது உரிமைச் சுற்றத்தினர் சிறந்த அணி கலன்களைப் பூண்டுகொள்வது வழக்கம் என்றும், அவன் தன் இராச்சியத்தில் நடுவுநிலைமையுடன் செங்கோல் செலுத்தி வந்தான் என்றும், வாணிபஞ் செய்வோரிடத்தும், பிறநாட்டு மக்களிடத்தும் அவன் பேரன்புடன் நடந்து வந்தமையின் அன்னோர் அவனது பாண்டி நாட்டிற்குப் போதற்குப் பெரிதும் விரும்பினர் என்றும் தன் குறிப்பில் வரைந்திருக்கின்றான்.2 அந்நாட்களில், பாண்டிநாட்டிற்கு வந்த மகமதியனாகிய வாசப் என்பானும் இவ்வேந்தனாட்சியை அங்ஙனமே புகழ்ந் துரைத்ததோடு இவன் தலைநகரில் ஆயிரத்திருநூறு கோடிப் பொன்னும் முத்துக்களும் வைத்திருந்தான் என்றும் குறித்துள்ளான். இவன்காலத்துப் போர்நிகழ்ச்சிகள், இவன் ஈழநாட்டின் மீது படையெடுத்ததும், சேர நாட்டிலுள்ள கொல்லத்தைக் கைப் பற்றியதுமேயாம். குலசேகரபாண்டியனும் இவன் தம்பிமார்களும் தம் படைத்தலைவர்களுள் மிகச் சிறந்தவனாகிய ஆரியச் சக்கர வர்த்தியின் தலைமையில் ஒரு பெரும்படையை ஈழ நாட்டிற்கு அனுப்பினர். அப்படைத்தலைவன் அந்நாட்டில் பல பகுதிகளைப் பேரழிவிற்குள்ளாக்கி, நகரங்களைக் கொள்ளையிட்டுச் சுபகிரி என்னும் நகரிலிருந்த பெருங்கோட்டையையும் கைப்பற்றினான். இறுதியில் அந்நாட்டில் கிடைத்த பெரும்பொருளையும் புத்த தேவரது மாண்பு வாய்ந்த பல்லையும் கைப்பற்றிக்கொண்டு வெற்றியுடன் பாண்டிநாட்டிற்குத் திரும்பினான்.1 பாண்டிய ரோடு போர்புரிந்து அப்பல்லைப் பெறுதற்கு இயலாத நிலையிலிருந்த ஈழநாட்டு மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகு என்பான், நம் குலசேகரபாண்டியனைப் பணிந்து நட்புரிமைகொண்டு அதனைப் பெற்றுச் சென்றனன்.2 இச்செய்திகளெல்லாம் இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்திலும் சொல்லப்பட்டுள்ளன. இவை கி. பி. 1284-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்தவையாதல் வேண்டும். இக்குலசேகர பாண்டியன் கி. பி. 1274-ல் சேர நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று கொல்லத்தை வென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான்.3 அதுபற்றியே, இவ்வேந்தன் கொல்லங்கொண்ட பாண்டியன் என்னும் பட்டம் எய்துவானாயினன். இனி, திருநெல்வேலி ஜில்லா சேரமாதேவியிலுள்ள இம்மன்னனது இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்று,4 இவன், மலைநாடு, சோழநாடு, இருகொங்கு நாடுகள், ஈழநாடு, தொண்டைநாடு என்பவற்றை வென்றனன் என்று கூறுகின்றது. அவற்றுள் பல, முதல் சடையவர்மன் வீரபாண்டியனாலும் முன்னரே வென்று பாண்டிய இராச்சியத்திற்கு உட்படுத்தப் பெற்றனவாகும். எனவே, இம்மாறவர்மன் குலசேகர பாண்டியன் தன் ஆட்சிக்காலத்தில் அந்நாடுகளில் நடைபெற்ற சில உள்நாட்டுக் குழப்பங்களையும் கலகங்களையும் அடக்கி அமைதியுண்டு பண்ணி முன் போலவே அந்நாடுகள் தனக்குக் கப்பஞ் செலுத்திவருமாறு செய்திருத்தல் வேண்டும். அந்நிகழ்ச்சிகளையே சேரமாதேவிக் கல்வெட்டு அவ்வாறு கூறுகின்றது என்பது உணரற்பாலதாம். சோழநாடு, நடுநாடு, தொண்டை நாடுகளிலுள்ள பல ஊர்களில் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஆகவே, அந்நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்பது தேற்றம். அன்றியும், இவனுக்கு முன் அரசாண்ட முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியனது ஆளுகையில் பாண்டியர் பேரரசின் கீழ் அடங்கியிருந்த எல்லா நாடுகளும் இவனுடைய ஆட்சிக்காலத்திலும் அங்ஙனமே இருந்தன என்பதில் ஐய மில்லை. எனவே சடையவர்மன் சுந்தரபாண்டியனைப் போல் இம்மாறவர்மனும் எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ குல சேகர பாண்டியன் என்று வழங்கப்பெற்று வந்தமை1 சாலப் பொருந்துமெனலாம். இவன் தன் பேரரசிற்குட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் அமைதியாக விருத்தல் வேண்டித் தன் தம்பிமார்களை ஆங்காங்கு அரசப்பிரதிநிதிகளாயிருந்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வேந்தர் பெருமான், சேரன் சோழன் போசளன் முதலான அரசர்களைப் போரில் வென்று, அன்னோர் நாடுகளிலிருந்து கைப்பற்றிக் கொணர்ந்த பொருளைக்கொண்டு திருநெல்வேலித் திருக்கோயிலில் ஒரு திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான் என்று அங்கு வரையப்பெற்றுள்ள கல்வெட் டொன்று கூறுகின்றது.2 இதனால் இவன் நெல்லையப்பரிடம் பேரன்புடையனாயிருந்தனன் என்பது நன்கு புலனாதல் காண்க. இனி, நம் குலசேகரபாண்டியன் காலத்தில் அரசப் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், சடையவர்மன் சுந்தர பாண்டியன், மாறவர்மன் விக்கிரமபாண்டியன், மாறவர்மன் வீரபாண்டியன் என்போர். அவர்களைப் பற்றிய வரலாறுகள் நன்கு புலப்படவில்லை. எனினும், ஆங்காங்குக் காணப்படும் அவர்களுடைய கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கும் சில செய்திகளே ஈண்டு எழுதப்படுகின்றன. சடையவர்மன் சுந்தரபாண்டியன் இவன் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு என்ன முறையினன் என்பது தெரியவில்லை. இவன் கி. பி. 1276 முதல் 1293 வரையில் கொங்குநாட்டில் அரசப்பிரதிநிதியாயிருந்து ஆட்சி புரிந்தவன். இவனுக்குத் தலைநகராயிருந்தது, கொங்கு நாட்டுக் கருவூராகும்.1 இவன் கல்வெட்டுக்கள் சேலம், கடப்பை, தென்னார்க்காடு ஜில்லாக்களில் காணப்படுகின்றன. மாறவர்மன் விக்கிரமபாண்டியன் இவன் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்குத் தம்பி யாவன். இச்செய்தி திருவெண்ணெய் நல்லூரிலுள்ள ஒரு கல்வெட்டால்2 அறியப்படுகின்றது. இவன் தைத்திங்கள் அத்தநாளில் பிறந்தவன்.3 இவன் கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, தென்னார்க்காடு ஜில்லாக்களில் மிகுதியாகக் காணப் படுகின்றன. எனவே, மாறவர்மன் குலசேகரன் ஆட்சிக் காலத்தில், இவன் நடுநாடு தொண்டை நாடுகளில் அரசப் பிரதிநிதியாயிருந்தவன் ஆவன். இவன் கி. பி. 1268 முதல் கி. பி. 1281 வரையில் அரசாண்டவன் என்று தெரிகிறது. இவன் கல்வெட்டுக்களில் திருமகள் ஜயமகள் 4 எனவும், திருமலர் மாது எனவும் தொடங்கும் இரண்டு மெய்க்கீர்த்திகள் உள்ளன. இவன் சிவன் கோயில்களிலும் திருமால் கோட்டங்களிலும் அமண்பள்ளியிலும் இராசாக்கள் நாயன் என்னும் பெயரால் நாள் வழிபாடும் திருவிழாவும் நடத்துவதற்கு 5 இறையிலி நிலங்கள் யாண்டும் அளித்திருத்தலை நோக்குங்கால், இவனுக்கு இராசாக்கள் நாயன் என்ற சிறப்புப்பெயர் ஒன்று அந்நாளில் வழங்கியிருத்தல் வேண்டும் என்பது நன்கறியக் கிடக்கின்றது.1 அன்றியும், இவன் புறச் சமயங்களையும் பெரிதும் மதித்து ஆதரித்து வந்தனன் என்பது வெளியாதல் காண்க. மாறவர்மன் வீரபாண்டியன் இவன் கல்வெட்டுக்கள் தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள சிதம்பரம், எறும்பூர், திருவயீந்திரபுரம் என்னும் ஊர்களில் உள்ளன;9 எனவே, இவன் அப்பகுதியில் அரசப் பிரதிநிதியாயி ருந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவன் ஆட்சிக் காலமும் இவனைப் பற்றிய பிற செய்திகளும் தெரியவில்லை. மதிதுங்கன் தனிநின்று வென்ற பெருமாளாகிய ஆரியச் சக்கரவர்த்தி இவன் மாறவர்மன் குலசேகர பாண்டியனிடத்தில் அமைச்சனாகவும் படைத்தலைவனாகவும் விளங்கியவன்; ஈழ நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிப் பெரு வெற்றியுடன் திரும்பியவன்; தனிநின்று வென்ற பெருமாள் என்னும் பட்டம் பெற்றவன்; பாண்டி மண்டலத்துச் செவ் விருக்கை நாட்டுச் சக்கரவர்த்தி நல்லூரினன் 3 மதிதுங்கன் என்பது இவனது இயற்பெயர் போலும். குலசேகர மாவலிவாணராயன் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாவலி வாணாதி ராயன் என்னும் பட்டமுடைய சில அரசியல் தலைவர்கள் பாண்டி நாட்டில் இருந்தனர். அவர்களுள், பிள்ளை குலசேகர மாவலி வாணராயன் என்பான் இவ்வேந்தன் காலத்தில் இருந்தவன். புதுக்கோட்டை நாட்டிலுள்ள கோனாடு இவன் மேற்பார்வையில் இருந்தது என்று தெரிகிறது. இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள கேரள சிங்கவளநாடும் வாணாதிராயன் என்ற தலைவன் ஒருவன் கண்காணிப்பில் அமைந்திருந்தமை அறியத் தக்கது.1 பாண்டி வேந்தரிடம் படைத்தலைவர்களாக நிலவிய இவ்வாணாதிராயர்கள் அன்னோர் அயலார் படையெழுச்சி யினால் ஆற்றலிழந்து இன்னல் எய்திய காலத்தில் பாண்டி நாட்டில் தாம் சுயேச்சையாகத் தனியரசு புரியத் தொடங் கியமையோடு பாண்டியர் திருநெல்வேலி ஜில்லாவிற்குச் சென்று அங்குக் குறுநிலமன்னர் நிலையில் இருந்து வருமாறு செய்தும் விட்டனர். எனவே, பாண்டியர் பேரரசின் வீழ்ச்சிக்கு இம்மாவலி வாணராயர்களின் அடாத செயலே காரணமாகும். இனி, குலசேகர பாண்டியற்குச் சுந்தர பாண்டியன் வீரபாண்டியன் என்ற புதல்வர் இருவர் இருந்தனர். அவர்களுள் சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன்; வீரபாண்டியன் வேறு மனைவியின் புதல்வன். அவ்விருவருள் வீரபாண்டியன் ஆண்மையும் வீரமுடையவனா யிருந்தனன். தனக்குப் பிறகு பாண்டிய இராச்சியத்தை நன்கு பாதுகாத்து ஆட்சி புரியவல்லவன். வீரபாண்டியனே என்று கருதிக் குலசேகர பாண்டியன் அவனுக்கு கி.பி. 1296-ல் இளவரசுப் பட்டங் கட்டினான்.2 சுந்தரபாண்டியன் தன் தந்தையின் செயலை வெறுத்து, கி. பி. 1310-ஆம் ஆண்டில் அவனைக் கொன்று சில வீரர்களின் துணைகொண்டு மதுரைமா நகரில் அரியணை ஏறினான். இளவரசனாயிருந்த வீரபாண்டியன் தலைநகரை விட்டு ஓடிவிட்டான். குலசேகர பாண்டியன் தன் மகனால் கொல்லப்பட்ட செய்தி, கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. மகமதிய ஆசிரியனாகிய வாசப் என்பவன் வரைந்துள்ள குறிப்பால் அறியப்படு கின்றது.3  8. கி. பி. 1310-ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆட்சிபுரிந்த பாண்டியர்கள் மிகச் சீரிய நிலையிலிருந்த பாண்டிய இராச்சியம், கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் தாழ்ந்த நிலையை அடையத் தொடங்கிற்று. மாறவர்மன் குலசேகர பாண்டியன் புதல்வர் இருவரும் தம்முட் பகைகொண்டு போர் புரிந்து கொண்டிருந்தமையின் உள்நாட்டிற் குழப்பம் மிகுந்தது. அலாவுடீன் கில்ஜியின் படைத்தலைவன் மாலிக் காபூர் என்பான் அதனை யுணர்ந்து பாண்டி நாட்டின்மீது படை யெடுத்துச் சென்று, பல நகரங்களைக் கொள்ளையிட்டுப் பெரும் பொருள் திரட்டிச் சென்றனன். பாண்டி மன்னர்கள் தம் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ளுதற்கேற்ற ஆற்றலின்றி அயலாரது படையெழுச்சியினால் அளவிலாத் துன்பத்திற் காளாயிருந்தமை அன்னோர்க்குத் திறை செலுத்திவந்த குறுநில மன்னரும் கலகஞ்செய்து சுயேச்சை அடைதற்கு ஏதுவாயிற்று. ஆகவே, கி. பி. பதினான்காம் நூற்றாண்டிலிருந்தே பாண்டி வேந்தர்களின் பெருமையும் குறையத் தொடங்கியது எனலாம். சடையவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் வீரபாண்டியன் ஆகிய இருவரும் மாறவர்மன் குலசேகர பாண்டியன் புதல்வர்கள் என்பதும், இவர்களுள் சடையவர்மன் சுந்தரபாண்டியன், தன் மாற்றாந் தாயின் மகனும் தன்னிலும் இளைஞனுமாகிய வீரபாண்டியனுக்குத் தன் தந்தை ஆட்சியுரிமை நல்கினமைபற்றித் தந்தையை வெறுத்துக் கொலை புரிந்து கி. பி. 1310-ஆம் ஆண்டில் அரியணை ஏறினான் என்பதும் முன்னர் உணர்த்தப்பட்டன. மகமதிய ஆசிரியனாகிய வாசப் என்பான் இச் செய்திகளைக் கூறியுள்ளனன்.1 வேறு சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும், மற்றொரு மகமதிய ஆசிரியனாகிய அமீர்குசுரு என்பான், இளவரசர்களாகிய இவ்விருவரும் பெரும் பகை கொண்டு தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்தனர் என்று குறித்துள்ளனன்.1 ஆயினும் இவ்விரு வேந்தர்களது ஆட்சியும் பாண்டிய நாட்டில் நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது இவர்கள் கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றது. சடையவர்மன் வீரபாண்டியன் கி. பி. 1296 முதல் 1342-ஆம் ஆண்டுவரை ஆட்சி புரிந்தனன் என்று கல்வெட்டுக்களால் தெரிகிறது. சடையவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டுக்கள், இவன் கி. பி. 1303 முதல் 1319-முடிய அரசாண்டனன் என்று உணர்த்துகின்றன. இம்மன்னர் இருவரும் நிகழ்த்திய போரைப் பற்றிய செய்திகளைத் தெளிவாக இந்நாளில் அறிதற்கியலவில்லை. ஆயினும், இவ்விருவரும் பாண்டி நாட்டில் வெவ்வேறிடங்களில் இருந்து ஒரே காலத்தில் ஆட்சி புரிந் திருத்தல் வேண்டுமென்பதிற் சிறிதும் ஐயமில்லை. மறுபடியும் இவ்விரு வர்க்கும் நிகழ்ந்த போரில் தோல்வியுற்ற சுந்தரபாண்டியன் அலாவுடீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூரைத் தென்னாட்டின் மீது படையெடுத்துவருமாறு அழைத்தமை குறிப்பிடத்தக்க தொன்றாம்.2 இது கி. பி. 1310-ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்ததென்று மகமதிய சரித்திர ஆசிரியனாகிய வாசப் கூறியுள்ளான். இப்படை யெழுச்சியைப் பற்றிய செய்திகளை அமீர்குசுரு என்பவன் எழுதியுள்ள குறிப்புகளால் ஒருவாறு உணரலாம். அந்நாளிற் பாண்டிநாடு மகமதிய வீரர்களால் கொள்ளையிடப் பெற்றமையின் அது தன் செல்வத்தையும் சிறப்பையும் இழந்து வறுமை யெய்தியது; நாட்டில் அமைதியாக வாழ்ந்து வந்த மக்களெல்லோரும் தம் வாழ்நாளில் என்றும் கண்டறியாத பல்வகை இன்னல்களுக்குள்ளாயினர்; அறநிலையங்களும் கோயில்களும் அழிவுற்றன. சயாவுடீன் பார்னி என்ற மற்றொரு சரித்திராசிரியன், குலசேகர பாண்டியன் புதல்வர் இருவருடைய செல்வங்களையும் மாலிக்காபூர் கொள்ளை கொண்டு வெற்றியுடன் டில்லிமா நகருக்குத் திரும்பிச் சென்றானென்று குறித்துள்ளனன்.1 இவற்றால் பாண்டிநாடு அந்நாளில் எத்தகைய துன்ப நிலையில் இருந்தது என்பதை எளிதில் உணரலாம். பாண்டி மன்னர் நிலைமையினையும் உள்நாட்டில் நேர்ந்த குழப்பங்களையும் நன்குணர்ந்த சேர மன்னன் இரவிவர்மன் குலசேகரன் என்பான் பாண்டிய இராச்சியத்தின் மீது படையெடுத்துச் சென்று சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனன். அவன் கல்வெட்டுக்கள் திருவரங்கம், காஞ்சி, பூந்தமல்லி என்னும் ஊர்களிற் காணப்படுகின்றன.2 அக்கல்வெட்டுக்களில் வீரபாண்டியனையும் சுந்தர பாண்டியனையும் அவன் வென்ற செய்தி குறிக்கப்பெற்றுளது. இந்நிலையில், பாண்டிய இராச்சியத்தில் நிலவிய குறுநில மன்னர்களும் திறைமறுத்துத் தனியரசுபுரியத் தொடங்கினார்கள். அங்ஙனம் சுயேச்சையாகத் தம் நாட்டை ஆட்சிபுரியத் தொடங்கியவர்கள் தொண்டைமண்டலத்துப் படைவீட்டு இராச்சியத்துச் சம்புவராயர்களும்3 பாண்டிய நாட்டிலிருந்த வாணாதிராயர்களும் ஆவர். ஆகவே, குலசேகர பாண்டிய னாட்சியில் மிகச் சிறந்த நிலையிலிருந்த பாண்டிய இராச்சியம் அவன் புதல்வர்கள் ஆளுகையிற் பலவகையிலும் தாழ்வுற்றமை உணரற்பாலது. வீரபாண்டியன் ஆட்சியின் பிற்பகுதியில் தலைநகராகிய மதுரையை மகமதியத் தலைவன் ஜலாலுடீன் அசன்ஷா என்பவன் கைப்பற்றினான். அவன் டில்லிமா நகரிலிருந்த மகமதுபின் துக்ளக் என்னும் அரசனால் தென்னாட்டிற்கு அனுப்பப்பட்டவன். அவன் பாண்டிய அரசனை வென்று நாட்டைக் கவர்ந்து கொண்டதோடு டில்லிமன்னன் பிரதிநிதியாக மதுரையிலிருந்து அரசாளவும் தொடங்கினான். சில நாட் களுக்குப் பின்னர், அவன் டில்லிவேந்தனுடைய தொடர்பை முழுவதும் ஒழித்துவிட்டு மதுரையில் அரசு செலுத்தி வந்தான். பாண்டிநாட்டில் மகமதியரது ஆளுகை கி. பி. 1330-ஆம் ஆண்டிற் கணித்தாகத் தொடங்கி, கி. பி. 1378 வரையில் நடைபெற்றது. ஜலாலுடீனுக்குப் பிறகு அங்கு அரசாண்ட மகமதியத் தலைவர்கள் அலாவுடீன் உடான்ஜி, குட்புடீன், கியாசுடீன், நாசிருடீன், அடில்ஷா, பக்ருடீன் முபாரக்ஷா, அலாவுடீன் சிக்கந்தர்ஷா என்போர்.1 அவர்களுள் சிலர், தம்பேரால் நாணயங்களும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஆளுகையைக் குறிக்கும் இரண்டு கல்வெட்டுக்கள் புதுக்கோட்டை நாட்டிலுள்ள இராங்கியம், பனையூர் என்ற ஊர்களில் உள்ளன.2 அவர்கள் காலங்களில் உள்நாட்டிற் கலகங்கள் மிகுந்திருந்தமையின், மக்களெல்லோரும் அல்லல் வாழ்க்கையுடையோ ராயிருந்தனர்.3 அப்போது பல திருக்கோயில்கள் கொள்ளையிடப் பெற்று நாள் வழிபாடும் ஆண்டு விழாவும் இன்றிப் பல ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன என்று சில கல்வெட்டுக்கள் கூறுகின்றன.4 சமயக் கொள்கை பற்றப் பொதுமக்கள் பல்வகைத் துன்பங்களுக்கும் ஆளாயினர் என்பது மகமதிய சரித்திர ஆசிரியனாகிய ïã‹g^lh(Ibn Batuta)É‹ குறிப்புக்களால் தெரிகிறது.5 மகம்மதியரது ஆட்சிக்காலத்தில் பாண்டி நாட்டில் பாண்டிய அரசர் சிலர் இருந்தனர். அவர்கள், மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1314-1346), சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (1315-1347), மாறவர்மன் வீரபாண்டியன் (1334-1380), மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் (1335-1352) என்போர்.6 இவர்கள் கல்வெட்டுக்கள் பாண்டிநாட்டிற் பல இடங்களிற் காணப்படுகின்றன.ஆனால், அந்நாட்டில் எவ்வெவ்வூர்களி லிருந்து எவ்வெப்பகுதிகளை இவர்கள் ஆண்டுவந்தனர் என்பது புலப்படவில்லை. இவர்கள் தம் நாட்டில் நடைபெற்று வந்த அயலாரது கொடிய ஆட்சியையும், அதனால் மக்கள் எய்திய எல்லையற்ற துன்பங்களையும் ஒழித்தற்கு முயன்றும் இருக்கலாம். அம்முயற்சி பயன்படவில்லை போலும். அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுழைத்த போசள மன்னனாகிய மூன்றாம் வீரவல்லாள தேவனும் ஊழ்வலியால் வெற்றி பெறாது போர்க்களத்தில் உயிர் துறந்தான்.1 அந்நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற விசயநகர வேந்தனாகிய குமார கம்பண்ணன் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்தான். அவன் படையெடுத்து வந்தது, மதுரைமா நகரில் நிலை பெற்றிருந்த மகமதியராட்சியை ஒழித்து, மக்களையும் சமயங்களையும் பாதுகாத்தற்கேயாகும்.2 குமார கம்பண்ணனது தென்னாட்டுப் படை யெழுச்சி கி. பி. 1363-ஆம் ஆண்டிற்கு முன்னர் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அப்படை யெழுச்சியைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் தமிழ் நாட்டிற் சில ஊர்களில் உள்ளன. விசயநகர வேந்தனது படையெழுச்சி யினால் தென்னாட்டில் மகமதியராட்சி ஒருவாறு நிலைகுலைந்தது எனலாம். ஆயினும், அவர்கள் ஆட்சி கி.பி. 1378 வரையில் தளர்ச்சியுற்ற நிலை யிலாதல் அங்கு நடை பெற்றிருத்தல் வேண்டும் என்பது அந்நாட்டிற் கிடைத்துள்ள சில மகமதிய நாணயங்களால் வெளியாகின்றது. மகமதியர்களை வென்ற விசயநகர மன்னன் பாண்டியர்களுள் எவ்வரசனிடத்தில் அந்நாட்டை ஒப்பித்துச் சென்றான் என்பது புலப்பட வில்லை. ஆயினும், அவன் பாண்டியர்க்கு உற்றுழி உதவுமாறும், அற நிலையங்களைப் பாதுகாத்து வருமாறும் சில தலைவர்களைப் பாண்டி நாட்டில் ஆங்காங்கு அமர்த்திச் சென்றனன். அத் தலைவர்களும் பாண்டிய இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டு தாமே அரசாள வேண்டுமென்ற எண்ணத்துடன் காலங்கருதிக் கொண்டிருந்தனர். பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பதினைந்தாம் நூற்றாண்டிலும் பாண்டிய அரசர்கள் கல்வெட்டுக்கள் மதுரை ஜில்லாவிற் காணப்பட வில்லை; திருநெல்வேலி ஜில்லாவில் மாத்திரம் இவர்கள் கல்வெட்டுக்கள் உள்ளன. ஆகவே, பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர்கள் தம் தலைநகராகிய மதுரையையும், அதனைச் சூழ்ந்துள்ள நாட்டையும் இழந்து திருநெல்வேலி ஜில்லாவிற்குச் சென்று தங்கியிருந்தனராதல் வேண்டும். இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் கி. பி. 1453-ஆம் ஆண்டில் வரையப்பெற்றுள்ள ஒரு கல்வெட்டு, மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் என்று கூறுகின்றது.1 அன்றியும், பாண்டியர்க்குத் திறைசெலுத்திவந்த குறுநில மன்னர்களான மாவலிவாணாதிராயர்கள் தம்மை மதுராபுரி நாயகன் எனவும், பாண்டிய குலாந்தகன் எனவும், கி. பி. 1483-ல் சிறப்பித்துக் கூறிக்கொள்வதைப் புதுக்கோட்டை நாட்டில் நெக்கோணம் என்ற ஊரிலுள்ள ஒரு கல்வெட்டில்2 காணலாம். ஆகவே, பதினைந்தாம் நூற்றாண்டில் மதுரையி லிருந்து அரசு செலுத்தியவர்கள் வாணாதிராயர்கள் என்பது நன்கு வெளியாகின்றது. பாண்டியர்கள் மிக்க தளர்ச்சி யெய்தியிருந்த நாட்களில் வாணாதிராயர்கள் இவர்களைப் போரில் வென்று மதுரையைக் கைப்பற்றிக் கொண்டதோடு. அதனைச் சூழ்ந்துள்ள நாட்டைத் தாமே சுயேச்சையாக ஆட்சி புரியவும் தொடங்கினர். அவர்கள் பாண்டிய குலாந்தகன் என்று தம்மைச் சிறப்பித்துக் கூறிக்கொள்வது ஒன்றே, பாண்டியரிடத்து அன்னோர் கொண்டிருந்த பெரும் பகைமையை நன்கு விளக்கா நிற்கும். அன்றியும், புதுக்கோட்டை நாட்டில் குடுமியான் மலையிலுள்ள இரண்டு கல்வெட்டுக்கள், பாண்டியர்கள் வாணாதிராயர் களிடம் தோல்வியுற்று வேற்றிடம் சென்றனர் என்பதை வலியுறுத்து கின்றன.1 மதுரைமாநகரைவிட்டு நீங்கிய பாண்டியர்கள் தென்பாண்டி நாட்டை அடைந்து அங்கு அரசு செலுத்தி வந்தனரென்பது பல கல்வெட்டுக் களாற் புலப் படுகின்றது. இவர்கள் ஆளுகையும் அங்குப் பதினேழாம் நூற்றாண்டின் இறுதிவரையில் நடைபெற்றமை அறியற் பாலதாகும்.  9. தென்பாண்டிநாட்டில் ஆட்சிபுரிந்த பிற்காலப் பாண்டியர்கள் கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் தென்பாண்டி நாட்டிற் பாண்டிய அரசர் சிலர் ஆட்சி புரிந்துள்ளனர். அவர்கள் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் அன்னோர் பெயர்களை உணர்த்துமளவி லுள்ளனவேயன்றி வரலாற் றுண்மைகளை விளக்கக்கூடியனவாக இல்லை. அவர்கள் தலைநகர் யாது என்பதும் நன்கு தெரியவில்லை. ஆயினும், கொற்கை, தென்காசி, கரிவலம்வந்த நல்லூர் ஆகிய ஊர்கள் அவர்கள் தலைநகரங்களாக இருந்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரப்படுகின்றது. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தென்பாண்டி நாட்டில் அரசு செலுத்திய பாண்டியர்களுள், பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடையார் மூவர் இருந்தனர்.1 அம்மூவருள் கி. பி. 1387-ல் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தவன் ஒருவன்; கி. பி. 1384 முதல் 1415 வரையில் அரசாண்டவன் மற்றொருவன்; கி. பி. 1401 முதல் 1403 வரையில் ஆட்சி புரிந்தவன் மற்றையோன். அன்றியும், அக்காலப் பகுதியில் சடையவர்மன் குலசேகர பாண்டியன், சடையவர்மன் விக்கிரமபாண்டியன் என்ற வேறிரண்டு மன்னரும் இருந்தமை அறியத்தக்கது. இவர்களுள், குலசேகர பாண்டியன் கி. பி. 1395-ல் பட்டம் பெற்றவன். இவன் கல்வெட்டொன்று கரிவலம்வந்த நல்லூரில் உள்ளது. அஃது இவ்வேந்தனது ஆணைத்திருமுகமாகும்.2 விக்ரமபாண்டியன் கி. பி. 1401 முதல் 1422 வரையில் அரசு செலுத்தியவன். இவன் கல்வெட்டுக்கள் திருக்குற்றாலத்திலும் திருப்புத்தூரிலும் உள்ளன.1 இவர்கள் எல்லோரும் தென்பாண்டி நாட்டில் எவ்வெவ் விடங்களிலிருந்து எவ்வெப்பகுதிகளை ஆட்சி புரிந்தனர் என்பது புலப்படவில்லை. சடையவர்மன் பராக்கிரமபாண்டியன் பிற்காலப் பாண்டியர்களுள் இவ்வேந்தன் மிகுந்த பெருமை வாய்ந்தவனாவன். இவன் கி. பி. 1411 முதல் 1463 வரையில் அரசாண்டவன்; செந்தமிழ்ப் புலமையும் வடமொழிப் பயிற்சியும் உடையவன். இவனைப் பொன்னின் பெருமாள்2 எனவும், மானகவசன் எனவும் அந்நாளில் வழங்கியுள்ளனர். தென்காசிக் கோயிவிலுள்ள பூமிசை வனிதை நாவினிற் பொலிய என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி3 இவன் போர்ச் செயல்களையும் திருப்பணிகளையும் குணச்சிறப்பையும் நன்கு விளக்குகின்றது. இம்மன்னன், சங்கரநயினார்கோயில், திருக்குற்றாலம், முதலைக் குளம், வீரகேரளம்புதூர் முதலான ஊர்களில் தன் பகைஞரைப் போரில் வென்று புகழெய்தினான் என்று இவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. இவன் திருக்குற்றாலப் போரில் சேரனை வென்றான் என்பது, தளவாய் அக்கிரகாரச் செப்பேடுகளால் வெளியாகின்றது.4 இவன் விந்தனூர் 5முதலான ஐந்து ஊர்களில் அகரங்கள் அமைத்து அந்தணர்களுக்கு அளித்தமையும், திருக்குற்றாலம் திருப்புடைமருதூர் இவற்றிலுள்ள சிவாலயங்களில் மண்டபங்கள் அமைத்தமையும், திருநெல்வேலியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு அர்த்தயாம வழிபாட்டிற்கு நிபந்தங்கள் விட்டமையும் இவன் மெய்க்கீர்த்தியால் அறியப்படுஞ் செய்திகளாம். இற்றைநாளிலும் காண்போர் கண்களைக் கவரும் சிற்ப நுட்பமும் வனப்பும் வாய்ந்த தென்காசிப் பெருங்கோயிலை இவ்வேந்தன் எடுப்பித்தது இவனது சிவபக்தியின் மாண்பினை இனிது புலப்படுத்தா நிற்கும். இவ்வாலயத்திற்கு நாள்வழி பாட்டிற்கும் ஆண்டுவிழாவிற்கும் தேவதான இறையிலியாகப் பல ஊர்கள் இவ்வரசனால் அளிக்கப் பெற்றுள்ளன.1 சிவபெருமான் ஒருநாள் இவ்வரசன் கனவில் தோன்றி வடகாசியிலுள்ள தம் திருக்கோயில் அழிவுற்ற நிலையிலிருத்தல் பற்றிச் சித்திராநதியின் வடகரையில் தென்காசியும் அதில் ஓர் ஆலயமும் அமைக்குமாறு கூறியருளியதே, இதனை இவன் கட்டுவித்தமைக்குக் காரணமாகும். இச் செய்தி, தென்காசிக் கோயிற் கோபுரத்தின் முன்னர் நிற்கும் ஒரு கற்றூணில் வரையப்பட்டுள்ளது.2 இக் கோயிலின் திருப்பணி முடிவு பெறுதற்குப் பதினேழாண்டுகள் ஆயின என்பது அக் கல்வெட்டால் தெரிகிறது. ஆனால் இவன் தொடங்கிய ஒன்பது நிலைக் கோபுரத் திருப்பணி மாத்திரம் இவனாட்சியில் முடிவெய்தவில்லை. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவன்பால் இவன் கொண்டிருந்த பக்தி அளவிட்டு உரைக்கத்தக்கதன்று. எத்தகைய குறைகளுமின்றி இக்கோயிலைப் பாதுகாத்து வருமாறு சிவனடியார்களையும் தன் வழித்தோன்றல்களையும் இம்மன்னன் வேண்டிக்கொண்டிருப்பது குறிப்பிடற்பாலதாகும். அவ்வேண்டுகோளும் சில செந்தமிழ்ப் பாடல்களாக உள்ளது. கன்னெஞ்சமுடை யாரையும் உருக்கும் இயல்புடை யனவும், எந்நிலையிரையும் பிணிக்குந் தன்மை வாய்ந்தனவும் ஆகிய அப்பாடல்கள் இவ்வரசன் இயற்றியனவே யாகும். அவற்றைத் தென்காசிக் கோயிற் கோபுரத்தில் இன்றும் காணலாம்.3 இப்பெருங் கோயிலில் பிற்காலப் பாண்டியர்கள் எல்லோருக்கும் முடிசூட்டு விழா நடைபெற்று வந்தமை உணரற்பாலதாகும். இவன் தன் ஆட்சியில் விசுவநாதப்பேரேரி என்ற பெயருடைய ஏரி ஒன்று வெட்டுவித்திருப்பது குடிகளது நலத்தின் பொருட்டு இவன் புரிந்த அரிய செயல்களுள் ஒன்றாகும்.1 சிவபத்தியிலும் செங்கோன் முறையிலும் சிறந்து விளங்கிய இவ்வேந்தன் கி. பி. 1463 - ல் விண்ணுல கடைந்தான்.2 சடையவர்மன் குலசேகரபாண்டியன் பராக்கிரம பாண்டியன் தம்பியாகிய இவ்வரசன் கி. பி. 1429 முதல் 1473 வரையில் ஆட்சி புரிந்தவன். எனவே, இவன் தன் தமையனுடன் சேர்ந்து தென்பாண்டிநாட்டை அரசாண்ட வனாதல் வேண்டும். பராக்கிரம பாண்டியன் காலத்தில் தொடங்கப்பெற்று முடிவு பெறாமலிருந்த ஒன்பதுநிலைக் கோபுரத் திருப்பணியை இவன் முடித்தமை அறிதற்குரிய தாகும்.3 அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் இவன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் புதல்வன்; கி. பி. 1473 முதல் 1506 வரையில் அரசு செலுத்தியவன். இவன் காலத்தில் பராக்கிரம பாண்டியனான குலசேகர தேவன் என்ற வேறொரு மன்னன் இருந்தனன் என்பது கல்வெட்டுக்களாற் புலப்படுகின்றது.1 அவன் கல்வெட்டுக்கள் கி. பி. 1479 முதல் 1499 வரையில் உள்ளன. அவன் யாவன் என்பது தெரியவில்லை. இனி, அபிராம பராக்கிரம பாண்டியன், ஆகவராமன் என்ற உடன் பிறப்பினர் இருவர் இருந்தமை, புதுக்கோட்டைச் செப்பேடுகளால் அறியப்படுகின்றது.2 இவர்களைப் பற்றிய செய்திகள் கிடைத்தில. சடையவர்மன் சீவல்லப பாண்டியன் இவன் ஆகவராமன் புதல்வன்; கி. பி. 1534 முதல் 1543 வரையில் அரசாண்டவன். இவனுக்கு இறந்தகால மெடுத்தவன்3 பாண்டியராச்சிய தாபனாசாரியன் 4 என்ற பட்டங்களுமுண்டு. இவன் காலத்தில் திருவாங்கூர் இராச்சியத்திலிருந்த உதயமார்த்தாண்டவர்மன் என்ற சேரமன்னன் ஒருவன், தென் பாண்டி நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.5 அச்சேரன் கல்வெட்டுக்கள் பிரமதேசம், சேரமாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு ஆகிய ஊர்களில் உள்ளன. ஆகவே, இப்பகுதி அவனது ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பது திண்ணம். தன் நாட்டை இழந்த சீவல்லபபாண்டியன், விசயநகரவேந்தனாகிய அச்சுததேவராயனிடம் முறையிடவே, அவனும் பெரும் படையோடு தென்னாட்டிற்கு வந்து உதயமார்த்தாண்ட வர்மனைப் போரில் வென்று அவன் கைப்பற்றியிருந்த தென் பாண்டிநாட்டைப் பிடுங்கிப் பாண்டியர்க்குக் கொடுத்தனன்.6 விசயநகரவேந்தன் இங்ஙனம் விரைந்து செய்தமைக்கு மற்றொரு காரணமும் உண்டு. அது, சேரமன்னன் சில ஆண்டுகள் அவனுக்குக் கப்பஞ் செலுத்தாதிருந்தமையேயாம். அச்சுததேவராயன் இத்தகைய அரிய உதவி புரிந்தமை பற்றிச் சீவல்லபன் தன் மகளை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்து மகிழ்ச்சியுற்றான்.1 இந்நிகழ்ச்சியினால் பாண்டியர் குலத்திற்குப் பழைய பெருமையும் சிறப்பும் மீண்டும் உண்டாகுமாறு தான் செய்துவிட்டதாக எண்ணி இறந்தகால மெடுத்தவன் பாண்டிய ராச்சியதாபனாசாரியன் என்ற பட்டங்களை இவன் புனைந்து கொண்டனன் போலும். சடையவர்மன் பராக்கிரம குலசேகரபாண்டியன் இவன் அபிராம பராக்கிரமபாண்டியனுடைய முதற் புதல்வன். இவனுடைய கல்வெட்டுக்கள் கி. பி. 1543 முதல் 1552 வரையில் உள்ளன. இவனைப்பற்றி யாதும் தெரியவில்லை. நெல்வேலிமாறன் இவன் அபிராம பராக்கிரமபாண்டியனுடைய இரண்டாவது புதல்வன்; கி. பி. 1552 முதல் 1564 வரையில் ஆட்சிபுரிந்தவன். இவனுக்கு வீரபாண்டியன், குலசேகர பாண்டியன், பொன்னின் பாண்டியன், தர்மப்பெருமாள், அழகன் பெருமாள் என்ற வேறு பெயர்களுமுண்டு. இவன் புலவர்கள் பாடிய வீரவெண்பாமாலை கொண்டவன் என்று தென்காசியிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.2 சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் இவன் நெல்வேலிமாறன் முதல் மகன்; கி. பி. 1564 முதல் 1604 வரையில் அரசுசெலுத்தியவன். இவனை அழகன் சீவலவேள் எனவும் வழங்குவர். தன் தந்தையாகிய நெல்வேலிமாறனை நினைவுகூர்தற் பொருட்டுத் தென்காசியில் குலசேகரமுடையா ராலயம் ஒன்றை இவன் எடுப்பித்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.3 இதன் அண்மையில் இவன் எடுப்பித்த விண்ணகரம் ஒன்றும் உளது. இவன் செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கியவன் என்பது இவன் பாடியுள்ள சில தமிழ் நூல்களாற் புலப்படுகின்றது. வடமொழியில் ஹர்ஷன் இயற்றியுள்ள நைஷதம் என்ற நூலை இவன் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளான். இது நைடதம் என்று வழங்கப்படுகிறது. அந்நூலை மொழி பெயர்த்தற்கு இவனுக்கு உதவி புரிந்தவர் நைஷதம் இராம கிருஷ்ணர் என்ற வடமொழிப் புலவர் ஆவர்.1 இவ்வேந்தன் பாடியுள்ள பிறநூல்கள் கூர்மபுராணம் வாயுசங்கிதை காசி காண்டம் இலிங்கபுராணம் நறுந்தொகை என்பன. இவன் சிவபெருமானிடத்தில் மிகுந்த ஈடுபாடுடையவனாக ஒழுகி வந்தனன் என்பது இவன் இயற்றியுள்ள சைவ புராணங்களால் நன்கு விளங்கும். வரதுங்கராம பாண்டியன் இவன் பராக்கிரம குலசேகரபாண்டியனுடைய இரண் டாவது மகன்; கி. பி. 1588-ல் முடிசூட்டப்பெற்றவன். அபிராமசுந்தரேசுவரன் எனவும், வீரபாண்டியன் எனவும் செப்பேடுகளில் இவன் குறிக்கப்பெற்றிருத்தல் உணரத்தக்கது.2 அதிவீரராம பாண்டியனாட்சிக் காலத்தில் தென்பாண்டி நாட்டிற் சில பகுதிகளைக் கரிவலம்வந்த நல்லூரிலிருந்து இவன் அரசாண்டவனாதல் வேண்டும் என்பது சில குறிப்புகளால் அறியப்படு கின்றது.3 இவன் வில்லவனை வென்றானென்றும் வல்லமெறிந் தானென்றும் தென்காசியிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது.4 இவனால் வென்றடக்கப்பெற்ற சேரமன்னன் யாவன் என்பதும், வல்லத்தில் இவன் யாருடன் போர் புரிந்தான் என்பதும் புலப்படவில்லை. அதிவீரராமபாண்டியனைப் போல் இவ்வேந்தனும் தமிழ்மொழியில் பெரும்புலமை படைத்தவன் என்பது இவன் இயற்றியுள்ள தமிழ்நூல் களால் நன்கு துணியப்படும். அவை, பிரமோத்தரகாண்டம், கருவைக் கலித்துறையந்தாதி, கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பா அந்தாதி என்பன.1 இவனும் சிவபெருமானிடத்து ஒப்பற்ற பத்தியுடைய வனா யிருந்தனன் என்பது இவனியற்றிய நூல்களால் இனிது புலனாகும். அதிவீரராமபாண்டியற்குச் சுவாமிதேவரும் வரதுங்கராம பாண்டியற்கு வேம்பற்றூர் ஈசான முனிவரும் ஞானாசிரியர் களாக இருந்திருத்தல் வேண்டும் என்பது இவர்கள் தம் நூல்களிற் கூறியுள்ள குருவணக்கங்களாற் பெறப்படுகின்றது. வரகுணராம குலசேகர பாண்டியன் கி. பி. 1613-ல் முடிசூட்டப்பெற்ற இவ்வேந்தன் முன்னவர்களுக்கு யாது முறையுடையான் என்பது தெரியவில்லை. இவன் வேதவிதிப்படி வேள்விபுரிந்தவன். இதுபற்றியே இவன் குலசேகரசோமாசியார் என்று வழங்கப்பெற்றமை குறித்தற்குரிய தாகும்.2 கி. பி. 1748 - ல் இருந்த மற்றொரு பாண்டியன் இவனைப் போலவே வரகுணராம பாண்டிய குலசேகர தேவதீட்சிதர் என்று தன்னைச் சிறப்பித்துக் கொண்டமை ஈண்டு உணரற் பாலது. ஆகவே, பிற்காலப் பாண்டியர்களுள் சிலர் சோமாசியார், தீட்சிதர் என்ற பட்டங்கள் புனைந்துகொண்டு அவற்றால் தம்மைப் பெருமைப்படுத்திக்கொள்ள விரும்பினர் என்பது வெளியாதல் காண்க. இக்காலப் பகுதியில் வாழ்ந்த பாண்டியர்களுள் பெரும்பாலோர் விசயநகரவேந்தர்கட்குக் கப்பஞ் செலுத்திவந்த குறுநில மன்னரேயாவர். இங்ஙனம் குறுநிலமன்னராயிருந்த பாண்டியர் இறுதியில் ஜமீன்தார் நிலையை எய்தித் தென் பாண்டிநாட்டில் ஓர் ஊரில் இருந்து வருவராயினர். நம் தமிழகத்தின் தென்பகுதி தம் பெயரால் என்றும் நின்று நிலவுமாறு சரித்திரகாலத்திற்கு முன்தொடங்கிப் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையில் அங்கு ஆட்சிபுரிந்துவந்த தமிழ் வேந்தர்களான பாண்டியர்கள் தம் நாட்டை இழந்த சிறுமையுற்றுச் சீர்குலைந்தமை காலவேறுபாட்டினால் நிகழ்ந்த மாறுதலேயாம். ஆயினும், அவர்களுடைய மாரியன்ன வரையா வண்மையால் வெளி வந்துள்ள எடுப்பும் இணையுமற்ற தமிழ்நூல்கள் நம்மனோர் பண்டைப் பெருமையினை எந்நாட்டினர்க்கும் அறிவுறுத்தும் அரும்பெரு நிதியமாகவும் அறிவுச்சுடர் கொளுத்தி நமது அகவிருள் போக்கும் செஞ்ஞாயிறாகவும் அமைந்து அன்னோரை நினைவுகூர்தற்கு ஏற்ற கருவிகளாக நிலைபெற்றிருப்பது மகிழ்தற்குரியதாகும்.  10. பாண்டியர் அரசியல் இனி, பாண்டியர் அரசியல் முறைகளை விளக்குவாம். பழைய தமிழ் நூல்களாலும், கல்வெட்டுக்களாலும், செப்பேடு களாலும் அறியப்படும் அரசியல் முறைகள் எல்லாம் நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் மூவேந்தர்க்கும் உரியனவேயாகும். ஆயினும், அம்முறைகள் பாண்டியர்க்கும் உரியனவாயிருத்தல் பற்றி அவற்றை ஈண்டு ஆராய்ந்து சுருங்கிய முறையில் விளக்குதல் பொருத்தமுடைத்து. 1. பாண்டி மண்டலத்தின் உட்பிரிவுகள் பாண்டி வேந்தர்கள் தம் ஆணை செல்லுமாறு தொன்று தொட்டு ஆட்சி புரிந்துவந்த பாண்டி மண்டலம் என்பது மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய மூன்று ஜில்லாக்களையும் புதுக்கோட்டை நாட்டில் வெள்ளாற்றுக்குத் தெற்கிலுள்ள பகுதிகளையும் தன்னகத்துக்கொண்டு விளங்கிய நிலப்பரப்பாகும். இது, பரந்த நிலப்பரப்பினையுடையதாயிருத் தலின், எவ்விடத்தும் ஆட்சி நன்கு நடைபெறுமாறு பல நாடு களாக முற்காலத்தில் பிரிக்கப்பட்டிருந்தது. கடைச்சங்க நாளிலும் இம்முறை வழக்கத்தில் இருந்தது என்று தெரிகிறது. இதனை, முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூறூரும் பரிசிலர் பெற்றனர் (புறம்-110) எனவும், ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே (புறம்-242) எனவும் வரும் புறப்பாட்டடிகளாலும் இரணியமுட்டத்துப்1 பெருங் குன்றூர் பெருங்கௌசிகனார் என்னும் தொடர்மொழி யாலுமறியலாம். பிற்காலங்களில் சில நாடுகள் கூற்றங்கள் என்ற பெயரோடு வழங்கப் பெற்று வந்தன என்பது ஈண்டு உணரற் பாலது. ஒல்லையூர் நாடு கி.பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண் டுகளில் ஒல்லையூர்க் கூற்றம் என்று வழங்கப்பெற்று வந்தமை இதற்கோர் எடுத்துக்காட்டாகும். இச்செய்தி மேலே காட்டி யுள்ள 242 - ஆம் புறப்பாட்டாலும், புதுக்கோட்டை நாட்டி லுள்ள கல்வெட்டுக்களாலும் உறுதியெய்துகின்றது.2 இரணியமுட்ட நாடு, புறப்பறளை நாடு, பாகனூர்க் கூற்றம், களக்குடி நாடு, தென் பறம்பு நாடு, வட பறம்பு நாடு, பொங்கலூர் நாடு, தென்கல்லக நாடு, செவ்விருக்கை நாடு, பூங்குடிநாடு, தும்பூர்க்கூற்றம், கீரனூர் நாடு, களாந்திருக்கை நாடு, அளநாடு, துறையூர்நாடு, வெண்பைக்குடி நாடு, நெச்சுர நாடு, சூரன்குடி நாடு, ஆசூர் நாடு, ஆண்மா நாடு, கீழ்க்களக் கூற்றம், கீழ்வேம்ப நாடு, மேல்வேம்ப நாடு, தென்வாரி நாடு, வட வாரி நாடு, குறுமாறை நாடு, குறுமலை நாடு, முள்ளி நாடு, திருவழுதிநாடு, முரப்பு நாடு, தென்களவழி நாடு, வானவன் நாடு, குட நாடு, ஆரிநாடு, திருமல்லி நாடு, கருநிலக்குடி நாடு, கானப்பேர்க்கூற்றம், அடலையூர் நாடு, திருமலை நாடு, கொழுவூர்க்கூற்றம், தாழையூர் நாடு, முத்தூர்க் கூற்றம், கீழ்ச்செம்பி நாடு, செம்பி நாடு, வடதலைச்செம்பி நாடு, வெண்புல நாடு, பருத்திக்குடி நாடு, புறமலை நாடு, துருமா நாடு, மிழலைக் கூற்றம், இடைக்குள நாடு, கோட்டூர் நாடு என்பன முற்காலத்தில் பாண்டி மண்டலத்திலிருந்த உள் நாடுகள் ஆகும். சில நாடுகளையும் கூற்றங்களையும் தன்னகத்துக் கொண்டு விளங்கிய பெருநிலப்பரப்பு வளநாடு என்று வழங்கப்பட்டு வந்தது. இத்தகைய வளநாடுகள் பாண்டி மண்டலத்தில் கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றண்டுகளிலும் பிற்காலங்களிலும் இருந்தன என்று தெரிகிறது.3 அவை, மதுரோதய வளநாடு, வரகுண வளநாடு, கேரள சிங்க வளநாடு, திருவழுதி வளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு, அமிதகுண வளநாடு என்பனவாம். நாடுகளின் பெயர்களுக்கும் வளநாடுகளின் பெயர்களுக்கு முள்ள வேறுபாடு ஆராய்தற்குரியது. நாடுகளின் பெயர்கள் எல்லாம் ஊர்களின் அடியாகப் பிறந்தன என்பது உணரற்பாலது. கூற்றங்களின் பெயர்களும் அத்தைகையவே. ஆனால், பாண்டியர்களின் இயற்பெயர்களும் சிறப்புப் பெயர்களுமே வள நாடுகளின் பெயர்களாக அமைந்திருப்பது அறியத்தக்கது. சோழ மண்டலத்திலிருந்த வளநாடுகளின் பெயர்களும் இவ்வாறே சோழ மன்னர்களின் இயற்பெயர்களாகவும் சிறப்புப் பெயர்களாகவும் இருத்தல் ஈண்டு உணர்ந்து கொள்ளுதற்கு உரியதாகும். இனி, நாடுகளும் கூற்றங்களும் இக்காலத்துள்ள தாலூகாக் களுக்கு ஒப்பானவை என்றும், வளநாடுகள் ஜில்லாக்கள் போன்றவை என்றும், மண்டலம் மாகாணத்திற்குச் சமமானது என்றும் கொள்ளல் வேண்டும். பாண்டிமண்டலத்து மதுரோதய வளநாட்டுத் தென்கல்லகநாட்டுப் பராக்கிரம பாண்டியபுரம் என்பதால், இவை அந்நாளில் வழங்கிவந்த முறை நன்கு புலனகும். ஆயினும், வளநாட்டைப் பொருட்படுத்தாமல் நாட்டை மாத்திரம் குறித்து விட்டு ஊரை வரைவது பாண்டி மண்டலத்தில் பெரு வழக்காக இருந்தது என்பது அப்பக்கங்களில் காணப்படும் கல்வெட்டுக்களால் வெளியாகின்றது.1 ஆனால், சோழ மண்டலத்தில், முதல் இராசராசசோழன் காலமுதல் வளநாடுகளைத் தவறாமல் குறித்துவிட்டுத்தான் நாடுகளையும் ஊர்களையும் எழுதிவந்தனர்.2 2. அரசனும் இளவரசனும் இங்ஙனம் வகுக்கப் பெற்றிருந்த பாண்டி மண்டலத்திற்குப் பாண்டிய அரசனே தலைவன் ஆவான். அரசியலில் தலைமை வகித்து எவற்றிற்கும் பொறுப்புடையவனாய் நீதிதவறாது செங்கோல் செலுத்துங் கடமை இவ்வேந்தனுக்கு உரியதாகும். பாண்டி வேந்தர்கள் தமக்குப் பின்னர்ப் பட்டத்திற்கு உரியவர்களாயுள்ள தம் புதல்வர்க்கு இளவரசுப் பட்டங் கட்டி அவர்களை அரசியல் முறைகளில் பழக்குவது வழக்கம். சில சமயங்களில் இவர்கள் தம் தம்பியரையும் இத்துறைகளில் பழக்கி வருவது உண்டு. தென்பாண்டி நாட்டிலுள்ள கொற்கை பாண்டியரது முதன்மை வாய்ந்த துறைமுகப்பட்டினமாயி ருந்தமையின் இளவரசர்கள் அந்நகரத்தில் தங்கியிருப்பது வழக்கமாயிருந்தது. இவ்வுண்மையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஊழ்வினையாற் கண்ணகிக்கு இடர்விளைத்து உயிர் துறந்த பின்னர், கொற்கையிலிருந்த இளவரசனாகிய வெற்றிவேற்செழியன் மதுரை மாநகரத்திற்குச் சென்று முடிசூட்டிக் கொண்டான் என்று ஆசிரியர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறியுள்ள ஓர் அரிய செய்தியினால் நன்கு உணரலாம்.1 கி. பி. 11-ஆம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாண்டி மன்னர் ஐவர் ஒரே சமயத்தில் பாண்டிமண்டலத்தில் ஆட்சி புரிந்தனர் என்பது கலிங்கத்துப்பரணியாலும் சில கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது.2 இன்னோர் அம்மண்டலத்தை ஐந்து பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஆண்டுவந்தனர் போலும். 3. அரசியல் அதிகாரிகள் பாண்டியரது ஆளுகையில் பல்வகைத் துறைகளிலும் தலைவர்களாக அமர்ந்து ஆட்சியை நன்கு நடைபெறச் செய்தவர்கள் அமைச்சர், படைத்தலைவர், அரையர், நாடுவகை செய்வோர், வரியிலார், புரவுவரித்திணைக்களத்தார், திருமுகம் எழுதுபவர் முதலானோர் ஆவர். இவர்களுள், அரையரெனப் படுவோர் உள்நாட்டிற்குத் தலைவர்களாக விளங்கிய நாட்டதி காரிகள்; இவர்கள் தம் நாட்டைச் சுற்றிப் பார்த்து, குடிகளின் நலன்கள், அறநிலையங்கள், நியாயம் வழங்குமுறை முதலான வற்றைக் கண்காணித்துக் காத்து வருவது வழக்கம். நாடு வகை செய்வோர், ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களைக் கூறுபட அளிப்பார்கள். வரியிலார், ஊர்கள்தோறும் எல்லா வரியாலும் அரசாங்கத்திற்கு வரவேண்டிய தொகைக்குக் கணக்கு வைத்திருப்பவர்கள். புரவுவரித் திணைக்களத்தார், இக்காலத்திலுள்ள ரெவினியூ போர்டு போன்ற ஒரு கழகத்தினர் ஆவர். இக்கழகத்திற்குத் தலைவர் புரவுவரித் திணைக்களநாயகம் என்று வழங்கப்பெறுவர். திருமுகம் எழுதுபவர் என்போர் அரசனது ஆணையைத் திருவாய்க் கேள்வியால் உணர்ந்து ஓலையில் வரைந்து ஊர்ச்சபைகளுக்கும் பிற அதிகாரிகளுக்கும் முறைப்படி அனுப்புவோர். சோழமண்டலத்தில் இவர்களைத் திருமந்திர ஓலை எனவும் திருமந்திர ஓலைநாயகம் எனவும் வழங்குவர். ஆங்கிலேயர் ஆட்சியில் அரசாங்க அதிகாரிகளுள் சிறந் தோர்க்கு அவர்கள் ஆற்றலையும் அரசியல் ஊழியத்தையும் பாராட்டி, ராவ்பஹதூர் திவான்பஹதூர் சர் முதலான பட்டங்கள் அளித்து அவர்களை மகிழ்வித்தமைபோல, பாண்டி வேந்தரும் தம் அரசியல் அதிகாரிகளுக்குப் பல பட்டங்கள் வழங்கி அவர்களைப் பாராட்டியுள்ளனர் என்பது ஈண்டு உணரத்தக்கது. அங்ஙனம் அளிக்கப்பெற்ற பட்டங்கள், அரையன், பேரரையன், விசையரையன், தென்னவன் பிரமராயன், தென்னவன், தமிழவேள், காவிதி, ஏனாதி, பஞ்சவன்மாராயன், பாண்டிய மூவேந்த வேளான், செழிய தரையன், பாண்டிய விழுப்பரையன், தென்னவ தரையன், பாண்டியப் பல்லவ தரையன், தொண்டைமான், பாண்டியக் கொங்கராயன், மாதவராயன், வத்தராயன், குருகுலராயன், காலிங்கராயன் முதலியனவாகும். காவிதி, ஏனாதி1 முதலான பட்டங்களைப் பெற்ற அதிகாரிகளுக்குப் பொற்பூவும், மோதிரமும், இறையிலிநிலமும் அளிப்பது பண்டை வழக்கம். எனவே, காவிதிப்பட்டம் பெற்றவன் ஒருவன் எய்துவன காவிதிப் பூவும் காவிதி மோதிரமும் காவிதிப் புரவுமாம்.9 4. அரசிறை அக்காலத்தில் குடிகள் தம் அரசர்க்கு நிலவரி செலுத்தி வந்தனர். இந்நிலவரி விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னுங் காசுமாகவாதல் செலுத்தப்பட்டு வந்தது. இதனை ஊர்ச்சபையார் குடிகளிடத்திலிருந்து ஆண்டுதோறும் வாங்கி அரசனது தலைநகரிலுள்ள அரசாங்கப் பொருள் நிலையத்திற்கு அனுப்பிவந்தனர். இனி, நிலவரியேயன்றித் தறியிறை, செக்கிறை தட்டார்ப் பாட்டம், இடைவரி, சான்றுவரி, பாடிகாவல், மனையிறை, உல்கு முதலான வரிகளும் இருந்துள்ளன. ஒவ்வொரு தொழிலின் பெயரையுஞ் சுட்டி வரிப்பெயர் குறிக்கப்பட்டிருத்தலின் வரிப் பெயர்கள் மிகுந்து காணப்படுகின்றனவேயன்றி வேறில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப்பெயரால் எல்லாத் தொழிலாள ரிடத்தும் வரி வாங்கப்படுகிறது. எனவே, இற்றை நாளிலுள்ள தொழில்வரி ஒன்றே, எல்லாத் தொழில் களின் மேலும் விதிக்கப் பட்டுள்ள வரிகளைத் தன்னகத்து அடக்கிக் கொண்டு நிற்றல் அறியதக்கது. இறை, பாட்டம் என்பன வரியை யுணர்த்தும் மொழிகள். தட்டார்பாட்டம் என்பது கம்மாளர்கள் செலுத்திவந்த வரியாம். பாடிகாவல் என்ற வரி நாடு காவல் எனவும் வழங்கப் பட்டுள்ளது. இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய வரியாகும். மனையிறை, குடியிருப்பு மனைக்கு வாங்கியதோர் வரி என்க. உல்கு என்பது சுங்க வரியாகும். கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு வாங்கப் பெற்ற வரி சுங்க வரியாகும். 5. நில அளவு ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன வென்பதும், குடிகளிடத்தி லிருந்து அரசாங்கத்திற்கு நிலவரி எவ்வளவு வரவேண்டும் என்பதும் நன்கு புலப்படமாட்டா. ஆதலால், பாண்டி மண்டலம் முழுமையும் அக்காலத்தில் அளக்கப்பட்டுள்ளது. அதனை அளந்த அதிகாரிகள் நாடுவகை செய்வோர் என்று வழங்கப் பெற்றனர் என்பது முன்னரே விளக்கப்பட்டது. நிலம் அளந்தகோல் சுந்தரபாண்டியன்கோல் என்ற பெயருடையது.1 இஃது இருபத்து நான்கடிக் கோலாகும். அன்றியும், குடிதாங்கிக்கோல் முதலான பிற கோல்களும் அந்நாளில் இருந்துள்ளன.2 நிலங்கள் எல்லாம் குழி, மா, வேலி என்ற முறையில் அளக்கப்பட்டன.3 நிலத்தை அளந்து எல்லைகள் தெரியும்படி அவ்விடங்களில் கற்கள் நடுவது வழக்கம் என்பது பல கல்வெட்டுகளால் புலப்படுகின்றது. அக்கற்களைப் புள்ளடிக்கற்கள் என்று வழங்கியுள்ளனர். சிவாலயங் களுக்கு விடப்பட்ட இறையிலி நிலங்களுக்கும் திருமால் கோயில் களுக்கு விடப்பட்ட இறையிலி நிலங்களுக்கும் முறையே திரிசூலக் கல்லும் திருவாழிக்கல்லும் எல்லைக்கற்களாக நடுவது அக்காலத்து வழக்கமாகும்.4 நிலங்கள் நீர்நிலம், புன்செய், நத்தம், தோட்டம் என்று வகுக்கப் பட்டுள்ளன. இவற்றுள், நீர்நிலம் என்பது நன்செய் ஆகும். 6. இறையிலி பாண்டியரது ஆட்சிக் காலங்களில் சிவன் கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப்பட்ட நிலம் தேவதானம் எனவும், திருமால் கோயில்களுக்கு அளிக்கப்பெற்றது திருவிடையாட்டம் எனவும், சைன பௌத்த கோயில்களுக்கு விடப்பெற்றது பள்ளிச்சந்தம் எனவும், பார்ப்பனர்க்கு அளிக்கப் பெற்றது பிரமதேயம் பட்டவிருத்தி எனவும், மடங்களுக்கு விடப்பட்டது மடப்புறம் எனவும், புலவர்கட்கு அளிக்கப் பட்டது புலவர் முற்றூட்டு எனவும், சோதிடர்கட்கு அளிக்கப்பெற்றது கணி முற்றூட்டு எனவும் வழங்கப்பட்டன.5 7. அளவைகள் பாண்டிநாட்டில் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய நான்குவகைப்பட்ட அளவைகளும் அக்காலத்தில் வழக்கிலிருந்தன. இவற்றுள், எடுத்தல் என்பது நிறுத்தல் ஆகும். பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள் கழஞ்சு, காணம் என்னும் நிறை கற்களாலும், சர்க்கரை, காய் கறிகள், புளி முதலான பொருள்கள் துலாம், பலம் என்னும் நிறைகற்களாலும் நிறுக்கப்பட்டு வந்தன. அந்நாளில் சேர், வீசை, மணங்கு என்பவற்றால் நிறுக்கும் வழக்கமின்மை ஈண்டு அறியற்பாலது. நெல், அரிசி, உப்பு, நெய், பால், தயிர், மிளகு, சீரகம், கடுகு முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரிநாழி, குறுணி என்னும் முகக்குங் கருவிகளால் அளக்கப்பட்டன. எடுத்தல் அளவை 10 காணம் = 1 கழஞ்சு 100 பலம் = 1 துலாம் முகத்தல் அளவை 5 செவிடு = 1 ஆழாக்கு 2 ஆழாக்கு = 1 உழக்கு 2 உழக்கு = 1 உரி 2 உரி = 1 நாழி 6 நாழி = 1 குறுணி1 15 குறுணி = 1 கலம்2 8. நாணயங்கள் பாண்டி வேந்தர்கள் ஆட்சிக் காலங்களில் பொன்னாலும் செம்பாலும் செய்யப் பெற்ற காசுகள் வழங்கிவந்தன. அவற்றுட் சில, இக்காலத்தும் சிற்சில இடங்களில் கிடைக்கின்றன. கடைச் சங்க நாளில் வழங்கிவந்த காசுகளைப் பற்றிய செய்திகள் இப்போது புலப்படவில்லை. பழைய பாண்டிய நாணயங்கள் சதுர வடிவமாக இருந்தன என்றும், அவைகளில் ஒரு பக்கத்தில் யானை வடிவம் பொறிக்கப்பட்டிருந்த தென்றும் திரு. ஸி. ஜே. பிரவுன்தான் எழுதிய இந்திய நாணயங்கள் என்ற நூலில் கூறியிருப்பது நம்பத்தக்கதாயில்லை.1 பொதுவாக நோக்குமிடத்து, பாண்டி மன்னர்களின் சிறப்புப் பெயர்களே அன்னோர் ஆட்சிக்காலங் களில் வழங்கிய நாணயங்களின் பெயர்களாக இருந்தன என்பது பல நாணயங்களாலும் கல்வெட்டுக்களாலும் அறியப்படுகின்றது. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் அரசாண்டவனும் முதல் வரகுண பாண்டியன் புதல்வனும் ஆகிய சீமாறன் சீவல்லபன் காலத்தில் வழங்கிய நாணயம் அவனிப சேகரன் கோளகை. 2 என்ற பெயருடைய தாயிருந்ததென்று தெரிகிறது. இவ்வேந்தனுக்கு அவனிப சேகரன் என்னும் சிறப்புப் பெயர் ஒன்று உண்டு என்பது புதுக்கோட்டை நாட்டில் சிற்றண்ணல்வாயில் என்ற ஊரிலுள்ள ஒரு கல்வெட்டால் புலப்படுகின்றது.3 முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சோணாடு கொண்டான் என்ற நாணயமும், முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் எல்லாந் தலையானான் என்ற நாணயமும், கி.பி. 1253-ல் முடிசூடிய சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில் வாளால் வழி திறந்தான் குளிகை4 என்ற பணமும். புதியனவாக வெளியிடப் பெற்று வழங்கிவந்தன.5 இப்பெயர்கள் எல்லாம் பாண்டி வேந்தர்களின் சிறப்புப் பெயர்களாக இருப்பது அறியத்தக்கது. அந்நாளில் வழங்கிய காசு ஒரு கழஞ்சு எடையுள்ளதாக இருந்தது. அக்காசின் ஒரு பக்கத்தில் விதானத்தின்கீழ் அமைந்த இரு கயல்களின் வடிவங்களும் மற்றொரு பக்கத்தில் அதனை வெளியிட்ட வேந்தன் பெயரும் மிளிர்வதைக் காணலாம். பத்துப்பொன் கொண்டது ஒரு காசு என்பது இரண்டாம் வரகுண பாண்டியனது திருச்செந்தூர்க் கல்வெட்டால் நன்கு உணரப்படும்.1 பத்துக் காணம் கொண்டது. ஒரு கழஞ்சு என்பது முன்னரே விளக்கப் பட்டது எனவே, ஒரு பொன் ஒரு காணம் எடையுள்ளது என்பது வெளியாதல் காண்க. ஒரு காணம் நான்கு குன்றி எடையுடைது. இனி, கையிலொன்றும் காணமில்லைக் கழலடி தொழுதுய் யினல்லால் 2 என்னும் சுந்ததரமூர்த்தி சுவாமிகள் திருவாக்கிலும், ஈசன்றன்னையேத்தினவென்று-காசும் பொன்னுங் கலந்து தூவியும் 3 என்னும் பட்டினத்தடிகள் திருவாக்கிலும், ஏருடைய விழுக்கழஞ்சிற் - சீருடைய விழைபெற்றிசினே 4 என்னும் புறப்பாட்டடிகளிலும் காணம், கழஞ்சு, காசு, பொன் என்பவை பயின்று வருதல் காண்க. 9. கிராமசபை பாண்டியரது ஆட்சிக் காலங்களில் ஊர்தோறும் கிராம சபையிருந்தது. இச்சபையினரே அங்கு நடைபெற வேண்டிய எல்லா வற்றையும் நிறைவேற்றி வந்தனர். சுருங்கச் சொல்லுமிடத்து, அந்நாளில் கிராம ஆட்சி முழுமையும் இச்சபையாரால்தான் நடந்தப்பட்டுவந்தது எனலாம். இச்சபையின் உறுப்பினர் எல்லோரும் பொதுமக்களால் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர் ஆவர். சிற்றூர்கள் சிலவற்றை ஒன்றாகச் சேர்த்து அங்கும் கிராமசபை அமைத்து வந்தனர் நிலமும் சொந்தமனையும் கல்வியறிவும் உடையவர்களாய் அறநெறி வழாது நடப்பவர்களே சபையின் உறுப்பினராதற்கு உரிமை யுடையவர் ஆவர். கிராமசபையில் சில உட்கழகங்களும் இருந்தன. அவை, சம்வற்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்பன. நியாயம் வழங்குவதும், அறநிலையங்களைக் கண்காணிப்பதும் சம்வற்சரவாரியரது கடமையாகும். நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பயன்படச் செய்தல் ஏரிவாரியரது கடமையாகும். நிலங் களைப் பற்றிய எல்லாவற்றையும் கண்காணிப்பது தோட்டவாரியரது கடமையாகும். நாணய ஆராய்ச்சி பொன்வாரியர்க்குரியது. பஞ்சவார வாரியர் என்போர் அரசனுக்குக் குடிகள் செலுத்த வேண்டிய நிலவரியையும் பிறவரிகளையும் வாங்கி அரசாங்கப் பொருள் நிலையத்திற்கு அனுப்புபவர் ஆவர். கிராமசபையின் உறுப்பினரைப் பெருமக்கள் எனவும், ஆளுங்கணத்தார் எனவுங் கூறுவர். இவர்கள் ஏதேனும் குற்றம் பற்றி இடையில் விலக்கப்பட்டாலன்றி ஓராண்டு முடிய எவ்வகை ஊதியமும் பெறாமல் தம் வேலைகளைச் செய்தற்கு உரிமை உடையவராவர். இவர்கள் கூடித் தம் கடமைகளை நிறைவேற்றுதற்கு ஊர்தோறும் பொது மன்றங்கள் இருந்தன. சில ஊர்களில் திருக்கோயில் மண்டபங்களை இன்னோர் தம் கருமங்களைப் புரிவதற்குப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. சபையின் உறுப்பினரைக் குடவோலை வாயிலாகத் தெரிந் தெடுக்கும் முறைகள் தொண்டை மண்டலத்தில் உத்தரமேரூரிலுள்ள ஒரு கல்வெட்டில் விளக்கமாகவும் விரிவாகவும் வரையப்பட்டுள்ளன. அவை முதற்பராந்தக சோழனது ஆணையின்படி கி. பி. 921-ல் பொறிக்கப் பெற்றன. அம்முறைகளே நம் தமிழகம் முழுவதும் பரவியிருந்தவை என்பதிற் சிறிதும் ஐயமில்லை. ஆயினும், சில இடங்களில் ஊர் நிலைமைக் கேற்றவாறு சிற்சில விதிகளைமாற்றியும் இன்றியமையாத வற்றைச் சேர்த்தும் உள்ளனர் என்பது சில ஊர்களில் காணப்படும் கல்வெட்டுகளால் தெரிகிறது. எனவே, அரசாங்க அதிகாரிகளின் முன்னிலையில் ஊர்ச்சபையார் கிராம ஆட்சிக்கு உரிய புதிய விதிகளை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தமை புலனாதல் அறிக. திருநெல்வேலியிலிருந்து சங்கரநயினார் கோயிலுக்குச் செல்லும் பெருவழியில் ஒன்பது மைல் தூரத்திலுள்ள மானூரில் காணப்படும் ஒரு கல்வெட்டு, கிராமசபையில் உறுப்பினராதற்கு உரியவர்களின் மிகக் குறைந்த தகுதிகள் யாவை என்பதை விளக்குகின்றது.1 இது மிக்க பழமை வாய்ந்த கல்வெட்டாகும். எனவே, பாண்டிமண்டலத்தில் கிராமசபையின் உறுப்பினரைத் தெரிந்தெடுத்தற்குக் கையாண்ட முறைகள் தமிழகத்திலுள்ள பிற மண்டலங்களிலும் வழங்கி வந்தவைகளே என்பது தெளிவாதல் காண்க. இனி, கடைச்சங்கப் புலவருள் ஒருவராகிய மதுரை மருதனிள நாகனார் என்பார், கயிறுபிணிக் குழிசியோலை கொண்மார் –பொறி கண்டழிக்கு மாவணமாக்களின் 2 என்று அகப்பாட்டில் கூறியிருத்தலின் அந்நாளிலும் குடவோலை எடுக்கும் வழக்குண்மை உணர்க. 10. ஆவணக்களரி அந்நாளில் ஒவ்வோர் ஊரிலும் எழுதப்பட்ட ஆவணங் களைக் காப்பிட ஆவணக்களரியும் (Registration Office) இருந்தது.3 பாண்டி மண்டலத்திலிருந்த ஆவணக்களரிகளைச் சில ஊர்களில் ஆவணக்களம் என்றும் வழங்கியுள்ளனர். நிலத்தை விற்போரும் வாங்குவோரும் ஆவணத்துடன் அங்குச் சென்று, நிலத்தின் பரப்பையும் விலையையும் நான் கெல்லையையும் தெரிவித்துத் தம் உடன்பாட்டிற்கும் உறுதிமொழி கூறி, ஆவணம் காப்பிடப்பெற்ற பின்னர்த் திரும்புவது வழக்கமாகும். இவ்வாவணம் என்றும் பயன்படக் கூடியதாயிருப்பின் அவ்வூரிலுள்ள கோயிற் சுவரில் பொறித்து வைக்குமாறு செய்வர். 11. படை பாண்டிய அரசர்கள்பால் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நான்கும் அக்காலத்தில் இருந்தன என்று தெரிகிறது. கொற்கை, தொண்டி முதலான கடற்றுறைப் பட்டினங்களில் ஆண்டு தோறும் பதினாயிரம் குதிரைகள் வந்திறங்கின என்று வாசப் என்னும் ஆசிரியன் கூறியுள்ளமையாலும், மார்க்கப்போலோ என்பான் பாண்டியர்கள் குதிரைகள் வாங்குவதில் பெரும் பொருளைச் செலவிட்டு வந்தனர் என்று குறித்துள்ளமையாலும் பாண்டியர்களிடத்தில் சிறந்த குதிரைப்படை அந்நாளில் இருந்தது என்பது நன்கு அறியக் கிடக்கின்றது. அன்றியும், வாட்போரில் வல்ல வீரர்களடங்கிய பெரிய காலாட் படைகளும் இருந்தன. பெரும் படையோம் என்று கையெழுத்திட்ட சில குழுவினர் பாண்டி மண்டலத்தில் கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டிருப்பது உணரற்பாலது. முனையெதிர்மோகர் தென்னவன் ஆபத்துதவிகள் என்னும் படைகளும் பாண்டியர்பால் இருந்தமை கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது. பாண்டியரது தலைநகராகிய மதுரையில் உரோமாபுரிப் போர்வீரர்கள் கோட்டை வாயிலைக் காத்துவந்த செய்தி, கடிமதில் வாயிற் காவலிற் சிறந்த -அடல்வாள் யவனர் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. 1 எனவே, கி. பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளில் மேனாட்டினரான உரோமாபுரி வீரர்கள் தமிழ் வேந்தரான பாண்டியரது படைகளில் போர் வீரர்களாக இருந்து வேலைபார்த்து வந்தனர் என்பது வெளியாதல் காண்க. 12. வாணிகமும் கைத்தொழிலும் பாண்டி நாட்டில் முற்காலத்தில் வாணிகம் செழிப்புற்றிருந்தது என்பதற்கு மதுரை, கொற்கை முதலான நகரங்களிலும் அவற்றிற்கு அண்மையிலும் கிடைத்துள்ள அளவற்ற உரோமாபுரி நாணயங்களே சான்று பகரும். உள்நாட்டில் பண்டங்களை ஓரிடத்திலிருந்து பிறிதோரிடத்திற்குக் கொண்டுபோய் விற்பதற்குப் பேருதவியாயிருப்பன அந்நாட்டிலுள்ள பல பெருவழிகளேயாகும். அத்தகைய பெரு வழிகள் பாண்டிநாட்டில் யாண்டும் இருந்தன. வணிகர் பண்டங்களை ஏற்றிச் செல்லுவதற்குக் கோவேறு கழுதைகளும் வண்டிகளும் பெரிதும் பயன்பட்டன. இடையில் களவு நிகழாதவாறு இன்றியமையாத இடங்களில் காவற்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. வணிகர்களும் பெருங்கூட்டமாகச் செல்வது வழக்கம். அக்கூட்டதிற்கு வாணிகச் சாத்து என்பது பெயராகும். வணிகருள் சிறந்தோர்க்கு எட்டி என்ற பட்டமும் தமிழ் வேந்தரால் வழங்கப்பெற்று வந்தது. பாண்டிநாட்டில் கொற்கைப் பெருந்துறைக்கருகில் கடலில் முத்துக் களும் சங்குகளும் மிகுதியாகக் கிடைத்து வந்தன. கொற்கை முத்துக்கள் உலகில் எங்கும் பெறவியலாத அத்துணைச் சிறப்பு உடையனவாம். இவற்றின் பெருமையினை, மறப்போர்ப் பாண்டிய ரறத்திற் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து (அகம்.27) எனவும், வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன் புகழ்மலி சிறப்பிற் கொற்கை முன்றுறை யவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து (அகம்.201) எனவும் வரும் அகநானூற்றுப் பாடல்களாலும் நன்குணரலாம். அன்றியும், மதுரைக்காஞ்சி,1 சிறுபாணாற்றுப்படை2 சிலப்பதிகாரம்3 ஆகிய நூல்களிலும் இவற்றின் சிறப்பைக் காணலாம். இம்முத்துக்களால் பாண்டிய அரசர்கட்கு ஆண்டுதோறும் பெரும்பொருள் கிடைத்து வந்தது. முத்துக்குளித்தல், சங்கறுத்து வளையல்செய்தல், உப்பு விளை வித்தல், நூல்நூற்றல், ஆடைநெய்தல் ஆகிய தொழில்கள் பாண்டிநாட்டில் நடைபெற்றுவந்தன. மதுரைமாநகரில், நுண்ணிய பருத்தி நூலினாலும் எலிமயிரினாலும் பட்டு நூலினாலும் அந்நாளில் ஆடைகள் நெய்யப்பட்டுவந்தன என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்படுகின்றது.4 இவற்றால் பண்டைக்காலத்தில் பாண்டிநாட்டார் நெய்தல் தொழிலில் சிறந்து விளங்கினர் என்பது நன்கு விளங்கும். முத்துக்களும் பல்வகை ஆடைகளும் மேனாடுகளுக்கு அனுப்பப் பெற்றன. மேனாடுகளிலிருந்து குதிரைகளும்1 மது வகைகளும்2 கண்ணாடிச் சாமான்களும் கொற்கைப் பெருந்துறையில் வந்திறங்கின. அன்றியும், கீழ்நாடுகளிலிருந்து கர்ப்பூரம் முதலான பொருள்களும் அங்கு வந்திறங்கின. உள்நாட்டு வாணிகமும் புறநாட்டு வாணிகமும் செழித் திருந்தமையின், பாண்டிவேந்தர்க்குச் சுங்க வரியினால் ஆண்டுதோறும் மிகுந்த பொருள் கிடைத்து வந்தமை அறியற்பாலது. கப்பல்கள் கடலில் திசை தடுமாறாமல் துறைமுகப் பட்டினங் களுக்கு வந்தசேருமாறு கொற்கை, தொண்டி முதலான கடற்கரைப் பட்டினங்களில் கலங்கரை விளக்கங்கள் (Light Houses) அமைக்கப் பட்டிருந்தன. வாணிகத்தின்பொருட்டு வெளிநாடு களிலிருந்து வந்திருந்த யவனரும்3 சோனகரும் 4 பாண்டிநாட்டு மக்களோடு வேறுபாடின்றி இனிது வாழ்ந்துவந்தனர். எனவே, பாண்டிநாடு பழைய காலத்தில் கைத்தொழிலிலும் வாணிகத்திலும் சிறந்து விளங்கியமை காண்க. 13. கல்வி பாண்டிவேந்தர்கள் சிறந்த தமிழ்ப் புலமை வாய்ந்தவர்கள் என்பது சங்கத்துச் சான்றோர் தொகுத்துள்ள தொகை நூல்களால் நன்கு துணியப்படும். ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும் -மூத்தோன் வருக வென்னா தவருள்- அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் என்பது பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்று. மக்கட்குக் கல்வி இன்றியமையாதது என்னும் உண்மையை எவ்வளவு தெளிவாக இவ்வேந்தன் விளக்கியுள்ளான் என்பது ஈண்டு அறியத்தக்கது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஒருமுறை வஞ்சினங்கூற நேர்ந்த போது, உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பிற் - புலவர் பாடாது வரைகவென் நிலவரை என்றுரைத் துள்ளமை இவன் புலவர் பெருமக்கள்பால் எத்துணை மதிப்பு வைத்திருந்தான் என்பதை இனிது விளக்குகின்றது. அறிஞர் பெருமான் களான இத்தகைய அரசர்கள் ஆட்சிபுரிந்த நாட்டில் கல்வி பரவியிருத்தல் வேண்டும் என்பதில் ஐயமில்லை. புலவர் பெருமக்கள் பால் இவர்கள் காட்டிய அன்பும் ஆதரவும் அளவிட்டுரைக்கத் தக்கனவல்ல. கடைச்சங்க காலத்தில் சமயம், குலம், தொழில் இவற்றில் எவ்வித வேறுபாடுமின்றி ஆண்பாலரும் பெண்பாலரும் கல்வி கற்றுச் சிறந்த புலமை எய்தியிருந்தனர் என்பது சங்க நூல்களால் பெறப்படுகின்றது. முதல், இடை, கடை ஆகிய மூன்று தமிழ்ச் சங்கங்களும் பாண்டியர்களால் ஆதரிக்கப்பட்டு, நடைபெற்று வந்தன. முதற் சங்கத்தையும் இடைச் சங்கத்தையும் பற்றி ஆராய்ச்சியாளர் களுக்குள் கருத்து வேறுபாடும் ஐயமும் நிகழினும், கடைச் சங்கத்தைப் பற்றி ஐயுறவு ஏற்படுவதற்குச் சிறிதும் இடமில்லை. இஃது எவ்வாறயினும் பண்டைக் காலத்தில் மதுரைமா நகரில் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்தது என்பதும், அது தமிழ்மொழி வளர்ச்சியில் ஈடுபட்டு உழைத்துவந்தது என்பதும் உண்மைச் செய்திகளேயாம். பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ் 1 என்னும் ஔவைப் பிராட்டியார் திருவாக்கும், வீயாத் தமிழுடையான்-பல்வேற்கடற்றானைப் பாண்டியன் 2 என்னும் பழம்பாடற் பகுதியும், தமிழ் நிலைபெற்ற தாங்கருமரபின்-மகிழ்நனை மறுகின் மதுரை 3 என்னும் இடை கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் கூற்றும், தமிழ்வையைத் தண்ணம்புனல் 4 என்னும் பரிபாடற் பகுதியும் தமிழ் மொழி பாண்டிநாட்டில் முற்காலத்தில் எய்தியிருந்த உயர்நிலையை நன்கு விளக்குதல் காண்க. அன்றியும், புலவர் பெருமான்களாகிய இளங்கோவடிகளும் 5 சேக்கிழாரும் 6 கம்பரும் 1 பாண்டி நாட்டையே செந்தமிழ்நாடு என்று தம் அரிய நூல்களில் குறித்திருப்பது உணரற்பாலது. தமிழ் மொழிக்கு இருபெருங் கண்களாகவுள்ள தொல்காப்பியமும் திருக்குறளும் பாண்டியர் தலைமையில் அரங்கேற்றப் பெற்ற பெரு நூல்கள் என்பது கற்றோர் யாவரும் அறிந்ததேயாகும். எனவே, அந்நாளில் நம் தமிழ்த் தாய்க்குத் தொண்டுபுரிந்து பெருமையுற்றது பாண்டி மண்டலம் என்று கூறுவது சிறிதும் புனைந்துரையன்று. இனி, தொடக்கக் கல்வி நாட்டில் பரவுவதற்குப் பாண்டியர்கள் புரிந்தன யாவை என்பது புலப்படவில்லை. ஆயினும், ஊர்தோறும் இளைஞர்கள் கல்வி கற்பதற்குப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. அவற்றை நிறுவி நடத்தி வந்த ஆசிரியன்மார் பாலாசிரியர் எனவும், கணக்காயர் எனவும் வழங்கப்பெற்று வந்தனர் என்பது சங்க நூல்களாலும் பல கல்வெட்டுகளாலும் அறியப்படுகின்றது. இளஞர்கட்குக் கல்வி கற்பித்துவந்த அந்தப் பாலாசிரியரும் கணக்காயரும் இயற்றிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை முதலான சங்க நூல்களில் காணப் படுகின்றன. எனவே, அக்காலத்தில் இளஞ்சிறார்க்கு எழுத்தறிவித்த ஆசிரியன்மாரும் சிறந்த புலவர்களாக இருந்தனர் என்பது தேற்றம். பாண்டிய அரசர்களும் மற்றையோரும் குல வேறுபாடு கருதாமல் கற்றவர்கள் எல்லோரையும் ஒருங்கே பாராட்டி மதித்துவந்தமையோடு அன்னோர்க்குப் பொருளுதவிபுரிந்தும் வந்தனர். முற்காலத்தில் நாட்டில் கல்வி பரவியிருந்தமைக்குக் கராணம் இதுவே யாகும். 14. சமயநிலையும் கோயில்களும் பாண்டியர் எல்லாரும் சைவர். பாண்டிநாட்டை உமா தேவியார் மீனாட்சியம்மை என்ற பெயருடன் ஆட்சிபுரிந்தனர் என்பதும் சிவபெருமான் அவ்வம்மையாரை மணந்து சோம சுந்தரபாண்டியர் என்னும் பெயருடன் அந்நாட்டை அர சாண்டனர் என்பதும் புராணச் செய்திகளாகும். பாண்டி நாட்டு மக்களுள் பெரும் பகுதியினர் சைவ சமயத்தினர்; ஏனையோர் வைணவராகவும் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். பாண்டிநாட்டூர்களில் சிவாலயங்களும் விண்ணகரங்களும் அருகன் கோட்டங்களும் புத்தப் பள்ளிகளும் இருந்தன. பாண்டியரும் சமயப் பொறுமை யுடையவராய் எல்லா மதத்தினரையும் ஆதரித்து அவர்கள் கோயில்களுக்கு நிபந்தங்கள் விட்டுள்ளனர். எனவே, சங்ககாலத்தில் சமயச் சண்டைகளும் அவற்றால் மக்களுக்குள் உணர்ச்சி வேறுபாடு களும் நிகழவில்லை என்பது தெள்ளிது. ஆயினும், பிற் காலங்களில் சில இடங்களில் சமயப்பூசல்கள் நேர்ந்துள்ளன என்பது யாவரும் அறிந்ததே. ஒவ்வொரு சமயத்தினரும் தம்தம் சமயத்தினை யாண்டும் பரப்ப வேண்டும் என்றெண்ணி முயன்று வந்தமையே சமயப் பூசல்களுக்குக் காரணமாகும். சிவாலயங்களிலும் விண்ணகரங்களிலும் திங்கள் தோறும் முழுமதி நாட்களில் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. அரசர்களும் தலைவர்களும் தாம்பிறந்த நாட்களில் விழாக்கள் நடத்துவதற்கு இறையிலி நிலங்களும் பொருளும் அளித்துள்ளனர். அன்றியும், தேவாரப்பதிகங்களையும் திருவாய் மொழியையும் சைவ வைணவ ஆலயங்களில் நாள்தோறும் இன்னிசையுடன் ஓதுவதற்கு அன்னோரால் நிபந்தங்கள் விடப்பட்டிருந்தன. இசை, நடனம், கூத்து முதலான கலை களின் வளர்ச்சிக்கும் கோயில்கள் அக்காலத்தில் பெரிதும் உதவிபுரிந்து வந்தன என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஊரானோர் தேவகுலம் என்பதற்கேற்பப் பாண்டி நாட்டில் பல செங்கற் கோயில்களையும் கற்றளிகளையும் வேந்தரும் பிறரும் எடுப்பித்து வந்தமையின், சிற்பம் ஓவியம் இவற்றில் வல்லவர்களும், செப்புத் திருமேனிகளும் கற்படிமங்களும் அமைப்பவர்களும் அணிகலன்கள் செய்பவர்களும் நன்கு ஆதரிக்கப்பட்டனர். எனவே, இக்கலைகளும் ஆலயங்களால் வளர்ச்சி யுற்று வந்தன எனலாம். அந்நாளில் அன்பர் பலர் ஆலயங்களுக்குப் பெரும் பொருள் அளித்துவந்தமையின் அவை செல்வநிலையில் சிறந்து விளங்கின. ஆதலால், இக்காலத்துள்ள ஐக்கிய சங்கங்கள்போல் கோயில்களும் பொதுமக்களுக்குக் கடன் கொடுத்து உற்றுழி உதவி வந்தன. அவ்வாறு கொடுக்கப்பெற்ற கடன் தொகை களுக்குப் பலிசையாகக் கோயில்களுக்கு வேண்டப்படும் பண்டங்கள் வாங்கப் பெற்று வந்தன. நாள்தோறும் உச்சியம்போதில் அடியார்களுக்குக் கோயில்களில் அன்னம் அளிப்பது வழக்கம். சில ஆலயங்களில் புத்தகசாலைகள் இருந்தன.1 அவற்றைப் பாதுகாத்தற்குப் பொதுமக்கள் பொருளுதவி புரிந்துள்ளனர் என்பது சில கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது. கோயிற் காரியங்களைச் சில ஊர்களில் அரசாங்க அதிகாரிகளும், வேறு சில ஊர்களில் ஊர்ச்சபையினரும் நடத்திவந்தனர் என்று தெரி கின்றது. அரசர்களும் பிற அரசியல் தலைவர்களும் நாட்டைச் சுற்றிப்பார்த்து வருங்கால், கோயில்களும் மற்ற அறநிலையங்களும் திட்டப்படி நடத்தப் பெற்று வருகின்றனவா என்று கண்காணித்து வந்தனர். தவறுகளும் ஊழல்களும் காணப்படின் கண்ணோட்டமின்றித் தக்க தண்டனை விதிப்பது உண்டு. கோயில்தோறும் காணப்படும் எண்ணிறந்த கல்வெட்டுக்கள் நம் நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கு ஏற்ற கருவிகளாக அமைந்திருக் கின்றன. கோயிலைப் புதுப்பிக்க விரும்புவோர் முதலில் அரசாங்க உத்தரவு பெற்று, கல்வெட்டுக்களைப் படியெடுத்து வைத்துக் கொண்டு திருப்பணி முடிந்த பின்னர், அதிகாரிகள் குறிப்பிட்ட இடங்களில் அவற்றை மீண்டும் எழுதுவித்தல் வேண்டுமென்பது அரசரது ஆணை யாகும். 15. சில பழைய வழக்கங்கள் அரசர்கள் தாம் முடிசூடும் நாளில் இறை தவிர்த்தமையும், தம் சிங்காதனங்களுக்கு மழவராயன், காலிங்கராயன், முனைய தரையன், பல்லவராயன் எனப்பெயரிட்டு வழங்கியமையும் அரசர்கள் உத்தரவு பிறப்பிக்கும்போது இன்னவிடத்தில் இன்ன காரியம் செய்து கொண்டிருந்தபோது இவ்வாணை பிறந்த தென்று திருமுகங்களில் வரைந்தனுப்புவதும், அரசர்கள் தம் பிறந்தநாள் விழாக்கள் ஆண்டு தோறும் கோயில்களில் நடை பெறுமாறு பொருளும் நிலமும் அளித்து வந்தமையும், போரில் இறந்த வீரர்களின் மனைவி மக்கட்கு உதிரப்பட்டி என்னும் பெயரால் இறையிலி நிலங்கள் வழங்கி அன்னோரை ஆதரித்து வந்தமையும் பாண்டியர் ஆட்சியிற் கண்ட பழைய வழக்கங்க ளாகும். பாண்டியர் வரலாறு முற்றும்.  சேர்க்கை 1 பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளும் மெய்க்கீர்த்திகளும் 1. நெடுஞ்சடையன் பராந்தகன் வேள்விக்குடிச் செப்பேடுகள் கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந்தவிர்த்த பல்யாகமுதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதி ராசனால் நாகமா மலர்ச்சோலை நளிர்சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாத கொற்கைகிழா னற்கொற்றன் கொண்டவேள்வி முற்றுவிக்கக் கேள்வியந்த ணாளர்முன்பு கேட்கவென் றெடுத்துரைத்து வேள்விச்சாலைமுன்புநின்று வேள்விக்குடியென் றப்பதியைச் சீரோடு திருவளரச் செய்தார்வேந்த னப்பொழுதே நீரோடட்டிக் கொடுத்தமையா னீடுபுக்தி துய்த்தபின் அளவரிய வதிராசரை யகலநீக்கி யகலிடத்தைக் களப்பரனெனுங் கலியரைசன் கைக்கொண்டதனை யிறக்கியபின் படுகடன்முளைத் பருதிபோற் பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதி ரவிரொளி விலகவீற் றிருந்து வேலைசூழ்ந்த வியலிடத்துக் குறும்பும்பhîl‹ முருக்கிக் காலோச்சிtண்குடைநீHற் காË நிறைந்த தரணி மங்கையைப் பாலுரிமை திறவிதி நீக்கித் தன்பா லுரிமை நன்கன மமைத்த மானம் போர்த்த தானை வேந்தன் ஒடுங்கா மன்ன ரொளிநக ரழித்த கடுங்கோ னென்னுங் கதிர்வேற் றென்னன் மற்றவற்கு மகனாகி மகீதலம்பொதுநீக்கி மலர்மங்கையொடு மணனயர்ந்த அற்றமில் பரவைத்தானை யாதிராச னவனிசூளாமணி எத்திறத்து மிகலழிக்கு மத்தயானை மாறவர்மன் மற்றவர்க்கு, மருவினியவொரு மகனாகி மண்மகளை மறுக்கடிந்து விக்கிரமத்தின் வெளிப்பட்டு விலங்கல் வெல்பொறி வேந்தர் வேந்தன் சிலைத்தடக்கைக் கொலைக்களிற்றுச் செழியன் வானவன் செங்கோற் சேந்தன் உதயகிரி மத்தியத் துறுசுடர் போலத் தெற்றென்று திசைநடுங்க மற்றவன் வெளிப்பட்டுச் சூழியானை செலவுந்திப் பாழிவா யமர்கடந்தும் வில்வேலிக் கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும் விரவிவந் தடையாத பரவரைப் பாழ்படுத்தும் அறுகாலினம் புடைதிளைக்குங் குறுநாட்டவர் குலங்கெடுத்தும் கைந்நலத்த களிறுந்திச் செந்நிலத்துச் செருவென்றும் பாரளவுந் தனிச்செங்கோற் கேரளனைப் பலமுறையும் உரிமைச் சுற்றமு மாவும் யானையும் புரிசை ம()மதிற் புலியூ ரப்பகல் நாழிகை யிறவாமைக் கோழியுள் வென்றுகொண்டும் வேலாழியும் வியன்பரம்பு மேலாமைசென் றெறிந்தழித்தும் இரணியகர்ப்பமுந் துலாபாரமுந் தரணிமிசைப் பலசெய்து அந்தணர்க்கு மரசர்க்கும் வந்தணைகென் றீத்தளித்த மகரிகையணி மணிநெடுமுடி அரிகேசரி யசமசமன் சிரீமாறவர்மன் மற்றவற்கு மகனாகிக் கொற்றவேல் வலனேந்திப் பொருதூருங் கடற்றானையை மருதூருண் மாண்பழித் தாய்வேளை யகப்பட வேயென்னாமை யெறிந்தழித்துச் செங்கோட்டும் புதான்கோட்டுஞ் செருவென்றவர் சினந்தவிர்த்துக் கொங்கலரு நறும்பொழில்வாய்க் குயிலோடு மயிலகவும் மங்கலபுரமெனு மாநகருண் மாரதரை யெறிந்தழித் தறைகடல் வளாகம் பொதுமொழி யகற்றிச் சிலையும் புலியுங் கயலுஞ் சென்று நிலையமை நெடுவரை யிடவயிற் கிடாஅய் மண்ணினி தாண்ட தண்ணளிச் செங்கோற் றென்ன வானவன் செம்பியன் சோழன் மன்னர் மன்னன் மதுரகரு நாடகன் கொன்னவின்ற நெடுஞ்சுடர்வேற் கொங்கர்கோமான் கோச்சடையன் மற்றவர்க்குப் புத்திரனாய் மண்மகளது பொருட்டாக மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்திக் கடுவிசையா லெதிர்ந்தவரை நெடுவயல்வாய் நிகரழித்துக் கறுவடைந்த மனத்தவரைக் குறுமடைவாய்க் கூர்ப்பழித்து மன்னிகுறிச்சியுந் திருமங்கையு முன்னின்றவர் முரணழித்து மேவலோர் கடற்றானையோ டேற்றெதிர்ந்தவரைப் பூவலூர்ப் புறங்கண்டும் கொடும்புரிசை நெடுங்கிடங்கிற் கொடும்பா ளூர்க்கூடார் கடும்புரியுங் கருங்களிறுங் கதிர்வேலிற் கைக்கொண்டும் செழும்புரவிப் பல்லவனைக் குழும்பூருட்டேசழிய எண்ணிறந்த மால்களிறு மிவுளிகளும் பலகவர்ந்தும் தரியலராய்த் தனித்தவரைப் பெரியலூர்ப் பீடழித்தும் பூவிரியும் பொழிற்சோலைக் காவிரியைக் கடந்திட் டழகமைந்த வார்சிலையின் மழகொங்க மடிப்படுத்தும் ஈண்டொளிய மணியிமைக்கு மெழிலமைந்த நெடும்புரிசைப் பாண்டிக்கொடுமுடி சென்றெய்திப் பசுபதியதுபதுமபாதம பணிந்தேத்திக் கனகராசியுங் கதிர்மணியு மனமகிழக் கொடுத்திட்டுங் கொங்கரவ நறுங்கண்ணிக் கங்கராசனொடு சம்பந்தஞ்செய்தும் எண்ணிறந்தன கோசகசிரமு மிரணியகர்ப்பமுந் துலாபாரமும் மண்ணின்மிசைப் பலசெய்து மறைநாவினார் குறைதீர்த்துங் கூடல்வஞ்சி கோழியென்னு மாடமாமதில் புதுக்கியும் அறைகடல் வளாகங் குறையா தாண்ட மன்னர் மன்னவன் றென்னவர் மருகன் மான வெண்குடை மான்றேர் மாறன் மற்றவற்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு மூன்று கொற்ற முரசுட னியம்பக் குளிர் வெண்குடை மண்காப்ப பூமகளும் புலமகளு நாமகளு நலனேத்தக் கலியரசன் வலிதளரப் பொலிவினொடு வீற்றிருந்து கருங்கட லுடுத்த பெருங்கண் ஞாலத்து நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக் கருதாதுவந் தெதிர்மலைந்த காடவனைக் காடடையப் பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் றென்கரைமேற் றண்ணாக மலர்ச்சோலைப் பெண்ணாகடத் தமர்வென்றும் தீவாய வயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த ஆய்வேளையுங் குறும்பரையும் மடலமரு ளழித்தோட்டிக் காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குறும்பிற் செருவென்றும் அறைகடல் வளாக மொருமொழிக் கொளீஇய சிலைமலி தடக்கைத் தென்ன வானவன் அவனே, சீரீவரன்சிரீ மனோகரன் சினச்சோழியன் புனப்பூழியன் வீதகன்மஷன் விநயவிச்சுருதன் விக்ரமபாரகன் வீரபுரோகன் மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்திதவீரன் கிரிதிரன் கீதகிந்நரன் கிருபாலயன் கிருதாபதானன் கலிப்பகை கண்டகநிஷ்டூரன் கார்யதக்ஷிணன் கார்முக பார்த்தன் பராந்தகன் பண்டிதவத்ஸலன் பரிபூரணன் பாபபீரு குரையுறு கடற்படைத்தானைக் குணக்கிராகியன் கூட நிர்ணயன் நிரையுறுமலர் மணிநீண்முடி நேரியர்கோ னெடுஞ்சடையன் மற்றவன்றன் ராஜ்யவற்சரம் மூன்றாவது 2. நெடுஞ்சடையன் பராந்தகன் சீவரமங்கலச் செப்பேடுகள் அன்ன னாகிய வலர்கதிர் நெடுவேற் றென்னன் வானவன் செம்பியன் வடவரை இருங்கய லாணை யொருங்குட னடாஅய் ஒலிகெழு முந்நீ ருலகமுழு தளிக்கும் வலிகெழு திணிதோண் மன்னவர் பெருமான் தென்னல ராடி தேம்புனற் குறட்டிப் பொன்மலர்ப் புறவில் வெள்ளூர் விண்ணஞ் செழியக் குடியென் றிவற்றுட் டெவ்வர் அழியக் கொடுஞ்சிலை யன்றுகால் வளைத்தும் மாயிரும் பெரும்புனற் காவிரி வடகரை ஆயிர வேலி யயிரூர் தன்னிலும் புகழி யூரிலுந் திகழ்வே லதியனை ஒடுபுறங் கண்டவ னொலியுடை மணித்தேர் ஆடல் வெம்மா வவையுடன் கவர்ந்தும் பல்லவனுங் கேரளனு மாங்கவற்குப் பாங்காகிப் பல்படையொடு பார்ஞெளியப் பவ்வமெனப் பரந்தெழுந்து குடபாலுங் குணபாலு மணுகவந்து விட்டிருப்ப வெல்படையொடு மேற்சென்றங் கிருவரையு மிருபாலு மிடரெய்தப் படைவிடுத்துக் குடகொங்கத் தடன் மன்னனைக் கொல்களிற்றோடுங் கொண்டுபோந்து கொடியணிமணி நெடுமாடக் கூடன்மதி லகத்துவைத்தும் கங்கபூமி யதனளவுங் கடிமுரசுதன் பெயரறையக் கொங்கபூமி யடிப்படுத்துக் கொடுஞ்சிலைப்பூட் டிழிவித்துப் பூஞ்சோலை யணிபுறவிற் காஞ்சிவாய்ப்பே ரூர்புக்குத் திருமாலுக் கமர்ந்துறையக் குன்ற மன்னதோர் கோயி லாக்கியும் ஆழிமுந்நீ ரகழாக வகல்வானத் தகடுரிஞ்சும் பாழிநீண்மதில் பரந்தோங்கிப் பகலவனு மகலவோடும் அணியிலங்கையி னரணிதாகி மணியிலங்கு நெடுமாட மதில்விழிஞ மதுவழியக் கொற்றவேலை யுறைநீக்கி வெற்றத்தானை வேண்மன்னனை வென்றழித்தவன் விழுநிதியோடு குன்றமன்ன கொலைக்களிறுங் கூந்தன்மாவுங் குலதனமு நன்னாடு மவைகொண்டும் அரவிந்த முகத்திளையவ ரரிநெடுங்க ணம்புகளாற் பொரமைந்தர் புலம்பெய்தும் பொன்மாட நெடுவீதிக் கரவந்தபுரம் பொலிவெய்தக் கண்ணகன்றதோர் கல்லகழோடு விசும்புதோய்ந்து முகிறுஞ்சலி னசும்பறாதவகன் சென்னி நெடுமதிலை வடிவமைத்தும் ஏவமாதி விக்கிரமங்க ளெத்துணையோ பலசெய்து மணிமாடக் கூடல்புக்கு மலர்மகளோடு வீற்றிருந்து மனுதர்சித மார்க்கத்தினார் குருசரிதங் கொண்டாடிக் கண்டகசோதனை தான்செய்து கடன்ஞால முழுதளிக்கும் பாண்டிய நாதன் பண்டித வத்ஸலன் வீரபுரோகன் விக்கிரம பாரகன் பராந்தகன் பரம வைஷ்ணவன் றானாகி நின்றிலங்கு மணிநீண்முடி நிலமன்னவ நெடுஞ்சடையற்கு ராஜ்யவர்ஷம் -பதினேழாவது 3. சடைய வர்மன் - பராந்தக பாண்டியன் செப்பேடுகள் ஓங்குதிரை வியன்பரப்பில் உததிஆ லயமாகத் தேங்கமழு மலர்நெடுங் கட்டிசைமகளிர் மெய்காப்ப விண்ணென்பெய ரேயணிய மேகதாலி விதானத்தின் றண்ணிழற்கீழ் ஸஹரபண மணிகிரணம் விளக்கிமைப்ப புஜங்கமபுர ஸரபோகி என்னும்பொங் கணைமீய்மிசைப் பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசைசெவிஉறப் பூதலமக ளொடுபூமகள் பாதபர் ஸனைசெய்யக் கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநாபி மண்டலத்துச் சோதிமர கததுளைத்தாட் சுடர்பொற்றா மரைமலர்மிசை விளைவுறுகளங் கமணியின்மேன் மிளிர்ந்திலங்கு சடைமுடிஓ டளவியன்ற கமண்டலுவோ டக்ஷமாலை ஒடுதோன்றின சதுர்ப்புஜந் சதுர்வ் வக்த்ரந்சதுர்வ் வேதிசதுர்த்வயாக்ஷந் மதுக்கமழ்மலர்க் கமலயோனி மனந்தந்த மாமுனி அத்ரி அருமரவிற் பலகாலந்தவஞ்செய்வுழி அவன்கண்ணி லிருள்பருகும் பெருஞ்சோதி இந்துகிரணம் வெளிப்பட்டனன் மற்றவற்கு மகனாகிய மனுநீள்முடிப் புதனுக்கு கற்றைச்செங் கதிர்க்கடவுள் வழிவந்த கழல்வேந்தன் ஏந்தெழிற்றோ ளினளொருநா ளீசனது சாபகெய்தி பூந்தளவ மணிமுறுவற் பொன்னாகிய பொன்வயிற்றுள் போர்வேந்தர் தலைபனிப்ப வந்துதோன்றிய புரூரவர்ப்பின் பார்வேந்த ரெனைப்பலரும் பார்காவல் பூண்டுய்த்தபின் திசையானையின் கும்பகூடத் துலவியசெழு மகரக்குலம் விசையொடுவிண் மீன்னொடுபோர் மிக்கெழுந்த கடற்றிரைகள் சென்றுதன்சே வடிப்பணியஅன்றுநின்ற ஒருவன்பின் விஞ்சத்தின் விக்ஞாபணை யும்பெறலரு நகுஷன்மதவிலாசமும் வஞ்சத்தொழில் வாதாபி சீராவியு மஹோததிகளின் சுருங்காத பெருந்தன்மையும் சுகேதுசுதை சுந்தரதையு மொருங்குமுன்ன மடிநண்ண திருமேனி உயுதலத்தோன் மடலவிழ்ஆ மலுய்த்து மாமுனிபுரோ கிதன்னாகக் கடல்கடைந் தமிர்துண்ணவுங் கயலிணைவட வரைப்பொறித்தும் ஹரிஹயந தாரம்பூண்டு மவன்முடிஒடு வளைஉடைத்தும் விரிகடலைவே லின்மீட்டும் தேவாசுரச் செருவென்றும் அகத்தியனொடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடை வேந்தழித்துந் திசவதனன்ÃD¡F¢ சந்துசெய்துந் தார்த்தராஷ்டிரர் படைமுழுதுங் களத்தவிய பாரதத்துப் பகடோட்டியும் மடைமிகுவேல் வாணர்அநுஜன் வசுசாப மகல்வித்தும் தொன் னகரழித்தும் பரிச்சந்தம்பல கவர்ந்தும் நாற்கடலொரு பகலாடியும் கோடிபொன் னியதிநல்கிக் கலைக்கடலைக் கரைகண்டுபொன் பகடாயிரம் பரனுக்கீயும் உரம்போந்த திண்டோளரைசுககரம் போகித்துறக்க மெய்தியும் பொன்னிமயப் பொருப்பதனில் தன்னிலையிற் கயலெழுதியும் வாயல்மீ மிசைநிமிர்ந்து பலவேண்டி விருப்புற்றுங் காயல்வாய் கடல்போலக் குளம்பலவின் கரையுயரியும் மண்ணதிரா வகைவென்று தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனில் லருந்தமிழ்நற் சங்கம்இரீஇத் தமிழ் வளர்த்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன் கெய்தியும் கடிநாறு கவினலங்கற்களப்பாழர் குலங்களைந்தும் முடிசூடி முரண்மன்னர் எனைப்பலரு முனிகந்தபின் இடையாரையும் எழில்பேணவைக் கூட்டியினிய வெல் கொடிஎடுத்த குடைவேந்தர் திருக்குலத்துக் கோமன்னர் பலரொழிந்தபின் காடவனைக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த கூடலர்கோன் ஸ்ரீவரகுணன் குறைகழற்கோச் சடையற்குச் சேயாகி வெளிப்பட்ட செங்கண்மால் ஸ்ரீவல்லபன் 55 மேய்போயந் தோளியர்கள் வித்யாதர ஹிரண்யகர்ப்ப குண்ணவல மாவென்றுங் குரைகடலீழங் கொண்டும் விண்ணாள வில்லவற்கு விழிஞத்து விடைகொடுத்தும் காடவருக் கடலானூர்ப் பீடழியப் பின்னின்றுங் குடகுட்டுவர் குணசோழர் தென்கொங்கர் வடபுலவர் 60 அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்படத்தன் களிறொன்று வண்குடையதைக் கதி.... காட்டியமபுரசீலன்ஒளிறிலைவேலதுபாயபகு...y‹ உம்பர்வான் உலகணைந்தபின் மற்றவற் குமகனாகிய கொற்றவனங் கோவரகுணன் பிள்ளைபிறை சடைக்கணிந்த விடையேறி எம்பெருமானை 65 உள்ளத்தி லினிதிருவி உலகங்காக் கின்றநாளில் அரவரைசன் பல்லூழி ஆரமாயி ருந்தலையால் பெரிதரிதின் பொறுக்கின்ற பெரும்போஹமண் மகளைத்தன் தொடித்தோளில் லெளிதுதாங்கிய தொண்டியர்கோன் றுளக்கில்லி யடிப்படைமா னாபரணன் திருமருகன் மயிலையர்கோன் 70 பொத்தப்பிக் குலச்சோழன் புகழ்தருசிரீ கண்டராசன் மத்தமா மலைவலவன் மதிமகளக் களநிம்மடி திருவயிறு கருவுயிர்த்த ஸ்ரீபராந்தக மஹாராஜன் விரைநாமத்தேர் வீரகர்ணன் முன்பிறந்த வேல்வேந்தனைச் செந்தாமரை மலர்ப்பழனச் செழுநிலத்தைச் செருவென்றுங் 75 கொந்தகபூம் பொழிற்குன்றையுங் குடகொங்கினும் பொக்கரணியும் bjன்மாயனுஞ்rழுவெண்கையுபuந்தகன்னுஞ்சிiலக்கÙர்ந்த ம‹மாயமhமிகுத்தவர்வÞதுவாஹdங்கொண்டும் ஆWபலதhன்கண்டும்அkராலையம்பyசெய்துஞ்rறுபடுவி‹யகழனித்jன்விழிஞநfர்கொண்டுங் 80 கொங்கினின்று தேனூரளவும் குடகொங்க ருடல்மடிய வெங்கதிர்வேல் வலங்கொண்டும் வீரதுங்கனைக் குசைகொண்டும் எண்ணிறந்த பிரமதேயமும் எண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த தடாகங்களும் இருநிலத்தி லியற்றுவித்தும் நிலமோங்கும் புகழாலுந் நிதிவழங்கு கொடையாலும் 85 வென்றிப்போர்த் திருவாலும் வேல்வேந்தரில் மேம்பட்ட கதிரார்கடுஞ் சுடரிலைவேல் கலிப்பகை கண்டகோன்(கண்டன்) மதுராபுர பரமேவரன் மாநிநீமகர கேதநன்மன் செங்கோல்யாண்டு ஆறாவதின் மேல்நின்ற தொடர்யாண்டில் பொன்சிறுகா மணிமாடப் புரந்தரனது நகர்போன்ற 90 களக்குடிநா டதனிற்படும் களக்குடிவீற் றிருந்தருள ஆசிநா டதனிற்படும் பிரமதேய மகன்கிடக்கைத் தேசமலிதிரு மங்கலமிது பண்டுபெரு நலனுட் படுவதனைப் பாங்கமைந்த குடிகளது காராண்மை யொடெழுந்த முதுகொம்பர்க் கொடைமுந்து கிடந்ததனைக் 95 கற்றறிந்தோர் திறல்பரவக் களப்பாழரைக் களைகட்ட மற்றிரடோண் மாக்கடுங்கோன் மானபேர்த் தளியகோன் ஒன்றுமொழிந் திரண்டோம்பி ஒருமுத்தீ யுள்பட்டு நன்றுநான் மறைபேணி ஐய்வேள்வி நலம்படுத்து அறுதொழிற்கள் மேம்பட்டு மறைஓர்பந் நிருவர்க்குக் 100 காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச் செப்பேடுசெய்து குடுத்தருளினன் தேர்வேந்தநின் குல முதல்வன் மைப்படுகண் மடமகளிர் மணவேள்மனு ஸமானன்வழுவாjசெங்கோனடÉமண்மகட்கொUகோவாகி¡கழுதூரிšசித்திசெய்jகடிக்கூoனகர்காவல‹ 105 சோமாசி குறிச்சியிது தொல்லைமேற்படி கிடந்ததனை ஸோமபான மநோசுத்தராகிய காடகசோம யாஜியார்க்கு யாகபோக மதுவாக எழிற்செப்பேட் டொடுகுடுத்தனன் ஆகியஇவ் வூரிரண்டின் செப்பேடு மறக்கேட்டில் இழந்துபோ யினவென்றும் ஏதமில்சோமாசி குறிச்சிச் 110 செழுந்தரைய நிலத்துப்படும் நிலத்தைக் கடன்றிருக்கைய கீழ்வன மணிதருபெரு நான்கெல்லை இட்டுக்கொண்டு மற்றதனை மதுரகர நல்லூரென்று பேரிட்டுக் குடிநிலனாகக்கொண்டநிலமதுவும்அவ.......To நிலனாகேய்ந் தவிரயிது தொண்டுசோ மாசிகுறிச்சி 115 மேலைபுரவேற்ப பெ(று)வதென்றும் சொல்லியவூ ரிரண்டுந் தம்மி லெல்லைகலந்து கிடக்குமாதலில் ஒன்றாக வுதவுமென்றும் வாசநாள் மலர்கமழ்பொழில் லாசிநாட்டுள்.... மாகிய கருவமைந்த கனகமாளிகைத் திருமங்கல நகர்த்தோன்ற சோமாசிகுறிச்சில் என்னுங் காமர்வண் பதிகாவலன் 120 வடிவமைவான கோத்திரத்து பௌதாயந சூத்திரத்துக் குடியினனாக வெளிப்பட்டு குணகணங்கட் கிடமாகி மறைநான்கின் துறைபோகிய மாயானமவி பட்டற்குச் சிறுவனாகிய பெருந்தகைஒன் றிசைமுகன்வெளிப் பட்டனையன் தர்ம்ம வத்தசலன் 125 மாயநாரா யணபட்டர் மஹாபந்நி வயிறுயிர்த்த சேயான திருத்தகைஓன் ஸ்ரீநாராயணங் கேசவன் கல்விக்கடல் கரைகண்டு மக்ஷத்தியான மதமுணர்ந்து சொல்வித்தகந் தனதாக்கி சத்சீலா சாரனாகி மீனவன் வீரநாரணற்கு விவாச குணங்கட் 130 கான தன்மையை னாதலில்லரு ளறிந்துவிண்ணப்பஞ்செய மதுரதர நாணுஎனும்வளம்பதிசேhமாசிகுறிச்áஅதன்மேyபுரவேற்¿ஆங்கதுந்திUமங்கலமு«உடன்கூட¥பிடிசூழ்வி¤துலகறிய¡குடுத்தருளின‹வடங்கூLமுலைமகளி®மன்மதவேŸமனுசரித‹ 135 மற்றிதனுக் காணத்தி வண்டமிழ்க் கோன்திக்கி பொற்றடம்பூண் மணிமார்பன் பொழிற்புல்லூ ரெழிற்பூசுரன் செய்யுந்து புனற்செறுவிற் செங்கழுநீர் மலர்படுகர் வைகுந்த வளநாடன் வத்ஸகோத்ர சூடாமணி ஹரிசரண கமலசேகரன் ஆயிரத்தஞ் ஞுற்றுவன் 140 திருமகிழி ளையனக்கன் திசைநிறைபெரும் புகழாளன் அவன்தலம் புகழுநிதி அவனாசூர் குலதிலகன் தாதலர்பூம் பொழிறழுவிச் சாலிவிளை வயல்வளத்தால் மேதகுபுகழ் பேணவுணாட்டு பெருநலூர் வெள்ளி எனப்பெயரிய திருந்துபதிக் குடித்தலைவன் தென்னவன் திரு வருள்சூடிய 145 பெருநலூர் வெள்ளி கிழவனாகிய பெருந்தகைசெந் தனுகிழவன் நலமலிசீர் நடுவுநிலை நன்குநா யகனாகவும் அலர்கமழும் பொனலளித்து நாட்டுக்கக் கிரமாகிய முகில் தோயபொழில் முசுக்குறிச்சி முற்கூடிப்பினோரகார்முளைய அகனிலத்தோர் புகழளத்து நாட்டுக்கோன் னருந்தமிழின் 150 பாத்தொகுதெருள் பயன்தருவோன் கொடைபயில் கற்பக சீலன் சாத்தம்படர் தெனப்பெயரிய தக்கோன் மிக்கோங்கு தலைவனாகிய களாத்திருக்கைப் பேரரண்சூழ் பெருங்காக்கூர்த் குலக்குரிசில் தகுதேய மாணிக்கம் கலைபயில் கிழவகோனும்கணக்Fநருமேவுயிšகணக்கராகவு« 155 மாசில்வான் குடித்தோன்றிய ஆசிநாட்டு நாட்டாரும்மச்சுறுபuமன்னுவந்jநெச்சுரநாட்Lநாட்டாரு«உடனாகிநி‹றெல்லைகாட்ட¥பிடிசூழ்ந்jபெருநா‹ கெல்yகீழெல்yபுனல்புவÅபுத்தேள்மhருதம்கனšஇருசுட®எஜமான‹ஆகியதிwலஷ்டமூர்த்âஅமரர்க்Fமறிவரிஒ‹ 160 வேகவெள் விடைபாரதி பீஷ்மலோ சனன்மகிழ்ந்து(ங்) (கோல்)பெய்வான் றிருவிருப்பூர் முழிநின்று தென்கிழக்கு நோக்கிப் போயின வெள்ளாற்றுக்கும் ஆயினபெரு நலூர்ச் சிறைக்கும் பன்கள்ளி முரம்புக்கும் வண்ணத்தார் வளாகத்தின் நன்குயர்பரம் பீட்டுக்கும் நலமிகுகள் ளிக்குறிச்சி 165 மேலைக்கள்ளி முரம்புக்கு மேற்குநடை யாட்டிகுளத்தில் சாலநீர் கோளுக்கும் இக்குளத் தின்தென் கொம்பின் மறுவாக்கும் பாங்கமைவடு பாறைக்கும் பயந்தருகுடிநடை ஏரி ஓங்கியவன குளத்தகம்பா லலையொழுகிய வனபெருப்புக்கும் 170 இப்பெருப்பை ஊடறுத்துச் செவ்வடு செழுங்கிழக்கு நோக்கி வாரிக்கொள்ளிக் கேய்போயின வழியதற்கும் வயல்மலிந்த வாரிக்கொள்ளிக் குளத்தினீர் கோளுக்கும் அடிகுழிக்கும் மேக்கும் தென்னெல்லை திருமரு நிலப்பாறைக்கும் செஞ்சாலி விளைகழனி 175 ஏரியனை வடகடைக் கொம்பிற்கும் ஒழுகுகள்ளி முரம்புக்கும் நீருடை அறைய்ச்சுனைக்கும் ஊருடையான் குழித்தென் கடைக் கொம்புக்கும் நெடுமதிற்கற் றாழ்வுக்கும் நீர்மாற்றுத்தி டலுக்கும் கடிகமழ்பூந் தார்க்கணத்தார் குழிக்கும் வடக்கு மேலெல்லை 180 கூற்றன்குழி மீய்குழியேய் போயினபடு காலுக்கும் போற்றரு மாருத மாணிக் குளத்துக்கரைப் பெருப்புக்கும் நாடறிநங் கையார் குழியின்மீய் குழியேய் காடதேரிக்கேய் போயின வழிக்கு மேதமில் லெறிச்சில் வழிக்கும் எழிலமை நெச்சு றநாட் 185 டோலைகுளத் தெல்லைக்கும் கிழக்கு மன் வடவெல்லை வளமிக்க மருத(ம)லி இளநெச்சுறத் தெல்லைக்கும் வெள்ளாற்றுக்கும் தெற்கு இவ்விசைத்த பெருநான் கெல்லை உண்ணிலமொன் றொழியாமல் 190 காராண்மை மீயாட்சி உள்ளடங்கக் கண்டமைத்துச் சீர்சான்ற திசையனைத்தின் னெல்லைவாய்க் கன்னாட்டில் தருமங்களி னென்றுபயில் திருமங்கலத்துச் சபையார்க்கும் தொல்லைவண் சோமாசிகுறிச்சி மல்லன்மா மறையோர்க்கும் பிரமதேய திதி வழாவகைய்ப் ப்ருதுவியின் கண்ணிலை பெறுத்து 195 தர்ம்மகர்ம்மப ராயணனாகிய தராபதி கொடுத்தருளிப்பின் ஈண்டிய பெரும்புகழேயுஞ் சாண்டில்ய கோத்திரத்து எண்ணார்புகழ் ஏகசந்தி காத்யாயன கோத்திரத்து வரிவண்டு மதுநுகர்பொழிற் சிரீவல்லப மங்கலத்து செப்பரிய செழுஞ்செல்வத் துப்பமவிரால் மேதக்க 200 கலையில் கணவாமிபட்டற்கு தற்பெரு மாமதலை உலவுசீர்த்தி யோகேவர பட்டற்கு விசிஷ்டனாகிய திருவடிச் சோமாசியென்னுஞ் சீர்மறையோன் மகள்பயந்த திருமருசீர்ச் சிரீமாதவன் ஸ்ரீமாதவ சரணேவரன் வேதவேதாங்கங்களும் விவிதாசாரமும் தன்னொடுபிற 205 ரோதிக்கேட்டு தரப்பெய்த நீரைக்காமா சால்யனாகி பெருந்தகைப் பிரமதேயமிதற்கு பிரஸதி செய்தோற்கு திருந்தியநன் பெருவயக்கலும் செழும்புனற் பருத்திவயக்கலும் இவ்வயல்களில் கிணறிரண்டும் அக்கிணற்றால் விளைநிலனும் மற்றவ்வூர் மாசபை ஓர்பெற்றபரிசேய் கொடுத்தபின் 210 சீரியசெழும் பணிஇதற்குச் செப்பேடு வாசகத்தை ஆரியம்விராய்த் தமிழ்தொடுத்த மதிஓற்கும் அதுஎழுதிய கற்பமைந்த கதலத்துவரச் சிற்ப மார்த்தாண்டற்கும் மண்ணெங்கும் நிறைந்தவான் புகழ் கண்ணங்கீரன்வயக்கல் திருஉலகு நற்சிங்க குளவளால் மருவியசோ 215 மாசிவயக்கல்லென்னும் வயல்களிற் கிணறுகள் ளொருமூன்றும் எக்காலமும் மன்னுக்கிணற்றில் விளைவயலனைத்தும் இறையிலியாகவும் சொல்லிய இக்கிணறு மூன்றின்னிடைக் கிடந்ததொன் னிலமுழுவதும் இல்லவளா லதுவாகவும் எழின் மிக்கதோட்டமாகவும் பால்லெருமை பெருவராலுகள் புனற்பதி இதனிற் 220 கோல்லுரிமையிற் செம்பாகமும் மஹாசபை குறிப்பொடு கொடுத்துப் பகல்செய்யும் பருதிஞாயிறும் இரவுச்செய்யும் பனிமதிஉம் அகல்ஞாலமும் உளவளவும் செப்பேடு செய்துகொடுத் தருளினன் மணிநீழ்முடி மன்பணிகழல் வசுதாதிப வாசுதேவன் அணிநீள வுய்த்தஹிதாகனி அசலாசலன் நவர்ஜ்யன் 225 கொந்தலர்தார் கோச்சடையன் கூடற்கோன் குருசரிதன் செந்தமிழ்க்கோன் ஸ்ரீநிகேதனன் ஸ்ரீபராந்தக மகராஜன் தேர்மிகுமாக் கடற்றானைத் தென்னவர்கோன் றிருவருளாற் சீர்மிகு செப்பேட்டுக்குச் செந்தமிழ்பாத் தொடைசெய்தோன் க்ர்தஉகமெனும் ஊழிக்கண் அவிர்சடை முடிஅரன்வேண்ட 230 நற்பரசு நிர்ம்மித்தவ னளிர்சடைமே லலங்கல்பெற்ற மாமுனிவன் வழிவந்தோன் பாமரு பண்டிதராசன் பொன்வரன்றி மணிவரன்றி அகிலவரன் றிக்கரை பொருபுனற் றென்வைய்கை வளநாடன் செழுங்குண்டூர் நகர்த்தோன்றல் பாண்டித்தமி ழாபரண னென்னும்பல சிறப்புப் பெயரெய்திய 235 பாண்டிமாராயப் பெருங் கொல்லனாகிய சிரீவல்லபன் தென்னவர்தந் திறலாணைச் சிலைஒடுபுலி கயலிணைமன் பொன்னிமையச் சிமையத்து விறற்கருவியிற் றைக்குந் தொழில்செய்து வந்தவபின் னோன்செயல்பல பயின்றோர் முன்னோன் திருமலி சாசன மிதற்குச் செழுந்தமிழ்பா டினோனற்றை 240 நிருப சேகரப் பெருங்கொல்லன் நீள்புகழ் நக்கனெழுத்து. 4. மூன்றாம் இராசசிங்க பாண்டியன் சின்னமனூர்ச் செப்பேடுகள் திருவொடுந் தெள்ளமிர்தத்தொடுஞ் செங்கதிரொளிக் கெளதுபத்தொடும் அருவிமத களிறொன்றொடுந் தோன்றியர னவிர்சடைமுடி வீற்றிருந்த வெண்டிங்கள் முதலாக வெளிப்பட்டது நாற்றிசையோர் புகழ்தர நானிலத்தி னிலைபெற்றது பாரத்துவா சாதிகளால் நேராக துதிக்கப்பட்டது விரவலர்க்கரியது மீனத்வயாஸனத்தது பொருவருஞ்சீ ரகத்தியனைப் புரோகிதனாகப்பெற்றது ஊழியூழி தோறுமுள்ளது நின்றவொருவனை யுடையது வாழியர் பாண்டியர் திருக்குலமிதினில் வந்துதோன்றி வானவெல்லை வரைத்தாண்டும் வளைகடல்கடைந் தமிர்தங்கொண்டும் நானிலத்தோர் விமயப்பட நாற்கடலொரு பகலாடியும் மங்கிலொளி மணிமுடியொடு சங்கவெள் வளைதரித்தும் நிலவுலகம் வலஞ்செய்தும் நிகரில்வென்றி யமரர்க்குப் பலமுறையுந் தூதுய்த்தும் பாகசாஸன னாரம்வவ்வியுஞ் செம்மணிப்பூ ணொடுந்தோன்றித் தென்றமிழின் கரைகண்டும் வெம்முனைவே லொன்றுவிட்டும் விரைவரவிற் கடன்மீட்டும் பூழியனெனப் பெயரெய்தியும் போர்க்குன் றாயிரம்வீசியும் பாழியம்பா யலினிமிர்ந்தும் பஞ்சவனெனப் பெயர்நிறீஇயும் வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும் உளமிக்க மதியதனா லொண்டமிழும் வடமொழியும் பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரின் மேந்தோன்றியும் மாரதர்மலை களத்தவியப் பாரதத்திற் பகடோட்டியும் விசயனை வசுசாபநீக்கியும் வேந்தழியச் சுரம்போக்கியும் வசையில்மாக் கயல்புலிசிலை வடவரைநெற் றியில்வரைந்துந் தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பலதிருத்தியும் அடும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சத் திரமுயர்த்தும் தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற் றலைதுமித்தும் குறைத்தலையின் கூத்தொழித்தும் மகாபாரதந் தமிழ்ப்படுத்து மதுராபுரிச் சங்கம்வைத்தும் மகாராசரும் சார்வபௌமரும் மகீமண்டலங் காத்திகந்தபின் வில்லவனை நெல்வேலியிலும் விரிபொழிற் சங்கரமங்கைப் பல்லவனையும் புறங்கண்ட பராங்குசன் பஞ்சவர்தோன்றலும் மற்றவர்க்குப் பௌத்ரனாயின மன்னர்பிரா னிராசசிங்கனுங் கொற்றவர்க டொழுகழற்காற் கோவரகுண மகாராசனும் ஆங்கவற் காத்மசனாகி யவனிதலம் பொறைதாங்கித் தேங்கமழ்பொழிற் குண்ணூரிலுஞ் சிங்களத்தும் விழிஞத்தும் வாடாத வாகைசூடிக் கோடாதசெங் கோனடப்பக் கொங்கலரும் பொழிற் குடமூக்கிற் போர்குறித்து வந்தெதிர்ந்த கங்கபல்லவ சோளகாலிங்க மாகதாதிகள் குருதிப்பெரும் புனற்குளிப்பக் கூர்வெங்கணை தொடை நெகிழ்த்துப் பருதியாற்ற லொடுவிளங்கின பரசக்கிர கோலாகலனுங் குரைகழற்கா லரைசிறைஞ்சக் குவலைதலாந் தனதாக்கின் வரைபுரையு மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மனும் மற்றவனுக் கிளையனான மனுசரிதன் வாட்சடையன் பொற்றடம்பூண் சிரீபராந்தகன் புனைமணிப்பொன் முடிசூடிக் கைந்நிலந்தோய் கரிகுலமும் வாசிவிருந்தமுங் காலாளும் செந்நிலத்தி னிலஞ்சோத் திண்சிலைவாய்க் கணைசிதறியும் கரகிரியிற் கருதாதவர் வரகரிகுல நிரைவாரியும் நிலம்பேர நகர்கடந்து நெடும்பெண்ணா கடமழித்தும் ஆலும்போர்ப் பரியொன்றா லகன்கொங்கி லமர்கடந்தும் தேவதானம் பலசெய்தும் பிரமதேயம் பலதிருத்தியும் நாவலந்தீ வடிப்படுத்த நரபதியும் வானடைந்தபின் வானவன்மா தேவியென்னு மலர்மடந்தை முன்பயந்த மீனவர்கோ னிராசசிங்கன் விகடபா டலனவனே அகிபதியா யிரந்தலையா லரிதாகப் பொறுக்கின்ற மகிமண்டலப் பெரும்பொறைதன் மாகபுசபலத்தாற்றாங்கி புஜகநாயக தரணிதாரண ஹரணராஜித புஜசுந்தரனாய் உலப்பிலிமங் கலத்தெதிர்ந்த தெவ்வருட னுகுத்தசெந்நீர் நிலப்பெண்ணிற் கங்கராக மெனநிலப் பரணிதந்தும் மடைப்பகர்நீர்த் தஞ்சையர்கோன் தானைவரை வைப்பூரிற் படைப்பரிசா ரந்தந்து போகத்தன் பணைமுழக்கியுங் கொடும்பைமா நகர்நிறைந்த குரைகடற் பெருந்தானை இடும்மையுற் றிரியத்த னிரணோதய மேற்கொண்டும் புனற்பொன்னி வடகரையிற் பொழில்புடைசூழ் மதில்வஞ்சி கனற்படவிழித் தெதிர்ந்தவீரர் கவந்தமாடக் கண்சிவந்துஞ் சேவலுயர் கொடிக்குமர னெனச்சீறித் தென்றஞ்சை காவலனது கரிதுரக பதாதிகள் செங் களத்தவியப் பூம்புனனா வற்பதியில் வாம்புரவி வலங்காட்டியும் விசயதம்பம் விசும்பணவச் செங்கோற்றிசை விளிம்பணவக் குசைமாவுங் கொலைக்குன்றமுங் குருதியார முங்கொணர்ந்தும் மகுடவர்த்தன ரடிவணங்க மகேந்திரபோக மனுபவித்த விகடபாடலன் சிரீகாந்தன் மீநாங்கித சைளேந்திரன் ராஜசிகா மணிதென்னன் ராஜிதகுண கணகங்கோன் எண்ணிறந்த பிரமதேயமு மெண்ணிறந்த தேவதானமும் எண்ணிறந்த பள்ளிச்சந்தமு மெத்திசையு மினிதியற்றி உலப்பிலோத வொலிகடல்போ லொருங்குமுன்னந் தானமைத்த இராசசிங்கப் பெருங்குளக்கீழ்ச் சூழுநக ரிருந்தருளி ராஜ்யவர்ஷ மிரண்டாவதி னெதிர்பதினான் காம்யாண்டில். 5. பராந்தக பாண்டியன் மெய்க்கீர்த்தி திருவளரச் செயம்வளரத் தென்னவர்தங் குலம்வளர அருமைநான் கவைவளர வனைத்துலகுந் துயர்நீங்கத் தென்மதுரா புரித்தோன்றித்தேவேந்திரனோடினிதிருந்த மன்னர்பிரான் வழுதியர்கோன் வடிவபரம்ப நின்றருளி மாக்கடலை யெறிந்தருளி மலையத்துக் கயல்பொறித்துச் சேரலனைச் செருவில்வென்று திறைகொண்டு வாகைசூடிக் கூபகர்கோன் மகட்கொடுப்பக் குலவிழிஞங் கைக்கொண்டு கன்னிப்போர் செய்தருளிக் காந்தளூர்ச்சாலை கலமறுத்து மன்னுபுகழ் மறையவர்த மணியம்பலத் தினிதிருந்து ஆயிரத் தெண்ம ரவிரோகதப் பணிப்பணியால் பறைபேர்த்துக் கன்னாட்டிப் பண்டுள்ள பேர்தவிர்த்து அளப்பனவுநிறுப்பனவுங் கயலெழுதி யனந்தபுரத் தெம்மாற்கு நிலவியபொன் மணிவிளக்கு நின்றெரியப் பத்தமைத்து ...................................................................................................... தைப்பூசப் பிற்றைஞான்று வந்திருந்தா ரெல்லார்க்குமாற்றாதே தியாகமிட அறத்தால் விளங்கிய வாய்ந்த கேள்விப் புறத்தாய நாடு பூமகட் களித்துத் தெலிங்க வீமன் குளங்கொண்டு தென்கலிங்க மடிப்படுத்துத் திசையனைத்து முடனாண்டசிரீபராந்தகதேவர்க்குயாண்டு. 6. வீரபாண்டியன் மெய்க்கீர்த்தி பூமடந்தையுஞ் சயமடந்தையும் பொலிந்துதிருப் புயத்திருப்பப் பார்முழுதுங் குடைநிழற்றப் பராக்கிரமத்தான் முடிசூடித் தென்மது ராபுரித் திருவிளையாட்டத்திற்கண்டு மன்னரெல்லாம் வந்திறைஞ்ச மலைநாடு கொண்டருளி மாபா ரதம்பொருது மன்னவர்க்குத் தூதுசென்று தேவாசுர மதுகைதரித்துத் தேனாருமறையுள் கொண்டருளி வடவரையிற் கயல்பொறித்து வானவர்கோ னாரம்பூண்டு திடவாசகக் குறுமனிபாற் செந்தமிழ்நூல் தெரிந்தருளி செங்கோ லெங்குந் திசையுற நடாத்தி மன்னிய வீரசிம்மா சனத்தில் திரைலோக்யமுழு துடையாளொடும் வீற்றிருந் தருளி மாமுதன் மதிக்குலம் விளக்கிய கோமுதற் கொற்றவன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீவீரபாண்டியதேவர். 7. மாறவர்மன் சுந்தரபாண்டியன் I மெய்க்கீர்த்தி பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப நாமருவிய கலைமடந்தையுஞ் சயமடைந்தையு நலஞ்சிறப்பக் கோளார்ந்த சினப்புலியுங் கொடுஞ்சிலையுங் குலைதொளிப்ப வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட இருங்கடல் வலயத் தினிதறம் பெருகக் கருங்கலி கடிந்து செங்கோல் நடப்ப ஒருகுடை நீழ லிருநிலங் குளிர மூவகைத் தமிழு முறைமையின் விளங்க நால்வகை வேதமு நவின்றுடன் வளர ஐவகை வேள்வியுஞ் செய்வினை யியற்ற அறுவகைச் சமயமு மழகுடன் றிகழ ஏழுவகைப் பாடலு மியலுடன் பரவ எண்டிசை யளவுஞ் சக்கரஞ் செல்லக் கொங்கணர் கலிங்கர் கோசலர் மாளுவர் சிங்களர் தெலுங்கர் சீனர் குச்சரர் வில்லவர் மாகதர் விக்கலர் செம்பியர் பல்லவர் முதலிய பார்த்திவ ரெல்லாம் உறைவிட மருளென வொருவர்மு னொருவர் முறைமுறை கடவதந் திறைகொணர்ந் திறைஞ்ச இலங்கொளி மணிமுடி யிந்திரன் பூட்டிய பொலங்கதி ரார மார்பினிற் பொலியப் பனிமலர்த் தாமரைத் திசைமுகன் படைத்த மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப் பொன்னிசூழ் நாட்டிற் புலியாணை போயகலக் கன்னிகுழ் நாட்டிற் கயலாணை கைவளர வெஞ்சின விவுளியும் வேழமும் பரப்பித் தஞ்சையு முறந்தையுஞ் செந்தழல் கொளுத்திக் காவியு நீலமு நின்று கவினிழப்ப வாவியு மாறு மணிநீர் நலனழித்துக் கூடமு மாமதிலுங் கோபுரமு மாடரங்கும் மாடமு மாளிகையு மண்டபமும் பலவிடித்துத் தொழுதுவந் தடையா நிருபர்ந் தோகையர் அழுத கண்ணீ ராறு பரப்பிக் கழுதை கொண்டுழுது கவடி வித்திக் செம்பியனைச் சினமிரியப் பொருதுசுரம் புகவோட்டிப் பைம்பொன் முடிபறித்துப் பாணனுக்குக் கொடுத்தருளிப் பாடருஞ் சிறப்பிற் பருதி வான்றோய் ஆடகப் புரிசை யாயிரத் தளியிற் சோழ வளவனபிஷேக மண்டபத்து வீராபி ஷேகஞ் செய்து புகழ்விரித்து நாளும் பரராசர் நாமத் தலைபிடுங்கி மீளுந் தறுகண் மதயானை மேற்கொண்ட நீராழி வைய முழுதும் பொதுவொழித்துக் கூராழியுஞ் செய்ய தோளுமே கொண்டுபோய் ஐயப் படாத வருமறைதே ரந்தணர்வாழ் தெய்வப் புலியூர்த் திருவெல்லை யுட்புக்குப் பொன்னம் பலம்பொலிய வாடுவார் பூவையுடன் மன்னுந் திருமேனி கண்டு மனங்களித்துக் கோல மலர்மே லயனுங் குளிர்துழாய் மாலு மறியா மலர்ச்சே வடிவணங்கி வாங்குசிறை யன்னந் துயிலொழிய வண்டெழுப்பும் பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில் ஒத்துலகந் தாங்கு முயர்மேருவைக் கொணர்ந்து வைத்தனைய சோதி மணிமண் டபத்திருந்து சோலை மலிபழனச் சோணாடுந் தானிழந்த மாலை முடியுந் தரவருக வென்றழைப்ப மான நிலைகுலைய வாழ்நகரிக் காப்புறத்துப் போன வளவ னுரிமை யொடும்புகுந்து பெற்ற புதல்வனைநின் பேரென்று முன்காட்டி வெற்றி யரியணைக்கீழ் வீழ்ந்து தொழுதிரப்ப தானோடி முன்னிகழ்ந்த தன்மையெலாங் கையலகத் தானோ தகம்பண்ணித் தண்டார் முடியுடனே விட்ட புகலிடந்தன் மாளிகைக் குத்திரிய விட்டபடிக் கென்று மிதுபிடிபா டாகவெனப் பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள்விளங்குஞ் செங்கயல் கொண் டூன்றுந் திருமுகம் பண்டிழந்த சோள பதியென்னு நாமமுந் தொன்னகரும் மீள வழங்கி விடைகொடுத்து விட்டருளி ஓதக் கடற்பாரில் வேந்தர் கிளைக்குற்ற ஏதந் தவிர்க்குங் கடவுளிவ னென்றெண்ணித் தளையுற் றடையாதார் தண்ட லிடையிற் கிளையுற்றன முழுதுங் கேட்டருள் என்றேத்தி வணங்கும் வடகொங்கன் சிறைமீள வண்டின் கணங்கொள் திருத்தோள் மாலைகழித் தெல்(லாம்) வழங்கி அருளியபி னொருநாள் மாற்றார் முழங்கு முரசக் கடற்றானை முன்புகுந்து தென்கொங்கன் வந்திட்ட தெண்டனுக்கு மின்பொங்கச் சாத்திய ஆபரணந் தக்கதென வழங்கி ஆறாத பெருநண்பி னவன்சிறையு மீட்டுத் திருமாலும் நான்முகனுஞ் சேவிப்பச் செங்கட் கருமால் களிற்றில்வரு முக்கட் கடவுளென மாட மதுரையிற் றான்போந்து புவனியிலே கூடவிரு கொங்கரையுங் கும்பிடுகொண் டவர்தந்த தொல்லைப் புவிக்கு மிணங்காமற் றாம்சொன்ன எல்லைக் குணிற்ப இசைந்திட்டு மேற்கொண் டிவனது செய்யா தொழில் யமனுக்கு வெவ்வேல் விருந்தாக்குது முமையென விட்டருளி முன்னம் நமக்கு முடிவழங்குஞ் சேவடிக்கீழ் இன்னம் வழிபடுவ மென்னாது பின்னொருநாள் காவ லெனதுபுனல் நாடெனுங் களியால் ஏவலெதிர் கொள்ளா திறைமறுத்த சென்னிவிடு தூசியும் பேரணியு மொக்கச் சுருண்டொதுங்கி வாசியும் வாரணமுந்தேரு மடற்கருங் காலாளும் வெட்டுண்ணக் கண்டுபயங் கைக்கொண்டு வேலா வலயத்து வீழ்ந்தவன்போய் மெய்நடுங்க அம்பருந்து மார்த்தகடல் மண்ட லிகருடல் வெம்பருந் துண்ண அக்களத்தில் ஆனையின் வெண்மருப்புங் கையுங்குறைத் தெங்கள் மீனவர்க்குப் பாகுடமா மென்றுதம் வீரர்கொள மாக முகடு தடவி மழைதடுக்குங் காக நெடும்பந்தர்க் கவந்தத்தி னாடலுங், கூகையின் பாடலுங் கண்டுங் கேட்டுங் களித்தடல் கருங்கூந்தல் வெள்ளெயிற்றுச் செவ்வாய்ப்பொற் சூலக்கை வல்லி பலிகொள்க எனவாழ்த்தி வென்று பகையின் மிகையொழிய வேந்தலறக் கொன்று சினந்தணியாக் கொற்றநெடு வாள்உயற்கு செங்குருதி நிறத்தொளி செய்து தெவ்புலத்து வெண்கவடி வித்த வீர முழுதெடுத்துப் பாடும் பரணிதன் பார்வேந்தர் கேட்பிக்க ஆடுந் திருமஞ்சன நீரில் மண்குளிர ஓங்கு ரிமைக்குழா மொருங்கு கைக்கொண்டு மூரிமணிப் பட்டங் கட்டி முடிசூட்டி மார்பி லணைத்து வளவன்முதல் தேவியென்று பேர்பெற்ற வஞ்சி முதலாய பெய்வளையார் பொங்கு புனற்கும்ப முதலாகப் புலவர்புகழ் மங்கலங்கள் எட்டு மணிக்கைத் தலத்தேந்திக் கொடிகொண்ட நெற்றி நிறைகோ புரஞ்சூழ் முடிகொண்ட சோழபுர மண்டபத்துப் புக்குத் திசைதொறுஞ் செம்பொற் செயத்தம்பம் நாட்டி விஜயா பிஷேகம் பண்ணியருள் செய்து வாகைக் கதிர்வேல் வடவேந்தர் தம்பாதம் மேகத் தளையணிய வீரக் கழலணிந்து விளங்கிய மணியணி வீரசிம் மாசனத்து வளங்கெழு கவரி யிருமருங் கசைப்பக் கடலென முழுங்குங் களிநல் யானை வடபுல வேந்தர் மணிப்புயம் பிரியா இலகுகுழை யரிவையர் தொழுதுநின் றேத்தும் உலகமுழு துடையாளொடும் வீற்றருந் தருளிய கோமாற வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் சோணாடு வழங்கி யருளிய ஸ்ரீசுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு- 8. மாறவர்மன் சுந்தரபாண்டியன் II மெய்க்கீர்த்தி பூமலர்த் திருவும் பொருசய மடந்தையும் தாமரைக் குவிமுலை சேரப்புயத் திருப்ப வேத நாவின் வெள்ளிதட் டாமரைக் காதன் மாது கவின் பெறற் திளைப்ப வேண்டிரை யுடுத்த மண்டிணி கிடக்கைத் திருநில மடந்தை யுரிமையிற் களிப்பச் சமயமு நீதியுந் தருமமுந் தழைப்ப இமையவர் விழாக்கொடி யிடந்தொறு மெடுப்பக் கருங்கலிக் கனல்கெடக் கடவுள் வேதியர் அருந்தொழில் வேள்விச் செங்கனல் வளர்ப்பச் சுருதியுந் தமிழுந் தொல்வளங் குலவப் பொருதிற லாழி பூதலஞ் சூழ்வர ஒருவகை யிருசெவி மும்மத நாற்கோட் டயிரா வதற்குற் செயிர்தீர் கொற்றத் தெண்டிசை யானை யெருத்த மேறிக் கோசலந் துளுவங் குதிரங் குச்சரம் போசல மகதம் பொப்பளம் புண்டரம் கலிங்க மீழங் கடாரங் கவுடம் தெலிங்கஞ் சோனகஞ் சீன முதலா விதிமுறை திகழ வெவ்வேறு வகுத்த முதுநிலக் கிழமையின் முடிபுனை வேந்தர்க் கொருதனி நாயக னென்றுல கேத்தத் திருமுடி சூடிச் செங்கோ லோச்சிக் கொற்றக் தரளத் குளிர்குடை நீழற் கற்றைக் கவரி காவலர் வீச மிடைகதிர் நவமணி வீரசிங் காதனத் துடன்முடி சூடி யுயர்குலத் திருவெனப் பங்கய மலர்க்கரங் குவித்துப் பார்த்திவர் மங்கையர் திரண்டு வணங்குஞ் சென்னிச் சுடரொளி மவுலிச் சூடா மணிமிசைச் சிவந்த விணை மலர்ச் சீறடி மதுகரம் கமலமென் றணுகு முலகமுழு துடையாளொடு வீற்றிருந்தருளிய மாமுதன் மதிக்குலம் விளக்கிய கோமுதற் கோமாறவன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவர்க்குயாண்டு- 9. சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி பூமலர்வளர் திகழ்திருமகள் புகழாகம் புணர்ந்திருப்ப நாமலர்வளர் கலைவஞ்சி நலமிகுமா மனத்துறையச் சிமையவரைத் திறன்மடந்தை திருத்தோளின் மிசைவாழ விமையவர்கோ னன்றிட்ட வெழிலாரங் கழுத்திலங்கப் பகிரதிபோற் றுய்யபுகழ்ப் படர்வல்லி கொழுந்தோட்டத் திகிரிவரைக் கப்புறத்துச் செழுந்திகிரி சென்றுலவத் தண்டாள மணிக்கவிகை தெண்டிரைசூழ் பார்நிழற்ற வெங்கோபக் கலிகடிந்து செங்கோலெண் டிசைநடப்பச் செம்முரசின் முகில்முழங்கச் சிலையகன்று விசும்படையத் திறற் புலிபோய் வன மடையக் கயலிரண்டு நெடுஞ்சிகரக் கனவரையின் விளையாட வொருமைமனத் திருபிறப்பின் முத்தீயின் நால்வேதத் தருமறையோ ரைவேள்வி யாறங்க முடன்சிறப்ப வருந்தமிழு மாரியமு மறுசமயத் தறநெறியுந் திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்கக் குச்சரரு மாரியரும் கோசலரும் கொங்கணரும் வச்சிரமங் காசியரு மாகதரும் அருமணருஞ் சோனகரு மவந்தியரு முதலாய விருநிலமா முடிவேந்த ரிறைஞ்சிநின்று திறைகாட்ட வடிநெடு வாளும் வயப்பெரும் புரவியுந் தொடிநெடுந் தோளுமே துணையெனச் சென்று சேரனுந் தானையுஞ் செருக்களத் தொழிய வாரசும் புலரா மலைநாடு நூறப் பருதிமா மரபிற் பொருதிறல் மிக்க சென்னியைத் திறைகொண்டு திண்டோள் வலியிற் பொன்னிநாட்டுப் போசலத் தரைசர்களைப் புரிசையி லடைத்துப் பொங்கு வீரப்புரவியுஞ் செருவிற லாண்மைச் சிங்கணன் முதலாய தண்டத் தலைவரும் தானையு மழிபடத் துண்டித் தளவில் சோரி வெங்கலுழிப் பெரும்பிணக் குன்ற மிருங்கள னிறைத்துப் பருந்துங் காகமும் பாறுந்(த)சையும் அருந்தி மகிழ்ந்தாங் கமர்க்கள மெடுப்பச் செம்பொற் குவையுந் திகழ்கதிர் மணியு மடந்தையரா மார்பு முடன் கவர்ந் தருளி முதுகிடு போசளன் றன்னொடு முனையும் அதுதவ றென்றவன் றன்னை வெற்பேற்றி நட்பது போலுட் பகையாய் நின்ற சேமனைக் கொன்று சினந்தணிந் தருளி நண்ணுதல் பிறரா லெண்ணுதற் கரிய கண்ணனூர்க் கொப்பத்தைக் கைக்கொண்ட டருளிப் பொன்னிசூழ்செல் வப்புன னாட்டைக் கன்னி நாடெனக் காத்தருள் செய்யப் பெருவரை யரணிற் பின்னரு காக்கிய கருநட ராசனைக் களிறு திறை கொண்டு துலங்கொளி மணியுஞ் சூழி வேழமு மிலங்கை காவலனை யிறைகொண் டருளி வருதிரை மறுத்தங் கவனைப் பிடித்துக் கருமுகில் நிகளங் காலிற் கோத்து வேந்தர்கண் டறியா விறற்றிண் புரிசைச் சேந்த மங்கலச் செழும்பதி முற்றிப் பல்லவ னடுங்கப் பலபோ ராடி நெல்விளை நாடு நெடும்பெரும் பொன்னும் பரும யானையும் பரியு முதலிய வரசுரிமை கைக்கொண்ட ரசவற் களித்துத் தில்லையம் பலத்துத் திருநடம் பயிலுந் தொல்லை யிறைவர் துணைகழல் வணங்கிக் குளிர்பொழில் புடைசூழ் கோழிமானகர் (அளி)செறி வேம்பி னணிமலர் கலந்த தொங்கல் வாகைத் தொடைகள் சூட்டித் திங்களுயர் மரபு திகழவந் திருந்த தன்னசையா னன்னிலை விசையம்பின் எண்ணெண் கலைதே ரின்மொழிப் பாவலர் மண்ணின்மே லூழி வாழ்கென (வாழ்)த்தக் கண்டவர் மனமுங் கண்ணுங் களிப்ப வெண்டிரை மகர வேலையி னெடுவரை யாயிரம் பணைப்பணத் தனந்தன் மீமிசைப் பாயல் கொள்ளும் பரமயோகத் தொருபெருங் கடவு ளுவந்தினி துறையு மிருபெருங் காவிரி யிடைநிலத் திலங்குந் திருவரங் கம்பெருஞ் செல்வம் சிறப்பப் பன்முறை யணிதுலா பாரமேறிப் பொன்மலை யென்னப் பொலிந்து தோன்றவும் பொன்வேய்ந் தருளிய செம்பொற் கோயிலுள் வளந்திகழ் மாஅ லுதைய வெற்பெனத் திருவளர் குலமணிச் சிங்கா சனமிசை மரகத மலையென மகிழ்ந்தினி தேறித் தினகரோ தயமெனச் செழுங்கதிர் சொரியும் கனகமாமுடி கவின்பெறச் சூடிப் பாராள் வேந்த ருரிமை யரிவைய ரிருமருங்கு நின்று விரிபெருங் கவரியின் மந்தளிர்க் கரங்கொண் டசைய வீச மந்த வாடையு மலையத் தென்றலு ஒருபொழு தும்விடா துடனிருந்து மகிழும் திருமக னென்னத் திருத்தோள் மேவி யொத்த முடிசூடி யுயர்பே ராணை திக்கெட்டும் நடப்பச் செழுந்தவஞ் செய்த இவன்போ லுலகிலே வீரன்(பலத்திர) மதிமுகத் தவனி மாமக ளிலகு கோடிக் காதல் முகிழ்த்துநின் றேத்தும் உலகுமுழுது முடையாளொடும் வீற்றிருந் தருளிய சிரீகோச்சடைய வன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் சிரீசுந்தரபாண்டிய தேவர்க்கு யாண்டு- 10. மாறவர்மன் குலசேகரபாண்டியன் மெய்க்கீர்த்தி தேர்போல லல்குற் றிருமகள் புணரவும் கார்சேர் கூந்தற் கலைமகள் கலப்பவும் பார்மகள் மனத்துப் பாங்குட னிருப்பவும் செங்கோ னடப்பவும் வெண்குடை நிழற்றவும் கருங்காலி முருங்கவும் பெரும்புகழ் விளங்கவும் கானிலை செம்பியன் கடும்புலி யாளவும் மீனம் பொன்வரை மேருவி லோங்கவும் முத்தமிழ் மனுநூலு நான்மறை முழுவதும் எத்தவச் சமயமும் மினிதுடன் விளங்கவும் சிங்கணம் கலிங்கந் தெலிங்கஞ் சேதிபம் கொங்கணங் குதிரம் போசளங் குச்சரம் முறைமையி னாளு முதுநல வேந்தர் திரைமுறை காட்டிச் சேவடி வணங்க மன்னர் மாதர் பொன்னணி கவரி இருபுடை மருங்கு மொருபடி யிரட்டப் பழுதறு சிறப்பிற் செழுவை காவலன் வீரசிங் காதனத் தோராங் கிருந்தே யாரும் வேம்பு மணியிதழ் புடையாத் தாருஞ் சூழ்ந்த தடமணி மகுடம் பன்னூ றூழி தொன்னிலம் புரந்து வாழ்கென கிœªJl‹ No miலமfள் முதலா மரிவைa ர்பரவ cலகமுG துடையhளொடு«வீற்றிருந்தருளின கோமhறவன்மரhனதிரிபுவdசக்கரtர்த்திகள் ஸ்ரீகுலnகrரதேவர்¡குயாண்டு- 11.mÇnfrÇ-guh¡»ukgh©oa‹ bkŒ¡Ñ®¤â பூமிசை வனிதை மார்பினிற் பொலிய நாமிசைக் கலைமக ணலமுற விளங்கப் புயவரை மீது சயமகள் புணரக் கயலிணை யுலகின் கண்ணெனத் திகழச் சந்திர குலத்து வந்தவ தரித்து முந்தையோர் தவத்து முளையென வளர்ந்து தென்கலை வடகலை தெளிவுறத் தெரிந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து சங்கர சரண பங்கயஞ் சூடிச் செங்கோ லோச்சி வெண்குடை நிழற்றி வான வாரியுந் மன்னருள் வாரியும் தான வாரியுந் தப்பா தளித்து மறக்களை பறித்துநல் லறப்பயிர் விளைத்துச் சிங்கையி லனுரையி லிராசையிற் செண்மையில் விந்தையி லறந்தையின் முதலையில் வீரையில் வைப்பாற் k‹diu bt§f© bl¥gh‰ ¿irí ÄirÉs¡ nf‰¿¥ gâbd© ghil¥ gh®¤âut uidtU« âiwíŠ á‹dK KiwKiw bfhz®ªJ Fiwgy ÉuªJ FiufH ÉiwŠr mtut® nt©oa jtut®¡ fUË mªjz undf® brªjH nyh«g ɪijKj yfu ikªâl¤ âa‰¿¢ átbe¿ nah§f¢ áth®¢rid òǪJ kUö ut®¡F k©lg kik¤J K‹bdhU öW _§»šò¡ »Uªj á‰gu® j«ik¤ âUt¤j rhk¤J¥ bgh‰fy¤ jKJ bghÈȤ jUË¢ r©gf td¤J¢ r§fu® jk¡F k©lg kik¤J kÂKo N£o ÉHht elh¤â Éiu¥òd yhlš tHhtif elh¤jË k‹dU sjdhš t‰wh tUÉí« t‰¿ t‰fl« c‰wÉ¡ fhy¤ JWòd dšbfd nt©oa¥ bghGnj nt¿l¤ â‹¿¢ nr©lU òdȉ brG«òd yh£o Ä‹fhš nt ÉRtehj®¡F¤ bj‹fh á¥bgU§ nfhÆš brŒJ ešyh fktÊ ieĤ âfKl‹ všyh¥ óirí bk¡nfh ÆÈD« bghU©Kj yid¤J« òiuaw elh¤â¤ âUkÈ br«bgh‰ á§fh rdÄir cyf KGJ Kilah Slnd ïyF fUiz Æu©LU bt‹d m«ikí k¥gD khaid¤ JÆ®¡F« ï«ik¥ gaD kWik¡ FWâí« nk«gl eš» 剿Uª jUËa $ mÇnfrÇ guh¡»uk njt®¡F ah©L.-  சேர்க்கை 2 கல்வெட்டுக்களிலுள்ள பாண்டியரைப்பற்றிய சில பாடல்கள் சடையவர்மன் சுந்தரபாண்டியன் I 1. வட்ட வெண்குடை மன்னர் தம்புகல் கொண்டு மாமுடி கொண்டுபோர் மாறு கொண்டெழு போசளன்றடை கொண்டுவாணன் வனம்புகத் தொட்ட வெம்படை வீரன்வென்றி புனைந்த சுந்தர மாறன்முன் சூழ விட்ட தெலுங்கர் சேனை துணித்து வென்றவெங் களத்துமேல் விட்ட வெம்பரி பட்ட போதெழு சோரி வாரியை யொக்குநேர் மேன்மி தந்தநி ணப்பெ ருந்திரள் வெண்ணு ரைத்திர ளொக்குமுன் பட்ட வெங்கரி யந்த வாரி படிந்த மாமுகி லொக்கும்வீழ் பரும ணிக்குடை யங்கு வந்தெழு பருதி மண்டில மொக்குமே. 2. காரேற்ற தண்டலைக் காவிரி நாடனைக் கானுலவுந் தேரேற்றி விட்ட செந்தமிழ்த் தென்னவன் சென்றெதிர்ந்து தாரேற்ற வெம்படை யாரியர் தண்டு படத்தனியே போரேற்று நின்ற பெருவார்த்தை யின்னும் புதுவார்த்தையே. 3. பண்பட்ட மென்மொழிப் பைந்தொடி கொங்கை பராக்கவைவேற் கண்பட்ட முத்த வடங்கண்டுங் காக்கிலன் காடவர்கோன் எண்பட்ட சேனை யெதிர்பட் டொழுக வெழுந்தபுண்ணர் விண்பட் டலையப் படைதொட்ட சுந்தர மீனவனே. 4. மீளா வழிசெல்ல வேணாடர் தங்களை வென்றதடந் தோளான் மதுரைமன் சுந்தர பாண்டியன் சூழ்ந்திறைஞ்சி யாளானா மன்னவர் தன்னேவல் செய்ய லவனி முட்ட வாளால் வழிதிறந் தான்வட வேந்தரை மார்திறந்தே. 5. கொங்க ருடல்கிழியக் குத்தியிரு கோட்டெடுத்து வெங்க ணழலில் வெதுப்புமே -மங்கையர்கண் சூழத்தா மம்புனையுஞ் சுந்தரத்தோண் மீனவனுக் கீழத்தா னிட்ட விறை. சடையவர்மன் விக்கிரமபாண்டியன் 6. சீர்கொண்ட வெள்ளாறு குருதிப் பெருக்கிற் செவ்வாறு பட்டோ சென்றப் போர்வென் றுணப்பேய் நடங்கண்ட தற்பின் புலியூர் நடங்கண்ட புவனேக வீரா பார்பண் டளந்துண்டொ ராலிற் கிடக்கும் பச்சைப் பசுங்கொண்ட லேபற்ப நாபா கார்கொண்ட நின்கையில் வேலுக்கு வற்றுங் கடலல்ல வென்பேதை கண்டந்த கடலே. 7. மாறுபடு மன்னவர்தங் கைபூண்ட வாளிரும்பு வேறுமவர் கால்பூண்டு விட்டதே-சீறிமிக வேட்டந் திரிகளிற்று விக்கிரம பாண்டியன்றன் நாட்டங் கடைசிவந்த நாள். 8. மீனவற்கு விக்கிரம பாண்டியற்கு வேந்தரிடும் யானை துருவுள்ளத் தேறுமோ -தானவரை வென்றதல்ல மேனிநிறம் வெள்ளையல்ல செங்கனகக் குன்றதல்ல நாலல்ல கோடு. 9. வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே பொங்கி வடதிசையிற் போகாதே - யங்கிருப்பாள் பெண்ணென்று மீண்ட பெருமாளே பேரிசையாழ்ப் பண்ணென்றும் வேய்வாய் பகை. அரிகேசரி பராக்கிரமபாண்டியன் 10. அரிகே சரிமன் பராக்கிரம மாற னரனருளால் வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம் புரிசேர் கடற்புவி போற்றவைத் தேனன்பு பூண்டிதனைத் திரிசேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதமென் சென்னியதே. 11. பூந்தண் பொழில்புடை சூழுந்தென் காசியைப்பூதலத்திற் றாந்தங் கிளையுட னேபுரப் பார்கள்செந் தாமரையாள் காந்தன் பராக்ரமக் கைதவன் மான கவசன்கொற்கை வேந்தன் பணிபவ ராகியெந் நாளும் விளங்குவரே. 12. மென்காசை மாமல ரன்னமெய் யோற்கும் விரிஞ்சனுக்கும் வன்காசு தீர்த்திடும் விச்சுவ நாதன் மகிழ்ந்திருக்கப் பொன்காசை மெய்யென்று தேடிப் புதைக்குமிப் பூதலத்துத் தென்காசி கண்ட பெருமாள் பராக்மத்தென்னவனே. 13. அணிகொண்ட விந்த வணங்குமொன் றேயடி யேற்குனக்கு மணிகொண்ட வாசன் மணியுமொன் றேபகை மன்னரையும் பிணிகொண்ட காரையு முந்நீரை யும்பெரும் பூதத்தையும் பணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே. 14. ஓங்கு நிலையொன்ப துற்றதிருக் கோபுரமும் பாங்குபதி னொன்றுபயிšதூணு«-தேங்குபுகœமன்ன®பெருமா‹வழுதிகண்lதென்காáதன்னிலன்¿யுண்டேhதலத்து. வீரபாண்டியன் 15. சேணுலவு வெண்டிங்கட் செல்வனெனத் தண்ணென்று நீணிலமோ ரேழு நிழற்றுமே - பேணிவந்து பூவேந்த ரேத்தும் புகழ்வீர பாண்டியனங் கோவேந்தன் கொற்றக் குடை. சேர்க்கை - 3 இடைக்காலப் பாண்டியர் மரபு விளக்கம் பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 575 600) மாறவர்மன் அவனிசூளாமணி(கி.பி. 600 -625) சடையவர்மன் செழியன்சேந்தன் (கி.பி. 625 -640) மாறவர்மன் அரிகேசரி (கி.பி. 640 670) கோச்சடையன் ரணதீரன் (கி.பி. 670 -710) மாறவர்மன் அரிகேசரி பராங்குசன்-இராசசிம்மன் I (». பி. 710 -765) நெடுஞ்சடையன் பராந்தகன் (கி. பி. 765 -790) இராசசிம்மபாண்டியன் II (கி. பி. 790 -792) வரகுண மகாராசன் கி.பி. 792 -835 சீமாறன் பரசக்கர கோலாகலன் - சீவல்லபன் (கி. பி. 835 - 862) வரகுணவர்மன் பராந்தகபாண்டியன் (கி. பி.862-880) (கி. பி. 880-900) இராசசிம்மன் III (கி.பி. 900-920) வீரபாண்டிய‹(946-966) சொற்குறிப்பு அகராதி *(எண்கள் - பக்க எண்கள்) அ அக்கள நிம்மடி 55 அகநானூறு 9, 4, 15, 24, 26, 36 அச்சிறுபாக்கம் 107 அச்சுதேவராயர் 125 அசோகன் 4 அடியார்க்கு நல்லார் 11 அடில்ஷா 117 அதியமான் 41, 42 அதிராசேந்திர சோழன் 72 அதிவீராம பாண்டியன் 126, 127,128 அந்துவஞ்சாத்தான் 15 அபராஜிதவர்மன் 57,58,59 அபிராமசுந்ரேசுவரன் 127 அபிராமபராக்கிரம பாண்டியன் 126 அம்பாசமுத்திரம் 36,47,50, 125 அமர்வல்லான் 54 அமரபுயங்கன் 70,71 அமீர்குசுரு 149, 150 அரசசின்னம் 66 அரசியல் தலைவர்பட்டங்கள் 173 அரசுகட்டில் 17, 18 அரிகேசரி 38,33,35,36 அரிகேசரி பராங்கு ச மாறவர்மன் 38,39 அரிசிலாறு 53,54 அரிசிற்கரைப்புத்தூர் 54 அரிசி கரைப்போர் 53,54 அரிஞ்சயன் 68 அருச்சுனன் 4 அலாவுடீன் கில்ஜி 114,115 அலாவுடீன் சிக்கந்தர்ஷா 117 அவனிபசேகரன் 51 அவனிபசேகரன் கோளகை 56, அவனிபசேகரமங்கலம் 56 அழகப்பெருமாள் 88 அழகன் சீவலவேள் 126 அழகன் பெருமாள் 125,126 அளவைகள் 136,137 அறிஞர் - துப்ரே 37 அறிவுடைநம்பி 14 அறுபத்துமூவர் 34 அனல் வாதம் 33 ஆ ஆகவராமன் 125 ஆடுதுறை 46 ஆனத்தி 45 ஆதன் அழிசி 15 ஆதிகாவியம் 3 ஆதிச்ச தேவன் 96 ஆதித்த கரிகாலன் 69 ஆதித்த சோழன் 58,59 ஆந்தை 15 ஆள்வேள் 37,40 ஆயர்பாடி 17 ஆயிரவேலியயிரூர் 41 ஆர்ப்பாக்கம் 78 ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 17,19, 27 ஆரிய மனனர் 18 ஆவணக்களரி 141 ஆறகளூர் 102 ஆறகழூர் 102 ஆனை மங்கலச் செப்பேடு 69 ஆனைமலை 44 ஆனைமலைக் கல்வெட்டுக்கள் 39 இ இடவைநகர் 58 இடைக்குன்றூர் கிழார் 22 இடைச்சங்கம் 10 இத்தாலிய நாடு 108 இபின்படூடா 117 இரணியகர்ப்பதானம் 35 இராசகம்பீர அஞ்சு கோட்டை நாடாழ்வான 79 இராச கம்பீரச் சதுர்வேதிமங்கலம் 87 இராசசிம்ம பாண்டியன் 38,46 64-66 இராசராசகற்குடிமாராயன் 79 இராசராசசோழன் 35,70,71 இராசராச மண்டலம் 70 இராசாக்கள் நாயன் 111 இராசாதிராச சோழன் 71,72 மேற்படி 77 - 80 இராசேந்திர சோழன் 72 இராபாட் சிவெல் 84 இராமநாதபுரம் 58,60,66,67,68,85 இராமேச்சுரம் 77 இருங்கோவேண்மான் 20,21 இருஞ்சோழநாடு 56 இருப்பைக்குடி 57 இருப்பைக்குடிக் கிழவன் 57 இரும்பிடர்த்தலையார் 25 இலங்காபுரித் தண்டநாயகன் 76,77,78 இலங்கை 4,52,61 இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் 25,35 இலிங்க புராணம் 127 இளங்கோவடிகள் 145 இளம்பெருவழுதி 12 இறந்தகால மெடுத்தவன் 125,126 ஈ ஈழநாடு 52, 77 ஈழப்படை 80 உ உக்கிரன் 61 உக்கிரன் கோட்டை 42,43,61 உதயமார்த்தாண்டவர்மன் 125 உதயேந்திரச் செப்பேடுகள் 66 உதிரப்பட்டி 59,149 உப்பூரிகுடிகிழார் 24 உருத்திரங்கண்ணனார் 90 உருத்திரசன்மர் 24 உருத்திரப்பட்டர் 93 உலகமுழுதுடையாள் 95,98 உலப்பிலிமங்கலம் 65 உறையூர் 21,34,90,58,60,66,67,68,85 எ எட்டி 56,143 எட்டிசாத்தன் 56 எட்டுத்தொகை 25 எண்ணாயிரவர் 33 எம்மண்டலமுங் கொண்டருளியவன் 102 எயினன் 45 எருக்கங்குடிக்குன்று 57 எருமையூரன் 20 எல்லாந்தலையான பெருமாள் 131,134 எல்லாந்தலையானாள் (நாணயம்) 134,178 எழினி 20 எறும்பூர் 112 ஏ ஏகவீரன் 51 ஏர்வாடி 50 ஏரிவாரியம் 139 ஏழகப்படை 80,86 ஏனாதிசாத்தஞ்சாத்தன் 52,54 ஐ ஐக்கியச்சங்கங்கள் 147 ஐந்தாங்காசிபன் 65 ஐவர்மலை 56 ஐவர்மலைக்கல்வெட்டு 56, ஒல்லையூர் தந்த பூதபாண்டியன் 15 க கங்கர்ப 51, 54 கச்சியாண்டவன் கோயில் 59 கட்டுரைகாதை 18 கடப்பை 83 கடவுண் மங்கலம் 44 கடல்கோள் 10 கடற்றெய்வம் 6 கடுங்கோன் 31,32 கடைச்சங்கம் 9-12,17 கண்டதேவமழவராயன் 77 கண்டராதித்த சோழன் 68 கண்டனுதயஞ் செய்தான் காங்கேயன் 95 கண்ணகி 11,17,18,18,19 கண்ணகியின் 19 கண்ணபிரான் 13 கண்ணனூர்க்கொப்பம் 100,101 கணக்காயர் 146 கணபதி 44 கணபதி (காகதீய வேந்தன்) 102 கணிமுற்றூட்டு 136 கபாடபுரம் 10 கம்பர் 146 கரகிரி 60,61 கரவந்தபுரம் 62 கரிகாற்பெருவளத்தான் 25,90 கருந்தங்குடி 77 கருநாட தேயம் 38 கருநாட 30 கருவூர் 146 கருவைக்கலித் துறையந்தாதி 128 மேற்படி பதிற்றுப்பத்தந்தாதி 128 மேற்படி வெண்பாவந்தாதி 128 கல்லிடைக்குறிச்சி 106 கலிங்கத்துப்பரணி 69,73,133 கவிராயர் ஈசுவரசில உடையார் 96 கழிக்கோட்டை 85 கழுகுமலை 50 களக்காடு 50,52 களப்பாழர் 32 களப்பாளர் 29 களப்பிரர் 28-31 களவழி நாடாள்வான் 111 களவியலுரை 24 கன்னிகவதி 74 கா காங்கேயன் 95 காங்கேயன் பிள்ளைத் தமிழ் 96 காசி காண்டம் 127 காசபன் 52 காஞ்சிமாநகர் 33, 78,104,115 காஞ்சி வாய்ப்பேரூர் 42 காஞ்சீபுரங் கொண்டான் 104 காஞ்சீபுர வராதீசுவரன் 104 காத்தியாயனர் 4 காந்தளூர் சாலை 74,75 காரணை விழுப்பரையர் 95 காரிக்கண்ணனார் 26 காரிகிழார் 7 காரைக்கால் 54 காலிங்கர் 53 காலிங்கராயன் 110 காவிக்களம் 107 காவிதி 134 காவிதிப்புரவு 134 காவிதி மோதிரம் 134 காவிரிப்பூம்பட்டினம் 17,26 காளையார் கோயில் 96 கானப்பேர் கடந்த உக்கிரப் பெருவழுதி 24,27 கானப்பேரெயில் 24,28 கி கியாசுடீன் 117 கிரீதேயம் 3 கிழவனேரி 70 கீ கீரந்தை 12 கீல்ஹார்ன் (டாக்டர்) 117 கீழ்மாத்தூர் 68 கீழைமங்கலம் 18 கு குகைக்கோயில் 50 குட்புடீன் 117 குடமூக்கு 53,54 குடமுக்குப்போர் 53,54 குடிதாங்கிக்கோல் 135 குடுமியான் மலை 156 குண்ணுர் 63 குந்து காலம் 76 கும்பகோணம் 53 கும்மணமங்கலம் 56 குமரிநாடு 6,10 குமரிமுனை 3,98 குமார கம்பண்ணன் 118 குமராப்பள்ளித் துஞ்சிய பெருக் திருமாவளவன் 26 குருகுலத்தரையன் 122 குலச்சிறையார் 33 குலசேகர சோமாசியார் 128 குலசேகர தேவர் 84 குலசேகர மாவலிவாணராயன் 112 குலோத்துங்க சோழன் 73,74 குழும்பூர் 38 குறுந்தொகை 9,14,26 குறுமடை 38 குறுவழுதி 26 கூ கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி 25 கூர்மபுராணம் 127 கூலவாணிகன் சாத்தனார் 18,20 கூன் பாண்டியன் 33 கே கேந்தூர்க்கல்வெட்டு 37 கேரள சிங்க வளநாடு 113, 132 கொ கொங்கர் 61 கொங்குச் சோழன் 97 கொங்குநாட்டுக் கருவூர் 85,111 கொங்குநாடு 36, 39,42,85 கொடும்பாளூர் 38,64 கொல்லங்கொண்ட பாண்டியன் 109 கொழுவூர் 45 கொள்ளிடம் 37 கொற்கை 121,141 கொற்கை நகர் 19 கொற்கைப் பெருந்துறை 142,143 கோ கோச்சடையன் 36, 37 கோச்சடையன் ரணதீரன் 36,37 கோப்பெருஞ்சிங்கன் I 94 கோப்பெருஞ்சிங்கன் II 101,105 கோப்பெருஞ்சோழன் 14 கோப்பெருந்தேவி 17 கோயில் பொன்வேய்ந்த பெருமாள் 103 கோயிலொழுகு 103 கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் 49 கோவலன் 17 கோனாடு 112 கெ கௌரியர் 5 ச சக்கசேனாபதி 70 சகத்விசயதண்டநாயகன் 77,78 சகநாத விசயம் 93 சங்க நூல்கள் 5 சங்கப் புலவர் 24 சங்கரன் சீதரன் 43,45 சங்கர நயினார் கோயில் 122 சடையவர்மன் குலசேகரபாண்டியன் 75-79 மேற்படி I 85-87 மேற்படி II 97 சடையவர்மன் குலசேகரன் 121 சடையவர்மன் சீவல்லபன் 73,74 மேற்படி சீவல்லப பாண்டியன் 125, 126 மேற்படி சுந்தர பாண்டியன் 111-120 மேற்படி பராக்கிரம குலசேகரபாண்டியன் 126-127 மேற்படி பராக்கிரம பாண்டியன் 122 மேற்படி பராந்தக பாண்டியன் 74,75 மேற்படி விக்கிரம பாண்டியன் 137 மேற்படி வீரபாண்டியன் 105,106 சடையன் மாறன் 50,57 சந்திரகுப்தன் 4 சந்திரவம்சம் 5 சம்புவராயர் 116 சம்வற்சரவாரியம் 180 சமண முனிவர் 33 சமயகுரவர் 44 சயங்கொண்ட சோழ சீவல்லபன் 87 சயங்கொண்டார் 73 சா சாத்தன் 56 சாத்தனார் 18 சாத்தனேரி 96 சாத்தன் கணபதி 44 சி சிங்களதேயம் 52 சிங்களம் 51,66 சித்திர மாடம் 19 சித்திராங்கதன் 5 சித்திராங்கதை 5 சிதம்பரம் 98-112 சிம்மவிஷ்ணு 29 சிலப்பதிகாரம் 9,18,35 சிற்றண்ணல் வாயில் 51 சின்னமனூர்ச் செப்பேடுகள் 7,22,46,52,57,61,64,66 சீ சீகாந்தன் 64 சீத்தலைச்சாத்தனார் 19 சீமாறன் சீவல்லபன் 51,54 சீவரமங்கலச் செப்பேடுகள் 39,41 சீவல்லப பாண்டியன் 73 சீவில்லிபுத்தூர் 77 சு சுந்தரசோழதேவர் 69 சுந்தரசோழபாண்டியன் 71 சுந்தரசோழன் 68,69 சுந்தரபாண்டியன் 33 சுந்தரபாண்டியன் I (மாறவர்மன் II) 87-95 சுந்தரமூர்த்திகள் 34-37 சுவாமிக்கண்ணுப்பிள்ளை 84 செ செங்கோற்சேந்தன் 32,33 செந்நிலம் 34 செம்பியன் 36 செழியக்குடி 41 செழியன் சேந்தன் 31-36 சே சேட்டை 45 சேந்தன் 31-36 சேரநாடு 36 சேரமண்டலம் 1 3 சேரமான்பெருமாள் நாயனார் 37 சேரன் செங்குட்டுவன் 18,19 சேனன் I 52 சை சைவத்திருமுறை 49 சோ சோணாடுகொண்டான்(நாணயம்) 138 சோமசுந்தரக்கடவுள் 24 சோமன் 100 சோழகேரளன் 85 சோழநாடு 36 சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி 20,24 த தகடூர் 41 தஞ்சாவூர்க் கூற்றம் 40 தமிழ்க்கலை 30 தமிழகம் 26 தமிழர் நாகரிகம் 30 தர்மபுரி 41 தலைச்சங்கம் 6 தலையானங்கம் 20,24 தளபதி சமுத்திரம் 50 தளவாய்புரச் செப்பேடுகள் 31 தா தாம்பிரபருணியாறு 10 தி திண்டுக்கல் 58,60 திதியன் 20 திரிகூடகிரி 106 திரிகோணமலை 106 திருக்கானப்பேர் 86 திருக்கானப் பேருடையான் 86 திருக்குறள் 24 திருக்கோடிகா 47 திருச்சிராப்பள்ளி 46-51 திருச்சிற்றம்பலக் கோவையார் 48 திருச்செந்தூர் 56-60 திருச்சோற்றுத்துறை 46 திருஞானசம்பந்தர் 33 திருத்தொண்டத்தொகை 34 திருத்தொண்டர் புராணம் 30 திருநெய்த்தானம் 56 திருப்பரங்குன்றம் 39,44 திருப்பரங்குன்றக் கல்வெட்டுக்கள் 39 திருப்பாண்டிக் கொடுமுடி 39 திருமங்கை 38 திருமங்கையாழ்வார் 38 திருமாலிருஞ்சோலை 13 திருவக்கரை 82 திருவதிகை வீரட்டானம் 67 திருவரங்கம் 100,103 திருவாங்கூர் 66 திருவாதவூரடிகள் 48 திருவாலங்காட்டுச் செப்பேடுகள் 70,71 திருவாலவாய் 37 திருவாலவாயுறை இறைவர் 37 திருவாழிக்கல் 136 திருவிடைமருதூர் மும்மணிக் கோவை 48 திருவிடையாட்டம் 136 திருவியலூர் 46,72 திருவிளையாடற்புராணம் 33 தீ தீரதரன்மூர்த்தி எயினன் 43,45 து துர்க்கை 45 தெ தெள்ளாற்றுப் போர் 53 தெள்ளாறு 53 தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் 53,54,55 தென்பரதவர் 34 தென் வெளியங்குடி 66 தே தேர்மாறன் 38 தேவதானம் 13 தை தைப்பூச விழா 74 தொ தொண்டி 77 தொண்டை மண்டலம் 38,47 தொல்காப்பியம் 6,10 தோ தோட்ட வாரியம் 139 ந நக்கன் கொற்றி 45 நக்கீரனார் 28 நச்சினார்க்கினியர் 6 நந்திபோத்தரையர் 53 நந்திவர்மப் பல்லவமல்லன் 38,40 நந்திவர்மன் 53,54 நம்பி நெடுஞ்செழியன் 26 நம்பியாண்டார் நம்பி 49,50 நரசிங்கப் பெருமாள் 44 நரசிம்மவர்மன் 29,30 நல்வழுதி 25 நற்றிணை 11,14,24,25,26 நன்மாறன் 19,27 நி நியமம் 47 நிருபதுங்கவர்மன் 54,55,57 நிலந்தருதிருவிற்பாண்டியன் 6 நின்றசீர் நெடுமாறன் 34 நெ நெடியோன் 6 நெட்டிமையார் 7 நெடுஞ்சடையன் பராந்தகன் பட்டங்கள் 43 நெடுநல்வாடை 22 நெடும்பல்லியத்தனார் 7 நெல்லூர் 83,102 நெல்வேலிமாறன் 126 நென்மேலி 38 நை நைடதம் 127 நைஷதம் 127 நைஷதம் இராமகிருஷ்ணர் 127 ப பஃருடீன் முபாரக்ஷா 117 பஃறுளியாறு 6 பஞ்சவார வாரியம் 139 பட்டவிருத்தி 136 பட்டினத்தடிகள் 48, 50 பண்டேயா 5 பண்டோ 4 பத்துப்பாட்டு 5,23,36 பரசக்ர கோலாகலன் 51 பரம சைவன் 50 பரம வைஷ்ணவன் 42,50 பரமேச்சுர விண்ணகரப் பதிகம் 38 பரமேச்சுர விண்ணகரம் 38 பராக்கிரம பாண்டியச் சதுர்வேரி மங்கலம் 122 பராக்கிரம சோழ பாண்டியன் 71 பராக்கிரமபாகு 75 பராக்கிரம பாண்டியன் 75,76,79 பராக்கிரம பாண்டியனான குலசேகர தேவன் 125 பராந்தக பாண்டியன் 61-63 பரிபாடல் 9,12,26 பருதிகுலபதி 82 பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 7,8 பல்லவர் 51 பல்லவராயன் 98 பலதேவன் 13 பழமொழி 12 பழைய வழக்கங்களின் பெயர்கள் 148, 149 பழையாறை 96 பள்ளிச்சந்தம் 61,65,136 பன்னாடு தந்த பாண்டியன்மாறன்வழுதி 25 பா பாசிப்பட்டினம் 77 பாண்டிமங்கல விசையரையன் 44 பாண்டி மண்டலத்து நாடுகளும் கூற்றங்களும் 131 பாண்டி மண்டலம் 3,48, 132 பாண்டி மார்த்தாண்டன் 67 பாண்டிய இராச்சியம் 55 பாண்டியகுல சம்ரட்சகன் 98 பாண்டிய குலாசனி 70,71 பாண்டிய குலாந்தகன் 119 பாண்டியமிர்தமங்கலவரையன் 44 பாண்டியன் வீரகேசரி 72 பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள் 68 பாண்யிளங்கோ மங்கலப் பேரரையன் 46 பாணினி வியாகரணம் 24 பாலாசிரியர் 146 பாழி 34 பாளி 28 பி பிசிராந்தையார் 14 பிரமதேயம் 61,64, 136 பிரமோத்தரகாண்டம் 128 பிருதிவிபதி ஐ 58,59 பிருதிவிபதி ஐஐ 66 பிளைனி 4 பு புகழியூர் 41 புத்தர் 4 புத்தர் பல் 109,110 புத்த விகாரம் 52 புதுநீர் விழா 25 புரவுவரித் திணைக்களத்தா 134 புரவுவரித்தணைக்களநாயகம் 134 புலவர் முற்றூட்டு 136 புவனேகவீரன் 107, 108 புறநானூறு 5,7,9,13,14,15 பூ பூசுந்தரி 38 பூதிவிக்கிரமகேசரி 69 பூந்தமல்லி 116 பூவலூர் 38 பெ பெண்ணாகட நகர் 40,61 பெண்ணையாறு 47 பெரிய புராணம் 30,34 பெரியலூர் 38 பெரியாழ்வார் 42 பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார் 131 பெருங்கோப்பெண்டு 15,16 பெருச்சிக்கோயில் 95 பெருந்திருமாவளவன் 26 பே பேரெயின் முறுவலார் 26 பொ பொத்தப்பிச் சோழன் 55 பொதியின் மலை 36,40 பொருநன் 20 பொற்கைப் பாண்டியன் 11,12 பொற்மடிமம் 52 பொன்மாளிகைத் துஞ்சின தேவர் 68 பொன்வாரியம் 139 பொன்னமராவதி 91 பொன்னின் பாண்டியன் 126 பொன்னின் பெருமாள் 122 போ போசளத்தண்டநாயகன் சிங்கணன் 100 பௌ பௌத்தம் 30 ம மகதநாடு 4 மகம்மதுபின் துக்ளக் 116 மகாபாரதம் 4 மகாவம்சம் 4,52 மி மிண்டிக்கல் 72 மிழலைக்கூற்றல் 21,131 மீ மீனாட்சியம்மை 5 மு முகமண்டபம் 44 மூடத்திருமாறன் 9,10 முடிகொண்ட சோழபுரம் 94 முத்தூர்க்கூற்றம் 21 முதலைக்குளம் 122 முருகவேள் 60 முல்லையூர் 72 மூ மூவேந்த மங்கலப் பேரரையன் 44 மெ மெகதனி 54 மே மேலைச்சளுக்கியவேந்தர் 29,36 மேலைமங்கலம் 76 மௌ மௌரிய மன்னன் 4 ய யவனர் 142,144 யவனாசிரியர் 5 யு யுவான் சுவாங் 33,34,35 ர ரணதீரன் 36,37 ரணரசிகன் 37 வ வஞ்சி 21, 65 வடவாரியர் 18 வடிம்பலம்ப நின்ற பாண்டியன் 6,7 வரகுண பாண்டியன் 57,60 வரகுண மகாராசன் 46,51 வரகுணராம குலசேகர பாண்டியன் 126,127 வரகுணராம பாண்டிய குலசேகர தேவதீட்சிதர் 167 வரதுங்கராம பாண்டியன் 125,126 வராக மிகிரர் 28 வரியிலார் 134 வல்லம் 125, 126 வல்லாளதேவன் II 93 வா வாகூர்ச் செப்பேடுகள் 54,55 வாசப் 108, 113, 114, 115 வாணகோவரையர் 102 வாணாதிராசர் 102 வாயுசங்கிதை 125 வார்த்திகம் 4 வாளால் விழிதிறந்தான் குளிகை 138 வான்மீகி ராமாயணம் 4 வானவன் மாதேவி 63,66 வி விக்கிரமங்கலம் 74 விக்கிரம சோழபாண்டியன் 71 விக்கிரம சோழன் 74.75 மேற்படி கொங்குச் சோழன் 97 விக்கிரம பாண்டியன் 71 விக்கிரமாதித்தன் I 29,37 விக்கிரமாதித்தன் II 29 விசயகண்ட கோபாலன் 102,105 விசயன் 5 விசயாதித்தன் 29 விசயாலய சோழன் 57 விசுவநாதப் பேரேரி 124 விண்ணம் 41 விந்தனூர் 122 வியாசமுனிவர் 4 விழிஞம் 41,42,51,61,74 வீ வீரகேரள பாண்டியன் 71 வீரகேரளம் புதூர் 122 வீரகேரளன் 82 வீரசோமேச்சுரன் 97,98,100, 101 வீரதுங்கன் 61 வீரநாராயணன் 63 வீரபாண்டியன் 67, 69, 70,76 வீரபாண்டியன்,சடையவர்மன் 105,106,113 வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரிவர்மன் 69 வீரபாண்டியன் திருமண்டபம் 106 வீரமங்கலப் பேரரையன் 45 வீர ரவி உதயமார்த்தாண்டவர்மன் 99 வீரரவிவர்மன் 75 வீரராசேந்திர சோழன் 72 வீரராமநாதன் 101 வீரவல்லாள தேவன் III 118 வீரவெண்பாமாலை 126 வெ வெள்ளாறு 79 வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெரு வழுதி 26 வெள்ளூர் 41,65 வெற்றிவேற்செழியன் 19 வெனி நகர் 108 வே வேங்கடம் 3 வேங்கை மார்பன் 24 வேணாடு 41 வேதவன முடையான் அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் 79 வேப்பத்தூர் 47 வேம்பற்றூர் ஈசான முனிவர் 128 வேம்பில் 47 வேள் எவ்வி 21 வேள்விக்குடிச் செப்பேடுகள் 7,31,32,33,40,42,50 வை வைணவ சமயகுரவர் 42 வைத்தியகுலம் 43,44 வைப்பூர் 65,66 வையையாறு 25 ஸ்ரீ ஸ்ரீ கண்டராஜன் 55 ஸ்ரீ குலசேகர தேவர் 84 ஸ்ரீ விக்கிரம பாண்டிய தேவர் 84 ஸ்ரீ வில்லிபுத்தூர் 121 ஜ ஜலாலுடீன் அஸன்ஷா 116, 117 ஹ ஹர்ஷன் 127 ஹெ ஹெர்க்கிளீ 4 தொல்காப்பியப் பாயிர உரை (நாச்சினார்க்கினியம்) பக்கம் 9. (i) நிலந்தந்த பேருதவிப் பொலந்தார் மார்பின் நெடி யோனும்பல் (மதுரைக் காஞ்சி வரி: 60-61). (ii) முன்னீர் விழவின் நெடியோன், நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (புறம்-9). சின்னமனூர்ச் செப்பேடுகள் பாண்டியனொருவன் கடல் சுவற வேலெறிந்த கதையையும் ஒரு பாண்டியனிடத்துக் கடல் அடைக்கலம் புகுந்த கதையையும் குறிக்கின்றன. கடற் பிரளயத்தால் உலகங்களெல்லாமழிய, ஒரு பாண்டிய அரசன் மாத்திரம் உயிர்வாழ்ந்திருந்த செய்தி வேள்விக்குடிச் செப்பேடுகளில் வரையப் பெற்றுள்ளது. இம் மூன்று கதைகளும் வடிம்பலம்ப நின்ற பாண்டியனைப் பற்றியனவேயாமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இறையனார் அகப்பொருள் உரை (சி. வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு) பக்கம் 5. சிலப்பதிகாரம்-பக்கங்கள் 2,3. இறையனார் அகப்பொருளுரை-பக்கம் 5. இறையனார் அகப்பொருளுரை-பக்கம் 5. ....... தென்மதுரா புரஞ்செய்தும் அங்கதனில் அருந்தமிழ் நற்சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும் இசைநுணுக்கம், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல் என்பன. இப்பாடற்கு இசை வகுத்தவர் மருத்துவன் நல்லச்சுதனார் என்பார். பொருண்மொழிக்காஞ்சி என்பது உயிருக்கு இம்மை மறுமைகளில் உறுதிதருகிற பொருளை ஒருவனுக்குக் கூறுதல். . இதன் பொருள்: உண்டேகாண், இவ்வுலகம்; இந்திரர்க் குரிய அமிழ்தம் தெய்வத்தானாதல் தமக்கு தவத்தானாதல் தமக்கு வந்து கூடுவதாயினும் அதனை இனிதென்று கொண்டு தனித்து உண்டலுமிலர்; யாரோடும் வெறுப்பிலர்; பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அது தீர்த்தற் பொருட்டு மடிந்திருத்தலுமிலர்; புகழ் கிடைக்கின் தம்முடைய உயிரையுங் கொடுப்பர்; பழியெனின் அதனான் உலகமுழுதும் பெறினும் கொள்ளார்; மனக்கவர்ச்சி யில்லார்; அப்பெற்றித்தாகிய மாட்சிமைப் பட்ட அத்தன்மையராகித் தமக்கென்று முயலாத வலிய முயற்சியையுடைய பிறர்பொருட்டென முயல்வார் உண்டாதலான் - என்பது. இதன் பொருள்: படைக்கப்படுஞ் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலருடனே கூடவுண்ணும் உடைமை மிக்க செல்வத்தை யுடையோராயினும் காலம் இடையே உண்டாகக் குறுகக்குறுகக் கடந்துசென்று சிறிய கையை நீட்டிக் கலத்தின்கட் கிடந்ததனைத் தரையிலேயிட்டும் கூடப்பிசைந்து தோண்டியும் வாயாற் கவ்வியும் கையால் துழாவியும் நெய்யை உடைய சோற்றை உடம்பின்கட் படச் சிதறியும் இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் புதல்வரை இல்லாதார்க்குப் பயனாகிய முடிக்கப்படும் பொருளில்லை, தாம் உயிர் வாழும் நாளின்கண்- என்பது. புறம்-246. இதன் பொருள்: தம் ஆசிரியர்க்கு ஓர் ஊறுபாடுற்ற விடத்து அது தீர்த்தற்குவந்து உதவியும் மிக்க பொருளைக் கொடுத்தும் வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல் ஒருவற்கு அழகிது; அதற்கு என்னோ காரணமெனின், பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும் கல்வி விசேடத்தால் தாயும் மனம் வேறுபடும்; ஒரு குடியின்கட் பிறந்த பலருள்ளும் மூத்தோன் வருக வென்னாது அவருள் அறிவுடையோன் சென்ற நெறியே அரசனும் செல்லும்; வேறுபாடு தெரியப்பட்ட நாற்குலத்துள்ளும் கீழ்க்குலத்தில் ஒருவன் கற்பின் மேற்குலத்துளொருவனும் இவன் கீழ்க்குலத்தா னென்று பாராது கல்விப்பொருட்டு அவனிடத்தே சென்று வழி படுவனாதலால் - என்பது. சிலப்பதிகாரம்-நீர்ப்படைக்காதை 127-138. இவை புதுக்கோட்டை நாட்டிலும் தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கித் தாலுகாவிலும் இராமநாதபுரம் ஜில்லா திருவாடானைத் தாலுகாவிலும் முற்காலத்திருந்த கூற்றங்களாகும். தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக் கொலைவாளிற்றலை துமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும் ஆலங்கானத் தமர்வென்று ஞாலங்காவல் நன்கெய்தியும் பல்லவர் வரலாறு, பக். 34. Ibid, ப. 38. திரு ராவ்சாகிப் ஆ. இராகவையங்கார் அவர்கள் எழுதிய ‘Epigraphy & Tamil Literature’ என்ற ஆராய்ச்சி நூலில் கண்ட முடிவு. (The Pandiyan Kingdom by K.A. Nilakanta Sastrigal, M.A., page 49) South Indian Inscriptions, Vol. l, p. 152, Ibid, Vol.ll, p.356. Indian Antiquary, Vol, Vll, p.303; lbid, Vol. lX p.129; Epigraphia Indica, Vol, V, p.204. கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவன் மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள் வானாய் யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திண்டேர் சேனைக் கடலுங் கொடுதென் திசைநோக்கி வந்தான் வந்துற்ற பெரும்படை மண்புதை யப்ப ரப்பிச் சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன் வீரம் சிந்திச் செருவென்று தன்னாணை செலுத்தும் ஆற்றால் கந்தப் பொழில்சூழ் மதுராபுரி காவல் கொண்டான் (பெரிய. மூர்த்தி. 11,12) படைநான் குடன்று பஞ்சவன் துரந்து மதுரை வவ்விய கருநடர் வேந்தன் அருகர்ச் சார்ந்துநின் றரன்பணி யடைப்ப (கல். 56) கடிநாறு கவினலங்கற் களப்பாழர் குலங்களைந்தும் கற்றறிந்தோர் திறல் பரவக்களப் பாழரைக் களைகட்ட மற்றிறடோண்மாக்கடுங்கோன் இவனது சிவபக்தி இறையனாரகப் பொருளுரையிலும் புகழப்பட்டுள்ளது. (மேற்கோட் பாடல்கள் 256, 279) Indian antiquary, vol XI. The Pallavas P.68. The Pandyan Kingdom, pp.55 and 56. Epigraphia Indica, Vol. IX; No. 29. பெரிய புராணம், கழறிற்றறிவார், 91-2. சுந்தரர் தேவாரம், திருப்பரங்குன்றப் பதிகம், பாட்டு 11. South Indian Inscriptions vol II, No. 74. இப்பராந்தகன் தன் முன்னோனான பல்யாகமுது குடுமிப் பெருவழுதி என்னும் அரசன் கொற்கைகிழான் நற் கொற்றனுக்கு வழங்கிய வேள்விக்குடியென்ற ஊரைக் களப்பிரர் தம் ஆட்சியிற் கவர்ந்துகொள்ளவே, அக் கொற்கை கிழான் வழியிற் றோன்றிய நற்சிங்கன் என்பான் தன் உரிமையை யெடுத்துரைத்து வேண்டிக் கொண்ட வாறு அவ்வூரை இவ் வேந்தன் அவனுக்கு மறுபடியும் வழங்கியதை யுணர்த்துவனவே வேள்விக்குடிச் செப்பேடுகளாம். இவ்வேந்தன் தென்களவழிநாட்டு வேலங்குடி யென்ற வூரைச் சீவரமங்கலமென்று தன் பெயராற் பிரமதேயமாக வழங்கியதைக் கூறுவனவே சீவரமங்கலச் செப்பேடுகளாம். Epigraphia Indica, Vol. XVII, No.16. Ins. 314 of 1907. Indian Antiquary, Vol. XXII. pp. 69-75. South Indian Inscriptions, Vol VII. Nos. 553 and 534. கொங்கு மன்னனும் அதியமானும் வெவ்வேறு அரசர் ஆவர் என்று பேராசிரியர் K.A. நீலகண்ட சாதிரிகள் கூறுவது பொருத்தமுடையதன்று. (The Pandyan Kingdom, p. 62) S.I.I., Vol. VII, 431. Ep. Ind., Vol XXIII, No 45. காஞ்சி என்ற ஆறு இக்காலத்தில் நொய்யல் என்று வழங்குகிறது. பேரூர் அவ்வாற்றின் கரையில் கோய முத்தூர்க்கு அண்மையில் உள்ளது. Ep. Ind., Vol. VIII, pp. 319 and 320. இவ் வானைமலைக் கல்வெட்டில் கலியுகம் ஆண்டு 3871 என்று குறிக்கப் பெற்றிருத்தல் அறியத்தக்கது. பாண்டியர் கல்வெட்டுக் களில் இதுகாறும் கிடைத்துள்ளவற்றுள், இதுவே ஆண்டு வரையப்பெற்ற பழமையான கல்வெட்டாகும். Ibid, p. 320. Indian Antiquary, Vol, XXII. p. 67. Ibid, pp. 69-75. Ibid. Ins. 17 of 1907. S. I. I., Vol. V.No.608. Ins. 364 of 1907. Ins. 13 of 1908. S. I. I. Vol, VI. No. 446. Annual Report on Archaeological Survey of India for 1903-04. page 275. Ins. 37 of 1931. Ins. 160 of 1931. காடவனைக் கருவூரில் கால்கலங்கக் களிறுகைத்த கூடலர்கோன் ஸ்ரீவரகுணன். Ep. Ind. Vol. IX. No. 10. (Ins. 105 of 1905.) Ins. 104 of 1905. Ins. 12 of 1928-29. Ins. 863 of 1917. Ins. 605 of 1915. The Pandyan Kingdom, pp. 40 and 41. Ins. 368 of 1904; சாசனத் தமிழ்க்கவி சரிதம் பக். 32. S. I. I., Vol. III. p. 13. The Pandyan Kingdom. p. 69. குரைகடலீழங் கொண்டும் தெள்ளாறு என்பது வட ஆர்க்காடு ஜில்லா வந்தவாசித் தாலூகாவில் உள்ளதோர் ஊராகும். S. I. I., Vol., XII. D. No. 56. காடவருக் கடலானூர்ப் பீடழியப் பின்னின்றும் Ep. Ind., Vol. XVIII, No. 2. குடகுட்டுவர் குணசோழர் தென்கொங்கர் வடபுலவர், அடலழிந்து களஞ்சேர அமர்வல்லான் மகன்பட லால்குடி, கண்டியூர், திருச்சின்னம்பூண்டி, திருக்கோடிகா முதலான ஊர்களில் நிருபதுங்கன் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இச் செய்தி உறுதியாதல் உணர்க. A History of South India, K. A. N. (Second Edition) Page 154. ஒளிநிலைவேலதுபாயபகு...y‹ உம்பர்ல்வான் உலகணைந்தபின் .....kÆiya®nfh‹ பொத்தப்பிக் குலச்சோழன் òகழ்தருசிரீfண்டராசன்k¤தமாமiலவளவன்மâkகளக்களÃம்மடிதிருயிWகருîயிர்த்தஸ்ரீgரhந்தகமகhராஜன்(பuந்தகபா©டியன்செ¥ngLfŸ)” Ins. 705 of 1905. Ep. Ind., Vol. XXI, No. 17. Annual Report on South Indian Epigraphy for 1929-30, part II, para 4. Indian Antiquary, Vol. XXI, p, 323. Annual Report on South Indian Epigraphy for 1929-30, page 73, Ins, 705 of 1905. S. I. I., Vol. XII. No. 71. Ins. 690 of 1905. S. I. I., Vol. II, No. 76, Verse 18. ......K‹ãwªj வேல்வேந்தனைச் செந்தாமரை மலர்ப்பழனச் செழுநிலத்தைச்செருவென்றும்” Ep., Ind. Vol. XXI, No. 17. Ins. 690 of 1905. சேரருக்குரிய விழிஞத்தை இவன் கைப்பற்றியது இதனால் வெளியாகின்றது. இதில் கூறப்பட்டுள்ள வீரதுங்கன்யாவன் என்று இப்போது அறியக்கூடவில்லை. South Indian Inscriptions, Vol. III, No. 206. S. I. I., Vol. III, No. 99. Ins. 231 of 1926. இதில் குறிப்பிடப்பெற்ற வெள்ளூர் பாண்டி நாட்டின் வடவெல்லையிலாதல் சோழநாட்டின் தென்னெல்லையிலாதல் இருந்ததோர் ஊராதல் வேண்டும். S. I. I., Vol. II. No. 76 Verses 9-11. Ins. 122 of 1905; T. A. S., Vol. III p. 63 Annual Report on South Indian Epigraphy for 1932-33; part II. para 30; Ibid for 1935-36, part II para 47. Ep. Ind. Vol. XXV. No. 6. T. A. S. Vol. III, Nos. 22-26. Ins. Nos. 624 and 625 of 1926; S. I. I., Vol. V. No. 304. S. I. I., Vol. V. No.455. சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 11. S. I. I., Vol. II. pp. 72 and 74; Ibid, Vol. V. Nos. 723 and 980. 4. அம்பொன்மேரு அதுகொல் இதுகொலென்று ஆயிரங்கதிர் வெய்யவ னையுறுஞ் செம்பொன் மாளிகைத் தென்குட திக்கினிற் செய்த சித்திர மண்டபந் தன்னிலே - (க. பரணி. பா. 302) S. I. I., Vol. III, No. 142. Ep. Ind., Vol. XXII, No. 34, Verse 25. S. I. I., Vol. III, Nos.115-118. Ep. Ind., Vol. XII, No. 15; Ins. 302 of 1908. S. I. I., Vol. III, Nos. 200-204. Ibid, No. 205, Verses 67 and 68. Inscriptions of the Pudukkottai State No. 14. S. I. I., Vol. III, No. 199. Ep. Ind., Vol. XXV, No. 6. S. I. I., Vol. III, No. 205, Verses 76-79. Ins. 7 of 1927; Ins. 333 of 1923; Ins. 119 of 1905. Ep. Ind. Vol. V., p.46. S. I. I., Vol. II, No. 59. S. I. I., Vol, III, No. 205, Verses 91-93. Annual Report on Epigraphy for 1916-17, part II, para 3. Ep. Ind., Vol. IV, No. 31. S. I. I., Vol. III, No. 208. Ins. 46 of 1907. தன்பெருஞ் சேனை யேவிப் பஞ்சவர், ஐவரும் பொருதப் போர்க்களத் தஞ்சி, வெரிநளித் தோடி அரணெனப் புக்க, காடறத் துடைத்து நாடடிப் படுத்து குலோத்துங்கன் I, மெய்க்கீர்த்தி . விட்ட தண்டெழ மீனவர் ஐவருங், கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலுநீ - கலிங்கத்துப்பரணி - 368. S. I. I., Vol.V, Nos. 294 & 298; 30 & 32 of 1909. A. R. E. for 1909. part II. para 29; A. R. E. for 1910, part II, para 32. Tamil and Sanskrit Inscriptions, Edited by J. Burgess and S.M. Natesa Sastri, p. 13. Travancore Archaeological Series, Vol I, No. 3. Travancore Archaeological Series, Vol. I, pp. 19-25. Indian Antiquary, Vol. 44, p. 255. Travancore Archaeological Series. Vol. IV, No. 28. Ep. Ind., Vol. XXV, p.84. S. I. I., Vol. V, Nos. 293 and 296. இலங்கைச் சரிதமாகிய மகாவம்சத்தில் 76, 77- ஆம் அதிகாரங் களில் இப்போர் நிகழ்ச்சிகள் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றில் குறிக்கப் பெற்றுள்ள தமிழ்நாட்டூர்களுள் சிலவற்றை இப்போது அறிந்து கொள்ள முடியவில்லை. S. I. I., Vol. VI, No. 456. Ep. Ind. Vol. XXI, No. 31. (பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு) இவ்வரலாறு யான் எழுதிய பிற்காலச் சோழர் சரித்திரம் இரண்டாம் பகுதியில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. 4. Ep. Ind., Vol. XXII, No. 14. (வடதிருவாலங் காட்டுக் கல்வெட்டு) இவ்வெள்ளாறு பாண்டிநாட்டின் வட எல்லையில் அறந்தாங்கித் தாலூகா வழியாக ஓடிக் கடலில் கலக்கும் ஓர் ஆறாகும். இவ்வாற்றின் தென்புறத்தில் பாண்டிநாடும் வடபுறத்தில் சோழநாடும் இருத்தல் அறியத்தக்கது. Ep. Ind., Vol. XXII, p. 86. T. A. S., Vol. II, pp. 18-20. S. I. I., Vol. VI. No. 436. (திருக்கொள்ளம் பூதூர்க் கல்வெட்டு) Ins 190 of 1904. S. I. I., Vol. III, No. 86 and 87. S. I. I., Vol. VII, No. 797; Inscriptions of the Pudukkottai State, No. 166. நெட்டூர் என்பது இராமநாதபுரம் ஜில்லா சிவகங்கைத் தாலூகாவிலுள்ள இளையான்குடிக் கண்மையில் உள்ளது. Ins. 190 of 1904; S. I. I., Vol. VIII, No. 296. S. I. I., Vol. No. 299. Ibid, No. 412. Ibid. No. 426. S. I. I., Vol. V, Nos. 302, 412 and 415. மட்டியூர் என்பது இJராமநாதபுரம் ஜில்லா திருப்பத்தூர்த் தாலூகாவில் சதுர்வேதிமங்கலம் என்ற பெயருடன் இக்காலத்தில் இருத்தல் அறியத்தக்கது. (Ins. 298 of 1927 - 28) Inscriptions of the Pudukkottai State, No. 166. Ins. 554J of 1904. திருவாரூரில் காணப்படும் மூன்றாங் குலோத்துங்க சோழனது 24 - ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில் அவன் மதுரையில் புனைந்து கொண்ட திரிபுவன வீரதேவன் என்ற சிறப்புப் பெயர் வரையப் பெற்றிருத்தலால் இவ்வாண்டு உறுதிஎய்துகின்றது. Ins. 550 of 1916. Ins. 540 of 1916. S. I. I., Vol. V, No. 302. Ep. Ind., Vol. XXV, No. 11. Ins. 313 of 1923. Ep. Ind., Vol. VIII. Appendix II, p. 24. Ins. Nos. 83 of 1927 and 47 of 1926. Ins. 298 of 1927 - 28; Ins. 84 of 1916; Ins. 183 of 1935 - 36. Annual Report on South Indian Epigraphy for 1926 - 27, part 41 Ibid, for 1927 - 28, part II para 17. Ins. 340 of 1916. Ins. 183 of 1935-36. S. I. I., Vol. V, No. 431; செந்தமிழ்-தொகுதி XII, g¡. 446-50. வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்ட தொன்றும் அறியாத செம்பியன் காவிரி நாட்டி லரமியத்துப் பறியாத தூணில்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று நெறியால் விடுந்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே திருவெள்ளறைக் கல்வெட்டு (செந்தமிழ் - தொகுதி 41, பக். 215) கல்வெட்டில் காணப்படும் இப்பாடலில் கூறப்பெற்ற கண்ணன் என்பார். சோழன் கரிகாற்பெருவளத்தான் மீது பட்டினப்பாலை என்ற நூலை இயற்றியுள்ள கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பெருமானே யாவர். இப் புலவர்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசில் வழங்கி அந்நூலைத் திருமாவளவன் பெற்றுக் கொண்ட செய்தி கலிங்கத்துப் பரணியால் அறியக் கிடக்கின்றது. எனவே, இப் பெருந் தொகையோடு நூல் அரங்கேற்றப் பெற்ற பதினாறுகால் மண்டபத்தையும் அவ்வரசர் பெருமான் இக்கவிஞர் கோமானுக்கு வழங்கினன் போலும். இவ்வூர், கும்பகோணத்திற்கு மேற்புறத்திலுள்ள தாராசுரம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ளது. இதனைச் சூழ்ந்துள்ள முழையூர், பட்டீச்சுரம், திருச்சத்தி முற்றம், சோழமாளிகை, திரு மேற்றளி, கோபிநாத பெருமாள் கோயில், ஆரியப் படையூர், புதுப்படையூர், பம்பைப்படையூர், மணப் படையூர், அரிச்சந்திரபுரம், தாராசுரம், நாதன்கோயில் ஆகிய ஊர்களையும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் பெரிய நகரமாக விளங்கியது. செந்தமிழ் 43-ஆம் தொகுதி, 4,5-ஆம் பகுதிகளில் யான் எழுதியுள்ள பழையாறை நகர் என்னுங் கட்டுரையில் இந் நகரைப் பற்றிய வரலாற்றைக் காணலாம். Ins. 358 of 1916. Ins. 322 of 1927-28. Ins. 336 of 1927-28; S. I. I., Vol.V, No. 421; Ins. 672 of 1916. Ep. Ind., Vol. XXIII, No. 27; The Vailur Inscription of Kopperunjinga I. முடிகொண்ட சோழபுரம் என்பது பழையாறை நகரேயாம் (Ins 271 of 1927) இந்நகரில் சோழர்களது அரண்மனை நிலைபெற்றிருந்த இடம் இந்நாளில் சோழமாளிகை என்னுந் தனியூராக இருக்கின்றது. Inscriptions of Pudukkottai State, Nos, 293 and 296. Ibid, Nos. 292, 297 and 298. Ep. Ind., Vol. VII. pp. 167-68. The Colas, Second edition, (1955) pp. 424 - 425. இச்சுந்தரபாண்டியன் நிகழ்த்திய முதல் படை யெழுச்சியில் மூன்றாங் குலோத்துங்க சோழன் தோல்வி யெய்தினன் என்று கூறுவர் சிலர். அது தவறு என்பதும் அவ்வேந்தன் இவன் படை யெழுச்சிக்கு முன்னரே இறந்தனன் என்பதும் இவனுடைய இரண்டு படை யெழுச்சிகளிலும் தோல்வி யுற்றவன் மூன்றாம் இராசராச சோழனே என்பதும் யான் எழுதியுள்ள பிற்காலச் சோழர் சரித்திரம் இரண்டாம் பகுதியில் விளக்கப் பட்டுள்ளன. Ins. 75 of 1924. Ins. Nos, 554 and 575 of 1922; A. R. E. for 1923. part II paras 49 and 50. Ins. 26 of 1926. Ins. 75 of 1924. Ins. 47 of 1924; A. R. E. for 1924, part II, para 29. A. R. E. for 1923, part II, para 51; Ins, 548 of 1922. S. I. I., Vol. V, Nos. 301 and 428. Ibid, No. 421. S. I. I., Vol. V, Nos. 448 and 421. Ibid. Vol. IV, No. 511. Ep. Car., Vol, V, Ak. 125. Ibid. No. 123. 3. S. I. I.,Vol. V, Nos. 427 and 448; Inscriptions of the Pudukkotai State, Nos. 340 and 341. திருமெய்யத்திலுள்ள இவ்விரு கல்வெட்டுக் களாலும் பாண்டிநாட்டில் அப்பகுதி, போசள வீர சோமேச்சுரன் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்று தெரிகிறது. S. I. I., Vol. V, Nos. 446 and 421. Ins. 28 of 1937-38. S. I. I., Vol. V, No. 459. Ep. Ind, Vol. III, No.2. S. I. I., Vol. VII, Nos. 429 and 446; Ibid, Vol. VIII No. 436. S. I. I., Vol. IV, Nos. 618-620. Annual Report on South Indian Epigraphy for 1926-27, page 92. கண்ணனூர் என்பது இக்காலத்தில் சமயபுரம் என்னும் பெயருடன் திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே ஏழு மைலில் உள்ளது. அங்குப் போசளேச்சுரம் என்ற சிவன் கோயிலும் இடிந்த கோட்டையும் இருத்தலை இன்றும் காணலாம். Ep. Ind., Vol. III, No. 2. நட்பதுபோ லுட்பகையாய் நின்ற-சேமனைக் கொன்று சினந்தணிந் தருளி- (மெய்க்கீர்த்தி) Ins. 702 of 1904. சேந்தமங்கலம் என்பது தென்னார்க்காடு ஜில்லாவில் திருநாவலூர்க் கண்மையில் உள்ளது. S. I. I., Vol. V, No. 459. Ins. 340 of 1913; S. I. I., Vol. IV. Nos. 619 and 625. Ins. 361 of 1913; S. I. I., Vol. IV, Nos. 624 and 631. வாக்கியல் செந்தமிழ்ச் சுந்தர பாண்டியன் வாளமரில் வீக்கிய வன்கழற் கண்டகோ பாலனை விண்ணுலகிற் போக்கிய பின்பவன் தம்பியார் போற்றப் புரந்தரசில் ஆக்கிய வார்த்தை பதினா லுலகமு மாகியதே. (செந்தமிழ் - தொகுதி IV, பக்கம் 493) சிவனரிக் கிம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட், சினமத வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லை மன்றில் வனசத் திருவுடன் செஞ்சொற் றிருவை மணந்த தொக்குங், கனகத் துலையுடன் முத்தத் துலையிற் கலந்ததுவே (S. I. I., Vol. IV, No. 620) S. I. I., Vol. IV, Nos. 628, 629 and 630. Ibid, No. 624. மதுரையில் கீழைக்கோபுரம் அமைத்தவனும் இவனே. Ep. Ind., Vol. III, pp 7-17. Ins. 6 of 1936-37. Ins. 150 of 1904; Ins. 531 of 1920. Ins. 28 of 1937-38. சுந்தரபாண்டியன் காஞ்சியிலும் வீராபிடேகம் செய்து கொண்டான் என்று திருப்புட்குழியிலுள்ள இவனது வடமொழிக் கல்வெட் டொன்று கூறுகின்றது. (செந்தமிழ் - தொகுதி IV, பக். 513) S. I. I., Vol. VIII, No. 359. Ibid, Vol. VI, No. 455. The Pandyan Kingdom. pp. 175-78. S. I. I., Vol. VII, No. 761. Inscriptions of the Pudukkottai State No. 366. கோச்சடையவர்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள். கொங்கீழங் கொண்டு கொடுவடுகு கோடழித்துக் - கங்கை யிருகரையுங் காவிரியுங் கைக்கொண்டு - திங்கள் அரவமுஞ் செழுமலர்த் தாருடன் - பொங்குபுனற் செஞ்சடையோன் பொற்புலியூர் வீற்றிருந்து - காடவன் திறையிடக் கண்டினி திருந்து - வீராபிஷேகமும், விஜயாபிஷேகமும் பண்ணி யருளிய ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு. (Ibid, Nos. 370 and 372) Ins. 616 of 1929-30. தில்லையிலுள்ள நூற்றுக்கால் மண்டபம், விக்கிரம சோழனுடைய படைத்தலைவருள் ஒருவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயனால் கட்டப் பெற்றதாகும். அதிலுள்ள பன்னிரண்டு தூண்களில் விக்கிரமசோழன் திருமண்டபம் என்று வரையப்பட்டிருத்தல் அறியற் பாலது. பிறகு அது வீரபாண்டியன் திருமண்டபம் என்ற பெயர் எய்தியது. Ins, 117 of 1907. S. I. I., Vol. VII Nos. 459 55, 793 and 128. Ins. Nos. 336, 353, and 365 of 1913. S. I. I., Vol. IV, No. 228. ஏந்து மருவி யிரவி புரவியின்முன் பூந்துவலை வீசும் பொதியிலே - காந்துசின வேணா டனைவென்ற விக்கிரம பாண்டியன்மெய்ப் பூணாரம் பூண்டான் பொருப்பு. புயலுந் தருவும் பொருகைப் புவனேக வீரபுனல் வயலுந் தரளந் தருகொற்கை காவல வாரணப்போர் முயலுங் கணபதி மொய்த்தசெஞ் சோதி முகத்திரண்டு கயலுண் டெனுமது வோமுனி வாறிய காரணமே. (சிதம்பரச் சாசனங்கள் - செந்தமிழ் - தொகுதி IV, பக்கங்கள், 493-94) சிதம்பரத்திற்கு அண்மையில் புவனகிரி என இக்காலத்தில் வழங்கும் ஊர் இவன் பெயரால் அமைக்கப் பெற்றதாகும், புவனேக வீரன்பட்டினம் என்னும் பெயரே பிற்காலத்தில் புவனகிரி என மருவி வழங்கலாயிற்று. Annual Report on South Indian Epigraphy for 1926-27, page 90, Ins. 120 of 1907. Ins. Nos. 260 and 263 of 1917. Foreign Notices of South India, p. 179. The Pandyan Kingdom, pp, 184 and 185. முதல் புவனைகபாகுவின் ஆட்சியின் இறுதிக்காலத்தில்தான் ஆரியச் சக்கரவர்த்தி ஈழநாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான் என்று தெரிகிறது. நான்காம் பராக்கிரமபாகு புத்ததேவரது பல்லிற்கு ஈழத்தில் ஒரு கோயில் அமைத்தமை அறியத்தக்கது. A. R. E. For 1926-27, part II, para 42. Ins. 698 of 1916. Ins. 526 of 1926; Ins 79 of 1927; S. I. I., Vol. VIII, Nos. 393 and 396. Ins. 29 of 1927. The Pandyan Kingdom. p. 184. Ins. 462 of 1921. இவன் தென்னார்க்காடு ஜில்லாவில் திருநறுங்கொண்டை யிலுள்ள நாற்பத்தெண்ணாயிரப் பெரும்பள்ளி என்னும் அமண் பள்ளியில், தான் பிறந்த தைத்திங்கள் அத்தநாளில் இராசாக்கணாயன் திருநாள் நடத்துவதற்கு இறையிலி நிலம் அளித்தித்ருத்தலால் இதனை நன்கறியலாம். (S. I. I., Vol. VII. No. 1014.) Ins. Nos. 539 and 704 of 1916. S. I. I., Vol. VII. No. 795, 916, 1018 and 1023. மூன்றாம் குலோத்துங்க சோழன் இராசாக்கணாயன் என்னுஞ் சிறப்புப் பெயருடையவன் என்றும், எனவே, அவன் தைத்திங்கள் அத்த நாளில் பிறந்தவன் என்றும் மூன்றாங் குலோத்துங்க சோழன் என்ற நூலின் ஆசிரியர் எழுதியிருப்பதற்குக் கல்வெட்டுக்களில் சிறிதும் ஆதார மின்மை அறியத்தக்கது. Ins. No. 269, 279, 320 and 386 of 1913; S. I. I., Vol. VII. Nos. 768 and 769. A. R. E. For 1936-37, Part, II. Para 40. The Pandyan Kingdom p. 187. Ins. 430 of 1921. Wassaf in Elliot and Dowson. Vol. III. pp. 53 and 54. Elliot and Dowson, Vol. III, pp. 53 and 54. Ibid, p. 88. முன்னாள் இராசராசன் சுந்தரபாண்டிய தேவர்துலுக் கருடன்வந்தநாளிலேஒக்கூருடையாரும்இவர்தம்பிமாரும்அனைவரும்அடியாரும்.................br¤J§ கெட்டும்போய் அலைந்து ஊரும் வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழாயிருக்கிற அளவிலே (S. I. I., Vol. VIII. No. 247) என வருங்கல்வெட்டு¥பகுâஇ¢செய்திaவலியுறுத்தšகாண்க. பாண்டியர் இருவர்க்கும் உரிய 612 யானைகளும் 20000 குதிரைகளும், 96000 மணங்கு பொன்னும் முத்துக்களும், அணிகலங்களும் அடங்கிய பல பெட்டிகளும் ஆகிய இவற்றை மாலிக்காபூர் கொள்ளையடித்துச் சென்றான் என்று பார்னி கூறியுள்ளமையறியத்தக்கது. (Elliot and Dowson. Vol, III, p. 204) Ins. Nos. 33 and 34 of 1911. தமிழ்ப் பொழிலிரண்டாந்துணரில் (பக்கம் 142-150) யானெழுதியுள்ள சம்புவராய மன்னர் என்ற கட்டுரையால் இவர்கள் வரலாற்றை அறியலாம். See South India and her Muhammadan Invaders by Dr. S. Krishnaswamy Aiyangar. Inscriptions of the Pudukkottai State, Nos. 669 and 670. Ibid, Nos. 454 and 669. Inscriptions No. 322 of 1927; Ins. Nos. 119 and 120 of 1908; S. I. I., Vol. VIII, No. 750. Foreign Notices of South India, pp. 277 and 279. The Pandyan Kingdom, pp. 245 and 246. Mysore Gazetteer Vol, II, Part II, Page 1405. குமாரகம்பண்ணன் மனைவி கங்காதேவி யென்பாள் தன் கணவனது வெற்றி குறித்து எழுதிய மதுராவிஜயம் என்ற வடமொழி நூலில் அம் மன்னன் மதுரையின் மேற்படை யெடுத்து வந்தமைக்குக் காரணமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றாள்: ஒரு நாள் இரவு குமாரகம்பண்ணன் கனவில் ஒரு தெய்வப்பெண் தோன்றிப் பாண்டி நாட்டில் துலுக்கர் ஆட்சியினால் மக்கள் அடையும் பெருந்துன்பத்தையும் திருக்கோயில்கள் இடிக்கப்படு வதனையும் வைதிக சமய வொழுக்கங்கள் இழிவுபடுத்தப் படுவதனையும் எடுத்துக் கூறித் தன் கையிலுள்ள வாளினை அம்மன்னன் கையிற் கொடுத்து, இது சிவபெருமானுக்கு விசுவகர்மாவினால் கொடுக்கப்பெற்றது; இவ்வாளினைச் சிவபெருமான் பாண்டியர்க்குக் கொடுத்தார்; இதனை எடுத்துப் போர்புரியும் வன்மை பாண்டியர்க்கு இல்லாது போகவே அகத்திய முனிவர்ïதனைv‹னிடந்தªதுஉ‹fயிற்fடுக்கும்படிகூ¿னார்;ஆfவேஇ›வாளினால்துYக்கரைtன்றுபhண்டிநhட்டும¡களைக்காத்துநyஞ்rய்வாயாகஎ‹றுrல்லிமiறந்தது எ‹பதுஅªÃfœ¢áahF«. Travancore Archaeological Series, Vol. I, page 46; Ins. 577 of 1926. Inscriptions of The Pudukkotai State, No. 672. மால்விட்ட படைதுரந்து வடுகெறிந்த kகதேசன்tடிவேல்tங்கக்fல்விட்டfதிர்முடிமேÈந்திரனைப் òடைத்ததுமுன்fடல்போய்tற்றnவல்விட்டbதாருதிறலுKகிலிட்ட jனிவிலங்கும்bவற்பிnலறச்nசல்விட்டbபருவலியுkங்கேவிட் Lடனடந்தான்bதன்னர்nகாவே.(Inscriptions of the Pudukkottai State, No. 653.) இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றென் றழைத்தவழுகுரலேயால்- தழைத்தகுடைமன்னவர்கோன்வாணன்வடிவேலால்தோற்றுடைந்ததென்னவர்கோன்போனதிசை. (Ibid. No. 678) The Pandyan Kingdom, pp. 246 and 248. Travancore Archaeological Series Vol. I. Page 45. The Pandyan Kingdom p. 248. Travancore Archaeological Series, Vol. I, p. 97. Ibid, p. 91. T. A. S., Vol. I. pp. 126 and 133. செங்கோட்டைத் தாலூகாவிலுள்ள இவ்விந்தனூர்க்குப் பராக்கிரம பாண்டியச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் முற்காலத்தில் இருந்தமை உணரத்தக்கது. Travancore Archaeological Series, Vol. I. pp. 91, 92, 93 and 101. T. A. S., Vol. I, pp. 99 and 100. 3 . மனத்தால் வகுக்கவு மெட்டாத கோயில் வகுக்க முன்னின் றெனைத்தான் பணிகொண்ட நாதன்றென் காசியை யென்றுமண்மேல் நினைத்தா தரஞ்செய்து தங்காவல் பூண்ட நிருபர்பதந் தனைத்தாழ்ந் திறைஞ்சித் தலைமீ தியானுந் தரித்தனனே. . ஆரா யினுமிந்தத் தென்காசி மேவும்பொன் னாலயத்து வாராத தோர்குற்றம் வந்தாலப் போதங்கு வந்ததனை நேராக வேயொழித் துப்புரப் பார்களை நீதியுடன் பாரா ரறியப் பணிந்தேன் பராக்ரம பாண்டியனே சேலே றியவயற் றென்காசி யாலயந் தெய்வச்செய லாலே சமைந்ததிங் கென்செய லல்ல வதனையின்ன மேலே விரிவுசெய் தேபுரப் பாரடி வீழ்ந்தவர்தம் பாலேவல் செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே. சாத்திரம் பார்த்திங் கியான்கண்ட பூசைகள் தாம்நடத்தி யேத்தியன் பால்விசுவ நாதன்பொற் கோயிலென் றும்புரக்க பார்த்திபன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடனங் கோத்திரந் தன்னிலுள் ளார்க்கு மடைக்கலங் கூறினனே. Travancore Archaeological Series, Vol. I, pp. 96 & 97. நாம் நவமாகக்கண்ட விசுவநாதப் பேரேரிக்குப் பெருநான்கெல்லையாவது Travancore Archaeological Series, Vol. I, page 51. இவ் வேந்தன் வானுலகெய்தியஞான்று ஒரு புலவர் பாடிய பாடல் தென்காசிக் கோயிலிற் பொறிக்கப் பெற்றுள்ளது. அஃது அடியில் வருமாறு: கோதற்ற பத்தி யறுபத்து மூவர்தங் கூட்டத்திலோ தீதற்ற வெள்ளிச் சிலம்பகத் தோசெம்பொ னம்பலத்தோ வேதத் திலோசிவ லோகத் திலோவிசுவ நாதனிரு பாதத் திலோசென்று புக்கான் பராக்ரம பாண்டியனே. Travancore Archaeological Series, Vol. I, page 97. Ibid, page 103. Ibid, p.60. Ibid, p. 83. Travancore Archaeological Series, Vol. I, page 47. Ibid, p. 54. Ibid, 55. Ibid. Ibid, p. 56. T. A. S., Vol. I, No. VII. Travancore Archaeological Series, Vol. I, page 50. Ibid, p. 85. Ibid, pp. 115 & 133. T. A. S., Vol. I., p. 125. பற்றலர்மண் கொள்ளும் பணிந்தார்க் கரசளிக்குங் கொற்ற முயர்க்குமறங் கூறுமே - விற்றடந்தோள் வில்லவனை வென்றுகொண்ட வீரமா றன்செழியன் வல்லமெறிந் தானேந்து வாள். திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள தென்காசியில் வாழ்ந்த கலியன் கவிராயர் என்பவர் வரதுங்கராமபாண்டியன் முடிசூட்டு விழாவில் நாண்மங்கலமும், குடைமங்கலமும், வாண்மங்கலமும் பாடி அரசனைப் பாராட்டியுள்ளனர். அவற்றுள் இப்பாடல் வாண்மங்கல மாகும். கல்வெட்டுக் களால் அறியப்படும் சில தமிழ்ப்புலவர்கள் என்ற எனது கட்டுரையில் இவற்றைக் காணலாம். (செந்தமிழ்த் தொகுதி 29, பக்கங்கள் 291-296) இவ்வந்தாதிகள் அதிவீரராமபாண்டியனால் பாடப் பெற்றவை என்பர். அது தவறாகும். Travancore Archaeological Series, Vol. I, Page 418. இரணியமுட்ட நாட்டிலுள்ள பெருங்குன்றூர் என்பது, இதன் பொருளாகும். Inscritions of the pudukkottai State, Nos. 382,386,387 & 399. Epigraphia Indica, Vol.XXX,Ins. No.17. S.I,I. Vol. V. Nos. 293, 296, 300, 331 and 302, Ibid, Nos.456, 637, 640, 641, 976, 980 and 986. சிலப்பதிகாரம்-உரை பெறு கட்டுரை; மேற்படி-நீர்ப்படைக்காதை, வரிகள் 126-138. கலிங்கத்துப்பரணி-தாழிசை 368, S.I.I. Vol. III, Nos. 70, 71 and 72. ஏனாதிமோதிரம்-இறையனார் அகம். சூத்.2.உரை (a) நன்னூல் 158- ஆம் சூத்திரம்-மயிலைநாதர் உரை. (b) தொல்காப்பியம் - பொருளதிகாரம் - 30-ஆம் சூத்திரம் நச்சினார்க்கினியர் உரை. S.I.I. Vol. Nos 446 and 448. Inscritions of the Pudukkottai State No.305 S.I.I. Vol. V, Nos.301, 421, 432 and 440. Inscriptlons of the Pudukkottai State. Nos.340 and 341. S.I.I., Vol.III, pp. 454-458; Ibid, Vol. V. No 301. S.I.I., V Nos.737 and 749. Epigraphia Indica,Vol. XXI, No.17. (page 105) The Coins of India by Mr. C. J. Brown, page 62. A. R. E for 1929-30, part II., para 4; Indian Antiquary, Vol. XXI. p. 323. Inscription No.368 of 1904; Annual Report on South Indian Epigraphy for 1905, page 55. புதுக்கோட்டை நாட்டுக் கல்வெட்டுக்கள் நெ.439,440 Mysore Gazetter Vol. II. pp. 1260 and 1272. Epigraphia Indica, Vol. XXI, No.17. திருவோணகாந்தன்றளிப் பதிகம், பா. 1. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, பா. 28, வரிகள் 39,40. புறம். 11 . Epigraphia Indica, Vol. XXII, page 5. அகம் .77. S.I.I.,Vol. V. No.303; Inscriptions of the Pudukkottai State. Nos. 401, 408 and 487. சிலப்பதிகாரம், ஊர்காண்காதை-வரிகள் 66-67. மதுரைக் காஞ்சி, வரிகள் 135-138. சிறுபாணாற்றுப்படை, வரிகள் 51-52. சிலப்பதிகாரம், ஊர்காண்காதை -வரி 80. 4. நூலினு மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் (சிலப். ஊர்காண்காதை, வரிகள் 205-207.) மதுரைக் காஞ்சி, வரிகள் 321-323. புறம்-56. கிரேக்கரும் உரோமரும் சங்கநூல்களில் யவனர் என்று வழங்கப்பட்டுள்ளனர். சோனகர் என்பார் அராபியர் ஆவர். பத்துபாட்டு-நச்சினார்க்கினியர் உரை (மூன்றாம் பதிப்பு) பக்கம் 60. யாப்பருங்கலவிருத்தி, பக்கம் 229. சிறுபாணாற்றுப்படை, வரிகள் 66-67. பரிபாடல்-பாடல் 6, வரி 60. சிலப்பதிகாரம்- நாடுகாண்காதை, வரி 58. பெரியபுராணம்-திருநாவுக்கரசுசுவாமிகள் புராணம், பாக்கள் 400, 421; மூர்த்திநாயனார் புராணம் 12, 13. கம்பராமாயணம்-நாடவிட்ட படலம். Ins. 695 of 1916; Ins.277 of 1913.