நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் 20 நீதிநூல்கள் பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் உரையாசிரியர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் - 20 உரையாசிரியர் : நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் பதிப்பாசிரியர் : பேராசிரியர் பி. விருத்தாசலம் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : 2007 தாள் : 18.6 கி. என்.எஸ்.மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 32 + 352= 384 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 240/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : மு. இராமநாதன், வ. மலர் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்ஸ் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் 124 ஆம் ஆண்டு நினைவு வெளியீடு பதிப்பாசிரியர் உரை புனல் பரந்து பொன்கொழிக்கும் மலைத்தலைய கடற் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கானல் வரியில், வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி, ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய்வாழி காவேரி உழியுய்க்கும் பேருதவி ஒழியாதொழுகல் உயிரோம்பும் ஆழியாள்வான் பகல்வெய்யோன் அருளேவாழி காவேரி என்று புகழ்ந்து பாடுவார். காவிரித்தாயின் உலகு புரந்தூட்டும் உயர்பேரொழுக்கம் காரணமாக இன்றைய கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பண்டைய சோழவளநாடு “ சோழவளநாடு சோறுடைத்து” எனவும், “ சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக் காவிரி புரக்கும் நாடுகிழ வோனே” பொருநராற்றுப்படை 246 - 248 எனவும், “ ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே” (புறநானூறு-40) எனவும் புலவர் பெருமக்களால் பாராட்டப்பெறுவதாயிற்று. இவ்வாறு, கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணைகள் நிரம்பிய சோழநாட்டில், தஞ்சாவூருக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ள நடுக்காவிரி என்னும் சிற்றூரில் திருவாளர் வீ.முத்துச்சாமி நாட்டார் திருமதி தைலம்மை இணையருக்கு மூன்றாவது மகனாக 12.04.1884 இல் பிறந்த பெருமைக்குரிய வர்தாம் நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர் களாவார். அவர் ஆசிரியர் எவருடைய துணையுமில்லாமல் தாமே படித்து, மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய மூன்று தேர்வுகளையும் முறையே 1905, 1906, 1907 ஆகிய மூன்றே ஆண்டுகளில் எழுதி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதனால் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் நாட்டார் ஐயாவிற்குப் பொற்பதக்கம் அளித்தும், தங்கத்தோடா அணிவித்தும் சிறப்புச் செய்தார். அதுகாரணமாக நாட்டார் ஐயா அவர்கள் தாமே பயின்ற தமிழ்ப் பேராசான் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப் பெற்றார். திருமுருகாற்றுப்படை கல்வி கேள்வி களிலும், தவத்திலும் சிறந்த முனிவர்களைப் பற்றி “ ..........................யாவதும் கற்றோர் அறியா அறிவினர்; கற்றோர்க்குத் தாம்வரம் பாகிய தலைமையர்” திருமுருகாற்றுப்படை 132-134) என்று சிறப்பித்துக் கூறும், அவர்களைப் போன்று வீறுசான்ற அறிவு நிரம்பிய நாட்டார் அவர்கள் “ கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (தொல்.பொருள்.மெய்ப்பாட்டியல் - 9) என்று தொல்காப்பியர் கூறிய பெருமிதம் உரையவராய் விளங்கினார். 1907-இல் பண்டிதம் பட்டம் பெற்ற நாட்டார் ஐயா அவர்கள் 1908-இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்று வந்த எஸ்.பி.ஜி.கல்லூரியிலும் (அக்கல்லூரி இப்பொழுது பிசப் ஈபர் கல்லூரி என்று வழங்கப் பெறுகின்றது) 1909-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள தூயமைக்கேல் உயர்நிலைப்பள்ளியிலும் வேலைபார்த்தார்; மீண்டும் திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரியில் 1910-இல் பணியில் சேர்ந்து 1933 வரை இருபத்து இரண்டு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அக்கல்லூரி 1933-இல் மூடப்பெற்றது. அதன்பின் இராசா சர்.அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அன்புநிறைந்த அழைப்பினை ஏற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்; அங்கே, 1933 முதல் 1940 வரை ஏழாண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். ஓய்வு பெற்ற பின் தஞ்சையில் வந்து குடியிருந்த நாட்டார் ஐயா அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கக் கரந்தைப் புலவர் கல்லூரியில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் மதிப்பியல் முதல்வராக 02.07.1941 முதல் 28.03.1944-இல் அவர் இறக்கும் நாள் வரையில் பணிபுரிந்தார். நாட்டார் ஐயா அவர்கள் தம்முடைய வாழ்நாளில் அறிஞர் பெருமக்களால் மிகுதியும் மதிக்கப்பெற்றார். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்ட பெருமை மிக்க திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் “செந்தமிழ்ச்செல்வி” என்னும் தமிழராய்ச்சித் திங்களிதழை நடத்தி வந்தது; அந்த இதழ் இன்றும் காலந்தவறாமல் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றது. அந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களாக முதலில் திருவரங்கனாரும், அவருக்குப்பின் அவர் தம்பி தாமரைத் திரு வ.சுப்பையா பிள்ளை அவர்களும் விளங்கினர். மறைமலை அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் கணவர் திருவரங்கனார் ஆவார். ஆயினும், செந்தமிழ்ச் செல்வியின் இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினராகவும் தலைவராகவும் நாட்டார் ஐயா அவர்களை ஏற்றுக் கொண்டமைக்கு ஐயா அவர்கள் செந்தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும் செய்துவந்த தொண்டுகளே காரணம் ஆகும். தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த குடிமக்களுள் சேக்கிழார் வழிவந்த தொண்டை மண்டல முதலியார்கள் இன்றைக்கும் பெருஞ்சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நடத்திவந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்கு நாட்டார் ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தலைவராக இருந்தார் என்பது பெருமைக்குரிய செய்தி ஆகும். 1940-இல் சென்னை மாகாணத் தமிழர் மாநாட்டில் நாட்டார் ஐயா அவர்களுக்கு நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றது. 28.3.1944-இல் நாட்டார் ஐயா தம் பூத உடம்பை நீத்துப் புகழுடம்பைப் பெற்ற போது அவரை அடக்கம் செய்த இடத்தில் கோயில் ஒன்று எழுப்பப் பெற்றது. அக்கோயில் நாட்டார் திருக்கோயில் என்று தமிழன்பர்களால் பெருமையுடன் அழைக்கப் பெறுகின்றது. நாட்டார் ஐயா அவர்கள் 1921-இல் தம்முடைய முப்பத்து ஏழாம் வயதில் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கு முன்னோடியாகத் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவவேண்டும் என்றும் கருதி அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள். அக்கல்லூரி நிறுவுவதற்குத் தமிழ்நாட்டில் தன்மானப் பேரியக்கத்தைத் தோற்றுவித்தவரும், பகுத்தறிவுப் பகலவனாக விளங்கியவரும் ஆகிய தந்தை பெரியார் அவர்கள் உருபா 50/- நன்கொடை வழங்கினார்கள் என்பது பெருமைக் குரிய வரலாறு ஆகும். இவ்வாறு நாட்டார் ஐயா அவர்கள் 1921 -இல் நிறுவ விரும்பிய திருவருள் கல்லூரி, 71 ஆண்டுகள் கழிந்ததற்குப் பிறகு நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்னும் பெயரில் தனித்தமிழ்ப் புலவர் கல்லூரியாகத் தஞ்சாவூரில் 14.10.1992இல் தொடங்கப் பெற்று இன்று வரையில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இவ்வாறு, தமிழ்நாட்டில் புலவர் ஒருவரின் பெயரால் திருக்கோயில் கட்டப்பெற்றதும், கல்லூரி நிறுவப் பெற்றதும் நம் நாட்டார் ஐயா அவர்களுக்கு மட்டுமே. இத்தகைய சிறப்புமிக்க நாட்டார் ஐயா அவர்கள் எஸ்.பி.ஜி.கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும், கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணிபுரிந்த காலத்தில் வேளிர் வரலாற்று ஆராய்ச்சி, நக்கீரர், கபிலர், கள்ளர்சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும், சோழர் சரித்திரம் என்னும் ஆறு வரலாற்று நூல்களை எழுதினார்; அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் இருபத்தாறு காதைகள்; திருவிளையாடல் புராணம், இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, திரிகடுகம் ஆகிய கீழ்க்கணக்கு நூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் முதலிய பிற்கால நூல்கள் ஆகிய பதின்மூன்று நூல்களுக்கு உரை எழுதினார்; அகத்தியர் தேவாரத்திரட்டு, தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய மூன்று நூல் களுக்கும் உரைத்திருத்தங்கள் செய்தார். அத்துடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்திலிருந்து ஆற்றிய இலக்கியப் பேருரைகள், கட்டுரைத்திரட்டு என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பெற்றன; மேலும், நாட்டார் ஐயா அவர்கள் பல்வேறு மாநாடுகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ்க் கழகங்களின் ஆண்டு விழாக்களிலும் ஆற்றிய உரைகளும், பல சங்கங்களின் விழா மலர்களில் எழுதிய கட்டுரைகளும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளையினரால் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், சொற்பொழிவுக் கட்டுரைகள் என்னும் பெயர்களில் மூன்று நூல்களாக வெளியிடப்பெற்றன. இப்பொழுது, தமிழ் மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்களால் மிகவும் அரிதின் முயன்று திரட்டப் பெற்ற நூல்களும், கட்டுரைகளும் தமிழ்மண் பதிப்பகத்தாரால் வெளியிடப் பெறுகின்றன. அவை, பின்வருமாறு 1. திரிகடுகம் - ந.மு.வே.உரை 2. மணிமேகலை வரலாறு 3. தொல்காப்பிய ஆராய்ச்சிச் சொற்பொழிவுகள் 4. நாவலர் நாட்டார் நாட்குறிப்பு முதலியனவாம். இவ்வாறு, நாட்டார் ஐயா அவர்கள் எழுதிய நூல்கள் வெளிவந்த ஆண்டுகளைப் பற்றிய விவரம் வருமாறு: 1. வேளிர் வரலாற்று ஆராய்ச்சி - 1915 2. நக்கீரர் - 1919 3. கபிலர் - 1921 4. கள்ளர் சரித்திரம் - 1923 5. இன்னா நாற்பது 6. களவழி நாற்பது 7. கார் நாற்பது 8. ஆத்திசூடி 9. கொன்றை வேந்தன் - 1925 10. வெற்றி வேற்கை 11. மூதுரை 12. நல்வழி 13. நன்னெறி 14. கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் - 1926 15. சோழர் சரித்திரம் - 1928 16. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராண உரை - 1925 - 31 17. அகத்தியர் தேவாரத் திரட்டு உரைத்திருத்தம் - 1940 18. தண்டியலங்காரப் பழைய உரைத்திருத்தம் - 1940 19 யாப்பருங்கலக்காரிகை உரைத்திருத்தம் - 1940 20. கட்டுரைத் திரட்டு முதல் தொகுதி - 1941 21. சிலப்பதிகார உரை - 1940-42 22. மணிமேகலை உரை - 1940 -42 23. அகநானூறு உரை - 1942-1944 24. கட்டுரைத் திரட்டு - இரண்டாம் தொகுதி - 1942 25. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கணக் கட்டுரைகள் - 2006 26. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் இலக்கியக்கட்டுரைகள் - 2006 27. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் சொற்பொழிவுக் கட்டுரைகள் - 2006 28. திரிகடுகம் உரை - 2007 தமிழக அரசு நாட்டார் ஐயா அவர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கியதன் பயனாகப் பல பதிப்பகத்தார்களும் நாட்டார் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்துள்ளனர். அவ்வகையில் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் சிறை சென்ற தமிழ்மொழிக் காவலர் திரு கோ.இளவழகன் அவர்கள் தம்முடைய தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாக நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் இருபத்து நான்கு தொகுதிகளாக இப்பொழுது வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியை விளைவிக்கின்றது. அவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திரு.வி.க., யாழ்ப்பாணத்துத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையா பிள்ளை, வெ.சாமிநாத சர்மா, சாத்தான்குளம் அ. இராகவன், பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் முதலிய தமிழறிஞர்களின் நூல்கள் மற்றும் தொல்காப்பிய பழைய உரைகள் அனைத்தையும் முழுமையாக வெளியிட்ட பெருமைக்குரியவர். அவர் இப்பொழுது நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவது மிகவும் துணிவான செயல் ஆகும். அவருடைய முயற்சி காரணமாகத் தமிழகப் பதிப்புத்துறை வரலாற்றில் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் போலவே தமிழ்மண் பதிப்பகமும் பலநூறு ஆண்டுகளுக்குத் தமிழறிஞர்களால் புகழ்ந்து பாராட்டப் பெறும். அவரது இந்த முயற்சி இமயமலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோய் வங்காள விரிகுடாவில் வைப்பது போன்ற அரிய பெரிய முயற்சி ஆகும். “ எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” (திருக்குறள் 666) என்னும் குறளுக்குத் திரு கோ.இளவழகன் அவர்களே தக்கதோர் எடுத்துக் காட்டாவார். அவர் வாழ்க, அவர் முயற்சி வெல்க என்று நான் வாயார மனமார வாழ்த்துகின்றேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் நாட்டார் ஐயாவின் நூல்கள் இடம் பெறுமாறு செய்ய வேண்டுவது தமிழறிஞர்களின் கடமை ஆகும். அதுபோலவே தமிழக அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்கள் அனைத்திலும் ந.மு.வே.நாட்டார் ஐயா அவர்களின் நூல்கள் இடம்பெறுமாறு செய்யும் படி தமிழக அரசை அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். 17.07.2007 பேராசிரியர் பி.விருத்தாசலம் நிறுவனர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை, தஞ்சாவூர் - 613 003. தொ.பேசி : 04362 252971 தமிழ்மண் தாங்கும் விதை! எழுத்தெண்ணிப் படித்த வாழ்வு இலக்கியம் படிந்த நெஞ்சம் அழுந்திய தமிழ்த்தேன் சிந்தும் அறிவுரு நாட்டார் அய்யா எழுந்ததால் எழுந்தோர் இன்றும் இருப்பதால் இருக்கின் றோம்நாம்! விழுந்திடா நாட்டார் நூல்கள் விதைப்பதால் தமிழ்மண் வாழும்! வாழ்வு தரும் வாழ்வு தூசகற்றிச் செந்தமிழ்த் தாய் சுவடுபதிந் திட்ட திசை தொடர்ந்து கண்டார். பேசவரும் பிழைக் குரலின் நூலறுத்து முடிச்சிட்டுப் பெருமை சேர்த்தார். நேசமுடன் தமிழ்த்தாய்க்கு நெஞசளிக்கும் தூயோர்க்கே நெஞ்சம் ஈந்தார். வாசமுறு ந.மு.வேங் கடசாமி நாட்டாரின் வாழ்வால் வாழ்வோம். வாழ்வு தரும் வாழ்வு நலம்வளர்க்கும் குடமுருட்டி நதியன்னை பாலூட்டும் நடுக்கா வேரி நிலம் வளர்ந்த ந.மு.வே. தமிழ்உழவால் பயிர்வளர்க்கும் நினைவில் வாழ்ந்தார். உலகறியாத் தமிழ்நூல்கள் உரைக்காலால் நடைபயில உழைப்பைத் தந்தார். புலவோர்க்கு மடியளித்தார்; புலமைக்கு முடியளித்தார்; புகழைக் காத்தார். - செந்தலை ந. கவுதமன் பதிப்புரை முன்னைப் பழமைக்கும் பழமையாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் நம் தமிழ் மொழியின் ஈடற்ற அறிவுச் செல்வங் களை யெல்லாம் தேடியெடுத்துத் உலகெங்கும் வாழும் தமிழர்க்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ்மண் பதிப்பகம்’ தொடங்கப் பெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு வளம் சேர்ப்பதை முதன்மை யாகக் கொண்டும், இனநலம் காப்பதைக் கடமையாகக் கொண்டும் மிகுந்த தமிழுணர்வோடு தமிழ் நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளைக் கால் பதித்து வருகிறோம். தமிழ் , தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்திற்கு வடிவம் தந்து தமிழுக்கு அளப்பரிய தொண்டு செய்த அறிஞர்கள் எழுதிய நூல்களையெல்லாம் ஒருசேரத் தொகுத்து ஒரே வீச்சில் தொகை தொகையாய் எம் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டு வருவதைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கறியும். மொழிநூல் கதிரவன் பாவாணரின் அறிவுச் செல்வங்களை யெல்லாம் ஒரே நேரத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டதால் தமிழ் உலகம் என்னை அடையாளம் கண்டது; என் மதிப்பை உயர்த்தியது. நல்ல தமிழ் நூல்களைத் தமிழர்களுக்கு அளிக்கும் போதெல்லாம் எனக்குப் புத்துணர்ச்சியும் பெருமகிழ்வும் ஏற்படுகின்றன. பதிப்புத் துறையில் துறைதோறும் மேலும் பல ஆக்கப் பணிகளைச் செய்ய உறுதி கொள்கிறேன். தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்பகம் இதுகாறும் ஆற்றிய தமிழ்ப் பணியை எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சில் ஒரு நிறைவு. இனிச் செய்ய வேண்டிய பணியை எண்ணிப் பார்க்கிறேன். தயக்கமும் கவலையும் மேலிட்டாலும், தக்க தமிழ்ச் சான்றோர்கள், நண்பர்கள் துணையோடு அதனைச் செய்து முடிப்பேன் என்ற உறுதியும் தெம்பும் எனக்கு ஏற்படுகின்றன. எனவே, முன்னிலும் வேகமாக என் பதிப்புப் பணிகளைத் தொடர்கின்றேன். “தொண்டு செய்வாய்! தமிழுக்கு..., செயல் செய்வாய் தமிழுக்கு......,ஊழியஞ் செய் தமிழுக்கு......., பணி செய்வாய்! தமிழுக்கு........, இதுதான் நீ செயத் தக்க எப்பணிக்கும் முதல் பணியாம்.”எனும் பாவேந்தர் வரிகளின் உணர்வுகளைத் தாங்கித், தமிழ், தமிழர் மறுமலர்ச்சி இயக்கத்தின் பின்னணியோடு வளர்ந்த நான் தாய்மொழிவழிக் கல்வியின் மேன்மையை வலியுறுத்திய நாவலர் நாட்டாரின் நூல்களை தமிழர் தம் கைகளில் தவழ விடுகிறேன். நாட்டார் யார்? 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்த் தேரை இழுத்த பெருமக்களுள் நாவலர் ந.மு.வே. நாட்டாரும் ஒருவர்; தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் பெருமக்களுள் முன்வரிசையில் வைத்துப் போற்றத் தக்க பெருமையர்; “சங்கத் தமிழ் நூல்களை எழுத்தெண்ணிப் படித்தவர்; பன்னூல் அறிவும் பழந்தமிழ்ப் புலமையும் மிக்கவர்; இணையற்ற உரையாசிரியர்; நூலாசிரியர்; வரலாற்று ஆய்வாளர்; ஆய்வறிஞர்; தமிழ் அறிஞர்கள் நடுவில் என்றும் பொன்றாப் புகழுடன் நிலைத்து நிற்பவர்” என்று அவர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ச் சான்றோர் களால் போற்றப் பெற்றவர். மேலும், நாட்டாரையா அவர்கள் தமிழ் நெறியையும், தமிழர் மரபையும் உலகுக்கு உணர்த்திய உரைவளச் செம்மல்; தமிழுணர்வின் - தமிழாற்றலின் வலிமையை வெளிப்படுத்திய தமிழ்ப் பேராசான்; தமிழறிவின் வற்றாத வளத்துக்குத் தமிழ் வள்ளலாய் வாழ்ந்தவர்; தமிழ்ப் பண்பாட்டு வடிவங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தவர்; தமிழ் உரைநடை வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர்; தன்னலம் கருதாது தமிழ் நலம் கருதியவர். தம்மை முன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தித் தமிழுக்கு வளமும் வலிவும் பொலிவும் சேர்த்த இப்பெருந் தமிழறிஞரின் நூல்களை எம் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது. பன்னருஞ் சிறப்புக்கள் நிறைந்த பழந்தமிழ்க் கருவூலங் களை ஒருசேரத் தொகுத்துத் தமிழ் உலகிற்கு வழங்க வேண்டும் என்று எனக்கு வழிகாட்டியவர் செந்தமிழறிஞர், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேனாள் முதல்வர், நாவலர் ந.மு.வே. நாட்டார் திருவருள் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் பி.விருத்தாசலம் ஆவார். அவர் ‘கெடல்எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க! ’ எனும் பாவேந்தர் வரிகளுக்கு நம்மிடையே இன்று சாட்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்; வாழும் தமிழறிஞர்களில் நான் வணங்கும் சான்றோருள் ஒருவர். இப் பெருமகனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டும் இவருடைய முழு ஒத்துழைப்புடனும், மேற்பார்வையுடனும் நாவலர் நாட்டார் தமிழ் உரைகள் என்னும் தலைப்பில் நாட்டாரையா நூல்கள் அனைத்தையும் 24 தொகுதிகளாகத் தமிழ் உலகுக்குப் பொற் குவியலாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். குமுகாய மாற்றத்துக்கு அடிப்படையானது தாய்மொழி வழிக் கல்வி ஒன்றுதான். இக்கல்விதான் மக்களுக்கு ஊற்றுக் கண். தாய்மொழி வழிக் கல்விதான் குமுகாயத்தின் முகத்தைக் காட்டவல்லது; மக்களை உயர்த்த வல்லது என்னும் உறுதியான நிலைப்பாடுடைய இப்பெருந்தமிழறிஞரின் நூல்களை வெளியிடு வதில் பெருமைப் படுகிறேன். ‘தாய்மொழியே சிந்தனைக்கு மலையூற்று’ என்னும் பாவேந்தரின் சிந்தனையைத் தம் நெஞ்சில் தாங்கியவர் பேராசிரியர் விருத்தாசலனார்.இவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இப்பழந்தமிழ்க் கருவூலங்களை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன். தாய்மொழியைப் புறக்கணித்த எந்த இனமும் , எந்த நாடும், வளர்ந்ததாகவோ, வாழ்ந்ததாகவோ, செழித்ததாகவோ வரலாறு இல்லை. வளர்ந்து முன்னேறிய நாடுகளின் மக்கள் எல்லாம் தம் தாய்மொழியின் மூலம்தான் கல்வி கற்று உலகரங்கில் உயர்ந்து நிற்கின்றனர் என்பதைத் தமிழர்கள் இனியேனும் எண்ணிப் பார்க்க வேண்டும். அரசோ, பல்கலைக் கழகங்களோ, பேரியக்கங்களோ, அறநிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ அறிஞர்கள் குழு அமைத்துச் செய்ய வேண்டிய பெரும்பணியைப் பெரும் பொருள் நெருக்கடிகளுக்கு இடையில் செய்ய முன் வந்துள்ளேன். பழந்தமிழ்க் கருவூலமான நாட்டாரின் இவ்வருந்தமிழ்ப் புதையல்கள் தமிழர்கள் இல்லந்தோறும் இருப்பதற்கு உங்களின் பங்களிப்பையும் செய்ய முன் வாருங்கள். மொழி, இன நாட்டின் அடையாளங்களை மீட்டெடுக்கும் எம் தமிழ்ப் பணிக்குக் கைகொடுத்து உதவுங்கள். இந் நூல்கள் அனைத்தும் தமிழ் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துப் போற்றத் தக்க - பாதுக்காக்கத்தக்க கருவூலங்கள் ஆகும். நாவலர் நாட்டார் தமிழ் உரைகளுக்கு அணிந்துரை தந்து எம் தமிழ்ப் பணிக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் பேராசிரியர்பி.விருத்தாசலம், புலவர் இரா.இளங்குமரனார், முனைவர் சோ.ந.கந்தசாமி, முனைவர் அ.தட்சிணாமூர்த்தி, புலவர் செந்தலை ந. கவுதமன், ச.சிவசங்கரன் , நாட்டாரின் மரபு வழி உறவினர் திருமிகுகுரு.செயத்துங்கன், பேரா. கோ. கணேசமூர்த்தி ஆகியோர்க்கு எம் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். நாட்டார் தமிழ்க் கல்லூரியின் பேராசிரியப் பெரு மக்களும், கல்லூரி மாணவர்களும் நாட்டார் தமிழ் உரைகள் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்குப் பல்லாற்றானும் துணையிருந்தனர். இவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். இப்பதிப்பில் பிழை காணின் சுட்டி எழுதுங்கள்: சொல்லுங்கள். அடுத்த பதிப்பில் பிழை நீக்கி நிறைவு செய்வேன். இந்நூல் ஆக்கத்திற்கு இரவும் பகலும் என்னோடு இருந்து, எனக்குப் பெருந்துணை செய்த எம் பதிப்பக ஊழியர்கள் அனைவரையும் இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டு கின்றேன். சென்னை இங்ஙனம், 3-10-2007 கோ.இளவழகன் வல்லுனர் குழு 1. முனைவர் கு.திருமாறன் 2. முனைவர் இரா.கலியபெருமாள் 3. பேராசிரியர் சண்முக.மாரி ஐயா 4. பேராசிரியர் நா.பெரியசாமி 5. முனைவர் பி.தமிழகன் 6. முனைவர் மு.இளமுருகன் ந.மு.வே. நாட்டார் விழா இந்நாட்டார் விழா பேராசிரியர் ச. பாலசுந்தரம், கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சை. 1. ஒளிவளர் விழியும், உண்மை உயிர்த்திடும் மூக்கும், நீற்றுத் தொளிவளர் நுதலும், சைவத் துறை மறை பயிலும் நாவும், அளிவளர் மொழியும், தூய அறிவொளிர் முகமும், தெய்வக் களிவளர் நெஞ்சும், கல்விக் கவினும்ஓர் உரு ந.மு.வே. 2. கற்பனை சுடரும் வாய்மைக் கவியமு துலகிற் கீந்து நற்புகழ் வளர்த்த கம்ப நாடனின் பின்சோ ணாட்டுப் பொற்பமை நடுக் காவேரி பூத்தசெந் தமிழ்ப்பே ராசான் விற்பனர் நயக்கும் ந.மு வேங்கடசாமி நாட்டார். 3. பைந்தமிழ்ச் சங்கம் மூன்றின் பாவலர், இளங்கோ, தெய்வச் செந்தமிழ் நால்வர், தேவர், சேக்கிழார், மற்றெல் லோரும் அந்தரத் தாசான் மாராய் அமைந் தறிவருளத் தாமே மந்திரத் தமிழ்நூல் முற்றும் மாசற உணர்ந்து தேர்ந்த 4. முதுக்குறைச் செம்மல், கூடல் முன்னவர் மதித்துத் தோடா பதக்கமொ டளிக்கப் பெற்ற பண்டிதர், தமிழ்ப்பூங் காவைப் புதுக்கிநல் லாய்வுப் பூக்கள் பூத்திசை கமழச் செய்தோன் விதிப்படி தமிழைக் காத்த வித்தகப் புலவோர் மன்னன் 5. மெல்லிதழ் முரிந்தி டாமல் மிளிர்மணங் குன்றி டாமல் சொல்லெனும் மலர்கள் தம்மைத் துறைதொறும் வண்ணந் தோன்ற எல்லுறு தொடை களாக இயற்றிமுத் தமிழன் னைக்கு நல்லுரை நடைய லங்கல் நயப்புறப் புனைந்த நம்பன் 6. வேங்கடந் தமிழகத்தின் எல்லையாம் விளைதமிழ்க் கோர் வேங்கட சாமி என்ன வியத்தகு பணிக ளாற்றி ஓங்குசெந் தமிழின் பண்பால் உயர்ந்தபன் னூல்கட் கெண்மைப் பாங்குற விளக்கந் தந்து பயின்றிடச் செய்த வள்ளல் 7. முறைபிற ழாத செஞ்சொல் முனைமழுங் காமற் கோத்து மறையிசை கமழப் பேசும் மணிமொழி நாவலன், பாத் துறைதெரிந் துரைக்கும் செம்மல், தொன்மைச் செந்நூல்கள் யாவும் குறைவற நெஞ்சிற் றேக்கிக் கொண்டல் போல் வழங்கு கோமான். 8. சிலம்பினுக் குரைவ ரைந்து செந்தமிழ் மறவர் பண்பார் நலந்திகழ் வரலா றெல்லாம் சான்றொடு நவின்று சைவப் புலந்திகழ் பன்னூல் செய்து பொய்யிலாப் புலமை யாலே வலந்தரு தமிழ்த்தொண் டாற்றி வான்சுட ராகி நிற்கும் 9. நற்றமிழ்ப் புலமை வேந்தர் ந.மு.வே யவர்நூ றாண்டு முற்றுமிவ் விழாஇந் நாட்டார் முத்தமிழ் விழாவாம், நாட்டார் வெற்றிசேர் விழாவிற் சான்றோர் வீறுசால் மாணாக் கர்நற் சுற்றமோ டளாவிச் சீர்த்த துணைசெயல் தமிழ்த்தொண் டன்றே 10. வண்மைசால் மக்கள் நாட்டார் மாண்புகழ் பரப்ப வேண்டும், ஒண்மைசேர் நினைவுச் சின்னம் ஊர்தொறுந் திகழ வேண்டும் நுண்மைகூர வர்நூல் யாவும் நூற்றாண்டில் வருதல் வேண்டும் தண்மைசால் ந.மு.வே யின் தமிழ்ப் பணி ஊழி வாழி நாட்டவர் போற்றும் நாவலர் ந.மு.வே. பேராசிரியர் கி. கோதண்டபாணி எம்.ஏ., பி.ஓ.எல்., திரு புட்பம் கல்லூரி, பூண்டி. 1. திருவளரும் சோணாட்டின் செழுமையுறு பன்னலமும் திகழ்ந்தே யோங்கி இரும்புகழ்சால் இயற்கைவளம் இலங்கியிங்கே உயர்ந்திலங்கும் எழில்சால் ஊராம் பெருமைமிகு நடுக்காவிரிப் பெரும்பதியில் பெருவளஞ்சால் பெரியோர் போற்றும் அருமைமிகு முத்துசாமி அன்பாளன் உஞற்றியதோர் அருந் தவத்தால் 2. செம்மனமும் தண்ணளியும் செழுமையுறு நல்லொழுக்கும் திகழப் பெற்றே நம்மினிய தமிழாக்கம் நலனினைந்தே நற்றொண்டை நலனாய் ஏற்ற தம்மினிய நலங்கருதாத் தகைமையராய்த் தாழ்வில்லாத் தக்கோர் போற்றும் அம்மதிபோல் அமைதிதிகழ் ஆசிரியர் அரும்பணியில் அமைந்தே யாண்டும். 3. நன்மைமிகு நந்தமிழின் சுவையுணர்ந்தே நற்றமிழர் செழித்தே யோங்க நன்மைமிகு நற்றொண்டை நன்றாற்றி நானிலத்தோர் நயந்தே போற்றும் அன்புமிகு அருந்தமிழின் ஆய்வாளர் அரியபுகழ் ஆசா னாகி இன்புறுநல் உரைவேந்தாய் இருநிலத்தோர் போற்றிட்ட ஏந்தால் வாழி! 4. நாவலராய்ப் பண்டிதராய் நானிலமே போற்றிட்ட நாட்டா ரையா பாவலராய் வளர்வதற்குப் பாங்காக யார்துணையும் பற்றார் என்றும் தாவருநற் றமிழ்ப்புலமை தன்னாலே ஆக்கிட்டார் தரணி தன்னில் யாவருமே வியந்துருக ஏற்றமிகு பேராசான் என்ன வாழ்ந்தார் 5. நாட்டாரும் நாவலரும் நனிபோற்றும் நாவலநின் நற்சீர் தன்னைப் பாட்டாலே போற்றிடவும் உரையாலே வாழ்த்திடவும் பான்மை யாமோ? ஏட்டாலே புகழ்பொறித்த ஏந்தலவர் எளிதாகத் தாமே கற்றுக் காட்டாளன் கழலிணையே கருதியநின் திருநாமம் கனிந்து வாழி! 6. நாவலரும் காவலரும் நாவினிக்க அழைத்திடுநல் நாட்டா ரையா பூவுலகில் ஆசானாய்ப் புகழுறுநல் உரைவேந்தாய்ப் பொலிந்தார் அன்னார் நாவினிக்க உரையாற்றும் நல்லமுதத் தமிழினையே நயமாய் மாந்திப் பாவினிக்கப் பாடிட்டார் வேங்கடசா மிப்புலவர் பதத்தைப் போற்றி. நாட்டார் நற்றமிழ் கவியோகி சுத்தானந்த பாரதியார், “தவக்குடில்” சோழபுரம், சிவகங்கை 623 650. 1. பாட்டாலும் உரையாலும் பயன் மிகுந்த பைந்தமிழைப் பயின்று நாளும் ஏட்டாலும் எழுத்தாலும் இனிய கனி மொழியாலும் இயம்பிநாளும் காட்டாறு போலுதவும் கலையின்பப் புலவர்மணி கருணை நண்பன் நாட்டாரின் நூற்றாண்டு நாடெல்லாம் கொண்டாட நன்மை யாமே (வேறு) 2. இனித்த நறுந் தேனுடனே இளநீரும் போலே கனிச்சாறும் கற்கண்டும் கலந்த சுவைபோலே தனித்தமிழைத் தருகின்ற தண்ணளியான் அவனே அனைத்துலகும் போற்றவளர் அறிவாளர் பெருமான்! 3. வேங்கடசாமி நாட்டார் வித்தகருள் வேந்தர் பாங்குடனே பாடுபட்டுப் பைந்தமிழைக் கற்றார் ஓங்குபுகழ்ப் பாண்டித்துரை ஒண்பரிசு நல்கத் தாங்கு புகழ் மேவியவர் தமக்குவமை யில்லார் 4. சங்க நூற்குவை யனைத்தும் தனதாக்கிக் கொண்ட சிங்கமணிப் புலவரெல்லாம் சிறந்த புகழ் செப்பும் தங்கமணிப் புலவனவன் தமிழினிக்கும் தமிழன் எங்குமவன் இசையோங்கும் இனியவிழாக் கொழிப்போம். உரைவேந்தர் ந.மு.வே. முனைவர் வே. காத்தையன், திரு புட்பம் கல்லூரி, பூண்டி. ஒப்பற்ற தமிழறிஞரான நாட்டாரையா அவர்கள் நூலாசிரியராகவும், உரையாசிரியராகவும், கட்டுரையாளராகவும் ஒளிரும் சிறப்பைத் தமிழகம் நன்கு உணரும். நாட்டாரையா உள்ளம் பழந்தமிழ்ப் பண்பாட்டுத் தாகம் கொண்டது; அதன் தாக்கமும் பெற்றது. நாவலர் பெருமானின் சங்கத்தமிழ்ப் பற்றும் பயிற்சியும் ‘நக்கீரர்’ ‘கபிலர்’ போன்ற நூல்கள் தோன்றக் காரணமாயின. அன்னார்தம் சிலம்புத் தோய்வின் வெளிப்பாடாகக் ‘கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும்’ உருவானது. எண்ணற்ற இலக்கியங்களுக்கும், அறநூல்களுக்கும் உரைகண்ட நாவலர் தம் நுண்மாண் நுழைபுலம் ஒளிரச் சிலப்பதிகாரத்திற்கு உரைவளம் வரைந்த பெருமகனும் ஆவர். சிலம்புக்குப் பழைய உரையாக அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையும் அமைந்தாலும் அவையிரண்டும் கற்பார் விழைவை நிறைவு செய்யும் அமைப்பிலும் அளவிலும் அருகின என்றே கொள்ள வேண்டும். அரும்பத உரை நூல்முழுதுக்கும் இருந்தாலும் யாவரும் எளிதில் உணரத் தக்கதென அதனைக் கொள்ள முடியாது. அடியார்க்கு நல்லார் உரையோ கானல் வரி, வழக்குரைகாதை, வஞ்சின மாலை, அழற்படுகாதை, கட்டுரை காதை, ஆகியவற்றிற்கும் வஞ்சிக் காண்டம் முழுமைக்கும் இல்லை. நாட்டாரையா உரை இக்குறைபாட்டினைப் போக்கி நாம் நூல் முழுதிற்கும் தெளிவான உரை பெற உதவுகின்றது. நாவலர் உரை அரும்பதவுரை, அடியார்க்கு நல்லார் உரை இரண்டையும் மிகுதியும் தழுவியே எழுதப்பட்டது. ஆயினும், மிகுதியான இடங்களில் இருவர்தம் கருத்தினை உடன்பட்டு உரைவரையும் நாட்டாரையா சில இடங்களில் மறுத்தும், மாறுபட்டும் எழுதி மூல நூலுக்கு விளக்கம் சேர்க்கிறார். அவர்கள் இருவரும் பொதுப் பொருள் கொண்ட சொற்கள், தொடர்கள் பலவற்றுக்குக் குறிப்பு விளக்கமும், சிறப்புரையும் நாவலர் தருவதைக்கண்டு மகிழலாம். காவியம் முழுதும் நாவலர் பெருமானின் பன்னூலறிவும் பைந்தமிழ்ப் புலமையும் ஒளிரும் நிலையில் பானைச் சோற்றுக்குப் பதச் சோறாகச் சிலவற்றைக் காணலாம். மங்கல வாழ்த்துப் பாடலில் ஆசிரியர் கண்ணகியை முற்கூறியதற்குக் காரணம் காட்டும் அடியார்க்கு நல்லார் ‘கண்ணகியை முற்கூறினார் பத்தினியை ஏத்துதல் உட்கோளாகலான்’ என்று குறிப்பிடுகின்றார். அரும்பத உரைகாரர் ‘இவளை முன் கூறிற்றுக் கதைக்கு நாயகியாதலின்’ எனக் கூறுகின்றார். இவ்விரு உரைக் குறிப்பிலும் நிறைந்த பத்தினி வழிபாடு, கதைத்தலைமைணு0 இரண்டையும் உள்ளடக்கி நாட்டாரையா அவர்கள் “பத்தினியை ஏத்துதல் கருத்தாகலானும், கதைக்கு நாயகியாகலானும் கண்ணகியை முற்கூறினார் என்க.” என்று விளக்கமளிப்பார். கொலைக்களக் காதையில் கண்ணகி நல்லாள் அடிசில் ஆக்குதற்காக இடைக்குல மாதரி மடந்தை அளித்த பல்வேறு பொருள்களில் கோளிப் பாகலும் குறிப்பிடப்படுகின்றது. கோளிப்பாகல் - பூவாதே காய்க்கும் பலா என அரும்பத உரைகாரரும், கோளி - பூவாது காய்க்கும் மரம் என அடியார்க்கு நல்லாரும் கூற, நாவலர் பெருமான் சொல்லாமற் செய்யும் பெரியோர் போல், பூவாதே காய்க்கும் கோளிப் பாகலின் மாண்பைச் ‘சொல்லாமலே பெரியார்’ எனத் தொடங்கும் தனிச் செய்யுள் வழி எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறார். உரைபெறுகட்டுரையில், ‘அன்று தொட்டுப் பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயுங் குருவுந் தொடர’ என்ற தொடரில் வெப்பு - தொழுநோய் என அடியார்க்கு நல்லார் உரை யெழுத, நாட்டாரையா ‘வெப்பு நோய் - வெம்மை விளைக்கும் நோய். குரு - கொப்புளம். வெம்மையால் உண்டாவது’ என விளக்கம் தருவது பொருத்தமாக உள்ளது. “ வினைவிளை காலம் ஆதலின் யாவதும், சினையலர் வேம்பன் தேரா னாகிக் கன்றிய காவலர்க் கூஉய் அக் கள்வனைக் கொன்றச் சிலம்பு கொணர்க வீங்கென” (சிலம்பு.பதிகம் 27-30)'94 என்பன பதிகத் தொடர்கள். இப்பகுதிக்கு உரைகண்ட அடியார்க்கு நல்லார், “அக்கள்வனைக் கொல்ல அச்சிலம்பையும், அவனையும் கொணர்கவெனச் சொல்லக் கருதினவன் வாய்சோர்ந்து, ‘கொன்று அச்சிலம்பைக் கொண்டு வருக’ என்று கூறினான்” எனக் குறிப்பிடுகின்றார். இதனை ஏற்புடைத்தன்று என மறுக்கும் நாவலர் அவர்கள் மூன்று காரணங்காட்டித் தம் கூற்றை மெய்ப்பிக்கின்றார். ‘வினைவிளைகாலமாதலின் யாவதும் தேரானாகி என்றமையானும், அச்சிலம்பு எனத் தேவியின் சிலம்பைக் கருதிக் கூறினமையானும், வழக்குரை காதையுள்ளும் கள்வனைக் கோறல் கடுங்கோலன்று என்றிறுத் தமையானும் என்க’ என்பது நாட்டாரையாவின் மறுப்புரையாகும். ஐயாண்டு தொடங்கிப் பன்னீராண்டு முடிய ஏழு ஆண்டுகள் ஆடல், பாடல், அழகு ஆகிய மூன்று கலைகளிலும் முழுமைத் தேர்ச்சியுடைய மாதவி தன் கலைநலங்காட்ட அரங்கேறியது கரிகாற் பெருவளத்தான் அவையென்பது அரும்பத உரைகாரர், அடியார்க்கு நல்லார் ஆகிய இருவரின் கருத்தாகும். நாவலர் நாட்டார் அவர்கள் இங்கும் வலிமையான மூன்று அகச்சான்றின் வழி மாதவியின் கலைக்கு அரங்கேற்றம் அளித்தவன் கரிகாலன் அல்லன் என்பதைக் காட்டுகின்றார். அச்சான்றுகளாவன: ‘கரிகாலன்’ என்ற பெயர் ஈண்டு இடம் பெறவில்லை. “ செருவெங் காதலின் திருமா வளவன் புண்ணியத் திசைமுகம் போகிய வந்நாள்” (சிலம்பு. இந்திரவிழவூரெடுத்த காதை 90,91) என இந்திர விழவூரெடுத்த காதையினும், “ மன்னன் கரிகால் வளவன் நீங்கிய நாள் இந்நகர் போல்வ தோர் இயல்பினதாகி” (மணிமேகலை 1:39,40) என மணிமேகலையுள்ளும் கரிகால்வளவன் வடதிசைச் செலவு இறந்த காலத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், மதுரைக் காண்ட இறுதிக் கட்டுரையில் பாண்டியன் நெடுஞ்செழியனையும், வஞ்சிக்காண்டத்தின் இறுதிக்கட்டுரையில் சேரன் செங்குட்டுவனையும் கிளந்தோதும் அடிகள் புகார்க்காண்டத்து இறுதிக் கட்டுரையில் சோழன் ஒருவனது பெயர் குறித்துக் கூறாமையானும் கரிகாலன் அப்போது இருந்தான் என்பது சாலாது என்க.’ என்பது நாவலர் மறுப்பாகும். இந்திர விழவூரெடுத்த காதையில் காவற்பூதம் என்ற தொடருக்குப் புகாருக்கும், அரசர்க்கும் காவலாகிய பூதம் என்று உரை கூறுவதும், காட்சிக் காதையில் முதுநீர்க் காவிரி என்ற தொடருக்குப் பொருள் கூறுங்கால் முதுமையைக் காவிரிக்கு ஏற்றுக என எழுதுவதும் நாவலர் புலமை நலம் ஒளிரும் தொடர்களுள் சில எனலாம். அரங்கேற்றுகாதை முடிவில், மாதவிபால் விடுதல் அறியா விருப்பங் கொண்ட கோவலன் தன் வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். வடுநீங்கு சிறப்பின் மனையகம் என்பதற்கு அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும் குற்றமற்ற கற்புச் சிறப்பினையுடைய மனைவியும் மனையும் என வாளாவெழுத, நாவலரோ வடுநீங்கு சிறப்பு என்பதற்கு மனையாட்குக் கற்பின் சிறப்பும், மனைக்குச் செல்வச்சிறப்பும் என விளக்கவுரை தருகின்றார். நாடுகாண் காதைத் தொடக்கத்தே ‘வான் கண் விழியா வைகறை யாமம்’ என்ற தொடரில் வான்கண் - ஆதித்தன், உலகின் கண் என்று அரும்பத வுரையும், அடியார்க்கு நல்லார் உரையும் குறிக்க, நாவலர் நாட்டாரையா அவர்களோ வான்கண் - சிறந்தகண் எனக் குறிப்பிட்டுச் சிறந்த கண்ணான அக்கதிரோனது சிறப்பைச் சுட்டும் முகத்தாற் காண்டற்குக் கருவியாகிய கண்ணொளியினும், காணப்படும் பொருளினும் ஞாயிற்றி னொளி கலப்பினன்றி ஒன்றையும் காணலாகாமையின் அதனைச் சிறந்த கண் என்றார். என விளக்கம் கூறுவர். இவ்வாறு சிலம்புக்கு நாவலர் எழுதிய நல்லுரை தொல்லுரையான அரும்பதவுரை அடியார்க்கு நல்லாருரை இரண்டையும் அடியொற்றி அமைந்ததாயினும் அவ்விரண்டின் எதிரொலியாகக் கொள்ளவோ கூறவோ முடியாது; தேவையான இடங்களில் ஒன்றியும் உறழ்ந்தும் தன் வழிச்சென்று காவிய ஆசிரியனின் கருத்தைக் காட்டும் ஒப்பற்ற தெளிவுரையாகவே ஒளிர்தலை உணரலாம். உள்ளடக்கம் பதிப்பாசிரியர் உரை v பதிப்புரை xiv நீதிநூல்கள் 1. ஆத்திசூடி 5 2. கொன்றை வேந்தன் 33 3. நல்வழி 55 4. மூதுரை 81 5. உலகநீதி 107 6. நன்னெறி 133 7. நறுந்தொகை 157 பதிணென்கீழ்க் கணக்கு நூல்கள் 8. இன்னா நாற்பது 197 9. கார் நாற்பது 229 10. களவழி நாற்பது 263 11. திரிகடுகம் 291 ஆத்திசூடி - ஒளவையார் முகவுரை ஆத்திசூடி என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ‘ஒளவையார்’ என்னும் மெல்லியலார் அருளிய நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாக்களும், ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக் குறித்து எத்தனையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச் சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுகள் புறநானூறு முதலிய சங்க நூல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சங்ககாலத்து ஒளவையாரும் வேறு; கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும். தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர் களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவையென்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையாரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றை யாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துகளும் ஆத்திசூடி யிலும், கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற் றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம்பருவத்தினர் எளிதாய்ப் பாடஞ் செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக, இவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந் துள்ளன. ஆத்திசூடி மிகச்சிறிய சொற்றொடர்களாலும், கொன்றை வேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும், ஆக்கப் பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்னும் கருத்துப் பற்றியே யாகும். மிக்க இளம் பருவத்தினராயிருக்கும் பொழுதே, பிள்ளைகளின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்க வேண்டுமென்னும் பெருங் கருணையுடனும், பேரறிவுடனும் ‘அறஞ்செய விரும்பு’ என்று தொடங்கி ஆக்கப் பெற்றுள்ள ஆத்திசூடியின் மாண்பு அளவிடற் பாலதன்று. இங்ஙனம் உலகமுள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன் பெறும் முறையினை ஏற்படுத்திவைத்தவர் பெண்மக்களுள் ஒருவரென்னும் பெருமை தமிழ்நாட்டிற்கு உரியதாகின்றது. ஆத்திசூடி உரைப் பதிப்புகள் வேறு பல இருப்பினும், இப்பதிப்பு மூலபாடம் தனியே சேர்க்கப்பெற்றும், பதவுரையும் பொழிப்புரையும் திருத்தமாக எழுதப்பெற்றும் சிறந்து விளங்குவது காணலாம். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். ஆத்திசூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே. நூல் 1. அறஞ்செய விரும்பு. 2. ஆறுவது சினம். 3. இயல்வது கரவேல். 4. ஈவது விலக்கேல். 5. உடையது விளம்பேல். 6. ஊக்கமது கைவிடேல். 7. எண்ணெழுத் திகழேல். 8. ஏற்ப திகழ்ச்சி. 9. ஐய மிட்டுண். 10. ஒப்புர வொழுகு. 11. ஓதுவ தொழியேல். 12. ஒளவியம் பேசேல். 13. அஃகஞ் சுருக்கேல். 14. கண்டொன்று சொல்லேல். 15. ஙப்போல் வளை. 16. சனிநீ ராடு. 17. ஞயம்பட வுரை. 18. இடம்பட வீடெடேல். 19. இணக்கமறிந் திணங்கு. 20. தந்தைதாய்ப் பேண். 21. நன்றி மறவேல். 22. பருவத்தே பயிர்செய். 23. மன்றுபறித் துண்ணேல். 24. இயல்பலா தனசெயேல். 25. அரவ மாட்டேல். 26. இலவம்பஞ்சிற் றுயில். 27. வஞ்சகம் பேசேல். 28. அழகலா தனசெயேல். 29. இளமையிற் கல். 30. அறனை மறவேல். 31. அனந்த லாடேல். 32. கடிவது மற. 33. காப்பது விரதம். 34. கிழமைப் படவாழ். 35. கீழ்மை யகற்று. 36. குணமது கைவிடேல். 37. கூடிப் பிரியேல். 38. கெடுப்ப தொழி. 39. கேள்வி முயல். 40. கைவினை கரவேல். 41. கொள்ளை விரும்பேல். 42. கோதாட் டொழி. 43. சக்கர நெறிநில். 44. சான்றோ ரினத்திரு. 45. சித்திரம் பேசேல். 46. சீர்மை மறவேல். 47. சுளிக்கச் சொல்லேல். 48. சூது விரும்பேல். 49. செய்வன திருந்தச் செய். 50. சேரிட மறிந்து சேர். 51. சையெனத் திரியேல். 52. சொற்சோர்வு படேல். 53. சோம்பித் திரியேல். 54. தக்கோ னெனத்திரி. 55. தானமது விரும்பு. 56. திருமாலுக் கடிமைசெய். 57. தீவினை யகற்று. 58. துன்பத்திற் கிடங்கொடேல். 59. தூக்கி வினைசெய். 60. தெய்வ மிகழேல். 61. தேசத்தோ டொத்துவாழ். 62. தையல்சொற் கேளேல். 63. தொன்மை மறவேல். 64. தோற்பன தொடரேல். 65. நன்மை கடைப்பிடி. 66. நாடொப் பனசெய். 67. நிலையிற் பிரியேல். 68. நீர்விளை யாடேல். 69. நுண்மை நுகரேல். 70. நூற்பல கல். 71. நெற்பயிர் விளை. 72. நேர்பட வொழுகு. 73. நைவினை நணுகேல். 74. நொய்ய வுரையேல். 75. நோய்க்கிடங் கொடேல். 76. பழிப்பன பகரேல். 77. பாம்பொடு பழகேல். 78. பிழைபடச் சொல்லேல். 79. பீடு பெறநில். 80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ். 81. பூமி திருத்தியுண். 82. பெரியாரைத் துணைக்கொள். 83. பேதைமை யகற்று. 84. பையலோ டிணங்கேல். 85. பொருடனைப் போற்றிவாழ். 86. போர்த்தொழில் புரியேல். 87. மனந்தடு மாறேல். 88. மாற்றானுக் கிடங்கொடேல். 89. மிகைபடச் சொல்லேல். 90. மீதூண் விரும்பேல். 91. முனைமுகத்து நில்லேல். 92. மூர்க்கரோ டிணங்கேல். 93. மெல்லினல்லாள் தோள்சேர். 94. மேன்மக்கள் சொற்கேள். 95. மைவிழியார் மனையகல். 96. மொழிவ தறமொழி. 97. மோகத்தை முனி. 98. வல்லமை பேசேல். 99. வாதுமுற் கூறேல். 100. வித்தை விரும்பு. 101. வீடு பெறநில். 102. உத்தம னாயிரு. 103. ஊருடன் கூடிவாழ். 104. வெட்டெனப் பேசேல். 105. வேண்டி வினைசெயேல். 106. வைகறைத் துயிலெழு. 107. ஒன்னாரைத் தேறேல். 108. ஓரஞ் சொல்லேல். ஆத்திசூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி யமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோ மியாமே. (பதவுரை) ஆத்தி-திருவாத்திப் பூமாலையை, சூடி-தரிப் பவராகிய சிவபெருமான், அமர்ந்த-விரும்பிய, தேவனை-விநாயகக் கடவுளை, யாம்-நாம், ஏத்தி ஏத்தி-வாழ்த்தி வாழ்த்தி, தொழுவோம்-வணங்குவோம். (பொழிப்புரை) சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார். ஏ : ஈற்றசை. நூல் 1. அறஞ்செய விரும்பு. (பத.) அறம்-தருமத்தை, செய-செய்வதற்கு, விரும்பு-நீ ஆசை கொள்ளு. (பொழி.) நீ தருமம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம். (பத.) ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபமாம். (பொழி.) கோபம் தணியத் தகுவதாம். 3. இயல்வது கரவேல். (பத.) இயல்வது-கொடுக்கக்கூடிய பொருளை, கரவேல்-(இரப்பவர்களுக்கு) ஒளியாதே. (பொழி.) கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு. 4. ஈவது விலக்கேல். (பத.) ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே. (பொழி.) ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே. 5. உடையது விளம்பேல். (பத.) உடையது-(உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல்-(பிறர் அறியும்படி) சொல்லாதே. (பொழி.) உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே. உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா. 6. ஊக்கமது கைவிடேல். (பத.) ஊக்கம்-(செய்யுந் தொழிலில்) மன எழுச்சியை, கைவிடேல்-கைவிடாதே. (பொழி.) நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மன வலிமையினைக் கைவிடாதே. (அது : பகுதிப்பொருள் விகுதி.) 7. எண்ணெழுத் திகழேல். (பத.) எண்-கணித நூலையும், எழுத்து-இலக்கண நூலையும், இகழேல்-இகழ்ந்து தள்ளாதே. (பொழி.) கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம்-கணக்கு.) 8. ஏற்ப திகழ்ச்சி. (பத.) ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி-பழிப்பாகும். (பொழி.) இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே. 9. ஐய மிட்டுண். (பத.) ஐயம்-பிச்சையை, இட்டு-(இரப்பவர்களுக்குக்) கொடுத்து, உண்-நீ உண்ணு. (பொழி.) இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு. ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும். 10. ஒப்புர வொழுகு. (பத.) ஒப்புரவு-உலக நடையை அறிந்து, ஒழுகு- (அந்த வழியிலே) நட. (பொழி.) உலகத்தோடு பொருந்த நடந்துகொள். 11. ஓதுவ தொழியேல். (பத.) ஓதுவது-எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல்-விடாதே. (பொழி.) அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. 12. ஒளவியம் பேசேல். (பத.) ஒளவியம்-பொறாமை வார்த்தைகளை, பேசேல்-பேசாதே. (பொழி.) நீ ஒருவரிடத்தும் பொறாமை கொண்டு பேசாதே. 13. அஃகஞ் சுருக்கேல். (பத.) அஃகம்-(நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல்-குறைத்து விற்காதே. (பொழி.) மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங் களைக் குறைத்து விற்காதே. 14. கண்டொன்று சொல்லேல். (பத.) கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல்-சொல்லாதே. (பொழி.) கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.) 15. ஙப்போல் வளை. (பத.) ஙப்போல்-ஙகரம்போல், வளை-உன் இனத்தைத் தழுவு. (பொழி.) ங என்னும் எழுத்தானது தான் பயனுடைய தாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக்கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள். (ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவதுபோல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.) 16. சனிநீ ராடு. (பத.) சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு-(எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு. (பொழி.) சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு. (புதன்கிழமைகளிலும் முழுகலாம்.) 17. ஞயம்பட வுரை. (பத.) ஞயம்பட-இனிமையுண்டாக, உரை - பேசு. (பொழி.) கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும் படி இனிமையாகப் பேசு. (நயம் என்பதன் போலி.) 18. இடம்பட வீடெடேல். (பத.) இடம்பட - விசாலமாக, வீடு-வீட்டை, எடேல்-கட்டாதே. (பொழி.) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடக்கும்படி வீட்டைப் பெரிதாகக் கட்டாதே. “சிறுகக் கட்டிப் பெருக வாழ்” என்பது பழமொழி. 19. இணக்கமறிந் திணங்கு. (பத.) இணக்கம்-(நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கை களை, அறிந்து-ஆராய்ந்தறிந்து, இணங்கு-(பின் ஒருவரோடு) நண்புகொள். (பொழி.) நற்குண நற்செய்கை உடையவரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய். 20. தந்தைதாய்ப் பேண். (பத.) தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும், பேண்-காப்பாற்று. (பொழி.) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று. 21. நன்றி மறவேல். (பத.) நன்றி-(ஒருவர் உனக்குச் செய்த) உதவியை, மறவேல்-(ஒருபோதும்) மறவாதே. (பொழி.) உனக்குப் பிறர் செய்த நன்மையை எப்பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு. உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது. 22. பருவத்தே பயிர்செய். (பத.) பருவத்தே-தக்க காலத்திலே, பயிர்செய்-பயிரிடு. (பொழி.) விளையும் பருவமறிந்து பயிரிடு. எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப் படவேண்டும். 23. மன்றுபறித் துண்ணேல். (பத.) மன்று-நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து-(வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல்-உண்டு வாழாதே. (பொழி.) நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே. ‘மண்பறித் துண்ணேல்’ என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம். 24. இயல்பலா தனசெயேல். (பத.) இயல்பு அலாதன-இயற்கைக்கு மாறான செயல்களை, செயேல்-செய்யாதே. (பொழி.) நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே. 25. அரவ மாட்டேல். (பத.) அரவம்-(நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல்-பிடித்து ஆட்டாதே. (பொழி.) பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே. 26. இலவம்பஞ்சிற் றுயில். (பத.) இலவம்பஞ்சில்-இலவம்பஞ்சு மெத்தையிலே, துயில்-உறங்கு. (பொழி.) இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு. 27. வஞ்சகம் பேசேல். (பத.) வஞ்சகம்-கபடச் சொற்களை, பேசேல்-பேசாதே. (பொழி.) கபடச் சொற்களைப் பேசாதே. 28. அழகலா தனசெயேல். (பத.) அழகு அலாதன-சிறப்பில்லாத செயல்களை, செயேல்-செய்யாதே. (பொழி.) இழிவான செயல்களைச் செய்யாதே. 29. இளமையிற் கல். (பத.) இளமையில்-இளமைப் பருவத்திலே, கல்-கல்வியைக் கற்றுக்கொள். (பொழி.) இளமைப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள். 30. அறனை மறவேல். (பத.) அறனை-தருமத்தை, மறவேல்-(ஒரு போதும்) மறவாதே. (பொழி.) தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய். 31. அனந்த லாடேல். (பத.) அனந்தல்-தூக்கத்தை, ஆடேல்-மிகுதியாகக் கொள்ளாதே. (பொழி.) மிகுதியாகத் தூங்காதே. 32. கடிவது மற. (பத.) கடிவது-(ஒருவரைச்) சினந்து பேசுவதை, மற-மறந்துவிடு. (பொழி.) யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே. 33. காப்பது விரதம். (பத.) காப்பது-(உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் அவற்றைக்) காப்பாற்றுவதே, விரதம்-நோன்பாகும். (பொழி.) பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும். தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம். 34. கிழமைப் படவாழ். (பத.) கிழமைப்பட-(உன் உடலும் பொருளும் பிறருக்கு) உரிமைப்படும்படி, வாழ்-வாழு. (பொழி.) உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு. 35. கீழ்மை யகற்று. (பத.) கீழ்மை-இழிவானவற்றை, அகற்று-நீக்கு. (பொழி.) இழிவான குணஞ் செயல்களை நீக்கு. 36. குணமது கைவிடேல். (பத.) குணமது-(மேலாகிய) குணத்தை, கைவிடேல்-கைவிடாதே. (பொழி.) நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவதென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது : பகுதிப்பொருள் விகுதி. 37. கூடிப் பிரியேல். (பத.) கூடி-(நல்லவரோடு) நட்புக்கொண்டு, பிரியேல்-பின் (அவரைவிட்டு) நீங்காதே. (பொழி.) நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே. 38. கெடுப்ப தொழி. (பத.) கெடுப்பது-பிறருக்குக் கேடு செய்வதை, ஒழி-விட்டுவிடு. (பொழி.) பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு. (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.) 39. கேள்வி முயல். (பத.) கேள்வி-கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு; முயல்-முயற்சி செய். (பொழி.) கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற்பொருளைக் கேட்க முயற்சி செய். 40. கைவினை கரவேல். (பத.) கைவினை-(உனக்குத் தெரிந்த) கைத்தொழிலை, கரவேல்-ஒளியாதே. (பொழி.) உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய். (ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.) 41. கொள்ளை விரும்பேல். (பத.) கொள்ளை-(பிறருடைய பொருளைக்) கொள்ளையிடுதற்கு, விரும்பேல்-ஆசைப்படாதே. (பொழி.) பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே. 42. கோதாட் டொழி.* (பத.) கோது-குற்றம் பொருந்திய, ஆட்டு-விளையாட்டை, ஒழி-நீக்கு. (பொழி.) குற்றமான விளையாட்டை விட்டுவிடு. 43. சக்கர நெறிநில். (பத.) சக்கரநெறி-(அரசனது ஆணையாகிய) சக்கரம் செல்லும் வழியிலே, நில்-அடங்கி யிரு. (பொழி.) அரசன் கட்டளை வழியில் அடங்கி நட. 44. சான்றோ ரினத்திரு. (பத.) சான்றோர்-அறிவினால் நிறைந்தவர்களுடைய, இனத்து-கூட்டத்திலே, இரு-எந்நாளும் இரு. (பொழி.) அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு. 45. சித்திரம் பேசேல் (பத.) சித்திரம்-பொய்ம்மொழிகளை, பேசேல்-பேசாதே. (பொழி.) பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே. 46. சீர்மை மறவேல் (பத.) சீர்மை-புகழுக்கு ஏதுவாகிய குணத்தை, மறவேல்-மறந்துவிடாதே. (பொழி.) புகழுக்குக் காரணமானவற்றை மறந்து விடாதே. 47. சுளிக்கச் சொல்லேல். (பத.) சுளிக்க-(கேட்பவர்) கோபிக்கும்படியாக, சொல்லேல்-(ஒன்றையும்) பேசாதே. (பொழி.) கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே. 48. சூது விரும்பேல். (பத.) சூது-சூதாடலை, விரும்பேல்-(ஒரு போதும்) விரும்பாதே. (பொழி.) ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே. 49. செய்வன திருந்தச்செய். (பத.) செய்வன-செய்யும் செயல்களை, திருந்த-செவ்வையாக, செய்-செய். (பொழி.) செய்யுஞ் செயல்களைத் திருத்தமாகச் செய். 50. சேரிடமறிந்து சேர். (பத.) சேர் இடம்-அடையத்தகும் (நன்மையாகிய) இடத்தை, அறிந்து-தெரிந்து, சேர்-அடை. (பொழி.) சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர். 51. சையெனத் திரியேல். (பத.) சை என-(பெரியோர் உன்னைச்) சீ என்று அருவருக்கும் படி, திரியேல்-திரியாதே. (பொழி.) பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே. 52. சொற்சோர்வு படேல். (பத.) சொல்-(நீ பிறரோடு பேசும்) சொற்களில், சோர்வு படேல்-மறதிபடப் பேசாதே. (பொழி.) நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்ற முண்டாகப் பேசாதே. 53. சோம்பித் திரியேல். (பத.) சோம்பி-(நீ செய்யவேண்டும் முயற்சியைச் செய்யாமல்) சோம்பல் கொண்டு, திரியேல்-வீணாகத் திரியாதே. (பொழி.) முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே. 54. தக்கோ னெனத்திரி. (பத.) தக்கோன் என-(உன்னைப் பெரியோர்கள்) யோக்கியன் என்று புகழும்படி, திரி-நடந்துகொள். (பொழி.) பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள். 55. தானமது விரும்பு. (பத.) தானமது-(சற்பாத்திரங்களிலே) தானம் செய்தலை, விரும்பு-ஆசைப்படு. (பொழி.) தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு. அது : பகுதிப்பொருள் விகுதி. 56. திருமாலுக் கடிமை செய். (பத.) திருமாலுக்கு-விட்டுணுவுக்கு, அடிமை செய்-தொண்டு பண்ணு. (பொழி.) நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய். 57. தீவினை யகற்று. (பத.) தீவினை-பாவச் செயல்களை, அகற்று-(செய்யாமல்) நீக்கு. (பொழி.) பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு. 58. துன்பத்திற் கிடங்கொடேல். (பத.) துன்பத்திற்கு-வருத்தத்திற்கு, இடங் கொடேல்-(சிறிதாயினும்) இடங்கொடாதே. (பொழி.) துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே. முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது. 59. தூக்கி வினைசெய். (பத.) தூக்கி-(முடிக்கும் வழியை) ஆராய்ந்து, வினை-ஒரு தொழிலை, செய்-(அதன் பின்பு) செய். (பொழி.) முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய். 60. தெய்வ மிகழேல். (பத.) தெய்வம்-கடவுளை, இகழேல்-பழிக்காதே. (பொழி.) கடவுளை இகழ்ந்து பேசாதே. 61. தேசத்தோ டொத்துவாழ். (பத.) தேசத்தோடு-நீ வசிக்கும் தேசத்திலுள்ளவர்களுடனே, ஒத்து-(பகையில்லாமல்) ஒத்து, வாழ்-வாழு. (பொழி.) நீ வசிக்கும் தேசத்தவருடன் பகையில்லாமல் பொருந்தி வாழு. 62. தையல்சொல் கேளேல். (பத.) தையல்-(உன்) மனைவியினுடைய, சொல்-சொல்லை, கேளேல்-கேட்டு நடவாதே. (பொழி.) மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே. 63. தொன்மை மறவேல். (பத.) தொன்மை-பழைமையாகிய நட்பை, மறவேல்-மறந்து விடாதே. (பொழி.) பழைமையாகிய நட்பினை மறந்துவிடாதே. 64. தோற்பன தொடரேல். (பத.) தோற்பன-தோல்வியடையக்கூடிய வழக்குகளிலே, தொடரேல்-சம்பந்தப்படாதே. (பொழி.) தோல்வியடையக்கூடிய காரியங்களில் தலையிடாதே. 65. நன்மை கடைப்பிடி. (பத.) நன்மை-புண்ணியத்தையே, கடைப்பிடி-உறுதியாகப் பிடி. (பொழி.) நல்வினை செய்தலை உறுதியாகப் பற்றிக்கொள். 66. நாடொப் பனசெய். (பத.) நாடு-உன் நாட்டில் உள்ளோர் பலரும், ஒப்பன-ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை, செய்-செய்வாயாக. (பொழி.) நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக் கூடிய நல்ல செயல்களைச் செய். 67. நிலையிற் பிரியேல். (பத.) நிலையில்-(நீ நிற்கின்ற உயர்ந்த) நிலையிலே நின்று, பிரியேல்-(ஒருபோதும்) நீங்காதே. (பொழி.) உன்னுடைய நல்ல நிலையினின்றும் தாழ்ந்து விடாதே. 68. நீர்விளை யாடேல். (பத.) நீர்-(ஆழம் உள்ள) நீரிலே, விளையாடேல்-(நீந்தி) விளையாடாதே. (பொழி.) வெள்ளத்திலே நீந்தி விளையாடாதே. 69. நுண்மை நுகரேல். (பத.) நுண்மை-(நோயைத்தருகிற) சிற்றுண்டிகளை, நுகரேல்-உண்ணாதே. (பொழி.) நோயைத் தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே. 70. நூல்பல கல். (பத.) நூல் பல-(அறிவை வளர்க்கிற) நூல்கள் பலவற்றையும், கல்-கற்றுக்கொள். (பொழி.) அறிவை வளர்க்கும் பல நூல்களையும் கற்றுக்கொள். 71. நெற்பயிர் விளை. (பத.) நெற்பயிர்-நெல்லுப் பயிரை, விளை-(வேண்டிய முயற்சி செய்து) விளைவி. (பொழி.) நெற்பயிரை முயற்சியெடுத்து விளையச்செய். உழுதுண்டு வாழ்வதே மேல். 72. நேர்பட வொழுகு. (பத.) நேர்பட-(உன் ஒழுக்கம் கோணாமல்) செவ்வைப்பட, ஒழுகு-நட. (பொழி.) ஒழுக்கந் தவறாமல் செவ்வையான வழியில் நட. 73. நைவினை நணுகேல். (பத.) நை-(பிறர்) கெடத்தக்க, வினை-தீவினைகளை, நணுகேல்-(ஒருபோதும்) சாராதே. (பொழி.) பிறர் வருந்தத்தகுந்த தீவினைகளைச் செய்யாதே. 74. நொய்ய வுரையேல். (பத.) நொய்ய-(பயன் இல்லாத) அற்ப வார்த்தைகளை, உரையேல்-சொல்லாதே. (பொழி.) வீணான அற்ப வார்த்தைகளைப் பேசாதே. 75. நோய்க்கிடங் கொடேல். (பத.) நோய்க்கு-வியாதிகளுக்கு, இடங் கொடேல்-இடங் கொடாதே. (பொழி.) உணவு உறக்கம் முதலியவற்றால் பிணிக்கு இடங் கொடுக்காதே. 76. பழிப்பன பகரேல். (பத.) பழிப்பன-(அறிவுடையவர்களாலே) பழிக்கப் படுவன வாகிய இழி சொற்களை, பகரேல்-பேசாதே. (பொழி.) பெரியோர்களாற் பழிக்கப்படுஞ் சொற்களைப் பேசாதே. பழிக்கப்படும் சொற்களாவன : பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பனவும்; இடக்கர்ச் சொற்களுமாம். 77. பாம்பொடு பழகேல். (பத.) பாம்பொடு-(பால் கொடுத்தவருக்கும் விடத்தைக் கொடுக்கிற) பாம்பைப் போல்பவர் களுடனே, பழகேல் சகவாசஞ் செய்யாதே. (பொழி.) பாம்புபோலும் கொடியவர்களுடன் பழக்கஞ் செய்யாதே. 78. பிழைபடச் சொல்லேல். (பத.) பிழைபட-வழுக்கள் உண்டாகும்படி, சொல்லேல்-ஒன்றையும் பேசாதே. (பொழி.) குற்ற முண்டாகும்படி பேசாதே. 79. பீடு பெறநில். (பத.) பீடு-பெருமையை, பெற-பெறும்படியாக, நில்-(நல்ல வழியிலே) நில். (பொழி.) பெருமை யடையும் படியாக நல்ல வழியிலே நில்லு. 80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ். (பத.) புகழ்ந்தாரை-உன்னைத் துதிசெய்து அடுத்தவரை, போற்றி-(கைவிடாமற்) காப்பாற்றி, வாழ்-வாழு. (பொழி.) அடுத்தவரை ஆதரித்து வாழு. 81. பூமி திருத்தியுண். (பத.) பூமி-(உன்) விளைநிலத்தை, திருத்தி-சீர்திருத்திப் பயிர் செய்து, உண்-உண்ணு. (பொழி.) பூமியைச் சீர்திருத்திப் பயிர்செய்து உண்ணு. 82. பெரியாரைத் துணைக்கொள். (பத.) பெரியாரை-(அறிவிலே சிறந்த) பெரியோரை, துணைக்கொள்-உனக்குத் துணையாகப் பேணிக்கொள். (பொழி.) பெரியாரைத் துணையாக நாடிக்கொள். 83. பேதைமை யகற்று. (பத.) பேதைமை-அஞ்ஞானத்தை, அகற்று-போக்கு. (பொழி.) அறியாமையை நீக்கிவிடு. 84. பையலோ டிணங்கேல். (பத.) பையலோடு-சிறு பிள்ளையோடு, இணங்கேல்-கூடாதே. (பொழி.) அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே. 85. பொருடனைப் போற்றிவாழ். (பத.) பொருள்தனை-திரவியத்தை, போற்றி-(மேன் மேலும் உயரும்படி) காத்து, வாழ்-வாழு. (பொழி.) பொருளை வீண்செலவு செய்யாமற் பாதுகாத்து வாழு. 86. போர்த்தொழில் புரியேல். (பத.) போர்-சண்டையாகிய, தொழில்-தொழிலை, புரியேல்-செய்யாதே. (பொழி.) யாருடனும் கலகம் விளைக்காதே. 87. மனந்தடு மாறேல். (பத.) மனம்-உள்ளம், தடுமாறேல்-கலங்காதே. (பொழி.) எதனாலும் மனக்கலக்க மடையாதே. 88. மாற்றானுக் கிடங்கொடேல். (பத.) மாற்றானுக்கு-பகைவனுக்கு, இடம் கொடேல் இடங் கொடாதே. (பொழி.) பகைவன் உன்னைத் துன்புறுத்தும்படி இடங் கொடுக்காதே. 89. மிகைபடச் சொல்லேல். (பத.) மிகைபட-சொற்கள் அதிகப்படும்படி, சொல்லேல்-பேசாதே. (பொழி.) வார்த்தைகளை மிதமிஞ்சிப் பேசாதே. 90. மீதூண் விரும்பேல். (பத.) மீது ஊண்-மிகுதியாக உண்ணுதலை, விரும்பேல்-இச்சியாதே. (பொழி.) மிகுதியாக உணவுண்டலை விரும்பாதே. 91. முனைமுகத்து நில்லேல். (பத.) முனைமுகத்து-சண்டை முகத்திலே, நில்லேல்-(போய்) நில்லாதே. (பொழி.) போர் முனையிலே நின்று கொண்டிருக்காதே. 92. மூர்க்கரோ டிணங்கேல். (பத.) மூர்க்கரோடு-மூர்க்கத்தன்மையுள்ளவர்களுடனே, இணங்கேல்-சிநேகம் பண்ணாதே! (பொழி.) மூர்க்கத்தன்மையுள்ளவர்களுடன் சேர்ந்து பழகாதே. 93. மெல்லினல்லாள் தோள்சேர்.* (பத.) மெல்-மெல்லிய, இல்-(உன்) மனையாட்டி யாகிய, நல்லாள்-பெண்ணுடைய, தோள்-தோள்களையே, சேர்-பொருந்து. (பொழி.) பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் சேர்ந்து வாழு. 94. மேன்மக்கள் சொற்கேள். (பத.) மேன்மக்கள்-உயர்ந்தோருடைய, சொல்-சொல்லை, கேள்-கேட்டு நட. (பொழி.) நல்லொழுக்கமுடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட. 95. மைவிழியார் மனையகல். (பத.) மைவிழியார்-மைதீட்டிய கண்களை யுடைய வேசையருடைய, மனை-வீட்டை, அகல்-(ஒருபோதும் கிட்டாமல்) அகன்றுபோ. (பொழி.) பரத்தையர் மனையைச் சேராமல் விலகு. 96. மொழிவ தறமொழி. (பத.) மொழிவது-சொல்லப்படும் பொருளை, அற-(சந்தேகம்) நீங்கும்படி, மொழி-சொல்லு. (பொழி.) சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்லு. 97. மோகத்தை முனி. (பத.) மோகத்தை-ஆசையை, முனி-கோபித்து விலக்கு. (பொழி.) நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்துவிடு. 98. வல்லமை பேசேல். (பத.) வல்லமை-(உன்னுடைய) சாமர்த்தியத்தை, பேசேல்-(புகழ்ந்து) பேசாதே. (பொழி.) உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே. 99. வாதுமுற் கூறேல். (பத.) வாது-வாதுகளை, முன்-(பெரியோர்) முன்னே, கூறேல்-பேசாதே. (பொழி.) பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே. 100. வித்தை விரும்பு. (பத.) வித்தை-கல்விப்பொருளையே, விரும்பு-இச்சி. (பொழி.) கல்வியாகிய நற்பொருளை விரும்பு. 101. வீடு பெறநில். (பத.) வீடு-மோட்சத்தை, பெற-அடையும்படி, நில்- (அதற்குரிய ஞானவழியிலே)நில். (பொழி.) முத்தியைப் பெறும்படி சன்மார்க்கத்திலே நில்லு. 102. உத்தம னாயிரு. (பத.) உத்தமனாய்-உயர்குணமுடையவனாகி, இரு-வாழ்ந்திரு. (பொழி.) நற்குணங்களிலே மேற்பட்டவனாகி வாழு. 103. ஊருடன் கூடிவாழ். (பத.) ஊருடன்-ஊரவர்களுடனே, கூடி-(நன்மை தீமைகளிலே) அளாவி, வாழ்-வாழு. (பொழி.) ஊராருடன் நன்மை தீமைகளிற் கலந்து வாழு. 104. வெட்டெனப் பேசேல். (பத.) வெட்டு என - கத்திவெட்டைப்போல, பேசேல் - (ஒருவரோடுங் கடினமாகப்) பேசாதே. (பொழி.) யாருடனும் கத்திவெட்டுப்போலக் கடினமாகப் பேசாதே. 105. வேண்டி வினைசெயேல். (பத.) வேண்டி-விரும்பி, வினை-தீவினையை, செயேல்-செய்யாதே. (பொழி.) வேண்டுமென்றே தீவினைகளைச் செய்யாதே. 106. வைகறைத் துயிலெழு. (பத.) வைகறை-விடியற்காலத்திலே, துயில்-நித்திரையை விட்டு, எழு-எழுந்திரு. (பொழி.) நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே தூக்கத்தை விட்டு எழுந்திரு. 107. ஒன்னாரைத் தேறேல். (பத.) ஒன்னாரை-பகைவர்களை, தேறேல்-நம்பாதே. (பொழி.) பகைவரை நம்பாதே. ‘ஒன்னாரைச் சேரேல்’ என்றும் பாடமுண்டு. 108. ஓரஞ் சொல்லேல். (பத.) ஓரம்-பட்சபாதத்தை, சொல்லேல்-(யாதொரு வழக்கிலும்) பேசாதே. (பொழி.) எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுவுநிலையுடன் சொல்லு. ஆத்திசூடி மூலமும் உரையும் முற்றிற்று. கொன்றைவேந்தன் - ஒளவையார் முகவுரை கொன்றைவேந்தன் என்பது நல்லிசைப் புலமை வாய்ந்த ஒளவையார் என்னும் மெல்லியலார் அருளிய நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும் பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றின வென்ப. கம்பர் முதலிய புலவர்கள் விளங்கிய காலத்தில் இருந்தவர் இவர். இவரைக்குறித்து எத்துணையோ பல கதைகள் வழங்குவதுண்டு. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிரில் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். அவர் பாடிய பாட்டுக்கள் புறநானூறு முதலிய சங்கநூல்களிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் அதியமான் என்னும் வள்ளல் அளித்த அமுதமயமான நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்தனரெனச் சங்கநூல்கள் தெரிவிக் கின்றன. எனினும், ‘சங்ககாலத்து ஒளவையாரும் வேறு, கம்பர் காலத்து ஒளவையாரும் வேறு’ என்பது இற்றைநாள் ஆராய்ச்சியாளர் கொள்கையாகும். தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர் களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஒளவை யென்னும் பெயரை அறிந்திருப்பர். அப் பெயரை அறியாதார் மிகவும் அரியர். அதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதிநூல்களே யாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சி யுடையாரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தே யிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துக்களும் ஆத்தி சூடியிலும், கொன்றைவேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர் களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன. இளம் பருவத்தினர் சுலபமாய்ப் பாடஞ்செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அகரம் முதலிய எழுத்துகளை முறையே முதலில் உடையனவாக அவற்றின் சூத்திரம் போலுஞ் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. ஆத்திசூடி மிகச் சிறிய சொற்றொடர்களாலும் கொன்றைவேந்தன் சற்றுப் பெரிய சொற்றொடர்களாலும் ஆக்கப் பெற்றிருப்பது பிள்ளைகளின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டுமென்று கருத்துப்பற்றியதாகும். மிக்க இளம் பருவத் தினராயிருக்கும் பொழுதே பிள்ளை களின் மனத்தில் உயர்ந்த நீதிகளைப் பதிய வைக்க வேண்டுமென்னும் பெருங்கருணையுடனும் பேரறிவுடனும் ‘அறஞ்செய விரும்பு’ ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்னும் இவற்றின் மாண்பு அளவிடற் பாலதன்று. இங்ஙனம் உலக முள்ளவரையும் இளைஞர்கள் பயின்று பயன்பெறும் முறையினை ஏற்படுத்தி வைத்தவர் பெண் மக்களில் ஒருவ ரென்னும் பெருமை தமிழ் நாட்டிற்கு உரியதாகின்றது. தொல்காப்பியச் செய்யுளியலுரையில் இந் நூற் கடவுள் வாழ்த்து, ‘கொன்றை வேய்ந்த செல்வ னடியிணை யென்று மேத்தித் தொழுவோ நாமே’ என்ற உருவுடன் பேராசிரியராலும் நச்சினார்க்கினியராலும் காட்டப்பெற்றுள்ளது. இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். கொன்றைவேந்தன் மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வ னடியிணை என்று மேத்தித் தொழுவோ மியாமே. பதவுரை: கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய, வேந்தன் - சிவபெருமானுக்கு, செல்வன் - குமாரராகிய விநாயகக் கடவுளுடைய , அடி இணை - பாதங்களிரண்டையும், யாம் - நாம், என்றும் - எந்நாளும், ஏத்தி - துதிசெய்து, தொழுவோம் - வணங்குவோம். பொழிப்புரை: சிவபெருமானுக்குத் திருக் குமாரராகிய விநாயக் கடவுளின் இரண்டு திருவடிகளையும் நாம் எப்பொழுதும் துதித்து வணங்குவோம். (ஏ - ஈற்றசை) நூல் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் பதவுரை: அன்னையும் - தாயும், பிதாவும் - தகப்பனும், முன்- முன்னே, அறி - காணப்பட்ட, தெய்வம் - தெய்வங்களாவார். பொழிப்புரை: தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட தெய்வங்களாவார். 2. ஆலயம் தொழுவது சாலவு நன்று பதவுரை: ஆலயம் - கோயிலுக்குப்போய், தொழுவது - கடவுளை வணங்குவது, சாலவும் மிகவும், நன்று - நல்லது. பொழிப்புரை : கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்குவது மிகவும் நல்லது. 3. இல்லற மல்லது நல்லற மன்று பதவுரை: இல்லறம் - (மனையாளோடு கூடிச் செய்யும்) இல்லறமானது, நல் அறம் - நல்ல அறமாகும்; அல்லது - இல்லற மல்லாத துறவறமானது, அன்று - நல்ல அறமன்றாகும். பொழிப்புரை: வீட்டிலிருந்து மனைவியுடன் கூடிச் செய்யும் இல்லறமே நல்லறமாகும்; துறவறம் நல்லறமன்று. (இல்லறம் எளிதிற் செய்யத் தகுந்தது. துறவறம் எளிதிற் செய்யக் கூடாதது.) 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் பதவுரை: ஈயார் - கொடாதவருடைய, தேட்டை - சம்பாத்தியத்தை, தீயார் - (கள்வர் முதலிய) தீயவர், கொள்வர் - அபகரிப்பர். பொழிப்புரை: வறியவர்க்குக் கொடாத உலோபிகள் தேடிய பொருளைத் தீயோர் அபகரித்துச் செல்வர். 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு பதவுரை: உண்டி - உணவு, சுருங்குதல் - குறைதல், பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - ஆழகாகும். பொழிப்புரை: மிதமாக உண்பது மாதர்களுக்குச் சிறப்பாகும். 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் பதவுரை: ஊருடன் - ஊராருடன், பகைக்கின் - (ஒருவன்) விரோதித்தால், வேருடன் - (தன்) வமிசத்துடன், கெடும் - (அவன்) கெடுவான். பொழிப்புரை: ஒருவன் தன் ஊராருடன் பகைத்துக் கொண்டால் அடியுடன் அழிந்து விடுவான். 7. எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும் பதவுரை: எண்ணும் - கணிதநூலும், எழுத்தும் - இலக்கண நூலும், கண் எனத் தகும் - (மனிதருக்கு) இரண்டு கண்களென்று சொல்லப்படும். பொழிப்புரை: கணிதமும் இலக்கணமும் மனிதர்க்கு இரண்டு கண்கள் என்று சொல்லத் தகும். 8. ஏவா மக்கள் மூவா மருந்து பதவுரை: ஏவா - (பெற்றவர் இதைச் செய் என்று) ஏவுதற்கு முன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள்- பிள்ளைகள், மூவா மருந்து - (அப்பெற்றவருக்கு) தேவாமிர்தம் போல்வார். பொழிப்புரை: பெற்றோர்கள் கட்டளை யிடுவதற்குமுன் குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவா மிர்தத்தை யொப்பார்கள். 9. ஐயம் புகினுஞ் செய்வன செய் பதவுரை: ஐயம் புகினும் - பிச்சை எடுத்தாலும், செய்வன - செய்யத்தக்கவைகளை, செய் - (விடாது) செய். பொழிப்புரை: பிச்சையெடுத்துச் சீவித்தாலும் செய்யத்தக்க காரியங்களைச் செய். 10. ஒருவனைப் பற்றி யோரகத் திரு பதவுரை: ஒருவனை - (நற்குணமுடைய) ஒருவனை, பற்றி - (துணையாகப் )பற்றிக்கொண்டு, ஓரகத்து - ஓரிடத்தில், இரு - வாசம் பண்ணு. பொழிப்புரை: தக்கான் ஒருவனைத் துணையாகப் பற்றிக் கொண்டு ஓரிடத்தில் வாசஞ்செய். 11. ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம் பதவுரை: வேதியர்க்கு - பிராமணருக்கு, ஒழுக்கம் - ஆசார மானது, ஓதலின் - (வேதம்) ஓதலினும், நன்றே - நல்லது. பொழிப்புரை: பிராமணருக்கு வேதம் ஓதுவதைக் காட்டிலும் நல்லொழுக்கம் சிறந்தது. 12. ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு பதவுரை: ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல்- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும். பொழிப்புரை: ஒருவன் பொறாமை வார்த்தை பேசுவது அவன் செல்வத்திற்கு அழிவைத் தரும். 13. அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு பதவுரை: அஃகமும் - தானியத்தையும், காசும் - திரவியத்தையும், சிக்கெனத் தேடு - வீண்செலவு செய்யாமற் சம்பாதி. பொழிப்புரை: தானியத்தையும் திரவியத்தையும் வீண் செலவு செய்யாமல் தேடிக்கொள். 14. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை பதவுரை: கற்பு எனப்படுவது - (பெண் களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது, சொல் - (கணவர்) சொல்லுக்கு, திறம்பாமை - தப்பி நடவாமையாம். பொழிப்புரை: மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது கணவர் வார்த்தைக்கு மாறு பட்டு நடவாமையாம். 15. காவ றானே பாவையர்க் கழகு பதவுரை: காவல்தானே - (கற்புக்கு அழிவு வராமல், தம்மைக்) காத்துக்கொள்வதுதானே, பாவையர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: கற்பினின்று வழுவாமல் தம்மைக் காத்துக் கொள்வதே மாதர்களுக்கு அழகாகும். 16. கிட்டா தாயின் வெட்டென மற பதவுரை: கிட்டாதாயின் - (இச்சித்த ஒரு பொருள்) கிடையா தானால், வெட்டென - சீக்கிரத்தில்தானே, மற - (அப்பொருளை) மறந்து விடு. பொழிப்புரை: நீ விரும்பிய பொருள் கிடைக்கா விட்டால், சீக்கிரத்தில் அதனை மறந்துவிடு. 17. கீழோ ராயினுந் தாழ வுரை பதவுரை: கீழோர் ஆயினும் - (கேட்பவர் உனக்குக்) கீழ்பட்டவராய் இருந்தாலும், தாழ - (உன் சொல்) வணக்க முடையதாய் இருக்கும்படி, உரை - (அவருடன்) பேசு. பொழிப்புரை: தாழ்ந்தோரிடத்திலும் தாழ்மையாகப் பேசு. 18. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை பதவுரை: குற்றம் - குற்றங்களை, பார்க்கின் - (ஆராய்ந்து) பார்த்தால், சுற்றம் - உறவாவோர், இல்லை - (ஒருவரும்) இல்லை. பொழிப்புரை: குற்றத்தையே ஆராய்ந்து பார்த்தால் சுற்றமாவார் ஒருவருமில்லை. (குற்றமே யில்லாதவர் ஒருவருமில்லை யாகையால் சுற்றத்தார் அகப்படார் என்பதாம்.) 19. கூரம் பாயினும் வீரியம் பேசேல் பதவுரை: கூர் அம்பு ஆயினும் - (உன் கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம் - வீரத்தன்மையை, பேசேல் - (வீணாகப்) பேசாதே. பொழிப்புரை: உன் கையிலே கூரிய அம்பு இருந்தாலும், உன் வீரத்தை வியந்து பேசாதே. 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் பதவுரை: கெடுவது - தீமையை, செய்யின் - (தன் சிநேகன்) செய்தால், விடுவது - (அவன் சிநேகத்தை) விடுவதே, கருமம் - நற்செயலாகும். பொழிப்புரை: தன் நண்பன் தீமையைச் செய்தால், அவனது நட்பை விட்டுவிடுவது நற்செய்கையாம். 21. கேட்டி லுறுதி கூட்டு முடைமை பதவுரை: கேட்டில் - (கைப்பொருள்) இழந்த காலத்தில், உறுதி - மனந்தளராமை, உடைமை - செல்வத்தை, கூட்டும் - சேர்க்கும். பொழிப்புரை: பொருளை இழந்த காலத்தில் மனந்தளராமல் உறுதியுடனிருப்பது மீண்டும் செல்வத்தை யுண்டாக்கும். 22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி பதவுரை: கைப்பொருள் தன்னின் - கையிலிருக்கிற பொருளைப் பார்க்கிலும், மெய்ப் பொருள் - மெய்ப்பொருளாவது, கல்வி - கல்வியேயாம். பொழிப்புரை: கையிலிருக்கிற திரவியத்தைப் பார்க்கிலும் கல்வியே உண்மைப் பொருளாகும். 23. கொற்றவ னறித லுற்றிடத் துதவி பதவுரை: கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒருவனை) அறிந்திருந்தால், உற்ற இடத்து (அவனுக்கு ஆபத்து) வந்த இடத்து, உதவி - உதவியாகும். பொழிப்புரை: ஒருவனுக்கு அரசன் அறிமுகமாயிருப்பது அவனுக்கு ஆபத்தில் உதவியாகும். (உற்றவிடத்து என்பது உற்றிடத்து என விகாரப்பட்டது) 24. கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு பதவுரை: கோட்செவி - கோள் கேட்குங் குணமுடையவனது காதிலே, குறளை - (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது, காற்றுடன்- காற்றுடன் சேர்ந்த, நெருப்பு - நெருப்பைப் போல மூளும். பொழிப்புரை: கோள் கேட்கும் இயல்புள்ளவன் காதில் ஒருவன் சொன்ன கோள் வார்த்தை காற்றுடன் சேர்ந்த நெருப்புப் போல மூளும். 25. கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை பதவுரை: கௌவை - (பிறர்மேலே) பழிச்சொற்களை, சொல்லின் - (ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் - எல்லாருக்கும், பகை - (அவன்) பகையாவான். பொழிப்புரை: ஒருவன் பிறர் பழிகளைச் சொல்லிக் கொண்டிருந்தால் அவன் யாருக்கும் பகையாவான் (எவருக்கும் என்பது எவ்வருக்கும் என விகாரப்பட்டது) 26. சந்ததிக் கழகு வந்திசெய் யாமை பதவுரை: சந்ததிக்கு - தன் வமிசம் பெருகுதற்கு, அழகு - அழகாவது, வந்தி - மலரடியாக, செய்யாமை - செய்யாமல் (தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம். பொழிப்புரை: வமிசத்திற்கு அழகாவது மக்கட்பேறு உண்டாகும்படி மனைவியுடன் கூடி வாழ்தலாம். 27. சான்றோ ரென்கை யீன்றோட் கழகு பதவுரை: சான்றோர் என்கை - (தன் புத்திரரைக் கல்வியறிவால்) நிறைந்தோர் என்று (பிறர்) சொல்லுகிறது, ஈன்றோட்கு பெற்றவளுக்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: தன் புதல்வரை, அறிவுடையோர் என்று பிறர் சொல்லக் கேட்பது பெற்ற தாய்க்கு மகிழ்ச்சியாம். 28. சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு பதவுரை: சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: ஒருவன் சிவபெருமானை விரும்பி வழி பட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும். 29. சீரைத் தேடி னேரைத் தேடு பதவுரை: சீரை - சௌக்கியத்தை, தேடின் - (உனக்குத்) தேடுவாயானால், ஏரை - பயிரிடுந் தொழிலை, தேடு - தேடிக் கொள்ளு. பொழிப்புரை: சுகமாக வாழ விரும்பினால் உழுது பயிரிடுந் தொழிலைத் தேடிக்கொள். 30. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல் பதவுரை: சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு - அழகாவது, சூழ இருத்தல் - சுற்றிலும் வந்திருத்தலாகும். பொழிப்புரை: சுற்றத்தார்க்கு அழகாவது நலந்தீங்குகளில் சூழ வந்திருப்பதாகும். 31. சூதும் வாதும் வேதனை செய்யும் பதவுரை: சூதும் - சூதாடுதலும், வாதும் -குதர்க்கம் பேசுதலும், வேதனை - வருத்தத்தை, செய்யும் - உண்டாக்கும். பொழிப்புரை: சூதாடுதலும் விதண்டாவாதம் பேசலும் துன்பத்தை உண்டாக்கும். 32. செய்தவ மறந்தாற் கைதவ மாளும் பதவுரை: செய்தவம் - செய்யுந் தவத்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், கைதவம் - பொய்யாகிய அஞ்ஞானமானது, ஆளும் - (அவனை அடிமைகொண்டு) ஆளும். பொழிப்புரை: ஒருவன் செய்யுந் தவத்தை மறந்துவிட்டால் அவனை அஞ்ஞானம் அடிமை கொள்ளும். 33. சேமம் புகினும் யாமத் துறங்கு பதவுரை: சேமம் - காவற்கூடத்திலே; புகினும் - போய் இருந்தாலும், யாமத்து - ஏழரை நாழிகைக்குப்பின்; உறங்கு - நித்திரை பண்ணு. பொழிப்புரை: காவற்கூடத்திலே போய் இருந்தாலும் இரவு ஏழரை நாழிகைக்குப்பின் நித்திரை செய். (காவல் வேலை செய்தாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும். ‘சாமத்துறங்கு’ என்றும் பாடம்.) 34. சையொத் திருந்தா லைய மிட்டுண் பதவுரை: சை ஒத்து இருந்தால் - பொருள் ஒத்திருந்தால், ஐயம் இட்டு- பிச்சை இட்டு, உண் - உண்டு வாழு. பொழிப்புரை: பொருள் ஒத்திருந்தால் பிச்சையிட்டு உண்டு வாழ். (சை - பொருள்.) 35. சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர் பதவுரை: சொக்கர் என்பவர் - பொன்னுடையவர் என்று சொல்லப்படுவோர், அத்தம் - (அறமும் இன்பமுமாகிய மற்றைப்) புருடார்த்தங்களையும், பெறுவர் - பெறுவர். பொழிப்புரை: பொருளுடையவர் அறமும் இன்பமும் ஆகிய மற்றைப் புருடார்த்தங்களையும் பெறுவர். (முயற்சியுடையவர் பொருள் பெறுவர் என்றும், களங்கமற்றவர் நல்வழியை அடைவர் என்றும் இதற்குப் பொருள் சொல்வதும் உண்டு.) 36. சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர் பதவுரை: சோம்பர் என்பவர் - சோம்பலுடையவர் என்று சொல்லப்படுவோர், தேம்பி - (வறுமையினால்) வருந்தி, திரிவர்- (இரந்து) திரிவர். பொழிப்புரை: சோம்பலுடையோர் வறுமையால் வருந்தி அலைவார்கள். 37. தந்தைசொன் மிக்க மந்திர மில்லை பதவுரை: தந்தை - பிதாவினுடைய; சொல் - சொல்லுக்கு, மிக்க - மேற்பட்ட, மந்திரம் (பலனைத் தரும்) மந்திரமானது, இல்லை - இல்லையாம். பொழிப்புரை: பிதாவின் சொல்லுக்கு மேற்பட்ட மந்திரம் இல்லை. (மந்திரம் என்பதற்கு ஆலோசனை என்றும் பொருள் கூறலாம்.) 38. தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை பதவுரை: தாயின் - மாதாவைப் பார்க்கிலும், சிறந்த - சிறப்புப் பொருந்திய, ஒரு கோயிலும் - ஓர் ஆலயமும், இல்லை - இல்லையாம். பொழிப்புரை: அன்னையைப் பார்க்கிலும் சிறந்த கோயிலும் இல்லை. (தாயைப் பூசித்தால் ஆலயத்திற் கடவுளைப் பூசிக்கும் பலனை அடையலாம் என்பது கருத்து. சிறந்த என்பது சிறந்து என விகாரப்பட்டது. ‘தாய்சொற் றுறந்தால் வாசக மில்லை’ என்றும் பாடம். இதற்கு, தாயின் வார்த்தையைத் தப்பினால் உறுதி பயக்கும் வேறு வாசகமில்லை என்பது பொருளாகும்.) 39. திரைகட லோடியுந் திரவியந் தேடு பதவுரை: திரை கடல் - அலைவீசுகின்ற கடலிலே, ஓடியும் - (கப்பலேறி, தூரதேசங்களிற்) போயானாலும், திரவியம் - திரவியத்தை, தேடு - சம்பாதி. பொழிப்புரை: கடல் வழியாகத் தேசாந்தரஞ் சென்றும் பொருளைத் தேடு. 40. தீராக் கோபம் போரா முடியும் பதவுரை: தீரா - நீங்காத, கோபம் - கோபமானது, போரா - (பின்பு) சண்டையாக, முடியும் - முடிந்துவிடும். பொழிப்புரை: தணியாத கோபமானது கலகமாக முடியும். 41. துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு பதவுரை: துடியா - (தங் கணவனுக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள், மடியில் - (அவர்) வயிற்றில், நெருப்பு - நெருப்பாவர். பொழிப்புரை: கணவர்க்குத் துன்பம் வந்த போது மனம் பதையாத மகளிர், அவர் வயிற்றில் நெருப்பாவர். (மடியில் நெருப்பு என்பதற்கு உடையிற் கட்டிய நெருப்பை யொப்பர் என்றும் பொருள் கூறலாம்.) 42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் பதவுரை: தூற்றும் - (தங் கணவர்மேற் குற்றஞ்சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று எனத் தகும் - (அவருக்கு) இயமன் என்று எண்ணத்தகும். பொழிப்புரை: கணவர்மேல் அவதூறு சொல்லும் பெண்டிரை அவருக்கு இயமன் என்று சொல்லத்தகும். 43. தெய்வஞ் சீறிற் கைதவ மாளும் பதவுரை: தெய்வம் -தெய்வமானது, சீறின் - (ஒருவனைக்) கோபித்தால், கைதவம் - (அவனுக்குக்) கைகூடியிருந்த தவமும், மாளும் - (பயன் கொடாமல்) அழியும். பொழிப்புரை: ஒருவன் கடவுளின் சினத்துக்கு ஆளானால் அவனுக்குக் கைகூடிய தவமும் அழிந்துவிடும். (கைத்தவம் என்பது கைதவம் என விகாரப்பட்டது.) 44. தேடா தழிக்கிற் பாடா முடியும் பதவுரை: தேடாது - (ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல், அழிக்கின் - (இருக்கிற பொருளைச்) செலவழித்தால், பாடா முடியும் - (அவனுக்குப் பின்) வருத்தமாக முடியும். பொழிப்புரை: பொருளைச் சம்பாதியாமல் செலவழித்துக் கொண்டிருந்தால் பின்பு துன்பமாக முடியும். 45. தையும் மாசியும் வையகத் துறங்கு பதவுரை: தையும் - தை மாதத்திலும், மாசியும் - மாசி மாதத்திலும், வை அகத்து - (பனிவருத்தந் தராத) வைக்கோல் வீட்டிலே, உறங்கு - நித்திரை பண்ணு. பொழிப்புரை: தை, மாசி மாதங்களாகிற பனிக்காலத்தில் வைக்கோலால் வேய்ந்த கூரை வீட்டில் நித்திரை செய். (வை - வைக்கோல்.) 46. தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது பதவுரை: தொழுது - (ஒருவரைச்) சேவித்து, ஊண் - உண்ணும் உணவினது, சுவையின் - சுவையைப்பார்க்கிலும், உழுது - உழுது பயிர் செய்து, ஊண் - உண்ணும் உணவின் சுவை, இனிது - இன்பந்தருவதாகும். பொழிப்புரை: சேவகஞ்செய்து உண்ணும் உணவைப் பார்க்கிலும் உழுது பயிர்செய்து உண்ணும் உணவு இன்பந் தருவதாகும். 47. தோழ னோடு மேழைமை பேசேல் பதவுரை: தோழனோடும் - (உன்) சிநேகிதனோடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கிற) சிறுமையை, பேசேல் - பேசாதே. பொழிப்புரை: உன் வறுமை முதலிய எளிமையை நண்பனிடத் திலும் சொல்லாதே. 48. நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் பதவுரை: நல் இணக்கம் அல்லது - நல்ல சகவாசம் அல்லாதது, அல்லல் - துன்பத்தையே, படுத்தும் - உண்டாகும். பொழிப்புரை: நற்சேர்க்கையல்லாத கெட்ட சகவாசம் துன்பத்தை உண்டாக்கும். 49. நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை பதவுரை: நாடு எங்கும் - தேசமெங்கும், வாழ - செழித்திருக்கு மாயின், கேடு ஒன்றும் - ஒரு கெடுதியும், இல்லை - இல்லை. பொழிப்புரை: தேசமெங்கும் செழித்திருந்தால் யாருக்கும் ஒரு குறைவுமில்லை. 50. நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை பதவுரை: நிற்க - நிலைபெறும்படி, கற்றல் - கற்றலாவது, சொல் - (தான் சொல்லும்) சொற்கள், திறம்பாமை - தப்பிப்போகாமை யாம். பொழிப்புரை: நிலைபெறக் கற்றலாவது சொல்லுஞ்சொல் தவறாமையாம். கற்றவர்கள் பயனின்றி யொழியாது நிலைபெறும் சொற்களைச் சொல்லுதல்வேண்டும். (சொல் திறம்பாமை என்பதற்கு வாக்குறுதியிற் பிறழாதிருத்தல் என்றும் பொருள் சொல்லலாம்.) 51. நீரகம் பொருந்திய வூரகத் திரு பதவுரை: நீர் - நீர்வளமானது, அகம் - தனக்குள்ளேயே, பொருந்திய - அமைந்த, ஊரகத்து- ஊரினிடத்திலே, இரு - குடியிரு. பொழிப்புரை: நீர்வளம் பொருந்திய ஊரிலே குடியிரு. 52. நுண்ணிய கருமமு மெண்ணித் துணி பதவுரை: நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலையும், எண்ணி - (நன்றாக) ஆலோசித்து, துணி - (பின்பு அதைச்) செய்யத்துணி. பொழிப்புரை: சிறிய காரியத்தையும் நன்கு ஆலோசனை செய்து செய்யத்துணி. 53. நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு பதவுரை: நூல் - தருமநூலிலே சொல்லப்பட்ட, முறை - (விதிகளின்) முறையை, தெரிந்து - அறிந்து, சீலத்து- நல்லொழுக்க வழியில், ஒழுகு - நட. பொழிப்புரை: நீதிநூலிற் சொல்லப்பட்ட விதிகளை அறிந்து நல்லொழுக்க வழியில் நட. 54. நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை பதவுரை: நெஞ்சை - (தம்முடைய) மனசுக்கு, ஒளித்த - மறைக்கப் பட்ட, ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும், இல்லை - இல்லை. பொழிப்புரை: மனத்திற்குத் தெரியாத வஞ்சகம் ஒன்று மில்லை. 55.நேரா நோன்பு சீரா காது பதவுரை: நேரா - (மனசினால்) உடன்படாத, நோன்பு - தவமானது, சீர் ஆகாது - சீராக முடியாது. பொழிப்புரை: மனம்பொருந்திச் செய்யாத தவமானது செம்மையாக முடியாது. 56. நைபவ ரெனினு நொய்ய வுரையேல் பதவுரை: நைபவர் எனினும் - (கேட்போர் எதிர்பேசாமல்) வருந்துவோராயினும், நொய்ய - அற்பவார்த்தைகளை, உரையேல்- சொல்லாதே. பொழிப்புரை: கேட்பவர் எதிர்பேசாமல் வருந்துவோ ராயினும், அற்பவார்த்தைகளைப் பேசாதே. 57. நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர் பதவுரை: நொய்யவர் என்பவர் - (உருவத்தினாலே) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவார்- (செய்காரியத்தால் யாவரும்) விரும்பும் குணத்தை யுடையவராவர். பொழிப்புரை: உருவம் முதலியவற்றால் சிறியவரென்று இகழப்படுவோருஞ் செய்யுங் காரியத்தால் யாவரும் விரும்புந் தன்மையினர் ஆவர். 58. நோன்பென் பதுவே கொன்று தின்னாமை பதவுரை: நோன்பு என்பது - தவமென்று சொல்லப்படுவது, கொன்று - (ஒரு சீவனைக்) கொலை செய்து, தின்னாமையே - (அதன் மாமிசத்தைத்) தின்னாமையேயாம். பொழிப்புரை: விரதம் என்று சொல்லப்படுவது ஓருயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னாமையாம். 59. பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும் பதவுரை: பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரின் - பயிரின் விளைவினாலும் விளைவில்லாமையினாலும், புண்ணியம் - (அவனிடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் - அறியப்படும். பொழிப்புரை: (ஒருவன்) செய்த பயிர் விளைவதிலிருந்து அவன் முன்பு செய்த புண்ணியம் அறிந்து கொள்ளப்படும். 60. பாலோ டாயினுங் கால மறிந்துண் பதவுரை: பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து - (உண்ணத்தகுங்) காலத்தை அறிந்து, உண் - (அதை)உண்ணு. பொழிப்புரை: பாலுடன் கூடிய அன்னமாயினும் உண்ணத் தகும் காலமறிந்து உண். 61. பிறன்மனை புகாமை யறமெனத் தகும் பதவுரை: பிறன் - பிறனுடைய, மனை - மனையாளிடத்தில், புகாமை - (இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும் - (எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும். பொழிப்புரை: பிறன்மனைவியை விரும்பாமையே உயர்ந்த தருமம் என்று சொல்லத்தகும். 62. பீரம் பேணி பாரந் தாங்கும் பதவுரை: பீரம்பேணி - தாய்ப்பால் குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை, தாங்கும் - சுமப்பான். பொழிப்புரை: தாய்ப்பாலைக்குறைவற உண்டு வளர்ந்தவன் பெரும் பாரத்தைச் சுமக்க வல்லவனாவான். (காரணத்தைக் குறைவறக் கொண்டவன் காரியத்தை எளிதில் முடிப்பான்.) (பீரம் என்பதில் அம் சாரியை.) 63. புலையுங் கொலையும் களவுந் தவிர் பதவுரை: புலையும் - புலாலுண்ணுதலையும், கொலையும் - சீவ வதை செய்வதையும், களவும் - பிறர்பொருளைத் திருடு தலையும், தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு. பொழிப்புரை: புலால் உண்ணுதலும், பிறவுயிரைக் கொல்லுதலும், பிறர்பொருளைத் திருடுதலும், செய்யாதே. 64. பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் பதவுரை: பூரியோர்க்கு - கீழ்மக்களுக்கு, சீரிய - சிறப்பாகிய, ஒழுக்கம் - நடையானது, இல்லை - இல்லை. பொழிப்புரை: கீழ்மக்களிடத்தில் சிறந்த நடை காணப்படுவதில்லை. 65. பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும் பதவுரை: பெற்றோர்க்கு - (மெய்ஞ் ஞானத்தைப்) பெற்றவர்க்கு, சுற்றமும் - உறவினர்மேல் ஆசையும், சினமும் - (மற்றவர்மேல்) வெறுப்பும், இல்லை - இல்லை. பொழிப்புரை: கடவுளருளைப் பெற்றோர்க்கு உறவுமில்லை கோபமும் இல்லை. 66. பேதைமை யென்பது மாதர்க் கணிகலம் பதவுரை: பேதைமை என்பது - அறியாமை யென்று சொல்லப் படுங்குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு, அணிகலம் - ஆபரண மாகும். பொழிப்புரை: அறிந்தும் அறியாதவர்போல அடங்கி இருக்கும் குணம் மாதர்களுக்கு ஆபரணமாகும். 67. பையச் சென்றால் வையந் தாங்கும் பதவுரை: பைய - மெள்ள, சென்றால் - (ஒருவன் தகுதியான வழியிலே) நடந்தால், வையம் - பூமியிலுள்ளோர், தாங்கும் - (அவனை) மேலாகக் கொள்வர். பொழிப்புரை: ஒருவன் தகுதியான வழியில் நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர். 68. பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர் பதவுரை: பொல்லாங்கு என்பவை - தீங்குகளென்று சொல்லப் பட்டவை, எல்லாம் - எல்லாவற்றையும், தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு. பொழிப்புரை: தீங்குகள் என்று சொல்லப்பட்டயா வற்றையும் செய்யாதொழி. 69. போனக மென்பது தானுழந் துண்டல் பதவுரை: போனகம் என்பது - போசனமென்று சொல்லப் படுவது, தான் உழந்து - தான் பிரயாசைப் பட்டுச் சம்பாதித்து, உண்டல் - உண்ணுதலாம். பொழிப்புரை: உணவென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது தான் வருந்திச் சம்பாதித்து உண்பதாம். 70. மருந்தே யாயினும் விருந்தோ டுண் பதவுரை: மருந்தே ஆயினும் - (உண்ணப் படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமே யானாலும், விருந்தோடு - வந்த விருந்தாளி களோடு கூடி, உண் - உண்ணு. பொழிப்புரை: கிடைத்தற்கரிய தேவாமிர்தமே யானாலும் விருந்தினரோடு புசி. 71. மாரி யல்லது காரிய மில்லை பதவுரை: மாரி அல்லது - மழையினால் அல்லாமல், காரியம் - யாதொரு காரியமும், இல்லை - (யாருக்கும் நடப்பது) இல்லை. பொழிப்புரை: மழையிருந்தாலல்லாமல் உலகத்தில் எக்காரியமும் நடப்பதில்லை. 72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை பதவுரை: மின்னுக்கு எல்லாம் - (வானத்திலே காணப்பட்ட) மின்னலுக்கு எல்லாம், பின்னுக்கு மழை - பின்னே மழை உண்டாகும். பொழிப்புரை: மின்னுவதெல்லாம் பின்னே மழை பெய்தற்கு அடையாளம். (ஒருவனுடைய ஊக்கம் முதலியவெல்லாம் அவனுக்குப் பின்னே வரும் நன்மைக்கு அடையாளம்) 73. மீகாம னில்லா மரக்கல மோடாது பதவுரை: மீகாமன் - (தன்னை ஓட்டத்தக்க) மாலுமி, இல்லா- இல்லாத, மரக்கலம் - கப்பல், ஓடாது - (கடலிலே செவ்வையாக) ஓடாது. பொழிப்புரை: மாலுமி யில்லாத கப்பல் ஓடாது. (நல்வழியில் நடத்தும் தலைவனில்லாத குடும்பமும், வேந்தனில்லாத நாடும் முதலியன செவ்வையாக நடைபெறமாட்டா.) 74. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும் பதவுரை: முற்பகல் - ஒரு பகலின் முன்பங்கிலே, செய்யின் - (பிறனுக்குத் தீங்கு) செய்தால், பிற்பகல் - அதன் பின்பங்கிலே, விளையும் - (செய்தவனுக்கு) அத்தீங்கு தானே உண்டாகும். பொழிப்புரை: ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு செய்தால் பிற்பாகத்தில் தனக்கு அத்தீங்கு உண்டாகும். (முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்ன தாகவும் கொள்ளலாம்.) 75. மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம் பதவுரை: மூத்தோர் - (கல்வியறிவினாலே) முதிர்ந்தவர், சொன்ன - சொல்லிய, வார்த்தை - வார்த்தையானது, அமிர்தம் - தேவாமிர்தத்தைப் போலும். பொழிப்புரை: பெரியோர் சொல்லிய வார்த்தை யானது தேவமிர்தம்போல் இன்பத்தைச் செய்யும். 76. மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு பதவுரை: மெத்தையில் -பஞ்சணையிலே, படுத்தல் - படுத்த லானது, நித்திரைக்கு - (ஒருவன் செய்கிற) நித்திரைக்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: மிருதுவான பஞ்சணையிற் படுத்தல் நித்திரைக்கு அழகாகும். (மெத்தெனப் படுத்தல் என்றும் பாடம்.) 77. மேழிச் செல்வம் கோழை படாது பதவுரை: மேழி - கலப்பை பிடித்து உழுது பயிர் செய்தலால் உண்டாகின்ற, செல்வம் - செல்வமானது, கோழை படாது - (ஒருபோதும்) குறைவை அடையாது. பொழிப்புரை: உழுது பயிர்செய்தலால் வரும் செல்வம் சிறுமையுறாது. 78. மைவிழி யார்தம் மனையகன் றொழுகு பதவுரை: மை விழியார்தம் - மை தீட்டிய கண்களையுடைய வேசிகளது, மனை - வீட்டினை, அகன்று ஒழுகு - விலகி நட. பொழிப்புரை: மைதீட்டிய கண்களையுடைய பரத்தையர் மனையை அணுகாமல் விலகிநட. 79. மொழிவது மறுக்கி னழிவது கருமம் பதவுரை: மொழிவது - (பெரியோர்) சொல்வதை, மறுக்கின்- கேளாமற் செய்தால், கருமம் - (ஒருவன் செய்யுந்) தொழில், அழிவது - கெடுவதாகும். பொழிப்புரை: ஒருவன் பெரியோர் சொல்லை மீறி நடந்தால் அவன் செய்யும் தொழில் பயன்படாது அழியும். 80. மோன மென்பது ஞான வரம்பு பதவுரை: மோனம் என்பது - மௌனநிலை என்பது, ஞானம்-மெய்ஞ்ஞானத்துக்கு, வரம்பு - எல்லையாகும். பொழிப்புரை: மௌனம் என்பது ஞானத்திற்கு எல்லையாம். 81. வளவ னாயினு மளவறிந் தழித்துண் பதவுரை: வளவன் ஆயினும் - (செல்வத்தில் நீ) சோழனுக்கு ஒப்பானவன் ஆனாலும், அளவு - (பொருள் வரவின்) அளவை, அறிந்து - தெரிந்து, அழித்து - செலவழித்து, உண் - அனுபவி. பொழிப்புரை: நீ சோழன் போன்ற செல்வமுடையவன் ஆனாலும் வரவுக்குத் தக்கபடி செலவுசெய்து உண்ணு. 82. வானஞ் சுருங்கிற் றானஞ் சுருங்கும் பதவுரை: வானம் - மழையானது, சுருங்கின் - குறையுமாயின், தானம் - தருமமானது, சுருங்கும் - குறைவுபடும். பொழிப்புரை: மழை பெய்வது குறைந்தால் தானஞ்செய்வது குறையும். 83. விருந்திலோர்க் கில்லை பொருந்திய வொழுக்கம் பதவுரை: விருந்து இலோர்க்கு - விருந்தினரை உபசரித்தல் இல்லாதவருக்கு, பொருந்திய - தகுதியான, ஒழுக்கம் - இல்லற வொழுக்கம், இல்லை - இல்லையாம். பொழிப்புரை: விருந்தினரை உபசரியாதவர்களுக்குத் தகுதியான இல்லற வொழுக்கம் இல்லையாம். 84. வீரன் கேண்மை கூரம் பாகும் பதவுரை: வீரன் - வீரனுடைய, கேண்மை - சிநேகம், கூர் அம்பு ஆகும் - கூர்மைபொருந்திய அம்பை ஒப்பாகும். பொழிப்புரை: ஒருவனுக்கு வீரனுடைய நட்பு இருந்தால் அஃது அவனுக்குக் கூரிய அம்புபோல் பகையை வெல்ல உதவும். 85. உரவோ ரென்கை யிரவா திருத்தல் பதவுரை: உரவோர் என்கை - வல்லவரென்று சொல்லப் படுதல், இரவாது - யாசியாமல், இருத்தல்- இருக்கையாம். பொழிப்புரை: திட்பமுடையோர் என்று சொல்லப்படுவது சிறுமைவந்த காலத்திலும் பிறரை இரவாதிருப்பதாம். 86. ஊக்க முடைமை யாக்கத்திற் கழகு பதவுரை: ஊக்கம் - மனந்தளராமையை, உடைமை - உடைத் தாதல்; ஆக்கத்திற்கு - செல்வத்திற்கு, அழகு - அழகாகும். பொழிப்புரை: செய்யுந் தொழிலில் மனம் தளராதிருத்தல் செல்வத்திற்கு அழகாகும். 87. வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை பதவுரை: வெள்ளைக்கு - களங்கமில்லாத பரிசுத்த குணமுடையவனிடத்து, கள்ளம் - வஞ்சனை பொருந்திய, சிந்தை - நினைப்பானது, இல்லை - இல்லை. பொழிப்புரை: களங்கமற்ற மனமுடையவனிடத்தில் வஞ்சக நினைப்பில்லை. 88. வேந்தன் சீறி னாந்துணை யில்லை பதவுரை: வேந்தன் - அரசனானவன், சீறின் - (ஒருவனைக்) கோபித்தால், ஆம் -(அப்போது அவனுக்கு) ஆகின்ற, துணை - உதவி, இல்லை - இல்லையாம். பொழிப்புரை: அரசன் ஒருவனைக் கோபித்தால் அவனுக்கு வேறு உதவியில்லை. 89. வையந் தோறுந் தெய்வந் தொழு பதவுரை: வையம் தோறும் - பூமியிலுள்ள தலந்தோறும் (போய்), தெய்வம் - கடவுளை, தொழு- வணங்கு. பொழிப்புரை: பூமியிலுள்ள தெய்வத் தலந்தோறுஞ் சென்று கடவுளை வணங்கு. 90. ஒத்த விடத்து நித்திரை கொள் பதவுரை: ஒத்தவிடத்து - (மேடுபள்ளம் இல்லாமற்) சமமான இடத்திலே, நித்திரை கொள் - நித்திரை பண்ணு. பொழிப்புரை: சமமான இடத்திலே படுத்து நித்திரைசெய். 91. ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் பதவுரை: ஓதாதார்க்கு - படியாதவர்க்கு, உணர்வொடும் - அறிவுடனே, ஒழுக்கம் - நல்ல நடையும், இல்லை - (உண்டாதல்) இல்லை. பொழிப்புரை: நல்ல நூல்களைப் பயிலாதவர்க்கு அறிவும் நன்னடையும் இல்லை. கொன்றைவேந்தன் மூலமும் உரையும் முற்றிற்று.  நல்வழி - ஒளவையார் முகவுரை நல்வழி என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களில் ஒன்று. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக் கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப்பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர் களிலும் பெண்டிர்களிலும், கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஒளவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களேயாகும். தமிழ் நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையவ ரெவரும் ஒளவையாரின் நீதி நூல்களில் ஒன்றையாவது படித்தே யிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும், கருத்துக்களும் இந்நீதி நூல்களில் தெளிவுற அமைந்து விளங்கு கின்றன. நல்வழியிலுள்ள செய்யுட்கள் பல மெய்ந்நூற்களின் முடிந்த கருத்துக்களை விளம்புவதாகும். இந் நூலின்கண் திருவைந்தெழுத்தும், திருநீறும் சிறப்பாக எடுத்தோதப்படுவதும், இறுதிச் செய்யுளில் திருக்குறள், திருநான் மறை முடிவு, தேவாரம் முதலிய சைவத்திருமுறைகள் என்னும் இவை யெல்லாம் ஒத்த கருத்துடையன எனக் கூறப்படுவதும் பிறவும் ஆக்கியோரின் சமயத்தையும், உண்மை நூலுணர்வையும் புலப்படுத்துவதாகும். மூவர் தமிழை எடுத்தோதியதிலிருந்து இந்நூல் தோன்றிய காலம் 9 - ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகு மென்பதும் விளக்கமாம். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். நல்வழி மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா. பதவுரை: கோலம் செய் - அழகினைச் செய்கின்ற, துங்கம் - உயர்வாகிய, கரிமுகத்து - யானை முகத்தையுடைய, தூமணியே - பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக் கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும் - ஆவின் பாலும் தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும் ஆகிய, இவை நாலும் கலந்து - இந்நான்கையும் கலந்து, நான் உனக்குத் தருவேன் - அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்; சங்கத் தமிழ் மூன்றும் - சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா - தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக. இதன் கருத்து : விநாயகக் கடவுளே! தேவரீர் அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப் புலமையும் தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல், இசை, நாடகம் என்னும் பிரிவினையுடைய தமிழ். தமிழ் முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப் பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர் பெறுவதாயிற்று. நன்மையே செய்க 1. புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந் தீதொழிய நன்மை செயல். பதவுரை: புண்ணியம் ஆம் - அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது அழிவினைச் செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே பிறந்த மனிதர் களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் - ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது புண்ணியமே செய்க. புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால் துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க எ-ம். ஆக்கும் போக்கும் என்பன ஆம் போம் என நின்றன. (1) ஈயாமையின் இழிவு 2. சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. பதவுரை: சாற்றுங்கால் - சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின்) நீதி வழுவாநெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று, முறையின் - முறையோடு, இட்டார் - (வறியர் முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர் - உயர்வாகிய சாதியார்; இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் - இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி - உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம். கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர் இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை எ-ம். (2) ஈதலின் சிறப்பு 3. இடும்பைக்கு இடும்பை இயலுடம்பி தன்றே இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக உண்டாயி னுண்டாகும் ஊழிற் பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும் வீடு. பதவுரை: இயல் உடம்பு இது - பொருந்திய இவ்வுடம் பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு, இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும் பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய் என்று இராது - நிலையுடையதென்று கருதியிராமல் கடுக - விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள், உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின், பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும், விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் - விரும்புகின்ற, வீடு - முத்தியானது, ஊழின் - முறையாலே, உண்டாகும்- உங்கட்குக் கிடைக்கும். அறஞ் செய்தவர்க்கு முறையாலே வீடுபேறுண்டாகும், எ-ம். நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய் எனப்பட்டது. உடம்பிற்கு மெய் என்று பெயர் வந்தது எதிர் மறை யிலக்கணை. பயன் கருதாது செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும் என்க. (3) காலம் நோக்கிச் செய்க 4. எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது புண்ணியம் வந்தெய்து போதல்லாற் - கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ லொக்குமே ஆங்கால மாகு மவர்க்கு. பதவுரை: யார்க்கும் - எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் - (முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழு தல்லாமல், ஒரு கருமம் - ஒரு காரியத்தை, எண்ணி - ஆலோசித்து, செய்யொண்ணாது - செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது) கண் இல்லான் - குருடன், மாங்காய் விழ- மாங்காயை விழுவித்தற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் -புண்ணியம் வந்து கூடும் பொழுது, அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில் முடியும். புண்ணியமில்லாதவன் செய்யத் தொடங்கிய காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன் எ - ம். மாத்திரை - அளவு. குருடன் மாங்காயும் பெறாது கோலும் இழப்பன் என்க. (4) கவலையுறுதல் கூடாது 5. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமினென்றாற் போகா - இருந்தேங்கி நெஞ்சுசம்புண் ணாக நெடுந்தூரந் தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில். பதவுரை: வாராத - (ஊழால்) வரக் கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும், வாரா - வாராவாம்; பொருந்துவன - (ஊழால்) வரக்கூடியவை, போமின் என்றால் போயிடுங்கள் என வெறுப்பினும், போகா - போகாவாம்; இருந்து ஏங்கி - (இவ்வுண்மை யறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக - மனம் புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம் நெடுந்தூரம் சிந்தித்து, துஞ்சுவதே - மாண்டு போவதே, மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது. இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள் தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும் கவலையுறுதல் தக்கதன்று எ-ம். (5) பேராசை கூடாது 6. உள்ள தொழிய ஒருவர்க் கொருவர்சுகங் கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி னாலென் உடலோடு வாழும் உயிர்க்கு. பதவுரை: ஒருவர்க்கு - ஒருவருக்கு, உள்ளது ஒழிய - (ஊழினால்) உள்ள அளவல்லாமல், ஒருவர் சுகம் - மற்றொருவருடைய சுகங் களை, கொள்ள- அநுபவிக்க விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்; (ஆதலால்) குவலயத்தில் - பூமியில், உடலோடு வாழும் உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, வெள்ளக் கடல் ஓடி - வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள்தேடி), மீண்டு கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும், என் - அதனால் பயன் என்னை? கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும் ஊழினள வன்றி அநுபவித்தல் கூடாது எ-ம். (6) ஞானிகள் பற்றற்றிருப்பர் 7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை - நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற் பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு. பதவுரை: எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து, இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு - பொல்லாத புழுக்களுக்கும், மலி நோய் - நிறைந்த பிணிகளுக்கும், புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது; நல்லார் - நல்லறிவுடையோர், அறிந் திருப்பார்-(இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; ஆதலினால் - ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல, பிறிந்து இருப்பார்- (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்; பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேச மாட்டார்கள். ஆம்: அசை. உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப் பார்கள் எ-ம். (7) மரியாதையே தேடத்தக்கது 8. ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ் கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம் மரியாதை காணு மகிதலத்தீர் கேண்மின் தரியாது காணுந் தனம். பதவுரை: மகிதலத்தீர் - பூமியிலுள்ள மனிதர்களே, கேண்மின்-கேளுங்கள்; ஈட்டும் பொருள்- தேடுதற்குரிய பொருள்களானவை, முயற்சி எண் இறந்த ஆயினும் - முயற்சிகள் அளவில்லாதன வாயினும், ஊழ் கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - ஊழ்கூட்டு மளவினல்லாமல் சேராவாம்; தனம் தரியாது - ஊழினாலே சேரினும்)அப்பொருள் நிலைபெறாது; தேட்டம் மரியாதை - (ஆதலினால் நீங்கள்) தேடத்தகுவது மரியாதையே யாம். ஆம்; ஆசை. காணுமிரண்டும் முன்னிலை யசை. பொருள் ஊழினளவன்றி வாராமையானும், வந்த பொருளும் நிலைபெறாமையாலும், நிலை பெறுவதாகிய நல்லொழுக்கத்தையே தேடல் வேண்டும் எ-ம். (8) குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார் 9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் - ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லையென மாட்டார் இசைந்து. பதவுரை: ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், அடி சுடும் அந்நாளும்- (மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால், உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; (அது போல)நல்ல குடிப்பிறந்தார் - நற்குடியிற் பிறந்தவர், நல்கூர்ந்தார் ஆனாலும் - வறுமையுடையவரானாலும், ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, இசைந்து - மனமிசைந்து, இல்லையென மாட்டார் - இல்லையென்று சொல்ல மாட்டார் (இயன்றது கொடுப்பர்). உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் எ-ம். (9) இட்டு உண்டு இரும் 10. ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும் எமக்கென்னென் றிட்டுண் டிரும். பதவுரை: மா நிலத்தீர் - பெரிய பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் - வருடா வருடந் தோறும் அழுது புரண்டாலும், மாண்டார் வருவரோ - இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்); வேண்டா - (ஆதலினால்) அழ வேண்டுவதில்லை; நமக்கு அதுவழியே - நமக்கும் அம்மரணமே வழியாகும்; நாம் போம் அளவும் - நாம் இறந்துபோ மளவும் எமக்கு என் என்று - எமக்கு யாது சம்பந்தமென்று, இட்டு உண்டு இரும் - பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள். இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும் பயனில்லாமையால் கவலையற்று அறஞ்செய்து வாழ்க எ-ம். (10) பசி கொடியது 11. ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. பதவுரை: இடும்பைகூர் என் வயிறே - துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - (கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்த போது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய். ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) உன்னோடு கூடி வாழ்தல் எனக்கு அருமையாக இருக்கின்றது. வயிற்றுக்கு உணவளிப்பதினும் வருத்தமான செயல் பிறிதில்லை எ-ம். (11) உழவின் உயர்வு 12. ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம் உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு. பதவுரை: ஆற்றங்கரையின் மரமும் - ஆற்றின் கரையிலுள்ள மரமும், அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும் - அரசன் அறியப் பெருமையாக வாழ்கின்ற வாழ்க்கையும், விழும் அன்றே - அழிந்து விடும் அல்லவா; (ஆதலினால்) உழுது உண்டு வாழ்வு ஏற்றம் - உழுது பயிர்செய்து உண்டு வாழ்வதே உயர்வாகும்; அதற்கு ஒப்பு இல்லை - அதற்கு நிகரான வாழ்க்கை வேறில்லை; வேறு ஓர் பணிக்கு - வேறு வகையான தொழில் வாழ்க்கைக்கெல்லாம், பழுது உண்டு - தவறு உண்டு. அம்: சாரியை. கண்டீர்: முன்னிலை அசை. உழுது பயிர்செய்து வாழும் வாழ்க்கையே சுதந்திர முடையதும், குற்றமற்றதும், அழிவில்லாததும் ஆகிய வாழ்க்கையாகும் எ-ம். (12) விலக்க இயலாதன 13. ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பவர் - ஓவாமல் ஐயம் புகுவாரை யாரே விலக்குவார் மெய்யம் புவியதன் மேல். பதவுரை: அம் புவியதன்மேல் - அழகிய பூமியின்மேலே, மெய்- உண்மையாக, ஆவாரை அழிப்பார் யார் - வாழ்வதற்கு உரியாரை அழிக்கவல்லார் யாவர்? அது அன்றி - அது வல்லாமல், சாவாரைத் தவிர்ப்பவர் யார் - இறத்தற்கு உரியவரை இறவாமல் நிறுத்த வல்லார் யாவர்? ஓவாமல் - ஒழியாமல், ஐயம் புகுவாரை - பிச்சைக்குச் செல்வோரை, விலக்குவார் யார் - தடுக்க வல்லவர் யாவர்? ஏ மூன்றும் அசை. ஊழினால் அடைதற்பாலனவாகிய ஆக்கக் கேடுகளைத் தவிர்க்க வல்லவர் ஒருவரும் இல்லை எ-ம். (13) மானமே உயிரினும் சிறந்தது 14. பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால் இச்சைபல சொல்லி இடித்துண்கை - சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது உயிர்விடுகை சால உறும். பதவுரை: பேசுங்கால் - சொல்லுமிடத்து, பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை - பிச்சை எடுத்து உண்டலினும் (இழிவிற்) பெரிய குடிவாழ்க்கை யாவது, பல இச்சை சொல்லி இடித்து உண்கை - பலவாகிய இச்சைகளைப்பேசி (ஒருவரை) நெருங்கி வாங்கி உண்ணுதலாம்; சிச்சீ - சீ சீ (இது என்ன செய்கை), வயிறு வளர்க்கைக்கு - இப்படி வயிறு வளர்ப்பதைப் பார்க்கிலும், மானம் அழியாது - மானங் கெடாமல், உயிர் விடுகை - உயிரை விடுதல், சால உறும் - மிகவும் பொருந்தும். பிறரிடத்திலே இச்சை பேசி வாங்கி உண்டு மானம் இழந்து உயிர் வாழ்தலினும் உயிரை விட்டு, மானத்தை நிறுத்துதல் உயர்வுடைத்து எ-ம். (14) திருவைந்தெழுத்தின் சிறப்பு 15. சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும். பதவுரை: சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு - சிவாயநம வென்று தியானித்துக் கொண்டிருப்பவருக்கு, ஒரு நாளும் அபாயம் இல்லை - ஒருபொழுதும் துன்பம் உண்டாகாது; இதுவே - இஃதொன்றுமே, உபாயம் - (விதியை வெல்லுதற் கேற்ற)உபாயமும், மதி - இது வல்லாத எல்லா அறிவுகளும், விதியே ஆய்விடும் - விதியின்படியே ஆகிவிடும். சிவபெருமானுக்குரிய திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்து கொண்டிருப்போர்க்கு விதியால் வரும் துன்பமில்லை; ஏனையர்க்கு உண்டு எ-ம். (15) வியத்தகு விழுப்பொருள் 16. தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால் கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. பதவுரை: தண்ணீர் நில நலத்தால் - தண்ணீ ரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும், கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றல் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் -வியக்கத்தக்க மேன்மையுடையனவாகும், என்று அறி - என்று நீ அறிவாயாக. நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும் எ - ம். (16) தீவினையே வறுமைக்கு வித்து 17. செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் - வையத்து அறும்பாவம் என்னவறிந்து அன்றிடார்க் கின்று வெறும்பானை பொங்குமோ மேல். பதவுரை: வையத்துப் பாவம் அறும் என்ன அறிந்து- பூமியிலே (அறஞ்செய்தலினாலே) பாவம் நீங்கும் என்று உணர்ந்து, அன்று இடார்க்கு - அக்காலத்திலே ஈயாதவருக்கு, செய் தீவினை இருக்க - செய்த அப்பாவம் (வறுமைக்கு வித்தாய்) இருக்க, இன்று தெய்வத்தை நொந்தக்கால் - இப்பொழுது கடவுளை வெறுத்தால், இரு நிதியம் எய்த வருமோ - பெரிய திரவியம் பொருந்த வருமோ? (வராது.) வெறும் பானைமேல் பொங்குமோ - வெறும் பானை (அடுப்பிலே வைத்து எரித்தால்)மேலே பொங்குமோ; (பொங்காது.) வறியவர் அவ்வறுமைக்கு வித்தாகிய தீவினையைச் செய்த தம்மை நோவாது, தெய்வத்தை நோதலிற் பயன் இல்லை எ -ம். (17) இடிப்பார்க்கு ஈவர் 18. பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில் உற்றார் உகந்தார் எனவேண்டார் - மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர் இடாரே சரணங் கொடுத்தாலுந் தாம். பதவுரை: பேர் உலகில் - பெரிய நிலவுலகத்திலே, பெற்றார் - (எம்மைப்) பெற்றவர், பிறந்தார் - (எமக்குப்) பிறந்தவர், பெரு நாட்டார் - (எம்முடைய) பெரிய தேசத்தார், உற்றார் - (எம்முடைய) சுற்றத்தார், உகந்தார் - (எம்மை) நேசித்தவர், என வேண்டார் - என்று விரும்பாதவராகிய உலோபிகள், மற்றோர் - பிறர், இரணம் கொடுத்தால் - தம்முடம்பிலே புண்செய்தால், இடுவர் - (அவருக்கு எல்லாம்) கொடுப்பர்; சரணம் கொடுத்தாலும் இடார் - (முன் சொல்லப்பட்டவர்) அடைக்கலம் புகுந்தா ராயினும் அவருக்கு ஒன்றுங் கொடார். ஏ -தாம் இரண்டும் அசை. உலோபிகள் தம்மைத் துன்புறுத்தும் கொடியவர்களுக்கன்றி நலம் புரியும் தாய் தந்தையார் முதலாயி னோருக்குக் கொடார் எ-ம். (18) பேரின்பம் நாடாப் பேதைமை 19. சேவித்துஞ் சென்றிரந்துந் தெண்ணீர்க் கடல்கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் - போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். பதவுரை: வயிற்றின் கொடுமையால் - வயிற்றினுடைய (பசிக்) கொடுமையினாலே, சேவித்தும் - (பிறரைச்) சேவித்தும், சென்று இரந்தும் - (பலரிடத்தே) போய் யாசித்தும், தெள்நீர்க் கடல் கடந்தும் - தெளிவாகிய நீரையுடைய கடலைக் கடந்து வேறு நாடு சென்றும், பாவித்தும் - (ஒருவரைப் பெரியவராகப்) பாவித்தும், பார் ஆண்டும் - பூமியை ஆண்டும், பாட்டு இசைத்தும் - (செல்வரைப் புகழ்ந்து) பாட்டுப் பாடியும், நாம் - நாம், உடம்பை - இந்த உடம்பினை, நாழி அரிசிக்கே - நாழி யரிசிக்காகவே, பாழின் - வீணிலே, போவிப்பம் - செலுத்துகின்றோம். வீட்டு நெறியிற் செல்லும் பொருட்டு அரிதாகக் கிடைத்த மனிதவுடம்பினை உணவு தேடுவதிலேயே கழிப்பது அறியாமை யாகும் எ-ம். (19) பரத்தையரால் செல்வம் பாழாம் 20. அம்மி துணையாக ஆறிழிந்த ஆறொக்குங் கொம்மை முலைபகர்வார்க் கொண்டாட்டம் - இம்மை மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும். பதவுரை: கொம்மை முலை - திரட்சி பொருந்திய தனங்களை, பகர்வார்க் கொண்டாட்டம் - விற்கின்ற பரத்தையரை (இன்பங் காரணமாக) கொண்டாடுதல், அம்மி துணையாக - அம்மிக் கல்லே துணையாக, ஆறு இழிந்தவாறு ஒக்கும் - ஆற்று வெள்ளத்தில் இறங்கிய தன்மையைப் போலும்; (அன்றியும்) மாநிதியம் போக்கி- (அது) பெரிய செல்வத்தை அழித்து, வெறுமைக்கு வித்து ஆய்விடும் - வறுமைக்குக் காரணமாகிவிடும்; (ஆதலால்) இம்மை மறுமைக்கு நன்று அன்று - அஃது இப்பிறப்பிற்கும் வருபிறப் பிற்கும் நல்லதாகாது. விலைமகளிரைச் சேர்பவன் தான் கருதிய இன்பத்தை யடையாமல், வறுமையையும், பழி பாவங்களையும் அடைந்து இம்மை மறுமைகளில் துன்புறுவன் எ-ம். (20) வஞ்சனையில்லார்க்கு வாய்க்கும் நலன் 21. நீரு நிழலு நிலம்பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றுந் தருஞ்சிவந்த தாமரையாள் தான். பதவுரை: சிவந்த தாமரையாள் - செந்தாமரை மலரில் இருக்கின்ற திருமகள், வஞ்சம் இல்லார்க்கு - வஞ்சனை இல்லாதவருக்கு, நீரும் - நீர்வளத்தையும், நிழலும் - நிழல் வளத்தையும், நிலம்பொதியும் நெற்கட்டும் - நிலத்திலே நிறையும் நெற்போரையும், பேரும் - பேரையும், புகழும் - கீர்த்தியையும், பெரு வாழ்வும் - பெரிய வாழ்வையும், ஊரும் - கிராமத்தையும், வரும் திருவும் - வளர்கின்ற செல்வத்தையும், வாழ்நாளும் - நிறைந்த ஆயுளையும், என்றும் தரும் - எந்நாளும் கொடுத்தருளுவள். வஞ்சனை யில்லாதவருக்கு இலக்குமியினது திருவருளினாலே எல்லா நலமும் உண்டாகும் எ-ம். (21) பாவிகளின் பணம் 22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம். பதவுரை: பணத்தைப் பாடுபட்டுத்தேடி - பணத்தினை வருந்தி யுழைத்துச் சேர்த்து, புதைத்து வைத்து - (உண்ணாமலும் அறஞ் செய்யாமலும்) பூமியிலே புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே - நன்மை யெல்லாவற்றையும் இழந்த மனிதர்களே, கேளுங்கள் - (நான் கூறுவதைக்) கேட்பீர்களாக; கூடுவிட்டு - உடம்பினை விட்டு, ஆவி போயின பின்பு - உயிர் நீங்கிய பின்பு, பாவிகாள் - பாவிகளே, அந்தப் பணம் - அந்தப் பணத்தை, இங்கு ஆர் அனுபவிப்பார் - இவ்விடத்து யாவர் அநுபவிப்பார்? தான், ஏ இரண்டும் அசை. அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்பதைப் பார்க்கிலும் அறியாமையில்லை எ-ம். (22) வழக்கோரஞ் சொன்னவர் மனை பாழ் 23. வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே - மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை. பதவுரை: மன்று ஓரஞ் சொன்னார் மனை - தருமசபையிலே ஓரஞ் சொன்னவருடைய வீட்டிலே, வேதாளம் சேரும் - பேய்கள் (வந்து) சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் - வெள்ளெருக்கு (முளைத்து) மலரும்; பாதாளமூலி படரும் - பாதாளமூலி யென்னும் கொடி படரும்; மூதேவி சென்று இருந்து வாழ்வள்- மூதேவியானவள் போய் நிலைபெற்று வாழ்வாள்; சேடன் குடி புகும் - பாம்புகள் குடியிருக்கும். ஏ ஐந்தும் அசை. நீதிமன்றத்திலே வழக்கோரஞ் சொன்னவர் குடும்பத்தோடு அழிவதுமன்றி, அவர் குடியிருந்த வீடும் பாழாம் எ-ம். (23) ஓரம் - நடுவுநிலை யின்மை. வாழ்க்கை மாண்பு ஐந்து 24. நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ் ஆறில்லா ஊருக் கழகுபாழ் - மாறில் உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே மடக்கொடி யில்லா மனை. பதவுரை: நீறு இல்லா நெற்றி பாழ் - விபூதியில்லாத நெற்றி பாழாகும்; நெய் இல்லா உண்டி பாழ் - நெய்யில்லாத உணவு பாழாகும்; ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ் - நதி யில்லாத ஊருக்கு அழகு பாழாகும், மாறு இல் உடன்பிறப்பு இல்லா உடம்பு பாழ் - மாறுபடாத சகோதரர் இல்லாத உடம்பு பாழாகும்; மடக்கொடி இல்லா மனை பாழே - (இல்லறத்திற்குத் தக்க) மனைவியில்லாத வீடு பாழேயாகும். திருநீற்றினாலே நெற்றியும், நெய்யினாலே உணவும், நதியினாலே ஊரும், துணைவராலே உடம்பும், மனைவியினாலே வீடும் சிறப்படையும் எ-ம். (24) வரவறிந்து செலவிட வேண்டும் 25. ஆன முதலில் அதிகஞ் செலவானான் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு. பதவுரை: ஆன முதலில் செலவு அதிகம் ஆனால் - தனக்குக் கிடைத்த முதற்பொருளுக்குச் செலவு மிகுதி செய்யலானவன், மானம் அழிந்து - பெருமை கெட்டு, மதி கெட்டு - அறிவு இழந்து, போனதிசை எல்லார்க்கும் கள்ளன் ஆய் - தான் ஓடிப்போன திசையினும் எல்லார்க்கும் திருடனாகி, ஏழ் பிறப்பும் தீயன் ஆய் - எழுவகைப் பிறப்புக்களினும் பாவம் உடையவனாகி, நல்லார்க்கும் பொல்லன் ஆம் - (தன்னிடத்து அன்புவைத்த) நன்மக்களுக்கும் பொல்லாதவ னாவான்; நாடு - (இதனை) ஆராய்ந்து அறிவாயாக. வரவுக்கு மிகுதியாகச் செலவு செய்பவன் பழிபாவங்களை அடைவான். ஆதலின், வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எ-ம். (25) பசி வந்திடப் பத்தும் பறக்கும் 26. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந் திடப்பறந்து போம். பதவுரை: பசி வந்திட - பசிநோய் வந்தால், மானம் - மானமும், குலம் - குடிப்பிறப்பும், கல்வி - கல்வியும், வண்மை - ஈகையும், அறிவுடைமை - அறிவுடைமையும், தானம் - தானமும், தவம் - தவமும், உயர்ச்சி - உயர்வும், தாளாண்மை - தொழின் முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் - தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லையுடைய மங்கையர்மேல் ஆசை வைத்தலும் ஆகிய, பத்தும் பறந்துபோம் - இப் பத்தும் விட்டோடிப்போம். மான முதலிய எல்லா நலங்களையும் கெடுத்தலினாலே பசி நோயினுங் கொடியது பிறிதில்லை, எ ம். தானம் தக்கார்க்கு நீருடன் அளிப்பது; பதவியும் ஆம். (26) எல்லாம் இறை செயல் 27. ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும் அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல். பதவுரை: ஒன்றை நினைக்கின் - ஒரு பொருளைப் பெற நினைத்தால், அது ஒழிந்திட்டு ஒன்றாகும் - அப்பொருள் கிடையாமல் வேறொரு பொருள் கிடைத்தாலும் கிடைக்கும்; அன்றி அதுவரினும் வந்து எய்தும் - அப்படி யல்லாமல் அப்பொருளே வந்து கிடைத் தாலும் கிடைக்கும்; ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் - (இன்னும்) ஒரு பொருளை நினையாதிருக்க முன்னே அது தானே வந்து நின்றாலும் நிற்கும்; எனை ஆளும் ஈசன் செயல் - (இவைகளெல்லாம்) என்னை ஆண்டருளும் கடவுளுடைய செய்கை களாகும். இருவினைகளுக்கீடாக இன்ப துன்பங்களை ஊட்டும் கடவுளுடைய கருத்தின்படியே யன்றி, உயிர்களுடைய கருத்தின்படி ஒன்றும் நடவாது எ-ம். (27) மனவமைதி வேண்டும் 28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம் எண்பது கோடிநினைந்து எண்ணுவன - கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையுஞ் சஞ்சலமே தான். பதவுரை: உண்பது நாழி - உண்பது ஒரு நாழியரிசி யன்னமே யாகும்; உடுப்பது நான்கு முழம்- உடுப்பது நான்கு முழ உடையே யாகும்; (இப்படியாகவும்) நினைந்து எண்ணுவன எண்பது கோடி- நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன; (ஆதலினால்) கண் புதைந்த - அகக்கண் குருடாயிருக்கிற, மாந்தர் குடி வாழ்க்கை - மக்களின் குடிவாழ்க்கையானது, மண்ணின் கலம்போல - மட்கலம்போல, சாம் துணையும் - இறக்குமளவும், சஞ்சலமே - (அவர்க்குத்) துன்பமாகவே இருக்கிறது. உள்ளதே போதும் என மனம் அமைந்திராதவர்கள் இறக்கும் வரையில் சஞ்சலமே அடைவார்கள். எ-ம். (28) கொடையாளருக்கு எல்லாரும் உறவினர் 29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம் கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத் தவர். பதவுரை: மரம் பழுத்தால் - மரம் பழுத்திருந்தால், வா என்று வௌவாலைக் கூவி இரந்து அழைப்பார் - (இப்பழத்தைத் தின்னு தற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர், அங்கு யாவரும் இல்லை -அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை; கன்று ஆ அமுதம் சுரந்து தரல்போல் - கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல்போல, கரவாது அளிப்பரேல் - ஒளிக்காமற் கொடுப்பாராயின், உலகத்தவர் உற்றார்- உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார். கொடையாளர்க்கு எல்லாரும் தாமே உறவினராவார். எ-ம். (29) விதியின் தன்மை 30. தாந்தாமுன் செய்தவினை தாமே யநுபவிப்பார் பூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே ஒறுத்தாரை யென்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமோ விதி. பதவுரை: வேந்தே - அரசனே, தாம் தாம் முன் செய்த வினை - தாம் தாம் முற்பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளை, பூந்தாமரையோன் பொறி வழியே - தாமரை மலரில் இருக்கின்ற பிரமன் விதித்தபடியே, தாமே அநுபவிப்பார் - தாமே அநுபவிப்பார்கள்; ஒறுத்தாரை என் செயலாம் - (தீவினையினாலே தூண்டப்பட்டுத்)தீங்கு செய்தவரை நாம் யாது செய்யலாம்; ஊர் எல்லாருந் திரண்டு வெறுத்தாலும் விதி போமோ - ஊரிலுள்ளார் எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் விதி போகுமா (போகாது). தமக்கு ஒருவன் துன்பஞ் செய்யின், அது தாம் முன் செய்த தீவினைக்கீடாகக் கடவுளாலே தமக்குக் கிடைத்ததென்று அமைவதே அறிவு எ-ம். (30) நல்லன நான்கு 31. இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும் ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று - வழுக்குடைய வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத் தாரத்தின் நன்று தனி. பதவுரை: இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று - இலக்கண வழுக்களையுடைய செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது, உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று - உயர் குலத்தினும் (அஃதில்லாத) மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது; வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று - தவறுதலையுடைய வீரத்தினும் தீராப்பிணி நல்லது; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று - பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது. இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவி யோடு கூடிய இல்வாழ்க்கையும், தீரா வசையை விளைவிக்கும் எ-ம். இசை - உலக வழக்காகிய சொற்றொடர். (31) செல்வநிலையாமையறிந்து உதவுக 32. ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் - சோறிடுந் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து. பதவுரை: மா நிலத்தீர் - பெரிய பூமியிலுள்ளவர்களே, ஆறு இடும் மேடும் மடுவும் போல் - ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப் படும் மேடும் பள்ளமும் போல, செல்வம் ஏறிடும் மாறிடும் - செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும்; (ஆதலினால்) சோறு இடும் - (இரப்பவருக்கு உண்ண) அன்னத்தை இடுங்கள்; தண்ணீரும் வாரும் - (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வாருங்கள்; தருமமே சார்பு ஆக - (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக, உள்நீர்மை உயர்ந்து வீறும் - உள்ளத்திலே தூயதன்மை ஓங்கி விளங்கும். ஆம்: அசை. நிலையில்லாத செல்வம் உள்ளபொழுதே இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளித்தால் மனம் தூய்மையுற்று விளங்கும் எ-ம். (32) வன்சொல்லும் இன்சொல்லும் 33. வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில் பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும். பதவுரை: வேழத்தில்பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது - (வலிய) யானையின் மேலே பட்டுருவும் அம்பானது (மெல்லிய) பஞ்சின்மேலே பாயாது; நெடு இருப்புப்பாறைக்கு நெக்கு விடாப் பாறை - நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் - பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம்; (அவ்வாறே) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் - வன்சொற்கள் இன்சொற்களை வெல்ல மாட்டா வாகும்; (இன் சொற்களே வெல்லும்) வன்சொல் தோற்கும்; இன்சொல் வெல்லும் எ-ம் (33) பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை 34. கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின் எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேண்டாள் செல்லாது அவன்வாயிற் சொல். பதவுரை: கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் - (ஒருவன்) படியாதவனே யாயினும் (அவன்) கையிலே பொருள் மாத்திரம் இருந்தால், எல்லோரும் சென்று எதிர்கொள்வர்- (அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர்; இல்லானை இல்லாளும் வேண்டாள்- (படித்தவனே யாயினும் பொருளே) இல்லாதவனை (அவன்) மனைவியும் விரும்பாள்; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் - (அவனைப்) பெற்று வளர்த்த அன்னையும் விரும்பாள்; அவன் வாயில் சொல் செல்லாது - அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன்படாது. அங்கு, மற்று: அசை. கல்லாதவனே யாயினும் பொருளுடையவனை எல்லாரும் மதிப்பர்; கற்றவனே யாயினும் பொரு ளில்லாதவனை ஒருவரும் மதியார் எ-ம். (34) உரைப்பினும் பேதை உணரான் 35. பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும் ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே - தூவா விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு உரைத்தாலுந் தோன்றா துணர்வு. பதவுரை: பூவாதே காய்க்கும் மரமும் உள - பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு; (அதுபோல) மக்களுளும் ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் - மனிதர்களுள்ளும் ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு; தூவா விரைத் தாலும் நன்று ஆகா வித்து என - தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது - மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்து ) உண்டாகாது. குறிப்பறிந்து செய்வாரே அறிவுடையோர்; அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர் எ-ம். (35) பிறர்மனை விரும்பாமை 36. நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில் கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடீ போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல் மாதர்மேல் வைப்பார் மனம். பதவுரை: ஒள் தொடீ - ஒள்ளிய வளையலை அணிந்தவளே, நண்டு சிப்பி வேய் கதலி - நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும்; நாசம் உறும் காலத்தில் - தாம் அழிவை அடையுங் காலத்திலே; கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் - (முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க்குலையும் ஆகிய) கருக்களை ஈனுந்தன்மைபோல, (மனிதர்கள்) போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம் - ஞானமும் செல்வமும் வித்தையும் அழிய வருங்காலத்தில், அயல் மாதர்மேல் மனம் வைப்பார்- பிற மகளிர் மேல் மனம் வைப்பார்கள். ஒருவன் மனைவியையன்றிப் பிற மகளிரை இச்சிக்கின், அஃது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றுங் கெடுதற்கு அறிகுறியாகும் எ-ம். (36) வீடடைவார்க்கு விதியில்லை 37. வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம் அனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக் கண்ணுறுவது அல்லால் கவலைபடேல் நெஞ்சேமெய் விண்ணுறுவார்க் கில்லை விதி. பதவுரை: வினைப்பயனை வெல்வதற்கு - இருவினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்), வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை - வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன் கண்ணும் இல்லை, (எனினும்) நெஞ்சே - மனமே, கவலைபடேல் கவலையுறாதே, மெய் விண் உறுவார்க்கு - மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு, நினைப்பது எனக் கண் உறுவது அல்லால் - (அவர்) நினைப்பதுபோலத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை - ஊழ் இல்லையாம். முத்தி நெறியாகிய தியான சமாதிகளினாலன்றி நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க வொண்ணாது எ-ம். விண் - பரவெளியும் ஆம்; இப்பாட்டிற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவாரும் உளர். (37) இறைவனுடன் இரண்டற்று நில் 38. நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும் அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே - நின்றநிலை தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள். பதவுரை: நன்று என்றும் - (இது) நல்லது என்றும், தீது என்றும் - (இது) தீயது என்றும், நான் என்றும் - (இது செய்தவன்) நான் என்றும், தான் என்றும் - (இது செய்தவன்) அவன் என்றும், அன்று என்றும் - (இது) அன்று என்றும், ஆம் என்றும் - (இது) ஆகும் என்றும், ஆகாதே நின்ற நிலை - பேதஞ் செய்யாமல் (இரண்டறக் கலந்து)நின்ற நிலையே, தான் அது ஆம் தத்துவம் ஆம் - ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும்; தேடும் பொருள் - தன்னின் வேறாக மெய்ப்பொரு ளாகிய கடவுளைத் தேடுவது, சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா - சம்பை அறுத்தவர் (அதனைக் கட்டுதற்கு அதுவே அமையுமென்று அறியாமல்) கயிறு தேடிப் போனது போலும். உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலை எ-ம். சம்பு - ஓர் வகைப் புல். (38) முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி 39. முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத் தப்பாமல் தன்னுள் பெறானாயின் - செப்புங் கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள் முலையளவே ஆகுமாம் மூப்பு. பதவுரை: முப்பது ஆம் ஆண்டு அளவில் - முப்பது வயதினளவிலே, மூன்று அற்று - முக்குற்றமும் ஒழியப்பெற்று, ஒரு பொருளை - கேவலப்பொருளாகிய கடவுளை, தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் - (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே (அனுபவ உணர்வால்) அடையானாயின், காரிகையார் தங்கள் மூப்பு முலை அளவே ஆகுமாம் - அழகிய மாதர்கள் முதுமையில் (பதியுடன் கூடி இன்பம் நுகர்தலின்றி) முலையினை யுடையராதல் மாத்திரமே போல, செப்பும் கலை அளவே ஆகும் - (அவன் முதுமையில் பதியுடன் கூடி இன்பம் நுகரப் பெறாமல்) கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன். மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று மெய்ப் பொருளை யடைந்தின்புற முயலல் வேண்டும் எ-ம். முக்குற்றம் காம வெகுளி மயக்கங்கள். ஆணவம் கன்மம் மாயை ஆகிய பாசம் மூன்றும் என்னலும் ஆம். இப்பாட்டிற்கு யாம் கூறி பொருளே பொருத்த முடைத்தாதலை ஓர்ந்துணர்க. (39) ஒத்த கருத்தமை ஒண்தமிழ் நூல்கள் 40. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். பதவுரை: தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திருநான்மறை முடிவும் - சிறப்புப் பொருந்திய நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும் (திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக. திருக்குறள் முதலிய இவையெல்லாம் பொருண் முடிவு வேறுபடாத மெய்ந்நூல்கள் எ-ம். 'முனிமொழியும்' என்பதற்கு 'வியாச முனிவருடைய வேதாந்த சூத்திரம்' என்றும் பொருள் கூறுவர். (40) நல்வழி மூலமும் உரையும் முற்றிற்று.  பாட்டு முதற்குறிப்பு பக்கம் பக்கம் அம்மி 64 ஆண்டாண்டு 60 ஆவாரை 61 ஆறிடும் 69 ஆற்றங் 60 ஆற்றுப் 59 ஆனமுத 66 இடும்பை 56 இழுக்குடை 69 ஈட்டும் 59 உண்பது 68 உள்ள 58 எண்ணி 57 எல்லாப் 58 ஒருநாள் 60 ஒன்றை 67 கல்லானே 70 சாதி 56 சிவாய 62 செய்தீ 63 சேவித்துஞ் 63 தண்ணீர் 62 தாந்தாமுன் 68 தேவர் 73 நண்டு 71 நன்றென்று 72 நீருநிழலு 64 நீறில்லா 66 பாடுபட்டு 65 பாலும் 55 பிச்சைக்கு 61 பூவாதே 71 பெற்றார் 63 புண்ணியம் 55 மரம்பழு 68 மானங் 67 முப்பதாம் 73 வருந்தி 57 வினைப்பயனை 72 வெட்டன 70 வேதாளஞ் 65 முகவுரை மூதுரை என்பது ஒளவையார் என்னும் தமிழ் மூதாட்டியார் அருளிய எவ்வமறுக்குஞ் செவ்விய தமிழ் நூல்களுள் ஒன்று. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை, பந்தனந்தாதி என்பனவாகிய நூல்களும், பல தனிப் பாக்களும் ஒளவையார் இயற்றியன வென்ப. கடைச்சங்க நாளிலே புலமையிற் சிறந்து விளங்கிய மகளிருள் ஒளவையார் என்னும் பெயரினரும் ஒருவர். புறநானூறு என்னும் அரிய தொகை நூலுள் அவரியற்றிய முப்பத்து மூன்று செய்யுள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு என்னும் தொகைகளிலும் அவருடைய செய்யுள்கள் பல உள்ளன. இதினின்றே அவருடைய பெருமையை அறியலாகும். தொகை நூல்களிலுள்ள அவருடைய பாட்டுக்கள் மிக்க அருமை பெருமை வாய்ந்தவை. கடையெழு வள்ளல்களுள் ஒருவனாகிய அதியமான் அஞ்சி அவரைப் பெரிதும் ஆதரித்து வந்தான். அவன் ஒரு மலை முழைஞ்சினுள்ளே அருமை யாகப் பெற்ற அமிழ்த மயமான நெல்லிக்கனி யொன்றை அவருக்கு அளிப்ப, அவர் அதனையுண்டு நெடிது உயிர் வாழ்ந்தனரென அவரும் பிறரும் பாடிய சங்கப் பாட்டுக்கள் தெரிவிக்கின்றன. அவர் அதியமானிடத்திருந்து தொண்டைமான் இளந்திரையன் பக்கல் தூதாகச் சென்று, தொண்டைமானின் படைக் கலக் கொட்டிலைப் பார்த்துப் பாடிய பாட்டும், அதியமான் உயிர் நீத்தபின் கையற்றுப் பாடிய பாட்டுக்களும் அவருடைய செய்யுளி யற்றுந் திறமையையும், அஞ்சாமை, நன்றியறிவு, அன்பு, இரக்கம் முதலிய உயர் குணங்களையும் நன்கு புலப் படுத்தும். தமிழ் நாட்டிலே இளைஞரும், முதியவரும் ஆகிய ஆடவர் பெண்டிர்களுள் கற்றவரும் கல்லாதவரும் ஆகிய யாவரும் ஒளவையார் என்னும் பெயரை அறிந்திருப்பதற்குக் காரணம் அவரியற்றிய ஆத்திசூடி முதலிய நீதி நூல்களே யாகும். தமிழ்நாட்டு மக்கள் அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பெற்ற பெருமை வாய்ந்தவை அவை. தமிழிற் சிறிது பயிற்சியுடையா ரெவரும் ஒளவையாரின் நீதிநூல்களுள் ஒன்றையாவது படித்தேயிருப்பர். பல பெரிய நூல்களின் சாரமாக வுள்ள நீதிகளும், கருத்துக்களும் இந் நீதி நூல்களில் தெளிவுற அமைந்து விளங்குகின்றன. நான்மணிக் கடிகையிலுள்ள "கல்லா வொருவர்க்கு" என்னுஞ் செய்யுளோடு, மூதுரையிலுள்ள "கல்லாத மாந்தர்க்கு" என்னுஞ் செய்யுள் சொல்லானும் பொருளானும் பெரிது ஒற்றுமையுறுகின்றது. வெண்பாவின் இடையிலும் மூச்சிரடி வருமென்பதற்கு இதிலுள்ள "அட்டாலும்" என்னுஞ் செய்யுளைத் தொல்காப்பிய உரை யாளர்கள் எடுத்துக்காட்டி இருப்பது இந்நூலின் பெருமைக்குச் சான்றாகும். இந்நூல் மூதுரை யென்னும் பெயரானே தொல் காப்பியவுரை முதலியவற்றில் வழங்கியுள்ளது. 'வாக்குண்டாம்' என்னும் பெயரானும் பிற்காலத்தாரால் வழங்கப் பெறுகின்றது. இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். மூதுரை மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு. (பதவுரை.) துப்பு ஆர்-பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி-திருமேனியையும், தும்பிக்கையான்-துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின், பாதம்-திருவடிகளை, பூக்கொண்டு-(அருச்சிக்க) மலர் எடுத்துக் கொண்டு, தப்பாமல்-நாடோறும் தவறாமல், சார்வார் தமக்கு-அடைந்து பூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம்-சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம்-நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள்-பெருமை பொருந்திய செந்தாமரைப் பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம்-அருட் பார்வை உண்டாகும்; மேனி-அவர் உடம்பு, நுடங்காது-(பிணிகளால்) வாட்ட முறாது. விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும். நூல் பயன் கருதாது அறஞ்செய்க 1. நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி என்று தருங்கொ லெனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தான்தருத லால். (பதவுரை.) நின்று-நிலைபெற்று, தளரா-சோராமல், வளர்-வளர்கின்ற, தெங்கு-தென்னை யானது, தாள் உண்ட நீரை-தன் அடியால் உண்ட தண்ணீரை, தலையாலே-தன் முடியாலே, தான் தருதலால்-(சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால், ஒருவற்கு - (நற்குணமுடைய) ஒருவனுக்கு, நன்றி செய்தக்கால்-உதவி செய்தால், அந்நன்றி-அவ்வுதவியை, என்று தருங்கொல்-அவன் எப் பொழுது செய்வானோ, என வேண்டா-என்று ஐயுற வேண்டுவதில்லை. நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம். (1) நல்லவர்க்குச் செய்த உதவி 2. நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம் கல்மே லெழுத்துப்போற் காணுமே-அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர்மே லெழுத்திற்கு நேர். (ப-ரை) நல்லார் ஒருவர்க்கு-நற்குணமுடைய ஒருவர்க்கு, செய்த உபகாரம்-செய்த உதவியானது, கல் மேல் எழுத்துப்போல்-கருங்கல்லின்மேல் வெட்டப்பட்ட எழுத்தைப்போல, காணும்-அழியாது விளங்கும்; அல்லாத-நல்லவரல்லாத, ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு-அன்பில்லாத மன முடையார்க்கு, ஈந்த உபகாரம்-செய்த உதவியானது, நீர்மேல் எழுத்திற்கு-நீரின்மேல் எழுதப் பட்ட எழுத்திற்கு, நேர்-ஒப்பாக(அழிந்துவிடும்). நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலை பெற்று விளங்கும், தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும் எ-ம். (2) இளமையில் வறுமை 3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவி லினியவும்-இன்னாத நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு. (ப-ரை.) இளமை-(இன்பத்தைத் தரும்) இளமைப் பருவத்தில், வறுமை வந்து எய்தியக்கால்-வறுமை வந்து அடைந்தால், இன்னா-அது துன்பத்தைத் தருவதாகும். இன்னா அளவில்-துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில், இனியவும் - இனியனவாகிய பொருள் களும், இன்னாத - துன்பத்தைத் தருவனவாம்; (அவை) நாள் அல்லா நாள்-(சூடுதற்குரிய) காலமல்லாத காலத்தில், பூத்த நல்மலரும்-மலர்ந்த நல்ல மலரையும், ஆள் இல்லா மங்கைக்கு அழகும்-(அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத மங்கையின் அழகையும், போலும்-ஒக்கும். ஏ : அசை. அழகும் என்பதில் உம்மை தொக்கது. வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பன எ-ம். (3) மேன்மக்கள் இயல்பு 4. அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும். (ப-ரை.) பால்-பாலினை, அட்டாலும்-காய்ச்சினாலும், சுவையிற் குன்றாது-அஃது இனிய சுவையிற் குறையாது; சங்கு-சங்கினை, சுட்டாலும்-சுட்டு நீறாக்கினாலும், வெண்மை தரும்-அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல), மேன் மக்கள்-மேலோர், கெட்டாலும்-வறுமை யுற்றாலும், மேன் மக்களே-மேலோராகவே விளங்குவர்; நண்பு அல்லார்-நட்பின் குணமில்லாத கீழோர், அளவளாய் நட்டாலும்-கலந்து நட்புச் செய்தாலும், நண்பு அல்லர்-நண்பராகார். பால் சங்கு என்னும் இரண்டும் மேன் மக்களுக்கு உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவரென்பது உவமைகளாற் புலனாகின்றது. ஏ : தேற்றப் பொருட்டு. மேலோர் வறுமையுற்றாலும் மேலோரே; கீழோர் கலந்து பழகினாலும் நண்பராகார் எ-ம். (4) காலமறிந்து நடத்தல் 5. அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி எடுத்த கருமங்க ளாகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் பருவத்தா லன்றிப் பழா. (ப-ரை.) தொடுத்த-கிளைத்த, உருவத்தால் நீண்ட - வடிவத்தால் நீண்ட, உயர் மரங்கள் எல்லாம்-உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி-பழுக்குங்காலம் வந்தாலல்லாமல், பழா-பழுக்கமாட்டாவாம்; (அதுபோல) அடுத்து முயன்றாலும்-அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், ஆகுநாள் அன்றி-முடியுங்காலம் வந்தால் அல்லாமல், எடுத்த கருமங்கள்-மேற்கொண்ட காரியங்கள்; ஆகா-முடியாவாம். எந்தச் செயலும் முடியுங் காலத்திலேதான் முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும் எ-ம். (5) மானம் இழந்து வாழாமை 6. உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர் பற்றலரைக் கண்டாற் பணிவரோ-கற்றூண் பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின் தளர்ந்து வளையுமோ தான். (ப-ரை.) கல் தூண்-கருங்கற் கம்பமானது, பெரும்பாரம் தாங்கின்-பெரிய பாரத்தைச் சுமந்தால், பிளந்து இறுவது அல்லால்-பிளந்து முரிவதல்லாமல், தான் தளர்ந்து வளையுமோ-தான் தளர்வுற்று வளையுமோ (வளையாது; அதுபோல), உற்ற இடத்தில்-மானக்கேடு உண்டானவிடத்தில், உயிர் வழங்கும் தன்மையோர்-தம் உயிரைவிடும் குணமுடையோர், பற்றலரை-பகைவரை, கண்டால் - பார்த்தால், பணிவரோ-வணங்குவரோ? (வணங்கார்). ஓ இரண்டும் எதிர்மறை. மானமுடையவர் ஆபத்து வந்தபோது உயிரை விடினும் விடுவரேயன்றி மானத்தை விடார் எ-ம். (6) அறிவு செல்வம் குணம் 7. நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத் தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுங் குணம். (ப-ரை.) நீர் ஆம்பல்-நீரிலுள்ள அல்லியானது, நீர் அளவே ஆகும்-நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும். (அதுபோல) நுண் அறிவு-கூரிய அறிவானது, தான் கற்ற-தான் படித்த, நூல் அளவே ஆகும்-நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம்-தான் அடைந்த செல்வ மானது, மேலை-முற்பிறப்பிற் செய்த, தவத்து அளவே ஆகும்-தவத்தின் அளவாகவே இருக்கும் குணம்-குணமானது, குலத்து அளவே ஆகும் - (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும். ஆம் மூன்றும் அசைநிலை. ஒருவருக்கு அறிவு நூலினளவாகவும், செல்வம் தவத்தினள வாகவும், குணம் குலத்தினள வாகவும் இருக்கும் எ-ம். (7) நல்லார் தொடர்பின் நலம் 8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ-நல்லார் குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ டிணங்கி யிருப்பதுவும் நன்று. (ப-ரை.) நல்லாரை-நற்குணமுடையோரை, காண்பதுவும்-பார்ப்பதும், நன்றே-நல்லதே; நல்லார்-நல்லவருடைய, நலம் மிக்க-பயன் நிறைந்த, சொல்-சொல்லை, கேட்பதுவும்-கேட்டலும், நன்றே-நல்லதே; நல்லார்-நல்லவருடைய, குணங்கள்-நற்குணங் களை, உரைப்பதுவும்-பேசுதலும், நன்றே-நல்லதே, அவரோடு-அந் நல்லவருடன், இணங்கி இருப்பதுவும்-கூடியிருத்தலும், நன்று-நல்லதே. ஏ மூன்றும் தேற்றம். நல்லவரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் நல்லொழுக்கமும் உண்டாகும் எ-ம். (8) தீயார் தொடர்பின் தீமை 9. தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ-தீயார் குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ டிணங்கி யிருப்பதுவுந் தீது. (ப-ரை.) தீயாரை-தீக்குணம் உடையவரை, காண்பதுவும் - பார்ப்பதும், தீதே-தீயதே; தீயார்-தீயவருடைய, திருஅற்ற-பயன் இல்லாத, சொல்-சொல்லை, கேட்பதுவும்-கேட்டலும், தீதே-தீயதே; தீயார்-தீயவருடைய, குணங்கள் - தீய குணங்களை, உரைப்பதுவும்-பேசுதலும், தீதே-தீயதே, அவரோடு-அத் தீயவருடன், இணங்கி இருப்பதுவும்-கூடியிருத்தலும், தீதே-தீயதே. ஏ மூன்றும் தேற்றம். தீயாரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும் அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்கமும் உண்டாகும் எ-ம். (9) நல்லாரால் எல்லார்க்கும் நலம் 10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில் நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட் டெல்லார்க்கும் பெய்யு மழை. (ப-ரை.) நெல்லுக்கு-நெற்பயிருக்கு, இறைத்த நீர் இறைக்கப் பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழி ஓடி - கால்வாய் வழியாகச் சென்று, ஆங்கு-அவ்விடத்திலுள்ள, புல்லுக்கும் பொசியும்-புல்லு களுக்கும் கசிந்தூறும்; (அதுபோல), தொல் உலகில் - பழைமையாகிய இவ்வுலகத்தில், நல்லார் ஒருவர் உளரேல்-நல்லவர் ஒருவர் இருப்பா ராயின், அவர் பொருட்டு-அவர் நிமித்தமாக, எல்லார்க்கும் மழை பெய்யும் - அனைவருக்கும் மழை பெய்யா நிற்கும். ஏ, ஆம் இரண்டும் அசை. நல்லோரைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர் எ-ம். (10) துணை வலிமை வேண்டும் 11. பண்டு முளைப்ப தரிசியே யானாலும் விண்டுமி போனால் முளையாதாம்-கொண்டபேர் ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி ஏற்ற கருமஞ் செயல். (ப-ரை.) பண்டு முளைப்பது-(உமி நீங்குதற்கு) முன்னே முளைப்பது, அரிசியே ஆனாலும்-அரிசியே யாயினும், உமி விண்டு போனால்-உமி நீங்கிப்போனால், முளையாது-(அவ்வரிசி) முளை யாது; (அதுபோல), கொண்ட-பெற்ற, பேர் ஆற்றல் உடையார்க்கும், பெரிய வல்லமையை உடைய வர்க்கும், அளவு இன்றி-துணைவலி யில்லாமல், ஏற்ற கருமம்-எடுத்துக்கொண்ட செயலை, செயல் ஆகாது-செய்து முடித்தல் இயலாது. மிக்க வல்லமை யுடையவர்க்கும் ஒரு செயலைச் செய்து முடிக்கத் துணைவலி வேண்டும் எ-ம். (11) உருவமும் குணமும் 12. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல் உண்ணீரு மாகி விடும். (ப-ரை.) *தாழை மடல் பெரிது-தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது, மகிழ் கந்தம் இனிது-மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே (தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது, கடல் பெரிது-சமுத்திரம் பெரிதாயிருக்கிறது, மண் நீரும் ஆகாது-ஆயினும் அதிலுள்ள நீர் (உடம்பழுக்கைக்) கழுவுவதற்குத் தக்க நீருமாகாது; அதன் அருகு சிற்றூறல்-அதன் பக்கத்தே சிறிய மணற்குழியிற் சுரக்கும் ஊற்றுநீர், உண் நீரும் ஆகும்-குடிக்கத்தக்க நீருமாகும்; (ஆதலினால்) உடல் சிறியர் என்று இருக்க வேண்டா-(ஒருவரை) உருவத்தினாலே சிறியவரென்று (மதியாமல்) இருக்க வேண்டா. மண்ணுதல்-கழுவுதல், ஏ : அசை. உருவத்தாற் பெரியவர் குணத்தாற் சிறியவராதலும் உருவத்தாற் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு; எ-ம். (12) அறிவற்றவனின் இழிவு 13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டா தவன்நல் மரம். (ப-ரை.) கவை ஆகி-கிளைகளை உடையனவாகியும், கொம்பு ஆகி-கொம்புகளை உடையனவாகியும், காட்டு அகத்து நிற்கும்-காட்டினுள்ளே நிற்கின்ற, அவை-அந்த மரங்கள், நல்ல மரங்கள் அல்ல-நல்ல மரங்கள் ஆகா; சவை நடுவே-கற்றோர் சபையின் நடுவே, நீட்டு ஓலை-(ஒருவர்) நீட்டிய ஓலையை, வாசியா நின்றான்-படிக்கமாட்டாமல் நின்றவனும், குறிப்பு அறிய மாட்டாதவன்-பிறர் குறிப்பை அறிய மாட்டாதவனுமே, நல்மரம்-நல்ல மரங்களாம். ஏ இரண்டும் அசை. கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்தினுங் கடையாவர்; எ-ம். (13) போலி அறிவின் புன்மை 14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன் பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே கல்லாதான் கற்ற கவி. (ப-ரை.) கல்லாதான்-கற்கவேண்டியவற்றை (முறைப்படக்) கல்லாதவன், கற்ற கவி-(கற்றோர் கூறுவதைக் கேட்டு) ஒரு கவியைக் கற்றுக்கொண்டு சொல்லுதல், கானம் மயில் ஆட-காட்டிலுள்ள மயில் (தன் அழகிய தோகையை விரித்து) ஆட, கண்டு இருந்த வான் கோழி-அதைப் பார்த்துக் கொண்டிருந்த வான்கோழியானது, தானும் அதுவாகப் பாவித்து-தன்னையும் அம்மயிலாகவே நினைத்துக் கொண்டு, தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்-தானும் தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற் போலும். ஏ : அசை. கல்லாதவன் கற்றவனைப்போல் நடித்தாலும் கற்றவனாகான் எ-ம். (14) தீயோர்க்கு உதவுதல் கேடு தரும் 15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி ஆங்கதனுக் காகார மானாற்போல்-பாங்கறியாப் புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரங் கல்லின்மே லிட்ட கலம். (ப-ரை.) வேங்கை வரிப்புலிநோய்-வரிகளை யுடைய வேங்கைப் புலியின் விடநோயை, தீர்த்த-போக்கிய, விடகாரி-விட வைத்தியன், ஆங்கு-அப்பொழுதே, அதனுக்கு-அப்புலிக்கு, ஆகாரம் ஆனால்போல்-இரையானாற்போல, பாங்கு அறியா-நன்றியறிவில்லாத, புல் அறிவாளர்க்கு-அற்ப அறிவினருக்கு, செய்த உபகாரம்-செய்யப்பட்ட உதவி, கல்லின் மேல் இட்ட கலம்-கல்லின் மேலே போடப்பட்ட மட்கலம்போல (அழிந்து, செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.) தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும். விஷகாரி என்னும் வடமொழி விடகாரி என்றாயிற்று. அதற்கு விடத்தை அழிப்பவன் என்பது பொருள். கல்லின் மேலிட்ட கலம் என்பதற்குக் கல்லின்மேலே தாக்கிய மரக்கலம் போலும் எனப் பொருள் சொல்லினும் பொருந்தும் எ-ம். (15) அடக்கத்தின் சிறப்பு 16. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில் ஓடுமீ னோட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாங் கொக்கு. (ப-ரை.) கொக்கு-கொக்கானது, மடைத் தலையில்-நீர் மடையினிடத்து, ஓடும் மீன் ஓட - ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருக்க, உறு மீன்-(இரையாதற்கேற்ற) பெரிய மீன், வரும் அளவும்-வரும் வரையும், வாடி இருக்கும் - அடங்கி யிருக்கும்; (அதுபோல) அடக்கம் உடையார்-தக்க பகைவர் வரும் வரையும் அடங்கியிருப்பவரை, அறிவு இலர் என்று எண்ணி-அறிவில்லாதவ ரென்று கருதி, கடக்க-அவரை வெல்லுவதற்கு, கருதவும் வேண்டா-நினைக்கவும் வேண்டுவதில்லை. அடக்கமுடையவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும் எ-ம். (16) உண்மை உறவினர் 17. அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு. (ப-ரை.) அற்ற குளத்தின்-நீர்வற்றிய குளத்தி னின்றும், அறு-நீங்குகின்ற, நீர்ப்பறவைபோல்-நீர்வாழ் பறவைகள்போல, உற்றுழி-வறுமை வந்தபொழுது, தீர்வார்-நீங்குவோர், உறவு அல்லர்-உறவினராகார்; அக்குளத்தில்-அந்தக் குளத்திலுள்ள, கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போல-கொட்டியும் அல்லியும் நெய்தலும் போல, ஒட்டி உறுவார்-நீங்காது சேர்ந்திருந்து வருத்தத்தை அனுபவிப்போரே, உறவு-உறவினராவர். போலவே என்பதிலுள்ள ஏகாரத்தை உறுவார் என்பதனுடன் சேர்க்க. வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப் போரே உறவினராவர் எ-ம். (17) தாழ்ந்தாலும் மேன்மக்களே சிறந்தவர் 18. சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற் றல்லாதார் கெட்டாலங் கென்னாகும்-சீரிய பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு மென்னாகும் மண்ணின் குடமுடைந்தக் கால். (ப-ரை.) சீரியர் கெட்டாலும்-மேன்மக்கள் வறுமை யுற்றாலும், சீரியரே-மேன்மைக் குண முடையோரே யாவர்; சீரியர் அல்லாதார் கெட்டால்-கீழ்மக்கள் வறுமையுற்றால், அங்கு என் ஆகும்-அப்பொழுது அவரின் குணம் யாதாகும், சீரிய பொன்னின் குடம் உடைந்தால்-சிறந்த பொன்னா லாகிய குடம் உடைந்தாலும், பொன் ஆகும்-பழைய பொன்னேயாகிப் பயன் தரும்; மண்ணின் குடம் உடைந்தக்கால்-மண்ணலாகிய குடம் உடைந்தால், என் ஆகும்-அது யாது பயனுடையதாம். மற்று: அசை. மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை குன்றார்; கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையில ராவர் எ-ம். (18) ஆசையால் பயனில்லை 19. ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி-தோழி நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம் விதியின் பயனே பயன். (ப-ரை.) ஆழ் கடல் நீர்-ஆழமாகிய கடலின் நீரை, ஆழ அமுக்கி முகக்கினும்-அழுந்தும்படியாக அமிழ்த்திமொண்டாலும், நாழி-ஒரு படியானது, நால் நாழி முகவாது-நான்குபடி நீரை மொள்ளாது; (அதுபோல), தோழி-தோழியே, நிதியும் கணவனும் நேர்படினும்-(பெண்டிர்க்கு) மிக்க பொருளும் தக்க நாயகனும் கிடைத்தாலும், தம்தம்-அவரவருடைய, விதியின் பயனே பயன்-ஊழினளவாகிய பயனே (அனுபவிக்கப்படும்) பயனாகும். தோழி : மகடூஉ முன்னிலை. வேண்டும் பொருளெல்லாம் கிடைத்திருந்தாலும், பழவினையின் அளவன்றி மிகுதியாய் அனுபவிக்க முடியாது எ-ம். (19) மருந்தும் உடன்பிறப்பும் 20. உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா உடன்பிறந்தே கொல்லும் வியாதி-உடன்பிறவா மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும் அம்மருந்து போல்வாரு முண்டு. (ப-ரை.) வியாதி-நோயானது, உடன்பிறந்தே கொல்லும்-உடம்புடன் பிறந்தே அதனைக் கொல்லுகின்றது, (ஆதலால்) உடன் பிறந்தார்-உடன் பிறந்தவர் எல்லோரும், சுற்றத்தார் என்று இருக்க வேண்டா-(நன்மை செய்யும்) சுற்றத்தாரென்று கருதி யிருக்க வேண்டுவதில்லை, உடன் பிறவா - உடன் பிறவாத, மாமலையில் உள்ள மருந்தே-பெரிய மலையில் இருக்கிற மருந்தே, பிணி தீர்க்கும்-நோயைப் போக்கும்; அம்மருந்து போல் வாரும் உண்டு-அம் மருந்து போல் (அயலாரா யிருந்தும்) உதவி செய்வாரும் சிலர் உண்டு. உடன்பிறந்தாருள்ளே தீமை செய்வோரும் அயலாருள்ளே நன்மை செய்வோரும் உண்டு எ-ம். (20) மனையாளில்லாத மனை 21. இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே யாமாயின்-இல்லாள் வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும். (ப-ரை.) இல்லாள் அகத்து இருக்க - (நற்குண நற்செய்கை களையுடைய) மனையாள் வீட்டில் இருக்கின், இல்லாதது ஒன்று இல்லை-(அவ் வீட்டில்) இல்லாத பொருள் ஒன்றுமில்லை, இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின்-மனையாள் இல்லாமற் போயினும், இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்கு மேல்-மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினும், அவ் வில் புலி கிடந்த தூறு ஆய் விடும்-அவ் வீடு புலி தங்கிய புதர்போல் ஆய்விடும். ஆம் : அசை. நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு; அஃதல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே யாகும் எ-ம். (21) ஊழின் வலிமை 22. எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல் முற்பவத்திற் செய்த வினை. (ப-ரை.) இரங்கும் மடம் நெஞ்சே-வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே, கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு-(நல்ல பயனைப் பெறலாமென்று) நினைத்துப் போய்க் கற்பகத் தருவை அடைந்தவர்க்கு, காஞ்சிரங்காய் ஈந்ததேல்-(அது) எட்டிக் காயைக் கொடுத்ததாயின், முற் பவத்தில் செய்த வினை-(அதற்குக் காரணம் அவர்) முற்பிறப்பிற் செய்த தீவினையாகும்; கருமம் கருதியவாறு ஆமோ-செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ, எழுதியவாறே காண்-(கடவுள்) விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக. செய்தொழில்கள் ஊழின்படி யன்றி அவரவர் நினைத்தபடி முடியா எ-ம். (22) நல்லார் சினமும் பொல்லார் சினமும் 23. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம். (ப-ரை.) கயவர்-கீழோர், கடுஞ்சினத்து-கடுங்கோபத்தால் வேறுபட்டால், கல் பிளவோடு ஒப்பர்-கல்லின் பிளவு போல் திரும்பக்கூடார்; பொன்பிளவோடு ஒப்பாரும் போல்வார்-(அப்படி வேறுபட்டபோது) பொன்னின் பிளவோடு ஒப்பாவாரும் ஒப்பாவர்; (ஒருவர் கூட்டக் கூடுவர்.) சீர் ஒழுகு சான்றோர் சினம்-சிறப்பு மிக்க பெரியோருடைய கோபம்; வில்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறும்-வில்லைப் பிடித்து (அம்பினாலே) நீர் பிளக்க எய்த பிளவுபோல் (அப்போதே) நீங்கும். ஏ இரண்டும் அசை. கோபத்தினால் வேறுபட்டவிடத்துக் கடையாயார் எக்காலத்துங் கூடார்; இடையாயார் ஒருவர் கூட்டக் கூடுவர்; தலையாயார் பிரிந்த அப்பொழுதே கூடுவர் எ-ம். (23) குணமும் தொடர்பும் 24. நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற் காக்கை உகக்கும் பிணம். (ப-ரை.) கயத்தின்-குளத்தில் உள்ள, நல் தாமரை - நல்ல தாமரைப்பூவை, நல் அன்னம் சேர்ந் தாற்போல்-நல்ல அன்னப் பறவை சேர்ந்தாற்போல, கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கல்வி யுடையோரைக் கல்வி யுடையோரே விரும்பிச் (சேர்வர்); முதுகாட்டில்-புறங்காட்டில் உள்ள, பிணம்-பிணத்தை, காக்கை உகக்கும் - காக்கை விரும்பும்; (அதுபோல்) கற்பு இலா மூர்க்கரை-கல்வியில்லாத மூடரை, மூர்க்கர்-மூடரே, முகப்பர்-விரும்புவர். கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும் நட்புச் செய்வர். எ-ம். (24) கரவுடையவர் ஒளிந்தே நிற்பர் 25. நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர். (ப-ரை.) நாகம்-விடப் பாம்பானது, தான் நஞ்சு உடைமை அறிந்து - தான் விடம் உடையதாயிருத்தலை அறிந்து, கரந்து உறையும் - மறைந்து வசிக்கும்; நீர்ப்பாம்பு-(விடமில்லாத) தண்ணீர்ப் பாம்பானது, அஞ்சா புறம் கிடக்கும் - அஞ்சாமல் வெளியே கிடக்கும்; (அவைபோல்) நெஞ்சில் கரவு உடையார்-மனத்தில் வஞ்சனையை உடையவர், தம்மைக் கரப்பர்-தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர்; கரவு இலா நெஞ்சத்தவர்-வஞ்சனை யில்லாத மனத்தை உடையவர், கரவார்-தம்மை மறைத்துக் கொள்ளார். வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர்; வஞ்சனையில்லாதவர் வெளிப்பட்டொழுகுவ எ -ம். (25) அரசனும் அறிஞனும் 26. மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச் சென்றஇட மெல்லாம் சிறப்பு. (ப-ரை.) மன்னனும்-அரசனையும், மாசு அறக் கற்றோனும்-கசடறக் கற்ற புலவனையும், சீர் தூக்கின்-ஆராய்ந்து பார்த்தால், மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்-அரசனைக் காட்டிலும் புலவனே சிறப்புடையனாவன்; மன்னற்கு-அரசனுக்கு, தன் தேசம் அல்லால்-தன் நாட்டிலல்லாமல் (பிற நாடுகளில்), சிறப்பு இல்லை-சிறப்பில்லையாகும்; கற்றோற்கு-புலவனுக்கோ எனில், சென்ற இடம் எல்லாம் சிறப்பு-அவன் சென்ற எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டாகும். அரசனிலும் புலவனே சிறப்புடையவன் எ-ம். (26) பல்வகைக் கூற்றங்கள் 27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே இல்லிற் கிசைந்தொழுகாப் பெண். (ப-ரை.) கல்லாத மாந்தர்க்கு-கல்வியறி வில்லாத மாக்களுக்கு, கற்று உணர்ந்தார் சொல்-கற்றறிந்தவருடைய உறுதி மொழி, கூற்றம் - இயமனாம்; (துன்பஞ் செய்யும் என்றபடி); அல்லாத மாந்தர்க்கு-(தருமத்தில் விருப்ப முடையர்) அல்லாத மனிதர்க்கு, அறம்-தருமமே, கூற்றம்-இயமனாகும், மெல்லிய வாழைக்கு-மெல்லிய வாழை மரத்துக்கு, தான் ஈன்ற காய் கூற்றம்-அஃது ஈன்ற காயே இயமனாம்; (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்-இல்வாழ்க்கைக்குப் பொருந்தி நடவாத மனைவி, கூற்றம்-(கணவனுக்கு) இயமனாவள். கற்றறிந்தவருடைய உறுதிமொழியினாலே கல்லாதவருக்கும், தருமத்தினாலே பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளாலே கணவனுக் கும் துன்பம் விளையும் எ-ம். (27) கெட்டாலும் மனவிரிவு குறையார் 28. சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்துங் கந்தங் குறைபடா தாதலால்-தந்தந் தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால் மனஞ்சிறிய ராவரோ மற்று. (ப-ரை.) மெல் சந்தனக் குறடு - மென்மையாகிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும்-தான் தேய்ந்து போன காலத்திலும், கந்தம் குறைபடாது-மணம் குறையாது; ஆதலால்-ஆதலினாலே, தார் வேந்தர்-மாலையை அணிந்த அரசர்கள், தம்தம் தனம் சிறியர் ஆயினும்-தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்தவரானாலும், கேட்டால்-அவ்வறுமையினாலே, மனம் சிறியர் ஆவரோ-மனஞ் சுருங்கினவராவாரோ (ஆகார்). தார்-சேனை; மனம்-மன வலிமை என்று பொருள் கூறுதலும் ஆம். அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மன விரிவு (தளராத் தன்மை)குன்றார் எ-ம். (28) நிலையில்லாத வாழ்வு 29. மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமு மெல்லாம்-திருமடந்தை ஆம்போ தவளோடு மாகும் அவள்பிரிந்து போம்போ தவளொடு போம். (ப-ரை.) மருவு இனிய சுற்றமும்-தழுவிய இனிய உறவும், வான் பொருளும்-மேலாகிய பொருளும், நல்ல உருவும்-நல்ல அழகும், உயர்குலமும் எல்லாம்-உயர்வாகிய குலமும் என்னும் இவை யெல்லாம், திருமடந்தை ஆம் போது-சீதேவி வந்து கூடும்பொழுது, அவளோடும் ஆகும்-அவளுடனே வந்து கூடும்; அவள் பிரிந்து போம்போது-அவள் நீங்கிப் போம்பொழுது, அவளொடு போம்-அவளுடனே நீங்கிப் போகும். திருமடந்தை-இலக்குமி, ஆகும் போகும் என்பன ஆம் போம் என்றும், பொழுது என்பது போது என்றும் விகாரப்பட்டன. சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும் நிலையுடையனவல்ல எ-ம். (29) அறவோர் அருள் உள்ளம் 30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து மறைக்குமாங் கண்டீர் மரம். (ப-ரை.) மரம்-மரங்களானவை, மாந்தர் குறைக்கும் தனையும்-(தம்மை) மனிதர் வெட்டு மளவும், குளிர்நிழலைத் தந்து மறைக்கும்-(அவருக்குங்) குளிர்ச்சியாகிய நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும் (அதுபோல), அறிவு உடையோர்-அறிவுடையவர்; சாம்தனையும்-(தாம்) இறந்து போமளவும், தீயனவே செய்திடினும்-(பிறர் தமக்குத்) தீங்குகளையே செய்தாராயினும், தாம் அவரை ஆம் தனையும் காப்பர் - தாம் அவரையும் தம்மாலே ஆகுமளவும் காப்பார். ஆம் : அசை. கண்டீர் : முன்னிலையசை. அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும் நன்மையே செய்வார் எ-ம். (30) மூதுரை மூலமும் உரையும் முற்றிற்று.  பாட்டு முதற்குறிப்பு அகரவரிசை (எண் : பக்க எண்) அடக்கமுடையா 88 அடுத்து முயன்றாலும் 83 அட்டாலும் 83 அற்ற குளத்தின் 89 ஆழ அமுக்கி 90 இல்லாளகத்திருக்க 91 இன்னா இளமை 82 உடன் பிறந்தார் 90 உற்ற இடத்தில் 84 எழுதியவா 91 கல்லாத மாந்தர்க்குக் 93 கவையாகிக் 87 கற்பிளவோ 92 கானமயிலாடக் 87 சந்தன மென்குறடு 94 சாந்தனையும் 95 சீரியர் கெட்டாலுஞ் 89 தீயாரைக் 85 நஞ்சுடைமை 92 நல்லாரைக் 85 நல்லாரொருவர்க்குச் 82 நற்றாமரைக் 92 நன்றி ஒருவர்க்கு 81 நீரளவேயாகுமாம் 84 பண்டுமுளைப்ப 86 மடல் பெரிது 86 மருவினிய 94 மன்னனு 93 வாக்குண்டாம் 81 வேங்கை 88 நெல்லுக்கிறைத்த 85 அருஞ்சொற்கள் அட்டாலும் - காய்ச்சினாலும் அற்ற - நீர் வற்றிய ஆந்தனையும் - ஆகுமளவும் ஆளில்லா - ஆள்வதற்கில்லா இசைந்து - பொருந்தி இணங்கி - கூடி உகக்கும் - விரும்பும் உறுமீன் - பெரியமீன் எய்தியக்கால் - அடைந்தால் ஒட்டி - நீங்காது ஒழுகா - நடவாத கடக்க - வெற்றிபெற கந்தம் - மணத்தினாலே கரந்து - மறைந்து கருமங்கள் - காரியங்கள் கலம் - மட்கலம் கவை - கிளை கற்பகம் - கற்பகத்தரு காஞ்சிரங்காய் - எட்டிக்காய் காமுறுவர் - விரும்புவர் கானம் - காடு குறடு - கட்டை குறைக்கும் - வெட்டும் கூற்றம் - இயமன் சவை - சபை சாம்தனையும் - இறந்துபோமளவும் சார்வார் - பூசைசெய்வோர் சிற்றுஊறல் - சிறிய ஊற்றுநீர் சீர்தூக்கின் - ஆராய்ந்து பார்ப்பின் சீரியர் - மேன்மக்கள் தளரா - சோராத துப்பார் - பவளம்போன்ற தூறாய் - புதர்போல் தெங்கு - தென்னைமரம் தொல்லுலகு - பழமை உலகு நட்டாலும் - நட்புச்செய்தாலும் நிதி - பொருள் நுடங்காது - வாட்டமுறாது நேர்படினும் - கிடைத்தாலும் நோக்குண்டாம் - அருட்பார்வையுண்டாம் பண்டு - முன்னர் பற்றலரை - பகைவரை பாங்கறியா - நன்றியறிவில்லாத புல்லறிவு - அற்ப அறிவு புலிகிடந்த - புலி தங்கிய பொசியுமாம் - கசிந்தூறும் மகிழினிது - மகிழம்பூ இனிது மண்ணீரும் - கழுவும் நீரும் மருவு இனிய - தழுவிய இனிய மறைக்கும் - வெயிலை மறைக்கும் மாசற - கசடற மாற்றம் - சொற்கள் முகப்பர் - விரும்புவர் முதுகாடு - புறங்காடு வடு - பிளவு வலிகிடந்த - கடுமையான வான்பொருள் - மேலான பொருள் விடகாரி - விடவைத்தியன் விண்டுஉமி - உமி நீங்கி மூதுரை முத்துக்கள் கல்வியும் குணமும் வளமும் இருக்கும் வரையில் உடம்பும் வாடாமல் நலமாயிருக்கக் கூடும். இதனால் உயிரும் நலமா யிருக்கும். இறைவனைச் சார்ந்திருப் பவர்களுக்கு அவன் இப்படி மூவகை நோக்குகளாய் விரிந்து அருள் கின்றனன்.  மனைவிக்குக் கணவனும் கணவனுக்கு மனைவியும் இருவருக்கும் மக்களும் மற்றுமுள்ள சுற்றங்களுமெல்லாம் செல்வங்களே யாம்.  'கல்வி' யென்பது பிறர்க்குப் பயன்படுகின்ற திறமையும், பிறர் குறிப்பை அறிந்துகொள்கின்ற திறமையுமாகும். நூல்களைப் படித்து விடுவது மட்டுங் கல்வியாகாது; பிறர் வாழ்க்கையைச் செப்பஞ் செய்யத்தக்க திறமையைப் பெறுகின்ற போதுதான் அக் கல்வி நிறைவடைகின்றது.  அவரவரும் முறையாகப் பயின்று அவரவர்க்கே உரியவாய் அவரவர் உயிரறிவினுள் மறைந்து கிடக்கும் தனித்திறமைகளை மேலெழுப்பி உலகுக்குப் பயன் படும்படி ஒளிரவைக்க வேண்டும்.  குணத்திலும் மாட்சிமைப்படும்போது தான் கல்வி பெருமையடைகிறது.  மாசறக்கற்று நிறைவடைந்தால் அக்கற்றோர்க்கு இணையானவர்கள் இவ்வுலகத்தில் யாரிருக்கிறார்கள்?  பழகுவதற்கு இனியரான சுற்றத்தவரும், மேன்மைவாய்ந்த செம்பொற்றிரளும், அழகு, வடிவம் முதலிய நல்ல தோற்றமும், சிறந்த நண்பர் களுமெல்லாம் செழுமையின் கூறுகளேயாம்.  பயன்களில் முனைப்புக்கொள்ளாமல் முயற்சிகளில் திருந்திய எண்ணம் வைத்து ஒழுகுதலே, உரிய நேரங்களில் நல்ல வளங்கள் மிகுவதற்கு ஏற்றதாகும்.  காரிய வெற்றிக்கு உறவு என்பது முதன்மை யன்று உண்மை யோடு திறமையே முதன்மை யானது.  துணைவலிக்குத்தெரிந்தெடுப்போரிடம் திறமையையே முதன்மையாகக் கருதல்வேண்டும். தோற்றம் ஆடம்பரம் முதலியன அவ்வளவு பொருளல்ல. 'நேரத்தில் தன்னை இழந்தாயினுஞ் செயலை நிறைவேற்றுவோரா?' என்பதே கருதுதல் வேண்டும்.  அவர் கரவில்லாதவரா என்றும் ஆராய வேண்டும்.  இல்லாள் அகத்திருந்தால் தேடிய செல்வங்களும் வளம் பெறும்; அப்போது, இல்லாத தென்பதே ஒன்றுமில்லை.  எவ்வகை முயற்சிக்கும், நலன்கள் எய்துதற்கும் நட்பியல்பே சிறந்த அடிப்படையாயிருக்கின்றது.  தம்மைப் பிறர் பகைத்து நெருக்கினாலும், கெடுத்தாலும், தாம் வறுமையுற்றாலும், நிலைகுலைந்து உயிர் துறக்கும்படி நேர்ந் தாலும் தம் குண மாட்சிமையிற் சிறிதுங் குன்றார் நல்லோர்.  சூழ்ந்தோரின் அறியாமையினால் ஒரோவொருகால் நல்லோர்க்குச் சிறிது சினம் எழுவதாயினும் அருள் காரணமாக அந்நொடியே முழுதும் மறைந்து மாறிவிடும்.  தமக்கு இறக்குந்தனையும் ஊறுசெய்தாருக்கும் ஆதரவும் உதவியுமாயிருந்து நலமே புரிந்துவருவர் நல்லோர்.  பொதுவாக நன்மைசெய்தல் எஞ்ஞான்றும் வீண்போகாது. எனினும், ஏதானும் நன்றி செய்வதாயின் நல்லாராயினாரைத் தெரிந்து அவர்க்குச் செய்தலே உலகுக்கும் தமக்கும் நலம் பயப்பதா யிருக்கும்.  சான்றோரைப் போற்றி வாழ்கின்ற உலகவர் நலம் அனைத்தும் பெற்றுச் சிறப்பர்.  உலகநீதி - உலகநாதனார் முகவுரை இந்நூற் பெயர் உலகநீதி என்பதும், இதனை இயற்றியவர் உலகநாதன் என்னும் பெயருடையவ ரென்பதும் இதன் இறுதிச் செய்யுளால் விளங்குகின்றது. இதனை இயற்றியவர் ஒளவையார் என்று சிலர் எழுதியிருப்பது மாறுபாடாகும். ஒளவையார் இயற்றியது என்பதற்கு ஆன்றோர் வழக்கு முதலிய சான்று ஒன்று மில்லை. இது பெரும்பாலும் பேச்சு வழக்கு நடையிலேயே அமைந்திருக்கிறது. இதிற் சொல்லப்பட்டன வெல்லாம் யாவரும் கைக்கொள்ள வேண்டிய சிறந்த நீதிகள் என்பதில் ஐயமில்லை. சிறுவர்களும் எளிதாகப் படித்துப் பாடம் பண்ணக் கூடியவாறு எளிய நடையில் ஓசை நலத்தோடு விளங்குவது இதற்குத் தனியாக உள்ள சிறப்பியல்பு ஆகும். இதனை இயற்றியவர் முருகக் கடவுளிடத்திலும், வள்ளி நாய்ச்சியாரிடத்திலும் பத்தியுடையவ ரென்பது ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் வள்ளிபங்கனாகிய முருகனை வாழ்த்து வாயாக என நெஞ்சை நோக்கிக் கூறுதலால் வெளியாகின்றது. இவர் இருந்த காலம் இடம் முதலியன தெரிய வில்லை. ஒளவையார் இயற்றிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலியவற்றைப் போலவே இந்நூலும் தமிழ்நாட்டில் சிறுவர் சிறுமியர் அனைவரும் படித்துப் பயனெய்தற்குரியதாய் விளங்கு கின்றது. இங்ஙனம் ந. மு. வேங்கடசாமி காப்பு உலகநீதி புராணத்தை யுரைக்கவே கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு (பதவுரை) உலக நீதி - உலக நீதியாகிய, புராணத்தை - பழஞ்செய்திகளை, உரைக்க - நான் கூறுதற்கு, கலைகள் - வேதம் முதலிய நூல்களால், ஆய்வு அரும் - ஆராய்ந்து காண்டற்கு அரிய, கரிமுகன் - யானை முகத்தையுடைய விநாயகக் கடவுள், காப்பு - காப்பாவர் என்றவாறு. (பொழிப்புரை) உலக நீதி என்னும் பழஞ் செய்திகளைச் சொல்லுதற்கு வேத முதலிய நூல்களாலும் அறிய வொண்ணாத விநாயகக் கடவுள் காப்பாவர் எ - று. உலகநீதி உலகத்தில் பண்டைக்காலந் தொடங்கி உயர்ந் தோர்களால் ஏற்கப்பட்டு வரும் நீதிகள். இவைதாம் புதியனவாகச் சொல்வனவல்ல, தொன்று தொட்டுள்ளனவே என்பது அறிவித் தற்குப் 'புராணம்' என்றார்; புராணம் பழைமை; பதினெண் புராணம் முதலியவற்றைப் போல் இதனையும் புராணமென்றா ரென்று கொள்ளற்க: கலைகளாய் வரும் என்பதற்குக் கலைகளின் வடிவாகி வரும் என்றுரைப்பினும் அமையும். காப்பு - காவல்; இடையூறு வராமல் பாதுகாப்பர் என்றபடி. உலகநீதி மூலமும் உரையும் 1. ஓதாம லொருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் வாகாரும் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. ('வேண்டாம்' - என்னும் இச்சொல், 'வேண்டா' என்றிருத்தல் வேண்டுமெனப் பெரும் புலவர் சிலரால் கருதப்படுகின்றது). (பதவுரை) ஓதாமல் - (நூல்களை) கற்காமல், ஒருநாளும் - ஒருபொழுதும், இருக்கவேண்டாம் - (நீ) வாளா இராதே. ஒருவரையும் - யார் ஒருவர்க்கும், பொல்லாங்கு - தீமை பயக்கும் சொற்களை, சொல்லவேண்டாம் - சொல்லாதே. மாதாவை - (பெற்ற) தாயை, ஒருநாளும் - ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே. வஞ்சனைகள் - வஞ்சகச்செயல்களை, செய்வாரோடு - செய்யுங் கயவர்களுடன், இணங்கவேண்டாம் - சேராதே. போகாத - செல்லத்தகாத, இடந்தனிலே - இடத்திலே, போகவேண்டாம் - செல்லாதே. போகவிட்டு - (ஒருர்) தன் முன்னின்றும் போன பின்னர். புறம் சொல்லி - புறங்கூறி, திரிய வேண்டாம் - அலையாதே. வாகு - தோள்வலி, ஆரும் - நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய்- வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) எக்காலத்திலும் இடைவிடாது கல்வி கற்க வேண்டும். எவரையும் தீய சொற்களால் வையாதே. பகைவராயினும் என்பதற்கு ஒருவரையும் என்றார். பொல்லாங்கு சொல்ல வேண்டாம் என்றமையால், நன்மைபயக்கும் சொற்களே சொல்ல வேண்டும் என்பதாயிற்று. பெற்ற தாயை எக்காலத்தும் நினைந்து போற்றுதல் வேண்டும். வஞ்சகச் செயல்களைச் செய்பவர்களுடன் நட்புக் கொள்ளுதல் கூடாது. வஞ்சனை - கபடம். செல்லத்தகாத தீயோரிடத்தில் ஒன்றை விரும்பிச் செல்லாதே. தகுதியில்லாரிடத்தில் எவ்வகைச் சம்பந்தமும் கூடாது. ஒருவரைக் கண்டபோது புகழ்ந்து பேசிக் காணாத விடத்தில் இகழ்ந்து பேசுதல் கூடாது. புறஞ் சொல்லல் - புறங்கூறல்; காணா விடத்தே ஒருவரை இகழ்ந்துரைத்தல். குறவர் மகளாகிய வள்ளியம்மையின் கணவனாகிய முருகக் கடவுளை நெஞ்சே நீ வாழ்த்துவாயாக. வாகு : ஆகுபெயர்; மான் வயிற்றிற் பிறந்து குறவர் தலைவனால் வளர்க்கப் பெற்றமையானும் குறவரெல்லாராலும் அன்பு பாராட்டப் பெற்றமையானும் 'குறவருடை வள்ளி' என்றார். உடைய என்னும் பெயரெச்சம் குறைந்து நின்றது. பெருமான் என்பது பெருமாள் எனத் திரிந்து நின்றது. வாழ்த்தாய் முன்னிலை யேவலொருமை வினைமுற்று. நெஞ்சே என்றது விளி; 'இதனை வேண்டாம்' என்பது முதலிய ஒவ்வொன்றோடும் கூட்டுக; பின்வரும் பாட்டுகளிலும் இங்ஙனமே கூட்டிக்கொள்க. (1) 2. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம் நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம் அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம் மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) நெஞ்சு ஆர - மனம் பொருந்த, பொய்தன்னை - பொய்யை, சொல்லவேண்டாம் - சொல்லாதே. நிலை இல்லா - நிலைபெறாத, காரியத்தை - காரியத்தை நிறுத்த வேண்டாம் - நிலைநாட்டாதே. நஞ்சுடனே - விடத்தையுடைய பாம்புடனே, ஒருநாளும் - ஒருபொழுதும், பழகவேண்டாம் - சேர்ந்து பழகாதே. நல் இணக்கம் - நல்லவர்களுடைய நட்பு, இல்லாரோடு - இல்லாதவர்களுடன், இணங்க வேண்டாம் - நட்புக் கொள்ளாதே. அஞ்சாமல் - பயப்பாடாமல், தனி - தன்னந் தனியாக, வழி போகவேண்டாம் - வழிச்செல்லாதே. அடுத்தவரை - தன்னிடத்து வந்து அடைந்த வரை, ஒரு நாளும் - ஒருபொழுதும், கெடுக்க வேண்டாம் - கெடுக்காதே. மஞ்சு ஆரும் - வலிமை நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவ னாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே; வாழ்த்தாய் - (நீ) வாழ்த்து வாயாக. (பொழிப்புரை) மனமறியப் பொய் கூறுதல் கூடாது. "தன்னெஞ் சறிவது பொய்யற்க" என்றார் திருவள்ளுவர். பொய்தன்னை என்பதில், தன் : சாரியை. உறுதியில்லாததை நிலைநிறுத்த முயலுதல் கூடாது. நிலையின்மை - பொய்த்தன்மை. பாம்பைப் போன்ற கொடியாருடன் பழகுதல் கூடாது. நஞ்சு, பாம்பிற்கு ஆகுபெயர் : அஃது ஈண்டுக் கொடியாரை உணர்த்திற்று. நல்லோரினத்தைப் பெறாது தீயவருடன் நட்புடை யோரை நட்பினராகக் கொள்ளுதல் கூடாது. நல்லிணக்கம் இல்லார் என்றமையால், தீயவரின் இணக்க முடையவரென்று கொள்க. நட்பிற்குரிய நல்ல பண்பில்லாதவர்களுடன் நட்புச் செய்ய வேண்டாம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆத்தி சூடியில் இணக்கமறிந் திணங்கு என்றதும் காண்க. 245துணையில்லாமல் தனியாக வழிச்செல்லல் கூடாது. தனி வழி என்பதற்கு மனிதர் நடமாட்டமில்லாத காட்டுவழி என்றும் பொருள் சொல்லலாம். தன்னை அண்டினவர்களைக் கெடுக்காமல் காத்தல் வேண்டும். அடுத்தவர் - வறுமை முதலியவற்றால் துன்பமுற்று அடைந்தவர். கெடுக்கவேண்டாம் என்றமையால் காத்தல் வேண்டும். என்றும் கொள்க. மைந்து என்பது மஞ்சு எனப் போலியாயிற்று. (2) 3. மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம் மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம் தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம் தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம் சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம் வனந்தேடுங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) மனம் - உள்ளமானது, போனபோக்கு எல்லாம் சென்றவாறெல்லாம், போக வேண்டாம் - செல்லாதே. மாற்றானை - பகைவனை, உறவு என்று - உறவினன் என்று நம்பவேண்டாம் - தெளியாதே. தனம் தேடி - பொருளை (வருந்தித்) தேடி, உண்ணாமல் - நுகராமல், புதைக்க வேண்டாம் - மண்ணிற் புதைக்காதே. தருமத்தை - அறஞ் செய்தலை, ஒருநாளும் - ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறக்காதே. சினம் - வெகுளியை, தேடி - தேடிக் கொண்டு, அல்லலையும்- (அதனால்) துன்பத்தினையும், தேடவேண்டாம் - தேடாதே. சினந்து இருந்தார் - வெகுண்டிருந்தாருடைய, வாசல் வழி - வாயில் வழியாக, சேறல்வேண்டாம் - செல்லாதே. வனம் தேடும் - காட்டின்கண் (விலங்கு முதலியன) தேடித் திரியும், குறவருடை - குறவருடைய (மகவாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) மனம் போன வழியில் தான் போகாமல் தன் வழியில் மனத்தை நிறுத்த வேண்டும். "எந்நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால் ஏழை நெஞ்சே" என்பது போல நெஞ்சை விளித்து, 'மனம்போன போக்கெல்லாம்' என்றார். பகைவன் உறவினனாயினும் அவனை நம்பலாகாது. பகைவன் நண்பன்போல் நடித்தாலும் அவனை நண்பனென்று நம்பிவிடக் கூடாது என்னலும் ஆம். உறவு : ஆகுபெயர். பொருளைத் தேடி அனுபவிக்கமல் புதைத்து வைத்தல் கூடாது. உண்ணாமல் என்பதனோடு அறஞ்செய்யாமல் என்பதும் சேர்த்துக் கொள்க. நாள்தோறும் அறத்தினை மறவாது செய்தல் வேண்டும். மறக்க வேண்டாம் என்றமையால் நினைந்து செய்தல் வேண்டும் என்பது ஆயிற்று. கோபத்தை வருவித்துக் கொண்டு துன்பமடையலாகாது. உம்மை எச்சவும்மை. சினங்கொண்டிருந்தாருடைய வீட்டின் வழியாக நடத்தல் கூடாது இல்வாய் என்பது வாயில் என்றாகி வாசல் என மருவிற்று சினத்திருந்தார் எனவும் பாடம். தேடும் என்பதற்கேற்ப விலங்கு முதலியன என்பது வருவிக்கப் பட்டது; வனம் என்பதற்கு அழகு என்று பொருள் கூறி அழகைத் தேடிய வள்ளியென்று இயைத்துரைத்தலும் ஆகும். (3) 4. குற்றமொன்றும் பாராட்டித் திரிய வேண்டாம் கொலைகளவு செய்வாரோ டிணங்க வேண்டாம் கற்றவரை யொருநாளும் பழிக்க வேண்டாம் கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம் கொற்றவனோ டெதிர்மாறு பேசவேண்டாம் கோயிலில்லா ஊரிற்குடி யிருக்க வேண்டாம் மற்றுநிக ரில்லாத வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே (பதவுரை) குற்றம் ஒன்றும் - (ஒருவர் செய்த) குற்றத்தை மாத்திரமே, பாராட்டி - எடுத்துச்சொல்லி, திரியவேண்டாம் - அலையாதே. கொலைகளவு - கொலையும் திருட்டும், செய்வாரோடு - செய்கின்ற தீயோருடன், இணங்கவேண்டாம் - நட்புச் செய்யாதே. கற்றவரை - (நூல்களைக்) கற்றவரை; ஒருநாளும் - ஒருபொழுதும், பழிக்க வேண்டாம் - பழிக்காதே. கற்பு உடைய மங்கையரை - கற்புடைய பெண்களை, கருதவேண்டாம் - சேர்தற்கு நினையாதே. எதிர் - எதிரேநின்று, கொற்றவனோடு - அரசனோடு, மாறு - மாறான சொற்களை, பேசவேண்டாம் - பேசாதே. கோயில் இல்லா - கோயில் இல்லாத, ஊரில் - ஊர்களில், குடிஇருக்க வேண்டாம் - குடியிருக்காதே. மற்று - பிறிதொன்று, நிகர் இல்லாத - ஒப்புச் சொல்ல முடியாத வள்ளி - வள்ளிநாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) ஒருவரிடத்துள்ள குற்றத்தையே எடுத்துத் தூற்றுதல் கூடாது. குற்றத்தை விட்டுக் குணத்தைப் பாராட்ட வேண்டும் என்பதாம். பிரிநிலை ஏகாரம் தொக்கு நின்றது. கொலை செய்வாருடனும், களவு செய்வாருடனும் கூடுதல் கூடாது. செய்வாருடன் சேர்தல் கூடாது என்றமையால் அவை செய்தல் ஆகாது என்பது, தானே பெறப்படும். கல்விகற்ற பெரியாரை நிந்தித்தல் கூடாது. பழிக்கவேண்டாம் என்றமையால் புகழவேண்டும் என்பது பெறப்படும். கற்புடைய மாதர் மேல் விருப்பம் வைத்தல் கூடாது. இங்கே மங்கையர் என்றது தம் மனைவியல்லாத பிற மாதர்களை நினைத்தலும் செய்தலோடு ஒக்குமாகையால் நினைத்தல் கூடாது என்றார். அரசன் முன்னின்று அவனுக்கு மாறாகப் பேசுதல் கூடாது. மாறு - விரோதம். கோயில் இல்லாத ஊரில் குடியிருத்தல் கூடாது. திருக்கோயில் இல்லாத ஊர் கொடிய காட்டை யொக்கும். (4) 5. வாழாமற் பெண்ணைவைத்துத் திரிய வேண்டாம் மனையாளைக் குற்றமொன்றுஞ் சொல்ல வேண்டாம் வீழாத படுகுழியில் வீழ வேண்டாம் வெஞ்சமரிற் புறங்கொடுத்து மீள வேண்டாம் தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம் தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வாழ்வாருங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) பெண்ணை - மனையாளை, வைத்து - (வீட்டில் துன்பமுற) வைத்து, வாழாமல் - (அவளோடு கூடி) வாழாமல், திரிய வேண்டாம் - அலையாதே. மனையாளை - பெண்டாட்டியின்மீது, குற்றம் ஒன்றும் - குற்றமான சொல் யாதொன்றும், சொல்ல வேண்டாம் - சொல்லாதே. வீழாத - விழத் தகாத, படுகுழியில் - பெரும் பள்ளத்தில், வீழ வேண்டாம் - வீழ்ந்துவிடாதே. வெஞ்சமரில் - கொடிய போரில், புறங்கொடுத்து - முதுகு காட்டி, மீள வேண்டாம் - திரும்பி வாராதே. தாழ்வான - தாழ்வாகிய, குலத்துடன் - குலத்தினருடன், சேர வேண்டாம் - உறவு கூடாது. தாழ்ந்தவரை - தாழ்வுற்றவர்களை, பொல்லாங்கு - தீங்கு, சொல்ல வேண்டாம் - சொல்லாதே. வாழ்வு ஆரும் - செல்வம் நிறைந்த, குறவருடை - குறவருடைய (மகளாகிய) வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) மனையாளோடு கூடி வாழாமல் அலைதல் கூடாது. திரிதல் - வேசையர் முதலியோரை விரும்பி அலைதல். இனி, பெற்ற பெண்ணைக் கணவனுடன் வாழாமல் தன் வீட்டில் வைத்து மாறுபட வேண்டாம் என்பதும் ஆம். மனைவியைப் பற்றி எவ்வகைக் குற்றமும் அயலாரிடத்துச் சொல்லுதல் கூடாது. மனைவிக்குள்ளது தனக்கும் உள்ளதாம் ஆகலானும், கேட்ட அயலார் ஒரு காலத்துப் பழிக்கக்கூடும் ஆகலானும் சொல்ல வேண்டாம் என்றார். கற்புடைய மனைவிமீது குற்றம் சுமத்துவது பாவம் என்பதுமாம். விழத்தகாத படுகுழியில் விழுதல் ஆகாது. படுகுழி என்பது கொடுந்துன்பத்ததிற்கு ஏதுவாகிய தீயசெய்கையைக் குறிக்கின்றது. மீளாத துன்பத்தை யுண்டாக்கும் தீச்செய்கையைச் செய்யலாகாது என்க. போரில் அச்சத்தால் முதுகுகாட்டி ஓடுதல் கூடாது, ஆண்மையுடன் எதிர்த்து நின்று போர்புரிய வேண்டுமென்க. புறம் - முதுகு. சமர் - போர், யுத்தம். தாழ்ந்த குலத்தாருடன் சேர்தல் கூடாது. குலம், அதனை உடையார்க்கு ஆகுபெயர். தாழ்ந்த குலத்தார் - இழிதொழில் செய்யும் குடியிற் பிறந்தவர். சேர்தல் - நட்புக்கொள்ளுதலும் சம்பந்தஞ் செய்து கொள்ளுதலும். உயர்ந்த நிலையிலிருந்து தாழ்வெய்தியவர்களைத் தீமையாகப் பேசுதல் கூடாது. தாழ்ந்தவர் என்பதற்குக் கீழோர் என்றும், வணங்கினவர் என்றும் பொருள் கூறுதலும் பொருந்தும். (5) 6. வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் முன்கோபக் காரரோ டிணங்க வேண்டாம் வாத்தியார் கூலியைவைத் திருக்க வேண்டாம் வழிபறித்துத் திரிவாரோ டிணங்க வேண்டாம் சேர்த்தபுக ழாளனொரு வள்ளி பங்கன் திருக்கைவே லாயுதனைச் செப்பாய் நெஞ்சே. (பதவுரை) வார்த்தை சொல்வார் - (பயனில்) சொற்கள் கூறுவாருடைய, வாய் பார்த்து - வாயைப் பார்த்துக் கொண்டு, திரியவேண்டாம் - அவரோடு கூட அலையாதே. மதியாதார் - நன்கு மதிக்காதவருடைய, தலைவாசல் - கடை வாயிலில், மிதிக்க வேண்டாம் - அடியெடுத்தது வைக்காதே. மூத்தோர் - மூத்தோர்கள், சொல் - கூறுகின்ற, வார்த்தை களை- சொற்களை, மறக்கவேண்டாம் - மறவாதே. முன்கோபக்காரரோடு முன்கோபமுடையாருடனே, இணங்க வேண்டாம் - சேராதே. வாத்தியார் - (கல்வி கற்பித்த) ஆசிரியருடைய, கூலியை - சம்பளத்தை, வைத்திருக்க வேண்டாம் - (கொடுக்காமல்) வைத்துக் கொள்ளாதே. வழி பறித்து - வழிப்பறி செய்து, திரிவாரோடு - திரிந்து கொண்டிருப்பவருடன், இணங்க வேண்டாம் - சேராதே. சேர்த்த - ஈட்டிய புகழாளன் - புகழுடைய வனாகிய, ஒரு - ஒப்பற்ற, வள்ளி பங்கன் - வள்ளியம்மையாரைப் பக்கத்தில் உடையவனாகிய, திருகை - அழகிய கையின்கண், வேலாயுதனை - வேற்படையையுடைய முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, செப்பாய் - புகழ்வாயாக. (பொழிப்புரை) வீண் பேச்சுப் பேசுவார் சொற்களைக் கேட்டுக் கொண்டு அவர்பின் அலைதல் கூடாது. வாய், சொல்லுக்கு ஆகுபெயர். வாய்பார்த்தல் என்றது "பண் கண்டளவில்" என்பது போல நின்றது. மதியாதாருடைய வீட்டிற்குச் செல்லல் கூடாது. மதியாதார் - அவமதிப்பவர். மிதித்தல் - அடியெடுத்து வைத்தல், சேர்தல். பெரியோர் கூறியனவற்றை மறத்தல் கூடாது; பெரியோர் சொன்னபடி நடக்க வேண்டும் என்க. மூத்தோர் - தாய், தந்தை, தமையன், ஆசான் முதலியவர்களும், அறிவிற் பெரியோர்களும் ஆவர். மிக்கக் கோபமுடையாருடன் நட்புக்கொள்ளுதல் கூடாது. முன்கோபம் - பொறுமையின்றி முதலெடுப்பில் உண்டாகும் சினம். கோபக்காரருடன் சேரவேண்டாம் என்றதனால் கோபம் கூடாது என்பதும் ஆயிற்று. கல்வி கற்பித்த ஆசிரியன் காணிக்கையைக் கொடாமல் இருத்தல் கூடாது. உபாத்தியாயர் என்பது வாத்தியார் எனத் திரிந்தது. வழிப்பறி செய்யும் கள்வருடன் சேர்தல் கூடாது. வழிப்பறி செய்தல் - வழியிற் பயணம் போகிறவர்களின் பொருளைப் பறித்துக் கொள்ளுதல். சேர்த்த - சம்பாதித்த; சேர்த்த என்பது வலித்தல் விகார மாயிற்று என்னலுமாம். (6) 7. கருதாமற் கருமங்கள் முடிக்க வேண்டாம் கணக்கழிவை யொருநாளும் பேச வேண்டாம் பொருவார்தம் போர்க்களத்திற் போக வேண்டாம் பொது நிலத்தி லொருநாளும் இருக்க வேண்டாம் இருதார மொருநாளுந் தேட வேண்டாம் எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் குருகாரும் புனங்காக்கும் ஏழை பங்கன் குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே. (பதவுரை) கருமங்கள் - (செய்யத்தக்க) காரியங்களை, கருதாமல் - (செய்யும் வழியை) எண்ணாமல், முடிக்க வேண்டாம்- முடிக்க முயலாதே. அழிவு கணக்கை - பொய்க்கணக்கை, ஒரு நாளும் - ஒரு பொழுதும், பேச வேண்டாம் - பேசாதே. பொருவார் - போர் செய்வாருடைய, போர்க்களத்தில் - போர் (நடக்கும்) இடத்தின்கண், போகவேண்டாம் - போகாதே. பொது நிலத்தில் - பொதுவாகிய இடத்தில், ஒருநாளும் - ஒருபொழுதும், இருக்க வேண்டாம் - (குடி) இராதே. இருதாரம் - இரு மனைவியரை, ஒரு நாளும் - ஒருபொழுதும், தேடவேண்டாம் - தேடிக் கொள்ளாதே. எளியாரை - ஏழைகளை, எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் - பகைத்துக் கொள்ளாதே. குருகு - பறவைகள், ஆரும் - நிறைந்த, புனம் - தினைப் புனத்தை காக்கும் - காத்த, ஏழை - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்- பக்கத்தில் உடையவனாகிய, குமரவேள் - குமரவேளின், பாதத்தை - திருவடியை, நெஞ்சே - மனமே கூறாய் - புகழ்வாய். (பொழிப்புரை) செய்யப்படும் காரியங்களை முடிக்கும் வழியை ஆராய்ந்து செய்தல் வேண்டும். ஒரு காரியத்தை அதனால் வரும் நன்மை தீமைகளை ஆராயாமற் செய்தல் கூடாது என்பதும் ஆகும். பொய்க்கணக்குக் கூறுதல் கூடாது. வேற்றுமை உருபைப் பிரித்துக் கூட்டுக. பொய் நிலை பெறாதாகலின் அஃது அழிவு என்று சொல்லப்பட்டது. பிறர் போர் செய்யும் இடத்தில் குறுக்கே செல்லலாகாது. வீணாகப் போரிலே கலந்து கொள்ளக்கூடாது என்றுமாம். தம் : சாரியை. பலர்க்கும் உரிய பொது நிலத்தில் குடியிருத்தல் கூடாது. பொது நிலம் - மந்தை, சாவடி முதலியன. பொதுவிடத்தில் பலரும் வருவார்களாகையால் அங்கே குடியிருப்பின் துன்ப முண்டாகும் என்க. இரண்டு மனைவியரை மணந்துகொள்ளல் கூடாது. இரு மனைவியரைக் கொண்டால் பெரும்பாலும் அவர்களுக்குள் போராட்டமுண்டாகு மாதலின் தனக்குத் துன்பமேயன்றி இன்பம் இராதென்க. தாரம் - மனைவி. ஏழைகளிடத்துப் பகைத்தல் கூடாது. எளியார் - இடம் பொருள் ஏவல் இல்லார், எதிர் - பகை. மறுகையில் நரகத்திற்கேதுவாகலின் எதிரிட்டுக் கொள்ள வேண்டாம் என்றார். காத்த என்பதைக் காக்கும் என்றது காலவழுவமைதி ஏழை - பெண், குமரவேள் - குமரனாகிய வேள்; குமரன் இளைஞன்; முருகன். (7) 8. சேராத இடந்தனிலே சேர வேண்டாம் செய்தநன்றி யொருநாளும் மறக்க வேண்டாம் ஊரோடுங் குண்டுணியாய்த் திரிய வேண்டாம் உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம் பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம் பிணைப்பட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம் வாராருங் குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) சேராத இடந்தனில் - சேரத்தகாத இடங்களில், சேரவேண்டாம் - சேராதே. செய்தநன்றி - ஒருவன் செய்த உதவியை, ஒரு நாளும் - ஒரு பொழுதும், மறக்க வேண்டாம் - மறக்காதே. ஊரோடும் - ஊர் தோறும் ஓடுகின்ற, குண்டுணியாய் - கோட் சொல்பவனாகி, திரியவேண்டாம் - அலையாதே. உற்றாரை - உறவினரிடத்து, உதாசினங்கள் - இகழ்ச்சியுரைகள், சொல்ல வேண்டாம் - சொல்லாதே. பேர்ஆன - புகழ் அடைதற்குக் காரணமாகிய, காரியத்தை - காரியத்தை, தவிர்க்க வேண்டாம் - (செய்யாது) விலக்க வேண்டாம். பிணைப்பட்டு - (ஒருவனுக்குப்) பிணையாகி, துணைபோகி- துணையாகச் சென்று, திரியவேண்டாம் - அலையாதே. வார்ஆரும் - பெருமை நிறைந்த, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) சேர்தற்குத் தகுதியில்லாதவருடன் சேர்தல் கூடாது. தகாதவர் - கள்ளுண்போர், தூர்த்தர் முதலாயினார். தன் : சாரியை, ஒருவர் செய்யும் உபகாரத்தை எப்பொழுதும் மறத்தல் கூடாது. நன்றி மறப்பது தீராக் குற்றமாகும்; "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்பது திருக்குறள். "நன்றி மறவேல்" என்றார் ஒளவையாரும். ஊர் தோறும் சென்று புறங்கூறுதல் கூடாது. ஓடும் என்னும் பெயரெச்சம் குண்டுணி என்னும் பெயருடன் முடிந்தது. குண்டுணி - கோட் சொல்வோன் என்னும் பொருளில் வழங்குகிறது. ஊரோடும் என்பதற்கு ஊரிலுள்ள தீயவர்களுடன் சேர்ந்து என்று பொருளுரைத்தலும் ஆம். உறவின் முறையாரை மதியாது இகழ்தல் கூடாது. புகழைத் தருதற்குரிய வினையைச் செய்யா திருத்தல் கூடாது. பேர், பெயர் என்பதன் மரூஉ; பெயர் - புகழ். ஒருவனுக்குப் பிணையாகித் திரிந்து கொண்டிருத்தல் கூடாது. கடன் வாங்குவோர்க்கும் குற்றஞ் செய்வோர்க்கும் பிணையாதல் துன்பத்தை யுண்டாக்கும். பிணை - புணை; ஈடு - ஜாமீன். வார் - விலங்கு, பறவை முதலிய பிடித்தற்குரிய வலையும் ஆம்.(8) 9. மண்ணின்று மண்ணோரஞ் சொல்ல வேண்டாம் மனஞ்சலித்துச் சிலுக்கிட்டுத் திரிய வேண்டாம் கண்ணழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம் காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம் புண்படவே வார்த்தைதனைச் சொல்ல வேண்டாம் புறஞ்சொல்லித் திரிவாரோ டிணங்க வேண்டாம் மண்ணளந்தான் தங்கையுமை மைந்தன் எங்கோன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) மண்ணில் நின்று - நிலத்தில் நின்று, மண் - மண்ணைப் பற்றி, ஓரம் - ஒருதலைச் சார்பாக, சொல்ல வேண்டாம்- பேசாதே. மனம் - உள்ளம், சலித்து - இளைத்து, சிலுக்கிட்டு - (யார் மாட்டும்) சண்டையிட்டு, திரியவேண்டாம் - அலையாதே. கண் - அருளை, அழிவு செய்து - அழித்து, துயர் காட்ட வேண்டாம் - (பிற உயிர்கட்குத்) துன்பஞ் செய்யாதே. காணாத - காணாதவற்றைப் பற்றி, கட்டுவார்த்தையை - கட்டு வார்த்தைகளை, உரைக்க வேண்டாம் - செய்யாதே. புண்பட - (கேட்போர் மனம்) புண்படுமாறு, வார்த்தைதனை- சொற்களை, சொல்ல வேண்டாம் - சொல்லாதே. புறம் சொல்லி - புறங்கூறி, திரிவாரோடு - அலைபவருடன், இணங்க வேண்டாம் - சேராதே. மண் அளந்தான் - நிலத்தை (மூவடியால்) அளந்த திருமாலுக்கு, தங்கை - தங்கையாகிய, உமை - உமாதேவிக்கு, மைந்தன் - மகனும், எம் கோன் - எமக்குத் தலைவனும் ஆகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) நிலத்தின் மீது நின்று நிலத்தைப் பற்றிய வழக்கில் ஓரஞ் சொல்லுதல் கூடாது. "ஓரஞ் சொல்லேல்" என்பது ஆத்திசூடி. ஓரம் - நடுநிலையின்மை, பட்சபாதம். மனத்திட்ப மில்லாது கோபத்தால் யாருடனும் சண்டை யிடுதல் கூடாது. அருளின்றிப் பிற உயிர்களை வருத்துதல் கூடாது. கண், கண்ணோட்டத்திற்கு ஆகுபெயர். ஈண்டு அருளைக் குறித்து நின்றது. இனி, கண்ணீர் ஒழுகுமாறு தனக்குள்ள துயரைப் பிறரிடத்துப் புலப்படுத்தல் வேண்டா என்பதும் ஆம். கண்ணழிவு என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு தடுத்து என்றும், பிரித்து என்றும் பொருள் சொல்லலுமாம். பிறர் செய்யும் நற்காரியத்தைத் தடுத்து என்றும், சேர்ந்திருப்போரைப் பிரித்து என்றும் கொள்ள வேண்டும். காணாதவற்றைக் கண்டதுபோல வைத்துப் பொய் கூறல் கூடாது. கட்டு வார்த்தையை என மாற்றப்பட்டது. கட்டு வார்த்தை - கற்பனை வார்த்தை. இனி, வார்த்தை என்பதற்குச் செய்தி என்று பொருள்கூறி, காணாத செய்தியைக் கண்டது போல உறுதியாகப் பேச வேண்டாம் என்று உரைத்தலுமாகும். கட்டுரைத்தல் - உறுதியாகப் பேசுதல். கேட்போர் மனம் வருந்துமாறு கொடுஞ்சொற் கூறலாகாது. புண்படல் - புண்பட்டாற்போல் வருந்தல். "தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு" என்பது திருக்குறள் புறங்கூறுவாருடன் சேர்தல் கூடாது. புறஞ்சொல்லல் இன்னதென்பது முன்பு உரைக்கப் பட்டது. (9) 10. மறம்பேசித் திரிவாரோ டிணங்க வேண்டாம் வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம் திறம் பேசிக் கலகமிட்டுத் திரியவேண்டாம் தெய்வத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம் குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன் குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே. (பதவுரை) மறம்பேசி - வீரமொழி கூறி, திரிவாரோடு (போருக்கு) அலைபவருடன், இணங்க வேண்டாம் - நட்புக் கொள்ளாதே. வாதாடி - வாதுகூறி, அழிவு வழக்கு - கெடுவழக்கு, சொல்ல வேண்டாம் - கூறாதே. திறம்பேசி - வலிமை கூறி, கலகம் இட்டு - கலகம் செய்து, திரிய வேண்டாம் - அலையாதே. தெய்வத்தை - கடவுளை, ஒருநாளும் - ஒருபொழுதும், மறக்க வேண்டாம் - மறவாதே. இறந்தாலும் - (கூறாதிருப்பின்) இறக்க நேரிடுமாயினும், பொய் தன்னை - பொய்யை, சொல்ல வேண்டாம் - சொல்லாதே. ஏசல் இட்ட - இகழ்ச்சி செய்த, உற்றாரை - உறவினரை, நத்த வேண்டாம் - விரும்பாதே. குறம்பேசி - குறிசொல்லி, வாழ்கின்ற - வாழும், வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடைய வனாகிய, குமரவேள் - முருகவேளின், நாமத்தை - பெயர்களை, நெஞ்சே - மனமே, கூறாய்- சொல்லித் துதிப்பாயாக. (பொழிப்புரை) வீரவாதம் பேசித் திரிவாருடன் நட்புக் கொள்ளுதல் கூடாது. மறம்பேசல் - தம் வீரத்தைத் தாமே புகழ்ந்து பேசுதல். திரிவார் - வீணே அலைகின்றவரும் ஆம். இனி, மறம்பேசி என்பதற்குக் கொலை முதலிய கொடிய காரியங்களைப் பேசி என்று உரைத்தலும் பொருந்தும். மன்றம் ஏறி அழிவழக்குப் பேசுதல் கூடாது. அழிவழக்கு - வழக்கல்லாத வழக்கு; பொய் வழக்கு. வல்லமை பேசிக் கலகஞ் செய்தல் கூடாது. திறம்பேசல் தம் வலிமை முதலியவற்றைப் புகழ்ந்து பேசுதல். கலகம் - சிறு சண்டை. "வல்லமை பேசேல்" என்பது ஆத்திசூடி. கடவுளை எப்பொழுதும் மறத்தல் கூடாது. சிந்தித்து வணங்க வேண்டும் என்க. ஒருநாளும் என்றது இன்பத்திலும் துன்பத்திலும் என்றபடி. உயிர் நீங்க நேர்ந்தவிடத்தும் பொய் கூறுதல் கூடாது. உயிரைக் கொடுத்தாயினும் உண்மையை நிலைநாட்டுதல் வேண்டும் என்பது கருத்து. மதியாது இகழ்ந்த உறவினரை விரும்பிச் சேர்தல் கூடாது, நத்தல் - விரும்பல். குறமகளிர் சொல்லும் குறியைக் குறம் என்பர். குறி-சோதிடம்; ஒருவர் மனத்து நினைத்ததனைக் குறித்துக் கூறல். குறப் பெண்டிர் செய்கையை வள்ளிக்கு ஏற்றிக் கூறினார். (10) 11. அஞ்சுபேர்க் கூலியைக்கைக் கொள்ள வேண்டாம் அதுவேதிங் கென்னின்நீ சொல்லக் கேளாய் தஞ்சமுடன் வண்ணான் நாவிதன்றன் கூலி சகலகலை யோதுவித்த வாத்தியார் கூலி வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சி கூலி மகாநோவு தனைத்தீர்த்த மருத்துவன்றன் கூலி இன்சொலுடன் இவர்கூலி கொடாத பேரை ஏதேது செய்வானோ ஏமன் றானே. (பதவுரை) அஞ்சுபேர் கூலியை - ஐவருடைய கூலியை கைக் கொள்ள வேண்டாம் - கைப்பற்ற வேண்டாம் (கொடுத்து விட வேண்டும்), அது - அக் கூலி, ஏது என்னின் - யாது என்று கேட்பின், சொல்ல - நான் சொல்கின்றேன், நீ - நீ, கேளாய் - கேட்பாயாக, வண்ணான் கூலி - வண்ணானுடைய கூலியும், நாவிதன் கூலி - அம்பட்டன் கூலியும், சகலகலை - பல கலைகளையும். ஓதுவித்த - படிப்பித்த, வாத்தியார் கூலி - ஆசிரியர் கூலியும், வஞ்சம் அற - வஞ்சனை நீங்க, நஞ்சு அறுத்த - நச்சுக் கொடி அறுத்த, மருத்துவிச்சி கூலி - மருத்துவிச்சியின் கூலியும், மகாநோவுதனை- (நீக்குவதற்கு அரிய) கொடிய நோயினை, தீர்த்த - நீக்கிய, மருத்துவன் கூலி - வைத்தியன் கூலியும், (ஆம்); இவர் கூலி - இவருக்குக் கொடுக்க வேண்டிய கூலியை, தஞ்சமுடன் - அன்புடனும், இன்சொல்லுடன் - இன்சொல்லோடும், கொடாத பேரை - கொடுக்காதவர்களை, ஏமன் - இயமன், ஏதுஏது - என்ன என்ன துன்பம், செய்வானோ - செய்வானோ, (நான் அறியேன்) (பொழிப்புரை) வண்ணான், அம்பட்டன், ஆசிரியர், மருத்து விச்சி, மருத்துவன் என்னும் ஐவரின் கூலியையும் கொடுத்துவிட வேண்டும். இன்றேல் எமனால் துன்புறுத்தப் படுவார்கள். அஞ்சு ஐந்து என்பதன் போலி. கூலியென்னும் பொதுமை பற்றி அது என ஒருமையாற் கூறினார். கூலி என்பதை வண்ணான் என்பதோடும் ஒட்டுக. மருத்துவிச்சி, மருத்துவன் என்னும் ஆண்பாற் பெயர்க்குப் பெண்பாற் பெயர். ஏது ஏது என்னும் அடுக்குப் பன்மைபற்றி வந்தது; குறிப்புச் சொல். ஓ; இரக்கம். யமன் என்பது ஏமன் எனத்திரிந்தது. இங்கு தன், தான், ஏ, என்பன அசைகள். (11) 12. கூறாக்கி யொருகுடியைக் கெடுக்க வேண்டாம் கொண்டைமேற் பூத்தேடி முடிக்க வேண்டாம் தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம் துர்ச்சனராய்த் திரிவாரோ டிணங்க வேண்டாம் வீறான தெய்வத்தை யிகழ வேண்டாம் வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம் மாறான குறவருடை வள்ளி பங்கன் மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே. (பதவுரை) ஒரு குடியை - ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கி - பிரிவுபடுத்தி, கெடுக்க வேண்டாம் - கெடுக்காதே. பூ தேடி - பூவைத் தேடி, கொண்டைமேல் - கொண்டையின் மீது, முடிக்க வேண்டாம் - முடித்துக் கொள்ளாதே. தூறுஆக்கி - (பிறர்மீது) பழிச்சொற்களை யுண்டாக்கி, தலையிட்டு - தலைப்பட்டுக் கொண்டு, திரிய வேண்டாம் - அலை யாதே. துர்ச்சனராய் - தீயவர்களாகி, திரிவாரோடு - (ஊர்தொறும்) அலைபவருடன், இணங்க வேண்டாம் - சேராதே. வீறு ஆன - பெருமையுடையனவாகிய, தெய்வத்தை - தெய்வங் களை, இகழ வேண்டாம் - இகழாதே. வெற்றி உள்ள - மேன்மையுடைய, பெரியோரை - பெரி யோர்களை, வெறுக்க வேண்டாம் - வெறுக்காதே. மாறு ஆன - (மற்ற நிலத்தில் உள்ளாருடன்) பகைமையுடைய ராகிய, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொழிப்புரை) ஒரு குடியின்கண் ஒற்றுமையுடன் வாழ்பவர் களைப் பிரிவுசெய்தல் கூடாது. கூறு - பிளவு; பிரிவு குடி; குடியிலுள்ளார்க்கு ஆகுபெயர். கொண்டைமேல் பூ முடித்தல் கூடாது. பிறர் காணும்படி கொண்டை மேற் பூ முடித்துக்கொண்டு தூர்த்தர்போலத் திரியலாகாது என்க. மலர் பறித்துக் கடவுளுக்குச் சாத்த வேண்டும் என்னுங் கருத்துங் கொள்க. பிறர்மேல் பழிச் சொற்களைக் கட்டிவிட்டு, அதுவே தொழிலாகத் திரிதல் கூடாது. தலையிடல் - தொடர்புவைத்துக் கொள்ளுதல்; பொறுப் பேற்றல். தீத்தொழில் உடையாருடன் சேர்தல் கூடாது. துர்ச்சனர் - துட்டர், தீயோர் பெருமையுள்ள தெய்வங்களை இகழ்ந்துரைத்தல் கூடாது. கூறு - பெருமை, வெற்றியுமாம். "தெய்வ மிகழேல்" என்பது ஆத்திசூடி. பெரியோரை வெறுத்தல் கூடாது. வெற்றி - பிறரினும் மேம்படுதல்; வாழவும் கெடவும் ஆற்றலுடைமையுமாம். வெறுத்தல் - இகழ்தல். மாறு - பகை: மாறுபட்ட நடையுமாம்; முருகக்கடவுளின் பெருமைக்கு மாறான என உரைப்பினும் அமையும். (12) 13. ஆதரித்துப் பலவகையாற் பொருளுந் தேடி அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன் உண்மையாய்ப் பாடி வைத்த உலக நீதி காதலித்துக் கற்றோருங் கேட்ட பேரும் கருத்துடனே நாடோறுங் களிப்பி னோடு போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப் பூலோக முள்ளளவும் வாழ்வர் தாமே. (பதவுரை) ஆதரித்து - விரும்பி, பலவகையாய் - பல (நல்ல) வழியால், பொருளும் தேடி - பொருளையும் ஈட்டி, அறு முகனை- ஆறுமுகங்களையுடைய முருகக்கடவுளை, அருந் தமிழால் அரிய தமிழ்மொழியால், பாட வேண்டி - பாடுதலை விரும்பி, ஓதுவித்த - அவ்விறைவன் அறிவித்தருளிய, வாசகத்தால்- வாசகங்களினால், உலகநாதன் - உலகநாதன் என்னும் பெயருடையான், உண்மையாய் - மெய்மைமையாக, பாடி வைத்த - பாடிய, உலகநீதி - உலக நீதி என்னும் இந்நூலை, காதலித்து - விரும்பி, கற்றோரும் படித்தவர்களும் கேட்ட பேரும் - கேட்டவர் களும், நாள் தோறும் - ஒவ்வொருநாளும், கருத்துடன் - நல்லெண்ணத்தோடும், களிப்பினோடு - மகிழ்ச்சியோடும், போதம் - அறிவும், உற்று - உறப்பெற்று, மிகவாழ்ந்து - மிகவும் வாழ்வுடையராய், புகழும் தேடி - புகழையும் பெற்று, பூலோகம் உள்ளளவும் - ஊழிக் காலம் வரையிலும், வாழ்வர் - வாழ்வார்கள். (பொழிப்புரை) உலகநாதன் என்னும் புலவன் பல நல்வழியாற் பொருள் சேர்த்து, பின்பு, தமிழ்மொழியால் முருகக் கடவுளைப் பாட விரும்பி, அப்பெருமான் உணர்த்திய வாசகங்களாற் பாடிவைத்த 'உலகநீதி' என்னும் இந்நூலை விருப்புடன் கற்றவரும், கேட்டவரும் நல் லெண்ணமும், மனமகிழ்ச்சியும் ஞானமும், வாழ்வும் புகழும் உடையவர்களாய் உலகமுள்ளவரையும் வாழ்வார்கள். இப்பாட்டின் முற்பகுதியால் இந்நூலைப் பாடியவர் உலகநாதன் என்னும் பெயரினர் என்பதும், அவர் பல வழியாலும் பொருள் தேடியதுடன் முருகக்கடவுளிடத்தில் அன்புடையவரா யிருந்தார் என்பதும் உலகநீதி என்பது இந்நூற் பெயரென்பதும் விளங்குகின்றன. பிற்பகுதியில் இதனைக் கற்றவரும் கேட்டவரும் அடையும் பயன்கள் கூறப்பட்டன. பொருளும் தேடி என்பதிலுள்ள உம்மை கல்வியும் தேடினார் என்பதைக் குறிப்பிடுகின்றது. பொருள் தேடி என்பதற்கு முருகக் கடவுட்குப் பொருள் தேடி வைத்து என்றும், 'ஓதுவித்த' என்பதற்குத் தனக்கு ஆசான் கற்பித்த என்றும் கூறுதலுமாகும். இனி, உலகநாதன் ஓதுவித்த வாசகத்தால் எனக் கொண்டு கூட்டி, உலகநாதன் கேட்டுக் கொண்டபடி என்றுரைத் தலுமாகும்; அப்பொழுது இந்நூலைச் செய்தோன் பெயர் விளங்க வில்லை. கேட்டவர் என்பது உலக வழக்கின்படி கேட்ட பேர் என்றிருக்கிறது. உள்ள அளவும் என்பது உள்ளளவும் என்றாயிற்று. தாம், ஏ: அசைகள். (13) உலகநீதி மூலமும் உரையும் முற்றிற்று  நன்னெறி - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் முகவுரை நன்னெறி யென்னும் இந் நீதிநூல் ஏறக்குறைய இருநூற்றெண்பது ஆண்டுகளின் முன்பு விளங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் கவிஞர் பெருமானால் அருளிச் செய்யப் பெற்றது. சிவப்பிரகாசரின் தந்தையார் காஞ்சிபுரத்திலே தொண்டை மண்டல வேளாளர்க்குக் குருக்களாயிருந்த குமார சுவாமிதேசிக ரென்பவர். இவர் பின்பு சிவலிங்க தாரணஞ்செய்து கொண்டு வீரசைவ (இலிங்காயத) மதத்தினராயினர். சிவப்பிரகாசருக்கு வேலையர், கருணைப்பிரகாசர் என இருதம்பியரும், ஞானாம்பிகை என ஒரு தங்கையும் இருந்தனர். ஞானாம் பிகையம்மை திருப்போரூரிலிருந்தவரும், வைராக்கிய சதகம் முதலிய அரிய நூல்களை அருளிச் செய்தவரும் ஆகிய சாந்தலிங்க சுவாமிகள் என்னும் பெரியாருக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றனர். சிவப்பிரகாசர் மணஞ்செய்து கொள்ளாது துறவு பூண்டிருந்தனர். இளைஞர் இருவரும் இல்லற வாழ்க்கைய ராயினர். சிவப்பிரகாசர் மிக்க இளம் பருவத்தினராயிருந்த பொழுதே தமிழ்க்கல்வியிற் றலைசிறந்து விளங்கியதுடன், செய்யுளியற்றும் வன்மை கைவரப்பெற்றவருமாயினர். இவர் இளைஞராய்த் திருவண்ணாமலையில் வதிந்து வருநாட்களில் ஒருநாள் சோணசைலமாலை யெனப் பெயரிய நூறு செய்யுட் களாலாய பிரபந்தம் பாடி அதனைத் துதித்தனர் என்ப. அவர் தமிழிலக்கணம் பாடங்கேட்ட வரலாறாகக் கேட்கப்படுவது பின் வருமாறு:- "பாண்டிய நாட்டிலே தாமிரவரணிக் கரையிலுள்ள சிந்துபூந் துறையில் தருமபுரவாதீனத்து வெள்ளியம்பல வாணத் தம்பிரான் இலக்கண விலக்கியங்களில் மிகவும் வல்லுநராயிருந் திருக்கின்றன ரெனக் கேள்வியுற்று, இவர் அவ்விடத்தெய்தித் தம்பிரான் சுவாமிகளைக் கண்டு தாம் இலக்கணங் கற்க வேண்டி வந்தமையைத் தெரிவித்துக் கொண்டனர். சுவாமிகள் இவரது இலக்கியப் பயிற்சியை அறிதற்பொருட்டு, 'கு என்னும் எழுத்து முதலிலும் இறுதியிலும் அமையவும், ஊருடையான் என்பது இடையிற் பொருந்தவும் ஒரு வெண்பாப் பாடுக' என்று கூற, இவர் உடனே, 'குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழன் முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு தேருடையான் றெவ்வுக்குத் தில்லைதோன் மேற்கொள்ள லூருடையா னென்னு முலகு.' என்னும் வெண்பாவைப் பாடினர். இதனுள் 'வடக்கோடு தேருடையான்' என்று அமைத்தமையைத் தம்பிரானடிகள் வியந்து பாராட்டி, வேலையர், கருணைப்பிரகாசர் என்னும் இருவர்க்கும் சில நாட்களில் ஐந்திலக்கணமும் பாடஞ்சொல்லி முடித்தனர். அது கண்ட சிவப்பிரகாசர் தாம் அண்ணாமலை ரெட்டியாராற் கொடுக்கப் பெற்றுக் கொண்டு வந்திருந்த முந்நூறு பொன்னையும் ஆசிரியர்க்குக் காணிக்கையாக வைத்து உபசரிக்க, அவர் 'இது நமக்கு வேண்டுவதில்லை; புலவர்களை இகழும் புன்மையுடை யராய்த் திருச்செந்தூரில் வசிக்கும் தமிழ்ப்புலவரொரு வரைச் செருக்கடக்கி, அவர் நம்மை வந்து வணங்கும்படி செய்தலே நமக்குக் காணிக்கையாகும்' என்றனர். சிவப்பிரகாச முனிவர் அதற்குடன்பட்டுத் திருச் செந்தூருக்குப் போய் முருகக் கடவுளைத் தரிசித்து வலம்வரும் பொழுது அப் புன்புலவர் இவரை யெதிர்ப் பட்டு இகழத் தலைப்பட்டவர், இவரைப் புதிய முறையால் வெற்றி பெறுவோமெனத் துணிந்து, 'நாமிருவரும் நிரோட்டக யமகம் பாடுவோம்; முன்பு பாடி முடித்தவர்க்கு அஃதியலாதார் அடிமை யாவோம்' என்று கூறினர். சுவாமிகள் அதற் கிசைந்தருளி , உடனே அத் தலத்து முருகக்கடவுள் மீது நிரோட்டக யமக அந்தாதியாக முப்பது கட்டளைக் கலித்துறை பாடி முடித்தனர். அப்பொழுது ஒரு செய்யுளேனும் பாடி முடிக்கா லாற்றாத அப் புலவர், அடிகளின் திருவடிகளை வணங்கி 'அடிமையா யினேன்' என்று விண்ணபப்பஞ் செய்ய, சிவப்பிரகாச முனிவர் அவரை யழைத்து வந்து தம் ஆசிரியருக்கு அடிமையாக்கிவிட்டனர்." சிவப்பிரகாச சுவாமிகள் பெரும்பாலும் வதிந்த இடம் வடவெள்ளாற்றின் பக்கத்திலுள்ள வாலிகண்ட புரத்திற்கு அணித் தாகிய நல்லாற்றூர் என்னும் துறைமங்கலமாகும். அதனாலேயே அவரது ஊர் துறைமங்கலம் எனப்படும். அக்காலத்து அங்கிருந்த பெருஞ்செல்வரும், தமக்கு அணுக்கத் தொண்ட ரானவரும் ஆகிய அண்ணாமலை ரெட்டியார் வேண்டிக் கொண்டபடி திருவெங்கைமா நகரத்தில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமான் மீது கோவை, கலம்பகம், உலா, அலங்காரம் ஆகிய பிரபந்தங்கள் பாடினர். அவற்றுள் அண்ணாமலை ரெட்டியாரையும் ஒவ்வோரிடங்களில் புகழ்ந்து கூறியிருக் கின்றனர். அக்காலத்திலே இத்தாலி தேசத்தி னின்றும் வந்திருந்த பாதிரியாகிய வீரமாமுனிவர் என்பவர் தமது ஏசுமதக் கொள்கையை நிலைநிறுத்துதற் பொருட்டுத் தருக்கஞ் செய்ய, சிவப்பிரகாச அடிகள் அக் கொள்கைகளை மறுத்து ஏசுமத நிராகரணம் எனப் பெயரிய நூல் இயற்றினர். சிவப்பிரகாசருக்கு ஞானாசிரியர் பொம்ம புரம் சிவஞான பாலைய தேசிகர். தம் ஞானாசிரியர் மீது தாலாட்டு, நெஞ்சுவிடு தூது, திருப்பள்ளியெழுச்சி, பிள்ளைத்தமிழ், கலம்பகம் ஆகிய பிரபந்தங்கள் அடிகளால் இயற்றப் பெற்றுள்ளன. சைவசமய குரவர்களாகிய நால்வர் களையும் அடிகள் துதித்துள்ள 'நால்வர் நான்மணி மாலை' என்னும் பிரபந்தம் சைவ நன்மக்கள் யாவராலும் போற்றப்படுகின்றது. திருவாவடுதுறை யாதீனத்துப் பெரியார்கள், சிவப்பிரகாசர் தமது சித்தாந்த சைவ மரபினரல்ல ராயினும், அவர் நால்வர்மீது பாடியுள்ள நான்மணிமாலைப் பாடல்களின் அருமை பெருமைகளைப் பாராட்டி அப் பாடல்களைச் சிறிய எழுத்துக் களால் எழுதிச் சுருள் செய்து உருத்திராக்க வடத்துடன் தொடுத்து அணிந்து கொள்வதுண்டென்று பெரியோர் சிலர் சொல்லக் கேட்டுளோம். சிவப்பிரகாச சுவாமிகள் போலவே, அவருடைய தம்பியரிருவரும் புலமை மிக்கவரா யிருந்தனர். இளையவராகிய கருணைப் பிரகாசரும், மூத்தவராகிய சிவப்பிரகாசரும் இவ்வுலக வாழ்வைத் துறந்த பின்பு , 'அல்லிமலர்ப் பண்ணவனும் ஆராய்ந் தறிகவிதை சொல்லும் இருவரிடைத் தோன்றியயான் - முல்லை அரும்பிற் பொலியும் அணிமுறுவல் நல்லாய் கரும்பிற் கணுநிகர்த்தேன் காண்.' என்று வேலையர் இரங்கிக் கூறியுள்ளார். சிவப்பிரகாசர் தமது முப்பத்திரண்டாம் ஆண்டிற் சிவப் பேறெய்தினரெனக் கூறப்படுகின்றது. அவருடைய பாடல்களெல்லாம் புதிய புதிய கற்பனைஅங்காரங்களுடன் கூடிக் கற்றவருள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் பான்மையன. அவர் பாடலின் சுவையில் ஈடுபடாத உள்ள முடையார் அவிழ்ச் சுவையன்றித் தமிழ்ச்சுவையறியாதவரே யாவர். சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நூல்கள்:- இட்டலிங்கப் பெருமான்மீதும் சிவஞான பாலைய தேசிகர் மீதும் இயற்றியுள்ள பிரபந்தங்களும், சோணசைமாலை, நால்வர் நான்மணிமாலை, திருச்செந்திலந்தாதி, பழமலையந்தாதி, பிக்ஷாடண நவமணிமாலை, பெரியநாயகியம்மை விருத்தம், பெரிய நாயகியம்மை கலித்துறை, நன்னெறி, திருவெங்கைக் கோவை, திருவெங்கைக் கலம்பகம், திருவெங்கையுலா, வேதாந்தசூடாமணி, சித்தாந்த சிகாமணி, பிரபுலிங் கலீலை, திருக்கூவப்புராணம், சீகாளத்திப்புராணம் (கண்ணப்பச் சருக்கம், நக்கீரச் சருக்கம்) என்பனவும், தருக்க பரிபாஷை முதலியனவும் ஆம். சீகாளத்திப் புராணத்தின் முற்பகுதி கருணைப் பிரகாசராலும், பிற்பகுதி வேலையராலும் பாடப்பெற்றன. சிவப்பிரகாச சுவாமிகள் பொம்மபுரத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில் ஒருநாள் தனிமை யாகக் கடற்கரை யெய்தி, அங்குள்ள நறுமணற் பரப்பிலே நன்னெறி வெண்பா நாற்பதையும் எழுதிவிட்டு வந்து, அதனை ஏட்டிலெழுதி வரும்படி கருணைப்பிரகா சருக்குக் கட்டளையிட, அவரும் அங்ஙனமே எழுதி வந்தனரெனக் கூறுப. இந்நூலின் ஒவ்வொரு பாவும் மக்கட்கு இன்றியமையாத நீதிகளை அழகிய உவமைகளுடன் கூறுவதாகும். உவமைகளெல்லாம் யாவ ராலும் அறியப்பட்டனவாகவும் அமைந்து, கற்போர்க்கு வியப்பும் மகிழ்ச்சியும் விளைப்பனவாகும். மக்களின் உடலுறுப்புக்களாகிய கண் முதலியவற்றின் இயல்புகளை ஒன்பது பாக்களிலும், ஞாயிறு, திங்கள், கடல், காற்று முதலிய இயற்கைப் பொருள்களையும், நெல், வாழை, பசு முதலிய பயிற்சி மிக்க பொருள்களையும், வேறு பல பாக்களிலும் உவமையாக அமைத்திருப்பது இளைஞர்கட்குக் கல்வி பயில்விப்ப தில் இவ்வாசிரியர்க்குள்ள திறப்பாட்டை நன்கு விளக்கா நிற்கும். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். நன்னெறி மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து மின்னெறி சடாமுடி விநாயக னடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே. (பதவுரை) மின் எறி - மின்னல்போலும் ஒளியை வீசுகின்ற, சடாமுடி - சடைமுடியை யுடைய , விநாயகன் அடிதொழ - விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்குதலால், நன்னெறி வெண்பா நாற்பதும் வரும் - நன்னெறி என்னும் நூலின் நாற்பது வெண்பாவும் வரும் ஏ: ஈற்றசை (கருத்து) விநாயகக் கடவுளை வணங்குதலால் நன்னெறி என்னும் நூல் இடையூறின்றி இனிது முடியும் என்பதாம். முகமன் எதிர்பாராமல் உதவுக 1. என்று முகமன் இயம்பா தவர்கண்ணுஞ் சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை பூவிற் பொலிகுழலாய்! பூங்கை புகழவோ நாவிற் குதவும் நயந்து. (பத.) பூவின் பொலி குழலாய் - பூவினால் விளங்குகின்ற கூந்தலை யுடையவளே, பூ கை - அழகிய கையானது, புகழவோ - தன்னைப் புகழ்தல் கருதியோ, நாவிற்கு - நாவினுக்கு, துன்றுசுவை- மிக்க சுவையுள்ள உணவினை, நயந்து உதவும் - விரும்பிக் கொடுக்கும் (புகழஅன்று; அதுபோல), தீது அற்றோர் - குற்றமற்றவராகிய பெரியோர், என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும் - யாதொரு நாளிலும் (தமக்கு) அன்புமொழிகளைச் சொல்லாத வரிடத்திலும், சென்று பொருள் கொடுப்பர் - தாமே சென்று (அவர்க்கு வேண்டும்) பொருளைக் கொடுப்பார். (க-து) பெரியோர் தமக்கு அன்பு காட்டாதவ ரிடத்தும் தாமே சென்று அவர்க்கு வேண்டும் பொருளை வழங்குவர் (எ- ம்.) (1) வன்சொல்லும் இனிதாதல் உண்டு 2. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர் பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு. (பத.) நல் நுதால் - நல்லநெற்றியை உடையவளே, மாசு அற்ற நெஞ்சு உடையார் வன்சொல் இனிது - குற்றமற்ற மனத்தை யுடையவரது கடுஞ்சொல்லும் இனியதாகும்; ஏனையவர் பேசுற்ற இன்சொல் பிறிது என்க - (குற்றம் பொருந்திய மனத்தை யுடையவராகிய) பிறர் சொல்லிய இன்சொல்லும் கொடியதாகும் என்று அறிவாயாக; ஈசற்கு - சிவபெருமானுக்கு, நல்லோன் எறிசிலையோ - நற்குணமுடையவராகிய சாக்கிய நாயனார் (அன்போடு) எறிந்த கல்லோ, ஒள் கருப்பு வில்லோன் மலரோ - ஒள்ளிய கரும்புவில்லையுடைய மன்மதன் (அன்பின்றி) எறிந்த பூவோ, விருப்பு - விருப்பாயிற்று? (க-து) மன நன்மையுடையோருடைய கடுஞ் சொல்லும் இன்பம் விளைக்கும்; மன நன்மை இல்லாதவருடைய இன் சொல்லும் துன்பம் விளைக்கும். உ - ம்: சிவபெருமான் சாக்கி யர்க்கு அருள் செய்தார்; மன்மதனை எரித்தார். (2) இனிய நெறியறிந்து பெறுக 3. தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவன் தங்கட் குரியவராற் றாங்கொள்க - தங்கநெடுங் குன்றினாற் செய்தனைய கொங்கையாய்! ஆவின்பால் கன்றினாற் கொள்ப கறந்து. (பத.) நெடும் தங்கக் குன்றினால் செய்து அனைய கொங்கையாய் - நெடிய பொன்மலையினால் செய்தாற் போன்ற தனங்களை யுடை யவளே, ஆவின்பால் கன்றினால் கறந்து கொள்ப - (தங்களுக்குக் கொடாத) பசுவினுடைய பாலை (அப் பசுவுக்குரிய) கன்றைக் கொண்டு கறந்துகொள்வார்கள், (அதுபோல) தங்கட்கு உதவிலர் கை - தங்களுக்கு உதவாதவர்களுடைய கையினின்றும், தாம் ஒன்று கொள்ளின் - தாங்கள் ஒரு பொருளைக் கொள்ள வேண்டினால், அவர் தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - அவர்களுக்கு உரியவராலே (அப் பொருளைத்) தாங்கள் கொள்ளக் கடவர்கள். (க - து) தமக்கு உதவாதவரிடத்தில் ஒரு பொருள் பெற வேண்டின், அதனை அவருக்கு உரியவரைக் கொண்டு பெறல் வேண்டும் (எ - ம்.) (3) செல்வம் பயன்படுத்துவார்க்கே உரியது 4. பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி செய்யாக் கருங்கடனீர் சென்று புயன்முகந்து பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு. (பத.) பிறர்க்கு உதவி செய்யா - பிறர்க்கு உபகாரஞ்செய்யாத, கருங் கடல் நீர் - கரிய கடலின் நீரை, புயல் சென்று முகந்து - மேகமானது போய் மொண்டுவந்து, பிறர்க்குப் பெய்யாக் கொடுக்கும்-பிறர்க்குப் பெய்து கொடுக்கும்; (அதுபோல) பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ்செல்வம் - பிறர்க்கு உபகாரஞ் செய்யாதவருடைய பெரிய செல்வமானது, வேறு - பிறிதேயாயினும், பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறு ஆம் - பிறருக்கு உபகாரஞ் செய் பவருடைய செல்வமாகும். (க - து) உலோபிகளின் பொருள் அதனை யெடுத்து ஈவோரின் பொருளாகவே கொள்ளப்படும் (எ - ம்.) (4) நட்பிற் பிரியாமை நன்று 5. நீக்க மறும்இருவர் நீங்கிப் புணர்ந்தாலும் நோக்கி னவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்! நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோற் புல்லினுந் திண்மைநிலை போம். (பத.) பூக்குழலாய் - பூக்களை முடித்த கூந்தலையுடையவளே! நெல்லின் உமி சிறிது நீங்க - நெல்லினின்றும் உமியானது சிறிது நீங்கி, பழைமை போல் புல்லினும் - முன்போலவே கூடினாலும், திண்மை நிலைபோம் - (முளைத்தற்கேற்ற) வலிமையின் நிலை போய்விடும்; (அதுபோல) நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந் தாலும் - பிரிவு இல்லாத நண்பர் இருவர் பிரிந்து (முன்போலவே) கூடினாலும், நோக்கின் அவர் பெருமை நொய்து ஆகும் - பார்க்கு மிடத்து அவருடைய பெருமை அற்பமாகும். (க-து) இடையே பகைமையாற் பிரிந்து கூடும் நட்பு முன் போல் உறுதியுடையதாகாது (எ - ம்.) (5) காதலர் ஒருமை 6. காதன் மனையாளுங் காதலனும் மாறின்றித் தீதி லொருகருமஞ் செய்பவே - ஓதுகலை எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கறான் கண்ணிரண்டு மொன்றையே காண். (பத.) ஓது - புகழ்ந்து சொல்லப்படுகின்ற, எண்ணிரண்டு கலையும் ஒன்றும் - பதினாறு கலைகளும் பொருந்திய, மதி என் முகத்தாய்- சந்திரன் என்று சொல்லப்படும் முகத்தை யுடையவளே!, கண் இரண்டும் - இரண்டு கண்களும், நோக்கல் - பார்த்தல், ஒன்றையே - ஒரு பொருளையேயாம்; (அதுபோல) காதல் மனையாளும் காதலனும் - அன்பையுடைய மனைவியும் கணவனும், மாறு இன்றித் தீது இல் ஒரு கருமமே செய்ப - (தம்முள்ளத்தில்) மாறுபாடில்லாமல் (ஒத்துக்) குற்ற மில்லாத ஒரு கருமத்தையே செய்வர். தான்: அசை. காண்: முன்னிலையசை. (க - து.) கணவனும் மனைவியும் ஒத்துச் செய்யும் அறமே நிறைவேறும் (எ - ம்.) (6) கல்விச் செருக்கு விடுக 7. கடலே யனையம்யாங் கல்வியா லென்னும் அடலே றனையசெருக் காழ்த்தி - விடலே முனிக்கரசு கையான் முகந்து முழங்கும் பனிக்கடலும் உண்ணப் படும். (பத.) முழங்கும் பனிக்கடலும் - ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய கடலும், முனிக்கு அரசு கையால் - முனிவர்களுக்குத் தலைவராகிய அகத்திய முனிவர் கையால், முகந்து உண்ணப்படும்- மொண்டு பருகப்படும்; (ஆதலால்) யாம் - நாம், கல்வியால் கடல் அனையம் - கல்விப் பெருமையால் கடலை நிகர்ப்போம், என்னும்- என்று கொள்கின்ற, அடல் ஏறு அனைய செருக்கு - வலிமை பொருந்திய ஆண் சிங்கத்தினது செருக்கைப் போலும் செருக்கிலே, ஆழ்த்திவிடல் - (உங்களை) அமிழ்த்திவிடாதிருங்கள். ஏ இரண்டும் அசை (க-து.) எத்துணைப் பெருங்கல்வி யுடையவரும், செருக்கடைவாராயின் வல்லவரொருவராலே தப்பாது வெல்லப்படுவர் (எ - ம்.)(7) சினத்தைக் காத்துக் கொள்க 8. உள்ளம் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக் கொள்ளும் குணமே குணமென்க - வெள்ளந் தடுத்த லரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்த லரிதோ விளம்பு. (பத.) உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்குசினம் - மனத்தைத் தன்வயத்ததாக்கிக் கொண்டு எழுந்து வளர்கின்ற கோபத்தை, காத்துக் கொள்ளும் குணமே குணம் என்க - அடக்கிக் கொள்கின்ற கு'99மே (அருமையாகிய)குணம் என்று அறியக்கடவாய்; வெள்ளம் தடுத்தல் அரிதோ - (பெருகி வருகின்ற) வெள்ளத்தை (கரை கட்டி)த் தடுத்தல் அரியதோ, தடம் கரை பேர்த்து விடுத்தல் அரிதோ - முன் கட்டப்பட்டிருந்த பெரிய கரையை உடைத்து (அதனுள் அடங்கியிருந்த வெள்ளத்தைப் புறத்திலே செல்ல) விடுத்தல் அரியதோ, விளம்பு - நீ சொல்வாயாக, தான்: அசை (க-து) சினங்கொள்ளுதல் எளிது; சினத்தை அடக்குதல் அரிது. ஆதலின், அரியதைச் செய்தலே பெருமை (எ - ம்) (8) சார்பின் வலி 9. மெலியோர் வலிய விரவலரை யஞ்சார் வலியோர் தமைத்தா மருவில் - பலியேல் கடவு ளவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே படர்சிறையைப் புள்ளரசைப் பார்த்து. (பத.) பலி ஏல் - (அன்பருடைய) பூசையை ஏற்றுக்கொள்ளும், கடவுள் - சிவபெருமானது, அவிர் சடைமேல் கட்செவி- விளங்குகின்ற சடையின்மேல் அணியப்பட்டிருக்கின்ற பாம்பானது, படர் சிறை விரிந்த சிறகினையுடைய, அப் புள் அரசைப் பார்த்து - அந்தப் பறவைகட்கு அரசாகிய கருடனைப் பார்த்து, அஞ்சாது - பயப்படாது; (அவ்வாறே) மெலியோர் - வலிமையில்லாதவர், வலிய விரவலரை - வலிமை யுடைய பகைவருக்கு, தாம் வலியோர் தமை மருவில் அஞ்சார் - தாம் (அவரினும்) வலியோரைச் சேர்ந்தால் பயப்படார். ஏ: அசை (க - து) பகைவர் வலியவராயவிடத்து, அவரினும் வலியவரைச் சேர்ந்தாற் பயமில்லை (எ - ம்) (9) தன்னலங் கருதாமை 10. தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம் வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள் கறையிருளை நீக்கக் கருதா துலகின் நிறையிருளை நீக்குமே னின்று. (பத.) திங்கள் - சந்திரனானவன், கறை இருளை நீக்கக் கருதாது - தனது களங்கமாகிய இருளை நீக்குதற்கு நினையாமல், மேல் நின்று உலகின் நிறை இருளை நீக்கும் - ஆகாயத்திலே நின்று உலகத்து நிறைந்த இருளை நீக்குவான்; (அதுபோல்) விழுமியோர்- மேலோர், தம் குறை தீர்வு உள்ளார் - (தமது)குறை நீக்குதலை நினையாராகி, தளர்ந்து - மனம் இளகி, பிறர்க்கு உறும் - பிறருக்கு உண்டாகிய, வெம் குறை - வெவ்விய குறையை, தீர்க்கிற்பார் - நீக்குவார். (க-து) மேலோர் தங்குறையை நீக்காது பிறர்குறையை நீக்குவர் (எ - ம்) (10) புலன்களால் வரும் புன்மை 11. பொய்ப்புலன்க ளைந்துநோய் புல்லியர்பா லன்றியே மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பிற் சுழற்றுங்கொல் கற்றூணைச் சூறா வளிபோய்ச் சுழற்றுஞ் சிறுபுன் றுரும்பு. (பத.) சூறாவளி போய் - சுழற்காற்றானது சென்று, சிறு புல் துரும்பு - சிறிய நொய்தாகிய துரும்பை, சுழற்றும் - (எடுத்துச்) சுழற்றும்; துப்பின் - (அது - தன்) வலிமையால், கல்தூணைச் சுழற்றும் கொல் - கல்லுக்கம்பத்தைச் சுழற்றுமோ - (சுழற்றமாட்டாது;) (அதுபோல) பொய்ப் புலன்கள் ஐந்தும் - பொய்யாகிய ஐந்து புலன்களும், புல்லியர் பால் அன்றி - புல்லறிவாளரிடத் தல்லாமல், மெய்ப் புலவர் தம்பால் - மெய்யறி வுடையவரிடத்தே, நோய் விளையா - துன்பத்தைச் செய்யமாட்டா. ஏ, ஆம்: அசை. (க-து) ஐம்புலன்களினால் மூடரேயன்றி, மெய்யறிவுடையவர் துன்பமடையார் (எ - ம்.) புலன்கள் ஐந்தாவன: ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்பன. (11) உடம்பில் உயிர் அமைப்பு 12. வருந்து முயிரொன்பான் வாயி லுடம்பிற் பொருந்துத றானே புதுமை - திருந்திழாய்! சீதநீர் பொள்ளற் சிறுகுடத்து நில்லாது வீதலோ நிற்றல் வியப்பு. (பத.) திருந்து இழாய் - திருந்திய அணிகலன்களை யுடையவளே, சீதநீர் - குளிர்ச்சியாகிய நீரானது, பொள்ளல் சிறுகுடத்து நில்லாது வீதலோ - இல்லிலையுடைய சிறிய குடத்திலே நில்லாது ஒழுகிப் போதலோ (ஆச்சரியம்), நிற்றல் வியப்பு - நிற்றலே ஆச்சரியமாகும்; (அதுபோல) வருந்தும் உயிர் - வருந்துகின்ற உயிரானது, ஒன்பான் வாயில் உடம்பில் பொருந்துதலே புதுமை- ஒன்பது துவாரங்களை யுடைய உடம்பிலே தங்குதலே ஆச்சரியம்; (நீங்குதல் - ஆச்சரியமன்று.) தான் : அசை. (க-து.) ஒன்பது தொளைகளையுடைய உடம்பிலே உயிர் நிற்றலுக்கன்றி நீங்குதலுக்கு ஆச்சரிய மடைதல் பேதைமை(எ - ம்.) (12) அன்பின் உதவுக 13. பெருக்க மொடுசுருக்கம் பெற்றபொருட் கேற்ப விருப்ப மொடுகொடுப்பர் மேலோர் - சுரக்கு மலையளவு நின்றமுலை மாதே! மதியின் கலையளவு நின்ற கதிர். (பத.) மலை அளவு நின்ற சுரக்கும் முலை மாதே - மலையளவாக நின்ற (பால்) சுரக்கின்ற தனங்களையுடைய பெண்ணே, மதியின் கதிர் கலை அளவுநின்ற - நிலாவினுடைய கிரணங்கள் வளர்தலை யும் தேய்தலையும் பொருந்திய கலைகளினளவாக நின்றன; (அதுபோல) மேலோர் - பெரியோர்; பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப - வளர்தலையும் குறைதலையும் பொருந்திய செல்வத்திற்கு இசைய, விருப்பமொடு கொடுப்பர் - அன்போடு கொடுப்பர். (க -து) பெரியோர் தாம்பெற்ற செல்வத்திற்கேற்ப மிகுதியாகவும் குறைவாகவும் கொடுப்பர்; ஒன்றும் கொடாதிரார் (எ -ம்) (13) செல்வச் செருக்கு விடுக 14. தொலையாப் பெருஞ்செல்வத் தோற்றத்தோ மென்று தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால் இரைக்கும்வண் டூதுமல ரீர்ங்கோதாய்! மேரு வரைக்கும்வந் தன்று வளைவு. (பத.) இரைக்கும் வண்டு ஊதும் - ஒலிக்கின்ற வண்டுகள் ஊதுகின்ற, மலர்ஈர்ங்கோதாய் - பூக்களாலாகிய குளிர்ச்சி பொருந்திய மாலையை யுடையவளே, மேருவரைக்கும் வளைவு வந்தன்று - (எக்காலத்தினும் அசைவற்றிருந்த) மகாமேரு மலைக்கும் (ஒரு காலத்தில்) வளைவு வந்தது; (ஆதலால்) தலையாயவர் - முதன்மையான அறிவுடையவர்கள், தொலையா - அழியாத, பெருஞ் செல்வம் - பெரிய செல்வத்திலே, தோற்றத்தோம் என்று - பிறந்திருக் கின்றோம் என்று, செருக்குச் சார்தல் இலை - செருக்கடைதல் இல்லை. ஆல் - அசை. (க-து) எத்துணைப் பெருஞ் செல்வத்துக்கும் அழிவு வருமென்றறிந்து அடங்குவோரே அறிவுடையோர் (எ - ம்). (14) அன்பிலார்க்குச் செல்வம் பயனில்லை 15. இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளேவன்மற்று எல்லா மிருந்தும்அவற் கென்செய்யும் - நல்லாய் மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும் விழியிலார்க் கேது விளக்கு. (பத.) நல்லாய் - நற்குணமுடையவளே, மொழி இலார்க்கு முது நூல் ஏது - பேச்சில்லாதவராகிய ஊமைகளுக்குப் பழமை யாகிய நூல் யாது பயனைச் செய்யும்; தெரியும் விழி இலார்க்கு விளக்கு ஏது - பார்க்கின்ற கண்ணில்லாதவராகிய குருடர்க்குத் தீபம் யாது பயனைச் செய்யும்; (அதுபோல) இங்கு அன்பு இல்லானுக்கு - இவ் வுலகத்தில் அன்பில்லாதவனுக்கு, இடம் பொருள் ஏவல் எல்லாம் இருந்தும் - இடமும் பொருளும் ஏவலுமாகிய இவை யெல்லாம் இருந்தும், அவர்க்கு என் செய்யும் - அவனுக்கு யாது பயனைச் செய்யும்? (ஒரு பயனுஞ் செய்யா.) மற்று: அசை. (க-து.) அன்பில்லாதவன், இடம் பொருளேவல்களுடைய வனாயினும், அவைகொண்டு அறமும் புகழுஞ் செய்துகொள்ள மாட்டான் (எ- ம்). (15) மேலோர் அன்புடையார்க்குத் தாமே உதவுவர் 16. தம்மையுந் தங்க டலைமையையும் பார்த்துயர்ந்தோர் தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின் இழியினுஞ் செல்வ ரிடர்தீர்ப்ப ரல்கு கழியினுஞ்செல் லாதோ கடல். (பத.) கடல் - (பெரிய) கடலானது, அல்கு கழியினும் - (தன்னை அடுத்த) சிறிய உப்பங்கழியிலும், செல்லாதோ - போய்ப் பாயாதோ (போய்ப் பாயும்; அதுபோல) உயர்ந்தோர் - (அறிவொழுக்கங் களினால்) உயர்ந்தவர்கள்; தமை அடைந்தோர் தம்மின் இழியினும் - தங்களைச் சார்ந்தவர்கள் தங்களைப் பார்க்கினும் தாழ்ந்தவர் களாயினும், தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்துத் தம்மை மதியார் - தங்களையும் தங்களுடைய தலைமையையும் பார்த்துத் தங்களை மதியாதவர்களாகி, செல்வர் இடர் தீர்ப்பர் - (அவர்கள் இருக்கும் இடத்துக்குப்) போய் (அவர்களுடைய) துன்பத்தை நீக்குவார்கள். (க-து.) மேலோர் தம்மைச் சார்ந்தவர் தம்மிற் றாழ்ந்தவ ராயினும் செருக்கின்றி அவரிடந் தேடிச்சென்று பாதுகாப்பர் (எ- ம்). (16) வறுமையிலும் உதவி 17. எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ! நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க் கன்று முதவுங் கனி. (பத.) பைந்தொடீ - பசும்பொன்னாலாகிய வளையல்களை யுடையவளே, எந்தை இரப்பார்க்கு ஈந்து நல்கூர்ந்தான் என்று - எங்கள் பிதா இரப்பவருக்குக் கொடுத்து வறியனானான் என்று, அவன் மைந்தர் தம் ஈகை மறுப்பரோ - அவனுடைய புதல்வர் தம் ஈகையைக் கைவிடுவரோ, (விடார்; எதுபோல எனின்) நின்று பயன் உதவி நில்லா - (முன்னே அழிவில்லாமல்) நின்றுகொண்டு (பழமாகிய) பயனைக் கொடுத்து (அதனாலே) அழிவை யடைந்த, அரம்பையின் - வாழைமரத்தினது, கீழ்க்கன்றும் - கீழ்நிற்கின்ற கன்றும், கனி உதவும் - பழத்தைக் கொடுக்கும் (அதுபோல). (க-து.) தந்தை இரப்பவர்க்கு ஈந்து வறியனானானென்று அவன் மக்கள் ஈகையைக் கiடார் (எ -ம்). (17) இன்சொல் 18. இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம் வன்சொலா லென்றும் மகிழாதே - பொன்செய் அதிர்வளையாய்! பொங்கா தழற்கதிராற் றண்ணென் கதிர்வரவால் பொங்குங் கடல். (பத.) பொன் செய் அதிர் வளையாய் - பொன்னாலே செய்யப்பட்ட ஒலிக்கின்ற வளையல் களையுடையவளே, கடல் தண் என் கதிர் வரவால் பொங்கும் - கடலானது குளிர்ச்சி பொருந்திய கிரணங்களையுடைய நிலாவின் வருகையினால் பொங்கும்; (அதுவன்றி) அழற்கதிரால் பொங்காது - வெம்மை பொருந்திய கிரணங்களையுடைய சூரியன் வருகையினாலே பொங்காது; (அதுபோல) இருநீர் வியன் உலகம் - பெரிய கடல் சூழ்ந்த பரந்த உலகத் திலுள்ளவர், இன்சொலால் அன்றி வன்சொலால் என்றும் மகிழாது - இன்சொல்லினாலல்லாமற் கடுஞ் சொல்லினால் எந்நாளும் மகிழ்ச்சியடையார். ஏ: அசை. (க-து.) இன்சொல்லினாலன்றி வன்சொல்லினால் ஒருவரும் மகிழ்ச்சியடையார் (எ - ம்). (18) நற்குணம் 19. நல்லோர் வரவால் நகைமுகம்கொண் டின்புறீஇ அல்லோர் வரவான் அழுங்குவார் - வல்லோர் திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா வருந்துஞ் சுழற்கால் வர. (பத.) தேமா - தேமாமரமானது, தென்றல் வரத் தளிர் காட்டித் திருந்தும் - தென்றற்காற்று வரத் தளிரைக் காட்டிச் சிறப் புற்றிருக்கும்; சுழல்கால் வர வருந்தும் - சுழற்காற்று வர வருந்தும்; (அதுபோல) வல்லோர் - (கல்வியறிவில்) வல்லவர், நல்லோர் வரவான் முகநகை கொண்டு இன்பு உறீஇ - நல்லவருடைய வருகையினாலே முகமலர்ச்சி கொண்டு இன்பத்தை அடைந்து, அல்லோர் வரவான் அழுங்குவார் - தீயவருடைய வருகையினாலே துன்பத்தை அடைவார். (க-து.) கல்வியறிவுடையவர்க்கு, நல்லோர் வரவினாலே இன்பமும்; தீயோர் வரவினாலே துன்பமும் விளையும் (எ - ம்.) (19) பிறர் துன்பங்கண்டு உள்ளங் கசிதல் 20. பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம் எரியின் இழுதாவர் என்க - தெரியிழாய்! மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக் கண்டு கலுழுமே கண். (பத.) தெரிஇழாய் - ஆராய்ந்த அணிகலன்களையுடையவளே! கண் - கண்கள், மண்டு பிணியால் வருந்து பிற உறுப்பைக் கண்டு - நெருங்கிய நோயினால் வருந்துகின்ற மற்றைய உறுப்புக்களைப் பார்த்து, கலுழும் - அழும்; (அதுபோல) பெரியவர் - (அறிவொழுக் கங்களிற்) பெரியவர். பிறர் நோய் கண்டு - பிறருக்கு வந்த நோயைக் கண்டு, தம் நோய்போல் உள்ளம் எரியின் இழுது ஆவர் என்க - தமக்கு வந்த நோய்போல் நினைத்து மனம் நெருப்பிலே பட்ட நெய்போல உருகுவார் என்று அறியக்கடவாய். ஏ: அசை. (க-து.) பிறருக்கு வருந் துன்பத்தைக் கண்டபோது இரங்குதல் பெரியோர்க்கு இயல்பாகும் (எ - ம்.) (20) அறிவிலார் செருக்கு அறிஞர்முன் அடங்கும் 21. எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம் - எழுத்தறிவார் ஆயுங் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயுஞ் சுரநீர் மிகை. (பத.) சுரநீர் மிகை - ஆகாய கங்கையின் பெருக்க மானது, எழுத்து அறிவார் ஆயும் கடவுள் - எழுத்துக்களி னியல்பை அறியும் பேரியோரால் ஆராயப்படும் சிவபெருமானது, அவிர் சடைமுன் கண்ட அளவில் - விளங்குகின்ற சடையை எதிரே கண்ட அளவில், வீயும் - அடங்கிவிடும்; (அதுபோல) எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் - இலக்கண நூலை அறியாதவருடைய மற்றைக் கல்வியினது பெருக்க முழுதும், எழுத்து அறிவார்க் காணின் இலை - இலக்கண நூலை அறிந்தவரைக் கண்டால் இல்லாமற் போகும். ஆம் : அசை. (க-து.) இலக்கண நூலுணர்ச்சியில்லாத வருடைய கல்வி இலக்கண நூலுணர்ச்சி யுடையாரெதிரே பயன்படாது (எ - ம்) (21) பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை 22. ஆக்கும் அறிவா னலது பிறப்பினான் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க - நீக்கு பவரார் அரவின் பருமணிகண் டென்றுங் கவரார் கடலின் கடு. (பத.) அரவின் பருமணி கண்டு நீக்குபவர் ஆர் - (நஞ்சை யுடைய) பாம்பினிடத்து உண்டாகிய பருத்த மாணிக்கத்தைக் கண்டு நீக்குவோர் யாவர்; (ஒருவருமில்லை) கடலின் கடு என்று கவரார் - பாற்கடலினிடத்து உண்டாகிய நஞ்சை ஒருநாளும் கொள்வாருமில்லை; (ஆதலால்) மீக்கொள் உயர்வு இழிவு - மேலாகக் கொள்கின்ற உயர்வையும் (கீழாகக் கொள்கின்ற) இழிவையும், ஆக்கும் அறிவான் அலது பிறப்பினான் வேண்டற்க- (நற்குணங்களை) உண்டாக்குகின்ற கல்வியறிவினானல்லாமல் சாதியினாலே விரும்பாதிருக்கக் கடவீர். (க-து.) எக்குலத்தினராயினும் அறிவுடையோரை உயர்ந்தவ ராகவும் அறிவில்லாதோரை இழிந்தவராகவும் கொள்ள வேண்டும் (எ - ம்.) (22) மனவுறுதி நெகிழலாகாது 23. பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய்! பலகால் எறும்பூரக் கற்குழியு மே. (பத.) பூரிக்கின்ற முலைப் பேதாய் - விம்முகின்ற தனங்களை யுடைய பெண்ணே, பலகால் எறும்பு ஊரக் கல் குழியும் - பலதரம் சிற்றெறும்புகள் ஊர்ந்து கொண்டு வந்தாலும் கருங் கல்லும் குழிந்து போகும், (அதுபோல) மடவார் பகர்ச்சி பயில - பெண் களிடத்தில் வாய்ப் பேச்சோடு பழகிக்கொண்டு வந்தாலும், நோன்பு ஆற்றல் திகழ்ச்சி தரும் நெஞ்சத் திட்பம் நெகிழ்ச்சி பெறும் - தவத்தைச் செய்தலில் விளங்குகின்ற (ஒருவனுடைய) மனத்தின் உறுதியானது (நாளுக்குநாள்) தளர்ந்துபோகும். ஏ: அசை. (க-து.) மாதர்களிடம் பேசிப் பழகுதலால் தவஞ் செய்தற் குரிய மனவுறுதியும் கெட்டுவிடும் (எ - ம்). (23) கீழோர் பிறர்குற்றமே பேசுவர் 24. உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே - வண்டுமலர்ச் சேக்கை விரும்புஞ் செழும்பொழில்வாய் வேம்பன்றோ காக்கை விரும்புங் கனி. (பத.) செழும் பொழில்வாய் - செழுமையாகிய சோலையினிடத்தே, மலர்ச்சேக்கை வண்டு விரும்பும் - பூவாகிய மெத்தையை வண்டுகள் விரும்பும், வேம்பு அன்றோ காக்கை விரும்பும் கனி - வேப்பம்பழமன்றோ காக்கைகள் விரும்பும் பழம்; (அதுபோல) இங்கு ஒருவர்க்குக் குணம் உண்டு எனினும் - இவ் வுலகத்தில் ஒருவருக்கு நற்குணம் உள்ளதாயினும், கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே - கீழோர் எடுத்துப் பேசுவது அவருடைய குற்றமேயாகும். (க-து) ஒருவரிடத்துள்ள நற்குணத்தையே மேலோர் எடுத்துப் பேசுவர்; தீக்குணத்தையே கீழோர் எடுத்துப் பேசுவர் (எ - ம்.) (24) கீழோர் சேர்க்கை ஆகாது 25. கல்லா அறிவிற் கயவர்பாற் கற்றுணர்ந்த நல்லார் தமதுகனம் நண்ணாரே - வில்லார் கணையிற் பொலியுங் கருங்கண்ணாய் நொய்தாம் புணையிற் புகுமொண் பொருள். (பத.) வில் ஆர் கணையின் பொலியும் கருங்கண்ணாய் - வில்லோடு கூடிய அம்பைப்போலப் (புருவத்தோடுகூடி) விளங்கு கின்ற கருமையாகிய கண்களையுடையவளே, புணையில் புகும் ஒள்பொருள் நொய்து ஆம் - (கனமில்லாத) தெப்பத்திலே சேர்ந்த கனமுடைய பொருள் இலகுவாம்: (அதுபோல) கல்லா அறிவின் கயவர்பால் - கல்லாத அறிவினையுடைய மூடரிடத்திலே (சேர்ந்தால்), கற்று உணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணார் - கற்றறிந்த நல்லோர் தமது பெருமையை இழப்பர். (க-து.) கற்றறிந்தவர் மூடரிடத்தே சென்றால் தமது பெருமை இழப்பர் (எ - ம்.) (25) கல்விப் பெருமை கருதுக. 26. உடலின் சிறுமைகண் டொண்புலவர் கல்விக் கடலின் பெருமை கடவார் - மடவரால் கண்ணளவாய் நின்றதோ காணுங் கதிரொளிதான் விண்ணளவா யிற்றோ விளம்பு. (பத.) மடவரால் - இளமை பொருந்திய பெண்ணே, ஒள் புலவர் உடலின் சிறுமை கண்டு - ஒள்ளிய புலவருடைய உடலின் சிறுமையைக் கண்டு, கல்விக் கடலின் பெருமை கடவார் - (அவரின்) கல்வியாகிய கடலின் பெருமையை (ஒருவரும்) கடக்கமாட்டார்; கதிர் காணும் ஒளி - சூரியனுடைய ஒளியோடு கூடிக் காண்கின்ற கருமணி யொளியானது, கண் அளவு ஆய் நின்றதோ - (தனக்கிட மாகிய சிறிய) கண்ணினளவாக அடங்கி நின்றதோ, விண் அளவு ஆயிற்றோ விளம்பு - (தான் காண்கின்ற பெரிய) ஆகாயத்தினள வாக வியாபித்து நின்றதோ நீ சொல்லுவாயாக. தான்: அசை. (க-து.) உருவத்தாற் சிறியவரும் அறிவினாற் பெரிய வராயிருப்பர் (எ - ம்.) (26) கைம்மாறு கருதாது உதவுக 27. கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மால் இயலுதவி தாஞ்செய்வார் - அம்மா முளைக்கும் எயிறு முதிர்சுவை நாவிற்கு விளைக்கும் வலியனதாம் மென்று. (பத) முளைக்கும் எயிறு - முளைக்கின்ற பற்களானவை, நாவிற்கு - (தமக்கு ஓருபகாரஞ் செய்தற்கியலாத) நாக்குக்கு, வலியன தாம் மென்று முதிர்சுவை விளைக்கும் - கடினமாகிய தின்பண்டங் களைத் தாமே மென்று கொடுத்து நிறைந்த சுவையை உண்டாக்கும்; (அதுபோல) கற்று அறிந்தோர் - கற்றறிந்தவர், கைம்மாறு உகவாமல்- பிரதி யுபகாரத்தை விரும் பாமல், மெய்வருந்தித் தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - உடம்பு வருந்தித் தம்மால் இயன்ற உதவிகளைத் தாமே செய்வர். அம்மா: வியப்பிடைச் சொல். (க-து.) அறிவுடையார் கைம்மாறு வேண்டாமலே பிறருக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வர் (எ - ம்.) (27) வெறுப்பிலும் உதவுவர் மேலோர் 28. முனிவினும் நல்குவர் மூதறிஞ ருள்ளக் கனிவினும் நல்கார் கயவர் - நனிவிளைவில் காயினு மாகும் கதலிதா னெட்டிபழுத் தாயினும் ஆமோ அறை. (பத.) மூதறிஞர் முனிவினும் நல்குவர் - பேரறிவுடையவர் கோபமுள்ள காலத்திலும் கொடுப்பர், கயவர் உள்ளக் கனிவினும் நல்கார் - மூடர் மனமகிழ்ச்சி உள்ள காலத்திலும் கொடார், கதலி நனி விளைவு இல் காயினும் ஆகும் - வாழையானது மிக முற்று தலில்லாத காயானாலும் பயன்படும், எட்டி பழுத்து ஆயினும் ஆமோ அறை - எட்டியானது பழுத்தாலும் பயன்படுமோ நீ சொல்வாயாக. தான்: அசை. (க-து.) அறிவுடையவர் கோபத்தினுங் கொடுப்பர்; மூடர் மகிழ்ச்சியினுங் கொடார் (எ - ம்.) (28) இடுக்கண் அஞ்சாது உதவுக 29. உடற்கு வருமிடர்நெஞ் சோங்குபரத் துற்றோர் அடுக்கும் ஒருகோடி யாக - நடுக்கமுறார் பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ மண்ணிற் புலியைமதி மான். (பத.) பண்ணின் புகலும் பனிமொழியாய் - பண்ணைப் போலப் பேசுகின்ற குளிர்ச்சி பொருந்திய சொல்லையுடையவளே, மதிமான் - சந்திரனிடத் திலிருக்கின்ற மானானது, மண்ணில் புலியைக் கண்டால் அஞ்சுமோ - பூமியிலிருக்கிற புலிகளுக்குப் பயப்படுமோ (பயப்படாது; அதுபோல) நெஞ்சு ஓங்கு பரத்து உற்றோர் - (தம்முடைய) மனம் உயர்ந்த பரம்பொருளிடத்தே அழுந்தப் பெற்ற ஞானிகள், உடற்கு வரும் இடர் அடுக்கும் ஒருகோடி ஆக - (தம்முடைய) உடம்புக்கு வருந் துன்பங்கள் அடுக்கிச் சொல்லப்படும் ஒரு கோடியளவினவாக இருந்தாலும், நடுக்கம் உறார் - அச்சமடையார். (க - து.) கடவுளிடத்து மனம் அழுந்தப்பெற்றவர் எத்துணைப் பெருந் துன்பங்களுக்கும் அஞ்சார் (எ - ம்.) (29) காலத்தில் அறஞ்செய்க 30. கொள்ளுங் கொடுங்கூற்றங் கொல்வான் குறுகுதன்முன் உள்ளங் கனிந்தறஞ்செய் துய்கவே - வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் பெருகுதற்கண் என்செய்வார் பேசு. (பத.) கொள்ளும் கொடும் கூற்றம் கொல்வான் குறுகுதல் முன் - (உயிரைக்) கொண்டு செல்கின்ற கொடுமையாகிய யமனானவன் கொல்லும்படி அணுகுவதற்கு முன்னே, உள்ளம் கனிந்து அறம் செய்து உய்க - மனங்கரைந்து தருமங்களைச் செய்து பிழைக்கக் கடவாய்; வெள்ளம் வருவதற்கு முன்னர் அணைகோலி வையார் - வெள்ளம் வருவதற்கு முன்னே கரையைக் கட்டி வையாதவர், பெருகுதற்கண் என்செய்வார் பேசு - (அது) பெருகி வரும்பொழுது யாது செய்வார், நீ சொல்வாயாக. ஏ: அசை. (க-து.) இறப்பு வருமுன்னே அறத்தை விரைந்து செய்தல் வேண்டும் (எ ம்.) (30) பிறர் துயரந் தாங்குக 31. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரந் தாங்கியே வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்! மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன்மேற் கைசென்று தாங்குங் கடிது. (பத.) நேர் இழாய் - தகுதியாகிய ஆபரணத்தை யுடையவளே, மெய் சென்று தாக்கும் வியன்கோல் அடி - உடம்பிலே போய்த் தாக்குகின்ற பெரிய கோலினுடைய அடியை, கை கடிது சென்று தன்மேல் தாங்கும் - கை விரைந்து போய்த் தன்மேலே ஏற்றுக் கொள்ளும்; (அதுபோல) பேர் அறிஞர் - பெரிய அறிவை யுடையவர், தாக்கும் பிறர் துயரம் வீரமொடு தாங்கி - வருத்துகின்ற பிறருடைய துன்பத்தை வீரத்தொடு தாம் ஏற்றுக் கொண்டு, காக்க விரைகுவார்- (அவரைப்) பாதுகாத்தற்கு முற்படுவர், ஏ: அசை. (க-து.) பேரறிவுடையோர் பிறருக்கு வருந்துன்பத்தை விரைந்து நீக்குவர் (எ - ம்.) (31) மெய்யுணர்ந்து உதவுக 32. பன்னும் பனுவற் பயன்றே ரறிவிலார் மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்! காமொன் றுயர்திண் கதவு வலியுடைத்தோ தாழொன் றிலதாயிற் றான். (பத.) நல் நுதால் - நல்ல நெற்றியையுடையவளே, காழ் ஒன்று உயர் திண் கதவு - வயிரம் பொருந்திய உயர்ந்த வலிய கதவானது, தாழ்ஒன்று இலது ஆயின் வலி உடைத்தோ - ஒரு தாழ் இல்லாத தாயின் உறுதியை உடைத்தாகுமோ, (உடைத்தாகாது; அதுபோல) பன்னும் பனுவல் பயன் தேர் அறிவு இலார் - சொல்லப் படுகின்ற நூல்களினது பொருளை அறியும் விவேக மில்லாதவர் செய்யும், மன்னும் அறங்கள் வலி இலவே - மிகுந்த தருமங்கள் உறுதி யில்லாதனவேயாம். தான்: அசை. (க-து.) விதிவிலக்குகளைப் பகுத்தறியும் அறிவில்லாதவர் செய்யுந் தருமங்கள் பயன்படா (எ - ம்.) (32) பெரியோர் போற்றுதல் வேண்டார் 33. எள்ளா திருப்ப இழிஞர்போற் றற்குரியர் விள்ளா அறிஞரது வேண்டாரே - தள்ளாக் கரைகாப் புளதுநீர் கட்டுகுள மன்றிக் கரைகாப் புளதோ கடல். (பத.) நீர்கட்டு குளம் தள்ளாக் கரை காப்பு உளது - நீரைக் கட்டி வைக்கின்ற (சிறிய) குளமே தள்ளப்படாத கரை காவலாக உள்ளது; அன்றிக் கடல் கரை காப்பு உள்ளதோ - அதுவல்லாமற் (பெரிய) கடலானது கரை காவலாக உள்ளதோ (உள்ளதன்று; அதுபோல), இழிஞர் எள்ளாது இருப்பப் போற்றற்கு உரியர் - அறிவில்லாத சிறியோர் (தம்மைப் பிறர்) இகழாதிருக்கும்படி காக்கப்படுதற்கு உரியவராவர், விள்ளா அறிஞர் அது வேண்டார் - நீங்காத அறிவுடைய பெரியோர், அங்ஙனம் காக்கப்படுதல் வேண்டார். ஏ : அசை. (க-து.) பிறர் இகழாவண்ணங் காக்கப்படுதல் சிறியோருக் கன்றிப் பெரியோருக்கு வேண்டுவதில்லை (எ - ம்.) (33) பெரியோர் பழிக்கு அஞ்சுவர் 34. அறிவுடையா ரன்றி அதுபெறார் தம்பாற் செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால் வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக் கண்ணஞ்சு மோஇருளைக் கண்டு. (பத.) பிறைநுதால் - பிறைபோலும் நெற்றியையுடையவளே! வண்ணம் செய் வாள்விழியே அன்றி- அழகு செய்கின்ற ஒளியை யுடைய கண்களே யல்லாமல், மறை குருட்டுக்கண் - (ஒளி மறைந்த) குருட்டுக் கண்களானவை, இருளைக் கண்டு அஞ்சுமோ - இருட்டைக் கண்டு அஞ்சுமோ, (அஞ்சா; அதுபோல) அறிவுடையார் அன்றி - அறிவுடையவரே யல்லாமல், அது பெறார் - அவ்வறிவைப் பெறாத மூடர்; தம்பால் செறிபழியைச் சிறிதும் அஞ்சார் - தம்மிடத்து நெருங்கிவரும் பழியைச் சிறிதும் அஞ்சார். (க-து.) அறிவுடையோர் பழிக்கு அஞ்சுவர்; மூடர் அஞ்சார் (எ - ம்) (34) மேன்மக்கள் நல்லோரை விரும்புவர் 35. கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள் மற்றையர்தாம் என்றும் மதியாரே - வெற்றிநெடும் வேல்வேண்டும் வாள்விழியாய்! வேண்டா புளிங்காடி பால்வேண்டும் வாழைப் பழம். (பத.) வெற்றி நெடும் வேல் வேண்டும் வாள் விழியாய் - வெற்றியையுடைய நெடிய வேற்படை விரும்புகின்ற ஒளி பொருந்திய கண்களையுடையவளே! வாழைப்பழம் பால் வேண்டும் - வாழைப்பழத்தைப் (தித்திப்பாகிய) பாலானது அவாவும், புளிங் கொடி வேண்டா - புளிப்பாகிய காடிநீரானது (அதனை) அவாவாது; (அதுபோல) கற்ற அறிவினரை மேன் மக்கள் காமுறுவர் - (நூல் களைக்)கற்ற அறிவுடையவரை மேலோர் விரும்புவர்; மற்றையர் என்றும் மதியார் - கீழோர் (அவரை) எப்போதும் மதியார். தாம், ஏ : அசை. (க-து.) கல்வி அறிவுடையவரை மேன்மக்களே விரும்புவர்; கீழ்மக்கள் விரும்பார் (எ - ம்) (35) தக்கார்க்கே உதவி செய்க 36. தக்கார்க்கே ஈவர் தகார்க்களிப்பா ரில்லென்று மிக்கார்க் குதவார் விழுமியோர் - எக்காலும் நெல்லுக் கிறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி புல்லுக் கிறைப்பரோ போய். (பத.) எக்காலும் நீர் நெல்லுக்கு இறைப்பதே அன்றி - எக்காலத்தும் நீரை நெற்பயிருக்கே இறைப்பதல்லாமல், காட்டு முளிபுல்லுக்குப்போய் இறைப்பரோ - காட்டினிடத்தே உலரும் புல்லுக்குப் போய் இறைப்பரோ; (இறையார்; அதுபோல) தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல் என்று - தகுதியுடையவருக்கே கொடுப்பார்; தகுதியற்றவருக்குக் கொடுப்பவர் இல்லையென்று அறிந்து, விழுமியோர் - மேலோர், மிக்கார்க்கு உதவார் - நன்னெறி கடந்தவர்க்குக் கொடார். (க-து.) மேலோர் தகுதியுடையவருக்கன்றித் தகுதியில்லாத வர்க்குக் கொடார் (எ - ம்.) (36) தற்புகழ்ச்சியால் தாழ்வு அடைபவர் 37. பெரியார்முன் தன்னைப் புகழ்ந்துரைத்த பேதை தரியா துயர்வகன்று தாழும் - தெரியாய்கொல் பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய்! விந்தமலை தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து. (பத.) பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய் - இலக்குமி யுடைய உயர்வை (அழகினாலே) நீக்கிய நெருங்கிய தனங்களை யுடையவளே, பெரியோர்முன் தன்னைப் புனைந்து உரைத்த பேதை - பெரியார் முன்னே தன்னைச் சிறப்பித்துச் சொல்லிய மூடன், உயர்வு தரியாது அகன்று தாழும் - உயர்வைப் பொறுக்க மாட்டாது இழந்து தாழ்வை யடைவன், விந்தமலை தாழ்ந்து தன் உயர்வு தீர்ந்தன்று - (அகத்திய முனிவர் முன்னே தன்னைச் சிறப்பித்துச் சொல்லிய) விந்தமலையானது (அவர் கையினாலே ஊன்றப் பாதாளத்திலே) தாழ்ந்து தன்னுடைய உயர்வு நீங்கியது; தெரியாய் கொல் - (நீ அதனை) அறியாயோ? (க-து.) பெரியாரெதிரே தன்னைப் புகழ்ந்து ரைத்தவன் தாழ்வையடைவன் (எ - ம்.) (37) தக்கார் தொடர்பு நலம் பெருக்கும் 38. நல்லார் செயுங்கேண்மை நாடோறும் நன்றாகும் அல்லார் செயுங்கேண்மை யாகாதே - நல்லாய்கேள் காய்முற்றின் தின்தீங் கனியாம் இளந்தளிர்நாள் போய்முற்றின் என்னாகிப் போம். (பத.) நல்லாள் கேள் - நற்குணத்தையுடையவளே! கேட்பாயாக, காய்முற்றின் தின் தீம் கனி ஆம் - காயானது (நாள் சென்று) முற்றினால் தின்னுதற்குரிய இனிய கனியாகும், இளம் தளிர் நாள்போய் முற்றின் என் ஆகிப்போம் - இளந்தளிரானது நாள்சென்று முற்றினால் யாதாகிப்போகும். (அதுபோல), நல்லார் செயும் கேண்மை நாடோறும் நன்று ஆகும் - நல்லோர் செய்யும் நட்பானது நாடோறும் நன்றாகி வளரும், அல்லார் செயும் கேண்மை ஆகாது - அல்லார் செய்யும் நட்பானது நல்லதாகாது. (க-து.) நல்லோர் நட்பு நாள் செல்லச் செல்ல இனிதாகும்; தீயோர் நட்பு அங்ஙனமாகாது கெடும் (எ - ம்.) (38) தகாதார் தொடர்பில் தீமை உள்ளது 39. கற்றறியார் செய்யுங் கடுநட்புத் தாங்கூடி உற்றுழியுந் தீமைநிகழ் வுள்ளதே - பொற்றொடீ சென்று படர்ந்த செழுங்கொடிமென் பூமலர்ந்த அன்றே மணமுடைய தாம். (பத.) பொன் தொடீ - பொன்னாலாகிய வளையல்களை யுடையவளே, சென்று படர்ந்த செழுங்கொடி மென்பூ - போய்ப் படர்ந்த செழுமையாகிய கொடியின் மெல்லிய பூவானது, மலர்ந்த அன்றே மணம் உடையது ஆம் - மலர்ந்த அன்றைக்கே மணம் உடையதாகிப் பின் கெட்டுவிடும் (அதுபோல), கற்று அறியார் செய்யும் கடு நட்பும் - கற்றறியாதவர்கள் செய்கின்ற மிகுதியாகிய நட்பும், தாம் கூடி உற்ற உழியும் - (நெடுங்காலம்) தாங்கள் கூடியிருந்தவிடத்தும், தீமை நிகழ்வே உள்ளது - தீங்கு விளைதலே உள்ளதாகும். (க-து.) மூடருடைய நட்புத் தொடக்கத்திலே நன்றாயினும், பின்பு தீங்கு விளைவிக்கும் (எ - ம்.) (39) தக்காரைப் போற்றிக் கொள்க 40. பொன்னணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி மன்னும் அறிஞரைத்தாம் மற்றொவ்வார் - மின்னுமணி பூணும் பிறவுறுப்புப் பொன்னே அதுபுனையாக் காணுங்கண் ஒக்குமோ காண். (பத.) பொன்னே - இலக்குமியைப் போன்றவளே, மின்னும் அணிபூணும் பிற உறுப்பு - விளங்குகின்ற, ஆபரணத்தை அணிந்து கொள்ளுகின்ற (கைகால் முதலிய) மற்றை அவயவங்களானவை, அது புனையாக் காணும் கண் ஒக்குமோ - அதனை அணியாத பார்க்கின்ற கண்களுக்கு ஒப்பாகுமோ? (ஒப்பாகா; அதுபோல), பொன் அணியும் வேந்தர் - பொன் ஆபரணங்களாலே அலங்கரித்துக் கொள்ளும் அரசர்கள், புனையாப் பெருங் கல்வி மன்னும் அறிஞரை ஒவ்வார் - (அதனை) அணியாத பெரிய கல்விப்பொருள் நிலை பெற்ற விவேகிகளுக்கு ஒப்பாகார். தாம், மற்று : அசை, காண்: முன்னிலையசை. (க-து.) புலவர்களுக்கு அரசர்களும் ஒப்பாகார் (எ - ம்.) (40) நன்னெறி மூலமும் உரையும் முற்றிற்று.  செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை பக்கம் அறிவுடையா 148 ஆக்கும் 143 இல்லானுக் 140 இன்சொலா 141 உடலின் சிறு 149 உடற்குவரு 146 உண்டுகுண 144 உள்ளங்கவர் 136 எந்தைநல் 141 எழுத்தறியார் 142 எள்ளாதிருப் 148 என்றுமுக 133 கடலேயனை 136 கல்லாஅறி 144 கற்றஅறிவி 149 கற்றறியார் 150 காதன்மனை 135 கைம்மாறுக 145 கொள்ளுங் 146 தக்கார்க் 149 பக்கம் தங்கட்குத 134 தங்குறைதீர் 137 தம்மையுந் 140 தொலையாப் 139 நல்லார்செயுங் 150 நல்லோர்வர 142 நீக்கமறும் 135 பகர்ச்சி 143 பன்னும்பனு 147 பிறர்க்குதவி 135 பெரியார்முன் 150 பெரியவர் தந்த 142 பெருக்கமொடு 139 பேரறிஞர் 147 பொய்ப்புலன் 138 பொன்னணியும் 151 மாசற்ற 134 மின்னெறி 133 முனிவினும் 146 மெலியோர் 137 வருந்துமுயி 138 நறுந்தொகை - அதிவீரராம பாண்டியர் முகவுரை நறுந்தொகை என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது. இவர் கொற்கை நகரத்திலிருந்து அரசு புரிந்தவரென்று, இந் நூற்பயன் கூறும் பாயிரத்தில் 'கொற்கையாளி' என வருதலால் அறியப்படு கின்றது. கொற்கை, பாண்டி மன்னர்கள் இருந்து அரசு புரியும் பதிகளிலொன்றாயிருந்ததென்பதைச் சிலப்பதிகாரத்திலே 'கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன்' எனக் கூறப்பட்டிருத் தலானும், பிறவிடத்தும் 'கொற்கைச் செழியர்' என வருதலானும், அறியலாகும். இப் பதி பாண்டிநாட்டில் முத்துக் குளிக்கும் துறை முகங்களுள் ஒன்றாயும் இருந்தது. சிறுபாணாற்றுப்படையில் 'உப்பு வாணிகரின் சகடவொழுங்கோடு கொற்கைக்கு வந்த மந்திகள் அங்குள்ள முத்துக்களைக் கிளிஞ்சலின் வயிற்றிலடக்கி உப்பு வணிகச் சிறாருடன் கிலுகிலுப்பையாடும்' என்று கொற்கை வருணிக்கப் பட்டிருக்கிறது. அதில், பாண்டியன் 'தத்துநீர் வரைப் பிற் கொற்கைக் கோமான்' எனக் கூறப்பட்டிருத்தலும் அறியற் பாலது. அதிவீரராம பாண்டியர் தென்காசி யிலிருந்து அரசு புரிந்தனரெனவும் கூறுவர். இவர் காலம் கி.பி. 11,12 ஆம் நூற்றாண்டு எனச் சிலரும், 15 ஆம் நூற்றாண்டு எனச் சிலரும் கூறாநிற்பர். இவர் தமிழில் நிரம்பிய புலமை வாய்ந்தவர். வட மொழிப் புலமையும் உடையவர். தமிழில் இவரியற்றிய நூல்கள் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிகாண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள், நறுந்தொகை முதலியனவாம். இவர் தமையனார் வரதுங்கராமபாண்டிய ரென்பவர். அவரும் சிறந்த புலவராய்த் தமிழில் பிரமோத்தர காண்டம் முதலிய நூல்கள் இயற்றியிருக்கின்றனர். அவர் மனைவியாரும் சிறந்த புலமையுடை யார் எனக் கூறுகின்றனர். இனி, இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக் கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது. திருக்கருவையில் எழுந்தருளி யிருக்கும் சிவபிரான்மீது இவர் பாடிய வெண்பாவந்தாதி, கலித்துறையந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி என்பன பத்திச்சுவை ததும்பும் துதி நூல்களாம். நறுந்தொகை யென்பது இளைஞர் பலராலும் படிக்கப்படுகின்ற நீதிநூல்களுளொன்றாக வுளது. இந் நூற்குப் பெயர் இதுவே யென்பது 'நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்' எனப் பாயிரத்திற் கூறியிருத்தலாற் பெறப்படும். அச் சூத்திரம் 'வெற்றி வேற்கை' என்று தொடங்கி யிருப்பது கொண்டு இதனை அப்பெயரானும் வழங்கி வருகின்றனர். நறுந்தொகை என்பது நல்லனவாகிய நீதிகளின் தொகை எனப் பொருள்படும். இதனால், பழைய நூல்களிலுள்ள நல்ல நீதிகள் பல இந்நூல்களே தொகுத்து வைக்கப்பட்டன என அறியலாகும். இதிலுள்ள நீதிகளெல்லாம் தொன்னூல்களிற் காணப்படுவனவே யெனினும், ஒரு சில புறநானூறு, நாலடியார் முதலியவற்றின் செய்யுள்களோடு சொல்லினும் பொருளினும் பெரிதும் ஒற்றுமையுற்று விளங்குகின்றன. அவை உரையில் அங்கங்கே காட்டப்பட்டுள்ளன. இந்நூல் முன் பலரால் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. அப் பதிப்புக்கள் ஒன்று ஒன்றனோடு பெரிதும் வேறுபட்டுள்ளன. அவற்றிற் காணப்படும் பாடவேறுபாடுகள் எண்ணிறந்தன. வாக்கியங்களின் முறையும் பலவாறாகப் பிறழ்ச்சி யடைந்துள்ளது. 'அதனால்' என்பது போலுஞ் சொற்கள் தனிச் சீராக வேண்டாத இடங்களிலெல்லாம் வைக்கப்பட்டுள்ளன. இப் பதிப்பில் இவை பலவற்றையும் கூடிய வரையில் திருத்தம் செய்து, இன்றியமையாத பாடவேறுபாடுகளையும் காட்டி, பதவுரை, பொழிப்புரைகளுடன் சிறப்புக் குறிப்புக்களும் திருந்த எழுதியிருப்பது காணலாகும். 'வாழிய நலனே வாழிய நலனே' என்னும் வாக்கியம் சில பதிப்புகளில் ஓரியைபுமின்றி நூலின் நடுவே வைக்கப்பட்டுள்ளது. ஒரு பதிப்பில் அஃது இறுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இப் பதிப்பிலும் அங்ஙனமே வாழ்த்தினை இறுதியில் அமைத்துளேம். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். நறுந்தொகை கடவுள் வாழ்த்து பிரணவப் பொருளாம் பெருந்தகை யைங்கரன் சரணஅற் புதமலர் தலைக்கணி வோமே. நூற் பயன் வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னாற் குற்றங் களைவோர் குறைவிலா தவரே. நூல் 1. எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். 2. கல்விக் கழகு கசடற மொழிதல். 3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். 4. வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும். 5. 1 மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை. 6. 2 வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல். 7. 3 உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல். 8. மந்திரிக் கழகு4வரும்பொரு ளுரைத்தல். 9. தந்திரிக் கழகு தறுக ணாண்மை. 10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல். 11. பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல். 12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல். 13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல். 14. 1அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல். 15. 2வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை. 16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை வானுற வோங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க் கிருக்க நிழலா காதே. 17. தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் 3கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. 18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர். 19. சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர். 20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர். 21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர். 22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர். 23. அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது. 24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது. 25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது. 26. புகைக்கினுங் காரகில் பொல்லாங்கு கமழாது. 27. கலக்கினும் தண்கடல் சேறா காது. 28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய். 29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே. 30. பெருமையுஞ் சிறுமையுந் 4தான்றர வருமே. 31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. 32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே. 33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே. 34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. 35. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினுங் கற்கை நன்றே. 36. கல்லா ஒருவன் குலநலம் 1பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. 37. நாற்பாற் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே. 38. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் 2கற்றோரை மேல்வரு கென்பர். 39. அறிவுடை யொருவனை யரசனும் விரும்பும். 40. அச்சமுள் ளடக்கி யறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்றே. 41. யானைக் கில்லை தானமுந் தருமமும். 42. பூனைக் கில்லை தவமுந் தயையும். 43. ஞானிக் கில்லை இன்பமுந் துன்பமும். 44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும். 45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும். 46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை. 47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை. 48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை. 49. உடைமையும் வறுமையு மொருவழி நில்லா. 50. குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். 51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர் அறக்கூழ்ச் சாலை யடையினு மடைவர். 52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினு மாளுவர். 53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினு மழிவர். 54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும். 55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினு மாகும். 56. மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடி யாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர். 57. இல்லோ ரிரப்பதும் இயல்பே யியல்பே. 58. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே. 59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லா மில்லை இல்லில் லோர்க்கே. 60. தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே. 61. குன்றுடை நெடுங்கா டூடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே. 62. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும் தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே. 63. கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே. 64. சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின் தேன்றேர் குறவர் தேயம் நன்றே. 65. காலையு மாலையும் நான்மறை யோதா அந்தண ரென்போர் அனைவரும் பதரே. 66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே. 67. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து அதன்பய னுண்ணா வணிகரும் பதரே. 68. வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே. 69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் 1பின்பவட் பாராப் பேதையும் பதரே. 70. தன்மனை யாளைத் 2தனிமனை யிருத்திப் பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே. 71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே. 72. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின். 73. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே. 74. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற் பொய்போ லும்மே பொய்போ லும்மே. 75. இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே இருவரும் பொருந்த வுரையா ராயின் 3மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிநின் றழுத கண்ணீர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாளா கும்மே. 76. பழியா வருவது மொழியா தொழிவது. 77. சுழியா வருபுனல் இழியா தொழிவது. 78. துணையோ டல்லது நெடுவழி போகேல். 79. புணைமீ தல்லது நெடும்புன லேகேல். 80. எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல்வா காதே. 81. வழியே யேகுக வழியே மீளுக. 82. இவைகா ணுலகிற் கியலா மாறே. வாழ்த்து வாழிய நலனே வாழிய நலனே. நறுந்தொகை மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன் சரணஅற் புதமலர் தலைக்கணி வோமே. (பதவுரை) பிரணவம் - பிரணவ மந்திரத்தின்;பொருள் ஆம்- அருத்தமாகிய, பெருந்தகை - பெருந்தன்மை யுடைய, ஐங்கரன் - ஐந்து கைகளை யுடையவராகிய விநாயகக் கடவுளின், சரணம் - திருவடியாகிய, அற்புதம் - அதிசயமிகுந்த, மலர் - செந்தாமரை மலரை, தலைக்கு அணிவோம் - தலையில் சூடிக்கொள்வோம் என்றவாறு. (பொழிப்புரை) பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்குவோம் என்றவாறு. பிரணவம் எல்லா மந்திரங்களுக்கும், வேதத்திற்கும் முதலாக வுள்ளது. யாம் என்னும் எழுவாய் தொக்குநின்றது; ஏ: ஈற்றசை. நூற்பயன் வெற்றி வேற்கை வீர ராமன் கொற்கை யாளி குலசே கரன்புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால் குற்றங் களைவோர் குறைவிலா தவரே. (பத.) கொற்கை - கொற்கை யென்னும் நகரை, ஆளி - ஆள்பவனும், குலசேகரன் - தன்குலத்திற்கு முடிபோல்பவனும் ஆகிய, வெற்றிவேல் கை - வெற்றி பொருந்திய வேலினை யேந்திய கையை யுடைய, வீரராமன் - அதிவீரராம பாண்டியன், புகல் - சொல்லிய, நல் தமிழ் தெரிந்த - நல்ல தமிழில் விளக்கமுற்ற, நறுந்தொகை தன்னால் - நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலால், குற்றம் களைவோர் - குற்றத்தைப் போக்குவோர், குறைவு இலாதவர் - சிறுமை இல்லாதவராவர் (எ -று). (பொழி.) கொற்கை நகரதிபனும் குலத்திற்கு மகுடம் போன்ற வனுமாகிய அதிவீரராம பாண்டியன் கூறிய நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலைக்கற்றுக் குற்றத்தைப்போக்கிக் கொள்வோர் ஒரு குறையும் இல்லாதவராவர் (எ று.) நறுந்தொகை யென்பதற்கு நல்ல நீதிகளைத் தொகுத்திருப்பது என்பது பொருள். இதுவே இந்நூலின் பெயர். இச்செய்யுளின் முதலில் 'வெற்றி வேற்கை' என்னுந்தொடர் இருத்தலால், அதனாலும் இந்நூலை வழங்குவர். ஏ - ஈற்றசை. நூல் 1. எழுத்தறி வித்தவ னிறைவ னாகும். (பத.) எழுத்து - எழுத்துக்களை, அறிவித்தவன் - கற்பித்த ஆசிரியன், இறைவன் ஆகும் - கடவுள் ஆவான். (பொழி.) ஒருவனுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியன் அவனுக்குத் தெய்வமாவான். எழுத்து முதலாகக் கற்பிக்க வேண்டுதலின் கல்வியை எழுத்து என்றார். ஆசிரியனைத் தெய்வமாகக் கருதி வணங்க வேண்டு மென்பது கருத்து. 2. கல்விக் கழகு கசடற மொழிதல். (பத.) கல்விக்கு - (ஒருவன் கற்ற) கல்விக்கு, அழகு - அழகாவது, கசடு அற - குற்றம் நீங்க, மொழிதல் - (தான் கற்றவற்றைச்) சொல்லுதல். (பொழி.) ஒருவன் கற்ற கல்விக்கு அழகாவது தான் கற்றவற்றைக் குற்றமறச் சொல்லுதல். கசடு, ஐயம் திரிபு என்பன. ஒருவன் தான் கற்றவற்றை ஐயம் திரிபு இன்றியும், திருத்தமாகவும் பிறருக்குச் சொல்லவேண்டும் என்பதாம். 3. செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல். (பத.) செல்வர்க்கு - பொருளுடையவர்க்கு, அழகு - அழகாவது, செழும் கிளை - நல்ல சுற்றத்தை, தாங்குதல் - பாதுகாத்தல். (பொழி.) செல்வமுடையோர்க்கு அழகாவது, சுற்றத்தார் வறுமையுற்ற பொழுது அவரைப் பாதுகாத்தல். கிளைபோன்றிருத்தலின் சுற்றம் கிளை யெனப்படும். செழுங் கிளை யென்பது நல்ல உறவு என்றும், தமக்கு அழகைச் செய்யும் உறவு என்றும் பொருள் படும். 4. வேதியர்க் கழகு வேதமு மொழுக்கமும். (பத.) வேதியர்க்கு - மறையோர்க்கு, அழகு - அழகாவன, வேதமும்-வேதம் ஓதுதலும், ஒழுக்கமும் - நல்லொழுக்கம் குன்றாதிருத்தலும் ஆம். (பொழி.) வேதத்தை மறவாமல் ஓதுதலும், ஒழுக்கத்திற் குன்றாமையும் அந்தணர்க்கு அழகாம். வேதத்தை மறந்தவரும், நல்லொழுக்க மில்லா தவரும் அந்தணராகார் என்பதாம். 5. மன்னவர்க் கழகு செங்கோன் முறைமை. (பத.) மன்னவர்க்கு - அரசருக்கு, அழகு - அழகாவது, செங்கோல் முறைமை - நீதி செலுத்தும் முறைமையாம். (பொழி.) அரசருக்கு அழகாவது நீதி செலுத்தும் இயல்பாம். நீதியானது செவ்விய கோல்போன்றிருத்தலின், அது செங்கோல் எனப்படும். தமது நாட்டை நீதியுடன் ஆளாதவர் அரசராகார் என்பதாம். 6. வைசியர்க் கழகு வளர்பொரு ளீட்டல். (பத.) வைசியர்க்கு - வணிகர்க்கு, அழகு - அழகாவது, வளர் பொருள் - வளர்கின்ற பொருளை, ஈட்டல் - தேடுதல். (பொழி.) வாணிகர்க்கு அழகாவது வளர்கின்ற பொருளைச் சேர்த்தல். வளர்தலாவது மேன்மேற் கிளைத்தல். 7. உழவர்க் கழகிங் குழுதூண் விரும்பல். (பத.) உழவர்க்கு - வேளாளர்க்கு, அழகு - அழகாவது, இங்கு - இந்நிலத்தில், உழுது - உழுது பயிர் செய்து, ஊண் - உண்டு வாழ்தலை, விரும்பல் - இச்சித்தல். (பொழி.) வேளாளர்க்கு அழகாவது பயிர் செய்து உண்டலை விரும்புதல். 8. மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல். (பத.) மந்திரிக்கு - அமைச்சனுக்கு, அழகு - அழகாவது, வரும்பொருள் - (மேல்) வரும் காரியத்தை; உரைத்தல் - (முன்னறிந்து) சொல்லுதல். (பொழி.) அமைச்சனுக்கு அழகாவது மேல் வருங்காரியத்தை முன்னறிந்து அரசனுக்குச் சொல்லுதல். 9. தந்திரிக் கழகு தறுக ணாண்மை. (பத.) தந்திரிக்கு - படைத்தலைவனுக்கு, அழகு - அழகாவன, தறுகண் - அஞ்சாமையும், ஆண்மை - வீரமும் ஆம். (பொழி.) படைத்தலைவனுக்கு அழகாவன அஞ்சாமையும் ஆண்மையுமாம். தந்திரம் - சேனை, தந்திரி - சேனையை உடையவன். 10. உண்டிக் கழகு விருந்தோ டுண்டல். (பத.) உண்டிக்கு - உணவிற்கு, அழகு - அழகாவது, விருந்தோடு - விருந்தினருடன், உண்டல் - உண்ணுதல். (பொழி.) உணவுண்டலுக்கு அழகாவது வந்த விருந்தினருடன் கலந்து உண்ணுதல். விருந்தினர் - புதியராய் வருகின்றவர், பரதேசிகள். 11. பெண்டிர்க் கழகெதிர் பேசா திருத்தல். (பத.) பெண்டிர்க்கு - மகளிர்க்கு, அழகு - அழகாவது, எதிர் பேசாது - (கணவன் சொல்லுக்கு) எதிர் பேசாமல், இருத்தல் - அடங்கியிருத்தல். (பொழி.) மாதர்களுக்கு அழகாவது கணவனோடு எதிர்த்துப் பேசாது அடங்கியிருப்பது. 12. குலமகட் கழகுதன் கொழுநனைப் பேணுதல். (பத.) குலமகட்கு - குலப்பெண்ணுக்கு, அழகு - அழகாவது, தன் கொழுநனை - தன் கணவனை, பேணுதல் - வழிபடுதல். (பொழி.) குலமாதுக்கு அழகாவது, தன் கணவனைப் பூசித்தல். குலமகள் - ஒருவனுக்கு உரியளாய் இல்லறம் நடாத்தும் நற்குடிப் பிறந்த பெண். பேணுதல் என்பதற்கு உண்டி முதலிய வற்றால், உபசரித்தல் என்றும் பொருள் சொல்லலாம். 13. விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல். (பத.) விலைமகட்கு - விலைமாதுக்கு, அழகு - அழகாவது, தன் மேனி - தன் உடம்பை, மினுக்குதல் - மின்னச் செய்தல். (பொழி.) பொதுமகளுக்கு அழகாவது, தன் உடம்பினை மின்னச் செய்தல். பொருள் கொடுப்பார்க்கு உரியளாதலின் பரத்தை விலை மகள் எனப்படுவள். மினுக்குதல் - ஆடை அணிகளாலும், மஞ்சள் முதலிய பூச்சுக்களாலும் விளங்கச் செய்வது. 14. அறிஞர்க் கழகு கற்றுணர்ந் தடங்கல். (பத.) அறிஞர்க்கு - அறிவுடையோர்க்கு, அழகு அழகாவது, கற்று - (கற்கவேண்டிய நூல்களை யெல்லாம்) கற்று, உணர்ந்து - (அவற்றின் பொருள் களை) அறிந்து, அடங்கல் - அடங்கியிருத்தல். (பொழி.) அறிவுடையோர்க்கு அழகாவது நூல்களைக் கற்றுணர்ந்து அடங்கியிருத்தல். அடங்கல் - செருக்கின்றியிருத்தல்; மனம் அடங்குதல் நூல்களிற் கூறியபடி நடத்தல். 15. வறிஞர்க் கழகு வறுமையிற் செம்மை. (பத.) வறிஞர்க்கு - வறுமையுடையோர்க்கு, அழகு - அழகாவது, வறுமையில் - அவ்வறுமைக் காலத்தும், செம்மை - செம்மையுடையராதல். (பொழி.) வறியோர்க்கு அழகாவது வறுமை யுற்ற அக்காலத்தும் செம்மை குன்றாதிருத்தல். செம்மையாவது மானத்தை விட்டு இரவாமலும், தீயன செய்யாமலும் இருத்தல். 16. தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை வானுற வோங்கி வளம்பெற வளரினும் ஒருவர்க் கிருக்க நிழலா காதே. (பத.) பனையின் - பனைமரத்தின், தேம்படு - மதுரம் பொருந்திய, திரள் - திரண்ட, பழத்து - கனியில் உள்ள, ஒரு விதை - வித்தானது, வான் உற - ஆகாயத்தைப் பொருந்தும்படி, ஓங்கி - உயர்ந்து, வளம் பெற - செழுமை உண்டாக, வளரினும் - வளர்ந் தாலும், ஒருவர்க்கு - ஒருவர்க்காயினும், இருக்க - இருப்பதற்கு, நிழல் ஆகாது - நிழலைத் தராது. (பொழி.) சுவை பொருந்திய பெரிய பனங்கனியிலுள்ள விதையானது முளைத்து வானமளாவ வளத்துடன் வளர்ந்தாலும் ஒருவரேனும் தங்கியிருக்க நிழலைத் தராது. உருவத்தாற் பெரியவரெல்லாம் பெருமையுடையவராகார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தேம்பழம் எனக் கூட்டுக. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது என விரித்துக் கொள்க. தொல்காப்பிய இலக்கணப்படி பனை முதலிய புறவயிரம் உள்ளவற்றிற்குப் புல் என்று பெயர். ஒருவர்க்கும் - என்னும் உம்மை தொக்கது. ஏ : ஈற்றசை. 17. தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே. (பத.) ஆலின் - ஆலமரத்தின், தெள்ளிய - தெளிந்த, சிறு பழத்து - சிறிய கனியிலுள்ள, ஒரு விதை - ஒரு வித்தானது, தெள் நீர் - தெளிந்த நீரையுடைய, கயத்து - குளத்திலுள்ள, சிறு மீன் - சிறிய மீனினது, சினையிலும் - முட்டையைக் காட்டிலும், நுண்ணிதே ஆயினும் - சிறியதே யானாலும், (அது), அண்ணல் - பெருமை பொருந்திய, யானை - யானையும், அணி - அலங்கரிக்கப்பட்ட, தேர்- தேரும், புரவி - குதிரையும், ஆள் - காலாளும் (ஆகிய), பெரும் படையொடு - பெரிய சேனையோடு, மன்னர்க்கு - அரசருக்கும், இருக்க - தங்கியிருப்பதற்கு, நிழல் ஆகும் - நிழலைத் தரும். (பொழி.) சிறிய ஆலம் பழத்திலுள்ள விதையானது சிறிய மீனின் முட்டையைப் பார்க்கிலும் சிறியதாயிருப்பினும் அது முளைத்து வளர்ந்து நால்வகைச் சேனையுடன் கூடிய அரசரும் தங்கியிருக்க நிழலைத் தரும். உருவத்தாற் சிறியவரெல்லாம் சிறுமை யுடையவராகாது பெருமையுடையவருமாவர் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. தெள்ளிய பழத்து என்றும், விதை நுண்ணிதே யாயினும் என்றும் கூட்டிக்கொள்க. அது முளைத்து வளர்ந்து நிழலாகும் என விரித்துக்கொள்க. மன்னர்க்கும் என்னும் உம்மை தொக்கது. நிழலாகும்மே என்பதில், ம்:விரித்தல் விகாரம்; ஏ : ஈற்றசை. 18. பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர். (பத.) பெரியோர் எல்லாம் - (உருவத்தால்) பெரியவரெல்லாரும், பெரியரும் அல்லர் - பெருமை யுடையவரும் ஆகார். (பொழி.) உருவத்தாற் பெரியவரெல்லாரும் பெருமையுடைய வராகார். பெரியோர் என்பதற்கு வயதிற் பெரியவரென்றும், செல்வத்திற் பெரியவரென்றும் பொருள் கூறினாலும் பொருந்தும். அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே பெருமையுடையவ ரென்க. பெரியவரும் என்பதிலுள்ள உம்மை பின்வரும் சிறியரும் என்பதைத் தழுவியிருக்கிறது. இங்கே கூறிய விசேடவுரைகளை மேல்வரும் தொடர்க்கு மாற்றி யுரைத்துக் கொள்க. 19. 1சிறியோ ரெல்லாம் சிறியரு மல்லர் (பத.) சிறியோர் எல்லாம் - (உருவத்தால்) சிறியவரெல்லாரும், சிறியரும் அல்லர் - சிறுமை யுடையவரும் ஆகார். (பொழி.) உருவத்தாற் சிறியவரெல்லாரும் சிறுமை யுடையவராகார். 20. பெற்றோ ரெல்லாம் பிள்ளைக ளல்லர். (பத.) பெற்றோர் எல்லாம் - பெறப்பட்டவர்களெல்லாரும், பிள்ளைகள் அல்லர் - (நல்ல) பிள்ளைகளாகார். (பொழி.) ஒருவர் பெற்ற பிள்ளைகளெல்லாரும் நல்ல பிள்ளைகளாகார். அறிவு ஒழுக்கங்களில் மேம்பட்ட பிள்ளைகளே பிள்ளைகள் என்று சொல்வதற்குத் தகுதியுடை யவர்கள் என்க. 21. உற்றோ ரெல்லாம் உறவின ரல்லர். (பத.) உற்றோர் எல்லாம் - உறவின ரெல்லோரும், உறவினர் அல்லர் - (நல்ல) உறவினராகார். (பொழி.) உறவினரனைவரும் சிறந்த உறவினராகார். இன்ப துன்பங்களில் ஈடுபட்டிருக்கும் சுற்றத்தாரே உறவினர் என்று சொல்லுவதற்குத் தகுதியுடையோர் என்க. 22. கொண்டோ ரெல்லாம் பெண்டிரு மல்லர். (பத.) கொண்டோர் எல்லாம் - கொள்ளப்பட்ட மனைவிய ரெல்லாரும், பெண்டிரும் அல்லர் - (நல்ல) மனைவியருமாகார். (பொழி.) மணஞ் செய்து கொள்ளப்பட்ட மனைவிய ரெல்லாரும் நல்ல மனைவியருமாகார். கணவன் குறிப்பறிந்து பணிசெய்து நடப்பவளே மனைவி யென்று சொல்லுவதற்குத் தகுதி யுடையவள் என்க. பெண்டிரும் என்பதிலுள்ள உம்மை மேல்வந்த பிள்ளைகள், உறவினர் என்பவற்றைத் தழுவியது. 23. அடினுமா வின்பால் தன்சுவை குன்றாது. (பத.) அடினும் - காய்ச்சினாலும், ஆவின்பால் - பசுவின் பால், தன்சுவை - தனது மதுரம், குன்றாது - குறையாது. (பொழி.) பசுவின்பாலை வற்றக் காய்ச்சினாலும் அதன் சுவை குறையாது (மிகும்.) இது முதல் ஐந்து வாக்கியங்கள் பெரியோர்க்கு எவ்வளவு துன்பம் செய்தாலும் அவர்கள் தம் பெருமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. 24. சுடினுஞ் செம்பொன் தன்னொளி கெடாது. (பத.) சுடினும் - சுட்டாலும், செம்பொன் - சிவந்த பொன்னானது, தன் ஒளி - தனது ஒளி, கெடாது - அழியாது. (பொழி.) தங்கத்தைத் தீயிலிட்டுச் சுட்டாலும் அதன் ஒளி கெடாது (மிகும்.) 25. அரைக்கினுஞ் சந்தனந் தன்மண மறாது. (பத.) அரைக்கினும் - அரைத்தாலும், சந்தனம் - சந்தனக் கட்டை யானது, தன் மணம் - தனது வாசனை, அறாது - நீங்காது. (பொழி.) சந்தனக் கட்டையை அரைத்தாலும் அதன் மணம் நீங்காது (மிகும்.) 26. புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது. (பத.) புகைக்கினும் - புகையச் செய்தாலும், கார் அகில் - கரிய அகிற்கட்டையானது, பொல்லாங்கு கமழாது - தீ நாற்றம் வீசாது. (பொழி.) அகிற் கட்டையை நெருப்பிலிட்டுப் புகைத்தாலும் அது தீ நாற்றம் நாறாது (நன்மணங் கமழும்). பொல்லாங்கு - தீமை; அது தீய நாற்றத்தைக் குறிக்கிறது. 27. கலக்கினும் தண்கடல் சேறா காது. (பத.) கலக்கினும் - கலக்கினாலும், தண் கடல் - குளிர்ந்த கடலானது, சேறு ஆகாது - சேறாக மாட்டாது. (பொழி.) கடலைக் கலக்கினாலும் அது சேறாகாது (தெளிவாகவே யிருக்கும்.) 28. 1அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய். (பத.) பால் பெய்து - பால் வார்த்து, அடினும் - சமைத் தாலும், பேய்ச்சுரைக்காய் - பேய்ச் சுரைக்காயானது; கைப்பு அறாது - கசப்பு நீங்காது. (பொழி.) பேய்ச் சுரைக்காயைப் பால்விட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது. இதுவும், அடுத்துவரும் வாக்கியமும் சிறியோர்க்கு எவ்வளவு நன்மை செய்தாலும் அவர்கள் தம் சிறுமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. இக்கருத்து, "உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும், கைப்பறாபேய்ச் சுரையின் காய்" என நாலடியாரில் வந்துள்ளது. பேய்ச்சுரைக்காய் சுரைக்காயில் ஒரு வகை. 29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே. (பத.) பல் விரை - பல வாசனைகளை, ஊட்டினும் - ஊட்டினாலும், உள்ளி - உள்ளிப் பூண்டானது, கமழாது - நன் மணம் வீசாது. (பொழி.) உள்ளிப் பூண்டுக்குப் பல வாசனைகளை ஊட்டினாலும் அது நறுமணம் கமழாது (தீ நாற்றமே வீசும்). ஏ : அசை. 30. பெருமையும் சிறுமையுந் தான்தர வருமே. (பத.) பெருமையும் - மேன்மையும், சிறுமையும் - கீழ்மையும், தான்தர - தான்செய்து கொள்ளுதலால், வரும் - உண்டாகும். (பொழி.) மேன்மையும் கீழ்மையும் தான் செய்யுஞ் செய்கையாலேயே உண்டாகும் (பிறரால் உண்டாவ தில்லை). ஏ:அசை. 31. சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே. (பத.) சிறியோர் செய்த - சிற்றறிவுடையோர் செய்த, சிறுபிழை எல்லாம் - சிறிய குற்றங்க ளெல்லாவற்றையும், பெரியோர் ஆயின் - மேலோரா யிருப்பின், பொறுப்பது - பொறுத்துக் கொள்வது, கடன் - முறைமையாம். (பொழி.) சிற்றறிவுடையோர் செய்த சிறிய பிழைகளைப் பெரியோர் பொறுத்துக் கொள்வது கடமை. பொறுமையினாலேயே பெருமை அறியப் படும் என்க. ஏ : அசை. 32. சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு மரிதே. (பத.) சிறியோர் - கீழோர், பெரும் பிழை - பெரிய குற்றங்களை, செய்தனர் ஆயின் - செய்தாரானால், பெரியோர் - மேலோர், அப்பிழை - அக்குற்றங்களை, பொறுத்தலும் - பொறுத்துக் கொள்ளுதலும், அரிது - அருமையாம். (பொழி.) சிறியோர்கள் பெரும் பிழைகளைச் செய்தால் பெரியோர் அவற்றைப் பொறுத்தலும் அருமையாம். பெரியோர் பொறுப்பரென்று கருதி அவரிடத்துப் பெரும் பிழை செய்தல் கூடாது என்க. ஏ:அசை. 33. நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை நீர்க்குட் பாசிபோல் வேர்க்கொள் ளாதே. (பத.) நூறு ஆண்டு - நூறு வருடம், பழகினும் - பழகினாலும், மூர்க்கர் - கீழ் மக்களுடைய, கேண்மை - நட்பானது, நீர்க்குள் நீரிலுள்ள, பாசிபோல் - பாசியைப்போல, வேர்க்கொள்ளாது - வேரூன்றாது. (பொழி.) எத்தனை காலம் பழகினாலும் கீழ் மக்களுடைய நட்பு நீர்பாசி வேரூன்றாமைபோல வேரூன்றாது. ஏ : அசை. 34. ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே. (பத.) ஒருநாள் - ஒருதினம், பழகினும் - பழகினாலும், பெரியோர் - மேன்மக்களுடைய, கேண்மை - நட்பானது, இரு நிலம் பிளக்க - பெரிய பூமி பிளக்கும்படி, வேர் வீழ்க்கும் - வேரூன்றப் பெறும். (பொழி.) ஒருநாட் பழகினும் மேலோருடைய நட்பானது பூமி பிளக்கும்படி, வேரூன்றி நிற்கும். நட்பை மரமாக உருவகப்படுத்தி 'இருநிலம் பிளக்க வேர் வீழ்க்கும்' என்றார். பின் சலித்தலின்றி நிலைபெறு மென்ப தாயிற்று. 35. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே. (பத.) கற்கை நன்று கற்கை நன்று - (நூல்களைக்) கற்றல் நல்லது, கற்றல் நல்லது, பிச்சை புகினும் - பிச்சைக்குப் போனாலும், கற்கை நன்று - கற்றல் நல்லது. (பொழி.) பிச்சை யெடுத்தாலும் கல்வி கற்பது நல்லது. வற்புறுத்துவதற்குப் பலமுறை கூறினார். ஏ : மூன்றும் அசை; தேற்றமும் ஆம். 36. கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதரா கும்மே. (பத.) கல்லா ஒருவன் - கல்வி கல்லாத ஒருவன், குல நலம் - தனது குலத்தின் மேன்மையை, பேசுதல் - சொல்லுதல், நெல்லினுள் பிறந்த - நெற்பயிரில் உண்டாகிய, பதர் ஆகும் - பதடியாகும். (பொழி.) கல்லாதவன் தன் குலத்தின் மேன்மையைப் பாராட்டும் வார்த்தை பதர்போலப் பயனற்றதாகும். பேசுதல் வீண். அவன் பதராகும் எனச் சொற்கள் வருவித்து முடித்தலுமாம். நெற்பயிர் நற்குடிக்கும், பதர் நற்குடிப்பிறந்த கல்லாதவனுக்கும் உவமைகளாம். ம் : விரித்தல் விகாரம். 37. நாற்பால் குலத்தின் மேற்பா லொருவன் கற்றில னாயிற் கீழிருப் பவனே. (பத.) நற்பால் நான்கு வகையான, குலத்தில் - குலங்களில், மேற்பால் ஒருவன் - உயர்குலத்திற் பிறந்த ஒருவன், கற்றிலன் ஆயின்- கல்லாதவனானால், கீழ் இருப்பவனே - தாழ்ந்த இடத்தில் இருப்பவனே. (பொழி.) உயர் குலத்திற் பிறந்தவன் கல்லாதவனாயின் தாழ்ந்த இடத்தில் இருக்கத் தக்கவனே. நாற்பாற் குலம் : அந்தண அரச வணிக வேளாள குலங்கள். இக்கருத்து, "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும், கீழ்ப்பாலொருவன் கற்பின், மேற்பா லொருவனு மவன்கட்படுமே" எனப் புறநானூற்றில் வந்துள்ளது. ஏகாரம் : பிரிநிலையும் தேற்றமும் ஆம். 38. எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும் அக்குடியிற் கற்றோரை மேல்வரு கென்பர். (பத.) எக்குடி - எந்தக் குலத்தில், பிறப்பினும் - பிறந்திருந் தாலும், யாவரே ஆயினும் - யாரா யிருந்தாலும், அக்குடியில் - அந்தக் குலத்தில், கற்றோரை - கல்வி கற்றவரை, மேல் வருக என்பர் - மேலிடத்து வருக என்று அழைப்பார். (பொழி.) எக்குலத்திற் பிறந்திருந்தாலும் யாராயிருந்தாலும் கற்றோரை மேல் வருக என்று உபசரித்து அழைப்பார். யாவரேயாயினும் என்றது, எந்த நிலைமையினராயினும் என்றபடி, தாழ்ந்த குலத்திற் பிறந்தவராயினும் இளைஞராயினும் கற்றோரை அழைப்ப ரென்க. 'வருக வென்பர்' என்பது 'வருகென்பர்' எனத் தொகுத்தது. 39. அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும். (பத.) அறிவுடை ஒருவனை - கல்வியறிவுடைய ஒருவனை, அரசனும் விரும்பும் - வேந்தனும் விரும்புவான். (பொழி.) கல்வியறிவுடையவனை அரசனும் விரும்புவான். "அறிவுடையோனா றரசுஞ் செல்லும்" எனப் புறநானூற்றில் இக் கருத்து வந்துள்ளது. உடைய என்பது உடை என விகாரமாயிற்று. 40. அச்சமுள் ளடக்கி அறிவகத் தில்லாக் கொச்சை மக்களைப் பெறுதலி னக்குடி எச்சமற் றேமாந் திருக்கை நன்றே. (பத.) அச்சம் உள் அடக்கி - அச்சத்தை உள்ளே வைத்து, அறிவு அகத்து இல்லா - அறிவு மனத்தி லில்லாத, கொச்சை மக்களை - கீழான பிள்ளை களை, பெறுதலின், பெறுவதைக் காட்டிலும், அக்குடி - அக்குடியிலுள்ளவர், எச்சம் அற்று - சந்ததியில்லாமல், ஏமாந்து இருக்கை - இன்புற் றிருப்பது, நன்று - நல்லது. (பொழி.) அறிவும் ஆண்மையு மில்லாத மக்களைப் பெறு வதைப் பார்க்கினும் மகப்பேறில்லாது களித்திருப்பது நன்று. கொச்சை - கீழ்மை; வெள்ளாடு என்று பொருள் கொண்டு வெள்ளாடுபோலும் மக்கள் என்று கூறுதலுமாம். அப்பிள்ளை களைப் பெறுதலால் துன்பமே விளையுமாதலின், பெறாது களித்திருப்பது நல்லது என்றார். ஏமாத்தல் - களித்தல். ஏ : அசை. 41. யானைக் கில்லை தானமுந் தருமமும். (பத.) யானைக்கு - யானைக்குக் (கைந்நீண்டிருந் தாலும்), தானமும் - தானஞ் செய்தலும், தருமமும் - அறஞ்செய்தலும், இல்லை - இல்லையாம். (பொழி.) யானைக்குக் கை நீண்டிருந்தாலும் அது தானமும் தருமமும் செய்வதில்லை. தானதருமஞ் செய்பவர்போற் காணப்படுகிறவர்கள் அவை செய்யாமலுமிருப்பர் என்பதாம். தானம் - தக்கோர்க்குப் பொருளை நீருடன் அளிப்பது. தருமம் - வறியவர்க்கு ஈதல் முதலியன. 42. பூனைக் கில்லை தவமுந் தயையும். (பத.) பூனைக்கு - பூனைக்கு (அது கண்மூடி ஒடுங்கி யிருந்தாலும்) தவமும் - தவஞ்செய்தலும், தயையும் - (உயிர் களிடத்து) இரக்கம் வைத்தலும், இல்லை - இல்லையாம். (பொழி.) பூனை (கண்ணை மூடிக்கொண்டு அமைதியா யிருந்தாலும்) அது தவஞ்செய்தலும் அருளுடைத்தாதலுமில்லை. தவவொழுக்கமும், சீவகாருணியமும் உடையவர் போற் காணப்படுகிறவர்கள் அவை யில்லாமலுமிருப்பர் என்பதாம். இவ்விரண்டு வாக்கியங்களும் வேடத்தினாலேயே ஒருவரை மதிக்கலாகாது என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. 43. ஞானிக் கில்லை இன்பமுந் துன்பமும். (பத.) ஞானிக்கு - ஞானமுடையவனுக்கு, இன்பமும் - சுகமும், துன்பமும் - துக்கமும், இல்லை - இல்லையாம். (பொழி.) மெய்ஞ்ஞானிக்குச் சுகமும் இல்லை; துக்கமும் இல்லை. ஞானி இன்ப துன்பங்களை அடைபவன்போற் காணப் பட்டாலும் அவன் மகிழ்ச்சியாவது துயரமாவது அடையான் என்க. 44. சிதலைக் கில்லை செல்வமுஞ் செருக்கும். (பத.) சிதலைக்கு - செல்லுக்கு, செல்வமும் - செல்வமுடைய ரென்பதும், செருக்கும் - செருக்குடைய ரென்பதும், இல்லை - இல்லையாம். (பொழி.) செல்வமுடையரென்றும் செருக்குடையரென்றும் பாராமல் கரையான் யாவருடையையும் அரித்துவிடும். கீழ்நிலையிலிருப்பவர் பிறருடைய செல்வத்தையோ அதிகாரத்தையோ கண்டு அஞ்சார் என்க. விலை யுயர்ந்த ஆடை களை அரித்துவிடுவதால் செல்லானது செல்வமும் செருக்கு முடையதன்று; அஃது அதன் இயற்கையே என்று பொருள் கூறி, கீழ் மக்கள் தம் அறியாமை யாகிய இயற்கையினாலேயே பிறர்க்கு இடர் விளைப்பர் என்று கருத்துக் கொள்ளுதலும் ஆம். 45. முதலைக் கில்லை நீத்தும் நிலையும். (பத.) முதலைக்கு - முதலைக்கு, நீத்தும் - நீந்தும் நீர் (என்பதும்), நிலையும் - நிலைகொள்ளும் நீர் (என்பதும்), இல்லை- இல்லையாம். (பொழி.) நீச்சென்றும் நிலையென்றும் பாராமல் முதலை எவ்வளவு ஆழமாகிய நீரிலும் செல்லும். மூர்க்கராயினார் தக்கது தகாதது என்று பாராமல் எவ்வளவு தகாத காரியத்தையும் துணிந்து செய்வர் என்க. 46. அச்சமு நாணமும் அறிவிலோர்க் கில்லை. (பத.) அச்சமும் - (தீய தொழிலுக்கு) அஞ்சுதலும், நாணமும் - (பழிக்கு) நாணுதலும், அறிவு இலோர்க்கு - அறிவில்லாதவருக்கு, இல்லை - இல்லையாம். (பொழி.) அஞ்சத்தக்க தீய தொழிலுக்கு அஞ்சுதலும், பழிக்கு நாணுதலும் அறிவில்லா தவரிடத்தில் இல்லை. 47. நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை. (பத.) நாளும் - நட்சத்திரமும், கிழமையும் - வாரமும், நலிந்தோர்க்கு - பிணியால் மெலிந்தவர்க்கு, இல்லை - இல்லையாம். (பொழி.) நோயால் வருந்தினவர்க்கு நட்சத்திரமும் கிழமையும் இல்லை. இன்ன நாளில் இன்னது செய்யவேண்டு மென்னும் நியதி நோயுற்றார்க்குக் கூடாதென்க. 48. கேளுங் கிளையுங் கெட்டோர்க் கில்லை. (பத.) கேளும் - நட்பும், கிளையும் - உறவும், கெட்டோர்க்கு - வறுமையுற்றோர்க்கு, இல்லை - இல்லையாம். (பொழி.) வறுமையுற்றோர்க்கு நண்பரும் உறவினரும் இல்லை. 49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா. (பத.) உடைமையும் - செல்வமும், வறுமையும் - தரித்திரமும், ஒருவழி - ஓரிடத்திலே, நில்லா - நிலைத்திரா. (பொழி.) செல்வமும் வறுமையும் ஓரிடத்திலே நிலைத்திராமல் மாறிமாறி வரும். பின்வருஞ் சில தொடர்கள் இவ்வியல்பை விளக்கு வனவாம். 50. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். (பத.) குடை நிழல் இருந்து - வெண்கொற்றக் குடையின் நிழலில் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர் - யானையை நடாத்திச் சென்ற அரசரும், நடைமெலிந்து - நடத்தலால் தளர்ச்சியுற்று, ஓர் ஊர் - மற்றோர் ஊரை, நண்ணினும் நண்ணுவர் - அடைந்தாலும் அடைவர். (பொழி.) யானையின் பிடர்மேல் வெண் கொற்றக் குடை நிழல் செய்ய வீற்றிருந்து அதனைச் செலுத்திச் சென்ற அரசரும் வறுமையெய்திக் காலால் நடந்து மற்றோர் ஊருக்குச் செல்லினும் செல்வர். "யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினையுலப்ப வேறாகி வீழ்வர்" என நாலடியாரில் இக்கருத்து வந்துள்ளது. 51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர் அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர். (பத.) சிறப்பும் - (பிறரை யேவிக்கொள்ளும்) முதன்மையும், செல்வமும் - பொருளும், பெருமையும் - மேன்மையும், உடையோர்- உடையவரும், அறக்கூழ்ச்சாலை - அறத்திற்குக் கஞ்சிவார்க்கும் சத்திரத்தை, அடையினும் அடைவர் - அடைந்தாலும் அடைவர். (பொழி.) பிறரை யேவிக்கொள்ளும் முதன்மையும் செல்வமும் மேன்மையும் உடையவரும் வறியராய் உணவின்றி அறத்திற்குக் கூழ்வார்க்கும் சத்திரத்தை அடைந்தாலுமடைவர். இவ்விரண்டு தொடர்களிலும் உயர்வு சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. 52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர் அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர். (பத.) அறத்து இடு பிச்சை - அறத்திற்கு இடுகின்ற பிச்சையை, கூவி - (கடைத் தலையில் நின்று) கூவியழைத்து, இரப்போர் - இரக்கும் வறுமை யுடையோரும், அரசோடு இருந்து - அரச அங்கங்களோடு கூடியிருந்து, அரசு ஆளினும் ஆளுவர் - அரசாட்சி செய்தாலும் செய்வர். (பொழி.) வீடுகள்தோறும் கடைத்தலையில் நின்று கூவியழைத்துப் பிச்சை ஏற்போரும் செல்வராகி அரசு அங்கங் களுடன் கூடி அரசாண்டாலும் ஆளுவர். இழிவு சிறப்பும்மை தொக்கது. பின் சிறப்பும்மை தொக்கு வருவனவற்றையும் கண்டு கொள்க. 53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர் அன்றைப் பகலே யழியினும் அழிவர். (பத.) குன்று அத்தனை - மலையவ்வளவு, இரு நிதியை - பெரிய செல்வத்தை, படைத்தோர் - படைத் தவரும், அன்றைப் பகலே - (படைத்த) அன்றைக்கே, அழியினும் அழிவர் - வறுமை யுற்றாலும் உறுவர். (பொழி.) மலையளவு பெரும்பொருள் பெற்றவரும் பெற்ற அப்பொழுதே அதனை யிழப்பினும் இழப்பர். 54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும். (பத.) எழுநிலை - ஏழு நிலைகளுடைய, மாடம் - மாளிகையும், கால் சாய்ந்து - அடியுடன் சாய்ந்து, உக்கு - சிதறுண்டு, கழுதை மேய் - கழுதைகள் மேய்கின்ற, பாழ் ஆயினும் ஆகும் - பாழ்நில மானாலும் ஆகும். (பொழி.) ஏழடுக்கு வீடுகளும் சரிந்து வீழ்ந்து துகளாகிக் கழுதைகள் மேயும் பாழ்நில மானாலும் ஆகும். 55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ் பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினு மாகும். (பத.) பெற்றமும் - எருதுகளும், கழுதையும் - கழுதைகளும், மேய்ந்த அப் பாழ் - மேய்ந்த அப் பாழ் நிலமானது, பொன் தொடி- பொன்னாலாகிய வளையலை (அணிந்த), மகளிரும் - மாதர் களையும், மைந்தரும் - ஆடவர்களையும், கூடி - பொருந்தி, நெல் பொலி - நெற் குவியல்களையுடைய, நெடுநகர் - பெரிய நகரம், ஆயினும் ஆகும் - ஆனாலும் ஆகும். (பொழி.) எருதும் கழுதையும் மேய்ந்த அப் பாழ் நிலம் பொன் வளையணிந்த மாதரையும் மைந்தரையும் உடையதாய் நெற்பொலி மிக்க பெருநகரமாயினும் ஆகும். மேல், பாழாயினுமாகும் என்றதைச் சுட்டி 'அப்பாழ்' என்றார். மைந்தர் - புதல்வர் என்னலுமாம். கூட என்பது கூடியெனத் திரிந்த தாகவும் கொள்ளலாம். 56. மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடி யாக முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர். (பத.) மண அணி அணிந்த - மணக்கோலம் பூண்ட, மகளிர் - பெண்கள், ஆங்கே - அப்பொழுதே (அவ்விடத்திலேயே), பிண அணி அணிந்து - (கணவர் இறத்தலால்) பிணத்திற்குரிய கோலத்தைப் பூண்டு, தம் கொழுநரைத் தழீஇ - தம் கணவருடம்பைத் தழுவி, உடுத்த ஆடை - முன்பு உடுத்த கூறையே, கோடி ஆக - கோடிக் கூறை யாக, முடித்த கூந்தல் - பின்னிய கூந்தலை, விரிப்பினும் விரிப்பர் - விரித்தாலும் விரிப்பர். (பொழி.) மணக்கோலம் பூண்ட மகளிர் அப்பொழுது அவ்விடத்தே கணவர் இறத்தலால் பிணத்திற்குரிய கோலம் பூண்டு, அவருடம்பைத் தழுவி, முன்பு உடுத்த கூறையே கோடியாகப் பூவுடன் முடித்த கூந்தலை விரித்து அழுதாலும் அழுவர். கோடி - புது உடை; இறந்த உடம்பிற்கு இடும் உடை; மங்கல நாண் இழந்த மகளிர் உடுக்கும் உடை "மன்றங்கறங்க மணப் பறையாயின" என்னும் நாலடியார்ச் செய்யுள் இந்நிலையாமையை உணர்த்துவது. 57. இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே. (பத.) இல்லோர் - பொருளில்லாதவர், இரப்பதும் - யாசிப்பதும், இயல்பே இயல்பே - இயற்கையே இயற்கையே. (பொழி.) வறியவர் இரப்பது இயற்கையே யன்றிப் புதுமை யன்று. இரப்பதும் என்பதிலுள்ள உம்மையும் பின் ஈவதும் என்பதிலுள்ள உம்மையும் ஒன்றையொன்று தழுவியுள்ளன. அடுக்கு வற்புறுத்தலைக் குறித்தது. 58. இரந்தோர்க் கீவதும் உடையோர் கடனே. (பத.) இரந்தோர்க்கு - யாசித்தவர்க்கு, ஈவதும் - கொடுப்பதும், உடையோர் கடனே - பொரு ளுடையவர் கடமையே. (பொழி.) வறியராய் இரப்பவர்க்கு ஈவது பொருளுடையவர் கடமையே. இவ்விரு வாக்கியத்தும் ஏ : தேற்றம். 59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும் எல்லா மில்லை யில்லில் லோர்க்கே. (பதவுரை.) நல்ல ஞாலமும் - நல்ல பூவுலகையும், வானமும் வானுலகையும், பெறினும் - பெற்றாலும், எல்லாம் - அவை யாவும், இல் - (மாண்புள்ள) மனைவியரை, இல்லோர்க்கு - இல்லாதவர்க்கு, இல்லை - இல்லையாம். (பொழி.) பூவுலகத்தையும் தேவருலகத்தையும் பெற்றாலும், மாண்புள்ள மனைவியில்லாதவர்க்கு அவற்றால் யாதும் பயனில்லை. ஏ : அசை. 60. தறுகண் யானை தான்பெரி தாயினும் சிறுகண் மூங்கிற் கோற்கஞ் சும்மே. (பத.) தறுகண் - அஞ்சாமையையுடைய, யானை - யானையானது, தான் பெரிது ஆயினும் - தான் பெரிய உருவத்தை உடையதாயினும், சிறுகண் - சிறிய கணுக்களையுடைய, மூங்கில் கோற்கு - மூங்கில் கோலுக்கு, அஞ்சும் - அஞ்சாநிற்கும். (பொழி.) அஞ்சாமையுடைய யானை உருவத்தாற் பெரிய தாயினும் சிறிய கணுக்களையுடைய மூங்கிற்கோலுக்கு அஞ்சும். வலிமையும் பெருமையும் உடையவரும் தம்மை யாள்வோர் சிறியர் (இளைஞர்) ஆயினும் அவருக்கு அஞ்சி நடப்பர் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருப்பது இது. கோற்கும் என்னும் உம்மை தொக்கது. ம் : விரித்தல் விகாரம். ஏ : அசை. 61. குன்றுடை நெடுங்கா டூடே வாழினும் புன்றலைப் புல்வாய் புலிக்கஞ் சும்மே. (பத.) குன்று உடை - மலைகளையுடைய, நெடுங் காடு ஊடே- நீண்ட காட்டினுள்ளே, வாழினும் - வாழ்ந்தாலும், புல்தலை - சிறிய தலையுடைய, புல்வாய் - மானானது, புலிக்கு அஞ்சும் - புலிக்கு அஞ்சா நிற்கும். (பொழி.) மானானது மலைகளையுடைய பெரிய காட்டிற்குள் வாழ்ந்தாலும் புலிக்கு அஞ்சும். 62. ஆரையாம் பள்ளத் தூடே வாழினும் தேரை பாம்பிற்கு மிகவஞ் சும்மே. (பத.) ஆரை ஆம் - ஆரைப்பூண்டு படர்ந்த, பள்ளத்து ஊடே - ஆழத்தினுள்ளே, வாழினும் - வாழ்ந்தாலும், தேரை - தேரையானது, பாம்பிற்கு - பாம்பினுக்கு, மிக அஞ்சும் - மிகவும் அஞ்சாநிற்கும். (பொழி.) தேரையானது ஆரைப் பூண்டு நிறைந்த பள்ளத்தில் வாழ்ந்தாலும் பாம்பிற்கு மிக அஞ்சும். இவ்விரண்டு தொடர்களும், வீரரல்லாதவர் எவ்வகை அரணுக்குள் இருப்பினும் வீரருக்கு அஞ்சுவர் என்னுங் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. ஆரை - நீரிற் படர்வதொரு கீரைப் பூண்டு. 63. கொடுங்கோன் மன்னர் வாழும் நாட்டிற் கடும்புலி வாழுங் காடு நன்றே. (பத.) கொடுங்கோல் மன்னர் - நீதியில்லாத அரசர், வாழும் நாட்டில் - வாழுகின்ற நாட்டைப் பார்க்கிலும், கடும்புலி வாழும் - கொடிய புலி வாழுகின்ற, காடுநன்று - காடு நல்லது. (பொழி.) கொடுங்கோலரசர் ஆட்சிபுரியும் நாட்டி லிருப்பதைப் பார்க்கிலும், கொடிய புலி வாழும் காட்டிலிருப்பது நல்லது. அவ்வரசர் நாட்டிலே குடிகளுக்கு அச்சமும் கவலையும் அளவின்றியிருக்கு மென்க. 64. சான்றோ ரில்லாத் தொல்பதி யிருத்தலின் தேன்றேர் குறவர் தேயம் நன்றே. (பத.) சான்றோர் இல்லா - பெரியோர் இல்லா, தொல்பதி - பழைமையாகிய நகரத்தில், இருத்தலின் - குடியிருப்பதைப் பார்க்கிலும், தேன் தேர் - தேனை ஆராய்ந்து திரியும், குறவர் - குறவருடைய, தேயம்- மலைநாட்டில் இருப்பது, நன்று - நல்லது. (பொழி.) அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் இல்லாத பழைமையான நகரத்தில் இருப்பதைப் பார்க்கிலும் குறவர் வசிக்கும் மலைப்பக்கத்தில் இருப்பது நல்லது. அப் பதியிலிருப்போர்க்கு இம்மை மறுமை யின்பங்கள் இல்லையா மென்க. ஏ: அசை. இரண்டிலும் ஏ தேற்றமுமாம். 65. காலையு மாலையும் நான்மறை யோதா அந்தண ரென்போ ரனைவரும் பதரே. (பத.) காலையும் மாலையும் - காலைப் பொழுதிலும் மாலைப் பொழுதிலும், நான்மறை - நான்கு வேதங்களையும், ஓதா - ஓதாத, அந்தணர் என்போர் அனைவரும் - மறையோர் என்று சொல்லப் படுவோர் எல்லாரும், பதரே - பதரேயாவர். (பொழி.) காலையிலும் மாலையிலும் வேதம் ஓதாத அந்தண ரென்று சொல்லப்படுவோர் அனைவரும் பதர்போலப் பயனில் லாதவரே யாவர். நான்மறை : இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்பன : வேறு வகையாகவும் கூறுவர். பதர்போல ஒதுக்கத் தக்கவரென்க. ஏ : தேற்றம்; பின் வருவனவும் அது. 66. குடியலைத் திரந்துவெங் கோலொடு நின்ற முடியுடை யிறைவனாம் மூர்க்கனும் பதரே. (பத.) குடி அலைத்து - குடிகளை வருத்தி, இரந்து - பொருள் வாங்கி, வெங்கோலொடு நின்ற - கொடுங்கோலொடு பொருந்தி நின்ற, முடி உடை இறைவன் ஆம் - மகுடத்தையுடைய அரசனாகிய, மூர்க்கனும் - கொடியவனும், பதரே - பதரேயாவன். (பொழி.) கொடுங்கோலனாய்க் குடிகளை வருத்திப் பொருள் வாங்கும் தீய அரசனும் பதர்போல்பவனே யாவன். அரசர் களுக்குள் அவன் பதர் என்றுஞ் சொல்லலாம். 67. முதலுள பண்டங் கொண்டுவா ணிபஞ்செய்து அதன்பய னுண்ணா வணிகரும் பதரே. (பத.) முதல் உள - முதலாகவுள்ள, பண்டம் கொண்டு - பொருளை வைத்துக்கொண்டு, வாணிபம் செய்து - வியாபாரஞ் செய்து, அதன் பயன் - அதனால் வரும் இலாபத்தை, உண்ணா - அனுபவியாத, வணிகரும் - வைசியரும், பதரே - பதரேயாவர். (பொழி.) முதற்பொருளை வைத்துக்கொண்டு வாணிகஞ் செய்து அதனால் வரும் இலாபத்தை அனுபவியாத வணிகரும் பதரே யாவர். முதலையிழத்தல் கூடாதென்க. 68. வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்தங் கிருக்கும் ஏழையும் பதரே. (பத.) வித்தும் - விதையும், ஏரும் - (உழுதற்குரிய) ஏரும், உளவாய் இருப்ப - உள்ளனவாகி யிருக்கவும், அங்கு - அவ்விடத்தில், எய்த்து இருக்கும் - இளைத் திருக்கும், ஏழையும் - அறிவில்லாதவனும், பதரே - பதரேயாவன். (பொழி.) விதையும் ஏரும் இருக்கவும் உழுது பயிரிடாமற் சோம்பியிருக்கும் அறிவிலியாகிய வேளாளனும் பதரே யாவன். அங்கு : அசையுமாம். 69. தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப் பின்பவட் பாராப் பேதையும் பதரே. (பத.) தன் மனையாளை - தன் மனைவியை, தாய் மனைக்கு - (அவளின்) தாய் வீட்டிற்கு, அகற்றி - போக்கி, பின்பு - பின்னே, அவள் பாரா - அவளை நோக்காதிருக்கிற, பேதையும் - அறிவில் லாதவனும், பதரே - பதராவான். (பொழி.) தன் மனைவியைப் பிறந்தகத்திற்குப் போக்கி விட்டுப் பின்பு அவளை யேற்றுக்கொள்ளாமலேயிருக்கிற அறிவில்லாதவனும் ஆடவருள் பதராவன். 70. தன்மனை யாளைத் தனிமனை யிருத்திப் பிறர்மனைக் கேகும் பேதையும் பதரே. (பத.) தன் மனையாளை - தன் மனைவியை, தனி - தனியே மனை இருத்தி - வீட்டில் இருக்கச் செய்து, பிறர் மனைக்கு - பிறர் வீட்டுக்கு, ஏகும் - செல்லுகின்ற, பேதையும் - அறிவில்லாதவனும், பதரே - பதரேயாவன். (பொழி.) தன் மனைவியை வீட்டில் தனியே, இருக்கச் செய்து, பிறர் மனைவியை விரும்பி அயல் வீட்டுக்குச் செல்லும் அறிவில்லாதவனும் பதரேயாவன். 71. தன்னா யுதமுந் தன்கையிற் பொருளும் பிறன்கையிற் கொடுக்கும் பேதையும் பதரே. (பத.) தன் ஆயுதமும் - தனது தொழிற்குரிய கருவியையும், தன் கையில் பொருளும் - தனது கையிலுள்ள பொருளையும், பிறன் கையில் கொடுக்கும் - அயலான் கையில் கொடுத்திருக்கும், பேதையும் அறிவிலானும், பதரே - பதரேயாவன். (பொழி.) தன் தொழிற் கருவியையும் தன் கைப் பொருளையும் பிறர் கையில் கொடுத்துவிட்டுச் சோம்பியிருக்கின்ற அறிவில்லாதவனும் பதரே யாவன். தன் ஆயுதத்தையும் பொருளையுங் கொண்டு தொழில் செய்ய வேண்டுமென்க. பிறர் என்பதற்கு ஒரு சம்பந்தமு மில்லாதவர் என்றும் கூறலாம். 72. வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும் சாற்றுவ தொன்றைப் போற்றிக் கேண்மின். (பத.) வாய்ப் பறை ஆகவும் - வாயே பறை யாகவும், நாகடிப்பு ஆகவும் - நாவே குறுந்தடி யாகவும் (கொண்டு), சாற்றுவது ஒன்றை - (அறிவுடையோர்) சொல்வது ஒன்றை, போற்றி - (மனம் புறம் போகாமல்) பாதுகாத்து, கேண்மின் - கேளுங்கள். (பொழி.) வாயே பறையாகவும் நாவே குறுந்தடியாகவுங் கொண்டு அறிவுடையோர், சாற்றுகின்ற உறுதிமொழியைக் குறிக்கொண்டு கேளுங்கள். கடிப்பு - பறையடிக்கும் கோல். சான்றோர்கள் பறைசாற்றுவது போல உலகத்தார்க்கு உறுதிப் பொருளை அறிவுறுத்துவரென்க. 73. பொய்யுடை யொருவன் சொல்வன் மையினால் மெய்போ லும்மே மெய்போ லும்மே. (பத.) பொய் உடை ஒருவன் - பொய்ம்மையுடைய ஒருவன், சொல்வன்மையினால் - வாக்கு வன்மையால், மெய்போலும் மெய்போலும் - (அவன் கூறும் பொய்) மெய்யே போலும் மெய்யே போலும். (பொழி.) பொய்ம்மையுடைய ஒருவன் கூறும் பொய்ம் மொழி அவன் பேச்சு வன்மையால் உண்மைபோலவே தோன்றக் கூடும். சொற்சாதுரியத்தில் மயங்கிப் பிறர் கூறும் பொய்யை மெய் யென்று கொள்ளலாகா தென்க. இருமுறை கூறியது வற்புறுத்து தற்கு. ம் : விரித்தல், மேல் வருவதற்கும் இங்ஙனம் உரைத்துக் கொள்க. 74. மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற் பொய்போ லும்மே பொய்போ லும்மே. (பத.) மெய் உடை ஒருவன் - மெய்ம்மையுடைய ஒருவன், சொலமாட்டாமையால் - (திறம்படச்) சொல்லமாட்டாமையால், பொய்போலும் பொய் போலும் - (அவன் கூறும் மெய்) பொய்யே போலும், பொய்யே போலும். (பொழி.) உண்மையுடைய ஒருவன் கூறும் மெய்ம்மொழி அவனது சொல்வன்மை யின்மையால் பொய்போலத் தோற்றக் கூடும். 75. இருவர்தஞ் சொல்லையும் எழுதரங் கேட்டே இருவரும் பொருந்த வுரையா ராயின் மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம் மனமுற மறுகிநின் றழுத கண்ணீர் முறையுறத் தேவர் மூவர் காக்கினும் வழிவழி யீர்வதோர் வாளா கும்மே. (பத.) இருவர் தம் சொல்லையும் - (வாதி எதிரி யென்னும்) இருவருடைய சொற்களையும்; எழுதரம் கேட்டு - ஏழு முறை கேட்டு (உண்மை யுணர்ந்து), மனுமுறை நெறியின் - மனு நீதி வழியால், இருவரும் பொருந்த - இருவரும் ஒத்துக்கொள்ள, உரையார் ஆயின் - (முடிவு) சொல்லாரானால், வழக்கு இழந்தவர் தாம் - (நீதியின்றி) வழக்கினை இழந்தவர், மனம் - மனமானது, உற மறுகி நின்று - மிகவும் கலங்கி நின்று, அழுத கண் நீர் - அழுத கண்ணீரானது, முறை உற - முறையாக, தேவர் மூவர் - மூன்று தேவர்களும், காக்கினும் - காத்தாலும், வழி வழி - (அவர்) சந்ததி முழுதையும், ஈர்வது - அறுப்பதாகிய, ஓர்வாள் ஆகும் - ஒரு வாட்படையாகும். (பொழி.) இரு திறத்தினர் சொல்லையும் ஏழு முறைகேட்டு ஆராய்ந்து உண்மையுணர்ந்து நீதி வழுவாது இருவரும் மனம் பொருந்தும்படி முடிவு சொல்லாராயின், அநீதியாக வழக்கிலே தோல்வி யுற்றவர் மனங்கலங்கி நின்று அழுத கண்ணீரானது அயன்அரி அரன் என்னும் மும்மூர்த்தியும் முறையாகப் பாதுகாத் தாலும் முடிவு கூறியவரின் சந்ததி முழுதையும் அறுக்கின்ற வாளாகும். இது நீதி செலுத்தற்குரிய அவையினரும் நீதிபதியும் அரசனும் என்பவர்களை நோக்கிக் கூறியது. சொல்வன்மையாலும் சொல மாட்டாமையாலும் பொய் மெய்யாகவும், மெய் பொய்யாகவும் தோன்றக்கூடுமாகலின், 'எழுதரங் கேட்டு' என்றார். ஏனைத் தேவரும் மூவரும் என்று கூறினும் பொருந்தும், முற்றும்மை தொக்கது. தம், தாம் என்பன சாரியை; ம்: விரித்தல். "அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை" என்னுந் திருக்குறளில் இதன் கருத்து அமைந் துள்ளது. 76. பழியா வருவது மொழியா தொழிவது. (பத.) பழியா வருவது - நிந்தையாக வருங் காரியம், மொழியாது ஒழிவது - பேசாது விடத்தகுவது. (பொழி.) பின் பழியுண்டாகுஞ் செய்தியைப் பேசாது விடவேண்டும். பழியாக என்பது ஈறுகெட்டது. 77. சுழியா வருபுன லிழியா தொழிவது. (பத.) சுழியா - சுழித்து, வரு புனல் - வருகின்ற வெள்ளத்திலே, இழியாது ஒழிவது - இறங்காது தவிர்க. (பொழி.) சுழித்து வருகின்ற நீர்ப் பெருக்கிலே இறங்காது ஒழிக. உயிர்க்கிறுதி விளைக்கும் காரியத்திற் புகலாகா தென்க. சுழியா : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஒழிவது : வியங்கோள். 78. துணையோ டல்லது நெடுவழி போகேல். (பத.) துணையோடு அல்லது - துணையினோ டல்லாமல், நெடுவழி- தூர வழியில், போகேல் - செல்லாதே. (பொழி.) தூரமான இடத்திற்குத் துணை யின்றிப் போகாதே. 79. புணைமீ தல்லது நெடும்புன லேகேல். (பத.) புணைமீது அல்லது - தெப்பத்தின்மேல் அல்லாமல், நெடும் புனல் - பெரிய வெள்ளத்தில், ஏகேல் - செல்லாதே. (பொழி.) தெப்பமின்றிப் பருவெள்ளத்திற் செல்லாதே. பிறவியைக் கடக்கலுறுவார்க்குத் தக்க துணையும் பற்றுக்கோடும் வேண்டுமென்க. 80. எழிலார் முலைவரி விழியார் தந்திரம் இயலா தனகொடு முயல்வா காதே. (பத.) எழில் ஆர் முலை - அழகு பொருந்திய தனங்களையும், வரி விழியார் - நீண்ட கண்களையும் உடைய மாதர்களின், தந்திரம்- உபாயங்களுள், இயலாதன - பொருந்தாதனவற்றை, கொடு - கைக்கொண்டு, முயல்வு ஆகாது - முயலுதல் கூடாது. (பொழி.) மாதர்மேல் வைத்த காதலால் அவர் கூறும் உபாயங்களிற் பொருந்தாதனவற்றை மேற்கொண்டு முயலுதல் கூடாது. வரி - இரேகையுமாம். தந்திறம் என்ற பாட மிருப்பின் அவர் விடயத்தில் என்று பொருள் கொள்க. 81. வழியே யேகுக வழியே மீளுக. (பத.) வழியே ஏகுக - (செவ்விய) வழியிலே செல்க, வழியே மீளுக - (செவ்விய) வழியிலே திரும்புக. (பொழி.) நேர்மையான வழியிலே செல்க, நேர்மையான வழியிலே திரும்புக. யோகப் பயிற்சி செய்வோர் சுழிமுனையாகிய வழியிலே சென்று திரும்பிப் பயிலுக என்றும், பிறவாறும் இதற்குக் கருத்துரைத்தலும் ஆம். 82. இவைகா ணுலகிற் கியலா மாறே. (பத.) இவை - கூறப்பட்ட இவை, உலகிற்கு உலகிலுள் ளோர்க்கு, இயல் ஆம் - நடத்தற்குரிய, ஆறு நன்னெறிகளாம். (பொழி.) இந்நூலிற் கூறிய இவையெல்லாம் உலகத்தார் நடத்தற்குரிய வழிகளாம். இந்நூலிற் சொல்லிவந்த நீதிகளெல்லாம் 'இவை' எனத் தொகுத்துச் சுட்டப்பட்டன. காண் : முன்னிலையசை. வாழ்த்து வாழிய நலனே வாழிய நலனே. (பத.) நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க, நலன் - எல்லா நன்மைகளும், வாழிய - வாழ்க. (பொழி.) எல்லா நலங்களும் வாழ வேண்டும்; எல்லா நலங்களும் வாழ வேண்டும். நலங்களாவன : மழை, பயிர், பசு, அறம் முதலியன. நன்மை வாழவேண்டு மென்றமையால் தீமை ஒழிய வேண்டுமென்பது மாயிற்று. மகிழ்ச்சியால் இருமுறை கூறினார். ஏ : அசை. நறுந்தொகை மூலமும் உரையும் முற்றிற்று.  இன்னா நாற்பது - கபிலர் முகவுரை இன்னா நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனார் களவியலுரையிற் கடைச் சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்பட்டிலவேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடிய வென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க் கணக்கியற்றிய ஆசிரியர்களுள் கபிலர், கூடலூர் கிழார் முதலிய சிலர் சங்கத்துச் சான்றோரென்பது ஒருதலை, கீழ்க்கணக்குப் பதினெட்டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், " வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே" என்னும் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறி யலாவது. அவை அம்மையென்னும் வனப் புடையவாதலும் அவ்வுரையாற்றெளியப்படும்; பழைய பனுவல் களை அளவு முதலியனபற்றி மேற்கணக்கெனவும் கீழ்க் கணக் கெனவும் பின்னுள்ளோர் வகைப்படுத்தின ராவர். "அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க்கணக் காகும்" என்பது பன்னிரு பாட்டியல். கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன, இதனை, " நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு" என்னும் வெண்பாவானறிக. இதில் 'நால்' என்பதனை 'ஐந்திணை என்பதன் முன்னுங் கூட்டி நாலைந்திணையெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். மற்றுஞ் சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக் கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர். அவர் 'திணைமாலை' என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல் வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் 'ஐந்தொகை' 'இன்னிலைய, 'மெய்ந்லைய' கைந்நிலையோடாம்' 'நன்னிலையவாம்' என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர். கீழ்க் கணக்குகள் பதினெட்டேயாதல் வேண்டு மென்னுங் கொள்கையால் இவ்விடர்ப்பாடுகள் விளைகின்றன. இனி, இன்னா நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் நல்லிசைப் புலவராகிய கபிலரென்பார். இவரது காலம் கி. பி. 50 முதல் 125வரை ஆதல் வேண்டும். இவர் தமிழ்நாட்டு அந்தணருள் ஒருவர். இவர் அந்தணரென்பது 'புலனழுக்கற்ற அந்தணாளன்' (புறம். 126) என மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் புகழ்ந்து கூறியிருத்தலானும், இவரே பாரிமகளிரை விச்சிக்கோன், இருங்கோவேன் என்பவர்களிடம் கொண்டு சென்று, அவர்களை மணந்து கொள்ளுமாறு வேண்டியபொழுது, 'யானே பரிசிலன் மன்னு மந்தணன்' (புறம் 200) என்றும், 'அந்தணன் புலவன் கொண்டுவந்தனனே' (புறம். 201) என்றும் தம்மைக் கூறிக் கொண்டிருத்தலானும் பெறப்படுவதாகும். இவரது சமயம் சைவமே. இவர் இந்நூற்கடவுள் வாழ்த்தில் சிவபெருமானை யடுத்து வேறு கடவுளரை யுங் கூறியிருப்பது இவர்க்கு ஏனைக் கடவுளர்பால் வெறுப்பின்றென்பது மாத்திரையேயன்றி விருப்புண் டென்பதையும் புலப்படுத்தாநிற்கும். சமயங்களின் கொள்கைகளும், சமயநெறி நிற்போர் நோக்கங்களும் அவ்வக் கால இயல்புக்கும் ஏனைச் சார்புகளுக்கும் ஏற்பப் பிழையின்றியோ பிழையாகவோ வேறுபாடெய்தி வருதல் உண்மை காணும் விருப்புடன் நுணுகி ஆராய்ச்சி செய்வார்க்குப் புலனாகும். இனி, இவரியற்றிய பாட்டுகள் சங்கத்தார் தொகுத்த எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்னும் மூன்று வகுப்பிலும் உள்ளன. பல நூறு புலவர்கள் பாடிய செய்யுட்களில் இவர் பாடியன ஏறக்குறைய பதினொன்றிலொருபங்காக இருத்தலும், அவை ஒவ்வொரு தொகையிலும் சேர்ந் திருத்தலும் இவரது பாட்டியற்றும் பெருமையையும் நன்மதிப்பையும் புலப் படுத்துகின்றன. இவரியற்றிய குறிஞ்சிப் பாட்டும், குறிஞ்சிக் கலியும் இயற்கை வளங்களை யெழில் பெற எடுத்துரைப்பதில் இணையற்ற பெருமை வாய்ந்தன. தமிழ்ச்சுவை யறியாதிருந்த ஆரியவரசன் பிரகத்தனுக்கு இவர் குறிஞ்சிப்பாட்டியற்றித் தமிழ் அறிவுறுத்தினார் என்பதிலிருந்து, தமிழின்பால் இவருக்கிருந்த பெரும் பற்றும், ஏனோரும் தமிழினை யறிந்தின்புற வேண்டு மென்னும் இவரது பெரு விருப்பமும், தமிழின் சுவையறி யாதோரும் அறிந்து புலவராகும்படி தெருட்டவல்ல இவரது பேராற்றலும் புலனாகின்றன. நச்சினார்க்கினியர், சேனாவரையர், பரிமேலழகர் முதலியஉரையாசிரியன்மாரெல்லாரும் ஆறாம் வேற்றுமைச்செய்யுட்கிழமைக்குக் 'கபிலரது பாட்டு, என்று உதாரணங் காட்டியுள்ளார்களென்றால் இங்ஙனம் சான்றோர் பலர்க்கும் எடுத்துக்காட்டாக முன்னிற்றற் குரிய இவர் பாட்டுக் களின் அருமை பெருமைகளை எங்ஙனம் அளவிட்டுரைக் கலாகும்.? இவ்வாறு புலமையிற் சிறந்து விளங்கிய இவ்வாசிரியர் அன்பு, அருள், வாய்மை முதலிய உயர்குணனெல்லாம் ஒருங்கமையப் பெற்றவராயும் இருந்தார். இவரது பாட்டியற்றும் வன்மையையும், வாய்மையையும், மனத் தூய்மையையும், புகழ் மேம்பாட்டையும் சங்கத்துச் சான்றோர்களே ஒருங்கொப்பப் புகழ்ந்து கூறியுள்ளார்கள். " உலகுடன் றிரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்" (அகம். 78) என நக்கீரனாரும், " அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின் உவலை கூராக் கவலையி னெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்" (பதிற்றுப்பத்து. 85) எனப் பெருங்குன்றூர் கிழாரும், "தாழாது செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்" (புறம். 53) எனப் பொருத்திலிளங்கீரனாரும், " நிலமிசைப் பிறந்த மக்கட் கெல்லாம் புலனழுக் கற்ற வந்த னாளன் இரந்துசெல் மாக்கட் கினியிட னின்றிப் பரந்திசை நிற்கப் பாடினன்" (புறம். 127) எனவும், "பொய்யா நாவிற் கபிலன்" (புறம். 174) எனவும் மாறோக்கத்து நப்பசலையாரும் பாடியிருத்தல் காண்க. இங்ஙனம் புலவரெல்லாரும் போற்றும் புலமையும் சான்றாண்மையும் உடையராய இவர்பால், அக்காலத்து வேந்தர்களும் வள்ளல்களும் எவ்வளவு மதிப்பு வைத்திருத்தல் வேண்டும்! வரையா வள்ளன்மையால் நிலமுழுதும் புகழ் பரப்பிய பறம்பிற்கோமானாகிய வேள்பாரி இவரை ஆருயிர்த் துணையாகக் கொண்டொழுகினமையே, இவர்பால் அவ்வள்ளல் வைத்த பெருமதிப்புக்குச் சான்றாகும். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் வேந்தர் பெருமான், இவர் பாடிய ஒரு பத்துப் பாடல்களுக்குப் பரிசிலாக நூறாயிரம் காணம் கொடுத்த தன்றி, ஒரு மலைமீதேறிக் கண்ட நாடெல்லாம் கொடுத்தான் என்றால், அவ்வரசன் இவர்பால் வைத்த மதிப்பினை அளவிட லாகுமோ? மாந்தரஞ்சேர லிரும்பொறையென்ற சேரர்பெருமான் இப்புலவர் பெருந்தகை தமது காலத்தில் இல்லது போனமைக்கு மனங்கவன்று 'தாழாது, செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன், இன்றுள னாயின் நன்றுமன்' என்று இரங்கிக் கூறினன். இது கேட்ட பொருந்தி லிளங்கீரனார் என்ற புலவர் அவ்வரசனைப் பாடுங்கால் இதனைக் கொண்டு மொழிந்தனர். இன்னணம் புலவரும், மன்னரும் போற்றும் புகழமைந்த இவர் தொல்லாணை நல்லாசிரியரும் ஆவர். இது, தமிழினை மதியாது கூறிய குயக் கொண்டான் பெரும் பிறிதுறுமாறு நக்கீரர் தாம் பாடிய அங்கதப் பாட்டினுள், "முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி" என்று, அருந்தவக் கொள்கை அகத்தியனாரொடு ஒப்பவைத்து வாழ்த்தி, இவரது ஆணை பிழையாமை காட்டினமையாற் றெளியப் படும். இவ்வாசிரியரது வரலாற்றின் விரிவையும், குறிஞ்சிப் பாட்டு முதலியவற்றின் ஆராய்ச்சியையும் யானெழுதிய கபிலர் என்னும் உரை நூலால் நன்கு அறியலாகும். இனி, இந்நூல் கடவுள்வாழ்த்து உட்பட நாற்பத்தொரு வெண்பாக்களையுடையது. இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும் இன்னது இன்னது 'இன்னா' எனக் கூறுதலின், இஃது இன்னா நாற்பது எனப் பெயரெய்திற்று. இதற்கெதிராக இன்னது இன்னது இனிது எனக் கூறும் பாக்களையுடைய நூல் இனியவை நாற்பது என வழங்குகிறது. இவற்றுள் ஒன்று மற்றொன்றைப் பார்த்துப் பாடியதாகும் எனக் கருதற்கு இடனுண்டு. இவ்வாசிரியர் துன்பின் மூலங்கள் இன்னின்ன வெனக் கண்டு, அவற்றையே தொகுத் தெடுத்துக் கூறியிருப்பது பாராட்டற் பாலதொன்றாம். மக்கள் யாவரும், தாம் விரும்புவது இன்பமேயாயினும் இன்ப துன்பங்களின் காரணங்களை யறிந்து ஏற்ற பெற்றி நடவாமையால், துன்பமே பெரிதும் எய்துகின்றனர். இஃது எக்காலத்திற்கும் பொதுவாக ஒக்கும். இன்பத்தின் காரணத்தை யறிந்து மேற்கொள்ளுதலினும், முதற்கட் செய்யற்பாலது, துன்பத்தின் காரணத்தை யறிந்து அதனின் நீங்குதலாகும். ஆதலாற்றான் அந்தண்மை பூண்ட கபிலர் துன்பின் மூலங்களைத் தொகுத்துரைப்பாராயின ரென்க. இந்நூல், திருக்குறள் முதலியன போன்று, கூறவேண்டும் பொருள்களையெல்லாம் அடைவுபட வகுத்துக் கூறவந்ததன்று; ஆகலின் இதனை, அவற்றோடு ஒப்பித்துப் பார்த்தல் பொருந்தாது. ஒரு பேரறிஞர் ஒருவாறாக உலகியலை விரைந்து நோக்குங்கால், அவருள்ளத்தில் இன்னாவெனத் தோன்றியவை, இதில், அவ்வப்படி வைக்கப் பட்டுள்ளன வென்றே கொள்ளல் வேண்டும். இதில் நீதிகளல்லாமல், சிற்சில மக்களியற்கை முதலியவும் கூறப்பட்டுள. ஒரே கருத்துப் பலவிடத்தில் வெவ்வேறு தொடர் களாற் கூறப்பட்டுமிருக்கிறது. இதிலுள்ள 'இன்னா' என்னுஞ் சொற்கு யாண்டும் துன்பம் என்றே பொருள் கூறிவந்திருப்பினும், சிலவிடத்து 'இனிமையன்று' எனவும், சிலவிடத்து 'தகுதியன்று' எனவும் இங்ஙனமாக ஏற்றபெற்றி கருத்துக் கொள்ளவேண்டும். கள்ளுண்டல், கவறாடல், ஊனுண்டல் என்பன இதிற் கடியப் பட்டுள்ளன. இந்நூலில் வந்துள்ள, 'ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா', 'குழவிகளுற்ற பிணியின்னா', 'கல்லா ருரைக்குங்' கருமப் பொருளின்னா என்னுந் தொடர்களோடு, இனியவை நாற்பதில் வந்துள்ள 'ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே,' குழவி பிணியின்றி வாழ்தலினிதே,' 'கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே' என்னுந் தொடர்கள் ஒற்றுமை யுறுதல் காண்க. இந்நூற்குப் பழைய பொழிப்புரை யொன்றுளது. சின்னாளின் முன்புஞ் சிலர் உரை யெழுதி வெளிப்படுத்தியிருக்கின்றனர். நம் தமிழன்னைக்கு அரிய தொண்டுகள் பல ஆற்றிப் போற்றிவரும் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் விரும்பியவாறு இப்புதியவுரை பல மேற்கோளுடன் என்னால் எழுதப் பெறுவதாயிற்று. பல சுவடிகள் பார்த்துப் பாட வேற்றுமையும் காட்டப்பெற்றுளது. இதிற் காணப்படும் குற்றங் குறைகளைப் பொறுத்தருளி எனக்கு ஊக்க மளிக்குமாறு அறிஞர் களை வேண்டிக்கொள்கிறேன். "ஞால நின்புக ழேமிக வேண்டும்தென் னால வாயி லுறையுமெம் மாதியே" இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். இன்னா நாற்பது 1. முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா பொற்பனை வெள்ளையை 1 யுள்ளா தொழுகின்னா சக்கரத் தானை மறப்பின்னா 2 வாங்கின்னா சத்தியான் றாடொழா தார்க்கு. (பதவுரை) முக்கண் பகவன் - மூன்று கண்களையுடைய இறைவனாகிய சிவபிரானுடைய, அடி - திருவடிகளை, தொழா தார்க்கு - வணங்காதவர்களுக்கு, இன்னா - துன்ப முண்டாம்; பொன் பனை வெள்ளையை -அழகிய பனைக் கொடியையுடையவ னாகிய பலராமனை, உள்ளாது - நினையாமல், ஒழுகு - நடத்தல், இன்னா - துன்பமாம்; சக்கரத்தானை - திகிரிப்படையை யுடைய வனாகிய மாயோனை, மறப்பு- மறத்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சத்தியான் - வேற்படையை யுடையவனாகிய முருகக் கடவுளின், தாள் - திருவடிகளை, தொழாதார்க்கு - வணங்காதவர்களுக்கு, இன்னா - துன்ப முண்டாகும் என்றவாறு. முக்கண் - பகலவன் திங்கள் எரி யென்னும் முச்சுடராகிய மூன்று நாட்டங்கள். பகவன் - பகம் எனப்படும் ஆறு குணங்களையும் உடையவன். அறு கு'99மாவன; முற்றறிவு, வரம்பிலின்பம், இயற்கை உணர்வு, தன்வயம், குறைவிலாற்றல், வரம்பிலாற்றல் என்பன. பகவன் என்பது பொதுப் பெயராயினும் 'முக்கண்' என்னுங் குறிப்பால் இறைவனை யுணர்த்திற்று; இறைவனுக்கு உண்மையும் ஏனையர்க்கு முகமனும் எனக் கொள்ளலுமாம். " ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங் கடல்வளர் புரிவளை புரையு மேனி யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனு மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வ ருள்ளும்" என்னும் புறப்பாட்டால் பலராமனைக் கூறுதல் தமிழ் வழக்காதலுணர்க. பலராமன் வெண்ணிற முடையனாகலின் வெள்ளை எனப்பட்டான். பொற்பனவூர்தி என்னும் பாடத்திற்கு அழகிய அன்ன வாகனத்தை யுடைய பிரமன் என்று பொருள் கூறிக்கொள்க. இனியவை நாற்பதில் அயனையும் வாழ்த்தினமை காண்க. ஒழுகும் முதனிலைத் தொழிற்பெயர். (1) 2. பந்தமில் லாத மனையின் வனப்பின்னா தந்தையில் லாத புதல்வ னழகின்னா அந்தண ரில்லிருந் தூணின்னா 1 வாங்கின்னா மந்திரம் வாயா விடின். (ப - ரை) பந்தம் இல்லாத - சுற்றமில்லாத, மனையின் - இல்வாழ்க்கையின், வனப்பு - அழகானது, இன்னா - துன்பமாம்; தந்தையில்லாத - பிதா இல்லாத, புதல்வன் - பிள்ளையினது, அழகு - அழகானது, இன்னா - துன்பமாம்; அந்தணர் - துறவோர், இல் இருந்து - வீட்டிலிருந்து, ஊண் - உண்ணுதல், இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மந்திரம் - மறைமொழியாய மந்திரங்கள், வாயா விடின் - பயனளிக்காவிடின், இன்னா துன்பமாம் எ - று. பந்தம் - கட்டு; சுற்றத்திற்காயிற்று. மனை - மனைவாழ்க்கை அதன் வனப்பாவது செல்வம். "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்" என்பவாகலின் சுற்ற மில்லாத மனையின் வனப்பு இன்னாவாயிற்று. இனி, அன்பில்லாத இல்லாளின் அழகு, இன்னாவாம் எனினும் அமையும். 'தந்தை யொடு கல்வி போம்'. ஆதலின் தந்தையில்லாத என்றதனால் கல்விப் பேற்றையிழந்த, என்னும் பொருள் கொள்ளப்படும். அந்தணர் - துறவோர். இதனை, 'அந்தண ரென்போ ரறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண்டொழுகலான்' என்னும் பொய்யா மொழியா னறிக. துறவறத்தினர் காட்டில் கனி கிழங்கு முதலிய உண்டலேனும், நாட்டில் ஒரு வழித் தங்காது திரிந்த இரந்துண்டலேனும், செயற்பாலரன்றி, ஒரு மனையின் கட்டங்கி யுண்ணற்பாலரல்ல ரென்க. மந்திரம் இன்னதென்பதனை "நிறை மொழி மாந்த ராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப" என்னும் தொல்காப்பியத்தா னறிக. மந்திரம் அமைச்சரது சூழ்ச்சி எனப் பொருள் கோடலும் ஆம்; சூழாது செய்யும் வினை துன்பம் பயக்குமென்பது கருத்து. (2) 3. பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா பாத்தில் புடைவை யுடையின்னா 1 வாங்கின்னா காப்பாற்றா வேந்த னுலகு. (ப - ரை) பார்ப்பார் - பார்ப்பாருடைய, இல் - மனையில், கோழியும் நாயும் -, புகல் - நுழைதல், இன்னா - துன்பமாம்; ஆர்த்த - கலியாணஞ் செய்துகொண்ட, மனைவி - மனையாள். அடங்காமை - (கொழுநனுக்கு) அடங்கி நடவாமை, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; பாத்துஇல் - பகுப்பு இல்லாத, புடைவை - புடைவையை, உடை - உடுத்தல், இன்னா - துன்பமாம், ஆங்கு அவ்வாறே, உலகு - நாடு, இன்னா - துன்பமாம் எ - று. பார்ப்பாரில்லிற் கோழியும் நாயும் புகலாகா தென்பதனை மனையுறை கோழியொடு ஞமலி துன்னாது' என்னும் பெரும் பாணாற்றுப்படை யடியானு மறிக. ஆர்த்தல் - கட்டுதல்; அது தொடர்புண்டாமாறு கலியாணஞ் செய்து கொள்ளுதலை யுணர்த்திற்று. அடங்காமை - எறியென் றெதிர் நிற்றல் முதலியன. பாத்து பகுத்து என்பதன் மரூஉ: ஈண்டுத் தொழிற் பெயர். சிலப்பதி காரத்தில் 'பாத்தில் பழம்பொருள்' என வருதலுங் காண்க. புடைவை - ஆடவருடையையும் குறிக்கும். 'பாத்தில் புடைவை யுடையின்னா' என்றதனாற் சொல்லியது ஒன்றுடுத்தலாகா தென்பதாம். 'ஒன்ற மருடுக்கை' என்னும் பெரும்பாணாற்றடி ஒன்றுடாமையே தகுதியென்பது காட்டி நிற்கின்றது. காப்பு ஆற்றா - காத்தலைச் செய்யாத: ஒரு சொல்லுமாம். (3) 4. கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா தடுமாறி வாழ்த லுயிர்க்கு. (ப - ரை) கொடுங்கோல் - கொடுங்கோல் செலுத்தும், மறம் - கொலைத் தொழிலையுடைய, மன்னர்கீழ் - அரசரது ஆட்சியின் கீழ்,வாழ்தல் - வாழ்வது, இன்னா - துன்பமாம்; நெடுநீர் - மிக்கநீரை, புணை இன்றி - தெப்பமில்லாமல், நீந்துதல் - கடந்து செல்லுதல், இன்னா - துன்பமாம்; கடுமொழியாளர் - வன்சொல் கூறுவோரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; உயிர்க்கு - உயிர்களுக்கு, தடுமாறி - மனத்தடுமாற்ற மடைந்து, வாழ்தல் - வாழ்வது, இன்னா - துன்பமாம் எ - று. கொடுங்கோல் - வளைந்த கோல்; அரச நீதியாகிய முறையினைச் செங்கோல் என்றும், முறையின்மையைக் கொடுங்கோல் என்றும் கூறுதல் வழக்கு: இவை ஒப்பினாகிய பெயர். மன்னர் என்பது அவரது ஆட்சிக்காயிற்று. கடுமொழியாளர் - மிகுதிக் கண் கழறிக் கூறுமுறையன்றி, எப்பொழுதும் வன்சொல்லே கூறுமியல்பினர் என்றபடி, தடுமாற்றம் - வறுமை முதலியவற்றாலுண்டாகும் மனவமைதி யின்மையாகிய துன்பம். உயிரென்றது ஈண்டு மக்களுயிரை. (4) 5. எருதி லுழவர்க்குப் போகீர மின்னா கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா திருவுடை யாரைச் செறலின்னா வின்னா பெருவலியார்க் கின்னா செயல். (ப - ரை) எருது இல் - (உழவுக்குரிய) எருது இல்லாத - உழவர்க்கு - உழுதொழிலாளர்க்கு, போகு ஈரம் - அருகிய ஈரம், இன்னா - துன்பமாம்; கருவி - படையின் தொகுதி, கண்மாறி, நிலையழிந்து, புறங்கொடுத்தல் - முதுகு காட்டுதல், இன்னா - துன்பந் தருவதாகும்; திரு உடையாரை - (மிக்க) செல்வமுடையவர் பால், செறல் - செற்றங் கொள்ளல், இன்னா - துன்பந் தருவதாகும்; பெருவலியார்க்கு - மிக்க திறலுடையார்க்கு, இன்னா செயல் - தீமை செய்தல், இன்னா துன்பந் தருவதாகும் எ - று. போகுதல் - அருகுதல், ஒழித்தல்; 'மன்னர் மலைத்தல் போகிய, என்புழி இப் பொருட்டாதல் காண்க. கருவி - தொகுதி; ஈண்டுப் படையது தொகுதியென்க. கண்மாறி : ஒருசொல்; 'ஆங்கவனீங் கெனை யகன்று கண்மாறி' என்புழிப்போல. இனி, கண்மாறி யென்பதற்கு அரசனிடத் தன்பின்றி எனப் பொருள் கொள்ளலுமாம். கருவிகள் மாறி எனப் பிரித்தல் பொருந்து மேற்கொள்க. பெருவலியார் - பொருள் படை முதலியவற்றாற் பெருவலியுடையராய அரசரும், தவத்தால் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலுமாம். பெருவலி பெற்றுடையராய முனிவரும் ஆம்; பெருவலியார்க் கின்னா செயல் துன்பந் தரும் என்பதனைக், 'கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க், காற்றாதாரின்னா செயல்' என்னுந் திருவள்ளுவப்பயனாலுமறிக. (5) 6. சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா உறைசேர் 1 பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா முறையின்றி யாளு மரசின்னா வின்னா மறையின்றிச் செய்யும் வினை. (ப - ரை) சிறை இல் -வேலியில்லாத, கரும்பினை - கரும்புப் பயிரை, காத்து ஓம்பல் -பாதுகாத்தல், இன்னா - துன்பமாம்; உறைசேர் - மழைத்துளி ஒழுகுதலையுடைய, பழங்கூரை - பழைய கூரையை யுடைய மனையில், சேர்ந்து ஒழுகல் - பொருந்தி வாழ்தல், இன்னா - துன்பமாம்; முறை இன்றி - நீதியில்லாமல், ஆளும் - ஆளுகின்ற, அரசு - அரசரது ஆட்சி, இன்னா - துன்பமாம்; மறை இன்றி - சூழ்தலில்லாமல், செய்யும், வினை - செய்யுங் கருமம், இன்னா - துன்பந் தருவதாகும், எ - று. காத்தோம்பல் : ஒரு பொருளிருசொல். உறைசேர் பழங்கூரை என்றது செய்கையழிந்து சிதைவுற்று மழைநீர் உள்ளிழியுஞ் சிறு கூரையினை. அரசு - அரசனுமாம். அரசன் முறையிலானயின் முறையிழத்தலானே யன்றி மழையின்மையாலும் நாடு துன்புறும்; 'முறைகோடி மன்னவன் செய்யினுறை கோடி, யொல்லாது வானம் பெயல்' என்பது காண்க. அமைச்சருடன் மறைவிற் செய்யப்படுவ தாகலின் சூழ்ச்சி மறையெனப்பட்டது. (6) 7. அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா2 மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா கொடும்பா டுடையார்வாய்ச் சொல். (ப - ரை) அறம் மனத்தார் - அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர், கூறும் - சொல்லுகின்ற, கடுமொழியும் - கடுஞ் சொல்லும், இன்னா - துன்பமாம்; மறம் மனத்தார் - வீரத் தன்மையுடைய நெஞ்சத்தினர், ஞாட்பில் - போரின்கண், மடிந்து ஒழுகல் - சோம்பி இருத்தல், இன்னா - துன்பமாம்; இடும்பை உடையார் - வறுமை உடையாரது, கொடை - ஈகைத் தன்மை, இன்னா துன்பமாம் - கொடும்பாடு உடையார் - கொடுமையுடையாரது, வாய்ச்சொல் - வாயிற் சொல்லும், இன்னா - துன்பமாம் எ - று. 'அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொ னான்கும், இழுக்கா வியன்ற தறம்' என்பவாகலின் அறமனத்தார் கூறுங் கடுமொழியும் இன்னாவாயிற்று. உம்மை; எச்சப்பொருளது. இடும்பை - துன்பம் ஈண்டுக் காரணமாய வறுமைமேல் நின்றது. 'வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்' என்று பிற சான்றோருங் கூறினர். கொடும்பாடு - கொடுமை: ஒரு சொல். 'அருங்கொடும்பாடுகன் செய்து' என்பது திருச்சிற்றம்பலக் கோவையார்; நடுவு நிலை யின்மையும் ஆம். வாய்ச் சொல் என வேண்டாது கூறியது தீமையே பயின்ற தெனவேண்டியது முடித்தற்கு வாய்ச் சொல்லும் என்னும் உம்மை தொக்கது. (7) 8. ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா நாற்ற மிலாத மலரி னழகின்னா தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா மாற்ற மறியா னுரை. (ப - ரை) ஆற்றல் இலாதான் - வலியில்லாதவன், பிடித்த படை - கையிற்பிடித்த படைக்கலம், இன்னா - துன்பமாம்; நாற்றம் இலாத - மணமில்லாத, மலரின் அழகு - பூவின் அழகானது, இன்னா - துன்பமாம்; தேற்றம் இலாதான் - தெளிவு இல்லாதவன், துணிவு - ஒருவினை செய்யத்துணிதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மாற்றம் - சொல்லின் கூறு பாட்டினை, அறியான் - அறியாதவனது, உரை - சொல், இன்னா - துன்பமாம் எ - று. ஆற்றல் - ஈண்டு ஆண்மை யெனினும் ஆம்; 'வானொடென். . . வன்கண்ண ரல்லார்க்கு' என்பது காண்க. தேற்றம் - ஆராய்ந்து தெளிதல்; 'தெளிவி லதனைத் தொடங்கார்' என்பது வாயுறை வாழ்த்து. மாற்றம் - பேசு முறைமையென்றும், எதிருரைக்கும் மொழியென்றும் கூறலுமாம். (8) 9. பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா நகையாய நண்பினார் நாரின்மை யின்னா இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா நயமின் மனத்தவர் நட்பு. (ப - ரை) பகல்போலும் - ஞாயிறுபோலும், நெஞ்சத்தார் - மனமுடையார், பண்பு இன்மை - பண்பில்லாதிருத்தல், இன்னா - துன்பமாம்; நகை ஆய - நகுதலையுடைய, நண்பினார் - நட்பாளர்; நார் இன்மை - அன்பில்லா திருத்தல், இன்னா - துன்பமாம்; இகலின் எழுந்தவர் - போரின்கண் ஏற்றெழுந்தவர், ஒட்டு - புறங்காட்டியோடுதல், இன்னா - துன்பமாம்; நயம்இல் - நீதியில்லாத, மனத்தவர் - நெஞ்சினையுடையாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம் எ - று. பகல்போலும் நெஞ்சம் - ஞாயிறு திரிபின்றி ஒரு பெற்றித் தாதல் போலத் திரிபில்லாத வாய்மையையுடைய நெஞ்சம்; 'ஞாயிறன்ன வாய்மையும்' என்பது புறம். இனி நுகத்தின் பகலாணி போல் நடுவுநிலையுடைய நெஞ்சம் எனினும் பொருந்தும். "நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சீனோர்" என்பது பட்டினப்பாலை. பண்பாவது உலகவியற்கை யறிந்து யாவரொடும் பொருந்தி நடக்கும் முறைமை. "பண்பெனப் படுவது பாடறிந்தொழுகல்" என்பது கலித்தொகை. தூய மனமுடையரேனும் உலகத்தோடு பொருந்தி நடவாமை தீதென்பதாம் நகையாய நண்பினார் நாரின்மையாவது - முகத்தால் நகுதல் செய்து அகத்தே அன்பு கருங்குதல். நயம் - நீதி யென்னும் பொருளதா தலைத் திருக்குறள் பரிமேலழகருரை நோக்கித் தெளிக; இனிமை யெனவும் விருப்பம் எனவும் பொருள் கூறலும் ஆம். (9) 10. கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா பண்ணில் புரவி பரிப்பு. (ப - ரை) கள் இல்லா - கள் இல்லாத, மூதூர் - பழைமையாகிய ஊர், களிகட்கு - கள்ளுண்டு களிப்பார்க்கு, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; வள்ளல்கள் - வள்ளியோர், இன்மை - இல்லா திருத்தல், பரிசிலர்க்கு - (பரிசில் பெறும்) இரவலர்க்கு, முன் இன்னா - மிகவுந் துன்பமாம்; வண்மை இலாளர் - ஈகைக்குண மில்லதாவர்களுடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பண் இல்- கலனையில்லாத, புரவி - குதிரை, பரிப்பு - தாங்குதல், இன்னா - துன்பமாம் எ - று. களிகட்கு இன்னா என்றது எடுத்துக்காட்டு மாத்திரையே, களித்த லென்னுஞ் சொல் கள்ளுண்டு மகிழ்தல் என்னும் பொருளில் முன் வழங்கியது; இக்காலத்தே பொதுப்பட மகிழ்தல் என்னும் பொருளதாயிற்று. களி - கள்ளுண்போன். முன் : மிகுதி யென்னும் பொருளது. பண் கலனை; இது கல்லனையெனவும் வழங்கும். (10) 11. பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா பொருளில்லார் வண்மை புரிவு. (ப - ரை) பொருள் உணர்வார் - (பாட்டின்) பொருளை அறியும் அறிவுடையார், இல்வழி - இல்லாத இடத்தில், பாட்டு உரைத்தல் - செய்யுளியற்றிக் கூறுதல், இன்னா - துன்பமாம்; இருள் கூர் - இருள் மிகுந்த, சிறுநெறி - சிறிய வழியிலே, தனிப் போக்கு - தனியாகப் போகுதல், இன்னா - துன்பமாம்; அருள் இல்லார் தம்கண் - தண்ணளியில்லாதவரிடத்தில், செலவு - (இரப்போர்) செல்லுதல்; இன்னா - துன்பமாம்; பொருள் இல்லார் - பொருளில்லாதவர், வண்மை புரிவு - ஈதலை விரும்புதல், இன்னா- துன்பமாம் எ - று. புலவராயினார் பாட்டின் பொருளுணரும் அறிவில்லார் பால் தாம் அரிதிற் பாடிய பாட்டுக்களைக் கூறின், அவர் அவற்றில் பொருளை அறியாராகலின், தம்மை நன்கு மதித்தல் செய்யார். அதுவேயன்றி இகழ்தலுஞ் செய்வர்; அவற்றின் மிக்க துன்பம் பிறிதில்லை யாகலின் 'பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத் தலின்னா' எனப்பட்டது. "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்" 'கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை யொருவற்கு' என்னும் பழமொழிச் செய்யுட்கள் இங்கே கருதற்பாலன. (11) 12. உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா1 இடனில் சிறியாரோ டியர்த்தநண் பின்னா இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா கடனுடையார் காணப் புகல். (ப - ரை) உடம்பாடு இலாத - உளம் பொருந்துதலில்லா, மனைவி தோள் - மனைவியின் தோளைச்சேர்தல், இன்னா - துன்பமாம்; இடன் இல் - விரிந்த வுள்ளமில்லாத, சிறியாரோடு - சிறுமையுடையாருடன், யாத்த நண்பு - பிணித்த நட்பு, இன்னா - துன்பமாம்; இடங்கழியாளர் - மிக்க காமத்திணை யுடையாரது, தொடர் - சேர்க்கை, இன்னா - துன்பமாம்; கடன் உடையார் - கடன் கொடுத்தவர், காண - பார்க்குமாறு, புகல் - அவர்க்கெதிரே செல்லுதல், இன்னா - துன்பமாம் எ - று. மனைவிதோள் : இடக்கரடக்கல். 'உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட், பாம்போ டுடனுறைந் தற்று' என்னுங் குறள் இங்கு நினைக்கற்பாலது. இட னென்றது ஈண்டு உள்ள விரிவை யுணர்த்திற்று. குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. இடங்கழி - உள்ளம் நெறிப்படாதோடுதல்; கழி காமம் என்பது கருத்து; 'இடங்கழி காமமொடடங்கானாகி' என்பது மணிமேகலை. சிலர் 'விடங்களியாளர்' எனப் பாடங் கொண்டு, விடம்போலும் கள்ளுண்டு களிப்போர் எனப் பொருள் கூறினர்; அது பொருந்தாமை யோர்க். 'கடன் கொண்டான் றோன்றப் பொருள் தோன்றும்' ஆகலின், 'காணப் புகல் இன்னா' என்றார்; கடன் படுதல் துன்பம் என்பது கருத்தாகக் கொள்க. (12) 13. தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா வலைசுமந் துண்பான் பெருமித மின்னா புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா முலையில்லாள் பெண்மை விழைவு. (ப - ரை) தலை தண்டம் ஆக - தலை அறுபடும்படி, சுரம் போதல் - காட்டின்கட் செல்லுதல், இன்னா - துன்பமாம்; வலை சுமந்து - வலையைச் சுமந்து, உண்பான் - அதனால் உண்டு வாழ்வானது. பெருமிதம் - செருக்கு, இன்னா - துன்பமாம்; புலை - புலால் உண்ணுதலை. உள்ளி - விரும்பி, வாழ்தல் - வாழ்வது, உயிர்க்கு - (மக்கள்) உயிர்க்கு, இன்னா - துன்பமாம் - முலை இல்லாள் - முலையில்லாதவள், பெண்மை - பெண்தன்மையை, விழைவு - விரும்புதல், இன்னா - துன்பமாம் எ - று வலைசுமந்து என்னுங் காரணம் காரியத்தின் மேற்று. புலை - புன்மை : தன்னுயிரோம்பப் பிறவுயிர் கொன்றுணல் சிறுமை யாகலின் அது புலை யெனப்படும். பெண்மை விழைவு இன்னா என் என்றது கடைபோகாதாகலின், 'கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு, மில்லாதான் பெண்காமுற் றற்று' என்பதுங் காண்க. (13) 14. மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா பிணியன்னார் வாழு மனை. (ப - ரை) மணி இலா - (ஓசையினால் தன் வருகையைப் பிறர்க்கு அறிவிக்கும்) மணியை அணியப் பெறாத, குஞ்சரம் - யானையை, வேந்து - அரசன், ஊர்தல் - ஏறிச் செல்லுதல், இன்னா துன்பமாம்; துணிவு இல்லார் - பகையை வெல்லுந் துணி வில்லாதார், சொல்லும் - கூறும், தறுகண்மை - வீரமொழிகள், இன்னா துன்பமாம்; பணியாத - வணங்கத்தகாத, மன்னர் - அரசரை, பணிவு - வணங்குதல், இன்னா - துன்பமாம்; பிணி அன்னார் (கணவருக்குப்) பிணிபோலும் மனைவியர், வாழும் மனை - வாழ்கின்ற இல், இன்னா - துன்பமாம் எ - று. சொல்லும் என்றதனால் தறு கண்மை மொழிக்காயிற்று; வஞ்சினமும் ஆம். பணியாத மன்ன ராவார் தம்மிற் றாழ்ந்தோர் பணிதல் - இன்சொல்லும் கொடையும். 'எள்ளாத வெண்ணிச் செயல் வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு' என்றபடி, தாம் வலியராய் வைத்து மெலிய பகைவரை வணங்குதல் எள்ளற் கேதுவாகலின் 'பணிவின்னா' என்றார். 'மன்னர் பணிவு' என்று பாடமாயின், அகத்தே பணிதலில்லாத பகை மன்னரது புற வணக்கம் இன்னாவாம் என்று பொருள் கூறிக்கொள்க. 'சொல் வணக்கம் மொன்னார்கட் கொள்ளற்க' 'தொழுத கையுள்ளும் படையொடுங்கும்' என்பன இங்கே கருதற்பாலன. பிணிபோறல் - சிறு காலை அட்டில் புகாமை முதலியன. (14) 15. வணரொலி 1 யைம்பாலார் வஞ்சித்த லின்னா துணர்தூங்கு மாவின் படுபழ மின்னா புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா உணர்வா ருணராக் கடை. (ப - ரை) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலார் - கூந்தலையுடைய மகளிர், வஞ்சித்தல் - (தம் கணவரை) வஞ்சித் தொழுகுதல், இன்னா - துன்பமாம்; துணர் -கொத்தாக, தூங்கும் - தொங்குகின்ற, மாவின் - மாவினது, படு பழம் - நைந்து விழுந்த கனி, இன்னா - துன்பமாம்; புணர் - வேற்றுமையின்றிப். . . பொருந்திய, பாவை அன்னார் - பாவைபோலும் மகளிரது, பிரிவு - பிரிதல், இன்னா - துன்பமாம்; உணர்வார் - அறியுந் தன்மைய.ர்-உணராக் கடை - அறியாவிடத்து, இன்னா - துன்பமாம் எ - று. வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி. ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை 'ஒலிநெடும் பீலி' என்னும் நெடுநல்வாடை யடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது. கூந்தல் ஐந்து பகுப்பாவன: குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி யென்ப. இங்ஙனம் ஒரோவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி ஒரொப்பனை யிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். படு பழம் - செவ்வியிழந்து விழுந்த பழம். புணர்தல் - அன்பால் நெஞ்சு கலத்தல்: மணம் பொருந்துதலும் ஆம். உணர்வார் - உணர்ந்து குறை தீர்க்கவல்லார்; பாட்டின் பொருளறிவாரும் ஆம். (15) 16. புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா இல்லாதார் நல்ல விருப்பின்னா 1 வாங்கின்னா பல்லாரு ணாணப் படல். (ப - ரை.) புல் - புல்லை, ஆர் - உண்கின்ற; புரவி - குதிரையை, மணி இன்றி - மணி யில்லாமல், ஊர்வு - ஏறிச் செலுத்துதல், இன்னா - துன்பமாம்; கல்லார் உரைக்கும் - கல்வியில்லாதார் கூறும், கருமப் பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; இல்லாதார் - பொருளில்லாதவரது, நல்ல விருப்பு - நல்லவற்றை விரும்பும் விருப்பம், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பல்லாருள் - பலர் நடுவே, நாணப்படல் - நாணப்படுதல், இன்னா - துன்பமாம் எ - று. ஊர்வு: தொழிற்பெயர். பொருள் - பயன், நல்ல - அறம் நுகரப்படுவனவும் ஆம். நாணப்படல் - மானக்கேடெய்துதல். (16) 17. உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா எண்ணிலான் செய்யுங் கணக்கு. (ப - ரை.) உண்ணாது வைக்கும் - நுகராது வைக்கும். பெரும் பொருள் வைப்பு - பெரிய பொருளின் வைப்பானது, இன்னா துன்பமாம்; நண்ணா - உளம் பொருந்தாத, பகைவர் -பகைவரது, புணர்ச்சி - சேர்க்கை, நனி இன்னா - மிகவுந் துன்மாம்; கண் இல் ஒருவன் - விழியில்லாத ஒருவனது, வனப்பு - அழகு, இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, எண் இலான் - எண்ணூல் பயிலாதவன், செய்யும் கணக்கு - இயற்றும் கணக்கு, இன்னா - துன்பமாம் எ - று. வைப்பு - புதைத்து வைப்பது, கண் - கண்ணோட்டமும் ஆம், எண் - கணிதம்; நூலுக் காயிற்று. எண்ணிலான் என்பதற்குச் சூழ்ச்சித் திறனில்லான் என்றும், செய்யுங் கணக்கு என்பதற்குச் செய்யுங் காரியம் என்றும் பொருள் கூறலும் ஆம். (17) 18. ஆன்றவிந்த சன்றோருட் பேதை புகலின்னா மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா ஈன்றாளை யோம்பா விடல். (ப - ரை.) ஆன்று - கல்வியால் நிறைந்து, அவிந்த - அடங்கிய, சான்றோர் உள - பெரியோர் நடுவே, பேதை - அறிவில்லாதவன், புகல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மான்று - மயங்கி, இருண்ட போழ்தின் - இருண்டுள்ள காலத்தில், வழங்கல் - வழிச் செல்லுதல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; நோன்று - (துன்பங்களைப்) பொறுத்து, அவிந்து - (மனம்) அடங்கி, வாழாதார் - வாழமாட்டாதவர், நோன்பு - நோற்றல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, ஈன்றாளை - பெற்ற தாயை, ஓம்பாவிடல் - காப்பாற்றாமல் விடுதல், இன்னா - துன்பமாம், எ - று. ஆன்று: ஆகல் என்பதன் மரூஉவாகிய ஆல் என்னும் பகுதியடியாகப் பிறந்தது. குணங்களால் நிறைந்து என்று கூறலும் ஆம். அவிந்த - ஐம்புலனும் அடங்கிய; பெரியோர்பாற் பணிந்த என்றுமாம். 'ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்' என்னும் புறப்பாட்டும், அதனுரையும் நோக்குக. மான்று - மால் என்பது திரிந்து நின்ற தெனினும் ஆம். பொழுது என்பதன் மரூஉ. ஓம்பா: ஈறுகெட்டது. (18) 19. உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா மனவறி யாளர் 1 தொடர்பு. (ப - ரை.) உரன் உடையான் - திண்ணிய அறிவுடையவன், உள்ளம் மடிந்து இருத்தல் - மனமடிந்திருத்தல், இன்னா - துன்பமாம்; மறன் உடை - வீரமுடைய, ஆள் உடையான் - ஆட்களை யுடையான், மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டுதல், இன்னா - துன்பமாம்; சுரம் - அருநெறியாகிய, அரிய - இயங்குதற்கரிய, கானம் - காட்டின் கண், செலவு - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மனம் வறியாளர் - மனவறுமை யுடையாரது, தொடர்பு - சேர்க்கை, இன்னா - துன்பமாம். உரன் - திண்ணிய அறிவாதலை 'உரனென்னுந் தோட்டியான்' என்னுங் குறட்குப் பரிமேலழகர் உரைத்த உரையா னறிக. மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டிப் போர்க்கெழுதல்; காரணம் காரியத்திற் காயிற்று. வீரரை யுடையான் தானே போர்க்குச் செல்லுதல் வேண்டா என்றபடி; வலிதிற் செல்லுதல் எனினும் ஆம். மனவறி யாளர் - மனநிறைவில்லாதவர்; புல்லிய எண்ணமுடையார் எனினும் ஆம். (19) 20. குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா கலத்தல் குலமில் வழி. (ப - ரை.) குலத்துப் பிறந்தவன் - நற்குடியிற் பிறந்தவன், கல்லாமை - கல்லாதிருத்தல், இன்னா- துன்பமாம்; நிலத்து இட்ட- பூமியில் விதைத்த, நல்வித்து - நல்ல விதைகள், நாறாமை - முளையாமற் போதல், இன்னா - துன்பமாம்; நலம் தகையார் -தன்மையாகிய அழகினையுடைய மகளிர், நாணாமை - நாணின்றி யொழுகுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, குலம் இல்வழி - ஒவ்வாத குலத்திலே, கலத்தல் - மணஞ் செய்து கலத்தல், இன்னா - துன்பமாம் எ - று. மகளிர்க்கு நாணம் சிறந்ததென்பது 'உயிரினுஞ் சிறந்தன்று நாணே' என்னும் தொல்காப்பியத்தானு மறியப்படும். நலத்தகையார் நாணாமை என்பதற்கு நற்குணமுடைய ஆடவர் பழிபாவங்கட்கு அஞ்சாமை எனப் பொருள் கூறுவாருமுளர். மணஞ்செய்வார் ஆராய வேண்டியவற்றுள் குடியொப்புக் காண்டலும் ஒன்று: "கொடுப்பினன் குடைமையும் குடிநிரலுடைமையும், வண்ண முந் துணையும் பொரீஇ யெண்ணா, தெமியேத் துணிந்த வேமஞ்சா லருவினை" என்னுங் குறிஞ்சிப் பாட்டடிகள் ஈண்டு நோக்கற் பாலன. (20) 21. மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா மூரி யெருத்தா லுழவு. (ப - ரை.) மாரி நாள் - மழைக்காலத்தில், கூவும் - கூவுகின்ற, குயிலின் குரல் - குயிலினது குரலோசை, இன்னா - துன்பமாம்; ஈரம் இலாளர் - அன்பில்லாதவரது, கடுமொழிக் கூற்று - கடியதாகிய சொல், இன்னா - துன்பமாம்; மாரி வளம் பொய்ப்பின் - மழை வளம் பொய்க்குமாயின், ஊர்க்கு - உலகிற்கு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மூரி எருத்தால் - மூரியாகிய எருதால், உழவு - உழுதல், இன்னா - துன்பமாம் எ - று. வீரமிலாளர் என்று கொள்ளலும் ஆம். மொழிக் கூற்று; ஒருபொருளிருசொல்; மொழியின் பகுதியுமாம். மழையாகிய வளம் என்க; மழையினது வளம் எனலுமாம். பொய்த்தல் - இல்லையாதல்; 'விண்ணின்று பொய்ப்பின்' என்பது திருக்குறள். 'மாரி பொய்ப்பினும்' என்பது புறம். மூரி யெருத்து: இருபெயரொட்டு. வலிமை மிக்க எருதுமாம். 'எருமையு மெருதும் பெருமையுஞ் சோம்பும் வலியு முரணு நெரிவு மூரி' என்பது பிங்கலம். கட்டுக் கடங்காத காளையால் உழுதல் துன்பம் என்பதாம். முதிர்ந்த எருதால் என்று பொருள் கூறுவாரு முளர். (21) 22. ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா ஓத்திலாப் பார்ப்பா னுரை. (ப - ரை.) ஈத்த வகையால் - கொடுத்த அளவினால், உவவா தார்க்கு - மகிழாதவர்க்கு, ஈப்பு - கொடுத்தல், இன்னா - துன்பமாம்; பாத்து உணல் - பகுத்து உண்ணுதல், இல்லார் உழை- இல்லாதவரிடத்தில், சென்று - போய், உணல் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; மூத்த இடத்து - முதுமையுற்ற பொழுதில், பிணி - நோய் உண்டாதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, ஓத்து இலா - வேதத்தை ஓதுதல் இல்லாத, பார்ப்பான் - பார்ப்பானுடைய, உரை - சொல், இன்னா - துன்பமாம் எ- று. ஈந்த வென்பது வலித்தாலாயிற்று. உவவாதார்க்கீப்பின்னா என்பதனை, 'இன்னா திரக்கப்படுத லிரந்தவ ரின்முகங் காணு மளவு'என்னுங் குறளுடன் பொருத்திக் காண்க. பாத்துணல் - தென்புலத்தார் முதலாயினார்க்கும், துறந்தார் முதலாயினார்க்கும் பகுத்துண்ணுதல். பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. ஓத்து - ஓதப்படுவது; வேதம். (22) 23. யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா கான்யா 1 றிடையிட்ட வூர். (ப - ரை.) யானைஇல் - யானைப்படையில்லாத, மன்னரை - அரசரை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஊனைத் தின்று (பிறிதோன் உயிரின்) ஊனை உண்டு, ஊனை - (தன்) ஊனை, பெருக்குதல் - வளர்த்தல், முன் இன்னா -மிகவுந் துன்பமாம்; தேன் நெய் - தேனும் நெய்யும், புளிப்பின் புளித்து விட்டால், சுவை - (அவற்றின்) சுவை, இன்னா - துன்பமாம், ஆங்கு - அவ்வாறே, கான்யாறு - காட்டாறு, இடை இட்ட இடையிலே உளதாகிய, ஊர் - ஊரானது, இன்னா - துன்பமாம் எ- று. 'யானையில் மன்னரைக் காண்டல்' என்றாரேனும் அரசர் படையில் யானையில்லாதிருத்தல் இன்னா என்பது கருத்தாகக் கொள்க. 'படைதனக்கு யானை வனப்பாகும்'என்பது சிறுபஞ்சமூலம். இனியவை நாற்பதிலுள்ள 'யானையுடைய படை காண்டன் மிகவினிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே, கான்யாற்றடைகரை யூரினி தாங்கினிதே, மானமுடையார் மதிப்பு' என்னுஞ் செய்யுளுடன் இதனை ஒப்பு நோக்குக. (23) 24. சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா துறையிருந் தாடை கழுவுத லின்னா அறைபறை யன்னவர் 1 சொல்லின்னா வின்னா நிறையில்லான் கொண்ட தவம். (ப - ரை.) சிறை இல்லா - மதில் இல்லாத, மூதூரின் - பழைமையாகிய ஊரினது, வாயில் காப்பு - வாயிலைக் காத்தல், இன்னா - துன்பமாம்; துறை இருந்து - நீர்த்துறையிலிருந்து, ஆடை கழுவுதல் - ஆடைதோய்த்து மாசுபோக்குதல், இன்னா - துன்பமாம்; அறை - ஒலிக்கின்ற, பறை அன்னவர் - பறைபோன்றாரது, சொல் - சொல்லானது, இன்னா - துன்பமாம்; நிறை இல்லான் - (பொறி களைத் தடுத்து) நிறுத்துந் தன்மையில்லாதவன், கொண்ட - மேற்கொண்ட, தவம் தவமானது, இன்னா - துன்பமாம்; எ - று. நீர்த்துறையில் ஆடை யொலித்தல் புரியின், நீர் வழி நோயணுக்கள் பரவி இன்னல் விளைக்குமாகலின், "துறையிலிருந் தாடை கழுவுதலின்னா" என்றார். இனம் பற்றிப் பிற தூயதன்மை புரிதலுங் கொள்க. அறைபறை யன்னவர் - தாம் கேட்ட மறைக்கப் படும் பொருளினை யாண்டும் வெளிப்படுத்து மியல்பினர். 'அறை பறை யன்னர் கயவர்தாங் கேட்ட, மறைபிறர்க் குய்த்துரைக் கலான்' என்றார் பொய்யில் புலவரும். (24) 25. ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா காம முதிரி னுயிர்க்கின்னா 2 வாங்கின்னா யாமென் பவரொடு நட்பு. (ப - ரை.) ஏமம் இல் - காவல் இல்லாத, மூதூர் - பழைய ஊரிலே, இருத்தல் - வாழ்தல், மிக இன்னா - மிகவுந் துன்பமாம்; தீமை உடையார் - தீச்செய்கை யுடையவரது, அயல் இருத்தல் - பக்கத்திலே யிருத்தல், நன்கு இன்னா - மிகவும் துன்பமாம்; காமம் முதிரின் - காமநோய் முற்றினால், உயிர்க்கு இன்னா - உயிர்க்குத் துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, யாம் என்பவரொடு - யாமென்று தருக்கியிருப்பவரோடு செய்யும், நட்பு - நட்பானது, இன்னா - துன்பமாம் எ -று. ஏமம் - மதிற்காவலும், அரசின் காவலும் ஆம். அயலிருத்தல் என்றமையால் அவரைச் சேர்ந்தொழுகுதல் கூறவேண்டா தாயிற்று. காமம் உயிரைப் பற்றி வருத்து மென்பதனைக் 'காமமு நாணு முயிர் காவாத் தூங்குமென், னோனா வுடம்பி னகத்து' என்னும் முப்பாலானு மறிக. (25) 26. நட்டா ரிடுக்கண்கள் காண்டல் நனியின்னா 1 ஒட்டார் பெருமிதங் காண்டல் பெரிதின்னா 2 கட்டில்லா மூதூ ருறையின்னா வாங்கின்னா நட்ட கவற்றினாற் சூது. (ப - ரை.) நட்டார் - நட்புக் கொண்டவருடைய, இடுக்கண்கள்- துன்பங்களை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா- மிகவுந் துன்பமாம்; ஒட்டார் - பகைவரது, பெருமிதம் - செருக்கை, காண்டல் - பார்த்தல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; கட்டு இல்லா - சுற்றமாகிய கட்டு இல்லாத, மூதூர் - பழையவூரிலே, உறை - வாழ்தல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, நட்ட- நட்பாகக் கொள்ளப்பட்ட, கவற்றினால் - கவற்றைக் கொண்டு ஆடுகின்ற, சூது - சூதாட்டம், இன்னா - துன்பமாம் எ - று. கட்டு - கட்டுப்பாடும் ஆம். உறை: முதனிலைத் தொழிற் பெயர். நட்ட என்பது விருப்புடன் அடிப்பட்டுப் பழகிய என்றபடி. கவறு - பாய்ச்சி; ஆவது தாயக்கட்டை, ஒரு சொல் வருவிக்கப் பட்டது. (26) 27. பெரியாரோ டியாத்த தொடர்விடுத லின்னா அரியவை செய்து மெனவுரைத்த லின்னா பரியார்க்குத் தாமுற்ற கூற்றின்னா வின்னா பெரியோர்க்குத் தீய செயல். (ப - ரை.) பெரியாரோடு - பெரியவருடன், யாத்த - கொண்ட, தொடர் - தொடர்ச்சியை, விடுதல் - விடுவது, இன்னா- துன்பமாம்; அரியவை - செய்தற்கரிய காரியங்களை, செய்தும் - செய்து முடிப்போம், என உரைத்தல் - என்று சொல்லுதல், இன்னா - துன்பமாம்; பரியார்க்கு - (தம்மிடத்தில்) அன்பு கொள்ளாதவர்க்கு, தாம் உற்ற - தாம் அடைந்த துன்பங்களைக் கூறும்; கூற்று - சொல், இன்னா - துன்பமாம்; பெரியார்க்கு - பெருமைiடையார்க்கு, தீய செயல் - தீயனவற்றைச் செய்தல், இன்னா - துன்பமாம் எ - று. பெரியார் தொடர் விடுதல் இன்னா என்பதனைப் 'பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்' என்னுந் திருக்குறளானு மறிக. பெரியார் - ஈண்டுக் கல்வியறிவு நற்குண நல்லொழுக்கங்களிற் சிறந்த நல்லோர். குற்றியலிகரம் அலகுபெறாதாயிற்று. 'அரியவை செய்துமென உரைத்தல் இன்னா' என்றது தாம் செய்யக் கருதிய அரிய செயல்களைச் செயலால் வெளிப்படுத்தலன்றி உரையாற் கூறுதல் தக்கதன்று என்றபடி; தம்மாற் செய்ய வியலாதவற்றைச் செய்து தருவேமெனப் பிறர்க்கு வாக்களிப்பது இன்னாவாம் எனப் பொருள் கூறினும் அமையும். செய்தும்: தன்மைப் பன்மை யெதிர்கால வினைமுற்று; இறந்தகால முற்றும் ஆம். பரிதல் - அன்பு செய்தல்: இரங்குதலுமாம். பெரியார்க்குத் தீங்கு செயல் இன்னா என்பதனை 'எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார், பெரியார்ப் பிழைத்தொழுகு வார்' என்னும் வாயுறை வாழ்த்தானு மறிக. உற்ற, தீய என்பன முறையே தெரிநிலையும் குறிப்புமாய வினைப்பெயர்கள். (27) 28. பெருமை யுடையாரைப் பீடழித்த லின்னா கிழமை யுடையார்க் 1 களைந்திடுத லின்னா வளமை யிலாளர் வனப்பின்னா வின்னா இளமையுண் மூப்புப் புகல். (ப-ரை) பெருமை உடையாரை - பெருமை யுடையவரை, பீடு அழித்தல் - பெருமை யழியக் கூறல், இன்னா - துன்பமாம்; கிழமை உடையார் - உரிமை உடையவரை, களைந்திடுதல் - நீக்கி விடுதல்; இன்னா - துன்பமாம்; வளமை இலாளர் - செல்வமில்லாத வருடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; இளமையுள் - இளமைப் பருவத்தில், மூப்பு - முதுமைக்குரிய தன்மைகள், புகல் - உண்டாதல், இன்னா - துன்பந் தருவதாகும் எ - று. பீடு அழித்தல் என்னும் இருசொல்லும் ஒரு சொன்னீர்மை யெய்தி இரண்டாவதற்கு முடிபாயின. பீடழித்தலாவது பெருமை உளதாகவும் அதனையிலதாக்கிக் கூறுதல் கிழமையுடையார் - பழையராக வரும் அமைச்சர் முதலாயினார்; நண்பரும் ஆம். கிழமை யுடையாரைக் கீழ்ந்திடுதலின்னா என்று பாடங் கொள்ளுதல் சிறப்பு; 'பழமையெனப்படுவதியாதெனின் யாதுங் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு' என்னும் திருக்குறளுங் காண்க. வளமை வண்மையுமாம். (28) 29. கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா வல்லாதான் சொல்லு முரையின் பயனின்னா இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா வாங்கின்னா கல்லாதான் கோட்டி கொளல். (ப-ரை) கல்லாதான் - (நடத்த வேண்டிய முறையைக்) கல்லாதவன், ஊரும் - ஏறிச் செலுத்தும், கலிமா - மனஞ்செருக்கிய குதிரை, பரிப்பு - (அவனைச்) சுமந்து செல்லுதல், இன்னா துன்பமாம்; வல்லாதான் - கல்வியில்லாதவன், சொல்லும் - சொல்லுகின்ற, உரையின் பயன் - சொல்லின் பொருள், இன்னா - துன்பமாம்; இல்லார் - செல்வ மில்லாதவருடைய, வாய்ச் சொல்லின் - வாயிலிருந்து வரும் சொல்லினது, நயம் - நயமானது, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கல்லாதான் - கல்வியில்லாதவன், கோட்டி கொளல் - கற்றவரவையில் ஒன்றைக் கூறுதல், இன்னா - துன்பமாம் எ- று. கலி - ஆரவாரமும் ஆம். வல்லாதான் ஒன்றனைச் செய்ய மாட்டாதான் எனினும் அமையும். இல்லார் வாய்ச்சொல்லின் நயமின்னா என்பதனை 'நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்' என்னுந் தமிழ்மறை யானுமறிக. கோட்டிகொளல்: ஒரு சொல்; அவை யின்கண் பேசுதல் என்னும் பொருளது; 'அங்கணத் துளுக்க. . . . கோட்டி கொளல்' என்பதுங் காண்க. (29) 30. குறியறியான் மாநாக 1 மாட்டுவித்த லின்னா தறியறியா 2 னீரின்கட் பாய்ந்தாட3 லின்னா அறிவறியா மக்கட் பெறலின்னா வின்னா செறிவிலான் கேட்ட மறை. (ப - ரை) குறியறியான் - (பாம்பாட்டுதற்குரிய மந்திர முதலியவற்றின்) முறைகளை அறியாதவன், மாநாகம் - பெரிய பாம்பினை, ஆட்டுவித்தல் - ஆடச் செய்தல், இன்னா - துன்பமாம்; தறி அறியான் - உள்ளிருக்கும் குற்றியை யறியாமல், நீரின்கண் - நீரில் பாய்ந்து, ஆடல் - குதித்து விளையாடுதல், இன்னா - துன்பமாம் ; அறிவு அறியா - அறியவேண்டுவனவற்றை அறியமாட்டாத, மக்கள்- பிள்ளைகளை, பெறல் - பெறுதல், இன்னா - துன்பமாம்; செறிவு இலான் - அடக்கம் இல்லாதவன், கேட்ட மறை - கேட்ட இரகசியம், இன்னா - துன்பமாம் எ - று. தறி - குற்றி; கட்டை. அறிவறியான் என்னின் அறிவு வறியனா யினான்; ஆவது கல்லா இளமையன் என்க. 'அறிகொன்று என்புழிப் போல' ஈண்டு அறி யென்பது முதனிலைத் தொழிற்பெயர். அறிவறியா மக்கள் - அறியவேண்டுவன அறியமாட்டாத மக்கள்: 'அறிவறிந்த மக்கள்' என்பதற்குப் பரிமேலழகர் கூறிய பொருளை நோக்குக. செறிவு - அடக்கம் : 'செறிவறிந்து சீர்மை பயக்கும்' என்னுங் குறளில் செறிவு இப் பொருட் டாதல் காண்க: அடக்க மில்லாதவன் மறையினை வெளிப்படுத்தலின் 'கேட்ட மறை யின்னா' என்றார். (30) 31. நெடுமர நீள்கோட் டுயர்பாய்த லின்னா 1 கடுஞ்சின வேழத் தெதிர்சேற லின்னா ஒடுங்கி யரவுறையு மில்லின்னா வின்னா கடும்புலி வாழு மதர் (ப - ரை) நெடுமரம் - நெடிய மரத்தினது, நீள் கோட்டு - நீண்ட கிளையின், உயர் - உயரத்திலிருந்து, பாய்தல் - கீழே குதித்தல், இன்னா - துன்பமாம்; கடும் சினம் - மிக்க கோபத்தினையுடைய, வேழத்து எதிர் - யானையின் எதிரே, சேறல் - செல்லுதல், இன்னா- துன்பமாம்; அரவு - பாம்பு, ஒடுங்கி உறையும் - மறைந்து வசிக்கின்ற, இல் - வீடானது, இன்னா - துன்பமாம்; கடும் புலி - கொடிய புலிகள், வாழும் அதர் - வாழ்கின்ற வழியானது, இன்னா- துன்பமாம் எ- று. கோட்டுயர் பாய்தல் என்பதற்குக் கோட்டின் நுனியிலேறிய தோடமையாது மேலும் பாய்ந்து சேறல் என்று பொருள் கூறலுமாம்; 'நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி, னுயிர்க்கிறுதி யாகிவிடும்' என்பது ஈண்டு நோக்கற்பாலது. நெடுமர நீற் கோட்டுயர் பாய்தல் முதலிய நான்கற்கும், ஓட்டென்னும் அணி பற்றி, முறையே தம் வளியளவறியாது பெரிய வினைமேற் சேறலும், வலியார்க்கு மாறேற்றலும், உடம்பாடிலாத உட்பகையுடன் வாழ்தலும், பகைக் கெளியராம்படி நெறியலா நெறியிற்சேறலும் இன்னா வாமெனப் பொருள்கோடலும் பொருந்துமாறு காண்க. (31) 32. பண்ணமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிதின்னா எண்ணறியா மாந்தர்2 ஒழுக்குநாட் கூற்றின்னா மண்ணின் முழவி னொலியின்னா வாங்கின்னா தண்மை யிலாளர் 1 பகை. (ப - ரை) பண் அமையா - இசை கூடாத, யாழின் கீழ் - யாழின் கீழிருந்து, பாடல் - பாடுதல், பெரிது இன்னா - மிகவுந்துன்பமாம்; எண் அறியா மாந்தர் - குறி நூல் (சோதிடம்) அறியாத மாக்கள், ஒழுக்கு நாள் கூற்று - ஒழுகுதற்குரிய நாள் கூறுதல், இன்னா - துன்பமாம்; மண் - இல் - மார்ச்சனையில்லாத, முழவின் - மத்தளத்தினது, ஒலி - ஓசை, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தண்மை இலார் - தண்ணிய குணம் இல்லாதவரது, பகை - பகையானது, இன்னா - துன்பமாம் எ - று. பண் என்பதனை முதனிலைத் தொழிற்பெயராகக் கொண்டு, இசைக்கரணம் எட்டனு ளொன்று என்னலுமாம். ஒழுகுதற்குரிய நாளாவது கருமங்கட்கு விதிக்கப்பட்ட நாள். நற்குணமுடையார் பகையிடத்தும் இனியன செய்தலும், நற்குணமில்லார் நட்பிடத்தும் இன்னா செய்தலும் உடையாராகலின் தண்மையிலாளர் பகை இன்னா வெனப்பட்டது; தீயோர்பால் பகையும் நண்புமின்றி நொதுமலாக விருத்தல் வேண்டு மென அறிக. (32) 33. தன்னைத்தான் போற்றா தொழுகுத னன்கின்னா முன்னை யுரையார் புறமொழிக் கூற்றின்னா நன்மை யிலாளர் தொடர்பின்னா வாங்கின்னா தொன்மை யுடையார் கெடல் (ப - ரை) தன்னைத்தான் - (ஒருவன்) தன்னைத் தானே, போற்றாது - காத்துக்கொள்ளாது, ஒழுகுதல் - நடத்தல், நன்கு இன்னா- மிகவுந் துன்பமாம்; முன்னை உரையார் - முன்னே சொல்லாமல், புறமொழிக் கூற்று - புறத்தே பழித் துரைக்கும் புறங்கூற்று, இன்னா - துன்பமாம்; நன்மை இலாளர் - நற்குணமில்லாதவரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தொன்மை உடையார் - பழைமையுடையவர், கெடல் - கெடுதல், இன்னா - துன்பமாம் எ - று. தன்னைத்தான் போற்றுதலாவது மனமொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடக்குதல். முன்னை - ஐ : பகுதிப் பொருள் விகுதி. உரையார்: முற்றெச்சம். மொழிக்கூற்று : ஒரு பொருளிருசொல். தொன்மை யுடையார் கெடல் என்றது தொன்று தொட்டு மேம்பட்டு வரும் பழங்குடியினர் செல்வங் கெடுதல் என்றபடி.(33) 34. கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா 1 வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு (ப - ரை) கள் உண்பான் - கட்குடிப்பவன், கூறும் - சொல்லு கின்ற, கருமப் பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; முள் உடை காட்டில் - முட்களையுடைய காட்டில், நடத்தல் - நடத்தலானது, நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; வெள்ளம் படு - வெள்ளத்திலகப்பட்ட, மா - விலங்கு, கொலை - கொலையுண்டல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, கள்ளம் மனத்தார் - வஞ்ச மனத்தினை யுடையாரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம் எ- று. மாக்கொலை - விலங்கைக் கொல்லுதல் எனினும், நீர்ப் பெருக்கிலகப்பட்டு வருந்தும் விலங்கைக் கரையேற வொட்டாது தடுத்துக் கொல்லுதல் இன்னாவாம் என்பது கருத்து. (34) 35. ஒழுக்க மிலாளார்க் குறவுரைத்த 2 லின்னா விழுத்தகு நூலும் 3 விழையாதார்க் கின்னா இழித்த தொழிலவர் நட்பின்னா வின்னா கழிப்புவாய் மண்டிலங் கொட்பு. (ப - ரை) ஒழுக்கம் இலாளர்க்கு - நல்லொழுக்கம் இல்லாத வரிடத்தே, உறவு உறைத்தல் - தமக்கு உறவுளதாகக் கூறுதல், இன்னா - துன்பமாம்; விழுத்தகு நூலும் - சீரிய நூலும், விழை யாதார்க்கு - விரும்பிக் கல்லாதார்க்கு, இன்னா - துன்பமாம்; இழித்த தொழிலவர் - இழிக்கப்பட்ட தொழிலையுடையாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம்; கழிப்பு வாய் - நல்லாரால் கழிக்கப்பட்ட இடமாகிய, மண்டிலம் - நாட்டிலே, கொட்பு - திரிதல், இன்னா - துன்பமாம் எ - று. ஒழுக்கமிலாளர் குறைவுரைத்தல் என்னும் பாடத்திற்கு ஒழுக்கமில்லாதவரை இழித்துரைத்தல் என்று பொருள் கொள்க. இழித்த தொழில் - அறிவுடையோராற் பழிக்கப்பட்ட தொழில். ஈற்றடிக்கு, ஒழுகக் குறைந்த மதியினது செலவு காண்டல் என்று பொருள் கூறலுமாம். (35) 36. எழிலி யுறைநீங்கி னீண்டையார்க் கின்னா குழலி னினிய 1 மரத் தோசைநன் கின்னா குழவிக ளுற்ற பிணியின்னா வின்னா அழகுடையான் பேதை யெனல் (ப - ரை) எழிலி - மேகமானது, உறை நீங்கின் - நீரைச் சொரியா தாயின், ஈண்டையார்க்கு - இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு, இன்னா - துன்பமாம்; குழலின் இனிய - புல்லாங் குழலைப் போலும் இனிய, மரத்து ஓசை - மரத்தினது ஓசை, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; குழவிகள் உற்ற - குழந்தைகள் அடைந்த, பிணி - நோயானது, இன்னா - துன்பமாம்; அழகு உடையான் - அழகினை யுடையவன், பேதை எனல் - அறிவில்லாதவன் என்று சொல்லப் படுதல், இன்னா - துன்பமாம் எ - று. உறை - நீர்த்துளி, 'குழலினினியமரத் தோசை நன்கின்னா' என்பதன் கருத்து (காற்று ஊடறுத்துச் செல்லுதலால் மரங்களினின் றெழும் ஓசை குழலிசைபோ லினியதாயினும் பாராட்டப்படுவ தின்று என்பது போலும்) குழலில் என்னும் பாடத்திற்குக் குழல் இல்லாத என்று பொருள் கூறிக் கொள்க. (36) 37. பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா நெடுமாட நீணகர்க் கைத்தின்மை யின்னா வருமனை பார்த்திருந் தூணின்னா வின்னா கெடுமிடங் கைவிடுவார் நட்பு. (ப - ரை) பொருள் இலான் - செல்வ மில்லாதவன், வேளாண்மை- (பிறர்க்கு) உதவி புரிதலை, காமுறுதல் - விரும்புதல், இன்னா - துன்பமாம்; நெடுமாடம் - நெடிய மாடங்களையுடைய, நீள் நகர்- பெரிய நகரத்திலே, கைத்து இன்மை - பொருளின்றி யிருத்தல், இன்னா - துன்பமாம்; வருமனை - வரப்பட்ட மனையிலுள்ளாரை, பார்த்திருந்து - எதிர்நோக்கியிருந்து, ஊண் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; கெடும் இடம் - வறுமையுள்ள இடத்தில், கைவிடுவார் - கைவிட்டு நீங்குவாரது, நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம் எ-று. வேளாண்மை - உபகாரம் வருமனை பார்த் திருந்தூண் என்றது பிறர் மனையை அடைந்து அம் மனைக்குரியாரது செவ்வி நோக்கியிருந்துண்டல் என்றபடி. கெடுமிடங் கைவிடுவார் நட்பு இன்னா வென்பதனைக் 'கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை யுள்ளினு முள்ளஞ் சுடும்' என்னுந் திருக்குறளானு மறிக. (37) 38. நறிய மலர்பெரிது நாறாமை யின்னா துறையறியா னீரிழிந்து 1 போகுத லின்னா அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா சிறியார்மேற் செற்றங் கொளல். (ப - ரை) நறிய மலர் - நல்ல மலரானது, பெரிய நாறாமை - மிகவும் மணம் வீசாதிருத்தல், இன்னா - துன்பமாம்; துறை அறியான் - துறையை அறியாதவன், நீர் இழிந்து போகுதல் - நீரில் இறங்கிச் செல்லுதல், இன்னா - துன்பமாம்; அறியான் (நூற்பொருள்) அறியாதவன், வினாப்படுதல் - (அறிவுடையோரால்) வினாப்படுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, சிறியார் மேல் - சிறியவர்மீது, செற்றங் கொளல் - சினங் கொள்ளுதல், இன்னா - துன்பமாம் எ - று. நறிய - நல்ல அழகுடைய, துறை - நீரில் இறங்குதற்கும் ஏறுதற்குமுரிய வழி அறியா நீர் என்பது பாடமாயின் அறியப்படாத நீர் என்க. சிறியார் - வெகுளி செல்லுதற்குரிய எளிமையுடையார்; குழவிப் பருவத்தினருமாம். (38) 39. பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா திறனிலான் செய்யும் வினை. (ப - ரை) பிறன் மனையாள் பின் நோக்கும் - பிறன் மனைவியைக் காமுற்றுப் பின் றொடரக் கருதும், பேதைமை - அறிவின்மை, இன்னா- துன்பமாம்; மறம் இலா மன்னர் - வீரமில்லாத அரசர், செரு புகுதல் - போர்க்களத்திற் செல்லுதல், இன்னா - துன்பமாம்; வெம் புரவி - விரைந்த செலவினையுடைய குதிரையினது, வெறும் புறம் - கல்லணையில்லாத முதுகில், ஏற்று - ஏறுதல், இன்னா - துன்பமாம்; திறன் இலான் - செய்யுங் கூறுபாடறியாதவன், செய்யும் வினை - செய்யுங் காரியம், இன்னா - துன்பமாம் எ - று. புரவியின் புறமென்று மாற்றுக. திறன் - அறிந்தாற்றிச் செய்யும் வகை. (39) 40. கொடுக்கும் பொருளில்லான் வள்ளன்மை யின்னா கடித்தமைந்த பாக்கினுட் கற்படுத லின்னா கொடுத்து விடாமை கவிக்கின்னா வின்னா மடுத்துழிப் பாடா விடல். (ப - ரை) கொடுக்கும் - கொடுத்தற்குரிய, பொருள் இல்லான்- பொருளில்லாதவனுடைய, வள்ளன்மை - ஈகைத் தன்மை, இன்னா - துன்பமாம் : கடித்து அமைந்த - கடித்தற்கு அமைந்த, பாக்கினுள் - பாக்கில், கல்படுதல் - கல் இருத்தல், இன்னா - துன்பமாம்; கவிக்கு - புலவனுக்கு, கொடுத்து விடாமை - பரிசில் கொடுத் தனுப்பாமை, இன்னா - துன்பமாம்; மடுத்துழி - தடைப் பட்ட விடத்து, பாடாவிடல் - பாடாது விடுதல், இன்னா - (பாடும் புலவனுக்குத்) துன்பமாம் எ - று. கடித்து; கடிக்க என்பதன் திரிபு; பிளந்து எனினுமாம். கல் என்றது பாக்கிற் படுவதொரு குற்றம், மடுத்துழி - பொருள் பெற்ற விடத்தில் எனினுமாம். பாடா: ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம். (40) 41. அடக்க முடையவன் மீளிமை யின்னா துடக்க மிலாதவன் றற்செருக் கின்னா அடைக்கலம் வவ்வுத லின்னாவாங் கின்னா அடக்க வடங்காதார் சொல். (ப - ரை) : அடக்கம் உடையவன் - (ஐம் பொறிகளை) அடக்கு தலுடையவனது, மீளிமை - தறுகண்மை, இன்னா - துன்பமாம், துடக்கம் இல்லாதவன் - முயற்சியில்லாதவன், தற்செருக்கு - தன்னையே மதிக்கும் மதிப்பு, இன்னா - துன்பமாம்; அடைக்கலம்- பிறர் அடைக்கலமாக வைத்த பொருளை, வவ்வுதல் - கவர்ந்து கொள்ளுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, அடக்க- (அறிவுடையோர்) அடக்கவும், அடங்காதார் - அடங்குதலில்லாத வர்க்குக் கூறும், சொல் - சொல்லானது, இன்னா - துன்பமாம் எ -று. மீளமை - பெருமிதமுமாம். துடக்கம் - வளைவு; உடல் வளைந்து வினைசெய்தற் கேற்ற முயற்சியை உணர்த்திற்று; தொடக்கம் என்று கொண்டு யாதானும் நற்கருமஞ் செய்யத் தொடங்குதல் என்றுரைப் பினுமாம். அடங்காதார் சொல் - அடங்காதார் அவையிற் கூறுஞ் சொல் எனினும் ஆம். (41) இன்னா நாற்பது மூலமும் உரையும் முற்றும்  செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை (எண் - பக்கவெண்) அடக்க 220 அறமனத்தார் 201 ஆற்றலிலா 202 ஆன்றவிந்த 207 ஈத்தவகை 210 உடம்பாடி 204 உண்ணாது 207 உரனுடையா 208 எருதிலுழ 200 எழிலி 218 ஏமமில் 211 ஒழுக்க 217 கல்லாதா 214 கள்ளில்லா 203 கள்ளுண்பான் 217 குலத்துப் 209 குறியறியான் 214 கொடுக்கும் 219 கொடுங்கோல் 199 சிறையில் கரு 201 சிறையில்லா 211 தலைதண்ட 205 தன்னைத்தான் 216 நட்டாரிடுக் 212 நறியமலர் 219 நெடுமர 215 பகல்போலு 202 பண்ணமையா 215 பந்தமில் 198 பார்ப்பாரிற் 199 பிறன்மனையாள் 219 புல்லார் 207 பெரியாரோ 212 பெருமை 213 பொருளிலான் 218 பொருளுணர்வா 203 மணியிலாக் 205 மாரிநாட் 209 முக்கட் 197 யானையின் 210 வணரொலி 206 கார் நாற்பது - மதுரை கண்ணங்கூத்தனார் முகவுரை கார்நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. கீழ்க் கணக்கு நூல் பதினெட்டென்பது, 'வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற்றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே' என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறியலாவது. அவை அம்மையென்னும் வனப்புடையவாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத் துரைத்தன ராவர். 'அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்' என்பது பன்னிரு பாட்டியல். கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன : நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழியைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறு பஞ்சமூலம், இன்னிலை, முது மொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இதனை, 'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு' என்னும் வெண்பாவானறிக. இதில் 'நால்' என்பதனை 'ஐந்திணை' என்பதன் முன்னுங்கூட்டி நாலைந் திணையெனக்கொள்ள வேண்டும். சிலர் கைந்நிலை யென்பது கூட்டி இன்னிலையை விடுத்திடுவர். வேறு சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக் கொண்டு இன்னிலை. கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவர். அவர் 'திணை மாலை' என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகல் வேண்டுமென்பர். முற்குறித்த வெண்பாவில் 'ஐந்தொகை' 'இன்னிலைய' 'மெய்ந்நிலைய' 'கைந்நிலையோடாம்' 'நன்னிலைய வாம்' என்றிவ்வாறெல்லாம் பாடவேற்றுமையும் காட்டுவர். இனி, கார்நாற்பது என்னும் இந்நூலை யியற்றி னார் மதுரைக் கண்ணங்கூத்தனார் எனப்படும் நல்லிசைப் புலவராவர். கூத்தனார் என்னும் பெயருடைய இவர் கண்ணன் என்பார்க்கு மகனா ராதலிற் கண்ணங் கூத்தனார் என்றும், மதுரையிற் பிறந்தமையாலோ இருந்தமையாலோ மதுரைக் கண்ணங்கூத்தனார் என்றும் வழங்கப் பட்டனரெனக் கொள்ளல் வேண்டும். கண்ணனுக்கு மகனாராகிய கூத்தனார் கண்ணங் கூத்தனார் என வழங்கப்படுதற்கு விதி, 'அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் நிற்றலு முரித்தே யம்மென் சாரியை மக்கண முறைதொ கூஉ மருங்கி னான' என்னும் தொல்காப்பியச் சூத்திரமாகும். இவ்வாசிரியர் கடைச் சங்கப் புலவரென்பது ஒருதலையாயின் இவரது காலம் கி. பி. 200 - க்கு முற்பட்டதெனக் கருதலாகும். இவர் இன்ன பிறப்பினர் எனத் துணிதற்கு இடனின்று. இவரது சமயம் சமணமோ பௌத்தமோ அன்றென்பது தெளிவு. இவர் இந்நூலன்றி வேறு செய்யு ளொன்றும் இயற்றியதாகத் தெரியவில்லை. இந்நூற் செய்யுட்களெல்லாம் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாட்டினுள் இன்பங் கண்ணிய அகத்தின் பகுதியாகிய முல்லைத் திணையின்பாற் பட்டனவாகும். முல்லையாவது ஒரு தலைமகன் தனக்குரியயாதானும் ஒரு நிமித்தத்தாற் பிரிந்து சென்றவழி அவன் வருந்துணையும் தலைமகள் அவன் கூறிய சொற் பிழையாது கற்பால் ஆற்றியிருத்தலாம். வேந்தற்குந் துணையாகப் போர்புரியச் செல்லுதலுற்ற தலைமகன் 'கார் காலத்து மீண்டு வருவேன்' எனக் காலங்குறித்துப் பிரிந்தானாக, அதுகாறும் அரிதின் ஆற்றியிருந்த தலையன்பினளாய தலைவிக்கு அப்பருவம் வந்தும் அவன் வரத் தாழ்த்திடின் ஆற்றாமை விஞ்சுதல் இயற்கை. அங்ஙனம் விஞ்சுத லுற்ற ஆற்றாமையும் ஆற்றுதலும், ஒன்றினொன்றிகலி நிற்கும் அந்நிலைமை தலைமகளது அன்பின் பெருமையும் கற்பின் அருமையும் நனி விளங்குதற் குரியதொன் றாகலின் அதுவே பொருளாக இந்நூல் இயற்றப்பட்டதென்க. இதிலுள்ள செய்யுட் களெல்லாம் தலைவி, தோழி, தலைவன் என் போரின்கூற்றுக்களாக உள்ளன. ஒவ்வொரு செய்யுளிலும் கார் வந்தமை கூறப்படுதலின் இந்நூல் கார் நாற்பது எனப்பட்டது. இதில் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளும் முதற் பொருளும் அன்றிக் கருப்பொருளிற் பல கூறப்பட்டுள்ளன. இதிலுள்ள உவமைகளெல்லாம் கற்போர்க்கு இன்பம் பயக்குந் தகையன மாயோனையும் பலராமனையும், வேள்வித் தீயையும், கார்த்திகை விளக்கீட்டையும் இவ் வாசிரியர் குறித்திருப்பது கருதற்பாலது. இந்நூற்குப் பழைய பொழிப்புரையொன் றுளது. அவ்வுரை 23 முதல் 38 வரையுள்ள பாடல்களுக்குக் கிடைத்திலது. சின்னாளின் முன்னரும் சிலர் உரையெழுதி யிருக்கின்றனர். அவற்றுள் காலஞ்சென்ற திருவாளர் பி. எஸ். இரத்தி வேலு முதலியார் அவர்கள் எழுதிய விருத்தியுரை முச்சங்கம், பதினெண் கீழ்க் கணக்கு, அகப்பொருளியல் என்பன முதலிய ஆராய்ச் சிகளையும் கொண்டிருப்பது. இதில் காணப்படும் குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்கின்றேன். "ஞால நின்புக ழேமிக வேண்டும் தென் னால வாயி லுறையுமெம் மாதியே" இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். கார் நாற்பது மூலமும் உரையும் தோழி தலைமகட்குப் பருவங் காட்டி வற்புறுத்தது. 1. பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெய றாழ1 வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானங் கருவிருந் தாலிக்கும் போழ்து.2 (பதவுரை.) பொருகடல் வண்ணன் - கரையை மோதுங் கடலினது நிறத்தினையுடைய திருமால், மார்பில் புனை தார் போல் - மார்பில் அணிந்த பூமாலைபோல, திருவில் - இந்திர வில்லை, விலங்கு ஊன்றி - குறுக்காக நிறுத்தி, தீம் பெயல் தாழ - இனிய பெயல் வீழாநிற்க, வருதும் என மொழிந்தார் - வருவோம் என்று சொல்லிப்போன தலைவர். வானம் - மேகமானது. கரு இருந்து - கருக்கொண்டிருந்து, ஆலிக்கும் போழ்து - துளிகளைச் சொரியாநிற்கையில், வாரார் கொல் - வாராரோ? (வருவார்) என்றவாறு. பொருகடல் - வினைத்தொகை, புனைதார் என்க. திரு - அழகு, விரும்பப்படும் தன்மை. திருவில் என்பது இந்திரவில் என்னும் பொருட்டு: 'திருவிற் கோலி' என ஐங்குறு நூற்றுள் வருவதுங் காண்க. விலங்கு - குறுக்கு; 'விலங்ககன்ற வியன் மார்ப' என்பது புறம். ஆக என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது. நீலநிற முடைய வாளின்கண் பன்னிறமுடைத்தாய் வளைந்து தோன்றும் இந்திரவில் நீலநிறமுடைய மாயோனது மார்பிலணிந்த பன்னிற மலர்த்தாரினைப் போலும் என்க. தாழ - நிகழ்கால வினையெச்சம். வருதும் - தனித்தன்மைப் பன்மை. வருவர் என்பது கிறிப்பாற் போந்தது. (1) இதுவுமது 2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய் 1 இன்னே வருவர் நமரென் றெழில்வான மின்னு மவர்தூ துரைத்து. (ப-ரை.) கொடுங்குழாய் - வளைந்த குழையை யுடையாய், கடுங்கதிர் நல்கூர - ஞாயிற்றின் வெங்கதிர் மெலிவெய்த, கார் செல்வம் எய்த - கார்ப்பருவம் வளப்பத்தைப் பொருந்த, நெடுங்காடு- நெடிய காடெல்லாம், நேர்சினை ஈன - மிக்க அரும்புகளை யீன, எழில் வானம் - எழுச்சியுடைய முகில், நமர் இன்னே வருவர் என்று - நமது தலைவர் இப்பொழுதே வருவரென்று, அவர் தூது உரைத்து- அவரது தூதாய் அறிவித்து, மின்னும் - மின்னாநின்றது எ-று. கடுங்கதிர் - அன்மொழித் தொகையாய் ஞாயிற்றை உணர்த்து வதெனக் கோடலும் ஆம். ஞாயிற்றுக்கு வெங்கதிர் செல்வ மெனப் படுதலின் அது குறைதலை நல்கூர்தல் என்றார். கார் - ஆகுபெயர். முதலடியிற் பொருள் முரண் காண்க. நேர் - ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு. கொடுமை - வளைவு. கொடுங் குழை - காதணி. எழில் - அழகுமாம். செயவெனெச்சம் மூன்றும் மின்னும் என்னும் வினைகொண்டன. (2) பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது. 3. விரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந் தயிர்மணற் றண்புறவி னாலி - புரள உருமிடி வான மிழிய வெழுமே நெருந லொருத்தி திறத்து. ப-ரை) வரிநிறப் பாதிரி வாட - வரி நிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாட, வளிபோழ்ந்து - காற்றினால் ஊடறுக்கப் பட்டு, அயிர்மணல் - இளமணலையுடைய, தண் புறவின் - குளிர்ந்த காட்டின்கண், ஆலி புரள - ஆலங்கட்டிகள் புரள, உரும் இடிவானம் - இடி இடிக்கும் முகில், நெருநல் - நேற்று முதலாக, ஒருத்தி திறத்து - தமித்திருக்கும் ஒருத்தி மாட்டு (அவளை வருத்துவான் வேண்டி,) இழிய - மழை பெய்ய, எழும் - எழாநின்றது எ- று. பாதிரி - ஆகுபெயர்; அது வேனிற்பூ ஆகலின் வாட என்றார். வாட என்றமையின் அது முல்லைக்கண் மயங்காமையோர்க. 'புன்காற் பாதிரி வரிநிறத் திரள்வீ' என அகத்தினும் வரிநிறம் கூறப்பட்டமை காண்க. போழ்தல் - ஊடறுத்தல்; 'வளியிடை, போழப் படாஅ முயக்கு' என முப்பலினும் இப்பொட்டாயது இது. நீர்திரண்ட கட்டி. உழிய எனப் பாடங் கொள்ளுதல் சிறப்பு; உழிதர என்க. நெருநல் எழும் என முடிக்க. நேற்றுமுதல் தமிமையால் வருந்துவாள் எனினும் மையும். பாதிரி வாட ஆலி புரள வானம் வளி போழ்ந்து ஒருத்தி திறத்து எழும் என வினை முடிவு செய்க. (3) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது 4. ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக் காடுங் கடுக்கை கவின்பெறப் 1 பூத்தன பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி வாடும் பசலை மருந்து. (ப-ரை.) ஆடும் மகளிரின் - கூத்தாடும் மகளிர் போல, மஞ்ஞை - மயில்கள், அணிகொள - அழகுபெற, காடும் - காடுகளும், கடுக்கை - கொன்றைகள், கவின் பெற - அழகு பெற, பூத்தன - அலர்ந்தன; பாடு வண்டு - பாடுகின்ற வண்டுகளும், ஊதும் - அப்பூக்களை ஊதாநிற்கும்; (ஆதலால்) பணைத்தோளி- மூங்கில் போலும் தோளையுடையாய், பருவம் - இப்பருவ மானது, வாடும் பசலை - வாடுகின்ற நின் பசலைக்கு, மருந்து - மருந்தாகும் எ-று. மகளிரின் என்பதில் இன் உவமப் பொருவு. மஞ்ஞை கார் காலத்திற் களிப்புமிக்கு ஆடதலின் ஆடுமகளிரை உவமை கூறினார். காடும் - உம்மை எச்சப்பொருளது. பூத்தன என்னும் சினைவினை முதலொடும் பொருந்திற்று; காடு முதலும் கடுக்கை சினையுமாகலின். வாடும் - காரணகாரியப் பொருட்டு. (4) இதுவுமது 5. இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல் பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப் பவழஞ் சிதறி யவைபோலக் கோபந் தவழுந் தகைய புறவு. (ப-ரை.) பகழிபோல் - அம்புபோலும், உண் கண்ணாய் - மையுண்ட கண்களையுடையாய், ஈண்டை - இவ்விடத்து, பவழம் சிதறியவைபோல் - பவழம் சிந்தியவை போல, புறவு - காடுகள், கோபம் தவழும் தகைய - இந்திர கோபங்கள் பறக்குந் தகைமையை உடைய வாயின; (ஆதலால்) இகழுநர் சொல் அஞ்சி - இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி, சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவர், வருதல் - மீளவருதல், பொய் அன்மை - மெய்யாம் எ - று. தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ் செய்யா தார்க் குளதாவது பழியாகலின் 'இகழுநர் சொல் லஞ்சி' எனப் பட்டது. வடிவானும் தொழி லானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை - மெய்ம்மை. ஈண்டைப் பவழஞ் சிதறியவை என்றமை யால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந்திருந்த பவழ வடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும். ஈண்டை - குற்றுகரம் ஐகாரச் சாரியை யேற்றது. கோபம் - கார்காலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர். (5) இதுவுமது 6. தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல் கடிதிடி வான முரறு நெடுவிடைச் 1 சென்றாரை நீடன்மி னென்று. (ப-ரை.) வடு இடை - மாவடுவின் நடுவே, போழ்ந்து - பிறந்தாற் போலும், அகன்ற கண்ணாய் - பரந்த கண்களையுடையாய், கடிது இடி வானம் - கடுமையாய் இடிக்கும் முகில், நெடு இடை சென்றாரை- நெடிய வழியிற் சென்ற தலைவரை, நீடன்மின் என்று - காலந் தாழ்க்கா தொழிமின் என்று சொல்லி, உரறும் - முழங்காநிற்கும்; (ஆதலால்) தொடிஇட ஆற்றா - வளையிடுதற்கு நிரம்பாவாய், தொலைந்த - மெலிந்த, தோள் நோக்கி - தோள்களைப் பார்த்து, வருந்தல் - வருந்தாதே எ - று. ஆற்றா - எதிர்மறை வினையெச்சமுற்று. தொடி யிடவாற்றா தொலைந்த தோள் என்றது உறுப்பு நலனழிதல் கூறியவாறு; 'தொடியொடு தொல்கவின் வாடிய தோள்' என்பது முப்பால். போழ்ந்தால் என்பது போழ்ந்து எனத் திரிந்துநின்றது. உவமவுருபு தொக்கது. நெடுவிடை - மருபின்பாற்படும்; நெட்டிடை என்பதே பயின்ற வழக்காகலின். (6) இதுவுமது 7. நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந் தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய் பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல எச்சாரு மின்னு மழை. (ப-ரை.) தளர் இயலாய் - தளர்ந்த இயல்பினை யுடையாய், நச்சியார்க்கு - தம்மை விரும்பியடைந் தார்க்கு, ஈதலும் - கொடுத்தலும், நண்ணார் - அடையாத பகைவரை, தெறுதலும் - அழித்தலும், தற்செய்வான் - தம்மை நிலைநிறுத்துவனவாக நினைத்து, (அவற்றின் பொருட்டு) சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவரை, பொச் சாப்பு இலாத - மறப்பில்லாத, புகழ் - புகழையுடைய, வேள்வித் தீப்போல - வேள்வித் தீயைப்போல, எச்சாரும் - எம்மருங்கும், மின்னும் - மின்னாநிற்கும், மழை - வானமானது, தரூஉம் - கொண்டு வரும் எ-று. அறஞ் செய்தற்கும் பகைதெறுதற்கும் பொருள் காரணமாதலை 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாய பகை வென்று பேணாரைத் தெறுதலும் . . . தருமெனப், பிரிவெண்ணிப் பொருள் வயிற் சென்ற நங்காதலர்' என்னும் பாலைக்கலி யானு மறிக. தற்செய்வான் சென்றார் - பன்மை யொருமை மயக்கம்; சில சொற்கள் வருவிக்கப்பட்டன. 'தளிரியலாய்' என்பது பாடமாயின் தளிர்போலும் சாயலையுடையாய் என்று பொருள் கூறப்படும். பொச்சாப்பின்றிச் செய்தலாற் புகழுண்டாம் ஆகலின் 'பொச் சாப்பிலாத என்னும் பெயரெச்சம் காரணப் பொருட்டு; 'பொச் சாப்பார்க்கில்லை புகழ்மை' என்பது திருவள்ளுவப் பயன். வேள்வித்தீ உவமம். அது மழைக்குக் காரணமென்பதற்கு ஞாபகமாகவும் உள்ளது. (7) இதுவுமது 8. மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப் பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும் தண்ணிய லஞ்சனந் தோய்ந்தபோற் காயாவும் நுண்ணரும் பூழ்த்த புறவு. (ப-ரை.) பெண் இயல் நல்லாய் - பெண் தகைமையையுடைய நல்லாய், மண் இயல் ஞாலத்து - மண்ணானியன்ற உலகத்து, மன்னும் புகழ் வேண்டி - நிலைபெறும் புகழை விரும்பி, பிரிந்தார்- பிரிந்து சென்ற தலைவர், வரல் - மீண்டு வருதலை, கண் இயல் அஞ்சனம் - கண்ணிற்கு இயற்றப்பட்டமையை, தோய்ந்தபோல் - தோய்ந்தவை போல, காயாவும் - காயாஞ் செடிகளும், நுண் அரும்பு ஊழ்த்த - நுண்ணிய அரும்புகள் மலரப்பேற்ற, புறவு - காடுகள். கூறும் - சொல்லா நிற்கும் எ-று. பெண் இயல் - நாண் முதலியன; 'அச்சமு நாணு மடனு முந்துறுத்த நிச்சமும் பெண்பாற் குரியவென்ப' என்று தொல்காப்பியம் கூறுவதுங் காண்க. காயா மலர் அஞ்சனந் தோய்ந்தாற் போலும் என்பதனை, 'செறியிலைக் காயா அஞ்சன மலர' என்னும் முல்லைப் பாட்டானும் அறிக. ஊழ்த்தல் - மலர்தல்; 'இணரூழ்த்து நாறாமலர்' என்பது திருக்குறள். புறவு பிரிந்தார்வரல் கூறும் என முடிக்க. (8) இதுவுமது 9. கருவிளை கண்மலர்போற் பூத்தன கார்க்கேற் றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து. (ப-ரை.) கண்மலர்போல் பூத்தன - கண்மலர் போலப்பூத்தன வாகிய, கருவிளை - கருவிளம்பூக்களும், கார்க்கு ஏற்று - கார்ப் பருவத்திற் கெதிர்ந்து, எரி வனப்பு உற்றன - தீயினது அழகை யுற்றனவாகிய, தோன்றி - தோன்றிப் பூக்களும், வரிவளை முன் கை இறப்ப - வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல, இன்சொல் பலவும் உரைத்து - இனிய சொற்கள் பலவும் மொழிந்து, துறந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - வருதலை, கூறும் - கூறாநிற்கும் எ-று. கருவிளை - கருங்காக்கணம்பூ; அது கண் போலும் என்பதனைக் 'கண்ணெனக் கருபிளை மலர' என்னும் ஐங்குறு நூற்றானு மறிக. தோன்றிப்பூச் செந்நிற ஒளியுடையது; 'சுடர்ப் பூந்தோன்றி' என்பது பெருங்குறிஞ்சி, 'தோடார் தோன்றி குருதி பூப்ப' என்றார் பிறரும். உரைத்து இறப்பத் துறந்தார் என்க. கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல் கூறும் என முடிக்க, (9) இதுவுமது 10. வானேறு வானத் துரற வயமுரண் ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக் கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி மேனி தளிர்ப்ப வரும். (ப-ரை.) என் தோழி - எனது தோழியே, வான்ஏறு - இடியேறு, வானத்து உரற - முகிலின்கண் நின்று ஒலிப்ப, வய - வலியினையும், முரண் - மாறு பாட்டினையும் உடைய, ஆன் ஏறு ஒருத்தல் - எருமையின் ஆணாகிய ஒருத்தல், அதனோடு - அவ்விடியேற்றுடன்; எதிர் செறுப்ப - எதிராகி வெகுள, கடுமான்தேர் - விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர், கான் யாற்று ஒலியின் - காட்டாற்றின் ஒலிபோலும் ஒலியினை உடைத்தாய், மேனி தளிர்ப்ப - நின்மேனி தழைக்க, வரும் - வாரா நிற்கின்றது எ-று. வய - வலி; 'வயவலியாகும்' என்பது தொல் காப்பியம். ஆன் என்னும் பெயர் எருமைக் குரித்தாதலும் ஒருத்தல் என்னும் பெயர் அதன் ஆணுக்குரித்தாதலும் தொல்காப்பிய மரபியலானறிக; இடபம் எனினும் ஆம். தேரொலி அருவியொலி போலும் என்பதனை 'அருவியினொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்' என்னும் பதிற்றுப்பத்தானும் அறிக. செயவெனெச்சம் முன்னைய விரண்டும் நிகழ்விலும், பின்னையது எதிர்விலும் வந்தன. (10) இதுவுமது 11. புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார் வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும் அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல் பூங்குலை யீன்ற புறவு (ப-ரை) வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலாய் - கூந்தலையுடையாய், அணர்த்து எழு - மேனோக்கி யெழும், பாம்பின் தலைபோல் - பாம்பினது படத்தைப் போல, புணர் கோடல் - பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற - பூங்கொத்துக் களை யீன்ற, புறவு - காடுகள், புணர்தரு - (இம்மை மறுமை யின்பங்கள்) பொருந்துதலையுடைய, செல்வம் - பொருளை, தருபாக்கு - கொண்டுவர, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வல் வருதல் - விரைந்து வருதலை, கூறும் - கூறாநிற்கின்றன எ - று. தருபாக்கு - வினையெச்சம், வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி. ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை 'ஒலி நெடும்பீலி' என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன; குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஓரோப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். 'வணரொலி யைம்பாலார்' என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க. (11) இதுவுமது 12. மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய் ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம் 1 நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ வைகலு மேரும் வலம். (ப-ரை) மை எழில் - கருமையும் அழகும் பொருந்திய, உண் கண் - மையுண்ட கண்களையுடைய, மயில் அன்ன சாயலாய் - மயில் போலும் சாயலினை யுடையாய் நெய் அணி குஞ்சரம் போல - எண்ணெய் பூசப்பட்ட யானைகள்போல, இருங்கொண்மூ - கரிய மேகங்கள், வைகலும் - நாடோறும், வலம் வரும் - வலமாக எழாநின்றன; (ஆதலால்) ஐயம் தீர் காட்சி - ஐயந்தீர்ந்த அறிவினையுடைய, அவர் - நம் தலைவர், வருதல் திண்ணிது - மீள வருதல் உண்மை எ - று. சாயல் - மென்மை; உரிச்சொல் ஐயந்தீர்ந்த எனவே திரிபின்மையும் பெற்றாம். காட்சி - அறிவு. காட்டியவர் எனக் குறிப்புவினைப் பெயராக்கலும் ஒன்று பொய் உள்ளீடில்லாததாகலின் உண்மையைத் 'திண்ணிது' என்றார். ஆம் - அசை. இருமை - கருமை; பெருமையுமாம். ஏர்தல் - எழுதல்; 'பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு' என்பது முல்லைப் பாட்டு. (12) இதுவுமது 13. ஏந்தெழி லல்குலா யேமார்ந்த 1 காதலர் கூந்தர் வனப்பிற் பெயறாழ - வேந்தர் களிறெறி வாளரவம் போலக்கண் வௌவி ஒளிறுபு மின்னு மழை. (ப-ரை) எழில் - அழகினையுடைய, ஏந்து அல்குலாய் - ஏந்திய அல்குலையுடையாய், ஏம் ஆர்ந்த காதலர் - தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின், கூந்தல் - சரிந்த கூந்தலினது, வனப்பின் - அழகு போல, பெயல் தாழ - மழை பெய்ய, மழை - முகில், வேந்தர் களிறு எறி - அரசர்யானையை வெட்டி வீழ்த்துகின்ற, அரவம் - ஒலியினையுடைய, வாள் போல - வாளிளைப்போல, கண் வௌவி- கண்களைக் கவர்ந்து, ஒளிறுபு - ஒளிவிட்டு, மின்னும் - மின்னா நின்றது; (ஆதலால் நம் காதலர் வருவர்) எ - று. ஏம் - ஏமம்; கடைக்குறை காதலர் - ஈண்டு மகளிரை உணர்த்திற்று. 'அரவம்' என்றமையால் மழைக்கு முழக்கம் வருவித்துக் கொள்ளப் படும். மழையின் மின்னுக்கு வாள் உவமமாதலை 'அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய லாடவர், கழித்தெறி வாளி னழிப்பன விளங்கு, மின்னுடைக் கருவியை யாகி நாளுங், கொன்னே செய்தியோ அரவம் - மழையே' என்னும் அகப்பாட்டானும் அறிக. கண் வௌவல் - கண்வழுக்குறச் செய்தல். ஒளிறுபு - செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம். காதலர் வருவரென்பது வருவிக்கப்பட்டது. (13) இதுவுமது 14. செல்வந் தரல்வேண்டிச் சென்றநங் காதலர் வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய் முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார் மெல்ல வினிய நகும். (ப-ரை) வயங்கிழாய் - விளங்காநின்ற அணிகளை யுடையாய், முல்லை - முல்லைக்கொடிகள், இலங்கு - விளங்குகின்ற, எயிறுஈன - மகளிரின் பற்களைப் போலும் அரும்புகளை ஈனும் வகை, நறு தண்கார் - நல்ல குளிர்ந்த மேகம், மெல்ல இனிய நகும்- மெல்ல இனியவாக மின்னாநின்றன; (ஆதலால்) செல்வம் தரல்வேண்டி - பொருள் தேடிக்கொள்ளுதலை விரும்பி, சென்ற- பிரிந்து சென்ற, நம் காதலர் - நமது தலைவர், வல்லே வருதல் - விரைந்து வருதலை, தெளிந்தாம் - தெளிய அறிந்தாம் எ - று வல்லே என்பதில் ஏகாரம் அசை; தேற்றமும் ஆம். தெளிந்தாம் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. எயிறு போலும் அரும்பினை எயிறென்றார். 'முல்லையெ யிறீன' என்பது ஐந்திணையெழுபது. நறு - நல்ல; இஃதிப்பொருட்டாதலைப் 'பொலனறுந் தெரியல்' என்பதானும் அறிக. (14) இதுவுமது 15. திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர் குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத் திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி இன்குழ லூதும் பொழுது. (ப-ரை) திருந்திழாய் - திருந்திய அணிகளை யுடையாய், குருந்தின் - குருந்த மரத்தின், குவி இணர் உள் - குவிந்த பூங் கொத்துக்களின் உள்ளிடமே, உறை ஆக - தமக்கு உறையிடமாக இருந்து, திருந்து இன் இளி - திருந்திய இனிய இளியென்னும் பண்ணை, வண்டுபாட - வண்டுகள் பாட, இரும் தும்பி - கரிய தும்பிகள், இன்குழல் ஊதும்பொழுது - இனிய குழலை ஊதா நிற்கும் இக்காலத்தில், காதலர் - நம் தலைவர், தீர்குவர் அல்லர் - நம்மை நீங்கியிருப்பாரல்லர் எ - று. திருந்து இழை என்னும் இரு சொல்லும் தொக்க வினைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைப் பெயர் விளி யேற்றுத்திருந்திழாய் என்றாயது; வயங்கிழாய் போல்வனவும் இன்ன. உறை என்னும் முதனிலைத் தொழிற்பெயர் உறையும் இடத்திற்காயிற்று; உள்ளுறை என்பதனை உறையுள் என மாறுதலும் ஆம். இளி - பஞ்சம சுரம். 'குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, மயிலாடரங்கின் மந்திகாண் பன காண்' என்பது மணிமேகலை. (15) இதுவுமது 16. கருங்குயில் கையற மாமயி லாலப் பெருங்கலி வான முரறும் - பெருந்தோள் 1செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப் பசலை பழங்கண் கொள. (ப-ரை) பெருந்தோள் - பெரிய தோளினை யுடையாய், செயலை - அசோகினது, இளந்தளிர் அன்ன - இளந்தளிர் போன்ற, நின்மேனி - உன் உடம்பினது, பசலை - பசலையானது, பழங்கண் கொள - மெலிவு கொள்ளவும், கருங்குயில் - கரிய குயில்கள், கையற- செயலற்றுத் துன்பமுறவும், மா மயில் - பெரிய மயில்கள், ஆல - களித்து ஆடவும், பெருங் கலிவானம் - பெரிய ஒலியையுடைய முகில்கள், உரறும் - முழங்காநிற்கும் எ - று. கையறல் - ஈண்டுக் கூவாதொடுங்குதல்; கார் காலத்தில் குயில் துன்புறலும் மயில் இன்புறலும் இயற்கை. ஆல - அகல; ஆட. பசலை - காதலர்ப் பிரிந்தார்க்கு உளதாகும் நிறவேற்றுமை. பழங்கண் - மெலிவு; 'பழங்கணும் புன்கணும்' மெலிவின் பால' என்பது திவாகரம். *பசலை பழங்கண் கொள என்றது தலைவர் வருகையால் தலைவி மகிழ்ச்சியுற என்றபடி. (16) இதுவுமது 17. அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப் பறைக்குர லேறொடு பௌவம் பருகி உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை கொண்டன்று பேதை நுதல். (ப-ரை) பேதை - பேதாய், வானம் - மேகமானது, பௌவம் பருகி - கடல் நீரைக் குடித்து, பறைக்குரல் ஏறொடு - பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்புசவட்டி - பாம்பு களை வருத்தி, அறைக்கல் - பாறைக் கற்களையுடைய, இறுவரை மேல் - பக்க மலையின்மேல், உறைத்து - நீரைச்சொரிந்து; இருள் கூர்ந்தன்று - இருள்மிக்கது; (ஆதலால்) நுதல் - உனது நெற்றி, பிறைத்தகை - பிறை மதியின் அழகை, கொண்டன்று - கொண்டதே எ - று. இறுவரை - பக்கமலை சவட்டி - வருத்தி; 'மன்பதை சவட்டுங் கூற்றம்' எனப் பதிற்றுப்பத்திலும் இச்சொல் இப்பொருளில் வந்துள்ளமை காண்க; இது 'கடிசொல்லில்லைக் காலத்துப் படினே' என்பதனாற் போந்தது. பௌவம் - ஆகுபெயர். உறைத்தல்- துளித்தல்; சொரிதல். கூர்ந்தன்று - கூர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த உடம்பாட்டு வினை முற்று. இருள் கூர்ந்தன்று - ஒரு சொல்லாய் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபாயிற்று. (17) இதுவுமது 18. கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே நல்லிசை யேறொடு வான் நடுநிற்பச் செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார் மேனிபோற் புல்லென்ற காடு. (ப-ரை) கல்பயில் - மலைநெருங்கிய, கானம் கடந்தார் - காட்டைக் கடந்து சென்ற தலைவர், வர - வரும்வகை, ஆங்கே - அவர் வருங்காலம் வந்த பொழுதே, வானம் - மேகங்கள், நல் இசை - மிக்க ஒலியையுடைய, ஏறொடு - உருமேற்றுடனே, நடு நிற்ப - நடுவுநின்று எங்கும் பெய்தலால், நல்கூர்ந்தார் மேனிபோல் - வறுமையுற்றார் உடம்புபோல, புல்லென்ற - (முன்பு) பொலி விழந்த, காடு - காடுகள், செல்வர் மனம் போல் - பொருளுடையார் மனம் போல, கவின் ஈன்ற - அழகைத் தந்தன எ - று. நல் - ஈண்டு மிக்க என்னும் பொருளது; 'நன்று பெரிதாகும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இங்கு நோக்கற்பாலது. கடந்தார் வர ஆங்கே வானம் நடுநிற்பக் காடு கவினீன்ற என வினைமுடிவு செய்க; வர நடுநிற்ப ஆங்கே கவினீன்ற என முடிப்பினும் அமையும். (18) வினைமுற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது. 19. நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச் செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற் றொடிபொலி முன்கையாள் தோடுணையாவேண்டி நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு. (ப-ரை) நாஞ்சில் வலவன் - கலப்பைப் படை வென்றியை யுடையவனது, நிறம்போல - வெண்ணிறம் போல, பூஞ்சினை - பூங்கொம்பினையும், செங்கால் - செவ்வியதாளினையு முடைய, மராஅம் - வெண் கடம்புகள், தகைந்தன - மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு - என் மனம், பைங்கோல் தொடி - பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி - விளங்குகின்ற, முன்கையாள் - முன்னங்கையையுடையாளின், தோள் - தோள்கள், துணையா வேண்டி - எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது - நெடிய காட்டுவழியைக் கடந்து சென்றது எ - று. நாஞ்சில் வலவன் - பலராமன்; அவன் வெண்ணிற முடைய னென்பதனையும், கலப்பைப் படையால் வெற்றியுடைய னென்பதனையும் 'கடல்வளர் புரிவளை புரையுமேனி, அடல்வெந் நாஞ்சிற் பனைக் கொடி யோனும்' என்னும் புறப்பாட்டானு மறிக. மராஅம் - வெண்கடம்பு; 'செங்கான் மரா அத்த வாலிணர்' என்னும் திருமுருகாற்றுப்படையானும் மராஅம் செங்காலும் வாலிணரு முடைத்தாதல் காண்க. 'ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும்' எனப் பாலைக்கலியிலும் வெண்கடம்பின் பூங்கொத்திற்குப் பலராமன் உவமை கூறப்பட்டிருத்தல் ஓர்க. தகைதல் - மலர்தல்; இஃதிப் பொருட்டாதலைப் 'பிடவுமுகை தகைய' (ஐங்குறுநூறு) என்புழிக் காண்க. நெடுவிடைக்கு முன்புரைத்தாங் குரைத்துக் கொள்க. (19) இதுவுமது 20. வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன ஆறும் பதமினிய வாயின - ஏறோ டருமணி நாக மனுங்கச் செருமன்னர் சேனைபோற் செல்லு மழை. (ப-ரை) வீறுசால் - சிறப்பமைந்த, வேந்தன் - அரசனுடைய, வினையும் - போர்த்தொழில்களும், முடிந்தன - முற்றுப்பெற்றன; ஆறும் - வழிகளும், பதம் இனிய ஆயின - செவ்வி யினியவாயின; மழை - மேகங்கள், அருமணி - அரிய மணியை யுடைய, நாகம் - பாம்புகள், அனுங்க - வருந்தும் வகை, ஏறொடு - உருமேற்றுடனே, செருமன்னர் சேனை போல் - போர்புரியும் வேந்தரின் சேனை போல, செல்லும் - செல்லாநிற்கும்; (ஆதலால் நாம் செல்லக் கடவேம்) எ - று. இடியோசையால் நாகம் வருந்துதலை 'விரிநிற நாகம் விடருள தேனும்; உருமின்கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்' என்னும் நாலடியானறிக. 'முதிர்மணி நாக மனுங்க முழங்கி' என்னும் திணைமொழியைம்பதும் ஈண்டு நோக்கற்பாலது. அணியணியாய் விரைந்து சேறலும் முழங்கலும் அம்பு சொரிதலும் பற்றிச் சேனை உவமமாயிற்று. (20) இதுவுமது 21. பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற் செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய் முள்ளெயி றேய்ப்ப வடிந்து (ப-ரை) பொறிமாண் - எந்திரச் செய்கைகளான் மாட்சி மைப்பட்ட, புனை திண் தேர் - அலங்கரிக்கப்பட்ட திண்ணிய தேர், போந்த வழியே - வந்த வழியிதே, சிறு முல்லைப் போது எல்லாம் - சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம், வடிந்து - கூர்மையுற்று, செவ்வி நறுநுதல் - செவ்விய அழகிய நெற்றியையும், செல்வ மழைத் தடங்கண் - வளப்பமான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும், சில்மொழி - சிலவாகிய மொழியினையு முடைய, பேதைவாய் - மடவாளது வாயின்கண் உள்ள, முள் எயிறு- கூரிய பற்களை, ஏய்ப்ப - ஒவ்வாநிற்கும் எ - று. சின்மொழி - மெல்லிய மொழியுமாம், 'முள்ளெயி றொக்க வடிவு பட்டு' என்று பொருளுரைத்து, 'நின்றது' என்னும் பயனிலை தொக்கது என்றுரைப்பர் பழைய வுரைகாரர். இப்பொருளில் 'ஏய்ப்ப' என்பது வினையெச்சம். (21) இதுவுமது 22. இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம்போற் பூத்தன காடு. (ப-ரை) இளையரும் - சேவகரும், ஈர்ங்கட்டு அயர - குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, உளை அணிந்து - தலை யாட்டம் அணிந்து, புல்உண் - புல்லினையுண்ட, கலிமாவும் - மனஞ் செருக்கிய குதிரையையும், பூட்டிய - தேருடன் பூட்டு தலைச் செய்ய, காடு - காடுகள், நல்லார் - நற்குணமுடைய மகளிரின், இள நலம் போல - இளமைச் செவ்விபோல, கவினி - அழகுற்று, வளம் உடையார் - வருவாயுடையாரது, ஆக்கம் போல் - செல்வம்போல, பூத்தன - பொலிவுற்றன எ - று. இளையர் - சேவகர்; ஏவலாளர் ஈர்ங்கட்டயர என்பதற்கு அழகிதாகக் கட்டியுடுத்தலைச் செய்ய என்றனர் பழையவுரை காரர். உளை - தலையாட்டம்; சாமரை யெனவும்படும்; இது கவரிமான் மயிராற் செய்து குதிரையின் தலையிலணியப்படுவது. பூட்டிய - செய்யிய என்னும் வினையெச்சம். இளநலம் என்புழி நலம் வடிவுமாம். வளம் வருவாயாதலை 'வளத்தக்காள் வாழ்க்கைத் துணை' என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையானறிக. பூத்தல் - பொலிதல்; மலர்தலுமாம். (22) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது. 23. கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந் தண்டுளி யாலி புரளப் புயல்கான்று கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ ஒண்டொடி யூடு நிலை (ப-ரை) ஒண்டொடி - ஒள்ளிய வளைகளை யணிந்தவளே, புறவு எல்லாம் - காடெங்கும், கண்திரள் முத்தம் கடுப்ப - இடந் திரண்ட முத்தையொப்ப, தண்துளி - குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலி- ஆலங்கட்டிகளும், புரள - புரளும் வகை, புயல் - மேகம், கான்று கொண்டு - மழை பொழிந்து கொண்டு, எழில் - அழகினையுடைய, வானமும் கொண்டன்று - வானத் திடத்தையெல்லாம் கொண்டது; (ஆதலால்) ஊடு நிலை - பிணங்குந்தன்மை, எவன்கொல் - எற்றுக்கு எ-று. கண்டிரள் முத்தம் என்றது மேனி திரண்ட முத்தம் என்றபடி - அகத்திலும், பிறாண்டும் 'கண்டிரண் முத்தம்' என வருதலுங் காண்க. கொல் ஓ - அசைநிலை. தலைவர் வருவர்; இனிப் பிணங்குதல் வேண்டா என்பது குறிப்பு. (23) வினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது 24. எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும் பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம் 1மெல்லவுந் தோன்றும் 2பெயல் (ப-ரை) கல் ஓங்குகானம் - முலைகள் உயர்ந்த காடுகள், களிற்றின் மதம் நாறும் - யானையின்மதம் நாறாநிற்கும்; கார் வானம் - கரிய வானத்தின்கண், பெயல் - மழை, மெல்லவும் தோன்றும் - மென்மை யாகத் தோன்றாநிற்கும்; (ஆதலால்) பல் இருங்கு கூந்தர் - பலவாகிய கரிய கூந்தலையுடையவள், பணிநோனாள் - ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப்பொறுக்கமாட்டாள்; நெஞ்சே - மனமே, எல்லா வினையும் கிடப்ப - எல்லாத் தொழில் களும் ஒழிந்து நிற்க; எழு - நீ போதற்கு ஒருப்படு எ - று. கிடப்ப - வியங்கோள்; வினையெச்சமாகக் கொண்டு கிடக்கும் வகை எனப் பொருளுரைத் தலுமாம். களிற்றின் மதம் நாறும் என்றது கார் காலத்தில் பிடியுடன் இயைந்தாடுதலான் என்க. பணி - பணித்த சொல். எல்லியும் என்று பாடமாயின் இரவிலும் எனப் பொருள் கொள்க. (24) பருவங்கண்டழிந்த தலைமகன் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது. 25. கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந் தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று கூர்ந்த பசலை யவட்கு (ப-ரை) ஈர்ந்தண் புறவில் - குளிர்ச்சி மிக்க காட்டில், கருங்கால் வரகின் பொரிபோல - காரிய தாளினை யுடைய வரகினது பொரியைப்போல, தெறுழ்வீ - தெறுழினது மலர்கள், அரும்பு அவிழ்ந்து மலர்ந்தன - அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன; செய்குறி சேர்ந்தன - (தலைவர்) செய்த குறிகள் வந்துவிட்டன; (ஆதலால்) அவர் வாரார் என்று - தலைவர் இனி வரமாட்டா ரென்று, அவட்கு - தலைவிக்கு, கூர்ந்த - பசலை மிக்கது எ - று. ஈர்ந்தண் - ஒரு பொருளிருசொல். தெறுழ்: காட்ட கத்த தொரு கொடி. கூர்ந்தது என்பதில் ஈறு கெட்டது. (25) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது. 26. நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி சிலமொழி 1 தூதொடு வந்த மழை. (ப-ரை) சிலமொழி - சிலவாகிய மொழியினை யுடையாய், தோன்றி - தோன்றிப்பூக்கள், நலம்மிகு கார்த்திகை - நன்மை மிக்க கார்த்திகைத் திருவிழாவில், நாட்டவர் இட்ட - நாட்டிலுள்ளோர் கொளுத்தி வைத்த, தலைநாள் விளக்கின் - முதல் நாள் விளக்கைப் போல், தகை உடையவாகி - அழகுடையனவாகி, புலம் எலாம் - இடமெல்லாம், பூத்தன - மலர்ந்தன; மழை தூதொடு வந்த - மழையும் தூதுடனே வந்தது எ - று. கார்த்திகை நாளில் நீரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டை நாள் தொட்டுள்ளது; 'குறு முயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேரு மகலிருணடு நாண், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் றுவன்றிய, விழவுடனயர வருகதிலம்ம' அகநானூற்றிலும், 'கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கு' எனக் களவழிநாற்பதிலும், துளக்கில் கபாலீச் சுரத்தான்றொல் கார்த்திகைநாள் . . . . . . விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' எனத் தேவாரத் திலும், 'குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன' எனச் சிந்தா மணியிலும் இத்திருவிழாக் கூறப்பெற்றுமை காண்க. தலைநாள் - திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை; நலமிகு கார்த்திகை என்பதனைக் கார்த்திகைத் திங்கள் எனக் கொண்டு, தலைநாள் என்பதனை அத்திங்களிற் சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம்; முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக எண்ணப் பட்டவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம். வந்த - 'கூர்ந்த' என்புழிப்போல் ஈறு கெட்டது. (26) ஊடுதலாற் பசலைமிகும் எனத் தோழி தலைமகட்குக் கூறி வற்புறுத்தது. 27. முருகியம்போல் வான முழங்கி யிரங்கக் குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப் 1 பள்ளியுட் பாயும் பசப்பு. (ப-ரை) வானம் - மேகம் முருகியம்போல் - குறிஞ்சிப் பறைபோல், முழங்கி இரங்க - முழங்குதலைச் செய்ய, கானம் - காட்டின்கண், குறுகுஇலை பூத்தன - குருக்கத்தியிலை விரிந்தன; பிரிவு எண்ணி - (நம் காதலர்) பிரிதலை நன்றென்று நினைத்து, உள்ளாது அகன்றார் என்று - நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, ஊடுயாம் பாராட்ட - நாம் ஊடுதலைப் பாராட்டுவதால், பசப்பு - பசலைநோய், பள்ளியுள் பாயும் - படுக்கை யிடத்தில் பரவும் எ - று. முருகு இயம் - குறிஞ்சிப் பறை விசேடம்; முருகனுக்கு இயக்கப்படுவது; தொண்டகம், துடி என்பனவும் குறிஞ்சிப் பறைகள். முழங்கி இரங்க - ஒரு பொருளிருசொல். குருகு குருக்கத்தி; முருக்கென் பாரும் உளர். இலையென்றமையால் பூத்தலாவது தழைத்தல் எனக் கொள்க. ஊடு - முதனிலைத் தொழிற் பெயர் இகரம் சந்தியால் வந்தது. பள்ளியுட்பாயும் என்றது படுக்கையிற் கிடக்கச் செய்யும் என்னும் குறிப்பிற்று. (27) வினைமுற்றிய தலைமகன் நெஞ்சொடு சொல்லியது 28. இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப் 1 பொன்செய் குழையிற் றுணர்தூங்கத் தண்பதஞ் செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர் கவ்வை யழுங்கச் செலற்கு (ப-ரை) இமிழ் இசை - ஒலிக்கும் இசையினை யுடைய, வானம் - முகில், முழங்க - முழங்குதலைச் செய்ய, குமிழின் பூ - குமிழின் பூக்கள், பொன் செய் குழையின் - பொன்னாற் செய்யப் பட்ட குழைபோல், துணர் தூங்க - கொத்துக்களாய்த் தொங்க, நெஞ்சே - மனமே, காதலி ஊர் - நம் காதலியது ஊருக்கு, கவ்வை அழுங்க - அலர் கெடும் வகை, செலற்கு - நாம் செல்வதற்கு,சுரம் - காடுகள், தண்பதம் செவ்வி உடைய - குளிர்ந்த பதமும் செவ்வியும் உடைய வாயின எ - று. இமிழ் இசை - இனிய இசையுமாம். சுரம் - காடு; அரு நெறியுமாம். கவ்வை அலர்; ஊரார் கூறும் பழி மொழி. அழுங்கல்- வருந்துதல்; ஈண்டு இலவாதல். (28) இதுவுமது 29. பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத் தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகை கொண்ட லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ் செவ்வி யுடைய சுரம். (ப-ரை) பொங்கரும் - சோலைகளெல்லாம், ஞாங்கர் - பக்கங்களில், மலர்ந்தன - பூத்தன; கானம் - காட்டின் கண்ணே, தங்கா - தங்குதலின்றித் திரியும், தகை வண்டு - அழகையுடைய வண்டுகள், பாண்முரலும் - இசைப்பாட்டைப் பாடா நின்றன; பகை கொண்டல் - பகைத் தெழுந்த மேகம், எவ்வெத்திசைகளும் - எல்லாத் திசைக்கண்ணும், வந்தன்று - வந்தது; சுரம் - காடுகளும், செவ்வி உடைய - தட்பமுடையவாயின; (ஆதலால்) நாம் சேறும் - நாம் செல்லக்கடவேம் எ - று. பொங்கர் - இலவுமாம். பகைகொண்டல் - வினைத் தொகை. சேறும் என்றது நெஞ்சை உளப்படுத்தி; தேர்ப்பாகற்குக் கூறியதுமாம். (29) இதுவுமது 30. வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந் திருநிலந் தீம்பெய றாழ - விரைநாற 1 ஊதை யுளரு நறுந்தண்கா பேதை பெருமட நம்மாட் டுரைத்து (ப-ரை) வரைமல்க - மலைகள் வளம் நிறைய - வானம் சிறப்ப- வானகம் சிறப்பெய்த, இருநிலம் - பெரியபூமியை, உறை போழ்ந்து - துளிகளால் ஊடறுத்து, தீம்பெயல் தாழ - இனிய மழை வீழாநிற்க, விரை நாற - நறுமணம் கமழா நிற்க, ஊதை - காற்றானது, பேதை பெருமடம் - காதலியது பெரிய மடப்பத்தை, நம்மாட்டு உரைத்து - நமக்குத் தெரிவித்து, நறுந்தண் கா - நறிய குளிர்ந்த சோலையில், உளரும் - அசையாநிற்கும் (ஆதலால் நீ விரையத் தேரைச் செலுத்துவாய்) எ - று. உறை - நீர்த்துளி; மூன்றன்தொகை. ஊதை - குளிர் காற்று. உளர்தல் - அசைதல்; பேதை பெருமடம் - தலைவர்வாராரென்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமை. (30) வினைமுற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது. 31. கார்க்சே ணிகந்த கரை மருங்கி னீர்ச்சேர்ந் தெருமை யெழிலே றெறிபவர் சூடிச் செருமிகு மள்ளரிற் செம்மாக்குஞ் செவ்வி திருநுதற் கியாஞ்செய் குறி (ப-ரை) எருமை எழில் ஏறு - எருமையினது எழுச்சியை யுடைய ஆண், கார்ச்சேண் இகந்த - மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த, கரை மருங்கின் - கரையின் பக்கத் திலுள்ள, நீர்ச்சேர்ந்து - நீரையடைத்து, எறி - எறியப்பட்ட, பவர் - பூங்கொடிகளை, சூடி - சூடிக்கொண்டு, செருமிகு மள்ளரில் - போரின்கண் மறமிக்க வீரரைப் போல, செம்மாக்கும் செவ்வி - இறுமாந்திருக்கும் காலமே, திருநுதற்கு - அழகிய நெற்றியை யுடையாளுக்கு, யாம் செய்குறி - நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்; (ஆதலால் விரைந்து தேர் செலுத்துவாய்) எ - று. சேண் - ஆகாயம்; தூரமும் ஆம். எழில் - அழகுமாம். எறி - துணித்த எனினும் பொருந்தும். பவர் - கொடி, 'அரிப்பவர்ப் பிரம்பின்' எனக் குறுந்தொகையும், 'நெடுங்கொடியுழிஞைப் பவரொடு மிடைந்து, எனப் புறநானூறும் கூறுதல் காண்க. மள்ளர்- வீரர்; போர்வீரர் வெட்சி, வஞ்சி முதலிய மாலைகளைச் சூடித் தருக்கி யிருக்குமாறு போலக் கடாக்கள் பூங்கொடிகளைச் சூடிக் கொண்டு தருக்கியிருக்கும் என்க. 'மள்ளரன்ன தடங் கோட் டெருமை, மகளிரன்ன துணையொடு வதியும்' (ஐங்குறுநூறு) என்றார் பிறரும். குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. (31) இதுவுமது 32. கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற் படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம் பிடாஅப் பெருந்தகை நற்கு (ப-ரை) கெடாப் புகழ்வேட்கை - அழியாத புகழை விரும்பு கின்ற, செல்வர் மனம்போல் - செல்வரது மனத்தைப் போல, படா மகிழ் வண்டு - கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள், கானம் - காட்டின்கண், பிடா - பிடவமாகிய, பெருந்தகை - பெருந்தகையாளிடத்து, நன்கு - நன்றாக, பாண்முரலும் - இசைப் பாட்டினைப் பாடாநிற்கும்; பாக - பாகனே, கார் ஓடக் கண்டு - மேகம் ஓடுதலைக் கண்டு, தேர் கடாவுக - தேரை விரையச் செலுத்துவாயாக எ - று. இப்பாட்டு நான்கடியிலும் முதற்கண் அளபெடை வந்தன; கடாவுக என்று பாட மோதுவாருமுளர். கார் ஓட என்றமையால் மேகத்தின் விரைந்த செலவு குறிப்பித்தவாறு; 'கொடுஞ் செலவெழிலி' என்றார் பிறரும். புகழை விரும்பும் செல்வர் மனம் மகிழ்ச்சி நிறைந்திருக்கு மென்க. பிடவம் - ஒரு செடி; வள்ளன்மை யுடையாரிடத்துப் பாண் மக்கள் பரிசில் கருதிப்பாடுமாறு போலப் பிடவத்தினிடத்துத் தேன் கொளக் கருதிய வண்டுகள் பாடினவென் றுரைக்கப் பட்டது. பெருந்தகை என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது. நற்கு - வலித்தல் விகாரம். (32) இதுவுமது 33. கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும் 1 இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை மடமொழி யெவ்வங் கெட (ப-ரை) கடல்நீர் முகந்த - கடலினது நீரை முகந்த, கமம் சூல் எழிலி - நிறைந்த சூலினையுடைய மேகம், குடமலை ஆகத்து - மேற்குமலையிடத்து, கொள் அப்பு இறைக்கும் - தான் கொண்ட நீரினைச் சொரியும், இடம் என - சமய மென்று, ஆங்கே - அப்பொழுதே, பேதை - பேதையாகிய, மடமொழி - மடப்பத்தினையுடைய மொழியையுடையாளது, எவ்வம் கெட - வருத்தம் நீங்க, குறி செய்தேம் - (மீளுங் காலத்திற்குக்) குறி செய்தேம்; (ஆதலால் தேரினை விரையச் செலுத்துக) எ - று. சூல் போறலின் நீர் சூலெனப்பட்டது; 'கார் கோண் முகந்த கமஞ்சூன் மாமழை' என்பது திருமுருகாற்றுப்படை. ஆகம் - அகம் என்பதன் நீட்டல்; மார்பு எனினும் ஆம். கொள்ளப் பிறக்கும் என்பது பாடமாயின் தாரை கொள்ளத் தோன்றும் எனப் பொருளுரைக்கப்படும்; பிறவாறுரைத்தல் பொருந்து மேற் கொள்க. இடம், ஆங்கு என்பன காலத்தை உணர்த்தின. (33) பருவங் கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற வுரைத்தது 34. விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப் பெருவிறல் வானம் பெருவரை சேருங் கருவணி காலங் குறித்தார் திருவணிந்த ஒண்ணுதல் மாதர் திறத்து. (ப-ரை) பெருவிறல் வானம் - மிக்க பெருமையை யுடைய மேகம், விரிதிரை வெள்ளம் - விரிந்த அலையை யுடைய கடலினது நீரை, வெறுப்பப் பருகி - நிறைய உண்டு, பெருவரை சேரும் - பெரிய மலையை அடையா நிற்கும், கரு அணி காலம் - கருக்கொள்ளுங் காலத்தை, திரு அணி - தெய்வவுத்தியென்னும் தலைக் கோலத்தை யணிந்த, ஒள்நுதல் - ஒள்ளிய நெற்றியை யுடைய, மாதர் திறத்து - காதலியிடத்து, குறித்தார் - (தலைவர் தாம் மீண்டுவருங் காலமாகக்) குறிப்பிட்டார் எ -று. வெறுத்தல் - செறிதல், நிறைதல்; உரிச்சொல். கெடுப்பதும் எடுப்பதும் ஆகிய எல்லாம் வல்லது மழை யாகலின் 'பெருவிறல் வானம்' என்றார். கருஅணி காலம் - மழை சூற்கொள்ளும் கார்காலம். திரு - சீதேவி என்னுந் தலையணி; இது தெய்வ வுத்தியென்றுங் கூறப்படும்; 'தெய்வவுத்தியொடு வலம்புரி வயின் வைத்து' என்பது திருமுருகாற்றுப்படை. (34) இதுவுமது 35. 1சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர வென்றி முரசி னிரங்கி யெழில்வானம் நின்று மிரங்கு மிவட்கு. (ப-ரை) சென்ற நம் காதலர் - வினைவயிற் பிரிந்து சென்ற நம் தலைவர், சேண் இகந்தார் என்று எண்ணி - நெடுந்தூரத்தைக் பாருந்திய பசப்பு நோயுடனே, இடும்பை பல கூர - பல துன்பங் களும் மிகப்பெறு தலால், இவட்கு - இவள் பொருட்டு, எழில் வானம் - எழுச்சியையுடைய முகில்,வென்றி முரசின் இரங்கி- வெற்றியை யறிவிக்கும் முரசின் ஒலியைப்போல இடித்து, நின்றும் - வானின்கண் இருந்தும், இரங்கும் - பரிவுறாநிற்கும் எ -று. முரசின் என்பதில் இன் உவமப்பொருவு. நின்றும் என்பதற்குச் சலியாது நின்று என்று பொருள் கூறுவாருமுளர். வானின்கண் உள்ள மேகமும் இரங்கு மியல்பினாள் திறத்துத் தலைவர் இரங்கி வாராதது என்னை யென்றபடி. (35) வினைமுற்றி மீளுந் தலைமகன் பாகற்குச் சொல்லியது. 36. சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்பப் ஈர்ந்தண் டளவந் தகைந்தன - சீர்த்தக்க செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர் நல்விருந் தாக நமக்கு. (ப-ரை) ஈர் தண் - குளிர்ச்சி மிக்க, தளவம் - செம்முல்லைப் பூக்கள், சிரல் - சிச்சிலிக் குருவியின், வாய் - வாய் போலும், வனப்பின ஆகி - அழகுடை யனவாகி, நிரல் ஒப்ப - வரிசை பொருந்த, தகைந்தன - அரும்பின; (ஆதலால் இப்பொழுது) சீர்த்தக்க - சிறந்த, செல்வம் - செல்வத்தையுடைய, மழை மதர்க்கண் - மழைபோற் குளிர்ந்த மதர்த்த கண்களையும், சில் மொழி - சிலவாகிய மொழியினையு முடைய, பேதை - காதலியது, ஊர் - ஊரானது, நமக்கு நல்விருந்து ஆக - நமக்கு நல்ல விருந்தயரும் இடமாகக் கடவது எ-று. சிரல் - மீன்குத்திக் குருவி. தளவம் - செம்முல்லை; அதன் அரும்பு சிரலின் வாய்போலும் என்பதனை 'பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை' என்னும் ஐங்குறுநூற்றானும் அறிக. ஈர்ந்தண் - ஒருபொருளிரு சொல். சீர்த்தக்க - ஒரு சொன்னீர்மைத்து. செல்வத்தை யுடைய பேதை என்க; செல்வமழை எனினும் ஆம். விருந்து - ஆகுபெயர். தலைவன் வினைமுற்றி மீண்ட பின் காதலியுடன் விருந்தயரும் வழக்க முண்டென்பதைனை 'வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து, மாலை யயர்கம் விருந்து' என்னும் முப்பாலானும் அறிக. (36) தோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது 37. கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி இருங்க லிறுவரை யேறி யுயிர்க்கும் பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன் அருந்தொழில் வாய்த்த நமர். (ப-ரை) கருங்கடல் மேய்ந்த - கரிய கடலின் நீரைக் குடித்த, கமம்சூல் - நிறைந்த சூலினையுடைய, எழிலி - மேகம், இரு - பெரிய, கல் - கற்களையுடைய, இறுவரை - பக்கமலையின்மேல், ஏறி உயிர்க்கும் - ஏறியிருந்து நீரைச் சொரியும், பெரும்பதக் காலையும்- மிக்க செவ்வியையுடைய காலத்தும், வேந்தன் - அரசனது, அருந்தொழில் - போர்த் தொழில், வாய்த்த - வாய்க்கப்பெற்ற, நமர் - நம் தலைவர், வாரார் கொல் - வாராதிருப்பாரோ எ-று. கடல் - ஆகு பெயர், சூல் என்றதற்கேற்ப உயிர்க்கும் என்றார். உயிர்த்தல் - நீரைக் காலுதல்; ஒலித்தல் எனினும் ஆம். வாய்த்த என்றதனால் தப்பாது வென்றிருப்பரென்பது குறிப்பித்தவாறாம். போர்த் தொழிலும் முற்றுப்பெற்றுக் காலமும் செவ்வியை உடைத்தாயவழித் தலைவர் வராாதிரார் என்று கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தாளென்க. (37) தலைவர் பொய்த்தாரெனக் கூறித் தோழி தலைவியை ஆற்றுவித்தது 38. புகர்முகம் பூழிப் 1புரள வுயர்நிலைய 2 வெஞ்சின வேழம் பிடியோ டியைந்தாடுந் 3 தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ ஒண்டொடி யூடு நிலை. (ப-ரை) உயர்நிலைய - உயர்ந்த நிலையினை யுடைய, வெம் சினம் வேழம் - கடிய கோபத்தினை யுடைய ஆண் யானைகள், புகர்முகம் - புள்ளியினை யுடைய முகம், பூழி புரள - புழுதியிற் புரளும் வகை, பிடியோடு - பெண்யானைகளுடன், இயைந்து ஆடும் - கூடி விளையாடும், தண்பதக் காலையும் - குளிர்ந்த செவ்வியையுடைய காலத்தும், வாரார் - நம் தலைவர் வாராராயினார்; (ஆதலால்) ஒள்தொடி - ஒள்ளிய தொடியினை யுடையாளே, ஊடுநிலை - அவருக்காக நீ பிணங்குந் தன்மை, எவன்கொல் - என்னை எ-று. வேழம் பிடியோடியைந்தாடும் என்றது தலைவர் வருதற்கு ஏதுக் கூறியவாறு. குறித்த பருவம் வந்தும் வாராமையாற் பொய்ம்மையும் வேழம் பிடியோடியைந் தாடுதல் கண்டும் வாராமையால் அன்பின்மையும் உடையராயினார்பால் ஊடுதலாற் பயனென்னை என்று தோழி கூறினாளென்க. வாரார்கொல்லோ என இயைத்து வருவர் என்று கூறி ஆற்றுவித்தாள் எனப் பொருள் கொள்ளலும் ஆம். (38) இதுவுமது 39. அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த 1கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கௌவை ஆகின்று நம்மூ ரவர்க்கு. (ப-ரை) அலவன் கண் ஏய்ப்ப - ஞெண்டினது கண்ணினை யொப்ப, அரும்பு ஈன்று - அரும்பினை யீன்று, அவிழ்ந்த - பின் மலர்ந்த, கருங்குரல் - கரிய பூங்கொத்தினையுடைய, நொச்சி - நொச்சியினது, பசுந்தழை சூடி - பசிய தழையைச் சூடிக்கொண்டு, இரும்புனம் - பெரிய புனங்களை, ஏர்க்கடி கொண்டார் - உழவர் புதிதாக ஏருழுவிக்கத் தொடங்கினார்கள்; (ஆதலால்) நம் ஊர் - நம் ஊரின்கண், அவர்க்கு - நம் தலைவர்க்கு, பெருங் கௌவை ஆகின்று - பெரிய அலராயிற்று. எ - று. நொச்சியின் அரும்பு ஞெண்டின் கண்ணுக்கு உவமையாதலை 'நொச்சி மாவரும் பன்ன கண்ண, எக்கர் ஞெண்டினிருங்கிளைத் தொகுதி' என்னும் நற்றிணை யானும் அறிக. ஏர்க்கடி கொள்ளுதல் - புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை 'நல்லேர்' என்றும், 'பொன்னேர்' என்றும் வழங்குவர். ஆகின்று - உடம்பாட்டு முற்று. (39) பருவம் வந்தமையால் தலைவர் வருதல் ஒருதலையெனக் கூறித் தோழி தலைமகளை ஆற்றுவித்தது 40. வந்தன செய்குறி வாரா ரவரென்று நொந்த வொருத்திக்கு நோய்ரீர் மருந்தாகி இந்தின் 2கருவண்ணங் கொண்டன் றெழில்வானம் நந்துமென் பேதை நுதல். (ப-ரை.) மென்பேதை - மெல்லிய பேதையே, செய்குறி - தலைவர் செய்த குறிகள், வந்தன - வந்துவிட்டன; அவர் வாரார் என்று - தலைவர் வருகின்றிலர் என்று, நொந்த ஒருத்திக்கு - நோதலுற்ற ஒருத்தியாகிய நினக்கு, நோய்தீர் மருந்து ஆகி - நோயைத் தீர்க்கும் மருந்தாகி, எழில்வானம் - அழகிய முகில், இந்தின் கருவண்ணம் - ஈந்தின் கனியினிறம் போலும் கருநிறத்தை, கொண்டன்று - கொண்டது; நுதல் நந்தும் - நினது நுதல் இனி ஒளிவளரப் பெறும் எ-று. இச்செய்யுளைத் தலைவர் மீண்டனரென்று தோழி மகிழ்ந்து தன் நெஞ்சிற்குக் கூறியதாகக் கொண்டு, என் பேதை எனப் பிரித்துப் படர்க்கையாக உரைப்பாரும் உளர், ஈந்து இந்தெனக் குறுகியது; 'முந்நீரை யிந்துருவின் மாந்தியிருங் கொண்மூ' என்பது திணைமாலை நூற்றைம்பது. ஈந்து - ஈச்சமரம். (40) கார் நாற்பது மூலமும் உரையும் முற்றிற்று.  செய்யுள் முதற்குறிப்பு அகராதி (எண் - பக்கவெண்) அலவன்க 251 சென்றநங் 248 அறைக்கலிறு 238 திருந்திழாய் 237 ஆடுமகளிரின் 231 தொடியிட 231 இகழுநர் 231 நச்சியார் 232 இமிழிசை 241 நலமிகு 243 இளையரு 242 நாஞ்சில் 239 எல்லாவினை 236 புகர்முகம் 250 ஏந்தெழி 247 புணர்தரு 235 கடனீர் முகந்த 247 பொங்கரு 245 கடாஅவுக 230 பொருகடல் 229 கடுங்கதிர் 242 பொறிமாண் 241 கண்டிரண் 243 மண்ணியன் 233 கருங்கடல் 238 முருகியம்போல் 244 கருங்கால் 234 மையெழி 235 கருங்குயில் 239 வந்தன 251 கருவிளை 246 வரிநிறப் 230 கல்பயில் 249 வரைமல்க 246 கார்ச்சேணிகந்த 246 வானேறு 234 சிரல்வாய் 249 விரிதிரை 248 செல்வந் தரல் 237 வீறுசால் 240 களவழி நாற்பது - பொய்கையார் முகவுரை களவழி நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறிவருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணென்க்கீழ் கணக்கு என எண்ணிவருகின்றனர். கீழ்க்கணக்கியற்றியோருட் கபிலர், கண்ணஞ் சேந்தனார், கூடலூர் கிழார், பொய்கையார் முதலாயினார் சங்கத்துச் சான்றோரென்பது ஒருதலையாகலின், அவற்றுட் பலவும் அக்காலத்தின வெண்பதில் இழுக் கொன்று மின்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட் டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், 'வனப்பியல் தானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியாற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே' என்னுஞ் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும், நச்சினார்க் கினியரும் உரைக்குமாற்றான் அறியப் படுவது. அவை அம்மை யென்னும் வனப்புடைய வாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத்தினராவர். 'அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்' என்பது பன்னிருபாட்டியல். கீழ்க்கணக்கு நூல் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, ஐந்திணை யெழுபது, திணை மொழி யைம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன. இதனை, 'நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு' என்னும் வெண்பாவானறிக. இதில் 'நால்' என்பதனை 'ஐந்திணை' என்பதன் முன்னுங் கூட்டி நாலைந்திணை யெனக் கொள்ள வேண்டும். சிலர் இன்னிலையை விடுத்துக் கைந்நிலையை ஒன்றாக்குவர். வெண்பாவின் சொற்கிடக்கை முறை அதற்கேற்ற தன்றென்க. சிலர் ஐந்திணை ஐந்து நூலெனக்கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்தல் செய்வர். அவர், 'திணைமாலை' என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவ துண்டாகலின் அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாகு மென்பர். 'ஐந்தொகை' 'இன்னிலைய' 'மெய்ந்நிலைய' 'கைந்நிலையோடாம்' 'நன்னிலையவாம். என்றிங்ஙனம் பாட வேற்றுமையும் காட்டுவர். இனி, களவழி நாற்பது என்னும் இந்நூலை யியற்றினார் நல்லிசைப் புலவராகிய பொய்கையா ரென்பார். இவர் இது பாடியதன் காரணம் இந்நூலிறுதியில் இதன் பழைய உரையாளரால் எழுதப் பட்டிருக்கும் தொடரால் விளங்கும். அது, 'சோழன் செங்கணானும் சேரமான் கணைக்கா லிரும்பொறையும் (திருப்?) போர்ப் புறத்துப் பொரு துடைந்துழிச் சேரமான் கணைக்கா லிரும்பொறையைப் பற்றிக்கொண்டு சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழி நாற்பது முற்றிற்று' என்பது. இச்செய்தி, கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியத்தில் "களவழிக் கவிதை பொய்கையுரை செய்யவுதியன் கால்வழித் தளையை வெட்டியர சிட்டவவனும்" என்றும், விக்ரம சோழனுலாவில் 'மேதக்க பொய்கை கலிகொண்டு வில்லவனைப் பாதத் தளைவிட்ட பார்த்திவனும்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது. சோழனொருவன் ஒரு சேரமன்னனை வென்ற வெற்றிச் சிறப்பைப் பாடியதே களவழி நாற்பது என்பதற்கு இதன் கண்ணேயே சான்றுகள் உள்ளன. செய்யுள்தோறும் சோழனது வென்றி கூறப்படுதல் வெளிப்படை. அவன் 'செங்கண்மால்' 'செங்கட்சினமால்' என்று பல பாடல்களிற் குறிக்கப்படுதலின் அவனது பெயரும் பெறப்படுவதாயிற்று. 'கொங்கரையட்ட களத்து' என்றும், 'வஞ்சிக்கோ வட்ட களத்து' என்றும் வருதலின், வெல்லப் பட்டோன் சேரனென்பது போதருவதாயிற்று. 'காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்' என்கையால் வென்றுகொண்ட இடம் கழுமலம் என்பதாயிற்று. புறநானூற்றிலே, 'குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுரை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே' என்னுஞ் செய்யுளின்கீழ் வரையப்பட்டுள்ள குறிப்பால், செங்கணா னொடு பொருதான் சேரமான் கணைக்காலிரும்பொறை யென்பது தெரிகின்றது. அது, 'சேரமான்கணைக் காலிரும்பொறை சோழன் செங்கணானோடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்பது' 'குழவியிறப் பினும்' என்னும் இச் செய்யுள், தமிழ்நாவலர் சரிதையில், 'சேரன் கணைக்கா லிரும்பொறை செங்கணானாற் குணவாயிற் கோட்டத்துத் தளைப்பட்டபோது பொய்கையாருக் கெழுதி விடுத்த பாட்டு' என்னும் தலைப்பின்கீழ்க் காணப்படுகிறது. செய்யுளின் பின்னே, 'இது கேட்டுப் பொய்கையாற் களவழி நாற்பது பாடச் செங்கணான் சிறைவிட் டரசளித்தான்' என்று குறிக்கப்பெற்றுள்ளது. இங்ஙனம் இரு குறிப்பும் வேறுபடுவதன் காரணம் புலப்படவில்லை. இவ் விரண்டினுள்ளே புறநானூற்றுக் குறிப்பே வலியுடைய தென்று கொள்ளின், அது பரணி, உலா முதலியவற்றுடன் முரணாமைப் பொருட்டு, துஞ்சினான் கணைக்கா லிரும்பொறை யாகச் சிறைவீடு செய் தரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவன் என்று கொள்ளவேண்டும். சேரமான் கொக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடிய இரண்டு பாட்டுக்கள் புறநானூற்றில் உள்ளன. நற்றிணையில் அவர் பாடிய பாட்டு ஒன்றும் அவனைக் குறிப்பிடு கின்றது. அவ்வேந்தன் கணைக்கா லிரும்பொறை யின் வேறாகிச் சோழனாற் சிறைப்பட்டவனாயின், அவனை விடுவித் தற்குக் களவழி நாற்பது பாடப் பட்டதென்று கோடல் அமையும். இனி, சிலர் நல்லிசைப் புலவராகிய பொய்கையாரையும், திருமாலடியாருள் ஒருவராகிய பொய்கை யாழ்வாரையும் ஒருவராகக் கொண் டுரைத்துப் போந்தனர். அது திரிபுணர்ச்சியின்பாற் பட்ட தென்பதும், சங்கத்துச் சான்றோரை ஆழ்வாராக்குதற்கு ஒரு சிறிதும் இயைபின்றென்பதும் செந்தமிழ்ச் செல்வி இரண்டாஞ் சிலம்பினுள் 'பொய்கையார்' என்னும் தலைப்பின்கீழ் யானெழுதிய கட்டுரையா னறிக. கடைச்சங்கப் புலவருள் ஒருவராகும் பொய்கையாராற் பாடப்பட்ட இந்நூல், கி. பி. 250 -ஆம் ஆண்டுக்குப் பிற்பட்டதாகா தென்பது ஒருதலை. களவழி கொண்ட சோழன் செங்கணானைக் கரிகாலனுக்கு முன்வைத்துக் கூறுகின்றது பரணி. உலாவானது கரிகாலனை யடுத்துப் பின்வைத்தோதுகிறது. இவற்றுள் எது உண்மையாயினும் செங்கணான் கடைச்சங்க நாளில் விளங்கிய மன்னன் என்பதில் இழுக்கொன்றுமில்லை. அவன் கழுமலங் கொண்டமை களவழியானும், வெண்ணியினும், அழுந்தையினும் ஏற்ற மன்னரை வெற்றிகொண்ட செய்தி திருமங்கையாழ்வா ரியற்றிய பெரிய திருமொழியிலுள்ள திருநறையூர்ப் பதிகத்தானும் அறியப்படுகின்றன. இவ் வேந்தர் பெருமானே திருத்தொண்டர் புராணத்திற் கூறப்பட்ட சிவனடியார் களில் ஒருவராகிய கோச் செங்கட் சோழர் என்பர். திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் எழுந்தருளி யுள்ள இறைவனை வழிபட்ட சிலந்தி கோச்செங்கட் சோழராகப் பிறந்த வரலாற்றினைப் பெரியபுராணம் இனிது விளக்குகின்றது. திருநெறிந்தமிழ் வேதமாகிய தேவாரம் முதலிய வற்றிலும் இவ்வுண்மை விதத்தோதப்படுகிறது. இவ்வரசர் பெருந்தகை சிவனார் மேவுந் திருக் கோயில்கள் பற்பல சமைத்த பரிசும் திருமுறைகளிற் பேசப்படுகின்றது. திருமங்கை யாழ்வாரும் 'இருக்கிலங்கு திருமொழிவா யெண்டோ ளீசற் கெழின்மாட மெழுபதுசெய் துலகமாண்ட - திருக்குலத்து வளச்சோழன்' என்று இதனைப் பாராட்டுவாராயினர். இவ்வாற்றால் இம்மன்னரது பெருமை அளப்பரிய தொன்றாதல் காண்க. இனி, இந்நூலாசிரியர் பொய்கை யென்னும் நாட்டிற் பிறந்தமையால் இப்பெய ரெய்தினரென ஒரு சாராரும், பொய்கை யென்னும் ஊரிற் பிறந்தமையாலெனப் பிறிதொரு சாராரும் கூறுப. இவ்வாசிரியர் 'கானலந்தொண்டி அஃதெம்மூர்' என்று புறத்திலே கூறியிருப்பதனால் மேற்கடற் கரையிலுள்ள தொண்டி நகரம் இவரது பிறப்பிடம் என்று உணரலாகும். அன்றித் தம்பாற் பேரன்புடையவனான சேரமானது பதியாதல் குறித்து அங்ஙனம் கூறினாரென்னினும் அமையும். களவழி நாற்பது என்னும் இந்நூல் செங்கட் சோழரது போர்க்கள வென்றியைத் தனித்தெடுத்துக் கூறுதற் கெழுந்தது. 'கூதிர் வேனில்' என்னும் புறத்திணை யிற் சூத்திரத்து 'ஏரோர் களவழியன்றிக் களவழித் - தேரோர் தோற்றிய வென்றியும்' என்பதனால் களவழி இருவகைப்படும் என்க. இவற்றுள் முன்னது, உழுதொழிலாளர் விளையுட் காலத்துக் களத்தின்கட் செய்யுஞ் செய்கை; என்றது, நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து அதரிதிரித்துச் சுற்றத்தோடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலர் முகந்து கொள்ள வரிசையின் அளிப்பது; பின்னது, அரசர் போக்களத்துச் செய்யுஞ் செய்கை; என்றது நாற்படையுங் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாண்மடலோச்சி அதரிதிரித்து . . அட்ட கூழ்ப் பலியைப் பலிகொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும், ஆண்டுப் பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகர்ந்து கொள்ளக் கொடுத்தல். களவழி - களத்தினிடம், களத்திடத்து நிகழ்ச்சியைப் பாடும் செய்யுளைக் களவழி யென்றது ஆகுபெயர். பிற்கூறிய களவழிச் செய்யுளைப் புலவர் தேரேறி வந்து பாடுவரென்ப. இவ்வாற்றால் இதன் இலக்கணம் ஓர்ந்துகொள்க. இந்நூலின்கண்ணே யானைப்போர் மிகுத்துக் கூறப்படு கின்றது. திருக்கார்த்திகைத் திருவிழா குறிக்கப்பட்டுள்ளது. இந்நூலானது சொற்செறிவும், பொருட் செறிவும் வாய்ந்த பாக் களாலாயது. பழைய உரையாசிரியர்களால் தொல்காப்பியவுரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்துக்காட்டப் பட்டப்பெற்ற பெருமையினையுடையது. இதிலுள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் பொருட்கேற்ற பெற்றி இவ்வாசிரியர் அமைத்திருக்கும் உவமைகள் கற்போர்க்குக் கழிபேரின்பம் விளைப்பன. இந்நூற்குப் பழையவுரை யொன்றுண்டு. அது செய்யுட் பொருளைப் பொழிப்பாக வெடுத்துரைப்பது; விசேடக்குறிப்பு யாதும் கொண்டிராதது. மற்ற இதற்குச் சோடசாவதானம் சுப்பராயச் செட்டியாரவர்களால் பதப்பொருளும், இலக்கணக் குறிப்புக் களுமாக எழுதப்பெற்ற உரையொன்றுண்டு. அதிலுள்ள இலக்கணக் குறிப்புக்கள் பெரும்பாலும் இக்காலத்துக்கு வேண்டப் பெறாதனவாயும், வழுவுள்ளனவாயும் தோன்றின; பதப்பொருளும் பலவிடத்துத் தவறான பாடத்தின் மேலெழுந்தும், மூலத்தொடு மாறுபட்டும் வழுவியிருந்தமை புலனாயிற்று. இவ்வேதுக் களாற்றான் நல்லிசைப் புலவர் செய்யுட்கு உரைகாணுந்திறன் ஒரு சிறிதும் வாய்க்கப்பெறாத யானும் இதற்கோர் உரை யெழுதுமாறு நேர்ந்தது. என் சிற்றறிவிற் கெட்டியவாறு பழைய பொழிப்புரையை முற்றிலும் தழுவிப் பதப் பொருள் கூறியும், இன்றியமையாத மேற்கோள்களும், இலக்கணங்களும் காட்டியும் இவ்வுரையினை வகுத்தமைக்கலானேன். பல சுவடிகள் பார்த்துப் பாடவேற்றுமையுங் காட்டப்பெற்றுள்ளது. இதில் காணப்படும் பிழைகளைப் பொறுத் தருளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்கின்றேன். இங்ஙனம், ந. மு. வேங்கடசாமி நாட்டார். களவழி நாற்பது 1. நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களிறுழக்கத் - தாண்மாய்ந்து 1முன்பக லெல்லாங் குழம்பாகிப் 2பின்பகல் துப்பத் துகளிற் கெழூஉம் புனனாடன் தப்பியா ரட்ட களத்து. (பதவுரை.) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், தப்பியார் - பிழைசெய்தவரை, அட்ட - கொன்ற, களத்து- போர்க்களத்தில், நாள் ஞாயிறு - ஞாயிறு தோன்றிய காலைப்பொழுதில், உற்ற - வந்தடைந்த, செருவிற்கு - போரில், வீழ்ந்தவர் - பட்டவருடைய, வாள்மாய் - வாளழுந்துதலா லொழுகும், குருதி - உதிரத்தை, களிறு உழக்க - யானைகள் கலக்க, தாள் - (அவற்றின்) காலாலே, மாய்ந்து - சுருங்கி, முன்பகல் எல்லாம் - முற்பகற் பொழுதெல்லாம், குழம்பு ஆகி - சேறாகி, பின்பகல் - பிற்பகற்பொழுதில், துப்பு துகளில் - பவளத் துகள்போல, கெழூஉம் - (விசும்பெங்கும்) பரந்து செறியாநிற்கும் எ - று. நாள் என்பது பசுவின் முற்கூறாகிய காலைப் பொழுதைக் குறிக்கும். இதனை, நாணிழல், நாளங்காடி என்பவற்றால் அறிக. குருதிமாய்ந்து குழம்பாகியக் கெழூஉம் என முடிக்க. செருவிற்கு - வேற்றுமை மயக்கம். வாண்மாய் - மறைதல் என்னும் பொருட்டாய மாய்தல் என்பதன் முதனிலை அழுந்தும் என்னும் பொருளில் வந்தது. கெழூஉம் - செய்யுளிசை கெட்டவழி வந்த அளபெடை, தப்பியார் - வினையாலணையும் பெயர்; தப்பு - பகுதி, இன் இடைநிலை ஈறு கொண்டது. (1) 2. ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்ப் போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ் நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன் ஆர்த்தம ரட்ட களத்து. (ப -ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஆர்த்து - குணலையிட்டு, அமர் - போரில், அட்ட - கொன்ற, களத்து - போர்க்களத்தில், ஞாட்பின்உள் - படையின் கண், எஞ்சிய - ஒழிந்த, ஞாலஞ்சேர் - நிலத்திற்சேர்ந்த, யானை கீழ் - யானைகளின்கீழ் (கிடந்த), போர்ப்பு இல் - மேற் போர்வை இல்லாத, இடி - இடிபோன் றொலிக்கும், முரசின் ஊடுபோம் - முரசத்தினூடு செல்லும், ஒள் குருதி - ஒள்ளிய உதிரம், கார்பெயல் பெய்தபின் - கார்காலத்து மழைபெய்த பின்பு, செங்குளம் - செங்குளத்தினது, கோடுகீழ் -கரையின் கீழுள்ள, நீர்தூம்பு - மதகுகள், நீர் உமிழ்வ - நீருமிழ்தலை, போன்ற - ஒத்தன எ- று. செங்குளம் - செம்மண்ணாற் சிவந்த நீரையுடைய குளம். பொருளின்கண் உள்ள குருதி யென்னும் பெயருக்கேற்ப உவமைக் கண் உமிழ்தலையுடைய நீர் என மாற்றுக. கார் - பருவத்திற்கு இருமடியாகுபெயர். போன்ற - போல் என்னும் இடைச் சொல்லடியாகப் பிறந்த வினைமுற்று. (2) 3. ஒழுக்குங் குருதி யுழக்கித் தளர்வார் இழுக்குங் களிற்றுக் கோடூன்றி யெழுவர் 1 மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடான் பிழைத்தாரை யட்ட களத்து. (ப -ரை) மழைக் குரல் - மேகத்தின் முழக்கம் போலும் முழக்கத்தையுடைய, மா முரசின் - பெரிய முரசினையுடைய , மல்குநீர் நாடன் - நிறைந்த நீரினையுடையனாகிய செங்கட் சோழன், பிழைத்தாரை -தப்பினவரை, அட்ட - கொன்ற, களத்து- போர்க் களத்தில், ஒழுக்கும் குருதி - புக்காரை ஒழுகச்செய்யுங் குருதியை, உழக்கி - கலக்கி, தளர்வார் - (*அதனைக் கடக்க லாற்றாது) தளர்ச்சி யுறுவார், இழுக்கம் - மறிந்துகிடக்கின்ற, களிற்றுக்கோடு - யானையின் கொம்புகளை, ஊன்றி எழுவர் - ஊன்றுகோலாகக் கொண்டு எழாநிற்பர் எ-று. ஒழுக்கும்- ஒழுகும் என்பதன் பிறவினை; ஒழுகல் - கால் தளர்ந்து செல்லுதல்; இதனை, 'பரங்குன்றினிற் பாய்புனல் யாமொழுக' என்னும் கோவையாரால் உணர்க. இழுக்குதல் - தவறுதல்; ஆவது வெட்டுண்டு கிடத்தல். முரசினையுடைய நாடன் என்றும், தளர்வார் ஊன்றி யெழுவர் என்றுங் கூட்டுக. (3) 4. உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற் செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால் புல்லாரை யட்ட களத்து. (ப-ரை) செங்கண்மால் - செங்கட்சோழன், புல்லாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், உருவக் கடுந்தேர் - அஞ்சத்தக்க கடிய தேரை, முருக்கி - சிதைத்து, அ தேர் பரிதி - அந்தத் தேரினுருளினை, சுமந்து எழுந்த யானை - சுமந் தெழுந்த யானைகள், இருவிசும்பு இல் - பெரிய வானத்தில், செல்சுடர் - செல்லுகின்ற ஞாயிறு, சேர்ந்த மலை போன்ற - அடைந்த மலையை யொத்தன எ-று. உரு என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. இஃது அச்சம் என்னும் பொருட்டாதலை ' உருவுட்காகும்' என்பதனால் அறிக. மற்று - அசைநிலை, பரிதி - இது பருதியெனவும் வழங்கும். பருதி - வட்டம்; தேருருளை வட்டமுடைமையின் பருதியெனப்பட்டது; 'சுரம்பல கடவும் சுரைவாய்ப் பருதி' என்னும் பதிற்றுப்பத்தும் அதன் உரையும் நோக்குக. சுடர் - ஆகுபெயர். போன்ற - அன்பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். திருமாலின் வழியில் வந்தமையால் சோழனுக்கு 'மால்' என்பது ஒரு பெயர்; பெரும்பாணாற்றில் 'முந்நீர்வண்ணன் புறங்கடை' என வருவது காண்க. (4) 5. தெரிகணை யெஃகந் திறந்தவா யெல்லாங் குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால் தப்பியா ரட்ட களத்து. (ப-ரை) செங்கண்மால் - செங்கட்சோழன், தப்பியார் - பிழைத்தாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், தெரி கணை - ஆராய்ந்த அம்புகளாலும், எஃகம் - வேல்களாலும், திறந்த- திறக்கப்பட்ட, எல்லாவாய் (உம்) - எல்லாப் புண்களின் வாய்களினின்றும் , குருதி படிந்து - (ஒழுகும்) உதிரத்திற் படிந்து, உண்ட காகம் - (அவ்வுதிரத்தை) உண்ட காகங்கள், உரு இழந்து - (தம்முடைய) நிறத்தை இழந்து, குக்கில் புறத்த - செம்போத்தின் புறத்தையுடையவாகி, சிரல்வாய் - சிச்சிலிக் குருவிபோன்ற வாயையுடையவாயின எ-று. வாயெல்லாம் என்பதனை எல்லாவாயும் என மாற்றுக. உண்ட என்பது பொதுவினையாதலை 'உண்ணு நீ ரூட்டிவா' என்னும் குறிஞ்சிக்கலியானும் அறிக. குக்கில் - செம்போத்தாதலை 'குக்கில் செம்போத்துச் சகோரமு மதற்கே' என்னும் பிங்கலந்தையான் அறிக. சிரல் - சிச்சிலி, மீன்கொத்துக் குருவி; 'புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்' என்பது சிறுபாண். (5) 6. நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை யடுக்குபு வேற்றிக் கிடந்த - இடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந் தெங்கும் பெருமலைத் 1தூறெறிந் தற்றே யருமணிப் பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன்தெவ் வேந்தரை யட்ட களத்து. (ப-ரை) அரு மணி - (பெறுதற்கு) அரிய மணிகள் (அழுத்திய), பூண் ஏந்து - அணிகலத்தை ஏந்திய, எழில் - எழுச்சியையுடைய, மார்பு - மார்பையும், இயல் - நடத்தலையுடைய, திண் தேர் - வலிய தேரையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வேந்தரை - பகையரசரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், நால் நால் திசையும் - பல திசைகளிலும், பிணம் பிறங்க - பிணங்கள் மிக, யானை அடுக்குபு - யானைகளடுக்கப்பட்டு, ஏற்றிக்கிடந்த - உயர்ந்து கிடந்தன, இடித்து உரறி - இடித்து முழங்கி, அம் கண் - அழகிய இடத்தையுடைய, விசும்பின் -வானத்தினின்று, உரும் எறிந்து - இடிவீழ்ந்து, எங்கும் - எவ்விடத்துமுள்ள, பெரு மலை - பெரிய மலைகளை, தூறு - தொடக்கு (அற), எறிந்தால் அற்று - எறிந்தாற்போலும் எ-று. நானால் - பன்மை குறித்தது; எட்டு எனினும் அமையும். அடுக்குபு வேற்றி - உயிர்வர உகரம் கெடாது நின்றது; 'அடித்தடித்து வக்காரம்' என்புழிப்போல. இயல்திண்டேர் என்புழி இயல் இப் பொருட்டாதலை 'இயறேர்க்குட்டுவன்' என்னும் சிறுபாண் உரையாலறிக. (6) 7. அஞ்சனக் குன்றேய்க்கும் யானை யமருழக்கி இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் -செங்கண் வரிவரான் முன்பிறழுங் காவிரி நாடன் பொருநரை யட்ட களத்து. (ப-ரை) செம் கண் - சிவந்த கண்களையும், வரி - வரிகளையு முடைய, வரால்மீன் பிறழும் - வரால் மீன்கள் பிறழா நிற்கும், காவிரிநாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், பொருநரை - (தன்னோடு) போர் செய்வாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், அஞ்சனம்குன்று - நீலமலையை, எய்க்கும் - ஒத்துத்தோன்றும், யானை - யானைகள், அமர் உழக்கி- போரின்கட் கலக்கி, இங்குலிகம் குன்றுபோல் - சாதிலிங்க மலையைப் போல, தோன்றும் - சிவந்து தோன்றாநிற்கும் எ-று. ஏய்க்கும் - உவமச்சொல். மீன் - இத் தமிழ்ச் சொல்லை வட நூலார் மீனம் எனத் திரித்து வழங்குவர். (7) 8. யானைமேல் யானை நெரிதர வானாது கண்ணேர் கடுங்கணை மெய்ம்மாய்ப்ப 1 - எவ்வாயும் எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே பண்ணா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. (ப-ரை) பண்ஆர் - ஒப்பனையமைந்த, இடிமுரசு இன் - இடிக்கும் முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்துசெல்லும் நீரினையுடைய, நீர்நாடன் - காவிரிநாட்டை யுடையோன், நண்ணாரை- பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், யானை மேல் யானை நெரிதர- யானைகள் மேல் யானைகள் சாய, ஆனாது - நீங்காமல், கண் நேர் - (மகளிரின்) கண்களை யொக்கும், கடுங்கணை - கடிய அம்புகள், எ வாய் உம் - எவ்விடத்தும் (பாய்ந்து), மெய் மாய்ப்ப - (அவற்றின்) உடலை மறைத்தலால்(அவை), எண் அரு -அளவில்லாத, குன்றில் - மலைகளில், குரீஇ இனம் - குருவியின் கூட்டங்கள் மொய்த்திருப்பவற்றை, போன்ற - ஒத்தன எ-று. மாய்ப்ப - மறைக்க; இஃது இப்பொருட்டாதலை 'களிறு மாய்க்குங் கதிர்க்கழனி' என்னும் மதுரைக் காஞ்சியடி உரையானறிக. குரீஇ - இயற்கை யளபெடை, முரசினை யொக்கும் பாய்புனல் என உவமையாக்கலும் ஒன்று. (8) 9. மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல் ஊணில் சுறபிறழ்வ 2 போன்ற புனனாடன் நேரரரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மேலோரை - (குதிரை முதலாயினவற்றின்) மேலிருந்தவரை, கீழோர்- கீழ்நின்ற காலாட்கள், குறுகி - சென்று சார்ந்து, குறைத்திட்ட - துணித்த, கால் ஆர் சோடு - காற்கிட்ட அரணத்தோடு, அற்ற - அறுபட்ட, கழல் கால் - வீரக்கழலணிந்த கால்கள், இருங்கடல் - பெரிய கடலுள், ஊண் இல் - இரையில்லாத, சுறபிறழ்வ போன்ற - சுறாமீன்கள் பிறழ்வனவற்றை யொத்தன எ -று. சோடு - சுவடு என்பதன் மருஉ : அரணம் என்பது பொருள். அரணம் - செருப்பு. சுற - இது 'குறியதனிறுதிச் சினைகெட' என்னுஞ் சூத்திரத்து இலேசானே ஆகாரங் குறுகி உகரம் பெறாது நின்றது. நீலச்சுறா என்னும் பாடத்திற்குக் கரிய சுறா மீன்கள் என்று பொருள் கொள்க. (9) 10. பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற் செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பல் கணை - பல அம்புகளும், எவாய் உம் - எவ்வுறுப்பிலும், பாய்தல் இன் - பாய்தலால், செல்கலாது - செல்ல மாட்டாது, ஒல்கி - தளர்ந்து, உயங்கும் - வருந்தும், களிறு எல்லாம் - யானைகளெல்லாம், தொல் சிறப்பு இன் - தொன்றுதொட்டு வருஞ் சிறப்பினை யுடைய, செவ்வல் குன்றம் போல் - தாதுமலை போல ,தோன்றும் - தோன்றா நிற்கும் எ-று. செல்கலாது - வினையெச்சம்; குவ்வும் அல்லும் சாரியைகள். செவ்வல் - பண்புப்பெயர். அம் - சாரியை. தாதுமலை - சிந்தூர மலை. 'இங்குலிகக் குன்றேபோற் றோன்றும்' என முன் வந்தமையும் காண்க. (10) 11. கழுமிய ஞாட்பினுண் மைந்திகாந்தா ரிட்ட1 ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து கண்காணா யானை யுதைப்ப விழுமென மங்குன் மழையி னதிரு மதிராப்போர்ச் செங்கண்மா லட்ட களத்து. (ப-ரை) அதிரா போர் - கலங்குதலில்லாத போரையுடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், கழுமிய - நெருங்கிய, ஞாட்பின்உள் - போரில், மைந்து இகந்தார் - வலியிழந்தவர்கள், இட்ட - போகவிட்ட, ஒழி முரசம் - ஒழிந்த முரசம், ஒள் குருதி - ஒள்ளிய உதிரத்தில், ஆடி - படிந்து, தொழில் மடிந்து - (தம்) தொழிலைத் தவிர்த்து, கண்காணா- (படைகளாலூறுபட்டு) கட்புலனிழந்த, யானை உதைப்ப - யானைகளுதைத்தலால், மங்குல் மழையின் - மேகம்போல, இழும் என அதிரும்- இழுமென முழங்காநிற்கும் எ-று. முரசம் ஆடிமடிந்து முழங்கும் என வினiடிவு செய்க. மங்குல் மழை - 'ஒரு பொரு ளிருசொற்பிரிவில் வரையார்' என்பதனால் ஒரு பொருண்மேல் வந்தன. அதிரா - கலங்காத, நடுங்காத; 'அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்' என்பது காண்க. (11) 12. ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந் தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப் பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவே காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக் கூடாரை யட்ட களத்து. (ப-ரை) காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கடாய் - படையைச் செலுத்தி, கடிதுஆக - விரைந்து, கூடாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓவா - இடை விடாமல், கணைபாய - அம்புகள் தைக்க, எழில்வேழம்- எழுச்சியுடைய யானைகள், ஒல்கி - தளர்ந்து, தீவாய் - தீயின் நிறம்பொருந்திய, குருதி இழிதலால் - உதிரத்தை யொழுக்குதலால், செம் தலை - சிவந்த இடத்தை யுடைய, பூவல் குன்றம் - செம்மண் மலைகள், புயற்கு ஏற்ற போன்ற - மழைக்கு எதிர்ந்தன ஒத்தன எ -று. செம்மண்மலையிற் பெய்த மழை செந்நீரா யொழுகுமாதலின், உடல்முழுதும் குருதியை யொழுகவிடும் யானைகள் அம்மலை களை யொக்கும் என்றார். தீவாய் என்பதனைக் கணையோடு இயைப்பினும் அமையும். இழிதல் பிறவினையாயிற்று. பூவல் - செம்மண்; "பூவலூட்டிய புனை மாண்பந்தர்க் - காவற்சிற்றிற் கடிமனைப் படுத்து" எனச் சிலப்பதிகாரத்து வருவது காண்க. அம் - சாரியை. (12) 13. நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர் வரைபுரை யானைக்கை நூற - வரைமேல் உருமெறி பாம்பிற் புரளுஞ் செருமொய்ம்பிற் சேஎய்பொரு தட்ட களத்து. (ப-ரை) செரு மொய்ம்புஇன் - போர்வலிமை யுடைய, சேய் - செங்கோட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - போர்க்களத்தில், நிரைகதிர் - நிரைத்தவொளி யினையுடைய, நீள் எஃகம் - நீண்ட வாளை, நீட்டி - பின்னே வாங்கி, வயவர் - வீரர்கள், வரை புரை - மலையையொத்த, யானை கை - யானைகளின் கைகளை, நூற - துணிக்க, வரைமேல் - மலையின் மேல், உரும் எறி - இடிவிழுந்த, பாம்புஇன் - பாம்பைப்போல, புரளும் - புரளாநிற்கும். - எ-று. பாம்பு உருமெறியப்பட்டு மலைமேனின்றும் விழுந்து புரளு மாறுபோலக் கையும் வாளெறியப்பட்டு யானையினின்றும் விழுந்து புரளாநிற்கும் என்க. எஃகம் வாளினையும், நீட்டல் பின் வாங்கலையுங் குறித்து நின்றன. எறி - என்னும் பெயரெச்ச முதனிலை பாம்பென்னும் செயப்படுபொருட்பெயர் கொண்டது. (13) 14. கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் 1 பட்டுப் பவளஞ் சொரிதரு பைபோற் - றிவளொளிய 2 வொண்செங் குருதி யுமிழும் புனனாடன் கொங்கரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், கொங்கரை - கொங்குநாட்டவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், கவளம் கொள் -கவளத்தைக் கொள்ளும், யானை கை - யானைகள் (தம்) துதிக்கைகள், துணிக்கப்பட்டு - துண்டு படுத்தப்பட்டு, பவளம் சொரிதரு - பவளத்தைச் சொரியாநின்ற, பைபோல் - பையைப்போல, திவள் ஒளிய - விளங்கும் ஒளியை யுடைய, ஒள் - ஒள்ளிய, செம் குருதி - சிவந்த உதிரத்தை, உமிழும் - உமிழாநிற்கும் எ-று. கவளம் - யானையுணவு; 'கல்லாவிளைஞர் கவளங்கைப்ப' 'வாங்குங்கவளத்து' என்பன காண்க. இன் - சாரியை. (14) 15. கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன் வினைபடு பள்ளியிற் றோன்றுமே செங்கட் சினமால் பொருத களத்து. (ப-ரை) சினம் - கோபத்தையுடைய, செங்கண்மால் - செங்கட் சோழன், பொருத களத்து -போர்செய்த களத்தில், எ வாய் உம் - எவ்விடத்தும், குடை முருக்கி - குடைகளையழித்து, கொல் யானை- கொல்லும் யானைகள், பாய - பாய்தலால், புக்க வாய் எல்லாம் - அவ் யானைகள் புகுந்த இடமெல்லாம், பிணம் பிறங்க - பிணங்கள் விளங்க, தச்சன் - தச்சனால், வினைபடு - வினைசெய்யப்படும், பள்ளியில் - இடங்கள்போல, தோன்றும் - தோன்றாநிற்கும். எ-று. பள்ளி - இடமென்னும் பொருளாதலைத் தொல்காப்பியத்தே 'சொல்லிய பள்ளி' என வருதலானறிக. தச்சன் - மரவினைஞன்; 'மரங்கொல் தச்சர்', 'தச்சச்சிறார்' என்பன காண்க. (15) 16. பரும வினமாக் கடவித் தெரிமறவர் ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக் குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும் வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன் வேந்தரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வேந்தரை - பகை மன்னரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பருமம் - கல்லணையையுடைய, இனம் மா - திரண்ட குதிரைகள், தெரி மறவர் - விளங்கிய வீரத்தினை யுடையரால், கடவி- நடத்தப்பட்டு, ஊக்கி - மனவெழுச்சி மிக்கு, எடுத்த - எழுப்பப் பட்ட, அரவத்தின் ஆர்ப்பு - மிக்க ஆரவாரத்தை, அஞ்சா - அஞ்சாத, குஞ்சரம் - யானைகளின், கும்பத்து - மத்தகத்தில், பாய்வன - பாய்கின்றவை, குன்று - மலையின்கண், இவரும் - பாய்கின்ற, இரு - பெரிய, வேங்கை புலி - வேங்கை யாகிய புலியை, போன்ற - ஒத்தன எ-று. பருமம், பண், கல்லணை என்பன ஒரு பொருட் சொற்கள். கடவி - செயப்பாட்டு வினையெச்சம். மறவர் கடவி என மாற்றுக. கடவப்பட்டு ஊக்கிப் பாய்வன என்க; யானைக்கு அடையாக்கி அஞ்சா என்பதனோடு முடிப்பினும் அமையும். (16) 17. ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித் தாக்கி யெறிதர வீழ்தரு மொண்குருதி கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப் 1 போன்றனவே போர்க்கொடித் தானைப் பொருபுன னீர்நாடன் ஆர்த்தம ரட்ட களத்து. (ப -ரை) போர் - போர்க்குரிய, கொடி - கொடி யினையுடைய, தானை - படையினை உடையனான, பொரு - மோதுகின்ற, புனல்- நீரினையுடைய, நீர் நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், ஆர்த்து - ஆரவாரித்து, அமர் - போரில், அட்ட - (பகைவரைக்)கொன்ற, களத்து - களத்தில், ஆர்ப்பு எழுந்த - ஆரவாரகுருந்த, ஞாட்பின் உள் - போரின்கண், ஆள்ஆள் - ஆளும் ஆளும், எதிர்த்து ஓடி - எதிர்சென்றோடி, தாக்கி - பொருது, எறிதர- (படைகளை) வீசுதலால், வீழ்தரும் - சொரியா நின்ற, ஒள் குருதி - ஒள்ளிய உதிரம், கார்த்திகை சாறுஇல் - கார்த்திகை விழாவில் , கழிவிளக்கை - மிக்க விளக்கினை, போன்றன - ஒத்தன எ-று. சாறு -விழா: இதனைச் 'சாறுதலைக் கொண்டென' என்னும் புறப்பாட்டானும், 'சாறயர்களத்து' என்னும் முருகாற்றுப் படையானும் அறிக. கார்த்திகை நாளில் நிரைநிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் மிக்கிருந்தது. இதனை 'குறுமுயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேரும் அகலிருள் நடுநாள், மறுகுவிளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுட னயர வருகதி லம்ம' என்னும் அகப்பாட்டா னறிக. 'துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் . . . விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' என்பது திருநெறித் தமிழ்மறை. கார்த்திகைக்கு மலையில் விளக்கிடுவது 'குன்றிற் கார்த்திகை விளக்கிட் டன்ன' என்று சிந்தாமணியிற் கூறப் பெற்றுளது. (17) 18. நளிந்த கடலுட் டிமிறிரை போலெங்கும் விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து தடற்றிடங் கொள்வாட் 1 டளையவிழுந் தார்ச்சே(ய்) உடற்றியா ரட்ட களத்து. (ப-ரை) தெளிந்து -விளக்கி, தடறு - உறையினது, இடம் கொள் - இடத்தினைக்கொண்ட, வாள் - வாளையும், தளை அவிழும் - கட்டவிழ்ந்த, தார்- மாலையையுமுடைய, சேய் -செங்கட் சோழன், உடற்றியார் -சினமூட்டிய பகைவரை, அட்ட - கொன்ற, களத்து -போர்க்களத்தில், நளிந்த - நீர்செறிந்த, கடல்உள் - கடலில், திமில்- தோணியையும், திரை - அலையையும், போல் - போல, எங்கும் - எவ்விடத்தும், விளிந்தார் - பட்டாருடைய ,பிணம் - பிணக்குப்பையை, குருதி ஈர்க்கும் - உதிரவெள்ளம் இழாநிற்கும் எ-று. 'தடற்றிலங்கொள்வாள்' என்னும் பாடத்திற்கு உறையில் விளங்குகின்ற 'ஒள்ளியவாள்' என்று பொருளுரைக்க. நளிந்து - நளியென்னும் உரிச் சொல்லடியாக வந்த பெயரெச்சம்; நீர்மிக்க எனினுமாம்; நளியென்பது பெருமையும், செறிவுமாதல் தொல் காப்பியத்தா னறிக. (18) 19. இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்கான்2 மூழ்கிக் கடைமணி கான்வரத் தோற்றி 3 - நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன் புக்கம ரட்ட களத்து. (ப-ரை) நீர் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், அமர் புக்கு - போரிற்புகுந்து; அட்ட களத்து - (பகைவரைக்) கொன்ற போர்க்களத்தில், மருப்பின் இடை - (யானைகளின்) கொம்பினடுவே, விட்டு எறிந்த எஃகம் - விட்டெறிந்த வேல், கால்மூழ்கி - காம்பு குளித்தலால், கடைமணி - (அவ்வேலின்) கடைமணி, காண்வர - விளங்க, களிறு எல்லாம் - யானை களெல்லாம், தோற்றி -தோன்றி, நடைமெலிந்து - நடைதளர்ந்து, முக்கோட்ட போன்ற - மூன்று கொம்புகளையுடைய யானைகளை யொத்தன (எ-று.) காழ் என்பதே சிறந்த பாடம். காழ் - காம்பு, மூழ்கலான் என்பது மூழ்கியெனத் திரிந்து நின்றது. முக்கோட்ட இது குறிப்பு வினைப்பெயர். (19) 20. இருசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச்1 சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன் நேராரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன்- நீர்நாட்டையுடைய செங்கட் சோழன், நேராரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், எருவை - கழுகுகள், இரு சிறகர் - இரண்டு சிறகின் கண்ணுமுள்ள, ஈர்க்கு பரப்பி - ஈர்க்குகளைப் பரப்பி, குருதி - உதிரத்தோடு, பிணம் கவரும் -பிணங்களைக் கொள்ளை கொள்ளும், தோற்றம் - காட்சி, அதிர்வு இலா - கலக்க மில்லாத, சீர் - ஓசையையுடைய, முழா - முழவினை, பண் அமைப்பான் - பண்ணமைப்பவனை, போன்ற - ஒத்தன எ-று. சிறகர் - ஈற்றுப்போலி. (20) 21. இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த் தொல்வலி யாற்றித்2 துளங்கினவாய் மெல்ல நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட் சினமால் பொருத களத்து. (ப-ரை) சினம் - கோபத்தையுடைய, செங்கண்மால் -செங்கட்சோழன், பொருத களத்து - போர் செய்த களத்தில், இணை வேல் - இணைத்த வேல்கள், எழில் மருமத்து -அழகிய மார்பில், இங்க - அழுந்துதலால், புண்கூர்ந்து - புண்மிகுத்து, கணை அலைக்கு - அம்பின் அலைப்புகளால், ஒல்கிய யானை - தளர்ந்த யானைகள், துணை இலவாய் - (தம்மேற்கொண்ட) துணைவரை யிலவாய், தொல் வலி - பண்டை வலியினின்று, ஆற்றி - நீங்கி, துளங்கின ஆய் - நடுங்கி, மெல்ல - மெல்ல, நிலம் - நிலத்தை, கால் கவரும் - காலாலே அகப்படுக்கும், மலைபோன்ற - மலையை யொத்தன எ-று. இங்கல் -அழுந்தல், அலை - முதனிலைத் தொழிற் பெயர். அலைக்கு - வேற்றுமை மயக்கம். (21) 22. இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல் ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள் ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை கோடுகொ ளொண்மதியை நக்கும்பாம் பொக்குமே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து. (ப-ரை.) பாடுஆர் - ஒலிநிறைந்த, இடி - இடிபோன்ற, முரசின் - முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர் நாடன் - காவிரிநாட்டை யுடையவனாகிய செங்கட் சோழன், கூடாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஒளிறு வாள் - விளங்கும் வாளையேந்திய, ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், வரி நுதல் - வரிபொருந்திய நெற்றியையுடைய, ஆடு இயல் - வெற்றி சேர்ந்த, யானை தட கை - யானையின் நீண்ட கைகளை, துணிப்ப - துண்டுபடுத்த, துணிந்தவை - துண்டிக்கப்பட்ட அவைகள், இருநிலம் சேர்ந்த - பெரிய நிலத்தில் விழுந்துகிடக்கும், குடைகீழ் - குடைகளின் அருகே. (கிடப்பன), கோடுகோள் - கலை நிறைந்த, ஒள் மதியை - ஒள்ளிய சந்திரனை, நக்கும் பாம்பு - தீண்டுகின்ற பாம்பினை, ஒக்கும் - ஒத்திருக்கும் எ-று. குடைக்கீழ்க் கிடப்பன என ஒரு சொல் வருவிக்க. ஆடு - வென்றி; அசைதலும் ஆம். கோடு - பக்கம்; ஈண்டுக் கலையை யுணர்த்திற்று. 'கோடுதிரள் கொண்மூ' என்பது காண்க. நீர்நாடு - பெயர்; நீர் - ஆகுபெயரும் ஆம். (22) 23. எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே கொற்றவேற் றானைக் கொடித்திண்டேர்ச் செம்பியன் செற்றாரை யட்ட களத்து. (ப-ரை) கொற்றம் - வெற்றியையுடைய, வேல் - வேலை யேந்திய, தானை - சேனையையும், கொடி திண் தேர் - கொடி கட்டிய வலிய தேரையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், செற்றாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், வயவர் எற்றி எறிய - வீரர்கள் (படைக்கலங்களை) எடுத்து எறிய, நுதல் பிளந்து - நெற்றி பிளத்தலால், நெய்த்தோர் புனல்உள் - உதிர நீருள், நிவந்த - மூழ்கியெழுந்த, களிறு உடம்பு - யானைகளின் உடம்புகள், செக்கர் கொள் வான் இல் - செக்கர் வானத்தில், கரும் கொண்மூ - கரிய மேகத்தை, போன்ற - ஒத்தன எ-று. பிளத்தலால் என்பது பிளந்தெனத் திரிந்து நின்றது. நெய்த்தோர் -குருதி. செக்கர் - செந்நிறம். (23) 24. திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும் பைந்தலை பாரிற் புரள்பவை நன்கெனைத்தும் பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. (ப-ரை) கண்ஆர் - கண்ணுக்கு நிறைந்த (காட்சியையுடைய), கமழ் தெரியல் - மணக்கின்ற மாலையை (அணிந்த), காவிரி நீர் நாடன் - காவிரிநீர் நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், திண்தோள் - வலிய தோளையுடைய, மறவர் - வீரர்கள், எறிய - (வாளால்) எறிதலால், திசைதோறும் - திசைகள் தோறும், பார் இல் - பூமியில், பைந்தலை - கரிய தலைகள், புரள்பவை - புரளுவன, நன்கு எனைத்து உம் - மிகவும், பெண்ணை தோட்டம் - பனங்காட்டில், பெருவளி - பெருங்காற்று, புக்கது அற்று - புக்க செயலை யொத்தன எ-று. பசுமை - கருமைமேல் நின்றது. அம் - சாரியை. புக்கதற்று என்பது புக்கற்று என்றாயது. பனந் தோட்டத்திற் பெருவளி புக்கால் காய்கள் உதிர்ந்து புரளுமாறு போலத் தலைகள் புரண்டன என்க. (24) 25. மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக் குஞ்சரம் பாயக் கொடியெழுந்து - பொங்குபு வானந் துடைப்பன போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மலை கலங்க - மலைகள் கலங்க, பாயும் - பாயாநின்ற, மலைபோல் - மலைகள்போல், கொடி - (அவற்றின் மிசை கட்டப் பெற்ற) கொடிகள், எழுந்து - மேல் எழுந்து ,பொங்குபு - விளங்கா நின்று, வானம் - வானத்தை, துடைப்பன போன்ற - துடைப்பனவற்றை யொத்திருந்தன எ-று. மலைகலங்கப் பாயுமலைபோல் என்றது இல் பொருளுவமம். கொடி துடைப்பனபோன்ற என்க. (25) 26. எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல் ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ் செல்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. (பி-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், எ வாய் உம் ஓடி -எவ்விடத்தும் சென்று, வயவர் - வீரர்கள், துணித்திட்ட - துணித்த, கை - கைகளை, வாய்இல் - (தமது) வாயில், கொண்டு எழுந்த - கவ்விக் கொண்டு மேலெழுந்த, செம்செவி - சிவந்த செவிகளையுடைய, புல் சேவல் - புல்லிய பருந்தின் சேவல்கள், ஐ வாய் - ஐந்து வாயையுடைய, வயம் நாகம் - வலியையுடைய பாம்பை, கவ்வி - கவ்விக்கொண்டு, விசும்பு இவரும் - வானிலே பறந்து செல்லும், செம் வாய் - சிவந்த வாயையுடைய, உவணத்தில் - கருடனைப்போல, தோன்றும் - தோன்றாநிற்கும் எ-று. புன்மை - புற்கென்ற நிறம். உவணத்தில் என்புழி இல் ஒப்புப் பொருட்டு. (26) 27. செஞ்சேற்றுட் செல்யானை சீறி மிதித்தலால் ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை பூநீர் வியன்றமிடாப்1 போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. (ப-ரை.) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், செம் சேறு உள் - (உதிரத்தாற் சேறுபட்ட) செஞ்சேற்றில், செல் யானை - செல்லுகின்ற யானைகள், சீறி மிதித்தலால் - வெகுண்டு மிதித்தலால் (குழிந்த இடங்களில்), தொக்கு ஈண்டி நின்றவை - ஒருங்கு தொக்குநின்ற, ஒள் - ஒள்ளிய, செம் குருதிகள் - சிவந்த உதிரங்கள், பூ வியன்ற - செம் பூக்களை யாக்கிய, நீர்மிடா - நீர்மிடாவை, போன்ற - ஒத்தன எ-று. குழிந்த இடங்களில் என்னுஞ் சொற்கள் அவாய்நிலையான் வந்தன. பூநீர் வியன்ற மிடா - செம்பூக்களையுடைய நீரினையுடைய அகன்றமிடா எனினும் ஒக்கும். தொக்கு ஈண்டி- ஒரு பொருளன. (27) 28. ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப் பீடுடை வாளார்1 பிறங்கிய ஞாட்பினுட் கேடகத்தோ டற்ற தடக்கைகொண்2 டோடி இகலன்வாய்த் துற்றிய3 தோற்ற மயலார்க்குக் கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன் நண்ணாரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நண்ணாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க் களத்தில், ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், உருத்து - கோபித்து, மதம் செருக்கி - களிப்பால் மிகுந்து, பீடு உடை - பெருமையையுடைய, வாளார் - வாளேந்தினவராய், பிறங்கிய - போர் செய்த, ஞாட்பின்உள் - போரின்கண், கேடகத்தோடு அற்ற- கேடகத்தோடறுபட்ட, தட கை - நீண்ட கைகளை ,கொண்டு ஓடி - கொண்டு சென்று, இகலன் - ஓரிகள், வாய் துற்றிய - (தமது) வாயிற் கவ்விய, தோற்றம் - காட்சி, அயலார்க்கு - அயலில் நின்றவர்க்கு, கண்ணாடி காண்பார் இல் - கண்ணாடி காண்பாரைப் போல, தோன்றும் - தோன்றாநிற்கும் எ-று. பிறங்குதல் போர்செய்தலை யுணர்த்திற்று. அயலார்க்குத் தோன்றும் என்க. (28) 29. கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபட்டு வீற்றுவீற் றோடு மயிலினம்போல் - நாற்றிசையும் கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட் சினமால் பொருத களத்து. (ப-ரை) செம் கண் - சிவந்த கண்களையும், சினம்- வெகுளியையு முடைய, மால் - செங்கோட்சோழன், பொருத களத்து - போர் செய்த களத்தில் , கடிகா இல் -மரங்கள் செறிந்த சோலையில், காற்று உற்று எறிய - காற்று மிக்கு எறிதலால், வெடிபட்டு - அஞ்சி, வீற்று வீற்று ஓடும் - வேறு வேறாக ஓடும், மயில் இனம்போல் - மயிலின் கூட்டம் போல், நால் திசைஉம் - நான்கு திசையிலும், கேளிர் இழந்தார் - கொழுநரை யிழந்த மகளிர், அலறுப - அலறாநிற்பர் எ-று. வீறு - வேறு; 'சோறுடைக் கையர் வீற்று வீற் றியங்கும்' எனப் புறத்தில் வருவது காண்க. செங்கண் மால் என இயைத்துப் பெயராக்குதலும் ஆம். நாற்றிசையும் அலறுப என்க. அலறுப - பலர்பால் முற்று (29). 30. மடங்கா வெறிந்து மலையுருட்டு நீர்போல் தடங்கொண்ட வொண்குருதி கொல்களி றீர்க்கு மடங்கா மறமொய்ம்பிற்1 செங்கட் சினமால் அடங்காரை யட்ட களத்து. (ப-ரை.) மடங்கா - மங்குதலில்லாத, மறம் - மறத்தினை யுடைய, மொய்ம்பு இன் - மார்பினையும், செம் கண் -சிவந்த கண்ணினையும், சினம் - கோபத்தையும் உடைய, மால் - செங்கட்சோழன், அடங்காரை - பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மலை மடங்கா எறிந்து - மலைகள் மறிய எறிந்து, உருட்டும் நீர்போல் - (அம்மலைகள்) உருட்டுகின்ற வெள்ளத்தைப்போல, தடம்கொண்ட - பரந்த, ஒள் குருதி - ஒள்ளிய உதிர வெள்ளம், கொல் களிறு - கொல்லப்பட்ட யானைகளை, ஈர்க்கும் - இழுத்துச் செல்லாநிற்கும் எ-று. மறம் மொய்ம்பு - முறையே வீரமும் வலியும் எனினும் பொருந்தும். மடங்கல் என்னும் பாடத்திற்குச் சிங்கம்போல என்றும், மடங்குதல் அல்லாத என்றும் பொருள் கொள்ளலாகும். கொல் களிறு - கொலைத் தொழிலையுடைய யானை எனினும் அமையும். செங்கண் என்பதற்கு மேலுரைத்தமை காண்க. (30) 31. ஓடா மறவ ரெறிய நுதல் பிளந்த கோடேந்து கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன் ஒன்னாரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் -நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஒன்னாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், எறிய - வேலினை யெறிதலால், நுதல் பிளந்த - நெற்றி பிளந்த, கோடு ஏந்து - கொம்பினை யேந்திய, கொல் களிறு - கொல்லும் யானையின், கும்பத்து - மத்தகத்தில்(கட்டிய), எழில் ஓடை - அழகிய பட்டம், மின்னுகொடி இல் - (முகிலின்கண்) மின்னற் கொடிபோல, மிளிரும் - விளங்கா நிற்கும் எ-று. பிளந்தகளிறு, ஏந்துகளிறு எனத் தனித்தனி முடிக்க. பிளந்த - பிளக்கப்பட்ட. மின்னுக்கொடி - 'தொழிற் பெயரில்' என்பதனான் உகரம் பெற்றது. (31) 32. மையின்மா மேனி நிலமென்னும் நல்லவள் செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்1 - பொய் பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன் காய்ந்தாரை யட்ட களத்து. (ப-ரை) பூ தார் - பூமாலையினையும், முரசு இன் - வெற்றி முரசினையுமுடைய, பொய்தீர்ந்த - வறத்த லில்லாத, பொரு - (கரையொடு) மோதும், புனல் - நீரினையுடைய, நீர்நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், காய்ந்தாரை - வெகுண்ட பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மை இல் - குற்றமில்லாத, மாமேனி -அழகிய மேனியையுடைய, நிலம் என்னும் நல்லவள்- பூமி என்னு மாது, செய்யது - சிவந்த போர்வையை, போர்த்தாள்போல் - போர்த்தவள் போல, செவ்வந்தாள் - செந்நிற மெய்தினாள் எ-று. நிலத்தை மகடூஉவாகக் கூறுதல் மரபு. "செல்லான் கிழவனிருப்பி னிலம்புலந், தில்லாளி னூடி விடும்" என்பதும் சிந்திக்கற்பாலது. செய்யது - குறிப்பு வினைப்பெயர். செவ்வந்தாள் - செவ்வரல் பகுதி. செவ்வென்றாள் எனின் செவ்வென் பகுதி. முரசினையுடைய நாடன் என்க. பொய் தீர்ந்த என்பதனை 'வானம் பொய்யாது' என்புழிப்போலக் கொள்க. காவிரியின் பொய்யாமையை 'கரியவன் புகையினும்..................ஓவிறந் தொலிக்கும்' என்னும் நாடுகாண்காதை யடிகளா னறிக. (32) 33. பொய்கை யடைந்து புனல்பாய்ந்த வாயெல்லா நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல் ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே கொய்சுவன் மாவிற் கொடித்திண்டேர்ச் செம்பியன் தெவ்வரை யட்ட களத்து. (ப-ரை) கொய் - கத்திரித்த, சுவல் - புறமயிரையுடைய, மாஇன் - குதிரையினையும், கொடி - கொடிகட்டிய, திண்தேர் - வலிய தேரினையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க் களத்தில், பொய்கை உடைந்து - பொய்கைக் கரையுடைதலால், புனல் பாய்ந்த - (அதன்கண்ணுள்ள) நீர்பரந்த, வாய் எல்லாம் - இடமெல்லாம், நெய்தல் - (மலர்ந்த) நெய்தற் பூக்களின், இடை இடை - நடுவே நடுவே, வாளை பிறழ்வனபோல் - வாளை மீன்கள் பிறழ்தல்போல, ஐது இலங்கு - அழகியதாய் விளங்காநின்ற, எஃகுஇன் - வேலொடு, அவிர் ஒளி - விளங்கும் ஒளியையுடைய, வாள் தாயின - வாள் பறந்தன எ-று. ஐது அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினை முற்று எச்சமாய் இலங்கு என்னும் காலங்கரந்த பெயரெச்சங் கொண்டது. ஐ பகுதி, து ஒன்றன்பால் விகுதி. தாயின அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை இறந்தகால வினைமுற்று; தாவு பகுதி, இன் இடைநிலை, வகரம் யகரமாய்த் திரிந்தது. (33) 34. இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர் சுடரிலங் கெஃக மெறியச்சோர்ந் துக்க குடர்கொண்டு 1 வாங்குங் குறுநரி கந்தில் தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட் சேய்பொரு தட்ட களத்து. (ப-ரை) அடர் - தகட்டுவடிவமாகிய, பைம் - பூண் - பசிய அணி கலத்தினையுடைய, சேய் - செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து- களத்தின்கண், இணரிய ஞாட்பின் உள்- தொடர்ந்து நெருங்கிய போரில், ஏற்று எழுந்த - எதிர்த்தெழுந்த, மைந்தர் - வீரர்கள், சுடர் இலங்கு - ஒளிவிளங்கா நின்ற, எஃகம் - வேல்களை, எறிய - எறிதலால், சோர்ந்து உக்க - சரிந்து சிந்திய, குடர்கொண்டு - (வீரர்களின்) குடர்களைக் கவ்விக் கொண்டு, வாங்கும் - இழுக்கும், குறுநரி -குறுநரிகள், கந்துஇல் - தூணிலே (கட்டப்பட்ட), தொடர் ஒடு - சங்கிலியோடு (நின்ற), கோணாய் புரையும் - கோணாய்களை யொக்கும் எ-று. இணரிய - இணர் பகுதி, இன் இடைநிலை கடைகுறைந்து நின்றது. கோணாய் வேட்டமாடும் நாய். குறு நரி - நரியின் ஓர் வகை; 'குறுநரி பட்டற்றால்' என்பது கலி. அடர் - தகடு. (34) 35. செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக் கரைகொன் றிழிதரூஉங் காவிரி நாடன் உரைசா னுடம்பிடி மூழ்க வரசோ(டு) அரசுவா வீழ்ந்த களத்து. (ப-ரை) மல்கி - மிகுந்து, கரை கொன்று - கரைகளை யழித்து, இழிதரும் - செல்லும், காவிரிநாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழனது, உரைசால் - புகழமைந்த, உடம்பிடி மூழ்க - வேல்கள் குளிப்ப, அரசுஓடு - அரசரோடு, அரசுஉவா - (பட்டம் பெற்ற) யானைகள், வீழ்ந்த களத்து - மறிந்துவீழ்ந்த களத்தின்கண் (அங்ஙனம் விழுந்தமை), செம் வரை - செவ்விய மலையின், சென்னி - உச்சியிலுள்ள, அரிமான் ஓடு - சிங்கத்துடன், அவரை - அந்த மலை, ஒல்கி - தளர்ந்து, உருமிற்கு - இடி யேற்றிற்கு, உடைந்தற்று - அழிந்தாற்போலும் எ-று. அரசர்க்கு அரிமானும், யானைக்கு மலையும் உவமம். உடைந்தால் என்பது உடைந்து என நின்றது. (35) 36. ஓஒ உவம னுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப் மாற்றார் குடையெலாங் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. (ப-ரை) காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கழுமலம் - கழுமலமென்னும் ஊரினை, கொண்ட நாள் - கைக்கொண்ட நாளில், புனல் நாடன் - அவன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மா உதைப்ப- குதிரைக ளுதைத்தலால், மாற்றார் - பகைவரின், குடையெல்லாம் - குடைகளெல்லாம், கீழ்மேல் ஆய் - கீழ்மேலாகி, ஆ, உதை - ஆணிரைகளா லுதைக்கப்பட்ட, காளாம்பி போன்ற - காளாம்பியை யொத்தன, உவமன் - அவ்வுவமை, உறழ்வு இன்றி - மாறுபா டில்லாமல், ஒத்தது - பொருந்தியது எ-று. முதலடி முற்றுமோனை, ஓ வென்பது சிறப்புணர்த்திற்று. புனனாடன் என்பது சுட்டு. உவமன் என்புழிச் சுட்டு வருவிக்க, கழுமலம் 'சேர நாட்டகத்ததோர் ஊராதல் வேண்டும். 'நற்றேர்க் குட்டுவன் கழுமலம்' என்பதும் காண்க. (36) 37. அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு முத்துடைக் கோட்ட களிறீர்ப்ப - எத்திசையும் பௌவம் புணரம்பி போன்ற புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணம் - அரசர் பிணங்கள், கான்ற - சிந்திய, நெய்த்தோர் - உதிரவெள்ளங்கள், எத்திசை உம் - எல்லாத் திசைகளிலும், முரசு ஒடு - முரசினோடு, முத்து உடை - முத்தினையுடைய, கோட்ட - கொம்புகளையுடைய, களிறு - யானைகளை, ஈர்ப்ப - இழுப்ப (அவைகள்), பௌவம் - கடலையும், புணர் - (அக்கடலைச்) சேர்ந்த, அம்பி - மரக்கலன்களையும், போன்ற - ஒத்தன எ-று. அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை அரசர் பிணம் என்றார். முரசினையும் களிற்றினையும் ஈர்ப்ப என்க. அவையெனச் சுட்டு வருவிக்க. கோட்ட - குறிப்புப் பெயரெச்சம். (37) 38. பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்ந்(து) உருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற் பொன்னார மார்பிற் புனைகழற்காற் செம்பியன் துன்னாரை யட்ட களத்து. (ப-ரை) செரு மொய்ம்பு இன் - போர் வலியினையும், பொன் ஆரம் -பொன்னாற் செய்த ஆரத்தை யணிந்த, மார்பு இன் - மார்பினையும், புனைகழல்கால் - கட்டிய வீரக்கழலினையுடைய காலினையுமுடைய, செம்பியன் -செங்கட்சோழன், துன்னாரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், பருமம் - பண்ணினையும், பணை - பருத்த, எருத்து ,ன் - பிடரினையு முடைய, பல் யானை - பல யானைகள், புண்கூர்ந்து -(படைகளால்) புண் மிகுதலால், உரும் எறி - இடியேற்ற லெறியப் பட்ட, பாம்பு இன் - பாம்பு போல, புரளும் - புரளாநிற்கும் எ-று. பருமம் - ஒப்பனை. பாம்பின் - ஐந்தனுருபு ஒப்புப் பொருட்டு. எருத்தின் முதலியவற்றில் சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையாது வருதலை 'மெல் லெழுத்து மிகுவழி' என்னுஞ் சூத்திரத்து 'மெய்பெற' என்பதனாற் கொள்ப. (38) 39. மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுட் புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன் வஞ்சிக்கோ வட்ட களத்து. (ப-ரை) புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வஞ்சி கோ - வஞ்சி யரசனாகிய சேரனை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மைந்து - (வீரர்கள் தங்கள்) மறவலிகள், கால் யாத்து - காலைத் தளை செய்தலால், மயங்கிய - போகாது மிடைந்த, ஞாட்பின் உள் - போரின்கண், கால் புய்ந்து போகி - காம்பு பறிந்து போகப்பட்டு, புலால் முகந்த - செந்தசையை முகந்த, வெண்குடை - வெள்ளைக் குடைகள், பஞ்சிபெய் - செம் பஞ்சுக் குழம்பு பெய்த, தாலம் ஏ போன்ற - தாலத்தையே யொத்தன எ-று. தாலம் - வட்டில், புய்ந்து - புய் பகுதி, 'புய்த்தெறி நெடுங்கழை' என்பது புறம். (39) 40. வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல் எல்லாக் களிறு நிலஞ்சேர்ந்த - பல்வேற் பணைமுழங்கு போர்த்தானைச் செங்கட் சினமால் கணைமாரி பெய்த களத்து. (ப-ரை) பல்வேல் - பல வேலினையும், பணை முழங்கு - முரசு முழங்காநின்ற, போர் தானை - போர்ச்சேனையையும், சினம் - கோபத்தையு முடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், கணை மாரி - அம்பு மழை, பெய்த களத்து - பெய்த போர்க்களத்தில், வெள்ளி - வெள்ளியாற் செய்த, வெள்நாஞ்சிலால் - வெள்ளிய கலப்பையால், ஞாலம் உழுவனபோல் - நிலத்தை யுழுதல்போல, களிறு எல்லாம் - யானை களெல்லாம், நிலம் சேர்ந்த - (முகங்க விழ்ந்து) நிலத்தைச் சேர்ந்தன எ-று. யானையின் வெண்கோடுகள் வெள்ளிநாஞ்சில் போன்றன. மாரி பெய்தவழி நிலம் உழுதலாகிய செயல் நிணைப்பிக்கப் பட்டது. (40) 41. வேனிறத் திங்க வயவரா லேறுண்டு கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து. (ப-ரை) பாடு ஆர் - ஒலி நிறைந்த, இடி - இடிபோன்ற, முரசு இன் - முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினை யுடைய, நீர்நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழன், கூடாரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், வேல் - வேலானது, நிறத்து இங்க - மார்பிலழுந்த, வயவரால் - வீரரால், ஏறுண்டு - குத்துப்பட்டு, கால் நிலம் கொள்ளாது - கால்கள் தளர்ந்து, கலங்கி - வீழ்ந்து, செவிசாய்த்து - செவிகளைச் சாய்த்து, (யானைகள் கிடத்தல்), மா நிலம் -பெரிய நிலமகள், கூறும் - உபதேசிக்கும், மறை - உபதேச மொழியை, கேட்ப போன்ற - கேட்டலை யொத்தன எ-று. மறை - மந்திரம், மறைந்த பொருளுடையது. செவி சாய்த்து என்பதனால் அது கேட்கு முறைமை யுணர்த்தப்பட்டது, அவாய் நிலையாற் சில சொற்கள் வருவிக்கப்பட்டன. (41) களவழி நாற்பது மூலமும் உரையும் முற்றிற்று.  பாட்டு முதற்குறிப்பகராதி (எண் - பக்கவெண்) அஞ்சனக் 266 அரசர் 281 ஆர்ப்பெழுந்த 271 இடைமருப்பின் 272 இணரிய 280 இருசிறக 273 இருநிலஞ் 274 இணைவே 273 உருவக்கடுந் 265 எவ்வாயு 276 எற்றிவயவ 274 ஒழுக்குங் 264 ஓஒஉவம 281 ஓடாமறவரு 277 ஓடாமறவரெறி 278 ஓவாக்கணை 276 கடகாவிற் 277 கவளங்கொள் 270 கழுமிய 268 கொல்யானை 270 செஞ்சேற்றுட் 276 செவ்வரைச் 280 ஞாட்பினு 263 திண்டோண் 275 தெரிகணை 265 நளிந்த 272 நானாற்றிசை 266 நாண்ஞாயி 263 நிரைகதிர் 269 பருமவின 271 பருமப்பணை 282 பல்கணை 268 பொய்கை 279 மடங்க 278 மலைகலங்க 275 மேலோரை 266 மையின்மா 279 மைந்து 282 யானைமேல் 267 வெள்ளி 283 வேனிறத் 283 திரிகடுகம் - நல்லாதனார் முகவுரை திரிகடுகம் என்பது கடைச்சங்கப் புலவர்கள் இயற்றிய கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. இறையனாரகப் பொருளுரையிற் கடைச்சங்கப் புலவர் பாடியவற்றைக் கூறி வருமிடத்தே கீழ்க் கணக்குகள் குறிக்கப்படவில்லையேனும், பின்னுளோர் பலரும் அவையும் சங்கத்தார் பாடியனவென்றே துணிந்து எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என எண்ணி வருகின்றனர். கீழ்க்கணக்கியற்றியோருட் கபிலர், கண்ணஞ் சேந்தனார், கூடலூர் கிழார், பொய்கையார் முதலானார் சங்கத்துச் சான்றோரென நன்கறியப்படுதலின், அவற்றுட் பலவும் அக்காலத்தினவெனக் கருதுவதில் இழுக்கொன்றுமின்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட் டென்பது, தொல்காப்பியச் செய்யுளியலில், வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியிற் றாய பனுவலோ டம்மை தானே யடிநிமிர் பின்றே. என்னுஞ் சூத்திரவுரைக்கட் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறியப்படுவது. அவை, அம்மையென்னும் வனப்புடைய வென்பதும் அவ்வுரையாற் றெளியப்படும். அம்மை யெனவே, அவையெல்லாம் சிலவாகிய மெல்லிய சொற்களா லமைந்தனவென்பதும், அடிநிமிராதன வென்பதும் பெரும் பாலும் அறம் பொருளின்பங்களைப் பற்றியன வென்பதும் போதரும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக் கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத்தினர். அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத் திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும். என்பது பன்னிருபாட்டியல். நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம் இன்னிலை சொற் காஞ்சியோ டேலா தியென்பவே கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு. என்பதோர் வெண்பா. கீழ்க்கணக்கு நூல்கள் இவை யென்பதனை அறிவித்தற் கெழுந்தது. எனக் கொள்ள வேண்டும். இதனால் அறிவிக்கப்படும் நூல்களாவன: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, *இனியது நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்ச மூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இவற்றுள் இன்னிலை என்பதனை விடுத்துக் கைந்நிலை யென்பதொன்றைச் சேர்த்துக் கூறுவாருமுளர்; அவர் இன்னிலை யென்பது ஓர் பழம் பனுவலன்றெனவும், கைந்நிலையே பழமையாய தெனவும் கூறுவர். "நாலடி நான்மணி என்னும் வெண்பா"வானது, "ஐந்தொகை", 'இன்னிலைய', 'மெய்ந்நிலைய', 'கைந்நிலையோடாம்', 'நன்னிலையவாம்' என்னும் பல பாடவேற்றுமைகளையுடையது; ஆகலின் அது கொண்டு இன்னிலை யென்றோ கைந்நிலை யென்றோ துணிதல் அரிதாகும். இப்பொழுது இன்னிலை யென்பதோர் நூலும் கைந்நிலை யென்பதோர் நூலும் வெளி வந்துள்ளன. இரண்டும் கீழ்க்கணக்கின் இலக்கணம் அமைந்தனவே. அவற்றுள், பதினெட்டென்னும் தொகையுட்பட்டது யாதாயினும் ஆக. இனி, திரிகடுகம் என்னும் இந்நூலை இயற்றினவர் நல்லாதனார் என்பவர். நல்லந்துவனார், நன்முல்லையார், நல்வேட்டனார் என்றிங்ஙனம் நல் என்னும் அடையடுத்த பெயர்களையுடைய சங்கப் புலவர் பலராவர். ஆதன் என்னும் பெயர் நல் என்னும் சிறப்புப் பற்றிய அடையை முன்னும் ஆர் என்னும் உயர்வு பற்றிய விகுதியைப் பின்னும் பெற்று நல்லாதனார் என்றாயிற்று. இவர் திருமால் பத்தியுடையரென்பது 'கண்ணகன் ஞால மளந்ததூஉம்' என்னும் இந்நூற் கடவுள் வாழ்த்துச் செய்யுளால் அறியப்படும். இந்நூல் கடவுள் வாழ்த்து உட்பட நூற்றொரு வெண்பாக் களையுடையது; ஒவ்வொரு வெண்பாவும் மும்மூன்று பொருள் களைக் கூறுவதனாலும், 'அருந்ததிக் கற்பினார் தோளும்' என்னும் முதற் செய்யுளில் 'இம் மூன்றும் திரிகடுகம் போலும் மருந்து என இவரே உவமை கூறினமையாலும் இது திரிகடுகம் என்னும் பெயரினதாயிற்று. திரிகடுகம் சுக்குத் திப்பிலி மிளகு என்னும் மூன்று கார்ப்புடைய மருந்துப்பொருள்கள். அவை உடற் பிணியை அகற்றி இன்பஞ் செய்தல் போல் இந்நூற் செய்யுட்கள் கூறும் மும்மூன்று பொருள்களும் உயிர்ப்பிணியாகிய அறியாமையைக் கெடுத்து இன்பஞ் செய்வனவாம் என்க. இந் நூலிலுள்ள வெண்பாக்களிற் பாதியின் மிக்கன இன்னிசை வெண்பா; ஏனையன நேரிசை வெண்பா.' திரிகடுகம் மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து கண்ணகன் ஞாலமளந் ததூஉங் காமருசீர்த் தண்ணறும் பூங்குருந்தஞ் சாய்த்ததூஉம்- நண்ணிய மாயச் சகட முதைத்ததூஉ மிம்மூன்றும் பூவைப்பூ வண்ண னடி. (பதவுரை) கண்அகல் - இடம்பரந்த, ஞாலம் - உலகத்தை, அளந்ததூஉம்- அளந்ததுவும், காம சீர் - அழகிய புகழையுடைய, தண் - குளிர்ந்த, நறும்பூ குருந்தம் - நல்ல நீ (மணமுடைய) நீ மலர் களையுடைய குருந்த மரத்தை, சாய்த்ததூஉம் - வீழ்த்தியதுவும், நண்ணிய - (கஞ்சனால் விடப்பட்டுத்) தன்னைக்கிட்டிய, மாயச் சகடம் - வஞ்சனைச் சகடத்தை, உதைத்ததூஉம் - உதைத்து வீழ்த்தியதுவும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்று செய்கையும், பூவைப்பூவண்ணன் - காயாமலர் போலும் நிறத்தை யுடைய திருமாலின், அடி - அடிகளின் செய்கைகளாம் என்றவாறு. ஞாலம் ஈண்டு உலகம் என்னும் பொருட்டு. "ஞால மூன்றடித் தாய முதல்வற்கு" (கலி - 1 - 124) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஞாலமளந்தது முதலியன " மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகை முடியத் தாவிய சேவடி." " கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன்." " நின் மாமன் செய்வஞ்ச உருளுஞ் சகடமுதைத் தருள் செய்குவாய்" எனச் சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டன. " பூவைப் புதுமல ரொக்கு நிறம்". என்பது நான்மணிக்கடிகை. காமரு, உ- சாரியை; காமம் மரு என்பது விகாரமாயிற்றெனக் கொண்டு, விருப்பம் மருவிய என்றுரைத்தலுமாம். அளபெடைகள் இன்னிசை நிறைக்க வந்தன. இம்மூன்றும் செய்தவை அடிகள் என்றுமாம். இம்மூன்று அரிய செயல்களும் செய்தன திருமாலின் அடி களாதலின் அவ்வடிகளை நினைந்து வாழ்த்தி வணங்கின் எல்லா நலமும் எய்தலாம் என்பது கருத்து. இது பொருளியல்புரைக்கு முறையில் உலகிற்குப் பயனுண்டாகக் கூறிய வாழ்த்தாகும். 1. அருந்ததிக் கற்பினார் தோளுந் திருந்திய தொல்குடியின் மாண்டார் தொடர்ச்சியுஞ் - சொல்லின் அரிலகற்றுங் கேள்வியார் நட்புமிம் மூன்றுந் திரிகடுகம் போலு மருந்து. (ப-ரை): அருந்ததி கற்பினார்- அருந்ததி போலும் கற்பினை யுடைய மகளிரது, தோளும் - தோளின் சேர்க்கையும், திருந்திய - குற்றமற்ற, தொல்குடியின் - பழைமையாகிய குடிப்பிறப்பின் கண், மாண்டார் - மாட்சிமையுற்றாரது, தொடர்ச்சியும் - தொடர்பும், சொல்லின் - சொல்லின்கண், அரில் அகற்றும் - பிணக்கை நீக்கும், கேள்வியார் - நூற்கேள்வியுடை யாரிடத்துக் கொண்ட, நட்பும் - நட்பும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், திரிகடுகம் போலும் மருந்து - (ஒருவர்க்கு) திரிகடுகையொக்கும் மருந்துகளாம். எ-று. அருந்ததி - வசிட்டன் மனைவி; கற்பிற்கு எடுத்துக் காட்டாயவள். " தீதிலா வடமீனின் றிறமிவள் திறம்" என்று சிலப்பதிகாரத்தும், " அருந்ததிக் கற்பினாளை யடிபணிந் தவனுங் கண்டான்" என்று சிந்தாமணியிலும், "சீலமின்ன தொன்ற ருந்ததிக் கருளிய திருவே." என்று கம்பராமாயணத்திலுங் கூறப்பெற்றமை காண்க. அரில் - மாறுபாடு, குற்றம். திரிகடுகம் - மூன்று கார்ப்புடைய மருந்துப் பொருள்கள், சுக்கு, திப்பிலி, மிளகு என்பன; திரிகடுகம் உடலின் பிணி நீக்கி இன்பம் பயத்தல் போல இம்மூன்றும் உடல் உயிர்களின் பிணிகளை நீக்கி இன்பம் விளைப்பனவாகுமென்க. சொல்லின் இம்மூன்றும் மருந்து எனக் கூட்டியுரைத்தலுமாம். மாண்டார் - மாண் பகுதி. 2. தங்குணங் குன்றாத் தகைமையுந் தாவில்சீர் இன்குணத்தா ரேவின செய்தலும் - நன்குணர்வின் நான்மறை யாளர் வழிச்செலவு மிம்மூன்றும் மேன்முறை யாளர் தொழில். (ப-ரை): தம்குணம் குன்றா - தமது குடிமைக்கும் நிலைமைக்கு மேற்ற பண்பினின்றும் வழுவாத, தகைமையும் - தன்மையும், தாஇல்- கேடில்லாத, சீர் - புகழையுடைய, இன்குணத்தார் - இனிய குணத்தினையுடையவர், ஏவின - பிறர் ஏவினவற்றை, செய்தலும்- செய்வதும், நன்கு உணர்வின் - நன்றாகிய உணர்வினையுடைய, நான்மறையாளர் - நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர் கூறிய நெறியில், செலவும் - ஒழுகுதலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், மேன்முறையாளர் - மேலாகிய முறையினையுடையாரின், தொழில் - செயல்களாம். எ-று. தகைமை - பெருமையுமாம். ஏவின - வினையாலணையும் பெயர். மேன்முறையாளர் - மேலோரின் ஒழுக்கமாகிய முறையைக் கையாளுபவர். 3. கல்லார்க் கினனா யொழுகலுங் காழ்கொண்ட இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லஞ் சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும் அறியா மையான்வருங் கேடு. (ப-ரை): கல்லார்க்கு - (நூல்களைக்) கற்றறியாதார்க்கு, இனன் ஆய் - இனமாகி, ஒழுகலும் - நடத்தலும், காழ் கொண்ட - வயிரங்கொண்ட, இல்லாளை - மனையாளை, கோலால் புடைத்தலும் - கோல் கொண்டு அடித்தலும், இல்லம் - (தம்) மனையின்கண், சிறியாரை - சிறுமைக் குணமுடைய காமுகரை, கொண்டு புகலும் - உடன் கொண்டு செல்லுதலும் , இம்மூன்றும் - (ஆகிய) இந்தமூன்றும், அறியாமையான் வருங்கேடு - பேதமை காரணமாக வருங்கேடுகளாம். எ-று. இனன் - சுற்றம், காழ்கொண்ட - செற்றங்கொண்ட " காழ்த்த பகைவர் வணக்கமும்". (திரிகடுகம் - 24) என்புழிக் காழ்த்தல் இப்பொருட்டாதல் காண்க. காழ்கொண்டவள் எறியென்று எதிர்நிற்பாளாவள். காழ் கொண்ட என்பதற்குக் கற்பின் உறுதியைக் கொண்ட என்றுரைப் பாருமுளர். சிறியார் காமுகராதலை "செருக்குஞ் சினமுஞ் சிறுமையுமில்லார்". என்னுங் குறளுரை நோக்கியுணர்க. கேடு பயப்பனவற்றைக் கேடு என உபசரித்தார். 4. பகைமுன்னர் வாழ்க்கை செயலுந் தொகைநின்ற பெற்றத்துட் கோலின்றிச் சேறலும் - முற்றன்னைக் காய்வானைக் கைவாங்கிக் கோடலு மிம்மூன்றுஞ் சாவ வுறுவான் றொழில். (ப-ரை): பகைமுன்னர் - தன்பகைவரிடத்துக்கு அணிமையில், வாழ்க்கை செயலும் - (குடியிருந்து) வாழ்க்கை நடத்துதலும், தொகைநின்ற - கூட்டமாக நின்ற, பெற்றத்துள் - எருதுகளின் நடுவில், கோல் இன்றிச் சேறலும் - கோல் இல்லாமல் செல்லுதலும், முன் தன்னைக் காய்வானை - காலம் நேர்ந்துழித் தன்னை வருத்தும் உட்பகையுடையவனை, கைவாங்கிக் கோடலும் - (பகையிலனென்று) தழுவிக் கொள்ளுதலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், சாவ உறுவான் தொழில் - சாதற்கு அமைந்தவனுடைய செயல்களாம். எ-று. வாழ்க்கை செயல் என்பதற்குச் செல்வத்துடன் வாழ்தல் என்று கூறுதலுமாம். முன் என்பது எதிர்வையுணர்த்திற்று. கைவாங்கி என்பதற்கு நீங்கி எனப் பொருள் கொண்டு, தன்னைப் பகைக்கு மியல்புடையளைவனை முன்னே கைவிட்டு நீங்கிப் பின் நட்புக் கொள்ளுதலும் என்று உரைப்பாருமுளர். இவை சாதலை விளக்கு மென்பார், 'இம்மூன்றும் சாவவுறுவான்றொழில்' என்றார். 5. வழங்காத் துறையிழிந்து நீர்ப்போக்கு மொப்ப விழைவிலாப் பெண்டிர்தோட் சேர்வும் - உழந்து விருந்தினனாய் வேற்றூர் புகலுமிம் மூன்றும் அருந்துயரங் காட்டு நெறி. (ப-ரை): வழங்கா - (பலரும் இறங்கிச்) செல்லப் பெறாத, துறைஇழிந்து - துறையின்கண் இறங்கி, நீர்ப்போக்கும் - நீரில் நடந்து செல்லுதலும், ஒப்ப - தன்னையொப்ப, விழைவு இலா - விருப்பமில்லாத, பெண்டிர்தோள் - மகளிரின் தோள்களை, சேர்வும் - அணைதலும், உழந்து - வருந்தி, விருந்தினனாய் - விருந்தினனாகி, வேற்றூர் - அயலூரில், புகலும் - செல்லுதலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், அருந்துயரம் - அரிய துன்பத்தைக், காட்டும் நெறி - உண்டாக்கும் வழிகளாம். எ-று. ஒப்ப விழைதல் - ஒத்த அன்புடைத்தாதல்; விழைவு என்பதற்கு விரும்பப்படும் அழகும் குணனும் என்றுரைத்தலுமாம். உழந்து என்பதற்குச் செல்வத்தையிழந்து வருந்தி என்று பொருள் கொள்க. அருந்துயரம் - சாக்காடு முதலியன; துயர் என்பது சாதலையும் சாதல் என்பது வருந்துதலையும் உணர்த்துதலை, " காதலனுற்ற கடுந்துயர் பொறாள்" என மணிமேகலையும், " சென்ற விருந்தும் விருப்பிலார் முற்சாம்." என நான்மணிக்கடிகையும் கூறுவனவற்றால் முறையே அறிக. 6. பிறர்தன்னைப் பேணுங்கா னாணலும் பேணார் திறன்வேறு கூறிற் பொறையும் - அறவினையைக் காராண்மை போல வொழுகலு மிம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு. (ப-ரை): தன்னை - தன்னை, பிறர் பேணுங்கால் - பிறர் நன்கு மதிக்குமிடத்து, நாணலும் - தான் அதற்கு நாணுதலும், பேணார் - மதியாராய், திறன் - தன்றகுதியை, வேறுகூறில் - வேறுபட இழித்துக் கூறில், பொறையும் - அதனைப் பொறுத்தலும், அறம் வினையை - அறமாகிய நற்செய்கையை, கார் - மழையானது, ஆண்மை போல - (கைம்மாறு கருதாது) ஆளுந் தன்மைபோல, ஒழுகலும்- வளர்த்து ஒழுகலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், ஊர் ஆண்மை என்னும் - ஊரை ஆளுந்தன்மை என்று சொல்லுகின்ற, செருக்கு - செல்வங்களாம். எ-று. பேணுதல் - மதித்துப் புகழ்தலும் உபசரித்தலும். பேணார், முற்றெச்சம்; பெயராக்கிப் பகைவர் என்றுரைப்பாருமுளர். வேறு திறன் என மாறுதலுமாம். காராண்மை என்பதற்குப் பயிர்த் தொழில் என்றுரைத்தலும் பொருந்தும். இன்சொல் விளைநிலனா வீதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை யெருவட்டி அன்புநீர் பாய்ச்சி பறக்கதி ரீனவோர் பைங்கூழ் சிறுகாலைச் செய். என்றார் முனைப்பாடியார். ஊராண்மையாவது ஊரிலுள்ளாரை உயரச் செய்து தன் வழிப்படுத்தல்; பிறரின் மேம்படும் ஆண்மை எனலுமாம். இம்மூன்றும் ஊராண்மை யென்னுஞ் செருக்கு எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். செருக்கு, செல்வத் திற்கு ஆகுபெயர். "வேண்டாமை யென்னுஞ் செருக்கு." என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக. 7. வாளைமீ னுள்ள றலைப்படலு மாளல்லான் செல்வக் குடியுட் பிறத்தலும் - பல்லவையுள் அஞ்சுவான் கற்ற வருநூலு மிம்மூன்றுந் துஞ்சூமன் கண்ட கனா. (ப-ரை): வாளைமீன் - வாளைமீனை, உள்ளல் - உள்ளான் என்னும் பறவை, தலைப்படலும் - வௌவுதற்கு முயறலும், ஆள் அல்லான் - ஆளுந்திற மில்லாதவன், செல்வக் குடியுள் - செல்வ முடைய குடும்பத்தில், பிறத்தலும் - பிறப்பதும், பல் அவையுள் - பல அவையின் கண்ணும், அஞ்சுவான் - (எடுத்துச் சொல்லுதற்கு) அஞ்சுபவன், கற்ற - கற்றறிந்த. அருநூலும் - அரிய நூற்கல்வியும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், துஞ்சுஊமன் - தூங்கிய ஊமையன், கண்ட கனா - கண்ட கனவினை யொக்கும்; எ-று. உள்ளல் என்பது உள்ளு எனவும் உள்ளான் எனவும் வழங்கும். சிறுபறவையாகிய உள்ளல் பெருமீனாகிய வாளையை அடைய வொண்ணாதென்றபடி. வாளை மீனுள்ளல் தலைப் படல் என்னுந் தொடரை எழுவாயும் இரண்டாம் வேற்றுமையும் மயங்கி வந்ததற்கு உதாரணமாகக் காட்டினர் மயிலைநாதர் முதலாயினார். பல்அவை - செல்லும் அவையின்கண்ணெல்லாம்; அறிஞர் பலர் கூடிய அவை என்றுமாம்; "பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத் தஞ்சு மவன்கற்ற நூல்." என்னுந் திருக்குறள் இங்கு நோக்கற்பாலது. பயனிலதென்பார் ஊமன் கண்ட கனா, என்றார். ஊமன் கனவினைப் பிறர்பாற் கூறி உசாவலாமையின், அதன் பயனை அறியமாட்டு வானல்லன் ஆகலின் கனவு பயனிலதாகும் என்க. 8. தொல்லவையுட் டோன்றுங் குடிமையுந் தொக்கிருந்த நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் - வெல்சமத்து வேந்துவப்ப வட்டார்த்த வென்றியு மிம்மூன்றுந் தாந்தம்மைக் கூறாப் பொருள். (ப-ரை): தொல் அவையுள் - பழைமையாகிய அவையின் கண், தோன்றும் - விளங்கித் தோன்றும், குடிமையும் - உயர் குடிப் பிறப்பும், தொக்குஇருந்த - கூடியிருந்த, நல்அவையுள் - நல்லோர் அவையின்கண், மேம்பட்ட கல்வியும் - மேன்மையுற்ற புலமையும், வெல்சமத்து - வெல்லும் போரின்கண், வேந்து உவப்ப - (தம்) அரசன் மகிழுமாறு, அட்டு - (பகைவரைக்) கொன்று, ஆர்த்த வென்றியும் - ஆரவாரித்த வெற்றியும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், தாம் - (அவற்றை உடையராகிய) தாம், தம்மைக் கூறா - தம்மைப் புகழ்ந்து கூறாத, பொருள் - பொருள்களாம். எ-று. தொல் அவை - தொல்லோர் அவை. தொல்லோர் - தொல் குடியில் வந்தோர். நல் அவை - நல்லார் அவை, "நல்லவை" எனவும் "நல்லாரவை" எனவும் வள்ளுவனார் கூறுதல் காண்க. ஆர்த்தவென்றி - ஆர்த்தற்குக் காரணமாகிய வென்றி. " தேன்வாயுமிழ்ந்த வமிர்து". (சிந்தாமணி) என்புழிப்போல, கூறாப்பொருள் என்றது. இவைதாமே விளங்கித் தோன்றுமாகலின் கூறவேண்டா என்றபடி; கூறின் பெருமை குன்றுமாகலின் கூறலாகாதன என்றுமாம். கற்றனவுங் கண்ணகன்ற சாயலுமிற் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும் தானுரைப்பின் மைத்துனர் பல்கி மருந்திற் றணியாத பித்தனென் றெள்ளப் படும். என்பதும் காண்க. 9. பெருமை யுடையா ரினத்தி னகறல் உரிமையில் பெண்டிரைக் காமுற்று வாழ்தல் விழுமிய வல்ல துணிதலிம் மூன்றும் முழுமக்கள் காத லவை. (ப-ரை): பெருமை உடையார் - பெருமைக் குணமுடையாரது, இனத்தின் அகறல் - கூட்டத்தினின்றும் நீங்குதலும், உரிமை இல் பெண்டிரை - மனைவியாகாத பிற மகளிரை, காமுற்று - விரும்பி, வாழ்தல் - அவரோடு கூடி ஒழுகுதலும், விழுமிய அல்ல - சிறந்தவையல்லாத வினைகளை, துணிதல் - துணிந்து செய்தலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்று செயல்களும், முழுமக்கள் - அறிவில்லாதார், காதலவை - விரும்புவனவாம். எ- று. உரிமை - மனைவியென்னும் பொருட்டாதலை, " உரிமை முன்போக்கியல்லா லொளியுடை மன்னர்போகார்" என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளாலறிக. விழுமிய வல்ல - சிறந்த பயனில்லனவும் இழிதக்கனவுமாய செயல்கள். முழுமக்கள் - அறிவு உட்புகுதற்கு ஓர் புரையில்லாதவர். " முழுப்பதகர் தாடுரந்து." என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில் முழு என்பதற்கு அறிவு நுழைதற்கு வழியிலராய் என நச்சினார்க்கினியர் பொருள் கூறினமை காண்க. " முழுமகன் சிதடனிழுதை மூடன்" என்பது திவாகரம். " நடலை யிலராகி நன்றுணராராய முடலை முழுமக்கள்." என்பது பழமொழி. 10. கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கும் மூத்தோரை யில்லா வவைக்களனும் - பாத்துண்ணுந் தன்மையி லாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. (ப-ரை): கணக்காயர் இல்லாத - ஓதுவிப்பாரைப் பெறாத, ஊரும் - ஊரும், பிணக்கு அறுக்கும் - மாறுபாட்டினை நீக்கும், மூத்தோரை இல்லா - முதியோரைப் பெறாத, அவைக்களனும் - அவையும், பாத்து உண்ணும் - பகுத்து உண்ணும் , தன்மை இலாளர்- தன்மையில்லாதவரது, அயல் இருப்பும் - பக்கத்திற் குடியிருத் தலும், இம்மூன்றும் - (ஆகிய) இந்த மூன்றும், நன்மை பயத்தல் இல - நன்மை தருதல் உடையனவல்ல. எ-று. கணக்காயர் - நூல் கற்பிக்கும் ஆசிரியர், "கற்றதூஉ மின்றிக் கணக்காயர் பாடத்தால்" என்பது நாலடியார். பிணக்கு - மாறுபாடு; ஐயம், திரிபுகள். மூத்தோர் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்ந்தவர். இதனை "அறனறிந்து மூத்தவறிவுடையார்" என்னுங் குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையானறிக. "அவைக்குப்பாழ் மூத்தோரை யின்மை" என்பது நான்மணிக் கடிகை. பாத்து - பகுத்து என்பதன் மரூஉ. பாத்துண்ணல் - வறியர் முதலாயினார்க்குப் பகுத்தளித்துப் பின்பு தான் உண்ணுதல். "பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின்" என்னுங் குறளுரை நோக்குக. ஊர்கல்வி விருப்பினர்க்கும் அவைக்களன் முறை கூறுவார்க்கும், அயலிருப்பு வறியராதியோர்க்கும் நன்மைபயவா என்க. 11. விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக் களியாதான் காவா துரையுந் - தெளியாதான் கூரையுட் பல்காலுஞ் சேறலு மிம்மூன்றும் ஊரெல்லா நோவ துடைத்து. (ப-ரை): விளியாதான் - பாடுந்திறமில்லாதவனது,கூத்தாட்டு -கூத்தாட்டத்தினை, காண்டலும் - பார்த்தலும், வீழ களியாதான் - (மயக்கத்தால்) வீழுமாறு கள்ளுண்ணாதவன், காவாது உரையும் - போற்றாது சொல்லும் சொல்லும், தெளியாதான்கூரையுள் - (குற்றமிலனென்று) தன்னைத் தேறாதவனுடைய வீட்டின்கண், பல்காலும் - பலமுறையும், சேறலும் - செல்லுதலும், இம்மூன்றும்- (ஆகிய) இந்தமூன்றும், ஊரெல்லாம் - ஊரெல்லாரும், நோவது- வருந்துங் குற்றத்தை, உடைத்து - உடையன. எ-று. விளி - இசைப்பாட்டு. " இளிவாய்ப் பிரசம் யாழாக" என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில், விளியாக் கொண்டு, என்பதற்குப் 'பாட்டாகக் கொண்டு', என்று பொருள் கூறி, விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், என்றார் பிறரும், என இதனையே மேற்கோளாகக் காட்டினர் நச்சினார்க்கினியர். விளியாதான் - என்பதனை எழுவாயாக்கி உரைப்பாருமுளர். காவாது - நாவைப் பாதுகாவாமல், கூரை - மனை. - நோவது, வினையாலணையும் பெயர். உடைத்து, பன்மையிலொருமை. 12. தாளாள னென்பான் கடன்படா வாழ்பவன் வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான் கோளாள னென்பான் மறவாதா னிம்மூவர் கேளாக வாழ்த லினிது. (ப-ரை): தாளாளன் என்பான் - முயற்சியுடையானென்று சொல்லப்படுவானாகிய, கடன்படா வாழ்பவன் - கடன் கொள்ளாமல் வாழ்பவனும், வேளாளன் என்பான் - ஒப்புரவு செய்வான் என்று சொல்லப்படுவானாகிய, விருந்து இருக்க - தன்னைத் தேடி வந்த விருந்தினர் இல்லின் புறத்திருக்க, உண்ணாதான் - தனித்து உண்ணுதலைச் செய்யாதவனும், கோளாளள் என்பான் - ஆசிரியன் கற்பித்தவற்றை உள்ளத்திற் கொள்ள வல்லன் என்று சொல்லப் படுவானாகிய, மறவாதான் - கற்றவற்றை மறவாதவனும், இம் மூவர் - (ஆகிய) இந்த மூவரையும், கேள் ஆக - நட்டாராகப் பெற்று, வாழ்தல் - வாழுதல், இனிது - (ஒருவர்க்கு) இன்பத்தைத் தருவதாம். எ-று. தாள், தாளாண்மை -முயற்சி, வேளாண்மை - உபகாரம், முயற்சியுடையானென்று சொல்லப்படுவோன் கடன்படாமல் வாழ்பவனாவன்; என்றிங்ஙனம் தனித்தனி முடித்துரைத்தலுமாம். படா - ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம், கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர். "கடமுண்டு வாழாமை காண்டலினிதே" என இனியவை நாற்பதிலும், "வேளாண்மை செய்தற் பொருட்டு" எனத் திருக்குறளிலும், "வேளாணெதிரும் விருந்தின் கண்ணும்" எனத் தொல் காப்பியத்திலும் போந்த தொடர்கள் இங்கு நோக்கற்பாலன கோளாளன் - கொள்ளுதல் வல்ல மாணவன். 13. சீல மறிவா னிளங்கிளை சாலக் குடியோம்பல் வல்லா னரசன் - வடுவின்றி மாண்ட குணத்தான் றவசியென் றிம்மூவர் யாண்டும் பெறற்கரி யார். சீலம் அறிவான் - ஆசிரியன் கற்பித்த நிலையை அறிவானாகிய, இளங்கிளை - மாணவனும், குடி - தளர்ந்த குடிகளை, சால - ஓம்பல்வல்லான் - மிகவுங் காத்தல் வல்லானாய, அரசன் - வேந்தனும், வடுஇன்றி - குற்றமில்லாமல், மாண்ட குணத்தான் - மாட்சிமையுற்ற குணத்தினனாகிய, தவசி - துறவியும், என்று இம்மூவர் - என்று இந்த மூவரும், யாண்டும் - எக்காலத்தும், பெறற்கு அரியார் - பெறுதற்கு அரியவர். எ-று. சீலம் - கற்பித்த நிலையாதலைச் "சீலக் கஞ்சி நற்போதகஞ் செல்வன" என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையாலறிக, இளங்கிளை என்பது, தம்பி, தங்கை, மைந்தன், மைத்துனன் முதலிய இளஞ் சுற்றங்களையும் குறிக்கும். "மாலவற் கிளங்கிளை" எனச் சிலப்பதிகாரத்திலே தங்கை என்னும் பொருளிலும், "எழுமையும் பெறுக வின்ன விளங்கிளைச் சுற்றமென்றாள்" எனச் சிந்தாமணியில் மைத்துனன் என்ற பொருளிலும் இச்சொல் வந்துள்ளமை காண்க. "இளங்கிளையாரூரன்" என நம்பியாரூரர் தேவாரத் திருப்பாட்டிற் கூறிக் கொள்ளுதலின் தோழன், தொண்டன் என்னுஞ் சுற்றங் களையும் இது குறிக்குமென்க. இங்கே தம்பி என்றும், புதல்வன் என்றும் உரைத்தலுமாம். சீலம் அறிவான் இளங்கிளையாவன் என்றிங்ஙனம் தனித்தனி முடித்தலும் அமையும். தளர்ந்த குடியை ஓம்பலாவது "ஆறி லொன்றாய பொருடன்னையும் வறுமை நீங்கிய வழிக் கொள்ளல் வேண்டின் அவ்வாறு கோடலும், இழத்தல் வேண்டின் இழத்தலும்" என்பர் பரிமேலழகர். வடு - காமவெகுளி மயக்கங்கள். 14. இழுக்க லியல்பிற் றிளமை பழித்தவை சொல்லுதல் வற்றாகும் பேதைமை யாண்டுஞ் செறுவொடு நிற்குஞ் சிறுமையிம் மூன்றுங் குறுகா ரறிவுடை யார். (ப-ரை): இளமை - இளமைப் பருவமுடையவர், இழுக்கல் இயல்பிற்று - தவறுபுரிதலாகிய இயற்கையை உடையார், பேதைமை - அறியாமையுடையவர், பழித்தவை - பெரியார் விலக்கிய சொற் களையே, சொல்லுதல் வற்று ஆகும் - சொல்லுதலில் வல்லவ ராவார், சிறுமை - கீழ்மையுடையவர், யாண்டும் - எப்பொழுதும், செறுவொடு நிற்கும் - கறுவுதலுடையராய் நிற்பர், (ஆதலால்) இம்மூன்றும் - இந்த மூவரையும், அறிவுடையார் - அறிவினை யுடையோர், குறுகார் - அணுகார். எ-று. பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. " பணியுமா மென்றும் பெருமை சிறுமை அணியுமாந் தன்னை வியந்து". என்புழிப்போல. இளையர், பேதையர், கீழோர் என்று இவர்களை அறிவுடையோர் நெருங்காரென். 15. பொய்வழங்கி வாழும் பொறியறையுங் கைதிரிந்து தாழ்விடத்து நேர்கருதுந் தட்டையும் - ஊழினால் ஒட்டி வினைநலம் பார்ப்பானு மிம்மூவர் நட்கப் படாஅ தவர். (ப-ரை): பொய்வழங்கி - பொய்ச் சொற்களைக் கூறி, வாழும் - உயிர்வாழ்கின்ற, பொறிஅறையும் - திருவற்றானும், ஊழினால் - விதியினால், தாழ்விடத்து - மேலோர் தாழ்வெய்திய காலத்து, கைதிரிந்து - ஒழுக்கம் வேறுபட்டு, நேர்கருதும் - அவரைத் தனக்கு ஒப்பாக எண்ணும், தட்டையும் - மூங்கில் போல்வோனும், ஒட்டி - பிறரோடு நட்புக் கொண்டு, வினைநலம் பார்ப்பானும் - தன் கருமத்தின் நன்மையையே நோக்குவோனும், இம்மூவர் - (ஆகிய) இந்தமூவரும், நட்கப்படாஅதவர் - நட்புக் கொள்ளப்படாதவர். எ-று. இந்நூலிலே பின் "நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகும்" என்றும், நான்மணிக்கடிகையில் "பொய்த்தலிறு வாயநட்புக்கள்" என்றும் கூறியிருப்பன இங்கு நோக்கற் பாலன. பொறி - அறிவுமாம், பொறியறை - பொறியிலி, கண்ணறை போல. தட்டை - மூங்கில்; உள்ளே புரையுடைத்தாதல் பற்றித் தட்டை என்றார்; வணங்காமை குறித்துமாம். ஒட்டி வினை நலம் பார்ப்பான் என்றது. "உறுவது சீர்தூக்கும் நட்பினை." 16. மண்ணின்மேல் வான்புகழ் நட்டானு மாசில்சீர்ப் பெண்ணினுட் கற்புடையாட் பெற்றானும் - உண்ணுநீர்க் கூவல் குறைவின்றித் தொட்டானு மிம்மூவர் சாவா வுடம்பெய்தி னார். (ப-ரை): மண்ணின் மேல் - புவியின் மீது, வான்புகழ் - சிறந்த புகழை, நட்டானும் - நிலைநிறுத்தினவனும், பெண்ணினுள் - பெண்களுள், மாசுஇல்சீர் - குற்றமில்லாத சிறப்பினையுடைய, கற்பு உடையாள் - கற்புடைய மனைவியை, பெற்றானும் - பெற்றவனும், உண்ணும் நீர் - உண்ணுதற்குரிய நீரையுடை, கூவல் - கிணற்றினை, குறைவு இன்றி - குறைவில்லாமல், தொட்டானும் - தோண்டின வனும், இம்மூவர் - (ஆகிய) இந்த மூவரும், சாவா உடம்பு - அழியாத உடம்பினை, எய்தினார் - பெற்றவராவர். எ-று. " இந்நிலத்து மன்னுதல் வேண்டினிசை நடுக." என்று நான்மணிக்கடிகையும், " பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்." என்று திருக்குறளும் கூறுவன இங்கே கருதற்பாலன. உண்டல் பொதுவினையுமாகலின், உண்ணுநீர் என்றார். "உண்ணுநீர் விக்கினா னென்றேனா" என்பது கலித்தொகை. சாவா உடம்பு - புகழுடம்பு; தேவயாக்கையுமாம். தெளிவு பற்றி எய்தினார் என இறந்த காலத்தாற் கூறினார். 17. மூப்பின்க ணன்மைக் ககன்றானுங் கற்புடையாட் பூப்பின்கட் சாராத் தலைமகனும் - வாய்ப்பகையுட் சொல்வென்றி வேண்டு மிலிங்கியு மிம்மூவர் கல்விப் புணைகை விட்டார். (ப-ரை): மூப்பின்கண் - மூப்பு வந்தவிடத்தும், நன்மைக்கு அகன்றானும் - துறவறத்தை அடைதற்கு அஞ்சி நீங்கினவனும், கற்புடையாள் - கற்புடைய தன் மனைவியை, பூப்பின்கண் - பூப் பெய்திய காலத்தே, சாராத்தலைமகனும் - அடையாத கணவனும், வாய்ப்பகையுள் - சொற்போரின் கண், சொல்வென்றி - சொல் வெற்றியை, வேண்டும் - விரும்பும், இலிங்கியும் - துறவியும், இம்மூவர் - இந்த மூவரும், கல்விப் புiகைவிட்டார் - கல்வி யாகிய தெப்பத்தைக் கைக்கணின்றும் தவறவிட்டு அழுந்துவார். எ-று. மூப்பின் கண்ணும் என உம்மை விரிக்க. நன்மை துறவின் மேற்று: " வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல". (திருக்குறள்) " நரைவருமென் றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்". (நாலடியார்) என்பனவாகலின், இளமைக் கண்ணே துறத்தல் கடவதாகவும் முதுமையிலும் துறத்தற்கஞ்சி யொழிந்தான் என இழித்துக் கூறிய வாறு. அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும் துறந்தில னென்பதோர் சொல்லுண்டான பின் என்னும் கம்பராமாயணச் செய்யுளும் ஈண்டுக் கருதற்பாற்று. பூப்பு- மாதவிடாய். பூத்தபின் மூன்றுநாள் சொற்கேட்கும் வழியுறைதலும், பன்னிருநாள் கூடியுறைதலும் வேண்டும் என்பர். பூப்பின் புறப்பா டீராறு நாளும் நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலையான. என்பது தொல்காப்பியம். இலிங்கி - துறவி; தவக்கோலந் தாங்கியவன் என்றும், தார்க்கிகன் என்றும் உரைத்தலுமாம். துன்பக் கடலினின்றும் கரையேறுதற்குப் புணையாகிய கல்வி இவர்கட்கு அப்பயன் விளைத்திலாமையின் கல்விப்புணை கைவிட்டார் என்றார். 18. ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க் கிருதலையு மின்னாப் பிரிவும் - உருவினை உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியு மிம்மூன்றும் கள்ளரி னஞ்சப் படும். (ப-ரை): ஒருதலையான் - உறுதியாக, வந்துறூஉம் மூப்பும் - வந்து பொருந்தும் முதுமைப் பருவம், புணர்ந்தார்க்கு - நட்டவர்க்கு, இருதலையும் - இருவர்மாட்டும், இன்னாபிரிவும் - துன்பத்தைப் பயக்கும் பிரிவும், உருவினை - உடலை, உள்உருக்கி - உள்ளேயுள்ள எலும்பு முதலியவற்றை யுருக்கி, தின்னும் - வருத்தும், பெரும்பிணியும் - பெரிய நோயும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கள்ளரின் அஞ்சப்படும் - திருடர்க்கு அஞ்சுதல்போல அஞ்சப்படும். எ-று. ஒருதலையான் என்பதற்குக் கணவன் மனைவி யென்னும் இருவருள் ஒருவரிடத்து என்றுருரைப்பாருமுளர். அளபெடை இன்னிசை நிறைத்தற் பொருட்டு. தின்னல் - நலிதல்; "பிணிதன்னைத் தின்னுங்கால்" எனப் பின்னுங் கூறுவர். படும் - தகும் என்னும் பொருட்டு. 19. கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற் பிறன்கடை நின்றொழுகு வானும் - அறந்தெரியா தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர் நாடுங்காற் றூங்கு பவர். (ப-ரை): கொல்யானைக்கு ஓடும் - கொல்கின்ற யானையின் முன் ஓடுகின்ற, குணம்இலியும் - குணமில்லாதவனும், எல்லில் - இரவில், பிறன்கடை நின்று - (பிறன் இல்லாளைக் காதலித்து) அவன் வாயிலின்கட் சென்று நின்று, ஒழுகுவானும் - ஒழுகுபவனும், ஆடும் பாம்பு - படமெடுத்தாடும் பாம்பினை, அறம்தெரியாது - அறத்தை ஆராய்ந்து தெளியாது, ஆட்டும் - ஆட்டுகின்ற, அறிவிலியும் - அறிவில்லாதவனும், இம்மூவர் - இம்மூவரும், நாடுங்கால் - ஆராயுமிடத்து, தூங்குபவர் - இறப்பவராவர். எ-று. கொல்யானைக் கோடுங்குணமிலி என்பதற்குக் கொல்லுந் தொழிற்குரிய யானைக்கு அஞ்சிப் போர்க் களத்தினின்றோடு கின்ற வீரத்தன்மை யில்லாதவன் என்றுரைப்பாருமுளர். அறந் தெரியாது பிறன்கடை நின்றொழுகுவானும் என மாறுதலுமாம். " அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்." என்னுந் திருக்குறளை நோக்குக. மறந்தெரியாது எனப் பிரித்து நன்றி செய்தார்க்கும் தீங்கினைச் செய்கின்ற (பாம்பின்) கொடுமையை உணராமல் என்றுரைத்தலுமாம்; ஆடும்பாம்பு - பெயர் மாத்திரை; அடும் என்பது நீண்டதாகக் கொண்டு கொல்லும் பாம்பு என்றுரைத் தலும் பொருந்தும். தூங்கல் - துஞ்சல்; மடிதல். 20. ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் - கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலு மிம்மூன்றும் எல்லார்க்கு மின்னா தன. (ப-ரை): பிறன் - பிறன்பொருண்மேல், ஆசைப்படுதலும் - விரும்புதலும், பாசம் பசிப்ப - சுற்றத்தார் பசித்திருக்குமாறு, மடியைக் கொளலும் - சோம்பலைக் கோடலும், கதித்து - வெகுண்டு, ஒருவன் - ஒருவனால், கல்லான்என்று - கல்லாதவன் என்று, எள்ளப் படுதலும் - இகழப்படுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், எல்லார்க்கும் - (அறிவுடையோர்) எல்லோருக்கும், இன்னாதன - துன்பம் பயப்பனவாம். எ-று. பிறன் என்றது பிறன்பொருளை யுணர்த்திற்று. ஆசை என்பதற்குப் பொன் என்று பொருள் கொண்டு அறிவில்லாத பிறனிடத்துச் செல்வமுண்டாதலும் என்றுரைத்தலுமாம், பாசம் - அன்பு, அன்பு செய்யும் சுற்றத்தின்மேல் நின்றது. கதித்து - கதங் கொண்டு, பருத்துவளர்ந்து என்றுரைத்தலும் பொருந்தும். 21. வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை - எய்தப் பலநாடி நல்லவை கற்றலிம் மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். (ப-ரை): வருவாயுள் - வரும்பொருளில், கால்வழங்கி வாழ்தல் - காற்பகுதியை ஈந்து வாழுதலும், செரு - போரின்கண், வாய்ப்பச்செய்தவை - வெற்றி பொருந்தச் செய்த வீரச் செயல் களை, நாடா - நினைந்து தம்மை நன்குமதியாத, சிறப்புடைமை - மேன்மைக் குணமுடையராதலும், பலநாடி - பலநூல்களையும் ஆய்ந்து, நல்லவை - அவற்றுள் நல்ல நூல்களை, எய்தக் கற்றல் - பொருந்தக் கற்றலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நலமாட்சி - நன்மையாகிய குணங்களையுடைய, நல்லவர்கோள் - நல்லோரின் கொள்கையாம். எ-று. கால் என்பது அவ்வளவிற்றாய பொருளுக்கு ஆகுபெயர். வருவாயறிந்து வழங்கலினிதே என்பது இனியவை நாற்பது. " ஆற்றின ளவறிந் தீகவது பொருள் போற்றி வழங்கு நெறி." என்னுங் குறளுரையில், பிறரும் வருவாயுட் கால்வழங்கி வாழ்தல் என்றார் எனப் பரிமேலழகர் இதனை எடுத்துக் காட்டினமை காண்க. நல்லவை பலவும் நாடிக் கற்றல் என்றும், பல அவையினுஞ் சென்று நல்லவைகற்றல் என்றும் உரைத்தலுமாம். பின்னும் பல்லவையுள் நல்லவை கற்றலும் என்பர். 22. பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றறா தோடு மவாத்தேருந் - தெற்றெனப் பொய்த்துரை யென்னும் பகையிருளு மிம்மூன்றும் வித்தற வீடும் பிறப்பு. (ப-ரை): பற்று என்னும் - பற்று என்று கூறப்படும், பாசத் தளையும் - அன்பாகிய கட்டும், பலவழியும் - பலபொருள் களிடத்தும், பற்று அறாது - விருப்பம் நீங்காது, ஓடும் - செல்லும், அவாத்தேரும் - அவாவாகிய தேரும், தெற்றென - தெளிவாக, பொய்த்து உரை என்னும் - பொய்த்துச் சொல்லுதல் என்னும், பகைஇருளும் - பகைமையுடைய இருளும், இம்மூன்றும் - இவை மூன்றும், வித்து - பிறவிக்கு மூலமாம், அற - இவை கெடுதலால், பிறப்புவீடும் - பிறவியொழியும். எ-று. சிலப்பதிகாரத்தில் வரும், " பிணிப்பறுத்தோர்தம் பெற்றி யெய்தவும்." என்னுந் தொடர்க்கு உரையெழுதுமிடத்தில், "பிணிப்பு - பற்று; ஆவது - அன்பாகிய ஒருதளை; அதனை அறுத்தோர் அருளுடையோர்" என்று அடியார்க்கு நல்லார் கூறியிருப்பது ஈண்டு அறியற் பாலது. தளை - கட்டு, பந்தம். அவா - எனக்கிது வேண்டுமென்னும் உணர்வு, வித்தற என்பதற்கு அடியுடன் கெட என்றுரைத்தலுமாம். அறுதல் என்பது அற எனத் திரிந்து நின்றது. " பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்." " அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து". என்னும் குறள்கள் இங்கே சிந்திக்கற்பாலன. பொய்த்து என்பதில் து பகுதிப் பொருள் விகுதியுமாம். அறியாமையைச் செய்தலின் பொய்யுரையை இருள் என்றார். " எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு." என்னுங் குறளுரையில், "உலகத்தார் விளக்காவன ஞாயிறு, திங்கள், தீ என்பன. இவற்றிற்குப் போகாதவிருள் போகலின், பொய்யா விளக்கே விளக்கென்றார். அவ்விருளாவது அறியாமை," எனப் பரிமேலழகர் கூறியிருப்பது அறியற்பாலது. 23. தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார் குற்றங் கடிந்த வொழுக்கமுந் - தெற்றெனப் பல்பொரு ணீங்கிய சிந்தையு மிம்மூன்று நல்வினை யார்க்குங் கயிறு. (ப-ரை): தானம் கொடுக்கும் - தானமாகப் பொருளைக் கொடுக்கும், தகைமையும் - பெருந்தன்மையும், மானத்தார் - மானமுடையாரது, குற்றம் கடிந்த ஒழுக்கமும் - குற்றங்களை நீக்கிய நல்லொழுக்கமும், தெற்றென - தெளிய பல்பொருள் நீங்கிய - பல பொருளினின்றும் நீங்கிய, சிந்தையும் - எண்ணமும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நல்வினை - நல்வினையை, ஆர்க்கும் கயிறு - பிணிக்கும் கயிறாம். எ-று. தானங் கொடுத்தலாவது அறநெறியால் வந்த பொருளைத் தக்கார்க்கு உவகையோடளிப்பது. மானம் - பெருமை, மானத்தார் ஒழுக்கம் என இயையும், தெற்றென - தெளிவாக; எச்சத் திரிபாகக் கொண்டு, உண்மை தெளிந்து என்றுரைத்தலுமாம். யாதனின் யாதனி னீங்கியா னோதல் அதனி னதனி னிலன். என்பவாகலின், பல்பொருள் நீங்கிய என்றார். நீங்குதல் - பற்று விடுதல், ஆர்க்குங்கயிறு - நீங்காமற் பிணிக்கும் கயிறு. " திருவினைத் தீராமை யார்க்குங் கயிறு". என்று முப்பால் கூறுதல் காண்க. 24. காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லும் தூண்டிலி னுட்பொதிந்த தேரையும் - மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமு மிம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கு மளறு. (ப-ரை): காண்தகு - காணத்தகுந்த, மெல்தோள் - மெல்லிய தோள்களையுடைய, கணிகை - பரத்தையினது, வாய் இன் சொல்லும் - வாயாற் சொல்லும் இனிமையுடைய சொல்லும், தூண்டிலினுள் - தூண்டிலின்கண்ணே, பொதிந்த - இரும்பை மூடிய, தேரையும் - தவளையும், காழ்த்த பகைவர் - வயிரம் பற்றிய பகையை யுடையாரது. மாண்டசீர் - மாட்சிமைப்பட்ட சிறப்பையுடைய, வணக்கமும் - பணிவும், இம்மூன்றும் - இந்த மூன்றும், ஆழ்ச்சிப் படுக்கும் அளறு- (அறியாதிறங்கினாரை) அழுந்துவிக்கும் சேறு போலாம். எ-று. உளத்தோடு சொல்லாமை தோன்ற 'வாய்இன் சொல்லும்' என்றார். தேரை மீனுக்கு இரையாகத் தூண்டிலிற் கோத்தது, அளறு- நிரயமுமாம். கணிகை வாயின் சொல்லும் பகைவர் வணக்கமும் துன்பம் விளைத்தலை " அன்பின் விழையார் பொருள்விழையுமாய் தொடியார் இன்சொ லிழுக்குத் தரும்." " தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னார் அழுத கண்ணீரு மனைத்து." என்னும் வாயுறை வாழ்த்தாலறிக. மூன்று பொருள் கூறும் நியதி பற்றித் தேரையும் என எண்ணினாரேனும் அதனை உவமமாகவே கொள்க. மேல் இங்ஙனம் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். 25. செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற அல்குல் விலைபகரு மாய்தொடியும் - நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொன்றானு மிம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார். (ப-ரை): செருக்கினால் வாழுஞ் - தருக்கோடு வாழும், சிறியவனும் - கீழ்மகனும், பைத்து அகன்ற - (நாக) படத்தின் தன்மையுடைத்தாய்ப் பரந்த, அல்குல் - அல்குலை, விலைபகரும் - விலைகூறி விற்கும், ஆய்தொடியும் - ஆராய்ந்த வளையலணிந்த கணிகையும், நல்லவர்க்கு வைத்த - துறவிகட்கமைத்த, அறப்புறம் - அறச்சாலையை, கொன்றானும் - கெடுத்தவனும், இம்மூவர் - இந்த மூவருடைய, கைத்து - பொருளை, கற்று அறிந்தார் - நூல்களைக் கற்று அவற்றின் பொருள்களை அறிந்தவர், உண்ணார் - உண்ணமாட்டார். எ-று. " அல்குனலம் வரைவின்றி விற்கும்." என்றார் திருத்தக்கதேவரும். ஆய்தொடி, அன்மொழித் தொகை, நல்லவர் என்றது ஈண்டுத் துறவறத்தினரை, " அடிசில் வைகலாயிரம் அறப்புறமு மாயிரம்" என்னுஞ் சிந்தாமணிச் செய்யுளுரையில் நச்சினார்க்கினியர், அறப்புறம் என்பதற்கு அறத்திற்கு விட்ட இறையிலி நிலங்கள் என்று பொருள் கூறி, ஓதுவிக்குஞ் சாலையென்பதும் ஒன்று என்றுரைத்தனர். ஆகலின் ஈண்டு நல்லவர் என்பதற்கு மாணாக்கர் என்றும், அறப்புறம் என்பதற்குக் கல்விச்சாலை என்றும் உரைத் தலுமாம். கொல்லுதல் - கெடுத்தல். " பொச்சாப்புக் கொல்லும் புகழை." என்புழிப்போல. 26. ஒல்வ தறியும் விருந்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதிற் சீல மினிதுடைய வாசானு மிம்மூவர் ஞால மெனப்படு வார். (ப-ரை): ஒல்வது - தான் சென்ற வீட்டின்கட் பொருந்திய, அறியும் - அறிந்து ஒழுகும், விருந்தினனும் - விருந்தினனும் , ஆர்உயிரை - அரிய உயிரை, கொல்வதிடை - கொல்லுதற்கண், நீக்கி - அதனை விலக்கி, வாழ்வானும் - வாழ்பவனும், வல்லிதின் - மனவுறுதியால், சீலம் இனிது உடைய - ஒழுக்கம் நன்கு உடைய, ஆசானும் - ஆசிரியனும், இம்மூவரும் - இந்த மூவரும், ஞாலம் எனப்படுவார் - உயர்ந்தோர் என்று எல்லாரானும் சிறப்பித்துச் சொல்லப்படுவார். எ-று. ஒல்வது அறிதலாவது இல்வாழ்வார் அளிக்கும் உணவு நொய்தாயினும் அவர்க்கியல்வது அஃதென விருப்புடன் ஏற்றுக் கோடல். கொல்வது இடை நீக்கி என்பதற்குக் கொல்லுந்தொழில் தன்கண் நிகழாமற் போக்கி என்றுரைத்தலுமாம். சீலம் - வாய்மை, தூய்மை, அழுக்காறின்மை, அவாவின்மை முதலியன. ஞாலம் என்பது உயர்ந்தோர் என்னும் பொருட்டு. " உலகம் எனப்படுவார் " எனப் பின்னுங் கூறுவர். 27. உண்பொழுது நீராடி யுண்ணுத லென்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதறம் - தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை யிம்மூன்றும் தூஉய மென்பார் தொழில். (ப-ரை): உண்பொழுது- உண்ணுதற்குரிய பொழுதில், நீராடி உண்ணுதல் - நீரின்மூழ்கிப் பின் உண்ணுதலும், என் பெறினும் - எத்துணைப் பொருள் பெறுவதாய் இருப்பினும், பால்பற்றி - ஒரு பக்கம் சார்ந்து, சொல்லாவிடுதல் - நடுநிலை பிறழக் கூறாமலொழி தலும், தம் தோல்வற்றி - தம் உடல் மெலிந்து, சாயினும் - அழிவ தாயினும், சான்றாண்மை - சான்றாண்மையானது, குன்றாமை - குன்றாதிருத்தலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், தூஉயம் - யாம் தூய்மையுடையேம், என்பார் - என்பவருடைய, தொழில் - தொழில் களாம். எ-று. " நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய் துண்டாரே யுண்டா ரெனப்படுவார்." என ஆசாரக்கோவை கூறுவது இங்கு நோக்கற்பாலது. பால்பற்றி என்பதற்குப் பகை நொதுமல் நண்பு என்னும் முறைமை பற்றி என்றுரைத்தலுமாம். " பகுதியாற், பாற்பட்டொழுகப் பெறின்" என்பதற்குப் பரிமேலழகர் கூறிய உரையை நோக்குக. சொல்லா- ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். தோல் - உடம்பு; சான்று ஆண்மை - பலகுணங்களானும் நிறைந்து அவற்றை ஆளுதற்றன்மை. பா - ம். உண்டலும், விடுதலும். 28. வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் - கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானுமிம் மூவர் உமிக்குற்றிக் கைவருந்து வார். (ப-ரை): வெல்வது வேண்டி - வெற்றியுறுதலை விரும்பி, வெகுண்டு உரைக்கும் - சினந்து கூறும், நோன்பு இலியும் - பொறுமை இல்லாதவனும், இல்லது - தன்கண்இல்லாததொன்றை, காமுற்று - (நுகர) விரும்பி, இருப்பானும் - வருந்தியிருப்பவனும், கல்வி - பிறர்கல்விக்கண், செவிக்குற்றம் - செவிப்புலனாகிய சொற் குற்றத்தை, பார்த்திருப்பானும் - நோக்கியிருப்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், உமிகுற்றி - உமியைக் குற்றி, கைவருந்துவார் - அதனால் கைவருந்துபவரை ஒப்பர். எ-று. வெல்வது - சொல்லில் வெற்றி கொள்ளுதல், நோன்பு பொறுமையாதலை "உற்ற நோய் நோன்றல்" என்பதனால் அறிக. சொற்குற்றத்தையே ஆராய்ந்து பிறர் சொல்லின் பயன்கொள்ளா திருப்பவன்" என்பார். 'செவிக்குற்றம் பார்த்திருப்பானும்' என்றார். கைவருந்துவார், சினைவினை முதலோடு முடிந்தது. " வெல்வது வேண்டின் வெகுளி விடல்" என நான்மணிக்கடிகையும், " வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே" என இனியவை நாற்பதும், " உமிக்குற்றிக் கைவருந்துமாறு" எனப் பழமொழியும் கூறுந் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கற் பாலன. 29. பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை யிம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. (ப-ரை): பெண் - மகளிர், விழைந்து - விரும்பி, பின்செலினும்- தன்பின்றொடரினும், தன் செலவில் - தனக்குரிய ஒழுக்கத்தி னின்றும், குன்றாமை - குறையாமையும், விழைந்து - தன்னை விரும்பி, கைக்கண்உறினும் - தன்கைக்கண் உற்றாலும், பொருட்கு - பொருளின்கண், காதல் இன்மை - விருப்பமின்மையும், மண் விழைந்து - (மனை படப்பை முதலிய) மண்ணை விரும்பி, வாழ்நாள் - வாழும் நாளினை, மதியாமை - உயர்வாக மதித்தல் செய்யாமையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நுண்நூலவர் - நுண்ணிய பொருள்களையுடைய நூற்களையுணர்ந்தவர், விழைந்த - விரும்பிய, நோக்கு - நோக்கமாம். எ-று. கண்விழைந்துதன் செலவிற் குன்றாமை என இயைதலும் பொருந்தும். கண்அசையுமாம். பொருட்கு, வேற்றுமை மயக்கம். நுண்நூல் விழைந்தவர் என விகுதி பிரித்துக் கூட்டலுமாம். நூலவர் தன்செலவு எனப் பன்மையொருமை மயங்கின. பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை யென்னும் மூவாசைகளையும் ஒழித்தல் கூறியவாறு. 30. தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும் மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும் என்று மழுக்கா றிகந்தானு மிம்மூவர் நின்ற புகழுடை யார். (ப-ரை): தன்நச்சி - தன்னை விரும்பி, சென்றாரை - அடைந்த வரை, எள்ளா ஒருவனும் - இகழாத ஒருவனும், மன்னிய செல்வத்து - மிக்க செல்வமுடைய காலத்து, பொச்சாப்பு நீத்தானும் - மறத்தலை நீக்கியவனும், என்றும் - எக்காலத்தும், அழுக்காறு - பொறாமையை, இகந்தானும் - நீங்கினவனும், இம்மூவர் - இந்த மூவரும், நின்ற புகழ் உடையார் - நிலைபெற்ற புகழுடையார். எறு. மன்னிய - மிக்க என்னும் பொருட்டு. செல்வக்களிப்பாலே செய்வதும் தவிர்வதும் மறந்திருத்த லில்லாதவன் என்க. செல்வம் வந்துற்ற காலைப் பழைய சுற்றமும் துணையும் முதலியவற்றை மறத்தல் இல்லாதவன் என்றுமாம். நின்றபுகழ் - நிற்றற்குக் காரண மாகிய புகழுமாம். 31. பல்லவையு ணல்லவை கற்றலும் பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் - வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலு மிம்மூன்றும் கேள்வியு ளெல்லாந் தலை. (ப-ரை): பல்லவையுள் - பல நூல்களுள்ளும், நல்லவை கற்றலும் - நல்ல நூல்களைக் கற்றலும், பாத்து - பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து, உண்டு - தானும் உண்டு, ஆங்கு - அவ்வாற்றால், இல் அறம் - மனையறத்தை, முட்டாது - குறைவுபடாமல், இயற்றலும் - நடத்தலும், வல்லிதின் - விரைவின், தாளின் - முயற்சியால், ஒரு பொருள் - ஒருபொருளை, ஆக்கலும் - செய்து கோடலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கேட்கப்படும் அறங்கள் எல்லாவற்றுள்ளும், தலை - சிறந்த அறமாம். எ-று. பல்லவையுள் என்பதற்குப் பல அவையின் கண்ணும் என்றுரைத்தலுமாம். முன் பலநாடி நல்லவை கற்றல் என்பதற் குரைத்தமையுங் காண்க. பாத்து, பகுத்து என்பதன் மரூஉ. ஏனை மூவகை நிலையினர்க்கும், வறியர் முதலாயினார்க்கும் பகுத்தளித்தல் இல்வாழ்வார் கடனாகுமென்க. வல்லிதின் என்பதற்குத் திட்பமுடன் என்றுரைத்தலுமாம். ஒருபொருள், ஒப்பற்ற பொருள்; மெய்யுணர்வு கேள்வியுள் எல்லாம் இதில் உள் என்பது மாறிநின்றது, கேள்வி யெல்லா வற்றுள்ளும் என்க. 32. நுண்மொழி நோக்கிப் பொருள்கோட னூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லுத லிம்மூன்றுங் கற்றறிந்தார் பூண்ட கடன். (ப-ரை): மொழிநோக்கி - சொற்களை ஆராய்ந்து, நுண் பொருள் - (அவற்றின் கண்ணுள்ள) நுட்பமாகிய பயனை, கோடல் - கொள்ளுதலும், நூற்கு ஏலா - அறநூலுடன் பொருந்தாத, வெண்மொழி - பயனில் சொற்களை, வேண்டினும் - பிறர்கேட்க விரும்பினும், சொல்லாமை - கூறாமையும், நன்மொழியை - (உயிர்க்கு உறுதி பயக்கும்) நல்ல சொற்களை, சிற்றினம் அல்லார்கண் - சிறிய வினத்தார் அல்லாரிடத்து, சொல்லுதல் - சொல்லுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கற்று அறிந்தார் - நூல்களைக்கற்று அவற்றின் பொருள்களை அறிந்தவர், பூண்ட - மேற்கொண்ட, கடன் - கடனாம். எ-று. நுண்ணிய பொருளுள்ள மொழிகளை ஆராய்ந்து என்றுமாம். வெண்மொழி - வெளிற்றுரை, பயனில்சொல் - சிறிய இனமாவது நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லையென்போரும் விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. " பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு. பிறர்சொற் பயன் கோடல். " புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார்." என்னும் வள்ளுவர் வாய்மொழிகள் இங்கே சிந்திக்கற்பாலன. பா - ம்: பொருள்கொளலும், சொல்லலும். 33. கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ் போலு மமைச்சனும் - வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல். (ப-ரை): கோல் அஞ்சி - செங்கோலை அஞ்சி, வாழும் - தனக்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்ற, குடியும் - குடிகளும், குடிதழீஇ - அக்குடிகளைத் தழுவுதலுடனே, ஆலம்வீழ் போலும் - (தன் பாரத்தைச் சுமத்தலால்) ஆலமரத்தின் விழுதினை ஒக்கும், அமைச்சனும் - மந்திரியும், வேலின்- வேலிடத்துள்ள, கடைமணி போல் - பூணினைப்போல, காப்பு - காத்தலையுடைய, திண்ணியான்- உறுதியுடைய படைத்தலைவனும், இம்மூன்றும் - இந்த மூன்றும், படை வேந்தன் - தானையையுடைய அரசன், பற்றுவிடல் - அன்பைப் பொருந்த விடும் இடங்கள். எ-று. வீழ் - விழுது " மதலையாய் மற்றதன் வீழூன்றியாங்கு." என்பது நாலடி. வேலின் கடைமணி - வேலினது காம்பின் அடியிலுள்ள பூண், இஃது இப்பொருட்டாதலை, " இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்காழ் மூழ்கிக் கடைமணி காண்வரத் தோன்றி - நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லாம்." என்னும் களவழிச் செய்யுளானறிக. திண்ணியானும் என உம்மையை மாறுக. விடல் - விடுமிடம் என்னும் பொருட்டு; இம்மூன்றிடத்தும் வேந்தன் விடுக என வியங்கோளாக்கி யுரைத்தலுமாம். 34. மூன்று கடன்கழித்த பார்ப்பானு மோர்ந்து முறைநிலை கோடா வரசுஞ் - சிறைநின் றலவலை யில்லாக் குடியுமிம் மூவர் உலக மெனப்படு வார். (ப-ரை): மூன்று கடன் - மூவர்க்குச் செய்யும் மூன்று கடன் களையும், கழித்த - செய்து கழித்த, பார்ப்பானும் - மறையோனும், முறைஓர்ந்து - அறநூல்களை உணர்ந்து, நிலைகோடா - அவை கூறியவற்றில் நிற்றலினின்றும் கோணுதல் செய்யாத, அரசும் - அரசனும், சிறைநின்று - அரசனது ஆணைவழி நின்று, அலவலை இல்லா - வீணாரவாரம் செய்தலில்லாத, குடியும் - குடிமக்களும், இம்மூவர் - இந்த மூவரும், உலகம் எனப்படுவார்- உயர்ந்தோர் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவர். எ-று. மூன்றுகடன் - தேவர்கடன், முனிவர்கடன், தென்புலத்தார் கடன் என்பன. ஓர்ந்து என்பதற்குக் குற்றத்தை நாடி என்றும், முறை என்பதற்கு நீதி என்றும் பொருள் கூறுதலுமாம். அலவலை - ஆரவாரம்; ஆராயாது செய்தலுமாம். இச்சொல் கீழ்மகன் என்னும் பொருளிலும் வரும்; மேலும் "அல்லவை செய்யும் அலவலையும்" என்பர். 35. முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதையும் நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை யின்றி மயலறுப்பா னிம்மூவர் மெய்ந்நீர்மை மேனிற் பவர். (ப-ரை): முந்நீர்த்திரையின் - கடலின்கண் (ஓயாது எழுந்து இயங்கும்) அலையைப் போல, எழுந்து இயங்கா - மனம் எழுந்து அலைதல் இல்லாத, மேதையும் - அறிவுடையவனும், நுண்நூல் பெருங்கேள்வி - நுண்ணிய நூல்களின் மிக்க கேள்வியால், நூல்கரை கண்டானும் - கல்விக் கடலின் எல்லை கண்டவனும், மைநீர்மை இன்றி - குற்றத்தன்மை இன்றி, மயல் அறுப்பான் - மருட்சியை அறுப்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், மெய் நீர்மை - மெய்ம்மைத் தன்மையுடைய, மேல் - வீட்டுலகத்தில், நிற்பவர் - அழிவின்றி நிலைத்து வாழ்பவர். எ-று. முந்நீர் - கீழதாகிய ஊற்று நீரும் மேலதாகிய மழைநீரும் நடுவணதாகிய ஆற்று நீரும் உடையது; படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையுடையது என்றும் உரைப்ப. " திரையற்ற நீர்போற் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே." என்னும் திருமந்திரம் இங்கே சிந்திக்கற்பாலது. பின்னுள்ள நூல் என்பது கல்வி என்னும் பொருட்டு. மை - களங்கம், மயல் - அவிச்சை, மெய்ந்நீர்மைமேல் என்பதற்கு மெய்யாகிய வீட்டு நெறியில் என்றுரைத்தலுமாம். 36. " ஊனுண் டுயிர்கட் கருளுடைய மென்பானும் தானுடன்பா டின்றி வினையாக்கு மென்பானும் காமுறு வேள்வியிற் கொல்வானு மிம்மூவர் தாமறிவர் தாங்கண்ட வாறு." (ப-ரை): ஊன்உண்டு - புலாலுண்டு வைத்து, உயிர்கட்கு - உயிர்களிடத்து, அருள் உடையேம் என்பானும் - அருள் உடையேம் என்று கூறுபவனும், தான் - தான், உடன்பாடு இன்றி - முயறற்கு உடன்படுதல் இல்லாமல், வினை - ஊழானது, ஆக்கும் என்பானும் - செய்யும் என்று கருதி மடிந்திருப்பானும், காமுறு - பயனை விரும்பிச் செய்யும், வேள்வியில் - யாகத்தின்கண், கொல்வானும் - ஓருயிரைக் கொல்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், தாம் கண்டவாறு - (தம்புல்லறிவால்) தாம் அறிந்த படியே, தாம் அறிவர் - தாம் அறிந்தவராவர். எ-று. ஊனுண்பான் அருளுடையனாகான் என்பதும், வேள்வியிற் கொல்வது நன்றன் றென்பதும், " தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙன மாளு மருள். " அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று." என்னும் திருக்குறள்களால் முறையே அறிவுறுத்தப்படுதல் காண்க. வேள்வியால் வரும் பயன் அநித்தமும், கொல்லாமை யானெய்தும் பயன் நித்தமும் ஆகலின் வேள்வியிற் கோறலும் இகழன் மாலைத்தென்க. இம்மூவரும் புல்லறிவாளரென்பார் தாமறிவர் தாங்கண்டவாறு என்றார். " காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு." என்னும் குறள் நோக்கற்பாலது. 37. குறளையு ணட்பளவு தோன்று முறலினிய சால்பினிற் றோன்றுந்1 தவக்குடிமை -பால்போலும் தூய்மையுட் டோன்றும் பிரமாண மிம்மூன்றும் வாய்மை யுடையார் வழக்கு. (ப-ரை): குறளையுள் - புறங்கூறுதலின்கண், நட்பு அளவு - கொண்ட நட்பினது அளவு, தோன்றும் - விளங்கும், உறல்இனிய - பொருந்துதல் இனிமையுடைய, சால்பினில் - நற்குணங்களின் நிறைவினால், தவக்குடிமை - உயர்குடிப் பிறப்பின் தன்மை, தோன்றும் - விளங்கும், பால்போலும் - பாலினது வெண்மையை ஒக்கும், தூய்மையுள் - தூயதன்மையின்கண், பிரமாணம் - நூல்வழி ஒழுகல், தோன்றும் - விளங்கும், இம்மூன்றும் - இந்தமூன்றும், வாய்மை உடையார் - உண்மையுடையவர் மேற்கொண்ட, வழக்கு - முறைமை. எ-று. நண்பர் இருவருள் ஒருவன் மற்றொருவனைப் புறம் பழிப்பனேல் பொய்த்தலிறுவாய நட்புக்கள் என்றபடி அந்நட்புச் சுருங்கி யொழிதலும், அங்ஙனமில்லாவிடத்து அது பெருகி விளங்குதலும் உண்மையின் 'குறளையுள் நட்பளவு தோன்றும்' என்றார்; இதற்கு, நட்பினரிருவரைப் பிரிக்கக் கருதிக் குறளை கூறுவானொருவன் இடைப்புகுந்து ஒருவர் பால் இழுக்கமுளதாக மற்றொருவருழைச் சொல்லியவழி 'எம் நண்பர் அது செய்யார்' எனக் கொண்டு, அவன் கூற்றை ஏற்றுக் கொள்ளாத உரிமைக் கேற்ப நட்பு விளங்கித் தோன்றும் என்றும் குறளை என்பதற்கு வறுமை எனப் பொருள் கொண்டு, செல்வக் காலத்து நட்பினராய்ப் போந்தார் வறுமையுற்றுழிச் செயல் வேறுபடாமையும், வேறு படுதலுங் கொண்டு நட்பின் அளவு அறியப்படும் என்றும் உரைத்தலுமாம். கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார் வாய்மைக் குடி என்பதுபோல தவக்குடிமை என்றார். பிரமாண வழியொழு குதலைப் பிரமாணம் என்றார். " கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்." என்னும் வள்ளுவர்வாய்மொழிகள் சிந்திக்கற்பாலன. " பால்போ லொழுக்கத் தவரே பரிவில்லா மேலுலக மெய்து பவர்." என அறநெறிச்சாரம் கூறுதல் காண்க. 38. தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய பல்பொருள் வெஃகுஞ் சிறுமையு மிம்மூன்றும் செல்வ முடைக்கும் படை. (ப-ரை): தன்னை வியந்து - தன்னைத்தானே நன்கு மதித்து, தருக்கலும் - செருக்குதலும், கொன்னே - பயனின்றி, வெகுளி - கோபத்தை, தாழ்வுஇன்றி - தணிதல் இல்லையாக, பெருக்கலும் - பெருகச் செய்தலும், முன்னிய - நினைத்த, பல்பொருள் - பல பொருள்களையும், வெஃகும் சிறுமையும் - விரும்பும் சிறுமைக் குணமும், இம்மூன்றும் - இந்த மூன்றும், செல்வம் உடைக்கும் - செல்வத்தை அழித்தற்கு வல்ல, படை - படைக்கலங்களாம். எ-று. தாழ்வு இன்றி என்பதற்கு அடக்கமில்லாமல் என்றுரைத்தலு மாம். தாழ்வின்றி வியந்து தருக்கல் என்று கூட்டுதலும் பொருந்தும். அகப்பகை ஆறனுள் மதம் குரோதம் காமம் என்பன இங்கு விலக்கப் பட்டன. இச்செய்யுளின் பொருள். " செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து." என்னும் குறளில் அடங்கியிருத்தல் காண்க. மேலும் நல்வினை நீக்கும் படை என்பர்; தெய்வப் புலவரும் 'செல்வத்தைத் தேய்க்கும் படை' எனச் செல்வத்தை யழிப்பதனைப் படையாக்கிக் கூறினர். 39. புலைமயக்கம் வேண்டிப் பொருட்பெண்டிர்த் தோய்தல் கலமயக்கங் கள்ளுண்டு வாழ்தல் - சொலைமுனிந்து பொய்ம்மயக்கஞ் சூதின்கட் டங்க லிவைமூன்றும் நன்மை யிலாளர் தொழில். (ப-ரை): பொருட்பெண்டிர் - விலைமாதரை, வேண்டி - விரும்பி, தோய்தல் - முயங்குதல், புலைமயக்கம் - புலைத்தன்மை (புன்மை) யுடன் கலத்தலாகும், கள் உண்டுவாழ்தல் - கள்ளினை உண்டு செல்லுதல், கலம் மயக்கம் - (எச்சிற்) கலத்துடன் கலத் தலாகும், சொலை முனிந்து - (ஆன்றோர்)சொல்லை வெறுத்து, சூதின்கண் தங்கல் - சூதாட்டத்தில் அடிப்படுதல், பொய் மயக்கம் - பொய்யுடன் கலத்தலாகும், இவை மூன்றும் - இந்த மூன்றும், நன்மை இலாளர் தொழில் - குடிப்பிறப்பு முதலிய நன்மை இல்லாதவரின் தொழில்களாம். எ-று. புலைமயக்கமாவது தோய்தல் என்றிங்ஙனம் இயைத் துரைத் தலுமாம். வாழ்தல் - வாழ்நாள் கழித்தல்; கெடுதல் என்ற குறிப்புமாம். சொலை முனிந்து என்பதற்கு மெய்ச்சொல்லை வெறுத்து என்றுரைத் தலுமாம். தங்கல் - அடிப்படல்; இடையறாது நிற்றல். 40. வெகுளி நுணுக்கும் விறலு மகளிர்கட் கொத்த வொழுக்க முடைமையும் - பாத்துண்ணும் நல்லறி வாண்மை தலைப்படலு மிம்மூன்றும் தொல்லறி வாளர் தொழில். (ப-ரை): வெகுளி - சினத்தை, நுணுக்கும் - கெடுக்கும், விறலும்- வெற்றியும், மகளிர்கட்கு - பெண்டிர்கட்கு, ஒத்த - பொருந்திய, ஒழுக்கம் உடைமையும் - ஒழுக்கத்தையுடைய தன்மையும், பாத்து உண்ணும் - பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்ணும், நல் அறிவு ஆண்மை - நல்ல அறிவினைஆளுந் தன்மையை, தலைப் படலும் - பொருந்துதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், தொல் அறிவாளர் - முதிர்ந்த அறிவுடையாரது, தொழில் - தொழில்களாம். எ று. உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினமாகிய உட்பகையைக் கெடுத்தால் பெரியதோர் வெற்றியாகுமென்பார். வெகுளி நுணுக்கும் விறலும் என்றார். மகளிர்க்கு ஒத்த வொழுக்கமாவது மென்மை யுடைமை; இதனை " மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து." எனக் கோப்பெருஞ்சோழனைப் பொத்தியார் பாடிய புறப் பாட்டடியானறிக. தொல் அறிவாளர் என்பதற்குப் பழைய நூலறிவினை ஆளுபவர் என்றுரைத்தலுமாம். 41. அலந்தார்க் கொன்றீந்த புகழுந் துளங்கினும் தன்குடிமை குன்றாத் தகைமையும் - அன்போடி நாணாளு நட்டார்ப் பெருக்கலு மிம்மூன்றும் கேள்வியு ளெல்லாந் தலை. (ப-ரை): அலந்தார்க்கு - (வறுமையால்) மெலிந்தவர்க்கு, ஒன்று - ஒருபொருளை, ஈந்தபுகழும் - அளித்தமையால் உளதாகிய புகழும், துளங்கினும் - தளர்ந்தவிடத்தும், தன்குடிமை - தனது குடிப் பிறப்பிற்குரிய பண்பு, குன்றா - குன்றலில்லாத, தகைமையும்- பெருமையும், அன்புஓடி - அன்புமிக்கு, நாள்நாளும் - நாள் தோறும், நட்டார் - நட்பினரை, பெருக்கலும் - பெருகச் செய்தலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் எல்லாம் - கேட்கப்படும் நன்மை எல்லாவற்றுள்ளும், தலை - சிறப்புடையன. எ-று. வறுமையான் மெலிந்தார்க்கு ஈவதே ஈகையாமென்ப தனையும், அதனாற் புகழுண்டாமென்பதனையும், குடிப்பிறந்தார் பொருள் சுருங்கிய வழியும் பண்பு குன்றாரென்பதனையும், அன்பு மிகுதலால் நண்பர் பெருகுவரென்பதனையும் " வறியார்க் கொன்றீவதே யீகை" " ஈத லிசைபட வாழ்தல்" " வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று." " அன்பீனு மார்வ முடைமை யதுவீனும் நண்பென்னு நாடாச் சிறப்பு." என்னும் திருக்குறட்பாக்களான் முறையே அறிக. ஈந்த என்னும் பெயரெச்சமும், ஓடி என்னும் வினையெச்சமும் காரணப் பொருளன. முன்னும் 'கேள்வியு ளெல்லாந் தலை' என்றமை காண்க. 42. கழகத்தால் வந்த பொருள்கா முறாமை பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் - ஒழுகல் உழவின்கட் காமுற்று வாழ்தலிம் மூன்றும் அழகென்ப வேளாண் குடிக்கு. (ப-ரை): கழகத்தால் - சூதாட்டத்தால், வந்தபொருள் - வரும் பொருளை, காமுறாமை - விரும்பாமையும், பழகினும் - (பலநாள்) பழகினராயினும், பார்ப்பாரை - (மறையுணர்ந்த) அந்தணரை, தீப்போல் ஒழுகல் - தீயைப் போற்கருதி நடத்தலும், உழவின் கண் - உழுதொழிலின்கண், காமுற்று வாழ்தல் - விருப்பம் வைத்து வாழுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், வேளாண்குடிக்கு - வேளாண்மை செய்யும் குடியிலுள்ளார்க்கு, அழகு என்ப - அழகைத் தருவன வென்று சொல்லுவர் (பெரியோர்). எ-று. கழகம் - சூதாடுமிடம், " பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்" எனத் திருக்குறளும், " சூதர் கழகம் அரவ மறாக்களம் பேதைக ளல்லார் புகாஅர் புகுபவேல் ஏதம் பலவுந் தரும்" என ஆசாரக் கோவையும் கூறுதல் காண்க. ஈண்டுக் கழகம் என்றது சூதாட்டத்திற்கு ஆகுபெயர். "வென்றதூஉம் தூண்டிற்பொன்மீன் விழுங்கியற்று" ஆகலின் வந்த பொருள்காமுறாமை என்றார். குடி என்பதும் அதிற் பிறந்தார்க்கு ஆகுபெயர். உழவின்கண் என்பதனை வேற்றுமை மயக்கமாகக் கொண்டு, உழவினை என்றுரைத்தலுமாம். 43. வாயி னடங்குத றுப்புரவா மாசற்ற செய்கை யடங்குதறிப்பியமாம் - பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும் வஞ்சத்திற் றீர்ந்த பொருள். (ப-ரை): வாயின் அடங்குதல் - சொல்லடங்குதல், துப்புரவுஆம் - தூய்மையாகும், செய்கை அடங்குதல் (மெய்யின்) செய்கை அடங்குதல், திப்பியம் ஆம் - தெய்வத் தன்மையாகும், நெஞ்சம் அடங்குதல் - மனம் அடங்குதல், பொய்இன்றி - மெய்ம்மையாக, வீடு ஆகும் - முத்தியாகும், இம்மூன்றும் - இந்த மூன்றும், வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - பொய்யின் நீங்கிய பொருள்களாம். எ-று. வாயின் -இன்சாரியை; வாயின்கண் அடங்குதல் என்றுமாம். வாயடக்கம் முதலிய காரணங்கள் துப்புரவு முதலிய காரியங்களாக உபசரிக்கப்பட்டன; அடங்குதலால் என உருபு விரித்து, ஆம் என்பதற்கு உண்டாகும் என்றுரைத்தலுமாம். துப்புரவு என்பதற்கு இம்மைக்கண் நுகர்பொருள் எனவும், திப்பியம் என்பதற்கு மறுமைக்கண் தெய்வப்பிறப்பு எனவும் பொருள் கூறி, மும்மைப் பயனும் உரைத்தவாறாக்கலுமாம். மெய்யாக மனம் அடங்குதல் என்றுரைத்தலும் பொருந்தும். மூன்றும் - மூவகை யடக்கமும். " பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காது - மெய்யிற் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் நலமன்றே நல்லா றெனல்." என்னும் நீதிநெறி விளக்கச் செய்யுள் இங்கே அறியற்பாலது. 44. விருந்தின்றி யுண்ட பகலுந் திருந்திழையார் புல்லப் புடைபெயராக் கங்குலும் - இல்லார்க்கொன் றீயா தொழிந்தகன்ற காலையு மிம்மூன்றும் நோயே யுரனுடை யார்க்கு. (ப-ரை): விருந்து இன்றி - விருந்தினரைப் பெறாமல், உண்ட- தமியராய் உண்ட, பகலும் - பகற்பொழுதும், திருந்து இழையார்- அழகிய அணிகளையுடைய மகளிர், புல்ல - தழுவ, புடைபெயரா- நீங்காத, கங்குலும் - இராப்பொழுதும், இல்லார்க்கு - நல்கூர்ந் தார்க்கு, ஒன்று - ஒருபொருள், ஈயாது - கொடாமல், ஒழிந்து அகன்ற - வறிதேநீங்கிய, காலையும் - காலைப்பொழுதும், இம்மூன்றும் - இந்த மூன்று காலங்களும், உரன்உடையார்க்கு - திண்ணிய அறிவுடையார்க்கு, நோய் - துன்பத்தைத் தருவனவாம். எ-று. புல்ல என்னும் வினையெச்சம் பெயரா என்பதன் முதனிலை கொண்டது. கற்புடை மகளிரை நீங்காது மருவியொழுக வேண்டு மென்றபடி, ஒன்று - அவர் வேண்டிய தொருபொருள், காலையில் ஈதல் மரபு. பெயரெச்சங்கள் காலப் பெயர் கொண்டன. உரன் அறிவின் மேற்றாதலை. " உரனென்னுந் தோட்டியான்." என்பதற்குப் பரிமேழகர் உரைத்த உரையாலறிக. 45. ஆற்றானை யாற்றென் றலைப்பானு மன்பின்றி ஏற்றார்க் கியைவ கரப்பானுங் - கூற்றம் வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர் நிரயத்துச் சென்றுவீழ் வார். (ப-ரை): ஆற்றானை - செய்யும் வலிமையில்லாதவனை, ஆற்று என்று - செய்யென்றுகூறி, அலைப்பானும் - வருத்துபவனும், ஏற்றார்க்கு - இரந்தவர்க்கு, அன்பு இன்றி - இரக்கம் இல்லாமல், இயைவ - ஈதற்கிசையும் பொருளை, கரப்பானும் - ஈயாமலொளிப் பவனும், கூற்றம் - கூற்றுவன், வரவுஉண்மை - என்றும் வருதலுண்மையை, சிந்தியாதானும் - மறப்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், நிரயத்து - நரகத்தின்கண், சென்று வீழ்வார் - சென்று விழுந்து அழுந்துவார். எ-று. ஆற்றான் - ஆற்றலில்லாதவன், இதனை, " ஆற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல்" என்னும் திருக்குறளானறிக. ஒரு தொழில் செய்ய வலிமையில்லாத ஏவலாளனை அதனைச் செய்யுமாறு தூண்டி வருத்தவொண்ணா தென்றபடி. அன்பின்றி அலைப்பானும் என இயைத்தலுமாம். கூற்றம் வரவுண்மை சிந்தியாதான் நல்லன செய்தற் கொருப் படாமையோடு தீயன செய்தற்கும்அஞ்சா னென்க. " இறப்பெனு மெய்ம்மையை யிம்மை யாவர்க்கும் மறப்பெனு மதனின் மேற் கட்டுமற்றுண்டோ." என்னும் கம்பராமாணயச் செய்யுள் இங்குநோக்கற்பாலது. 46. காறூய்மை யில்லாக் கலிமாவுங் காழ்கடிந்து மேறூய்மை யில்லாத வெல்களிறும் - சீறிக் கறுவி வெகுண்டுரைப்பான் பள்ளியிம் மூன்றும் குறுகா ரறிவுடை யார். (ப-ரை): கால் - காலினது நடை, தூய்மையில்லா - குற்ற முடைய, கலிமாவும் - மனஞ்செருக்கிய குதிரையும், காழ்கடிந்து - குத்துக் கோற்காரரைச் சினந்து, மேல் - மேலுள்ளோராய், தூய்மை இல்லாத - அடங்குதலைப் பெறாத, வெல்களிறும் - வெல்லும் யானையும், கறுவி - உள்வைரமுடையனாய், சீறி - சீற்றங் கொண்டு, வெகுண்டு உரைப்பான் - சினந்து பாடங் கூறுவானது, பள்ளியும் - கல்விபயிலிடமும், இம்மூன்றும் - இந்த மூன்றினையும், அறிவுடையார் - அறிவுடையவர்கள், குறுகார் - அணுகார். எ-று. கால், நடைக்கு ஆயிற்று. காழ் - குத்துக்கோல்; குத்துக் கோற்காரருக்கு ஆயிற்று. மேல் என்பதும் ஆகுபெயர். " காழோர் கையற மேலோரின்றி." என்னும் மணிமேகலையடியுங் காண்க. காழ் என்பதற்குக் கட்டுத்தறி என்றும், வயிரிகள் என்றும் உரைப்பாருமுளர். பா - ம். பள்ளியும் மூன்றும். 47. சில்சொற் பெருந்தோண் மகளிரும் பல்வகையும் தாளினாற் றந்த விழுநிதியும் -நாடோறும் நாத்தளிர்ப்ப வாக்கிய வுண்டியு மிம்மூன்றுங் காப்பிகழ லாகாப் பொருள். (ப-ரை): சில்சொல் - சிலவாகிய சொற்களையும், பெருந்தோள் - பெரிய தோள்களையுமுடைய, மகளிரும் - பெண்டிரும், பல்வகையும் - பலமுறையிலும், தாளினால் தந்த - முயற்சியாலீட்டிய, விழுநிதியும் - சிறப்புடைய செல்வப் பொருளும், நாத்தளிர்ப்ப - நாவின்கண் நீரரும்ப, ஆக்கிய உண்டியும் - சமைத்த உணவும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நாள்தோறும் - ஒவ்வொரு நாளும், காப்பு இகழலாகா- காத்தலைப் புறக்கணித்தலாகாத, பொருள் - பொருள்களாம். எறு. சில்சொல் - மென்மொழியுமாம். தாள் - முயற்சி. " தாளாற்றித் தந்த பொருளெல்லாம்" என்பது திருக்குறள். பின்நினைக்கும் நாளிலெல்லாம் நா நீரரும்ப என்றுரைப்பாருமுளர். 48. வைததனை யின்சொல்லாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் - ஊறிய கைப்பதனைக் கட்டியென் றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார். (ப-ரை): வைததனை - பிறர் வைத வசைமொழியை இன்சொல்லா - இனிமை பயக்கும் சொல்லாக, கொள்வானும் - உள்ளத்துக் கொள்வானும், கூழை - புல்லரிசிக்கூழை, நெய்பெய்த சோறு என்று - நெய்வார்த்த சோறு என்று, மதிப்பானும் - கருதியுண்பவனும், ஊறிய கைப்பதனை - மிக்க கைப்புடைய பொருளை, கட்டி என்று - இனிப்புடைய வெல்லக்கட்டி என்று கருதி, உண்பானும் - உண்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், மெய்ப்பொருள் - உண்மைப் பொருளை, கண்டுவாழ்வார் - உணர்ந்து வாழ்பவராவர். ஊறிய கைப்பு - மிக்க கைப்பு; ஊறிய என்பதனைச் செய்யிய வென்னும் வினையெச்சமாக்கி, வாயில் ஊறும்படி உண்பவனும் என்றுரைப்பாருமுளர். கற்பனைகளைக் கழித்து உண்மை காண்டலின் 'மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்' என்றார். 49. ஏவாது மாற்று மிளங்கிளையுங் காவாது வைதெள்ளிச் சொல்லுந் தலைமகனும் - பொய்தெள்ளி அம்மனை தேய்க்கு மனையாளு மிம்மூவர் இம்மைக் குறுதியில் லார். (ப-ரை): ஏவாது - ஏவப்படாமல், மாற்றும் - மறுத்து விடுகின்ற, இளங்கிளையும் - புதல்வனும், காவாது - மனைவியைப் பாதுகாவாமல்வைத்து, எள்ளிவைது சொல்லும் - இகழ்ந்து வைதுரைக்கும், தலைமகனும் - தலைவனும், பொய்தெள்ளி - பொய்யையே ஆராய்ந்து கூறி, அம்மனை தேய்க்கும் - அழகிய மனையறத்தைக் கெடுக்கும், மனையாளும் - மனைவியும், இம்மூவர் - இந்த மூவரும், இம்மைக்கு உறுதியில்லார் - இம்மைக்கு உறுதியாய பயனளிப்பவர் அல்லர். எ-று. ஏவுஆதும் எனப் பிரித்து ஏவிய எதனையும் என்றுரைத் தலுமாம்; இதற்கு ஆதும் என்பது யாது மென்பதன் மரூஉ; " ஆதுமில் காலத் தெந்தை யச்சுத னமலனையே" என்னும் ஆன்றோர் வாக்குங் காண்க. இளங்கிளை என்பதற்கு மேல் 'சீலமறிவா னிளங்கிளை' என்புழி உரைத்தமை காண்க. 50. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும் இல்லிருந் தெல்லை கடப்பாளு மிம்மூவர் வல்லே மழையருக்குங் கோள். (ப-ரை): கொள்பொருள் - கொள்ளும் இறைப் பொருளையே, வெஃகி - விரும்பி, குடி அலைக்கும் - குடிகளை வருத்தும், வேந்தனும் - அரசனும், உள்பொருள் - உண்மைப் பொருளை, சொல்லா - சொல்லாமல், சலம்மொழி - பொய்ம்மை கூறும், மாந்தரும் - மக்களும், இல்இருந்து - மனையிலிருந்து, எல்லை கடப்பாளும் - தனக்குக்கூறிய ஒழுக்கத்தின் எல்லையைக் கடந்து ஒழுகும் மனைவியும், இம்மூவர் - இந்த மூவரும், வல்லே - கடுக, மழைஅருக்கும் - மழையைக்குறைக்கும், கோள் - கோள்கள். எ-று. குடிகளின் நலங் கருதாது பொருள்கோடலே கருதுவா னென்பார் கொள் பொருள் வெஃகிக் குடியலைக்கும் வேந்தனும் என்றார். பொருள் கொள்ளுதலை விரும்பி என மாறியுரைத் தலுமாம். மாந்தர் - முறை புரிமன்றத்தார் முதலாயினர். சொல்லா, பெயரெச்ச மறையுமாம். அருக்கும் - அருகச் செய்யும், அரசனது கொடுங்கோலால் மழை குன்றுமென்பது. " முறைகோடி மன்னவன் செய்யினுறை கோடி யொல்லாது வானம் பெயல்." எனத் திருக்குறளிலும், " கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும் கோணிலை திரியின் மாரிவறங் கூரும்." என மணிமேகலையிலும், கோணிலை திரிந்து நாழிகுறைபடப் பகல்கண்மிஞ்சி நீணில மாரியின்றி வினைவஃகிப் பசியுநீடிப் பூண்முலை மகளிர்பொற்பிற் கற்பழிந் தறங்கண்மாறி ஆணையிவ் வுலக. . . கோல் கோடினென்றான். எனச் சிந்தாமணியிலும் கூறப் பெற்றுள்ளமை காண்க. வானிலே சூழ் வரும் கோட்களின் நிலைமாறுதலால் மழை குன்றுவ துண்டாகலின் மழையருக்குங் கோள் என்றார். 51. தூர்ந்தொழுகிக் கண்ணுந் துணைக டுணைகளே சார்ந்தொழுகிக் கண்ணுஞ் சலவர் சலவரே ஈர்ந்தகல் லின்னாக் கயவ ரிவர்மூவர் தேர்ந்தக்காற் றோன்றும் பொருள். (ப-ரை): தூர்ந்து - வருவாய் அடைபட்டு, ஒழுகிக் கண்ணும் - வாழ்ந்த காலத்தும், துணைகள் துணையாந் தன்மையுடையார், துணைகளே - துணைவரேயாவர், சார்ந்து - தம் கருத்தொடு பொருந்தி, ஒழுகிக் கண்ணும் - நடந்தகாலத்தும், சலவர் - பகையாந் தன்மையுடையார், சலவரே - பகைவரே யாவர், இன்னா - துன்பத்தைச் செய்யும், கயவர் - கீழ்மக்கள், ஈர்ந்தகல் - பிளக்கப்பட்ட கல்லையே ஒப்பாவார், இவர்மூவர் - ஆகிய இவர் மூவரையும், தேர்ந்தக்கால்- ஆராயுமிடத்து, பொருள்தோன்றும் - அவரிடத் துள்ள மெய்ம்மை காணப்படும். எ-று. ஒழுகியக் கண்ணும் என்பது விகாரமாயிற்று. ஈர்ந்தகல் - பிளவுண்டகல்; கூர்ங்கல்லுமாம். துன்புறுத்த லொப்புமையால் 'ஈர்ந்தகல்' என்றார். இவர் மூவரும் ஆராயுமிடத்து வெளிப்படும் பொருள்களாவர் என்றுரைத்தலுமாம். 52. கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங் காமுற்ற பெண்ணுக் கணிகல நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங் குறியுடையார் கண்ணே யுள. (ப-ரை): கண்ணுக்கு அணிகலம் - கண்ணுக்கு அணியும் அணியாவது, கண் ஓட்டம் - கண்ணோடுதல், காமுற்ற - கணவனால் விரும்பப்பட்ட, பெண்ணுக்கு - பெண்ணுக்கு, அணிகலம் - அணியும் அணியாவது, நாண் உடைமை - நாணமுடைமை, மறுமைக்கு - மறுபிறப்பிற்கு, அணிகலம் - அணியும் அணியாவது, நண்ணும் கல்வி - உயிரோடு பொருந்தி வரும் கல்வி, இம்மூன்றும் - இந்த மூன்றும், குறிஉடையார்கண்ணே - நுண்ணறிவுடை யாரிடத்தில் மாத்திரமே, உள - உண்டு. எ-று. கண்ணோட்டமாவது தம்மொடுபயின்றார் எதிர்ப்பட்ட விடத்து அவர் கூறியன மறுக்க மாட்டாமை; இஃது அவர் மேற்கண் சென்றவழி நிகழ்வதாகலின் கண்ணோட்டம் எனப்பட்டது. கண்ணோட்டம் முதலியவற்றால் கண் முதலியன அழகுபெறும் என்க. வருகின்ற மறுமைக்கு அணிகலம் கல்வி என்றுரைத்தலுமாம். குறி - சிந்தனையுமாம். " கண்ணுக் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற் புண்ணென் றுணரப் படும்." " ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற் கெழுமையு மேமாப் புடைத்து." என்னும் திருக்குறட்பாக்களும், "உயிரினுஞ் சிறந்தன்று நாணே." என்னும் தொல்காப்பியத் தொடரும் இங்கே கருதற் பாலன. 53. குருடன் மனையா ளழகு மிருடீரக் கற்றறி வில்லான் கதழ்ந்துரையும் - பற்றிய பண்ணிற் றெரியாதான் யாழ்கேட்பு மிம்மூன்றும் எண்ணிற் றெரியாப் பொருள். (ப-ரை): குருடன் மனையாள் - கண்ணில்லாதவன் மனைவி யினது, அழகும் - அழகும், இருள் தீர - அறியாமை நீங்க, கற்று - நூல்களைக் கற்று, அறிவுஇல்லான் - அவற்றின் பொருளை அறிதல் இல்லாதவன், கதழ்ந்து உரையும் - விரைந்து கூறும் சொல்லும், பற்றிய பண்ணின் - பொருந்திய இசைத்திறங்களை, தெரியாதான்- அறியாதவன், யாழ்கேட்பும் - யாழிசையைக் கேட்பதுவும், இம்மூன்றும் - இந்த மூன்றும், எண்ணில் - ஆராயுமிடத்து, தெரியாப் பொருள் - விளங்காப் பொருள்கள். எ-று. அழகு முதலிய மூன்றும் குருடன் முதலிய மூவர்க்கும் முறையே விளங்காத பொருள்கள் என்க. பண்ணின் என்பதில் சாரியை நிற்க உருபு தொக்கது யாழ், ஆகுபெயர். 54. தன்பயந் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா நன்பயங் காய்வின்கட் கூறலும் - பின்பயவாக் குற்றம் பிறர்மே லுரைத்தலு மிம்மூன்றும் தெற்றென வில்லார் தொழில். (ப-ரை): தன்பயம் - தனது பயனை, தூக்காரை - எண்ணாதவரை, சார்தலும் - அடைதலும், நன்பயம் - நல்ல பயனுடைய சொற்களை, தாம் பயவாக் காய்வின்கண் - பயனையளிக்காத சினத்தின்கண், கூறலும் - சொல்லுதலும், பிறர்மேல் - அயலார் மீது, பின்பயவா குற்றம் - பிறகு தனக்கு நன்மை பயவாத அவர் குற்றங்களை, உரைத்தலும் - பாரித்துச் சொல்லுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், தெற்றெனவு - பின் வருதலைத் தெளிதல், இல்லார் தொழில் - இல்லாதவருடைய செய்கை. எ-று. தன் பயம்தூக்கார் - தமக்கு வரும் பயனையே அன்றித் தம்மையடைந்தார் பயனைச் சிந்தியாதவர். கூறலும் என்றமையால் நன்பயம் என்றது சொல்லாயிற்று. சினத்தால் உள்ளம் மாறு பட்டிருப்பாரிடத்தில் உறுதியுள்ள சொற்களைக் கூறின் அவர் ஏற்றுக் கொள்ளாரென்க. பிறர் குற்றமுரைப்பது அப்பொழுது நலம் பயப்பதுபோற் றோன்றினும் பின்பு தீமை பயக்கு மென்ற வாறா யிற்று. தெற்றெனவு - தெளிவு; தெற்றென் பகுதி; " தெற்றென்க மன்னவன் காண்" என்னும் திருக்குறள் காண்க. பயவா என்னும் பெயரெச்ச மறை குற்றமுரைத்தல் என்னும் பெயர் கொண்டது. தன்பயம், இல்லார் தொழில், பன்மை யொருமை மயக்கம். 55. அருமறை காவாத நட்பும் பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் - யாண்டானும் செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர் ஒற்றா ளெனப்படு வார். (ப-ரை): அருமறை - வெளிப்படுத்தலாகாத மறையினை, காவாத - உள்ளத்தடக்காத, நட்பும் - நண்பனும், பெருமையை - மனையறத்திற்குத் தக்க மாண்பினை, வேண்டாது - விரும்பாமல், விட்டு ஒழிந்த - விட்டு நீங்கிய, பெண்பாலும் - மனைவியும், யாண்டானும் - எவ்விடத்திலும், செற்றம் கொண்டு - கறுவுதலை மேற்கொண்டு, ஆடும் - உரையாடும், சிறுதொழும்பும் - குற்றேவ லாளனும், இம்மூவர் - இந்த மூவரும், ஒற்றாள் எனப்படுவார் - ஒற்றர் என்று சொல்லப்படுவர். எ-று. நட்பு, தொழும்பு என்பன அவற்றை உடையார்க்கு ஆயின. இழிவுபற்றி மனையாளைப் பெண்பால் என்றார். யாண்டானும்- யாண்டும்; யாண்டாயினும் என்னலுமாம். ஒற்றாள் - ஒற்றாகிய ஆள். " அறிவார் யார் நல்லாள் பிறக்குங் குடி" என்னும் நான்மணிக்கடிகைச் செய்யுளிலும் ஆள் என்பது ஆடவன் என்னும் பொருளில் வந்துளது. ஆள், பன்மையில் ஒருமை. (55) 56. முந்தை யெழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையுந் தாயும் வழிபட்டு - வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிதூரா வாறு. (ப-ரை): முந்தை - இளமைப் பருவத்தில், எழுத்தின்வரவு - கல்வியின் வரவும், உணர்ந்து - அதனை அறிந்து, பிற்பாடு - பின்பு, தந்தையும் தாயும் - தந்தையையும் தாயையும், வழிபட்டு வந்த - வழிபட்டு ஒழுகிய, ஒழுக்கம் - ஒழுக்கமும், பெருநெறி - பெரியோர் வழியை, சேர்தல் - அடைதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், விழுப்பம்நெறி - வீட்டு நெறியை, தூராஆறு - அடைக்காத வழி களாம். எ-று. முந்தை என்பது இளமையையும், எழுத்து என்பது கல்வியையும் உணர்த்தின. வழிபட்டு வந்த ஒழுக்கம் - வழிபாட்டுடன் கூடிய ஒழுக்கம். பெருநெறி - துறவறமுமாம். விழுப்பம் - சிறப்பு; வீடு. 'எல்லாப் பேற்றினும் சிறந்தமையின் வீடுசிறப்பெனப்பட்டது' என்றார் பரிமேலழகரும். 57. கொட்டி யளந்தமையாப் பாடலுந் தட்டித்துப் பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் - துச்சிருந்தான் ஆளுங் கலங்கா முறுதலு மிம்மூன்றும் கேள்வியு ளின்னா தன. (ப-ரை): கொட்டி - தாளத்தால், அளந்து - அளக்கப்பட்டு, அமையாப் பாடலும் - பொருந்துதல் இல்லாத இசையும், தட்டித்து - கொட்டிக் கொண்டு, பிச்சைபுக்கு - பிச்சைக்குச் சென்று, உண்பான் - உண்ணுபவன், பிளிற்றலும் - வெகுண்டுரைத் தலும், துச்சுஇருந்தான் - ஒதுக்குக் குடியிருந்தவன், ஆளும் கலம் - தான் இருந்த இல்லுக் குரியன் ஆளும் பண்டங்களை, காமுறுதலும் - விரும்புதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், கேள்வியுள் - கேட்கப் படுவனவற்றுள், இன்னாதன - துன்பம் பயப்பன. எ-று. கொட்டி - கொட்டுவது, தாளம்; பாடல் - பாட்டு, தட்டித்து என்பதில் து பகுதிப் பொருள் விகுதி; துப்பிச்சை எனப் பிரித்தியைத்துச் சோற்றுப் பிச்சை என்றுரைப்பாரும் உளர். " பிச்சைபுக் குண்பான் பிளிற்றாமை முன்னினிதே" என்பது இனியவை நாற்பது. கலம் - கட்டில் முதலியன. 58. பழமையை நோக்கி யளித்தல் கிழமையாற் கேளி ருவப்பத் தழுவுதல் - கேளிராய்த் துன்னிய சொல்லா லினந்திரட்ட லிம்மூன்றும் மன்னற் கிளையான் றொழில். (ப-ரை): பழமையை நோக்கி - நண்பரது பழையராந் தன்மையைக் கருதி, அளித்தல் - அவர்க்கு வேண்டுவ தருதலும், கேளிர் - உறவினர், உவப்ப - மகிழுமாறு, கிழமையால் - உரிமை யால், தழுவுதல் - தழுவுதலும், கேளிராய் துன்னிய - தமராகிச் சூழுமாறு, சொல்லால் - இன்சொற் கூறுதலால் இனம் திரட்டல் - பெரியோர் இனத்தைக் கூட்டுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், மன்னற்கு இளையான் - மன்னவன் மைந்தற்குரிய, தொழில் - தொழில்களாம். எ-று. அளித்தல் - பிழை பொறுத்தலுமாம். துன்னிய-செய்யிய வென்னும் வினையெச்சம். பழமை பாராட்டுதல், சுற்றந் தழுவுதல், பெரியாரைத் துணைக்கோடல் என்னும் இவை அரசற் குரியன. ஈண்டு அரசகுமாரன் மேல்வைத்துக் கூறப்பட்டன. மன்னற் குழையான் என்பது பாடமாயின் அமைச்சன் என்பது பொருளாம். 59. கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ் விளைவின்கட் போற்றா னுழவும் - இளையனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையு மிம்மூன்றும் உள்ளன போலக் கெடும். (ப-ரை): கிளைஞர்க்கு - உறவினர்க்கு, உதவாதான் - உதவி புரியாதவ னுடைய, செல்வமும் - செல்வமும், பைங்கூழ் - பயிரை, விளைவின்கண் - விளையும் பருவத்தில், போற்றான் - காவாதவ னுடைய, உழவும் - உழுதொழிலும், இளையனாய் - அறிவிலானாகி, கள்உண்டு வாழ்வான் - கள்ளைக் குடித்து ஒழுகுபவனுடைய, குடிமையும் - குடிவாழ்க்கையும், இம்மூன்றும் - இந்தமூன்றும், உள்ளனபோல - உள்ளன போலப் புறத்தே தோன்றி, கெடும் - கெட்டுவிடும். எ-று. உழவு என்றது ஏர் வளத்தை. இளையன் - அறிவு முதிராதவன்; அறிவால் மெல்லியன். இளையனாய் என்பதற்கு இளமை தொடங்கி என்றும், குடிமை என்பதற்கு நற்குடிப்பிறப்பு என்றும் கூறுதலுமாம். 60. பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய் விலங்கின் பிறப்பின் வெருவும் - புலந்தெரியா மக்கட் பிறப்பி னிரப்பிடும்பை யிம்மூன்றும் துக்கப் பிறப்பாய் விடும். (ப-ரை): பேஎய் பிறப்பில் - பேய்ப்பிறப்பின்கண், பெரும் பசியும் - மிக்க பசியாகிய துன்பமுடன், பாஅய் - பாயுமியல் புடைய, விலங்கின் பிறப்பின் - விலங்காகிய பிறப்பின்கண், வெருவும் - அச்சமாகிய துன்பமும், மக்கள் பிறப்பின் - மனிதப் பிறப்பின்கண், புலம்தெரியா - அறிவு விளங்காமைக் கேதுவாகிய, நிரப்புஇடும்பை - வறுமையாகிய துன்பமும் (உள்ளன; ஆதலால்), இம்மூன்றும் - இந்த மூன்றும், துக்கப் பிறப்பாய் விடும் - துக்கத்தைத் தரும் பிறவியாய் முடியும். எ-று. இடும்பை என்பதனைப் பசி, வெருவு என்பவற்றோடும், எண்ணும்மையை நிரப்பிடும்பை என்பதனோடும் கூட்டியும் உள்ளன, ஆதலால் என்னுஞ் சொற்கள் விரித்துமுரைக்கப் பட்டன. 'நிரப்பிடும்பை' என்றார் வள்ளுவனாரும். எப்பிறப்பும் இன்னாதன வாகலின் பிறப்பினை யொழிக்க முயறல் வேண்டும் என்றபடி. புலந்தெரியா மக்கட் பிறப்பு எனக் கொண்டு, மெய்யுணர்வு பெறாத மக்கட்பிறப்பு என்றுரைத்தலுமாம். 61. ஐயறிவுந் தம்மை யடைய வொழுகுதல் எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும் மாறேற்கு மன்னர் நிலையறித லிம்மூன்றும் சீரேற்ற பேரமைச்சர் கோள். (ப-ரை): ஐ அறிவும் - ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய - தமக்கு வயமாக, ஒழுகல் - ஒழுகுதலும், எய்துவது - தம் அரசர்க்கு மேல் வரக்கடவ துன்பத்தை, முன் - முன்னரறிந்து, எய்தாமை காத்தல் - வாராமற் காத்தலும், மாறுஏற்கும் - பகைமையை ஏற்கும், மன்னர்நிலை - அரசரது நிலைமையை, வைகலும் அறிதல் - நாடோறும் தெரிந்தொழுகலும், இம் மூன்றும் - இந்த மூன்றும், சீர் ஏற்ற - புகழினைக் கொண்ட, பேர் அமைச்சர் - பெருமையுடைய மந்திரிகளின், கோள் - துணிவு களாம். எ-று. மன்னர் விழைப விழையாமையும், உற்றநோய் நீக்கி உறாமை முற்காத்தலும், இகல் வேந்தரைத் தீயைப் போற்கருதியொழுகு தலும் ஆகிய மன்னரைச் சேர்ந்தொழுகும் முறைமைகள் கூறப் பட்டன. மாறேற்கும் மன்னர்நிலையறிதல் என்பதற்குப் பகை மன்னர் இருப்பை ஒற்றரால் அறிந்து அதற்கேற்பச் செய்தல் என்றுரைப் பாருமுளர். 62. நன்றிப் பயன்றூக்கா நாணிலியுந் சான்றோர்முன் மன்றிற் கொடும்பா டுரைப்பானும் - நன்றின்றி வைத்த வடைக்கலங் கொள்வானு மிம்மூவர் எச்ச மிழந்துவாழ் வார். (ப-ரை): நன்றிப்பயன் - பிறர்செய்த நன்றியின் பயனை, தூக்கா - ஆராயாது மறந்த, நாண்இலியும் - நாணமற்றவனும், சான்றோர் மன்றின் முன் - அறிவால் நிறைந்தாரது அவைக் களத்தின் கண், கொடும்பாடு உரைப்பானும் - கொடிய சொற்களைக் கூறுவானும், வைத்த அடைக்கலம் - ஒருவர் தன்னிடத்துவைத்த அடைக்கலப் பொருளை, நன்று இன்றி- அறத்தொடு பொருந்துதல் இன்றி, கொள்வானும் - வௌவிக் கொள்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், எச்சம் இழந்து வாழ்வார் - மக்களையிழந்து வருந்தி வாழ்பவர் ஆவர். எ-று. நாண் - பழி பாவங்களுக்கு அஞ்சுமியல்பு. கொடும்பாடு என்பதற்குப் பொய் என்று பொருள்கொண்டு முறை மன்றத்தில் சான்றோர் முன் பொய் கூறுபவனும் என்றுரைத்தலுமாம். நன்று - அறம். அடைக்கலப் பொருளை உரியவர் கேட்ட பொழுதே கொடுக்க வேண்டும் என்பதனை, " உள்ள தொருவர் ஒருவர்கை வைத்தகாற் கொள்ளும் பொழுதே கொடுத்ததாம் - கொள்ளார் நிலைப்பொரு ளென்றதனை நீட்டித்தல் வேண்டா புலைப்பொருள் தங்கா வெளி." என்று பழமொழி வலியுறுத்துரைத்தலுங் காண்க. (62) 63. நோவஞ்சா தாரோடு நட்பும் விருந்தஞ்சும் ஈர்வளையை யில்லத் திருத்தலும் - சீர்பயவாத் தன்மை யிலாள ரயலிருப்பு மிம்மூன்றும் நன்மை பயத்த லில. (ப-ரை): நோ - தாம் உறுந் துன்பத்தைக் கண்டவழி, அஞ்சா தாரோடு நட்பும் - அஞ்சாதாரிடத்துக் கொண்ட நட்பும், விருந்து அஞ்சும் - விருந்தினர் அஞ்சும், ஈர்வளையை - மனைவியை, இல்லத்து இருத்தலும் - மனையின் கண் வைத்திருத்தலும், சீர்பயவா - சிறப்பைத் தராத, தன்மையிலாளர் - தன்மையுடைய வர்க்கு, அயல் இருப்பும் - பக்கத்தில் குடியிருத்தலும், இம் மூன்றும் - இந்த மூன்றும், நன்மை பயத்தல் இல - நன்மையைத் தருவன அல்ல. எ-று. அஞ்சும் என்னும் பெயரெச்சம் ஏதுப்பெயர் கொண்டது. விருந்தினரைக் கண்டு அஞ்சும் என்றுமாம்; அஞ்சுதல் - உணவளிக்க மறுத்தல். ஈர்வளை - அறுத்தியற்றப்பட்ட வளையினை அணிந்தவள்; மனைவி. தன்மையிலாளர், இல்சாரியை; தவமிலார், அரசிலார் என நான்மணிக்கடிகையில் இச்சாரியை வருதல் காண்க. புகழ்பயவாத பண்பில்லாதவர் என்றுரைத்தலும் பொருந்தும்; இதற்குப் பயவா என்னும் பெயரெச்சம் இல்லாளர் என்பதன் விகுதியோடியையும், இல்லாளர் என்பதற்கு இல்வாழ்வார் என்றுரைப்பாருமுளர். 64. நல்விருந் தோம்பலி னட்டாளாம் வைகலும் இல்புறஞ் செய்தலி னீன்றதாய் - தொல்குடியின் மக்கட் பெறலின் மனைக்கிழத்தி யிம்மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். (ப-ரை): நல்விருந்து - தக்க விருந்தினரை, ஓம்பலின் - பேணுதலால், நட்டாள் ஆம் - நட்பினளாவள், இல்புறஞ் செய்தலின் - இல்லறத்தைக் காத்தலினால், ஈன்றதாய் - பெற்றதாயாவள், தொல்குடியின் - பழமையாகிய குடிக்குரிய, மக்கட் பெறலின் - பிள்ளைகளைப் பெறுதலினால், மனைக்கிழத்தி - மனையவளாவள், இம்மூன்றும் - இந்த மூன்றும், கற்புடையாள் - கற்புடையவள், பூண்ட கடன் - மேற்கொண்ட கடமைகள். எ-று. நல்விருந்து - தக்கவிருந்து, தகுதி - ஞானவொழுக்கங்களா னுயர்தல்; "நல்விருந் தோம்புவான்" என்புழிப் பரிமேலழகர் உரைத்த உரையை நோக்குக. ஆம் என்பதனைத் தாய், கிழத்தி என்பவற்றோடும் ஒட்டுக. மனைக்கிழத்தி - மனைக்கு உரியவள்; மனையாள். இம்மூன்றும் - இம்மூன்றியல்பும் உடையளாதல். 65. அச்ச மலைகடலிற் றோன்றலு மார்வுற்ற விட்டகல கில்லாத வேட்கையும் - கட்டிய மெய்ந்நிலை காணா வெகுளியு மிம்மூன்றும் தந்நெய்யிற் றாம்பொரியு மாறு. (ப-ரை): அலைகடலின் - அலைகின்ற கடலைப்போல, அச்சம் தோன்றலும் - உளத்தின்கண் அச்சமுண்டாதலும், ஆர்வுஉற்ற - நுகரப்பட்டனவற்றை, விட்டு அகலகில்லாத - பற்றி நீங்குந்திற மில்லாத, வேட்கையும் - அவாவும், கட்டிய - உயர்ந்தோர் யாப்புறுத்த, மெய்ந்நிலை - உண்மை நிலைமையை, காணா வெகுளியும் - அறியாமைக் கேதுவாய சினமும், இம்மூன்றும் - இந்த மூன்றாலும் இவற்றையுடையார் கெடுதல், தம் நெய்யில் - (ஆடு முதலியன) தம்மிடத்துத் தோன்றிய நெய்யால், தாம் பொரியுமாறு - தாம் பொரிதல் போலவாம். எ-று. கடலின் அலை மாறிமாறித் தோன்றுதல் போல அச்சம் மாறி மாறித் தோன்றுதல் என்க. ஆர்தல் - நுகர்தல், ஆர்வுற்ற, வினைப் பெயர், கில் ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இசையெச்சமாக வேண்டுஞ் சொற்கள் விரித்துரைக்கப்பட்டன. அச்சம், அவா, வெகுளி என்பன அவையுடையாரை அழிக்கும் என்றபடி. 66. கொழுநனை யில்லா ணலமும் வழிநிற்கும் சிற்றாளில் லாதான்கைம் மோதிரமும் - பற்றிய கோல்கோடி வாழு மரசனு மிம்மூன்றும் சால்போடு பட்ட தில. (ப-ரை): கொழுநனை இல்லாள் - கணவனை இல்லா தவளுடைய, நலனும் - அழகும், வழிநிற்கும் - தான்கூறிய வழியில் நின்று ஒழுகும், சிறுஆள் இல்லாதான் - ஏவலாள் இல்லாதவன், கை மோதிரம் - கை விரலில் அமைந்த மோதிரமும், பற்றிய - கைக் கொண்ட, கோல் - செங்கோல், கோடி வாழும் - கோணுமாறு ஒழுகும், அரசனும்- வேந்தனும், இம்மூன்றும் - இந்த மூன்றும், சால்போடு பட்டது இல - நன்மையோடு பொருந்தியனவல்ல. எ-று. கறை என்ற பாடத்திற்குப் பூப்பு என்பது பொருளாம். கலன் என்று பாடங் கொள்வாருமுளர். கோடி என்பதனைக் கோட வெனத் திரிக்கப்பட்டது, து சாரியை. திணைவிரவி அஃறிணை முடிபேற்றன. 67. எதிர்நிற்கும் பெண்ணு மியல்பி றொழும்பும் செயிர்நிற்குஞ் சுற்றமு மாகி - மயிர்நரைப்ப முந்தைப் பழவினையாய்த் தின்னு மிவைமூன்றும் நொந்தார் செயக்கிடந்த தில். (ப-ரை): எதிர்நிற்கும் - மாறுபட்டொழுகும், பொண்ணும் - மனையாளும், இயல்புஇல் - அடங்கி நடக்குந் தன்மையில்லாத, தொழும்பும் - ஏவலாளும், செயிர் நிற்கும் - சென்று நிலைபெற்ற, சுற்றமும் - உறவினரும், ஆகி - ஆகிநின்று, முந்தை - முற்பிறப்பிற் செய்த, பழவினையாய் - பழவினைபோல, மயிர்நரைப்ப - மயிர் வெளிறிவந்த முதுமைப் பருவங்காறும், தின்னும் - வருத்தும், இவை மூன்றும் - இவைமூன்றாலும், நொந்தார் - துன்பமுற்றவர், செயக் கிடந்தது இல் - செய்யக் கிடந்ததோர்கழுவாய் இல்லை.எ-று. எதிர் நிற்றல் - மாறுபட்டு நிற்றல். "எறியென்றெதிர் நிற்பாள் கூற்றம்" என்பது நாலடி. பழவினை, வினையென்னுந் துணையாய் நின்றது. தின்னுதல் - வருத்துதல் மயிர் நரைப்ப என்பதற்கு யாண்டு பலவாகா முன்னும் நரையுண்டாகுமாறு என்றுரைத்தலுமாம், கேட்குங் காலம் பலவாலோ நரை நுமக்கில்லையாலோ என வினவிய சான்றோர்க்குப் பிசிராந்தைார் கூறிய புறப்பாட்டு ஈண்டு அறியற் பாலது. பழவினையாய் என்பதற்குப் பழவினை யனையவாகி என்றுரைக்க. 68. இல்லார்க்கொன் றீயு முடைமையு மிவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் - எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையு மிம்மூன்றும் நன்றறி மாந்தர்க் குள. இல்லார்க்கு - நல்கூர்ந்தவர்க்கு, ஒன்றுஈயும் - அவர் விரும்பிய பொருளொன்றைக் கெடுக்கும், உடைமையும் - செல்வமுடைமையும், இவ் உலகில் - இந்த உலகத்தில், நில்லாமை - பொருளும், யாக்கையும் முதலியன நிலையின்றி அழிதலுண்மையை, உள்ளும் - நினைக்கும், நெறிப்பாடும் - முறைமையும், எவ்வுயிர்க்கும் - எல்லாவுயிர்க்கும், துன்பு உறுவ - துன்பமுறுதற்கேதுவாய செயல்களே, செய்யாத தூய்மையும் - செய்யாத தூய தன்மையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நன்று அறியும் - நன்மையை யறிந்தொழுகும், மாந்தர்க்கு உள - மக்களிடத்து உள்ளன. இல்லார் என்பது உலக வழக்கு. "உடையார் முன் இல்லார் போல்" என்னுங் குறளுரையிற் பரிமேலழகர் கூறினமைகாண்க. நெறிப்பாடு என்பதற்குத் துறவற நெறியிற் படுதல் என்றுரைத் தலுமாம். "இன்னா செய்யாமை மாசற்றார் கோள்" என்பவாகலின் அதனைத் தூய்மை என்றார். மாந்தர் - ஆடூஉப் பன்மை. 69. அருந்தொழி லாற்றும் பகடுந் திருந்திய மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் - நொந்து நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும் பெறுமா றரிய பொருள். (ப-ரை): அருந்தொழில் - .....அரிய தொழில்களை, ஆற்றும் பகடும் - செய்யவல்ல எருதுவும், திருந்திய - குற்றமற்ற, மெய்ந் நிறைந்து - வடிவழகு..., நிறையபெற்று, நீடு இருந்த - நெடுநாள் மணமின்றி யிருந்த, கன்னியும் - குமரியும், நெறிமாறி - வழிதவறி, நொந்துவந்த - வருந்தியடைந்த, விருந்தும் - விருந்தினரும், இம் மூன்றும் - இந்த மூன்றும், பெறுமாறு அரிய பொருள் - கிடைத் தற்கரிய பொருள்கள். எ-று. அருந்தொழிலாவன - அளற்று நிலம் முதலியவற்றிற் பண்டியீர்த்தல் முதலியன. "மடுத்தவாயெல்லாம் பகடன்னான்" என்னுங் குறளும், அதனுரையும் நோக்குக. பகடு - கடாவுமாம். நீடிருந்த என்றது நெடுநாள் மணமின்றியிருத்தல் அரிதென்னுங் குறிப்பிற்று. பெறுமாறு - பெற. பலரும் விரும்புவராகலின் பெறற்கரிய பொருள் என்றார். ஈண்டும் திணைவிரவி அஃறிணை முடிபேற்றன. 70. காவோ டறக்குளந் தொட்டானு நாவினால் வேதங் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்து ஒல்வதுபாத் துண்ணு மொருவனு மிம்மூவர் செல்வ ரெனப்படு வார். (ப-ரை): காவோடு - சோலையை உண்டாக்குதலோடு, அறக்குளம் - அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் - தோண்டிய வனும் நாவினால் - நாவினால் ஓதி, வேதம் கரைகண்ட - வேதத்தை முடிவுகண்ட, பார்ப்பானும் - பார்ப்பனனும், தீது இகந்து - தீமைபயக்கு நெறி யினீங்கி, ஒல்வது இசையும் பொருளை, பாத்து உண்ணும் - வறியர் முதலாயி னார்க்குப் பகுத்து உண்ணும், ஒருவனும் - ஒப்பற்ற இல்லறத் தானும், இம்மூவர் - இந்த மூவரும், செல்வர் - செல்வ முடையார், எனப்படுவார் - என்று பெரியோராற் சிறப்பித்துச் சொல்லப்படுவார். எ-று. அறத்திற்குச் சோலை வைத்து வளர்த்தவனும், குளம் தோண்டியவனும் என்க. காவோடு என்பதில் ஓடுவேறுவினை யுடனிகழ்ச்சி. தொட்டான், ஏவும் வினை முதல். கரைகண்ட என்பது ஒரு சொல். வேதமாகிய கடலின் கரையைக் கண்ட என்னின் வேதங்கரை என்பது மெலித்தல் விகாரமாம். " காவோ டறக்குளந் தொட்டல் மிகவினிதே" என்பது இனியவை நாற்பது. 71. உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் - கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவு மிம்மூன்றும் காண வரியவென் கண். (ப-ரை): உடுத்து ஆடை இல்லாதார் - உடுத்திட ஆடை யில்லாதவர், நீராட்டும் - நீராடுதலும், பெண்டிர் - மகளிர், போர்தொடுத்து - வழக்கிட்டு, ஆண்டு அவை - அவ்விடத்துள்ள சபை யின்கண், புகலும் - புகுதலும், கொடுத்து அளிக்கும் - நல்கூர்ந் தார்க்குப் பொருள் கொடுத்துப் புரக்கும், ஆண்மை உடையவர் - ஆண்டன்மையுடையவரது, நல்குரவும் - வறுமையும், இம்மூன்றும் - இந்த மூன்றையும், காண - காண்டற்கு, என்கண் அரிய - எனது கண்கள் இல்லையாகுக. எ-று. " உடுத்தலால் நீராடார்" என்பது ஆசாரக்கோவை. கொடுத்தளித்தல் ஆண்மையாம் என்பதனை, " ஏற்றகை மாற்றாமை யென்னானும் தாம்வரையாது ஆற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் என்னும் நாலடியாராலும் அறிக. என் கண்கள் காணத்தகாதன என்றுமாம். 72. நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும் அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும் மறவனை யெவ்வுயிரு மஞ்சுமிம் மூன்றும் திறவதிற் றீர்ந்த பொருள். (ப-ரை): நிறைநெஞ்சுடையானை - நிறைந்த வுள்ள முடை யானை, நல்குரவு அஞ்சும் - வறுமை அஞ்சும், அறனை நினைப்பானை - அறத்தை மறவாதவனை, அல்பொருள் அஞ்சும்- பாவம் அஞ்சும், மறவனை - வன்கண்மை யுடைய வீரனை, எவ்வுயிரும் அஞ்சும் - போர்க்களத்துற்ற யாவரும் அஞ்சுவர், இம்மூன்றும் - இந்த மூன்றும், திறவதில் - உறுதியுடைமையில், தீர்ந்த பொருள் - தெளிந்த பொருள்களாம். எ-று. " செல்வமென்பது சிந்தையின் நிறைவு" என்பவாகலின், அஃதுடையானை நல்குரவு அஞ்சும் என்றார். அல்பொருள் - அறனல்லாதது; பாவம். எவ்வுயிரும் என்றது போர்க்களத்துற்ற படைஞர்களை, நிறைநெஞ்சு முதலிய மூன்றும் தீர்ந்த பொருள் என்க. அஞ்சுதல் மூன்றும் நன்கு தெளியப்பட்டவை என்னலுமாம். 73. இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும் விரிகட லூடுசெல் வானுமிம் மூவர் அரிய துணிந்துவாழ் வார். (ப-ரை): இரந்து கொண்டு - பிறரிடம் இரந்துபெற்று, ஒண்பொருள் செய்வல் - ஒள்ளிய பொருளைத் தேடுவேன், என்பானும் - என்று கருதுபவனும், பரந்து ஒழுகும் - ஒருமைப் பாடின்றி உள்ளம் திரிய ஒழுகும், பெண்பாலை - விலைமகளை, பாசம் என்பானும், - அன்புடையாள் என்று கருதுபவனும் விரிகடலூடு - அகன்ற மாகடலினூடே, செல்வானும் - பொருள் தேடச் செல்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், அரிய துணிந்து - அரியனவற்றைத் துணிந்து, வாழ்வார் - ஒழுகுபவராவர். எ-று. அரியன - இயலாததும், இல்லாததும், அஞ்சத் தகுவதும் ஆம். பாசம் என்னும் பண்புப்பெயர் பண்பியின்மேல் நின்றது. இழித்தற் குறிப்பால் 'பெண்பால்' என்றார். முன்னர் 'பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பால்' என்றமையுங் காண்க. 74. கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர் புல்லுங்காற் றான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன் றீகென் பவனை நகுவானு மிம்மூவர் யாதுங் கடைப்பிடியா தார். (ப-ரை): கொலை நின்று - கொலைத் தொழிலில் நிலை பெற்று, தின்று ஒழுகுவானும் - அதனால் வந்த ஊனைத் தின்று வளர்பவனும், பெரியவர் - பெரியோர்கள், புல்லுங்கால் - தன்னைத் தழுவுமிடத்து, தான் புல்லும் - தானும் அவரைத் தழுவும், பேதையும் - அறிவிலாதவனும், இல் எனக்கு - எனக்கு இல்லை, ஒன்று ஈக - ஒரு பொருளை ஈவாயாக, என்பவனை - என்றிரப்பவனை, நகுவானும் - இகழ்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், யாதும் - ஓரறத்தையும், கடைப்பிடியாதார் - உறுதியாகக் கைக்கொள்ளாதவராவர். எ-று. வணங்குதற்குரிய பெரியாரை எதிர்புல்லுபவன் உலகநடை அறியாதவனாகலின் 'பேதை' என்றார். இல் எனக்கு - பொருளில்லா எனக்கு என்றுரைத்தலுமாம். ஈக என்பதன் அகரம் தொக்கது. 75. வள்ளன்மை பூண்டான்கட் செல்வமு முள்ளத் துணர்வுடையா னோதிய நூலும் - புணர்வின்கண் தக்க தறியுந் தலைமகனு மிம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். (ப-ரை): வள்ளன்மை -வரையாது கொடுத்தலை, பூண்டான் கண் - கடனாகக் கொண்டவனிடத்துள்ள, செல்வமும் - பொருளும், உள்ளத்து - மனத்தினாற் சிந்தித்தறியும், உணர்வு உடையான் - அறிவுடையவன், ஓதிய நூலும் - கற்ற நூலும், புணர்வின்கண் - பிறர் தன்னைச் சார்ந்தவிடத்து. தக்கது அறியும் - அவர்க்குச் செய்யத் தகுவதனை அறியவல்ல, தலைமகனும் - தலைவனும், இம்மூவர் - இந்த மூவரும், பொத்து இன்றி - பொந்து இல்லாமல், காழ்த்த - வயிரம் பற்றிய, மரம் - மரம்போல் உறுதியுடையராவர். எ-று. நூல் - கல்வியுமாம், தலைவியுடன் கூடிய காலத்து நலம் பாராட்டுதல் முதலிய தகுதியினை அறியும் தலைவன் என்றுரைத் தலுமாம். செல்வம், நூல் தலைமகன் என்பன. திணைவிரவி, என உயர்திணை முடிபேற்றன. இவற்றுள் முன்னைய இரண்டும், " உள்ளத் துணர்வுடையா னோதிய நூலற்றால் வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் என நாலடியாரில் உவமையும் பொருளுமாக வந்திருத்தல் அறியற் பாலது. பொத்து - பொந்து; வலித்தல் விகாரம். 76. மாரிநாள் வந்தவிருந்து மனம் பிறிதாய்க் காரியத்திற் குன்றாக் கணிகையும் - வீரியத்து மாற்ற மறுத்துரைக்குஞ் சேவகனு மிம்மூவர் போற்றற் கரியார் புரிந்து. (ப-ரை): மாரிநாள் - மழைக் காலத்தில், வந்த விருந்தும் - வந்த விருந்தினரும், மனம் பிறிது ஆய் - உளம் மாறுபட்டு, காரியத்தில் - தனது கருமத்தில் நின்றும், குன்றாக் கணிகையும் - குன்றா தொழுகும் வேசைமகளும், வீரியத்து - போரிடத்து, மாற்றம் - தலைவனது சொல்லை, மறுத்து உரைக்கும் - மறுத்துக் கூறும் சேவகனும் - வீரனும், இம்மூவர் - இந்த மூவரும், புரிந்து - விரும்பி, போற்றற்கு - பேணுதற்கு, அரியார் - அரியவர். எ-று. மழைக்காலத்தில் வந்த விருந்தினரை அவர் ஏகுங்காறும் உண்டியும் உடையும் கொடுத்துப் பாதுகாத்தல் யாவர்க்கும் எளிதன்றென்பதும், கவர்த்த மனமுடையளாய்ப் பொருள் வௌவுதலாகிய தன் இயல்பினின்றும் மாறாதிருக்கும் கணிகையை ஒரோவழி அவள் எய்திய எளிமை நோக்கி இரங்கிப் பாதுகாக்கப் புகின் பொருளையிழந்து துன்புற நேரும் என்பதும், தலைவன் ஆணைக்குக் கீழ்ப்படியாத போர்வீரனை வைத் திருத்தலால் பகையை வெல்லுதல் அரிதென்பதும் தோன்ற 'இம்மூவர் போற்றற்கரியார்' என்றார். "வீரியத்து . . . . . சேவகனும்" என்பதற்குத் 'தலைவன் பகைவர்மேற் கருணையாற் சொல்லுஞ் சொல்லை மறுத்துப் போருக்குச் செல்லும் வீரன்' என்று பொருள் கொண்டு இம்மூவரும் போற்றுதற்கு அருமையானவர் என்றுரைப்பாருமுளர்; இப்பொருள் பொருந்துமேற் கொள்க. 77. கயவரைக் கையிகந்து வாழ்த னயவரை நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் - தெள்ளி வடுவான வாராமற் காத்தலிம் மூன்றும் குடிமா சிலார்க்கே யுள. (ப-ரை): கள்வரை - கீழ்மக்களை, கையிகந்து - விட்டுநீங்கி, வாழ்தல் - ஒழுகுதலும், நயவரை - நல்லவரை, நள்இருளும் கைவிடா - பாதியிரவிலும் கைவிடாமல், நட்டு - அவருடன் நட்புப் பூண்டு, ஒழுகல் - ஒழுகுதலும், வடுவான - குற்றம் பயக்கும் செயல்கள் வாராமல் காத்தல் - தங்கண் உண்டாகாமல் தடுத்தலும், இம்மூன்றும்- இந்த மூன்றும், குடி - குடிப்பிறப்பில், மாசுஇலார்க்கே - குற்றம் இல்லாதவர்க்கே, உள - உண்டாகும். எ-று. கையிகத்தல், கைவிடாமை என்பவற்றில் கை என்பன வேறு பொருளின்றி, வினையுடன் ஒட்டி ஒரு சொல்லாய் நின்றன. நயவர் - நற்குணமுடையார்; நீதியுடையார் என்றுமாம். விடா - ஈறு கெட்டது. வடு - குற்றம்; பழியுமாம். குடிமாசிலார் - நற்குடிப் பிறந்தார். 78. தூய்மை யுடைமை துணிவாத் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகும் - தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும் தவத்திற் றருக்கினார் கோள். (ப-ரை): தூய்மை உடைமை - தூய தன்மையுடைமை, துணிவுஆம் - துணிவுடைமைக்கேதாகும். வாய்மையுடைமை - உண்மை யுடைமை, வனப்பு ஆகும் - அழகிற் கேதுவாகும், தீமை - தீமை யுடையவற்றை, மனத்தினும் வாயினும் சொல்லாமை - உள்ளத்தால் உள்ளுதலும் வாயாற் சொல்லுதலும் இன்மை, தொழில் அகற்றும் - தீய தொழில்களின்றும் நீக்கும், மூன்றும் - இந்த மூன்றும், தவத்தில் தருக்கினார் - தவத்தினால் மிக்காரது, கோள் - கொள்கைகள் எ - று. மனந்தூயார்க்கு அச்சமின்றாகலின் 'தூய்மையுடைமை துணிவாம்' என்றும், 'பொய் சிதைக்கும் பொன்போலு மேனியை' என்பவாகலின் 'வாய்மையுடைமை வனப்பாகும்' என்றும், தீமையை மனத்தால் நினைத்தலும் வாயாற் சொல்லுதலும் இல்லார்க்கு அவற்றின் வழிப்பட்ட தீத்தொழில் நிகழ்தலின்மையின், அவை 'தொழிலகற்றும்' என்றும் கூறினார். தொழிலகற்றும் என்பதனைச் சொல்லாமை என்பதன்பின் மாட்டேற்றியுரைக்க. தொழில் என்றது ஈண்டுத் தீத்தொழிலை. மனத்திற்கேற்ப நினையாமை என்பது விரித்துரைக்க. இனி, துணிவாந் தொழிலகற்றும் வாய்மையுடைமை என்றும், வனப்பாகுந் தீமை என்றும் இயைத்து. நலிந்து பொருள் கொண்டு, தூய்மை யுடைமையும் வாய்மையுடைமையும் சொல்லாமையும் என எண்ணி முடிப்பாருமுளர். துணிவாந் துணிவகற்றும் என்பதற்கு மெய்ந்நூல்களாலே 'துணியப் பட்ட தாகிய நற்செய்கையை விரிக்கும் என்பதும் வனப்பாகுந் தீமை' என்பதற்கு மங்கையருடைய அழகாகிய தீமையைத் தருவது என்பதும் அவர் கொண்ட பொருள்களாம். 79. பழியஞ்சான் வாழும் பசுவு மழிவினாற் கொண்ட வருந்தவம் விட்டானும் - கொண்டிருந் தில்லஞ்சி வாழு மெருது மிவர்மூவர் நெல்லுண்ட னெஞ்சிற்கோர் நோய். (ப-ரை): பழி அஞ்சான் - பழிக்கு அஞ்சாதவனாகி, வாழும் - ஒழுகும், பசுவும் - ஆவினை யொத்தவனும், கொண்ட அரும் தவம் - மேற்கொண்ட அரிய தவவொழுக்கத்தை, அழிவினால் - மனவுறுதியின்மையால், விட்டானும் - கைவிட்டவனும், கொண்டிருந்து - மணஞ்செய்து வைத்து, இல் - மனைவிக்கு, அஞ்சி வாழும் - அஞ்சியொழுகும், எருதும் - எருதைப் போல்வானும், இவர் மூவர் - இவர் மூவரும், நெல் உண்டல் - உணவினை உண்டிருத்தல், நெஞ்சிற்கு - அறிவுடையோர் நெஞ்சிற்கு, ஓர் நோய் - ஒரு நோயாகும் எ - று. மக்கட்குரிய சிறப்பறிவின்மையின் பசு என்றும், எருது என்றும் கூறினார். இச்செய்யுளைத் திணை விரவிய உயர்திணை முடிபு பெற்றதற்கு உதாரணமாகக் கூட்டினார் சங்கரநமச்சிவாயப் புலவர் முதலாயினார். அதற்கேற்பப் 'பழியஞ்சா வாழும்' எனப் பாடங்கொள்வது சிறப்பு. அழிவு - வறுமையும் ...... நெல் - உணவிற்காயிற்று. உணவினையுண்டு புவிக்குப் பொறையாக - இருந்தல் என்றபடி. 'நெல்லுண்ட நெஞ்சு' என்ற பாடத்துடன் பழைய வுரைகளிற் காணப்படுகின்றது. 80. முறைசெய்யான் பெற்ற தலைமையு நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் - நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பு மிவைமூன்றும் தூற்றின்கட் டூவிய வித்து. (ப-ரை): முறை செய்யான் - நீதி நூல்வழி முறைசெய்யுந் திறமில்லாதவன், பெற்ற தலைமையும் - பெற்ற அவைத் தலைமையும், நெஞ்சில் நிறையிலான் - உள்ளத்தின்கண் அவாவுடையான், கொண்ட தவமும் - மேற்கொண்ட தவமும், நிறை ஒழுக்கம் - நிறைந்த நல்லொழுக்கத்தை, தேற்றாதான் - அறிந்து நடவாதவன், பெற்ற வனப்பும் - பெற்ற வழகும், இவை மூன்றும் - இவை மூன்றும், தூற்றின்கண் - புதலிடத்து, தூவிய வித்து - விதைத்த விதையை யொக்கும் எ. று. தலைமை - முறை செய்யும் மன்றின் றலைமை, நிறை - சிந்தையின் நிறைவாகிய செல்வம்; நிறையின்மை - அச்செல்வ மின்மையாகிய நல்குரவு.; புலன்களிற் செல்லாது நிறுத்துந் தன்மையைப் பேணலும்.... பாதுகாத்தலும் நிறையொழுக்கம் - சால்பும் ஒழுக்கமும், இந்த மூன்றும் பயனில வென்பதாம். 81. தோள்வழங்கி வாழுந் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கு நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானு மிம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார். (ப-ரை): துறைபோல் - தன் கட் செல்வார்க்கெல்லாம் பொதுவாய் நீர்த்துறைபோல, தோள்வழங்கி வாழும் கணிகையும் - பொருள் கொடுப்பார் யாவர்க்கும் தோள் களை விற்று வாழும் வேசையும், வாழும் - வாழும், நாள் - நாடோறும், கழகம் - பார்க்கும் - சூதாடுமிடத்தையே நோக்கிச் செல்லும், நயம் இலா - நன்மை பயத்தல் இல்லாத, சூதனும் - சூதினையாடுவோனும், வாசிகொண்டு - மிகு வட்டி கொண்டு, ஒண் பொருள் செய் வானும் - ஒள்ளிய பொருளீட்டுவானும், இம்மூவர் - இந்த மூவரும், ஆசைக்கடலுள் - ஆசையாகிய கடலினுள்ளே, ஆழ்வார் - முழுகி யழுந்துவார் எ - று. நாளும் என்னும் உம்மைதொக்கது. நயமிலா என்னும் பெயரெச்சம் சூதர் என்பதன் முதனிலை கொண்டு முடியும். " பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் என்னும் வாயுறை வாழ்த்து ஈண்டு அறியற் பாலது. நயம் - நீதி யென்றுமாம் இவர்களுடைய ஆசைகளுக்கு அளவில்லை யென்றவாறு. 82. சான்றாருட் சான்றா னெனப்படுத லெஞ்ஞான்றும் தோய்ந்தாருட் டோய்ந்தா னெனப்படுதல் - பாய்ந்தெழுந்து கொள்ளாருட் கொள்ளாத கூறாமை யிம்மூன்றும் நல்லாள் வழங்கு நெறி. (ப-ரை): சான்றாருள் - குணங்களானிறைந்தவர் அவைக்கண், சான்றான் எனப்படுதல் - சால்புடையான் என்று சொல்லப் படுதலும், எஞ்ஞான்றும் - எக்காலத்தும், தோய்ந்தாருள் - நெஞ்சு கலந்து நட்டார் குழாத்தின்கண், தோய்ந்தான் எனப்படுதல் - உள்ளங் கலந்த நண்பன் என்று சொல்லப்படுதலும், பாய்ந்து எழுந்து - தம் மீது பாய்ந் தெழுந்து, கொள்ளாருள் - தாம் கூறிய வற்றை ஏற்றுக்கொள்ளா தாரவைக்கண், கொள்ளாத கூறாமை - அவனாற்கொள்ளப்படாத நற்சொற்களைச் சொல்லாமையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், நல்ஆள் - வழங்கும் நெறி - நற்பண்புடையவன் செல்லும் வழிகள் எ - று. எனப்படுதல் ..... தோய்தல் - கலத்தல், நற்பண்புடையவன் நட்டவர், பாய்ந்தெழுதல் - தோட்புடையார் ....வெகுளுதல். 83. உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும் நட்பின் கொழுமுளை பொய்வழங்கி னில்லாகும் செப்ப முடையார் மழையனைய ரிம்மூன்றும் செப்ப நெறிதூரா வாறு. (ப-ரை): உப்பின் பெருங்குப்பை - உப்பினது பெரிய குவியல், நீர் படியின் - நீர்கலந்தால், இல்லாகும் - இல்லையாகும், நட்பின் கொழுமுளை - நட்பின் செழிய முளை, பொய் வழங்கின் இல்லாகும் - பொய்கூறின் இல்லையாகும், செப்பம் உடையார் - நடுநிலையுடையார், மழையனையர் - மழையை யொப்பர். இம்மூன்றும் - இந்த மூன்றும், செப்ப நெறி - தூராத ஆறு - நல்நெறி அடையாமைக்கு ஏதுவாவன எ. று. முளையாவது ஆரம்பம். மழையனையர் - மேகம் போற் கைம்மாறு கருதாது யாவர்க்கும் நலம் புரிந்து வாழ்பவர். செய்யுள் தோறும் மூன்று பொருள் கூறும் முறைமைக்கேற்ப ஈண்டு இம் மூன்றும் என்றாராயினும், உப்பின் பெருங் குப்பை நீர் படியினில் லாகும் என்பதனை, அடுத்து வரும் நட்பின் கொழுமுளை பொய் வழங்கினில்லாகும் என்பதற்கு உவமை மாத்திரமாகக் கொண்டு, பொய் வழங்காமையும் மழையனைய ராதலும் என்னு மிரண்டும் செப்ப நெறி தூராதவை என்பது கருத்தாகக் கொள்க. 84. வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத் தாய்முலை யுண்ணாக் குழவியுஞ் - சேய்மரபிற் கல்விமாண் பில்லாத மாந்தரு மிம்மூவர் நல்குரவு சேரப்பட் டார். (ப-ரை): வாய் நன்கு அமையா - நீர் வரும் வழி நன்கு பொருந்தப் பெறாத, குளனும் - குளமும், வயிறு ஆர - வயிறு நிறைய, தாய் முலை உண்ணாக் குழவியும் - தாயின் முலைப்பால் உண்ணாத குழவியும், சேய் மரபின் - தொன்றுதொட்டமுறைப்படி, கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் - கல்வி மாட்சியைப் பெறாத மக்களும், இம்மூவர் - இந்த மூவரும், நல்குரவு சேரப்பட்டார் - வறுமையால் அடையப்பட்டவர் எ - று. வாய் - வழி; மதகு. சேய் என்பதற்கு மாணாக்கர் எனப் பொருள் கொண்டு, மாணாக்கர் கல்வி கற்கும் வழிபாட்டு முறைப் படிக் கல்வியைப் பெறாத மாந்தர் என்றுரைத்தலுமாம். இளம் பருவத்திற் கல்வியைப் பெறாத மாந்தர் என்றுரைப் பாருமுளர். துணிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினார். திணை விரவிச் சிறப் பினால் உயர்திணை முடிபு பெற்றது. 85. எள்ளப் படுமரபிற் றாகலு முள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையு முட்டின்றி உள்பொருள் சொல்லு முணர்ச்சியு மிம்மூன்றும் ஒள்ளிய வொற்றாள் குணம். (ப-ரை): எள்ளப்படும் மரபிற்று ஆகலும் - (தன் வடிவு) கண்டோரால், இகழப்படும் முறைமையையுடையதாகலும் - உள்பொருளை - உண்மைப்பொருளை, கேட்டு - தானே கேட்டு, மறவாத கூர்மையும் - அதனை மறத்தல் இல்லாக் கூரியவறி வுடைமையும், முட்டு இன்றி - குறைவில்லாமல், உள்பொருள் - முன்கேட்ட உண்மைப் பொருளை, சொல்லும் உணர்ச்சியும் - தன் தலைவனிடத்துச் சொல்லும் அறிவுடைமையும், இம்மூன்றும் - இந்த மூன்றும், ஒள்ளிய - ஒண்மையுடைய, ஒற்றாள் குணம் - ஒற்றனின் பண்புகளாம் எ - று. வடிவு என்பது வருவித்துரைக்க. "கடாஅவுருவோடு" என்பவாகலின், நன்கு மதிக்கப்படாத வடிவு வேண்டியதாயிற்று. செய்கை எள்ளப்படு மரபிற் செலும் என்றுரைத்தலுமாம். நிகழ்ந்த காரியத்தை ஐயந் திரிபின்றி அறியல் வேண்டுமென்பார் உள் பொருளைக் கேட்டு என்றார். ஒண்மை - அறிவு. ஒற்று ஆள் - ஒற்றாகிய ஆள். ஒற்றாள் குணம் என இயல்பாகலுமாம். 86. அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்புணை காதலிற் கைவிடுதல் நட்பி னயநீர்மை நீங்க லிவை மூன்றும் குற்றந் தரூஉம் பகை. (ப-ரை): அற்புப் பெருந்தளை - உயிர்கண் மாட்டுத் தனக்குள்ள அன்பாகிய பெரிய தளை, யாப்பு நெகிழ்ந்து ஒழிதல் - கட்டுந் தளர்ந்து நீங்குதலும், கற்புப் பெரும்புணை - கல்வியாகிய பெரிய தெப்பத்தை, காதலின் கைவிடுதல் - பொருள் மீதுண்டாய வாசையாற் கைவிடுதலும், நட்பின் - நட்புப்பூண்டொழுகுங்கால், நயம் நீர்மை - அதற்குரிய நல்ல தன்மையினின்றும், நீங்கல் - நீங்குதலும், இவை மூன்றும் - இவை மூன்றும் குற்றம் தரூஉம் பகை - தனக்குக் குற்றத்தைத் தரும் பகைகள் எ - று. அற்பு - அன்பு. கற்பு - கல்வி. "கைப்பொருள் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணுமாகும், மெய்ப்பொருள் விளைக்கு நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும்" என்பவாகலின், கற்புப் பெரும் புணை என்றார். ஒருவரிடத்துள்ள நட்பினால் நீதித் தன்மை யினின்று நீங்கல் எனலுமாம். 87. கொல்வது தானஞ்சான் வேண்டலுங் கல்விக் ககன்ற வினம்புகு வானு மிருந்து விழுநிதி குன்றுவிப் பானுமிம் மூவர் முழுமக்க ளாகற்பா லார். (ப-ரை): கொல்வது - கொல்லுந் தொழிலை, அஞ்சான் - அஞ்சாதவனாகி, வேண்டலும் - அதனை விரும்புபவனும், கல்விக்கு அகன்ற - கல்விக்குச் சேய்மையான, இனம் புகுவானும் - தீய கூட்டத் திலே சேர்பவனும், இருந்து - ஒரு முயற்சியுஞ் செய்யாதிருந்து, விழுநிதி - முன்னுள்ள சிறந்த பொருளை, குன்றுவிப்பானும் - குறையச் செய்பவனும், இம்மூவர் - இந்த மூவரும், முழு மக்கள் ஆகற்பாலார் - அறிவிலார் ஆகும்பான்மை யையுடையார் எ - று. தான், அசை. வேண்டலும் என்பதற்கு வேண்டுபவனும் என்று பொருள் கொள்க. தொழிற்பெயர், இம்மூவர் என்பதனோடு இயையாமையின், முழுமக்கள் என்பதற்கு, முன் 'பெருமை யுடையார்' என்னுஞ் செய்யுளுரையில் உறைத்தமை காண்க. கொல்வது தானஞ்சான் வேண்டலும் என்பதற்குத் தன்னை வருத்துவதனைத் தான் அஞ்சாதவனாகி அடைய விரும்புபவனும் என்று ரைப்பாருமுளர். 88. பிணிதன்னைத் தின்னுங்காற் றான்வருந்து மாறும் தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும் பிணைசெல்வ மாண்பின் றியங்கலுமிம் மூன்றும் புணையி னிலைகலக்கு மாறு. (ப-ரை): பிணி - நோய், தன்னைத் தின்னுங்கால் - தன்னை வருத்துங் காலத்து, தான் வருந்துமாறும் - தான் வருந்துமியல்பும், தணிவு இல் - தாழ்தல் இல்லாத, பெருங் கூற்று - பெரிய கூற்றுவன், உயிர் உண்ணுமாறும் - உயிரைக்கவரவருமியல்பும், பிணை செல்வம் - பிணைந்த செல்வம், மாண்பு இன்று இயங்கலும் - நன்னெறியின்றிச் செலவிடப் படுமியல்பும், இம்மூன்றும் - இந்த மூன்றும் புணையின் நிலை - பற்றுக் கோடாவாரினது நிலைமையை, கலக்குமாறு - கலக்குந் தன்மையையுடையன எ. று. தின்னுதல் - வருத்துதல்; "உருவினை யுள்ளுருக்கித் தின்னும் பெரும் பிணி" என்றார் முன்னும். பிணைசெல்வம் என்பதற்கு விரும்பப்படும் செல்வம் எனப் பொருளுரைப்பின் பிணைச் செல்வம் என்பது தொக்கதாகக் கொள்க. சுற்றத்தார் முதலியோர் வந்து சேர்தற்குக் காரணமாகிய செல்வம் என்றுரைப்பாருமுளர். மாண்பின்றியங்கல் என்பதற்கு நிலையின்றி யொழிதல் என்றுரைத் தலுமாம். புணையின் நிலை - மரக்கலம் போலும் மனத்தின் நிலை யெனலுமாம். 89. அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும் இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார். (ப-ரை): அருளினை - அருளை, நெஞ்சத்து - உள்ளத்தின் கண், அடை கொடாதானும் - அடையச் செய்யாதவனும், பொருளினைத் துவ்வான் - பொருளைநுகராதவனாகி, புதைத்து வைப்பானும் - மண்ணிற்புதைத்து வைப்பவனும், இறந்து - நெறிகடந்து, இன்னா, சொற்களை, சொல்ல கிற்பானும் - சொல்லும் வன்கண்மையுடை யவனும், இம்மூவர் - இந்த மூவரும், பிறந்தும் - உலகத்து மக்களாய்ப் பிறந்தும், பிறந்திலாதார் - பிறவாதவராவர் எ-று. அடைகொடாதான் - அடைவியாதவன், துவ்வான் - முற்றெச்சம், இனம் பற்றிப், பிறர்க்கு வழங்காதவனாகியென்றும் உரைத்துக் கொள்க. இறத்தல் - நெறிகடத்தல்; "இறந்தார்வாய், இன்னாச் சொல் நோற்கிற்பவர்" என்புழி இறந்தார் என்பதற்கு, நெறியைக் கடந்தார் என்று பரிமேலழகர் உரைத்திருப்பது காண்க. சொல்லகிற்பான் என்பதில் கில் வன்கண்மையை உணர்த்துகின்றது. மக்கட் பிறப்பின் பயனை அடையாமையின் பிறந்திலாதார் என்றார். பின்னரும் இவ்வாசிரியர் "பிறந்தும் பிறவாதவர்என்பர்". 90. ஈதற்குச் செய்க பொருளை யறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை யாதும் அருள்புரிந்து சொல்லுக சொல்லையிம் மூன்றும் இருளுலகம் சேராத வாறு. (ப-ரை): ஈதற்கு - பிறர்க்கு ஈதற்பொருட்டு, பொருளைச் செய்க - பொருளை ஈட்டுக, அறநெறி சேர்தற்கு - அற வழியையடைதற் பொருட்டுப், பெருநூலைச் செய்க - பெரிய நூற் பொருள்களைக் கற்க, யாதும் - எத்துணையும், அருள்புரிந்து - அருளை விரும்பி, சொல்லைச் சொல்லுக - நல்ல சொற்களைக் கூறுக, இம்மூன்றும்- இந்த மூன்றும், இருள் உலகம் இருளையுடைய நரகவுலகத் தின்கண், சேராத ஆறு - அடையாத வழிகள் எ - று. செய்க பெருநூலை என்புழிச் செய்க என்பதற்குத் தகுதி பற்றிக் கற்க வென்றுரைக்கப்பட்டது. யாது சொல்லையும் என விகுதி பிரித்துக் கூட்டி யுரைத்தலுமாம். புரிதல் - விரும்புதல், இருள் - நரக வகையுளொன்று. "அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லையிருள் சேர்ந்த இன்னா வுலகம் புகல்" என்னும் குறளும், 'இருள் செறிந்த துன்பவுலக மென்றது திணிந்த விருளையுடைத் தாய் தன்கட் புக்கார்க்குத் துன்பஞ் செய்வதோர் நரகத்தை ; அது கீழ்உலகத்தோரிட மாகலின் உலகமெனப்பட்டது' என்னும் அதன் உரைக்குறிப்பும் ஈண்டு அறியற்பாலன. 91. பெறுதிக்கட் பொச்சாந் துரைத்த லுயிரை இறுதிக்கண் யாமிழந்தே மென்றன் - மறுவந்து தன்னுடம்பு கன்றுங்கானா ணுதல் லிம்மூன்றும் மன்னா வுடம்பின் குறி. (ப-ரை): பெறுதிக் கண் - செல்வம் பெற்றகாலை, பொச் சாந்து - தெய்வத்தை மறந்து, உரைத்தல் - கூறத் தகாதவற்றைக் கூறலும், இறுதிக்கண் - வாழ்நாளின் முடிவு நெருங்கியகாலை, யாம் - நாம், உயிரை - பெறுதற்கரிய இவ்வுயிரினை, இழந்தேம் என்றல் - அவமே இழந்தோம் என்று இரங்கலும், தன் உடம்பு - தன்னுடைய உடல், கன்றுங்கால் - நோயினால் வருந்துமிடத்து, மறுவந்து - உள்ளம் மறுகி, நாணுதல் - முன் செய்த தீவினையை நினைந்து நாணுதலும், இம்மூன்றும் - இந்த மூன்றும், மன்னா உடம்பின் குறி - அறிவு பொருந்தாத உடம்பின் செய்கைகளாம் எ - று. 'செல்வம் வந்துற்றகாலைத் தெய்வமும் சிறிது பேணார், சொல்வன அறிந்து சொல்லார்' என்பதனால்; கீழோர் செல்வமுற்ற காலத்துத் தெய்வத்தை மறத்தலும் மிகுதிச் சொல் சொல்லலுங் காண்க. துன்புற்ற காலத்துப் பிறர் செய்த யுதவியைச் செல்வமுற்ற காலத்து மறந்து ரைத்தல் என்றுமாம்; "கெட்டிடத் துவந்த வுதவி கட்டில்", வீறு பெற்று மறந்த மன்னன்போல" (குறுந்தொகை - 225) என்னும் சான்றோருரையும் நோக்குக. இதற்கு எடுத்துக் காட்டா வான் பாஞ்சால மன்னன் துருபதன் என்க. 92. " விழுத்திணைத் தோன்றா தவனு மெழுத்தினை ஒன்று முணராத வேழையும் - என்றும் இறந்துரை காமுறு வானுமிம் மூவர் பிறந்தும் பிறவா தவர்" (ப-ரை): விழுத்திணை - (ஒழுக்கத்தால் உயர்ந்த) சிறந்த குடியில், தோன்றாதனும் - பிறவாதவனும், எழுத்தினை - கல்வியை, ஒன்றும் உணராத - சிறிதும் அறியாத, ஏழையும் - அறிவில்லாதவனும், என்றும் - எப்பொழுதும், இறந்து உரை - நெறி கடந்து பேசுதலை, காமுறுவானும் - விரும்புவோனும், இம்மூவர் - இந்த மூவரும், பிறந்தும் - உலகில் தோன்றி வைத்தும், பிறவாதவர் - தோன்றாதவரேயாவர். எ- று. ஒழுக்கம், வாய்மை, நாண் முதலிய பண்புகள் உயர் குடிப்பிறந்தார் மாட்டு இயல்பினைமையுமென்னுங் கருத்தால் அக்குடியிற் பிறவாமையைப் பயனிலதாகக் கூறினாரேனும், உயர்குடிக்குரிய ஒழுக்கம் முதலியன இல்லாதவன், பயனிலி யாவன் என்பது கருத்தாகக் கொள்க. ஈண்டு எழுத்து என்றது கல்வியை. உரை - முதனிலைத் தொழிற்பெயர். இறந்துரைக்கும் உரை என விரித்துரைத்தலுமாம். காமுறுவானும் - விரும்புவோனும், இம்மூவர் - இந்த மூவரும், பிறந்தும் - உலகில் தோன்றி வைத்தும், பிறவாதவர் - தோன்றாதவரேயாவர் எ - று. 93. இருளாய்க் கழியு முலகமும் யாதுந் தெரியா துரைக்கும் வெகுள்வும் - பொருளல்ல காதற் படுக்கும் விழைவு மிவைமூன்றும் பேதைமை வாழு முயிர்க்கு. (ப-ரை): இருளாய்க் கழியும் - எப்பொழுதும் இருள் போன்று கழியும், உலகமும் - உலக வாழ்க்கையும், யாதும் - (நன்மை தீமைகளில்) ஒன்றும் தெரியாது. உரைக்கும் - உணராது சொல்லுகின்ற, வெகுள்வும் - சினமும், பொருள் அல்ல - நற்பொருள்களல்லா தவற்றை, காதற்படுக்கும் - விரும்பும், விழைவும் - விருப்பமும், இவை மூன்றும் - இம்மூன்றும், வாழும் உயிர்க்கு - இவ்வுலகில் வாழ்ந்து வரும். மக்கள் உயிர்க்கு, பேதைமை - அறியாமையை விளைப் பனவாம் எ - று. உலகம் - உலக வாழ்க்கை. மக்கட் பண்பின்மையால் யாவ ரோடும் கலந்து அறியப் பெறாதார்க்கு உலகிய லொன்றும் தெரியாதாகலின் அவர்கள் வாழ்க்கையை இருளாய்க் கழியும் உலக வாழ்க்கை யென்றார். " நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும் பாற்பட்டன் றிருள்" என்னும் திருக்குறள் ஈண்டு அறியற்பாலது. உரைக்கும் - உரைத்தற் கேதுவாகிய. 94. நண்பிலார் மாட்டு நசைக்கிழமை செய்வானும் பெண்பாலைக் காப்பிகழும் பேதையும் - பண்பில் இழுக்கான சொல்லாடு வானுமிம் மூவர் ஒழுக்கங் கடைப்பிடி யாதார். (ப-ரை): நண்பு இலார் மாட்டு - நட்புக் குணம் இல்லாதவ ரிடத்து, நசைக் கிழமை, செய்வானும் - நட்புரிமை செய்கின்றவனும், பெண்பாலை - தன் மனைவியை, காப்பு இகழும் - காத்தலை இகழு கின்ற, பேதையும் - அறிவிலியும், பண்பும் இல் - குணமில்லாத, இழுக்கு ஆன சொல் ஆடுவானும் - குற்றமாகிய சொல்லைச் சொல் பவனும், இம்மூவர் - இந்த மூவரும், ஒழுக்கம் - தாம் ஒழுகுந்திறத் தினை, கடைப்பிடியாதார் - உறுதியாகக் கொள்ளாதவ ராவர் எ- று. நண்பிலார் மாட்டு, நசைக்கிழமை செய்தல் - நட்கத் தகாதவ ரிடத்து நட்புச் செய்தல் என்றபடி, அன்றி, பழகிய நண்பரல்லாரை நண்பராகக் கருதி அவர் மாட்டு நட்புரிமை செய்தல் என்றுமாம். உரிமை செய்தல் - அவர் வினையைக் கேளாது செய்தல், கெடும் வகை செய்தல், பெண்பால் என்றது ஈண்டு மனைவியை. சொல்லுக்குப் பண்பாவன இனிமை, வாய்மை, பயனுடைத்தாதல் முதலியன. (94) 95. அறிவழுங்கத் தின்னும் பசிநோயு மாந்தர் செறிவழுங்கத் தோன்றும் விழைவுஞ் - செறுநரின் வெவ்வுரை நோனா வெகுள்வு மிவைமூன்றும் நல்வினை நீக்கும் படை. (ப-ரை): அறிவு அழுங்க - அறிவு கெடும் வண்ணம், தின்னும்- வருத்துகின்ற, பசி நோயும் - பசிப் பிணியும், மாந்தர் - மக்களது, செறிவு அழுங்க - அடக்கம் கெடும்படி, தோன்றும் - தோன்று கின்ற, விழைவும் - விருப்பமும், செறுநரின் - பகைவர்களுடைய, வெவ்வுரை - கொடுஞ்சொற்களை, நோனா - பொறுக்காமைக்குக் காரணமாகிய, வெகுள்வும் - சினமும், இவை மூன்றும் - இம் மூன்று குணங்களும், நல்வினை - அறவினையை, நீக்கும் - அழிக்கின்ற, படை - படைக்கலங்களாம். எ - று. அழுங்கல் - கெடுதல், செறிவு - அடக்கம்; "செறிவறிந்து சீர்மை பயக்கும்" என்பது காண்க. ஈண்டு அடக்கமாவது புலன டக்கம். நோனா - பொறுக்காத; நோன்றல் - பொறுத்தல். நல்வினை என்பதற்கு மேற்கொண்ட நல்ல கருமம் என்றுரைத்தலுமாம். 96. கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன செய்வகை செய்வான் றவசி கொடிதொரீஇ நல்லவை செய்வா னரசனிவர் மூவர் பெய்யெனப் பெய்யு மழை. (ப-ரை): கொண்டான் - கணவனுடைய, குறிப்பு அறிவாள் - உள்ளக் குறிப்பினை யுணர்ந்து நடப்பவளாகிய, பெண்டாட்டி - மனைவியும், கொண்டன - தான் மேற்கொண்ட விரதங்களை, செய்வகை - செய்யும் முறைப்படி, செய்வான் - செய்பவனாகிய, தவசி - தவமுடையோனும், கொடிது - தீமையை, ஒரீஇ - விலக்கி, நல்லவை - குடிகளுக்கு நன்மையானவற்றை, செய்வான் - செய்வப னாகிய, அரசன் - அரசனும் (ஆகிய), இம்மூவர் - இம்மூவரும் - பெய்என - பெய்யென்று சொல்ல, மழை பெய்யும் - மழையானது பெய்யும் எ- று. பெண்டு - பெண்மை; பெண்டாட்டி - பெண்மையை ஆளுபவள்; ஈண்டு மனைவியென்னும் பொருட்டு, குறிப்பறிவாள் பெண்டாட்டி யாவள், செய்வகை செய்வான் தவசியாவான், நல்லவை செய்வான் அரசனாவன் எனத் தனித்தனி முடித்து இவர் மூவரும் பெய்யென மழை பெய்யும் என்றுரைத்தலுமாம். உலகம் நலம் பெறுதற்குக் கற்புடை மாதரும், தவஞ் செய்வாரும், நீதிமன்னரும் இன்றியமை யாதவ ரென்பது பெற்றாம். 97. ஐங்குரவ ராணை மறுத்தலு மார்வுற்ற எஞ்சாத நட்பினுட் பொய்வழக்கும் - நெஞ்சமர்ந்த கற்புடை யாளைத் துறத்தலு மிம்மூன்றும் நற்புடை யிலாளர் தொழில். (ப-ரை): ஐங்குரவர் - . . . . , ஆணை - ஏவலை, மறுத்தலும் - மறுத்தலும் - மறுத்து நடத்தலும், ஆர்வு உற்ற - விருப்பம் மிக்க, எஞ்சாத - குறைவில்லாத, நட்பினுள் - நண்பரிடத்து, பொய் வழக்கும் - பொய்கூறுதலும், நெஞ்சு அமர்ந்த - உள்ளம் விரும்பிய, கற்பு உடையாளை - கற்புடைய மனைவியை, துறத்தலும் - நீக்கி விடலும், இம்மூன்றும் - இம்மூன்றும், நற்புடை இலாளர் - நற்சார்வு இல்லாதவருடைய, தொழில் - செய்கைகளாம் எ - று. ஐங்குரவராவார் ஐந்து பெரியவர்களுடைய உவாத்தியான், தாய், தந்தை தமையன் என்போர். ஆர்வுற்ற நட்பு, எஞ்சாத நட்பு எனப் பெயரெச் சங்களைத் தனித்தனிக் கூட்டுக. நற்புடை - நற்சார்வு; நல்லினம். இனி நற்புடை - தருமசிந்தை என்றலுமாம். 98. செந்தீ முதல்வ ரறநினைந்து வாழ்தலும் வெஞ்சின வேந்தன் முறைநெறியிற் சேர்தலும் பெண்பால் கொழுநன் வழிச்செலவு மிம்மூன்றுந் திங்கண் மும்மாரிக்கு வித்து. (ப-ரை): செந்தீ சிவந்த முத்தீ வேள்விக்கும், முதல்வர் - முதன்மையான அந்தணர், அறம் நினைந்து வாழ்தலும் - தமக்குரிய அறங்களை மறவாது செய்து வாழ்தலும், வாழ்தலும் - வாழ்ந்துவரலும், வெஞ்சின வேந்தன் - கொடிய கோபத்தினை யுடைய அரசன், முறைநெறியில்- நீதி நெறிக்கண், சேர்தலும் - செல்லுதலும், பெண்பால் - ஒருபெண், கொழுநன்வழி - கணவனுடைய குறிப்பின்வழியே, செலவும் - செல்லுதலும், இம்மூன்றும் - இந்த மூன்று செயல்களும், வித்து - திங்கள் மும்மாரிக்கு - மாதந் தோறும் பெய்ய வேண்டிய மூன்று மழைக்கும், வித்து - காரணங்களாம் எ - று. அந்தணர் அறத்தாலும் அரசனது நீதியாலும் மகளிர் கற்பாலும் திங்கள் மும்மாரி பெய்யும் என்றபடி. 99. கற்றாரைக் கைவிட்டு வாழ்தலுங் காமுற்ற பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி அல்லவை செய்யு மலவலையு மிம்மூவர் நல்லுலகஞ் சேரா தவர். (ப-ரை): கற்றாரை - கற்றறிந்த அறிஞர்களை, கைவிட்டு - விட்டு நீங்கி, வாழ்தலும் - (கீழாரொடு கூடி) வாழ்பவனும், காமுற்ற - தான் விரும்பியவற்றை, பெட்டாங்கு - தான் விரும்பிய வாறே, செய்து - புரிந்து, ஒழுகும் - நடக்கின்ற, பேதையும் - அறிவில்லாதவனும், முட்டு இன்றி - யாதொரு தடையுமில்லாது, அல்லவை - தீமை யானவற்றை, செய்யும் - செய்கின்ற, அலவலையும் - கீழ்மகனும், இம்மூவர் - இந்த மூவரும், நல் உலகம் - நன்மை அமைந்த மேலுலகத்தை, சேராதவர் - அடையாதவராவர் எ - று. அலவலை - வீண் ஆரவாரஞ் செய்பவன் என்றுமாம். 100. பத்திமை சான்ற படையும் பலர் தொகினும் எத்துணையு மஞ்சா வெயிலானும் - வைத்தமைந்த எண்ணி னுலவா விழுநிதியு மிம்மூன்றும் மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு. (ப-ரை): பத்திமை சான்ற - (தம் மீது) அன்பு நிறைந்த, படையும் - சேனையும், பலர் தொகினும் - பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும், எத்துணையும் - எவ்வளவும், அஞ்சா - அச்ச முறாமைக்குக் காரணமாகிய, வைத்து அமைந்த - உணவு முதலிய எல்லாப் பொருளும் வைக்கப் பெற்று அமைந்த, எயில் அரணும் - மதிலையுடைய அரணும், எண்ணின் - அளவிடின், விழுநிதியும் - சிறந்த செல்வமும், இம்மூன்றும் - இந்த மூன்று பொருள்களும், மண்ஆளும் வேந்தர்க்கு - இவ்வுலகத்தினை ஆளுகின்ற வேந்தர்க்கு, உறுப்பு - உறுப்புக்களாம். எ - று. பத்திமை சான்ற படை - இறைவன் செறினும் சீர் குன்ற லில்லாத சேனை. எயில் என்றது உபலக்கணத்தால் அகழி, காடு முதலியவற்றையுங் குறிக்கும். அமைந்த - இலக்கணத்தால் அமைந்த வென்க; தொகுத்து வைக்கப்பட்டு நிறைந்த நிதியென்னலுமாம். அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்னும் ஆறங்கங் களுள் வினை செய்தற்கண் இன்றியமையாத மூன்றினை இதனுட் சிறந்தெடுத் தோதினார். திரிகடுகம் மூலமும் உரையும் முற்றிற்று.  * கோதாட்டொழி என்பதன்பின் ‘கௌவை யகற்று’ என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. ‘துன்பத்தை நீக்கு’ என்பது இதன் பொருள்.* * ‘மெல்லியா டோன் சேர்’ என்னும் பாடம்.  தாழை என்பது தென்னையையும் குறிக்கும். தென்னை மடல் பெரிதாயிருப்பினும் அதற்குச் சிறிதும் மணமில்லை.  (பா-ம்) 1. மன்னர்க் கழகு. 2. வணிகர்க்கழகு.  3. உழவர்க் கழகே ருழுதூண். 4.வருபொருள்.  (பா-ம்) 1. அறிவோர்க்கு. 2. வறியோர்க்கு.  3. கயத்துள். 4 . தாந்தர.  (பா-ம்) 1. பேசின். 2. கற்றோரை வருக வென்பார்.  (பா-ம்): 1. பின்பவட் பேணா, 2. தனியே யிருத்தி  3. மனுநெறி முறையின். 1 சில பதிப்பில் 'சிறியோர்' என்பது முன்னும் 'பெரியோர்' என்பது பின்னும் காணப்படுகின்றன. 1 அடினும் என்னும் இவ்வாக்கியம் 'ஊட்டினும் என மேல்வரும் வாக்கியமும் சில பதிப்புக்களிலேயே உள்ளன. 1. பொற்பன வெள்ளியை என்றும் பொற்பன வூர்தியை என்றும் பாடம். 2. மறப்பின்னாது என்றும் பாடம். 1. ஊணின்னாது என்றும் பாடம். 1. உடையின்னாது என்றும் பாடம். 1. புரைசேர் என்றும் பாடம். 2. கடு மொழி யின்னா என்றும் பாடம். 1. மனைவி தொழி லின்னா என்றும் பாடம். 1. வணரொளி என்றும் பாடம். 1. விழைவின்னா என்றும் பாடம். 1. அகம்வறியாளர் என்றும் பாடம். 1. கானாது என்றும் பாடம். 1. அறைபறை யாயவர் என்றும் பாடம். 2. உயிர்க்கின்னாது என்றும் பாடம். 1. இடுக்க ணனிகண்டா னன்கின்னா என்றும் பாடம். 2. கண்டாற் பெரிதின்னா என்றும் பாடம். 1. கிழமை யுடையாரை என்றும் பாடம். 1. மானாகம் என்றும் பாடம். 2. இன்னா தறிவறியான் என்றும் பாடம். 3. கீழ்நீர்ப்பாய்ந் தாடுதல் என்றும் பாடம். 1. நெ டுமாநீள் கோட்டுயர் பாஅய்த லின்னா என்றும் பாடம். 2. எண்ணறிய மாந்தர் என்றும் பாடம். 1. தன்மையிலாளர் என்றும் பாடம். 1. நடக்கி னனியின்னா என்றும் பாடம். 2. ஒழுக்கமிலாளர்க் குறைவுரைத்தல் என்றும் பாடம். 3. விழித்தகுநூலும் என்றும் பாடம். 1. குழலிலினிய என்றும் பாடம். 1. துறையறியா நீரிழிந்து என்றும் பாடம். 1. தீம்பெயல் வீழ என்றும் பாடம் 2. பொழுது என்றும் பாடம் 1. கொடுங்குழை என்றும் பாடம். 2. இழிந்தெழுந் தோங்கும் என்றும் பாடம். 1. கவின்கொள என்றும் பாடம். 1. நெறியிடை என்றும் பாடம். 1. திண்ணிதால் என்றும் பாடம். 1. ஏமார்ந்த என்றும் பாடம். 1. அசோகினிளந்தளிர் என்றும் பாடம். 1. எல்லியும் என்றும் பாடம். 2. செயல் என்றும் பாடம். 1. தோன்றிசின் மென்மொழி என்றும் பாடம். 1. பாராட்டில் என்றும் பாடம். 1. குமிழிணைப்பூ என்றும், குமிழிணர்ப்பூ என்றும் பாடம். 1. திரை நாற என்றும் பாடம் 1. கொள்ளப் பிறக்கும் என்றும் பாடம். 1. சென்று என்றும் பாடம். 1. பூமி புரள என்றும் பாடம். 2. உயர்நிலை என்றும் பாடம். 3. இணைதாழ என்றும் பாடம். 1. கருங்கதிர் என்றும் பாடம். 2. கணிவண்ணம் என்றும், கொண்டது என்றும் பாடம். 1. ‘முற்பகல்’ என்றும் பாடம். 2. ‘பிறபகல்’ என்றும் பாடம். 1. ‘எழூஉம்’ என்றும் பாடம். 1. ‘தூவெறிந்து’ என்றும் பாடம். 1. ‘மெய்ம்மறைப்ப’ என்றும் பாடம். 2. ‘இருங்கடலுணீலச்சுறாப்பிறழ்வ’ என்றும் பாடம் 1. ‘மைந்திழந்தாரிட்ட’ என்றும் பாடம் 1. ‘கைகடுணிக்க’ என்றும், 2. ‘திகழொளிய’ என்றும் பாடம். 1. ‘விளக்குப்போன்றனவே’ என்றும் பாடம். 1. ‘தடற்றிலங்கொள்வாள்’ என்றும் பாடம். 2. ‘எஃகங்காழ்’ என்றும் பாடம் 3. ‘தோன்றி’ என்றும் பாடம் 1. ‘தோற்றந்திரலிலா’ என்றும் பாடம். 2. தொல்வலியிற்றீர என்பதுவே சிறந்த பாடம். 1. ‘பூவியன்ற நீர்மிடா’ என்று பாடங் கொள்ளுதல் வேண்டும். 1. ‘வாளர்’ என்றும், 2. ‘ஓரி இகலனவாய்’ என்றும், 3. ‘வாய்துற்றிய ’ என்றும் பாடம். 1. ‘மடங்கன் மறமொய்ம்பின்’ என்றும் பாடம். 1. ‘செவ்வென்றாள்’ என்றும் பாடம். 1. ‘குடர் கொடு’ என்றும் பாடம். 1. பா-ம் - தோன்றுங் குடிமையும்