உரைவேந்தர் தமிழ்த்தொகை 24 செந்தமிழ் வளம் - 1 (கட்டுரைகள்) ஆசிரியர் ஒளவை துரைசாமி' இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 24 ஆசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 496 = 520 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 325/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராக வும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டு கிறது.பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற் களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச்சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக் கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும்பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின்அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xx நூலடக்கம் செந்தமிழ் வளம் - 1 1. பண்டைத் தமிழகம் - I 1 2. பண்டைத் தமிழகம் - II 8 3. எழுதா இலக்கியம் 19 4. குணமாலை 27 5. இளங்கோ கண்ட இயற்கை 37 6. நந்தா விளக்கு 49 7. தமிழரசில் புலவர் பணி 59 8. முல்லை 73 9. புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகம் 108 10. முதனூலா? மொழி பெயர்ப்பா ? 145 11. சங்ககாலப் பரணர்கள் 152 12. தமிழகத்தில் தமிழ்நிலை 161 13. முல்லை-ஒரு சொற்பொழிவு 170 14. முடத்தாமக் கண்ணியார். 178 15. காதல் வாழ்வு 183 16. மறுப்பு முறை 189 17. நற்றிணைக் கடவுள் வாழ்த்து 194 18. கல்லாடனார் 197 19. சொகினனார், சொகிரனார் 209 20. கிழான் 217 21. தமிழரசு நீதி வழங்கிய திறம் 223 22. தொல்காப்பியச் சொல்லதிகாரக்குறிப்பு ஆராய்ச்சி 230 23. மதுரைக்காஞ்சியாராய்ச்சி 247 24. நன்னனும் பரணரும் 275 25. சிந்தாமணியின் செந்தமிழ் நலம் 294 26. மனைகெழு மடந்தை 321 27. ஒளவையாரும் பாரிமகளிரும் 329 28. நாடக வழக்கு 338 29. அருள் இயக்கம் 350 30. சங்க இலக்கியத் தனிச்சிறப்பு 360 31. மணிமேகலையில் அழகுணர்ச்சி 380 32. அறுவடையில் நிலவும் அருள் 398 33. சிலப்பதிகாரமும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளும்* 403 34. இன்ப நிலை 413 35. ஓர் திருமுகம் 428 36. தேம்பாவணி 429 37. தமிழுக்கு ஆக்கமாகும் பணிகள் 447 38. அகநானூற்று உரை 459 39. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் 464 40. தமிழ் இலக்கியத்தில் நெய்தல் திணை - அணிந்துரை 468 41. தமிழிசைப்பாடல் 474 42. கவிதைகளின் அணியமைப்பு 475 43. சங்ககாலத் தமிழ்மகன் 489  1. பண்டைத் தமிழகம் - i தமிழகத்து எல்லைகள் பண்டைத் தமிழறிஞர் தம்முடைய பாக்களில் தமிழ் நாட்டைத் ‘தமிழகம்’ என்று குறித்தனர். தொல்காப்பியத்துக்குப் பாயிரம் உரைத்த பனம் பாரனார், இதனைத் ‘தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று சிறப்பித்தார். இடைக்காலத்தே நிலவிய திருமூலர் ‘தமிழ் மண்டலம்’ என்று குறித்தாா. பிறநாட்டினருள் கங்கை பாயும் வங்க நாட்டினர் ‘தமிழகம்’ என்று குறிக்கவும், ஆரிய நாட்டினர் ‘திராவிடம்’ என்று செப்பினர். வங்க நாட்டில் பழங்காலத்தில் தமிழுக்கிருந்த தொடர்பால், ‘தமிளிக்’ என்று பெயருடைய மாவட்டம் ஒன்று இருந்து வருவது யாவரும் நன்கறிந்தது. மேலே கண்ட பனம்பாரனார், பண்டைத் தமிழகத்துக்கு எல்லையும் குறித்தார். “அது வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்பது. பின் வந்த நூல்கள் பலவும் இந்த எல்லைகளையே வற்புறுத்தின. இதனால், பண்டைத் தமிழகத்துக்கு வடக்கெல்லை வேங்கடம் என்பதும், தெற்கெல்லை குமரி என்பதும் தெளிவாயின. கிழக்கிலும் மேற்கிலும் கடலாதலால், அவ்விரண் டெல்லைகளும் கூறப்படவில்லை. வடவெல்லை தமிழகத்தின் வடவெல்லையானதால் வேங்கடம், ‘வட வேங்கடம்’ எனப்பட்டது. வேங்கடம் இப்போதுள்ள சித்தூர் மாவட்டத்துக்கு வடக்கெல்லையாகவும் நெல்லூர் மாவட்டத்துக்கு மேல் எல்லையாகவும் நிற்கும் நெடிய மலைத்தொடராகும்; இது சித்தூர் மாவட்டத்தில் மேற்கிலிருந்து கிழக்காக ஓடிப் பின் வடக்கு நோக்கி நெல்லூர் மாவட்டத்தின் மேலெல்லையாய் வடபெண்ணைக் கரைக்கு அப்பாலும் சிறிது தொடர்ந்து சென்றுள்ளது. நெல்லூர் மாவட்டத்தில் இப்போது அதற்கு வேறு பெயர்* கூறப்படினும், பழம்பெயர் வேங்கடம் என்பதை அவ்வட்டத்தில் சிறந்து விளங்கும் ‘வேங்கடகிரி நகரம்’ இருந்து காட்டிக்கொண்டு உளது. நெல்லூர் மாவட்டத்து வடபெண்ணைக் கரைக்கும் செங்கற்பட்டு மாவட்டத்துத் திருவொற்றி யூர்க்கும் இடையில் உள்ள பகுதிகளில் நிற்கும் பெருங்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் நூற்றுக்குத் தொண்ணூா று தமிழில் இருப்பதை ‘நெல்லூர்க் கல்வெட்டுக்கள்’ என்ற நூற்றொகுதிகள் ** காட்டுகின்றன. இவற்றால் வடவேங்கடம் எனப்படும் வடவெல்லை நெல்லூர் மாவட்டத்துத் தென்பகுதி முழுவதையும் தன்கண் அடக்கிக் கொண்டிருப்பது தெரியவரும். தென் எல்லை ‘தென் குமரி’ என்ற தென்னெல்லையைப் பற்றி அறிஞர் பலர் ஆராய்ச்சி செய்தனர். இன்று குமரிப் பகுதி கடலைத் தனக்குத் தென்னெல்லையாகக் கொண்டிருப்பது தெரிந்த செய்தியாகும். கடலை எல்லையாகக்கொண்ட ஏனைக் கிழக்கு மேற்குகளைப் போலக் குமரியும் கடலை எல்லையாகக்கொண்டு இருந்திருக்கு மாயின், பனம்பாரனார், தென்குமரி என்று பெயர் குறியாமல், ‘வடவேங்கடம் தென்கடல் ஆயிடை’ என்று குறித்திருப்பர். அவ்வாறு கூறாமையால், அவர் காலத்தே குமரிக்குத் தெற்கில் நிலப்பகுதி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் கருதினர். அதன் மேல் சிலப்பதிகார உரை, இறையனார் களவியலுரை என்ற பழைய உரை நூல்களை ஆராய்ந்த போது, குமரிக்குத் தெற்கில் பெரிய நிலப்பகுதி யிருந்தும், அஃது ஒரு காலத்தே கடல் கொள்ளப்பட்டதும் தெரியவந்தன. தஞ்சை மாவட்டத்துப் பகுதியில காவிரிப் பூம்பட்டினம் கடலுக்கு இரையானதும், நெல்லூர் மாவட்டத்தில் பவத்திரி நகரம் பௌவத்திற் படிந்ததும் பழைய நூல்களாலும் கல்வெட்டுக்களாலும் வெளிவந்து, குமரிக்குத் தென் பகுதி கடல் கொள்ளப்பட்டதென்ற உரை முடிவை வற்புறுத்துவனவாயின. இந்நிலையில், மேலை நாட்டு அறிஞர் சிலர் கடல்களின் உள்ளும் புறமும் ஆராய்ந்து, குமரிக்குத் தெற்கிலுள்ள கடலில் ஒரு பெரிய நிலப்பகுதி மறைந்துவிட்ட தென்றும், அதனிடையே நின்ற உயர்ந்த பகுதிகளே இன்று இலங்கையும் பிறவுமாகிய தீவுகளாகக் காட்சியளிக்கின்றன என்றும் துணிந்துரைத்தனர். கடல்கொண்ட நாட்டைப்பற்றிய குறிப்புக்களை நோக்கிய போது, வேங்கடம்போலக் குமரியும் ஒரு மலை என்பதும், அதற்குத்தெற்கில் பரந்துகிடந்த நாட்டின் தென்பால் பஃறுளி என்னும் ஆறு ஓடிற்றென்பதும், குமரிக்கும் பஃறுளிக்கும் இடையில் நாற்பத்தொன்பது நாடுகள் ஏழ்பனைநாடு, ஏழ்காரை நாடு, ஏழ்குன்றநாடு, ஏழ்பின்பாலைநாடு, ஏழ்முன் பாலைநாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்தெங்கநாடு என ஏழெழாக வகுப்புண்டிருந்தன என்பதும் புலனாயின. அந்த ஏழெழுநாடும் கடல் வயிறு புகுந்தன வாயினும், அவற்றின் உயர்நிலைப்பகுதி மாத்திரம் இன்று ஒரு தீவு வடிவில் இருந்துவருகிறது. ‘ஏழெழு நாடு’ என்ற அப்பழைய தொகைப்பெயர் திரிந்து ‘ஈழ நாடு’ என்ற பெயராய் மருவி நிலவுகிறது என்றுகூறுதல் பொருத்தமாகும். ஏழெழு நாட்டின் ஒருபகுதியான ‘ஏழ்பனைநாடு’ நாளடைவில் மருவி ‘யாழ்ப்பாண நாடு’ என்று ஆகி, இன்றும் நின்று விளங்குகிறது. ஏழெழுநாட்டின் வட வெல்லையாய் நின்ற குமரிமலை, கடல்கோட்குப்பின் தமிழகத்தின் தென்னெல்லையாயிற்று. பல்லாண்டு கட்குப் பின்னர்க் குமரிமலையும் கடலுள் ஆழவே, இன்றுள்ள குமரிமுனை தமிழகத்தின் தென் எல்லை ஆயிற்று, ஆகவே, பின் வந்தோர், “வேங்கடம் குமரி தீம்புனற் பௌவம் என்று, இந்நான்கெல்லை தமிழது வழக்கே” என்று தமிழகத்துக்கு எல்லை வகுத்து உரைப்பாராயினர். ஆகவே, தொல்காப்பியர்க்குப் பிற்பட்ட பண்டைத் தமிழகம் ன்பது வடக்கே வேங்கடத்தையும் ஏனை மூன்று பக்கங்களிலும் கடலையும் எல்லையாகக் கொண்ட நிலப்பகுதி எனத் தெளிகின்றோம். இதனைச் ‘செந்தமிழ் நிலம்’ என்றும், ‘செந்தமிழ் நாடு’ என்றும் சான்றோர்கள் பாராட்டிக் கூறுவது மரபாயிற்று. தமிழகத்து மலைகள் இதுகாறும் கண்டுதெளிந்த பண்டைத் தமிழகத்தில் சிறப்புடைய மலைகள் சிலவும் ஆறுகள் சிலவும் பண்டைத் தமிழ் நூல்களாகிய புறநானூறு முதலிய தொகை நூல்களால் அறிகின்றோம். மலைகள் வடவெல்லையாக நிற்கும் வேங்கடம் ஒழிய, மேலைக் கடற் கரைப் பகுதியில் ஒரு நெடிய மலைத்தொடர் உளது. அதற்கு இருபத்தைந்து கல் இடையகலமுள்ள பிளவு ஒன்று உண்டு. அதன் கிழக்கு வாயிலாகப் ‘பாலைக்காடு’ என்ற பேரூர் இருக்கிறது. அதனால் அப்பிளவு பாலைக்காட்டுக் கண்வாய் எனப்படுவது வழக்கம். இரண்டு - மூன்று நூற்றாண்டுக்கு முன் தோன்றிய கல்வெட்டுக்கள் பாலைக்காட்டைக் “பாலைக்கோடு” என வழங்கியிருக்கின்றன. பாலைக் காட்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் மலைத் தொடர் ‘வானமலை’யெனவும், தெற்குநோக்கிக் குமரிவரை செல்வது ‘தென்பொருப்பு,’ ‘தென்னம் பொருப்பு’ எனவும் வழங்கின. வானமலையின் வடபகுதியில உள்ள ஒருமலை ‘குதிரைமலை’ என்பது. கடற்கரையோரத்தில் நிற்கும் ஒருகுன்று ‘ஏழில் மலை’ என வழங்கியது. குதிரை மலை குதிரை மூக்கு (Gudramukh) என்றும், ஏழில்மலை எலிமலை (Mount Eli) என்றும் இப்போது பெயர் கூறப்படுகின்றன. தென்பொருப்பில் நேரிமலை, அயிரைமலை, பொதியில்மலை, நாஞ்சில்மலை முதலியன உண்டு. நாஞ்சில்மலை இடையில் ‘நஞ்சில்மலை’யாகி, ‘மருத்துமாமலை’ யென்ற பெயருடன் இருக்கிறது. ‘கவிரம்’ என்று பண்டைத் தொகைநூல் குறிக்கும்மலை, பொதியில்மலைப் பகுதியில் பாவநாச மேலணை மருங்கில் ஒன்றாக வுளது. காவிரியின் வடகரையில் கொல்லி மலையும், அதற்குக் கிழக்கில் திருச்சிராப் பள்ளி மாவட்டத்தில் விச்சிமலையும் உள்ளன. ‘விச்சிமலை’ இப்போது ‘பச்சைமலை’ யென்ற பெயர் தாங்கிக் கொண்டு நிற்கின்றது. ‘பவளமலை’ என்பது வடவார்க்காட்டு மாவட்டத்தில் அதற்கு மேலெல்லையாய்ச் ‘சவ்வாதுமலை’ என்ற பெயருடன் இருந்து வருகிறது. தமிழகத்து ஆறுகள் இம்மலைகளிலிருந்து தோன்றும் ஆறுகள் சில பண்டைத் தமிழகத்துக் குறிப்புக்களில் உள்ளன. அவற்றுள், பெண்ணை, காவிரி, வையை, பேரியாறு, வானியாறு என்பவை சிறந்தனவாகும். பெண்ணையாறு மைசூர் நாட்டில் தோன்றிச் சேலம், வடவார்க்காடு, தென்னார்க்காடு மாவட்டங்களில் ஓடிக் கடலோடு கலந்து விடுகிறது. காவிரி, வானமாமலையில் தோன்றி, மைசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பாய்ந்து கடலோடு கலக்கின்றது. வையை தென்பொருப்பில் தோன்றி மதுரை, இராமநாதபுர மாவட்டங்களின் வழியாகக் கடலை அடைகிறது. பேரியாறு வையை போலவே தென்பெருப் பிடத்தே தோன்றிக் திருவிதாங்கூர், கொச்சி என்ற நாடுகளின் வழியாக ஓடி, மேலைக்கடலை மேவுகின்றது. வானியாறு வானமா மலையின் வடபகுதியில் தோன்றி தென்கன்னட மாவட்டத்துக்கு வடவெல்லையாய் மேற்கே சென்று மேற்குக் கடலில் விழுகின்றது. ‘இந்த வானியாற்றின் நீர் மிக்க தெளிவுடையது; நீர் மிகப் பெருகி வரும்போதும், நீராடும் மகளிர் காதணியாகிய பொற்குழை அதன் கண் வீழ்ந்தால் அது கிடக்கும்மிடத்தை அந்த நீரின் தெளிவு காட்டிவிடும்’ என்னும் கருத்துப்பட, “கழைநிலை பெறாஅக் குட்டத் தாயினும் புனல்பாய் மகளிர் ஆட ஒழிந்த பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்துவரு வானி” என்று சான்றோர் தமிழ்நலம் தோன்றப் பாடியுள்ளனர். இனி, இவற்றின் வேறாகக் கீழ்க்கடலில் வெள்ளாறு, தண்ணான் பொருநை என்ற ஆறுகளும் மேலைக்கடலில் பொன்வாணி. பொருநை என்பனவும் சென்று சேர்கின்றன. பூவானி, ஆன்பொருநை என்ற ஆறுகள் காவிரியோடு கலந்து கொள்கின்றன. பண்டைத் தமிழகம் இந்தச் சிற்றாறுகட்குப் பெயரிட்டிருக்கும் திறத்தைச் சிறிது அறிதல் வேண்டும். தமிழகத்தில் ஓடும் சிறப்புடைய ஆறுகள் பலவும் மேலைமலைத் தொடரில் தோன்றுவன. அதன் வடபகுதியான வானமாமலையில் தோன்று வனவற்றுக்கு வானி என்பது பெயர். வானமா மலையின் வடகோடியில் தோன்றி மேலைக்கடலை அடையும் ஆற்றை ‘வானி’ என்றாற் போல, அதன் தென்கோடியில் தோன்றிப் பாலைக்காட்டுப் பிளவு வழியாகச் சென்று மேலைக் கடலோடு கூடும் ஆற்றுக்குப் ‘பொன்வானி’ என்பது பெயர். இப்போது வானியாறு ‘சிராவதி’ என்ற பெயரும் பொன்வானி ‘பொன்னானி’ என்ற பெயரும் கொண்டுள்ளன. இடையில் தோன்றுவன கிழக்கே ஓடிக்காவிரியில் கலந்து கொள்கின்றன. அவற்றுள் வடக்கில் மைசூர் நாட்டில் ஓடி வருவது ‘கீழ்ப்பூவானி’ எனப்படும்; ஆயினும், அதனை இன்று கெப்பானி என்பர். மற்றொன்று ‘பூவானி’ என்பது; அஃது இப்போது ‘பவானி’ என மருவிக் கோயம்புத்தூர் வட்டத்தில் காவிரியோடு கலந்துவிடு கிறது. கோயம்புத்தூர் நகர்க்கு அண்மையிலோடும் ‘நொய்யல்’ என்னும் ஆறு பண்டைத் தமிழ் நூல்களில் ‘காஞ்சி’யென்ற பெயர் பூண்டிருந்தது. இனி, மேலைமலையின் தென்பகுதியான பொருப்பிடைத் தோன்றும் சிறப்புடைய ஆறுகள் பொருநை என்ற பெயர் கொண்டு நிலவின. மேலைமலையில் தோன்றி மேற்கே சென்று கடலகம் புகுந்த ஆற்றுக்குப் ‘பொருநை’ என்பது பெயர். அது முடியும் இடம் பொருநைத்துறை என வழங்கிற்றாயினும், இன்று அது ‘திருப்புனித் துறா’ என உருத்திரிந் துள்ளது. கிழக்கே ஓடிய சிற்றாறு ‘ஆன்பொருநை’ என்ற பெயருடன் சென்று காவிரியில் கலந்து கொள்வதாயிற்று. ஆன்பொருநை இப்போது ஆம்பிராவதி, அமராவதி என்ற பெயர் பெற்றுள்ளது. இவ்வாறே தண்ணான் பொருநை என்னும் ஆறு ‘தாம்பிரபரணி’ என மருவித் திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்ந்து கீழ்க்கடலைச் சேர்ந்து விடுகிறது. மேலே கூறிய மலைகளையும் ஆறுகளையும் எல்லையாகக் கொண்டே பண்டைத் தமிழ் மக்கள் நாடுகளை வகுத்துக்கொண்டனர். தென்குமரிக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் கிடந்த பகுதி பாண்டிநாடாகும். வெள்ளாறு இப்போது புதுக்கோட்டைக்கு அண்மையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிக் கடலில் கலந்து விடுகிறது. வெள்ளாற்றுக்கும் தென்பெண்ணையாற்றுக்கும் இடை யிலுள்ளது சோழநாடு. தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்டது தொண்டை நாடு. தொண்டை நாட்டுக்கு மேலெல்லையாக வேங்கடமும் பவளமலையும் நின்றாற் போலச் சோழநாட்டுக்கு மேலெல்லையாக விச்சிமலையும் கொல்லிமலையும் ஆன்பொருநையாறும் விளங்கின. தெற்கில் வெள்ளாற்றுடன் சிறுமலையும் எல்லையாயிற்று. மேலைக்கடற்கரையில் தெற்கில் கோட்டாற்றுக்கும் வடக்கில் வானியாற்றுக்கும் இடையே கிழக்கே மேலைமலைத்தொடரை எல்லையாகக் கொண்டு சேரநாடு விளங்கிற்று. வானியாற்றுக்கும் பொன்வானியாற்றுக்கும் இடையிலுள்ளது குட நாடு என்றும், பொன்வானிக்கும் கோட்டாற்றுக்கும் இடைப்பட்ட நாடு குட்டநாடு என்றும் பண்டைநாளில் பெயர் பூண்டிருந்தன. கோட்டாறு இப்போது கொல்லத்தாறு என வழங்குமாயினும், அதன் கரையிலுள்ள கொட்டாரக்கரா எனப்படும் கோட்டாறு பழம் பெயரை நினைப்பித்துக் கொண்டு நிற்கிறது. சேரநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடையிலுள்ள நாட்டைக் கொங்கு நாடு என்றும், சேர நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் இடையிலுள்ள நாட்டைத் தகடூர் நாடு என்றும் பண்டையோர் குறித்துள்ளனர். தொண்டை நாட்டுக்கு வடமேற்கிலும் தகடூர் நாட்டுக்கு வடக்கிலும் உள்ளது புலி நாடு என்றும், அதன் மேலைப்பகுதி புன்னாடு என்றும் வழங்கின. ‘புல்லிநாடு’ என்ற பழம் பெயர் ‘புலிநாடு’ என்றும் ‘புன்னாடு’ என்றும் மருவின.  2. பண்டைத் தமிழகம் - II சேரநாடு இதுகாறும் கண்ட சேரபாண்டிய சோழ நாடுகளை ஆண்ட தமிழ் வேந்தர்கள் முறையே சேரர், பாண்டியர், சோழர் என்ற பெயருடன் முன்னாளில் சிறப்புற்றிருந்தனர். அம்மூவரையும் இந்த முறையிலேயே பண்டைச் சான்றோர்களும் நிறுத்திக் கூறியுள்ளனர். சேரருக்குப் பனந்தோடும், பாண்டியருக்கு வேம்பும், சோழருக்கு ஆத்தியும் அடையாள மாலைகளாகும். அவற்றைக் கூற வந்த தொல்காப்பியம், “போந்தை வேம்பே ஆர்என வரூஉம், மாபெருந் தானையர் மலைந்த பூவும்” என முறைசெய்து காட்டுகின்றது. இவ்வேந்தர்களின் குணஞ் செயல்களை குறிக்கும் புறநானூறு என்ற பண்டைத் தமிழ் நூலும் இவர்கட்குரிய பாட்டுக்களை இம்முறை யிலேயே தொகுத்துள்ளது. தகடூர் நாட்டைச் சேரர் குடியிற் பிரிந்து போந்த அதியமான்கள் என்ற வேந்தர் பண்டை நாள் முதல் நெடுங்காலம் ஆட்சி செய்தனர். கொங்கு நாடுமட்டில் சேரர் முதலிய மூவருள் வலியுடையோர் ஆட்சியில் மாறி மாறி இருந்து வந்துள்ளது. சேரர் ஆட்சியில்தான் அது நெடுநாள் இருந்திருக்கிறது. சேரநாட்டுச் சேரர்க்கு வஞ்சி தலைநகரமும், முசிறி கடற்கரை நகரமுமாம். வஞ்சிமாநகர் இடைக்காலத்தே அஞ்சைக்களமாகி, இப்போது கொடுங்கோளூர் என்ற பெயருடன் இருந்துவருகிறது. முசிறி மறைந்துபோயிற்று. சேரர்க்குரிய குடநாட்டுக்கு மாந்தை உண்ணாட்டுத் தலைநகரமாகவும், தொண்டி கடற்கரை நகரமாகவும், இருந்தன. மாந்தை இடைக்காலத்தே மாதையாகி மறைந்து போயிற்று; அதன் சின்னமாகப் பழையங்காடி என்ற ஊர்மட்டும் புகைவண்டி நிலையமாய் உளது. தொண்டி சிறுத்து ஒரு சிற்றூராகி விட்டது. சேரநாட்டு அரசர் தொல்குடியினர் அதியர் உதியர் என இருவகையினராவர். அவருள் அதியர் வடபகுதியிலுள்ள குதிரை மலைநாட்டிலும், உதியர் குட்டநாட்டிலும் அரசுநிலையிட்டுப் பெருகினர். அதியர் கிழக்கே சென்று தகடூர் நாட்டில் இடம் பெற்றாராக, உதியர் குட்டநாட்டில் நின்று பெருவேந்தராய்ப் பிறங்குநிலை எய்தினர். குட்டநாட்டில் தோன்றிச் சேரநாடு முழுதும் ஆண்டவர் குட்டுவர் எனவும், குடநாட்டில் தோன்றிச் சேரவரசுக்கு உரியராயினோர் குடக்கோ, குடவர்கோ எனவும் குறிக்கப்படுவர். கடல் பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் என்றும், குடக்கோ நெடுஞ் சேரலாதன் என்றும் சேரவேந்தர் கூறப்படுவதைப் பழந்தமிழ் நூல்களில் காணலாம். பின்னர், குடநாட்டின் தென்பகுதி பொறைநாடு என்ற பெயருடன் பிரிந்தது. அதன்கண் தோன்றி முடிவேந்தரானோர் ‘இரும்பொறை’ எனப் பெயர் பூண்டனர். குடக்கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, சேரமான் கணைக்கால் இரும்பொறை என வரும் பெயர்கள் இதற்குச் சான்றாகும். பின்னர், செல்வக்கடுங்கோ, பொறையன் கடுங்கோ என்பவரும், குட்டுவன் கோதை, மாக்கோதை என்பவரும் தோன்றிச்சேரநாட்டை ஆண்டனர். அவர்கட்குப்பின் சேரலர் ‘கேரளரா’க, சேரலர்நாடு ‘கேரளநாடா’க மாறித் தமிழகத் தோடு தமிழ்த் தொடர்பு அற்றொழிந்தது. குட்டுவரும் குடவரும் பொறையரும் கடுங்கோக்களும் வீறுபெற்று விளங்கிய காலத்தில் சேரவரசு கொங்குநாடு முழுதும் பரந்திருந்தது. அக்காலத்தில் கொங்குநாட்டின் இடையில் ஆன்பொருநைக் கரையில ஒரு வஞ்சி நகரம் தோன்றிற்று; அதன்பின் ஆன்பொருநை காவிரியோடு கலக்குமிடத்தே ஒரு வஞ்சிநகர முண்டாயிற்று. இரண்டையும் வேறுபடுத்தற்கு இரண்டாவதாகத் தோன்றிய வஞ்சி, கருவூராக மாறிற்று. மேலைக்கடற்கரையில் முசிறிக்கு வடக்கிலுள்ள கருவூரின் நினைவுக்குறியாக, ஆன்பொரு நையின் கரையில் இக்கருவூரும், காவிரியின் வடகரையின் முசிறியும் உண்டாயின. பிற்காலச் சோழ வேந்தர் காலத்தில் கொங்குவஞ்சி இராசராசபுரம் என்ற பெயர்பெற்று, முடிவில் அதுவும் தேய்ந்து ‘தாராபுரம்’ என்ற பெயருடன் இன்று நிலவுவதாயிற்று. கடற்கரை வஞ்சிமாக் கோதையர் காலத்தில் மாக்கோதைப் பட்டினமாகிப் பின்னர் ‘மகோதை’யாய்க் குறுகி, மகோத்தியா பட்டினம், மகாதேவர் பட்டினம் என மருவி, முடிவில் அதுவும் மாய்ந்து அறவே மறைந்தது. இச்சேரமன்னரைப் பண்டையோர் வானவர் என்றும், வானவரம்பர் என்றும் கூறுவது வழக்கம். வானமலைக்கு உரியவரா தலால் ‘வானவர்’ என்றும், வானமாமலையைத் தமது நாட்டுக்கு வரம்பாகக் கொண்டதுடன், தங்கள்நாட்டின் வடக்கில், மேலைக் கடலொடு கலக்கும் வானியாற்றை வரம்பறுத்துக் கொண்டமையின் ‘வானவரம்பர்’ என்றும் சான்றோரால் சிறப்பிக்கப்பெற்றனர். “வசையில் வெம்போர் வானவன்” என்றும், “வானவரம்பனை நீயோ பெரும” என்றும் பழந்தமிழ் நூல்கள் உரைப்பது காணலாம். சேரநாட்டின் வடக்கில் இருந்த ஆரியர் நாடாகிய ஆரியகம், ‘ஆரியகே’ (Ariake) என்று தாலமி முதலிய யவனர்களால் குறித்துக் காட்டப்படுகிறது. வானமலைக்குக் கிழக்கிலுள்ளது என்று பொருள் படும் வானவாசிநாடு வேளகத்து வேளிரது ஆட்சிக்குரியது. வேளிரும் ஆரியரும் மிக்கு வாராதவாறு வானியாற்றை வரம்பாகக் கொண்டமை பற்றிச் சேரர் ‘வானவரம்பர்’ எனப்படுவாராயினர் என்று கொள்வது பொருத்தமாகும். சேரரது குடநாடு ஏறைநடு, பாயல்நாடு, பொறைநாடு, கொண்கானநாடு எனச் சில உண்ணாடுகளைக் கொண்டிருந்தது. ஏறைநாடு ஏர்நாடு எனவும், பாயல்நாடு வயனாடு எனவும், பொறைநாடு குறும்பர்நாடு (குறும்பொறைநாடு) எனவும், கொண்கானம் கொங்கணநாடு எனவும் இப்போது மாறி விட்டன. பண்டைய கற்காநாடு இன்று குடகு நாடாக விளங்குகிறது. பாண்டிய நாடு பாண்டியர் ஆண்ட பாண்டிநாட்டுக்கு மதுரை தலைநகரமும், கொற்கை கடற்கரை நகரமுமாகும். பழங்கால யவனர்களும் இந்நகரங்களைத் தங்கள் குறிப்பில் பொறித்துள்ளனர். மதுரைக்குக் ‘கூடல்’ என்றும் ஒரு பெயருண்டு. இதனால் “தமிழ் கெழு கூடல்” என்று முன்னைய சான்றோர் மொழிந்து சென்றனர். தமிழ்ச் சான்றோர் கூடித் தமிழ் ஆராயும் இடமாக இருந்ததுபற்றி மதுரை ‘கூடல்’ என்று பெயர் பெற்றது என்று அறிஞர் கூறுவதுண்டு. ‘ஆலவாய்’ என்ற பெயர் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்பட வில்லை. மதுரையைச் சூழவுள்ள நாட்டைக் ‘கடம்ப வனம்’ என்பதும் பண்டைத் தமிழ் நூல்களில் காணப்படவில்லை. மதுரையைச் சூழவுள்ள நாட்டைக் ‘கடம்ப வனம்’ என்பதும் பண்டைத் தமிழ் நூல்களில் குறிக்கப்படாத தொன்று. கொற்கை நகரம் இப்போது தண்ணான் பொருநையாகிய தாமிரபரணி கடலொடு கூடுமிடத்தே உள்ளது. முன்னாளில் கொற்கைப் பெருந்துறை முத்துக் குளிப்பதில் புகழ்பெற்று விளங்கிற்று. பொதியமலைச் சந்தனமும் கொற்கைத் துறை முத்தும் மேலைநாடுகளில் மேன்மைபெற்று விளங்கின. பாண்டியர் என்ற பெயரை ஆராய்ந்தோர் ‘பண்டையோர்’ என்ற சொல்லின் திரிபே பாண்டியர் என்பது என்று கண்டனர். பாண்டியர்களை மாறன், வழுதி, செழியன், தென்னவன் என்றும் கூறுவர். சேரன் வானவன் என்றாற்போலப் பாண்டியர் பொருப்பு மலையைத் தமக்கு உரியதாகக் கொண்டதனால், ‘தென்னம் பொருப்பன்’ என்றும், ‘பொருப்பன்’ என்றும், பொருப்பின் ஒரு பகுதியான கவிரமலையைச் சிறப்பாக உரிமைகொண்டது பற்றிக் ‘கவுரியா’ என்றும் (கவிரியர் என்பது கவுரியர் என மாறியதாகலாம்) சான்றோர் குறிப்பாராயினர். மீன்கொடி உடையரென்பதுகொண்டு ‘மீனவர்’ என்றும், பாண்டியர்க்குரிய ஐந்து முதுகுடிகளில் தோன்ற அரசமுடிபெற்ற காரணத்தால் ‘பஞ்சவர்’ என்றும் இவர்கட்குப் பெயர் குறித்தனர். பிற்காலத்தார், பாரத வீரருள் ஒருவனான அருச்சுனன் பாண்டியன் மகளொருத்தியை மணந்துகொண்டதனால் பாண்டியர் பஞ்சவராயினர் என உரைப்பாராயினர். பாண்டியரது பாண்டிநாடு மேலைக் கடற்கரையில் குமரி முதல் கோட்டாற்றுக் கரை (கொட்டாரக்கரா) வரையில் பரந்திருந்தது. கோட்டாற்றுக்கும் அதங்கோட்டுக்கும் இடைப்பகுதி வேணாடு என்றும், அதங்கோட்டுக்கும் தென் கோட்டாற்றுக்கும் இடையிலுள்ள நாடு நாஞ்சில் நாடு என்றும் பண்டை நாளில் நிலவின. நாஞ்சில் நாட்டை வள்ளியூரிலிருந்து வள்ளுவனும் அவன் வழிவந்தோரும், வேணாட்டை ஆய்குடியிலிருந்து ஆய் அண்டிரனும் அவன் வழி வந்தோரும் ஆண்டு வந்தனர். வள்ளியூர் திருநெல்வேலியிலிருந்து நாகர் கோயிலுக்குச் செல்லும் பெருவழியில் ஆரலைவாய் முழைக்கு அண்மையில் உளது. ஆய்குடி செங்கோட்டை வட்டத்திற் சிதைந்துள்ள ஊர்களில் ஒன்றாய் இன்றும் இலங்குகிறது. சோழ நாடு சோழ நாட்டை ஆண்ட சோழர்கள் பண்டைக் காலத்தில் உறையூரைத் தலைநகராகவும் காவிரிப் பூம்பட்டினத்தைக் கடற்கரை நகரமாகவும் கொண்டிருந்தனர். உறையூர் இப்போது காவிரியின் தென்கரையில் திருச்சிரப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. காவிரிப்பூம்பட்டினம் காவிரியாறு கடலோடு கலக்கு மிடத்தே இருந்து கடல்கோளால் அழிந்து போயிற்று. அஃது இருந்த இடத்தே இப்போதொரு சிற்றூர் அதே பெயருடன் அமைந்துள்ளது. சோழர் கொடியில் ‘புலி’ பொறித்திருப்பர். அவர்களை, வளவன், செம்பியன், சென்னி என்றெல்லாம் பண்டைய சான்றோர் குறித்துள்ளனர். சோழரது ஆட்சி வடவேங்கடம் வரையும் பரவிய பெருமையுடையது. சோழ நாட்டின் வடக்கிலுள்ள தொண்டை நாட்டுக்குச் காஞ்சி மாநகர் தலைநகரமும் பவத்திரி கடற்கரை நகரமுமாகும். இந்த நாட்டை ஆண்டவர் ‘தொண்டையர்’ எனவும், ‘திரையர்’ எனவும் பெயர் பெற்றனர். பிற்காலத்தே தென்பெண்ணைக்கும் காவிரிக்கும் இடையில் ஓடும் வெள்ளாற்றைச் சோழ நாட்டின் வடவெல்லையாக்கித் தென்பெண்ணைக்கும் வெள்ளாற்றுக்கும் நடுவிருந்த நாட்டை ‘நடுநாடு’ எனச் சான்றோர் குறிப்பாராயினர். சோழநாட்டுக்கு வடக்கில் வடவெள்ளாறும் தெற்கில் தென்வெள்ளாறும் எல்லையாயின. குறுநில மன்னர் சேரநாட்டைக் கண்டபோது, அதன் வடகிழக்கில் வேளகம் (Belgam) என்ற பெயரால் ஒரு வேள் நாடும், தெற்கில் அதற்கும் பாண்டி நாட்டுக்கும் இடையே ஆய்அண்டிரன் முதலியோர் விளங்கிய வேணாடும் கண்டாற்போல, பாண்டி நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையே பாண்டி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் வேள்பாரி, வேள் எவ்வி என்ற வேளிர்க்குரிய வேணாடு ஒன்றும், சோழ நாட்டுக்கும் தொண்டை நாட்டுக்கும் இடையே தொண்டை நாட்டின் தென் பகுதியில் ஒரு வேணாடும், சோழ நாட்டிற்கும் தகடூர் நாட்டுக்கும் இடையே நடுநாட்டின் மேலைப்பகுதியில் ஒரு வேணாடும், சோழ நாட்டுக்கும் கொங்கு நாட்டுக்குமிடையே ஆன்பொருநையின் கீழ்ப்பகுதியில் ஒரு வேணாடும், கொல்லிமலை விச்சிமலைப் பகுதியில் ஒரு வேணாடும் இருந்துள்ளன. இந்த வேணாடுகளை ஆண்ட வேளிர்களைக் குறுநில மன்னர் என்பர்; ஏனைச் சேர பாண்டிய சோழர்களை முடிவேந்தர் என வழங்குவர். இவ்விருதிறத்தார்க்கும் இடையே மகட்கொடை முறை நிலவியிருந்தது. தொண்டை நாட்டின் தென்பகுதியான வேணாட்டில் ஓவியர் என்பவர் வாழ்ந்தனர்; அதனால் அந்த நாடு ஓய்மானாடு என்றும், அதனை ஆண்ட வேளிர் தலைவன் ஓய்மான் நல்லியக்கோடன் என்றும் கூறப்படுவன். அவற்குத் தலைநகரம் தென்னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவனத்தைச் சேர்ந்த கிடங்கிலும் மாவிலங்கையு மாகும். திருவேங்கடத்தில் புல்லி என்னும் களவர் தலைவன் இருந்து தமிழகத்து வடதிசைக் காவலனாய் வயங்கினான். தென்பெண்ணை யாற்றின் தென்கரையில் இருக்கும் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட வேணாடு நடுநாட்டின் மேலைப்பகுதியில் மலையமானாடு, மலாடு என்ற பெயர் தாங்கி விளங்கிற்று. அதனை மலையமான் திருமுடிக்காரியும் அவன் வழி வந்தோரும் நெடுங்காலம் ஆட்சி புரிந்தனர். பிற்காலத்தே மலையமான்கள் கிளியூரைத் தலைநகராகக் கொண்டு ‘கிளியூர் மலையமான்கள்’ என வாழ்ந்தனர். அவர் நாடு ‘சேதிநாடு’ எனவும் ‘மகதை நாடு’ எனவும் பெயர்பூண்டன. ஆன்பொரு நையின் கிழக்கே சோழநாட்டைச் சேர இருந்த வேணாட்டில் ஆவியர் என்பார் வேள் ஆவி வழி வந்த வையாவிக் கோப்பெரும் பேகனாலும் அவன் வழியினராலும் ஆளப்பட்டு வந்தனர். கொல்லி மலையைச் சேர்ந்த வேணாட்டுக்கு மழநாடு என்றும், அங்கே வாழ்ந்த வரை மழவர் என்றும் பண்டையோர் குறித்தனர். விச்சி மலைப் பகுதியில் விச்சிக்கோவும் கண்டீரக்கோப் பெரு நள்ளியும் இருந்து நாடுகாவல் புரிந்தனர். விச்சிக்கோவுக்குரிய விச்சியூர் இப்போது ‘விச்சூர்’ என்றும், கண்டீரம் இளங்கண்டீரமென நின்று இன்று உருத்தெரியாவாறு மருவி ‘வாலிகண்டபுரம்’ என்றும் திருமுது குன்றத்துக்குத் தென்மேற்கில் உள்ளன. இவற்றின் வேறாக, திருக்கானப்பேரில் வேங்கை மார்பனும், கோடைமலையில் பொருநனும், திண்டுக்கல் பகுதியில உள்ள தோன்றிக்குடியில் தோன்றிக் கோமானும் திருவண்ணாமலைக்கு மேற்கிலுள்ள செங்கைமாவில் வேள் நன்னனும் வாழ்ந்திருந்தனர். தமிழர் நாகரிகம் முடிவேந்தரும் குறுநில மன்னருமாகிய தலை மக்களின் குடை நிழலில் இருந்த தமிழகத்து மக்களிடையே சிறந்த கருத்துக்கள் பல பொதுவாக நிலவியிருந்தன. நாடு, நாட்டில் வாழும் மக்கட்குரியது. நாட்டுமக்கள் நாடாளும் வேந்தர்க்கு உடம்பு போல்வர்; வேந்தன் அவ்வுடம்பில் உறையும் உயிராவன். “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்பதும் அரசியலின் அடிப்படை. அதனால் நாட்டுமக்களின் நற்பண்பும் நன்னடையும் பாதுகாப்பது வேந்தன் கடன். “நன்னடை நல்கல் வேந்தற்குக் கடன்” என்பர் பண்டைச் சான்றோர். “எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி” நாடும் நற்புகழ் எய்துகிறது. நன்மக்கள் அரசியலுக்கு “வேண்டுமிடத்து அறிவும்” படை வேண்டு வழி ஆளும் உதவுகின்றனர். நாட்டின் நலம் கருதி வேண்டுவன எடுத்தோதும் பேச்சுரிமையும், வேண்டுவோர் வேண்டிய தெய்வங்களை வழிபடும் வழிபாட்டுரிமையும், வணிகர்க்கு வாணிக உரிமையும் இயல்பாகவே அமைந்துள்ளன. மகளிர் கல்விப்பேற்றிலும் அரசியற் பணியிலும் ஆடவரை ஒப்ப உரிமை பெற்றுள்ளனர். “வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்” என்பது வாழ்க்கையின் குறிக்கோள். வாழ்வு யாவர்க்கும் பொதுவுரிமை; சிலர் வாழவும், சிலர் வாழ வகையின்றி வருந்தவும் காண்பது தமிழ்மரபன்று. பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறுத்தி, அவரையும் பெற்று வாழச் செய்வது பொருள் நெறி. அதனால் விருந்தோம்பல் பண்டைத் தமிழகத்தின் மேதக்க பண் பாடாக விளங்கிற்று. “செல்வத்துப் பயனே ஈதல்” என்பது செல்வர் கொள்கை. இவற்றின் உள்ளீடாக, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற கொள்கை இயங்கிற்று. இவ்வியக்கம், “தமக்கென முயலா நோன்றாள், பிறர்க்கென முயலும்” பெருமிதத்தை விளைவித்தது. நாரும் போழும் பருத்தியும் பட்டும் தழையும் பிறவும் கொண்டு தூசும் துகிலும் உடையும் ஆடையும் கச்சும் பிறவும் நெய்தலாகிய தொழிலும், நெற்சோறும் வேறுபல பண்ணியங்களும் விரவிய உணவுவகையும், தொழிற்குரிய கருவிகளும் நாடு முழுதும் காணப்பெறுகின்றன. “இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப”வும், “மைந்து பொருளாக”வும் நாட்டில் போர்கள் உண்டாகின்றன. போரின்கண், ஆவும் ஆனியற் பார்ப்பனமாக்களும் பெண்டிரும் பிணியுடையோரும் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றனர். அறம் பிறழாது நெறி வழுவாது போர்செய்து புண்ணுற்று வீழ்வோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் பகைவர் நண்பர் என்ற வேறு பாடின்றிப் புகழ்பெறுவதோடு, “பெயரும் பீடும் எழுதிய” பிறங்குநிலை நடுகல் நாட்டப்பெறுகின்றனர். தமிழ்மொழி இயல் இசை நாடகம் என முக்கூறுபட்டு அறிவுப்பணி ஆற்றுகின்றது. இயலைப் புலவர்களும், இசையைப் பாணர்களும், நாடகத்தைக் கூத்தர்களும் நயந்துபயின்று நல்வளம் பெறுவிக்கின்றனர். கரும்பு தின்றதிற்குக் கூலிபெற்றாற்போலப் புலவர் முதலாயினார் தாம் பெற்று நுகரும் தமிழ் இன்பத்திற்கு வேந்தரும் செல்வரும் பெரும்பொருள் நல்கப்பெற்று, அச்செல்வர்களின் புகழ் கொடை வெற்றி முதலிய நலங்களைப் பாடி, அவர்களை என்றும் பொன்றாத இசைவாழ்வு எய்து விக்கின்றனர். “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப” என்றும், இவ்வுலக வாழ்வில் “இசையுடையோர்க்கு அல்லது உயர்நிலையுலகத்து உறையுள் இல்லை” என்றும் நாட்டில் கொள்கைகள் சில தோன்றிப் புகழ் வேட்கையைப் பொலிவித்தன. “புகழெனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின் உலகு முழுதும் பெறுவதாயினும் வேண்டலர்,” என மக்கள் உரைக்கப்படுகின்றனர். “வயிற்றுத் தீத்தணிய” வேண்டுவதொன்றையே கருதி மானமின்றி இரந்துண்டலைப் பண்டைத் தமிழகம் வெறுத்தொழுகிற்று. அறத் துறை, பொருள் துறை, இன்பத் துறை போர்த் துறை முதலியவற்றில் புகழ் தருவனவற்றைப் பாராட்டியுரைப்பதும், மானக்கேடும் பழியும் விளைவிப்பவைகளைக் கடிந்து கழறுவதும் புலவர்களின் செயல்களாயின. பொதுவாக, வினையுணர்வும் மறுபிறப்பும். ஆண் பெண் அனைவருடைய உள்ளத்திலும் வேரூன்றி யிருக்கின்றன. உயிர்வாழ்க்கை எடுத்த உடம்பளவாய் நின்று மறைந்தொழியாது, முன்னும் பின்னும் தொடர்ந்து வினைக்கேற்ப மாறிவரும் என்றும், “நீர்வழிப்படும் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படும்” என்றும் “வாழச்செய்த நல்வினையல்லது, ஆழுங்காலைப் புணை பிறிது இல்லை” என்றும், இவ்வுலகு உயிர்கட்காகவே படைக்கப்பட்டதென்றும், உயிர்கள் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுடைய மக்களுயிர் ஈறாக அறுவகைப்படும் என்றும், இவ்வுயிர்கள் வினைக் கேற்பப் பிறந்து ஒடுங்குவதற்கென்றே இவ்வுலகு படைக்கப் பட்டதென்றும் தமிழர் கருதியிருந்தனர். வானத்தில் நிலவும் ஞாயிறு, திங்கள், விண்மீன், கோள்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அவை ஒவ்வொன்றிற்கும் இடையே “பரிப்பு” (ஈர்த்து நிற்கும் ஆற்றல்) உண்டென்றும், நிலத்தைச் சூழ்ந்து வானத்தில் இருக்கும் காற்று மண்டிலத்துக்கு அப்பால் காற்று வகையும் பிற எவையும் இல்லாத “வளியிடை வழங்கா வழக்கரு (Ethereal Region) நீத்தம்” உளதென்றும் கண்டிருந்தனர். பருவந்தோறும் பிழையாமல் வீசும் காற்றின் வரவு அறிந்து கடலில் கலம் செலுத்திப் பிறநாடுகட்குச் சென்று வாணிகம் புரிதற்குச் சிறந்த வழி கண்டவர் கரிகாலனுடைய முன்னோராகிய சோழர். அக்காற்றின் இயல்பைப்பற்றி எழுதிய யவனர் குறிப்பைக் கண்டவர், இத் தமிழ்க் குறிப்பு அறியாத காரணத்தால், ‘காற்றியல்பு தேர்ந்து கலஞ் செலுத்தியவர் யவனர்’ என்று கரைவாராயினர் பாண்டியர் தலைநகரத்தைத் “தமிழ்கெழு கூடல்” என்றாற் போலச் சோழரது உறையூர், “அறம் துஞ்சும் உறந்தை” என்று புகழப் பெறுகிறது. எனவே, அறம் தவறாதபெருமை சோழரது ஆட்சியின் சிறப்பியல்பு என்று முன்னாளைய தமிழகம் கண்டிருந்தமை தெளிவாகும். வேளிர் செய்த நற்பணிகள் சேர பாண்டிய சோழ நாடுகளின் எல்லைப் புறங்களிலிருந்து நாடு காவல் புரிந்த வேளிர்களின் செயல் நலங்கள் பல தமிழகத்தின் மாண்புக்குச் சிறப்பளித்துள்ளன. சேரநாட்டு வேளிர்களான அதியமான்கள் முதல் முதலாகக் கரும்பு பயிரிடும் திறத்தைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்தனர். செந்தமிழ் மூதாட்டியான ஒளவையார்க்கு அரிய நெல்லிக்கனி தந்து நெடுங்காலம் வாழ்ந்து தமிழ்ப் பணி செய்யுமாறு அறிவுப்பணி புரிந்தவர்களும் இந்த அதியமான்களே. ஒரு காலத்தில் இவர்களது ஆட்சி தொண்டை நாட்டுத் தென்பகுதி முற்றும் பரவியிருந்தது; தென் கெடில ஆற்றின் கரையில் உள்ள திருவதிகை அவர்கள் சிறப்புணர்த்தும் பேரூராக நிலவுகின்றது. சேர நாட்டின் தென்னெல்லையில் விளங்கிய வேணாட்டில் ஆய் முதலிய வேள்குடித் தலைவர் ஆட்சியில் வடதிசை இமயம் போலப் பொதியில்மலை புகழ்மிக்கு விளங்கிற்று. நாஞ்சில் மலைப்பகுதியில் வாழ்ந்த வேளிர்கள் முடிவேந்தர் அரசியலில் உள்படு கருமத் தலைவர்களாகவும் பணி செய்துள்ளனர். அவர்கள் வள்ளுவர் எனப்படுவர். அவர்தம் குடியைச் சேர்ந்த முன்னோர்களுள் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் சிறந்தோராவர். அவரைத் ‘தெய்வப் புலவன் திருவள்ளுவன்’ எனப் பண்டைச் சான்றோர் பாராட்டியுள்ளனர். அவருடைய திருக்குறள் இன்று உலக மெல்லாம் பரவும் உயர்தனிச் சிறபபுடைய நூலாக ஓங்கி நிற்கிறது. பாண்டி நாட்டுப் பகுதியில் பறம்புநாட்டுக்கு உரியனாய் வேள் பாரி விளக்க முற்றிருந்தான். இன்றும் கொடைக்கு எல்லையாக அவன் பெயரே குறிக்கப்படுகிறது. “கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இல்லை” என்று நம்பி ஆரூரர் கூறியுள்ளார். வையாவிக் கோப்பெரும் பேகன் இப்போது ‘பழனி’யென வழங்கும் பண்டைப் ‘பொதினி’ நகர்க்கண் இருந்து அரசு புரிந்த ஆவியர்குடித் தோன்றலாவன். முல்லைக்குத் தேர் ஈந்து மூவாப் புகழ்பெற்ற பாரிபோல வையாவிக்கோ மயிலுக்குப் போர்வை ஈந்து புலவர் பாடும் புகழ்பெற்று விளங்கினான். சோழநாட்டுக் குறுநிலக் தலைவர்களில் ஆதனுங்கன், கண்டீரக் கோப் பெருநள்ளி, கரும்பனூர் கிழான், சிறுகுடி கிழான் பண்ணன், சோழிய ஏனாதி திருக்குட்டுவன், தாமான் தோன்றிக்கோன், நல்லியக் கோடன், நல்லேர் முதியன், பொறையாற்று கிழான், மலையமான் திருமுடிக்காரி, வல்வில் ஓரி, விண்ணந்தாயன், வில்லிஆதன் முதலியோர் சிறந்து தோன்றுகின்றனர். மழநாட்டுக் கொல்லி மலைக்குரியவன் வல்வில் ஓரி; இவனை, “கொல்லி யாண்டவல்வில் ஓரி” என்று கூறுவர் வன்பரணர். திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டிருந்த மலையமான் திருமுடிக் காரியை, “துஞ்சா முழவின் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி” என்றும், “கடல்கொளப் படாஅது உடலுநர் ஊக்கார் கழல்புனை திருந்தடி காரிநின் நாடு,” என்றும் கபிலர் பாடுகின்றார். ஓய்மா நாட்டு நல்லியக் கோடனை, “பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடன்” எனப் புறத்திணை நன்னாகனார் புகழ்ந்து போற்றுகின்றார். இவ்வாறே ஏனையோரும் இனிய பாட்டுக்களால் சான்றோர் படைத்த இறவாப் புகழுடம்பு பெற்றுப் பொலிகின்றனர். முடிவுரை இதுகாறும் கண்ட முடிவேந்தரும் குறுநிலத் தலைவராகிய வேளிரும் இருந்து, கொடிது கடிந்து கோலோச்சி, இயலும் இசையும் கூத்துமாகிய முத்தமிழும் முறையே வளரக் காத்து ஓம்பிய பண்டைத் தமிழகம், இலக்கிய நெறியில் சான்றோர் பலரால் இன்பமும் பொருளும் அறமும் சிறந்து ஏற்றம் பெற்று இலங்கிற்று., சான்றோர் குழுவில் வேந்தரும் வணிகரும் வேளாளரும் அந்தணரு மெனப் பலர் இருந்தமை ஒருபுறம் நிற்க, பெண்பாலருள், அள்ளூர் நன்முல்லையார், இளவெயினியார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், காக்கை பாடினியார், நச்செள்ளையார் முதல் வெண்ணிக் குயத்தியார், வெறிபாடிய காமக்கணி நப்பசலையார் ஈறாகப் பலர் இருந்துள்ளனர். அவர்கட்குப் பண்டைத் தமிழ் வேந்தர் அரசியலில் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துளது. ஒளவையார் அதியமான் பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றதும். நப்பசலையார், சேரமன்னர் கடல் பிறக்கோட்டிய சிறப்பை நாட்டிற் பரப்பியதும், வெண்ணிக் குயத்தியார் சோழன் கரிகாலனது வெற்றி மேன்மையையும் சேரமன்னன் திருவுடை மானத்தையும் சிறப்பித்துப் பாடியதும் பிறவும் இன்றைய இளைஞர் உலகம் உள்ளங்கொள்ளற்குரிய உண்மைச் செய்திகளாகும். இவ்வண்ணம் அறிவால் ஆண்மையால் அறம் பொருள் இன்பங் களால் பண்புமேம்பட்டு விளங்கிய பண்டைநாளைப்போல் இன்றைய தமிழகமும் விளங்குதற்குரிய காலம் இளைஞர் முன்னே எதிர்நோக்கி வருகிறது. அவர்கள் அதனை அன்புடன் வரவேற்று இன்புறுவார்களாக!  3. எழுதா இலக்கியம் முகவுரை நம் தமிழகத்தில் ஏட்டில் எழுதப்படாமல் மக்கள் பேச்சு வழக்கிலேயே சில இலக்கிய மொழிகள் நிலவுகின்றன. பொருள் பொதிந்த சிறுசிறு சொற்களால் இயன்றுள்ள பழமொழிகளே அம்மொழிகள். அவை ஏட்டில் எழுதப்படாவிட்டாலும் கற்றவர் களால் பாராட்டப்பட்டும், இலக்கிய உரை வகையாகக் கருதப் பட்டும், தமிழ்ப் பெருமக்களால் போற்றப்பட்டும் வருகின்றன. அவைகளை, எழுதா இலக்கியம் என்பதோடு முதுமொழி யென்றும், பழங்காலமுதலே வழங்கி வருவதுபற்றிப் பழமொழி என்றும் சான்றோர் வழங்குவர். பழைமையும் சிறப்பும் "அப்பனைப் போலப் பிள்ளை" என்பது நாட்டில் வழங்கும் முதுமொழிகளில் ஒன்று. இதனைத் தொல்காப்பியனார் தமது தொல்காப்பிய நூலில், "தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கலும்" என்று கற்பியல் சூத்திரம் ஒன்றினுட் குறித்துள்ளார். "கும்பிட்ட தெய்வம் கொடுமை செய்யுமா?" என்பது ஒரு பழமொழி. இதனை நல்லந்துவனார் என்ற சான்றோர், "வழிபட்ட தெய்வந்தான் வலியெனச் சார்ந்தார்கட்கு, அழியும் நோய் கைம்மிக அணங்காகியது போல" என்று கலித்தொகையில் கூறியிருக்கின்றார். "இறைக்கிற ஊற்றுத்தான் சுரக்கும்" என்றொரு முதுமொழி நாட்டுப்புறங்களில் நிலவுகின்றது; இதை நம் திருவள்ளுவர், "மறைப்n மன்யான் இஃதோர் நோயை இறைப்பவர்க்கு, ஊற்றுநீர் போல மிகும்," என்று தமது திருக்குறளில் அமைத்து எழுதியிருக்கின்றார். இவ்வண்ணம் தமிழிலக்கிய உலகில் புகழ்பெற்ற சான்றோர் அனைவரும் எழுதா இலக்கியங்களாகிய அணிகலன்களில் வைத்து இழைத்து அழகு செய்திருக்கின்றார்கள். இப்பழமொழிகள் நுண்ணிய கருத்தும், சுருங்கிய சொல்லும், சொல்லுதற்கு எளிமையுமாகிய இனிய நலங்களை உடையன. இவற்றைக் கண்ட தொல்காப்பியர், இவற்றின் இலக்கிய மாண்பை வியந்து, "நுண்மையம் சுருக்கமும் ஒளியுடைமையும், என்ற இவை விளங்கத் தோன்றிக் குறித்த மொழி என்ப" என இலக்கணம் கண்டார். மேலும், அவர், "முதுமொழி என்ப" என்றதனால், அவர் காலத்துக்கு முன்பிருந்தே, சான்றோர்கள் இந்த முதுமொழிகளைக் கண்டு பாராட்டியிருக்கின்றனர் என்று அறிகின்றோம். இந்தப் பழமொழிகள் எல்லாம் உண்மை நிகழ்ச்சிகளைக் குறிப்பவை; இவற்றில் பொய்யோ புனைந்துரையோ இல்லை. அழகிய சொல்லாட்சியும் பிறிதுமொழிதல் முதலிய அணிநலமும் இவற்றின் தனிச்சிறப்பாகும். ஒருவர் வேறொருவரிடத்து ஒரு தொகையைக் கடனாக வாங்குகிறபோது முகம் ஒருவாறு மகிழ்ச்சி யாகவும், அதையே கொடுத்தவர் திரும்பக்கேட்டு வாங்கும் போது தருபவர் முகம் ஒருவாறு வேறுபட்டும் இருப்பது உண்மை நிகழ்ச்சியாம். இதுவே, "கேட்கிற போது பசப்பு, கொடுக்கிற போது கசப்போ?" என்னும் பழமொழியாக வழங்குகிறது. இதனை இப்போதும் காண்கின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்புவாழ்ந்த பாலை பாடிய பெருங்கடுங்கோ என்ற சான்றோர், "உண்கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும்தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறாகுதல் பண்டும் இவ்வுலகத்து இயற்கை அஃது இன்றும் புதுவ தன்றே புலனுடை மாந்தீர்" என்று பாடியுள்ளார். பழமொழி நானூறு எழுதா இலக்கியமாய் உண்மையும் இனிமையும் எளிமையும் கொண்டு இவை இருப்பது கண்டார் முன்றுறை அரையனார் என்ற சான்றோர். அவர் சுமார் 1500 ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்தவர். அவர் தமது காலத்தில் நிலவியவற்றில் நானூறு பழமொழிகளைத் தொகுத்து, ஒவ்வொன்றின் கருத்தையும் ஒவ்வொரு வெண்பாவில் வைத்துப் பழமொழி நானூறு என்ற பெயரிட்டு ஒரு நூல் பாடியிருக் கின்றார். அது பதினென் கீழ்க்கணக்கு என்ற நூல் வகையில் ஒன்றாய் இருக்கிறது. இப்பழமொழிகளில் மக்களுடைய சமுதாயம், பொருளாதாரம், வாணிகம், தொழில், சமயம், கல்வி, அரசியல் முதலிய பல துறைகட்குரிய கருத்துக்கள் பொதிந்துள்ளன. பழமொழிகள் சமுதாய வாழ்வில் திருமணம் என்பது ஒரு சிறப்புடைய நிகழ்ச்சி. திருமண நிகழ்ச்சியில் திருமணத்துக்குரிய ஆடவனுக்கு ஒரு பெண்ணை மணம் பேசும் முறை முன்னணியாக நடைபெறுவது. அப்போது மணமக்களுக்காகச் சான்றோர் ஒன்று கூடி இருவருடைய குல நலம் குணநலம் ஆகியவற்றைப் பெரிதும் எடுத்துப் பேசுவர். அவ்வகையில், "குலம் கெட்டவரோடு சம்பந்தம் செய்தாலும் குணங் கெட்டவரோடு சம்பந்தம் செய்யக்கூடாது" என்றொரு முதுமொழி அடிக்கடி கூறப்படும். இந்த நிகழ்ச்சி திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார்க்கும் கலிப்பகையார்க்கும் திருமணம் பேசியபோது சிறந்த இடம்பெற்றது. இதனைச் சேக்கிழார் "மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக் குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்... பைந்தொடியை மணம் நேர்ந்தார்," என்று இப்பழமொழிக் கருத்தை எடுத்துரைப்பதைக் காணலாம். மக்களில் ஒருவர் இறந்துபோவாரயின், அவரது உடலை நீராட்டி ஆடை அணிகலன்களால் சீர் செய்து இடுகாட்டிற்கோ சுடுகாட்டிற்கோ எடுத்துச் செல்வது சமுதாய வழக்கம். இறந்தார் பொருட்டு அங்கே கூடும் உறவினரும் பிறரும் கண்ணீர் விட்டுப் புலம்புவர். புலம்பி அழுமிடத்தும் இறந்தார் உடலுக்குரிய சீரைச் செய்தபின்பே அழுவர். இதனைச் "செத்த பிணத்தைச் சீரிட்டழு" என்ற மூதுரை இனிது காட்டுகிறது. இவவண்ணமே, "பணமில்லாதவன் பிணம்," "பணம் பத்தும் செய்யும்" முதலியன பொருள் பற்றி வழங்கும் எழுதாமொழிகள். "கப்பலேறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுத் தீருமா?" "கருவாடு விற்ற காசு நாறாது" என வருவன வாணிகத்தில் வழங்கும் பழ மொழிகள். "வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்", "உழைப்பாளிக்கு ஒருத்தர் சோறு போடவேண்டா" என்பன தொழில் பற்றிச் சொல்லாடும் தொல்லுரைகள். "விதைப்பழுது முதற்பழுது", "பார்க்காத பயிரும் கேட்காத கடனும் பாழ்" முதலியன உழவுத் துறைக்குரிய உலகுரை. சமயத்துறையில், "அவனே அவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பது மேல்," "இரவெல்லாம் இராமாயணம் கேட்டுவிட்டு விடிந்த பின் சீதைக்கு இராமன் சிற்றப்பன்," படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோவிலா?" என்பன முதலிய பழமொழிகள் பரந்து உலவுகின்றன. "தோட்டிமுதல் தொண்டைமான் வரை" என்பது இடைக்காலச் சோழபாண்டியர் கால அரசியல் பற்றியும், "டில்லிக்குப் பாச்சாவானாலும் தல்லிக்குப் பிள்ளை" என்பது விசயநகர வேந்தர் காலத்து அரசியல் பற்றியும், "நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமை போகாது," "பரங்கிக்குத் தெரியுமா சடங்கும் சாத்திரமும்" என்பவை முதலியன மேனாட்டவர் காலத்து அரசியல் பற்றியும் தோன்றி நிலவும் பழமொழிகள். அரசியல் சீர்திருத்தம் வந்தபின் தேர்தலுக்கு நின்று ஓட்டுப்பெறுபவர்களைப் பற்றி, "ஓட்டுக்குப் போனாயோ, ஓடு வாங்கப் போனாயோ" என்பது முதலிய பழமொழிகள் புதியவாய் முளைத்துள்ளன. பழமொழிகளும் வரலாறும் இந்தப் பொருள் மொழிகளை நோக்குவோமாயின், பழங்கால வரலாற்றுக் குறிப்புக்கள் சில காணப்படுகின்றன. கி.பி.பன்னிரண்டு, பதின் மூன்றாம் நூற்றாண்டில் அரசுபுரிந்த வீரபாண்டியன் காலத்தில் திருக்கொடுங்குன்றத்துப் பகுதியில் வாணாதிராயர் என்பவர் வந்து குறும்பு செய்து ஊர்களைச் சூறையாடிச் சென்றனர். கோயில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு அக்காலத்தில் தனித்தனிக் கழகங்கள் இருந்தன. அவற்றில் கோயிற்பணி செய்யும் சிவப்பிரா மணர்களும் வயிராகிகளும் உறுப்பினராக இருப்பது வழக்கம். அந்நாளில் திருக்கொடுங்குன்றத்துக் கோயிலில் பொன்னப்ப அணுக்க வன்றொண்ட வயிராகி என்பவன் பணிசெய்துவந்தான். கோயிலிற் சூறையாடவந்த வாணாதிராயர்க்கும் வன்றொண்ட வயிராகிக்கும் சண்டை உண்டாயிற்று. கோயிலைப் பாதுகாக்கும் வகையில் வன்றொண்ட வயிராகி மிக்க வலியுடன் போர் செய்து வாணாதிராயரைத் தோற்றோடச் செய்து, தானும் புண்பட்டு வெற்றிபெற்று விளங்கினான். ஊரவர் அவன் புண்ணை ஆற்றி அவனுக்குச் சிறப்புச் செய்தார்கள் என்று இடையாத்தூர்க் கோயில் கல்வெட்டொன்று கூறுகிறது.* இந்த வயிராகிகளுக்கு 'வீரமுஷ்டி' என்று பெயர் வழங்கும். இவர்கள் குத்துக்கும் சண்டைக்கும் முன்னின்று கோயில்களைக் காத்த செய்திகள் பல கோயில் வரலாறுகளில் உள்ளன. இவ்வரலாற்றை, "உண்பான் தின்பான் சிவப்பிராமணன், குத்துக்கு நிற்பான் வீரமுஷ்டி" என்ற பழமொழி குறித்து நிற்கிறது. பண்டைநாளில் வீரர்கள் போர்செய்து புண்பட்டு இறந்து படுவராயின், அவருடைய பெரையும் அவர்பெற்ற பெருமைகளையும் ஒரு கல்லில் எழுதி, அதனை நீராட்டிப் பலபேர் செல்லக்கூடிய வழிகளிலும் ஆற்றங்கரையிலும் நிறுத்துவது வழக்கம். அந்தக் கல்லை, அவ்வீரனுடைய மனைவி நீராட்டி நெல்லும் பூவும் சொரிந்து தன் கணவனாகவே எண்ணி வழிபடுவாள். "ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை, நடுகல் தொழுது பரவும்" எனப் புறநானூறு முதலிய சங்கத்தொகை நூல்கள் கூறுகின்றன. இதுபற்றியே "கல்லென்றாலும் கணவன்" என்ற பழமொழி உண்டாயிற்று. இனி, கொல்லைகளிலும் வயல்களிலும் கதிர் முற்றிவரும் பயிர்களுக்குக் காவலாகப் புல்லும் வைக்கோலும் கொண்டு ஆடவன்போல உருவம் செய்து வயல்வரப்புகளில் நிறுத்தும் மரபு இன்றும் இருப்பதொன்று. அதனைப் 'புல்லாள்' என்பர். அதனிடத்தே வீரச்செயல் ஒன்றும் இல்லையாயினும், தொலையில் வருபவர்க்கும் இரவில் இயங்குபவர்க்கும் ஆள்போலத் தோன்றி ஓரளவு காவலா வதுபற்றி அதனை நிறுத்தி வைப்பதை நாட்டவர் மேற்கொண்டிருக் கின்றனர். போர்க்குரிய ஆண்மையில்லாமல் வழிப்பறிசெய்து வாழ்பவரைப் 'புல்லாள்' என்பதொரு முறையும் நாட்டில் உளது. இது பண்டும் இருந்ததென்பதைப் பதிற்றுப்பத்து என்னும் சங்கநூல், "புல்லாள் வழங்கும் புல்லிலை வைப்பின் புலம்" என்று குறிக்கின்றது. தன்னைக் கொண்ட கணவன் சீரிய வீரமில்லாத புல்லாளாயினும், அவனையும் கணவனாகக்கொண்டு ஒழுகவேண்டியது பெண்கட்கு அறம் என்று அறிஞர் கூறலாயினர். இவ்விரு கருத்துக்களையும் உள்ளடக்கி, "கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருடன்" என்ற உலகுரை தோன்றி நிலவுவதாயிற்று. "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே" என்பது நாட்டில் இன்றும் வழங்கும் இலக்கியக் கருத்துரை. மதுரை நகரில் தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பை விற்கச்சென்ற கோவலனைக் கள்வன் என்று கருதிக் கொலைத் தண்டனை கொடுத்தான் பாண்டியன். அதனை அறிந்த கண்ணகி, பாண்டிவேந்தன் அவைக்களம் சென்று, தன் சிலம்பைக் காட்டித் தன் கணவன் கள்வனல்லன் என்பதை வழக்குரைத்து நிலைநாட்டினாள். அதனால் கோவலனுக்கு உண்டான குற்றம் நீங்கிற்று. தான் செய்தது குற்றம் என்பதை உணர்ந்த பாண்டியன் உடனே கீழே வீழ்ந்து உயர்விட்டான். அவனது மதுரைநகர் தீப்பட்டழிந்தது. பாண்டியன் குலமும் பாழ்பட்டது. இதனை அறிந்த சேரவேந்தனான செங்குட்டுவன் வடநாடுசென்று, அங்கே தமிழ்வேந்தரை இகழ்ந்துபேசிய வடபுல வேந்தரை வென்று, தமிழர் மாண்பினை நிலைபெறுவித்து, இமயத்தி லிருந்து கல்கொண்டுவந்து கண்ணகிக்கு வடிவம் செய்து கோயில் அமைத்து வழிபாடு செய்தான். இவ்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே, "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே," என்ற பழமொழி தோன்றி வழங்கி வருகின்றது. இதனை வற்புறுத்துதற்கு வேறொரு வரலாறுமுண்டு. கொங்குநாட்டில் மேற்கு மலைத்தொடரின் அடிப்பகுதியில் நன்னன் என்றொரு தலைவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய ஊர் நன்னனூர் என்பது; இப்போது அஃது ஆனைமலை யென்ற பெயருடன் பொள்ளாச்சி வட்டத்தில் உளது. அவ்வூரில் ஆற்றங் கரையில் அவன் ஒரு மாமரத்தை வைத்து வளர்த்து வந்தான்; அது காய்த்துப் பழுக்கத் தொடங்கியதும் அதற்குக் காவலும் ஏற்படுத்தினான். அந்நாளில் அப்பகுதியில் கோசர் என்னும் மரபினர் வாழ்ந்து வந்தனர். அவருள் செல்வன் ஒருவனுடை மகள் ஆற்றிற்குக் குளிக்கச் சென்றாள். அவள் நீரில் இறங்கிக் குளித்துக் கொண்டிருக் கையில், நன்றாய்ப் பழுக்காத மாங்காய் ஒன்று தானே உதிர்ந்து தண்ணீரில் மிதந்து கொண்டு அப்பெண்ணருகே வந்தது. அதனை அப்பெண் எடுத்துத் தின்றாள். அதைக்கண்ட காவலன் சென்று நன்னனுக்குத் தெரிவிக்கவே, கொடியவனான நன்னன் அவளைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அதையறிந்த அப்பெண்ணின் தந்தை அவள் நிறையளவு பொன்னும் எண்பத்தோர் யானைகளும் தந்து வணங்கி, அவளைக் கொலை செய்யாது விட்டுவிடுமாறு வேண்டினான். நன்னன் சிறிதும் மனம் இரங்காது அவளைக் கொன்று விட்டான். உடனே, அப்பகுதியில் வாழ்ந்த கோசர் பலரும் திரண்டெழுந்து அவன் மாமரத்தை வெட்டி வீழ்த்தி அவனையும் வெருட்டி ஓட்டிவிட்டனர். அரசுநிலை இழந்து வெருண்டோடிய நன்னன், ஈரோட்டுக்கண்மையிலுள்ள பெருந்துறைக்கருகில் 'வாகை' என்னும் ஊரில் இருந்து வந்தான்; சின்னாட்குப்பின் நார்முடிச்சேரல் என்ற சேரமன்னனுக்குத் தோற்று இறந்துபோனான். அவன் வழி வந்தோர், "பெண்கொலை புரிந்த நன்னன்" மரபினர் என்று மக்களால் புறம் பழிக்கப்பட்டனர். வாகையென்னும் ஊரும் அழிந்துபோயிற்று. அது முதலே, "ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே" என்ற பழமொழி நிலைபெறுவதாயிற்று. "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்" என்பது இவ்வெழுதா இலக்கியங்களுள் ஒன்று. முத்தமிழின் கூறுகளான இயல், இசை, நாடகம் என்ற மூன்றனுள் நாடகம் என்பது கூத்து. இது தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து என இருவகைப்படும். "ஆரியம் தமிழ் எனும் சீர்நடம் இரண்டினும்" என்று அறிஞர் கூறுவர். ஆரியக்கூத்தாடுவோர் ஆரிய நாட்டிலிருந்து வந்து கழைக்கூத்தர் போல் கயிற்றின்மேல் நின்று பக்கத்தே பறை கொட்ட அழகாக ஆடுவர் என்று குறுந்தொகையில் பெரும் பதுமனார் பாடிய பாட்டால் அறிகின்றோம். ஆரிய நாடு சேர நாட்டின் வடக்கில் இருந்த நாடு எனத்தாலமி (Ptolemy) குறிக்கின்றார். அவர்கட்குத் தமிழ் வேந்தர்களும் பிற செல்வர்களும் பொன்னும் பொருளும் பரிசிலாகத் தருவர். அவற்றைப் பெற்றுக்கொண்டு அவர்கள் தமது நாட்டுக்கே சென்றொழிவர். தமிழ்க் கூத்தர்க்கு நிலம் விடுவது மரபு. அந்நிலங்கட்குக் ‘கூத்தாட்டுக் காணி’ என்பது பெயர். இம்மரபு. இடைக்கால சோழ பாண்டியர் காலத்தும் இருந்து வந்திருக்கிறது. நாளடைவில் தமிழ்க் கூத்தர் ஆரியக் கூத்தைப் பயின்று அதனையும் ஆடத் தலைப்பட்டனர். அதற்குரிய பரிசில் பொன்னும் பொருளுமேயாயினும், தமிழ்க் கூத்தர் தாம் வழிவழியாகப் பெற்றுவந்த நிலப்பரிசிலையே விரும்பினர்; அதுவே பெற்றுக் கொண்டு வந்தனர். இதனைக் கும்பகோணத்து நாகநாதசாமி கோயில் கல்வெட்டும் திருவாவடுதுறைக் கோயில் கல்வெட்டும் நன்கு கூறுகின்றன. ஆகவே, தமிழ்க் கூத்தர் ஆரியக் கூத்தாடினாலும் காரியமாகிய கூத்தாட்டுக் காணி பெறுவதையே நாட்டமாகக் கொண்டமை துணியப்படும். அது பற்றியே, “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்” என்ற பழமொழி வழங்கி வருவதாயிற்று. திருஞானசம்பந்தர் சீகாழித் திருக்குளக்கரையில் நின்று அழுது சிவஞானப்பால் உண்டது முதல், “அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்ற பழமொழியும், அவர் வரலாறு மட்டில், சேக்கிழார் எழுதியுள்ள பெரிய புராணத்திலும் திருநாவுக்கரசர் புராணத்திலும் கலந்து பாதியளவுக்கு மேல் இருப்பதால் “பிள்ளை பாதி, பெரியவர் பாதி” என்ற பழமொழியும், சிறுவயதில் கற்கப்பட்டு வாழ்நாள் முழுதும் பயன்பட்டு வரும் சிறப்புப்பற்றித் திருக்குறளையும் நாலடியாரையும் அடிப்படையாகக்கொண்டு “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியும் தோன்றி நிலவுகின்றன. முடிவுரை இவ்வாறு இலக்கியம், இசை, நாடகம் முதலியன பற்றியும், “விருத்த வைத்தியம், பாலிய சோதிடம்” என மருத்துவம் பற்றியும் எழுதா இலக்கியங்கள் பல நூற்றுக்கணக்காக நாட்டவர் நாவிலும் நயம் பெற்றுத் திகழ்கின்றன. இவற்றைக் கண்ட மேனாட்டு ஆராய்ச்சியாளருள் ஒருவரான சார்லஸ். இ.கோவர் (Charles. E.Gover) என்பவர், “உயர்ந்த கருத்துக்கள் நிறைந்த பழமொழிகளும் நாட்டுப் பாடல்களும் பொதுவாகத் தமிழ் தெலுங்கு மொழிகளிலும், சிறப்பாகத் தமிழில் மிகுந்தும் உள்ளன. இத்துறையில் உழைத்து இவற்றை வெளியிட்டுப் பொது மக்கள் கண்டு மதிக்கவும் திராவிடர் மனப்பான்மையின் விளைவை அறிந்து கொள்ளவும் செய்வது பழுத்த புலவர்கட்கும் சிறந்த நாகரிகம் படைத்த அரசியலாருக்கும் தகுதியாம்” என்ற கருத்தமையக் கூறியிருப்பது அறிஞர் நினைவு கூரற்பாலதாகும்.  4. குணமாலை சீவகசிந்தாமணி நம் தமிழ்நாட்டில் நிலவும் சீவகசிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம், கந்தபுராணம் முதலிய தமிழ்நூல்களை நீங்கள் படித்திருப்பீர்கள். அவற்றில் உள்ள பாட்டுக்களை விருத்தப்பாக்கள் எனப் பொதுவாகக் கூறுவர். இவை கி.பி.7-ஆம் நூற்றாண்டில் தோன்றி வளர்ச்சிபெற்றவை. இச்செய்யுள்நெறியில் முதன்முதலாக ஒரு புதுக்காப்பியம் செய்து தந்தவர் திருத்தக்கதேவர். பழந்தேனைப் புதுவள்ளத்திற் பெய்து தருவதுபோலப் பழந்தமிழ்க் கருத்துக்கள் பலவற்றை இப்புதுக்காப்பியத்தில் புதுநெறிச் செய்யுளில் புனைந்து தந்த தேவரது புதுமைப் புலமை நலத்தை இங்கே சிறிது காண்பாம்: சீவகன் - குணமாலை சீவகசிந்தாமணி என்பது, சீவகன் என்னும் அரசகுமரன் பிறந்து வளர்ந்து கல்விகற்று வெற்றி சிறந்து மகளிர் பலரை மணந்து அரசாண்டு மக்கட் பேறுபெற்று முடிவில் ஞானம்மிகுந்து துறவு பூண்டு வீடுபெற்ற நிகழ்ச்சியை ஆற்றொழுக்காகக் கூறிச் செல்லும் அரிய கற்பனைக் காப்பியம். குணமாலை என்பது சீவகன் மனைவியருள் ஒருத்தியின் பெயர். சீவகன் ஏமாங்கதநாட்டுக்கு அரசனான சச்சந்தனுக்கு மகன். இராசமாபுரம் அதன் தலைநகரம். சச்சந்தன் தன் முதலமைச்சன் கட்டியங்காரனால் கொலையுண்டு இறந்துபோக, சீவகனைக் கருக்கொண்டிருந்த அவன் மனைவி சுடுகாடொன்றில் சீவகனைப் பெற்றுவிட்டு வேறுநாட்டுக்குச் சென்று விடுகின்றாள். சீவகனான பச்சிளங்குழவியை, இறந்த தன் மகனை இடுதற்கு வந்த கந்துக்கடன் என்னும் வணிகன் கண்டு தன் மனைக்குக் கொண்டு செல்கின்றான். அவன் மனைவி இறந்த மகன் உயிர்பெற்று வந்ததாக எண்ணிச் சீவகனைத் தன் மகனாகவே வளர்த்துவருகின்றாள். சீவகன் பரந்த கலைப்புலமையும் சிறந்த போர்வன்மையும் கொண்டு நாடாளும் வேந்தனும் கண்டு அழுக்காறுகொள்ளத்தக்க வகையில் வீறுபெற்று விளங்குகின்றான். அவனுக்குக் காந்தருவதத்தை என்ற மனைவியொருத்தி இருக்கின்றாள். அந்த இராசமாபுரத்தில் ஒருகால் வேனில் விழா நடைபெறுகிறது. பொழிலில் தங்கி நீர்நிலையில் விளையாடி இன்புறும் பொருட்டு நகரமக்கள் பலரும் வேனிற்பொழிலுக்குச் செல்கின்றனர். அவருள் குணமாலை சுரமஞ்சரி என்ற செல்வ இளமகளிர் இருவர் வருகின்றனர். மணமாகாத இளையோராகிய இருவரும் நீராடுதற்கெனச் சுண்ணப் பொடி கொண்டு வந்துள்ளனர். இருவரும் தாம்தாம் கொணர்ந்த சுண்ணப்பொடி ஒருவர் ஒருவர்க்குக் காட்ட, சுரமஞ்சரி, குண மாலையின் சுண்ணத்திற்குக் குற்றம் கூறித் தனதே சிறந்ததென்று சொல்லுகின்றாள். கருத்துவேறுபாடு மிகுகிறது. இருவர் சுண்ணங்களைத் தக்கார் ஒருவர்க்குக் காட்டித் தோற்றவர் நீராடாது வீடு திரும்புவது என்ற முடிபுக்கு வருகின்றனர். சுண்ணங்கள் சீவகன் பார்வைக்குச் செல்கின்றன. அவன் தக்க காரணம் காட்டிக் குணமாலை சுண்ணமே உயர்ந்தது என்று தீர்ப்புக் கூறுகின்றான். சுரமஞ்சரி நீராடாது போய்விடுகின்றாள். குணமாலை நீராடித் திரும்புங்கால் மதயானை யொன்று குறுக்கிட்டு அவளை அச்சுறுத்தவே, சீவகன் அந்த யானையை அடக்கி அவளை உய்விக்கின்றான். அதுவே வாயிலாகக் குணமாலை தன்னைச் சீவகனுக்கு உரிமை செய்து விடுகின்றாள். பின்னர்ப் பெற்றோர் அவள் கருத்தறிந்து, சீவகனுக்கே அவளை மணஞ்செய்து கொடுத்துவிடுகின்றனர். சீவகனுக்கும் குணமாலைக்கும் திருமணம் செய்விக்கக் கருதிய திருத்தக்கதேவர், குணமாலையை நமக்குக் காட்டி அவளும் சுரமஞ்சரியும் சுண்ணம் காரணமாக மாறுபடுவதும், அது வழியாகச் சீவகனுக்கும் குணமாலைக்கும் மனம்ஈடுபடுதற்குத் தோற்றுவாய் செய்வதும், குணமாலை அறியாமல் அவள் உள்ளத்தே சீவகன்பால் காதல் முளைத்து யானையை அவன் அடக்கி அவளை உய்வித்த செயலால் முறுகிப் பெருகி அவனை இன்றியமையாத நிலையை விளைவிப்பதும் தமது புலமைப் பணியாக மேற்கொள்ளுகின்றார். இந்நிகழ்ச்சிக்கு முதலிடமாக வேனிற்காலத்தையும் பொழிலகத்தையும் நம் மனக்கண்ணில நிறுத்துகின்றார். பொழில் வளம் வேனிற்காலம் வருகிறது. பொழில்கள் பூவகையாலும் கனிவகை யாலும் காண்போர் மனத்தைக் கவர்கின்றன. வண்டினம் பூக்களில் ஊறும் தேனை உண்டு சிறக்கின்றன. குரங்கினம் கனிகளை யுண்டு களிப்பு மிகுந்து கொம்புதோறும் தாவிக்குதித்து மகிழ்கின்றன. தென்றற்காற்று, புதுப்பூக்களின் புதுமணம் விரவிப் பொழிலெங்கும் பரவி மக்கள் மனத்தில் இன்பம் மலர்விக்கின்றது. இராசமா புரத்து மக்கள் அனைவரும் பொழிலகம் நோக்கிச் செல்கின்றனர். இப்பொழில் நகர்க்குப் புறத்தே ஓர் யாற்றயல் உளதெனத் தேவர் குறிக்கின்றார். மரவகையும் செடிவகையும் கொடிவகையும் கலந்து வண்டினத்தாலும், மயில் குயில் முதலிய புள்ளினத்தாலும் இசைமிக்கு இருக்கின்ற பூமரக்கா, தெளிந்த நீர் அறாத யாறு ஒன்றின் அயலே உளதாயின், தன் அழகை விழைந்து காண்பார்க்கு விழைவு அறாதவாறு அது புதுப்புதுக் காட்சிகளைத் தந்து ஊக்கும் இயல்பினதாம். மேலும், நகரருகே உளதாயின், மக்களின் பெருகிய வரவு செலவுகளாலும் மாவும் மாக்களும் ஊர்தியும் பிறவும் பயில வழங்குதலாலும் தூய்மையும் புதுமையும் இழந்து பொழில் எழில் சிறவாது என்பதை உட்கொண்டு வேனிற்பொழிலை நகர்க்குப் புறத்தே தேவர் நிறுத்துவது மிகவும் பொருத்தமாகவுளது. இனி, ஆசிரியர் நம்மை வேனிற்பொழிலுக்கு அழைத்துச் செல்லுகின்றார். குணமாலையும் சுரமஞ்சரியும் இங்கேதான் நாம் காண வரப்போகின்றனர். அதற்கு முன்னணியாக அவர்கள் வீற்றிருக்கும் பொழிலை ஒரு சொல்லோவியம் செய்கின்றார். இராசமாபுரத்துச் செல்வப் பெருமக்கள் தத்தம் ஊர்திகளில் வந்து அன்னங்கள் அமர்ந்து விளையாட்டயரும் பொழிற்பகுதியில் தங்குகின்றனர். தண்கயமும், விரிந்த நீரோடையும் ஒருபால் காட்சி தருகின்றன. செவ்வாழையும் மாவும் பலாவும் ஆகிய பலவகைப் பயன்மரங்கள் கனி தாங்கி நின்று கவின் செய்கின்றன. இடையிடையே பூ நிறைந்த புதர்களும் செடிகளும் பொலிந்து மக்கள் தங்கி இன்பம் நுகர்தற்கேற்றவாறு குளிர்ந்த நிழல் செய்கின்றன. வேனில் வெம்மையால் வெய்துற்று வருவோர்க்குத் தண்ணிய நீழலிடம் அன்றோ தளரா இன்பம் தருவது! அவர்கள் தங்கிய இடங்கள் கொம்புத்தேன் ஊறித் துளிப்பதனாலும், பூந்தேன் ஒழுகுதலாலும், பன்னிறப் பூக்கள் உதிர்ந்து கிடத்தலாலும், யாற்றயலாகலின் வெண்மணல் பரந்து குளிர்ச்சியும் நறுமணமும் பெற்றுத் தூய்மையுடன் துலங்குகின்றன. அங்கே தங்கினோர் தாம் பூம் பொழிலகத்தே இருப்பதை மறந்து தண்ணிய நீர் நிலையில் இருப்பதாகவே நெஞ்சில் நினையலுறுகின்றனர். குணமாலையும் சுரமஞ்சரியும் இப்பொழிலகத்தே ஒருபால் குணமாலையும் சுரமஞ்சரியும் தங்குகின்றனர். ஒருவரையொருவர் முன்பே கண்டு பயின்று நட்பு எய்தியிருந்தமையின், ஓரிடத்தே இருவரும் கூடியிருப்பாராயினர். உருவும் திருவும் பருவமும் கல்வியும் இருவரும் ஒப்பவுடையரே எனினும், குணஞ்செயல்களில் சில வேறுபாடுகள் உள்ளன. குணமாலை தன் பெயருக்கேற்ப நற்குணமே நிறைந்த நங்கையாகத் திகழ்கின்றாள். அறம் பிழையாத அறிவும் பழியஞ்சும் பண்பும் அவட்குப் பாங்காய் உள்ளன. இவற்றால் அவள் மனத்தூய்மையும் அதற்கேற்ற செய்வினைத் தூய்மையும் சிறந்து மிளிர்கின்றாள். சுரமஞ்சரி உருவும் திருவும் ஒத்தலால் குணமாலையினும் குறைந்த வளல்லள்; ஆயினும், பின் விளைவு கருதிச்செய்வன முன்னெண்ணிச் செய்தலும் செப்புதலுமாகிய திறங்களில் சிறந்திலள். கணிகமாய் நிகழும் துன்பத்தின் பொருட்டுப் பிறப்புத்தோறும் தொடரும் சிறப்புடைய நட்பினையும் சிதைத்துத் துறக்கும் சிறுமையுடையள்; தன் செயலே சிறந்ததெனக் கருதும் தருக்கும் அவள்பால் உண்டு. சுண்ணப்பூசல் இருவரும் ஒருங்கிருந்து உரையாடியிருக்கையில், குண மாலையின் தோழி, அவள் குறிப்பின் வண்ணம், அவள் செய்த சுண்ணப்பொடியைக் கொணர்ந்து சுரமஞ்சரிக்குக் காட்டுகின்றாள். அது காணும் சுரமஞ்சரி தனதே சிறப்புடையதென்ற தருக்கினால் உலகியலையும் மறந்து, "சுண்ணம் என்பதோர் பேர்கொடு சோர்குழல் வண்ணம் மாலை நுசுப்பு வருத்துவான் எண்ணி வந்தன கூறுஇவை யோஎன நண்ணி மாலையை நக்கனள்." இதன்கண், குணமாலை சுண்ணத்தின் நன்மையை எடுத்தோதுவதை விடுத்துக் கண்ணிற்கண்ட மாத்திரையே வாய்திறந்து, "இவை நின் இடையை வருத்துவற்காகச் சுண்ணம் என்பதொரு பெயர் கொண்டு வந்தனவேயன்றி, உண்மைச் சுண்ணமாதல் இல்லை" என்பாளாய், நுசுப்பு வருத்துவான் எண்ணி வந்தன, என இசைக்கின்றாள். அவள் உரையில் நிற்கும் முன்னிலையும் கூற்றும் இகழ்வுமாகிய மூன்றும் குணமாலைக்கு அவலத்தைத் தருகின்றன. சோர்குழல் வண்ணமாலை என்ற முன்னிலையில், சோர்குழல் எனக் குழலை வேறு பிரித்துச் சிறப்பித்தமையால், வண்ணம் என்றது மாலையைப் பிறிது பொருள்பட அமைப்பதாயிற்று. சோர்தல் குழலுக்கு இயல்பேயாயினும் இதுபோது இனிது ஒப்பனை செய்யப்பட்டுக் கவின் கொண்டு விளங்குகிறது. அதனை விதந்து முன்னிலைப்படுத்துவது நட்பாயின சுரமஞ்சரிக்கு நேர்மையாகும். குணமாலை மனத்தில ஒருவகைக் கோட்டமும் இல்லை; இருவரும் ஒருவரொருவரைக் கண்டு கூடியிருந்ததைக் கூறுமிடத்து, "மௌவலங்குழலாள் சுரமஞ்சரி கொவ்வையங் கனிவாய்க் குணமாலையொடு, எவ்வம் தீர்ந்திருந்தாள்" என்றும், இருவரையும் சேரக்கூறுவாராய், "மல்லிகை மாலை மணங்கமழ் வார்குழல் கொல்லியல் வேல்நெடுங்கண்ணியர்" என்றும் ஆசிரியர் குறிக்கின்றார். இவ்வாறு ஒரு வேறுபாடும் இன்றி வீற்றிருந்தவள், சுண்ணம் கண்டதும் வேறுபாடுற்றுக் குணமாலை சுண்ணம் குற்றமாகிய சோர்வுடையதென்பது தோன்றச் சோர்குழல் என்றும், பயனில்லாத செயலை மேற்கொண்டு மெய்வருந்தி வாடி இளைத்தாய் என இகழ்ந்த குறிப்புத் தோன்ற, வண்ணமாலை என்றும், நுசுப்பு வருத்துவான் எண்ணி வந்தன என்றும் உரைக்கின்றாள். அவள் உரைத்தது கேட்டிருந்த குணமாலை, புன்முறுவல் பூத்து, "செம்பொன் பாவை அன்னாய், தேவருலகிலன்றி இவ்வுலகில் இவ்விடத்து என் சுண்ணத்துக்கு ஒப்பாக வேறும் சில உள என்று அறிஞர் கூறுவராயின், நின்சுண்ணமும் என்சுண்ணத்தோடு நிகர்க்கும் என்று நீ கூறிக்கொள்ளலாம்" என்று செப்பினாள். சுரமஞ்சரியை முன்னிலைப்படுத்தியவிடத்து, அவளுடைய உள்ளக் கிளாச்சியும் மேனியொளியும் வாட்டமுறாதவாறு, செம்பொன் பாவை அன்னாய் என்பதும், கூற்றின் கண், "என்சுண்ணம் ஒப்பும் உயர்வும் இல்லாதது; நின் சுண்ணம் அதனை நிகர்க்கும்; யான் அதுபற்றி ஒன்றும் கூறேன்" என்று சொல்லக்கருதி, "இப்பார்மிசை இங்கே என் சுண்ணம் நிகர்ப்பன இல்லை; உள்ளன எல்லாம் தாழ்ந்தனவே; நிகர்ப்பன உள என அறிஞர் கூறார்; ஒருகால் கூறுவராயின் பாவையன்னாய், உனது சுன்னம் எனது சுன்னத் தோடு நிகர்க்கும் எனச் செப்புக" என்று வணங்கிய மொழிகளால் சுரமஞ்சரி இணங்குமாறு உரைக்கின்றாள். தருக்கினால் தம் குறையினைத் தாமே காணமாட்டாதார்க்கு அதனைக் காண்பார் கண்டு கூறினும், அத்தருக்கு அவர் உள்ளத்தில் வெகுளியைக் கிளப்பி வேதனையுறுவிப்பது நாம் நாளும் காணும் காட்சியாகும். அதற்கொப்பவே குணமாலையின் கூற்றுச் சுரமஞ்சரி உள்ளத்தைக் கலக்கிவிடவும், அவள் வெய்துயிர்த்து முகஞ்சிவந்து, "இவற்றை அறிஞர்பால் காட்டி நல்லது தெளிவோம்; தோல்வியுறு பவர் நீர் விளையாடலைச் செய்தல் கூடாது; வெல்பவர்க்கு அவர் கோடியளவான பொன்னைக் கொடுக்கவேண்டும்" என்று நெடுமொழி நிகழ்த்துகின்றாள். விளைவு எண்ணி மெத்தெனப் பேசும் மேதகவு சுரமஞ்சரிபால் இல்லாமை இந்த நெடுமொழியால் விளங்கித் தோன்றுகிறதன்றோ? இதுவே, பின்பு சீவகன் ஒரு முதிய வேதியன் உருவில் சுரமஞ்சரியிடம் வந்து கவர்பொருள் படப் பேசியபோது உண்மையுணரமாட்டாது அவளை அவனுடைய சொல்வலையில் வீழ்த்தி அவனை மணக்கச் செய்தது. இருவரும் தத்தம் தோழியர்பால் தங்கள் சுண்ணங்களைத் தந்து அறிஞரிடத்தே காட்டி வருமாறு விடுக்கின்றனர். சுண்ணங்களைக் கண்டோர் சீவகன்பால் காட்டுமாறு பணிக்கவே, அவனிடம் சுண்ணங்கள் சென்று சேர்கின்றன. இரண்டையும் ஒப்புநோக்கும் சீவகன், குணமாலை சுண்ணம் உயர்ந்தது என்றும், அது கோடைக் காலத்தில் சமைந்தது என்றும், மற்றது குளிர் காலத்தில் அமைந்தது என்றும் முடிவு கூறுகின்றான். சீவகன் நேர்மையின்றி ஓரம் பேசினான் என்ற பொருள்படச் சுரமஞ்சரியின் தோழியர் உரைக்கவும், அவன், அவர்கள் உள்ளம் தெளியும்படியாக வண்டினத்தை வருவித்து, இருவர் சுண்ணங் களிலும் சில எடுத்து எறிந்தான். குணமாலை சுண்ணத்தை வண்டினம் உண்டுநீங்கின; சுரமஞ்சரி சுண்ணம் நிலத்திலே வீழ்ந்தது. வண்டு விரும்பும் சுண்ணமே மாண்புடைய தென்னும் வழக்கினால், குணமாலை சுண்ணம் உயர்ந்த தென்பது விளக்கப் பட்டது. இதனைத் தோழியர் போந்து கூறவும், சுரமஞ்சரி திடுக்கிட்டுச் செயலற்று வருந்துகின்றாள். அவள் வாயிலிருந்து ஒரு சொல்லும் வெளிவரவில்லை. குணமாலை தானும் சிறிதும் மகிழ்ச்சி கொள்ளாது, மஞ்சரியின் மனமென்மை கண்டு இரக்கமுற்று, "பாவாய், நங்காய், என்னோடு பேசுகின்றாய் இல்லையே, ஏன்?" என்று வருந்தி அவள் சுரமஞ்சரி அடிவீழ்ந்து இரந்தாள். "குணமாலையின் பால் சீவகன் மனங்குழைந்து சுண்ணத்துக்கு ஏற்றம் கூறினன்; அவளைப் பாராட்டி அவள் நலத்தைப் பெறக் கருதும் அச்சீவகன், என்னை அடைந்து என் அடியில் வீழ்ந்து வணங்கினாலன்றி எனக்குத் தெளிவு பிறவாது" என்று சுரமஞ்சரி என்ணமிட்டுக் கொண்டிருக்கின்றாள். அதனால் குணமாலை கூறிய சொற்கள் அவள் உள்ளத்திற் சென்று சேரவேயில்லை. அவள் வீழ்ந்து வணங்கக் கண்ட போதுதான் சிறிது நினைவு தோன்றிற்று. குணமாலையின் வணக்கம் அவள் உள்ளத்தில் சீவகன் போந்து தன்னை வணங்கவேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகிறது. அதன் வயப்படும் சுரமஞ்சரி, நா கூசாமல், "மழை வள்ளல், என் ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல் தோற்று வந்துஎன் சிலம்படி கைதொழ நோற்பன்; நோற்றனை நீ" என்று நொடிக்கின்றாள். இவ்வுரையில் சீவகனை மழை வள்ளல் என்று அவள் குறிப்பதனால், தன் கண்ணத்தினை நுண்ணிதின் ஆராய்ந்து கூறிய அவனது மதிநுட்பத்தை மனத்தால் வியந்து அங்கே அவனது அழகிய உருவம் தோன்றக் கண்டு, அதன்கண் அவள் தன் உள்ளத்தை இழந்து அவன் காதலைப் பெற விழைந்ததும், தக்கவாறு முயன்றால் பெறலாம் என்பதும் எண்ணித் துணிந்த குறிப்பு வெளிப்படுகிறது. "என் சுண்ணமே ஏற்ற முடையது; ஆயினும், அஃது ஏற்றமுடைய தன்று என்று சீவகனால் சொல்லப் படுதற்குக் காரணம் சுண்ணத்தின் இயல்பன்று; அதனைச் செய்த நினது நோன்பேயன்றி வேறில்லை" என்பாளாய், நீ நோற்றனை என்றும், "யான் அதனைச் செய்து, அச்சீவகன், தோற்று வந்து என் சிலம்படி கை தொழ நோற்பன்" என்றும் இயம்புகின்றாள். பின்னர் மனையடைந்த சுரமஞ்சரி தான் நீர் விளையாடாது வந்ததன் காரணத்தைத் தன் தாய்க்கு உரைத்தலும், அவள் பிறர்க்கு, "கட்டவிழ்கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள்" என்று மஞ்சரியின் செயலுக்கு மாற்றம் உரைக்கின்றாள். சுரமஞ்சரி தான் கூறிய நெடுமொழிப்படி நீராடாது நீங்கியது குணமாலைக்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. சுரமஞ்சரி, நீ நோற்றனை என்றது, அவள் உள்ளத்தில் வினையைப் பற்றி நினையத் தூண்டிற்று. இன்பமுண்டாக நீர் விளையாட வந்த இடத்தே நட்பைத் துறக்கும் இத்துன்ப நிகழ்ச்சிக்குக் காரணம் முன்னைவினை என்று நினைக் கின்றாள். வினைக்கொடுமைக்கு மனம் வெதும்பிக் கண்ணீர் சொரிகின்றாள். சுரமஞ்சரி மறைந்தபின் மகிழ்ச்சியுடன் நீராட வேண்டிய வளான குணமாலை, சினமுற்றுப் பிரிந்தேகிய சுரமஞ்சரிபால் வெறுப்புற்றாளா? அவள் நட்பினை மறந்தாளா? அதற்குக் காரண மாகிய சுண்ணத்தை முனிந்தாளா? அவையெல்லாம் ஒழிய, தன் சுண்ணத்தைப் பாராட்டி ஏற்றம் கூறிய சீவகனையாவது நினைந்து மகிழ்ந்தாளா? ஒன்றும் இல்லை. இந்நிகழ்ச்சியால் இன்பம் எய்துதற் குரிய தான் அதனை எய்தாது துன்பம் எய்துதற்குக் காரணம் தன் தீவினை எனத் தெரிந்து, அது தீரும் பொருட்டு அருகன்கோயிலை அடைந்து அவன் அடி பணிந்து அறம்செய்கின்றாள். முன்னைவினை எவ்வழியும் நுகர்ந்தே கழிக்கத் தக்கது. அருகனைப் பணிந்துசெய்த அறமாகிய நல்வினையால் தீவினையின் தீமை குறைகின்றது; சீவகனை மணந்துகொள்ளும் நல்வாய்ப்பு உண்டாகிறது. "நீ நோற்றனை" என்று சுரமஞ்சரி சொன்ன சொல் உண்மையுரையாய்ச் சீவகனைக் குணமாலை மணந்துகொள்வதற்கு முன்னறிவிப்பாய் முடிகிறது. சீவகன்மேற் காதல் குணமாலை நீராடிவிட்டு வருங்கால், அசனி வேகம் என்ற அரசயானை மதங்கொண்டு அவளைக் கொல்ல நெருங்குகிறது. அந்நிலையில் சீவகன் தோன்றி அந்த யானையை அடக்கிக் குணமாலையைக் காத்து ஓம்புகின்றான். அவன் கையகப்பட்டு மார்பிடைப் படிந்து அரிதில் உயிர்காக்கப்பட்ட குணமாலை தன் உயிரை அவனுக்கே உரிமை செய்கின்றாள். அயராக்காதல் அவள் உள்ளத்தில் தோன்றி அவனை இன்றி அமையாத நிலையைப் பயந்துவிடுகிறது. பின்னர், குணமாலை தான் வளர்த்த கிளியைச் சீவகன் மனைக்குச் சென்றுவரப் பயிற்றி அதன் வாயிலாகத் தன் காதலைச் சீவகனுக்குத் தெரிவிக்கின்றாள். சீவகனும் யானை முன் அகப்பட்டு வருந்தியது கண்டு, "பெண்ணுயிர் அவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்வில் சாதல் எண்ணி" அவளை உய்வித்து விடுவித்த அப்பொழுது முதல் குணமாலை பால் தீராக் காதல் கொண்டு தெளிவு பெறாது வருந்தியிருக்கின்றான். குணமாலை விடுத்த கிளி சீவகன் மனைப்புறம் அடையும் போது காந்தருவதத்தை சீவகன் இருந்த இடத்துக்கு வருகிறாள்; அழகிய பெண்ணொருத்தியின் உருவம் எழுதப்பெற்ற கிழியொன்று அவன் கையில் உளது; அது காணும் தத்தைக்குப் புலவியும் சினமும் பொங்கி வழிகின்றன. சீவகன் தெருட்டும் உரைகள் தத்தைக்குத் தெளிவு நல்காமையால் அவள் அவனின் நீங்கிப் போய் விடுகின்றாள். அந்நிலையில் கிளி சீவகனை அடைந்து குணமாலையின் காதற்குறிப்பை அவனுக்குத் தெளிய உரைக்கின்றது. அவனும் தன் காதற் பெருக்கத்தைக் கட்டுரைத்துத் தான் விரைவில் குணமாலையை மணந்து கொள்ள இருக்கும் கருத்தை ஓர் ஓலையில் எழுதிக் கிள்ளை வழியாக அவட்கு விடுகின்றான். கிளி சீவகன் தந்த ஓலையைக் கொணர்ந்து கொடுக்கிறது. அவன் தன் மீது உண்மைக்காதல் கொண்டிருப்பதைக் குணமாலை அறிந்து அவளும் பெருமகிழ்வு கொள்கின்றாள். உண்மைக் காதல் சிறிது போதில் குணமாலையின் செவிலித்தாய் போந்து. "நின் தந்தை நின் மாமன் மகனுக்கு நின்னை வரைவுடன் படுகின்றான். நின் மாமன் மகனும் நின் உருவைக் கிழிமிசைத் தீட்டி நாடோறும் அதனை வழிபட்டு வருகின்றான்; நின் திருப்பெயரல்லது வேறு எதனையும் அவன் உரைப்பதிலன்" என்று உரைக்கின்றாள். உடனே குணமாலை தன் இரு காதுகளையும் கையாற் புதைத்து, "மணிமதக் களிறு வென்றான் வருத்தச்சொற் கூலி யாக அணிமதக் களிறன் னானுக்கு அடிப்பணி செய்வ தல்லால் துணிவதென்? சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல்" என்று சொல்லி வருந்துகின்றாள். இச்சொற்களில் ஒளிரும் அறிவும் அறமும் செவிலியின் உள்ளத்தில் சிந்தனையை எழுப்பு கின்றன. "துகள்மனத்து இன்றி நோற்ற தொல்வினைப் பயன்" என்று அவள் சொல்லுகின்றாள். "என்னைக் காத்தற் பொருட்டுத் தன்னுயிரை யானைமுன் வைத்து வென்ற சீவகன் மேற்கொண்ட வருத்தத்துக்குக் கூலியாக அவனுக்கு யான் அடித் தொண்டு செய்து வழிபடல் வேண்டுமே யல்லாது பிறனொருவனால் வழிபடப்படுவது அறமாகா; அதனை நினைந்து அச்சீவகற்கே என்னை அடிப்படுப்பது என் பெற்றோர்க்கு நன்றியறிதலாய பேரறமாம்; அதனை நினையாது பிறனொரு வனுக்கு என்னைக் கொடுக்கத் துணிவதால் உளதாகும் தீமையை அவர்கள் நினையாதது என்னோ," என்றும், "சீவகனது நன்றியை அவர்மறப்பினும், அந்நன்றியை நேர் நின்று பெற்றயான் மறந்து பிறிது நினைத்தல் எனக்கும் அறமாகாது" என்றும் கூறுவாளாய், "மணிமதக்களிறு வென்றான் வருத்தச் சொற் கூலியாக அணி மதக்களிறு அன்னானுக்கு அடிப்பணி செய்வதல்லால், துணிவது என்" எனவுரைத்தது செவிலிக்கு மிக்க இன்பத்தைத் தருகிறது. குணமாலையது மனம் அறநெறியிற் செல்வது கண்டு வியந்து, "துகள்மனத்து இன்றி நோற்ற தொல்விமைனப் பயன்" எனப் பெற் றோர்க்கு உரைக்கக் கருதுகின்றாள். அதற்கிடையே செவிலியின் அமைதி குணமாலையின் கருத்தை நிலைகுலையச் செய்கிறது. உடனே, "என்னைச் சீவகற்குக் கொடுக்க எந்தையும் யாயும் நேராராயின், சிந்தனை பிறிதொன்றாகிச் செய்தவம் முயறல் வேண்டும்" எனத் தெளிய உரைக்கின்றாள். கற்புடை நன் மகளாகிய குணமாலை இவ்வாறு உரைப்பது பெரிதன்று; அது நன்மகளிர்க்கு இயல்பு. குணமாலையின் குணமாண்பு கண்டு பெற்றோர், சீவகனுக்கே அவளை மணம் செய்து வைக்கின்றனர். இதனால், அறம் திரியாத நற்குடியில் பிறக்கும் மகளிரும், அவர் பெற்றோரும், அறம் வழுவாத வகையில் தம் செயல் முறைகளைச் செய்தொழுகும் திறம் திருத்தக்க தேவரால் சிறப்பித்துக் காட்டப்படுவது நாம் அறியத் தகுவதொன்றாம்.  5. இளங்கோ கண்ட இயற்கை முன்னுரை இயற்கையன்னை கோயில் கொள்ளும் இடம் மலை நாடான குறிஞ்சி; அவள் தனது அருளழகை விளக்குமிடம் முல்லை; கொலு வீற்றிருக்கும் திருவோலக்கம் மருதம்; அவள் மகிழ்ந்து விளையாடி மாண்புறும் இடம் நெய்தல். இவ்விடங்களில் இயற்கையின் எழில் நலம் கண்டு இன்புறுவது புலமை நலம் படைத்த சான்றோர்க்கு இயல்பு. இச்சான்றோர் கூட்டத்துத் தலைமை நலம் பெற்ற இளங்கோவடிகள் மலைநாட்டுச் சேரவேந்தர் குடியிற் பிறந்து, அறிவு நூல் துறையில் தலைசிறந்து, இயற்கையன்னையின் மடியின் கண் இருந்து அவளதுஇன்ப அழகு முற்றும் நன்கு நுகர்ந்த நல்லிசைத் துறவியாவர். தனது நலமாகிய பாலை அருந்த விழையும் புலவர் பெரு மக்களாகிய குழவிகட்கு இயற்கையன்னை காலந்தோறும் அதனை நல்கி வளர்த்தலில் நல்ல தாயாக விளங்குபவள். இயற்கைக் காட்சி யாகிய இனிய பாலை அவ்வப்போது ஆர்வந்தீர உண்டு தேக் கெறியும் சேரர் இளங்கோவும், அப்பாலின் பயனைக் கண்ணகியார் வரலாறாகிய சிலப்பதிகார நாடகத்தில் ஆங்காங்கு நமக்குக் காட்டி நுகர்வித்து இன்புறுத்துகின்றார். கண்ணகியார் வரலாறு சோழ நாட்டில் தோன்றிப் பாண்டி நாட்டில் சிறப்பெய்திச் சேர நாட்டில் முடிவு பெறுகிறது. சோழ நாடு நெய்தல் நலம் சிறிதும் மருதநலம் பெரிதும் உடையது. பாண்டி நாடு முல்லைவளம் பெரிதும் குறிஞ்சி நலம் சிறிதும் பெற்றது. சேரநாடு குறிஞ்சி வளம் பெரிதும் சிறந்தது. இம்மூன்று நாடு களோடும் தொடர்புடைய சிலப்பதிகாரம் முற்றும், இயற்கை யன்னையின் இன்ப அழகு காண்டதற்கு ஏற்புடைய தென்பது இதனால் தெற்றென விளங்கும். ஒரு கோயிற்குச் சென்று அங்குள்ள கடவுளை வழிபடுவோர் முதற்கண் அதன் அரணைக் கடந்து, பின் இடையிலுள்ள அகலிடம் கடந்து, அதற்குப் பிறகு உட்சென்று கண்டு பரவி மகிழ்வது போல, இயற்கையன்னையின் கோயிற்குட் செல்லும் நாமும் அரணிடமாகிய நெய்தலையும், அகலிடமாகிய மருதமுல்லைகளையும் அவற்றின் பின் குறிஞ்சியையும் காணும் முறைமையினை உடையவர்களாகின்றோம். நெய்தல் நிலம் சிலப்பதிகாரத்துக் காவிரிப் பூம்பட்டினம் சோழ நாட்டு நெய்தல் நிலத்துச் செல்வ நெடுநகரமாகும். அது கடற்கரையில் உளது. அதன் அருகே காவிரியாறு இடையறா நீர்ப் பெருக்குடன் போந்து கடலோடு கலக்கிறது. கடற்கரை நுண்ணிய மணல் பரந்துள்ளது. மணலும் நன்கு இடித்துக் கலந்து மாவைப் போல நுண்மையும் நொய்மையும் உடையதாய், தன்பால் வீழ்ந்த ஐயவி (ஒருவகைக் கடுகு) யை எளிதில் கண்டெடுக்கக் கூடிய தூய்மையும் உடையதாய்த் திகழ்கிறது. கரையருகே இனிய நீர்நிலை காணப் படுகிறது. அதன்கண் தாமரைகள் மலர்ந்து விளங்குகின்றன. இதனை, "மருத வேலியின் மாண்புறத் தோன்றும், கைதை வேலி நெய்தலங் கானல்" என அடிகள் கட்டுரைக்கின்றார். இந்த நெய்தலங்கானலில் புன்னை மரங்கள் நிறைந்த பூம்பொழில் உளது. அதன்கண் கடற் காற்றால் புதுமணல் பரந்து தரை மெத்தன அமைந்திருக்கிறது. அப்பொழிலைச் சுற்றியோடும் கழிக்கரையில் தாழைகள் மலர்ந்து இன்மணம் கமழ்கின்றன. அம்மணத்தால் கடற்காற்றின் புலவுமணம் கெடுகின்றது. ஒருபால், கடல் திரையானது, தான் புலால் நாற்றம் கொண்டு உலவுவதற்கு வருந்தி ஓலமிட்ட வண்ணம் வந்து, தாழம்பூவும் புன்னைப்பூவும் உதிர்ந்து நன்மணம் பொருந்திய இடத்தை அடைந்து, தன் புலால் நாற்றம் நீங்கிப் பூவின் நறுமணம் பெற்று நீங்குகிறது. இக்காட்சியைக் காணும் இளங்கோ, "புலவுற் றிரங்கி யதுநீங்கப் பொழில்தண் டலையில் புகுந்துதிர்ந்த கலவைச் செம்மல் மணம்கமழத் திரையு லாவு கடற்சேர்ப்ப" என்று பாடுகின்றார். ஒருபால் கரையை மோதி அலைக்கும் அலைகள் வலம்புரிச் சங்குகளைக் கரையில் ஒதுக்குகின்றன; அச்சங்குகள் மெல்ல ஊர்ந்து செல்லுகையில், அவற்றின் சுவடு மணல்மேல் எழுதியது போலத் தோன்றுகிறது. ஆங்கே நிற்கும் புன்னைகள் பூக்களை உதிர்ந்துச் சங்குகளின் சுவட்டை மறைத்து இனிய காட்சி வழங்குகின்றன. நீர்த்துறைக்கு வந்து மீண்டு செல்லும் கடல் அலைகள் வரும்போது முத்துக்களைக் கொணர்ந்து கரையில் தொகுத்து விட்டுக் கரையில் இருக்கும் பூக்களை அலைத்துக் கொண்டு செல்லுகின்றன. அது மேலைநாட்டுக் கடல் வணிகர் பொன்னும் மணியும் கொண்டு வந்து கொடுத்து விரைப் பொருள்களை (வாசனைப் பொருள்) வாங்கிச் செல்வது போல் இருக்கிறதென அக்கால வழக்கத்தை உட்கொள்ளவைத்து, "வீங்கோதம் தந்து விளங்கொளிய வெண்முத்தம் விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம்மூர்" என்று பாடுகின்றார். துறைமுத்துக்கருகே காவிரி கடலோடு கலக்கின்றது. அக் காவிரியில் நீர் பெருகி வருகிறது. கடலொடு கலந்து ஒன்றாகும் இடமாதலால் தண்ணீரும் பையவே செல்கிறது. நீர்மேல் நீல மணியும் மாணிக்க மணியும் போல நிறமுடைய பூக்கள் பல மிதக்கின்றன. புதுப்பூ வாதலால் அவற்றின் தேனை விரும்பும் வண்டினம் கூடி ஆரவாரிக்கின்றன. இடையிடையே கயல்மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இளங்கோவின் உள்ளமும் இன்பத்தால் துள்ளுகின்றது; "மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக் கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வழி காவேரி" என்று பாடுகின்றார். அக்காவிரியின் இருகரையிலும் பூக்கள் நிறைந்த சோலைகள் நிற்கின்றன. சோலைகளிலே மயில்கள் ஆலக் குயில்கள் பாடுகின்றன. கரையோரங்களில் பூக்கள் ஒதுங்கி மாலை போலத் தொடர்புற்றுச் செல்கின்றன. இக்காட்சி, ஆடுவோர் ஆட, பாடுவோர் பாட, அரசமகள் ஒருத்தி, தான் அணிந்த மாலை தன் மார்பின் இருமருங்கும் அசையக் கைவீசி நடந்து வரும் காட்சி போல இருத்தல் கண்டு, "பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி" என்று பாடுகின்றார். இவ்வாறே, அடிகள் பாண்டி நாட்டு வையையாற்றையும் காண்கின்றார். அதன் கரைக்கண் குரவம் வகுளம் கோங்கம் வேங்கை முதலிய மரங்களும், குருக்கத்தி, தளவம், முசுண்டை முதலிய கொடிகளும் நிறைந்து செறிந்திருக்கின்றன. கரையினையும் மணல் மேடுகளையும் ஆற்றிடைக் குறைகளான துருத்திகளையும் முல்லையரும்பிய வளைந்த கரையையும் நீரிடைப் பிறழும் கயல் கெண்டை முதலிய மீன்களையும் கருமணலையும் காண்கின்ற நம் இளங்கோ, வையையாற்றை ஒரு பெண்ணுருவிற் காட்டி நம்மை மகிழ்விக்கின்றார். வையையாகிய பெண்ணுக்குக் கரை மேகலை; மணல்மேடு மார்பு; முல்லையரும்பு பல்; முருக்கம் பூ வாய் இதழ்; கயல் மீன் கண்; கருமணல் கூந்தல். அவளுடைய உயர்வும் ஒழுக்கமும் புலவர் பாடும் புகழ் பெற்றவை. "உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி" என்று வையையின் பெருமையை வாயார வாழ்த்துகின்றார். இந்நிலையில் அடிகள், சேரநாட்டிலோடும் பேரியாற்றையும் எடுத்தோத மறக்கின்றாரில்லை. சேரநாடு மலை நாடாதலால், அங்குள்ள மலைகள் மிக்க உயரமாய்க் காடு பரந்து அழகிய காட்சி வழங்குவன. சேய்மையில் தோன்றும் அவற்றின் நிறம் நீலமாய் நெடிய திருமாலை நினைப்பிக்கின்றது. அம்மலைகளும் ஒன்றின்மேல் ஒன்றாய் உயர்ந்து நிற்பதால், அவற்றின் மேலிடத்தே தோன்றிக் குறுக்கிட்டு ஓடி வரும் பேரியாறு திருமால் மார்பில் குறுக்கே வீழ்ந்து கிடக்கும் முத்துமாலை போலத் தோன்றுகிறது. இரு கரையிலும் கோங்கமும் வேங்கையும் கொன்றையும் நாகமும் திலகமும் சந்தனமும் ஆகிய மரங்கள் வானளாவி நின்று பூக்கள் நிரம்பப் பூத்து விளங்குகின்றன. அவற்றின் பூக்கள் ஆற்றின் நீர்மேல் உதிர்ந்து, அதனைப் புறத்தே தோன்றாதபடி மறைத்து விடுகின்றன. இதனை இளங்கோவடிகள், "உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து மதுகரம் ஞிமிறொடு வண்டினம் பாட நெடியோன் மார்பின் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாறு" என்று எடுத்துரைக்கின்றார். மருத நிலம் இதுகாறும், காவிரியின் காட்சியில் ஈடுபட்ட நாம், தொடர்பு பற்றி வையையின் வனப்பையும் பேரியாற்றின் பெருமையையும் ஓரளவு கண்டு இன்புற்றோம். இனி, அக்காவிரி பாயும் நாடாகிய சோழ நாட்டு மருத நிலத்தைக் காண்பது முறையாகும். இம்மருதப் பகுதி வழங்கும் இயற்கைக் காட்சியை, அடிகளார், கண்ணகியும் கோவலனும் காவிரிப்பூம் பட்டினத்தைவிட்டு மதுரை நோக்கிச் சென்ற வழி நடைக் காட்சியில் வைத்துக் காட்டுகின்றார். கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகள் துணைசெய்யக் காவிரியின் வடகரை வழியே செல்கின்றனர். வழி முழுதும் வயலும் சோலையுமாகவே உளது. "வயலும் சோலையும் அல்லது, யாங்கணும், அயல் படக்கிடந்த நெறி ஆங்கு இல்லை" என்று அடிகள் குறிப்பதைக் காணலாம். வயலும் சோலையும் பொருந்தியது மருதமன்றோ? வயற் பகுதியை முதலிற் காண்பாம்: மருத வயல்கள் நீர் வளஞ் சிறந்து விளங்குவதால் நெல்லும் கரும்பும் தமது அழகிய தோற்றத் தால் இன்பக் காட்சி நல்குகின்றன. முற்றி விளைவுற்று நிற்கும் கரும்புகளில் தேனினம் கூடு கட்டி யிருக்கின்றன. தேன்கூடு கிழிந்து அருகில் இருக்கும் பொய்கையிற் பாய்ந்து அதன் நீரோடு கலந்து கொள்கிறது. அதனைக் காண்போர்க்குத் தேன் கலந்த நீரையுண்டற்கு ஆர்வமுண்டாகிறது. ஆயினும், அதனை உண்டல் நன்றன்று; அவ்வழியே செல்வோர் ஆசையை அடக்கும் திறமுடையராதல் வேண்டும். வயலுழவர்களில் சிலர் களை எடுக்கின்றனர்; சிலர் பூக் கொய்கின்றனர். பூவைப் பறிப்போர் வயல்களில் பூத்திருக்கும் குவளைப் பூக்களைப் பறித்து வயல் வரம்புகளின்மேல் எறிகின்றார்கள். பூக்களில் தேனுண்ணும் வண்டினம் படிந்து கிடக்கின்றன. வரம்பு வழியே செல்வோர் அப்பூக்களை மிதித்தேகும் போது அவற்றோடு கிடக்கும் தேனீக்கள் மிதிப்புண்டு வருந்துவது இயல்பாகவுளது. அவ்வுயிர்கட்கு ஊறுண்டாகாதவாறு நடந்துசெல்வது மக்கட்குக் கடன் என்று அடிகள் அறிவுறுத்துகின்றார். நீர் நின்ற வயல்களில் பற்பல மீன் வகைகளும் நண்டும் நத்தையும் வேறுபல உயிர்களும் வாழ்கின்றன. அவற்றை உண்டு வாழும் நீர்ப் பறவை களான கம்புட்கோழி, நாரை, அன்னம், கொக்கு, கானக்கோழி, நீர்க்காக்கை, உள்ளல், ஊரல், புள், புதா முதலியன செறிந்து பந்தி பந்தியாய் வரம் பணையில் இருப்பது காண்போர்க்கு அவ்வயல், "வெல்போர் வேந்தர் முனையிடம்போல"க் காணப்படுகிறது. வயல்களில் உழுத எருமைகள் சேறுபட்ட மேனியுடன் சென்று அருகிலுள்ள நெற்போரில் உராய்கின்றன. அக்காலை, அப்போரில் உள்ள நெற்கதிர் மணிகள் உதிர்கின்றன. அவை தம் தலையிலும் தோளிலும் உதிர, செல்லும் உழவர் ஆரவாரித்து அவ்வெருமைகளை ஓட்டுகின்றனர்; ஒருபால் வயலின்கண் முளைத்து மலர்ந்து நெற்பயிர்க்கு ஊறுசெய்யும் களைகளை எடுத்து நெல்லின் நாற்று முடியை அவிழ்த்து அவற்றைத் தனித்தனியாக நடுகின்றனர்; அப்பொழுது நடுவோர் தோளிலும் மார்பிலும் சேறுபட்டு உலர்ந்து விடுகிறது; அச் சேற்றைக் கழுவாமலே நெற்சோற்றில் இறக்கப்படும் அரியல் என்னும் கள்ளைத் தம் விருந்தினர்க்கு அளித்துத் தாமும் உண்டு மகிழ்கின்றனர். ஒருபக்கம் வயலை உழும் உழவர் அறுகைக் கொடியும் குவளைப் பூவும் பிற கதிர்களும் சேர்த்து ஏரின் மேழியிற்கட்டி, அதற்கு வழிபாடு ஆற்றி, உழவினைத் தொடங்குகின்றனர். அவ்வழி பாட்டில் தொடங்கி உழுது வரம்பணை ஏறும்வரை, உழவன், 'ஏர் மங்கலம்' என்னும் உழவுப் பாட்டைக் கேட்போரும் ஏரையீர்த்துச் செல்லும் எருமையும் எருதும் இன்புறப் பாடுகின்றான். இவ்வாறு வித்தவிளைந்த நெல்லை அறுப்போர் காட்சியும், அறுத்த நெற்றாளைக் கட்டிப் போரிடுவோர் காட்சியும், போரைச் சிதைத்து அடித்துக் கடாவிட்டு நெல்லெடுப்போர் காட்சியும், அவற்றைப் பண்டியில் ஏற்றிச் செல்லும் காட்சியும், ஏனைக் கரும்பறுத்து ஆலையில் இடும் காட்சியும், கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி அடும் காட்சியும் பிறவும் வயலிடத்தே நிகழ்கின்றன. இவ்வயல்களுக்கு இடையிடையே சிறுசிறு நீர் நிலைகள் உள்ளன. அவற்றின் கரையில் நண்டும் நத்தையும் மேய்கின்றன. அவ்வழியே செல்வோர் தம்மைப் போற்றாது செல்குவராயின், அவருடைய காற்கீழ் அகப்பட்டு அவை இறந்துபடும். இதனை முன்னுற உணர்ந்திருந்த கவுந்தியடிகள், கண்ணகிக்குக் கூறுவதாக, படிப்போர்க்கு அடிகள் அறிவுறுத்துகின்றார். மதுரை மூதூரைச் சார்ந்துள்ள நிலப்பகுதி மருதப் பகுதியாகும். அப்பகுதி தரும் இயற்கைக் காட்சியை, "புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் வேய்த்திரட் பந்தரும் விளங்கியஇருக்கை" என்று சுருக்கமாகக் காட்டி மகிழ்விக்கின்றார். இவ்வயல்களின் புறத்தே நிற்கும் சோலைகளும் பொழில் களும் இன்ப நிலையங்களாகும். அவற்றுள் மரவகை பலவும் இருள் படத் தழைத்து அழகுறப் பூத்து இனிய காட்சி தருகின்றன. அவற்றின் அடியில் பல்வகைக் கிழங்குகள் உண்டு. அவற்றை அகழ்ந்தெடுக்கும் குழிகளில் சோலைகளிலுள்ள சண்பகம் முதலிய வற்றின் பூக்கள் உதிர்ந்து அவற்றை மறைத்து விடும். அவ்வழியே செல்வோர் அங்கே குழிகள் இருப்பது அறியாது காலை வைத்து விடின், கீழே வீழ்ந்து வருந்துவர். மருத நிலத்து வாழ்வோர்க்குப் பொழில்களில் தங்கிப் பல்வகைப் பூக்களை அணிந்து இன்புறுதலும், ஆறுகளில் நாவாய் இயக்கியும், புணைபற்றி நீந்தியும் நீர்விளையாடுவது செல்வ வாழ்வின் சீர்மையாகத் தெரிகின்றது. பொழில் விளையாட்டுப் புரியும் செல்வர், முல்லையும் குவலையும் நெய்தலுமாகியவற்றைக் கூந்தலிலும், வேறே, மல்லிகையும் செங்கழு நீரும் பிறவும் தொடுத்த மாலையை முத்துமாலையோடு மார்பிலும் அணிந்து கொள்ளு கின்றனர். மேனியில் சந்தனம் பூசப்பெற்றிருத்தலால் அதன் மணம் இனிது கமழ்கிறது. இதனைக் கூர்ந்து நோக்கிய இளங்கோவின் எழிற் புலமை, "தண்ணறும் முல்லையும் தாழ்நீர்க் குவளையும் கண்ணவிழ் நெய்தலும் கதுப்புற அடைச்சி வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல் கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப் பொற்கொடி மூதூர்ப் பொழிலாட்டு" என்று மதுரை மூதூரிடத்து மருத நிலச் செல்வரது பொழில் விளையாட்டைப் பொறித்துக் காட்டுகின்றது. அருவியாடுதலும் சுனைகுடைதலும் ஆகிய நீர் விளையாட்டு ஏனைக் குறிஞ்சி முல்லை முதலிய நிலத்தவர்க்கு உரியது. ஆயினும், மருதம் நெய்தல் என்ற இருநிலத்து மக்களே நீர் விளையாட்டினை மிக்க சிறப்பாகப் போற்றித் திருவிழாக் கொண்டாடுகின்றனர். இவ்விருநிலத்திலும் ஓடும் ஆறுகளில் நீர்ப்பெருக்கு வேகமின்றி மெல்லவே செல்லும். ஆறுகளும் அகலமாய் ஆழமின்றி நுண்மணல் நிறைந்து நீராடற்கேற்ற நீர்மைபெற்று விளங்கும். குறிஞ்சியிலும் முல்லையிலும் ஓடிவரும் ஆறுகள் கடுவரவும் ஆழமும் கொண்டு அகலமின்றி இடையே பெரிய பெரிய கற்கள் கிடக்கப் பெற்றுள்ளன. அதனால் அவை புனல் விளையாட்டுக்குப் பொற் புடையவாக அமைவதில்லை. இதனால் தான் காவிரியிலும் வையையிலுமே நீராட்டுப் பெருவழக்காகவுளது. சேரநாட்டு ஆறாட்டும் கடலாட்டாகவே காட்சியளிக்கிறது. வையையாற்றுப் புனலாட்டொன்றினை இளங்கோவடிகள் வகுத்துரைக்கின்றார்: மேலைக்காற்று வீசுங்கால் வையையில் நீர் பெருகுகிறது. செல்வர்கள், தம் மகளிரும் மக்களும் உடன் வரச் சென்று மருத மரங்கள் நிற்கும் நீர்த்துறையை அடைகின்றார்கள். ஆற்றின் இடையே துருத்திகள் (தீவுகள்) உள்ளன. அவற்றில அழகிய பொழில்களும் மணல் பரந்த இடங்களும் உண்டு. அவ் விடங்கட்கு நாவாய் வழியாகச் செல்கின்றனர். நாவாய்களில் பல வேறு அடுக்குகளைக் கொண்டு மாடமாளிகை போல் உள்ளவை நீரணிமாடம் எனப்படுகின்றன. துருத்தியின் கரையில் நீரில் இறங்கி நீந்தி விளையாடுவர் சிலர்; புணைபற்றி விளையாடுவர் வேறு சிலர். ஒரு சிலர் நாவாய்களிலும் நீரணிமாடங்களிலும் ஏறி ஆற்றில் உலா வருவர். இதனை, "குடகாற் றெறிந்து கொடிநுடங்கு மறுகில் கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை விரிபூந் துருத்தி வெண்மணல் அடைகரை ஓங்குநீர் மாடமாடு நாவாய் இயங்கிப் பூம்புணைத் தழீஇப் புனலாட் டமர்ந்து" என்று அடிகள் புகழ்ந்து பாடுகின்றார். பாலை நிலம் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் காவிரி யைக் கடந்து தென்திசை நோக்கிச் சென்ற நெறியே நம்மையும் செலுத்தி, முல்லையும் குறிஞ்சியுமாகிய நிலங்கள் வழங்கும் இயற்கைக் காட்சியில் ஈடுபடச் செய்கின்றார் நமது இளங்கோ சிராப்பள்ளிக்கும் சிறுமலைத் தொடருக்கும் இடையிலுள்ள முல்லைப் பகுதியை முதற்கண் காட்டுகின்றார். முல்லைக் காட்டைச் சென்று சேருமுன், நீர் வளமில்லாத பாலைப் பகுதியொன்று காட்சியளிக்கிறது. அது, "வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தான்நலம் திருகத் தன்மையில் குன்றி முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம்" கொண்டு கிடக்கின்றது. அதன்கண் அறையும் பொறையும் சிறுசிறு வழிகளும் பொருந்தியுள்ளன. பாலை நிலம் என்றவுடனே, தார் பாலைவனமும் சகாரா பாலைவனமும் நமது நினைவுக்கு வரும். அவை போல்வன அல்ல நம் தமிழகத்தில் காணப்படும் பாலைப்பகுதிகள். சீரழிந்த காடும், வளங்குறைந்த குன்றுகளும், நீர்வளமின்றி முரம்பும் பருக்கைக் கற்களும் நிறைந்து கிடக்கும் இடமே பாலையாகும். இவற்றிடையே மான்களும் குறுநரி முதலிய விலங்குகளும் உண்டு. எயினர் மறவர் என்பார் இப்பகுதிகளில் இடம் அமைத்து வாழ்கின்றனர். காரை, கள்ளி, மரல், மூங்கில் முதலிய முட்புதர்களும், வேல், மரவம், ஓமை, உழிஞ்சில் முதலிய மரங்களும் உள்ளன. சில இடங்களில் குன்றவரும் கொடுவில் மறவரும் வழிபாடு செய்யும் கொற்றவைக்குரிய கோயில்கள் இருக்கின்றன. அக்கோயில் முற்றத்தில் நாகம், நரந்தம், ஆச்சா, சந்தனம், சேமரம், மா, வேங்கை, இலவு, புன்கு, பாதிரி, புன்னை, குரவம், கோங்கம் முதலிய மரங்கள் நிற்கின்றன. அடிகள் இக் காட்சியை அழகுறத் தமது நூலிற் காட்டியுள்ளார். குறிஞ்சி நிலம் இப்பாலை நிலத்துக்குத் தெற்கில் வளம்பொருந்திய காடும், காடுசெறிந்த சிறுமலைத் தொடரும் காணப்படுகின்றன. காடுகளில் பல்வகை மரங்களும் செடிகொடி வகைகளும் புதர்களும் செறிந்துள்ளன. மலையின்கண் ஐவனநெல், கரும்பு, தினை, வரகு, வெங்காயம், மஞ்சள், கவலைக் கிழங்கு, வாழை, கமுகு, தென்னை முதலியன சிறந்து விளங்குவது காட்டி, "மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்" என்று குறித்துரைக்கின்றார். இந்நிலையில், அடிகளாகிய சேரர் இளங்கோ, மலை நாட்டிலே பிறந்து வளர்ந்து அது வழங்கும் காட்சியைக் கண்டு பயின்றவராாலால், அதுபற்றி அவர் கூறுவனவற்றைக் காண்பதற்கு நமது உள்ளம் அவாவுகின்றது. அதற்கேற்பவே, அவரும், குறிஞ்சிக் குறவர் குரவையாடி மகிழ்தலையும், வேலன் அயரும் வெறியாட்டையும், தினை குற்றுவோரது வள்ளைப் பாடலையும் புனங்காப்போர் புள் ஓப்புவதையும், அருவி வீழ்ச்சியையும், புலியும் யானையும் போரிடு பூசலையும், பொய்க்குழி அமைத்து யானை வேட்டம் புரிதலையும் ஆங்காங்கு எடுத்துரைக்கின்றார். அம்மலை நாட்டிற் பெறக்கூடிய பொருள் வகைகளை, யானைக்கோடு, அகிற்கட்டை, கவரிமயிர், தேன், சந்தனம், சிந்துரம், அஞ்சனம், அரிதாரம், ஏலம், இலவங்கம், மிளகு என நிரல்படக் கோத் துரைப்பதில் நிகரற்று விளங்குகின்றார். தேமா, பலா முதலிய கனிவகைகளுடன், அரிக்குருளை, புலிப்பறழ், மதகரிக்கன்று, குரங்கின்குட்டி, மான்மறி முதலியவற்றையும் பீலிமயிலையும் கானக் கோழியையும் கிள்ளைகளையும் குன்றவர் வேந்தர்க்கு வரிசையாக வழங்குகின்றனர். குறிஞ்சி நிலத்தவர் தேன் ஈட்டுவதையும் தொழிலாகக் கொண்டவர். மா, பலா, வாழை முதலிய பழங்களையும் வேறு பழவகைகளின் சாறுகளையும் தேனொடு கலந்து தேறல் அமைக் கின்றனர். அதன் தெளிவை மூங்கிற் குழாய்களில் பெய்து புளிப் பேறவைத்து உண்டலும் அவர்கட்கு இயல்பு. அதனை, "நீடமை விளைந்த தேங்கள் தேறல்" என்பர். கையில் கவண்கொண்டு தினைப்புனத்தை மேய வரும் யானைகளை உயர்ந்த பரண்மீதிருந்து வெருட்டி ஓட்டித் தினையைக் காவல் புரிவர்; யானைகளை வேட்டையாடுவதும் செய்வர். குறமகளிர் பரண் மேல் இருந்து தினைக்கதிர்களைக் கவர்ந்துண்ணும் பறவைகளை ஓப்புவர். ஒருபக்கத்தில் மூங்கிற் குழாயில் வைத்திருந்த தேறலையுண்டு கையில் கவண் ஏந்தி நின்ற ஒரு கானவன், தினைப்புனத்தை மேயவரும் யானையைப் பார்க்கின்றான். அதனைத் தன் கவணால் எறிந்து ஓட்டவேண்டுமென்று கருதி அதற்குரிய இடம் நாடிச் சென்று நிற்கின்றான். அதனை அறியாமல் பரண்மேல் இருந்த குறமகள் குறிஞ்சிப் பண்ணில் திறத்திறம் என்ற இசைவகையைத் தொடுத்து இனிமையாகப் பாடுகின்றாள். அவ்யானை அவள் பாட்டிசையில் ஈடுபட்டுத் தினைமேய்வதையும் விடுத்து அயர்ந்து உறங்கிவிடுகிறது; கானவனும் இசைச் சுவையில் மூழ்கிக் கையிலிருந்த கவண் கீழ்வீழ மெய்மறந்தொழிகின்றான். இக்காட்சியை வியந்து காணும் அடிகளார், "அமைவிளை தேறல் மாந்திய கானவன் கவண்விடுபு உடையூஉக் காவல் கைவிட, வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த வாகைத் தும்பை வடதிசைச் சூடிய வேக யானையின் வழியோ நீங்கெனத் திறத்திறம் பகர்ந்து சேணோங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணி" என்று குறிக்கின்றார். இவ்வண்ணம் சோழநாட்டிலும் பாண்டிநாட்டிலும் சேர நாட்டிலும் ஆங்காங்கே காணப்படும் இயற்கைக் காட்சிகளை இளங்கோவடிகள் கண்டு இன்புற்றிருக்கின்றார். கீழ்க்கடற் கரை யிலுள்ள காவிரிப்பூம்பட்டினம் முதல் மேலைக்கடற்கரை நாடாகிய சேரநாடு வரையில் அடிகளார் உலாவியிருப்பதைக் கண்ணகியார் வரலாற்று நெறிகளே நன்கு வற்புறுத்துகின்றன. தமிழகத்தின் வட வெல்லையாகிய வேங்கடத்துக்கும் சென்றுள்ளாரென்பதை, அது பற்றி அவர் கூறும் பகுதி நமக்கு அறிவிக்கின்றது. பாக்காலாவி லிருந்து இரேணுகுண்டாவரையில் கிழக்கு நோக்கிச் சென்று பின், வடக்கு நோக்கிச் செல்லும் வேங்கட மலைத் தொடரைக் கார் காலத்தில் காணின், மிகப் பல அருவிகளுடன் அது காட்சி வழங்குவது யாவரும் அறிந்த தொன்று. வேங்கடத்தில் திருமால் எழுந்தருளும் திருமலைக்குச் செல்லும் நெறியில் வீழும் வீங்குநீர் அருவியை வியந்து அடிகள் "வீங்குநீர் அருவி வேங்கடம்" என்பதும், அங்கே திருமால் நின்ற கோலத்தில் காட்சி தரும் திறத்தையும் எடுத்துரைப்பதும் அடிகள் திருவேங்கடத்தை நேரிற் கண்டவ ரென்பதை வற்புறுத்துகின்றன. இதனால் இளங்கோவடிகள், அரசர் குடியிற்பிறந்த செல்வத் தோன்றலாயினும், தமிழகம் முழுதும் சுற்றித் திரிந்து, இயற்கையன்னை வழங்கும் இன்பக் காட்சியில் திளைத்துச் சிறந்த புலமையுடையராகையால், தாம் பாடியருளிய சிலப்பதிகாரத்தை இயற்கையழகிற்குரிய சொற்கோயிலாக்கி யுள்ளார் என்பது தெளிவாகிற தன்றோ? வாழ்க இளங்கோ!  6. நந்தா விளக்கு சம்புவராயர் சோழ வேந்தன் இரண்டாங் குலோத்துங்கன் சோழநாட்டை ஆண்டு வருகையில் தொண்டை நாடு அவனது ஆட்சியில் இருந்தது. இன்றுள்ள சித்தூர், செங்கற்பட்டு, வடஆர்க்காடு, தென்னார்க் காட்டின் வடபகுதி ஆகிய இந்த மாவட்டங்கள் சேர்ந்தது பண்டைத் தொண்டை நாடு. கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன் பிருந்தே இந்நாடு இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிந்து வழங்கி வந்துள்ளது. விசயநகர வேந்தர் ஆட்சியில் தான் இக் கோட்டங்களின் பெயர்கள் மறையத் தலைப்பட்டன; முகமதிய மேனாட்டவராட்சியில் முற்றிலும் ஒழிந்தன. இன்று அவை கல் வெட்டுக்களில் மாத்திரம் காட்சி வழங்குகின்றன. சோழவேந்தர் ஆட்சிக்காலத்தில் தொண்டை நாட்டுக் கோட்டங்களுள் ஒன்றான பல் குன்றக்கோட்டத்தில் சம்புவராயர் என்ற குறுநில மன்னர் நாடுகாவல் புரிந்து வந்தனர். பல்குன்றக் கோட்டம் பாலாற்றுக்கும் தென்பெண்ணை யாற்றுக்கும் இடையில் பவளமலையை மேல் எல்லையாகக் கொண்டிருந்தது. பவளமலை இப்போது சவ்வாது மலை யென்ற பெயருடன் வடவார்க்காடு வட்டத்தில் உள்ளது. பல்குன்றக் கோட்டத்துச் சம்புவராயருக்குப் படைவீடு தலைநகராக விளங்கிற்று. அவரது ஆட்சி கிழக்கே திருக்கழுக்குன்றத்தையும் விழுப்புரத்துக்கு வடகிழக்கிலுள்ள திருவரசிலியையும் தன்னகத்தே கொண்டிருந்தது. படைவீடு வடவார்க்காட்டில் போளூரிலிருந்து வேலூர்க்குச் செல்லும் பெருவழியில் சந்தைவாசல் என்னும் அழகிய ஊர் உளது. அதற்கு மேற்கில் கிழக்கொழிய ஏனை மூன்று பக்கங்களிலும் உயர்ந்த மலைகளால் சூழப்பட்ட இடைநிலத்தில், படைவீடு காட்டாறு ஒன்றின் கரையில் இருக்கிறது. அந்த ஆற்றை ஆரணியாறு என்றும் படைவீட்டாறு என்றும் வழங்குகின்றனர் சிறுகாடு படர்ந்து பசுந்தழை போர்த்து நிற்கும் குன்றுகளின் அடியில் மணல் பரந்த ஆற்றங்கரையில் நின்று திகழும் இவ்வூர் படைவீடு என்ற பெயர் தாங்கியிருப்பது மிகவும் பொருத்தமே என்பதை நேரிற் சென்று காண்பவர் நினையா தொழியார், ஒரு காலத்தில் இது செல்வம் சிறந்த திருநகரமாய் விளங்கிற்றென்பதைக் காட்டும் சின்னங்கள் பல இன்னும் இருந்து வருகின்றன. சம்புவராயர் ஆட்சி கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டின் இறுதிவரை சம்புவராயர்களின் ஆட்சி மிக்க புகழ் படைத்து விளங்கிற்று. "கலம்பகத்துக்கு இரட்டையர்கள்" எனச் சிறப்பித்துப் புகழப்பெற்ற இரட்டைப் புலவர்களை ஆதரித்துப் புறந்தந்த பெருமை படைவீட்டரசர்க்குத் தனித்த உரிமையாகும். கச்சி ஏகாம்பரநாதருலா என்ற நூல் சம்புவராயர்களின் செயல் மாண்பு, கொடை மாண்புகளைச் செவ்வையாக உரைக்கின்றது. படைவீட்டுக் கல்வெட்டு படைவீட்டு நகரத்தைச் சூழ்ந்த நிலப்பகுதி மிக்க நீர் நிலவளம் படைத்தது. இன்றும் முன்னே சொன்ன பெருவழியாகச் செல்வோர், அப்பகுதி இனிய மருதவளஞ் சிறந்து விளங்குதலைக் காண்பர். அதன்கண் இன்றுபோல் அன்றும் வேதியர் பலர் வாழ்ந்தனர். அவர்களில் கன்னடரும் தமிழரும் தெலுங்கரும் இலாளரும் எனப் பல திறத்தர் இருந்தனர். ஒரு காலத்தில் அவரிடையே திருமணம் பொருளாகத் தீய கொள்கை ஒன்று உண்டாயிற்று. மணப் பெண்ணுக்காக மணமகன் மிக்க பொன் தரவேண்டும் என்றும், மணமகனுக்காக மணப் பெண்ணின் தந்தை பொருள் தருதல் வேண்டுமென்றும் ஒரு வழக்காறு அவ்வேதியரிடையே நிலவிற்று. இத்தீநெறியின் பயனாகப் பொன்கொடுத்து மணம் செய்து கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர், தவறான நெறிகளில் மணஞ் செய்து கொள்ளலாயினர். அதனால் அவர் மரபுக்கு மாசு தோன்றக் கூடிய சூழ்நிலையும் தோன்றுவதாயிற்று; சமுதாயத்தின் பண்பாடும் வலியிழக்கத் தொடங்கியது. அதனை உணர்ந்த அறிஞர் பலர், வேந்தனான சம்புவராயனது ஆணைபெற்று, விரிஞ்சைபுரத்து வழித்துணைநாதர் கோயிலில் கூடியிருந்து நல்ல தோர் திருமண ஏற்பாட்டைச் செய்து கொண்டனர். "இற்றை நாள் முதலாக இந்தப் படைவீட்டு ராஜ்யத்துப் பிராமணரில் கன்னடிகர், தமிழர், தெலுங்கர் இலாளர் முதலான அசேஷ கோத்ரத்து அசேஷ சூத்திரத்தில் அசேஷ சாகையிலவர்களும் விவாகம் பண்ணுமிடத்துக் கன்னியா தானமாக விவாகம் பண்ணக் கடவராகவும்; கன்னியாதானம் பண்ணாமல் பொன் வாங்கிப் பெண்கொடுத்தால், பொன் கொடுத்து விவாகம் பண்ணினால் இராஜதூஷணத்துக்கு உட்பட்டுப் பிரா மணியத்துக்கும் புறம் பாகக்கடவர் என்று பண்ணின தர்மஸ்தாபன சமய பத்திரம்;இப்படிக்கு அசேஷ வித்வ மகாஜனங்கள் எழுத்து"* என்பது அந்த ஏற்பாடு. இவ்வாறே மற்றைச் சமுதாயத்தாரும் தத்தம் இனம் செம்மை எய்தும் பொருட்டுப் பலப்பல சீர்திருத்தங்களைச் செய்து கொண்டனர். இவற்றையெல்லாம் அப்பகுதிகளிலுள்ள கல்வெட்டால் அறிகின்றோம். நாட்டின் அரசியல் நன்கு அமைந்திருந்தாலன்றி மக்களுக்குத் தத்தம் சமுதாய வளர்ச்சி பற்றிய வழி வகைகளில் கருத்துச் செல்லாது. படைவீட்டரசின் கீழ் வாழ்ந்த மக்கள் இவ்வாறு பல செவ்விய திருத்தங்களை ஏற்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்கொண்டு, வாழ்க்கை வகை செய்து கொண்ட தொன்றே சம்புவராயர்களின் அரசியலின் செம்மைக்குச் சிறந்த சான்று பகருகின்றது. மக்கள் வகுத்துக் கொள்ளும் ஏற்பாடுகளில் வழுவுவோர் "இராஜ தூஷணத்துக்கு" உட்பட்டுத் தண்டனை பெற்ற செய்திகளை நவிரமலையடியின் வடபகுதியில் உள்ள கங்கன் மாதேவி, கட்டகரம் பாளையம் முதலிய ஊர்களில் வழங்கும் பழஞ்செய்திகளால் இனிது அறிகின்றோம். இதனால், படை வீட்டிலிருந்து அரசு புரிந்த சம்புவராய மன்னர்கள் நாடுகாத்து நல்கும் அரசியற் பாதுகாப்புடன் நாட்டு மக்கட்கு நன்னெறிப்பட்ட உரிமையும் நன்கு தந்திருந்தனர் என்பது விளங்குகிறது. சம்புவராயர் நீதிமுறை சம்புவராயர்களின் படைவீட்டரசு தொண்டை நாட்டின் தென்பகுதி முற்றும் பரந்து விளங்கியதாயினும், அவர்கள் முடிவேந்த ரான சோழர்களுக்கு அடங்கி அவர்தம் வழிநின்று ஒழுகிவந்தனர். சோழவரசு வேண்டும்போது சம்புவராயர் படைத்துணை செய்தனர்; வினைவேண்டிய வழி அறிவு உதவினர். இவருடைய அருஞ்செயலைப் பாராட்டிச் சோழமன்னர் உயரிய சிறப்புக் களைச் செய்தனர். சம்புவராயரிற் பலர் குலோத்துங்க சோழச் சம்புவராயன், வீர நாராயணச் சம்புவராயன் எனப் பெயர் தாங்கி யிருப்பதே தக்க சான்று. இச்சம்புவராயர் வழியில் எதிரிலி சோழச் சம்புவராயன் என ஒருவன் தோன்றி மிக்க புகழ்பெற்று விளங்கினான். அவனுடைய நீதிமுறை பற்றிப் பல வரலாறுகள் படைவீட்டுக்கருகிலுள்ள கண்ண மங்கலம், குளத்தூர் முதலிய ஊர்களிலுள்ள பெரியோர் கூறுவது வழக்கம். உற்ற நண்பர்கள் எதிரிலி சோழச் சம்புவராயன் படைவீட்டில் இருந்து அரசு புரிந்து வருகையில், அவனுக்குப் படைத் துணைவர் சிலர் பக்கத்தே இருந்தனர். அவருள் விக்கிரம சோழப் பேரரையன், அம்பலக் கூத்த னான தென்னாட்டரையன் என்பவர் ஏற்றம் பெற்று இலங்கினர். விக்கிரம சோழப் பேரரையன் தொண்டை நாட்டுக் களத்தூர்க் கோட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகத்துக்கு அண்மையில் இருக்கும் குன்றத்தூரில் வாழ்ந்து வந்தான். அம்பலக் கூத்தன் தென் பெண்ணையாற்றின் வடகரைப் பகுதியில் உள்ள மலையனூர் என்னும் ஊரில் இருந்தான். தென்பெண்ணை வடகரைப் பகுதி மலாடு என்றும் வழங்கும். அதன் உள்நாடுகளில் இருங் கோளப் பாடிப் பனையூர் நாடு ஒன்று. பனையூர் நாட்டில் அடங்கிய தாகலின், மலையனூர், மலாடான இருங்கோளப் பாடி நாட்டுப் பனையூர் நாட்டு மலையனூர் என்று இடைக்கால வரலாற்றுக் குறிப்புக்கள் எடுத்து மொழிகின்றன. மலையனூர் அம்பலக் கூத்தன், எதிரிலி சோழச் சம்புவராயனுடன் இளமையில் போர்ப் பயிற்சி பெற்றுச் சோழ வேந்தர் படையில் உடனிருந்து பழகிய உயரிய நண்பனாவன். அக்காலத்தே அவனுடைய போர் வன்மையும் மன நன்மையும் நேரிற் கண்டமையின், எதிரிலி சோழன் அவன் பால் எஞ்சாத அன்பு கொண்டான். படைவீட்டுக்கு எதிரிலி சோழச் சம்புவராயன் வேந்தனானதும், மலையனூர் அம்பலக் கூத்தனை வருவித்து ஒரு படைத் தலைவனாக்கிச் செம்மூர்க் கோட்டத்து முக்காட்டுப் பட்டு என்னும் ஊரில் இருந்து பாடிகாவல் புரிந்து வருமாறு பணித்திருந்தான். விக்கிரம சோழப் பேரரையனும், அம்பலக் கூத்தனான தென்னாட்டரையனும் சம்புவராயனுக்கு இரு கண் போல் திகழ்ந்தனர். கண்ணிரண்டும் ஒன்றையே காணும் என்பர். அது போல் இருவரும் எதிரிலியின் ஆட்சி இனிது இயங்குதற் கண் ஒன்றிய கருந்துடையவராய்க் கலந்து ஒழுகினர். காதல் போட்டி அந்நாளில் அப்பகுதியில் வம்பு என்ற பெயருடைய செல்வ மகள் ஒருத்தி வாழ்ந்தாள். அவள் திருமணத்துக்குரிய செவ்வியில் இருந்ததனால், அரசியலில் சிறப்புற்றிருந்த தலைவர்களான பேரரை யனும் தென்னாட்டரையனும் அவளை மணந்து கொள்ள விரும்பினர். அவளுடைய பெற்றோரும் உடன் பிறந்தோரும் இருவரிடத்தும் ஒத்த பண்பும் ஒத்த செயலும் இருப்பது கண்டு செய்வது தெரியாது திகைப்புற்றனர். ஒருவாறு அவர்கள் தமக்குள்ளே ஆராய்ந்து, இருவரில் ஒருவரைத் தேர்ந்து கொள்ளும் உரிமையை வம்புவுக்கே விட்டொழித்தனர். நெல்லிகிழான் விண்ணனான அவள் தந்தை, சம்புவராயன் ஆணைப்படி இருவருடைய குணஞ் செயல்களையும் நேரிற் கண்டறியும் வாய்ப்பையும் வம்புவுக்கு வழங்கினான். வம்புவும் இருவரையும் கண்டு தனக்குரிய அறத்தில் வழுவாமல் நின்று அறிவன அறிந்துகொண்டாள். சின்னாட்குப் பின், கற்புடைய நங்கையான வம்பு தன் கருத்தை விண்ணனுக்கு விளம்பினாள். அவளுடைய உள்ளத்தைத் தென்னாட்டரையன தன் குணஞ்செய்கைகளால் கவர்ந்து கொண்டான் என்பது புலனாயிற்று. பெற்றோரும் உற் றோரும் உடனிருப்ப, நன்னாளில் வம்புவுக்கும் தென்னாட்டரை யனுக்கும் சீரிய முறையில் திருமணம் நடைபெற்றது. தென்னாட் டரையன் வாழ்க்கைத் துணைவியாய் வம்புவும் அவனது திருமனை சென்று வாழ்ந்துவரலானாள். காதற் பகைமை இம்முயற்சியில் வெற்றி பெறாத விக்கிரம சோழப் பேரரையன் தென்னாட்டரையன் பால் அழுக்காறு கொள்ளலானான். வம்புவை மணத்தற்குச் செய்த முயற்சியில் தன்னைப்பற்றி வடுவான உரைகள் சில அவன் அவட்கு வழங்கியிருத்தல் வேண்டும் என்றும், அவ்வாறு வடுக் காணத்தக்க குற்ற மொன்றும் தன்பால் இல்லை யென்றும் பேரரையன் கருதினான். அக்கருத்தினூடே அழுக்காற்றுத் தீயும் கனிந்து எழுவதாயிற்று. நாள் கழியக் கழியத் தென்னாட்டரையன் பால் பேரரையற் குண்டான கடுப்பும் மிகுவதாயிற்று. இடை யிடையே நிகழ்ந்த அரசியல் நிகழ்ச்சிகளில் தென்னாட்டரையன் மேன்மையுற்றுச் சம்புவராயன் பால் சிறப்புக்கள் பல பெற்றான். இவ்வாற்றால் பேரரையன் உள்ளத்திற் கனிந்து பெருகி வந்த கடுப்புப் பகையாய் மூண்டது. முடிவில் தென்னாட்டரையனை ஒழித் தாலன்றித் தனக்கு மனவமைதி எய்தாது என்று கருதும் அளவிற்கு அவன் உள்ளத்தில் உறுபகை வளர்ந்து ஓங்கி நின்றது. பேரரையன் எதனையும் எளிதில் தொடங்கிச் செய்யும் பெற்றியனல்லன்; செய்வது எதுவாயினும் காலமும் இடமும் கருது மளவுக்கு வலியும் அமைந்தால் தான் செய்வன். செய்தல் வேண்டு மென ஒன்றைத் துணிந்தானாயின், துணிந்ததனைத் துணிந்தவாறே செய்து முடிக்கும் திறலும் திட்பமும் உடையன். "கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை" என்ற திருக்குறளைக் கடைப்பிடித்து ஒழுகுபவனாதலால், பேரரையன் கருத்தை முக்காட்டுப்பட்டில் வாழும் தென்னாட்டரையன் சிறிதும் அறியும் திறம் இல்லாத வனானான். பெண்விழைவால் பெருந்தீமைகளைச் செய்தோர் வரலாறுகள் பலவற்றைப் பேரரையன் அறிந்திருந்தானாயினும், இப்போது தன் அறிவு பேதுறுவது நன்றன்று என்பதை எண்ணினான் இல்லை; தன் கருத்துக்கு இசைந்த கொலைமறவர் சிலரைக் கலந்துதென்னாட்டரையன் உயிரைத் தீர்த்து விடுவதற்கு ஏற்பாடு செய்தான். ஒருநாள் இரவு முக்காட்டுப் பட்டில் தென்னாட் டரையன் தனித்திருக்கும் நிலைமை நோக்கிப் பேரரையன் விடுத்த பெருஞ் செய்வீரர் தென்னாட்டரையனைச் சூழ்ந்து கொண்டனர்; அவர் பலராகவும் தென்னாட்டரையன் தனியாகவும் நின்று கடும் போர் உடற்றினான். தன் வீரர் பின்னிடக்கூடிய நிலை எய்துவதைக் கண்ட பேரரையன் தானே சரேலெனப் பாய்ந்து தென்னாட் டரையனைத் தன் கைவாளாற் கொன்று விட்டு ஓடிப்போனான். தீப்பாய்ந்த செல்வி தன் ஆருயிர்க் கணவன் போர் புரிவதையும், வீரர் பிறக்கிடு வதையும் பார்த்து நின்ற வம்பு, பேரரையன் பாய்ந்து தென்னாட் டரையனைக் கொன்ற செயலைக் கண்டதும் ஓவெனக் கதறிப் புலம்பினாள். அருகிருந்த தானை வீரர்கள் வந்து கூடுமுன் பேரரை யனுடைய கொலை மறவர்கள் ஓடி மறைந்தனர். வம்புவுக்குக் கையறவு பெரியதாயிற்று; கணவன் உடல்மேல் வீழ்ந்து கதறினாள். செய்தி யறிந்ததும் விண்ணனும் பிறரும் வந்து சேர்ந்தனர். அவர்கள் எத்துணையோ ஆறுதல் கூறித் தேற்றியும் தேறாளாயின வம்பு, கணவனை எரித்த ஈமத் தீயிலேயே தானும் வீழ்ந்து உயிர் கொடுத் தாள். பழிக்குப் பழி ஈமத்தீயை வலம் வருகையில் விக்கிரம சோழப் பேரரையன் செய்த தீமையை விரிவாகச் சொல்லி வாயில் அறைந்து கொண்டு வம்பு தீவாய் புகுந்தாள். அப்போது அதனைக் கேட்டிருந்த மக்கள் அனைவரும் மனங்கலங்கி வருந்தினர். கண்டிருந்த விண்ணனும் கருத்துடைந்து கண்ணீர் சொரிந்தான். அவன் அருகே நின்றவருள் தென்னாட்டரையன் தமையனும் ஒருவன். ஈமத்தீ எழ எழ, அவன் உள்ளத்தில் வெகுளித்தீ வீறிட்டெழுவதாயிற்று. அவனைக் கல்வெட்டுக்கள் இராம நம்பியான இருங்கோளப்பாடி நாடாள் வான் என்று குறிக்கின்றன. தென்னாட்டரையன் போல் அவன் பிறி தோரிடத்தில் பாடி காவல் தலைமை பூண்டவனாவன். தன் தம்பியைக் கொன்ற விக்கிரம சோழப் பேரரையனை கொன்று பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உருத்தெழுந்தது. இராமநம்பி பேரரையனைவிட வினைத்திட்பமும் அதற் கேற்ற மனத்திட்பமும் ஒருங்கு உடையவன்; பகையாயினாரை வேரோடு தொலைத்தன்றித் துயில் கொள்ளாத துணிவு மிக்கவன்; வம்புவின் உடம்பு வெந்து சாம்பரானது காணுமுன் பேரரையன் தொலையவேண்டுமென நினைத்தான். முகம் கறுத்தது; உடல் வியர்த்தது; ஊதுகுழல்போல் மூச்சு எழுந்தது; வீசை துடித்தது; கண்கள் சிவந்தன; பற்கள் கடியுண்டன; மடித்த வாயினின்றும் வெடித்த சொற்கள் வெளிவந்தன; தன்னொடு நின்ற தானை மறவரை நோக்கினான்; "பேரரையனும் அவன் இனத்தவரும் இனி நிலவுலகில் இருத்தல் கூடாது" என்று கட்டளையிட்டான். அவர்கள் பேரரையனைத் தேடலுற்றனர். பேரரையன் தான் செய்த தவற்றை யுணர்ந்து மறைந்து கொண்டான். அவன் செயலால், ஒரு குற்றமும் செய்யாத பேரரையன் துணைவர் பலர் உயிர் துறந்தனர்; உறவினர் துன்புற்றனர்; அவர் வீடுகள் தீக்கிரையாயின. பேரரையனுடைய களத்தூர்க்கோட்டம் முழுதும் நாடாள்வான் விடுத்த மலாட ருடைய பகைப்புயல் வளைந்து உயிர்ச் சூறையாடிற்று. இதனை மறைந்திருந்து கண்ட பேரரையன் இனித் தனக்கு உய்யுந் திற மில்லை யென்பதை ஓர்ந்தான்; நேரே படை வீடுடி சென்று தனக்கும் நாடாள்வானுக்கும் தலைவனான சம்புவராயன் பால் முற்றும் தெரிவித்து உய்திபெறுவதெனத் துணிந்தான்; இரவோடிரவாய்ப் படைவீட்டை அடைந்து, எதிரிலி சோழச் சம்புவராயனிடம் உண்மையை உள்ளவாறு உரைத்து உய்தி வேண்டினான். நேர்மையுடைய நீதி எதிரிலி சோழச் சம்புவராயனுக்குத் தென்னாட்டரையன் இறந்தது பற்றி மிக்க வருத்தமுண்டாயிற்று. அந்நிலையில் விக்கிரம சோழப் பேரரையன் உண்மையை ஒளியாமல் உரைத்தது பற்றி ஒரு வகையில் உவகை கொண்டான். பேரரையன் செய்த தீமைபற்றி இராமநம்பி மேற்கொண்ட செயல் சம்புவராயன் உள்ளத்தை அலைக்கத் தொடங்கிற்று. தன் தம்பியைக் கொன்றவன் சிறப் புடைய தானைத் தலைவனாக இருப்பதால், அவன் செயலை வேறு வகையில் ஆராய்ந்து முறை செய்வது உள்ளத்தெழுந்து உருத்து நிற்கும் சினத்தீக்குப் போதிய இரையாகாது என எண்ணியே இருங் கோளப்பாடி நாடாள் வானான இராமநம்பி, பேரரையனைப் பெருந்தொல்லைக்கு உள்ளாக்கினான் என்பதையும் நன்கு எண்ணி னான்; அதனால் அவனைத்தான் வெறுப்பதிலும் பயனில்லை எனச் சம்புவராயன் தனக்குள்ளே தெளிந்தான். நாட்டில் சிறந்த சான்றோர் களை வருவித்துச் செய்வகையாது எனத் தேர்வானாயினன். சான்றோரும் தானுமாய் இருந்து இராம நம்பியைப் படை வீட்டுக்கு வருவித்தான். பேரரையனையும் அவனையும் நிறுத்தி, இருவர் கருத்துக்களையும் சான்றோர் கேட்டறிந்தனர். இருவர் உரையினையும் ஒருசேரக் கண்டு சான்றோரொடு கலந்து எதிரிலி சோழச் சம்புவராயன், எல்லோரும் தெளியப் பேசலுற்றான்; "பேரரையனும் நாடாள்வானும் நம் அரசியலுக்குப் பெருந் துணைவர்கள், இவர்களிடையே பூசலும் போரும் உண்டாயின், நம் பகைவர்க்கு நகையும் எளிமையும் காட்டிவிடும். விரும்பிய வண்ணம் பேரரையனைக் கொல்வதால், இராமநம்பி தன் தம்பி தென்னாட்டரையனை மீளப் பெறப் போவதில்லை; அதனால் அவனது உயிர் ஒருவகை ஆக்கமும் அடையப் போவதில்லை; மறத்திற்கும் அறமே துணை. பேரரையன் செய்த மறவினைக்குக் கழுவாய் அறம் செய்வதே. அஃதாவது, நாடாள்வான் பேரரையன் பால் கொண்ட சினத்தைத் தணிக்க வேண்டி, அவனைப் பகைப் பதைக் கைவிடவேண்டும் என்பது தெளிவாக விளங்குகிறது. பேரரையனால் உண்டான கொலைவினை ஒன்றென்றால், நாடாள் வானால் பல உண்டாகியிருக்கின்றன. ஆகவே, இருவரும் தங்கள் தங்கள் செயல் குறித்துக் கழுவாய் செய்யவேண்டும்." இதனைக் கேட்டதும், அவையில் கூடியிருந்த சான்றோரும் நாட்டவரும் மகிழ்ச்சி கொண்டனர். அதனைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட சம்புவராயன், விக்கிரம சோழப் பேரரையனை முதலில் நோக்கி, "உன்னாற் கொலையுண்ட தென்னாட்டரையன் பொருட்டும் அவன் மனைவி வம்பு என்பவள் பொருட்டும் இரண்டு நந்தா விளக்குகள் வைத்தல் வேண்டும்" என்று பணித்தான். பின்பு இருங் கோளப்பாடி நாடாள்வானைப் பார்த்து, "நீயும் இவ்வாறே நந்தா விளக்குகளை இரண்டு வைப்பாயாக" என்று ஆணையிட்டான். இது கேட்ட அறங்கூறவையத்தார், "எங்கள் வேந்தனான சம்புகுலப் பெருமாள் பெயராலும் எதிரிலி; போர்க்குரிய மறத் துறையிலும் எதிரிலி; ஆட்சிக்குரிய அறத்துறையிலும் எதிரிலி" எனப் பாராட்டினர். தானைத் தலைவர் இருவரும் முக மலர்ச்சி யோடு அத்தண்டத்தை ஏற்றனர். முடிவில், சம்புவராயன் இருவரையும் ஒருங்கு நிறுத்தி, "இவ்விளக்கீடு மாத்திரம் அமையாது; மற்றொரு தண்டம் உளது, அதனையே நீங்கள் மனங்கலந்து மேற் கொள்ளவேண்டும்" என மொழிந்தான். அங்கே கூடியிருந்த அனைவருக்கும் அவன் குறிப்பு விளங்காமையால் வியப்பும் அமைதியும் எங்கும் நிலவின. சம்புவராயன் தன் மலர்ந்த முகத்தில் சிறிது விருவிருப்புத் தோன்ற இருவரையும் உருத்து நோக்கி, "நீங்கள் இருவம் இனி ஒருவர் மேல் ஒருவர் பகை தொடர்வதில்லை என உடன் பட்டு உறுதி தரல் வேண்டும். நீங்கள் செய்யும் விளக்கீடு, தென்னாட்டரையன் அவன் மனைவி வம்பு ஆகிய இருவர் உயிரும் நலம் எய்துதற்கு ஆயிற்று. அத்தென்னாட்டரையன் நமது படை வீட்டரசியலுக்குச் செய்த ஆக்கத்தை நீங்கள் இருவரும் செய்யத் தக்கவராகின்றீர்கள். அந்த ஆக்கம் உங்கள் இருவருடைய மனவொருமையால் தான் உண்டாகும். ஆதலால், நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் பகைத் தொழுகுவ தில்லை என உறுதி தருக" எனக் கட்டுரைத்தான். எல்லோரும் தமது உடன்பாட்டைத் தெரிவித்தார்கள். இருவரும் பலரும் காண உறுதி மொழிந்தனர். நந்தா விளக்கு தென்னாட்டரையனும் வம்புவும் திருக்கழுக்குன்றம் உடைய இறைவனை நோக்கி வழிபாடாற்றக் கருதியிருந்த கருத்தொன்றை விண்ணன் வெளிப்படுத்தவும், சம்புவராயன் சான்றோர்களைக் கலந்து அவ்வாறே செய்க என இடம் குறித்தான். திருக்கழுக்குன்றமுடையார் திருக்கோயிலில் இவ்விளக்கீடு பற்றிய முடிபைக் கல்லிற் பொறிப்பது என்றதன் பின், கல்லில் வெட்டும் திறம்பற்றி ஒரு சிற்றாராய்ச்சி செய்தனர். இக்கொலை வழக்கில் பேரரையனே முதற்கண் குற்றம் செய்து பின்னர் நாடாள் வானால் அலைப்புண்டு சம்புவராயன் பால் புகல் நாடினானாத லால், அவன் உடன்பாடு, தம்பியான தென்னாட்டரையன் வம்பு என்ற இருவர்க்கும் நன்று உண்டாக விளக்கெரிப்பதற்கு நாடாள் வான் நல்கிய உடன்பாட்டினும் சிறந்தது எனக்கொண்டு, அதனையே முதலில் வெட்ட வேண்டுமென ஆணை தந்தான். அது, "இருங் கோளப்பாடி நாடாள் வான் இரண்டு விளக்குக்கும் சம்மதித்து இருவரும் தங்கள் உபயம் வந்து உடையார் திருக்கழுக்குன்ற முடையார் திருக்கோயிலிலே வைப்பது என்று இருங் கோளப்பாடி நாடாள்வான் சொல்லி, நானும் என் வமிசத்தாரும் இப்பகை தொடரவும் சொல்லவும் பெறாதோமாகச் சம்மதித்துத் தென்னாட் டரையனுக்கும் அவன் அகமுடையாளுக்குமாக வைத்த திரு நந்தா விளக்கு இரண்டுக்கும் விட்ட சாவா மூவாப் பேராடு தொண்Qறும் பசு முப்பத்தொன்றும் இத்தேவர் கோயிலிலே விட்டுச் சிலாலேகை பண்ணிக் கொடுத்தேன்; இத்தன்மம் அழியாமற் காப்பான் அடி என் தலைமேலன" என்று கூறுகிறது* 7. தமிழரசில் புலவர் பணி முன்னுரை நம் தமிழகத்தில் தமிழ் வேந்தர் தமிழ் மொழியால் அரசு புரிந்த போது தமிழரசு நடைபெற்றது. தமிழகத்து வரலாற்றில் சங்க காலத்திலும், இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்திலும் தமிழரசு நடந்தது. ஏனைப் பல்லவர், விசயநகர வேந்தர், முகமதியர், மேனாட்டவர் அரசு நடத்திய காலமும் உண்டு. மேனாட்டவர் காலத்தில் தான் அரசியல் மொழி ஆங்கிலமாயிற்று. அவர் கட்கு முன், வேற்றவரான பல்லவர் முதலியோர் அரசு நடத்திய போதும் தமிழே அரசியல் மொழியாக இருந்து வந்தது. சங்க காலத்துக்கும் பல்லவர் காலத்துக்கும் இடையில் உள்ள காலத்தில் களப்பிரர் என்பவர் தமிழகத்தில் இருந்திருக்கின்றனர்; ஆயினும் அவர்கள் நிலையாக இருந்து அரசு நடத்தியதற்கு ஒரு சான்றும் இதுவரையில் கிடைக்கவில்லை. இடைக்காலச் சோழ பாண்டியர் நடத்திய அரசியல் தமிழரசே எனினும், அதன்கண் புலவர் பணி மிக்க ஈடுபட்டதாகச் சிறந்த குறிப்புக்கள் காணப்படவில்லை. சேக்கிழார், ஒட்டக்கூத்தர், சயங்கொண்டார் முதலிய சிறந்த புலவர்கள் அரசரொடு நெருங்கிப் பயின்றுள்ளார்கள் எனினும், அரசியல் நெறியில் அவர்களது ஈடுபாடு விளங்கித் தோன்றவில்லை. அரச வாழ்வும் புலமை வாழ்வும் பின்னிப் பிணைந்து நிற்கும் தமிழரசு சங்க காலத்தில் தான் இருந்திருக்கிறது. புலவரது புலமைப் பயன் அரசியலின் செம்மை யொன்றே நாடி நின்றது; அரசியலும் புலமைக்குச் சீரிய இடம் தந்து சிறப்பித்துளது. அதுகண்டே திருவள்ளுவர் முதலிய அரசியலறி ஞர்கள், அரசியலுக்குப் புலமைமிக்க பெரியோரது துணை இன்றி யமையாது என்பதை வற்புறத்தியுள்ளனர். சங்க காலத் தமிழரசில் பெரியோர்களான புலவர்கள் செய்த பணிகள் சிலவற்றை இங்கே காண்பாம்: கிள்ளிவளவன் சங்க காலச் சோழ வேந்தருள் கிள்ளிவளவன் என்பவன் பழமையான வேந்தன். அவனது ஆட்சியில் ஒருகால் பருவ மழை பொய்த்தமையின் நாட்டில் விளைவு வளம்படாதாயிற்று. "வான் பொய்ப்பினும் தான் பொய்யா, மலைத் தலைய கடற் காவிரி" என்ற புகழ்பெற்ற காவிரியும் அப்போது கை விரித்து விட்டது. நாட்டில் வறுமை மிகுந்தது. இன்றுபோல் அன்று போக்குவரவுக்குரிய நெறியும் வாயிலும் நன்கு நிலவாமையால் பொருள் இன்மை நாடு முழுதும் நடம் புரிந்தது. நாடு காவல் பொருட்டு நாட்டு மக்கள் வேந்தர்க்குச் செலுத்த வேண்டிய கடமையும் கலக்கமுற்றது. ஆண்டுகள் சில கழிந்தன. செய்க்கடனும் (Land Revenue) பெருகிற்று. பின்பு நாடு நன்மழை பெற்றுப் பொருள் வளம் பெறு வதாயிற்று. அது கண்ட வேந்தன், அரசுக்கு மக்கள் இறுக்க வேண்டிய கடமையுடன் கழிந்த ஆண்டுகளில் செலுத்தப்படாது நின்ற பழங் கடனையும் பெறக் கருதினான். விளைந்த விளைவு அக்கடன் முழுதும் கழிக்கும் அளவுக்கு இல்லை. விளையாத காலத்து விளைவையெல்லாம் விளையுங் காலத்தில் நிலம் ஒருங்கே விளைத்துக் கொடுக்குமாயின், குடிகள் அரசன் விரும்புமாறு செலுத்துவது நேர்மையும் அறமுமாகும். விளை நிலம் அது செய்வதில்லை; தனது வளமைக் கேற்பவே விளைத்துக் கொடுத்தது. அதனால் குடிகள் பழங்கடமையில் ஓரளவே செலுத்தினர். அரசுக்குரிய அறிவு, ஆளுந்தன்மை, பொருள், படை என்ற நான்கு நெறியிலும் விரிந்த பயிற்சியும் பண்பாடும் இல்லாத மக்கள் வேந்தனுக்குத் துணையாயினர்; பொருள் பெறுதல் ஒன்றையே குறிக் கொண்டு குடிகளை நெருக்குவதிலேயே அவர்கள் முன்னின்றனர். அமைதி நெறி மேற்கொண்டு குடிகள் தம் குறையை வேந்தர்க்கு அறிவிக்கவரின், வேந்தனைச் செவ்வி வழங்காவாறு செய்து அவர்கள் வாளா திரும்பச் செய்தனர். பழங்கடன் பெறுவதே அரசியல் அறம் என்பது எவரும் அறியச் செய்வதில் அரசியற் பணியாளர் அல்லும் பகலும் உழைத்து வந்தனர்; பகையினின்று பாதுகாப்பதற்கென்று அமைந்த படையை இத்துறையில் பயன் படுத்த முற்பட்டனர். இதனால், குடிகட்கு அரசன் பால் இருந்த அன்பு குறையத் தலைப்பட்டது. அரசுக்கு அதனால் உளதாகும் கேடு ஆங்காங்கு வாழ்ந்த சான்றோர்க்கு இனிது விளங்கிற்று. நாகனார் நல்லுரை வளவன் உளங்கொண்ட சான்றோர் சிலர் அவனுக்குக் குடிகளின் நிலையை எடுத்துக் கூறினார். அவனைச் சூழ இருந்த அரசியற் சுற்றத்தார் குடிகளிடத்து அவனுக்கு அருள் பிறவாத வாறு பொய்யும் புனைந்துரையும் சொல்லி அவன் மனத்தைத் திரித்து விட்டனர். பொருள் இன்றேல் படைவலி குன்றும்; அவ்வலி இல்லையாயின் நாடுகாவல் என்பது பகற்கனவாம் என வாதிக்கத் தொடங்கினர். இச்செயலால் குடிகளில் குறை கூறுவோர் பெரு கினர்; மாரி பொய்ப்பின் அதற்கு மன்னவன் காரணம் என்றனர்; பொருள் வருவாய் குன்றினும், இயற்கையில் ஏதேனும் புதுமை தோன்றினும் எல்லாவற்றிற்கும் குற்றம் அரசின் மேல் ஏற்றினர். சுருங்கச் சொல்லின், சோறுமிக்க சோழநாட்டில் உழுவோரும் உழுவிப் போரும் உள்ளம் உடைந்து உருக்குலைந்து வாடினர். சோழநாட்டு ஊர்களுள் வெள்ளைக் குடி என்பது ஓர் ஊர். அவ்வூரில் நாகனார் என்ற சான்றோர் வாழ்ந்தார்; அரசியலின் செயற்கொடுமையையும் குடி மக்களின் குழம்பிய நிலையையும் நேரிற்கண்டார்; உழுவிப் போர்க்கு ஆதரவும் உழுவோர்க்குப் பழங்கடன் விடுதலையும் உடனடியாக வேண்டியிருப்பதையும் ஓர்ந்தார். பார்மன்னர் பால் பரிசுபெற்று வாழும் பாவாணராயினும், நாட்டவர் நலம் பேணும் நாவாணராகிய நாகனார் வளவன் திரு முன் சென்று உண்மை நிலையை எடுத்துரைப்பதற்குத் துணிந்தார்; உரையூரை அடைந்தார். கிள்ளிவளவன் புலவர்பாடும் புகழ்படைத்தவன். ஆலத்தூர், கிழார், ஆவூர் மூலங்கிழார், கோவூர் கிழார் முதலிய சான்றோர் பலருடைய புலமை நலத்தில் ஈடுபட்டுத் தக்க சிறப்புச் செய்பவன்; தானும் தக்கோர் பரவத்தக்க சால்புடைய புலமை பெற்றவன். தன் நண்பனான சிறுகுடி கிழான் பண்ணன் என்பவன், நாடு வளஞ் சுருங்கி வறனுற்று வருந்தியபோது மக்கட்கு உணவளித்து உதவிய அவனது அருஞ்செயலை வியந்து, “யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய” என்றும், “பசிப் பிணி மருத்துவன்” என்றும் பாடி இன் புற்றவன். நாகனார் வரவு கேட்டதும் வளவன் அவரை அன்போடு வரவேற்று மகிழ்வித்தான். நாகனார் மன்னன் பண்பாடு கண்டு இன்புற்றுத் தன் வேண்டு கோளை அவன் செவியேற்குமாறு, இனிய எளிய சொற்களால் ஆழ்ந்த கருத்தமைத்து, “வேந்தே, எந்த நாடு தன் கண் வாழ்வார்க்கு இன்றியமையாத பொருள் குறித்து வேறு நாடுகளின் உதவியை நோக்குகிறதோ அந்த நாடு நாடெனச் சிறப்பிக்கப்படாது. ‘நாடென்ப நாடா வளத்தன’ என்பர் சான்றோர். எனைப் பாண்டி நாடு நீர் வளம் நிரம்பவுடைய தன்று; சேர நாட்டுக்கு நிலப்பரப்பில்லை; ஆதலால் அவை நாடா வளமுடையவல்ல; ஆகவே நாடு எனப்படுவது நினதே. இந்த நாட்டுப் பேரரசு நாடு சுரக்கும் செல்வத்தால் சிறந்த புகழ் பெற்று விளங்குவது; அதனால், அரசு எனப்படுவதும் நினதே. ஆதலால் ‘நாடு கெழு செல்வத்துப்பீடு கெழு வேந்தே’ என்று நின்னைப் பெருமிதம் தோன்ற அழைக்கின்றேன்” என்று கூறித் தம் பேச்சை நிறுத்தினார். கேட்ட கிள்ளிவளவன் உள்ளத்தில் இன்பம் கிளர்ந்தெழுந்தது; அவர் மேலும் கூற இருப்பதைக் கேட்க ஆவல் கொண்டான். “வேந்தே, நீ பெற்று மகிழும் பீடு நாடு நல்கும் செல்வத்தால் பிறங்குவது; அச்செல்வம் உழுதொழில் புரியும் குடிகளால் வருவது; அதனை நோக்காது, அவர்கள் வருந்த நீ வருத்துவது நினக்குப் பீடு அன்று” என்ற குறிப்பு, ‘நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே’ என்ற தொடரில் அமைந்து கிடந்தது. ஆயினும், அரசன் அவர் கருத்தை உணரவில்லை. அவர் கூற இருப்பதையே அவன் எதிர் நோக்கினான். அப்போது, “நினவ கூறுவல் எனவ கேண்மதி” என்றார் நாகனார். வேந்தன் உள்ளத்தில் விருவிருப்புண்டாயிற்று. முகக் குறிப்பில் சிறு மாறுதல் தோன்றிற்று. உரையாடல் தொடர்ந்தது. “குடிகள் மன்னவன்பால் முறை வேண்டி வருவாராயின், அவர்கள் தன்னை எளிதில் காணவும் முறையிட்டுக் கொள்ளவும் அவன் காட்சி எளியனாக வேண்டும். அஃது, உழவனொருவன் தான் விளைத்த பயிர்க்கு மழை வேண்டியிருப்பதறிந்து வானத்தை நோக்க, உடனே வானம் மழையைப் பெய்தாற் போல அத்தனை இன்பம் பயப்பதாகும். குடிகள் செவ்வி பெறாது திரும்புவது மழை பெய்யாமையால் விளைபுலம் கெடுவது போலாம். அதனால் அரசு வளம் சுருங்கும்” என்றார். காவலன் காட்சிக்கு எளியனாதல் நாட்டில் செல்வம் பெருகு தற்கு ஏதுவாம் என்ற குறிப்பு அவர் உரையில் இருப்பதைச் சோழன் அறிந்தான்; ஆயினும் அவன் உள்ளத்தில் தெளிவு பிறக்கவில்லை. புலவர் பெருமான். அவனது அரசு கட்டிலின் மேல் நின்று நிழற்றும் வெண்குடையைக் காட்டி, “கண்பொர விளங்கும் நின் விண்பொரு வியன்குடை வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே; வருந்திய குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ” என்று இசைத்தார். நாகனார் நவின்றது கண்ட வேந்தன், “குடி புறந்தருவது பகை கடிந்து ஒதுக்குதலன்றோ? அதற்குப் படையே பெரிதும் வேண்டுவது. அதன் வலியும் பெருமையும் வெற்றியும் நோக்கியே அரசு நிலை பெறுகிறது,” என்றானாக, அவனுக்கு விடை கூறுவாராய், “வருபடை தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப் பொருபடை தரூஉம் கொற்றமும், உழுபடை ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே” என்றார். வேந்தர் பெருமகனுக்கு விளக்கம் உண்டாயிற்று. உழுவோர் உழுது விளைக்கும் பொருளே, படையின் வலிக்கும் வெற்றிக்கும் உயிர்நாடி என்பது உணராது, பொருளும் படையுமே நினைந் தொழுகிய தன் செயல்வகையை எண்ணினான்; குடிகள் தன்பால் அன்பு குறைவரோ என வெருவினான். எதற்கும் குடிகள் அரசினைக் குறை கூறுவதை ஒற்றரால் அறிந்திருந்தமையின் அதுவும் அவன் மனத்தில் தோன்றி அலைக்கத் தொடங்கியது. அவனைத் தேற்றுவது வெள்ளைக் குடியார்க்கு மேலும் கடமை யாயிற்று. ஆகவே, அவனைத் தேற்றுதற் பொருட்டு நாட்டு மக்களின் பொதுவியல்பு இது என்று விளக்குவாராய், “மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர்ப் பழிக்கும் கண்ணகல் ஞாலம்” என்று தெரிவித்தார். “இனிச் செய்யத் தகுவது யாது?” என்பான் போல அவன் நாகனாரை நோக்கவும், “ஆளும் அரசர்க்கும் ஆளப்படும் குடிகட்கும் இடையேயிருந்து இச்சை பேசி வயிறு வளர்க்கும் நொதுமலர் சிலர் உண்டு; அவர் உரைக்கும் பொது மொழி, நாடுகாக்கும் கோமகனது அருள்நலம் குடிகள் பால் செல்லாமலும் குடிகளின் அன்புநலம் அரசன் பால் சேராமலும் தடுத்துச் சீரழிக்கும்; அதனை நீ நன்கறிந்து, அவர் மொழியைக் கொள்ளாது, உழுவிப் போராகிய பகடு புறந்தருநர் கடமையையும், உழுவோராகிய குடிகள் நிலையையும் சீர் தூக்கிப் புரப்பாயாயின், நாடு பொருள் வளம் மிகும்; படைவலி சிறக்கும் அடங்கா தொழுகும் பகைவரும் நின் அடியின் கீழ் அடங்கி நடப்பர்” என்று கூறிமுடித்தார். வேந்தனுக்கு உவகை மிகுந்தது. அவர் உரைத்த வண்ணம் குடிகளிடம் வற்புறுத்தப்பட்ட பழங்கடன் தள்ளிவிடப் பட்டது. மக்கள் மனம் குளிர்ந்து அரசன் பால் அயரா அன்பு கொண்டனர். உழைப்பின் உயர்வால் விளைபொருள் பெருகச் சோழ நாடு துறக்க நாடு போல் துலங்கு வதாயிற்று. பாண்டியன் நெடுஞ்செழியன் இனி, பாண்டி நாட்டை நோக்குவோம்; பாண்டி நாடு சோழ நாடு போலச் சமநிலநாடு அன்று. காவிரி போல நீளமும் அகலமும் நீர்வளமும் உடையதன்று வையை. தாமிரபரணி என வழங்கும் தண்ணான் பொருநையும் அத்தன்மையதே. நாடு முழுதும் காடும் குன்றும் மேடும் பள்ளமும் நிறைந்தது. மேலைப் பொருப்பில் தோன்றிவரும் வையையும் பொருநையும் கடுகிச் செல்லும் நீர்ப் பெருக்குடையவை; அதனால் அவற்றின்கண் ஆழம் போல் அகலம் இல்லை. இருகரையிலும் நீர்படர்ந்து பரத்தற்கு இயலாதபடி மேட்டு நிலமே மிக்குளது. மேலைக் கடலிலிருந்து வரும் மழை முகிலை மேலைமலைத் தொடர் பெரிதும் தடுத்து விடுகிறது. கீழைக் கடலிலிருந்து வரும் மழையைத் தடுத்து நிறுத்துதற்குரிய பெருமலைகள் இடையில் இல்லாமையால் மழைவளம் மிகுதியாக இல்லை. காடுபடர்ந்த சிறுமலையும் குன்றும் ஆங்காங்குப் பெய் விக்கும் மழை நீர், விரைந்து ஓடி ஆழ்ந்த காட்டாறுகளில் வீழ்ந்து விளைபயன் நல்காது வெறிது சென்றது. இவ்வகையில் பாண்டி நாடு நாடா வளமுடைய சிறப்பின்றி மெலிந்திருந்தது. நீர்வளம் குறைந்திருப்பினும் நாட்டில் வாழ்ந்த நன்மக்கள், தூய தமிழ்ப் பண்பும், அறிவு, ஆண்மை முதலிய செயற் பண்பும் சிறந்து விளங்கினர். பாண்டி வேந்தரது படைப் பெருமையும் வெற்றி மிகுதியும் ஏனைநாடுகளினும் ஏற்றம் பெற்று விளங்கின. நெடுஞ்செழியன் என்னும் பாண்டி மன்னன் பாண்டி நாட்டை ஆண்டு வருகையில் முடிவேந்தர் இருவரும் வேளிர் ஐவருமாக எழுவர் பெரும்படை கொண்டு அவனோடு போர் தொடுத்தனர். சோழ நாட்டின் தென்கிழக்கிலுள்ள தலையாலங்கானம் என்ற ஊர்ப்புறத்தே அப்போர் நடந்தது. எழுவர் படைத்திரளும் எலிக் கூட்டம் போலவும், பாண்டிப் படை படநாகம் போலவும் போர்க் களத்தில் எதிர்ந்தன. “நாகம் உயிர்ப்ப எலிப்பகை கெடும்” என்பதற் கிணங்கப் பகைக் கூட்டம் தோற்றோடியது. பாண்டியன் செரு வென்று சிறப்பு மேம்பட்டான்; அன்று முதல் அவனைச் சான்றோர் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று பாராட்டிக் கூறுவாராயினர். அவன் புகழைக் குறுங்கோழியூர் கிழார், கல்லாடனார், மாங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார் முதலியோர் பொன்றாத் தமிழால் இன்றும் நாம் படித்து இன் புறுமாறு பாடியிருக்கின்றனர். பரந்து பட்ட நில முழுதும் பாண்டியர் புகழ் பரவியிருந்ததைப் புலவர் பலரும் போற்றிப் பரவினர். அவருள் குடபுலவியனார் என்பவர் ஒருவராவர்; அவரும் பாண்டி நாட்டவரே.பாண்டியர் புகழ் பரவும் பண்பு மிக்கவர்; ஆயினும் பாண்டி மன்னன் புகழ்ப் பரப்பில் அவர்க்கு மனவமைதி உண்டாகவில்லை. பாண்டி மக்கள் தமிழ் நலமும் தாளாண்மையும் செருவென்றியும் செம்மை நோக்கமும் சிறக்கப் பெற்றும், நாட்டவர்க்கு வேண்டப்படும் உணவுப் பொருட்டுப் பிறநாடுகளை நாடி நிற்கும் அவர்களது நிலை புலவர்க்குப் பெருவருத்தம் உண்டு பண்ணிற்று. பிறநாடுகளை நாடி வளம் பெறும் நாடு நாடாகாது என்ற கொள்கை அவர் உள்ளத்தை அலைத்தது. இதற்கொரு வழிகண்டாலன்றித் தமது புலமை நாட்டுக்கோ நாடாளும் அரசுக்கோ தமக்கோ பயனில்லை எனத் துணிந்தார். புலவர் அறிவுரை மேடும் பள்ளமும் மிக்கதாயினும் மழை தரும் நீர் பள்ளங் களில் நில்லாது பரந்து விரைந்து வீணே கழிந்தோடுவதை ஆங்காங்கே அவரது புலமைக் கண் நெடிது நோக்கிற்று. இந்நீரை இப்பள்ளப் பகுதியில் ஒருபால் தேக்கிச் சிறு சிறு கண்வாய் வழியே நிலத்திற் பாய்ச்சிப் பரப்பினால் நெல்லும் பிறவுமாகிய உணவுப் பொருளை விளைத்துக் கொள்ளலாம் என்பது நன்கு புலனாயிற்று. அவர் பாண்டி நாடுமுற்றும் உலாவிப் பள்ளப்பாங்கும் பரந்த வயற் பகுதியும் நேரிற் கண்டு நெஞ்சிற் கொண்டார்; முடிவில் தலையாலங் கானத்துச் செருவென்று சிறக்கும் நெடுஞ்செழியன் திருமுன் சென்றார். செழியனும் அவரை வரவேற்றுச் சிறப்பித்தான். அவர் அவனதுபெரும் புகழைப் பாராட்டி, “வேந்தே, நீ இப்போது பெற்று மகிழும் வெற்றி புதிதன்று; நின்முன்னோர் காலத்திருந்தே இச்சிறப்புத் தொன்று தொட்டு வருவதொன்று. நீ அவர் வழித் தோன்றல்; நினக்கு இஃதோர் அரிய செயல் அன்று; நீ பல்லாண்டு வாழ்க” என்று பாடினர். இவ்வாறு எடுத்த எடுப்பிலேயே தான் பெற்ற சிறப்பைத் தன் முன்னோர் மேலேற்றித் தன்னை வாழ்த்து முகத்தால் தன் மனம் அமைதி பெறாத குறிப்பைப் புலப்படுத்தும் அவர் உரையை வேந்தன் பரிவுடன் கேட்கலானான். “சிறந்த முறையில் நாடாளும் வேந்தர், மறுமையில் துறக்க வின்பமும் இம்மையில் ஏனை வேந்தர் எல்லாரினும் ஒப்புயர்வற்ற பெருமையும் கொண்டு தாமே தனித் தோங்க வேண்டும்; தாம் மறையினும் தமது புகழ் மறையாது நிலைபெற வேண்டும் என்ற கருத்துக் கொண்டு அவற்றையே நாளும் வேண்டியொழுகுவர். நீயும் அவ்வாறே அமைத்திருக் கின்றாய்; ஆயினும், அவையனைத்தும் குன்றாத நிலையில் விளங்கச் செய்தல் வேண்டும்; செய்தற்குத் தகுதிகள் சில உண்டு” என்றார். நெடுஞ்செழியன் நெடிது நோக்கினான். தகுதிகளை அறிதற்கு அவன் நெஞ்சம் அவாவிற்று. அதே நிலையில் தனது மிகுதியையும் எண்ணினான்.அவர் கருதுவது அவனுக்குப் புலனாகவில்லை. அவரையே தொடர்ந்து சொல்லுமாறு பணித்தான். குடபுலவியனார் அவன் மனக்குறிப்பை அறிந்து கொண்டார். “மறுமைச் செல்வமும் இம்மைப் புகழும் இவ்வுலகத்து நல்லுயிராகிய மக்களிடத்தே இடம்பெறுவன. புகழ்கண்டு பரவுவதும் மறுமை நிலை ஓர்ந்து மாண்புடைய செயல் செய்வதும் உயிர்களேயாகும். உயிரும் உடம்பும் ஒன்றி நின்றலன்றி, இவை உணரவும் உணர்ந்து உருப் படச் செய்யவும்படா; ஒன்றி நிற்பதற்கு உணவுதான் இன்றியமை யாதது. உணவால் ஆகுவது உடம்பு உடம்பு நீரை இன்றி அமையாது என்பர் ” ஆயினும், “நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்” என்றார். வேந்தனுக்கு வியப்பு மிகுந்த. புலவர் பெருமான் புன்முறுவலுடன், “உணவு, நீரும் நிலமும் சேர விளைவது; உணவால் உயிரும் உடம்பும் ஒன்றுபட்டு நிற்கும். உடம்பின்றி உயிர் ஒன்றும் செய்ய மாட்டாது; உயிரில்லாத உடம்பு சிறிது போதில் கெட்டழியும், ஆதலால்,” “உணவுஎனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே” என்றார். உயிர்கள் உடலொடு கூடி வாழ்தற்கு வேண்டுவதாகிய உணவு நிலப்பகுதி நீர்வளம் பெறுவதால் உளதாகும்; நாடு நீர் வளமுடையதாகச் செய்வது உணவு பெருக்கி உயிர்கள் நெடிது இனிது வாழச் செய்யும் நல்வினையாய், செல்லும் துறக்கவுலகத் துக்குச் செல்வமாம் என்பது நெடுஞ்செழியனுக்கு விளங்கிற்று. யாதோ புதுமைக் கருத்தை வெளியிடுடிவார் என எதிர்நோக்கிய அவனுக்கு நாட்டில் நீர் வளம் பெருகச் செய்ய வேண்டும் என்ற கருத்து அவனது வியப்புணர்வை மாற்றியது. பாண்டி நாட்டின் பரந்த பண்பையும் அதுநல்கும் பொருள் நலத்தையும் அவர்முன் காட்டினான். புலவியனார், “பாண்டிநாடு புன்செய்ப் புலம் மிக்கது; எப்போதும் வானம் பார்த்து நிற்கும் புன் செய்க காடுகள் எத்துணைப் பரப்புடையவாயினும் வேண்டுங் காலத்து உதவா தொழியும்” என்றார். அவர் சொல் செழியன் செவியிற் புகவில்லை. காவிரி நாட்டையோ கங்கை நாட்டையோ போலப் பாண்டி நாட்டை நீர் வளம் பெருகச் செய்வது இயலாத ஒன்று என்ற கருத்து வேந்தன் உள்ளத்தில் வீறு கொண்டு நின்றது. அதனை அவன் முகக் குறிப்பால் உணர்ந்த அரசியற்சுற்றத்தாரும் அதுவே கருதினர். அது கண்ட புலவர், மிக்க பணிவுடன், “அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே நிலன்நெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர், அம்ம, இவண் தட்டோரே தள்ளா தோர் இவண் தள்ளா தோரே” என்று தான் கூறக் கருதியதனை முடித்துக் கூறி விட்டார். “வேந்தே, யான் கூறும் இது போர் வினையன்று, அது போல்வதும் அன்று; போர் வினையில் நீ மேதக்க பொருநன்; யான் கூறுவது பொருளியல்; புன்புல நாட்டை நன்புலமாக்குவது நான் கூறுவது. இதனை இகழாது கேட்டல் வேண்டும்,” என்பாராய், “அடுபோர்ச் செழிய” என்றும், “இகழாது” என்றும் எடுத்துரைத்தார். “நாட்டில் நிலன்நெளி மருங்கான பள்ளப் பாங்குகள் பலவுள்ளன. அவை தாம் பெறும் நீரையும் மேடு கழித்து நல்கும் நீரையும் வீணே சென்று கழியவிடாது அவற்றின் கண் நீர்நிலைகள் பெருக அமைக்க வேண்டும். நெடிய கரையாகிய அணையால் கழிந்தோடும் நீரைத் தடுத்துநிறுத்திக் கொண்டால் அதன் கீழுள்ள பகுதி நெல் விளையும் மருதவயல்களாய் மாண்புமிகும். இவ்வாறு நீர்நிலை பெருகத் தடுத்து நிறுத்தி வறிதே கழியும் நீரைப் பிணித்துக் கொண்ட வேந்தர் மறுமையுலகத்துச் செல்வமும் இம்மையுலகத்து இறவாப் புகழும் தம்மைவிட்டு நீங்காதவாறு பிணித்துக் கொண்டோராவர். அவ்வாறு செய்யாதோர் மேலே எண்ணிய நலங்களை எய்தாதொழிவர்,” என்ற கருத்து வேந்தனுக்கு இனிது விளங்கிற்று. பாட்டின் பயன் குடபுலவியனார் நாடு நலம் குறித்துப் பாடிய பாட்டின் பொருளை நன்கு ஆராய்ந்து நெடுஞ் செழியன் ஆங்காங்கு நீர் நிலைகள் வகுக்கத் தொடங்கினான். பாண்டி நாட்டின் பரப் பெங்கும். பள்ளப் பகுதிகளில் பல நீர்நிலைகள் பெருகின. இன்றும் பாண்டிநாட்டில் இருக்கும் அளவு கம்மாய் என மருவி வழங்கும் கண்வாய் (நீர்நிலை, ஏரி) கள் ஏனைத்தமிழ் நாடுகளில் காணப்படா மைக்குக் காரணம், அன்று நெடுஞ்செழியன் திருமுன் குடபுல வியனார் நிகழ்த்திய புலமைப்பணியென்பதை நினைவு கூர்தல் வேண்டும். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் சேரன் செங்குட்டுவன் குட்ட நாட்டு வஞ்சி நகர்க்கண் இருந்து முடிமன்னனாய் அரசுபுரிந்து வருகையில், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் என்பவன் தொண்டி நகர்க்கண் இருந்து நாடுகாவல் செய்துவந்தான். குடநாட்டின் வட பகுதியான கொண் கான நாட்டவர் அத்துறையில் அக்காலத்தே சிறப்புற்று விளங்கினர். கொண்கானம் பிற்காலத்தே கொங்கணம் என்று மருவிற்று; அந்நாட்டவர் கொங்காணி, கொங்கணர் என்று கூறப்படு வாராயினர். கொங்கணக் கூத்தரின் கூத்தும் இசையும் கி.பி. பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளிலும் சிறந்து விளங்கின. மேனாட்டவர் முதல் முதலாகக் கோவா முதலிய பகுதிகளில் வந்து தங்கிய போது, இக்கூத்தர் தம் ஆடல்பாடல்களால் அவர்களை மகிழ்வித்து, அவர்களுடைய நெளிவு மெலிவுகளைக் கண்டு வந்து தங்கள் அரசியல் தலைவர்களுக்கு அறிவித்தனர்; அதனால் மேனாட்டவர் தொடக்கத்தில் மிக்க அல்லலுற்றனர் என்று அவர் களுடைய குறிப்புக்களால் அறிகின்றோம். இவ்வாறே பண்டை நாளிலும் அவர்களின் சிலர் பகைவர்க்குக் கையாட்களாகவும் இருந்துள்ளனர். ஒருகால் குடநாட்டின் வடக்கில் வாழ்ந்த கடம்பர்களும் வடகிழக்கில் வாழ்ந்த வேளகத்து (Belgaum) வேளிர்களும் குடநாட்டுள் புகுந்து எல்லை பற்றித் தொல்லை கொடுத்தனர். அதனால் சேரலாதன் பெரும்படையுடன் வடபுலம் நோக்கி மேலைக் கடற்கரையில் சென்று கொண்டிருந்தான். ஒரு நாள் கடற்கரையில் பனைமரங்கள் நின்ற கானற் சோலையொன்றைச் சேரலாதன் கண்டான். நுண்ணிய தூய மணல் பரந்து அடும்பங் கொடிகள் படர்ந்து அழகுறப் பூத்து விளங்க, மேலைக்கடற் காற்று மேனியிற்பட்டு இன்பம் செய்தது. அவ்விடத்தே தங்கி இளைப்பாற வேந்தன் விரும்பினான். பனைமரச் சோலையில் அகன்ற பந்தர் அமைத்து அங்கே தன் அரசியற் சுற்றமும் துணைவரும் தானைத் தலைவரும் உடன் இருப்ப இருந்து இன்புறு வானாயினன். அப்பொழுது அவ்விடத்தே ஆடலும் பாடலும் வல்ல மகளிருடன் இசைவாணர் சிலர் அரசன் முன் போந்து தமது புலமைத் திறத்தைக் காட்ட விரும்பினர். இளமை மாறாத சேர மன்னனும் அவர் வேண்டுகோட்கு இசைந்தான். விறலியர் தம்முடைய இசைநலமும் ஆடல் வன்மையும் வேந்தன் கண்டு விரும்புமாறு பாடியும் ஆடியும் மகிழ்வித்தனர். தமிழ்வேந்தர் செல்லும் போது அவருடன் புலமை மிக்க சான்றோரும் உடன் செல்வது வழக்கம். ஆங்காங்கு அரசர் செய்யும் அழகிய செயல்களையும் உரைக்கும் உரைகளையும் இனிய பாட்டிடைத் தொடுத்துப் பாடி அவரது புகழை நிறுத்துவது அச்சான்றோரது இயல்பு. புலமைக்கு அந்நாளில் ஆண்-பெண் என்ற வேறுபாடு கிடையாது. சேரனுடைய அரசியற் சுற்றத்தாருள் காக்கை பாடினியார் என்ற புலவர் பெருமாட்டி யாரும் ஒருவர். அவரும் அங்கே வந்திருந்தார். அவருடைய இயற்பெயர் நச்செள்ளை யார் என்பதாகும். ஒருவர் வீட்டுக்கு விருந்து வருமாயின், முற்படக் காக்கை வந்து கரைந்து தெரிவிக்கும் என்பது தமிழரது பழமையான கருத்து. அக்கருத்தை இனிய பாட்டிடையே வைத்துப் பாடியது. பற்றி நச்செள்ளையாரைச் சான்றோர், காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கமாயிற்று. நச்செள்ளையின் நன்மொழி வேந்தன் முன்னே நின்று ஆடல் பாடல் அழகு என்ற இவற்றால் அவனை மகிழ்விக்கும் இசைவானரின் பார்வையும் செயலும் ஒற்றர் செயல் போல் இருந்ததைக் காக்கை பாடினியார் எப்படியோ அறிந்து கொண்டார். அவரை வேந்தன் முன் நெடிது இருக்கவிடின், அவர்கள் சேரருடைய படையின் குறைவு நெகிழ்வு முதலியவற்றை உணர்ந்து சென்று பகைவர்க்குரைத்துக் கேடு செய்வர் என்ற குறிப்பு அவர்க்கு நன்கு புலனாயிற்று. அதனால் அவர் எழுந்து நின்று, “பந்தர் அந்தரம் வேய்ந்து வண்பிணி அவிழ்ந்த கண்போல் நெய்தல் நனையுறு நறவின் நாகுடன் கமழ” என்றார். வேந்தனும் பிறரும் அவர் கூறுவதைக் கேட்க லுற்றனர். “பாதுகாப்புச் செறிந்த அரணாகாத புல்லிய ஒரு பந்தரை அந்தரத்தே அமைத்து அதன்கீழ் இருக்கின்றாய்; நெய்தற் பூவும் நறவம் பூவம் புன்னை மலரும் ஆங்காங்கு மணம் கமழ அணி செய்யப்பட்டிருக்கின்றன. நெய்தலின் மலர்ந்த பூ கண் போல் இருப்பதைக் காண்பாயாயின், நின்னைப் பகைவர் பார்த்த வண்ணம் இருக்கும் குறிப்புப் புலனாகும் என்பதை வெளிப்படச் சொல்லாமல், கண்போல் நெய்தல்... நாகுடன் கமழ” எனக் குறிப்பாய் உரைத்தார். வேந்தன் கண்கள் ஆடல் மகளிர்மேல் பாய்ந்தன. நச்செள்ளை யாரும் அதனை நயம்பட எடுத்து, “சுடர்நுதல் மடநோக்கின் வாள்நகை இலங்கெயிற்று அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்” என்று ஆடல்மகளிரின் நெற்றி, கண்பார்வை, முறுவல், ஒளிதிகழும் பற்கள், அமிழ்து போன்று இனிமைதரும் சொற்கள், சிவந்த வாய்,அசைந்த நடை ஆகியவற்றைச் சிறப்பித்துச் சொல்லி, “இவர்கள் அனைவரும் நின்பால் பரிசுவேண்டி வந்த மகளிர்; இவர்களை இவ்விடத்தே நெடிது தங்கவிடுவது நேர்மையன்று; விரைந்து பரிசில் தந்துவிடுக்க;” “பாடல் சான்று நீடினை உரைதலின், வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என உள்ளுவர் கொல்லோநின் உணரா தோரே” என்றார். “நின் இயல்பை இவர்கள் உணரார்; ஆதலால் ‘இவன் பாடல்கேட்டு நெடிது மகிழ்ந்திருக்கின்றான்; இவ்வேந்தன் அறிவு ஆண்மைகளில் மெல்லியன் போலும்’ என இவர்கள் கருதுவர்; அதனால் நீ பகைவர்க்கு இடியேறு போல் வாய்; நின் படை மறவர் ஒரு வீச்சில் பெருங்களிற்றின் கையை அதன் கொம்புடன் எறியும் பெருவலி படைத்தவர்;” “கூற்றம் வலைவிரித் தன்ன நோக்கலை, கடியையால் நெடுந்தகை செருவின் கண்ணே” என்பதை அறியாது கெடுவர் என்று மொழிந்தார். இவற்றைக் கேட்டதும், சேரலாதனுக்குத் தெளிவு பிறந்தது. விறலியர் முகம் வெளுத்து வெய்துயிர்த்துப் பரிசில் பெற்று நீங்கினர். வேந்தன் படையுடன் சென்று கடம்பரை வெருட்டி வேளிரை வெற்றிகொண்டு வானவரம்பன் எனப்படும் தன் பெயரை நிலைநாட்டினான். “வானவரம் பன் எனப்பேர் இனிது விளக்கி” எனப் பதிற்றுப் பத்துப் பாராட்டுகின்றது. காக்கை பாடினியார், உரைத்த குறிப்பு மொழியால், தான் பகைவர் வலைப்பட்டு வருந்த இருந்த தீங்கினின்றும் உய்ந்தது நினைந்தும், அவர் அவ்வப் போது பாடித் தன்னைச் சிறப்பித்தது குறித்தும் சேரலாதன் அவர்க்கு மிக்க பொன்னும் பொருளும் கொடுத்துத் தன்பக்கத்து அரசியற் சுற்றத்தாருள் ஒருவராகக் கொண்டான். அவர் பெயரால் ஓர் ஊரும் உண்டாயிற்று. அது பாலைக்காட்டுப் பகுதியில் காக்கையூர் என்று இன்றும் நின்று அவரை நினைப்பித்துக் கொண்டிருக்கிறது. பக்கத்துக் கொண்டான் என்ற தொடரின் பொருள் தெரியாமையால் சிலர், சேரமான் காக்கை பாடினியாரை மணந்து கொண்டான் என்று பிழை செய்திருக்கின்றனர்.  8. முல்லை ஒரு நாட்டுமக்களின் மனமாண்பையும், அவரது மனவுணர்வின் வளர்ச்சியையும் ஒருவன் அறிய வேண்டின், அம் மக்கள் வழங்கும் மொழியின் இலக்கணத்தை ஆராய்தல் வேண்டும் என அறிவுடை யோர் கூறுவர். மொழியின் சொற்களும், சொற்கள் தொடர்களாக இயைந்து பேசுவோர் கருத்தை வெளிப்படுக்கும் திறங்களும் அவ்வாராய்ச்சியால் உணரப்படும். படவே, அவர் மனத்தெழுந்த எண்ணங்களும், அவற்றிடையே சிறந்து விளங்கும் நாகரிகமும் அவ்வாாய்ச்சியின் பயனாக வெளியாகும். இம்முறையினை மேற்கொண்டு நம் செம்மொழியாய செந்தமிழ் மொழியின் சீரிய இலக்கணங்களை யாராய்ந்த அறிஞர், "தமிழர் மிகச் சிறந்த மனப்பண்பும், தனிச் சிறப்பமைந்த நாகரிகமும் கொண்டு வாழ்ந்து வரும் நன்மக்கள்" என்பதை இனிதறிந்து உலகறிய உரைத்துள்ளனர். ஒரு சில கயவர், இப்பொருள் மொழியை மறைத்தற்கு முயன்றனர்; ஆயினும், "புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே" என்றாற் போல, அது மறைந்து மழுங்காது பரந்து வெளிப்படுவதாயிற்று. ஆகவே, தமிழ் நலம் தேரும் தகவும், தமிழ்க்கு ஆக்கம் தேடும் சால்பும் தமிழ் நன்மக்கள்பால் மிகுவவாயின. இன்று எம் மருங்கும் தமிழர் குழாம்; எச்சொல்லும் தமிழின் சொல்; எந்நினைவும் தமிழ்நினைவு; எவ்வெவரும் தமிழன்பராக மேவுகின்றனர். தமிழ் நூல்கள் ஆராயப்படுகின்றன; தமிழ் இலக்கணம் சால்பு பெறுகின்றது. 'தமிழ் நூல்களின் ஆராய்ச்சியில் தமிழ் இலக்கணம் சால்பு பெறுமாறு என்னை? தமிழ் பயிலும் சிறார்க்குத் தமிழிலக்கணமன்றோ பேரிடர் விளைத்துவந்தது? என்பாரும் உண்டு. தமிழாராய்ச்சிக்கண் இப்பொழுது எழுந்து நிலவும் ஊக்கம், பிறர் எழுப்ப எழாது, தானே எழுந்து தகைமை எய்தியுளது; தமிழன், தன் தமிழை நன்கு கற்றல் வேண்டும்; தமிழுணர்வு சாலப் பெறுதல் வேண்டும் என்ற ஆர்வம் தலைசிறந்து நிற்கின்றான்; சுருங்கச் சொன்னால், தமிழன் தமிழனாக வாழ விரும்புகின்றான். அதனால் அவனது உள்ளம், தமிழறிவு பெறும் வழியில் எத்துணை இடுக்கண்கள் அடுக்கிவரினும் மிடுக்குடன் தான் கொண்ட கருத்தை வென்று வீறு கொண்டு நிற்கின்றான். நிற்குமிடத்து, அவன் மனக்கிழியில், தமிழிலக்கணம் பிறமொழி யிலக்கணங்களுட் காணப்படாத பண்டை மக்களின் மனப்பண்பும் ஒழுகலாறும் விளங்கக் காட்டுகிறது. அக்காட்சியில் பேரின்பம் ஊறுகின்றது. அதனை நுகருந் தோறும், அவன் அதனை ஆரப்பெற்று உண்டு ஆர்வமுறுகின்றான். அத்தகைய இன்பவூற்றாக உள்ளது தமிழிலக்கணத்துக் கூறப்படும் பொருளிலக்கணப்பகுதி என்றால், அது மிகையாகாது. பொருளிலக்கணத்தின் பொற்பு, தொல்காப்பியத்தே சிறப்புடன் ஓதப்பெற்றிருக்கிறது. பண்டைத் தமிழ்நன் மக்களின் மனமாண்பும் உணர்ச்சியொட்பமும் பொருளிலக் கணத்தால் யாவரும் இனிதறிய விளங்குகின்றன. மக்களின் வாழ்க்கைக் குறிக்கோளும், அவர்கள் வாழ்வு நடத்தும் நெறிகளும் பொருளிலக் கணத்தின் இலக்கியமாகும். மக்கள் இயற்கையிற் பிரிந்து வாழ்வது எக்காலத்தும் இயலாது. இயற்கையில் தோன்றி, இயற்கையில் வளர்ந்து இயற்கையில் வாழ்ந்து, இயற்கையில் ஒன்றி இன்புறுவதே இயற்கையிற் பிரியாது இயலும் வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கையின் செம்மை குறித்து, இயற்கை வழியாக அறிவுரம் பெற்ற ஆன்றோர், பல ஒழுக்க நெறிகளைக் கண்டு, மக்கள் அறிந்து ஒழுகி நலம் பெறுமாறு தெரிவித்திருக் கின்றனர். அவ்வொழுக்க நெறிகளைப் பொருளிலக்கணம் இயற்கைப் பொருள்களின் வாயிலாக அறிவுறுத் திவருகின்றது. இயற்கை வழியாக உணர வந்த ஒழுக்க நெறியே பொருளிலக் கணம் என்பது அதன் பாகுபாட்டால் இனிது விளங்கும். நம் பொறி புலன்களின் காட்சிக்கு அகப்பட்டு நிற்கும் இயற்கை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என ஐவகையாகப் பிரித்துக் காட்டப்பெறுகின்றது: பசுந்தழை பரந்து, பன்னிற மலர் செறிந்து, நறுமணம் கமழும் கானமும், கானத்து வாழும் உயிர்களும் முல்லைப் பகுதியால் மொழியப் பெறுகின்றன. இவ்வண்ணமே குறிஞ்சியால் மலை நிலமும், பாலையால் கடுஞ் சுரமும், மருதத்தால் வளவயற் பகுதியும், நெய்தலால் கடற்கரைப் பகுதியும், ஆங்காங்கு நிகழும் வாழ்க்கைத் திறமும் நெறியே கூறப்படுகின்றன. ஈண்டு, மாவும், புள்ளும், மக்களுயிரும் பிறவும் தம்மிற் கூடியிருந்து வாழ்வு நடத்தும் வனப்பு, அறிஞர் அறிவுக்குப் பேரின்பம் தருகின்றது. இவ்வுயிருள்ளும், மக்களுயிர் ஆணும் பெண்ணுமாய்க் கூடி இன்புற்று வாழும் ஒழுக்கம் இன்ப ஒழுக்கம் என எடுத்துக் கூறப்பெறுகிறது. இன்ப ஒழுக்கத்தை அறிஞர் ஆராய்ந்து முறை செய்த நாளையில், இஃது அகவொழுக்கமென்றும், இன்பப் பேற்றுக்கு வாயிலாய் நின்ற பொருள், வினை, கல்வி என்ற இவற்றையும், இவைபோன்ற பிறவற்றையும் குறித்துச் செய்வன செய்தொழுகும் ஒழுக்கம் புறவொழுக்கமென்றும் வகுக்கப் பெற்றன. இவற்றைச் சுருங்கிய வாய்பாட்டாற் கூறுவோர் அகம் என்றும், புறமென்றும் கூறுவர். அகத்தின் கண் வகுத்தும் விரித்தும் கூறப்படுவது மேலே கூறிய இன்ப வொழுக்கமாகும். இது, மேலே முல்லை முதலாகச் சொல்லிய ஐவகையாகப் பகுத்து ஓதப் பெறுகிறது. புறம் என்பது வெட்சி முதலாக வகுத்தும் விரித்தும் ஓதப் பெறும். அகவொழுக் கத்தின் பகுதியாகிய முல்லையே ஈண்டைக்குப் பொருளாவது. அகவொழுக்கத்தின் கூறுபாடுகளை இயற்கையிற் கண்ட நல்லிசைச் சான்றோர் நவிறற்கு இனிய நற்றமிழ்ப் பாட்டுக்களால் நவில்தோறும் நயந்தோன்றக் கூறியுள்ளனர். அதனால், இப்பாட்டுக்கள் அகப் பாட்டுக்கள் என அறிவு மிக்க சான்றோரால் வரைந்து ஓதப்படுகின்றன. முல்லை முதலாகச் சொல்லிய ஐந்தனுள்ளும், மக்களது இன்ப வொழுக்கமும்--- தலைமைப் பண்புடைய ஒருவனும் ஒருத்தியும், கொடுப்பாரும் அடுப்பாருமின்றி, பால்வழியே தலைப்பெய்தித் தம்மிற் கூடிச் செய்யும் இன்பவொழுக்கமும்---ஐவேறு வகையில் வகுத்துப் பேசப்படுகின்றது. குறிஞ்சிக்கண் அத்தலைமக்கள் புணர்தலும், அதற்குரிய வாயில்களும் நிகழ்கின்றன; பாலைக்கண் அவர்களிடையே பிரிவும், அதற்குரிய வாயில்களும் நடைபெறு கின்றன இவ்வண்ணமே, ஊடலும் இரங்கலும் முறையே மருதத்தும் நெய்தலிடத்தும் நிகழ்கின்றன. புணர்ந்து ஒன்று படும் தலைமக்கள் பிரிந்தவழி ஒருவர் ஒருவரை நினைந்து அன்பு வயப்பட்டுப் பிரிவாற்றி இருத்தலும் அதற்கு வாயிலாகும் பிறவும் முல்லைக்கண் சீரிய ஒழுக்கங்களாகச் சிறப்பிக்கப்பெறுகின்றன. முல்லை முதலாகப் பிரித்து நிற்கும் இவ்வொழுக்கம் தமிழிலக்கணங்களுள் திணை எனப் பெயர் கூறப் பெறுகிறது. பெறவே முல்லை, முல்லைத் திணையென்றும், குறிஞ்சி, குறிஞ்சித் திணை என்றும் இவைபோலப் பிறவும் வழங்கப்பெறுவவாயின. ஆகவே, இவ்வொழுக்க நிகழ்ச்சிக்கு இடமும் காலமும் பொருளும் இம் முல்லை முதலிய நிலப்பகுதிகளுட் காணப்படுவனவே என்பது தெளிவாகும். முல்லைத் திணை பொருளாக வரும் அகப்பாட்டில், முல்லைத் திணைக்குரிய இடமும், காலமும், பொருளும் காணப்படும் என்பதை இதுகாறும் கூறியவற்றால் அறியலாம். முல்லைக்குரிய இடம், காடும் காடு சார்ந்த நிலமுமாகும்; காலம், காரும் மாலைக் காலமுமாம். பொருள் காட்டிடத்தே காணப்படும் மாவும், புள்ளும், மரங்களுமாகும். இப்பொருள்களுள் இயங்கக்கூடியவை, முல்லையேயன்றிப் பிறவிடங்கட்கும் செல்லும் பான்மை யுடையவை. ஆதலால் இவை சிற்சில காலங்களில் குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற ஏனை நிலங்கிளிலும் காணப்படும். மக்களும், இவைபோலவே, தமக்குரிய இன்பவொழுக்கத்தை இவ்வைந்து திணைகளிலும் நிகழ்த்துவதுண்டு. பெரும்பான்மைபற்றி, ஒவ்வோரொழுக்கம் ஒவ்வொரு திணைக்கென உரிமை செய்யப்பெற்று உரிப்பொருள் என உரைக்கப்பெறுகிறது. அகப்பொருள்களை நுதலிவரும் அகப்பாட்டுக்களுள் அவ்வத்திணைக்குரிய பொருள்களும் ஒழுகலாறுகளும் கூறப்படு மெனினும், சிறுபான்மை வேறு திணைகளில் விரவிக் கூறப்படுவது முண்டு. இதனால், இப் பாட்டுக்களைக் காண்போர், இவற்றுட் காணப்படும் பொருட்கூறும் ஒழுக்கக் கூறும் நோக்கித் திணைவகுத்தல் முறைமையாயிற்று. அதனால், பண்டைச் சான்றோர், இடமும் காலமும் முதற் பொருள் என்றும், மாவும் புள்ளும் பிறவும் கருப்பொருள் என்றும், புணர்தல் முதலிய ஒழுக்க நெறிகள் உரிப்பொருள் என்றும் வகை செய்தனர். இவ்வகையுள், அகப்பாட்டொன்றில் முதல், கரு, உரி என்ற மூன்றும் வந்திருப்பின், முதலைக் கொண்டும், முதலின்றி, கரு, உரி என்ற இரண்டுமே வரின், கருவைக் கொண்டும், உரியொன்றே வந்திருப்பின் அதனைக் கொண்டும் முல்லை முதலாகச் சொல்லிய திணைகளை வகுக்க வேண்டும் என்றனர். இதனையே ஆசிரியர் தொல்காப்பியனார், "முதல் கரு உரி என்ற மூன்றே நுவலுங் காலை முறை சிறந்தனவே பாடலுட் பயின்றவை நாடுங்காலை" என்று கூறுவாராயினர். இதனை விளக்கவந்த இளம்பூரண ரென்பார், "முறை சிறத்தலாவது, யாதானுமோர் செய்யுட்கண், முதற்பொருளும், கருப்பொருளும், உரிப்பொருளும் வரின், முதற்பொருளால் திணையாகு மென்பதூஉம், முதற்பொருளொழிய ஏனைய இரண்டும் வரின், கருப்பொருளால் திணையாகு மென்பதூஉம், உரிப்பொருள் தானே வரின், அதனால் திணையாகு மென்பதூஉமாம்..................." என்று உரைத்துள்ளார். இம் முறைமையாலேதான், தொகைநூல்களுள், சில பாட்டுக்கள், திணையும், அதன்கண் கூறப்படும் உரிப்பொருளும் வேறுவேறாகக் கொண்டிருக்கின்றன. தொகைநூல்கள், எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் என வகையால் இரண்டு பட்டு, விரியால் எட்டும் பத்துமாகும். எட்டனுள், இன்று நாம் மாநாடு கூடி ஆராய்ந்து இன்புறும் குறுந்தொகை இரண்டாவது தொகை நூலாகும். பல புலவர்கள் பாடிய அகப்பாட்டுக்களின் தொகையாதலால், இவை தொகை நூல் எனப்படுவதாயிற்று; இக்குறுந்தொகையும் தொகை நூல் எனப்படு வதாயிற்று. இதனை "நல்ல குறுந்தொகை" என்று பழைய பாட்டொன்று சிறப்பித்துக் கூறுகின்றது. இதனை ஆராய்வோர் இதனிடத்துள்ள நன்மை கண்டு இன்புறும் கடப்பாடுடையராவார். இந்நூல் மூன்று புலவர் பெருமக்களால் ஆராய்ந்து வெளியிடப் பெற்றிருக்கின்றது. நான் எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றிற்குரிய ஆராய்ச்சி செய்து வருகையில், காலஞ் சென்ற தமிழ்ப் பெரும் புலமைச் செல்வர் உயர்திரு. கா. நமச்சிவாய முதலியாரவர் களிடத்து முதலும் ஈறுமில்லாத குறுந்தொகையில் அச்சாகிய பகுதிகள் சில கண்டேன். அவற்றிற்கும் ஏனை மூன்றுக்கும் சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவற்றுள் உரையுடன் கூடியவை இரண்டே. இவ்விரண்டினுள்ளும் செவ்விய உரை காணப்பெற்றுத் திருந்திய முறையில் அமைந்திருப்பது டாக்டர். திரு.உ.வே. சாமிநாதையரவர்கள் வெளியிட்டிருக்கும் குறுந்தொகை. இதன்கண், பாட்டுக்கள் திணை வகுக்கப்பெறவில்லை. நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என்ற மூன்று தொகைநூல்களுள், நெடுந்தொகை என்ற அகநானூறு ஒழிந்த இரண்டிலும் மூலப்பிரதி களில் திணைப்பாகுபாடு காணப்பட்டிலது. நெடுந்தொகையிலும் பாட்டுத்தோறும் திணை காணப்படாவிடினும், இறுதியிற் காணப்படும் பழைய பாட்டுக்களால் திணைப்பாகுபாடு நன்கு உணர நிற்கிறது. நற்றிணை, குறுந்தொகைகட்கு வெளியிட்டோரால் திணை காட்டப்பெற்றிருக்கின்றது. அப்பாகுபாடுதானும், டாக்டர் அய்யரவர்கள் வெளியீட்டில் காணப்படு கின்றிலது. அதனாற் குறையொன்றுமில்லை யெனினும், திணைப் பாகுபாடு காண்பார் அது குறித்து ஒவ்வொரு பாட்டையும் நன்று ஆராய வேண்டிய வராகின்றனர். அத்தகைய சிறு முயற்சியுமின்றி, அவரவர் வேண்டி யாங்கு நூல்களை அமைத்துப் பதிப்பிக்கும்: ஆற்றல் வாய்ந்த திரு.அய்யரவர்கள் யாது காரணத்தால் அதனை விட்டனரோ, தெரிந்திலது. இனி, ஐயரவர்கள் பதிப்பை விடுத்து, ஏனைப் பதிப்புக்களை வைத்து நோக்கின், முல்லைத் திணைக்கண், குறுந்தொகையில், நாற்பத்து மூன்று பாட்டுக்கள் காணப்படுகின்றன. இவை, பெரும் பாலும், மேலே காட்டிய முறையில், திணைவகை செய்யப் பட்டிருக்கின்றன. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள்கள், வேற்றுத் திணைச் செய்யுட்களில் காணப்பட்டமையின், அவற்றையும் ஒருங்கு சேர்த்து எண்ணுமிடத்து, இக் குறுந்தொகையில் முல்லைக் குரிய இன்ப வொழுக்கம் நுவலும் அகப்பாட்டுக்கள் எழுபத் தைந்திற்குமேல் உள்ளன. திணை வகுப்பிற்கு முதலும் கருவும் சிறந்தனவாயினும், சிறப்புடைய ஒழுக்க நெறியினைக் காண்பதற்கு உரிப்பொருள் மிகச் சிறந்து நிற்கின்றது. அதனால், இம்முல்லை யாராய்ச்சி, இவ்வெழுபத்தைந்திற்கு மேற்பட்ட பாட்டுக்களை மேற்கொள்வதாயிற்று. முல்லைக் குரிய உரிப்பொருள் இருத்தலும் அதன் நிமித்தமும் என்பர். இருத்தலாவது, தலைமகனும் சான்றோரும் கற்பிக்கும் நெறிக்கண்ணே நின்று, தலைமகள் தனக்குரிய நல்லறமாய இல்லறம் புரிந்து இல்லின்கண் வாழ்ந்திருத்தலாகும். தலைமகன் என்றும், தலைமகள் என்றும் வரும் வழக்காறுகளை நோக்கின், இவர் இருவர்பாலும் தலைமைக் குணங்கள் நிறைந்திருக்கின்றன வென்பது பெறப்படும். படவே, இத்தலைமக்கள், பான்மை வழியோடித் தம்மில் தாம் தலைப்பட்டுக் கூடி அன்பாற் பிணிப்புண்டு, இன்புற்று, சிலநாள் களவின்வழி ஒழுகி, பின்னர்க் காரண வகையால் வரைவு செய்துகொண்டு, இல்லறம் புரியும் ஏற்றம் பெறுவர். இல்வாழ்க்கை செம்மை எய்துவது குறித்துத் தலைமகன், பொருள் கருதியும், வேறே செயற்குரிய வினை குறித்தும், கல்வி குறித்தும் பிரிந்தேகுவது உண்டு. தலைமகளது நட்புக்கிழமை பூண்டு ஒழுகுமிடத்துத், தலைமகன் அவளை வரைந்துகொள்வது குறித்து, வரைவிடை வைத்துப் பொருள் நாடிப் பிரிதலும் செய்வன். பிரிவுக் காலங்களில், தலைமகன் கார்ப் பருவத்திலோ, முன்பனிப் பருவத்திலோ, வேறே தான் மேற்கொண்ட வினைமுடிதற்குரிய காலத்தை நாடி அறிந்துரைக்கும் அக்காலத்திலோ "வருவேன்" எனக் கூறிப் பிரிவன். அவன் சொல்லிய பருவத்தை எதிர் நோக்கி, தலைமகளும், அவன் பிரிவால் உளதாகும் வருத்தத்தைத் தாங்கிக் கற்புக்கடன் பூண்டு இனிதிருப்பள். ஒரோ சமயத்துத் தலைவி, தலைவனை நினைந்து ஆற்றாது வருந்துமிடத்துத் தோழியர் முதலாயினார், அவள் ஆற்றத் தகுவன கூறி ஆற்றியிருக்குமாறு செய்வர். பிரிந்து சென்ற தலைமகனும், தலைமகளின் பிரிவாற்றாது, தான் பிரிந்தே கியவிடத்தே, அவளை நினைந்து வருந்துதலு முண்டு. ஆயினும், தொடங்கியவினை முடியாமுன் மீளுதல் தலைமகற்குத் தலைமைப் பண்பு அன்றாம். அதனால் அவர் அது முடியுங்காறும் பிரிவுத் துயரை ஆற்றியிருப்பன். இவ்வண்ணம், ஆற்றியிருத்தலே பொருளாகத் தலைமக்கள்பால் நிகழும் ஒழுக்க நிகழ்ச்சிகள் முல்லைத் திணைக்கு உரியவாய்ப் புலவர் பாடும் புகழ்பெறுகின்றன. தலைமக்கள் என்றவழி, அவர்பால் பொருளும், ஆள்வினையும், கல்வி யறிவும், பிறவும் உயர்வற வுயர்ந்து நிகரற நிறைந்தே யிருக்குமன்றோ? தலைமகன் இவை குறித்துப் பிரிவது என்னை? என்ற ஐயம் நிகழ்தற்கு இடனுண்டு. இவற்றை, பிரிவு பொருளாக நிகழும் நிகழ்ச்சிகளை ஆராய்வோர் ஆராய்ந்து கூறுதற்கு உரியர். இயைபுபட்டமையால், ஒரு சிறிது சுருங்கக் கூறல், முல்லையாராய்ச்சி யுடையார்க்கும் முறைமையாகும். ஆதலால் இவற்றைக் குறித்துப் பண்டையாசிரியன்மார் கூறியவற்றைக் கூறியமைகின்றாம். "ஓதற்குப் பிரியுமென்பது, கற்பான் பிரியும் என்பதன்று; பண்டே குரவர்களால் கற்பிக்கப்பட்டுக் கற்றான், அறம் பொருள் இன்பம் வீடுபேறுகள் நுதலிய நூல்களெல்லாம் இனிப் பரதேசங்களினும், அவை வல்லார் உளரெனில், காண்பல் என்றும், வல்லார்கள் உள்வழிச் சென்று, தன் ஞானம் மேற்படுத்து, அவர்கள் ஞானம் கீழ்ப்படுத்தற்குப் பிரியும் எனக் கொள்க. இனி, காத்தற்குப் பிரியும் என்பது, நலிவார் உளராக, நலிவு காத்தற்குப் பிரியும் என்பதன்று; நாட்டகத்தும், நகரகத்தும், தமக்கு உற்றது உரைக்கலாத மூத்தார் களும், பெண்டிர்களும், இருக்கை முடவரும், கூனரும், குருடரும், பிணியுடையாரும் என இத் தொடக்கத்தார் தம் முறைக்கருமம் கேட்டுத் திருத்துதற் பொருட்டாகவும், காட்டகத்து வாழும் உயிர்ச்சாதிகள் ஒன்றனையொன்று நலிவன உளவாயினவிடத்து, தீது என்று அவற்றை முறை செய்தற்கும், கொடி வலைப்பட்டுக் கிடந்தனவற்றைத் துறை நீக்குதற்பொருட்டாகவும், வளன் இல்வழி, வளன் தோற்று வித்தற் பொருட்டாகவும், தேவ குலமே, சாலையே, அம்பலமே என்று இத் தொடக்கத்தனவற்றை ஆராய்வதற்கும், அழிகுடி யோம்புதற்கும் பிரியுமென்பது. அல்லதூஉம், பிறந்த வுயிர், தாயைக் கண்டு இன்புறுவதுபோல, தன்னாற் காக்கப்படும் உயிர் வாழ் சாதிகள் தன்னைக் கண்டு இன்புறுதலின், தான் அவர்கட்குத் தன் உருக்காட்டுதற்கும், மாற்றரசர் ஒற்று வந்தவிடத்து, அவர் முன்னர்த் தனது ஊக்கம் காட்டுதற் பொருட்டாகவும் பிரியும்; அதனானே, மாற்றரசரும், திறை கொடுப்பரென்பது. இனி, பகை தணி வினையென்பது, தூதுவர்போலச் சந்து செய்வித்தற்குப் பிரியும் என்பதன்று; இருவர் அரசர், 'நாளைப்பொருதும், இன்று, பொருதும்' என்று முரண் கொண்டு இருந்த நிலைமைக்கண் தான் அருளரசனாகலின், 'இம்மக்களும், இவ்விலங்குகளும் எல்லாம் பட, இவ்விரண்டு குலத்திற்கும் ஏதம் நிகழும்; அதனால் இப் போர் ஒழிப்பன்' என்று இருவரையும் இரந்து சந்து செய்வித்தலும் ஒன்று; அல்லதூஉம் தேவரும் அசுரரும் பொருத காலத்துத் தேவரையும் அசுரரையும், 'ஒருவீர் ஒருவீர் மிக்காரை ஒறுப்பல் யான்'' எனப்பாண்டியன் மாகீர்த்தி சந்து செய்வித்ததுபோல், 'இருவரின் மிகை செய்தீரை ஒறுப்பல்' என்று சந்து செய்வித்தலும் ஒன்று; இருவரையும் ஒறுக்கும் துணை ஆற்றலுடைய னாகலான் என்பது. அஃதே எனின், தன்னகத்து இருந்து விட அமையாதோ? அன்ன ஆற்றலனாகலான், தான் செல்ல வேண்டுமோ? எனின், செல்ல வேண்டும் என்பது; என்னை, காதலர்ப் பிரிந்து ஒரு கருமம் முடிப்பதனின் மிக்க ஆள்வினை இல்லை யென்பது; ஆதலாற் பிரிந்தெ சந்து செய்விக்கும் என்பது. இனி, வேந்தர்க் குற்றுழியென் பதற்குச் சேவகனாய்ப் பிரியும் என்பதன்று; தனக்கு நட்டானோர் அரசன் சென்றவிடத்து, அவற்காய மறுதலையை வென்று நீக்குவதற்குப் பிரியுமென்று கொள்க. இனி, பொருட் பிணியென்பது, பொருள் இலனாய்ப் பிரியுமென்பது அன்று; தன் முதுகுரவரால் படைக்கப் பட்ட பல வேறு வகைப்பட்ட பொருளெல்லாம் கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்று எனத் தனது தாளாற்றலால் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்வதற்குப் பிரியுமென்பது. அல்லதூஉம், தேவர் காரியமும், பிதிரர் காரியமும் தனது தாளாற்றலால் படைத்த பொருளாற் செய்தன தனக்குப் பயன்படுவன; என்னை, தாயப்பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார், ஆதலான், அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியும் என்பது..." என வரும் ஆசிரியர் நக்கீரனார் உரையால் மேலே காட்டிய ஐயங்கள் நீக்கப்படும். இனி, தலைமகன், பொருள் வினை முதலியவற்றைக் குறித்துப் பிரியும் பான்மையுடையவனாயினும், தலைவியைப் பிரிந்தேகும் அவனது செயல், மிக்க நயமுடையதாகும். தலைவியோடு இல்லின்கண் இருந்து வருகையில், தான் கருதியிருக்கும் பிரிவைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் தெரிவிப்பன்; பொருளின் இன்றியமையாமையைப் புகழ்ந்து பேசுவன்; ஆள்வினையின் மாண்பை அழகாக எடுத்தோதுவன். ஒருநாளையில் தான் பிரிந்தேக வேண்டியிருக்கு மென்பதைச் சட்டென உரைக்கலாற்றாது, அவன் சிறிது தயங்குவன்; பிரிவேன் என்று மெல்ல மொழிவன்; அது கேட்டுத் தலைவி அஞ்சுவள். அவ்வச்சம் தீர அன்புடைய மொழிகள் பல சொல்லித் தான் கருதிய பிரிவைக் கைவிட்டவன்போல் இருந்துவிடுவன். இவ்வாறு ஒரு முறைக்குப் பன் முறையும் பிரிவேன் என்று மொழிவதும், பிரியாதே நின்றொழிவது மாகச் சிலநாட்கள் கழியும். பின்பொருநாள் உண்மையாகவே தலைவியிடம் கூறிவிட்டுப் பிரிந்துவிடுவன். சில காலங்களில் தலைவிக்கு அறிவியாது, தோழிவாயிலாக அறிவித்து நீங்கு வதும் செய்வன். பிரிந்தேகும் தலைமகன், தலைமகளைப் பிரியமாட்டாது பெருவருத்தமுறுவன். அவள்பால் உள்ள தூய காதல் ஒரு புறம் ஈர்ப்ப, மேற்கொண்ட வினையோ, பொருளோ முற்ற முடித்தல்லது மீளலாகாது என்கிற மேற்கோள் மறுபுறம் ஈர்ப்ப, அவன் உள்ளம் ஊசலாடி அலமருவன். அவன் செல்லும் நெறியில் வாழும் மாவும் புள்ளும் நிகழ்த்தும் அன்பொழுக்கம் அவனுக்குக் காட்சி வழங்கும். அதனால், அவன் தன் துணை வியாகிய தலைமகளை நினைந்து வருந்துதலுமுண்டு. காலம் சிறிது நீட்டித்தவழி, தலைவியிடமிருந்து பாணன் முதலிய வாயில்கள் வந்து அவளது காதல் நிலையைக் கட்டுரைப்பர். அவன் குறித்த பருவம் வரும்; அப் பருவம் பெரும்பாலும் கார்ப்பருவமாகும்; சிறுபான்மை ஏனைப் பருவங்களுமாகும். கார்ப்பருவத்தே மேகங்கள் கருத்தெழுந்து மின்னி யிடித்து மழைபெய்ய முழங்கும். அதனைக் காணின் தலைமகள், தன் பிரிவையுள்ளி ஆற்றாது பெரிதும் வருந்துவள் எனத் தலைமகன் நினைத்துக் கலக்க முறுவன்; பின்னர்த் தேறித் தேளிவன். மேற்கொண்ட வினையை முடிக்க விரையும் தலைவன், தான் குறித்த பருவம் வரும் முன்பே அவ்வினையை முடித்து மீளுவது பெரும்பான்மையாகும். அவன் மீள்வதும் கார் முகில்கள் பெயல் தொடங்குவதும் ஒன்றாக நிகழ்வது இயல்பு. வினை முடியுமளவும் அதன்மேற் சென்ற அவனது உள்ளம், வினை முடிவில் தோன்றும் இன்பத்தால், தன்பால் காதலன்பு மிக்க தலைவியின் இன்பத்தை நினைக்கும். தலைமகளை, "உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்" (நற்.3) என்றும் அவன் வழங்கக் காண்கின்றோம். அவன் மீண்டு விரையச் சென்று தன் காதலியைக் காண விரும்புவன். அதனால் பாகனுடன் சில தகுவன கூறலுறுவான். மேற்கொண்ட வினையை முடித்துக்கொண்டு மீளும் தலைமகனொருவன் தன் பாகனை நோக்கி, "பாக, நாம் இது காறும் இவ்வினையை முடித்தற்பொருட்டு நெடுநாட்கழித் தோம்; இந்நாட்களையும், தலைமளோடு கூடியுறைந்து இன்புற்ற நாட்களையும் நோக்கின், இவை இன்பவுள்ளீடில்லாத பயனில் நாட்களாகும்" என்று சொல்லலுற்று, "எல்லாம் எவனோ பதடி வைகல்" என்றும், "அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்த நாளே இவண் வாழுநா" (குறுந். 323) ளென்றும் வருந்திக் கூறுகின்றான். பிறிதோரிடத்தும், தலைமகளைக் கூடியிருக்கம் நாட்களின் சிறப்பை நோக்கின், "விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும், அரிது பெறுசிறப் பின் புத்தேள் நாடும், இரண்டும் தூக்கின் சீர்சா லாவே" (குறுந். 101) என்றே சொல்லுகின்றான். ஆதலால் தான், தலைவியைப் பிரிந்துறையும் நாட்களை இங்கே "பதடி வைகல்" என்கின்றான். இது கேட்கும் பாகன், "எம்பெருமான், தலைவிபாற் சென்ற நெஞ்சினனாயினன்; இனி, தேரை விரையச் செலுத்துவதே பொருளாம் என்று கருதித் தேரை இனிது பண்ணிக் கடாவுகின்றான். தேர்மீது இவர்ந்து செல்லும் தலைமகன், தேரின் விரைவையும், தலைவியின் காதல் நிலையையும் எண்ணி, இடையே கடக்க வேண்டியிருக்கும் நிலப்பகுதியை நினைக்கின்றான்; பெருங்காடு செறிந்திருக்கிறது; அதன் கண் புலியினம் கடலலைபோல் முழங்கி எழுந்து திரிகின்றன; அவற்றிற்கு அவன் அஞ்சுகின்றான் என்பதில்லை; அவற்றைக் கடிந்துகொண்டு கடப்பதால் உண்டாகும் காலக்கழிவு தனக்கு முட்டுப்பாடு பயப்பது குறித்து மனம் அழிகின்றான்; வழியின் சேய்மை ஒருபால் கவலை எய்து விக்கின்றது. "எனைத்தென்று எண்ணுகோ முயக் கிடைமலைவே" (குறுந்.237) என்று சொல்லி வருந்துகின்றான். இவ்வாறு எண்ணமிட்டு மீளலுறும் தலைமகன், ஊரின் சேய்மை கண்டு வருந்திய நெஞ்சினனாய் வந்துகொண்டிருக் கையில், குறித்த பருவம் எய்துமுன் தலைவியைக் கூடவேண்டு மென்று விரைகின்றான். அவனது நெஞ்சம் தலைவியைக் கடிதிற் கண்டு கூடி இன்புறுதற்குத் துடிக்கின்றது. அதனால் அவன், "நெஞ்சே, ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து, ஓர் ஏர் உழவன் போலப் பெருவிதுப்புறுகின்றாய். பேரமர்க்கண்ணி யாகிய தலைவியிருந்த ஊர் நெடுஞ் சேண் ஆரிடையது; இதனை நீ அறிந்திலை; யான் வருந்துவேனாயினேன்" (குறுந்.131) என்று தன்னுட் கூறிக் கையறவு எய்துகின்றான். இதற்குள் கார்முகில் எழுந்து நல்ல மழையைப் பெய்துவிடுகிறது. பள்ளங்களில் நீர் நிரம்பித் தெளிந்திருக்கிறது. மானினம் துணையொடு கூடி அந்நீரைப் பருகி இன் புற்றுத் திரிகின்றன. இக்காலத்து மாலைப்பொழுது காதலரைப் பிரிந்து தனித் திருப்பார்க்கு வருத்தத்தைச் செய்யு மென்பது இனிதறிந் திருக்கின்றானாதலால், பாகனைத் தேரை விரையச் செலுத்தச் சொல்லுவான். இவை யெல்லாம் சுட்டி, "பரலவல் படுநீர் மாந்தி, துணையோடு இரலை நன்மான் நெறிமுதல் உகளும் மாலை வாரா அளவை, காலியல் கடுமாக் கடவுதி பாக, நெடுநீர்ப் பொருகயல் முரணிய உண்கண் தெரிதீங் கிளவி தெருமரல் உயவே" (குறுந்.250) என்கின்றான். இதன்கண், மாலை வருமுன், தேரை மனை யகம் அடையுமாறு செலுத்துக என்று பாகனுக்குரைக்கும் தலைவன், அது கைகூடுமென்றற்கு ஏதுவாகக் குதிரை களை, "காலியல் கடுமா" என்றும், மாலை வரக் கண்டு தலைவி மதிமருண்டு வாய் வெருவி நிற்கும் நிலையினை மனத்தால் நினைந்து, "கயல் முரணிய உண்கண், தெரி தீங்கிளவி" என்றும் கூறும் திறம் எத்துணை இன்பம் தருகின்றது காண்மின்! இவ்வாறு மாலைப்பொழுது நெருங்கவே, கானத்தே முல்லை கொடிகள் அரும்பி மலர்ந்து அழகிய காட்சி நல்குகின்றன. முல்லைமலரின் வெண்ணிறம் விளங்கித் தோன்றுவது, பகலொளி மழுங்குதலைக் காட்டுகிறது. ஞாயிறு மலைவாய் அடைகிறது. மக்கள் தத்தம் மனையகம் புகுகின்றனர். இன்ன பொழுதில், "நீ விரையச் சென்று நின் மனையகம் புகாது தனித்தல் நன்று, நன்று" என்று முல்லை தன்னை எள்ளி நகையாடுவதுபோலத் தலைவன் நினைக்கின்றான். அதனைப் பார்த்து, "கார்புறந் தந்த நீருடைய வியன் புனத்துப் பலர்புகு தரூஉம் புல்லென் மாலை முல்லை, வாழியோ முல்லை ! நீநின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவை போலக் காட்டல் தகுமோ மற்றிது தமியோர் மாட்டே" (குறுந். 162) என்கின்றான். தனித்தார்க்கு அத் தனிமை வருத்தத்தின் மேலும், நீ நின் எள்ளல் நகையால் துன்பம் செய்தல் தகவன்று; இது குறித்த பருவத்தின் வரவெனக் கூறித் தனித் தோரைத் தேற்றுதலன்றோ தகுவதாவது என்று கூறுவான், தலைவன், இதன்கண், "முல்லை, நீ நின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டு நகுவை போலக் காட்டல் தகுமோ, தமியோர் மாட்டே" என்கின்றான். இனி, வினைமுற்றி மீண்ட தலைமகன், தன் கடி மனையடைந்து தலவியொடு கூடி இன்புற்றிருக்கின்றான். பிரிந்தேகிய காலத்தே, தான் கூறிச் சென்றதுபோலவே, கார்ப்பருவம் வரு முன்பே வந்தடைந்த தலைமகன் மனைவியோடு இனிதிருக்கையில் கார்முகில் மழை பெய்கிறது. அது காணும் தலைவன், "மழையே, யாம் வருமுன் பெய்வா யாயின், தலைமகள் ஆற்றாது வருந்தியிருப்பள். இதுபோது நின் பெயல் எமக்கு இன்பம் தருகிறது; ஆதலால், 'கடிப்பிகும் முரசின் இடித்துப், பெய்து இனி வாழியோ, பெருவான்!' (குறுந்.270) என்று சொல்லி, "யாம் செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு, இவளின் மேவினமாகி, குவளைக் குறுந்தாள் நாண்மலர் நாறும், நறுமென் கூந்தல் மெல்லணையேம்" என்று தன்னை அக்கார்ப்பெயல் வருத்தக் கூடாமை பேசி மகிழ்கின்றான். இவ் வண்ணம் தலை மக்களது இல்வாழ்வின்கண் நல்லறம் இனிது நடைபெறுகிறது. இடையே, ஒருநாள், தோழி, தலைமகனை நோக்கி, "நீவிர் பிரிந்த காலத்து, எம்மை நினைத்தீரோ?" என்கின்றாள். அவட்குத் தலைவன், "குறுநடையாய், யாம் சென்றவழி, கடத்தற் கரிய குன்றங்களைக் கடந்து செல்ல வேண்டியதாகும். சென்ற யாம், மடந்தையாகிய தலைவியது நட்பையே பெரிதும் நினைத்தேம்; வேறேயுள்ள பலவற்றையும் நினைத்தேமில்லை" (குறுந். 209) என்று செப்புகின்றான். பின்னர் ஒருநாள், தலைமகளது கேளிர் போந்து, தலைமகனைப் பார்த்து, "இளமையும் இன்பமும் நோக்காது பெயர்ந்து சென்று, இத் துணை நாள் நீட்டித்தீரே, காரணம் என்னை?" என்று கேட்கின்றனர். அவர்கட்குத் தலைமகன், "யாம் உங்களை உள்ளாது இருந்தோமில்லை; உள்ளி, உங்களையே பெரிதும் நினைத்தேம்; 'காதலரைப் பிரிந்து சென்று செய்யும் கருமத்தினும் சீரியது பிறிதில்லை' என்ற உலகப் பண்பை நினைத்து மதி மருண்டேன்; அக்காலமெல்லாம், "கோடு தோய் மலிர் நிறை' போல் பெருகிய வேட்கை, அஃது 'இறைத்துண்ணச்' சென்றது போல, சிறுகிச் சிறுகி, யான் ஈண்டுப் போந்து உம்மைக் கண்ட விடத்து முடிவடைவதா யிற்று'' (குறுந்.99) என்று தன் காதல் மாண்பைக் கட்டுரைத்துக் களி கூர்கின்றான். தான் வருங்காறும் தலைவியை ஆற்றுவித்திருந்த தோழியைப் பாராட்டியும், தான் நினைத்தவாறு தேரை விரையச் செலுத்திப் போந்த தேர்ப்பாகனைப் பாராட்டியும் கூறுவன பலவும் உண்டு. இனி, தலைவியாவாள், தலைமைப் பண்பு நிரம்ப வுடைய மகள் என முன்பே கூறி யுள்ளோம். தலைமைப் பண்புகளாவன, "கற்பும் காமமும் நற்பாலொழுக் கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்து புறந்தருதலும், சுற்ற மோம்பலும், பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்" என ஆசிரியர் தொல் காப்பியனார் கூறியதனால் அறிகின்றோம். இப் பண்புகளால் மேம்பட்டுத் திகழும் தலைமகள், தலைவனோடு கூடி அறம் புரியுங்கால், தோழியர் முதலிய கேளிர் போற்றத் 'தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற் காத்து' ச் சோர்வின்றி வாழ்ந்து வருகின்றாள். வருங்கால், தலைமகளது கற்பு நலம் கண்ட தோழி, "தலைவன்பால் இத்துணை அன்புடைய நீ, அவன் நின்னை வரையுங்காறும், நன்கு ஆற்றியிருந்தாயல்லையோ? நின் கற்பின் திண்மையே திண்மை !" என்று வியக்கின்றாள். அவட்கு, "தோழி, தலைவன் வரைவை இடை வைத்துப் பிரிந்தேகியபோது நாம் ஆற்றாது வருந்தி யிருந்தோமன்றோ! அக் காலத்து ஒரு நாள், நாம் அவர் வரவு எதிர் நேக்கியிருக்கையில், நம் அயலிலாட்டி (அயல் வீட்டுக்காரி) 'வரும், வரும்' என்றாள். அவள் வாயச் சொற்போலவே, தலைமகனும் தவறாது போந்து நம்மை வரைந்துகொண்டனன். அதுபோது நாம் ஆற்றியிருந்தது பெரிதன்று; அயலிலாட்டி சொன்ன சொல் தப்பாது வாய்த்ததனால், அவள் நீடு வாழ்க; (மலைகெழு நாடனை வரும் என்றனள்;... (அதனால்) அமுதம் உண்க நம் அயலிலாட்டி" (குறுந்.201) என்று வாழ்த்துகின்றாள். இவ்வண்ணம், களவுக்காலத்தும், கடிமணக் காலத்தும் தலைமகன் செய்த தலையளியை நினைந்து மகிழ்ந்து இருக்கும் தலைமகள் வருந்த, அத்தலைவன் பொருள் குறித்தும் வினை குறித்தும் பிரிந்து போகின்றான். தலைமகள் பிரிவாற்றாது, "தோழி, அவர் செல்வேன் செல்வேன் என அடிக்கடி சொல்வர்; சொல்லி யாங்குச் செல்லார்; அவர் சொல்லும் செலவு 'மாயச்செலவு' என்று கருதி, யானும் 'சென்று வருக' என்பேன். (குறுந்.325) இவ்வாறு, 'செல்வாரல்லர் என்று யான் இகழ்ந்தனனே, ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே" (42) என்று இரங்குகின்றாள். தலைவன் பிரிந்தவழி, தலைவி துயர் மிகுந்து,தோழியர் முதலாயினோர் தேற்றத் தேறி அவன் பிரியும் போது வற்புறுத்த சொல்லைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஒருவாறு ஆற்றியிருக் கின்றாள். காதலரைப் பிரிந்தவர்க்கு மாலைப்போதும், மனக்கினிய இயற்கைக் காட்சியும் பெருவருத்தம் செய்வனவாகும். இதனால், அவளது நினைவு அடிக்கடி அவன்மீது செல்வதால், பிரிவுத்துன்பம் எழுந்து உள்ளத்தை அலைக்கின்றது; உடல் மெலிகின்றது; கண்ணீர் உவட்டெடுத்து ஒழுகுகின்றது. தலைமகள் தோழியைப் பார்த்து, "நம் கண்ணீர் துடைத்து நம்மோடு அமைதற்குரியராகிய நம் காதலர், இப்போது அவ்வாறு அமையாராதலால் என் நெஞ்சம் வருந்துகின்றது. (குறுந். 4) எருமையினம் தம் கழுத்திற்கட்டிய மணியொலிக்க, நடு யாமத்தில் இயங்கும்; மாலைவரற்பாலராகிய அவர், மாலை கழிந்து நடுவியாமமாகியும், வந்திலர் (குறுந். 279); அவர் நம்மை யுள்ளினராயின், வருவாரல்லரோ?" என்று வருந்து கின்றாள். பிறிதொருநாள், தலைவி வருந்தக் கண்ட தோழி, "கடலன்ன காமம் உழப்பினும், குலமகளிர் தம் கற்பால் அதனைச் சிறையழியாமே காத்தல் வேண்டும்; நீ ஆற்றாது வருந்துவது நன்றன்று" என்று ஆற்றுவிக்கின்றாள். அது கேட்கும் தலைவி, பொறாளாய், தோழி தன் மனநிலையையுணராது கூறுகின்றாளெனச் சிறிது சிவந்து, அவளை அயன்மைப் படுத்தி, "காமம் தாங்குமதி யென்போர், தாம்அஃது அறியலர் கொல்லோ? அனைமது கையர்கொல்? யாம்எம் காதலர்க் காணே மாயின் செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே" (குறுந்.290) என்று உரைக்கின்றாள். இவ்வுரையாட்டால் பொழுது கழிய மாலை வருகிறது. தனிமைத் துன்பம் ஒரு புடையே தோன்றித் தலைவிக்குத் துயர் விளைவிக்கின்றது. ஆற்றாத தலைவி தோழியை நோக்கி, "தோழி, அவர் சென்ற நாட்டில், புன்கண் மாலையும் புலம்பும் இல்லையோ? இருந்தால், அவரும் நம்போல் துயரெய்தி, நம்மை நினைந்து வந்திருப்பாரன்றோ?" (குறுந். 330) என்று வினவுகின்றாள். தோழி, தலைவியின் தலைமைப் பண்புகளை எடுத்தோதி ஆற்றுவிக் கின்றாள். இதனால் தலைவி கருத்தழிகின்றாள். தோழியை மறுபடியும் விளித்து, "தோழி, கறவையினம் தம் கன்றையுள்ளிப் போதரும் இப் புன்கண் மாலைப்போதில், பிரிந்து சென்ற காதலர் திரும்பிவரக் காண்போர் மிகவும் நோற்றோராவர்; யான் அஃதில்லேன்" (344) என்கின்றாள். இது கேட்கப் பொறாத தோழி, "நீ இவ்வாறு கூறல் நன்றன்று" என்று கழறுகின்றாள். தலைவி, அவட்கு, "தோழி, பின்னுள்ள தாகிய இரவுப்போது, வரும் என்று கருதி இம் மாலைப் போதினை ஒருவாறு கழிப்போமாயின், கங்குலும் கடல்போல் பெருகி, கண்படை எய்தாவாறு வருத்துகின்றது; ஆகவே, அதுவரினும், மாலை கழியினும், என் துயர் கழிவதின்று" (குறுந். 387) எனக் கலங்கி மொழிகின்றாள். இவையாவும், இரங்கற் பொருளவாகத் தோன்றினும், தோழியோடு சொல்லாடி ஓராற்றால் ஆற்றியிருத்தற்கு ஏதுவாதலால் முல்லைத் திணையேயாகும் என்றே ஆசிரியன்மார் கூறுவர். மேலே காட்டியவாறு, தலைவனது பிரிவு நினைந்து வருந்து வதும், தோழியால் தேறுவதுமாய்த் தலைவன் குறித்த பருவத்தின் வரவு நோக்கித் தலைவி இல்லிருந்து நல்லறம் செய்து வருகின்றாள். தலைவன் குறித்த பருவம் வருகின்றது; மற்று, அவன் வரவு நீட்டிக்கின்றது. தலைவிக்கு ஆற்றாமை மிகுகின்றது. அவள் தோழியைப் பார்த்து, "தோழி காதலர் குறித்த கார்ப்பருவம் வந்தது; அவர் வந்திலர்; வருவர் என ஆற்றியிருப்பேமாக. கணவனைப் பிரிந்த பின்னரும் நீவிர் உயிர் வாழ்கின்றீர் போலும் என்பது போல, இக்காரின் வரவு இருக்கின்றது, காண்" (குறுந். 65) என்றும், "இளமைச் செவ்வி நோக்காது பொருளே நச்சிப் பிரிந்த காதலர் இப்போது எங்குள்ளாரோ?" (126) என்றும் நாம் எண்ணி ஏங்கி நிற்க, "இக் கார்ப்பருவம் முல்லையின் தொகு முகைகளைத் தன் இலங்கும் எயிறாகக்கொண்டு நகுகின்றது காண்" என்றும் இயம்பு கின்றாள். இவற்றைக் கேட்கும் தோழி, "இது பருவமன்று" என்று வற்புறுத்துகின்றாள். தலைவி தோழியோடு புலந்து, "கொன்றை குருந்தோடு அலமரும் பெருந்தண் காலையும் 'கார் அன்று' என்றி; ஆயின், யான் காணும் இது கனவோ? நின்னையே வினவுகின்றேன், கூறுக" (குறுந். 148) என்று பேசுகின்றாள். கார்காலம் வந்து விடுகிறது. விசும்பு முழுதும் கார் மழை பரவிக் கறுத்து, மின்னி, இடித்து, குன்றும் காடும் குளிர்ப்புமிகப் பெய்கிறது. அவல்கள் (பள்ளங்கள்) தோறும் நீர் நின்று தெளிந்திருக் கிறது. கானத்தே கொன்றை, குருந்து, கோங்கு, பிடவம், பித்திகை, தளவம், முல்லை முதலியன முகையும் அரும்பும் மலரும் நிரம்பி இனிய காட்சி தருகின்றன. மானினம் பிணையுடன்கூடி, பள்ளங்களில் நிற்கும் தண்ணீரையுண்டு இன்புற்றுத் திரிகின்றன. இக்காலத்தே, பெரும்பாலும் மாலைப்போது தொடங்கி நள்ளிரவு முற்றும் மழை பெய்வது இயல்பு. அதனால், கன்றும் கறவையும் கொண்டு, கானத்திற்குச் சென்று மேய்க்கும் ஆயர், மாலை வரக் கண்டு அவற்றைச் செலுத்திக்கொண்டு மனையகம் திரும்புவர். ஆனேறுகளின் கழுத்தில் மணியோசை கேட்போர்க்கு மாலைப்போதின் மாண்பு காட்டி மகிழ்வுறுத்தும்: ஒருபால் கானமஞ்ஞைகள் அகவும். இதனைக் காணும் தலைவி, "கார்வரும் முன்பே வருவேம் என்று சொல்லியகன்ற நம் காதலர் வந்திலர், காண்; தம்மை ஒருபோதும் மறவாத நம்மை அவர் தெளிவாக மறந்தனர்; பெய்த குன்றத்திலிருந்து புனலும் பூக்களைச் சுமந்து இழி தருகின்றது; மாலைப்போதில் மழையும் இடித்து முழங்கு கின்றது (200); இதோ, முல்லையும் பூத்துளது; யாவரும் கையில் பறியோலை (பனங்குடை) யுடையராயினர்; இடை மகன் சென்னியில் உள்ள கண்ணியெல்லாம் முல்லை முகைகளே; அவர் வரவில்லையே (221); இக்காலத்தே காதலரைக் கூடிப்பெறும் துயிலே இனிய துயிலாகும். காதலரோ, 'துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர்; பயில் நறுங்கதுப்பின் பாயலுமுள்ளார்; அவர் வரவு அறிந்து வந்து இசைக்கும் தூதுகளும் வாராவாயின (254); மானே றுமடப் பிணை தழீஇப் புதலிடத்தே ஒடுங்குகின்றன; களிறுகள் பிடியொடு பொருந்தி மலையகம் சேர்கின்றன; இது போதில் தலைவர் வாராமையால் நம் இன்னுயிர் நிலை என்னாகும்?" (319) என்று கலுழ்கின்றள். பருவவரவு கண்டு தலைவி வருந்துவது ஒருபுற மிருக்க, தோழியும், அதனைக் காணின், நம் தலைமகள் எவ்வாறு ஆற்றுவளோ எனக் கலங்கிக் கையறவு படுகின்றாள். தோழி எய்தும் கவற்சியைத் தலைவி கண்டு, அவளைத் தேற்றுவதும் தன் கடனாதலை யுணர்கின்றாள். தோழியைப் பார்த்து, "தோழி, கொன்றை, புதிய பூக்களை மலர்ந்து கானத்தில் கார்கால வரவு காட்டுகின்றது; எனினும், இதனைக் கார்ப் பருவமென்று தேறேன்; கார்ப்பருவமாயின், காதலர் தவறாமே வந்திருப்பர்; வாராமையால், அதனைக் காரென்று கொள்ளேனாயினேன்" என்று கூறுவாள், "புதுப்பூங் கொன்றைக் கானம் 'கார்' எனக் கூறினும் யானோ தேறேன் அவர்பொய் வழங்கலரே" (குறுந்.21) என்கின்றாள். மறுவலும் ஒருமுறை, தோழியின் கவற்சி நீக்கும் கருத்துடையளாய தலைவி, "தோழி, நீ கவலற்க; இதுபோது நம்மை வருத்துவதுபோலத் தோன்றியுள்ள 'புன்கண் மாலையும் புலம்பும், அவர் சென்றுள்ள நாட்டினும் உண்டல்லவோ? இவை நம்போல் அவரையிம் துயரெய்து விக்கும்; அதனால் அவர் விரைய வருவர்; ஆகவே, நான் நன்கு ஆற்றியிருப்பேனென்று உணர்க" (46) என்று உரைக்கின்றாள். பின்பொருகால், தலைவி தோழியை யழைத்து, "தோழி, இதோ கார்ப்பருவம் வந்துவிட்டது; பிச்சியின் அரும்புகள் நன்கு சிவந்துள்ளன; இது கண்டு யான் மருள்வேனாயி னேன்: கராணம் ஆற்றாமையன்று; கார்மழையின் முழக்கத்தை அவர் கேட்பின், நம்மை நினைந்து செய்வினை முடியாது மீள்வரோ என்று அஞ்சும் அச்சமே தவிர வேறன்று" என்கின்றவள், "பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே; யானே மருள்வேன்; தோழி, பானாள், இன்னும் தமியர் கேட்பின் என்னா குவர்கொல், பிரிந்திசி னோரே; அருவி மாமலைத் தத்தக் கருவி மாமழைச் சிலைதரும் குரலே" (குறுந்.94) எனவரும். இதனால் இக் கருத்து அழகுற்று நிற்றலைக் காணலாம். காதலர் செய்வினை முற்ற முடியாது மீள்வரோ என்று வெளிப்படக் கூறுதற்கு நாணி, தலைவி, "என்னாகுவர் கொல் பிரிந்திசினோரே" என்று கூறும் திறத்தைக் காண்மின். பிறாண்டும், தோழி, தலைவியை நோக்கி, "கார்ப்பருவம் வருகின்றது; நீ ஆற்றுவையோ?" என்று கேட்கின்றாள். அவட்குத் தலைவி தன் கற்பு நலம் தோன்ற, "குரவமும் புன்கும் தழைத்து மலர்ந்து சினை இனிதாகிய காலையும், காதலர் நம்மை நினையாது மறந்தாராயினும், செய்வினை முடியாது மீளுதல் ஆண்மையன்று எனப் பெரியோர் கண்ணினர்: இதனை முன்பு துணியாத என் நெஞ்சம், இப்போது துணிந் தமையின், யான் ஆற்றி உயிர்வாழ்வேனாயினேன்; இத்துணிபிற்கு என் மனத்து வன்கண் துணையாயிற்று" என்பாள், "காதலர், பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவ தன்றுஎன வலியா நெஞ்சம் வலிப்ப, வாழ்வேன் தோழிஎன் வன்க ணானே" (குறுந். 341) என்று பெருமிதம் படக் கூறுகின்றாள். ஒருநாள் தோழி போந்து, "குறித்த பருவம் வந்தும், காதலர் வாராராதலால், அவர் வரவறிதற்கு ஊரார் செய்வன செய்து காண்பேமோ?" என்று கேட்கின்றாள். அவட்குத் தலைமகள், "தோழி, காதலர் நம் உயிர்க்கு உயிரன்னர்; தம்மையின்றி ஓர் இமைப்பளவும் அமையாத நம்மை மறந்து, சென்றவிடத்தே அமைந்துவிடும் வன்மையுடைய ரென்பது தகாது; அவர் பொருட்டுச் சூலிக்குக் கடன் பூணலோ, கையில் காப்பு நூல் யாத்தலோ, புள் நிமித்தம் பார்த்தலோ, விரிச்சி நிற்பதோ, ஒன்றும் வேண்டா; இவற்றை நினைத்தலும் கூடாது; அவர் தாமே வருவர்" (குறுந். 218) என்று பேசுகின்றாள். மேலும், தோழி, "இத்துணை யன்புடைய நின்னைப் பிரிந்திருக்கும் தலைவர் நின்பால் அன்பிலர் போலும்" என்று சொல்லாற் சுடுகின்றாள். அச்சுடுசொல் பொறாத தலைமகள், "காதலர் உழையரல்லாமையால் யான் வருந்துகின்றேன்; மழையும் இக் காலத்தைக் கார் என்று மயங்கிப் பெய்வதாயிற்று; இது பொழியா முன்பே, அவர் திறத்து நாம் இரங்கினோம்; அற்றாக, இவ்வூர் நம்பொருட்டு மிக இரங்கி அழுகின்றது; அதுவே எனக்குப் பெரு நோய் தருகின்றது; என் வேறுபாட்டிற்குக் காரணம் வேறே, ஆற்றாமையன்று" (289) என்கின்றாள். இதன்கண் ஊர் என்றது தோழியை. இப் பேச்சினைச் "சாக்கிட்டுப் பேசுவது" என்று யாவரும் இக் காலத்து, வழங்குகின்றனர். இவ்வாறு சிலநாட்கள் கழிகின்றன. தலைவன் வாராமை யால் ஆற்றாத தலைவி, தன் வேறுபாட்டைத் தலைமகற்கு உணர்த்தக் கருதுகின்றாள். அவளது மாந்தளிர்போலும் மேனி வெளுத்துத் தோன்றுகிறது. இந்த நிலையைத் தலைவனுக்குத் தெரிவிக்க வேண்டுமென விழைந்து, தோழியை நோக்கி, "தோழி, நம் படப்பையில் மாரிக் காலத்தே மலரும் பீர்க்கின் வெண்பூவைக் கொண்டு சென்று, அவற்குக் காட்டி, "இன்னள் ஆயினள் நல்நுதல் என்று, அவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே, நன்று மன்வாழி தோழி" (குறுந்.98) என்று சொல்லுகின்றாள். அது கேட்டுத் தூதுவிடத் துணிந்த தோழி, "அவர் யாண்டு உள்ளனரோ? அவரை எங்ஙனம் காண இயலும்?" என்று வினவ, அவட்கு, "அவர் நிலம் தொட்டுப் புகார்; வானம் ஏறார்; முந்நீருட் காலிற் செல்லார்; நாடு தோறும், ஊர் தோறும்,குடிதோறும் தேடின் அவர் அகப்படாது போகார்; காணாது கெடுநரும் இலராவர்" (130) என்று வெம்மை விரவிய நன்சொற்களால் விளம்புகின்றாள். அது, "நிலந்தொட்டுப் புகார், வானம் ஏறார், விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார், நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், குடிமுறை குடிமுறை தேரின் கெடுநரு முளரோநம் காத லோரே" என வருவது. இவ்வண்ணம் தூது விட்டுத் தலைவன் வரவு நோக்கி யிருக்கும் தலைமகட்கு ஒருநாள் பாணன் போந்து, தலைவனது வருகையை உணர்த்துகின்றான். அது கேட்டு எல்லையில் இன்பமுறும் தலைமகள், "பாண, ஒன்று தெளிவாக அறிய விரும்புகின்றேன்: காதலர் வருகையை நீயே கண்டனையோ? அன்றிக் கண்டார் சொல்லக் கேட்டனையோ? யார் வாய்க் கேட்டனை, கூறுக. அவர் வருகை யுணர்த்திய நீ யான் தரும் இப் பெருநிதியைப் பெற்றுச் செல்வாயாக" (75) என்று தன் காதல் மிகுதி தோன்றப் பலபடச் சொல்லாடு கின்றாள். சிறிது காலத்துள் தலைமகன் தேரிற் கட்டிய மணி யோசை கேட்கின்றது; தேர் தோன்றுகிறது; அது வந்து வாயிலில் நிற்கிறது; தலைவனைத் தழீ இய தலைவி மகிழ்ந்து பேருவகைக் கடல் மூழ்கிப் பிறங்குகின்றாள். "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?" அன்றிரவு கழிகின்றது; வெள்ளிமுளைப்ப விடியல் வருகின்றது; கோழிச் சேவல் கூரைமீது ஏறி நின்று குரலெடுத்துக் கூவுகின்றது. தலைமகள் துயிலெழுந்து கோழியை நோக்குகின்றாள்; முகம் சிவந்து பொலிகின்றது; கண் கறுத்து மடித்த தன் வாய் திறந்து வெடித்த சொல் சில விளம்புகின்றாள். "ஏ, கோழிச் சேவலே, நீ இல்லெலி பார்க்கும் பிள்ளைப் பூனைக்குஇரையாகிக் கழிவாயாக" என்று சொல்லி, "நெடுநீர் யாணரூரன் தன்னொடு வதிந்த ஏம இன்துயில் (குறுந். 107) எடுத்தனை யன்றோ?" என்கின்றாள். இந்நிலையில், தோழி அவளிடம் போந்து, அவளது மகிழ்க்சி மலிவு கண்டு மனம் குளிர்ந்து, "நின் நலம் கெடாமை எனக்கு மகிழ்ச்சி தருகின்றது; காதலர் பிரிந்து நீட்டிப்பவும், நீ நன்கு ஆற்றினா யல்லையோ?" என்று சொல்கின்றாள். அவட்குத் தலைமகள், "தோழி, அவர் நம்மைத் துறந்து நெடுஞ்சேண் நாட்டாராயினும், நெஞ்சிற் கணியர் (228); அதனால் ஆற்றுவேனாயினேன்" என்று விடையிறுத்து இற்சிறப்பு மேம்படுகின்றாள். இனி, இத் தோழியாவாள் யாவள்? இவள் தலைமகளை வளர்த்து நற்குண நற்செய்கைகளால் தலைமை எய்துவித்த செவிலியின் மகள் என்பர். இவளும் தலைவியொடு ஒப்ப அவள் பெற்றோரால் சீரும் சிறப்பும் செய்யப்பெறும் சீர்மை யுடையவள்; தலைமகளின் நலமே தன் வாழ்வின் குறிக்கோளாக் கருதும் சால்புடையவள். சுருங்கக் கூறின், அறிவே இவளது வடிவு; அன்பே இவளது உள்ளம்; அறமே இவளது நினைவு என்னலாம். இளமையிலிருந்தே இவள் தலைமகட்குச் சிறந்தவளாய், அவளோடு உடனிருந்து, உடன் பயின்று, உடனொழுகி வருபவளாவாள். இவ்வுரிமையால், வாய்த்த விடத்துத் தலைமகட்கு உற்றனவெல்லாம் தனக்கு உற்றனவாகக் கருதி இவள் கூற்று நிகழ்த்துவ துண்டு. அதனையுடன்பட்டே ஆசிரியரும், "ஒன்றித் தோன்றும் தோழிமேன்" என அமைத்தோது கின்றனர். இத்தோழி, தலைமகள் தலைமகனை மணந்து இல்லிருந்து நல்லறம் புரிவதைக் கண்ணும் மனமும் குளிரக் கண்டு களித்திருக் கின்றாள். அக்காலத்தே, தலைவன், தலைவியொடு சுடி இன்புறுதற்குப் பெருவிதுப்புக்கொள்கின்றாள்; அவனது உள்ளம் இன்ப நுகர்ச்சி குறித்துப் பெரிதும் துடிக்கின்றது. அது கழிகாமமாய் நோய் செய்யும் என்பது அறநூல் முடிவு. அதனால், அவனைத் தெருட்டி நெறிநிறுத்துகின்றாள் தோழி. அவள், அவனது மனநிலையைக் கலைக்க நினைத்து, "பெரும, களவுக் காலத்தே, தொழுது காண் பிறைபோல யாம் நினக்கு அரியமாய் இருந்தேம்; அப்போழ்து, பெரிதும் பொறை கொண்டொழுகிய நீ, இப்போழ்து இவள் "மார்பிடை" க் கிடந்தும் பெருவிதுப்புறுகின்றாய்; இது நன்னீர்க் குளத்துப் பூத்திருக்கும் ஆம்பல் மலரைப் பறிக்கச் செல்வோர், நீர்வேட்கையுற்று நின்ற விடத்தே இருக்கும் நன்னீரைப் பருகாது, நீர் வேண்டி வருந்துவதுபோல வுளதே ! இதற்கு யான் என் செய்வேன்" (குறுந்.178) என்று நயம்படக் கூறுகின்றாள். இவ்வண்ணம் ஒழுகுமிடத்துத் தலைவன் பிரிந்தேகிய வழி, தலைமகளை ஆற்றுவித்திருக்கும் பொறுப்புத் தோழிக்கு எய்துகின்றது. பிரிந்தோர்க்கு மாலைப்போதும், அப்போது நிகழும் நிகழ்ச்சிகளும் பெருந்துயர் செய்வன வல்லவோ? அக்காலையில், கற்புவழி யொழுகும் தலைவியை ஆற்றுவிப் போர், அக் கற்பிற்குக் கேடு தருவனவற்றைத் தம் சொல்லில் மறந்தும் சொல்லக்கூடாது. தலைவியோ கற்பே உருவாயரைமந்த பொற்புடையவள். அறக்கழி வுடைய சொல்லும் செயலும் தோன்றின் அவள் அப்போதே உயிர் விடுவள். "அறக்கழிவுடையன பொருட்பயம் படவரின், வழக்கென வழங்கலும் பழித்தன்றென்ப" என்று ஆசிரியர் கூறியது, அறக் கழிவுடைய சொல் நிகழ்ச்சிபற்றியே யாகும்; செயலுக்கு அன்று. அச்சொல்லும் "பொருட்பயம் படவரின்" அமையும் என்பது குறிக்கொள்ள வேண்டியதாகும். இப்பெற்றியளாய தலைமகளை ஆற்றுவிப்போர் நுண்ணறிவும் மென்மொழியும் உடையராதல் வேண்டும். அதனால், தோழி இவ்வமைதி முற்றும் உடையளாய் விளங்கு கின்றாள். இவள், தலைமகன் பிரிந்தேகியது கண்டு, ஆற்றாளாகிய தலைமகளை, ஆற்றுவிக்கத் தொடங்கி, முதற்கண் அவனது காதன்மை கூறித் தலைமகளை வற்புறுத்துகின்றாள். அவள், தலைவியை நோக்கி, "தோழி, காதலர் நம்பால் அன்புமிக வுடையார்; அதனால் குறித்த பருவத்தே வந்து நல்கலும் நல்குவர்; அவர் சென்ற வழியும், மனத்தே அன்பு தோன்றுவிக்கும் அமைதியுடையதாகும்" (37); மேலும் "அவர் முயலும் பொருள் முற்றும் கைகூடுவதின்று; பொருள் எனப்படுவனவெல்லாம் குறைவறக் கைகூட்டிக் கொள்வ தென்பது ஒருகாலும் ஒருவர்க்கும் இயைவதன்று; அன்றியும், குவளையொடு பொதிந்து குளவிநாறும் நின் நறிய நுதலை ஒரு போதும் மறவார்; அதனால் அவர் நீட்டியாது வருவரெனக்கொண்டு வருந்துவ தொழிக" (59) எனப் பல வேறுவகையாகக் கூறி ஆற்றுவிக்கின்றாள். இவற்றைக் கேட்கும் தலைவி, "காதலர் நம் பொருட்டுத் தாம் மேற்கொண்ட வினை முற்றாது வருவரேல், அஃது அவர்க்கும் நமக்கும் இழுக்காமன்றோ?" என்று சொல்லுகின்றாள். அவட்குத் தோழி, "அவர் இழுக்குத் தருவனவற்றை எஞ்ஞான்றும் செய்யார்; அவர் சென்ற விடத்தே தடமருப்புடைய யானை, தழை மரங்களைக் குத்தித்தள்ளி, ஏனைய யானைகள் தழை மேய்ந்து பசி தீருமாறு செய்வதைக் காண்பர்; அது காணின், தாமும் மேற்கொண்ட வினை முற்றித் தமது கடனை ஆற்றிவருவர்" (குறுந்.255) என்று மொழிந்து தலைவியைத் தேற்றுகின்றாள். இவ்வாறிருக்கையில், தலைமகனது வரவு நீட்டிக்கின்றது; தலைமகளும் பிரிவாற்றாது பெரிதும் துயரடைகின்றாள். அவளைக் காணும் தோழி, அவளது உடல் மெலிவு கண்டு, உளம் கவன்று , செய்வகையறியாது திகைப்புண்டு நிற்கின்றாள்; அறிவுடைப் பெருமக்களைக் கண்டு தலைமகன் மீண்டு வருங்காலத்தை உசாவியறிய முயல்கின்றாள். அறிவர் ஒருவர் அவள் கண்ணெதிர்ப்படுகின்றார். தோழி, அவரை யண்மி, "ஐய, எம் காதலர் கார்ப்பருவத்தே வருவரென மொழிந்து பிரிந்தேகினர். வாடைக்காற்று எறியும் காலத்தை யேனும் சொல்லுக. அதன் இறுதியே கார்காலமாதலின், அதுகொண்டு அவர் வரவினை உணர்ந்து கொள்வோம். இதனை அறிந்துரைக்கின், நீ, செந்நெல் வெண்சோறும், நறு நெய்யும் எம் ஓரில்லிலேயே நிரம்பவுண்டு, அற்சிலக் காலத்துக்கு வேண்டும் வெந்நீரையும் செப்பு நிறையப் பெறுவை" (குறுந்.277) என்று வேண்டியறிகின்றாள். பின்னர், அதனைத் தலைமகட்குரைத்து அவளை யாற்றுவிக்கின்றாள். பின்னரும் தலைமகளது பிரிவுத்துன்பம் மிகுகின்றது. அது காணும் தோழி, கவலை மிகவுற்று எத்துணையோ நய மொழிகள் நவில்கின்றாள். இதற்குள் அறிவர் உரைத்த வாடைக்காலம் வருகிறது. தலைமகள் துயர் மிகுந்து வருந்துகிறாள். தோழி, தலைவிக்கு, "இன்னாது எறியும் வாடை வந்தும், என்னாயினள் கொல் என்று எண்ணாத காதலர், வாரா ராயினும், வரினும், அவர் நமக்கு யாராகியர்; அவரை நினையற்க" (குறுந். 110) என்கின்றாள். இச்சொல் தலைவிக்கு வருத்தம் செய்கிறது. அவள் அச் சொல்லைக் கேட்கப் பொறாது அமைந்தொழிகின்றாள். தோழி, அதன்மேல், "நீ கவலற்க; அவர் வானமேறார், நிலந்தொட்டுப் புகார்; முந்நீர் காலிற் செல்லார்; நாடுதோறும் ஊர்தோறும், குடிதோறும் தேடின் அகப்படுவர்; நீகவலற்க; தூதுவிடலாம்" (குறுந். 130) என்று தேற்றுகின்றாள். இவ் வகையில் சின்னாட்கள் கழிகின்றன. கார்ப்பருவமும் வந்தேவிடுகிறது. தலைமகன் வாராமையால் தலைவிக்குப் பிரிவு நோய் பெருகிப் பேதுறவு செய்கின்றது. அதனினின்றும் அவளைப் பாதுகாக்கும் கடன் தோழிக்கு மிகுகின்றது. அவள், தலைவியை நோக்கி, "தோழி, இதுபோது வரும் மழை வம்பு; இதனை மெய்யான மாரியெனப் பிறழக்கொண்டு கொன்றைகள் மலர்ந்திருக் கின்றன: கொடிகள் இணரூழ்த்துள்ளன; தலைவர் குறித்த கார்ப் பருவம் இஃது அன்று; அவர் குறித்த பருவம் வரு முன்பே இவை இது செய்கின்றன, நீ கவலற்க" (66); மேலும், "இது கார்ப் பருவமாயின், நம் காதலர் வருவாரல்லரோ? வந்திலர்காண்; அதனால் இது காரன்று; நீயும் கவல்வது ஒழிக" (382); இம் மழை வருவதற்குக் காரணம் வேறு; "கழிந்த மாரியில் பெய்யாது எஞ்சிய பழநீரைப் புது நீர் கொள்வது குறித்து, முகிற் கூட்டம் இப்போழ்து பொழிகின்றன. இதனைக் கார்மழையென்று தவறாகக் கருதியே, மயிலும் மாவினமும் ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன; இவை மடமையுடையன; நீ நின் படர் தீர்க" (251) என்று நய முறக் கூறுகின்றாள். ஒரு நாள் தலைவி, தோழியை அழைத்து, "தோழி, நம் காதலர் நம் நிலைமையினை இதுகாறும் கேள்வியுறா திருப்பரோ?" என்று கேட்கின்றாள்; அதற்குத் தோழி, தலையசைத்து, "ஆம்; கேளாராகுவர்; கேட்பின், விழுமிது கழிவதாயினும், நின் துயர் கெட நீட்டியாது வருவர்" (253) என்று சொல்லித் தலைவியின் கருத்தை வற்புறுத்து கின்றாள். தலைவன் வரவிருக்கும் காலத்தையும் நாளடைவில் தோழி உணர்ந்து கொள்கிறாள். கார்ப்பருவம் வந்துவிட்ட தனால், தலைவன் வருநாட்கு இடைக் காலத்தில் தலைவி மெலிவது கண்ட தோழி, "தோழி, இனி, நீ சுவர்களில் கோடிட்டு வருந்தும் வருத்தம் நீங்குக. இதோ கார்ப்பருவம் வந்துவிட்டது. மாலைப்போது வருதலால், கோவலர் வீடு நோக்கி வருகின்றனர். அவர் தலையில் சூடிய கண்ணியில் உள்ள முகைகள், 'கார் வந்தது பிரிந்தோர் வருப' என்பது போல இருக்கின்றன; இனிக் காதலர் தவறாமே வருவர்" (358) என்று தேற்றுகின்றாள். இருந்தாற்போல் இருந்து மணியோசை கேட்கின்றது. அது கேட்கும் தோழி, "இது தலைமகன் தேர் மணியோ?"; ஆனினத்தின் கழுத்திற் கட்டப்பெற்றிருக்கும் மணியோ? என்று ஐயுறுகின்றாள். அவள் உடனே தலைவியை நோக்கி, "தோழி, முல்லை யூர்ந்த கல்லுயர் ஏறிக், கண்டனம் வருகம் சென்மோ" (275) என்று தலைவியின் மெலிந்த உள்ளத்தே கிளர்ச்சி யூட்டி ஆற்றுவிக் கின்றாள். பின்னர்த் தலைவி, "கார்ப்பருவம் வந்தால் ஏன்? தலைவர் தம் வரவு நீட்டியாரோ?" என்று ஏங்கி வினவுகின்றாள். அவ் வேக்கத்திற்கு இடமுண்டாகாவாறு, தோழி, "காலைப் போதில் மான்கன்று வரகு மேய்ந்து தன் காலையுண வாகிய கடன் கழிக்கும் காட்டில், கார் வந்து விட்டது; அங்கே வெண் கூதாளத்தின் மலர்கள் காம்பி னின்றும் கழன்று உகுகின்றன; அவற்றைக், காதலர் காணின், நின் கைவளையும் அவ்வாறே கழன்று உகும் என்று நினைந்து நீட்டியாது விரைய வருவர்" (282) என விடுக்கின்றாள். சிறது போதில், தலைமகன் தேர் வருகின்றது. அதனைச் சேய்மையிற் காணும் தோழி, "அச்சிரக் காலம் வந்தன்று; நின் புலம்பு தீர, பெருவிறல் தேரும் வந்தன்று" (338) எனப் பெரு மகிழ்வு கொள்ளப் பேசித் தலைவியைத் தெருட்டிச் சிறப்பெய்து விக்கின்றாள். இனி, இத் தோழியின் தாயாகிய செவிலியின் செயல்கள் சில இம் முல்லைத் திணைக்கண் இந் நூலுட் காணப்படு கின்றன. களவுக் காலத்தே தலைவி நிகழ்த்திய ஒழுக்க நெறி களை முன்னறிந்து, நற்றாய் முதலியோர்க்குக் கூற்றுவகை யால் வெளியிட்டு, அத் தலைமக்கட்கு ஆக்கஞ் செய்தாளாதலால், இவளையே சான்றோர் "தாய்" என்று மொழிவர். ஆசிரியர் தொல்காப்பியனாரும், "ஆய் பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாய் எனப்படுவோள் செவிலியாகும்" என்று கூறினர். கற்பினும் இச் செவிலியது சொல்லே சான்றேரால் உயர்த்துப் பேசப்பெறுகின்றது. தலைமகள் தலைமகனோடு கூடி இல்லறம் செய்து வருகையில், செவிலி, அவளது கடிமனைக்கு வந்து அவள் செய்யும் அறத்துறை களைக் காண்கின்றாள். தலைமகனது காதற் சிறப்பும், இருவரது வாழ்க்கைச் சிறப்பும் செவிலிக்குப் பெரு மகிழ்ச்சியைத் தருகின்றன. அவள் பின்பு, தன் மனைக்குச் சென்று, ஆங்கே, தலைமகளின் நற்றாயைக் காண்கின்றாள். செவிலி நற்றாய்க்குத் தோழி என்பது முன்பே கூறப்பட்டது. நற்றாய், செவிலியை நோக்கி, "தோழி, நம் நன்மகள் வாழும் கடிமனைக்கண் நீ கண்ட சிறப்பென்னை?" என்கின்றாள். அவட்குச் செவிலி,தலைவி, தலைமகனை உண்பிக்கும் திறத்தைச் சிலவாய சொற்களால் பல வாய பொருள் பொதுள இனிது கூறுகின்றாள்; அது, "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந்(து) அட்ட தீம்புளிப் பாகர் இனிதுஎனக் கணவர் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே." (குறுந்.167) என்பது. இதன்கண் தலைமகள் முறுகக் காய்ந்த தயிர் கொண்டு புளிக் குழம்பு சமைத்துத் தன் கணவற்கு இடுகின்றாள்; அவன் அதனை "வானோரமுதம் புரையுமால் எமக்கு" என உண்கின்றான். கணவன் இனிதென்று உண்பதால், அவள் உள்ளத்தே மகிழ்ச்சி தோன்றுகிறது.; நாணத்தால் அதனை மறைக்கினும், மகிழ்ச்சி முகத்தே நுண்ணி தாய்ப் புலப்படுகின்றது, இதனை இனிது கண்டு பெரிது மகிழ்ந்தாளா தாலின், செவிலி நற்றாய்க் குரைத்தாள். அது கேட்டவழி, நற்றாய்க்கும் சூழ இருந்தார்க்கும் தலைமகள் புளிக்குழம்பு அட்டவகையை அறிதற்கு அவ உண்டாகின்றது. அதனால். அதனை அட்டவகையைக் கூறலுற்ற செவிலி, "முறுகக் காய்ந்த தயிரைத் தன் காந்தள்போலும் விரலால் பிசைந்தனள்; அதுபோது மேலாடை சிறிது நெகிழ்ந்தது; பெருநாணினளாதலால் அதனை உடனே எடுத்து அணிந்தாள். தயிர் பிசைந்த கையைக் கழுவுதற்குக் காலமில்லை" என்கின்றாள். இது கேட்டு அனைவரும் மகிழ்ச்சியால் நகைக்கின்றனர். செவிலி, மேலும் சொல்லத் தொடங்கி, "தான் பிசைந்து அமைத்த புளிக்குழம் பிற்கு நறுமணம் கமழும் தாளிதம் செய்யலானாள்" என்பாள், "குவளையுண்கண் குய்ப்புகை கமழ" என்கின்றாள். எனவே, தலைவி குனிந்தவண்ணமே தாளிதம் செய்தாள் என்பதும், அதன் புகை அவளது ஒளி முகத்தில் தோய்ந்து, மையுண்ட கண்ணிற் படிந்தது என்பதும், அதனால் கண்கள் நீர் படிந்து நீரால் நனைந்த குவளை மலரை யொத்தனவென்பதும் பிறவும் பெறப்படும். இச்செவிலியே, பிறிதொருநாள் தலைமகளது கடிமனைக்குச் சென்று வருகின்றாள். முன்பு சென்று வந்த போது, தலைமகளது அடிசிற் றொழில் வன்மையை வியந்து கூறினாளன்றோ? இதுபோது, தலைமகனதுஅயரா அன்பினை வியந்து பேசுகின்றாள். "கானங் கோழிக் கவர்குரற் சேவல் ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப் புதல்நீர் வாரும் பூநாறு புறவில் சீறூ ரோளே மடந்தை; வேறூர் வேந்துவிடு தொழிலொடு செலினும் சேந்துவரல் அறியாது செம்மல் தேரே." எனவரும். இஃது, அவள் நற்றாயிடம் சொல்லியதாகும். "தலைவன் தலைவியைப் பிரியாது உறைகின்றான்; எச்செயல் குறித்தும் பிரிந்து செல்வதில்லை; அரசனது ஏவல் கடத்தற் கரிதாகலின், அதன்பொருட்டு மாத்திரம் அரிதிற் சிலகால் வேற்றூர் போவான்; போயினும் உடனே மீள்வான்" என்பது இதன் கருத்து. தலைமகள் முல்லை நிலத்துச் சீறூரில் உள்ளாள்; முல்லைப் புறவில் புதல்கள் பல இருக்கின்றன; அவற்றில் மழைத் துளி நிறைந்து சொட்டுகிறது; அப்புதலின்கண் வாழும் கானங் கோழியின் கழுத்திடத்தே அங்கே சொட்டும் நீர்த் துளிகள் துளிக்கின்றன என்று செவிலி கூறுவது, தலைவியது திருமனையின் செல்வச் சிறப்பையும், தலைவன் அருள் நிரம்பிய அறச் செயல் புரிவதையும் குறிக்கின்றது. தலைமக்கள் களவொழுக்கம் பூண்டு ஒழுகும் காலத்தும் தலைமகன் பொருள் குறித்துப் பிரிவதுண்டென மேலே கூறினோ மன்றோ? அப்பிரிவை ஆற்றி யிருத்தலும் தலைமக்கட்குக் கடனாகும்; முல்லைத் திணைக்கு உரியது மாகும். அந் நிலையில் இவர்கள் நிகழ்த்தும் கூற்றுக்கள் பலவும் ஈண்டு விரிக்கலுறின் பெருகும். இனி, இம் முல்லை யொழுக்கத்தின்கண் நிகழும் கூற்று வகைகளுள் பலவகைக் கருப் பொருள்கள் காணப்படுகின்றன. இவ் வொழுக்கம் முல்லை நிலத்தேயன்றி, சிறு பான்மை, பிற நிலங்களிலும் நிகழும். அக்காலத்தே, ஆங்குத் தோன்றும் கருப் பொருள்களே அவர் கூற்றுக்களிற் காணப்படும். ஆயினும், முல்லைத் திணைக் கென்றே வரை யறுத்தோதும் கருப்பொருள்கள் சிலவற்றை ஈண்டுக் கூறுகின்றோம். முல்லைத் திணைக்குக் கார்ப்பருவமும் மாலைப் பொழுதும் முதற் பொருளாக வருமாதலின், மழையும் கானமும் முதற்கண் தோன்றுவனவாகும். இம்மழை குன்றிடையும், கானத்தும் மின்னி யிடித்துப் பெயல் மிகுவது பாட்டுத் தோறும் பெரும்பாலும் வருகிறது. இடி முழக்கம் நன்கு இசைக்கப் பெறுகிறது. இடி முழக்கம் கேட்டுப் பாம்பினம் அஞ்சிப் பனிக்கும் என்பது, "பொறி வரி வெஞ்சின அரவின் பைந்தலை துமிய உரவுரும் உரறும்" (குறுந்.190) என வருவது முதலிய பல பாட்டுக்களில் பாடப்பெறு கின்றது. இடி முழக்கம் சில போழ்துகளில் முரசு முழக்கத்தைக் காட்டி இசை கொள்ளும்; இது, "மாமழை இன்னிசை உருமினம் முரலும்" (200) எனவும், "ஊழின் கடிப்பிகு முரசின் முழங்கி இடித் திடித்துப் பெய்தினி வாழியோ பெரு வான்" (குறுந்.270) எனவும் கூறப்படுகிறது. நீர் நிரம்பிய முகில், குன்றங்களில் மெல்லச் சென்று படிந்து பெருமழை பெய்வதைக் கண்ட தோழி, அதனை சூல் நிரம்பிய மகளிர் செலவுக்கு ஒப்புக் கூறித் தலைமகளைத் தேற்று கின்றாள். அது, "நிறைபொறுத் தசைஇ, ஒதுங்கல் செல்லாப் பசுப்புளி வேட்கை, கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, விசும்பு இவர்கலாது தாங்குபு புணரிச், செழும்பல் குன்றம் நோக்கிப், பெருங்கலி வானம் ஏர்தரும்" (287) என வருகின்றது. இவ்வாறு மழை பெய்யுமிடத்து, உண்டாகும் மின்னல் இரவுக் காலத்துப் படரும் காரிருளைக் கெடுக்கும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. "தாழிருள் துமிய மின்னி" (270) என்று இக் குறுந்தொகை குறிக்கின்றது. மழை தவழும் குன்றம் "மழை விளையாடும் குன்று" (108) எனப்படுகின்றது; மழை நீரால் கானம் வளமுற்றுத் தழைப்பதாதலால், அது "கார்புறந் தந்த நீருடை வியன் புலம்" (162) என்று சிறப்பிக்கப் பெறுகிறது. கார் காலத்து மழை பெரும்பாலும் மாலையில் வருவது; அதுபோது, கார் மழை விசும்பை மூடிக்கொள்வதால் இருள் மிகுகிறதன்றோ? அதனை, "சேயுயர் விசும்பின் நீருறு கமஞ்சூல் தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப் பெயல் தாழ் பிருளிய புலம்புகொள் மாலை" (314) என்று இக் குறுந்தொகை கூறுகின்றது. மழை பெய்யுங்கால் உழவர் இனிது உழுதல் முடியாது; ஆகவே உழவு மாடுகள் ஓய்ந்திருக்கும் என்பது உலகறிந்தது. இது, "உவரி ஒருத்தல் உழாது மடிய........ இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்று" மழை என இயம்பப்பெறுகிறது. மழையில்லாமையால் புழுதி படிந்து தோன்றும் துறுகற்கள் மாறு படிந்த யானை போலத் தோன்றுமென்பது. "மழை கழூஉ மறந்த மாயிருந் துறுகல், துகள்சூழ் யானையின் பொலியத் தோன்றும்" (279) என்ற அடிகளால் காட்டப் பெறுகின்றது. மழைபெய்த கானத்தில் மானினம் துணையொடு கூடி, பள்ளங்களில் நிற்கும் நீர் பருகி இனிது திரிகின்றன. இச்செய்தி "வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன், இன்புறு துணையொடு மறுவந்து உகள" (65) என வருகிறது. களிறுகள் பிடிபுணர்ந்து மலையகத்தே ஒடுங்கிக் கிடக்கின்றன. மாலைப்போதில், ஆனினம் தாம் மேய்ந்திருந்த கானத்தின் நீங்கி மனையகம் நோக்கி வருகின்றன. வருபவை மனையகத்தே யுள்ள கன்றுகளை யுள்ளிக் கனைத்துக் கொடுவரும்; கன்றுகளும் அவற்றின் வரவு நோக்கித் தலை நிமிர்த்திப் பார்த்தும் கதறும்; தொழுவத்திடத்தே ஏறுகள் தம் கழுத்தில் யாத்த மணியொலிக்க இயங்கும். இவை, "புலம்பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு நிலந்தூங்கு அணல வீங்கு முலைச் செருத்தல், பால்வார் குழவி யுள்ளி நிரை யிறந்து, ஊர்வயிற் பெயரும்" (344) என வருவதுபோல் வனவற்றால் இனிது விளங்கு கின்றன. முல்லை நிலத்தவர், காடு கெடுத்துப் பண்டே யாக்கிய கொல்லையை நன்கு உழுது வரகு முதலியவற்றை விதைப்பர். வித்தற்கு விதைகொண்டு செல்லுமவர், திரும்புகாலையில், விதை கொண்டுபோன வட்டி நிறைய முல்லைப் போதுகளையும் பிற மலர்களையும் நிரம்பக் கொண்டு வருவர். அவர் தலையிலும் முல்லையால் தொடுக்கப்பெற்ற கண்ணிகள் இருந்து நறுமணம் கமழும். ஆனினத்தை மேய்க்கும் இடையர், அவற்றை ஓரிடத்தே இருத்தி, அவ்வாணினம் கறந்த பாலைக் கொண்டுவந்து தந்து, அது நிறையக் கூழ் கொண்டு செல்வர். இவை, "முதைப்புனம் கொன்ற ஆர்கலி யுழவர் விதைக்குறு வட்டி போதொடு பொதுளப், பொழுதோதான் வந்தன்றே" (155) எனவும், "மறியினத் தொழியப், பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச், சூடிய வெல்லாம் சிறு பசு முகையே" (221) எனவும் வருவன முதலாயவற்றால் அறியப்படுகின்றன. இந்நிலத்தே, பலவகைப் பூவினம் காணப்படுமெனினும், இக்குறுந்தொகை சிலவற்றை எடுத்துச் சிறப்பிக்கின்றது. அவற்றுள், முல்லை, கொன்றை, பித்திகம், பீர்க்கு, கருவிளை, ஈங்கை, குறுந்து, காயா, பிடவம், அவரை என்பன சிறந்தோதப் பெறுகின்றன. முல்லை கற்புடை மகளிர்க்குச் சிறப்பாக உரியது; இதன் முகை மகளிர் பற்கு உவமை யாகக் கூறப்படுவதாதலால், முல்லை யரும்பியவழி அதனை நகைப்பதாகச் சான்றோர் புலனெறி வழக்கம் செய்துள்ளனர். "முல்லை மென்கொடி எயிறென முகைக்கும்" (186), "பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கெயிறாக நகுமே, தோழி, நறுந்தண் காரே" (126) "முல்லை! நீ நின் சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை தகுமோ" (162) என வருதல் காண்க. பூத்தமுல்லை, பூனை சிரிப்பது போன்று உளது என்பர்; "வெருக்குப் பல்லுருவின் முல்லை" (240) என்றும் "பூத்த முல்லை வெருகு சிரித்தன்ன பசுவீ" (210) என்றும் சான்றோர் உரைத்தலால் அறியலாம். முல்லையரும்பு சிவந்திருக்கும் என்பர். தலைமகன் மேனியும், தலைமகள் நுதலும் முல்லையின் நறுமணம் கமழும் என்று சான்றோர் கூறுகின்றனர். இக் கருத்து, "மணந்தனன்மன் நெடுந்தோளே, இன்று முல்லை முகை நாறும்மே" (193) எனவும், "முல்லைப் பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்" (323) எனவும் வருவன வற்றால் அறியப்படுகிறது. இம்முல்லை மாலைப்போதில் மலருவது; "பாசிலை முல்லை யாசில் வான்பூச், செவ்வான் செவ்வி கொண்டன்று" (108) என வருவது காண்க. தளவம் என்பது முல்லையினத்துள் ஒன்று. இதுவும் கார்ப்பருவத்தே மலர்வது (382). கொன்றை ஒருவகை மரம். இதன் பூ பொன்னிறம் கொண்டு வட்டமாய் இருப்பது. இது கார் காலத்தே மலர்வது. பூத்த கொன்றைமரம், பொன்னிழை புனைந்த மகளிர் கூந்தல் போல்வது என்றும், இதன் இதழ், சிறுவர் அடியிற் புனையும் தவளைவாய்க் கிண்கிணிக் காசுபோல இருக்கும் என்றும், மகளிரது பசலையின் நிறம் இது போல இருக்கும் என்றும், கொன்றைப்பூ வுதிர்ந்து கிடக்கும் அகல்வாய்ச் சிறு குழிகள் செல்வர் பொன் பெய்த பேழை போன்று தோன்றும் என்றும் இக் குறுந்தொகை அழகுறக் கூறுகின்றது; "வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு, பொன் செய் புனையிழை கட்டிய மகளிர், கதுப்பின் தோன்றும் புதுப்பூங் கொன்றை" (21) எனவும், "செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளைவாய பொலன்செய் கிண்கிணிக், காசின் அன்ன போது ஈன் கொன்றை" (148) எனவும், "கொன்றையம் பசுவீ நம் (தலைமகள்) போல் பசக்கும்" (183) எனவும், "கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி, கொன்றை ஒள்வீ தாஅய்ச் செல்வர், பொன்பெய் பேழை மூய்திறந்தன்ன காரெதிர் புறவு" (233) எனவும் சான்றோர் கூறுப. இவ்வண்ணமே, பீர்க்கம்பூ மகளிர் மேனி வேறு பாட்டிற்கும், பிறபூக்கள் பிறவற்றிற்கும் எடுத்துக் காட்டப் பெறுகின்றன. இங்கே விரிக்கிற் பெருகும்; கருவிளைப்பூ மயிற்பீலி யொப்பதும், காயாம்பூ மயிலின் கழுத்துப் போல் வதும், தேரைகள் பறைபோல் ஒலிப்பதும் பிறவும் நேரில் கண்டு இன்புறத் தகுவனவாகும். பறவைகளுள் மயிலும் காக்கையும் கோழிச் சேவலும் இங்கே சிறப்பிக்கப் பெறுகின்றன. மழை கண்டு மயிலாலும்; "கானமஞ்ஞை கடிய ஏங்கும்" (194) என்பது போல்வன பல உண்டு. பிரிந்து வந்த தலைமகன் தோழியைக் கண்டு, "இவளை நன்கு ஆற்றுவித்தாய்" என்று பாராட்டினன்; அது கேட்ட தோழி, "இவள் ஆற்றியது என் செயலால் அன்று; இவள் அடைந்த பிரிவுத் துயர்க்குச் செய்வகையறியாது, நின் வரவறிய வேண்டிப் புள் நிமித்தம் பார்க்கலுற்றோம். அதுபோது காக்கை விருந்துவரக் கரைந்தது; அக்காக்கைக்கு வெண்ணெல் வெண்சோறு ஏழு கலத்தில் ஏந்தித் தரினும், அப் பலி சிறிதாகும்; அதன் உதவி பெரிது" என்ற கருத்துப்பட, "திண்டேர் நள்ளி கானத் தண்டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு, எழுகலத் தேந்தினும் சிறி(து) என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே" (குறுந்.210) என்று பாடுகின்றாள். இப்பாட்டால் இதனைப் பாடிய சான்றோர்க்குக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற சிறப்புப் பெயர் வழங்குகிறது என்பர். அவரது இயற்பெயர் நச் செள்ளையார் என்பது. இக்குறுந்தொகைக்கண் முல்லைப் பாட்டுக்களைப் பாடிய சான்றோர் மாத்திரம் சுமார் அறுபத்தைவரின்மேல் உள்ளனர். இவருள் பெண்பாற் புலவர் பதின்மராவர். அவர்கள், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கழார்க் கீரனெயிற்றியார், காக்i பாடினியார், நச்செள்ளையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், அள்ளூர் நன்முல்லையார், நன்னாகையார், நெடும்பல்லியத்தை, பொன்மணியார், வெள்ளிவீதியார் என்போராவர். இவருள் முதற்கண் ஓதிய ஓக்கூர் மாசாத்தியாரும், ஒளவையாரும் முல்லையொழுக்கம் பொருளாக நான்கு பாட்டுக்கள் தனித்தனியே பாடியிருக்கின்றனர். இவருள் ஒக்கூர் மாசாத்தியார், ஆடவன் ஒருவன் தான் செய்தற்கு மேற் கொண்டவினையைச் சீர்பெறச் செய்தானாயின், அவன் உள்ளம் "செம்மல் உள்ளமாம்" (குறுந்.275) என யாப்புறுக்கின்றார். முருகனது சேவடி படர்ந்த உள்ளத்தைச் "செம்மல் உள்ளம்" என ஆசிரியர் நக்கீரனார் கூறுவர்; பாண்டியன் பன்னாடு தந்த பெருவழுதி யென்பானும் செய்வினை முடித்த உள்ளத்தையே "செம்மல் உள்ளம்" (குறுந்.270) என்கின்றான். எனவே, இவர்கள் கூற்றால், செயற்குரிய வினை, செயற்கரியவினை என்ற இருவகை வினையும் செய்வோர்க்கே உள்ளம், "செம்மல் உள்ள" மாகும் என்பது தெளியப்படுகிறது. தலைமகன் சேணிடைப் பிரிந்த வழி, அவனாற் பிரிவுற்று மனையகத் திருப்பார்மேல் அவனுக்கு வேட்கை மிக்கெழும் என்றும், அஃது அவன் மீண்டேகுங் கால் சிறிது சிறிதாகச் சிறுகி, அவன் மனையடைந்த வழி முடிவடைந்து விடும் என்றும் உள்ள ஓர் அரிய கருத்து ஒளவையார் பாட்டொன்றில் (99) காணப்பெறுகிறது. "நீடிய மரத்துக் கோடுதோய் மலிர்நிறை இறைத்துணச் சென்(று) அற்றா அங்கு அனைப்பெருங் காமம் ஈண்டுகடைக் கொளலே" (99) என்றும், இஃது உலகத்துப் பண்பு என்றும் ஒளவையார் வற்புறுத்து கின்றார். இன்னோரன்ன கருத்துக்கள் பல இவர்கள் பாடலுட் பொதிந்து கிடக்கின்றன. அக்கருத்துக்களுட் சிலவும் வழக்காறுகளுட் சிலவும் ஈண்டுத் தருகின்றோம். மகளிர் கொடிப்பூங் கொத்துக்களைத் தழை விரவத் தொடுத்துப் பொன்னிழையோடு கூந்தலிற் கட்டி அணிசெய்து கொள்வர் (குறுந்.21). இடையர் கன்றுகளை மனையகத்தே நிறுத்திக்கொண்டு, கறவைகளைக் கொல்லைகளுக்கு ஓட்டிச் சென்று மேய்த்துவிட்டு மாலையில் கொணர்வர்(64). இளஞ் சிறார்க்குக் காலில் தவளைவாய்க் கிண்கிணி (சதங்கை) யணிவர். (148). கொல்லைக்கு விதை கொண்டு போகும் கானவர், வட்டி நிறைய மலர் கொண்டு வருவர் (155); இக்காலத்தே, இது "விதைக்கூடை வெறிது வரலாகாது" என்ற கருத்துட் கொண்டு வழங்குகிறது. மாடுகட்குக் கழுத்தில் மணிகட்டி விடுவது வழக்கம். கணவன் பிரிந்த வழி, மகளிர் தம்மை ஒப்பனை செய்துகொள்வது கிடையாது. புறத்துப் போய் மீண்ட தலைவனைத் தலைமகள் "எம்மைத் தீண்டாதே" என்பதும் உண்டு(191). காக்கைக்குச் சோறு போட்டு, அதன் கரைதலால் விருந்து வரும் என மகளிர் நினைந் தொழுகுவர் (210). இடையரும் பிறரும் பனையோலைத் தடுக்கும் குடையும், உட்கார்தற்கும் மழைதடுத்தற்கும் பயன்கொண்டனர் (221). உயர்ந்தோர்க்கு விருந்தயருமிடத்து, நல்ல வெண்ணெல் வெண்சோறும், தூய நெய்யும் "வெப்பத் தண்ணீரும்" தந்து ஊட்டுவர் (233;273); கோழி விடியலிற் கூவுவதால் பொழுது புலர்கின்றது (234). சூல்கொண்ட மகளிர் புளித்தின்னும் வேட்கை யுடையராவர் (281). தலைமக்கள் பிரிந்திருக்குமிடத்து நிகழும் கூற்றுக்கள் பல வற்றுள்ளும் இளிவரலைச் சார்ந்த பெருமிதமே மெய்ப் பட்டுத் தோன்றற்பாலதாம்; ஆயினும், தலைமகன் பிரிந்த வழித் தலைவி நிகழ்த்தும் கூற்றுக்களுள், தலைமகள் குறித்த பருவம்கண்டு ஆற்றாது தலைமகள் வருந்திக்கூறுவன பெரும் பாலும் இழிப்புச் சுவையவாகவே இருக்கின்றன; சில அவலக் குறிப்பும் உணர்த்துகின்றன. தலைமகன் நிகழ்த்தும் கூற்றுக்களுட் பல இளிவரலைக் காட்டுகின்றன. தோழி கூற்றுக்களுள், தலைமகளை ஆற்றுமாறு வற்புறுத்துவன யாவும் வியப்புச் சுவையுடையவாய், சிலவற்றுள் பெருமிதமும் தோன்ற நிற்கின்றன. பிரிந்தோன் மீண்டுவந்து கூடியவழி தலைமக்களிடை நிகழும் கூற்றுக்கள் யாவும் உவகைச் சுவைய வாய் இருப்பது நன்கு புலனாகிறது. செவிலி கூற்றுக்கள் உவகையும் வியப்பும் உறுவிக் கிடன்றன. மேலும், நகைச்சுவை பயப்ப உரையாடும்திறம் தோழி பால் நன்கு அமைந்திருக்கிறது. அச் சுவை தோன்றப் பேசுவோர், தாம் நகைச்சுவை தோன்றக் கூறுவதைத் தாம் அறியாமல் வழங்குவதே சிறப்பு என்பர். தலைவன் குறித்த பருவம் வருகிறது; மழையும் மிகுதியாகப் பெய்கிறது; தலைமகள் அதனைக் கார்வரவு என்று கொண்டு கன்கலுமுகின்றான். அவளைத் தோழி, "கார்ப்பருவம் அன்று" எனக்கூறி ஆற்றுவிக்க முயல்கின்றாள். மேகங்கள் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய நீரை ஒரே வழியாய் முகந்து கொண்டு, சிறிது சிறிதாகப் பெய்வது போலவும், அடுத்த ஆண்டுக் கார்கால வரவிற்குச் சிறிது முன்னர்ப், பெய்யாது எஞ்சியிருந்த நீரைப் பெய்துவிட்டுப் புதுநீர் முகந்து வருவது போலவும் படைத்துக் கொண்டு, "தோழி, இதுபோது பெய்யும் மழை பழைய மழைநீர்; இது புது நீரைக் கொள்வாற்காகச் சொரிகின்றது; இது காரன்று" (251) என்கின்றாள். இதன்பால் பிறக்கும் நகைச்சுவை புறத்தே சிறிதும் தோன்றாத வண்ணம் கூறும் நயம், மிக்க இன்பம் தருகின்றது. ஆங்கில நூற்புலவரும் * இவ்வாறு எழுப்பும் நகைச்சுவையே மிக்க இன்பம் தருவது என்பர். இந்நிலையில், தோழியின் நாநலமும், சிவ்ட் (swift) என்னும் புலவரது நாநலமும் ஒப்பச் சிறந்திருக்கிறது. அதனை விரிக்கிற் பெருகும். இன்னோரன்ன இலக்கிய நலங்களும், தமிழர் மனப்பண் புணர்த்தும் மாண்புகளும், ஒழுகலாறு காட்டும் ஒட்பங்களும், இயற்கையோடு இயைந்து நடவும் வாழ்க்கை மேம்பாடுகளும், இயற்கைப் பொருளின் உண்மைத் தோற்றங்களும் உள்ளவாறு காண்டற்குப் பெரும் பொருள் நிலையமாய் நிற்பவை இத் தொகை நூற் பாட்டுக்கள் என்பது இது காறும் ஆராய்ந்து கூறியவாற்றால் இனிது விளங்கும். இப்பாட்டுக்கள் வழங்கும் சில சொல்வழக்குகள் இன்னும் உண்மையாகவே உள்ளன. “கல்லுயரேறிக் கண்டனம் வருகம் சென்மோ” (குறுந். 275) என்பதிலுள்ள கல்லுயரேறல் என்பது, சென்ற சனிக்கிழமை (7-9-40) மாலை *செங்கைமா கணவாயின் தென்மலைச் சரிவில் உள்ள ஆலப்புத்தூர் என்னும் சீறூர்க்கு யானும் என் தோழர்களும் சென்றிருந்த போது, யாங்கள் இப்போதும் வழக்கில் இருப்பது கண்டோம். இவ்வாறு என்றும் நின்று நிலவும் பொருளும் வழக்காறும் பொருந்தவுடைய இச் சங்க இலக்கியங்கள் ஆயுந்தொறும் ஆயுந்தொறும் அயரா இன்பவூற்றாக விளங்குவன வென்பதன்றி வேறில்லை. இன்ன சிறப்பால் ஏற்றமிகும் இந்நூல், ஆய்வார் அறிவுக்கு என்றும் இன்பம் சுரந்து நிலவுமாக. “சொல்லென்னம் பூம்போது தோற்றிப் பொருளென்னும் நல்லிருந் தீந்தாது நாறுதலால்-- மல்லிகையின் வண்டார் கமழ்தாம மன்றே மலையாத தண்டாரான் கூடல் தமிழ்.”  9. புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகம் அன்புடைய அவைத்தலைவர் அவர்களே, அருமைத் தமிழ்ப் பெருமக்களே, பண்டைத் தமிழ்ச் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய புறநானூறு பொருளாக நடைபெறும் இம் மாநாட்டில், அப் புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகத்தைப் பற்றிச் சொற்பொழிவொன்றினை ஆற்றும் பேறு இன்று எனக்குக் கிடைத் திருப்பதுபற்றி யான் பேரின்பம் உறுகின்றேன். இன்ப மென்றே ஒழியாது பேரின்பம் என்கின்றேன்; காரணம், பண்டைத் தமிழ் நன்மக்களின் நாகரிகத்தை அறிவாற் காண்பதும், கண்ட தனை அந்த நன்மக்களின் வழித்தோன்றல்களாகிய உங்கள் திருமுன் எடுத்தோதுவதுமாகிய இருவகை வாய்ப்பும் உண்டாகி யிருப்பதே. இவ்வாறு இன்பப் பெருமையால் விழுங்கப்பட்டு நிற்கும் என் சொற்பொழிவில், கூறத் தகுவன முற்றும் கூறப் பெறாது எஞ்சி நிற்கவும் பெறும்; அக்குறையினைப்பொறுத்து உங்கள் ஆராய்ச்சியால் நிறைவு செய்துகொள்ள வேண்டுகின்றன். முன்னுரை: புறப்பொருளாராய்ச்சி, மக்களின் அறவுணர்வு, பொருளு ணர்வு,புகழ்வேட்கை, வீடுபேற்று விழைவு முதலியவற்றை நன்கு விளங்கக் காட்டும் வீறுடைய தாகும். ஆதலாற்றான், பண்டை நாளைத் தமிழ் மக்களின் வாழ்க்கைப் பண்புகளை ஆராயலுற்ற அறிஞர் அனைவரும், புறப்பொருளை யுணர்த்தும் நூல்களைப் பொது வாகவும், புறநானூற்றைச் சிறப்பாகவும் ஆராய்ந்திருக் கின்றனர். அவருட் பெரும்பாலார் நிரம்பிய தமிழறி வில்லாமையாலும், பண்டைத் தமிழ் மக்களின் தொன்மை, அறிவு வன்மை, வாணிபத் துணிவு, அரசியல் நுட்பம் முதலியவற்றைக் கண்டதனா லெழுந்த அழுக்காற்றாலும் பிறவாற்றாலும் சிலவற்றை விடுத்தும், சிலவற்றை மறைத்தும், சிலவற்றைத் திரித்தும் சிலவற்றைப் பிழைத்தும் தம் ஆராய்ச்சிகளை நடத்தினர். மெய்யைப் பொய் எத்துணையளவு மறைக்க முடியம்? மெய் தனது தூய வொளியினை வெளிப்படுத்திவிட்டது. இந்நாளில் இம் மெய்யை யுணர்ந்து பிறர்க்கு எடுத்துரைத்துப் பொய்யைக் களைந்து போக்கும் புலவர் பலர் தோன்றி விட்டனர்; பண்டைத் தமிழ் நன்மக்களின் மனத்திட்பம், வினைத்திட்பம், அரசியல் நுட்பம் என்றின்னோரன்ன நலங்களை எடுத்தோத முன் வந்துவிட்டனர். நாடு நகரங் களிலெல்லாம் தமிழாராய்ச்சியின் நன்மணம் கமழுகின்றது; தமிழர் தமிழ் நன்மக்களாகும் செயலில் தலைப்பட்டிருக்கின்றனர். தமிழியலும், தமிழிசையும், தமிழ் நாடகமும் தலை தூக்குகின்றன. அவை இடைக் காலத்திற்போலத் தலை மடங்குமாறு செய்யும் தீச் சுமைகளால் நெருக்குண்ணாது தூக்கிய தலை நிமிர்ந்து பீடுநடை கொண்டு பிறங்குமாறு செய்தல் தமிழ் மக்களின் உயிர்க்கடனாகும். அது குறித்து அவர்கள் செயற்பாலதுயாது? அத் தமிழியலும் தமிழிசையும் தமிழ்நாடகமும் தலை நிமிர்ந்து நிலவிய நாளில் தமிழ் நன்மக்கள் வாழ்ந்த வாழ்க்கை நெறியினை, - அறச் செயல், பொருளீட்டல், புகழ் வேட்டல் முதலிய புறப் பொருட்டுறைகளை- ஆராய்ந்தறிந்து செய்வன செய்தலேயாகும். அகப் பொருட்டுறை களை யாராய்ந்தறிந்ததன் பயனாய் அத்தகைய நெறியில் இந்நாளில் மணவினை நிகழ்த்தல் வேண்டுமென விழைபவர் தொகை பெருகுகிற தன்றோ? அவர்கட்கு இப் புறப் பொருளா ராய்ச்சி, புறப் பொருட்டுறையிற் சென்று சீர்பெறும் சீரிய நெறியினைப் பயப்பிக்கும் என்பதில் ஐயமில்லை. ஆகவே, இப் புறப்பொருளா ராய்ச்சி இந்நாட்கு ஏற்றதோர் ஆராய்ச்சி என்பதை நாம் இனிது தெளியவேண்டும். புறப்பொருளாராய்ச்சி மேற்கொண்டு கூடியிருக்கும் நமக்குப் பொருளா யிருப்பது புறநானூ றன்றோ? இப் புறநூல், தன் காலத்தே இத் தமிழகத்தே வாழ்ந்த தமிழ நன்மக்களைப் பல வேறு பிரிவாகப் பிரித்துக் காட்டுகின்றது. தமிழரிடையே, குறவர், இடையர், மறவர், உழவர், பரதவர், அரசர், வணிகர், அந்தணர், புலவர், பாணர், விறலியர், கூத்தர், கொல்லர், குயவர், வண்ணார் எனப் பல பிரிவினர் காணப்படுகின்றனர். இவர் அனைவரும் தாம் வாழ்ந்த இடத்தாலும் மேற்கொண்ட தொழிலாலும் இவ்வாறு பிரிந்தவராவர். இவர்தம் வாழ்க்கையியல்பு, ஒழுகலாறு, அரசியல், வாணிபம் முதலிய பலவும் நாகரிகம் என்ற சொல்லால் இந்நாளில் ஆராய்ச்சி யாளரால் வழங்கப்படும்; இப்போதில் யான் பேசலுற்றது இந் நாகரிகத்தைப் பற்றியே யாதலின், இக்கூறிய கூறுபாடுகளில் என்னறிவால் ஆராய்ந்து கண்ட தமிழ் நாகரிகத்தைக் கூறலுறு கின்றேன். நாகரிகம் என்னும் தமிழ்ச் சொல் சங்ககாலத்தே கண்ணோட்டம் என்னும் பொருள் குறித்து வழங்கிவந்ததாகும். கால வேறுபாட்டால் சொற்களிற் சில வேறு படுவதுபோல, இச் சொல்லும் வேறுபட்டு மேற்கூறிய வற்றைத் தன்னகத்தே கொண்டு ரைக்கும் கோள் பெறுவதாயிற்று. தமிழ் மக்களின் இனம்: தமிழ நன்மக்க ளினம் பொதுவாக நோக்கின் இருபெரும் பிரிவுக்குள் அடங்கும். ஒன்று குறிஞ்சி முதலாகவுள்ள ஐவகைத் திணைக்கண்ணும், மற்றையது பொதுவின் கண்ணும் அமையக் காண்கின்றோம். குறிஞ்சி நிலத்தையே இடமாகக் கொண்டு, ஆண்டுச் செய்தற்குரிய செயலும் அவற்றாற் பெறும் உணவுங் கொண்டு வாழ்ந்தவர் குறவர்என்போராவர். இவ்வாறே முல்லை நிலத்தவர் இடையரும், பாலை நிலத்தவர் மறவரும், மருத நிலத்தவர் வேளாளரும், நெய்தல் நிலத்தவர் பரதவருமாவர். இவ்வைந்தும் சேர்ந்த தமிழகத்தே அவ்வந் நிலப் பகுதிக் குரிய தொழில் சிறிதும், அரசு புரிதல், ஓதுதல், வாணிபம் செய்தல், உடை நெய்தல், போர் புரிதல், போர்க் கருவி உழவுக்கருவி முதலியவற்றைச் செய்தல் முதலிய தொழில்வகை பெரிதும் மேற்கொண்டிருந்த மக்களினமும் உண்டு. அதனிடையே அறிவு, ஆண்மை, பொருள், படை முதலியவற்றால் மேம்பட்டவர் அரசராகவும், அறிவொன்றே சிறப்பாக வுடையவர் அந்தணராகவும், ஆண்மையும் பொருளும் உடையோர் வணிகராகவும், உழுதலும் உழுவித்தலும் மேற்கொண் டிருந்தோர் வேளாளராகவும் விளங்கினர். போர் நிகழுங்காலத்தில் மட்டும் அந்தணரும் மகளிரும் ஒழிய ஏனை யோர் அனைவரும் போர் மறவராகவே சிறப்பெய்தினர். "மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்................வன்புலச் சீறூர்க், குடியு மன்னுந் தானே கொடி யெடுத்து, நிறையழிந் தெழுதரு தானைக்குச், சிறையுந் தானே தன்னிறை விழுமுறினே" (புறம்.314) என வரும் ஐயூர் முடவனார் பாடிய புறப்பாட்டு மேலே கூறிய கருத்துக்கு ஏற்ற சான்றாகும். இவ்வாறு அறிவு, ஆண்மை முதலியவற்றின் சிறப்புப் பற்றி மக்களினத்தில் பிரிவு பிறந்திருந்ததே யன்றி, உணவு, உடை, உறையுள், மகட்கொடை முதலியவற்றில் வேறுபாடு கிடையாது. குறவர் முதலிய திணைநிலை மக்களும், அரசர் முதலிய பொதுநிலை மக்களும் உணவு முதலியவற்றில் வேறுபாடின்றி யொழுகிய திறத்தைப் புறநானூறு நன்கு காட்டுகின்றது. உறையுள்: குறவர் வாழும் குறிச்சிகளில் "புல்வேய் குரம்பை" களும் (புறம்.120), முல்லைப் பாடிகளில், "வண்காற் பந்த" ரிட்ட மனைகளும் (புறம்.324), மருத நிலத்தூர்களிலும் நெய்தற் பாக்கங்களிலும் முறையே வயலை படர்ந்த வளமனைகளும் மீன்வலை யுலரும் குறியிறைக் குரம்பைகளும் காணப்படு கின்றன. ஏனை அரசர் இருக்கும் அரண் மனைகள், நெடுமாடமும் வலிய அரணும்பெற்று நிலாமுற்றத்துடன் நிமிர்ந்து நிற்கின்றன. அரண்களில் காவலர் காவலே யன்றிப் பல்வகை எந்திரப் பொறிகள் இருக்கின்றன. "அமரெனில் திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக் கண்மாறு நீட்ட நணிநணி யிருந்த குறும்பல குறும்பு" (புறம்.177) என்னும், "பொன்னுடை நெடுநகர்" (புறம்.198) என்றும் அம்மனைகள் சிறப்பித்துக் காட்டப்படுவது காண்க. அந்தணர் மனைகளில் முத்தீக்குண்டங்கள் காணப்படுகின்றன. உண்டி: இம் மக்களில் ஊனுண் பவரும் இருந்தனர். "புலவு நாற்றத்த பைந்தடி, பூநாற்றத்த புகை கொளீஇ ஊன்றுவை, கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது, பிறிது தொழிவறியா" (புறம்.14) என வரும் அந்தணராகிய கபிலர் கூற்றும், "மைவிடை யிரும் போத்துச் செந்தீச் சேர்த்திக் காயங்கனிந்த கண்ணகன் கொழுங்குறை, நறவுண் செவ்வாய் நாத்திறம் பெயர்ப்ப, உண்டும் தின்றும் இரப்போர்க் கீந்தும், மகிழ்கம் வம்மொ மறப்போரோயே" (புறம்.364) என வரும் கூகைக் கோழியார் கூற்றும் இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன. உணவில், கலந்த பாலும் பாகும் கொண்டு பண்ணியம் பல செய்துண்டலுமுண்டு. "ஊனும் ஊணும் முனையின் இனிதெனப் பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும், அளவுபு கலந்து மெல்லிது பருகி," (புறம்.381) மகிழ்ந்திருக்கும் செய்தியை நன்னாகனார் விதந்தோதுகின்றார். புறவங்களில் வாழ்வோர் தம் நாட்டில்நெல் விளையாமையின் வரகும் தினையும் பயிர் செய்துண்பர். "புறவு சேர்ந்திருந்த புன்புலச் சீறூர் நெல்விளை யாதே" (புறம். 328) என்றும், "கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு, இந்நான் கல்ல துணாவு மில்லை" (புறம்.335) என்றும் வருதல் காண்க. வரகுச்சோற்றால் ஆயர், புளிச் சோறமைத்து உண்ணும் திறத்தைப் பிசிராந்தையார், "கவைக்கதிர் வரகின் அவைப்புறு வாக்கல், தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய, வேளை வெண்பூ வெண் தயிர்க் கொளீஇ, ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை" (புறம்.215) என்று பாராட்டி, இதனை "அவரை கொய்யுநர் ஆரமாந்துவர்" என்கின்றார். குறிஞ்சி நிலம் உழவர் ஏரால் உழுது பயிர்செய்தற்கு ஏனையபோல அத்துணை நயம்வாய்ந்த தன்மையின், அங்கு வாழ்பவர், மூங்கில் நெல்லும், பலாப்பழமும், வள்ளிக் கிழங்கும், தேனும் உண்பர். "உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே, ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளையும்மே, இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க்கும்மே; மூன்றே கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே; நான்கே அணிநிற ஓரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே" (புறம்.109) என்று கபிலர் எடுத்தோதுவது காண்மின். நெய்தனிலமும் இவ்வாறே நெல் முதலியன விளைத்துக் கோடற்கு ஏற்றதாகாமையால், அங்கு வாழும் பரதவர் மீன் பிடித்து ஏனை நிலத்தவர்க்கு விற்று நெல்லும் பிற வுணவுப் பொருளும் பெற்றுக்கொள்கின்றனர். முல்லை நிலம் வரகு, தினை, கொள் முதலியவற்றை விளைத்துக்கொள்ளுதற் கமைந்திருத்தல்போல, மருதநிலம் நெல்லுங், கரும்பும் விளைதற்கு ஏற்ற பகுதியாக விளங்குகிறது. இங்கு வாழ்நர் நெற்சோறுண்டு அரியல் என்னும் கள்ளுண்டு மகிழ்ந்திருக்கின்றனர்; "நெய்தலங் கழனி நெல்லரி தோழுவர், கூம்புவிடு மென்பிணி யவிழ்ந்த ஆம்பல் அகலடை யரியல் மாந்தித் தெண்கடற், படுதிரை யின்சீர்ப் பாணி தூங்கும் மென்புல வைப்பு" (புறம்.209) என வருதல் காண்க. உடை: இத் தமிழ்மக்கள் நல்ல பருத்தி நூலால் இயன்ற ஆடையினை உடுத்திருக்கின்றனர். இப்பருத்தியாடை இழை தெரியா வகையில் நெருக்கமாக அமைந்து மிக்கமென்மையும் நயப்பு முடையவாய் இருக்கின்றன. மனக் கண்ணால் நோக்குமிடத்து இந்நாளில் ஆலைகளில் மிக்க வேலைப்பாடமைய நெய்யப்பெற்று வரும் மெல்லிய ஆடையினும் மேன்மை பொருந்தியவாகத் தோன்றுகின்றன. இவற்றின் சிறப்பை, "பாம்புரி யன்ன வடிவின காம்பின், கழைபடு சொலியின் இழையணி வாரா, ஓண்பூங் கலிங்கம்" (புறம்.383) என்றும், "நேர்கரை நுண்Qற் கலிங்கம்" (புறம்.392) என்றும், "போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன, அகன்றுமடி கலிங்கம்" (புறம்.393) என்றும், "திருமலரன்ன புதுமடி" (புறம்.390) என்றும், "புகை விரிந்தன்ன பொங்குதுகில்" (புறம்.398) என்றும் சான்றோர் பாராட்டிக் கூறுகின்றனர். இவ்வாறு நுண்ணிய வேலைப்பாடும் நேர்கரையும் புகைபோலும் நொய்ம்மையும் பொருந்திய ஆடை யணிந் திருந்ததோடு, இளைய மகளிர் அவ்வாடைமேல், அரையில், அழகிய மலர்களும் தழை களும் விரவித்தொடுத்த தழையுடை யுடுத்திருக்கின்றனர். "தண்டழைக் கடைசியர்" (புறம்.61) என்றும், "அளியதாமே சிறுவெள் ளாம்பல், இளையமாகத் தழையா யினவே" (புறம்.248) என்றும், "அணித்தழை நுடங்க வோடி மணிப்பொறிக் குரலங்குன்றி கொள்ளு மிளையோள்" (புறம்.340) என்றும், "ஏந்து கோட்டம் பூந்தொடலை யணித்தழை யல்குல், செம்பொறிச் சிலம்பின் இளையோள்" (புறம்.341) என்றும் பெரிதெடுத்துப் பேசப்படுமாறு காண்க. அணி: இத் தமிழ்மக்கள் பொன் மணி முத்து பவழம் முதலிய உயரிய பொருள்களைக் கொண்டு விலையுயர்ந்த அணி களைச் செய்து அணிந்து மகிழ்கின்றனர். இளஞ்சிறார்க்கு ஐம்படைத்தாலி, புலிப்பற்றாலி, காலிற்சிலம்பு, கிண்கிணி, காதிற் குதம்பை, குழை, நெற்றிப் பட்டம், முத்துமாலை, முத்துவடம் முதலியன அணிகின்றனர். மணமான மகளிர் இடையில் அணியும் தழையும் சிலம்பும் நீக்கிக் கழுத்தில் திருமங்கலநாணும் காலில் நூபுரமும் அணிகின்றனர். இவற்றைப் பிறர்க்குக் கொடையாக வழங்க நேரின், திருமங் கலத்தை மட்டில் இவர்கள் தம் கழுத்தினின்றும் நீக்குவ தில்லை. மகளிர் தம் கையில் ஆம்பல் தண்டாற் செய்த தொடியணிந்து கொள்வர்; இதனை, "ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்" (புறம்.63) என்று பரணர் கூறிக் காட்டுகின்றார். யானைக்குப் பொன்னால் ஓடை செய்து அழகு செய்வர். போர் நிகழுமிடத்துப் பகைவர் யானையைக் கொன்று அவற்றின் ஓடைப் பொன்னால் தாமரைப் பூக்களைச் செய்து, பாடியாடும் மகளிராகிய விறலியர்க்கும் ஏனைப் பாணர்க்கும் வழங்குகின்றனர்; "ஒன்னார் யானை ஓடைப் பொன்கொண்டு, பாணர் சென்னி பொலியத்தைஇ, வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர், ஓடாப் பூட்கை யுரவோன்" (புறம்.126) என்று சான்றோர் கூறுதல் காண்க. தம்மொடு பொருத அரசர் எழுவரை வென்று அவர்தம் முடிப்பொன்னால் மார்பணி செய்து சேரவேந்தர் அணிந்துகொண்டன ரெனப் பதிற்றுப்பத்து என்னும் தொகை நூல் கூறுகின்றது. "பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய, மாமலை பயந்த காமரு மணியும், இடைபடச்சேய வாயினும், தொடை புணர்ந்து, அருவிலை நன்கலம் அமைக்குங் காலை, ஒருவழித் தோன்றி யாங்கு" (புறம்.218) என்பதனால், பொன்னும் மணியும் முத்தும் துகிரும் பிறவும் அணி செய்தற்குப் பயன்படுத்து மாறு இனிது விளங்குகிறது. "மலை பயந்த மணியும் கடறுபயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தமும், வேறுபட்ட வுடையும்" (புறம்.377) எடுத்துக்காட்டப்படுவதை நோக்கின், இத் தமிழ நன்மக்கள் மலையிடத்தே மணியும் காட்டிடத்தே பொன்னும் கடலிடத்தே முத்தும் கண்டறிந்து எடுத்துப் பயன்கொண்டு சிறக்கும் ஒட்பமுடைய ரென்பது தெரிகிறது.* சுருங்கச் சொல்லின், இத் தமிழ் மக்கள் விரற்கும் செவிக்கும் கழுத்துக்கும் அரைக்கும் தோட்கும் மார்பிற்கும் தலைக்கும் ஏற்ற அணிகலன்களை உயரிய பொன்னாலும் மணியாலும் முத்தாலும் செய்து அணிந்திருந்தன ரென்பது சாலும். தொழில்: இனி, இத் தமிழ நன்மக்கள் உயரிய நாகரிக வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டும் தொழில் பலவும் நன்கு தெரிந்திருந் தனர். மக்களை அவரவர் தொழில்பற்றியே வேட்டுவர், ஆயர், உழவர், கூத்தர், கொல்லர், கம்மியர், வணிகர், தச்சர் என்பன முதலிய பெயரிட்டழைப்ப தொன்றே அவரது தொழிலறிவின் மேன்மையை இனிதெடுத்துக் காட்டுகின்றது. குறிஞ்சி முதலிய நிலப்பகுதிகளில் வாழ்பவர் முறையே தத்தமக்குச் சிறப்பாக வுரிய வேட்டையாடுதல், நிரை மேய்த்தல், நெல்விளைத்தல், மீன் பிடித்தல் முதலிய தொழில் வகைகளில் நல்ல வன்மை பெற்றிருக் கின்றனர். ஒன்று காட்டுதும். குறவர் பறவை விலங்கு முதலியவற்றை வேட்டம் செய்பவ ராயினும், யானை முதலிய பெரு விலங்குகளை வேட்டை புரிதலை "உயர்ந்த வேட்டம்" என்று கருதுகின்றனர். அவர் யானைவேட்டம் புரிந்து, அவற்றை அகப்படுத்து வது மிக்க நயப்பமைந் திருக்கிறது. யானைகள் இயங்கும் வழிகளில் ஆழ்ந்த குழிகளை யமைத்து, அவை தெரியாத படி மூடிவைத்து, உணரா மையால் குழியிடை வீழ்ந்த அவ் யானைகளை முன்பே பழகிய யானைகளைக் கொண்டு பற்றித் தம்வயம் செய்துகொள்கின்றனர். இதனை, "மாப்பயம்பின் பொறைபோற்றாது, நீடுகுழி யகப்பட்ட பீடுடைய வெறுழ் முன்பின், கோடு முற்றிய கொல்களிறு" (புறம்.17) என வரும் சான்றோர் கூற்றால் அறியலாம். யானையைக் கொண்டு யானைகளையும் மானைக் கொண்டு மான்களையும் பற்றும் குறவரது இயற்கை யறிவு மிக்க வியப்புத் தருவதாகும். இவ்வாறே இவர்கள் குறும்பூழ், பூவை முதலிய பறவைகளையும் வேட்டை புரிகின்றனர். பன்றி வேட்டையும், தேனழித்தலும் இவர்பால் சிறந்து நிற்கின்றன. இடையர் நிரைமேய்த்துப் பாற்பயம் கோடலும், பாலைக் காய்ச்சி நெய்யும் தயிரும் மோரும் பெறுதலும், நெய் முதலியவற்றை விற்று நெல்லும் முத்தும் மணியும் பெறுதலும் அவர்பால் உரிமைத் தொழில்களாய் நிகழ்கின்றன. வேறு சிலர் வரகும் தினையும் கொள்ளும் விளைக்கின்றனர். குறிஞ்சியிலும் முல்லையிலும் வாழும் மக்களுட் சிலர் விலங்குகளின் தோலும் மயிரும் கொண்டு தோற் பதனிடுதலும், மயிர்க் கம்பளம் நெய்தலும் உண்டு. மருதநிலத்தவர் உழவுத் தொழில் புரிகின்றார்கள். "கார்ப் பெயற் கலித்த பெரும்பாட்டீரத்துப், பூழி மயங்கப் பல வுழுது வித்திப், பல்லியாடிய பல்கிளைச் செவ்வி" (புறம்.120) என்பது இவ்வுழவுத் தொழிற்கு ஏற்ற சான்றாகும். உழுதற்கு எருதுகளே மிகவும் பயன்படுகின்றன. "ஈரச்செவ்வி யுதவினவாயினும், பல்லெருத்துள்ளும் நல்லெருது நோக்கி, வீறுவீறாயும் உழவன்" (புறம்.289) என வருதல் காண்க. இவ்வுழவர் தமக்கு எத்துணை வறுமை யெய்துவதாயினும் விதைத்தற்கு அமைத்த வித்தினை யுண்ணுவது கிடையாது; அதனைச் செய்பவன் உழவருட் கீழ்மகனாக எள்ளி இகழப்படுகின்றான். "வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான், வீழ்குடி யுழவன் வித்துண்டாங்கு" (புறம்.230) என்று அரிசில் கிழார் என்னும் சான்றோர் இகழ்ந்து பேசுகின்றார். இனி, மீன் பிடித்தலும் உப்பு விளைத்தலும் இவற்றை மாற்றி உணவுப்பொருள் பெறுதலும் நெய்தற் பரதவர்க்கு இன்றியமையாத் தொழில்களாகும். இவ்வியைபால் இவர்கட்கு வாணிபமே சிறப்புடைத் தொழிலாதல் இனிது விளங்கும். இவருள் உப்பு விற்போர் உமண ரெனவும், கடலிற் கலஞ் செலுத்தி மீன் பிடிப்பதனாலும், அதுவே வாயிலாகக் கலங்களில் வேறு நாடுகட்குச் செல்லும் செலவு வாய்ப்பதனாலும். இந்நெய்தனிலத்தவரைப் பரதவர் என்றும் வழங்குகின்றனர். நம் தமிழகத்திற்கும் ஏனைத் தேயங்கட்கும் வாணிகத் தொடர்பு முன்னம் உண்டாயதற்கு இவர்களே காரணர் களாவர். வணிகருள் சிறப்புடையாரைப் பரதகுமரர் என்று வழங்கும் வழக்குண்மை சிலப்பதிகாரத்தாலும் நன்கறியலாம். மூன்று பக்கமும் கடலாற் சூழப்பட்ட தென்னாட்டவர் கடலிடத்தே தம் தொழில் புரிந்துவந்தமை தோன்ற அவர்களைத் "தென்பரதவர்" என்பர். அவர் கொடியில் மீன் பொறிக்கப்பட்டிருப்பதும் இதனை வற்புறுத்துவதாகும். சேரவேந்தர் கடலிற் கலம் செலுத்திப் பொன்வருவாய் மிகக் கொண்டன ரென்பதும், அவர்க்கே அக்காலத்திற் கடலிற் கலம் செலுத்தும் தனியுரிமையும் வன்மையும் இருந்தன வென்பதும் தோன்ற மாறோக்கத்து நப்பசலை யார், "சினமிகு தானை வானவன் குடகடற், பொலந்தாரு நாவா யோட்டிய அவ்வழிப், பிறகலம் செல்லாது" (புறம்.126) என்று பாடியிருக் கின்றார். கலம் செலுத்து மிடத்தும் வாணிகக் காற்றின் (trade winds) வரவு நெறியும் காலமும் அறிந்து செலுத்தும் மதுகை அவர்பால் இருந்ததனை இனிது காட்டுவாராய், வெண்ணிக் குயத்தியார் என்பார் சோழன் கரிகாற் பெருவளத்தானைச் சிறப்பித் துரைக்குமிடத்து, “நளியிரு முந்நீர் நாவா யோட்டி, வளிதொழி லாண்ட வுரவோன் மருக, களியியல் யானைக் கரிகால் வளவ” (புறம்.66) என்று தெரிவிக்கின்றார். இதன்கண் “வளிதொழிலாண்ட உரவோன்” கரிகாலனுக்கு முன்பிருந்தா னொரு சோழன் என்பதும், அவன் காலத்தே கடலிற் கலம் செலுத்தி வேற்று நாடு சேறற் குரிய வணிகக்காற்று தொழில் கொள்ளப்பட்டது என்பதும் விளங்கு கின்றன. இவ்வளியினை வணிகக்காற்று என்பது பிற்கால வழக்காதலின், பண்டையோர் “வளி” என்றே கூறியொழிந்தனராதல் வேண்டும். இக்காற்றின் இயல்பினை முதன்முதலாகக் கண்டவர் உரோமானியர் என்றும், அவருள் ஹிப்பலாஸ் (hippalos) என்பவனே முன்னவ னென்றும் r.h.வார்மிங்டன் (warmington) முதலிய வரலாற்றா சிரியன்மார் கூறுவர். இக்கூற்று தவறுடைத்து; இவ்வுரோமானியர்க்கு முன்பே தமிழர் அறிந்து அவ்வளியினைப் பயன் கொண்டனர். இச்செய்தி யினைத் “தமிழகத்து முந்நீர் வழக்கம்” என்னும் ஆராய்ச்சி யுரையில் விரியக்கூற விருக்கின்றேன். இந்நெய்தனிலத்துப் பரதவர் கடலிற் கலஞ் செலுத்தும் வன்மை மிகக் கொண்டிருந்ததோடு, நிலத்தில் வண்டிகளில் உப்பு மூடைகளை யேற்றி உள்நாடு சென்று விற்பதும் மேற்கொண்டிருந்தன ரென முன்பே கூறியுள்ளேன். இப்பரதவ ருடைய நாடு மணல் மிக்க நாடாதலாலும், முல்லை குறிஞ்சி முதலிய வன்புல நாடு கட்கும், மருதமாகிய நீர் நாட்டிற்கும் செல்லவேண்டி யிருத்தலாலும், இவருடைய வாகும். வண்டியிற் பூட்டிய பகடுகள் மிக்க நோன்மையுடைய “கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன்பகடு” (புறம்.60) என்று பாராட்டப்படுமாறு காண்க. இவர்களும் தமது உப்பு வாணிகம் குறித்து நாட்டில் நெடிது செல்வது வேண்டி, இடையில் வண்டி அச்சு முறிந்து இடையீடுபடா வண்ணம் * சேமவச்சும் உடன் கொண்டு செல்கின்றனர். இச் செயலைக் கண்டு வியந்த ஒளவையார், “எருதே இளைய நுக முணராவே; சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே; 1அவலிழியினும் மிசை யேறினும் அவண தறியுநர் யாரென வுமணர் கீழ்மரத் தியாத்த சேமவச்சு” (புறம்.102) என்று எடுத்தோதுகின்றார். இனி இவர்பால் ஒரு வன்கண்மையும் காணப்படுகிறது. தாம் தமது வண்டியிற் பூட்டிக் கொணரும் பகடுகளில் யாதேனும் ஒன்று வழியிடையே வலிகுன்றி யாதல், நோயுற்றாதல் மேற் செல்லும் தகுதி யிழந்துவிடுமாயின், அதன்பால் சிறிதும் இரக்க மின்றி, நீரும் புல்லும் ஈயாது அவ்விடத்தே கைவிட்டுச் சென்றொழிகின்றனர். “நீரும் புல்லும் ஈயா துமணர், யாருமில் ஒரு சிறை முடத்தொடு துறந்த வாழா வன்பகடு” (புறம். 307) என்று சான்றோர் இவர் செயலைச் சுட்டிக் கூறுவதைக் காண்மின். இனி, இக் கூறியனவே யன்றி, வயல்விளைவு குறித்து நீரைச் சிறை செய்து வைப்பதும், பருத்தி கொண்டு நூல் நூற்றலும் ஆடை நெய்தலும், பொன்னாலும் மணியாலும் அணிவகை செய்தலும், மணிகடைதலும், முத்துக் குளித்தலும், கரும்பாட்டிப் பாகு செய்தலும், குயவர் மட்கலம் தாழி முதலியன வனைதலும், யாணையால் காட்டிலிருந்து விறகு கொணர்தலும், தச்சர் தேர் செய்தலும், கருமார் இருப்பு வேலை செய்வதும் பிறவும் இத் தமிழ் நன்மக்களிடத்தே காணப்படுகின்றன. வண்ணாத்தி களர் நிலத்தேயுற்ற கூவலில் ஆடையொலிக்கின்றாள் களர் நிலத்தூற்று உவர்மண் ஊறி ஆடையின் அழுக்கினை நன்கு போக்கும் நயந் தெறிந்து தன் தொழிலைச் செய்கின்றாளெனின், இத்தொழிலாளரின் தொழிலறிவுக்கு வேறு சான்று வேண்டாவாம். “களர்ப்படு கூவம் தோண்டி நாளும் புலைத்தி கழீஇய தூவெள் ளறுவை” (புறம்.311) என்று சான்றோர் கூறுதல் காண்க. வாணிகம்: மேலே, பண்டைத் தமிழ் நன்மக்களின் தொழில் கூறுமிடத்தே அவர் மேற்கொண்டொழுகிய வாணிகத்தையும் ஓரளவு கண்டோ மாயினும், ஈண்டும் சிறிது காணலாம். வேட்டுவர் தாம் கொணர்ந்த மான்தசையை மருத நிலத்தார்க்கு விற்கின்றனர்; முல்லை நிலத்து ஆயர் மகளிர் தயிர் கொணர்ந்து விற்கின்றார்கள். இருவர்க்கும் உழவர் தம்பால் இருக்கும் வெண்ணெல்லைத் தருகின்றார்கள். “கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன், மான்றசை சொரிந்த வட்டியும், ஆய்மகள், தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய, ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர், குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல், முகந்தனர் கொடுப்ப உகந்தனர்” (புறம்.33) பெயர்வர் என்று சான்றோர் கூறுகின்றார்கள். “தென்பவ்வத்து முத்தும்” (புறம்.380) “வடகுன்றத்துச் சாந்தமும்” “எண்வகைக் கூலழும்” “வேறுபல் தாரமும்” தமிழரிடையே விற்கவும் வாங்கவும் படுகின்றன. இக் கூறிய பொருள்களே யன்றி, பல வேறு பண்ணியம் விற்றுலும், கள், தேறல், தேன் முதலியனவும், பூமாலைகளும் பிறவும் விற்கப்படுகின்றன. வரகு நெல் முதலியன கடன் கொடுத்தலும் கடன் வாங்குதலும் உண்டு. அரசியல்: இப் புறநானூறு கூறும் பண்டை நாளில் சேர சோழ பாண்டியர் என முடி வேந்தர் மூவர்க்கும் தமிழகம் உரிய தாய் இருந்திருக்கிறது. இவர்தம் ஆட்சியின் கீழ்ச் சிறுசிறு நாடுகள் பல உள்ளன. அவற்றைக் குறுநில மன்னர் ஆட்சி புரிகின்றனர். இவர்களைச் “சீறூர் வேந்தர்” என்றும் முடி யுடைவேந்தரை வாளா “வேந்தர்” என்றும் இந் நூல் வழங்குகின்றது. இந்நூற்கண் காட்டுநாடு, காரிநாடு, கொங்குநாடு, கோனாடு, சோணாடு, பறம்புநாடு, பெண்ணைநாடு, மலைநாடு, மாறோக்கம், முக்காவல்நாடு, வேங்கடநாடு என்பன சிறப்பாகக் காணப்படுகின்றன. இவ்வேந்தர் அனைவரும் தமக்குரிய அரசு முறையினைத் தந்தை மகன் என்ற வழிவழியாகப் பெறுகின்றனர். “எழா அத்தாயம் வழுவின் றெய்தியும்” (புறம்.79) என்றும், “பால்தர வந்த பழவிற்ற றாயம்” (புறம்.75) என்றும் இந் நூல் குறித்துரைப்பது காண்க. தாயம் என்ற சொற்கு உரை கூறிய உரையாசிரியரும் நச்சினார்க்கினியாரும் தந்தைக் குரித்தாய் மக்கட்கு வந்துறும் உரிமை என்ற கருத்துப்பட உரை கூறியிருப்பது “தாயத்தினடையா” என்ற தொல்காப்பிய நூற்பாவுரையால் இனிது தெரிகிறது. இங்கே குறித்த குறு நில மன்னர் முடிவேந்தர் மூவருள் எவரேனும் ஒருவர்க்குக் கீழிருந்து ஆட்சிபுரிவர்; அதனால் அவர்கள் தம்முடைய வேந்தர்க்குரிய அடையாள மாலையினையே தாமும் அணிந்து கொள்வர். பிற்காலத்தே, இவ்வழக்கு மாறியது. முடிவேந்தர் தமக்குக் கீழிருந்து ஆட்சிபுரிந்த வேந்தர்க்குத் தம் பெயரைப் பட்டமாகத் தந்து “எதிரிலி சோழ சம்புவராயன்” “குலோத்துங்க சோழ காங்கையன்” என்பன போலச் சிறப்பித்திருக்கின்றனர், வேள்பாரி முதலாயினார்போல முடிவேந்தருக்குக் கீழிராது தமித்திருந்து ஆட்சி புரிவோரும் உண்டு. குறுநில மன்னர்க்கு ஏனைச் சேர சோழ பாண்டியர் போல மணிமுடி சூடும் மாண் பொன்று இல்லையே யொழிய ஏனைச் சிறப்புக்களெல்லாம் உண்டு. முடி வேந்தரை இறை வனுடைய திருக்கண் மூன்றிற்கும் ஒப்பாகக் கருதி, அவருள் பாண்டி வேந்தரை நெற்றிக் கண்ணுக்கு நிகராக்கி, “கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப், பிறை நுதல் விளங்கு மொருகண் போல, வேந்து மேம்பட்ட பூந்தார் மாற” (புறம்.55) என்று சான்றோர் பாராட்டுவர். இவ்வேந்தர் அனைவரும் கல்வியின் இன்றியமை யாமையினை இனிதறிந்து, கற்றோர் கூறும் அறநெறியிலே தமது அரசு முறையினை நடாத்துகின்றனர். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனென்பான், மக்கட்குக் கல்வி கற்பது நன்று என்பான், “உற்றுழியுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்றும், கற்றோன் கூற்றே *அரசு முறையை நெறிப்படுத்துவ தென்றற்கு “ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும், மூத்தோன் வருக என்னாது அவருள், அறிவுடையோனாறு அரசுஞ் செல்லும்” (புறம்.183) என்றும் இயம்புகின்றான். இவ்வாறு கல்விநலத்தைக் கண்டு பேணிய இவ்வேந்தர், அரசிய லறிவின் சிறப்பையும் ஐயமறத் தெளிந்து, “கால்பார் கோத்து ஞாலத் தியக்கும், காவற் சாகா டுகைப்போன் மாணின், ஊறின்றாகி யாறினது படுமே, உய்த்தல் தேற்றானாயின் வைகலும், பகைக் கூழ் அள்ளற்பட்டு, மிகப் பல் தீநோய் தலைத்தலைத் தருமே” (புறம்.185) என்று தெரிவிக்கின்றனர். தமிழரசு புரியும் இவ்வேந்தர் கருத்தில் சில சீரிய நோக்கங்கள் இருந்து அவரைச் சிறப்பித்துள்ளன. அறநெறி யொழுகி அன்புடைக் காமத்தால் மணந்து கொண்ட மனைவியை பிரிந்தொழுகலும், தம்மைக் காதலியாத மகளிரை வலிதிற் கூடுதலும், முறை வேண்டி னார்க்கு நீதி வழங்காமையும், குடிபழி தூற்றும் கோலுடை யனாதலும் புலவர் பாடும் புகழ்பெறானாதலும், கையிகந்த இறைவாங்குதலும், போர்க் கருவியாற் பட்டி றவாது கொன்னே மூத்து நோயுற் றிறத்தலும் கனவிலும் தம்பால் நிகழ்தல் கூடாது என்பது அவர்தம் கருத்துக்களாகும். இவை யனைத்தும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி, சேரமான் கணைக்காலிரும்பொறை என்ற இவர்கள் பாடியுள்ள பாட்டுக்களில் நாமெல்லாம் கண்டறியுமாறு விளங்கித் தோன்றுகின்றன. இவருள் பூதப் பாண்டியன், தான் பிறந்த பாண்டியர் குலமே மேம்பட்ட தென்றும், இறந்து மீட்டும் பிறக்குமிடத்துத் தனக்குத் தென்புலங் காக்கும் பாண்டிய வேந்தர் பிறப்பே எய்Jல் வேண்டுமென்றும், ஏனைப்புல மெல்லாம் வன்புல மென்றும் அவற்றைப் புரக்கும் அரசுரிமை யெய்தினும் அஃது ஆகாதென்றும் கருதி, “மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த, தென் புலங்காவலின் ஒரீஇப் பிறர், வன்புலங்காவலின் மாறியான் பிறக்கே” (புறம்.71) என்று கூறுகின்றான். இறுக்கும் இறையன்றி மிக்க இறை விதித்து வாங்கும் கொடுமையை வெறுத்து வஞ்சினம் கூறுவானாய், பாண்டியன் நெடுஞ்செழியன், “எந்நிழல் வாழ்நர் செல்நிழற் காணாது, கொடியன் எம்மிறை யெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக” என்றுரைப்பதும், கையிகந்த இறை பெறும் வேந்தனை, “குடிபுரவிரக்கும் கூரிலாண்மைச் சிறியோன்” (புறம்.75) எனச் சோழன் நலங்கிள்ளி இகழ்வதும் குடிகட்கு இறை விதிக்கும் வகையில் இத் தமிழ்வேந்தர் கண்ணுங் கருத்துமாய் இருந்ததை வற்புறுத்துகின்றன. இவ் வெல்லாவற்றினும் மேன்மையாக அவர்கள் கருதியது புலவர் தம்மைச் சிறப்பித்துப் பாட வரும் புகழேயாகும். தன் பகைவர் கேட்ப வஞ்சினங் கூறு மிடத்தே, பாண்டியன் நெடுஞ் செழியன், பகைவரை அறப்போர் செய்து வென்று புறங்காணேனாயின், “ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைகஎன் நிலவரை” (72) என்பது அவனுக்குப் புலவர் பாடும் புகழின்கண் இருந்த வேட்கையும் நன்மதிப்பும் நமக்கு நன்கு விளங்கக் காட்டுகின்றது. இவ்வாறு நல்லிசைப் புலவர் பால் பேரன்பும் அவர் பாட வுண்டாகும் புகழின்கண் பெருவேட்கையும் இவ்வேந்தர்க்கு உண்டாதற்குக் காரணம், “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வானவூர்தி, எய்துப என்ப தம் செய்வினை முடித்து” (புறம்.27) எனவுரைக்கும் சான்றோர் சால்புரை யென்று கோடலு முண்டு. ஆயினும், புகழ் விளைக்கும் சான்றோர், தாம் பாட விரும்பும் வேந்தரது வேத்தியல், கொடிது கடிந்து கோல் செம்மை கோடாது நடத்தலையே வற்புறுத்து மொழிவதை நாம் நெகிழ்க்க முடியாது. சோழன் இளஞ்சேட் சென்னிக்கு ஊன்பொதி பசுங்குடையார் என்பார். “வழிபடுவோரை வல்லறி தீயே1 பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே நீ மெய்கண்ட தீமை காணின் ஒப்பநாடி அத்தக ஒறுத்தி வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே” (புறம்.10) என்று உரைப்பதும், சோழன் நலங்கிள்ளியை நோக்கி, ஆசிரியர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், “அறனும் பொருளும் இன்பமும் மூன்றும், ஆற்றும் பெரும நின் செல்வம், ஆற்றாமை நின் போற்றாமையே” (புறம்.28) என்றும், “கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும், ஒடியாமுறையின் மடிவிலையாகி, நல்லதன் நலனும் தீயதன் தீமையும், இல்லையென் போர்க்கு இனனாகிலியர்” (புறம்.29) என்றும் உரைப்பதும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவற்கு வெள்ளைக் குடி நாகனார் என்பார், முறை வேண்டிவரும் குடிமக்கட்கு அரசர் செவ்வி யெளியராதல் வேண்டு மென்றற்கு, “அறம்புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து, முறை வேண்டும் பொழுதிற் பதனெளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதிற் பெயல் பெற்றோரே” என்றும், அரச ரேந்திய வெண்குடை குடிகளைப்புரத்தற் கென்றே யாயதென்பர், “கண்பொர விளங்கும் நின் விண்பொரு வியன்குடை, வெயின் மறைக் கொண்டன்றோ வின்றே, வருந்திய, குடிமறைப்பதுவே” என்றும், நாட்டில் ஏதேனும் தீங்கு நேரின், அதற்குக் குடிகள் அரசனையே நோவர் என்ற கருத்துப்பட, “மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும், இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்” என்றும், அரசர்க்கு உளவாகும் வெற்றிக் கெல்லாம், அவர் கீழ்வாழும் வேளாண் மாக்களின் உழவுப்பயனே என்பார், “வருபடை தாங்கிப் பெயர் புறத் தார்த்துப், பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை, ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே” என்றும், ஆகவே குடி புறந்தருதலே நீ சிறப்பாய் எண்ணிச் செயற்பால தென்பார், “நொதுமலாளர் 1பொதுமொழி கொள்ளாது பகடுபுறந் தருநர் 2பாரம் ஓம்பிக் குடிபுறந் தருகுவை யாயின்நின் அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே” (புறம்.35) என்றும் உரைப்பதும், குடிகளிடத்தே இறையை “வசூலிக்கும்” திறத்தைப் பாண்டியன் அறிவுடைய நம்பிக்குப் பிசிராந்தை யார், எடுத்தோதித் தெருட்டு வாராய், “அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;3 மெல்லியன் கிழவனாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப 4எடுக்கும் பிண்டம் நச்சின் யானைபுக்க புலம் போலத் தானு முண்ணான் உலகமுங் கெடுமே” (புறம்.184) என்று விளக்குவதும் மோசிகீரனார் என்னும் சான்றோர், வேந்தர்க்குக் கடன் இஃது என்பாராய், “நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே, மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம், அதனால், யான் உயிர் என்பது அறிகை, வேல் மிகுதானை வேந்தற்குக்கடனே” (புறம்.186) என்பதும் பிறவும் வேந்தர் சான்றோர்களாகிய புலவர்கள் பாடும் புகழைப் பெரிதும் வேட்டு நிற்பதற்குச் சீரிய காரணங்களாகின்றன. இத் தமிழ் வேந்தராட்சியில், ஆங்காங்குப் பெரு நகரங்களில் சான்றோர் இருந்து அறமுரைக்கும் நல்லவைகள் இருந்திருக் கின்றன, “சான்றோர் இருந்த அவையத்து” (புறம்.266) என்றும், “மறங்கெழு சோழர் உறந்தை யவையத்து, அறநின்று நிலையிற்று” (புறம்.39) என்றும் “அறம்துஞ்சு உறந்தை” (புறம்.58) என்றும் வருவன இக்கருத்தை வலியுறுக்கின்றன. இச்சான்றோர் அனைவரும் அரசன் நால்வகைப்படையும் வீறு பெறக் கொண்டிருப்பினும், அவன் கொற்றமெல்லாம் அறத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்குமென்ற வுண்மையைத் தேர்ந்து, “கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவருமென நான்குடன் மாண்ட தாயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” (புறம்.55) என்று உரைக்கின்றனர். அற முதலிய மூன்றனையும் நாட்டில் நிலவுவித்தற்கும் இச்சான்றோரே ஏதுவாதல்பற்றி, இம்மூன்றற்கும் இன்றியமையா இயல்பிற்றாகிய வயல் விளைவினைச் செம்மை செய்தற்கு உரியவற்றை அரசர்க்கு எடுத்தோதும் கடன்மை இவர்பால் அமைந்திக்கிறது. அதனால், நீர் வருவாயைச் செம்மை செய்து நிலபுலங்களில் நீர்மையைச் சிறப்பிக்கக் கருதிய குடபுல வியனார் பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி. நாட்டில் தடையின்றி வறிதே கழிந்தோடும் நீரை ஏரிகளில் நிரப்பி வயல்வளம் பெருக் குவித்தல் சிறப்பாம் என்பாராய், செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், போர்த்தொழிலில் ஒரு நீ யாகல் வேண்டினும், நல்லிசை நிறுத்தல் வேண்டினும், “தகுதி கேள், இனி, மிகுதி யாள, நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே; வித்திவான் நோக்கும் புன்புலம், கண்ணகன் வைப்பிற் றாயினும், நண்ணி யாளும் இறைவன் தாட்குத வாதே; அதனால், அடுபோர்ச் செழிய, இகழாது, வல்லே, நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் 1தட்டோர் அம்ம இவண்தட் டோரே தள்ளா தோர்2இவண் தள்ளா தோரே” (புறம்.18) என்று உரைக்கின்றார். இத்தகைய சான்றோரைத் துணையாகப் பெற்றும், அவருரைக்கும் சால்புரை களை மேற்கொண் டொழுகியும், அவராற் பெறும்புகழ் மேம்பட்டும் விளக்கமுறும் இத்தமிழ் வேந்தர் புலவர்க்கேயன்றி, ஆடல் பாடல்களால் இன்புறுத்தலும் பிறநாடு களில் தம்முடைய புகழைப் பரப்புதலும் செய்யும் பாணர், கூத்தர், விறலியர் முதலி யோர்க்குத் தம் செல்வத்தை வரையாது வழங்கு கின்றனர். அவரது வண்மையினைக் கூறவந்த கோவூர் கிழார் என்னும் சான்றோர், “கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங்கொடிப், பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ, வண்ணம் நீவிய வணங்கிறைப் பணைத்தோள், ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என, மாடமதுரையும் தருகுவன் எல்லாம், பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்” (புறம்.32) என்று பாடிக் காட்டுகின்றார். இவ்வாறு வழங்குவனவற்றுள் பகைப்புறத்துக் கொள்ளும் பொருள் பெரும் பாலனவாம். இவ்வாறு ஈதல் வழியாலும் பிறவற்றாலும் எய்தும் இசைமேற் சென்ற உள்ள மிகுதியால், ஏனை யரசர் தம்மை வழிபடச் செய்வதிலும், பெரும்போகம் வேண்டியும், இந்நிலவுலகு வலியுடையார்க்கே யன்றி ஏனை யெல்லார்க்கும் பொதுவன்று என்ற மேற்கோளை நிலைநாட்டும் வீறு கொண்டும் பிற வேந்தரொடு பொருதலை மேற்கொள்கின்றனர். இவ்வியல்பு பற்றியே இவர்தம் உள்ளப் பான்மை யையுணர்த்தும் குறிப்பால், கபிலர், ஞாயிற்றை நோக்கிப் பாடுவாரைப் போல, “ஏ, ஞாயிறே, சேரமான் கடுங்கோவாழி யாதனை நீ எவ்வாறு ஒப்பாவாய்; அவன்,” “வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாது இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளம்” (புறம்.8) உடையோன்; ஓம்பா ஈகையன்; வலிய தானையினையுடையன்” என்று பாடுகின்றார். போர்: இவ்வேந்தர் போர் செய்யும் திறம் மிக்க இறும்பூது தருவதாகும். போர் செய்கிறபோதும் போர் தொடங்கு கிறபோதும் இவ்வேந்தர் பால் அறமே தலைசிறந்து நிற்கிறது. போர் குறித்து இருபாலும் மண்டி நிற்கும் வேந்தரை “அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்” (புறம்.62) என்று கழாத்தலையார் என்னும் சான்றோர் சிறப்பித்துக் கூறுகின்றார். போர்க்குச் செல்லும் வேந்தன் முதற்கண் தண்ணுமை முழக்கால் தன் நாட்டு வீரரை வருவித்து அவர் கட்கு அடையாளப் பூக்களை வழங்குகின்றான். அப்பூக் கோளேய தண்ணுமை கேட்டதும் வீரர் அனைவரும் உடனே திரண்டுவிடுகின்றனர். பூக்கோளேய வேந்தன் படை திரளக்கண்டு அவரவர்க்குப் பூக்களை நல்கித் தான் நீராடிப் போர்க்குரிய கோலம் கொள்கின்றான். அவ்வாறு கொலங் கொண்டு வரும் செழிய னொருவனைக் கண்ட சான்றோ ரொருவர். “மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி1 மன்ற வேம்பி னொண்குழை மலைந்து தெண்கிணை2 முன்னர்க் களிற்றின் இயலி வெம்போர்ச் செழியனும் வந்தனன்” (புறம்.79) என்று பாடுகின்றார். இனி, போர் நிகழுமிடத்து, வாள் வேல் முதலிய கருவிகளும் யானை, குதிரை முதலிய படைகளும் போரில் ஈடுபடும் கூறுபாடு மிக்க சிறப்புடையதாகும். உறையினின்றும் வாங்கிய வாட்படை பகைவர் உடலுள் மூழ்கிக் குருதி படிந்து உருவிழந்து நிற்கிற தென்றற்கு, “போர்க் குரை இப் புகன்று கழித்த வாள், உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், ஊனுற மூழ்கி யுருவிழந்தனவே” என்றும், “வேலே, குறும்படைந்த அரண்கடந்தவர் நறுங்கள்ளின் நாடு நைத்தலின் சுரைதழீஇய இருங் காழொடு மடைகலங்கி நிலை திரிந்தனவே; களிறே, எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர் குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலின் பழூஉப்பிணிய தொடிகழிந்தனவே” (புறம்.97) என்றும், இவ்வாறே குதிரைகள் வீரர் திரளைச் சாய்த்துப் போர்க்கள முற்றும் உலாவிக் குளம்பு முழுதும் ஊனும் குருதியும் படிந்து மறுப்பட்டுத் தோன்றுகின்றன என்றும் கூறி, வேந்தன் போர்த்திறம் கூறுவார், அவ னேந்திய தோல் (கேடயம்) பகைவர் செலுத்திய கணைபட்டுத் துளையுற்றதனால், “அவன் தானும், நிலந்திரைக்கும் கடற்றானைப் பொலந்தும்பைக் கழற் பாண்டில்1 கணைபொருத துளைத் தோலன்னே” (புறம். 97) என்றும் ஒளவையார் பாடியிருக்கிறார். போரில் வெற்றி மிகும் வேந்தன் தன் பகை வேந்தன் ஓம்பும் காவல்மரத்தைத் தன் வெற்றிக்குறியாக வெட்டி வீழ்த்துவது போர்மரபு. ஒவ்வொரு வேந்தன் ஒவ்வொரு மரத்தைத் தன் வெற்றியைச் சிறப்பிக்கும் மரமாக மேற்கொண்டு சிறப்பா யோம்பி வருதல் பண்டைத் தமிழ்வேந்தர் மரபாகும். அம்மரம் இரவு பகலாகப் போர் மறவரால் காக்கப்படுவது குறித்து அதனைக் கடிமரம் என்ப. அது பகைவர்பால் சிக்குண்டு வெட்டப்படாவாறு பாதுகாப்பது மானமுடைய வேந்தர்க்கு மறப்பண்பாகும். அதனைப் பகைவர் கைப்பற்றித் தடிகின்றார் எனின், தடியுமவர் வெற்றி பெற்றார் என்பது துணிபாம். “வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும்” (புாறம்.23) என்று சான்றோர் கூறுவது காண்க. வேங்கை, புன்னை, வேம்பு முதலியன பல வேந்தர்களால் காவன் மரமாகப் பேணி வளர்க்கப் படும் திறம் ஏனைத்தொகை நூல்களிலும் மிகுதியாகக் கூறப்படுகிறது. பரிசிலரும், வேற்றுப் புலத்துப் பெற்ற யானைகளை இக்காவன் மரத்திற் கட்டிவைப்பது வழக்காம். போர்க் களத்தே போருடற்றும் வேந்தருள் பொருது தோல்வி யுறுவோர் தம்மை வென்ற வேந்தன் வீரச் சிறப்பறிந்து பாராட்டு வதும், வென்றோர் தம்பால் தோல்வி பெற்றோர் செய்த போர் நலத்தைப் பாராட்டுவதும் உண்டு, “இதனை, குன்றத் தன்ன களிறு பெயரக் கடந்தட்டு வென்றோனும் நிற்கூறும்மே” என்றும், “கழலணிப் பொலிந்த சேவடி நிலங் கவர்பு, விரைந்து வந்து சமந்தாங்கிய, வல்வேல் மலையனல்லனாயின், நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கெனத் தோற்றோன்றானும் நிற்கூறும்மே” (புறம்.125) என்றும் பெருஞ்சாத்தனா ரென்பார் எடுத்தோதுவது காண்க. தம்மோடு எதிர்நின்று பொரும் வேந்தன் அஞ்சிய போது அவனொடு பொருவது வீரமன்று. பகை வேந்தர் போந்து தம் அரனை முற்றுகையிட்டுக் காவல் மரத்தைத் தடியக் கண்டும் போர் செய்தற்கு அஞ்சித் தம் அரணிடத்தே வேந்தர் மடிந்திருப்பரேல், அவரொடு பொருவது மானம் மிக்க தமிழ் வேந்தர்க்கு நாணுடைச் செயலாகத் தோன்றுகிறது. கருவூரிடத்தே மடிந்திருந்த வேந்தனை விட்டொழியாது பொருதழிக்கலுற்ற சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழா ரென்னும் சான்றோர், “தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரந் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப ஆங்கினி திருந்த வேந்தனொடு ஈங்குநின் சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே” (புறம்.36) என்று பாடித் தெருட்டுகின்றார். போருடற்றுமிடத்தே இன்னாரொடு இன்னார் பொருதல் இன்னார்க்குப் பின் இன்னார் பொருதல் வேண்டு மென்ற முறையும், வேந்தன் ஏவினாலன்றித் தாமே சென்று வீரர் பொரலாகா தென்னும் முறையும், பெரும் போர் நிகழுமிடத்து வேந்தர் தாமே முன் சென்று பொரும் முறையும் போர்த்துறைக்கண் காணப்படுகின்றன. போர் முடிந்தபின், வேந்தன், போர் வீரரை ஒருங்குகூட்டிப் போர்விருந் தொன்று செய்கின்றான். அவ்விருந்தில் வீரர் வாள்பற்றி நிற்பது குற்றமாகம் (புறம்.292); ஆயினும் அவன் மிகச் சீரிய வீரமும் போர் வன்மைச் சிறப்பும் உடையனாயின், போர் நிகழ்ச்சிக்கண் நிகழ்ந்தன எவை யேனும் எடுத்தோதுதற்கு அறிகுறியாக வாள்பற்றி நிற்பன். இவ் விருந்தில் அரசனும் தானை வீரருடன் ஓருங்கிருந்து உண்பன். வீரர்க்குக் கள் வழங்கப்படும். படுங்கால், ஒரு புலவர் ஆங்கிருந்து போர் வீரரின் குடிநிலையை விருந்தவை யறிய எடுத்து விளம்புகின்றார் (புறம்.290). போரில் புண்பட்டு வரும் வீரருடைய புண்ணை மகளிர் தக்க மருந்திட்டு ஆற்றுகின்றார்கள். வீரர் மகிழுமாறு போரிசை பாடலும்* தீக்காற்றுப் புகாதவாறு ஐயவி புகைத்தலும் வேப்பிலை மாலை கட்டி மனையைப் புனைவதும் செய்கின்றனர் (புறம்.296). மகளிர் போர்க்களம் சென்று ஆடவர் செய்யும் போர்த் தொழிலைக் காணாராயினும், போர் முடிவிற் சென்று காண்டலும், ஆடவர் போர்த்திறங் கேட்டு மகிழ்தலும் பெருவழக்காகும். ஒருத்தி தன் கணவனுடைய போர்ச் செயலைக் கேட்கும் வேட்கையுடையளாக அவர் கட்கு, “நின் கேள்வன், “தமர்பிறர் அறியா அமர்மயங் கழுவத்து1, இறையும் பெயரும் தோற்றி, 'நுமருள் நாண்முறை தபுத்தீர் வம்மி னீங்’ கெனப் போர்மலைந் தொருசிறை நிற்ப, யாவரும் அரவுமிழ் மணியிற் குறுகார்; நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே” (புறம்.294) என்று சான்றோர் கூறுகின்றனர். இது கேட்டுப் பெரு மகிழ் வெய்தும் மகளிரது வீரம் மிக நலம் பயப்பதாகும். தம் வயிற்றிற் பிறந்து தமது முலைப்பா லுண்ட மக்கள் மறங்குன்றா மானமும், வீரம் செறிந்த வீறாப்பு முடையராதல் வேண்டுமென்பது அவரது உட்கோள். ஒருத்தி தன் மகன் போர்புரிந்து, “இடைப்படை யழுவத்துச் சிதைந்து வேறாகிய மாண்பு கண்டு அருளி, வாடுமுலை யூறிச் சுரந்தனள்” (புறம்.295) என்றும், வேறொருத்தி, “சிதைந்து வேறாகிய, படுமகன் கிடக்கை காQஉ, ஈன்ற ஞான்றினும் பெரிது வந்தனளே” (புறம்.278) என்றும் சான்றோர் கூறுதலைக் காண்மின். செருப்பறை கேட்ட ஒருத்தி, தான் ஒரு மகனல்ல தில்லா ளாயினும், வேல் கைக் கொடுத்துப் போர்க்கு விடுப்பதும், நின் மகன் போர்க்களத்தே படையழிந்து மாறினன் என்பது கேட்டு ஆறாச் சினத்தளாய்ப் போர்க்களம் நோக்கிச் செல்லலுற்று, “மண்டமர்க்குடைந் தனனாயின், உண்டவென் முலையறுத்திடுவன்” என்று கூறுதலும், நின் மகன் யாண்டுளன் என்று கேட்டார்க்கு, அவனை, புலியிருந்து போகிய அளைபோல, “ஈன்ற வயிறோ இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே” என்பதும் பிறவும் இம் மகளிரது வீரத்துக்குச் சான்றுகளாகும். வாழ்க்கை: இவ் வீர மக்கள் இல்லிருந்து அறம் புரியுந் திறம் மிக்க நயமுடையதாகும். குறிஞ்சி நிலத்தவர் விருந்தோம்பும் திறம் கூறலுற்ற ஏணிச்சேரி முடமோசியார், “சிலைப்பாற்பட்ட முளவுமான் கொழுங்குறை, விடர்முகை யடுக்கத்துச் சினை முதற் சாந்தம்; புகர்முக வேழத்து மருப்பொடு மூன்றும், இருங்கேழ் வயப்புலி வரிய தட்குவைஇ விருந்திறை நல்கும் நாடன்” (புறம்.374) என்று தெரிவிக்கின்றார். தம்மை நாடி வருவோர்க்கு உடை முதலியன தந்து அறம் புரியும் திறத்தை, ஓளவையார், “திருமல ரன்ன புதுமடிக்கொளீஇ மகிழ்தரல் மரபின் மட்டே யன்றியும், அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில், வெள்ளி வெண்கலத் தூட்டலன்றி...... அகடுநனை வேங்கை வீகண்டன்ன, பகடு தரு செந்நெல் போரொடு நல்கிக், கொண்டி பெறுகென்றோனே” (புறம்.390) என்று மொழிகின்றார். இரவிடை வந்தோர்க்கு, “அதளுண் டாயினும் பாயுண்டாயினும் யாதுண்டாயினும்” (புறம்.317) கொடுத்து உறங்குவித்துச் சிறப்பிக்கும் உயர்வும், கணவன், “பரிசில் பரிசிலர்க்கு ஈய”க் கண்டும், அவன் மனையாட்டி, “பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கை தூவா” (புறம்.334)ப் பெருமையும், “கிழவன் சேட்புலம் படரின் இழையணிந்து.......... பெண்டிரும் தம் பதம் கொடுக்கும்” (புறம்.151) கொடையும், கணவன் இறந்துபட்டவழி மகளிர், குழல் களைதலும், இழையணியாமையும், கைம்மை நோற்றலும், உடனுயிர் விடுதலும், தீப்பாய்தலும், பிறவும் இத் தமிழ் நன்மக்கள்பால் காணப்படுகின்ற செயல் வகைகளாகும். பெண்களின் உருநலனும் குணநலனும் கேள்வியுற்று வேந்தர் மகட்கொடை வேண்டலும், அவர்பால் மறப்பண்பும் அறவுணர்வும் குன்றியிருக்குமாயின் பெற்றோர் மகட் கொடை மறுத்தலும், அது வாயிலாகப் போர் நிகழ்தலும் பண்டைநாளை மரபாகும். மகட் பேசியபின் மணமகன் போர் குறித்துப் பிரியலுறின், வாள் வைத்து மணம் புரிதலும் பண்டைத் தமிழ் மரபாகும். (புறம்.332). கடவுட் கொள்கை: பண்டைத் தமிழ் மக்கள் பல்வேறு தெய்வப் பெயர்களை வழங்கியிருக்கின்றா ராயினும் புறநானூற்றில் சிறப்பாக முக்கட் செல்வற்கும் முருக்க கடவுட்கும் கோயிலுண்மை தெரிகிறது. “பணியியரத்தை நின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர் வலம் செயற்கே” (புறம்.6) என்றும் “அணங்குடை முருகன் கோட்டம்” (புறம்.299) என்றும் வருதல் காண்க. இவர்களே யன்றி, திருமால், இமையவர், பலதேவன் முதலிய கடவுளரும் கூறப்படுகின்றனர். ஞாயிற்றின் வெப்பத் தைத் தாங்கி நிலமக்கட்கு வேண்டியவளவு நல்கும் முனிவரருண்டென்றும் அவர்கள் காற்றையுணவாகக் கொண்டு சுடரொடு திரிகின்றன ரென்றும் இப் புறநானூறு கூறுகின்றது (புறம்.43). முருகன் மலையிடத்தும் நீர்த்துறை யிடத்தும் கோயில் கொள்வன். முக்கட் செல்வன் மூவெயில் முருக்கிய செய்தியும், ஆலின் கீழ் இருப்பதும், கறைமிடறும் மூன்று கண்களும் உடையனாகிய இயல்பும் பாராட்டிக் கூறப்படுகின்றன. முருகன் கோயிலில் தூய்மையில்லா மகளிர் ஒடுங்கித் தலைகவிந்து நிற்பரென்பர் (புறம்.299) குறவர் மழை வேண்டியிருப்பினும், பெய்யும் மழை மிக்க வழியும் கடவுளைப் பலிதூய்ப் பரவுகின்றார்கள் (புறம்.143). இவ்வண்ணம் கடவுளுண்மையுணர்ந்து வழிபட்டொ ழுகிய இம் மக்கள் வினையுணர்வும், மறுபிறர்புண்மையும் மேற்கொண்டி ருக்கின்றனர். “வாழச் செய்த நல்வினையல்லது, ஆழுங் காலைப் புணை பிறிதில்லை” (புறம்.367) என்றும், “தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, சாதலும் புதுவதன்றே” என்றும், “நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர், முறை வழிப்படூ உம் என்பது திறவோர், காட்சியிற் றெளிந்தனம்” (புறம்.192) என்றும், “உணர்ந்த வேட்டத் துயர்ந்திசினோர்க்குச், செய்வினை மருங்கின் எய்துலுண்டெனில், தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்” (புறம்.214) என்றும் வருவனவும் பிறவும் இக் கருத்தை வலியுறுத்துகின்றன. இவற்றோடு, போரிற் பட்டோர் தேவருலகத்தே இன்புறுவர் என்னும் கொள்கை வீரர் நெஞ்சில் ஊறியிருக்கிறது: “ஆரமருழக்கிய மறங்கிளர் முன்பின் நீளிலையெஃக மறுத்த வுடம் பொடு வாரா வுலகம் புகுதல்” ஒன்றெனப் படைதொட்டனனே குரிசில் (புறம்.341) என ஆசிரியர் பரணர் கூறுவது காண்க. இக்கூறிய உணர்வுகளால் உடலோடு கூடி இவ்வுலகில் வாழும் வாழ்க்கையின் இன்பநிலை, துன்பநிலை இரண்டனையும் இனிதறிந்து வாழ்வாங்கு வாழும் நல்லுணர்வு இப் பண்டைய நன்மக்கள்பால் விளங்கித் தோன்று கிறது. ஒரு சான்றோர். “ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப், பூவும்பொன்னும் புனல்படச் சொரிந்து, பாசிழை மகளிர் பொலங்கலத் தேந்திய, நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து, இரவலர்க் கருங்கலம் அருகாது வீசி, வாழ்தல் வேண்டுமிவண் வரைந்த வைகல்” (புறம்.367) என்றும், வாழ்நாளும் நிலையின்றிக் கழிவ தென்றற்கு, “குன்றுதலை மணந்த மலைபிணித் தியாத்தமண், பொதுமை சுட்டிய மூவருலகமும், பொதுமை யின்றி யாண்டிசினோர்க்கும், மாண்டவன்றே யாண்டுகள்” (புறம்.357) என்றும், “விழவிற் கோடியர் நீர்மைபோல, முறை முறை ஆடுநர் கழியு மிவ்வுலத்துக் கூடிய, நகைப்புறனாக நின் சுற்றம், இசைப் புறனாக நீ ஓம்பிய பொருளே” (புறம்.29) என்றும் கூறுவர். இவ்வுலகத்தே உயிர்கள் கூத்தாட்டவைக் குழாம் போலக் கூடிப் பிரியும் செயலால் உண்டாகும் துன்ப நிலையினையும், “இன்னாதம்ம உலகம்” என்றோதி, இதனைத் துறந்து, “இனிய காண்கிதன் இயல்புணர்ந்தோரே” (புறம் 194) என்று எடுத் துரைத்து, இனிய காண்டற்கு வாயில் கூறுவார்போல, “நல்லது செய்தலாற்றீராயினும், அல்லது செய்த லோம்புமின் அதுதான், எல்லாரும் உவப்பதன்றியும், நல்லாற்றுப்படூஉம் நெறியுமாரதுவே” (புறம்.195) என்றுரைக்கும் சான்றோரும் இருந்திருக் கின்றனர். துறவு: இவ்வுலகில் யாக்கை, இளமை, செல்வம் முதலியன நிலை பேறின்றிக் கழிவது கண்டு, நிலைத்த வாழ்வு பெற விரும்புவோர் இதனைத் துறந்து சேறலே தகுதியென்றற்கு, “இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோர்” என்றாற் போல, “இன்னா வைகல் வாராமுன்னே, செய்ந்நீ முன்னிய வினையே, முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே” (புறம்.363) எனத் துறவு வற்புறுத்தலும் பண்டைச் சான்றோர் மேற்கொண்டிருக்கின்றனர். இத் துறவுக்கு இடையூறாகச் சுற்றம் சூழவாழும் மனை வாழ்க்கை இருத்தலை யறிந்து, “ஓடியுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” (புறம்.193) என்றலு முண்டு. துறவு பூண்டோர் தமக்குண்டாகும் நலந்தீங்குகளை ஒப்பாகக் கருதி இரண்டினிடத்தும் உவப்பு வெறுப்பின்றி யொழுகு மாற்றால் “யாதுமூரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர்தர வாரா, நோதலும் தணிதலு மவற்றோரன்ன, சாதலும் புதுவதன்றே வாழ்தல், இனிதென மகிழ்ந்தன்று மிலமே, முனிவின் இன்னா தென்றலும் இலமே” (192) என்று தம் உட்கோளைத் தெரிவித்து நம்மைத் தெருட்டுகின்றனர். இத்தகைய நல்லறிவும் அருந்துறவும் பூண்டோர், நீராடி, தாளியிலை முதலிய இலை, காய், கனி யுண்டு உண்மை நிலையினைத் தலைக்கூடுகின்றனர். இவர் தாம் முன்னர்த் தம் இல்லிருந்தாற்றிய நல்லறப் பயனாய்த் துய்த்த இன்பத்தையும், இப்போது துறவுபூண்டு தவம் செய்யும் திறத்தையும் கண்ட மாற்பித்தியார் என்ற சான்றோர், ஒரு துறவியைப் பார்த்து, “கழைக்கண் நெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகின் கடுந்தெறற் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடைப் புலர்த்துவோன்” (புறம்.251) ஓவத்தன்ன தன் இடனுடை மனையின்கண், “பாவை யன்ன குறுந்கொடி மகளிர், இழைநிலை நெகிழ்த்த மள்ளன்” (புறம்.251) என்றும், வேறொரு துறவியைக் காட்டி, இவன், பண்டு, “இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவனாயினன்;” இப்போது, அருவி நீரோடுவதால், “நிறம் பெயர்ந்து, தில்லையன்ன புல்லென் சடையோடு, அள்ளிலைத் தாளி” (புறம்.252) கொய்கின்றான் என்றும் கூறுகின்றார். இவ்வாறு துறவுபூணும் உரவோர், அதனைப் பூணா முன் தம் நாட்டு அரசர்க்குப் “படை வேண்டுவழி வாளுதவியும், வினை வேண்டுவழி அறிவுதவியும், வேண்டுப வேண்டுப” (புறம்.179) வேந்தர்க்கு வழங்கி வீறு பெற்றவராவர். தம் அரசன் ஆண்மையும் சாயலும் வண்மையும் உடையனாதல் வேண்டும் (புறம்.55) என அவற்கு அறிவுறுத்துவர். எவ்விடத்து ஆடவர் நல்லவரே அவ்விடமே நிலவுலகில் சீரிய நலமுடைத் தென்று கருதும் (புறம்.187) நயமுடை யோராவர். இச்சான்றோர் நற்குண நிறைவால் சால்புடைய ராதலே யன்றி மறமாண்பிலும் சால்புடையராவர். மறக்குடியிற் பிறந்தார், “குழவி யிறப்பினும் ஊன்றடி பிறப்பினும், ஆளன்றென்று வாளிற்றப்பார்” (புறம்.74); மானம் படவரின் உயிர் வாழார். “தமர் தன் தப்பின் அது நோன்றலும், பிறர் கையறவு தான் நாணுதலும், படைப்பழிதாரா மைந்தினனாகலும், வேந்துடை யவையத்து ஓங்குபு நடத்தலும்” (புறம்.157) ஒவ்வொருவருக்கும் உளவாகும் உயர் பண்புகளாகும். தாம் எத்துணைவலியராயினும், அவ்வன்மை தோற்றுவிக்கும் செயல் நிகழுமிடத்து அது குறித்துத் தம்மை வியவார் (புறம்.30); சொல்பெயராத் துணி நாவுடையர் (புறம்.341). அவர் பெற்றிருந்த ஒளியினைக் கண்டு வியந்த மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் என்னும் சான்றோர், “நல்லரா வுறையும் புற்றம் போலவும் கொல்லேறு திரிதரு மன்றம் போலவும் ஆற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை உளனென வெரூஉ மோரொளி வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே” (புறம்.309) என்று பாராட்டுகின்றார். ஈமக் கடன்: இத்தகைய மறச்சான்றோர் போரில் புகழுண்டாக மடிவராயின், இவருடைய பெயரும் பீடும் ஒரு நல்ல கல்லில் எழுதி அதனை ஓர் சிறப்புடைய இடத்தே நட்டு, மயிற்பீலியும் மாலையும் சூட்டி வழிபாடு புரிவது பண்டைத் தமிழ் நன்மக்கள் கொண்டிருந்த நற்கொள்கையாகும். “பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி, மரல் வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு, அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித்து, இனி நட்டனரே கல்லும்” (புறம்.264) என்று சான்றோர் கூறுதல் காண்க. இந் நடுகல்லையும் பட்டவிடத்தே நடாது வழிச் செல்வோர் கண்டு வழிபடுமாறு, பலரும் செல்லும் வழியருகே நடுவது இயல்பு என்பார், “நல்லமர்க் கடந்த நாணுடைமறவர், பெயரும் பீடுமெழுதி அதர்தொறும் பிறங்கு நிலை நடுகல்” என்றும், “அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்” என்றும் சான்றோர் (அக.67,131) கூறுவதனால் அறியலாம். இக்கல்லை வழிபடுவோருள் கோவலர் வேங்கைப் பூவைப் பனை நாரால் மாலைதொடுத் தணிந்து வழிபாடு செய்கின்றனர் (புறம்.265). ஏனையோர் இறப்பின், அவர்களைச் சுடுவது, தாழியிற் கவித்துப் புதைப்பது என்ற இருவகைச் செயல்கள் காணப்படு கின்றன. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இறந்த போது. “நெடுமாவளவன் தேவருலக மெய்தின னாதலின், அன்னோற் கவிக்கும் கண்ணகன் தாழி” (புறம்.228) எனத் தாழியிற் கவித்த செய்தி கூறப்படுகிறது. பூதப் பாண்டியன் என்பான் சுடலையில் வைத்துக் கொளுத்தப் பெறுகின்றான், அவன் மனைவியும் தீயிற் பாய்ந்து உயிர்விடுகின்றாள் (246). இறந்தாரைப் பாடையிற் கிடத்தி வெள்ளாடையாற் போர்த்துச் செல்லும் வழக்கு (புறம்.286), பண்டை நாளிலும் காணப்படுகிறது. கணவனை இழந்த மகளிர், பழஞ் சோறுண்டு பரற் பெய் பள்ளியில் பாயின்று வதியும் கைம்மை மேற்கொள்கின்றனர். (புறம்.246) இறந்தோர்க்குப் பிண்டம் படைத்து வழிபடும் செயல் (புறம்.234,363) பண்டை நாளை வழக்கே யாகும். காதலன்புடைய மனைவி இறந்தவிடத்துக் கணவன் வருந்தும் நிலையினைத் தபு தாரநிலையென்று (புறம்.245) சான்றோர் காட்டி, வருந்தும் திறத்தை மிக உருக்கமாகப் பாடுகின்றனர். சுடுதலினும் தாழியிற் கவித்துப் புதைப்பது முதியோர்க்கும் செல்வமிக் கோர்க்கும் நிகழ்ந்திருக்குமோ என்று நினைப்பதற்குத் தாழிகவிக்கும் செயல் கூறும் பாட்டுகள் இடந்தருகின்றன. வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்ந்தோர் முடிவில் தவமே சீரிதென்று கருதுகின்றனர். “வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு, ஐயவி யனைத்தும் ஆற்றாது” (புறம்.358) என்று ஒரு சான்றோர் கூறுகின்றார். கொள்கைகள்: இனி, இப் பண்டை நன்மக்களிடத்தே மிகப்பல கொள்கைகள் காணப்படுகின்றன. நாள் பார்த்தல், புள்நிமித்தம் காண்டல் (புறம்.124) வானத்தே மீன் விழுந்தால் அரசர்க்குக் கேடு வருமெனல் (புறம்.221), நடுப்பகலில் தும்பி பறப்பதும், இரவில் விளக்கு நில்லாமையும், கூகை குழறலும், பெருந்தூக்கம் வருதலும் துந்நிமித் தங்களென்றல் (புறம்.280) என்பன முதலியன நிமித்தங்களாகச் சான்றோர் உரைக்கின்றனர்! எண்டிசையும் எரிகொள்ளி வீழ்தலும் இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றலும், ஞாயிறு பலவிடத்தும் தோன்றுதலும், கெடுபுள்ளோசையும், பல்வீழ்தலும், எண்ணெயாடலும், யானை யேறுதலும், உடைகளை உடுத்தலும் பிறவும் கனவிற் காணப்படுதல் கூடாது: கண்டார்க்குத் தீங்குண்டாம் (புறம்.41). நாட்டில் மழை யில்லையாயின் அதற்கு அரசன் கோல்நிலை திரிதல் ஒருகாரணமாதலுடன், கிரகங்கள் தம் நிலை பெயரினும் மழை யின்றாம் (புறம்.117). இப்புறநானூற்றுக் காலத்தே வானுலகப் பொருள்களை ஆராய்ந்தறிந்த சான்றோர் இருந்திருக்கின்றனர். “செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும் இனைத்தென் போரும் உளரே” (புறம்.30) என வரும் சான்றோர் சால்புரையால் தெளிகின்றோம். அரசனுடைய போர் முரசிற்கு நீராட்டும், குருதிப் பலியிட்டுச் செய்யும் பூசனையும் நடைபெறுகின்றன; அம்முரசிருக்கும் கட்டிலின் கண் பிறர் எவரும் படுத்துறங்கல் கூடாது; உறங்குவோர் உளராயின் அவரைக் கொல்வதே தக்க தண்டமாகும். விற் பயிற்சி செய்வோர் சேய்மையில் ஒரு கம்பம் நிறுத்தி, அதனைக் குறியாகக் கொண்டு அம்பெய்து பயில்வர். “விளங்கு படை கன்மார் இகலின ரெறிந்த அகலிலை முருக்கின், பெருமரக் கம்பம்” (புறம்.169) என்பதனால் அது தெரிகின்றது. “முருகு மெய்ப்பட்ட புலைத்தி பொல” (புறம்.259) என வருதலால் மகளிர் மருள்கொண்டு தெருவில் ஆடித்திரியும் இயல்பும் அந்நாளில இருந்தது தெரிகிறது. நன்மக்கள் விலை மகளிரைக் கூடுதல் குற்றமாகும். “தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக என் தாரே” (புறம்.73) என்று சோழன் நலங்கிள்ளி கூறும் வஞ்சினத்தால் இக்கருத்து விளக்க மெய்துகிறது. விலைமகளிர் வேறு பரத்தையர் வேறு; இவ்விருவரையும் ஒரு திறமாகக் கருதுவது வழுவாகும்.* இந்நாளி லிருந்த சான்றோர்க்குத் தாம் வாழ்ந்த நாட்டின்பால் இருந்த அன்பு அளவிடற் பால தன்று. பாரி உயிர்நீத்த பின்னர், அவனோடு உடனிருந்து ஒருவாழ்வு வாழ்ந்த கபிலர், அவனுடைய பறம்பு நாட்டை விட்டு நீங்குங்காலத்து, அதனைப் பிரியமாட்டாது வருந்தி யுரைக்கும் உரைகள் அவரது நாட்டுப் பற்றின் நயப்பாட்டினை நன்கு நவில்கின்றன. “பெட்டாங்கீயும் பெருவளம்பழுனி, நட்டனை மன்னோ முன்னே இனியே, பாரிமாய்ந்தெனக் கலங்கிக் கையற்று, நீர்வார் கண்ணேம் தொழுது நிற்பழிச்சிச், சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே” (புறம்.113) என்பது அதற்கு நல்ல சான்று பகரும். இனி, பண்டைச் சான்றோர், தம் மனம் இனிக்குமாறு நலம் செய்த நன்மக்களைத் தூய நாவால் செந்தமிழால் வாழ்த்துவது மரபாகும். பொதுவாக நீடுவாழ்க என்ற கருத்தமைய, வாழ்நாள் ஆற்று மணலினும், கடற்கரை நுண் மணலினும், விண்மீனினும் பலவாக வாழ்வாயாக என்பது பெரும்பான்மை. அதியமான் நெடுமான் அஞ்சி சாதலை நீக்கும் வன்மை பெற்ற நெல்லிக் கனியைத் தானுண்ணாது ஒளவைக்குத் தந்தானாக, அதனைப் பாராட்டி வாழ்த்த லுற்ற அவர், “போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி, பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி, நீல மணிமிடற் றொருவன்போல, மன்னுக பெரும நீயே” (புறம்.91) என்று வாழ்த்துவதும், நாஞ்சில் வள்ளுவனது வண்மை நலங்கண்டு வியந்த ஒரு சிறைப் பெரியனார், “நீ வாழியர் நின்தந்தை தாய் வாழியர் நிற் பயந்திசினோரே” (புறம்.137) என்று வாழ்த்துவதும், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பார், பிட்டங் கொற்றனது பெருங்கொடையை வியந்து வாழ்த்தலுற்று, அவன் காலில் முள்ளும் தைத்தல் கூடாது என்பார், “அன்னனாகலின் எந்தை யுள்ளடி, முள்ளும் நோவ வுறாற்க தில்ல, ஈவோ ரரிய விவ்வுலகத்து, வாழ்வோர் வாழ அவன்தாள் வாழியவே” (புறம்.171) என்று வாழ்த்துவதும், பொறையாற்றுக் கிழானை வாழ்த்தக் கருதிய கல்லாடனார், அவனது நாட்டை, “துளிபதன் அறிந்து பொழிய, வேலியாயிரம் விளைகநின் வயலே” (புறம்.391) என்று வாழ்த்து வதும் எண்ணுந்தோறும் மிக்க இறும்பூது பயக்கின்றன. பண்டைத் தமிழ் வேந்தர் தமக்கு ஏதேனும் பெருங்குறை நேரின் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கும் செயலொன் றுடையராவர். இதனை வடக்கிருத்தல் என்பர். இச் செயலை மேற்கொண்டோன், மக்கள் வழக்கம் இல்லாததோரிடத்தே புல்லைப் பரப்பி வடக்கு நோக்கி யிருந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் துறப்பன். இந்நூற்கண் இவ் வடக்கிருக்கும் செயல் பெரிதும் வேந்தராற்றான் மேற்கொள்ளப்படுகின்றது. கரிகாற் பெருவளத்தானொடு பொருது புறப்புண்ணுற்றது காரணமாக மானம் பொறாது சேரமான் பெருஞ் சேரலாத னென்பான் வடக்கிருந்த செயலை, “உவவுத் தலை வந்த பெருநாளமையத்து, இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர், புன்கண்மாலை மலை மறைந்தாங்குத், தன்போல் வேந்தன் முன்பு குறித் தெறிந்த, புறப்புண் நாணி மறத்தகை மன்னன், வாள் வடக்கிருந்தனன்” (புறம்.65) என்று கழாத் தலையாரும், “மிகப் புகழுலக மெய்திப் புறப்புண் நாணி வடக்கிருந்தோனே” (புறம்.66) என்று வெண்ணிக் குயத்தியாரும் பாடுகின்றனர். இவ்வாறே கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்ததும், அவனைக் காணாதிருந்து காண்டற்கு வந்த பிசிராந்தையார் என்னும் சான்றோர் வடக்கிருந்ததும், அச் சோழற்கு அமைச்சுக் கடம்பூண்டொழுகிய பொத்தியார் வடக்கிருந்ததும் இவ்வழக்கின் மிகுதியை நன்கு வற்புறுத்துகின்றன. இத் தமிழ நன்மக்கள் இசை நாடகங்களை வளர்ப்பதில் மிக்க ஊக்கமுடையராவர். கூத்தர், பாணர், பொருநர், வயிரியர், கொடியர், விறலியர், யாழோர் என்பவர் முதலிய இசைவாணர் மிகப் பலர் இருக்கின்றனர். இவரது இசைநலத்தை முடிவேந்தர் முதல் அனைவரும் பாராட்டி, இவர்கட்குப் பரிசில் நல்குவர். “ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென, மாட மதுரையும் தருகுவன்” (புறம்.32) என்று சான்றோர் கூறுதல் காண்க. யாழ் இசைப்போர் மாலையிற் செவ்வழிப் பண்ணும், காலையில் மருதப்பண்ணும் இசைத்தற்குரியர்; நின் கொடை நலத்தால் மயங்கி, தலை தடுமாறி, “மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி” இசை நெறியை “எமர் மறந்தனர். அது நீ புரவுக் கடன் பூண்ட வண்மையானே” (புறம்.149) என்று வன்பரணர் வல்விலோரிக்குக் கூறுகின்றார். மண்முழா, பண்யாழ், கண்விடு தூம்பு, களிற்றுயிர், எல்லரி, ஆகுளி, பதலை, முதலாக இசைக்கருவிகள் மிகப் பலவாகும். அவற்றை இசைக்குந் துறை இருபத்தொன் றென்பார், “மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி” (புறம்.152) என்று சான்றோர் கூறுகின்றனர். பண்டைத் தமிழ்ச் சங்க இலக்கியம் முழுதும் இசைக் கலைக்கும் நாடகக் கலைக்கும் பேராதரவு தந்து சிறப்பித்த பெருமையே பேசப்படுமெனின், அது சிறிதும் புனைந் துரையாகாது. இதுகாறும் புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகம் என்பது பொருளாக, பண்டைத் தமிழ் நன்மக்களிடையே இருந்த சமூக வகைகள், அவர்தம் உறையுள் வகை, உண்டிவகை, உடைநலம், அணிவகை, தொழின் முறைகள், வாணிபம், அரசியல், போர்முறை, வள்ளன்மை, இல்வாழ்க்கை, வீரம், சான்றாண்மை, கடவுட் கொள்கை, துறவு, ஈமக்கடன், கொள்கைகள் முதலிய கூறுபாடுகளை ஒருவகையாகக் கூறிவரக் கேட்குமாற்றால், என்னைப் பேசும்வகையில் ஊக்கி மகிழ்வித்த உங்கள் திருமுன், முடிவாக அத் தமிழ் நன்மக்கள் மேற்கொண் டின்புற்ற விழாக்கள், விளையாட்டுகள் முதலிய வற்றைப் பற்றிச் சிறிது கூறி என் சொற்பொழிவை முடித்துக் கொள்ளக் கருதுகின்றேன். விழா: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைச் சிறப்பிக்கப் புகுந்த நெட்டிமையார் என்னும் சான்றோர், அப் பெருவழுதியின் முன்னோன் ஒருவன் கடற்றெய் வத்துக்கு முந்நீர் விழாவொன்றாற்றி, பஃறுளியாற்றினை ஏற்படுத்தினான் என்பார், “குடுமிதங்கோ,..... முந்நீர் விழவின் நெடியோன், நன்னீர்ப் பஃறுளி” (புறம்.9) என்று குறிப்பிடுகின்றார். பெரிய மாட மனைகளில் விழாக்கள் கொண்டாடப் படுகின்றன; அக்காலத்தே செம்மறிக் கிடாய்களைப் பலியிடுகின்றனர் (புறம்.33). போர் நிகழ்ந்தபின் அதன்கண் விளைந்த வெற்றிகுறித்து வெற்றி விழா வயர்தலும் இந்நன்மக்கட்கு இயல்பு (புறம். 84). விழாக் காலங்களில் களமர் அரியல் என்னும் கள்ளை ஆமையிறைச்சியுடன் உண்டு, ஆரல் மீனைச் சுட்டுக் கதுப்பி லடக்கிக் கொண்டு உறக்கமின்றி இரவு முழுதும் விளையாட்டயர்கின்றனர் (புறம்.212). திருமணங்களை வதுவை விழவென்று கூறி அக்காலத்துப் புதியராய் வந்தோரைச் சிறப்பிக்கும் செயலை, “வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம், வெவ்வாய்ப் பெய்த பூதநீர் சால்க” (புறம்.372) என்று மாங்குடி கிழார் உரைக்கின்றார். இவ்வாறு சிறு சோற்றுவிழாவும், வில்விழாவும் பிறவும் காணப்படுகின்றன. விளையாட்டு: இனி, விளையாட்டு வகைகளைக் கூறலுற்றால், என்சொற் பொழிவு மிக நீளும் என்று அஞ்சுகின்றேன். குறவர் சிறார் ஊகம் புல்லின் நுனியில் உடைமுள்ளைச்* செருகி, வளாரால் செய்த வில்லில்வைத்து அம்பெனத் தொடுத்து விளையாடும் நலமும், “நெடுநீர்க் குட்டத்துத் துடும் எனப்பாய்ந்து, குளித்து மணற்கொண்ட” இளமை நலமும், மகளிர் ஓரையாடுவதும், கழங்காடுவதும், கடலிற் குதித்து விளையாடுவதும், நரை முதியோர் சூதாடுவதும் இத் தமிழ் நன்மக்கள்பால் பெருகக் காணப்படுகின்றன. மற்போர்க்குக் குறைவில்லை; அல்லிக் கூத்தும் குரவைக் கூத்தும் ஆங்காங்கு நிகழ்கின்றன. கரும்புவிளை கழனியில் வேலைசெய்யும் உழவர், அதன் வேலிக்குப் புறத்தேயிருந்து கரும்பு கேட்போருக்கு அறங்குறித்துச் சில வெட்டி வெளியே யெறிகின்றனர்; அவ்விடம், கூத்தராடும் களம்போலத் தோன்றுகிறதென்பார், “புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர், புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப், பூப்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர் ஆடுகளம் கடுக்கும்” (புறம்.28) என்று கூறுகின்றனர். வழக்கு: ஏணிச்சேரி முடமோசியார் என்பார் ஆஅய் என்பானைக் கண்டு பாடிப் பரிசில் பெற்றுவருமாறு விறலியொருத்திக்குக் கூறுவாராய், நீ ஆய் அண்டிரனைக் கேட்டிருப்பையே யன்றிக் கண்டிராய்; காண்டல் வேண்டினையாயின், நின் கொண்டைமேல் காற்றடிக்கச் செல்க என்பார், “நின் விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக், கலவமஞ்ஞையிற் காண்வர இயலி...... சென்மே” (புறம்.133) என்கின்றார். சிறக்கச் செல்க என்றற்கு அக்காலைச் சான்றோர் 'கூந்தலில் வரைவளி யுளரச் செல்க’ என்னும் வழக்கொன்றினை வழங்கி யிருத்தலைக் காண்மின். “இல்லார்க்குக் கிழியீடு வாய்த்தாற்போல்” என்று திருவிளை யாடற் புராணம் முதலிய பிற்கால நூல்களிற் காணப்படும் வழக்காறு போலக் “கிளியீடு வாய்த்தாற் போல” என்றொரு வழக்கு இத்தமிழ்ச் சான்றோர் வழக்கின்கட் காணப்படுகிறது. தன்னை நாடிவரும் இரவலர்க்கு நாஞ்சில் வள்ளுவன் தன் பெருவளத்தை வரையாது வழங்கும் வண்மையைச் சிறப்பிக்கப் புக்க மருதனிளநாகனார் என்னும் சான்றோர், நாஞ்சில் வள்ளுவன், “கிளிமரீஇயவியன் புனத்து, மரனணி பெருங்குரலனையன்” (புறம்.138) என்ற பாராட்டு மாற்றால், இவ்வழக்காற்றினைப் புலப்படுக்கின்றார். எறும்பு முட்டைகொண்ட திட்டையேறின் மழைபெய்யும் என்ற வழக்கு இக்காலத்து முண்டு; எறும்பு முட்டைகொண்டு செல்லக் காணின் விரைவில் மழை வரும் என்று நாமும் சொல்லுகின்றோம். இவ்வழக்கும் கருத்தும் பல நூற்றாண்டுகட்கு முன்பே நிலவிய தொன்று என்பதை, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், “பொய்யா எழிலி பெய்யிடம் நோக்கி, முட்டைகொண்டு வற்புலம் சேரும், சிறுநுண் ணெறும்பு” (புறம்.173) என்று கூறுவதனால் தெளியலாம். சங்கு வயிற்றில் முத்துண்டாகும் திறம், இக்கால ஆராய்ச்சியாளரால் வேறுவகையாகக் கண்டுரைக்கப்படு கிறதெனினும், பண்டையோர், அது மழைத்துளியால் உண்டாயிற் றெனக் கருதியது, “மிசைப்பெய்த நீர் கடற்பரந்து முத்தாகுந்து” (புறம்.380) என வரும் சான்றோ ருரையால் துணியப்படுகின்றது. “நிலத்துக் கணியென்ப நெல்லும் கரும்பும்” எனப் பாராட்டப்படும் கரும்பின் வகைகள் பல நம் நாட்டிற் காணப்படு கின்றன. இவற்றுள் சாவகக் கரும்பென்றும், பன்றிக் கரும்பென்றும் இருவகை யுண்டு. இவற்றுள் பன்றிக் கரும்பு, பன்றி நாட்ட தென்று எங்கள் ஒளவையார்குப்பத்துக்கு அருகிலுள்ள ஆலைக் கிராமத்தில் வாழ்ந்த முதியோர் கூறக் கேட்டிருக்கின்றn. அவ்வூரில் நெடுங் காலமாகக் கரும்பன்றி வேறு விளைபயன் சிறப்பாக இல்லாமை பற்றியே, அதற்கு ஆலைக்கிராமம் என்னும் பெயர் வழங்கி வருவதாயிற்றென்பது ஓய்மா நாட்டார் நன்கறிந்த செய்தி யாகும். சாவகக்கரும்பு என்பது எக்காலத்து நம் நாட்டிற்கு வந்ததென்று அவ்வூரவர்க்குத் தெரியவில்லை. புறநானூற்றுக் காலத்தே கரும்பு வகை யொன்று வேற்று நாட்டி விருந்து கொணரப்பட்டிருக்கிறது. இதனை எங்களூர்க்குரிய முதல்வியாகிய ஓளவையார், அதியமானைப் பாடுமிடத்து, அவன் முன்னோர், கரும்பினை வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த செய்தியைக் குறிப்பிட்டு, “அமரர்ப் பேணியும் ஆவுதியருத்தியும், அரும் பெறல் மரபிற் கரும்பிவண் தந்தும், நீரக விருக்கை ஆழி சூட்டிய, தொன்னிலை மரபின் நின் முன்னோர்” (புறம்.99) என்றும், “அந்தரத்து அரும்பெற லமிழ்த மன்ன, கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே” (புறம்.392) என்றும் கூறியிருக்கின்றார். இனி இப்புறநானூற்றுக்கு உரை கண்டசான்றோர், “அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும்” என்ற தொடர்க்குப் “பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத் தினின்று இவ்வுலகத்தின்கட் கொடுவந்து தந்தும்” என்று உரை கூறுகின்றார். “விண்ணுலகத்தினின்று” என்பதை வருவித்தமைக்குக் கராணம் தெரிந்திலது; அவரும் கூறினா ரில்லை. பிறாண்டும், “அந்தரத்து அமிழ்தமன்ன கரும்பு” என்று ஒளவையார் கூறியருளினா ரேயன்றி, அந்தரத்தினின்று கொணரப்பட்டதென்றாரில்லை. இவணென்ற சொற்கு இவ்வுலகமென்று பொருள் கொண்டமையின், கரும்பிருந்த விடம் அவணென்றாகித் தேவருலகமாயிற்றுப் போலும். சீனர் தேவர் (celestials) எனப்படுதலின், அவர் நாட்டிலிருந்து ஒருகால் இக்கரும்பு கொண்டுவரப்பட்டிருக்குமோ என்று நினைத் தற்கு இடமுண்டாகிறது. இது நன்கு ஆராய் தக்க தொன்றாகும். வையாவிக்கோப் பெரும் பேகனை அவன் மனைவி கண்ணகி காரணமாகப் பாடிச் சென்ற கபிலர், வேண்டுங் காலத்துப் பெய்வித்தற்கும் வேண்டாக் காலத்து ஒழித்தற்கும் குறவர் மழையைப் பலிதூவிப் பரவுவர் என்ற கருத்தமைய, “மலைவான் கொள்கென உயர்பலி தூஉய், மாரியான்று மழைமேக் குயர்கெனக், கடவுட் பேணிய குறவர் மாக்கள்” (143) என்று பாடுகின்றார். இப்பாட்டிற் காணும் குறவர் வழக்கு, இக்காலத்தே பர்மிய நாட்டவர்பாலும் காணப்படுகிறதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றார்கள். இவ்வாறு ஆராய்ச்சியாளர் செய்யும் ஆராய்ச்சிகள் பலவற்றாலும் பல்வகைப் பொருள்களைத் தெரிந்து கோடற்கு இடமாய், ஆராய் வார்க்கு ஆராயுந் தோறும் புதுக் கருத்துக்களை வழங்கியின்புறுத்தும் அறிவின்ப நிலையமாய்ப், பண்டைத் தமிழ் நன்மக்களின் நாகரித்தையறிந்து தெளிதற்குச் சீரிய சான்றார்ய் விளக்கும் இப் புறநானூறு காட்டும் பண்டைத் தமிழ் நாகரிகத்தை இதுகாறும் ஓரளவு என் சிற்றறிவின் சிற்றெல்லையில் நின்று கண்டு உங்கள் திருமுன் தெரிவித்தேன். இதனை அன்போடு கேட்டுச் சிறப்பித்த உங்கட்கு என் வணக்கத்தையும், இதனை ஆராய்ந்து கண்டுரைத்தற்கு வேண்டும் இடமும் காலமும் வாய்ப்பும் அமைத்தளித் துதவிய தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத் தினர்க்கு என் அன்பார்ந்த நன்றியறிவினையும் பணிவோடு தெரிவித்துக்கொண்டு என் சொற்பொழிவை இவ்வளவில் நிறுத்திக்கொள்கின்றேன். - புறநானூறு மாநாடு 22.4.44  10. முதனூலா? மொழி பெயர்ப்பா ? நம் நாட்டவருள் ஒரு சில மொழி யினர்க்குப் பழைமைக்கண் மிக்க விருப்பமும் நன்மதிப்பும் உண்டு. அதற்காகப் பல பொய்களைப் புனைந்துரைத்துப் பழைமை காட்டி மகிழ்வது அவர்கள்பால் இயல்பாக இருக்கிறது. ஊரை மூதூர் என்பதும், நூல் களை முதுநூல் என்பதும் அவர்பால் மிக்கு விளங்குகிறது. காலத்தின் பழைமையொன்றே கொண்டு பெருமை நினைப்பதும் தருவதும் பெரும் பேதைமை. அதனால், "பண்டை யோர்க்குத் தான் நுண்ணறிவு உடைமை; இந்நாளையோர் அன்னர் அல்லர்" என்று நினைக்கும் இழிந்த பண்பு அம்மக்கள் உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ளது. அவர்பால் பயில்பவர்க்கும் அப்பண்பே உருவாகித் தம்மையும் தம்பின் வருவாரையும் நுண்ணிய அறிவின ரல்லர் எனக் கருதும் தவறு நரம்புக்கால் தோறும் ஊடுருவி நிற்கிறது. அம் மடமக்கள் பெருகியதால் நம் நாட்டில் விஞ்ஞான வளர்ச்சிக்கும் அதன் ஆக்கத்துக்கும் பெரிய தடையும் ஊறும் உண்டாயின. திங்கள் மண்டிலத்தில் மனிதன் சென்று இறங்கிச் சிலபோது தங்கி மீண்டான் என்ற நிகழ்ச்சி தமது பொய்ந்நெறிக்குக் கேடுதரும் என்ற காரணத்தால் அச்செய்தி வெறுங் கற்பனை; மனிதனாவது மதி மண்டிலம் செல்வதாவது என்று கேட்பவர் மனவலியை யழிக்கும் படுபொய் பகர்ந்து மக்களை மயக்கும் போலியறிஞர் சிலர் இந்நாளில் ஊர்தொறும் இருந்துகொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. பொய்யர் கூட்டமும் அவரது பொய்யும் போய்மடியும் நாளே நாமும் நம்நாடும் அறிவு நலம் பெறும் அழகிய நன்னாளாகும். காலத்தால் முந்தும் நூல் பிந்தும் நூல் உண்டு. அவற்றின்கண் வேற்றுமையும் பெருமை சிறுமையும் நோக்கும் கீழ்மைப் பண்பு நம் நாட்டில் இந்த அளவில் நிற்கவில்லை. நூல்கள், தனிமுதலா வழிநூலா, சார்பு நூலா, புடை நூலா என ஆராய்வதும், அதனால் முதனூற் கருத்து எங்ஙனம் வளர்ந்து திருந்தி இந்நாளைய நிலைமை அடைந்துள்ளது என்ற உண்மை காண்பதும் இயலுகின்றன; மக்கள், காலப் போக்கில் மனம் திருந்தி அறிவு தெளிவுற்றுச் செம்மை நெறியில் சீர்மை பெறும் திறத்தை நன்கு உணரும் வகை நமக்கும் உண்டாகிறது. தொல்காப்பியர் காலத்தேயே நூல்கள் முதலும் வழியும் என வளர்ந்து விரிந்தன என்பது "உரைபடு நூல்தாம் இருவகை இயல, முதலும் வழியும் என நுதலிய நெறியின" என்ற நூற்பாவால் இனிது விளங்குகிறது. முதனூல் உயர்ந்தது, வழிநூல் தாழ்ந்தது; வழிநூல் தூயது, முதனூல் தெளிவில்ல தென்று பிணங்கி வேறுபட்டு ஒதுக்கும் நிலை முன்னாளில் மக்களிடையே தோன்ற வில்லை; தெளிவில்லாத சிலரிடையே அச் செயல் சில காரணம் பற்றித் தோன்றியதுண்டு. அதன் விளைவாக நூல்கள் பல பேணு வாரற்று இறந்தன. காலப் போக்கில், உணர்வும் செயலும் மிகப் பெறும் வளர்ச்சி யால் மக்கள் மனப்பண்பும் வாழ்க்கைத் திறமும் பெருகி விரிகின்றன; உலகியல் வாழ்வே ஒரு பெருங்கலைக் கூடமாய் மக்கள் அறிவுக்குத் தெளிவுதந்து மாண்புறுத்துகிறது. அதனால் அறிவு விரிகிறது; கருத்து மலர்கிறது; உண்மையுணர்வு கூரிதாகிறது. மனத்திடை ஆயிரம் எண்ணங்கள் தோன்றி வாழ்வைப் பெருக்குகின்றன. இவ்வகையில், தாம் கண்டதைப் பிறரும் கண்டு இன்புறச் செய்வது, கரும்பு தின்றற்குக் கூலி பெறுவது போல ஒருவருக்குப் பெரு மகிழ்ச்சியும் ஊக்கமும் பயக்கின்றது; அது காணும் அறிஞன் தான் அறிந்ததையும் எண்ணியதையும் கருதியதையும் நூல் வடிவில் தருகின்றான். இவ்வாற்றால் தோன்றும் நூற்பொருளும் முன்னே காணப்பட்டதொன்றை அடியாகக் கொண்டு மலர்வதும், புதிதாக ஒன்றினைக் கண்டுரைப்பதுமாக அமைகின்றது. புதிது கண்டுரைப்பது முதனூல்; அதனை அடியாகக் கொண்டு விரிந்து மலர்வது வழி நூல். ஒரு காலத்தே முதனூல் படைப்போர் சிலரும், வழி நூல் எழுதுவோர் பலருமாக நம்மிடையே இருந்துள்ளனர். வழி நூலார் நெறியை நுணுகிக் கண்ட தொல்காப்பியர், "வழியின் நெறியே நால்வகைத் தாகும்" "தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழி பெயர்த்து, அதர்ப்பட யாத்தலொடு அனைமரபினவே" என உரைக்கின்றார். இதனை நோக்குமிடத்து முதனூல் தமிழேயாக இருக்க வேண்டும் என்பதில்லை; வேற்று மொழியாகவும் இருக்கலாம்; வேற்று மொழி நூலை "மொழி பெயர்த்து அதர்ப்படயாத்தல்" வேண்டு மென்று தொல்காப்பியர் உரைப்பது நன்கு தெளிவாகும். இந்நாளில் விஞ்ஞான நூல்கள் பல தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்; விஞ்ஞான அறிவு மக்களிடையே பரவினாலன்றி, விரைந்து முன்னேறும் ஏனை நாட்டவரிடையே பொருளாற் சமநிலையும், பண்பால் நன்மதிப்பும் பெறுதல் இல்லையாம் என்று அறிஞர் பலர் ஆர்வத்தோடு உரைப்பது பொருத்தமே யாகும். இக் கருத்து வெளியாய போது முதனூல் உயர்ந்தது; மொழி பெயர்த் துரைக்கும் வழிநூல் தாழ்ந்தது என்று எவரும் உரைக்க வில்லை; அறிவுடையோர் நினைக்கவும் இல்லை. முதனூலைவிட மொழி பெயர்ப் புக்கள் மிகவுயர்ந்து பலர்க்குப் பயன்பட்ட துண்டு. ஈப்ரு மொழியிலிருந்த விவிலிய நூல் ஆங்கிலத்தில் பெயர்க்கப் பட்டபின், கற்றவர் அனைவரும் அதனையே விரும்புகின்றனர். முதனூலாகிய வான்மீகி இராமாயணத்தினும் மொழி பெயர்ப்பாகிய கம்பராமாயணம் மிக்க விருப்புடன் பயிலப்படுகிறது. மொழி பெயர்ப் பென்பது இன்னது எனப் பலர்க்குத் தெரிய வில்லை. ஆங்கிலநூல் ஒன்றைத் தமிழில் மொழி பெயர்ப்பதென்பது, ஆங்கிலத்தை வரிவரியாகச் சொல் சொல்லாகப் பிரித்துத் தமிழ் காண்பது அன்று; ஆங்கிலத்தில் உள்ள கருத்தைத் தொகுத்தும் விரித்தும் தொகைவிரி வகையிலும் தமிழில் எழுதுவதாகும். அது விளங்குதற்காகவே "மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல்" எனத் தொல்காப்பியர் சொல்லுகின்றார். இவ்வுண்மையறியாமல் சிலர் கம்பர் கருத்துகளை வால்மீகத்திலும் வான்மீகியின் உரைகள் சிலவற்றைக் கம்பரிலும் காண முயன்று கையறவு படுகின்றனர். கருத்தும் பொருளும் மொழி பெயர வேண்டுமேயன்றிப் பிறமொழி எழுத்தும் சொல்லுமன்று; எழுத்தையும் சொல்லையும் கொள்வது நல்லறிவுடைய மாந்தர் செயலன்று; அவ்வாறு செய்யின் மொழி பெயர்க்கும் நற்பணி விரைவில் வெற்றி பயவாது. தமிழில் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் சேக்கிழார் எழுதிய தமிழ்த் தனி முதனூல். இதன் ஆக்கத்துக்குச் சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகையும் நம்பியாண்டார் நம்பி நல்கிய திருத்தொண்டர் திருவந்தாதியும் அவர் காலவரலாற்றுச் செய்திகளும் சேக்கிழாருக்த் துணை புரிந்தன. அரசியல் அமைச் சராய் இருந்தமையின், வேண்டிய இடங்கட்குச் செல்லுவதும் வேண்டும் செய்திகளைத் தக்கோரைக் கேட்டுத் தெரிந்து கொள்வதும் அவருக்கு இயன்றன. திருத்தொண்டர் அனைவரும் செந்தமிழ் நாட்டு நன்மக்கள்; அவர் பேசியது தமிழ்; வாழ்ந்தது தமிழகம், வாழ்வு தமிழ் வாழ்வு; அவர்களின் வரலாறு காண்போர் வடபுலத்து இமயப் பகுதிக்கோ நடு நிற்கும் விந்தமலைச் சாரலுக்கோ செல்ல வேண்டா. அங்கு வழங்கும் வடமொழி நூல்களை ஆராய்ந்து அலமருதல் முறையன்று. இந்த உண்மை யறியாமல் சிலர் திருத்தொண்டர் புராணம் வடமொழியில் உபமன்யு சிவபக்த விலாசம் என்ற நூலிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டது எனக் கூறுகின்றனர். அதனை வற்புறுத்தத் திருத்தொண்டர் புராணத் தையே சான்று காட்டுகின்றார்கள். இப்பெருமக்களின் உண்மை நோக்கம் யாது? கயிலைத் திருமலைக் கடியில் முனிவர் சூழ உபமன்யு முனிவன் இருக்கையில், சுந்தரர் ஒளிப் பிழம்பாகக் கயிலை இறைவன் திருமுன் அணைவது கண்டு, அவர்கட்குக் காட்டிப் பின் அவர்கட்குச் சுந்தரர் வரலாற்றையும் அவர் உரைத்த திருத்தொண்டர் வரலாற்றையும் உரைத்தான் என்ற செய்தியைச் சேக்கிழார் தமது திருத்தொண்டர் புராணத்தில் எடுத்து மொழிகின்றார். இதனை, "என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை அன்று சொன்ன படியால் அடியவர் தொன்று சீர்திருத் தொண்டத் தொகைவிரி இன்றென் ஆதர வால்இங் கியம்புகேன்" என்று சேக்கிழார் கூறுகின்றார். இப் புராணக் கூற்றில், உபமன்யு முனிவர் பக்த விலாசம் என்ற நூலை வடமொழியில் உரைத்தார் என்றும், அதனை முதலாகக் கொண்டு சுந்தரரோ சேக்கிழாரோ உரைத்தார் என்று ஒரு செய்தியும் நமக்குச் சான்றாகக் கிடைக்கவில்லை. சேக்கிழார் பெரியபுராணம் எழுதத் துணை புரிந்தது வடமொழி உபமன்யு பக்த விலாசம் எனச் சிலர் உரைப்பது ஏன்? இந்தப் பக்த விலாசம் வந்த வரலாறு யாது? விசய நகர வேந்தர் வரிசையுள் அச்சுதராயர் ஒருவர்; இவர் நரசநாயக்கவுடையார் மகன் வீரப்பிரதாப அச்சுததேவ மகாராயர் என்றும், எம்மண்டலமும் கொண்டருளிய வேந்தர் என்றும் சிறப்பிக்கப் படுகின்றார். (கல். ஆண்டறிக்கை. 27/1911; 356/1912.) இவ்வேந்தனது ஆட்சியில் காஞ்சிபுரம் பகுதியில் போகைய தேவமகாராயர் என்பவர் பிரதானியாக விளங்கினார். அந்நாளில் சீனிவாசயக்ஞன் என்ற வடமொழிப் புலவன் காவியப் பெயரால் உபமன்யு சிவபக்த விலாசம், ஏகாம்பரேசஸ்தவம் என்ற நூல்களையும் வேறு இரண்டு நூல்களையும் செய்தான். காஞ்சி நகரத்து வித்வ சபை கூடி பக்த விலாசத்தை அரங்கேற்றம் செய்தனர். அந்த நாள் சகம். 1453. கர ஆண்டு கும்ப மாதம் 3 ஆம் நாள் வெள்ளிக்கிழமை. (9-2-1532); வேந்தன் அப்புலவனைப் பாராட்டிச் செய்யூரில் வீடும் நிலமும் கொடுத்துச் சிறப்பித்தான் என்று காஞ்சி புரத்து ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டொன்று (கல். ஆண்டறிக்கை. 274/1955-6) கூறுகிறது. இங்ஙனம், கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய பக்த விலாசத்தைக் கி. பி. 11-2 நூற்றாண்டில் தோன்றிய சேக்கிழாருக்கு முதனூலாய்த் துணை செய்தது என்பது உண்மையறிவுக்குப் பொருத்தமாகிறதா, அறிஞர்கள் காண்பார்களாக. இதுபோலவே, மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் என்ற நூல் ரௌரவாக மத்துப் பாச விமோசனப் படலத்து மொழி பெயர்ப் பென்று யாரோ சிலர் பொய் கூறிவிட்டனர்; அதனைச் சிவாக்கிரயோகிகள் என்பவர் மெய்யென்று நம்பிச் சங்கிரகம், விஸ்துருதம் என இருபாடி யங்களை வடமொழியில் எழுதினர்; மாதவச் சிவஞான முனிவர் தாம் தமிழ்ச் சிவஞான போதத்துக்கு எழுதிய சிற்றுரை பேருரை களில் அது, வடமொழி ரௌரவாகம மொழி பெயர்ப்பென்று எழுதினார். அந்நூல்களைப் படித்த சைவர் அனைவரும் உண்மை யென்றே எண்ணினர். அணிமையிற் சில ஆண்டுகட்கு முன் புதுச்சேரியில் பிரெஞ்சு நாட்டு அறிஞர் கூடி ரௌரவாகமத்தைக் கண்டு ஆராய்ந்து வெளியிட்டனர். அதன் கண் பாபவிமோசனமும் இல்லை; சிவஞான போதமும் இல்லை என்பது தெளிவாயிற்று. அதனோடு மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் தனித் தமிழ் முதனூல் என்பது கலக்கமறத் தெளிய விளங்குவதாயிற்று. இங்ஙனம் உண்மைகளைக் கண்டு உரைப்பதை விடுத்துப் பொய்யும் புனைந்துரையும் தொடுத்துப் பழைமையின் உண்மை நிலை தோன்றாவாறு செய்யும் புன்செயல் நாட்டில் சிறப்பாகச் சமய இலக்கியத் துறைகளில் இடம் பெற்றிருப்பது வருந்தத் தக்கது. இது போன்ற தீய செய்கைகளால் பழங்காலப் பல்லவர், சோழர், பாண்டியர், கங்கர், கடம்பர் முதலிய வேந்தர் மரபுகளின் உண்மை வரலாறு மறைந்து போயிற்று. மலைகள் குன்றுகள் ஆறுகள் நாடுகள் ஆகிய வற்றின் பழைமையியல் மாறி மறைந்திருக்கின்றன. சங்ககாலப் பாண வேந்தர் மரபு புராணவுலகத்து மரபினோடு தொடர்புண்டு உண்மையொளி இழந்துளது; பல்லவ மல்லனால் நிறுவப் பெற்ற கடற்கரை மாமல்லபுரம், மாபலிபுரமாய்ப், பல்லவர் வரலாற்றுண்மையைப் போக்கிவிட்டது. செம்மண்பரந்த நாடு என்ற பொருளில் நிலவும் நாடு அண்ணா நாடு; அந்நாட்டு மலை அண்ணாமலை; அருணகிரி, அருணாசலம், சோணகிரி, சோணாசலம் எனப் பொய்ப் பெயர் போந்து அதனை மறைத்து விட்டன. அந்நாட்டுச் செம்மண் மலையில் தோன்றிச் செந்நிலத்தில் தவழ்ந்து செந்நீர் பெருகி வரும் சேயாறு, சண்முகநதி என்றும் புராணவிருளிற் புகுந்து கையின் பெயர் கொண்ட பாகுநதி என்றும் பொய் மாலை சூடிப் பொலிகிறது. வடார்க்காடு மாவட்டத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி யோடிவரும் பாலியாறு வெள்ளிய மண்ணும் மணலும் பரந்த நிலப் பகுதியில் ஓடி வெண்மை நீர் பெருகிவருவது பற்றிப்பாலாறு எனப் படுவது; அதனைப் புராணச் சூழலிற் புகுத்திப் புலனாகாத வகையில் க்ஷீரநதி எனக் குழறுகின்றார்கள். அவ்வக் காலங்களில் நாடாண்ட மன்னர்களும் அரசியல் தலைவர்களும் செல்வர்களும் தோன்றித் திருக்கோயில்களில் வழிபாடாற்றித் திருப்பணி செய்து சிறப்புற்றனர். அவர்களின் பெயரும் பணியும் மறையும் வகையில், இந்திரன் முதலிய தேவர்களும், சூரியன் முதலிய கிரகங்களும், இராமன், தருமன், அருச்சுனன், வீமன் முதலிய இதிகாசத் தலைவர்களும், யானை, குரங்கு, பருந்து, நாரை, கழுகு முதலிய உயிரினங்களும் திருப்பணி செய்து உய்ந்ததாகப் பொய் புனைந்துரைக்கும் தலபுராணங்கள் தோன்றி உண்மை வரலாற்றை மூடி மறைத்துவிட்டன. நாட்டின் வரலாற்றுக் குறிப்புக்களாக உள்ள கல்வெட்டுக் களும், செப்பேடுகளும், பல்லாயிரக் கணக்கில் இந்தியப் பேரரசின் ஆட்சி எல்லைக்குட்பட்ட கல்வெட்டுத் துறையின்கண் புதை பட்டுள்ளன. 1903 ஆம் ஆண்டுக்குப் பின் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களை அத் துறையினர் வெளியிடவே இல்லை. இதனை ஏன் என்று கேட்பவரும் இல்லை; சுமார் 70 ஆண்டுகட்கு முன் வெளியான தொகுதிகளும் இப்போது எங்கும் கிடைப்ப தில்லை. கிடைக்கச் செய்யவேண்டுமென எண்ணும் அரசியல் அறிஞர்களும் தலைவர்களும் செல்வர்களும் இந்நாளில் நம்நாட்டில் இருப்பதாகத் தோன்றவில்லை. அரசியல் வாழ்வில் இருந்த அடிமையிருள் நீங்கி இருபத்தைந்து ஆண்டு கழிந்தனவே; வரலாற்றறிவுக் குரிய கல்வெட்டு ஆராய்ச்சிக் கமைந்தவை, சுமார் 100 ஆண்டுகளாகப்படி எடுக்கப்பட்டவற்றை வெளியிட்டு வரலாற்று அறிவுக்கு ஆதரவு செய்யும் நல்லரசு தோன்றவில்லையே என அறிஞர்கள் வருந்து கின்றனர். கல்லூரிகளில் மேனாட்டு வரலாறுகளை உயர்நிலையில் கற்றுப் பட்டம் பெற்ற அறிஞர்கள் மிகப் பலர் கல்வித்துறையிலும் கல்வெட்டுத் துறையிலும் தலைமை தாங்குகின்றார்கள்; எனினும், வரலாற்றுணர்வு பெருகிச் சிறப்பெய்துவிக்க வல்ல கல்வெட்டுக் களை மக்கள் எளிதில் பெற்று அறிவு பெறுமாறு செய்யும் பரந்த பண்புடையோர் முன்வராதிருப்பது மிகவும் வருந்தத் தக்கது; இந்நிலையை மனம் கொள்ளாது "மாண்டார் நீராடி" மகிழ்வது நமது அரசுக்கு மாண்பாகாது.  11. சங்ககாலப் பரணர்கள் சங்கத்தொகை நூல்களிற் காணப்படும் நல்லிசைச் சான்றோர் களுள் பரணரெனப் பெயருடையார் மூவர் காணப்படுகின்றனர். அவர்கள் பரணர், வன்பரணர், நெடுங்கழுத்துப்பரணர் எனப்படும். இவர்களுள் பரணருடைய பாட்டுக் கள் பரிபாடல், கலித்தொகை, ஐங்குறுநூறு என்ற மூன்று மொழிந்த ஏனையெல்லா வற்றிலும் உள்ளன. இலக்கண நூல் உரைகள் பலவும் இவர் பெயரைக் கபிலரோடு இணைத்துக் கபிலபரணர் என்று விதந்து கூறுகின்றன. இதுபற்றி, இவரைக் கபிலர்க்கு நண்பரென்று கூறுவதும் உண்டு. அவர் பாடியன அகத்தில் முப்பத்து நான்கும், குறுந்தொகையிற் பதினாறும், நற்றிணையிற் பன்னிரண்டும், பதிற்றுப்பத்திற் பத்தும், புறத்திற் பதின்மூன்றுமாக எண்பத்து மூன்று பாட்டுக்கள் உள்ளன. இனி, பதினோராந் திருமுறையிலும் ஒரு நூல் இவர் பெயராற் காணப்படுகிறது. ஆயினும், திரு முறைப்பரணர், பரணதேவர் எனப்படுவராதலின், சங்கச்சான்றோராகிய பரணர் வேறெனவும், பரணதேவர் வேறெனவும் அறிஞர் கருதுகின்றனர். அது தனியே ஆராய்தற்குரிய தொன்று. சங்க இலக்கியப் பரணரைப் பற்றிய வரலாறுகள் திருவிளையாடற் புராணத்திலும் பிறவற்றிலும் உள்ளன. இவரைப்பற்றிய செய்திகளைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்து வெளியீடாகிய தமிழ்ப்பொழிலும், சென்னைப் பல்கலைக் கழகத்து வெளியீடாகிய பரணரென்னும் நூலும் விரிந்த ஆராய்ச்சிகளை நிகழ்த்தியுள்ளன. இப்பரணரால் தமிழ் வேந்தர் மூவருள் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன், குடவர் கோமான் நெடுஞ்சேரலாதான், சேரமான் பெரும்பூண்பொறையன், சேரமான் மாந்தரம் பொறையன் கடுங்கோ, சோழன் கரிகாலன், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி, சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி, பசும் பூண்பாண்டியன் என்போரும், வேறு சிலரும் பாடப்பெறுகின்றனர். குறுநில மன்னருள் அதியமான் நெடுமான் அஞ்சி, வையாவிக் கோப்பெரும்பேகன், வேள் எவ்வி, வேள் ஆஅய், வேள் ஓரி, நள்ளி முதலாயினோரும், அறுகை, ஆட்டனத்தி, ஆஅய் எயினன், ஆரியப் பொருநன், எயினன், கட்டி, கணையன், கழுவுள், குறும்பியன், தழும்பன், திதியன், தித்தன், 1வல்லங்கிழவோன் நல்லடி, நன்னன், நெடுமிடல், பழையன், பாணன், பிண்டன், மலையன், மத்தி, மிஞிலி, விராஅன், வெளியன் வேண்மான் முதலியோரும், அகுதை, ஐயை, அன்னி மிஞிலி, மருதி, ஆதிமந்தி வேண்மகளிர் முதலிய தமிழ் மகளிரும், ஆங்காங்குக் குறிக்கப்பெறுகின்றனர். வேளிர், கொங்கர், கோசர், பூழியர், ஆரியர் முதலிய இனத்தவரையும் ஏற்ற இடங்களில் எடுத்தோதுகின்றார். மேலும், தித்தனது உறையூரும், மத்தியின் கழாரும், கழுவுள் என்பானுடைய காமூரும், நன்னனுடைய பாழியும், ஆஅய்கானத்துத் தலையானும், சோழனது புகார் நகரும், பழையனது போஒரும், திதியனது அழுந்நூரும், வெண்ணியும், நீடுரும், 2அரிமணரும், உறத்தூரும், அலைவாயும், மட்டவாயிலும், நன்னன் ஆஅயினது பிரம்பு நகரும், மரந்தையும், வஞ்சியும், தொண்டியும், அழிசியினுடைய ஆர்க்காடும், விராஅன் என்பானுடைய இருப்பை யூரும், மிஞிலியது பராமும், வேளிர்க்குரிய குன்றூரும், தழும்பனுடைய ஏஎர் என்னும் ஊரும், ஊQரும், மோகூரும், பெரும் பேகனது நல்லூரும், குட்டுவனுடைய முசிறியும் என்ற ஊர்கள் பல இவராற் குறித்துக் காட்டப்படுகின்றன. இனி, இவர் பாட்டுக்களில் ஊர்களே யன்றி மலைகளும் ஏற்றவகையில் காட்சியளிக்கின்றன. அவை கொல்லி மலையும், ஏழின் மலையும், குதிரை மலையும், வேங்கை மலையும், கவிர மலையும், இமய மலையும் பிறவுமாகும். இவற்றிடையே காவிரியாறும், தென் குமரியும், கழா அர்ப்பெருந்துறையும், வாகை முன்றுறையும், கானற் பெருந்துறையும், காஞ்சிப் பெருந்துறையும் காணப்படு கின்றன. கூடற் பறந்தலையும், பாழிப்பறந்தலையும், வாகைப்பறந் தலையும் இவர் பாட்டிடையே நின்று பகை கடியும் போர் நிகழ்ச்சிகளை நினைப்பிக்கின்றன. பூழியர் யானைகளை நீராட்டும் இயல்பும், ஆரியர் பிடி யானைகளைப் பார்வையாகக்கொண்டு களிறுகளைப் பிடிக்கும் திறமும், கொல்லி மலையிற் கடவுளெழுதிய பாவையின் செயலும், செறிவளையுடைப்பேமெனச் சூள்மொழியும் பரத்தையர் பண்பும், கவிர மலையில் சூர்மகள் இருப்பும் படிப்போர் மனத்துக்கண் வியப்பினை விளைவிக்கின்றன. உப்புச்சிறை நில்லா வெள்ளம்போலக் காமம் நாணுவரை நில்லாதெனக் காதல் நோயுற்ற மகளிர் உரையாடுவதும், ஆதிமந்திக்கு அவளுடைய காதலனைக்காட்டி மருதி யென்பாள் பாடல்சால் சிறப்புப்பெற்றதும், தொன்முதுவேளிர் தமது பொன்னைப் பாழி நகர்க்கண் வைத்திருந்ததும், கோசரது ஆவொன்று பயற்றங் கொல்லையை மேய்ந்தது கண்டிருந்த பெரியோன் ஒருவன், மன்றத்தில் வாய்மை மொழிந்தானாக, அக்கோசர் அவன் கண்ணைப் பிடுங்கித் துன்புறுத்திக் கொன்று விடவே, அவன் மகளான அன்னமிஞிலி யென்பாள் கலத்தும் உண்ணாது வாலிதும் உடுக்காது, சினத்தீ யெரியச்சென்று குறும்பியன் திதியன் என்பவர்கட்குத் தெரிவிக்க, அவர்கள் அவள் வேண்டுகோட்கு இரங்கி இசைந்து அக் கோசரைக் கைப்பற்றிக் கொலைபுரியக்கண்டு பெரு மகிழ்வுற்றதும், நன்னன் பெண்கொலை புரிந்ததும் பிறவும் பரணரால் சுருக்கியும் விளக்கியும் தீவிய இனிய சொற்களால் சொல்லோவியம் செய்யப்பெற்றிருக் கின்றன. ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சி திருக்கோவலூரை எறிந்தபோது, அவனைப் பாடலுற்ற ஒளவையார், "வேந்தே, நீ அன்றும் பாடுநர்க்கரியை, இன்றும் பரணன் பாடினன் மற்கொல்" என வியந்து கூறுவதொன்றே இவரது பாடல் சான்ற பெருமையை இனிது புலப்படுத்தும். இனி, இப்பரணரின் வேறாக, வன்பரணர் என்னும் சான்றோர் ஒருவர் உளர். இவர் வன்பரணரெனப்படுவதே இவர் ஆசிரியர் பரணரின் வேறாவர் என்பதை நன்கு வற்புறுத்தும். இவர் பாடியன வாக நற்றிணையில் ஒன்றும், புறத்தில் ஆறுமாக ஏழு பாட்டுக்கள் சங்கத் தொகை நூல்களுட் காணப்படுகின்றன. குறுநிலத் தலைவருள் கண்டீரக் கோப்பெருநள்ளியும் வல்வி வோரியும் இவராற் பாராட்டப்பட்டுள்ளனர். இவர் சிறந்த சொல்வன்மை படைத்தவர். இவர் கண்டீரக் கோப்பெரு நள்ளியை முதன் இலாகக் கண்ட திறம் மிக அழகாக இவராலேயே கூறப் பெற்றுள்ளது. "வறுமையுற்று வருந்திய யான் இரவலர் சுற்றத்துடனே புறப்பட்டு நள்ளியினது கண்டீர நாட்டுக்குப் போனேன்; ஒருநாள் வழிநடை வருத்த மிகுதியால் ஒரு பலாமரத்தின்கீழ் அமர்ந்திருந்தேன்; என் சுற்றத்தாரும் உடன் இருந்தனர். மான் கணத்தை வேட்டம் புரிந்து அவற்றின் குருதி தோய்ந்து சிவந்த கழற்காலும், மணி விளங்கும் சென்னியும் உடைய செல்வத்தோன்றல் ஒருவன் எம்பாற் போந்து எம் வருத்தமுற்றும் எம்முகம் நோக்கித் தெரிந்து கொண்டான். அவனது கூர்த்த பார்வை கண்டு யான் எழுந்தோன்; என்னைக் கைகவித்திருக்கச்செய்து, தன்னொடு போந்து காட்டிடத்தே பரந்திருந்த வில்வீரர் திரும்பி வருமுன், தன் கையிலிருந்த தீக்கடை கோலால் தீமூட்டிக் காட்டில் தான் கொன்ற விலங்கொன்றின் ஊனைக் காய்ச்சி எம்மை உண்பித்தான். உண்டு பசிதீர்ந்த நாங்கள், மலைச்சாரலில் வீழ்ந்த அருவி நீரைப் பருகி அயர்வு தீர்ந்தோம். அப்போது, 'எம்பால் வீறு பொருந்திய நன்கலம் வேறில்லை; யாம் காட்டு நாட்டில் வாழ்வோம்', என மொழிந்து, தன் மார்பிற் பூண்டிருந்த முத்தாரத் தையும், கையில் அணிந்திருந்த கடகத்தையும் தந்தான். நாங்கள் அவனது வள்ளன்மை கண்டு, 'ஐய, நீவிர் யார்? உம்முடைய நாடு யாது? என வினவினோம்; அவன் ஒரு மொழியும் கூறாது எம்பால் விடைகூறிச் சென்றான். பின்னர், நாங்கள் வழியில் பிறமக்கள் தமக்குள் பேசிக்கொண்ட சொற்களால் இவ்வாறு உண்பித்து எம்மை ஓம்பிய வள்ளல் தோட்டி மலைக்குரிய கண்டீரக் கோப்பெருநள்ளி என்று தெரிந்துகொண்டோம்" என்ற கருத்துப்பட அழகிய பாட்டொன்றை (புறம்.150) அவர் பாடியுள்ளார். இவ்வாறே, இவர் ஒருகால் வல்விலோறியை முதன் முதலாகக் காணச் சென்றார். அவன் கொல்லிமலையைச் சார்ந்த காட்டிடத்தே வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது, யானையொன்றைக் கொல்லக்கருதி புலியொன்று அற்றம் நோக்கியிருப்பதை ஓரி பார்த்துவிட்டான்; உடனே அவன் தன்வலிய வில்லில் அம்பு தொடுத்து அந்த யானைமேல் எய்தான்; அஃது அந்த யானையை வீழ்த்தி, அற்றம் நோக்கியிருந்த புலியின் அகன்ற வாய்க்குள் ஊடுருவிச்சென்று அதனைக் கொன்று விட்டு, வழியில் நின்ற கலைமான் ஒன்றை மடித்து அண்மையிலிருந்த காட்டுப்பன்றி யையும் வீழ்த்தி, அதன் அயலே புற்றிற் கிடந்த உடும்பொன்றின் உடலில் தைப்புண்டு வீழ்ந்தது. அது கண்டு, ஆதன் ஓரியெனப் படுதற்கமைந்த அவனை வல்வில்லோரி என்றல் அமையும் என்பார் போல் வியந்து பராட்டி, அவனை இதற்குமுன் அவர் கண்டதில்லை யாதலால், இவன் ஒரு சிறந்த செல்வத் தோன்றலாவான் என அவன் செயலைப் பாராட்டிப் பாடினார். அவன் தான் எய்த மானினது ஊனும் தேனும் தன் மலையிற் கிடைக்கும் பொன்னும் தந்து சிறப்பித்து வழிவிட்டான் எனப் புறப்பாட்டொன்றில் (புறம். 152) கூறியுள்ளார். அன்றுமுதல் ஓரியும் வல்விலோரி என்றே சான்றோரால் குறிக்கப்படுவானாயினன். அவனது வன்மையை எடுத்தோதிச் சிறப்பித்த காரணத்தால் இவரும் வன்பரணர் என்ற பெயரால் இலங்குவாராயினர். ஆதனோரியின் வில்வன்மையை விதந்துபாடிய சிறப்பால் இப்பரணர் வன்பரணர் எனப் பெயர் சிறந்தனரெனத் தெளிய வுணர்வோமாயின், இவரது இயற்பெயர் பரணர் என்பதே தேற்றமாம். இது பற்றியே இப்பரணர்க்குப் பின்வந்த கல்லாடனார், இவ்வோரி, காரி யென்பானாற் கொல்லப்பட்ட செய்தி கூறுங்கால் இவனை, "செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்ஒரி" என்று கூறியுள்ளார். வன்பரணரது பாட்டுத் தோன்று தற்கு முன்பெல்லாம் கொல்லி மலைக்குரிய ஓரி ஆதன்ஓரி யெனவே வழங்கப்பெற்றனன் என்பதும் தெளியக்கொள்ளவேண்டிய தொன்று. வன்பரணர் அவனை ஆதனோரி யெனவே வழங்குதல் (புறம். 153) காண்க. இனி, இவ்விருவரின் வேறாக நெடுங்கழுத்துப் பரணர் என்றொரு சான்றோர் சங்கத்தொகை நூல்களுட் காணப்படு கின்றனர். "இவர்க்கு இப்பெயர் உறுப்பால் வந்ததுபோலும்" என டாக்டர். திரு. உ. வே. சாமிநாதையரவர்கள் கூறியுள்ளார்கள். பெருந்தலைச்சாத்தனார் பெயரும், சீத்தலைச்சாத்தனார் பெயரும் உறுப்பால் வந்தனவென நெடுங்காலம் கருதப்பட்டு வந்தமையும், இன்று பெருந்தலையும் சீத்தலையும் ஊர்ப்பெயர்க ளெனவும், இவர்கள் அவ்வூரவரெனவும் தெளிவாகிவிட்டமையும் காண்கின் றோம் இவ்வகையால் நெடுங்கழுத்துப்பரணரது பெயர்க் கண் காணப்படும் நெடுங்கழுத்து என்பதன் உண்மை நிலை யறிதற்கண் ஆராய்ச்சியாளர்க்கு வேட்கை யுண்டாகு மென்பது ஒருதலை. தஞ்சைமாவட்டத்துப் பள்ளியூரிலிருந்த ஆசிரியர் கிருஷ்ண சாமி சேனை நாட்டாரால் இராIளியாரது கைப்பிரதியெனப் பட்டதொரு பிரதி கிடைக்கப்பெற்று, அதனையும் புறநானூற்று அச்சுப் பிரதியினையும் வைத்து ஒப்புநோக்கியதில், இந்நெடுங் கழுத்துப்பரணர் பெயர், நெடுங்களத்துப்பரணரென்று காணப்பட்டது. பின்னர் யான் நெடுங்களத்துக்குச் சென்றிருந்தபோது, அவ்வூர்த் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டொன்று, இறைவனை "நெடுங்க ழுத்து மகாதேவர், திருநெடுங் கழுத்தாழ்வார்" (a. r. no. 682 of 1909) என்று குறிப்பது தெரிந்தது. இக்கோயில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே திருஞானசம்பந்தப் பெருமானால் அழகிய இனிய திருப்பதிகம் ஒன்றால் சிறப்பிக்கப் பெற்றிருப்பது அன்பர்கள் நன்கு அறிந்த தொன்று. இதற்கேற்பவே, இக்கோயிலில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழநாட்டையாண்ட வேந்தனான முதலாம் ஆதித்தன் கல்வெட்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஐயரங்க சொக்கநாத நாயக்கர் கல்வெட் டீறாக முப்பத்தொன்பது கல்வெட்டுக்கள் உள்ளன அரசியலாரால் படி யெடுக்கப்பட்டவை முப்பத்து நான்கு. இவற்றுள், பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த உத்தமசோழன் கல்வெட்டும், அவற்குப்பின் வந்த முதல் இராசராசன் கல்வெட்டும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் இராசாதிராசன் கல்வெட்டுக் களும் மூன்றாம் இராசராசன் கல்வெட்டுக்களும், பதின் மூன்றாம், நூற்றாண்டினரான மூன்றாங்குலோத்துங்கன் கல்வெட்டுக்களும் சடையவன்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்களும் ஹொய்சள மன்னன் வீரசோமீசுவரன் மகன் வீரராம் நாததேவன் கல்வெட்டுக் களும், பதினைந்தாம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் வந்த நாயக்க மன்னர் கல்வெட்டுக்களும் உள்ளன. இனி, திருஞானசம்பந்தர் திருப்பதிகமும், முதலாம் ஆதித்தன் கல்வெட்டும் இவ்வூரை நெடுங்களம் என்றே கூறுகின்றன. இடை யிற்றோன்றிய கல்வெட்டுக்களுட் சிலவே நெடுங்களத்துத் திருந்திய தேவப்பெருமானை, நெடுங்கழுத்து மகாதேவரென்றும், திருநெடுங் கழுத்தாழ்வார் என்றுங் குறிக்கின்றன. ஒருகால் களமென்னுஞ் சொல் கழுத்தையும் குறிக்குமாதலால், நெடுங்களத்து இறைவனை நெடுங்கழுத்து மகாதேவரெனக் கல்வெட்டெழுதினோர் எழுதி யிருக்கலாம்; ளகர ழகரவேறுபாடறியாது நெடுங்கழத்தென எழுதப்பட்டது, நெடுங் கழுத்தெனத் திரிக்கப்பட்டும் இருக்கலாம். எங்ஙனமோ திருந்திய தேவனான திருநெடுங்களமுடைய இறைவன் திருநெடுங்கழுத்து மகாதேவரென்றும், இப்பரணரும் அவ்வூர வராதலால், இவரும் நெடுங்கழுத்துப் பரணர் என்றும் குறிக்கப்படு வாராயினர். இனி, இவ்வூர்க்கும் பரணர்க்கும் உள்ள இயைபு யாது? இதனைத் திருச்சிராப்பள்ளியிலுள்ள தாயுமானார் கோயில் அருச்சகர் ஒருவர் விளக்கினார். இந்நெடுங்களத்தில் பரணிமேடென ஒன்றிருந்த தென்றும், பரணி நாளில் திருநெடுங்கள முடையார்க்குப் பூசனை செய்வது குறித்து இறையிலியாகப் பண்டைநாளை வேந்தரால் விடப்பட்டதென்றும், அஃது இப்போது நன்கு திருந்தி நிலமாய் விட்டதென்றும் கூறினார். கூறவே, இப்பரணி மேடென்பது பரணன் மேடு என இருந்திருக்க வேண்டும் என்றும், நெடுங்களத்து மகாதேவர் நெடுங்கழுத்து மகாதேவரென மாறியதுபோல இப்பரணன் மேடும் பரணிமேடாக மாறியிருக்க வேண்டும் என்றும் உணர்வது முறைதானே! ஆகவே, நெடுங்களத்துக்கும் பரணருக்கும் தொடர் புண்டென்பது தெளிவாயிற்று. இவ்வாற்றால், நெடுங்கழுத்துப் பரணரென்பது நெடுங்களத்துப் பரணரென இராIளியார் பிரதி கூறுவது பொருத்தமானதென்பது சொல்லாமலே விளங்கும். நெடுங்கழுத்தென்பது திருந்திய பாடமாகாதென்பது கருதியே டாக்டர். திரு. ஐயரவர்களும் “இவர்க்கு இப்பெயர் உறுப்பால் வந்ததுபோலும்” என ஐயவாய்பாட்டாற் குறித்தன ரெனக் காணலாம். இதற்குச் சான்றாக, “மதுரையும் ஈழமும் சருவூரும் பாண்டியன் முடித்தலை யுங்கொண்ட திரிபுவன சக்கரவர்த்திகளான திரிபுவன வீரதேவர்க்கு (குலோத்துங்கன் iii) யாண்டு 32-வது வடகவிர் நாட்டுத் திருநெடுங்களருடைய மகாதேவர்க்குவளப்பக் குடியுடை யான் தில்லைத் திருநட்டப் பெருமாளான விசயாலய முத்தரை யனென்பான் விட்ட நிலத்துக்கு நாற்பால் எல்லை கூறுமிடத்து “பரணங் காணிற்குத் தெக்கு” (a.r. 670 of 1904) என்றொரு நிலத்தைக் குறிக்கின்றான். இப்பரணன் காணியே பின் பரணிமேடாகி, அதன்பின் திருந்தி நிலமாகி யிருத்தல் கூடும். ஆகவே, நெடுங்களத் துக்கும் பரணருக்கும் இக் கல்வெட்டாலும் இயைபுண்டென்பது தெளிவாகிறது. இதுகாறும் கூறியவாற்றால், நெடுங்கழுத்துப் பரணரெனச் சங்கத்தொகை நூல்களுட் காணப்படும் சான்றோர் நெடுங்களத்துப் பரணரே என்பதும், “சிறாஅஅர் துடியர்” (புறம். 291) என்று தொடங்கும் புறப்பாட்டிறுதியிற் காணப்படும் நெடுங் களத்துப் பரணர் என்ற பாடமே பொருத்தமான தென்பதும் வெள்ளிடைமலை. இவர் பாடியதாக இப் புறப்பாட்டு ஒன்றுதான் கிடைத்துள்ளது. இதன்கண், போர்மறவன் ஒருவன் போர்ப்புண்பட்டு வீழ்ந்தானாக அவன் சிறப்புக் கூறுமுகத்தால், துடிகொட்டு வோரையும் பாண் மக்களையும் நோக்கி, “தூய வெள்ளாடை யணிந்துள்ள கரிய மறவனான இவனை மொய்க்கும் புள்ளினங்களைக் கடிமின்; யான் இவன் உடலைப் பற்றவரும் நரிகளைக் கடிவேன்; வெறிதேயும் வேந்தன் பொருட்டு இறத்தர்க்கு விரும்பும் இவ்வீரன், இப்போது தன் வேந்தனைக் காத்து உயிர் கொடுத்துப் புகழ் கொண்டானா கலின், அவ்வேந்தன் என்போல் பெருந்துய ரெய்துவானாக; அவன் இவனுக்குத் தன் மணிமாலையைச் சூட்டித் தான் இவனுடைய ஒற்றை வடமாலையை மாற்றி யணிந்துகொள்ளும் அத்துணைப் பேரன்புடையவன் என்று இந் நெடுங்களத்துப்பரணர் பாடியுள்ளார். “கொடுத்த லெய்திய கொடைமை” என்னும் புறத்துறைக்கு (புறத். சூ 8) மேற்கோளாக நச்சினார்க்கினியரால் எடுத்துக் காட்டப்பெறும் சிறப்புடையது. இதன்கண் “அவ்வேந்தன் என்போல் பெருந்துய ரெய்துவானாக” என்ற கருத்தை இப்பரணர், “என்போற் பெருவிதுப் புறுக வேந்தே” என்று கூறுகின்றார். இதன்கண் வரும் “பெருவிதுப்பு” என்பது மிக்க நயமுடையதொரு சொல்லாகும். விதுப்பு, விதும்பல் எனவும் வரும்; அஃதாவது அன்பு மிகுமியால் உள்ளத்தில் தோன்றும் விரைவும், அது காரணமாக உண்டாகும் நடுக்கமும் குறிப்பதாம். வேந்தனுக்கு இவ்வீரன்பால் உண்டாகிய பெருங்காதல் காரணமாக இவனது வீழ்ச்சி வேந்தன் உள்ளத்துப் பெருநடுக்கத்தைச் செய்வதாக என்பது தோன்றப் “பெருவிதுப்புறுக” என்று குறிக்கின்றார். இந்தச் சொன்னயத்தைக் கண்ட கயமனார் என்னும் சான்றோர், புணர்ந்துடன் போகிய தலைமகன் பிரிவாற்றாத தாய், தன்னைப் போல், தலை மகனைத் தம்மிற் பிரித்துக்கொண்டு தன்னுடனே கொண்டு தலைக்கழிந்த தலைமகனை ஈன்ற தாயும் பெருவருத்த மெய்து வாளாக என்னக் கருதி “எம்போற் பெருவிதுப் புறுக மாதோ......... கொண்டுடன் போகவலித்த, வன்கட் காளையை ஈன்ற தாயே” (நற். 293) என்று எடுத்தோதி இன்புறுகின்றார். இவ்வாறு அன்பாற் பிணிக்கப்பெற்ற இருவருள் ஒருவர்க் குற்ற இடும்பை ஏனையோர் உள்ளத்தில் அன்பு காரணமாகப் பிறக்கும் பெருவிதுப்பினையே வியந்து, போரிற் புண்பட்டு வீழ்ந்த தன் கணவனைக் கண்டு அவன் மனைவி தனித்திருந்து புலம்பு மிடத்து “என்போற் பெருவிதுப் புறுக நின்னை இன்னாதுற்ற அறனில் கூற்றே” (புறம்.255) என்று கூறக் காண்கின்றோம். தனிமகள் புலம்பும் இப் புறப்பாட்டைப் பாடியவர் வன்பரணர் எனப் புறநானூற்றால் அறிகின்றோம். நெடுங்களத்துப்பரணர் பாட்டும் அழுகை விளைவிக்கும் பாட்டாய்க் கருத்து வகையில் ஒத்து நிற்பது காணப்படும். பெயரொற்றுமையும் கருத்தொற்றுமையும் நோக்கு மிடத்து நெடுங்களத்துப் பரணரே வன்பரணராகவும் இருக்கலாம் என்பது தோன்றுகிறது. இஃது உண்மையாயின், இவர் தொடக்கத்தில் நெடுங்களத்துப்பரணராய் வழங்கப்பெற்றுப் பின்னர், ஆதனோரியின் வில் வன்மையைச் சிறப்பித்ததுகொண்டு சான்றோரால் வன்பரண ரெனப் பாராட்டிக் கூறப்பெறுவாராயினர் என்று தெளியலாம். ஆகவே, பரணர் மூவராயினார் இருவராவர் என்றும் அறியலாம். இப்பரணர்கட்குப் பரணர் என்று வழங்கும் பெயர்ப் பொருள் யாது? பரணரெனவும், வன்பரணரெனவும், நெடுங்களத்துப் பரணரெனவும் வழங்கும் வழக்காறுகள், இது பயின்ற வழக்கிற் றென்பதை வற்புறுத்துகின்றன. சங்கச் சான்றோர் பலர் மூலனார், ஆத்திரையனார் முதலியோர் மூலநாளிலும், ஆதிரை நாளிலும் பிறந்தமைபற்றிப் பெயர் பெற்றாற் போல, இப்பரணர்கள் பரணி நாளில் பிறந்தமைபற்றி இப் பெயரெய்தினர் என உணர்தல் வேண்டும்.  12. தமிழகத்தில் தமிழ்நிலை இன்று நமது பாரதநாட்டில் மக்களாட்சி அமைதியுடன் நிலவுகிறது. நிலவுலக முழுதிலுமுள்ள நாடுகளை நோக்கின் பெரும் பான்மை மக்களாட்சியில் இருந்துதான் மாண்புறு கின்றன. அவ்வகையில் நமதுநாடு மக்களாட்சியால் சிறப்பெய்து வதில் வியப்பு இல்லை. மேலும் நாம் மேற்கொண்டிருக்கும் மக்களாட்சி முறை உலகில் இல்லாத புதிய ஆட்சிமுறையும் அன்று. நமதுநாடு நிலப்பரப்பாலும் மக்கள் தொகையாலும் நம்மைச் சூழவுள்ள நாடுகள் பலவற்றினும் பெரியது. முப்பது கோடிக்குமேல் நம்நாட்டில் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் கற்றவர்தொகை நூற்றுக்குப் பத்துப்பேர்க்குமேல் இல்லை யென்பது உண்மை இந்தப் பத்துப்பேரிலும் தாம் நினைத்ததைப் பிறர்க்கு எழுதிக்காட்டவோ தெளிவாகச் சொல்லவோ தெரிந்தவர் ஐந்துபேர்கூட இல்லை. மற்றைத் தொண்Qற்றைந்துபேரும் நல்ல கல்வி யில்லாதவராகும். ஆனால், அவர்கள் அனைவரும் நம் மக்களாட்சியின் உறுப்பினர். கல்வியுடைய மிகச் சிலரே மக்கள் ஆட்சியின் செயல்வகை களையும் விளையும் நன்மை களையும் பகுத்துணரக்கூடிய நிலையில் உள்ளனர்; இவர்களே ஆட்சி யிருக்கையில்இருந்து ஆட்சி செய் கின்றனர். நூற்றுக்குத் தொண்ணுற்றைந்துபேர் அச்சிலரால் ஆளப் படுகின்றனர். இது பற்றியே கல்வியுடைய ஒருசிலரால் கல்லாத பெரும்பான்மை யோரை ஆளுவது நம் நாட்டு இன்றைய மக்கள் ஆட்சியின் மான்பாக இருக்கிறது என்ற குறையும் கூறப்படுகிறது. நாட்டுமக்கள் அனைவரும் நாட்டு ஆட்சியின் உறுப்பினராக இருப்பதால் அவர்கள் அனைவரும் "நல்ல" கல்வியுடையவர் களாக இருத்தல்வேண்டும். அப்பொழுதுதான் மக்களது ஆட்சி அசைக்கமுடியாத பேராற்றலும் பெருவலியும் உடையதாய்ப் பெருமைபெற முடியும். அந்தக் காலம்தான் மக்கள ஆட்சியின் பொற்காலமாகும். அந்தக்காலம் விரைவில் வரச்செய்வதே மக்களாட்சியின் குறிக்கோள். "பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும், கொல்குறும்பும் இல்லது நாடு" என்று திருவள்ளுவர் கூறுவர். கல்லாத மக்கள் பெருகியிருக்கும் நாட்டில் பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்பும் உண்டாதற்கு வாய்ப்புக்கள் உண்டு, கல்லாத மக்களை இக்குழுக்களின் கொள்கைகள் விரைவில் தமக்குத் துணையாக்கிக் கொள்ளும். அதன் விளைவாக நாடு அமைதியிழந்து அல்லலுறும். அதனால் நாட்டுமக்கள் அனைவரையும் நல்ல கல்வியுடைய மக்களாக்குவது ஆட்சியின் குறிக்கோளாக இருக்கிறது. மக்கள் ஆட்சி சிறந்து விளங்குதற்கு அது பெரிய பாதுகாப்பும் வலியுமாகும். முப்பதுகோடி மக்களைக்கொண்ட நமது நாட்டில் முந்நூறுக்கு மேற்பட்ட மொழிகள் நிலவுகின்றன என்று மொழியறிஞர் கூறுகின்றனர். ஓராயிரம் ஈராயிரம் மக்கள் பேசும் மொழிகளை விலக்கினால் பல நூறாயிரக்கணக்கில் பேசுபவர்களைக்கொண்ட மொழிகள் மிகச் சிலவேயாகும். அவற்றைக் கொண்டே தமிழ்நாடு, ஆந்திரநாடு, கேரளநாடு, கன்னடநாடு, மராட்டியநாடு, குசராத்திநாடு எனப் பெயர்தாங்கிய உள்நாடுகள் பல நமது பாரதநாட்டில் உள்ளன. அவற்றில் வாழ்பவரும் முறையே தமிழர், ஆந்திரர், கேரளர், கன்னடர், மராட்டியர், குசராத்தியர் என்று குறிக்கப்படுகின்றனர். இந்த உண்ணாடுகள் நமது பராதப் பெருநிலத்துக்கு உறுப்புக்கள். இந்த உறுப்புக் களின் அறிவுவன்மையால்தான் பாரதப் பேரரசு வன்மையுற்றுத் திகழவேண்டி. யிருக்கிறது. இவ் வுண்ணாடுகள் கல்வியால் வன்மை பெற்றாலன்றி நமது பாரதப் பேரரசுக்கு உய்தியில்லை என்பதை யாவரும் தெளிவாக வுணரவேண்டும். தமிழர், ஆந்திரர், கேரளர் எனப்படும் பலரும் தத்தம் பகுதியிலுள்ள மக்கள் நல்ல கல்வியுடையவராக வேண்டும் என்ற கருத்தும் அதனைச் செயற்படுத்துவதில் கண்ணாகவும் இருக்கும் கடமை யுடையவராகின்றார்கள். மக்களாட்சி நிலவும் பிற நாடுகளிலும் இப்படிக் கல்லாதவர் பலரும் கற்றவர் சிலருமாகத்தான் மக்கள் வாழ்கின்றார்களோ என்று ஓர் ஐயம் உண்டாகலாம் அதனை ஆராய்ந்தால் அவ்வாறு இல்லை என்று கூறவேண்டும். கல்லாதவர் பெருகியிருந்த நாடுகள் சில, மக்கள் ஆட்சிமுறை பெற்ற சிறிதுகாலத்தில் கற்றவர் தொகையைப் பெருவாரியாகப் பெருக்கிவிட்டன. அந்த நாடுகளிலும் அமைதியான வாழ்க்கை இல்லாமையால் அந்த நிலையும் ஏற்பட்டதேயன்றி வேறில்லை. நமது பராதநாட்டில் சென்ற இருநூறு ஆண்டுகட்கு மேலாக அமைதியான வாழ்க்கையே நிலவியிருந்தது. ஆயினும், மக்களிடையே கல்வியில்லாமை என்ற இருள் நன்றாகப் பரந்து மூடிக்கொண்டது. இதற்குக் காரணம் வேற்றுநாட்டவரின் ஆட்சி என்று கூறலாம். வேற்றவரான ஆங்கிலராட்சியில் அமைதி நிலவியது உண்மை; ஆனால், நல்ல கல்வியறிவு பெறுவதற்கேற்ற வாய்ப்புக்கள் குறைவாக இருந்தன. பெருக்கவேண்டும் என்ற எண்ணம் அரசிய லார்க்கும் இல்லை; கல்விபெற்றிருந்த சில பொதுமக்களுக்கும் தோன்ற வில்லை. "தான்வாழ ஏனோர் தனக்கடிமை யாக எனும், ஊன அறிவே" அந்நாளில் ஓங்கியிருந்தது. வாழ்ந்தாரை வாழ்விக்கவும் வீழ்ந்தாரை மீளாவறுமையில் வீழ்விக்கவுமே அக்காலச் சூழ்நிலை இடம் தந்துகொண்டிருந்தது. ஆங்கில் ஆட்சியில்தானே கலாசாலைகள் பலவும் கல்லூரிகள் பலவும் தோன்றிக் கல்விப்பணி புரிந்தன; நாட்டுப் புறங்களிலும் நகரங்களிலும் மக்கட்குக் கல்வி தரப்படாமல் இல்லையே என்றொரு கேள்வி இங்கே எழும். கல்வி ஓரளவு தரப்பட்டதுண்டு; ஆயினும் அக்கல்வி நாட்டு மக்களிடையே பரவி அறிவு பெருகுதற்கேற்ற வகையில் நடைபெறவில்லை. நான் யார்? என்னைச் சூழவுள்ளவர் யார்? அவர்கட்கும் எனக்குமுள்ள தொடர்பு யாது? என் வாழ்வு அவர்கட்கும் இந்நாட்டுக்கும் எவ்வகைத் தொடர்பில் இயங்குகிறது? உலக மக்களிடையே என் நாட்டுமக்கள் எந்தநிலையில் உள்ளனர்? என்பனபோலும் அறிவை வளர்த்துப் பயன்பட வாழ்விக்கும் வகையில் அறிவு தோன்றவில்லை. கற்பவர் உள்ளத்தில் நல்லறிவு தோன்றி மக்கட்கு நலம்புரிதற்கேற்ற வளர்ச்சி யுண்டு பண்ணக் கூடிய மொழியில் கல்வி கற்பிக்கப்படவில்லை. ஆட்சி புரிந்த ஆங்கிலேயர் நாட்டில் தங்களது ஆட்சி அமைதியான முறையில் நடைபெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். அரசியல், நீதி, வாணிகம், போக்குவரவு முதலிய எல்லாத் துறைகளிலும் ஆங்கிலேயரே தலைமையேற்று நின்று, எல்லாச் செயல்முறை களையும் தங்கள் ஆங்கிலமொழியிலேயே நடத்தினர். அவர்கட்குக் கீழேயிருந்து அவர்க்கு வேண்டிய வற்றைச் செய்தற்கேற்ற எழுத்தாளர்களே அவர்கட்குத் தேவைப்பட்டனர். அவர்களை உண்டுபண்ணுவதே அவர்களது கல்விப்பணியின் கருத்தும் நோக்கமுமாக இருந்தன. மக்களின் எதிர்கால நல்வாழ்வு கருதி அவர்கள் வழங்கும் மொழியிலேயே கல்வியறிவு பெறுவிக்கக் கருதாது, தங்கள் நலமொன்றையே கருதித் தங்கட்கு என்றும் அரசியலடிமைகளாய் மக்களை மாற்றி அவர்கள் உள்ளத்தில் அவர்தம் நாடு மொழி கலை பண்பாடுகளை மறந்து ஆங்கில மாக்களாக்குவதே கல்வி நோக்கமாகக் கொண்டனர். அதனால் நாட்டுமொழிகளை மூலையில் ஒதுக்கித் தங்கள் ஆங்கிலமொழிக்கே முதலிடம் தந்து கல்வி தருவாராயினர். ஆங்கிலர் ஆட்சியில் வேறொரு சூழ்நிலை தோன்றுவ தாயிற்று. வேறு வேறு மொழி வழங்கும் நாட்டுப் பகுதிகளைத் தங்கள் வசதிக்கேற்பச் சேர்த்து ஒருநாடாக்கி ஆட்சிபுரிய வேண்டிய சூழ்நிலை வந்தது. சென்னை மாநாட்டில் ஆந்திரர், கன்னடர், கேரளர், தமிழர் ஆகிய பலரும் ஒருங்கிருந்து ஆளப்பட வேண்டிய வராயினர். அவர்களிடையே மொழிப் பூசல் தோன்றி அமைதியைக் குலைக்காவண்ணம், அவர்கட்கு வேறான ஆங்கில மொழியை அவர்களிடையே புகுத்தி நிலவவிட வேண்டியது இன்றியமையாத தாயிற்று. ஆதலால், ஆங்கில மொழியால் அரசியல் நடக்கவேண்டிய நிலைமை உறுதிபெறுவதாயிற்று. அரசியல் ஆட்சி வகையில் நம் நாட்டுமக்கள் அறியாமல் மறைமுகமாகச் சில செயல்முறைகளை ஆங்கிலமக்கள் மேற் கொண்டிருந்தனர். அவர்கள் நம்நாட்டுக்கு வந்ததே வாணிகஞ் செய்து ஊதியம் பெறுவதற்காக ஆதலால், ஆட்சி வகையிலும் ஊதியங்கண்டு, ஆளப்படும் மக்கட்குத் தெரியாமல் அதனைத் தங்கள் நாட்டுக்குக் கொண்டுசெல்லும் வழக்கமுடையரா யிருந்தனர். அதற்கேற்ற சூழ்ச்சிகளை மக்கள் தெரியாமல் தடுப்பதற்கு மக்களுக்கும் அரசியலுக்கும் இடையே ஆங்கிலமொழி ஓர் அழகிய இரும்புத் திரையாகப் பயன்பட்டது. இதனாலும் ஆங்கில மொழியை நாட்டில் புகுத்துவது வேண்டிய தொன்றாயிற்று. அமைதியாக வாழ்ந்த மக்கள் அரசியலுக்கும் தங்கட்கும் இடையே ஆங்கிலமொழி திரையாக இருப்பதை நீக்கி, தங்கள் மொழியில் ஆட்சி நடக்கவேண்டுமென்று கேட்கலாமே எனில், ஆங்கிலம் எல்லார்க்கும் பொதுவாக உளது என்ற கருத்து நாட்டவர் களில் ஒருசிலர்க்கு உண்டாயிற்று. பெரும்பாலோர் வேறுவகையில் பழகிவந்தவர்கள். ஆங்கிலர் ஆட்சி வருமுன் தமிழர், ஆந்திரர், கன்னடர் ஆகிய பலரும் வேந்தர் செய்யும் முடியாட்சியின்கீழ் வாழ்ந்து வந்தவர். வேந்தனிடத்தில் குறை வேண்டுதலும் முறை வேண்டுதலுமாகிய இரண்டுமே நாட்டுக் குடிமக்கள் செய்து கொள்வது வழக்கம். நாட்டாட்சியில் தங்கட்குப் பங்குண்டு என்பது அவர்கட்குத் தெரியாது. செய்து கொண்ட குறை நீங்குவதும், முறை பெறுவதுமே அவர்கட்கு வேண்டியன. அவை கிடைத்துவிடின், குடிமக்கள் அமைந்து விடுவது வழக்கம். கல்வியுடையவர்கள் அரசியலில் ஏதாவதொரு சேவகம் பெற்று அதன் வாயிலாகப் பொருள்பெற்றுத் தம் வயிற்றைக் கழுவுவதே வாழ்வின் குறிக்கோளாகக் கருதினர். ஆங்கிலக்கல்வி பெற்றோருள் பெரும்பாலோர் வெள்ளைத் துரைக்கு மகிழ்ச்சி யுண்டுபண்ணி அவர் விரும்பிப் பாராட்டும் சிறந்த அடிமையாக வாழ்வதே உயிர்வாழ்க்கையின் ஊதியமாகக் கருதினர். ஆதலால், அவர்கள் தங்கட்கொரு மொழி உண்டு என்றும், அதன் வாயிலாகத் தங்கள் நாட்டு அரசியல் நடக்குமாயின் அதனால் நாட்டில் நல்லாழ்வும் நல்லறிவும் தோன்றி விளங்கும் என்றும் நினையாராயினர்; ஆங்கில மொழி ஆளப்படும் மக்கட்கும் ஆளும் அரசுக்கும் இடையே இரும்புத்திரையாக இருக்கிறது என்பதை அறியமாட்டா தொழிந்தனர். ஒளியைக் கண்டு இருள் அஞ்சுவதுபோல, அறிவைக் கண்டு அறியாமை அஞ்சுவது இயற்கை. அதனால் கல்விக்குக் கல்லாமை அஞ்சியோடுவது அறமாயிற்று. ஆங்கிலக் கல்வி கற்றோர் அரசியலதி காரிகளாய் ஆங்கில மேலோரின் சிறந்த அடிமைகளாய் ஆட்சிபுரியத் தொடங்கியதும், கல்லாத பொதுமக்கட்கு அவர்கள்பால் அச்சமும் ஒடுக்கமும் உண்டாயின. ஆங்கிலம் கற்றோர் உயர்ந்தோராகவும் அது கல்லாதவர் தாழ்ந்தோராகவும் சமுதாயத்தில் வேறுபாடுகள் தோன்றலாயின. அதனால் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இடையே மனக்கலப்பு இல்லாதொழிந்தது. ஆங்கிலமொழி வாயிலாக வந்த அறிவு, பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் அவர்களிடையே பரவா தொழிந்தது. அறியாமைக்கு மன்னிப்பு இல்லையாதலால், அறியாமை கொண்ட பொதுமக்கள், ஆங்கில வறிவு கொண்ட அதிகாரிகட்கு அஞ்சி நீங்கி நின்றனர். இதனால் பொதுமக்களிடையே நல்ல கல்வியும் அறிவும் வளர்வதற்கு இடமில்லை யாயிற்று. இந்த நிலை நல்லறிவு வளர்தற்கு இடம் தராது போயினும் பொதுமக்கள் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சியை எழுப்பிற்று. ஆங்கிலக் கல்வி, மக்கள் சிலர்க்கு அதிகாரமும் பெரும் பொருளும் தருவதை அவர்கள் கண்டனர். அதனால் அவர்கள் தங்கள் நாட்டு மொழியினும் ஆங்கில மொழியினிடத்தில் பற்றும் நன்மதிப்பும் தர முற்பட்டனர். தங்கள் வயிற்றில் பிறக்கும் மக்களை எவ்வகைத் துன்பப்பட்டேனும் ஆங்கிலக் கல்வியுடையராக்க வேண்டு மென்று முயல்வாராயினர். இம் முயற்சியில் வீடு நிலம் முதலிய பொருள்களை யெல்லாம் விற்று ஆங்கிலம் கற்றவர் மிகப்பலராவர். இந்த வேகத்தில் தமிழ் நாட்டுத் தமிழும், ஆந்திர நாட்டுத் தெலுங்கும் பிறவும் கைவிடப்பட்டன. இத்துறையில் ஏனை ஆந்திரர், கேரளர், வங்காளியர் முதலியோரைக் காட்டிலும் கண்டோர் இகழத்தக்க நிலையில் தங்கள் மொழியைக் கைவிட்டவர் தமிழர்களே. தமிழர்களுள் பலர் தமிழ் படிப்பதையும் தமிழில் பேசுவதையும் மானக் குறைவாகவும் இழிநிலையாகவும் கருதினர்; இன்னும் சிலர் கருதிக்கோண்டிருக் கின்றனர். தலையில் ஒழுகிய சேறு, உடல் முழுதும் ஒழுகிப் பரவுவது போல, அன்று அரசியல் தலைமை நிலையத்தில் பாய்ந்த ஆங்கிலம், இன்று நாட்டில் தந்தி, தபால், தொழிற்சாலை, மருத்துவச்சாலை, கல்விச் சாலை, வாணிகம், கோயில், புகைவண்டி, மோட்டார் நிலையங்கள் முதலிய எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டது. நாடு நகரங்களிலும், சிற்றூர் பேரூர்களிலும், மூலை முடுக்குகளிலும். பிச்சைக்காரர் வாயிலும், பெருஞ் செல்வப் பெரு மக்கள் வாயிலும் எங்கும் ஆங்கிலம் இடம்பெற்று விட்டது. இன்று மக்கள் நினைக்கும் நெஞ்சிலும், பேசும் வாயிலும் ஆங்கிலம் முன்னணியில் நிற்கிறது என்றால் வேறு கூறுவானேன்? தமிழ் நாட்டுத் தமிழன் உடலில் தமிழ் நினைக்கும் நெஞ்சில் தமிழ் இல்லை; தமிழ் பேசும் வாயில் தமிழ் இல்லை; தமிழனுடைய அன்றாட வாழ்வில் தொடர்புடைய தொழில், கல்வி, மருத்துவம், போக்கு வரவு முதலிய யாவும் ஆங்கிலமொழி நிலவும் இடங்களாய் விட்டன. இதனால் தமிழனது தமிழ் இருக்குமிடம் தெரியாது ஒடுங்கிவிட்டது. எப்பக்கமும் வேற்றுமொழி வந்து மோதுவதால் தமிழ்வாழ்வு தலை தடுமாறி நிற்கிறது. இது நிற்க, இந்த ஆங்கில மொழி வரவால் தமிழன் தமிழ் ஒதுக்கப்பட்டதே யன்றித் தமிழருட் சிலரேனும் பயன்பட்ட துண்டோ எனின், பெரும்பயன் பெற்றுள்ளனர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. மக்களாட்சிக்கு இன்றியமையாத அரசியல் உரிமை உணர்வில், சிலர் முன்னேறி யுள்ளனர். சமுதாய வாழ்வில் தக்க மதிப்பு பெற்றுள்ளனர். பொருள் துறை, தொழில் துறைகளில் ஓரளவு நல்லறிவு பெற்று விளங்குகிறார்கள். தாம் இந்த நாட்டுக்கு உரியவர்; இந்த நாட்டின் நல்வாழ்வில் தமக்கு நல்லதொரு பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை நன்றாக உணர்ந்துள்ளனர்; விஞ்ஞானம், தத்துவம், வரலாறு, அரசியல் நுட்பம், நீதி முதலிய துறைகளில் சிலர் ஓரளவு உணர்வு பெற்றுப் பிறங்குகின்றார்கள். இந் நிலைக்கெல்லாம் காரணம் ஆங்கிலக் கல்வியின் பெருக்கமே என்று எவரும் நன்கு அறிவர். நமது நாட்டில் புகுந்து இருநூறு ஆண்டுகளாகக் கல்விப்பணி புரிந்த மிகச் சிலரே ஆங்கிலத்தால் பயன் பெற்றுள்ளார்கள் என்றால், அதனால் நாட்டுமக்களில் பெரும்பாலார் பயன் பெறாமல் போனதற்குக் காரணம் ஆராய வேண்டிய தொன்று. ஆங்கிலம் கற்றவர் அதனைக் கல்லாத மக்களோடு கலந்துகொள்ளாதவாறு அரசியல் பதவியும் ஊதியமும் தடை செய்து வந்தன. ஆங்கிலக் கல்வி காட்டிய இலக்கியக் காட்சியும் அரசியல் வரலாறு, நீதிநூல் முதலியன காட்டிய காட்சியும் ஆங்கில நாட்டுக் காட்சிகளாய்க் கற்றவருள்ளத்தை அவற்றினிடமே அடிமைப் படுத்தி விட்டன. ஆங்கிலக் கல்வி காட்டும் மக்கள் வாழ்வும் பண்பாடும் ஒழுகலாறும் நம் நாட்டுக்கு உரியவல்ல வாதலால் அவற்றை உள்ளத்தில் வாங்கிக்கொள்ளும் வகையில் செய்த உழைப்பு, நம்மவரை நம் நாட்டு வரலாறு, வாழ்க்கை, பண்பாடு, அரசியல் முதலிய துறை களை அறவே மறக்கச் செய்தது. நம் நாட்டு மக்கட்கு உணர்த்தக் கூடிய மொழி நமது தமிழ் மொழி; அதனைச் சிறுபோதிலேயே கைவிட்டமையின் ஆங்கிலம் கற்றவர்கள் தாம் கற்றதைப் பிறர்க்கு உரைப்பதற்கு அவரிடம் சொற்கள் இல்லாமல் போய்விட்டன. இன்று ஆங்கிலம் கற்றவர்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அறிவும் கருத்துக்கள் அனைத்தும் ஆங்கிலச் சொற்களாகவே யிருக்கின்றன. ஆங்கிலப் பயிற்சிக்கொப்பாக ஒன்றேனும் ஒரு சிறிது குறைவாகவேனும் தமிழ்ப் பயிற்சியிருந்திருப்பின், அவர் உள்ளத்தில் நிறைந்து கிடக்கும் கருத்துக்களுள் பெரும்பான்மை யானவற்றை ஆங்கிலம் கல்லாத நாட்டுமக்களுக்கு உணர்த்தி ஆங்கிலக் கல்வியின் பயனை நாட்டில் பரவச் செய்வர். போதிய தமிழ்ப்பயிற்சியின்றி நிறைய ஆங்கிலப் பயிற்சி பெற்றுவரும் தமிழ் மக்கள் பஞ்சியடைத்த குடுக்கைகள் போலப் பிறர்க்குப் பயன்பட வழியின்றித் திகைக்கின்றனர். இன்று அறிவுத்துறையில் விஞ்ஞானம், கணிதம், வானநூல், மருத்துவ நூல், மின்சார நூல், தொழில் நுட்ப நூல், அரசியல் தந்திர நூல், உள நூல், தாவர நூல், ஏனை உயிர் நூல் என எண்ணிறந்த நூல்கள் ஆங்கிலத்தில் பெருகி வந்துள்ளன. விவசாய வகையில் எத்தனையோ பல அரிய நூல்கள் வளர்ந்து வந்திருக்கின்றன. இவற்றின் கருத்துக்களில் ஒரு சிறிதும் நாட்டுமக்களுக்குத் தெரியமல் ஆங்கிலமொழியிலே அடைபட்டுக்கிடக்கின்றன. அவையெல்லாம் வெள்ளம்போல் நாட்டுமக்களிடையே பரந்து பாயவேண்டும். நாட்டுமொழிப் பயிற்சியில்லாமையால் நாட்டவர்க்கு அவை பயன்படாது மட்குகின்றன. இவற்றை நாட்டுமக்களுக்கு உணர்த்தும் பணியைச் செய்ய வேண்டுமானால் ஆங்கிலம் கற்றவர்களிடம் உள்ள குறையை நோக்கவேண்டும். அவர்களிடம் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப் பதற்கேற்ற தமிழ்ச்சொற்கள் இல்லை; அவை இல்லாமைக்கும் காரணம் அவர்கள் தமிழ்ச்சொற்கள் மிகுதியாகப் பெறுவதற்கேற்ற பயிற்சியில்லை. சிறு வகுப்பில் கற்ற ஒருசில சொற்களைக்கொண்டு. பல்லாண்டுகளாப் பேருழைப் புச்செய்து பெற்ற சொற்பொருளை உரைக்கச்சொல்வது இரண்டடி உயரமுள்ள குள்ளனை எட்டடி உயரமுள்ள நெடியவன் தோள்மேல் கைபோட்டுச் செல்லச்செய்வது போலும் மடமைச் செயலாகும். ஆங்கிலமொழிச் சொற்களுக்கு ஒத்த அளவு தமிழில் இல்லாமல் இருக்கலாம். ஆங்கிலச்சொற்களின் தொகைக்கு முக்காற் பங்கு தமிழ்ச்சொற்கள் தமிழில் உண்டு. இவையாவும் செயலற்று மடிந்து மறைந்துள்ளன. இவை வெளிப்படவேண்டுமானால், அரசியல், வாணிகம், போக்குவரவு, நீதிமன்றம், தபால் முதலிய எல்லாத் துறைகளும் தமிழில் இயங்க வேண்டும்; இப்போது மூலை முடுக்குகளில் மறைந்துகிடக்கும் தமிழ்ச்சொற்கள் வெளிப்படும். அடுத்தபடியாக அரசியல் பணிகளுக்கு ஆங்கிலம் கற்றவர்களை விலக்கி, மிக்க வூதியம் தந்து நாட்டுமக்களுக்கு ஆங்கிலக் கலையறிவை உணர்த்தும் பணியில் ஈடுபடுத்தி ஊக்கவேண்டும். அரசியல் நிலையங்கள், நீதிமன்றகள், மருத்துவ நிலையங்கள், தொழில் நிலையங்கள் ஆகிய எங்கும் தமிழே வழக்குமொழியாக நிலவப் பண்ணினால் ஒருசில ஆண்டுகளில் கல்வியறிவில்லாத நாட்டு மக்கள் பலர் நல்ல அறிவுடைய மக்களாய் மக்கள் ஆட்சிக்கு மாண்புமிக்க உறுப்பினராய் விளங்குவார்கள். நாடும் நல்வாழ்வுக் குரிய செல்வம் சிறக்கும் திருநாடாகத் திகழும்.  13. முல்லை-ஒரு சொற்பொழிவு தமிழ் நலம் சான்ற தலைவர் அவர்களே, சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே, இதுகாறும் நாம் தலைவர் அவர்களின் இனிய சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தோம். குறுந்தொகை யென்னும் சங்க இலக்கியத்தின் நலம் பலவும் இனிமையுறக் கூறிவந்தனர். யானும், இனி, அக் குறுந்தொகையில் உள்ள முல்லைப் பாட்டுக்களைப் பொருளாகக் கொண்டு சொற்பொழிவு செய்ய இருக்கின்றேன். தலைமப் பேருரையில் தலைவன், தலைவி என்ற இரண்டு சொற்கள் அடிக்கடி வழங்கப்பட்டன. தலைவன், தலைவி என்ற இவர்கள் யாவர்? உயர்ந்த குணமும், உயர்ந்த ஒழுக்கமும், உயர்ந்த எண்ணமும், உயர்ந்த சொற்களும், உயர்ந்த செயல்களும் உடைய ஆண்மகன் தலைவன் ஆவான்; அவனோடு எவ்வகையிலும் ஒப்பாகக் கூடிய குணமும் செயலும் ஒழுக்கமு முடைய பெண்மகள் தலைவி ஆவாள். இவ்விருவரும் அன்போடு கூடி இன்புற்று நடத்தும் வாழ்க்கையே பொருள் இலக்கணத்தின் இலக்கியமாகும். இந்த இன்ப வாழ்க்கைக் குரிய ஒழுக்கத்தை விளக்குவதே தமிழ் நூல்களில் காணப்படும் பொருளிலக்கணத்தின் கருத்தாகும். உலகில் ஏனை மொழிகட்கு இல்லாத ஒரு சிறப்பு நம் தமிழ்மொழிக்கு உண்டு. ஏனைய யாவும் மக்கள் பேசும் சொற்களுக்கும், அச்சொற்கள் தம்மில் தொடர்ந்து பேசுவோர் கருத்தை வெளிப்படுக்கும் முறைக்கும் இலக்கணம் கூறுகின்றன. நம் தமிழிலக்கணமோ, அவ்வளவில் நில்லாது, மக்கள் நடத்தும் வாழ்க்கைக்கும் ஒரு சீரிய இலக்கணம் காண்பதாயிற்று. இதனையறிந்தே ஏனை நாட்டு அறிஞர் நம் தமிழ் நாட்டின்பாலும், தமிழ் மக்கள்பாலும் பண்டை நாளிலேயே பெருமதிப்புக் கொண்டிருந்தனர். அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தபோது, அவர் சிவபெருமான்பால் விடை பெற்றுக்கொண்டார். அப்போது அவர் "நான் ஏகும் தேயம் தொடைபெறு தமிழ்நாடு என்று சொல்லும்; அந்த நாட்டின் இடைபயில் மனிதரெல்லாம் இன் தமிழ் ஆய்ந்து கேள்வியுடையவர் என்ப; கேட்டார்க்கு உத்தரம் உரைத்தல் வேண்டும்" என்று வேண்டிக்கொண்டார் என்று பதஞ்சலி முனிவர் கூறுகின்றார். ஆகவே, அகத்தியர்க்கும் அச்சம் விளைவிக்கும் அறிவுத்திட்பம் பெற்றது நம் தமிழ் என்பதை மறக்கலாகாது. இப் பொருளிலக்கணம் காட்டும் இன்பவொழுக்கத்தைப் பற்றிப் பாடிய பாட்டுக்கள் அகப்பாட்டுக்கள் என்றும், அகப் பொருட்பாக்கள் என்றும் வழங்கும். இப் பாட்டுக்கள் மக்களின் மனவியலை அறிந்து, மனத்தின் உணர்வும், அவ்வுணர்வு உடலை இயக்கும் திறமும் அறிந்து செய்யப்பட்டவையாதலின் இவற்றை ஆராய்பவருக்கு வருத்தமும் மெலிவும் பிறப்பது இயல்பு. ஒரு தலைவன் ஒரு தலைவியைக் கண்டு அவள்பால் தன் நெஞ்சைப் போக்கி மெலிந்துவந்தான்; அவனைக் கண்ட அவன் நண்பன், 'தோழ, உனக்கு ஏன் இவ் வாட்டம்; நீ அன்று பரமன் கூடல் நகரில் இருந்து தமிழாராய்ந்த அகப்பாட்டாராய்ச்சியில் உன் கருத்தைச் செலுத்தினையோ? அன்றி, எழுவகைப்பட்ட இசையில் செலுத் தினையோ? யாது செய்தனை? இவை தவிர உன் அறிவை அலைக் கக்கூடியது வேறு என்ன இருக்கிறது என்பவன், "சிறைவான் புனல்தில்லைச் சிற்றம் பலத்தும்என் சிந்தையுள்ளும் உறைவான் உயர்மதிற் கூடலின் ஆய்ந்தஒண் தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ? அன்றி ஏழிசைச் சூழல்புக்கோ? இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்மெலி வெய்தியதே" என்றதாக நம் மணிவாசகனார் பாடுகின்றார். மேலும், அகப்பாட்டு, ஏழ் இசை என்ற இரண்டினும், ஆராய்வார் அறிவை அலைப்பதில், அகத்துறைப்பாட்டே மேம்பட்டது என்பதைக் காட்ட, "தீந்தமிழின் துறைவாய் நுழைந்தனையோ" என்பதை முதலிலும், "ஏழிசைச் சூழலை" அதன் பின்னரும் வைத்துக் கூறியிருக்கின்றார். இத்துணை ஏற்றமுடைய முதலிய தொகை நூல்கள் என்பனவாகும். இக் குறுந்தொகையில் குறிஞ்சி முதலாக ஐவகைத் திணைச் செய்யுட்கள் இருக்கின்றன என்றும், அவற்றின் பொருள் நலம் இத்தகையது என்றும் தலைவரவர்கள் நன்கு காட்டிட, நாம் அனைவரும் கண்டு மிக்க மகிழ்ச்சியுற்றோம். இனி, அக் குறுந்தொகையின் முல்லைப்பாட்டுக்களைப்பற்றி ஒரு சிறிது கூற நினைக்கின்றேன். உயர்ந்த எண்ணமும், உயர்ந்த சொல்லும், உயர்ந்த செயலும் உடைய ஆண்மகனொருவன், அத்தகைய பெண்மகளை விரும்பியொழுகுகின்றான். அவன் வினைகுறித்தோ, பொருள்குறித்தோ தலைவியைவிட்டுப் பிரிந் தேகுகின்றான். அவன் பிரிந்து சென்று தான் குறித்த கருத்து முடியுமளவும் தன் காதலியின் பிரிவைப் பொறுத் திருந்து, அது முடிந்தபின் மீள்கின்றான். இவ்வாறு அவன் பிரிவாற்றியிருப்பது முல்லை எனப்படும்; அவனைப்போல, அவளும், அவன் பிரிந்த வழி, பிரிவுத் துயரைப் பொறுத்து, அவன் வற்புறுத்திவிட்டுச் சென்ற சொற்களைத் தெரிந்து தேறி, அவள் மனைக்கண்ணே இருந்து தனக்குரிய அறங்களைச் செய்தொழுகுவது முல்லையெனப்படும். இதுவே முல்லையென் பதன் முடிந்த கருத்தாகும். தலைமகள் தலைவியோடு கூடியிருக்கும்போது, இருவர் மனத்தும் நிகழ்ந்த ஒத்த காதலால், இருக்கும் நாள் ஒவ்வொன்றும் இன்பநாள் என்றும் வாழ்நாள் என்றும் கருதுகின்றான். இன்ப நுகர்ச்சியுள்ள நாளே வாழ்நாள்; அஃது இல்லாத நாள் வீழ்நாள் என்று எண்ணுகின்றான். "விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும் இரண்டும் தூக்கின் சீர்சா லாவே........... மாண்வரி யல்குற் குறுமகள் தோள்மாறு படூஉம் வைகலொ டெமக்கே" என்று வாய்விட்டும் கூறுகின்றான். இதனால், அவனது உள்ளம் காதல்வயப் பட்டு, அதன் வழி எய்தும் இன்பத்தில் எத்துணை மிகுதியாக ஆழ்ந்திருக்கின்ற தென்பது தெரியும். இன்ன இயல்புடை யோன் ஏதோ வினையோ பொருளோ கருதிப் பிரிகின்றான் என்றால், அப் பிரிவு எத்துணை வன்மையுடைதாக இருக்கும். அதற்கு - அப் பிரிவிற்கு, காதலின்பத்தை நீக்கி வைக்கும் பிரிவிற்கு - அவ் வன்மை எங்கிருந்து வந்தது? "வினையே ஆடவர்க்கு உயிர்" "நாளும் நாளும் ஆள்வினை மழுங்க, இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையால் புகழ்" "அறங்கடைப் படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன்கடைச் செலா அச் செல்வமும் இரண்டும், பொருளினாகும்" என்ற எண்ணங்கள் எழுந்து அத் தலைமகனது ஆண்மைப் பண்பை எழுப்புகின்றன. உயர் குணமும் செய்கையும் படைத்த உரவோனா தலால் இவ்வாண்மகன் தானே தலைமகனாயினான். ஆதலால், அவனது உள்ளத்தே ஆள்வினையும் காதலும் பூசலிடுகின்றன. உண்மைத் தமிழ்த் தலைமகனுக்குக் காதலினும் ஆள்வினையே மாண்பு தருவது. அதனால், ஆள்வினை மேம்படுகிறது; காதல் தாழ்கிறது. அவனும் பிரிந்து ஏகுகின்றான். எடுத்த வினையையோ பொருளையோ முடித்துக் கொள்ளுகின்றான். அதன் முடிவில் இன்பம் தோன்றுகிறது. அவ்வின்பம் அவனது காதலியை நினைப் பிக்கின்றது. அவளை "உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்" என்று மன மகிழ்ந்து வியக்கின்றான். வினை செய்யுமிடத்து அவனது உள்ளம் அவளை நினையாதோ? காதல் பெருவலியுடையதாயிற்றே என்ற ஐயமெழும். கடலன்ன காதல் எழினும், அதனை அடக்கி எடுத்த வினையை முடிப்பதே தலைமைக் குணமாதலால், அவன்பால் அதன் வேகம் செல்லுவதில்லை. வினைசெய்யு மிடத்து அவளை நினைந்து கூறல் ஆண்மையன்று என்பதற்காகவே ஆசிரியர் தொல்காப்பியனார் இங்கே ஓர் அணை வகுக்கின்றார். வினைமேற் சென்ற ஆண்மக்கள் அது முடியுங்காறும் தன் காதலியின் காதலின் பத்தை நினைந்து கலுழ்தல் கூடாது; வினைமுற்றி வென்றியெய்தும் போது அது மிக்குத் தோன்று தல் சிறப்பென்கிறார். "கிழவி நிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்" என்கின்றார். வினைமுடிவில் தோன்றிய இன்பத்தால் தலைவியை நினைந்து மீண்டுவரும் தலைவன் அவளைப் பிரிந்திருந்த நாட்களையும், பிரியாது வாழ்ந்த நாட்களையும் எண்ணுகின்றன். "எல்லாம் எவனோ பதடிவைகல்" எனப் பிரிந்திருந்த நாட்களைப் பதடிவை கல் என்கின்றான். இன்பவுள்ளீடு இல்லாத நாள் என்பது கருத்து. வினைமேற் செல்லும்போது மடங்கியிருந்த அவனது காதல், அது முடிந்து மீளும்போது அளவுகடந்து எழுந்து அவனது உள்ளத்தை விதுப்புகின்றது. நெஞ்சம் துடிக்கின்றது. அது இக்குறுந்தொகைக் கண் மிக அழகாகக் கூறப்பட்டுள்ளது. உழவன் ஒருவனுக்குப் பரந்த நிலம் இருக்கிறது; ஆனால் அவன்பால் ஒரே ஏர்தான் உண்டு. நிலத்து ஈரமும் பக்குவமாக இருக்கிறது; உழுகின்றான். உழுது முடிவதற்குள் ஈரம் செவ்வி கெட்டுப் புலர்ந்துவிடும்போல் இருக்கிறது. உழவேண்டிய பகுதியோ பரந்து கிடக்கின்றது; அந்நிலையில் அவன் உள்ளம் என்ன பாடுபடும்! வினை முடித்து வரும் தலைவன் தன் மனை நோக்கி வருகின்றான்; குறித்த காலமும் வந்துவிட்டது; போகவேண்டிய வழியோ நீண்டிருக்கிறது; காலத்தில் சென்று சேர்வதற்கு அவன் உள்ளம் துடிக்கிறது; குறித்தகாலம் தவறின் தன் காதலி என்னாவாளோ என்ற எண்ணம் அவன் மனத்தைக் கலக்கு கின்றது. என்ன செய்வான் ! "ஆடமை புரையும் வனப்பின் பணைத்தோள் பேரமர்க் கண்ணி இருந்த வூரே நெடுஞ்சேண் ஆரிடை யதுவே நெஞ்சே, ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஓர்ஏர் உழவன் போலப் பெருவிதுப் புற்றன்றால் நோகோ யானே" என்று பாடுகின்றான். இனித் தலைமகள் என்பவள் உயர்ந்த குணமும் உயர்ந்த செய்கையு முடையவள். அவளும் காதல் வயப்பட்டுக் கருத்தறியும் பான்மையளே. அவள் அவன் பிரிவாற்றாது மெலிந்து பொலிவிழந்து நிற்பதும், அவள் குறித்த காலம் நோக்கி யிருப்பதும், இதற்கு இடையே தனக்குரிய இல்லறம் நன்கு ஆற்றுவதும் அவளுடைய தலைமைப் பண்புகளாகும். அவன்பால் உண்டான காதலால் அவனைப் பிரிவது என்பது அவட்கு உயிரிழப்பது போல்வதாகும். மேன்மையே உருக்கொண்டது போல்பவள். தன் அறத்துக்கோ புகழ்க்கோ, கற்புக்கோ சிறு கேடு தோன்றக் கூடிய சொல்லோ செயலோ தோன்று மாயின் உடனே உயிர் விட்டு விடக்கூடிய அத்துணை மென்மை யுடையவள்; காதலனோடு கூடியுறையுங்கால் "பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன" புலம்புகொண்டு மெலியும் மென்மையுடையள்; அருளின் உருவே அவளது உள்ளம். இப்பண்பு குறித்தே இவளை "மெல்லியல்" என மேலோரும் கூறுகின்றனர். இத்துணை மென்மையுடையளாயினும், இவள் மனத்தே கற்பென்னும் கலங்கா நிலைமை, திண்மை, உண்டு. காதலன் பால் அவளுக்குற்ற நம்பிக்கையை எவராலும் எவ்வாற்றாலும் அசைக்க முடியாது. உலகமே தலைகீழாக மாறினும், தன் காதலன் சொன்னதே அவட்கு உறுதியாகும். தலைவன் பிரிகின்ற காலத்தில் குறித்துச் சென்ற பருவம் வருகிறது. அதனைத் தோழி காண்கின்றாள்; இது தலைவன் குறித்த பருவம்; அவனோ இன்னும் வந்திலன்; இம் மெல்லியல் நல்லாள் என்னா வாளோ என்று கலங்குகின்றாள். இதனைத் தலைவி அறிந்து கொள்கின்றாள்; அவள் தோழியை நோக்கி, "தொழி, நீ கவலற்க. புதுப்பூங் கொன்றைக்கானம், கார் எனக் கூறினும், யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலர்" என்று கூறித் தோழியை ஆற்றுவிக்கின்றாள். மேலும், தலைவி தான் தலைமகனோடு கூடிச் செய்யும் இல்லறம் வெறும் காதலின்ப நுகர்ச்சி யொன்றையே கருதியது என்னுங் கருத்து அவட்குக் கிடையாது. தலைவன்பால் அவள் எவ்வளவு காதல் மிக்கிருப்பினும், அவள், அவன் தன் ஆண்மை குன்றாதிருக்கும் நெறி எதுவோ அதனையே நினைத்த வண்ண மிருப்பள். ஆண்மைக்கு மாசும், மானத்துக்குக் கேடும் தருவனவற்றை மனத்தால் நினைத்தற்கும் அவள் கூசுவள். குறித்த பருவம் வரக் கண்ட அவள் ஒருநாள் மெலிந்து நின்றாள். அதனை அறிந்த தோழி வருத்தமுற்றாள். அப்போது, அத்தலைவி, "தொழி, யான் அவர் குறித்த பருவம் வரக்கண்டு வருந்துகின்றேனில்லை. இப் பருவம் தனித்திருப்போரை வருத்தும் இயல்புடையது; இங்கே இது என்னை வருத்துவதுபோல அங்கே அவரையும் வருத்துமன்றோ ! அதுபோது அவர் தாம் மேற்கொண்ட வினையில் சோர்வுபட்டு ஆண்மை குன்று வரோ? வினை முடியாது பழி தந்துவிடுமோ என்றெல்லாம் எண்ணி என் மனம் கலங்குகிறது; வெறெ ஆற்றாமை யன்று என்கின்றாள்; "பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே, யானே மருள்வேன் தோழி பானாள் இன்னும் தமியர் கேட்பின் என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே" என்று கூறுகின்றாள். வினைமுடியாது ஆண்மை மழுங்கிக் காதற்கு அடிமையாகி விடுவரோ என்று வெளிப்படக் கூறாமல், "என்னா குவர் கொல்" என்றும், "யானே மருள்வேன்" என்றும் கூறும் திறத்தைக் காண்மின்! தலைமைக்குணமும் தலைமைச் செய்கையு முடைய தலைவிக்குத் தோழமைகொண்ட நங்கை யொருத்தி உளள்; அவளைத் தோழி என்றே கூறுவர். அறிவே அவளது வடிவு; அன்பே அவளது உள்ளம்; அறமே அவளது செய்கை. "இடித்து வரைநிறுத்தல்" அறிவுடை யோரது செயல் என ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்தா ராயினும், "உறுகண் ஓம்பல் தன்இயல் பாகலின், உரிய தாகும் தோழிகண் உரனே" எனத் தோழிக்கும் அச் செயல், பணிந்த லாய்பாட்டால் உரித்தாகு மாறு மொழிந்திருக்கின்றார். அதனால் அவள் ஒழுகும் திறம் மிக்க ஒட்பமுடையதாகவுளது. புதுமணம் புணர்ந்த தலைமகன் தலைமகளோடு கூடியிருக் கும்போதே வேட்கை மீதூர்ந்து புணர்ச்சி விதும்புகின்றான். அதனை அந்நெறியே விடின் அது கழிகாமமாய் ஆண்மைக்கும் இற்சிறப்புக்கும் மாசு தரும் என்று அஞ்சுகின்றாள் தோழி. உடனே அவள், அவனை நெருங்கி, "ஐயனே, நல்ல இனிய நீர் நிரம்பிய குளத்தில் ஆம்பல் மலர்ந்துளது; அதனை ஒருவன் பறிக்கச் செல்கின்றான். மார்பளவு தண்ணீரில் நின்று பறிக்கின்றான். அப்போது எனக்குத் தண்ணீர் தாகமாய் இருக்கிறது; தண்ணீர் கொண்டுவாவெனக் கரைமேல் இருப்பவர்க்கு அவன் சொன்னால், அது எப்படியிருக்கும்? அது போலன்றோ இருக்கிறது தங்கள் செயல்" என அவன் வேட்கை வேகத்தைத் தணிக்கின்றாள். "அயிரை பரந்த அந்தண் பழனத்து ஏந்தெழில் மலரத் தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கலானீர்" என்று கூறி, களவிக்காலத்தே எளிதிற் கூடலாகாதபடி நாங்கள் இருந்த காலத்தில் எழுந்த வேட்கையைப் பொறுத்துக் கொண்டிருந்த உமக்கு இதுபோது அவ்வன்மை கழிந்து போயிற்றோ? என் நெஞ்சு வருந்துகின்றதே என்பாள், "யாம் நமக்கு அரியமாகிய காலைப் பெரிய நோன்றனிர், நோகோயானே" என்கின்றாள். இவ்வண்ணமே இவளது அறிவின் பெருமையும், அன்பின் அகலமும், அறத்தின் சிறப்பும் இத்தொகை நூல்கள் விரியக் கூறுகின்றன. ஈண்டு விரிக்கிற் பெருகும். இனிச் செவிலியென்பாள் ஒருத்தியுண்டு. அவள் இத்தோழியின் தாயாவாள். தலைவியின் தாய்க்குத் தோழியுமாவாள். அவளும் தலைமக்களது வாழ்வு செம்மை பெறு வதற்குவேண்டும் செயல் பலவும் செய்பவள். அவள் ஒருகால் தலைவியின் இல்வாழ்க்கையைக் காண வருகின்றாள். அச் சமயத்தில் தலைவி தயிர்க்குழம்பு வைத்துத் தன் கணவனுக்கு இடுகின்றாள். அவன் "இனிது" என உண் கின்றான். அது கண்ட தலைவி பெருமகிழ் கொண்டு நாணத்தால் அதனை மறைக்கின்றாள். அதனைக் கண்டு உவந்த செவிலி, தலைவியைப் பயந்த தாயிடம் சென்று உரைக்கின்றாள்: "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதுஎனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே" என்று சொல்லி மகிழ்கின்றாள். இவ்வாறு பண்டை நன்மக்களின் வாழ்க்கைப் பண்புகளை ஓவியம்போற் காட்டும் இச் சங்க இலக்கியங்களை ஆராய்ந்து மாநாடு கூட்டி மகிழ்ந்து சிறக்கும் இக் கூட்டத்தில் என்னையும் கலந்துகொள்ளச்செய்து சிறப்பிக்கும் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கும், இதுகாறும் யான் கூறியவற்றை அமைதியோடு கேட்டிருந்து சிறப்பித்த உங்கட்கும் என் நன்றி யினைத் தெரிவித்துக்கொண்டு என் சொற்பொழிவை இதனோடு நிறுத்திக்கொள்ளுகின்றேன். "வாழி பகலோன் வளரொளிசேர் ஞாலமெலாம் ஆழி செலுத்தும் அரசர்பிரான்- வாழியரோ நங்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கம் நாணாளும் அங்கம் தழைக்க அமைந்து."  14. முடத்தாமக் கண்ணியார் உலகத்தில் பலதிறப்பட்டு விளங்கும் நாடுகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் நுணுகி யாராயின், அது அந்நாட்டின் பெருஞ் செல்வமுடைமையைப் பற்றிநிற்றல் ஒருபுடை தேற்றமாயினும், மறுபுடை, அந்நாட்டின் சான்றோருடைமை ஒரு ஏதுவாக நிற்றல் தோன்றும். அச்சான்றோர் கல்லித்துறைபோகிய கமையுடைய ராவர். அவரை நக்கீரனார் பொருண்மொழி கொண்டு, 'யாவதும் கற்றோர் அறியா அறிவினர், கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையார்" என்பது மிகையாகாது. நாடும், மக்களும் நன்னிலை யடைதற்குக் காரணர் அவரே யென்பது, "ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழு மூரே" எனப் பிசிராந் தையார் தாம் நரையின்று நின்றமைக்குக் காரணங் கூறியவழிக் கூறியவாற்றானும் தெளியப்படும். படவே, சான்றோர் பலர் உளராதலே ஒரு நாட்டின் சிறப்புடைமைக்கு அடிப்படை யென்பதும் துணியப்பட்டதாம். இத்தகைய சான்றோர்கள் நம் நாட்டில் மல்கியிருந்த காலம் சங்க காலமென்பது யாவரானும் கொள்ளப்படுவதொன்று. அக் காலத்தின் பெருமையும், அக்காலத்து நம் நாடடைந்திருந்த பெருமையும், அக்காலத்து நூல்களைப் படிக்கும் ஒவ்வொரு வருடைய மனத்தும் தோன்றி மிளிரும். அவர் தம் சொல்வன்மையும், அச்சொல்வழித் தோன்றும் செம்பொருட்டன்மையும், அவற்றை நுனித்துணர்ந் துணர்த்தும் அவரது நுண்புலமையும் நினைத்தொறும் இன்பம் பயக்கும் நிர்மையவாம். நிற்க, இச்சான்றோர்கள் பாடிய கவிகளும் பலவுள. அவற்றின் உண்மையே தமிழராய நமக்கும், நம் மொழிக்கும் பெருமை யைத்தந்து நிற்கின்றது. இவ்வுண்மையை யுணர்ந்து, உழைத்த சான்றோர்கள் மிகப்பலர். நம் தமிழ்நாட்டில் சங்கம் நின்று நிலவியகாலத்து, இவர்தம் கவிகளைத் தொகுத்து வைத்த சான்றோர்கள் மிகப் பலர். அவர்களால் றொகுக்கப்பட்ட நூல்களும் பல. ஆயினும், அவற்றைக் காலமென்னும் கடல் மண்டிக்கொள்ளச் சிலவே எஞ்சி நின்றன. நின்றவையும், பேணுவாரின்மையிற் பிலம்புகுற் தருவா யடைய, நம் தமிழ்நாட்டுப் புலவர்களுக்குப் புலவராய உயர்திருவாளர். உ. வே. சாமிநாதையரவர்கள் அந்நிலையை யுணர்ந்து, விரைந்து சென்று உடலுயிர் பொருளெல்லாம் ஒருங்கே செலுத்தி முயன்று, விரும்புவோர் கைக்குக் கொணர்ந்தனர். அவர்மாட்டு என்ன கைம்மாறு ஆற்றுங்கொல்லோ இவ்வுலகு! இப்பெருந்தகையார் முயற்சியின் பயனாய் வெளிவந்துள்ள பண்டைத் தமிழ்நூல்களின்கண், மேற்போந்த சான்றோரின் சால்புடைமையும், சான்றாந்தன்மையும் தோன்றுகின்றன. அந் நூற்களுட் பத்துப்பாட்டென்ப தொன்று. அதன் பெருமையை என் நாவினாற் கூறுதலினும், "பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ-எத்துணையும் பொருட்கிசைவில் இலக்கணமில் கற்பனையே" எனவரும் திரு. சுந்தரம்பிள்ளையவர்கள் பாவாற் கூறுதல் காலச் சிறப்புடைத்தாம். இப்பெருநூற்கண் பத்து நூல்களிருக் கின்றன; அவற்றின் தொகையே இந்நூல்; இந்நூற்களைப்பாடிய சான்றோர் எண்மராவர். இது சங்ககாலத்தே தொகுக்கப் பெற்றது. பெறினும் அகநானூறு, குறுந்தொகை முதலியவற் றின்கட்போல இந்நூற்கண் தொகுத்தார் பெயர் காணப்பட வில்லை. எனினும், இந்நூற் கண்ணுள்ள "மலைபடுகடாம்" என்னும் நூலுரையால் இது சங்ககாலத்துத் தொகுக்கப்பெற்ற தென்பது தோன்றுகிறது. அதுவருமாறு:- தீயின் அன்ன ஒண்செங் காந்தள் - நெருப்பினை யொத்த ஒள்ளிய செங்காந்தள். "இதற்கு நன்னனென்னும் பெயர் தீயோ டடுத்தமையின், ஆனந்தமாய்ப், பாடினாரும், பாட்டுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்தபிள்ளை யாசிரியர் குற்றங் கூறினாராலெனின், அவர் அறியாது கூறினார்! செய்யுள் செய்த கௌசிகனார் ஆனந்தக் குற்றமென்னுங் குற்றமறியாமற் செய்யுள் செய்தாரேல் இவர் நல்லிசைப்புலவ ராகார்; இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவார்; அங்ஙனம் நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றமென்பதொரு குற்றம் இச்செய்யுட்கு உறாமையானென்றுணர்க." எனவே, இப்பத்துப்பாட்டும் சங்ககாலத்தே தொகுக்கப் பெற்றதென்பதும் துணியப்பட்டதாம். இனி, மேற்கூறிய எண்மருள், ஈண்டு யான் கூறத்தொடங்கிய சான்றோரும் ஒருவராவர். இவர் பாடிய நூலொன்று இப் பாட்டின்கணுளது. அது பொருநராற்றுப்படை யென்பது. இவர் பாடியதாக வேறு நூல்கள் இற்றைப்போது பெறப்படும் தொகை நூல்களுள் உள்ளனவாகத் தெரிந்தில. ஆகவே, இவர்க் கமைந்த உயர்குணங்களனைத்தும் இவ் வொருநூலைக் கொண்டே நாம் உய்த்துணர்தல் வேண்டும். அன்றியும் இவரது இயற்பெயர் மட்டில் "முடத்தாமக்கண்ணி" யென்பது தொல்காப்பியச் சேனாவரை யத்தா னுணரப்பெறுகின்றது. இவருடைய பெற்றோர், மரபு, சமயம் முதலியவை நமந்குத் தெரிந்தில. இனி, இவர் கரிகாற் பெருவளத்தானையே இப்பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமையான், இவரது காலமும் அவன் காலமே யாம் என உணர்ந்தோர் கூறுகின்றனர். அன்றியும், இவர் அவன் அவைக்கண் இருந்தாரெனவும், அவனால் புரக்கப்பெற்றா ரெனவும் "சோழன் கரிகாற்பெருவளத்தான்" என்னும் நூல் கூறுகின்றது. கூறவே, இவரது காலம் ஏறக்குறைய இரண்டாயிர மாண்டுகட்கு முன்னராதல் தோன்றுகின்றது. இனி, இவரது நல்லிசைப் புலமை நலத்தையும், அதனைப் புலப்படுத்து மாற்றான் வெளிவரும் இவரது சீரிய குணங்களையும் ஆராய்ந்து காண்பாம். இவ்வாராய்ச்சிக்குக் கருவி பொருநராற்றுப் படையென யான் முன்னரே கூறியுள்ளேன். பொருநாரவார் ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் எனப் பலராவர் என்பர் ஆசிரியர் நச்சினார்க் கினியர் ஆயினும், புறப்பொருள் வெண்பாமாலை உரைகாரர் இவர் கிணைகொட்டுமவர் என்பர் ஆற்றுப்படை யென்பது தலைவனொருவனிடத்துச் சென்று மிக்கப் பரிசுபெற்ற ஒரு இரவலன், எதிர்ந்தோரைக் கண்டு தான் பெற்ற பெருவளத்தை அவர்க்குக் கூறி, அவரையும் தன்னைப்போற் சென்று பெறுமாறும், அவ்வாற்றிற் குரிய தலைவனது நாடுசேர் ஆற்றின் அருமை, தலைவன் பண்பு முதலியவற்றையும் கூறிவிடுத்தலாம். இத்தொழிற்குரி யோர் கூத்தர், பாணர், பொருநர், விறலியர், புலவர் முதலியோராவர். இது, "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறார்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்" எனவரும் தொல்காப்பியத்துட் பெறப்பட்டது. சிறிது விரிவாக நோக்கின், "புரவலன் பரிசு கொண்டு மீண்ட இரவலன் வெயிறெறூஉ மிருங்கா னத்திடை வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர் பொருநர் விறலியர் கூத்தர்க் கந்தப் புரவலன் நாடூர் பெயர்கொடை பரா அய் ஆங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை ஓங்கிய வதுதா னகவலின் வருமே" எனவரும் பன்னிருபாட்டியலுட் காண்க. ஈண்டு ஆற்றிடையெதிருறும் இரவலர் பொருநராகலின், அவரை யாற்றுப்படுத்துக் கூறும் இந்நூலும் அவர் பெயராலே "பொருநாரற்றுப்படை" யென்றாயிற்†று. இனி, இந்நூலின் கருப்பொருள் வருமாறு:- பெருவளம் பரிசிலாகப்பெற்ற ஒரு பொருநன் அது பெறாதானொருவன் தன் எதிர்வரக்கண்டு, தான் அதனைப்பெற்ற வரலாற்றினை அவற்குக் கூறுகின்றான். “ஏ பொருந! இடையறாத செல்வ வருவாயினை யுடைய அகன்ற இப் பேரூர்களில் நடைபெறும் விழாக்கள் கழிந்த பின்னரும் ஆண்டுத் தரப்பெறும் சோற்றை விரும்பாது அவ்விழாக்கள் நிகழும் வேற்றுப்புலங்களைக் கருதிச்செல்லும் பொருந! நின் அறிவே அறிவு! பெடைமயில் அருகுநின்ற மயில் போலும் சாயலும், கல்விப்பெருமையும் தக்கிருப்பவளும், நின்னோடு தொடர்ந்து வருபவளுமாய இப்பெருமை மிக்க பாடினி, சாதிலிங்கத்தை யுருக்கி வார்த்தாற்போலும் சிவந்த இந்நிலத்தில் நடத்தலால், வழியிற் கிடக்கும் சிறுசிறு சுக்கான்கற்கள் அவளுடைய சீறடியிற் றைப்புண்டு அவட்குச் சால வருத்தத்தைத் தந்ததுமன்றிப் பாற்பழங்க ளொத்த கொப்புளங்களையும், அவள் தன் காலில் எழுப்பி நோய் செய்கின்றன. செய்யினும், அவள் அதனைத்தாங்கி நடந்தனளாக, நீயும், காலம் உச்சிக்காலமான சந்தியென்பதை யுணர்ந்து, மேற்செல்லுதலையுந் தவிர்த்துக் கொழுவிய நிழலில்லாத மரா அமாத்தின் கீழ்த் தங்கினை. இவ்வழியின்தன்மை யறியாய் கொல்! இது நாடோறும் பல யானைகள் நெருங்கிச் சென்று கொண்டிருக்கும் காட்டுவழியாகும்; இம் மரத்திடத்தும் இலைகள் இல்லாமையால், படர்ந்து நாற்றிசையும் செல்லும் இதன் கிளைகளின் நிழல், வலையொன்றை மேலே கட்டினாற்போல் மெல்லிதாக விருக்கின்றது. இந்நிலையில் நீ அவளொடும் இங்குத் தங்கினை. ஆ, நின் நிலையை என்னென்பேன்!!”  15. காதல் வாழ்வு வாழ்வு என்பது உயிர் உடம்பொடு கூடி உலகில் தோன்றி நிற்கும் செய்கையாகும், உயிர் உணர்வு வடிவாகி அது அறிவாற்றல், விழைவாற்றல், தொழிலாற்றல் என்ற மூன்றினால் ஆகிய தனி ஆற்றல் என அதனை அறிஞர் கூறுவர். உயிரின் வேறாகிய உடம்பு, உலகில் விளையும் பொருள்களை உண்டு வளர்வது; அதனைப் பழந்தமிழர் உணவின் பிண்டம் என்பர். "உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று உரைத்தனர், ஆகவே அவ்வுடம்பு உலகின்கூறு எனப்படுகிறது. அதற்கு உயிர்போல உணர்வு கிடையாது. உணர்வில்லாத உடம்பும் அதனையுடைய உயிரும் வேறுபட்டவையாயினும் அவை ஒன்று பட்டு உலகில் வாழ்வு பெறுகின்றன. இனமான பொருள்களே ஒன்று சேரும்; இனமல்லாதவை அவ்வாறு சேரா; இது யாவரும் அறிந்த உலகியல் உண்மை. வேறுபட்ட இயல்புடைய உயிரும் உடம்பும் எப்படி ஒன்றுபடு கின்றன; ஏன் ஒன்றுபடுகின்றன என்ற கேள்விகள் அறிஞர் உள்ளத்தில் எழுந்துள்ளன. "வந்தவாறு எங்ஙனே? போமாறு ஏதோ?" என்று திருநாவுக்கரசர் கேட்கின்றார். என்றாலும் நாம் ஒன்று கூறலாம்; அதாவது உலகில் வாழ்தல் வேண்டி உயிர்கள் உடம்போடு ஒன்றித்தோன்றுகின்றன என்போமாயின் அது முற்றிலும் பிழையாகாது. உலகில் இப்படித் தோன்றி வாழும் உயிர் வகைகளுள் கண்ணுக்குத்தெரியாத நுண்பொருளைக் காட்டும் வன்மைமிகுந்த கண்ணாடியாலும் காணமுடியாது மிகமிக நுட்பமாயுள்ள உயிர்கள் (micio or ganisms) முதல் மக்களுயிர் ஈறாகப் பல உயிர்கள் உள்ளன; இத்தனையென எண்ணிக் காண முடியாத பெருந் தொகையினவாகும். ஆயினும் அவற்றுள் மக்களுயிர் அறிவு தொழில் முதலியவற்றால் ஏனை எல்லாவற்றையும்விடச் சிறந்தவை; ஆதலால் மக்கள் வாழ்வு மேன்மைகொண்டு விளங்குகிறது. மக்களுயிர் இனம் இனமாய்க் கூடிவாழும் குணமுடையது. அவ்வினத்தைச் சமுதாயம் என்பது இக்கால வழக்கு. தமிழ் நாட்டில் வாழும் மக்களினம் தமிழ் இனம் என்றும் தமிழ்ச் சமுதாயம் என்றும் பராதநாட்டு மக்களினம் பாரதசமுதாயம் என்றும் கூறப்படுவது இதுபற்றியே யாகும். இச்சமுதாயம் பல குடும்பங்களால் ஆகிய ஒரு கூட்டம். அக்குடும்பங்கள் ஒன்றுக்கொன்று உதவியும், உதவப்பட்டும் ஒப்புரவு செய்து வாழ்கின்றன. இதனால் இவ்வொப்புரவு வாழ்வு சமுதாய வாழ்வு எனவும் குறிக்கப்படும். சமுதாய வாழ்வு தக்காங்கு அமையுமானால் மக்கள் வாழ்வு இன்பமாக இருக்கும். சமுதாயத்துக்கு ஒவ்வொரு குடும்பமும் அடிப்படையாகும். சமுதாயமாகிய ஆலமரத்துக்கு குடும்பங்கள் வேரும் வீழ்துமாய் நின்று விளக்கம் தருகின்றன. குடும்ப வாழ்வு அன்பும். அறிவும், அறமும் கொண்டு சிறக்குமானால் சமுதாய வாழ்வு இன்பமும், பொருளும், அறமும் பெற்றுப் பெருமையுறும். குடும்பம் என்பது கணவனும் மனைவியுமாகிய இருவரால் ஆகியது. அவ்விருவரும் முறையே ஆணுடம்பும் பெண்ணுடம்பும் உடையவர். இந்நாளைய உடற்கூற்றுப் புலவர்களுள் தலைசிறந்த வரான அலிக்சிஸ் காரல் (alixis carrel) என்பவர். ஆடவர், பெண்டிர் என்ற இருவரும் மக்களேயாயினும் இருவர் உடம்பும் தோல், தசை, நரம்பு முதலிய கூறுகளுள் அணுவுக்கணு வேறுபட்டுள்ளன என்று தெளிவாக அறுதியிட்டுக் காட்டியுள்ளார். வேறுபட்ட உடற்கூறு படைத்த ஆணும் பெண்ணும் ஒன்றி வாழ்வது குடும்ப வாழ்வின் நுண்ணிய அமைப்பு. “ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்று பெருங்கடுங்கோ உரைக்கின்றார். ஒற்றுமை யில்லாத குடும்பம் ஒருசேரக்கெடுவது கண்கூடு. பேணப்படுதலும் பேணுதலும் உடையது பெண் என்றும் ஆளுதலும் சூளப்படுதலும் உடையது ஆண் என்றும் கருதப்படுகின்றன. வேறுபட்ட உடலினராகிய ஆண்மகனும், பெண்மகக்ளும் ஏன் கணவனும் மனைவியுமாய் ஒன்றுபட வேண்டுமென உண்மை ஞானம் (philosophy) உசாவுகிறது, எங்ஙனம் ஒன்றுபடுகிறார்கள் என்று விஞ்ஞானம் (science) வினாவுகிறது. உடம்பொடு கூடியுறையும் உலகியல் வாழ்வால் உயிர் அறிவின்பம் பெறுகிறது என உண்மை ஞானமும், ஏனை மரஞ்செடி கொடிகளாகிய உயிர்கள் பூத்துக் காய்த்துக் கனிவாயிலாக விதை பயந்து தம் இனத்தைப் பெருக்கு வதுபோல மக்களுடம்பு வளர்ந்து அழகு மலர்ந்து மேனி பொலிந்து வேறு மக்களுடம்பை உலகில் தோற்றுவித்து இனம் பெருக்குகிறது என விஞ்ஞானமும் முறையே விடை காணுகின்றன. இவ்வாற்றால் மக்களினத்தின் உயிர், அறிவு, இன்பம் நாடியும், உடல் இனப்பெருக்கம் கருதியும் இயலுகின்றன என்பது தெளிவாம். ஆகவே குடும்ப வாழ்வின் பயன் அறிவின்பப் பேறும் இனம்பெருகும்பேறும் என்ற இரண்டு குறிக்கோள்களைக்கொண்டு நிற்கிறது என்பது சொல்லாமலே விளங்குகிறது. “மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே” எனப் புறநானூறு கூறுவது எத்துனைப் பொருத்தமாகிறது! குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் அறிவின்பமும் இனப்பெருக்கமும் கருதுகின்றனராயினும், இருவரும் தனித்தனி இருந்தவழி இப்பேறுகளை அடைதல் முடியாது. தனித்தவழி ஓரளவு அறிவு விளக்கம் எய்துமாயினும், அது நிறைந்த முழு அறிவாய் இன்பம் நல்காது. ஆணும் பெண்ணுமாய்க் கூடியிருந்தே அவற்றைப் பெறுதல் வேண்டுமென்ற கருத்தை உள்ளீடாகக் கொண்டே உலகியற் படைப்புப் பெரும்பான்மையும் அமைந்திருக்கிறது. அணுவினத்து உயிர்களுள் ஒரு சில ஆண் பெண் எனப்பால்பகா உயிர்களாக (assexual) இருக்கின்றன. அவற்றின் உடல் ஆண்கூறும் பெண்கூறும் பொருந்தியதென உயிர்நூற் புலவர் கூறுவர். அது கொண்டே தமிழர் தங்கள் இறைவனுக்குக் கற்பித்துக்கொண்ட உடம்பில் ஒரு பாதி பெண் கூறு எனவும், ஒருபாதி ஆண்கூறு எனவும் உரைத்து, அவனை அம்மையப்பன் என்று குறிப்பாரயினர், நிற்க. ஆணும் பெண்ணும் ஒன்றுபட்டு இயலுவது குடும்பம் என்றும், அவ்விருவர் உடம்பும் வேறு வேறு இயல்பின என்றும் கண்டோம்; வேறுபட்ட இருவரும் உயிராலும் உடலாலும் ஒன்றுபடவேண்மே! அஃது எவ்வாறு அமைகிறது? மக்கள் உடம்பு உலகியற் பொருள்களால் ஆவது என்பது முன்பே அறிந்ததொன்று. உலகியற் பொருள்கள் ஒன்றை யொன்று ஈர்த்து நிற்கும் இயல்புடையன. அதனை ஈர்ப்புச் சத்தி யென்றும் ஆகர்ஷண சக்தி என்றும் இன்றைய விஞ்ஞானம் விளம்புகிறது. பழந்தமிழ் நூல்கள் அச்சத்தியைப் பரிப்பு என்று பகர்ந்துள்ளன. ஞாயிறு, திங்கள், விண்மீன்கள், கோள்கள் முதலியவற்றை ஈர்த்துக் கொண்டிருப்பதையும் அவ்வாறே பிறவும் ஒன்றையொன்று ஈர்த்து நிற்பதையும் புறநானூறு பரிப்பு என்று குறிக்கிறது. அதனால் ஆணுடம்பு பெண்ணுடம்பையும் பெண்ணுடம்பு ஆணுடம்பையும் ஈர்க்கின்றது. மக்களினத்தில் நிகழும் இவ்வீர்ப்பு அல்லது பரிப்பு, அன்பு எனவும் வழங்குகிறது. உடம்பளவாய் நின்று ஒன்றையொன்று ஈர்த்து நிற்கும் அன்பால் ஈருடலும் நெருங்கி முயக்கத்தால் சேருமிடத்து ஊற்றின்பம் பிறக்கும்; அவ்வூற்றுணர்வு, உடற்கூறுகளை யூடுருவிச் சென்று உயிரைத் தொடுகிறது. இவ்வாறே கண், காது முதலிய கருவி களும் ஒருவர் ஒருவரை உள்ளத்தில் முழுவுருவத்துடன் இடம் பெறச் செய்கின்றன. இங்ஙனம் காதலர் இருவரின் உயிருருவம் அவரவர் உள்ளத்தில் மாறி நின்று இன்பம் செய்கிறது. உள்ளத்தின் நினைவும் வாயின் சொல்லும் செய்யும் செயலும் அவ்வின்பப் பொருளாகவே நிற்கின்றன. இவ்வகையில் இருவர் உடம்பு வழிநிற்கும் உயிரும் ஒன்றுபட்டு ஒன்றையொன்று இன்றியமையாத நிலையை எய்துகின்றன. இது கொண்டன்றோ st. paul என்பார் “know ye not that he that is joined to a harlot is one body, for the twain, saith he, shall become one plesh” என்று கூறினார். உடம்பொடு உயிரிடையென்ன அன்ன மடந்தையொ டெம்மிடை நட்பு” என்றார் திருவள்ளுவர். இவ்வாற்றால் ஒன்றையொன்று அவாவி நிற்கும் அன்பு பெருகிக் காதலுணர்வாய்த் திரிகிறது. அன்பு பொது: காதல் சிறப்பு. ஆண் பெண் இருவர்பாலும் உயிருணர்வும் உடம்பின் ஆற்றலும் தனித்தனியே நிலவுகின்றன. இளமைக்காலத்தில் உயிரது அறிவு வளர்ச்சியினும் உடம்பினது வளர்ச்சி இன்றியமையாததாம். விரைவில் வளரும் வளர்ச்சியும் பெற்று வேறு உடம்பு படைக்கும் தொழிலை மேற்கொள்ள வேண்டியது மக்களுடம்பின் இயற்கையறம். அறிவின்பம் பெறுவதையே குறிக்கோளாகக்கொண்ட உயிர்க்கு அது நின்ற உடம்பே கருவியாதலால், அவ்வுடம்பு வளமையும் வன்மையும் பெறும்வரை உயிரின் உணர்வாற்றல் ஒடுங்கி இருக்கிறது. உடம்பு வளர்ந்து வன்மை பெறப்பெற உயிரது அறிவாற்றல் பைய வளர்ச்சி பெறும். உயிரைக் கல்வியும் உடலை உணவும் வளர்க்கின்றன. காளைப்பருவத்தில் உயிரது அறிவு நலத்தினும் உடலினது வளர்ச்சி நலம்மிக்கு நிற்கும்; அதனால் அவ்வுடல் வேறு உடம்பு படைக்கும் தன் தொழிலைத் தொடங்குகிறது. காய்த்துக் கனிபயக்கும் செவ்வி எய்திய செடிகொடிகள் பூத்துப் பொலிவு சிறந்து தோன்று வதுபோல ஆடவர் பெண்டிராகிய இருவர் உடம்பும் காளைப் பருவத்தில் கட்டழகும் கண்கவர் வனப்பும் பெறுகின்றன. இது பற்றியே சில அறிஞர் “love two in the epidiwin” (pitigritti) என்று கூறுகின்றனர். மகப்பயத்தற் கேற்ற வளர்ச்சி நிறைந்த அக்காலத்தைப் பழந்தமிழர் காமச் செவ்வி யென்றனர். காமம் என்பது, நிறைவு என்ற பொருள் தரும். கமம் என்ற சொல்லடியாகப் பிறந்த தூய தமிழ்ச்சொல். “கமம் நிறைந்து இயலும்” என்பது தொல்காப்பியம். இவ் வரலாறு அறியாதவர் அது காமம் என்ற வடசொல் என்பர். வடமொழிக் காமத்துக்கும் தமிழில் உள்ள காமம் என்ற சொல்லுக்கும் ஓசை யொன்றேயன்றிப் பொருள் வேறுவேறாகும். திருவள்ளுவர் எழுதிய காமத்துப்பாலையும் வடமொழியில் வாற்சாயனர் எழுதிய காமசூத்திரத்தையும் ஒப்பு நோக்குவோர் நன்கு அறிவர். காமச் செவ்வி கனிந்து நிற்கும் காளைப்பருவத்தில் உடம் பின் ஆற்றல் மிகுந்தும் உயிர் அறிவின் ஆற்றல் குறைந்தும் இருக்குமன்றோ? அப்போது மக்கள் உள்ளத்தில் காமக்குறிப்பு ஓங்கி நிற்க, அறிவின் வலி ஒடுங்கியிருக்கும். அறிவு நிலை ஓங்குங்கால் காதற்காமம் ஒடுங்கும். கல்வி வளத்தால் உயிர் அறிவு ஒத்த வன்மையுடையதாயின், அறிவுக்கும் காமக்காதலுக்கும் உள்ளம் போர்க்களமாகும். ஒன்று மிகுமிடத்து மற்றொன்று அடங்கி அதன் வழியே செல்லும். காளைப்பருவத்தில் பெரும் பாலும் உயிரறிவு உடம்பின் இயற்கைத் தொழிலாகிய உடம்பு படைக்கும் காதற்காமத்துக்கு அடங்கிமடி கின்றது. உடம்பு முதிர்ந்து வலிகுன்றுமிடத்து உயிர் அறிவு வன்மை மிகுந்து அதன் காமப்பணியை ஒடுக்கித் தன்வழி நிற்கப்பண்ணும். இதுவே காமக்காதல் வாழ்வின் நுண்ணிய இயல்பாகும். இரவுப்பொழுதில் இனிது உறங்கிய உயிர்கட்குக் காலைப் பொழுது மக்கள் செய்தற்குரிய தொழில்கட்கு வேண்டும் கிளர்ச்சியை நல்குகிறது; அவருடைய உடம்பு அத்தொழில்களில் விருவிருப் பாகப்பணிபுரிகிறது. அந்நிலையில் உடம்பின் காதற்குறிப்பு ஒடுங்குதலால் உயிரறிவு ஓங்கி நின்று அறிவுப்பேற்றின் கண் செல்லுகிறது. நண்பகலில் இரண்டும் சமநிலையை எய்துகின்றன. மாலைப்போதில் பரவும் இருளால் உலகின் ஒளி குன்றுவதால் உயிர் அறிவு ஒடுங்குகிறது: அந்நிலையில் உடலின் வழித்தாகிய காமக்காதல் எழுந்து ஓங்கி உயிரறிவைத் தன் அடிப்படுத்திக் கொள்ளும். அதனால் மக்கள் உள்ளம் காதல் நினைவுகட்கு இட மாகிறது. காலையில் ஒடுங்கியிருந்த காதல்வேட்கை நண்பகலில் சமநிலை யடைந்து மாலையில் ஓங்கி நிற்கிறது. அப்போது காதலிற் பிணிப் புண்ட காளையர் உள்ளம், காதல் துணைவர் இல்லாவிடின் வருத்தம் மிகுந்து கவலை எய்தும். “காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர்போல வரும்” என்றும் “காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலைமலரும் இந்நோய்” என்றும் திருவள்ளுவர் கூறுவது இதற்குப் போதிய சான்றாகும். இக்காதல் வாழ்வின் நலம் கூறவந்த திருவள்ளுவர், “வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கு அன்னள் நீங்குமிடத்து” என்றார். எனவே, காதலர் உள்வழி வாழ்வும் இல்வழிசாதலும் ஆதல் பெற்றாம். அதனால், காதலர் இல்வழிக்குச் சாதல் பயக்கும் கொலைக்களத்தை உவமித்தும், மாலைப்போதினைக் கொலைபுரிந்து சாதலையுறுவிக்கும் ஏதிலரோடு ஒப்பவைத்தும் கூறுகின்றார்.  16. மறுப்பு முறை பொழிலன்பர்கள் சென்ற சிலமலர்களில் பின்னங்குடி, திரு. சுப்பிரமணிய சாத்திரியார் எழுதிய சொல்லதிகாரக் குறிப்புரை நூலை, தமிழ்ப்புலவர் திரு. சோமசுந்தரம் பிள்ளை யவர்கள் ஆராய்ந்தெழுதிவரும் மறுப்புரையினைக் கண்ணுறு தலேயன்றி யூன்றி நோக்குதலும் செய்து வருகின்றனர். அம்மறுப்பு, அக்குறிப்புரை நூலைத் தொடக்க முதல் முடிவுகாறும் ஆராயத் தொடங்கியுள்ள தென்பதும், அது மேற்கொண்டுள்ள முறை நடுநிலை இகவாத தென்பதும் அன்பர்கள் அறிந்தனவாம். நிற்க, சென்ற மலரில் வித்துவான் திரு. வேதாசலய்யர் அவர்கள் பிள்ளையவர்கள் எழுதிய மறுப்புக்கு மறுப்பொன்று எழுதியிருக்கின்றார். வாதப்பொருளாய குறிப்புரை நூலுடையார் நோக்கத்தையாதால், பிரதிவாதமாகிய மறுப்புரை நோக்கத்தையாதல் கொள்ளாது, காலத்துக்கேற்ற கோலம் கோடல் வேண்டும் என்னும் நோக்கத்தையுடையராய், ஐயரவர்கள் மறுப்பெழுதத் தொடங்கியுள்ளார். அது மறுப்பு முறையன்று; வாதி பிரதிவாதிகள் இருவரும் ஒரு நோக்கமுடையராய், அதனைச் சாதிக்கு முகத்தால் எழும் பொருள்பற்றி வாதிக்கின்றமையின், அவ்வாதப் பிரதிவாதங்களைத் தூக்குவோர் பிறிதொரு நோக்க முடையராதல் அமையாதாம்; இருவர் நோக்கமும் வழுவாயவழி, பிறிதொன்றமையும். இனி, ஒரு பொருள்பற்றி வாதம் நிகழ, அதனை மறுக்கு முகத்தால் பிரதிவாதம் எழின், இவ்வாதம் முடிவதன்முன், ஒருவர் இடைபுகுந்து தகைதலேயன்றி வெற்றுரை தொடுத்துக் காலங் கழிப்பித்தல் தருக்க நெறிக்கும் வழக்குக்கும் ஒவ்வாத செயல் என்ப. குறிப்புரை நூலை வாதப் பொருளாகக் கொண்டு திரு. பிள்ளையவர்கள் பிரதிவாதம் புரிந்து மறுக்கின்றாராகலின், அதற்கிடையிலே, ஐயரவர்கள் மறுப்பெழுதுதல் மறுப்பு முறையன்று. இனி, பிள்ளையவர்கள் செய்யும் மறுப்புரையின் பாங்கறியாது முன்னுரையிற் கூறியன சில கொண்டு, மறுப்புரை போன்று, ஐயரவர்கள், ஆரியம் படித்தவராதலே யன்றித் தமிழும் தாம் படித்தவராவர் என்பதனைத் தமிழுலகிற் கறிவிக்கின்றனர். வனப்பும் மணமும் வாய்க்கப் பெற்ற மலர் வறிதேகானிடைத் தோன்றி மலர்ந்து கமழ்ந்து வாடுதல்போல் அறிவுடையாருட்பலர் சொல் வனப்பும் அறிவு மணமும் அறிந்து உலகு இன்புறும் வகைப் பயன்படாது கழிகின்றனர் என்ற புலவர் பொருளுரையை உணர்ந்து, ஐயரவர்கள் முற்போந் தமையால் அவர்க்குத் தமிழ்த்தாயின் தண்ணருள் பெருகுமாக. இனி, ஐயரவர்கள் குறிப்புரை நூலின் மறுப்புரை குறித்துக் கூறுவார், "திருவாளர் சோமசுந்தரம் பிள்ளையவர்கள் வரையும் மறுப்பினைக் கண்ணுற்றேன். அதில் பெரும்பாலும் சாத்திரியார் வரையும் உரை நடையைப் பற்றிய கண்டனமே கூறுவர்" என்கின்றார். ஒரு பொருள்பற்றி எழுந்த உரைக்கு மறுப் பெழுதுவோர், அப் பொருளைக் கண்ணுற்ற துணையானே அமைந்து அதுசெய்தல் மறுப்புமுறையன்று. அப்பொருளுரைகளை நன்காராய்ந்த பின்னரே அது செய்தல் முறையாகும். "சாத்திரியார் வரையும் உரை நடையைப் பற்றிய கண்டனமே கூறுவர்" என்னும் இஃது உரைநடை அத்துணைச் சிறப்புடைத்தன்று என்று உணர்த்துவதோடு, "ஆதலின் உரை நடையைப்பற்றி ஆய்தல் பயனில் செயலாம்" என்று பின் கூறுவது அவ்வுணர்ச்சியினை வலியுறுவிக்கின்றது. ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாவது உரைநடைப் பொலிவே என்பதனை எல்லா மொழி வல்லாரும் கூறுகின்றனர். ஒருவன் தன் கருத்துட்கிடந்த பொருளைப் பிறர்க்கு வெளியிடுதற்குப் பெருந்துணையாகும் இவ்வுரைநடை, அப்பொருளைத்தன் அகத்தே கொண்டு, தான் அதற்குப் புறமாய் நின்று விளங்கும் நேர்மை கற்றோரேயன்றிக் கற்க முயல்வாரு மறிவர். பொருட் பொலிவு குறைவுற்றிருப்பினும், அதனை வெளிப் படுக்கும் உரைநடைப் பொழிவு அக்குறை வினைநிறைவு செய்து காட்டும் என்ப. சொல்லதிகராக் குறிப்புரையுடையார்; ஆங்கிலத் திலும் பெரும் புலமை பெற்றவராகலின், அம்மொழிக்கண் உரைநடையைப்பற்றிய கொள்கைகள், சிறந்தோர் கூறியன, பல இருத்லை அறிவர். ஆரியம், ஆங்கிலம், தமிழ் என்ற மூவகை மொழியினும் பயிற்சி மிக்க அவர், அவற்றின்கண் உரைநடையாக்கம், பொருளராய்ச்சி முதலிய நெறிகளைக் கண்டிருப்பார். ஆதலின், அவர் கருத்தறியாது ஐயரவர்கள் மறுப்பெழுதுதல் முறையன்று. பொருளின் உயர்வு, தூய்மை முதலிய நலங்கட்கேற்ப, அப்பொருளை வெளிப்படுக்கும். உரையும் உயர்வு தூய்மை முதலிய நலம் பெற்றுத் திகழ்தல் எம்மொழியினும் காணலாம் உயர்பொருளைக் குற்றம் நிறைந்த உரையிடை வைத்துக்கூறுதல் அவ்வுயர்பொருளை யுணர்ந்தார் செயலன்று; அவ்வுணர்ச்சியின் பயனுமன்று. மணியினைப் பொன்னிடை வைத்து அழகு திகழக் காண்பரே யன்றிக் குப்பையிற் கலந்து காணார், ஒருகால் கிடப்பக் காணில், குப்பையிற் பிரித்துக் காணவே அறிவுடையார் முயல்வர். அங்ஙனமே, தமிழ்மொழிக்கண் ஒப்பும் உயர்வுமின்றித் தானே தனக்கு நிகராய்விளங்கும் தொல்காப்பிய நுண்பொருளை ஆராய்ந்து காண்பவர், அதனை, வெளியிடுங்கால், தூயசெம்மொழி நிறைந்த உரையிடைப்பெய்து உரைப்பர்; வேறே வழுநிறைந்த மொழிபயிலும் உரை அவரிடைத்தோன்று தலும் செய்யாது; ஒருகால் தோன்றின், அது, அவரது இலக்கணவறிவின்மையைக் காட்டி விடும். இலக்கண அறிவின் முதற்பயனான உரைநடையை ஆராய்தலும் வேண்டுவதே. இதனைக் காணாது "உரைநடையைப் பற்றி ஆய்தல் பயனில் செயலாம்" என்று அவர் கூறுவது மறுப்பு முறையன்று; உண்மையுரையு மன்று. தமிழறிவு சிறிது பெருகவுடை யார்க் கன்றித் தொல்காப்பியப் பொருள் இனிது விளங்காதென்ப. அது வாயாகுதல் நடைமுறையிலும் காண்கின்றோம். அதனை ஆராய்ந்து குறிக்கும் அறிவு படைத்தவர், அவ்விலக்கண வறிவின் பயனாய உரைநடை வரைதலிற் பிழையாரான்றே! அன்றியும், இலக்கண ஆராய்ச்சிக்கு எத்துணை அறிவு வேண்டுமோ, அத்துணை அறிவன்றே அவ்வாராய்ச்சியை வெளியிடுதலினும் வேண்டப்படுவது! இனி, "உரைநடை காலத்துக் கேற்ற நடையானே வரைதல் பயனளிக்குமே யல்லாது பலதிரிசொற்களைப் பெய்து வரைதல் சிறப்பின்று" என்று கூறிய ஐயரவர்கள், "மரபியலின் கண்ணே பேராசிரியரும் அவ்வக்காலத்துக் கேற்ற நடையானே வரைதல் வேண்டுமென்கின்றனர்" என்றார். உரைநடை, தமிழ்மொழிக் கண்ணதாயின், சீரிய கூரிய தீஞ்சொற்களால் வழுவின்றி எழுதப்படுதல்வேண்டும், என்னுங் கருத்தினராய் உரை நடையைப் புலவர் ஆராய்வாரக. அதனை யறியாத ஐயரவர்கள் மற்றொன்று விரித்தல் குற்றமாகும். வழுவின்றி யன்ற உரைகள் திரிசொற்கள் பெய்து வரையப் பட்டிருக்குமென்பது இவர் கருத்துப்போலும். இன்றேல், இதனை இவர் எழுதுவதன் கருத்து என்னை? இனி, பேராசிரியர் காலத்துக்கேற்ற நடைவேண்டு மென்றனரேயன்றி, வழுமலிவும் பொருளியைபின்மையும் பிறவும் ஆகிய குற்றமெல்லாம் நிறைய எழுதுதல் வேண்டுமென்றாரிலர். இங்கே, பேராசிரியர் "மரபு நிலை திரியா" என்ற மரபியற் சூத்திரவுரையில், "முற்காலத்து வழங்கிவந்ததனை வழுவென்று களைய வாயினன்றே பிற்காலத் துப்பிறந்த வழக்கு இலக்கணமெனத் தழீ இக் கொள்வதென்க" என்ற பொருளுரையை ஐயரவர்கள் மனத்துட் கொள்வாராக. இவரோரன்னார் கருத்துட்கொண்டு போலும், சிலர், "ஒருவள்" "பூந்து" முதலிய சொற்களைப் பெய்து நூல்கள் எழுதுதலே யன்றி, இன்ட்டர் மீடியட், பி. ஏ. முதலிய தேர்தல்களுக்குப் பாடங்களாக விதிப்பித்தலும் செய்கின்றனர். இனி, "அன்றியும், ஆரியம் படித்தார் தமிழறியார் என்பர்," என்று கூறுகின்றார். பிள்ளையவர்கள் கூறியது உண்மை யுரையே. ஆரியம் படிப்பவர் ஆரியம் அறிவரே யன்றித் தமிழறிதல் யாங்ஙனம் கூடும்? இருமொழியும் ஒருங்குணர்ந்தார் ஒருங்கறிதல் கூடும். ஆரியம் படித்தார், தமிழறிந் திருப்பாராயின், தமிழறிவாராவர்; ஆங்கிலம் அறிந்திருப்பாராயின், அஃதறிந்தாராவர். ஆரியம் படித்ததனாலே ஒருவன் தமிழையும் அறிந்தானாவன் என்பராயின், அவருரையைக்கொள்ளார் அறிவுடையோர். இனி, "வடமொழி நூல் உணர்ச்சியுடையாரே தமிழின் உண்மைப் பொருளைத் தெள்ளிதின் விளக்குவர்" என மாதவச் சிவஞான யோகிகளும், தொல்காப்பிய உரையாசிரியர்களுட் சிலரும் விளக்கினர் என்பர். ஒரு மொழியின் இலக்கண ஆராய்ச்சிக்குப் பிற மொழிகளின் இலக்கண அறிவு ஒருவர் பெறின், அது நன்றே. ஆரிய மொழியின் இலக்கண முறையினும், ஆங்கில மொழியின் இலக்கணமே உரைநடை யாக்கத் திற்கும், சொல் முடிபுகட்கும் ஒருபுடை நெருங்கிய ஒற்றுமை யுடைத்தாய்த் தோன்றுதல்bகொண்டு, ஆங்கிலமுணர்ந்த ஒருவர், "ஆங்கில நூல் உணர்ச்சி யுடையாரே தமிழின் உண்மைப் பொருளைத் தெள்ளிதின் விளக்குவர்" என்பராயின், அஃதெவ்வாறு கோடற்பாலதாமோ அவ்வாறே இக்கருத்தும் கோடற்பாலதாம். ஒரு மொழியின் இலக்கணம், எள்ளின் நெய்போலும் என்ப வாகலின், அந்நெய்யின் இயல்பாராய்வார், எள்ளையாராயாது கொள்ளையாராய்தலோடு, பிற மொழியின் இயல்பற்றிப் பேசுதல் ஒக்கும் என்க. ஒருகால் ஒற்றுமைப் பகுதிகள் இருக்கலாம். அவற்றைத் காட்டுதல் அறிவுடைமையாகும். இந்நெறியை நோக்காது, ஐயரவர் கள், வடமோழி தென்மொழிகளின் உணர்ச்சியின்மை யுண்மைகளைத் தொடுத்து நெறி பிறழ்தல் மறுப்பு முறையன்று. இனி, இவர், பிள்ளையவர்கள் மறுப்புரைகளில் பிழையெனக் கண்டு காட்டியவற்றுக்கு மறுப்புக் கூறத் தொடங்குகின்றார். ஆராய்தற்கு எடுத்துக் கொண்ட பொருள் இலக்கண மேயாக, பிறிதோர் சின்னூலையும் அதன் உரையையும் சான்று கோடல் அமையாது; அந்நூலே அமையும். உயர்ந்தோர் மனப்பான்மையை அவரிற் குறைந்தார் மனப் பாண்மை கொண்டளித்தல் பொருளா ராய்ச்சிக்கு விளக்கந் தராது. இவற்றை நோக்காது விசாகப் பெருமாளையர், ஆறுமுக நாவலர், வை. மு. சடகோப ராமாநுசா சாரியார் முதலிய நன்நூல் உரைகாரர்களையும் பிற சின்னூல் எழுதினோரையும் காட்டி முடிபு வகுக்கின்றார். இவர்கள் பெரும்பாலும் முன்னோர் கூறுவன வற்றைக் கூறி யாங்குக் கோடலே யன்றி, முன்னோர்போலக் கூடாவிடைகளால் தூய்மை செய்த உரைவகுத்தல் செய்வதிலர். இவருட் சிலரொழியப் பலர் தம்முடைய கருத்தே உரைத்திலர். இலக்கண ஆராய்ச்சி செய்பவர், அதனை ஒப்ப, நூலொன்றுளதாயின், அதனையாதல், இன்றேல், அவ்விலக் கணத்தைப்பற்றிப் பிறர் எழுதியவற்றை யாதல் துணைகோடல் பொருந்துவதாம். அதனிற் பிற்பட்ட நூல்களைக் கருவியாகக் கோடல் மறுப்பு முறையன்று. ஆகலின், புலவர் பெருமக்களாவார் குறிப்புரை நூலையும், அதன் மறுப்புரையையும் முற்றும் தூக்கி நோக்கி, தகுவனவும் தவிர் வனவும் எடுத்துக் காட்டி முடிபு கூறுதலே யன்றி, இனியும், பலரும் எழுதும் உரை, பாட்டு ஆகிய இருவகை நூல்களையும் ஆராய்ந்து வழுக்களைந்து நம் தமிழ் மொழியினை வளர்த்து வளம்பெறச் செய்வார்களாக. இவ்வகையான மறுப்புக்களும், சொற் போர்களும் எழுந்தமைகாரணமாக, ஆங்கிலம், ஜர்மன், ப்ரெஞ்ச் முதலிய நாட்டின் மொழிகள் வளமுற்றுத் திகழ்கின்றன என்பதையும் நினைவு கூர்வார்களாக. 17. நற்றிணைக் கடவுள் வாழ்த்து (நற்றிணைக் கடவுள் வாழ்த்து திருமாலைக் குறிப்பதாகு மென்று நற்றிணை உரைகாரரான ஆசிரியர் பின்னத்தூர். திரு. நாராயணசாமி ஐயரவர்கள் குறிப்பதே பொருத்த முடையதாவ தென்பதைச் சிறக்க விளக்கிக் காட்டுகின்றது இக்கட்டுரை.) மாநிலம் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் படர்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே என்பது சங்கத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணையில் காணப் படும் கடவுள் வாழ்த்து. இதனைப் பாடிய ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தெள்ளா றெறிந்த நந்திவன்மன் காலத்தில் வாழ்ந்த சான்றோர்களில் ஒருவர்; பாரதக் கதையைத் தமிழில் எழுதிய சிறப்பால் இவர் பாரதம் பாடிய பெருந்தேவனா ரென்று சிறப்பிக்கப்பட்டார். 'தீதற விளங்கிய திகிரியோனை, எல்லாம் பயின்று அகத்தடக்கிய வேத முதல்வன் என்ப; அவனை வணங்கி வழிபடுவது நலம்' என்பது இதன் கருத்து. வேத முதல்வனுக்குச் சேவடி மாநிலம்; உடுக்கை (உடை) கடல்; மெய் விசும்பு; கைகள் திசை; கண்கள் ஞாயிறு, திங்கள், தீ என்பன. மாநில முதலியவற்றான் இயன்ற உலகத்து எல்லாப் பொருளினும் பயின்று ஒன்றாயும் வேறாயும் உடனாயும் உள்ள இம்முதல்வன், எல்லா வுயிர்கட்கும் குற்ற மில்லையாக விளங்கும் அறவாழி யுடையவன்; இவனே, வேதங்களுக்கும் முதல்வன் என்பது பொருள். இனி, நற்றிணை யுரைகாரரான ஆசிரியர் பின்னத்தூர், திரு. நாராயணசாமி ஐயரவர்கள், "மாயோனே வேத முதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோ மென்று வாழ்த்துக் கூறாநிற்பது" எனக் கருத்தும், "பசுங்கதிர் மதிய மொடு சுடர்கண்ணாக" என்று பாட வேறு பாடும், திகிரியோன் என்ப தற்குத் "திகிரியையுடைய மாயோனே" என்று பொருளும் கூறுவர். மேலும், உரை விளக்கத்தில், இப்பாட்டு ஏடுகளில் சிதைந்து காணப்பட்ட தென்றும், வடமொழிச் செய்யுளை நோக்கி இது செம்மை செய்துகொள்ளப்பட்ட தென்றும் விளங்குமாறு, "ஏனைப் பூதமும் பிறவும் கூறிய அடிகள் சிதைவுற்றமையின், வடமொழிச் செய்யுளை நோக்கிக் கூறலாயிற்" றென்று குறித்துள்ளார். பாரதம் பாடிய பெருந் தேவனாரது வரலாறு கூறியவிடத்தே, திரு. ஐயரவர்கள், "இந்நற்றிணைக்குக் கூறிய காப்பு விஷ்ணு சகஸ்திர நாமத்தியான சுலோகமாகிய ஹூ: வாஷௌ (பூ:பாதௌ) என்ற தின் மொழி பெயர்ப்பேயாம்" என்று உரைத்துள்ளார்கள். பெருந்தேவனார் வாழ்ந்த காலத்திற்குப் பின்னே எழுந்து நிலவுவது விஷ்ணு சகஸ்திர நாமத் தியான சுலோகமென்பது அதன் சொல் நடையாலே இனிது விளங்குகிறது. அதனால், அவரது பாட்டமைதியை இந்தச் சுலோகத்தின் மொழி பெயர்ப்பாக அறுதியிட்டுக் கொள்வது பொருந்தவில்லை. அந்தச் சுலோகத்தில் அடங்கிய கருத்து கி. பி. எட்டாம் நூற்றாண்டில் பிறந்த தமிழ் நூல்களில் சான்றோர்களால் வழங்கப்பட்டுள்ளது. அன்றியும், நற்றிணை ஏடுகளில், "பசுங்கதிர் மதியமொடு" என்பது "படர்கதிர் மதியமொடு" எனப்பாட வேறுபா டெய்தியும் உளது. படர்கதிர் ஞாயிற்றையும், சுடர் தீயையும் குறிக்குமா கலின், ஞாயிறு, திங்கள், தீ என்ற மூன்றும் மூன்று கண்களாகக் குறிக்கப்படுகின்றன. இனி, எட்டாம் நூற்றாண்டில் விளங்கிய சேரமான் பெருமாள் தாம் பாடிய பொன்வண்ணத் தந்தாதியில், தோழி தலைவனை இயற்பழிக்குந் துறையில், பாதம் புவனி சுடர்நய னம்பவ னம் உயிர்ப்(பு) ஓங்கு ஓதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேஉடம்பு வேதம் முகம் திசை தோள்மிகு பன்மொழி கீதம்என்ன போதம் இவற்கோ மணிநிறம் தோற்பது பூங்கொடியே (19) என்று பாடியுள்ளார். இதனையும், இதற்கு ஒரு நூற்றாண்டு கழித்துப் போந்த பெருந்தேவனாரது இப்பாட்டையும் ஒருங்கு வைத்து நோக்கின், நற்றிணையுரைகாரர் கருத்து ஆராயத்தக்க தொன் றென்பது இனிது விளங்கும். திகிரியோன் என்பது "திகிரியையுடைய மாயோனே" எனத் தேற்றமாக உரைப்பதும் அமையாது; அது சிவனையும் குறிக்கும்; அயனும் அரியும் அரனும் அருகனே என்ற கருத்துப்படப் பாடலுற்ற திருத்தக்கதேவர், அயனைக் குறித்து, "முனிமை முகடாய மூவா முதல்வன்" என்றும், அரியை, "மலரேந்து சேவடிய மால்" என்றும், அரனை, "களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த, அளிசேர் அறவாழி யண்ணல்" (சீவக.1611) என்றும் குறிப்பதால், திகிரியோ னென்பதற்கு அறவாழி யண்ணலாகிய சிவன் என்று கூறுதலும் அமைவதாம். இதுகாறும் கூறியவாற்றால், நற்றிணைக் கடவுள் வாழ்த்து, அதன் உரைகாரரால் செம்மை செய்யப் பெற்றபோது, வடமொழிச் செய்யுளைத் துணைக்கொண்டு செம்மை செய்தல் வேண்டா; இதற்கு ஒரு நூற்றாண்டு முன்பே யெழுந்து நிலவிய பொன்வண்ணத் தந்தாதிச் செய்யுள் துணைக்கொள்ளப் பெற்றிருக்கவேண்டும் என்பதும், பசுங்கதிர் மதிய மென்னும் பாடம் ஞாயிற்றைத் தழுவி நில்லாமையின், படர் சுடர் மதிய மொடு என்ற பாடம் மேற்கொள்ளப் பட்டிருக்கவேண்டும் என்பதும், திகிரியோ னென்பது மாயோனையே குறிக்கு மெனல் வேண்டா; அது சிவபெருமானையும் குறிக்கு மெனக்கோடல்வேண்டு மென்பதும் கூறியவாறாம்.  18. கல்லாடனார் கல்லாடனார் ஒருவரல்லர் 'கல்லாடனார்' என்ற பெயரைக் கண்ட அளவில் அன்பர் களுக்கு இவர் சங்க காலத்துப் புலவர் பெருமக்களுள் ஒருவர் என்பது நினைவிற்கு வரும். சங்க காலத்து நூல்களில் மட்டு மன்றிச் சைவத் திருமுறைகளிலும் கல்லாடனார் ஒருவர் உளர். சைவத் திருமுறையா சிரியர்களான கபிலதேவர், பரணதேவர் போலச் சங்கத் தொகை நூல்களிலும் கபிலரும் பரணரும் உள்ளனர். ஆயினும், சங்ககாலத்துக் கபில பரணர்கள், கபில பரணதேவர்களின் வேறாவர் என்பர். எனவே, கல்லாடனாரும் சைவத் திருமுறையாசிரியரான கல்லாட தேவரின் வேறாவர் என்பர். இவ் விருவரின் வேறாகத் தொல்காப் பியத்துச் சொல்லதிகாரத்துக்கு உரைகண்ட கல்லாட ரொருவரும், கல்லாட மென நிலவும் நூலுக்கு ஆசிரியரான கல்லாட ரொருவரும், தமிழிலக்கியத் துறையில் காணப்படுகின்றனர். ஆகவே, தமிழுலகில் கல்லாடர் நால்வர் இருக்கின்றன ரென்பது தெளிவாகும். இந் நால்வரும் ஒருவரா, இருவரா, மூவரா என்பதனை இப்போது இங்கே ஆராயப்புகவில்லை. அதனைப் பின்னர்ச் செய்தற்கு முன்னர், சங்ககாலத்துக் கல்லாடனாரைப்பற்றிச் சிறிது ஆராய்ச்சி முறையிற் கூறுவோம். பாண்டியன் நெடுஞ்செழியன் கல்லாடனார், பாண்டிநாட்டைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆண்ட காலத்தில் வாழ்ந்தவர். நெடுஞ்செழியன் பாண்டிநாட்டு அரசுகட்டி லேறிய சின்னாட் கெல்லாம் முடிவேந்தர் இருவர், வேளிர் ஐவராக எழுவருடன் தலையாலங்கானம் என்றவிடத்தே போர் செய்யவேண்டியவனானான். அக்காலை, அவன் மிக்க இளையனாயிருந்தான். அவனைப் போரெதிர்ந்தவர் எழுவரும் மிக்க வலியுடையரா யிருந்தனர். ஆயினும், பாண்டியனது போர் வன்மைக்கு எழுவர் படையும் எதிர்நிற்கமாட்டாது தோற்றோடின. நெடுஞ்செழியனுக்கு இவ் வெற்றியால் உண்டாகிய நெடும்புகழ் தமிழக மெங்கும் பரவிற்று. மேலும், நெடுஞ்செழியனுக்குத் தமிழ்ப் புலவர்பால் பேரன்பும் பெருமதிப்பும் உண்டு. புலவராற் புகழப்பாடாமை ஒருவற்கு உண்டாகக்கூடிய குறைகளுள் பெரும்குறை யென்பது அவன் கொள்கை. அவனும் இனிய பாட்டுப் பாடுவதில் வல்லவன். தமிழ்நாட்டுத் தமிழ் மக்களுள் ஒருவனாகிய தமிழ் வேந்தனுக்குத் தமிழிற் பாடவல்ல தகுதியுண்டென்பது ஒரு சிறப்பாகுமா என எண்ணலாம்; அக்காலத்தில் வேண்டுமானால் அவ்வாறு கூறுவது குறைவாகத் தோன்றும். நம்முடைய காலத்துக்கு அது வியப் புத்தானே! மாங்குடி மருதனார் பாண்டியன் நெடுஞ்செழியனுக்குண்டான மறம்வீங்கு பல் புகழ் அக்காலத்து வாழ்ந்த புலவர்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது. அவருட் பலரும் சென்று அவனைப் பாராட்டினர். அவன் அவைக்களத்தே அரிய பாட்டுக்களால் அவன் நாளவையைச் சிறப்பித்தவர் மாங்குடிமருதனா ரென்பவராவர். அவர் தன்னைச் சிறப்பித்துப் பெருங்காஞ்சி பாடியது கேட்டு மகிழ்ச்சி மிக்க அவன் அவர்க்கு மாங்குடியை முற்றூட்டாகத் தந்து, அவரையும் "மாங்குடி கிழார்" என்று சிறப்பித்தான். ஆகவே, அவன்பால் வளம்பெற்றுச் செல்வ வாழ்வு எய்திய புலவர் பலர் என்பது சொல்லாமலே விளங்கும். அப்புலவர் கூட்டத்தில் ஒருவராய் அவனது நன்மதிப்புப் பெற்றவர் கல்லாடனாரு மாவர். சங்ககாலக் கல்லாடனார் கல்லாடனார் நெடுஞ்செழியனைக் கான வந்துகொண்டிருக் கையில், அவனொடு பொருது தோற்ற வேந்தர் நாட்டுவழியே வந்தார். வழியில், அந்நாட்டு நீர்த்துறைகள் பாண்டிப் படையிலிருந்த களிறுகள் படிந்து உழக்கியதனால் இடிந்து பாழ்பட்டுக் கிடந்தன; ஊரவர்களின் நுகர்பொருள்கள் சூறையாடப்பட்டும், கொண்டன போகக் கொள்ளாதன இரவலர்க்குக் கொடுக்கப் பட்டும் சிதறுண்டன. பேரூர்களில் உள்ள பூங்காக்களில் நின்ற காவன்மரங்களெல்லாம் வெட்டுண்டுகிடந்தன; பெருஞ் செல்வ மனைகள் தீவைக்கப்பட்டு வெந்து கரிந்துபோயிருந்தன. எதிர்ப் பட்டோரை இதுகுறித்துக் கல்லாடனார் வினவினார். அவர்கள், "நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென்று இன்னும் இன்னபல செய்குவன் யாவரும் துன்னல் போகிய துணிவி னோன்என" மொழிந்தனர். இதுகேட்ட கல்லாடனார்க்கு உள்ளத்தே அசைவு பிறந்தது. புலமிக்கவரைப் புலமைதேரும் புலவர் பெருமக னாக விளங்கும் இப் பாண்டியன், "போரால் நாட்டிற் குண்டாகும் கேடு இத்துணைப் பெரிது என்பதை எண்ணினானில்லை போலும். போர்க்குக் காரணமானவர் பகைவரே யாயினும், இவனும் இக் கேட்டினை யுள்ளத்தாற் காண்டல் வேண்டும்," எனக் கல்லாடனார் கருதினார். தாம் கண்ட காட்சியை ஒரு பாட்டில் அமைத்து, அவனை யடைந்து, அவற்குப் பாடிக்காட்டினார். அப் பாட்டில், "தலையாலங்கானத்துச் செரு வென்ற வேந்தே, யான் நின்னைக் காண்பது கருதி வந்தேன். வந்த வழி, நின்னால் வெல்லப்பட்ட பகைவேந்தருடைய காட்டு வழி. அக் காட்டில், தன் காதற்கினிய ஆண்மான் புலியால் தாக்குண்டு இறக்கவே, பெண்மான் தன் சிறு கன்றைத் தழுவிக் கொண்டு பசுந்தழை மேயாது கைம்மை கொண்டு வேளைப் பூவைக் கறித்துக்கொண்டிருந்தது," என்ற கருத்தமைந் திருந்தது. அப்பகுதியை மட்டில் இங்கே தருவோம். செழியனை வாழ்த்திப் பாடல் "ஆலங் கானத் தமர்கடந் தட்ட கால முன்ப! நிற் கண்டனென் வருவல் அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீ இய தெறிநடை மடப்பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண்பூக் கறிக்கும் ஆளி லத்த மாகிய காடே." (புறம்.23) என்பது. இப் பாட்டைக் கேட்டதும், பாண்டியன் உள்ளத்தில் இரக்கம் உவட்டெடுத் தெழுந்தது. போரிற்பட்ட வீரர்களை ஆண்மானாகவும், தன்னைப் புலியாகவும், இளஞ் சிறார்களோடு கூடிய அவர் மகளிரை மான்பிணையாகவும் எண்ணினான். கல்லாட னார் புலமை நலத்தை வியந்தான். ஆனால், கல்லாடனார் அவன் உள்ளம் அருள் நிறைந்து நிற்பதை யுணர்ந்தார். "வேந்தே, இத்துணை மெல்லிய உள்ளம் படைத்த நீ, நின்பகைவரை வென்றுகொண்ட போது, போரிற்பட்ட வீரர்க்குரிய மகளிர் தம் கூந்தலைக் கொய்து கைம்மை மேற்கொண்ட காட்சியைக் கண்டிருப் பாயன்றோ? அக்காலை, "நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச் சிதைத லுய்ந்தன்றோ நின்வேல்? செழிய!" என்றார். கல்லாடனார் புலமைச் சிறப்புக் கண்டு பெருமகிழ் வுற்ற பாண்டியன், பின்னர் அவருக்குப் பெரும் பொருள் நல்கிச் சிறப்பித் தான். அவரும் அவன்பால் விடைபெற்றுச் சென்றார். சென்றவர், தாம் பாட நேர்ந்தபோதெல்லாம், வாய்க்குமிடந் தோறும் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய மறப்புகழைப் பாடுவாராயினர்." தாயுந் தலைவியும் தலையாலங்கானமும் தன் காதலன் தன்னை மணத்தற்கு முன்பே, தன்னைப் பிரிந்து செல்ல வேண்டிய கடமை யொன்று அவனுக்கு உண்டாயிற்று. அவனும், ஒரு கால அளவு கூறிவிட்டுச் சென்றான். அதற்குள்ளே, காதல் நோய் வருத்தக் காதலி உடம்பு வாடலானாள். அவளைப் பெற்ற தாயும் நோய்முதல் நாடியறியும் திறனின்றி மிக்க துயருற்றாள். அவளுடைய தோழிக்கு அவளைத் தேற்றித் தெளிவிக்கும் பொறுப்பு பெரிதாயிற்று. "அம்மே, என் உடம்பு மெலிந்துவிட்டது; உன் தாய்க்கும் துயர் பெரிதாயிற்று. ஊரவர் கூறிக்கொள்ளும் அலர் பெரிதாக இருக்கிறது; ஆகையால் நீ கருத்தழிவது கூடாது; காதலர் நெடுந் தொலைவு சென்றுள்ளாராயினும் உன்னை ஒருபோதும் நினையாமல் இரார்" என்று அவள் சொல்லுகின்றனாள். அவள் சொல்வதைப் பாட்டில் கூறவந்த கல்லாடனார், தலைவியின் உடம்பு வாட்டத்தையும், தாயின் வருத்த மிகுதியையும், "தோளும் தோல்கவின் தொலைந்தன, நாளும் அன்னையும் அருந்துயர் உற்றனள்" என்று சொல்லிவிட்டு, கூறும் அலர் பெரிது என்பாராய், "............................................அலரே. பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் பெருமான் எழுவுறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன் நேரா ரெழுவர் அடிப்படக் கடந்த ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது" (அகம்.209) என்று பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற சிறப்பை எடுத்துக் கூறி இன்புறுகின்றார். நன்னனும் நார்முடிச் சேரலும் அக்காலத்தே, கொங்கு நாட்டில், மேற்கு மலைத் தொடரின் அடிசார்ந்த பகுதியில் நன்னன் என்பவனும், சேரநாட்டில்களங் காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்பவனும் ஆட்சி செய்து வந்தனர். நார்முடிச் சேரல் அரசு கட்டிலேறிய சில நாட்களில் நன்னனுக்கும் அவனுக்கும் போருண்டாயிற்று. அதனால் நன்னன் சேரர்க்குரிய பகுதியான நாடொன்றைக் கவர்ந்து கொண்டான். நன்னனது செயல் அந்நாளைச் சான்றோர்க்கு வருத்தமே விளைவித்தது. இன்றைய பொள்ளாச்சி நாட்டில் உள்ள ஆனைமலை யென்பது அப்போது நன்னனூர் எனப்பட்டது. அந்த ஆனைமலை யிலுள்ள கல்வெட்டும், அதனை "வீரகேரள வளநாட்டு நன்னனூர்" (a.r.no. 214 of 1926) என்று கூறுகிறது. களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும் தான் இழந்த நாட்டைப் பெறவேண்டுமென்ற கருத்தால் காலம் நோக்கி யிருந்தான். உரிய காலம் வாய்த்ததும், சேரல் நன்னனுடன் வாகைப் பெருந்துறை யென்னுமிடத்தே போர் தொடுத்து, நன்னனை வென்று, தான் இழந்த நாட்டையும் மீளப் பெற்றுக்கொண்டான். அதனால் அவன் புகழும் மேம்படுவதாயிற்று. அச் செய்தியறிந்த காப்பியனா ரென்னும் சான் றோர் அவனைப் பாடிய பாட்டில், “பொன்னங் கன்னிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த, தார்மிகு மைந்தின் நார்முடிச் சேரல்” (பதிற்.40) என்று பாடிப் பாராட்டினர். நார்முடிச் சேரலைப் பாராட்டல் இச் சேரமான் செயல் தன் குடிக்குண்டான மாசு துடைத்துப் போக்கும் மாண்புறு செயலாவதைக் கண்டார் கல்லாடனார், அவனைக் கண்டு பாராட்டினார். பின்பு தாம் பாடிய பாட்டொன்றில், “........................................குடா அது இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத் தொழிய வலம்படு கொற்றந் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்த நாடு தந்தன்ன வளம் பெரிது பெரினும்.............” (அகம்.199) என்று நார்முடிச் சேரலை வைத்துச் சிறப்பித்தார். கொல்லி மலையும் மலையமான் காரியும் இனி, கொல்லிமலைப் பகுதிக்குக் கொல்லிக்கூற்ற மென்றும், கொல்லிமலையிற் பூதத்தாற் செய்யப்பட்டதொரு பெண்பாவை யுண்டென்றும், மகளிருள் உருநலம் சிறந்தவருக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக அப்பாவை விளங்குவதென்றும் சான்றோர் கூறுவர். இக் கொல்லிக் கூற்றம் ஒரு காலத்தே சேரர்களுக்குரியதா யிருந்தது. பின்பு ஓரி யென்பவன் அதனை வென்று தனக்குரியதாக்கிக் கொண்டான். அக்காலத்தே காரியென்பவன் மலையமானாட்டை முள்ளூரிலிருந்து ஆண்டு வந்தான். சேரலன் காரியைத் துணையாகக் கொண்டு கொல்லிக் கூற்றத்தைத் தான் கொள்ள விரும்பினான். அதற்கிசைந்த காரி ஓரியொடு பொருது அவனைக் கொன்று அக் கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்கு அளித்தான். இச் செய்தியையும் கல்லாடனார், தாம் பாடிய அகப்பாட் டொன்றில், “முள்ளூர் மன்னன் கழல் தொடிக்காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகம்.209) என்று குறித்துப் பாடுவாராய் மலையமான் காரியைச் சிறப்பித்துள்ளார். இவ்வண்ணம் தமக்கு ஓராற்றால் இயைபுடையராகிய பாணன் என்பவனையும், அகுதை யென் பவனையும், கோசர், தொண்டையர் என்ற குடியினரையும் ஏற்ற விடங்களில் கல்லாடனார் சிறப்பித்துப் பாடியுள்ளார். தமிழகம் முழுதும் அறிந்தவர் கல்லாடனார் பாண்டியன் நெடுஞ்செழியனையும், சேரமான் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலையும், மலையமான் காரியையும் பாடியிருக்கின்றமையின், இவர் தமிழகம் முழுதும் சென்றுலாவிய சிறப்புடையவர் என்பது தெளியப்படும். சோழ நாட்டுச் சோழனை இவர் பாடியதாக ஒன்றும் தெரிய வில்லையாயினும், அந்நாட்டு அம்பரில் வாழ்ந்த அம்பர்கிழான் அருவந்தையையும், பொறை யாற்றில் வாழ்ந்த பொறையாற்று கிழானையும் பாடியுள்ளார். இவ்வண்ணம் தமிழகம் முழுதும் சென்று, ஆங்காங்குப் புலவர் பாடும் புகழ்க்குரியராய் விளங்கிய வேந்தர்களையும் செல்வர்களையும் புகழ் வடிவில் தம் செய்யுட்கண் நிலைபெறு வித்த சான்றோராகிய கல்லாடனார் எந்நாட்டினர்? எவ்வூரினர்? என்பன இனி ஆராய வேண்டுவன. வேங்கட நாடும் பெரும்பாணப்பாடி நாடும் தமிழகத்தின் வடவெல்லையாகிய வேங்கடமும், அதனைச் சேர்ந்த பகுதியும் வேங்கடக் கோட்டம் எனப்படும். ஒரு காலத்தில், இக் கோட்டத்தின் வடவெல்லை வேங்கட மலைத் தொடரையும், தென்னெல்லை பாலியாற்றையும் கொண்டிருந்தன. இக் கோட்டங்கள் பல கொண்டது தொண்டை நாடு. தொண்டை நாட்டையாண்ட வேந்தர் சோழரேயாயினும், அவர்க் கீழிருந்து ஆட்சி நடத்திய குறுநிலத் தலைவர் தொண்டையர் எனப்படுவர். தொண்டை நாட்டின் வடவெல்லை வேங்கடவரைத் தொடரும் வடபெண்ணை யாறும், தென்னெல்லை தென்பெண்ணையுமாகும். கல்லாடனார் காலத்தே, வேங்கடக்கோட்டத்து வேங்கடத்தில் புல்லி யென்பவன் தலைவனாயிருந்து வந்தான். அவன் செய்த செயலொன்றையும் கல்லாடனார் குறிக்கின்றார் இல்லை. ஆயினும், அப் புல்லியையும் அவனது வேங்கடத்தையும் பலபட எடுத்தோது கின்றார். “பெருமகன் புல்லி, வியன்தலை நன்னாட்டு வேங்கடம்” (அகம்.83) எனவும், “மாஅல்யானை மறப்போர்ப் புல்லி, காம்புடை நெடுவரை வேங்கடம்” (அகம்,209) எனவும், “புல்லிய, வேங்கட விறல்வரை” (புறம்.385) எனவும் கூறுகின்றார். இவ் வேங்கடக் கோட்டத்தின் தென்மேற்குப் பகுதி பெரும்பாணப்பாடி நாடு எனப்படும். அதற்குத் தலைமை தாங்கி ஆட்சி செய்தவன் பாணன் எனப்படுவன். அவன் வழி வந்தவர் இடைக்காலத்தே வாணாதிராய ரெனவும், வாணகோவரைய ரெனவும் நிலவினவராவர். அந்தப் பாணனது நாட்டையும் நம் கல்லாடனார், “எழா அப்பாணன் நன்னாடு” (அகம்.113) என்று பாடியுள்ளார். இங்கே காட்டிய பாடற் பகுதிகளை நோக்குவோமாயின், கல்லாடனார்க்கும், புல்லி பாணனாகிய இருவர்க்கும் நேரிய தொடர்பு ஒன்றும் இல்லையென்று நன்கு தெளியலாம். ஆயினும், வேங்கடக் கோட்டமும் பெரும்பாணப்பாடி நாடும் அடங்கிய தொண்டை நாட்டை எடுத்தோதிச் சிறப்பிப்பதால், கல்லாடனார்க்குத் தொண்டை நாட்டோடு தொடர்புண்டென்பது தெரிகிறது. தொண்டை நாட்டினர் கல்லாடனார் சோழ நாட்டுப் பொறையாற்றுக்குச் சென்று அவ்வூர் கிழவனைக் கண்டபோது, “பெரும, வேங்கடப் பகுதியாகிய வடபுலம் வற்கடத்தால் பசிநோய் மிகுந்து வருந்துகிறது. அதனால் யான் என் சுற்றத்தாருடன் இங்கே வந்து தங்கினேன்,” என்ற கருத்துப்பட, “வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென, ஈங்குவந் திறுத்தவென் னிரும்பே ரொக்கல்” (புறம்.391) என்று கூறியுள்ளார். ஆகவே, கல்லாடனாருடைய நாடு தொண்டை நாட்டு வடபகுதி யென்பது தெளிவாம். அப்பகுதி வேங்கடக் கோட்டத்தைச் சேர்ந்த தென்பதும் தெள்ளிதாம். வேங்கடத்துக்கும் நமக்குமுள்ள இயைபால், கல்லாடனார் சோழநாட்டு அம்பர்கிழான் அருவந்தை தமக்குச் செய்த சிறப்புப்பற்றி அவனைப் பாராட்டியபோது, “காவிரி யணையுந்தாழ்நீர்ப் படப்பை, நெல்விளை கழனி அம்பர் கிழவோன், நல்லருவந்தை வாழியர்” (புறம்.385) என வாழ்த்துவாராயினர். வாழ்த்துங்கால், அவன் பல்லாண்டு வாழியர் எனச் சொல்லக் கருதியவர், அப் பன்மைக்கு மிகுதி கூறுதற்கு வேங்கட மலையிற் பெய்யும் மழைத்துளியை எடுத்துக் காட்டி, “புல்லிய, வேங்கட விறல்வரைப் பட்ட, ஒங்கல் வானத் துறையினும் பல” என்று கூறுகின்றார். இதனால், உண்டினி துவக்கும் வேங்கடம் கல்லாடனார் வேண்டா விடத்தும் தமது வேங்கட நாட்டை யெடுத்தோதுவது பற்றி, அவர் அந் நாட்டினரென்றும், அதன் பால் அவர் பேரன்பினரென்றும் துணியலாம். பொறையாற்று கிழான்பால் தமது வேங்கட நாடு வற்கட மாயிற்றென்று கூறும் அவர், செல்வக் காலத்து அதன் சீரிய நலத்தை உரைக்கின்றார். “மழை தவறாதே பெரும் பெயலைச் செய்யும், நெற்கரிசைகள் மலைபோல் குவிக்கப் பெற்றிருக்கும்; எருதுகள் உதவியால் பெற்ற நெல்லாகிய பெரு வளத்தைப் பெறும் உழவர் அரியல் உண்டு மகிழ்வர்; அரிய லென்னும் கள்ளுக்குத் துணையாக மான் முயல் முதலியவற்றின் ஊனைத் துண்டித் துண்பர்; இவ்வாறு உணவுக் குறைபாடின்றி இனிதுண்டு மகிழும் வேங்கட வரைப் பின் வடபுலம் இப்போது பசி நோய் கொண்டு வருந்துகிறது” என்பாராய், “தண்டுளி பலபொழிந் தெழிலி யிசைக்கும் விண்டு வனைய விண்டோய் பிறங்கல் முகடுற வுயர்ந்த நெல்லின் மகிழ்வரப் பகடுதரு பெருவளம் பரந்துபடக் கெண்டி அரியலார் கையர் உண்டினி துவக்கும் வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென” (புறம்.391) என்று குறித்துள்ளார். வேங்கட நாட்டு வேட்டுவர் பிறிதோரிடத்தில் வேங்கட நாட்டில் வாழும் வேட்டுவர் இயல்பை எடுத்துரைக்கின்றார். வேங்கடத்தில் கடம்புமரங்கள் செறிந்திருக்கும். அவற்றின் பூக்களைக் கொய்து அங்கு வாழும் வேட்டுவ இளையர் தம் தலையில் சூடிக்கொள்வர். தம் தந்தையும் தன்னையரும் யானைவேட்டம் போவது போலத் தாமும் வேட்டம் சென்று, யானைக் கன்றை, அதன் தாயாகிய பிடியானை பிரிவாற்றாமல் கதறிப் புலம்பப் பற்றி, கடம்பு மரப்பட்டையிலிருந்து நாரெடுத்துக் கயிறு திரித்து அக் கயிற்றினால் அந்த யானைக் கன்றைப் பிணித்து, அதன் உடம்பில் வடுவுண்டாகும்படி இறுகக் கட்டிக்கொண்டு தம்மூர்க்கு வந்து அங்குள்ள கள்ளுக்கடை வாயிலில் கட்டிவைத்து இன்புறுவர் என்பாராய், “வலஞ்சுரி மராஅத்து சுரங்கமழ் புதுவீச் சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக் கறையடி மடப்பிடி கானத் தலறக் களிற்றுக் கன்றொழித்த வுவகையர் கலிசிறந்து கருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொளி வெண்ணா ரழுந்துபடப் பூட்டி நெடுங்கொடி நுடங்கும் நியம் மூதூர் நறவுநொடை நல்லில் புதவுமுதல் பிணிக்கும் கல்லா விளையர் பெருமகன் புல்லி வியன்தலை நன்னாட்டு வேங்கடம்” (அகம்.83) என்று கூறியுள்ளார். கள்ளில் ஆத்திரையனாரும், கல்லாடனாரும் இவ்வண்ணம் வேங்கடநாட்டு வேட்டுவர் செய்தியாக ஆசிரியர் கல்லாடனார் கூறுவது, இந்த நாட்டுப் பகுதியைச் சேர்ந்த புலவரான கள்ளில் ஆத்திரையனார் கூறும் நிகழ்ச்சி யொன்றால் வலியுறுகிறது. கள்ளில் என்பது “தொண்டை நாட்டுப் புழற் கோட்டத்துக் குன்றக நாட்டுக் கள்ளில்” (a. r. no. 486 of 1926) என்றும், இடைக்காலத்தில் ஒருகால் இது “சந்திரகிரி ராஜ்யத்தில்” இருந்ததென்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். ஆகவே, இவ்வூரவரான ஆத்திரையனார் கூறும் வேங்கடநாட்டு நிகழ்ச்சி வலிமிக்க தென்பது தெள்ளிது. மேலும் கல்வெட்டுக் கூறும் “குன்றக நாடு” என்பது, ஆத்திரையனார் கூறும் “குன்றக நல்லூர்” என்றும் நினைவிற்கொள்ளற்பாலதாகும். இக்கள்ளில் ஆத்திரையனார், “புன்றலை மடப்பிடி யினையக் கன்றுதந்து, குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும், கல்லிழி யருவி வேங்கடம்” (புறம். 389) என்று கூறுகின்றார். இதனால் கல்லாடனார் கண்ட வேங்கடக் காட்சியும், கள்ளில் ஆத்திரையனார் கூறும் வேங்கடக் காட்சியும் ஒரு காட்சியாய் ஒன்றை யொன்றை வற்புறுத்திக் கல்லாடனாரைத் தொண்டை நாட்டுச் சான்றோருள் ஒருவரெனத் துணிவிப்பது காணலாம். கல்லாடம் எங்கே உளது ? இனி, கல்லாடனார் தொண்டைநாட்டவராயின், அவரது ஊரும் தொண்டை நாட்டின்கண்ணதாம். தொண்டை நாட்டு ஊருள்ளும் வேங்கட நாட்டைச் சார்ந்த வூர்களுள் ஒன்றாதல் வேண்டும். கல்லாடனார் கல்லாடம் என்ற ஊரினர் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. அவ்வூர் எங்குள்ள தென்பது பற்றி இதுகாறும் ஆராய்ச்சியாளர் பலரும் ஒரு முடிபும் கூறினாரல்லர். கல்லாடம் என்பது திருவாசகத்தில் “கல்லா டத்துக் கலந்தினி தருளி, நல்லா ளோடு நயப்புற் வெய்தியும்” (கீர்த்தி 11 - 2) எனத் திருவாதவூரடிகளால் குறிக்கப்படுகிறது. திருவாசகத்து இப் பகுதிக்கு உரை கண்டவர்களோ, கல்லாடம் என்னும் நூலுக்கு உரை கண்டவர்களோ, யாவரும், “கல்லாடம் என்பது ஒரு சிவ தலம்” என்று கூறி யொழிந்தனரே யன்றி, அவ்வூரிருக்கும் இடத்தைக் குறித்திலர். தமிழறிஞரிடையே இது குறித்துப் பேச்சு நிகழுங்கால், கல்லாட மென்பது மலை நாட்டகத்த தோர் ஊர் என்றும், பாண்டி நாட்டு ஊர்களுள் ஒன்றென்றும் கூறிக்கொள்வது வழக்கம். சென்னை மாநிலத்து ஊர்ப் பட்டியலை (list of villages of the madras presidency) நோக்கினும் கல்லாடமென்ற ஊர் உருத் திரிந்தும் காணப் படவில்லை. இனி, கல்வெட்டுத் துறையினர் இதுகாறும் வெளியிட்டிருக்கும் கல்வெட்டுக்களையும் ஆண்டறிக்கைக் குறிப்புக்களையும், ஆராய வேண்டியது இன்றியமையாதாகிறது. இத்துறையில் அரசியற் கல்வெட்டுத் துறையினர் சென்ற ஆண்டிலும் கல்வெட்டுக்கள் கண்டு படியெடுத்துள்ளன ரெனக்கேள்விப்படுகிறோம். 1938-ஆம் ஆண்டுக்குப்பின் ஆண்டறிக்கைகூட வெளிவருவது நின்றுபோயிற்று. 1903 ஆண்டுக்குப்பின் எடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பல்லவர் காலத்துக் கல்வெட்டுக்கள் மட்டில் வெளியாகி யுள்ளன. ஏனையவை இன்னும் வெளியாகவில்லை. செவ்விய அரசியற் கலைக்கு இவற்றின் வெளியீடு சிறந்த துணையாம் என்பதை அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் உணர்வார்களாக. கல்லாடீச்சுரம் என்னும் மீஞ்சூர் இனி, கிடைத்துள்ள கல்வெட்டுக்களையும் ஆண்டறிக்கை களையும் ஆராயுமிடத்துக் “கல்லாடீச்சுரம்” என்றொரு சிவன் கோயில் செங்கற்பட்டு (ஜில்லா) நாட்டிலுள்ள மீஞ்சூர் என்னும் ஊரில் உளது. திண்டீச்சுரம் உள்ள ஊர் திண்டிவனம்; சங்கமீச்சுரம் உள்ள ஊர் சங்கம்; ஆலீச்சுரம் உள்ள ஊர் ஆற்பாக்கம் என வருவது காண்கின்றோம். இதனால் கல்லாடீச்சுரம் உள்ள ஊர் கல்லாடம் என்பது பெறப்படும். படவே கல்லாடீச்சுரம் உள்ள மீஞ்சூர், பண்டை நாளில், கல்லாடம் என வழங்கிற் றென்பது துணிபாம். மீஞ்சூரிலுள்ள சிவன் கோயிற்குக் கல்லாடீச்சுர மென்று பெயரென்பதனை அவ்வூர் அக் கோயில் கல்வெட்டு (a. r. no. 133 of 1916) கூறுகிறது. “ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்து ஞாயிறு நாட்டு மீஞ்சூருடையார் கல்லா டீச்சுர முடையார்” என்று அக் கல்வெட்டுக் கூறுவதால், அக் கல்வெட்டுக் காலத்தே கல்லாட மென்ற ஊர்ப் பெயர் மறைந்து கோயிலளவில் நின்றிருந்ததென அறியலாம். ஆகவே, தொண்டைநாட்டுச் சான்றோரான கல்லாடனாரது ஊராகிய கல்லாடம், தொண்டை நாட்டுப் புழற்கோட்டத்தைச் சேர்ந்த தெனவும், அஃது இப்போது சென்னைக்கு வடக்கே பொன்னேரிக் கருகில் புகை வண்டி நிலையமாக இருக்கும் மீஞ்சூ ரெனவும், கள்ளில் ஆத்திரையனாரது ஊராகிய கள்ளிலும் இப்புழற் கோட்டத்து ஊராதலின், கள்ளிலாத் திரையனாரும் கல்லாடனாரும் ஒரு நாட்டு ஒரு கோட்டத்தவ ரெனவும் அறிகின்றோம்.  19. சொகினனார், சொகிரனார் சங்கத்தொகை நூல்களிற் காணப்படும் நல்லிசைச் சான்றோர் களில் சிலருடைய பெயர்கள் நமக்கு வியப்பாக இருக்கும். இக்கால மக்கள் கூட்டத்தில் சில சான்றோருடைய பெயர்களைச் சொன்னால் எல்லோரும் நகைப்பதும் உண்டு. சில இளைஞர்கள் இப்படியும் பெயர்கள் வழங்குவதுண்டோ என்றுகூட வினவுவ துண்டு. இதற் கெல்லாம் காரணம் அப்பெயர்கள் மக்களிடையே பயில வழங் காமையேயாகும். வடமொழிப் பெயர்களும் மேனாட்டவர் பெயர்களும் அடிக்கடி கேட்கக்கூடிய வாய்ப்புக்கள் இடைக் காலத்தே பெருகியதால் தூயதமிழ்ப் பெயர்கள் வழக்கிலிருந்து மறையலாயின. அறுநூறு எழுநூறு ஆண்டுகட்கு முன்பெல்லாம் வழக்கிலிருந்த தமிழ்ப்பெயர்கள் நாள் செல்லச்செல்ல மறைந்து போயின. தெய்வப் பெயர்களை மக்களுக்கு இட்டு வழங்கும் வழக்கம் உண்டாகிய போதும், சில தூய தமிழ்ப் பெயர்கள் வழக்கில் இருந்தன. தெய்வத் தமிழ்ப்பெயர்கள் பின்பு வடமொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. பின்பு எல்லாம் வடமொழிப் பெயர்களாக மாறிவிட்டன. போதாக் குறைக்கு இக்காலத்து நாட்டாள்களும், கிழமைத்தாள்களும், திங்கட்டாள் களும் சிறு கதைகள் எழுதத் தலைப்பட்டன. இவற்றை எழுதும் ஆசிரியர் அனைவரும் வடமொழி யறியாராயினும் அறிந்தாற்போல வடமொழிப் பெயர்களை வழங்குவாராயினர். இந்தக் கதைகாரார்களின் ஆதரவை நாடியிருக்கும் "சினிமாக் காரர்" களும் இவ்வடமொழிப் பெயர்களை பரப்பத் தொடங்கி விட்டனர். இந்திப் படங்கள் சில வந்துவிட்டன. அவற்றில் வழங்கும் கொச்சைப் பெயர்கள் சில குடும்பங்களிவ் மக்கட்கிட்டு வழங்கும் பெயராய்விட்டன. இவ்வகையில் தமிழ் மக்களுக்குத் தங்கள் இனிய தமிழ்ப் பெயர்களும் தமிழ்ச்சான்றோர் பெயர்களும் அருமையாய்விட்டன. அதனால் அவர் களுக்கும் அவர்கள் மக்களுக்கும் நல்லிசைத் தமிழ்ச்சான்றோர் பெயர் கேட்பதற்கு வியப்புத் தருகிறது. நல்லிசைச் சான்றோர் பெயருள்ளும் தொல்காப்பியர், வள்ளுவர், நக்கீரர், கபிலர், பரணர், சாத்தனார் முதலியோர் பெயர், ஏனைப் பலருடைய பெயர்களைக் காட்டிலும் பள்ளிச் சிறுவர் களுக்குச் சிறிது மிகுதியாகப் பயின்றவையாகும். இவற்றை ஓரொரு கால் சொல்லும்போதே சிறுவர்களுக்கு வியப்பும் நகையும் தோன்றுகின்றன. இங்கே எடுத்துக் கொண்ட 'சொகினனார்' என்ற பெயரைக் கூறுவோமாயின், அவர்கள்பால் உண்டாகக்கூடிய ஆரவாரத்துக்கு எல்லை யிராது. இதற்காகத் தமிழ் முன்னோர் பெயரை வெளியிடாமல் இருப்பது தவறு. உரிமை பெற்ற இந்நாளில், தமிழராகிய நாம், உரிமை வாழ்வு வாழ்ந்த தமிழ் முன்னோர்களின் பெயர், வரலாறு முதலியவற்றை அறியவேண்டியவர்களாகின்றோம். இடையிலே நம்மை வந்து மூடிய இரவற்போர்வைகளைக் களைந்து எறிய வேண்டும். இரவற்போர்வையைக் களைய இதுவரையில் நமக்கு உரிமையுணர்வு இல்லாதிருந்தது, இப்போது தான் நமக்கு அந்த உணர்வு உண்டாகி விட்டதே ! இனி ஏன் தாழ்க்க வேண்டும்? நாம் தமிழ் வாழ்வு வாழும் உண்மைத் தமிழராக வேண்டும். சங்க நூல்களில், தமிழ் மக்களின் மனைவாழ்வு இன்பவாழ்வாக இருக்கவேண்டும் என்றே தமிழ்ச்சான்றோர் பல வாழ்க்கை முறைகளைக் கூறியிருக்கின்றனர். இன்ப வாழ்வு வேண்டா தவன் எவனும் இருக்கமாட்டான். இன்ப வாழ்வில் முதற்கண் இன்பமும், பிறகு பொருளும், பின்னர் அறமும் முறையாக நிற்கும். இம் மூன்றையும் அன்பு பிணித்துக்கொண்டு நிற்கும். "இன்பமும் பொருளும் அறமும் என்றாங்கு, அன்பொடு புணர்ந்த" இன்ப வாழ்வு என்றே தொல்காப்பியரும் கூறி வைத்தார். அன்பால் பிணிக்கப்பட்ட இன்ப வாழ்வு ஒருவனும் ஒருத்தியும் கூடி நடத்துவதாகும். இவர்கள் மணத்தற்கு முன்னும் மணந்த பின்னும் இன்பநுகர்ச்சியிடையே நிகழும் நிகழ்ச்சிகளை இனிய பாட்டுக்களின் வாயிலாக எடுத்துக் கூறி, அறிவுறுத்தியும் இன்புறுத்தி யும் வந்தவர் சங்கச் சான்றோர். இவர் கருத்துக் களைத் தெளிய அறியும் திறமில்லாத மடவர் சிலர், இவர்களையும் இவர்கள் பாட்டுக்களையும் இந்நாளில் இகழ்தலும் செய்கின்றனர். விரைவில் நம் தமிழகம் அத் தகவிலா மடவர்களுக்கு அவர்களுடைய தகவின்மையையும் மடமையையும் தக்க வகையில் எடுத்துக் காட்டும் நிலையில் முன்னேறி வருகிறது. சொகினனாரென்பவர், சங்கத்தொகை நூல்களிற் காணப்படும் சான்றோருள் ஒருவர். இவர் பெயர் தும்பி சொகினனா ரென்றும், தும்பி சேர்கீரனாரென்றும் காணப்படும். இவருடைய பாட்டுக்கள் புறநானூற்றில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் ஐந்துமாக ஏழு பாட்டுக்களாகும். இத்தொகை நூல்களுள் புறநானூற்றை வெளியிட்ட டாக்டர் திரு. உ. வே. சாமிநாதையரவர்கள் இவரைப் பற்றிக் கூறுமிடத்து, "தும்பி ஒருவகை வண்டு; சொகினம்-நிமித்தம்; தும்பியை நோக்கிச் செய்தி கூறிய சிறப்பால், இவர் இப்பெயர் பெற்றார் போலும்; தும்பி சேர்கீரனார் என்றும் பிரதி பேதமுண்டு; இவருடைய பாடல்கள் குறுந்தொகையிலும் நற்றிணையிலும் காணப்படுகின்றன" என்று கூறினர். இனி, நற்றிணையை உரையெழுதி வெளியிட்ட பின்னத்தூர் திரு. அ. நாராயணசாமி ஐயரவர்கள், "தும்பி சோகீரனார்" என்று கொண்டு, "இவர் பெயர் தும்பி சோகீரன்: கீரன் என்பது இயற்பெயர். சோ, அடைமொழி. இதன் பொருள் விளங்காமையால், இவர் பெயரைத் 'தும்பி சேக்கீரனார்' என்று பதிப்பிக்கலாயிற்று. தமது பாடலிலே தும்பியை நோக்கி, "கொடியை வாழி தும்பி" (நற். 277) எனவும், "அம்ம வாழியோ மணிச் சிறைத் தும்பி" (குறுந். 392) எனவும் விளித்து அதனைப் பலவாகப் பாராட்டிக் கூறலின், தும்பி சேர்கீரனா ரெனப்பட்டார்," என்று கூறினர் குறுந்தொகைக்குத் தாம் உரையெழுதி வெளியிட்ட பதிப்பில் திரு. உ. வே. சாமிநாதையர் அவர்கள் இந்தச் சான்றோர் பெயரைக் கூறுமிடத்து, "அதனைத் தும்பி சொகிநனென்று படித்தற்கும் இடமுண்டு" என்றும் "தும்பி சொகினார்" "தும்பிசேர் தீரன்" என்றும் பாட வேறுபாடு உண் டென்றும் குறித்துள்ளார். ஆயினும், பாட்டின் ஆசிரியர் பெயர் குறிக்குமிடத்து நற்றிணையுரைகாரர் குறித்தபடியே "தும்பி சேர் கீரனார்" என்று குறித்தனர். அண்மையில் நற்றிணையேடு ஒன்று கிடைக்கப்பெற்றது அதனை அச்சாகியிருக்கும் நூலோடு ஒப்பு நோக்கியபோது அதன்கண், இந்த ஆசிரியர் பெயர் "தும்பி சொகினனார்" என்றே காணப்பட்டது. புறநானூற்றுக் கையெழுத்துப்படி யொன்றில் இப்பெயர் தும்பைச் சொகினனாரென்று காணப்பட்டது. இவ்வாறு பல படிகளிலும் தும்பி சொகினனாரென்ற பாடமே பெரிதும் காணக் கிடைத்தலால், இவரைத் தும்பி சொகினனாரென்று கொண்டு இவ்வாராய்ச்சியை நிகழ்த்துவோம். இஃது இவர் பெயராயின், இப்பெயரின் பொருள் யாது? எனக் காண்பது முறையாகின்றது. 'சொகினன்' என்பதற்குப் பொருள் கண்டோர், சொகினம் என்பது நிமித்தம் என்னும் பொருளது என்று கூறுகின்றனர். அது பொருளாயின் 'சொகினம்' என்பது 'சகுனம்' என்பதன் திரிபாதல் வேண்டும். நிமித்தம் காண்பதென்பது போர்க்குச் செல்வோரிடத்துப் பெரு வழக்கில் இருந்த தொன்று. நிமித்தம் காண்பதே போர்த் துறையில் ஒரு துறையாகக் காணப்படுகிறது. அதனைக் குறிக்கு மிடங்களில் இச்சகுனமென்ற சொல்லோ, இதன் திரிபாகிய சொகினமென்ற சொல்லோ சங்கச் சான்றோர் வழக்கிற் காணப்பட வில்லை; ஆயினும், புறப்பொருள் வெண்பா மாலை உரையில் "சொகின விகற்பத்தால்" (பு. வெ. மா. 125) என்று வரக் காண்கின் றோம். இதனல் நிமித்தமென்பது சொகினமென வழங்குவது காணப்படுவதால், நிமித்தம் கூறு வோனைச் 'சொகினன்' என்று வழங்குப என்பது விளங்குகிறது. கணியன் பூங்குன்றன் என்றாற்போலக் கணி கூறுவோனைக் கணியன் என்று சான்றோர் கூறுவது ஈண்டு நினைவுகூரத்தக்கது. 'தும்பிசொகினனார்' என்ற தொடரில் 'சொகினன்' என்பது 'சகுனம் கண்டு பொருள் கூறுவோன்' என்ற பொருள் தரும் பெயராதலால், இப்பெயர் இவர்க்கு இயற்பெயராகவோ, சொகினம் கூறும் தொழில்பற்றியதாகவோ இருக்கலாம். தொழில்பற்றி வந்ததாயின், சொகினம் கூறும் தொழிலில் இவர் சிறப்புற்றிருந்தவராம். இச்சிறப்பால் இவர்க்கு வேந்தர்கள் பல சிறப்புக்கள் நல்கினராதல் வேண்டும். "ஒள்வாள் மலைந் தார்க்கும் ஒற்றாய்ந் துரைத்தார்க்கும், புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும்" (பு. வெ. மா. 1.14) வேந்தர் சிறப்புச் செய்வதைப் பழமையான நூல்கள் கூறுகின்றன. கணி கூறினார் பெற்றவூர் கணியன்பாடியென்றும், கணியனூர் என்றும் இப்போதும் தமிழகத்தில் உள்ளன. இவ்வாறே சொகினம் கூறிய இச்சான்றோர் ஊர்பல பெற்றிருத்தல் வேண்டும். அவற்றுள் ஒன்று இவர்பெயரால் விளங்கும் என்பது பெறப்படும். படுதற்கேற்பவே, தொண்டைநாட்டுத் திருவேங்கடக் கோட்டத்தில் சொகினூரென்ற பெயருடைய ஊரொன்று உளது. திருப்பதிக் கண்மையில் பொன் முகலியாற்றின் வடகரையில் 'திருச்சாகினூர்' என்றோர் ஊர் உளது. அஃது இப்போது 'திருச்சானூர்' என வழங்குகிறது; ஆயினும், அதற்குப் பல்லவர்கள் காலத்தேயும் இடைக்காலச் சோழ பாண்டியர் காலத்தேயும் 'திருச்சொகினூர்' என்றே பெயர் வழங்கிற்று. பல்லவ வேந்தனான தந்தி விக்கிரமனது ஐம்பத்தோராமாண்டுக் கல்வெட்டு, "திருவேங்கடக் கோட்டத்துக் குடவூர் நாட்டுத் திருச்சொகினூர்" என்றும், "திருவேங்கடத்து எம்பெருமானடிகளுக்கு எழுந்தருளு வித்த திருவிளங்கோயில் பெருமானடிகளுக்குச் சோழநாட்டுச் சோழனார் உலகபெருமானார் வைத்த திருவிளக்கு" (s. i. in. vol. xii, no. 43 and also vide a. r. 452 of 1924) என்றும் கூறுகிறது. அதனால் இவ்வூர் ‘திருச்சொகினூர்’ எனப்படுவது காண்க. இச் சொகினூர் என்னும் பெயர் பிற்காலத்தே ‘திருச்சோகனூர்’ என்றும், ‘திருச்சுகனூர்’ என்றும் ‘திருச்சானூர்’ என்றும், ‘சிறத்தானூர்’ என்றும் வழங்குவதாயிற்று. ஆயினும், இது பண்டை நாளில், சொகினன் என்பான் ஒருவன் பெயரால் அமைந்ததென்பது மறக்கக் கூடியதன்று. பல்லவர் காலத்தக்கு முன்னுள்ள நூல்களுள் எவற்றினும் காணப்படாத சொகினன் என்னும் பெயர் சங்கச் சான்றோர்களுள் ஒருவர் பெயராகக் காணப்படுவதும். இப்பெயருடைய ஊர்கள் வேறெங்கும் காண்ப்படாமையும் நோக்குவோமாயின், இச்சொ கினூர், சங்கச் சான்றோராகிய தும்பிசொகினனார்க் குரியதென்றும், சொகினங் கூறிய சிறப்பால் இவர்க்குத் திருவேங்கடத்திலிருந்து அரசு புரிந்த வேந்தனொருவனால் இவ்வூர் வழங்கபட்டிருக்கவேண்டு மென்றுங் கொள்ளலாம். இச்சொகினனாரைத் தும்பி சொகினனாரென்று சிறப்பிப் பானேன் என்பது அடுத்துவரும் வினாவாகும். இவர் பாடிய நற்றிணைப்பாட்டும் குறுந்தொகையிலொரு பாட்டும் தும்பியைப் பற்றிக் கூறுகின்றன. காதலனைப் பிரிந்துறையும் தமிழ் மகளொருத்தி, தும்பியைப் பார்த்து, “தும்பி நீ பீர்க்கம்பூவை யூதி அதன் தேனை யுண்டு நின் பெடையை நினைந்து சென்று அதனோடு கூடி மகிழ்கின்றனை; இப்பீர்க்கம்பூப்போலப் பசந்து நிற்கும் என் நிலை கண்டு விரைந்து சென்று காதலரை யடைந்து என் துயரைக் கூறாயாயினை; “கொடியை வாழி தும்பி இந்நோய் படுகதில் அம்ம யானினக் குரைத்தென மெய்யே கரியை யன்றியும் செவ்வன் அறிவுங் கரிதோ அறனிலோய் நினக்கே” (நற். 277) என்பதாக ஒரு பாட்டுப் பாடியுள்ளார். குறுந்தொகைப் பாட்டிலும் காதலி, தும்பியைத் தூதுவிடுங் கருத்துடையளாய், “தும்பியே, நீ என் காதலர் ஊர்க்குச் செல்வாயாயின் யான் இல்லிடத்தே செறிக்கப் பட்டேன்; என் தமரின் நீங்கி வெளியே வருதல் இனி எனக்கு இயலாது என்று தெரிவிப்பாயாக” என்பாள், “அம்ம வாழியோ மணிநிறத் தும்பி நன்மொழிக் கச்ச மில்லையவர் நாட்டு அண்ணல் நெடுவரைச் சேறியாயின் கடவை மிடைந்த துடவையஞ் சிறுதினைத் துளரெறி நுண்துகள் களைஞர் தங்கை தமரின் தீராள் என்மோ” (குறுந். 392) என்றாளெனப் பாடியுள்ளார். இவ்வாறு தும்பியைத் தூதுவிடுங் கருத்தால், இனிய இப் பாட்டுக்களைப் பாடியது கொண்டு, இவர் தும்பிசொகினனா ரெனப்பட்டனர் என்பது கருத்து என நற்றிணையுரைகாரர் கூறு கின்றார். காமமிக்க கையறுநிலையில் தும்பியையும் கடலையும் இன்ன பிறவற்றையும் முன்னிலைப்படுத்திப் பாடுவது சான்றோர் மரபாதலின், தும்பியை விளித்துப் பாடியதுபற்றி இவர் இப் பெயர் பெற்றாரென்பது சிறப்பாகாது. தும்பியைப் பாடிய சிறப்புப்பற்றி இப்பெயர் வந்ததாயின், இவர் ‘தும்பி பாடிய சொகிகனனார்’ எனப் பெயர் குறிக்கப்படுவரேயன்றி வெறிதே தும்பி சொகினனாரெனப் படார். பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங் கடுங்கோ, வெறி பாடிய காமக்கணியார், காக்கை பாடினி நச்செள்ளையார், நோய்பாடியார் எனப் பாட்டால் வந்த சிறப்புக் களைச் சான்றோர் விதந்து கூறியிருத்தலைக் காண்க. மேலும் தும்பியென்பது இவர் குடிப்பெயராதற்கும், தந்தை பெயராதற்கும் வழியில்லை. ஆகவே அஃது இவரது ஊர்ப்பெயராதல் வேண்டும். திருச்சொகினூர் திருவேங்கடக் கோட்டத்தில் உள்ளதோர் ஊர் என்று முன்பே கூறினோம். இச்சொகினூர் இவர் பெயரால் சிறப்புற்ற வூராகும்; ஆயின் இவர் தொண்டைநாட்டவராவர். தும்பியென்பது இவரது ஊராயின் அப்பெயரியதோர் ஊர் தொண்டை நாட்டில் இருத்தல் வேண்டும். திருவேங்கடத்துக்கு நேர்கிழக்கில், செங்கற்பட்டு மாவட்டத்துப் பொன்னேரி தாலூகாவின் வடக்கில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூலூர்ப்பேட்டைப் பகுதியிருக்கிறது. இப்பகுதியில் ‘தும்மூரு’ என்றோர் ஊர் உளது. இவ்வூரிலுள்ள பெருமாள் கோயிலில் இரண்டாம் இராசராச சோழனுடைய 13, 16, 23-ஆம் அண்டுக் கல்வெட்டுக்கள் மூன்று (கி. பி. 1158 9; 1161.2; 1168.9) காணப்படுகின்றன. அவை இவ்வூரை “சயங்கொண்ட சோழ மண்டலத்துப் பையூரிளங்கோட்டத்துப் பட்டைய நாட்டுத் தும்பையூர் (nel. ins. sulur 12, 15, 17) என்று கூறுகின்றன. புறநானூற்றுக் கையெழுத்துப் படியொன்றில் தும்பைச் சொகினனா ரென்ற பாடமுண்டென முன்பே கூறினேன். அப்பாடத்தையும் இக்கல்வெட்டையும் ஒப்பநோக்கின், சொகினனார் தும்பையூரின ரென்பது தெளிவாம். தும்பைச் சொகினனாரென்பது ஏடெழுதி னோரால் தும்பிச் சொகினனாரெனப் பிழைக்கப்பட்டதாம். சொகினனார் ஒரு பாட்டில் ஒரு முறைக் கிருமுறை தும்பியைப் பாடியது கண்டவர், தும்பைச் சொகினனாரென்பதைத் தும்பி சொகினனாரெனத் திருத்திக்கொண்டிருத்தலும் கூடும். தும்பி சொகினனாரென்பது இனிது பொருள் விளங்காமையால் ‘தும்பி சேர்கீரனார்’ எனத் திருத்தப்பட்டதையும் கண்டுள்ளோம். இவ் வளவும் சுருங்க நோக்கின், தும்பி சொகினனர், தொண்டைநாட்டுத் தும்பை யூர்க்குரியவரென்பதும், இவர் ‘சொகினன்’ என்னும் பெயரின ரென்பதும், சொகினம் கூறும் சிறப்பால் இவர் திரு வேங்கடக் கோட்டத்துச் திருச்சொகினூர்க்குரியரென்பதும், அவர் பெயர் தும்பைச் சொகினனாரென இருக்கவேண்டுமென்பதும், ஏடெழுதினோரால் தும்பி சொகினனாரெனத் திரிக்கப்பட்ட தென்பதும் கூறியவாறாம். சொகினனார் என்பதுபற்றிய கருத்து இதுவாயின், வினைத் தொழில் சொகிரனார், என்றொரு சான்றோர் உளரே, அவர் பெயரும் இதுபோலத் திருத்தமெய்துவதுதானோ என்றோர் ஐயம் அன்பர்கள் கருத்தில் எழும். அதனையும் சிறிது காண்பது முறையாகிறது. ஏடுகளில் சொகிரனார் எனக் காணப்படும் இதனைப் பெயர்த் தெழுதினோர் சோகீரனாரென எழுதியது பொருள் விளங்காமையைச் செய்துவிட்டது. சொகிரனாரென்பது இயற்பெயர். இவர் போர் வினையாகிய தொழிலில் தலைசிறந்து விளங்கினார். வினையென்றது போர்வினையையே குறிக்கும் வகையில் பண்டைத் தமிழ் நூல்கள் குறிக்கின்றன. தொழிலென்றது போர் வினைக்கும் வரும். போரைக் குறித்தற்கு “வினைத்தொழில்” என்று பாடிய சிறப்பால் இச்சொகி ரனார்க்கு இப்பெயர் வந்திருக்கலாம். “வினை நவில்யானை” (பதிற். 82) என்றும், “தொழில் புகல் யானை” (பதிற். 84) என்றும் வரும் தொடர்கள் போர்வினை யாகிய பொருள் குறித்துநின்று நலமும் அழகும் திகழ நிற்பதைக்கண்டு சான்றோர் இவற்றாலே இவை வந்த பாட்டுக்கட்குப் பெயர் வகுத்திருப்பது ஈண்டு நோக்கத்தக்கதாகும். சொகிரனாரென்பது அவரது இயற்பெயர். இத்தகைய பெயருடையோர் சேரநாட்டில் இருந்திருக்கின்றனர். மலையாள மாவட்டத்துப் பொன்னாணி தாலூகாவிலுள்ள சுகபுரத்துக் கல் வெட்டு (s. i. ins. vol. v. no. 773) அவ்வூரைச் ‘சொகிரம்’ என்றும், அதற்குரியவனைச் ‘சொகிரன்’ என்றும் குறிக்குமாற்றால், “சொகிரத்துத் தொரவம் (பாடிகாவல்) உரியசொகிரனேன்” என்று கூறுகிறது. ஆகவே, சொகிரனார் சேரநாட்டவரென்றும், போர்வினையை வினைத்தொழில் என்று சிறப்பித்துரைத்ததுபற்றி வினைத்தொழில் சொகிரனாரெனப் பட்டாரென்றும், எனவே தொண்டைநாட்டுச் சொகினனார் வேறு. சேரநாட்டுச் சொகிரனார் வேறு என்றும் தெரிதல் வேண்டும்.  20. கிழான் சங்கத் தொகை நூல்களில் புலவர்கள் பலரும் தலைமக்கள் பலரும் கிழான், கிழார் என்ற சிறப்புடன் கூறப்படுவது அன்பர் பலரும் அறிந்ததொன்று. அரிசில்கிழார்,ஆலத்தூர்கிழார், இடைக் குன்றூர்கிழார், கோவூர்கிழார், பெருங்குன்றூர்கிழார், மாடலூர் கிழார் எனவும், புதுக்கயத்துவண்ணக்கன் கம்பூர்கிழான் எனவும், அம்பர்கிழான், அருவந்தை ஈர்ந்தூர்கிழான், ஒல்லையூர்கிழான், கரும்பனூர்கிழான், கொண்கானங்கிழான் எனவும் வருதலைப் பலரும் அறிவர். இக் கிழான் என்ற பெயர் கிழவன் எனவும் வழங்கும். நாலைகிழவன்நாகன் என வருதல் காண்க. இவ்வாறு கிழான் எனவும் கிழாரெனவும் கிழவன் எனவும் வழங்கும் சிறப்புப் பெயர்களால், இவை வேளாளர்க்குரிய சிறப்புப்பெயர்களாம் என்ற கருத்தொன்று நாட்டில் நிலவுகிறது. இக் கருத்தை அடிப்படை யாகக்கொண்டு, என் நண்பர் ஒருவர், யான் எழுதிய "மதுரைக் குமரனார்" என்ற நூலில் ஈர்ந்தூர் கிழானைப்பற்றி யுரைத்ததனைச் "சித்தாந்தத்" தில் மறுத்தெழுதியுள்ளனர். அதனால் இச்சிற்றா ராய்ச்சி செய்ய வேண்டுவதாயிற்று. புறநானூற்றை முதற்கண் அச்சிட்டு வெளியிட்ட டாக்டர். திரு. உ. வே. சாமிநாதையரவர்கள், பாடினோர் வரலாறு என்னும் பகுதியில், அரிசில்கிழாரைப்பற்றிக் குறிக்கவந்தவிடத்து, "கிழா ரென்பது வேளாளர்க்கேயுரிய சிறப்புப்பெயராக இருந்த தென்று தெரிதலின், இவர் வேளாண்மரபினராகக் கருதப்படுகிறார்; இஃது 'ஊரும் பேரும்' (தொல். மரபு. 74) என்னும் சூத்திரத்தின் உரையில் காட்டிய பெயர்களாலும், திருத்தொண்டர்புராண வரலாற்றின் 12-ஆம் செய்யுளில் எடுத்துக் காட்டிய பெயர்களாலும் அறியலாகும்" என்று குறித்துள்ளார். "ஊரும் பேரும்" என்னும் சூத்திரத்தின் உரையில், "ஊரும் பெயரும் என்பன: உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன், கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்குரியனன்; உறையூர்ச் சோழன், மதுரைப்பாண்டியன் என்பன அரசர்க்குரியன. காவிரிப் பூம்பட்டினத் துக் காரிக்கண்ணன், மதுரை அறுவைவாணிகன் இளவேட்டன் என்பன வணிகர்க்குரியன; அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்குரியன," என்பது காணப்படுகிறது. திருத்தொண்டர்புரண வரலாற்றின் 12-ஆம் செய்யுள், "நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே ஏற்றும் நற்குடிநாற் பத்தெண்ணா யிரத்துவந்த கூடல்கிழான் புரிசைகிழான் குலவுசீர்வெண் குளப்பாக்கி ழான்வரிசைக் குளத்துழான்முன் தேடுபுக ழாரிவரும் சிறந்து வாழச் சேக்கிழார் குடியிலிந்தத் தேச முய்யப் பாடல்புரி அருண்மொழித்தே வரும்பினந்தம் பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்" என்று காணப்படுகிறது. இவ்விரண்டிலும் காணப்படும் பெயர்கள், அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன், கூடல் கிழான், புரிசைகிழான், வெண்பாக்கிழான், குளப்பாக்கிழான், குளத்துழான், சேக்கிழார் என்பன. இப் பெயர்களைக்கொண்டு டாக்டர். திரு. அய்யரவர்கள், "கிழாரென்பது வேளாளர்க்கே உரிய சிறப்புப் பெயராக இருந்தது," என்று தெரிந்துரைக் கின்றார். மரபியல் உரை காரராகிய பேராசிரியரும், திருத்தொண்டர் புராண வரலாறு டையாரும், இக்கிழார்களை வேளாளரென்றமையின், கிழார் என்பது வேளாளர்க்கே யுரிய சிறப்புப் பெயராகத் தெரிந்து கொண்டன ரென்பது தேற்றமாம். ஆகவே, கிழார் கிழான் எனப்படுவோரை வேளாளரெனக் கோடல் வேண்டும் என்பது அவர் கருத்தாம். மற்று, இறையனார் களவியலுரையில் "இவ்வூர் உப்பூரி குடிகிழார் மகனாவான் உருத்திரசன்ம னென்பான், பைங்கண்ணன் புன்மயிரான், ஐயாட்டைப்பிராயத்தான் ஒரு மூங்கைப் பிள்ளையுளன்" என்று கூறுகிறது. திரு. அய்யரவர்கள் தெரிந்துரைத்தவாறே கொள்ளின், உருத்திரசன்மன் என்பான் ஒரு வேளாளனாதல் வேண்டும். சன்மன் எனவரும் சிறப்புப்பெயரெல்லாம் பார்ப்பார்க் கே உரியதாக வழங்கப்பட்டிருப்பது யாவரும் அறிந்ததொன்று. ஆதலால், கிழான் என்ற சிறப்புப் பெயர் வேளாளர்க்கே யன்றிப் பார்ப்பார்க்கும் உரியதென்பது விளங்கும். இனி, கிழாரென்ற சிறப்புப்பெயர்பற்றி ஒரு வரையறை கோடற்குக் காரணமாயிருந்த உரைகாரரும், திருத்தொண்டர் புராண வரலாறுடையாரும் வாழ்ந்த காலம் கல்வெட்டுக்கள் தோன்றி நிலவிய இடைக்காலமாகும். இடைக்காலக் கல்வெட்டுக்களில் கிழான், உழான் என்ற சிறப்புப்பெயர்பெற்றோர் பலர் இருந்திருக் கின்றனர். "குளத்துழான்" என்று திருத்தொண்டர் புராண வரலாறு டையார் கூறுவதுபோல, கந்த முழான் கூத்தன் திருவெண்காடு தேவன், கடம்புழான் தீர்த்தன் சுந்தரன், பாலமுழான் வேளாண் அம்மையப்பன்1 எனக் கல்வெட்டுக்கள் கூறுவது காணலாம். திருவிடைமருதூர்க்கோயில் கல்வெட்டொன்று, "திரு விடைமருதில் ஸ்ரீ மூலஸ்தானத்து மகாதேவர்க்கு ஒரு நொந்தா விளக்கினுக்குப் புலியூர்க்கோட்டத்து மயிலாப்பில் வியாபாரி விளத்தூர் கிழவன் அரையன் அரிவலன் வைத்த பொன் 252" என்றும், மதுராந்தகம் தாலூகாவிலுள்ள கடப்பேரிச்சிவன் கோயில் கல்வெட்டொன்று "இந் நாயனார் தேவதானம் தீன சிந்தாமணித் தெருவில் வியாபாரிகளுக்குச் சமைந்து மெய் (யூர்) கிழான் சீரிளங்கோ ஸ்ரீ கிருஷ்ணனும் தண்டலங்கிழான் ஸ்ரீ வாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணனும்................உள்ளிட்ட இத் தெருவில் வியாபாரிகளோம்3" என்றும், உலகாபுரத்துக் கல்வெட்டொன்று, "உலோகமாதேவிபுரத்து உடையார்கோமணி யுண்டாருக்கு வியாபாரி ஆர்வலங்கிழான் வீதிவிடங்கன் சிறு நம்பாடிகள் வைத்த திருநுந்தாவிளக்கு ஒன்று4" என்றும் கூறுகின்றன. இவ்வாறுவரும் கல்வெட்டுக்கள் பலவற்றையும் நோக்கின், வேளாளரேயன்றி வியாபாரிகளும் கிழான் என்ற சிறப்புக்குரியராவது விளக்கமாம். இனி, திருமழபாடியில் உள்ள கல்வெட்டுக்களுள் ஒன்று, "இந் நாயனார் கோயில் திருநந்தாவிளக்குக் கோயில்குடிமக்களில் ............ செம்பியதரையகோன் மகன் பிரமனும், ஏமப்பேர்க்கோன் வயிரவனும் இவ்வாட்டைக் கார்த்திகை மாசத்து ஸ்ரீ பண்டாரத்து நாங்கள் கைக்கொண்ட செவ்வாடு தொண்ணூாறு"1 என்று கூறுகிறது. இதனால், இக் கல்வெட்டுக் காலத்தே, இடையர்கள் கோன் என்ற சிறப்புப்பெயருடன் விளங்கினமை காணலாம். இங்குள்ள வேறொரு கல்வெட்டு, மல்லாண்டானான சேரகோன் என்பான் திருவிளக்குப் புறமாக நிலம்விட்ட செய்தியைக் குறிக்கிறது. இச் சேரகோன், "சுத்தமலி வளநாட்டுப் பாம்புணிக் கூற்றத்துப் பாம்புணிகிழான் மல்லாண்டானான சேரகோன்"2 எனப்படுகின்றான். மல்லாண்டானான சேரகோண் இன்னானென இனிது விளங்குதலால், கிழான் என்பது இடையர்கட்கும் உரியதென்பது தெரியத்தோன்றுகிறது. இனி, கிழான் என்பது வேளாளர்க்குரியதாய் வழங்குவதை, கல்வெட்டுகள், "கொங்கான வீர சோழமண்டலத்தில் வெள்ளாாரில் நீலங்கிழார் மஸ்தககுடாரி மகுட சூடாமணி மன்னர் வணங்கிலும் வணங்காத முடியான்" என்றும், "அனுக்காவூரில் இருக்கும் வெள்ளாளன் களத்தூர் கிழவன் உடையான்"3 என்று கூறுகின்றன. இதுகாறும் கூறியவாற்றால் கிழான், கிழார் என்ற சிறப்பு, வேளாளர்க்கேயன்றிப் பார்ப்பனருக்கும், வணிகருக்கும் வேளாள ருக்கும் ஒப்பவழங்கிய சிறப்புப்பெயரென்பது துணியப் படும். மேலும் நாலைகிழவன் என்றும், ஈர்ந்தூர்கிழான் என்றும், அம்பர்கிழா னென்றும், பொறையாற்றுகிழா னென்றும் வருவன. கிழான் என்னும் சிறப்புப்பெயர் குறுநிலத்தலைவர்க்கும் உரியதெனக் காட்டுகின்றன. எனவே, கிழான் என்னும் சிறப்பு குறுநிலத் தலைவரான அரசர், வணிகர், வேளாளர், பார்ப்பனர் பலர்க்கும் உரியதாமென்பது துணியப்படும். இனி, இச் சிறப்புப்பெயர் எவ்வாறு ஒருவர்க்கு எய்துகிறதென்பது அறியவேண்டுவதொன்றாம். இதற்குச் சங்கத்தொகை நூல்களிலும் இடைக்கால நூல்களிலும் போதிய குறிப்பொன்றும் காணப்பட வில்லை. தொல்காப்பிய வுரைகளிலும் ஒரு குறிப்பும் இல்லை. சங்ககால வழங்கு மிகுதியும் மறையாது நிலவிய காலம் இடைக் காலமாகும். சங்ககால வழக்கு மறைதற்கும் சென்ற முந்நூறாண்டைய வழக்கின் தோற்றத்துக்கும் இடைக்காலம் நடுநின்று இரண்டு வழங்குகளின் குறிப்புக்களையும் கல்வெட்டுக்களின் வாயிலாகக் குறித்துவைத்தது தமிழகம் வரலாற்றுத் துறையில் செய்துகொண்ட நற்பணியாகும். இக் கல்வெட்டுக்களும் சென்ற நாற்பத்தைந்தாண்டு களாக அரசாங்கத் தாரால் படியெடுக்கப்பட்டும் வெளியிடப்படாமல் இருக்கின்றன. தமிழகத்துக் கல்வெட்டுக்களின் பயனை அறியாமை யாலோ அரசியலறிஞர் புறக்கணிப்பாலோ எதனாலோ சென்ற பத்தாண்டுகளாக ஆண்டறிக்கைகள்கூட வெளியிடப்படா தொழிந்து போயின. எருக்கங்குடியுலுள்ள கல்வெட்டொன்று1 பாண்டியன் நெடு மாறன் ஸ்ரீவல்லபன் காலத்தில் எட்டிசாத்தன் என்பான் இருஞ் சோணாட்டுக் கூடற்குடி, குளத்தூர், துழாயூர், இருப்பைக்குடி, வெளியங்குடி, ஆலங்குடி என்ற ஊர்கட்குத் தலைவனா யிருந்து, பாண்டிவேந்தனால் இருப்பைக்குடி கிழான் (கிழவன்) என்று சிறப்பிக்கப்பட்டானென்று2 கூறுகிறது. இதனால், கிழானென்னும் சிறப்பு வேந்தரால் அவர்கீழ்வாழும் மக்களுட் சிறந்தோர்க்கு வழங்குவதென்பது உணரப்படும். காவிதி என்பது வேந்தர் தம்நாட்டு நன்மக்கட்கு வழங்கும் சிறப்புப்பெயரென்பது சங்கநூல் பயின்றார் நன்கறிந்த தொன்று. காவிதிப்பட்டம் பெற்றோர்களைக் காவிதி மாக்கள் என்ப. அவர்தம் இயல்பை, "நன்றுந் தீதுங் கண்டாராய்ந் தடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்துப், பழியொரீஇயுயர்ந்து பாய்புகழ் நிறைந்த, செம்மைசான்ற காவிதிமாக்கள்" என்று மதுரைக் காஞ்சி (496-9) யென்னும் சங்கப்பாட்டுக் கூறுகிறது. இக் காவிதியென்னும் சிறப்புப்பெறுவது இடைக்காலத்தும் இருந்துவந்தது. இதனைப் பெற்றோர்க்கு இடைக்கால வேந்தர் நிலம்வழங்கிச் சிறப்பித்தனர்; அந் நிலவுரிமைக்குக் காவிதிக்காணி3 எனக் கல்வெட்டுக்கள் பெயர் குறிக்கின்றன. சங்கநூல்வழக்குகள் பல கல்வெட்டுக்களால் இவ்வாறே வற்புறுத்தப்படுகின்றன. ஆதலால், கிழான் என்ற சிறப்புப்பற்றிக் கல்வெட்டுக்கள் கூறுவதுகொண்டு நோக்குமிடத்து, அது "சாதி" வேறுபாடு கருதாது சிறப்புடைய மக்களுக்கு வேந்தரால் வழங்கப் பெற்ற சிறப்புப்பெயரென்று தெளிய உணரவேண்டுவ தொன் றென்பது துணிபாம்.  21. தமிழரசு நீதி வழங்கிய திறம் தமிழர் தங்கள் நாடாளும் வேந்தர்களை மன்னர், அரசர் முதலிய பெயர்களால் குறித்தபோது இறை என்ற பெயரையும் குறித்து வழங்கினர். இறை என்ற சொல் இறுத்தல் என்னும் சொல்லடியாகப் பிறந்தது. இறை என்பது முதனிலை திரிந்த தொழிற் பெயர் என இலக்கணம் கூறப்படும். இறு என்பது முதனிலை. அது, தங்குதல், விடை சொல்லுதல், கடன் முதலிய வற்றைச் செலுத்துதல் என்று பொருள்படும். கண்ணகியும் கோ வலனும் மதுரைப் புறஞ்சேரியில் இறுத்தனர்; என் வினாவுக்கு அவன் நேரிய விடையிறுத்தான்; பாண்கடன் இறுத்த சேண்விளங்கு புகழோன் எனவரும் தொடர்கள் மேலே காட்டிய பொருள் வகைகளை நன்கு விளக்கும். நாட்டாட்சி நன்கு நடைபெறுதற்குப் பொருள் இன்றியமை யாமையின் அதனை நல்குவது நாட்டுமக்கட்குக் கடன். அக்கடன் புரவுக் கடன் எனப்பட்டு வேந்தர்க்கு இறுக்கப்படுதலின் இறை யென்றும் வழங்கும். அந்த இறைப்பொருளைப் பெறுதற்குரியனாதல் பற்றி அவ்வேந்தனை இறை என்பது ஒரு வழக்காறு. உயிர்ப்பொருள். உயிரில் பொருள் ஆகிய எல்லாப் பொருளிலும் நீக்கமற நிறைந்து தங்கும் இறையாகிய கடவுள் போல வேந்தனது ஆணை நாடு முழுதும் நீக்கமற நிற்பதால். அவனையும் இறையெனக் கோடல் தகும் என்பது ஒரு கொள்கை. இனி, கடவுளாகிய இறைவன், செய்யப்படும் வினைகட்குரிய பயனை வினை முதலாகிய உயிர்கள் நுகருமாறு செய்கின்றார்; நல்வினை செய்த உயிர் இன்பமாகிய பயனையும் தீவினை செய்தவுயிர்துன்பமாகிய பயனையும் நுகர்தல் வேண்டும் என முறை வகுத்து. அப்பயன்கள் தாமாகவே சென்று வினைமுதலைச் சாரமாட்டாமை கண்டு அவற்றைச் செய்த உயிரை அடையுமாறு பண்ணுவான்; அதனால் அக்கடவுளைப் "பால்வரை தெய்வம்" எனத் தொல்காப்பியம் கூறுகிறது. அதுபோலவே மன்னனும் நல்வினை செய்தாரைப் பாராட்டி இன்புறுத்தியும் தீவினை செய்தாரை ஒறுத்துத் துன்புறுத்தியும் ஒழுகுதலின் இறை யெனப் படுகின்றான் என்பதும் உண்டு. நாட்டு மக்கட்குத் தலைவனாகிய வேந்தன், எட்டுத் திக்கினும் நின்று உலகம் காக்கும் இந்திரன், திருமால் முதலிய "உலகபாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறையென்றார்; "திருவுடைமன்னரைக் காணின் திமாலைக் கண்டேனே யென்னும்" என்று பெரியாரும் பணித்தார்" என்று பரிமேலழகர் கூறுவர். வேறு சிலர். வேந்தர்கள் ஆதியில் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டு அவரால் ஆட்சிபுரியுமாறு ஏற்படுத்தப்பட்ட உரிமையுடையராதலால் வேந்தர் இறையெனப் பட்டனர் என்பர். எனினும், திருவள்ளுவர், இன்னோரன்ன கருத்துக்களால் நாம் அலைப்புண்டு மயங்காவாறு, "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்" என்றார். முறையென்பது அளி, தெறல் என இருவகைப்படும். நல்வினை செய்தாரது நலத்தை அறிந்து பாராட்டி அருள் செய்வது அளி; தீது செய்தோருடைய தீமையை அறிந்து. அந்நெறியைக் கைவிட்டுத் திருந்தி நன்னெறிக்கண் நிற்குமாறு ஒறுத்தல் தெறல் என்பதாம். இம்முறைமையை நீதி என வடநூல்கள் குறிக்கின்றன; தமிழ் நூல்கன் செங்கோன்மை, நடுவுநிலைமை, செம்மை, செப்பம் என்ற சொற் களால் இடத்துக்கேற்ப வழங்கும். அரசன் செய்யும் முறை "ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் எனப்பட்டது என்று பரிமேலழகர் கூறுவர்." இம்முறையை வேந்தர் செய்யும் திறமே நீதி வழங்கும் செயலாகும். இதனை "ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வஃதே முறை" என்று திருவள்ளுவர் செப்புகின்றார். முறைசெய்தலும் குறைநீக்கலும் அரசுபுரியும் ஆட்சிவினையாகும். குறை நீக்கம் வேண்டிய மக்கட்கு ஆவன ஆராய்ந்து செய்தல் நேர்முக ஆட்சியின்பாற்படும். மக்கள் முறை வேண்டிவருவது வழக்கு எனப்படும். ஒவ்வொரு வழக்குக்கும் தொடை, விடை என இருபக்கம் உண்டு. தொடையை வாதம் எனவும் விடையைப் பிரதிவாதம் எனவும், வழக்குத் தொடுப்போரை வாதி எனவும், அவர் காட்டுவனவற்றை எதிர்த்து விடுப்போரை பிரதவாதி எனவும் இந் நாளில் வழங்குகின்றனர். இருவர்பாலும் உள்ள உண்மைகளைக் காய்தல் உவத்தலின்றி நோக்குவது ஓர்தல்; இருவருள் யாவர் மாட்டும் கண்ணோட்ட மின்றி ஆராய்வது கண்ணோடாமை; சான்றுகளையும் நூனெறிகளையும் துணைக் கொண்டு மெய்ம்மை பொய்ம்மைகளைக் கண்டுணர்தல் தேர்தல்; காணப்பட்ட குணம் குற்றங்களின் வன்மை மென்மை நோக்கி அளியும் தெறலும் செய்தல் இறைபுரிதலாகும். இங்ஙனம் இறைபுரியும் வேந்தர் மக்களினத்தவராதலால், மக்கள் பால் இயல்பாகக் காணப்படும் சினம், இரக்கம், அன்பு முதலியன அளவு கடந்து நின்று அறிவை மறைத்துக் குற்றம் விளைவிக்கும். வேந்தர் இக்குற்றங்கட்குத் தம்மை இடமாக்கிக் கொள்ளல் கூடாது எனத் தமிழ்ச் சான்றோர் எடுத்தோதுகின்றனர். "சினனே காமம் கழிகன்ணோட்டம் அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை தெறல் கடுமையொடு பிறவும் இவ்வுலகத்து, அறம்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது" (பதிற்.22) என நீதி வழங்கும் பல்யானைச் செல்செழுகுட்டுவன் என்ற சேரமன்னற்குப் பாலைக் கௌதமனார் கூறுகின்றார். சினம் காமம் முதலியன முற்றவும் நீக்கத் தகுவனவல்லவாய் அளவோடு நின்றவழி வாழ்க்கைக்கு வேண்டு வனவாய் இருப்பதால் கழிசினம் கழி காமம் முதலாயின விலக்கப்பட்டன. நீதியாகிய முறை செய்யும் மேலோர் ஒரு குற்றம் தம் கண்முன்னே நிகழினும். தாம் கண்டதே கொண்டு குற்றம் செய் தார்க்குத் தண்டனை விதித்தல் கூடாதென்பது பழந்தமிழர் அரசு முறை. அதனையும் உரிய நெறியில் நன்கு ஓர்ந்து கண்ணோடாது குற்றத்தின் வன்மை மென்மை தேர்ந்து இறைபுரிதல் வேண்டும். சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி யென்ற வேந்தன் முறை வழங்கக்கண்ட ஊன்பொதி பசுங்குடையார் என்ற சான்றோர் மிகவும் வியந்து. "நீ மெய் கண்ட தீமை காணின் ஒப்பநாடி அத்தக ஒறுத்தி" (புறம். 10) என்றதனால் இதனை அறிகின்றோம். வரலாற்றுக் காலத்துக்கு முன்பு காவிரிபாயும் சோழ நாட்டில் ஒரு சோழன் ஆண்டுவந்தான். அவனைச் சேக்கிழார் மனுச்சோழன் என்று பெயர் குறிக்கின்றார். அவனுக்கு ஒரே மகன் உண்டு. ஒருகால் அவன் தேரேறிச் சென்றுகொண்டிருக்கையில் இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கொப்ப ஆன்கன்று ஒன்று துள்ளி அவன் தேர்க்காலில் அகப்பட்டு இறந்தது. ஆன்கன்றைக் கொன்ற குற்றத்துக்காகக் சோழன் தன்மகன் எனக் கண்ணோடாது கொலை செய்து முறை புரிந்தான். இவ்வரலாற்றை இடைக்காலச் சோழவேந்தரவையில் அமைச்சராயிருந்த சேக்கிழார் சிறிது விரிய வுரைக்கின்றார். தன் கன்று இறந்ததைக் கண்ட தாய்ப்பசு கண்ணிர்விட்டுக் கதறி மன்னவன் கோயில் வாயிலையடைந்து அங்கு வழக்குரைப் போர் வரவுணர்த்தும் பொருட்டுக் கட்டப்பட்டிருந்த மணியைத் தன் கொம்பினால் முட்டியடித்தது. அதுகேட்ட வேந்தர் அவையினர் வந்து பார்த்துப் பசு நிற்பது கண்டு வியந்து வேந்தற்கு உரைத்தனர். வேந்தனும் அதுகண்டு மருண்டு நிற்ப. அங்கே கூடியிருந்தோர் நிகழ்ந்தது கூறினர். வேந்தற் குண்டான துயரத்துக்கு எல்லையில்லை; மிகவும் வருந்தி, "மன்னுயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும் என் நெறி நன்று" எனத் தன்னையே இகழ்ந்து, "என் செய்தால் தீரும்?" என்று வினவினான். அவனது வருத்தமிகுதி கண்ட அமைச்சர் அவனைத் தேற்றி, "ஆன்கொலை புரிந்தார்க்கென மறைநூல்கள் சில முறைகளை விதித்துள்ளன; அவற்றின்படி ஏற்றது செய்வதுவழக்கு" என்று சொல்லி அதனை விளங்கக் கூறினர். அவர் உரையால் சோழன் மனம் அமைதி கொள்ளவில்லை. "வழக்கென்று நீவிர் கூறுகின்றீர்; அது கன்றை யிழந்து அலறும் ஆவின் மனநோயைத் தீர்க்கும் மருந்தாகுமா? யான் என் மகனை இழக்கின்றேன் என நினைந்து நீங்கள் மொழிவது சழக்கு; அதற்கு நான் இசைந்தால் தருமம் சலித்தொழியும்" என்று சொன்னான். மேலும் அவன் கூறலுற்று. "என் மகன் செய்த குற்றத்துக்கு மறைநூற் சடங்கு செய்து விட்டு வேறொருவன் அது செய்தால் அவனை மறைநூன் முறையென்று கொல்வேனானால், நமதுவேந்தன் அறத்தை அழித் தான் என்னும் பழி இவ்வுலகில் நிலைபெற அன்றோ மொழி கின்றீர்கள்!" என்றானாக, அமைச்சர்கள், "இப்படியே முன்னாளில் முறைசெய்யப்பட்டுள்ளது; இதற்காக வேந்தன் மகனைக் கொல்வது மரபன்று" என்று வாதித்தனர். முடிவில் வேந்தன், அவர்களை நோக்கி, "எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித் தாம் இடரால் வெவ்வுயிர்த்துக்கதறி மணியெறிந்து வீழ்ந்தது?" என்று கேட்க, ஒருவரும் விடை இறுக்கமாட்டாராயினர். அதனால் அவன், தன்மகனைத் தேர்க்காலில் இட்டுக்கொல்லுமாறு பணிக்க, அவன் ஆனை பெற்றுச் சென்ற அமைச்சன், மறுத்தற்கு அஞ்சித் தன்னுயி ரையே மாய்த்துக்கொண்டான். அதனால் சோழன் மனம் அயராது தானே தேரைச் செலுத்தித் தன் மகனைக் கொன்றான். இதனைச் சேக்கிழார், "ஒருமைந்தன் தன்குலத்துக் குள்ளான்என் பதும்உணரான் தருமம்தன் வழிச்செல்கை கடன் என்று தன்மைந்தன் மருமம்தன் தேராழி உறஊர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோமற்று எளிதோதான்" என்று பாடிக் காட்டுகின்றார். இச் சோழன் இவ்வாறு முறை செய்ததிறத்தை வியந்து இளங்கோவடிகள், வழக்குரைத்த கண்ணகி கூற்றில் வைத்து. "வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுசுடத்தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியில் மடித்தோன்" என்று பாராட்டுகின்றார். புகார் நகரத்தில் இருந்து ஆட்சி புரிந்த சோழ மன்னன் ஒருவனுக்கு உதயகுமரன் என்றோரு மகன் தோன்றி, அங்கே புத்த தருமத்தை மேற் கொண்டு அறப் பனி செய்தொழுகிய மணிமே கலையை விரும்பி அவளைத் தன் கைப்படுத்தற்காக அவலிருந்த இடத்திற்குச் சென்றான்; அப்போது அவள் காயசண்டிகை யென்ற ஒருத்தியின் உருக்கொண்டிருந்தமையின் அச்சண்டிகையின் கணவன் அரசகுமரனைக் கண்டு மனம் பொறாது தன் வாளால் கொன்று நீங்கினான். இச்செய்தி வேந்தனுக்குத் தெரிந்தது; நிகழ்ந்தவற்றையும் ஆராய்ந்தறிந்தான். ஆயினும் அதனை ஆய்ந்து முறை செய்ய வேண்டியது அரசின் கடனாகவும், விஞ்சையன் செய்தது தவறு என்று தேர்ந்து, "யான் செயற்பாலது இளங்கோன் தன்னைத்தான் செய்ததனால் தகவிலன் விஞ்சையன்" என்றான். இதனால் முறை செய்து நீதி வழங்குதற்கென்று அமைந்த அரசரது செயலை. அவரல்லாத ஏதிலார் மேற்கொண்டு ஆற்றுவது நேர்மையன்று என்பது தமிழ் மக்களிடையே நிலவியகொள்கையாதலைக் காணலாம். அன்றியும், அச்சோழன், உதய குமரன் செயலுக்கு நாணி, "மகனை முறை செய்த மன்னவன் வழி ஓர் துயர்வினையாளன் தோன்றினன் என்பது வேந்தர்தம் செவியுறுவதன் முன்னம் அவனை ஈமத்தேற்றுக" எனப்பணித்தான். அஃது அவனது மானவுணர்வைக் காட்டுவது ஒருபுறம் நிற்க. மணிமேகலை வேறொருவன் மனைவியின் உருக் கொண்டு திரிந்த குற்றத்தை எண்ணி, "கணிகை மகளையும் காவல் செய்க" என்று கட்டளையிட்டான். இதனால் நீதியின் அமைதியை நிறுத்ததற்கண் தமிழரசு எத்துணைக் கருத்தாக இருந்த தென்பது விளங்கும். ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொலை செய்தது தவறு என்பதைக் கண்ணகி வழக்குரைத்து நிறுவிய போது. ஓர்ந்து கண்ணோடாது உண்மையைத் தேர்ந்து இறை புரிய வேண்டிய தான் தவறியதற்கு நொந்து. "பொன் செய் கொல்லான் தன் சொல் கேட்ட யனோ அரசன்; யானே கள்வன்" என்று வாய்வெருவி "மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது" என்று வருந்தி உயிர் துறந்தது நீதிநெறிக்கண் அத்தமிழ்வேந்தன் உள்ளம் ஒன்றியிருந்த திட்பத்தையே நமக்குத் தெரிவிக்கிறது. இச்செய்தியைச் சேர வேந்தனான சென்குட்டுவன் கேள்வியுற்றபோது. தான் நீதி வழங்கு மிடத்துத் தவறிய கொடுமை சென்று வேற்று வேந்தர் செவிப்படு முன் பாண்டியன் தான் இறந்த செய்தி பரந்து வெளிப்பட வேண்டுமென வீழ்ந்து பட்டது நன்றா யிற்று என்ற கருத்துப்பட, "எம்மோரன்ன வேந்தர்க்குற்ற செம்மையின் இகந்த சொல் செவிப்புலம்படாமுன், உயிர் பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென" உயிர் விட்டது நன்று என்றும், "வல்வினை வளைத்த கோலைச் செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோலாக்கியது" என்றும் கூறினான். இதனால் பண்டைத் தமிழரசர் நீதி வழங்கற்கண் கொண்டிருந்த நேர்மைத் திறம் இனிது விளங்குதலைக் காணலாம். பாண்டி நாட்டில் தங்கால் என்னும் ஊர் சங்க காலத்தையே சான்றோர் பலர் தோன்றிய சால்பும் செம்மையும் உடையது. அதன்கன் வார்த்திகன் என்றொரு வேதியன் வாழ்ந்தான். அவனுக்குத் தக்கிணாமூர்த்தி என்ற பெயருடைய மகன் ஒருவன் இருந்தான். அவன் சிறுவனாயிருந்த போது பராசரன் என்ற வேதியின் சேரநாட்டு வேந்தன் நல்கிய பெருஞ்செல்வத்தைப் பெற்று வருகையில் தங்காலில் தங்கிச் சிறுவர் விளையாட்டுக் குழுவில் இருந்த தக்கிணாமூர்த்தி வேதம் ஓதுதலில் ஏனைச் சிறுவர் அனை வரினும் மேம்பட்டு நிற்பது கண்டு வியந்து, தான் பெற்ற பெருவளத்தை அவற்று அளித்துவிட்டுச் சென்றான். திடீரென்று வார்த்திகன் பெரும் பொருள் கொண்டு விளங்குவது கண்டு அழுக்காறு கொண்ட சிலர் "படுபொருள் வௌவினன்" எனப் பொய்க்குற்றம் காட்ட, அரசியல் ஏவலர் வார்த்திகனைப் பற்றிச் சென்று சிறையிட்டனர். பின்னர் அது பாண்டி வேந்தனுக்குத் தெரிந்தது; ஏவலர் உண்மை நிலையை முறைப்படி ஆராய்ந்து தெளியாது சிறையிட்டமைக்கு மனம் பெரிதும் வருந்தி, வார்த்திகனை "நீர்த்தன்று இது" எனச்சிறை விடுவித்து. "அறியா மாக்களின் முறைநிலை திரிந்தான் இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நும்கடன்" எனப் பணிந்து மொழிந்து. பெருமையாலல்லது பிறவற்றால் வணங் காத தன் மணிமுடி வார்த்திகன் காலில்பட வணங்கி நின்றான். தாமேயன்றித் தம் ஆணைவழி நிற்கும் ஏவலர் தவறு இழைப்பினும் தமது நீதி நெறிவழுவிய தென்பது தேர்ந்து அதற்காக மனமழிந்து வருந்திய செயல் இந் நிகழ்ச்சியால் விளக்கமாகிறது. இவ்வாறே இடைக்காலத்தில் ஆட்சி புரிந்த சோழ பாண்டியர்கள் நீதி வழங்குதற்கண் மிக்க கண்ணும் கருத்து மாயிருந்தமை அவர் களுடைய கல்வெட்டுக்களிலும் செப்பேடுகளிலும் பெருகவுள்ளன; அவற்றுள் வேள்விள் குடிச் செப்பேடுகள் சிறந்த எடுத்துக்காட்டாகும். சங்ககாலப் பாண்டியனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி, கொற்கை கிழான் நற்கொற்றன் என்பவனுக்கு வேள்விக் குடியை நல்கினானாக, இடைக் காலத்துக் களப்பிரர்களால் அவ்வழுதியின் ஆணை புறக்கணிக்கப்பட்டது; பின்னர், பாண்டியன் நெடுஞ்சடையன் என்னும் வேந்தன்பால், நற்கொற்றன் வழியினனாகிய காமக்காணி நற்சிங்கன் முறையிட. அவன் அம்முறையீட்டை நன்கு ஆராய்ந்து, "மேனாளை நம் குரவரால் பால் முறையில் தரப்பட்டதை எம்மாலும் தரப்பட்டது" (epigraphia indica, vol. xvii no. 16) என்று ஆணை தந்து, “கொற்கைகிழான் காமக்காணி நற் சிங்கற்குத் தேரோடும் கடற்றானையான் நீரோடு அட்டிக் கொடுத்தான்” என்பது வேள்விக்குடிச் செப்பேடு 22. தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு ஆராய்ச்சி தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு என்னும் உரை நூல் பின்னங்குடி, டாக்டர், திரு. P.S. சுப்பிரமணிய சாஸ்திரி M.A. ph. D., அவர்களால் பல அறிஞர் துணைகொண்டு எழுதப் பட்டதோர் ஆராய்ச்சி நூல் என்பது பொழிலன்பர்களும், பிற தமிழறிஞர்களும் அறிந்ததே. அந்நூலின் முகவுரைக்கண், திரு.சாஸ்திரியார், “இவ் வாராய்ச்சியில் கூறப்பட்டன அனைத்தும் குற்றமில் கூற்று என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. “குற்றங்களைக் காரணங் களுடன் அறிவிக்கும் புலவர்களிடம் எப்போதும் நன்றி யோடிருப் பேன். பண்டை நூல்கள் இயற்றிய நூலாசிரியரிடமும், உரைகள் இயற்றிய உரைகாரர்களிடமும் மிக்க பக்தியுடனும், கௌரவ புத்தியுடனும் இருக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் கொள்கையைத் தொல்காப்பியம் படிப்போர் நன்கு ஆராய்தல் வேண்டும் என்பதையும் அறிவிக்கவே இச்சிறு நூல் எழுதப் பட்டது,” என்று கூறியிருத்தல் கண்டு, அறிஞர்கள் இதனை யாராய்வாராயினர். இவ்வாராய்ச்சிகளுள், மன்னார்குடி, தமிழ்ப் புலவர், திரு.ம. நா.சோம சுந்தரம் பிள்ளையவர்கள், சாஸ்திரியார் எழுதிய குறிப்பும், உரையும் சேரக்கொண்டு, குறிப்புரையென்னும் கருத்தினராய், “சொல்லதிகார ஆராய்ச்சிக் குறிப்புரையும் மறுப்பும்” என்னும் பெயரிய ஆராய்ச்சியினைச் செய்துகொண்டு வருகின்றனர்.திரு. பிள்ளையவர்கள் குறிப்புரையை மறுக்கு முகத்தால் அக்குறிப் பெழுதற்குக் காரணமாயிருந்த பண்டைய உரையாசிரியர்கள் உரையையும் தமக்கு இயற்கையே வாய்த்த ஆழ்ந்தகன்ற நுண்ணிய அறிவுடைமை தோன்றச் சிறந்து விரிந்ததோர் ஆராய்ச்சி செய்து வருகின்றனரென்பதும்,தமிழிலக்கண ஆராய்ச்சி வேட்கையுடை யார்க்கு ஆர்வம் நிரப்பும் உரையமிழ்தாய் அது விளங்குகின்ற தென்பதும் பொழிலன்பர்கள் அறிந்தனவாகும். இந்நிலையில், இக்குறிப்பு நூல் சென்னைப் பல்கலைக் கழகத்து வித்துவான் தேர்தலுக்குப் பாடமாக விதிக்கப் பெற்றிருத்த லாலும், அத்தேர்தற்குத் தம்மை உரிமை செய்து கொள்ளும் மாணவர்கட்குக் குறுகியகாலமே கிடைத்திருத்தலின், அக்கால வெல்லைக்குள், திரு.பிள்ளையவர்களின் மறுப்பு முடிவுபெறுதல் ஆகாதெனத் தோன்றுதலாலும், யான் இவ்வாராய்ச்சியினை அக்காலவெல்லைக்குள் முடித்துத் தருமாறு பிள்ளையவர்களை வேண்டுகின்றேன். தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்புடையார், முதற்கண், “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே, யஃறிணை யென்மனார் அவரலபிறவே, ஆயிருதிணையினிசைக்குமன சொல்லே” என்ற சூத்திரத்தை யெழுதிப்பின், சொல்லதிகாரம், கிளவியாக்கம் என்னும் சொற்றொடர்களை யாராய்ந்து, பின்னர்ச் சூத்திரப் பொருளை யாராய்ந்து குறிக்கின்றார். அம்முறையே, முதலில், சொல்லின் இலக்கணம், அதிகாரம் என்பதன் பொருள் கிளவியாக்கம் என்பனவாகிய தலைப்புக்களை வகுத்துக் கொண்டு செல்லுதல், அவர்தம் ஆராய்ச்சியொழுக்கம் இற்றெனச் சிறப்பிக்கின்றது. சொல்லதிகாரம், சொல்லின் இலக்கணம். சொல்லின் இலக்கணம் கூறுமிடத்து, சாஸ்திரியார் உரை யாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் கூறிய இலக்கணங்களையும் காட்டி, அவற்றுள் நச்சினார்க்கினியர் சேனாவரையரை மறுத்துரைக்கும் பகுதியையெழுதி, முடிவில், “சேனாவரையர் சொல் கருவியாய் நில்லாது என்று கருதினர் என்பதற்குப் பிரமாணந்தோன்றவில்லை. அன்றியும், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” (சொல் -155) என்ற தொல் காப்பியச் சூத்திரத்தை நச்சினார்க்கினியர் இங்கு மறந்தனர் போலும்,” என்றனர். சேனாவரையர் “சொல்லாவது எழுத்தோடு ஒருபுடையான் ஒற்றுமையுடைத்தாய்ப் பொருள் குறித்துவருவது” என்றாராக அதன்கட் குறித்து வருதற்குக் கருதி நிற்றல் எனப்பொருள் கொண்டு அவ்வாறு நிற்றல் உணர்வுடைப் பொருட் கல்ல தின்மையின், கருதி நிற்றற் பொருண்மையில் குறித்துவருமென்றல் அசம்பவம் என நச்சினார்க்கினியார் மறுத்தனர். குறித்தல் என்பதற்கு அது பொருளாதல், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”என்ற விடத்தும் “இவ்வாள் வெட்டுதலைக் கருதியேயிருக்கும் என்றாற் போலக் கருவிக் கருத்தாவாய் நின்றதென்றும்,” உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே” என்ற சூத்திரத்தில், “இசைக்குமன்” என்றதும், கருவிக் கருத்தாவாய்க் கூறப்பட்டதென்பார், “பொருளை யுணர்த்துவான் ஒரு சாத்தனேயெனினும், அவற்கது கருவியாக வல்லது உணர்த்தலாகாமையின், அக்கருவிமேல் தொழிலேற்றிச் சொல் உணர்த்துமென்று கருவிக் கருத்தாவாய்க் கூறினார். இவ்வாசிரியர் எவ்விடத்தும் சொல்லைக் கருவிக் கருத்தாவாகக் கூறுமாறு மேலே காண்க. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன வே” என்றாற் போல்வன என்றும் கூறினார். அஃதாக, சாஸ்திரியார் “மறந்தா” ரென்றது யாங்ஙனமமையும். அல்லதூ உம், சேனாவரையர் “சொல்நிகழ்ச்சிக்குப் பொருள் இடமாகலின், ஆயிருதிணையின் கண்ணென ஏழாவது விரிக்க” (சொல்-1) என்றும், “பொருளைச் சொல் இன்றியமையாமையின், அதனைக் குறையென்றார்” (சொல் -396) என்றும், “திரிந்துவேறு படூஉம் அன்னபிறவு” மென்றதனால், எட்சாந்து, கோட்டு நூறு, சாத்தனதொப்பு, தொகையதுவிரி, பொருளதுகேடு, சொல்லது பொருள் என்னும் தொடக்கத்தன கொள்க” (சொல் -80) என்றும் கூறுவனவற்றை நோக்குமிடத்துச் சேனாவரையர்க்கு, சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடம் என்பதும், எனவே சொல்லும் பொருளும் இடத்து நிகழ்பொருளும் இடமும் ஆகியவெனினும் இவற்றதியைபு எட்சாந்து முதலியனபோல சமவாய சம்பந்த மென்பதும் கருத்தாமென்க. நச்சினார்க்கினியர் “பொருட்டண்மை யுணர்தற்குக் கருவியாம்” என்பாராகலின், சொல்லும் பொருளும் கருவியும் செயப்படுபொருளுமாகிய சையோக சம்பந்தமென்பது அவர் கருத்தாமென்க. இங்ஙனம், கருத்துவகையால் இருவரும் வேறுபடு மாற்றையுணராது, சாஸ்திரியார், “ஆனால் சேனாவரை யர் சொல் கருவியாய் நில்லாது என்பதற்குப் பிரமாணந் தெரிய வில்லை” எனத் தம்முண்மை நிலையைக் கூறினார். பிரமாணந் தெரிந்திருப்பின், நச்சினார்க்கினியரை மறுப்பல் என்றிருப்பரேல் நம்மனோர்க்கு மகிழ்ச்சி பயந்திருக்கும். இராது, “எல்லாச் சொல்லும் என்றது நோக்குகின்றவர்க்கு மக்களாகிய கருத்து யாதொரு பொருளிடத்துத் தோன்றுமென்று பொருள் தந்தால், வெள்ளாடையென்னும் பண்புத் தொகைபோல, அக்கருத்து மக்களாகாமையின் பண்புத் தொகையன்றாம்; அது மக்கட் சுட்டென்றதற்கு அப்பொருள் மக்கட் சுட்டென்று அவர் கூறிய பொருளானும் மக்களையே தோற்றுவித்து நிற்றலின், அன்மொழி தொகையன்றாம்,” என்றனர். என்றது, மக்கட்சுட்டென்றதற்கு முதற்கண் மக்களாகிய பொருள்கூறிப், பின் இலக்கணங் கூறுமிடத்து, அம்மக்கட் பொருள் எய்தாவகையிற் கூறுதலாற் பொருந்தாது என்பதாம். எய்தாவகையிற் கூறுதலாவது; வெள்ளாடை யென்பது “பண்புதொக விரூஉம்” (சொல் -418) என்புழிச் சேனாவரையர் காட்டியதொரு பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. மக்களாகிய சுட்டு நிகழுமிடம் மக்கட் சுட்டெனின், வெண்மையாகிய ஆடையணியுமிடம் மகளாதல் வேண்டும்; அங்ஙனமாதல் கூடாமையின் மக்களாகிய சுட்டு நிகழும் பொருளும் மக்களாகா தென்றவாறாம். இவ்வியை பின்மை நோக்கியன்றே, சிவஞான யோகிகளும், “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை யென்மனார வரலபிறவே” (இலக். விளக். 162) என்றவிடத்துப் பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன் மொழித்தொகை யென்றதனை மறுத்து, இருபெயரொட்டாகு பெயர் என்று கூறிப்பின், சூத்திர விருத்தியுள், “மக்கட்பொருள் எனவே யமையுமாயினும், அப்பொருட்கு உயர்திணையெனக் குறியிட்டதற்குக் காரணந்தோன்ற, மனத்தோடாறறிவினரே மக்களென மரபியலுட் கூறும் உயர்ச்சிபற்றி மக்களாகிய நன்கு மதிக்கப்படும்பொருள் என்பார் மக்கட் சுட்டென்றார்; மக்களென்பது பொதுமையினீக்கிப் பொருளை விசேடித்து நிற்பச் சுட்டென்பது ஆகுபெயராப் அப்பொருளின் உயர்ச்சியுணர நிற்ப. இருபெயரு மொன்றனையொன்று விசேடித்து இன்னதிதுவென வருமாறு காண்க” எனத் தெருட்டுவாராயினர். இவ்வாராய்ச்சி நெறியிற் பொருளுரையைத் தெளியாது, சாஸ்திரியார், நச்சினார்க்கினியர் கூற்றினைக்கொண்டால், “தூணைக்கண்டு மகனென்று கருதிய வழியும் அஃறிணையே வழங்க வேண்டும்” என்று கருதுகின்றார். பொருள் குறித்தனவே என்ற தொல்காப்பிய சூத்திரத்தை நச்சி னார்க்கினியர் இங்கு மறந்தனர்போலும்” என்றல் இச்சாஸ் திரியார்க்கு அடாது என்க. இனி, அதிகாரம் என்றசொற்கு உரையாசிரியர், நச்சினார்க் கினியர் முதலியோர் முறைமையெனப் பொருள் கொண்டதற்கு ஏது கூறுவார்போன்று திரு.சாத்திரியார், “முறைமை யென்பதற்கு விதி என்ற பொருள் கொண்டனர் போலும்,” என்கின்றார். இதனை, அரசன் அதிகாரத்தை அரசுமுறை என்றாற் போலக் கோடல் பொருந்துவதாகும். ஈண்டு, முறைமைக்கும், விதிக்கும் இயைபின்மை “தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்புரையும் மறுப்பும்” என்ற கட்டுரைப் பகுதிகள் காட்டியிருக்கின்றன. மேலும், “சேனாவரையர் அதிகரணம் என்று பொருள் கூறினர்” என்று சாஸ்திரியார், கூறு கின்றார். சேனாவரையர், “ஈண்டு அதிகாரமென்றது ஒருபொருள் நுதலிவரும் பலவோத்தினது தொகுதியை என்க” என்று கூறி, “வடநூலாரும் ஓரிடத்து நின்றசொல் பல சூத்திரங்களோடு சென்றியைதலையும், ஒன்றன திலக்கணம் பற்றிவரும் பல சூத்திரத் தொகுதியையும் அதிகாரம், என்ப,” என்று கூறியிருத்தலின், அவர்க்கு அதிகரணம் என்றல் கருத்தன்றென்க. அன்றியுமது கருத்தாயின், “யோகவிபாகம்,” “நேயம்,” “தாது” என்று வடநூலியைபுகளைக் கிளர்ந்தோதினவர், அதிகரணமும் கூறாதொழியாராகலானும், அதிகாரத்துக்கும் அதிகரணத்துக்கும் பெரியதோர் வேறுபாடு நடைமுறையினும் காண்டலானும், அறிவு நூல்களின் சம்சயம், பூர்வபக்ஷம். சித்தாந்தம் முதலியவற்றின் நிலைக்களனாம் பொருண்மையில் அதிகரணம் வழங்கப்படுதலாலும், இலக்கண நூல்களில் அரிகியிருத்தற்கு ஆதாரமாகிய கலத்தை அதிகரண மென்னும் பொருண்மையில் வழங்குபவாகலானும், அதிகரணம் என்றாரென்றல் குற்றம் என்க. இனி, கிளவியாக்கம் என்புழி, சேனாவரையர் “வழுக் களைந்து சொற்களையாக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று” என்று கூறி அதனை எடுத்துக் காட்டு முகத்தால் வலியுறுத்தியதோடு, “வினையிற் றோன்றும் பாலறி கிளவியும்” என்ற சூத்திரமுதல் இவ்வோத்து முடிவுகாறும் வழுக்களைந்து சொற் களையாக்கிக் கோடலே பொருளாதல் காட்டிச் செல்லுதலாலும், நால்வகைப்பட்ட சொற்களையும் பொருள் கண்மேலா மாறுணர்த்து கின்றதென உரையாசிரியர் கூறியது தம் கருத்துக் கிசைவில தாயினும், குற்றமின்மைகண்டு அதனையும் தழுவி, “சொற்கள் பொருள்கண் மேலாமாறு கூறினமையான் கிளவியாக்கமாயிற் றெனினுமமையும்” என்று கூறுதலாலும், பேரிலக்கிய விலக்கணக் கடலாய் விளங்கும் நச்சினார்க்கினியார் இவ்விருவர் கூறுவன வற்றையு மோர்ந்து, சேனாவரையார் கூறி யாங்கே கூறினமையாலும், சாஸ்திரியார் “தெய்வச்சிலையார் கூற்றே மிகப்பொருந்தும்” என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிவதன்று. இனி “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்ற விடத்து மக்கட்சுட்டு என்பதன் பொருள்பற்றிய குறிப்பினுள் சாஸ்திரியார், “மக்களென்று கருதப்படும் பொருள்” எனப் பொருளுரைத்த சேனாவரையர் உரையினையும், நச்சினார்க்கினியர் உரைத்த “மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருள்” என்ற உரையினையும் காட்டி, அவ்விரண்டினுட் சேனாவரையருரைத்தது மெய்யுணர்வு, திரிபுணர்வு என்றிரண்டிற்கும் ஏனையது மெய் யுணர்வுக்கும் பொருந்துமென்று கூறினர். கூறினபின், நச்சினார்க் கினியர் சேனாவரைய ருரையின்கண் நிகழ்த்திய மறுப்பினைக் குறிப் பிட்டு, “ஆனால், கருதப்படும்” என்னும் சொல்லின் தாற்பரியத்தை யூன்றி நோக்கின், இருவகையாய்க் கூறியவற்றுக்கும் பொருளில் மாறுபாடு இல்லையென்றே தோன்றுகின்றது” என்று கூறுகின்றார். சேனாவரையர், மக்கட்சுட்டு என்றதற்கு மக்கள் என்று கருதப்படும் பொருள் என்று பொருள் கூறிப்பின், அதற்கிலக்கணங் கூறுவார், “மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும் அது மக்கட்சுட்டு எனப் பண்புத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை,” என்றாராக, அது பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகையன்றென மறுக்கப் புகுந்த நச்சினார்க்கினியர், “முன்னர் மக்களென்று கருதப்படும் பொருளையுயர்திணை யென்பவென்று அவர் கண்ணழிவு கூறியது ஒரு பொருளிடத்து நின்ற மக்கட்டன் மையாலே ஒருவற்கு அப்பொருள் மக்களென்று கருதப்பட்ட தென்று பொருடந்து நின்றது; பின்னர், மக்களாகிய சுட்டு யாதன் கண் நிகழும் இக்கருத்துத்தானும் திரிபுணர்ச்சி யாகலானும், மெய்யுணர்வுக்கே பொருந்துமெனத் தாம் முற்கூறியதனோடு மாறுகோடலானும், இருவர் உரையினையும் அவர் தெளிய உணராமை யுணர்த்துவதாயிற்றென்க. இனி, “ஆயிருதிணையின் இசைக்குமன சொல்லே” என்ற விடத்து, சேனாவரையரும் தெய்வச்சிலையாரும் முறையே சொல் நிகழ்ச்சிக்குப்பொருளும், சொல் இசைத்தற்குத் திணையும் இட மாகக் கொண்டமையாலும், உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் இருதிணையினையும் இசைக்கும் எனக்கொண்டமையாலும், முறையே, இவ்விரு திறத்தாரும் ஏழாவதும், இரண்டாவதும் விரித்தனரென்றொழிதலை விடுத்து சாஸ்திரியார், “சான்றோர் செய்யுளுக்கு ஆதாரம் யாதெனத் தேடவேண்டியிருத்தலானும், தொல்காப்பியச் சூத்திரங்கள் இப்பொழுது நேரில் உள்ளமை யானும், ஏழாம் வேற்றுமைத் தொகையென்று கருதினர்போலும்” என்கின்றார். இலக்கணத்திற் காதாரமாவது சான்றோர் செய்யுளென்பவாக, அச்செய்யுட் கடலுட்டினைத் தாடிய சேனாவரையர்க்குத் தேடற் றுன்பத்தையேற்றி, ஏதுவாக்கினதோடமையாது தொல்காப்பியச் சூத்திரங்களே போதிய ஏதுவாயின என்றனர். தொல்காப்பியச் சூத்திரங்களுள்ளும், “யாதனுருபிற் கூறிற்றா யினும், பொருள் சென்மருங்கின் வேற்றுமை சாரும்” (சொல் -106) என்றும், “யாஅரென்னும் வினாவின் கிளவி, அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே” (சொல் - 210) என்றும் வரும் சூத்திரங்களி லெல்லாம், சேனாவரையரே, இரண்டாவது விரித்தற்கேற்பப் பொருளுரைத்தனராகலின், அவர்க்கது கருத்தன்றென்க. இனி, உயர்திணை யென்பதன் தொகைவிரி எனக்குறித்துக் கொண்டு அதன்கண் ஆசிரியர் சேனாவரையர், நச்சினார்க் கினியார், தெய்வச்சிலையார் ஆகிய மூவர் கூறிய இலக்கணங்களைக் கூறி, முடிவில் “ஆதலால் உயர்திணை யஃறிணை என்ற இரண்டையும் பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகவே கொள்ளுதல் நேராகும்; தெய்வச்சிலையார் கூறும் பொருளின்படி இரண்டையும் பண்புத் தொகையாகவே கொள்ளலாம்,” என்றனர். சேனாவரையர் பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித்தொகை யென்றாரென்றும், அதுவே கோடற்பால தென்றும் கூறுமிவர், அவர் அங்ஙனம் கூறியதனை யாண்டுக் கண்டனரோ, அறியேம். சேனாவரையர்க்கது கருத்தாயின், இறந்தகாலந்தொக்க வினைத்தொகை யென்ற உரையாசிரியர் உரையினை மறுத்திருப்பராகலானும், சொல்லதிகார உரையின் கண் தம்மால் மறுக்கப் படுந்தோறும் சேனாவரையர் பெயரினைக் கிளந்தோது மியல்பினராகிய நச்சினார்க்கினியரும், பெயர் கூறாது தெய்வச்சிலையாரையோ பிறரையோ சுட்டி,“இதனைப் பண்புத் தொகை யென்பாருமுளர்” என்று மறுத்துச் சேறலானும், நன்னூற் குரை வகுத்த சங்கர நமச்சிவாயப் புலவர், “மக்கள் தேவர் நரகர் உயர்திணை” (நன் -261) என்ற சூத்திர உரையில், “திணை நிலங்குல னொழுக்கம்” என்பவாகலின், திணையென்னும் பல பொரு ளொருசொல் ஈண்டுக் குலத்தினை யுணர்த்திநின்றது. உயர் திணையல்லாத யஃறிணை யெனப்பட்டது. இவ்விரண்டும் பண்புத் தொகை; உயர்வாகிய குலம், அஃதன்மையாயகுலம் என விரியும் அடையடுத்த இவ்விரண்டு சாதிப்பண்புகளும் ஆகுபெயராய்ப் பண்பிகளை யுணர்த்தி நின்றன,” என விளங்க வுரைத்திருத்தலானும், இவருக்குப் பின்போந்த திராவிட மாபாடியமருளிய சிவஞான முனிவர், இலக்கண விளக்கச் சூறாவளியில் “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்பதன் மறுப்பின்கண், “உயர்திணை யென்பது இறந்தகால வினைத்தொகை யென்றார். உயர்ச்சி முக்காலத்தும் ஒத்தியல்வதறியார் போலும்” என மறுப்பவர், சேனாவரையர் கூறினாரென இவர் கூறும் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையினை மறாதொழியாராகலானும், அது சேனாவரையர் கூறியதன்றென்றும், மக்கட் சுட்டென்பது பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையென அவர் கூறியதனையே நினைவுமாறி உயர்திணைக்கு ஏற்றிச் சாஸ்திரியார் கூறியதென்றும், உயர் திணையென்பது பண்புத் தொகையென்றும் கொள்க. அல்லதூஉம், உயர்திணையென்பது, “உயர்பொருளென விசேடித்து நின்றமையின், உயர்வான மென்றாற்போல வினைத் தொகையாகாதோவெனின், “வினையின் தொகுதி காலத்தியலும்” (சொல். தெய். 409) என்றாராகலின், ஈண்டுக் காலந் தோன்றாமை யின் ஆகாதென்(க) எற்றுக்கு? உயர்ந்த மக்கள், உயராநின்ற மக்கள், உயரு மக்களென நல்வினை யேதுவாக மூன்று காலமுங் கொண்டாலாகுமேயெனின், அவ்வாறு கருதுவார்க்கு வினைத் தொகையுமாம்”என்று தெய்வச்சிலையார் கூறுதலானும், மக்கட் பிறவி அறிவிலதாம் நிலையினின்றும் ஓரறிவுடையுயிர் முதல் ஆறறி வுடை மக்கள் நிலையெனப் படிப்படியாய் உயர்ந்து போந்ததென, “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாகி மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்” என மணிவாசகப் பெருந்தகையார் சிவபுராணத்துள் (25 -30) கூறியிருத்தலானும், இக்காலத்தும் இயற்கைப் பொருள் நூலாராய்ச் சியாளரும் இதனை யுடம்பட்டுக் கோடலானும், வினைத்தொகை யெனக் கூறியிருப்பாராயின், ஒருவாறு அமைவுடைத்தாம் என்க. இனி, என்மனார் என்னும் சொற்பற்றிய உரைவகைகளை எடுத்துக்காட்டி, அவற்றுள் உரையாசிரியர், உரைத்ததனை மறுத் துரைக்கும் சேனாவரையரின் மறுப்புரையின் ஒரு பகுதிக்குப் பொருளுரைக்கப் புகுந்து,“ சேனாவரையத்தில் ‘இசைநிறை யென்பது..... மேற்கோண் மலைவாதலானும், என்பதற்குப் பொருள்:- இடையியலில் மன் என்பது இசை நிறையில்வரும் என்று ஆசிரியர் கூறாமலிருக்கும்போது, இங்கு இசை நிறையாகக் கொள்வது தாம் கொண்ட கொள்கைக்கு மாறுபாடாகலானும் -என்பதாகும்,” என்று கூறுகின்றார். ஆசிரியர் தொல்காப்பியனார், மன்னென்னும் இடைச்சொன் முதலிய சொற்களுட் பல தனிமொழிக் குறுப்பாய் இயைந்து, ஒரு தனிச்செம்மொழியாயவிடத்து, அவற்றைப் பிரித்து, ஒரு மொழி முடிபிலக்கணம் கூறினாரல்லர்; கூறுதலும், “இந்திரனுக்குப் பிரகற்பதி இவைவழு இவை வழுவில்லனவென” வட மொழி களைத் தனித்தனி யெடுத்தோதலுற்றார்க்குத் தெய்வயாண்டிலா யிரம் சென்றது; சென்றும், சொற்கண் முடிந்தில வெனமாபாடியத் துள் ஆசிரியர் பதஞ்சலியார் எடுத்தோதினார். தமிழ்மொழி யுமவ்வாறு பெருகிக் கிடத்தலின் அவற்றை இவை வழு, இவை வழுவில்லனவெனத் தனித்தனி எடுத்தோதப்புகின், முடிவுபெறாது. ஆசிரியர்க் கொருவாற்றான் முடிவு பெறினும், சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் அவற்றைக் கற்பதற்கே ஆயுள் போதாவாம். ஆகவே, அவற்றைக் கற்றுப் பலருடன் பயின்று, பிறர்க்குரைத்துக் கல்வி நிரப்புமாறில்லையாகலின், அவ்வாறு கூறாது, சிலவற்றைப் பொதுவிதியானும், சிலவற்றைச் சிறப்பு விதியானும், சிலவற்றை எடுத்தோத்தானும், சிலவற்றையிலேசானும், சிலவற்றைப் புறனடை யானும், சிலவற்றை யுத்திவகையானு முணர்ந்து கொள்ளுமாறு, தொகுத்து நூல் செய்தாராகலின், ஆகாதென்க “(தொல் -முதற் சூத்திர விருத்தி” என்று சிலஞான முனிவர் கூறியருளினர். இடையியலில் ஏகாரவிடைச் சொற்கு எதிர்மறைப்பொருள் கூறாராயினும், அதற்கு அப்பொருண்மை, “மாறுகொளெச்சமும் வினாவுமெண்ணும் கூறிய வல்லெழுத்தியற்கை யாகும்” (தொல். எழுத் 275) என்புழிப் பெறுமாறு ஆசிரியர் கூறுப. அங்ஙனம் கூறல் இடையியலிற் கூறிய ஐவகைப் பொருளினும் சிறு வரவிற்றென்பது பெறவைத்தற்கு என்ப. அன்றியும் மன்னென்னும் இடைச்சொல், சின் முதலிய இடைச்சொல் அசைநிலை முதலிய பொருண்மை குறித்து, “உரைத்தி சினோரே,” “அறிந்திசினோரே” எனவருதல் போலாது, காலம் முதலிய காட்டிப் “புணரியல் நிலையிடை யுணரத்தோன்றா” முடிபிற்றாகலினாலும், “அம்மூன்றென்ப மன்னைச் சொல்லே” (சொல்.252) என்றது, “அஃது அடுத்த சொல்லினை மன்னைச்சொல் என்றான், அவை மூன்றன்றி எத்துணையும் பலவாயினும், ஒன்றாயினும். மூன்று பகுதிப்படும் என்று கோடற்கு” (பொ.661 உரை) எனப் பேராசிரியர் கூறுதலானும், அன்றி, சிவஞான முனிவர் கூறிய நூற்புணர்ப்பு வகையாற் கொள்வதல்லது எடுத்தோதாமையின் கோடற்பாற் றன்றெனல் உணர்வுடைமையன்று; மேற்கோண்மலைவு என்பதற்குப் பொருள் சாஸ்திரியார் கருதுவதன்று; மேற்கோள் மலைவென்பது “தோல்வித்தானம் இரண்டு இருபத்திரண்டாம்” (சிவ. சித்தி. சுபக். அளவை. 14) எனும் தோல்வித் தானத்துள் அடங்கும் மயங்கப் பேசுதல், வாளா யிருத்தலென்ற வகையிரண்டனுள், “தான் எடுத்துக் கொண்ட மேற்கோளைச் சாதிக்கமாட்டாமல் அதற்குக் கேடுவரப் பேசுதலும், பிறிதொரு மேற்கோளைக் கூறுதலும், மேற்கோளுக்கு மறுதலைப்படப் பேசுதலும், மேற்கோளை விட்டு விடுதலு” முதலிய பகுதிக்கண் அடங்குவதாகும். ஆகவே, என்ப என்னும் சொல்லினது பகரத்தை இசை நிறையென மேற்கொண்டு மறுத்து நீக்கி, மீட்டும் இசை நிறையெனமன், ஆர் என இரண்டிடைச் சொற்பெய்தல், குறைத்தற்குக் கொண்ட மேற்கோட்குக் கேடு வரப்பண்ணுதலின், சேனாவரையர் “இசை நிறையென்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார் பின்னும் இசைநிறையென்றல் மேற்கோள் மலைவாதலானும்.” எனச் சுருங்கிய வாய்பாட்டாற் கூறினா ராகலின், சாஸ்திரியார், இதனை யறியாது கூறுபொருள் பொருளன் றென்க. இனி, இக்குறிப்புரையுடையார், திரு.ம.நா. சோமசுந்தரம் பிள்ளையவர்கள் காட்டியவாறு சொற்றொடராக்கத்து வழுவுதல் ஒருபுடை நிற்ப, பத்தி (Paragraph) வகுக்கு முறையிலும் வழுவு கின்றார். “சூத்திரத்தில் ‘அவரல’ ‘பிற’ இவ்விரண்டும் வேண்டுமா?” என வினவிக்கொண்டு தொடங்கும் பத்தியில், அதுபற்றிய கருத் தொன்றே பொருளாக அமைத்தல் வேண்டியிருப்ப, அதன்கண் அவ்வினாவோடியைபிலாத நச்சினார்க்கினியர் உரைத்த, “இச்சூத் திரத்தால் பொருளிரண்டு சொல்லிரண்டென வரையறுத்தார்” எனும் உரையினைக்காட்டி மறுக்கின்றமையின், இதுபத்திவழு என்க. வாக்கிய பேதம் எய்துதல் பற்றி மனம் உளைந்து வருந்தும் ஒருவர், அஃதெய்தா வகையிற் பத்திகளை வகுத்தலன்றோ செய்யற்பாலர். இனி, நச்சினார்க்கினியர் உரைத்த கருத்துரையினைக்காட்டி “அவ்வாறாயின், வாக்கியபேதம் என்னும் குற்றம்வரும்; “இவ்வாறு ஒருபொருள் நுதலிற்றாக உரையாக்கால், சூத்திர மொன்றாமா றில்லையென்க’ என்று கூறியதும் இதுபற்றியே” என்று மறுக் கின்றார். பொருள்கள் உயிருள்ளன, உயிரில்லன என்றும், இயங்கு திணை, நிலைத்திணையென்றும், உள்பொருள், இல்பொரு ளென்றும் ஆராய்ச்சி வகைமைக்குத் தக வகுத்து ஆராயப்படு தலுண்மையின் இலக்கண நூலோர் உயர்திணைப் பொருள் அஃறி ணைப் பொருள் என்று வகுத்துக் கொண்டனரென்றும், அப் பொருள்வகை யிரண்டனையும் இசைக்கும் சொல் உயர்திணைச் சொல், அஃறிணைச்சொல் என்றும் முறையே வகுக்கப்பட்ட தென்றும் கூறுவார், “இச்சூத்திரத்தால், பொருளிரண்டு சொல்லி ரண்டென வரையறுத்தார்” என்றார் எனினும் சொல்லை யுணர்த்திய அதிகாரமாகிய இதன்கண் முதலிற்சொல் வரையறுத்தலே கருத்தென்பார், சேனாவரையர், “எனவே, உயர்திணைச் சொல்லும் அஃறிணைச் சொல்லுமெனச் சொல்லிரண்டென்றவாறாம்,” என்றார். இதன்கண், “எனவே ” என்றதன் தாற்பரியம், சொன்னி கழ்ச்சிக் கிடமென்ற முறையிற்பொருள் உயர்திணைப்பொருள், அஃறிணைப்பொருள் எனப்பொருள் இரண்டாயினும் என்பதாம். ஆகவே, இருவர் உரையினும் பொருள் வகை பெறப்படினும், வேண்டுவது சொல் வரையறையே யாகலின், குறிப்புரைகாரர் மறுப்பு போற்றத் தக்கதே யாம். இனி, இவர் மறுப்புரைகளில் வழங்கும் வாக்கியபேதம் என்னும் குற்றம் இலக்கண ஆராய்ச்சிக்கு வேண்டுவதே; யெனினும், வாக்கியபேதம் எய்தாவகையிற் பொருள் கூறுமிடத்து, சூத் திரத்தின் கருத்து விளங்கத் தோன்றாதாயின், வாக்கிய பேதம் எய்தாமையும் குற்றமாம்; அன்றியும், வாக்கிய பேதம் எய்தாவகையிற் பொருள் கூறுமிடத்துச் சூத்திரத்தின் சொல்லிலக்கண வமைதிகெடுமாயின், வாக்கியபேதம் எய்தினும் குற்றமின்றாம். இஃது எது போலவெனின், கூறியது கூறல் குற்றமாம்; ஆயினும், “கூறியது கூறினும் குற்றம் இன்றே, வேறொரு பொருளை விளக்குமாயின்” என்பது போல வென்க. எனவே, கூறியது கூறல் போலச் சொற்கள் நிற்றல்கண்டு பொருளைத் துணியாமலே குற்றமென்றல் எவ்வாறு குற்றமாய் முடிகிறதோ, அவ்வாறே சூத்திரத்துச் சொல்லிலக்கண வமைதி நோக்காது வாக்கியபேதம் எய்தாவகையிற் கூறுதல் குற்றமாகும். ஈண்டு வடமொழியாளர், “கருதிய இலக்கியம் சித்திக்குமாயின், வாக்கியபேதம் எய்தாமைக் கூறுக” என்றும், “கருதிய இலக்கியம் சித்திக்காதாயின், வாக்கியபேதம் எய்தினும் குற்றமின்று” என்றும் கூறுப; அம்மொழியிற் சொற்களின் கிடக்கை முறைக்காவதோர் வைப்பு நெறியின்மையின். இனி சூத்திரத்தின் பொருள் கூறுவான், “ஒரு சூத்திரத்தில் ஓர் உத்தேசியமும் ஒருவிதேயமுந்தான் இருத்தல்வேண்டும். இம் முறையை ஆசிரியர் தந்நூலுள் எங்கும் ஆண்டனர் என்பது அந் நோக்கத்துடன் ஒவ்வொரு சூத்திரத்தையும் ஆராய்வோருக்கு நன்கு புலப்படும். இச்சூத்திரத்தில் (‘உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே’ என்று தொடங்கும் இச்சூத்திரத்தில்) மக்களைச் சுட்டுவது உயர்திணை, மக்களல்லாப் பிறவற்றைச் சுட்டுவது அஃறிணை, அவ்விருதிணையின் கண்ணும் சொல் இசைக்கும் என்று மூன்று உத்தேசியமும் மூன்று விதேயமும் இருப்பதால் வாக்கியபேதம் ஆகாதோவெனின், அற்றன்று; இதனுள் உயர்திணை, அஃறிணை இவற்றின் இலக்கணங்கூறாது முன்னோர் கூறிய இலக்கணத்தையே அநுவதித்து, சொல் என்பது உயர்திணை அஃறிணையின்கண் இசைக்கும் என்பது விதிக்கப்படுகின்றதென்க,” என மேலே கடாவிடைகளால் அகலங் கூறக்கருதி, வாக்கிய பேதமின்றிக் கூறும் கருத்தினராய்,“ சொல், மக்களைச் சுட்டும் உயர்திணை, மக்களல் லாததைச் சுட்டும் அஃறிணை இவ்விரண்டு திணையின் கண்ணும் இசைக்கும் என்றவாறு” என்று கூறி முடித்தார். இப்பொருளை நோக்குமுன், “அஃறிணை இவ்விரண்டு” என்பதனை, “அஃறிணையென்ற அவ்விரண்டு” எனத் திருத்திக் கொள்க, சொற்றொடர் பொருணிலை இயைபுற நிற்றல்வேண்டு மாகலின் இச்சூத்திரத்துள் விதிக்கப்படுவது, சொல் உயர்திணை அஃறிணையென்ற இருதிணையின் கண்ணும் இசைக்குமென்ப தாகலின், சூத்திரப்பொருளும் அதனையே முடித்தலின், வாக்கிய பேதம் எய்தாமை நன்றாயிற்று; ஆயினும், மக்கட்சுட்டு உயர் திணையென்மனார் என்றியைய நின்றதொடர், மக்களைச்சுட்டும் உயர்திணை எனப்பொருடந்து நிற்றற்குரிய இயைபின்மையானும் மக்கட் சுட்டென்பது பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகையென்று சேனாவரையர் கூறியதனை உடம் பட்டுப் போந்தவர், அதற்குரிய பொருள் கூறாது பெயரெச்சமாக்கிக் கூறுதல் வழுவாமாகலானும், அன்மொழித் தொகையைப் பெயரெச்சப் பொருண்மைத்தாக்குதல் இலக்கணமறியார் செயலாகலானும், என்மனார் என்னும் சொன்முடிபினை உரை யாசிரியர்களின் உரைவிகற்பம் காட்டித் தம் கருத்தினைக் காட்டாது விடுத்தது போல, ஈண்டும் என்மனார் என்பதனை யறவே விடுத் தமையானும், இப்பொருளின்கண், வாக்கியபேதமென்னும் அக்குற்றமொழியப் பிறகுற்றம் மலியக் கிடத்தலானும் இவ்வுரை போலியுரை என்க. இந்நெறியினையுணர்ந்தன்றே, ஆசிரியர் சேனாவரையர், “வாக்கிய பேதம் எய்துமாறு, மக்களென்று கருதப்படும் பொருளை ஆசிரியர் உயர்திணை என்று சொல்லுவர்; மக்களென்று கருதப்படாத பிறபொருளை அஃறிணையென்று சொல்லுவர்; அவ்விருதிணை மேலும் சொற்கள் நிகழும் என்றவாறு,” என்று கூறி, எனினும், இதன்கட் கூறப்பெறும் இலக்கணம் ஒன்றே யென யாப்புறுப்பார், “எனவே, உயர்திணை சொல்லும் அஃறிணைச் சொல்லுமெனச் சொல் இரண்டென்றவாறாம்,” என்றார். இவர் கருதிய வாக்கியபேதம் குற்றமாய் முடிந்தமையின், அதுபற்றி மறுக்கப்பட்டனவெல்லாம் குற்றமுடைய வல்லவென்று கொள்க. இனி, இந்நூலுள் கூறப்பெறும் உரையாசிரியர் இளம்பூரணர் என்பது துணிபாயின் (உரையாசிரியர் வேறு, இளம்பூரணர் வேறு என்பாருமுளர்) அவருரையே எல்லாருரையினும் பழமையான தென்பவாகலினாலும், தெய்வச் சிலையார் உரை உரையாசிரியர் உரைக்குக் காலத்தாற் பிற்பட்டதென நன்கு தெரிதலாலும், அவ்வுரையாசிரியரால், “செய்ம்மன என்பது வழக்கரிது” எனக் கூறப்படும் சொல் தெய்வச்சிலையார்க்குத் தோன்றுதல் அரிதா கலாலும், இசைக்குமன் என்பதற்குச் சேனாவரையர் கூறியதனைக் கோடலே பொருந்துவதாம் என்றாதல்,பிறிதாதல் கூறாது குறிப் புரையாளர் வாளாது செல்கின்றார். இனி, உரை நூல்களையாராயத் தொடங்கி இவர், திரு. கா. நமச்சிவாய முதலியார் வெளியிட்டுள்ள தொல்காப்பியச் சொல்லதி கார இளம்பூரணத்து, “என்மனார் ஆசிரியர் என்று முடியற்பாற்று. முற்றுச் சொல் எச்சப்பெயர் என்பவாகலின், இது செய்யுணோக்கித் தொகுத்துக் கூறினான் என்பது” என்றிருத்தலில், முடியற்பாற்று என்புழியுள்ள முற்றுப்புள்ளி, காற்புள்ளி ( ,)யாகவும், என்பவாகலின் என்புழியுள்ள புள்ளியை முற்றுப் புள்ளியாகவும் அமையத் திருத்திக் கொள்ளல் வேண்டுமென்பார், “முற்றுச்சொல் எச்சப்பெயர் என்பவாகலின் என்பது என்மனார் ஆசிரியர் என்று முடியற்பாற்று என்பதற்கு ஏதுவாகும்” என்றார். மேற்கோளும், ஏதுவும், எடுத்துக் காட்டும் இக்கூறிய முறையே நடைபெற்றியலும் என்பது, தொல்காப்பியம் படித்தறியப்புகும் மாணவர் முன்னரே அறிந்த தொன்றாகலின், இக்குறிப்பு வேண்டற்பாற்றன்று, மேலும் மேலும், இன்னோரன்ன புள்ளி பற்றிய பிழை நிகழ்ச்சி அச்சுத் தொழிற்கண் இயல்பே என்பதற்கு இவர் வெளியிட்டுள்ள இக் குறிப்பு நூலே போதிய சான்றாகும். ஒன்று கூறுதும், “ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல்” (சொல்.2) என்ற சூத்திரக் குறிப்பில் வரற்பாற்றாகிய, “சிவணி - தெய்வச்சிலையார் சிவணியென்பது வினையெச்சமன்று; ஒடுவின் பொருண்மை தோன்ற வந்தது என்கின்றார். அவர் கொள்கையில் அச்சொல் ஒரு சொல் விழுக்காடென்று கொள்க” என்ற குறிப்பு, இச்சூத்திரக் குறிப்பில், “இசைக்குமன்” என்பதுபற்றிச் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும் கூறியவற்றைக் குறிக்கும் குறிப்பின்கீழ், அச்சாகியிருத்தல் பெரும் பிழையாகும். இனி, “முற்றுச்சொல் எச்சப்பெயர் என்பவாகலின்,” என்ற தொடர்க்கண்ணுள்ள எச்சப்பெயர் என்பதற்கு எஞ்சிய பெயரை யுடைய சொல்லென்பது பொருள். இங்கு என்மனார் என்னுஞ் சொல் எச்சப்பெயர் என்பது அவிநயனார் மதமென்பது “பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே” (சொல். 425) என்ற சூத்திரத்தினடியிலுள்ள தெய்வச் சிலையாருரையானும், பெயர் வினையும்மை (நன். 359) என்ற சூத்திரத்தினடியிலுள்ள மயிலை நாதருரையானும் நன்கு விளங்கும்” என்றார். என்ற இச்சாஸ்திரியார், “எச்சப்பெயர் வினையெய்து மீற்றினும்” என்னும் நன்னூற் சூத்திரம் (356) நினைவிருப்பின், “எச்சமாய் வரும் பெயர்” என்று கூறிய மயிலை நாதருரையாதல், “எச்சமாகிய பெயர்” என்ற சங்கர நமச்சிவாயருரை யாதல் குறித்திருப்பர்; துணையின்மையால், தம் அறிவிற்கெட்டிய இவ் “வெஞ்சிய பெயரையுடைய சொல்,” என்றார். முடிக்கப் படுவதும், முடிப்பதுமாகிய எல்லாப் பெயர்ச்சொற்களும் இந்நிலையில் எச்சப்பெயராமென்பது இந்நன்னூற் சூத்திரத்தாலே விளங்குதலின், அதனையறியாது, அதனைப் பெயரெச்சங் கொண்டு முடியும் எச்சப் பெயரினீக்குதற்கு, “முற்றுச் சொல் எச்சப் பெயர்” என விசேடித்திருப்பதனையுமறியாது, ஆசிரியர் நக்கீரனார் முதலிய பண்டைய உரையாசிரியர்கள், “முற்றுச் சொல் எச்சப் பெயர் கொண்டு முடியுமாகலினென்பது,” (இறை. அ. பொ.1) என வழங்குதலு நோக்காது, என்மனார் என்பதனை எச்சப் பெயரெனத் திரியக்கொண்டு, அதனோடு நிற்றலின்றி, ஆசிரியர் அவிநயனார், தெய்வச்சிலையார் என்ற இருபேரிலக்கண அறிஞர் மேலும் இக் குற்றத்தை யேற்றுகின்றார். இக்குறிப்புரையெழுதும் சாஸ்திரியா ரொழிய, சிற்றிலக்கணம் கற்ற தமிழ்ச் சிறுவருள்ளும் ஒருவரும் கூறாராகலின், அவர் தம் உரைகளை யாம் ஈண்டுக் காட்டுதலுறின் வாளாது இடம் நிரம்புதலும், கட்டுரை விரிதலுமே பயனாம். “சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி” என்பது போல, செந்தமிழில் இவர் வெளியிட்ட இக் குறிப்பை, அதனோடு நிற்கவிடாது, “ ஒரு புத்தகத்தில் எழுதப்படின், அப்புத்தகம் தொல்காப்பியம் படிக்கும் மாணவர்க்குப் பயன்படும்” (முகவுரை) என்று இவர்க்கு ஓதிக் கெடுத்தார் சிலர். இனி, “சுட்டுதற்குக் காரணமாகிய தன்மையென்னும் ஒருவன் என்பது சுட்டுதற்குக் காரணமாகிய தன்மையனெனும் ஒருவன் என்றிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது” என்பது வேறொரு குறிப்பு. இதன்கண், சுட்டென்னும் பெயர், ஆகுபெயராய்த் தன்மை குறித்துணரக் கிடக்கும் சொற்றொடரை மாற்றி மக்கட்சுட்டே யென்பது மக்களென்று வரைந்து சுட்டுதற்குக் காரணமாகிய தன்மையனெனும் பொருள் தருமாறு இயைத்தற்குரியதோர் இயைபேயின்மையின், “சுட்டுதற்குக் காரணமாகிய தன்மை என்னும் ஒருவன்” என்பதே திருந்திய பாடமென்க. எனவே, காரணமின்றியே திருத்தங் கொள்ளுதலும் தாம் வேண்டியவாறு பொருள்கொள்ளுதலும் பிறவும் செய்தொழுகுதல் ஈண்டேபெறப் படுதலின், அவ்வொழுக்கம் நூலாராய்ச்சி யுடையார் மாட்டெய் தலாகாத் தீயொழுக்கம் என்பது சாஸ்திரியார் மனத்துட் கோடற் பாற்று. இக்குறிப்பிற்கு முன்னும் பின்னும் நின்ற குறிப்புக்களில் தம் உணர்வுக் கெட்டிய ஏது கூறினவர், ஈண்டுக் கூறாமை குற்றம் என்க. இனி, “இசைக்கும் என்பது செய்யுமென்னும் பெயரெச்சம்” எனவரும் இளம்பூரண உரைப்பகுதியை மறுப்பார், “மேலும் அதனிலுள்ள இசைக்குமென்பது செய்யுமென்னும் பெயரெச்சம் என்ற வாக்கியம் பொருந்த வில்லை” என்று கொண்டமேற்கோளை வலியுறுத்துவான் காட்டிய ஏதுக்கள் இரண்டினுள்ளும் முதலாவ தனைக் கூறுமிடத்து ஐயுற்றுக் கூறுவார் வாய்பாடு தோன்ற, “சூத்திரத்துக்கும் பொருள் சொல்லுங்கால் வினைமுற்றாகவே சொன்னதாகத் தோன்றுகிறது” என்கின்றார். இஃது “ஏதுவுடைமை நிச்சயிக்கப்படாமை” யாகிய குற்றம் என்க. இனிச் சேனாவரையத்து, “என்மனார்” என்னும் சொன்முடிபு பற்றி வரும் மறுப்புரைப் பத்தியின் கண்ணுள்ள, “என்மனாரென்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்வாராது, நூலுள்ளும் சான்றோர் செய்யுளுள் ளும் பயின்று வருதலானும்” என வரும் தொடரின் “நூலுள்ளும்” என்புழி “இந்நூலுள்ளும் என்ற பாடங்காட்டி, அதுவே பொருந்து” மென்கின்றார். இருவகைப்பட்ட பாடங்களுள் ஒன்றனைத் துணிந்து கூறலுறுவார், பொருந்துமாற்றிற்கு ஏதுவாதல், எடுத்துக் காட்டாதல், பொருளாதல் கூறுதலே இயல்பு. இவற்றுள் ஒன்றும் கூறாது, வாளாது, “பொருந்து” மென்றொழிதல் பொருந்தாது. நுல் என்ற விடத்துச் சான்றோர் செய்யுளென்றாற் போலச் சான்றோர் கூறிய எல்லா இலக்கணங்களும், “இந் நூல்” என்ற விடத்துத் தொல்காப்பியம் ஒன்றுமே கொள்ளப்படுமாகலினாலும், சொல் நிலவுமிடம் இவ்வொரு நூலே யன்றி எல்லா நூலுமாகலினாலும், “நூலுள்ளும்” என்ற பாடமே கொள்க.  23. மதுரைக்காஞ்சியாராய்ச்சி 1. நூலின் கருப்பொருள் முன்னுரை: இற்றைக்குச் சற்றேறக்குறைய இரண்டாயிரத்து இருநூறு யாண்டுகட்கு முன்னர் மதுரையிலிருந்து அரசு புரிந்த பாண்டியன் தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் மன்ன னுக்கு, அக்காலத்து விளங்கிய நல்லிசைப்புலவர் பலருட் சிறந்தாராய மாங்குடி மருதனார் என்பார் பாடித்தந்ததொருபாட்டு இது. இது நவிறொறும் நயம் பயக்கும் பெருநூலாய பத்துப்பாட்டினுள் ஒன்று. இதற்கு மதுரை காஞ்சி யென்பதுபெயர். ஏனையவற்றை ஆராய்ச்சியின் முடிவில் கூறுகின்றேன். மதுரைக்காஞ்சி யென்பதற்கு மதுரையினிடத்து ஒரு அரச னுக்குக் கூறிய காஞ்சி யென்பது பொருளாம். காஞ்சியாவது "வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமை சான்றோர் அடையும் குறிப்பினதாம்." இதனை ஆசிரியர் தொல் காப்பியனார், "காஞ்சி தானே பெருந்திணைப் புறனே பாங்கருஞ் சிறப்பின் பன்னெறி யானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே" என்றருளியுள்ளார். இதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் தனக்குத் துணையில்லாத வீடுபேறு நிமித்தமாக, அறம் பொருள் இன்பமென்னும் பொருட் பகுதியாலும், அவற்றின் உட்பகுதிகளான உயிர், யாக்கை, செல்வம், இளமை முதலியவற்றாலும் நிலைபேறில்லாத உலகியற் வாழ்க்கையைப் பொருந்தியதோர் நன்னெறியினை யுடையது காஞ்சி என்பதாம் என்பர். எனவே, அறம் பொருள் இன்பமென்னும் பொருட்பகுதியும், அவற்றின் உட்பகுதியாய உயிர், யாக்கை, செல்வம், இளமை முதலியனவும் நிலையாமையும், அந்நிலையாதனவற்றை கொண்டே நிலையாய பொருளாய வீடுபேற்றினைப் பெறும். வகைக்கும் இக் காஞ்சி யென்பது தன்னகத்தே கொண்டு விளங்குமென்பது பெறப் பட்டது. பாட்டின் கருப்பொருள்: பல்லாண்டுகளாக உலகின் உயர்த்துக் கூறும் வகை, இவ் வுலகினை யாண்ட உயர்ந்தோனாகத் தோன்றிய குடியிற் பிறந்தவனே! மலைகளையும் காடுகளையும் தமக்கு அரணாகக்கொண்ட மறநெறி அரசர் பலரையழிப்ப, அதனை தன் வலிகண்டு அஞ்சித், தம் நாடுகளை விட்டகன்றனராக; நாட்டு நிலங்களையெல்லாம் கொண்ட பேருதவியும், பொலந்தார் விளங்கும் மார்பும் உடைய வடிம்பலம் நின்ற பாண்டியன் வழித்தோன்றலே! தென்னவனாய இராவணனைத் தமிழ் நாட்டினின்ரவாறு பெயர்த்தவர் கிட்டுதற் கரிய வலிமிக்க தொன் முதுகடவுளர். அகத்தியராவர்; அவர்க்குப் பின்னர், சான்றோர் தொகையுள் ஒருவராய் வைத்தெண்ணுதற்கு மேவிய சால்புற்ற அடிப்பற்றோய்! சீர்சான்ற உயர்ந்த நெல்லின் பெயரைப் பெற்ற பாலியூர் என்னும் சீரிய ஊரை வென்றுகொண்ட வெற்றிமிக்கோய்! நலம்சான்ற பேரணிகலங்களை யெல்லோர்க்கும் கொடுக்கும் வள்ளன்மை மிக்க பலவாகிய குட்டநாட்டினர் வெல்கோவே. முதுவெள்ளிலை யென்னும் ஊரிலுள்ளார் அனைவரும் தொன்று மொழிந்து தொழில் கேட்கும் வகை, தலையாலங்கான மென்னுமிடத்துத் தன்னை யெதிர்த்த சேர சோழராய பெருநில மன்னரிருவர், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்பாராய குறுநில மன்னரைவர் ஆகிய எழுவரையும், லென்னுமாறு கடிது பரந்து சென்று, நாடு முற்றவும் எரிவாய்க்குப் படும்படி வென்று, அவர் முரசமுங் கைக்கொண்டு, வெற்றிக் குறியாகக் களவேள்வியும் வேட்ட கொல்லும் வலிமிக்க புகழ் வேந்தே! கொற்கையூர் வாழ்நர் விரும்பும் பொருந! தென்புரிசைக்கண் வாழும் பரதவர்க்குப் போர்த்தொழில் செயல்வல்லவனே! பகைவர் நாட்டைத் தன்னாடாக்கும் பொருட்டு, செய்யப்பட்ட அவரது நாடுகளுட் கோடற்பான்மையவான பகுதிகளிற் பல யாண்டுகள் தங்கி, அவற்றைப் பண்டையின் தகுவனவற்றைப் புரிந்து, வெல்லும் போரினும் சிறந்து நிற்கும் குரிசில்! கோவே! வடவேங்கடம், தென்குமரி, குணகடல், குடகடல் இவ் வெல்லையிடைப்பட்ட நிலத்துள்ளோர் தம்முடன் திறம் பல கூறித் தம் மேவல் கேட்குமாறு செய்து, வெற்றியோடு செறிந்து நடக்கும் கொற்றவர்க்கெல்லாம் நீ, கோனாகும் தன்மை பூண்டுள்ளாய். அன்றியும் நீ, ஒரு பொய்யால் உயர்நிலை யுலகுமுற்றும் ஆண்டுள் ளோர் நுகரும் அமிழ்தொடு பெற வருங்காலம் அமையினும், அப் பொய்யினை அறவே கடிந்து மெய்ம்மை சேர்ந்த நட்புச் செய் தலையே யுடையாய். முழங்குங்கடல் எல்லையாக, இடையே பரந்து விளங்கும் உலகத்துள்ளாரும், உம்பர்நாட்டுத் தேவரும் கூடிப் பகைவராய்த் திரண்டு வரினும், அப் பகைவர்க்கு அஞ்சிப் பணிந்தொழுகும் பான்மையின் மேற்கொள்ளாய், தென்புல மெனப்படும் தென்னாட்டு மலைகளனைத்தும் நிறையும்வகை, வாணன் என்னும் சூரனொருவன் வைத்த விழுநிதி பெறல் நேரினும், நீ, பிறர்கூறும் பழி நமக்கு வருவதாக என்னும் கருத்துடையை யாகாய். சீரிய பொருள்களைப் பிறர்க்குக் கொடுத்தலையே யுள்ளும் நினது நெஞ்சோடு புகழும் விரும்புவாயாக. அன்னாய்! இற்றைப்போது நின்வெற்றியாற் பெறப்படு வதும், பின்னர் நின்வழித் தோன்றுவார்க்கு உளதாவது மாய கொற்றம், நின் குலத்திற்குரியதும் மேற்றிசைக் கட்டோன்றுவது மாகி, எல்லாரானும் தொழப்படும் பழமைசான்ற பிறைத்திங்கள் நாடோறும் சிறக்குமாறு போல, அவர் தம் வழிவழியாக மிகுவதாக. நின் பகைவரது ஆக்கம், கீழ்த்திசைக் கட்டோன்றும் நிறையிருளைத் தரும் மதி நாளும் தேய்ந்தொழிதல் போல் நாடோறும் கெடுவ தாக. நின்னிடத்துண்டாகிய மாயையும் இனிக் கெட்டொழிவதாக. சேட் புலமெங்கும் சென்று விளங்கும் நின் சீரியபுகழ் ஒருகாலும் கெடாது நிலைபெறுவதாகும். இனி, நீ ஆளும் இந் நன்னாடு புலவர் பாடும் புகழுடையது இதன் நடுவண், காண்டற்கினிய ஓவியத்தைக் கண்டாற்போலும் காட்சியமைந்து விளங்குவது மதுரை யென்னும் நல்ல ஊர் இந்நகர்க் கண், நாளங்காடி, அல்லங்காடியெனும் இரு பெரும் நியமங்கள் உள. அவற்றுள் நாளங்காடியின் நனந்தலை யெழும் ஓசை,மேகங்கள் படிந்து முகத்தலாற் குறைதலும் யாறுகண் நிறைந்து பாய்தலால் மிகுதலுமின்றிக்கரைபொருது ஒரு தன்மையதாய் ஒலிக்கும் முந்நீரையொப்ப, பலரும் போந்து பலகாலும் கொள்ளுதலாற் குறைதலும், பலரும் மேன்மேலுங் கொண்டு வர கொண்டுவர மிகுதலுமின்றி ஒரு தன்மைத்தாய், கணம் எனப்படுவதும், ஏழு நாள்காறும் நடத்தப்படுவதுமாய விழாக் காலத்து வேறோர் இடத்தில்லாத வெற்றி நெருங்கும் திருநாளும், தீவினை கழுவும் தீவிய நீராட்டும் (தீர்த்தமாடல்) தன்கட் கொண்டு ஏழா நாளந்தியில், கூடுமந் நாட்டுமக்கள் செய்யும் போரார வாரத்தை ஒத்து இசைக்கும். அல்லங்காடியில் மிகுந்து எழுதரும் ஓசை, அகன்ற இவ்வுலகத்துப் பிறநாட்டு வணிகர் ஈண்டுச் செய்த பேரணிகலங்களைக் கொண்டுபோதல் காரணமாகக் காற்றால் உந்தப்பட்டுவரும் தம் பாய்மரக்கலம் கொணர்ந்த பலவேறுவகைப் பட்ட பண்டங்களைப் பட்டினங்களி லிறக்குங்கால் எழுவதும் இறக்குவா ரிடுவதுமான கல்லென்னும் ஓசையையொப்ப நிறைய இரைமேய்ந்து தம் பார்ப்புக்களையுள்ளிக் கூடுநோக்கி மாலைக் காலத்து மீளும் வேறுபல் பறவையின் பேரிசையை ஒத்து இமிழும். இனி, அவ்வூர்க்கண், எழுந்த ஞாயிறு, தன் ஒள்ளிய சுடர்த் திரளின் சினமாய வெப்பத்தைப் பகலெல்லாம் பரப்பிப் பின்னர்த் தணிந்து, அப்பொழுதினைச் சேரக்கொண்டு குடமுதற்குன்றஞ் (அத்தகிரி) சேர்தலும், கல்லென்னும் மாலைக்காலம், நயந்த காதலர்க்கு எய்தும் மம்மர் நோய்கொண்டு புகுந்து நீங்கும். அக்காலை, முதல் யாமமுங் கழியும், பின்னர் கங்குல் யாமம் எனப்படும் இரண்டாம் யாமமும், கடவுள் வழங்கும் கையறு யாமமாய மூன்றாம் யாமமும் கழிய, இரவுக்காலத் திறுதிப் பகுதியாய விடியல் எய்தும். அவ்விடியலில், மறையோதல் பயின்ற அந்தணர், அம்மறை யினுட் கூறப்பெறும் வணக்கப்பகுதி, வாழ்த்துப்பகுதிகளை ஆய்ந்து ஓதுவர்; யாழ்வல்லோர், தாளவறுதியை இனிது நுனித்து, நரம்பையும் நன்கு தெறித்து மருதப்பண்ணிசைப்பர்; காழோர் (பரிக்காரர்கள்) கடுங்களிறுகட்குக் கவள மூட்டுவர்; நெடுந்தேர்ப் புரவிகள் பந்தி பந்தியாய் நின்று, புல்லுணாத் தெவிட்டும்; பல்வகைப் பண்டங் களும் விற்கும் கடைகளில், விற்போர் மெழுகுதலைச் செய்வர்; கள் விற்போர், தம் புளித்த கள்ளின் விலையை வாங்குவோர்க்கு உரைப்பர்; கற்புடைய மகளிர் இருள் மாய்ந்து கதிர்விரியும் விடியல் எய்துதலால், அதுபோது செயற் பாலானவற்றைச் செய்தற்கு விரும்பி, தம் கண்களை வெறியோடப் பண்ணி, விளங்கும் மின்னொழுங்கை யொக்கும் பொற்சிலம்பு, தம் செஞ்சீறடியிற் கிடந்து புலம்பப் புறம் போதுவர்; அவ்வமயம், திண் சுவர்படைத்த, அவருறையும் நல்லில்லங்களின் காழொன்று கதவங்கள், திறக்கப் படுகையில், பேரொலிசெய்யும்; கள்ளுண்டு களிப்போர், வெறியால், தட்டமழலைச் சொற்களை (தடைபட்டு வரும் சொற்கள்) வழங்க, கள்ளுண்ணும் பழஞ்செருக்காளர் தம் முழக்கத்தில் அச்சொற்கள் முன்னின்றெழும்; நின்றேத்தும் இயல்பினராய சூதர்கள் வாழ்த்த, இருந்தேத்தும் மாகதர் தம் மன்னன் புகழை நுவலுவர்; வைதாளிகள் தத்தம் துறைக்கு உரியனவற்றை முறையே இனிதாக இசைப்பர்; நாழிகை கூறுவோர் நாழிகை அளந்து சொல்லுவர்; பள்ளியெழுச்சி முரசம் ஒருபுடையதிர, ஏறுகள் தம்முள் மாறுபட்டு ஒருபால் முழங்கும் பொறிமயிர்க்கோழிகள் ஒருசார் வைகறையியம்ப, ஒருசார் வன் டாழ்ங்குருகுகளும், காமுற்ற அன்னச் சேவலும் தத்தமக்குரிய பெடைகளை யழைக்கும்; அணிமயிலும் தம் அம்மென் பெடையினை அழைப்பான் அகவும்; பிடியொடு கூடிய பெருங்களிறுகள் முழக்கஞ்செய்ய, கரடி முதலிய வலிமிக்க விலங்குகள் கூட்டிலுறையும் வயப்புலியோடு கலந்து முழங்கும். நீலவானத்தின் கண் மிளரும் மின்னின் நுடக்கமும் மாணிழையு முடைய மாவுண்டு களிப்பு மீதூர்ந்த மகளிர் தம் கணவரொடு புலந்தனராய் அறுத்தெறிந்த பருத்தவடமாய ஆரத்திற் சொரிந்த முத்துகளோடு, பொன்னுருக்கும் நெருப்புச் சிந்திய நிலம் போல மாணிக்கம், மரகதம், பொன், மணி முதலாயினவும் பச்சை பாக்கும், புதுமணல் பரந்த முற்றத்தில் விழுந்து கிடத்தலாகிய அவற்றையும் பிற வாடிய பூக்களையும் வண்டுந்தேனும் மொய்த்து ஆர்க்கும். அன்றியும், இவ்வூர், வளங்கெழுமிய அரும்பண்டங்கள் பலவற்றோடு, பிறர்தோள் குற்றமாம் வகைப் பெருத்த பெருந்தோள் மறவர் பலரைக் கெடுப்ப அவர் புறந்தந்தோடுங்கால் இடை புலமாய போர்க்களத்து வினையோரை யிழந்துநிற்கும் கோட்டியானை களும், பகைப்புலத்துக் கவரப்பட்ட பாய்மா புரவிகளும், காய் சினங்கனலும் தறுகண்மை மிக்க கூளி (வேட்டுவர்) பகைவரூரைச் சுடவெழும் ஒளியில் நிரைந் துறையும் வீரரைமாளவெட்டி ஏந்தி யவேலே கோலாகக் கொண்டு ஓட்டிக்கொணர்ந்த ஆநிரையும், அகநாடு சூழநிற்கும் முழுமுதலரணங்கட் கமைத்துள்ள அணங் குடைய கதவுகளும், நாடோறும் தமக்குச் செல்வமிகுமாறு கையாற் றொழுது வாயால் வாழ்த்திப் பகற்காலத்தே பிறர் திறையாகக் கொண்டுவர வந்த சீரியகலங்களும், அத்தன்மைய பிறவும் கங்கைப் பேரியாறு ஆயிரமுகமாகக் கடலின்கட் பரந்ததுபோலப் பரந்து நிற்றலால் ஒரு வகையினும் அளந்து முடிபுகாண்டல் இயலாத தகைமை யுடையதாய், தன் பொங்கழகினைக் காண்பான் பொன்ன கரும் வறிதாகப் புத்தேளிர் வந்தெய்தும் புகழ்படைத்ததாய், நுண்ணிய அறல் பரந்த துறைதோறும் பல்வகைப் பூக்கள் செறிந்த தண்டலைகள் சூழப் பெற்றதாய் நெடுங்காலம், அடிப்பட்டிருந்த பெரும்பாணர் இருக்கையும், மண்ணுள்ள வளவு மாழ்ந்த நீலமணி போலும் நீர் நிரம்பிய கிடங்கும், விண்ணுற வோங்கிநிற்கும் பல்வகைப் படைகள் அமைக்கப்பெற்ற புரிசையும், முகில்தவழும் மலைபோல் நிவந்த மாடங்களோடு தெய்வமுறையும் நெடுநிலை களும், நெய்பலகாலு மிடுதலாற் கருகின திண்ணிய கதவுகொண்டு வையையாறு இடைவிடாது ஓடுமாறுபோல மாவும் மாந்தரும் இடையறாத வாயிலு முடையது; நான்மாடத்தால் மலிந்த புகழ் கூடும் பெரும்பதியுமாகும். இந்நகர்க்கண், 'சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவில சுடர் பொழிந் தேறிய விளங்குகதிர் ஞாயிற்(று) இலங்குகதிர் இளவெயில் தோன்றி யன்ன தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை நிலம்விளக் குறுப்ப, மேதகப் பொலிந்து, மயிலோ ரன்ன சாயல், மாவின் தளிரே ரன்ன மேனி, தளிர்ப்புறத் (து) ஈர்க்கின் அரும்பிய திதலையர், கூரெயிற்(று) ஒண்குழை புணரிய வண்டாழ் காதில் கடவுட் கயத்(து) அமன்ற சுடரிதழ்த் தாமரைத் தாது படு பெரும் போது புரையும் வாண்முகத்(து) ஆய்தொடி மகளிர்' பொற்கலங்களில் மணநாறும் இனிய பானத்தை யெடுத்து நினக்குத்தருவர். நீ அதனையுண்டு, துயில்கொண்டு, பின்னர்ச் செல்வத்தை நினைந்து இன்புறுகின்ற பற்றுள்ளம் உறக்கத்தை யுணர்த்துதலால், அது நினைத்துப் பின்னர் இனிதெழுந்து அரசர்க் குரிய கடன்களைக் கழித்துக் கடவுள் வழிபாடு செய்தல்வேண்டும். அவ் வழிபாட்டை, வல்லோனொருவனாற் செய்யப்பட்டு, எழுதிக் கை செய்யவும்பட்ட ஒரு பாவையினிடத்து தெய்வத்தன்மை நிகழ்ந்ததுபோலும் வடிவுடையனாய் நீ விளங்குவாயாக. பின்னர், நறுமணங்கமழும் சந்தனம் பூசிக் கதிர்விடும் முத்து வடம் தவழ்ந்து மிளிரும் நின் அகன்றமார்பில், தேனினமும் பிறமூசுவனவும் மொய்ப்ப, கழுத்தினின்றுந் தாழ்ந்த பூக்கள் பல விரவிய மாலையும் உடன் கிடந்து தவழ, வலிகெழுமிய நின் தடக்கையிற் பொற்றொடியும், பொலஞ் செயப்பொலிந்த மணிகள் அழுத்திய மோதிரங்களும் சுடர்விட்டு விளங்க, சோறமைவுற்ற நீருடைக் கலிங்கம் ஒன்று (கஞ்சியிட்டுப் பாலென வெளுக்கச் செய் உடை), மேலணியப் பெறும் கலங்களாற் பொலிவுமிகும் வகை யொழுங்குபெற வுடுத்து, மிக்குவருகின்றவோர் யாற்று நீர்ப் பெருக்கைக் கல்லணை யொன்று நின்று தாங்கினாலொப்பத் தம் படையைக் கெடுத்து மேல்வருகின்ற பகைவர் படைப் பெருக் கினை நடுநின்று தகைந்து, அவரையும் அறவே கெடுத்த போரே விரும்பும் படைத் தலைவர்கள் வாள்வெற்றி பொருந்திய நின்தாள் வெற்றியை வாழ்த்த, ஒன்றா வுலகத்தில் ஓங்கு புகழே ஒன்றும் வண்ணம் நிறுவிய மாறன் *முதலாகப் பகைவன் வென்று கொல்லும் தப்பாத வாளேந்திய இளங்கோசர் ஈறாகப் பலரும் சூழ்வர, யாவரும் புகழும் பேரணிகலம் பூண்ட ஐம்பெரும் கேளிருமுட்பட, மறமிக்க குறுநில மன்னர் பலரும் நெறி மரபு வழாத நின் வாய்மொழி கேட்டு அதற்குத் தகநிற்ப, பொற்புடை புகழ் விளங்கும் அறங் கூறவையத் தார் நெருங்கி, நின் அறவியல்பைப் புகழ்ந்தேத்தி, வாழ்த்த, "மறவர், செல்வர், குரிசிலர், ஊக்கலர் முதலியோரையும், பெருஞ் செய் யாடவரையும் தம்மின்; ஏனோரும் தம்மின்" எனச் சிலரை வரைந்து கூறியும், வாயிலின் கண் தகையாமல் இவர்போல்வாரும் படையாளர் முதலியோரும் 'வருக' எனப் பொதுப்படக் கூறியும், காட்சிக்கெளியனாய் நாளோலக்கமிருக்கும் பேரகத்தின்கண் வீற்றிருத்தல் வேண்டும். அதுகாலை, 'புலவர், பாணர், பாட்டியர், வயிரியர் முதலா யினார் வருக' என அன்புகனிய வழைத்து, அவர் தம் சுற்றத்தாராய், அவர்களாற் போற்றப்படுபவராய் வரும் பேரிரவலர் அனை வோர்க்கும் நீர் யாரென்றும் அவர்களைக் கேளாது அவர் காட்டின அளவைக்கொண்டு, கொடிஞ்சி நெடுந்தேர்கள் யானை யொடுங் கொடுத்து, வேற்றுப் புலத்திலிருந்து கொணரப்பட்ட அரும் பொருள்களை யாவர்க்குமளித்து, அதனூடே, நாட்டில் வாழும் குடிமக்களைப் பெருக்கிப் புரத்தல் வேண்டுமாதலின், நற் பொருணூாற் களைக் கசடறக்கற்றுத் தெளிவாயாக! கற்றவறிவினால், நின்புகழே எவ்வுலகத்தும் நின்று நிலவப்பண்ணுவாயாக! மண்டிலமாக்கள், தண்டத்தலைவர் முதலாய சுற்றத்தார்க்கு நடுவே, முந்நீர் நாப்பண் தோன்றும் ஞாயிறு போலவும், பலகலைகளைக் கற்றோரிடைப் பன்மீன் நடுவண் விளங்கும் திங்கள் போலவும், நீ பொலிவுகூர் சுற்றத்தோடு பொலிந்து இனிது வாழ்வாயாக! இங்ஙனம், தம்புகழ் எங்ஙணும் பரவும் வகை மலர்தலை யுலகினைத் தம்மேவலின் நடத்தி, மக்கட்குரிய மனனுணர்வின்மை பால் பிறப்பற முயலாது பயனின்றி மாண்டோர், கரையைப் பொருது இரங்கிக் கனையும் இருமுந்நீர்த்திரையிடும் நுண்மண லினும் பலராவர். அப்பயனின்மையாலே நீயும் அவ்வாறு கழியலாகாது என்று இவ்வாழ்விற் பெரிதாயிருப்பதோர் பொருளை யான் கூறுவேன்; ஆயினும், அண்ணலே! அஃது என்னால் எளிதிற் காட்டலரிது. அதனை, எல்லாவுலகையும் தன் செவ்வாயிற்றந்து காட்டிய மாயோன்போன்ற, நல்ல யாகங்கட்குக் கூறிய துறை யனைத்தும் முன்னரே முடித்துவிட்ட தொல்லாணை நல்லாசிரிய ராம் தத்துவவுணர்வான் மெய்ப்பொருளுணர்ந்து வீட்டின்ப நுகர்ச்சிகாணும் ஆசிரியர் பலர் பின்பு கூடின கந்தழியாய் கொள்ளை யை அவரிடத்தே பெற்று நுகர்ந்த புகழ்சால் சிறப்பினன், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி யொப்ப நீயும் நல்லாசிரி யரிடத்தே கேட்பாயாக! கேட்டு, நீ, அவ்வாசிரியரிடத்துப் பெறும் கந்தழியின் வியப்பும், பின்பு நீ பெற்றமையும் அமைதியும், புகரறு சிறப்பினவாய் எய்தும் நின் தலைமைகள் யாவும் சான்றோர் பலரால் தம் மவையிற் சொல்லப்பட்டு விளங்கும் பெரும! நல்லூழியுள் "இத்துணைக்காலம் இருத்தி" எனப் பால்வரை தெய்வத்தால் வரையாக அறுதியிடப்பெறும் நாள் முழுவதும் நீ இனிது பேரின்பம் நுகர்ந்திருப்பாயாக! அதனை நுகராது ஐம்பொறிகட்கும் முன்னிற்கப் படுவனவாய இந்நுகர் பொருள்களோடு நினக்கு என்னவுற வுண்டு! நின்னிடத்துண்டாய மாயை இனிக் கெடுவதாக!! அண்ணலே! நீ நெடிது வாழ்க!!! 2. மதுரைச் சிறப்பு மதுரைக்காஞ்சி யென்னும் இச்சீரிய பாட்டின் பெரும் பான்மையான பகுதிகள் மதுரையின் சிறப்பையும், அதனைச் சூழவுள்ள நானிலங்களின் வளனையும், அதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னரது ஆட்சி நலனையும் உணர்த்துகின்றன. ஆகலின் அவற்றைமட்டில் இவ்வாராய்ச்சியின் இப்பகுதியில் வெளியிடுகின்றேன். 1.மதுரையாண்ட மன்னரது ஆட்சி நலன்: இவ்வுலகம் மிக்க பரப்பும் உயரியமுடிகள் கொண்ட மலைகளும் தன்பாற் கொண்டது. மலை முடிகளில் தேனிறால் தூங்கும் மாண்பும், யாறுகள் தோன்றிப் படரும் சிறப்பும், கானஞ்செறிந்து நிற்கும் கவினும் காண்பார் கட்புலனைக் கவரும் காட்சியினவாம். இக்காட்சியமைந்த உலகினை, இப்பாட்டுடைத்தலைவனான பாண்டியன் நெடுஞ்செழியன் முன்னோர்கள் ஆட்சிபுரிந்து புரந்து வருநாள், காற்று வலமாக விசும்பின்கண் சுழன்று திரிய, அதனால் மழை வேண்டுங்காலதுத் தப்பாது பெய்து உதவ, நாற்றிசையும் விளை நலனும் பிறவும் மிகைபடப்பெற்றன; தொடுப்பின், விதைத்த ஒன்று ஆயிரமாக விளையும் நிலவளஞ்சிறந்தது; விளைநிலனும் மரங்களும் தம்பாலாம் பயனைப் பல்லுயிர்க்குங் கொடுத்தலை மேற்கொண்டு, தழைத்தன; அங்கண் விசும்பில், ஆங்காங் குமிளிரும் நாண்மீன் தத்தம் நிலைதிரியாது கொட்புற் றொழுகின; செஞ்ஞாயிறு பகற்போது செய்தும், வெண்டிங்கள் இரவு செய்தும், மைதீர்ந்து கிளர்ந்து விளங்கின; மக்கட்கு நோய்தருவனவாய பசியும் பிணியும் இலவாகி நீங்க, நோக்கு விளங்கும் வசியும் வளனும் பெருகின; எண்டிசையினும் இருந்து உலகின்பொறை யேற்கும் வயக்களிறுகள் அறவும் பொலிவுபெற்று, வளர்ச்சியும் வலியும் ஒருங்குவாய்ப்ப, உலகாள் மன்னரது செங்கோன்மை யான், அப்பொறையின் வருத்தம் பேணாது மேம்பாடுபெற்றன. இந்நலங்களைத்தரும் ஆட்சிக்குக் கண்ணென வகுத்த மாந்தர் வாய்மொழியால் புகழ் நிறைந்தவர், பொய்யறியாப் பொலிவும் பெற்றவர்; இவர் வாழுந்தெருக்கள் பலரோடிருந்து பலநாளுண்ணினும் தண்டாத மிகுவளனும் இருமருங்கும் மழையென மருளும் மாடம்பிறங்குதலால், காண்பவர் கண்டு தண்டாக் காட்சியும் பெற்றனவாம். இவர்கள் அமைச்சுத் தொழில்பூண்டு ஆட்சித் துறையில் உதவிசெய்ய, பல நல்லூழிகள் தமக்கு அடிப்பட்டு நடக்க, இவ்வாட்சிநலனைப் பல வெள்ளம் எனும் எண்ணியற் பெயரைக் கொண்ட காலமெல்லாம் மக்கள் மீக்கூற, இப்பாட்டுடைத் தலைவனது முன்னோர் உலகினை ஓங்குதிரை யொலிக்கும் முந்நீரே வரம்பாக நிற்க ஆண்டனர் என்பது. 2. வடிம்பலம்ப நின்ற பாண்டியன்: இவன் "நிலந்தந்த பேருதவிப் பொலந்தார்மார்பின் நெடியோன்" எனச் சிறப்பிக்கப் பெறுகின்றான். பெறவே, இவன், நாட்டிலுள்ள ஏனையரசர் பலரும் தன் துன்னருந் துப்பினைகண்டு அஞ்சித் தம் நாடனைத்தும் விட்டுஅகன்றாராக, *அவற்றைக் கொண்டு தன் கீழ்வாழ்வார்க்குக் கொடுக்கும் வள்ளன்மையும், போர்வன்மையும் தலைசிறந்தவன் என்பது பெறலாகும். எனினும் இவன், விழுமிய வழியும், விளங்கிய ஓடையும், கடுஞ்சினமும், கடாம் கமழுதலால் அளறுபட்ட சென்னியும், வரைமருளும் தோற்றமுமுடைய வினைநவின்ற போர் யானைகள் பல சினஞ்சிறந்து, போர்க்களத்து வீரரைக்கொன்று திரிந்துழக்கவும், குதிரைத்திரள் பகைப்புலநோக்கிப் பாய்தர, ஆண்டெழும் செந்துகள் அகல்வானத்து வெயிலை மறைப்பவும், வரவும் பரிகள் பல பிணைத்த திண்ணிய தேர்கள் காற்றென்ன விரைந்து கொட்புறவும், வாட்போரின் மிக்க மறங்கொண்டு திரியும் மைந்தர் பலர் தோண்முறையால் வீறுமுற்றவும், இருபெருவேந்தராய சேரசோழரொடு வேளிர் பலரும் சாய்ந்தோடப் பொருது, அவரைச் செருவென்றும் அமையாமல், உயர்ந்திலங்கும் அருவிகன்மிக்க மைவரையுலகத்து மன்னர் பலரையும் வென்றுயர்ந்து, தன்னொடு மாறுகொண்ட பகை மன்னர் தம் நாடுகளைப் பலவாகச் சிதறுண்ணப் பிளந்த சிறப்பும் மிக்கவன் என்பது போதந்தது. 3. மதுரையின் வளம் நாட்டுச் சிறப்பு:- வானம் குணகடலின் நீரை முகந்து சென்று குடமலைவரையில்முற்றி, அவ்வரைச்சாரலின் வளர்ந்தோங்கும் கழைகள் நிலை தளரவும், வாழும் களிற்றினமும் அஞ்சி அலமரவும், உருமேற்றோடு பரந்து, இரவும் பகலும் ஒழிவின்றிப் பெருமழை பெய்ததாக, ஆங்காங்கு, கல்லப்பட்டிருக்கும் கவலைக்கிழங்கின் அழகிய குழும்புகளில் (குழிகளில்) நீர் நிறைந்து மிகுதிப்பட்டு அருவியென வழிந்தோட, இந்நீர்மிகுதியைத் தாங்காது திரண்ட புனல் நீத்தம், செந்நிறங்கொண்டு, குணகடல் நோக்கிப் பரந்து செல்லும், அவ்வழி, இடையிலுறும் ஏரி குளம் முதலியன நீர் நிரம்பப் பெற, அவற்றிற்கீழ் வயங்கும் களிறு நிற்பினும் மறைக்கும் உயர்ச்சிசான்ற கதிர்விளையும் செந்நெற்கழனிகளும், ஒளிரும் இலஞ்சிகளும் (மடுக்கள்) நீர் வளம் மேம்படும். அவற்றின் கண்ணும். அடையும், முட்டாளும் கொ ண்டதாமரை, கட்கமழும் நெய்தல், வள்ளிதழ் அவிழும் நீலம், வண்டினம் படியும் மெல்லிலை கொண்ட ஆம்பல் முதலியனவும், மற்றும் பிற சுரும்பினம் இறைகொள்ளும் பூக்களும் நிறைந்து மணங்கமழ்ந்து, தேனார்ந்த சுரும்பாடத் திகழ்கின்ற பொய்கையின்கண்ணும், இடையிடையே படர்ந்து நிற்கும் வள்ளைக் கொடிகளைத் தள்ளி, வயமுற்ற மீன்களை வலைஞர்கள் தம் வலைகளாற் பிடித்துக் கொன்று குவிப்பர். அதுபோது, அவ்வள்ளைக் கொடிகளிற்றங்கி யுறங்கியிருந்த கம்புட் கோழி பறந்தோடுங்கால் எழும் ஓசையும், கொடுமுடிகள் மிக்க மீன்வலை வீசும் வலைஞர், அம்மீன்கட்கு விலைகூறிக் களிக்கும் ஓசையும் ஒருபக்கம் எழுந்து சிறக்கும். ஒருபால், கரும்புகளை ஆட்டியடும் எந்திரச்சாலையினோசையும், வேறொருசார் களைப் பறிப்போர் செய்யும் ஓசையும், அவ்வயலருகே, அள்ளற்கண் வலியற்று வீழ்ந்த முதுமைமிக்க பகடுகளை, எழுப்புதற்காக, கள்ளுண்டகளமர், அவற்றிக்கு உற்றவிழுமம் தெரியாதவாறு பெயர்க்கும் ஆரவாரமும் ஓங்கும். தழைத்த பகன்றை முதலியன மிக்குறும் கழனிகளில் வித்திய நெல் முற்றியதாக, அதனை அறுத்தற்கண், அவ்வன்கைவினைஞர் செய்யும் ஓசையும், இன்குரல் தொடுத்த வாச்சியங்களுடன் மழைவளனறாத் தண்ணிய பரங் குன்றத்தில் நடைபெறும் விழாக்களில் எழும் நல்லோசையும், புதுநீர் விழாவயர்தற் பொருட்டுப் பேராரவாரத்துடன் செல்லும் மகளிர் தம் கோதையை மைந்தர் புனையவும், அம்மைந்தரின் தண்ணிய தாரைத் தாம் புனையவுமாகக் கூடியாடும் நீராட்டோசையு மாகவெழும் இவ்வோசைகளோடு, குருகுகள் மேலே சூழ, வீடுகளினருகு நிற்கும் மரங்கடோறும்; நிரையே கோத்து உணக்கப் பெறும் வற்றன் மீன்கள் அசையும் பாணர்குடியிருப்புக் களில், அவர் பாடலால் எழும் ஓசை முற்றும் கலந்து, விண்படர்ந்து, ஆண்டுவாழ்வார்க்கு இனிய இசையின்பம் நல்கும். இது மருத நிலவளன். இனி, முல்லை நிலவளன் வருமாறு: இது காடும், காடு சார்ந்த நிலமும் பொருந்தியது. ஈண்டு, கானவர் ஒருபக்கல் நின்று தினைகொய்வர். ஒருசார் எள்ளிளங்காய் முற்றிநிற்ப, இருந்தாள் வரகு தன் முற்றிய கதிர்காட்டி அழகுசெய்ய, ஆழ்ந்த விழிகளில் மணிகள் கிடந்து மிளிர, பேரழகு வாய்ந்த நவ்விமான்கள் எழுந் தோங்கிய அக்காட்டின்கண், மடப்பம் பொருந்தும் கண்ணினை யுடைய பிணைமானோடு, தம் சிறுதலையையுயர்த்தி பாடியாடியுகளும். செம்பொற்றுகள், பரந்தமணலின் மேற்புறத்தே யடைந்து நல்லொளி பரப்பும். பரப்பிவைத்தாற் போலும் பான்மையவாய்ப் பாறைகள், ஒள்ளிய கொன்றை பரந்த நீழலில், இனிய காட்சியினை நல்கும். நீலமணியன்ன பசும்பயிர்களின் மேல் முருக்குண்ட முசுண்டையின் ஒள்ளரும்புகளோடு, முல்லையின் வெள்ளியொத்த வொண்பூக்க ளுதிர்ந்து பரந்து, அழகு செய்ய, அவற்றினருகே, வல்லோன் ஒருவன் தைஇய (எழுதிய கூத்தயர் வெறிக்களமொப்ப, மெல்லிய அவல்களில் தெளிந்த நீர் நிறைந்து, நீலமணியெனத் திகழும் நெய்தல், இடை மணந் தொய்யிற் கொடியொடு மாறுபட மலர்ந்து வயங்கும். இனிச் சேயோன் மேய மைவரை யுலகமெனப்படும் குறிஞ்சி யில், வரைச்சாரல்களிற் கிடக்கும் பெரும் பாறைகள், வெள்ளருவிகள் பல வீழ்தலாலும், நீர்த்தாரைகளின் உறைப்பாலும் கருநிறங் கொண்டு அஞ்சுவரு காட்சிபயப்ப, இடையிடை செழிப்புற்றுத் தழைத்த பைங்கூழும் பிறவும் ஆமா முதலியவற்றிற்கும் புல்லுணா வளிக்கும் பொற்பு விளங்கும். ஆங்காங்குள்ள தினைப் புனங்களிற் படியும் கிளிமுதலிய புட்களைக் கானவர் ஒப்பும் ஓசையும், துடவைகளிற் செழித்து நின்று, பலமணிகளையொக்கும் அழகிய பூக்கள் நிறைந்து விளங்கும் அவரையின் நறுந்தளிரை மேயவரும் அவ்வாமா முதலியவற்றைக் குறவர்கள் கடிதலாலெழும் ஓசையும், மலைமிசையுறையும் அக்குறிச்சி மக்கள் பொய்க்குழிதொட்டுக் கேழல் முதலியவற்றைப் பிடித்தற் பொருட்டு, அதன் வாயை மேலாக மூடிவைப்ப, அவ்வழிவந்தகேழல் அதன்கண் வீழ்தலும், அதனைக் கொல்லும் வெற்றியாக செய்யும் ஆரவாரமும், கருங்கால் வேங்கையின் நறும்பூக் கொடியும் குறமகளிர் 'புலிபுலி' என்று கூறியாடும் ஓசையும், இம் மலைச்சாரல்களில் மாறிமாறி யொலிக் கும். அன்றியும் இச்சாரங்கள், குறுங்கதிர்தாங்கும் தேரையும், நெடுங்காலையுடைய ஐயவியும், ஐவனமென்னும் வெண்ணெல்லு மாகிய விளைநலம் சிறந்து இஞ்சி, மஞ்சள், மிளகு முதலியனவும் பிறவுமாய பண்டங்கள் பல மிகுந்து விளங்கும். இனி, அருவிகளும், அவற்றாலுளதா மழகுமில்லாத பல மலைகள் ஆழ்ந்த விடாகங்கள் கொண்டுநிற்பது பாலை. நிறைந் தெழும் சூறைக்காற்று, ஊகம்புல் முதலியன உலர்ந்து கிடக்கும் காட்டுள், வைக்கோலைச் சாடுவதுபோல் அவற்றைச் சாடியலைத்து அவ்விடாகங்களின் மோதிச்சேர்த்து அணைத்து அடங்கும் காற்று மோத, அலைபடுங்கடலின்கண் எழும் பேரோசை யொத்த பெரு முழக்கம் அச்சூறாவளியின் பயனாக யெழும். இந்நிலத்துக் காயும் வெயில், நிழலும்தன் உருவிழக்குந் தன்மைத்தாய வேனில் வெப்ப முடையது. இக்காலத்தில், மலையருகு கிடக்கும் சுரத்தின் கண், வேட்டுவவிளைஞர் பலர் சிலையேந்தி ஆறலைக்கும் கள்வரைக் காத்தற் பொருட்டுக் கரந்துறைவர். இவர்களுறையும் மனையகங்கள் தழை வேயப்பட்டும், இவரது படுக்கைகள் மான்தோல் பரப்பப் பெற்றும் இருக்கும். பொதுவாக, இவர்கள் தழை விரவிய கண்ணி சூடுமியல்பும், கடுஞ்சொற் கூறும் காய்சினமுமுடையர். இனிக் கடற்சார்ந்ததாய நெய்தல் வளன் வருமாறு: கடற்றுறை களில், பெருநீரோச்சும் மரக்கலமீகாமர் பலருடன் கூடி, இடம கன்ற யவனம் முதலிய பிறநாடுகளினின்று கொணர்ந்த குதிரைகளுடன், முழங்குங் கடல்தந்த விளங்குகதிர் முத்தமும், அரம் போழ்ந்தறுத்த இலங்குகின்ற வளைகளும், பரதர் (செட்டிகள்) முதலியோர் கொண்டுதந்த பலவேறுவகைக் கூலங்களும் ஒருபுடை மலையும் கடலுமென மிக்குத்தோன்ற, வேறோர் பக்கத்தில், இருங்கழிகளில் விளைந்த வெள்ளுப்பும், கருப்புக்கட்டியொடு கூட்டிப் பொரிக்கப் பட்ட புளியும், பரந்தோங்கிய கானலில் வன்கைத்திமிலர் (மீன் பிடிக்கும் படகு உடையவர்கள்) தாம் கொணர்ந்த கொழுமீன் களைத் துடியின் கண்போல் உருண்ட துண்டுகளாக அறுத்த உணக்கிய கருவாடுகளும் ஏற்றப்பட்ட நாவாய்கள் பல நின்று அசையும் பொலிவு விளங்கும். இங்ஙனம், இவை நாடோறும் முறையே மிகும் பெருவளம் பயின்றது இந் நெய்தல். இவ்வண்ணம் ஐந்திணைவளனும் அமைந்து அழகுபெற்று, முழவு முழங்குந் திருநாள் நடைபெறும் நெடுந்தெருக்களும், துணங்கை, குரவை முதலிய கூத்துக்கள் நிகழும் பரத்தையர் சேரியும் இடையறாப் புதுவருவாயும் கொண்ட பல ஊர்களும், அவற்றுட் பல குடித்திரளும் மிகுந்திருத்தலால், இப்பாண்டிநாடு பாடல் சான்ற பண்புடைய நாடாயிற்று. நகரச்சிறப்பு: இது பெரும்பா ணிருக்கையும், மணி நீர்க் கிடங்கும், பல்படைப்புரிசையும் வையைபோலும் வழக்குடைய வாயிலுமுடையது. இவற்றுட் பெரும்பாணிருக்கையின் நலம். பெரும்பா ணிருக்கையாவது பெரும்பாணர் என்னும் ஒரு வகைச்சாதியார் வாழும் இடம். இது, வையைத்துறைதோறும் பல்வேறு வகைப்பட்ட பூந்தோட்டங்கள் சூழப்பெற்று அவற்றி னிடையில் நெடுங்காலமாக இருந்துவரும் தொன்மை சிறந்தது. அன்றியும் இது, யாற்றின் அடைகரையிலிருத்தலால் காவும் பொழிலும் மிக்கு, உயர் சிமயத்து நின்று இயங்கிவரும் நீர் கொழிப்ப வரும் நுண்ணிய வெண்மணற் குன்றுகள் தம்மேற் படிந்த பூக்களால் நறுமணம் வீச, முழங்குகால் பொருதலால் மாவிசும்பு தடவும் மரங்களசைய, மயில்கள் அகவி ஆரவாரிப்ப, முசுக்கலைகள் தாவும் கொம்பரில் அவற்றின் மந்திகள் விளையாட்டயரும் பெருஞ் சிறப்புடையது. கரையினியல்பு இற்றாக, யாற்று நீரொழுக்கு, தாது சூழ்ந்த கோங்கம் பூவும் வேறு பிற மலர்களும் பரந்து, ஒருகோதை (பூமாலை) யொப்ப ஒழுகி யழகு செய்யும். மணிநீர்க் கிடங்கு: இந்நூற்பொருள் நிகழ்ந்த காலத்துக்கு முன்னர் மானவிறல் வேள் என்னுமொரு குறுநிலமன்னன் அழும் பில் என்னும் ஊருடையனாய் விளங்கினன். அவ்வூர் நில வளமும் பொருள் வளமும் மிகுந்தது. இதன் வளத்தைக் காணப்புகும் ஒருவனது காட்சி வேறொரு நிலத்தையும் விளைநலனையும் காண்டற்குச் செல்லாதென்பர். இத்தகைய அழும்பிலை யொத்த நாடிழந்தவர்களும், செல்வங் கொழுத்த செழும்பதிகளிடத்தவாய குடியிழந்தவர்களுமாய்த் தொன்றுதொட்டுவரும் செற்றங்கலந்த வலிமை தம்மைத் தூண்டுதலால் எதிர்ப்பான் வந்த அண்ணல் யானையும் அடுபோர்த் தொழிலுமுடைய வேந்தர்பலர் உழிஞைப் போர்செய்தற்கு வந்தாராக, அவர் நெஞ்சிற் கிடந்த மாறுபா டனைத்தையும் போக்கி, தாம் தம் இன்னிசைமுரசு முதலியவற்றை இடைப்புலத்தே விட்டோடச் செய்து அவர் முதுகு காணும் வகையிற் காத்துநிற்கும் மிக்க ஆழமுடையது அக்கிடங்கு. வாயில்: மழைதவழும் மலையென உயர்ந்தோங்கிய மாடங் களாற்றிகழ்ந்து, மிக்க முதுமையும் வலிமையுங் கொண்டு நிற்கும் இந்நகர்க்கண்வாயில், அணங்கு வாழ்தரலால் ஐயவியும் நெய்யும் அப்பிய நெடுநிலையும், திண்ணிய கதவங்களும் உடையதாய், இடையறா நீர்ப்பெருக்கினைக் கொண்டு ஓடும் வையையாற்றினைப் போல மாந்தரும் மாவும் இடையறாது வழங்கும் வழக்கினை யுடையதாய் விளங்கும். இங்ஙனம் வழக்கிடையறாது விளங்கும் வாயில் கடந்து உள்ளகம் நோக்குவார்க்குக் கட்புலனாவது யாறு கிடந்தன்ன அகன்ற நெடுந்தெருவேயாகும். அதன் இருமருங்கும், மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை முதலியனவாகப் பலவேறு வகைகள் விரவிய மாடங்கள் வானகம் மூழ்கி நின்று உயர்ச்சி காட்ட, அவற்றின் சாளரங்கள், அம்மேடையிலே வீசுகின்ற மெல்லியதென்றலை வரவழைக்கும். தெருவின்கண், விழாவயர்தல் விரும்பி நகர் மாக்கள் எடுத்த பேரோசை ஒருபுடையெழுந்து அதிர, அவ்வோசை கேட்டு மகிழும் வேறொரு சாரார் பல இன்னியம் இயம்புவர். அவற்றின் றிரண்டவோசை நீராட்டிடையெழும் முழக்கத்தை யொக்கும். நிற்க, இம்மாடங்களின் மேனிலை யிற்றிகழும் நெடுங்கொடிகளும், விழா விரும்பியெடுத்த வியன் கொடிகளும், வேற்று வேந்தரை வேறலாலெடுத்த நலம் பெறு கொடிகளும், நீர் ஒலித்ததுபோல மிக்கொலித்துவந்த வேற் படையைப் புலவுப்படக் கொன்று, உடன் மேல்நெருங்கிய யானைப் படையையும் அறவே சாய்த்துப் புகழ்செய்து வீறுற்று எடுத்த விறல்சான்ற நன்கொடிகளும், பெருவரை மருங்கின் வீழும் அருவி போல் நுடங்கித்தோன்ற, கள்விற்போ ரெடுத்தகொடி யெழுந்து அசையும் காட்சி, அந்நியமத்தை நன்கு அணிசெய்யும். இனி, அந்நியமங்களுள், கந்து நீத்து உழிதரும் கடாம் பொழியானை, காலெனக்கடுக்கும் தேர், இடுமயிர்ப்புரவி, கள்ளார் களமர் உட்பட நால்வகைத்தாய படைதிரண்டு முறையே செல்ல, நறுமணம் கமழும் பூக்கள் பல பூந்தட்டுக்களிற் கொண்டு நிற்பவரும், ஒன்றற்கொன்று மாறுபடும் வகையிற் பலபடவிரித்த மாலைகளை ஏந்தி நிற்பவரும், நவமணிகள், பொன், சந்தனம், கருப்பூரம் முதலியவற்றைச் சேர இடித்துத் துகள்செய்து, பூந்தாது ஒப்பத் தூய்மைப்படுத்திய சுண்ணத்தை உடையவரும், பசிய கருங்காலி யைச் சீவிக் காய்ச்சி யெடுத்த களிப்பொடு, இனிய நீர்மைகொண்ட பாக்குக்களைக் கலந்துகொண்டு, அவற்றொடு வெற்றிலையும் சேரவைத்து விற்பவரும், சங்கைச் சுடுங்காற் பெறலாகும் சுண்ணாம்பு உடையவருமாகிய பலவேறு வகைப்பட்ட மக்கள், இருமருங்கும் வந்து கலந்த பகைப்புலம் போன்று விளங்குதலால், தம் இன்னுயிர்க்கு அஞ்சி, வெய்துயிர்த்து, ஏங்கியிருந்து, பின்னர் அந்நாற்படையும் நீங்க, மாட நீழலிலே பல இன்னியங்கள் கறங்கச் செம்மாந்திருப்பர். நிற்க, மனையகங்களில் மடப்பமும் நோக்கினாரை வருத்தும் செயிர்ப்பு முற்ற கண்களும், அழகுறப்படர்ந்து தோன்றும் மாமை யும், நிரைகெடாது வார்ந்து கூரியவாய் இலங்கும் எயிறுடைய செவ்வாயும், மூங்கில் போலும் தோளும், விளங்கும் ஒளிகொண்ட கைவந்தியும் *தொய்யில் பொறித்த சுணங்குபூத்த இளமுலையும், மைபோலும் கரிய மொய்த்த கூந்தலும், மயிலன்ன சாயலும், மடப்பமும் உடைய மகளிர் பலரும், தம்மைக் கோலஞ்செய்து, மெல்லெனக் கையெறிந்து நடந்து, காமநுகர்ச்சியன்றிப் பிறிதொன் றினையுங் கல்லாத இளையோருடன் கூடிக்களிக்கும்படி சங்கொப்ப நரைத்த கூந்தலைக் கோதிப் பின்னே முடியிட்டுப் பொலியும் தொன்முது பெண்டிர் பலர், காமரு பண்ணியங்கள் பல "புடையமை பொலிந்த வகையமை செப்பு" க்களில் வைத்து, மணம் கமழும் பூக்களையும் உடன்கொண்டு சென்று மனைதோறும் உலாவி விற்பனை செய்வர். இனி, இம்மனையகம் கடந்து செல்லின், ஒருவன் காணலாவன கடவுட்பள்ளி, அந்தணர் பள்ளி முதலியனவாம். அவற்றுட் கடவுட் பள்ளியென்பது பௌத்தப்பள்ளியாம். திண்ணிய கதிர்களைத் தெறிக்கும் பேரணிகலங்கள் பலபூண்டு, காமருபேரிளம் பெண்டிர் தாம் விரும்பிக்கூடிப் போற்றும் தம் கணவருடன், தாதணிந்து விளங்கும் தாமரைப் போதைக் கையிற் பிடித்துச் செல்லுதலொப்ப ஒள்ளிய சிறு பிள்ளைகளைத் தம் கையிற் பிடித்துக்கொண்டு, எல்லோருமாகத் திரண்டு இப்பள்ளிகளை யடைந்து, பூவும் புகையுங் கொண்டு, பள்ளிக் கடவுளைப் பரவித் தொழுது வணங்குவர். அந்தணர் பள்ளியாவது எக்காலமும் மறைமுடிவையே பார்த்தொழுகலாற்றும் பான்மையர் உறையும் விழுமிய விடமாம். இவர்கள் மறைநான்கனுள், சிறப்பில்லாத அதர்வமறை நீங்கலாக, ஏனைச்சிறப்புடை மறைமூன்றையும் தமக்குப் பொருள் விளங்கும் வகையிற் பாடுதலுடையவர். அன்றியும், இவர் விழுமிய சீர் பயப்பதாய வேள்வி யொழுக்கத்தி லீடுபட்டு நிற்பவர். இவரது நெஞ்சம் அறநெறி பிழையாத அன்பு நிறைந்து, உயர் நிலைமைய தான உம்பருலகையும் இவண் நின்றே யெய்தும் கொள்கைமேற் கொண்டு, விளங்கும் விழுப்பமுடையது. இதனால், இவர், இந்நால் வகை நிலங்களமைந்த உலகத்தில் ஒப்பரும் மிக்காருமிலராகி, ஒருதாமாகி உறைகின்றனர். இங்ஙனம் சீவன் முத்தராயிருக்கும் இவர் விரும்பியுறையும் இடமே இப்பள்ளி. இது மலையொன்றை உள்வெளியாக வாங்கி இருப்பிடமாக்கினாற் போன்ற திண்மையும் பெருமையும் அமைந்ததாகும். இவற்றோடு உடனெண்ணப்படுவனவாய்ப் பல அறிஞர் சேக்கைகள் (அமணப்பள்ளிகள்) அருகே காணப்படுகின்றன. அவை, செம்பினாற் செய்தமைத்தாற்போலும் செவ்வியசுவர்கள் சூழ்ந்தவை; நோக்குவார் காட்சிவிசையும் தவிர்க்கும் வகையில் மேலேபுயர்ந்து, குன்றங்கள் பல அணுக்கத்தே நிறைந்து தோன்றுங் காலெழுந்த காட்சியினைப் பெற்று, விளங்குவனவாம். இங்கு, தாதுண்ட வண்டுகள் சூழ்வந்து முரலும் தேனாரும் பூக்களும் நறுமணம் கமழும் புகையும் கொணர்ந்து சாவகர் முதலியோர் வணங்கிப் பரவுவர்; அந்தக் 'கயம் குடைந்தன்ன வயங்குடை'க் கோயிலின் கண்ணிருக்கும் பெரியோர், வானமும் நிலமும் ஒருங்கே முழுதும் உணரும் சான்ற கொள்கையினையும், அக்கொள்கைக்குத் தளர்தல் இல்லையாய்ச் சாயாத திண்ணிய யாக்கையும் அமையப் பெற்றவர். மேலும், *இவர் புலன்கண்மேற் செல்லுகின்ற அவாவைந் தனையும் அவித்த பேராற்றல் படைத்தமைந்தவர்; சென்ற காலமும் வரூஉம் அமையமும், இன்று இவண் தோன்றிய (நிகழ்காலம்) ஒழுக்கமொடு நன்குணரும் மதிநுட்பம் நூலோடுடையர். இவரது சேக்கைகளில் பல வடங்களால் அமைந்த நூலுறிகள் தொங்கும். அவற்றில் இவரது குண்டிகைகள் வைக்கப் பெற்றிருக்கும்; அக்குண்டிகைகள் மிகக் குறுகிய வாயுடையவை; கல்லைப் பொளிந்தான்ற போன்ற தோற்றத்தனவுமாம்(?) இச்சேக்கைகளைச் சுற்றிலும் நறும்பூப்புதர்கள் பல வயங்குங் காட்சி, மனத்தானோக்கு வார்க்குப் பெரியதோர் இறும்பூது பயக்கின்றது. இதன்கண் உறையும் அறிஞராய அமணர்தாம் வருத்தமறப் பறித்து வழிபடுதற்கெனவே இப்பூஞ்செடிகளும் பிறவும் வைத்து வளர்க்கப் பெறுகின்றவாம். இனி, மேலே கூறப்பட்டனவற்றோடு, கல்வி, அறிவு, நல்லொழுக்கம், அறனருளுடைமை முதலியவை மணக்கும் சிறப்புடைமையால் சிறந்து விளங்கும் அரசவையிலுறையும் பெரியோராய காவிதிமாக்கள் முதலியோரது நலனும், பிறவும் கூறுகின்றார். காவிதிமாக்களாவார் காவிதியென்னும் பட்டத்தை அரசனால் தரப்பெற்றவராவர். அவர்களுள் ஈண்டுக் கூறப்படுபவர், அரசனிடத்து அப்பட்டத்தைப்பெற்று, அமைச்சுக்கடம் பூண்டொழுகும் அமாத் தியராவர். இவர்கள் முறை வேண்டினார்க்கும், குறைவேண்டி னார்க்கும் அச்சம், அவலம், ஆர்வம் முதலிய நிகழாமற்போக்கி, செற்றமாதல் உவகையாதல் ஒன்றேனும் ஒரு திறத்தேனும் செய்யாது, தம்மையும் காத்து, ஞெமன்கோல் (துலாக்கோல்) போலும் செம்மைத்தாய நடுநிலை பிறழாத கொள்கை மேற்கொண்டவ ராவர். அன்றியும், இவர்கள் அறங் கூறவையத்தாரோடு உடனிருந்து, அரசன்மாட்டு நிகழும் நன்றும் தீதும்கண்டு, அத்தீங்குகளையா ராய்ந்து அவற்றுள் அவன் மீட்டும் ஒழுகாவாறு அடக்கி, அன்பும் அறனும் அவனைவிட்டு ஒழியா வகையிற்காத்து ஒழுகும் பேராண்மை தலைசிறந்தவர். இத்தொழில்களில் ஈடுபடுங்கால், இவர்கள் தம்மையும் பழிபாவங்கள் வந்தணுகாவாறு நீக்கிக்கோடலும், பரந்த புகழை யிப்பரந்தவுலகில் நிறுத்தலும் செய்து கொள்ளும் திறல்மிக்கவர். இதுபற்றியே இவர்களை ஆன்றவிந்தடங்கிய கொள்கை மேம்பட்ட சான்றோர்களோடு ஒப்பவைத்து எண்ணுப. ஏனெனின், இச்சான்றோரும் அரிய வேள்விகள் பலசெய்து மாவிசும்பு (தேவருலகு) வழங்கும் வாலறிவும், வேள்விக்காலத்துப் பரந்த தம்மார்பிடைப் பூசப்பெறும் நறிய சந்தனப்பூச்சு முடையவரே. இவர்கள் தம் அரசனைச் சூழவிருக்குங்கால், உயரிய பட்டாடை யுடுத்து, முடியில் மயிர்க்கட்டணிந்து (தலைப்பாகையணிந்து) சிறந்த தோற்றங் கொண்டு திகழ்வர். வாணிபநலன்:- இதுகாறும், மதுரைக்காஞ்சியின் கருப்பொருளும், மதுரை யாண்ட மன்னரது ஆட்சி நலனும், மதுரையின் வளத்து ஒரு பகுதியும் கூறப்பட்டன. இனி மதுரையின் வாணிப நலன், விழவு நலன் ஆகிய ஏனைநலன்களையும், கூறி இக்காஞ்சியின் சொற் பொருணலங்களைப் பிறநூல்களோடு ஒப்பு நோக்குமிடத்துத் தோன்றும் சில நூண் பொருள்களும், அவ்வாராய்ச்சி யிடைப் போதரும் அக்கால ஒழுக்க நலன்களையும் கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன். வடித்த சொற்களாற்றொடுக்கப் பெற்று, ஆயுந்தொறும் புத்தின்பம் பயக்கும் பொலிவு கூர்ந்து, கடவுளின்பத்தைக் கற்பார்க் கூட்டும் இன்ப நிலையமாய இப்பாட்டின் கண்வரும் வணிகர் பல திறப்படுகின்றனர். ஒரு சிலர் பண்டம் பகருநர் ஆவர். இவர்கள் மலை, நிலம், நீர் முதலிய விடங்களிற் படுவனவும், பிறவிடங்களிற் சிறுபான்மை கிடைக்கப் பெறுவனவுமாய பண்டங்களோடு பலவாய் வேறுபட்டு அழகு சிறக்கும் மணி, முத்து, பொன் முதலியவற்றிற்குத் தாம்பிறதேயங்களினின்று வந்துள்ள அரும் பண்டங்களை மாறி வழங்குவர். இவர்கள் கொள்வதூஉம் மிகை படாது; கொடுப்பதூஉம் குறைபடாது. மேலும், இவர்கள், தமக்கு ஓதிய இல்லறநெறியிற் றவறாது நின்று, அறத்தாறு போற்றி ஆருயிர்ப்பேணும் இயல்பினராவர். இவர் தம் இல்லங்கள், திரண்ட குன்றங்கள் பல மிக அண்மையவாய் நிற்ப அவற்றைக் காண் பார்க்குப் புலனாகும் சீரிய தோற்றத்தையும், விண்ணிடைப் பறந்து திரியும் பருந்துகள் இருந்து இளைப்பாறிப் பின்னர் உயரப் பறக்கும் உயர்ச்சியையும், பலவேறு சிற்பத்தொழில் விளங்கும் மாண்பையும் உடைய நல்ல இல்லங்களாகும். இவற்றுள் பல்வகைப் பண்டமொடு உணவும் மிக்குற்றுப் பொலியும். நிற்க, கோடுபோழ் கடைநர் முதல் கம்மியர் ஈறாகவுள்ள வணிகர் பலர் உளர். அவர்களுட்கோடுபோழ்கடைநர் சங்கு களையறுத்து வளை முதலியனவாகச்செய்து விற்பர்; திருமணி குயிற்றுனர் என்பவர் அழகிய மணிகளை வாங்கித்துளையிட்டு மாலை முதலியனவாகத் தொடுத்துவிற்பர்; இழைபுனைநர் பொன்னைக் காய்ச்சித் தூய்மைசெய்து ஒள்ளிய பூணாரங்கள் செய்வர்; இவர்கள் தட்டார் என்றும் வழங்கப்படுவர்; பொன் வாணிகர் வரப் பெறும் பொற்றிரளை உரையிட்டு நோக்கி மாற்றுக் காண்பவராவர்; கலிங்கம் பகர்நர் உயரிய பட்டாடைகளும் புடவைகளும் விற்பர்; செம்பு நிறைகொண்மார் என்பார் செம்பினை நிறுத்து விலைக்கு வாங்கும் வணிகராவார்; வம்பு நிறை முடிநர் கச்சுக்களை யழகு பெற முடியிட்டுத் தம்தொழில் நயம்தோன்றப் புனைந்துவிற்கும் வணிகர். ஏனைப்பூவாணிகர் நறியபூக்களும் புகைகமழும் சாந்தும் ஆய்ந்து தொடுத்து விற்றல் செய்வர்; சித்திரகாரிகள் என்பார் மகளிராவர்; இவர் கூரிய மதிநுட்ப முடையவர்; எழுதப்பெறும் வடிவங்களின் தொழில்கள் நன்கு விளங்கும் வகையில், இவர் தம் கூரிய வுணர்வுமுற்றும் பொருந்த எழுதிய ஓவியங்களை, ஒன்றோடொன்று ஒப்பக் காட்ட, அவ்வளவிற் காண்பார் கட்புலனெல்லாங் கவர்ந்து நிற்கும் தொழிற்பேறு சிறக்கும் சிறப்பினர். இவர்கட்கு ஓவியங்கள் எழுதிவிற்றலே தொழில். கம்மியர் எனப்படுவோர் அந்திக்கடையில் புடவை விற்பவர். பெரியரும் சிறியருமாகத் திரண்டு, நால்வகைத் தெருக் களிலும், மக்கள், ஒருவர் காலொடு ஒருவர் காலுற நெருங்கி நிற்ப, தெண்ணீர்த்திரையால் மடிப்புப் பெறும் யாற்றறல் ஒப்ப, பெரியவும் சிறியவுமாய பல மடிப்புடைவைகளை விரித்து வைத்துப் பிறர்க்கு விற்பர். சோறுதருநர்: இவர்கள் வருவார்க்குச் சோறிடுதற்கெனத் தனிப்படச் சோறிடுசாலைகளமைத்து, அங்குப் பாற்சோறும் பாலும் கொணர்ந் தளிப்பர். வருபவர் தமித்துவரினும், கூட்டமாய் வரினும் சோறிடுதலில் வரைவின்றி யளிப்பர். அங்கு அச்சோற் றொடு தேன், பலவின்சுளை, மாங்கனி, பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய் முதலியனவும், வாழைப்பழம், முந்திரி கைப்பழம் முதலிய பழவகை களும், இலைக்கறிகள் (கீரைவகை), கற்கண்டு, கிழங்கு முதலியனவும் செறிந்து கிடக்கும். இவற்றொடுகலந்து மணக்கும் ஊனும்பிறவும் உரைப்பார் உரையினையும் பாடுவார் பாட்டினையும் இகந்து திகழும். செல்வர்கள்: இவர்கள் செக்கர் வானத்தை யொப்பச் சிவந்து நுணங்கும் ஒள்ளிய ஆடையுடுத்து, அரையிற் பொன் புனைந்த உடைவாளைப் பொலிவுபெறக்கட்டி, தோளில் மேலாடை கிடந்தசைய, பிறக்கிடாப் பெருமையுற்ற தம் திருந்தடியிற் கச்சம் தின்ற கழலிருந்து ஒலிப்ப, வேப்பந்தெரியலும், செங்கழுநீர் மாலையும் அணிகிளரும் மார்பிற்றிகழும் ஆரத்தோடு கலந்து விளங்க, காற்றினுங் கடிய கதழ்பரி பூட்டிய திண்ணிய தேர்மீ திவர்ந்து, நாற்புறமும் காலோர் (காலாட்கள்) காவல் செய்ய விரைந்து செல்லும் மேம்பாடுடையவர். வருவார்க்கு வரையாது கொடுக்கும் வானம்போலும் வண்மையினராகிய இவர்க்கு, அவ்வள்ளன்மைக்கேற்ப வளங்கெழுமிய செல்வம் சிறந்து புகழ் வளர்க்கும். இங்ஙனம், வீரமும், வெற்றியும், வண்மையும், செல்வமு மொருங்கே வாய்க்கப்பெற்ற இவர்க்கு, உளத்தே கடவுளன்பு பெருக்கெடுத்துச் செல்லுதல் நம்மனோரால் மறக்கற்பாற்றன்று. இவர்கள் அந்தி விழவெடுத்தலும், அதனை யெடுத்தற் பொருட்டு, புண்ணிய நீராடி, மாசற விளங்கும் யாக்கையராய், நறிய மணந் தருவனவற்றைப் பெரிது அணிந்து, அவ்வணிதலா லெழும் மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழச் செல்லுதலும் நினைத்தொறும் பேரின்பம் பயப்பன. நிற்க, இவர்கள் எடுக்கும் விழாவினைக் காணும் மகளிர் நிரைநிலை மாடங்களின் அரமியந்தோறும் நின்றும், தாமணிந்துள்ள பொற்பூண்களொடு சீறடிச் சிலம்பு புலம்ப இழிந்தும் விழாக்காண்டலும், அதுகாலை அவர் தந்தோற்றம் வானர மகளிரதொப்ப, ஆய்ந்த பொன்னாற் செய்யப்பட்ட இழைகளுந்தொடிகளும் பேரழகு செய்தலும், அகக்காட்சியால் (Imagination) நோக்குவார்க்குத் தோன்றாது ஒழியா. பின்னர், நாயன்மார்கள் எழுந்தருளுங்கால் எடுக்கப்படும் ‘திண்காழுற்ற வியலிருவிலோதம்” (பெரிய அகன்ற கொடிகள்) காற்றசைவினால் தெண்கடற் றிரைபோலப் புடைப்ப, அம்மகளிரது ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகம், மழைக்கண் மறையும் மதிய மொப்பத் தோன்றுபு மறையும். இனி, இச் செல்வர்கள், மழுவாள் நெடி யோனை முதல்வனாகக்கொண்டு ஏனைத் தெய்வவொளியும், வாடாத பூக்களும், இமையாத நாட்டமும், நாற்றவுணவு (அவி யுணவு) ங்கொண்ட வுருகெழு பெரியோராய மாயோன், முருகன் முதலிய கடவுளர்கட்கு உயர்பலி கொடுத்து அவ்வந்தி விழவினை முடிப்பர். அக்காலை, எழும் தூரியங்களின் ஒலி அலை கடலையு மடக்கும். கொண்டி மகளிர் (பரத்தையர்):- இவர் *வானர மகளிரையொத்த வனப்புடையவர். மேலும் இவர் நீனிற விசும்பின்கண் அமர்ந்து விளையாட்டயரும் அம் மகளிரையொப்பவே, தம்மைக் காண்பவர் மனத்தை வருத்தி, அவரது பொருளைக்கவரும் பரத்தையராவர். இவர்கள் ஒண்சுடர் பரப்பும் விளக்கங்களின் நல்லொளியில், பலராகச் சேரநெருங்கி, ஆழ்ந்த நீர் நிறைந்த துறைகளின்முன் பரந்து கிடக்கும் நுண் மணலிற் கூடியாடுவர். அக்காலை, முதல்யாமத்தில் வாசித்தற்குரிய யாழிசை யொரு மருங்கு எழ, அவ்விசைக் கேற்ப, இவர்கள் தாழ்ந்தும், அருகே ஒலிக்கும் முழவொலியொடு ஒத்தும் மனமகிழ்ந் தாடுவர். இங்ஙனம் மணல் விளையாட்டு முடிந்ததும், அவ்விடத் தினின்றும் நீங்கி, குவளைமலர், நீர்க்கீழ்ச் செவ்வரும்பு முதலி யவற்றாற் றொடுக்கப்பெற்ற மாலைத்தொடர்பல, தம் ஆடையின் வடிம்பில் விழும்வண்ண முடுத்து, நீர் திரண்டாற்போன்ற வெண்பூ மாலைகளைக் கொண்டையிற் சூடிச் சேயரும் அணியருமாகப் பலராய்த் தம் நலன் நயந்து வரும் பல இளமையுங் செல்வமு மிக்காரை, வஞ்சனையும் பொய்யுங் கலந்த சொற்களால், முதலிற் கூட்டிக் கொண்டு, அவரது நுண்பூணாகம் தம் ஆகத்தில் வடுக் கொள்ளும் வகையில் முயங்கித் தம் பொய்யின்பத்தை யவர்க்கு நல்குவர். அங்ஙனம், அன்புடையார் போல் முயங்கிய முயக்கத்தை அவர் பொருள் தருமளவு மறைத்தலாலும், கருத்து முற்றும் நயந்துவந்தவருடைய செல்வத்தைக் கவரும் முறையிலே யீடு பட்டிருத்தலாலும் இவர்கள் தரும் இன்பம் பொய்யின்பம் எனப் படுகின்றது. அவர்கள் செல்வம் முற்றும்கெடத் தாம்வாங்கி, நுண்தாது உண்டு பின்னர் அத் தாது நிறைந்துள்ள பூவினைத் துறந்து செல்லும் மென்சிறை வண்டினம் ஒப்ப, அவர் கூட்டத்தை, (தம்மைப் புணர்ந்து, தம் பெருஞ் செல்வத்தை யிழந்தோரது கூட்டத்தை), அவர் நெஞ்சம் ஏமாந்து கலங்க, இம்மகளிர் நேரே கைவிட்டுப்பிரிந்து செல்வர். செல்பவர் மீண்டும், தம் பொலிவு குலைந்துகிடக்கும் பணிகளையும் ஒப்பனைகளையும் பெருமையும் அழகும் நன்கமையப் புனைந்து, மிகு நல மெய்தின வராய்ச் செங்கழுநீர் மலர்களில் சுரும்புபடுவனவும், ஏனைப்பூக்களும் கொண்டு, மழைக்கு மலர்ந்த மலர் நெருங்கிய ஒரு சிறு தூறொப்பத் தம் குழலிற் சூடி, போதவிழும் அப்புது மலர்களின் நறுமணம் தெருவெங்கும் கமழ, வளைகுலுங்கக் கைவீசி, மணங்கமழ் மனை தோறும் பழந்தேர் வாழ்க்கைப் பறவைபோற் சென்று, பொருள் தருதற்குரிய இளையோர் பலருடன் விளையாட்டயர்வர். பாசிழைமகளிர்: இவர்கள் குடிப்பெண்களாவர். இவர் களுடைய இல்லங்கள் அணங்குடைய நல்லில்லங்களாகும். இவர்கள், கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேய தம் இல்லத் திருந்து, மணம் புணர்ந்தோங்கிய பசிய இழையும் ஒட்டற்ற பொன்வளை யலும் அணிந்து, இராக்காலங்களில், ஒண் சுடர் விளக்கங்களின் நல்லொளியிலமர்ந்து, இசையேழும் வாய்த்த சீரிய சிறிய யாழெடுத்து, பண்முறையில் மாறியிசைத்துத் தம்மை நயக்கும் ஆருயிர்க் காதலர்க்குச் செவிச்சுவையமுதம் சிறக்கவூட்டித் தழுவி, தம் உயிரினுஞ் சிறந்த நாணையுந் தம்மிடத்தே தடுத்துக் கொள்ளுந் தகுதி மேம்பட்டவராவர். வளமனைமகளிர்: இவர் பெருங்குடிப் பிறந்து பெருமையும், செல்வஞ் செழிக்கும் சிறப்புங்கொண்ட மனைமகளிராவர். இவருட் சிலர் “இருமை யின்பமும் பயக்கும் அறிவறிந்த மக்களைப் பெற்றேம்” எனத் தம் கணவருப்ப, மக்களைப்பயந்து, மெலிவு மேவும் புனிறும் தீர்ந்து, இறைவனருளால் ஓர் இடுக்கணும் அற்றுக்குளத்து நீராட்டயர்வர். அதுகண்டு, தலைச்சூல் கொண்ட மகளிர், தாமும் இங்ஙன் ஒரு இடுக்கணுமின்றி மக்களைப் பெறுதல் வேண்டுமெனக் கடவுளைப்பரவிக் குறைதீர்ந்தபின், பொலிந்த சுற்றத்தாரோடு, வழிபாட்டிற்கு வேண்டப்படும் பொருள்கள் பலவற்றுடன், பெருந்தோள் கொண்ட சாலினி என்னும் தேவ ராட்டியோடு, திவவினை யாழின் தண்டில் நிறுத்திச் செவ்வழிப் பண்ணிசைத்து, குரல் எனப்படும் நரம்பு கூடும் வன்னத்தால் நலம்பரப்பி, அப்பண்ணுக்கும் வன்னத்துக்கும் ஒப்ப முழவங்கள் ஒலிப்ப, மெல்லிய சிறுபறை (ஆகுளி) கறங்க, மகளிர்பலர் விளக் கேந்தி முன்செல்ல, நன்மாமயிலென மென் மெல நடந்து சென்று சூழ்வந்து, கையாற்றொழுது வணங்கிய பிறகு, தாம் படைத்த பாற் சோறு முதலிய மடைப்பொருள்களை யுண்பர். ஊர்காப்பாளர்: இராக்காலங்களில் மூன்றாம் யாமத்தில் ஊரைச்சுற்றித் திரிதரும் காவலராவர். பிடியானையின் தோல் போலும் இயற்கைக் கருநிறம் வாய்ந்த இருணிறக் கருஞ் சட்டையும், மரந்துணிப்பினும், கல் உடைப்பினும் வாய்மடியாக் கூர்மை கொண்ட நிலமகழும் உளியும், தூக்கிட்டவாளும், தொடு தோற் கோத்த செருப்புமே இவர்கள் கையகத்திருப்பன. இவர்கள் கண் மாறாடவர் (விழித்தகண் இமைக்கு மளவிலே மறைகின்ற கள்வர்) ஒடுங்கும் ஒதுக்கிடங்களை நுனித்து, பிறர் தெரியாதபடி ஆண்டு மறைந்து நின்று, வயக்களிற்றின் வரவு பார்க்கும் வயப்புலி போல, விரைந்த வுள்ளமொடு நோக்கும் துஞ்சாக் கண்ணும், பேய் முதலியவற்றிற்கும் அஞ்சாக்கொள்கையும் உடையர். அன்றியும், இவர்கள், களவுத்தொழில் வல்லாராற் சிறப்பித்துக்கூறப்படும் தொழில் நுட்பங்களை யெளிதில் அறிந்தாளும் ஆண்மையும், நுண்மைசெறிந்த அரிய நூல்கள் பலவும் ஆராயும் நுண்ணறிவும் படைத்தவர். இவர் கட்புலனாகி, பின்னர்த் தப்பக் கருதி முயல் வார்க்கு ஒருகாலும் தப்புதல் இயலாது. இவர்கள் ஊக்கருங்கணை யினராதலின், அது கூடாது போகின்றது. நிற்க, இவர்களுடைய தொழில் நயப்போ (Love towards the discharge of duties) யாவரும் மிகப் போற்றற்பாலதாம். தேர் வழங்கு தெருவில் நீர் திரண் டொழுகுமாறு, பெருமழை பெய்யும் நடுநாள் யாமத்தும், இவர்கள், ஒரு சிறிதும் அசைவு இலராகி நின்று, தம் தொழிலை நயம் வந்து செய்தொழுகுகின்றவர். இனி, இப்பெற்றியராய காவலர் இருந்த நாளில் களவுத் தொழில் மேற்கொண்டிருந்த கண்மாறாடவர், இயல்பு ஒருசிறிது கூறப்படுகிறது. இவ்வாடவர் கருநிறமும் நுண்மையுங் கொண்ட சேலை யொன்றை யரையிற் கட்டி, அதன்கண் கூரிய சொட்டை (உடைவாள்) களைச் செருகி, இரு துடைகட்கும் இடையிற்செலுத்திப் புறத்தே தெரியாமல் மறைத்துக் கொள்வர். பின்னர் பல நிறங்களமைத்துப் பொலிவு செய்யப்பெற்ற நீலக்கச்சினையணிந்து, அதன் கீழ்மெல்லிய நூலேணி யொன்றைச் சுற்றிக் கொண்டுமிருப்பர். இவர்களின் நசை முற்றும் செல்வர்கள் வைத்துள்ள பேரணிகலங்களின் மேலதாகவே நிற்கும். (இவரது தொழிற்றிறம் முதலியவற்றைப் பொருளாராய்ச் சியிற் கூறுகின்றேன்.) அரசனால் இன்பநுகரப் பெறுதற்குரிய மாதர்: அரசன் தன் அரசிருக்கை நகராகிய மதுரையின் கண்ணிருந்து இவர்கள் பொற் கலங்களில் தரும் இன்பக்குடியினை யுண்டு துயில்கொள்ளப் புகுவது மரபு. காமபானமெனப்படுவது “பழுமிள குக்க பாறை நெடுஞ்சுனை முழுமுதற் கொக்கின் தீங்கனி யுதிர்ந்தென புள்ளெறி பிரசமொடு ஈண்டிப் பலவின் நெகிழ்ந்துகு நறும்பழம் விளைந்த தேறல்” போலும் ஒருவகைத் தேறல். இது நறும்பூக்களிலிருந்து பெறப் படுதலின் நறுமணமும் இன்சுவையும் மிக்குளது. இதனை யுண்ட பின்னரே மன்னன் பள்ளிக்குச் சேறலும் துயில் கோடலும் நிகழும். அவர்க்குப் போகமகளிராகும் இவர்களது வனப்பு ஈண்டுக் கூறப் படுகிறது. நாற்றிசையும் தம் சினைகள் படர்ந்து செந்தீப்போலும் பூக்கண் மலர்ந்து சுரும்பு முரல, அழகுமிக்கு விளங்கும் அசோகம் பொழிலொன்றில், பகல் முற்றும் சுடர் பொழிந்து குடவரையேறிய விளங்குகதிர் ஞாயிறு தன் இளவெயில் பரப்புங்காற்றோன்றும் வண்ணமும் வனப்பும் பொருந்திய மேனியுடையராய், நடுவே மணிகள் வைத்திழைத்த தாவில் பொற்கலன்கள் அணிந்து விளங்கும் இம்மகளிர், தம்பெறலருங் கற்பினால், உலகமுற்றும் விளக்க முறும்படி மேம்பாடு பெற்றவராவர். இவர்கள் மயில் போலும் சாயலும் மாவின் தளிர்போலும் மேனியும், அத்தளிரின் புறத்திருக்கும் ஈர்க்குப்போலும் திதலையுமுடையவர். இவர் தம் பற்கள் ஒண்மையும் கூர்மையும் பெற்றவை. வளவிய காதுகள் ஒள்ளியமகாக்குழை யணியப்பட்டுத் தாழ்ந்து விளங்கும். மேலும், இவர்கள் குளங்களில் நெருங்கியிருப்பதும், நெருப்புப் போலும் இதழ்களை யுடையதாய்த் தெய்வங்கட்கு உரியதுமாகவுள்ள தாமரையின் தாதுபடும் பெரிய பூப்போலும் வாண்முகத்தினராய்க் கைகளில் ஆய்தொடி பூண்டு விளங்குவர். இவர்களோடு கோதை யாற் பொலிந்த சேக்கைக் கண் மன்னன் இன்பநுகர்ந்து இன்றுயில் கொள்வன். மாலைகாலச்சிறப்பு: நெடுநகராய மதுரையின் எல்லையெல்லாம், பகல் முற்றும் ஒளியும் வெப்பமும் ஒருங்குகொன்று, தன் சினமாறியதெனும் வகை, ஞாயிறு தன் ஒளியைச் சேரக்கொண்டுகுடமுதற் குன்றம் சேர, குணமுதல் வரையில் முழுமதியந்தோன்றித் தன் நிலவு விரித்துப் பகலெனும்படி இரவுச் செய்யும். பெண்மைச் சிறப்பும் மான்பிணைபோலும் நோக்கமுமுடைய மகளிர், நெடுஞ்சுடர் பரப்பும் விளக்குக்களையேற்றி, பலவேறு வகைப்பட்ட அணி களைப் புனைந்து, தண்ணறுங் கழுநீர் மலரை மாலையாகத் தொடுத் தணிந்து, தாம் தம் கூந்தலிற் பூசிய நறுவிய மயிர்ச் சந்தனத்தை அலைத்து நீக்கிக் கத்தூரி, சந்தன முதலியவற்றை யரைத்து ஒன்றாகக் கலந்து பூசி, மென்னூல் ஆடைக்கு நறும்புகை யூட்டியுடுத்து விளங்குவர். நயந்த காதலரைப் பிரிந்த மகளிரோ வருந்துதல் செய்வர். இரவுச்சிறப்பு: முதல்யாமம்: இவ்யாமத்தின்கண், மேற்கூறப்பட்ட கொண்டி மகளிர் பொருள் தருதற்குரிய இளைஞரோடு விளையாடி, அவர் மனத்தைக் கரைத்துத் தம்வயப்படுத்த முயலுவர். பாசிழைமகளிர் தம் கணவர்க்கு யாழிசையும் முயக்க வின்பத்தையுந்தந்து, தம் உயிரினுஞ் சிறந்த நாணைக் காத்துக்கொள்ளுவர். மாறுபாடுமிக்குப் பொரும் பெரும் போர்களில், நின்ற அடி மாறாமையாற்படும் வடுப்பட்ட நெற்றியும், போரே விரும்பும் உள்ளமும், சுரும்பு முரலும் தும்பைப்பூச் சூடுதலுமுடைய மறவர், (வீரர்கள்) தோட்டியால் வடுப்பட்ட நுதலும், போர்தாங்கும் வன்மையும், பெரிய கையினையுங் கொண்ட பெருங் களிறுகளைக்கொணர்ந்து, கொலைபழக்கு முகத்தால், பலகாலும் எடுத்து ஓட்ட, அக்காலை, அக் களிறுகள் பெருவிசைகொண்டு எழுதலும், அவற்றின் விசையைக் காண்டற் பொருட்டு, இம்மறவர்கள் அவற்றின் முன்பு ஓடிப்பார்ப்பார். அவை தம்மைப் பிடித்துக்கொண்டு தம்மேல் வாராமல் அஞ்சி மீளுதற்கென, அவற்றின் கால்களிற் பொதுக்கும்படி, சில பல கப்பணங்களை, *அவை வரும்வழியில் நிலத்தே சிதறுவர். இப் பயிற்சி முடிந்ததும், இவர்கள் கட்டெளிவையுண்டு மகிழ் சிறந்து தெருக்களிற் றிரிதருவர். வளமனைமகளிர் புதல்வர்ப் பயந்து புனிற்றுப் மெலிவுந்தீர்ந்து குளநீராடலும், அவரைக் காணும் தலைச் சூல் மகளிர் கடவுளைப் பரவுதலும் செய்வர். ஒருத்தி நாற்றம், தோற்றம் முதலியவைகளால் வேறுபட்டாளாக, அவட்கு அவ் வேறுபாட்டுக்கண், முருகனால் வந்தது என வெறியாட்டயரும் வேலன் அவடன் பெற்றோர்க்கு நயம்படக்கூறி, அவரைத் தன் சொல்லால் வளைத்துக்கொண்டு, சல்லி, கரடி முதலிய இன்னியங்கள் கறங்க, கார்காலத்து மலரும் இயல்பினையுடைய குறிஞ்சி மலரைச் சூடி, கடம்புசூடி அழகு மிகும் முருகனைத் தன் மெய்க் கண்ணிறுத்தி, வழிபாடு செய்வன். அதுபோது மாதர்மகளிரும் மதவலி மைந்தரும் தாதுபோலும் எருப்பரந்த மன்றங்களிற் குரவையயர, ஏனையோர் உரையும் பாட்டும் இடையிடையே விரவப்பாடியும் ஆடியும் மகிழ்வர். இங்ஙனம், பல நிகழ்ச்சிகள் நிகழ்வதனால் பல வேறுவகைப்பட்ட கம்பலை மிகுந்து, பேரிசை கொண்ட நன்னன் என்னும் வள்ளல் கொண்டாடும் பிறந்த நாட்கொண்டாட்டத்தன்று எழும் ஓசையை ஒத்து இமிழும். பானாட்கொண்டகங் குல்யாமம்: (இரண்டாம் யாமம்) இது பதினைந்தாம் நாழிகையை முடிவாகக்கொண்ட பகுதி யாகும். இதன் கண், சங்குகளை முழக்கும் முழக்கம் ஒரு புடையடங் கியவிய, பண்டங்களின் விலைகூறி விற்பனை செய்யும் வணிகர் தம் கடைகளின் சட்டக்கால் எனப்படும் காழைச் சாய்த்துத் தம் நெடிய கடைகளை யடைத்துக்கொண்டு இல்லம் ஏகுவர். மடப்பம் மதர்ப்பு முதலிய உயரிய குணங்களும் ஒள்ளிய இழைகளும் கொண்டமகளிர் பள்ளியிற் கண்டுஞ்சல் செய்வர். வரிபொருந்திய தேனிறாலொப்ப, அடை, மோதகம், கரைத்தமாவப்பம் முதலிய வற்றை விற்கும் அப்பவாணிகர் அவற்றோடே தூங்குவனராய் உறங்க, கூத்தாடல் பயின்ற வயிரியரும் பிறரும் கூத்தாட் டொழிந்து உறங்க, பாடு அவிந்து அடங்கிய பனிக்கடல்போல் பாயில் கண்வளர்வோர் இனிது கண்ணயர்வர்.  24. நன்னனும் பரணரும் நன்னன் என்பவன் சேரன் செங்குட்டுவன் காலத்துக்குச் சிறிது பிற்காலத்தில் சேரனாட்டு ஒரு பகுதியில் இருந்து அரசு புரிந்த குறுநில மன்னன். இவன் வேளிர் குலத்தில் தோன்றியவன்; இவனுடைய பெற்றோர் வரலாறு ஒன்றும் தெரிந்திலது. இவனுடைய நாடு கொண்கான நாடு என்று கூறப்படு கின்றது. இதுவே பின்னர், கொங்கணநாடென்றும், கொங்கு நாடென்றும் மருவி வழங்கிவரலாயிற்றென்று கூறுப. இதனுடைய பரப்பு, இக்காலமுறைப்படி, மைசூர் நாட்டின் தென்பகுதியும், சேலம் கோயம்புத்தூர் ஆகிய நாடுகளும், நீலகிரி மேலகிரி முதலிய கிழக்குமலைத் தொடரின் பகுதியும் கொண்டிருந்தது. இந்நாட்டின் கண் பாரம், பிரம்பு, வியலூர், பாழி என்னும் சிறந்த நகரங்களும், பாழி, ஏழில் முதலிய மலைகளும் இருந்தன. இந் நாட்டின்கண் கொண்கானம் என்னும் சிறந்த மலை யிருந்தமையின், அதனைச் சூழ்ந்த இந்நாடும் கொண்கான நாடு எனப் படலாயிற்று. இந் நாட்டின்கண் பொன்மிகுதியாகக் கிடைக்கும். மேற்கூறிய நகரங்களுள் பாரம் என்பது இவனுக்கே உரித் தாயினும் நாட்டின் பரப்புடைமையும், ஆட்சியருமை யுடைமையும் குறித்து, மிஞிலி என்னும் வீரன் ஒருவன் ஆட்சியின் கீழ், இருந்தது. பாழி என்னும் நகரம், பாழி யென்னும் மலையடியிலிருந்த பேரூர்; இதன்கண், நன்னன் தான் ஈட்டிய பொருளை வேளிர் பலர் காவல்செய்ய வைத்திருந்தான். இது தேன்வளம் சிறந்தது. நன்னன், பலரைப் புறங் கண்டு அவர் அருங்கலம் கொணர்ந்து பாழிக்கண் தொகுத்து வைத்தமையே யன்றி, "இடனின்றி இரந் தோர்க்கு இல்லென்றல் இழி" வெனக் கருதி வரையாது வீசும் வள்ளன்மையும், புலவர் பாடும் புகழும் படைத்தவன். இவன் காலத்தின் "நாண்மங்கலம்" என்னும் பிறந்தநாட் கொண்டாட்டம் நிகழ்ந்தது. இவன் ஒருகால் கொண்ட வஞ்சினம், தொழிலால் முற்றுப் பெறுங்காறும், அது தணியான் எனப் பெறப்படுவது அவன் போர்ச் செயல்களால் அறியலாம். இவன் காலத்தில் பிண்டன், அதிகன் என்பார் மிக மெய்வலி படைத்திருந்தனர். இவருள் அதிகன் என்பவன், பாண்டியன் ஆணைக்கீழ் நிற்கும் குறுநில மன்னன். ஆகவே, அவன் அதிகன்பசும்பூண்பாண்டியன் என வழங்கப் பெறுவானாயினன். இவன் போர்த்தொழிலில் மிக்க வன்மை யுடையவன்; நல்லிசை தரும் இரவலர்க்குப் பெரும் பொருள் அளித்து அழியாப் புகழ் பெற்றவன்; வில்லேந்திய படைவீரர் பலர் கொண்டவன். நன்னன் இவ் விருவரையும் வென்று பெரும் பொருள் கொண்டதோடமையாது, அப்பொருள்களை அவர்நாட்டு யானை மீதேற்றி, அவர்தம் மகளிர் கூந்தலால் கயிறு திரித்துப் பிணித்துக் கொணர்ந்து தனது பாழிநகரின் கண் வேளிர் காப்ப வைத்தனன். நன்னன் சென்ற விடங்களிலெல்லாம் தன் வென்றியே விளங்கச் செய்தற்குத் துணையாக ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன் எனப் பல வீரர் இருந்தனர். இவருள் கட்டி யென்பான் சிறந்த வீரனல்லன்; இவன் தித்தன் வெளியன் என்பா னோடு போர்செய்யத் தொடங்கிச் சென்றவன், அவனுடைய அவைக்களத்து எழும் கிணையோசை கேட்டு அஞ்சி யோடினான். ஒருகால், நன்னன், இவர்தம் துணையுடன், பெரும்பூண் சென்னி யோடு போர்செய்யச் சென்று, அவனுடைய படைவீரனாகிய பழையனைக் கொல்ல, அதனாற் சினம் சிறந்து பெரும் போருடற்றிய சென்னிக்குப் புறந்தந்து ஓடினன். நன்னன் படைவீரருள் மிஞிலி யென்பவன் சிறந்த வீரன்; நன்னன் புகழ்க்கு முதற்காரண மாகியோன் இம் மிஞிலியே எனக் கோடல் வேண்டும். இவன் அன்னி யென்னும் வீரனுக்கு மகன். இந்த அன்னி, அக்காலத்தில் பெரும் வலிச் சிறப்புடையனா யிருந்த திதியன் என்பவனுடைய காவல்மரத்தைத் தடிந்து, வேள்எவ்வி என்பவன் கூறிய நல்லுரையையும் கேளாது, அவன் சினத்திற் காளாகிப் பின் அவனோடு போர் செய்து, குறுக்கை யென்னு மிடத்துப் புறந்தந்து வீழ்ந்தனன். பின்னர் அவ்வன்னி, கோசர் களோடு பொருது தோல்வியுற அவர் அவன் கண்களைக்களைந்து அழித்தனர். இச்செய்தியால் ஆறாச் சினமுற் றிருந்த மிஞிலியை நன்னன் தன் படைத்தலைவனாகக் கொண்டு, அக்கோசர்களை வென்றழித்து, வாகைசூடினன், திதியன் இறந்தபின், மிஞிலி அவனுடைய அழுந்தூரின் கண் சிறப்புடன் உலாவினன். அக்காலத்தில், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேரவேந்தனுக்கு ஆய்எயினன் என்னும் படைத் தலைவன் ஒரு வனிருந்தனன். இச்சேரனுக்கும், நன்னனுக்கும் எக்காரணத்தாலோ பகைமையுண்டாக, எயினன் மிஞிலியோடு போர் செய்யத் தொடங்கினான். எயினனுக்குப் பலர் மிஞிலியின் வலியுடைமை விளங்கக் கூறியும் எயினன் கொள்ளாது போர் செய்து ஒழிந்தான். இதனா லுண்டான சினம் நார் முடிச் சேரலுக்கு விரைவில் அடங்கிற்றன்று; சேரனுக்கும் நன்னனுக்கும் கடம்பின் பெரு வாயில், வாகைப் பெருந்துறை என்னும் இரண்டிடங்களில் போர் நிகழ்ந்தன. இவற்றுள். வாகைப் பெருந் துறைப் போர்க்கண்ணே, நன்னன் பெரும்போர் செய்து தன்னாடிழந்து ஆவியு மிழந்தான். இது நிகழ்ந்த சிறிது காலத்துக்கு முன்னர், பெண்கொலை ஒன்று புரிந்து தீராப் பழியும் பெற்றான். குணம் குற்றம் இரண்டினுள் ஒன்றே யுடையார் உலகத் திலரன்றோ! பெண்ணொருத்தி நீராடச் சென்றவள், நீர்க்கண் மிதந்து போந்த இவனுக்குரிய முற்றாத பழம் ஒன்றைத் தின்றொழிந் தாளாக. அது பொறாத இவன், அவள் தந்தை எண்பத்தொரு களிறுகளையும், அவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளாது, அவளைக் கொலையே புரிந்தழிந்தான். இவன் ஒருகால் ஒளவையார் தன்னைப் பாடி வந்தமை யறிந்து அவர் வரிசையறிந்து பரிசில் நல்கா தொழிய, அவர் இவனை வெறுத்துப் பாடினர். இனி, இவனது வரலாறு அறிதற்குப் பேருதவியா யிருந்த ஆசிரியர் பரணர் பாடல்களை ஒவ்வொன்றாக ஆராய்வாம். இவற்றுள் அகநானூற்றில் உள்ளனவற்றுள் பலவற்றிற்கு உரை யின்மையின், உரையும் ஈண்டுக் கூறுகின்றோம். பிழை படுவன வற்றைத் தெரிக்குமாறு பெரியோர்களை வேண்டுகின்றேம். ஆசிரியர் பரணர் அகநானூற்றில் தாம் பாடிய முப்பத்து நான்குபாட்டுக்களுள் நன்னன் வரலாற்றுக் கியையப் பதினான்கு பாட்டுக்கள் பாடியுள்ளார். அவற்றுள், இவன் தித்தன், பிண்டன் முதலியோரை வென்ற செய்தியும், ஆஅய் பிரம்பு என்னும் பேரூர் இவனுக்கே உரித்தென்பதும் பிறவுமாகிய செய்திகளோடு பெரும் பாலனவற்றுள் மிஞிலியின் போர்ச்செயலின் நலங்களையும் விளக்கிச் செல்கின்றார். ஏனைக் குறுந்தொகை, நற்றிணை முதலிய தொகை நூல்களுள், நன்னன் கோசரைவென்றமையும், பெண்கொலை புரிந்தமையும், பிண்டன் முதலியோரை வென்று அவர்தம் பொருள் களை மகளிர் கூந்தலாற் றிரித்த கயிற்றாற் கட்டிக் கொணர்ந்தமையும் பிறவும் கூறுகின்றார். இனி, நன்னன், தித்தன், பிண்டன் முதலியோரை வென்ற செய்தி கூறும் பாட்டு, "நெஞ்சுநடுங் கரும்படர் தீர வந்து குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் வணர்சுரி யைம்பால் நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச் சினங்கெழு தானைத் தித்தன் வெளியன் இரங்குநீர்ப் பரப்பிற் கானலம் பெருந்துறைத் தனந்தரு நன்கலம் சிதையத் தாக்கும் சிறுவெள் ளிறவின் குப்பை யன்ன வுறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன் உண்முர ணுடையக் கடந்த வென்வேல் இசைநல் லீகைக் களிறுவீசு வண்மகிழ்ப் பாரத்துத் தலைவ னார நன்னன் ஏழில் நெடுவரைப் பாழிச் சிலம்பிற் களிமயிற் கலாவத் தன்ன தோளே வல்வில் இளையர் பெருமகன் நள்ளி சோலை யடுக்கத்துச் சுரும்புண விரிந்த கடவுட் காந்த ளுள்ளும் பலவுடன் இறும்பூது கஞலிய வாய்மலர் நாறி வல்லினும் வல்லா ராயினும் சென்றோர்க்குச் சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும் மாஅல் யானை யாஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் வேயமைக் கண்ணிடை புரைஇச் சேய வாயினும் நடுங்குதுயர் தருமே" - என்பது. இதன் பொருள்: (கூட்டம் பெறாமையால்) நெஞ்சம் நடுங்கத் தக்க பொறுத்தற்கரிய வருத்தம் நீங்க வந்து, கூட்டத்தால் அந் நோயைப் போக்கிக், குன்றினுக் கணித்தான சிற்றூரின்கட் செல்வான் பெயர்ந்து போகின்றவளுடைய, நெறித்துச் சுரிந்த கூந்தலினையும், நுண்ணிய கோலையு முடைய பாண்மகளிரைப் பாதுகாத்த மிக்க புகழினையும், சினம் பொருந்திய தானை யினையு முடைய தித்தன் வெளியன் என்பானுடைய ஒலிக்கின்ற நீர்ப் பரப்பினையுடைய கானலம் பெருந்துறைக்கண் பொருள் மிகுதியாகக் கொணரும் நல்ல மரக்கலங்கள் சிதையும்படி மோது கின்ற சிறிய வெள்ளிய இறாமீன்களின் தொகுதியை யொப்ப, மிக்க பகையினைச் செப்பும் வலிமை நிறைந்த பிண்டன் என்பானைத் தன் மனமாறுபாடு கெடுமாறு பொருது வென்றவெற்றி பொருந்திய வேலினையும், இசைபயக்கும் வரையா ஈகையும், களிறுகளைப் பரிசிலர்க்குக் கொடுக்கும் வளவிய மகிழ்ச்சியிiனயுமுடைய, "பாரம்" என்னும் ஊருக்குத் தலைவனான ஆரம் அணிந்த, - நன்னன் என்பவனுடைய "ஏழில்" என்னும் நெடிய மலையைச் சார்ந்த "பாழி" யென்னும் மலையின்கட் களித்தாடும் மயிலின் கலாபத்தை யொத்த -தோள், வலிய வில்லினையுடைய வீரர்களுக் குப் பெரிய தலைவனான நள்ளி யென்பவனுடைய மலைப் பக்கத்துத் தழைத்த சோலைக்கண் வண்டுகள் மதுவுண்ண மலர்ந்த கடவுள் விரும்பும் காந்தள் மலர்களுள்ளும் பலவாகப் பெருமிதம் நிறைந்த மெல்லிய மலர்களாகிய கையினைத்தோற்றுவித்து, தன்னை யுள்ளிவந்தவர் ஒன்று கூற வல்லராகவாதல் அல்ல ராகவாதல் இருப்பினும் அவர்க்கு மிக்க சோற்றினை அவர் தம் நெடிய பானை நிறையும்படி அளிக்கும் பெரிய யானைகளை யுடைய ஆஅய் என்பானது கானத்தின் அருகுள்ள தலையாறு என்னுமிடத்து நிலைபெற்ற மிக வுயர்ந்த மலையின்கண் உண்டாகிய மூங்கிலின்கணுவின் இடைப் பகுதியை ஒத்தவாய், நம்மைப் பிரிந்து சேய்மைக்கண்ணே அகன்று நீங்கின எனினும், கூட்டம் பெறாமுன் தந்த நடுங்கத் தக்க துயரத்தையே இனியும், தாரா நின்றன வாகலான் நாம் கூட்டம் பெற்றும் பேறேமாயினேம் என்பது. இஃது, இரவுக் குறிக்கண் தலைமகளைக் கூடி நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. அரும்படர் தீர வந்து சீறூர் ஆங்கண், செலீஇய பெயர்வோள், களிமயிற் கலாவத் தன்ன தோள் ஆய்மலர்நாறி, வேயமைக் கண்ணிடை புரை இச்சேய வாயினும் நடுங்கு துயர் தரும் என வியையும். இரவுக் குறிக்கண் தலைமகளைத் தலைப்பெய்வான் வருபவன் கூட்டம் இடையீடு படுங்கொலோ என்னும் எண்ணத்தனாய் நடுங்கி வருகின்றானாகலின், "நெஞ்சு நடுங்கு படர்" என்றும் அப்படர்தானும், மறைப்பினும் அடங்காது மிகுதலின், "அரும் படர்" என்றும், கூறினான். ஆசிரியர் திருவள்ளுவனாரும், அதனை "இறைப்பார்க்கு, ஊற்றுநீர் போல மிகு" மென்று கூறினார். (குறள் 1161) உழை, ஏழாம் வேற்றுமைப்பொருள் பட வந்த இடைச் சொல். கூட்டம் பெற்றவழி மயிற்கலாவம் போல் மென்மையும் உயர்வு முடையவாய் இன்பம் பயந்த சிறப்புநோக்கிக் "களிமயிற் கலாவத் தன்ன தோள்" என்றும், அவ்வின்பம் தந்து பெயர்ந்தவழித் தாராமையாய் "அறிதோறறியாமை காண்பது போல் மறைந்து துயர்தருதலின் "நடுங்குதுயர்தரும்" என்றும், நெருங்கியவழித் தன் பிரிவினாலுளதாகிய மெலிவு காட்டியும், நீங்கியவழித் தன்மனத்தே தோன்றி நினைப்பித்தும் வருத்துதலின் "சேய வாயினும் நடுங்குதுயர் தருமே" என்றும் கூறினான். உம்மை, எச்சவும்மை. பாண்மகள் கையில் மூங்கிற்கோல் உடையளாதல், தன்பிறப் புணர்த்தற்கென்ப. இங்ஙனம் பாண்மகள் ஒருத்தி காதம்பரி என்னும் வடமொழி நூலின் கண்ணும் கூறப் படுகின்றாள். அவள் கையிலும் மூங்கிற் கோலொன் றிருந்த தென்பது கூறப்பட்டிருக்கிறது. வெளியன் என்பது வெளியம் என்னும் ஊரினன் என்னும் பொருள தென்பர். இவன் உறந்தைக்கண் இருந்து அரசாண்டவன் என்றும், தித்தன் வெளியன் என்றே ஆசிரியர் பரணரே பிறிதோரிடத்தும், "மலிதார்த், தித்தன் வெளியன் உறந்தை நாளவை" (அகம். 226) எனக் கூறி யுள்ளார். இவன் "வீரை வெளியன் தித்தன்" என்றும் "வீரை வேண்மான் வெளியன் தித்தன்" (நற். 58) என்றும் "வீரை வெளியன் தித்தனார்" என்றும் கூறப்படும் சோழமன்னன். அகநானூற்றில் "பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூ"என்று தொடங்கும் பாட்டு இவன் பாடியது. வெளியனல்லுர் என்னும் ஊர் ஒன்று திருவத்திபுரத்துக்குக் கிழக்கே மூன்றுமைல் தூரத்தில் உளது. கானற் பெருந்துறைக்கண் தனம் தரும் வலிய மரக்கலங்கள் சிதையுமாறு சிறியவும் வெண்மையவு மாய இறாமீன்கள் கூடித் தாக்கும் என்ற வுவமையால் வில்லேந்திய வலிய வீரர்களுடன் வரும் தன் படையைச் சிதறுமாறு பிண்டனது சேனை போந்து தாக்கினமை பெற்றாம். அச்செயல் விளங்க ஆசிரியர் "உறுபகை தரூஉம் மொய்ம்மூசு பிண்டன்" என்றார். எனவே நன்கலம் சிதையுமாறு இறவின் குப்பை தாக்கினும், அக்கலங்களின் விசையால் எதிரழிந்து அவை இரிந்தோடல் போலப் பிண்டன் சேனையு மொழிந்த தென்பார், "உண்முர ணுடையக் கடந்த" வென்றார். முருகக்கடவுள் விரும்பும் பூவாகலின் "கடவுட் காந்தள்" என்றார். திருமால் உயர்த்த கொடியைக் கடவுட் கொடி என்பது போல(பரி. 4.43உரை) மலர், உவமையாகுபெயராய்க் கையினை யுணர்த்திற்று "கொடியியலார் கைபோற் குவிந்தன முகை" என்றார் பரிபாடலி லும், பரி. 20.98) 'வல்லினும் வல்லாராயினும் சென்றார்க்குச் சாலவிழ் நெடுங்குழி நிறைய வீசும், மாஅல் யானை ஆஅய் என்றது ஆஅய் அண்டிரனது கொடைமடம்கூறியவாறு சாலவிழ் நெடுங் குழி என்பதற்குச் சால் என்னும் மட்கலத்து ஆழ்ந்த குழி நிறைய எனினுமாம். தலையாற்று நிலைஇய என்பதற்குக் காரணத்தைச் செல்லும் நெறியின் முதற்கண்ணே நிலை பெற்ற எனினுமாம். அதுபோது அது பின்முன்னாகத் தொக்க ஆறாவதன், தொகை, சேயவாயினும் என்புழிச் செம்மையுடைய வாயினும் என்னுரைப் பினுமாம். இதன்கண் பிண்டனது சேனை நன்னன் சேனையை எதி ரூன்றித் தாக்குதலும், அது நோக்கி நன்னன் சேனை அச்சேனையை யழித்துப் பூசல் மாற்றுதலின், இது குறிஞ்சியின் புறமாகிய வெட்சி யாயிற்று. துறை பூசன்மாற்று, ஆய் அவிழ் வீசுதல் வெட்சியில் உண்டாட்டு. இரவுக் குறிக்கண் கூட்டம் பெற்றவன் பெறாதான் போல நெஞ்சொடு நொந்து கூறுதலின், மெய்ப்பாடு; தன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய அழுகை. பயன்; நெஞ்சொடு தன் ஆராமை கூறுதல். குறிப்பு: இரவுக்குறிக்கண் கூட்டம் பெற்றுச் செல்லும் தலைமகன் தன் நெஞ்சொடு கூறுவது பொருளாகப் பாடத் தொடங்கிய ஆசிரியர் முதற்கண் தலைவியின் இயல்கூறிப் பின் அவள் தோள்நிலை கூறுவார் மாட்டுறுப்பாகத் தித்தனது கானலம் பெருந்துறைக்கண் கலங்கள் வரும் சிறப்புக் கூறி அதனையே உவமையாக இயைத்துப் பிண்டனை நன்னன் வென்றமையும், அவனுடைய பாரம் என்னும் நகரம், ஏழில் நெடுவரை, பாழிமலை முதலியவற்றின் நலமும் விளக்கிப் பின்னர் அவள் கைச்சிறப்பினை நள்ளியின் சோலை யடுக்கத்தைப் புகழு முகத்தாற் கூறிப் படிப் போர் மனத்தைத் தம்வயம் கொண்டு இச் செய்திகளுள் நடுநாயகமாய் நன்னன் புகழ் அவர்தம் மனதிற் பதிய வைத்துள்ளமை நோக்கி யின் புறற்பாற்று. இங்ஙன் ஒவ்வொருபாட்டையும் விரித்தெழுதின், இது மிக விரியுமாகலின், இனி ஒவ்வொரு பாட்டையும் பொதுப் பொருள் கூறுமுகத்தால் விளக்கிச் செல்லுகின்றேன். இனி, நன்னன் நகரங்களுள் ஒன்றான ஆஅய் பிரம்பு என்பது உணர்த்தும் பாட்டு. "மேற்றுறைக் கொளீஇய கழாலிற் கீழ்த்துறை யுகுவா ரருந்தப் பகுவா யாமை கம்பு ளியவ னாக விசிபிணித் தெண்கட் கிணையிற் பிறழு மூரன் இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென் பொற்றொடி முன்கை பற்றின னாக வன்னா யென்றனெ னவன்கைவிட் டனனே தொன்னசை சாலாமை நன்னன் பறம்பிற் சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கற்போ னாவினே னாகி மற்றது செப்பலென் மன்னால் யாய்க்கே நற்றேர்க் கடும்பகட் டியானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லங் கிழவோன் நல்லடி யுள்ளா னாகவும் ஒன்னார் கதவ முயறலு முயல்ப அதாஅன்று ஒலிபல் கூந்தல் நம்வயின் அருளாது கொன்றன னாயினும் கொலைப ழுதன்றே அருவி யாம்பல் கலித்த முன்றுறை நன்னன் ஆஅய் பிரம் பன்ன மின்னீ ரோதி யென்னைநின் குறிப்பே" (அகம் .356) என்பது, இஃது இரந்து பின்னின்ற தலைமகற்குத் தோழி தலை மகளைக் குறைநயப்பக் கூறியது. அஃதாவது தோழியை மதியுடம் படுக்கு முகத்தால் தலைமகன் தலைமகள் கண்ணாற் காட்டிய தோழியை யணுகித் தன் குறையிரந்து நிற்ப, அவள் அவற்குக் குறைநேர்ந்து தலைமகளிடம் போந்து, "யான் தலைமகனைத் தெருவிடைக் கண்டேனாக, அவன் என் முன்கை பற்ற, யான் உடனே அன்னாய் என்று கூற, அவன் என் கைவிட்டுச் சென்றனன்; யானும் அதனை யாய்க்கு உணர்த்தினே னில்லை; அவன் பொருட்டு நின்குறிப்பு யாது? கூறுக." என அவள் குறைநயந்து உடம்படுமாறு சொல்லியது. இதன்பொருள்: மின்னல்போல ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலை யுடையாய்! மேலைத்துறைக்கட் கொள்ளப்பட்டனவற்றைக் கழுவுதலால், கீழைத்துறைக்கண் உதிர்ந்து தப்பி, வருவனவற்றை யுண்டற்குத் திறந்த வாயை யுடைய யாமை, கம்புட்கோழி பாடுமகனாக விளங்க, வார்க்கட் டமைந்த தெளிந்த கண்ணை யுடைய கிணையென்னும் இசைக்கருவி போலப் பிறழும் ஊரன், நெடிய தெருவினிடையில், என்னைக் கதுமெனக் கண்டு என் பொன்வளை யணிந்த முன்கையைப் பற்றினானாக, யான் அஞ்சி "அன்னாய்" எனக் கூவினேன்; அவன் உடனே என்கையை விட்டனன்; பழைய விருப்ப மமையாமையினால், நன்னனது பறம்பின்கண் சிறிய பணையினால் அரக்கொடு கூட்டப்பட்டு அசையாது நிற்கும் கல்லைப்போல் அசையாத நாவினை யுடையேனாய், யாய்க்கும் செப்பா தொழிந்தேன்; ஆகவே, நல்ல தேரினையும் விரைந்த செலவினையுடைய யானைகளையு முடைய சோழர் குடியோ னாகிய நீண்ட கதிர்களையுடைய நெல்வயல் மிக்க "வல்லம்" என்னும் ஊருக்குரியோன் பிறர் தன் நல்ல அடியை அடைதலை நினையா னாயினும், பகைவர், அவனது அந் நெஞ்சத் திட்பத்தைக் கொள்ளாது அவன் கோபிக்கத்தகுவனவற்றை முயலுதலும் செய்வர்; அதனால் அவன் அவர்களையே யன்றி, தழைத்த பலவாகிய கூந்தலையுடைய நம் போலும் மகளிர்மாட்டு மருள்செய்யாது அப்பகைவரோடு கொல்லுவா னாயினும் அது குற்றமாகா தன்றே. அருவியும் ஆம்பலும் தழைத்த முன்துறையினையுடய நன்னனது "ஆஅய் பிரம்பு" என்னும் நகரத்தை யொத்த நின் கருத்து யாது? கூறுக, என்பது. கல், சாணை, அரக்கும் கல்லும் கூட்டிச்செய்த கல்லை வேறு பிரிக்கவும் அசைக்கவும் ஒண்ணாதென்று, "கற்போல் நாவினேன்" என்றார். தன்னை யடைந்தார்க்கு ஆதரவு செய்யும் இயல்பிற்றா கலின், "நல்லடி" என்றார். ஒன்னார் அவன் வெறுப்பனவற்றைச் செய்து வெகுளுவித் தலால் அவன் அவரைச் செகுத்தல் குற்றமன் றாகலின், அவர் மகளிரைக் கோறலும் குற்றமன்றா மென்பாள் "கொன்றனனாயினும் கொலை பழுதன்றே" என்றாள். உம்மை, கொன்றது, குற்றமே யென்பதுபட நின்றது. ஒன்னாரது நல்லடி யுள்ளானாகவும், அவர் உள்ளியதாகக் கருதி அவன் வெறுப்பனவற்றைச் செய்ய முயல்ப, அதனால் அவன் சினந்து நம்போல் வாரிடத்தும் அருள்செய்யாது கோறல் குற்றமன்று என்றும்; நல்லடியுள்ளிய காலத்துத் தான் அருள் செய்தல் வேண்டுமென்பதை நினையானாகவும், பகைவர் அவன் அருள் செய்யத் தகுவனவற்றைச் செய்தலின்றி வெகுள்வனவற்றைச் செய்தலின் அவன் செய்யும் பெண்கொலை பழுதாகாதென்றுமாம். "சோழர் மருகன்" என்றதனால் குடிப்பெருமையையும் "நல்லடி யுள்ளான்" என்றதனால் அவனது மறமுடைமையும் நோக்காது, ஒன்னார் தகாதனவற்றைச் செய்ய முயல்வர்; அவன் அவற்றைக் காத்தற்பொருட்டு மிக்க செயலைச் செய்தல் குற்றமாகா தென்ப தாம்; எனவே, ஆடவர் தம் குடிப்பெருமையும் ஆண்மையும் காத்தற்பொருட்டு மகளிர்மாட்டும் அருள் செய்யாது மிக்க செயல் செய்வாரதலின், ஊரனும், தான் உள்ளியது பெறற் பொருட்டு மடலேறுதல், வரைபாய்தல் முதலிய மிக்க செயல்களையும் செய்வன்; அஃது அவற்குக்குற்றமாகா தாகலின், நாம் அவன் வேண்டும் குறைநேர்ந்து தடுத்தல் நம் கடன் என்பாள். "என்னை நின் குறிப்பு" என்றாள். "இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டு, பொற்றொடி முன்கை பற்றினன்" என்றதனால் தலைவன் இரந்துபின்னின்றதும், "கற்போல் நாவினேனாகி மற்றது, செப்பலென் மன்னால்யாய்க்கே" என்றதனால் தான் அவற்குக் குறைநேர்ந்தமையும், "என்னை நின் குறிப்பே" என்றதனால் குறைநயக்குமாறும், கூறினாளாம். மெய்ப்பாடு: தன்கண் தோன்றிய இசைமை பொருளாகப் பிறந்த பெருமிதம். பயன்: தலைமகள் கேட்டுக் குறை நயப்பாளாவது. இனி, நன்னன் தன் பாழிநகரத்தின்கட் பொருள் வைத்து வேளிர் பலர் காப்பச் செய்த செய்தி கூறும் பாட்டு, நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்னினும் அருமைநற் கறிந்து மன்னோட் டுன்னல மாதோ வெனினுமஃ தொல்லாய் தண்மழை தவழுந் தாழ்நீர் நனந்தலைக் கடுங்காற் றெடுக்கு நெடும்பெருங் குன்றத்து மாய விருளளை மாய்கற் போல மாய்கதில் வாழிய நெஞ்சே நாளும் மெல்லியற் குறுமகள் நல்லக நசைஇ யரவிரை தேரு மஞ்சுவரு சிறுநெறி யிரவி னெய்தியும் பெறாஅ யருள்வரப் புல்லென் கண்ணை புலம்புகொண் டுலகத் துள்ளோர்க் கெல்லாம் பெருநகை யாகக் காமம் கைம்மிக வுறுதர வானா வரும்படர் தலைத்தந் தோயே," (அகம். 258) என்பது இஃது அல்லகுறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. இதன்பொருள்:- நெஞ்சே! நன்னனாகிய உதியன் கிட்டுதற்கரிய காவலமைந்த பாழி யென்னும் நகரின்கண் மிகவும் தொல்லோ ராகிய வேளிர் பலர் காவல் செய்ய வைத்த பொன்னினும் இவள் (தலைமகள்) பெறுதற் கரியளாதலைத் தெளிய அறிந்து வைத்தும், அவளை நெருங்கா தொழிகுவம் என்றாலும், அமையாது, வருத்துகின்றனை; மேலும், நாடோறும் மென்மையான இயல் பமைந்த சிறியவளுடைய நல்ல மனையை விரும்பி, பாம்புகள் தமக்குரிய இரையைத் தேடுகின்ற அச்சம் பொருந்திய இரவிற் சென்றும், அவளது கூட்டத்தைப் பெற்றாயில்லை; கண்டோர் நெஞ்சத்து இரக்கம் எய்துமாறு புல்லென்ற கண்ணையுடையை யாய்த் தனிமையுற்று வருந்தி, உலகத்தி லுள்ளவர்களெல்லாரும் கண்டு நகைசெய்யும் வகையிற் காமம் பெருகி வருத்துதலால் அமையாத தடுத்தற்கரிய நோயை மிகத் தந்தனையாதலால், குளிர்ந்த மேகங்கள் தவழப் பெய்த மழைநீர் தாழ்ந்தோட, அதனிடையில், பெருங்காற் றெழுந்து சவட்டும் நெடிய மலையின் மிகக் கருத்த இருள் நிறைந்த முழைஞ்சினுள் விழுந்து மறைகின்ற கற்போல நீயும் விழுந்து மாய்வாயாக, என்பது. நெஞ்சே, உதியன் பாழியின்கண் வைத்த பொன்னினும் அருமை நன்கறிந்து வைத்தும், எனினும், ஒல்லாயாய், நல்லகம் நசைஇ, நெறியை இரவின் எய்தியும், பெறாதொழிந்தனை; மேலும், புல்லென் கண்ணையாய்ப் புலம்புகொண்டு நகையாக, காமம் கைம்மிக வுறுதர, தலைத்தந்தோய் ஆதலால் மாய்கல் போல மாய்வாயாக என வியையும். 'நன்னன் உதியன் அருங்கடிப் பாழித், தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்னினும் அருமை" என்றதனால் தலை மகளைச் சென்று தலைப்பெயற்குக் கூடாவகை அமைந்துள்ள காவலும், அதனைக் கடத்தற் கருமையும் விளக்கிய வாறாம். கூட்டம் இடையீடுபட்டு எய்தப் பெறாமையின், "அன்னோள் துன்னலம்" என்றும், பின்னர்த் தலைமகளால் அவ்விடையீடெய் தாமை யுணர்ந்தவிடத்து, அவ் வொழுக்கத்தி னிடத்தே உள்ளம் சேறலின், "அஃதொல்லாய், நாளும்............ இரவின் எய்தியும்" என்றும், வினைமேற் கொண்டவன், இடையி லுளவாம் இடையீடு களால் மனமுடைந்து புலம்புகொண்டு மடங்குவானாயின், அறிவும் மானமு மிலன்என உலகத்தார் இகழுதலின் "உலகத் துள்ளோர்க் கெல்லாம் பெருநகையாக" என்றும் கூறினான். "அரவிரை தேரு மஞ்சுவரு சிறுநெறி, இரவின் எய்தியும்" என்றதனால், முற்போந்து அவளது துன்னற் கருமையுணர்ந்தது பகற்குறி யிடையீடுபட்ட தென்பதாம். எனவே, தலைமகன் இரவினும் பகலினும் குறிவழி யொழுகி இடையீடுபட்டுக் கூட்டம் பெறாமையின், கலக்கமுற்றுப் புலம்புகொண்டு நெஞ்சினை நெருங்கிக் கூறுவா னாயினன் எனவறிக. "இன்பத்தை வெறுத்தல்" (தொல். பொ. 270) என்ற மெய்ப் பாட்டியற் சூத்திரத்து "நலத்தக நாடிற் கலக்கமு மதுவே" என்றது கொண்டு, "இவ்வாறு கூறவே இச்சூத்திரத்து ளோதிய இருபது மெய்ப்பாடுந் தலைமகற்கும் ஏற்றவகையானே கொள்ளப்படும்" என்பவாகலின், இதன்கண் "அரவிரைதேரும் அஞ்சுவரு சிறுநெறி" யென்றது ஏதமாய்தல், "புல்லென் கண்ணை புலம்புகொண்டு" என்றது ஆங்கு நெஞ்சழிதல். "உலகத்து, உள்ளோர்க் கெல்லாம் பெருநகையாகக், காமம் கைம்மிக வுறுதர, ஆனா வரும்படர் தலைத் தந்தோய்" என்றது உடம்பு நனி சுருங்கலும் கலக்கமுமாம். ஏனை மெய்ப்பாடு; அழுகையைச் சார்ந்த இளிவரல் பயன் நெஞ்சொடு நேர்தல். பின்வரும் பாட்டும் இப்பொருட்டே யாகும். அருந்தெறல் மரபின் கடவுள் காப்பப் பெருந்தேன் றூங்கு நாடுகா ணனந்தலை யணங்குடை வரைப்பிற் பாழி யாங்கண் வேண்முது மாக்கள் வியனகர்க் கரந்த வருங்கல வெறுக்கையி னரியோள் பண்புநினைந்து வருந்தின மாதோ வெனினுமஃ தொல்லாய் இரும்பணைத் தொடுத்த பலரா டூச லூர்ந்திழி கயிற்றிற் செலவர வருந்தி நெடுநெறிக் குதிரைக் கூர்வே லஞ்சி கடுமுனை யலைத்த கொடுவி லாடவர் ஆகொள் பூசலிற் பாடுசிறந் தெறியும் பெருந்துடி வள்பின் வீங்குபு நெகிழா மேய்மணி யிழந்த பாம்பின் நீநனி தேம்பினை வாழியென் னெஞ்சே வேந்தர் கொண்டணி யெயிலிற் காப்புச் சிறந் தீண்டருங் குரையள்நம் மணங்கி யோளே. இதுவுமது. (அகம். 372) உரை: என் நெஞ்சே! தடுத்தற்கரிய தெறுதற் றொழிலைச் செய்யும் முறைமையினை யுடைய தெய்வம் நின்று காத்தலைச் செய்ய, பெரிய தேனடைகள் தூங்கும் கொண்கானநாட்டின் இடையிலிருக்கும் தெய்வ மகளிரையுடைய மலையைச் சார்ந்த பாழியென்னும் நகரின்கண் வேளிராகிய முதுகுடி. மக்கள் அகன்ற பேரகத்தி னிடத்தே மறைத்துவைத் தோம்பிய அரியவாகிய பொன்னும் மணியும் போலப் பெறுதற் கரிய தலைமகளது அருமைப் பண்பினைநினைத்து, "இனி இவளைப்பெறேம்" என வெண்ணி வருத்தமுறுவே மாயினேம் என்று கூறியும். நீ அது கேட் டமையா யாயினை; பெரிய மூங்கிலிற் பிணித்த பலராடும் ஊசலினது ஏறியும் இறங்கியும் வரும் கயிற்றைப் போல வறிதே செல்லுதல் வருதல் என்ற தொழில்கட் கஞ்சி, நீண்ட வழியினை யுடைய குதிரைமலைக்கு உரியவனான கூரிய வேலேந்திய அஞ்சி யென்பவனது அச்சம் பொருந்திய போர்முனைக்கண் நின்று பகைவரை வருத்திய வளைந்த வில்லேந்திய வீரர் பகைப்புலத்து ஆவினைக் கொள்ளும் போரின்கண் ஒலிமிக்கு எறியப் படும் பெரிய துடியின் வாரைப்போல வருத்தத்தால் விம்மி நெகிழ்ந்து, மேய்தல் காரணமாக வுமிழ்ந்த மணியை யிழந்து தடுமாறும் பாம்பைப் போல நீ மிகவும் கலக்க முற்று வருந்தினை நம்மை வருத்திய அவள், வேந்தர் பகைப்புலத்தே வென்று கவர்ந்து வலியாகிய அழகு செய்யப்பட்ட மதிலைப் போலக் காவல் மிக்குற்று நெருங்குதற்கு அரியளாயினாள், காண் என்பது. என் நெஞ்சே! பாழியின்கட் கரந்த வெறுக்கையின் அரி யோளின் பண்பு நினைந்து நாம் வருந்தின மெனினும், அஃதொல் லாயாய், ஊசற்கயிற்றைப் போலச் செலவுவரவுகட்கு அஞ்சி வருந்தி, வீங்கி நெகிழ்ந்து, மேய்மணி யிழந்த நாகம் போல நீ தேம்பினை; நம் அணங்கியோள், காப்புச் சிறத்தலால் ஈண்டுதற் கரியளாயினாள் என வியையும். பகைவரிடம் கவர்ந்து கொள்ளப்பட்ட எயில், சீர்கேடுற்ற பகுதி முற்றும் சீர்செய்யப்பட்டு அப் பகைவர் மீட்டும் நெருங்கிக் கைப்பற்றாவகைக் காவலமைக்கப்படுதல் போலத் தலைவியொடு நாம் ஒழுகும் ஒழுக்கம், பெற்றோரால் உணரப்பட்டு அவள் வெளிப்போதா வகை இற்செறிக்கப் பட்டளாதலின் இனி நாம் அணுகும் பான்மை யிலளாயினாள் என்றும், மேலே "அருங்கல வெறுக்கையி னரியோள்" என்றதற் கேற்ப, "மேய்மணி யிழந்த" என்றும், மேய்மணி யிழந்த நாகம் பின்னர் உய் வழியின்றி இறத்தல் போலத் தலைமகளைக் கூடுதலை யிழந்த நீ தேம்பிப் பிறிதுபடுவா யென இரங்குவான், "வாழி" என்றும் கூறினான். துடியின் வள்பு அடிக்கப்படுங்கால் விம்முதலும் அஃதொழிந்த விடத்து நெகிழ் தலும் போல நெஞ்சம் கூட்டம் எய்தியவழிக் களிப்பால் விம்மியும், எய்தாவழிக் கலங்கி நெகிழ்ந்தும் நிற்றலின், பெருந்துடி வள்பின் "வீங்குபு நெகிழா" என்றார். குறிஞ்சித் திணைக்கேற்ப அதன் புறனாய வெட்சி கூறுவார், "கொடுவில் ஆடவர், ஆகொள்பூசல்" கூறினார். பலராடும் ஊசல் இரும்பணைக்கண் தொடுக்கப்பட்ட தென்ற மையான், தலைமகன் நெஞ்சம் தலைமகள் தோளிற் பிணிக்கப் பட்ட தென ஒரு நயந்தோன்றியவாறு காண்க. இங்ஙனம் தலை மகனைப் பிணித்தற்குத் தோள் இடமாதல், "பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போலத், தோள்கந் தாகக் கூந்தலிற் பிணித்து" (அகம். 276) என வருதல் காண்க. மெய்ப்பாடும் பயனு மவை. இனி, நன்னன் பிண்டன் முதலிய வேந்தர் பலரை வென்று அவர் மகளிர்தம் கூந்தலாற் கயிறுதிரித்து, அவர்தம் அருங்கலம் கொணர்ந்த செய்தியைக் கூறும் பாட்டு, "தடந்தாள் தாழைக் குடம்பை நோனாத் தண்டலை கமழும் வண்டுபடு நாற்றத் திருள்புரை கூந்தற் பொங்குதுக ளாடி யுருள்பொலி போல வெம்முனை வருந்த வணித்தகை யல்லது பிணித்தல் தேற்றாப் பெருந்தோட் செல்வத் திவளினு மெல்லா வெற்பெரி தளித்தனை நீயே பொற்புடை விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வேந்த ரோட்டிய வேந்துவேல் நன்னன் கூந்தல் முரற்சியிற் கொடிதே மறப்பன்மா தோநின் விறற்றகை மையே," (நற். 270) என்பது. இது தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி வாயில் எதிர்கொண்டது, உடனிலைக் கிளவி வகையால். உரை: *ஏடா! நீ பிரிந்தக்கால் பெரிய தூற்றினையுடைய தாழைப் புதலினாலே கட்டப்பட்ட எமது சிறிய வீட்டின் கண்ணே பொறுக்க முடியாதபடி, சோலையிலுள்ள புன்னை முதலாகிய வற்றின் மலரை முடித்தலால் வண்டுகள் மொய்க்கின்ற நறுநாற்றத்தையுடைய இருளொத்த கூந்தலில் மிக்க துகள் படிய நிலத்திலே புரண்டு சாய்ந்தாற்போலாக எம்முன்னேவருந்து தலை யுடையளாகி அழகழிந்த தன்மை யொன்றல்லாது நின்னை வசமாக்குதலைத் தெளியாத பெரியதோளையுடைய செல் வமகளாகிய இவளினுங் காட்டில் என்னைப் பெரிதும் நீ அன்புசெய் தொழுகா நின்றனை: அங்ஙனமாயினும் நீ பிரிந்து சென்றதானது அழகு பொருந்திய விரிந்த பிடரிமயிர் பொலிவுற்ற விரைந்த செலவினையுடைய நல்ல குதிரைப் படைகளையுடைய பகையரச ராகிய பிண்டன் முதலானோரைப் போரிலே தோற்றோடச் செய்த ஏந்திய வேற்படையையுடைய நன்னன், தான் அப்பகையரசரின் உரிமை மகளிரைப் பற்றிவந்து அவர் தலையை மழித்து அக் கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றாலே அப்பகைவரின் யானையைப் பிணித்த கொடுமையினும், கொடியதாய் இராநின்றது. ஆதலால் நினது வலிய தகுதிப் பாட்டினை யான்மறந்தே விடு கின்றேன், காண், என்பது. தலைவியுடன் எதிர்கொண்டமையால் உடனிலைக் கிளவி யாயிற்று. இவளெனச் சுட்டிநின் றமையின், உடனின்றமை தெளிக. புலவிதீர்க்கும் வாயிலாக யான் அமையாதவழி என்னுட னும் பேசாது வெறுத்தல் செய்வாய், அமைந்தமையால் என்னுடன் பேசுவாயாயினை என்று கொண்டு, "எற்பெரி தளித்தனை" என்றாள். மெய்ப்பாடு: உவகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: வாயில் நேர்தல். இனி, நன்னன் பெண்கொலை புரிந்த செய்தி கூறும் பாட்டு. "மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் றப்பற் கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரயத்துச் செலீஇயரோ அன்னை ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக வூரிற் றுஞ்சலோ விலளே" (குறு. 292) என்பது. இது, தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி கூறியது. உரை: *குளித்தற்குச் சென்ற அரிவை, புனல்கொணர்ந்த பிழைக்காக அவள் தமர் எண்பத்தொருகளிற்றோடு அவள் நிறையுள்ள பொற்பாவையைக் கொடுப்பவும் கொள்ளானாய், அப்பெண்ணைக் கொலைபுரிந்திட்ட நன்னனைப் போல நீக்காத நிரயத்துப் போவாளாக அன்னை; ஒருநாள் விருந்தினனாக வந்ததனால் பகையை முகத்திற்காட்டும் துயிலுதல் இலளாயினாள் ஆகலான். எ-று பறித்திலள்; பழமுமன்று; அவனதேயென்னும் துணிவும் இல்லை; இவள் எடாதொழியின் அவற்கே கிடைத்தலும் ஐய முடையது எனுமிவை புலப்பட "புனல்தரு பசுங்காய்" எனப் பட்டது. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன்: இடை யூறுணர்த்தல். இனி, நன்னன் தன் படைத்தலைவன் மிஞிலி யென்பானது தந்தை அன்னியென்பவனைப் போரில் வென்று அவன் கண்களைக் களைந்தமை காரணமாக, கோசர்களைவென்று அவர் தம் நாட்டின் கண் துரத்தும் செய்தி கூறும்பாட்டு, "மகிழ்நன் மார்பே வெய்யை யால்நீ அழியல் வாழி தோழி நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே" என்பது. (குறுந். 73) இது பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து அதனையும் மறுத் தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது. உரை: தோழி! நீ மகிழ் நனது மார்பையே விரும்புவாயாயினை யேயன்றி, குறிவழி யொழுகுதலால் இவ்வொழுக்கம் பிறரால் உணரப்படின் வரும் ஏதத்தினை யாராயாமையின், தான் அவனை இருவகைக் குறியும் மறுத்தலின், இனிக் கூடுங்கொலோவென மனம் அழுங்காதொழிக; நன்னன் என்பான், வன்மை பொருந்திய கோசர் களின் காவல் மரமாகிய நறிய மரத்தினைத்தடிந்து அவர் தாம் முன்னர் இருந்து போந்தர நாட்டுட் புறந் தந்துபோகப் பொறாதவழி, அக்கோசர்க்கு தேடியிருந்த வன்கண்மை மிக்க சூழ்ச்சியிற் சிறிதேனும் தாம் வேண்டுமாகாலான். என்பது. வெய்யை, வெம்மையென்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த குறிப்பு முற்று. "வெம்மை வேண்டல்" என்ப (தொல். சொல். உரி. 26) ஒன்றுமொழி -மனத்தொடு பொருந்திய மாறுபடாத சொல். நன்னன், போக்கிய, கோசர் என வியையும். நன்னனாற்றுரத்தப் பட்ட கோசர் என்பதாம். கோசர் ஒன்று மொழியுடையரென்பது, "ஒன்று மொழிக் கோசர்க்கொன்று முரண் போகிய, கடுந்தேர்த் திதியன் (அகம். 196) என்பதனாலுமுணர்க. "இளம்பல் கோசர் விளங்குபடைகன்மார், இகலினரெறிந்த வகலிலை முருக்கின், பெருமரக் கம்பம் போலப், பொருநர்க்குலையா நின்வலன்" (புறம். 169) என்பதனால் இவர் படைப் பயிற்சி மிகுதியு முடையர் என்பது பெறுதும். இக்கோசர் தாமும் தம் நன்மொழியாலும், படைப் பயிற்சி யாலும் தம்மை வியந்து, வன்கண்மையும் சூழ்ச்சியும் இலரா யொழிய, நன்னன் அவை யிரண்டு முடையனாய் இவரைவென்றா னெனவே, நீயும்மகிழ்நன் மார்பே விரும்பி, அவன் பிரிவாற்றாது கலங்கி, இவ்வொழுக்கத்தா னுளதாகும் ஏதத்தை நினையா திருந்தனையென்றும், அக்கோசர் தாமும் வன்கட்சூட்சியுடைய ராயின் நன்னன் வென்றியெய்துதலாகாதவாறுபோல, நாமும் வன்கண்மையும் சூழ்ச்சியும் கொள்ளின், ஒழுக்கத்தாலுளவாகும் ஏதங்களை வாராமற் காக்கலாம் என்றும், இவ்வாறு நம்நலங் கருதியே செய்ய வேண்டுதலின், நீ அழுங்குதல் கூடாது என்பாள், "அழியல்" என்றும் கூறினாள். பகற்குறி வருவானை, அதுமறுத்து இரவுக்குறி நேர்ந்தும், அவ்வழி வருவானை மறுத்தும் அலைத்தற்கு வேண்டப்படுதலின் "வன்கண்மையும்," காப்பு மிகுதி கூறியும், படைத்துமொழி யானும் பிறவாற்றானும் தலைமகனைத் தெருட்டி வரைவுகடா தலின் "சூழ்ச்சியும்", இவை தாமும் மிக்க வழித் தலைமகன் ஆற்றானாய் பிறிது படுவனாகலின், "வேண்டுமால் சிறிதே" என்றும், இவற்றைக் கையாளுமிடத்து அவனாற்றாமைகண்டு தலைமகளு மாற்றாளாவள்கொல் என்னுமெண்ணத்தினளாகலின், "அழியல்" என்றதனோடொழியாது "வாழி" என்றும் கூறினாள். "மகிழ்நன் மார்பே வெய்யை" என்றது கைம்மிகலும் நினை தலுமாம். "அழியல்" என்றது நடுக்கம். இம்மெய்ப்பாடுகள், "இவையுமுளவே அவையலங்கடையே" (தொல். பொ. 260) என வந்தனவாம். ஏனை மெய்ப்பாடு இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல். இனி, இதற்கு "நன்னனது சிறந்த யானையைக் கொன்று அவனது நாட்டிற் போகவிட்ட வாய்மைபொருந்திய சொல்லினை யுடைய கோசர்" *என்று இதற்கு இதன் உரைகாரர் கூறுகின்றார். நறுமா என்றற்கு யானையெனப் பொருள் கோடலாகாமையாலும், கொன்ற யானையை மீட்டும் நாட்டின் கட்போக்குதல் ஆகாமை யாலும், கோசர்கள் இன்னோரன்ன செயல் செய்துளரெனற்கு வேறு சான்றின்மையாலும், யாம் கூறியபொருளை யேற்றலாற் கவிப் பொருட் சிறத்தலாலும் அஃது உரையன்மையறிக. இதுகாறும் கூறியவாற்றால், நன்னனது வரலாறும், அது பற்றி ஆசிரியர் பரணர் பாட்டுக்களின் நலனும் பெறப்பட்டனவாம். 25. சிந்தாமணியின் செந்தமிழ் நலம் செந்தமிழ் நலம் பரவிவரும் இக்காலத்தில், பொழிலன்பர் களுக்குச் சிந்தாமணியைப் பற்றி முன்னுரை யாதேனும் கூறல், வேண்டா கூறலாகும். ஆயினும் கற்பனைக் களஞ்சியமாகிய துறைமங்கலம் சிவப்பிரகாசர் முதலிய சைவ நன்மக்களும், புலவர் பெருமக்களும், இதற்குச் "சீவக சிந்தாமணி" யென்ற பெயர் இருக்கவும், சிந்தாமணி யென்று சிறப்பக் கூறும் சிறப்புடைய தாகலின், இக்கட்டுரைக் கேற்பவேனும் சிறிது கூறுவது வேண்டு வதொன்றேயாம். சீவகசிந்தாமணி என்பது நம் செந்தமிழ் மொழியின் நந்தாச் செல்வமாய் விளங்கும் காவியங்களுள் ஒன்று. இதன் தலைமகன் சீவகன் என்பவன். இவன் பலமகளிரை மணந்து முடிவில் துறவு பூண்ட அரசகுமரன். இச்செந்தமிழ் நூல் திருத்தக்கதேவர் என்ற சமண முனிவர் ஒருவரால் இயற்றப் பெற்றது. இதனை அச்சேற்றித் தமிழுலகிற்கு உதவிய பெருமை டாக்டர். உயர்திரு. உ.வே. சுவாமி நாதய்யர் என்னும் செந்தமிழ்ச் சிறப்புடை அந்தமில் வரலாறு, பலவும் நிலவும் நிலையமாய், நுண்மாண் நுழைபுலத் தமிழ்மாண் புலமையொடு இன்மொழி வழங்கும் செம்மலாய் வழங்கும் பெருமகனாராவர் அவர்கட்கு, இவ்வுதவிபற்றித் தண்டமிழ் உலகு என்றும் நன்றி செலுத்தும் கடப்பாட்டினால் இவர் நெறிக்கண் அடித்தொண்டு புரியும் அறம் உடைத்து. இந்நூற்கண், கற்பார்மனத்தில் செந்தமிழின் தீவிய நலத் தைத் தேர்ந்து நுகர்தற்குரிய பகுதிகள் மிகப்பலவாகும். அவற்றைத் தேர்ந்து நுகரும் நெறிகளும் பலவாகும். ஆசிரியர் உயர்திரு. அ.வரதநஞ்சையப்பிள்ளை முதலிய அருந்தமிழ்ச் சான்றோர் தம் பால் ஆரச் சிறந்து நிற்கும் மதிநுட்பத்தால் ஒவ்வொரு கவியினையும் ஆராய்ந்து காட்டும் உரிமையுடையோராயுளர். உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உதவிய நல்லுரையின்றேல், இதன் செந்தமிழ் நலம் இனிது விளங்கியிராது என்று பலரும் கருதுவர். இதனை ஆராய்தற்கு விரும்பிய மாணவர் சிலர்க்கு இதனை உரைத்துவருகையில், அவர் சீவகனால் மணக்கப்பெறும் மகளிருள், குணமாலை, சுரமஞ்சரி என்ற இருவருடைய குணநலம் பற்றித் தம்முட் சொல்லாடிப் பிணங்குவாராயினர். அவர் பொருட்டு இவ்வாராய்ச்சி செய்யப் பெற்றமையின், இக்கட்டுரைக்கண் இவ்விருவருடைய வரலாற்றினை ஆராயுங்கால் தோன்றும் செந்தமிழ்த் தீஞ்சுவை நலத்தை நம் தமிழ்ப்பொழில் அன்பராகிய "தேனூற நின்று தெருண்டார்" திருமுன் செப்பலுறுகின்றேன். சீவக சிந்தாமணி யென்னும் இக்காவியத்துக் கதை நிகழ்ச்சிக்கு நிலைக்களம் ஏமாங்கதம் என்னும் இசையால் திசைபோகிய நாடாகும். இதற்கு இராசமாபுரம் என்பது தலைநகரம். இந்ந கரத்தே கந்துக்கடன் என்னும் சீரியோன் செல்வமனையில் சீவகன், கல்வி கேள்விகளில் ஒன்மையும், படையாண்மையில் வன்மையும் பெற்றுச் சிறந்து வாழ்ந்துவருகின்றான். அங்கே குபேரமித்திரன் என்னும் செல்வன் தன் மனைவி வியைமாலை யொடுகூடி இல்வாழ் பவன் குணமாலையென்னும் நங்கையைப் பயந்து வளர்த்து வருகின்றான். அவளும் திருமணத்துக்குரிய பருவ முடையளாய், நற்குண நற்செய்கையிற் சிறந்த நங்கையாய் வாழ்ந்து வருகின்றாள். அந்நகரத்தே குபேரதத்தன் என்னும் திருமிக்கோன் இருக்கின்றான். அவன் மனைவிபெயர் சுமதி என்பது. அவ்விரு வரும் கூடிப்பெற்ற காதலின்பப் பயனே சுரமஞ்சரி யென்னும் பெண்ணணங்கு. குணமாலையும் சுரமஞ்சரியும் ஒத்த உருவும், திருவும், உயர்நிலைக்கல்வியும் வாய்க்கப் பெற்ற ஒண்டொடியர். பண்டைக்காலத்தில் நம் நாடடுச்செல்வர் வேனிற்காலத்து நகரின் நீங்கி, யாறும், குளமும், காவும் புக்கு நீராடியும், பொழில் விளையாடியும் போகநுகர்தல் மரபன்றோ? "யாறும் குளனும் காவும் ஆடிப்பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப" என ஆசிரியர் தொல்காப்பியனாரும் கூறுகின்றாரன்றோ? அம்முறையே, ஏமாங்கத நாட்டிலும் நிகழ்வது மரபு. அந்நகர மாந்தரும், வேனிற் காலத்துப் பொழிலாடலும் நீராடலும் புரிந்து போகநுகர்தலை மேவுகின்றனர். அக்காலத்தில் இளமகளிர் தாம் பெற்ற கல்விப் பயனால், சுண்ணப் பொடி செய்தல் இயல்பு. அம்முறையே வேனிற்காலத்தில், பொழில் விளையாடலும் நீர் விளையாடலும் நயந்த நகரமாந்தருடன், குணமாலையும் சுரமஞ்சரியும் தாம் செய்த சுண்ணத்தோடு பொழிலின்கண் சென்று தங்கியிருக்கின்றனர். இருவரும் இன்பமாக உரையாடியிருந்த காலத்தில், குண மாலையின் தோழி, மாலை யென்பவள், குணமாலை செய்த சுண்ணத்தை, அவள் குறிப்பின்படி, சுரமஞ்சரிக்குக் காட்டு கின்றனள். அவள் தன் சுண்ணத்தினும் சிறந்ததன்று என்று குறித்து நகையாடுகின்றனள். அது கேட்ட குணமாலை, "தன் சுண்ணத்தின் மிக்க சுண்ணம் பெறலரிது; ஒப்பனவுளவாயின் அவை சிலவேயாம்; அச்சிலவற்றுள் ஒன்றாக வேண்டுமாயின், நீ கூறிக் கொள்க" என் கின்றாள். இதனால் இவ்விருவர்க்கும் மன வேறுபாடு உண்டாகிறது. முடிவில், இருவர் சுண்ணத்தையும் அறிந்தார்பால் காட்டி, மிக்கது துணிதல் நன்றென்று துணிந்து, இருவரும் தத்தம் சுண்ணங்களைத் தோழியர்பால் தந்து அனுப்புகின்றனர். தோழியர் இருவரும், தக்கோர் சிலரையணுகித் தம் கருத்தை அறிவிக்கின்றனர். அவர்கள், "இத்துறையிலும் பிறவற்றிலும் வல்லுநன் சீவகனே; அவன்பாற் காட்டித் தெளிந்து கொண்மின்," என்கின்றனர். என்றலும், அவர்கள், அப்பொழிலகத்தே ஒருபால் தன் தோழர் சூழவீற்றிருந்த சீவகனை யடைந்து தம் கருத்தைத் தெரிவிக்கின்றனர். சீவகன், இருவர் சுண்ணங்களையும் பார்த்து, "குணமாலை செய்த சுண்ணமே சீரிது" எனக்கூறி, அதனைத் துணிவதற்காக வண்டுகளை யழைத்து, அவற்றின் முன் இருவர் சுண்ணங்களையும் அள்ளித் தூவுகிறான். அவை, குணமாலை சுண்ணத்தை உண்டொழிகின்றன; சுரமஞ்சரியின் சுண்ணம் தரையில் விழுகின்றது. இதனால் குணமாலை வெற்றியுறு கின்றாள்; சுரமஞ்சரி தோல்வியுறுகின்றாள். சுண்ணத்தால் தோல்வியுற்று ஆற்றாளாகிய சுரமஞ்சரி, தான் செய்த சூளுரையின்படி நீராடலாகிய விளையாட்டினை விரும் பாமல், நீங்கிச் சென்று, தன் மனையகம் புகுந்து தன் சுண்ணத்தைத் தீதென்று கூறித் தன்னை அவலம் உறுவித்த அந்தச் சீவகன் தானாகவே வலியவந்து தன் சிலம்படி கைதொழுமாறு நோற்பேன் என்று உட்கொண்டு கன்னிமாடம் சமைப்பித்து, ஆடவர் குறுகா அருங்கடி அமைத்து, ஆண்டேவதிதலை மேற் கொள்ளுகின்றாள். இப்பால், சுரமஞ்சரியின் பிரிவால் வருந்தி அரிதுதேறிச் செய்வனசெய்து தெளிந்த குணமாலை, நகரமாந்தரோடு கூடித் தானும் நீர்விளையாட்டினை இனிது அயர்கின்றாள். சீவகனும் தோழரும் நகரமாந்தர் விளையாடும் காட்சியினைப் பார்த்துக் கொண்டு வருகின்றனர். பின்பு, விளையாட்டு முடிந்ததும், மக்கள் அனைவரும் நகர்க்குத் திரும்புகின்றனர். அதுபோது, அசனிவேகம் என்னும் பட்டத்து யானை மதங்கொண்டு பிளிறி வருகிறது. யாவரும் தலைத்தலை மயங்கிச் சிதறி ஓடுகின்றனர். குணமாலை மதிமருண்டு நின்று தவிக்கின்றாள். அசனிவேகமும் அவளைக் கொல்வது குறித்து அணுகுகின்றது. அதுகண்டு பேரச்சங்கொண்ட அவள் தோழி, மாலை யென்பவள், அவட்கு முன்னே நின்று, "ஆடவர் இல்லையோ?" என்று அலறி அரற்றுகின்றாள். அஃது அங்கு வந்துகொண்டிருந்த சீவகன் செவியுற் புகுதலும், அவன் விரைந்து பாய்ந்து, அவ்யானையைத் தகைந்து பிறிதொருபக்கம் புகுவிப்பான், அவளை உயிர்தப்புவிக்கின்றான். தப்பித்தேறிய குணமாலை, தன்னை உய்வித்த வள்ளலின் மேனிநலமும் குணநலமும் கண்களாற் கண்டு, அவனையே மணக்க வேண்டும் என்னும் குறிப்பினளாய், மனையகம் சென்று, அவன் பொருட்டு மெலிகின்றாள். தான் பேணிவளர்த்த கிளியின் பால் தன்காதலை ஒருமுடங்கலில் வரைந்துதந்து, சீவகனிடம் போக்கு கின்றாள். இவளைப் போலவே, இவள்பால் எழுந்த காதலால் வெய்துற்று வருந்தும் சீவகன், அம்முடங்கலைப் பெற்றுத், தன் உடன்பாட்டினையும் தெரிவிக்கின்றான். இதற்கிடையே, குண மாலையை அவள் மைத்துனன் ஒருவற்கு மணம் பேசுகின்றனர். அவள் அதற்கு உடன்படுகின்றிலள். குணமாலையின் மனக்குறிப்புச் சீவகன்பால் உளதெனத் தெரிந்து, பெற்றோர், பின்பு மணம்பேசி, முறைப்படிச் சீவகனுக்குத் திருமணம் புரிவிக்கின்றனர். மணம் புணர்ந்த இருவரும் பெருகிய இன்பம் துய்த்து இனிதிருக்கின்றனர். இஃது இவ்வாறாக, சீவகனால் தகைப்புண்ட அசனிவேகம் என்னும் அரசுவா, கவளமுதலியன கொள்ளாது மெலிந்து வருகிறது. அதுகண்ட கட்டியங்காரன் என்னும் அந்நகர வேந்தன், காரணம் வினவ, பாகர்கள் பொழில் விளையாட்டில் நிகழ்ந்தது கூறு கின்றனர். அவன், சினம் மிகுந்து, தன் வீரரை யேவி, "அச்சீவகனைக் கொணர்க" என்று கட்டளையிடுகிறான். வீரர்கள் குணமாலையோடு இருந்த இல்லத்தைச் சூழ்ந்து கொள்கின்றனர். சீவகன் போர்க் கோலங் கொண்டு வெளி வருகிறான். அக் காலை அவன் பெற்றோர் வந்து, "அரசனுக்கு அடங்கியொழுகுதல் அறம் என்று கூறி அவனை அடங்கிச் செல்லு மாறு வேண்டுகின்றனர். இச்செய்தி காந்தருவதத்தை என்னும் சீவகனுடைய முதல் மனைவிக்கு எட்டுகிறது. அவள் தன் கண வனைக் காத்தற் பொருட்டுத் தெய்வங்களை வேண்டுகின்றாள். அவைதாமும் வந்து அவளைச் சூழ்ந்து நிற்கின்றன. இதனைச் சீவகன் அறிந்து சுதஞ்சணன் என்னும் தன் நண்பன் ஒருவனை நினைக்கின்றான் அவன் விரைந்து மழையோடும் மின்னலோடும் போந்து சீவகனை வானாறாகத் தான்வாழும் பதிக்குக் கொண்டு செல்கின்றான். வீரர்கள் சீவகனைக் காணாமல், வேறொருவனைக் கொன்று விட்டதாகப் பொய்கூறி ஒழிகின்றனர். கட்டியங்காரனும் அதுகேட்டு மகிழ்ந்து போகிறான். இக்கூறிய செய்தி முற்றும் சீவகசிந்தாமணியில், குணமாலை யார் இலம்பகம் என்னும் பகுதியில் விரியக் கூறப் பெற்றுள்ளது. சீவகன் சுரமஞ்சரியை மணந்தகதை சுரமஞ்சரியார் இலம்பகம் என்னும் பகுதிக்கண் விரிக்கப் பெற்றுளது. அதன் சுருக்கம் வருமாறு:- சுதஞ்சணன் என்னும் தேவனால் கொண்டுசெல்லப்பட்ட சீவகன், அவன்பால் சிலநாள் தங்கிப் பின் விடைபெற்று, பல்லவதேயம் முதலிய பலதேயங்கட்குச் சென்று, ஆங்காங்கு, முறையே, பதுமை முதலிய மகளிரை மணந்து, அவர்களை அவரவர் நகரத்தே தமித்திருப்பவிடுத்து, மறுபடியும் இராசமாபுரம் வந்து சேருகின்றான். அப்போது, அவன் மகளிர் விரும்புதற்குரிய வேற்றுருவம் கொண்டே வருகின்றான். அவ்வூரில் சாகரதத்தன் என்னும் வணிகன் மகள் விமலை யென்பவளை மணம்புரிகின்றான். அவள்பால் இரண்டுநாள் தங்கியிருந்து, பின்னர்த் தன்தோழரை அடைகின்றான். அவன் மணக்கோலத்தோடு வருவது கண்ட தோழர், அவன் மணந்த தையலின் பெயர் கேட்டு வியந்து, "இவனேகாமன்" என்று பாராட்டுகின்றனர். அவருள்புத்திசேனன் என்பவன், சீவகன்பால் சுரமஞ்சரியின் விரதநெறியைக்கூறி, "அவளை மயக்கி மணந்துவரின், நின்னைக் காமதிலகன் என்பேன்," என்கின்றான். அதுகேட்கும் சீவகன், "யான் அதனைச் செய்து வருகிறேன்; நீ நாளையே காமன் கோட்டம் புகுந்து மறைந் திரு," என்று கூறிவிட்டு இறப்பமுதிர்ந்த வேதியன் போல வடிவுகொண்டு, சுரமஞ்சரியிருக்கும் கன்னி மாடத்துக்குச் செல் கின்றான். வாயிலில் காவலிருக்கும் மகளிர் அவனைக் கண்டு, அவன் பசியையும் உணர்ந்து சுரமஞ்சரிக்குத் தெரிவிக்கின்றனர். சுரமஞ்சரி அவனைக் காண்டலால் தன் விரதம் கெடாதென நினைந்து, அவன் முன்வந்து, அவனோடு சொல்லும் ஆடுகின்றாள். அவன் கவர்பொருள் எய்தப் பேசுகின்றான். அதனை உணராத அப்பேதை, அவனைப் பித்தன் என்றெண்ணியும், அவனது பசியினைப் போக்குதல் பேரறம் என்று கருதியும், தன் மாடத்தே அழைத்துச் சென்று, அமுதூட்டி, இனிய பஞ்சணையிற்கண் படுவிக்கின்றாள். அவனும் அதன்கண், சிறிது நேரம் உறங்கினவன்போற் கிடந்துவிட்டு, எழுந்து, இனிய பாட்டுப் பாடத் தொடங்குகின்றான். அதனைக் கேட்ட மகளிர் பரவசமாகின்றனர்; சுரமஞ்சரியும் மகிழ்வுறுகின்றாள். பின்பு, அம்மகளிர், "இப்பாட்டுச் சீவகன் பாட்டை ஒத்துளது," என்று கூறிச் சுரமஞ்சரிக்குச் சீவகனைப் பற்றி நினைப்பூட்டலும், அவள், மறுநாளே, காமன் கோட்டம் நோக்கி ஆடவர் எவரும் காணாதபடி, வேதியனும் தோழியரும் உடன்வர சகடமூர்ந்து சென்று சேர்கின்றாள். அங்கே, சீவக வேதியனை ஓர் அரையுள் விடுத்து, காமம்படிவத்தின் முன்நின்று, சீவகனை விரையத் தருமாறு வேண்டுகின்றாள். அங்கே, மறைந்திருக்கும் புத்திசேனன்,"நீ சீவகனைப் பெற்றாய்" என்று மொழிகின்றான். அஃது அத்தெய்வத்தின் திருமொழி எனப் பிறழக் கொண்ட சுரமஞ்சரி, மகிழ்ந்து, வேதியன் இருந்த அறைக்கு வருகின்றாள். அங்கே சீவகன் தன் உண்மை வடிவோடு நிற்கின்றான். அது கண்டு, அவள், காதல் கைம்மிக்கு மெய்ம்மறந்து நின்றொழிகின்றாள். சீவகன், அவளைத் தழுவி, "நின்னை நாளைவந்து மணப்பேன்" என்று தேற்றி அனுப்புகின்றான். புத்திசேனன், தோழர்பால் நடந்தது கூறுகின்றான். அவர்களும் முன்பு செய்து கொண்ட முடிபின்படி, அவனைக் காமதிலகன் என்று பாராட்டுகின்றனர். இப்பால், சுரமஞ்சரியின் பெற்றோர் இதனைக் கேள்வியுற்று, மகிழ்வுமிக்குக் குறித்தவாறே திருமணம் செய்கின்றனர். பின்பு, சீவகன், தன் தாய் தந்தையராகிய சுநந்தை, கந்துக் கடன் என்பவரையும், மனைவியாகிய காந்தருவதத்தை, குணமாலை என்பவரையும் கண்டு மகிழ்வித்துத் தேற்றி, குதிரை வாணிகன் உருக்கொண்டு, அந்நாட்டைவிட்டு நீங்கி, விதைய நாட்டை அடைகின்றான். இக்கூறிய நிகழ்ச்சிகளுள், படிப்போர் மனக்கண்ணின் முன் குணமாலை, சுரமஞ்சரி என்ற இருவரையும் கொணர்வதற்கு இந்நூலாசிரியர், திருத்தக்கதேவர் என்பார் ஒரு சூழ்ச்சி செய்கின்றார். மேலே கூறிய நிகழ்ச்சிகளைக் கூறப்புகுந்த தேவர், குண மாலையும் சுரமஞ்சரியும் சுண்ணங் காரணமாக மாறுபடுவதும், அதன்கண் சீவகனது மதிநுட்பம் புலப்படுவதும் குறித்து முதற்கண், அந்நகரத்தே, பங்குனிப் பருவத்தின் வரவும் பிறவும் கூறலுறு கின்றார். வேனிற்காலம் வந்தது. பொழில்கள் பூவகையாலும், கனிவகை யாலும் காண்போர் மனத்தைக் கவர்ந்தன. வண்டினம் பூக்களில் ஊறும் தேனையுண்டு சிறந்தன. குரங்கினம் கனிவகையினையுண்டு களிப்புற்றன. தென்றற்காற்று, புதுமணம் விரவிப்பொழி லெங்கும் பரவி, மக்கள் மனத்தில் இன்பம் கிளர்வித்தது. இராசமாபுரத்து மக்கட்குப் பொழிலாட்டில் விருப்புண்டாயிற்று. அந்நகர் முற்றும் பொழில் நோக்கிச் சென்றது. இங்ஙனம் போகம் நுகர்தற்கு இடனாகிய பொழில், நகர்க்குப் புறத்தேயும், யாற்றுக்கு அயலேயும் உளதாம் எனத் தேவர் குறிக் கின்றார். மரவகையும் செடி வகையும் கொடி வகையும் விரவி, வண்டினத்தாலும், மயில் குயில் முதலிய புள்ளினத்தாலும் இசை தக்கிருக்கின்ற பூமரக்கா, தெளிந்த நீர் இடையறாத யாறு ஒன்றின் அயலே உளதாயின், இயற்கை, தன் ஒள்ளிய அழகினை, விழைந்து காண்பார்க்கு விழைவறாதவாறு பிணிப்புண்ணத் தோற்று வித்தற்கு, அதனையே இடமாகக் கொள்ளும். மேலும், இப்பொழில் நகரருகே உளதாயின் மக்களின் வரவு செலவாலும், மாவும் மாக்களும் வையமும் ஊர்தியும் பயில வழங்குதாலும், தூய்மையும் புதுமையுமிழந்து, பொழில் எழில் சிறவாதென்பதை உட்கொண்டு நகரத்தார் அவ்வாறு அமைத்துக் கொண்டது குறிக்கத் தக்கதாகும். வேனிற்பருவம், சூரியன் வடதிசை நோக்கிப் பெயரும் காலமாகிய உத்தராயணத்தில், பங்குனித்திங்களின் முடிவில் பிறக்கும் பருவம் ஆகும். சித்திரையும் வைகாசியும் இளவேனிற் குரிய திங்களாயினும், அது பங்குனியின் பிற்பகுதியிலேயே தோன்றத் தொடங்குகின்றபடியால், அதனைத் தெரிவிக்க, "பங்குனிப் பருவம்" என்கின்றார். "மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசையயண முன்னி, ஆசரநடக்கு நாளும் ஐங்கணைக் கிழவன் வைகிப், பாசறைப் பரிவு தீர்க்கும் பங்குனிப்பருவம் செய்தான்" என்று தேவர் கூறுமாற்றால், மேலே சொன்ன உண்மை தெரிகிறது. பண்டைக்காலத்தில், நாட்டுமக்களுள் ஆடவர் பலரும் போர் வீரராய்ச் செய்வனசெய்து சிறப்புற்றிருந்தனர் என்பது "ஈன்று புறந்தருதல் என்றலைக் கடனே" என்று தொடங்கும் புறப்பாட்டால் புலனாகிறது. அவர் கூதிர்ப்பருவத்தே போர்க்குச் சென்று பாசறைக் கண் தங்கி, போர் செயல்வகைகளையும், தம் பிரிவால் வருந்தும் காதலர் திறங்களையும் நினைந்து நினைந்து பரிவுகூர்ந்து இருப்பர். வெயிலின் வெம்மைமிக்கு நிலவும் வேனிற்காலம், போர்க்கு நன்றாகாமையின், அதுபோது தம்மனையகம்போந்து மனதிற்கினிய காதலரைக்கூடி இன்புறுதல் மரபு. போர்க்குரிய காலமாவது, "செம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய், தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம்"என்று பரிமேலழகர் (குறளுரை:481) கூறுவதனால் அறியப்படும். படவே, பாசறைக்கண் தங்கிப் பரிவு கூர்ந்திருந்த ஆடவர்க்கு, இளவேனிற்பருவம், காதலரைக் கூட்டி இன்பப்பயனை நல்கும் ஏற்றம் உடையதென்பது இனிது தோன்ற, தேவர், பாசறைப் பரிவுதீர்க்கும் பங்குனிப் பருவம்" என்றார். என்றவர், அதனோடு நில்லாது, காதலரைக் கூடும் ஆடவர், அப்பரிவு தீரும் வகையினை, அக்கூட்டத்தின் மேல்வைத்துச் செய்யுள் செய்துள்ளார். அது, "தோடணி மகளிர் போன்ற துணர்மலர்க் கொம்பர்; கொம்பின் ஆடவர் போல வண்டும் அடைந்தன; அளியிற் கொல்கி ஊடிய மகளிர் போல ஒசிந்தன; ஊடல் தீர்க்கும் சேடரிற் சென்று புல்லிச் சிறுபுறம் தழீஇய தும்பி" என்பது, "உயர்ந்ததன்மேற்றே உள்ளுங்காலை" (தொல்.பொரு) என்பதனால், வண்டினும் மக்கள் உயர்வு தோன்ற, அவர்செயலை உவமையாக நிறுத்திக் கூறியுள்ளார். துணர்மலர்க் கொம்புகள் மகளிர் போல் நிற்கின்றன; அம்மகளிரை அடையும் ஆடவர் போல, அக்கொம்புகளை வண்டினம் அடைகின்றன. வண்டின் கனம் பொறாது கொம்புகள் தாழ்வது, அம்மகளிர் அவர் செய்யும் தலையளியால் புலந்து ஊடுவதுபோல் உளது. வண்டில் உயர்ந்த தும்பியினம் போந்து, தாழ்ந்த கொம்பின் உயர்ந்தபக்கத்துத் தங்குதலும், கொம்பு நிமிர்ந்து இருதலையும் ஒக்கநிற்கிறது. அது, ஊடிய மகளிர்பொருட்டு, தகுவன கூறித் தெருட்டிக் கூட்டுவிக்கும் அறிஞர்செயல் போல்கின்றது. இது வேனிற்காலநிகழ்ச்சி. இதனால் வண்டும், தும்பியும் மணங்கமழ் மலரின் தேனுண்டு சிறக்க, ஆடவர் பலரும் காதலரைக் கூடிக் களிப்புறுவதும்; அக்காலை, அறிஞர் போந்து, அவர்கட்கு அறிவு நெறி காட்டிச் செம்மை செய்வதும் கூறப்படுவது காண்க. இனி, பங்குனிப்பருவம், ஆடவர்க்குளதாகிய பாசறைப் பரிவினைத் தீர்க்குமாற்றைத் தொகுத்தும் வகுத்தும் கூறிச் செல்லும் தேவர், இராசமாபுரத்து மக்கள் வேனிலில் பொழிலாட்டும், நீர்விளையாட்டும் புரிவதனை விரிக்கத் தொடங்கி, முதற்கண், அவர்கள் பூம்பொழிற் கேகித் தாம்தாம் விரும்பிய இடங்களில் தங்கியிருப்பதைக் கூறுகின்றார். இந்நகரமாந்தர் தொலையாப் பெருஞ்செல்வராகலின், அவர் தத்தமக்குரிய வண்டியும், ஊர்தியும், வையமும், இவர்ந்து பொழிலுக்குச் செல்கின்றனர். சென்றவர் அன்னங்கள் அமர்ந் திருந்து விளையாட்டயரும் பொழிற்பகுதியில் தங்குகின்றனர். ஒருமருங்கு, தண்கயமும், ஒருசார் விரிந்த நீரோடையும் இருக் கின்றன. அயலே தெளிந்தநீர் பெருகியயாறு ஓடுகின்றது. செவ்வாழையும், மாவும், பலாவும் ஆகிய பலவகைப் பயன் மரங்கள், கனிதாங்கி நிற்கின்றன. இடையிடையே, பூவகை செறிந்த புதல்களும் செடிகளும் பொலிந்து, மக்கள் தங்கி, இன்பம் நுகர்வதற்கு ஏற்றவாறு, குளிர்ந்த நிழல் செய்து நிற்கின்றன. வேனில் வெம்மையால் வெய்துற்றார்க்குத் தண்ணிய நீழலிடம் அன்றோ இன்புறுத்துவது! அதனால், இவர்கள் தங்கிய இடங்கள், கொம்புத் தேன்கள் ஊறித் துளிப்பதனாலும், பூந்தேன் ஒழுகுவதாலும், அப்பூக்கள் உதிர்ந்து பரந்து கிடத்தலாலும், யாற்ற யலாகலின் வெண்மணல் பரந்து குளிர்ச்சியும் நறுமணமும் பெற்றுத் தூயவாய் விளங்குகின்றன. அங்கே தங்கிய மக்களும் தண்ணிய குளத்தில் தங்கியதுபோல, வெப்பம் சிறிதுமின்றிக் குளிர்ச்சியே நுகர்ந்து இன்புறுகின்றனர். இதுபின்வரும், "கூறப்பட்ட அக்கொய்ம் மலர்க் காவகம் ஊறித் தேன்துளித்து ஒண்மது வார்மணம் நாறிநாண்மலர் வெண்மணல் தாய் நிழல் தேறித் தெண்கயம் புக்கது போன்றதே" என்ற இனிய பாட்டால் இனிது விளங்குதல் காண்க. இப் பெற்றித்தாயதோர் இடத்திற்றான், குணமாலையும் சுரமஞ்சரியும் தத்தம் தோழியர் சூழத் தங்கியிருக்கின்றனர். சீவகனும் பிறி தோரிடத்தில் தன் தோழர்சூழ வீற்றிருக்கின்றான். குணமாலையும் சுரமஞ்சரியும் ஓர் ஊரினர்; அன்றியும், உருவும், திருவும், பருவமும், கல்வியும் ஒப்ப உடையவர். தேவர் இவர்கள் உள்ளத்தே பெருகிய நட்பிருந்ததாகக் கூறுகின்றனரே யன்றி, அஃதுளதாதற்குரிய ஏதுக்களுள் சிறப்புடைய புணர்ச்சி, பயிற்சி, உணர்ச்சிகளுள் ஒன்றையும் கூறிற்றிலர். அதனால் வேனிலாட்டில் பொழிற் கெய்தியவழி, இருவரும் ஒரு மருங்கே தங்கி ஒருவரோடொருவர் அளவளாவி நட்புக் கொண்டவராதல் வேண்டும் என்று தெரிகிறது. இவர்களுள், குணமாலை தன் பெயருக்கேற்ப நற்குணமே நிறைந்த நங்கையாவள்.அறன்கடை நில்லாத அறிவினள்; பழியஞ்சும் பண்புமிக்கவள்; இவற்றால் எய்திய மனத்தூய்மையோடு செய்வினைத் தூய்மையும் சிறக்க உடையவள். சுரமஞ்சரி யென்பவளும் நற்குணம் படைத்த நங்கை நாயகமாயினும் சிலகுறைபாடுகளும் உடையவள்; பின்விளைவு கருதிச் செய்வன செய்யும் திறப்பாடு குறைந்தவள்; கணிகமாய் நிகழும் துன்பத்தின் பொருட்டுப் பிறப்புத் தோறும் தொடரும் சிறப்புடை நட்பினையும் துறக்கும் சிறுமையள்; தன் செயலே தலைசிறந்தது என்று கருதும் தருக்குடையவள். சீவகனும் தான் காமதிலகன் எனத் தோழரால் சிறப்பிக்கப்படுவது குறித்து அவள் பால் அன்பு கொண்டு மணம்புரிகின்றானேயன்றி, பிறிதொன்றால் அன்று என அவள் வரலாறு கூறுகின்றது. குணமாலைக்கு மாலையென்னும் பெயருடைய தோழி ஒருத்தி உளள். அவள், குணமாலையும் சுரமஞ்சரியும் ஒருங்கே இருந்தபோது. தன் தலைவி செய்த சுண்ணத்தை, அவள் குறிப்பின் படி, சுரமஞ்சரிக்குக் காட்டுகின்றாள். அதனைக் காணும் அவள், தனதே உயர்ந்த தென்னும் தருக்கினால். "சுண்ணம் என்பதோர் பேர்கொடு, சோர்குழல் வண்ணமாலை! நுசுப்புவருத்துவான் எண்ணிவந்தன; கூறு இவையோ? என நண்ணிமாலையை நக்கனள்" (சீவக. 876) இதன்கண், குணமாலை சுண்ணத்தின் நன்மை சிறிதும் கூறாமல், இவை நின் நுசுப்பை வருத்துவற்காகச் சுண்ணம் என்ப தோர் பெயர் கொண்டு வந்தனவேயன்றி, உண்மைச் சுண்ணமாதல் இல்லை" என்கின்றாள். அவள் மனத்தில் தன் சுண்ணத்தின் உயர்வே முன்னேறி நிற்றலால், என் சுண்ணத்திற்கு இவை எவ்வாற்றானும் நிகராகா," என்பாள், "கூறு இவையோ? என்கின்றாள். ஆனால், இருவர் சுண்ணங்களையும் ஒப்பக்காணும் சீவகன், எவ்வாறு கூறுகின்றான் எனின், "நல்ல சுண்ணம்; இவை இவற்றிற் சிறி (து) அல்ல சுண்ணம்; அதற்(கு) என்னை? ஏன்றிரேல், புல்லு கோடைய பொற்புடைப் பூஞ்சுண்ணம்; அல்ல சீதம் செய்காலத்தின் ஆயவே" என்று கூறுகின்றான். அஃதாவது, குணமாலை சுண்ணம் நல்லவை சுரமஞ்சரி சுண்ணம் சிறிது நல்லவல்ல. நல்லவை நல்ல வாதற்குக் காரணம், கோடைகாலத்தே செய்யப்பட்டன என்பது; மற்றவை அல்லவாதற்குக்காரணம், மாரிக்காலத்து இடிக்கப்பட்டன என்பது. இதனால்,இருவர் சுண்ணங்களும் ஒப்ப நல்லவேயாயினும் கால வேறுபாட்டால், சுரமஞ்சரியின் சுண்ணம் சிறிதே அல்ல வாயின என்றானாம். ஆகவே, குணமாலை சுண்ணத்தே நன்மை விளங்க வுளதாதல் தெரிகிறது. அதனைச்சுரமஞ்சரி கண்டு வைத்தும், தனதே உயர்ந்ததெனும் தருக்குணர்வால் மறைப் புண்டு உறழ்ந்து கூறுகின்றாள். மேலும், அவள் கூறும் கூற்றும் குணமாலை நெஞ்சில் வருதத் தம் விளைவிக்குமாறு அமைந்துளது; அவள், "சோர்குழல் வண்ண மாவை! இவை, சுண்ணம் என்பதோர் பேர்கொண்டு நின் நுசுப்புவருத்துவான் வந்தன, காண்" என்று கூறி நகுகின்றாள். இவள் கூற்றில்நிற்கும் முன்னிலையும், கூற்றும், நiகயுமாகிய மூன்றும் குணமாலைக்கு அவலத்தை உண்டுபண்ணுவனவாகும். முன்னிலைக் கண், குணமாலையை, "சோர்குழல் வண்ணமாலை" என்று விளிக்கிறாள். சோர்குழல் எனக்குழலைப் பிரித்து விசேடித்து விட்டமையால், வண்ணம் என்பது மாலையைப் பிறிது பொருள்பட விசேடிப்பதாயிற்று. சோர்தல் குழற்கு இயல்பாயினம், இதுபோது, தாயாரால் இனிது கைசெய்யப்பட்டுக் கவினுற்று விளங்குவதால், அக்கவின் சிறப்புத் தோன்ற முன்னிலைப்படுத்தல் நட்பாயின அச்சுரமஞ்சரிக்கு நேரிது. அவள் மனத்தே குணமாலைபால் யாதொரு வெறுப்பும் இல்லை என்பதைத் தேவரே, "மௌவளங் குழலாள் சுரமஞ்சரி, கொவ்வையக் கனிவாய்க் குணமாலை யோடு, எவ்வந்தீர்த்திருந்தாள்" (சீவக.874) என்பதனால் விளக்கி யுள்ளார். அன்றியும் இருவரும் மல்லிகை மாலைசூடிய மணங் கமழும் கூந்தலையுடையர் என்பது, "மல்லிகை மாலை மணங்கமழ் வார் குழற், கொல்லியல் வேல் நெடுங் கண்ணியர்" (சீவக.879) எனவரும் பாட்டாலும் அறியக்கிடக்கிறது. தன் சுண்ணத்தினும், குணமாலையின் சுண்ணம் சோர்வுடையதென்னும் குறிப்பை அவள் குழல் மேலேற்றி, "சோர் குழல்" என்றும் பயனில் செயலால் வருந்திய மெய்யினை என்றற்கு வண்ணமாலை என்றும் குறிப்பித் தாள். இவ்வாறு, "சோர்குழல் வண்ணமாலை" என்று முன்னிலைப் படுத்தி, இச்சுண்ணம் செய்தற் கண் உளதாய உழைப்புப் பயனற்றதே என்பதை நேரிற்கூற மாட்டாமையால், சுண்ணமென்பதோர் பேர்கொண்டு நுசுப்பு வருத்துவான் வந்தன" என்கின்றாள். நகை, எள்ளல் பற்றிவந்தது. இதனால், சுண்ணத்தைக் காட்டிய குண மாலைக்குச் சுரமஞ்சரி கூறியது வருத்தம் விளைவிப்பதொன் றென்பது கூறியவாறாம். குணமாலை, சீரியகுணமாலையாகையால், அவள் கூறியது பற்றி, மனநோய் கொள்ளாது தக்கவிடைகூறுவாள், "செம் பொற் பாவையன்னாய், தேவருலகின்றி, இவ்வுலகில், இவ்விடத்து என் சுண்ணத்துக்கு ஒப்பாக வேறும் சிலஉள என்று அறிஞர் கூறலுறு வாராயின், நின் சுண்ணமும் என் சுண்ணத் தோடு நிகர்க்கும் என்று நீ கூறிக்கொள்ளலாம்" என்கின்றாள். இது, "பைம் பொன் நீளுல கன்றியிப்பார் மிசை இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள எனின் செம்பொற் பாவையன்னாய்! செப்பு நீ" என வருதலால் அறியப்படும். இதன்கண் தன்னைவியத் தலாற் பிறக்கும் செயற்கை ஒளியோடு இயற்கை ஒளியும் உடன் விளங்கத் திகழும் மேனியுடையளாய்ச் சுரமஞ்சரி எதிரில் இருப்பதைக் காணும் குணமாலை அவளை நன்கு மதித்து, "செம் பொற் பாவையன்னாய்!" என்று முன்னிலைப் படுத்துகின்றாள். பொற் பாவையன்னாய் என்றலே நிரம்புமாயினும் செம்பொற் பாவை யன்னாய் என விதந்து மொழிகின்றதனால், அவள் மேனி வனப்பும் ஒளியும் சிறந்து, இளவெயிலால் மிகு கவின்பெறும், நன்பொற் பாவைபோல, கவின் மிக்கு நிற்பதைப் புகழ்கின்றாளாம். "தாவில் நன் பொன்தைஇய பாவை, விண்டலழ் இளவெயில் கொண்டு நின்றன்ன, மிருகவின்" (அகம் 212) எனக் கவின் மிகுதியின் கண்,செம் பொற்பாவை உவமமாதல் காண்க. கூற்றினும், "என் சுண்ணம் ஒப்பும் உயர்வும் இல்லாதது; நின் சுண்ணத்தை நிகர்க்கும் என்று கூறிக்கொள்க. யான் அதுபற்றி ஒன்றும் கூறேன்" என்று கூறக்கருதுமவள், "இப்பார்மிசை, இங்கே என் சுண்ணம் நிகர்ப்பன இல்லை; உள்ளவெல்லாம் தாழ்ந்தனவே; நிகர்ப்பன உள என அறிஞர் கூறின், அன்னாய், நீசெப்புக" என வணங்கிய மொழியால் இணங்கவுரைக்கின்றாள். உள்ளவாறே நோக்கின், இவர் தம் சுண்ணங்களுள் சுரமஞ்சரிசுண்ணம் நன்றன்று. அதன் இயல்பினைக் குணமாலை அறிந்திருந்தும், அவள் கூறியவா றே தானும் அவள் மனம் புண்படுமாறு கூறாமல், "ஒக்கும் என்று கூறி கொள்க" என்றது, அவளுடைய விரிந்த மனப் பான்மையும் பொறைமருவிய நிறை குணமும் நாமறிய விளக்குகின்றது. தருக்கினால், தம் குறையினைத் தாமே காணமாட்டாதார்க்கு அதனைக் காண்பார் கண்டுகூறினும், அத்தருக்கு அவர்பால் வெகுளியைக் கிளப்பி வருந்துவிப்பது நாம் நாளும் காணும் காட்சி. இவ்வியல்பினால், தருக்கிநின்ற சுரமஞ்சரிக்கு, குணமாலை கூறிய சொற்கள் "செவிசூட்டாணியில் நெஞ்சுழல் பொத்தின. அதனால், அவள், மனம் கொதித்து "இவற்றை அறிஞர்பால் அனுப்பி நல்லது தெளிவோம். அதனால், தோல்வியுறுபவர் நீர் விளையாடலைச் செய்தல் கூடாது அன்றியும், வெல்பவர்க்குக் கோடியளவான பொன்னைத் தருதல் வேண்டும்," என்று நெடுமொழி நிகழ்த்துகின்றாள். இவள்பால், பின்விளைவு எண்ணிக் கூறும் இயல்பில்லாமை இனிது விளங்குவது காண்க. இதனாலன்றோ, பின்னர்ச் சீவகன், வேதியன் ஒருவனது உருக்கொண்டு போந்து, கவர்பொருள் எய்தப்பேசிய காலத்து, உண்மையுணரமாட்டாமையை இவட்கு எய்துவித்து, அவனது காம வலையிற் படுவித்தது! அதனைப் பின்பு கூறுதும். "குணமாலையின் சுண்ணமே நல்லது," எனச் சீவகனால் யாவரும் தெளிய விளக்கப்பட்டது தெரிந்ததும், சுரமஞ்சரி, குணமாலைபால் கண்ணற்று நீங்கி விடுகின்றாள். அதனால் குணமாலை பெருந்துயர் அடைந்து, சுரமஞ்சரிக்கும் தனக்கும் பிறந்திருந்த நட்பு இவ்வாறு கெடுதற்குக் காரணம் யாதென ஆராய்ந்து, அது பண்டைத் தீவினை யாமென நினைந்து, அது மேலும் உருத்து வந்து வருத்தாமைவேண்டி, அருக தேவனது அருட்கோயிலுக்குச் சென்று, அவனது திருவடியில் மலரிட்டு வணங்கி, அந்தணர்பலர்க்குப் பொருட் கொடைசெய்து நீராடத் தொடங்குகின்றாள். சுரமஞ்சரியின் பிரிவாற்றாத குணமாலை, அப்பிரிவு நிகழ்தற்குரிய காரணத்தை நெஞ்சில் நினைந்தவழி, ஒருவர் செய்த தீவினை, இன்பக் காரணமாகிய விளையாட்டி னுள்ளும் நுழைந்து, துன்பத்துக்குக் காரணமாய், அவ் இன்பத்தைத் துறப்பிக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது. உடனே தீவினையின் தீமைப் பயனைப் உணர்ந்து பிரிந்தோம். சுரமஞ்சரிபால் தோன்றி யிருந்த அன்பினால் குணமாலை மனம் உளைந்து அழு கின்றாள். இஃது, "இன்பக் காரணமாம் விளையாட் டினுள் துன்பக் காரணமாய்த் துறப்பித் திடும் என்பதே நினைந்(து) ஈர்மலர் மாலைதன் அன்பினால் அவலித் (து) அழுதிட்டாள் எனத் தெளியக்கூறப்பட்டுளது. இதற்கு,"இன்பதுக்குக் காரணமாம் கடுநட்புத்தானே பகைக்கும் காரணமாய் ஒரு விளையாட்டினால் நட்பினைத் துறப்பிக்கும் என்கின்ற பழவார்த் தையையே நினைந்து வருந்தி அழுதாள்" என்றும் கூறுவர். யாது கூறினும், குணமாலை சுரமஞ்சரியின் பிரிவாற்றாது, அன்பினால் வருந்திப் புலம்பினாள் என்பது தேற்றம். உரைவிகற்பத்தின் நலந்தீமையினை உரையாராய்ச்சியில் கூறுவோம். இதனாலும், குணமாலையும் சுரமஞ்சரியும் பழகிய நண்பரல்லர் நட்புப் பெறு வாராயின், அவர்பால் பொறையாகிய பேரறம் தானாகவே அமைந்துவிடும். "இனத்தியல்பதாகும் அறிவு." குணமாலையின் பால்பொறையும், சுரமஞ்சரிபால் பொறாமையும் வேறு வேறு விளங்கிநிற்றலால், அவர்கள் பொழிலிடையே புதுநட்புப் பெற்றாராதல் வேண்டும் என்பது தெளியப்படும். சுண்ண மாறுபாட்டின்கண், வெற்றி எய்தினமையால் பேருவகை கொள்ளற் பாலளாய குணமாலை, தோல்வியுற்ற சுரமஞ்சரிபால் கழிபேரிரக்கம் கொண்டு, அன்பினால் அவலித்தழுவாளாக, புல்லிய சுண்ணத்தின் பொருட்டு, பொறையறத்தின் உருவாய குணமாலையின் நட்பினைத் துறந்து செல்லும் சுரமஞ்சரி, உருவும், திருவும், பிறவும் ஒப்பவுடை யளாயினும், குணநலத்தால் ஒவ்வாள் என்பதே துணிபாம். மேலும், சுரமஞ்சரி போயினபின், நீராடற்பாலளாய குணமாலை, சினந்தேகிய சுரமஞ்சரிபால் வெறுப்புற்றாளா? அன்றி, அவள் நம்பினையாவது மறந்தாளா? அப்பிரிவுக்குக் காரணமாகிய சுண்ணங்களையாவது முனிந்தாளா? அன்றி, தன் சுண்ணத்தைப் புகழ்ந்து வென்றிகூறிய சீவகனையாவது நினைந்து மகிழ்ந்தாளா? ஒன்றுமில்லை. இந்நிகழ்ச்சியால், இன்பம் எய்துதற்குரிய தான், அதனை எய்தாது துன்பம் எய்துதற்குரிய காரணம் யாதென நினைந்து, அது தன் தீவினையெனத் தெரிந்து, அதனைக்கழுவும் பொருட்டு அருகன்கோயிலை அடைந்து அவன் அடிபணிந்து அறம்பலபுரிகின்றாள். குணமாலையின் அன்புடைமை பிறிதொரு செயலாலும் இனிது துணியப்படும். சீவகன் கூறிய தெளிப்புரையைக் கேட்ட மாத்திரத்தே சுரமஞ்சரி இடிப்புண்ட நாகம்போலத் திடுக்கிட்டுச் சொல்லாடல் இன்றி மயங்கிநிற்கின்றாள். அது போது, குணமாலை மகிழ்ச்சி சிறிதுமின்றி, அவளது மனத்தின் மென்மை கண்டு இரங்கி, "பாவாய், நங்காய், என்னோடு பேசாயாயினை; என்னோ? விரைந்து பேசுக" என்று வேண்டுவாள், "திங்களங்கதிர் செற்றுழக்கப்பட்ட பங்கயப்படு வொத்துளைபாவாய் நங்கை என்னொ(டு) உரையாய் நனிஒல்லே, இங்கண் என்(று) அடிவீழ்ந்(து) இரந்திட்டாள்" இதன்கண், சுரமஞ்சரியின் முகம் வாடிக்கூம்பிய தாமரை போன்றதாயினும், மேனி பண்டேபோல் ஒளிகுன்றாது திகழ்தலின், குணமாலை, முன்பு "செம்பொற்பாவையன்னாய்" என்றதுபோலவே, "பாவாய்" என்கின்றாள். முன்பு அவளால் இகழப்பட்ட காலையும், சுண்ணத்தின் ஒண்மையால் புகழப்பட்ட இக்காலையும் குணமாலை, சுரமஞ்சரியை ஒரேவகையாக முன்னிலைப் படுத்துவதால், அவட்கு அச்சுரமஞ்சரிபால் இருந்த நன்குமதிப்பும், வியப்பும் வேறுபட்டில என்பதும், அவள் அடி வீழ்ந்து இரந்து வேண்டுதலால் அவள்பால் பெருகிய அன்புடையளாதலும் விளங்குகின்றன. பகலவன் கதிரால் தகவுறமலர்ந்து அளி மொய்ப்ப ஒளிசிறந்து நிற்கும். தாமரை போலும் கண்ணும் வாயும் உடைய பாவையை ஒத்த நீ, வெண்கதிரின் தண்கதிரால், அளியின்றி ஒளிமழுங்கித்nதான்றும் பங்கயம்போல், கண்ணொளி மழுங்கி, வாய்மூடி உரையாடாதிருக்க வேண்டா என்றற்கு, "திங்களங்கதிரால் செற்று உழக்கப்பட்ட பங்கயப்படு ஒத்துளை" என்றும், புல்லிய சுண்ணம் காரணமாக வேறுபடுதல் நங்கைமார்க்கு நலமன்று என்றற்கு, "நங்கை" என்றும் மொழிகின்றாள். நங்கை என்பது பெண்களிற் சிறந்தவளையன்றோ! இதைக்கேட்கும் சுரமஞ்சரி, முதற்கண் மாற்றம் ஒன்றும் உரைக்கின்றிலள். பின்பு, ஒருவாறு தேறி ".... .... .... மழைவள்ளல் என் ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்றசொல் தோற்றுவந்(து) என்சிலம்படி கைதொழ நோற்பன்; நோற்றனை நீ".... .... என்கின்றாள். எனவே, காய்தல் உவத்தலின்றி, உள்ளதன் உண்மை துணிந்து கூறிய சீவகனது மனநிலையை ஓராது, அவன் தானும் வலியவந்து தன் சிலம்படி தொழுமாறு நோற்பேன் என்று சுரமஞ்சரி தன் தருக்குத் தோன்றக் கூறியவாறும், நின் சுண்ணம் ஏற்பில தாயினும், நின் நோன்பினால் ஏற்றது எனக் கூறப்பட்டது என்றற்கு "நீ நோற்றனை" என்று கூறியவாறும் பெறப்படுகின்றன. அன்றி, தன் சுண்ணத்தின் குறையினை நுண்ணிதின் ஆராய்ந்து கூறிய சீவகனது மதிநுட்பத்தையோர்ந்து, அவன்பால் விரும்புற்று, அவனை மணக்கும் குறிப்பால், "மழை வள்ளல்" என்றும், "என் சிலம்படி கைதொழ நோற்பன்" என்று கூறுகின்றாள் என்று கூறுதலும் உண்டு. அத்துணையமைதி சுரமஞ்சரி பால் உண்டோ என்று, மேலே கூறிய செய்திகளால் ஐயப்படநின்றது. மேலும், "கட்டவிழ்கண்ணி நம்பி சீவகன் திறத்திற் காய்ந்தாள்" (சீவக 904) எனப்பிறாண்டும் சுரமஞ்சரியின் தாயாகிய சுமதி கூறுவதும் காண்க. குணமாலை, பின்பு, சீவகனால் அசனி வேகத்தின் முன்னின்று உயிர்க்காக்கப்பட்டபின், அவன்பால் காதல் கொண்டு அவனையே நினைந்து மெலிகின்றாள். அவள் காமவேட்கை வயத்தவளாய் வெருவிக் கூறுவன, பொருளிலக்கண வரம்பினை இறக்கும் நிலையில் இருக்கின்றன. அதுபோது, தன் பெண்மையின் நிலையினை யுணர்ந்து, "எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப், பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே" என்று தன்னையே நொந்து கொள்ளுகிறாள். பின்பு, "கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப், பெண்ணிற் பெருந்தக்கதில்" (குறள் 1137) என்பவாயினும், அத்தகுதியிழந்து, 'ஓலைதாழ் பெண்ணைமாமடலுர்தலைக், காலவேற்றடங்கண்ணி"யாகிய அவள் கருதுகின்றாள். இக்கருத்துக்கு அமைதி கூறுவார்போல தேவர். "வேலைமாக்கடல் வேட்கை மிக்கூர்தர ஓலைதாழ் பெண்ணை மாமடலூர்தலைக் காலவேற்றடங் கண்ணி கருதினாள்" (சீவக. 999) என்கின்றார். அம்மட்டோ, அவள் "தெளிகயம்மலர் மேலுறை தேவியின் ஒளியும் சாயலும் ஒப்புமையில்லவள் களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன் கிளியைத் தூதுவிட்டாள் கிளந்தென்பவே (சீவக. 1001) என்றும் கூறுகின்றார். குணமாலையின் வேண்டுகோட்கு இணங்கி அவள் வளர்த்த கிள்ளை சீவகன்பால் சென்று மீள்வதற்குள், அவளது நெஞ்சில் அதன் செயல்பற்றிப் பலவேறு எண்ணங்கள் தோன்றுகின்றன. "தன்துணைவி கோட்டியினின் நீங்கித் தனியிடம் பார்த்(து) இன்துணைவற் சேர்வான் இருந்ததுகொல்! போந்ததுகொல்! சென்றதுகொல்! சேர்ந்தது கொல்! செவ்வியறிந்(து) உருகும் என்துணைவி மாற்றம் இஃது என்றதுகொல்! பாவம்!!" என்றபாட்டின் கண் காணப்படுகின்றன. தன்துணைவி என்றது சீவகன் மனைவியாகிய காந்தருவதத்தையை, துணைவன் சீவகன், என் துணைவியென்றது, கிளிக்குத் துணைவியாகிய தன்னையே இவ்வெண்ணங்களால் அலைப்புண்ட நெஞ்சின் கண், கிளியைநினைந்தவழி, அதன்பால் இவ்வலைப்பு உளது போலத் தோன்றுகிறது. அதனால், "அலைப்புண்டல் வினையேனாகிய எனக்கு அமையும்; என்னாற் பேணப்படுவதொன்று தவிரப் பிறிதொன்று மில்லாத இக்கிளி இவ்வாறு அலைதல் கூடாதே! இஃதென்ன பாவம்" என்பவள், "பாவம்" என இறுதியில் கூறிமொழிகின்றாள். அதன்பால் யாதோர் பாவமும் இன்மை தோன்ற, அதனைப் பின்னரும், "செந்தார்ப் பசுங்கிளியார்" என்று உயர்த்துக் கூறுகின்றாள். பின்பு கிளி சீவகன் தந்த ஓலையைக் கொணர்தலும் மகிழ்ந்து, அவனது வரைவினை எதிர்நோக்கி யிருக்கின்றாள். அவளது காமநிலை பின்னர் ஆராயப்படும். இங்ஙனம், சீவகன் வரையுங் காலத்தையே நினைந்து கொண் டிருக்கும் குணமாலைபால், செவிலித்தாய் போந்து, "நின்னை நின்மாமன் மகனுக்கு வரைவுடன் பட்டான்போல் நின்தந்தை விருந்து செய்தான் "என்கின்றாள். மேலும், "அவன் நினக்குப் பரியமாப் பண்டிபண்டியாகச் செம்பொன் கொண்டு வந்து தந்து, நினக்கே என்றும் அடிமையாய்ப் பணிசெய்து நிற்பன்; நின் உருவைக் கிழிமிசைத் தீட்டி, நாடோறும் அதனையே வழிபடு கின்றான்; அவன் நினக்கு மைத்துனன்; வனப்பிலும் மிக்கான்; வளர்நிதிக்கிழவன்; காளை; உத்தமன்; நின் திருப்பெயரல்லது பிறிதொன்றையும் கூறுவதிலன்; ஆதலால் அவற்கு நின்னைக் கொடுக்க எண்ணினர் நின் பெற்றோர்" என்கின்றாள். என்றலும், அது கேட்கப் பொறாளாய், குணமாலை தன் செவிகளைக் கைகளாற் புதைத்து, "மணிமதக்களிறுவென்றான் வருத்தச்சொற் கூலியாக அணிமதக்களிறனானுக்(கு) அடிப்பணி செய்வதல்லால், துணிவதென்? சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல்" என்று கூறுகின்றாள். எனவே, என்னைக்காத்தற் பொருட்டு, அசனி வேகத்தை வென்ற சீவகன் மேற்கண்ட வருத்தத்துக்குக் கூலியாக அவனுக்கு யான் அடித்தொண்டேனும் செய்து வழிபடல் வேண்டுமேயல்லது, பிறனொருவனால் வழிபடப்படுதல் அறமாகாது; அதனை நினைந்து அவற்கு என்னை அடிப்படுத்தல் என்பெற்றோர்க்கும் நன்றியறிதலாய பேரறமாம். அதனைநினயாது, பிறனொருவனுக்குக் கொடுக்கத் துணியு முகத்தால் உளதாகும் தீமையினை நினையாதது என்னோ? என்றும், அவர் மறப்பினும், அவனது உதவியினை நேர்நின்று பெற்ற யான்மறந்து பிறிது நினைத்தல் எனக்கும் அறமாகாதென்றும் கூறுவாள், "களிறனானுக்கு அடிப்பணி செய்வதல்லால், துணிவதென்?" என்கின்றாள். செவிலி, அவள் மைத்துனற்கு உடன்படு முகத்தால் பெற்றோர் நகைமுக விருந்து செய்தமை கூறிவிட்டதனால், அவர் உடன்பட்டவாறே நடக்கும் என்றெண்ணியஞ்சி, என்னைச் சீவகற்குக் கொடுக்க என்பெற்றோர் நேராராயின், யான் இறத்தல் வேண்டும்; இன்றேல், சிந்தனை பிறிதொன்றாகிச் செய்தவர் முயறல் வேண்டும். இவ் விரண்டனுள் ஒன்று நாளையே நிகழவந்தது" என்கின்றாள். இது கற்புடைய மகளிர்க்குப் பொது விலக்கணமாகலின், குணமாலையாகிய குணமாலைக்கு இத்துணிபு பிறத்தல் வியப்பன்று. இதைக்கேட்ட அவள்பெற்றோர், அவள் கருத்துக்கு மாறபடாது அவள் விரும்பிய கணவர்க்கே மணம் புணர்க்கத்துணிவது நம்மனோர்க்கு வியப்பைத் தருவதாம். இதனை நூற்புணர்ப்பு என்னும் பகுதிக்கண் ஆராய்வோம். இக்காலத்து நூற் புணர்ப்பு முறையின் பெற்றியினை ஆங்கிலப் பேராசிரியரான, டாக்டர். சாமூவேல் ஜான்சன் (Dr. Samuel Johnson) என்பார், “To bring a lover, a lady and rival into the fable; to entangle them in contradictory obligation, perplex them with oppositions of interest. and harass them with violence of desires inconsistent with each other; to make them meet in rapture and part in agony; to fill their mouths with hyperbolical joy and outrageous sorrow; to distress them as nothing human ever was delivered; is the business of a modern dramatist,” *என மிக நுண்ணிதாக ஆராய்ந்து தெளிய உரைத்திருத்தலைக் காண்க. சிந்தாமணியின் செந்தமிழ்நலம் என்ற இத்தலைப்பின் கீழ், முன்னைக் கட்டுரைகளில் சீவகன் மணந்த மகளிருள் குணமாலை, சுரமஞ்சரி என்ற இருவர் குணநலங்களை வகுத்துக் காணுமுகத்தால், குணமாலையும் சுரமஞ்சரியும் சுண்ணம் காரணமாக மாறுபட்டு நீங்கியதும், குணமாலையைச் சீவகன் மணந்ததும், சுரமஞ்சரி சீவகனையே மணக்க வேண்டுமென நோன்பு பூண்டதும் பிறவும் சுருங்கக் கண்டோம். இனிச் சீவகன் சுரமஞ்சரியை மணந்த வரலாறு ஒருவாறுகூறி, இவ்வரலாறுகளைக் கூறுதற்கண், இந்நூலா சிரியர், திருத்தக்கதேவர் காட்டும் செந்தமிழ் நலத்தை உரைக்கத் தொடங்குகின்றேன். இருவர் ஒருதொழிலிற் போட்டியிட்டு முயலுமிடத்து, வெற்றியுறுவோர் மகிழ்வதும், மற்றவர் வருந்துவதும் உயிர் களிடத்துக் காணப்படும் இயல்பு. சுண்ணம் காரணமாக எழுந்த மாறுபாட்டில், சுண்ணச் சிறப்பால் வென்றியெய்திய குணமாலை மகிழ்தற்கு உரியவள்; சுரமஞ்சரி வருந்துதற்குரியள். ஆகவே, குணமாலை மகிழ்வதிலும், சுரமஞ்சரி வருந்துவதிலும் புதுமை யொன்றுமின்றாம். மற்றும், வென்றியெய்தக்கேட்ட குணமாலை மகிழ்வெய்துதற்குரியளாகவும், அது செய்யாது, சுரமஞ்சரிக்கிரங்கி, அவட்கு ஆறுதல்கூறி வருந்துவளாயினள். சுரமஞ்சரியோ, நடுநின்று கூறிய சீவகனைச் சினந்து “மழை வள்ளல் என் ஏற்ற சுண்ணத்தை எற்பில என்று சொன்ன சொல்தோற்று, வந்து, என் சிலம்படி கைதொழ நோற்பேன்” என்று துணிந்து வாயிட்டுக் கூறுகின்றாள். இதனால், குணமாலை சுண்ணத்தினும் தன்சுண்ணமே உயர்ந்தது என்பதும், இதனை நோக்காது சீவகன் மாறிக் கூறியதற்குக் காரணம் குணமாலையது நோன்புடைமையே என்பதும் சுரமஞ்சரிக்குக் கருத்தாதல் இனிது விளங்குகின்றது. சீவகன் “ஏற்பில என்றசொல் தோற்றுவந்து என் சிலம்படி கைதொழ நோற்பன்” என்று சுரமஞ்சரி கூறுவது, குணமாலை ஆற்றிய அந்நோன்பினையே தானும் ஆற்றி, அதன்துணையால் அவன் சொல் தோல்வியுறுமாறு செய்ய வேண்டும் என்னும் துணிபுடையளாவதைக் காட்டுகின்றது; மேலும், அவள் குணமாலையை நோக்கி, “நோற்றனை நீ” என்கின்றாள். எனவே, தான் நோலாமை தன் தோல்விக்குக்காரணம் எனத் தான் தெளிந்தமை சுரமஞ்சரி நன்கு விளங்கக் குணமாலைக்குக் கூறினாளாம். இக்கூற்றால், ஒருவர் ஒரு வினையைச் செய்யுமிடத்து, அதனாலாம் பயனுக்கு ஏது, செய்வோரது முன்னை வினைப் பயனே என்பதும், அதனையுணர்ந்து அதற்கேற்பச் செய்வன செய்வதே ஒருவர் அறிவுநெறிக்கு அடுத்ததென்பதும் தேவர் கருத்தாயின. இனி, குணமாலையைப் பிரிந்து சென்ற சுரமஞ்சரி தன்கன்னி மாடம், அடைந்து நோன்பு புரியலுறுவாள். “யான் மணந்தால் சீவகனை மணப்பேன்; இன்றேல், என்நிறை யழிப்பார் பிறர் இலர்” என்று கருதி, “சென்று காலம் குறுகினும் சீவகன் பொன் துஞ்சாகம் பொருந்திற் பொருந்துக; அன்றி என்நிறை யார் அழிப்பார்?” எனத் துணிந்து ஒடுங்கினாள். சீவகனைக் காய்ந்தேகிய சுரமஞ்சரி அவனையே மணக்க நினைப்பதற்குக் காரணம் என்னை? ஒரு பெண்மகள் வேறோர் ஆடவனை வெல்வது வேண்டின், அவனை மணந்து தன்னைப் பணியுமாறு செய்து கோடல் ஒன்று; இருபாலார்க்கும் பொதுவாயுள்ள விஞ்சை யொன்றில் வெல்வது ஒன்று; இவற்றுள் யாதேனும் ஒன்றினைச் செய்யினும் அமையும். பொதுவாய விஞ்சை இசையேயாகும். அதன் கண், சீவகன் நிகரற்ற வன்; ஆகலின், அது தவிர்த்து, அவனை மணத்தலையே சுரமஞ்சரி கருதுவாளாயினாள். அன்றியும், குணமாலையால் நல்வினை யுண்மையின், அவளை நயந்துள்ள நயப்பினால் அவன் அவட்கு வென்றி கூறினானாதல் வேண்டும் என்பது தோழியால் அவள் (சுரமஞ்சரி) எய்திய துணிபாதலின், அக் குணமாலையறிய, அவன் தன்னைப் பணிந்து தன் சிலம்படி தொழுவதினும் அவட்கு இன்பம் தருவது பிறிதில்லை. அதனால் அவனையே தானும் மணப்பது கருதி, “சீவகன் பொன் துஞ்சாகம் பொருந்திற் பொருந்துக” என்றும், அவனைக்குறித்து நோன்பு இயற்றியவழி, அவனை யல்லது அவள் கூடற் குரியார் பிறர் இலராவர் என்னும் துணிபு தோன்ற, “அன்றி என் நிறையார் அழிப்பார்” என்றும் கூறினாள். எனவே, இங்ஙனம் கருதும் இச்சுரமஞ்சரியின் காமமும் இயற்கையாகாது செயற்கையாமாறு விளங்குகின்றது. குணமாலை, தன்னைச் சீவகன் உயிர்தப்புவித்த நன்றிகண்டு எழுந்த அன்பு வயப்பட்டு, அவன்வடிவின் காட்சியால் வேட்கையுற்று, இயற்கைக் காமம் எய்தினாளாக, அவனும் அவளது சுண்ணநலத்தால் கண்ட நல்லறிவும், மேனிகண்டதனாற் பிறந்த காமமும் எய்தி இயல்பாகப் பிறங்கும் காதற்காமம் உடையனாகிக் கூடுகின்றான். சுரமஞ்சரியை மணக்குமிடத்துக் காமதிலகன் என்று தன் தோழர் தரவிரும்பும் பெயரைப் பெறுவதே குறிக்கோளாகக் கொண்டு கூடுகின்றான். இனி, சீவகன், சுரமஞ்சரியை மணந்த வரலாற்றினைச் சுருங்கக் கூறுவாம்; சுரமஞ்சரி கன்னிமாடம் சமைப்பித்து அதன்கண் இருந்து “சீவகன் பொன் துஞ்சாகம் பொருந்திற் பொருந்துக” என்று நோற்றுவருகின்றாள். அந்நோன்பின் கடுமையினை, “ஆடவர் தனதிடத் தருகு போயினும், நாடிமற் றவர்பெயர் நயந்து கேட்பினும், வீடுவல் உயிர் என வெகுளும்” எனவும், “காமனே செல்லினும் கனன்று காண்கிலாள் வேம்எனக் குடம்பெனும் வேய்கொள் தோளி” எனவும் தேவர் கூறுகின்றார். சீவகன், அவள்பால், வயதுமுதிர்ந்த வோர் வேதியனுருக் கொண்டு செல்கின்றான். செல்பவன், சுரமஞ்சரியிருந்த கன்னி மாடத்தை நெருங்கின அளவில், அவள் சேடியர்போந்து, “ஏதம் இது; போமின்” என்கின்றனர். அவன் இறப்பவும் மெலிந்து அவர் கண்டு நனியிரங்கத் தக்க நிலையனாய் நிற்கின்றான். அது கண்ட அவர் சென்று, மஞ்சரிக்கு உரைப்ப, அவள் கன்னிமாடத்தின் மேனிலத்திலிருந்து தரை நிலத்திற்கு இழிந்து வருபவள், “சோலை வரைமேல் இழியும் தோகைமயில் ஒத்தாள்.” பின்பு, அவ்வேதியன் முன்னர், “நாறுமலர்க் கொம்பர் நடைகற்பதென வந்தாள்.” வந்தவள் சீவகவேதியனைக் கண்டு, “ஐயன்மீர், நீவிர் இங்கு வந்த வரவு என்னை?” என்றாளாக, அவன், “என் சிந்தையில் நின்று என்னை வருத்துகின்ற அழகிய நீர்மையினையுடைய குமரியாகிய நின்னைக் கூடவே வந்தேன்” என்றும், “சித்தத்தே நலிகின்ற தீர்த்த நீராகிய குமரியாற்றில் மூழ்கியாட வந்தேன், என்றும் கவர் பொருள் எய்த, “சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட” வந்தேன் என்றான். என்றலும், அதனையுணரமாட்டாத அவள், பிற்கூறிய பொருளையே கருத்தாகக் கொண்டு, “அதனால் உண்டாகக் கூடிய பயன் என்னை?” என்றாள். அதற்கு, அவன், தான் வருதற்குரிய காலத்தில் வராது அதற்கு முன்பே வந்து நலிகின்ற மூப்புப் போம் என்றும், “நீ உன்கண் முன்னே காண என்னைவருத்தும் மூப்புப் போகும்” என்றும் இருபொருள்பட, “முந்தி நலிகின்ற முது மூப்பு ஒழியும்” என்றான். “இப்போதும், பிற்காட்டிய பொருளையே கொண்டு, சுரமஞ்சரி, “இவ்வாறு குமரியாடி மூப்பொழிந்தவர் யாவரேனும் உண்டோ?” என்பாள், இகழ்ச்சிதோன்ற நகைத்து, “பிறரும் உளரோ பெறுநர்? பேணி மொழிக” என்று கேட்டாள். அவட்கு, அவன், “துறையறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர்இல்” என்றான். இதன் கண், “நின்னைக் கூடுதற்குரிய துறை இவ்வாறு வேற்றுருக் கொண்டு போதருவதே என்று அறிந்து, நின்பாற் போந்து, நின்னைத்தொழுது கூடுவோர் பிறர் இல்லை” என்று சீவகன் கருதிக் கூறினான். ஆனால், இதற்கு, “மூப்பொழிக்கும் குமரித் துறையென்பது ஒன்று உளது என்று அறிந்து, அதனை யடைந்து பரவி மூழ்குபவர் பிறர் இல்லை” யென்றான் எனவுட் கொண்ட சுரமஞ்சரி, “அற்றேல், அதனை நீவிர் அறிதிர்போலும்” என்பாள், “அறிதிர் பிறநீவிர்” என்றாள். எனவே, அவன், இத்துறையேயன்றிப் பிறதுறைகளையும் யான் அறிவேன்; இதற்கு ஐயம் இல்லை என்றற்கு, “ஐயமில்லை” என்றான். சுரமஞ் சரியோ, “கழிந்த இளமையை மீட்டும் பெறலாம் என்று கருதுமிவர், செத்தமரம் மழையால் பெயர்த்தும் தளிர்க்கும் என்று கருதும் பித்தர் போல இருக்கின்றார்,” என்று கருதினவளாய், இவன் பசியைப் போக்கவேண்டி மாடத்துட் சென்றாள். ஆயமகளிரும் சீவக வேதியனை உட்கொண்டேகினர். உட்சென்றதும், சுரமஞ்சரி சேடியரைநோக்கி, இம்முதி யோர்க்கு முதுமை மிக்குளது; வாய் பவளத்துண்டம் போல உளது; கண்ணும் பாதமும் கமலம் போன்று இருக்கின்றன; பசியும் மிகுந்திருக்கிறது. நீவிர், அடிசில் கடிதே ஆக்கி, இவண் கொணர் மின்,” என்றனள். அவர்களும் அவ்வண்ணமே செய்து அமைத்தனர். சீவகன், அவர்கள் செய்த உபசாரங்களையேற்று உணவுகொண்டு, வெற்றிலைமென்று கவுளில் அடக்கிக் கொண்டு இனிதிருந்தான். அதுகண்ட சுரமஞ்சரி, அவனைநோக்கி, “ஐயன்மீர், நீர் வல்லது என்னை?” என்றாள். அவட்கு, அவன் தான் மறைந்து வேடம் கொள்வதில் வல்லவன் என்றும், சாமவேதம் பாடுவதில் வல்லவன் என்றும் இருபொருள் எய்துமாறு, மடவாய், யான் மறைவல்லன்” என்றான். அதனையறியாத அவள், “நீவிர் கற்றதன் எல்லை யாது?” என்று வினவினாள். அதற்கு, அவன், “யான் நினைத்தகாரியம் முடியும்வரையில் என் இசைவன்மையைக் காட்டுவேன்” என்றும், “சாமவேதத்தின் முடிபொருளாகிய தத்துவப்பொருள் எய்துமளவும் கற்றுவல்லேன்” என்றும் பொருள்படுமாறு, ‘பொருள் எய்தி முடிகாறும்’ என்று சொன்னான். அதனோடமையாத சுரமஞ்சரி, “இன்னும், நீவிர் கற்ற காலத்துச் சிறப்புக்களையும் கூறுமின்,” என்ற கருத்துக்கொண்டு, “சொல்லும் இன்னும் நீவிர் கற்ற காலம்” என்றனள் அவன், மேலும் வினாவிடை பெருகுதல்கண்டு, “எனக்கு அது கருத்தன்று ” என்றும், “அக்காலநிலை கூற நினைவில்லேன்” என்றும் பொருள்பட “சிந்தையிலன்” என்று மொழிந்தான். இச்சொல்லாட்டால் இன்புற்ற சுரமஞ்சரி மேல்விளையப் போவது நினையாது, “இவர் போல்பவர் இந்நிலவுலகத்தில் இல்லை” என்று ஏத்தி, விருப்பத்தோடு அவனைநோக்கினள். அதுகண்ட அவன், “இனி, இவள் செல்வாள்” என்று கருதி, தூங்கி விழுபவன்போல் வீழ்ந்து நகைச்சுவை யுண்டு பண்ணினான். சுரமஞ்சரியும் நகைத்து நிற்ப, “எனக்கு உறக்கம் வருகின்றது; என் செய்வேன், உரைத்தி”என்று பரிவுடன்கேட்க, அவள், தனது பட்டு விரித்த கட்டிலின்கண் ‘பரிவின்றி உறைக’ என்றாள். அவனும் அவ்வாறே உரையலாயினன்; அவளும் சேடியரும் தத்தம் அறைக் குட் புகுந்து அடங்கினர்; பொழுதும் நன்கு மறைந்தது; இரவுக் காலமும் இடையின்றி எய்திவிட்டது. அணைமேற்கிடந்த சீவகன், கண்ணைத்திறந்து கீதம் ஒன்று மதுரம்படப்பாடினார். அது கேட்டதும், அவளுடைய சேடியர் பலரும் வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர். சுரமஞ்சரியும் பாட்டிசைகேட்டு, பரவசமுற்று, “பனிப்பிறைப் பூணினான் தன் பாண்வலைச் சென்றுபட்டாள்” என்னுமாறு அவன் அருகு வந்து அணைந்தாள். அவர்களைக் காண்டலும், சீவகன் அவர்கள் வெள்கி நாணத்தக்க சில சொற்களைக் கூறிப்பின்னர், “முதுமை மிக்க யான் பாடியது கேட்டுப் பெரும்பரிவு கொண்டு என்பால் அணையும் நீவிர், இளையவன் ஒருவனைக் காண்பீராயின், என் செய்வீர்?” என்றான், உடனே, அவர்கள் “கெடுக, கெடுக” என்றனர். அதனைக் கேட்டதும், சீவக வேதியன், வியப்புற்றவன் போல் நோக்கி, “இளையவர் எவரும் இவளை விரும்பிப்போந்து கேட்டிலர் என்று வெறுத்தோ, அன்றி, அவருள் எவரேனும் தீங்கு செய்தா ரென்ற காரணத்தாலோ, எக்காரணத்தால் இளையவர் கெடுக கெடுக “என வெறுக்கின்றீர்கள்?” என வினவினான். அவர்கள், சுண்ணம் காரணமாகச் சொன்னதும், சீவகன் அது வழியாகச் சுரமஞ்சரி நோன்பு மேற்கொண்டதும் விளங்கக் கூறினர். சீவகன், அவர் கருத்தறிவான்போல் “இவட்குத் தீங்கு சொன்ன அச்சீவகன் ‘மாய்ந்தனன் போலும்” என்றான். உடனே, அம்மகளிர், தம் காதுகளைப் பொத்தி, ‘சீவகன் வாழ்க’ என வாழ்த்தி, “அவன் மாய்ந்திலன்; அதனை யாம் காந்தருவதத்தைபால் தூதனுப்பியறிந்து கொண்டேம்” என்று மொழிந்து, சீவகனைப் பின்னும் பாடுமாறு வேண்டினர். அவனும் சுரமஞ்சரியின் முகத்தை நோக்கிப் பாடத் தொடங்கினான். இதனை, “மகளிர் தம்முள், உயிர்பெற எழுதப்பட்ட ஓவியப் பாவையொப்பாள் செயிரில் வாண்முகத்தை நோக்கித், தேன்பொதிந்து அமுதமூறப், பயிரிலா நரம்பிற் கீதம்பாடிய தொடங்கினானே” என்று தேவர் கூறுகின்றார். பாடத் தொடங்கிய சீவகன், தலைவன் பிரிந்தவழித் தலைவி மாலையம்பொழுது கண்டு ஆற்றாது கூறும் துறையில், “தொடித் தோள்வளை நெகிழத் தொய்யில் முலைமேல் வடிக் கேழ்மலர் நெடுங்கண் வார்புயலும் காலும்; வார்புயலும் காலும், வளை நெகிழும், நந்திறத்த(து) ஆர்வமுறு நெஞ்சம் அழுங் குவிக்கும் மாலை (2049) “ஐதேந் தகலல்குல் ஆவித் தழலுயி ராக் கைசோர்ந் தணலூன்றிக் கண்ணீர் கவுள் அலைப்ப, கண்ணீர் கவுள்அலைப்ப, கையற்(று) யாம் இணையப் புண்ணீரும் வேலிற் புகுந்ததால் மாலை;” (2050) “அவிழ்ந் தேந்து பூங்கோதை ஆகத் தலர்ந்த முகிழ்ந் தேந்திள முலைமேல் பொன்பசலை பூப்பப் பொன் பசலை பூப்ப, பொருகயற்கண் முத்தரும்ப, அன்புருகு நெஞ்சம் அழுங் குவிக்கு மாலை” (2051) என்ற இப்பாட்டுக்களைப் பாடினான். இவற்றைக் கேட்ட சுரமஞ்சரி, கூற்று நிகழ்த்தும் தலைவியது நிலையில் தன்னைவைத்து, சீவகனைநினைந்து, அவனைப் பெறுதற்குரிய நோன்பை மேற்கொண்டு மறுநாளே காமக் கடவுளைப் பரவி வரம் வேண்டத் துணிந்தாள். மறுநாள், சுரமஞ்சரி, சீவக வேதியனையும் உடனழைத்துக் கொண்டு காமன் கோட்டம் சென்றனள். அங்கே, ஒருபுடையில் சீவகனை மறையவைத்துக் காமனை வணங்கி, “தாமரைச் செங்கட் செவ்வாய்த் தமனியர்க் குழையினாய்!ஓ காமம் இங்குடை யேன்; காளை சீவகன் அகலம் சேர்த்தின், மாமணிமகரம் அம்பு வண்சிலைக் கரும்பு மான் தேர் பூமலி மார்ப! ஈவல் ஊரொடும் பொலிய என்றாள்” அங்கே, சீவகனது தோழர்கள் முன்னே செய்து கொண்ட ஏற்பாட்டிற்குத்தக, அவருள் புத்திசேனன் என்பவன், காமக் கடவுளின் பின்னே மறைந்து நின்றிருந்தவன், “மட்டவிழ் கோதை! நின் மனம்மகிழ் காதலனை நீ பெற்றாய்; இனி, நில்லாது எழுக” என்று கூறினன். அதனை யுணராத அப்பேதையும், தான் “பரவிய தெய்வம் தான் வாய்விட்டு உரைத்திட்டது” என்று கருதியவளாய்ச் சீவகன் மறைந்திருந்த இடம்சென்றாள். அங்கே, சீவகன் தன் இயற்கை வடிவத்தோடு எழில் விளங்க நின்றான். இருவரும் ஒருவரையொருவர் கண்ணில் ஆரக்கண்டு, “இன்தமிழ் இயற்கை யின்பம் நிலைபெற நெறியில் துய்த்தார்கள்.” பின்பு, சீவகன், சுரமஞ்சரியைப் பிரிந்து நீங்கி, தன் தோழரை யடைந்தான். அவர்கள் அவனைக் காமதிலகன் என்று வாழ்த்திப் புகழ்ந்தனர். சீவகனும் காமதிலகன் என்னும் பெயர் பெறுவது குறித்துச் சூள் முற்றியதற்கு மகிழ்ந்து, சுரமஞ்சரியையும் முறைப்படி மணந்து கொண்டான்.  26. மனைகெழு மடந்தை (ஆசிரியர் ஓரம் போகியார் பாடியது) (ஒரு சிறுகதை) "நீ ஒரு மனைகெழு மடந்தை; உனக்கு அது தகாது" என்ற பேச்சொலி கேட்டதும், பூஞ்சோலையின் ஓரமே சென்று கொண் டிருந்த பெரியவர், அவ்வொலிவந்தபக்கம் தம் கட்பார்வையைச் செலுத்தினார். உடனே, அவர் மனத்தில், "இதோ, வேம்படிநின்று பேசிக் கொண்டிருக்கும் மகளிரின் பேச்சொலியே இது; இவர்களுள் ஒருத்தி முகம் வாடியும், மற்றொருத்தியின் முகம் அவ்வாறு இன்றியும் இருக்கின்றன; இவர்கள்பால் இப்பேச்சு உண்டாதற்குக் காரணம் யாது?" என்ற எண்ணம் எழுந்தது. அவரை அணுகி, அவர்க்குள்ள செய்தியை அறிவதற்கு ஆர்வமும் பிறந்தது. வேறு ஏதோ ஓர் எண்ணம் பிறக்கவே, அவ்வார்வத்தையடக்கிக் கொண்டு, சோலையின் தெற்கிலிருந்த பொய்கையின் கரையை யடைந்தார். பகலவனும் மேற்கில் இறங்கி, மேலைக் கடல்நோக்கி விரைந்து கொண்டிருந்தான். அவர் நின்றவிடத்தில் அரசும், அத்தியும் வேம்பும், பூவரசும், நின்று, தம் கிளைகளைப் பரப்பி நிழல் செய்தன. தென்றலும் மெல்லென வீசிக்கொண்டிருந்தது. அகன்ற அப்பொய்கையில் நீர் நிரம்பித் தெளிந்திருந்தது. கரையோரத்தில் நாணலும், கோரையும் நன்கு வளர்ந்திருந்தன. கரையில் நின்ற தென்னைகளும் காய்தாங்கிக் கவினுற்று விளங்கின. பொய்கையின் கரையருகே இருந்த நன்செய் வயல்களில் நெற்பயிர் விளைந்து கதிர்முற்றித் தலைசாய்ந்து கிடந்தன. சேய்மையில், வரம்புகளில் செறிந்திருந்த புல்லை ஆனினம் மேய்ந்து கொண்டி ருந்தன. பாலுண்டுகளிக்கும் ஆன்கன்றுகள் மான்கன்றெனத் துள்ளி விளையாட்டயர்ந்தன. பொய்கை விளிம்பில் மலர்ந்திருந்த ஆம் பலை நன்கு மேய்ந்த எருமையினம், வெயிலின் வெப்பந் தாங்காது சேற்றிற் படிந்து உறங்கிக் கிடந்தன. அவற்றைச்சுற்றி, சிறியவும் பெரியவுமாக மீனினம் மேய்ந்து கொண்டிருந்தன. உழுநர்பாட்டும், எருமை மேய்க்கும் இளஞ்சிறுவர் பாட்டும் வயற்புறம் எங்கும் வயங்கியிருந்தன. தென்றலின் மேன்மையும், செழுமலரின் தீவிய மணமும், பெரியவர் உள்ளத்தே இனிய எண்ணங்களை எழுப்பின. இதனால், இவர்வாயின் இதழ்கள் அசைய, இனிய பாட்டொன்று வெளி வருவதாயிற்று. அப்பாட்டில், அவர் கண்முன் தோன்றும் காட்சி முற்றும் இடம் பெற்றிருந்தது. அதனால், இவரோர் நல்லிசைப் புலவராவர் என்பது காண்போர்க்கு இனிது விளங்குவதாயிற்று. திடீரென, பொய்கைக்கண் கலிப்போசை யெழுந்தது. அப்பக்கத்தில் இப்புலவர் தம் பார்வையைச் செலுத்தினர். அதே சமயத்தில், "இதோ பார். எருமை எழுவதினால், அருகிருந்த மீன் கூட்டங்கள் அஞ்சியோடின; வாளைமீன் தண்ணீரில் துள்ளிக் களிக்கின்றது; இதுவே, இவ்வோசைக்குக் காரணம், வேறில்லை" என்ற பேச்சு புலவர் செவியிற் புக்கது. அவ்வோசை வந்த இடத்தை நோக்கிய போது தாம் முன்கண்ட மகளிர் இருவரும் பொய்கைக் கரையில் வேறொருபக்கத்தில் உட்கார்ந்திருப்பது கண்டார். "அவ்வோசை என்நெஞ்சை நடுக்கிவிட்டது; இன்னும் என் உடல் நடுங்குகின்றது, பார்" என்று வாடிய முகத்துடனிருந்த மடந்தை கூறினாள். "முன்பே, வேறோர் எண்ணத்தால் மெலிந் திருக்கின்றாயாதலால், இஃது உனக்குப் பெருநடுக்கத்தை உண்டு பண்ணிவிட்டது. இதோ, இவ்வெருமை எழுந்திருப்பதால், மீன் கூட்டம் அஞ்சி நீங்குவது காண். எழுந்தேகும் அவ்வெருமை பகன்றை படர்ந்து நிற்கும் அவ்வேலியைத் தகர்த்துக் கொண்டு போவதால், அதன் கொம்பில் பகன்றைக் கொடி தன் பூவுடன் சுற்றிக் கொண்டது. அவ்வெருமை செல்லும் செருக்கைப்பார். பொழுது சாய்தல்கண்டு, பகன்றை சூடிய மருப்புடன் செருக்கி ஊர்க்குள்புகும் இவ்வெருமையின் செயல், உன் தலைவன் செயலே போல் இருக்கிறதன்றோ! ஆகவே தலைவனது செயலும் இயற்கை யொடு பொருந்தியதேயன்றோ!" எனத் தோழி மடந்தையின் மனநோயை மாற்ற முயன்றாள். இச்சொற்கள் புலவர் செவியிற் புக்கதும், அவர் ஆம்பல்மேய்ந்து, சேற்றிற்படிந்து கிடந்து எழுந்தேகும் எருமை பகன்றை வேலியைச் சிதர்த்து, அதன் கொடியும், பூவும் தன் கொம்பிற் சூழ்ந்து கொள்ள, அக்கோலத் துடன் ஊர்க்குட்புகும் செயலைக்கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு, தோழியின் சொல் வன்மையை வியப்பாராயினர். மடந்தை:- இதன் செய்கைக்கும், நம் தலைவர் செய்கைக்கும் எவ்வகையில் ஒற்றுமை காண்கின்றாய். பெருமையும், போர்மறமும் அவர்க்கேயுரிய சிறப்புப் பண்புகளன்றோ! தோழி:- போர்மறவர் தும்பைசூடி ஊக்கம் கிளரச் செம் மாந்து செருக்களம் புகுவதுபோல, இவ்வெருமையும் பகன்றை சூடி உயர்ந்த மருப்பொடு செருக்கி ஊர்க்குட் புகுகின்றதே. மடந்தை:- (முறுவலித்து) நன்று நன்று. இதன் உடலிற் படிந்திருக்கும் சேற்றை, அவர்மார்பிற்கிடக்கும் சந்தனச் சேறு என்பாய் போலும். தோழி:- ஆம், அதுமட்டுமா! போர்மறவர் போர்க்களம் புகுந்தால், அவரை வலியிலார் பலர் கூடி மொய்த்துக் கொள்வர். அவர் சிலைத்தெழுந்தவழி அவரனை வரும் சிதறியோட, அவர் செருக்கிச் செல்வர். அதுபோலன்றோ, இவ்வெருமையும், தன்னைச் சூழ இருந்த மீன்கூட்டம் சிதறியோட எழுந்து செல்கின்றது. மடந்தை:- (பெருமூச்செறிந்து) இத்தகைய பெருவீரம் சிறக்கும் நம்தலைவர் இது செய்யாராயின், யான் எவ்வளவு இன்பமுறுவேன். அஃதிருக்கட்டும்; இஃது அவர்க்கு இயல்பு என்கின்றாயே, எப்படி? தோழி:- மகளிர்க்குக் கருத்தங்கும் காலம் வருமளவும் தலைமக்கட்குப் பரத்தையிற் பிரிவு தகுமெனச்சான்றோர் விதித்திருக் கின்றனர். அதனால், அவர்கள் பரத்தையர் சேரிக்குச் சென்று, நாளும் புதியமகளிரொடு தேரேறிச் சென்று புறவொழுக்கம் பூண்டு ஒழுகுவர். அம்முறையே, நம் தலைவர் புறத்தொழுகி வருகின்றார். அங்ஙனமாக, அவர் புறத்தொழுகுவதைக் கைவிட்டிலர் என நினைந்து நீ புலக்கின்றது முறையன்று. மடந்தை:- ஏன் முறையன்று? புறத்தொழுகித் திரியும் ஆடவரைத் தெருட்டுதற்கு, மனைகெழுமடந்தையர் கொள்ளும் கருவி புலவியல்லது வேறுயாது? தோழி:- மடந்தாய், மனைகெழு மடந்தைகட்குப் புலவியே சிறந்தகருவி யென்பது ஒக்கும். ஆயினும், மனையறம் வழுவாது ஒழுகும் மடந்தை மனைகெழும டந்தையாவாள். அவள் அவ்வறத் திற்கு இடையூறு செய்யும் செயல்யாதும் நெஞ்சால் நினைப்பதும் கூடாதே. புலவியால் அது நிகழுமாயின், அதனை ஏறிட்டும் பார்த்தல் கூடாதன்றோ! மடந்தை:- மனைகெழு மடந்தை, தன்னைக் கொண்டவன் நல்வழியின் நீங்கி, அல்வழிக்கண் செல்லின், அவனைத் தெருட்டும் கடமை உடையளல்லளோ? அது குறித்து அவள் புலவியை ஏவல் கொள்வளன்றோ? தோழி:- பரத்தைமை பூண்பது ஆடவர்க்கு இயல்பெனச் சான்றோர் விதித்திருத்தலால், அதனைத் தீதெனக் கடியக் கருதுவது எவ்வாறு அமையும்? மடந்தை:- புறத்தொழுக்கத்தும், ஆடவர் நெறிகடந்து செல்லுதற்கு இயை புண்டன்றோ. அவ்விதி வரம்பு கடவாதபடி நிறுத்துதற்கன்றோ சான்றோர் புலவியைப் பொருளாக விதித் துள்ளனர். தோழி:-ஆகவே, இப்புலவியை மிக்க நயம்படக் கையாளுதல் வேண்டும் என்பது தெரிகிறதன்றோ? இது மிக்க மென்மை யுடையது; சிறிது இறுக வலிப்பின், அதனைப் பிணித்து நிற்கும் அன்பு நார் அறுந்து கெடும்; அதனால் வாழ்வும் சீர்குலைந்து விடும். மடந்தை:- (கண்கலங்கி) என்ன ! வாழ்வு சீர்குலைந்து விடுமா? தலைவர் அன்பின்றிக் கைவிட்டு விடுவரோ! அதை நினைத்தால் என் நெஞ்சு கலங்குகின்றதே! தோழி:- புலவிமிக்க வழியே, அவர்பாலும் புலவிமிக்குப் பின் தீராப் புலவியாகி, முடிவில் நெஞ்சுகலங்கத்தக்க நிலைமையை உண்டு பண்ணுவதாம். மடந்தை:- அது மிகக் கொடிதுபோல இருக்கிறதே? தோழி:- "போல" என்பது என்ன? கொடிது, கொடிதே, அவ்வாறு புலப்பதும், புலந்துறைவதும் மனவன்மைமிக உடைய மகளிர்க்குத் தான் முடியும். மடந்தை:- அவ்வகையும் உண்டோ? தோழி:- ஐயமென்ன? பலர் உள்ளனர். அவர் வாழ்வும் இரங்கத் தக்கதாகவே உள்ளது. மடந்தை:- அஃதெப்படி இரங்கத்தக்கதாகப் போய் விடுகிறது? தோழி:- ஏன், அது நன்றாகத் தெரிகிறதே? புலவி மிகமிக, புலக்கும் மகளிர் மனத்தில் அன்புகுறைந்து வன்புமிகுகிறது. வன்புமிகின், மனையறத்துக் குரிய அன்பும் அறமும் குன்றும்; அவைகுன்றவே, அவர் மனையிலிருந்து செய்யவள் நீங்குவள்; நீங்கின், செல்வம் குறையும். செல்வம் குறைந்தவழி, வறுமை மிகும்; வறுமைமிகின், விருந்தோம்பு நல்லறம் கெடும்; அதனால் பிறர்க்கெனச் செய்யும் அட்டிற்றொழில் இன்றித் தமக்கே என அட்டுண்ணும் சிறுமை யுண்டாகும்; அச்சிறுமையால் நாளடைவில் தமக்கும் போதிய உணவு இல்லையாம்; உடலும் மெலிந்து திரங்கும்; தேமொழி வழங்கும் புதல்வர் வறுமுலை சுவைத்துப் பசினோய் நீங்காது வருந்துவர்; புதல்வர் எய்தும் பசிவருத்தம் காண்பதினும் மகளிர்க்கு வேறு துன்பம் வேண்டாவன்றே. முடிவில் அவர், இலரல்லர், உளர்என்னும் மாத்திரையன்றிப் பிறிதொன்றும் இலராவர். மடந்தை:- (மனநோய்மிக்கு) இதனையறிந்தால் எத்தகைய மகளிரும் புலக்க நினையார், அல்லவா? தோழி:- அது தானே இல்லை. இதனையறிந்தும் தம் தலைவருடன் தீராப்புலவி கொண்டு அவரோடு உடன்று அறியாமை எய்தினவர் பலர் இருக்கின்றனரே! அதனாற்றான், புதல்வரைப் பெற்றுப் பயன்படும் மனைகெழு மடந்தையாகிய உனக்குப் புலத்தல் பொருந்தாது என்ற கருத்தினால், "புலத்தல் ஒல்லுமோ மனைகெழுமடந்தை" என்று சொன்னேன். மடந்தை:- தோழி, நீ சொன்ன இவ்வளவும் வரம்பு மீறிய புலவியால் விளைவது தானே. தோழி:- நீ கேட்பது எனக்குத் தெரியும். வரம்பு மீறிய வழி உண்டாகும் தீது இவ்வளவு; எனவே, வரம்புக்கு உட்பட்ட சிறு புலவியால் தீது உண்டாகாது என்று சொல்லிவிட முடியாது. சிறிது புலக்கினும், அது பின் வன்புக் கேதுவாய், தீராப்புலவிக் கண் செலுத்திவிடும். மடந்தை:- ஆனால் ஒன்று கேட்கின்றேன்; தலைவர் நாடொறும் புதுப்புது பரத்தையரைத் தம் தேர்மிசைக் கொணர்ந்து கூடி, அவர் சேரிக்கண்ணே தங்கிவருவது நமக்கு வருத்தம் தரு கிறதே, அதனை வெளிப்படுக்காமல் இருக்க முடியுமா? "நெஞ்சின் மிக்கது வாய் சோர்ந்து விடும்" என்று சொல்லுவார்களே பெரி யோர்கள். அது புலவிதானே. அவரை அவ்வொழுக்கத்திலிருந்து விலக்குவதுதான், பின்னர் எப்படி? சொல். தோழி:- இப்படி யெல்லாம் பேச்சுத் திரும்புமென்று தானே, நான் தலைவரை, ஊர்க்குட்புகும் எருமையோடு வைத்துக் காட்டினேன். மடந்தை:- அஃதெப்படி? எனக்கு விளங்கச் சொல். தோழி:- கேள், பொய்கையில் உள்ள ஆம்பலை மேய்ந்த எருமைச் சேற்றில் படிந்து கிடந்துவிட்டு, மாலைப் போது வரக்கண்டு, தன்னைச்சுற்றி மொய்த்துக் கொண்டிருந்த மீனும் வராலினமும் அஞ்சி நீங்கியோடும்படி எழுந்து, பகன்றைக் கொடியும் பூவும் கொம்பிற் சுற்றிக் கொண்டு விளங்க ஊர்க்குள் புகுகின்றது; அதுபோலவே, தலைவரும், பரத்தையர் நலம் நுகர்ந்து, அவர் மனைக்கண்ணே தங்கியிருந்துவிட்டு, உனக்குக் கருத்தங்கும் காலம் வரக்கண்டு, தன்னைச் சூழ்ந்து கிடந்த அப்பரத்தையர் நீங்க, மாலை யணிந்த தோளும் மார்பும் உடையராய் உன்மனைக்கு வருகின்றார். இதுதான் இவ்வெருமையின் செயலால் நாம் அறியக் கிடப்பது. மடந்தை:- (முகம்மலர்ந்து) இதுவாயின், அவர் நம்மிடத்தில் அன்பு குறைந்திலர் என்றன்றோ தெரிகிறது? தோழி:- அதிற் சிறிதும் ஐயமேன்? அவர் வருவார்; வரின், அவரை அன்பு கனிந்து வரவேற்பதே உன் கடமை; அது செய்வது தான் உனக்கு அறமாகும். (சுற்றிப்பார்த்து) நாழிகை ஆகிறது; வா, போகலாம். மடந்தையும் "நல்லது" என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள். அவளது சுடர்நுதல் சோலைக்கு வரும்போதிருந்தது போலாது ஒளிவிட்டுத் திகழ்வதாயிற்று. அவள் தோழி முன்செல்லத் தான், அழகின்கொழுந்தெழுந்து அசைந்தேகுவது போல நடந்து சென்று தன் அறம் தழைக்கும் பெருமனையை அடைந்தாள். இச்சொல்லாட்டை எழுத்துவிடாது நன்கு கேட்டுக் கொண்டிருந்த நல்லிசைப் புலவர், இம்மகளிரின் மனக்கருத்தை வியந்து, இதனை ஓர் இனிய தமிழ்ப்பாட்டாக யாக்கவிரும்பினார். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்பது நல்லிசைப் புலவர்களின் மனக்கோள். அதன்வழிச்செல்லும் அவரது உள்ளம் உடனே இந்நிகழ்ச்சிகளை விடாது பாட்டுருவாய்ப்படுத்தி வெளியிடு வதாயிற்று. அப்பாட்டு பின்வருமாறு:- "துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்(பு) ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முது போத்துத் தூங்கு சேற்(று) அள்ளல் துஞ்சி, பொழுதுபட, பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்செறி மள்ளரின் புகுதரும் ஊரன், தேர்தர வந்த தெரியிழை, நெகிழ்தோள், ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப் 'பரத்தமை தாங்கொலோ இலன்' என வறிது நீ புலத்தல் ஒல்லுமோ? மனைகெழுமடந்தை! அது புலந்(து) உறைதல் வல்லியோரே, செய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்து, தாம் அட்(டு) உண்டு, தமியராகி, தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப வைகுந ராகுதல் அறிந்தும், அறியார் அம்ம அஃ(து) உடலுமோரே" இவ்வினிய பாட்டு, தொகை நூல்களுள் ஒன்றான அக நானூற்றின்கண் ஒன்றாக (316) த் தொகுக்கப் பட்டுள்ளது. ஈண்டுக் காட்டிய நிகழ்ச்சி மிகச் சுருங்கிய சில சொற்களால், "தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது" எனப் பேரறிஞர் ஒருவரால் இப்பாட்டின் கருத்தாக வடித்துக் காட்டப் பெற்றுள்ளது. இதனைக் காணின், மேலே கூறிய நிகழ்ச்சியில் காணப்படாத செய்தியொன்று, இக்கருத்துரையில் இருப்பது புலனாகும். அது, தோழிதலைவனுக்கு வாயில் நேர்ந்த செய்தி. இது தோன்றியதற்கு ஏது, இப்பாட்டினைப் பாடியளித்த நல்லிசைப் புலவரின் நாநலத்தின் சிறப்பாகும். அதனை ஒரு சிறிது காண்போம். தோழி, மடந்தையை நோக்கி, "பரத்தைமை தாங்கலோ இலன் என வறிது நீ, புலத்தல் ஒல்லுமோ? மனைகெழு மடந்தை!" என்று கூறுகின்றாள். இக்கூற்றில், "பரத்தைமை தாங்கலோ இலன்" என்பது மடந்தை தோழிக்குக் கூறியதாகும். அது கேட்கும் தோழி, அவளுற்ற வருத்தத்தைத் தானும் உற்று வருந்தும் கடன்மை யுடையளா வாள். மேலும், அவன் பிரிவை நினைந்து வருந்தாமல் ஆற்றியிருக்கு மாறு அம்மடந்தையைத் தேற்றும் செயலும் அவட்குச்சிறப்பாக உரியது. அதனைச் செய்யாது, இதுபோது, தலைவியாகிய மடந்தையை, "மனைகெழு மடந்தைக்குப் புலத்தல் சிறிதும் கூடாது; புலந்துறைவோர் மனத்தே வன்புடையராவர் (உறைதல் வல்லியோரே); தலைவரோடு உடலுவோர் அறிந்தும் அறியா தாரேயாவர்" என நெருங்கிக் கூறுகின்றாள் இதற்குக் காரணம் யாதாக இருக்கலாம்? தலைவன் பரத்தையர் இல்லின்நீங்கி, தன்மனைக்கு வந்திருத்தல் வேண்டும்; அவனொடு மடந்தை புலந்து மறுத்திருத்தல் வேண்டும்; அவன் தோழிபால் வாயில் வேண்டியிருப்பன்; அதனைத் தோழி நேர்ந்து தலைமகளை இவ்வாறு நெருங்கித் தெருட்டி, புலவியால்மறாது அவனை ஏற்குமாறு இவற்றை மொழிந்திருக்க வேண்டும் என்பன உணரக் கிடக்கின்றன. இவ்வாறு தோழியின்பால் ஆராய்ச்சிக் கிடனாயிருந்த இதனை, அந்த நல்லிசைப்புலவர் தம் நாவன்மையால் பாட்டிடையே தோன்றச் செய்தனர். இவ்வாறு செய்யாவழி இந்நிகழ்ச்சிகள் ஏதுவும் பயனுமாய் இயைந்து பாட்டளவில் முற்றுப்பெறா. இத்துணைச் சதுரப்பாடமைய இதனைப் பாடிய நல்லிசைப் புலவர் யாவர்? இவர் ஓரம்போகியார் என்னும் பெயர் கொண்ட செந்தமிழ் நல்லிசைப் புலவராவர். இதுபோல், ஐங்குறுநூற்றில் நூறுபாட்டுக் களும், குறுந்தொகை, நற்றிணை முதலிய தொகை நூல்களிலும் சில பாட்டுக்களும் பாடியிருக்கின்றார். - தமிழ்ப்பொழில் 27. ஒளவையாரும் பாரிமகளிரும் தமிழ் நாட்டு மக்கட்கு நன்கு தெரிந்த பழம் புலவர்களில் ஒளவையார் முதன்மையானவராவர். இவரைப்பற்றிக் கூறப்படும் கதைகளும்இவர் பாடியனவாகக் காட்டப்படும் பாட்டுக்களும் பலவாகும். சங்க நூற்பாட்டுக்களையும் வேறு சிலவற்றை யும் துணையாகக் கொண்டு ஒளவையார்க்கும் பாரிமகளிர்க்கும் உண்டாகிய தொடர்பினைக் காணலாம். ஒளவையார் பொதுவாகத் தமிழகம் முழுவதும் சென்று ஆங்காங்கு நிறைந்த பண்பும், புகழும் படைத்த வேந்தர்களையும், செல்வர்களையும் பாராட்டிப் பாடிப் பரிசில் பெற்றுவருவது வழக்கம். ஆயினும் இவர் தகடூரிலிருந்து ஆட்சி புரிந்து வந்த அதிகமான் நெடுமான் அஞ்சியிடமே சிறப்பன்புடையராய் அவனது அரசவையை அணிசெய்து வந்தார் ஒரு காலத்தே தன்னை யுண்டவரை நெடிது வாழப் பண்ணும் அருநெல்லிக்கனி ஒன்று அதிக மானுக்குக் கிடைத்தது. அதனைத்தானுண்டு நெடிது வாழ்தலினும் ஒளவையார் அதனை உண்டு நீடு வாழ்வது உலகிற்கு நலமாம் என்றெண்ணி அவர்க்குக் கொடுத்து உண்பித்தான். உண்ட பின்பே அதன் சிறப்பை அவன் ஒளவையாருக்குத் தெரிவித் தான். அவன் பெருந்தன்மையைக் கண்டு வியந்த ஒளவையார், "போரடு திருவின் பொலந்தார் அஞ்சி! பால் பிறை திரு நுதல் பொலிந்தசென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத் தடக்கிச் சாதல் நீங்க எமக்கீத் தனையே" என்று பாடிப் பாராட்டினார். இதன்கண் நீலமணிமிடற் றொருவன் என்றது, விடத்தையுண்டதனால் கருத்த கழுத்தை யுடைய இறைவனைக் குறிப்பதாம். இதனால் உண்டாரைச் சாகப் பண்ணும் நஞ்சினைத் தான் உண்டு உண்டவரைச் சாகாதிருக்கும் படி செய்யும் அமிழ்தத்தை விண்ணோர்க்குக் கொடுத்த அந்த இறைவன் அருள்நிலை குறிக்கப் பட்டது. அந்த இறைவனைப் போல நீயும் நெடிது வாழச்செய்யும் நெல்லிக்கனியை எமக்குக் கொடுத்தாய் என்ற கருத்தை, "நீலமணி மிடற்றொருவன்போல, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது சாதல் நீங்க எமக்கீத்தனையே" என்றார் மேலும் அமுதத்தை கனியை யுண்ணாயாயினும் நெடிது வாழ்க என்ற கருத்தால் நீலமணி மிடற்றொருவன்போல, 'மன்னுக பெரும' நீயே என்றார் இதனோடு நில்லாமல், பூங்கமல வாவிசூழ் புள்வேளூர்ப் பூதனையும் ஆங்கு வருபாற் பெண்ணை யாற்றினையும்-ஈங்கு மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றின் நாவை அறுப்பித்தாய் ஆமலகம் தந்து என்றும் மேலும் பாடிப் பரவினார். அவனுக்காக ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்று,அதிகமானைப் புகழ்ந்து, "உண்டாயின் பதம் கொடுத்து இல்லாயின் உடனுண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல் எங்கோமான்" என்று பாராட்டி, தொண்டைமானை இகழ்ந்தும் அதிக மானை புகழ்ந்தும் கூறுவன அவரது மனத்திட்பத்தை விளக்குவன ஆகும். ஒருகால் ஒளவையார் எழில்மலைத் தலைவனான நன்னன் என்பவனை காணச் சென்றார்; அவன் ஒளவையாரை அவமதித்தான். அதற்குச் சிறிதும் அஞ்சாது, "நீ என்னைக் கண்டும் காணாதவன் போல ஒழுகினாய்; என் பாட்டைக் கேட்டும் கேளாதவன் போல் செருக்கினாய் இது நினக்குத்தகாது" என்பாராய் ஒளவையார், இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்றம் - மருள்தீர்ந்த பாட்டும் உரையும் பயிலாதன இரண்டு ஓட்டைச் செவியும் உளை" என வெறுத்துப்பாடி நீங்கினார். ஒருகால் அதிகமான் பகைவரொடு பொருது பேரழிவு செய்யுங்காலை, ஒளவையார் போரால் பலமக்கள் மாண்டொழிவது கண்டு மிக்க இரக்கமுற்று, அதிகமானை வேண்டி, "இப்போரை நிறுத்துக" என்று வேண்டினார். அவனும் நிறுத்தி அருள் மிக்க உள்ளம் உடையவனானான். அது கண்ட ஒளவையார் அவன் பேரருளை வியந்து, "யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா வாயினும் தந்தையர்க்கு அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை எனவாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் கடிமதில் அரண் பல கடந்த நெடுமா னஞ்சிநீ அருளன் மாறே" என்று பாடி மனங்குழைந்தார். இன்னும் அவர் அதிகமான் போர் புண் பட்டது கண்டும், இறந்தமை கண்டும் பாடுவன உள்ளத்தை உருக்குவனவாம். ஒளவையார்க்குத் தம்மையொத்த புலவர்களிடத்தே நன் மதிப்பும் பேரன்பும் உண்டு. அதிகமான் கோவலூர் வேந்தனொடு பொருது அந்நகரைத் தாக்கிய போர் நிகழ்ச்சியைப் பரணர் என்னும் புலவர் அழகு திகழப் பாடினாராம். அதிகமானைத் தாம் பாராட்டிப் பாட நேர்ந்தபோது ஒளவையார், "அதிகமானே! "சென்றமர் கடந்த நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்கரியை; இன்றும் பரணன் பாடினன் மற் கொல் மற்று நீ முரண்மிகு கோவலூர் நூறி நின் அரணடு திகிரி ஏந்தியதோளே" என்று பாடுவார், "இன்றும் பரணன் பாடினன் மன்" என்று பரணரைப் பாராட்டுகின்றார். பாரி மகளிரின் தந்தையான வேள் பாரி தமிழக முழுதும் தன் புகழ் பரப்பி மேம்பட்டிருப்பது கண்டு பொறாமை கொண்ட தமிழ் வேந்தர், அவனது பறம்பு மலையைச் சூழ்ந்து முற்றுகை இட்டுக் கொண்டனர். முற்றுகை பல நாட்கள் நிகழ்ந்தது. பறம்பு மலையில் உள்ளார்க்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதுகண்ட கபிலர் என்னும் புலவர் கிளிகளைப் பயிற்றி வெளியே செலுத்தி, ஆங்கு வயல்களிலிருந்து நெற்கதிர்களை கொணர்வித்து மக்களைக் காத்தனர். இச்செய்தியை அறிந்த ஒளவையார் கபிலரது மதி நுட்பத்தையும், மன நலத்தையும் நயந்து, கிளிகளின் செயலை எடுத்து, "உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின் நிரைபறைக் குரீஇயினங் காலை போகி முடங்குஒச் செந்நெற் றரீஇயர் ஓராங்கு இரை தேர் கொட்பினவாகிப் பொழுதுபப் படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு வருவர்" என்று பாடுகின்றார். இவ்வாற்றால் பன்னாள் முற்றுகையிட்டும் தமிழ் வேந்தர் வேள்பாரியை வெல்லமாட்டாது ஓடினர். முடிவில் அவர்கள் வஞ்சனையால் வேள் பாரியைக் கொன்று பறம்பு மலையைக் கைப்பற்றிக் கொண்டனர். வேள் பாரியின் மகளிரைக் கபிலர் அழைத்துச் சென்று அரசகுமாரர் சிலரைக் கண்டு அம்மகளிரை மணந்து கொள்ள வேண்டுவார் இவர்கள், "நெடுமரப் பாரி மகளிர், யானே தந்தை தோழன், இவர் என் மகளிர்" யான் கொடுப்பக் கொண்மின்" என்றார். அவ்வேந்தர்கள் தமிழ் வேந்தர் பகைமையுண்டாமென்று அஞ்சி மறுத்தனர். முடிவில் அவர் அம்மகளிரை யழைத்துக் கொண்டு கோவலூர்க்குச் சென்று அங்கிருந்த பார்ப்பாரிடம் அடைக்கலமாக அவர்களை ஒப்படைத்தார். பார்ப்பாரிடம் வைத்த பொருட்குத் தீங்கு செய்யலா காது என்பது அக்கால அரசியல். பின்பு அவர் சேரநாட்டுக்குச் சென்றார். திருக்கோவலூரில் பார்ப்பார் ஆதரவில் பாரிமகளிர் இருந்து வருகின்றனர். இச்செய்தியை முற்றும் அப்போது தகடூரி லிருந்த ஒளவையார் அறிந்தார். அவருக்குண்டான துயரத்துக்கு அளவில்லை. உடனே சென்று அந்த மகளிர்களைக் காணவேண்டும் என்றெழுந்தார். அக்காலம் மழையும் குளிரும் மிக்க காலம், பழுத்த முதுமை நிரம்பிய ஒளவைக்கு அது தக்க காலமாகுமா? இருந்தாலும் அவர் உடம்பில் முதுமையே தவிர உள்ளத்தில் இளமை தான். இளமை மழை குளிருக்கு அஞ்சுமோ? அவரும் வந்தார்; மழையும் வந்தது; கோவலூரை யடையும்போது பொழுதும் மறைந்தது; இருளும் பரந்தது; குளிரும் மிகுந்தது. மெல்ல நடந்து சென்று பாரி மகளிர் இருந்த வீட்டைக் கேட்டுக் கொண்டு சென்று அடைந்தார். வரவேற்ற அம்மகளிருள் ஒருத்தி யோடிச் சென்று நீலச் சிற்றாடை ஒன்று கொண்டுவந்து ஒளவையாருக்குப் போர்த்துக் குளிரை நீக்கி, உணவு உண்பித்தற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்யலானாள். மிக்க துயரத்தில் மூழ்கித் தடுமாறிய ஒளவையார் சிறிது தேறி அம்மகளிரையும் தேற்றினார். அம்மகளிர் தமக்கு நீலச்சிற்றாடை போர்த்துக் குளிர் போக்கியதை யுணர்ந்தார். அம்மகளிரின் மன நிலையை அறிந்தார். இம்மகளிரின் தந்தையான பாரி தன்னைத் தன் அரண்மனையில் சில நாள் தங்குவிக்க எண்ணி வழிப்பறிக் கள்வன் போல் தன்னிடத்திலிருந்த பொன்னைப் பறித்த வரலாறும். பழையனூரில் வாழ்ந்த காரியென்பவன், களைக்கொட்டை அன்புடன் தந்து களையெடுக்கச் சொன்ன செய்தியும், தகடூர் மன்னனான சேரமான் தன்னோடு உடனிருக்கச் செய்வது குறித்து விருந்தினர் கூட்டத்திலிருந்து வாராய் என அழைத்துக் கொண்ட செய்தியும் அவர் நெஞ்சில் எழுந்தன. அவர்களின் அன்பு நிலையை எண்ணினார் "அரம்பையின் கீழ்க்கன்றும் கனியுதவும்" என்ற பழமொழியை நினைந்தார். பெரும் மகிழ்ச்சி பிறந்தது. அது பாட்டாய் வெளிவந்தது. "பாரி பறித்த பறியும் பழையனூர்க் காரியன் றீந்த களைக் கொட்டும் - சேரமான் வாராயென வுரைத்த வார்த்தையும் இம் மூன்றும் நீலச்சிற றாடைக்கு நேர்" என்பது அப்பாட்டு. இப் பாட்டோசையில் ஒளவையின் பசியினை உணர்ந்த மூத்தவள் ஓடி இலை திருத்தி, ஒளவையை யுணவுண்ண வழைத்தாள். உணவைப் பரிமாறுங்கால் அவள் உள்ளத்தே நினைவுகள் பல எழுந்தன. ஒளவையார் தங்கள் பறம் பரண்மனைக்கு வந்திருந்த போது தாங்கள் அளித்த உணவின் உயர்வை நினைந்தாள் "இப்போது அவ்வாறு செய்தற்கில்லையே; வெறுங் கீரைதானே சமைத்துள்ளோம்" என எண்ணினாள். நெஞ்சுக் கலங்கிற்று உடம்பு சுருங்கிற்று; அவள் கையிலிருந்த கடகம் தளர்ந்து முன் கையில் வீழ்ந்தது. ஒளவையின் புலமை நிறைந்த கண்ணுக்கு இவையெல்லாம் தெரிந்தன. அம் மகளிரை மகிழ்விக்க எண்ணி, ....................................................... அடகென்று சொல்லி யமுதத்தை யிட்டீர் கடகஞ் செறியாதோகைக்கு," என்று பாடி மகிழ்வித்தார். மகளிர் இருவரும் பாட்டின் நயமறிந்து மகிழ்ந்திருந்தார்கள். இவ்வாறிருக்கையில், சில நாட்கள் கழிந்தும் முழு நிலா (பௌர்ணமி) வந்தது. அதனுடைய பால்போலும் வெள்ளிய நிலா எங்கணும் விரிந்த இன்பம் செய்தது. ஒளவையார் அதனைக் காட்டி, கலை நிரம்பிய உங்கள் முகம்போல முழுமதியம் ஒளி திகழ்வது காண் மின்," என்று சொல்லி இன்புறுத்துகின்றாள். அது கேட்டு மகளிர், முழுமதியம் வளர்வதும் தேய்வதும் போலச் செல்வர் வாழ்விலும், வளர்ச்சியும், வீழ்ச்சியும் உண்டு என்று அறிவுறுத்தக் கருதுகின்றார். ஒளவையார் என்று கருதுகின்றனர். அக்கருத்து அவர்கள் உள்ளத்தில் முன்னைய தங்கள் செல்வ நிலையையும், இற்றைய தாழ் நிலையையும் காட்டிற்று. கண்களில் நீர் அரும்பிற்று. அவர்கள் மலர்போன்ற வாயிலிருந்து தேன் போன்ற கருத்து அமைந்த பாட்டு ஒன்று பிறந்தது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையுமுடையேன் எம் குன்றும் பிறர் கொள்ளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே" என்று பாடினர். இதனைக் கேட்டதும் ஒளவையாருக்கு அடக்க முடியாத துயரமுண்டாயிற்று, சிறிது நேரம் அனைவரும் அவலித்திருந்து ஒருவாறு தேறி உறங்கச் சென்றனர். சில நாட்கட்குப் பின் சேரநாடு சென்று இருந்த கபிலர் கோவலூர் வந்து சேர்கின்றார். ஒளவையார் வந்திருப்பதைக் காண அவர்க்கு மிக்க மகிழ்ச்சி யுண்டாகிறது. நிகழ்ந்தது நினைந்து வருந்து வதை விட்டு இனி நிகழ வேண்டியதை நினைப்பது தக்கது என்று தணிந்து இம்மகளிர்க்குத் திருமணம் செய்ய வேண்டியதைப் பற்றி ஆராய்கின்றனர். ஒளவையார் மனம் களித்தது. இவர்களுக்கு யானே இருந்து மணம் செய்விக்க விரும்புகிறேன் என்ற பொருள் அமைய, "பாரிதாயும் இவர் பாலின்மை யொன்றல்லால் சீரும் சிறப்பும் செழித்தோங்க - நாரியர்தம் கண்ணாலங் காணக் கடவேன் யான்" என்றிசைத்தார். கபிலரும் தாம் சேரநாட்டிலிருந்து இம்ம களிர் திருமணத்துக்கெனப் பொன்னும், பொருளும் பெற்று வந்து இருப்பதாகச் சொல்லி இன்புறுகின்றார். மேலும் ஒளவையார் மகளிர் திருமணம் முடியும் வரையில் தான் உடனிருக்கப் போவ தாகச் சொல்வது அவருக்குப் பேரின்பத்தைச் செய்கிறது. ஒளவை யார் இவ்வாறு மனம் கொள்ளுதற்குக் காரணம் பாரி செய்த அறமே என்று பாராட்டினார். இவ்வாறு இருக்கையில் பாரி மகளிரை மன்னனான திருமுடிக்காரியின் புதல்வர் தெய்வீகன் திருக்கண்ணன் என்ற இருவருக்கும் திருமணம் செய்து தருவது என்று முடிபு செய்கின்றனர். மறுநாளே திருமுடிக் காரியையும் இது குறித்துக் காண்கின்றார்கள். அக்கோவலூர் மன்னனும் பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்கள் கருத்திற்கிசைந்து தன் புதல்வர்களை அழைத்து உசாவு கின்றார். அவர்களும் அத்திருமணத்தை மனமார விரும்புகின்றார்கள். திருமுடிக்காரி, "புலவீர் என் மக்களும் திருமணத்துக்கு இசைந்து உள்ளனர்; இனி பாரி மகளிரைக் கன்னி மாடத்துக்குக் கொணர்வது தக்கது" என்பானாய், "என் மக்கள் வாழ்விற் கியைந்தார் நன்பொன்னையார் புன் மக்கள் இல்லம் புகல் வேண்டா - மன் மக்கள் வேந்தன் வேள் பாரி விறல் மகளிர் என் மனைக்கே போந்தொளிர்க என்றான் புகன்று" இவ்வாறு சொல்லக் கேட்டதும் கபிலரும், ஒளவையாரும் பாரி மகளிர் இருந்த மனைக்கு வந்து, அரச மகளிருக்கு அணிகளால் அவர்களை ஒப்பனை செய்து மிக்க சிறப்புடன் கன்னிமாடத்துக்குக் கொண்டு செல்கின்றனர். அம்மகளிரைக் கண்ட வேந்தனும் பெருமகிழ்ச்சி அடைகின்றான். இங்ஙனம் தன் உயிர்த் தோழனான வேள் பாரியின் மகளிரை மலையமான் புதல்வர்க்கு மணம் செய்வதென ஒப்படைத்து அவர் மணம் முடியும் வரை ஒளவையாரையும் உடனிருக்க ஏற்பாடு செய்த கபிலர் தான் முன்பே செய்து கொண்ட சூளுறவின்படி அறிஞர் வியக்க, ஒளவையும், மகளிரும் அருந்துயரெய்தத் தீப்பாய் கின்றார். அங்கே கூடியிருந்த அரசரும் சான்றோரும் அவருக்குக் கல்நட்டுச் சிறப்புச் செய்கின்றார்கள். இச்செய்தி திருக்கோவலூர் வீரட்டேசுரர் கோயில் கல்வெட்டில் இன்றும் நாம் காணுமாறு பொறிக்கப் பட்டிருக்கிறது. சில நாட்களுக்குப் பின் ஒளவையார் மலைய மானொடு ஆராய்ந்து திருமணத்துக்குரிய நாளைக்குறித்துத் தமிழ் வேந்தருக் கும், பிறருக்கும் ஓலை போக்குகின்றார் எல்லோரும் தவறாமல் கோவலூருக்கு வந்து சேர்கின்றனர். தமிழ் வேந்தரும், தம் முன்பிருந்தோர் பாரி மீது வீணே பொறாமைகொண்டு பாரியைக் கொன்று பழி தேடிக் கொண்டதை நினைந்து வருந்தித் தாமே அம்மகளிர்க்குத் தந்தையராயிருந்து திருமணம் செய்து தருதற் கிசையுமாறு ஒளவையாரை வேண்டுகின்றனர், ஒளவையாரும் அவர்களைப் பாராட்டுகின்றார். திருமணம் நடைபெறுகிறது. சேரவேந்தன் முன்பே போந்து அங்கவையைத் தெய்வீகனுக்கு நீர் பெய்து தருகிறான்; சோழவேந்தன் சங்கவையைத் திருக்கண்ணனுக்கு நீர் பெய்து தருகிறான்; பாண்டிவேந்தன் தான் கொண்டு வந்த பெருஞ் செல்வத்தை இருவருக்கும் சீதனமாகத் தருகின்றான். திருமணம் சிறப்பொடு முடிகிறது எல்லோரும் மணமக்களை வாழ்த்திவிட்டு ஒளவையாரை வணங்கி விடைபெற்றுச் செல் கின்றார்கள். நாட்கள் சில கழிந்ததும் ஒளவையார் தகடூருக்குப் போக விரும்பிப் பாரி மகளிரை விடை தருமாறு கேட்கின்றார். அம்மகளிர் அவரை வணங்கி நின்று. "தந்தையாய்த் தாயாய்த் தனித் தெய்வமாகியெம்முன் வந்து பெருவாழ்வின் வைத்தீரால் - நுந்தம்மைச் சிந்தையிடை வைப்பதல்லால் செய்யும் கைமமாறுதான் எந்த வுலகத்தும் இலை" என்று சொல்லி விடைபகருகின்றார்கள். ஒளவையாரும் மனம் மகிழ்ந்து, "தூண்டா விளக்கனையீர், தோ மின்றி வாழ்மின்" என வாழ்த்தி நீங்குகின்றார். பாரி மகளிர் இன்பவாழ்வில் இனிது இருக்கின்றனர். - 19.4.45-ல் திருச்சி வானொலியிற் பேசியது.  28. நாடக வழக்கு "நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரை கின்றேன்." என்று மணிவாசகர் சிவபோகப் பெரு வாழ்வு பெறுதற்குத் தமக்குள்ள ஆர்வத்தைப் புலப்படுத்துகின்றார். நாடகத்தில் ஒருவன் சிவனடி யார் வேடம் பூண்டு நடிக்கின்றான். நடிக்கும் போது அவனுடைய உள்ளமும் சொல்லும் மெய்யும் சிவனடியாராகவே ஒன்றி நிற்கின்றன. அவ்வாறு சிவனடியாராக மாறினாலன்றி அவனது நடிப்புக் காண் பார்க்குச் சுவை பயவாது, அவனுக்கும் மனவமைதி எய்தாது. அவனுடைய நடிப்புக்கும் தோற்றம், இடைநிலை, முடிவு என முத்திறம் உண்டு. சிவனடியாராகத் தோன்றுவதும் இடையில் செய்வன செய்து நடிப்பதும் நிகழும்போது அவனுடைய உட் கரணங்கள் தம்மில் ஒன்றி அவனைச் சிவனடியார்க்குள்ள சிறப்பை எய்துவிக்கின்றன. அந் நடிப்பு முடிவதற்குள் அவன் சிவனடியார் எய்தும் வீடு பேற்றை விரும்புவானாயின். அது நகைப்புக்கு இடமாகும். காரணம் வீடு பேற்றுக்கு இன்றியமையாத மெய்யன்பு அவனுக்குச்சிவன்பால் இல்லை. அவனைப் போல் நானும் அடியார் வேடம் பூண்டு வீடு பேறு எய்துதற்கு விரைகின்றேன். அதற்கு வேண்டிய உண்மை யன்பை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டுகின்றார் மணிவாசகர். அதனால்தான், அவர் 'ஆடகச் சீர்மணிக்குன்றே இடையறா அன்புனக்கு என் ஊடுருகத் தந்தருள்' என வேண்டுகிறார். இத்திருவாசகத்துள் நாடகம் என்பது ஒருவர் பிறரொருவர் வேடம் தாங்கி, மனமொழி மெய்கள் ஒன்றி அவரே என்னுமாறு நடிப்பது என்ற வழக்கு மணி வாசகர்காலத்தில் இருந்தமை அறிகின்றோம். இந்நாடக வழக்கு உலகியல் நிகழ்ச்சியே, ஆயினும் உலகியல் நிகழ்ச்சிகள் அவற்றிற்குரிய இடத்தாலும் காலத்தாலும் வேறு வேறு இயல்பின. இவற்றை ஒரு சேரத் தொகுத்து நாடகமேடையில் காண்பார் கண்டு இன்புறுமாறு செய்வதில் நாடக வழக்கு வேறு படுகிறது. மேலும் அது தன்னைக் காணும் மக்கட்குக் காட்சியின்ப மேயன்றி அறிவு விளக்கம் நல்கும் சிறப்பும் உடையதாகலின் நாடக வழக்கில் புனைந்துரை புகுந்து அதற்கு இனிமை தந்து உருவாக்குகிறது. இவ்வுண்மை புலப்படுத்தற்கே தொல்காப்பியர் இலக்கிய உலகிற்கு உரியன நாடக வழக்கும் உலகியல் வழக்கும் என இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டுகின்றார். தொல்காப்பியர்க்கு முன்பே நிலவிய இலக்கியங்களில் நாடக நன்னூல்கள் பெருக இருந்தமையின் அவற்றை ஆராய்ந்து பொருள் இலக்கணம் வகுத்த அவர். "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலன் நெறி வழக்கம்" என்று குறிப்பாராயினர். பாடற் கமைந்தது என்று ஒன்றை நல்லி சைப்புலவர் மேற்கொண்டு பாடுகிற முறை புலனெறி வழக்கம் எனப்படும். புலனெறியாவது அறிவு நெறி. எனவே, நாடகமும் ஏனை இலக்கியங்கள் போல் புலவர் பெரு மக்கள் பாடும் பொற் புடைய தென்பது பழந்தமிழ்ச் சான்றோர் கொள்கை. அதுபற்றியே அகமும் புறமுமாகிய பொருள்களைச் சான்றோர் நாடகவுரை யாடல் போலவே உரைத்துள்ளனர். இந்நாடகங்களைக் காண்பதில் தமிழ் மக்கள் பேரார்வம் கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்களில் "பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்" மக்கள் இன்புற்றனரெனப் பட்டினப்பாலை முதலிய நூல்கள் உரைப்பதால் அறிகின்றோம். பின்னர்த் தோன்றிய சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் அவி நயத்தோடு கூடிய நடனத்தையும் ஓரொருகால் நாடகம் என்று குறிக்கலுற்றன. ஆயினும் கதை தழுவி வரும் கூத்தையே நாடகம் என்று அந்நூல்கள் சிறப்பாக வுரைக்கின்றன. எனவே, கதைக்கு உறுப்பாகப் பல வேறு மக்கள் வருவதால், பலர் கூடிக் கதை நிகழ்ச்சி இனிது புலப்பட வேற்றுருக் கொண்டு நடிப்பது நாடகம் என்பது முடிந்த பொருளாகிறது. தனி நின்று அவிநயம் காட்டி நடித்தற்கு அரங்குகள் இருந்தமை போல, கதை தழுவிய நாடகங்களை நடித்தற்கு நாடகசாலைகள் இருந்தன. இவ்வரங்குகளிலும் சாலைகளிலும் குறிஞ்சி முதலாக ஐவகை நிலங்களைக் காட்டும் திரைகள் நிறுத்தப் படுவதும் வழக்கம். மாதவி அரங்கேறியபோது இத்திரைகள் எழினி என்ற பெயரால் நிறுத்தப்பட்ட திறத்தைச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. இந்நாடகசாலைகளில் நடித்தற் கமைந்த நாடகத்தை எழுது பவன் புலநெறி அறிந்த புலமைச் செல்வனாதல் வேண்டுமென்பதை முன்பே கண்டோம். இளங்கோவடிகள், இமிழ் கடல்வரைப்பில் தமிழகம் அறிய தமிழ் முழுதறிந்த தன்மையனாகி வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின் நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து...... நாத்தொலைவில்லா நன்னூற் புலவன் என்று கூறுகின்றார். இனி, இந்நாடகங்கட்குப் பொருளாய் நிற்கும் கதைகளின் இயல்பைக் காணும் முன் இவை தோன்றியதற்குக் காரணம் யாது எனக் காண்பது முறையாகும். மக்கட்கு உணர்வு பெருகும் வாயில் கண்ணும் காதும் சிறப்புடையவை. "கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்" எனத் தொல்காப்பியர் உரைப்பர். இவை யிரண்டிற்கும் ஏற்ப அமைந்தது நாடகக் காட்சி. ஆதலால் கண்ணாலும் செவியாலும் முறையே கண்டும் கேட்டும் மக்கள் நல்லுணர்வு பெறல் வேண்டும் என்பது நாடகங்களின் குறிக்கோள் என்று அறிகின்றோம். சேக்சுபியரின் நாடகங்கட்கு கூறிய முன்னு ரையில், "ஒரு பேரரண்மனையின் அழகு பகைவர் நெருங்கா வகையில் அமைவது போல ஒரு நாடகத்தின் அழகு உலகியலை உள்ளவாறு காட்டுவதிலும் மக்கட்கு உண்மை யுணர்வு நல்குவதிலும் அமைந்துளது" என்று ஜான்சன் கூறுகிறார். நாடக இலக்கியமும் நூலாதலால் நூல்களின் குறிக்கோளே நாடகத்துக்கும் ஆம் என்ற கருத்தால் "அறமுதல் நான்கும் ஒன்பான் சுவையும் முறை முன்னாடகம்" என்று செயிற்றியனர் கூறுகின்றார். அகன்று யர்ந்த பெருமலையொன்றைச் சிறு கண்ணாடியிற் காண்பது போலப் பரந்துபட்ட உலகியல் வாழ்வை சுருங்கிய இலக்கியம் காட்டுவது பற்றி அதனை வாழ்வியற் கண்ணாடி என மேனாட்டறிஞர் விளம்புகின்றார். அது பற்றியே ஜான்சனும் சேக்சுபியரின் நாடகத்தை His Drama is the mirror of life என்று கூறுகின்றார். இதனால் தமிழ் மக்களேயன்றி உலக நாடுகளில் உள்ள எல்லா மக்களும் நாடகமாவது வாழ்வியலைக் காட்டும் இலக்கிய மாகக் கருதுவது விளங்கும். நாடகத்தில் தோன்றும் மாந்தர் யாவராயினும் நினைப்பதும் பேசு வதும் செய்வதும் உலகியலில் மக்களின் நினைவு சொல் செயல்களேயாகும். நாடகத்தில் காணப்படும் மாந்தரிடையே தெய்வங்களும் முனிவர்களும் பேய் முதலிய வைகளும் உண்டு. அவையும் மக்கள் நிலையிலே நின்று நினைப்பதும் பேசுவதும் செய்யுமே யன்றி வேறில்லை. இதுபற்றியே, “தெய்வம் சுட்டிய பெயர் நிலைக்கிளவி இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே உயர்திணை மருங்கில் பால் பிரிந்திசைக்கும்” என்று தொல்காப்பியம் உரைக்கின்றது. அன்றியும், நாடக மாந்தரிடையே தோன்றும் உணர்வுகளும், பிறக்கும் சொற்குளும் காட்டப்படும் நிலக்காடசிகளும், முற்றத் துறந்த முனிவர்களும் கண்ணிற்காணின் உலகியலின் போக்கினை அறிந்து கொள்வர் நல்லறிஞர் காண்பராயின் மக்கள் வாழ்வின் எதிர்கால நிலையை முன்னறிந்துரைக்கும் தெளிவு பெறுவர். இன்னோரன்ன காரணங் களால்தான் பழந் தமிழர் நாடகத்தைத் தமிழின் முக்கூறுகளில் ஒன்றாக்கி அறிவு நெறிக்கு இன்றியமையாத தாக்கினர். தமிழ்ச் செல்வர்கள் கூத்தரைப் போற்றி நாடகத் தமிழையும், பாணர்களைப் பேணி இசைத் தமிழையும் புலவர் களைச் சிறப்பித்து இயற்றமிழையும் வளர்த்தனர். அந்நாட்களில் புதிது புகுந்த சமயக் கருத்துக்கள், இசை நாடகம் இரண்டும் காமமும் நோயும் விளைவிக்கின்றன எனப் பழித்தன. தமிழர் “நாளும் புதுவோர் மேவலர்” புதுமைப் பித்தராதலின் அவற்றை மெய்யெனக் கொண்டனர். அதனால் இசைவாணரும், கூத்தரும் மக்களினத்தில் தாழ்வும் இழிவும் எய்தி மறைந்தொழிந்தனர். இசைத் தமிழும் நாடகத் தமிழும் கைவிடப் பட்டு இறந்து போயின. பின்னர் தோன்றிய பல்லவ, பாண்டிய, சோழர் காலத்தில் இசை நாடகங்கள் பெரும் செல்வாக்கு எய்தாவிடினும் தெய்வ வாழ்வுகளைப் பாடியும் நடித்தும் காட்டிப் பத்தி நெறிக்கு உதவும் கருவிகளாக இருந்து வந்தன. அக்கால வேந்தரும் செல்வர்களும் திருக்கோயில் விழாக்களில் இசை நாடகங்கட்கு இடம் அமைத்து இசைவாணர்க்கும் கூத்தர்க்கும் ஓரளவு உதவி செய்தனர். கூத்தாடுதற்கு வேந்தர்கள் நிவந்தங்கள் ஏற்படுத்திய செய்தியைக் கல் வெட்டுக்கள் குறிக்கின்றன. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் அரசர்க்கு நலம் புரிந்த பெரியோர் களின் வரலாறுகளை நாடகமாக எழுதி நடிப்பது அப்பெரி யோர்க்குச் செய்யப்படும் சிறப்பாகக் கருதப்பட்டது. நல்லுதவி புரிந்த சுதஞ்சணனுக்குச் சிறப்புச் செய்யக் கருதிய சீவகன் அவன் வரலாற்றை நாடகமாக எழுதி நடிக்கச் செய்தான் எனத் திருத்தக்க தேவர் கூறுகிறார். இவ்வாறே இராசராசன், குலோத்துங்கன் என்ற சோழ வேந்தர் வரலாறும் நாடகமாக எழுதப்பட்டதைக் கல்வெட்டுக்கள் உரைக்கின்றன. பிற்காலத்தே மராட்ட வேந்தரது ஆட்சி சோழநாட்டில் நிலவியபோது சரபோசி மன்னரைச் சிறப்பித்தற்குச் சிவக்கொழுந்து தேசிகர் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம் எழுதியதும் பலரும் அறிந்தது. சோழ பாண்டியராட்சியில் பாரத ராமாயணக் கதைகள் பேராதரவு பெற்றன. அவற்றின் உட்கூறுகள் சிலவற்றை நாடகங் களாக எழுதி நடிக்கும் முறை மக்களிடையே தக்கஇடம் பெற்றது. ஆங்கிலக் கல்வி பரவத் தொடங்கியதும் நாடக இலக்கியங்கள் பல தோன்றுவனவாயின. திரைப் படங்கள் நாடகசாலையைக் கைப் பற்றியதும் நாடகங்கள் நன்முறையில் வளம்பெறத் தலைப்பட்டு விட்டன. இங்ஙனம் வரலாற்றுக் காலத்துக்கு முன்பே தோன்றி வளர்ந்த நாடகங்களின் உட்கிடை பெரும் பாலும் ஒருதன்மைத்தாகவே இருந்து வந்துள்ளது. வேறு வேறு குடும்பங்களில் வேறு வேறு சூழ் நிலையில் பிறந்து வளர்ந்த ஒருவனும் ஒருத்தியும் ஒருவர் ஒருவரைத் தனிமையிற் கண்டு காதலுறவு கொள்வதும், பிறர் அறியாவகையில் அதனை அவர்கள் வளர்ப்பதும் காலச் சூழ்நிலையும் இடவகையும் அக்காதலுறவைப் பிறர்க்குக் காட்டிவிடுவதும், அதனால் அவ்வுறவு இடையூறும் இடையீடும் எய்தி இருவர்க்கும் துயர் விளைப்பதும் இருவரது அயரா முயற்சியாலும் அறிவு பெருமை பொருள் என்ற மூவகை யாற்றலாலும், தடைகளும் இடை யீடுகளும் களைந்து மணம் புரிந்து கொண்டு மகிழ்வதும் நாடகங்களின் உரிப்பொருள் களாகும். இடையிடையே காதலர்கள் கூடுவதும், பிரிவதும் கூடியிருந்து பெரு மகிழ்வு கொள்வதும், பிரிந்தவழிப் பெருந்துயர் எய்தி வருந்துவதும் பின்னர்க் கடிமணத்தால் கூடுவதும் ஊடுவதும் நாடக நிகழ்ச்சிகளில் பொதுவகையில் சொல்லாடற் கமைந்த சூழ்நிலைகளாகும். காதலுறவையே நாடகங்கள் பெரும்பான்மையும் கருவாகக் கொண்டது கண்டே சமயவாதிகள் நாடகத்தைப் புறம் பழித்தனர். அரசியலில் அவர்களது தொடர்பு பெருகினமையின் நம் நாட்டில் நாடகத் தமிழ் கற்ற நன் மக்களால் கைவிடப்பட்டது. அதனால் நாடகங்கள் போதிய கல்வி அறிவில்லாத கீழ்மக்கள் கையில் அகப்பட்டுச் சீர் குலைந்தன. நாடக அமைப்பும் நடிப்பும் நல்லோர் விரும்பிப் போற்றத்தக்க நயம் இழந்தன, சுருங்கச் சொன்னால் நாடகம் கல்வி யறிவு பெறுதற்குச் சிறப்பமைந்த கருவி என்ற உண்மை நாட்டவரின் நல்லறிவுக்கு விளங்காது போயிற்று. காதலுறவு ஒன்றுதான் உலகியலில் மக்கள் விருப்பு வெறுப்புக் கட்குப் பொருளாவது என்று கருதுவது தவறு. பொருள் வேட்கை, புகழ் விருப்பு, பிறர் ஆக்கம் காணப் பொறாமை முதலிய பலவுணர்வு கள் மக்களது வாழ்வில் இன்பமும் துன்பமும் எய்துவிக்கின்றன. பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை என மூன்றாகச் சான்றோர் நாடகம் பொருட்டு அடிப்படையாகக் காட்டுவர். மக்களாட்சி தோன்றிய பின் கட்சி வெறியும், பதவி மயக்கமும் நாடகத்துக்குப் பொருளாய் வந்து சேர்ந்துள்ளன. இவற்றால் விளையும் நன்மை தீமைகளைக் காட்டி மக்கள் வாழ்க்கைக்கு நலம் விளை விப்பதில் நாடகங்கட்குப் பெருவாய்ப்புண்டு. இப்பெருமை கருதியே இளங்கோவடிகள் நாடக நூல்களை நாடக நன்னூல் என்று சிறப்பிக்கின்றார். மேலே குறித்த விருப்பு, வெறுப்புக்களில் கருத்தைச் செலுத்தி இன்புற்றோர் வாழ்க்கைக் கூறு களையுரைக்கும் நாடகத்தை இன்பியல் நாடகம் என்றும், துன்புற்றெழுந்ததோர் வரலாறு காட்டு வதைத் துன்பியல் நாடகம் என்றும் மேனாட்டவர் வகுத்துக் கொள்வர். அவருள்ளும் பண்டை யோர் துன்பியல் நாடகத்துக்கு அத்துணை நன்மதிப்பு வழங்க வில்லை, இன்பத்தில் முடியும் நாட கங்களையே பெரிதும் விரும்பினர். ஏனெனில் மக்களுயிர்க்கு இன்பம் பெறுவதே நாட்டம், அதனை நன்னெறியிற் பெறுவதையே நல்லோர் விரும்பினர். தீநெறியின் விளைவே துன்பமாதலால், தீமையில் முடியும் துன்பியல் நாடகத்தை அவர்கள் விரும்பவில்லை. தமிழ்ச் சான்றோர் மேனாட்டறிஞரின் வேறுபட்டவரல் லராதலால் துன்பத்தில் முடியும் நாடகத்தைத் தெய்வ வாழ்வோடு இணைத்து மங்கல முடிபு தந்து மேற் கொண்டனர். நாடக முறையில் அமைந்த சிலப்பதிகாரம் துன்பியலாயினும் கண்ணகியைத் தெய்வ மாக்கியும், கோவலனைத் தெய்வவுலகில் வைத்தும் மங்கல முடிபு பெறுகிறது. மணிமேகலை துன்பியலுமாகாது, இன்பியலுமாகாது தெய்வ வாழ்வு பெறும் துறவு நெறியில் நின்று மங்களமாய் முடிகிறது. “இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் நன்பகல் அமையமும் இரவும் போல வேறு வேறு இயலவாகி” என அகநானூறு கூறுகிறது. உலகியல் காட்டும் நாடகத்துள் துன்பியல் நாடகத்தில் இன்பியற் கூறுகளும் விரவி வரும். ஆயினும் துன்பியல் உணர்ச்சி மீதூர்ந்து அதனை விளக்கம் பெறாதவாறு மறைத்துவிடும். நாடக வகைகளில் வரலாற்று நாடகம் என ஒருவகையுண்டு. சேக்சுபியர் இத்தகைய நாடகங்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றில் நிகழ்ச்சிகள் யாவும் ஒன்றற் கொன்று காரணகாரிய முறையில் ஆற்றொழுக்காக வரும். அதனால் ஏனைய நாடகங்களிற் போலச் சிக்கல்கள் தோன்றிய பின் படிப்படியாக உடைந்து செம்மையாக முடிவது இல்லை. பொருந்து மிடத்து நிற்பதும் பின்பு தொடர்வதும் வரலாற்று நாடகங்கட்கு இயல்பாகும். அவற்றையும் காண்போர் வெறுப்பின்றி விரும்பிக் காணுமாறு புணர்ப்பதில் நாடகாசிரியனது புலமைத்திறம் அமைகிறது. நம் தமிழகத்தின் வரலாறு தக்க புலமையும் உண்மையுணர்வும் பெற்ற நல்லறிஞர் களால் விரிவாக இன்னும் எழுதப்படவில்லை. அதனால் வரலாற்று நாடகங்கள் பாராட்டிற்குரிய முறையில் இன்னும் தோன்றவில்லை. இதற்கு அடிப்படையான இலக்கியங்கள் ஒருபுற மிருக்க, உண்மை தெளிதற்கேற்ற கல்வெட்டுகளும். செப்பேடுகளும் பல்லாயிரக் கணக்கில் எடுக்கப் பட்டுள்ளனவாயினும், அவற்றைக் கற்பவர் எளிதில் பெறுதற்கேற்ற வகையில் வெளியிடுவதில் இன்றைய பேரரசு ஊக்கமோ விருப்பமோ உடையதாக இல்லை. வரலாற்றறிவு தான் அரசியலறிவு, மக்களிடையே பரவுதற்கும் நிலையான நல்லரசு தோன்றுதற்கும் அடிப்படை என்பது இன்றைய அரசியல் அறிஞர் அறிந்திருப்ப தாகத் தோன்றவில்லை. இந்தியப் பேரரசின் கல்வெட்டுத் துறையில் ஆண்டறிக்கைகள் கூட சுமார் இருபது ஆண்டுகளாக வெளிவரவில்லை என்றால் வேறு கூறுவானேன்! வேறு நாடகங்கள் மக்கட் சமுதாயத்துக்கு வேண்டிய கல்வி அறிவு ஒழுக்கம் முதலிய நல்லொழுக்கங்களைக் கற்பிப்பது போல வரலாற்று நாடகங்கள் பலங்கால அரசுகளின் வீழ்ச்சிக்கும் உயர்ச்சிக் கும் உரிய காரணங்களைக் காட்டி இன்றைய அரசு முறையைச் செம்மைச் செய்து கொள்ளும் திறம் உண்டாக்கும். இவ்வாய்ப்பு இல்லாமையால், அரசியற் சட்டமன்றங்களில் யாதானுமொரு சிக்கல் உண்டாயின் வேற்றுநாட்டு வரலாறுகளைத் தேடியுரைக்கும் சிறுமையை நம் நாட்டுச் சட்டமன்றங்களில் அவ்வப்போது நாம் காண்கின்றோம். நாடங்களை எழுதுதற்கும் நடிப்பதற்கும் உரிய இலக்கணங்கள் உண்டு, எனினும் நம் நாட்டில் அவை பலவும் பேணுவாரற்று மறைந்தது போல வேறு மேலைக் கீழை நாடுகளிலும் மறைந்து போயின. எனினும் மிகச் சிலரே ஓரளவு தெரிந்திருந்தனர். அதனால் நாடகங்களை விமரிசனம் செய்யும் முறை நம்நாட்டில் திருந்திய நிலையில் இல்லை. அத்துறையில் பயிற்சியில்லாமையால் பொது மக்களிடையிலும் நாடகவிலக்கண அமைப்புப் பற்றி ஒரு கருத்தும் நிலவவில்லை. மேனாடுகளிலும் சேக்சுபியர் காலத்தில் இன்று நம் நாட்டு நிலையே இருந்ததென ஆராய்ச்சியாளர் அறிவிக்கின்றனர். அதனால் தான் சேக்சுபியர் தமது அறிவு தந்த நெறியிலேயே நாடங்களை அமைத்துள்ளனர். மேனட்டில் அவரையும் அவரைத் தொடர்ந்து தோன்றிய பிறரும் காட்டிய நெறிகளையே இலக்கண வரம்பாக் கொண்டு நாடகங்கள் எழுதப்பட்டு வருகின்றன. நம் நாட்டில் நாடகங்கள் சிறந்த முறையில் தோன்றாமையால் நாடக விமரிசன நூல்கள் இன்னும் தோன்றவில்லை. திரைப்படங்கள் ஓரளவு பெருகி வருகின்றன. எனினும் அவற்றைப் பண்பட்ட இலக்கண வரம்பு கண்டு ஆராய்ந்துரைக்கும் நன்மரபு இன்னமும் பிறக்கவில்லை. தாம் தாம் நினைத்த வகையில் வமரிசனம் செய்வதால் பல படங்கள் செல்வாக்கிழந்து வெறும் பொருட் கேட்டை விளைக்கின்றன. விமரிசனங்களும் சில சமயங்களில் விலைக்கு விற்கப்படுகின்றன. உலக நாடுகள் பலவற்றினும் பலவேறு மொழிகள் பேசப்படுவது உண்டு. அவ்வந்நாட்டு மொழியியல்புக்கேற்பச் சொல்லாடல்கள் அமைந்துள்ளன. அவையும் அம்மொழிகளைப் பேசும் மக்களின் நினைவு செயல் முறைகளுக்கு ஒத்தவாறு அமைந்திருக்கும். பேசு வோருள்ளும் உயர்நிலையினரும் தாழ்நிலையினரும் உண்டு. உயர்ந்தோர் உரைகளில் நல்லொழுக்கமும் பண்பாடும் இயல்பாகவே அமைந்திருக்கும். ஒழுக்கம் உடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல் என்று திருவள்ளுவர் உரைப்பது காணலாம். உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் கலந்தது உலகியலாதலால், அதனை எடுத்துக் காட்டுவதையே குறிக்கோலாகக் கொண்ட நாடகங்கள் அவரவர் தகுதிக்கொத்த மொழி நடையை மேற்கொள் வதே முறையாகும். ஆயினும், தாழ் நிலை மக்களிடை நிலவும் மொழி நடையை உரைத்துக் காட்டுமிடத்து இழி சொற்களை விலக்குதல் வேண்டுமென மேனாட்டு நாடகப் புலவர் வற்புறுத்து கின்றனர். தொல்காப்பியரும் ‘அவையல் கிளவி’ என அவற்றை விளக்குவர். தனித் தனியாக இருந்து பேசுங்கால் வந்து விழும் இழிசொற்கள் பலர் கூடியிருக்கும் மக்களவையில் பேசத்தகுவன அல்ல என்பது விளங்கவே தொல்காப்பியர் ‘அவையல் கிளவி’ என எடுத்து மொழிகின்றார். மொழி மரபுக்கும் வழக்கு நெறிக்கும் ஒவ்வாத சொற்களும் சொல்லாட்சிகளும் திரைப்பட நாடகங்களில் தோன்றுகின்றனவே எனின் நாடகவியல்பும் அதன் குறிக்கோளும் கல்லாத கீழ்மைப் பண்புடையோர் அவற்றை எழுதுவதும் விமரிசனம் செய்வதும் வழக்காக இருப்பதே அதற்குக் காரணம். இனி நாடகங்களில் வழங்கும் பாட்டுக்களைப் பற்றிச் சிறிது கூறி இக்கட்டுரையை முடிப்பாம். இசைப்பாட்டுகளைப் படைத்துக் கொடுக்கும் அறிஞன் ‘தமிழ் முழு தறிந்த தன்மையனாதல் வேண்டும், என்று இளங்கோவடிகள் கூறுவர். இயல், இசை, நாடகம் என்ற மூன்றும் சேர அறிந்தவன் என்பதற்குத் தமிழ்முழுதும் அறிந்த தன்மையன் என்று அடிகள் கூறுவர். இசை நாடகங்களுக்கு அமையும் பாட்டுகள்.’ “ஆடல் பாடல் இசையே தமிழே பண்ணே பாணி தூக்கே முடமே தேசிகம் எனிறிவை” என்று அடிகள் வகுத்துரைக்கின்றனர். பொருள் புலப்பட அவி நயித்துத் தாளம் பிறழாது ஆடுதல் ஆடல், பாடலாவது, இசைக்கும் தாளத்துக்கும் ஒப்ப எடுத்தும் படுத்தும் பாடுவது. இசையாவது, சுருதியோடு இயைந்து செல்லும் திறம் இந்நாளில் அதனை சுரஞானம் என்றும், சுருதிலய ஞானம் என்றும் கூறுவர். தமிழ் என்பது வடமொழி முதலிய பிறமொழிச் சொற்கள் விரவாமல் பாடுவது. அவற்றின் எழுத்தொலிகள் தமிழினும் வேறுபட்டுப் பாடுவோர் நன்கு ஒலிக்க முடியாமல் குற்றப் படும் என்பதற்காவே தமிழ் என்று பொதுப்படக் கூறினார். அதுபற்றியே இதற்கு உரை சொன்னவர்கள் வடவெழுத்து ஓரீஇ எழுத்தாலே கட்டப்பட்ட இசைக்கட்டளை என்று உரைக்கின்றார்கள். விஷயம் ‘விஜயம்’ என வரும் சொற்களை விசயம் என்று ஒலிப்பது பொருளை வேறு படுத்திப் பாட்டைக் கெடுத்துக் கேட்போர் மனதில் அருவருப்பை உண்டு பண்ணுகிறது. ‘பண்’ என்பது இசை வகை. ‘பாணி’ என்றது தாள வகை. ‘தூக்கு’ என்பது பாடப்படும் இசைப்பாட்டு வகை. ‘முடம்’ என்பது இசைத்தாளம். பாடல், ஆடல் முதலியவற்றில் உண்டாகும் தவறுகள் தொண்டை நாடு, கொங்கு நாடு, பாண்டிய நாடு, என்ற வேறுபாடின்றி எல்லா நாட்டவரும் நன்கு அறிந்து கொள்ளத்தக்க சொல்நடையைத் ‘தேசிகம்’ என்பர். தேசத்தோடு இசைந்தது தேசிகம், சேக்சுபியரின் பாட்டும் உரையுமாகிய சொன்னடைபற்றிக் கூறவந்த ஜான்சனும், பேச்சு நடை இசையறுத்து அமைந்த வழிப் பாட்டாகவும், பாட்டு நடை உரையாக அமைந்த வழிப்பேச்சாகவும் இயங்குகிறது. உலகியலைக் கண்ணாடி போலக் காட்டும் நாடகத்துக்கு அதுவே ஏற்றது என்ற கருத்துப்பட இன்றைய அனைத்து நாட்டு நாடக நன்னூற் புலவர்கள் ஒருமுகமாக உரைக்கின்றனர். சுமார் 1000 ஆண்டுகட்கு முன்வாழ்ந்த கொங்குவேளிர் இதுபற்றி ஒரு குறிப்புத் தருகின்றார். கலங்கிய நீரின்கண் தேற்றாங் கொட்டையை இட்டு மேலும் கீழும் நாலா பக்கமும் சுழற்றிய வழி அந்த நீர் முடிவில் நல்ல தெளிவு பெறுவது போல வாழ்க்கை நினைவுகளால் கலங்கி அலமரும் மனத்தை பாட்டுக்குரிய நல்லிசையானது இருகப் பற்றிக் கொண்டு ஏறியும் இறங்கியும் உந்தியும் உறழ்ந்தும் முடிவில் சுருதியுடன் இயைந்து அடங்கும், மனமும் அசைவு இன்றி தெளிவு பெறும், அந்நிலையில் மெல்லிய எளிய சொற்களால் இனிய கருத்தமைந்த பாட்டை இசைக்க வேண்டும். என்ற கருத்து விளங்க. “சொல்லின் நுண் பொருள் காட்டி இல்லின் படுகாழ்ப் படுத்துத் தேய்வை உறீஇக் கலுழி நீக்கும் கம்மியர் போல மகர வீணையின் மனமாசு கழிஇ” என்று கூறுகின்றார். இன்றைய நாடகப் புலவர்கள் இளங்கோ காட்டிய தமிழும் தேசிகமும் என்ற இரண்டையும் கைவிட்டு அடிகள் கூறிய ‘முடம்’ என்ற குற்றத்துக்கு உள்ளாகின்றனர். முடம் படுவதே சிறப்பு என்று கருதும் கருத்து நாடகத்தையும் திரைப் படங்களையும் ஊக்கும் செல்வர்களிடையே மேலோங்கி நிற்பதால், செல்வர்களின் பின்னே அடி வருடிச் செல்லும் வறுமை நிலையையே நாம் நொந்து கொள்ள வேண்டும். செல்வர்கள் மனம் வைப்பாராயின் பல்லாயிரம் ஆண்டுகளாக வெளிப்பட விளங்கியும் இல்லையென்னு மாறு மறைந்தும் இருந்து இன்று ஓரளவு ஊக்கம் பெற்று வரும் தமிழ் நாடகம் உலகு புகழும் உயர்நிலையை எய்தும் என்பது உறுதி. “கைத்துடையான் காழ் கீழ் ஒதுங்கும் கடல் ஞாலம் பித்துடைய அல்ல பிற” - குமர குருபரர்.  29. அருள் இயக்கம் மாற்பித்தியார் என்னும் சான்றோர் காட்டில் ஒரு பெரியவர் கடும் தவம் புரிவதைக் கண்டார், அவரை, "கழைக்கண் நெடுவரை அருவி யாடிக் கான யானை தந்த விறகின் கடுந்தெறல் செந்தீ வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே" என்று பாடினார். இது புறநானூற்றில் உளது. இதனைப் படிக்கும் போது, மலையருவியில் நீராடுவது பொருந்தும்; காட்டில் வாழும் யானை அவர்க்கு விறகு கொணர்ந்து உதவும் என்றும், அதைக் கொண்டு அவர் செந்தீ வேட்பர் என்றும் கூறுவது எங்ஙனம் என்று வியப்புண்டாகும். மேலும் விறகு தரும் யானையை அத்தொழிற்குப் பழக்கப்பட்ட யானை என்றற்கும் இடமில்லை; பழகியதாயின் அது வினைநவில் யானை என்று குறிக்கப்பட்டிருக்கும். அது பழகாத யானை காட்டு யானை என்பது நன்கு தோன்றக் கான யானை என்று திட்டவட்டமாகச் செப்புகின்றார். இப்போது இவ்வாறு தவம் செய்வோரையும் கான யானைகள் விறகு தந்து அவர்கட்கு உதவுவதையும் நாம் காண்பதில்லை. அதனால் இச் செய்தி நமது அறிவை அசைக்கின்றது. இது வெறுங் கற்பனையோ என்று நினைப்போமாயின், கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் வேறொரு சான்றோரும், "செந்தீப் பேணியமுனிவர் வெண்கோட்டுக் களிறு தரு விறகின் வேட்கும் ஒளிறிலங்கு அருவிய மலைகிழ வோனே" என இக்கருத்தையே எடுத்தோதுகின்றார். தொண்டைமான் இளந்திரையனைச் சென்று காணுமாறு பாணன் ஒருவனுக்கு, இளந்திரையனுடைய ஊரும் மலையும், ஊர்க்குச் சென்று சேரும் வழியும் உரைக்குமிடத்தே அவர் இதனைக் குறிக்கின்றார். ஆகவே, இதனை வெறுங் கற்பனை யென்று கொள்ளுவது அறமாக இல்லை; உண்மையை யாராவது கற்பனை யெனப் புறக்கணிப்பது அறிவுடை மையாகவும் தோன்றவில்லை. கல்வி கற்ற மக்களிடையே நம் நாட்டில் இப்போது விஞ்ஞான அறிவு ஓரளவு பரவி யிருக்கிறது. நாம் வாழும் நிலவுலகுக்குப் பொருளை ஈர்த்துப் பிடிக்கும் ஆற்றல் ஒன்று உண்டு என்பது மேனாட்டு விஞ்ஞானியான ஐசக் நியூட்டன் கால முதல் நாடெங்கும் தெரிந்திருக்கிறது. மேலும், வானத்தில் காணப்படும் நாண்மீண் கோண்மீன் அனைத்திற்குமே இந்த ஆற்றல் உண்டென்றும் விஞ்ஞானம் கண்டிருக்கிறது. மேனாட்டுக் கல்வியறிவின் பயனாய் இந்த அறிவு நமது நாட்டில் இப்போது நன்கு பரந்துளது. என்றாலும், இது தமிழ் மக்களின் பழந்தமிழ் நூல்களைப் பயின்றவர்களுக்குப் புதுமையாகத் தோன்றாது. பழைய நூல்களான தமிழ்ச் சங்க இலக்கியங்களில் ஞாயிற்று மண்டிலத்துக்கே இந்த ஈர்ப்பாற்றல் உண்டென்று சான்றோர்கள் குறித்துள்ளனர். "செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிதுநிலைஇய காயமும் என்றிவை சென்று அளந்தறிந் தோர்" என்பது அக்குறிப்பு இதன்கண்ணும் காயமென்றது ஆகாயம்; அது காற்று இயங்காத வெற்றிடம் என்றற்கு வறிது நிலைஇய காயம் என்று கூறுகின்றார். இவ்வாறே வேறு சான்றோரும், "வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்" (புறம் - 365) என்றும், "விசும்பு நீத்தம்" என்றும் குறித்துள்ளனர். இன்றைய வானநூல் அறிஞர் அனைவரும் இஃது உண்மையென உரைக்கின்றனர்; அமெரிக்க நாட்டு ஆராய்ச்சி யாளர் வானவூர்திகளிற் பறந்து சென்று அந்த உண்மையைத் தெளிந்துள்ளனர். இவ்வாற்றால் ஞாயிற்றுக்குப் பரிப்பு என்ற ஈர்ப்பாற்றல் உண்டெனப் பண்டையோர் குறித்தது உண்மையை அடிப்படையாகக் கொண்ட தென்பது தேற்றம். இனி, பரிப்பு என்னும் சொல்லின் பொருள்இதுதானா என்றோர் ஐயம் சிலர் உள்ளத்தில் எழலாம், ஞாயிற்றின் பரிப்பு என்பதற்கு உரை வகுத்த புறநானூற்றுப் பழையவுரைகாரர் ஞாயிற்றினது இயக்கம் எனப் பொருள் கூறி, "பரிப்பு என்றது இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லும் என்னும் இயக்கத்தை" என்று விளக்கமும் கூறினார். ஞாயிறு நிலவுலகத்தைச் சுற்றுகின்றதென்னும் கொள்கை அக்காலத்தே நிலவியதனால் அவர் இவ்வாறு கூறவேண்டியவரானார். இக்கால விஞ்ஞானி களுள்ளும் அதனை முற்றிலும் மறுப்பவர் இலர்; ஞாயிற்றுக்கும் இயக்கமுண்டு; அது நிலவுலகு முதலிய வானுலகப் பொருள்கள் எல்லவாற்றையும் விட மிகமிகப் பெரிதாக இருத்தலால் ஏனைத் திங்கள் முதலியவற்றைப்போல இயக்கம் புலப்படத் தோன்ற வில்லை என்பர். நிற்க, பரிப்பு என்னும் சொல்லுக்குத் தாங்குதல் என்னும் பொருள் உண்டு; "வாழும் நாளினில் தமைப் பரித்தவரை யும் வணக்கித் தாழும் நாளினில் சரண் என அவரையே சாரும், ஏழை" என்று பிற்காலத்து ஆன்றோரான செவ்வந்திப் புராண முடையார் கூறுவதாலும் ஞாயிற்றின் செலவும் எனச் செலவு கூறிப் பின்னர் அஞ்ஞாயிற்றுப்பரிப்பும் எனக் கூறுதலாலும் தாங்குதல் என்ற பொருளே ஏற்றது என்பது விளங்கும். இப்பரிப்பினால், ஞாயிறு, நாள்கோள் ஆகிய வானப் பொருள் களை ஈர்த்துப் பற்றித் தாங்குகிறது; அதனால் அவை ஞாயிற்றைச் சூழ்வருகின்றன. அன்றியும், ஞாயிற்றின்பால் உள்ள இப்பரிப்பாற்றல் அதனைச் சூழ்வரும் நிலவுலகு முதலியவற்றிற்கும் பாய்கிறது. அதனால் நிலவுலகைத் திங்கள் மண்டிலம் சுற்றி வருகிறது. நிலத்திலுள்ள பரிப்பு அதன் மேலே உள்ள பொருள்களை ஈர்த்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு ஞாயிறு முதலிய கோள் களிடத்தே பரிப்பென்னும் ஈர்ப்பாற்றல் இயல்பாக அமைந் திருப்பதை நியூட்டனுக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே நம்மவர் கண்டிருந்தாராயினும், அதன் உண்மை கண்டு அளந்து பயன்படுத்திய பெருமையும் அருமையும் மேனாட்டவர்க்கே உரியவை என்பதை யாரும் மறுக்க முடியாது. நிலம் தனது பரிப்பாற்றலால் திங்களை ஈர்த்து நிற்பதனால் அது நிலவுலகைச் சுற்றி வருகிறது. இவ்வாறு நிலம்பிற பொருள் களை ஈர்த்து நிற்பதுபோல் தன்னகத்தே உள்ள எல்லாப் பொருள் களையும் தன்னின் நீங்காதவாறு பரித்துக் கொள்கிறது. அதனால், அது ஞாயிற்றைச் சுற்றி வரும்போதும் தன்னைத்தானே சூழ்வரும் போதும் நாமும் ஏனை எவ்வகைப் பொருளும் வானவெளியில் வீழ்ந்துபடாமல் தாங்கிக் கொள்கிறது. அன்றியும் அதன் பரிப்பாற்றல் நிலத்தின் மேலும் கீழும் உள்ள எல்லாப் பொருள்களிலும் ஊடுருவிப் பரந்திருக்கிறது. எல்லாப் பொருளிலும் என்ற போது எல்லா உயிர்ப் பொருளும் உயிரில் பொருளும் கருதப்படும். தம்மைப் பெற்ற தாய் தந்தையர் தூரத்தில் வரக் கண்டதும், குழந்தைகள் அவர்களை நோக்கிப் பாய்ந்தோடுவதும், மக்கள் வழங்காத நிலப் பகுதியில் தனித்துச் செல்பவர் மக்கள் வாழுமிடத்தைக் கண்டதும் அங்கே சென்று சேர்வதும் இந்தப் பரிப்பினால் விளையும் பயனாகும். இப்பரிப்பு மாவும் புள்ளுமாகிய உயிர்களிடத்தும் காணப் படுகிறது. கொடுமை மிக்க விலங்குகளும் பிறவும் தத்தம் இனத் தோடு கூடி யிருப்பதும் இதனாலேயாம். உயிரில் பொருள்களாகிய கல், மண், நீர் என்ற யாவும் சிறு சிறு அணுக்களால் ஆகியவை. அவை தம்மில் கூடிச் செறிந்து கற்பாறைகளாலும் நீர்ப்பெருக்கா கவும் உருக்கொண்டிருத்தற்கும் ஒவ்வொன்றின்கண்ணும் ஊடுருவி நிற்கும் பரிப்பாற்றலே ஏதுவாகும். உயிர்களிடத்தே நிலவும் பரிப்பை அன்பு என்றும், உயிரில் பொருள்களிடத்தே நிலவு வதைப் பரிப்பு என்றும் விஞ்ஞானம் கூறுகின்றது. இதனால் ஈர்ப்பு அல்லது பரிப்பு எனப்படும் இவ்வியல்பு எல்லாப் பொருளிடத்தும் கலந்து நிற்பதொன்று என்பது தெளியப்படும். பொருள்களிடத்தே காணப்படும் பரிப்புக்கு முதல் நிலவுலகு என்பதும், நிலவுலகும் ஏனை நாள் கோள்களைப் போல வானத்தில் சுழன்று திரியும் பொருளாதலால் இதற்கு ஞாயிற்றின் பரிப்புக் காரணம் என்பதும் முன்பே கூறப்பட்டன. ஞாயிற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதுவும் சுழலுகிறதென்று சொல்லுகின்றார்கள். நமது நிலவுலகுபோல ஞாயிறும் சுழலுவதோர் பொருளாயின் அதனை ஈர்த்துப் பற்றிச் சுழல்விக்கும் பொருள் ஒன்று வேறே இருத்தல் வேண்டும். இவ்வண்ணமே நுணுகி நோக்கின் ஞாயிறு முதலிய எல்லாப் பெரும் பொருட்கும் வேறாய் மேலாய் ஏனை எல்லாவற்றையும் ஈர்த்துக்கொண்டு நிற்கும் முழுமுதற் பொருள் ஒன்று உண்டு என்பதும், அதன் சூழ்நிலையில், பரிப்பில், எல்லா வுலகுகளும் எல்லாப் பொருள்களும் ஈர்ப்புண்டு நிற்கின்றன என்பதும் நன்கு தோன்றுகின்றன. அந்த முழுமுதற் பொருளை நம் முன்னோர் சிவம் என்றும், அதன் பரிப்பை அருள் என்றும் குறிக்கலாம். அதன் இயக்கமே அருள் இயக்கமெனப் படும். அதனால் இயக்கப்படாத பொருளோ, அதன் இயக்கத்துக்கு அகப்படாத பொருளோ யாதும் இல்லை. அதனை மெய்யுணர்வால் கண்ட காரைக்கால் அம்மையார், "அருளே உலகெல்லாம் ஆள் விப்பது" என்பர்; உமாபதி சிவனார், "அருளிற் பெரியது அகிலத்து வேண்டும் பொருளில் தலையிலது போல்" என்று உரைப்பர். ஒவ்வொரு பொருளிடத்தும் அமைந்து கிடக்கும் பரிப்பாகிய இந்த அருளை மனவுணர்வால் அறிந்து கொள்ளும் மாண்புடையது மக்களுயிர். ஏனைப் பொருள்போல அருள் வேறாகப் பெறப்படுவ தின்றி ஒவ்வொருவரிடத்தும் அமைந்து கிடப்பதால், அதனை நன்னெறிக்கண் ஆண்டு பயன் கொள்வது அறமென்ற கருத்துத் தோன்றவே திருவள்ளுவரும் "அருளாள்க" என்றும், "அருளாட்சி" என்றும் குறித்தருளினார். முழுமுதற் பொருளைச் சிவம் என்றும் அன்பு என்றும் சான்றோர் கூறுவர்; அதனால், சிவமாகிய அன்பின் பரிப்பை அன்பு ஈனும் அருள் என்று தமிழறிஞர் மேற்கொண்டனர். "அருள் என்னும் அன்பீன் குழவி" என்று திருவள்ளுவனாரும் குறித்தருளினார். இவையெல்லாம் அடங்கக் கண்ட திருமூலர், "அருளே சகலமும் ஆய பவுதிகம் அருளே சராசர மாய அமலம் இருளே வெளியேஎனும் எங்கும் ஈசன் அருளே" என்றும் இனிமையாக இசைக்கின்றார். முழு முதற் பொருளிடத்தி லிருந்து பாயும் பரிப்பு அதனை இயக்கும்; அதனால் ஞாயிற்றின் பால் தோன்றும் செலவும் பரிப்பும் நிலத்தையும் திங்களையும் இயக்குகின்றன. இவ்வாறே முழு முதலாகிய சிவத்தின் அருளாகிய பரிப்பினால் நம்முடைய உயிரும் உடலும் இயங்குகின்றன. அருளால் பரிப்புண்டு நிற்கும் உயிர் ஞாயிறு போலத் தானும் இயங்கித் தன்னைச் சூழ்ந்து தாங்கும் உடற்கூறுகளையும் இயக்கு கிறது. அதனால் உயிர் உள்வழிக் காணப்படும் வளமும் ஒளியும், அது நீங்கியபோது உடலிடத்தே அவை காணப்படாமற் போகின்றன. உடம்பின் பரிப்பினால் உயிரும் ஈர்க்கப்படுவதனால், "துன்பம் உழத்தொறும் காதற்று உயிர்" என்று திருவள்ளுவனாரும், "உடம் பொடு உயிரிடை நட்பு அறியாதார், மடம்புகு நாய்போல் மயங்கு கின்றாரே" என்று திருமூலனாரும் சிறப்பித்துக் கூறியுள்ளனர். இனி, இந்த உயிர்க்கும் உடலுக்கும் இடையே மன முதலிய நுண்பொருள்கள் சான்றோர்களால் உணர்ந்துரைக்கப்பட்டுள்ளன. உடம்புக்கு முதற் காரணமான மாயையே மன முதலியவற்றுக்கும் முதல் என்பர். இதனைத் திருமூலர் "மனமாயை மாயை" என்றும், "மனத்து விளக்கது மாயா விளக்கே" என்றும் கூறுவது காண்க. மேனாட்டறிஞர் மனத்தை உடம்போடு சேர்க்காமல் அதனின் வேறாய் உயிரோடு ஒன்றிய பொருளாகக் கருதுகின்றனர். இந்த மன முதலிய பொருள்களை உயிர்க்கென அமைந்த அகக்கருவி என்றும், அந்தக்கரணம் என்றும் நம்மவர் குறிக்கின்றனர். அகக் கருவியாகிய மனம் உயிருடம்புகளின் பரிப்புக்கும் திருவருட் பரிப்புக்கும் இலக்காகி நின்று உடலினகத்தும் புறத்தும் அது கறங்குகிறது. அதன் பரிப்புக்கு உயிரும் உடம்பும் அகப்பட்டு இயலும். இனி, உயிரின்கண் கிளர்ந்தெழும் பரிப்பு உடம்பையும் மனத்தையும் இயக்குகிறது.அதனால் உயிர் மனத்தைக் கொண்டு நினைத்தலும் உடம்பைக் கொண்டு உரையும் செய்கையுமாகிய செயலும் செய்துகொள்கிறது. மனமும் உடம்பும் இல்லையானால் உயிர்க்குச் செயலில்லை; வினையில்லை. "இருவினை என்பது என்னைகொல் அருளிய, மனமே காயம் வாக்கெனும் மூன்றின், இதமே அகிதமே எனும் இவை" என்று அருணந்தி சிவனார் கூறுவது காண்க. மனத்தின்கண் நினைவு இயல்பும் வாய் உடம்பு களில் உரையும் செயலுமாகிய தொழிற் பண்பும் திருவருளின் பரிப்பியக்கமாகும். இதனால் உயிர் திருவருளியக்கத்தின் துணைகொண்டே மனம் உடம்பு ஆகிய கருவிகளை இயக்கி வாழ்க்கைத் தொழிலைச் செய்வது இனிது தெளியப்படும் திருமூலனாரும். "பாசத்தில் இட்டது அருள்அந்தப் பாசத்தின் நேசத்தை விட்டது அருள்அந்த நேசத்தில் கூசற்ற முத்தி அருள்அந்த கூட்டத்தின் நேசத்துத் தோன்றா நிலைஅரு ளாமே" என்றும், "அருள் ஐங்கருமத்து அதிசூக்கம் உன்னார், அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே" என்றும் குறித்தருளினார். இதைத் தான் "அழிப்பு இளைப்பாற்றல்" என்ற சிவஞான சித்தித் திருவிருத் தத்தில், "பார்த்திடின் அருளே எல்லாம்" என்று அருணந்தி சிவனார் முடித்துக் காட்டினார். இதுகாறும் கண்டவற்றால் உயிரும் மனமும் உடம்பும் தம்மில் ஒன்றினொன்று ஈர்ப்புண்டு இயங்குதற்குத் திருவருளின் பரிப்பியக்கமே இன்றியமையாத முதல் என்பது கண்டோம். சுருங்கச் சொல்லுமிடத்து, திருமூலர் அருளியது போல நாம் "அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் அழிந்து இளைப்பாறி" வாழ்கின்றோம் என்பது தெளிவாம். உயிர் என்பது யாது? உணரும் தன்மையும், அறிவு விழைவு செயல் என்ற மூவகை ஆற்றலுமுடைய ஒரு பொருள். திருவருளின் பரிப்பால் இம்மூன்று ஆற்றலும் உயிர்ப் பொருளின்கண் கிளந்து நின்று செயற்படச் செய்யும் எல்லா அண்டங்களையும் பொருள்களையும் பரித்து இயக்கும் திருவருளின் பேராற்றல் அளப்பரும் தன்மை வாய்ந்தது உயிர்ப் பொருளின் ஆற்றலை நோக்க அது மிக மிக உயர்ந்திருத் தலால் அதன் வேகம் கெடுத்து ஆள்வதற்கென மூன்று வகைத் தத்துவங்கள் உயிரைச் சூழ்ந்து நிற்கின்றன. அவை வித்தை, அராகம், கலை என்று பெயர் கூறப்படுகின்றன. திருவருள், கலையின் வாயிலாகச் செய்கையாற்றலும், அராகத்தின் வாயிலாக விருப்பமும், வித்தை வாயிலாக அறிவாற்றலும் உயிரின்பால் எழச் செய்கிறது. இவ்வாறு நிலவும் திருவருள் இயக்கத்தால்தான் உயிர் உடம் பொடு கூடி மன முதலிய கருவிகளையும் உடலையும் கொண்டு உடலில் வாழ்வு நடத்துகிறது. வாழ்வாவது மன முதலிய கருவி வாயிலாக அறிவன அறிந்தும் செய்வன செய்தும் நுகர்வன நுகர் வதாம். இந்நுகர்ச்சி முதலிய வற்றால் உயிரைப் பற்றியிருக்கும் அறியாமை நீங்க அறிவு விளக்கமும் தூய்மையும் பெறுகிறது. அறிவு விளக்கம் பெற்ற உயிர், உலகின் இயல்பும் உடம்பு மனங் களின் இயக்கமும் யாவும் திருவருட் பரிப்பு என்பதைத் தெளிந்து, அத்திருவருளில் தன்னை அழுத்தி 'யான்', 'எனது', என்று பற்றின்றி நிற்கும். அதனால் உயிரின் நினைவு செயல் யாவும் திருவருளின் செயலாகி விடும். அப்போது திருவருட் செல்வனான சிவன் அதனைத் தானாக்கித் தன் திருவடிக் கீழ் நிறுத்துவன். இதனைக் திருஞான சம்பந்தர், "முக்குணங்கள் வாய் மூடா வூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் சேர்வார் தாமே தானாகச் செயும்அவன் உறையுமிடம் கத்திட்டோர் சட்டங்கம் கலந்திலங்கு நற்பொருள் காலோ ஓவாதார் மேவும் கழுமல வளநகரே" என்று பாடி யருளுகின்றார். மக்களுயிர் மனவுணர்வால் ஏனை எல்லா வுயிர்களினும் சிறந்த மாண்புடையது. எனினும் அதன் உடம்பு, "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாய்" இருந்து விலங்கு நிலையெய்திப் போந்தது; அதனால், பழம் பிறப்புக்களில் இருந்து வந்த பழக்கத்தால் உடம்பின் பரிப்பு இளமைக்கண் மக்களின் உயிரையும் மனத்தையும் ஈர்த்துத் தன்பாற் படுத்தித் தன் வழியே நிற்கப்பண்ணும். அச்செய்கையால் உடம்புக்கு வளர்ச்சியும் வேறு உடம்புகளைப் படைக்கும் செய்கையும் உண்டாகின்றன. அப்போது, அப்பரிப்பின் வேகத்தை அடக்கி யாளும் வன்மை பெறும் உயிர் மனத்தையும் உடம்பையும் தன் வசமே நிறத்தித் தன்னை இயக்கும் திருவருள் உண்மை யுணர்ந்து அதன்வழி நிற்குமாயின் பிறவிப் பயனாகிய அறவாழ்வும் வீடுபேறும் பெற்று இன்புறும். அதன் நினைவு முற்றும் திருவருளையே எண்ணி, "அருளே உலகெல்லாம் ஆள்விப்பது ஈசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாவே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவது எனக்கு" என்று பாடிப் பரவுவதிலே ஒன்றி யிருக்கும். இவ்வண்ணம் ஒன்றியிருந்ததனால், திருவருள் இயக்கத்தின் வழி நிற்கும் கானயானையும் ஏனைக் கொடு விலங்குகளும் அருஞ் செல்வர்களான தாபதர்கட்கு விறகு கொணர்ந்து உதவுவது இயற்கை யறமாதல் இனிது விளங்குகிறது. ஆகவே, மாற்பித்தியார் பாட்டில் கண்ட கான யானையின் செயல் அறிவுக்குப் பொருந்துவதென்பது மேற்கொள்ளற்பாலதாகிறது. நன்றி : சித்தாந்தம்.  30. சங்க இலக்கியத் தனிச்சிறப்பு சங்க இலக்கியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற நூற்றொகுதி என்பது இன்று யாவரும் அறிந்தது. நெடுங்காலம் வரை ஏட்டிலிருந்த இவற்றை அச்சேற்றி வெளியிட்ட அறிஞருள் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் தலையாயவர். அவற்றுள் புறநானூற்றின் முற்பகுதிக்குப் பழையதொரு விரிவுரை உண்டு. பரிபாடலில் சிலவொழியப் பலவற்றிற்குப் பரிமேலழகர் உரை யெழுதியுள்ளனர். ஐங்குறுநூற்றுக்கும், பதிற்றுப்பத்துக்கும் பழைய குறிப்புரையுளது. கலித்தொகைக்கு நச்சினார்க்கினியர் உரை வரைந்துள்ளார். நற்றிணை, குறுந்தொகை யொழிய அகநானூற்றின் முதல் சில பாடல்களுக்குப் பழைய குறிப்புரை உண்டு. பத்துப்பாட்டு முழுதுக்கும் நச்சினார்க்கினியரது உரையுளது. இந்த நூற்றாண்டில். குறுந்தொகைக்குச் சௌரிப்பெருமாள் அரங்கனாரும் டாக்டர் உ.வே. சாமிநாதையரும் உரையெழுதினர்; நற்றிணைக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரைகண்டு வெளியிட்டார். புறநானூற்றின் உரையில்லாத பாட்டுக்களுக்கும். ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்துக்களுக் கும் இக்கட்டுரைகாரர் விரிவுரை தந்தார். பின்பு கிடைத்த ஏடுகளைக் கொண்டு ஆராய்ந்ததில் நற்றிணைப் பாட்டுக்கள் பாடவேறுபாடு மிகப் பல பெற்றமை கண்டு "உரை வேந்தர்" அவர்களால் விளக்கவுரை யொன்று எழுதி வெளியிடப் பெற்றிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றியவையாதலால், இந்நாளையவர்க்குச் சங்க இலக்கியம், உரைகளைத் துணைக் கொண்டல்லது, பொருள் இனிது எளிது படித்துணர மாட்டாத நிலையில் உள்ளன. இது பற்றியே உரைகளைப் பற்றி இங்கே கூறுவது முறையாயிற்று. சங்க இலக்கியங்கள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையுடையவை என்று கூறும்போது, பழமையில் ஏதோ பெருமையிருப்பதாக எண்ணி, அதனைக் குறைத்துக் கூறி மகிழ்கின்ற அன்பர்கள் சிலர் இன்றும் இருக்கின்றனர். தமிழ் நல்கும் தேனும் பாலும் உண்டு வளரினும், அளர்களது உள்ளத்தில் தமிழ்பால் வேறு பட்டு நினைக்கும் ஒருவகை யுணர்வு இருந்தே வருகிறது. அவர்கள் குருதியின் ஒவ்வொரு துளியினும் ஊறிநிற்கும் இவ்வேற்றுமை யுணர்வு நாளடைவில்தான் நீங்கும். ஏனெனில், அஃது அவர்கள்பால் பல்லாயிரம் ஆண்டுகளாக வேரூன்றிப் பச்சை கொண்டிருப்பது. மிகப் பழமை வாய்ந்த சங்க இலக்கியம் தோன்றிய காலம் தமிழகத்துத் தமிழ் மக்களைத் தமிழ் மன்னரே தமிழ் நெறியில் தமிழ் மொழியில் ஆட்சிபுரிந்த காலம்; மக்கள் தமிழே நினைந்து தமிழே மொழிந்து, தமிழ்ச் செயலே புரிந்த தனித் தமிழ்க் காலம்; வைதிகம், பௌத்தம், சயினம் முதலிய சமய வுணர்வுகள் பெரிதும் பரவாத காலம். புலவர்கள் இயற்றமிழும், பாணர்கள் இசைத் தமிழும், கூத்தர்கள் நாடகத் தமிழும் பேணி வளர்க்க. முடிமன்னரும் குறுநிலத் தலைவரும், செல்வரும், அம் மூவர்க்கும் பெருங் கொடை புரிந்து முத்தமிழ் வளர்த்த பெருமைக் காலம். முதுபெரும் புலவர்கள் மன்னர் பேரவையில் இருந்து அரசியற் கருத்துக்கள் அளவளாவி இருந்த அருமைக் காலம். அக்காலத்தை மீளத் தோற்றுவிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகி, அறிஞர்கள் முயன்று. எழுத்தினும் பேச்சினும் எடுத்துரைக் கவே, இளைஞர்கள் இச்சங்க இலக்கியங்களைப் பயிலுவதில் அன்புகொள்வாராயினர். இளைஞர்களுக்குத் தங்கள் குடி முன்னோர்களின் அருமை பெருமை காட்டும் வரலாறுகளைக் கேட்பதில் பெருவிருப்பம் எழுவது இயல்புதானே? மறைந்த பழம்பொருள் மீளக் கிடைத்த வழி அதனைப் பேணிப் போற்றுவது மக்களினத்தின் தனிப் பண்பாகும். இச் சங்க இலக்கியங்கள் பழமையும் பெருமையும் உடை யவையாயினும் பழமை பற்றி ஒதுக்குதற்கில்லை. இன்றைய வாழ்வுக்கு வேண்டிய இனிய புதுமைக் கருத்துக்களை நல்குவதிலும் இவ்விலக்கியங்கள் குறை படுவதில்லை. இவற்றுள் சாதி சமய வேறு பாட்டுச் சரக்குகள் இல்லை. எல்லோரும் ஓர்குலம்; எல்லோரும் ஓரினம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்." ஏறக்குறைய 1500 ஆண்டுகட்குமுன் தமிழகத்தில் புகுந்த சமயங்கள், "இவ்வுலக வாழ்வு நிலையில்லாதது; சுவையில்லாதது" என்ற கருத்தை நாட்டிற் புகுத்தின. சங்க இலக்கியங்கள், "உடம் பொடு நின்ற உயிரும் இல்லை மடங்கள் உண்மைமாயமோ அன்றே" என்றும், "பொதுமை சுட்டிய மூவருலகமும். பொதுமை யின்றி ஆண்டி சினோர்க்கும் மாண்டவன்றே ஆண்டுகள்" என்றும், "ஒருதாமாகிய பெருமையோரும் தம்புகழ் நிறீஇச் சென்று மாய்ந் தனரே" என்றும் பல பாட்டுக்கள் வாழ்வின் நிலையாமையைச் சுட்டிக் காட்டிய துண்டு; ஆயினும் புதிது புகுந்த சமயங்கள் தமது புது மொழியால் உரைத்தது, "நாளும் புதுவோர்மேவல" ராகிய தமிழ் மக்கள் உள்ளத்தில் நன்கு வேர்கொண்டு, அவரது வாழ்விற் படர்ந்து வளம்பெற்றது. பெறவே, மக்கட்கு மண்ணக வாழ்க்கையை வளமுடையதாக்கும் முயற்சிக்கண் கருத்து நெகிழ்வதாயிற்று. வறுமைக்கு இடம் தந்து நாடு அடிமை யிருளில் வீழ்ந்தது. களப்பிரர் பல்லவர் முதலிய வேற்றவர் கைபட்டுப் பழைய மரபும் வீரமும் துறந்து மிடிமையுற்றது. வேற்றவர் மொழியும் கலையும் பண்பாடும் பரவியதால், மக்களிடையே கல்வி நலம் குன்றியது; கல்லாமையும் இல்லாமையும் பெரும் பாலார் உடமையாயின. இந்த இருபதாம் நூற்றாண்டில் அடிமையிருள் புலர்வதற்கு ஏற்ற சூழ்நிலை தோன்றிற்று. காந்தியடிகள் முதலிய சான்றோர் தோன்றிவிடுதலை யொளியை உணர்த்தி மக்களின் மனவிருள் ஒழிதற்கு வழிகாட்டினர். நாட்டுக்கு நல்லரசுவரினும் தோட்டிக்குத் துன்பவிருள் போகாது என்ற மயக்கம் நீங்குவதாயிற்று. அரசியல் பொருளியல் முதலிய வற்றைப் பற்றிப் புதிய வுணர்வுகள் தரப்பட்டன. உணர்வு பெற்ற வர்கள், "வாழப் பிறந்தோம், வாழ்ந்தே தீர்வோம்" என்ற இனிய குரலை எழுப்பினர்; அது பின்பு பெரு முழக்கமாகி நாடு முழுதும் பரவிப் பெருகிற்று. நாட்டவர், அறிவு, தொழில், விஞ்ஞானம், சமுதாயம், அரசு என்ற கூறுகளைச் செம்மைப்படுத்தும் தேசியத் திருப்பணிகளில் உள்ளத்தைச் செலுத்தலாயினர். "வாழ்வு வாழத் தக்கது; வாழ்தல் வேண்டும்;" வாழ்வாங்கு வாழ்ந்தாலன்றி வையக வாழ்வேயன்றி மேலுலக இன்ப வாழ்வையும் எய்தலாகாது என்ற திருவள்ளுவரின் செம்மை மொழியை நினைவு கூர்வாராயினர். இப்புதுக் கருத்தைக் கண்டு உள்ளம் பொங்கும் தமிழர்கள். பழைய சங்க இலக்கியம், "வாழ்தல் வேண்டும் இவண்வரைந்த வைகல், வாழச் செய்த நல்வினையல்லது, ஆழுங்காலைப் புணைபிறிதில்லை" என்று கூறுவதைக் கண்டு வியக்கின்றனர். உழவு, தொழில், வாணிகம் முதலிய அறங்களை நெறிப்படச்செய்து பொருள்வளம் பெருகற்குச் செய்வன யாவும் வாழச் செய்யும் நல்வினைகள். நாடு வறுமையால் துன்பக் கடலில் ஆழுங்காலத்தும் வாழ்வளிக்கும் நல்வினைகளே துணையாதலால், "ஆழுங்காலைப் புணைபுறிதில்லை" என்று சங்க இலக்கியம் கூறுவது எத்துணைப் பொருத்தமாகவுளது காண்மின். உள்ளம் கயங்க உடல் வருந்த உழைத்தாலன்றி இவ்வுலக வாழ்வு இன்பம் செய்வதில்லை; இதனைக் காணும் சங்கச் சான் றோர், "வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே" என்று சொல்லி, இதனால் வாழ்க்கையை வெறுத்து நாட்டை வறுமைக்கும் பிணிக்கும்இரையாக்குதல் கூடாது என்பாராய், "முனிவின் இன்னா தென்றல் அதனினும் இலமே" என்று உரைக்கின்றார். வேறொருவர், "இன்னாது அம்ம உலகம்" எனினும், "இனிய காண்க இதன் இயல் புணர்ந்தோரே" என்று கூறுகின்றார். அதாவது, உலகம் இன்னாது என்று கண்டு அஞ்சி மடிந்து கெடாது இனிமையாவன வற்றைச் செய்து வாழ்க்கைக் கூறுகள் அனைத்தும் இனியவாகுமாறு செய்க என்பதாம். இதற்குத்தான் "இனிய காண்க" என்று கூறுகிறார். இவ்வாறு கொள்ளாமல், இவ்வுலகம் துன்ப நிலையம்; இதனைத் துறந்து உயிரை வருத்தி மேலுலகம் சென்று சேர்க என்று பொருள் கூறுபவரும் உண்டு. அஃது இன்றைக்குப் பொருந்தாது. இவற்றை நோக்கும் போது இன்றைய சூழ்நிலைக்கு இன்றியமையாத பயனுள்ள கருத்துக்களுக்குச் சங்க இலக்கியம் நல்ல அறிவுக் கருவூலமாவது நன்கு விளங்கும். இந்நாளில் உழவு, தொழில் முதலியன வளம்பெறும் வகையில் விஞ்ஞானம் உயிர் நாடியாக விளங்குகிறது. உலகியலுக்கு வேண்டிய அறிவு வகை அனைத்தினும் விஞ்ஞானம் தலைமைபெற்றிருக்கிறது. விஞ்ஞானத்தால் வீறுகொண்ட நாடுகளே வல்லரசு என்ற பெயரும் பீடும் பெற்றுள்ளன. மடிமைக்கும் மிடிமைக்கும் அடிமையாயிருந்த சீன நாடு இந்த விஞ்ஞான அறிவுப் பேற்றால் வல்லரசு என உலக நாடுகள் அஞ்சத் தக்க அளவுக்கு வளர்ந்துவருகிறது. அணுக் குண்டுக்கு இரையாகிப் பேரவலமுற்றுச் சுருங்கிய சப்பான் நாடு, பிற நாடுகட்கு அறிவும் பொருளும் உதவவல்ல உயர்நிலை பெற்றிருப்பதற்கும், இவ்வாறே இரண்டாவது உலகப் போரால் சீர்குலைந்து நன்னிலை யிழந்து மெலிவுற்ற சருமனி நாடு உலகப் பெருநாடுகட்கு வேண்டும் பேருதவி புரிதற்குரிய வளமைபெற்றிருப் பதற்கும் விஞ்ஞான அறிவுப்பேறே அடிப்படை. அணு விஞ்ஞானம் அழகிய வளர்ச்சிபெற்று வானுலக ஆராய்ச்சியில் தலைப்பட்டுத் திங்கள் முதலிய கோள்களின் உண்மையைக் கண்டறிவதில் வெற்றி கண்டுள்ளது. அது கண்ட காட்சி களில், நாம் காணும் வானம் காற்று மண்டலத்துக்கு அப்பால் ஒன்றும் இல்லாத வெறு வெளி என்பது ஒன்று. மற்றொன்று, ஞாயிற்று மண்டிலம் தனது ஈர்ப்பாற்றலால், பரிப்பால், (gravitational force) ஏனைக் கோள்களைப் பிணித்து நிற்கிறது என்பது. இவற்றைச் சங்க காலத் தமிழர் எவ்வாறோ கண்டிருக்கின்றனர். இதனை, “செஞ்ஞாயிற்றுச் செலவும், அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், வளிதிரிதருதிசையும், வறிதுநிலைஇய காயமும் என்றிவை, சென்று அளந்து அறிந்தோர் போல என்றும் இணைத்து என்போரும் உளரே” என்று சங்க இலக்கியம் சாற்றுகிறது. இதன்கண் வறிது நிலைஇய காயம் என்பது; வெறு வெளியாகிய வானம் என்று பொருள்படும். இக் கருத்து அந்நாளில் தமிழக முழுதும் பரவி யிருந்தது. வேறொரு சான்றோர், இவ்வெறு வெளியை, நீத்தம் என்று பெயர் குறித்து, “வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்” என்றும் வேறொருவர், “விசும்பு நீத்தம் இறந்த ஞாயிறு” என்றும் சங்க இலக்கியத்தில் உரைக்கின்றனர். இந்த நீத்தத்தை இக்கால விஞ்ஞானிகள் நிலத்தைத் தழுவிநிற்கும் வளிமண்டிலத்தை ‘டோப்பாஸ்பியர்’ என்றும், அதற்கு மேலுள்ள வளிமண்டிலத்தைச் ‘சிடேட்டாஸ்பியர்’ என்றும், அதற்கு அப்பால் காற்றே யில்லாத மேல் நிலையை ‘ஈத்தர்’ என்றும் குறிக்கின்றார்கள். இனி “வளிதிரிதருதிசை” என்றது, காலந்தோறும் காற்று குறிப்பிட்ட திசைகளில் வீசும் இயல்பைக் குறிக்கிறது. ஆண்டு தோறும், சில திங்களில் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் காற்று வீசும்; அத்திசை நோக்கிக் கடலில் கலஞ் செலுத்துவர் கடல் வணிகர். காற்றின் இவ்வியல்பை முதலிற் கண்டு கலஞ் செலுத்தி யவர் யவனர் என்றும் முதலில் கண்டவர் பெயர் ‘இப்பலாஸ்’ என்றும் வரலாற்றறிஞர் கூறுகின்றனர். அந்த அறிஞரிடையே தமிழ் நூல் அறிந்தோர் இல்லாமையால், பண்டை நாளில் காற்றின் இவ்வியல்பைக் கண்டவர் தமிழர் என்பது மறைந்தே போயிற்று. சங்க இலக்கியம், “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழி லாண்ட உரவோன்மருக” என்று கூறுவது எவ்வளவு இன்பம் தருகிறது. இவ்வாறே தமிழக வரலாற்று உண்மைகள் பல, இந்திய நாட்டு வரலாற்றறிஞர்களுக்குத் தெரியாமலே உள்ளன. ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்ற சங்ககால ஆட்சிக்குழுவின் பெயர் களைப் ‘பஞ்சாயம்’ என்று வடமொழியில் பெயர்த்துப், பஞ்சாயத்து என்பது மோரியர் காலத்தில் முதன் முதலாகக் காணப்பட்டது என்று கூறும் அளவுக்கு வரலாறுகள் திரிக்கப்பட்டுள்ளன. இடைக் காலச் சோழர்களின் ஆட்சி நலன்களைக் கல்வெட்டிலும் செப் பேட்டிலும் கண்ட அறிஞர் சிலர் அவற்றை மோரிய மன்னரின் ஆட்சியில் ஏற்றியுரைத்ததை மறக்க முடியுமா? சங்க இலக்கியம், “பெயரும் பீடும் எழுதி அதர் தொறும், பீலிசூட்டிய பிறங்கு நடுகல்” என்று கூறும் நடுகல் எழுத்துக்களையே பிராமி எழுத்தி லிருந்து வந்தவை என்று இழுக்கு மொழியும் சழக்குத் தானே ஏற்கப் பட்டுளது. இன்னோரன்ன பொய்யும் வழுவும் புகுந்தமை கண்டன்றோ காலஞ் சென்ற ஆர்.கே. சண்முகஞ் செட்டியார் அவர்களும், சி. இராமலிங்க ரெட்டியார் அவர்களும் இந்திய நாட்டின் வரலாறு தென்னகத்திலிருந்து தொடங்க வேண்டும் என்றனர்? இன்று, மக்கட் சமுதாயம், சாதியின வேறுபாடு, உயர்வு தாழ்வு வேறுபாடு செல்வ நல்குரவு வேறுபாடின்றிச் சமநிலை ஒருமைச் சமுதாயமாக அமைதல் வேண்டு மென்ற கொள்கை யொன்று தோன்றி அரசியல் அறிஞரிடையே நிலவிவருகிறது. சாதி சமய இனமொழி வேறுபாடுகளால் சிதறுண்டு பன்னூறாண்டுகளாக வாழ்ந்து பழகியதால், வேற்றுமையற்ற ஒருமைச் சமுதாயம் காண்பது இனி அரிது என்று கருது வோரும் இருந்து வருகின்றனர். ஒருமைச் சமுதாய அமைப்பைத்தான் சிறந்த கருத்தை உள்ளீடாகக் கொண்டது என்ற பொருள் நிலையில் ஒருமை காணவேண்டிச் சங்க இலக்கியம் முயன்றுள்ளது. அதனால், கற்ற அரசர்க்கும் கல்லா எவர்க்கும் சமநிலை காட்டல் வேண்டி, “உண்பது நாழி உடுப்பவை இரண்டே, பிறவும் எல்லாம் ஓரொக்குமே, செல்வத்துப் பயனே ஈதல்” என்கிறார் ஒரு சான்றோர். மேட்டிற் பெய்கிற மழை அருகிலுள்ள பள்ளத்திற் பாய்ந்து உயர்த்திச் சமநிலை காண்பது போலச் செல்வர் இல்லாரை உயர்த்திச் சமநிலை ஒருமைச் சமுதாயம் காண்டற்குச் சங்க காலம் முயன்றிருப்பதைக் காண நமது உள்ளம் இறும்பூது எய்துகிறது. பிற்காலத்தில் தோன்றிய சமய சாதி இன அரசியல் கொள்கை வேறுபாடுகள், உயர்ந்தோர் மேன்மேல் உயரவும், தாழ்ந்தோர் மேலும் மேலும் தாழவும் கட்டும் காவலும் செய்தமையின் சங்க கால முயற்சி நிலைநின்று வெற்றி காணாது வீழ்ந்தோழிந்தது. மற்றொரு புதுமை சங்க இலக்கியத்தில் உண்டு. பிற இலக்கியங்கள். வெற்றி வேந்தரின் போரைப் புனைந்துரைத்து, அதன்பால் அவர்கட்குத் தீரா வெறியுண்டாகச் செய்வதைக் கொள்கையாகக் கொண்டுள்ளன. சங்க இலக்கியச் சான்றோர் போரைத் தவிர்க்கும் நெறியில், போர்க் கொடுமையைப் புனைந்து கூறி வேந்தர் உள்ளத்தை மாற்ற முயன்றுள்ளனர். போரே நிகழலா காது என்னும் முயற்சி அணுக்குண்டு உருவாகிய பின்பே உலக அறிஞர்கள் உள்ளத்தில் வன்மையான இடம்பெற்றது. போர்க்கு இரையாகி அழிவுற்ற நாடுகளின் காட்சியே சங்க காலச் சான்றோர் உள்ளத்தில் இவ்வுணர்வை எழுப்பியுள்ளது. நீ எழுந்து போருடற்று வையாயின், பகைவர் நாடு வாழ் விழந்து, தாயில்லாக் குழவிபோல வருந்தும் என்ற பொருள்பட, “தாயில் நூவாக் குழவி போல, ஓவாது அழூஉம் நின் உடற்றியோர் நாடு” என்று ஒரு சான்றோர் கூறுகின்றார். வேறொருவர் போரால் அழிவுற்ற நாடுகளைக் காட்டி, இவை நெடுங்காலமாக வளம் சிறந்த நல்ல நாடுகள் என்று சொல்லிக் காண்போர் தம் கையால் முகத்தில் அறைந்துகொண்டு வருந்துமாறு பாழ்பட்டன என்ற பொருள் தோன்ற. “இன்றோ அன்றோ தொன்றோர்காலை, நல்லமன் அளிய தாம் எனச் சொல்லிக், காணுநர் கைபுடைத்து இரங்க, மாணாமாட்சிய மாண்டன பலவே” என்று பாடு கின்றார். நெறிமாறாமல் அறம் புரிந்தொழுகும் வகையில் ஒரு நாடு விளங்கு மாயின், அதனைப் போரால் அழிவுறாமல் காப்பது அந்நாட்டு அரசுக்கேயன்றி நினக்கும் கடமையாம் என்று போர்மேற்கொண்ட வேந்தனுக்குச் சொல்லிப் போரைத் தவிர்க்க முயலும் ஒரு சான்றோர், “ஆறுமுட்டுறாது அறம்புரிந்து ஒழுகும் நாடல் சான்ற துப்பின் பணைத்தோள் பாடுசால் நன்கலம் தரூஉம் நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே” என்று வற்புறுத்து கின்றார். இன்று நிலவும் போரொழிப்பு முயற்சிக்குச் சங்க இலக்கியம் உரைக்கும் கருத்துக்கள் எத்துணைப் பொருத்தமாக வுள்ளன, காண்மின். தாங்கள் செய்த போரால் நாட்டு மக்கள் எய்திய அழிவு போக்க, அந்நாட்டு அரசே யன்றிப் பகையரசும் துணைசெய்ய வேண்டும் என்பது சங்க இலக்கியம் உரைக்கும் பழமையறம். படுபிணம் பிறங்க நூறிப் பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே என்பது சங்க இலக்கியம். பிணம் பிறங்க நூறியதனால் வேந்தன் பகைவரது நாட்டுக் கெடுபிடியை உயர்த்துகின்றான் என்பது கருத்து. இவ்வாறு போரால் கெடுகுடி திருத்தியுயர்த்து வதுதான் வெற்றி என்று வற்புறுத்தற்குத் “துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றி” என்று பாராட்டுவர். இது வலமாவதே யன்றி அரசுக்கு வளமுமாம் என்றற்குத் “துளங்கு குடி திருத்திய வளம்படு வென்றி” என்பர். இஃது இந்நாளைய அரசுகட்குப் புதுமை. இனி சங்ககால மக்களது பண்பாடு மிகவும் திருந்தியநிலையில் பொருந்தியுளது. அதனை அவர்களுடைய சொல்லாடல்கள் இனிது விளக்குகின்றன. அது தானும் நெருக்கடியான நிலையில் சிறந்து நிற்பதைச் சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகிறது. வள்ளன்மை மிக்க வேந்தனொருவன் அண்மையில் நிகழ்ந்த போரில் வேற்றி பெற்று மகிழ்ச்சி மிக்கிருந்தான். அந்நிலையில் பாடல் சான்ற சான்றோர் ஒருவர் சென்று கண்டபோது, அவரோடு உரையாடி உவகை கூர்ந்த வேந்தன், “செறுத்த செய்யுள் செய்செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்க புகழ்க் கபிலன் இன்று உளனாயின் நன்றுமன்” என்றான். அது கேட்ட சான்றோர், முகமலர்ந்து புன்னகை புரிந்தார். அவையிலிருந்த ஏனைச் சான்றோர் புலவர் உள்ளம் புண்படுமே என எண்ணித் துணுக்குற்றனர். தான் கூறியது இந்நாளைய புலவரது புலமைக்கு இழுக்குரைத்ததாகுமோ என எண்ணி வேந்தனும் மனம் இரங் கினான். அந்நிலையில் இளங்கீரனார் என்ற அச்சான்றோர், “கபிலர் போன்ற ஒளியுடையோர்க்குப்பின், அவர்போல் ஒளியில்லாமை பற்றிப் புலவர்கள் வாழேம் என உயிர் துறப்பதில்லை; கபிலர் முதலிய ஒளி மிக்க சான்றோர் போல ஒளிபெறற்கு இயன்றாங்கு முயல்வர்; நினது வெற்றியை யானும் பாடுவேன் என்பாராய் என்றும் ஒளியோர் பிறந்த இம்மலர் தலை யுலகத்து, வாழேம் என்றதும் அரிதே. தாழாது, செறுத்த செய்யுள் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன், இன்று உளனாயின் நன்று மன் என்ற நின் ஆடுகொள் வரிசைக்கு ஒப்பப் பாடுவன்மன்னால் பகைவரைக் கடப்பே” என்று கூறினார். கேட்ட வேந்தனும் ஏனைச் சான்றோரும் அவரது பண்பாடு கண்டு வியந்தனர். கபிலரைப் போலவோ, அவரைவிட உயர்வாகவோ பாடுவேன் என்றோ, பாடுவோர் உளர் என்றோ கூறியிருந்தால், பண்பாடு சிறப்பெய்தியிராது. தாமற்பல்கண்ணனார் என்ற சான்றோர் ஒருகால் மாவளத்தான் என்ற அரசகுமரன் ஒருவனோடு வட்டாடுகையில், வட்டுக்களில் ஒன்று பல்கண்ணனார் இருக்கையின் கீழ் மறைந்தொழிந்தது; அதனால் தோல்வி எய்திய அவன், பின்பு அதனைக் கண்டு வெகுளியுற்று. அவ்வட்டினை எறிந்தானாக, அஃது அவர்மேற்பட்டு நோய் செய்தது. அதனால் அவர் சினந்து, தேர்வண்கிள்ளி தம்பி, நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யார்; இது நினக்கு நீர்த்தோ? (தகுதியோ) என்று கூறினர். அவன் வேறே ஒரு சொல்லும் கூறாமல் நாணத்தால் முகஞ் சிவந்து தலைகவிழ்ந்திருந் தான். தனது இளமைக் கொப்பத் தானும் மிக வெகுண்டு வெவ்வுரை யேதும் விளம்பாமல் மாவளத் தான் நாணியிருந்தது அவனது உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தவே, பல்கண்ணனார்க்கு நாணமுண்டாயிற்று; எண்சாண் உடம்பும் முக்கால் சாணாய்ச் சுருங்கிற்று. தாம் சினந்து கூறியது குற்றம் என்பதை உணர்ந்து, “அரசே, நின்யான் பிழைத்தது நோவாய்; நீ பிழைத்தாய் போல் நனி நாணுகின்றாய்: உன் குடிப்பிறந்தோர் தமக்குப் பிழை செய்தாரையும் பொறுத்துப் போற்றும் அரும் பண்புடையவர் என்பது நாடறிந்த உண்மை; அதனை. உன் செயலால் காட்டினை; யானே பிழை செய்தேன்” என்று வருந்தினர். “நின்யான் பிழைத்தது நோவாய்: என்னினும் நீபிழைத்தாய் போல் நனி நாணினையே: தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும்எனக் காண்டதகு மொய்ம்ப காட்டினை; ஆகலின் யானே பிழைத்தனன் சிறக்கநின் ஆயுள்,” என்று பல்கண்ணனார் கூறுவதைந் காண்மின். தாமல் என்பது காஞ்சிபுரத்லிருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் இன்றும் உள்ளதொரு நல்ல ஊர். தொண்டை நாட்டில் சங்க காலத்தில் வாழ்ந்த தலைவர்களில் ஆதன் நுங்கன் என்பவன்பால், அப்பகுதியில் உள்ள கள்ளில் என்ற ஊரில் வாழ்ந்த ஆத்திரையன் என்றொரு சான்றோர் பெரு நட்புக் கொண்டு பிறங்கினார். ஒருகால் அவர்களிடையே நண்பரது நட்புறவு பற்றியொரு பேச்சுத் தோன்றியது. அப்போது அவர் நுங்கனை நோக்கி “வாழி எந்தை ஆதன் நுங்க, என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே” என்றார். இதனைப் படிக்கின்ற போது ஆங்கில நாட்டு வரலாற்று நிகழ்ச்சி யொன்று நினைவுக்கு வருகிறது. ஆங்கில நாட்டு அரசக் குடும்பத்தில் தியூடார் வழிவந்த மன்னரிடையே மேரி என்பவள் அரசியாகி ஆட்சி புரிந்தாள். அவளை ஸ்காத்லாந்து நாட்டவள் என்றலும் உண்டு. அவள் காலத்தே ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் போர் உண்டா யிற்று. அப்போரில் ஆங்கில அரசின் கீழ் நெடுங்காலமாக இருந்து வந்த கலே என்ற பகுதியைப் பிரெஞ்சுக்காரர் வென்று கொண்டனர். அக்கலே பகுதியின் மேல் மேரியரசிக்கு மிக்க ஆசை பெருகியி ருந்தது. அதனால், கலே பகுதியை இழந்ததற்கு மனம் வருந்திக் கண்கலுழ்ந்து “என் நெஞ்சைப் பிளந்தால் அதன்கண் கலே என்ற பெயர் எழுதியிருப்பதைக் காணலாம்” என்றாள். காலத் தாலும் இடத்தாலும் நெடிது வேறு பட்ட இவ்விருவர் கூற்றும் கருத்தொத் திருப்பது நமக்குப் புதுமையாய் இன்பம் தருகிறது. சங்ககாலம், மக்களினம் என்பது பல குடும்பங்களின் கூட்டம் என்பதை நன்கு அறிந்திருந்தது. குடும்பம் என்பது ஒருவனும் ஒருத்தியும் கணவனும் மனைவியுமாய்க் கூடி நடத்துவது. கணவனும் மனைவியும் ஒத்த வுணர்வும் ஒத்த செயலும் உடையவரானால், குடும்பம் ஒழுங்குற நடக்கும். குடும்பம் செம்மையுற்றால், அன் பாலும் அறத்தாலும் நன்மையுடையதானால்தான் மக்கட் சமுதாயம் மாண்புபெறும் *உணர்வொருமையும் செயலொற்றுமையும் செயற்கையால் உளவாவனவல்ல; இயற்கையால் ஒருவனும் ஒருத்தியும் தமக்கு வாழ்க்கைத் துணை வேண்டி ஒருவரை யொருவர் கண்டு அன்புற்றுக் காதலனும் காதலியுமாகிப் பின் கடிமணத்தால் கணவனும் மனைவியுமாவர். காதலராகுதல், பிறர் அறிய நிகழாமை பற்றிக் களவு என்றும், பிறர் அறியக் கடிமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துவது கற்பு என்றும் வகுத்திருந்தனர். சாதியின வேறுபாடுகள் புகுந்த பின்பு களவு நெறி மறைந் தொழிந்தது. அதுவரையில் தமிழரிடையே களவும் கற்பும் இருவகை ஒழுக்கம் எனப் போற்றப்பட்டுவந்தன. திருவள்ளுவர் முதலிய சான்றோர், அவ்வொழுக்கத்தை இன்பம் என நிறுவி, அறம் பொருள் என்ற உறுதிப் பொருளோடு ஒப்ப நிறுத்திப் பேணி யுரைத்தனர். இதன் உண்மை யுணரமாட்டாமை யால் இந்நாளில் சிலர் திருவள்ளுவரையே குறைகூறிக் கீழ்மை எய்தினர். வாழப் பிறந்த மக்கள் வாழ்க்கைத் துணையை நாடிக்கொள்வது தனியவர் உரிமை; பெற்றோரது அன்று என்பதை நன்கு அறிந்தே திருவள்ளுவர் மக்கட் பேறு கூறுமிடத்து அவரைக் கல்வியறிவு உடையவராக்குவது பெற்றோர்க்கு அறம் என்று சொல்லி, அவர் கட்கு ஒத்த நலமுடையவரைப் புணர்த்துக் கடிமணம் செய்து மனையறம் படுத்துவது முறையென்றோ கடன் என்றோ எங்கும் கூறிற்றிலர். அதனை, மணம் செய்து கொண்டு மனையறம் மேற் கொண்ட பின் ஒருநாள் கணவன் தன் மனைவியோடு உரையாடற்று, “யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி அறிதும். செம்புலப் பெயல் நீர்போல, அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்று கூறினான். மனையவளும், “இன்மை மாறி மறுமையாயினும், நீ யாகியர் எம் கணவனை யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே” என்று உரைக் கின்றாள் எனச் சங்க நூல் கூறுகிறது. மனைவாழ்வமைதற்கு, குடும்பமொன்று உருவாவதற்குப் படிமுறையில் அமைத்து, கருத்தொருமை தோன்றி இருவர் உள்ளத்தையும் பிணித்தற்கு வாயிலாவது பற்றிக் களவு ஒழுக்கத்தைத் “தள்ளா இயல்பிற்று” என்று சங்கச் சான்றோர் வற்புறுத்தினர். பிறர்க்குத் தெரியாமல் காதலன்பு கொள்ளும் நெறியால் களவும், வடநூல் கூறும் காந்தருவமும் ஒன்று போலத் தோன்று மாயினும், வேறு வேறு முடிபினவாகும். களவுக் காதலர் கடிமணம் செய்து கொண்டன்றிக் கணவனும் மனைவியுமாகார். கடிமணத்துக்கு இடையீடுதோன்றி உடன்போக்கைத் துணிந்து மேற்கொள்விக்கும் போது, உடன் போகுங்கால், அக்காதலர் வழியில் இரவுப் போது வரின், ஓர் ஊரில் தங்கி, அவ்வூரவர் அறிய மணம் செய்துகொண்டு உடனுறைவு மேற்கொள்வர். ஏனெனில், களவுக் காலத்தில் மகப் பெறு புணர்ச்சி கிடையாது. காந்தருவத்துக்கு அத்தகைய முறை கிடையாது; மணமின்றியே விலங்குகள் போலக் கூடி மகப் பெறுவர். இதற்குச் சகுந்தலையின் காந்தருவமே சான்று. தமிழறிஞர் சிலர் களவொழுக்கத்திலும் மகப்பெறு புணர்ச்சி யுண்டு என்கிறார்களே எனின் அது தமிழறிவின் தவக்குறை. இவ்வாறு களவும் கற்பு மாகிய இன்ப வொழுக்கத்தால் ஒன்றியியைந்த குடும்பமே செம்மை கனிந்த மக்களினம் தோன்றுதற்கு அடிப்படை யென்று கண்டே, இரண்டையும் அகம் என ஒன்றாக்கிப் புறத்தினு மிக்க பல பாட்டுக் களால் சங்க இலக்கியம் பாரித்துரைக்கின்றது. இங்ஙனம் சமுதாய நல்லமைப்புக்கு இன்றியமையாத உறுப்பாகிய குடும்பம் தோன்றுதற்கு முதலாயுள்ள காதலனும் காதலியும் கணவனும் மனைவியும் பெற்றிருந்த பண்பாட்டை எடுத்துக் காட்டுவதில் சங்க இலக்கியம் ஈடு எடுப்பின்றி இலங்குகிறது காதலியின் காதலன்பைக் காதலனுக்கு உரைக்கின்ற தோழி. “நல்காய் ஆயினும் நயனில செய்யினும், நின்வழிப் படூஉம் என்தோழி” என்று கூறுகின்றாள். காதலியைத் தனித்துக் கண்டு உரையாடி மகிழ்தற்கு ஏற்ற சூழ்நிலை வாயாமையால் வருத்தமுற்ற காதலன், இவளைப் பெறுவது இப்பிறப்பில் எய்தாதாயின் மறுமை யுலகிலேனும் எய்தலாம் என்று தன் நெஞ்சொடு கூறவான், “பெறு வது இயையாதாயினும். உறுவது ஒன்று உண்டுமன், வாழிய நெஞ்சே ......... இன்றையன்ன நட்பின் இந்நோய், இறுமுறை என ஒன்றின்றி மறுமையுலகத்து மன்னுதல் பெறினே” என்று உரைக் கின்றான். களவுக் காலத்தில் இரவினும் பகலினும் காதலர் தம்மில் தமித்துக்கண்டு உரையாடி மகிழும் வாய்ப்பு நேர்ந்தபோதும், கடலன்ன காதல் பெருகினும், அறம் பிழையாத பெருமையும் உரனும் ஆண்மகன்பால் அமைந்துள்ளன; அறிவும் அருமையும் பெண்மகள் பால்நிறைந்துள்ளன எனத் தொல்காப்பியர் எடுத்துக் கூறுகின்றார். காதலுறுவு தோன்றுங்கால் காதலன் உள்ளத்தில் அன்புபெருகிக் காதலியை இன்றி அமையாத நிலையுண்டாகுமாறு காதலி அவனைச் சேட்படுத்துவதும், காதலியுள்ளத்துக் காதல் முறுகிப் பெருகிக் காதலனையின்றி அமையாத நிலையுண்டாகுமாறு அவன் வரைவு நீட்டிப்பதும், காதலுணர்ச்சி மீதூர்ந்து கையறவு எய்துவித்த போதும், வெம்மைமிகுந்து உடலை வெதுப்பி உள்ளத்தை அலைத்தபோதும், விலங்குணர்ச்சிக்கு இரையாகி அறநெறி வழுக்கி வீழ்ச்சியுறாது மேன்மையுறும் மேதகவு சங்க இலக்கியம் காட்டும் தமிழ்க் காதலரின் களவொழுக்கத்தில் விளங்கித் தோன்று கிறது. ஒருவரையொருவர் நேரிற்கண்டு காதலுற்றபின், காதலன் நாளும் அவளையே நாடி வடிவது கண்டு அவனை நெருங்க விடாது சேட்படுக்கின்றாள். அவளைத் தான் நெருங்கி மகிழாவாறு விலக்குண்ட காதலன் அதனால் வெறுப்புறாமல், “அருளினும் அருளாளாயினும் பெரிது அழிந்து, பின்னிலை முனியல்மா நெஞ்சே, என்ன தூஉம். அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து பிறிதில்லை யான் உற்றநோய்க்கே” என்று தனக்குள் கூறிக்கொள் கிறான். வரைவு நீட்டித்த காதலனுக்குச் காதலியின் காதல் மிகுதியை அவளுடைய தோழி, “தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு, அன்னாய் என்னும் குழவிபொல, இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், நின்வரைப்பினள் என் தோழி, தன்னுறு விழுமம் களைஞரோ இலளே” என்று கூறுவது, காண்மின். இனி, இக்காதலர் மணம் செய்துகொண்டு கணவனும் மனைவியுமாய் மனயைறம் புரிவது சங்க இலக்கியம் காட்டும் இன்பக் காட்சி வகையில் ஒன்று. தாங்கள் நடத்தும் மனை வாழ்வில் கணவன் பேரின்பமும் பெருமிதமும் எய்துகிறான். “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும், அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும், இரண்டும் தூக்கின் சீர் சாலாவே” என்று கணவன் கட்டுரைக் கின்றான். கணவன் வீட்டிலிருந்து தாய் மனைக்கு வந்த பெண்மகள், “அன்னாய் வாழி; நம்படப்பைத் தேன் மயங்கு பாலினும் அவர் நாட்டு உவலைக் கூவல்கீழ, மா உண்டு எஞ்சிய கலுழி நீரே” என்று மொழிந்து தம் மனையின் பெருமையைப் புலப்படுத்துகின்றாள். இளங்கணவன் மனைவியர் வாழ்வில் காதலுக்கும் கடமைக்கும் கடும்போர், நடக்கும். கடமை, கணவனைத் தன் மனைவியின் நீங்கிச் செல்வத்தை வற்புறுத்தும்; காதல், அவனை அவ்வாறு பிரிந்தேகா வாறு தடை செய்யும், கடமை வெற்றிபெறின் வாழ்வு வளம் பெறும்; காதல் வெற்றி பெறுமாயின் மனைவாழ்வு வறுமைக்கும் உறைவிடமாய்த் துன்பம் பயக்கும். கணவன் கடமைகாரணமாக வேறு நாட்டுக்குச் செல்பவன் கார் காலத்தில் மீள்வதாகச் சொல்லிச் செல்கின்றான். கார் காலம் வருகிறது; அவன் வருகின்றானில்லை. கார்கால வரவை மழைமேகம் பரந்து காடெல்லாம் படிந்து காட்டு கிறது. அதனைப் பார்க்கின்ற அம்மங்கை, “இது கார்காலமாயின், என் கணவன் வாராதிரார்; வராமையால் இது கார்காலமன்று” என்று கூறுகிறாள். “கானம் கார் எனக் கூறினும், யானோ தேறேன்: அவர் பொய்வழங்கலரே” என்று மொழிவது கணவன் செயலில் அவட்கிருக்கும் நன்மதிப்பை எத்துணை அழகாகக் காட்டுகிறது, காண்மின். கூடியிருந்து மகிழும் காதலன்புக்குப் பிரிவுதான் மிக்க நோய் செய்வது பிரிந்த வழி. மனையுறையும் மங்கை பிரிவுத் துயர் பொறாது, “அரிதே காதலர்ப்பிரிதல்” என்று நினைந்து உண்டி மறுத்தும் உடம்புநனி சுருங்கியும் கண்துயில் இன்றியும் கையறவு படுவது இயல்பு. பிரிந்தவன் வாரானாயின் அவள் இறந்துபடுவதும் உண்டு. ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் இறந்தானாக, அவன் மனைவி பெருங்கோப்பெண்டு, உடன்கட்டை யேறத் துணிந்த போது தீயின்வெம்மை கூறிச் சான்றோர் விலக்கவும். “பெருங் காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம் நுமக்கு அரிதாகுகதில்ல எமக்கு எம், பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே” என்று கூறி இறந்துபடுகின்றாள், அதனை நேரிற் கண்ட பேராலவாயார். பெருங்கோப்பெண்டின் இளமை நலத்தையும், அதனை வென்று யர்ந்த அவளது காதலன்பின் திறத்தையும் வியந்து “இன்னுயிர் கொடுக்கும் தன் இளமை புறங்கொடுத்தே” என்று பாராட்டு கின்றார். மனைவி பிரிந்த காலை, காதலன்பால் பிணிப்புற்ற கணவனும் பெரும்பேதுறவு கொண்டு வருந்துவன். கோட்டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் மனைவி இறந்தது குறித்து வருந்துகிறான். காதல் என்பது கணவன் மனைவி யென்ற இருவர் உயிரையும் பிணிக்கும் அன்புத் தொடர்பு; அதனால் காதல் வாழ்வில் உளதாகும் பிரிவு நோய் பொறுத்தற்கரிது என்று உரைக் கின்றனர். “காதலியைப் பிரிந்த எனக்குற்ற நோய் என் உயிரைச் செகுக்கமாட்டாது; என்னே அதன் வன்மை இருந்தவாறு” என இகழ்ந்து, “யாங்குப் பெரிதாயினும் நோயளவு எனைத்தே, உயிர் செகுக்கல்லா மதுகைத் தன்மையின்” என்று சொல்லி, தன்னுயிர் உடன்போ காமைக்கு வருந்தி, “ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை, இன்னும் வாழ்வல்; என் இதன்பண்பே?” என்று எள்ளிநகையாடித் துயர்மிகுகின்றான். இதன்கண் அவனது காதலுறவின் சிறப்பு எத்துணை மேன்மையுறுகிறது, காண்மின். பிரிந்து வெளிநாடு சென்ற கணவன் வாராமை கண்டு கலக்க முற்ற காரிகை; முன்பெல்லாம். பிரிவு நேரின் உயிர் தாங்கியிரேன் என்று சொல்லியவள், உயிர்விடாது அவனுடைய வரவை நெடிது எதிர்நோக்கியிருந்தாள். அதுகண்ட ஏனைமகளிர் இவள் சாதற்கு அஞ்சுகிறாள் போலும் எனத்தம்முள் பேசிக்கொண்டனர். அதனை அறிந்ததும், அவள். “நான் சாதற்கு அஞ்சுவேனல்லேன்; ஆனால் இப்பொழுது அஞ்சுகிறேன்; காரணம் என்னவேனில், செத்தால் பிறப்பு மாறும்; மாறினால் கணவனை மறக்க வேண்டிவரும்” என்ற பொருள்பட, “சாதல் அஞ்சேன், அஞ்சுவல், சாவின், பிறப்புப் பிறிது ஆகுவதாயின், மறக்கு வென்கொல் என் காதலன் எனவே” என்று மொழிகின்றாள். அவளது மனமாண்பு கண்டு மகளிர் வியக்கின்றனர். பழனியைச் சூழ்ந்த பகுதிக்கு வையாவி நாடு என்று சங்க காலத்தில் பெயர் வழங்கிற்று. அந்நாட்டைக் கோப்பெரும் பேகன் ஆண்டு வந்தான். தனக்குக் கண்ணகி என்றொரு மனைவியிருக்கவும். அவன் வெறொருத்தியை விரும்பி நாடோறும் அவளுடைய ஊர்க்குப் போய்க்கொண்டிருந்தான். அதனால் கண்ணகி வருத்த முற்று வாடியிருப்பதை அறிந்தார் பரணர். அவர் முதற்கண் அவளைக் கண்டு உண்மையை உசாவினார். அவள் வாய்திறந்து. “எம்போல் ஒ ருத்தி நலன் நயந்து, என்றும், வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன், ஒல்லென ஒலிக்கும் தேரொடு, முல்லைவேலி நல்லூரானே” என்று உரைத்தாள். அதுகேட்ட பரணர், உள்ள தறிந்து பேகனைக்கண்டு தக்கது சொல்லிக் கண்ணகியுடன் பண்டு போல் மனம் கலந்து வாழச் செய்தார். பேகன், மயிலுக்குப் போர்வையீந்து மாயாப்புகழ் பெற்ற அருள் வள்ளலாதலால் அவனுக்கு மனத் தெளிவு விரைவில் உளதாயிற்று. அத நிற்க, இங்கே கண்ணகி பரணர்க்குச் சொன்ன சொற்கள் தாம் என்ன நயம் மிகுந்து உள்ளன, பாருங்கள்: பேகனால் விரும்பப்பட்டவள் இழிந்த ஒழுக்கத்துப் பரத்தை அல்லள் என்று விளங்க, “எம்போல் ஒருத்தி நலன் நயந்து” என்று சொல்லுகிறாள்; இரவோடு இரவாய்க்கள்வர் போல இன்றி, தேரில் கட்டிய மணி யொலிக்கப் பலரும் அறிய நாளும் செல்கின்றான் என்பதை, “என்றும் ஒல்லென ஒலிக்கும் தேரொடு வரூஉம்” என்று குறிக்கின்றாள்; அவன் அவ்வாறு செல்வதைத் தான் நேரில் காணவில்லை என்றும், ஊரவர் கண்டு உரைக்கின்றனர் என்றும் கூறுவாளாய் “வரூஉம் என்ப” என்று தெரிவித்து, இச் செயலால் பேகன் புகழ் மாசுபடுகிறது என்று வருந்துகிற தன் குறிப்புத் தோன்ற “வயங்கு புகழ்ப் பேகன்” என்பது அறிவுக்கு மிக்க இன்பம் தருகிறது. இவ்வாறே நாகையார் என்ற நங்கை கூறுவதைக் கேண்மின். ஒளவைக்கு நெல்லிக்கனி ஈந்து அழியாப் புகழ்பெற்ற வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சிக்கு மேலே கூறிய நாகையார் அரும் புலமைசான்ற மனைவியாவர். அஞ்சிக்கு அவர் அத்தை மகளாவர். அவனுக்கு அவ்வம்மையை மணம் பேசியபோது. அவனுடைய குணநலங்களைக் கூறிய தோழி, “கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி”யோ எனின், “குடிநன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன். கெடுநாமொழியலன் அன்பினன்” என்று மொழிந்தனர். மணம் முடிந்து பொகுட்டெழினி என்பானைப் பெற்று மாண்புமிக்க தாயாய் விளங்கிய நாளில், ஒரு நாள் மகளிரிடையே அவளுடைய திருமணம் பற்றியும் அஞ்சியின் அன்பு பற்றியும் பேச்சு நிகழ்ந்தது. அப்போது நாகையார் தன் கணவனான அஞ்சியின் அயரா அன்பை, “நல்லிசை நிறுத்த நயவருபனுவல், தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன், எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், புதுவது புனைந்த திறத்தினும், வதுவை நாளினும் இனியனால் எமக்கே” என்று கூறினார். தன் கணவனது அன்பின் இனிமைக்கு யாழ்வல்ல பாண்மான் புதிது புனைந்து இன்புறுத்த திறத்தை உவமை கூறும் இசைப் புலமை ஒருபுறம் இருக்க, திருமண நாளன்று அவன் காட்டிய இன்ப அன்பு மென்மேலும் பெருகிய தென்றற்கு, “வதுவை நாளினும் இனியனால் எமக்கே” என்பது அருமை வாய்ந்தது. நாகையார்க்குப் பன்னூறு ஆண்டு பின்னர் ஆங்கிலநாட்டில் தோன்றிய எமர்சன் என்பவர், “மனைவாழ்வு வளம் பெறுதற்கு மணநாளன்று நிலவும் இன்ப அன்பு வழிநாட்களில் தன் இனிமை நலம் குன்றாதிருக்க வேண்டும்” என்று மொழிகின்றார். யாக்கைப் புறந்தோலின்மேல் விளங்கும் வனப்பைப் பற்றுக் கோடாகக்கொண்டு தோன்றி நிலவும் காதலுறவு, அவ்வனப்புக் கழிந்து ஒழியுமிடத்துப் பற்றுக்கோடு இன்றிக் கெட்டுப்போவதை நன்குணர்ந்தே “இருதலைப் புள்ளின் ஓருயிர் அனையேம்” என உயிரொன்றிய காதலன்பையே சங்க இலக்கியம் வற்புறுத்துகிறது. இங்ஙனம் மக்களினம் ஆணும் பெண்ணுமாய்க் காதலுற்று உயிரோடு உயிராய்ப்பிணிப்புண்டு மனையகத்தே நிகழ்த்தும் இன்பவாழ்வை அகம் எனப் பெயரிட்டு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் காதலுரையாட்டையும் இனிய பாட்டு வடிவில் மனக் கண்ணிற்குக் காட்டி மகிழ்விக்கும் சங்க இலக்கியம் இனிய இயற்கைக் காட்சி மலிந்துளது. உலகியல் வாழ்வில் இளமைக் காலத்துக் காதலின்பக் கூறுபோல் காண்பார்க்கும் கேட்பார்க்கும் எல்லார்க்கும் இன்பம் நல்குவது வேறில்லை. அக்கால நிகழ்ச்சிகளை இன்ப இயற்கைக் காட்சிகளின் இடையே வைத்துப் பாடுவதைச் சங்கச் சான்றோர் மேற்கொண்டுள்ளனர். மக்கள் வாழ்வுக்கு இடமாவது இயற்கை யுலகமாதலால் அதற்கும் மக்கள் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர் புண்டென்பதைச் சங்கப் புலவர் கண்டு அதனோடு இயைத்தே தமது பாவன்மையைப் பயன்படுத்தியுள்ளனர். ஏனை எம் மொழிப் புலவர்பாலும் காணப்படாத இச் செயற்கூறு சங்ககாலத் தமிழ்ப் புலமையில் தழைத்திருப்பது இவ்விலக்கியத்துக்குத் தனிமாண்பு நல்குகிறது. பெற்ற மகனோடு கொஞ்சிக் குலாவுகின்றாள் ஓர் இளந்தாய். அவளுடைய காதற் கணவன் இனிய சொல்லாடி அவளை நெருங்கு கிறான். அவளோ அவனை நெருங்க விடாமல் புதல்வனை ஈன்ற என் மேனி முயங்கன்மோ தெய்ய நின்மார்பு சிதைப்பதுவே என்று சொல்லி மறுக்கின்றாள். இதைக் கூறுபவள், பேச்சின் தொடக்கத்தில் அவன் முகத்தைப் பார்த்து, நீ, “கரும்பு நடுப்பாத்தியில் கலித்த ஆம்பல், சுரும்புபசிகளையும் பெரும்புனலூரன்” என்று சொல்லு கிறாள். இதைப் படிக்கும்போது கருப்பந் தோட்டமும், அதன் பாத்திகளில் நீர் நிறைந் திருப்பதும், ஆம்பல்கள் பூத்துவிளங்க, அவற்றில் வண்டினம் படிந்து தேன் உண்பதும் நமது மனக்கண்ணில் ஓவியம்போல் தோன்றுகின்றன. அதனைச் சொல்பவள், சொற் களைச் சிறிது மாற்றிக் கரும்புநட்ட பாத்தியில் ஆம்பல் மலர்ந்து பசித்து வரும் வண்டிற்குத் தேனளித்துப் போற்றுகிறது என்று கற்பனை செய்து உரைக்கின்றாள். இதற்கும் மகப்பெற்று விளங்கும் என்னைத் தொடாதே என்பதற்கும் என்ன தொடர்பு? தொடர்பு இல்லையானால் இயற்கைக் காட்சி யையுரைப்பது பயனில் கூற்றாகும். கரும்பைக் குடும்பம் நடத்தும் குலமகளாகவும், பாத்தியை அவனது ஊராகவும், ஆம்பலைப் பரத்தையாகவும் கொண்டால் ஊரில் பரத்தையர் தழைத்து, அவனைப் போன்ற வண்டுகளை மகிழ்விக்கின்றனர்; அவரது தொடர்பைப் பெற்றமையால் நீ என்னைத் தொடலாகாது என்ற கருத்தை இவ்வியற்கைக்காட்சி நமக்கும் காட்டி இன்பம் செய்கிறது. பாலைக் கௌதமனார் என்ற சான்றோர் செல்கெழுகுட்டுவன் என்னும் சேரமன்னனுடைய வஞ்சிப் போரைப் பாடியபோது அவனொடு பொருதபகை வேந்தரின் நாடுகள் “ஏறுபுணர்ந்து அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் விண்ணுயர்வைப் பின் காடாயின” என்று கூறினர். இங்ஙனம் காடாகிக்கெடுதற்கு அமைந்த காரணத்தை இயற்கை நிகழ்ச்சி யொன்றில் இயைபு படுத்தி, “கழனிவாயிற் பழனப்படப்பை, அழல்மருள் பூவின் தாமரை வளைமகள், குறாது மலர்ந்த ஆம்பல், அறாஅ யாணர் அவர் அகன்றலைநாடே” என்று கூறுகின்றார். மலர்ந்த தாமரையைப் பயன்கொண்டு இளமகளிர் குவிந்த ஆம்பலைப் பறியாது வாளா விடுவர் என்று இதன்கண் குறிப்பது, செல்வத்திற் சிறந்தாரைப் பயன்கொண்டு மெலிந்தவரைப் புறக்கணித்தனர்; இதுவும் அப் பகைவர் நாட்டரசு கெடுதற்குக்காரணம் என்பதைக் காட்டுகிறது. மகளிர், மலர்ந்த தாமரையைப் பயன்கொண்டது போலப் பகை வேந்தர் சிறந்து விளங்கும் வேந்தாகிய நின்னை வணங்கிப் பயன் கொள்ளாமல், மகளிர் தமக்கு எட்டாத ஆம்பலைக் குறாது விட்டது போலத் தமக்கு எய்தமாட்டாத வென்றியை எய்த முயன்று கெட்டனர் என வேறுஓர் ஏதுவும் தோன்றக் கூறுவது காணலாம். புலவன் ஒருவனை முருகப்பெருமான் உறையுமிடம் சென்று அவனை வழிபட்டு, இருள்நிற முந்நீர் சூழ்ந்த இவ்வையகத்து, “ஒருநீயாகத் தோன்ற, விழுமிய பரிசில் நல்குவன்” என்று கூறும் நக்கீரனார், தமது திருமுருகாற்றுப் படையில், முருகன் அமர்ந் துறையும் பரங்குன்றத்தை அவனுக்கு உரைக்கின்றார். உரைப்பவர், மதுரை மாநகரின் கொடியும் கோட்டைவாயிலும், செல்வ நெடு மாடக் கடைத்தெருவும் கூறி, நகரின் மேற்கிலுள்ளது பரங்குன்றம் என்பவர். இடையிலுள்ள நன்செய் வயற் காட்சியை, அதன் இயற்கை நலத்தை, “மாடமலி மறுகின் கூடல் குடவயின் இருஞ்சேற்று அகன்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்று” என்று பாராட்டுகின்றார். வயல்களின் இடையிலுள்ள நீர்நிலையில் தாமரைப் பூவில் இரவில் உறங்கிய வண்டு வைகறையில் வெளிப் போந்து, அப்போது மலர்ந்த நெய்தற்பூவின் தேனுண்டு சிறிது பகலொளி பரவியதும் குன்றிலுள்ள சுனையில் மலரும் நீலமலரின் தேனுண்டு பாடும் என்ற இதன் கருத்து, மதுரையில் வாழும் செல்வர்கள் திருமிக்க தங்கள் மனையில் இரவுப் போதைக் கழித்து வைகறையில் நீராடிப் பரங்குன்றம் சென்று முருகனைப் பாடிப்பரவி வழிபடுகிறார்கள் என்பது. இங்ஙனம் மக்கள் வாழ்க்கையை இயற்கையோடு இயைத்து நோக்கும் ஏற்றம் பெற்ற சங்க இலக்கியம் இயற்கைப்பொருள்களை நுணுகி நோக்கிச் சொல்லோவியம் செய்வது அறிவுக்குப் பேரின்பம் நல்கும் பெருமையுடையது. காட்டுப் பன்றியின் வாயில் இரு பக்கத்திலும் வளர்ந்து வளைந்து தோன்றும் கோரப் பற்களை உவமையால் விளக்கும் ஒரு பாட்டு, “புகழா வாகைப் பூவின் அன்ன வளைமருப்பு ஏனம்” என்று கூறுகிறது. புகழாவாகை என்று வெற்றிலைத் தோட்டங்களில் வளரும் அகத்தியைக் கூறுவர். அகத்திப்பூவை நேரிற் பார்த்தால் இந்த உவமையின் உண்மை உள்ளத்தில் தோன்றி இன்பம் செய்யும். கலைமானின் கொம்பைக் காட்டுதற்கு இதழ் உதிர்ந்த வாழைப்பூவின் கொம்பை உவமை கூறுகிறது வேறொரு பாட்டு. “குவிமுகை வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த, ஒழிகுலையன்ன திரிமருப்பு இரலை” என்று கூறுவது காண்மின். இங்ஙனம் காலத்துக்கு அமைந்த கருத்து, பண்பாடமைந்த உரையாடல், உயரிய கருத்தொருமை, இயைபுடைய இயற்கைக் காட்சி, உண்மையொடு மாறாத உவமை ஆகிய கூறுகளால் சங்க இலக்கியம் இன்பக் கருவூலமாக விளங்குவது ஒருபுறமிருக்க, அக்கால வரலாற்று நிகழ்ச்சிகள் வேறு பல பாட்டுக்களில் இடம் பெறுகின்றன. மோரியரும் வடுகரும் தமிழ்நாடு போந்தது; சேரமன்னர் கடம்பரை வென்று வெருட்டியது; பாண்டியர் கடல் கோளால் நிலமிழந்து வந்தார்க்கு இடம் தந்து ஆதரவு செய்தது; சோழர் காடுகொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கியது; குறுநில மன்னர்களில் ஆய்அண்டிரன் யானை வழங்கியது; வேள் பாரி முல்லைக்குத் தேரீந்தது; வையாவிக் கோப்பெரும்பேகன் மயிலுக்குப் போர்வையளித்தது; அதியமான் நெடுமான் அஞ்சி ஒளவைக்கு நெல்லிக்கனி தந்தது முதலியன பலவாகும். முடிவாக, சங்கச் சான்றோர்கள் பிறரை வாழ்த்தும் முறை மிக்க இன்பம் தருவ தொன்று “சேரலாத, நீ வாழியர் இவ்வுலகத் தோர்க்கு” “வயிறமாசு இலீஇயர் அவன் ஈன்ற தாயே” “ஆயிரை நெடுவரை போல தொலையாதாக நீ வாழும் நாளே” “எந்தை உள்ளடி நோவ. முள்ளும் உறாற்க” “யான் வாழும் பண்ணன் வாழிய” என வாழ்த்துவர்.  31. மணிமேகலையில் அழகுணர்ச்சி மக்களுடைய மனத்திலும் வாயிலும், அடிக்கடி பயிலும் கருத்தும் சொற்களுமாகிய இரண்டனுள் அழகு பற்றிய கருத்தும் அழகென்ற சொல்லும் தலைசிறந்தனவாகும். அழகிய சொல், அழகான செயல், அழகிய கருத்து என்ற தொடர்கள் மக்கள் உரையாடுமிடத்து மிகுதியாக வருகின்றன. அழகு என்ற சொல்லைப் பலமுறையும் பேசும் மக்களை நோக்கி அழகு என்பது யாது என்று கேட்போமாயின் அது இன்னது என நேரான விடை கூறுவோர் ஒருவரும் இலர். இந்த அழகு என்பது பற்றிப் பல அறிஞர்கள் பல வேறு காலங்களில் பலவகையாக எண்ணிப் பலவேறு முடிவுகளைக் கூறியுள்ளனர். அவருள் பிளேட்டோ, அரிஸ்டாட்டல், காண்ட், காலரிட்ஜ், ஷோப்பனவர், நீயட்சி, ரஸ்கின், ஹெகேல், குரோச்சே முதலாகப் பலர் முன்னணியில் நிற்கின்றனர். அவர்கள் வரைந்துள்ள உரையும் பொருளும் ஆராய்ந்து காணலுறின் ஒவ்வொன்றும் அழகின் ஒவ்வொரு சிறப்பியல்பைக் காட்டி அழகு என்பது "ஆயுந்தொறுந்தொறும் இன்பம் தரும் கலை" எனக் கச்சியப்ப முனிவர் உரைத்த கட்டுரைக்கு இலக்காய் நிற்கின்றது. இன்று நிலவுலகு முழுதும் பரந்து அளப்பிலவாய்ப் பெருகி யிருக்கும் அருங்கலைகள் அனைத்தையும் தன்பாற்கொண்டு உலக முழுதுக்கும் ஒரு தனிச் செம்மொழியாய் நின்று விளங்கும் பெருமையை ஆங்கிலமொழியொன்றே பெற்றுள்ளது; ஆயினும் அதன் கண் இந்த அழகின் இயல்பைக் கூறுதற்கு பியூட்டி (Beauty) என்ற ஒரு சொல்லே உளது. இந்த அழகைப் பற்றி அஃகி யகன்ற ஆராய்ச்சி செய்தோர் அனைவரும் இந்த ஒரு சொல்லின்கண் அடங்கி நின்றனர். அழகின் இயல்பை யுணர்த்த வேறே சொல்லொன்றும் காணப்படாமையால் உலகெலாம் பரவிநிற்கும் ஆங்கிலமொழி இன்னும்அழகின் முழு இயல்பையும் நன்கு அறியாமல் ஏக்கற்று நிற்பதை ஆங்கிலமொழிப் புலவர்கள் அறியாமல் இல்லை. E.F. காரிட் வெர்னான்லீ முதலியோர் அக்குறையை நினைந்து வருந்துதலும் செய்கின்றனர். இனி நம் தமிழ் மொழியை நோக்குவோமாயின், அழகு என்னும் சொல்லுணர்த்தும் பொருளியல்பை அம்மை, கவின், வனப்பு, ஏர், பொற்பு, பொலிவு, எழில், அணி, ஐ, காமர், தகை, திரு, மா, மதன் முதலிய பல சொற்கள் உணர்த்துகின்றன. இவற்றுள் ஒவ்வொன்றும் அழகின் ஒவ்வொரு சிறப்பினைக் காட்டுகிறது. அந்தாமரை, அஞ்செஞ்சீறடி என்ற தொடர்களில் அழகின் பொது வியல்பை யுணர்த்தும் அம்மை யென்னும் சொல் (உம்மை யென்னும் இடைச் சொல்போல ஈறு குறைந்து) நிற்பது காணலாம். அணியென்பது பொருளிடத்தே உள்ளீடாய் மறைந்து நிற்கும் அழகினை வெளிப் படுத்தும் கருவி; பொன்னும் பூவும் பிறவும் அழகு வெளிப்படும் நிலையமாதலின், அவற்றால் ஆகிய கலன்களும் மாலைகளும் அழகுடைய பொருளினை அணூகி அதன் அழகை வெளியிடுகின்றன. வாதலால், அவ்வொற்றுமை நயம் கருதி அணியென்னும் சொல் அழகுக்காகி வருவதும் இயல்பாகவுள்ளது. “பிறர்க்கணி படுக்கு மாற்றால் அணியென்னும் பெயர வெல்லாம், சிறக்குமின் அனையாள் மெய்யிற் சேர்ந்தணி பெற்று முன்னர், உறுத்தவப் பெயரின் நீங்கா வாயின. ஒருவர் தம்பால் துறுத்திடப்படார் கொல் ஒண்மை துறுத்தவர் எவர்க்கும் ஒண்மை” (தணிகை. வள்ளிநாயகி.148) என்று அறிஞர் கூறுவது காண்க. எழில் என்பது எழுந்தோங்கி நிற்கும் பொருளின் உய்ர்ச்சிக்கண் விளங்கித் தோன்றும் அழகு. “நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்” என்றவிடத்து நுழைபுலம் இல்லானுடைய பொருள் முதலியவற்றால் உயர்ந்த உயர்ச்சிக்கண் தோன்றும் அழகு எழில் எனப்படுவதைக் காணலாம். நற்பண்பு நற்செய்கைகளால் தகுதி மிக்கார்பால் பிறர்கண்டு உயர்த்தி மதிக்கத்தக்கதோர் அழகு புலப்படுகின்றது. அதனை ஏர் என்பது வழக்கு. ஏர் என்னும் சொல்லும் உயரத்தே எழுவதை யுணர்த்துதலால் எழில் போல்வதாயினும், எழுகின்ற செயலிடை விளங்குதலின் இவ் வழகு ஏர் எனப்பட்டது. “நலத்தகை நல்லார்க்கு ஏர் புலத்தகை” (குறள் 1305) என்பர். கவின் என்பது இயற்கையாக நின்று காண்பார் உள்ளத்தைத் தன் அகப்படுத்திச் செயலற் றமைதியுறச் செய்யும் அழகு. “கவவு அகத்திடுமே” என்பது தொல்காப்பியம். பொருளின் கண் நிலைத்து நின்று விளங்காது ஒரு காலத்தே விளங்கித் தோன்றி நின்று பின்னர்மறைந்தொடுங்கும் அழகு ஐ எனப்படும்; ஒரொருகால் தோன்றிக் காண்பார் உள்ளத்தில் அமைதிதோற்றுவித்து வியப் புணர்ச்சியை எழுப்புவதுபற்றி இஃது ஐ எனப்படுகிறது. “ஐவியப்பாகும்” என்பர் தொல்காப்பியர். பொருளின் ஒருபுடையே தோன்றி அப்பொருள் முழுதும் நிறைந்து காண்பார் கருத்தை யீர்த்து ஒன்றுவிக்கும் அழகின் செயற்கூறு காமர் என வழங்கும். இது கமம் என்னும் சொல்லடியாகப் பிறந்து இயலுவது. அளவு, வடிவு, நிறம், முதலிய பண்புகளால் தகுதி முற்றும் அமைந்த பொருளிடைத் தோன்றும் அழகு தகையாகும். பெண்தகை,ஆண்டகை என்பன இதனைக் காட்டா நிற்கும். கண்டாரால் விரும்பப்படும் தன்மை சில பொருள்களிடத்துச் சிறப்பாக அமைந்திருப்பதுண்டு; அதனை அழகின் பொருள்படத் திரு என்பது வழக்கு. திரு என்பது கண்டாரால் விருப்பப்படும் தன்மை நோக்கம் எனப் பேராசிரியர் கூறுவர். பொருள்களின் வன்மைச் சிறப்புப் பற்றி அவற்றின்பால் ஒருவகை அழகு தோன்றுவதுன்டாகலின் அதனை மதன் என்றும், வன்மை திண்மை முதலிய பண்பால் உளதாகும் பெருமைபற்றித் தோன்றும் அழகை மா என்றும் கூறுவர். இவ்வுலகில் மக்கள் பெறும் பொருள்களில் உயர்ந்தது பொன்; அதன்பால் விளங்கும் அழகு பொற்பு என்றும் அதன் விளக்கம் பொலிவு என்றும் வழங்குகின்றன. இவ்வாறு பலதிறமாகக்காணப்படும் அழகின் இயல்பையும் விளக்கத்தையும் காணுமிடத்து, தூய்மையிடமாக ஒளியுடைமை யுருவாகக் காண்பார் கருத்தை ஈர்த்துத் தன்பால் ஈடுபடுத்துவது செயலாக அழகு விளங்குகிறது என்பது உணரப்படுகிறது. இயற்கையும் செயற்கையுமென இருவகையால் இயலும் பொருள்களில் இயற்கைப் பொருள்களில் இந்த அழகு தானே தோன்றி நிற்பதைக் கண்டு இன்புற்று அதன்பால் அன்பு செய்து பாராட்டும் மக்கள் செயற்கைப் பொருள்களிடத்தும் அந்த அழகைத் தோற்றுவிக்கும் செயலை மேற்கொள்வதுண்டு. அங்ஙனம் தாம் தேர்ந்துகொள்ளும் பொருளின் புறத்தே செய்வன செய்து அதன்பால் அழகைத் தோற்றுவித்துக் கண்ணாரக்கண்டு இன்புறுவது மக்கள் இயல்பு. இச் செயற்கை அழகை வனப்பு என்றும், அதனைத் தோற்றுவிக்கும் செயலை வனைதல் என்றும் தமிழறிஞர் குறிப்பாராயினர். இயற்கைப் பொருளிடத்தே விளங்கும் இயற்கையழகுக்கு இடமான தூய்மையும், உடலான ஒளியும், கண்டார் கருத்தை யீர்த்து அன்பு செய்விக்கும் செயலும் ஆகிய மூன்றனையும் செயற்கைப் பொருளிடத்தே செயற்கைவகையில் உண்டாக்கி அழகைத் தோற்றுவிப்பது செயல் வல்லுநரின் அழகுப் பணியாகும். இத்தகைய அழக, உலகியற் பொருள்களில் தோன்றிக் காண்பார் கருத்தைப் பிணித்துத் தன்பால் ஈடுபடுத்துவானேன் என்றொரு வினா அறிஞர் உள்ளத்தில் எழுவதுண்டு. உலகியற் பொருள்களில் உயிருள்ளன, இல்லன என இருவரை யுள்ளன. உயிரில்லன வாகிய கல், மண், இரும்பு, வெள்ளி, பொன் முதலிய பொருள்களிலும் உயிருள்ளனவாகிய மரம், செடி, கொடி, புல் முதலியவற்றிலும் மேலே கண்ட அழகு தோன்றி இன்பம் செய்கிறது. உயிரில்லாத பொருள் வெயில், காற்று, நீர்ப்பெருக்கு முதலிய வற்றால் புறநிலை திரிந்து தன் பால் அழகுண்மையைப் புலப்படுத்தக்கண்ட மக்கள் அவற்றைத் தம் செயல் வன்மையால் செம்மை செய்துஅந்த அழகு விளங்கக் காண்பது இயல்பாயிற்று. ஆகவே, உயிரில் பொருள்கள் யாவும் அழகுக்கு உறையுளாய் இன்பப்பயன் நல்கும் ஏற்றமுடையவை என்பது உணரப்படுவதாயிற்று. உயிருள் பொருள் களாகிய புல், பூடு, செடி, கொடி, மரங்கள் முதல் புள், விலங்கு, மக்கள் ஈறாகவுள்ள பொருள்கள் யாவும் தோன்று நிலை, இளமை, முதுமை, முடிவுநிலை என நால்வகை நிலை பெற்றுள்ளன. அவற்றுள் தோன்று நிலையில் முகிழ்த்துநிற்கும் அழகு இளமைக்காலத்து எழில் மிக்கு விளங்குகிறது. அதனால் அவை பிற உயிர்ப்பொருள்களைத் தம்பால் ஈர்த்துத் தமது இனத்தைப் பெருக்கும் பணியை இனிது செய்து கொள்கின்றன. வேனிற் காலத்தில் மரஞ் செடி முதலியன புதுத் தளிரீன்று புதுப்பூ மலர்ந்து நிறமும் மணமும் கொண்டு திகழ்வது வண்டினங்களையும் பிற உயிர்களையும் தன்பாற் பொலிந்து விளங்கும் அழகால் ஈர்த்துத் தம் இனம் பெருகுதற்குரிய விதை தோன்றும் செவ்வியைப் பெற்றுக் கொள்கின்றன. ஏனை மாவும் புள்ளும் இவ்வாறே இளமைக்கண் விளங்கி நிற்கும் அழகால் பெண் ஆணையும் ஆண் பெண்ணையும் ஈர்த்துக் காதலாற் பிணிப்புண்டு இனம் பெருக்கும் பெரும்பணியை இனிது ஆற்றுகின்றன. இதனைத் தன் கண் முதலிய புறக்கருவி யாலும், மனமாகிய அகக் கருவியாலும் அறிவு துணையாக அறிந்து அழகு பற்றுக்கோடாக மக்களுயிர் அன்பும் உறவும் உற்றுத் தன் இனம் பெருக்கிக் காத்துக்கொண்டு வாழ்கிறது. ஆகவே, உயிருடையனவும் இல்லனவுமாகிய உலகியற் பொருள்கள் அழகு கொண்டு விளங்குகிறது, உலகியல்வாழ்வில் இனம் பெருகி இன்பம் விளைத்தற் கென்பது இனிது தெளியப்படும். இயற்கையும் செயற்கையுமாய்ப் பொருள்களிடத்தே விளங்கித் தோன்றும் அழகை ஏனை உயிரினும் மக்களுயிர் நன்கு பயன் கொள்ளுகிறது. பொருளிடத்தே பொலியும் அழகு தன் உள்ளத்தே இன்பத்தையும் அப்பொருளித்தே அன்பையும் உண்டுபண்ணி அதனைப் பேணி வாழச் செய்யும் செயல் நலத்தைக் கண்ட மக்களுயிர், அந்த அழகை நிலைபெற நிறுத்திக் கண்டு இன்புறுதற்கு விரும்புவதாயிற்று. ஆயினும், உயிருள்பொருள் சிறிது காலம் இருந்து பின்னர் மறைந் தொழிவதும் உயிரில்பொருள்கள் நெடுங் காலம் இருத்தலும், உயிருள் பொருளின் அழகினும் உயிரில் பொருளில் அழகு நெடிது நிலைபெறுதலும் கண்ட மக்களுயிர், இருவகைப் பொருளிடத்தும் விளங்கும் அழகை உயிரில் பொருள் களிடத்தே விளங்க அமைத்து இன்புறும் செயலை மேற்கொள் வதாயிற்று. அழகு என்பது மக்களால் செய்யப்படுவதன்று; ஆயினும் அஃது உயிரில்பொருள்களிடத்தே செயல்வகையால் தோற்று விக்கப்படும் இயல்புடையதாகையால், அச் செயல் வகையில் தோன்றிப் பொலிந்து இன்புறுத்தும் அழகைச் செயற்கையழகு என்பது மரபாயிற்று. உலகியற்பொருள்கள் யாவும், தனிநிலை தொகைநிலை என்ற இருவகை நிலையிலும் அழகுக்கு உறைவிடமாகும். அழகு விளங்கும் இடங்கள் மலையுச்சி, மலைச்சரிவு, கடற்கானல், காடும் காவும் கவின் பெறு துருத்தியும் யாறும் குளமும் பிறவும் எனப் பலவாயினும் அவை எப்போதும் அழகைத் தோற்றுவிப்பதில்லை. அன்றியும், நெடுந் தொலைவில் நின்று நோக்கக் காணப்படும் அழகு நெருங்கிச் சென்ற வழிப் புலப்படுவதில்லை. இன்னோரன்ன குறைபாடுகளைக் கண்ட மக்கள், அந்த அழகுக் காட்சிகளை நிழற்படங்களிலும், கிழிகளிலும், கிடைகளிலும் பொறித்துக் கொள்வதைப் பெரிதும் செய்வாராயினர். கடற்கானல் நல்கும் கவினை நேரிற் சென்று கண்களால் காண்பதிலும், அதனை ஒரு நிழலோவியத்தில் (Photography) காணின், அக்கவின் மிகச்சிறந்து விளங்குகிறது. அதுவே ஒரு கிழியில் ஓவியப் புலவன் ஒருவனால் பல்வகைவண்ணங்கள் விரவ எழுதப் பெறின், நிழலோவியம் விளக்கும் அழகினும் மிக்க அழகு விளங்கக் காணலாம். இவ் விருவகை ஓவியங்களிலும் காணப்படாத இயக்கமும் இசையும், பாட்டும் உரையும், மணமும் குளிர்ச்சியும் புலவன் கண்டுரைக்கும் சொல்லோவியத்தில் துளக்கமின்றி விளங்குவதால், அங்கே அழகு நன்கு தோன்றிப் புதுமை குன்றாது பொலிகின்றது. ஏனை ஓவியங்கள் நாள்பல கழிந்தவழி ஒளி சிறிது குன்றி அழகின் இன்பக் கூற்றினைக் குறைத்தற் கிடமுண்டு சொலல் வல்ல இலக்கியப் புலவனது சொல்லோவியம், அத்தகைய குறைகட்கு இடமின்றி, காலமும் இடமும் வேறுபடினும் தான் வேறுபடுவதின்றி எழுதிய அன்று தோன்றிய அழகின் புதுமை நலம் குன்றாது என்றும் விளங்க நிற்கும் இயல்புடையதாகிறது. அழகு பற்றிய இந்த உணர்ச்சி மணிமேகலையாசிரியர் உள்ளத்தில் சிறப்புறமலர்ந்து நின்றமையால் ஆயிரத்து எழுநூறு எண்Q று ஆண்டுகட்கு முன்னர்க் கண்ட அழகினை இன்று நமக்குக் காட்டுகின்றார். காவிரிப்பூம்பட்டினம் கடல் கொள்ளப்படாது பெருஞ் சிறப்புற்றிருந்த அந்த நாளில் ஒரு நாள் மாலைப் போதில் இயற்கை யழகு தோன்றி இன்புறுத்திய திறத்தை ஆசிரியர் சாத்தனார் நம் மனக் கண்ணில் காட்டுகின்றார். ஒரு நாள் மாலைப்போதில் தாமரை நிறைந்த நீர் நிலையில் அன்னம் தன் பெடையுடன் விளையாடுகிறது; மாலைப்போது வரவும் பெடையன்னம் இருந்த தாமரைப்பூ இதழ் குவியவே அது அப்பூவுக்குள் சிறைப்பட்டது; உடனே சேவலன்னம் விரைந்து சென்று அப் பூவைக் கிழித்துத் தன் பெடையைக் கூட்டிக்கொண்டு கரைக்கண் நின்ற தென்னை மரத்தில் அமைந்த தன் கூட்டுக்குச் செல்கிறது. இதனை. “அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறு பெடையைத் தாமரை யடைக்கப் பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற” (65) என்று பாடுகின்றார். ஒருபால் அன்றிற்பேடை தன் அரிக்குரல் எடுத்துச் சேவல் அறியத் தெரிவிக்கிறது; பகற்போதில் பசும்புல்லும் பைங்குவளையும் மேய்ந்த பசு மாலைவரவும் மனையகத்துறையும் கன்றை நினைத்துக் கனைக்கிறது; அதன் மடி சுரந்து ஒழுகும் பால் அதன் வருகையால் தெருவிடை யெழும் புழுதியை அவிக்கிறது; மகளிர் மனையில் மணிவிளக் கேற்ற, யாழோர் மருதப்பண் பாடுகின்றனர்; ஆனிரையின் பின்னேவரும் கோவலர் குழலை இசைக்கின்றனர். பகல் ஒளி தேய இருள்பெருகிப் பரவிவரும் அந்தி மாலையின் வரவு, அமர்க்களத்தில் கணவனை இழந்து தன் தமரகம் நோக்கிவரும் ஒரு பெண் மகள் போல இருக்கிறது என்பாராய், “அமரக மருங்கில் கணவனை இழந்து தமரகம் புகூஉம் ஒருமகள் போலக் கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமொடு அந்தி யென்னும் பசலைமெய் யாட்டி வந்திறுத் தனளால் மாநகர் மருங்கு” (65-6) என்று இனியதோர் சொல்லோவியம் செய்கின்றார். சிறிது போதில் முழுத்திங்கள் வானத்தில் எழுகிறது. அதன் நடுவே மைபடிந்தாற் போன்ற களங்கம் யாவரும் அறிய இலங்குகின்றது; ஆயினும் அதன் நிலவு பல்வகைப் பூக்கள் மலர்ந்து பொலியும் பொழிலிடத்தே பொழிகிறது; அதனை, “மாசறு விசும்பின் மறுநிறம் கிளர ஆசற விளங்கிய அந்தீந் தண்கதிர் வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல் கள்ளவிழ் பூம்பொழில் இடையிடைச் சொரிய” (67) என்று பாடிக் காட்டுகின்றார். விடியற்காலம் பல்வகை முழக்கங்கள் கொண்டு அழகிய காட்சி வழங்குகிறது. ஒருபால் வலம்புரிச் சங்கங்களும் ஒருபால் புலவர் சங்கங்களும் முழங்குகின்றன; மற்றொருபக்கம் யானைகள் பிளிறக் கோழிச் சேவல்கள் கூவுகின்றன; ஒருசார் குதிரைகளின் கனைப்பெலியும் புள்ளினங்களின் பெருங்குரலும் எழுகின்றன; பூஞ்சோலைகளில் புள்ளினம் சிலைக்க, மனையகத்தே உறக்கம் விட்டெழும் மகளிரின் வளையொலிகள் இசைக்கின்றன; கடவுள் நிலையங்களில் வழிபாட்டரவம் தோன்ற, கடைத் தெருக்களில் மலரிட்டுச் செய்யும் வழிபாடு முழங்குகிறது. இவ் வாரவாரங் கட்கிடையே காரிருள் போக்கிக் கதிரவன் கீழ் வானத்தில் கிளர்ந்து தோன்றுகின்றான்; இதனை; வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப் புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப் புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப் பொறிமயிர் வாரணம் குறுங்கூ விளிப்பப் பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப் பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப் பூம்பொழி யார்கைப் புள்ளொலி சிறப்பப் பூங்கொடி லார்கைப் புள்ளொலி சிறப்பக் கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக் கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகௌாக் குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக் கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ ஊர்துயி லெடுப்ப உரவுநீர் அழுவத்துக் காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும் (94-5) என்று எடுத்தியம்புகின்றார். பகற்போதில் அழகு வீற்றிருந்து காண்பார் கண்கட்கும் கருத்துக்கும் விருந்தாற்றி இன்புறுத்தும் இடங்களில் பூஞ்சோலைகள் தலைசிறந்தனவாகும். காவிரிப்பூம் பட்டினத்து உவவனம் ஒன்று அவ்வகையில் மிக்க பொலிவுற்று விளங்குகிறது. அதன் இயற்கை யழகில் ஈடுபட்ட சாத்தனார், உவவனத்தில் வளர்ந்து மலர் நிறைந்து நறுமணங்கமழ்ந்து தோன்றும் குரவம், மரவம், குருந்து, கொன்றை, திலகம், வகுளம், செங்கால் வெட்சி முதல் செருந்தி, வேங்கை, செண்பகம், இலவம் ஈறாகப் பல்வேறுவகைப் பூக்களையும் கண்டு, செருத்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும் எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய உவவனம் (41) என்று சிறப்பித்துக் கூறகின்றார். கைவல்ஓவியன் ஆங்காங்கே சிதறுண்டு பரந்துகிடக்கும் அழகுடைப்பொருள்களை ஓரிடத்தே ஒருங்கே வண்ணமும் வடிவும் வழுவின்றி அமைய எழுதிய ஓவியம் இயற்கை யழகை இனிதெடுத்துக் காட்டுவதில் மேதக நிற்பதுபற்றி உவவனத்தின் இயற்கைக் காட்சிக்கு “வித்தகரியற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே ஒப்ப” எனச் சித்திரச் செய்கையை உவமம்காட்டி விளக்குவது சாத்தனாரின் அழகுணர்ச்சியின் ஆழ்ந்த நலத்தை நன்கு காட்டுகிறது. செம்மண் பரந்த காடொன்றின் இடையே நீலநிறமுடைய காயாம்பூவும் வெண்ணிறமுடைய முல்லைமலரும் உதிர்ந்து கிடப்ப இடையிடையே சிவந்த நிறமுடைய தம்பலப்பூச்சிகள் மேய்ந்து தோன்றும் தோற்றத்தில் எழும் அழகைக்கண்ட சீத்தலையார், “மணிமருள் பூவை அணிமலர் இடையிடை, செம்புற தோயும் முல்லைமலரும் கிடந்த வல்லோன் செய்கையன்ன செந்நிலப் புறவின்” (அகம்.134) என வல்லோன் எழுதிக் காட்டும் ஓவியத்தோடு உவமித்துரைப்பதை வேறிடத்தும் நாம் காணலாம். நடுவில் ஆழ்ந்த நீர்நிலைபெற்று, சுற்றிலும் இருள்படத் தழைத்து நிற்கும் பூம்பொழில், அதன்கண் ஆங்காங்கு வண்டினமும் மயிலும் குயிலும் மந்தியும் பிறவும் வாழ்ந்து சிறக்கும் தோற்றத்தால் இயற்கை அழகை இனிது காட்டி இன்புறுத்தும் ஏற்றம் பெறுகிறது. அத்தகைய அழகு விளங்கும் பொழில் சாத்தனாரது புலமைக் கண்ணில் தோன்றுகிறது. அதன் கவின்கண்டு களிப்புற்ற அவரது உள்ளம் குயிலிருந்து குளிர்ப்பெய்தும் பொதும்ப ரொன்றில் தும்பியினம் குழலிசைபோல் இயம்ப, வண்டினம் யாழ் போல் இசைக்க, மயில்கள் தம் தோகையை விரித்து ஆட, மரக்கிளை களிலிருந்து மந்தியினம் மகிழ்ந்து நோக்கிய காட்சியில் அமைந்து நிற்கிறது. அதனை, இருள் வளைப்புண்ட மருள்படுபூம் பொழில் குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய வெயில் நுழைபறியாக் குயில்நுழை பொதும்பர் மயிலா டரங்கின் மந்திகாண்பன காண் (42) எனச் சுதமதி யென்பாள் மணிமேகலைக்குக் காட்டுவதாக நாம் மனக்கண்ணில் கண்டு இன்புறச் செய்கின்றார். நீர்நிலைக்கண் தாமரையின் பசிய இலைகள் நீர்ப்பரப்பை மூடிவிட ஒரு பெரிய தாமரை நீர்மட்டத்தின் உயர்ந்து நின்று மலர்ந்து விளங்க, அதன்மேல் அன்னமொன்று வீற்றிருக்கிறது; அதன் முன்னே கரையில் மயிலொன்று தோகையைவிரித்து ஆடுகின்றது; அந்நீர்நிலையில் மேயும் கம்புட்கோழி மயிலின் ஆடலுக்கு முழவு கொட்டுவதுபோல முழங்க, மரக்கொம்பில் இருந்த குயில் ஆடலுக்கும் முழவுக்கும் ஒப்ப இனிமையுறப் பாடாநிற்கின்றது; இதனை, பாசடைப் பரப்பின் பன்மலர் இடைநின்று ஒருதனி ஓங்கிய விரைமலர்த் தாமரை அரச வன்னம் ஆங்கினி திருப்பக் கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக் கம்புட் சேவல் கனைகுரல் முழவாக் கொம்பர் இருங்குயில் விளிப்பது காணாய் (43) எனச் சுதமதி கூற்றாக நமக்கு உரைக்கின்றார். மணிமேகலை காலத்துக் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து ஆட்சி புரிந்த சோழன் மாவண்கிள்ளி தன் மனைவி சீர்த்தி என்பாளுடன் பொழிலாட்டு விரும்பிச் சென்றபோது அவற்கு அப்பொழில் வழங்கிய அழகிய காட்சிகள் சாத்தனாரது தமிழ்உள்ளத்தில் இன்பத்தைப் பெருக்குகின்றன. ஒருகால் கோங்கமரமும் மாமரமும் நெருங்கி நின்று முறையே பூவும் கனியும் பொற்புறக் கொண்டுள்ளன. நடுவே வெள்ளிய துய்யினையுடைய பொன்னிறக் கோங்கம்பூ பொற்றட்டுப் போலப் பொலிந்து தோன்றுகிறது; அதன்மேல் பொருந்த வைத்தது போல மாவின் தீங்கனி பழுத்துத் தொங்குகிறது. அதன் அருகே ஒருபால் கிளி ஒன்று வீற்றிருக்க ஒருபால் மயிலொன்று உட்கார்ந்திருக்கிறது. அக்காட்சியைக்கண்ட வேந்தன், பொற்றட்டில் பாலை யேந்திக்கொண்டு பைங்கிளிக்கு மெல்ல ஊட்டும் ஒருபெண் போல மயில் அமர்ந்திருக்கும் காட்சியைப்பார் எனத் தன்தேவிக்குக் காட்டிக் கூறுகின்றான். அதனை, கோங்கலர் சேர்ந்த மாங்கனி தன்னைப் பாங்குற விருந்த பல்பொறி மஞ்ஞையைச் செம்பொன் தட்டில் தீம்பால் ஏந்திப் பைங்கிளி யூட்டுமோர் பாவையாம் (208) என்று சாத்தனார் குறிக்கின்றார். இவ்வாறே சோலையழகில் தோய்ந்து கின்ற சோழன் உள்ளம், மகளிர் ஏறி விளையாடுதற் கமைத்த ஊசலில் மந்தியை ஏற்றி யூக்கும் கடுவனது செய்கைகண்டு கழிபேருவகை கொள்கின்றது; அது, மணிமலர்ப் பூம்பொழில் அகவயின் இருந்த பிணவுக்குரங் கேற்றிப் பெருமதர் மழைக்கண் மடவோர்க் கியற்றிய மாமணி யூசல் கடுவன் ஊக்குவது கண்டுநகை எய்தியும் (209) என்பதனால் வெளிப்படுகின்றது. இங்ஙனம் மாவும் புள்ளும் மரமும் பொழிலும் வழங்கும் இயற்கைக் காட்சிகளில் சிறந்து நிற்கும் அழகைக் கண்டு தாம் இன்புற்ற தோடு நமக்கும் காட்டி இன்புறுத்திய சாத்தனார், மக்கள் மெய்யிடைத் திகழும் இயற்கையழகை எடுத்துக் காட்டுகின்றார். அதற்கு ஏற்ற இடமாக மணிமேகலைiன் மெய்ந்நலம் மிக்குற்று விளங்குகிறது. மணிமேகலையின் அழகு வீற்றிருக்கும் திருவுருவை இளமை நலமிக்க ஆடவர்காணின் அவளைவிட்டு நீங்க விரும்பார் என்றும், ஒரு கால் அவளது அழகில் ஈடுபடாது நிற்பாராயின், அவர் பேடியர் எனப்படுதற்கு உரியராவர் என்பாராய், ஆடவர் கண்டால் அகறலு முண்டோ? பேடி யான்றோ பெற்றியின் நின்றிடில் (29) எனப் பொதுவாகக் கூறி உவவனத்தில் பளிங்கினாலாகிய அறைக்குள் மணிமேகலை இருந்தாளாக புறத்தே அவளது உருவ அழகு தோன்றக்கண்ட அரன் மகனான உதயகுமரன், மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது ஓவியச் செய்தி என்று ஒழிவேன் (192) என்று சொல்லி நீங்குகின்றான் எனத்தான் முன்பு கூறியதனை வற்புறுத்துகிறான். மணிமேகலையின் புன்னகையில் தவழ்ந்த பேரழகை விளக்கு மிடத்து, அவளது சிவந்த வாய்க்குள் ஒழுங்குற அமைந்து தோன்றிய வெள்ளிய பற்களை வியந்து, ஒத்தொளிர் பவளத்துள் ஒளி சிறந்த முத்துக் கூர்த்தன்ன முள்ளெயிற் றமுதம் அருந் தேமாந்த ஆருயிர் தளிர்ப்ப விருந்தின் மூரல் அரும்பியதுஉம் (192) என்று கூறுவதனால் எடுத்துக் காட்டுகின்றார். இவ்வாறே தருமதத் தன் விசாகை என்பாள் இருவர் மேனியழகை, விண்ணுல கத்துத் தேவரை யன்றி மண்ணகத்து ஓவியப்புலவர் எவரும் எழுதவொண்ணா தென்பாராய், தரும தத்தனும் தன் மாமன்மகள் பெருமதர் மழைக்கண் விசாகையும் பேணித் தெய்வம் காட்டும் திப்பிய ஓவியக் கைவினை கடந்த கண்கவர் வனப்பினர் (945) என இயம்புகின்றார். இயற்கைப் பொருளிடத்தேதோன்றும் அழகை ஏனைப் பொருள்களின் கண்செயல்வகையால் தோற்றுவித்துப் காண்பது மக்களுயிர்க்குச் சிறப்பாக அமைந்த செய்கை நலம். உயிர்ப்பொருளி டத்தே அமைந்த அழகை அணி முதலியவற்றால் வனைந்தும் புனைந்தும் வெளிப்படுப்பது போல, உயிரில்லாத கிழியிலும் கிடையிலும் ஓவியம் செய்து வெளிப்படுத்தி மகிழ்வது பெரும் பான்மையாகும். இயற்கையில் தோன்றும் கடல் மலை மலை வானம் காடு நாடு முதலியவற்றின் அழகை ஓவியத்தில் உருவுபெற எழுதிக் கண்டு இன்புறுவது மக்கள் உலகெங்கும் மலிந்துள்ளது. மணிமேகலை முதலிய பழங்கால ஆசிரியர் காலத்தில் நிழற்பட மெடுக்கும் கருவிகள் காணப்படாமையால், கையாலெழுதிய கைபுணை ஓவியங்களே மக்களுயிர்க்கு அழகைக்காட்டி அன்புடைய இன்பத்தைத் தந்து வளர்த்துவந்தன, ஆதலால் அழகுணர்ச்சியில் மீதூர்ந்த நம் சாத்தனார், புனையா ஓவியம் புறம் போந் தென்ன (243) புனையா ஓவியம் போல நிற்றலும் (177) எனப் பல படியாலும் ஓவியச் செய்தியை உயர்த்திக் கூறுகின்றார். அழகு உணர்ச்சியால் அதனை உருவுபெற ஓவியம்செய்து கண்டு மகிளும் மக்களுக்கு, தாம் வாழும் மணை, விளையாடி இன்புறும் பூம்பந்தர், பொன்மண்டபம் முதலியனவும் அழகு விளங்கி இன்புறுத்தும் இடமாகப் புனைவதில் பேரூக்கம் இருப்பது இயற்கை. தாம் உறையும் ஊர்களையும் நகரங்களையும் அழகு வீற்றிருக்கும் அருமையுடையவாகச் செய்வதில் மணிமேகலை காலத் தமிழ் முன்னோர் சிறந்து நின்றனர். அது பற்றியே அவர்கள் பூம்புகர், பூம்புகலூர், பூங்கற்குடி,பூங்குன்றம், பூஞ்சாற்றூர், பூந்துருத்தி, பூங்கணூா ர் என நாடு நகரங்கட்குப் பெயரிட்டு வழங்கியிருக்கின்றனர். பூம்புகார் நகரத்தவர், தாங்கள் விழாக் கொண்டாடும் காலத்தில் நகரத் தெருக்களையும் வீடுகளையும் ஒப்பனைசெய்து அழகு விளங்குமாறு செய்கின்றனர். அவ்வாறு செய்தல் அறம் என்று தேர்ந்து அதனை மக்கள் தவறாது செய்தல் வேண்டுமென அரசும் ஆணையிடுகின்றது. இதனை, தோரண வீதியும் தோமறு கோட்டியும் பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும் பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் காய்க்குலைக் கமுகும் வாழையும் இஞ்சியும் பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும் பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின் கதலிகைக் கொடியும் காமூன்று விவோதமும் மதலைமாடமும் வாயிலும் சேர்த்துமின் (16-7) என்று விழா முதல்வர் நகரமக்களுக்கு ஆணை யிடுவது கொண்டு அறிகின்றோம். செல்வருடைய செல்வ மனைகள் செங்கற்களாலும் சுதையாலும் கட்டப் பெற்று உயர்ந்து நிற்கின்றன. அம் மனைப்புறங்களில் வானவர் முதல் மக்களும் பிறவுமாகிய உயிர் வகைகளை ஓவியம் செய்து காண்போர் கண்டு இன்புறுமாறு அமைத்துள்ளனர். இதனை, சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவ ரோவியம் கண்டு நிற்குநரும் (37-8) என்பதனால் அறிக. செல்வத்தால் சிறப்புற உயர்ந்த மனைகள் புறவழகு பெற்றுப் பொலிவது ஒருபுறம் இருக்க மனையுற மகளிரின் மனம் பண்பாலும் கற்பு நலத்தாலும் கவின்பெற வேண்டும் என்பது அழகுணர்ச்சியும் அதற்குரிய அறவுணர்ச்சியும் சிறக்கப் பெற்றவர் கருதுவராதலால், குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண் ஒருதனி யோங்கிய திருமலர் போன்று வான்றரு கற்பின் மனையுறை மகளிரின் தான்தனி யோங்கிய தகைமைய ளன்றோ ஆதிரை நல்லாள் அவள்மனை இம்மனை (168) என்று அந்த மனையழகையும் மாண்புறக் காட்டுகின்றார். மக்கள் விளையாடி இன்புறும் பூம்பந்தர்கள் இன்பப்பேறு ஒன்றே குறித்துச் செய்யப்படுவனவாதலால், அவ்வின்பத்துக்கு ஆக்கமாகும் அழகு அப்பூம்பந்தர்களில் செவ்வையாக அமையச் செய்வது இயல்பு. அதற்கேற்பப் பூம்பந்தரின் கீழே பொன்னிறம் பெற்ற தூணும் பல நிற மணிகள் இழைத்த போதிகையும், ஓவிய மெழுதிய விதானமும் அமைத்த பொன்வேயந்த மண்டபம் ஒன்று சோழ வேந்தன் தன் தேவியுடன் இருந்து அழகின்பம் நுகர்தற்கு அமைக்கப்பெற்றுள்ளது. அதனை நம் சாத்தனார், பவளத் திரள்காற் பன்மணிப் போதிகைத் தவள நித்திலத் தாமம் தாழ்ந்த கோணச் சந்தி மாண்வினை விதானத்துத் தமனியம் வேய்ந்த வகைபெறு வனப்பின் பைஞ்சேறு மெழுகாப் பசும்பொன் மண்டபம் (212) எனப் புனைந்துரைக்கின்றார். இவ்வாறு அழகு விரும்பும் உள்ளமும் அதனைப்பேணிப் புரக்கும் செய்கையுமடைய வேந்தன் இருந்து நாடுகாவல்புரியு மிடத்து அவனது அரசியலிலும் அழகு வீற்றிருக்குமன்றோ? அழகுணர்ச்சி மிக்க புலவரதுபுலமை அதனையும் கண்டு நமக்குக் காட்டுவது புலமைப்பணிதானே. உலகில் வாழப்பிறந்த உயிர்க்கு வாழ்வுக் குரிய தொழிலும் உடன்பிறக்கிறது. தான் செய்யும் தொழிலால் விளையும் பயனை அவ்வுயிர் பெறுவது உரிமையாதலின், அதற்கு இடையூறும் இடையீடும் தோன்றாத வாறு காப்பதும், தோன்றியவழி அவற்றை நீக்குவதும் நீக்கி முறைசெய்வதும் குறைபோக்குவதும் அரசியலின் பொதுச் செயல்கள். அச்செய்கை களைச் செய்யும் உரிமையை அரசியல் பெற்று விளங்குகிறது. அரசனது அரசியல் அவ்வுரிமையுணர்ந்து அறம் பிழையாது தன் பணியை ஆற்றும்போது அதன்பால் அழகு தோன்றி அதன்கீழ் வாழும் உயிர்கட்கு இன்பம் நல்குகிறது. காயசண்டிகை வடிவில் இருந்த மணிமேகலைபால்சென்ற உதயகுமரனை, உண்மையறியாது ஒளித்திருந்த காயசண்டிகை கணவன் வாளால் எறிந்து கொன்ற செய்தியைக் கேள்வியுற்ற சோழவேந்தன் தவறு செய்த உதயகுமரனைத் தண்டிப்பது அரசன் செய்கையாக இருப்ப, அதனைத் தான் மேற்கொண்டு காயசண்டி கையின் கணவன் செய்தது முறையன்று என்பானாய், யான்செயற் பாலது இளங்கோன் தன்னால் தான்செய் ததனால் தகவிலன் விஞ்சையன் என்று கூறுவதும்,கொலையுண்டிறந்த உதயகுமரன் தனக்கு மகனாதலின், அவன் இறந்ததுபற்றி வருத்தமுறாது, அரசியல் அறமே நினைந்து, மகனை முறை செய்த மன்னவன் வழியோர் துயர்வினையாளன் தோன்றினன் என்பது வேந்தர் தம்செவி உறுவதன் முன்னம் ஈங்கு இவன் தன்னையும் ஈமத் தேற்றிக் கணிகை மகளையும் காவல்செய்க என்றனன் இதன்கண் தன் மகன் தவறு செய்து தகவிலான் ஒருவனால் கொலையுண்டதனால் பிறக்கும் மானத்துக்கு வேந்தன் நாணி, இது பிற வேந்தர் செவிபுகுவதன்முன் மகன் உடலை ஈமத்து ஏற்றுக என்பதும், அதுபற்றி மணிமேகலைக்கு நாட்டவர் தீங்கு யாதும் செய்யாதவாறு பாதுகாப்பளிப்பானாய், கணிகை மகளையும் காவல் செய்க என்பதும் அரசியலின் அழகை நாம் அறிந்து நன்கு மதித்து இன்புறச் செய்கின்றன. அரசியலின் அழகு காட்டிய ஆசிரியர், நாடகமகளிர்பால் பொருந்தும் ஆடல் பாடல் அழகு என்ற மூன்றனுள் அழகாவது இன்னது என்பாராய், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும் கற்றுத்துறை போகிய பொற்றொடி நங்கை என்பதனால் விளக்குகின்றார். அழகு விரும்பும் மக்கள் அகத்தும் புறத்தும் அது வீற்றிருந்து அவரது சொல்லிலும் செய்கையிலும் வெளிப்பட்டுத் தோன்றும் என்பது அறிஞர் அறிந்துரைக்கும் உண்மை. செய்கை வாயிலாக அழகு வெளிப்பட்ட திறத்தை இதுகாறும் கண்டோம். இனி மனத்தின்கண் கிடந்து சொல் வழியாக விளங்கித் தோன்றும் அழகைக் கண்டோமாயின், அழகுணர்ச்சியின் நலத்தை நாம் ஒருவாறு கண்டவராவோம். மணிமேகலை உதயகுமரனுக்கு அஞ்சிப் பளிக்கறை புகுந்து மறையவும், உதயகுமரன் அவ்விடம் போந்து சுதமதியைக் கண்டு “சிறையு முண்டோ செழுப்புனல் மிக்குழி, நிறையு முண்டோ காமம் காழ் கொளின், மணிமேகலை செவ்வியளாயின் என் செவ்விய ளாகுக” எனத் தான் தீரா வேட்கை மிக்குத் திரிவதைத் தெரிவித்துச் சுதமதியின் வரலாறு கேட்டானாக, அறிவு திரிந்து நிற்கும் அவன் தன் வரலாறு கேட்பின் தனக்குத் தவறு செய்தலும் கூடும் என அஞ்சி, வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி (67) என்பது அவளது உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் அழகினை நமக்கு அறிவிக்கின்றது. உதயகுமரன் நீங்கியதும் வெளிவந்த மணிமேகலையின் உள்ளம் உதயகுமரன்பால் செல்லுகிறது; ஆயினும், அவளது உண்மையறிவு அவன்பொருட்டு அவள் உள்ளத் தெழும் காதற் காமத்தைத் தடுக்கிறது. அந்நிலையில் அவள் உள்ளத்தில் வீற்றிருக்கும் அழகு, அறிவைப் பணிகொண்டு, “கற்புத்தான் இலள், நற்றனை உணர்விலள், வருணக் காப்பிலள், பொருந்தா விலையாட்டி” என்று இகழ்ந்த நோக்கத்துடன் உதயகுமரன் தன்பால் வந்தான் எனநினைந்து காதல் வயப்பட்டு மெலியும் தன் அறிவை வன்மை யுறுவித்து, இகழ்ந் தனனாகி நயந்தோன் என்னாது புதுவோன் பின்றைப் போயது என்நெஞ்சம் இதுவோ அன்னாய் காமத் தியற்கை? இதுவே யாயின் கெடுக தன்திறம் என்று மணிமேகலை தன் மனத்தழகு விளங்க வாய்விட்டுக் கூறுகின்றாள். கோதமை என்பவள் இறந்துபோன தன்மகனைச் சம்பாதி என்னும் தெய்வத் துக்குக் காட்டி, “என் உயிர்கொண்டு இவனது உயிரைத் தருக” என்று கேட்க, அவளுக்கு அச்சம்பாபதி, ஒருவர் இறந்தால் வேறொருவர் உயிர் கொடுத்து இறந்தவர் உயிரைப் பெறுவது இயலாத தொன்று என்பாளாய், உலக மன்னவர்க் குயிர்க்குயிர் ஈவோர் இலரோ? இந்த ஈமப்புறங் காட்டு அரசர்க் கமைந்தன ஆயிரம் கோட்டம் என்று சொல்லுவது சுருங்கச் சொல்லும் உரையழகுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். வேள்வியிற் கொல்வதுகுறித்துக் கொண்டுவரப்பட்ட ஆவின் பொருட்டு உரையாடலுற்ற ஆபுத்திரன், வேதியர் உள்ளத்தில் இரக்க முண்டாகப் பேசுமிடத்து, விடுநில மருங்கில் படுபுல் லார்ந்து நெடுநில மருங்கில் மக்கட் கெல்லாம் பிறந்த நாள்தொட்டும் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சோடு அருள்சுரந் தூட்டும் இதனொடு வந்த செற்றம் என்னை? என்பது இரக்கப் பண்பின் எழிலை இனிது காட்டுகின்றது. உதயகுமரன் கொலையுண்டதற்கு மணிமேகலை காரண மாதலை எண்ணி அவட்குத் தீங்கு செய்துவருந்திய இராசமா தேவிக்கு மணிமேகலை; பூங்கொடி நல்லாய் பொருந்தாது செய்தனை; உடற்கழு தனையோ உயிர்க் கழுதனையோ உடற் கழுதனையேல் உன்மகன் தன்னை எடுத்துப் புறங்காட் டிட்டனர் யாரே உயிர்க் கழுதனையேல் உயிர்புகும் புக்கில் செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியது அவ்வுயிர் கன்பினை யாயின் ஆய்தொடி எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் எனத் தான்கூறும் பொருளை ஆய்ந்து பகுத்துரைப்பதும், “பிறந்த முற்பிறப்பெ ய்துப் பெறுதலின் அறிந்தோர் உண்டோ?” என்று சொல்லி நகையாடிய பூதவாதி அனுமான அளவையை ஏற்க மறுப்பதை மிக நாகரிகமாக மறுக்க முற்பட்ட மணிமேகலை, நின் தந்தை தாயரை அனுமானத் தால்அல்லது இந்த ஞாலத்து எவ்வகை அறிவாய் மெய்யுணர் வின்றி மெய்ப் பொருளுணர் வரிய என்பதும் சாத்தனார் உரையாடலும் அழகு விளங்கக் கண்டு காட்டு நலத்தைப் புலப்படுத்துகின்றன. இயற்கையும் சாத்தனார் உரையாட்டிலும் அழகு விளங்கக் கண்டு காட்டு நலத்தைப் புலப்படுத்துகின்றன. இயற்கையும் செயற்கையுமாகிய இருவகைப் பொருள்களையும் இடமாகக் கொண்டு, உடற்குள் உறையும் உயிர்போல் தனது உண்மை காட்டிக் காண்பார் கருத்தைப் பிணித்து இன்பத்தில் ஈடுபடுத்தும் அழகின் இயல்பை நன்கு உணர்ந்து தான் பெற்ற அழகின்பத்தை நமக்கும் வழங்குதற்கு ஆசிரியர் சாத்தனார் மணிமேகலை என்ற இலக்கியத்தைக் கருவியாகக் கொண்டுள்ளார். இதன்கண் காணப்படும் நாடு நகரங்களும் நீர்நிலைவும் பூஞ்சோலையும் பூம்பந்தரும் பொன்மண்டபமும் ஆடவரும் பெண்டிரும் அரசரும் அறவோரும் மாவும் புள்ளும் மலையும் கடலும் யாவும் அழகு வீற்றிருக்கும் அரிய கலைக் கோயில்களாக அமைத்துக் காட்டுவதில் சாத்தனாரின் சீரிய அழகுணர்ச்சி சிறந்த பணி புரிந்திருக்கிறது என்று கூறி இச்சிற்றுரையை முடிக்கின்றோம்.  32. அறுவடையில் நிலவும் அருள் சங்ககாலத் தமிழ்மக்கள் வாழ்வில் சிறந்த சில கொள்கைகள் நிலவி யிருந்தன. உயிர்களைக் குறிக்கும்போது மன்னுயிர் என்பது ஒன்று. மன்னுயிர் என்ற தொடர் நிலைபெற்ற உயிர்கள் என்று பொருள் படுவது. உயிர்களை நிலைபெற்ற உயிர்கள் என்பது எற்றுக்கு? உடலோடு கூடி உலகில் வாழும் உயிர்கள் பலவும் ஒரு காலத்தே தோன்றுவதும் ஒரு காலத்தே உடம்பைவிட்டு இறந்து படுவதும் இயற்கை. இதனால் உலகில் உடம்பொடு கூடிவாழும் வாழ்க்கை நிலையற்றது என்பது கொள்கையாயிற்று. உலகியல் வாழ்வு நிலையில்லாதது என்பது யாவரும் தெரிந்த கொள்கை; அதன்கண் கருத்து வேறுபாடு இல்லை. இந்த நிலையில்லாத வாழ்க்கையை யுடைய உயிர் நிலையானது என்ற கொள்கை நமது நாட்டில் மட்டில் நன்கு வேரூன்றியுள்ளது. மேனாட்டவர்பலரிடையே காணப்படாத இக் கொள்கை நமது நாட்டில் சங்க காலத்தேயே நன்கு நிலைபேறு எய்தியிருக்கிறது. "தோற்றமும் கேடும், காணப்படும் உடம்புக்கே யன்றி உயிர்க்கு இல்லை; உயிர் என்றும் உள்ள நிலைப்பொருள்; அதற்குக் தோற்றமும் கேடும் இல்லை; உலகியற் பொருளையும் உடம்புகளையும் படைப்பதுதான் இறைவன் தொழில்; உயிர்கள் இறைவனால் யடைக்கப்படுவன அல்ல; படைக்கப்பட்ட உடம்பில் உயிர்களைப் புகுத்தி வாழச் செய்யும் செயல் இறைவன் புரியும் அருட்செயல்" என்பர். இத்தகைய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததனால் பண்டைத் தமிழர் உயிர்களை மன்னுயிர் என வழங்கினர். உடம்பில் மன்னி வாழ்க்கை நடத்தும் உயிர்கள், இவ் வுலகில் செய்வன செய்து பெறுவன பெற்று நுகர்வன நுகர்ந்து, நின்ற வுடம்பு கெடும்போது அதனைவிட்டு நீங்குகின்றன. உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் இதனையே செய்தலால், இந்த உலகும் உலகியற் பொருள்களும் இந்த உயிர்களின் பொருட்டே இறைவனால் ஆக்கப்பட்டன என்பது பழந் தமிழ்க் கொள்கையாய் இருந்து வருகிறது. உயிர்கள் உடம்பிடை நின்று வினைசெய்து பயன் நுகர்தற் பொருட்டே இவ்வுலகு தோன்றியுள்ள தென்ற இக் கொள்கையால் உலக வாழ்வு என்பது உலகில் காணப்படும் உயிர்கள் அனைத்துக்கும் பொது என்ற உண்மை விளக்கம் பெறுகிறது. ஒவ்வோருயிர்க்கும், உலகில் வாழ உரிமையுண்டு என்றும், அந்த உயிருரிமையை விலக்குதற்கு எந்த உயிர்க்கும் உரிமையில்லை யென்றும் பழந்தமிழ் வாழ்வு கருதியிருந்தது. அக்காலத்தே வேறு நாடுகளில் வாழ்ந்தோர், "இந்த உலகு மக்களுயிர்க்கென்றே படைக்கப்பட்டது.அதனால் இவ்வுலகில் மக்களுயிர் ஒன்றுக்குத்தான் வாழ வுரிமையுண்டு; பிறவுயிர்களுக்கு அந்த உரிமையில்லை" என்று கருதினர். அதனால் அவர்கள் ஒருபடி முன்னே சென்று, "மக்களுயிரல்லாத பிறவற்றையும் மக்களுக்கென்றே இறைவன் படைத்துள்ளான்; அவற்றைக் கொன்று தின்பது மக்களுயிர்க்கு அறமாம்" என்று பேசவும் எழுதவும் தொடங்கிச் செய்கையிலும் கொணர்ந்துவிட்டனர். தின்றற் பொருட்டுப் பிறவுயிர்களைக் கொல்வதும்,அவற்றின் உடம்பைத் தின்பதும் மக்களுயிர்க்கு ஆகாதன வல்ல என்ற கொள்கை அம் மக்களிடையே நிலவி வருவதாயிற்று. இவ் வுலகவாழ்வு எல்லாவகை உயிர்க்கும் பொது என்பதும், மக்களுயிர் ஒன்றிற்கே உரியது என்பதுமாகிய இருவகைக் கொள்கை களில் மக்களுயிர் ஒன்றிற்கே இவ்வுலகு உரிய தென்பது காலத்தால் முற்பட்டது. எல்லா வுயிர்க்கும் பொது என்ற உண்மை மக்களறிவு திருந்தி வளர்ச்சி யுற்றபோது எய்திய விளக்கம். இந்த விளக்கம் அறிஞர் குழுவிலே தோன்றியது முதலில் தென்புலத்தில் என்று கூறலாம். உயிர்க் கொலையும் புலாலுண்டலும் தீயவை என்று கட்டுரைக்கும் நூல்களுள் மிகப் பழமை வாய்ந்தவை தமிழில்தான் உள்ளன என ஆராய்ச்சியாளர் உரைக்கின்றனர். புத்தரும் சமணரும் தோன்றி இவற்றை எடுத்துரைக்கு முன்பே, இவை தமிழ்ச் சான்றோர்களால் எடுத்துக் கடியப்பட்டன வாதலால், அவ்விரு சமயங்களும் தென்னாட்டில் நிலைபெறத்தக்க வாய்ப்பில்லாது போயின; அதனால் அவை வேறு நாடுகளுக்குச் சென்ற சேர்ந்தன. சங்ககாலத் தமிழ் வாழ்வில் சான்றோர் குழுவில் உயிர்க் கொலையும் புலாலுண்டலும் கடியப்பட்டிருந்தன. புலாலுண் போரைப் புலையர் என்பது மரபாக இருந்து வந்தது. ஒரு காலத்தே பார்ப்பார், அரசர் முதலாக வகுக்கப்பெற்ற நான்கு வகுப்பினருள்ளும் புலாலுணவு விலக்கப்படாது இருந்து வந்ததுண்டு. அதுபற்றியே புலாலுணவு எல்லோர்பாலும் பொதுவாகப் பழைய நூல்களில் காணப்படுகிறது. ஆயினும் அக்காலத்தேயே புலாலுணவைக் கடிந்து உயிர்க்கொலையை வெறுத் தொழுகிய சான்றோர்கள் இருந்திருக்கின்றனர். இவ் விரண்டையும் கடிந்தொழுகிய சான்றோர்களே அறவோர் என்றும் அந்தணரென்றும் பாராட்டப் பட்டனர். அதுபற்றியே அந்தண ரென்பது சாதிப்பெயராகாமல் உயிர்க் கொலையும் ஊனுணவும் கடிந் தொழுகுவதே வாழ்க்கை அறமாகக் கொண்ட அறவோர்க்கு உரிய சிறப்புப் பெயராக வழங்கிற்று. திருவள்ளுவரும் அறவாழ்வை மேற்கொண்ட துறவிய ரிடையே இவ் விரண்டும் ஆகா என விலக்குவாராய்த் துறவறத்தின் கண்ணே புலாலுணவையும் உயிர்க் கொலையையும் எடுத்தோதி மறுக்கின்றார். இவ்வண்ணம் துறவுநெறிக்கண்நின்ற சான்றோர்க்கு விதிக்கப் பெற்ற இவ்வறம் நாளடைவில் இல்லிருந்து வாழும் எல்லோரிடையிலும் பரவுவதாயிற்று. சங்ககால எல்லை அதற்குள் கழியாமையின் சங்க நூல்களில் இந்த அறம் இல்வாழ்வில் இடம்பெற்றிருந்த திறம் காணப்படுகிறது. ஊனுணவு, உயிர்க் கொலை என்ற இரண்டனுள் முதற்கண் விலகத் தொடங்கியது உயிர்க்கொலை. போரில் நிகழும் உயிர்க்கொலையும் அரசர் நீதி செலுத்துமிடத்து நிகழும் உயிர்க் கொலையும் பொருள்துறையாய் நாட்டின் நல்வாழ்வுக்கு அரண் செய்வதாய் அமைந்தமையின் அவற்றைச்சான்றோர் வழுவமைத்துக் கொண்டனர். "கூற்றத்தன்ன மாற்றரு முன்பின் தாக்குரல் கேண்மின் அந்தணாளிர் நான்மறைக் குறித்தன்று அருளாகாமையின், அறங் குறித்தன்று பொருளாகுதலின்" (புறம். 362) என்று சான்றோர் கூறுவது காண்க. உயிர்க்கொலையை விலக்கி எவ்வுயிர்க்கும் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ உரிமையுண்டென உணர்ந்து பிறவுயிர்களை வாழ்வித்து அவற்றிடையே தாமும் வாழ்தல் வேண்டுமென்ற கொள்கை தமிழ் வாழ்வில் வேரூன்றிப் பரவத்தொடங்கியதனால் சான்றோர் வேந்தர்களை "நீ வாழியர் இவ்வுலகத்தோர்க்கே" என வாழ்த்துவாராயினர். "தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்" எனத் தலை மக்களைப் பாராட்டினர். தான் வாழ ஏனோர் தனக்கு அடிமையாக எனும் ஊன அறிவு ஒழிக என வெறுத்துரைத்தனர். உயிர்க் கொலையை விலக்கும் இவ்வொள்ளியசெயல் உழவர் விளைபுலத்துக்கும் சென்றது. மருதநிலப்பகுதிகளில் வாழும் வேளாண்பெருமக்கள் தங்கள் நன்செய்களை உழுது நெல்வித்தி விளைப்பது இயற்கை. நெல் வளர்ந்து சிறக்கும் வயல்களில் நீர் இடைறாது நிற்றலின் அவ்வயல்கள் மீனினங்களும் மீனுண்டு வாழும் புள்ளினங்களும் வாழ்தற்கு உரிய இடமாய்விடும். நெல்முற்றிக் கதிர் தலைசாயத் தலைப்பட்டதும் வயலிடை நிற்கும் நீரை உழவர் வடித்து நீக்குவர். வடியுங்கால் வயலிடையே வாழும் மீனினம் பலவும் நீரோடே நீங்கிவிடும். நெல் அறுவடைக்காலத்தில் மீன் முதலிய உயிர் வகைகட்கு இடையூறு உண்டாவதில்லை. நெல் விளைந்து அறுவடைக்குரிய செவ்வி எய்துவது கண்ட வேளாண் மக்கள் வயல் நீரை வடிப்பது ஒருபால் நீரில் வாழும் உயிரினங்கட்கு ஊறுண்டாகாவாறு நலம் செய்யும் சிறப்புப்பணியாக இருப்பது இனிது விளங்கும். இஃது ஒருபுறும் இருக்க நெல்லை அறுப்பதற்குச் சில நாட்களை வரையறுத்துக்கொள்ளும் உழவர் வேறொரு நல்ல செயலைச் செய்கின்றனர். நெற்பயிர் வளர்ந்து செம்மாந்திருக்கும்காலத்து மீனுண்ணும் புள்ளினம் சில நெற்பயிரிடையிலும் வயல் வரம்பிலும் கூடுகட்டி வாழ்க்கை நடத்துவதுண்டு. திடீரென உழவர் நெல்லை அறுக்கத்தொடங்குவராயின் அப்புள்ளினங்கட்குப் பெருந்துன்ப முண்டாகும். அவற்றிடையே உயிர்க்கேடும் உண்டாகும். அதனை விலக்குதற்குச் சங்ககால வேளாண் பெருமக்கள் நெல்முற்றிய வயலைச் சுற்றிப் பம்பை தண்ணுமை முதலிய இசைக்கருவிகளை இசைப்பர். ஒரு சில நாட்கள் இவ்விசை முழக்கம் தொடர்ந்து நடை பெறக்காணின் வயல்களை வாழிடமாகக்கொண்ட புள்ளினம் அவ் வயல்களைவிட்டு நீங்கிவிடும். எஞ்சிநிற்கும் ஒரு சில புள்ளினமும் நீங்கும்பொருட்டு நெல் அறுவடை செய்யும்போது இசைக்கருவிகளைக் கொண்டு பெருமுழக்கம் செய்வதை வழக்கமாகக்கொண்டனர் "வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப்பல்புள் இரிய" (நற்.350) என்றும், "வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை" (அகம்.40) என்றும், வெண்ணெல் அரிநர்மடி வாய்த் தண்ணுமை பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஒப்பும் (அகம்.201) என்றும் சான்றோர் பல விடங்களில் இவ்வழக்காற்றை எடுத்துக் காட்டுகின்றனர். இங்ஙனம் அறுவடைப்போதில் பிறஉயிர்கட்கு இன்னல் விளைவியாதவாறு தமது அருளறம் இலங்குதல் வேண்டுமென்று ஒழுகிய தமிழ்வாழ்வு நாம் நினைந்து இன்புறுமாறு அமைந்துள்ளது.  33. சிலப்பதிகாரமும் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளும்* சிந்தாந்த கலாநிதி பேராசிரியர், ஒளவை, சு.துரைசாமிப் பிள்ளை, மதுரை. இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் என்பது, இயற்கை யுலகில் காணப்படாத தெய்வ தெய்விக நிகழ்ச்சிகளைக் குறிப்பதாகும். தெய்வங்களின் செய்கைகளும் தெய்வச் சார்பான நிகழ்ச்சிகளும் மக்கள் வாழ்வில் நேரில் காணப்படாமல் இயற்கை வாழ்வுக்கு அப்பாற் பட்டு நின்று தொடர்பு பெறுவது பற்றி அவை இயற்கைக்கு அப்பாற் பட்டவை யெனக் கருதப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகள் மக்கள் வாழ்விலே நேரில் காணப்படவில்லை யாயினும், நமது இலக்கியங்களில் தொடர்பு படுத்திப் புலவர் பெருமக்காளல் காட்டப்படுவதை நாம் நாளும் பார்க்கிறோம். இந்த வழக்கம் நமது தமிழ் நூல்களில் சங்க காலத்தை யடுத்துத் தோன்றிய சிலப்பதிகாரக் காலம் முதல் இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றுபோன தலபுராணக் காலம் வரை நம்மிடையே இருந்திருக் கின்றது. இப்படியே இது மேனாடுகளிலும் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையில் புலவர்கள் எழுதிய இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. ஆகவே, இலக்கியங்களில் தெய்வ, தெய்விகமான இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் வந்து தொடர்பு பெறுவது நம் நாட்டு இலக்கிய்ஙகளில் தான் உண்டு என்று கருதுவதற்கில்லை. எல்லா நாடுகளிலும் பழங்கால இலக்கியங்கள் எல்லாவற்றிகுமுள்ள பொதுப் பண்பு என அறிதல் வேண்டும். இயற்கை வரம்பு கடவாது உலகியல் எல்லைக்குள்ளேயே இயங்கியது சங்க இலக்கியம்; அதற்குப் பின்புதான் சிலப்பதிகாரம் தோன்றியது. அப்போது மக்கள் வாழ்க்கையில் தெய்வ தெய்விக நிகழ்ச்சிகளை இயைத்துப் பாடும் இலக்கியநெறி வேரூன்றி இருந்தது. யாரால் அந்த நெறி நம் தமிழகத்திற் புகுத்தப்பட்டது என்பது ஆராய்ச்சிக்கு இன்னும் அகப்படவில்லை. இயற்கை வரம்புக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளை மக்கள் வாழ்க்கையுடன் இணைத்து நோக்கும் மரபு, தமிழிலக்கியங்களுள் சிலப்பதிகாரத்திற்றான் முதன்முதலாக இளங்கோவடிகளால் கையாளவும் படுகின்றது. நூலின் தொடக்கத்தேயே சிலப்பதிகாரத் தலைமக்களான கோவலன் கண்ணகி என்பவருடைய புகார் நகரத்தைக் கூறப்புகுந்த அடிகள், இயற்கையுலகில் எங்கும் காணப்படாத சுவர்க்கலோகம் பவணலோகம் என்ற உலகங்களின் தலைநகரங்களை எடுத்துச் சொல்லி, அவற்றின்கண் நிலையாக இருக்கும் போகமும் புகழும் புகார் நகரத்திலும் உண்டு என்பாராய், நாகநீள் நகநொடு நாககா டதனொடு போகம் நீள்புகழ்மன்னும் புகார்நகர் என்று புகழ்ந்துரைக்கின்றார். கோவலனும் கண்ணகியும் மணம் புரிந்துகொண்டு வாழ்க்கையில் இன்புற்றிருந்த திறத்தைக் கூறுமிடத்துத் தவம் செய்தவர்கள் மறுமையில் உத்தரகுரு என்னும் மேலுலகம் அடைந்து இன்புற்றிருப்பது போல, "அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய கயன்மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும் மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை நெடுநிலா மாடத்து இடைநிலத்து இருந்தனர்" என்று உரைக்கின்றார். இங்கேயும் கோவலன் கண்ணகியுடன் வீற்றிருந்த கட்டிலைக் கூறும்போது மயன் என்னும் தெய்வலோகத்துத் தச்சன் செய்தது போன்ற கட்டில் என இயற்கை யுலகுக்கு அகப்படாத தெய்விகப் பொருளையே புகுத்துகின்றார். இனி, சிலப்பதிகாரத் தலைமக்களுள் மாதவியும் ஒருத்தி, அவளை நமக்குத் தெரிவிக்கப்புகும் சேரர் இளங்கோ அவள் மண்ணுலக மக்களினத்து நாடக மகளே யாயினும், தெய்வ உலகத்து இந்திரன் அவைக்களத்து நாடக மகளான உருப்பசி (ஊர்வசி)யின் வழிவந்தவள் என்றும், அவளுக்குரிய தலைக்கோல் எனப்படும் மூங்கிற்கோல், இந்திரன் மகனான சயந்தன் சாபத்தாற் பெற்ற வடிவமென்றும், உருப்பசிக்கு மாதவி யென்ற பெயருண்டாகையால் அவள் வழிவந்த மாதவிக்கும் அது பெயராயிற்று என்றும் உரைப்பாராய். "தெய்வ மால்வரைத் திருமுனி யருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப்பரும் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவி" என்று எடுத்துரைக்கின்றார். இப்படி,காப்பியத் தலைமக்கள் மண்ணில் வாழும் மக்களாகவும், அவர்களுடைய பிறப்பு, இயல்பு முதலிய பண்பாடுகளை விளக்குதற்கு மண்ணுலக இயற்கைக்கு அப்பாலுள்ள தெய்வங்களைக் கொணர்ந்து இயைபுபடுத்தும் முறையினை இளங்கோவடிகள் மேற்கொள்வதைக் காணலாம். கண்ணகியுடன் கடிமனை இருந்து அறம் புரிந்துவந்த கோவலன் மாதவியின் நட்புப்பெற்றுக் கண்ணகியைப் பிரிந்து, அம் மாதவி மனையிலே பன்னாள் இருந்து பின்பு பாட்டிடைத் தோன்றிய கருத்து வேறுபாட்டால் அவளைக் கைவிட்டுக், கண்ணகியிடம் திரும்பிவந்து அவளைத்தன்னுடன் அழைத்துக்கொண்டு மதுரை நோக்கிச்செல்வதும், வழியில் கவுந்தியடிகளின் துணை கிடைக்கப் பெறுவதும், மூவரும் காவிரியின் வடகரைவழியாகச் சென்று திருவரங்கத்துக்கு அண்மையில் ஆற்றைக்கடந்து, தென்கரையிலுள்ள உறையூர்ப் புறத்தை அடைவதும் புகார்க்காண்டம் என்னும் முதற்பகுதியில் காணப்படும் வரலாறாகும். இந் நிகழ்ச்சிகளுள் கோவலன் மாதவி மனையில் இருந்து வருகையில் புகார் நகரத்தவர் இந்திரவிழாக் கொண்டாடுகின்றனர். அவ்விழாவில் நகரத்துமக்கள் காவற்பூதம் இருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபாடுசெய்துவிழாவைத் தொடங்குகின்றார்கள். அந் நிலையில் சோழவேந்தனைக் காத்தற்பொருட்டுத் தெய்வவுலகத்து இந்திரன் ஏவ அப் பூதம் புகார்நகரத்துக்கு வந்துள்ளது என்பாராய், "வெற்றிவேல் மன்னற்கு உற்றதை யொழிக்கெனத் தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதம்" என்று அதன் வரலாற்றைக் கூறகின்றார். அவ்வாறே அந் நகர்க்கண் உள்ள வெள்ளிடைமன்றம், இலஞ்சி மன்றம்,நெடுங்கல்மன்றம் பூத சதுக்கம், பாவைமன்றம் ஆகிய ஐவகை மன்றங்களும் சோழவேந்தன் இந்திரனுக்கு உண்டான இடுக்கண்களை நீக்கியதற்குக் கைம்மாறாக அவன்தர வந்தவை என்பது தோன்ற, "அமரா பதிகாத்து அமரனில் பெற்றுத் தமரின் தந்து தகைசால் சிறப்பின் பொய்வகை யின்றிப் பூமியிற் புணர்த்த ஐவகை மன்றம்" என அறிவிக்கின்றார். மாதவிமனையில் கோவலன் மடங்கியிருக்கையில் கண்ணகிக்குப் பணிபுரியும் அடித் தோழியின் வேறாகத் தேவந்தி யென்பவள் ஒரு தோழியாக வந்து சேர்கின்றாள். இறந்த குழந்தை யொன்றின் உடலுக்குள் புகுந்து வளர்ந்த பாசண்டச் சாத்தான் என்னும் தெய்வத்துக்கு அவள் மனைவி யென்றும், சின்னாட்குப்பின் பாசண்டச் சாத்தன் மறைந்துவிட, அவள் சாத்தான் கோயிலிலே வழிபாடு செய்து வந்தாள் என்றும் தேவந்தியின் வரலாறு குறிக்கப் படுகின்றது. கவுந்தியடிகளும் கோவலனும் கண்ணகியும் காவிரியாற்றைக் கடந்து தென்கரை நோக்கி வருகையில் ஆற்றிடையுள்ள தீவில் அருகன்நெறிநிற்கும் சாவகர் இட்ட சிலாதலத்தில் தேவசாரணர் தோன்றி அருக பரமேட்டியின் புகழ்பாடிக் கற்றலத்தின்மேல் ஒரு முழ உயரத்தில் அந்தரமாய் நின்று, "பவந்தரு பாசம் கவுந்தி கெடுக" எனச் சொல்லிவிட்டு மறைகின்றனர். பின்னர் மூவரும் உறையூரை நோக்கி வருகையில் வம்பப் பரத்தை யொருத்தியும் வறுமொழியாளன் ஒருவனும் அவர்களை நேர்பட்டுக் குறும்புபேசக் கேட்ட கவுந்தி யடிகள் சினந்து, "எள்ளுநர் போலும் என்பூங் கோதையை முள்ளுடைக் காட்டில் முதுநரி யாக" எனச் சாபமிடுகின்றனர். கோவலன் கண்ணகியாகிய இருவர் வேண்டுகோட்கும் இசைந்து இப் பரத்தையும் இவனும் "உறையூர் நொச்சி யொருபுடை யொதுங்கிப் பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின் முன்னை யுருவம் பெறுக ஈங்கிவர்" எனச் சாபவிடை அருளுகின்றார் கவுந்தியடிகள். பின்பு கோவலன் முதலிய யாவரும் உறையூர்ப் புறத்தே தங்கியிருந்து விடியலில் எழுந்து மதுரை நோக்கிச் செல்கின்றார்கள். இதனோடு புகார்க்காண்டம் முடிகிறது. இதன்கண் கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகியொடு கூடிக் கவுந்தியடிகளுடன் சோழ நாடு கடந்து மதுரைநோக்கிச் செல்லும் செய்தியே கூறப்படு கின்றது. இடையிடையே கூறப்படும் மாதவியின் பிறப்பு வரலாறும் தேவந்தியின் கணவனான பாசண்டசாத்தன் வரலாறும், காவற்பூதம், ஐவகைமன்றம் அருகசாரணர் வரவும், வம்பப்பரத்தையும் வறுமொழியாளனும் குறுநரியாகிய குறிப்பும் இயற்கை வரம்புக்கு மேற்பட்ட தெய்விக நிகழ்ச்சிகளே; ஆயினும் அவற்றால் காப்பிய வரலாறு ஒரு சிறு மாற்றமோ சிறப்போ அடைகிறதில்லை. ஒவ்வொன்றும் தனித்தனியே சார்ந்த பொருட்குள்ள தெய்விகத் தொடர்பைக் காட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. இவ்வாறே மதுரைக் காண்டத்திற்குச் சென்றால் வழியில் மாங்காட்டு மறையோன் ஒருவன் வந்து திருவரங்கத்துத் திருமாலின் கிடந்த வண்ணமும் திருவேங்கடத்தில் அவரது நின்ற வண்ணமும் தெரிவித்து, கோவலன் முதலிய மூவர்க்கும் மதுரைக்குச் செல்லும் வழியைக் கூறுகின்றான். அவன் கூற்றில் பாண்டி வேந்தருள் ஒருவன் இந்திரனுடைய ஆரத்தை வாங்கி யணிந்ததும், ஒரு பாண்டியன் மழை பெய்யாது மறுத்த மழை மேகத்தைப் பிணித்துத் தன் பாண்டி நாட்டிலே மழை பெய்வித்துக் கொண்டதுமாகிய இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகள் தோன்றிப் பாண்டியர் பெருமை விளக்குவது காண்கிறோம். அவற்றால் காப்பிய நிகழ்ச்சி ஒருவகைக் கிளர்ச்சியும் விருவிருப்பும் எய்தவில்லை. மேலும் அம் மறையோன் மதுரை செல்வதற்கு மூன்றுவழிகள் காட்டி ஒவ்வொன்றின் இயல் பையும் கூறுகின்றான். அவற்றுள் ஒன்று சிறுமலையைக் கடந்து திருமால் வீற்றிருக்கும் குன்றத்திற்குக் கொண்டு செல்லும்; அக் குன்றத்தருகேயுள்ள பிலத்தில் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்ற மூன்று பொய்கைகள் உண்டு. அவற்றுள் மூழ்கிய வர்கட்குப் புண்ணிய சரவணம் இந்திரன் உரைத்த ஐந்திர வியாகரணத்தை ஒருவர் அறிவியாமலே அறியச்செய்யும்; பவகாரணி பழம்பிறப்பை அறிவிக்கும்; இட்டசித்தி வேண்டிய சித்திகளை நல்கும். மேலும், அக்குன்றத்திற்கு அருகே ஓடும் சிலம்பாற்றையும், வரோத்தமை யென்னும் தெய்வமங்கை வரலாற்றையும் அம் மறையோன் மொழிகின்றான். வேறொருவழி வேறொரு தெய்வ மடந்தையைக் காட்டுகின்றது. அவளால் வழிச்செல்வோர்க்கு யாதொரு இடையூறும் இல்லை. அதனையடுத்துச் செல்லும் மூன்றாவதுவழியே மதுரைக்குச் செல்லும் பெருவழி யென்று பேசுகின்றான். இப் பேச்சில் காணப்படும் தெய்வ தெய்விகப் பகுதிகள் காப்பிய நிகழ்ச்சிக்குச் சீரிய துணையாகாவிடினும், காவிரிநாட்டு உறையூருக்கும், பாண்டிநாட்டு மதுரைக்கும் இடையில் உள்ள கொடும்பாளூர், சிறுமலை,சிலம்பாறு எனவரும் ஊர்; மலை, ஆறுகளைக் காட்டும் வகையில் உதவிசெய்கின்றன. கோவலன் முதலிய மூவரும் மதுரைப் பெருவழியே சென்று கொண்டிருக்கையில் நீர்பருகுவதற்கு ஒரு பொய்கையை நோக்கிக் கோவலன் தனித்துச் சென்றபோது, வனசாரிணி என்னும் தெய்வம் மாதவியின் தோழியான வயந்தமாலை வடிவில் தோன்றிக் கோவலன் முன் கண்ணீர் சொரிந்து அவன் காலில் வீழ்ந்து, மாதவி தன்பால் குற்றம் காட்டித் தன்னை வெளியே போக்கிவிட்டதாகச் சொல்லி, "துனியுற்று என்னையும் துறக்தன ளாதலின் (நீ)மதுரை மூதூர் மாநகர் போந்தது எதிர்வழிப் பட்டோர் எனக்குஆங் குரைப்பச் சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்" என்று மொழிந்து நின்றது. அது கண்ட கோவலன், இவள்தான் அந்த மாங்காட்டு மறையோன் உரைத்த மயக்கும் தெய்வம்போலும் என நினைந்து மனதில் பாய்கலைப்பரவை மந்திரத்தை வழுத்தினான். உடனே அத் தெய்வம் அஞ்சி, "வனசா ரிணியான் மயக்கம் செய்தேன் புனமயில் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என்திறம் யாதும் உரையாது ஏகுக" என்று வேண்டிக்கொண்டு போகிறது. இந்தத் தெய்வ நிகழ்ச்சி காப்பிய நிகழ்ச்சியோடு நெருங்கிய தொடர்பு கொள்ளாது ஒழியினும் கோவலனுக்கு எதிர்காலத்தில் தீங்கு நேர்தற்கு ஏற்ற ஊழ்வினை உருத்து வந்து கொண்டிருக்கின்றது என்ற குறிப்பைக் காப்பியத்தைப் படிக்கும் நமக்குக் காட்டுகின்றது. கோவலன் முதலியோர் மதுரைநகர்ப் புறஞ்சேரி யடைந்து அங்குள்ள பொழிலிடம் ஒன்றில் தங்கினர்; கோவலன் மட்டில் நகர்க்குட் புகுந்து வேந்தன் கொற்றமும் மதுரைநகர் மாண்பும் அறிந்துவந்து கூறுகின்றான். அப்போது, அங்கே மாடலன் என்னும் மறையவன் வந்து கோவலனைக் கண்டு அளவளாவுகின்றான். அவன்,கோவலன் புகார்நகரத்தில் இருக்கையில் செய்த நல்வினைகளை எடுத்தோதி, "இம்மைச் செய்தன யான்அறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது" என்று ஆற்றுவிக்கின்றான். அவ்வுரையாட்டில் கோவலன் மாதவிவயிற்றில் தனக்குப் பிறந்த மகள் மணிமேகலைக்குப் பெயரிட்ட வரலாறும், பொய்ச் சான்று கூறிப் பூதத்தின் பாசத்திற்பட்ட ஒருவன் பொருட்டுக் கோவலன் தன்னுயிரைக் கொடுக்க முற்பட்டதும் அதற்கு அப்பூதம் "நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி யிழக்கும் பண்பு ஈங்கில்லை ஒழிக" என உரைத்ததும் மதுரையில் கொலையுண்டு இறக்கவிருக்கும் கோவலன் பால் நம் உள்ளத்தில் நன்மதிப்பும் இரக்கமும் உண்டாகச் செய்கின்றன. மாதவிபால் கண்ணகியை அடைக்கலப் படுத்துங்கால் கவுந்தியடிகள் கூறும் சாயலன் மனைவி வரலாறும் கருங்குரங்கா யிருந்து தேவனாகிய வானவன் வரலாறும் மாதரியின் உள்ளத்தில் வியப்பை விளைவித்துக் கவுந்தியின் உரைக்கு ஏற்றதொரு எடுத்துக் காட்டாய் நிற்பதையன்றி வேறு காப்பியப் பயனின்றி நிற்கின்றன. ஆய்ச்சியர் சேரியிலிருந்த கண்ணகிக்குக் கோவலன் கொலை யுண்ட செய்தி தெரிந்ததும்,எழுந்த ஆத்திரத்தால் வானத்தில் விளங்கிய சூரியனை நோக்கி, "பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன்" என்று வினவுவதும், "கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி யுண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல்" என்பதும் இயற்கை வரம்பு மீறினவாயிருப்பினும் கண்ணகியின் வரலாற்றுக்கு விருவிருப்பும் படிப்போர் உள்ளத்துக்குக் கிளர்ச்சியும் எழுப்பி அழுகைச் சுவையை வளர்க்கின்றன. இங்கே தோன்றி வளரும் அழுகைச் சுவை, கோவலன் வெட்டுண்டு கிடந்த கொலைக்களம் புகுந்த கண்ணகி கண்டு அவனது, "பொன்துஞ்சும் மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள நின்றான் எழுந்து நிறைமதி வாண்முகம் கன்றியது என்று அவள்கண்ணீர் கையால் மாற்ற" கண்ணகி கீழே விழுந்து கோவலன் அடிகளைப் பற்றுதலும் அவன் தேவர் பலர் சூழநின்று, "எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போவது," என்ற தெய்விக நிகழ்ச்சியால் நமது உள்ளத்தை உருக்குகின்றது. இவ்வண்ணமே கண்ணகியார் தனது இடதுமார்பைக் கையால் திருகி எறிந்து தீத்திறத்தார் பக்கமே சென்று எரியுமாறு மதுரை நகரைத் தீக்கிரையாக்குவதும் அதுகண்டு மதுராபதி என்னும் தெய்வம் போந்து, "கேட்டிசின் வாழி நங்கை என்குறை" எனக் கண்ணகியின் பின்னே நின்று கூறத் தனது முகத்தை வலப்புறம் சிறிது திருப்பி, "யாரைநீ என்னுடன் வருவோய் என்னுடை ஆரஞர் எவ்வம் அறிதியோ" என்று கண்ணகியார் கேட்கவும்; அம் மதுராபதி, "ஆரஞர் எவ்வம் அறிந்தேன் அணியிழாய் மாபெருங் கூடல் மதுரா பதி என்பேன் கட்டுரை யாட்டியேன் யான் நின்கணவற்குப் பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி." என்று பன்முறை சொல்லி வேண்டுவதும், பின்பு பாண்டியன் செங்கோற் சிறப்பும் கண்ணகியின் பழம்பிறப்பும் சொல்லி "உம்மை வினைவந்து உருத்த காலை செம்மை யிலோர்க்குச் செய்தவம் உதவாது வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத்து எல்லை நீங்கி வானோர் தங்கள் வடிவி னல்லதை ஈனோர் வடிவில் காண்டல் இல்லென" உரைப்பதுமாகிய தெய்வ நிகழ்ச்சிகள் கொலைக்கள நிகழ்ச்சியால் மீதூர்ந்து நின்று நம் நெஞ்சை வருத்தும் அழுகை நிலைக்கு ஆறுதல் தருகின்றன. முடிவில் செங்குட்டுவன் எடுத்த கண்ணகி கோட்டத்திற்குக் கண்ணகியின் தாயும் அடித்தோழியும் தேவந்தியும் மாதரி மகள் ஐயையும் வந்து கண்ணகியைப் பாராட்டிப் பரவியபோது, காலிற் பொற்சிலம்பும் இடையில் மேகலையும், மார்பில் பொன்னணிகளும் விளங்கக் கண்ணகித் தெய்வம் தோன்றி, "தென்னவன் தீதிலன் தேவர்கோன் தன்கோயில் நல்விருந் தாயினான் நான் அவன்தன் மகள்" என்று சொல்லி ஏனைமகளிரை நோக்கி, "வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டு யான் அகலேன் என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்" என்பது இயற்கை வரம்புக்கு மேற்பட்ட தெய்விக நிகழ்ச்சியாயினும் காப்பிய வரலாற்றுக்கு மங்கலமுடிவு தந்து படிக்கின்ற நமது உள்ளம் அமைதியும் பெருமிதமும் கொள்ளச் செய்கின்றது.  34. இன்ப நிலை இன்பநிலை என்பது உலகில்வாழும் உயிர்கள் நுகரும் இன்பத்தின் தன்மையென்னும் பொருளைத் தருகின்றது. நிலை யென்னும் சொல் நில்லென்னும் முதனிலையிற் பிறந்ததெனினும் "இருண்மல நிலை" "அருளுருநிலை" என்னு மிடங்களில் சேது மடம், ஆசிரியர் நிரம்ப வழகிய தேசிகர் அவர்கள் தன்மை யென்றே உரை கூறினாராகலின், இன்பத்தின் தன்மையெனப் பொருள் கொள்ளப்பட்டது. "இன்பநிலை, தானே வந்தெய்தும் பராபரமே" எனத் தாயுமானாரும். "இன்பநிலை வளர்க்கின்ற கண்ணுதலோய்" எனத் திருவருட்பாவுடைய இராமலிங்கசுவாமி களும் கூறியனவற்றிற்கு இவ்வாறு பொருள் செய்தலாகாது. அவற்றின் பொருண்மை பின்னர்த் தானே போதரும். இனி, இன்பம் என்பது உடலொடுகூடி உயிர் நுகரும் இரு வகைப் பொருள்களுள் ஒன்று. மற்றையது துன்பம் என்பது. இதனைப் பிற்காலத்தறிஞரொருவர், "இன்பே துன்பமென்றா யிரண்டென்ப, மன்னுயிர் மெய்யின் மயங்கியல் பொருளே" என்று கூறினார். இதனைப் பொருளென்ப வாயினும், பொறிகளால் அறியப்படுவதன்று. உயிர், கருவி கரணங்களால் இவற்றை நுகர்தல் செய்கின்றதென்பது, "அருந்தின்பத் துன்பமுள்ளத் தறிவினுக்கு அராகமாதி, தருந்தன்வேதனை யாங்காட்சி" (சிவ. சித்தி. அள. 7) எனக் காட்சியிலக்கணம் கூறும் செய்யுளாலும், "இழத்தொறுங் காதலிக்கும் சூதே போல் துன்பம், உழத்தொறுங் காதற்றுயிர்" (குறள். 940) எனவரும் தமிழ் மறையாலும், அவரவர் உணர்வாலும் அறியப்படுகின்றது. இங்ஙனம், பொறிகளுக் கெட்டாது, உணர்விடையே நிகழ் வதாய இதனைப் பிறர்க்குணர்த்தலும் அரிது; இவ்வருமை குறித்தே நம் பெரியோர்கள், ஒருவனிடை நிகழும் இன்ப வுணர்வினையும் பிறிதினையும் அறிதற்குக் கருவியாக மெய்ப்பாடும் அதன் பல வேறு இயல்புகளையும் வகுத்தனர். ஆகவே, அகத்தே நிகழும் இவ்விருவகை யுணர்வும் புறத்தே யறியுங் கருவியே மெய்ப்பாடும் அவிநயமும் என்பது அறியலாம். ஆயினும் "கண்ணினும் செவியினும் திண்ணிதினுணரும், உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின், நன்னயப் பொருள் கோள் எண்ணருங்குரைத்தே" (தொல். பொ. 275) என ஆசிரியர் கூறுதலின், அகவுணர்வறியும் கருவியாகிய மெய்ப்பாடு களும் நுண்ணியோர்க்கே தெரியும் என்பது பெறப்படும். இதனை நோக்குமிடத்து, இன்பதுன்பமாகிய இவ்விரண்டன் நிகழ்ச்சியும் உணர்தற்கரிதாதலேன் என்னும் அவா எழுகின்றது. இவ்வவாவின் வயப்பட்ட யான் ஒருவாறு உணர்ந்த தனை வெளியிடுகின்றேன். ஒருவன் தமிழ் நூற் பொருளின்கண் ஐயங்கொண்டானாயின், அதனைப் பலகாலும் மனத்தால் நினைந்தாராய்வன்; அங்ஙனம் கண்ட விடத்தும் அவ்வையமறாதாயின், தொல்காப்பியம், திருவள்ளுவர், திருக்கோவையார் என்னும் மூன்று நூல்களிலும் விளங்கும் என்ப., 'பல்காற் பழகினும் தெரியாவுளவேல், தொல் காப்பியம் திருவள்ளுவர் கோவையார், மூன்றினு முழங்கும்' (இலக். கொத்து. சூ. 7) என்பர். இதனை யுட்கொண்டயான் திருவள்ளுவர் செய்தருளிய திருக்குறளின் கண் இன்பத்தோ டிணைந்துள்ள துன்பநிலை விளக்கப் பெற்றுளது காணப் பெற்றேன். ஒரு பொருளில் உண்மை நிலை யறிதற்கு அதன் மறுதலைப் பொருளின் உண்மை நிலையறிவும் கருவியாமாகலின் அதனை மேற்கொண்டேன். "இன்னாமை யின்பம் எனக்கொளின் ஆகுந்தன், ஒன்னார் விழையும் சிறப்பு" (குறள். 630) என்பதன் உரையில் ஆசிரியர் பரிமேலழகர் "துன்பந்தானும் உயிர்க் கியல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பா டாகலின் அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கிழிவின்றி மனமகிழ்ச்சி யுடையனாய், அதனாற் றொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றலுடையனாமென்பது கருத்து" என்று கூறுகின்றார். இக்கூற்று, துன்பமாவது உயிர்க்கியல் பன்று என்றும், உயிர் நிற்றற்கு நிலைக்களனாகிய உடலைச் சார்ந்த மனத்திடையே கணப் பொழுதே நிகழும் ஒருவகைக் கோட் பாடாகும் என்றும் கூறுதல் பெற்றாம். பெறவே இதன் மறுதலையாகிய இன்பமும் கணிகமாய் மனத்தின்கண் நிகழ்வதோர் கோட்பாடே என்பதறியப்படும். எனவே, தான் நிகழ்பொழுது கணமாயும், தன்னையறியலுறும், அறிவைத் தன் வயமாக்கிக் கொள்ளவல்ல தாயும் நிற்றலின், இன்பம் உணர்தன் மாத்திரையே யன்றிப் பிறர்க்கு உரைக்கும் அளவிற் றன்றாதல் உணரப்பட்டது. இனி, துன்பம் இன்பத்திற்கு மறுதலையாதல், "இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் நன்பக லமையமும் இரவும் போல வேறு வேறியல வாகி மாறெதிர்ந் துளவென வுணர்ந் தனையாயின்" (அகம். 327) என்பதனாலறியலாம். இங்ஙனம் இவை யிரண்டும் ஒன்றிற் கொன்று மாறெதிர்ந் துளவாயினும், இடையீடின்றித்தொடர்ந்து வருதலினாலும், இன்ப நுகர்ச்சிக்குப் பின் துன்ப நுகர்ச்சியும், துன்பத்தின் பின் இன்பமும் நிகழும் ஒற்றுமையால் இன்பத்திடத்தே துன்பமும், துன்பத்திடத்தே இன்பமும் ஒருகால் உயிரால் உணரப்படுதலாலும், நம்பெரியோர்கள், "தீயும் வளியிம் விசும்பு பயந்தாங்கு நோயும் இன்பமும் ஆகின்று மாதோ" (நற். 294) என்றும், "இன்பமுண்டேல் துன்பமுண்டு ஏழைமனை வாழ்க்கை; முன்பு சொன்னால் மோழைமையால்; முட்டை மனத்தீரே! அன்பரல்லால் அணிகொள் கொன்றையடிகள் அடிசேரார் என்பர்; கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே." (சுந்தரர். எதிர். 8) என்றும் கூறுவர். இனி, உயிரால் நுகரப்படும் இவ்வின்பம் எவ்வாறு நுகரப் படுகின்றது என்பதனை யாராய்வாம். உயிர் தானே நுகரும் ஆற்றல் உடைய தன்மையின், அஃது உடலோடு கூடி இவ்வின்பப்பயனை நுகர்கின்றது என்பது யாவரும் அறிந்தவுண்மை யாம்; அன்றியும் இன்ப நுகர்ச்சி கருதியே உயிர் உடலோடு நெருங்கிய தொடர்பு பெற்றுளதென்பதும் முன்னர்க் காட்டிய 940 ஆம் திருக்குறளால் அறியலாம். இங்ஙனம் உயிர் இன்ப நுகர்ச்சி கருதிக் கூடிய உடல் ஐம்பொறிகளையும், பிறகரணங்களையுமுடையதாய், அவ்வுயிரின் கருத்தினை முற்றுவித்தற்குரிய நெறியிலும் நிற்கின்றது. அதனால் உயிர்களாகிய நாம் ஐம்பொறிகளாலும் கரணங்களாலும் இன்பத் தினை நுகர்வோமாயினோம். அழகும், ஒளியும் திகழும் பொருளைக் காணுமிடத்து, அதன் காட்சி நம்பொறியிற்றாக்கியவழி நம்மனம் அதனைக் காண்டற்குரிய பொறியிடை நிலவும் புலனோடியைந்து கண்டு இன்பம் நுகர்கின்றது; யாழ் குழல் முதலிய இன்னிசைக் கருவிகளின் மெல்லோசை செவியிற்றாக்குமிடத்து மனம்செவிப் புலனோடியைந்து செவிச் சுவையார்ந்து இன்பம் நுகர்கின்றது. இவ்வண்ணமே பிறபொறி புலன்களாலும் இன்பம் நுகரப்பெறுகின்றது. இனிப் பொறிவாயிற்பட்ட பொருள் உயிர்க்கு இன்பந் தரும் முறையை, நம் பெரியார் கண்ட முறையை ஒருவாறு சுருக்கிக் கூறுவோம். சர்க்கரையே காணான் ஒருவன் முதற்கண் பழுப்புச் சர்க்கரையைக் காண்பானாயின், சர்க்கரையாவது பழுப்பு நிறமுடையதென வுட்கொள்வான், பின்னர் அவனே மணற் சர்க்கரையைக் காண்பானாயின், பழுப்புச் சர்க்கரைக் காட்சியாற் கொண்ட கருத்தினைத் திருத்திப் பிறிதோர் கருத்தினைக் கைக்கொள்வான்; அவனே மீட்டும் மாவைப்போலும் வெள்ளைச் சர்க்கரையைக் காணின், சர்க்கரைபற்றிய நிறமும் வடிவமுமாகிய கருத்துக்களை விடுத்துச் சர்க்கரை யென்பதோர் உணர்வினையே யுடையவனாவான். ஈண்டு, அவன் கட்பொறியால் சர்க்கரையைக் காண்டல் இந்திரியக் காட்சி என்றும், இக்காட்சியறிவோடு, சர்க்கரையின் நிறம் சுவை முதலிய இயல்பறிந்து அதனைப்பற்றிய தோர் உணர்வு கோடல் மானதக்காட்சி யென்றும் கூறுவர். அது, "உயிரினோ டுணர்வு வாயில் ஒளியுரு வாதி பற்றிக் செயிருறு விகற்ப மின்றித் தெரிவதிந் திரியக் காட்சி அயர்வில் இந்திரிய ஞான மைம்புலன் சார்ந் துயிர்க்கண் மயர்வற வந்த ஞானம் மானதக் காண்ட லாமே." (சிவ.சித்தி. அள. 6) எனவரும். இனி, இம்மானதக் காட்சியிற் றோன்றிய பொருள் தானும் இந்திரியக் காட்சியினீங்கி மனத்துட் படுவதற்குள் நால்வேறு வகையில் ஆராயப்பட்ட பின்பே முடிபு செய்யப் பெறுகின்றது. பலவேறு வகைச் சர்க்கரையைக் கண்டவன், பொறிகட்கு சர்க்கரை புலனாதலும், அவன் மனம் பொறிபுலன்களோடியைந்து சர்க்கரை யைப் பற்றியதும், புத்தி எழுந்து சர்க்கரையின் நிற முதலிய வேறுபாட்டினை யாராய்ந்து காண்டலும் கண்டவிடத்து, அகங்கார மாகிய கரணம் அவற்றைப் பல முறையும் ஆய்தலும், முடிவிற் சித்தமாகிய கரணம் சர்க்கரையைப் பற்றியதோர் உணர்வினை நிறுத்துதலும் செய்யும். இனி, இவ்வுணர்வு தோன்றியவுடன், காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் எனும் அறுவகைத் தத்துவங்களுள் காலம், அவன் பழுப்புச் சர்க்கரையைக் கண்டகழிகாலநிகழ்ச்சியை யும் பொருத்திக் காட்ட, நியதி, சர்க்கரைக்கே உரியதோர் நிறமும் உருவும் இல்லையெனும் உண்மையைக் காட்ட, கலை, அவ் வுண்மையைத் தலைப்பட்டு அதன் வகையை யுணர்ச்சிக்கண் எழுதலைச் செய்ய, வித்தையென்பது, எழுந்தவிடத்து, அவ்வுணர்ச் சிக்குரிய அறிவினைத் தூண்டும்; தூண்டுங்கால், புருடனுக்கு அவ்வுணர்ச்சியிடை நசையையுளதாக்குவது அராகமாம்; அதனால் விரும்பியுணர்ந்த விடத்துளதாகும் இன்ப நுகர்ச்சியால் உயிர்க் கிழவன் தன்னை மறந்துநிற்றல் மாயை என்பதாம். ஆகவே, சர்க்கரையைப்பற்றிய உண்மையறிவு பெற்று இன்பம் நிகழ்தற்குள தாகும். அறிவு நிலை நுண்ணியதாய் விரிந்து நிற்றல் தோன்றும். இச்செய்தியையே சுருங்கிய வாய்பாட்டால் தன் வேதனைக் காட்சியென்ற குறியால், ஆசிரியர் அருணந்திதேவ நாயனார், "அருந்தின்பத் துன்பமுள்ளத் தறிவினுக் கராகமாதி தருந்தன் வேதனையாங் காட்சி" (சிவ.சித்தி.அளவை.7) என்று கூறியருளினார். இச்செய்திகளை மேனாட்டார் பொருட்கும் பொறிக்குமுள்ள இயைபு, (physical factor) என்றும், பொறிக்கும் மூளைக்கு முள்ள தொடர்புபற்றிய நிகழ்ச்சி (physiological factor) என்றும், மூளைக்கும் மனத்துக்கும் உளதாய தொடர்புபற்றிய நிகழ்ச்சி (psychical factor) என்றும் கூறியாராய்ந்து முடிபு காண்கின்றனர். அவர் கூறுவனவும் பொருள் முடிபின்கண் ஒத்தனவேயாயினும், முடிபெய்தும் முறையில் சிலபல வேறு பாடுடைய. அவற்றை யீண்டு விரிப்பிற் பெருகும், நிற்க. இவ்வண்ணம் பொறி புலன்களாலும், கரணங்களாலும், தத்துவங்களாலும், இந்திரியக் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி என மூவகை நெறியால் உயிர் இன்பம் நுகரு மிடத்து, புருடதத்துவத்தின் மேற்பட்டுநிற்கும் மாயைபோந்து கணிகப்பொருளாய இன்ப நுகர்ச்சியினையும் நீட்டியாது உயிரை மயக்குதலின், அந்நுகர்ச்சியினை நுகர்ந்தாங்கு நுவலுதல் உயிர்க்கு இயலாமை விளங்குகின்றது. இதனாலும், இன்பம் பிறர்க்குரைக்கும் நிலையை யிறந்து நிற்றல் காணப்படுகின்றது. இதுகாறும் கூறியவாற்றால் உயிர்கள் நுகரும் இன்பம் புறத்தே உரைத்தற்குரியதன்றாய், நுண்ணுணர் வுடையோர் உணரும்வகை மெய்ப்பாட்டினாற் புலனாம் தன்மையுடைத்தாய் நிற்றலே வலியுறுவதாயிற்று. ஆயினும் இன்ப நுகர்ச்சிக்கண், கட்புலன் தொழிற்படுமிடத்துச் செவிப்புலன் தொழிற்படுதலும், செவிப்புலன் தொழிற்படுமிடத்துப் பிற புலன்கள் தொழிற்படுதலும் இல்லையாகலின், இன்ப நுகர்ச்சி சிறுகுவதாயிற்று; நாடகமேடை யில் நடிக்கும் ஒருவனைக் காணுமிடத்து, அவனுடைய வேடமும் குறிப்பும் கட்புலனுக்கும், இன்னிசைப் பாட்டும் உரையும் செவிப் புலனுக்கும் இன்பம் பயத்தலின், இவ்விருவகைப் புலன்களும் ஒருங்கு தொழிற்படு மிடத்தே பெறலாகும் இன்பம் முன்னர்க்கூறிய இன்பத்தினும் சிறப்புடைத்தாய நீட்டித்ததோர் இன்பமாமென்பதும் போதரும். மற்று, சுவை மிக்கதொரு பொருளைச் சிறிதுண்டவழி நிகழும் இன்பம் நோக்கிப் பெரிதுண்டவழி வெறுப்பெய்தித் துன்பம் பயத்தலாலும், தேனும் நெய்யும் தம்முள் அளவொத்தவழியும் நஞ்சாய்த் துன்பம் பயத்தலினாலும் இன்பத்தை அக்கணிகமாம் நிலையிலிருந்து பெருக்கிக் கோடல் அரிதாதல் தெரிகின்றது. நாடகக்காட்சி தானும், நெடிது நோக்கியவழி இன்பந்தரு நிலையிற் குறைந்து வெறுப்பினை எழச்செய்தலினாலும், கண்ணும் செவியு மேயன்றி வாய், மூக்கு முதலிய பொறிகளாற் சேர நுகரும் இன்பத் தினை நோக்கக் குறைவுடைத் தாதலாலும், இன்ப நுகர்ச்சிக்கேற்ற தன்றாதல் தோன்றுகிறது. தோன்றினும் இன்பம் பயக்கும்பொருள் ஒன்றினைச் சிறிது நுகர்ந்தவழி, அமையாது அவ்வின்பத்தினை மிகநுகர்தல் வேண்டுமென்னும் வேட்கையினை அந்நுகர்வான் மனத்துள் எழுப்புதலும், மிக நுகர்ந்தவழித் துன்பமாய் முடிதலும் இன்பத்திடையே காணப் படுகின்றன. படினும், இன்பத்தின் மாட்டெழுந்த வேட்கை மிகுதி அத்துன்பத்தினை நுகர்வார்க்குப் புலனாகாவாறு மறைத்தலின் இன்பவேட்கையே நிலைபெறுவதா கிறது. கட்புலனாற் கண்டு இன்புறுதற்குரிய பொருளினை, அது பயக்கும் இன்பம், காண்பார் மனத்திற் பெருவேட்கை யெழுப்பி, வேண்டாதன வற்றையும் வேண்டுவிக்குமெனின், கட்புலன் ஒன்றினாலெய்தலாகும் இன்பத்தின் வலியை என்னென்பது! நிலைபேறில்ல தாய், மூவகைத் துன்பத்ததாய், வினைவிளைவுக்கு நிலைக்களனாயுள்ள உடல் அறிந்தோரால் வெறுக்கப்படுமா யினும், அதனைத் துணைக்கொண்டு கட்புலனால் நுகர்தற்குரிய காட்சியின் பத்தினை நுகரப் பெறுவனேல் அதனையும்வெறாது விரும்புவேன் என்பார், “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால் வெண்ணீறும் இனித்த முடைய வெடுத்த பொற்பாதமுங் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே” என்றார் நம் திருநாவுக்கரசர். இனிச் செவியால் நுகரலாகும் இசையின்பம் அக்காட்சியின்பத்தினும் விஞ்சித்தோன்றுதலைச் சேக்கிழார் பெருமான் ஆனாய நாயனார் புராணத்தின்கண், உயிருள்ளன, உயிரில்லனவாகிய இருவகைப் பொருளும் இசையின் பத்து மூழ்கினவெனக் கூறுதலால் உணரப்படுகின்றது, அது, “ஆனிரை களறுகருந்தி யசைவிடா தருகணையப் பானுரைவாய்த் தாய்முலையிற் பற்றுமிளங் கன்றினமும் தானுணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமு மான் முதலாங் கான்விலங்கு மயிர் முகிழ்த்து வந்தனைய,” “மருவியகால் விசைத்தசையா மரங்கண் மலர்ச்சினை சலியா கருவரை வீழருவி களுங்கான் யாறுங் கலித்தோடா பெருமுகிலின் குலங்கள் புடை பெயர் வொழியப் புனல்சோரா இருவிசும் பினிடை முழங்கா எழுகடலு மிடை துளும்பா” என வருவது. இவ்வாறு ஒரோவழி ஒருபொறியால் நுகரப்பெறும் இன் பத்தின் மாண்பு இதுவாயின், ஒன்றோ பலவோகூடி நுகருமிடத் தெய்தும் இன்பமாண்பும், ஐம்பொறிகளும் ஒருங்கே நுகரும் இன் பத்தின் மாண்பும் ஒன்றையொன்றுமிக்குத் தோன்றுதல் பெறப்படும். படுமாயினும், பொறிகள் ஐந்தல்லதின்மையின், அவ்வைந்தினாலும் ஒருங்கு நுகரும் இன்பம் சிறப்புடைத்தாதலே துணியப்படுவதாம். அவ்வின்பமே பெண்ணின்பம் என்பது. ஒருவன் பெண்ணின்பத்தை நுகருமிடத்து, அவன் ஐம்பொறிகளும் இன்பமார்தலை ஆசிரியர் திருவள்ளுவனார், “கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடி கண்ணேயுள” (குறள். 1101) என்றதனால் அறியலாம். அன்றியும், ஒவ்வொரு பொறியாலும் தனித்தனி நுகரப்படும் இன்பமும் இன்பமாயினும், பெண்ணின்பத்தையே இன்பமெனப் பெரியோர் வழங்கினர். அறம், பொருள், இன்பம், வீடு எனக் கூறப்பெறும் நால்வகை உறுதிப்பொருள்களுள் இன்பம் என்றதும் இதனையே. ஆசிரியர் தொல்காப்பியனார் “எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் ஏவற்றாகும்” (தொல். பொ. 223) என்றதும் இவ்வின்பத்தினையே. இவ்வின்பம் உயிர்கள் உலகியல் வழாது வாழ்க்கைச் சாகாடுகைத்தற்கு உறுதுனையாகும் பெருஞ் சிறப்பினையுடைத்தாகலின் நம்பெரியோர் இதனை யுயர்த்திக் கூறினர். ஆசிரியர் திருவள்ளுவனார், “அறத்தான் வருவதே யின்பம் மற்றெல்லாம் புறத்த புகழுமில” (குறள். 39) என்றும், பரூஉமோ வாய்ப்பதுமனார் என்னும் சான்றோர், “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் இரண்டுந் தூக்கின் சீர் சாலாவே பூப்போ லுண்கண் பொன் போன்மேனி மாண்வரி யல்குற் குறுமகள் தோண்மாறு படூஉம் வைகலோ டெமக்கே” (குறுந். 101) என்றும், நம்மணிவாசகப் பெருந்தகையார், “ஆனந்த வெள்ளத் தழுந்து மோராரு யிரீருக் கொண்டு ஆனந்த வெள்ளத் திடைத் திளைத்தா லொக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத் தறை கழலோ னருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றா திவ்வணி நலமே” (கோவை. 3) என்றும் கூறியருளினார். *ஆகவே, இதுகாறும் நாம் ஆராய்ந்தது கண்டு போந்த இன்பத்தினும் இவ்வின்பம் சிறப்புடைத்தென்பதும், இதன் சிறப்பு அறிவுடையோரால் பெரிதும் பாராட்டப் பெறுவ தென்பதும் பெறப்படுகின்றன. மேலும் முன்னர் கண்ட இன்பம் சிறிதாய வழிப்பெரிது நுகர்தற்பொருட்டு நுகர்வார் மனத்து வேட்கை யெழுப்புதலும் பெரிது நுகர்ந்த வழிவெறுப்பு விளைத்தலும் செய்தல் போலாது, வேட்கை யெழுப்பி, நுகர்வார் நுகர்தற்குரிய தம்மெய் வலியிழந்து உடலைத் துறக்கு ஞான்றும், தன்னின் மிக்கதோர் இன்பமும் உண்டெனக் காட்டும் சிறப்பினை யுடையது. இவ்வின்பத்தின் இயல்பினை, ஆசிரியர் திருவள்ளுவனார் “அறிதோ றறியா மைகண்டற்றாற் காமம், செறி தோறுஞ் சேயிழை மாட்டு” (குறள் 1110) என்றும், மணிவாசகப் பெருந்தகையார், “உணர்ந்தார்க் குணர்வரி யோன் தில்லைச் சிற்றம்பலத் தொருதன்தன் குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாயிக் கொடியிடை தோன்ற புணர்ந்தாற் புணருந் தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய் மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர் கின்றதே” (கோவை) என்றும் ‘கச்சியப்ப முனிவர், “ஆயுந்தொறுந் தொறுமின்பந் தருங்கலை யாங்கறிவு மாயுந்தொறுந் தொறுமின்பந் தரும்வள்ளல் வார்கழல்கள் தேயுந்தொறுந் தொறுமின்பந் தரும்சந்து தேங்குழல்நிற் றோயுந்தொறுந் தொறுநேராக இன்பம் சுரந்திடுமே.” (தணிகை. களவு. 100) என்றும் கூறினர். இவற்றை நோக்குமிடத்து இவ்வின்பம் ஒருகாலைக் கொரு காலை புத்தின்பம் பயந்து வளர்தல் பெறப்படுகின்றது. திருக் கோவையார்க்கு உரை செய்தருளிய பேராசிரியர், “குறைபாடுள்ளதற் கன்றே வளர்ச்சி யுண்டாவது” என்பதனாலும், இவ்வின்பத்துக்கு வளர்ச்சி கூறுதலினாலும், இதுவும் குறை பாடுடையதே யாம். முன்னர் ஒவ்வொரு பொறியின் கண்ணும் எய்திய இன்பம் தன்னின் மிக்கதோர் இன்பத்தின் உண்மை காட்டினமையாலும், உளவெனக் கண்டவை தாமும், தம்மின் மிக்கதென இவ்வின்பத்தைக் காட்டினமையாலும், இவ்வின்பமும் ஒருகாலைக் கொருகாலை வளர்தலாலும் வளர்ந்து முற்றிய தோர் இன்ப முண்டென்பது துணியப்படுகின்றது. மேலும் இவ்வின்பத்திற்கு நிலைக்களனாகக் கட்புலனாம் பொருள் செவிப் புலனாம் பொருள் எனப்பொருள்கள் உளவாதல்போல, வளர்ந்து முற்றிய இன்பத்திற்கு நிலைக்களனாய பொருளொன்றுளதாதல் வேண்டும் என்பதும், இப்பொருள்கள் தாமும் இன்ப நுகர்தற்கு நெடிது நில்லாவாய் மிக்க வழி வெறுக்கப் படுதலால், அப்பொருள் நெடிது நுகர்ந்த வழியும் வெறுக்கப்படு தலின்றி என்றும் நுகர்தற்குரிய இன்ப நிலையமாதல் வேண்டுமென் பதும், இப்பொருள்கள் ஒன்றிற்கொன்றுமிக்குந் தாழ்ந்தும் அழிந்தும் கழிதலால், அப்பொருள் மிக்கதும் ஒப்பதுமின்றி என்றும் அழியா வியல்பினதாகிய பரம்பொருளாதல் வேண்டுமென்பதும், இவ்வின்பங்கள் ஒன்றிற்கொன்று குறைபாடும் சிறுமையுமுடைய சிற்றின்பமாதலால், அப்பரம்பொருளிடை நுகரப் படுமின்பம் பேரின்பம் என்பதும், இச்சிற்றின்ப நுகர்ச்சிக்குக் கருவிகளாக இந்திரியமும், கரணமும் வேண்டுதலால் அப்பேரின்ப நுகர்ச்சிக்குக் கருவிகளாகக் கருவிகரணங்களுக்குக் கதிதமான பேருணர்வு வேண்டுமென்பதும் பெறப்பட்டன. ஐம்பொறிகளாலும் ஒருங்கு நுகரப்பெறும் இன்பமும் சிற்றின்பமாதல், “கண்டுகேட்டுற்று மோந்துண் டுழலுமைங்கருவி, கண்டவின்பந் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்” என நம்மாழ்வார் கூறுதலாலறியப்படும். இவ்வின்பநிலை பேரின்ப நிலையுண்மையினைக் காட்டுஞ் சிறப்பு நோக்கிப் போலும், ஆன்றோர், இன்பத்தின்பின் வீடு கூறினர்! இனி, மேலே ஆராய்ந்துகண்ட பரம்பொருளிடத்தே நுகரப் பெரும் பேரின்பமும், அதனை நுகர்தற்குரிய பேருணர்வும் சிறிது காண்பாம். உயிர், தன்மாட்டெய்திய பொருளைக்கலை, நியதி முதலாய தத்துவங்களால் ஆய்ந்து, அப்பொருளிடத்தே அராகம்வைத்து இன்பம் நுகருமிடத்து மாயை என்பதொரு தந்துவந் தோன்றி மயக்குதலை முன்னர்க் கூறினோம். அதன் மயக்கத்தால் மயங்கியவழி, இன்ப நுகர்ச்சியும் இடையறுதலின், அஃது இடையறாதவாறு மாயையின் மயக்கத்தை வீட்டுதல் வேண்டும். அதற்குக் கருவி, கருவி கரணங்களால் உணரப்படும் பொருள்களின் உண்மைத் தன்மைகண்டு, அப்பொறி புலன்களின் நீங்கி பேரின்ப நிலைக் களனாகிய பரம்பொருளைக் காணமுயலுதலாகும். உலகிடைத் தோன்றும் ஒவ்வொருபொருளும் பரம்பொருளின் உண்மையைக் கூறும் திறத்தையுடையதாகலின், ஐம்புலனாலும் அப்பொருள்களைக் கண்டு, பின் அவற்றிடை விளங்கித்தோன்றும் பரம்பொருளையும் கண்டு, அப்புலன்களை விடுத்து, தனித்து நின்று நினைத்தல்வேண்டும். “ஐம்புலனால் தான் கண்டகன்றால் அதுவொழிய, வைம்புலனார் தாமார் அதற்கு” (திருவருள் 70) என்பது திருவருட்பயன். உலகியற் பொருள்கள் பரம்பொருளுண்மை கூறும் திறத்தனவென்பது இறைவற்கு உலகமே யுருவமென்றும், உலகிடைத்தோன்றும் பொருள்களேயவனுக்கு உறுப்பென்றும், உலகியலில் நடைபெறும் அறிவு, இச்சை, தொழில் எனப்படுவன அவனுக்குக் கரணங்க ளென்றும் பெரியோர் கூறுவர். மேலும் இறைவன், “தாபர சங்கமங்களென்றிரண்டுருவினின்று, மாபரன் பூசைகொண்டு மன்னுயிர்க்கருளை வைப்பன்” (சிவ. சித்தி. சூ. 2.28) என்பதனாலும், ஷேக்ஸ்பீயர் என்பர் “and this our life, exempt from public haunt, Finds tongues in trees, books in the running brooks, sermons in stones and good in every thing” என்றும் தாமஸ் ஏ கெம்ப்பிஸ் என்பவர் “if thy heart be right, then will every creature be to thee a mirror of life, and a book of holy doctrine” என்றும் கூறுதலாலும் விளங்குகின்றது. இது போதும், “நவசக்தி” யாசிரியர் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் ஒருசொற்பொழிவின்கண் “நம்முயிருண்மையறிதற்கு நம் முடல் கருவியாதல்போல, கடவுளுண்மையறிதற்கு இயற்கையே கருவி” யென்றார்; என்று கூறியும் வருகின்றார். இனிப் பொருள்நிலை யறிதற்குத் துணைசெய்யும் பொறி புலன்களால் பொருளுண்மை யுணர்ந்தபின், அவற்றைவிடுத்து, அறிவு துணையாக நாம் அதனை யாராயுமிடத்து உண்மை தோன்றி இன்பம் செய்தல் கண்கூடு. கலாசாலை மாணவனொருவன் அரிய கணக்கினை *அளவையால் முடிபு செய்தல் கருதி முயலுமிடத்து மயக்கமெய்தினான், உண்ணும்போதும் உறங்கும் போதும் உலவும் போதும் அதுவே நினைவாய் ஆய்ந்து வருங்கால், தவறாது முடிபு செய்தற்குரியநெறி, அவன் அறிவுக்குப் புலனாகின்றது; அம்மட்டோ, அவனையூக்குதற்கேற்ற இன்பமும் உடனெழுகின்றது; இங்ஙனமே, பேரறிஞர்களின் ஆழ்ந்த அறிவாராய்ச்சியின் பயனே இன்று நாம் வானிற்சேரலும் நீர்மேல் நடத்தலும், நிலத்துட்புகுதலுமாம். இவ்வண்ணமே, உலகியற் பொருள்களில் ஒன்றித் தோன்றும் பரம்பொருளை, அறிவாராய்ச்சியால் ஆழ்ந்து நோக்குவார்க்கு, அம்மாணாக்கற்குத் தோன்றியதுபோலும் மெய்யறிவுதோன்றி இன்பம் பயக்கின்றது. அவ்வறிவு மிக்குத் தோன்றுதலால் அவ் வின்பம் மிக்குத்தோன்றி மகிழ் செய்வதாயிற்று. அது நுகர்ந்தே, தாயுமானாரும், “இன்னமுது கனிபாகு கற்கண்டு சீனிதேன் என ருசித்திட வலியவந் தின்பங் கொடுத்த நினைஎந் நேரநின்பர் இடையறா துருகி நாடி உன்னிய கருத்தவிழ வுரைகுழறி யுடல்தளர்ந் தோய்ந் தயர்ந்த வசமாகி உணர்வரிய பேரின்ப வநுபூதி யுணர்விலே யுணர்வார்க ளுள்ளபடி காண்” (சுகவாரி. 1) என்றும், திருநாவுக்கரசர், “சிந்திப்பரியன, சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் - முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு - பந்தித்து நின்ற பழ வினைமாய்ப்பன பாம்பு சுற்றி - அந்திப் பிறையணிந்தாடுமையாறன் அடித்தலமே” என்றும் கூறியருளினர். முதற்கண், மறைந்துநின்ற இவ்வுண்மை பின்னர்த் தோன்று தலும் இன்பம் பயத்தலும் நோக்குமிடத்து, இந் நிகழ்ச்சிகட்குக் காரணமாயதோர் பொருள் உளதாதல் வேண்டு மென்பதோர் உணர்வு தோன்றும்; அத்தோற்றப் பொருள் திருவருள் என்றும், அஃது எல்லார்க்கு முளதாகாது, சிலர்க்கே புலனாதல்குறித்து, அதற்கேது, பதிபுண்ணியமென்றும் வகுத்து நம்பெரியோர், “புண்ணியமேல் நோக்குவிக்கும் பாவங் கீழ்நோக்கும், புண்ணியனைப் பூசித்த புண்ணி யத்தினாலே கண்ணிய ஞானத்தினால் இரண்டினை யுமறுத்து ஞாலமொடு கீழ்மேலும் நண்ணானாகி எண்ணுமிக லோகத்தே முத்திபெறும்” (சிவ. சித். 8.13) என்று கூறினர். இங்ஙனம், நாம் பொறி புலன்களால் நுகரும் இன்பம் பரம் பொருளொன்றுண்டென்றும், அதனிடத்தே அறிவினால் நுகரப் பெறும் இன்பம் பேரின்பமென்றும் காட்டினமையால், அதனை நுகர்தற்குரிய நெறியும் காண்டல்வேண்டும். நம்பெரியோர்கள், உண்மையறிவினை மறைத்து நிற்கும் அறியாமையிருட்கு எது முன்னைவினையென்றும், அவ்வறியாமை தீர வேண்டின், உண்மையறிவை நாடித்தொழுதல் வேண்டுமென்றும் தொழுது பெறும் ஞானம் பின்னரும் மறவாதிருத்தற்குப் பரம் பொருளின் அடியாரிடத்து அன்பும், ஆருயிர்மாட்டருளுமுடையராய் அவ்வடி யாரோடு கூடியும், அவர் வேடமும் பிறவும் பரம் பொருளே எனக் கருதியும் ஒழுகுதல் வேண்டும் என்பர். இது “வினையா லசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையா - வினைதீர ஞானத்தை நாடித் தொழவே யதுநிகழும் ஆனத்தா லன்பிற் றொழு,” எனவும், “செங்கமலத் தாளிணைகள் சேர லொட்டாத் திரிமலங்களனுத் தீசனேசரொடுஞ் செறிந்திட்(டு) அங்கவர்தந் திருவே டமாலயங்க ளெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி யாடிப்பாடி எங்கும் யாமொருவருக்கு மெளியோ மல்லோம் யாவர்க்கும் மேலானோம் என்றிறு மாப்பெய்தித் திங்கள் முடி யாரடியார் அடியோ மென்று திரிந்திடுவர் சிவஞானச் செய்தி யுடையோரே.” (சிவ. சித்தி. சூ. 12) எனவும் வரும். மேனாட்டறிஞர், பொறிபுலன்களாற் கண்ட பொருளின் உண்மை நிலையாராய்வான் தனித்து நின்று, மனவுலகின் நினைவுக் குழுவினைக் கண்டு தெளிதல் 1என்றும், அங்ஙனம் செய்தற்கு முதற்கண் அறிவியற் பொருள்களைக் காண்டலும், கண்டவற்றால் மனம், கலுழி நீர்தானே தெளிந்து மணி நீராதல் போல, தானே தெளிந்து அமைதிபெறுதலும், 2உரனுடைமையும் 3இன்றியமையாதனவென்ப. மற்று, உலகியலில் மாறுதல்பல கணந்தோறும் நிகழ்தலால், அறிவின் திண்மை தளர்தலுண்டாதல் பெரும்பான்மை யாதலாலும், அதனால் துன்ப நிகழ்ச்சி எய்துதலாலும், இன்ப நுகர்ச்சி இடையறு மாயினும், பெருந்துன்பங்கள் யாவும் நம் மனத்தினின்றே யெழுதலின், பேரின்பத்தையும் அதனினின்றே கண்டு நுகருமாற்றால் அத்துன் பத்தின் நீங்குதல் வேண்டும். 4இதுபற்றியே மில்ட்டன் என்னும் புலவர்பெருமான் எல்லாம் வல்லது மனமேயாகலின், அம்மனத்தே துறக்கத்தை நிரயமாகவும், நிரயத்தைத் துறக்கமாகவும் நோக்கி நீக்குதலும் கோடலும் செய்யலாம் என்பர். 5திருவள்ளுவப் பெருந் தகையும் “இன்னாமை இன்பம் எனக்கொளின், ஆகும்” என்றனர். இவற்றை நோக்குமிடத்து டென்னிசன் என்பவர் கூறியவாறு துன்ப நிகழ்ச்சிக் கஞ்சாதே, தான் நுகர விரும்பும் இன்பத்தின் பொருட்டுப் பரம்பொருளிடத்து ஆட்பட்டோர் உரனுடையராதலே தக்கதாம்; இதுவே இன்ப நுகர்தற்குரிய இன்ப நிலையுமாம். ஆகவே, இப்பொருள்பற்றி நம் நாவுக்கரசர் கூறிய திருமொழியினைக் கூறி இக்கட்டுரையை நிறுத்துகின்றேன். “வானந் துளங்கி லென்மண் கம்பமாகி லென்மால் வரையும் தானந் துளங்கித் தலைதடு மாறி லென்தண் கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ் சுண்(டு) ஊனமொன் றில்லா வொருவனுக் காட் பட்ட வுமர்க்கே.” - தமிழ்ப்பொழில் துணர் 8, 1932 - 33  35. ஓர் திருமுகம் நாகை. திரு. தண்டபாணிதேசிகர் ‘சங்கர நமச்சிவாயர் உரைபொருந்துமாறு’ என்னும் உரைபற்றிய ஓர் திருமுகம். (3.1.35) ஐயன்மீர், தாங்கள் செய்துவரும் தொல். சொல். குறிப்புரை மறுப்பின் இடை நுழைந்து, பலர்தம் வெற்றுரையால் தகைதலால் காலம் நீட்டித்தலின், தாங்கள் இம்மறுப்பு முடியுங்காறும், அவர்கள் உரைப்பனவற்றை ஏலாது, இதனையே முற்றும் தொடர்ந்து செல்லு மாறு வேண்டுகின்றேன். நாகை, திரு. தண்டபாணி தேசிகர் முதலியோர் எழுதுவனவற்றின் பொருந்தாமை இலக்கணவறிவு சிறிதுடையார்க்கே நன்கு புலனாதலின், அவற்றைப் பொருளாகக் கொண்டு காலந் தாழ்க்காமையைப் பெரிதும் வேண்டுகின்றேன். தங்களால் ஆதற்குரிய தமிழ்ப் பணிகளை அவர் உணர்ந்திலர், தங்கள் நலனையே வேண்டி நிற்பார். இவ்வூரினர், பலரின் பணி கொண்டு இதனை எழுதுகின்றேன்.  36. தேம்பாவணி தேம்பாவணியென்பது தமிழின்கண் விளங்கும் இலக்கிய நூல்களிற் சிறப்புடை நூல்களுள் ஒன்றாகும். இதனை யியற்றியவர் மேனாட்டவருள் தமிழ்ப்புலமை நிறைந்தபெரியார்களுள் ஒரு வராகிய வீரமாமுனிவர் என்பவராவர். இவருடைய இயற்பெயர் கான்ஸ்டாண்ட்டினஸ் பெஸ்ச்சி என்பது (constantinus beschi), இவர் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், பதினெட்டாம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் வாழ்ந்தவர், இவருக்குத் தைரியநாத சுவாமியென்னும் ஒருபெயருண்டு. ஒருவர் தம் தாய்மொழியல்லாத பிறமொழிகளைக் கற்பராயின், அவர் அதனைக் கற்குமிடத்து அம்மொழியிலே வழுவற நினைத் தலும், நினைத்தவற்றை வழாது உரைத்தலும் செய்யக் கூடிய அளவில் கற்பதே அக்கல்வியின் பயன் என்று அறிஞர் கூறுப. அம்மொழியின்கண் உள்ள நூல்கள் பலவற்றையும் படித்தாலும், அந்நினைத்தல் உரைத்தல்களைச் செய்யாவழி, அப்படிப்புபயன் தரும் சிறப்பிற்றன்று என்பதும் தானே போதரும். ஒருசாரார் ஒருவன் எத்துணை மொழிகளைக் கற்பினும், நினை வெழுவது அவன் இளமையிற்கற்ற தாய்மொழிக் கண்ணதேயாம் என்பர். இவர் கூறுவனவும் திண்ணிய பொருள்களை ஏதுவாகக் கொண்டுள வெனினும், முன்னையோர் கூற்றே பலர்க்கும் உடன்பாடென்பது யாவரும் அறிந்தது. இதற்குச் சான்று பகர்வார் போலே வீரமாமுனிவர் என்னும் மேனாட்டுத் தமிழ்ப்புலவர், தம் முப்பதாம் வயதில் தமிழ் கற்கத் தொடங்கி, ஏறக்குறைய பத்தாண்டுகளில் தமிழ் நூல்கள் பலவுங்கற்று அம்மொழியிலேயே நினைத்தலும் உரைத்தலும் செய்ய வல்லுநரா யினர். இச்செய்தி இவர் பாடியுள்ள தேம்பாவணியென்னும் சீரிய நூலுள் மணியெனத் திகழும் பாட்டுக்களால் உணரலாம். இந்நிலை யெய்தப்பெறாது, திண்டாடி நிற்பவர் கூற்றுக்களை நாம் பத்திரிகை வாயிலாக நாளும் காண்கின்றோம். முனிவர் தமிழ்மொழிக்கண் மிக்க பயிற்சி பெற்றதன் பயனாகத் தங்குதடையின்றி இழுமெனவிழி தரும் அருவிபோலச் சொல்லொழுக்கமுடைய கவிகள் மொழு மொழுவெனப் பாடுகின்றார். “முறையி லொலியொடு முரசு முருடொடு முழவு கடமொடு மொலியெழும் பறையி னொலியொ டுமிரத வுருளொடு பரிகள் கரியொடு மொலியெழக் கறையி னொலியொடு முவணியயிலொடு கதைகள் சிலையொடு சிலைபொழி யுறையி னொலியொடு முகிலினொலியொடு முவரி யொலிமெலி வனவெனா” (தேம். 24.41) எனவரும் செய்யுளால் இவ்வுண்மை நன்கு புலனாகும். பிறநாட்டிற் பிறந்தாரொருவர், வேறொரு நாட்டினிடையே தங்கி அந்நாட்டு மக்களோடு உடனிருந்து வாழ்தற்கு ஒத்த கருவி யாவது அந்நாட்டுமக்களின் மொழியறிவேயாகலின், வீரமா முனிவரும் தமிழ் நாட்டிற்குப்போந்து தமிழ் மக்களிடையே வாழ விரும்பினாராகலின், தாமும் தமிழ் மொழியை நன்கு கற்கத் தொடங்கி நன்கனம் கற்றுக் கவிபாட வல்ல பெரும் புலமை யெய்தினார். கற்றற்குரிய நூல்களையும் நன்கு கல்லாது பிழையுறக் கற்று வழுமலிந்த பாட்டுக்கள் பாடித் திரியும் கல்லாமாக்கள் போலாது, புலவர் புகழும் புலமையெய்துவான் கற்றலை மேற்கொண்ட இவர் தம் மனப்பான்மை, “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்” என்னும் உறுதியும் உரனுமுடைய தென்பது விளங்குகின்றது. தமிழ் கற்றுவருங்கால் இவர் திருக்குறள், சிந்தாமணி கம்பரா மாயணம் முதலிய சீரிய இலக்கியங்களைக் கற்று, அவற்றின் சொற்சுவை பொருட்சுவைகளை யழுந்தி நுகர்ந்து, தாமும் அவற்றை யாக்கினோர்போல நூல் ஒன்றனை ஆக்கவும், அவ்வாக்கத்திடை அவர் கொண்ட முறையினையே கொள்ளவும் கருதி, திருத்தக்க தேவரும் தோலாமொழித் தேவரும் சிந்தாமணி, சூளாமணி முதலிய இலக்கியங்களில் தம் சமயப்பொருள் தழுவிய வரலாறு களையே யுரைத்தது கண்டு, தாமும் தம் சமயமாகிய கிறித்தவ சமயப்பொருள் தழுவிய கிறித்துவின் வரலாற்றினையே பாடத் தொடங்கி, சிந்தாமணி, சூளாமணி என்றாற் போல, தேம்பாவணி யெனப் பெயரிட்டு, இச்சீரிய தொடர் நிலைச் செய்யுளைச் செய்துள்ளார். தமிழ் இலக்கியங்களுள் சிறப்புடையதெனக் கருதப்படும் சிந்தாமணியின் சொல்லொழுக்கமும் பொருளமைதியும் கண்டு காமுற்ற இவர், அதனையே பெரும் பான்மையும் தழுவி வருவ தோடு, அந்நூலின் சொற்களையும், தொடர்களையும் தம் கவியின் கண் அமைத்துப் பாடுவாராயினர். சிந்தாமணியில், அரசு நிலைபெற்ற கட்டியங்காரன் சச்சந் தனைக் கொல்லக் கருதிய கருத்தினைத் தன் அமைச்சரிடத்துக் கூறியவிடத்து, அவர் அதற்குடன்படாது சில பேசியது கண்டு மனம் பொறாது, “என்னலாற் பிறர்கள் யாரே யின்னவை பொறுக்கும் நீரார், உன்னலாற் பிறர்கள் யாரே யுற்றவற்குறாத சூழ்வார்” (சிந்தா. 259) என்று கூறும் செய்யுளையுட்கொண்டு இவர், தேம்பாவணியில், சித்திர கூடப் படலத்து, ஆணரன் என்பானுக்கு அரசன்கூறும் கூற்றாக, “உன்னலால் தெய்வமல்லா லுணர்வரும் பயன்கள்சொன்னாய், நின்னலால் பிறர்கள்யாரே நிறைந்திவை செலுத்தும்பாலார், என்னலால் பிறர்கள்யார்க்கும் இறைவனீ யுலகங்காக்க, மன்னலா லெவையுந்தந்தேன் வாய்ந்த நூல் வடிவோயென்றான்” (தேம் - 20.98) என்று கூறினார். சிந்தாமணியில் அளங்கமா வீணையென்பா ளொருத்தி வனசரிதன்மேல் அன்பு கொண்டொழுக, அவள் காதலன் பவதத்தன் என்பான் அவளைக் காணானாய்ப் புலம்பக் கண்ட சீவகன், அவற்கு, “பெண்ணெனப் படுவகேண்மோ பீடில பிறப்புநோக்கா, வுண்ணிறை யுடையவல்ல வொராயிர மனத்தவாகும், எண்ணிப்பத் தங்கையிட்டால் இந்திரன் மகளுமாங்கே, வெண்ணெய்க் குன்றெரியுற்றாற் போல்மெலிந்து பின்னிற்குமன்றே” (சிந். 1597) என்று கூறியதனை யுட்கொண்ட இவ்வீரமா முனிவரும், சஞ்சோன் என்னும் மயிரே யுயிராக்கொண்ட வீரன் (samson agonisties) தாலிலையென்பாளொருத்தியின் வயப்பட்டி ருக்கு ஞான்று, அவன் பகைஞர் அவள் மனந்திரித்துக் கோறற்கு நெறிநாடிய நிலையை யுரைக்கப் புகுந்து, அவள் அன்பின்மை யுணர்த்துவார், “அண்ணிப்பற் றன்பறிந்த வரிகர்பொற்சால் பளித்தன்னாள் நண்ணிப்பற் றருந்திறத்தின் நிலைகேளென்ன நனிகேட்டார் எண்ணிப்பத்தங் கையிடுமேல் அவைநட்பு மியற்பிறப்பும் கண்ணிப் பற்றாதென்னை கடிதிற்செய்யாள் பெண்பிறந்தாள்” (தேம் - 17.32.) என்று கூறுகின்றார். இராமாயணத்துக் கம்பர் இராமன் தாடகையைக் கொன்ற விடத்து, “சொல்லொக்கும் கடியவேகச் சுடுசரங் கரியசெம்மல் அல்லொக்கும் நிறத்தினாண்மேல் விடுதலும் வயிரக்குன்றக் கல்லொக்கும் நெஞ்சிற்றங்கா தப்புறங் கழன்றுகல்லாப் புல்லர்க்கு நல்லோர்சொன்ன பொருளெனப் போயிற்றன்றே” (கம்-ரா-பால-தாட-73) என்று கூறிய செய்யுளில் ஈற்றடிக் கருத்தினை, சேதையோன் வெற்றிப் படலத்து மதியோன் அமலேக் என்பவனைக் கொன்ற செய்தி கூறும், “வேனிகர் வடிவைவாளி வில்லிடை யவன்கோர்த்தெய்ய வானிகர் விலங்கறன்னை வானுருமறுத்தாற் போலத் தோனிகர் அமலேக்காகம் துளைத்த கோலுருவியப்பாற் கானிகர் மூடர்க்கோதும் கலையெனப் போயிற்றன்றே” (தேம் - 16.49) எனவரும் செய்யுளில் அமைத்துக் கூறுகின்றார். இனி, இவர் “தீயினாற் சுட்டபுண்ணுள்ளாறும் ஆறாதே, நாவினாற் சுட்டவடு” (குறள்- 13.9) என்பதனையும், “சுடச் சுடரும் பொன்போலொளி விடுந்துன்பம், சுடச்சுட நோற்கிற்பவர்க்கு” (குறள்- 27.7) என்பதனையும் உட்கொண்டு, “சுட்ட நோயாறினா றாத்துகடருந் தருக்குநீக்க, விட்டநோய் போரா வேகத் திவன் சுழல் சூரல்” (தேம்- 14.34) என்றும், “சுடரப்பொன்சுடுந் தீயெனத் தொன்மறை, படரப் பொங்கி வரும் பகைப் பாசறை” (தேம்- 18.53) என்றும், “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கையெரி முன்னர், வைத்தூறு போலக்கெடும்” (குறள்- 435) என்பதன் உவமை, “நங்கை நம்பிய நாடிய வன்பென நாட்டிச் சங்கை யம்பல சாதிநன் முறையெனப் புகுத்தி, யங்கை யங்கனை பழகினீ யகலினு மரிதுன் வங்கை யின்புற வன்னிமுன் வையென வழல்வாள்” (தேம்-23.91) என்ற செய்யுளின்கண் அமைத்தும், “ஒலித்தக் காலென்னா முவரி எலிப்பகை, நாகமுயிர்ப் பக்கெடும்” (குறள்-763) என்பதனை, “ஒலித்தலா லெவன்செயு முவரி பேயினம், கலித்தலா லெவன்செயும் கடவுள் சார்ந்தகால் சலித்தலா லெவன்செயும் பிணித்த தன்மையின், வலித்த நாய் கடிக்குமோ மருவிலாமையே” (தேம்-24.52) என்பதன்கண் வைத்தும் கூறியிருத்தலால் தமிழ்நடையில் இவர்க் குள்ள கைவன்மை விளக்க முறுகின்றது. இனி, இவர் வீரமாமுனிவர் என்னும் தன்பெயர்க்கேற்ப, ஆண்மக்களின் வீரம்புலனாகுமாறு கவிபாடும் வன்மை நோக்குந் தோறும் இன்பம் பயப்பதோடு, போர்த்தொழில் நிகழுங்கால், மேனாட்டார் செய்யும் போர்த்தொழில் நிலையும் உய்த்துணர வைப்பர். வைப்பினும், தமிழ் நெறியிலேயே இவர் மனமும், நினைவும் எழுதலின், தமிழ் வண்ணமே மாசின்றி விளக்கமெய்து கின்றது. ஒன்று கூறுதும், சோசுவன் என்னும் அரசன் யூத வீரரை யழைத்துக்கொண்டு எரிக்கோ என்னும் நகர் நோக்கிச் சென்ற செய்தியைக் கூறுமிடத்து, அந்நாட்டு வளத்தைக் கூறுவார், “அமிர்தம்பாய்ந்து மதுப்பாய்ந்தார் அன்னம்பாய்ந்த வயல்கடந்து துமிர்தம்பாய்ந்து கயல்பாய்ந்து துள்ளுங்கமலத் தடநீக்கித் திமிர்தம்பாய்ந்து நிழல்பாய்ந்த செழும்பூஞ் சோலைபுடைமருவ நிமிர்தம்பாய்ந்து முகில்பாய்ந்த நேரார்வைகு நகர்கண்டார்” (தேம்-15.13) என்கின்றார். கண்ட அளவில் வீரர்மனத்தெழுந்த மறத்தை யுற்றுணர்ந்த சோசுவன், படையொன்றும் ஏந்தற்க எனப் பரமன் பணித்தமொழியுன்னி, அதனை நினைப்பிக்கு முகத்தால், அவர் மனத்தெழுந்த மறத்தீ அவியா வகையில், “செல்வேம்செல்வ நகர்தகர்ப்பச் செல்லச்செல்லு மெல்லைசெலும் வெல்வேம்வெல்லும் வல்லமையோ வீரவில்விள் மாரியினோ டெல்வேல்வல்ல தல்லதென விறைவன்றான் றன்வலிகாட்டக் கொல்வேலில்லா திந்நகரைக் குலையச்சிதைத்தல் காண்மினென்றான்” (தேம் - 15.15) என்று கூறுதலால், வஞ்சினங்கூறும் வகைமையும், வீரரையாளும் தலைமக்கள் திறலும் பெறவைத்தார். இனிப் போர் நிகழ்ச்சி கூறுமிடத்து, வீழ்வாரையும் வீழ் வனவற்றையும் மிகுத்துக் கூறலுறுவார், “மலையிரண்டுமிசை மலையெழுந்ததென மலிபுயங்கண்மிசை தலையெழ வுலையிரண்டுமிசை யழலழன்றதென வுயிரெரிந்த வெரிவிழிவிட வலையிரண்டுமிசையெழ முழங்குமென வதிரெழுந்த வுணனொருவனீர்க் கலையிரண்டுமிசை யமர்நிகர்ந்திருவர் களநடுங்கவமர் நடவினார்.” (தேம் - 15.94) என்றும், “வண்டுபட்டன விபங்கள்பட்டன வயங்கள் பட்டன வளர்ந்ததேர் துண்டுபட்டன கரங்கள்பட்டன துமிந்துபட்டன பதங்கடிண் டண்டுபட்டன சிரங்கள்பட்டன சடங்கள்பட்டன தடிந்தவாள் கொண்டுபட்டன குணுங்கர்பட்டன குணுங்குபட்டில நயங்களே” (தேம் - 16.37) என்றும் கூறும் கவிகளால் தமிழ் நாட்டுத் தமிழ்ப்புலவர் பாடும் முறையும் வண்ணமுமே தோன்றப் பாடியிருத்தல் நம்மனோர்க்குப் பெருவியப்பும் மகிழ்ச்சியும் பயக்கின்றது. மேலும், போரில் வெற்றிபெற்ற வீரர் தாம் கைக்கொண்ட அறத்தைப் புகழ்ந்து கூறல் மரபு ஆகலின், அதுதோன்ற இவரும், பீலித் தேயரைப் பொருது வென்றிகொண்ட சஞ்சோன் என்பவன் போர்க்களத்தே வாகைசூடி நின்று, பலருங்கேட்க, “புறத்துணைகடந் தவல்லோன் போர்க்களத் தொருவன்நின்று, திறத்துணைவரைத் தோள்வீங்கித் திசைதிசை சுளித்துநோக்கி மறத்துணை துணையென்றுற்ற வஞ்சகரோ டக்கண்டே அறத்துணை பெற்றாற்பெற்ற தழிவுண்டோ விடையிலென்றான்” (தேம் - 17.25) என்பதனால் அறத்தின் பெருமை கூறும்பகுதி, இராமர் இராவ ணனுக்குக் கூறும், “அறத்தினாலன்றி யருஞ்சமம் அமரர்க்குங் கடத்தல், மறத்தினாலரிதென்பது மனத்திடை வலித்தி என்னும் கூற்றினை நினைப்பிக்கின்றது.” இனி, இவர் நம் நாட்டில் வழங்கும் பொருளுரைகள், பலவற்றைத் தம் நூற்கண் அமைத்துத் தமக்குத் தமிழர் வாழ்வின்கட் டோன்றிய உண்மை உடம்பாடாதலை யுணர்த்துவார், “வருடலென யூகவிரு புடையிலுள யாவுமற வயவிருதர் வீழ்த்த பினர்மீளக் கருடனகல் வார்புலவு கணையிலவர் மாற்றரசு கரியிலுறை பேரணி யெதிர்த்தார் புருடனினும் விஞ்சரிவை யனையவிக லெண்ணமில பொருநனிவை கண்டு மனநோகக் குருடனொரு காட்சியுறி னெனவதி சயித்துமலை குவடதிர வார்த்தசனி யொத்தான்” (தேம் - 15.12) என்னும் செய்யுளில் கொண்டானின் மிஞ்சியொழுகும் மனைவி வருவது நோக்காது தீமை விளைத்துக் கொள்வள் என்பதனை “புருடனினும் விஞ்சரிவை யனையவிக லெண்ணமில பொருநன்” என்று கூறுகின்றார். பெண்ணிடந்தோன்றிய கருப்பமும், பெண்மக்களிடம் மொழிந்த மறையும் (இரகசியம்), பிறரறியாவகை நில்லாது பலருமறியத் தோன்றும் என்னும் பொருளு ரையை உவமை வாயிலாக உணர்த்துவார், சஞ்சோன், தனக்கு உயிர்நிலை தன் தலைமயிரேயெனத் தாலிலையென்பாட் குரைத்த மறை அவன் பகைஞர்க்குப் புலனாக அவர் அவனைப்பற்றித் தலைமயிரை நீக்கி வலி குன்றுவித்த செய்தி கூறுமிடத்து, “முதிர்சூலும் பெண்காதின் மொழியுநில்லா முறையிலவள், கதிர்சூழு முதயத்தன் றொன்னார்க்கெல்லாங் காட்டியபின், பொதிர்சூழும் பின்னிரவி லின்பத்தன்னாள் பூமடிமே, லெதிர்சூழும் கேடுணரான் துஞ்சமயிரீர்த் திமிழ்த்தனரே” (தேம் - 17.34) என்னுஞ் செய்யுளால் விளக்கினார். இப்பொருளுரை எல்லா நாட்டு மகளிர்க்கும் ஒப்ப முடிந்த தோரியல்பென்பார், “முதிர் சூலும் பெண்காதின் மொழியுநில்லா முறை” என்கின்றார். எனினும், “காதலகாத லறியாமை யுய்க்கிற்பின், ஏதில ஏதிலார் நூல்” என்னுந் திருக்குறண் மணியினை இச்செய்யுட் பணியிலமைத்திருப்பராயின், இது, மேலும் பேரொளி திகழ்ந்திலங்கு மன்றோ! நற்குணமும் நற்செய்கையுமில்லாத கயவர்மனம் இருள் சூழ்ந்து நிற்குமென்னும் பொருளுரையினை, யூதர் சேனைகளை யழைத்துச் சென்ற மோயீச னென்பான், மலையுச்சியடைந்து ஊணும் உறக்கமுமின்றி நின்ற வளவில், யாண்டும் இருள் மண்டி நின்ற நிலையை விளக்குமிடத்து, “கோணிகந்தாள் வானிறைவ னேவல்கொண்ட குலக்கோமான் சேணிகந்தான் சேண்சென்ற குன்றத்துச்சி செல்லுகின்றான், ஊணிகந்தான் றுயிலிகந்தான் வானோரொத்தாங் குறைந்தனகான் மாணிகந்தார் மனம்போல விருண்டியாவு மருண்டனவே” (தேம். 18.13) என்புழி, “மாணிகந்தார் மனம்போல இருண்டு” என விளக்கு கின்றார். உலகவாழ்க்கை மின்போல் தோன்றி யழியும் மாலையது என்னும் பொருண்மொழியினை, “தனத்தெழுதி வைத்ததென வுறுதிஞானத் தகுதியினான், மனத்தெழுதி வைத்தமறை மறையத்தீமை மல்கியதால், கனத்தெழுதி வைத்தமின லொத்தவாழ்க்கை காதலித்துப், பனத்தெழுதி வைத்தபொரு ளொத்தவ்வேதம் புறத்தொழிந்தார்” (தேம் - 18.19) என்னும் செய்யுளில் “கனத்தெழுதிவைத்த மினலொத்த வாழ்க்கை என வமைத்தும், இவ்வாழ்க்கையைக் காதலித்துப் பொருளீட்டினார், அதனைப் புதைத்து யாற்று மணலிலெழுதி வைத்துப்பின் இழந்து அலமருவர் என்னும் அறநெறியினை காதலித்து புனத்தெழுதி வைத்த பொருளொத்தவ்வேதம் புறத்தொழிந்தார்” என, பரமன் ஞானப்பொருளை மக்கள் மனத்தே எழுதிவைத்திருப்பவும், அதனையுணராது அவர் தீவினையீட்டினமையின், அப்பொருள் மறைந்தமைக்கு உவமித்தார். இவ்வாறு, பொருண்மொழி நிறைந்த பாக்கள் பலவுள வாகலின், இம்மட்டில் நிறுத்தி, ஆடவரொப்பப் பிறந்திறந்துழலுதலின், மகளிரை இழித்துரைத்தல் நம்நாட்டவரி யல்பே என்னும் சிலர் தலைமடங்க, இஃது எந்நாட்டவர்க்கும் ஒருகாலத்துளதாயிற் றென்பார்போல், மேனாட்டவர்க்கும் இவ் வியல்பு உண்டென்பார், “சிலைவல்லார்களும் சிறப்பெழு நெடும்புகழ் திளைநூற் கலைவல்லார்களுங் கடிநிதித் திருக்கொடு பெருங்கோ னிலைவல்லார்களு நிறுவிய மற்றவல் லாரும் முலைவல்லார்களின் முயலினான் முரிவியா ருண்டோ” (தேம் - 23.84) எனவும், “போர்முகத்து நிகரின்றிப் பொலிந்தவெற்றி புனைந்துயர்ந்தோன் கார்முகத்து மணிக்கூந்தல் வலைப்பட்டோர் பூங்கவினல்லாள் ஏர்முகத்து வயங்குழையச் சிதைந்த தன்மை யினிக்கேட்டார் பார்முகத்துப் பெண்மையினோர் பழியுங்கேடு மிலையென்பார்” (தேம் - 17.29) எனவும், “கடம்புனைந்த வளையுருட்டும் பெருஞ்சீர்ச்செங்கோற் கடிவளமும் சடம்புனைந்து பெண்ணாசைச் சழக்கிற்கோலு மென்றுணரான்” (தேம் - 17.30) எனவும், “தீய்வயி றார்ந்தகாலும் செஞ்சுடர்க் கதிருஞ்செந்தீ மேய்வயி றார்ந்துவேகும் விரிமணற் பரப்புந்தீயாய் நோய்வயி றார்ந்தகானம் நுடைநல மாதர்வஞ்சம் காய்வயி றார்ந்தவாயுங் கண்களுமனமும் போன்றே” (தேம் - 19.9) எனவும் வரும் பாட்டுக்களாலும் பிறவற்றாலும் பெண்மையின் கொடுமையும், மனநிறையின்மையும் பிறவும் சுட்டி இழித்துக் கூறுவர். கூறினும், நம்நாட்டுப்புலவர் பெருமக்களுட் சிலரைப் போல் பெண்களின் உறுப்புக்களுள் முலையினையும் அல்குலினை யும் விதந்து கூறும் இயல்பு கண்டுளாராயினும், அவர்நெறி கைப் பற்றாது அவையிரண்டும் விலக்கிப்பாடும் நேர்மை நம்மனோர்க்கு மகிழ்ச்சி தருகின்றது. எனக்குக் கிடைத்த தேம்பாவணிப் பிரதி இரண்டாம் காண்டமே யாகலின், அதன்கண் அடங்கியுள்ள 830 செய்யுட்களிலும் “முலைவல்லார்” (23 - 84) என்னும் ஒரு சொற்றொடர் இருசெய்யுட்களினன்றி யாண்டுங் கிடைத்திலது. இனி, இவர் வருணித்துக் கூறும் பகுதிகள், ஆங்கிலக் கவிஞர் கூறும் திறம்போலாது, தனித், தமிழ்ப்புலவர் பாடுவன போலத் தமிழ் மணம் கமழ்ந்து நிற்கின்றன. யேசுகிறித்து குழவியா யிருந்தகாலத்து அவர் பெற்றோர் அவரை வேறுநாட்டிற்கு எடுத்தேகுங்கால், அவரது துன்பநிலை கண்டு இரங்குவனபோல, “கறாகறாவெனக் காடைக லுழ்ந்தன ஞறாஞறாவெனத் தோகைகள் நைந்தழும் புறாகுறாவுத லோடிவர் போதலால் அறாநறாப் பொழிலா ரழுமோதையே” (தேம் - 13.34) என்றும், “அலையலைந் தலர்கூப்பிய தாமரை இலையலைந் தலைமீதெழுந் தாடலந் நிலையடைந் தனர்நீங்கிலிர் நின்மினென் றுலைவடைந் துகைகூப்பிய தொத்தவே” (தேம் - 13.27) என்றும், நம் நாட்டுப் புலவர் பெருமக்கள் போலவே, கோழி சிறகராற் புடைத்துக் கூக்குரலிடுதலை, “ஆரணந்தரு மாண்டகை யாகுலக் காரணந் தருகட்புனல் கண்டிடர் பூரணந் தருமார்பு புடைத்தெலா வாரணந் தரும்வானுறக் கூக்குரல்” (தேம் - 13.32) என்றும் கூறுவர். சோலை முதலியவற்றின் அழகினைக் கூறப் புகுந்தவர். “இருநில மடந்தை” (சீவக 720) என்னும் சிந்தாமணியைக் கருத்திற்கொண்டு, பூமகளை நற்றாயாகவும், மரங்களை மக்களா கவும், மழையினைக் கைத்தாயாகவும் உவமித்து “பார்கெழு மடந்தை யீன்ற படர்தருகைத் தாயாம்வான் கார்கெழு முலைத்தழீஇய கரமெனச் சினைகணீட்டி நீர்கெழு பாலுண்டப்பால் நிழன்றுதன் தாயைக்காக்க வேர்கெழுகைத் தாய்நோக விகன்றொளி யொளிக்குங்காவே” (தேம் - 18.26) என அழகுறப் பாடுகின்றார். பிறிதொரு செய்யுளில், சோலையில், கொடியும் கொம்பும் பின்னி நிற்றலையும், நெடியவாய் ஓங்கி நிற்றலையும், உயரத்தே அசைந்தாடு தலையும், இருள் படப் பொதுளி யிருத்தலையும் பறவை முதலியவற்றாலும், அசை வினாலுமுண்டாகும் ஒலியினையும் தனித்தனி யுவமித்துச் சதுரப் பாடமைய, “சிலைவளர் நாணிற்கையின் சேர்ந்தடர்ந் திறுகப்பின்னிக் கலைவளருணர் வினோங்கிக் கள்ளுண்டார் தலையினாடி விலைவளர் மகளிர்நெஞ்சின் வெயிற்பக லிருளிற்றாகி யலைவள ரொலியினார்க்கு மலர்முகத்த லர்ந்தகாவே” (தேம் - 18.27) எனப்பாடியுள்ளார். வேறோர் செய்யுளில் “பூவிடையளிகள் துஞ்சப் பொதும்பிடை மயில்கள் துஞ்சக் கோவிடை யன்னந்துஞ்சக் கொம்பிடைக் குயில்கள் துஞ்ச மாவிடை முசுகள் துஞ்ச மருளிடை யிரவுதுஞ்ச நாவிடை யுரைகள் துஞ்ச நலமெலாந் துஞ்சுங்காவே” (தேம் - 18.28) எனக் காவின் இயற்கையைக் கிடந்தாங்கு நவின்று செல்கின்றார். இனி, யேசுகிறித்துவாகிய குழந்தையைக் கொண்டேகும் பெற்றோர், தண்ணிய பொழிலும் பூங்காவும் கடந்து கடுஞ்சுரம் புகுந்தேகுதலைக் கூறத்தொடங்கி, சுரத்தின் வெம்மையை யுணர்த்தப் புகுந்து, “துயிலென விரிபூங்காத் தும்பிகள் குழலாகக் குயிலின முழவாகக் குளிர்பொழி லரங்காக மயிலின நடமாடு மதுவழி யதுநீக்கி யயிலென வழல்வீசு மருஞ்சுர நெறிபோனார்” (தேம் - 19.3) என்று சோலையின் தட்பமும் அழகும் காட்டிப் பின் சுரத்தின் கொடுமையைப் புலப்படுத்தி, புண்ணியப் பொருளாயுள்ள யேசு கிறித்துவின் மென்மையும், சுரத்தின் வெம்மையும் கண்டு ஆற்றாவாய், “பூவிடை யழவண்டு பொதும்பிடை யழமஞ்ஞை காவிடை யழவம்பூக் கடிமலர் தவழ்யாறு தாவிடை யழவந்தோ தகாதென வழயாவும் கோவிடை யரசாள்வோர் கொடுவன மருகுற்றார்” (தேம் - 19.5) எனப் படிப்போர்க்கு அவலத்தை மெய்ப்படுத்தி, “காட்டிய விரலைத்தீக்கக் கண்டகண் விழியைத்தீக்கச் சூட்டிய கொடியகானம் சுடுமெனிலெனும் வாய்தீக்க வீட்டிய வழலையெண்ணி லெண்ணிய மனத்தைத்தீக்கக் கோட்டிய மனத்திற்றீக்கும் கொடியதோர் சுரமதன்றோ” (தேம் - 19.7) எனக் கூறும் பாட்டுக்கள் சுரத்தின் தன்மையை நன்கு நவிலுமாறு அமைக்கின்றார். இனி, இவர் ஏனைப்புலவர்களைப் போலப் பொய்யின் இயல்பும், நாணத்தின் நடையும் பிறவும் கூறுதற்குப் பின்னிடுகின்றா ரில்லை. ஒருவன் ஒரு பொய் கூறிய விடத்து, அதனை மறைப்பான் பல கூறுதலின் அது பல்குமென்னு முண்மையினை, “பொய்செலச் செல்லும்வாயிற் பொலிவொடு பெருகும்போல மைசெலச் செல்லும்வாரி மருளிவந் தளவிற்பொங்கி மெய்செலச் செல்லும்நன்றொத் தெக்கணும் வினைவுய்த்தோடிப் பைசெலச் செல்லும்நாகப் பரிசெனச் செல்லுமாறே” என்பர். (தேம் - 21.2) என்பதன் கண்ணும், “பொய்யெழு வழியெனப் போதல் கண்டுளி” (தேம் - 19.37) என்புழியும், காதலிருவர் கருத்தொருமித்து வாழ்வு நடாத்துகையில், ஒரு பொருள் கருதிப் பிணங்கினாராயினும், அவர் மாட்டு அன்பு குன்றாதே மிகும் என்னும் உண்மை யினை, “நம்பியோ டெழில்நன்மணத் துணைவியுந் தம்முள், வெம்பியோர் பகைவிளைந்த கால்காமமும் விளைவாம்; தும்பிசூழலர்த் தொற்கொழு கொம்பிழந் தடுத்த கொம்பிலேறிய கொழுங்கொடி போல்வது காண்பாய்” (தேம் - 23.95) என்பதன் கண்ணும், குற்றமாவன கூறுவாரும் கேட்பாரும் கூடு மிடத்து ஒருவர் குற்றத்தை வெறுப்பவராயின், ஆண் நாணந்தோன்றித் தகைக்குமென்றும், அதனையவர் பலகாலும் கூறுவாராயின், அவர் தம் நாணம் வெல்லப் பட்டழியுமென்று கூறி, கொடிதேயாயினும் புலி பழகியவிடத்துச் சிறுவரும் அதனையஞ்சார் என்னும் உண்மை யினை யமைத்து, “ஒருவருஞ் செயிருரைப்பவும் கேட்பவும் செய்தால் இருவருஞ் செயிரின்றியு நாணமே வெல்வாய் மருவரும்புகர் பழகவே வழங்கிய முறையாம் தெருவரும்புலி சீறினும் சிறுவரும் வெருவார்” (தேம் - 23.93) என்பதன் கண்ணும், தாம் செய்யும் நல்வினைப் பயனாய்ப் புகழெய்தப் பெற்று மகிழும் பெரியார், அதற்கு மறுதலையாய் இகழ்ச்சி பயக்கும் வினைகள் தங்கண் நிகழாவகை யில் தம்மைக் காப்பர் என்னும் நன்னெறிப்பொருளை, “புகழ்ச்சி வந்துற்ற காற்பொலிந்த மாண்பினார் இகழ்ச்சி வந்து திக்குமென் றெண்ணிப் போற்றுவார் நிகழ்ச்சிவந் துதிப்பது நினைக்கிலாத பேய் மகிழ்ச்சி வந்துவந்தன கடையின் மாழ்கவே” (தேம் - 23.124) என்பதன் கண்ணும் அமைத்துக் கூறுகின்றார். இனி, நூனெறியும், நூலுணர் புலவரியல்பும் தேவர், கம்பர் முதலிய சிறப்புடைத் தொடர் நிலைச்செய்யுள் செய்யும் ஆசிரியர் போல, “கவிஞர், நூல்கலந்த வாய் நுனித்ததேன் எனத்தகும் காமம்” (தேம் - 23.92) என்றும், “நூல்வழி யுரைத்த தீஞ்சொல் நொய்யிதழ விழ்ந்த தேன்போல், வேல்வழி மின்கை வேந்தன் வியப்பினோடி மிழிற்கேட்டு” (தேம் - 20.97) என்றும், “பால்வழி சுவையெனப் படத்தைத் தீட்டிய கோல்வழி யழகெனக் குறையிற் கேள்விசெய் நூல்வழி புகழென நுழையன்னார் புடை மேல்வழி வளமெலாம் விளையப் புக்கனர்” (தேம் - 22.31) என்றும், “பாமுகத்தில், சொல்வதற் கருந்தொடையெனத் தொடர்வன துகளே” (தேம் - 23.90) என்றும் கூறுமாற்றால் உணரப்படும். இனி, “ஈரெழு வகுப்பிற் றேர்ந்த வினமணி நல்யாழ் வாங்கி யோரெழு குரலி னோதை யுரிக்கிளை தளிர்ப்பப் பாகின் நேரெழு மிடற்றி னோதை நெறிகள் மூன்றியக்கிக் கூட்டிப் பாரெழு நடங்கள் வாட்டப் பாடினர் சிறப்பின் வானோர்” (தேம் -19.16) எனவரும் பாட்டு இவர்க்குள்ள இசை நூலுணர் வினை வெளிப் படுத்துகின்றது. இனி, இவர் பெண்களின் நாணத்தைக் கூறுமிடத்து, அஃது அவர்கட்கு உயிரினும் சிறந்ததென்னும் விதியினை யுட் கொண்டு, “பெண்மையின் காணியாம் நாணம்” (தேம் - 20.71) என்றும் “பெண்ணங் காணியும் பெருமையும் பேரொளிப் பிறப்பும்” (தேம் - 23.96) என்றும், உடையின் மென்மை கூறுமிடத்து * “தூங்கெழு நுரையம் பூந்துகில்” (தேம் - 20.66) என்றும், “மணி நிறத்தவெழின் மைந்தனைமூடு, மணிநிறத்த நுரையந் துகிலாடை” (தேம் - 21.20) என்றும் “பால்வழி நுரையம் பைம்பூப் பழித்த போற்றுகிலைப் போர்த்து” (தேம் - 20.97) என்றும் கூறுவர். இனி, உலகினர்க்கு நீதி கூறுவார்போன்று கூறிய பாட்டுக்கள் பலவுள, அவற்றுள், “மடநடைபெண்மை நட்பென வுரைத்தார் வளருணர் வுயரிய நீரார்” (தேம் - 20.80) என்றும், “மலிந்த வாண்டினி லீட்டலும் மற்றவை மெலிந்த வாண்டில் வகுத்தலு மிக்குறும் பொலிந்த வாண்மை பொருந்திடத் தேருதி வலிந்த நாட்டுயிரா யமன்னா என்றான்” (தேம் - 20.98) என்றும், “ஏரணி வலியின்னீதி யிறையவன் முனிந்தகாலை நீரணி யரணமாகா நெடுமதி லரணமாகா சீரணி யரணமாகா சேண்வரை யரணமாகா பேரணி யரணமாகாப் பெற்றநல் வினையிலார்க்கே” (தேம் - 14.110) என்றும் கூறுவன பல. இனி, இவர் ஆங்காங்கு எடுத்துக் காட்டும் உவமைகள் இடத்துக் கேற்பவமைந்து இவர் தம் புலமை நலத்தைச் சிறப்பிக் கின்றன. பேயினம் திரண்டுவரினும் நம்மைப் பற்றலாகாமையின், தீங்கில்லையென்பார், “பிணித்த தன்மையின், வலித்த நாய் கடிக்கு மோ மருவிலாமையே” (தேம் - 24.52) என்றும். காமங் கலந்த பாடல்களைப் பாடலும், பாடக்கேட்டலும் செய்த விடத்து, அதுபற்றாதொழில் இல்லையென்றற்கு, “பால்கலந்த கால் பருகிய நஞ்சுமீட் பரிதே” (தேம் - 23.92) என்றும். குற்றமே செய்து பயின்றவர் பாவத்துக் கஞ்சார் என்றற்குப் “பழகவே வழங்கிய முறையாந், தெருவரும் புலி சீறினும் சிறு வரும் வெருவார்” (தேம் - 23.93) என்றும், கற்பும் பெருமையும், குடிப்பிறப்பும், வாழ்வும் கெடுமென்றுணராது தீ நெறிக்கிணங்குவராயின், மகளிர்க்குத் தீங்கெய்துதல் ஒருதலை யென்பார், “தண்ணம் வேர்கெடிற் றரு வெலாஞ் சாய்தலுமரிதோ” (தேம் - 23.96) என்றும் வருவனவற்றால் இது விளங்கும். இன்னணம், பெரும் புலவர்க்குள்ள அமைதி முற்றும் பெற்ற வீர மாமுனிவர், பிறிதொடுபடாஅன் தன்மதங்கொளல் என்னும் உத்தி பற்றிக் கூறுவனவற்றை விலக்கி நோக்கின், அவர்க்கு “உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்” காக்கும் திறமே சிறந்த கருத்தாதல், “செம்பொறிச் சினத்தபோர்ச் செறுநர்க் கஞ்சலாற் பைம்பொறி யெயிலின் வாய்ப்படியப் பூட்டியுள் வெம்பொறி விழத்தமை வெட்டி வீழ்த்தெனா வைம்பொறி யடக்கியுள் அவாக்கொண்டா லென்பார்” “கோலமே வீணடா குளித்தல் வீணடா சூலமே வீணடா துறவு வீணடா காலமே மந்திரம் கதைத்தல் வீணடா சீலமே கெடநசை செகுத்திலா லென்பார்” (தேம் - 20.125, 126) என்றற்றொடக்கத்துச் செய்யுட்களாலுணரலாம். இங்ஙனம் சீரிய முறையில், தொடர்நிலைச் செய்யுட் செய்தற்குரிய புலமைபெற்ற இவர், விரைந்து கவி பலபாடும் திறத்தால் வித்தாரகவியாய் விளங்குகின்றாராயினும், திருந்திய முறையிற்சொல்லாடல் பயின்ற பாக்கள் இவர் நூற்கண் காணப் பெற்றில. பெற்றோர்கள் தம் மக்களை மகிழ்ச்சியால் வாழ்த்துதலே நம் நாட்டு மரபாகலின், இவர், பாட்டுடைத் தலைமகனை அவன் பெற்றோர் வணங்கிப் பரவினாரெனக் கூறுதல் தமிழ் மக்கட்கு நல்லொழுக்கமாகத் தோன்றாது. மேலும், கவிகளின் கீழ்வகுத்துள்ள பொழிப்புரைகளுள் நூற்புணர்ப்புக்காகாவென விலக்கப்பட்ட வழக்குச்சொற்களைத் தொடுத்தெழுதுதல் குற்றமாயினும், இவர் கூறிய தொன்னூல் என்னும் நூற்கியைய வமைந்து தோன்றுகிறது. அது தமிழ் நெறிக்குப் பொருந் தாமையின், குற்றமாதல்பற்றியே ஆசிரியர் இரேனியஸ் (Rev.c.t.e. rhenius) என்பாரும் இவர் இலக்கண நெறிக்கண், அதற்காகாச் சொற்களைப் புணர்த்தமைத்தல் குற்றம், எனத் தாமெழுதிய நூற்கட் கூறுவாராயினர். ஆயினும், இத்தொடர் நிலைச்செய்யுளின் சொல்லொழுக்கமும் பொருள மைதியும் படிப்பார் மனத்தே பேரின்பம் பயக்கும் தகையவாய் விளங்குதல் ஒருதலை. திராவிடமொழிகளை நன்கனமாராய்ந்த புலவரான ஆசிரியர் கால்டுவெல் என்பாரும், “சிந்தாமணியின் நடையால் தொடர்ந்தெழுதப் பெற்றுத்திகழும் தேம்பாவணி, தமிழ் நடையும், ஒழுக்கமும் நிற்கும் நிலையில் நின்று நோக்குமிடத்து, திருந்தியதாய், அணிநலஞ் சிறந்ததாய் விளங்குதலின், இந்நூலாசிரி யரைத் தமிழ்ப்புலவர் வரிசையுள் முதற்கண் நிறுத்தற்குத் தமிழா ராய்ச்சியாளர் யாவரும் ஒருங்குநேர்வர்” என்னும் பொருளமைய, “thembavani of Beschi: It is a long and highly wrought religious epic in the style of Chintamani and is so exellent - from the point of view of Hindu ideas of excellence; that it is so elaborately correct, so highly ornamented, so invariably harmonious - that I have no doubt he may fairly claim to be placed by the Votes of impartial native critics themselves in the very first rank of Tamil poets” என்று கூறுவாராயினர். கிறித்தவர்க்கே யன்றித் தமிழ் கற்பார்க்கும் கற்றவர்க்கும் விருந்துசெய்யும் மேன்மைத் தாம் என்று கூறியமைகின்றேன். மன்மதன் விரகநோய் விளைத்தற்பொருட்டு மலர்க்கணையெய்வன் என்பதும், சந்திரகிரகணத் தின் போது திங்களைப் பாம்பு கொள்ளுகின்றதென்பதும் போன்ற கருத்துக் களை யிவ்வாசிரியர் நேர்ந்து தம் நூற்கண் அமைத்துப் பாடுதல் முதலியன விரிவஞ்சி விடுக்கப்பட்டன. - தமிழ்ப்பொழில்  37. தமிழுக்கு ஆக்கமாகும் பணிகள் இதுபோது நம் தமிழ் நாட்டில் புத்துணர்ச்சி யொன்று பிறந்து, தமிழர் அனைவரையும் தமிழ்பற்றிய நினைவுகூரும் படிச் செய்து வருகிறது. அரசியல், சமூகம், வாணிபம், சமயம் என்ற பலதுறையிலும் நிகழும் பொதுக்கூட்டங்கள் நம் தமிழின் வளர்ச்சி பற்றிய செயன் முறைகளை நாடி நிற்கின்றன. ஒற்றைமாட்டுவண்டி நிலையம் முதல் வானவிமான நிலையம் ஈறாக எல்லா நிலையங் களிலும் தமிழ்பற்றிய உணர்ச்சிகள் தோன்றிமிளிர்கின்றன. கற்றவர், கல்லாதவர், சிறுவர், முதியர், செல்வர், வறியர், ஆடவர், பெண்டிர் எனப் பல திறத்து மக்களும் தமிழை வளம்படுத்தற்குரிய சொற் களையே பேசுகின்றனர். எனவே, இக்காலம் தமிழ்நாட்டிற்கே ஒருதனித்த நற்காலம் என்று கூறல்வேண்டும். தமிழருள் பார்ப் பனரும், ஏனையரும், கிறித்தவரும், முகமதியரும், சைனரும் என்ற பலரும் தமிழ் வளர்ச்சியின்கண் தம் கருத்தைச் செலுத்துகின்றனர். நாட்டுப்பற்றுடைய நற்றமிழருட் பெரும் பான்மையர் நம் தமிழின் நன்மையே நினைந்து நினைந்து வேண்டுவனசெய்ய முனைந்து நிற்கின்றனர் என்றல் மிகையாகாது. தமிழின் வளர்ச்சி நாடுவோர், தம் நாட்டத்தை முதற் கண் கல்வித் துறையில் செலுத்தவேண்டியிருக்கின்றனர். நமது நாட்டுத் தொடக்கப் பாடசாலை முதல் உயர் நிலைக் கல்லூரி வரையிலும் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கப் பெறுகின்றது. ஆனால், ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் கட்டாயம் தன் தாய் மொழியாகிய தமிழைக்கற்கவேண்டும் என்ற கட்டாய விதி கிடையாது. கல்வித் துறையில் கற்பிக்கப்பெறும் பாடங்கள் யாவும் பொது வகையில் மொழிப்பாடம், மொழி யல்லாத பாடம் (language and non - language subjects) என இருவகையாகப் பகுக்கப்பெற்றிருக்கின்றன. இவற்றுள் மொழிப் பாடம், முதன்மொழி, இரண்டாம் மொழி என இருவகையதாகும். முதன்மொழி அரசியல்மொழி. அது தானும் இதுபோது ஆங்கில மாகலின் அம்மொழி ஆங்கிலமாயிற்று. இதனை எல்லா மாணவரும் கட்டாயம் பயிலவேண்டும் என்ற கட்டாய விதியுண்டு. ‘இரண்டா மொழிப் பயிற்சி வேண்டா’ என விலக்குதல் ஒருவழி உண்டு; எனினும், முதன் மொழிப் பயிற்சிக்கு மட்டில் அவ்விலக்கு அறவே கிடையாது. இரண்டாவது மொழிப்பகுதியில் தமிழ், சமஸ்கிருதம், இந்துஸ்தானி முதலாகப் பலமொழிகள் தொகுக்கப்பெற்றிருக்கின்றன. இவற்றுள் தாய்மொழியும், அந்நியமொழியும் என இருவகை மொழிகளும் இருப்பினும், தாய்மொழியை ஒவ்வொரு மாணவனும் கற்றல் வேண்டுமென்ற விதிகிடையாது என்பது முன்பே கூறப்பட்டது; தமிழ் நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சிறுவன் ஒருவன் தன் தாய்மொழியைக் கட்டாயம் பயிலவேண்டும் என்ற நியதி கலாசாலைகளிலும், கல்லூரிகளிலும் இல்லாமற் போனதன்பயனாய், நம் நாட்டு மக்களுட் பலரது உயிருணர்வு, தாய் மொழிப் பயிற்சியை நாடாது, அதனைக் கட்டாயமாக்குதற்கும் தூண்டுதல் செய்யாது இறந்துபடுவதாயிற்று. ஆனதால், நம் தமிழகம், தாய்மொழியைக் கட்டாயமாக்குதற்கு விருப்பமில்லாத விலங்கினத்தால் நிரம்புவதாயிற்று. நம்நாட்டில் தமிழ்ப்பயிற்சி, கற்றவர் என்று கணக்கிடத்தக்க மக்கட் கூட்டத்தும் போதிய அளவு இலதாயிற்று. அரசியலின் பொறுப்புடைய பதவியேற்கும் பெரியார் ஒருவர், தமது பெயரைத்தம் தாய்மொழி யில் பிழையற எழுதும்வன்மையில்லாப் பேதையராய் இருப் பாராயினர். அஃது அவர் பெருமையைக் கெடுக்கும் சிறுமையிற் சிறுமையென்பதனை அவரேயன்றிப் பிறரும் உணராராயினர். நாட்டின் விடுதலையிற் பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் தம் தாய்மொழியில் நல்ல அறிவுள்ளவராதல் வேண்டும். தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் கட்டாயம் தமிழ்கற்பிக்கப்பெற வேண்டும் என்பது விதியாகவேண்டும். அஃதில்லாமல்பெறும் நாட்டுவிடுதலை, வாயில்லாதவன்பெறும் அமைச்சுத்தொழில் போலப்பயன் இல்லாமல் போகும். ஆதலால், தமிழர் நாகரிகம், கலை, மொழி முதலியவற்றைப் பாதுகாக்கும் குறிப்புடன் உழைக்கும் தமிழ்த் தலைவர்கள், நம் தமிழ்நாட்டுக் கல்வித்துறையில், நம் தமிழ் மொழி கட்டாயமொழிப் பாடமாக்குதல் வேண்டும் என்றும், அதற்குரிய முயற்சிகளை உடனே செய்யவேண்டும் என்றும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழ் கட்டாயபாடமாகும் வகையில், சிலர் ஒருவகைத் தடை நிகழ்த்துகின்றனர். ஏனைப்பாடங்கள் யாவும் தமிழிலேயே கற்பிக்கப்படுவதால், தமிழ்ப்பயிற்சி, தனித்தமுறையில், கட்டாயமாக வேண்டுவதில்லை என்பது அவரது தடை. தமிழ் கட்டாயமாகியவழி, வடமொழி என்னும் ஆரியமொழி இடம் பெறாது கற்பார் தொகைகுன்றிக் கெடும் என்பது மற்றொரு தடை. இனி, முதலாவது தடையினை யாராய்வாம்; ஏனைப் பாடங்கள் யாவும் ஆங்கிலத்தின் வழியாகக் கற்பிக்கப் பெற்ற போதும், ஆங்கிலமொழிப் பயிற்சி, தனியே, கட்டாய முறையில் செய்துவந்த செய்தியை இவர்கள் மறந்து பேசுகின்றனர். ஏனைப் பாடங்களை ஆங்கிலத்தின் வாயிலாகக் கற்பித்தாலும், அதன் மொழிப் பயிற்சி எளிதில் எய்தாது என்பது கொண்டு, மொழிப் பயிற்சி, தனியே, கட்டாயமாக்கப்பெற்றது. இதனால், ஏனைப் பாடங்களைக் கற்பிப்பார் நோக்கம் மொழிப்பயிற்சி நோக்காது. பொருளுணர்ச்சியே நோக்கிநின்றது என்பது பெறப் படுகிறது. இப்போது ஏனைப் பாடங்களைத் தமிழ் வாயிலாகக் கற்பிக்கத் தொடங்கின் அந்நோக்கம் மாறிவிடும் என்பதற்கு யாதோர் ஏதுவும் இல்லை. எக்காலத்தும், ஏனைப் பாடங்களைக் கற்பிப்பார் நோக்கமும், கற்பார் நோக்கமும் பொருளுணர்ச்சியையே நோக்கு வதன்றி மொழிப்பயிற்சியை அத்துணைச் சிறப்பாக நோக்கா என்பது விளங்குகின்றது. மேலும், ஏனைப்பாடங்களைக் கற்பிப்பதற்கு வாயிலாகும் மொழி அப்பாடப் பொருள்களையுணர்ந்து கொள்வதற்கே கருவி யாகும். தனித்த முறையிற் பயிலப்பெறும் மொழி, மாணவன் மனத் தெழும் கருத்துக்களைப் பிறர்க்குப் பிழையற உணர்த்துவதற்குக் கருவியாகும். உணர்தற்குக் கருவியாகும் மொழி வழுவுடையதா யிருப்பினும், உணர்த்துதற்குக் கருவியாகும் மொழி வழுவுடைய தாயிருத்தல் கூடாது என்பது அறிவு வழக்கத்துக்குரிய உண்மை நெறியாகும். “எண் பொருளவாகச் செலச் சொல்லித் தான் பிறர் வாய், நுண்பொருள் காண்பதறிவு” (குறள் 424) என்ற திருக்குறளை, ஆசிரியர் திருவள்ளுவர். “சொல்லி” எனச் சொல் மேல் வைத்தும், “காண்பது” எனப்பொருள் மேல் வைத்தும் கூறிய திறத்தை விளக்கவந்த ஆசிரியர். பரிமேலழகர், “சொல்லுவன வழுவின்றி இனிது விளங்கச் சொல்லுக என்பார் சொல் மேல் வைத்தும், கேட்பன வழுவினும், இனிது விளங்காவாயினும், பயனைக் கொண்டு ஒழிக என்பார் பொருள் மேல் வைத்தும் கூறினார்” என்று, மேலே காட்டிய உண்மை நெறியினை வற்புறுத்தியிருக்கின்றார். ஆகவே உணர்தற்குக் கருவியாகியவழி, தமிழ், உணர்த்தற்கும் சீரிய கருவியாய்விடும் என்று கூறிவிடுவது நேர்மையாகாது. அன்றியும், பொருள் ஒன்றின் இருப்பினைச் செவ்வையாகக் காணமாட்டாத ஒருவன், கண்ணாடியொன்றின் துணைகொண்டறி வதுபோல, ஆங்கிலமொழிவாயிலாக உணரநின்றமையின், பொருளுண்மையினைச் செவ்வையாக உணரமாட்டாது நின்ற தமிழ்மாணவன், தமிழைக் கண்ணாடித் துணை போலக் கையாளு கின்றான். உணர்தற்குத் துணையாகிய கண்ணாடி. அவன் மனக் கருத்தை யுணர்த்தற்குத் துணையாகாதவாறுபோல, தமிழும் துணையாகாது போகுமாதலால், துணையாகுமாறு, அதனை அவன் கட்டாயமாகத் தனியே பயிலவேண்டிது இன்றியமையாதா கின்றது. ஆகவே, எவ்வகையால் நோக்கினும், தமிழ் நாட்டுத் தமிழ் மாணவனுக்குத் தமிழ் கட்டாய பாடமாதல் மிகவும் வேண்டுவ தொன்றே என்பது பெறப் படுவதாம். இனி, தமிழ் கட்டாயமாகியவழி வடமொழி இடம் பெறாது கெடும் என்ற தடை அறிவு நெறிக்குப் பொருந்தாத் தடையாகும். தமிழ்க் கட்டாயமாவதால் வடமொழி இடம் பெறாது போதற்கு ஏதுவென்னை? தமிழோ, உலகவழக்கில், ஒரு மக்கட் குழுவின் தாய் மொழியாவது. ஆரியமோ வழக்கிறந்தது; எம்மக்களுக்கும் தாய் மொழியாக இருப்பதன்று. தாய்மொழியின் இடத்திற்றான், அச்சமஸ் கிருதம் இருத்தல் வேண்டும் என்பதற்கு ஒருவகை இயைபும் கிடையாது. அதனைக் கற்கவேண்டும் என்று விரும்புவோர் உளராயின், அதனை விருப்பப் பாடப் பகுதிகளுள் ஒன்றாக்கிவிடின், அது கெடுமாறில்லை. எல்லா மக்கட்கும் உயிர்போல் வேண்டப் படும் தாய்மொழியை, அத்தகைய இயைபில்லாத பிறிதொரு மொழியின்பொருட்டுக் கட்டாயமாக்காது விடுவது மருந்துண்டு உயிர்வாழ நினைந்த ஒருவன் நஞ்சை உண்பதுபோலாகும். ஆகவே, தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்குகூடித்தம் தாய்மொழியாகிய தமிழ்மொழி நம் நாட்டுக் கலாசாலைகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயமொழிப் பாடம் (compulsory language subject) ஆக்கமுயல வேண்டிய கடமையுடையவராகின்றனர். ஒருசிலர், ஆங்கிலம் முதலிய மொழிகள் கட்டாய பாடமாக விதிக்கப்பெற்ற காலத்தில் தாய்மொழியும் கட்டாயமாதல்வேண்டும் என்று கிளர்ச்சி செய்யாது,இப்போது செய்வது முறையன்று என ஒரு வாதம் செய்கின்றனர். இவர் வரலாற்று நிலையறியாத மடவோர் ஆகலின், இவரது பேதமைக்கு நாம் இரங்குவதல்லது வேறு செய்வதற்கில்லை. அந்நிய ஆட்சிக்கும், அந்நிய நடையுடை கட்கும், அந்நியமொழிப் பயிற்சிக்கும் அடிமைப்பட்டுக் கிடந்த நம்நாடு, இன்று ஏன் ஆட்சி விடுதலைக்கும், நம்நாட்டு நடையுடைகட்கும் பிறவற்றிற்கும் கிளர்ச்சி செய்யவேண்டும்? வடநாட்டார் போன்ற உடையுடுத்தற்கும், வடநாட்டாரது மொழிப் பயிற்சிக்கும் பெருமுயற்சி செய்யும் நம் மக்கள், மேனாட்டார் நடையுடையும், மொழிப்பயிற்சியும் வந்தகாலத்தில் அவற்றிற்கு அடிமையானது ஏன்? இவற்றையெல்லாம் அப்போதே செய்திருக்கலாமல்லவா? வரலாற்று நெறியை நோக்காது, ஒருகாலத்துத் தோன்றும் நல்லுணர்ச்சி அதற்கு முன்னோ, பின்னோ தோன்ற வேண்டு மென்று வாதம் செய்து தோன்றிய நல்லுணர்ச்சியைச் சிதைப்பது சிறப்புமன்று சீருமன்று. இனி, ஏனைப்பாடங்களை (non - language subjects)க் கற்பித்தற்காகத் தமிழில் பல புத்தகங்கள் எழுதப்பெற்றிருக்கின்றன. இவற்றுள் சில நீங்கலாகப் பெரும்பாலன மிக இழிந்த நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றை எழுதியவர்கள், தமது தமிழறிவின்மையைத் தமிழுலகிற்குக் காட்டுவதற்கு இவைகளைக் கருவியாகக் கொண்டனரோ என்று எண்ணத்தக்க நிலையில் இவைகள் இருக்கின்றன. ஒரு மொழியில் ஒரு நூல் எழுதப்புகும் ஒருவர், முதற்கண் அம் மொழியில் தனக்குப் போதிய அறிவுபெற்ற பின்னரே செய்தல்வேண்டும். இதுபோது எழுதப்பெற்று வருவன பெரும்பாலும் தமிழறிவே நிரம்பாதவர்களால் மிக இழிதக்க நிலையில் எழுதப்பெற்றிருக்கின்றன. முதலாவதாக இப்புத்தகங்கள் பெரும்பாலும் நூற்றுக்குத் தொண்று வடசொற்கள் நிரம்பி, தமிழ்மணமும், தமிழ் நடையும், தமிழோசையும் இன்றி தமிழ்ப்புத்தகம் என்று ஒருவன் கூறுவதற்கு மிகவும் நாணப்படத்தக்க நிலையில் இருக்கின்றன. கலந்து நிற்கும் கலைச்சொற்கள் பலவும் கத்தலோசையும் களைப்போசையும் உடைய வடசொற்களாகவே இருக்கின்றன. இவற்றின் அவகேடான நிலையினை, சென்னைப் பச்சையப்பன் கலாசாலைத் தலைமையாசிரியர். திருவாளர். எம். சண்முகசுந்தர முதலியார் எம். எ. எல். டி. அவர்கள் விடுத்துள்ள சுற்றறிக்கையில் விளங்கக்காட்டியிருக்கின்றனர். அவாந்தரகணனம் (interpolation), விலோமதராதரம் (inverse ratio), அநிஷ்கர்ஷம் (approximation), ஸ்நிக்தக்வம் (adhesion), ஆரோஹகம் (rider), உன்மஜ்ஜனம் (buoyancy), பின்னஸ்படிகீகரணம் (crystallization fractional) நிவர்த்தி தோஷ அவலம்பம் (compensated pendulam), கர்ணம் (hypotenuse), குலஸ்திரீ புருஷ பாலவிருத்த ஆயவ்யய பரிமாணபத்ரிகை (census report), என்பனவும், ஆவர்த்த தசாம்சம் (recurring decimal), ஐக்கிய சாம்யம் (identity), நேர்விகித சாம்யம் (direct proportion), பாஜ்யத்துவம் (divisibility), குணாங்கம் (factor), தனராசி, ரிணராசி யெண்கள் (positive and negative numbers), ரீதிமானம் (ratio) என்பனவும் பிறவுமாக வரும் கலைச்சொற்கள் செறிந்து, தமிழ் நூல்களின் நடையழகைக் கெடுத்து, மாணவர்க்குப் பெருமயக்கத்தை யுண்டுபண்ணுகின்றன. ஆங்கிலமொழி வாயிலாக எளிதில் பொருள் நலம் உணரமாட்டாது தவித்த தமிழ் மாணவர்களுக்கு, அம்மாட்டாமை மிகுதற்பொருட்டு தமிழும், ஆங்கிலமுமல்லாத ஆரியச் சொற்கள் நிறைந்து புத்தகவடிவாய்த் தமிழ்ப்போர்வை போர்த்து வந்துள்ள அறிவுக் கொலை நூல்களே இவை யென்னின், அது மிகையாகாது. இன்னோரன்ன நூன்முறைகளை ஊக்குவோர் முழுத்த அறிவிலிகள் ஆவரேயன்றி வேறு யாவராவர்? இவற்றின் இயல்புகளைக்கண்ட தமிழறிஞர் பலர் ஒருங்குகூடி, கலைச் சொல்லாக்க முயற்சிசெய்து ஒரு சொன்னிரலை வகுத்திருக்கின்றனர். நூலெழுதுவோர், முன்னே காட்டியதும் பின்னே குறித்த சொன்னிரலு மாகிய இவ்விருவகை நிரலில் எந்த நிரலை எடுத்தாளவேண்டும் என்று திரு. சண்முகசுந்தர முதலியார் அவர்கள் எழுப்பிய கடாவிற்கு, அரசியலார், அவரவர் விருப்பப்படி எழுதலாம் என்று விடை கூறியதாக, அவர் சென்னையில் நடந்த ஒரு கூட்டத்திற் கூறியிருக்கிறார். இவ்வகையில் அரசியலார் விடுத்துள்ள விடை ஏனைப்பாடங்களைத் தமிழிலேயே கற்பிக்கவேண்டும் என்ற கொள்கை நடை முறையில் வெற்றி பெறாது கெடுதற்குத் துணை புரிவதாக இருக்கிறது. ஆகவே தமிழ்த் தலைவர்கள் பிறசொற்களின் அளவிறந்த கலப்பால் தமிழின் தனிநலம் கெடா தவகையினைத்தேட முன் வருதல்வேண்டும். தமிழின் தனித்த சிறப்புக் கெடத்தக்கமுறையில் இந் நூல்களை இவர்கள் எழுதுவதற்குரிய காரணங்கள் சில கூறப்படுகின்றன. அவற்றுள் இந்நூலாசிரியருட் பெரும்பாலார் தமிழில் போதிய அறிவில்லாதவர் என்பது ஒன்று. தமிழில் போதிய அறிவில்லாதவர் களாயின், இவர்கள் தாம் எழுதும் நூல்களைத் தமிழறிந்தவரிடத்தில் காட்டித் தமிழ் மொழியின் அமைதிக்கேற்பத் திருத்திக்கொள்ள வேண்டும். தமிழில் இல்லாதபொருளாயின், அதற்குரிய பெயரைத் தமிழ் இலக்கண அமைதிக்கேற்ப ஆக்கிக்கொள்ளுவதே செய்யற் பாலதாகும். அதற்கெனத் தமிழ் இலக்கணத்தில் இடம் விதிக்கப் பெறாமல் இல்லை. “வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ, எழுத்தொடுபுணர்ந்த சொல்லாகும்மே” என்பது விதி. ஏனைமொழிச் சொற்களைத் தம் மொழியில் ஆக்கிக்கொள்ளும்போது அச்சொற்களைத் தம் மொழியின் எழுத்து, ஓசை அமைதிகட்கேற்ப மாற்றிக்கொள்வதே உலகமக்களின் இயல்பு. அச்சொற்களுக் கேற்பத் தம் மொழிவரம்பைச் சிதைத்துக்கொள்வது மானமுடைய மக்கட் செயலன்று. த்வரிதம், ம்ருகம், ரிணராசி, லம்பம் முதலிய வடசொற்களைத் தமிழில், மாற்றாது எழுதுவது தமிழிலக்கண வரம்புகடந்த தாகும். அவ்வாறு எழுதும் முறை தமிழனுடைய மானத்துக்குக் கேடாகும். தமிழில் மெய்யெழுத்து ஒரு பதத்தின் முதலில் வரலாகாது. ர,ல முதலியனவும் மொழிக்கு முதலில் வாரா. இவ்விதியைக்கடவாமலே சென்ற நூற்றாண்டுவரையில் இருந்த தமிழ்ப்பெருமக்கள் செய்துவந்திருக்கின்றனர். இப்போது, இவ்வரம்பு அறவே புறக்கணிக்கப் பெறுகிறது. ஆங்கிலமக்களோ, வடமொழியாளரோ, தமது மொழியில் ஒரு தமிழ்ப் பொருளை யுணர்த்த நேருமாயின், அதனை மொழி பெயர்த்தோ, தம் மொழி யோசைக் கேற்பத் திருத்தியோ கூறுவது மரபேதவிர, தம் மொழியில் இல்லாத ஓசைகுறித்து, தம்மொழியைச் சிதைத்துக் கொள்வது கிடையாது. அம் மக்களைப்பார்த்து, அவர் தம் நடையுடை ஒழுக்கம் முதலியவற்றை மேற்கொள்ள விரும்பும் இக்காலத் தமிழர்கள், அவர் தம் மொழிபற்றிய மானத்தை மேற்கொள்ளாமை இழிசெயலாகும். இவையாவும் நூல்வழக்குகளில் முதலில் குறிக் கொண்டு காக்கப்படவேண்டும். தமிழில் புத்தகம் எழுதுவோரும், பத்திரிகை நடத்துவோரும் பிறமொழிகளின் ஓசை தமிழில் இல்லாதவழி, சமஸ்கிருத எழுத் தோசைகளை நிரப்பித் தமது மானமின்மை யுணர்த்திவருகின்றனர். மொழிக்கு முதலில்வாராத எழுத்துக்களையும் உடனினல் மயக்கத்துக் கொவ்வாத எழுத்துக்களையும் தமிழிலக்கண வரம்பு கடந்து மொழிக்கு முதலில் வருமாறும், உடனிலையாய் மயங்குமாறும் எழுதி, தமிழ் மொழியின் கற்பு நெறியைக் கெடுத்து, தமிழரின் மான வுணர்வைச் சிதைத்துவரும் இக்கொடுமை இப்போது மிகுந்து வருகிறது. இது மிகாதபடி தொடக்கத்தேயே தடுக்க வேண்டியது தமிழர்களின் முதற் கடமையாகும். இதற்காக, அரசியலார் நிறுவியிருக்கும் புத்தகத் தேர்வுக் கழகங்களில் நாடறிந்த தமிழ்ப் புலவர்களும், தமிழ்ச் சங்கங்களும் உறுப்புப்பெற்று, இக்கொடுமை தலைகாட்டாதபடித் தடுக்க வேண்டும். இனி, இரண்டாவதாக ஒரு காரணம் கூறுகின்றனர். இந்திய நாட்டில் ஆரியமொழி பொதுவாக எல்லாப் பகுதியினும் பரவி யிருக்கின்றது; கலைச் சொற்களும் இந்தியநாட்டின் எப்பகுதியினும் நிலவத் தகுந்தனவாகலின், இவை வடமொழிச் சொற்களாகவே இருத்தல்வேண்டும், என்று கூறி, மேனாடுகளில், லத்தீன் மொழியே கலைச்சொற்களுக்கு உரிய மொழியாகக் கையாளப்படுகிறது எனத் தம் கொள்கைக்குச் சான்று காட்டுகின்றனர். கலைச்சொற்கள் எல்லா நாட்டிற்கும் பொதுவாயவை யென்பது உண்மை; அற்றாக, அவற்றை வடமொழியால் எழுதி, நம் நாட்டு மாணவர்களை ஏனை உலக மக்களினின்று பிரிப்பது கொடுமையன்றோ? மேனாடுகள், அவர்கள் கூற்றின் படி, லத்தீன் மொழியையே மேற்கொண்டபோது. நாம் ஏன் அம்மொழிச் சொற்களையே மேற்கொண்டு, கலைச்சொல் வகையால் உலக மக்களோடு அறிவு ஒற்றுமை எய்தக்கூடாது? வடமொழிச்சொல் மேனாட்டு மக்கள் அறியாததாகலின், எல்லா நாட்டு எல்லா மக்கட்கும் தெரியக்கூடிய அச்சொற்களையே, நம்மொழியின் எழுத்தோசைக் கேற்ப அமைத்து வழங்குவதால் வரும்கேடு என்னை? தமிழில் உள்ளனபோக, இல்லாத கலைச்சொற்களை, பிறநாடுகளில் வழங்கிய வண்ணமேகொண்டு தமிழோசைக் கேற்ப அமைத்துக்கொள்ளுவது தானே அறிவுடைய செயலாகும்? போ லோனியம் என்னும் பொருளை வடமொழியிற் கூறிக்கொள்வதா? தமிழ்ப்படுத்திக்கொள்வதா? போலந்து நாட்டுப்பெருமக்கள், தம் நாட்டின் பெருமை நிலவ, புதிதாய்க் காணப்பெற்ற பொரு ளொன்றிற்குப் போலோனியம் என்ற பெயரிட்டிருக்கின்றனர். போலோனியம் என்ற வழி அஃது உலகில் எப்பாலுள்ளார்க்கும் இனிது அறியக் கூடிய பொருளாயிருக்க, அதனை வடமொழியில் மொழிபெயர்த்துத் தமிழில் எழுதுவதால் உண்டாகும் ஆக்கம் என்னை? கலைச் சொற்களைப் பெருக்கு முகத்தால் மக்களது அறிவுவளர்ச்சிக்கு ஆக்கம் தேடும் வழியில் சாதி, சமயம், தேசீயம் போன்றவற்றைப் புகுத்துவது மடவோர் செயலாகும். அஃது அறிவு நெறிக்கும் பொருத்தமாக இன்மையால் இவர்கள் செயலும் பொருந்தாச் செயலென்பது வெளிப்படை. ஆகவே ஏனைப் பாடபுத்தகங்களுள் வேண்டாத வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலந்து தமிழின் தனிச் சிறப்பைக் கெடுக்காத படி, புத்தகத்தேர்வுக் கழகங்களில் தமிழ்ப்பெரும் புலவர்களும், தமிழ்ச்சங்கங்களும் உறுப்பினராய், வடசொற்கள் மிக விரவிய தமிழ் நூல்களை அரசியலார் ஏலாத வழியை அமைத்தல் வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகின்றேம். இனி, ஏனைப்பாடங்களைத் தமிழில் கற்பிக்கும் ஆசிரியன் மார்களின் தகுதியை நோக்குவோம். இவர்களுட் பெரும் பாலோர் தாய்மொழியாகிய தமிழில் நிரம்பிய அறிவில்லாதவராவர். இவர்கள் பேசுவதும் எழுதுவதும் பிழைமலிந்தே யிருக்கின்றன. இவர்களுள் மிகப்பலர், தம்பெயரையும் தம் ஊர்ப் பெயரையும் தமிழில் பிழையில்லாமல் எழுதக்கூடிய அறிவுதானும் இல்லாதவராவர். இவர்கள் தேர்வு (examinations)க்காலங்களில் மணவர்களுக்கு விடுக்கும் வினாக்களை மட்டில் ஒருவர் காணலுறுவாராயின், அவரது தமிழறிவின்மைக்கு மனங்கசிந்து பெரிதும் இரங்குவர். நம்நாட்டுக் கலாசாலைகளில் இப்பிழைகளை நீக்குதற்கு வேண்டிய அளவில் தாய்மொழி இடந்தரப் படவில்லை யென்பதை ஆர்தர் மேஹ்யூ, (arthur mayhew) மைக்கேல் வெஸ்ட் (michael west) முதலிய கல்வியாளர்கள் எடுத்தக் காட்டியிருக்கின்றனர். இவர் தம் தமிழறிவே இந்த இழித்தக்க நிலையில் உளதாயின், இவர்களால் எழுதப்படும் தமிழ் நூல்கள் எத்துணை வழுமலிந் திருக்கும் என்பதை அறிஞர்களே உணர்ந்து கொள்ள வேண்டும். இவர் தம் நூல்களில், வகுப்புயர்ச்சிக் கேற்ப நடையுயர்ச்சியோ, பொருளாழமோ, யாதும் காணப்பெறுவது இல்லை. ஆகையால், இந்த நூல்கள் யாவும், கலாசாலைகளில் பாடமாக நிறுவப்பெறுவதற்கு முன் தமிழ்ப் புலவர்களின் ஆராய்ச்சிக்கு இடனாகவேண்டும் என்ற விதி பிறத்தற் குரிய முயற்சியினைத் தமிழ்ப் பெரியார்கள் செய்தல் வேண்டும். தொடக்கப் பாடசாலைகளிலும், தொடக்க உயர்தரப் பாடசாலைகளிலும் உள்ள ஆசிரியன்மார்களிற் பெரும்பாலார், தமிழ்ப் பயிற்சியாற்போதிய அறிவு பெறாமல் இருக்கின்றனர். அவர்கள் குறைந்த கலாசாலைப் படிப்புடையவராயினும், மேற் கூறிய ஆசிரியன்மாரிடத்தில் பயின்று, வழுமலிந்த தமிழ் அறிவு உடையராய் உள்ளனர். மிகச் சிலரே தமிழறிவு நன்கு பெற்றவராய் இருக்கின்றனர். இவர்கள் தமிழறிவு குறைந்தவராய் இருத்தலின், இவர்பால் பயின்று, அப் படிப்போடு நின்று போகும் மாணவர்கள் நான்கு தமிழ்ச் சொற்கள் பிழையில்லாமல் எழுதவும் பேசவும் மாட்டாமல் இரங்கத்தக் நிலையில் இருக்கின்றனர். இக்குறை முதற்கண் நீக்கப்படின், தொடக்கப் பாடசாலை மாணவர்கள் பலரும் செவ்விய தமிழறிவு பெற்று விளங்குவர். தொடக்கக் கல்வியும் வளமுடைய கல்வியாய் நாட்டுக்கு நன்மை விளைவிக்கும். ஆதலால் தொடக்க உயர் நிலைப் பாடசாலைகள் (higher elementary schools) எல்லா வற்றிலும் போதிய தமிழறிவுபெற்ற தமிழாசிரி யர்களை நியமித்தற்கு வேண்டிய முயற்சிகளைத் தலைவர்கள் செய்ய வேண்டும். இவ்வாசிரியர்களைப் பயிற்றுவிக்கும் போதனாமுறைப் பாடாசலைகளில் (training schools for teachers) உள்ள ஆசிரியர்கள் அனைவரும் தமிழில் வித்துவான் பட்டம்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இவர்களிற் பெரும்பாலார் தமிழ் அறிவு இல்லாதிருக் கின்றமையின், தம்பால் ஆசிரியராதற்குப் பயிலும் ஏனையோரது மொழியறிவை அளந்து செம்மை செய்யக்கூடிய ஆற்றல் இல்லா தவர்களாய் இருக்கின்றனர். இவர்கள் பேசும் தமிழும், எழுதும் தமிழும் ஈண்டுக்காட்டலுறின், அவை பலரும் நகைத்து இழிப் பதற்குரிய பொருளாகி விடும் என்று அஞ்சிவிடுக்கின்றோம். இவர்களே பெரும்பாலும் தொடக்கக் கலாசாலைகளின் கண்காணிப் பாளர்களாக (inspectors of schools) வருகின்றனர். எனவே, இவர்களால் கண்காணிக்கப்படும் தொடக்கக்கலாசாலை களின் கல்விநிலை எவ்வளவு சீர்கேடு அடையும் என்பதைச் சொல்ல வேண்டுவதேயில்லை. தொடக்கக்கல்வி நம்நாட்டில் வளம்பெற வளராமைக்குக் கூறப்படும் காரணங்களுள், இக்கண்காணிப் பாளர்களுட் பெரும்பாலார் தமிழில் அறிவில்லாதவர்களாய் இருக்கின்றனர் என்பதும் ஒன்றாகும். ஆனால், இதனை உணர்ந்து தமிழறிவு சிறக்கவுடையவர்களை இத்தொழிலுக்கு உரிய வராக்கிவிடின், நாட்டில் கல்விநலம் மேன்மையெய்தும். எழுவாய் பயனிலை யியைபு அறியாதவர்களும், பாடசாலையின் நிலையினை நன்கு அறிந்து, அதனை உள்ள படியே தூயதமிழில் எழுதத் தெரியா தவர்களுமே பெரும்பாலும் கல்வித்துறையிற் பல்கியிருக்கின்றனர். இதுவே நாட்டில் கல்விவளர்ச்சிக்குப் பெருந்தடையாய் இருக்கிற தென்பதைத் தமிழ்த் தலைவர்கள் அறிவார்களாக. பாடசாலைக் கண்காகணிப்பாளராக வருகிற ஒவ்வொருவரும் தமிழில் வித்துவான் பட்டம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் என்றதொரு கட்டாய விதியை அரசியலார் பிறப்பிக்குமாறு செய்தல் வேண்டும். இது காறும் கூறியவற்றால், நம் தமிழ்க்கு ஆக்கமாகும் பணிகள் இவையெனச் சுருங்கக் கூறலுறுகின்றேன். 1. தமிழ்நாட்டுக் கலாசாலைகள் எல்லாவற்றிலும் தமிழ் கட்டாய பாடமாக இருத்தல் வேண்டும்; இதன் இடத்தில், ஆரியம், முதலிய பிறமொழிகள் இடம் பெறுதல் கூடாது. 2. ஏனை மொழிப்பாடங்களைக் கற்பித்தற்குக் கருவியாகும் புத்தகங்கள் யாவும் வேண்டாதவடசொற்கள் விரவியிருத்தல் கூடாது. 3. இப் பாடபுத்தகங்கள் வகுப்புயர்ச்சிக் கேற்ப நடை யுயர்ச்சியும் பொருளாழமும் உடையவாய் இருத்தல் வேண்டும். 4. இவற்றைக் கலாசாலைகளிற் பாடமாகத் தேர்ந்து கொள்ளும் அரசியற் கழகத்தில், நாடறிந்த தமிழ்ப்புலவர்களும், தமிழ்ச் சங்கங்களும் உறுப்புப் பெற்று, இவற்றை நன்கு ஆராய்ந்த பின்பே பாடமாக வைத்தற்குரிய தகுதிப் பாட்டினை வழங்க வேண்டும். 5. எல்லா உயர்நிலைத் தொடக்கப் பாடசாலைகளிலும் தமிழாசிரியர்கள் நியமிக்கப் பெறுதல் வேண்டும். 6. போதனா முறைப் பாடசாலைகளில் தொழில் செய்யும் ஆசிரியர்களும், பாடசாலைகளைக் கண்காணிப்பவர்களும் (teachers in Teachers ‘training school and Inspectors of schools’) தனித் தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். இக் கூறிய யாவும் நம் தமிழ்மொழியின் ஆக்கத்திற்குப் பெரும் பணியாவன வாகலின், தமிழ்மக்கள் இவற்றைமேற் கொண்டு, மேலும் ஆக்கமாவனவற்றையும் உடன் எண்ணி வேண்டுவனசெய்ய இன்னே முயலுமாறு வேண்டுகின்றேம். “ஞானமுண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே” - திருமூலர். - தமிழ்ப்பொழில்  38. அகநானூற்று உரை வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் அங்காட்(டு), இலையில மலர்ந்த முகையில் இலவம், கலிகொள் ஆயம் மலிபுதொடு(பு) எடுத்த அஞ்சுடர் நெடுங்கோடி பொற்பத் தோன்றிக் கயந்து களாகிய பயம்தபு கானம் எம்மொடு கழிந்தனர் ஆயின், கம்மென, வம்பு விரித்தன்ன பொங்குமணற் கான்யாற்றுப் படுசினை தாழ்ந்த பயில்இணர் எக்கர், மெய்புகு வன்ன கைகவர் முயக்கம் அவரும் பெறுகுவர் மன்னே; நயவர, நீர்வார் நிகர்மலர் கடுப்ப, ஓமறந்(து), அறுகுளம் நிறைக்குந போல, அல்கலும், அழுதல் மேவல வாகிப் பழிதீர் கண்ணும் படுகுவ மன்னே, என்பது, நல்லிசைப் புலமை மெல்லிய லாராகிய ஒளவையார் பாடியனவாகக் காணப்படும், பாட்டுக்களுள், ஒன்று. இது, "தலைமகன் பொருள் வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடுகண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் 'ஆற்றுவல்' என்பது படச்சொல்லியது," எனத்துறை கூறுகின்றது. இனி, இதற்கு உரைமுடிபு, மண்டிலம் சிவத்தலால் உண்டாகிய உருப்பு அவிர் காட்டு இலவம், நெடுங்கொடி பொற்பத் தோன்றிக் கயந்துகளாகிய கானம், எம்மொடு கழிந்தனராயின், கான்யாற்று, இணர்பயில் எக்கரிடத்து, கைகவர் முயக்கம் அவரும் கம்மென நயம்வரப் பெறுகுவர்மன்; (அவ்வாறு கழியாமையின் அதுவும் கழிந்தது;) கண்ணும், நிகர்மலர் கடுப்ப, ஓ மறந்து, அறுகுளம் நிறைக்குநபோல, அல்கலும், அழுதல் மேவலவாகிப் படுகுவமன் (எம்மொடு கழியாமையின், படாது ஒழிந்தன), என்பது. இனி, இதன் உரை:- வானத்தில் விரைவாகச் செல்லும் விளங்குகின்ற ஒளியினையுடைய சூரியன் நெருப்புப் போலக் காய்வதால் உண்டாகிய வெப்பம் சிறந்த அழகிய பாலைக்காட்டி லுள்ள, இலைகளும் அரும்புகளும் இன்றி, (முற்றவும்) மலர்ந்த இலவின்பூ, ஒலிகொண்ட மகளிர் கூட்டம் மகிழ்ந்து கூடியெடுத்த அழகிய விளக்குகளின் ஒழுங்குபோலத் தோன்றி, (உலர்ந்து) மெல்லிய துகளாகிய பயனற்ற சுரத்தின்கண், எம்மையும் தம் மோடு உடன்கொண்டு சென்றிருப்பாராயின், புதிதாய் விரித் தாற்போல் மிக்குற்ற மணல்பரந்த காட்டாற்றின் (கரையிற்) றோன்றிய மரங்களின் கிளைகள் தாழ்ந்துள்ள, பூங்கொத்துக்கள் விரவிக் கிடக்கும் மணல் மேட்டின்கண், (நம் தலைவராகிய) அவரும் ஒருவர் மெய்யினுள் மற்றவர் மெய் புகுவதுபோலும் கைகளால் தழுவிப்பெறும் முயக்கத்தை விருப்பம் மிக விரையப் பெறுவாரன்றோ; (அன்றியும்,) நீர்சொரியும் அழகிய ஒளி பொருந்திய பூவைப்போலக் கண்ணீருகுத்து, வற்றியகுளத்தை நீரால் நிறைப்பவைபோல அழுவதைப் பொருந்தாவாய், நம் குற்றமில்லாத கண்ணும் உறங்குவனவாம் அன்றோ; அவர் அவ்வாறு கொண்டு ஏகாமையினால், நாமேயன்றி அவரும் அம் முயக்கம் பெறுவது இல்லையாயிற்று; நம் கண்களும் உறங்குவது இல்லையா யிற்று, என்பது. இனி, சூரியன் வானம் ஊர்ந்துவருதல் முக்காலத்தும் ஒத்த செய்தியாகையால், நிகழ்கால வாய் பாட்டால் கூற வேண்டியதாயினும் விரைவுக் குறிப்புத் தோன்றுவதற்காக "ஊர்ந்த" என இறந்த காலத்தாற் கூறப்பட்டது. வட்டமாய்த் தோன்றுதலால், சூரியனை, "மண்டிலம்" என்றார். சிவந்த என்னும் பெயரெச்சம் காரணப் பொருளில்வந்து உருப்பு என்னும் பெயர் கொண்டு முடிந்தது. சிவத்தல், இலக்கணை, இலையுதிர் பருவத்தில், இலவுபூத்தல் இயல்பாகையால்"இலையிலமர்ந்த இலவம்" எனப்பட்டது. "இலையிலமர்ந்த வோங்கு நிலை இலவம், மலையுறுதீயிற் சுரமுதல் தோன்றும்" (ஐங். 338) என்றார் பிறரும். இனிப்பூத்தற்கின்றி முற்றவும் பூத்துவிட்டமைதோன்ற, "முகையில் இலவம்" என்றார். "அரும்பற, வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையும்" (246) எனப் புறநானூற்றினும் வந்தது. இலவம், சினையாகிய பூவைக் குறித்தலின், முதலிற் கூறும் சினையறி கிளவி. ஒலி செய்தலே மகளிர் கூட்டத்தின் சிறப்பியல்பு என்பதனால், "கலிகொள் ஆயம்" என்றார் போலும். அவர்கள் நெடியரும் குறியருமாய் ஒருநெறியின்றிக் கூடியிருத்தல் தோன்ற, "மலிபுதொகுபு" என்றார். பொற்ப என்பது உவமஉருபு. கயந்துகள் என்பது தடந்தோள் என்றாற்போல உரிச்சொல் முடிபு. "கயவென்கிளவி மென்மையுமாகும்" (சொல். 322) என்பது தொல்காப்பியம். பூவின்துகளாகலின், "கயந்துகள்" எனப்பட்டது. இவ்வாறு துகளாதற்குக் காரணம் காட்டின் "உருப்பு" என்க. மேலே கூறும் "பயிலிணர் எக்கர்" (9) போலாது, தன்பால் விழுந்தவை யாவும் வெந்து துகளாகுமாறு செய்யும் கொடுமை குறித்துப் பாலையைப் "பயந்தபு கானம்" என்றும், காட்டாற்றின்கண், பெருக்கு எழுந்தோறும் புதுமணல் வந்து விரிந்து விடுமாகையால், "வம்பு விரித்தன்ன பொங்குமணல்" என்றும் கூறினார். வம்பு, புதுமை, கம்மென என்னும் விரைவுக் குறிப்புணர்த்தும் இடைச் சொல் "பெறுகுவர்" என்பதனோடு கூட்டப்பட்டது. "தாழ்ந்த" (9) என்பதனைத் தாழ்த்த என்பதன் திரிபாகக்கொண்டு "உதிர்த்த" என்று உரைத்தலுமுண்டு. ஓ மறந்து என்பது ஒருசொல்லாய் இடையறாமல் என்னும் பொருள தாயிற்று. ஓவுதல், நீங்குதல், மன்னென்னும் இடைச்சொல் கழிவு குறித்து வந்தது. இனி இதன்கண் "கழிந்தனராயின்" (7) என்றதனால் உணரப் படும் பிரிவு, ஓதுதல், தூது முதலிய ஏனைப் பிரிவுகள் போலத் தெரித்துக் கூறப்படாமையால், ஆண்மகனுக்குக்கடன் எனப்படும் சிறப்புடைய பொருள் வயிற் பிரிவு என்பதும், "கைகவர் முயக்கம் அவரும் பெறுகுவர்மன்" (10-11) என்பதனாற் கூட்டமில்லாமையும், "அல்கலும், அழுதல் மேவலவாகி" (13-14) என்றதனால் அழுகை யும், "கண்ணும் படுகுவமன்" (15) என்றதனால் கண் துஞ்சாமையும் தோன்றக் கூறுதலால், தலை மகள்பால் மெலிவும், தன் மெலிவறிந்து தோழிக்குக் கூறுவதனால் தோழி ஆற்றாளாயினமையும், அதுகண்டு, "எம்மொடு கழிந்தனராயின்" (7) என்பது முதலியவற்றால் முயக்கம் பெறுதலும், அழாமையும், இனிது கண்படுதலும் கூறித் தேற்று தலின், தலைமகள் தான் ஆற்றுவல் என்பது படக் கூறியவாறும் பெறப்படுவதால், "தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது," எனத்துறை கூறுவதாயிற்று. இனி, தலைமகன் பிரிவினால் தன் மேனியுற்ற வேறுபாடு கண்டு, "அவன் அன்பிலனாய்க் கழிந்தான்," எனக் கருதித் தோழி ஆற்றாளாயினள் என்ப துணர்ந்த தலைமகள், உருப்பவிர் அங் காட்டின்கண் முற்றவும் மலர்ந்த இலவம், மகளிர் எடுத்த அஞ்சுடர் நெடுங்கொடி போலத் தோன்றி, உதிர்ந்து துகளாகியதுகண்டு, பிரிவுத் துன்பம் நின்று வருத்தும் மனையின்கண், நலங்கனிந்து தோன்றிய நம்மேனி, தன் பிரிவால் வேறுபாடு நினைந்து வருந்தும் பேரன்பினர்; ஆகலின், நீ ஆற்றாயாதல் என்னை, என இறைச்சியுட் சுட்டிக் கூறினாள். "அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டலும், வன்புறை யாகும் வருந்தியபொழுதே" (தொல். பொ. 231) என்பது விதி. இவ்விதி,பெரும்பான்மையும் தோழி கூற்றுக்கே யுரியதாயினும், தோழி வருந்திய பொழுதின்கண் தலைமகள் வன்புறையாகச் சிறுபான்மை வருதலின் தலைமகட்கும் சிறுபான்மை யுரித்தெனக் கோடல்வேண்டும். இவ்விதி இன்னார்க்கே யுரியதெனத் தெரித்துக் கூறாமையே, இதற்குச் சான்றாதல் அறிக. களவின்கண் ஒழுகுதல்போலத் தலைமகன் கற்புக் காலத்தில் நம்மை தன்னுடன் கொண்டேகுதல் முறையன்றென்பாள் "எம்மொடு கழிந்தனராயின்," (7) எனக்கொண்டு கழியாமை யுணரக்கூறி, வழியின்கண் நிகழ்வன அவர் மனத்தில் நம்மை நினைப்பித்து அழுங்குவித்தலின், அவர் அன்பு சிறந்து, கூட்டம் நினைந்து வருந்துவர் என்பாள், "கைகவர் முயக்கம் அவரும் பெறுகுவர்" (10-11) என்றும் கூறினாள். இஃது அன்புதொக நிற்றல் களவுக்காலத்துத் தலைமகனோடு உடன்போகியபோழ்துத், கூடியாடி மகிழ்ந்து பயின்றுளாள் ஆகலின், "வம்பு விரித்தன்ன பொங்குமணற் கான் யாற்றுப், படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர்" (9) எனச் சிறப்பித்தாள். "நிழல் காண்டோறும் நெடியவைகி, மணல் காண்டோறும் வண்டல்தைஇ, வருந்தா தேகுமதி வாலெயிற்றோயே" (நற். 9) என்பதனால், உடன் போக்கின்கண் தலைவனொடு கூடியாடி மகிழ்ந்து செல்லுதல் துணியப்படும். இவ்வாறு நிகழ்ந்ததுகூறி நிற்றலும் பாலை யாகும். "நிகழ்ந்ததுகூறி நிலையலும் தினையே" (தொல். பொ. 44) என்பது விதி. இஃது அழிவில் கூட்டத்து மறைந்தவை யுரைத்தல். நீர்சொரிதல் நீங்காவாயினும், கூடிய விடத்துப் போலப் பிரிவினும் தலைவன்வரும் நெறியும் பொழுதும் நோக்கி ஆற்றுமாறு பயத்தலின், "பழிதீர் கண்ணும்" (15) என்றாள். இனி, இதனை எதிர்மறைக் குறிப்பு மொழியாகக் கொண்டு, கண்ணீர் சொரிந்து மெலிவு தோற்றித் தலைவன்பால் பழியேற்றித் தூற்றும் கண்கள் என்று கூறுதலும் ஒன்று. மெய்ப்பாடு, இளிவரல்; பயன் தோழியையாற்றுவித்தல். இனி, இதன் அரும்பதவுரைகாரர் "அஞ்சுடர் நெடுங்கொடி பொற்பத்தோன்றி" (5) என்றவிடத்துத் தோன்றியென்பதைத் "தோன்ற" வென்பதன் திரிபாகக் கொள்வர். அவ்வாறு கொள்ளின், கயந்துகளாதற்காதல், கானம் பயன்கெடுதற் காதல் பொருந்தாமை யின், அதனால் ஒருபொருட் சிறப்பின்மை யறிக. அன்றியும், "அஞ்சுடர் நெடுங்கொடி" யென்றது கார்த்திகை விளக்கை என்றும் அவர் கூறுவர். "அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கட், செல்சுடர் நெடுங்கொடி போலப், பல்கூங் கோங்கம் அணிந்த காடே" (நற். 202) என்பது இதற்கு ஒத்த எடுத்துக் காட்டாகும். - தமிழ்ப்பொழில்  39. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் (ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் இன்றைய தமிழகத்தின் சிறந்த புலவர்களில் ஒருவர். அண்ணாமலைப் பல்கலைக் கழக விரிவுரையாளர் மட்டுமல்லர். சிறந்த சங்க இலக்கியங்களின் உரையாசிரியர்; நல்ல பேச்சாளர். அவர்களுடைய எழுத்தைப்பொலவே பேச்சும் கேட்போர் மனத்தை இழுக்கவல்லது. கற்போருக்குப் பெருவிருந்தாவன. அவர்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து செல்வியின் பரல்களிற் காணலாம்.) ஒருநாள் மாலை நான் குமணிக்குக் கட்டிளங்காளை ஒருவன் குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்தான். முதுகில் அம்பறாத் தூணியும் இடத்தோளில் நாணேறா வில்லும் இருந்தன. வண்டியில் அவன் எதிரே வாதுவன் குதிரை வார்களை இடக்கையிலும் கோலை வலக்கையிலும் பற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். வெய்யிலின் வெம்மை இயல்பாகவே குறைந்திருந்தது. தென்றலும் இனிதாக வீசிக்கொண்டிருந்தது. வண்டியும் மிக விரைவாகவே சென்றது. வண்டிசெல்லும் பெருவழியின் பக்கத்தே நின்ற குறுங்காட்டில் மரங்கள் தழைத்துப் பூத்து இனிய காட்சி வழங்கின. இங்குமங்கும் காட்டுப்பறவைகள் சிலவே காணப்பட்டன. விலங்குகள் எவையும் காணப்படவில்லை. மக்கள் எவரும் வழங்க வில்லை. இயற்கைக் காட்சியில் ஈடுபட்டுச் செல்லும் காளையின் உள்ளத்தில் இன்ப நினைவுகள் பல எழுந்து நிலவின. அவற்றை அவனது பொலிவுற்ற முகம் காட்டிற்றேயன்றி அவன் வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவேயில்லை. அவன் குறிப்பெல்லாம் வண்டி விரையச் செல்ல வேண்டுமெனும் ஒன்றிலே பதிந்திருந்தது. வாதுவனும் அக்குறிப்புப் பிழையாதவாறு குதிரைகளைச் செலுத்திக் கொண்டேயிருந்தான். இவ்வாறு செல்வோன் எதிரே குன்றுகள் பல இருந்தன. அவற்றின்மேல் மரமோ செடியோ புதரோ ஒன்றும் இல்லை. அவற்றின்பால் ஈரமும் பசுமையும் சிறிதும் இல்லை. கண்ட காளை "இங்கே மக்கள் வழங்குவதே இல்லைபோலும்" என்றான். வாதுவன் "மக்கள் வழங்குதற்குரிய வழிகள் உள்ளன; ஆனால் அவர்கள் வழங்குவதில்லை; வழிப்பறி செய்வோர் அச்சமே அதற்குக் காரணம்" என்றான். "மடியில் கனம் உடையவர் அஞ்சலாம்; மற்றை யோர் இனிது வழங்கலாமே?" எனக் கேட்டான் அக்கிளர் இளங் காளை. அந்நிலையில் வாதுவன் குதிரைகள் மருள்வதுணர்ந்து அவற்றைத் தேற்றிச் சேய்மையில் யானைகள் தம்முள் அணிவகுத்துச் செல்வது காட்டி, சிறிது தொலைவில் மூங்கிற் காடு தோன்ற அதனையும் காளைக்குக் காட்டினான். காளைக்கு வியப்புப் பெரிதாயிற்று. சிறிது போதில் யானைக்கூட்டம் மறைந்தது. மூங்கிற்காடும் நணுகிற்று. மூங்கிற்காட்டின் பக்கத்தே அழகிய சோலையும் இருந்தது. அதனுள் அணில்கள் பல அங்குமிங்கும் ஓடி விளையாடிக் கொண் டிருந்தன. சோலைப்பகுதி முற்றும் சருகுகள் குவியல் குவியலாகக் காணப்பட்டன. அவற்றிடையிருந்து திடீரெனத் தீயநாற்றம் உண்டாயிற்று. அதனைப் பொறானாய் நம் செல்வக் காளை குதிரைகளை விரையக் கடாவப் பணித்தான். சில வினாடிகளுக்குள் வண்டி அவ்விடத்தைக் கடந்து நெடுந்தொலைவு சென்று சேர்ந்தது. "தலைவ, தீய நாற்றத்துக்குக் காரணம் சருகுகளின் குவியலன்று; அவற்றுள்ளே மூடப்பட்டிருக்கும் பிணம். அவை வழிச் செல்வோர் வெற்றுடம்பு. மடியில் கனம் அல்லையாயினும், வழிப்பறி செய் வோர் வழிச்செல்வோரைக் கொல்வர். அவர்கட்குத் தலைவன் கட்டளைப்படி அவ்வாறு செய்யா விடின் அக்குற்றத்துக்குக் கழுவாயாக அவனுக்குக்களிற்றுக் கொம்பும் புலித்தோலும் இறையாகச் செலுத்தவேண்டும். கொம்பும் தோலும் பெறுவதிலும் வழிச்செல்வோரைக் கொல்லுதல் எளிதன்றோ" என்றான். இரக்கம் ஒருபாலும் வெகுளி ஒருபாலும் வருத்த வருந்தும் காளை, "வழிப்பறி செய்வோர் தலைவன் எங்கே உளன்?" என்றான். வாதுவன், "அவன் இந்த நாட்டவன்; அவனுக்கே இதோ, நம் எதிரில் தோன்றும் பகையில்லாத குன்றங்கள் உரியன" என்றான். "கையில் பொன்னும் பொருளும் இன்றி வறிதே செல்பவர் களையும் வருத்துவதில் இக்கொலைவேந்தன் பெறும் பயன் யாது?"என்பது போலும் வினாக்களும் விடைகளும் இருவரிடையே நிகழ்ந்தன. "தாம் உடையபொருளின் பயனை நுகர்தற்கு ஒவ்வொரு வர்க்கும் உரிமையுண்டு. அவ்வுரிமைக்குக் கேடுண்டாகாத வகையில் அரசனது அரசியல் நடத்தல் வேண்டும். வாழ்க்கையில் மக்கட்கு உரிமையும், அதற்கு வேண்டும் பாதுகாப்பும் வழங்குவது அரசர்க்கு அறம். அது நோக்காத, பாதுகாவாத, அரசியல் அறம்நிறைந்த அரசியலாகாது. அத்தகைய அறமில்லாத வேந்தன் நாட்டைத் தீண்டுதலும் குற்றம். விரையச் செலுத்துக" என விரும்பினான் அவ் வீரக்காளை. இது கேட்டலும் காளையின் உள்ளத்தே மக்கள் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் போரிட வேண்டுமெனும் வீரத்தீ எழவில்லையோ? எனின், வீரத்தீ யெழவில்லை; அவன் உள்ளத்தில் வேட்கைத் தீ விஞ்சியிருந்தது. ஓரளவே அவன் நெஞ்சு அவன்பால் இருந்ததேயன்றி முழுதும் இல்லை. தாமரை போலும் கண்கள்; யாழிசைபோலும் இனிய சொற்கள்? தண்புனத் தயலும் பொழிலகத்தும் சிறைப்புறத்தும் போந்து தன் உருவாலும் மொழியாலும் இன்பம் தந்த இளநங்கை; இன்பக்காதற் காழில் கனி - இவ்வகையில் அவன் நெஞ்சு அடிமை யுற்றுக் கிடந்தது. அறனில் வேந்தனை அலைத்து அவன் நாட்டிற் கெட்டிருந்த அறத்தை நிலைநிறுத்த வேண்டுவது காளைக்குக் கடன். காதலியின் காதலின்பத்தைப் பெறுதற்கு முயலுங்கால், இக்காளைக்கு இதுபோலும் கடமையொன்று குறுக்கிட்டது. காதலும் கடமையும் போர் உடற்றின. கடமை வென்றது. காளை காதலின்பப் பேற்றுக்குரிய கடிமணத்தை இடைவைத்துப் பிரிந்தான். கடமையை முடித்தான். வெற்றியோடு காதலியைக் காணவிரும்பி வந்து கொண்டிருப்பவன் இடையே இச்செய்தியைக் கேள்வியுறு கின்றனான். முதற்கடமை முடிவெய்தினமையின், இடையிற் பிறந்த கடமை காதலின் முன் வலியிழந்து நிற்கிறது. காதலியை நினைகின்றான். அவளுடைய கண்கள் காட்சி வழங்குகின்றன; அவளுரைத்த மெல்லிய சொற்கள் யாழினும் இனியவாய் இன்பம் செய்கின்றன; அவளது காதலின்பம் தோன்றி உடலெங்கும் இன்பவுணர்ச்சி பரப்பி வேட்கைத் தீயைக் கிளப்பி வெதுப்புகின்றது. அவளிருக்கும் ஊரும் கட்புலனாகிறது. பல்லிதழ் மென்மலர் உண்கண், நல்யாழ் நரம் பிசைத் தன்னஇன்தீங் கிளவி நலம்நல்கு ஒருத்தி இருந்த ஊரே............. என்கின்றான். வழிச் செல்வோர் வறியராயினும் அவர் உயிரை வாங்காதுவிட்ட கள்வரை யானைக்கோடும் புலித்தோலும் தந்து இறுக்குமாறு வருத்தும் தகவிலா வேந்தன் நினைவு வருகிறது. வழிச் செல்வோரிடம், கைப்பொரு ளில்லை யாயினும் மெய்க்கொண்டு இன்னுயிர் செகா அர் விட்டகல் தப்பற்குப் பெருங்களிற்று மருப்பொடு வரியதள் இறுக்கும் அறனில் வேந்தன் ஆளும் வறனுறு குன்றம் பலவிலங் கினவே என வருந்திச் சொன்னான். சொல்லொடு நின்றானா? மறத் தமிழ் மாண்பினனாதலின், சிறிது போதில் தன்னை வந்தடைந்த தானை வீரரைநிறுத்தினான். "அறனில் வேந்தனை" யடர்த்தான். அவனது அறமிலா ஆட்சியை யழித்தான். அறத்தை அந்நாட்டில் அழகுற அமைத்தான். அக்காளை அன்று தாங்கிய அம்பே அம்பு; அறம் நிலை நிறுத்திய அம்பு. அஃது அம்பறாத் தூணியில் அமைந்து கிடவாது, அவனது கடுந்தொடையால் வில்லினின்றும் நீங்கி அறத்தைத் தாங்கிச் சென்று, அறமிலான் நெஞ்சில் அமைவித்தது. கடுந் தொடையால் அறத்தைக் காவி (தாங்கி)ச் சென்றதுபற்றி. அக்காளை கடுந்தொடை காவிய காளையானான். அவன் அறத்துறையைப் பாடிய சான்றோர் கடுந்தொடைக் காவினார் என்ற கவின்மிக்க பெயர் பெற்றார். கடுந்தொடைக் காவினார் வாழ்க.  40. தமிழ் இலக்கியத்தில் நெய்தல் திணை - அணிந்துரை தமிழ்ச் சொற்களுக்கு இலக்கணம் உரைத்த பவணந்தியார், "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்றார். சொற்கள் மக்கள் உள்ளத்தில் எழும் எண்ணங்களின் வடிவமாகும். ஆகவே பழைய சொற்கள் மறைவதும் புதிய சொற்கள் தோன்றுவதும் வழுவாகா என்றது, மக்களிடையே பழைய எண்ணங்கள் மறைவதும் புதிய புதிய எண்ணங்கள் தோன்றுவதும் காலத்தின் விளைவாதலால் வழுவென்று தள்ளப்படாது இயல்பு எனக் கொள்ளப்படும் என்பது கருத்து. காலவெள்ளத்தில் மக்களிடையே பழைய எண்ணங்கள் மறைவதையும், புதிய எண்ணங்களும் அவற்றிற்கேற்ப நடையும் உடையும் மாறிவருவதையும் நாம் நன்கு காண்கின்றோம். போக்குவரவுக் கருவிகளும், புதுப்புதுக் கண்டுபிடிப்புக்களும் தோன்றியதன் விளைவாகப் பல்வேறு நாட்டு மக்களின் கருத்தும் மொழியும் பண்பாடும் தங்குதடையின்றி நம்மிடையே வந்து கலக்கின்றன. அரசியல், பொருளியல், அறிவியல் ஆகிய துறைகளில் புதிய மாற்றங்கள் தோன்றி இனிய பணி புரிவதை நாம் நாளும் கண்டு வருகின்றோம். முப்பதாண்டுகட்கு முன் வாழ்ந்த மக்களையும், இன்று வாழ்கின்ற மக்களையும் காணும் முதுமக்கள் இதனை நேரிற் கண்டு வியக்கின்றனர். மக்களினத்தின் நடையும் உடையும் மொழியும் வாழ்க்கை முறையும் பெருமாற்றம் எய்தியிருப்பது அவர்கள் அறிவுக்குப் புலனாகாமல் இல்லை. இவ்வாறே, மாறாவியல்பன எனக் கருதிய சாதியின் வேறுபாடுகளும் சமய வேறுபாடுகளும் மாறுகின்றன; கல்வித் துறையிலும் தொழில்துறையிலும் விஞ்ஞானக் கருத்துக்கள் புகுந்து பெருமாறுதல்களைப் புகுத்தியுள்ளன. மக்களின் நினைவுகளிலும் செயல்முறையிலும் மாற்றங்கள் இடம்பெற்றுவிட்டன. மாறுவதைச் சீரிதாகக் கொண்டு மக்கள் இயங்கத் தலைப்பட்டது இன்றுநேற்றன்று; மணிவாசகர் காலத்தேயே தோன்றி நிலவியது. காலமாற்றங்கட்கு உலகு இறையாவது கண்டும் இறைவன் திருவருள் மாத்திரம் மாறாது நிலைபெறுவது உணர்ந்தும், "மாறிலாத மாக் கருணைவெள்ளமே" என மனமாரப் பாராட்டிக் கூறினர். அக் கருணை வெள்ளத்தின் விளைவாய்த் தோன்றியதனால் மக்கள்வாழ்வின் அடிப்படை மாறாதே இருக்கிறது. மக்களின் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் ஊடுருவி நிற்பது ஒன்று உண்டு. அதனை இன்ப நாட்டம் என்பர். இன்பத்தை வேண்டாத உயிரே இல்லை. மக்களுயிரே யன்றி எல்லாவுயிருமே அதனை விரும்புகின்றன. அதனைக் கண்ட தொல்காப்பியர், "எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது, தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்" என்றார். இன்றுவரை அந்த இன்ப நாட்டம் மாறாதிருப்பது விஞ்ஞான வளர்ச்சியாலும் நன்கு தெளியப்பட்டது. அதனைப் பெருகப் பெறுதற்கும், எளிதில் விரைவில் எய்துதற்கும் மக்களினம் தன் அறிவு ஆண்மை பொருள் முதலியவற்றைத் தொழிற்படுத்தி முயன்றவண்ணம் இருக்கிறது. இம்முயற்சியால் புதிய புதிய கருத்துக்களும் கருவிகளும் பிறந்து பெருமாற்றங்களை விளைவித்து இன்ப நாட்டத்தை ஏற்றம் செய்கின்றன. இதனால் மக்களினம் இன்பப் பேற்றுக்குப் பொருளின் இன்றியமையாமையை உணர்ந்து அப்பொருளைப் பெறுதற்கும் பெருக்குதற்கும் பெருமுயற்சி செய்கிறது. பொருட்பேறு தொழில் வாணிகங்களின் துணையின்றி இயலாது என்பது தெளிவானபின் அவற்றில் மக்களின் கருத்து ஊக்கமுடன் இயங்குகிறது. இப் பொருளும் அதற்கு உரிய ஆள்வினையும் ஒருங்கு இயலுங்கால், இன்ப நாட்டம் மனக்கண்ணில் தோன்றி உலக வாழ்வை இன்பநிலையமாக்குதல் வேண்டும் என்ற உயரிய கொள்கையை உணர்த்தி ஊக்குகின்றது. இன்பநிலையை உணர்ந்து அதனை எய்துதற்குரிய நெறியில் ஏனை உயிர்களைவிட மக்களுயிர் மாண்புமிக்கது. நன்னெறி தீநெறி என்ற இரண்டாலும் இன்பம் பெறப்படினும், தீநெறியில் வருவது சிறிதுபோது நின்று பின்பழிவிளைத்துத் துன்பமாய் முடிதலால் அதனை விடுத்து நன்னெறியால் வரும் இன்பம் புகழ்விளைத்து நிலைபெற்றுப் பெருகுவதை மக்களுயிர் உணர்கிறது. இதுதான் மக்களுயிர்க்குள்ள மாண்பு. அம் மாண்பினை அறிந்து முயல்வதில் மக்களினம் முழுதும் ஈடுபடவில்லை. குணமேயுடையவரும் குற்றமேயுடையவரும் மக்களில் இல்லை. இரண்டும் விரவியே மக்கள் வாழ்கின்றனர். "குணநாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்" எனவும், "அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு" எனவும் திருவள்ளுவர் கூறினர். இதனால், மக்கள் நன்னெறியும் தீநெறியும் மேற்கொண்டு இன்பமும் துன்பமும் எய்துகின்றனர். எனினும், "இன்பமே எந்நாளும் துன்பமில்லை" என்ற நிலை எய்துவதே குறிக்கோள் என்பது பண்டும் இன்றும் என்றும் மாறாது நிலவுகிறது. இன்பம் வேண்டி முயலும் மக்களினத்திற்கு மற்றொரு சிறந்த பண்பு மேம்பட்டிருக்கிறது. தம்மினும் மிக்கார் காட்டும் வழியைப் பின்பற்றிச் செல்வது அப் பண்பு. அதுகண்டே சான்றோர் நன்னெறியால் விளையும் இன்பத்தையும் தீநெறியால் விளையும் துன்பத்தையும் தம்முடைய சொல்லாலும் எழுத்தாலும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இதனை நன்கு அறிந்துணர்ந்த சான்றோருள், தொல்காப்பியர் முதலியோர் காலத்துக்கு முன்பு வாழ்ந்த சான்றோர் அரியதோர் அன்புப்பணி புரிந்துள்ளனர். மக்கட் சமுதாயத்தின் அடிப்படை, கணவனும் மனைவியும் ஆக இருவரும் கருத்தொருமித்து நடத்தும் தனிக் குடும்பம்; ஒருவனும் ஒருத்தியுமாய்ப் பிறந்து காதலனும் காதலியுமாய் இயைந்து கணவனும் மனைவியுமாய்ப் பிணிப்புண்டு அறநெறியில் பொருளீட்டி இன்புற்று வாழ்வது அதன் உரிமைச் செயல். இக் குடும்பத்தினின்றும் கிளைத்துப் பெருகும் மக்களினம் அறச்செயலும் பொருட்பேறும் இன்ப நுகர்ச்சியும் குறைவறப் பெற்றுப் புகழ் நிறுவி மண்ணக வாழ்வை விண்ணுலகப் பெருவாழ்வாக மாற்றி மாண்புற்றுத் திகழும் என எண்ணினர். தமது எண்ணத்தை உருவாக்கும் வகையில், குணமேயுருவாய ஓர் ஆண்மகனையும் அவனோடு ஒப்பப் பெண்மைக்குரிய குணமே வடிவான ஒரு பெண்மகளையும் படைத்து அவர்களை முறையே தலைவனும் தலைவியுமாக நிறுத்தி இருவரும் காதலால் ஓருயிரும் ஈருடம்பினருமாக இயைந்து மனைவாழ்வு நடத்தி ஏனைக் குணமும் குற்றமும் விரவிய மக்களினத்துக்கு வழிகாட்டியாய் அமைதல் வேண்டுமெனத் துணிந்து ஐந்திணையொழுக்கம் என்னும் அன்பு நெறியை வகுத்து எழுத்தும் சொல்லும்போல இதுவும் இளமையிலேயே ஒவ்வொருவரும் பயிலவேண்டுவதென இலக்கணத்தில் இணைத்துரைத்தனர். தமிழ்வாழ்வில் நேர்ந்த சீரழிவு காரணமாகப் பொருளிலக்கணம் மறைக்கப்பட்டது. பின்பு இறையனார் அகப்பொருளும் அதற்குப் பின் பல அகப்பொருள் நூல்களும் தனியே தோன்றலாயின. புறப்பொருள் வகையில் பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை முதலியன தோன்றின. காலமாற்றத்தால் இப் பொருளிலக்கணம் பயில்வது அருகிற்று. தமிழர் உள்ளத்தில் பொருளுணர்வு குன்றவும், பொருளறிவும் பொருள் செய்யும் உணர்வும் குறைந்தன. தற்காப்புக்கும் தனக்கு இன்றியமையாத உணவு உடைகட்கும் பிறநாட்டவரை எதிர்நோக்கும் இழிநிலை தோன்றி நிலவுவதாயிற்று. உலக வாழ்வின்கண் மக்கள் செய்யும் பொருள், அன்பார்ந்த மனைவாழ்வும், பொருளும் புகழும் நல்கும் புறவாழ்வும் என இரண்டல்லது இன்மையின், இரண்டையும் தமிழ்ச் சான்றோர் அகம் புறம் எனக் கொண்டனர் போலும், பொருட்பேற்றுக்கும் வினைசெய்தற்கும் இடம் மனைக்குப் புறமாதலால் புறம் என்றும், அப் பொருளைக் கொணர்ந்து பயன் நுகருமிடம் அகமாதலால், அகவாழ்வின் அன்பு அறங்களை அகமெனவும் வகுத்து முறை செய்தனர். மாசற்ற குணவடிவாய தலைமக்கள் தனித்தனியே ஒருவர் ஒருவரைக் கண்டு காதலுற்றுத் கருத்தொருமித்து இயைவது களவு என்றும், பின்பு இருவரும் நாடும் ஊரும் அறிய நன்மணம் செய்து கொண்டு மனையறம் மேற்கொண்டு நல்லற நன்வினைகளால் பேரின்பப் பெருவாழ்வினராதல் கற்பு என்றும் முறைசெய்தனர். களவும் கற்புமாகிய அகப்பொருளை அன்பின் ஐந்திணை யொழுக்கம் என்றனர். ஐந்திணை என்பவை காதலன்புற்ற தலைமக்கள் கூடலும், பிரிதலும், கூடியும் பிரிந்தும் இருத்தலும், கூடுமிடத்து ஊடலும், பிரிந்தவிடத்து இரங்கலும் என ஐந்தாகும். ஒவ்வொன்றின் கண்ணும் தலமக்கள் உள்ளத்தெழும் கருத்துக் களைப் பாடலுற்ற சான்றோர், ஒவ்வொன்றிற்கும் இடமும் காலமும் வகுத்து இயற்கைச் சூழ்நிலையொன்றை அமைத்து உரைத்தனர். பாடுதற்குரிய கருத்தை உரிப்பொருள் எனவும், இயற்கைச் சூழ்நிலையைக் கருப்பொருள் எனவும், இடமும் காலமுமாகிய இரண்டினையும் முதற்பொருள் எனவும் வகுத்துக் கொண்டு, கூடலாகிய உரிப்பொருளைக் குறிஞ்சியெனவும், பிரிவைப் பாலையெனவும், இருத்தலை முல்லையெனவும், ஊடலை மருதமெனவும், இரங்கலை நெய்தலெனவும் பகிர்ந்தனர். குறிஞ்சியின் சூழ்நிலை மலைநாடு; முல்லை காட்டுநாடு; மருதம் , நீர்வளம் நிறைந்த நன்செய் வளமிக்க நிலப்பகுதி; நெய்தல் கடற்கரை நாடு. இந்நூலின்கண், பண்டித வித்துவான் சாம்பசிவம் அவர்கள் நெய்தற் பாட்டுக்களைத் தொகுத்து அவற்றின்கண் அமைந்த முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் மூன்றையும் வகுத்து ஒவ்வொன்றையும் தனித்தனியாக நிறுத்தி விளக்கியிருப்பது இதனைப் பயில்வோர்க்கு அகப்பொருள் நலத்தை எளிதில் உணர்ந்து இன்புறுதற்கு வாய்ப்பாக இருக்கிறது. கருப்பொருட் கூறு, இயற்கையில் காணப்படும் மரம் செடி கொடி முதலியனவும், பறவைகளும் விலங்குகளும் அங்கு வாழ்பவர் மேற்கொண்ட தொழிலும் பிறவும் அடங்கியது. ஆதலால், நெய்தலிற் காணப்படும் உயிரினங்களையும் பிறவற்றையும் தனித்தனியாகக் காட்டியிருப்பது மிகவும் பொருத்தமான செயலாகும். சிறந்த தமிழாசிரிய ராதலால், மாணவர்களும் பிறரும் பொருளியல்பை நன்கு உணரத்தக்க வகையில் எடுத்துரைக்கின்றார். நெய்தற்றிணை ஆராய்ச்சிக்கென எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என்ற தொகை நூல்களில் உள்ள நெய்தற் பாட்டுக்களைத் தொகுத்து அவற்றின் கருத்துக்கள் யாவும் இனிது விளங்க எளிய நடையில் உரைப்பது அவரது இயல்பாக இருக்கிறது. இயற்கை உயிர்களின் இயல்பு கூறற்கண்ணும் உரிப்பொருளின் உயர்ந்த கருத்துக்களை விளக்குதற் கண்ணும் நண்பர் திரு.சாம்பசிவம் எளிய முறையில் யாவரும் நயந்து மகிழுமாறு இனிமை கமழ எழுதுவது அவரது புலமை நயத்தை நன்கு வெளிப் படுத்துகிறது. இதனைக் காணும் என் உள்ளம் இவர் ஏனைத் திணைகட்கும் இவ்வாறு எழுதவேண்டுமென விரும்புகிறது. திரு.சாம்பசிவத்தின் இத் தமிழ்ப் பணி காலத்தாற் செய்யும் அரும்பணி யாதலின் தமிழுலகம் இதனை விரும்பி வரவேற்கு மென்று நம்புகிறேன். இவர்கட்கு இதுபோலும் நற்பணி புரிதற்கு இன்றியமையாத நலம் பலவும் பெருக அருளுமாறு ஞாலம் புகழும் ஆலவாய் அண்ணல் திருவருளைப் பரவுகின்றேன்.  41. தமிழிசைப்பாடல் இராகம்: இரதிபதிப்பிரியா தாளம்: ஆதி ஆ: ச ரி க ப நி ச அ: ச நி ப க ரி ச 20-ஆவது மேளத்திற் பிறந்தது முதனிலை இனிநலமே தமிழ்மா மகளே, கேள் இனி, இடைநிலை நினைவெலாம் நினைப் பரவ வேண்டி நிகழ்வ தாதலால் குறைவ திலாமலே இனி இறுதிநிலை தான் தனி யாம் தமிழ்த் தாய் நின தாள்பணி தான்புரி வோம் தயங் கோம் இனி யாம் தேங்குபுகழ் மிகச் சொல்லும் வளமில்லையோ செஞ்சொல் நலம் பல செய்திடு வோம் யாம் இனி  42. கவிதைகளின் அணியமைப்பு ஒருகால், கம்பர் கோதாவிரி யாற்றின் சிறப்பைக் கூற நேர்ந்தபோது அதனுடைய பொருள் நலமும், தெளிவும், ஒழுக்கும் அவர்க்குச் சங்கச் சான்றோர் பாடிய பாட்டை அவர் நினைவில் எழுப்பின. அவர், "புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி அவியகத் துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரியினை வீரர் கண்டார்" என்றார். இதனால் ஆன்ற பொருளும், ஐந்திணை நெறியும், சவியுறு தெளிவும், தண்ணென்ற ஒழுக்கமும் பொருந்தியிருப்பது சான்றோர் கவிகளின் தன்மையாவது தெரிகிறது. ஐந்திணை நெறி பொருளொடுபட்ட தாகையால், பொருள்நலமும், சவியுறு தெளிவும், தண்ணென்றொழுக்கமும் கவிகட்குச் சிறப்புத் தருவன எனக் கொள்ளலாம். இவற்றுள் சவி என்பது ஒளியெனப் பொருள் தருமாயினும், இனிய ஓசை காரணமாகப் பிறக்கும் ஒட்பம் என நாம் அதற்குப் பொருள் செய்யலாம். இவ்வாறே தண்ணென்ற ஒழுக்கம் எனக் கம்பர் கூறியது, கவிகளில் சான்றோர் தொடுத்திருக்கும் சொற்கள் ஒன்றனையொன்று தொடர்ந்து நிற்குஞ் சொல்லொழுங்கு என்றல் பொருந்தும். எனவே, பொருள்வளமும், இன்னோசையும், தெளிவும், செவ்விய சொல்லொழுங்கும் கவிகட்குரிய மாண்புகள் என்பது விளங்குகிறது. அவற்றை முறையாகக் கண்டறியப் பிறக்கும் அறிவின்பத்தைக் கவியின்பம் என்று கூறுவர். ஆனால், கம்பரோ அவ்வின்பத்தைப் பிறிதோரிடத்தில் "தென்னுண் தேனில் தேக்கிய செஞ்சொற் கவியின்பம்" என அள்ளூறித்தித்திக்கப் பேசுகின்றார். மேலும், ஒன்றை யொன்று தொடர்ந்து இசையால் இயைந்து நிற்கும் சொல்லொழுங்கினை, தண்ணென்ற ஒழுக்கம் எனக் கம்பர் கூறியதனை நூல்கள் யாப்பு எனக் குறிக்கின்றன. யாழின்கண் நரம்புக் கட்டு அமையாதபோது இனிய இசை எழாது; அதுபோலவே, கவியின்கண் யாப்பு நன்கு பொருந்தாதாயின் இன்னோசை பிறவாது. "பண்ணென்னாம் பாடற்கு இயைபு இன்றேல்" என்ற திருக்குறள் இங்கே நினைக்கத்தக்கது. இதுபற்றியே கவியமைதிக்கு யாப்பு இன்றியமையாது வேண்டப்படுகிறது. கவிநலத்தைக் குறிக்க வந்த கம்பர் வேறோர் அழகிய கருத்தை அறிவிக்கின்றார். சிறந்த கவியென்பதுதான் பிறந்த நாட்டுக்கே அணியாய்த் திகழவேண்டும் என்பது அவர் கருத்து. இதே கருத்து ஆங்கில நாட்டுப் புலவர்களிடையேயும் நிலவிற்று. நமது இந்திய நாடு ஆங்கிலப் பேரரசின் கைப்பட்டிருந்தபோது, "இந்தியப் பேரரசு வேண்டுமா? செகப்பிரியரின் கவிதை வேண்டுமா? எனின், இந்திய நாட்டை இழந்தாலும் இழப்பேன், செகப்பிரியரின் கவிதையை இழக்க ஒருப்படேன்" என்று ஆங்கிலப் பெரும் புலவரான கார்லைல் கூறினார். அவரது அக்கருத்தை அவர்க்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த கம்பரும், "புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி" என எடுத்து மொழிந்திருப்பது அறிஞர் நினைவு கொள்ளற்குரியது. பொருள் வளமும், இன்னோசையும், தண்ணென்ற யாப்பும் உடைய கவிகளைப் பாமாலை என்றும் உரைமாலை என்றும், பண்டையோர் குறிப்பது வழக்கம். பாட்டும் உரையும் இனிய சொற்களால் ஆக்கப்படுவது பற்றி அவற்றைச் சொன்மாலை என்று உரைப்பதுமுண்டு. மாலை என்ற சொல் முதன்முதலில் தோன்றிய போது பூக்களே மாலைக்குப் பயன்பட்டன. அதனால், சொன் மாலை, பாமாலை என்ற தொடர்களால், சொல்லும் பாட்டும் பூக்களாகக் கருதப்பட்டமை இனிது விளங்கும். இதனை, "சொல்லென்னும் பூம்போது தோன்றிப் பொருளென்னும் நல்லிருந் தீந்தாது நாறுதலால் - மல்லிகையின் வண்டார் கமழ் தாமமன்றே மலையாத தண்டாரான் கூடற் றமிழ்" என்ற பழம் பாட்டும் வற்புறுத்துகிறது. ஏனைப்பூக்கள் எல்லா வற்றினும் மிகுந்ததாகையால், இப்பாட்டு மல்லிகையைச் சிறந்தெடுத்து மொழிகிறது. பூவின்கண் இதழும் மணமும் தேனும் இருந்து காண்பார்க்கு இன்பம் செய்வதுபோலச் சொன்மாலை பாமாலைகளிற் செஞ்சொல்லும், இன்னோசையும், நன்பொருளும் கிடந்து இன்பம் செய்கின்றன என்பது கருத்து. இவ்வாறு சொற்களைப் பூவென்று சான்றோர் பலரும் குறிப்பதில் வேறு ஓர் ஆழ்ந்த கருத்தும் உளது. பூவோ, தன் நிறத்தாலும், மணத்தாலும் வண்டினங்களைத் தன்னிடத்துற்ற தேனை யளித்து இன்புறுத்தும் செயல் நலமுடையது; பாட்டோ எனின், தற் சொற்செம்மையாலும் ஓசையினிமையாலும் படிப்பவர் மனத்தை ஈர்த்துத் தன்னிடத்தே அமைந்த பொருள் நலத்தால் மகிழ்விக்கின்றது. ஆயினும், பூவும் கவிதையும் ஒருவகையில் வேறுபடுகின்றன. பூவானது நிறத்தாலும் மணத்தாலும், காண்போருடைய கண்ணும் மூக்குமாகிய பொறியிரண்டினையும் பணி கொள்ளுகிறது; கவிதை, கற்பவரின் கண்ணும் செவியுமாகிய இரு பொறிகளையும் இயக்குகிறது. இதனை, "கண்ணினும் செவியினும் நுண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே". என்று தொல்காப்பியனார் சுட்டியுரைத்துள்ளார். இதனால் சொல்லையும் ஓசையையும் கருவியாகக் கொண்டே பாட்டுக்கள் நன்பொருள் உணர்த்தி மக்களுக்கு அறிவின்பம் நல்கும் அரும்பணி செய்வதை அறியலாம். இந்த அறிவின்பத்தைக் கம்பர் முதலாயினோர் செஞ்சொற் கவியின்பம் என்றனர்; இக்காலத்தவர் கவிதையின்பம் என்று இசைக்கின்றனர். வண்டினத்தைத் தம்பால் வருவித்தற்குக் கருவியாகக் கொண்ட நிறமும் மணமும் பூக்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளன. அவற்றிற்குச் செயற்கையழகு ஒன்றும் சேர்ப்பதில்லை. யாரே அழகுக்கு அழகு செய்வார்? சொற்களையும் பூவாகக் கருதினமையின் பழங்காலத் தமிழ்ச் சான்றோர், செயற்கையாகப் புணர்க்கப்படும் அணிவகைகளைத் தனியாக எடுத்து ஆராயவில்லை; பூமாலை களைத் தொடுப்பதில் செயல்வகை தோன்றியது போலச் சொன்மாலை தொடுப்பதிற் சில தோன்றக் கண்டு அவற்றை மாட்டு என்றும் வண்ணம் என்றும் வகுத்துரைத்தனர். கவிதைக்கண் இயல்பாக அமைய வேண்டிய அழகு வகைகளை மாத்திரம் வனப்பு என வகுத்தும் விரித்தும் உரைத்தார்கள். உவமம் என்பது மக்களுடைய பேச்சு, எழுத்து, பாட்டு என்ற மூன்றிலும் பயின்று பொருள் இனிது விளங்குவது நோக்கமாக அமைந்த சொல் வழக்காகக் கருதப்பட்டது. ஒருவன் வாழ்க்கையில் நாளும் பயிலும் இடம் பொருள் முதலியன வழங்கும் காட்சிகளும், அவ்வப்போது நிகழும் நிகழ்ச்சிகளும், பயிலும் நூற்பொருளும் அவன் உள்ளத்தின்கண் கிடந்து அவனுடைய பேச்சிலும் எழுத்திலும் பாட்டிலும் உவமங்களாக வெளிப்படும். அவற்றையும், தன் கருத்துக் களை பிறர் நன்கு உணரவேண்டும் என்ற குறிப்பிலேயே அவன் கையாளுகின்றான். அதனால் ஒருவன் வழங்கும் உவமங்கள் அவனுடைய உலகியலறிவையும், வாழ்க்கை வளத்தையும், கற்பனைத் திறனையும் காட்டுதற்குப் பெருந்துணைகளாகப் பிறங்குகின்றன. பெரும்புலமை படைத்த பெரியோரிடத்தும், செய்தற்கெளியவற்றையும் செய்து முடிக்கும் திறம் பெறாத சிறியோரிடத்தும் இவ்வுவமங்கள் ஒப்ப நின்று அவரவர் மன விரிவுக்கேற்ப அவர் கருத்துக்களைப் பிறர் அறியப் புலப்படுத்து கின்றன. இதுபற்றியே பழந்தமிழ்ச் சான்றோர் உவமத்தைச் செய்யுள் போலத் தனியே நிறுத்தி ஆராய்ந்தனர். மேலும் ஒருவன் தான் பிற பொருள்களை யுணர்தற்கும் பிறர்க்கு உணர்த்தற்கும் சிறந்த சொல்வழக்காக இருப்பது பற்றியே பண்டையோர் உவமத்தையும் யாப்பையும் பொருளின்கண் அடக்கி, எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பாலாக நிறுத்தி இலக்கணம் கண்டனர். தொல்காப்பியரும் அந்நெறி பற்றியே உவமத்தையும் யாப்பையும் பொருளதிகாரத்தில் வைத்து உரைத்தார். பனம்பாரனார் என்ற சான்றோரும் "எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி" உரைப்பதே தொல்காப்பியர் கருத்து என்றார். தொல்காப்பியர்க்குப் பன்னூறாண்டு பின்னர்தோன்றிய சான்றோர் செய்யுளியலிற் காணப்படும் பாவகைகளில் இனங்கள் பல தோன்றக் கண்டு யாப்பு என்ற பெயராற் பல நூல்கள் எழுது வாராயினர். அவற்றுட் பல பொருட் சிறப்பு இல்லாமையாலோ பேணுவார் கைவிட்டமையாலோ இறந்து போயின; ஒன்றிரண்டே எஞ்சின. இவற்றின் தோற்றக் கேடுகளால், கவிகளை மலர் என்று கருதிய கருத்தோடு உடம்பு எனக் கருதும் கருத்தொன்று உருவாயிற்று. காக்கைபாடினியார் என்ற சான்றோர் தாம் பாடிய யாப்பு நூலுள், "நாதம் முதலாக நல்லுறுப் பேழும் இயைந்து ஏதமில் தன்மை இயல்ஆசாம் - தாதுக்கள் ஏழும் புணர்ந்தது யாக்கை எழுத்தாதி ஏழும் புணர்ந்தது யாப்பு" என்று கூறினர். இக்கருத்தையே ஏறக்குறைய 600 ஆண்டுகட்கு முன்பு விளங்கிய பவணந்தியார், "பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல சொல்லாற் பொருட்கு இடனாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்" என்று வற்புறுத்திச் சென்றார். 350 ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த குமரகுருபர அடிகளும், "கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க்கு ஒவ்வான் - மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயாபுகழ் கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு" என்று பாராட்டினர். இங்ஙனம் கவிகளை உடம்பாகக் கருதும் கொள்கை நிலை பெறவும் ஆடை அணிகளால் ஒப்பனை செய்யும் உணர்வு சிறந்து, செய்யுள்களின் மேல் பரவுவதாயிற்று. ஆடையணிகளுள் ஆடை இன்றியமையாத தென்பது உலகறிந்த உண்மை. "ஆடையில்லாதவன் அரைமனிதன்" எனவும், "அணியெல்லாம் ஆடையின் பின்" எனவும் வரும் பழமொழிகளே இதற்குப் போதிய சான்று. அணிவகை கவிதையாகிய உடம்புகட்கு ஏறியபோது உவமத்தை ஆடை யாகவும் மெய்ப்பாடு வனப்பு முதலிய நலங்களை அணிகளாகவும் அறிஞர் சிலர் கருதத் தலைப்பட்டனர். வடநூல் ஆசிரியர் ஒருவர், கவிதையை ஓர் ஆடரங்காகவும், உவமையணியை ஆடுகளமாகவும் கற்பனை செய்தார். தாம் செய்யும் எல்லாப் பொருள்களையும் அணி அணிந்து அழகுறுத்திக் காண்பது மக்கள் இயல்பு. நாள் செல்லச் செல்ல அஃது இயற்கையும் செயற்கையுமாகிய எல்லாப் பொருள்களுக்கும் அணி பெய்து மகிழும் தன்மையாயிற்று. முதலில் அது உடையைப் பற்றிப் பின்பு உடம்பைப் பற்றி முடிவில் உணர்வுக்கும் உரைக்கும் சென்று பற்றிக் கொண்டது. பின்னர், மக்களுடைய பேச்சு எழுத்து பாட்டு ஆகிய எல்லாத் துறையிலும் அணிவகைகள் பரவினமையால், சான்றோர் அவற்றுக்கெனத் தனியே இலக்கணம் காண்பாராயினர். தமிழ் ஆங்கிலம் முதலிய இயற்கை மொழிகளைப் போலாகாது சமக்கிருதம், நன்கு செய்யப்பட்டது எனப் பொருள்படும் செய்கை மொழியாகையால் அதன்கண் அணி நூல்கள் மிகப்பல உண்டாயின. ஆங்கிலத்தில் அணியிலக்கணமே கிடையாது; சொல்லோவியம்.1 என்பது அணியே யாயினும் அது தமிழ்ப் பொருளதிகாரத்தில் உவமம் நிற்பதுபோல ஆங்கிலச் சொல்லிணக்கத்தோடே சேர்ந்து நிற்கிறது. தொல்காப்பியர்க்குப் பல்லாயிரம் ஆண்டுக்குப் பின் தோன்றிய தமிழ்ச் சான்றோர் சிலர், சமக்கிருதம் பயின்று, அதன்கட் கண்ட அலங்காரங்களையும், தொல்காப்பியத்தில் உள்ள சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்ற இரண்டிலும் காணப்படும் சொற்பொருள் வழக்காறுகளையும் தொகுத்து, அணியிலக்கணம் என்ற பெயரால் ஒருசில நூற்றாண்டுகட்கு முன்பே எழுதினர். பொருளதிகாரத்துச் செய்யுளியலை வேறு நிறுத்திப் பிற்காலச் சான்றோர் யாப்பிலக்கணம் கண்டது, இந்த அணியிலக்கணம் வகுத்துரைப்பதற்கு வழிகாட்டியாயிற்று. தமிழில் இப்போது, தண்டியலங்காரம், வீரசோழியம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம் என நான்கு நூல்களே உள்ளன. நாளும் வளர்ந்து வரும் மக்கள் உள்ளத்தை ஊக்கிப் புதிய புதிய பாட்டுவகைகளில் அவர்களைத் தொழிற்படுத்துவதில் யாப்பு நூல்கள் பெரும்பணி செய்துள்ளன. சீவகசிந்தாமணி கம்பராமாயணம் பெரியபுராணம் முதலிய பெருங்காப்பியங்கள் தோன்றியது இதனாலேயாம். இவ்வாறே அறிஞர் அறிவைப் புது நெறியிற் புகுத்தி மேலும் மேலும் மக்கள் வாழ்வை மாண்புறுத்தும் அணி நிறைந்த காப்பியங்கள் செய்யுமாறு தூண்டுவதில் இந்த அணியிலக்கணங்கள் தவறின. ஆயினும் ஆங்காங்கு அவ்வப் போது தோன்றிய தமிழ்க் கவிதைகளில் மேலே காட்டிய அணிகள் அமைந்து தமக்குரிய இன்பத்தை நல்குவதில் தவறுவதில்லை. தமிழ் அணியிலக்கணங்கள், பொதுவணி, பொருளணி, சொல்லணி என அணிகளை மூன்றாக வகுத்து அவற்றை விரித்துரைக் கின்றன; சொல்லிலும் பொருளிலும் யாப்பிலும் குற்றம் என விலக்கப்பட்டவற்றுக்கு மறுதலையான குணங்களையெல்லாம் தொகுத்துப் பொதுவணி என்ற பகுதியிலும், இசைத் தமிழ்ப் பகுதியில் கிடந்த மடக்கு வகைகளையும் வடநூலுட் காணப்படும் சித்திரக்கவி வகைகளையும் இறுதியில் நிற்கும், சொல்லணிப் பகுதியிலும், ஏனை உவமம், உருவகம் முதலிய அணிவகைகளைப் பொருளணிப் பகுதியிலும் உரைக்கின்றன. ஒரு பொருளின் வடிவம் நிறம் பயன் தொழில் என்பவற்றை ஒருவன் பிறர்க்கு உரைத்துக் காட்டுமிடத்து உவமம் தோன்றுவது இயல்பு; உவமத்தால் விளக்கப்படுவது பொருள் எனப்படும்., உலகுக்கெல்லாம் முழுமுதல் கடவுளாகிய ஆதிபகவன் என்று சொல்ல வந்த திருவள்ளுவர், "அகரமுதல எழுத் தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே யுலகு" என்று கூறினர்; இப்பாட்டில் எழுத்தெல்லாம் அகரமுதல என்றது உவமம்; "உலகு ஆதிபகவன் முதற்று" என்றது பொருள். உவமம் எல்லாம் பொருளை விளக்குதற் கேற்ற சிறப்பும் உயர்வும் உடையவாதல் வேண்டும். மேலும், அவை, கேட்போர் மனம் இசைந்து "தகும்" எனத் தலையசைத்து அமையத் தகுவனவாய் இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணின் கூந்தற் கருமையைக் குறிக்க வந்த கவிஞர் அதனை "மேகத்தையனைய கூந்தல்" என்றும், "இருளிருங் கூந்தல்" என்றும் கூறுவது தகும். ஒருவன் "கரிபோல் இருக்கும்காண் கன்னியிவள் கூந்தல்" என்பானாயின், அவன் கூற்றை அறிவுடையோர் கொள்ளார். மேகமும் இருளும் போலக் கரி உயர்ந்த பொருளாகாது; மக்களும் கரியை உவமையாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளாது இகழ்வார்கள். இதுபற்றியே, தொல்காப்பியம் 'உயர்ந்ததன் மேற்றே உள்ளும் காலை" எனவும், "உவமும், பொருளும் ஒத்தல் வேண்டும்" எனவும் உரைத்துள்ளது. இவ்வியல்பு அறியாமையால் இந்நாளைய பாவலரொருவர், "அரிக்கன் விளக்குப்போல் அமைந்த விழி இரண்டுடையாள்" என்று பாடினர்; கேட்டவர் அனைவரும் இகழ்ந்து கைகொட்டி நகையாடினர். எடுத்துக்கொண்ட பொருளின் சிறப்பும் அதனைச் செய்பவரது சால்புமே உவமத்தின் தகுதி காண்பதற்கு அமைந்த உரைகல். இவ்வாறே அணிகள் யாவும், "வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் பெருவழக்கு" வழி நிற்பனவாகும். இனி, கவிகளிற் காணப்படும் அணிவகைகள் யாவும் அவற்றில் இடங்கொண்டிருக்கும் பொருளின் உயர்வு தாழ்வுகளையுணர்த்தலும், நலந்தீங்குகளைக் காட்டுதலும், விருப்பு வெறுப்புக்களைப் புலப் படுத்தலும், வன்மை மென்மைகளைச் சிறப்பித்தலும் என்ற நான்கின் அடிப்படையில் எழுவனவாகும். "சிறப்பே நலனே காதல் வலியொடு, அந்நாற்பண்பும் நிலைக்களம் என்ப" என்று தொல்காப்பியர் கூறுகின்றார். மேலும் அவர், "அந்நாற்பண்பும் நிலைக்களமாகும்" என்னாமல், "நிலைக்களம் என்ப" என்று உரைப்பதால், தொல்காப்பியனார்க்கு முன்பு வாழ்ந்த சான்றோர்களே இந்த அடிப்படையைக் கண்டனர் என்று அறிகிறோம். காலையில், கிழக்கில் தோன்றி விளங்கும் ஞாயிற்றைக் கண்ட சான்றோர் ஒருவர் அதன் தோற்றச் சிறப்பை ஆர்வத்தோடு தன் தோழர்க்குச் சொல்லுகின்றார். விரிந்த வானத்தில் கிழக்கில் ஞாயிறு தோன்றவும், அதன்கண் பரவியிருந்த இருள் முற்றும் அகன்றது; பகல் ஒளி எங்கும் விரிந்தது என்று சொல்லக் கருதின அவர், "அகல்இரு விசும்பில் பாயிருள் பருகி பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி" என்று பாடினார். காதலனைப் பிரிந்த நங்கை யொருத்தி மாலைப் பொழுது வர, மதியம் வானத்தில் எழுந்ததும் ஞாயிறு மேற்கில் மறைந்ததும் கண்டு கவலை மிகுந்து மனம் வருந்தித் தன் தோழிக்குக் கூறுவாளாய், "புதுமதிபுரை முகத்தாய் போனார்நாட்டு உளதாங்கொல் மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்த இம்மருண்மாலை" என்று கூறுவதாக இளங்கோவடிகள் இயம்புகின்றார். இது காதல் அடிப்படையில் அவள் எய்திய வருத்தத்தை இனிது உணர்த்துவது காணலாம். இது பொதுவணிவகை. சேரநாட்டுக் கழுமலம் என்னும் ஊரின்கண் நிகழ்ந்த போர் ஒன்றில் சோழன் செங்கணான் வெற்றி பெற்றான். அவனது களத்தைப் பாடிய பொய்கையார் என்னும் சான்றோர், மாற்றாராகிய சேரருடைய படை ஏந்தி நின்ற வெண்குடைகள் சோழனது படைக் களிறு உதைத்ததால் கீழ்மேலாய் முறிந்து வீழ்ந்து சிதறிய காட்சியைப் பொருளணிவகையுள் ஒன்றான உவமவணியால் உரைக்கின்றார். மழைக்காலத்தில் குப்பை மேடுகளில் தோன்றும் குடைக் காளான்கள், மேயவரும் ஆனினங்களின் கால்பட்டு உடைந்து சிதறுவது யாவரும் அறிந்த தொன்று, ஆதலால், அதனை உவமையாக்கி யுரைப்பாராய், "ஓ ஓ உவமன் உறழ்வின்றி ஒத்ததே காவிரி நாடன் கழுமலம் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெல்லாம் கீழ்மேலாய் ஆவுதை காளாம்பி போன்ற செங்கணான் மேவாரை அட்ட களத்து" என்று பாடிக் காட்டுகின்றார். போர்க்களிறுகள் உதைத்ததனால் மாற்றார் குடை யெல்லாம் கெட்டழிந்தன என வாளா கூறிய வழித் தோன்றாத இன்பம், "ஆவுதை காளாம்பி போன்ற" என்ற உவமையால் சிறந்து தோன்றுகிறது. இது மாற்றார் தோல்வியைச் சிறப்பித்து நிற்பது. சங்க காலத்தில் தொண்டை நாட்டுக்குக் காஞ்சி தலைநகரும் பவத்திரி கடற்கரை நகருமாக விளங்கின. அந்நாளில் ஒரு சான்றோர் காஞ்சி நகரைக் கண்டார்; அதன் பெருமையும் ஆங்கு எழும் பேரொலியும் அவரைப் பெரிதும் வியப்படையச் செய்து கடலை நினைக்கச் செய்தன. உடனே அவர், "மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும்" என்றார்; அப்போது கச்சி நகரின் செல்வ வளம் அவர் சிந்தனையில் மிக்கு மிக்கு எழுந்தது; அதனால் அவர் - மலிதேரான் "கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ எல்லாம் படும்" என்று பாடினார். இவ்வாறு கச்சி நகர்க்கும் கடலுக்கும் தொடக்கத்தில் ஒற்றுமை காட்டிப் பின்பு வேற்றுமை காட்டிய வழியும் கச்சி நகரின் பெருமையே பிறங்குவதால் நமக்கு இன்பமுண்டாகிறது. இதனைப் பொருளணி வகையுள் வேற்றுமையணி என்பர். பகைவர் எறிந்த வேல் மார்பில் துளைத்துச் சென்றமையால் அதியமான் நெடுமானஞ்சி இறந்து படவே, அது குறித்து ஒளவையார்; 'பாணர் முதலிய இரப்போர் கூட்டமும் புரவலர் சுற்றமும் புலவர் பெருமக்களும் ஆதரவு இழந்தனர்" என்ற கருத்துப்பட மொழியத் தொடங்கினார். அதனை அவ்வாறு கூறினால் கேட்போர் உள்ளம் எளிதில் ஈடுபடாதென்று, "பாணர் அகன் மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று அவன் அருநிறத் தியங்கிய வேலே." என்று பாடினார். இதன் கண், அதியமான் மார்பைத் துளைத்த வேல், பாணர் உணவு பெற்றுண்ணும் மண்டையென்னும் உண்கலத்தைத் துளைத்து, இரப்பவர் ஏந்தும் கையை வீழ்த்திப் புரப்போருடைய அன்பு நாடும் கண்ணைக் கெடுத்துப் புலவர் நாவையும் துண்டித்தது என்று மொழிந்து நம்மை மிக்க இரக்கத்தில் ஆழ்த்துகின்றார். இவ்வாறு கூறுவதை அணிநூலார் அசங்கதி என்னும் அணி என்பர். மோசி கீரனார் என்ற சான்றோர் ஒருகால் ஓர் அரசனைக் கண்டு அளவளாவி யிருக்கையில், "நாட்டு மக்கள் தம் வேந்தனையே உயிராகக் கருதி வாழ்கின்றனர்; அதனால், நாடாளும் வேந்தன் நாட்டைத் தனக்கு உடம்பாகவும் அவ்வுடம்புக்குள் நிலவும் உயிர் தானாகவும் உணர்ந்து ஒழுகுவது கடன்" என்று உரைக்க எண்ணினார். மன்னனே நாட்டுக்கு உயிர் என்பது நிலைநாட்டப் பெற்றால்தான் மற்றைய கருத்து வலியுறும்; ஆகவே, உயிரெனக் கருத நிற்கும் நெல்லும் நீருமாகிய பொருள்களை விலக்கி வேந்தனே உயிர் என்பாராய், "நெல்லும் உயிரன்று நீரும் உயிரன்று மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்" என்று முற்பட மொழிந்து, பின்னர், "அதனால் யான்உயிர் என்பது அறிகை வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே" என்று பாடினார். இப்பாட்டில், நெல்லையும் நீரையும் விலக்கி வேந்தனை வற்புறுத்துவதால் இதனை அணிநூலார் அவநுதி என்று கூறுவர். பறம்பு நாட்டிலிருந்த நிகரற்ற கொடை வள்ளலாகிய வேள்பாரியைப் பாராட்டி, "வேள் பாரிக்கு நிகராக மழை மேகந்தான் உளது; ஆயினும் அது வேண்டுவோர் வேண்டும் போது குறிப்பறிந்து நல்கும் இயல்புடையதன்று; அதனால் புலவர் பலரும் பாரி பாரி என அவன் ஒருவனையே புகழ்கின்றனர்" என்ற கருத்தை வைத்து ஒருகால் கபிலர் பாட நினைத்தார். அக்கருத்தை அப்படியே உரைப்பது மிகையாதல் கண்டு, "பாரி பாரி என்று பலவேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்; பாரி யொருவனும் அல்லன்; மாரியும் உண்டு ஈண்டுஉலகு புரப்பதுவே" என்று பாடினர். இதன் கண், மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பது; அதனைச் செந்நாப் புலவர் ஏத்தாது விலக்குகின்றனரே என்பது தோன்ற நிற்கிறது. இஃது அணிவகையுள் விலக்குவமை எனப்படுகிறது. நங்கை யொருத்தி தன் காதலன் தன் பொருட்டு நள்ளிரவில் கொடிய காட்டைக் கடந்து வருவதை நோக்கி, "இனி, இவ்வாறு வருவது கூடாது" என்று கூற நினைத்து, "காட்டில் வேங்கைமரம் பூத்துப் பொலிவதை ஒரு மதயானை கண்டு உண்மைப் புலியென மருண்டு தன் பிடியானையுடன் சென்று புலியொடு மாறுபட்டு நின்று பிளிறுவது நீவரும் காட்டுவழி; அவ்வழியே வரின் உனக்குத் தீங்குண்டாம்" எனக் குறிப்பால் உணர்த்தி, "பாயாத வேங்கை மலரப் படுமதமா பூவாத புண்டரிகம் என்றஞ்சி - மேவும் பிடிதழுவி மாறதிரும் கானில் பிழையாம் வடிதவழும் வேலோய்நின் வரவு" என்று கூறுகிறாள். இவ்வாறு தன் கருத்தைச் சிந்தித்து உணரச் செய்யும் இதனை அணிநூலார் விபாவனை அணி என்பர். இதன் கண் வேங்கைமரம் என உணர்த்தற்குப் பாயாத வேங்கை என்றும், புண்டரிகம் என்பது தாமரையையும் புலியையும் குறிப்பதால், இங்கே அது புலியைக் குறிக்குமாறு தோன்றப் பூவாத புண்டரிகம் என்றும் கூறியது வெளிப்படை என்னும் அணியாகும். சமக்கிருத அலங்கார நூல்களைப் பயின்று தமிழில் அணி நூல் கண்ட தண்டியாசிரியரும் பிறரும் உவமப்பகுதியில் தொல்காப்பியர் காட்டிய உள்ளுறை உவமத்தைக் காணாது போயினர். பின் வந்த மாறனலங்காரம் எழுதிய ஆசிரியர்தான் அந்த உள்ளுறையை ஓர் அணியாகக் கண்டு அணிநூலுள் சேர்த்து உரைப்பாராயினர். நிகழ்ச்சி யொன்றைக் கூற நினைக்கும் புலவன் முதற்கண் அதற்கோர் இடத்தையும் காலத்தையும் குறித்துக் கொள்வன்; இடம், ஆங்குள்ள மரம், செடி-கொடி, விலங்கு, பறவை, வயல், சோலை, காடு, ஆறு, மலை, முதலியவற்றைக் காட்டா நிற்கும். காலம் இடத்திலுள்ள பொருள்களின் செயல்களால் விளங்கும். இந்த இயற்கைச் சூழ்நிலையில், யாதானுமோர் நிகழ்ச்சியைக் கூறுவோன், அந் நிகழ்ச்சிக்குப் பின்னணியாக அச்சூழ்நிலை காட்டும் காட்சி யொன்றை நிறுத்துவன்; இயற்கை வழங்கும் காட்சிகள் எண்ணிறந்தன வாதலால் அவன் யாதானுமொன்றை வரைந்து கொள்வன்; அது தான் கூறும் நிகழ்ச்சிக்கு எவ்வாறாயினும் தொடர்புற்று நிற்கும். அத்தொடர்பு மிக்க நெருக்கமுடையதாக அமையுமிடத்து உள்ளுறை எனப்படும். அந்நெருங்கிய தொடர்பு எடுத்துக் கொண்ட நிகழ்ச்சிக்கு உவமமாக அமையுமாயின் அஃது உள்ளுறை உவமம் எனப்படும். காதலனோடு கூடியுறையும் இன்பத்தைக் கூறக் கருதி நங்கை, அவனுடைய நட்புக் கூடியிருப்பார்க்குச் சிறந்த பாதுகாப்பாய் இன்பம் பயக்கும் என்று சொல்லுகிறாள். காதலன் இயல்பை உணர்த்துவதற்கு மலைநாட்டு இயற்கைக் காட்சியொன்றை உள்ளுறுத்தி உரைக்கின்றாள். "பெருங்கை இருங்களிறு ஐவனம் மாந்திக் கருங்கால் மராம்பொழில் பாசடைத் துஞ்சும் சுரும்புஇமிர் சோலை மலைநாடன் கேண்மை பொருந்தினார்க்கு ஏமாப் புடைத்து" என்று பாடுகின்றாள். இதன் கண், மலைநாடன் கேண்மை பொருந்தினார்க்கு ஏமாப்புடைத்து என்று அவள் கூறுவது நிகழ் பொருள்; அதற்குப் பெரிய களிற்றியானை ஐவன நெல்வகையுண்டு மராமரம் நிறைந்த சோலையில் உதிர்ந்து கிடக்கும் இலையின் மேல் படுத்து உறங்கும் என்றது. அதற்கு அமைந்த இயற்கைச் சூழ்நிலைக் காட்சியாகிய உள்ளுறையாகும். பெருங்களிறு தனக்கு வேண்டும் ஐவனமாகிய உணவைப் பெற்று மராமரப் பொழிலில் இனிது உறங்குவது போல, மலைநாடனுடைய நண்பர் தமக்கு வேண்டும் நலங்களைப் பெற்று இன்புறுவர் என எடுத்துக் கொண்ட கருத்துக்கு உவமமாய் நின்று விளங்குவது பற்றி இஃது உள்ளுறை உவமம் எனப்படுகிறது. தமிழிலுள்ள அணிநூலார் எல்லார்க்கும் பின்வந்த மாறனலங்காரமுடையார், இதனை உள்ளுறை உவமவணி என்பர். இறுதியாக நிற்கும் சொல்லணிப்பகுதியில் மடக்கு, சித்திர கவி என்ற இரண்டுமே கொள்ளப்படுகின்றன. திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஓச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழிதல் கயற்கண்ணாய் மங்கை மாதர் அருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி. என்ற இந்தப் பாட்டு இரண்டாமடி மடங்கி மூன்றாமடியிலும் வருவதால் மடக்கு என்று குறிக்கப்படுகிறது. பிற்காலத்தே இம்மடக்குச் சிலேடையணி பெற்றே பெரிதும் இயலுவதாயிற்று. புகார் நகரத்து விடியற்காலச் சிறப்பைக் கூற வந்த மணிமேகலை இம்மடக்கணியைச் சிலேடையணி கலந்து, பணை நிலைப் புரவி பல எழுந்தாலப் பணை நிலைப் புள்ளும் பல எழுந்தாலப் பூம் பொழிலார் கைப்புள் ளொலி சிறப்பப் பூங் கொடியார் கைப்புள் ளொலி சிறப்ப எனப் பாடுகின்றது. சித்திரக் கவிகள் பாடலுள் அமைந்த பொருட்குச் சிறப்புத் தராது, சொற்களுக்கே சிறப்பளித்து நிற்கும். தேயத்தியங்கி யலகில் தலங்களில் சென்று அடிகள் தேயத்தியங்கி அலையல் திடம் கதிசேர்தல் அறைந் தேயத்தியங்கி நித்திலம் தான் எறிசெந்தில் அடைந் தேயத்தியங்கி தரித்தான் தனயற் றெரிசிக்கினே. இப்பாட்டு திருச்செந்தில் நிரொட்டக யமக அந்தாதியில் உள்ளது. திருச்செந்திலில் உள்ள முருகனைத் தெரிசித்தால் கதிசேர்தல் திடம்; தேயந்தோறும் சென்று ஆங்காங்குள்ள தலங்களை நோக்கிப் போய் அலைய வேண்டா என்பது கருத்து. நிரொட்டகம் என்பது வாயின் மேலிதழும் கீழிதழும் தொட்டு மூடாதவாறு பாடுவது; யமகம் என்பது முதலடிக்கண் வந்த சீரே எல்லா அடியிலும் வந்து பொருள் வேறுபட நிற்பது. இவ்வண்ணம் சொற்களுக்கே ஏற்றம் கொடுத்துப் பாடப் படும் சொல்லணிப் பகுதிக்குள் பொருளணிக்கண் குறிக்கப் பட்டிருக்கும் சொற்பின் வருநிலை, முரண், வெளிப்படை, தீபகம், சிலேடை முதலியவற்றையும் அடக்கியிருக்கலாம். அவற்றை அங்கே வைத்ததற்குரிய காரணம் அணிநூல்களிற் காணப்பட வில்லை. 43. சங்ககாலத் தமிழ்மகன் பண்டை நாளில் வாழ்ந்த தமிழ்மகன் என்னாது சங்ககாலத் தமிழ்மகன் என்றே தலைப்பு அமைகிறது. பண்டைக்காலம் என்பது ஒரு காலவெல்லைக்குள் அடங்காது பரந்த பண்பினதாய் இருக்கிறது. சங்ககாலம் என்ற வழி, முற்காலத்தே நம் செந்தமிழ்நாட்டில் சங்கம் இருந்து தமிழ்த் தொண்டாற்றித் தனிப்பெருஞ் சிறப்பெய்தியிருந்த காலம் என்ற உணர்வு நம் உள்ளத்தில் எழக் காண்கின்றோம். ஆயினும், இச் சங்ககாலம், இத்துணை ஆண்டுகட்கு உட்பட்ட காலம், மேற்பட்ட காலம் என எண்ணிட்டுக் காணமுடியாத நிலையில் உள்ளது. சங்கத்தின் உண்மையையே ஐயுறுவோரும், ஐயுற்றுச் சங்கமென்பதே இருந்ததில்லை யென்போரும், உண்டென் போரும், கிறிஸ்து பிறப்பதற்கு முன்னென்போரும் பின் என்போரும் எனப் பல திறத்தராய் ஆராய்ச்சியாளர் உளர். மற்று, நம் செந்தமிழ் மொழிக்கண் பழைய நூல்கள் பல சங்க இலக்கியங்கள் என்ற பெயரால் வழங்கி வருகின்றன. அவ்விலக்கியங்கள் தோன்றி நிலவிய காலமே சங்க காலமாம் என்ற பொது எல்லையை ஈண்டுக் கால வெல்லையாகக் கொள்கின்றேன். அவ்விலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு என மூவகையாய் இயலுகின்றன. இவை எழுந்து வளர்ந்த சிறந்த காலம், சங்க காலம் இன்றேல், இவை சங்க இலக்கியம் எனப்படா. பத்துப்பாட்டு என்பது ஒரு தொகை நூல். இதன்கண் திருமுருகாற்றுப்படை முதலாகக் கூத்தராற்றுப்படை ஈறாகப் பத்துப் பெரும்பாட்டுக்கள் உள்ளன. இவற்றுள் இயற்கையின் இனிய காட்சி இனிது காட்டப் பெறுகிறது. அக்காட்சியைக் காட்டும் கட்டுரைகள் இலக்கணவரம்பு கடவாது, உள்ளம் கொள்ளத் தக்க அளவில் நின்று இன்பம் சுரப்பிக்கும் திறம் எண்ணுந்தோறும் நமக்கு இறும்பூது தருகின்றது. இதனால் கல்வியின் இன்றி யமையாமையை வற்புறுத்துகின்றார்கள். தமிழ்மன்னன் ஒருவன் தன் கோல் நிழலில் வாழும் மக்களை நோக்கி, "உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே; பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம்திரியும்; ஒரு குடிப் பிறந்த பல்லோ ருள்ளூம் மூத்தோன் வருக என்னாதுஅவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்" என்று வற்புறுத்துகின்றான். ஒரு பெரியவர், வாழ்நாள் மிகுதியாகிய வழியும், தமக்கு நரையோ திரையோ உண்டாகாமல் இருந்தார். அது கண்ட அறிஞர் சிலர் அவரை நோக்கி, இதற்குக் காரணம் என்னை என வினவினர். அவர்கட்கு அவர், "என் மனைவி, மக்கள் முதல் அனைவரும் என்கருத்திற்கேற்ப ஒழுகும் இயல்புடையவர். வேந்தனும் அல்லவை செய்வதிலன். சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" என்றார். எனவே, சான்றோர் இனத்தனாய், கல்வியறிவு சிறந்து நிற்பது தனக்கு இன்றியமையாதது என்பதைச் சங்ககாலத் தமிழ்மகன் இனிதறிந்து ஒழுகிய திறம் நாம் காண்கின்றோம். சங்ககாலத் தமிழ்மகன், தன் வாழ்வில், உடல் வளர்ச்சி கருதா உயிர் வளர்ச்சியொன்றே கருதி, கல்வி பயின்று அறிவுபெறு ஆர்வம் கொண்டான் என்பவர் அவனது இயல்பை அறியாதவராவர். உடல் உரம்பெறுவதற்கேற்ற ஆள்வினைக்கண் அவனது உள்ளம் அழுந்திய பயிற்சி பெற்றிருந்தது. வாளேந்திப் போருடற்றிச் செய்வன செய்தல் தன் கடன் என்பதை அவன், தாயால் இளமையிலேயே வற்புறுத்தப் பெறுகின்றான். நீரில் நீந்துதல், யானை குதிரை முதலிய இவர்ந்து செல்லுதல், வாட்பயிற்சி, விற்பயிற்சி முதலியன பயின்றிருந்தான். இதனை நன்குணர்ந்த கம்பனும், இராமன் வாயில் வைத்து, "மதிதரு தனயரும் வலியர்கொல்' என்று வினவுகின்றான். உடல் வளர்ச்சிக்குப் படைப்பயிற்சியும், அறிவு வளர்ச்சிக்குத் கல்வியும் வேண்டுவனவாம் என்பதைச் சங்ககாலத் தமிழ்மகன் நன்கு அறிந்திருந்தான். உடல் வன்மையால் மனத்திட்பமும் வினைத்திட்பமும் பிறக்கும் என்பது அவனது உள்ளக்கிடை. வீரமகனொருவன், மனக்கினிய மகளொருத்தியை மணம் புணருங் காலத்தே, அரசனது போர்ப்பறை முழங்கக் கேட்டான். ஒருத்தியை மணந்து நுகரும் இன்பத்திலும், தன் நாட்டிற்கு உற்ற இடர் நீக்குதலால் உளதாகும் இன்பம் பெரிதெனக் கருதி மணத்தைத் தள்ளிவைத்துப் போர்க்குச் செல்கின்றான். "விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற் சுணங்கணி வனமுலை யவளொடு நாளை மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ, ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின் நீளிலை யெஃக மறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்றெனப் படைதொட் டனனே குரிசில்" என்று பரணர் கூறுகின்றார். இவ்வண்ணம் கல்வியறிவும், உடல் வன்மையும் ஒருங்கு பெற்றுத் திகழும் தமிழ் மகனுக்குத் திருமணம் செய்விக்கும் எண்ணம் இந்நாளில், பெற்றோர்க்கு அமைகின்றது. அந்நாளில் அங்ஙனம் இல்லை. தக்கோனாய் மணப்பதம் பெற்ற மகன், தன் மனம் விரும்பும் மாண்புடைய மகள் ஒருத்தியைத் தானே தேர்ந்து காண்கின்றான். அவளது மனவொருமையைப் பல நெறிகளால் ஆராய்கின்றான். கற்பின் திண்மையைக் களவில் ஒழுகிக் காண்கின்றான். பின் தன் களவு நெறி உலகறிய வெளிப்படுத்துகின்றான். "அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின், அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும்" என்றே ஆசிரியர் தொல்காப்பியனார் உரைக்கின்றார். பின்னர், பெற்றோர் மணத்திற்கு இயைந்து மணம் புணர்விக்கின்றனர். மனைவாழ்க்கையின் மாண்பு குறித்து அவன் செய்யும் திறம் மிக்க வியப்புத் தருவதாகும். தான் நடத்தும் வாழ்க்கை தன் நலமே குறித்த வாழ்வாதல் கூடாது. ஈதலும் இசைபட வாழ்தலுமே மனைவாழ்க்கை. தன் வாழ்வு ஏனை எவ்வகை மக்கட்கும் ஏமம் பயக்கும் வாழ்வாதல் வேண்டும். தான் ஈட்டிய பொருளைத் தானே நுகர்தலின்றி, பிறர்க்கும் பயன்பட வாழவேண்டிய தமிழ்மகன் பொருள் ஈட்டல் கருதிக் கலங்கள் ஏறிக் கடல் கடக்கின்றான். நிலவரையிலும் நாடிடையிட்டும் காடிடையிட்டும் செல்கின்றான். செல்பவன் தன் மனைவியின் பிரிவாற்றாமை கண்டு தெருட்டு முகத்தால் வாழ்வின் குறிக்கோளை நன்கு வற்புறுத்துகின்றான். அவன் பிரிந்தவழி, அதனை அவன் மனையுறையும் மகளிர் பேசிக்கொள்வதால் நாம் இனிது அறியலாம். "அறந்தலைப் பிரியாது ஒழுகலும், சிறந்த கேளிர் கேடுபல வூன்றலும், நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்" என்றும், "அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும் பிறன்கடைச் செலாஅ செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும் புனைஇழை" என்றும் பொருளைக் கருதித் தமிழ்மகன் வாழ்ந்திருக்கின்றான். இவ்வண்ணம் தானும், தன் நாட்டு மக்களும் பொருட் குறைபாடின்றி இனிது வாழ்தல் வேண்டும்; நாட்டில் வறுமை தோன்றின், (நாட்டவர் மனத்தே நல்ல எண்ணங்கள் வற்றிவிடும்;) நல்லறிவு மாயும் என்று அஞ்சி, அவன், "செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் மென்கட் செல்வம்" என்று பிறர்க்கென வாழ்தலைப் பொருளாகப் பேணி வாழ்ந்து வந்தான். தான் ஈட்டிய பொருளைத் தானும் ஏனைத் தமிழ்மக்களும் பிறரும் பெற்று இன்பவாழ்வு நடத்தவேண்டும் என விரும்பும் அத் தமிழ்மகனுக்கு வேறொரு கடமையும் உண்டாகின்றது. நாட்டுக்குப் பகைவரால் உண்டாகும் கேடும் அச்சமும், வாழ்க்கையின்பத்தைச் சிதைக்கும் என்ற எண்ணங் கொள்கின்றான். அதனால், தன் நாட்டிற் காவல் குறித்துப் போர் செய்தற்கும், பிற வினை செய்தற்கும் அவன் உள்ளம் கொண்டு, அது குறித்து வினை செய்வதும் கடமை என்பதை உணர்கின்றான். தான் இளமையிற் பெற்ற கல்வி, நாட்டின் நலம் கருதிச் செய்வன செய்தற்குப் போதிய துணை செய்யாமை கண்டவழி, நிரம்பிய கல்வி பெறுவதும் கடன் என்று தெளிகின்றான். ஒரு கால் ஒரு தமிழ்மகன் கல்வி குறித்துப் பிரிந்திருந்தபோது, அவன் பிரிவாற்றாது வருந்திய அவன்றன் மனைமகளிர், வாடைக்காற்றை நோக்கிக் கூறுவாராய், "ஏ, வாடைக்காற்றே, தமியோர் மதுகை தூக்காய் தண்ணென, முனிய அலைத்தி, முரண்இல் காளை கைத்தொழு மரபின் கடவுட் சான்ற செய்வினை மருங்கின் சென்றோர் வல்வரின், நீ, கரிகாலனோடு வாகையென்னுமிடத்தே ஒன்பது வேந்தர் ஒன்றுகூடி எதிர்த்தபோது, அவனால் அலைப்புண்டு தம் கொற்றக்குடை இழந்த அந்தப் 'பீடில் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடைநீ எமக்கே' என்கின்றனர். இங்கே, தமிழ்மகன் மேற்கொண்ட கல்வியை, "கைதொழு மரபின் கடவுட்சான்ற செய்வினை" என்கின்றனர். அரசு முறையாயினும், வாழ்க்கை முறையா யினும் அவ்வதற்கு வேண்டிய கல்வியறிவு இல்வழிச் சிறவாது என்பதற்காகக், "காவற் சாகாடு உகைப்போன் மாணின், ஊறின் றாகி ஆறுஇனிது படுமே; உய்த்தல் தேற்றா னாயின், வைகலும் பகைக்கூழ் அள்ளல்பட்டு மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே" என்று இளந்திரையன் கூறுகின்றான். நாட்டின் காவல் குறித்துப் போருடற்றி உயிர்கொடுப்பது நல்வினையென்றும், அவ்வாறு உயிர்கொடுத்துப் புகழ் கொள்வாரே சிறந்தோர் என்றும் தமிழ்மகன் கருதியிருந்தான். அக் கருத்தை அவனேயன்றி, அவன் மகளிரும் இனிதறிந்து இருந்தனர். பகைவருடன் போருடற்றச் சென்ற தமிழ்மகன் ஒருவன்றன் மனைமகளிர், "நோற்றோர் மன்ற தாமே கூற்றம் கோளூற விளியார் பிறர்கொள விளிந்தோர் எனத் தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்" என்று பேசிக் கொள்கின்றனர். இந்நெறியில் மகளிர் வீரத் தீ எரிய நிற்கும் உள்ளமுடையராதலைச் சங்ககாலத் தமிழ்மகள் இயலறியும் நெறியிற் புலப்படும். மனைவாழ்க்கையில் பொருளீட்டல், கல்வியறிவு பெறுதல், வினைசெய்து நாடுகாத்தல் முதலியன செய்தொழுகும் தமிழ்மகன் மகப்பேறு குறித்து மகிழ்கின்றான். மக்களையில்லாத வாழ்க்கையை விரும்புவதிலன், "மக்களை இல்லோர்க்குப் பயக் குறையில்லை தாம்வாழும் நாளே" என்று கூறுவன். பெற்ற மக்கள் தம் குடியின் உயர்ச்சிக்கு உழைத்தல் வேண்டுமெனக் கருதுகின்றான். அன்ன மக்களைப் பெற்றோரை வாயார வாழ்த்தி மகிழ்வன். "எண்ணியல் முற்றி ஈரறிவு புரிந்து, சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற் கமைந்த அரசுதுறை போகிய வீறுசால் புதல்வற் பயந்தனை" என்று பாராட்டுதலைக் காண்க. இனி, இவனது உள்ளத்தே கடவுள் உணர்ச்சி வீறுபெற்று நிற்கின்றது. "பல்லோரும் பரம்பொருள் ஒன்று உண்டு; அதன்பால் பரிவுகொடு பரசி வாழ்தல் எல்லோரும் செய்கடனாம்" என்று கருதி வாழ்பவன். இவன் ஆண்டவனை வழிபட்டு வேண்டுவன மிக்க வியப்புத் தருவனவாம். சங்க காலத்தே ஏனை நிலத்து மக்கள் வேண்டியன வேறு. பிறர் அழிவதையும், பிறர் ஆக்கம் கெடுவதையும் பொருளாகக் கருதி ஆண்டவனை வேண்டினர் பிறர்; தமிழன், "யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமு மல்ல, அருளும் அன்பும் அறனும் மூன்றும்" என்றும் "யாமும் எம் சுற்றமும் பரவுதும், ஏம வைகல் பெறுகயாம் எனவே" என்றும் வேண்டுகின்றான். இங்ஙனம், சங்ககாலத் தமிழ்மகன், தன் வாழ்க்கையைத் தனக்கேயன்றிப் பிறர்க்கும் தன் நாட்டின் நலத்துக்கும் எனக் கருதிச் செலுத்தி, ஆண்டவன் வழிபாட்டை மறவாது, மேற்கொண்டு அவ்வழிபாட்டிலும் தன் வாழ்வின் குறிக்கோள் கை கூடுதற்கு ஆக்கமாகும் அருள், அன்பு, அறம் என்ற மூன்றுமே விரும்பியிருந்த நிலையை, இற்றைநாளில் மக்கள் அறிந்து நலம் பெறுவாராக!  வேளிகொண்டா என்று இப்போது பெயர் கூறப்படுகிறது. தெற்கு வடக்காக நிற்கும் இதன் கீழ்ப்பகுதியில் நெல்லூர் மாவட்டத்து வேங்கடகிரி என்னும் பழமையான நகரம் இருக்கிறது. **Nellore Inscriptions in 3 Vols. * (Puidukkottai State Inscriptions 380) * Annual Report on S. Indian Epigraphy for 1932 - 33 Part.ii Para 25. Ins- no.162 of 1932 - 33 * Lord Macaulay’s Essay on Addison’s wit and humour. * br§ifkh v‹gJ tlh®¡fhL ÍšyhÉš ï¥bgaÇabjhU jhYfhÉ‹ jiyefU¡F¥ bga®. bfh§FehL bršYnth® ïj‹ tÊna r›thJ tiu¤ bjhliu¡ flªJ bršt®. *இதனை ஆசிரியர் பால் (Prof. ball.F. R. S) என்பார் வற்புறுத்திக் கூறும் கட்டுரை காண்க. (Vide Indian Antiquary. August 1884). *இந்நாளில் மோட்டார் பஸ் வெலுத்துவோர் உடன்கொண்டு செல்லும் “ரப்பர் டயர்கள்” (Rubber Tyres) இவ் வுண்மைக்குச் சான்றாகின்றன 1. அவல்- பள்ளம். * இக்கருத்தே பிற்கால வேந்தர் மனத்தும் இருந்த தென்பதன் உத்தர மேரூர்க் கல்வெட்டு வற்புறுத்துகின்றது. 1. வல் அறிதீ - விரைய அறிவாய். 1. நொதுமலார் என்றது இங்கே கோளுரை கூறுவாரை. 2. பகடு புறந்தருநர் - ஏரைப் பாதுகாக்கும் உழவர். 3. நந்தும் - தழைக்கும். 4. பரிவு தப - அன்பு கெட. 1. தட்டோர் - தளை செய்து உதவினோர். 2. இவண்தண்டோர் - இவ்வுலகில் தம் புகழைத் தளைசெய்தோ ராவார். 1. பனிக்கயம் மண்ணி - குளிர்ந்த பொய்கையில் மூழ்கி. 2. கிணை - பதை 1. பாண்டில் - கிண்ணி. * இவை இந்நூற்றாண்டிலும் நிகழ்தலைக் காண்மின்1 1. அழுவத்து - போர்க்களப் பரப்பில் * இது பொருளாக வரும் ஆராய்ச்சியொன்று பின்னர்ச் செந்தமிழ்ச் செல்வியில் வெளிவரும் * இதனைக் குடைவேல் என்றும் வழங்குவர் 1. இந் நல்லடிசோழன் செங்கணான் மகன் என அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. இவன் பெயரால் நல்லடி மங்கலம் என்றோர் ஊரும் கல்வெட்டுக்களிற் காணப்படுகிறது. 2. இவை புதுக்கோட்டைப் பகுதியில் உள்ளன. 1. S.I. Ins. Vol., No. 456, 157, 455. 2. S.I.Ins. Vol. V., No.711. 3. S.I.Ins.Vol. V., No. 994 4. M.Ep. A.R. No. 137 of 1919. 1. S.I.Ins. Vol. V.No.,648 2 S.I. Ins. Vol. V. No.,650. 3. S.I. Ins. Vol. VII. No., 19,88. 1. M.Ep.A.R.No.334 of 1929 - 30 2. M.Ep.A.R. for 1937 -7. பக்.73-4. 2. M.Ep. A.R.No.229of 1927 The Unity of Philosophical Experience by E. Gilson, p III. pp. 223-95. *தூத்துகுடி சைவசித்தாந்த சபைத் தலைமையுரையின் ஒரு பகுதி இது 54. *The Mystrious Universe p.11-22. † காஞ்சிபுராணம் - காப்பு * Ibird p. 182. †பௌஷ் 1:43 1. அகநானுறு. 340:6-7. 2.S.I. Ins. Vo1. SII No.43. 3. Nellore Insciption. Gudur. No.54 1. Annual Report (Epigraphy) Madras. No. 84 of 1922. 2. Do Do Do No.309 of 1928 -29. 3. Nellore Insciptions. Sulurpet. No.4. 4. Do Do Gudur. No. 20-33. 1. S.I. Ins. Vol. V No.491. 2. Nellore Ins. Nellore No. 108. 3. S.I.Ins. Vol. V Repur No.4. 4. Nellore Ins. No.8. 5. Nellore Ins. Raur No.23. 6. Nellore Ins. Repur No. 38. 7. Nellore Ins. Gudur No. 88-105. (1).nellore ins. gudur no 87 (2). s. i. ins. vol. v. no. 495 (3) Nellore Ins. Nollore Tq.No.76 (4) Ep.A.R.No.172 of 1926. 1. Hobson Jobson - under the head “Madras” 2. Ep. A.R.No.173 of 1932-3. 2.S.I.Ins. Vol. VIII 533.44 3. S.I.Ins. Vol VIII 371 of 1911 4. Do Do 238 of 1903 5. Do Do 235 of 1903 *தென்னிந்திய சைவசித்தாந்த சங்கத்தினர் அண்மையில் வெளியிட்ட சுற்றரிக்கை. * இளங்கண்டீரம் வாளிகண்டபுரம் எனவும், விச்சியூர் எனவும், விச்சிமலை பச்சைமலை எனவும் இந்நாளில் வழங்குகின்றன. ‡வேளிகொண்டா என்று இப்போது பெயர் கூறப்படுகிறது. தெற்கு வடக்காக நிற்கும் இதன் கீழ்ப்பகுதியில் நெல்லூர் மாவட்டத்து வேங்கடகிரி என்னும் பழமையான நகரம் இருக்கிறது *Nellore Inscriptions in 3 Vols. * (Pudukkottai State Inscriptions 380) * A.R. No. 335 of 1914 *S.I.I. Vol. I. No. 56 * Annual Report on S. Indian Epigraphy for 1932 - 33. part ii. Para 25. Ins - no. 162 of 1932 - 33. னனன * இம் மாறனை இவன் குடியிலுள்ள பாண்டியனென்றும், குறு நில மன்னனென்றும் கூறுப * இது இளம்பூரண அடிகளது உரை. நச்சினார்க்கினியர் சிறிது விரித்துக்கூறுவர். * கைவந்தி: கையில் தோளின் கீழ் அணியப்படும் ஓர் அணிகலன் இப்பெயர் வழக்கிலுமுள்ளது. * கற்கப்படுவனவாய நூல்களனைத்தையும் முற்றுணர்ந்து நிறைந்தும் களிப்பின்றியடங்கின அறிவுடையரென்பது மொன்று. * வானரமகளிரின் வனப்பு முருகாற்றுப்படையில் ‘மால்வரை நிவந்த’ என்பது முதல் ‘வேங்கை நுண்டாது அப்பிக் காண்வர’ என்பது வரையுள்ள அடிகளிற் காண்க. * கப்பணம் - நெருஞ்சி முள்ளுப்போல முனைபடச்செய்யப்பட்ட இருப்புப் பரல்கள். இவற்றையவர் நீலநிறப்புடைவைகளில் வைத்துக் கட்டிக் கொண்டிருப்பவர். * இவ்வுரை, நற்றிணைக்குத் திரு.அ. நாராயணசாமி ஐயர் உரை. * பண்டிதர் T.S. அரங்கசாமி ஐயங்கார் உரை. * குறுந்தொகை மூலமும் உரையும். பக்கம் 87. * Dr. Johnson’s Preface to Shakespeare. * இது பெர்ட்ரண்டு ரசல் முதலியோர்க்கும் ஒத்த கருத்து. 18.8.53 ல் திருச்சி வானொலியிற் பேசியது. * மேனாட்டுக் கவிஞர் பெருமானாகிய ஷேக்ஸ்பீயரும் “She is mine own, And as I rich in having such a jewel, As twenty seas, if all their sands were pearls, The water nectar and the rocks pure gold” என்றார் * Solution of a geometrical rider. 1. “For nowwhere either with more quiet of more freedom from trouble does a man retire, than into his own soul particularly, when he has within him such thoughts that by looking into them he is immediately in perfect tranquility” - Marcus - Aurelius. 2. Peace of mind must come in its own time as the waters settle themselves into clearness as well as quietness; you can no more filter your mind into purity than you can compress in into Calmness.” - Ruskin. 3. “Self - reverecnce, Self - knowledge, Self - Control, These three alone lead life to sovereign power” Tennyson. 4. “The greatest evils are from within us; and from our- selves also we must look for our greatest good” - Jermey Taylor. 5. “The mind is its own place, and in itself, can make a Heaven of Hall, a Hell of Heaven” - Milton. * இவ்வுவமையும் “இன்னுரைக்கலிங்கம்” (சீவக. 697) என்றும், “நுரைகிழித்தனைய நொய்ம்மை நுண்டுகில்” (சீவக . 699) என்றும் வருவதனையுட் கொண்டது. * Figure of Speech