உரைவேந்தர் தமிழ்த்தொகை 21 புறநானூறு - 1 உரையாசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 21 உரையாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 568 = 592 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 370/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந் தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங் களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ் நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரை வரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்பு களையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவு படுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவு படுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர்களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற் போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xx நூலடக்கம் 1. கடவுள் வாழ்த்து 1 2. சேரமான் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதன் 4 3. பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி 9 4. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி 13 5. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேர லிரும்பொறை 17 6. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 19 7. சோழன் கரிகாற் பெருவளத்தான் 25 8. சேரமான் கடுங்கோ வாழியாதன் 29 9. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 32 10. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி 36 11. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ 40 12. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 45 13. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி 46 14. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் 49 15. பாண்டியன் பல்யாகசாலை முடுகுடுமிப் பெருவழுதி 53 16. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி 57 17. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை 60 18. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 66 19. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை 75 20. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி 78 21. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை 81 22. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 86 23. சோழன் நலங்கிள்ளி 99 24. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 120 25. சோழன் மாவளத்தான் 151 26. சோழன் நெடுங்கிள்ளி 155 27. சோழன் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும் 158 28. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 159 29. சோழன் நெடுங்கிள்ளி 161 30. சேரமான் கோக்கோதை மார்பன் 163 31. சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை 167 32. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி 171 33. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை 177 34. சேரமான் குட்டுவன் கோதை 181 35. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் 184 36. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன் 187 37. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் 194 38. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் 199 39. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் 201 40. சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி 203 41. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி 206 42. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி 210 43. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 212 44. சேரமான் பெருஞ்சேரலாதன் 214 45. சோழன் கரிகாற் பெருவளத்தான் 217 46. கோப்பெருஞ் சோழன் 219 47. சோழன் நலங்கிள்ளி 223 48. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 226 49. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் 232 50. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் 235 51. சோழன் நலங்கிள்ளி 238 52. சேரமான் கணைக்கா லிரும்பொறை 241 53. சோழன் நலங்கிள்ளி 243 54. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 246 55. தலையாலங்கானத்துச் செருவென்றபாண்டியன் நெடுஞ்செழியன் 248 56. சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி 254 57. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி 258 58. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி 263 59. காவற் பெண்டு 265 60. அதியமான் நெடுமான்அஞ்சி 266 61. பொகுட்டெழினி 300 62. அதியமான் நெடுமான்அஞ்சி 302 63. வேள் பாரி 307 64. மலையமான் திருமுடிக்காரி 335 65. வேள் ஆய் 350 66. வேள் ஆய் அண்டிரன் 353 67. நாஞ்சில் வள்ளவன் 371 68. வையாவிக்கோப் பெரும்பேகன் 381 69. கண்டீரக் கோப் பெருநள்ளி 401 70. இளவிச்சிக் கோ 408 71. வல்வி லோரி 412 72. கொண்கானங் கிழான் 420 73. ஏறைக்கோன் 427 74. குமணன் 430 75. இளவெளிமான் 447 76. குமணன் 450 77. கௌணியன் விண்ணந்தாயன் 457 78. ஏனாதி திருக்கிள்ளி 462 79. பிட்டங்கொற்றன் 465 80. சிறுகுடிகிழான் பண்ணன் 480 81. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் 484 82. ஆதனுங்கன் 489 83. ஓய்மான் நல்லியக்கோடன் 492 84. மல்லிகிழான் காரியாதி 497 85. பாண்டியன் கீரஞ்சாத்தன் 500 86. நாலை கிழவன் நாகன் 503 87. ஈர்ந்தூர்கிழான் கோயமான் 505 88. வல்லார் கிழான் பண்ணன் 508 89. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 511 90. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 513 91. பாண்டியன் அறிவுடை நம்பி 518 92. தொண்டைமான் இளந்திரையன் 521 93. மோசிகீரனார் 524 94. ஒளவையார் 526 95. பாண்டியன் அறிவுடை நம்பி 528 96. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் 530 97. சோழன் நல்லுருத்திரன் 532 98. பிசிராந்தையார் 535 99. கணியன் பூங்குன்றனார் 537 100. ஓரே ருழவர் 539 101. பக்குடுக்கை நன்கணியார் 542 102. நரிவெரூஉத்தலையார் 544 103. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் 547 104. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் 550 105. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் 554 106. பெரும் பதுமனார் 559 107. விச்சிக்கோ 561 பாடல் அகர வரிசையும் எண்களும் 565  புறநானூறு மூலமும் உரையும் 1. கடவுள் வாழ்த்து இக்கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந் தேவனார். பெருந் தேவனார் என்பது இவ்வாசிரியரது இயற் பெயர். தமிழில் பாரதத்தைப் பாடிய செயல்பற்றி இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்கப்படுகின்றார். இப்போது வெளியாகியிருக்கும் பாரத வெண்பாவென்னும் நூல் இவர் பாடிய தென்று கூறுவர். இப் பாரத வெண்பா உரையிடையிட்ட பாட்டு. சங்கத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்ற இவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப் பாடிச் சேர்த்தவர் இவர். இதனால் இவர் கடவுள்கொள்கை நிறைந்த வுள்ளமுடையவரென்பது புலனாகும். இவர் பெரும்பாலும் சிவனையும் முருகனையும் பாடியிருக்கின்றார்; நற்றிணையில் உள்ள பாட்டு திருமாலைக் குறித்து நிற்பதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்களால் உரை காணப்பட்டுளது. இப்பாட்டின்கண் ஆசிரியர் பெருந்தேவனார், சிவனை அருந்தவத்தோன் என்று குறிப்பிட்டு, அவனுக்குக் கண்ணியும் மாலையும் கொன்றை; ஊர்தியும் கொடியும் ஆனேறு என்று குறித்து, அவனுடைய கறைமிடறும், பெண்ணுருவாகிய திறனும், தலையிற் சூடிய பிறையும் முறையே அந்தணராலும் பதினெண் கணங்களாலும் புகழவும் ஏத்தவும் படும் எனத் தெரிவித்து, அதனால் நாமும் அவனை வணங்கி வாழ்த்துதல் வேண்டும் என்ற கருத்தை உய்த்துணர வைக்கின்றார். கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப 5 கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை மறைநவி லந்தணர் நுவலவும் படுமே பெண்ணுரு ஒருதிற னாகின் றவ்வுருத் தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும் பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை 10 பதினெண் கணனு மேத்தவும் படுமே எல்லா உயிர்க்கும் ஏம மாகிய நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. (1) உரை : கண்ணி - திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி; கார் நறுங் கொன்றை - கார்காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை - அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ; ஊர்தி வால் வெள்ளேறு - ஏறப்படுவது தூய வெளிய ஆனேறு; சிறந்த சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப - மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ் வானேறென்று சொல்லுவர்; கறை மிடறு அணியலும் அணிந்தன்று - நஞ்சினது கறுப்பு திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது; அக்கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படும் - அக்கறுப்புத்தான் மறுவாயும் வானோரை யுய்யக் கொண்டமையின் வேதத்தைப் பயிலும் அந்தணராற் புகழவும்படும்; பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று - பெண்வடிவு ஒருபக்கம் ஆயிற்று; அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் - ஆய அவ்வடிவுதான் தன்னுள்ளே ஒடுக்கி மறைக் கினும் மறைக்கப்படும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று - பிறை திரு நுதற்கு அழகாயது; அப்பிறை பதினெண்கணனும் ஏத்தவும்படும் - அப்பிறைதான் பெரியோன் சூடுதலாற் பதினெண்கணங்களாலும் புகழவும்படும்; எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய - எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய; நீர் அறவு அறியாக்கரகத்து - நீர் தொலைவறியாக் குண்டிகை யானும்; தாழ் சடை - தாழ்ந்த திருச்சடையானும்; பொலிந்த -சிறந்த; அருந்தவத்தோற்கு - செய்தற்கரிய தவத்தை யுடை யோனுக்கு எ-று. தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு அவ் வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளே யடக்கி அவ் விறைவன் கூற்றிலே மறையினும் மறையும் என்று உரைப் பினும் அமையும். நீரறவு அறியாக் கரகம் கங்கை யென்பாரு முளர். அக்கறை, அவ்வுரு, அப்பிறை என நின்ற எழுவாய்கட்கு, நுவலவும் படும், கரக்கினும் கரக்கும், ஏத்தவும் படும் என நின்ற பயனிலைகள் நிரலே கொடுக்க, இவ்வெழுவாய்களையும் பிறவற்றையும் அருந்தவத்தோற் கென்னும் நான்காவதனோடு முடிக்க. ஏமமாகிய அருந்தவத்தோ னென்க. ஏமமாகிய நீர் எனினு மமையும். அணியலு மணிந் தன்று என்பது "உண்ணலு முண்ணேன்" (கலி. 23) என்பது போல நின்றது. பதினெண் கணங்களாவார் தேவரும், அசுரரும், முனிவரும், கின்னரரும், கிம்புருடரும், கருடரும், இயக்கரும், இராக்கதரும், கந்தருவரும், சித்தரும், சாரணரும், வித்தியா தரரும், நாகரும், பூதரும் , வேதாளமும், தாராகணமும், ஆகாச வாசிகளும் போகபூமி யோரு மென இவர்; பிறவாறும் உரைப்பர். இப்பெரியோனை மன மொழி மெய்களான் வணங்க, அறமுதல் நான்கும் பயக்கும் என்பது கருத்தாகக் கொள்க. விளக்கம் : தலையிற் சூடப்படுவது கண்ணி யென்றும், மார்பில் அணியப் படுவது மாலை யென்றும் வழங்குவது மரபாதலால், கண்ணி யென்ப தற்குத் 'திருமுடிமேற் சூடப்படும் கண்ணி' யென்றார். காமர் - அழகு, வண்ணம், முன்னது நிறமும் பின்னது அழகும் குறித்து நின்றன. செம்மேனியிற் கறுப்புநிறங் கொண்டு நிற்பதுபற்றி, கறையை நஞ்சுக் கறுப்பென்றும், அது நஞ்சினால் உண்டானது பற்றி, நஞ்சினது கறுப்பு என்றும் உரைத்தார். அது மறை நவிலும் அந்தணராற் பரவப்படுவ தற்குக் காரணம் தொக்குநிற்றலின், அதனை விரித்து, "வானோரை யுய்யக்கொண்டமையின்" என்று உரை கூறினார். மறுவாயும் என்றது, அக்கறை மறுவாய் நுவலப்படுதற் குரித்தன் றாயினும் என்பதுபட நின்றது. நவிலுதல், பயிலுதல்; "வினைநவில் யானை" (பதிற். 82) என்பதன் உரை காண்க. பிறை மகளிரால் தொழப்படுமேயன்றி, ஏனோரால் பெரிதும் தொழப்படுவதன்று; ஆயினும் அப்பிறை பதிணென் கணங்களாலும் தொழப்படுதற்குக் காரணம் "பெரியோன் சூடுதலாம்" என்பதனால் காட்டினார். அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு, "எல்லாப் பொருளையும் தன்னுள்ளே அடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும்" என்று வேறுபொருள் கூறினும் பொருந்தும் என்றுரைக்கின்றார். அருந்தவத் தோற்கு அக்கறை நுவலவும் படும்; அவ்வுரு கரக்கினும் கரக்கும்; அப்பிறை ஏத்தவும் படும் என முடியும். பதினெண்கணங்களையும், "கின்னரர், கிம்புருடர், விச்சா தரர், கருடர், பொன்னமர், பூதர், புகழியக்கர் - மன்னும், உரகர் சுரர், சாரணர்முனிவர் மேலாம், பரகதி யோர் சித்தர் பலர். "காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம், ஏந்து புகழ் மேய விராக்கதரோ - டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போகபுவி யோருடனே, ஆகாச வாசிகளா வார்" என அடியார்க்கு நல்லார் காட்டும் பழைய வெண்பாக்களால் வேறு வகைப்படக் கூறுதலும் உண்டெனத் தோன்றுவது பற்றி, "பிறவாறும் உரைப்ப" என்றார். (1) நூல் 2. சேரமான் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதன் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் சேரமன்னருள் ஒருவன். இவனை உதிய னென்றும், உதியஞ்சேர லென்றும், உதியஞ்சேரல னென்றும் மாமூலனாரும், கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும் பாடுவர். பாண்டவரும், துரியோதனனாதி யோரும் பொருத காலத்து இரு திறத்துப் படைகட்கும் பெருஞ்சோறிட்டு இச் சேரமான் நடுநிலை புரிந்தானென்பது பற்றி, இவன் பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதன் எனப்படுகின்றான். முரஞ்சியூ ரென்பது இப்பாட்டைப் பாடிய ஆசிரியர் முடிநாகனாரது ஊராகும். இவர் தலைச்சங்கப் புலவருள் ஒருவரென இறையனார் களவியலுரை கூறுகிறது. நாகனார் என்பது பிற்காலத்து ஏடெழுதினோரால் நாகராயர் எனப் பிறழ எழுதப்பட்டுவிட்டது. இப்பாட்டில், இச்சேரமான், நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்ற ஐம்பெரும் பூதங்களின் இயற்கைபோலப் பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளியென்ற ஐந்தும் உடையவன் என்றும், பாண்டவ ராகிய ஐவரும், துரியோதனன் முதலிய நூற்றுவரும் பொருத களத்தில் அவர் படைக்குப் பெருஞ்சோறு வரையாது கொடுத்தவன் என்றும், மேலைக் கடற்கும் கீழைக்கடற்கும் இடையிற் கிடக்கும் நாடு முற்றும் இவற்கே யுரியது என்றும், இமயமும் பொதியமும் போல இவன் நடுக்கின்றி நிலைபெறுதல் வேண்டுமென்றும் கூறி வாழ்த்துகின்றார். மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் 5 தீமுரணிய நீரு மென்றாங் கைம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் வலியுந் தெறலும் அளியு முடையோய் நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் 10 வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந வான வரம்பனை நீயோ பெரும அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை 15 ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பாஅல் புளிப்பினும் பகலிருளினும் நாஅல் வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி 20 நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே (2) திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ; வாழ்த்தியலுமாம். சேரமான் பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் பாடியது. உரை : மண் திணிந்த நிலனும் - அணுச்செறிந்த நிலனும்; நில னேந்திய விசும்பும் - அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும்; விசும்பு தைவரு வளியும் - அவ்வாகாயத்தைத் தடவிவரும் காற்றும்; வளி தலைஇய தீயும் - அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும்; தீ முரணிய நீரும் என்று - அத்தீயோடு மாறுபட்ட நீருமென; ஐம்பெரும் பூதத்து இயற்கை போல - ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மை போல; போற்றார்ப் பொறுத்தலும் - பகைவர் பிழைசெய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் - அப்பிழை பொறுக்குமளவல்ல வாயின்- அவரை யழித்தற் குசாவும் உசாவினது அகலமும்; வலியும் - அவரை யழித்தற்கேற்ற மனவலியும் சதுரங்கவலியும்; தெறலும்- அவ்வாற்றால் அவரை யழித்தலும்; அளியும் உடையோய் - அவர் வழிபட்டால் அவர்க்குச் செய்யும் அருளு முடையோய்; நின் கடல் பிறந்த ஞாயிறு - நினது கடற்கண் தோன்றிய ஞாயிறு; பெயர்த்தும் - பின்னும்; நின் வெண்டலைப் புணரிக் குடகடல் குளிக்கும் - நினது வெளிய தலைபொருந்திய திரையை யுடைய மேல்கடற்கண்ணே மூழ்கும்; யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந - புதுவருவாய் இடையறாத வூர்களை யுடைய நல்ல நாட்டிற்கு வேந்தே; வானவரம்பனை - வான வரம்ப; பெரும -; நீ-; அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ - அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து; நிலம் தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை ஈரைம் பதின்மரும் - நிலத்தைத் தம் மிடத்தே கொண்ட பொற்பூந்தும்பையை யுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும்; பொருது களத்தொழிய - பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும்; பெருஞ்சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் - பெருஞ் சோறாகியட மிக்க வுணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய்; பாஅல் புளிப்பினும் - பால் தன் இனிமை யொழிந்து புளிப்பினும்; பகல் இருளினும் - ஞாயிறு தன் விளக்கமொழிந்து இருளினும்; நாஅல் வேதம் நெறி திரியினும் - நான்கு வேதத்தினது ஒழுக்கம் வேறுபடினும்; திரியாச் சுற்றமொடு - வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரிச் சுற்றத்தோடு; முழுது சேண் விளங்கி - ஒழியாது நெடுங்காலம் விளங்கி; நடுக்கின்றி நிலியர் - துளக்கமின்றி நிற்பாயாக; அடுக்கத்து- அரைமலையின்கண்; சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை - சிறிய தலையை யுடைய மறிகளையுடையவாகிய பெரிய கண்ணையுடைய மான்பிணைகள்; அந்தி - அந்திக் காலத்தே; அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கில் துஞ்சும் - அந்தணர் செய்தற்கரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும் முத்தீயாகிய விளக்கின் கண்ணே துயிலும்; பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று - பொற்சிகரங்களையுடைய இமய மலையும் பொதியின் மலையும் போன்று - எ-று. குளிக்கும் நாடென இயையும். குளிக்கும் நாடென இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் நின்றது. நீயோ, ஓ: அசைநிலை. அன்றி, இதனை வினாவாக்கி, ஞாயிறு குளிக்கு மென்பதனை முற்றாக்கி வானவரம்ப னென்பதனை அவ்வினா விற்குப் பொருளாக்கி உரைப்பாருமுளர். முத்தீயாவன: ஆகவனீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி. ஆங்கும் அத்தையும் அசை நிலை. வானவரம்பனை : ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது. நிலந் தலைக்கொண்ட வென்பதற்கு நிலங்கோடல் காரணமாகத் தலைக்கட் சூடிய வெனினு மமையும். போற்றார்ப் பொறுத்தல் முதலிய குணங்களையுடையோய், பொருந, வரையாது கொடுத்தோய், வானவரம்ப, பெரும, நீ புளிப்பினும் இருளினும் திரியினும் இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றிச் சுற்றமொடு விளங்கி நிற்பாயாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. போற்றார்ப் பொறுத்தல் முதலாகிய குணங்களை அரசியலடைவாற் கூறுகின்றாராதலின், பூதங்களின் அடைவு கூறாராயினார். இதனாற் சொல்லியது தன்கடற் பிறந்த ஞாயிறு தன்கடற் குளிக்கும் நாட னாதலால் செல்வமுடையையாக வென்று வாழ்த்த வேண்டுவதின்மையின் நீடுவாழ்கவென வாழ்த்திய வாறாயிற்று. விளக்கம் : குளிக்குமென்னும் பெயரெச்சவினை ஞாயிற்றின் வினை யாயினும், ஞாயிற்றுக்கும் நாட்டுக்கு முள்ள தொடர்பு இடத்துநிகழ் பொருளுக்கும் இடத்துக்கு முள்ள தொடர்பாவது பற்றி, குளிக்கும் நாடென முடிந்தது. இது பற்றியே "குளிக்கும் நாடென இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறி நின்ற" தென்றார். வான வரம்பனை, வானவரம்பவென முன்னிலையாய்க் கொள்ளாது, "நீயோ வானவரம்பனை?" என வினாவாக்கிக் கூறுவதுமுண் டென்றற்கு, வினாவாக்கி யுரைப்பாரு முளர் என்றார். சூது பொருது நிலத்தை முன்பே கவர்ந்து கொண்டமையின், நிலம் தலைக்கொண்ட வென்பதற்கு நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட என வுரை கூறினார். நிலந்தலைக் கொண்ட தும்பை யென்பதற்கு, நிலத்தைக் கைக் கொள்ளுதல் காரணமாகத் தலையிற் சூடிக்கொண்ட தும்பை என்றும் பொருள் கூறலாமாதலால் "நிலங்கோடல் காரணமாகத் தலைக்கட் சூடிய வெனினு மமையும்" என்றார். பெருஞ்சோற்று மிகுபதம் - பெரிய சோறாகிய மிக்க வுணவு. பொருது களத்தொழிந்தவழி, சோறு கொடுத்தற்கு வழியின்மையின், ஒழிய வென்றதற்கு, "போர்க் களத்தின்கட் படுந்துணையும்" என்று பொருள் கூறினார். முழுது என்பது எஞ்சாமை குறித்தலின், ஒழியாதென்றுரைத்தார். திரியாச் சுற்றம் என்றவிடத்து, திரிதல் சுற்றத்தார்க் காகாது அவரது சூழ்ச்சிக் காதலால், இதற்கு வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரச் சுற்றம் என்று உரை கூறினார். சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை யென்றவிடத்து, பிணை யென்றது பெண்மானுக் கானமையின் சிறுதலை நவ்வி யென்றது சிறிய தலையையுடைய மான்மறிக் காயிற்று. மறி-கன்று. "மறியிடைப் படுத்த மான்பிணை" (ஐங்.401) என வருதல் காண்க. அரசியலடைவாவது பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளியென நிற்கும் முறை. இவற்றிற் கேற்பவே நிலமும் விசும்பும், வளியும், தீயும், நீரு மென முறையே பாட்டின்கட் கூறப் படுகின்றன. பொறைக்கு நிலமும், சூழ்ச்சிக்கு விசும்பும், வலிக்கு வளியும், தெறலுக்குத் தீயும், அளிக்கு நீரும் அடைவு எனவுணர்க. "அகழ்வாரைத் தாங்கும் நிலம்" (குறள் 151) என்றும், "விசும்பினன்ன சூழ்ச்சி" (பேரா. உரை. மே. உவம 6) என்றும், "வளிமிகின் வலியு மில்லை" (புற 51) என்றும் வருதல் காண்க. பூதங்களின் அடைவாவது நிலம், நீர், தீ, வளி, விசும்பு என நிற்பது. பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றி நிலியர் என இப்பாட்டுக் கூறுவதை யுட்கொண்டே இளங்கோவடிகள், இமயத்தும் பொதியிலிடத்தும் உயர்ந்தோ ருண்மையின், உயர்ந்தோர் இவற்றிற்கு ஒடுக்கம் கூறார் என்று கூட்டி; இமயமாயினும், பொதியிலாயினும், புகாரேயாயினும் "நடுக்கின்றி நிலைஇய வென்பதல்லதை, ஒடுக்கங் கூறார் உயர்ந் தோருண்மையின், முடித்த கேள்வி முழுதுணர்ந்தோரே" என்று கூறுவது ஒப்புநோக்கத்தக்கது. இமயப் பொற்கோட்டையும், பொதி யத்தையும் சேர வெடுத்தோதுதலால், இமயத்து அடிப்பகுதியில் நடந்த பாரதப் போர் நிகழ்ச்சியில் சேரமான் செய்த நடுநிலை யுதவியை இவர் நேரிற் கண்டறிந்தவ ரெனத் துணிதற் கிடனாகிறது. (2) 3. பாண்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி இப் பெரும்பெயர் வழுதி இப்பாட்டின்கண் ஆசிரியர் இரும்பிடர்த் தலையாரால் "கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி" யெனவே பாராட்டப்படுகின்றா னாதலால் இவனது பெயரும் இதுவே போலும். இவன் கவுரியர் வழித் தோன்ற லென்றும், தன்பால் வரும் இரவலர் குறிப்பறிந்து அவர் வேண்டு வன நல்கும் பெருங்கொடை வள்ளல் என்றும், இதனால் இவனிடம் இரவலர் வந்தவண்ணமே யிருப்பரென்றும் கூறி, இவ் வகையால் உண்டாகும் புகழினும், சொல் தவறாத வாய்மையால் உண்டாகும் புகழே மிகச் சிறந்த தாதலால், "நிலம் பெயரினும் நின்சொல் பெயரல்" என்றும் இப்பாட்டின்கண் ஆசிரியர் வற்புறுத்துகின்றார். இப்பாட்டினைப் பாடிய ஆசிரியர் இரும்பிடர்த்தலையார் சோழன் கரிகாலனுக்கு அம்மான் என்று கூறுவர். இவர் யானை யின் பெரிய கழுத்தை இப்பாட்டின்கண் இரும்பிடர்த்தலை யென்று சிறப்பித்துக் கூறுவது பற்றி இத்தொடரால் இவரைச் சான்றோர் இரும்பிடர்த் தலையார் என வழங்கலாயினர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. இவர்பால் கரிகாலன் இளமையில் கல்விகற்றுச் சிறப்புற்றா னென்று முன்றுறையரையனார் கூறுவர். இப்பாட்டில் இவர் பெரும்பெயர் வழுதியின் குடிப் பிறப்பும், மனை மாண்பும், கொடைப்புகழும் எடுத்தோதிப் பாராட்டி வாழ்த்தி யொழியாது; சொற்பெயராமை வேண்டும் என வற்புறுத்தும் திறம், கரிகாலனைப் பேரரசனாக்கும் திறம் இவர்பால் உண்மை யினை நாமறியப் புலப்படுத்துகிறது. உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற ஏம முரசம் இழுமென முழங்க நேமி யுய்த்த நேஎ நெஞ்சின் 5 தவிரா ஈகைக் கவுரியர் மருக செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ பொன்னோடைப் புகரணிநுதல் துன்னருந்திறல் கமழ்கடாஅத் தெயிறுபடையாக எயிற்கத விடாஅக் 10 கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி நிலம்பெயரினும் நின்சொற் பெயரல் 15 பொலங்கழற்காற் புலர்சாந்தின் விலங்ககன்ற வியன்மார்ப ஊரில்ல உயவரிய நீரில்ல நீளிடைய பார்வ லிருக்கைக் கவிகண் ணோக்கிற் 20 செந்தொடை பிழையா வன்க ணாடவர் அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும் உன்ன மரத்த துன்னருங் கவலை நின்னசை வேட்கையின் இரவலர் வருவரது 25 முன்ன முகத்தி னுணர்ந்தவர் இன்மை தீர்த்தல் வன்மை யானே. (3) திணை - பாடாண்டிணை; துறை - செவியறிவுறூஉ; வாழ்த்தியலுமாம். பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் பாடியது. உரை : உவவுமதி உருவின் - உவாநாளின் மதியினது வடிவு போலும் வடிவினையுடைய; ஓங்கல் வெண்குடை - உயர்ந்த வெண்கொற்றக் குடை; நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற - நிலைபெற்ற கடலெல்லைக்கண் நிலத்தை நிழற்செய்ய; ஏம முரசம் இழுமென முழங்க - காவலாகிய வீரமுரசம் இழுமென முழங்கும் ஓசையையுடைத்தாய் முழங்க; நேமி யுய்த்த நேஎ நெஞ்சின் - சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்; தவிரா ஈகை - ஒழியாத வண்மையினையு முடைய; கவுரியர் மருக - பாண்டியர் மரபினுள்ளாய்; செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ - குற்றமற்ற கற்பினையுடைய சேயிழைக்குத் தலைவ; பொன் ஓடைப் புகர் அணி நுதல் - பொன்னானியன்ற பட்டத்தையுடைய புகரணிந்த மத்தகத் தினையும்; துன்னருந் திறல் - அணுகுதற் கரிய வலியையும் கமழ் கடாஅத்து - மணநாறும் மதத்தினையும்; கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின் - கயிற்றாற் பிணித்தலைச் செய்த கவிழ்ந்த மணியணிந்த பக்கத்தையும்; பெருங்கை - பெருங்கையையு முடைய; எயிறு படையாக - கொம்பு படைக்கலமாகக் கொண்டு; எயிற் கதவிடா - பகைவர் மதிலின்கட் கதவைக் குத்தி; யானை இரும்பிடர்த் தலையிருந்து - யானையினது பெரிய கழுத் திடத்தே யிருந்து; மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயா - பரிகாரமில்லாத கூற்றத்தினது பொறுத்தற்கரிய கொலைத் தொழிலுக்கு இளையாத; கருங்கை ஒள்வாள் - வலிய கையின் கண்ணே ஒள்ளிய வாளினையுடைய; பெரும்பெயர் வழுதி -; நிலம் பெயரினும் நின்சொல் பெயரல் - நிலம் பிறழினும் நினது ஆணையாகிய சொல் பிறழா தொழியல் வேண்டும்; பொலங் கழற்கால் - பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்த காலினையும்; புலர்சாந்தின் விலங்கு அகன்ற வியன்மார்ப - பூசிப் புலர்ந்த சந்தனத்தை யுடைத்தாகிய குறுக்கன்ற பரந்த மார்பினையு முடையோய்; ஊர்இல்ல - ஊரில்லாதனவும்; அரிய உயவ - பொறுத்தற்கரிய உயங்குதலையுடையனவும்; நீரில்ல - நீரில்லாதனவும்; நீள் இடைய - நீண்ட வழியனவு மாகிய; பார்வல் இருக்கை - வம்பலரை நலியச் சேய்மைக் கண்ணே பார்த்திருக்கும் இருப்பினையும்; கவி கண் நோக்கின் - கையாற் கவிக்கப்பட்ட கண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையையும்; செந்தொடை பிழையா வன்கண் - செவ்விய தொடை பிழையாத தறுகண்மையையுமுடைய; ஆடவர் - மறவர்தாம்; அம்பு விட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை - அம்பை விடுதலாற் பட்டோரது உடல் மூடிய புதிய கற்குவையின் மேலே; திருந்து சிறை வளைவாய்ப் பருந்து - திருந்திய சிறகினையும் வளைந்த வாயினையுமுடைய பருந்து; இருந்து உயவும் - இருந்து வருந்தும்; உன்னமரத்த துன்னருங் கவலை - உன்ன மரத்தினை யுடையவாகிய அணுகுதற்கரிய கவர்த்த வழியின் கண்ணே; நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் - நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்; அது - அங்ஙனம் வருவது; முன்னம் முகத்தின் உணர்ந்து - அவர் மனக்குறிப்பை அவர் முகத்தானறிந்து; அவர் இன்மை தீர்த்தல் வன்மையான் அவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான்; எ-று. நுதலையும், திறலையும், கடாத்தையும், மருங்கையும், பெருங் கையையுமுடைய யானைப் பிடர்த்தலை யிருந்து, எயிறு படையாக எயிற்கதவிடாக் கூற்றத் தருந்தொழில் சாயாப் பெரும்பெயர் வழுதியென மாறிக்கூட்டுக. காலா லடுதல் கையாலூக்குத லன்றி, எயிறு படையாக எயிற்கதவு இடக்கை விடாத பெருங்கை யானையென இயைத்துரைப்பினுமமையும்; எயிற்கதவிடாஅக் கயிறு பிணிக்கொண்ட வென இயைத் துரைப்பாரு முளர். ஊரில்ல, உயவரிய, நீரில்ல, நீளிடையவாகிய உன்னமரத்த கவலை யெனவும், பருந்திருந் துயவும் துன்னருங் கவலை யெனவும் இயையும். மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர் வருவர். அஃது அவர் இன்மை தீர்த்தல் வன்மையான்; அதனால் நின் சொற்பெயரா தொழியல் வேண்டும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வாழ்த்தி யலாதல் விளங்க, வேண்டுமென ஒரு சொல் தந்துரைக்கப் பட்டது. விளக்கம் : உவாமதி - முழுத்திங்கள். வெண்கொற்றக் குடைக்கு முழுமதி உமவம். நிலவுக் கடல்-நிலைபெற்ற கடல் ; "மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது, விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல்" (பதிற். 15) என்று சான்றோர் கூறுதலால் கடற்கு நிலைபேறுண்மை யறிக. "இமிழ்குரன் முரச மூன்று" (புறம். 58) என்றவற்றுள், வீர முரசமாகிய காவன் முரசினை ஈண்டு "ஏமமுரச" மென்றார். நேஎ-ஈரம்; நேயம் நேச மென்பன இதனடியாகப் பிறந்தன. சேயிழை யணிந்த- கோப்பெருந்தேவியைச் சேயிழை யென்றார். அருந்தொழில் சாயா என்புழி - நான்கனுருபு விரித்துரைக்கப்பட்டது. யானையின் மதம் ஏழிலைப்பாலையின் மணம் கமழும் என்பவாகலின், "கமழ்கடா அத்து" என்றார். கருங்கை யென்றவிடத்துக் கருமை, வலிமை குறித்து நின்றது; "கருங்கை வினைஞர்" (பெரும். 223) என்றாற் போல. இடக்கை - இடத்தல். இடாஅ-இடந்து. கட்புருவத்தின்மேற் கையைக் கவித்துத் தொலைவிற் குறித்த பொருளை நோக்கும் செயல் வகையைக் "கவிகண் நோக்கு" என்பர். "மருந்தில் கூற்றம்" என்றும் "அருந்தொழில்" என்றும் விதந்தோதியது சாதலின் கொடுமை யுணர்த்தி நிற்ப, அதற்குச் சாயாவழுதி யென்றது, வழுதியது சாதலஞ்சாத் தறுகண்மை விளக்கி நின்றது. பெயரல் என்பது அல்லீற் றெதிர்மறை வியங்கோ ளாயினும் வேண்டும் என ஒருசொல் பெய்துரைக்கப்பட்டது; உரைகாரர் "வாழ்த்தியலாதல் விளங்க வேண்டுமென ஒரு சொல் தந்துரைக்கப்பட்ட" தென்றார். "நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்தசொல் நீ பொய்ப்பறி யலையே" (பதிற். 63) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, அரசரது ஆணை, வழியொழுகப்படாது பிறழுமாயின், அரசியல் அறம் பொரு ளின்பங்கள் நிலவுதற் கரணாகா தொழியு மாதலால், சொல்லென்ப தற்கு "ஆணையாகிய சொல்" லெனப் பொருள் கூறுகின்றார். பாட்டுக் கிடந்தபடியே பொருள்கொள்ளாது; "எயிறு படையாக வெயிற்கதவிடாஅ" என்பதனை, "இரும்பிடர்த் தலையிருந்" தென்பதன்பின் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டியிருத்தலின், "மாறிக் கூட்டுக" என வுரைக்கின்றார். உடைமையை மிகுத்தற்கண் செல்லும் மனத்தை மீட்டுப் பிறரது இன்மை தீர்த்தற்குச் செலுத்தல் மிக்க வன்மையுடையார்க் கல்ல தாகாமையால், "தீர்த்தல் வன்மை யான்" என்று உரைக்கின்றார். (3) 4. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி இச் சோழவேந்தன் கரிகால்வளவனுக்குத் தந்தை யென்பர். பொருநராற்றுப்படைகாரர் கரிகாலனை, "உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்" என்பர். இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கொடை கொண்டான் எனத் தொல்காப்பிய வுரையில் நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். பெருங்குன்றூர் கிழார், இவனை, "நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல், வான்றோய் நீள்குடை வயமான் சென்னி"(புறம் 266) என்று பாராட்டுகின்றார். இனி, இப் பாட்டைப் பாடிய பரணர் சங்கத் தொகை நூல்களுட் காணப்படும் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியவர். இவர் பாட்டுக்கள் கற்பனை வளமும் வரலாற்றுக் குறிப்பும் செறிந்தனவாகும். இப்புறநானூற்றின்கண் இவர் பாடியனவாகப் பதின்மூன்று பாட்டுக்கள் உள்ளன. அதியமான் கோவலூரை யெறிந்த காலத்து அவனை இவர் பாராட்டிப் பாடியதாக ஒளவையார் குறிக்கின்றார். இவர் மருதத்திணையை அழகொழுகப் பாடும் அமைதியுடையவர். இப் பாட்டின்கண் ஆசிரியர் பரணர், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் காலாட்படை, குதிரைப்படை, யானைப் படை, தேர்ப்படை யென்ற நான்கும் போருழந்து சிறக்கும் பெருமையைப் புகழ்ந்து, தேர்மீது தோன்றும் அவனை, "நீ, மாக்கடல் நிவந்தெழுதரு, செஞ்ஞாயிற்றுக் கவினை" என்றும், "நீ இத்தன்மையாக, நின்னைப் பகைத்தோருடைய நாடு அழியு" மென அதன் அழிவுக் கிரங்கி, "தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூவும்" என்றும் கூறுகின்றார். வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வானத்து வனப்புப்போன்றன தாள், களங்கொளக் கழல்பறைந்தன கொல்ல் லேற்றின் மருப்புப் போன்றன 5 தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ நிலைக்கொராஅ இலக்கம்போன்றன மாவே, எறிபதத்தான் இடங்காட்டக் கறுழ்பொருத செவ்வாயான் எருத்துவவ்விய புலிபோன்றன 10 களிறே, கதவெறியாச் சிவந்துராஅய் நுதிமழுங்கிய வெண்கோட்டான் உயிருண்ணுங் கூற்றுப்போன்றன நீயே, அலங்குளைப் பரீஇஇவுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி 15 மாக்கடல் நிவந்தெழுதரும் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ அனையை ஆகன்மாறே தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே. (4) திணை : வஞ்சி; துறை : கொற்றவள்ளை. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடியது. உரை : வாள் வலந்தர மறுப்பட்டன - வாள் வெற்றியைத் தருதலாற் குருதிக்கறை பட்டன; செவ்வானத்து வனப்புப் போன்றன - செக்கர்வானத்தினது அழகை யொத்தன; தாள் களங்கொள கழல் பறைந்தன - கால் புடைபெயர்ந்து போர் செய்து களத்தைத் தமதாக்கிக் கொள்ளுதலால், வீரக்கழல் அருப்புத்தொழில் பறைந்தவை; கொல்லேற்றின் மருப்புப் போன்றன - கொல்லும் ஆனேற்றினது கோட்டை யொத்தன. தோல் துவைத் தம்பின் துளை தோன்றுவ - பரிசைகள் ஒலித்துத் தைத்த அம்புகளால் துளை தோன்றுவன; நிலைக்கு ஒராஅ இலக்கம் வொன்றன - நிலையிற் றப்பாத இலக்கத்தை யொத்தன; மா எறிபதத்தான் இடம் காட்ட - குதிரைகள் எதிரியை யெறியும் காலமுடையான் இடவாய் வலவாயாகிய இடத்தைக் காட்ட; கறுழ் பொருத செவ்வாயான் - முகக்கருவி பொரப்பட்ட செவ்வாயை யுடைமையான்; எருத்து வவ்விய புலி போன்றன - மான் முதலாயினவற்றின் கழுத்தைக் கவ்வி யுதிரம் உவற்றியுண்ட புலியை யொத்தன; களிறு - களிறுகள், கதவெறியாச் சிவந்து உராய் - கதவை முறித்து வெகுண் டுலாவி; நுதி மழுங்கிய வெண்கோட்டான் - நுனை தேய்ந்த வெளிய கோட்டையுடைமையான்; உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன - உயிரை யுண்ணும் கூற்றை யொத்தன; நீயே - நீதான்; அலங்குளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசை - அசைந்த தலையாட்டமணிந்த கதியையுடைய குதிரையாற் பூட்டப்பட்ட பொற்றேரின் மேலே; பொலிவு தோன்றி - பொலிவொடு தோன்றுதலால்; மாக்கடல் நிவந்து எழுதரு செஞ்ஞாயிற்றுக் கவினை - கரிய கடலின்கண்ணே யோங்கி யெழுகின்ற செய்ய ஞாயிற்றினது ஒளியையுடையை; அனையை யாகன் மாறு - அத்தன்மையையாதலால்; தாயில் தூவாக் குழவி போல - தாயில்லாத உண்ணாக் குழவி போல; ஓவாது கூஉம் - ஒழியாது கூப்பிடும்; நின் உடற்றியோர் நாடு - நின்னைச் சினப்பித்தவருடைய நாடு எ-று. நாடென்றது, நாட்டுள் வாழ்வாரை. மாறென்பது ஏதுப் பொருள் படுவதோர் இடைச்சொல். கழல் பறிந்தன வென்றோதி வீரக்கழல் நீங்கியவை யென்றுரைப்பாரு முளர். வாளாகிய மறுப்பட்டவை யெனவும், கழலாகிய பறைந்தவையெனவும், தோலாகிய துளை தோன்றுவவெனவும் கொள்க. துவைத்துத் தோன்றுவவென வியையும். எறிபதத்தா னென்பதற்கு ஒத்தும் காலையுடையானென்றுரைப்பாரு முளர். செஞ்ஞாயிற்றுக் கவினையென்ற துணையும் மன்னவன் புகழும், ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடென ஒன்னார் நாடழி பிரங்கலும் ஓதலான் இது கொற்றவள்ளை யாயிற்று. விளக்கம் : போர் செய்யுமிடத்துக் குருதிக்கறை படிந்து சிவந்து தோன்றும் வாட்படைக்குச் செக்கர் வானம் உவமம். வீரரணியும் கழல் முல்லை யரும்புபோல வேலைப்பாடமைந்தவையாதலால், அவை வீரர் தம்முடைய காலை முன்னும், பின்னும், பக்கத்தும், புடை பெயர்த்து வைத்துத் தாவடியிட்டுப் பொருங்கால் பிறர் கழலோடும், நிலத்திற் கிடக்கும் பிறவற்றோடும் புடைப்புண்டு, அரும்புகள் உதிர்ந்து, மழுங்கி விடுதலைப் பறைதலென்று கூறுகின்றாராதலால்; போரின்கண் களத்தைத் தமதாக்கிக் கொள்ளும் முயற்சியில் வீரர் கழல்கள் பறைந்து மழுங்குதல் கண்டு "களங்கொளக் கழல் பறைந்தன" என்றார். தோல் - கேடயம்; இது பரிசையென்றும் வழங்கும். தோலாற் செய்யப்படுவது பற்றி-இது தோல் என்றும் பெயர் பெறும். துவைத்தல்- ஒலித்தல். இலக்கம், இல்வழி அதனை நோக்கி வீரர் நிலையின் றியங்குபவாதலால், இலக்கத்தை "நிலைக்கொராஅ இலக்கம்" என்றார். எறிபதம் - பகைவரை யெறிதற்கு வேண்டுங் காலம். அக் காலம் வாய்க்கப்பெற்ற வீரன் "எறிபதத்தான்" எனப்பட்டான். உவற்றி யுண்டல் - உறிஞ்சியுண்டல். பரி - குதிரையின் கதி; இது பரீஇயென அளபெடுத்து நின்றது. தோன்றி யென்னும் வினையெச்சம் தோன்று தலாலெனக் காரணப் பொருளில் வந்தது. தூவாக் குழவி - உண்ணாக் குழவி; துவ்வாமை தூவாமை யென விகாரம். "துவைத் தம்பின் துளை தோன்றுவ" என்பதில், துவைத்தென்னும் வினையெச்சம் தோன்றுவவென்பதனோடு முடிதலின், "துவைத்துத் தோன்றுவ வென வியையும்" என்றுரைத்தார். காலாளும், குதிரையும், யானையும், தேருமாகிய படையினது மேற்செலவினைப் பாராட்டிக் கூறுதலால் இது வஞ்சித்திணையாயிற்று. கொற்றவள்ளையாவது வேந்தனது புகழைப் பாராட்டி, அவன்பகைவர் நாட்டது அழிவுக் கிரங்கிக் கூறுவது. இதனை விளக்குதற்பொருட்டே உரைகாரர், "செஞ் ஞாயிற்றுக் கவினை..... கொற்றவள்ளை யாயிற்" றென்றார். (4) 5. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர லிரும்பொறை இச்சேர வேந்தன் இரும்பொறைக் குடியிற் பிறந்தவன். ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் என்பது இவனதியற்பெயர். இவன் தன் அரசியலைக் கொங்குநாட்டுக் கருவூர்வரையில் நிலவச் செய்து அந்நகர்க்கண்ணே அரசு கட்டிலேறி முடிசூடிக்கொண்ட சிறப்புப் பற்றி, கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர லிரும்பொறை யென வழங்கப்படுகின்றான். இவன் சிறந்த மெய்ப் பொலி வுடையவன். தன்னைக் கண்டார்க்கு நலஞ் செய்யும் இவனது தோற்றச் சிறப்பு. நரிவெரூஉத்தலையார் என்னும் சான்றோர்க்குற்ற மெய்வேறுபாடு இவனது காட்சியால் நீங்கிப் பண்டைய நலத்தை யடைந்தது என்று கூறுவர். பண்டைய நல்லுடம்பு பெற்ற அச்சான்றோர் பாடியது இப்பாட்டு. இதன்கண், அவர் கோப்பெருஞ் சேர லிரும்பொறையைக் கண்டு அவனது தோற்றப் பொலிவை வியந்து தனக்குச் செய்தது போலப் பிறர்க்கும் இன்பம் செய்யும் இயல்பு குன்றாதிருப்பது காரணமாக, இத்தோற்றப் பொலிவு செல்வக்குறைவாலும் சிற்றினச் சேர்க்கையாலும் மக்கள்பால் அளியின்மையாலும் குன்றுமென நினைந்து, "பெரும, நீ கானக நாடனாதலால், செல்வக்குறைவிலை; ஆதலால், நீ நிரயங்கொள்ளும் சிற்றினத்தைச் சேராது நாட்டினைக் குழவி வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பா யாக" என அறிவுறுத்துகின்றார். எருமை யன்ன கருங்கல் லிடைதோ றானிற் பரக்கும் யானைய முன்பின் கானக நாடனை நீயோ பெரும நீயோ ராகலி னின்னொன்று மொழிவல் 5 அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரோ டொன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. (5) திணை : பாடாண்டிணை; துறை : செவியறிவுறூஉ ; பொருண்மொழிக்காஞ்சியுமாம். சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறையைக் கண்ட ஞான்று நின்னுடம்பு பெறுவாயாகென, அவனைச் சென்று கண்டு தம்முடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது. உரை : எருமையன்ன கருங்கல் இடைதோறு - எருமை போலும் வடிவையுடைய கரிய கற்பொருந்திய இடந்தோறும்; ஆனிற் பரக்கும் யானைய - பெற்றம் போலப் பரக்கும் யானையை யுடையவாய; முன்பின் கான் அக நாடனை - வலியையுடைய காட்டிற்குள்ளாகிய நாட்டினையுடையாய்; பெரும - ; நீ ஆகலின் - நீ இங்ஙனம் பகைவரான் அணுகப்படாத இயல் பாகிய பெருஞ்செல்வத்தை யுடையனாதலால்; நின் ஒன்று மொழிவல் - நினக்கு ஒரு காரியஞ் சொல்லுவேன், அதனைக் கேட்பாயாக; அருளும் அன்பும் நீக்கி - அருளையும் அன்பை யும் நீக்கி; நீங்கா நிரயங் கொள்பவரோடு ஒன்றாது - பாவஞ் செய்தாரை நீங்காத நரகத்தைத் தமக்கு இடமாகக் கொள்பவ ரோடு பொருந்தாது; காவல் - நீ காக்கப்படும் தேயத்தை; குழவி கொள்பவரின் ஓம்புமதி - குழவியை வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக; அளிது அது - அளிக்கத்தக்க தொன்று அக் காவல்; பெறல் அருங்குரைத்து - அது பெறுதற் கரிது எ-று. காவல் என்றது ஆகுபெயர். நாடனை : ஐகாரம் முன்னிலைக் கண் வந்தது. ஓவும், ஓரும் - அசைநிலை. அருளாவது ஒன்றின் துயர் கண்டாற் காரணமின்றித் தோன்றும் இரக்கம். அன்பாவது தன்னால் புரக்கப்படுவார்மேல் உளதாகிய காதல். இனி, ஓகாரத்தைப் பிரித்து வினாவாக்கிக் கோப்பெருஞ்சேர லிரும் பொறையைக் கண்டஞான்று நின்னுடம்பு பெறுவாயெனத் தம்முடம்பு பெற்றமை தோன்ற நீயோ வென வினாவினாராக்கி யுரைப்பாரு முளர். காவல் குழவி கொள்பவரின் ஓம்பென்றமையால் செவியறி வுறூஉவும், அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரோ டொன்றா தென்றமையால் பொருண்மொழிக் காஞ்சியு மாயிற்று. விளக்கம் : பல எருமைகட்கிடையே விரவி நின்று மேயும் பசுக்கூட்டம் போலக் கருங்கற்பாறைகட்கிடையே விரவி யானைக் கூட்டம் காணப்படுகிற தென்பதை, "எருமை யன்ன கருங்கல் விடைதோ, றானிற் பரக்கும் யானைய" என்றார். இது வடிவுவமம். பரக்கும் - பரந்து சென்று மேயும். முன்பு - வலி. கான் அக நாடு - காட்டின் அகத்ததாகிய நாடு; காடு சூழ்ந்த நாடென்பதாம். கானக நாடனை நீயோ வென்பது, காட்டிற் குள்ளாகிய நாட்டினையுடையோன் நீதானோவென்று பொருள் கொள்ளவும் இடந் தருதலின், ஓகாரத்தைப் பிரித்து நீ கானக நாடனையோ என வினாவினாராக்கி யுரைப்பாரு முளர் என்றுரைத்தார். கோப்பெருஞ் சேர லிரும்பொறையைக் காணில் உடம்பு பெறுவை யெனச் சான்றோர் தமக்குரைத்தவாறே, நரிவெரூஉத்தலையார் அவனைக் கண்டு தம்முடம்பைப் பெற்று அதனால் உண்டாகிய வியப்பால், சான்றோரால் உரைக்கப்பட்ட கானக நாடனாகிய கோப்பெருஞ் சேர லிரும்பொறை நீயோ என்றா ரெனப் பொருள்கொள்வாரு முண்டு என்பதாம். காவலென்னுந் தொழில் காக்கப்படுந் தேயத்துக்காயினமையின் ஆகுபெயர் என்றார். குழவி கொள்பவரின் என்புழிக் கொள்ளுதல் வளர்த்துக் கொள்ளுதல். இன் : உவமப்பொருட்டு. இனி, இப்பாட்டை வாயுறை வாழ்த்தாகக் கொண்ட நச்சினார்க் கினியர் "இதனுள் நிரயங் கொள்பவரோ டொன்றாது காவலை யோம்பென, வேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி, அவற்குறுதி பயத்தலின் வாயுறை வாழ்த்தாயிற்" றென்றார். கானக நாடென்றது, காவலும் செல்வமும் உடைய நாடென்பது பட நிற்றலின், அதற்கேற்ப "ஆகலின்" என்றவிடத்து, "இங்ஙனம் பகைவரானணுகப்படாத" என்பது முதலிய சொற்களைப் பெய்து கூறினார். இவை இசையெச்சம். 6. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இப்பாண்டியன் யாகசாலைகள் பல நிறுவி யாகங்கள் செய்தவன் என இவன் பெயராலும் நெட்டிமையார் பாட்டாலும் அறியலாம். இவனை வாழ்த்தும் சான்றோர் "பஃறுளியாற்று மணலினும் பல யாண்டு வாழ்க" என வாழ்த்துதலால், இவன் குமரிக் கோடும் பஃறுளியாறும் கடல் கொள்ளப்படுதற்கு முன்பே நம் தமிழகத்தில் இருந்தவனென்பது பெறப்படுகிறது. இப் பாட்டினைப் பாடும் காரிகிழார் காரியென்னும் ஊரினர். இவ்வூர் தொண்டை நாட்டிலுள்ள தென்றும், இப்போது இதற்கு இராமகிரியென்று பெயர் வழங்குகிற தென்றும் கூறுப. இப்பாட்டின்கண், ஆசிரியர் காரிகிழார் பாண்டியனை நோக்கி, "வேந்தே, நினக்கு எல்லா வுலகினும் உருவும் புகழும் உண்டாகுக; நின் கோல் ஒருதிறம் பற்றாது நடுநிலை நிற்க; நின் படைகுடி முதலியன சிறக்க; பகைப்புலத்து வென்ற நன்கலங் களைப் பரிசிலர்க்கு வழங்கி யுயர்வதோடு முக்கட்செல்வன் நகர்வலம் செய்தற்கண் நின் குடை பணிக; நான்மறை முனிவர் கைகவித்து வாழ்த்துங்கால் நின் சென்னி தாழ்க; பகைப்புலத்துச் சுடுபுகையால் நின் கண்ணி வாடுக; மகளிர் கூட்டத்திற் சினமின்றி மெல்லியனாகுக; மதியமும் ஞாயிறும் போல இந் நிலமிசை மன்னுவாயாக" எனச் சொல்லி வாழ்த்துகின்றார். (6) வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும் 5 கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின் நீர்நிலை நிவப்பின் கீழும் மேல தானிலை யுலகத் தானு மானா துருவும் புகழு மாகி விரிசீர்த் தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம் 10 பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச் சிறுகண் யானை செவ்விதி னேவிப் பாசவற் படப்பை யாரெயில் பலதந் 15 தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப் பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த 20 நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே வாடுக விறைவநின் கண்ணி யொன்னார் நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே 25 ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ நிலமிசை யானே. (6) திணை : பாடாண்டிணை; துறை - வாழ்த்தியலுமாம். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது. உரை : வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் - வடக்கின் கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்; தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் - தெற்கின் கண்ணது உட்குந்திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும்; குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும் - கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும்; குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் - மேல் கண்ணது பழையதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்; கீழது - கீழதாகிய; முப்புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் - நிலமும் ஆகாயமும் சுவர்க்கமுமென மூன்றுங் கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற்கட்டாகிய; நீர்நிலை நிவப்பின் கீழும் - நீர்நிலைக்கண் ஓங்கிய நிலத்தின் கீழும்; மேலது ஆன்நிலை உலகத்தானும் - மேலதாகிய கோ லோகத்தின் கண்ணும்; ஆனாது - அமையாது; உருவும் புகழும் ஆகி - உட்கும் புகழுமாக; விரிசீர்த் தெரிகோல் ஞமன்ன் போல - பரந்த அளவையுடைய பொருள்களை ஆராயும் துலாக் கோலின்கட் சமன்வாய் போல; ஒரு திறம் பற்றல் இலியர் - ஒருபக்கம் கோடாதொழிக; நின் திறம் சிறக்க - நினது படை குடி முதலாகிய கூறுபாடுகள் சிறக்க; செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்து - போர் செய்தற்கு, மாறுபட்ட பகைவர் தேயத்தின் கண்ணே; கடற்படை குளிப்ப மண்டி - நினது கடல்போலும் படை மேல் விழுந்து உள்புக மிக்குச் சென்று; அடர்ப்புகர்ச் சிறுகண் யானை செவ்விதின் ஏவி - அடர்ந்த புகரினையுடைய சிறுகண் யானையைத் தடையின்றி நேரே யேவி; பாசவல் படப்பை ஆரெயில் பல தந்து - பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையுங் கொண்டு; அவ் வெயில் கொண்ட செய்வுறு நன்கலம் - அவ்வரணின்கட் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த நல்ல அணிகலங்களை; பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி - பரிசிலர்க்கு வரிசையின் வழங்கி; நின் குடை - நினது கொற்றக்குடை; முனிவர் முக்கட் செல்வர் நகர் வலம் செயற்கு - முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருவ தற்கு; பணியியர் - தாழ்க; பெரும - ; நின் சென்னி - நினது முடி; சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கையெதிரே - மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடு வாழ்கவென் றெடுத்த கையின் முன்னே; இறைஞ்சுக - வணங்குக; இறைவ-; நின் கண்ணி - நினது கண்ணி; ஒன்னார் நாடு சுடு கமழ்புகை எறித்தலான் வாடுக - நின் பகைவரது நாட்டைச் சுடும் பல மணநாறும் புகை யுறைத்தலான் வாடுக; நின் வெகுளி - நினது சினம்; வாலிழை மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே செலியர் - வெளிய முத்தாரத்தையுடைய நின் தேவியருடைய துனித்த ஒளியையுடைய முகத்தின் முன்னர்த் தணிக; வென்று வென்றி யெல்லாம் அகத்தடக்கிய - வென்று வென்றி முழுதை யும் வியவாது நின்மனத்தே உட்கொண்ட; தண்டா ஈகை தகை மாண் குடுமி - தணியாத வண்மையையுடைய தகுதி மாட்சிமைப் பட்ட குடுமி; தண்கதிர் மதியம் போலவும் - குளிர்ந்த சுடரை யுடைய திங்களை யொப்பவும்; தெறு சுடர் ஒண் கதிர் ஞாயிறு போலவும் - சுடுகின்ற ஒளிபொருந்திய ஒள்ளிய கதிரையுடைய ஞாயிற்றை யொப்பவும்; பெரும -; மன்னிய- நிலை பெறுவா யாக; நீ நிலமிசையானே - நீ உலகத்தின்மேல் எ-று. வடாஅ தென்னும் முற்றுவினைக்குறிப்பைப் பெயர்ப் படுத்தி, பனிபடு நெடுவரையொடு பண்பொட்டாக்கி, அதன் வடக்கு மென்க. ஒழிந்தனவும் அன்ன. "மேலது" துறக்கத்தின் மேலுமென்பார், அதற்கு மேலதாகிய "ஆனிலை யுலகத்தானு" மென்றார். உரு வென்பது இவனாணையாற் பிற ரஞ்சும் உட்குடைமை. அத்தையும், ஆங்கவும் அசைநிலை. குடுமி, பெரும, உருவும் புகழும் ஆக; ஒருதிறம் பற்றா தொழிக; நிற்றிறம் சிறக்க; பணிக; இறைஞ்சுக; வாடுக; செல்லுக; பரிசின் மாக்கட்கு நல்கி, மதியம் போலவும், ஞாயிறு போலவும், பெரும, நீ நிலத்தின்மிசை மன்னுக வெனக்கூட்டி வினைமுடிவு செய்க. தேஎத்தென்பதனுள், அத்தை அசைநிலையாக்கித் தேயம் கடற்படைக்குள்ளே குளிப்ப வென்றுரைப்பாருமுளர். ஞமன், யமனெனினுமமையும். அடற்புகர்ச் சிறுகண் யானை யென்று பாடமோதி, கொலையைச் செய்யும் புகரையுடைய யானை யெனினு மமையும். ஆகி, ஆகவெனத் திரிக்க; ஆகி யென்ப தனைத் திரியாது நிற்றிறஞ் சிறக்க வென்பதனோ டியைத் துரைப்பாரு முளர். நின்றிறம் - நிற்றிறம் என வலிந்து நின்றது. நகர்வலஞ் செயற்குப் பணியியரென வீடும், ஏந்துகை யெதிர் இறைஞ்சுக வென அறமும், புகையெறித்தலான் வாடுக வெனப் பொருளும், முகத்தெதிர் தணிகவென இன்பமும் கூறியவாறாயிற்று. இஃது இவ்வாறு செய்கவென அரசியல் கூறலிற் செவியறிவுறூஉம், மதியமும் ஞாயிறும் போல மன்னுக வென்றமையான் வாழ்த்தியலுமாயிற்று. விளக்கம் : வடக்கின்கண்ணது வடாஅது, தெற்கின் கண்ணது தெனாஅது, குணக்கின்கண்ணது குணாஅது, குடக்கின் கண்ணது குடாஅது என வந்தன. "கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும்" (தொல். சொல் 213) என்பதனால், இவை யாவும், ஏழாம் வேற்றுமைப் பொருண்மைக் கண் வந்த வினைக்குறிப்புமுற்று. இவை பெயராய், வடக்கின் கண்ணதாகிய நெடுவரை யெனவும், தெற்கின் கண்ணதாகிய குமரி யெனவும், குணக்கின்கண்ணதாகிய தொடுகடலெனவும், குடக்கின் கண்ணதாகிய பௌவமெனவும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை யாயின. இதனால், இவ்வுரைகாரர், "வடாதென்னும் முற்றுவினைக் குறிப்பைப் பெயர்ப்படுத்திப் பனி படு நெடுவரையொடு பண்பொட் டாக்கி, அதன் வடக்குமென்க" என்றார். பண்பொட்டென்றது, இருபெயரொட்டுப் பண்புத்தொகை. தொடுகடல், தோண்டப்பட்ட கடலெனப் பொருள்படுதலின் இதற்கேற்ப, "சகரரால் தோண்டப்பட்ட சாகரம்" என்று உரைத்தார். சகரர் தோண்டியது சாகரமாயிற்று. கீழைக் கடலினும் மேலைக் கடல் பழையதாதலால், அதனைத் "தொன்று முதிர் பௌவம்" என்றார். இப்பாண்டியன் காலத்தில் தெற்கில் கடலில்லையாதலால், "தெனாஅது உருகெழு குமரி" யென்றாராக, உரைகாரரும் "தெற்கின் கண்ணது உட்குந் திறம் பொருந்திய கன்னியா" றென்றுரை கூறினார். மேலது என்றது, மேலுள்ள துறக்க முதலிய உலகுகளையெல்லாம் அகப்படுத்தி நிற்குமாயினும், எல்லா வுலகிற்கும் மேலதாகிய ஆனிலையுலகிற்காயிற்று. "உருவுட் காகும்" (தொல். சொல். 300) என்பவாகலின், அவ்வுட்காவது "ஆணையாற் பிறர் அஞ்சும் உட்குடைமை" என்றார். பணி யியரத்தை, செலியரத்தை என நின்ற அத்தையும், ஆங்க வென்பதும் அசைநிலை. தேஎம் என்பது அத்துச் சாரியை பெற்றுத் "தேஎத்து" என நிற்கும். "தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப" என்பதற்கு இங்கே கூறியது போலவன்றி வேறுரைத்தலு முண்டு. தேஎத்து என்பதன் அத்துச்சாரியையை அசைநிலையாக்கி விலக்கி, தேஎம் என நிறுத்தி, தேஎம் கடற்படைக்குள்ளே குளிப்ப (மூழ்க) என்று இயைத்து, பகைவரது தேயம் படையாகிய கடலுக்குள்ளே மூழ்க என்று பொருள் கூறுபவரும் உண்டு. உருவும் புகழுமாகி நிற்றிறம் சிறக்க என இயைத்து, உருவும், புகழும் உடையவாய் நின்படை குடி முதலிய திறங்கள் சிறக்க வென்றுரைப்பவரு முண்டென்பதை, "ஆகியென்பதைத் திரியாது நிற்றிறஞ் சிறக்க வென்பதனோ டியைத் துரைப்பாருமுளர்" என்றார். அறமும், பொருளும், இன்பமும், வீடும், என்ற நான்கும் பெறுக வென்றறிவுறுத்துவது சான்றோர்க் கியல்பாதலால், காரிகிழாரும் பாண்டியற்குப் பணிக வென்பதனால் வீடும், இறைஞ்சுக வென்பத னால் அறமும், வாடுக வென்பதனால் பொருளும், தணிக வென்பதனால் இன்பமும் கூறினார். அற முதலிய நான்கனுள் சான்றோரால் தலையாயதெனக் கருதப்படுவது வீடாதலின் அதனை முதலிலும், கடையாக வைத்து ஒதுக்கப்படுவது இன்பமாதலின் அதனை இறுதியிலும் ஓதினார். வீடுபேற்றுக்கு வாயிலாதலின் அறத்தை வீட்டை யடுத்தும், இன்பத்துக்கு ஆக்கமாதலின் பொருளை அதனை யடுத்தும் வைத்துரைத்தார். வேந்தன்பால் நடுவுநிலை இன்றாயின், படை குடி அமைச்சு நட்பு முதலிய உறுப்புக்கள் சிறப்புற நின்று அரசியலுக்குத் துணை செய்யாவாதலால் "ஒரு திறம் பற்றலிலியரோ" என்றார். அரசியலுக்கு உறுப்பாகிய படை குடி அமைச்சு முதலிய ஆறனையும் "திறம்" என்றார். திறம் - கூறு. ஞமன் - துலாக்கோலின் நாக்கு. பகைவர் மதிலைக் கவர்ந்து அவ்விடத்துப் பகைமன்னர் திறையாகத் தரும் செல்வத்தைக் கொணர்ந்து பரிசிலர்க் கீவது பண்டைத் தமிழ்வேந்தர் மரபாதலால், "ஆரெயில் பலதந்து அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம், பரிசில் மாக்கட்கு நல்கி" என்றார். "பலர்புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப், புலவோர்க்குச் சுரக்குமவன் ஈகை மாரியும்" (மலைபடு. 71-2) என்று பிறரும் கூறுதல் காண்க. பரிசிலர்க்கு வழங்குமிடத்தும் பொதுவுற வழங்காது பரிசிலரது தகுதி யறிந்து அதற்கேற்ப வழங்குதல்வேண்டுமென்பதை, "வரிசையின் நல்கி" என்றார். "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர்" (குறள். 528) என்று சான்றோர் கூறுப. மகளி ரூடுமிடத்துச் சிறிது சினம் நிகழினும், ஊடியவரை உணர்த்து தற்கண் கருத்தைச் செலுத்தாது அவரை வாடப்பண்ணிக் காத லின்பத்தைக் கெடுக்குமாதலால், "செலியரத்தை நின்வெகுளி" என்றார். "ஊடி யவரை யுணராமை வாடிய, வள்ளி முதலரிந் தற்று" (1304) என்பது தமிழ்மறை. "நான்மறை முனிவர் ஏந்துகை யெதிரே இறைஞ்சுக பெரும" என்கின்றாராதலால், "முனிவர் முக்கட் செல்வர்" என்ற விடத்து "முனிவராற் பரவப்படும் முக்கட் செல்வர்" என்று உரை கூறினார்; அவராற் பரவப்படும் அருந்தவச் செல்வம் முக்கட் செல்வரிடத் துண்டென்றறிக. (6) 7. சோழன் கரிகாற் பெருவளத்தான் சோழன் கரிகாலன் தமிழ்மக்களால் இன்றுவரை மறக்கப் படாத பெருவேந்தனாவான்; சோழநாட்டின் வளத்துக்கும் பெருமைக்கும் முதற்காரணமானவன்; இரும்பிடர்த்தலையார் பால் கல்வி கற்று இளமையிலே தன் பகைவரை வென்று புகழ் மேம்பட்டவன்; நடுநிலையிலும் அரசியல் முறையிலும் தலை சிறந்தவன்; சோழநாட்டின் தலநகராகிய உறையூரோடு காவிரிப் பூம்பட்டினத்தையும் தலைநகராக்கிச் சிறப்புற்றவன்; முடத்தாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆகிய சான்றோர் களால் பொருநராற்றுப் படையும் பட்டினப்பாலையும் பாடப் பெற்றவன். இந்நூற்கண் இப்பாட்டினைப் பாடிய கருங்குழலாத னாரேயன்றி வெண்ணிக் குயத்தியார் என்பாரும் இவனைப் பாராட்டிப் பாடியுள்ளார். இப்பாட்டினைப் பாடிய கருங்குழ லாதனார் சேரநாட்டுச் சான்றோர்; கரிகாலனிடத்துப் பேரன்பும் பெருமதிப்பும் உடையவர். இவர் கரிகாலனுடைய கொற்றத்தைப் பாடும் கருத்தால், அவனது போரின் கடுமையால் பகைவர் நாடு அழிவுறுதலை யெடுத்தோதி, அவன் மனத்தில் அருள் பிறப் பிப்பது மிக நயமாகவுள்ளது. இப்பாட்டின்கண் "பகைவரின் நாடுகள் புதுவருவாய் நிரம்பிப் பயன் பல திகழ்வனவும், அகன்ற பரப்புடையனவுமாம். நீயோ இரவும் பகலும் அந்நாட்டரசர்களான பகைவரைப் பொருதழிக்கக் கருதி, அவர்தம் ஊர்களைச் சுட்டெரித்தலால் நாட்டுமக்கள் அழுது புலம்பும் ஆரவாரக்கொள்ளையை விரும்பு கின்றாய்; அதனால் அந்நாடுகள் நலமிழந்து கெட்டன காண்" என்று கூறுவது இவ்வாதனாரின் சான்றாண்மையைப் புலப்படுத்து கின்றது. களிறு கடைஇயதாள் கழலுரீஇய திருந்தடிக் கணைபொருது கவிவண்கையாற் கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து 5 மாமறுத்த மலர்மார்பின் தோல்பெயரிய வெறுழ்முன்பின் எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர் ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலின் நல்ல 10 இல்லவா குபவா லியல்தேர் வளவ தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து மீனிற் செறுக்கும் யாணர்ப் பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே. (7) திணை : வஞ்சி; துறை - கொற்றவள்ளை; மழபுல வஞ்சியுமாம். சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கருங் குழலாதனார் பாடியது. உரை : களிறு கடைஇய தாள் - களிற்றைச் செலுத்திய தாளை யும்; கழல் உரீஇய திருந்தடி- வீரக்கழல் உரிஞ்சிய இலக்கணத் தால் திருந்திய அடியினையும்; கணை பொருது - அம்பொடு பொருது; கவி வண் கையால் - இடக் கவிந்த வள்ளிய கை யுடனே; கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து - கண்ணிற்கு விளங்கும் அழகினையுடைய வில்லையும்; மா மறுத்த மலர் மார்பின் - திருமகள் பிறர் மார்பை மறுத்தற் கேதுவாகிய பரந்த மார்பினையும்; தோல் பெயரிய எறுழ் முன்பின் - யானையைப் பெயர்த்த மிக்க வலியினையுமுடைய; எல்லையும் இரவும் எண்ணாய் - பகலும் இரவும் எண்ணாது, பகைவர் ஊர் சுடு விளக்கத்து - பகைவரது ஊரைச் சுடுகின்ற தீயினது ஒளியின் கண்ணே; தங்கள் அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை - தம் சுற்றத்தை யழைத்தலுடனே அழுகின்ற கூவுதலையுடைய ஆரவாரத்தோடு கூடிய கொள்ளையை விரும்புதலுடையை; ஆகலின் - ஆதலான்; நல்ல இல்ல ஆகுபவால் - நல்ல பொருள்கள் இல்லையாகுவனவால்; இயல் தேர் வளவ - இயற்றப்பட்ட தேரையுடைய வளவ; தண் புனல் பரந்த பூசல் - குளிர்ந்த நீர் பரந்த ஓசையையுடைய உடைப்புக்களை; மண் மறுத்து - மண் மறுத்தலான்; மீனிற் செறுக்கும் - மீனாலடைக்கும்; யாணர் பயன் திகழ் வைப்பின் - புது வருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடைய, பிறர் அகன்றலை நாடு - மாற்றாரது அகன்ற இடத்தையுடைய நாடுகள் எ-று. திருந்தடி யென்பதற்குப் பிறக்கிடாத அடி யெனினு மமையும். கணைபொரு தென்றது, அதனொடு மருவுதலை. தாளையும் அடியையும் கையுடனே சாபத்தையும் மார்பையும் முன்பையுமுடைய வளவ, நீ கொள்ளை மேவலையாகலின், யாணரையும் வைப்பினையுமுடைய பிறர் நாடு நல்ல இல்ல வாகுப வெனக் கூட்டுக. நாடு நல்ல இல்ல வாகுபவென இடத்து நிகழ் பொருளின் றொழில் இடத்துமேலேறி நின்றது. இனித் தாளாலும், அடியாலும், கையாலும், சாபத்தாலும், மார்பாலும், முன்பாலும், கொள்ளை மேவலையாகலின் என ஆலுருபு விரித்துரைப்பினுமமையும். இது, பிறர் அகன்றலை நாடு நல்ல வில்ல வாகுப வென் றமையிற் கொற்ற வள்ளையும், ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலை யென்றமையின் மழபுல வஞ்சியுமாயிற்று. விளக்கம் : யானையின் பிடரிமேலிருந்து அதனைச் செலுத்துவோர்க்குக் காலே பெருங்கருவியாதலால், "களிறு கடைஇய தாள்" என்றார். கடவிய என்பது கடைஇய வென நின்றது. உறுப்புநூல் வல்லார் கூறும் இலக்கணப்படியே அமைந்த அடியென்றற்குத் "திருந்து அடி" என்றாராகலின், "இலக்கணத்தால் திருந்திய அடி"யென உரை கூறப்பட்டது. இனி, இவ்வாறு கொள்ளாது முன் வைத்தது பின் வையாத அடியென்று கொள்ளினும் பொருந்தும் என்பார், "பிறக் கிடாத அடி யெனினு மமையும்" என்று உரைகாரர் கூறினார். கணை பொருது என்பதற்கு "அம்பொடு பொருது" என்றுரைத்தார். அம்பொடு பொருதலாவது இதுவென்பார், "கணைபொரு தென்றது அதனொடு மருவுதலை" என்றார். கவிகை: வினைத்தொகை; பிறர்க்கு வேண்டுவது வழங்குதற்காகக் கவியும் கை யென்பது பொருள். நிரம்ப அள்ளிக் கொடுக்கும் இயல்பு தோன்ற "வண்கை" யென்றார். ஒளிர் வரூஉம்- விளங்கும். "புனைமறு மார்ப" (பரி 4 : 59) என்றும், "திருமறு மார்பு" (கலி. 104) என்றும் வந்த இடங்களில் "புகழப்படும் மறுவையுடைய மார்ப; திருமகளாதலால் புனைமறு என்றார்" என்று பரிமே லழகரும், "திருவாகிய மறுவையுடைத்தாகிய மார்பு" என்று நச்சி னார்க்கினியரும் கூறியாங்கு, "மாமறுத்த மலர்மார்பு" என்பதற்குத் 'திருவாகிய மறுவையுடைய அகன்ற மார்பு' என வுரை கூறாது, மறுத்த வென்பதைத் தெரிநிலைப் பெயரெச்சமாகக் கொண்டு, "திரு மகள் பிறர் மார்பை மறுத்தற் கேதுவாகிய மார்பு" என்று கூறுவது குறிக்கத்தக்கது. அழுவிளி யென்பதில் விளி, அழைத்தலும் கூவுதலு மாகிய இருபொருளும் கொண்டு நிற்றலின், இருபொருண்மையும் விளங்க, "அழைத்தலுடனே அழுகின்ற கூவுதல்" என உரைக் கின்றார். இல்லை யாகுவன நல்லனவாயினும், நாடு இல்ல வாகுப வென நாட்டின் வினையாகக் கூறியதற்குக் காரணம், நாடும் நல்லன வும் இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயை புடைமையாதலால், "நாடு நல்ல.... நின்றது" என்றார். இப்பாட்டிற்கு உரைத்துள்ள பொருள் வகையே நோக்கின், "நீ கொள்ளை மேவலையாகலின்" என்பதற்குக் காரணம் விளங்காமையால், அதனைக் காணலுறின், தாளும் அடியும் முதலியவற்றையுடைமை காரணமென்று காணப்படுவது பற்றி, "தாளாலும் அடியாலும்... உரைப்பினு மமையும்" என்றார். (7) 8. சேரமான் கடுங்கோ வாழியாதன் சேரமான் கடுங்கோ வாழியாதன், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் கூறப்படுவான். இவனைப் "பொறையன் பெருந்தேவி யீன்ற மகன்" என்று பதிற்றுப்பத்து ஏழாம்பதிகம் கூறுகிறது. திருமாலிடத்தே இவன் மிக்க ஈடுபாடுடையவன். இவன் கபிலருக்கு நூறாயிரங் காணம் பொன் தந்து நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் என மேலே காட்டிய பதிகத்தால் அறிய லாம். இவன் இருபத்தையாண்டு அரசு புரிந்தானென்ப. இவனைப் பாடிய கபிலர் சங்கத்தொகை நூல்களில் உள்ள பல பாட்டுக் களைப் பாடியவர்; வேள்பாரியின் உயிர்த்தோழர். இவரால் சிறப்பிக்கப்பட்ட வள்ளல்களும் வேந்தர்களும் பலர். இவர் பாண்டிநாட்டில் பிறந்த அந்தணர். குறிஞ்சித் திணை பாடுவதில் நிகரற்றவர். இப்பாட்டின்கண், ஞாயிற்றை நோக்கி, "வீங்கு செலல் மண்டிலமே! நீ பகற்போதை நினக்கென வரைந்து கொள்வாய்; திங்களுக்குப் புறங்கொடுக்கின்றாய்; தெற்கினும் வடக்கினும் மாறி மாறி வருகின்றாய்; மலைவாயில் மறைகின்றாய்; பகற் போதிற்றான் தோன்றுவாய்; இத்துணை குறைபாடுடைய நீ சேரலாதனை ஒப்ப தென்பது நினக்கு ஆகாது" என்று பழிப்பது போலச் சேரமானைப் பாராட்டுகின்றார். வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக் 5 கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் 10 பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே. (8) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி; பூவை நிலையுமாம். சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது. உரை : வையங் காவலர் வழிமொழிந் தொழுக - உலகத்தைக் காக்கு மரசர் வழிபாடு சொல்லி நடக்க; போகம் வேண்டி - நுகரும் இன்பத்தை விரும்பி; பொதுச்சொற் பொறாஅது - பூமி பிற வேந்தருக்கும் பொதுவென்னும் வார்த்தைக்குப் பொறாஅது ; இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப - தன் நாடு இடம் சிறிது என்னும் மேற்கோள் செலுத்த; ஒடுங்கா உள்ளத்து - மடியாத வுள்ளத்தையும்; ஓம்பா ஈகை - பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும்; கடந்து அடு தானைச் சேரலாதனை - வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையையு முடைய சேரலாதனை; வீங்கு செலல் மண்டிலம் - மிக்க செலவையுடைய மண்டிலமே; யாங்கனம் ஒத்தி - எவ்வா றொப்பை; பொழுது என வரைதி - நீ பகற்பொழுதை நினக் கெனக் கூறுபடுப்பை; புறக்கொடுத்து இறத்தி - திங்கள் மண்டிலத்திற்கு முதுகிட்டுப் போதி; மாறி வருதி - தெற்கும் வடக்குமாகிய இடங்களில் மாறிமாறி வருவை; மலை மறைந்து ஒளித்தி - மலையின்கண்ணே வெளிப்படாது கரப்பை; அகல் இரு விசும்பினானும் - அகன்ற பெரிய ஆகாயத்தின்கண்ணும்; பகல் விளங்குதி பல்கதிர் விரித்து - பகற்பொழுது விளங்குவை பல கிரணங்களையும் பரப்பி எ-று. மாறி வருதி யென்பதற்கு, இராசிதோறும் மாறி வருதி யெனினுமமையும். வீங்கு செலல் மண்டிலமே, வரைதி, இறத்தி, வருதி, ஒளித்தி, நீ விசும்பினானும் பகல் விளங்குதி; இக்குறை பாடெல்லாமுடைய நீ சேரலாதனை யாங்ஙன மொத்தியோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. ஒழுக வென்னு மெச்சம், நுகரு மென ஒரு சொல் வருவித்து அதனோடு கூட்டி முடிக்கப் பட்டது. ஒழுகவும் போகம் நுகரவும் வேண்டி யெனினு மமையும். வேண்டி, பொறாது, துரப்ப என நின்ற வினை யெச்சங்கள் ஒடுங்கா வென்னும் பெயரெச்ச மறையோடு முடிந்தன. இனி, பகல் விளங்கலை யென்னும் பாடத்திற்குத் திங்கண் மண்டிலமாக்கி மாறி வருதி யென்பதற்குத் தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும் பிறவும் அதற்கேற்ப வுரைப்ப. விளக்கம் : திங்கள்தோறும் மேடம் முதலாகக் கூறப்படும் இராசிதோறும் நின்று ஞாயிறு விளக்கம் செய்யும் என்னும் சோதிட நூன்முறைப்படி "மாறிவருதி யென்பதற்கு இராசிதோறும் மாறி வருதியெனினு மமையும்" என்றார். சேரலாதன் போல, ஞாயிற்று மண்டிலமும் மிக்க செலவினை யுடைமை பற்றி, அவற்கு அதனை ஒப்பாகக் கூறுப; அதனை யாராயுமிடத்து, வீங்கு செலல் மண்டிலம் பல குறைபாடு களை யுடைத்தாதலால், அவ்வொப்புமை பொருந்தாதென்பார், "யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்" என அம்மண்டி லத்தையே கேட்கின்றார். ஞாயிறு விளங்கும் காலம் பகற்போதெனப் படுவதுபற்றி பொழுதென வரைதி யென்பதற்கு "பகற்பொழுதை நினக்கெனக் கூறுபடுப்பை" என்றுரைத்தார். ஞாயிறு மறையத் திங்கள் தோன்றித் திகழ்வதால், "திங்களுக்கு முதுகிட்டுப் போதி" யென்றார்; திங்கள் முதுகிடுதல் இல்லை; ஞாயிறு எழுதற்குமுன் மறைதலும், எழுந்தபின் மறைதலும் திங்கட்குண்மையின், "பகல் விளங்குதி" யென்றதற்குப் "பகற்பொழுது விளங்குவை" யென்று கூறுதலால் "பொழுதென வரைதி" யென்பதற்குக் காலத்தைப் பல பொழுதுகளாக (சிறுபொழுது பெரும்பொழுதுகளாக) வகுத்தற்கு ஏதுவாகுவை யென்றுரைப்பினும் அமையும். உரைகிடந்தவாறே கொள்ளுமிடத்து, பகற்பொழுது நினக்கென கூறுபடுக்கும் நீ அப் பகற்போதிற்றான் பல்கதிர்களையும் பரப்பி விளங்குவையென்ற தாகக் கொள்க. இவற்றிற்கு மாறாகச் சேரலாதனது ஒளி, இரவு பகலென வரையறையின்றி யெக்காலத்தும் திகழும் என்றும், "கடந்தடுதானை"யை யுடையனாதலால், இவன் பிறர்க்குப் புறங் கொடுத்தல் இலன் என்றும், போரில் வஞ்சிக்கும் இயல்பிலனாதலால், இடமாறுதலும், பகைவர் படைக்கு மாறுதலும் இவன்பால் இல்லை யென்றும், அத்தகிரியில் மறைந்தொளிக்கும் ஞாயிறு போலாது எங்குந் தன் புகழே விளக்க மிக்குத் தோன்றுகின்றானென்றும், விண்ணும் மண்ணும் தன் புகழே பரப்பி விளங்குகின்றானென்றும் சேரலாதன் மிகுதி கூறியதாகக் கொள்க. காவலர் வழிமொழிந் தொழுகலால், அரம்பும், குறும்பும், பகையும், பிறவும், நாட்டில் இல்லையாக, சேரலாதன் போகநுகர்ச்சி மேற்கொண்டிருந்தமையின், "வழியொழுக நுகரும் போகம் வேண்டி" யென ஒழுகவென்னும் வினையெச்சத்தை நுகரும் என ஒருசொல் வருவித்து முடித்தார். நுகரும் என்பது அவாய்நிலையான் வந்தது. ஒழுகவும் போகம் நுகரவும் வேண்டியென்று கொள்ளுமிடத்தும் நுகரவும் என்பது வருவிக்கப்படும். இனி, "பகல் விளங்குதி" யென்பதைப் "பகல் விளங்கலை" யென்று பாடங்கொண்டு, அதற்கேற்பப் பகலில் விளக்கம் செய்யாத திங்கள் மண்டிலத்தை "வீங்கு செலல் மண்டிலம்" என்றார் என்றுகொண்டு, மாறி வருதி யென்பதற்குத் "தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும்... உரைப்ப" என்றார். தொல்காப்பிய வுரைகாரரான பேராசிரியர், இவ்வுரைகாரர் காட்டியவாறே "பகல் விளங்கலை யால்" என்று பாடங்கொண்டு, "வீங்கு செலல் மண்டிலத்தைத்" திங்களாக்கி, பொழுதென வரைதி யென்பதற்கு, "நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தி" யென்றும், புறக்கொடுத்திறத்தி யென்பதற்கு, "தோற்றோர் போன்று ஒளிமழுங்கிச் செல்கின்றா" யென்றும், மாறி வருதி யென்பதற்கு, "திங்கடோறும் மாறிப் பிறத்தி" யென்றும், மலை மறைந் தொளித்தி யென்பதற்கு, "மலைசார்ந்த வழித்தோன்றா" யென்றும் பொருள் கூறுவர். வீங்கு செலல் மண்டிலம் என்பதை விலங்கு செலல் மண்டிலம் என்று பாடங்கொண்டு, "கடையாயி னார் கதியிற் செல்லும் மதியம்" என்று கூறுவர். இவையெல்லாம் உட்கொண்டே உரைகாரர், "பிறவும் அதற்கேற்ப வுரைப்ப" என்றார். 9. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இப் பெருவழுதியை இப்பாட்டால் நெட்டிமையா ரென்னும் சான்றோர் சிறப்பிக்கின்றார். நெடுந்தொலைவிலுள்ள பொருளைக் கூர்ந்து நோக்கி யறியும் கண்ணை, நெட்டிமை யெனச் சிறப்பித்துரைத்த நயங்கருதி இவர்க்கு இப்பெயருண் டாயிற்று. இவர் பஃறுளியாறு கடல் கோட்படு முன்பு இருந்தவ ராதலின், கடல்கோட்குப் பின்னர்த் தோன்றிய சங்ககாலத்தில் அப்பாட்டு இறந்துபோயிற் றாதல் வேண்டும். இவரது கண்ணிமை நீண்ட பண்புடையது; அதனால் இவர்க்கு இப் பெயரெய்திற்று என்று கூறுவர். கண்ணிமை நீண்டிருத்தல் அழகன்மையின், அதனால் ஒருவர் பெயர் படைத்துக் கொள்வரென்பது மக்கள் இயல்பன்று. இனி, இப்பாட்டின்கண் பாண்டியன் முதுகுடுமிப் பெரு வழுதி, அறத்தாறு நுவலும் பூட்கையும் யானைமேற் கொடி கட்டிய சிவிகையமைத்து இவர்ந்து வரும் பெருமிதமும் உடையன் என்றும், இவனுடைய முன்னோனாகிய பாண்டியன் நெடியோ னென்பான் பஃறுளியாறு கடலிற் கலக்குமிடத்தே முந்நீர்விழா ஆற்றினான் என்றும், அவ்வியாற்று மணலினும் பல வாண்டுகள் இப்பாண்டியன் முதுகுடுமி வாழ்வானாக என்றும் வாழ்த்து கின்றார். ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் 5 எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசை கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த 10 முந்நீர் விழவி னெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (9) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி; பூவை நிலையுமாம். பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. உரை : ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும் - ஆவும் ஆவினதி யல்பையுடைய பார்ப்பாரும்; பெண்டிரும் - மகளிரும்; பிணி யுடையீரும் - நோயுடையீரும்; பேணி - பாதுகாத்து; தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் - தென்றிசைக்கண் வாழ்வோ ராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும்; பொன்போல் புதல்வர்ப் பெறாதீரும் - பொன்போலும் பிள்ளைகளைப் பெறாதீரும்; எம் அம்பு கடி விடுதும் - எம்முடைய அம்பை விரையச் செலுத்தக் கடவேம்; நும் அரண் சேர்மின் என - நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையும் என்று; அறத்தாறு நுவலும் பூட்கை - அறநெறியைச் சொல்லும் மேற்கோளினையும்; மறத்தின் - அதற்கேற்ற மறத்தினையுமுடைய; கொல் களிற்று மீமிசைக் கொடி - கொல் யானை மேலே எடுக்கப்பட்ட கொடிகள்; விசும்பு நிழற்றும் - ஆகாயத்தை நிழற்செய்யும்; எங்கோ குடுமி வாழிய - எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக; தம்கோ - தம்முடைய கோவாகிய; செந்நீர்ப் பசும்பொன் - சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை; வயிரியர்க்கு ஈத்த- கூத்தர்க்கு வழங்கிய; முந்நீர் விழவின் நெடியோன் - முந்நீர்க் கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடைய நெடி யோனால் உளதாக்கப்பட்ட; நன்னீர்ப் பஃறுளி மணலினும் பல - நல்ல நீரையுடைய பஃறுளி யென்னும் ஆற்றின் மண லினும் பலகாலம் எ-று. எங் கோவாகிய குடுமி பஃறுளியாற்று மணலினும் பல காலம் வாழியவெனக் கூட்டுக. கொடி விசும்பு நிழற்றுமென்பது சினைவினைப் பாற்பட்டு எங்கோ வென்னும் முதலொடு முடிந்தது; கொடியால் விசும்பு நிழற்றுமென்றுரைப்பினு மமையும். மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும் களிற்றினையு மென மாறிக் கூட்டுவாரு முளர். தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் என்பதற்குத் தமது அரசாட்சியினது செவ்விய நீர்மையாற் செய்த பசும்பொன் என்பாருமுளர். முந் நீர்க்கண் வடிம்பலம்ப நின்றானென்ற வியப்பால் நெடியோனென்றா ரென்ப. யாற்று நீரும் ஊற்றுநீரும் மழைநீருமுடைமையான், கடற்கு முந் நீரென்று பெயராயிற்று. அன்றி முன்னீரென்று பாடமோதி நிலத்திற்கு முன்னாகிய நீரென்றுமுரைப்ப. பிணியுடையீரும் புதல்வர்ப் பெறாதீரு மென்னும் முன்னிலைப் பெயரோடு ஆவும் பார்ப்பன மாக்களும் பெண்டிருமென்னும் படர்க்கைப் பெயர்கள் விராய் வந்து, நும்மரண் சேர்மின் என்னும் முன்னிலை வினையான் முடிதல், "செய்யுண் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்" (தொல். சொல். எச்ச. 67) என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும். விளக்கம் : ஆனினதியல்பையுடைய பார்ப்பாரும் என்று ஏட்டில் காணப் படுகிறது. அந்தணரை மாக்களென்று வழங்காராதலால், ஏட்டிற் காணப்பட்டதே ஈண்டுக் கொள்ளப்பட்டது. அச்சுப்படி "ஆனின தியல்பையுடைய அந்தணரும்" என்று கூறுகிறது. பிண்டோதகம், பிண்டமும் உதகமும். பிண்டம் - சோறு; உதகம் - நீர். ஒரு குடியில் இறந்தோர், தென்றிசைக்கண் இருந்து, தம் குடியில் பிறக்கும் புதல்வர் தம்மை நோக்கிப் படைக்கும் சோறும் நீரும் உண்டு வாழ்வர் என்ப. பகைவராலும் விரும்பப்படும் சிறப்புப்பற்றி, புதல்வரைப் "பொன் போற் புதல்வர்" என்றார்; "பொன்போற் புதல்வனோ டென்னீத் தோனே" (ஐங். 265) என்று பிறரும் கூறுப. அடையும் என்பது உம்மீற்று முன்னிலை வினைமுற்று; செய்யுமென்னும் முற்றன்று. மேற்கோள் - மேற்கொண்டொழுகும் கொள்கை. ஒரு கொள்கை யினை மேற்கொண்ட வழியும், அதனைச் செயற்படுத்தற்கு இன்றி யமையாது வேண்டப்படுவது மறப்பண்பாதலின், "மறத்தின்" என்றதற்கு, அதற்கேற் மறத்தினையும் என்றுரைத்தார். மீமிசைக் கொடியென்றது பற்றி, அது விசும்பினும் உயர்ந்து அதனைக் கீழ்ப்படுத்தித் தான் மேலுயர்ந்து நின்று அவ் விசும்பிற்கு நிழல் செய்யும் என்பது தோன்ற "ஆகாயத்தை நிழற்செய்யும்" என்றார். மீமிசை யென்புழி மீயென்றது யானைமீதுள்ள சிவிகையின் மேலிடத்தையும், மிசை யென்றது, அவ்விடத்தே விசும்பும் கீழ்ப்பட மேலுயர்ந்து நிற்கும் கொடி மரத்தின் உச்சியையும் குறித்து நின்றன. நிழற்றுமென்பது கொடியின் வினை. அது பெயரெச்சமாய்க் கோவென்பதனோடு முடிந்தது. கோவுக்குக் கொடி சினையாதலின், "சினை வினைப்பாற்பட்டு எங்கோவென்னும் முதலொடு முடிந்தது" என்றார். இவ்வாறு கொள்ளாமல், விசும்பானது தன்கீழ் களிற்றுமிசை நின்று நுடங்கும் கொடியால் நிலத்தை நிழற்செய்யும் என்றும் பொருள் கூறலாம் என்பதற்கு, "கொடியால் விசும்பு நிழற்றும் எனினும் அமையும்" என்றார். கொடிநின்று விசும்பு நிழற்றுதற்குக் களிறு இடமாதலின், இடத்து நிகழ் பொருளின்தொழில் இடத்துமேலேற்றிக் கூறுபவரும் உண்டு; அதனால், "மீமிசைக்கொடி - மாறிக் கூட்டுவாரு முளர்" என்றார். "செவ்விய நீர்மையாற்செய்த பசும்பொன்" என்று உரைகூறுவோர், செய்த என்பதற்கு ஈட்டிய என்பது பொருளாகக் கொண்டுரைப்பர். நெடியோன் பாண்டி வேந்தருள் மிகப் பழையோனாகிய ஒருவனாவான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனை மாங்குடிமருதனாரென்னும் சான்றோர், "பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்" (மதுரைக். 61) என்பதனாலும் இவனை யறியலாம். உரைகாரர், திருவிளையாடற் புராண காலத்திற்குப் பிற்பட்டவராதலின், வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வரலாற்றை யுட்கொண்டு இதற்கு வேறுரை கூறுபவரைக் கண்டு "முந்நீர்க்கண் வடிம் பலம்ப நின்றானென்ற வியப்பால் நெடியோ னென்றா ரென்ப" என்று குறிக்கின்றார். முந்நீர் விழவு கண்ட நெடியோனுக்கும் வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கும் பொருத்தம் யாதுமில்லையாத லால், வடிம்பலம்ப நின்ற பாண்டிய னென்னாது நெடியோனென்று உரைகூறினார். இனி, முந்நீர் என்று கடற்குப் பெயருண்டானதற்கு இவ் வுரைகாரர் கூறும் காரணத்தை மறுத்து, மண்ணைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய முச்செய்கையையுடைய நீர் முந்நீர்; ஆகுபெயரால் அது கடற்காயிற்றென அடியார்க்கு நல்லார் (சிலம்.17) கூறுவர்; அவர் கூறியதையே நச்சினார்க்கினியரும் (பெரும்பாண். 441) மேற்கொள்வர். நிலத்திற்கு முன்னாகிய நீர், நிலத்திற்கு முன்னே யுண்டாகிய நீர்; "முதுநீர்ப் பௌவம் கதுமெனக் கலங்க" (பெருங். 3. 24 : 140) என்று பிறரும் இக் கருத்துத் தோன்ற உரைப்பது நோக்கத்தக்கது. முன்னிலைப்பெயரும் படர்க்கைக் பெயரும் விரவி முன்னிலைவினை கோடற்குத் தனியே விதி கூறப் படாமையால், அதிகாரப் புறனடையாற் கொள்ள வேண்டியிருத்தல் கொண்டு, "முன்னிலை வினையான் முடிதல்... கொள்ளப்படும்" என்றார். பாண்டியன் நெடியோன் காலத்திருந்த பஃறுளியாற்றை நெட்டிமையார் எடுத்தோதி அதன் மணலினும் பல்லாண்டு வாழ்க வென வாழ்த்துதலால், அப்பஃறுளியாறு நெட்டிமையார் காலத்தும் உளதாதல் பெறப்படும்; படவே, இவரும் இவராற் பாடப்பெற்ற பாண்டியனும் கடல்கோட் காலத்துக்கு முற்பட்டவர் என்பது விளக்கமாம். (9) 10. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி நெய்தலங்கானல் என்பது இச்சோழன் பிறந்த வூராகும். "நெய்தலங்கானல் நெடியோய்" என்று ஊன்பொதி பசுங்குடையார் கூறுவர். இவன் தென்னாட்டுப் பரதவரையும், வடநாட்டு வடுகரையும், வென்று புகழ் மேம்பட்டவன். இரப்போர்க்கு வரையாது வழங்கும் வண்மையுடையன். இவன் பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழியென்னுமிடத்தும் பகைவரை வென்று முறையே பாமுளூரெறிந்த இளஞ்சேட் சென்னி யென்றும் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னியென்றும் கூறப்படுகின்றான். பாமுளூர் சேரர்கட் குரியது. இவன் நெய்தலங் கானலிலிருந்த போதும், பாமுளூ ரெறிந்தபோதும், செருப்பாழி யெறிந்தபோதும் ஊன்பொதி பசுங்குடையார் இவனைப் பாடி பரிசில் பெற்றிருக்கின்றார். ஊன் பொதி பசுங்குடையாரது இயற் பெயர் தெரிந்திலது. பனையினது பச்சோலையால் உட்குடைவுடைய தாகச் செய்யப்படுவது பனங்குடை. உணவுண்டற்கும் பூப் பறித்தற்கும் மக்கள் பயன்படுத்துவர்; "எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை, இரும்பனங் குடையின் மிசையும்" (புறம் 177) என்றும், "அவல்வகுத்த பசுங்குடையாற், புதல்முல்லைப் பூப்பறிக்குந்து" (புறம். 352) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. வேண்டுமாயின் இதனிடத்தே சோறு பொதிந்து கொண்டும் போவது மரபு; "ஆறுசென் மாக்கள் சோறுபொதி வெண்குடை" (அகம். 121) என வருவது காண்க. இதனிடத்தே ஊன் பொதிந்துகொண்டு செல்வதை வியந்து, இவ்வாசிரியர், "ஊன்பொதி பசுங்குடை" யென்று பாடிய சிறப்பால், இவர் "ஊன்பொதி பசுங்குடையார்" எனப்படுகின்றார். இவர் பாட்டில் நகைச்சுவையும், இயற்கை நவிற்சியும், அறவுணர்வும் விரவி இவரது பெருமாண்புலமை நலத்தைப் புலப்படுத்தி நிற்கின்றன. இப்பாட்டின்கண், இளஞ்சேட்சென்னி நெய்தலங்கான லிடத்தே யிருக்குங்கால் தன் வழிபடுவோரைத் தழுவிக்கோடலும், பிறர் பழி மேற்கொள்ளாமையும், குற்றஞ் செய்தாரை நன்கா ராய்ந்து ஒறுத்தலும், அடியடைந்தாரை ஏற்றலும், மனைவாழ்வில் இன்புறுதலும் உடையனாய், முன்செய்து பின்னிரங்காவினையும் நாடு முழுதும் பரந்த நல்லிசையும் கொண்டு சிறப்பது கண்டு மகிழ்ந்து புகழ்கின்றார். வழிபடு வோரை வல்லறி தீயே பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி 5 வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற் றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்த லல்லது மள்ளர் 10 மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ் நெய்தலங் கான னெடியோய் எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே. (10) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி; பூவை நிலையுமாம். சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது. உரை : வழிபடுவோரை வல் அறிதி - நின்னை வழிபட்டொழுகு வோரை விரைய அறிவை; பிறர் பழி கூறுவோர் மொழி தேறலை - பிறருடைய குற்றம் சொல்லுவாரது வார்த்தையைத் தெளியாய்; நீ மெய்கண்ட தீமை - நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து அறுதியிடப்பட்ட கொடுமையை; காணின் - ஒருவன்பாற் காணின்; ஒப்ப நாடி - அதனை நீதிநூற்குத் தக ஆராய்ந்து; அத் தக ஒறுத்தி - அத் தீமைக்குத் தகத் தண்டம் செய்வை; வந்து அடி பொருந்தி - வந்து நின் பாதத்தை யடைந்து; முந்தை நிற்பின் முன்னே நிற்பாராயின்; பண்டையிற் பெரிது நீ தண்டமும் தணிதி - அவர் பிழை செய்வதற்கு முன் நீ செய்யும் அருளினும் அருள் பெரிதாக அவரைச் செய்யுந் தண்டமும் தணிவை; அமிழ்து அட்டு - அமிழ்தத்தைத் தன் சுவையால் வென்று; ஆனா - உண்ணவுண்ண வமையாத; கமழ் குய் யடிசில் - மணங் கமழும் தாளிப்பையுடைய அடிசிலை; வருநர்க்கு வரையா - விருந்தினர்க்கு மிகுதி குறைபடாமல் வழங்கும்; வசையில் வாழ்க்கை - பழி தீர்ந்த மனை வாழ்க்கையை யுடைய; மகளிர் மலைத்தல் அல்லது - பெண்டிர் முயக்கத் தால் மாறுபடுத்தலல்லது; மள்ளர் மலைத்தல் போகிய - வீரர் போரான் மாறுபடுத்தலொழிந்த; சிலைத்தார் மார்ப - இந்திர விற்போலும் மாலையையுடைய மார்ப; செய்து இரங்கா வினை - ஒரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச் செய்தே மென்று கருதாத செய்கையையும்; சேண் விளங்கும் புகழ் - சேய்மைக் கண்ணே விளங்கும் புகழினையுமுடைய; நெய்தலங் கானல் நெடியோய் - நெய்தலங்கானலென்னும் ஊரையுடைய நெடியோய்; எய்த வந்தனம் யாம் - அணுக வந்தேம் யாம்; பல ஏத்துகம் - நின் பல குணங்களையும் புகழ்வேமாக எ-று. வழிபடுவோரை வல்லறிதி யென்றது, அறிந்து அவர் களுக்கு அருள் செய்வை யென்பதாம். பெரிதென்பது வினை யெச்சக் குறிப்பாதலின், ஆகவென ஒரு சொல் வருவித் துரைக்கப்பட்டது. பண்டையிற் பெரிது யென்பதற்கு, நீ பண்டு செய்த கோபத்தினும் பெரிதாகத் தணிதியென்றுரைப்பினு மமையும். அடப்பட்டமையாத அமிழ்து போலும் அடிசிலென் றுரைப்பினு மமையும். வினையும் புகழும் உடைய நெய்தலங் கானல் நெடியோய், பல வேத்துவேமாக எய்த வந்தன மெனக் கூட்டுக. விளக்கம் : வினையும் புகழுமுடைய நெய்தலங்கானல் நெடியோய், மார்ப, நீ, வல்லறிதி, மொழிதேறலை, தகவொறுத்தி, தண்டமும் தணிதி, ஏத்துவேமாக, எய்த வந்தனம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தன்னை வழிபட்டொழுகுபவரை அவர் சொல் செயல்களைக் கண்டறிதற்கு முன்னே அவர் முகக்குறிப்பால் மனநிலையைக் கண்ட மாத்திரையே யுணர்ந்து கொள்ளுதல்பற்றி, "வல்லறிதி" என்றார். அறிதியே யென்பது அறிதீயேயெனச் செய்யுளாதலின் விகாரமாயிற்று. அறிதலின் பயன் செயலால் வெளிப்படுதல் பற்றி, "அறிதி யென்றது, அறிந்து அவர்களுக்கு அருள் செய்வை யென்ப தாம்" என்றார். குற்றமென்பது பழிக்கப்படுவதொன்றாதலால் பழி யெனப்பட்டது. "நீதிநூற்குத் தக ஆராய்ந்து" என்பதனால், குற்ற வகைகளும் அவற்றை யாராயுந் திறங்களும் ஒறுக்கும் திறங்களும் உணர்த்தும் நீதிநூல்கள் தமிழகத்தே யிருந்தமை புலனாகிறது. பொருணூலை வடமொழியில் எழுதிய கௌடிலியன் தென்றமிழ் நாட்டவனாதலால் அவனது நூலில் காணப்படும் நீதிகள் பல தமிழகத்தே நிலவினவாம் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. குறிப்பு வினையெச்சம் பொருள் முடிவின்கண் ஆக்கச்சொல் பெற்று முடிதல் வேண்டுமென்பது இலக்கணமாதலால் (சொல். எச்ச. 36) "ஆகவென ஒருசொல் வருவித்துரைக்கப்பட்ட" தென்றார். ஒரு சொல் லென்றது ஆக்கச் சொல்லையென வறிக. தணிதி யென்றத னால் தணிதற்குரிய வெகுளியை வருவித்து, "பண்டு செய்த கோபத்தினும் பெரிதாகத் தணிதி"யென்று பொருள் கூறினும் பொருந்துவதாம் என்பார், "பண்டு..... அமையும்" என்றார். அமிழ்து அட்டு என்புழி, அடுதல் - சுவையால் வெல்லுதல். அவ்வாறன்றி, அட்டென்றதை உவமப்பொருளதாகக் கொண்டு "அமிழ்து போலும் அடிசில்" என்றும் பொருள் கூறலாம் என்றார். "வருநர்க்கு வரையா" என்றதற்கு வரும் விருந்தினர்க்கு வரையாமல் வழங்கி யென்று பொருள் கூறுகின்றாராதலால், அவ்வாறு வழங்கப்படும் அடிசிலின் அளவை வருவித்து, "மிகுதி குறையாமல்" என்றார். விருந் தோம்பாமை மனைவாழ்க்கைக்கு வசையாமாதலால், விருந்து வரையாத வாழ்க்கை, "வசையில் வாழ்க்கை" யெனப்பட்டது. வாழ்க்கையை யுடைய மகளிர் என்க; மனைவாழும் மகளிர்க்கு விருந்து புறந் தருதல் மாண்பாதலை. "கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்துபுறந் தருதலும் சுற்றமோம்பலும், பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்" (கற்பு. 11) என ஆசிரியர் ஓதுவது காண்க. மகளிர்பால் மென்மையும், பகைவர்பால் வன்மையும் காட்டும் அவனது இயல்பை, "மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப" என்றார்; "வணங்குசிலை பொருத நின் மணங்கம ழகலம், மகளிர்க் கல்லது மலைப்பறி யலையே" (பதிற். 63) என்று பிறரும் கூறுதல் காண்க. "செய்திரங்காவினை" யென்பதற்கு "முன்னொரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச் செய்தேம் என்று கருதாத செய்கை" யென்று பொருள் கூறியது "செய்து பின்னிரங்கா வினை" (அகம். 268) என்றும், "எற்றென் றிரங்குவ செய்யற்க" (குறள். 655) என்றும் சான்றோர் கூறி யதை யுட்கொண்டென வறிக. இங்கே கூறிய நற்பண்புடையோரை யணுகிக் காண்பதுவும் அவர் குணங்கள் உரைப்பதுவும் நலமென்பது பற்றி, "எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே" என்றார். (10) 11. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ இச்சேரமான் முடிவேந்தர் மூவருள் ஒருவனாதலேயன்றி, நல்லிசைச் செய்யுள் பாடும் சான்றோர் கூட்டத்தும் ஒருவனாவன். இவன் பாடிய பாட்டுக்கள் பலவும் பாலைத் திணைக்குரியன வாகும். பாலைக்கலி முற்றும் இவன் பாடியனவே. நற்றிணை, குறுந்தொகை, அகம் முதலிய தொகை நூல்ளுட் காணப்படும் பாலைப்பாட்டுக்களுட் பல இவனாற் பாடப்பட்டவை. இப் பாட்டுக்கள் அனைத்தும் இலக்கியவளமும் அறவுணர்வும் நல்லிசை மாண்பும் உடையன. கொண்கான நாடு பொன் மிகவுடையதென்றும், அதனை யுடையவன் நன்னன் என்றும், அந் நாட்டினுள் ஏழிற் குன்றம் மிக்க பொருணலமுடையதாகலின் பெறலரிது என்றும் பாராட்டிக் கூறுவன். வேனிற்காலத்தில் குயில்கள் மாம்பொழிலிலிருந்து "புணர்ந்தீர் புணர்மினோ" என இசைக்கும் என்பதும், "கிழவோ ரின்னா ரென்னாது பொருள் தான், பழவினை மருங்கிற் பெயர்பு பெயர் புறையும்" என்பதும் பிறவும் இவனது மன மாண்புலமையைப் புலப்படுத்தும். போரில் பகைவர் படையால் உடல் சிதைந்து உயிர் கெட்ட வீரனை, "அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளன்" என்றும், அவன் யாண்டுளன் எனில் "சேண்விளங்கு நல்லிசை நிறீஇ, நாநவில் புலவர் வாயு ளானே" (புறம். 282) என்றும் கூறுவது இவனுடைய மறப்பண்பை வலியுறுத்தும். இச்சேரமானைப் பேய்மகள் இளவெயினி யென்பார் கட்புலனாமாறு பெண்வடிகொண்டு இளவெயினியென்னும் பெயருடன் நின்று இதனைப் பாடினா ளென்று இவ்வுரைகாரர் காலத்தே சிலர் கூறியிருக்கின்றனர். போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து விரியப் பாடிய சிறப்பால், இளவெயினியார்க்குப் பேய்மகளென்பது சிறப்புப் பெயரா யமைந்ததாகல் வேண்டும். இளவெயினி யென்பது இவர தியற்பெயர். குறமகள் இளவெயினி யென்பார் ஒருவர் சான்றோர் குழாத்துட் காணப்படுதலின், அவரின் வேறுபடுத்த இவரை இவ்வாறு சிறப்பித்தனர். குறமகள் என்றதை, குறிஞ்சி நிலத்து நன்மகள் என்று கொள்ளாது குறக்குடியிற் பிறந்த மகளென்று பிழைபடக் கொண்டது போல, இவரைப் பேய் மகளென்று கோடல் அறமாகாது. அரிமயிர்த் திரண்முன்கை வாலிழை மடமங்கையர் வரிமணற் புனைபாவைக்குக் குலவுச்சினைப் பூக்கொய்து 5 தண்பொருநைப் புனல்பாயும் விண்பொருபுகழ் விறல்வஞ்சிப் பாடல்சான்ற விறல்வேந்தனும்மே வெப்புடைய வரண்கடந்து துப்புறுவர் புறம்பெற்றிசினே 10 புறம்பெற்ற வயவேந்தன் மறம்பாடிய பாடினியும்மே ஏருடைய விழுக்கழஞ்சிற் சீருடைய விழைபெற்றிசினே இழைபெற்ற பாடினிக்குக் 15 குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே எனவாங்கு ஒள்ளழல் புரிந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. (11) திணை - பாடாண்டிணை; துறை - பரிசில் கடா நிலை. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது. உரை : அரிமயிர்த் திரள் முன்கை - ஐய மயிரையுடைய திரண்ட முன்கையினையும், வாலிழை - தூய ஆபரணத்தையுமுடைய; மட மங்கையர் - பேதை மகளிர்; வரி மணல் புனை பாவைக்கு - வண்டலிழைத்த சிற்றிற்கட் செய்த பாவைக்கு; குலவுச் சினைப் பூக் கொய்து - வளைந்த கோட்டுப்பூவைப் பறித்து; தண் பொருநைப் புனல் பாயும் - குளிர்ந்த ஆன்பொருந்தத்து நீரின்கட் பாய்ந்து விளையாடும்; விண்பொரு புகழ் விறல் வஞ்சி - வானை முட்டிய புகழினையும் வெற்றியையுமுடைய கருவூரின்கண்; பாடல் சான்ற விறல் வேந்தனும்மே - பாடுதற் கமைந்த வெற்றியையுடைய அரசனும்; வெப்புடைய அரண் கடந்து - பகை தெறும் வெம்மையையுடைய அரணை யழித்து; துப்புறுவர் புறம் பெற்றிசின் - வலியோடு எதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்; புறம் பெற்ற வயவேந்தன் மறம் பாடிய பாடினி யும்மே - அப் புறக்கொடையைப் பெற்ற வலிய அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்; ஏருடைய விழுக் கழஞ்சின் - தோற்றப் பொலிவுடைய சிறந்த பல கழஞ்சால் செய்யப்பட்ட; சீருடைய இழை பெற்றிசின் - நன்மையை யுடைய அணிகலத்தைப் பெற்றாள்; இழை பெற்ற பாடினிக்கு- அவ்வணிகலத்தைப் பெற்ற விறலிக்கு; குரல் புணர் சீர்க் கொளைவல் பாண் மகனும்மே - முதற் றானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணனும்; ஒள்ளழல் புரிந்த தாமரை - விளங்கிய தழலின்கண்ணே ஆக்கப்பட்ட பொற்றாமரையாகிய; வெள்ளி நாரால் பூப் பெற்றிசின் - வெள்ளி நாரால் தொடுத்த பூவைப் பெற்றான் எ-று. பாடினி இழை பெற்றாள், பாணன் பூப்பெற்றான். யான் அது பெறுகின்றிலேன் எனப் பரிசில் கடாநிலையாயிற்று. இனி, இவள் பேயாயிருக்க, கட்புலனாயதோர் வடிவுகொண்டு பாடினா ளொருத்தி யெனவும், "இக்களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள், ஈண்டு நின்னோடு எதிர்ந்து பட்டோ ரில்லாமையான் எனக்கு உணவாகிய தசை பெற்றிலேன்" எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில் கடாயினா ளெனவும் கூறுவாருமுளர். "பாடினிக்குப்............ பாண்மகன்" என்பது அது வெனுருபுகெடக் குகரம் வந்தது. உயர்திணை யாகலின். பாடினி பாடலுக்கேற்பக் கொளைவல் பாண்மகன் எனினு மமையும். எனவும், ஆங்கும் - அசைநிலை, பெற்றிசின், மூன்றும் படர்க்கைக்கண் வந்தன. விளக்கம் : அரி - ஐம்மை. ஐம்மையாவது மென்மை. திரட்சியினைக் கைக் கேற்றுக. மங்கை யென்பது, மங்கைப் பருவத்தராகிய மகளிரைக் குறியாது மகளிர் என்ற பொதுப்பெயராய் நிற்றலால், மட மங்கையர் என்றதற்கு, "பேதை மகளிர்" என்று பொருள் கூறப்பட்டது. பேதை மகளிர் - விளையாடும் பருவத்து இளமகளிர். வரிமணலிற் புனைந்த பாவையை வண்டற்பாவை யென்றும் கூறுப. "வண்டற்பாவை வௌவலின், நுண்பொடி யளைஇக் கடறூர்ப் போளே" (ஐங். 124) என வருவது காண்க. குலவுச்சினை யென்புழிக் குலவுதல் வளைதல்; "திருப்புருவ மென்னச் சிலைகுலவி" (திருவா. திருவெம். 16) என்புழி யும் குலவுதல் இப்பொருளில் வருதல் காண்க. ஆன் பொருந்த மென்னும் யாறு வஞ்சிநகரின் புறமதிலைச் சார்ந்தோடுவது எனச் சான்றோர் (புறம். 387) கூறுவர். அதன் வெண்மணலில்" மகளிர் விளையாட்டயர்வது மரபாதலை, "குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றியாடும், தண்ணான் பொருநை வெண்மணல்" (புறம். 36) எனப் பிறரும் கூறுதலாலும் அறியலாம். வேந்தனுமே யென்பது செய்யுளின்பங் குறித்து, "வேந்தனும்மே" என விகாரமாயிற்று; "பாடினியும்மே" "பாண்மகனும்மே" என்பவையும் இது போலவே விகாரம் எனக் கொள்க. வெப்புடைய அரண் என்றவிடத்து வெம்மை வெப்பென நின்றது; அஃதாவது பகை தெறும் வெம்மை யென்பர். உறுவர், ஈண்டுப் போரிடத்தே எதிருறுபவ ரென்றாகிப் பகைவர்க்காயிற்று துப்பு - வலி; "மூவருள் ஒருவன் துப்பா கியரென" (புறம். 122) என்றாற் போல. துப்பென் பதற்குப் பகை யென்றே கொண்டு, துப்புறுவர் - பகையுற்றவர் எனினும் பொருந்தும்; "துப்பி னெவனாவர்" (குறள். 1165) என்பதனால் துப்புப் பகையாதல் காண்க. ஏர் - தோற்றப் பொலிவு. விழுக்கழஞ் சென்புழி கழஞ்சுக்கு விழுப்பம் சிறப்பாலும் பன்மையாலும் உண்டாதலின், விழுக்கழஞ்சு என்றதற்குச் "சிறந்த பலகழஞ்சு" என உரை கூறினார். இழைகளாவன பொன்னரிமாலை, முத்துமாலை முதலாயின. குரல் முதலிய எழுவகை இசைத் தானங் களுள், குரல் முதற்றானமாதலால், "முதற் றானமாகிய குரல்" என்றார். சீர், ஒரு மாத்திரையும் இருமாத்திரையுமாகிய தாளவளவு. கொளை, பாட்டு. பாடினிக்கு என்றவிடத்துக் குவ்வுருபு, சிறப்புப் பொருட்டு. இனி, உரைகாரர் பாடினிக்குப் பாண்மகன் என இயைத்து; பாடினியது பாண்மகனெனப் பொருள்கொண்டு உயர்திணையாகலின், அது வென்னும் உருபுகெட, அதன் பொருண்மை தோன்றக் குகரம் வந்தது என்பர். அதுவென் வேற்றுமைக்கண் வந்த உயர்திணைத் தொகை விரியுமிடத்து, அதுவென்னும் உருபுகெடக் குகரம் வரும் எனத் தொல்காப்பியர் கூறினரேயன்றி, நான்கனுருபு விரிந்து தொகா நிலையாய தொடரிடத்தன்றாகலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக. பாடினிக்கு என்பதற்குப் பாடினியது பாடலுக்கென்று பொருள் கொண்டு, அப் பாடற்கேற்பக் கொளைவல்ல பாண்மகன் என் றுரைப்பிற் பொருத்தமாகலின், "பாடினி பாடலுக் கேற்பக் கொளை வல்ல பாண்மகன் எனினு மமையும்" என்றார். இசின் என்பது முன் னிலைக்குரிய அசைச்சொல்; ஈண்டு அது படர்க்கைக் கண் வந்தமையின், "பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன" என்றார். (11) 12. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இப்பாட்டின்கண், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தன் பகைவர்க்கு இன்னாவாக அவர்தம் நாட்டை வென்று கைக்கொண்டு, தன்னை வந்து அன்பால் இரக்கும் பரிசிலராகிய பாணர் பொற்றாமரைப்பூச் சூடவும், புலவர் யானையும் தேரும் பெற்றேகவும் இனியவற்றைச் செய்கின்றான்; இஃது அறமோ என நெட்டிமையார் அவனைப் பழிப்பது போலப் புகழ்கின்றார். பாணர் தாமரை மலையவும் புலவர் பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் அறனோ மற்றிது விறன்மாண் குடுமி இன்னா வாகப் பிறர்மண்கொண் 5 டினிய செய்திநின் னார்வலர் முகத்தே. (12) திணை - பாடாண்டிணை; துறை : இயன்மொழி. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. உரை : பாணர் தாமரை மலையவும் - பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும்; புலவர் - ; பூ நுதல் யானையொடு புனைதேர் பண்ணவும் - பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானை யுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்க வும்; அறனோ இது - அறனோ இவ்வாறு செய்தல்; விறல் மாண்குடுமி - வெற்றி மாட்சிமைப்பட்ட குடுமி; பிறர் மண் இன்னாவாகக் கொண்டு - வேற்றரசருடைய நிலத்தை அவர்க்கு இன்னாவாகக் கொண்டு; நின் ஆர்வலர்முகத்து இனிய செய்தி - நின்னுடைய பரிசிலரிடத்து இனியவற்றைச் செய்வை எ-று. குடுமி, பிறர் மண் இன்னாவாகக் கொண்டு, மலையவும், பண்ணவும், நின் ஆர்வலர் முகத்து இனிய செய்வை; இது நினக்கு அறனோ சொல்லுவாயாக வெனக் கூட்டி வினை முடிவு செய்க. மற்று : அசைநிலை. இது பழித்தது போலப் புகழ்ந்ததாகக் கொள்க. விளக்கம் : பொன்னால் தாமரைப்பூச் செய்து அதனை வெள்ளியாற் செய்த நாரிடைத் தொடுத்தது பொன்னரிமாலை; இதனைப் பாணர்க்கு வழங்குதல் மரபாதலால், "பாணர் தாமரை மலையவும்" என்றார்; "ஒள்ளழல் புரிந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே" (புறம். 11) என்பது காண்க. புலவர்க்குக் களிறும் தேரும் நல்குதலும் பண்டையோர் மரபு; "புலவர் புனை தேர் பண்ணவும்" என்றார். மலைதல், சூடுதல். பண்ணல், ஏறுதற்கேற்ப அமைத்தல். நுதல், மத்தகத்துக் காயிற்று. பூ, பொற்பட்டம். அன்பு கொள்ளாது பகைமையைக் கொண்டமையின், பகைவேந்தரைப் பிறர் என்றும், அன்பு செய்து பரவிப் புகழ்வாரை "ஆர்வலர்" என்றும் கூறினார். ஒருவர்க்குரிய நிலத்தைப் பிறர் வலியாற் கொள்ளுமிடத்து உரியார்க்கு வருத்தமுண்டாதல் இயல்பாதலால், "பிறர் மண் இன்னாவாகக் கொண்டு" என்றார். வேந்தே, நீ ஒருபால் இனிமையும், ஒருபால் இன்னாமையும் செய்தல் அறனோ என்று வினவுவது பழிப்புரை. ஆர்வலர்க்கு இன்பம் செய்தலும், பகைவர்க்கு இன்னாமை செய்த லும் விறல் மாண்ட வேந்தர்க்குப் புகழாதலால், அதனைக் கூறுதல புகழாயிற்று. புகழைப் பழிபோலக் கூறுதலின், "இது பழித்தது போலப் புகழ்ந்ததாகக் கொள்க" என்றார். இதனை வஞ்சப் புகழ்ச்சி யென்றும் கூறுப. (12) 13. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி இப்பெருநற்கிள்ளி சோழநாட்டு வேந்தனாய் இருந்து வருகையில் தன்னோடு பகைகொண்ட சேரமன்னரொடு போருடற்றும் கருத்தினனாய்க் கருவூரை முற்றியிருந்தான். அப்போது சேரநாட்டு மன்னனாவான் சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறை. ஒருநாள் சோழன் கோப்பெருநற்கிள்ளி கருவூரை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் அவன் ஏறிய களிறு மதம்படுவதாயிற்று. அக்காலை ஆசிரியர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் சான்றோர் சேரமன்னனுடன் அவனது அரசமாளிகையாகிய வேண்மாடத்துமேல் இருந்தார். சோழன் களிற்றுமிசை யிருப்பதும், களிறு மதம்பட்டுத் திரிவதும், பாகரும் வீரரும் அதனை யடக்க முயல்வதும் கண்ட சேரமான் மோசி யாருக்குக் காட்ட, அவர் இப்பாட்டினைப் பாடினார். முட மோசியார் என்னும் சான்றோர் ஏணிச்சேரி என்னும் ஊரினர். இவர் உறையூரிடத்தே தங்கியிருந்தமையால், உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் எனப்படுகின்றார். இவர் பாடிய பாட்டுக்கள் பல இத்தொகை நூல்களில் உண்டு. அவை பெரும்பாலும் ஆஅய் அண்டிரனைப் பாடியவையாதலால் அவன்பால் இவருக்கிருந்த நன்மதிப்பு நன்கு புலனாகும். இப்பாட்டின்கண், களிற்றுமேலிருந்த சோழனை இன்னா னென்றறியாது கேட்ட சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறைக்குக் களிற்றுமேற் செல்வோனாகிய இவன் யாரெனின், நீர் வளத்தால் மிக்கு விளைந்த நெல்லை யறுக்கும் உழவர், மீனும் கள்ளும் பெறும் நீர்நாட்டையுடையவன்; இவன் களிறு மதம்பட்டதனால் இவன் நோயின்றிச் செல்வானாதல் வேண்டும் என்று குறிக் கின்றார். இவனியா ரென்குவை யாயி னிவனே புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் மறலி யன்ன களிற்றுமிசை யோனே 5 களிறே, முந்நீர் வழங்கும் நாவாய் போலவும் பன்மீ னாப்பட் டிங்கள் போலவும் சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே நோயில னாகிப் பெயர்கதி லம்ம 10 பழன மஞ்ஞை யுகுத்த பீலி கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும் கொழுமீன் விளைந்த கள்ளின் விழுநீர் வேலி நாடுகிழ வோனே. (13) திணை : பாடாண்டிணை; துறை : வாழ்த்தியல். சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறை யொடு வேண்மாடத்து மேலிருந்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : இவன் யார் என்குவையாயின் - இவன் யாரென்று வினவுவாயாயின்; இவனே - இவன்தான்; புலிநிறக் கவசம் - புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகு கருவி பூம்பொறி சிதைய - பொலிந்த கொளுத்தற; எய் கணை கிழித்த - எய்த அம்புகள் போழப்பட்ட; பகட்டெழில் மார்பின் - பரந்துயர்ந்த மார்பினையுடைய; மறலி யன்ன களிற்று மிசையோன் - கூற்றம்போன்ற களிற்றின் மேலோன்; களிறு - இக்களிறு தான்; முந்நீர் வழங்கும் நாவாய் போலவும் - கடலின் கண்ணே யியங்கும் மரக்கலத்தை யொப்பவும்; பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் - பல மீனினது நடுவே செல்லும் மதியத்தை யொப்பவும்; சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப - சுறவின் இனத்தை யொத்த வாண்மறவர் சூழ; மரீஇயோர் அறியாது - தன்னை மருவிய பாகரை யறியாது; மைந்து பட்டன்று - மதம் பட்டது; நோயிலனாகிப் பெயர்கதில் அம்ம - இவன் நோயின்றிப் பெயர்வானாக; பழனம் - வயலிடத்து; மயில் உகுத்த பீலி- மயில் உதிர்த்த பீலியை; கழனியுழவர் - ஆண்டுள்ள உழவர்; சூட்டொடு தொகுக்கும் - நெற் சூட்டுடனே திரட்டும்; கொழு மீன் - கொழுவிய மீனையும்; விளைந்த கள்ளின் - விளைந்த கள்ளையுமுடைய; விழுநீர் வேலி - மிக்க நீராகிய வேலியை யுடைய; நாடு கிழவோன் - நாட்டையுடையோன் எ-று. களிற்று மிசையோனாகிய இவன் யாரென்குவையாயின், நாடுகிழவோன்; இவன் களிறு மதம்பட்டது; அதனால் இவன் நோயின்றிப் பெயர்க வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. களிற்றுக்கு நாவாயோடுவமை எதிர்ப்படையைக் கிழித்தோட லும், திங்களோ டுவமை வாளோர் சூழத் தன் தலைமை தோன்றச் செல்லுதலுமாகக் கொள்க. தில் : விழைவின்கண் வந்தது. பெருநற்கிள்ளி களிறு கையிகந்து பகையகத்துப் புகுந்தமையால் அவற்குத் தீங்குறுமென் றஞ்சி வாழ்த்தினமையால், இது வாழ்த்தி யலாயிற்று. இவற்குத் தீங்குறின் நமக்குத் தீங்குறுமென்னுங் கருத்தால், நோயிலனாகிப் பெயர்கவென்றாராயின் வாழ்த்திய லாகாது, துறையுடையானது பாட்டாமெனவுணர்க. விளக்கம் : புலி நிறம், புலியினது தோல், பூம் பொறி - பொலி வினை யுடைய தோலினது இணைப்பு. புலியினது வரியுடன் இணைப்பும் கலந்து அழகு செய்தலின் அதனைப் "பூம்பொறி" யென்றார். உரையிற் கொளுத்து என்றது, தோலினது தையல் இணைப்பை. இப் புலிநிறக் கவசத்தை, "புலிப்பொறிப் போர்வை" யென்றும் கூறுவர். மறலி - கூற்றுவன். களிற்றினுடைய நிறமும், தோற்றமும், வன்மையும் தோன்ற, "மறலி யன்ன களிறு" என்றவர், மீட்டும் அதற்கு நாவாயும் திங்களும் உவமை கூறியதற்குக் காரணம், "களிற்றுக்கு.... கொள்க" என்றார். சோழன் கருவூரை முற்றியிருக்கின்றானாதலால், பகைப் புலமாகிய கருவூரிடம் செல்லுங்கால் ஊர்ந்து செல்லும் களிறு மதம் பட்டது காணும் பகைவர், அதனை அடக்க முயலாது சினம் மிகுவித்து, அதற்கும் ஊர்ந்துவரும் சோழற்கும் தீங்கு விளைவிப்ப ரென்ற கருத்தால், "நோயிலனாகிப் பெயர்கதில்" என்று வாழ்த்து கின்றார். "இவற்குத் தீங்குறின் நமக்குத் தீங்குறும்" என்றது, இவனுக்குத் தீங்குண்டாயின் இவனது ஆதரவு பெற்று வாழும் தம்மைப் போலும் பரிசிலருக்கும் ஆதரவின்றி யொழிதலால் தீங்குண்டாம் என்பதாம். தந்நலம் நோக்காது பிறர் நலமே பேணி வாழ்த்துவது வாழ்த்திய லாகும். தமக்குத் தீங்குறுமென்று கருதிக் கூறின் வாழ்த்தியலாகாது. சோழன் பெருநற்கிள்ளியையே பாடும் செந்துறைப் பாடாண்பாட்டாய் முடியும் என்பதாம். தில்லென்னும் இடைச்சொல் விழைவுப் பொருளில் வந்தது; "விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென், றம்மூன் றென்ப தில்லைச் சொல்லே" (சொல். இடை 5) என்பது தொல்காப்பியம். (13) 14. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஒருகால் கபிலரும் இக் கடுங்கோ வாழியாதனும் ஒருங் கிருந்த காலையின், இவ்வேந்தன் அவர் கையைப்பற்றி "நுமது கை மிக மென்மையாகவுளதே!" என வியந்து கூறினான். அதுகேட்ட கபிலருள்ளத்தே, அவன் கூற்றே கருப்பொருளாகப் பாட்டொன் றெழுந்தது. அதுவே ஈண்டுக் காணப்படும் பாட்டு. இப்பாட்டின்கண், "அரசே, யானை யிவருமிடத்து அதன் தோட்டி தாங்கவும், குதிரையைச் செலுத்துங்கால் அதன் குசை பிடிக்கவும், தேர் மிசையிருந்து வில்லேந்தியவழி அம்பு செலுத்த வும், பரிசிலர்க்கு அருங்கலம் வழங்கவும் பயன்படுவதால் நின் கை வன்மையாக வுளது; என் போலும் பரிசிலர் மெய்ம் முயற்சியின்றிப் பிறர் நல்கப்பெறும் சோறுண்டு வருந்துதொழில் தவிர, தொழில் இலராதலால் அவர் கை மென்மையாக உளது" என்று கூறுகின்றார். கடுங்கண்ண கொல்களிற்றாற் காப்புடைய வெழுமுருக்கிப் பொன்னியற் புனைதோட்டியான் முன்புதுரந்து சமந்தாங்கவும் 5 பாருடைத்த குண்டகழி நீரழுவ நிவப்புக்குறித்து நிமிர்பரிய மாதாங்கவும் ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் 10 பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் வலிய வாகுநின் றாடோய் தடக்கை புலவு நாற்றத்த பைந்தடி பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது 15 பிறிதுதொழி லறியா வாகலி னன்றும் மெல்லிய பெரும தாமே நல்லவர்க் காரணங் காகிய மார்பிற் பொருநர்க் கிருநிலத் தன்ன நோன்மைச் செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (14) திணை : பாடாண்டிணை; துறை: இயன்மொழி. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி "மெல்லிய வாமால் நுங்கை" எனக் கபிலர் பாடியது. உரை : கடுங் கண்ண கொல்களிற்றால் - வன்கண்மையை யுடைய கொலையானையாலே; காப்புடைய எழு முருக்கி - காவலை யுடைய கணையமரத்தை முறித்து; பொன் இயல் புனை தோட்டியான் - இரும்பாற் செய்யப்பட்ட அழகு செய்த அங்குசத்தால்; முன்பு துரந்து - முன்னர்க் கடாவி; சமம் தாங்கவும் - அது செய்யும் வினையைப் பின் வேண்டுமளவிலே பிடிக்கவும்; பார் உடைத்த குண் டகழி - வலிய நிலத்தைக் குந்தாலியால் இடித்துச் செய்த குழிந்த கிடங்கின்கண்; நீரழுவ நிவப்புக் குறித்து - நீர்ப் பரப்பினது ஆழமாகிய உயர்ச்சியைக் கருதி அதன்கட் செல்லாமல்; நிமிர் பரிய மா தாங்கவும் - மிகைத்த செலவினையுடைய குதிரையைக் குசைதாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும்; ஆவம் சேர்ந்த புறத்தை - அம்பறாத்தூணி பொருந்திய முதுகை யுடையையாய்; தேர் மிசை - தேர்மேலே நின்று; சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் - வில்லினது வலிய நாணாற் பிறந்த வடுப் பொருந்தும்படி அம்பைச் செலுத்தவும்; பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் - பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களை யளிக்கவும்; குரிசில் - தலைவ; வலிய வாகும் நின் தாள் தோய் தடக்கை - வலியவாகும் நின் முழந்தாளைப் பொருந்திய பெரிய கைகள்; புலவு நாற்றத்த பைந்தடி - புலால் நாற்றத்தை யுடையவாகிய செவ்வித் தடியை; பூ நாற்றத்த புகை கொளீஇ - பூ நாற்றத்தவாகிய புகையைக் கொளுத்தி; ஊன் துவை கறி சோறு உண்டு -அமைத்த வூனையும் துவையையும் கறியையும் சோற்றையும் உண்டு; வருந்து தொழில் அல்லது - வருந்தும் செயலல்லது; பிறிது தொழில் அறியா ஆகலின் - வேறு செயலறியா வாகலான்; தாம் நன்றும் மெல்லிய - அவைதாம் பெரிதும் மெல்லியவாயின; பெரும -; நல்லவர்க்கு ஆரணங் காகிய மார்பின் - பெண்டிர்கட்கு ஆற்றுதற்கரிய வருத்த மாகிய மார்பினையும்; பொருநர்க்கு இருநிலத்தன்ன நோன்மை - பொருவார்க்குத் துளக்கப்படாமையிற் பெரிய நிலம்போன்ற வலியினையுமுடைய; செரு மிகு சேஎய் - போரின் கண்ணே மிக்க சேயை யொப்பாய்; நிற் பாடுநர் கை - நின்னைப் பாடுவா ருடைய கைகள் எ-று. கொளீஇ யென்னு மெச்சம் அமைத்த வென்னும் ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது; கொளுத்த வெனத் திரித்து அவ்வூன் என ஒரு சுட்டு வருவித்து அதனொடு முடிப்பினு மமையும். உண்டென்பது பொதுவினையன்றேனும் கறியொழிந்த வற்றிற்கெல்லாம் சேறலின், பன்மைபற்றி அமைத்துக் கொள்ளப்படும். ஊன் துவை கறியொடு கூடிய சோற்றை உண்டென வுரைப்பினு மமையும். இதனைப் பொதுவினை யென்றுரைப்பாரு முளர். குரிசில், பெரும, சேஎய், வலியவாகும் நின் கை; நிற்பாடுநர் கை தாம் மெல்லியவாகும் எனக் கூட்டுக. இனி, மா தாங்கவும் என்பதற்கு அகழியைக் கடக்கப் பாய்தற்குக் குதிரைக் குசையைத் தாங்கி யெடுத்து விடவும் என்றுரைப்பாரு முளர். பாடுநரெனத் தம்மைப் படர்க்கை யாகக் கூறினார். தம் கையின் மென்மையது இயல்பு கூறுவார், அரசன் கையின் வலிஇயல்புங் கூறினமையான், இஃது இயன் மொழியாயிற்று. விளக்கம் : கடுங்கண் - வன்கண்மை. எழு - கணைய மரம். பொன் - இரும்பு. சமம் - வேண்டும் அளவு. பார்நிலத்தை யுடைத்தற்குக் கருவியாகலின், குந்தாலியாலென வருவித்துரைத்தார். குறிப்பதன் பயன் அந்நீரழுவத்துட் செல்லாமையாதலால், குறித்து என்பதற்குக் கருதிய தன்கண் செல்லாதபடி யென்று உரை கூறுகின்றார். குசை - சாட்டி; பிடிவாருமாம். புறம் - முதுகு. சாபம் - வில். அருங் கலம் என்பதில் அருமை, பெறலருமை. பரிசிலர்கட்குப் பெறுதற்கரியது என்பது. செவ்வித் தடி - புதிய வூன்கறி. பூநாற்றம் - தாளிதத்தாற் பெற்ற இனிய மணம். கொளீஇ யென்னும் வினையெச்சம் கிடந்த படியே எவ்வினையோடும் இயையாமையால்; அமைத்த என ஒருசொல் வருவித்து முடிக்கப்பட்டது என்றார். இனி, அவ்வினை யெச்சத்தையே பெயரெச்சமாகத் திரித்து, அதற்கேற்ப முடித்தாலும் அமையும் என்று கூறுகிறார். வினையெச்சத்தைப் பெயரெச்சமாகத் திரித்து வேண்டியவாறு முடிப்பது அத்துணைச் சிறப்புடைய தன்றாதலால், அமைத்தவென ஒருசொல் வருவித்துரைப்பதையே மேற்கொள்கின்றார். ஊனுண்டல், துவையுண்டல், சோறுண்டல் என்றாற்போலக் கறியுண்டலென வாராது கறிதின்றல் என வருமாத லால், "கறியொழிந்தவற்றிற் கெல்லாம் சேறலின் பன்மைபற்றி அமைத்துக் கொள்ளப்படும்" என்றார். சேனாவரையர் முதலியோர் உண்டலென்பது பொதுவினை யென்பர். "நும் கை மெல்லியவால்" என்ற சேரமான் வாழியாதனுக்கு, கபிலர் தம் கையின் மென்மைக்குக் காரணம் கூறுமாற்றால் "என் கை" யென்று கூறாமல், "பாடுநர் கை" யென்றது, தன்னைப் படர்க்கை யாகக் கூறுவது.நும் கை மெல்லிது என்றதுவே வாயிலாக வேந்தனது கைவன்மையும், கைவண்மையும் ஒருங்கு பாடுதற்கு இடம் வாய்த் தமையின், அதனை விடாது அரசன் கையின் இயல்பு கூறினார். எம் கை உண்டு வருந்துதொழில் அல்லது பிறிது தொழிலறியா வென்றது, வேந்தன் கையின் பெருமையை விளக்கிற்று. ஆடவர் மார்பகலம் மகளிர்க்குப் பொறுத்தற்கரிய வேட்கைத்துன்பம் பயக்குமென்ப வாதலால், "மகளிர்க்கு ஆரணங்காகிய மார்பு" என்றார்; "மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்" (அகம். 22) என்று பிறரும் கூறுப. போரின்கண் உயர்வற வுயர்ந்த ஒருவன் முருக னென்பது தமிழ்நாட்டு வழக்காதலின், போரில் மேம்படுவோரை முருகனோ டுவமை கூறிச் சிறப்பிப்பது வழக்காயிற்று. அதனால், சேரமானை, "செருமிகு சேஎய்" என்றார். நிலத்தோடு வேந்தனை யுவமித்தது, பொறைபற்றி யன்று; துளக்கப்படாமை பற்றி யாதலால், அதனைப் பெய்து உரை கூறுகின்றார். (14) 15. பாண்டியன் பல்யாகசாலை முடுகுடுமிப் பெருவழுதி இப்பாட்டின்கண், ஆசிரியர் நெட்டிமையார், பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் போர்மிகுதியும், வேள்விமிகுதியும் கண்டு வியந்து, "பெரும, மைந்தினையுடையாய், பகைவருடைய நல்லெயில் சூழ்ந்த அகலிடங்களைக் கழுதை யேர் பூட்டி யுழுது பாழ்செய்தனை; அவர் தேயத்து விளைவயல்களில் தேர்களைச் செலுத்தி யழித்தனை; நீருண் கயங்களில் களிறுகளை நீராட்டிக் கலக்கி யழித்தனை. இவ்வாறு மிக்க சீற்றமுடையோனாகிய நின்னுடைய தூசிப்படையைக் கொள்ளவேண்டி வந்து பொருது வசையுற்ற வேந்தரோ பலர்; நால்வேதத்துக் கூறியவாறு வேள்வி பல செய்து முடித்து அவ் வேள்விச் சாலைகளில் நட்ட யூபங்களும் பல. வசையுற்றவர் தொகையோ, யூபங்களின் தொகையோ, இவற்றுள் மிக்க தொகை யாது?" என்று கேட்கின்றார். கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில் புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல் 5 வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத் தேர்வழங் கினைநின் றெவ்வர் தேஎத்துத் துளங்கியலாற் பணையெருத்திற் பாவடியாற் செறனோக்கின் ஒளிறுமருப்பிற் களிறவர 10 காப்புடைய கயம்படியினை அன்ன சீற்றத் தனையை யாகலின் விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு நிழல்படு நெடுவே லேந்தி யொன்னார் ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார் 15 நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில் நற்பனுவ னால்வேதத் தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண் 20 வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூப நட்ட வியன்களம் பலகொல் யாபல கொல்லோ பெரும வாருற்று விசிபிணிக் கொண்ட மண்கனை முழவிற் பாடினி பாடும் வஞ்சிக்கு 25 நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே. (15) திணை : பாடாண்டிணை; துறை: இயன்மொழி. பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது. உரை : கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் - விரைந்த தேர் குழித்த தெருவின்கண்ணே; வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி - வெளிய வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டி யுழுது; பாழ் செய்தனை - பாழ்படுத்தினை; அவர் நனந்தலை நல்லெயில் - அவருடைய அகலிய இடத்தை யுடைய நல்ல அரண்களை; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல் - புள்ளினங்கள் ஒலிக்கும் புகழமைந்த விளை கழனிக்கண்ணே; வெள்ளுளைக் கலிமான் கலி குளம்பு உகள - வெளிய தலையாட்டமணிந்த மனஞ் செருக்கிய குதிரை யினுடைய கவிந்த குளம்புகள் தாவ; நின் தெவ்வர் தேயத்துத் தேர் வழங்கினை - நின்னுடைய பகைவர் தேயத்துக்கண் தேரைச் செலுத்தினை; துளங்கியலால் பணை யெருத்தின் - அசைந்த தன்மையோடு பெரிய கழுத்தினையும்; பா வடியால் செறல் நோக்கின் - பரந்த அடியோடு வெகுட்சி பொருந்திய பார்வையினையும், ஒளிறு மருப்பின் களிறு - விளங்கிய கோட்டினையுமுடைய களிற்றை; அவர காப்புடைய கயம் படியினை - அப்பகைவருடையனவாகிய காவலையுடைய வாவிக்கட் படிவித்தனை; அன்ன சீற்றத்து அனையை - அப் பெற்றிப்பட்ட சினத்துடனே அதற்கேற்ற செய்கையை யுடையை; ஆகலின் - ஆதலான்; விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு - விளங்கிய இரும்பாற் செய்யப் பட்ட ஆணியும் பட்டமும் அறைந்த அழகுமிக்க பலகை யுடனே; நிழல்படு நெடுவேல் ஏந்தி - நிழலுண்டாகிய நெடிய வேலை யெடுத்து; ஒன்னார் - பகைவர்; ஒண்படைக் கடுந்தார் - ஒள்ளிய படைக்கலங்களையுடைய நினது விரைந்த தூசிப் படையின்; முன்பு தலைக்கொண்மார் - வலியைக் கெடுத்தல் வேண்டி; நசைதர வந்தோர் - தம் ஆசை கொடுவர வந்தோர்; நசை பிறக்கொழிய - அவ்வாசை பின்னொழிய; வசை பட வாழ்ந்தோர் பலர்கொல் - வசையுண்டாக உயிர் வாழ்ந்தோர் பலரோ?; நற்பனுவல் - குற்றமில்லாத நல்ல தரும நூலினும்; நால் வேதத்து - நால்வகைப்பட்ட வேதத்தினும் சொல்லப் பட்ட; அருஞ் சீர்த்தி - எய்தற்கரிய மிக்க புகழுடைய; பெருங் கண்ணுறை நெய்ம் மலி ஆவுதி பொங்க - சமிதையும் பொரியும் முதலாகிய பெரிய கண்ணுறையோடு நெய் மிக்க புகை மேன்மேற் கிளர; பன்மாண் வீயாச் சிறப்பின் - பல மாட்சிமைப் பட்ட கெடாத தலைமையையுடைய; வேள்வி முற்றி - யாகங் களை முடித்து; யூபம் நட்ட வியன் களம் பலகொல் - தூண் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ?; யா - பலகொல் - இவற்றுள் யாவையோ பல?; பெரும -; வாருற்று விசி பிணிக் கொண்ட மண்கனை முழவின் - வார் பொருந்தி வலித்துக் கட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த தண்ணுமையையுடைய; பாடினி பாடும் வஞ்சிக்கு - விறலி பாடும் மேற்செலவிற்கு ஏற்ப; நாடல் சான்ற மைந்தினோய் - ஆராய்தலமைந்த வலிமையுடையோய்; நினக்கு -; எ-று. பூட்டி யென்னும் வினையெச்சத்திற்கு உழு தென்னுஞ்சொல் தந்துரைக்கப்பட்டது. நற்பனுவல் நால்வேதத்து வேள்வி யென இயையும். நற்பனுவலாகிய நால்வேத மென்பாரு முளர். பெரும, மைந்தினோய், பாழ்செய்தனை, தேர் வழங்கினை, கயம் படியினை; ஆதலின், நினக்கு ஒன்னாராகிய வசைபட வாழ்ந்தோர் பலர் கொல், யூபம் நட்ட வியன் களம் பலகொல்; இவற்றுள் யா பல கொல்லோ வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளங்கு பொன்னெறிந்த வென்பதற்குக் கண்ணாடி தைத்த வெனினுமமையும். தார் முன்பு தலைக் கொண்மார் என்பதற்குத் தாரை வலியால் தலைப்பட வெனினு மமையும். புரையுநற் பனுவலென்பதூஉம் பாடம். யா பலவென இவ்விரண்டின் பெருமையும் கூறியவாறு. இவை எப்பொழுதுஞ் செய்தல் இயல்பெனக் கூறினமையின், இஃது இயன்மொழியாயிற்று. விளக்கம் : ஞெள்ளல் - தெரு. நன வென்னும் உரிச்சொல் அகலமென்னும் பொருட்டாதலாலும், தலையென்பது இடமாதலானும், நனந்தலை யென்றது, அகன்ற இடமெனப் பொருள்படுவதாயிற்று. அகன்ற என்பது அகலிய வென வந்தது. உகளல் - தாவுதல்; அஃதாவது ஊன்றிப் பாய்தல். பாவடி - பரந்த அடி. ஒளிறுதல் - விளங்குதல். பலகை - கிடுகு; கேடகம் - வாளும் வேலும் கொண்டு பகைவர் தாக்குமிடத்து, அவற்றைத் தாங்கித் தடுத்து நிற்றற்கேற்ப, ஆணியும் பட்டமும் அறைந்து அழகும் வன்மையும் பொருந்தியிருப்பதனால் இதனை "நலங்கிளர் பலகை" என்றார். முன்பு - வலி. இதனைத் தலைக் கொள்ளல் என்பது சிதைப்பதாகும்; ஆதலால் தலைக்கொண்மார் என்பதற்குக் கெடுத்தல் வேண்டி யென்றார். இனித் தலைக் கொள்ள லென்பது எதிர்தல் என்றும் பொருள்படுதலால், முன்பு தலைக் கொண்மார் என்பதற்கு 'முன்பால்' என ஆலுருபு விரித்து, "வலி யால் தலைப்பட" என்றும் உரைக்கலாம் என்றார். நற்பனுவல் நால்வேதத்தென்பதை, நற்பனுவலும் நால்வேதமும் எனக் கொண்டு, தரும நூலினும் வேதத்தினு மெனவுரைத்தார். நற்பனுவலும் வேதமே யாமெனக் கோடலும் பொருந்துமாகையால் "நற்பனுவலாகிய நால்வேத மென்பாருமுளர்" என்றார். பொன்னென்னும் பல பொரு ளொருசொல் கண்ணாடிக்குமாதலின் "விளங்கு பொன் தைத்த வெனினுமமையும்" என்று கூறினார். (15) 16. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி இச்சோழன் காலத்தே சேரநாட்டில் சேரமான் மாரி வெண் கோவும், சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையும், பாண்டி நாட்டில் பாண்டியன் கானப்பேர்எயில் தந்த உக்கிரப் பெருவழுதி யும் ஆட்சி புரிந்தனர். இவற்குச் சேரமன்னர் இருவரில் மாரி வெண்கோ நண்பன். ஒரு கால் மாரிவெண்கோவும் உக்கிரப் பெருவழுதியும் இப் பெருநற்கிள்ளியும் நட்பால் பிணிப்புற்று ஒருங்கிருப்ப ஒளவையார் கண்டு பெருமகிழ்வுற்று, வானத்து வயங்கும் மீனினும் மாமழைத் துளியினும் நும்முடைய வாழ்நாள்கள் "உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக" என வாழ்த்திச் சிறப்பித்தனர். பிறிதொருகால், இந்நற்கிள்ளிக்கும் சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறைக்கும் போருண்டாயிற்று. அக் காலை, சோழற்குத் துணையாய்த் தேர்வண் மலையனென்பான் போந்து இரும்பொறையை வென்று புறங்கண்டான். இக் கிள்ளியை உலோச்சனார் என்னும் சான்றோர் சென்று கண்ட போது அவர்க்கு இவன் மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தமும், வேறுபட்ட வுடையும் பிறவும் தந்து சிறப்பித்தான். அவரும் "அடல் வெங்குருசில் மன்னிய நெடிதே" யென வாழ்த்தி மகிழ்ந்தார். இவன் பெயர், "இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி" யெனப்படுவது நோக்கின், இவன் இராச சூயம் என்னும் வேள்வி செய்தவனென்பது தெரிகிறது. பாண்டரங் கண்ணனார் என்னும் சான்றோர் இவன் தன் பகைவர் நாட்டை யழித்த செய்தியைப் பாடிச் சிறப் பிக்கின்றார். பாண்டரங்கன் என்பார்க்கு மகனாதலால் இவர் பாண்டரங் கண்ணனார் எனப்பட்டார். கண்ணனாரென்பது இவர தியற்பெயர். இப்பாட்டின்கண், இவர் இப்பெருநற்கிள்ளியை நோக்கி, "முருகன் போலும் குருசில், நீ பகைவர் நாட்டுட் புகுந்து அவர் ஊர் சுட்ட தீயினது விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர் போலத் தோன்றுகிறது; இவ்வாறு தீயிட்டுக் கொளுத்திய அந் நாடு "கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணை" பொருந்திய நன்னாடாகும். ஆயினும் நீ எரி யூட்டுவான் செய்த போரின்கண் நின் களிறுகளும் நின் கருத்தொப்பப் போர் மலைந்தன" என்று கூறுகின்றார். வினைமாட்சிய விரைபுரவியொடு மழையுருவின தோல்பரப்பி முனைமுருங்கத் தலைச்சென்றவர் விளைவயல் கவர்பூட்டி 5 மனைமரம் விறகாகக் கடிதுறைநீர்க் களிறுபடீஇ எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப் புலங்கெட விறுக்கும் வரம்பி றானைத் 10 துணைவேண்டாச் செருவென்றிப் புலவுவாட் புலர்சாந்தின் முருகற் சீற்றத் துருகெழு குருசில் மயங்குவள்ளை மலராம்பற் பனிப்பகன்றைக் கனிப்பாகல் 15 கரும்பல்லது காடறியாப் பெருந்தண்பணை பாழாக ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை நாம நல்லமர் செய்ய ஓராங்கு மலைந்தன பெருமநின் களிறே. (16) திணை : வஞ்சி; துறை : மழபுலவஞ்சி. சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது. உரை : வினை மாட்சிய விரை புரவியொடு - போரிற்கு நன்மையை யுடையவாகிய விரைந்த குதிரையுடனே; மழை உருவின தோல் பரப்பி - முகில்போலும் நிறத்தையுடைய பரிசையைப் பரப்பி; முனை முருங்கத் தலைச்சென்று - முனையிடம் கலங்க மேற் சென்று; அவர் விளை வயல் கவர்பு ஊட்டி - அவரது நெல் விளை கழனியைக் கொள்ளை யூட்டி; மனை மரம் விறகாக - மனையிடத்து மரமே விறகாக; கடி துறை நீர்க் களிறு படீஇ - காவற்பொய்கைகளின் நீரிலே களிற்றைப் படிவித்து; எல்லுப் பட இட்ட சுடுதீ விளக்கம் - விளக்கமுண்டாக இடப்பட்டட நாடு சுடு நெருப்பினது ஒளிதான்; செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற - விடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது செக்கர் நிறம் போலத் தோன்ற; புலம் கெட இறுக்கும் வரம்பில் தானை - இடமில்லையாகச் சென்று விடும் எல்லை யில்லாத படையினையும், துணை வேண்டாச் செரு வென்றி - துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும்; புலவு வாள் - புலால் நாறும் வாளினையும்; புலர் சாந்தின் - பூசிப் புலர்ந்த சாந்தினையும்; முருகற் சீற்றத்து உருகெழு குருசில் - முருகனது வெகுட்சி போலும் வெகுட்சியினையுமுடைய உட்குப் பொருந்திய தலைவ; மயங்கு வள்ளை மலர் ஆம்பல் - ஒன்றோடொன்று கலந்த வள்ளையையும் மலர்ந்த ஆம்பலை யும்; பனிப் பகன்றை - குளிர்ச்சியையுடைய பகன்றையையும்; கனிப் பாகல் - பழத்தையுடைய பாகலையுமுடைத்தாகிய; கரும்பல்லது காடு அறியா - கரும்பல்லது பிறிது காடறியாத; பெருந் தண்பணை பாழாக - பெரிய மருதம் பாழாக; ஏம நன்னாடு ஒள்ளெரி ஊட்டினை - காவலையுடைய நல்ல நாட்டை ஒள்ளிய தீயை யூட்டி; நாம நல்லமர் செய்ய - அஞ்சத்தக்க நல்ல போரைச் செய்ய; ஓராங்கு மலைத்தன - நின் கருத்திற்கேற்ப ஒரு பெற்றிப் படப் பொருதன; பெரும-; நின் களிறு - நின்னுடைய களிறுகள் எ-று. தோல் பரப்பி யென்பது முதலாகிய வினையெச்சங்களை இறுக்குமென்னும் பெயரெச்ச வினையொடு முடித்து, அதனைத் தானை யென்னும் பெயரொடு முடிக்க. பாகற் றண்பணை யென வியையும். எல்லுப்பட இட்ட சுடு தீ யென்றதனைத் தானைக்கு அடையாக்குக. கவர் பூட்டி யென்பதற்கு விரும்பிக் கொள்ளை யூட்டியெனவும், புலங்கெட வென்பதற்கு நாடழியவெனவும், புலவு வா ளென்பதற்குப் புலாலுடைய வாளெனவும் உரைப்பினு மமையும். குருசில், பெரும, நீ அமர் செய்ய நின் களிறு ஓராங்கு மலைந்தன வென வினைமுடிவு செய்க. பாகல் பலாவென் றுரைப்பரு முளர். ஏம நன்னா டொள்ளெரி யூட்டி, யென்றதனால், இது மழபுலவஞ்சியாயிற்று. விளக்கம் : கவர்பு - கொள்ளை. கடி துறை - ஊரார் உண்ணுநீர் கொள்ளும் நீர்நிலைகளில் மக்களும் விலங்குகளும் இறங்கிப் படிந்து நீரைக் கெடுக்காவண்ணம் காத்தல் பண்டையோர் மரபாதலால் அவற்றைக் கடிதுறை யென்றார். தண் பணை - மருதநிலம். நாம் - அச்சம். போர் நிகழுமிடத்துப் பகைவர் நாட்டு விளைவயல்களைக் கெடுப்பதும், நீர்நிலைகளைச் சிதைத்தழிப்பதும், நெல் கரும்பு முதலியன விளையும் மருத நிலங்களைப் பாழ் செய்வதும், மக்கள் குடி யிருக்கும் ஊர்களைத் தீயிட்டழிப்பதும், அவர்தம் பொருளைச் சூறையாடுவதும் நிகழ்வது குறித்தே, இப் போர் நிகழ்ச்சி சான்றோர் களால் வெறுக்கப்படுகின்றது. இதனை இச்சான்றோர் விரித் தோதுவது வேந்தன் உள்ளத்தில் அருள் பிறப்பித்துப் போரைக் கைவிடுவித்தல் கருதி யென்றறிதல் வேண்டும். தோல் பரப்பி, கவர்பூட்டி, களிறு படிவித்துப் புலங்கெட இறுக்கும் தானை யென இயைவது விளங்க, "தோல்......-முடிக்க" என்றார். பாகலையுடைய தண்பணை, காடறியாத் தண்பணை யெனக் கொள்க. "கவர்பு, விருப்பாகும்" என்பது தொல்காப்பியம்; அதற்கேற்பக் கவர்பூட்டி யென்பதற்கு "விரும்பிக் கொள்ளையூட்டி" என்றும், புலம் என்பது நாட்டிற்கும் பொருந்துதலால், புலம் கெட வென்பதற்கு நாடழிய வென்றும் பொருள்கொள்ளலாம் என்றார். இறுத்தல் - தங்குதல். தங்குதலை விடுதலென்பதும் வழக்காதலால், இறுக்கும் என்பதற்கு விடும் என்று உரை கூறினார். 17. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை இச் சேரமன்னனின் இயற்பெயர் சேய் என்பது. இவன் சேரர் மரபில் இரும்பொறைக் குடியில் பிறந்தவன். யானையினது நோக்குப் போலும் நோக்கினையுடையவன் என்பது பற்றி இவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை யெனப்படு கின்றான். "வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்" என இவனைக் குறுங்கோழியூர்கிழார் பாராட்டுவர். இவன் காக்கும் நாடு "புத்தேளுலகத் தற்று" என்பது. இவனுக்கும் பாண்டியன் தலை யாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கும் ஒருகால் நடந்த போரில் இச்சேரமான் தோல்வியுற்று அவனாற் சிறைப் படுத்தப் பட்டான். அச் சிறையினின்றும் தன் வலியினால் சிறைக் காவலரை வென்று தப்பிச் சென்று தன் அரசுக் கட்டிலிற் சிறப் புற்றான். இவன்பால் நல்லிசைச் சான்றோர் பலர்க்கும் பேரீடுபா டுண்டு. இவனது இறுதிக் காலத்தே, வானத்தே ஒரு மீன் வீழ்ந்தது. அதன் வீழ்ச்சி நாடாளும் வேந்தர்க்கு எய்தும் தீங்கினை யுணர்த்தும் குறியென்று அக் காலத்தவர் கருதியிருந்தனர். இக் காலத்தும் ஞாயிற்றினிடத்தே காணப்படும் கறுப்புக்குறியே இப்போது நிகழ்ந்த போர்க்கும் வற்கடத்துக்கும் காரணமென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனரன்றோ! மீன்வீழ்ச்சி கண்ட சான்றோருள் கூடலூர்கிழார் என்பவர் பெரு வருத்தமெய்தி ஏழுநாள் கழித்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை யிறந்தானென்றறிந்தார். அறிந்தவர், அப்போது தாம் கொண்ட கையறவை ஒரு பாட்டில் (புறம். 229) குறித்துள்ளார்; அஃது இந் நூலுள்ளே யுளது. இப்பாட்டில் ஆசிரியர் குறுங்கோழியூர்கிழார், இச் சேரமான் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறையிலிருந்து தன் வலியாற் றப்பிச் சென்று அரசுகட்டி லேறி யிருக்க, அவனைக் கண்டு, "குடவர் கோவே, சேரர் மரபைக் காத்தவனே, தொண்டிநகரத்தோர் தலைவனே, நின்னைக் காணவந்தேன்" என்று கூறுகின்றார். சிறையினின்று இவன் தப்பிச் சென்ற திறத்தை, தான் கைப்படுக்கப்பட்ட குழியினின்றும் கரையைக் குத்தித் தப்பிப்போகும் யானை யொன்றின் செயலோ டுவமித்திருப்பது மிக்க நயமுடையதாகும். தென்குமரி வடபெருங்கல் குணகுடகட லாவெல்லை குன்றுமலை காடுநா டொன்றுபட்டு வழிமொழியக் 5 கொடிதுகடிந்து கோறிருத்திப் படுவதுண்டு பகலாற்றி இனிதுருண்ட சுடர்நேமி முழுதாண்டோர் வழிகாவல குலையிறைஞ்சிய கோட்டாழை 10 அகல்வயன் மலைவேலி நிலவுமணல் வியன்கானற் றெண்கழிமிசைச் சுடர்ப்பூவின் தண்டொண்டியோ ரடுபொருந மாப்பயம்பின் பொறைபோற்றாது 15 நீடுகுழி யகப்பட்ட பீடுடைய வெறுழ்முன்பிற் கோடுமுற்றிய கொல்களிறு நிலைகலங்கக் குழிகொன்று கிளைபுகலத் தலைக்கூடியாங்கு 20 நீபட்ட வருமுன்பிற் பெருந்தளர்ச்சி பலருவப்பப் பிறிதுசென்று மலர்தாயத்துப் பலர்நாப்பண் மீக்கூறலின் உண்டாகிய வுயர்மண்ணும் 25 சென்றுபட்ட விழுக்கலனும் பெறல்கூடு மிவனெஞ் சுறப்பெறி னெனவும் ஏந்துகொடி யிறைப்புரிசை வீங்குசிறை வியலருப்பம் இழந்துவைகுது மினிநாமிவன் 30 உடன்றுநோக்கினன் பெரிதெனவும் வேற்றரசு பணிதொடங்குநின் ஆற்றலொடு புகழேத்திக் காண்கு வந்திசிற் பெரும ஈண்டிய மழையென மருளும் பஃறோன் மலையெனத் 35 தேனிறை கொள்ளு மிரும்பல் யானை உடலுந ருட்க வீங்கிக் கடலென வானீர்க் கூக்குந் தானை யானாது கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப இடியென முழங்கு முரசின் 40 வரையா வீகைக் குடவர் கோவே. (17) திணை : வாகை; துறை : அரசவாகை; இயன்மொழியு மாம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை வலிதிற் போய்க் கட்டி லெய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது. உரை : தென் குமரி - தென்றிசைக்கட் கன்னியும்; வட பெருங் கல் - வடதிசைக்கண் இமயமும்; குண குட கடல் எல்லையா - கீழ்த் திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக; குன்று மலை காடு நாடு - நடுவுபட்ட நிலத்துக் குன்றமும் மலையும் காடும் நாடும் என இவற்றையுடையோர்; ஒன்றுபட்டு வழிமொழிய - ஒரு பெற்றிப்பட்டு வழிபாடு கூற; கொடிது கடிந்து - தீத்தொழிலைப் போக்கி; கோல் திருத்தி - கோலைச் செவ்விதாக்கி; படுவதுண்டு - ஆறிலொன்றாகிய இறையை யுண்டு; பகல் ஆற்றி - நடுவுநிலைமையைச் செய்து; இனி துருண்ட சுடர் நேமி - தடையின்றாக வுருண்ட ஒளியையுடைய சக்கரத்தால்; முழுதாண்டோர் வழி காவல - நிலமுழுதையும் ஆண்டோரது மரபைக் காத்தவனே; குலை இறைஞ்சிய கோள் தாழை - குலை தாழ்ந்த கோட்புக்க தெங்கினையும்; அகல் வயல் - அகன்ற கழனியையும்; மலை வேலி - மலையாகிய வேலியையும்; நிலவு மணல் வியன் கானல் - நிலாப் போன்ற மணலையுடைய அகன்ற கடற்கரையையும்; தெண்கழிமிசைச் சுடர்ப் பூவின் - தெளிந்த கழியிடத்துத் தீப்போலும் பூவினையு முடைய; தண் தொண்டியோர் அடு பொருந - குளிர்ந்த தொண்டியி லுள்ளோருடைய அடு பொருந; மாப் பயம்பின் பொறை போற்றாது - யானை படுக்கும் குழிமேற் பாவின பாவைத் தன் மனச்செருக்கால் பாதுகாவாது; நீடு குழி அகப் பட்ட ஆழத்தால் - நெடிய குழியின்கண்ணே அகப்பட்ட; பீடுடைய எறுழ் முன்பின் - பெருமையை யுடைத்தாகிய மிக்க வலிமையுடைய; கோடு முற்றிய கொல்களிறு - கொம்பு முதிர்ந்த கொல்லுங் களிறு; நிலை கலங்கக் குழி கொன்று - அதன் நிலைசரியக் குழியைத் தூர்த்து; கிளை புகல - தன் இனம் விரும்ப; தலைக் கூடியாங்கு தன்னினத்திலே சென்று பொருந்தினாற்போல; அரு முன்பின் பொறுத்தற்கரிய வலி யால் பகையை மதியாது; நீ பட்ட பெருந் தளர்ச்சி - நீயுற்ற பெரிய தளர்ச்சி நீங்க; பிறிது சென்று - பிறிதொரு சூழ்ச்சியாற் போய்; பலர் உவப்ப - பலரும் மகிழ; மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக்கூறலின் - பரந்த உரிமையையுடைய இடத்தின் நின் சுற்றத்தார் பலர்க்கு நடுவே உயர்த்துச் சொல்லப்படுத லால்; உண்டு ஆகிய உயர் மண்ணும் - நீ செழியனாற் பிணிப் புண்பதற்கு முன்பு நின்னா லழிக்கப்பட்டுப் பின்பு தம் மரசு வௌவாது நின் வரவு பார்த்திருந்த அரசர் நமதாய் இவனாற் கொள்ளப்பட்டு உண்டு அடிப்பட்டுப் போந்த மேம்பட்ட நிலமும்; சென்றுபட்ட விழுக் கலனும் பெறல் கூடும் - இவன் பாற் சென்றுற்ற சீரிய அணிகலமும் கிடைத்த லுண்டாம்; இவன் நெஞ்சுறப் பெறின் எனவும் - இவனது நெஞ்சு நமக்கு உரித்தாகப் பெறின் என நினைந்தும்; ஏந்து கொடி இறைப் புரிசை - நின் வரவு பார்த்திராது தம் மரசு வௌவிய பகைவர் எடுத்த கொடியையுடைய உயர்ந்த மதிலையும்; வீங்கு சிறை வியல் அருப்பம் - மிக்க காடும் அகழும் முதலாய காவலை யுடைய அகலிய அரணினையும்; நாம் இனி இழந்து வைகுதும் - நாம் இனி இழந்து தங்குவேம்; உடன்று நோக்கினன் பெரிது எனவும் -இவன் நம்மை வெகுண்டு பார்த்தான் மிகவென நினைந்தும்; வேற்றரசு - பகை வேந்தர்; பணி தொடங்கும் நின் ஆற்றலொடு புகழேத்தி - ஏவல் செய்யத் தொடங்குதற்குக் காரணமாகிய நினது வலியுடனே புகழை வாழ்த்தி; காண்கு வந்திசின் - காண்பேனாக வந்தேன்; பெரும - ; ஈண்டிய மழை யென மருளும் பல் தோல் - திரண்ட முகிலெனக் கருதி மயங்கும் பல பரிசைப் படையினையும்; மலையெனத் தேன் இறை கொள்ளும் இரும்பல் யானை - மலையென்று கருதித் தேனினம் தங்கும் பெரிய பல யானையினையும்; உடலுநர் உட்க வீங்கி - மாறுபடுவோர் அஞ்சும்படி பெருத்தலால்; கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை - கடலெனக் கருதி மேகம் நீர் முகக்க மேற்கொள்ளும் படையினையும்; ஆனாது - அமையாது; கடு ஒடுங்கு எயிற்ற - நஞ்சு கரக்கும் பல்லினை யுடையவாகிய; அரவுத் தலை பனிப்ப - பாம்பினது தலை நடுங்கும் பரிசு; இடி யென முழங்கும் முரசின் - இடியென்று கருத முழங்கும் முரசினையும்; வரையா ஈகை - எல்லார்க்கும் எப்பொருளும் வரையாது கொடுக்கும் வண்மையையுமுடைய; குடவர் கோவே - குடநாட்டார் வேந்தே எ-று. காவல, பெருந, பெரும, கோவே, ஏத்திக் காண்கு வந்தேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. குன்றென்றது சிறு மலைகளை; அன்றி மணற்குன்றென்று நெய்தல் நிலமாக்கி, ஏனை மூன்றோடுங் கூட்டி நானிலத்தோருமென் றுரைப்பாரு முளர். அடுபொருந வென்றது, வேந்தற்கு வெளிப்படையாய் நின்றது. தளர்ச்சி யென்பதன்பின் நீங்கவென ஒரு சொல் வந்தது. "அருமுன்பிற் பெருந்தளர்ச்சி பலருவப்பப் பிறிது சென்று" என்பதற்கு, முன் போலே தளர்ச்சி பிறிதாகப் பலருவப்பச் சென்று எனினு மமையும்; அன்றி முன்பின் தளர்ச்சி பிறிதாகச் சென் றென்றுரைப் பாரு முளர். ஆனால் முழங்கும் முரசு என்க. விளக்கம் : குண குட கடல் என்றாற்போலக் குமரிக்கண் கடல் கூறப் படாமையால், குமரி கடல்கோட்படுதற்கு முன்னையது இப்பாட் டென்பது தெளிவாகும். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், இல்லறத்தானாகிய தான் என்ற கூறு ஐந்தொழிய எஞ்சி நிற்கும் ஆறாவது கூறு அரசர்க்காதலின், அதனைப் "படுவது" என்றார். தடையுண்டாகிய வழி, அரசு இனிது நடவாதென்பதுபற்றி, இனிது உருண்ட என்பதற்குத் தடையின்றாக வுருண்ட என்றார். முழு தாளுதல் - நிலம் முழுதும் ஆளுதல். கோள் தாழை - கோட்புக்க தாழை; குலை தாழ்ந்து மக்கள் ஏறி இனிது கொள்ளத்தக்க வகையில் உயர்ந்த தெங்கு என்றற்குக் கோட்புக்க தெங்கு என வுரைத்தார். நிலாப்போல் வெண்மையான மணலை "நிலவு மணல்" என்றமை யின், "நிலாப் போன்ற மணல்" என வுரைத்தார். நிலா, நிலவென வந்தது. பயம்பு - பள்ளம். யானை வரும் வழியில் ஆழ்ந்த பள்ளஞ் செய்து அதன்மேல் மெல்லிய கழிகளைப் பரப்பி மணலைக் கொட்டி பொய்யே நிலம் போலத் தோன்றச் செய்துவைப்பர் யானை வேட்டம் புரிவோர். அதனை யறியாது வரும் யானை அப்பள்ளத்தில் வீழ்ந்துவிடும். பின்னர்ப் பழகிய யானைகளைக் கொண்டு அதனைப் பிணித்துக் கொள்வர். இக்கரவினை யறிந்த யானைகள், செல்லு மிடத்து மிக்க கருத்தோடு செல்லும். ஈண்டு யானை அகப் பட்டமைக்குக் காரணம் மனச்செருக்காலுண்டாகிய கருத்தின்மை யென்பார், "மாப்பயம்பின் பொறை போற்றாது" என்றார். எனவே, இவ்வாறு பல இடையூறுகளைக் கண்டு தேறிய களிறென்பது பெற்றாம். அரு முன்பு, முன்பு - வலி. இதனையுடைமையின் பயன், பகைக்கஞ்சாமையாதலால், அரு முன்பின் என்பதற்கு, "பொறுத்தற்கரிய வலியால் பகையை மதியாது" என வுரைத்தார். இறைப்புரிசை : இறை - உயர்வு. காடு, அகழ், மதில் முதலிய அரண் களின் பன்மை தோன்ற, "வீங்கு சிறை" என்றார். சிறை, காவல். மலை யிடத்தே தேனினம் கூடமைத்தல் இயல்பாதலால், யானைகளின் மதநாற்றங் குறித்துத் தங்கும் தேனினத்தை, "மலையெனத் தேனிறை கொள்ளும் யானை" யென்றார். வான் - மேகம்; "வான் பொய்ப்பினும் தான் பொய்யா" (பட்டி. 5) என்றாற்போல. குன்று மலை காடு நாடென்றவிடத்துக் குன்றொழிந்த ஏனைய தனித்தனியே குறிஞ்சி, முல்லை, மருதங்களைக் குறித்தலின் குன்றென்பதும் ஒரு நிலப்பகுதி குறித்ததென்றற்கும் இடமுண்மையின், "அன்றி... உளர்" என்றார். பொருநர் - வேந்தர்க்கும், போர்க்களம், ஏர்க்களம், என்ற இருவகைக் களம் பாடுவோர்க்கும் பொதுப்பெயர். 18. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இப் பாண்டியனது இயற்பெயர் நெடுஞ்செழியன் என்பது. தலையாலங்கானம் என்னுமிடத்தே தன்னை யெதிர்த்த முடி வேந்தர் இருவரும் வேளிர் ஐவருமாகிய எழுவரை வென்று மேம் பட்டது கொண்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் எனச் சிறப்பிக்கப் பட்டான். மாங்குடி மருதனார் முதலிய சான்றோரிடத்தே பெருமதிப்பும் அன்பும் உடையவன். அவர் பாடிய மதுரைக்காஞ்சிக்கும் தலைவன் இவனே. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையை வென்று சிறைப்படுத்தியதும், வேள்எவ்வியின் மிழலைக் கூற்றத்தையும் முதுவேளிர்கட்குரிய முத்தூர்க்கூற்றத்தையும் வென்று தான் கைப்படுத்திக் கொண்டதும் இவனுடைய போர்ச் செயல் களாகும். தன்னை யெதிர்த்த வேந்தரொடு பொரச் சென்றபோது இவன் வழங்கிய வஞ்சினப்பாட்டு இத்தொகைநூற்கண் உள்ளது. இவனைக் குறுங்கோழியூர் கிழார், குடபுலவியனார், கல்லாட னார், மாங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார் முதலியோர் பாடியுள்ளனர். இவனைப் பாண்டியன் நெடுஞ்செழியனென்றும் கூறுவர். இவன் வேறு; கோவலனைக் கொலைபுரிவித்த நெடுஞ் செழியன் வேறு. குடபுலவியனார் என்னும் சான்றோர் இப்பாண்டியனை இப்பாட்டாலும் வரும் பாட்டாலும் சிறப்பித்துப் பாடுகின்றார். புலவியன் என்பது இவரது இயற்பெயர். குடநாட்டவராதலால், குடபுலவியனார் எனப்பட்டார். புலவியன் என்பது விரிந்த அறிவுடையவனென்னும் பொருள்பட வருந் தமிழ்ச்சொல் லாதலால், புலத்தியனென்னும் வடசொற்றிரிபெனக் கூறுவது மடமையாகும். இப்பாட்டின்கண், தாம் பாண்டிநாட்டின் மேற்பகுதியில் வாழ்பவராதலாலும், அப்பகுதி நீர்நிலையின்றி விளைநலம் குன்றி வாடுதலாலும், நீர்நிலை பெருக அமைக்க வேண்டுமெனப் பாண்டியற் குணர்த்தக் கருதி "வயவேந்தே, நீ மறுமைப்பேறாகிய துறக்கவின்பம் வேண்டினும், இம்மைக்கண் ஒரு பேரரசனாய்ப் புகழெய்த வேண்டினும், நாட்டில் நீர்நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்தி வானோக்கும் புன்புலம் வேந்தன் முயற்சிக்கு வேண்டுவ உதவாது; ஆகவே நீர்நிலை பெருக அமைப்பாயாக" வென வற்புறுத்துகின்றார். அரசன்பால் பொருட் கொடை பெறும் பான்மையரான புலவர் பெருமக்கள் அவன்பால் பொருள்வளம் குன்றாது மேன்மேலும் பெருகுதற்குரிய செயன்முறைகளை அவர்கட்கு அறிவுறுத்துவது கடமையாகும். ஆதலால், ஈண்டுக் குடபுலவியனார், நாடு வளம் மிகுவது குறித்து நீர்நிலை பெருகச் செய்க என அறிவுறுத்துகின்றார். சேரமான் கோதை யென்பாற்குத் தானைத் தலைவனான பிட்டங்கொற்றனென்பான் மாறுபடும் மன்னரை வென்று அவர் தரும் பொருள்வளத்தைப் புலவருக்கு நல்கிப் புகழ்பெறக் கண்ட வடமவண்ணக்கன் தாமோதரனார் என்னும் சான்றோர், அவனது பொருள்வளம் குன்றாமை வேண்டி, "வயமான் பிட்டன், ஆரமர் கடக்கும் வேலும் அவன்இறை மாவள் ளீகைக் கோதையும், மாறுகோள் மன்னரும் வாழியர் நெடிதே" (புறம் : 172) என்று வாழ்த்துவது இக்கருத்தை நாம் நன்கு தெளிய வற்புறுத்துகின்றது. முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன்ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ ஒருதா மாகிய வுரவோ ரும்பல் 5 ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய பெருமைத் தாகநின் னாயு டானே நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப் பூக்கதூஉ மினவாளை நுண்ணாரற் பருவராற் 10 குரூஉக்கெடிற்ற குண்டகழி வானுட்கும் வடிநீண்மதில் மல்லன்மூதூர் வயவேந்தே செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி 15 ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன் தகுதி கேளினி மிகுதி யாள நீரின் றமையா யாக்கைக் கெல்லாம் உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே 20 உண்டி முதற்றே யுணவின் பிண்டம் உணவெனப் படுவது நிலத்தொடு நீரே நீரு நிலனும் புணரி யோரீண் டுடம்பு முயிரும் படைத்திசி னோரே வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன் 25 வைப்பிற் றாயினு நண்ணி யாளும் இறைவன் றாட்குத வாதே யதனால் அடுபோர்ச் செழிய விகழாது வல்லே நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத் தட்டோ ரம்ம விவடட் டோரே 30 தள்ளா தோரிவட் டள்ளா தோரே. (18) திணை : பொதுவியல்; துறை : முதுமொழிக்காஞ்சி. பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது. உரை : முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ - ஒலிக்கின்ற கட லானது முழுதும் சூழப்பட்டு; பரந்துபட்ட வியன் ஞாலம் - பரந்து கிடக்கின்ற அகன்ற வுலகத்தை; தாளின் தந்து - தமது முயற்சியாற் கொண்டு; தம் புகழ் நிறீஇ - தம்முடைய புகழை யுலகத்தின்கண்ணே நிறுத்தி; ஒருதாம ஆகிய உரவோர் உம்பல் - தாமே ஆண்ட வலியோருடைய வழித்தோன்றினோய்; ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை யிரீஇய - ஒன்றைப் பத்து முறையாக அடுக்கப்பட்டதாகிய கோடி யென்னும் எண்ணினைக் கடையெண்ணாக இருத்திய; பெருமைத்தாக நின் ஆயுள் - சங்கு முதலாகிய பேரெண்ணினை யுடைத்தாக நினது வாழ் நாள்; நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சி - நீரின்கண்ணே யுறத் தாழ்ந்த குறிய காஞ்சியினது; பூக் கதூஉம் இன வாளை - பூவைக் கவரும் இனமாகிய வாளையினையும்; நுண்ணாரல் - நுண்ணிய ஆரலினையும்; பருவரால் - பரிய வராலினையும்; குரூஉக் கெடிற்ற - நிறமுடைய கெடிற்றினையு முடைத்தாகிய; குண்டு அகழி - குழிந்த கிடங்கினையும்; வான் உட்கும் வடி நீண் மதில் - வான மஞ்சும் திருந்திய நெடிய மதிலையு முடைத்தாகிய; மல்லல் மூதூர் வயவேந்தே- வளவிய பழைய ஊரினையுடைய வலிய வேந்தே; செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் - நீ போகக் கடவ மறுமையுலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினும்; ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும் - உலகத்தைக் காப்பாரது தோள் வலியைக் கெடுத்து நீ ஒருவனுமே தலைவனாதலை விரும்பினும்; சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும் - மிக்க நல்ல புகழை இவ் வுலகத்தே நிறுத்துதலை விரும்பினும்; அதன் தகுதி கேள் இனி - அவ் வேட்கைக்குத் தக்க செய்கையைக் கேட்பாயாக இப் பொழுது; மிகுதியாள - பெரியோய்; நீர் இன்று அமையா யாக்கைக்கெல்லாம் - நீரை யின்றியமையாத உடம்பிற்கெல் லாம்; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்- உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார்; உண்டி முதற்று உணவின் பிண்டம் - உணவை முதலாக வுடைத்து அவ் வுணவா லுளதாகிய உடம்பு; உணவெனப் படுவது நிலத்தொடு நீர் - ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்; நீரும் நிலனும் புணரியோர் - அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள்; ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோர் - இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்; வித்தி வான் நோக்கும் புன்புலம் - நெல் முதலாயவற்றை வித்தி மழையைப் பார்த்திருக்கும் புல்லிய நிலம்; கண்ணகன் வைப்பிற் றாயினும் - இட மகன்ற நிலத்தையுடைத்தாயினும்; நண்ணி யாளும் இறைவன் தாட்கு உதவாது - அது பொருந்தி யாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது; அதனால் - ஆதலால்; அடு போர்ச் செழிய - கொல்லும் போரையுடைய செழிய; இகழாது - இதனைக் கடைப்பிடித்து; வல்லே - விரைந்து; நிலன் நெளி மருங்கின் - நிலம் குழிந்த விடத்தே; நீர் பெருகத் தட்டோர் - நீர்நிலை மிகும் பரிசு தளைத்தோர்; இவண் தட்டோர்- தாம் செல்லு முலகத்துச் செல்வ முதலாகிய மூன்றினையும் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தோராவர்; தள்ளாதோர் - அந்நீரைத் தளையாதவர்; இவண் தள்ளாதோர் - இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளை யாதோர் எ-று. இதனால், நீயும் நீர்நிலை பெருகத் தட்கவேண்டுமென்பது கருத்தாகக் கொள்க. மற்றும் அம்மவும் அசைநிலை. உணவின் பிண்டம் உண்டி முதற்றாதலான், உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரென மாறிக் கூட்டுக. தள்ளாதோர் இவண் தள்ளாதோ ராதலால், செழிய, இதனை இகழாது வல்லே செய்யென ஒருசொல் வருவித்துரைப்பாரு முளர். தட்டோ ரென்பதற்குத் தம் பெயரைத் தளைத்தோ ரெனினு மமையும். நீரும் நிலனும் புணரியோர் உயிரும் உடம்பும் படைத்தோ ரெனவே, செல்லு முலகத்துச் செல்வமும், வித்தி வானோக்கும் புன்புலம் இறைவன் தாட் குதவாதெனவே, நீர்நிலை பெருகத் தட்டலால் வானோக்க வேண்டாத நன்புலம் இறைவன் தாட்கு உதவி ஞாலங் காவலர் தோள்வலி முருக்குதலும், நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் இவண் தட்டோ ரெனவே, நல்லிசை நிறுத்தலும் கூறப்பட்டன. நீர்நிலை பெருகத் தட்கவே அறன் முதல் மூன்றும் பயக்கு மென்பது கூறினமையான் இது முதுமொழிக் காஞ்சியாயிற்று. விளக்கம் : முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்து பட்ட ஞாலம் என்று இயை தலால், வளைஇ யென்பதற்குச் சூழப்பட்டு என்று பொருளுரைத்தார். புகழ் நிறீஇ யென்றவிடத்து, புகழ்க்கு ஆதாரம் உலகமாதலின் "புகழை யுலகத்தின் கண்ணே நிறுத்தி" யென்றார்; "சிறந்த நல்லிசை நிறுத்த வேண்டினும்" என்றவிடத்தும் இவ்வாறு உரை கூறுதல் காண்க. இருந்து ஆளும் உலகம் நிலவுலகமாதலால், செல்லு முலகம் மறுமையுலகமாயிற்று. ஞாலங் காவலர் - ஞாலம் காக்கும் வேந்தர் உடம்பு உணவால் வளர்தலின், உணவின் பிண்டமெனப்பட்டது. "மக்கள் யாக்கை யுணவின் பிண்டம்" (10:90) என மணிமேகலை யாசிரியரும் கூறுவர். புணர்த்தவரைப் "புணரியோர்" என்றார். புணர்த்தல் - கூட்டுதல்; அஃதாவது நீர் இல்லா நிலத்தில் நீர்நிலை யுண்டு பண்ணுதல். ஆறு, ஏரி, குளம் முதலியவற்றால் நீர் வருவா யின்றி மழை வருவா யொன்றையே நோக்கி நிற்கும் புன்செய் நிலத்தை, "வானோக்கும் புன்புலம்" என்றார். இக்காலத்தும் இந் நிலங்களை "வானவாரி" யென்பர். தாள், - முயற்சி; வெற்றிச் சிறப்பால் பகை களைந்து செல்வம் பெருகுவிக்கும் அரசியல் முயற்சி. இயல் பாகவே ஆழ்ந்திருக்கும் நிலப்பகுதி தேர்ந்து நீர்நிலை யமைத்தல் இயல்பாதலால், "நிலன் நெளி மருங்கு" என்றார். மூன்றுமாவன: செல்லு முலகத்துச் செல்வம், ஞாலங் காவலர் தோள்வலி முருக்குதல், நீர்நிலை பெருகத் தளைத்தல். "வித்தி வானோக்கும் புன்புலம் இறைவன் தாட்கு உதவாது" என்ற இவ்வுண்மையை இகழாது என இவ்வுரைகாரர் கூறியது போலாது, "இகழாது வல்லே செய்" என ஒருசொல் வருவித்துரைத்தலு முண்டு. களைதல், கட்டல் என வருதல்போலத் தளைத்தல், தட்டல் என வந்தது. நிலனெளி மருங்கில் நெடிய நீண்ட கரையெடுத்து நீரைத் தேக்கி வேண்டுமளவிற் பயன் படுமாறு கட்டிவைத்தலைத் தளைத்தல் என்கின்றார். உயிரும் உடம்பும் படைத்தல் அறம்; வேந்தர் தோள்வலி முருக்குதல் பொருள்; நல்லிசை நிறுத்தல் இன்பம். இவ்வகையால் அறமுதல் மூன்றும் கூறப்பட்டனவாம். (18) 19. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆசிரியர் குடபுலவியனார், இந் நெடுஞ்செழியன் தலை யாலங்கானத்துச் செருவென்று வந்திருக்க அவனைக் காண்பது கருதி வந்தார். அவரையும் அவன் அன்போடு வரவேற்றுத் தழீஇக் கொண்டான். அவனால் தழுவப்பட்ட இச்சான்றோர் அவனது பேரன்பை வியந்து, "செழிய, நின் மார்பு புலியைப் படுப்பது குறித்து வேட்டுவன் கல்லிடத்தே சேர்த்திய அடாரையும் ஒக்குமென்று கருதிப் புல்லினேன்; எம் போல்வார்க்கு இன்பமும் பகைவர்க்குத் துன்பமும் பயப்பது நின் மார்பு" என்று பாராட்டி, அவனது போர்ச் செயலைச் சிறப்பித்து உரைக்கின்றார். இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும் நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய 5 இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி முயங்கினெ னல்லனோ யானே மயங்கிக் குன்றத் திறுத்த குரீஇயினம் போல அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத் 10 தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள எறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தர் எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர் இன்ன விறலு முளகொ னமக்கென 15 மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக் கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை எழுவர் நல்வலங் கடந்தோய்நின் கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே. (19) திணை : வாகை; துறை : அரசவாகை. பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது. உரை : இமிழ் கடல் வளைஇய - ஒலிக்கும் கடலாற் சூழப்பட்ட; ஈண்டு அகன் கிடக்கை - அணுச் செறிந்த அகன்ற உலகத்துக் கண்; தமிழ் தலைமயங்கிய தலையாலங் கானத்து - தமிழ்ப் படை கைகலந்த தலையாலங்கானத்துக்கண்; மன்னுயிர்ப் பன்மையும் - நிலைபெற்ற உயிரினது பன்மையையும்; கூற்றத் தொருமையும் - அவ்வுயிரைக் கொள்ளும் கூற்றினது ஒருமையை யும்; நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய - நின்னுடனே சீர்தூக்கிக் காட்டிய வென்றி வேலையுடைய செழிய; இரும்புலி வேட்டுவன் பொறி யறிந்து மாட்டிய - பெரும்புலியைக் படுக்கும் வேட்டுவன் எந்திர மறிந்து கொளுத்திய; பெருங்கல் அடாரும் போன்ம் - பெரிய கல்லையுடைய அடாரையும் போலும்; என விரும்பி - என்று விரும்பி; முயங்கினென் அல்லனோ யானே - புல்லினேனல்லனோ யான்; மயங்கிக் குன்றத் திறுத்த குரீஇ யினம் போல - கலங்கி மலைக்கண்ணே தங்கிய குருவியினம் போல; அம்பு சென்று இறுத்த அரும் புண் யானை - அம்பு சென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணை யுடைய யானையினது; தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து - துளையையுடைய பெருங்கை வாயுடனே துணிந்து வீழ்ந்து; நாஞ்சில் ஒப்ப - கலப்பையை யொப்ப; நிலமிசைப் புரள - நிலத்தின்மேலே புரள; எறிந்து களம் படுத்த - வெட்டிப் போர்க்களத்தின்கண்ணே வீழ்த்த; ஏந்து வாள் வலத்தர் - ஏந்திய வாள்வெற்றியை யுடையோராய்; எந்தையொடு கிடந்தோர் எம் புன்தலைப் புதல்வர் - எம் தலைவனொடு கிடந்தார் எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்; இன்ன விறலும் உளகொல் நமக்கு - இப்பெற்றிப்பட்ட வென்றி யும் உளவோ நமக்கு; என - என்று சொல்லி; மூதில் பெண்டிர் கசிந்தழ - முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர் இன்புற்று உவகையால் அழ; நாணி - அது கண்டு நாணி; கூற்றுக் கண் ணோடிய - கூற்றம் இரங்கிய; வெருவரு பறந்தலை - அஞ்சத் தக்க போர்க்களத்தின்கண்ணே; எழுவர் நல்வலங் கடந்தோய் - இருபெரு வேந்தரும் ஐம்பெரு வேளிருமாகிய எழுவரது நல்ல வலியை வென்றோய்; நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பு - நினது கழுவி விளங்கின முத்தாரம் அகத்திட்ட மார்பை எ-று. தமிழ் தலைமயங்கிய வென்புழித் தலை: அசைநிலை; இடமுமாம். செழிய, கடந்தோய், நின் மார்பை யான் விரும்பி முயங்கினெ னல்லனோ வெனக் கூட்டுக. பெருங்கல் அடாரு மென்ற வும்மை, எமக்கு விருப்பஞ் செய்தலேயன்றி நின் பகைவர்க்கு வருத்தஞ் செய்தலான், நின் மார்பு கல்லடாரும் போலுமென எச்சவும்மையாயிற்று; சிறப்பும்மையுமாம். மூதிற்பெண்டிர் கசிதலால் நாணி யெனவும், அழுதலாற் கண்ணோடிய வெனவும் நிரனிறையாகக் கொள்க. போர் முடிதலாற் போயின கூற்றை நாணியும் கண்ணோடியும் போயிற்றுப் போலக் கூறியது ஓர் அணி கருதி நின்றது. இனி, அம்பு தைத்த யானையை வெட்டிப் படுத்தல் மறத்திற் கிழிபென்று பெண்டிர் இரங்கி யழுதலின், கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோடியதென் றுரைப்பாரு முளர். விளக்கம் : ஈண்டுதல் செறிதல் என்னும் பொருளதாகலின், ஈண்டகன் கிடக்கை யென்பதற்கு அணுச் செறிந்த அகன்ற உலகம் என்று கூறினார். அணு - மண். "மண் திணிந்த நிலனும்" (புறம். 2) என்பதன் உரை காண்க. தமிழ்ப்படை, வென்றோர் படையும் தோற்றோர் படையும் தமிழகத்துப் படையாதலால், "தமிழ்ப் படை" யென்றார். தலை மயங்கிய என்புழி, தலை, அசைநிலையாகக் கொண்டமை யின், மயங்கிய என்பதற்குக் கைகலந்த என்றுரைத்தார். இனி, தமிழ் தலை யென்று கொண்டு, தமிழகத் திடத்தே மயங்கிய என்று பொருள் கொள்ளற்கும் இடமுண்மையின், "தலை, இடமுமாம்" என்றார். உயிர்கள் பல வாயினும் கூற்றொன்றே நின்று அவை பலவற்றையும் உண்டலிற் சலியாமை போல, இப்பாண்டியன் ஒருவனே நின்று பகைவர் பலரையும் வெல்வது அமையுமெனக் கருதிப் போருடற்று கின்றான் என்பது விளங்க, "நின்னொடு தூக்கிய செழிய" என்றார். அடார், கருங்கற் பாறைகளின் இணைப்பு; கற்பலகையுமாம். பொறி யறிந்து மாட்டிய பெருங்கல் அடார் - மலைநாட்டவர் பாறைகள் செறிந்த குன்றுகளில் முழைகள் கண்டு, அவற்றின் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டிப் புலிகளை அதனுட் புகுவித்து, அவை ஆடுகளைக் தாக்கியவழி வாயிற் கதவாகிய கற்பலகை விரைய மூடிக் கொள்ளுமாறு பொறி யமைத்து வைப்பது. இவ்வடார், புலியை அகப்படுத்தற்கேயன்றி, வெயில் காற்று மழை முதலியவற்றின் மறைதற்கு இடமாய் வேட்டுவற் கின்பம் செய்யும். ஆதலின், உம்மை, எச்சவும்மையாயிற்று. பகைவரைப் படுக்கும் ஆண்மைச் சிறப்பை விளக்குதலால், சிறப்பும்மை என்றலும் பொருந்தும் என்றற்குச் "சிறப்பும்மையுமாம்" என்றார். புனத்திடத்தே தங்கும் குரீஇயினம் மலையிடத்தே தங்குதற்குக் காரணம் இது வென்பார், "மயங்கி" யென்றார். மலையிடத்துத் தங்கிய குரீஇயினம் போல வீரர் மார்பிடத்தே தங்கிய அம்பு தோன்றும் என வறிக. "மயங்கி... நமக்கு" என்பது மூதில் மகளிர் கூற்று. இறுத்தலா லுண்டாகிய புண்ணை, இறுத்த புண் ணென்றார். மூதில்மகளிர்க்குத் துயர் தருவது மற மானங்களின் இழப்பே தவிர உயிரிழப்பன்மை யின், கசிந்து அழ என்பதற்கு, "உவகையுற்றழ" வென்றார். அணி, தற்குறிப்பேற்றம். மானமுடைய மறக்குடியிற் பிறந்தவர் உணர் வில்லாத விலங்காகு மென்று கருதி யானையைக் கொல்வதும், பிறரால் தாக்குண்டு மிச்சிற் பட்டாரெனப் போர்ப்புண் பட்ட வீரரை வெல்வதும், ஒத்த மாறுபாடு இல்லாதவ ரென்று நினைந்து தமக்கு இளையவரை வெல்வதும், தம்மின் மூத்தவரொடு பொருவது போர் நெறியன்றென எண்ணி அவரை வெல்வதும், மறத்திற்கு இழிபு என்று கருதுவர்; இதனை, "வீறின்மை யின் விலங்காமென மதவேழமு மெறியான், ஏறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் றெறியான், மாறன்மையின் மறம் வாடுமென் றிளையாரையும் எறியான், ஆறன்மையின் முதியாரையு மெறியான் அயில் உழவன்" (சீவக. 2261) என்று சான்றோர் கூறுதல் காண்க. இதனாற்றான், இவ்வுரைகாரர், "அம்பு தைத்த யானையை வெட்டிப் படுத்தல் மறத்திற் கிழிபென்று பெண்டிர் இரங்கி யழுதலின் கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோடிய தென் றுரைப்பாரு முளர்" என்றார். "தானால் விலங்கால் தனித்தால் பிறன்வரைத்தால், யானை யெறிதல் இளிவரவால் - யானை, ஒருகை யுடைய தெறிவலோ யானும், இருகை சுமந்துவாழ்வேன்" (தொல். புறத். 5, நச்சி. மேற்) என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. 20. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் இப்பாட்டின்கண் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் செங்கோ லாட்சியின் செம்மையைப் புகழ்ந்து, "செம்மலே, நீ அறம் துஞ்சும் செங்கோலையுடையை; அதனால் நின்னாட்டவர் புதுப்புள்வரினும் பழம்புள் போகினும் நடுக்கம் சிறிதும் இலராய் இன்பத்திலே திளைத்திருக்கின்றனர். அவர்கள் நின்செம்மைப் பண்பு கருதி நின்னுயிர்க்கு ஏதேனும் ஏதம் வருமோ வென எண்ணி அன்பால் அஞ்சியிருக்கின்றனர் காண்" எனப் பாராட்டு கின்றார். இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய காயமும், என்றாங் 5 கவையளந் தறியினு மளத்தற் கரியை அறிவு மீரமும் பெருங்க ணோட்டமும் சோறுபடுக்குந் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே 10 திருவி லல்லது கொலைவில் லறியார் நாஞ்சி லல்லது படையு மறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது 15 பகைவ ருண்ணா வருமண் ணினையே அம்புதுஞ்சுங் கடியரணால் அறந்துஞ்சுஞ் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை 20 அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே. (20) திணை : வாகை; துறை : அரசவாகை. சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது. உரை : இரு முந்நீர்க் குட்டமும் - பெரிய கடலினது ஆழமும்; வியன் ஞாலத் தகலமும் - அகன்ற உலகத்துப் பரப்பும்; வளி வழங்கு திசையும் - காற்றியங்குந் திசையும்; வறிது நிலைஇய காயமும் - வடிவின்றி நிலைபெற்ற ஆகாயமும்; என்ற ஆங்கவை - என்று சொல்லப்படுமவற்றை; அளந்தறியினும் - வரையறுத் தறியினும்; அளத்தற் கரியை - வரையறுத்தற் கரியை; அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும் -அறிவும் அன்பும் மிக்க கண்ணோட்டமும்; சோறு படுக்கும் தீயோடு - ஆகலான் சோற்றையாக்கும் நெருப்புடனே; செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிது தெறல் அறியார் - செஞ்ஞாயிற்றினது வெம்மையல்லது வேறு வெம்மை யறியார்; நின் நிழல் வாழ்வோர் - நின் குடைநிழற்கண் வாழ்வோர்; திருவில் அல்லது கொலை வில் அறியார் - இந்திரவில் லல்லது பகைவரது கொலைவில்லை யறியார்; நாஞ்சில் அல்லது படையும் அறியார் - கலப்பை யல்லது வேறு படைக்கலமும் அறியார்; திறன் அறிவயவ ரொடு தெவ்வர் தேய - போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரருடனே பகைவர் மாய; அப்பிறர் மண் உண்ணும் செம்மல் - அம்மாற்றாருடைய மண்ணைக் கொண்டுண்ணும் தலைவ; நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது - நின் னுடைய நாட்டின்கண் வேட்கை நோயுற்ற பெண்டிர் விரும்பி உண்ணினல்லது; பகைவர் உண்ணா அருமண்ணினை - பகைவர் உண்ணப்படாத பெறுதற்கரிய மண்ணையுடையை; அம்பு துஞ்சும் கடியரணால் - அம்பு தங்கும் காவலை யுடைய அரணுடனே; அறம் துஞ்சும் செங்கோலை - அறம் தங்கும் செவ்விய கோலையுடையை; புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் - புதுப்புள் வரினும் பழைய புள் அவ்விடத்தை விட்டுப் போகினும்; விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை - அவற்றால் நடுக்கமுறுத லறியாத சேமமாகிய காவலை யுடையை; அனையை யாகன்மாறு - அத்தன்மையையுடையை யாதலான்; மன்னுயி ரெல்லாம் - உலகத்து நிலைபெற்ற உயிரெல்லாம்; நின் அஞ்சும்மே - தத்தம் காதலால் நினக்கு ஏதம் வருங்கொல் என்று அஞ்சும். எ-று. அறிவும் ஈரமும் கண்ணோட்டமும் என்பன சினைவினைப் பாற்பட்டு அளத்தற் கரியை யென்னும் முதல்வினை கொண்டன. விளக்கம் : ஆகாயமும், முதற்குறைந்து காயமென நின்றது. அதன்கண் காற்றும் கிடையாதாதலால், "வறிது நிலைஇய காயம்" என்றார். இக் கால வான நூலாரும் இஃதுண்மை யென்பர். பெருங் கண்ணோட்டம் என்பதற்கு மிக்க கண்ணோட்ட மென்றார். நீரின் குட்டமும், நிலத்தின் அகலமும், காற்றின் திசையும், காயத்தின் வறுமையும், என்றதற்கேற்ப; இவன் பால் அறிவும், ஈரமும், பெருமையும், கண்ணோட்டமும் அளத் தற்கரியன என்று கூறல் பொருத்தமாகும். பெருங்கண்ணோட்டம் கழிகண்ணோட்டமன்று. பிறர்மண் உண்டலாவது பிறர் மண்ணைக் கொண்டல்லது உண்டி கொள்ளே னென்றிருந்து கொண்டபின் உண்டல்; "வெவ்வரி நிலைஇய எயிலெறிந் தல்லது, உண்ணா தடுக்கிய பொழுது பலகழிய" (பதிற். 68) என்று சான்றோர் கூறுதல் காண்க. புதுப்புள் வருதலும் பழம்புள் ஏகுதலும் தீநிமித்தமாகக் கருதுபவாதலின், "புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்" என்றார். பெருங்காதலாற் பிணிக்கப்பட்டார் தம்முள் ஒருவரொருவர்க்கு யாது தீங்கு நேருமோ என்ற அச்சத்தால் அடிக்கடி வருத்தப்படுவராத லால், "மன்னுயி ரெல்லாம் நின் அஞ்சும்மே" என்றார். அஞ்சுதற் கேது ஆசிரியர் கூறாமையின், "தத்தம் காதலால்" என்று உரையின் கண் பெய்து கூறினார். அறிவும், ஈரமும், கண்ணோட்டமும், அவற்றை யுடைய சேரமானும் முறையே சினையும் முதலுமாதலின், சினை யொடு முதற்கொற்றுமை யுண்மையால், "நீ அறிவும் ஈரமும் கண் ணோட்டமும் அளத்தற் கரியை" என்றார். அளத்தற்கருமை, அறிவு முதலாயவற்றிற் குரியவாகும். அஃது "அளத்தற் கரியை நீ" என முதன்மேல் நிற்பது காண்க. "பகைவ ருண்ணா அரு மண்ணினை" என்ற விடத்து, அருமை பெறற்கருமை குறித்து நின்றது. சூலுற்ற மகளிர் புளியும் மண்ணும் உண்பர் என்ப. அதனால், "வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா அரு மண்ணினையே" என்று கூறுகின்றார். திறனறி வயவர் - போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரர். திறம் - கூறுபாடு. 21. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி இப் பெருவழுதி பாண்டிவேந்தருள் பழையோருள் ஒருவன். இவன் காலத்து ஏனை முடிவேந்தரான சேரமான் மாரி வெண் கோவும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் இவற்கு நண்பராயிருந்தனர். ஒருகாலத்து இம்மூவரும் ஒருங்கிருந்த காட்சி கண்டு ஒளவையார் மகிழ்ந்து பாடியுள்ளார். அக நானூற்றைத் தொகுப்பித்தோன் இவன் என்பர். இவன் முன்பே திருவள்ளுவரது திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்றும் கூறுப. கானப்பேர் என்பது இப்போது காளையார் கோயிலென வழங்குகிறது. இது பாண்டிநாட்டிலுள்ளது. இவன் காலத்தே இது வேங்கை மார்பன் என்னும் குறுநிலமன்னற் குரியதாய் நல்ல அரணமைந்து விளங்கிற்று. இவன் அம்மன்னனை வென்று அக் கானப்பேரெயிலைத் தனக்குரித்தாகக் கொண்டான். அதனாற்றான், இவற்குக் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப் பெயர் வழங்குகிறது. கானப்பேரெயில் கடந்து வென்றி கொண்டு விளங்கும் மேம்பாட்டைக் கண்டு வியந்து ஐயூர் மூலங்கிழார் என்னும் சான்றோர் இப்பாட்டின்கண் இக்கானப்பேரெயிலின் அரண் சிறப்பை யெடுத்தோதி, அதற்குரியனான வேங்கை மார்பன், "இனி, இஃது இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிது" என இரங்கு மாறு இவன் அதனைக் கடந்த செய்தியைப் பாராட்டி வாழ்த்து கின்றார். ஐயூர் மூலம் என்பது ஓரூர். ஐயூர் என்பது வேறு; ஐயூர் மூலமென்பது வேறு. புலவரை யிறந்த புகழ்சா றோன்றல் நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி வான்றோய் வன்ன புரிசை விசும்பின் மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற் 5 கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை அருங்குறும் புடுத்த கானப் பேரெயில் கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்பு ணீரினு மீட்டற் கரிதென வேங்கை மார்ப னிரங்க வைகலும் 10 ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே இகழுந ரிசையொடு மாயப் புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. (21) திணை : வாகை; துறை : அரசவாகை. கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங்கிழார் பாடியது. உரை : புலவரை யிறந்த புகழ் சால் தோன்றல் - நின்னைப் பாடுவாரது அறிவின் எல்லையைக் கடந்த புகழமைந்த தலைவ; நிலவரை இறந்த குண்டு கண் அகழி - நிலவெல்லையைக் கடந்த பாதலத்தே யுற ஆழ்ந்த இடத்தையுடைய அகழியினையும்; வான்தோய் வன்ன புரிசை - உயர்ச்சியால் வானைப் பொருந்துவது போன்ற மதிலையும்; விசும்பின் மீன் பூத்தன்ன உருவ ஞாயில் - அவ் வானிடத்து மீனைப் பூத்தாற்போன்ற வடிவையுடைய சூட்டினை யும்; கதிர் நுழைகல்லா மரம் பயில் கடிமிளை - வெயிற்கதிர் நுழையாத மரஞ் செறிந்த காவற்காட்டினையு முடைத்தாய்; அருங் குறும்பு உடுத்த கானப் பேரெயில் - அணைதற்கரிய சிற்றரண்களாற் சூழப்பட்ட கானப்பே ரென்னு மரண்; கருங்கைக் கொல்லன் - வலிய கையையுடைய கொல்லனால்; செந் தீ மாட்டிய - செந் தீயின்கண்ணே மாட்டப்பட்ட; இரும் புண் நீரினும் மீட்டற் கரிது என - இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிதெனக் கருதி; வேங்கை மார்பன் இரங்க - வேங்கை மார்பன் வருந்த; வைகலும் - நாடோறும்; ஆடு கொளக் குழைந்த தும்பை - வென்றி கொளத் தழைத்த தும்பையையுடைய; புலவர் பாடு துறை முற்றிய - புலவர் பாடப்படும் துறைகளை முடித்த; கொற்ற வேந்தே - வெற்றியினையுடைய வேந்தே; இகழுநர் இசையொடு மாய - நின்னை மதியாத பகைவர் தம்முடைய புகழுடனே பொன்ற; புகழொடு விளங்கி - வெற்றிப் புகழுடனே விளங்கி; பூக்க நின் வேல் - பொலிவதாக நின் வேல் எ-று. கானப் பேரெயில் மீட்டற் கரிதென வேங்கை மார்பன் இரங்கப் பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே, நின் வேல் பூக்க வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. குழைத்த வென்பது குழைந்த வென மெலிந்து நின்றது. விளக்கம் : உக்கிரப் பெருவழுதியின் புகழ் மிகுதி, புலவரது புலமை யெல்லையைக் கடந்து நிற்பது என்பது தோன்ற, "புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல்" என்றார். நிலவரை இறந்தவழி யுள்ளது பாதல வெல்லை யென்பவாகலின், நிலவரை இறந்த என்றதற்கு, நில வெல்லையைக் கடந்த என்றதனோ டமையாது, "பாதலத்தே உற ஆழ்ந்த" என்றார். புரிசையின் எல்லைக்கு வான் கூறப்பட்டமை யின், அகழியின் எல்லையாகப் பாதலம் கூறப்பட்டதென்றுமாம். புரிசை வானத்தின்கண் தோய்ந்தாற் போல்வதற்குக் காரணம் உயர்ச்சியாதலால், "உயர்ச்சியால்" என்றுரைத்தார். அகழி யென்றதே ஆழமுடைமை யுணர்த்துதலின், வேறு கூறாராயினர். சூட்டு - உச்சி. அது விண்மீன் போலத் தோன்றுதல்பற்றி, "மீன்பூத் தன்ன உருவ ஞாயில்" எனப்பட்டது. குறும்பு - சிற்றரண். பழுக்கக் காய்ச்சிய இரும்பில் நீரைச் சொரியின் அதன்பால் மிக்க வெம்மையுள்ள வரையில் அந்நீர் ஆவியாய் மறைந்து போதலின், அந்நீர் இரும்பால் உண்ணப்பட்ட தென்று கூறுப. இரும்பினிடத்தலிருந்து மீளவும் அது பெறலாகாமையின், "இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிது" என்றார்; "கனலிரும் புண்ட நீரின் விடாது" (பெருங் 3.25.71) என்று கொங்கு வேளிரும் கூறுதல் காண்க. உக்கிரப் பெருவழுதி கைப்பற்றிக் கொண்டமையின், தோற்றோடிய வேங்கை மார்பன், இனி, "இக் கானப் பேரெயில் இரும்புண் நீரினு மீட்டற் கரிது" என நினைத்துக் கூறினான். குழைதல் - தழைத்தல். பாடு துறை - பாடுதற்குரிய புறத் திணைத் துறைகள். இசையொடு மாய்தலாவது, இசையைத் தாங்கும் நாடழிதலால், அதனாற் றாங்கப்படும் புகழும் உடனழிதல். (21) 22. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் இப்பாட்டின்கண், "இச் சேரமான் மடிமையின்றி முயல்வதே பொருளாக வுடையன்; அதனால் நாடு சோறு வளம் மிக்கது; செல்வப் படைப்பும் மிகுந் துளது; இவனது காவல்நலம் கண்ட சான்றோர் 'மாந்தரஞ்சேர லிரும்பொறை யோம்பிய நாடு புத்தேளுலகத் தற்று' என மீக்கூறுகின்றனர்; தன்னைப் பாடிய புலவர் பிறர்பாற் சென்று அவரிசையினைப் பாடாவாறு பெருங்கொடை நல்குவன்" என்றும், இத்தகைய சிறப்பைக் கேட்டுத் தாம் வந்து கண்டு மகிழ்வுற்றதாகவும் கூறுகின்றார். தூங்குகையா னோங்குநடைய உறழ்மணியா னுயர்மருப்பின பிறைநுதலாற் செறனோக்கின பாவடியாற் பணையெருத்தின 5 தேன்சிதைந்த வரைபோல மிஞிறார்க்குங் கமழ்கடாத் தயறுசோரு மிருஞ்சென்னிய மைந்துமலிந்த மழகளிறு கந்துசேர்பு நிலைஇவழங்கப் 10 பாஅனின்று கதிர்சோரும் வானுறையும் மதிபோலும் மாலைவெண் குடைநீழலான் வாண்மருங்கிலோர் காப்புறங்க அலங்குசெந்நெற் கதிர்வேய்ந்த 15 ஆய்கரும்பின் கொடிக்கூரை சாறுகொண்ட களம்போல வேறுவேறு பொலிபுதோன்றக் குற்றானா வுலக்கையாற் கலிச்சும்மை வியலாங்கட் 20 பொலந்தோட்டுப் பைந்தும்பை மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇச் சினமாந்தர் வெறிக்குரவை ஓதநீரிற் பெயர்புபொங்க வாய்காவாது பரந்துபட்ட 25 வியன்பாசறைக் காப்பாள வேந்துதந்த பணிதிறையாற் சேர்ந்தவர் கடும்பார்த்தும் ஓங்குகொல்லியோ ரடுபொருந வேழ நோக்கின் விறல்வெஞ் சேஎய் 30 வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே நிற்பாடிய வலங்குசெந்நாப் பிறரிசை நுவலாமை ஓம்பா தீயு மாற்ற லெங்கோ மாந்தரஞ் சேர லிரும்பொறை யோம்பிய நாடே 35 புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டுவந் தினிது கண்டிசிற் பெரும முனிவிலை வேறுபுலத் திறுக்குந் தானையொடு சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே. (22) திணை : வாகை; துறை : இயன்மொழியுமாம். சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேர லிரும் பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது. உரை : தூங்கு கையான் - அசைந்த பெருங் கையுடனே; ஓங்கு நடைய - தலையெடுத்து நடக்கும் உயர்ந்த நடையை யுடையன வும்; உறழ் மணியான் - அந்நடைக்கேற்ப ஒன்றற்கொன்று மாறுபட்டொலிக்கும் மணியுடனே, உயர் மருப்பின - உயர்ந்த கோட்டினையுடையனவும்; பிறை நுதலால் செறல் நோக்கின - பிறை வடிவாக இடப்பட்ட மத்தகத்துடனே சினம் பொருந்திய பார்வையையுடையனவும்; பாவடியால் பணைஎருத்தின - பரந்த அடியுடனே பரிய கழுத்தையுடையனவும்; தேன் சிதைந்த வரைபோல - தேனழிந்த மலைபோல; மிஞிறார்க்கும் கமழ் கடாத்து - தேனீ யொலிக்கும் மணநாறும் மதத்துடனே; அயறு சோரும் இருஞ் சென்னிய - புண்வழலை வடியும் பெரிய தலையை யுடையனவுமாகிய; மைந்து மலிந்த மழகளிறு - வலி மிக்க இளங்களிறு; கந்து சேர்பு நிலைஇ வழங்க - கம்பத்தைப் பெருந்தித் தான் நின்ற நிலையிலே நின்று அசைய; பாஅல் நின்று கதிர் சோரும் - பக்கத்தே நின்று கிரணத்தை விடுகின்ற; வான்உறையும் மதிபோலும் மாலை வெண்குடை நீழலான் - வானத்தின் கண்ணே தங்கும் திங்கள் போலும் முத்தமாலையை யுடைய வெண்கொற்றக் குடையினது நிழற்கண்ணே; மருங்கு வாள் இல்லோர் காப்பு உறங்க - தம் பக்கத்து வாள் இல்லா தோர் அக்குடையே காவலாக உறங்க; அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த - அசைந்த செந்நெற்கதிரால் வேயப்பட்ட; ஆய் கரும்பின் கொடிக் கூரை - மெல்லிய கரும்பாற் கட்டப்பட்ட ஒழுங்குபட்ட கூரை; சாறு கொண்ட களம்போல - விழா எடுத்துக் கொள்ளப்பட்ட இடம் போல; வேறு வேறு பொலிவு தோன்ற - வேறு வேறாகப் பொலிந்து தோன்ற; குற்று ஆனா உலக்கையால் - குற்று அமையாத உலக்கையொலியுடனே; கலிச் சும்மை வியல் ஆங்கண் - மிக்க ஆரவாரத்தையுடைய அகன்ற விடத்து; பொலந்தோட்டுப் பைந்தும்பை - பொன்னாற் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடனே; மிசை அலங்கு உளைஇய பனைப்போழ் செரீஇ - மிசையே அசைந்த தலையினையுடைய பனந்தோட்டைச் செருகி; சினமாந்தர் வெறிக்குரவை - சினத்தையுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தொலி; ஓத நீரிற் பெயர்பு பொங்க - ஓதத்தையுடைய கடலொலி போலக் கிளர்ந்து பொங்க; வாய் காவாது பரந்து பட்ட - படைப் பெருமையால் பகைவ ருட்கும் மதிப்புடைமை யின் இடம் காவாது பரந்து கிடக்கின்ற; வியன் பாசறைக் காப்பாள - அகன்ற பாசறையிடத்துக் காவலாள; வேந்து தந்த பணி திறையால் - மாற்றரசர் பணிந்து தந்த திறையால்; சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும் - தம்மை அடைந்தவருடைய சுற்றத்தை நிறைக்கும்; ஓங்கு கொல்லியர் அடு பொருந - உயர்ந்த கொல்லிமலையோருடைய அடு பொருந; வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய் - யானையினது நோக்குப் போலும் நோக்கினையுடைய வெற்றியை விரும்பும் சேயே; வாழிய - வாழ்க; பெரும - பெருமானே; நின் வரம்பில் படைப்பு - நினது எல்லையில்லாத செல்வம்; நிற் பாடிய அலங்கு செந்நா - நின்னைப் பாடிய விளங்கிய செவ்விய நா; பிறர் இசை நுவலாமை - பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமல்; ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ - பாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எம் கோவே; மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஒம்பிய நாடு - மாந்தரஞ்சேர லிரும்பொறை பாதுகாத்த நாடு; புத்தேளுலகத்து அற்று என - தேவருலகத்தை யொக்கும் என்று பிறர் சொல்ல; கேட்டு வந்து -; இனிது கண்டிசின் - கட்கினி தாகக் கண்டேன்; பெரும - பெருமானே; முனிவிலை - முயற்சி வெறுப்பில்லையாய்; வேறு புலத் திறுக்கும் தானையொடு - வேறு நாட்டின்கட் சென்று விடும் படையுடனே; சோறு பட நடத்தி - சோறுண்டாக நடப்பை; நீ துஞ்சாய்மாறு - நீ மடியாயாதலான் எ-று. கதிர் சோரு மதி யென இயையும்; கதிர் சோரு மென்னும் சினைவினை மதி யென்னும் முதலொடு முடிந்தது; கதிர் சோரு மாலை யென இயைப்பினு மமையும். பாய் நின் றென்று பாடமோதுவாரு முளர். கூரை பொலிவு தோன்ற வென இடத்து நிகழ் பொருளின் றொழில் இடத்துமேலேறி நின்றது. செரீஇ யென்னும் வினையெச்சத்தை ஆடுமென ஒருசொல் வருவித்து அதனோடு முடிக்க. நிலைஇ வழங்கக் காப்புறங்கப் பொலிவு தோன்றப் பெயர்பு பொங்க வென்னும் செயவெனெச்சங்களும், வாய் காவா தென்னும் எதிர்மறை வினையெச்சமும் பரந்துபட்ட வென்னும் பெயரெச்ச வினையொடு முடிந்தன. காப்பாள, பொருந, சேஎய், பெரும, எங்கோ, பெரும, நீ துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை யோம்பிய நாடு புத்தேளுலகத் தற்றெனக் கேட்டு வந்து இனிது கண்டிசின்; நின் படைப்பு வாழிய வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. அன்றி எங்கோவே, நீ துஞ்சாதபடியாலே இரும்பொறை யோம்பிய நாடு புத்தேளுலகத் தற்றெனப் பிறர் சொல்லக் கேட்டு நிற்பாடிய அலங்கு செந்நாப் பிறரிசை நுவலாதபடி வந்து இனிது கண்டேன்; நினது படைப்பொடு வாழ்வாயாக வென இயைப்பினு மமையும். இசின் : தன்மைக்கண் வந்தது. சோறுபட நடத்தி யென்ப தனை வினையெச்சமாக வுரைப்பினு மமையும். உயர்மருப்பி னென்பதூஉம், செறனோக்கி னென்பதூஉம் பணையெருத்தி னென்பதூஉம் பாடம். விளக்கம் : கையான், மணியான், நுதலான், அடியான் என நின்ற ஆனுருபுகள் ஒடு வுருபின் பொருளில் வந்தன. பிறை நுதல் என்ற விடத்து நுதல் மத்தகத்துக் காயிற்று. நடுவிடம் தாழ்ந்து பக்கமிரண்டும் உயர்ந்து பிறை வடிவாகத் தோன்றுதலின், "பிறை வடிவாக விடப்பட்ட மத்தகம்" என வுரைத்தார். பிறை நுதலாற் செறல் நோக்கின என்னும் இது நுதற்கண்ணான் மூவெயிலைச் செறல் நோக்கின சிவன் செயலைக் குறிப்பாய் நினைப்பிக்கின்றது. அயறு - நீர் கசியும் புண்; இதனைப் புண்வழலை யென்பர். நிலைஇ வழங்க என்றவிடத்து வழங்குதல் அசைதலாகலின், நிலைஇ யென்று அடையடுத்தமை யால் , "நின்ற நிலையிலே அசைய" என்று பொருளுரைத்தார். காப்பு - காப்பாக. கொடி - ஒழுங்கு. வாய் காவாது பரந்துபட்ட என்றவிடத்து வாய் காவாமைக்கேது கூறப்படாமையால், "படைப் பெருமையால் பகைவ ருட்கும் மதிப்புடைமையின்" என்பது பெய்து கூறப்பட்டது. வாய் - இடம்; "எவ்வாயும்" (கலி. 30) என்றாற் போல. விறல் வெஞ்சேய் என்புழி வெம்மை வேண்டல் (விரும்புதல்) என்னும் பொருளினதாகையால் வெற்றியை விரும்பும் சேய் என்று பொருள் கூறினார். கதிர் சோரும் மதி யென்பதில், சோரும் என்பது கதிரின் வினை; அக் கதிர் மதிக்குச் சினையாதலால், சினைக்கும் முதலுக்கு முள்ள ஒற்றுமையால் சோருமென்னும் சினைவினைப் பெயரெச்சம் மதி யென்னும் பெயர்கொண்டு முடிந்தது; இதனை, "கதிர் சோரும்...... முடிந்தது" என்றார். மதிபோலும் குடையென இயைவதற்கேற்ப, கதிர் சோரும் மாலை, வானுறையும் மதிபோலும் வெண்குடை யென இயைத்தாலும் பொருள் நலம் குன்றாமை பற்றி, "கதிர் சோரும் மாலை யென இயைப்பினு மமையும்" என்றார். கூரை பொலிவு தோன்ற என்றதில், தோன்றுதல் பொலிவின் வினை : கூரைக்கும் பொலிவுக்கும் இடமும் இடத்துநிகழ் பொருளுமாகிய தொடர்பு; அதனால் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் நின்ற தென்றார். பனைப் போழ், பனந் தோடு. செரீஇ யென்னும் வினை யெச்சம் குரவை யென்பதனோடு இயையாமையால், ஆடும் என ஒரு சொல் வருவித்து, செரீஇ ஆடும் குரவை யென்றார். இசின் என்பது முன்னிலைக் குரித்தாயினும் ஏனையிடத்துக்கும் "தகும் நிலையுடைய" தென்பவாதலால் "தன்மைக்கண் வந்த" தென்றார். நீ சோறுபட நடத்தித் துஞ்சாய் எனக் கொள்ளலும் பொருந்தும். (22) 23. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இப்பாட்டின்கண் ஆசிரியர் கல்லாடனார், இப் பாண்டிய னுடைய படையிலுள்ள யானைகளாற் கலக்கப்பட்ட பகைவர் நாட்டு நீர்த்துறைகளையும், வில் வீரர் தாம் கொள்வது கொண்டு எஞ்சியவற்றை யழித்துப் பாழ் செய்த புலங்களையும், ஊர்தோறும் கடிமரம் தடியப்பட்ட காக்களையும் எரி பரந்தெடுத்த இடங் களையும் கண்டு, இனியும் பகைமை செய்யும் பகைவர் நாட்டில் இன்ன பல செய்கைகளைச் செய்யும் துணிவே யுடையன் இப்பாண்டியன் என்று உட்கொண்டு, ஆள் வழங்குதலின்றிப் பாழ்பட்ட காட்டு வழியே வருபவர், நின்னைக் கண்டனென் வருவலென உரைக்கின்றார். வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக் களிறுபடிந் துண்டெனக் கலங்கிய துறையும் கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியற் சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின் 5 கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் கொள்பத மொழிய வீசிய புலனும் வடிநவி னவியம் பாய்தலி னூர்தொறும் கடிமரந் துளங்கிய காவு நெடுநகர் 10 வினைபுனை நல்லில் வெவ்வெரி யினைப்பக் கனையெரி யுரறிய மருங்கு நோக்கி நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென் றின்னு மின்னபல செய்குவன் யாவரும் துன்னல் போகிய துணிவி னோனென 15 ஞால நெளிய வீண்டிய வியன்படை ஆலங் கானத் தமர்கடந் தட்ட கால முன்பநிற் கண்டனென் வருவல் அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை 20 பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண்பூக் கறிக்கும் ஆளி லத்த மாகிய காடே. (23) திணை : வாகை; துறை : நல்லிசை வஞ்சியுமாம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது. உரை : வெளிறில் நோன்காழ் பணை - வெண்மையில்லாத வலிய வயிரக் கம்பத்தையுடைய கூடத்தில்; நிலை முனைஇ - நிற்றலை வெறுத்துச் சென்று; களிறு படிந் துண்டென - யானை படிந்து நீருண்டதாக; கலங்கிய துறையும் - கலக்கமுற்ற துறையையும்; கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் - கார்காலத்து நறிய கடம்பினது பசிய இலையோடு விரவிய மாலையையுடைய; சூர் நவை முருகன் சுற்றத் தன்ன - சூரபன்மாவைக் கொன்ற முருகனது கூளிச்சுற்றத்தை யொக்கும்; நின் கூர் நல் அம்பின் கொடுவில் கூளியர் - நின்னுடைய கூரிய நல்ல அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்; கொள்வது கொண்டு - தம்மால் கொள்ளலாவதனை முகந்துகொண்டு; கொள்ளா மிச்சில் - கொள்ளாத ஒழிபொருளை; கொள்பதம் ஒழிய வீசிய புலனும் - மாற்றார் முகந்துகொள்ளப்படும் உணவாக்காமல் சிதறிய நிலங்களையும்; வடி நவில் நவியம் பாய்தலின் - வடித்தல் பயின்ற கோடாலி வெட்டுதலான்; ஊர் தொறும் கடிமரம் துளங்கிய காவும் - ஊர்தோறும் காவல்மரங்கள் நிலைகலங்கிய காவையும்; நெடுநகர் வினை புனை நல்லில் - நெடிய நகரின்கண் தொழில் புனைந்த நல்ல மனைகளிடத்து; வெவ்வெரி இனைப்ப - விரும்பும் அடு தீயைக் கெடுக்க; கனை எரி உரறிய மருங்கும் - மிக்க தீ முழங்கிய பக்கத்தையும்; நோக்கி - பார்த்து; நண்ணார் நாண - பகைவர் நாண; நாடொறும் தலைச் சென்று - நாடோறும் அவரிடத்துச் சென்று; இன்னும் இன்ன பல செய்குவன் - இன்னமும் இத்தன்மையான பலவும் செய்குவன்; யாவரும் துன்னல் போகிய துணிவினோன் - யாவரும் தன்னை யணுகவொண்ணாத சூழ்ச்சித் தெளிவினை யுடையோன்; என - எனக் கருதி; ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை - உலகம் பொறை யாற்றாது நெளியத் திரண்ட பரந்த படையினையுடைய; ஆலங்கானத்து அமர் கடந் தட்ட கால முன்ப - தலையாலங்கானத்தின்கண் போரை யெதிர் நின்று கொன்ற காலன்போலும் வலியையுடையோய்; நிற் கண்டனென் வருவல் - நின்னைக் கண்டேனாய் வந்தேன்; அறு மருப்பு எழிற் கலை - அற்ற கோட்டையுடைய பெரிய கலை; புலிப்பாற் பட்டென - புலியின்கண்ணே யகப்பட்டதாக; சிறுமறி தழீஇய தெறி நடை மடப்பிணை - சிறிய மறியை யணைத்துக் கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய மான்பிணை; பூளை நீடிய வெருவரு பறந்தலை - பூளை யோங்கிய அஞ்சத் தக்க பாழிடத்து; வேளை வெண்பூ கறிக்கும் - வேளையினது வெளிய பூவைத் தின்னும்; ஆளில் அத்தமாகிய காடு - ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டு வழியே எ-று. கால முன்ப, துறையும், புலனும், காவும், மருங்கும், நோக்கி, இன்னும் இன்ன பல செய்குவன் துணிவினோனென வுட் கொண்டு, காட்டின்கண்ணே நின்னைக் கண்டு, அக் காட்டுவழியே வந்தே னெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வருவ லென்பது ஈண்டு இறந்தகாலப் பொருட்டாய் நின்றது. இவனைக் காணா முன்னே கண்டுவந்தே னென்றான், இவன் செய்த வென்றியெல்லாங் கண்டமையின். பாசிலைத் தெரியல் முருக னென வியையும். நவியம் பாய்த லென்பது கருவி கருத்தா வாய் நின்றது. கலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீஇய மடப்பிணை பறந்தலை வேளை வெண்பூக் கறிக்குமென்பது, அவன் பகைவரைக் கொன்றவழி அவர் பெண்டிர் தம் இளம் புதல்வரை ஓம்புதற்பொருட்டு இறந்து படாது அடகு தின்று உயிர் வாழ்கின்றா ரென்பதொரு பொருள் தோன்ற நின்றது. இனி, துணிவினோ னென்று பிறர் சொல்ல வெனவும், கண்டனென் வருவ லென்பதனைக் காலமயக்கமாக்கிக் கலங்கிய துறை முதலாயினவற்றை நோக்கி இன்னும் இவ்வாறு பகைவர் நாட்டின்கண் மேற்செல்வனென நினைந்து காட்டிடத்தே நின்னைக் காணிய வந்தே னெனவும் உரைப்பாருமுளர். விளக்கம் : வெளிறு - வெண்மை; "இன்மை யரிதே வெளிறு" (குறள் 503) என்றாற் போல. புறத்தே வெளிறும் அகத்தே காழும் உடைய பணை யன்று என்பதற்கு, "வெளிறில் நோன் காழ்ப்பணை" என்றார். கார்காலத்து மலர்ந்து மணங் கமழ்வது கடம்பு; இதுபற்றி, "கார் நறுங்கடம்பு" என்று கூறப்பட்டது; உரைகாரரும் "கார்காலத்து நறிய கடம்பு" என்றுரைத்தார். பகைவர்நாட்டுப் பொருளைக் கொள்ளை கொண்டு வரும் மறவர் தம்மாற் கொள்ளப்படாது ஒழிந்து நிற்கும் பொருள் பிறர் எவர்க்கும் பயன்படாவாறு, அவற்றை யழித்துச் சிதைப்பதும் விளைவயல்களை யழித்துவிடுவதும் பண்டைய போர் மரபு. இவ்விருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டாவது உலகப் போரிலும் இச் செயல்கள் நிகழ்ந்தனவாதலால், இஃது எக்காலத்துப் போர்க்கும் இயல்பு எனத் தெரிகிறது. மனைகளில் விருந்தோம்பல் முதலிய நற்செயல் குறித்த சோறடும் தீயை "வெவ்வெரி" யென்றார். தெறிநடை - துள்ளு நடை. கண்டனென் வருவல் என்றது, காண்பே னாய் வந்தேன் என இறந்தகாலப் பொருளதாதலின், "இறந்த கால.....நின்ற" தென்றார். செய் பொருளின் தோற்றம் செய்தோரைக் காண்போர் மனக் கண்ணிற் றோற்றுவித்தலின், "செய்த வென்றி யெல்லாங் கண்டமையின்" என்றார். நவியமாகிய கருவி தானாகச் சென்று மரத்தை வெட்டாது; அதனைக் கையாள்வோன் செயலை அதன் செயலாக வைத்து, கருவி கருத்தாவாகக் கூறுதல் மரபு; இவ்வாள் நன்றாக அறுக்கும் என்பதுபோல. காணிய வந்தேன் என வுரைப்பதாயின், காண்பதற்காக வந்தேன் என அதற்குப் பொருள் கொள்க. (23) 24. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பத்துப்பாட்டிற் காணப்படும் மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனார், இப் பாட்டினும் அக் காஞ்சியே பொரு ளாகப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகின்றார். இதன் கண் "நல்ல ஊர்களை இடமாகக் கொண்டு சிறந்த எவ்வி யென்பானுக்குரிய மிழலைக் கூற்றத்தையும், முதுவேளிர்க்குரிய முத்தூற்றுக் கூற்றத்தையும் வென்று கொண்ட நெடுஞ்செழிய, நின் நாண்மீன் நிலைபெறுக; நின் பகைவர் நாண்மீன் பட்டொழிக; வாள் வீரர் வாழ்த்தப் பரிசிலர் புகழ் பாட, மகளிரொடு மகிழ்ந்து இனிதொழுகுவாயாக; அங்ஙனம் ஒழுக வல்லோரையே வாழ்ந் தோர் என்பர்; இவ்வுலகத்தே தோன்றிப் புகழ் தோற்றுவியாது உயிர் வாழ்ந்து விளிந்தவர் பலராயினும் அவர் வாழ்ந்தோர் எனப் படார்" என்று நாளும் போர் கருதியுழலும் அவன் நெஞ்சினைத் தெருட்டி இன்ப வாழ்வில் ஈடுபடச் செய்கின்றார். அருளும் பொறையு மேவு முள்ளத்தனாவ னென்பது கருத்து. நெல்லரியு மிருந்தொழுவர் செஞ்ஞாயிற்று வெயின்முனையின் வெண்கடற்றிரை மிசைப்பாயுந்து திண்டிமில் வன்பரதவர் 5 வெப்புடைய மட்டுண்டு தண்குரவைச் சீர்தூங்குந்து தூவற் கலித்த தேம்பாய் புன்னை மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து 10 வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் முண்டகக் கோதை யொண்டொடி மகளிர் இரும்பனையின் குரும்பைநீரும் பூங்கரும்பின் றீஞ்சாறும் ஓங்குமணற் குவவுத்தாழைத் 15 தீநீரோ டுடன்விராஅய் முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும் தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய ஓம்பா வீகை மாவே ளெவ்வி புனலம் புதவின் மிழலையொடு கழனிக் 20 கயலார் நாரை போர்விற் சேக்கும் பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய நின்று நிலைஇயர்நின் னாண்மீ னில்லாது 25 படாஅச் செலீஇயர்நின் பகைவர் மீனே நின்னொடு, தொன்று மூத்த வுயிரினு முயிரொடு நின்று மூத்த யாக்கை யன்னநின் ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த 30 இரவன் மாக்க ளீகை நுவல ஓண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந் தாங்கினி தொழுகுமதி பெரும வாங்கது வல்லுநர் வாழ்ந்தோ ரென்ப தொல்லிசை 35 மலர்தலை யுலகத்துத் தோன்றிப் பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே. (24) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி. அவனை மாங்குடி கிழார் பாடியது. உரை : நெல் அரியும் இருந்தொழுவர் - நெல்லை யரியும் பெரிய உழவர்; செஞ்ஞாயிற்று வெயில் முனையின் - செஞ்ஞாயிற் றினது வெயிலை வெறுப்பின்; தெண் கடல் திரை மிசைப் பாயுந்து - தெளிந்த கடற்றிரையின்மேலே பாயும்; திண் திமில் வன் பரதவர் - திண்ணிய திமிலையுடைய வலிய நுளையர்; வெப்புடைய மட்டுண்டு - வெம்மையையுடைய மதுவை யுண்டு; தண் குரவைச் சீர் தூங்குந்து - மெல்லிய குரவைக் கூத்திற்கேற்ற தாளத்துக்கேற்ப ஆடும்; தூவற் கலித்த தேம்பாய் புன்னை - கடற்றுவலையாலே தழைத்த தேன் பரந்த புன்னை யினது; மெல்லிணர் கண்ணி மிலைந்த மைந்தர்- மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட மாலையைச் சூடிய ஆடவர்; எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து - விளங்கிய வளையை யுடைய மகளிர்க்கு முதற்கை கொடுக்கும்; வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் - வண்டு மொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறிய கானலிடத்து; முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் - கடல் முள்ளிப் பூவாற் செய்யப்பட்ட மாலையையுடைய விளங்கிய வளையையணிந்த மகளிர்; இரும் பனையின் குரும்பை நீரும் - பெரிய பனையினது நுங்கின் நீரும்; பூங்கரும்பின் தீஞ்சாறும் - பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும்; ஓங்கு மணல் குவவுத் தாழை தீ நீரோடு - உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே; உடன் விராஅய் - கூடக் கலந்து; முந்நீர் உண்டு - இம்மூன்று நீரையுமுண்டு; முந்நீர்ப் பாயும் - மூன்று நீரையுடைய கடற்கண்ணே பாயும்; தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய - பரிக்க வொண்ணாத பல மக்களும் வாழ்தலையுடைய நல்லவூர்கள் பொருந்திய; ஓம்பா ஈகை மாவேள் எவ்வி - பொருளைப் பாதுகாவாத வண்மையை யுடைய பெரிய வேளாகிய எவ்வியது; புனலம் புதவின் மிழலையொடு - நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக் கூற்றத்துடனே; கழனிக் கயலார் நாரை - வயலிடத்துக் கயலை மேயும் நாரை; போர்விற் சேக்கும் - போரின்கண்ணே யுறங்கும்; பொன்னணி யானைத் தொன் முதிர் வேளிர் - பொன்னணிந்த யானையையுடைய பழைய முதிர்ந்த வேளிரது; குப்பை நெல்லின் முத்தூறு தந்த - திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக் கூற்றத்தைக் கொண்ட; கொற்ற நீள்குடைக் கொடித் தேர்ச் செழிய - வெற்றி பொருந்திய உயர்ந்த குடை யினையும் கொடியாற் பொலிந்த தேரினையுமுடைய செழிய; நின்று நிலைஇயர் நின் நாண்மீன் - நின்று நிலைப்பதாக நினது நாளாகிய மீன்; நில்லாது படாஅச் செலீஇயர் நின் பகைவர் மீன் - நில்லாது பட்டுப் போவதாக நின் பகைவருடைய நாளாகிய மீன்; நின்னொடு தொன்று மூத்த உயிரினும் - நின்னொடு பழையதாய் முதிர்ந்த உயிரினும்; உயிரொடு நின்று மூத்த யாக்கையன்ன - உயிருடனே நின்று முதிர்ந்த உடம்பு போன்ற; நின் ஆடு குடி மூத்த விழுத்தினைச் சிறந்த வாளின் வாழ்நர் - நினது வெற்றிக் குடியோடு மூத்த சீரிய குடியின்கட் சிறந்த வாட்போராலே வாழ்வோர்; தாள் வலம் வாழ்த்த - நினது முயற்சி வலியை வாழ்த்த; இரவல் மாக்கள் ஈகை நுவல - இரக்கும் பரிசிலர் நின் வண்மையைச் சொல்ல; ஒண்டொடி மகளிர் - ஒள்ளிய வளையையுடைய மகளிர்; பொலங்கலத் தேந்திய தண் கமழ் தேறல் மடுப்ப - பொற் கலத்தின்கண் ஏந்திய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை மடுப்ப அதனை யுண்டு; மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு; ஆங்கு இனிது ஒழுகுமதி - அப்படி இனிதாக நடப்பாயாக; பெரும-; அது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப - அவ்வொழுக்கம் வல்லவரை வாழ்ந்தோரென்று சொல்லுவர் அறிவுடையோர்; மலர்தலை யுலகத்துத் தோன்றி - பரந்த இடத்தையுடைய உலகத்தின் கண்ணே பிறந்து; தொல்லிசை செலச் செல்லாது - பழைய புகழ்தான் பரக்க வொழுகாது; நின்று விளிந்தோர் பலர் - நின்று மாய்ந்தோர் பலர், அவர் வாழ்ந்தோரெனப்படார் ஆதலான் எ-று. மேல் எண்ணப்பட்ட பெயரெச்ச மூன்றும் மிழலை யென்னும் பெயர் கொண்டன; அவை உம் உந்தாய் நின்றன, முந்நீர்ப் பாயும் நல்லூர் என்க. உயிரினும் சிறந்த யாக்கை யன்ன வாளின் வாழ்நரெனக் கூட்டி, உயிர்க்கு யாக்கை போலவும், யாக்கைக் குயிர்போலவும் இன்றியமையாது இரண்டுமாயிருக்கின்ற வாளின் வாழ்நர் என்க. நின் குடியொடு மூத்த, நின் யாக்கை யன்ன, விழுத்தினைக்கண் உளராய, நின்னுயிரினுஞ் சிறந்த வாளின் வாழ்நரெனக் கூட்டினு மமையும். செழிய, நின் நாண்மீன் நின்று நிலைஇயர்; நின் பகைவர் மீன்படாஅச் செலீஇயர்; உலகத்துத் தோன்றி இசை செலச் செல்லாது விளிந்தோர் பலர். அவர் வாழ்ந்தோர் எனப்படார் ஆதலால்,பெரும, வாழ்த்த, நுவல, மடுப்ப, மகிழ் சிறந்து இனிதொழுகு; அது வல்லுநரை வாழ்ந்தோ ரென்ப வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. தாங்கா விளையு ளென்பதூஉம் பாடம். ஆங்கது, ஒரு சொல். ஆங்கு அசைநிலையுமாம் இனி, தொல்லிசையை யுடைய உலகத்துத் தோன்றி மேற்சொல்லப்பட்ட நன்மைகள் தமக்குப் பரக்க வொழுகாது நின்று விளிந்தோர் பலர் என வுரைப்பாருமுளர். இது நிலையாமை கூறி, இனி தொழு கென்றமையாற் பொருண்மொழிக் காஞ்சி. விளக்கம் : தொழுவர் கடல் திரைமிசைப் பாயும் மிழலை, பரதவர் குரவைச் சீர் தூங்கும் மிழலை, மைந்தர் தலைக்கை தரூஉம் மிழலை என்ற விடத்து, பாயும், தூங்கும், தரூஉம் என நின்ற மூன்று பெயரெச்சங் களிலும் ஈற்றுஉம், உந்தாய், பாயுந்து, தூங்குந்து. தரூஉந்து என வந்தன. "உம் முந்தாகும் இடனு மாருண்டே" (தொல்.இடை. 44) என்பர். சீர் - தாளம். சீர்தூங்குதலாவது தாளத்திற்கேற்ப ஒத்தறுத் தாடுதல். கடற்கானலிடத்துப் புன்னையின் வேர் நிலத்துக்குள் ஆழச்சென்று காற்றால் அலைப்புண்டு வீழ்ந்தொழியாமற் காக்க, இலைகள் காற்றிற் பறக்கும் நீர்த் துவலைகளை யேற்றுத் தழைப்பிக்கும் என்ற கருத்தால், "தூவற் கலித்த புன்னை" என்றாராக; அதற்குக் "கடற்று வலையாலே தழைத்த புன்னை"யென உரை கூறப்பட்டது. துவலை- சிறுநுண் நீர்த்துளி. ஊர்களில் உறைவார்க்கு அவ்வூர் வருவாய் நிரம்பாதென்னுமாறு மிக நிறைந்த மக்களையுடைய ஊர் என்பதைத் "தாங்கா உறையுள் ஊர்" என்றார். தாங்கா விளையுளையுடைய வூர் என்ற பொருளமைய, "தாங்கா விளையுள்" என்று பாடமோதுதலு முண்டு. சில பொருள்கள் பெறுதற்கரியன எனக் கருதி இரப்போர்க்கு ஈயாதொழிதலின்றி, அரியனவற்றையும் ஈயும் வண்மை யுடையவன் எவ்வி என்பதை, "ஓம்பா ஈகை எவ்வி" என்றாராதலால், ஓம்பாமைக்குப் பொருளைப் பாதுகாவாமை என்றுரைத்தார். வாய்த் தலைகளில், நீர் வேண்டுமளவிற் செல்லவும் வேண்டாவிடத்து நிறுத்தவும் வேண்டிக் கதவுகள் அமைத்திருத்தல் தோன்ற, "புனலம் புதவின் மிழலை" என்றார். புதவு - கதவு. சேக்குதல் - தங்குதல்; ஈண்டு உறங்குதல் என்னும் பொருளாதாயிற்று. ஒருவரை வாழ்த்து வோர் அவர் பிறந்த நாளை வாழ்த்துதலும் மரபு. அதுபற்றியே, "நின் நாண்மீன் நிலைஇயர்" என்றார். உயிர்க்கு வளர்தலும் தேய்தலும் இல்லையாயினும், உயிரில்வழி அதுநின்ற உடற்கு வளர்ச்சி கிடையா தாகையால், "உயிரொடு நின்று மூத்தயாக்கை" யென்றார். ஆடு குடி: ஆடு - வென்றி. மகிழ்சிறத்தற் கேது உண்டலாதலால், மடுப்ப மகளிர் அதனை யுண்டு என்பதைப் பெய் துரைத்தார். இனி தொழுகுமதி என்கின்றாராதலால், அதற்கு, நின்று விளிந்தோர் வாழ்ந்தோ ரெனப் படாராதலான் என்பதை ஏதுவாகக் கூறினார். தொல்லிசையை உலகத்துக்கேற்றி மலர்தலை யுலகத்துத் தோன்றிச் செலச் செல்லாது எனக் கொண்டு, "தொல்லிசையை....பலர்" என்று கூறுதலு முண்டென்று உரைத்தார். (24) 25. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இப்பாண்டிவேந்தனை ஆசிரியர் கல்லாடனார், இப் பாட்டின்கண்,இவன் தன்னொடு பகைத்த வேந்தர் இருவரைப் பொருதழித்து அவருடன் துணைவந்த பிறரையும் வென்று மேம்பட்ட திறத்தை, அப் பகைவ ரிறந்தமையான் அவருடைய மகளிர் கூந்தல் களைந்து கைம்மை மேற்கொள்ளும் செயலைக் கூறிச் சிறப்பிக்கின்றார். மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங் 5 குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணிப் பிணியுறு முரசங் கொண்ட காலை நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச் சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய 10 முலைபொலி யாக முருப்ப நூறி மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல் ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர அவிரறல் கடுக்கு மம்மென் குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே. (25) திணை : வாகை; துறை : அரசவாகை. அவனைக் கல்லாடனார் பாடியது. உரை : மீன் திகழ் விசும்பின் - மீன் விளங்கும் வானத்தின்கண்; பாய் இருள் அகல - பரந்த இருள் நீங்க; ஈண்டு செலல் மரபின் - ஓங்கிச் செல்லுதன் முறைமையையுடைய; தன் இயல் வழாஅது - தனது தன்மையிற் பிழையாது;உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு - வலிய வெம்மை முறுகிய உட்குப் பொருந்திய ஞாயிறு; நிலவுத் திகழ் மதியமொடு - நிலா விளங்கும் திங்க ளுடைய; நிலம் சேர்ந்தாஅங்கு - நிலத்தைப் பொருந்தினாற் போல; உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை - பகைத்தற் கரிய வலியையுடைய வஞ்சினங் கூறிய இரு வேந்தரை; அணங்கரும் பறந்தலை - வருத்துதற்கரிய போர்களத்தின் கண்ணே; உணங்கப் பண்ணி - மாயப் பொருது; பிணியுறு முரசம் கொண்டகாலை - அவருடைய வாராற் பிணிப்புற்ற முரசத்தைக் கொண்ட காலத்து; நிலை திரிபு எறிய - நின்ற நிலையிலே நின்று - நின்னைச் சூழ்ந்துகொண்ட வீரரைப் புரிந்து எறிதலால்; திண் மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்று - திண்ணிய கொளுத்துக் கலங்கிக் கெடுதல் பிழைத்தது; நின் வேல்- நினது வேல்; செழிய -; முலை பொலி ஆகம் உருப்ப நூறி - முலை பொலிந்த மார்பம் அழல் அறைந்து கொண்டு; மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் -அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை யாரவாரத்தையுடைய; ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர - ஒண்ணுதல் மகளிர் கைம்மை நோன்பிலே மிக; அவிர் அறல் கடுக்கும் - விளங்கும் அறலை யொக்கும்; அம் மென் குவை இருங் கூந்தல் - அழகிய மெல்லிய குவிந்த கரிய மயிரினை; கொய்தல் கண்டு - கொய்த பரிசைக் கண்டு எ-று. செழிய, மகளிர் கூந்தல் கொய்தல் கண்டு, நின் வேல் சிதைதலுய்ந்த தெனக் கூட்டுக. ஈண்டுச் செலல் மரபெனவும், ஐம்பாற் குவை யிருங் கூந்தலெனவும் பாடமோதுவாரு முளர். உய்ந்தன்றோ; ஓ; அசைநிலை. விளக்கம் : ஞாயிறு மதியமொடு நிலஞ் சேர்ந்தது போல, பெருவேந்தர் இருவர் போரிற் பட்டனர்; அவர் சேரனும் சோழனுமாவர். உடலுதல் - பொருதல்; இதற்குக் காரணம் பகையாதலின், உடலருந்துப்பு, பகைத்தற்கரிய வலியாயிற்று. போர்க்களத்துப் பொரும் வீரர் உயிரிழத்தற்கும் புண்ணுற்று வருந்துதற்கும் அஞ்சாராதலின், போர்க்களம், "அணங்கரும் பறந்தலை" யெனப்பட்டது. மடை; வேலினது மூட்டுவாய். வேலினுடைய இலையும் எறி பிடியும் ஆசிடை மடுத்துக் காய்ச்சிப் பற்றவைக்கப்படுதல் பற்றி, மடை யென்றாராக, உரைகாரர் அதனைக் "கொளுத்து" என்றார். மெய்ம் மறத்தற்கு ஏது அறிவுமயக்கமாதலால், மெய்ம்மறந் தென்றதற்கு அறிவு மயங்கி என வுரைத்தார். மகளிர் கூந்தல் களைவது காணாவழி, வேல்கொண்டு தாக்குதலால், அவ்வேல் ஆற்றாது மடை சிதைந்து கெடுமெனப் போரின் கடுமை யுரைத்தாராயிற்று. இதனால் கணவனை யிழந்த மகளிர் தம் கூந்தலைக் கொய்துகொள்ளும் வழக்குப் பண்டைத் தமிழ்வழக்காதல் துணியப்படும். (25) 26. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மாங்குடி கிழாராகிய மருதனார் இந் நெடுஞ்செழியனது உயர்வு கண்டு, "அடுபோர்ச் செழிய, நான்மறை முதல்வரும் துணைவேந்தரும் சுற்றமாய்ச் சுற்ற, வேள்வி பல செய்த வேந்தே, நின் பகைவர் இவ்வுலகத்தே நின்பால் பகைமையுற்றுப் பொருது துன்புற்று வீழ்ந்தாராயினும் துறக்கம் புக்கு இன்புறுகின்றா ராதலால், அவர் நோற்றவரே யாவர்" என்று பாடிப் பாண்டியன் சிறப்பைப் பாராட்டுகின்றார். நளிகட லிருங்குட்டத்து வளிபுடைத்த கலம்போலக் களிறு சென்று களனகற்றவும் களனகற்றிய வியலாங்கண் 5 ஒளிறிலைய வெஃகேந்தி அரைசுபட வமருழக்கி உரைசெல முரசுவௌவி முடித்தலை யடுப்பாகப் புனற்குருதி யுலைக்கொளீஇத் 10 தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக மன்ன ரேவல் செய்ய மன்னிய 15 வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு மாற்றா ரென்னும் பெயர்பெற் றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே. (26) திணை : வாகை; துறை : அரசவாகை. அவனை மாங்குடி கிழார் பாடியது. உரை : நளி கடல் இருங் குட்டத்து வளி புடைத்த கலம் போல - பெரிய கடலின்கண் பெரிய ஆழத்திடத்துக் காற்றாற் புடைக்கப் பட்ட மரக்கலம் நீரைக் கிழித்து ஓடுமாறு போல; களிறு சென்று களன் அகற்றவும் - களிறு சென்று போர்க்களத்தை இடமகலச் செய்ய; களன் அகற்றிய விய லாங்கண் - அவ்வாறு களம் அகலச்செய்த பரந்த இடத்தின்கண்; ஒளிறு இலைய எஃகேந்தி - விளங்கிய இலையையுடைய வேலை யேந்தி; அரைசு பட அமர் உழக்கி - வேந்து படப் போரைக் கலக்கி; உரை செல - புகழ் பரக்க; முரசு வௌவி - அவர் முரசைக் கொண்டு; முடித்தலை அடுப்பாக - முடித்தலையை யடுப்பாகக் கொண்டு; புனல் குருதி உலைக் கொளீஇ - குருதிப் புனலாகிய உலையின்கண் தசையும் மூளையு முதலாயினவற்றைப் பெய்து; தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின் - வீர வளையை யுடைய தோளாகிய துடுப்பால் துழாவி யடப்பட்ட உணவால்; அடு களம் வேட்ட அடு போர்ச் செழிய - அடுகளத்தின்கண் களவேள்வி வேட்ட கொல்லும் போரையுடைய செழிய; ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றமாக - அமைந்த கேள்வியையும் ஐம்புலனு மடங்கிய விரதங்களையும் நான்கு வேதத்தையுமுடைய அந்தணர் சுற்றமாக; மன்னர் ஏவல் செய்ய - வேந்தர் அதற்கேற்ப ஏவல் செய்ய; மன்னிய வேள்வி முற்றிய வாள் வாய் வேந்தே - நிலைபெற்ற வேள்வியைச் செய்து முடித்த வாய்த்த வாளினை யுடைய வேந்தே; மன்ற நோற்றோர் நின் பகைவர் - யாவர்க்கும் தெளிவாகத் தவஞ் செய்தார் நின்னுடைய பகைவர்; நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று - நினக்குப் பகைவரென்னும் பெயரைப் பெற்று; ஆற்றா ராயினும் - நின்னொடு போர் செய்தற்கு மாட்டாராயினும்; ஆண்டு வாழ்வோர் - அத் துறக்கத்து வாழ்வோர் எ-று. களனகற்றவு மென்னும் உம்மை அசைநிலை. மன்னிய வேள்வி யென்றது, கள வேள்வி யொழிந்த வேள்விகளை. செழிய, வேந்தே, ஆற்றாராயினும் ஆண்டு வாழ்வோராகிய நின் பகைவர் மாற்றா ரென்னும் பெயர்பெற்று நோற்றாரெனக் கூட்டுக. விளக்கம் : காற்றாற் புடைக்கப்பட்ட மரக்கலம் மலைபோலெழும் கடலலை களைக் கிழித்துக்கொண்டு விரைந்தேகுவது ஒருதலையாதலால், வளிபுடைத்த கலம் என்றதற்கு, "காற்றாற் புடைக்கப்பட்ட மரக்கலம் நீரைக் கிழித்தோடு" மென வுரைத்தார். முன்னே யானையைச் செலுத்தியவழி அதன் உடற்பருமையும் வலியும் கண்டு ஈண்டித் தம்முள் சேர்ந்திருக்கும் படை வீரர் இடம் விட்டு அகல நின்றாராக, அவ்வழியே தானை வீரர் விரைந்து சென்று பகை வீரரிடை நின்று பொருது அவரை யழிப்பதாகிய போர்ச்செயல்முறை இதனால் குறிக்கப்படுகிறது. முடித்தலை - முடியணிந்த வேந்தர் தலை. உலைக் கொளீஇ யென்றதனால் உலையிடத்துப் பெய்துகொள்ளப்படுவன "தலையும் மூளையு முதலாயின" என்றார். நான்மறை முதல்வர் வேந்தரைச் சுற்றியிருத்தல் வேள்வி செய்தற்பொருட்டு. இராயசூய முதலிய வேள்விக்கண், நான்மறை முதல்வர் வேந்தர்க்கு மறைவழி காட்டும் சுற்றமாக, ஏனை வேந்தர் வேள்வி வினைக்குத் துணையாக ஏவல் செய்வர். இப்பாண்டியன் வீரரைக் கொண்டு களவேள்வியும், நான்மறை முதல்வரைக்கொண்டு ஏனைத் தீ வேள்வியும் செய்தான் என்பதாம். போரிற் பட்டு வீழ்ந்தோர் துறக்கம் புகுவரென்பது நூல் வழக்கு. அதனால் போரிற் பட்ட பகைவர் துறக்கம் புகுதலின் நோற்றவ ராயினார் என்றார்; "நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்" (அகம்.61) எனக் கற்ற மகளிர் தம்முட் பேசிக்கொள்ளுதல் காண்க. (26) 27. சோழன் நலங்கிள்ளி இச்சோழ மன்னன் காவிரி பாயும் சோழநாட்டுக் குரியவன்; விழுமிய உள்ளம் படைத்தோர்க்கு அரசுரிமை தகுமேயன்றி உள்ளத்தாற் சிறியவர்க்குப் பொருந்தாதென்னும் கொள்கை யுடையவன். இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி யென்றும் கூறுவர். இவனுக்கு உடன்பிறந்தான் ஒருவன் உண்டு; அவன் பெயர் சோழன் மாவளத்தான் என்பது. இவன் காலத்தே சோழநாட்டின் உறையூர்ப் பகுதிக்கு வேந்தாய் உறையூரை இடமாகக்கொண்டு சோழன் நெடுங்கிள்ளி யென்பான் ஆண்டான். அவற்கும் இந் நலங்கிள்ளிக்கும் பகைமையுண்டாயிற்று. அக் காலத்தே, "பகைவர் ஈயென விரப்பின் இன்னுயிரும் ஈகுவேன்; அரசுரிமையும் ஒரு பொருளன்று; அவர் அதனை என்னோடு பகைத்துப் பெறக் கருதின் கழை தின்னும் யானையது காலகப் பட்ட முளைபோலக் கெடுத்தொழிப்பேன்" என்று இவன் கூறும் வஞ்சினம் இவனது மனமாட்சியைப் புலப்படுக்கும். ஒருகால் நெடுங்கிள்ளி ஆவூரிலிருந்த காலத்து, இவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு வருத்தினான்; அவன் பின் உறை யூர்க்குச் சென்று தங்கினானாக, நலங்கிள்ளி உறையூரைத் தனக்குரித்தாகக் கொண்டு, தனது வரையா ஈகையால் புகழ் மேம்பட்டான்; அக்காலத்தே பாண்டிநாட்டிற் சிறப்புற்றிருநத மலை அரண்கள் ஏழினை யெறிந்து, அவற்றிடத்தே தன் புலிப் பொறியை வைத்தான் இவனது வென்றி கிழக்கே கீழ்க்கடலும் மேற்கே குடகடலுமாகிய இரண்டிற்கும் இடையே பரந்து மேலோங்கக் கண்ட வடநாட்டரசர், தங்கள் நாடு நோக்கி இச்சோழன் வருவானோ என நடுங்கித் துஞ்சாக்கண்ணராயினர். இவனைக் கோவூர்கிழார், ஆலத்தூர் கிழார் என்ற இருவரும் பாடியுள்ளனர். இவனை முதுகண்ணன் சாத்தனார் இது முதல் நான்கு பாட்டுக்களால் இவனது சிறப்பியல்பை எடுத்தோது கின்றார். இந்த ஆசிரியரும் உறையூரைச் சேர்ந்தவர். முதுகண்ணன் என்பது இவர் தந்தை பெயர். புலவர் பாடும் புகழுடையோர் வலவனேவா வானவூர்தி யேறித் துறக்கஞ் செல்வரென்பதும், திங்கள், உலகில் உயிர்கள் பிறத்தலும் இறத்தலும் வளர்தலும் தேய்தலும் அறியா மடவோரும் அறியக் காட்டு மென்பதும், அறமும் பொருளும் இன்பமும் செய்தல் அறத்தின் பயனென்பதும், நாடகமே யுலகம் என்பதும் இவருடைய புலமைப் பண்பை நன்கு விளக்குகின்றன. இப் பாட்டின்கண், "விழுமிய குடியிற் பிறந்து அரசு வீற்றிருந் தோர் பலருள்ளும் புலவர் பாடும் புகழ் பெற்றவர் சிலரே; புகழ் பெற்றவர் வலவன் ஏவா வானவூர்தி யேறி விண்ணுக்குச் செல்வர் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்டுளேன்; வளர்தலும், தேய்தலும், பிறத்தலும், இறத்தலும், உடையது உலகம்; இவ் வுலகத்தில் வருந்தி வந்தோர்க்கு வேண்டுவனஅருளும் வன்மை தான், வென்றிக்கு மாண்பு; நீ அதனைச் செய்க" என்று அறி வுறுத்துகின்றார். சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ் நூற்றித ழலரி னிரைகண் டன்ன வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை 5 உரையும் பாட்டு முடையோர் சிலரே மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவ னேவா வான வூர்தி எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக் 10 கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி தேய்த லுண்மையும் பெருக லுண்மையும் மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும் அறியா தோரையு மறியக் காட்டித் திங்கட் புத்தே டிரிதரு முலகத்து 15 வல்லா ராயினும் வல்லுந ராயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை யாகுமதி யருளிலர் கொடாமை வல்ல ராகுக கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே. (27) திணை : பொதுவியல்; துறை : முதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது. உரை : சேற்று வளர் தாமரை பயந்த - சேற்றின்கண்ணே வளரும் தாமரை பூத்த; ஒண் கேழ் நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன - ஒள்ளிய நிறத்தை யுடைத்தாகிய நூறாகிய இதழையுடைய மலரினது நிரையைக் கண்டாற்போன்ற; வேற்றுமையில்லா விழுத்திணைப் பிறந்து - ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியின் கட் பிறந்து; வீற்றிருந்தோரை எண்ணுங்காலை - வீற்றிருந்த வேந்தரை யெண்ணுங் காலத்து; உரையும் பாட்டும் உடையோர் சிலர் - புகழும் பாட்டும் உடையோர் சிலர்; மரையிலை போல மாய்ந்திசினோர் பலர் - தாமரையினது இலையை யொப்பப் பயன்படாது மாய்ந்தோர் பலர்; புலவர் பாடும் புகழுடையோர் - புலவராற் பாடப்படும் புகழை யுடையோர்; விசும்பின் - ஆகாயத்தின்கண்; வலவன் ஏவா வானவூர்தி எய்துப என்ப தம் செய்வினை முடித்து - பாகனாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவாரென்று சொல்லுவார் அறிவுடையார் தாம் செய்யும் நல்வினையை முடித்து; எனக் கேட்பல் - என்று சொல்லக் கேட்பேன்; எந்தை - என்னுடைய இறைவ; சேட் சென்னி நலங்கிள்ளி-; தேய்த லுண்மையும் - வளர்ந்த தொன்று பின் குறைதலுண்டாதலும்; பெருக லுண்மையும் - குறைந்த தொன்று பின் வளர்தலுண்டாதலும்; மாய்த லுண்மையும் - பிறந்த தொன்று பின் இறத்த லுண்டாதலும்; பிறத்த லுண்மை யும் - இறந்த தொன்று பின் பிறத்த லுண்டாதலும்; அறியா தோரையும் அறியக் காட்டி - கல்வி முகத்தான் அறியாத மடவோரையும் அறியக் காட்டி; திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து - திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற தேயத்தின் கண்; வல்லாராயினும் - ஒன்றை மாட்டாராயினும்; வல்லுந ராயினும் - வல்லாராயினும்; வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி - வறுமையான் வருத்தமுற்று வந்தோரது உண்ணாத மருங்கைப் பார்த்து; அருள வல்லை யாகுமதி - அவர்க்கு அருளி வழங்க வல்லை யாகுக; கெடாத துப்பின் நின் பகை யெதிர்ந்தோர் - கெடாத வலியையுடைய நினக்குப் பகையாய் மாறுபட்டோர்; அருளிலர் - அருளிலராய்; கொடாமை வல்ல ராகுக - கொடாமையை வல்லராகுக எ-று. நூற்றித ழலரின் நிரைகண் டன்ன உரையும் பாட்டும் உடையோர் சிலரென இயையும். நிரைகண் டன்ன விழுத்திணை யென் றுரைப்பினு மமையும். அருளிலர் கொடாமை வல்ல ராகுக வென்றதனாற் பயன். அவையுடையோர் தத்தம் பகைவரை வெல்வராதலால் பகை யெதிர்ந்தோர் அவையிலராக வென்ப தாம். செய்வினை முடித்து வானவூர்தி எய்துப வென இயையும். விளக்கம் : நூறாகிய இதழ் என்ற விடத்து நூறென்பது அப் பொரு ளுணர்த்தும் எண்ணைக் குறியாது பல வென்னும் பொருள் குறித்து நின்றது. இதனை யறியாதார் வடமொழியில் சததளம் என மொழி பெயர்த்துக் கொண்டனர்; "நூற்றிதழ்த் தாமரைப்பூ" (ஐங் 20) என்று வேறு சான்றோரும் கூறுவர். வேற்றுமை செய்வன உயர்வு தாழ்வு களேயாதலின், வேற்றுமையில்லா வென்பதற்கு ஏற்றத் தாழ்வில்லாத என்றுரைத்தார். விழுமிய குடிக்கு விழுப்பம் தருவது உயர்வு தாழ்வு கருதாமையே என்பதற்கு "வேற்றுமை யில்லா விழுத்திணை " என்பது வேற்றுமை மலிந்த இக்காலத் தமிழ்மக்கள் குறிக்கொண்டு போற்றத்தக்கதாகும், உரை புகழ். இனிப் பரிமேலழகர், உரையாவது எல்லாராலும் புகழப்படுவதென்றும், பாட்டாவது சான்றோர் பாடும் புகழ் என்றும் கொண்டு, "புகழ்தான் உரையும் பாட்டு மென இரு வகைப்படும்" என்பர். உரையும் பாட்டும் பெற்றவர், பெற்றவுடனே "வலவ னேவா வானவூர்தி எய்துப" என்பதன்று; செய்தற்குரிய நல்வினையைச் செய்து முடித்த பின்பே அவ்வூர்தியில் விசும் பெய்துப என்பார், "செய்வினை முடித்து" என வேறு வைத்து வற்புறுத் தினார். புலவர் பாடும் புகழ்ப் பயனை இவ்வாறு அறிவுடையோர் சொல்லக் கேட்டுளேன் என்பது விளங்க "என்ப" என்றும், "எனக் கேட்பல்" என்றும் கூறினார். வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோரை யெண்ணுங்கால் நூற்றித ழலரின் நிரைகண் டன்ன உரையும் பாட்டும் உடையோர் சிலர் என இயைத்தல் வேண்டுமென்பது உரைகாரர் கருத்து, இவ்வாறன்றி, நிரைகண் டன்ன விழுத்திணை யென்றும் கிடந்தபடியே கொண்டாலும் பொருந்து மென்பதற்காக, "நிரை......அமையும்" என்றார். "அவை யுடையோர் தத்தம் பகைவரை வெல்வர்" என்ற விடத்து, அவை யென்றது அருளும் கொடையும் குறித்து நின்றது; அருளும் கொடையு முடையவர் வெல்வ ரென்பதாம். (27) 28. சோழன் நலங்கிள்ளி உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாட்டின்கண், "மக்கட் பிறப்பிற் காணப்படும் சிதடு முதல் மருள் ஈறாகக் கூறப்படும் எண்வகை எச்சங்களும் ஒருவர்க்குப் பிறப்பிற் பொருந்துவது குற்றம். கானத்தை இடமாகக் கொண்டு வாழும் நின் பகைவர் போலாது, கூத்தர் ஆடுகளம் போலும் அக நாட்டை நீ யுடையை யாதலும், நீ பெற்ற செல்வம் அறம் பொரு ளின்பங்களை ஆற்றுதற்காகவே யாகும்; அவற்றை ஆக்காமை மேலே கூறிய குற்றம் பொருந்திய பிறப்புண்டாகப் பண்ணும்" என்று சோழன் நலங்கிள்ளிக்கு நல்லறிவு கொளுத்துகின்றார். சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும் கூனுங் குறளு மூமுஞ் செவிடும் மாவு மருளு முளப்பட வாழ்நர்க் கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம் 5 பேதைமை யல்ல தூதிய மில்லென முன்னு மறிந்தோர் கூறின ரின்னும் அதன்றிற மத்தையா னுரைக்க வந்தது வட்ட வரிய செம்பொறிச் சேவல் ஏனல் காப்போ ருணர்த்திய கூஉம் 10 கானத் தோர்நின் றெவ்வர் நீயே புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர் புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப் பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர் ஆடுகளங் கடுக்கு மகநாட் டையே 15 அதனால், அறனும் பொருளு மின்பமு மூன்றும் ஆற்றும் பெருமநின் செல்வம் ஆற்றா மைந்நிற் போற்றா மையே. (28) திணை : பொதுவியல்; துறை : இயன்மொழி வாழ்த்து; முதுமொழிக் காஞ்சியுமாம். சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது. உரை : சிறப்பில் சிதடும் - மக்கட் பிறப்பிற் சிறப்பில்லாத குருடும்; உறுப்பில் பிண்டமும் - வடிவில்லாத தசைத் திரளும்; கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட; வாழ் நர்க்கு - உலகத்து உயிர்வாழ்வார்க்கு; எண் பேர் எச்சம் என்ற இவை யெல்லாம் - எட்டு வகைப்பட்ட பெரிய எச்சமென்று சொல்லப்பட்ட இவையெல்லாம்; பேதைமை யல்லது - பேதைத் தன்மையுடைய பிறப்பாவதல்லது; ஊதிய மில்லென - இவற்றாற் பயனில்லை யென; முன்னும் அறிந்தோர் கூறினர் - முற்காலத்தும் அறிந்தோர் சொன்னார்; இன்னும் அதன் திறம் யான் உரைக்க வந்தது - இன்னமும் அவ்வூதியத்தின் பாகு பாட்டை யான் சொல்ல வந்தது; வட்ட வரிய செம்பொறிச் சேவல் - வட்டமாகிய வரியை யுடைத்தாகிய செம் பொறியை யுடைய காட்டுக் கோழிச்சேவல்; ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் - தினைப்புனங் காப்போரைத் துயிலுணர்த்துவதாகக் கூவும்; கானத்தோர் நின் தெவ்வர் - காட்டின்கண் உள்ளோர் நின்னுடைய பகைவர்; நீயே - நீ தான்; புறஞ்சிறை மாக்கட்கு - வேலிப் புறத்து நின்று வேண்டிய மாக்கட்கு; அறம் குறித்து - அறத்தைக் கருதி; அகத்தோர் புய்த் தெறி கரும்பின் விடு கழை - அகத்துள்ளோர் தாம் பிடுங்கி யெறியும் கரும்பாகிய போகப் பட்ட கழை; தாமரைப் பூம் போது சிதைய வீழ்ந்தென - வாவியகத்துத் தாமரையினது பொலிந்த பூச் சிதற வீழ்ந்ததாக; கூத்தர் ஆடு களம் கடுக்கும் அக நாட்டை - அது கூத்தர் ஆடு களத்தை யொக்கும் உள்ளாகிய நாட்டையுடையை; அதனால் - ஆதலான்; அறனும், பொருளும், இன்பமும், மூன்றும், ஆற்றும் நின் செல்வம் - அறனும், பொருளும், இன்பமுமென்னப்பட்ட மூன்றும் செய்வதற் குதவும் நினது செல்வம்; பெரும -; ஆற்றாமை நிற் போற்றாமை - உதவா தொழிதல் நின்னைப் பாதுகாவாமை எ-று. பிண்ட மென்பது மணை போலப் பிறக்குமது. மாவென்பது விலங்கு வடிவாகப் பிறக்குமது. மரு ளென்பது அறிவின்றியே மயங்கி யிருக்குமது. ஊதிய மென்பது, அறம் பொரு ளின்பங் களை; அன்றி அறமென்பாரு முளர். நிற்போற்றாமை யென்ற கருத்து, சிதடு முதல் அறிவின்மை பிறப்பொடு கூடாதவாறு போல நின் செல்வமும் அற முதலியன செய்தற் கேற்றிருப்பச் செய்யாமையாகிய அறிவின்மை, மக்கள் யாக்கையிற் பிறந்தும் பயனில் பிறப்பாகப் பண்ணுதலால் நினக்கு வரும் பொல் லாங்கைப் போற்றாமை யென்பதாம். கானத்தோர் நின் பகைவ ரென்றதனாற் பகையின்மை தோற்றி நின்றது. மாவும் மருளு முளப்படச் சிதடு முதலாகப் பிறப்பொடு கூட்டப்படாத பெரிய எச்சமெனப்பட்ட எட்டுமெனக் கூட்டியுரைப்பினு மமையும். இஃது அறஞ் செய்யாதானை அறஞ் செய்கவெனக் கூறியவாறு. அதன்திற மென்பதற்கு அப் பேதைமை யென்றாக்கி, அஃது உண்டானால் வரும் பொல்லாங்கும், அது போனால் வரும் நன்மையு மென்றுரைப்பாரு முளர். விளக்கம் : சிதடு - குருடு. "கண்ணிற் சிறந்த உறுப்பில்லை" என்பராதலால், கண்ணிலாக் குருட்டினைச் "சிறப்பில் குருடன்" என்றார்; உரைகாரர், குருடு மக்கள் பிறப்புக்குச் சிறப்புத் தருவதன் றென்பதுபட, "மக்கட் பிறப்பிற் சிறப்பில்லாத குருடு" என்பர். கை கால் முதலிய உறுப்புக்கள் தோன்றுதற்கு முன்பே கருச் சிதைதலால் பிறக்கும் ஊன் பிண்டத்தை, "உறுப்பில் பிண்டம்" என்றும், அது "வடிவு இல்லாத தசைத் திர" ளென்றும் கூறினார்; "ஊன் தடி பிறப்பினும்" (புறம்:74) எனச் சேரமான் கணைக்கா லிரும்பொறை கூறுவது காண்க. எச்சம், மக்கட் பிறப்புக்குரிய இலக்கணம் எஞ்சவுள்ளன. ஈண்டுக் கூறிய எண் வகைக் குறைபாடுமின்றி யிருக்கும் பிறப்பு மக்களது நற்பிறப்பென வறிக. இக் குறையுடைய மக்கள் பேதைத்தன்மை யுடையரென்பார், "பேதைமை" யென்பதற்குப் "பேதைத் தன்மையுடைய பிறப்பு" என்றார். "பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல்" (குறள். 831) என்பதனால், "பேதைமையல்லது ஊதியம் இல்" லென்றார். கோழி, விடியலில் எழுந்து கூவி, உறங்குவோரைத் துயிலுணர்த்தும் என்ற இயல்புபற்றி, "ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்" என்றார். உணர்த்துதல். துயில் உணர்த்துதல், வைகறை வந்தன்றா லெனவே, "குக்கூ வென்றது கோழி" (குறுந். 157) என்று பிறரும் கூறுதல் காண்க. சிறைப்புறம் என்பது புறஞ் சிறையென வந்தது. கழை - இக்காலத்துக் கட்டை யெனவும் கழியெனவும் வழங்கும். கூத்தர் பல்வகைப் பூவும் அணியும் அணிந்து ஆடுவர்; ஆடுங்கால் அவை உதிர்ந்து கிடக்கும் இடம், இங்கே உவமமாகக் கூறப்படுகிறது. மணை, ஊன். மக்கட் பிறப்பாற் பெறும் பயன் அறம் பொருளின்பங்களாதலால், அப்பிறப்பிற் குறைந்தவர் அவற்றை யிழத்தலின், அற முதலியன ஊதிய மெனப் பட்டன. ஊதியமாவது, அறமொன்றுமே யெனக் கொள்பவரும் உண்டென்றற்கு, "அன்றி....உளர்" என்றார். பகை கொண்டிருந்தால் நாட்டிலிருந்து குறும்பு செய்வராதலின் செய்யாது கானத் துறைதல் கொண்டு பகையில்லை யென்பது தெளிவாயிற்று. அதன் திறம் என்றவிடத்து, அது எனச் சுட்டப்பட்டது ஊதிய மெனக் கொள்ளாது பேதைமை யென்று கொள்பவரு முண்டென்பதை, "அதன் திறம்.... உளர்" என்றார். (29) 29. சோழன் நலங்கிள்ளி இப் பாட்டின்கண் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியை நோக்கி, "வேந்தே, நின் திருவோலக் கத்தில் நின் புகழ் பாடும் பாணர் நிறைதல் வேண்டும்; பாணர் இசைகேட்ட பின்பு மகளிர் கூட்டத்தின் இன்பத்தை நீ நுகர்தல் வேண்டும்; கொடியோரைத் தெறுதலும், நல்லோரை யளித்தலும் தவிராது நிலவுதல் வேண்டும்; இவற்றோடமையாது நீ சிற்றினம் சேர்த லாகாது; நீ வழங்கும் நாடு பெற்றுச் சிறக்கும் படைத் தலைவர் நின்பால் வருநர்க்கு உதவியாற்றும் நண்புடைப் பண் புடையராமாறு நின் செய்கை முறைப்பட வமைதல் வேண்டும். கூத்தாட்டவைக் குழாம்போலக் கூடுதலும் கழிதலுமுடையது இவ்வுலகம்; இதன்கண் நின் சுற்றத்தார் நினக்கு நகைப்புறமாக, நின் செல்வம் இசைப்புறமாக விளங்குதல் வேண்டும்" என வற்புறுத்துகின்றார். அழல்புரிந்த வடர்தாமரை ஐதடர்ந்த நூற்பெய்து புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல் பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப் 5 பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை பாண்முற் றொழிந்த பின்றை மகளிர் தோண்முற் றுகநின் சாந்துபுல ரகலம் ஆங்க முனிவின் முற்றத் தினிதுமுர சியம்பக் கொடியோர்த் தெறுதலுஞ் செவ்வியோர்க் களித்தலும் 10 ஒடியா முறையின் மடிவிலை யாகி நல்லத னலனுந் தீயதன் றீமையும் இல்லை யென்போர்க் கினனா கிலியர் நெல்விளை கழனிப் படுபுள் ளோப்புநர் ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு 15 வெங்கட் டொலைச்சியு மமையார் தெங்கின் இளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு பெற்றன ருவக்குநின் படைகொண் மாக்கள் பற்றா மாக்களிற் பரிவுமுந் துறுத்துக் கூவை துற்ற நாற்காற் பந்தர்ச் 20 சிறுமனை வாழ்க்கையி னொரீஇ வருநர்க் குதவி யாற்று நண்பிற் பண்புடை ஊழிற் றாகநின் செய்கை விழவிற் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய 25 நகைப்புற னாகநின் சுற்றம் இசைப்புற னாகநீ யோம்பிய பொருளே. (29) திணை : பொதுவியல்; துறை : இயன்மொழி வாழ்த்து; முதுமொழிக் காஞ்சியுமாம். சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது. உரை : அழல் புரிந்த அடர் தாமரை - எரியா லாக்கப்பட்ட தகடாகச் செய்த தாமரைப் பூவுடனே; ஐது அடர்ந்த நூல் பெய்து - ஐதாகத் தட்டிக் கம்பியாகச் செய்த நூலின் கண்ணே யிட்டு; புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் - அலங்கரித்த தொழிலாற் பொலிந்த பொன்னான் இயன்ற நறிய மாலையை; பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடி - பாறிய மயிரையுடைய கரிய தலை பொலிவு பெறச் சூடி; பாண் முற்றுக நின் நாள் மகிழ் இருக்கை - பாண்சுற்றம் சூழ்வதாக நினது நாட்காலத்து மகிழ்ந்திருக்கும் ஓலக்கம்; பாண் முற்று ஒழிந்த பின்றை - பாண்சுற்றம் சூழ லொழிந்த பின்னர்; மகளிர் தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் - நினது உரிமை மகளிருடைய தோள் சூழ்வதாக நின் சாந்து புலர்ந்த மார்பம்; முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்ப - எப்போதும் வெறுப் பில்லாத அலங்காரத்தையுடைய கோயில் முற்றத்தின்கண்ணே இனிதாக முரசு ஒலிப்ப; கொடியோர்த் தெறுதலும் செவ்வி யோர்க்கு அளித்தலும் ஒடியா முறையின் - தீயோரைத் தண்டஞ் செய்தலும் நடுவு நிலைமை யுடையோர்க்கு அருள் பண்ணுதலுமாகிய இடையறாத முறைமையால்; மடிவிலை யாகி - சோம்புதலையுடையை யல்லையாகி; நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு - நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று சொல்லு வோர்க்கு; இனனாகிலியர் - இனமாகா தொழிவாயாக; நெல் விளை கழனிப் படுபுள் ஒப்புநர் நெல்விளைந்த வயலிடத்துள தாகிய புள்ளையோட்டுவோர்; ஒழிமடல் விறகின் கழி மீன் சுட்டு - வீழ்ந்த பனங்கருக்காகின்ற விறகால் கழிக்கண் மீனைச் சுட்டு; வெங்கள் தொலைச்சியும் அமையார் - அதனுடனே வெய்ய மதுவையுண்டு தொலைத்தும் அமையாராய்; தெங்கின் இளநீர் உதிர்க்கும் - தெங்கினது இளநீரை யுதிர்க்கும்; வளமிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் - செல்வ மிக்க நல்ல நாட்டைப் பெற்று மகிழும்; நின் படை கொள் மாக்கள் - நின்னுடைய படைக்கலம் பிடித்த மாந்தர்; பற்றா மாக்களின் - நின்னுடைய பகைவரைப் போல; பரிவு முந்துறத்து - இரக்கத்தை முன் னிட்டுக்கொண்டு; கூவை துற்ற - கூவை இலையால் வேயப் பட்ட; நாற்கால் பந்தர் சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ - நான்கு காலையுடைய பந்தராகிய சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கையினின்று நீங்கி; வருநர்க்கு உதவியாற்றும் - நின்பால் வருவார்க்கு உதவி செய்யும்; நண்பிற் பண்புடை ஊழிற்றாக நின் செய்கை - நட்போடு கூடிய குணத்தையுடைய முறைமை யுடைத்தாக நினது தொழில்; விழவிற் கோடியர் நீர்மை போல - விழவின் கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம் போல; முறைமுறை ஆடுநர் கழியும் இவ்வுலகத்து - அடைவடைவே தோன்றி இயங்கி இறந்து போகின்ற இவ்வுலகத்தின்கண்; கூடிய நகைப் புறனாக நின் சுற்றம் - பொருந்திய மகிழ்ச்சி யிடத்ததாக நின்னுடைய கிளை; இசைப்புறனாக நீ ஓம்பிய பொருள் - புகழிடத்ததாக நீ பாதுகாத்த பொருள் எ-று. நின் நாண் மகிழிருக்கை பாண் முற்றுக; அதன்பின் அகலம் தோள் முற்றுக; நீ மடிவிலையாய் இனனாகா தொழிவாயாக; நின் பற்றா மாக்களைப் போல முற்காலத்துச் சிறுமனை வாழும் வாழ்க்கையி னீங்கி இப்பொழுது நின் நாடு பெற்றுவக்கும் நின் படைகொள் மாக்கள் வருநர்க்கு உதவியாற்றும் நண்பொடு கூடிய பண்புடைத்தாகிய முறைமையை யுடைத்தாக நின் செய்கை; நகைப் புறனாக நின் சுற்றம்; இசைப் புறனாக நீ ஓம்பிய பொரு ளெனக் கூட்டுக. ஒரீஇ யென்பதனை யொருவ வெனத் திரிப்பினு மமையும். நறுமை பொன்னிற் கின்றெனினும் தெரியற்கு அடையாய் நின்றது; நன்மையுமாம். ஆங்க; அசை. நசைப்புறனாக வென்றுரைப்பாரு முளர். இதனாற் சொல்லியது, படைகொண் மாக்களும் முறை முதலாயின தப்பாமற் செய்து இன்புற்றிருக்கும் படி சிறப்புச் செய்யவேண்டு மென்பதாயிற்று. விளக்கம் : இருந்தலை: இருமை, கருமைப் பண்பு குறித்து நின்றது; "இரும்பிடித் தொழுதி" (புறம். 44) என்புழிப் போல. கட்கினிய அலங்காரத்தால் தன்கண் வந்திருந்தாரை நீங்காவாறு பிணித்து இன்புறுத்தும் சிறப்புடைய கோயில் முற்றத்தை, "முனிவில் முற்றம்" என்றார். ஒடியா முறைமை இடையறவுபடாத முறைமை; முக்குணங் களும் கணந்தோறும் மாறும் இயல்பினவாதலின், அதனால் முறைமை மாறாமை தோன்ற. "ஒடியா முறைமை" யென்றார். நெற்கதிர்களை மேய்ந்துண்ணும் கிளி முதலிய புட்கள் "படுபுள்" ளெனப்படு கின்றன. வெங்கள் ளென்புழி வெம்மை மயக்கஞ் செய்யும் களிப்பு. பெற்றனர்: முற்றெச்சம். தம்மைக் கண்டவழிப் பகைமையால் தெறுதலைச் செய்யாது அருள்செய்யுமாறு மெலிவு புலப்படுத்தி நிற்கும் பகைவர்போல வென்பார், "பற்றா மாக்களிற் பரிவு முந்துறுத்து" என்றார். கோடியர் நீர்மை, கூத்தருடைய வேறுபட்ட கோலம். கூத்தரது கோலம் தோன்றி நின்றியங்கி மறைவது, உலகம் தோன்றிநின்று மறைதற்கு உவமமாயிற்று. ஒரீஇ யென்பது செய்தெனெச்சமாய் ஆற்றும் என்பதனொடு முடியும். ஒருவ வெனத் திரிப்பின் மாந்தர் வாழ்க்கையின் ஒருவ, நின் செய்கை ஊழிற்றாக என இயையும்; அவ்வழியும் பொருள் நலங் குன்றாமையின், "அமையும்"என்றார். பொன் மாலைக்கு மணமில்லையாகவும். நறுந் தெரிய லென்றதற்கு அமைதி கூறுவார். "தெரியற்கு அடையாய் நின்ற" தென்றார். நறுமை நன்றாதலின், நன்மை யெனப் பொருள் கொண்டு, நல்லமாலை யென்று உரைப்பினுமாம் என்றற்கு "நன்மையு மாம்" என்றார். (29) 30. சோழன் நலங்கிள்ளி உறையூர் முதுகண்ணன் சாத்தனார், இப்பாட்டின்கண், சோழன் நலங்கிள்ளிபாற் காணப்படும் அடக்கமாகிய பண்பு கண்டு வியந்து, "வேந்தே, செஞ்ஞாயிற்றின் செலவும், அதன் பரிப்பும், மண்டிலமும், திக்கும், ஆகாயமும் என இவற்றின் அளவை நேரிற் சென்று கண்டவரைப் போலத் தம் அறிவால் ஆராய்ந்துரைப்போரும் உளர்; அவர்களாலும் ஆராய்ந்தறியக் கூடாத அத்துணை அடக்கமுடையனாய்க் கல்லைக் கவுளில் அடக்கியுள்ள களிறுபோல வலி முழுதும் தோன்றாதவாறு அடக்கிக்கொண்டு விளங்குகின்றாய்" என்று பாராட்டுகின்றார். செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமு மென்றிவை 5 சென்றளந் தறிந்தோர் போல வென்றும் இனைத்தென் போரு முளரே யனைத்தும் அறிவறி வாகாச் செறிவினை யாகிக் களிறுகவு ளடுத்த வெறிகற் போல ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட 10 யாங்கனம் பாடுவர் புலவர் கூம்பொடு மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே. (30) திணை : பாடாண்டிணை. துறை; இயன்மொழி. சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது. உரை : செஞ்ஞாயிற்றுச் செலவும் - செஞ்ஞாயிற்றினது வீதியும்; அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் - அஞ்ஞாயிற்றினது இயக்கமும்; பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் - அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார் வட்டமும்; வளி திரிதரு திசையும் - காற்றியங்கும் திக்கும்; வறிது நிலைஇய காயமும் - ஓராதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும்; என்றிவை சென்று அளந்தறிந் தோர் போல - என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்தறிந்தறிந்தவர்களைப் போல; என்றும் இனைத்து என்போரும் உளர் - நாளும் இத்துணையளவை யுடையன வென்று சொல்லும் கல்வியை யுடையோரு முளர்; அனைத்தும் அறிவு அறிவாகாச் செறிவினையாகி - அப் பெரியோர் அச் செலவு முதலாயின அறியும் அறிவாலும் அறியாத அடக்கத்தை யுடையையாகி; களிறு கவுள் அடுத்த எறி கல் போல - யானை தன் கதுப்பின்கண் அடக்கிய எறியும் கல்லைப் போல; ஒளித்த துப்பினை யாதலின் - மறைத்த வலியையுடையை யாதலான்; வெளிப்பட யாங்கனம் பாடுவர் புலவர் - நின்னை விளங்க எப்பரிசு பாடுவர் புலவர்; கூம்பொடு மீப்பாய் களையாது - கூம்புடனே மேற் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல்; மிசைப் பரம் தோண்டாது - அதன்மேற் பாரத்தையும் பறியாமல்; புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் - ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை; தகாஅர் - பரதவரும் அளவரு முதலாகிய தகுதி யில்லாதோர்; இடைப்புலப் பெரு வழிச் சொரியும் -தம் புலத்திற் கிடையாகிய பெருவழிக்கண்ணே சொரியும்; கடல் பல் தாரத்த - கடலால் வரும் பல பண்டத்தையுடைய; நாடு கிழவோய் - நாட்டை யுடையோய் எ-று. செல வென்றது, செல்லப்படும் வீதியை. பரிப்பென்றது இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லுமென்னும் இயக்கத்தை. பாய் களையாது பரம் தோண்டா தென்பதனால், துறை நன்மை கூறியவாறாம். பெருங்கலத்தி னின்றென ஐந்தாவ தாக உரைப்பினு மமையும். துப்பினையாதலிற் புலவர் யாங்கனம் பாடுவர் எனக் கூட்டுக. விளக்கம் : மண்டில மென்றது வட்டமாதலின் ஈண்டு நிலவட்டத்தைப் பார் வட்ட மென்றார். வறிது என்றது இன்மைப் பொருட்டாய், ஆதார மின்மை குறித்து நின்றது ஆகாய மென்பது, காயமெனத் தலை குறைந்தது. பூரித்தல், கட்டுற்று விரிதல். தோண்டுதல், குறைத்தல். கடலினும் ஆற்று முகம் ஆழம் குறைந்ததாதலின், ஆங்கு வரும் மரக்கலம் செவ்வே நிற்றற்குப் பாய் களைதலும் பாரம் குறைத்தலும் வேண்டுமென வறிக. பெரிய மரக்கலங்களைச் செலுத்தும் தகுதியில ராதலின், அளவர் முதலாயினோரைத் 'தகாஅர்' என்றார். பரதவர், மீன் பிடிப்போர்; அளவர், உப்பு விளைப்போர். பெருங்கலத்தை யென இரண்டாவது விரித்துரைத்தார்; அவ்வாறு செய்யாது பெருங்கலத்தி னின்று என ஐந்தாவது விரித்துரைப்பினும் பொருந்து மென்பதாம். நாடு கிழவோய், நீ ஒளித்த துப்பினையாதலின், புலவர் யாங்கனம் பாடுவர் என இயையும். (30) 31. சோழன் நலங்கிள்ளி கோவூர் கிழார் என்னும் சான்றோர் இப்பாட்டின்கண் இச் சோழனைப் பாடுகின்றார். கோவூர் தொண்டை நாட்டிலுள்ள தோர் ஊர். இவ்வூரிற் பிறந்த சான்றோராகிய இவர், சிறந்த நல்லிசைப் புலமை யுடையராதல் ஒருபுறமிருக்க, இவர் செய்த அருஞ் செயல்கள் சில குறிக்கத் தகுவன. சோழன் நெடுங்கிள்ளி யென்பவன், ஆவூரிலும் உறையூரிலும் சோழன் நலங்கிள்ளியின் தம்பியாலும் அந் நலங்கிள்ளியாலும் முற்றுகையிடப்பட்டு அடைப்பட்டு அஞ்சிக் கிடந்தான்.நெடுங்கிள்ளி, நலங்கிள்ளியின் தாயத்தாரில் ஒருவன். அக்காலத்தே இச் சான்றோர் அவற்கு அறிவுறுத்தும் வீர வுரைகள் இன்பந் தருவனவாகும். ஒருகால் அந்த நெடுங்கிள்ளி இளந்தத்த னென்னும் புலவனைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்றனெனப் பிறழக் கருதிக் கொல்ல நினைத்தா னாக, அதனை யுணர்ந்த இக்கோவூர் கிழார் தகுவன கூறி உய்வித்தார். கிள்ளிவளவ னென்பான் மலையமான் மக்களைப் பற்றி யானைக் காலிலிட்டுக் கொல்ல நினைப்ப, இச் சான்றோர், சிறுவர்களின் இயல்பு கூறி, அவன் நினைவை மாற்றினார். இத்தகைய சான்றோர் இப்பாட்டின்கண், சோழன் நலங் கிள்ளியின் வென்றி நலத்தைச் சிறப்பித்து, "வேந்தே, நீ நல்லிசை வேட்டம் வேண்டிப் பாசறையில் இருப்பதற்கே விழைகின்றாய் நின் யானைப்படை பகைவர் அரண்களைச் சிதைத்தும் அடங்கா வாய் மைந்துற்று நிற்கின்றன; போரெனிற் புகலும் நின்மறவர், பகைவர் நாடு காடிடையிட்டு நெடுந்தூரத்திலுள்ளதென வறிந்தும் செல்லுதற் கஞ்சார்; இவ்வாற்றால், குணகடற் கரையையுடைய நீ குடகடல் அடைந்து பின் அங்கிருந்தே வடபுலம் நோக்கி வருவாயென நினைந்து, வடபுலத்தரசர் இரவெல்லாம் உறக்க மின்றிக் கிடக்கின்றனர்" எனப் பாடிப் பாராட்டுகின்றார். சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க 5 நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே நுதிமுக மழுங்க மண்டி யொன்னார் கடிமதில் பாயுநின் களிறடங் கலவே போரெனிற் புகலும் புனைகழன் மறவர் 10 காடிடைக் கிடந்த நாடுநனி சேய செல்வே மல்லே மென்னார் கல்லென் விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக் குணகடல் பின்ன தாகக் குடகடல் வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப 15 வலமுறை வருதலு முண்டென் றலமந்து நெஞ்சுநடுங் கவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே. (31) திணை : வாகை; துறை : அரசவாகை; மழபுல வஞ்சி யுமாம். சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார் பாடியது. உரை : சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் - சிறப்புடை முறைமையால் பொருளும் இன்பமும்; அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல - அறத்தின் பின்னே தோன்றும் காட்சி போல; இரு குடை பின் பட - சேர பாண்டியருடைய இரண்டு குடையும் பின்னாக; ஓங்கிய ஒரு குடை உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க - ஓங்கிய நினது ஒன்றாகிய வெண் கொற்றக்குடை நிறம் பொருந்திய கலை நிறைந்த திங்கள் போல ஓங்கிச் சேய்மைக்கண்ணே விளங்க; நல்லிசை வேட்டம் வேண்டி - நல்ல புகழ்வேட்கையை விரும்பி; வெல் போர்ப் பாசறை யல்லது ஒல்லாய் நீ - வெல்லும் போரினைச் செய்யும் பாடிவீட்டின்கண்ணே யிருத்தலல்லது நின்னகரின்கண் இருத்தலை உடம்படாய் நீ; நுதி முகம் மழுங்க மண்டி - கோட்டினது நுனை முகந் தேய மடுத்து; ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கல - பகைவரது காவலையுடைய மதிலைக் குத்தும் நின்னுடைய யானைகள் அடங்கா; போரெனில் புகலும் புனை கழல் மறவர் - பூசலென்று கேட்பின் விரும்பும் அணிந்த வீரக் கழலையுடைய மறவர்; காடு இடைக் கிடந்த நாடு - காடு நடுவே கிடந்த நாடு; நனி சேய - மிகவும் தூரிய வாதலால்; செல்வே மல்லேம் என்னார் - யாம் போவே மல்லேமென்று கருதார் ஆதலான்; கல்லென் விழவுடை ஆங்கண் - ஓசையுண்டான விழாவினையுடைய அவ்விடத்து; வேற்றுப் புலத்திறுத்து - பகைப் புலத்தின்கண்ணே தங்கிவிட்டு; குண கடல் பின்ன தாக - கீழ் கடல் பின்னதாக; குடகடல் வெண் டலைப் புணரி - மேல் கடலினது வெளிய தலையையுடைய திரை; நின் மான் குளம்பு அலைப்ப - நினது குதிரையினது குளம்பை யலைப்ப; வலம் முறை வருதலுமுண்டென்று - வலமாக முறையே வருதலு முண்டாமென்று; அலமந்து - சுழன்று; நெஞ்சு நடுங்கு அவலம் பாய - நெஞ்சம் நடுங்கும் அவலம் பரப்ப; துஞ்சாக் கண்ண வடபுலத்தரசு - துயிலாத கண்ணையுடையவாயின வடநாட்டுள்ள அரசுகள் எ-று. அவம்பாய வென்பதூஉமாம் விளக்கம் : உலக வாழ்க்கையில் மக்களால் நெறியறிந்து எய்துதற்குரிய சிறப்புடைய பொருள், அறம் பொருளின்ப மூன்று மாதலால், பொரு ளின்பங்களை, "சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்" என்றார். சேர பாண்டியர் இருவர் குடைக்கும் பொருளின்ப மிரண்டும் உவமம். நல்லிசை வேட்ட மென்புழி; வேட்டம் - வேட்கை யுணர்த்தி நின்றது; "உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோரே" (புறம். 214) எனப் பிறரும் கூறுதல் காண்க. தூரிய - தூரமுடைய. புணரி- அலை; "வெண்டலைப் புணரி" (புறம். 2) என வருதல் காண்க. ஒவ்வொரு திசையினும் வென்றி நிலைநாட்டி வரும் முறைமையால் வடதிசை யினும் அது நிலைநாட்டற்கு வருவான் என்றற்கு, "வலம் முறை வருதலுமுண்" டென்றஞ்சினர். பாய்தல் - பரத்தல். (31) 32. சோழன் நலங்கிள்ளி ஆசிரியர் கோவூர் கிழார் இப்பாட்டின்கண்,சோழன் நலங் கிள்ளியின் வள்ளன்மையை வியந்து, "இத் தண்பணை நாடு அவன் கருதிய முடிபே யுடையதாதலால், அவன் வஞ்சியும் மதுரையும் தருவன்; அவனை நாமெல்லாம் பாடுவோம் வம்மின்" என்று பாராட்டுகின்றார். கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப் பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள் ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென 5 மாட மதுரையுந் தருகுவ னெல்லாம் பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமட் குரூஉத்திரள் போலவவன் 10 கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே. திணை: பாடாண்டிணை; துறை: இயன்மொழி. சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார் பாடியது. உரை : கடும்பின் அடு கலம் நிறையாக - நம் சுற்றத்தினது அடு கலத்தை நிறைக்கும்பொருட்டு விலையாக; நெடுங் கொடிப் பூவா வஞ்சியும் தருகுவான் - நெடிய துகிற்கொடியினையுடைய பூவாத வஞ்சியையும் தருகுவன்; வண்ணம் நீவிய - நிறமுடைய கலவை பூசப்பட்ட; வணங்கிறைப் பணைத்தோள் ஒண்ணுதல் விறலியர் - வளைந்த சந்தினையுடைய முன்கையினையும் வேய் போன்ற தோளினையும் ஒள்ளிய நுதலினையுமுடைய விறலியர்; பூவிலை பெறுக என - பூவிற்கு விலையாகப் பெறுகவென்று; மாட மதுரையும் தருகுவன் - மாடத்தையுடைய மதுரையையும் தருவன் ஆதலால்; எல்லாம் பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள் - யாமெல்லாம் அவனைப் பாடுவோமாக வாரீர், பரிசின் மாக்காள்; தொன்னிலக் கிழமை சுட்டின் - பழைய நிலவுரிமையைக் குறிப்பின்; நன்மதி வேட்கோச் சிறாஅர் - நல்ல அறிவையுடைய குயக்குலத் திளையோர்; தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத் திரள் போல - கலம் வனைதற்குத் திகிரிக்கண்ணே வைத்த பச்சை மண்ணாகிய கனத்த திரள் போல; அவன் கொண்ட குடுமித்து - அவன் கருத்திற் கொண்ட முடிபையுடைத்து; இத்தண்பணை நாடு - இக் குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு எ-று. பூவா வஞ்சி யென்றது, கருவூர்க்கு வெளிப்படை. ஒன்றோ வென்றது எண்ணிடைச்சொல். தேர்க்கா லென்றது, தேர்க்கால் போலும் திகிரியை. அவன் கொண்ட குடுமித்து இந் நாடு; ஆதலால், வஞ்சியையுந் தருகுவன்; மதுரையையும் தருகுவன்; ஆதலால், பரிசின் மாக்கள் நாமெல்லாம் அவனைப் பாடுகம் வம்மினோ வெனக் கூட்டுக. தொன்னிலைக் கிழமையென்று பாடமோதுவாரு முளர். விளக்கம் : அடு கலம் - உணவு சமைக்கும் கலங்கள். அடு கலம் நிறையாக என்றது, அக் கலங்கள் நிறையச் சமைக்கப்படும் உணவுப் பொருட்கு விலையாக என்பதாம். பூத்தவஞ்சி - வஞ்சிக்கொடிக்கும்; பூவாவஞ்சி வஞ்சிமா நகர்க்குமாதலின், "பூவா வஞ்சி" யென்றாராக, "பூவா வஞ்சி யென்றது கருவூர்க்கு வெளிப்படை" யென்று உரைகாரர் கூறினார். கருவூர்க்கும் வஞ்சியென்பது பெயராதலின், இவ்வூர் கருவூர் என வுரைகாரராற் கொள்ளப்படுகிறது. வஞ்சிநகர் - வஞ்சிக்களமென்றும் அது பின்பு அஞ்சைக் களமென்றும் மாறிய காலத்துக் கருவூர் வஞ்சியென வழங்கப்படுவதாயிற்று. நல்ல நிறமுடைய கலவைப் பூச்சினை "வண்ண" மென்றார். விறலியர் பூவிலை பெறுக என என்றவிடத்து, பூவிலை மடந்தையராய கூத்தியரின் நீக்குதற்கு, பூவிலை யென்பதைப் பூவிற்கு விலையெனப் பிரித்துப் பொருள் கூறினார். இழை பெற்ற விறலியர், தலையிற் சூடிக்கொள்ளும் பூவிற்கு விலையாக "மாட மதுரை தருகுவன்" என்றார். இவ் விருநகர்க்குமுரிய வேந்தர் இருவரும் தன் வழிப்பட, இந் நலங் கிள்ளி ஓங்கி விளங்குகின்றானென முன் பாட்டிற் கூறியதைக் கடைப்பிடிக்க. குயவரது திகிரி - தேர்த்திகிரி போல்வதேயன்றி, அது வாகாமை விளக்குத்தற்கு, "தேர்க்கா லென்றது தேர்க்கால் போலும் திகிரியை" யென்றார். சிறார் கலம் வனைதற்பொருட்டுத் திகிரிக்கண் மண் பிசைந்து கொணர்ந்து வைப்பக் குயவன் தான் கருத்திற் கருதிய கலங்களைச் செய்வனாதலால், அவன் கருத்துப்படி உருப் படும் மண்போல, இத் தண்பணை நாடும் நலங்கிள்ளியின் கருத்துப் படி பயன்படு மென்றற்குக் "கொண்ட குடுமித்" தென்றார். தொன் னிலைக் கிழமை யென்ற பாடங் கொள்ளின், தொன்று தொட்டே நிலை பெற்ற கிழமையெனப் பொருள் கொள்க. (32) 33. சோழன் நலங்கிள்ளி ஆசிரியர் கோவூர் கிழார் இப் பாட்டின்கண் சோழன் நலங்கிள்ளியின் வென்றி நலம் கூறலுற்று, "வேந்தே, தென்னவன் நன்னாட்டிலுள்ள ஏழெயில்களின் கதவுகளை யெறிந்து, அவ் விடத்தே நின் புலிப்பொறியைப் பொறிக்கும் ஆற்றலுடையை; நின்னைப் பாடுவோர் வஞ்சிப் பாட்டுப் பாட, நின் படைவீரர் தங்கியிருக்கும் பாசறைக் கண்ணேயமைந்த தெருவில் பாணர்க்கு ஊன் சோற்றுத் திரள் கொடுக்கப்படும்; இத்தகைய முனை யிருக்கைகள் பல உள்ளன; ஊரிடத்தே அல்லிய மாடும் விழாக்கள் பல நிகழ்கின்றனவாயினும், விழாக்களினும் முனையிருக்கைகளே பலவாக உள்ளன." என்று கூறுகின்றார். கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள் தயிர்கொடு வந்த தசும்பு நிறைய ஏரின் வாழ்நர் பேரி லரிவையர் 5 குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும் தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின் பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை 10 பாடுநர் வஞ்சி பாடப் படையோர் தாதெரு மறுகிற் பாசறை பொலியப் புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த மலரா மாலைப் பந்துகண் டன்ன ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும் 15 செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை வல்லோன் றைஇய வரிவனப் புற்ற அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக் காம விருவ ரல்லதி யாமத்துத் தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின் 20 ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே. (33) திணை : வாகை; துறை : அரசவாகை. சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார், உரை : கான் உறை வாழ்க்கை - காட்டின்கண்ணே தங்கும் வாழ்க் கையையுடைய; கத நாய் வேட்டுவன் - சினம் பொருந்திய நாயையுடைய வேட்டுவன்; மான்தசை சொரிந்த வட்டியும் - மானினது தசையைச் சொரிந்த கடகமும்; ஆய்மகள் தயிர் கொடு வந்த தசும்பும் - இடைமகள் தயிர்கொண்டு வந்த மிடாவும்; நிறைய -; ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் - ஏரான் உழுதுண்டு வாழ்வாரது பெரிய மனையின்கண் மகளிர்; குளக்கீழ் விளைந்த - குளத்துக்கீழ் விளைந்த; களக்கொள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப - களத்தின்கட் கொள்ளப் பட்ட வெண்ணெல்லை முகந்து கொடுப்ப; உகந்தனர் பெயரும் - உவந்து மீளும்; தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும் - தென்றிசைக்கட் பொதியின் மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டுள்ளும்; ஏழெயில் கதவம் எறிந்து கைக் கொண்டு - ஏழாகிய அரணின்கட் கதவத்தை யழித்துக் கைக்கொண்டு; நின் பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை - நினது பெரிய வாயையுடைய புலியைப் பொறிக்கும் வலியை ஆதலான்; பாடுநர் வஞ்சி பாட - நின்னைப் பாடும் புலவர் நினது மேற் செலவைப் பாட; படையோர் தாதெரு மறுகிற் பாசறை பொலிய - படைக்கலத்தினையுடையோர் தாதாகிய எருப் பொருந்திய மறுகினையுடைய பாசறைக்கண்ணே பொலிவு பெற; புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த - புலராத பசிய இலையையிடையிட்டுத் தொடுக்கப்பட்ட; மலரா மாலைப் பந்து கண்டன்ன - மலராத முகையினையுடைய மாலையினது பந்தைக் கண்டாற்போன்ற; ஊன் சோற்றமலை - தசையோடு கூடிய பெருஞ்சோற்றுத் திரளையை; பாண் கடும்பு அருத்தும் - பாண் சுற்றத்தை யூட்டும்; செம்மற்று நின் வெம் முனை இருக்கை - தலைமையை யுடைத்து நினது வெய்ய முனை யாகிய இருப்பிடம்; வல்லோன் தைஇய - கைவல்லோனாற் புனைந்து செய்யப்பட்ட; வரி வனப்புற்ற - எழுதிய அழகு பொருந்திய; அல்லிப்பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப - அல்லிப் பாவை அல்லிய மென்னும் கூத்தையாடும் அழகை யொப்ப; காம இருவரல்லது - அன்பினையுடைய துணைவனும் துணைவி யுமாகிய இருவரல்லது; யாமத்து - இடையாமத்தின்கண்; தனி மகன் வழங்காப் பனிமலர்க் காவின் - தனிமகன் வழங்காத குளிர்ந்த மலரையுடைய காவின்கண்; ஒதுக்கு இன் திணி மணல் - இயங்குதற்கினிய செறிந்த மணலையுடைய; புதுப் பூம் பள்ளி வாயில் - புதிய பூவையுடைய சாலையினது வாயிலின் கண்; மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப - மாடந்தோறும் செம்மறிக் கிடாயைப் படுக்க; நீ ஆங்குக் கொண்ட விழவினும் பல - நீ அவ்விடத்து எடுத்துக் கொண்ட விழவினும் பல எ-று. நன்னாட் டுள்ளு மென்ற வும்மை, சிறப்பும்மை. அல்லிப் பாவை ஆடுவனப் பென்றது. ஆண்கோலமும் பெண்கோலமு மாகிய அவ்விருவரும் ஆடுங் கூத்தை. படையோர் பாசறை பொலிய வென்பதற்குப் படையோரது பாசறை பொலிவு பெற என்றுரைப்பினும் அமையும். பாசிலை மலைய வென்று பாட மோதுவாரு முளர். தனிமகன் வழங்கா வென்றது, தனித்து வழங்கின் அப்பொழில் வருத்து மென்பது. களத்துக்கொள் வெண்ணெல் என்பது, களக்கொள் வெண்ணெல்லெனத் தொக்கது. முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரு மென்பன வினையெச்ச முற்று. உழுவை பொறிக்கு மாற்றலை யாகலின், பாண்கடும் பருத்தும் நின் வெம்முனை இருக்கை. நீ கொண்ட விழவினும் பல செம்மற்றெனக் கூட்டுக. விழ வென்பது சிறுசோற்று விழவினை; வேள்வி யென்றுரைப்பினுமமையும். விளக்கம் : கடகம், ஓலையாற் செய்யப்பட்ட கடகப் பெட்டி. குளம் - ஏரி. குளத்தின் கீழுள்ள வயல்களில் விளையும் நெல்லை வேறிடத்தே யமைத்த களத்தின்கண் தொகுத்து வையும் பதரும் களைந்து நெல்லைப் பிரித்துக்கொள்பவாதலின், "குளக்கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்" என்றார். ஏழெயிற் கதவம்; ஏழெயில் என்பது சிவகங்கையைச் சார்ந்துள்ள ஏழு பொன்கோட்டை யென்னும் ஊராக இருக்கலாமென அறிஞர் கருதுகின்றார். இப் பாட்டின்கட் கூறப்படும் பாண்டிநாட்டு மருதவளமும் அவ்வூர்ப் பகுதியின் இற்றைநிலையும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. வஞ்சி பாடுதல், வஞ்சித் துறைப் பாடாண்பாட்டைப் பாடுதல்; அத்திணைக் குரிய துறைகளை விதந்து பாடுதலுமாம். முல்லை யரும்புகளாற் றொடுத்த பூப்பந்து போலச் சோற்றுத் திரளிருந்த தென்பதாம். திரள் - திரளை யென வந்தது. வரிவனப்பு - வரையப்படும் அழகு; அதனால் ஈண்டு "எழுதிய அழகு" எனப்பட்டது. அல்லிய மென்னும் கூத்தானது- கண்ணன், கஞ்சன் விடுத்த யானையின் கோட்டை யொசித்தற்காடிய கூத்து எனச் சிலப்பதிகார வுரை கூறுகிறது . அல்லிப்பாவை-ஆணும் பெண்ணுமாய கோலமுடைய பாவை; அலிப் பேடெனச் சிலப் பதிகார வுரைகாரர் கூறுவர். இக் கூத்தாடுவோர் வட்டணையும் அவிநயமு மின்றி எழுதிய வோவியம் போல்வராதலின், "வரிவனப் புற்ற அல்லிப் பாவை யாடு வனப்பு" என்றார். பள்ளி - சாலை. காம விருவர் வழங்கின் வருத்தம் செய்யாது தனிமகன் வழங்கின் அப் பொழில் வருத்து மென்றது, தனித்தோர்க்குக் காமவுணர்ச்சியை யெழுப்பி வருத்தும் என்பதாம். சிறு சோறு, பெருஞ்சோறு என விழா வகையுண்மையின், சிறு சோற்று விழா வென்றார். (33) 34. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இவன் சோழர்வேந்தருட் சிறப்புடையவனாவான். சிறுகுடிக் குரிய பண்ணன் என்பவன் மேல் இவன் பாடியுள்ள பாணாற்றுப் படை இத்தொகைநூற்கண் கோக்கப்பட்டுள்ளது. இவனை ஆலத்தூர்கிழார், வெள்ளைக்குடி நாகனார், ஐயூர் முடவனார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார், மாறோக்கத்து நப்பசலையார் முதலிய பல சான்றோர் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். இவன் ஒருகால் கருவூரை முற்றுகையிட்டிருந்தானாக, அடைபட்ட வேந்தன் போர்க்கு வாராது அஞ்சிக் கிடப்ப, ஆலத்தூர் கிழார், "அஞ்சிய வேந்தன் அடைப்பட்டுக் கிடக்க அவனொடு பொருதல் நின் பெருமைக்குப் பொருந்தா" தெனச் சொல்லிப் பாடினர். இவன் பகைவர் நாட்டினை யழிப்பது கண்ட மாறோக்கத்து நப் பசலையார், "புள்ளுறு புன்கண் தீர்த்த சோழன்வழித் தோன்றிய நீ, வேந்தன் நகரத்திருப்பவும் அவனது நல்ல வூரை யழித்தல் அருளற மாகாது" என்று தெருட்டினார். இவ்வளவன் ஆவூர் மூலங்கிழாரை நோக்கி, "எம்முள்ளீர்? எந் நாட்டீர்?" என்று வினவ, "எமது நினை வெல்லை சொல்லுதல் வேண்டா; பகைவர் தேயத் திருப்பினும் அது நின்னதே யெனக் கருதிப் பரிசிலர் அனை வரும் நின்னையே நினைப்பர்" என்று சொல்லி மகிழ்வித்தார். ஒருகால் கோவூர் கிழார் இவன் பகைவர் நாட்டை யழிக்கும் திறம் கண்டு இவன்பாற் போந்து கொற்றவள்ளை பாடி அருள் மேவியவுள்ள முடையவனாக்கினார். மலையமானோடு பொருத இவ் வளவன் பெருஞ்சினங் கொண்டு அவன் மக்களைப் பற்றிக் கொணர்ந்து யானையின் காலிலிடப் புக்கானாக, அதனை யறிந்த கோவூர் கிழார், சோழன் குடிவரவும் இளஞ்சிறாரின் இயல்பும் கூறி அவன் செயலைத் தடுத்து மக்களை உய்வித்தார். வெள்ளைக் குடிநாகனார் என்னும் சான்றோர் இவனை இனிமையுறப் பாடிப் பழஞ்செய்க்கடன் தள்ளிவிடப் பெற்றார். இவன் கொடைத் திறத்தைப் புலவர் பலரும் பல்லாறாக மகிழ்ந்து பாடியுள்ளனர். இவன் இறந்த பிறகு, மாறோக்கத்து நப்பசலையாரும் ஆடுதுறை மாசாத்தனாரும் ஐயூர் முடவனாரும் இரங்கிப் பாடிய பாட்டுக்கள் மிக்க உருக்கமுடையனவாகும். இவன் இறந்தவிடம் குளமுற்றம் என்னும் ஊர். இது பற்றியே இவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் எனப் பிற்காலத் தான்றோரால் குறிக்கப்படுகின்றான். ஆலத்தூர் கிழாரின் இயற்பெயர் தெரிந்திலது. ஆலத்தூர் - சோழ நாட்டில் உள்ளதாகிய ஓர் ஊர். இவர், கிள்ளிவளவன் உறையூரிலிருந்தானாக, அவனைக் கண்டு பரிசில் பெற்ற திறத்தைப் பாணாற்றுப்படையால் விளக்கிக் கூறுகின்றார். இத் தொகை நூற்கண் ஐந்து பாட்டுக்கள் இவர் பாடியவாக உள்ளன. இப்பாட்டின்கண், இவர் கிள்ளிவளவன்பால் பெருஞ் செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை, அவன் "எம்மை நினைத்து மீளவும் வருதிரோ?" என்று கேட்க, "பாணர்க்குத் தொலையாச் செல்வத்தை வழங்கும் எம்கோனாகிய வளவன் வாழ்க என்று பாடேனாயின், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென அறநூல் கூறிற் றாதலின், அக்கூற்றுப்படி யானுறையும் நாட்டில் ஞாயிறு முறைப்படி தோன்றுதலொழியும்; சான்றோர் செய்த நல்வினையால் நாட்டிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகிய காலம் நீ வாழ்வாயாக" எனச் சொல்லி வாழ்த்து கின்றார். ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென 5 நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம்பா டிற்றே யாயிழை கணவ காலை யந்தியு மாலை யந்தியும் புறவுக் கருவன்ன புன்புல வரகின் 10 பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக் குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலோ டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக் கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க் 15 ககலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன் எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின் பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற் படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன் யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச் 20 சான்றோர் செய்த நன்றுண் டாயின் இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக் கொண்டன் மாமழை பொழிந்த நுண்பஃ றுளியினும் வாழிய பலவே. (34) திணை: பாடாண்டிணை; துறை: இயன்மொழி. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது. உரை : ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும் - ஆனினது முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்; மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் - மாட்சிமைப் பட்ட ஆபரணத்தையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித் தோர்க்கும்; குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் - தந்தை தாயாரைப் பிழைத்த கொடுந்தொழிலை யுடையோர்க்கும்; வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என - அவர் செய்த பாதகத்தினை யாராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியும் உள வெனவும்; நிலம் புடை பெயர்வ தாயினும் - நிலம் கீழ் மேலாம் காலமாயினும்; ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகம் நீங்குதலில்லை யெனவும்; அறம் பாடிற்று - அறநூல் கூறிற்று; ஆயிழை கணவ - தெரிந்த ஆபரணத்தையுடையாள் தலைவ; காலை யந்தியும் மாலை யந்தியும் - காலையாகிய அந்திப்பொழுதும் மாலையாகிய அந்திப்பொழுதும்; புறவுக் கருவன்ன புன்புல வரகின் - புறவினது கருவாகிய முட்டை போன்ற புல்லிய நிலத்து வரகினது அரிசியை; பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கி - பாலின்கட் பெய்து அடப்பட்ட சோற்றைத் தேனொடு கலந்துண்டு; குறு முயற்கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு- குறிய முயலினது கொழுவிய சூட்டிறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட; இரத்தி நீடிய அகன்றலை மன்றத்து - இலந்தை மரமோங்கிய அகன்ற இடத்தையுடைய பொதியிற்கண்; கரப்பில் உள்ளமொடு - ஒன்றனையும் மறைத்தலில்லாத உள்ளத்துடனே; வேண்டுமொழி பயிற்றி - வேண்டிய வார்த்தைகளைப் பலகாலும் கூறி; அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு - பெரிய கட்டியாகிய கொழுவிய சோற்றை யருந்திய பாணர்க்கு; அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன் - நீங்காத செல்வ மெல்லாவற்றையும் செய்தோன்; எங்கோன் வளவன் வாழ்க என்று - எம்முடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக வென்று சொல்லி; நின் பீடு கெழுநோன்றாள் பாடேனாயின் - நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடிற்றிலே னாயின்; பல் கதிர்ச் செல்வன் படுபறியலனே - வாழ்நாட் கலகாகிய பல கதிரை யுடைய செல்வன் தோன்றுத லறியான்; யானோ தஞ்சம் - யானோ எளியேன்; பெரும -; இவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண்டாயின் - இவ்வுலகத்தின்கண் நற்குணங்களால் அமைந்தோர் செய்த நல்வினை யுண்டாயின்; இமயத்து ஈண்டி - இமய மலையின்கண்ணே திரண்டு; இன்குரல் பயிற்றி - இனிய ஓசையைப் பயிற்றி; கொண்டல் மாமழை பொழிந்த நுண் பல் துளியினும் பல வாழிய - கீழ் காற்றால் வரும் பெரிய முகில் சொரிந்த நுண்ணிய பல துளியினும் பல காலம் வாழ்வாயாக எ-று. நிலம் புடை பெயர்வதாயினும் என்பதற்கு ஊழி பெயருங் காலத்து யாவரும் செய்த இருவினையும் நீங்குதலின், அக் காலத்தும், செய்தி கொன்றோர்க்கு உய்தியில் லென்றும், நிலத் துள்ளார் யாவரும் இவர் கூற்றிலே நிற்பாராயினும் என்றும் உரைப்பாரு முளர். புன்கம் இவன்பாற் செல்வதற்கு முன்பு பெற்ற உணவாகவும், அமலைக் கொழுஞ்சோறு இவன்பாற் பெற்ற உணவாகவும் கொள்க. அன்றிச் சென்ற இடந்தோறும் பெற்ற உணவாக வுரைப்பினு மமையும். மன்றத்துச் சூடு கிழித்த வொக்க லொடு கூட வேண்டுமொழி பயிற்றி ஆர்ந்த பாணர்க்கெனக் கூட்டுக. பாணர்க்கெனத் தம்மைப் பிறர் போலக் கூறினார். ஆயிழை கணவ, செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம் பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வ முழுதுஞ் செய்தோன், எங்கோன் வளவன் வாழ்கவென்று காலை யந்தியும் மாலை யந்தியும் நின்றாள் பாடேனாயின், பல் கதிர்ச்செல்வன் படுபறியான்; பெரும, யானோ தஞ்சம்; சான்றோர் செய்த நன்றுண்டாயின், நுண் டுளியினும் பல காலம் வாழ்வாயாக வெனக் கூட்டுக. கோவதை முதலாயின வாக்காற் சொல்லவும் படாமையின், ஆன்முலை யறுத்த வெனவும், மகளிர் கருச்சிதைத்த வெனவும், குரவர்த் தப்பிய வெனவும் மறைத்துக் கூறப்பட்டன. இது பரிசில் பெற்றுப் போகின்றானை நீ எம்மை நினைத்து வருவையோ வென்றாற்கு, இவ்வாறு செய்த நின்னை வளவன் வாழ்க வென்று பாடேனாயின், யானிருக்குமிடத்துப் பல் கதிர்ச் செல்வன் படுத லறியான்; அதனால் இம்மை யின்பம் பெறேன் எனவும், செய்ந் நன்றி கொன்றோர்க்கு உய்தி யில்லை யெனவே மறுமையின்கண் நரகம் புகுவே னெனவும் கூறியதாகக் கொள்க. விளக்கம் : ஆன் முலை யறுக்கும் கொடியவர் குறிப்பு அதனாற் பெறும் பயனைக் கெடுப்பதென்பதாதலின், அதற் கேற்பவே உரை கூறினார். குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கு மெனத் திருத்தப்பட்டிருக்கிறது. இத் திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப் படுகிறது. நிலம் கீழ் மேலாங் காலமாவது நில நடுக்கத்தால் மேடு பள்ள மாதலும், பள்ள மேடாதலுமாகிய காலம். இமயம் கடலாகவும், அரபிக்கடல் நிலமாகவும் இருந்த காலமு முண்டென்ப. மண்ணுலகம் விண்ணுலக மென்பன தலைகீழாக மாறுங் காலமாகிய பேரூழிக் காலமெனச் சமய நூல்கள் கூறும் இக்காலத்தில் வினைகள் மூலப் பகுதியில் ஒடுங்குமெனச் சாங்கிய நூல்களும், மாயையி லொடுங்கு மெனச் சைவ நூல்களும், பிறவும் கூறலால் "ஊழி பெயருங் காலத்து வினை நீங்குதலின்" என்று உரைகாரர் கூறுகின்றார். புன்புலம், புன் செய்க்கொல்லை. மயக்குதல் - கலத்தல், "தேன் மயங்கு பாலினும் இனிய" (ஐங், 203) என்றாற் போல. முயலின் சூட்டிறைச்சியைக் கிழித் தெடுப்பது தின்றற்காகையால், கிழித்த ஒக்கல் என்றதற்கு, தின்ற ஒக்கல் என உரை கூறினார். அருந்திய வென்பது ஆர்ந்த வென வந்தது, "ஏற்றினம் மேய லருந்தென" (ஐங்.93) என வருதல் காண்க. படுபறியலன் - படுதல் ஈண்டுத் தோன்றுதல் என்னும் பொருளது; "எற்படக் கண்போன் மலர்ந்த காமர் சுனைமலர்.....அரிக்கணம் ஒலிக்கும்" (முருகு . 74-76) என்றாற் போல, ஞாயிறு வாழ்நாட் கலகா மென்பது, "வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம்" (நாலடி:22) என்று பிறரும் கூறுதல் காண்க. மழை, மழையைச் சொரியும் முகின்மே னிற்றலின், முகில் என வுரைத்தார். தன்னைப் பிறன்போல் வைத்துக் கூறலும் உயர்ந்தோர் கூற்றுட்படும் மரபுகளுள் ஒன்றாதலின், பாணர்க்கெனத் தம்மையும் அகப்படுத்திக் கூறினார். ஒழுக்கமுடைய சான்றோர் தீயவற்றை வழுக்கியும் வாயாற் சொல்லா ராதலால், சொல்லு மிடத்து அத் தீமையை மறைத்து வேறுபாட்டாற் கூறுவது மரபாயிற்று. அதனால், "ஆன்முலை யறுத்த" வென்றும், "தப்பிய" வென்றும் கூறினார். இவை யாவும் கொலைப் பொருள் என அறிக. (34) 35. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆசிரியர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் சான்றோர், விளைநிலங்கட்குக் குடிகள் இறுக்க வேண்டிய செய்க்கடன் சில ஆண்டுகளாய் இறுக்கப்படாமல் அரசற்குக் கடனாய் விட, அதனைத் தள்ளி வீடுதரல் வேண்டுமெனக் குடிகளின் பொருட்டுக் கிள்ளிவளவனை யடைந்து, "நாடு கெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே, நீ குடிமக்கட்குக் காட்சி யெளியனாதல் வேண்டும்; நின் கொற்றக் குடை வெயில் மறைத்தற்குக் கொண்டதன்று; குடி கட்கு அருள் செய்தற்பொருட்டு; நின்கொற்றமும் உழவர் உழு படை யூன்றுசால் மருங்கில் உண்டாகும் விளை பயனேயாகும்; இயற்கையல்லாதன தம் செயற்கண்ணே தோன்றிய விடத்தும் மக்கள் வேந்தனையே தூற்றுவர்; ஆதலால், நீ நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தரும் குடிகளையும் ஏனைக் குடிகளையும் ஓம்பி அவர் மொழி கொண்டு ஒழுகுதல் வேண்டும்; அவ்வாறு செய்யின் பகைவேந்தரும் நின்னை வணங்கி வாழ்வர்" என்று அறிவுறுத்திச் செய்களின் பொருட்டுச் செலுத்தக்கடவ கடனை வீடுபெற்றுச் சென்றார். அக்காலை யவர் பாடிய பாட்டு, இப் பாட்டு. நளியிரு முந்நீ ரேணி யாக வளியிடை வழங்கா வானஞ் சூடிய மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும் 5 அரசெனப் படுவது நினதே பெரும அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும் இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத் தோடுகொள் வேலின் றோற்றம் போல 10 ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது நினதே யத்தை, ஆங்க நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே நினவ கூறுவ லெனவ கேண்மதி அறம்புரிந் தன்ன செங்கோ னாட்டத்து 15 முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண் டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை 20 வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக் களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் 25 பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம் 30 அதுநற் கறிந்தனை யாயி னீயும் நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயினின் அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே. (35) திணை: பாடாண்டிணை; துறை : செவியறிவுறூஉ. அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிப் பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது. உரை : நளி யிரு முந்நீர் ஏணியாக - நீர் செறிந்த பெரிய கடல் எல்லையாக; வளி யிடை வழங்கா - காற்று ஊடு போகாத ; வானம் சூடிய மண் திணி கிடக்கை - வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் - குளிர்ந்த தமிழ்நாட்டிற் குரியராகிய; முரசு முழங்கு தானை மூவருள்ளும் - முரசொலிக்கும் படையினையுடைய மூவேந்தருள்ளும்; அரசெனப் படுவது நினதே - அரசென்றற்குச் சிறப்புடையது நின்னுடைய அரசே; பெரும-; அலங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும் - விளங்கிய சுடரையுடைய ஞாயிறு நான்கு திக்கினும் தோன்றினும்; இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் - விளங்கிய கதிரையுடைய வெள்ளிமீன் தென் றிசைக்கட் செல்லினும்; அந் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட - அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல காலாய் ஓடி ஊட்ட; தோடு கொள் வேலின் தோற்றம் போல - தொகுதி கொண்ட வேலினது காட்சியை யொப்ப; ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் - அசைந்த கண்ணினையுடைய கரும்பினது வெளிய பூ அசையும்; நாடெனப் படுவது நினதே - நாடென்று சொல்லப் படுவது நின்னுடைய நாடே; நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே - அந் நாடு பொருந்திய செல்வத்தையுடைய பெருமை பொருந்திய வேந்தே; நினவ கூறுவல் - நின்னுடையன சில காரியம் சொல்லுவேன்; எனவ கேண்மதி - என்னுடைய சில வார்த்தையைக் கேட்பாயாக; அறம் புரிந்தன்ன செங் கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் - அறக்கடவுள் மேவி ஆராய்ந்தாற் போன்ற செங்கோலா னாராயும் ஆராய்ச்சியையுடைய நீதியைக் கேட்கவேண்டுங் காலத்து; பதன் எளியோர் - செவ்வி யெளியோர்; ஈண்டு உறை வேணடு பொழுதில் பெயல் பெற்றோரே - இவ்விடத்துத் துளிவேண்டுங் காலத்து மழை பெற்றவரே; ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ - ஞாயிற்றைத் தன்மேற் கொண்ட பக்கந் திரண்ட முகில்; மாக விசும்பின் நடுவு நின்றாங்கு - மாகமாகிய உயர்ந்த வானத்தினது நடுவு நின்று அதன் வெயிலை மறைத்தாற் போல; கண் பொர விளங்கும் - கண்ணொளியோடு மாறுபட விளங்குகின்ற; நின் விண் பொரு வியன் குடை - நினது வானை முட்டிய பரந்த வெண்கொற்றக் குடை; வெயில் மறைக் கொண் டன்றோ அன்றே - வெயிலை மறைத்தற்குக் கொண்டதோ வெனின் அன்று; வருந்திய குடி மறைப்பது- வருத்தமுற்ற குடியை நிழல் செய்தல் காரணத்தாற் கொள்ளப்பட்டது; கூர் வேல் வளவ - கூரிய வேலினையுடைய வளவ; வெளிற்றுப் பனந்துணியின் - இளைய பனையினது துண்டம் போல; வீற்று வீற்றுக் கிடப்ப - வேறு வேறு கிடப்ப; களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை - களிற்றுத் திரளைப் பொருத இடமகன்ற போர்க்களத்தின்கண்; வரு படை தாங்கிப் பெயர் புறத் தார்த்து - வருகின்ற படையை யெதிர்நின்று பொறுத்து அது சரிந்து மீளும் புறக்கொடை கண்டு ஆர்த்துக் கொண்டு; பொருபடை தரூஉம் கொற்றமும் - நின் போர் செய்யும் படை தரும் வெற்றியும்; உழு படை யூன்று சால் மருங்கின் ஈன்றதன் பயன் - உழுகின்ற கலப்பை நிலத்தின் கண்ணே ஊன்று சாலிடத்து விளைந்த நெல்லினது பயன்; மாரி பொய்ப்பினும் - மழை பெய்யுங்காலத்துப் பெய்யா தொழியினும்; வாரி குன்றி னும் - விளைவு குறையினும் ; இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும் - இயல்பல்லாதன மக்களது தொழிலிலே தோன் றினும்; காவலர்ப் பழிக்கும் - காவலரைப் பழித்துரைக்கும்; இக்கண்ணகன் ஞாலம் - இவ்விடமகன்ற உலகம்; அது நற்கு அறிந்தனை யாயின் - அதனை நன்றாக அறிந்தனை யாயின்; நீயும் நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது - நீயும் குறளை கூறுவாரது உறுதியில்லாத வார்த்தையை உட்கொள்ளாது; பகடு புறந் தருநர் பாரம் ஒம்பி - ஏரைப் பாதுகாப்பாருடைய குடியைப் பாதுகாத்து; குடி புறந் தருகுவையாயின் - அக் காவலாலே ஏனைக் குடிகளையும் பாதுகாப்பாயாயின்; நின் அடி புறந்தருகுவர் அடங்காதோர் - நின் அடியைப் போற்றுவர் நின் பகைவர் எ-று. வளியிடை வழங்கா மண்டிணி கிடக்கை யென இயையும்; அன்றி, வாயு பதத்துக்கு மேலான வானமெனக் கிடந்தவாறே உரைப்பினுமமையும். அரசென்றது, அரசர் தன்மையை. முறை வேண்டு பொழுதிற் பதன் எளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றாரென்ற கருத்து, நீயும் பதனெளியை யாதல் வேண்டும், அவ்வாறு பெயல் பெறுதற்கென்றவாறாம்; அன்றி, இதற்கு முறைவேண்டுபொழுதிற் பதனெளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றாரோ டொப்பரென் றுரைப்பாரு முளர். அத்தையும், ஆங்கவும், மதியும், அசைநிலை. நினவ, எனவ, வென ஈற்று நின்ற அகரங்கள் செய்யுள் நோக்கி விரிக்கப்பட்டன. நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தனே, நினவ கூறுவல் எனவ கேண்மதி; குடை வருந்திய குடி மறைப்பது வாகும்; கூர் வேல் வளவ, பதனெளியோர் உறை வேண்டு பொழுதிற் பெயல் பெற்றோராவர்; ஆகையால் நீயும் அவ்வாறு காலம் எளியையாய்க் கொற்றமும் ஈன்றதன் பயனென்று கருதிக் காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலமென்று கொண்டு, நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, பாரமோம்பிப் புறந்தருகுவையாயின், நின்னடி புறந்தருகுவர் அடங்காதோ ரென்றமையால் செவியறிவுறூஉ வாயிற்று. விளக்கம் : "நளியென் கிளவி செறிவு மாகும்" (சொல். உரி: 25) என்பதனால், "நீர் செறிந்த கடல் " என்றுரை கூறினார். அலங்குதல் - விளங்குதல். காவிரி கவர்பு ஊட்டலாவது-காவிரியாறு பல கால்களாய்ப் பிரிந்தோடி நீரை யுண்பித்தல். அறம் புரிந் தன்ன முறை - அறக்கடவுளே அரச ருருவிற் போந்து முறைமையினை விரும்பிச் செய்தாற்போலும் முறை. செங்கோல் நாட்டம் - செங்கோலா னாராயும் ஆராய்ச்சி; செவ்விய கோல் போறலின் முறைமையைச் செங்கோல் என்றார். முறை வேண்டி வருவார்க்குச் செவ்வி யெளியனாகியவழி, அவ் வெளிமை மழை வேண்டினார்க்கு அம் மழை யெய்தினாற்போலும் என்பதுபட "பதன் எளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோர்" என்றார். செவ்வி யெளியோர் - செவ்வி யெளி தாகப் பெற்றோர்.கோடு - பக்கம். விசும்பின் நடுவே ஞாயிறு நிற்ப, அக்காலத் தவ்விடத்தே முகில் நின்றால் அதனால் ஞாயிற்றி னொளி மறைக்கப்படுமாகலின், நின்றாங்கு என்பதற்கு "நின்று வெயிலை மறைத்தாற்போல" என்று உரை கூறினார். கண்ணொளியின் அளவிறந்து விளங்குவதால், "கண் பொர விளங்கும்" என்றார். வெளிற்றுப் பனந் துணி - உள்ளே வயிரமில்லாத பனந்துண்டம்; முற்றிய பனையே வயிரமுடைய தாகையால், அஃதில்லாத பனந்துணி இளையதாதல்பற்றி, இளைய பனையினது துண்டம் என்றார். ஈன்றதன் பயன், வித்திய நெல்லது விளைபயன். செயற்கை - தொழில்; கை: விகுதிமேல் விகுதி. நொதுமலாளர் - குறளை கூறுபவர். பொது மொழி - உறுதியில்லாத மொழி. புறந் தருதல் ஈண்டு வழிபடுதல் மேற்று, நின, என என்பன, அகரம் விரிந்து நினவ, எனவ என வந்தமையின் இவை செய்யுள் நோக்கி விரிக்கப்பட்டன வென்றார். (35) 36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இப்பாட்டின்கண் ஆலத்தூர் கிழார், கிள்ளி வளவன் கருவூரை முற்றியிருந்தானாக, அடைபட்டிருந்த கருவூர் மன்னன், சோழ னுடைய வீரர் தன் நகர்ப் புறத்துக் காவிலுள்ள காவல்மரங்களை வெட்டுதலா லுண்டாகும் ஓசை தன் செவிப்பட்டும் போர்க்கு வாராது அஞ்சி மடிந்து கிடப்பது கண்டு. சோழனை நோக்கி, "வேந்தே, காக்கள்தோறுங் கடி மரம் தடியும் ஓசை தானுறையும் அரண்மனைக்கண் இயம்பக் கேட்டும் ஆங்கு இனிதிருந்த வேந்தனுடன் பொருவது தூய வீரர்க்கு நாணுத் தருவதாகும்; ஆதலால், இது கேட்டு விடுவதோ அடுவதோ செய்க; அதனால் நினக்குப் புகழுண்டாகா தென்பதை நீ நன்கு அறிகுவாய்" என்று கூறிப் போரை விலக்குகின்றார். அடுநை யாயினும் விடுநை யாயினும் நீயளந் தறிதிநின் புரைமை வார்கோல் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும் 5 தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரந் தடியு மோசை தன்னூர் 10 நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப ஆங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின் சிலைத்தார் முரசங் கறங்க மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே. (36) திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. அவன் கருவூர் முற்றியிருத்தானை ஆலத்தூர் கிழார் பாடியது. உரை : அடுநை யாயினும் - கொல்வா யாயினும்; விடுநை யாயி னும் - கொல்லாதொழிவாயாயினும்; நின் புரைமை - அவற்றால் நினக்கு வரும் உயர்ச்சி யாம் சொல்ல வேண்டா; நீ அளந்தறிதி - நீயே எண்ணி யறிவை; செறி யரிச் சிலம்பின் - செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும்; வார் கோல் குறுந்தொடி மகளிர் - நீண்ட கோற்றொழிலாற் செய்யப்பட்ட குறிய வளையினையுமுடைய மகளிர்; பொலஞ் செய் கழங்கின் தெற்றி யாடும் - பொன்னாற் செய்யப்பட்ட கழலான் வேதிகை போல வுயர்ந்த எக்கர்க்கண்ணே யிருந்து விளையாடும் அணுமையையுடைய; தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த ஆன்பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் - வலிய கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி வெட்டுதலான்; நிலை யழிந்து வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப - நின்ற நிலை கலங்கி வீழும் பூ நாறுகின்ற நெடிய கொம்புகள் தனிப்ப; காவு தொறும் கடி மரம் தடியும் ஓசை - காக்கடோறும் காவன் மரங்களை வெட்டும் ஓசை; தன்னூர் நெடுமதில் வரைப்பின் கடி மனை இயம்ப - தன்னுடைய ஊரின்கண்ணே நெடிய மதிலெல்லையில் தனது காவலையுடைய கோயிற்கண்ணே சென்றொலிப்ப; ஆங்கு இனிதிருந்த வேந்தனோடு - அவ் விடத்து மானமின்றி இனிதாக இருந்த வேந்தனுடன்; ஈங்கு - இவ்விடத்து; நின் சிலைத்தார் முரசம் கறங்க - நினது இந்திரவிற் போலும் மாலையையுடைய முரசொலிப்ப; மலைத்தனை என்பது நாணுத்தக வுடைத்து - பொருதா யென்பது கேட்டார்க்கு நாணும் தகுதியை யுடைத்து, ஆதலால் அப் போரை ஒழியத்தகும் எ-று. வார்கோற் குறுந்தொடி யென மாறி யுரைக்கப்பட்டது. இனி திருந்த வென்றது குறிப்பு மொழி. கடிமரந் தடியு மோசை தன் மனை இயம்ப இனிதிருந்த வேந்தனொடு மலைத்தனை யென்பது நாணுத்தகவுடைத்து; அதனால் அடுநையாயினும் விடுநையாயினும் நின் புரைமை நீ யளந் தறிதி யென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. மகளிர் தெற்றி யாடும் பொருநை யென்ற கருத்து; இங்ஙனம் இள மகளிர் கழங்காடும் அணுமையதாயினும் புறப்பட்டுப் போர் செய்யாத அவன் வலியின்மை தோற்றி நின்றது. தெற்றி யாடும் தன்னூ ரென இயைப்பினும் அமையும். மேற்சென்றோனைச் சந்து செய்து மீட்டலின் இது துணை வஞ்சியாயிற்று. விளக்கம் : தெற்றிபோ லுயர்ந்த எக்கர் மணலைக் தெற்றி யென்றது ஆகுபெயர். "புரை யுயர்பாகும்" (தொல். உரி: 4) என்பதனால், புரைமை உயர்ச்சி குறித்து நிற்பதாயிற்று. கருங்கை யென்ற விடத்துக் கருமை வன்மை குறித்து நின்றது. பகைவர் தன்னூர்க் கடிமிளைக்குட் புகுந்து கடி மரம் தடியு மோசை தன் கோயிலிற் கேட்கவும், போர்க்கெழாது கோயிற்கண்ணே இனிதிருப்ப தென்பது மானமுடைய வேந்த ரெவர்க்கும் இயலாத செயலாயிருப்ப, இனிதிருந்தான் என்றமையின், "மானமின்றி யினிதிருந்த" என உரைகூறினார். இனிதிருந்த என்புழி இனிமை இன்னாமை யுணர்த்தி நிற்றலின், இதனைக் குறிப்பு மொழி யென்றார். இளமகளிர் தெற்றி யாடும் அத்துணை யண்மையில் போர் வந்தவழியும், அதனை ஏறட்டுப் பொருதற்கு நினையாத அவ் வேந்தனது இழிநிலை இதனால் விளக்கப்படுகிறது. கடிமரங்களைப் பகைவர் தடியக் காணுமிடத்தே அச்சமின்றிச் சென்று தெற்றியாடும் இள மகளிர்க்குள்ள மனவலியும் இவ் வேந்தன்பால் இல்லை யென்றற்கு இளமகளிர் செயலை யெடுத்தோதினார். ஆன் பொருந்தம் இப்போது அமராவதி யென வழங்குகிறது. (36) 37. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மாறோக்கத்து நப்பசலையார் இப்பாட்டின்கண், "புள்ளின் புன்கண் தீர்த்த செம்பியன் மருக, நல்லர ணமைந்த மூதூர்க்கண் வேந்தன் இருத்தலை யறிந்து போரின்கண் அந்நகரை யஞ்சாது சிதைக்கும் ஆற்றலுடையை"யெனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது வாகை நலத்தைப் பாராட்டுகின்றார். மாறோக்கம் என்பது மாறோகம் என்றும் வழங்கும். இது பாண்டிநாட்டிற் கொற்கையைச் சூழ்ந்த பகுதியாகும். நப்பசலை யார் என்பது இவரதியற்பெயர். இவர் இச் சோழனையே யன்றி, மலையமான் திருமுடிக்காரி, மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன், கடுந்தேர் அவியன் என்போரைப் பாடியுள்ளார். இவருள் இச் சோழனைப் பற்றி மட்டில் பல பாட்டுக்கள் பாடியுள்ளார். இச் சோழனைப் பாடுமிடத்து இவன் முன்னோர் புள்ளுறு புன்கண் தீர்த்த வரலாற்றிiன ஒருமுறைக்கு இருமுறை வற்புறுப்பர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் வரலாற்றினையும் குறிப்பர். உறையூர் நல்லவைக்கண் அறம் நிலைநிற்பதும், சேரர் இமயத்தில் விற்பொறி வைத்ததும் இவரால் சிறப்புறக் குறிக்கப்படுகின்றன. இவர், இக்கிள்ளி வளவன் இறந்தகாலத்து உண்டாகிய தீ நிமித்தங்களை நிரலே தொடுத்துரைப்பதும், அவன் உயிரைக் கொண்டு சென்ற கூற்றுவனை இகழ்ந்துரைப்பதும் நயமுடையவாகும். நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த வேக வெந்திற னாகம் புக்கென விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப் பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப் 5 புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற் சினங்கெழு தானைச் செம்பியன் மருக கரா அங் கலித்த குண்டுகண் ணகழி இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம் 10 கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச் செம்புறழ் புரிசைச் செம்மல் மூதூர் வம்பணி யானை வேந்தகத் துண்மையின் நல்ல வென்னாது சிதைத்தல் வல்லையா னெடுந்தகை செருவத் தானே. (37) திணை: வாகை; துறை: அரசவாகை; முதல் வஞ்சியு மாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. உரை : நஞ்சுடை வாலெயிற்று ஐந்தலை சுமந்த வேக வெந்திறல் நாகம் புக்கென - நஞ்சுடைத்தாகிய வெளிய பல்லினையுடைய ஐந்து படம் பொருந்திய தலையைச் சுமந்த சினம் பொருந்திய வெய்ய திறலையுடைய பாம்பு புக்கதாக; விசும்பு தீப்பிறப்பத் திருகி - வானம் தீப் பிறக்கும் பரிசு முறுகி; பசுங் கொடிப் பெருமலை விடரகத்து - பசிய கொடியினையுடைய பெரிய மலை முழையின்கண்ணே; உரும் எறிந் தாங்கு - இடியேறு எறிந்தாற்போல; புள்ளுறு புன்கண் தீர்த்த - புறவுற்ற துயரத்தைக் கெடுத்த; வெள்வேல் சினங் கெழு தானைச் செம்பியன் மருக - வெள்வேலொடு சினம்பொருந்திய படையையுடைய செம்பி யன் மரபிலுள்ளாய்; கராஅம் கலித்த குண்டு கண் அகழி - கராம் செருக்கிய குழிந்த இடத்தையுடைய அகழியினையும்; இடம் கருங் குட்டத்து - இடம் கரிதாகிய ஆழத்தின்கண்; உடன் தொக்கு ஓடி - சேரத் திரண்டோடி; யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் - இடையாமத்து ஊர் காப்பாருடைய விளக்கு நிழலைக் கவரும்; கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி - கடிய மாறுபாடு பொருந்திய முதலையையுடைய நீர் மிக்க மடுவினையும்; செம்பு உறழ் புரிசை - செம்பு பொரு வும் மதிலையுமுடைய; செம்மல் மூதூர் அகத்து - தலைமை பொருந்திய பழைய வூரினுள்ளே; வம்பு அணி யானை வேந்து உண்மையின் - கச்சணிந்த யானையையுடைய அரசு உண்டா கலின்; நல்ல என்னாது - அவற்றை நல்லவென்று பாராது; செருவத்தான் சிதைத்தல் வல்லை - போரின்கண் அழித்தலை வல்லையா யிருந்தாய்; நெடுந் தகை - பெருந் தகாய் எ - று. இலஞ்சியையுடைய அகழி யென மாறிக் கூட்டினும் அமையும். இப் பொருட்கும் கராம் கலித்தலை அகழிக் கடையாக்குக. கராம் - முதலையுள் ஒரு சாதி. செம்பியன் மருக, நெடுந்தகாய், விட ரகத்து நாகம் புக்கென, உருமெறிந் தாங்கு, மூதூரகத்து வேந்துண்மையின், செருவத்துச் சிதைத்தல் வல்லை யென மாறிக் கூட்டுக. புள்ளுறு புன்கண் தீர்த்த பேரருளினோன் மருகனாயும், செருவின்கண் இவற்றை நல்லவென்று பாராது அழித்தல் வல்லையாயிருந்தாயென அவன் மறம் வியந்து கூறியவாறு. ஐந்தலை யென்றதற்கு ஐந்து தலையெனினு மமையும். இடங் கருங்குட்ட மென்பதனுள் உம்மையை அசைநிலையாக்கி இடங் கரையுடைய குட்ட மென் றுரைப்பாரு முளர் . இடங்க ரீட்டத் தென்று பாடமோதுவாரு முளர். விளக்கம் : விசும்பில் தீப் பிறப்பதில்லையாகலின், விசும்பு தீப்பிறப்ப என்பதற்குத் தீப் பிறக்கும் பரிசு என்று கூறினார். கலித்தல் - தழைத்தல். வேண்டுவன குறைவறப் பெற்று மெய் வலி தழைத்த வழிச் செருக்கு விளைதலின், கலித்த என்றதற்குச் "செருக்கிய" என வுரைப்பர்; "கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ" (புறம்: 39) என்புழியும் இவ்வாறே கூறுதல் காண்க. நெடு நீர் என்றவிடத்து நெடுமை, மிகுதி குறித்து நின்றது. வேந்தன் கோயிலினுள்ளே யிருக்குமாறு விளங்க, "வேந்து அகத் துண்மையின்" என்றற்கு "அரசுண்டாதலின்" என்றார். அரசன் உளனாதலின் என்பார் வேந் தென அஃறிணை வாய்பாட்டாற் கூறியது கொண்டு உண்டாதலின் என உரை கூறினார். (37) 38. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஒரு கால் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் இக்கிள்ளி வளவனைக் காண வந்தாராக, "நீவிர் எந்நாட்டீர்? எம்மை நினைத்தலுண்டோ?" என்று வினவினான்; அவற்கு, "வேந்தே, நீ சினந்து நோக்குமிடம் தீப்பரவும்; அருளி நோக்குமிடம் பொன் பொலியும்; நீ வேண்டியது விளைக்கும் ஆற்றலுடையை; யாம் நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்தோம்; நின்னளவு எம்மால் நினைக்கும் அளவிற்றன்று; பரிசிலர் நின்பகைவர் நாட்டில் இருப்பினும், நின் நாட்டையே நினைப்பர்" என்று பாராட்டிப் பாடிய பாட்டு இது. ஆசிரியர் ஆவூர்மூலங்கிழார் ஆவூர்மூலம் என்னும் ஊரினர். சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயனையும், மல்லிகிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும் பாராட்டிப் பாடியுள்ளார். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஒருகால் பரிசில் தர நீட்டித்தானாக, சினமுற்ற இவர், "இரப்போரை வருத்துதலும் புகழ் குறைபட வரும் செய்கையும் சேய்மையிற் காணாது ஈண்டே கண்டனம்; நின் புதல்வர் நோயிலராக; யான் செல்வேன்" என்பது இவரது புலமை சான்ற மனத்திட்பத்தை யுணர்த்தும். இவர் பாடிய கரந்தைப் பாண்பாட்டும் தானை மறமும் மிக்க இன்பந் தருவனவாகும். வரைபுரையு மழகளிற்றின்மிசை வான்றுடைக்கும் வகையபோல விரவுருவின கொடிநுடங்கும் வியன்றானை விறல்வேந்தே 5 நீ, உடன்று நோக்கும்வா யெரிதவழ நீ. நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் வெண்டிங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின் 10 நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த எம்மள வெவனோ மற்றே யின்னிலைப் பொலம்பூங் காவி னன்னாட் டோரும் செய்வினை மருங்கி னெய்த லல்லதை உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும் 15 கடவ தன்மையிற் கையற வுடைத்தென ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின் நின்னா டுள்ளுவர் பரிசிலர் ஒன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே. (38) திணை : பாடாண்டிணை ; துறை : இயன்மொழி. அவன், "எம்முள்ளீர் எந்நாட்டீர்" என்றாற்கு, ஆவூர் மூலங்கிழார் பாடியது. உரை : வரை புரையும் மழகளிற்றின்மிசை - மலையை யொக்கும் இளங்களிற்றின்மேல்; வான் துடைக்கும் வகைய போல - ஆகாயத்தைத் தடவும் கூறுபாட்டையுடைய போல; விர வுருவின கொடி நுடங்கும் - விரவின பல நிறத்தையுடைன வாகிய கொடிகள் அசைந்து தோன்றும்; வியன் தானை விறல் வேந்தே - பரந்த படையையுடைய விறல்வேந்தே; நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ - நீ முனிந்து பார்க்குமிடம் தீப்பரக்க; நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப - நீ அருளிப் பார்க்கு மிடம் பொன் பொலிய; செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் - செஞ்ஞாயிற்றின்கண்ணே நிலவுண்டாக வேண்டினும்; வெண்டிங்களுள் வெயில் வேண்டினும் - வெளிய திங்களின் கண்ணே வெயிலுண்டாக வேண்டினும்; வேண்டியது விளைக்கும் ஆற்றலை யாகலின் - நீ வேண்டிய பொருளை யுண்டாக்கும் வலியை யுடையை யாகலின்; நின் நிழல் பிறந்து - நினது நிழற்கண்ணே பிறந்து; நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ - நினது நிழற்கண்ணே வளர்ந்த எமது நினை வெல்லை சொல்ல வேண்டுமோ? வேண்டா வன்றே; இன்னிலைப் பொலம் பூங்காவின் நன்னாட்டோரும் - இனிய நிலையையுடைத்தாகிய பொற்பூப் பொருந்திய கற்பகக் காவை யுடைய நல்ல விண்ணுலகத்தவரும்; செய்வினை மருங்கின் எய்த லல்லதை - தாம் செய்த நல்வினையாலுள்ள இன்பத்தின் பக்கத்தைப் பொருந்துவ தல்லது; உடையோர் ஈதலும் - செல்வமுடையோர் வறியோர்க்கு வழங்குதலும்; இல்லோர் இரத்தலும் - வறியோர் செல்வமுடையோர்பாற் சென்றிரத் தலும்; கடவ தன்மையின் - ஆண்டுச் செய்யக்கடவ தல்லாமை யான்; கையறவுடைத்தென - அது செயலற வுடைத்தெனக் கருதி; ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் - அவ்விடத்து நுகரும் நுகர்ச்சி இவ்விடத்தும் கூடுதலான்; நின் நாடு உள்ளுவர் பரிசிலர் - நின்னாட்டை நினைப்பர் பரிசிலர்; ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத்தென - பகைவர் தேயத்திருந்தும் நின்னாடு நின்னை யுடைத்தென்று கருதி யாதலால் எ-று. மற்று: அசை. வேந்தே, நீ வேண்டியது விளைக்கும் ஆற்றலையாகலின், விண்ணுலகத்து நுகர்ச்சி ஈண்டும் கூடலின், ஒன்னார் தேயத்திருந்தும் பரிசிலர் நின்னாடு நின்னை யுடைத்தென்று நின்னாட்டை யுள்ளுவர்; ஆதலான், நின்னிழற் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம்மளவு எவனோ வென மாறிக் கூட்டுக. விளக்கம் : வேந்தன் அருளி நோக்குமிடம் அவன் தானையால் அழி வுறாது ஆக்கமெய்தும் ஆதரவு பெற்றுப் பொன்னும் பொருளும் சிறக்கவுண்டா மென்றற்குப் "பொன் பூப்ப" என்றார். "வேண்டியது விளைக்கும் ஆற்றலை" யென்கின்றாராதலால் அவ்வாற்றலின் எல்லையைச் "செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்டிங் களுள் வெயில் வேண்டினும்" என்றார். "ஈவாரும் கொள்வாரு மில்லாத வானத்து, வாழ்வாரே வன்க ணவர்" (குறள், 1058. மேற்) என்பவாகலின், இங்கும், "உடையோ ரீதலும் இல்லோ ரிரத்தலும், கடவ தன்மையிற் கையறவுடைத்தெனக் " கூறுவாராயினர். செய்தல் நுகர்தலாதலால், செய் நுகர்ச்சியென்றதற்கு "நுகரும் நுகர்ச்சி" யென்றார். (38) 39. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இக் கிள்ளி வளவனை இப் பாட்டின்கண் மாறோக்கத்து நப்பசலையார், "வளவ, நின்னைப் பாடுங்கால் நின் ஈகையைப் புகழ்வதும் புகழாகாது, அது நின் முன்னோர் செய்கை; பகைவரை யடுதுலும் புகழன்று, நின் முன்னோர் தூங்கெயி லெறிந்தவர்; முறை செய்தலும் புகழன்று, நினக்குரிய உறந்தையில் அறம் நிலைநிற்பது; சேரரது வஞ்சி நகரை யலைக்கும் நின் வென்றி யான் பாடும் திறமன்று" என்று பாராட்டுகின்றார். புறவி னல்லல் சொல்லிய கறையடி யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக் கோனிறை துலாஅம் புக்கோன் மருக ஈதனின் புகழு மன்றே சார்தல் 5 ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல் தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின் அடுதனின் புகழு மன்றே கெடுவின்று மறங்கெழு சோழ ருறந்தை யவையத் தறநின்று நிலையிற் றாகலி னதனால் 10 முறைமைநின் புகழு மன்றே மறமிக் கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட் கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ யாங்கன மொழிகோ யானே யோங்கிய வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட் 15 டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய வாடா வஞ்சி வாட்டுநின் பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே. (39) திணை : பாடாண்டிணை ; துறை : இயன்மொழி. அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. உரை : புறவின் அல்லல் சொல்லிய - புறவினது வருத்தத்தைக் களைய வேண்டி; கறை யடி யானை வான் மருப் பெறிந்த - கறை பொருந்திய அடியினையுடைய யானையினது வெளிய கோட்டாற் கடைந்து செறிக்கப்பட்ட; வெண்கடைக் கோல் நிறை துலாம் புக்கோன் மருக - வெளிய கடையினையுடைய கோலாகிய நிறுக்கப்படும் துலாத்தின்கண்ணே துலை புக்க செம்பியனது மரபினுள்ளா யாதலான்; ஈதல் நின் புகழும் அன்றே - இரந்தோர்க்குக் கொடுத்தல் நினக் கியல்பாவ தல்லது புகழு மல்லவே; ஒன்னார் சார்தல் உட்கும் - அசுரர்க்குப் பகைவராகிய தேவர்கள் கிட்டுதற்கு வெருவும்; துன்னரும் கடுந்திறல் - அணுகுதற்கரிய மிக்க வலியையுடைய; தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் - ஆகாயத்துத் தூங் கெயிலை யழித்த நின்னுடைய முன்னுள்ளோரை நினைப்பின்; அடுதல் நின் புகழும் அன்றே - ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதல் நினது புகழும் அல்லவே; கெடு வின்று - கேடின்றி; மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற்று ஆகலின் - மறம் பொருந்திய சோழரது உறையூர்க் கண் அவைக்களத்து அறம் நின்று நிலைபெற்ற தாதலால்; முறைமை நின் புகழும் அன்றே - முறைமை செய்தல் நினக்குப் புகழுமல்லவே; அதனால் -; மறம் மிக்கு எழு சமம் கடந்த - மறம் மிக்கு எழுந்திருந்த போரை வென்ற; எழு உறழ்திணி தோள் - கணைய மரத்தோடு மாறுபடும் தசை செறிந்த தோளினையும்; கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ - கண்ணிற் கார்ந்த கண்ணியையும் மனம் செருக்கிய குதிரையையுமுடைய வளவ; யாங்கனம் மொழிகோ யான் - எவ்வாறு கூறுவேனோ யான்; ஓங்கிய வரை அளந் தறியா - உயர்ந்த எல்லை யளந்தறியப் படாத; பொன் படு நெடுங் கேட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி - பொன் படுகின்ற நெடிய சிகரங்களையுடைய இமயமலையின்கட் சூட்டப்பட்ட காவலாகிய விற்பொறியை யும்; மாண்புனை நெடுந்தேர் வானவன் தொலைய - மாட்சிமைப் படத் தொழில் பொருந்திய நெடிய தேரையு முடைய சேரன் அழிய; வாடா வஞ்சி வாட்டும் - அவனது அழிவில்லாத கருவூரை யழிக்கும்; நின் பீடு கெழு நோன்றாள் பாடுங்கால் - நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடுங் காலத்து எ-று. நின்னைப் பாடுங்கால் என்பார், அவனது சிறப்புத் தோன்றத் தாள் பாடுங்கால் என்றார். தாளை முயற்சி யெனினு மமையும். நிறை துலாம் புக்கோன் மருக, நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழு மன்று, தூங்கெயிலெறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின் புகழுமன்று; உறந்தை யவையத்து அறம் நின்று நிலையிற்றாதலின், முறைமை நின் புகழுமன்று; அதனால், கலிமான் வளவ, நின் தாள் பாடுங்கால் யான் யாங்கன மொழிகோ வெனக் கூட்டுக. அதனால் யாங்கன மொழிகோவென வியையும். மருக வென்புழி, ஆதலானென்பது ஆற்றலாற் போந்த பொருளெனக் கொள்க. கறையடி யென்பதற்கு உரல் போலும் அடியென்பாரு முளர். விளக்கம் : சொல்லிய என்புழிச் சொல்லுதல் களைதல் என்னும் பொருளது; "ஒக்கல் ஒக்கஞ் சொல்லிய" (புறம். 327) எனப் பிறரும் கூறுதல் காண்க. நின் புகழ் நினக்குப் புகழ் என நான்கனுருபு விரித்துக் கொள்ளப்பட்டது. கடுந்திறல் - கடுமை: மிகுதி. ஊங்கணோர் - முன்னோர் கெடுவின்று என்புழிக் கெடுவென்பது முதனிலைத் தொழிற் பெயர்; "கெடுவாக வையாதுலகம்" (குறள். 117) என்றாற் போல. எழு சமம் - மறத்தீக் கிளர்தலால் எழுந்து வீறிட்டுச் செய்யும் போர். வரை - எல்லை. ஏம விற்பொறி - காவலாகிய விற்பொறி; சேரமான் தன்னரசு காவலாகிய ஆணை செல்லுதற் கெல்லையாக இட்ட பொறியாத லால் "ஏம விற்பொறி" என்றார். வானவன் - சேரன்; சேரரை வானவ ரென்றும்; வான வரம்ப ரென்றும் வழங்குப; இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்று ஈண்டுக் கருதப்படுகின்றான். சீனர் தம்மை வானவர் என்று கூறிக்கொள்வது கொண்டு, சேரர் பண்டு சீனநாட்டி லிருந்து குடியேறியவரென முடிபு செய்வது, வரலாறறியாதார் தவறுடைக் கூற்றாகும். பாடுதற்குச் சிறப்புடையது தாள் என அறிக; "வாய்வாள் வளவன் வாழ்கெனப், பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே" (புறம். 393) எனப் பிறரும் தாளே பாடுதல் காண்க. (39) 40. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆசிரியர் ஆவூர்மூலங்கிழார் ஒருகால் இக் கிள்ளிவளவனைக் காண வந்தார்; அவர்க்கு இவனைக் காண்டல் அரிதாயிற்று. நாள்கள் சில கழிந்தன. ஒருநாள் அவனைக் காண்டற்கு வேண்டும் செவ்வி கிடைத்தது. அக்காலத்தே இப்பாட்டினைப் பாடின ராதலால், இப் பாட்டின்கண், வளவனை நோக்கி, "வேந்தே, நீ இன்சொல்லும் எளிய காட்சியும் உடையனாதல் வேண்டும்; யாங்கள் நின்னை இகழ்வோர் தலை மடங்கவும், புகழ்வோர் பொலிவுற்றுத் திகழவும் இன்று காண்பதுபோல் என்றும் கண்டு பாடிப் பரவுவோம்" என்று செவியறிவுறுத்துகின்றார். நீயே, பிறரோம்புறு மறமன்னெயில் ஓம்பாது கடந்தட்டவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடிபொலியக் கழறைஇய 5 வல்லாளனை வயவேந்தே யாமேநின், இகழ்பாடுவோ ரெருத்தடங்கப் புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற இன்று கண்டாங்குக் காண்குவ மென்றும் இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும 10 ஒருபிடி படியுஞ் சீறிடம் எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே. (40) திணை : பாடாண்டிணை துறை: செவியறிவுறூஉ. அவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது. உரை : நீ-; பிறர் ஓம்புறு மற மன் னெயில் ஓம்பாது - பகைவரது பாதுகாத்த மறம் நிலைபெற்ற அரண்களைப் பாதுகாவாது; கடந்தட்டு - எதிர்நின் றழித்து; அவர் முடி புனைந்த பசும் பொன்னின் - அவரைக் கொன்று அவர் மகுடமாகச் செய்யப் பட்ட பசும்பொன்னால்; அடி பொலியக் கழல் தைஇய - நினது அடி பொலிய வீரக்கழல் செய்து புனைந்த; வல்லாளனை - வலிய ஆண்மையை யுடையை; வய வேந்தே -; யாம் - யாங்கள்; நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க - நின்னை இழித்துரைப் போர் கழுத்திறைஞ்ச; புகழ்பாடுவோர் பொலிவு தோன்ற - புகழ்ந்துரைப்போர் பொலிவு தோன்ற; இன்று கண்டு ஆங்குக் காண்குவம் - இன்று கண்டாற்போலக் காண்குவம்; என்றும் - எந்நாளும்; இன்சொல் - இனிய மொழியோடு; எண்பதத்தை ஆகுமதி - எளிய செவ்வியை யாகுக; பெரும-; ஒரு பிடி படியும் சீறிடம் - ஒரு பிடி கிடக்கும் சிறிய விடம்; எழு களிறு புரக்கும் நாடு கிழவோய் - ஏழு களிற்றியானையைப் பாதுகாக்கும் நாட்டை யுடையோய் எ-று. நாடு கிழவோய், இன்சொல் எண்பதத்தை யாகுமதி; அதனால் நின் இகழ் பாடுவோர் எருத்தம் அடங்கப் புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற யாம், இன்று கண்டாங்குக் காண்குவ மெனக் கூட்டுக. வல்லாளனை யென்பதனுள் ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது; அசைநிலையுமாம். மதி: முன்னிலை யசைச்சொல். "கழல் தைஇய வல்லாளன்" என்றதனாற் பகையின்மையும், "ஒரு பிடி படியுஞ் சீறிடம் எழு களிறு புரக்கும் நாடு கிழவோய்" என்றதனால் பொருட்குறை வின்மையும் கூறியவாறாயிற்று. விளக்கம் : நண்பரைப் பிறரென்றல் வழக்கன்மையின், பிறரென்றது பகைவரை யாயிற்று. எருத்து - கழுத்து; எருத்துக் கடக்கமாவது நாணால் தலை குனிதல்; "நாண் அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்" (பொருந: 31) எனச் சான்றோர் கூறுதல் காண்க., பொலிவு தோன்ற என்றது, பெருமிதத்தால் தலை நிமிர்ந்து விளங்க வென்பதாம். கண்டு ஆங்கு என்றவிடத்துக் கண்டென்னும் செய்தெனெச்சம் பிற வினைமுதல்வினை கொண்டு முடிதற்கு அமைதி கூறுவாராய், ஆசிரியர் பேராசிரியர், "நடை கற்றன்ன வென்புழிக் கற்றென்னும் வினையெச்சம் தன்னெச்சவினை இகந்த தாயினும், அஃது உவமப் பகுதியாகலான், அங்ஙனம் வருதலும் வகையென்றதனானே கொள்ளப்படும்" (தொல். உவம:1) என்பது காண்க. எழு களிறு புரக்கும் நாடு - ஏழு களிற்றியானைகட்கு வேண்டும் உணவினை விளைக்கும் நாடு. (40) 41. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆசிரியர் கோவூர் கிழார், இப்பாட்டின்கண் இக் கிள்ளி வளவனைச் சினப்பித்தோர் நாட்டு மக்கள், நனவின்கண் திசை களில் எரிகொள்ளி வீழ்ச்சி முதலிய தீ நிமித்தங்களும், கனவின் கண் வாயிற் பல் வீழ்தல் முதலிய தீ நிகழ்ச்சிகளும் கண்டு, நின் மேற்செலவு நினைந்து அஞ்சித் தாமெய்தும் மனக்கலக்கத்தை மகளிர் அறியாவாறு மறைத்து அலமருகின்றனர் எனக் கொற்ற வள்ளை பாடிச் சிறப்பிக்கின்றார். காலனும் காலம் பார்க்கும் பாராது வேலீண்டு தானை விழுமியோர் தொலைய வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே திசையிரு நான்கு முற்க முற்கவும் 5 பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும் வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும் எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும் களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும் 10 வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும் கனவி னரியன காணா நனவிற் செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி மையல் கொண்ட வேமமி லிருக்கையர் புதல்வர் பூங்கண் முத்தி மனையோட் 15 கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ டெரிநிகழ்ந் தன்ன செலவிற் செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே. (41) திணை: வஞ்சி; துறை: கொற்றவள்ளை. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது. உரை : காலனும் காலம் பார்க்கும் - கூற்றும் தன்னால் உயிர் கொள்ளலாம் காலம் வருந்துணையும் பார்க்கும்; பாராது - அவ்வாறு காலம் பாராது; வேலீண்டு தானை விழுமியோர் தொலைய - வேல் நெருங்கிய படையினையுடைய பெரியோர் மாளும் பரிசு; வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே - நீ வேண்டிய விடத்தே கொல்லும் வெல்லும் போரையுடைய வேந்தே; திசை இருநான்கும் உற்கம் உற்கவும் - எட்டுத்திசையும் எரிகொள்ளி எரிந்து வீழவும்; பெரு மரத்து இலையில் நெடுங் கோடு வற்றல் பற்றவும் - பெரிய மரத்தின்கண்ணே இலை யில்லாத நெடிய கோடாகியது வற்றல் பற்றவும்; வெங்கதிர்க் கனலி துற்றவும் - வெய்ய சுடரையுடைய ஞாயிறு பலவிடத்தும் செறிந்து தோன்றவும்; பிறவும் - மற்றும்; அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும் - அஞ்சத் தகுவனவாகிய புட்கள் குரலிசைப்பவும்; எயிறு நிலத்து வீழவும் - பல் நிலத்தின் கண்ணே வீழவும்; எண்ணெய் ஆடவும் - எண்ணெயை மயிரின்கண்ணே வார்க்கவும்; களிறு மேல் கொள்ளவும் - பன்றியேற்றை யேறவும்; காழகம் நீப்பவும் - ஆடையைக் களையவும்; வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும் - வெளிதாகிய வலிய படைக்கலம் தானிருந்த கட்டிலுடனே மறியவும்; கனவின் நனவின் அரியன காணா - இங்ஙனம் கனாவினும் மெய்ம்மையினும் பொறுத்தற்கரிய வற்றைக் கண்டு; செருச் செய் முன்ப - போர் செய்யும் வலியையுடை யோய்; நின் வருதிறன் நோக்கி - நின் மேற்செலவின் கூறு பாட்டைக் கருதி; மையல் கொண்ட ஏமமில் இருக்கையர் - மயக்கம் பொருந்திய காவலில்லாத இருத்தலை யுடையராய்; புதல்வர் பூங்கண் முத்தி - தம் பிள்ளைகளுடைய பூப் போலுங் கண்ணை முத்தங்கொண்டு; மனையோட்கு எவ்வம் கரக்கும் - தம் மனைவியர்க்குத் தமது வருத்தம் தோன்றாமல் மறைக்கும்; பைதல் மாக்களொடு - துன்பத்தையுடைய ஆடவரோடு; பெருங்கலக் குற்றன்று - மிக்க கலக்கமுற்றது; காற்றோடு எரி நிகழ்ந்தன்ன செலவின் - காற்றுடன் எரி நிகழ்ந்தாற் போன்ற செலவையுடைய; செருமிகு வளவ - போரின்கண்ணே மிக்க வளவ; நிற் சினைஇயோர் நாடு - நின்னைச் சினப்பித் தோருடைய நாடு எ - று. உற்க வென்றது - வீழ்தலை. உற்க முதலிய நான்கும் உற்பாத மாய் நனவிற் காணப்பட்டன; எயிறு நிலத்து வீழ்தல் முதலாயின கனவிற் காணப்பட்டன. வருதிறன்: ஈண்டுச் செல்லுந் திறனென இடவழுவமைதியாய் நின்றது. "மனையோட் கெவ்வம் கரக்கு" மென்பது "ஏவலிளையர் தாய்வயிறு கறிப்ப" என்றாற் போலப் பன்மைக் கேற்ப நின்றது. தான்: ஈண்டு அசைநிலை. பெரு மரத்துப் பற்றவும் என இயையும். இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவு மென்பதற்கு நெடுங்கோட்டின்கண்ணே இலையில் வற்றற்றன்மை பற்றவுமென வுரைப்பினுமமையும். வேந்தே, முன்ப, வளவ, நீ இத்தன்மையை யாதலால், நிற் சினைஇயோர் நாடு பைதன் மாக்களொடு பெருங் கலக்குற்ற தெனக் கூட்டுக. காற்றோ டெரி நிகழ்ந் தன்ன செலவிற் செருமிகு வளவ வென மன்னவன் புகழும், நிற்சினைஇயோர் நாடு பைதன் மாக்களொடு பெருங்கலக் குற்றன்றென ஒன்னார் நாடழி பிரங்கி யதும் கூறுதலால், இது கொற்றவள்ளை யாயிற்று. விளக்கம் : உயிர்கள் அவை நின்ற உடம்பினின்று நீங்குதற்குரிய காலம் பார்த்து நீக்கும் இயல்புபற்றிக் கூற்றுவனைக் காலன் என்ப. அதனால் காலனும் காலம் பார்க்கும் என்றார். வேலீண்டு தானைக்கண் விறல் மிக்க செய்கைகளால் உயர்ந்த பெரியோரை "விழுமியோர்" என்றார். உற்கம் - எரிகக்கும் விண்மீன்; அஃது எரிந்து வீழும் செய்தியை "உற்குதல்" என்பவாகலின், "உற்கம் உற்கவும்" என்றார். கனலை யுடைய ஞாயிறு கனலி யெனப்பட்டது. களிறு - பன்றி; "கேழற் கண்ணும் கடிவரை யின்றே" (மரபு: 35)என்றலின், கேழற் பன்றியைக் களி றென்றார். வெள்ளி - வெண்மை நிறமுடையது. தாம் இருக்கும் இருக்கை போதிய காவலின்றி யிருத்தலால், ஆங்கிருப்போர் அதனை யுணர்ந்து வரும் தீங்கு குறித்து அறிவு மயங்குகின்றமை தோன்ற, "மையல் கொண்ட வேமமில் இருக்கையர்"என்றார். முத்துதல் - முத்தமிடுதல். தன்னை யின்றியமையாத மனையவள் தனக்குளதாகும் வருத்தமறியின் பெரும் பேதுற்றுத் தன் நெஞ்சின் வலியைச் சிதைப்ப ளென்ற அச்சத்தால் "மனையோட்கு எவ்வம் கரத்தல்" நிகழ்வதாயிற்று. வருதிறன் - மேற்செல்லுந் திறம். படர்க்கைக் குரிய செல்லுதல் கூறவேண்டிய விடத்துத் தன்மை முன்னிலைகட் குரிய வருதல் என்ற சொல்லைக் கூறியது வழுவமைதியாயிற்று. மனையோள் என்ற ஒருமையும் மாக்களென்ற பன்மையும் இயைவது, "ஏவ லிளையர் தாய்வயிறு கறிப்ப" என்றாற் போலப் பன்மைக்கேற்ப நின்ற தென்றார். ஒரு மனைவியை மணப்பதே பண்டைத் தமிழ் வழக்காதல் அறிக. (41) 42. சோழன் குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இப்பாட்டின்கண், ஆசிரியர் இடைக்காடனார், இவன் ஏனை இருவேந்தர் நாடுகளைக் கவரும் கருத்தினனாய் மைந்துற் றிருப்பதும், மலைபோன்ற யானையும் கடல்போலும் தானையும் கொண்டு, புலி, தன் குருளையைக் காப்பது போலத் தன்னாட்டை இனிது காத்துச் செங்கோலோச்சி வருவதும், கடல் நோக்கிச் செல்லும் யாறு போலப் புலவர் பலரும் இவன்புகழ் பாடிப் போதருவதும் எடுத்தோதிப் பாராட்டுகின்றார். இடைக்காடன் என்பது இயற்பெயர். இலக்கிய வளஞ் சிறந்த பாட்டுக்கள் பல இவரால் செய்யப்பெற்றுச் சங்கத் தொகைநூல் களிற் கோக்கப்பெற்றுள்ளன. தக்க உவமைகளைத் தொடுத்துப் பொருள்களை விளக்குவதில் நல்ல வாய்ப்புடையர். குறுவிழியை, "சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன, குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்" என்பார்; காட்டிடத்தே காயாம் பூவும் தம்பலப் பூச்சிகளும் சிதறிக் கிடப்பதை, மணிமிடை பவளம் போலும் என்று புனைவார்; காட்டிடத்தே ஆட்டிடையன் கோலூன்றி நின்று செய்யும் வீளையொலி கேட்டுத் "தெறிமறி பார்க்கும் குறுநரி" முட்புதற்குள் ஓடியொளியும் இயல்பை அழகு திகழக் கூறுகின்றார்; மகளிர் விருந்தோம்பும் செய்கையால் மேம்படுவ தனை, "அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும், முல்லை சான்ற கற்பின், மெல்லியற் குறுமகள்" (நற். 142) என்று சிறப் பிப்பார். விருந்து புறந்தரும் அறத்தை இப் பாட்டின்கண்ணும் இவர் எடுத்தோதிப் பாராட்டுவதைக் காணலாம். ஆனா வீகை யடுபோ ரண்ணனின் யானையு மலையிற் றோன்றும் பெருமநின் தானையுங் கடலென முழங்குங் கூர்நுனை வேலு மின்னின் விளங்கு முலகத் 5 தரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற் புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே தண்புனற் பூச லல்லது நொந்து களைக வாழி வளவ வென்றுநின் முனைதரு பூசல் கனவினு மறியாது 10 புலிபுறங் காக்குங் குருளை போல மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப் பெருவிறல் யாணர்த் தாகி யரிநர் கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர் படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர் 15 கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை நீர்தரு மகளிர் குற்ற குவளையும் வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந மலையி னிழிந்து மாக்கட னோக்கி 20 நிலவரை யிழிதரும் பல்யாறு போலப் புலவ ரெல்லா நின்னோக் கினரே நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்றுவெகுண் டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே. (42) திணை : வாகை; துறை : அரசவாகை. அவனை இடைக் காடனார் பாடியது. உரை : ஆனா ஈகை - அமையாத வண்மையையும்; அடு போர் அண்ணல் - பகையைக் கொல்லும் பூசலையுமுடைய தலைவ; நின் யானையும் மலையின் தோன்றும் - நினது யானையும் மலை போலத் தோன்றும்; பெரும -; நின் தானையும் கட லென முழங்கும் - நின் படையும் கடல் போல முழங்கும்; கூர் நுனை வேலும் மின்னின் விளங்கும் - நின் கூரிய நுனையையுடைய வேலும் மின்போல விட்டு விளங்கும்; உலகத்து அரசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின் - இங்ஙனம் உலகத்தின்கண் வேந்து தலை நடுங்குவதற் கேதுவாகிய வலிமையையுடையை யாதலால்; புரை தீர்ந்தன்று - குற்றம் தீர்ந்தது; அது புதுவதோ அன்று - அது நினக்குப் பழையதாய் வருகின்றது; தண் புனல் பூசல் அல்லது - குளிர்ந்த நீரால் உள்ளதாகிய பூசலல்லது; நொந்து - வருந்தி; களைக வாழி வளவ என்று - எமது துயரத்தைத் தீர்ப்பாயாக வாழி வளவ என்று சொல்லி; நின் முனை தரு பூசல் கனவினும் அறியாது - நினது முந்துற்றுச் செல்லும் படையுண்டாக்கும் பூசலைக் கனவின் கண்ணும் அறியாது; புலி புறங்காக்கும் குருளை போல - புலி பாதுகாக்கும் குட்டி போல; மெலிவில் செங்கோல் நீ புறங் காப்ப - குறை வில்லாத செவ்விய கோலால் நீ பாதுகாப்ப; பெருவிறல் யாணர்த்தாகி - பெரிய விசேடத்தையுடைய புது வருவாயை யுடைத்தாய்; அரிநர் கீழ் மடைக் கொண்ட வாளையும் - நெல் லறுப்பார் கடை மடைக்கண் பிடித்துக் கொள்ளப்பட்ட வாளையும்; உழவர் படை மிளிர்ந்திட்ட யாமையும் - உழுவார் படைவாளால் மறிக்கப்பட்ட ஆமையும்; அறைநர் கரும்பிற் கொண்ட தேனும் - கரும்பறுப்பார் கரும்பினின்றும் வாங்கப் பட்ட தேனும்; பெருந்துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும் - பெரிய துறைக்கண் நீரை முகந்து கொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீரு மென இவற்றை; வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும் - வன்புலத்தினின்றும் வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும்; மென் புல வைப்பின் நன்னாட்டுப் பொருந - மென்புலத் தூர்களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே; மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல் யாறு போல - மலையினின் றிழிந்து பெரிய கடலை நோக்கி நிலவெல்லையி னின்றிழியும் பல யாறுகளை யொப்ப; புலவரெல்லாம் நின்னோக்கினர் - புலவர் யாவரும் நின்னை நோக்கினர்; நீயே - நீதான் அவர்க்குப் பரிசில் கொடுத்தற் பொருட்டு; மருந்தில் கணிச்சி - பரிகார மில்லாத கணிச்சி யென்னும் படைக் கலத்தை; வருத்த - உயிர் வருந்த; வட்டித்து - சுழற்றி; கூற்று வெகுண்டன்ன - கூற்றம் சினந்தாற் போலும்; முன்பொடு - வலியுடனே; மாற்று இரு வேந்தர் மண்ணோக்கினை - நினக்கு மறுதலையாகிய இரு வேந்தருடைய நிலத்தைக்கொள்ள நோக்கினாய் எ-று அறியா தென்பதனை அறியாம லெனத் திரிப்பினு மமையும். வன்புலம், குறிஞ்சியும் முல்லையும்; மென் புலம், மருதமும் நெய்தலும். கணிச்சியைக் குந்தாலி யென்றும் மழு வென்றும் சொல்லுவர். யாணர்த்தாகி விருந் துயரும் நன்னா டென்க. பொருத, புலவரெல்லாம் நின் நோக்கினார்; நீ அரசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; அதனால் இச் செய்திபுரை தீர்ந்தது; நினக்குப் புதுவ தன்றாகலி னெனக் கூட்டுக. புரை தீர்ந்தன் றென்பதற்கு, உயர்ச்சி தீர்ந்த தெனப் பொருளாக்கி பொருந, நீ ஆற்றலை யாதலின்,இரு வேந்தர் மண் ணோக்கினை புலவரெல்லாம் பரிசில் பெறுதற் பொருட்டு நின் னோக்கினர்; இச்செய்தி நினக்குப் புதிதன்று; ஆதலின் உயர்ச்சி தீர்ந்த தென் றுரைப்பினு மமையும். விளக்கம் : பொருட் குறைபாடு நோக்கித் தன்னளவிற் குன்றாத ஈகை யென்பது "ஆனா வீகை" யெனப்பட்டது. புதுவதன் றெனவே, அதன் மறுதலையாய பழைய தென்பது கொள்ளப்பட்டது. முனை தரு பூசல் என்புழி முனை யென்பது முந்துற்று முன்னேறிச் செல்லும் படை யென வறிக. "நாயே பன்றி புலிமுய னான்கும், ஆயுங்காலைக் குருளை யென்ப (தொல். மரபு. 8)" என்றலின், புலிக்குட்டி குருளை யெனப்பட்டது. விறல் ஈண்டுச் சிறப்புக்குறித்து நின்றது. மிளிர்தல், கீழ் மேலாகப் பெயர்தல் மாக்கட லென்புழி பெருமை, தன்னை நோக்கி வரும் நீர்ப் பெருக்கை ஏன்று கொண்டு தன்னியல்பில் விகார மின்றி நிற்கும் இயல்பு. பள்ள நோக்கியோடுதல் நீர்க்கு இயல் பாதலின், பெரும் பள்ளமாகிய "மாக்கடல் நோக்கி" யென்றார். நோயைத் தடுப்பது மருந்தாதலால், சாக்காடாகிய நோய் செய்யும் கூற்றுவனை விலக்கும் ஆற்றலுடையது பிறிதியாது மில்லை யாதல் கொண்டு, மருந்தில்.... கூற்று என்றார் .உயர்ச்சி தீர்ந்த தென்பது உயர்ச்சியிலதாயிற்றென்னும் குறிப்பினை யுடையதாயிற்று. " (42) 43. சோழன் மாவளத்தான் இச்சோழன், சோழன் நலங்கிள்ளியின் தம்பியாவான். எளிதில் வெகுளும் இயல்பின னாயினும். நல்லதன் நல முணரும் நயம் மிக்கவன். சோழன் திருமாவளவன் வேறு. இவன் வேறு! ஒரு கால் இவனும் ஆசிரியர் தாமற்பல்கண்ணனாரும் வட்டாடி னர். வட்டுக்களில் ஒன்று தாமற்பல்கண்ணனாரை யறியாமல் அவர்க்கீழ் மறைந்து விட்டதாக அதனைப் பின்புணர்ந்த மாவளத்தான் வெகுண்டு, அவரை அவ் வட்டினால் எறிந்தான். உண்மை கூறவும் ஓராது வெகுண்டெறிந்த அவன் செய்கையை இகழ்ந்து அப் புலவர், "வேந்தே ,நின் செயல் பொருந்துவ தன்று; நின்குடிப் பிறந்தோர்க்கு இச்செயல் இயல்பன் றாதலின், நின் பிறப்பின்கண் ஐயமுறுகின்றேன்" என வருந்தி யுரைத்தார். அதனைக் கேட்டதும் மாவளத்தான் தன் தவற்றினை யுணர்ந்து, நாணி மனம் கலங்கினான். முடிவில் அவரும் தகுவன கூறித் தேற்றிப் பாராட்டினர். இந்நிகழ்ச்சியையே இப் பாட்டும் குறித்து நிற்கிறது. தாமற்பல்கண்ணனார் என்பார் பார்ப்பனர்; கூர்த்த புலமை நலஞ் சிறந்தவர்; தாம் செய்த தவற்றை விரைந்துணரும் நல் லறிஞர். தாமப்பல் கண்ணனார் என்றும் பாடமுண்டு. இவர் தாமல் என்னும் ஊரினர். தாமல், காஞ்சிபுரத்துக்கு மேற்கில் உள்ளதோர் நல்ல வூர். இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் இவ்வூர் மிக்க சிறப்புற்று விளங்கிய தென்பதை இவ்வூரிலுள்ள கோயிற் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இக் கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தாமர் (S.I. Vol. V. 1004. A.R. 139 of 1896) என்று கூறுதலின், இவர் பெயர் தாமர்ப்பல்கண்ணனாரென இருக்க வேண்டு மென்று துணியலாம். ஏடெழுதியோர் தாமற்பல் கண்ணனா ரென எழுதிவிட்டனர்; இவ்வூர் இப்போதும் தாமல் என்று வழங்குவது நோக்கி, இவ்வாறு கொள்ளப்பட்ட தென்று கொள்க . பல்கண்ணன் என்பது இந்திரனையும் குறிக்கும் பெயராதலின் . பார்ப்பனராகிய இவர் இவ்வாறு பெயர் பெற்றனர் என்றறிய லாம். இதன்கண், “பார்ப்பார் நோவன செய்யார்” என்று இவர் கூறுவதே இவர் பார்ப்பனரென்பதை வற்புறுத்துகிறது. இப் பாட்டின்கண் தாமற்பல்கண்ணனார், “கிள்ளிக்குத் தம்பி, நீ புறவின் பொருட்டுத் துலை புக்கவன் வழித்தோன்றல்; நின் முன்னோர் சான்றோர்க்கு நோய் செய்யார்; இச் செயல் நினக்குத் தகுவதோ? நின் பிறப்பில் ஐயமுடையேன்” என்று கூறக் கேட்டு நாணியிருந்த மாவளத்தான் செய்கைச் சிறப்பைக் கண்டு வியந்து, “யான் செய்த பிழையை மனங்கொள்ளாது, நீ செய்த தையே நினைந்து நாணி யிருந்தது, பிழைத்தாரைப் பொறுப்பது நுங்கள் குடிக்கு இயல்புகாண் என்பதைக் காட்டுகிறது. பிழை செய்தவன் யானே; நீ காவிரி மணலினும் பல்லாண்டு வாழ்க” எனப் பாராட்டுகின்றார். நிலமிசை வாழ்ந ரலமர றீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் காலுண வாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ் சிறைக் 5 கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத் தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா வீகை யுரவோன் மருக நேரார்க் கடந்த முரண்மிகு திருவின் 10 தேர்வண் கிள்ளி தம்பி வார்கோற் கொடுமர மறவர் பெரும கடுமான் கைவண் டோன்ற லைய முடையேன் ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது 15 நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி நின்யான் பிழைத்தது நோவா யென்னினும் நீபிழைத் தாய்போ னனிநா ணினையே தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல் இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக் 20 காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின் யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள் மிக்குவரு மின்னீர்க் காவிரி எக்க ரிட்ட மணலினும் பலவே. (43) திணை : வாகை; துறை : அரசவாகை. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமற்பல்கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கை கரப்ப வெகுண்டு வட்டுக்கொண்டெறிந் தானைச் சோழன் மகன் அல்லையென, நாணியிருந் தானைத் தாமற்பல் கண்ணனார் பாடியது. உரை : நிலமிசை வாழ்நர் அலமரல் தீர - நிலத்தின்மேல் உயிர் வாழ்வார்க்கு வெம்மையான் உளதாகிய சுழற்சி நீங்க; தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி - சுடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது வெப்பத்தைத் தாம் பொறுத்து; கால் உணவாக - காற்றை யுணவாகக் கொண்டு; சுடரொடு கொட்கு - அச் சுடருடனே சூழ வரும் ; அவிர் சடை முனிவரும் மருள - விளங்கிய சடையையுடைய அருந் தவரும் வியப்பால் மயங்க; கொடுஞ் சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇ - வளைந்த சிறைகினையும் கூரிய உகிரினையுமுடைய பருந்தினது எறிதலைக் கருதி அதனைத் தப்பி; தன்னகம் புக்க - தன் னிடத்தை யடைந்த; குறு நடைப் புறவின் தபுதி யஞ்சி - குறிய நடையையுடைய புறாவினது அழிவிற்கஞ்சி; சீரைபுக்க - தன்னழிவிற்கஞ்சாது துலாத்தலையுட் புக்க; வரையா ஈகை உரவோன் மருக - வரையாத வண்மையையுடைய வலி யோனது மரபினுள்ளாய்; நேரார் கடந்த முரண் மிகு திருவின் - பகைவரை வென்ற மாறுபாட்டான் மிக்க செல்வத்தை யுடைய; தேர்வண்கிள்ளி தம்பி - தேர்வண் கிள்ளிக்குத் தம்பி; வார் கோல் கொடுமர மறவர் பெரும - நீண்ட அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்க்குத் தலைவ; கடு மான் கை வண் தோன்றல் - விரைந்த குதிரையையுடைய கைவள்ளிய தோன்றால்; ஐயம் உடையேன் - நினது பிறப்பின்கண் ஐயப் பாடுடையேன்; ஆர் புனை தெரியல் - ஆத்தியாற் செய்யப் பட்ட தாரையுடைய; நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யார் - நினக்கு முன்னுள்ளார் யாவரும் பார்ப்பார் வெறுக்கத் தகுவன செய்யார்; மற்று இது நினக்கு நீர்த்தோ என - மற்று இவ் வெறுக்கத்தக்க செய்கை நினக்கு நீர்மையை யுடைத்தோ என்று; வெறுப்பக் கூறி - நீ வெறுக்கச் சொல்லி; நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் - நினக்கு யான் செய்த தவற்றிற்கு வெறாய் என்னினும்; நீ பிழைத்தாய் போல் நனி நாணினை - நீ தவறு செய்தாய் போல மிக நாணினாய்; தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல் - இவ்வாறு தம்மைத் தப்பியவரைப் பொறுக்கும் தலைமை; இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் என; இக்குலத்தின்கட் பிறந் தோர்க்கு எளிமை யுடைத்துக்காணும் என; காண்தகு மொய்ம்ப - காணத்தக்க வலியையுடையோய்; காட்டினை யாகலின் - அறிவித்தா யாகலின்; யானே பிழைத்தனென் - யானே தவறு செய்தேன்; மிக்கு வரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பல நின் ஆயுள் சிறக்க - பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரி கொழித் திடப்பட்ட மணலினும் பலவாக நின் வாழ்நாள் சிறப்பதாக எ-று. முனிவ ரென்றது, வேணாவியோரை; அன்றி, சுடர் திரிந்த வழித் திரிந்து தவஞ் செய்யு முனிவரென்று முரைப்ப. சீரை - துலாக்கோல் தட்டு. மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி என்றது, சூது பொருவுழிக் கையாற் கவறு புதைப்ப வெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானை, இவ்வாறு செய்தல் நின் பெருமைக்குப் பொருந்துமோ? அதனால் நின் பிறப்பிலே ஓர் ஐயமுடையேன் என்ற சொல்லை. இது பொறுத்தற்கரிய பிழையைப் பொறுத்த குணவென்றி யான் அரசவாகை யாயிற்று. விளக்கம் : “அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி” (உரி: 13) என்பது தொல்காப்பியம். சுடரொடு கொட்கும் முனிவர், “விண்செலன் மரபின் ஐயர்”(முருகு: 107) என்று நக்கீரரால் குறிக்கப்படுகின்றார். உயிர்கள்பா லுண்டாகிய அருள் மிகுதியால் சுடரொடு திரியும் தம்மினும் அருள்மிக வுடையனாதல் கண்டு அவர் மதி மருண்டன ரென்றற்கு, “முனிவரும் மருள” என்றார். பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ - பருந்தினால் எறியப்படுவ துணர்ந்து அதன் இலக்கினின்றும் தப்பி; எறியப்படுவது ஏறாயிற்று; “வேலேறு படத் தேளேறு மாய்ந்தாற் போல” என்றாற் போல. சீர் தூக்கும் துலாக் கோல், “சீரை” எனப் பட்டது. நனி நாணினை யென்புழி, மிகுதி குடிப்பிறப்புக்கு உயர் வெடுத்து மொழிதற்கு இடந்தந்தது. தவறு கண்டு மிக நாணுதல் தலைமை மிக்க மனநலமும் அறிவுநலமும் உடையார்க்கே அமைவ தாகலின், “காண்தகு மொய்ம்ப” என்று சிறப்பித்தார். வேணாவி: வேள்விக்கண் பெறும் அவி வேணாவி யெனப்பட்டது; “வேணவா” என்றாற்போல. அவரவர் தகுதிப்பாட்டை மிகுதிப்படுத்துவது வாகைத் திணையாதலால், பொறை மிக்க குணத்தை அரசவாகை யில் அடக்கிக் கூறினார். (43) 44. சோழன் நெடுங்கிள்ளி இவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி யெனவும் வழங்கப்படுவன்; திருந்திய அரசியற் பயிற்சி இல்லாதவன். இவற்கும் சோழன் நலங்கிள்ளிக்கும் எவ்வகையாலோ பகைமை யுண்டாயிற்று. அக்காலத்தே சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்த னென்னும் புலவ னொருவன் வந்து பரிசில் வேண்டினா னாக, அவனைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்றனெனத் தவறாகக் கருதிக் கொலைபுரிய முற்பட்டான். அதனை யுணர்ந்த ஆசிரியர் கோவூர் கிழார், இவ் வேந்தனுக்குத் தகுவன கூறி அப் புலவனை யுய்வித்தார். பின்பு இவன் ஆவூர் சென்றிருக்கையில், ஆவூர் தனக்குரியதாதலால், அதனைத் தான் பெறுதற்காகச் சோழன் நலங் கிள்ளி ஆவூரை முற்றுகையிட்டான். இவன் அஞ்சிப் போர்க்கு எழானாக, கோவூர் கிழார் தமது பாட்டால் இவற்கு மறத்தீ யெழு வித்துப் போர் செய்யத் தூண்டினார். அப் போரில் உய்ந்தோடிய இவன் உறையூரிடத்தே இருந்தான். உறையூர் இவற்குரியதே. நலங்கிள்ளி உறையூரையும் முற்றுகையிட்டான். ஆங்கும் இவன் அடைபட்டுக் கிடந்தான். அக்காலத்தும் ஆசிரியர் கோவூர் கிழாரே சென்று இருவரையும் சந்துசெய்து போர் செய்யாவாறு தடுத்து நலஞ்செய்தார். முடிவில் இவன் காரியாறு என்னு மிடத்தே போரிற் பட்டு இறந்தான். அதனால் இவற்குக் காரி யாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி யென்று பெயரெய்துவதாயிற்று. இப்பாட்டின்கண், முற்றுகைக்கஞ்சி அடைபட்டிருந்த நெடுங்கிள்ளியை நோக்கி, ஆசிரியர் கோவூர் கிழார், “தோன் றால், யானைகள் வெய்துயிர்த்து உருமென முழங்குகின்றன; குழவிகள் பாலின்றி அலறியழுகின்றன; மகளிர் வறுந்தலை முடிக்கின்றனர்; மனையிடங்களில் எழும் அழுகுரல் நின் அரண் மனைக்கண் கேட்கிறது; இவை நிகழவும் நீ அரண்மனைக்கண் அடங்கிக் கிடத்தல் இனிதன்று; முன்னே வந்து, முற்றுகை யிட்டிருக்கும் வேந்தனைப் பார்த்து ஈயும் அறவுணர்வால் “இது நினக்கு வேண்டின் பெற்றுக்கொள்ளெனச் சொல்லி எயிற் கதவைத் திறத்தல் வேண்டும்; எதிரூன்றிக் காத்தலே மறம் என்பது கருத்தாயின், போர் குறித்துத் திறந்துவிடல் வேண்டும். அறவை யும் மறவையு மல்லையாய் மதிற்கதவைத் திறவாது ஒருபுறத் தொடுங்கியிருப்பது நாணத் தகுவதொன்று” என்று கூறுகின்றார். இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த் 5 தலமரல் யானை யுருமென முழங்கவும் பாலில் குழவி யலறவு மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில் வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும் இன்னா தம்ம வீங்கினி திருத்தல் 10 துன்னருந் துப்பின் வயமான் றோன்றல் அறவை யாயி னினதெனத் திறத்தல் மறவை யாயிற் போரொடு திறத்தல் அறவையு மறவையு மல்லை யாகத் திறவா தடைத்த திண்ணிலைக் கதவின் 15 நீண்மதி லொருசிறை யொடுங்குதல் நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. (44) திணை : வாகை; துறை : அரசவாகை. அவன் ஆவூர் முற்றி யிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது உரை : இரும் பிடித் தொழுதியொடு - கரிய பிடியினது ஈட்டத் தோடு; பெருங்கயம் படியா - பெரிய கயத்தின்கட் படியாவாய்; நெல்லுடைக் கவளமொடு நெய்மிதி பெறாஅ - நெல்லை யுடைய கவளத்துடனே நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளமும் பெறாவாய்; திருந்தரை நோன் வெளில் வருந்த ஒற்றி - திருந்திய மருங்கையுடைய வலிய கம்பம் வருந்தச் சாய்த்து; நிலமிசைப் புரளும் கைய - நிலத்தின் மேலே புரளும் கையை யுடையவாய்; வெய் துயிர்த்து அலமரல் யானை - வெய்தாக வுயிர்த்துச் சுழலும் யானை; உரு மென முழங்கவும் - உருமேறு போல முழங்கவும்; பாலில் குழவி அலறவும் - பாலில்லாத குழவி அழவும்; மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் - மகளிர் பூவில்லாத வறிய தலையை முடிப்பவும்; நீரில் விiனை நல்லில் இனை கூஉக் கேட்பவும் - நீரில்லாத தொழில் புனைந்த நல்ல மனையிடத்துள்ளார் வருந்திக் கூப்பிடும் கூப்பீட்டைக் கேட்கவும்; ஈங்கு இனிதிருத்தல் இன்னாது - இவற்றிற்கு நாணாது இவ்விடத்து நீ இனிதாக இருத்தல் இன்னாது; துன்னரும் துப்பின் வயமான் தோன்றல் -நண்ணுதற்கரிய வலியையுடைய வலிய குதிரையையுடைய தோன்றால்; அறவை யாயின் நினது எனத் திறத்தல் - அறத்தையுடையையாயின் இது நினதன்றோ வென்று சொல்லித் திறத்தல் செய்வாயாக; மறவை யாயின் போரொடு திறத்தல் - மறத்தையுடையை யாயின் போரால் திறத்தல் செய்வாயாக; அறவையும் மறவை யும் அல்லையாக - அவ்வாறன்றி அறத்தையும் மறத்தையும் உடையை யல்லையாக; திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் - திறவாது அடைக்கப்பட்ட திண்ணிய நிலையை யுடைத்தாகிய கதவினையுடைய; நீண் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் - நீண்ட மதிலுள் ஒரு பக்கத்தே ஒதுங்குதல்; நாணுத் தகவுடைத்து - நாணுந் தன்மையை யுடைத்து; இது காணுங்கால் - இஃது ஆராயுங்காலத்து எ - று. செய்யென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது; திறத்த லென்பதனை இது திறக்க என வியங்கோளீறாக வுரைப்பினு மமையும். அம்ம, கேட்பித்தற்கண் வந்தது. அறவியு மறவியு மல்லை யாயின் என்று பாடமோதுவாரு முளர். படியா பெறா வென்பன எதிர்மறை வினையெச்ச முற்று. கைய வென்பது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று. விளக்கம் : பெருங்கயம் - பெருமை; யானைகள் படிதற்குரிய தகுதி. சுற்றிச் சுற்றி வரும் யானையை அலமரல் யானை யென்றார். நீர் இல் வினை- நன்னீர்மை யில்லாத தொழில். திறத்தல் என்பதற்குத் திறத்தலைச் செய்வாயாக என்று உரைக்கின்றாராதலால், “செய்யென வொரு சொல் வருவித்துரைக்கப்பட்டது” என்றார். வினையெச்ச வினைக் குறிப்பு முற்று என்பது குறிப்பு முற்றெச்சம். (44) 45. சோழன் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும் சோழன் நெடுங்கிள்ளி ஆவூரினின்றும் தப்பிப் போந்து தனக்குரிய உறையூரில் இருக்கையில், அதனை யறிந்த நலங்கிள்ளி போந்து உறையூரை முற்றுகையிட்டான். சோழர் குடிக்குரிய ராகிய இருவர் தம்முள் பகைகொண்டு மாறி மாறிப் போருடற்றித் திரிதல் நன்றன் றென்பதை யறிந்த கோவூர் கிழார் இப் பாட்டின்கண் இருவரையும் சந்து செய்விக்கின்றார். இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன் கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன் நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே 5 ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனாற் குடிப்பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர் நும்மோ ரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே. (45) திணை: வஞ்சி; துறை: துணைவஞ்சி சோழன் நலங் கிள்ளி உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும் கோவூர் கிழார் பாடியது. உரை: இரும் பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன் - பெரிய பனையினது வெளிய தோட்டைச் சூடினோ னல்லன்; கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் - கரிய கோட் டினையுடைய வேம்பினது தாரையுடையோ னல்லன்; நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்று - நின்னுடைய கண்ணியும் ஆத்தி யால் செறியக் கட்டப்பட்டது; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்று - நின்னுடன் பொருவா னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது; ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே - ஆதலால் நும்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது நுங்குடி யன்றோ; இருவீர் வேறல் இயற்கைய மன்று - இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; அதனால் - ஆதலால்; குடிப் பொருள் அன்று நும் செய்தி - நும் குடிக்குத்தக்க தொன்றன்று நுமது செய்கை; கொடித் தேர் நும்மோ ரன்ன வேந்தர்க்கு - கொடியாற் பொலிந்த தேரையுடைய நும்மைப் போலும் வேந்தர்க்கு; மெய்ம்மலி உவகை செய்யும் இவ்விகல் - உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும் இம் மாறுபாடு; ஆதலான் இது தவிர்த்தலே நுமக்குத் தக்கது எ - று. நின கண்ணியு மென்பது , நின்ன கண்ணியு மென விகார மாயிற்று. அதனா லென்பதனை யொழித்தும் பாட மோதுப. இது சந்து செய்தலால் துணைவஞ்சி யாயிற்று. விளக்கம்: சேரர் குடியிற் பிறந்தவ னல்லன் என்பதற்குப் “பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்” என்றார். வேம்பின் தாரை யுடையவன் பாண்டியன். வெல்லுதல் வேறல் என வந்தது; செல்லுதல் சேறல் என வருதல் போல. ஒரு குடிக்குப் பொருளாவது அதன் தகுதியாதலால், பொருளன் றென்றதற்குத் தக்க தொன்றன் றென வுரை கூறப்பட்டது. மெய்ம்மலி யுவகை - உடம்பு பூரிப்பதற் கேதுவாகிய உவகை. நும்மோ ரன்ன வேந்தர் - சேர பாண்டியர். (45) 46. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கிள்ளி வளவன் தன் பகைவனான மலையமான் மக்களைக் கொணர்ந்து கொலையானைக் காற்கீழிட்டுக் கொல்ல முயறல் கண்ட கோவூர் கிழார், அதனைத் தவிர்க்க வேண்டி, இப் பாட்டிண்கண், “நீயோ புறாவின் பொருட்டுத் தன்னை வழங்கிய சோழன்மரபிற் பிறந்துள்ளாய்; இவர்களோ புலவர்கட்குப் பெருங்கொடை நல்கி வாழும் பெரியோர் மரபினர்; மிக்க இளையர்; இம்மன்றினை யஞ்சி மருண்டு நோக்குகின்றனர்; யான் கூறுவது கேட்டபின் விரும்புவது செய்க” என்று இயம்புகின்றார். நீயே. புறவி னல்ல லன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை இவரே, புலனுழு துண்மார் புன்க ணஞ்சித் தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர் 5 களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி விருந்திற் புன்கணோ வுடையர் கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே. (46) திணை: வஞ்சி; துறை: துணைவஞ்சி சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் கிடுவுழிக் கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்டது. உரை: நீயே - நீதான்; புறவின் அல்லல் அன்றியும் - புறாவுற்ற துன்ப மன்றியும்; பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை - பிறவு முற்ற துன்பம் பலவற்றையும் தீர்த்த சோழன் மரபினுள்ளாய்; இவரே - இவர்தாம்; புலன் உழு துண்மார் புன்கண் அஞ்சி - அறிவான் உழுதுண்ணும் கற்றோரது வறுமையை யஞ்சி; தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் - தம்முடைய பொருளைப் பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலை யுடையராய் வாழ்வாரது மரபினுள்ளார்; களிறு கண்டழூஉம் - இவர் இப்பொழுது களிற்றைக் கண்டு தம் இளமையால் தாம் முன்பு வெருவி யழுகின்ற; அழாஅல் மறந்த புன்றலைச் சிறாஅர் - அழுகையை மறந்த புல்லிய தலையையுடைய சிறு பிள்ளைகள்; மன்று மருண்டு நோக்கி - மன்றை வெருவிப் பார்த்து; விருந்திற் புன்கண் நோவுடையர் - முன்பு அறியாத புதியதொரு வருத்தத்தை யுடையர்; கேட்டனை யாயின் - இது கேட்டாயாயின்; நீ வேட்டது செய்ம்மே - நீ விரும்பியதைச் செய்வாயாக எ - று. தண்ணிழல் வாழ்நர் சிறாஅரென வியைப்பினு மமையும். அழால் களிறு கண்டு மறந்த வெனக் கூட்டுக. நீ புறா முதலாயின வற்றின் துயர் தீர்த்தற்கு உயிர்க்கொடை பூண்டோன் மருக னாதலாத லானும், இவர் கற்றோர் வறுமை யஞ்சிப் பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் மரபினுள்ளாராதலானும் இவர் நின்னால் அருளத் தகி னல்லது முனியத்தகா ரென்பதாம். இதுவும் இவரைக் கொல்லாமற் சந்து செய்வித்தலின், துணை வஞ்சியாயிற்று. விளக்கம்: களிறு கண்டழுதற்குக் காரணம் விளக்குதற்கு, இளமையால் வெருவி யழும் என்றுரைத்தார். உயிரிழக்கும் துன்பமாதலின் அதனை “விருந்திற் புன்கண் ” என்றார். அழூஉம் அழாஅல் - அழு கின்ற அழுகை; அழாஅல் தொழிற்பெயர். செய்ம்மே என்றது ஈற்று மிசை யுகரங் கெட்ட செய்யுமென் முற்றன்று; அது முன்னிலைக்கண் செல்லாது, “நின்மே” யென்றாற்போல ஏவற்பொருட்கண் வந்தது. (46) 47. சோழன் நெடுங்கிள்ளி ஆசிரியர் கோவூர் கிழார், இந்த நெடுங்கிள்ளி, சோழன் நலங் கிள்ளியிடத்திலிருந்து போந்த இளந்தத்த னென்னும் புலவரை அவனுடைய ஒற்றனெனக் கருதிக் கொல்லப் புகுந்தா னாகக், கண்டு, இப்பாட்டால் அப் புலவரை உய்விப்பாராய், “வேந்தே, வரிசை நோக்கி வாழும் புலவரது பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீங்கு செய்வ தன்று; வள்ளியோரை நாடிச் சென்று அவரைப் பாடி அவர் தரும் பொருள் கொண்டு பகுத்துண்டு பல்லுயிரோம்புவது பரிசிலர் செயல்; மண்ணாளும் செல்வ முடைய நும்போலும் வேந்தரை யொப்பக் கல்வியால் மாறுபட்டோரைத் தம் புலமையால் வென்று தலைமை பெறுவது அவர்க் கியல்பு ” என்று கூறுகின்றார். வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி நெடிய வென்னாது சுரம்பல கடந்து வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி 5 ஓம்பா துண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட நண்ணார் நாண வண்ணாந் தேகி ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ் 10 மண்ணாள் செல்வ மெய்திய நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே. (47) திணை: வஞ்சி; துறை: துணைவஞ்சி சோழன் நலங் கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்த னென்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தானென்று கொல்லப் புக்குழிக் கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்டது. உரை: வள்ளியோர்ப் படர்ந்து - வண்மை யுடையோரை நினைத்து; புள்ளிற் போகி - பழுமரம் தேரும் பறவை போலப் போகி; நெடிய என்னாது சுரம் பல கடந்து - நெடிய வென்று கருதாது அரிய வழி பலவற்றையும் கழிந்து; வடியா நாவின் - திருந்தாத நாவால்; வல்லாங்குப் பாடி - தாம் வல்லபடி பாடி; பெற்றது மகிழ்ந்து - ஆண்டுப் பெற்ற பரிசிலான் மகிழ்ந்து; சுற்றம் அருத்தி - சுற்றத்தை யூட்டி; ஓம்பா துண்டு - தாமும் பொருளைப் பாதுகாவா துண்டு; கூம்பாது வீசி - உள்ளம் மலர்ந்து வழங்கி; வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை - தம்மைப் புரப்போராற் பெறும் சிறப்பு ஏதுவாக வருந்தும் இப் பரிசி லான் வாழும் வாழ்க்கை; பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்று - பிறர்க்குச் செய்யும் கொடுமை யறிந்ததோ வெனின் இல்லை; திறப்பட - கூறுபட; நண்ணார் நாண - கல்வி முகத்தால் தம் மோடு மலைந்தோர் நாண; அண்ணாந் தேகி - தமது கல்வி யான் வென்று தலையெடுத்து நடந்து; ஆங்கு இனி தொழுகின் அல்லது - அவ்விடத்து இனிதாக ஒழுகி னல்லது; ஓங்கு புகழ் மண்ணாள் செல்வ மெய்திய நும்மோ ரன்ன செம்மலும் உடைத்து - உயர்ந்த புகழையுடைய நிலமாளும் திருப் பொருந்திய நும்மை யொக்கும் தலைமையு முடைத்து எ - று. ஓங்கிய வென்பதூஉம் செல்வமுடைத் தென்பதூஉம் பாடம். சுரம்பல கடந்து புள்ளிற் போகி யென மாறிக் கூட்டுக. பரிசில்வாழ்க்கை நும்மோ ரன்ன செம்மலு முடைத்து; ஆதலால் நண்ணார் நாண இனி தொழுகி னல்லது பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்று எனக் கூட்டுக. இக் கோவூர் கிழார் பரிசில் வாழ்நருள் ஒருவராதலான் வடியா நாவின் வல்லாங்குப் பாடியெனப் பணிந்து கூறினா ரென்க. விளக்கம்: படர்தல் - நினைத்தல், வள்ளியோரை நினைந்து செல்வோர்க்கு உவமமாகக் கூறலின், அதற்கேற்ப, பழுமரந் தேர்ந்து செல்லும் பறவையென உரை கூறினார். “பழுமரந் தேரும் பறவை போல” (பெரும்பாண். 20) என்றார் பிறரும். கூம்பாது வீசி யென்புழி, கூம்புதல்- மனம் சுருங்குதல். பெருமிதமான நடைகொண்டு சென்று என்பது- அண்ணாந் தேகி யெனப்பட்டது. செம்மல் - தலைமை; செம்மை - நிலையுமாம். (47) 48. சேரமான் கோக்கோதை மார்பன் சேரவேந்தருள் ஒருவனான இவன், கோதை மார்பன் என்னும் இயற்பெயரை யுடையவன்; இவனுடைய தலைநகரம் தொண்டி யென்பது. இவனது நாடு குறிஞ்சி வளமும், மருத வளமும், நெய்தல் வளமும் பொருந்தியது. இவன் பொய்கையார் முதலிய புலவர் பெருமக்களை ஆதரித்து அவராற் பாடப்பெறும் சிறப்புப் பெற்றவன். இச் சேரமானுக்கும் கூடல் நகரிலிருந்து ஆட்சி புரிந்த பழையன் மாறன் என்ற பாண்டிய மன்னனுக்கும் பகைமை யுண்டு. அக் காலத்தே சோழவேந்தனான கிள்ளி வளவன் பழையன் மாறன்பாற் பகைமைகொண்டு கூடலை முற்றுகை செய்து, மாறனை வென்று, அவனுடைய குதிரை யானை முதலிய பலவும் கைக்கொண்டான்.தான் செய்தற்குரிய செயலைக் கிள்ளிவளவன் செய்தது கண்டு, இச்சேரமான் பேருவகையுற்றுச் சிறந்தான். இச் சேரனது வள்ளன்மை புலவர் பாடும் புகழ்பெற்றதாகும். இப்பாட்டின்கண் பொய்கையார், கோதை மார்பன்பாற் சென்று அவன் போரில் மேம்படும் புகழைப் பாடிப் பெருவளம் பெற்று வருபவர், வேறொரு புலவரைக் கண்டு, அவரை இச் சேரன்பால் ஆற்றுப்படுக்கின்றார். ஆசிரியர் பொய்கையார், இச்சேரனை இரண்டு பாட்டுக்கள் பாடிச் சிறப்பிக்கின்றார். இவருடைய ஊர் சேரநாட்டுத் தொண்டி நகரம். இந்நகரத்து வாயிற் கதவில் மூவன் என்பா னொருவனது பல்லைப் பிடுங்கி இழைத்திருக்கும்செய்தி யொன்றை இவர் குறிக்கின்றார். கோக்கோதை மார்பனை இவர் “கானலந் தொண்டிப் பொருநன்” என்றும், “தெறலருந் தானைப் பொறையன்” என்றும் குறிக்கின்றார். சோழன் செங்கணான் சேரமான் கணைக்கா லிரும்பொறையொடு செய்த போரைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ள களவழி நாற்பது இவர் பாடிய தென்பர். கோதை மார்பிற் கோதை யானும் கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும் மாக்கழி மலர்ந்த நெய்த லானும் கள்நா றும்மே கானலந் தொண்டி 5 அஃதெம் மூரே யவனெம் மிறைவன் அன்னோற் படர்தி யாயி னீயும் எம்மு முள்ளுமோ முதுவா யிரவல அமர்மேம் படூஉங் காலைநின் புகழ்மேம் படுநனைக் கண்டன மெனவே. (48) திணை : பாடாண்டிணை; துறை : புலவராற்றுப் படை. சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது. உரை: கோதை மார்பின் கோதையானும் - கோதையுடைய மார்பிற்கணிந்த கோதையானும்; கோதையைப் புணர்ந்தோர் கோதையானும் - அக் கோதையைப் புணர்ந்த மகளிர் சூடிய கோதையானும்; மாக்கழி மலர்ந்த நெய்தலானும் - கரிய கழியின்கண் மலர்ந்த நெய்தற் பூவானும்; கள் நாறும் கானலம் தொண்டி - தேன் நாறாநிற்கும் கானலையுடைய தொண்டி; அஃது எம்மூர் - அஃது எம்முடைய வூர்; அவன் எம் இறைவன் - அவன் எம்முடைய தலைவன்; அன்னோற் படர்தி யாயின் - அத் தன்மையோனிடத்தே போகின்றாயாயின்; நீயும் எம்மும் உள்ளுமோ - நீயும் எம்மையும் நினைப்பாயாக; முது வாய் இரவல - முதிய வாய்மையையுடைய இரவல; அமர் மேம் படூஉங் காலை - நீ அமரின்கண் மேம்படுங் காலத்து; நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் என - நினக்கு உளதாகிய புகழை மேம்படுத்துமவனைக் கண்டேம் யாமெனச் சொல்லி எ.று. இரவல, நீயும் அன்னோற் படர்குவையாயின், நின் புகழ் மேம்படுநனைக் கண்டன மென எம்மையும் உள்ளெனக் கூட்டுக. கண்டன மென எம்மும் உள்ளென்றாரேனும், உள்ளிக் கண்டனமெனச் சொல்லென்பது கருத்தாகக் கொள்க. மோ: முன்னிலை யசைச்சொல். நீயு மென்பதூஉம், எம்முமென் பதூஉம், எச்சவும்மை. தலைவனது இயல்பையும் ஊரையும் கூறி, முதுவாயிரவல எம்மும் உள்ளெனத் தன் தலைமை தோன்றக் கூறினமையின், இது புலவராற்றுப்படையாயிற்று. விளக்கம்: இடையறாச் சேறுடைமையால், கறுத்திருக்கும் கழியை “மாக்கழி” யென்றார்; குவளை முதலிய பூக்களின் மிகுதியால் கறுத்துத் தோன்றுதல் பற்றி இவ்வாறு கூறப்பட்ட தென்றுமாம். அறிவு முதிர்ந்த வாய்மையுடைய இரவலன் (முருகு. 284 உரை) என்பர் நச்சினார்க்கினியர். உள்ளு மென்பதை எச்சப்படுத்தி, உள்ளிக் கண்டன மென இயைத்துக் கொள்ளவேண்டு மென்பது கருத்து. (48) 49. சேரமான் கோக்கோதை மார்பன் ஒருகால் சேரமான் கோக்கோதை மார்பனது நாட்டு நலம்பற்றி நல்லிசைச் சான்றோரிடையே பேச்சு நிகழ்ந்தது. அவன் நாடு நானில வளமுமுடைய தென்பாராய், அங்கே இருந்த ஆசிரியர் பொய்கையார், இச் சேரமான் சேர நாட்டவனாயினும், முல்லையும், மருதமும், நெய்தலுமாகிய, பல்வகை நாடுகளையு முடையன்; அதனால் அவனை நாடனென்றோ, ஊரனென்றோ, சேர்ப்ப னென்றோ வரையறுத்துக் கூறலாகாது; குறிஞ்சி நிலத்துப் புனவர் தட்டையைப் புடைப்பராயின் மருத நிலத்துக் கழனி யிலும் கடல் சார்ந்த நெய்த னிலத்திலும் உள்ள புள்ளினங்கள் வெருவி யெழுந்தோடும் என்று இப்பாட்டால் வற்புறுத்தினார். நாட னென்கோ வூர னென்கோ பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ யாங்கன மொழிகோ வோங்குவாட் கோதையைப் புனவர் தட்டை புடைப்பி னயல 5 திறங்குகதி ரலமரு கழனியும் பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே. (49) திணை : பாடாண்டிணை; துறை: இயன்மொழியுமாம். சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது. உரை: நாடன் என்கோ - குறிஞ்சிநில முடைமையால் நாட னென்று சொல்லுவேனோ; ஊரன் என்கோ - மருத நிலமுடை மையால் ஊரனென்று சொல்லுவேனோ; பாடிமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ - நெய்தல் நில முடைமையால் ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலையுடைய சேர்ப்பனென்று சொல்லுவேனோ; யாங்கனம் மொழிகோ - எவ்வாறு சொல்லு வேன்; ஓங்கு வாள் கோதையை - மேம்பட்ட வாளையுடைய கோதையை; புனவர் தட்டை புடைப்பின் - புனங்காப்போர் கிளிகடி கருவியைப் புடைப்பின்; அயலது இறங்கு கதிர் அலமரு கழனியும் - அப் புனத்திற் கயலதாகிய வளைந்த நெற்கதிர் சுழலும் வயலின்கண்ணும்; பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் - மிக்க நீரையுடைய கடற்கரையின்கண்ணும் உளவாகிய; புள் ஒருங்கு எழும் - புட்கள் சேர வெழுமாதலான் எ - று புனவர் தட்டை புடைப்பின் எனக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்பக் கூறினமையான், நாட னென்பதூஉம் அவ்விரண்டு நிலத்துக்கும் கொள்ளப்படும். எனவே முல்லை நிலமு முடைய னென்றவாறாம். புனவர் தட்டை புடைப்பின் கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழு மாதலால் கோதையை யாங்கன மொழிகோ வெனக் கூட்டுக. இது நானிலமு முடைய னாதலிற் பெருஞ்செல்வ முடையன்; நீ அவன்பாற் செல்லென ஆற்றுப்படுத்தவாறு; அவனது இயல்பைப் புகழ்ந்தமையான் இயன்மொழியு மாயிற்று. விளக்கம் குறிஞ்சி, முல்லை நிலங்கட்குரிய தலைமகனை நாடன் என்றும், மருத நிலக் கிழவனை ஊர னென்றும், நெய்தல் நிலத் தலைவனைச் சேர்ப்ப னென்றும் கூறும் வழக்குப்பற்றி, “நாடனென்கோ ஊர னென்கோ” என்றதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. “கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன், குறும்பொறை நாடன் நல்வய லூரன். தண்கடற் சேர்ப்பன்”(ஐங்: 183) எனப் பிறரும் கூறுதல் காண்க. பாலை விளைநில முடையதன் றாதலால், அதனை யொழித்து ஏனை நானிலங்களே கூறப்பட்டன. (49) 50. சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை இப் பெருஞ்சேர லிரும்பொறை செல்வக் கடுங்கோ வாழி யாதன் மகன். இவன் தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி யெனப் பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது. இவன் தகடூருக்குரிய அதியமானொடு பொருது அவனது தகடூரை யெறிந்து கொண்டதனால் இவ்வாறு சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இவனைப் பதிற்றுப்பத்திற் காணப்படும் எட்டாம் பத்திற் பாடிய அரிசில்கிழாருக்கு இவன் தன் கோயிலாளுடன் வெளிப் போந்து கோயிலில் உள்ளனவும் அரசுங் கொள்கவென வழங்கினான். அவர் அவற்றை ஏலாது வேறாகக் கொடுத்த ஒன்பது நூறாயிரம் காணத்தைப் பெற்றுக்கொண்டு தமக்கு இவன் கொடுத்த அரசினை இவனையே மேற்கொண்டாளுமாறு வேண்டி அமைச்சுப் பூண்டார். இவன் பதினேழியாண்டு அரசு வீற்றிருந்தான். இவன் ஆட்சிக் காலத்தே, புலவர் பலரும் இவனால் உயிரினும் சிறந்தா ராகப் பாராட்டப் பட்டனர். ஒருகால், இவனைக் காண்பதற்கு வந்திருந்த மோசிகீரனார் என்னும் சான்றோர், வெற்றி முரசு வைக்கும் கட்டிலின்மேல் தம்மை யறியாது கிடந்து உறங்கி விட்டார்.வெற்றித் திரு வீற்றிருக்கும் கட்டிலின் மேல் வேறு பிறர் கிடந்து உறங்குவது குற்றமாகும். அது செய்வோர், கொலைத் தண்டத்துக் குரியவராவர். இஃது அக்கால அரசு முறை. இதனை யறியாதவர் புலவர். அவர் உறங்கியதை யறிந்த இவ்விரும் பொறை அவரைக் கொலை புரியாது, இனிதே உறங்குமாறு அவர்க்குக் கவரிகொண்டு வீசலுற்றான். இதனால், இவன் வெற்றித் திருவும் பிறவும் புலவர் புலமைமாண்பினை நோக்கத் தாழ்ந்தன வெனக் கருதும் கருத்தினனாதலை நன்கறியலாம். இப் பாட்டின்கண், முரசுகட்டிலின்கண் அறியாது ஏறி உறங்கிக் கிடந்த தனக்கு உறக்கம் தெளியுங்காறும் சாமரை வீசிய சேரமானது பேரருளை வியந்து, மோசிகீரனர், “முரசினுடைய மென்பூஞ் சேக்கைக்கண் அறியா தேறிய என்னை, வாளால் இருபாற் படுப்பதைச் செய்யாதருளிய தொன்றே, நீ தமிழ் முழுவதும் நன்கறிந்த சிறப்புக்குப் போதிய சான்றாகும். அதனோ டமையாது, என்னை யணுக வந்து, முழவுத்தோள்கொண்டு, கவரி வீசியதற்குக் காரணம் யாதுகொல்லோ? இவ்வுலகத்தே இசையுடையோர்க் கல்லது உயர்நிலை யுலகத்துள் உறைவிடம் இல்லையெனச் சான்றோர் கூறுதலை விளங்கக் கேட்ட கேள்விப் பயனோ நீ இங்கே இதனைச் செய்தற்குக் காரணம்” எனக் கூறிப் பாராட்டுகின்றார். ஆசிரியர் மோசி கீரனார், மோசி யென்பாருடைய மகனார் போலும் இனி, மோசு கீரனார் என்று கொண்டு, மோசுகுடி யென்னும் ஊருண்மை பற்றி அவ்வூரினராகக் கருதுபவரும் உண்டு. இவர், சேரநாட்டு வேந்தனையே யன்றி, அவன் நாட்டிற் கடுத்த கொண்கான நாட்டுத் தலைவனையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவன் கொண்கானங் கிழான் எனப்படுவன். “உலகத்து வாழும் மக்கட்கு நெல்லும் நீருமன்று உயிர்; மக்கள் மன்னனையே உயிராகக்கொண்டு வாழ்வர்; அதனால், வேந்தன், “யான் உலகிற் குயிராவேன் என்றறிந் தொழுகுதல் கடமை யாகும்” என்று பெருஞ்சேர லிரும்பொறைக்கு வற்புறுத்தி யுரைத் தவர் இவரே. கொண்கானங் கிழானைக் காணச்சென்ற காலத்து, “முடிவேந்தர்பால் நெருங்கிப் பயிலும் இவர், குறுநிலக் கிழாரைப் பாடிப் பரிசில் பெறல் வேண்டாவே” என்றொரு கேள்வி யெழுந்தது. அதற்கு விடையிறுப்பார் போல, கடலருகே வாழி னும் நீர் வேட்கையுற்றோர் சிற்றூறலையே நாடுவர்; அதுபோல், அரசர் உழையராகிய வழியும் புலவர் உயர்ந்த வள்ளியோரையே விரும்பிச் செல்வர்; எனக்கு ஈயென இரத்தல் அரிதாயினும் இக்கொண்கானம் பாடுதல் எளிதுகாண்” என்று பாடுகின்றார். மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் 5 குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை யெண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியா தேறிய வென்னைத் தெறுவர இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை 10 அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல் அதனொடு மமையா தணுக வந்துநின் மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென வீசி யோயே வியலிடங் கமழ இவணிசை யுடையோர்க் கல்ல தவண 15 துயர்நிலை யுலகத் துறையு ளின்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குருசினீ யீங்கிது செயலே (50). திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. சேரமான் தகடூ ரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை முரசு கட்டில் அறியா தேறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயிலெழுந் துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது. உரை : மாசற விசித்த - குற்றந் தீர வலித்துப் பிணித்த; வார்புறு வள்பின் - வாரப்பட்ட வாரையுடைய; மைபடு மருங்குல் பொலிய - கருமரத்தாற் செய்தலான் இருட்சி பொருந்திய பக்கம் பொலிவு பெற; மஞ்ஞை ஒலி நெடும் பீலி ஒண்பொறி - மயிலினது தழைத்த நெடிய பீலியால் தொடுக்கப்பட்ட ஒள்ளிய பொறியை யுடைத்தாகிய; மணித் தார் - நீலமணி போலும் நிறத்தையுடைய தாரை; பொலங்குழை உழிஞை யொடு பொலியச் சூட்டி - பொற்றளிரையுடைய உழிஞை யுடனே பொலியச் சூட்டப்பட்டு; குருதி வேட்கை உரு கெழு முரசம் - குருதிப்பலி கொள்ளும் விருப்பத்தையுடைய உட்குப் பொருந்திய வீரமுரசம்; மண்ணி வாரா அளவை - நீராடி வருவதன் முன்னே; எண்ணெய் நுரை முகந்தன்ன மென்பூஞ் சேக்கை - எண்ணெயினது நுரையை முகந்தாற் போன்ற மெல்லிய பூவையுடைய கட்டிலின்கண்ணே; அறியா தேறிய என்னை - இதனை முரசு கட்டிலென்ப தறியாது ஏறிக் கிடந்த என்னை; தெறு வர இருபாற் படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை - வெகுட்சி தோன்ற இரு கூறாக்கும் நின்னுடைய வாளை வாயை மாற்றியதாகிய; அதூஉம் சாலும் - அதுவும் அமையும்; நல் தமிழ் முழு தறிதல் - நல்ல தமிழ் முழுதும் அறிந்தமைக்கு; அதனொடும் அமையாது - அவ் வெகுட்சி யொழிந்து அதனாலும் அமையாதே; அணுக வந்து - குறுக வந்து; நின் மதனுடை முழவுத் தோள் ஓச்சி - நினது வலியை யுடைய முழவுபோலும் தோளை யெடுத்து; தண்ணென வீசியோய் - சாமரத்தாற் குளிர வீசினாய்; வியலிடம் கமழ - இவ்வகன்ற உலகத்தின்கண்ணே பரக்கும் பரிசு; இவண் இசையுடையோர்க் கல்லது - இவ் வுலகத்துப் புகழுடையோர்க் கல்லது; அவணது - அவ்விடத்ததாகிய; உயர்நிலை உலகத் துறையுள் இன்மை - உயர்ந்த நிலைமையுடைய உலகத்தின் கண் உறைதலில்லாமையை; விளங்கக் கேட்டமாறு கொல் - தெரியக் கேட்ட பரிசாலேயோ; வலம் படு குருசில் - வெற்றி பொருந்தப்பட்ட தலைவர்; நீ ஈங்கு இது செயல் - நீ இவ் விடத்து இச் சாமரையை வீசுதல். அதற்குக் காரணம் சொல்லு வாயாக எ-று. சூட்டி யென்பதனைச் சூட்ட வென்று திரிப்பினு மமையும். உழிஞை - கொற்றான்; அது குட நாட்டார் வழக்கு. முழவுத் தோளோச்சி யெனவும் தண்ணென வீசியோ யெனவும் கூறிய வாற்றால் சாமரை யென்பது பெற்றாம். கமழ்தல் ஈண்டுப் பரத்தற்பொருட்டாய் நின்றது; தமிழென்பதற்குத் தமிழ்நாடெனினு மமையும். குருசில், நீ இது செய்தல், இசையுடையோர்க் கல்லது உறை யுளின்மை விளங்கக் கேட்ட மாறுகொல் எனக் கூட்டுக. எண் ணென்பது கருத்தெனவுமாம். எண்ணி யென்று பாடமாயின் கருதி யென்க. விளக்கம் : மைபடு மருங்குல் என்புழி மருங்குல் பக்க மாதலால் மைபடு பக்க மெனக் கொண்டார்; மை - கருமை. இதற்குக் காரணம் கருமரத் தாற் செய்யப்பட்டது என்கின்றார். பொலங்குழை யுழிஞை, பொன் னாற் செய்யப்பட்ட உழிஞை யென்றும், குழை யென்பது அதற்கு அடையென்றும் கொள்ளலாம். பொற்றளிரையுடைய உழிஞை யென்பர் உரைகாரர். உழிஞைப்பூ பொன்னிறமுடையது. முரசுறை கடவுட்குக் குருதிப் பலி தருதல் மரபாதலால், “குருதி வேட்கை யுருகெழு முரசம்” என்றார். தெறுதல் - வெகுளுதல். சாமரை வீசுவது தண்ணென்ற காற்றெழுப்புங் குறிப்பினாலாதலால், “தண்ணென வீசியோய்” என்றார். வெகுட்சியால் வெம்மை செய்தற்குரிய நீ, சாமரையால் தண்ணென வீசினாய் என்பதாம். இம்மையிற் புகழுடையோர்க் கல்லது மறுமைக்கண் துறக்கவாழ் வில்லை யென்பதுபற்றி, “இவணிசை யுடையோர்க் கல்லது அவணது, உயர்நிலை யுலகத் துறையுள்” இல்லை யென்பது ஈண்டுக் கூறப்படு கிறது. தமிழ் முழுதும் என்றது. இய லிசை நாடக மென்ற முத்தமிழை யும் குறித்து நின்றது.தமிழ்நாடு முழுவதும் என்று கூறலும் பொருந்தும் என்றற்குத் “தமிழென்பதற்குத் தமிழ்நாடெனினு மமையும்” என்றார். தண்ணென வென்பதற்கு வேறாக, எண்ணென வென்றும் எண்ணி யென்றும் பாடமுண்டு. அக்காலை, “எண்ணென்பது கருத்தெனவு மாம்; எண்ணியென்று பாடமாயின் கருதி யென்க” என்று கூறுக வென்றார். (50) 51. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கூடகார மென்பது பாண்டிநாட்டி லிருந்ததோர் ஊர். இவ்வேந்தன் தன் நாட்டிற்கு வடக்கிலிருந்த வேந்தருடன் பெரும்போருடற்றி வெற்றி மேம்பட்டவன். இவனுடைய போர்த்திறலை வியந்து. ஐயூர் முடவனார், மதுரை மருதனிள நாகனார் என்ற இரு சான்றோரும் அழகிய பாட்டுக்களைப் பாடி யிருக்கின்றனர். இவன் காலத்தே. சோழநாட்டைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி புரிந்து வந்தான். இவ் வழுதிக்குப் பின் வந்த பாண்டிவேந்தன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். நாஞ்சில்மலைத் தலைவனான வள்ளுவனும் இவன் காலத்தவனே. ஆசிரியர் முடவனார் ஐயூர் என்னு மூரினார்.இவர் முடவ ரெனப்படுதலால், நடந்து செல்ல இயலாதவரென்றும், இதனால் இவர் தாமான் தோன்றிக்கோன் என்பானை யடைந்து வண்டி யிழுத்தற்குப் பகடு பல தரப்பெற்றன ரென்றும் கூறுவர். தாம் கிள்ளிவளவனைக் காணச் சென்றதாகவும். இடை வழியில் மாட்டாமை வந்துற, “கிள்ளிவளவ னுள்ளியவற் படர்ந்தும், செல்லேன் செல்லேன் பிறர் முக நோக்கேன்” என்று வருந்தி ஒருபால் இருப்ப, அதனை யறிந்த தோன்றிக்கோன் இவர்க்குச் சிறப்புச் செய்ததாகவும், இவர் அவனை, “கடுந்தேர் அள்ளற் கசாவா நோன்சுவல், பகடே யத்தையான் வேண்டி வந்தது”வென விரும்பியதாகவும், அவன் “விசும்பின் மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை, ஊர்தியொடு நல்கி”னானெனவும் பிறிதோரிடத்திற் (புறம்: 399) பாடியுள்ளார். இப் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்து வருகையில் , தன்னேவல் வழிநின்று திறை செலுத்தி வாழ்தலின்றிப் பகைத்துப் போருடற்றிய வேந்தரது வலியினை யழித்துத் தன்னாணையே அவர் நாட்டி னும் செல்வித்தான். அதுகண்ட ஆசிரியர் ஐயூர் முடவனார், “வேந்தே, நீர் மிகின் சிறையும், தீ மிகின் நிழலும், காற்று மிகின் வலியும் இல்லாதவாறு போல, நீ மிக்கெழின் எதிர்ந்துய்யும் வேந்தர் பிறரில்லை; எவரேனும் உளராயின், அவர் வாழ்வும் அரணும் ஈயலும் அதன் புற்றும் போலச் சிறிது போதிற் கெடுதல் திண்ணம்” என இப் பாட்டின்கண் புகழ்ந்து பாராட்டுகின்றார். நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின் மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை வளிமிகின் வலியு மில்லை யொளிமிக் கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி 5 தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே அளியரோ வளியரவ னளியிழந் தோரே நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த 10 செம்புற் றீயல் போல ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே (51) திணை: வாகை; துறை: அரசவாகை. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது. உரை : நீர் மிகின் சிறையு மில்லை - நீர் மிகுமாயின அதனைத் தாங்கும் அரணு மில்லை; தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை - நெருப்பு மிகுமாயின் உலகத்து நிலை பெற்ற உயிர்களை நிழல் செய்யும் நிழலுமில்லை; வளி மிகின் வலியும் இல்லை - காற்று மிகுமாயின் அதனைப் பொறுக்கும் வலியு மில்லை; ஒளி மிக்கு - விளக்கம் மிக்கு; அவற்றோர் அன்ன சினப் போர் வழுதி - அவற்றை யொத்த சினம் பொருந்திய போரையுடைய வழுதி; தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் - குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொதுவென்று கூறப் பொறானாய்; போரெதிர்ந்து - போரை யேற்று; கொண்டி வேண்டுவனாயின் - திறையை வேண்டுவனாயின்; கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற்றனர் - கொள்க எனச் சொல்லி முன்னே கொடுத்த மன்னர் நடுக்கம் தீர்ந்தார்; அளியரோ அளியர் - கொடாமையின் யாவராலும் மிக இரங்கத்தக்கார்; அவன் அளியிழந்தோர் - அவனது அருளை யிழந்த அரசர்; நுண் பல சிதலை - நுண்ணிய பல கறையான்; அரிது முயன்று எடுத்த - அரிதாக உழந்தெடுக்கப்பட்ட; செம்புற்றீயல் போல - செம்புற்றினின்றும் புறப்பட்ட ஈயலைப் போல; ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோர் - ஒரு பகற் பொழுதின்கண் வாழும் உயிர்வாழ்க்கையின் பொருட்டுச் சுழல்வோர் எ-று. வழுதி, தமிழ் பொதுவெனப் பொறானாய்க் கொண்டி வேண்டுவானாயின் கொடுத்த மன்னர் நடுக்கற்றனர்; கொடாமை யின் அவன் அளியிழந்தோர் ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோர்; ஆதலான் அவர் அளியரோ அளியர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க; அவன் அளியிழந் தோராகிய உலமருவோர் அளியரெனக் கூட்டி யுரைப்பினு மமையும். அளியரோ அளிய ரென இரங்கற்குறிப்புத்தோன்ற அடுக்கி நின்றது. விளக்கம் : மாறன் வழுதி போர் வேட்டெழுந்த எழுச்சி காண்போர் தம்முட் கூறுவதுபோல் அமைந்துள்ளது. அரணழித்தற்கு நீர் மிகுதியும்; வெம்மை செய்தற்குத் தீ மிகுதியும், மோதி முருக்குதற்கு வளியும் உவமமாயின. கொள்ளப்படுவது கொண்டி;அஃது ஈண்டுக் கொள்ளப் படும் திறைமேல் நின்றது. திறையை முன்னே செலுத்திவிட்டு இதனைக் கொள்க எனப் பின்னே வாயாற் சொல்லி வேண்டுதல் திறை செலுத்தும் முறையாதலால், கொள்க வென்று சொல்லி முன்னே கொடுத்த மன்னர் என வுரைத்தார். கொடாதார் ஈயல் போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோராவர் என்க. அவரது உலமரும் நிலையினைக் கண்டு இரங்கிக் கூறுதலின் “அளியரோ வளியர்” என்று இயம்புகின்றார். திறை செலுத்தாத வேந்தர்க்கு ஈயலை உவமை கூறலின், அவரது செல்வ வரண், அரிதுமுயன்றெடுத்த செம்புற்றை ஒக்கு மென்றவாறாம். சுழற்சிப் பொருளதாகிய அலமரல் என்பது உலமரல் என வந்தது. 52. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆசிரியர் மருதன் இளநாகனார், பாண்டிவேந்தர்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையர். பாண்டி நாட்டு மக்கள் அயரும் விழாக்களையும் பாண்டிவேந்தருடைய போர்த் திறங் களையும் பலபடியாகப் புகழ்ந்து பாடும் பண்பினர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை இறைவனுடைய “பிறைநுதல் விளங்கு மொருகண் போல, வேந்து மேம்பட்ட பூந்தார் மாற” என்று பாராட்டுகிறார். “நண்ணார், அரண் தலைமதிலராகவும் முரசுகொண்டு ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன், பெரும் பெயர்க் கூடல்” என்று கூடல் நகரையும், “நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும், தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார், ஆனா விருப்போ டணியயர்ப காமற்கு வேனில் விருந்தெதிர் கொண்டு” என அந்நகரவர் காமவேள் விழா வயர்தலும் பிறவும் கூறுகின்றார். இவரால் சிறுகுடி வாணனும், வேளிரும், நாஞ்சில் வள்ளுவனும் பிறரும் பாராட்டப்படுகின் றார். அந்துவனார் முருகவேட்குரிய பரங்குன்றத்தைப் புகழ்ந்து பாடிய சிறப்பை இவர் வியந்து கூறுகின்றார். இவர் பாடியுள்ள பாட்டுக்கள் மிக்க இலக்கிய நலம் சிறந்தனவாகும். பாண்டி நாட்டுக்கு வடக்கிலுள்ள வேந்தர் இந்த மாறன் வழுதியின் போராண்மை கேட்டு அஞ்சும் திறத்தை இப்பாட்டின்கண் நயமுறக் கூறுகின்றார். இவர் பாடிய பாட்டுக்களை நோக்கின், இவர் பாண்டிநாட்டுத் திருச்செந்தூர்க் கருகில் பிறந்தவராகலாம் என்று நினைத்தற் கிடமுண்டாகிறது. மருதன் இளநாகனார் மதுரை மருதனிளநாகனார் என்றும் கூறப்படுவர். மருதம் பாடு தலில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன் என்பது. இரு திறனும் பொருந்த இவர் மருதனிளநாகனா ரெனப்படுகின்றார். இளநாகன் என்பது இவரது இயற்பெயர். இப் பாட்டின்கண், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தன் நாட்டின் பரப்பினை மிகுதிப்படுத்தும் கருத்தினனாய்ப் போர்க்கெழுதலை யறிந்து, “வேந்தே, ஊன்வேட்கை யுள்ளத்தைச் செலுத்த, அதுகுறித்துத் தான் வேண்டு மருங்கில் புலி வேட்டெழுந்ததுபோல், நீ வடபுல நோக்கிப் போர்வேட் டெழுந்தனை; அப்புலத்தே நின்னைப் போரெதிரும் வேந்தர் யாரோ? அறியேம்; அவரது நாடு தன் பெரு நல்யாணர் வளம் இழந்து கானக்கோழி வாழும் காடாகி விளியு மென்பதை நன்கறிவேம்” என்று பாராட்டிப் பாடியுள்ளார். அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல் ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத் தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு 5 வடபுல மன்னர் வாட வடல்குறித் தின்னா வெம்போ ரியறேர் வழுதி இதுநீ கண்ணிய தாயி னிருநிலத் தியார்கொ லளியர் தாமே யூர்தொறும் மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி 10 வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் பெருநல் யாணரி னொரீஇ யினியே கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூ தாளர் நாயிடக் குழிந்த 15 வல்லி னல்லக நிறையப் பல்பொறிக் கான வாரண மீனும் காடாகி விளியு நாடுடை யோரே. (52) திணை: வாகை; துறை: அரசவாகை. அவனை மருதனிளநாகனார் பாடியது. உரை : அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் - தெய்வங் களை யுடைத்தாகிய நெடிய சிகரங்களையுடைய மலையின் கண்ணே முழையின்கண்; முனைஇ - துயிலை வெறுத்து; முணங்கு நிமிர் வயமான் முழு வலி யொருத்தல் - மூரி நிமிர்ந்த புலியாகிய நிரம்பிய வலியையுடைய ஏற்றை; ஊன் நசை உள்ளம் துரப்ப - ஊனை விரும்பிய வுள்ளம் செலுத்துதலான்; இரை குறித்து - அவ் விரையைக் கருதி; தான் வேண்டு மருங்கின் வேட் டெழுந்தாங்கு - தான் வேண்டிய விடத்தே விரும்பிச் சென்றாற் போல; வட புல மன்னர் வாட அடல் குறித்து - வட நாட்டு வேந்தர் வாட அவரைக் கொல்லுதலைக் கருதி; இன்னா வெம் போர் இயல்தேர் வழுதி - இன்னாத வெய்ய போரைச் செய்யும் இயற்றப்பட்ட தேரினையுடைய வழுதி; நீ கண்ணியது இதுவாயின் - நீ கருதியது இப்போராயின்; இரு நிலத்து யார் கொல் அளியர்தாம் - பெரிய வுலகத்தின்கண் யாரோ அளிக்கத் தக்கார்தாம்; ஊர்தொறும் மீன் சுடு புகையின் - ஊர்தொறும் மீன் சுடுகின்ற புகையினது; புலவு நாறு நெடுங் கொடி - புலால் நாறும் நெடிய ஒழுங்கு; வய லுழை மருதின் வாங்கு சினை வலக்கும் - வயலிடத்து மருதினது வளைந்த கோட்டைச் சூழும்; பெரு நல் யாணரின் ஒரீஇ - பெரிய நல்ல புது வருவாயின் நீங்கி; இனி - இப்பொழுது; கலி கெழு கடவுள் கந்தம் கைவிட - முழவு முதலாகிய ஒலி பொருந்திய தெய்வங்கள் தூணத்தைக் கைவிடும் பரிசு; பலி கண் மாறிய பாழ் படு பொதியில் - பலி இடத்தின் மாறிய பாழ்பட்ட அம்பலத்தின் கண்; நரை மூதாளர் நாய் இடக் குழிந்த - முற்காலத்து, நரையையுடைய முதியோர் சூதாடுங் கருவியை இடுதலாற் குழிந்த; வல்லின் நல்லகம் நிறைய - அச்சூது கருவியினது நல்ல மனையாகிய இடம் நிறைய; பல் பொறிக் கான வாரணம் ஈனும் - பல பொறியையுடைய காட்டுக் கோழி முட்டையிடும்; காடாகி விளியும் - காடாய்க் கெடும்; நாடுடையோர் -, எ-று. கலி புகழும் அரவமுமாம். வழுதி அடல் குறித்து நீ கருதி யது இதுவாயின், விளியும் நாடுடையோர்தாம் யார்கொல் அளியர் எனக் கூட்டுக. விளக்கம் : முழையின்கண் இருக்குங்கால் உறங்குவது தவிரப் பிறிதி யாதும் செய்யாதாகலின், முழையின் நீங்கி வெளிப்படும் புலியை, “அளையகம் முனைஇ” வந்த தென்றாராக, உரைகாரர், “முழையின் கண் துயிலை வெறுத்து” எனவுரை கூறினார். முனைவு - வெறுப்பு. வெறுக்கப்படுவது துயில்: முழையன்று. ஊன் நசையுள்ளம் துரப்ப வென்பதற்கு ஊன்மேற் சென்ற விருப்பம் அதன் உள்ளத்தைச் செலுத்துதலான் எனினு மமையும். வடபுல வேந்தரைஅடல் குறித் தெழுதலால், அவர் வாடுதலும், அதனால் விளையும் போர் துன்பம் பயத்தலும் பயனாதலால், “வாட இன்னா வெம்போர் செய்யும் வழுதி” யென்றார். இத்தகைய போர்க்கென்றே சமைக்கப்பட்ட தேர் என்றற்கு “இயல் தேர்” எனப்பட்டது. வடபுல மன்னர் பலராதலால், போர் ஏற்போர் இவரென்பது விளங்காமையின், “யார்கொல்” என்றும், ஏற்றவழி அவர் கெடுதல் ஒருதலையாதலின், “அளியர் தாமே” என்றும் கூறினார். போரில் அழியுமுன் நாடிருந்த நன் னிலையை, “பெருநல் யாணர்” என்றும், அழிந்தபின், “காட்சி விளியும்” என்றும் குறிக்கின்றார். முழவு முதலியவற்றின்கண் தெய்வ முறையும் என்பவாகலின், “முழவு முதலாகிய ஒலி பொருந்திய தெய்வம்” என்றார். கந்தம் - கடவுளுறையும் தூண்; “கடவுள் போகிய கருந்தாட் கந்தம்” (அகம்: 307) என்று பிறரும் கூறுதல் காண்க. நாய், சூதாடு கருவி. வல் - சூதாடுங் காய். (52) 53. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை மாந்தரன் என்பது இச் சேரமானது இயற்பெயர். இவன் இரும்பொறைக் குடியினனாதலால், இவ்வாறு கூறப்படுகின் றான். “நிறையருந் தானை வெல் போர் மாந்தரம் பொறையன்” (அகம் : 142) என மாந்தரன் சான்றோரால் குறிக்கப்படுவது காணலாம். இவன் கபிலராற் சிறப்பிக்கப்பட்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் முதலிய சேரமன்னர்கட்குக் காலத்தாற் பிற்பட்ட வன். கபிலர் முதலிய நல்லிசைப் புலவர் பாட்டுக்களிற் பேரீடுபா டுடையவன். ஒரு காலத்தே இவற்கும் இராயசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கு போர் உண்டாயிற்று. தேர்வண்மலைய னென்பான் சோழற்குத் துணைவனாய் வந்து, இவனை வேறற்கு உதவினான். அக்காலத்தே, இச் சேரமான் தன்னைத் தொலைவித்த தேர்வண் மலையனது பேராண்மையை வியந்து, “வல்வேல் மலையனல்லனாயின், நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கென” நினைத்தானென வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடு கின்றார். இச்சேரமான் ஆட்சிக்குட்பட்ட விளங்கில் என்னும் ஊரைப் பகைவர் முற்றுகையிட்டு வருத்த முறுவித்தாராக, இவன் யானைப்படையும் குதிரைப்படையும் சிறப்புறக் கொண்டு சென்று பகைவரை வெருட்டி விளங்கிலரை உய்வித்தனன். இச் சிறப்பு நிகழ்ச்சி இப் பாட்டின்கண் குறிக்கப்படுகிறது. கிடங்கில், விளங்கில் என்பன போலப் பொருந்தில் என்பது ஓர் ஊர். இளங்கீரன் என்பது இப் புலவரது பெயர். இதனால் இவர் பொருந்தி லிளங்கீரனார் எனப்படுகின்றார். இவர், அழகிய பாட்டுக்களைப் பாடும் நலஞ் சிறந்தவர். பொருள்வயிற் பிரிந் தேகும் ஒரு தலைமகன் நெஞ்சினை அவன்தன் மனைவிபாற் சென்ற காதல் தடுப்ப, அவன் அதனைத் தெருட்டிச் சென்றதும், சென்றவன் வினை முடித்துப் பொருள் நிரம்பக் கொண்டு வருங்கால், அக்காத லுணர்வு தோன்றி, அவன் காதலியை நினைப்பிக்க, “குறைவினை முடித்த நிறைவின் னியக்கம்” எனத் தான் திரும்பி வரும் வருகையைப் புகழ்ந்து பேசியதும், தலைவி அவன் வரவு குறித்து ஆழியிழைத்திருப்பதும், அவன் வரவினை அவள் நினைக்குந்தோறும் பல்லி யிசைப்பதும், பிறவும் இவரால் அழகொழுகப் பாடப்படுகின்றன. இவர், இச் சேரமான் திருமுன் சென்று பாடியவழி, அவன் , செறுத்த செய்யுள் செய்யும் சிறப்புடைய “கபிலன் இன்று உளனாயின் நன்று” எனச் செய்யு ளின்பச் சொல்லாட்டிடை விதந்து கூறினான். அந்நிலையில் இவர் இப்பாட்டினைப் பாடியுள்ளார். முதிர்வா ரிப்பி முத்த வார்மணற் கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத் திலங்குவளை மகளிர் தெற்றி யாடும் விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற 5 களங்கொள் யானைக் கடுமான் பொறைய விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும் மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை கைம்முற் றலநின் புகழே யென்றும் ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து 10 வாழே மென்றலு மரிதே தாழாது செறுத்த செய்யுட் செய்செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் இன்றுள னாயி னன்றும னென்றநின் ஆடுகொள் வரிசைக் கொப்பப் 15 பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே. (53) திணை: வாகை; துறை: அரசவாகை.சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையைப் பொருந்தி லிளங்கீரனார் பாடியது. உரை : முதிர் வார் இப்பி முத்த வார் மணல் - முற்றி நீண்ட சிப்பிக்கண் முத்துப்போலும் வெளிய ஒழுங்குபட்ட மணற் கண்ணே; கதிர் விடு மணியின் கண்பொரு மாடத்து - ஒளி விடுகின்ற மணிகளாற் கண்ணைப் பொருகின்ற மாடத் திடத்து; இலங்கு வளை மகளிர் தெற்றி யாடும் - விளங்கிய வளையையுடைய மகளிர் வேதிகைக்கண்ணே விளையாடும்; விளங்குசீர் விளங்கில் - விளங்கிய சீர்மையையுடைய விளங் கிற்கு; விழுமம் கொன்ற பகைவரான் வந்த இடும்பையைத் தீர்த்த; களங்கொள் யானைக் கடுமான் பொறைய - போர்க் களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானையையும் விரைந்த குதிரையையுமுடைய பொறைய; விரிப்பின் அகலும் - விரித்துச் சொல்லிற் பரக்கும்; தொகுப்பின் எஞ்சும் - தொகுத்துச் சொல்லிற் பொருள் ஒழிவுபடு மாகலான்; மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு - மயக்கம் பொருந்திய நெஞ்சையுடைய எங்களுக்கு; ஒரு தலை கைம்முற்றல நின் புகழ் என்றும் - ஒரு தலையாக முடியா நினது புகழ் எந்நாளும்; ஒளியோர் பிறந்த இம்மலர்தலை யுலகத்து - கல்வியால் விளக்கமுடையோர் பிறந்த இப் பெரிய இடத்தையுடைய வுலகத்தின்கண்ணே; வாழேம் என்றலும் அரிது - வாழே மென் றிருத்தலும் கூடாது; தாழாது - விரைய;செறுத்த செய்யுள் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன் - பல பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும் மிக்க கேள்வியையும் விளங்கிய புகழையுமுடைய கபிலன்; இன்று உளனாயின் நன்றுமன் என்ற - இன்று உளனாகப் பெறின் நன்று அது பெற்றிலேன் என்று சொல்லிய; நின் ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப - நினது வென்றி கொண்ட சிறப்பிற்குப் பொருந்த; பாடுவன்மன் - பாடுவேன்; பகைவரைக் கடப்பு - நீ பகைவரை வென்ற வெற்றியை எ-று. மாடத்து மகளிர் மணலிடத்துத் தெற்றிக்கண்ணாடும் விளங்கில் என்க. தெற்றி யென்பதனைக் கை கோத்தாடும் குரவை யென்பாரு முளர். பொறைய, கபிலன் இன்றுளனாயின் நன்றுமன் னென்ற நின் ஆடு கொள் வரிசைக் கொப்பப் பகைவரைக் கடப்பை யான் தாழாது பாடுவேன்; நின் புகழ் விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; ஆதலான் எமக்குக் கைம்முற்றல; ஒளியோர் பிறந்த இம் மலர்தலை யுலகத்து வாழே மென்றலும் அரிது என மாறிக் கூட்டுக. தாழாது செய்யுட் செய் செந்நா வென வியைப்பினு மமையும். ஒளியோ ரென்றது, கபிலன் முதலாயி னோரை. வாழே மென்றதும் அரிதென்ற கருத்து. பாடாதிருத் தலும் அரிதென்றதாக்கி, யாமும் வல்லபடி பாடிப் போதுவே மென்றதாகக் கொள்க. நன்றுமன் என்பது கழிவின் கண் வந்தது. பாடுவன்மன்னா லென்றவழி மன்னும், ஆலும், அசைநிலை. பாடுவன்மன் னென்பதனை அல்லீற்றுத் தனித்தன்மை வினையாக்கி நின் வரிசைக் கொப்ப, நின் பகைவரைக் கடப்பைப் பாடுவேன்; அதனால் விரிப்பின் அகலும், தொகுப்பின் எஞ்சும், மம்மர் நெஞ்சத்து எமக்கு நின் புகழ் கைம்முற்றல வென அவன் புகழை மேம்படுத்துக் கூறியவாறாக வுரைப்பினு மமையும். இப்பொருட்குப் பாடுவன்மன் னென்றதனை ஒழியிசையாகக் கொள்க. சிறந்த செய்யுள் என்றும், செய்யுட் செய்த செந்நா என்றும் பாடம். விளக்கம் : தெற்றிக்கண்ணிருந்து விளையாடல் மகளிர் இயல்பாதலின், “தெற்றி யாடும்” என்றார்; “குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்” (புறம்: 36) என்று பிறரும் கூறுதல் காண்க. விரிப்பின் அகலுதலாலும் தொகுப்பின் எஞ்சுதலானும் இவ்விரண்டினும் வேறு நெறி யில்லாமையாலும் பாடுவோர்க்கு மயக்க முண்டாதலின் “மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் ” கென்றார். கல்வி கேள்விகளால் உயர்ந்தோர்க் குளதாகும் புகழ் காரணமாகப் பிறக்கும் இசை, ஈண்டு ஒளியெனப்படுகிறது. ஒத்தல் - ஈண்டு உவமப்பொருளதாகாது “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்” (தொல். உவமை: 8) என்றாற் போல அமைதி குறித்து வந்தது. சிறிதும் “தாழாது கபிலன் இன்றுளனாயின் நன்றுமன் என்ற” என இயையும். தாழா தென்னும் வினை யெச்சத்தைச் செய்யென்பதனொடு முடித்தலும் அமையும் என்றற்குத் “தாழாது.......அமையும்” என்றார். வாழ்தல், பாடற் குரியோரைப் பாடி வாழ்தலாதலின், “வாழே மென்றலும் அரிதென்ற கருத்து....கொள்க” என்றார். (53) 54. சேரமான் குட்டுவன் கோதை இவன், சேரநாட்டின் ஒரு பகுதியாகிய குட்ட நாட்டுக்கு உரியவன் ஆதலால், இவன் குட்டுவன் கோதை யெனப்படு கின்றான். கோதை யென்பது இயற்பெயர். இவன் காலத்தில் சோழ நாட்டில் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் ஆட்சி புரிந்தனர். “வானம் நாண வரையாது சென்றோர்க், கானா தீயும் கவிகை வண்மைக், கடுமான் கோதை” யெனப்படுதலால், இவனது கொடைச் சிறப்பும், “புலி துஞ்சு வியன்புலத் தற்றே, வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே” என்பதனால், இவனது வென்றிச் சிறப்பும் புலவர் பாடும் புகழ் பெற்று விளங்குகின்றன. இக் குமரனார், கோனாட்டு எறிச்சிலூரைச் சார்ந்த மாடல னென்பாற்கு மகனாராவர். மாடல னென்ற பெயரை நோக்கின் இவர் பார்ப்பன ரென அறியலாம். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் இவராற் பாடப்பட்டுள்ளனர். சோழர் கட்குத் தானைத் தலைவராகிய சோழியவேனாதி திருக்குட்டு வனையும் ஏனாதி திருக் கிள்ளியையும் இவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். இவர், கேட்போர் மனமகிழத்தக்க இனிய சொல் லமையப் பாடல் வல்லவர். பெருந்திருமாவளவன் ஒருகால் பரிசில் நீட்டித்தானாக, இக் குமரனார், வெண்குடைச் செல்வமுடைய வேந்தராயினும் சீறூர் மன்னராயினும் எம்மால் வியக்கப்டுவோர், “எம்வயிற் பாடறிந் தொழுகும் பண்பினோரே” என்றும், “மிகப்பே ரெவ்வ முறினும் எனைத்தும், உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம், நல்லறி வுடையோர் நல்குரவு உள்ளுதும்” என்றும் இவர் கூறுவது இவருடைய உயர்ந்த மன மாண்பைப் புலப்படுத்துகிறது. சேரமான் குட்டுவன் கோதையி னுடைய கொடைநலனும், காவற்சிறப்பும் பிறர்க்கு அறிவுறுத்தும் கருத்தால் மதுரைக் குமரனார், இப் பாட்டின்கண், “ஓரூரை யுடைய தலைவன் ஒருவன் அதனுட் செம்மாந்து புகுவது போல, சேரமான் குட்டுவன் கோதையின் அவைக்களத்துட் செம்மாந்து செல்வது எம்போல்வார்க்கு எளிது; அவனைப் பகைத்துப் போரெதிரக் கருதும் வேந்தர்க்கு, இடையன் தன் ஆட்டு நிரை யுடன் புகுதற்கஞ்சும் புலிதுஞ்சும் காடுபோலப் பேரச்சம் விளைப்ப தாகையால், புகுவதென்பது அரிது” என்று சிறப்பித்துக் கூறு கின்றார். எங்கோ னிருந்த கம்பலை மூதூர் உடையோர் போல விடையின்று குறுகிச் செம்ம னாளவை யண்ணாந்து புகுதல் எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே 5 இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து வான நாண வரையாது சென்றோர்க் கானா தீயுங் கவிகை வண்மைக் கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப் 10 பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி மாசு ணுடுக்கை மடிவா யிடையன் சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன்புலத் தற்றே வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே. (54) திணை: வாகை; துறை: அரசவாகை.சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. உரை : எங்கோன் இருந்த கம்பலை மூதூர் - எம்முடைய இறைவன் இருந்த ஓசைiடைய பழைய வூரிடத்து; உடையோர் போல இடை யின்று குறுகி - அதனை யுடையவர்களைப் போலக் காலம் பாராதே யணுகி; செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல் - தலைமையுடைய நாளோலக்கத்தின்கண்ணே தலை யெடுத்துச் செம்மாந்து சென்று புகுதல்; எம்மன வாழ்க்கை இரவலர்க்கெளிது - எம்மைப் போலும் வாழ்க்கையுடைய இரப்போருக்கு எளிது; இரவலர்க்கு எண்மை யல்லது - இங்ஙனம் இரப்போர்க்கு எளிதாவ தல்லது; புர வெதிர்ந்து - பாதுகாத்தலை ஏற்றுக் கொண்டு; வானம் நாண வரையாது - மழை நாணும்படி எப்பொருளையும் வரையாது; சென் றோர்க்கு - தன்பாற் சென்றவர்கட்கு; கவிகை ஆனாது ஈயும் வண்மைக் கடு மான் கோதை - இடக் கவிந்த கையால் அமையாது கொடுக்கும் வண்மையையுடைய கடுமான் கோதையது; துப்பு எதிர்ந் தெழுந்த நெடுமொழி மன்னர் - வலியோடு மாறுபட்டெழுந்திருந்த வஞ்சினங் கூறிய வேந்தர்; நினைக்குங்காலை - கருதுங்காலத்து; பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி - பசிய இலையால் தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும்; மாசுண் உடுக்கை - மாசுண்ட உடையையும்; மடி வாய் இடையன் - மடித்த வாயையுமுடைய இடையன்; சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா - சிறிய தலையை யுடைய ஆட்டினத்தோடுகூட அணுகல் செல்லாத; புலி துஞ்சு வியன் புலத் தற்று - புலி தங்கும் அகன்ற நிலத்தை யொக்கும்; வலி துஞ்சு தடக்கை யவனுடை நாடு - வலி தங்கிய பெரிய கையை யுடையவனுடைய நாடு எ-று. எங்கோ னிருந்த மூதூர்ப் புகுதல் இரவலர்க் கெளிது; அவனுடைய நாடு மன்னர் நினைக்குங்காலை இடையன் சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப் புலி துஞ்சு வியன் புலத் தற்றெனக் கூட்டி வினைமுடிவு செய்க. மன்னர்க்கு இடையனும் அவர்படைக்குச் சிறுதலை யாயமும் கோதை நாட்டிற்குப் புலி துஞ்சு வியன்புலமும் உவமையாகக் கொள்க. உவலைக் கண்ணி யென்றதனைப் பெயராகக் கொள்க. புலியுடை வியன்புலமென்பதூஉம் பாடம். விளக்கம் : மூதூரென முன்னர்க் கூறி உடையோ ரென்றமையின், “மூதூரை யுடையோரைப் போல்” என்றார்; அவரை யன்றிப் பிறர் இடையின்று குறுகுதல் கூடாதாகலின். செம்மல் - தலைமை. “சேவடி படரும் செம்ம லுள்ளமொடு” (முருகு: 62) என்றாற்போல. எண்மை யுடையதனை யெண்மை யென்றது உபசாரம், கவிகை - இறந்த காலந் தொக்க வினைத்தொகை. நெடுமொழி - வஞ்சினம். துஞ்சுதல் - தங்குதல். உவலை கருதி இடையன் குறுகல் செல்லா என இயைக் காமல், உவலையாற் றொடுக்கப்பட்ட கண்ணி யெனப் பெயராக்குக வென்பார், “உவலைக் கண்ணி யென்றதனை...கொள்க” என்றார்.புலி துஞ்சு வியன்புலம் ஆட்டிடையர் புகாத அச்சமுடைய தாதல் போலக் குட்டுவன் கோதையது நாடு பகைவர் புகுதற் கச்சமுடைய தென இதனால் அவன் காவற்சிறப்புக் கூறினாராம்; அதியமா னெடுமானஞ்சியின் காவற்சிறப்புக் கூறவந்த ஒளவையார், “ஆர்வலர் குறுகி னல்லது காவலர், கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர்” (புறம்: 390) என்றது ஈண்டு நினைவுகூரத் தக்கதாம் (54). 55. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் இப்பாண்டியன் இலவந்திகைப் பள்ளிக்கண் இறந்ததுபற்றிப் பிற்காலச் சான்றோரால் இவன் இவ்வாறு கூறப்படுகின்றான். இவன் மிக்க பேராண்மை யுடையவன் . இவனைப் பாடிய சான்றோர் பலரும் இவனுடைய போர் வன்மை முதலிய பேராற்றல்களையே பெரிதெடுத்து மொழிந்திருக்கின்றனர். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், “வல்லா ராயினும் வல்லுந ராயினும், புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன, உரை சால் சிறப்பின் புகழ்சால் மாற” என்றும், நக்கீரனார், “ஓங்குவாள் மாற” என்றும் பாராட்டியிருக்கின்றனர். ஒருகால் இவனை ஆவூர் மூலங் கிழாரும், வடம வண்ணக்கன் பேரிசாத்தனாரும் தனித் தனியே காணச் சென்றபோது, அவர்கட்கு இவன் பரிசில் தர நீட்டித்தான். அது கண்டு அவர்கள் வெகுண்டு பாடியன மிக்க பெருமிதம் தோற்றுவிப்பனவாகும். இவன் புதல்வர் பலரை யுடையவன். “நோயில ராகநின் புதல்வர்” என ஆவூர் மூலங் கிழாரும், “நின்னோ ரன்னநின் புதல்வர்” என வடம வண்ணக்கன் பேரிசாத்தனாரும் இவன் மக்கள் நலத்தைக் குறித்துரைப்பது நோக்கத்தக்கது. ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப் பெருவிற லமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப் 5 பிறைநுதல் விளங்கு மொருகண் போல வேந்துமேம் பட்ட பூந்தார் மாற கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என நான்குடன் மாண்ட தாயினு மாண்ட 10 அறநெறி முதற்றே யரசின் கொற்றம் அதனால், நமரெனக் கோல்கோடாது பிறரெனக் குணங்கொல்லாது ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும் திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும் 15 வானத் தன்ன வண்மையு மூன்றும் உடையை யாகி யில்லோர் கையற நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில் நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக் 20 கடுவளி தொகுப்ப வீண்டிய வடுவா ழெக்கர் மணலினும் பலவே. (55) திணை : பாடாண்டினை; துறை: செவியறிவுறூஉ. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார் பாடியது. உரை : ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ - உயர்ந்த மலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக் கொளுத்தி; ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றி - ஒப்பில்லாததோ ரம்பை வாங்கி மூன்று மதிலையும் எய்து; பெரு விறல் அமரர்க்கு - பெரிய வலியையுடைய தேவர்கட்கு; வென்றி தந்த - வெற்றியைக் கொடுத்த; கறை மிடற் றண்ணல் - கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது; காமர் சென்னிப் பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல - அழகிய திருமுடிப் பக்கத் தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக்கண்ணே விளங்கும் ஒரு திருநயனம் போல; வேந்து மேம்பட்ட பூந் தார் மாற - மூவேந்தருள்ளும் மேம்பட்ட பூந்தாரை யுடைய மாற; கடுஞ்சினத்த கொல் களிறும் - கடிய சினத்தை யுடையவாகிய கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும் - விரைந்த செலவை யுடையவாகிய மனஞ் செருக்கிய குதிரையும்; நெடுங் கொடிய நிமிர் தேரும் - நெடிய கொடியை யுடையவாகிய உயர்ந்த தேரும்; நெஞ்சுடைய புகல் மறவரு மென - நெஞ்சு வலியை யுடைய போரை விரும்பும் மறவருமென; நான்குடன் மாண்ட தாயினும் - நான்கு படையுங் கூட மாட்சிமைப்பட்டதாயினும்; மாண்ட அறநெறி முதற்று அரசின் கொற்றம் - மாட்சிமைப் பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி; அதனால் -; நமர் எனக் கோல் கோடாது - இவர் நம்முடைய ரென அவர் செய்த கொடுந்தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது; பிறரெனக் குணம் கொல்லாது - இவர் நமக்கு அயலோ ரென்று அவர் நற்குணங்களைக் கெடாது; ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும் - ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும்; திங்களன்ன தன்பெருஞ்சாயலும் - திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும்; வானத் தன்ன வண்மையும் - மழையைப் போன்ற வண்மையுமென்ற; மூன்று முடையை யாகி - மூன்றையு முடையை யாகி; இல்லோர் கையற - இல்லாதோர் இல்லையாக; நீ நீடு வாழிய - நீ நெடுங் காலம் வாழ்வாயாக; நெடுந் தகை - நெடுந்தகாய்; தாழ் நீர் வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில் - தாழ்ந்த நீரை யுடைய கடலின்கண் வெளிய தலையையுடைய திரை யலைக்கும் செந்திலிடத்து; நெடுவேள் நிலைஇய - நெடிய முருகவேள் நிலைபெற்ற; காமர் வியன் துறை - அழகிய அகன்ற துறைக்கண்; கடுவளி தொகுப்ப - பெருங்காற்றுத் திரட்டுதலால்; ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பல - குவிந்த வடு வழுந்திய எக்கர் மணலினும் பலகாலம் எ-று. குணம் கொல்லாது என்பதற்கு. முறைமை யழிய நீ வேண் டியவாறு செய்யா தெனினுமாம். பூந் தார் மாற, நெடுந்தகாய், நான்குடன் மாண்டதாயினும் அரசின் கொற்றம் அறநெறி முதற்று; அதனால் கோல் கோடாது குணங் கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையு முடையையாகி, இல்லோர் கையற, நீ மணலினும் பலகாலும் நீடு வாழிய வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : கொளீஇ - கொளுத்தி; கொள்வித் தென்பது கொளுத்தியென வந்தது; வருவித் தென்பது வருத்தி யென இன்றும் வழங்குவது போல வென்க. மூவெயில், மூன்றாகிய மதில்; பொன் வெள்ளி இரும்பெனப் புராணங்கள் கூறும். ஓரம்பே கொண்டு மூவெயிலும் எய்தாரென வரலாறு கூறலின், “ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றி” யென்றார். “கறைமிட றணியலு மணிந்தன்று” என்ற விடத்துக் கறை கறுப்புநிறங் குறிப்பதாக உரை கூறினமையின் ஈண்டும் கறைமிடற்றண்ணல் என்றதற்குக் கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவன் என்று உரை கூறினார். வேந்தெனப் பொதுப்படக் கூறினமையின் மூவேந்தரையும் கொண்டார். நெஞ் சுடைய புகல் மறவர் என்ற விடத்துப் புகல்வது - விரும்புதல் என்னும் பொருளதாகலின், அதற்கேற்பப் போரை விரும்பும் மறவர் என்றார்; “போரெனிற் புகலும் புனைகழல் மறவர்” (புறம்: 31) எனப் பிறரும் கூறுதல் காண்க. நமரெனக் கோல் கோடுவது இவ்வாறென விளக்க வேண்டி, “இவர் நம்முடையரென.....பொறுத்துக்” கொள்ளுவது என்பது தோன்ற விரித்துக் கூறினார். சாயல்-மென்மை. கையற - இல்லை யாக; இல்லோர்க்கு இடமில்லையாக; கை - இடம். இடமில்லாமை யாவது இன்மையுடையோர் இலராய் எல்லோரும் செல்வராக என்ப தாம். செந்தில் - திருச்செந்தூர். நுண்மணற்குவை - திரைதிரையாகத் திரைத்துத் தோன்றுவது பற்றி, “வடுவாழ் எக்கர்” எனப்பட்டது. (55) 56. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன் இப் பாண்டிவேந்தனான இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தெறலும், அளியும், வண்மையும், நிரம்ப வுடையவனாய், மிக்க புகழ் கொண்டு விளங்குதல் கண்ட மருதன் இளநாகனார், தெறல் முதலியன வுடையனாய் நெடுங் காலம் வாழ்க வெனப் பாராட்டி வாழ்த்தியது போலக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், இப்பாட்டின்கண் இவனை உலகங் காக்கும், நால்வராகிய மணிமிடற் றிறைவனும், பலராமனும், திருமாலும், முருகவேளும், செயல்வகையில் ஒப்பரெனக் கூறி, “வேந்தே இன்ப நுகர்ச்சிக்கண் குறைவிலனாய் உலகில் இருணீக்கி யொளி விளக்கும் ஞாயிறும் திங்களும் போல நிலைபெற்று வாழ்க” வென வாழ்த்துகின்றார். நக்கீரனார் மதுரைக் கணக்காயனார்க்கு மகனாராவார். சங்க காலத்துப் புலவர் நிரலில் தலைமை பெற்றவர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனது ஆலங்கானப் போரும் பொலம் பூண் கிள்ளி யென்பவன் கோய ரென்பாரை வென்று நிலங் கொண்ட திறமும், சேரமான் கோதை மார்பனுக்குப் பகையாய் இறுத்த கிள்ளிவளவனைப் பழையன் மாறன் என்பான் வென்று சேரனுக்கு உவகை யெய்துவித்த திறமும், பிறவும் இவரால் குறிக்கப்படுவனவாகும். இவர் மதுரையைச் சேர்ந்தவராதலின், அதனை வாய்த்த விடங்களில், “அரண் பல கடந்த முரண்கொள் தானை, வாடா வேம்பின் வழுதி கூடல்” “பொன்மலி நெடுநர்க் கூடல்” “மாடமலி மறுகிற் கூடல் ” என்று சிறப்பித்துரைப்பர். மருங்கூர்ப் பட்டினம், காவிரிப்பூம் பட்டினம், முசிறி, கருவூர், உறையூர் முதலிய வூர்களும் ஆங்காங்கு இவரால் சிறப்பிக்கப்படுகின்றன. வேள் பாரியைத் தமிழ்வேந்தர் மூவரும் நெடுங்காலம் முற்றுகை யிட்டிருந்த காலத்துக் கபிலர் கிளிகளைப் பயிற்றி, வெளியே விளை புலங்களிலிருந்து நெற்கதிர் கொணர்வித்து, உணவுக் குறைவுண்டாகாவாறு பேணிக் காத்த செய்தியை இவர் குறிக்கின் றார். கபிலரை இவர் “உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்” எனச் சிறப்பிக்கின்றார். தூங்க லோரியார் என்னும் புலவர் இவர் காலத்தே சிறப்புற்றிருந்த செய்தி இவர் பாட்டால் விளங்குகிறது. இவருடைய பாட்டுக்கள் இலக்கியச் செறிவுடையன. உறையூர்க்குக் கிழக்கேயுள்ள பிடவூருக்கு ஒருகால் சென்று, ஆங்கிருந்த பெருஞ்சாத்தன் என்பானைக் கண்டார். அவன் இவரைத் தன் மனைவிக்குக் காட்டி, “என்பால் செய்யும் அன்பளவே இவர்பாலும் செய்க” என்றான். அதனால் வியப்பு மிகக் கொண்ட நக்கீரர், “தன் மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை என்போல் போற்றென் றோனே” யென்று பாடிப் பரவினார். இவர் பாடியுள்ள பொருண்மொழிக் காஞ்சி ஒவ்வொரு செல்வ மகனும் படித்து இன்புறுதற்குரியது. இவரைப் பற்றிக் கூறப்படும் வரலாறுகள் பல. ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும் கடல்வளர் புரிவளை புரையு மேனி அடர்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும் 5 மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும் மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பின் 10 தோலா நல்லிசை நால்வ ருள்ளும் கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம் வலியொத் தீயே வாலி யோனைப் புகழொத் தீயே யிகழுந ரடுநனை முருகொத் தீயே முன்னியது முடித்தலின் 15 ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும் அரியவு முளவோ நினக்கே யதனால் இரவலர்க் கருங்கல மருகா தீயா யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன் செய் புனைகலத் தேந்தி நாளும் 20 ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந் தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத் தண்கதிர் மதியம் போலவும் 25 நின்று நிலைஇய ருலகமோ டுடனே. (56) திணை : பாடாண்டினை; துறை: பூவைநிலை. அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. உரை : ஏற்று வலன் உயரிய - ஆனேற்றை வெற்றியாக உயர்த்த; எரி மருள் அவிர் சடை - அழல் போலும் விளங்கிய சடை யினையும்; மாற்றருங் கணிச்சி மணி மிடற்றோனும் - விலக்குதற் கரிய மழுப்படையையுமுடைய நீலமணி போலும் திருமிடற்றை யுடையோனும் ; கடல் வளர் புரி வளை புரையும் மேனி - கடற் கண்ணே வளரும் புரிந்த சங்கை யொக்கும் திரு நிறத்தை யுடைய; அடல் வெம் நாஞ்சிற் பனைக் கொடியோனும் - கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையு முடையோனும்; மண்ணுறு திருமணி புரையும் மேனி - கழுவப் பட்ட அழகிய நீலமணி போலும் திருமேனியையும்; விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும் - வானுற வோங்கிய கருடக் கொடியையுமுடைய வென்றியை விரும்புவோனும்; மணி மயில் உயரிய - நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற் கொடியை யெடுத்த; மாறா வென்றி - மாறாத வெற்றியை யுடைய; பிணிமுக வூர்தி ஒண் செய்யோனும் என - அம் மயிலாகிய வூர்தியையுடைய ஒள்ளிய செய்யோனுமென்று சொல்லப்பட்ட; ஞாலம் காக்கும் கால முன்பின் - உலகம் காக்கும் முடிவுகாலத்தைச் செய்யும் வலியினையும்; தோலா நல்லிசை நால்வருள்ளும் - தோல்வியில்லாத நல்ல புகழினையு முடைய நால்வருள்ளும்; மாற்றரும் சீற்றம் - விலக்குதற்கரிய வெகுட்சியால்; கூற்று ஒத்தீ - கூற்றத்தை யொப்பை; வலி வாலியோனை ஒத்தீ - வலியால் வாலியோனை யொப்பை; புகழ் இகழுநர் அடுநனை ஒத்தீ - புகழால் பகைவரைக் கொல்லும் மாயோனை யொப்பை; முன்னியது முடித்தலின் முருகு ஒத்தீ - கருதியது முடித்தலான் முருகனை யொப்பை; ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் - அப்படி யப்படி அவரவரை யொத்த லான்; யாங்கும் அரியவும் உளவோ நினக்கு - எவ்விடத்தும் அரியனவும் உளவோ நினக்கு; அதனால் - ஆதலால்; இரவலர்க் கருங்கலம் அருகா தீயா - இரப்போர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களைப் பெரிதும் வழங்கி; யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல் - யவனர் நல்ல குப்பியிற் கொடுவரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலை; பொன் செய் புனை கலத் தேந்தி - பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின் கண்ணே யேந்தி; நாளும் ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து இனிது ஒழுகுமதி - நாடோறும் ஒள்ளிய வளையை யுடைய மகளிர் ஊட்ட, மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பா யாக; ஓங்கு வாள் மாற - வென்றியான் உயர்ந்த வாளையுடைய மாற; அங்கண் விசும்பின் - அழகிய இடத்தையுடைய வானத் தின்கண்ணே; ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும் - நிறைந்த இருளைப் போக்கும் வெய்ய கதிரை யுடைய ஞாயிற்றை யொப்பவும்; குட திசைத் தண்கதிர் மதியம் போலவும் - மேலைத் திக்கிற் றோன்றும் குளிர்ந்த கதிரையுடைய பிறையைப் போலவும்; உலகமோ டுடன் நின்று நிலைஇயர் - இவ்வுலகத்தோடு கூட நின்று நிலை பெறுவா யாக எ-று பிணிமுகம் பிள்ளையா ரேறும் யானை யென்றும் சொல்லுப. காலமுன் பென்றது, தம்மை யெதிர்ந்தோர்க்குத் தாம் நினைந்த பொழுதே முடிவுகாலத்தைச் செய்யும் வலியை. மணிமிடற் றோனைக் கூற்றமென்றது, அழித்தற் றொழிலை யுடைமையான். வாலியோ னென்றது, நம்பி மூத்தபிரானை. இகழுந ரடுநன் என்றது, மாயோனை. ஆரிரு ளகற்றும் வெங்கதிர்ச் செல்வன் என்றது, எழுகின்ற ஞாயிற்றை. மதி,இளம் பிறை இது தேவரோ டுவமித்தமையாற் பூவைநிலை யாயிற்று. விளக்கம் : மணியெனப் பொதுப்படக் கூறியவழிச் சிறப்புடைய நீல மணியே கொள்ளப்படுமாகலின், “மணி மிடற்றோன்” “திருமணி” “மணி மயில்” என்புழி யெல்லாம் நீலமணி யென்றே உரை கூறினார். வெம் நாஞ்சில் என்றவிடத்து, வெம்மை வேண்டற்பொருட் டாதலால், “அடல் வெம் நாஞ்சில்” என்றதற்குக் “கொலையை விரும்பும் நாஞ்சில்” என்றார். மணிமிடற்றோன் முதலிய நால்வரும் தெய்வ மாதலின் அவர்க்கேற்ப, காலமுன்பு என்பதற்கு முடிவு காலத்தைச் செய்யும் வலி யென்றார்; “காலமுன்ப” (புறம்: 23) என்றவிடத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் குறிக்கப்படுதலின், அவற்கேற்பக் காலன் போலும் வலியுடையோய் என்று உரை கூறினார். தான் கருதியதைக் கருதியவாறே முடிக்கும் பேராற்றல் முருகற் குண்டு, முருகன் திருவடி கருதுவோர்க்கே இவ்வுண்மை யுண்டாமென நக்கீரர், “இன்னே பெறுதிநீ முன்னிய வினையே” என்பர். மேனாட்டுக் கிரேக்கரும், உரோமரும், தம்மை அயோனியர் என்ப; அது யவனர் எனத் திரிந்தது. ஓங்கு வாள் மாற என்ற விடத்து, ஓங்குதற்குக் காரணம் இது வென்பார், “வென்றியான் உயர்ந்த வாள்” என்றார். ஞாயிறு இருளகற்றலாலும், திங்கட்பிறை தொழப்படலாலும்; உவமமாயின. (56) 57. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன் இப்பாண்டி வேந்தன், ஒருகால் பகைவர்மேற் போர்குறித்துச் செல்லலுற்றானாக, அவனைக் காணப் போந்திருந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவனுடைய போர்வன்மையை நன்குணர்ந்தவராதலால், “வேந்தே, நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க; ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக; நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க; அவர் கடிமரங்களை மட்டும் தடியாமல் விடுக; அவை நின் யானைகட்குக் கட்டுத் தறியாகும் வன்மை யுடையவல்ல” என்று பாடுகின்றார். இக்காரிக்கண்ணனார், காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் சிறந்த செய்யுள் செய்யும் செந்நாப் புலவர். இவர் காலத்தே இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாற னும்,வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருவரை யொருவர் அடுத்து வாழ்ந்தனர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் இவர் காலத்தவன். இச் சோழன் நம் கண்ணனார்பால் நன்மதிப்புக் கொண்டு, அவர் சொல்வழி நின்று சீர்த்தியுற்றான். அங்கே காவிரி கடலொடு கலக்கும் நீர்த்துறைக் கண் போந்து பரவும் கடலோதம், தான் வருங்கால் இறாமீனைக் கொணர்ந்தெற்றி மீண்டு செல்லும்போது மகளி ரெறிந்த கோதை களைக் கொண்டேகு மெனத் தமக்குரிய நகரின் சிறப்பை யெடுத் தோதுவர். ஒருகால் இவர், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சியப் பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டார். கண்டவர், இருவரது ஒற்றுமையால் உண்டாகும் நலத்தை வியந்து “இருவீரும் உடனிலை திரியீராயின், இமிழ் திரைப் பௌவ முடுத்த இப் பயங்கெழு மாநிலம் கையகப்படுவது பொய்யாகாதே” என்று கூறி, என்றும் “இன்றே போல்கநும் புணர்ச்சி” யென வற்புறுத்திப் பெருஞ்சிறப்புற்றார். பிட்டங் கொற்றன் என்பவனுடைய வண்மையைப் புகழ்ந்து பாடிய இவர் அவன் “உள்ளடி , முள்ளும் உறாற்க தில்ல” என்றும் , “ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே” என்றும் வாழ்த்துவர். ஆய் அண்டிரன் இரவலர் வருவதுணர்ந்து அவர்க்கு யானைகளைத் தொகுத்து வைத்தளிப்ப னென்றும், கோச ரென்பார் படைப் பயிற்சி செய்யுமிடத்து, முருக்கமரத்துப் பெருங்கம்பத்தை நிறுத்திப் பயிலுவ ரென்றும் கூறுவர். வல்லா ராயினும் வல்லுந ராயினும் புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின் 5 நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட் டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க நனந்தலைப் பேரூ ரெரியு நக்க மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம் 10 கடிமரந் தடித லோம்புநின் நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே. (57) திணை : வஞ்சி; துறை : துணைவஞ்சி. அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. உரை : வல்லாராயினும் - யாதொரு கல்வியை மாட்டாரா யினும்; வல்லுந ராயினும் - அதனை வல்லா ராயினும்; புகழ்த லுற்றோர்க்கு மாயோன் அன்ன - புகழ்தலைப் பொருந்திய வர்கட்கு மாயோனை யொத்த; உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற - சொல்லுத லமைந்த தலைமையையுடைய புகழமைந்த மாற; நின் ஒன்று கூறுவ துடையேன் - நினது ஒரு காரியஞ் சொல்லுத லுடையேன்; என் னெனில் - அது யாதெனின்; நீ பிறர் நாடு கொள்ளுங் காலை - நீ நின் பகைவர்நாட்டைக் கொள்ளுங் காலத்து; அவர் நாட்டு இறங்கு கதிர்க் கழனி - அவர் நாட்டின்கண் வளைந்த கதிரையுடைய வயலை; நின் இளையரும் கவர்க - நின்னுடைய வீரரும் கொள்ளை கொள்க; நனந் தலைப் பேரூர் எரியும் நக்க - அகலிய இடத்தையுடைய பெரிய வூரைத் தீயும் சுடுக; மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளி றிலங்கு நெடுவேல் - மின் நிமிர்ந்தாற் போன்ற நினது பாடஞ் செய்கின்ற விளங்கிய நெடிய வேல், ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க - பகைவரை யழிக்கினும் அழிக்க; என்னதூஉம் - யாவதும்; கடிமரந் தடிதலோம்பு - காவன்மரத்தை வெட்டுதலைப் பாதுகாப்பாயாக; நின் நெடு நல் யானைக்குக் கந்தாற்றா - நின்னுடைய நெடிய நல்ல யானைகட்கு முன்பு நட்டு நிற்கின்ற தறிகள் ஆற்றமாட்டா வாதலான் எ-று அவை இளமர மாதலால், நின் நெடுநல் யானைக்குத் தறியாதற்குப் பொறையாற்றா வென்று உரைப்பாரு முளர். வல்லவர்க்கும் மாட்டார்க்கும் ஒப்பப் புகழ்ந்து முடிய வொண்ணாமையான், “மாயோ னன்ன” வென்றார்; அன்றி, அவ் விருவர்க்கும் ஒப்ப அருள் பண்ணுதலின் அவ்வாறு கூறிற் றெனினு அமையும். மாற, நின் யானைக்குக் கந்து ஆற்றாவா தலால் கந்து ஆற்றாவாதலால் கடிமரந் தடித லோம்பெனக் கூட்டுக. நின் யானைக்குக் கந்தாற்றா வாதலால் கடிமரந் தடித லோம்பெனக் கூறுவான் போல் சந்துசெய்விக்கும் நினைவாற் கூறினமையின், இது துணைவஞ்சி யாயிற்று. விளக்கம் : வல்லுந ரென்பதற்கு, மறுதலை வல்லா ரென் றறிக. வல்லுநரும் வல்லாருமாகிய இருதிறத்தார் புகழினும் மாயோன் ஏற்றுக் கோடலை, “ஆர்வலர் தொழுதேத்தி, நின் புகழ் விரித்தனர் கிளக்குங்கா லவைநினக், கிறும்பூ தன்மை நற்கறிந்தே மாயினும், நகுதலுந் தகுதியீங் கூங்கு நிற் கிளப்ப” (பரி . 4) என்று சான்றோர் கூறுதலா லறிக. நின்னொன்று கூறுவ தென்ற விடத்து, நினக் கென்னாது நின தென்றது, கூறுவதாகிய ஒன்று அவனது செய லென்பது தோன்ற; நினக்கென்றவழி, அவ்வொன்று பிறரதாகலும் கூடும். இறங்கு கதிர்க் கழனி - முற்றி விளைந்து வளைந்து நிற்கும் கதிர்களையுடைய நெல் விளையும் கழனி. பாடஞ் செய்தலாவது - வடித்துத் தீட்டி நெய் பூசி உறையிலிட்டு வைத்தல். கடிமரந் தடிந்தாலன்றி வென்றி நிரம்பாதாகலின், அதனைச் செய்யற்க வென்றது, கழனியைக் கவர்தல் முதலிய செயல் தண்ட மாத்திரையே; பகைவர் பணிந்து திறைபகரலுறுவர்; அதனை யேற்றுப் போரைத் தவிர்த்து அவரை யருளுதல் வேண்டும் என்பது பட நிற்றலின், “சந்து செய்விக்கும் நினைவாற் ” கூறியவாறாயிற்று; ஆகவே இது துணைவஞ்சி யாயிற் றென வறிக. (57) 58. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் சோழன் பெருந் திருமாவளவன் குராப்பள்ளி யென்னும் இடத்தே உயிர் துறந்தமை கருதிப் பிற்காலத்தான்றோர் குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் எனச் சிறப்பித்தனார். இவன் போருடற்றுவதில் தலைசிறந்தவன். தன் காலத்தே வாழ்ந்த சேரமன்னன் கொங்குநாட்டவர் துணைபெற்று இவனொடு பகை கொண்டானாக, இவன் அக் கொங்கரை வென்று சேரனாடு புகுந்து, அதன் தலைநகராகிய வஞ்சிநகரையே போர்க்களமாகக் கொண்டு போருடற்றி வென்றி யெய்தினான். இவன் , “பகைவர் புகழ்ந்த ஆண்மையும் நகைவர்க்குத், தாவின் றுதவும் பண்பும்” உடைய னெனக் கோவூர் கிழார் பாடுகின்றார். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு முன்னோ பின்னோ அடுத்திருந்தவன். ஏனையோர் போலாது தனது ஆட்சி நிலைபெறுதற்குச் சோழ னொடு நட்புற்றிருப்பதே வேண்டுவதெனத் துணிந்து சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனது நட்பைப் பெற்று இனிதிருந்தான். ஒருகால் இருவரும் ஒருங்கிருப்பக்கண்ட காவிரிப் பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனா ரென்னும் சான்றோர் இப் பாட்டால், “நீவிர் இருவீரும் ஒருவர்க்கொருவர் உதவி நட்பு மாறா தொழுகுவீராயின், இந்நிலவுலகு முற்றும் நும் கையகப்படுவது பொய்யாகாது” என வற்புறுத்தினார். சோழனினும் பாண்டி யனையே சிறப்புற வெடுத்தோதி இப்பாட்டின் கண் வற்புறுத்து வதால், சோழன் அவர் கருத்துக்கு இனி தியைந்திருப்பதும் பாண்டியன் தெருட்டப்பட வேண்டியிருப்பதும் நன்கு விளங்கு கின்றன. நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே முழுமுத றொலைந்த கோளி யாலத்துக் கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது 5 நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ இளைய தாயினுங் கிளையரா வெறியும் அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச் செருமாண் பஞ்சவ ரேறே நீயே அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே 10 நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென வரைய சாந்தமுந் திரைய முத்தமும் இமிழ்குரன் முரச மூன்றுட னாளும் தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே பானிற வுருவிற் பனைக்கொடி யோனும் 15 நீனிற வுருவி னேமி யோனுமென் றிருபெருந் தெய்வமு முடனின்றாஅங் குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி இன்னீ ராகலி னினியவு முளவோ இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே 20 ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவிரும் உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப் பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே அதனால், நல்ல போலவும் நயவ போலவும் 25 தொல்லோர் சென்ற நெறிய போலவும் காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும் ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென் றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக் 30 கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே. (58) திணை: பாடாண்டிணை; துறை: உடனிலை. சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந் தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது. உரை : நீயே தண்புனல் காவிரிக் கிழவனை - நீ குளிர்ந்த நீரை யுடைய காவிரிக்குத் தலைவன்; இவனே - இவன்; முழு முதல் தொலைந்த கோளி யாலத்துக் கொழுநிழல் நெடுஞ் சினை - பரிய அடி மாய்ந்த கோளியாகிய ஆலத்துக் கொழுவிய நிழலையுடைய நெடிய கொம்பை; வீழ் பொறுத் தாங்கு - அதன் வீழ் தாங்கினாற் போல; தொல்லோர் மாய்ந்தென - தனக்கு முன்னுள்ளோர். இறந்தாராக; துளங்கல் செல்லாது - தான் தளராது; நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ - நல்ல புகழையுடைய பழைய குடியைத் தடுமாற்றமற அணைத்து; இளைய தாயினும் - தான் சிறிதே யாயினும்; கிளை அரா எறியும் - கிளையுடனே பாம்பை யெறியும்; அரு நரை உருமின் - பொறுத்தற்கரிய வெள்ளிய உருமேறு போல; பொருநரைப் பொறாஅ - இளமைக் காலத்தும் பகைவர்க் காணப் பொறாத; செரு மாண் பஞ்சவர் ஏறு - போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியுள் ஏறு போல்வான்; நீயே அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை - நீ அறம் தங்கும் உறையூரின்கண் அரசன்; இவனே - இவன்; நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய - நெல்லும் நீரும் யாவர்க்கும் எளிய வெனக் கருதி; வரைய சாந்தமும் - அவை போலாது யாவர்க்கும் பெறுதற் கரிய பொதியின்மலையிடத்துச் சந்தனமும்; திரைய முத்தமும் - கடலிடத்து முத்துமென இவற்றை; இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் - ஒலிக்கும் குரலையுடைய முரசம் மூன்றுடனே யாளும்; தமிழ் கெழு கூடல் தண்கெழு வேந்து - தமிழ் பொருந்திய மதுரைக்கட் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்; பால் நிற உருவின் பனைக்கொடியோனும் - பால் போலும் நிறத்தையுடைய பனைக் கொடியை யுடையோனும்; நீல் நிற வுருவின் நேமியோனும் என்று - நீலநிறம் போலும் திருமேனியையுடைய ஆழியை யுடையோனுமென்று சொல்லப்படும்; இரு பெருந் தெய்வ மும் உடனின்றாங்கு - இரண்டு பெரிய தெய்வமும் ஒருங்கு நின்றாற்போல; உரு கெழு தோற்றமொடு - உட்குப் பொருந்திய காட்சியோடு; உட்கு வர விளங்கி - அச்சம் வர விளங்கி; இன்னீ ராகலின் - நீர் இத்தன்மையிராகுதலின்; இனியவும் உளவோ - இதனினும் இனிய பொருள் உளவோ; இன்னும் கேண்மின் - இன்னமும் கேளீர்; நும் இசை வாழிய - நும்முடைய புகழ் நெடுங்காலம் செல்வதாக; ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் - நும்முள் ஒருவீர் ஒருவீர்க் குதவுவீராக; இருவீரும் உடனிலை திரியீ ராயின் - நீங்களிருவீரும் கூடி நிற்கின்ற இந்நிலையின் வேறு படீராயின்; இமிழ் திரைப் பௌவம் உடுத்த இப் பயங்கெழு மாநிலம் - ஒலிக்கும் திரையையுடைய கடல் சூழ்ந்த இப் பயன் பொருந்திய உலகங்கள்; கையகப்படுவது பொய்யாகாது - கையகத்தே யகப்படுதல் பொய்யாகாது; அதனால் - ஆதலால்; நல்ல போலவும் - நல்லன போலே யிருக்கவும்; நயவ போலவும் - நியாயத்தை யுடையன போலே யிருக்கவும்; தொல்லோர் சென்ற நெறிய போலவும் - பழையோ ரொழுகிய ஒழுக்க முடையனபோலே யிருக்கவும்; காதல் நெஞ்சின் - அன்பு பொருந்திய நெஞ்சினையுடைய; நும் இடை புகற்கு அலமரும் ஏதில் மாக்கள் - நும்மிடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு அலமரும் அயலாருடைய; பொதுமொழி கொள்ளாது - சிறப்பில்லாத மொழியைக் கேளாது;இன்று போல்க நும் புணர்ச்சி - இன்று போல்க நுமது கூட்டம்; வென்று வென்று அடுகளத்து உயர்க நும்வேல் - வென்று வென்று போர்க் களத்தின்கண் மேம்படுக நும்முடைய வேல்; கொடு வரிக் கோண்மாக்குயின்ற - வளைந்த வரியை யுடைய புலி வடிவாகச் செய்யப்பட்ட; சேண் விளங்கு தொடுபொறி - சேய்மைக்கண் விளங்குகின்ற தோண்டிய இலாஞ்சனையை; நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த - பெரிய நீரின்கண் வாழும் கயலுடனே பொறித்த; குடுமிய வாக - சிகரங்களையுடைய வாக; பிறர் குன்றுகெழு நாடு - பிறருடைய குன்றையுடைய நாடுகள் எ-று. குன்று கெழு நாடென்ற தாயினும் கருதியது பிறர் நாட்டுக் குன்றுகளென்றதாகக் கொள்க. கோளி யென்றது, பூவாது காய்க்கும் மரம். தழீஇப் பொறாவென வியையும் முரச மூன்றாவன; வீர முரசும், நியாய முரசும், தியாக முரசும்; மணமுரசுடனே ஏனை யிரண்டு முரசென்பாரு முளர். நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென முற்றாக வுரைப்பாரு முளர். தொடு பொறி - பெயர் மாத்திரையாய் நின்றது. ஒருவீர் ஒருவீர்க்கு உதவியாய் வலியை யுடையீராய் நீங்கள் இருவீருமென்பாரு முளர். இருவரரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இஃது உடனிலை யாயிற்று. விளக்கம் : ஆலமரத்தின் கிளையைத் தாங்குதற்குரிய வீழ் தோன்றித் தாங்கத் தொடங்கிய வளவில் அதன் அடி முதல் புரை யோடித் தொலைந்து போதலின், “முழுமுதல் தொலைந்த கோளி யால” மென்றார். துளங்கல் செல்லாது ஒருசொல்லாய்த் துளங்கா தென்பது படநின்றது. உருமின்பால் உள்ள அருமை யிது வென்றற்குப், “பொறுத்தற்கரிய” என்றார். “இளைய தாயினும் கிளையரா வெறியும் உருமின்” என்ற உவமத்தால், பொருநரைப் பொறாஅ என்றதற்கு, இளமைக்காலத்தும் பகைவரைக் காணப் பொறாத என்று உரை கூறினார். நெல்லும் நீரும் பாண்டியர்க்கே யன்றி, ஏனைச் சோழ சேரர்க்கு எளியவாய்க் கிடைப்பது பற்றி, “எல்லார்க்கும் எளிய” என்றும் “வரைய சாந்தமும் திரைய முத்தமும்” பாண்டியர்க்கே யுரிய, ஏனையோர்க்கு அரிய வென்றும் அறிக. உடனிலை, நட்பாற் கூடி யொன்றியிருக்கும் நிலை. யாவராலும் நயக்கப்படுவது நடுவு நிலையாதலின், அதனை நயம் என்றும் அதனைப் புலப்படுத்தும் மொழிகளை நயவ வென்றும் கூறுவர். காதல் நெஞ்சின் நும் - காதல் நெஞ்சினையுடைய நுங்கள் என்க. தொடு பொறி - கல்லின்கண் வெட்டப்படும் பொறி. இரண்டு முரசாவன வெற்றியும், கொடையுமாம். தொடு பொறி, தொடராற்றலால் வேறுபொருள் பயவாமையின் “பெயர்மாத்திரையாய் நின்ற” தென்றார். (59) 59. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் கூடகாரம், வெள்ளியம்பலம், இலவந்திகைப்பள்ளி முதலியன போலச் சித்திரமாட மென்பது ஓரிடம். இவ்விடத்தே இறந்தமை பற்றி இப்பாண்டியன் இவ்வாறு கூறப்படுகின்றான். கள்ளங் கபடமற்ற வுள்ளமும் சான்றோரைப் பேணும் சால்பும் பெருவன்மையும் உடையன்; மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், இப்பாட்டின்கண் இவனுடைய அணி விளங்கும் மார்பினையும், தாளுற நீண்டு விளங்கும் தடக்கையினையும் பாராட்டி, “நீ அருளுதல் வல்லையேயன்றிப், பிறர் கூறும் பொய்யைத் தேர்ந்தறிகுவாயல்லை; பகைவரைத் தெறுதலின் ஞாயிற்றையும், எம்போல்வாரை யருளுதலில் திங்களையும் ஒப்பாய்” என்று பரிந்தோதுகின்றார். சீத்தலை யென்பது ஓர் ஊர். அவ் வூரினராயினும் மதுரை நகர்க் கண் இருந்து கூலவாணிகம் செய்தமையின், இவர் இவ்வாறு கூறப்பட்டார். இவர்காலத்து வேந்தன் இப் பாட்டிற்குரிய நன்மாறனே யாவன். மணிமேகலை பாடிய ஆசிரியரும் இவரே யென்று பெயரளவே நோக்குமிடத்துப் புலனாகும் மணிமேகலை யாசிரியர் காலத்துப் பாண்டிவேந்தன் இவனல்லனென்பது சிலப்பதிகாரத்தால் இனிது விளங்குதலின், இச் சீத்தலைச் சாத்தனார் வேறென்பது தெளிவாகும். ஆயினும் இஃது ஆராய்தற்குரிய தொன்று. ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பின் தாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி வல்லை மன்ற நீநயத் தளித்தல் தேற்றாய் பெரும பொய்யே யென்றும் 5 காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும் ஞாயி றனையைநின் பகைவர்க்குத் திங்க ளனையை யெம்ம னோர்க்கே. (59) திணை: பாடாண்டிணை; துறை : பூவை நிலை. பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது. உரை : ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் - ஆரம் தாழ்ந்த அழகு மிக்க மார்பினையும்; தாள் தோய் தடக்கை - முழந் தாளிலே தோய்ந்த பெரிய கையினையுமுடைய; தகைமாண் வழுதி - அழகு மாட்சிமைப்பட்ட வழுதி; நீ நயந்தளித்தல் வல்லை மன்ற - நீ யாவர்க்கும் உவந்து அருளைப் பண்ணு தலைத் தெளிவாக வல்லை மெய்யாக; தேற்றாய் - யாவரிடத்தும் தெளியாய்; பெரும -; பொய்யே - பொய்யை; என்றும் காய்சினம் தவிராது - எந்நாளும் சுடும் வெம்மை யொழியாது; கடல் ஊர்பு எழுதரும் ஞாயிறு அனையை - கடலிடத்தே கிளர்ந்தெழுகின்ற ஞாயிற்றை யொப்பை; நின் பகைவர்க்கு -; எம்மனோர்க்குத் திங்கள் அனையை - எம்போல்வார்க்குத் திங்களை யொப்பை எ-று. தேற்றா யென்றது, தேறா யெனத் தன்வினையாய் நின்றது. தேற்றா யென்பதற்குப் பொய் தெளிக்கப்படா யெனினுமமை யும். ஞாயிற்றோடும் திங்களோடு முவமித்தமையால், இது பூவைநிலை யாயிற்று. விளக்கம் : முழந்தாளளவும் கை நீண்டிருத்தல் ஆண் மக்கட்கிலக்கணம், “வலிய வாகும் நின் தாடோய் தடக்கை” எனப் பிறரும் கூறுப. பிறவினை யென்றே கொள்ளின், பொருள் இது வென்பார், “பொய்..... அமையும்” என்றார். (59) 60. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் இவ்வளவனை உறையூரிடத்தே யிருந்த மருத்துவன் தாமோதரனார் இப் பாட்டின்கண் பாராட்டுகின்றார். இவன் தன் காலத்தேயிருந்த பாண்டிவேந்தனோடு நட்புற்றுச் சேரனது பகைமையை வென்று புகழ் மேம்பட்டிருக்கையில், சான்றோர் பலரும் இவனைப் பாடிப் பாராட்டி யிருக்கின்றனர். நாட்டிற் குண்டாகும் குறை பலவும் போக்கி அதனைக் காக்கும் வகையில் பெருமுயற்சியும் பேருழைப்பு முடையனாய் இருந்த இவனது இயல்பை இப் பாட்டின்கண், “கானற், கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன்பகட் டன்ன எங்கோன்” என்பதனால் தாமோதரனார் சிறப்பிக்கின்றார். தாமோதரனார் என்னும் சான்றோர் உறையூரின்கண் மருத்துவத்தொழில் புரிந்திருந்தவர். இனிய செய்யுள் செய்வதில் சிறந்தவர். இவரும் சேரமான் தானைத் தலைவன் பிட்டங் கொற்றனால் பெருஞ்சிறப்புச் செய்யப்பெற்றவர். இவர் இவ் வளவனைப் போலப் பிட்டங்கொற்றனையும் அழகு திகழப் பாடியுள்ளார். “மலைகெழு நாடன் கூர்வேற் பிட்டனைக், குறுக லோம்புமின் தெவ்விர்” என்றும், அவன் “நசைவர்க்கு மென்மை யல்லது பகைவர்க்கு, உலைக்கல் லன்ன வல்லாளன்” என்றும் கொற்றனது வன்மையும் வண்மையும் ஒருங்கு விளங்கப் பாடி யிருக்கின்றார். முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச் செம்மீ னிமைக்கு மாக விசும்பின் உச்சி நின்ற வுவவுமதி கண்டு கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த 5 சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து தொழுதன மல்லமோ பலவே கானற் கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும் ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன் 10 வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன் வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின் மாலை வெண்குடை யொக்குமா லெனவே. (60) திணை: பாடாண்டிணை; துறை : குடை மங்கலம். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது. உரை : முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல - கடனடுவே தோன்றுகின்ற திமிலின்கண் இடப்பட்ட விளக்குப் போல; செம் மீன் இமைக்கும் - செவ்வாய் மீன் விளங்கும்; மாக விசும்பின் உச்சி நின்ற உவவு மதி கண்டு - மாகமாகிய விசும்பினது உச்சிக்கண்ணே நின்ற உவாநாளின் மதியத்தைக் கண்டு; கட்சி மஞ்ஞையின் - காட்டுள் வாழும் மயிலைப் போல; சுர முதல் சேர்ந்த சில் வளை விறலியும் யானும் - சுரத்திடைப் பொருந்திய சிலவாகிய வளையையுடைய விறலியும் யானும்; வல் விரைந்து தொழுதனம் அல்லமோ பலவே - கடிதின் விரைந்து தொழுதே மல்லேமோ பலகால்; கானல் கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும் - கடற்கரையிடத்துக் கழியினீரான் விளைந்த உப்பை முகந்துகொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்கின்ற; ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் - ஆரையுடைய சகடையினது குழிப்பாய்தலைத் தீர்த்துச் செல்லும்; உரனுடை நோன் பகட்டன்ன எங்கோன் - வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை யொக்கும் எங்கோன்; வலன் இரங்கு முரசின் - வென்றியாக முழங்கும் முரசினையும்; வாய் வாள் வளவன் - தப்பாத வாளினையுமுடைய வளவனது; வெயில் மறைக் கொண்ட - வெயிலை மறைத்தற் கெடுத்த; உரு கெழு சிறப்பின் மாலை வெண்குடை ஓக்குமால் என - உட்குப் பொருந்திய தலைமையையுடைய தாமம் பொருந்திய வெண்கொற்றக் குடையை யொக்குமெனக் கருதி எ-று. செம்மீ னிமைக்கும் விசும்பின் உச்சிநின்ற மதியை உவமித் தமையின், இது தலைப்பெய லுவமையாய் நின்றது. கானல்- கடற்கரை வெயிலென்றது; பகைவரானும் கொடியோரானும் வரும் வெம்மையை. இராச்சிய பாரத்தைப் பொறுத்து நடத்து மாறு நோக்கி, நோன்பகட்டோடுவமித்தமையின், இறப்ப விழிந்த ஆனந்த வுவமையன்றாயிற்று உவாமதியைக் கண்டு. வளவன் வெண்குடையை யொக்குமென விறலியும் யானும் பலகால் தொழுதோமல்லமோ எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வளவன் வெண்குடையைக் காட்டித் தொழுமின் என்றார்க்கு நிறைமதி தொழப்படாதாயினும் குடையோடு ஒப்புமை கண்டு தொழுத யாம், குடை தன்னைக் கண்டால் தொழுதல் சொல்ல வேண்டுமோ வென அதன் சிறப்புக் கூறியவாறு. செம்மீன் - திருவாதிரையுமாம். விளக்கம் : கடலிற் செல்லும் திமிலின்கண் இரவுக் காலங்களில் விளக் கேற்றுதல் மரபாதலால் அவ்விளக்கு வானத்தில் இரவில் விளங்கும் செவ்வாய் மீனுக்கு உவமமாயிற்று. முழுத்திங்கள் தொழப்படாதா யினும் தொழுதமை தோன்ற, “வல் விரைந்” தென்றார். கல்நாடு - மலைநாடு. ஆழ்ச்சி - குழிகளில் சகடம் புதைந்து ஆழ்தல். மறைக் கொண்ட என்புழி, மறை முதனிலைத் தொழிற்பெயர். நான்கனுருபு விரித்து மறைத்தற்குக் கொண்ட என உரை கூறப்பட்டது. உயர்ந்த பொருட்கு மிகத் தாழ்ந்த தொன்றை யுவமித்தல் இறப்ப விழிந்த ஆனந்த வுவமை யென்னும் குற்றமாம். அரசியற் பொறையைத் தாங்கிப் பகைக்கூழள்ளற்படாது உய்க்கும் வேந்தற்கு நோன்பகடு சிறந்த வுவமையாதலின், இது குற்றமன் றென்பதாம். (60) 61. சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி சோழன் நலங்கிள்ளியின் மைந்தன் சேட்சென்னி யென்ப வனாகும். இவன் சிறந்த வீரன். இவன் இலவந்திகைப் பள்ளியில் இருந்து உயிர் துறந்தமைபற்றி இவ்வாறு கூறப்படுகின்றான். இவ்வேந்தனை யணுகியிருந்து அவனால் சிறப்பிக்கப்பட்டவ ராதலின், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் இவன் நாட்டு இயல்புகளையும் இவனுடைய விறலையும் விரித்துக் கூறுகின்றார். ஒருகால் இவனது வெற்றி நலத்தைச் சிலர் வினவினாராக, அவர்கட்கு இப்பாட்டால் இக் குமரனார், இச் சென்னியைப் பகைப்போர் உளராயின், அவர்க்கு எய்தக்கடவ துன்பத்தை யவர்தாமே யறிகுவர்; அவனொடு வழுவின்றிப் பொருதவர் வாழக் கண்டதில்லை; அவனது அருள் பெற்றோர் வருந்தக் கண்டது மில்லை” என்று அறிவுறுத்தினார். இவன் காலத்தே சேரநாட்டைக் குட்டுவன் கோதை ஆட்சி புரிந்தான். இவனுக்குச் சிறிது முன்னோ பின்னோ குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் சோழநாட்டை யாண்டான். சோழர் படைத்தலைவன் ஏனாதி திருக்கிள்ளி யென்பான், இவன் காலத்தும் சிறப்புற்று விளங்கினான். கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் சிறுமா ணெய்த லாம்பலொடு கட்கும் மலங்குமிளிர் செறுவிற் றளம்புதடிந் திட்ட பழன வாளைப் பரூஉக்கட் டுணியல் 5 புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை யாக விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடுகதிர்க் கழனி சூடுதடு மாறும் வன்கை வினைஞர் புன்றலைச் சிறாஅர் தெங்குபடு வியன்பழ முனையிற் றந்தையர் 10 குறைக்க ணெடும்போ ரேறி விசைத்தெழுந்து செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும் வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன் எஃகுவிளங்கு தடக்கை யியறேர்ச் சென்னி சிலைத்தா ரகல மலைக்குந ருளரெனில் 15 தாமறி குவர்தமக் குறுதி யாமவன் எழுவுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர் வாழக் கண்டன்று மிலமே தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்ட லதனினு மிலமே. (61) திணை - வாகை; துறை : அரசவாகை. சோழன் இலவந் திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. உரை : கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் - கொண்டையாகிய மயிரையும் குளிர்ந்த தழையையுமுடைய கடைசியர்; சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் - சிறிய மாட்சிமையுடைய நெய்தலை யாம்பலுடனே களையும்; மலங்கு மிளிர் செறுவின் - மலங்கு பிறழ்கின்ற செய்யின் கண்ணே; தளம்பு தடிந்திட்ட - தளம்பு துணித்திடப்பட்ட; பழன வாளைப் பரூஉக் கண் துணியல் - பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய தடியை; புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறையாக - புதிய நெல்லினது வெள்ளிய சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு; விலாப்புடை மருங்கு விசிப்ப மாந்தி - விலாப்புடைப் பக்கம் விம்ம வுண்டு; நீடு கதிர்க் கழனி சூடு தடுமாறும் - நெடிய கதிரையுடைய கழனியிடத்துச் சூட்டைஇடு மிட மறியாது தடுமாறும்; வன்கை வினைஞர் புன்றலைச் சிறாஅர் - வலிய கையையுடைய உழவர் புல்லிய தலையையுடைய சிறுவர்; தெங்கு படு வியன்பழம் முனையின் - தெங்கு தரும் பெரிய பழத்தை வெறுப்பின்; தந்தையர் குறைக் கண் நெடும்போ ரேறி - தந்தையருடைய தலை குவியாமல் இடப்பட்ட குறைந்த இடத்தையுடைய நெடிய போரின் கண்ணே யேறி; விசைத் தெழுந்து - உகைத் தெழுந்து; செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும் - வளவிய கோட் புக்க பனையினது பழத்தைத் தொடுதற்கு முயலும்; வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன் - நாடோறும் புதுவரு வாயையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனாகிய; எஃகு விளங்கு தடக்கை இயல் சேர்ச் சென்னி - வேல் விளங்கும் பெரிய கையினையும் இயற்றப்பட்ட தேரினையு முடைய சென்னியது; சிலைத்தார் அகலம் மலைக்குநர் - இந்திர விற்போலும் மாலையையுடைய மார்போடும் மாறுபடுவோர்; உளரெனின் - உளராயின்; தாம் அறிகுவர் தமக்குறுதி - தாமறிகுவர் தமக்குற்ற காரியம்; யாம் - யாங்கள்; அவன் எழு வுறழ் திணிதோள் வழுவின்று மலைந்தோர் - அவனுடைய கணைய மரத்தோடு மாறுபடும் திணிந்த தோளைத் தப்பின்றாக மாறுபட்டோர்; வாழக் கண்டன்றும் இலமே - வாழக் கண்டது மிலம்; தாழாது திருந்தடி பொருந்த வல்லோர் - விரைய அவனது திருந்திய அடியை அடையவல்லோர்; வருந்தக் காண்டல் அதனினும் இலமே - வருந்தக் காண்டல் அவ் வாழக்கண்டதனினும் இலம் எ-.று. தளம்பு என்றது சேறுகுத்தியை. வழுவின்று மலைதலாவது வெளிப்பட நின்று மலைதல். விளக்கம் : தளம்பு - சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை யுடைத்துச் செம்மை செய்யும் கருவி. அது செல்லுங்கால் சேற்றிற் கிடக்கும் வாளைமீன் அறுபட்டுத் துண்டுபடுமாறு தோன்ற. “தளம்பு தடிந்திட்ட பரூஉக்கண் துணியல்” என்றார். கண்ணுறை - வியஞ்சனம்; சோற்றோடு துணை யாய் உண்ணப்படும் காய்கறிகள். உணவை மிக வுண்டதனால் மயங்கிச் சூட்டினை இடுமிட மறியாது தடுமாறுதல் உண்டாயிற்று. செழுங்கோட் பெண்ணை யென்புழி, கோள் என்றது குலை பொருந்தி எளிதிற் கொள்ளத்தக்க நிலையிலிருப்பதை யுணர்த்தி நின்றது. உறுவது-உறுதி யென நின்றது; தபுவது-தபுதி யென வருதல் போல. தாழ்த்தவழி, சீற்றத்துக் கிலக்காய்க் கொல்லப்படுவ ரென்பது கருதி, “தாழாது’ என்றார். அது, வாழக் காண்டல். (61) 62. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர்வன்மையும் கொடைச் சிறப்பும் மிக வுடையவன். பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் பதிகம் கூறும் சேரமான் இவனாயின், இவற்குப் பின் அரசுகட்டிலேறியவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான். வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி பெருநற்கிள்ளி யெனவும் வழங்கப்படுவன் போலும். இவ்விரு பெரு வேந்தர்க்கும் மண் ணாசையின் விளைவாகப் போருண்டாயிற்று. கழாத்தலையா ராகிய சான்றோர் சேரலாதன் போர்க்களத் திருப்பதை யறிந்து அவனைக் காண்பது கருதிச் சென்றார். அவர் சென்று காணும் போது இரு வேந்தரும் பொருது விழுப்புண்பட்டு வீழ்ந்து கிடந்தனர். சேரமான் உயிர் நீங்குந் தறுவாயி லிருப்பக் கண்ட அச் சான்றோர், அவன் புகழ்பாடி வியந்தாராக, அவன் தன் கழுத்திலிருந்த ஆரத்தை வழங்கி இறவாப் புகழ் பெற்றான்.சிறிது போதில் அவன் உயிரும் நீங்கிற்று. இருவரும் வீழ்ந்து கிடத்தலைக் காணுந்தோறும் கழாத்தலையார், ஆறாத்துயர மெய்தி, இப் பாட்டால், “செருமுனிந்து, அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாமும் மாய்ந்தனர்; அவரை நிழல் செய்த குடைகளும் துளங்கின; அவர் தம் வெற்றியும் குடையும் நுவலும் முரசமும் ஒழிந்தன; போர் மறவர் தாமும் எஞ்சாது வீழ்ந்தமையின் அமரும் உடன் வீழ்ந்தது. இவர்தம் பெண்டிரும் பாசடகு மிசைதல், பனிநீர் மூழ்கல் முதலிய கைம்மைச் செயல்களை விரும்பாது இவர்தம் மார்பகம் பொருந்தி உயிர் துறந்தனர்; இமையா நாட்டத்தவரும் நிறைய விருந்து பெற்றனர்; இவர்தம் புகழ் மேம்படுவதாக” எனப் பாடிச் சிறப்பித்தார். கழாத்தலையார் பெயர் கழார்த் தலையார் என்றும் காணப்படுகிறது. முதுமக ளொருத்தியின் தலையை, “நறுவிரை துறந்த நாறா நரைத்தலை” யென்றது போலக் கழாத்தலை யென்று பாடிய சிறப்பால் இவர் இப்பெயர் பெற்றன ராதல் வேண்டும். கழார்த் தலையார் என்பதே பாடமாயின், கழார் என்னும் ஊரின ராதல் வேண்டும். கழாத்தலை யென்பதே ஓர் ஊரென்றும், இவர் அவ்வூரின ரென்றும் கூறுப. ஒருகால் இருங்கோவேளின் முன்னோரில் ஒருவன் இவரை இகழ்ந்தமையால், வேளிர்க்குரிய அரைய மென்னும் நகர் கெட்டதெனக் கபிலர் (புறம். 202) கூறுகின்றார். இவர் செய்யுள் புலவர் புகழும் சிறப்புடைய தென்றும் இவர் பெயர் கழாத்தலை யென்றும் தோன்ற, “புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை, இகழ்ந்ததன் பயன்” என்று கபிலர் கூறுவது ஈண்டு நினைவுகூரத் தகுவதாம். இவர், குடக்கோ நெடுஞ்சேரலாதன்பால் ஆரம் பெற்றதும், பிறவும் மேலே கூறினாம். வருதார் தாங்கி யமர்மிகல் யாவது பொருதாண் டொழிந்த மைந்தர் புண்டொட்டுக் குருதிச் செங்கைக் கூந்த றீட்டி நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டிர் 5 எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கப் பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந் தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே உரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே 10 பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக் களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர உடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார் 15 மார்பகம் பெருந்தி யாங்கமைந் தனரே வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவி னோரு மாற்ற அரும்பெற லுலக நிறைய விருந்துபெற் றனராற் பொலிகநும் புகழே. (62) திணை: தும்பை; துறை: தொகைநிலை. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற் பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது. உரை : வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது - வருகின்ற தூசிப் படையைத் தடுத்துப் போரின்கண் ஒருவர் ஒருவரை வெல்வே மென மிகுதல் எங்ஙனமாவது; பொருது ஆண்டொழிந்த மைந்தர் - பொருது அக்களத்தின்கட்பட்ட வீரரது; புண் தொட்டுக் குருதிச் செங்கை- புண்ணைத் தோண்டி அவ்வுதிரந் தோய்ந்த செய்ய கையால்; கூந்தல் தீட்டி - தமது மயிரைக் கோதி; நிறங் கிளர் உருவிற் பேஎய்ப் பெண்டிர் - நிறமிக்க வடிவையுடைய பேய் மகளிர்; எடுத் தெறி அனந்தற் பறைச் சீர் தூங்க - மேன்மேலும் கொட்டுகின்ற மந்தமான ஓசையை யுடைய பறையினது தாளத்தே யாட ; பருந்து அருந்துற்ற தானையொடு - பருந்து ஊனைத் தின்னப் பொருந்திய படை யானே; செரு முனிந்து - போரின்கண் வெகுண்டு; அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்தாம் மாய்ந்தனர் - அறத்தின் அடர்த்துச் செய்த வலிய போரையுடைய அரசர் இருவரும் பட்டார்; குடை துளங்கின - அவர் கொற்றக் குடையும் தளர்ந்தன; உரை சால் சிறப்பின் முரைசு ஒழிந்தன - புகழமைந்த தலைமையையுடைய முரசு வீழ்ந்தன; பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் - பல நூறாக அடுக்கப்பட்ட பதினெண்பாடை மாக்களாகிய படைத் தொகுதி; இடம் கெட ஈண்டிய வியன்கண் பாசறை - இடமில்லை யாம்படி தொக்க அகன்ற இடத்தையுடைய பாடி வீட்டின்கண்; களம் கொளற்கு உரியோர் இன்றி - போர்க்களம் தமதாக்கிக் கொள்ளுதற் குரியோர் ஒருவரின்றி; தெறுவர உடன் வீழ்ந் தன்றால் அமர் - கண்டார்க்கு அச்சம் வர, வுடனே மடிந்தது பூசல்; பெண்டிரும் பாசடகு மிசையார் - அவர் பெண்டிரும் பச்சையிலை தின்னாராய்; பனி நீர் மூழ்கார் - குளிர்ந்த நீரின்கண் மூழ்காராய்; மார்பகம் பொருந்தி - அவர் மார்பகத்தைக் கூடி; ஆங்கு அமைந்தனர் - அக்களத்தின் கண்ணே உடன் கிடந்தார்; வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற வுணவினோரும் - வாடாத கற்பகத்தின் தாரினையும் இமையாத கண்ணினையும் நாற்றமாகிய உணவினையுமுடைய தேவர்களும்; ஆற்ற அரும்பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் - மிகப் பெறுதற்கரிய உலகம் நிரம்ப விருந்து பெற்றார்; பொலிக நும் புகழ் - அதனால் பொலிக நுங்கள் புகழ் எ-று. அனந்தல்-பறை கொட்டுவார் கை புண்படுதலின் மந்தமாக ஒலித்தல்; அறத்தின் மண்டுதலாவது - படை பட்டபின் பெயராது சென்று இரு பெருவேந்தரும் பொருதல். பட்ட இரு வேந்தரும் அக் களத்துக் கிடக்கின்ற படியைக் கண்டு, தம் மனத்தோடு நொந்து கூறுகின்றாராதலான், நும் புகழென முன்னிலையாக்கி கூறினார். வேந்தர் மாய்ந்தனர்; குடை துளங்கின; முரசு ஒழிந்தன; அமர் உடன் வீழ்ந்தது; பெண்டிரும் மார்பகம் பொருந்தி அமைந் தனர்; நாற்ற உணவினோரும் விருந்து பெற்றனர்; இவ்வாறான பின்பும் யாம் அமரினை மேற்கொண்டு பொருது வெல்வே மென்று தாந்தாம் நினைந்த நினைவு எவ்வண்ணமாவதென்று தம் நெஞ்சொடு கூறிப் பின் பொலிக நும் புகழே யென அவ்வரசர் கிடந்தவாறு கண்டு கூறியவாறு. மறத்தின் மண்டிய வென்ற பாடமோதுவாரு முளர். வருதார் தாங்கி அமர் மிகல் யாவது என்பதற்கு, இவர்கள் செய்தபடி கண்டு...... இனிச் சிலர் பொருது வேறல் எங்கே யுளது என வியந்து கூறியதாக வுரைப்பாருமுளர். விளக்கம் : அமரின்கண் மிகுதல் என்பது ஒருவர் ஒருவரை வெல்வே மென மிக்குற நினைத்து முயறல். அனந்தல் - மயக்கம், ஈண்டு மந்தமான ஓசைமேல் நின்றது. அருந்தவுற்ற வென்பது அருந்துற்ற வென நின்றது. பாசடகு மிசைதலும். பனிநீர் மூழ்கலும் கணவனை யிழந்த மகளிர் மேற்கொள்ளும் கைம்மைச் செயல். பைஞ்ஞிலம், மக்கட்டொகுதி; “உண்ணாப் பைஞ்ஞிலம் (பதற். 31) என்று பிறரும் வழங்குப. வேந்தர் மாய்ந்தனர்; குடை துளங்கின; அமரும் வீழ்ந்தது எனப் படர்க்கைக்கண் கூறி வந்த ஆசிரியர், ‘பொலிக நும் புகழ்” என முன்னிலைப்படுத் துரைத்தற்கு அமைதி காட்டுவார், “பட்ட இருவேந்தரும்.......கூறினார்” என்றார். தேவரை வழிபடுவோர் “நறும்புகை” யிடுவது அவர்கள் நாற்ற வுணவினோ ராதல்பற்றி யென அறிக. (62) 63. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இவ்விரு பெரு வேந்தரும் போர்க்களத்திற்பட்டு வீழ்ந்தது கண்டு, கழாத்தலையார் இரங்கியதுபோல, ஆசிரியர் பரணரும் அமர்க்களம் போந்து இருவரையும் கண்டு “ஒருவரை யொருவர் வஞ்சியாது நின்று வெற்றி பெறுவோம்” என்றுபோரில் மண்டிய இவர்தம் வீழ்ச்சி மண்ணாளும் மன்னர்க்கு ஒரு நல்ல வுண்மை யுணர்த்தும் என்ற கருத்தால், இப் பாட்டின்கண், “இவர்கள்பால் எத்துணையோ யானைப்படைகள் இருந்தன; அவை யாவும் அம்பால் துளங்கி விளைத்தற்குரிய வினையின்றி அழிந்தன. குதிரைகளோ மிக்க புகழ் படைத்தவையெனினும், தம்மைச் செலுத்தும் மறத்தகை மைந்தரோடு பட்டொழிந்தன; இவர் தம் வெற்றி முரசங்களும் கிழிந்தொழிந்தன; நெடுவேல் மார்பில் பாய்ந்ததால் வேந்தரும் வீழ்ந்துபட்டனர். இவர்தம் அகன்றலை நாடுகள் இனி என்னாம்” என இரங்கிப் பாடியுள்ளார். எனைப்பல் யானையு மம்பொடு துளங்கி விளைக்கும் வினையின்றிப் படையொழிந் தனவே விறற்புகழ் மாண்ட புரவி யெல்லாம் மறத்தகை மைந்தரொ டாண்டுப்பட் டனவே 5 தேர்தர வந்த சான்றோ ரெல்லாம் தோல்கண் மறைப்ப வொருங்குமாய்த் தனரே விசித்துவினை மாண்ட மயிர்க்கண் முரசம் பொறுக்குந ரின்மையி னிருந்துவிளிந் தனவே 10 வேந்தரும் பொருதுகளத் தொழிந்தன ரினியே என்னா வதுகோ றானே கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவன் முக்கித் தண்புனற் பாயும் யாண ரறாஅ வைப்பிற் 15 காமர் கிடக்கையவ ரகன்றலை நாடே. (63) திணை: தும்பை; துறை: தொகைநிலை. அவரை அக்களத்திற் பரணர் பாடியது. உரை : எனைப் பல் யானையும் - எத்துணையும் பலவாகிய யானையும்; அம்பொடு துளங்கி - அம்பால் கலங்கி; விளைக்கும் வினையின்றிப் படை யொழிந்தன - இனிமேலுண்டாக்கும் போரின்றிப் படையிடத்துப் பட்டன; விறற் புகழ் மாண்ட புரவி யெல்லாம் - வெற்றிப்புகழ் மாட்சிமைப்பட்ட குதிரை யெல்லாம்; மறத்தகை மைந்தரொடு - ஆண்மைக்கேற்ற வீரப்பாட்டுக் கூற்றையுடைய மேலாட்களுடனே; ஆண்டுப் பட்டன - அக்களத்தே பட்டன; தேர் தர வந்த சான்றோர் எல்லாம் - தேர் கொடுவர வந்த போரிற் கமைந்தோ ரெல்லாம்; தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர் - தாம் பிடித்த பரிசை தம் கண் மறைப்பச் சேரப் பட்டனர்; விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம் - வாரால் விசிக்கப்பட்டுத் தொழில் மாட்சிமைப்பட்ட மயிர் சீவாது போர்க்கப்பட்ட கண்ணை யுடைய முரச மெல்லாம்; பொறுக்குநர் இன்மையின் - பரிப்பார் படுதலான்; இருந்து விளிந்தன - இருந்து கெட்டன; சாந்தமை மார்பில் நெடு வெல் பாய்ந்தென - சாந்தமைந்த மார்பின்கண்ணே நெடிய வேல் பாய்ந்தனவாக; வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் - அரசரும் பொருது அக் களத்தின்கண்ணே மடிந்தனர்; இனி என்னாவது கொல்தான் - இனி என்ன வருத்த முறுவதோதான்; கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் - கழனிக்கண் ஆம்பற்றண்டாற் செய்த வளையணிந்த கையினையுடைய மகளிர்; பாசவல் முக்கி - செவ்வி யவலை முக்கி; தண் புனல் பாயும் - குளிர்ந்த புனற் கண்ணே பாயும்; யாணர் அறாஅ வைப்பின் - புதுவருவா யறாத ஊர்களையுடைய; காமர் கிடக்கை - அழகிய கிடையை யுடைய; அவர் அகன்றலை நாடு - அவரது அகன்ற விடத்தை யுடைய நாடு எ-று. அன்னோ என்னாவதுகொல் என்று பாடமோதுவாரு முளர். நாடுதான் என்னாவதுகொல் எனக் கூட்டுக. நாடென்னு மொருமை நோக்கி, என்னாவதுகொல் என ஒருமையாற் கூறப்பட்டது. விளக்கம் : வெற்றியால் உளதாகும் புகழை “விறற்புகழ்” என்றார். அறப் போர் செய்தற்குரிய குணங்களால் அமைந்தோரைச் “சான்றோர்” என்பது மரபு; “மெய்சிதைந்து சாந்தெழில் சிதைத்த சான்றோர் பெருமகன்” (பதிற். 67) என்று பிறரும் கூறுதல் காண்க. மயிர்க்கண் முரசம் “கொல்லேற்றுப் பைந்தோல், சீவாது போர்த்த மாக்கண் முரசம்” (மதுரை. 732-3) சீவுதல் - மயிரை நீக்குதல். சீவாது போர்த்த முரசினை மயிர்க்கண் முரசம் என்றலை, “தழங்குகுரல் மயிர்க்கண் முரசினோரும்”(நற். 93) என்பதனாலு மறிக. முக்குதல்-உண்ணுதல். “தத்திங்கந் தத்திங்கம் கொட்டு வாளாம், தயிருஞ் சோறுந் தின்பாளாம், ஆப்பஞ் சுட்டால் தின்னு வாளாம், அவலிடிச்சால் முக்குவாளாம்” என்று மகளிர் கைக்குழந்தைகட்குப் பாடிக் காட்டும் பாட்டிலும் முக்குதல் இப் பொருளில் வருதல் காண்க. (63) 64. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முதுகுடுமிப் பெருவழுதி புலவர் பாடும் புகழ் படைத்தவன். இவனது வண்மை புலவர் மிடி தீர்க்கும் பெருநலம் படைத் திருப்பதுபற்றி, வறுமை யெய்துங் காலங்களில் புலவர்கள் இவன்பால் பொருள் பெற்றுச் சென்று இனிது வாழ்வதனோ டமையாது, தாம் பெற்ற பெருவளத்தைப் பெறார்க்கும் அறிவித்து, அவன்பாற் சென்று அது பெறச் செய்வது மரபு. அம்முறையே, இப்பாட்டின்கண் ஆசிரியர் நெடும்பல்லியத்தனார், வறுமை யெய்தி வாடும் விறலியைக் கண்டு, “இக் காலத்தே புற்கையுண்டு வருந்தும் நாம் முதுகுடுமிப் பெருவழுதியைக் கண்டு வருவே மாயின், புற்கை யுணவு நீங்கி இனிய வுணவு கொள்ளும் செல்வம் பெறலாம்; வருக செல்வோம்” என்று பாடியுள்ளார். நெடும்பல்லியத்தன் என்னும் பெயர் ஆண்பாற்கும் நெடும் பல்லியத்தை யென்பது பெண்பாற்கும் வழங்கும். இப்பாட்டின் முதலடியில் யாழ், ஆகுளி, பதலை யெனப் பல்லியங்களைத் தொகுத்தோதுதலின் இவர் நெடும்பல்லியத்தனா ராயினா ரெனக் கருதுவோரும் உளர். நெடும்பல்லியத்தை யென வருதலை நோக்கின், இக்கருத்துச் சிறப்புடையதாகத் தோன்றவில்லை. முதுகுடுமிப் பெருவழுதி தனக்குரிய கூடலினீங்கிப் போர்க் களத்தே அமர்ந்திருப்பதை யறிந்துவைத்தும், அங்கே அவன்பாற் செல்லக் கருதுவது அவனது வண்மையும் இவரது வறுமைக் கொடுமையும் புலப்படுத்துகிறது. இவரைப் பற்றி வேறே குறிப் பொன்றும் காணப்படவில்லை. நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப் 5 பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே. (64) திணை: பாடாண்டிணை; துறை: விறலியாற்றுப் படை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது. உரை : நல் யாழ் ஆகுளி பதலை யொடு சுருக்கி - நல்ல யாழையும் சிறு பறையையும் ஒரு தலை மாக்கிணையுடனே கட்டி; செல்லாமோ சில்வளை விறலி - போவே மல்லேமோ சொல்லுவாயாக, சில வளையையுடைய விறலி; களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை - யானையணி பொருத இடமகன்ற பாசறைக்கண்; விசும்பு ஆடு எருவை பசுந்தடி தடுப்ப - ஆகாயத்தின்கண்ணே பறக்கும் எருவையைப் பசிய வூன்தடி தகைப்ப; பகைப்புலம் மரீஇய - மாற்றார் தேயத்தின் கண்ணே மருவிய; தகைப் பெருஞ் சிறப்பின் குடுமிக் கோமான் கண்டு - அழகிய பெரிய செல்வத்தினையுடைய முதுகுடுமி யாகிய கோமானைக் கண்டு; நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கு - மிக்க நீரான் அடப்பட்ட புற்கையைக் கைவிட்டு வருவதற்கு எ-று. எருவை, தலை வெளுத்து உடல் சிவந்திருக்கும் பருந்து; கழுகெனினுமமையும். விறலி, குடுமிக்கோமாற் கண்டு புற்கையை நீத்தனம் வரற்குச் செல்லாமோ வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. தகைப்பெருஞ் சிறப்பின் என்பதூஉம் பாடம். விளக்கம் : சுருக்குதல் - கட்டுதல்; பைக்குள்ளே வைத்து அதன் வாயைச் சுருக்கிக் கட்டுதல் பற்றி இவ்வாறு கூறினார். யானைகள் தம்மில் அணிவகுத்துச் செல்லும் இயல்பினவாதலால், களிற்றுக் கணம் என்றதற்கு யானை யணியென உரை கூறினார். பசுந்தடியின் காட்சி எருவையை மேலே செல்லாவாறு தடுத்துத் தன்னை யுண்டற்குரிய வேட்கையை யெழுப்புதலின், அதன் மேலேற்றி, “பசுந்தடி தடுப்ப” என்றார். தகை அழகு தகைப்பருஞ் சிறப்பின் என்ற பாடத்துக்குத் தடுத்தற் கரிய தலைமையையுடைய என உரை கூறிக் கொள்க. (64) 65. சேரமான் பெருஞ்சேரலாதன் இச் சேரலாதன் பெயர் சில ஏடுகளிற் பெருந்தோளாதன் என்று காணப்படுகின்றது. இவன் மிக்க வீரமும், சான்றோர் பாடும் சால்பு முடையன். குடக்கோ நெடுஞ்சேரலாதன் இவற்கு முன் தோன்றிக் குறுகிய காலத்தில் உயிர் துறந்தான். இவ்விருவர் காலத்தும் கழாத்தலையார் இருந்தார். இருவர்பாலும் அவர் சிறந்த நன்மதிப்புடையராய்ப் பாடியுள்ளார். இச் சேரமான் சோழநாட்டை யாண்ட கரிகால்வளவனொடு வெண்ணி யென்னு மிடத்தே பெரும்போர் செய்தான். அப்போரில் பாண்டிவேந்த னொருவனும் போர் உடற்றினன். இதன்கண் வளவன் செலுத்திய நெடுவேல் இச் சேரமான் மார்பிற்பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. மார்பினும் முகத்தினும் பட்ட புண்ணையே வீரர் விழுப்புண் ணென விரும்புவர். மார்பிற்பட்ட கருவியால் முதுகிடத்தும் இச் சேரமானுக்குப் புண்ணாயினமையின், இவன் அதனால் பெரு நாணம் கொண்டு மானம் பொறாது வடக்கிருப் பானாயினன். இச்செய்தி தமிழ்நாடெங்கும் பரவிற்று. கேள்வியுற்ற ஏனை யரசரும் சான்றோரும் இவன்பால் பெருமதிப்புற்றுப் பாராட்டு வாராயினர். கழாத்தலையாராகிய சான்றோர், இவன்செயல் கண்டு, ஆற்றாமை மிகக் கொண்டு, தன்போலும் வேந்த னொருவன் மார்பு குறித்தெறிந்த படையாலுண்டாகிய புறப் புண்ணிற்கு நாணி மறத்தகை மன்னனாகிய எங்கள் பெருஞ் சேரலாதன் வாள் வடக்கிருந்தனன்; எங்கட்கு இனி ஞாயிறு விளங்கும் பகற்போது முன்போலக் கழியாது; உழவர் உழவு மறப்பர்; சீறூர்களும் விழாவை மறக்கும்; இவனது வடக்கிருப்பு உவாநாளில்ஞாயிறுதோன்றத் திங்கள் மலைவாய் மறைவது போல வுளது. அஃதாவது, தமிழ் நாட்டின் மேலைப் பகுதியில் இனி இருள் சூழ்வதன்றி ஒளியில்லையாம்” என்று இப்பாட்டின் கண் கையறவுற்றுக் கலுழ்ந்து பாடியுள்ளார். மாமூலனார் என்னும் சான்றோர், இவன் வடக்கிருந்து உயிர் துறந்தன ரெனக் கூறுகின்றார். மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப இருங்கட் குழிசி கவிழ்ந்திழுது மறப்பச் சுரும்பார் தேறல் சுற்ற மறப்ப உழவரோ தை மறப்ப விழவும் 5 அகலு ளாங்கட் சீறூர் மறப்ப உவவுத்தலை வந்த பெருநா ளமயத் திருசுடர் தம்மு ணோக்கி யொருசுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத் தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த 10 புறப்புண் ணாணி மறத்தகை மன்னன் வாள்வடக் கிருந்தன னீங்கு நாள்போற் கழியல ஞாயிற்றுப் பகலே. (65) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை, சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருது புறப்புண்ணாணி வடக்கிருந்தானைக் கழாத் தலையார் பாடியது. உரை : முழா மண் மறப்ப - முழா மார்ச்சனை யிடுத லொழிய; யாழ் பண் மறப்ப - யாழ் பண்ணை யொழிய; இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப - பெரிய இடத்தையுடைய பானை பாலின்மையிற் கவிழ்ந்து நெய் கடைதலை யொழிய; சுற்றம் சுரும்பார் தேறல் மறப்ப - தம்முடைய கிளை வண்டார்ந்த மதுவை யுண்ணா தொழிய; உழவர் ஒதை மறப்ப - உழுவார் தொழில் செய்யு மோசையை யொழிய; அகலுள் ஆங்கண் சீறூர் விழவு மறப்ப - அகன்ற தெருவினையுடைய சீறூர் விழாவினை யொழிய; உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து - உவா வந்து கூடிய பெரிய நாளாகிய பொழுதின் கண்; இரு சுடர் தம்முள் நோக்கி - ஞாயிறுந் திங்களுமாகிய இரு சுடரும் தம்முள் எதிர்நின்று பார்த்து; ஒரு சுடர் புன்கண் மாலை மலை மறைந்தாங்கு - அவற்றுள் ஒரு சுடர் புல்லிய மாலைப்பொழுதின்கண் மலையுள்ளே யொளித்தாற் போல; தன் போல் வேந்தன் முன்பு குறித்தெறிந்த புறப்புண் நாணி - தன்னை யொக்கும் வேந்தன் முன்னாகக் கருதி யெறிந்த புறத்துற்ற புண்ணுக்கு நாணி; மறத்தகை மன்னன் வாள் வடக் கிருந்தனன் - மறக் கூறுபாட்டையுடையவேந்தன் வாளோடு வடக்கிருந்தான்; ஈங்கு ஞாயிற்றுப் பகல் நாள்போற் கழியல - ஆதலால், இவ்விடத்து யாம் அவனையின்றித் தனித்து உயிர் வாழும் ஞாயிற்றையுடைய பகல் எமக்கு இனி முன்பு கழிந்த நாள் போலக் கழியா எ-று. மண் முழா மறப்ப வென்பது முதலாகிய செயவெனெச்சங்க ளெல்லாம் வாள் வடக்கிருந்தன னென்னும் வினையோடு முடிந்தன. எறிந்த புண் - எறிதல் ஏதுவாக வுற்ற புண். முன்பு குறித் தெறிந்த புறப்புண் ணாணி யென்றது, மார்பில் தைத்துருவின புண்ணும் புறப்புண்ணாதலை யொக்கு மென நாணி யென்ற தாகக் கொள்க. விளக்கம் : முழாவை மண்ணுதலாவது மார்ச்சனையிடுதல் குழிசி இழுது மறப்ப வென்றதனால், குழிசி யிடத்தே கடைந்தெடுக்கப்படும் இயைபு கருதி, நெய் கடைதல் என்று பொருள் கூறப்பட்டது. இழுது - நெய் ; இன்றும் மலைநாட்டவர் உருக்காத நெய்யை இழுது என்ப. அரசர் குடியில் இழவுண்டாயின் ஊர்களில் எடுக்கப்படும் விழா கைவிடப் படும்; திரையனை இழந்து வருந்தியதனால் காவிரிப்பூம்பட்டினம் இந்திர விழாவை மறந்த செய்தி மணிமேகலையால் உணர்ந்து கொள்க. கரிகாலனொடு பொருத காலத்தில் சேரமான் முதுகிடாது நேர் நின்று பொருதானென்றும், அவன் மார்பு குறித்தெறிந்த கரிகாலன் வேல் அவனது மார்பிற் பட்டு முதுகிடத்தே புண்ணாகிற் றென்றற்கு. “முன்பு குறித்தெறிந்த புறப்புண்” என்றார். உவாநாளில் இருண் மாலைப்போதில் கிழக்கே திங்கள் தோன்ற, மேற்கே ஞாயிறு மலைவாய் மறையுமாறு தோன்ற, “ஒரு சுடர் புன்கண் மாலை மலை மறைந்தாங்கு” என்றார். (65) 66. சோழன் கரிகாற் பெருவளத்தான் சேரமான் பெருஞ்சேரலாதனோடு பொருது வெற்றிபெற்று மகிழ்ந்த கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் என்னும் புலவர் பெருமாட்டியார் கண்டார். இச்சேரமான் புறப்புண்ணாணி வாள் வடக்கிருந்ததும், அது கண்டு, வீரராகிய சான்றோர் பலர் உயிர் துறந்ததும் கேள்வியுற்றிருந்த அவர்க்கு. கரிகாலனது வன்மையும், சேரமானது மானவுணர்வும் பெரு வியப்பைப் பயந்தன. இதனினும் சிறப்புடைய பொருள் தாம் பாடுதற் கில்லாமை தேர்ந்து இப்பாட்டின்கண் இதனைப் பொருளாக அமைத்து, “ களியியல் யானைக் கரிகால் வளவ, பல போர்களிலும் பகைவரை வென்றுயர்ந்த நின் ஆற்றல் மிக விளங்குமாறு பெருஞ்சேரலாதனை வென்றனை; ஆயினும் வெண்ணிப் பறந்தலைக்கண் நின்னால் உண்டாகிய புறப் புண்ணுக்கு நாணி வாள் வடக்கிருந்து இவ் வுலகத்தே புகழ் மிக வெய்திய சேரலாதன் நின்னினும் நல்ல னன்றே” என்று பாடி யுள்ளார். வெண்ணி யென்பது, தஞ்சை மாநாட்டில் உள்ளதோர் ஊர். இது வெண்ணில் என்றும் வழங்கும். குயத்தியார் என்பது இப் புலவர் பெருமாட்டியின் பெயர். வேட்கோவருள் சிறந்தோர்க்குப் பண்டை நாளில் வேந்தர் குயம் என்னும் பட்டம் தந்து சிறப் பித்தல் மரபு. இவர் குயத்தியார் எனப்படுதலால், வேட்கோவருள் சிறந்தவ ரென்பது துணிபாம். இம்மரபு பத்தாம் நூற்றாண்டு வரையில் இருந்திருக்கிறது. கடலில் இயங்கும் காற்றைக் கலஞ் செலுத்துதற்குப் பணி கொள்ளும் விரகினை முதன் முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே; உரோமானிய ரல்லர் என்பது இவர் பாட்டால் வலிபெறுகிறது. கரிகாலன் முன் இவர் அவற்குத் தோற்ற, பெருஞ்சேரலாதனைச் சிறப்பித்து, “வேந்தே, வெற்றிப் புகழ் ஒன்றே நீ பெற்றனை; அதனை நினக்குத் தந்து, நின்னா லுண்டாகிய புறப்புண்ணுக்கு நாணி வாள் வடக்கிருந்து இவ் வுலகத்தே புகழ்மிக எய்திய சேரலாதன் நின்னினும் நல்லன் போலும்” என நயம்படக் கூறுவது இவரது புலமை நலத்தைப் புலப்படுத்துகிறது. நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ சென்றமர்க் கடந்தநின் னாற்ற றோன்ற 5 வென்றோய் நின்னினு நல்ல னன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புக ழுலக மெய்திப் புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே. (66) திணை : வாகை; துறை: அரசவாகை. சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது. உரை : நளி யிரு முந்நீர் நாவாய் ஓட்டி - நீர் செறிந்த பெரிய கடலின்கண்ணே மரக்கலத்தை யோட்டி; வளி தொழிலாண்ட உரவோன் மருக - போர்செய்தற்குக் காற்றின்றி நாவாய் ஓடா தாக ஆண்டு வளிச்செல்வனை யழைத்து ஏவல் கொண்ட வலியோன் மரபிலுள்ளானே; களியியல் யானைக் கரிகால் வளவ - மதம் பொருந்திய யானையையுடைய கரிகால் வளவ; சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய் - மேற் சென்று போரை யெதிர்நின்று கொன்ற நினது வலி தோற்ற வென்றவனே; நின்னினும் நல்லன் அன்றே - நின்னினும் நல்லனல்லவே; கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை - தழைத்தலைக் கொண்ட புது வருவாயையுடைய வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்துப் போர்க்களத்தின்கண்; உலகம் புகழ் மிக எய்தி - உலகத்துப் புகழை மிகப் பொருந்தி; புறப் புண்ணாணி வடக்கிருந்தோன் - புறப்புண்ணிற்கு நாணி வடக்கிருந்தோன் அவ்வாறிருத்தலான் எ-று. புகழெய்தி யென்றது, புறப்புண் நாணுதல்தன்னை. ஓட்டிய யென்பதனை யோட்ட வெனத் திரிக்க. எய்தி, எய்த வெனத் திரிப்பினு மமையும். எய்தவென்று பாடமோதுவாரு முளர். உரவோன் மருக, கரிகால் வளவ, வென்றாய், வெண்ணிப் பறந்தலைப்பட்ட புறப்புண் நாணி உலகத்துப் புகழ் மிக எய்தி வடக்கிருந்தோன், நின்னினும் நல்ல னன்றே யெனக் கூட்டுக. இது, கரிகால்வளவன் வென்றி கூறியதாகலின் அரசவாகை யாயிற்று. விளக்கம் : ஆண்டில் குறிப்பிட்ட காலத்தில் வீசும் வணிகக் காற்றின் வரவறிந்து கலஞ் செலுத்துவது முறையென்ற செய்தி ஆராய்ச்சி யால் விளங்காமுன் இவ்வுரை யெழுதப்பட்டதாகலின், உரைகாரர், “வளிதொழி லாண்ட வுரவோன்” என்றதற்குத் தம் காலத்து வழங்கிய புராண கதை யொன்றைப் பெய்து கூறுகின்றார். மார்பு குறித்தெறிந்த வேல் முதுகிடத்தே புண்ணாக்கியது கரிகாலனது ஆற்றல் தோற்றுவித்து நிற்றலின், “ஆற்றல் தோன்ற வென்றோய்” என்றார். வெண்ணிப் பறந்தலை - வெண்ணி யென்னும் ஊர்க்குப் புறத்தே யுள்ள போர்க்களம். ஊர்க்குப் புறத்தே அதனருகே யுளதாகிய போர்க்களம் இவ்வாறு கூறப்படும்; கூடற் பறந்தலை, பாழிப் பறந்தலை, வாகைப் பறந்தலையென வருதல் காண்க. புகழுடையார்க் கன்றிப் புறப்புண்ணுக்கு நாணு தலுண்டாகாதாகலின், நாணுதலையே புகழென்றார். ஆற்றல் தோன்ற வென்று கொண்ட நின் புகழினும், விழுப்புண்பட்டும் புறப்புண்ணாணியும் சேரமான் கொண்ட புகழ் போற்றத்தக்க தென்றற்கு, “நின்னினும் நல்லனன்றே” என்றார். (66) 67. கோப்பெருஞ் சோழன் இப் பெருஞ்சோழன் உறையூரிலிருந்து ஆட்சி புரிந்த பெரு வேந்தன்; சிறந்த புலவன். இவன் ஆட்சிகாலத்தே, இவனுடைய மக்கள் இவற்கு மாறாக வெழுந்து போருடற்றக் கருத, அவரைச் செகுத்தற்கு இவனும் போர்க்கெழுந்தான்; ஆயினும், புல்லாற்றூர் எயிற்றியனார் முதலிய சான்றோர் விலக்க விலக்குண்டு அமைந் தான். அம் மானம் பொறாது வடக்கிருந்து உயிர் துறந்தான். இவனுக்குப் பிசிராந்தையார், பொத்தியார் முதலிய சான்றோர் உயிர்த் தோழர். நட்புக்குரிய காரணங்களான புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி என்ற மூன்றனுள், உணர்ச்சி காரணமாகப் பிறக்கும் நட்புக்கு இவற்கும் பிசிராந்தையார்க்கும் உளதாய நட்பினைச் சான்றோர் எடுத்துக்காட்டுவர்.இவன் வடக்கிருந்த காலத்தில், அவ்வாறே தாமும் இருந்து உயிர்நீத்தற்குப் போந்த பொத்தியாரை விலக்கி, “நின் மனைவி கருவுயிர்த்தபின் வருக” என இச்சோழன் பணித்தான். அவ்வாறு அவர் வருவதற்குள் இவன் உயிர் துறந்து நடுகல் ஆயினான், பின்னர், அவர் வந்தபோது நடுகல்லாகியதான் அவர்க்கு இடமளித்தான். இவன்தானே அவ்வப் போது பாடிய பாட்டுக்களும் உள. அவை உயர்ந்த கருத்தும், சிறந்த இலக்கிய நயமுமுடையன. இப்பாட்டின்கண் ஆசிரியர் பிசிராந்தையார், அன்னச் சேவலுக்குக் கூறுவாராய்க் கோப் பெருஞ்சோழன் தன்பால் கொண்டிருக்கும் அன்பினையும், நன்மதிப்பையும், எடுத்தோதிக் காட்டுமுகத்தால் உண்மை யன்பு கலந்த நண்பர் மனப்பாங்கினை வெளிப்படுக்கின்றார். பிசிர் என்பது பாண்டிநாட்டிலிருந்ததோரூர். ஆந்தையார் என்பது இச் சான்றோரது பெயர். இவர் காலத்தே பாண்டி நாட்டை அறிவுடைநம்பி யென்பான் ஆண்டுவந்தான். அவன் தன்னாட்டு மக்கள்பால் இறை பெறுந் திறத்தில் முறை பிறழும் நிலையிலிருப்ப, அதனையறிந்த பிசிராந்தையார், தம்மூர்ச் சான்றோர் தம்மை விடுப்ப வேந்தன்பாற் சென்று, “அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடியாத்து நாடு பெரிது நந்தும்” என்று தெருட்டி நெறிப்படுத்தினார். பின்பு கோப்பெருஞ் சோழனது செம்மையும் புலமையும் கேள்வியுற்று, அவன் பால் பேரன்பு பூண்டார். சோழனும் இவர்பால் மெய்யன்பு கொண் டான். உணர்ச்சி யொருமையால் ஒருவரை யொருவர் அறியாமே பிறந்த நட்பு முடிவில் ஒருவரை யொருவர் இன்றியமையாத நிலையினைப் பயந்தது. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து நடுக்கல்லாகிய பின்பு இவர் சென்று கண்டு தாமும் உயிர்நீத்தார். அந் நிகழ்ச்சிக் குறிப்புகள் இத் தொகை நூற்கண் காணப்படும். அன்னச் சேவ லன்னச் சேவல் ஆடுகொள் வென்றி யடுபோ ரண்ணல் நாடுதலை யளிக்கு மொண்முகம் போலக் கோடுகூடு மதிய முகிழ்நிலா விளங்கும் 5 மையன் மாலையாங் கையறு பினையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது சோழநன் னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ 10 வாயில் விடாது கோயில் புக்கெம் பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர் ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின் இன்புறு பேடை யணியத்தன் நன்புறு நன்கல நல்குவ னினக்கே. (67) திணை : பாடாண்டிணை; துறை : இயன் மொழி. கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது. உரை : அன்னச் சேவல் அன்னச் சேவல் - அன்னச் சேவலே அன்னச் சேவலே; ஆடு கொள் வென்றி அடுபோர் அண்ணல் - கொல்லுதலைப் பொருந்திய வென்றியையுடைய அடுபோ ரண்ணல்; நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல - தன் னாட்டைத் தலையளி செய்யும் விளங்கிய முகம் போல; கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் - இரண்டு பங்கும் வந்து பொருந்திய மதியம் அரும்பு நிலா விளங்கும்; மையல் மாலை - தமியோராயினார்க்கு மயக்கத்தைச் செய்யும் மாலைப் பொழுதின்கண்; யாம் கையறுபு இனைய - யாம் செயலற்று வருந்த; குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி - குமரியாற்றி னது பெரிய துறைக்கண்ணே அயிரையை மேய்ந்து; வட மலைப் பெயர்குவை யாயின் - வடதிசைக்கண் இமயமலைக் கண்ணே போகின்றாயாயின்; இடையது சோழ நன்னாட்டுப் படினே - இவ்விரண்டிற்கு மிடையதாகிய நல்ல சோழ நாட் டின்கண் சென்று பொருந்தின்; கோழி - உறையூரின்கண்; உயர் நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ - உயர்ந்த நிலையை யுடைய மாடத்தின்கண்ணே நினது குறும்பறையோடு தங்கி; வாயில் விடாது கோயில் புக்கு - வாயிற் காவலர்க்கு உணர்த்தி விடாதே தடையின்றிக் கோயிற் கண்ணே புக்கு; எம் பெருங் கோக் கிள்ளி கேட்க - எம்முடைய பெருங்கோவாகிய கிள்ளி கேட்ப; இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே - பெரிய பிசிரென்னும் ஊரின்கண் ஆந்தையுடைய அடிக்கீழென்று சொல்லின்; மாண்ட நின் இன்பறு பேடை அணிய - மாட்சிமை யுடைய நினது இன்புறும் பேடை பூண; தன் நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கு - தனது விருப்பமுறும் நல்ல அணிகலத்தை அளிப்பன் நினக்கு எ-று. ஆடுகொள் வென்றி யென்பதற்கு, வென்றி மிக்க வென்றி யெனினுமமையும். குறும் பறை யென்றது, பேடையை. வாயில் விடா தென்றதற்கு வாயில் காவலர் விடவேண்டா தெனினு மமையும். முகிழ்நிலா வென்பது ஒரு சொன்னடைத்தாய் மதியம் முகிழ் நிலா விளங்கு மென முதல்வினை கொண்டது. மதியம் முகிழ்க்கும் நிலா வெனினு மமையும். ஆந்தை யடியுறை யென்பதற்கு, ஆந்தை நின் அடிக்கண் உறைவானென்பாரு முளர். பேடை யணிய நன்கலம் நல்குவ னென்றதனாற் பயன், மறவாது போதல் வேண்டும் என்னும் நினைவாயிற்று. விளக்கம் : ஆடு கொள் வென்றிக்கு இடமும் ஏதுவுமாகலின். “அடு போர் அண்ணல்” என்றார். அடு போர் அண்ணல் பகைவரை வஞ்சியாது கொல்கின்ற போரையுடைய அண்ணல். காதலன்பாற் பிணிக்கப் பட்டார் இருவர் பிரிந்திருக்குமிடத்து, இம் மாலைப்போது வருத்தத் தால் மயக்க முறுவிக்குமாகலின், “மையல் மாலை” யெனப்பட்டது. மாலைப்போதில் வெயிலொளி குன்ற இருள் விரவுதலின், மையல் மாலை யெனப்பட்ட தென்றுமாம். வடமலை - இமயமலை. திரு வேங்கடமும், விந்தமும், வடமலை யெனப்படுமாயினும், அவை தாமும் வடக்கே பிறமலைகளை யுடைமையின் அவ்வாறில்லாத இமயமே ஈண்டுக் கொள்ளப்படுவதாயிற்று. இவற்றின் கண்ணுள்ள நீர்நிலை ஒருகால் நீர் வற்றுமாயினும், இமயத்து நீர்நிலை என்றும் வற்றாமையின், அது நோக்கி அன்னச் சேவல் செல்வதாகக் கருதுகின்றார். குறும்பறை இளமை பொருந்திய பெடை யன்னம். குறுமை - இளமை குறித்து நின்றது, குறுமகன் என்றாற் போல, பறத்தலையுடையது. பறை வாழ்க்கைத் துணையாகிய பெடை தனக்குரிய பெண்மைக் குணத்தால் மாட்சிமைப் படுவதையே இவர் பெரிதும் விரும்புபவராதலால், “மாண்ட நின் பெடை” என்றார். பிறாண்டு தம் மனைவியை, “மாண்டவென் மனைவி”யென்பார். அடியுறை யென்னற்குரியது அன்னமாதலின், அதற்கேற்ப “அடிக்கீழ்” என்றார். “அடியுறை யெனின் வறிது செல்வாயல்லை; நின் இன்புறு பேடை அணிய நன்கலம் நல்குவன்” என்பது கேட்கின் அன்னம் மறவாது செல்லும் என்பது கருத்து. (67) 68. சோழன் நலங்கிள்ளி சோழன் நலங்கிள்ளி உறையூரின்கண் இருக்கையில், கோவூர் கிழார் சென்று அவனைக் கண்டார். அவன் உயர்ந்த பூண்களை யணிந்து மகளிர் பால் மென்மையுடையனாய் இனிதிருப்பதும், அவன் மெய் - வன்மையால் வீரராகிய ஆடவர் அவனைப் பணிந் தொழுகுவதும்,சோழ நாட்டு மன்பதைகட்குத்தான் உயிரெனக் கருதிப் பேணுவதும், அவனுடைய மறம் நீங்கா வீரர் போர்த் தினவு கொண்டு செம்மாப்பதும் நேரிற் கண்டு வியந்தார். சோழனும் அவர்க்கு மிக்க பொருளைப் பரிசிலாக வழங்கினான். இச் செய்தியை அவர் இப்பாட்டின்கண் பாண னொருவற்குக் கூறும் முறையில் வைத்துக் கூறுகின்றார். உடும்புரித் தன்ன வென்பெழு மருங்கிற் கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது சில்செவித் தாகிய கேள்வி நொந்துநொந் தீங்கெவன் செய்தியோ பாண பூண்சுமந் 5 தம்பகட் டெழிலிய செம்பொறி யாகத்து மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போலச் சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர் 10 மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன் உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத் தணிபறை யறையு மணிகொ டேர்வழிக் 15 கடுங்கட் பருகுநர் நடுங்குகை யுகுத்த நறுஞ்சே றாடிய வறுந்தலை யானை நெடுநகர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும் உறந்தை யோனே குருசில் பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே. (68) திணை : பாடாண்டிணை; துறை : பாணாற்றுப்படை. சோழன் நலங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடியது. உரை : உடும்பு உரித்தன்ன என்பெழு மருங்கிற் கடும்பின் - உடும்புரித்தாற் போன்ற எலும்பெழுந்த விலாப்புடையை யுடைய சுற்றத்து; கடும் பசி களையுநர்க் காணாது - மிக்க பசியைத் தீர்ப்பாரைக் காணாதே; சில் செவித்தாகிய கேள்வி நொந்து நொந்து - கேட்டார் பலரும் அறிதற் கரிதாய் அறிவார் சிலராதலின் சில் செவிக்கண்ணதாகிய யாழை இப்பாண் சாதியது உணவிற்கு முதலாகப் பெற்ற பரிசு என்னென்று வெறுத்து; ஈண்டு எவன் செய்தியோ பாண - இங்கே என் செய்கின்றாயோ பாண; பூண் சுமந்து - பூணைத் தாங்கி; அம்ப கட்டு எழிலிய செம்பொறி ஆகத்து - அழகிய பெருமையை யுடைய எழில் பெற்ற செம்பொறி பொருந்திய மார்பினை யுடைய; மென்மையின் மகளிர்க்கு வணங்கி - மென்மையான மகளிர்க்குத் தாழ்ந்து; வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் - வன்மையான் வீரரை யகப்படுக்கும்; பீடு கெழு நெடுந்தகை - பெருமை பொருந்திய நெடுந்தொகை; புனிறுதீர் குழவிக் கிலிற்று முலைபோல - ஈன்றணிமை பொருந்தி அது தீர்ந்த குழவிக்குச் சுரக்கும் முலை போல; சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர் - நீர் மிக்க காவிரியினது கரைமரத்தைச் சாய்க்கும் மிக்க வெள்ளம்; மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன் - உலகத்து உயிர்ப்பன்மையைப் பாதுகாக்கும் நல்ல சோழ நாட்டையுடைய வேந்தன்; உட்பகை ஒரு திறம் பட்டென - உட்பகை யொரு கூற்றிலே பட்ட தென்னும்படி; புட்பகைக்கு ஏவானாகலின் - எம்மைப் புட்செய்யும் பகையிடத்து ஏவா னாகலான்; சாவேம் யாமென - யாம் எம்மிற் பொருது மடியக்கடவேமென்று; நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப - நீங்காத மறத்தையுடையோர் தம்முடைய பூரித்த தோள்களைத் தட்ட; தனி பறையறையும் அணி கொள் தேர் வழி - அவருடைய மேற்கோள் தணிதற்குக் காரணமாகிய பறை யறையும் அழகு பொருந்திய தேர்வழிக்கண்; கடுங்கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த - வெய்ய கள்ளைப் பருகுவார் தம் நடுங்கு கையான் உகுக்கப்பட்ட; நறுஞ் சேறாடிய வறுந்தலை யானை - நறிய அச்சேற்றின்கண் ஆடிய பாக ரேறாத யானை; நெடு நகர் வரைப்பிற் படு முழா ஓர்க்கும் - நெடிய நகரிடத் தொலிக்கும் பறையினது ஓசையைச் செவி தாழ்த்துக் கேட்கும்; உறந்தை யோன் - உறையூரிடத்தான்; குருசில் - அவ்விறைவன்; பிறன் கடை மறப்ப நல்குவன் செலின் - நீ பிறன் வாயிலை நினை யாமை நினக்கு அளிப்பின் அவன்பாற் செல்வையாயின் எ-று. செம்பொறி யென்றது, “வரையகன் மார்பிடை வரையு மூன்றுள” (சீவக 1462) என்னும் இலக்கணத்தை; திருமக ளெனினு மமையும். உறந்தையோ னென்றது வினைக்குறிப்பு முற்று. பூண் சுமந் தெழிலிய அம் பகட் டாகத்து நெடுந்தகை யென இயையும். பாண, நீ, செலின், நெடுந்தகை, பொருநன் குருசில், உறந்தை யோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு எவன் செய்தியோ வெனக் கூட்டுக. “உட்பகை யொருதிறம் பட்டென” என்பதற்கு உள்ள பகை சந்தாகிய ஒரு கூற்றிலே பட்டதாக என்றுரைப்பனு மமையும். பகட்டினுடைய தோற்றம் பொலிவு பெற வென்பாரு முளர். புட்பகை யேவானாகலின் என்றோதி உள்ள பகை தம்மிற் கூடிற்றாக, புள் நிமித்தத்திற்குப் பகைவன் ஏவானாகலின், சாவேம் யாமென மறவர் தோள் புடைப்ப வென்றுரைப்பாரு முளர். புட்பகை யென்று இவனுக் கொரு பெயர். விளக்கம் : சில் செவித்தாகிய கேள்வி யென்ற விடத்துக் கேள்வி யாழ் என்றும், அவ் யாழிசையின் நலத்தைக் கேட்டறிவோர் சிலராதலின், “சில் செவித்தாகிய கேள்வி” யென்றும் கூறினார். நொந்து நொந்து என அடுக்கியது, வறுமை மிகுதியாற் பிறந்த வருத்த மிகுதி தோற்றுவித்து நிற்றலின். அதனை, “இப் பாண் சாதியது உணவிற்கு முதலாகப் பெற்ற பரிசு என்னென்று வெறுத்து” என விளக்கினார். பகடு - பெருமை; இது யானைக்கும் உரியதாகலின், அதுபற்றி, அம்பகட்டெழிலிய வென்றதற்குப் “பகட்டினுடைய தோற்றம் பொலிவு பெற வென்பாரு முளர்”என்றார் இலிற்றுதல் - சுரத்தல். மன்பதை - உயிர்த்தொகுதி. படை கொண்டு செல்லும் தலைவன், தன் படையில் ஒரு பகுதிக்கண் உட்பகை தோன்றிற்றெனின், அதுகுறித்துச் செய்வன செய்தற்கு மேற்செலவை நிறுத்திவிடுவன்; அது போல வேந்தன் புட்பகைக் கேவானாதல் கண்டு, “உட்பகை யொருதிறம் பட்டென” என்றார். புட்பகை-காரி செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட் டோடித் தீநிமித்தம் செய்தல். குறையத் தாராது மிக நிறையத் தருவன் என்பதுபட “பிறன்கடை மறப்ப” என்றார். (68) 69. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இக் கிள்ளிவளவனும் உறையூரின்கண் ணிருந்து சோழ நாட்டை ஆட்சி செய்த வேந்தன். ஒருகால், ஆலத்தூர் கிழா ரென்ற சான்றோர் இவனைக் காண்டற்குச் சென்றார். அங்கே வாயில் காப்போர் ஒரு தடையும் செய்யாது அவரை உட்புக விடுத்தனர். இவனும் அவரை அன்புடன் வரவேற்றான். அங்கே இவனுடன் அவர் சின்னாள் தங்கினார். அப்போது அவர் இவனது தானைச் சிறப்பையும் போர்க்குச் சென்று பாடிவீட்டில் தங்கும் இருப்பையும் வேற்படையின் மாண்பையும் நேரிற் கண்டு மகிழ்ந்தார். முடிவில் இவன் அவர்க்கு மிக்க பொருளை நல்கிச் செல விடுத்தான். இவன் பெற்ற பெருவளத்தைப் பாண னொருவற்குக் கூறி, ஆற்றுப்படுக்கும் வகையில் இப்பாட்டால் வளவனைச் சிறப்பித்தார். கையது கடனிறை யாழே மெய்யது புரவல ரின்மையிற் பசியே யரையது வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர் ஓம்பி யுடுத்த வுயவற் பாண 5 பூட்கை யில்லோன் யாக்கை போலப் பெரும்புல் லென்ற விரும்பே ரொக்கலை வையக முழுதுடன் வளைஇப் பையென என்னை வினவுதி யாயின் மன்னர் அடுகளி றுயவுங் கொடிகொள் பாசறைக் 10 குருதிப் பரப்பிற் கோட்டுமா தொலைச்சிப் புலாக்களஞ் செய்த கலாஅத் தானையன் பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே பொருநர்க் கோக்கிய வேல னொருநிலைப் பகைப்புலம் படர்தலு முரியன் றகைத்தார் 15 ஒள்ளெரி புரையு முருகெழு பசும்பூட் கிள்ளி வளவற் படர்குவை யாயின் நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகல் தேர்வீ சிருக்கை யார நோக்கி நீயவற் கண்ட பின்றைப் பூவின் 20 ஆடும்வண் டிமிராத் தாமரை சூடா யாத லதனினு மிலையே. (69) திணை : பாடாண்டிணை; துறை : பாணாற்றுப்படை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர்கிழார் பாடியது. உரை : கையது - நின் கையகத்தது; கடன் நிறை யாழ் - இலக்கண முறைமை நிரம்பிய யாழ்; மெய்யது - உடம்பின் கண்ணது; புரவலரின்மையின் பசி - ஈத்தளிப்போ ரில்லாமையால் பசி; அரையது வேற்றிழை நுழைந்த வேர் நனை சிதாஅர் - அரையதாகிய வேற்றிழை யூடுபோன வேர்ப்பால் நனைந்த சீரையை; ஒம்பி உடுத்த உயவற் பாண - அற்ற மறைத்துடுத்த வருத்தத்தையுடைய பாண; பூட்கை யில்லோன் யாக்கை போல - மடியால் மேற்கோ ளில்லாதவன் உடம்பை யொப்ப; பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை - பெரிதாகப் புற்கென்ற மிகப் பெரிய சுற்றத்தை யுடையையாய்; வையக முழுதும் வளைஇ - உலக மெல்லாவற்றையும் சூழ்வந்து ; என்னைப் பையென வினவுதியாயின் - பின்னை என்னை மெல்ல வறுமை தீர்ப்பார் யார் எனக் கேட்கின்றாயாயின் கேளாய்; மன்னர் அடு களிறு உயவும் - வேந்தரது கொல் யானை புண்பட்டு வருந்தும்;கொடி கொள் பாசறை - கொடி யெடுக்கப்பட்ட பாடிவீட்டின்கண்; குருதிப் பரப்பில் கோட்டு மா தொலைச்சி - குருதிப் பரப்பின்கண்ணே யானையைக் கொன்று; புலாக் களஞ் செய்த கலாஅத் தானையன் - புலாலை யுடைய போர்க்களத்தை யுண்டாக்கிய போர் செய்யும் படையை யுடையவன்; பிறங்கு நிலை மாடத்து உறந்தையோன் - உயர்ந்த நிலையை யுடைத்தாகிய மாடத்தையுடைய உறையூ ரிடத்திருந்தான்; பொருநர்க் கோக்கிய வேலன் - அவன் பொரு வோர் பொருட் டெடுக்கப்பட்ட வேலை யுடையவனாய்; ஒருநிலைப் பகைப்புலம் படர்தலும் உரியன் - ஒரு பெற்றியே பகைவர் நாட்டின்கண் போதலு முரியன்; தகைத்தார் - சுற்றப்பட்ட மாலையையும், ஒள்ளெரி புரையும் உருகெழு பசும்பூண் - ஒள்ளிய எரியை யொக்கும் நிறம் பொருந்திய பசும்பொன்னாற் செய்யப்பட்ட பூணினையு முடைய; கிள்ளி வளவற் படர்குவையாயின் - கிள்ளிவளவனிடத்தே செல்குவை யாயின்; நெடுங் கடை நிற்றலும் இலை - அவனது நெடிய வாயிலின்கண் காலம் பார்த்து நிற்றலும் உடையை யல்லை; கடும்பகல் - விளங்கிய பகற்பொழுதின்கண்; தேர் வீசு இருக்கை ஆர நோக்கி - அவன் பரிசிலர்க்குத் தேர் வழங்கியிருக்கும் இருப்பை நின் கண்ணாரப் பார்த்து; நீ அவற் கண்ட பின்றை - நீ அவனைக் கண்ட பின்பு; பூவி னாடும் வண்டு இமிராத் தாமரை சூடா யாதல் - பூவின்கணாடும் வண்டு ஊதாத பொற் றாமரைப் பூவைச் சூடாயாதல்; அதனினும் இலை - அந் நெடுங்கடை நிற்றலினும் உடையை யல்லை; அதனால் ஆண்டுச் செல்வாயாக எ-று. தகை தார் - தகைத்தாரென நின்றது; மேம்பட்ட தாருமாம். பாண, ஒக்கலையாய் வளைஇ வினவுதியாயின், தானையை யுடையவன், உறந்தையோன், அவன்பாற் படர்குவையாயின், நின் கையது யாழாதலானும், மெய்யது பசியாதலானும் நெடுங் கடை நிற்றலுமில்லை; நீ அவற்கண்ட பின்றைத் தாமரை சூடாயாதல் அதனினு மிலையென மாறிக் கூட்டுக. பூவாகிய தாமரை யெனினு மமையும்; அதற்கு இன் அல்வழிச் சாரியை புகழ்த்தகையில்லோன் என்பதூஉம் பாடம். ஒருநாளுள், முதலன பத்து நாழிகையும், அறத்தின்வழி யொழுகிப் பின் பத்து நாழிகையும் இறையின் முறைமை கேட்டுச் செய்த பொருளைப் பரிசிலர்க்குக் கொடுத்து மகிழ்ந்திருத்தலால், “கடும் பகல் தேர் வீசிருக்கை” யென்றார். விளக்கம் : கடன் - முறைமை; ஈண்டஃது இலக்கணமுறைமை குறித்து நின்றது. மெய்யிடத்துப் பசியுண்மைக் கேது, ஈத்தளிப்போரில் லாமையாதலின், அதனைப் பெய்துரைத்தார். பூட்கை யில்லோன்பால் அப் பூட்கை யில்லாமைக் கேது மடிமையாதலின், அதனை வருவித்தார். பாசறையில் தங்கும் படைக்குரிய கொடிகள் அப் பாசறையில் கட்டப்பட்டிருக்குமாதலால், “கொடிகொள் பாசறை” யென்றார். கலாஅத்தானை: கலாஅம் - போர். தகை யென்பது மேம்பாட்டையும் குறித்தலின், தகைத்தாற் என்பதற்கு மேம்பட்ட தாருமாம் என்றார். கடை நிற்றல் - காவலர்களால் தடைப்பட்டு நிற்பதன்றி, வளவனைக் காண்பதற்கு வேண்டும் காலம் நோக்கி நிற்றலாதலால் அதனைப் பெய்துரைத்தார். வேந்தர் பரிசிலர்க்குத் தேர் முதலியன வழங்கும் திருவோலக்கக் காட்சி காண்டற் கினிதாத லால், “தேர்வீ சிருக்கை போல” (நற். 381) என்று பிறரும் கூறுதல் காண்க. பூவின் ஆடும் வண்டிமிராத் தாமரை யென்பது, பூவின் தாமரை யென இயைந்து, பூவாகிய தாமரை யெனப் பொருள்படின், இன் அல்வழிப் புணர்ச்சிக்கண் வந்த சாரியையாம். பூட்கையில் லோன் என்பது சில ஏடுகளில் “புகழ்த்தகை யில்லோன்” என்று பாட வேறுபாடுற்றுக் காணப்படுகிற தென உரைகாரர் குறிக்கின்றார். பொருளை யீட்டுக வென்பார், “பொருள் செய்க” வென்ப வாதலால், ஈட்டப்பட்ட பொருளைச் “செய்த பொருள்” என்றார். (69) 70. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மீண்டும் ஒரு முறை ஆசிரியர் கோவூர்கிழார் சென்று கண்டார். முன்பு சென்று கண்டபின், காவிரியின் வடகரையில் உள்ள சிறுகுடி யென்னும் ஊரை யுடையவனும், “தனக்கென வாழாப் பிறர்க் குரியாள” னெனச் சான்றோராற் சிறப்பிக்கப்பட்டவனுமாகிய பண்ணன் என்பானைக் கண்டு பெருஞ்சிறப்புத் தரப்பெற்றா ராயினும், கிள்ளி வளவனுடைய அன்பு நலத்தால் மீளவும் சென்றார். அவர்க்குச் சோழன் மிக்க பொருளைத் தந்து சிறப்புச் செய்தான். அப்போது நாட்டில் சோறும் நீரும் குறைவின்றி யிருப்பதும், அவனுடைய நல்லிசை விளக்கமிக்கிருப்பதும், அவன் இரவலர்க்குப் பெருவண்மை புரிவதும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. அதனைப் பாணாற்றுப்படை வாயிலாக இப் பாட்டிண்கண் குறித்துச் சிறப்பித்தார். தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை இனிய காண்கிவட் டணிகெனக் கூறி 5 வினவ லானா முதுவா யிரவல தைஇத் திங்கட் டண்கயம் போலக் கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் அடுதீ யல்லது சுடுதீ யறியா திருமருந்து விளைக்கு நன்னாட்டுப் பொருநன் 10 கிள்ளி வளவ னல்லிசை யுள்ளி நாற்ற நாட்டத் தறுகாற் பறவை சிறுவெள் ளாம்பன் ஞாங்க ரூதும் கைவள் ளீகைப் பண்ணன் சிறுகுடிப் பாதிரி கமழு மோதி யொண்ணுதல் 15 இன்னகை விறலியொடு மென்மெல வியலிச் செல்வை யாயிற் செல்வை யாகுவை விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பா டன்றவ னீகை நினைக்க வேண்டா வாழ்கவன் றாளே. (70) திணை : பாடாண்டிணை; துறை : பாணாற்றுப்படை. அவனைக் கோவூர் கிழார் பாடியது. உரை : தேஎந் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண - தேன் போல இனிய நரப்புத்தொடை பொருந்திய சிறிய யாழையுடைய பாண; கயத்து வாழ் யாமை காழ் கோத் தன்ன - கயத்தின்கண் வாழும் யாமையை நாராசத்தின்கண்ணே கோத்தாற் போன்ற; நுண் கோல் தகைத்த தெண்கண் மாக் கிணை - நுண்ணிய கோலாற் பிணிக்கப்பட்ட தெளிந்த கண்ணையுடைய பெரிய உடுக்கை யோசை; இனிய காண்க இவண் தணிக எனக் கூறி வினவல் ஆனா - இனிய காண்க, இவ்விடத்தே சிறிது ஆறிப் போவீராக என்று சொல்லிப் பலவும் என்னை வினவுத லமையாத; முது வாய் இரவல - முதிய வாய்மையுடைய இரவலனே! யான் சொல்லுவதனைக் கேட்பாயாக; தைஇத் திங்கள் தண் கயம் போல - தைமாதத்தின்கட் குளிர்ந்த பொய்கையைப் போல; கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் - கொள்ளக் கொள்ளத் தொலையாத சோற்றையுடைய அகன்ற நகரிடத்து; அடு தீ யல்லது சுடு தீ யறியாது - அடு நெருப்பல்லது சுடு நெருப்பறியாது; இரு மருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன் - சோற்றையும் தண்ணீரையும் விளைக்கும் நல்ல நாட்டுக்கு வேந்தன்; கிள்ளி வளவன் நல்லிசை உள்ளி - கிள்ளி வளவனது நல்ல புகழை நினைத்து; நாற்ற நாட்டத் தறுகாற் பறவை - மணத்தை யாராயும் ஆராய்ச்சியையுடைய வண்டு; சிறு வெள்ளாம்பல் ஞாங்கர் ஊதும் - சிறிய வெளிய ஆம்பலின்மீதே யூதும்; கைவள் ஈகைப் பண்ணன் சிறு குடி - கையான் வள்ளிய கொடையை யுடைய பாணணனது சிறுகுடிக்கண் ; பாதிரி கமழும் ஓதி - பாதிரி நாறும் மயிரினையும்; ஒண்ணுதல் இன்னகை விறலியொடு - ஒள்ளிய நுதலினையும் இனிய முறுவலையுமுடைய விறலியுடனே; மென் மெல இயலிச் செல்வை யாயின் - மெல்ல மெல்ல நடந்து செல்வையாயின்; செல்வை யாகுவை - செல்வத்தையுடையை யாவை; விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர் - விறகைக் காட்டினின்றும் ஊரகத்துச் செலுத்தும் மாந்தர் அக் காட்டகத்து விழுப் பொருள் எடுத்துக்கொண்டாற் போல்வதொரு; தலைப்பாடு அன்று - நேர்பா டன்று; அவன் ஈகை - அவனது வண்மை; நினைக்க வேண்டா - அது பெறுவேன்கொல் என்று கருத வேண்டா; அவன் தாள் வாழ்க - அவனது தாள் வாழ்க எ-று. பாண தணிக எனக் கூறி வினவலானா இரவல விறலியொடு மென்மெல இயலிச் செல்குவையாயி னென இயையும்; வியனகர்ச் செல்வையாயி னெனவு மமையும். நகரையுடைய நாடென இயைப்பாரு முளர். “விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர் தலைப்பாடன்” றென்பதற்கு விறகிற்குச் சென்றார் பொன் பெற்றாற் போல்வதொரு தலைப்பாடதென்று பொருளுரைப் பாரு முளர்; அது பொருந்துமேலறிந்து கொள்க. விளக்கம் : தீந்தொடை யென்றவிடத்துத் தொடையின் இனிமையைத் தேனாகிய உவமையால் விளக்கினா ரென்றற்குத் “தேன் போலும் இனிய தொடை” யென வுரைத்தார். வறுமையுற்றிருக்கும் இரவலன் வளவன்பால் பொருள்பெற்று வரும் பாணனை நோக்கி, “பாண, மாக்கிணை இனிய காண்க; இவண் தணிக” எனச் சொல்லித் தன் வறுமை நீக்குதற்குரியவர் யாவரென வினவுகின்றான். “கயத்துவாழ் யாமை காழ்கோத் தன்ன” வென்றது, கிணையின் உருவமைப்பைப் புலப்படுத்துதல் காண்க. தணிதல்-பசி தணித்து இளைப்பாறுதல். முது வாய் இரவலன் - இரவலனுடைய முதுமையும் சொல்லின் வாய்மை யும் தோன்ற நின்றது. மழைக் காலத்து நீர்ப் பெருக்கால் கலக்கமுற் றிருக்கும் நீர், தைத்திங்களில் தெளிந்து தண்ணிதாயிருத்தலால், “தைத் திங்கள் தண்கயம்” என்றார். “பனிச்சுனைத் தெண்ணீர், தைஇத் திங்கள் தண்ணிய”(குறுந். 196) என்ப. “கூதி ராயின் தண்கலிழ் தந்து, வேனி லாயின் மணிநிறங் கொள்ளும், யாறு ”(ஐங்.45) என்பது ஈண்டுக் குறிக்கத் தக்கது. பகைவர் ஊர்களைச் சுடு நெருப்பு ஈண்டுச் சுடுநெருப் பெனப்பட்டது. செல்வு - செல்வம். ஒய்தல் - செலுத்துதல்; “உப்பொய் ஒழுகை” (புறம். 116) எனப் பிறரும் கூறுப. தலைப்படுதல் - நேர்படுதல். விறகு விற்போர் ஊருக்குக் கொண்டுசென்று ஆங்கே விற்றுப் பெறும் பொருளை அக் காட்டிடத்தே பெற்றுக்கொள்ள நேரும் வாய்ப்பு. அது போல்வதன்று; போல்வதாயின் அஃது ஐயத்துக் கிடமாம் என்பார், “தலைப்பா டன்று” என்றார். விறகு வெட்டப் போனவன் புதையல் கண்டாற் போல்வதொரு வாய்ப்பெனக் கொண்டு அதற்கேற்பப் பொருள் கோடல் பொருந்தா தென்பது. (70) 71. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பூதப்பாண்டியன், பாண்டியர்க்குரிய ஒல்லையூரைப் பகைவ ரிடமிருந்து வென்று கொண்ட சிறப்பால் ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் எனச் சிறப்பிக்கப்படான். இவன் மனைவி பெருங் கோப் பெண்டு என்பவளாவாள். இருவரும் நல்லிசைப் புலமை யும் ஒருவரையொருவர் இன்றியமையாக் காதலன்பும் உடையர். இப்பாண்டியற்குத் திதியன் என்பான் இனிய நண்பன். அவன் பொதியின் மலையைச் சார்ந்த நாட்டுக்குரியவன். அவன் இன்னிசை நல்கும் இயம் இயம்புவதில் வல்லுநன்.விற்போரிலும் விறல் படைத்தவன். ஒருகால், இப் பாண்டியற்கும் ஏனைச் சேர சோழ வேந்தர்கட்கும் இடையே பகைமை யுண்டாயிற்று. அது காரணமாக, அவ்விருவரும் ஒருங்கு கூடி இவனோடு பொருதற்கு வந்தனர். அதனை அறிந்ததும், மிக்க சினமுற்று இவன் கூறிய வஞ்சினமே இப் பாட்டாகும் “வேந்தர் உடங்கியைந்து என்னொடு பொருதும் என்ப” எனத்தான் கேள்வியுற்றது கூறி, அவரை அமரின்கண் அலறத் தாக்கிப் புறங்காணேனாயின், இதோ என்னருகிருக்கும் சிறந்த பேரமருண்கண் இவளினும் பிரிக” என்றும், மறுபிறப்பில் தென்புலங் காக்கும் சிறப்பிழந்து பிறர் வன்புலம் காக்கும் காவலர் குடியில் பிறப்பேனாக என்றும் இவன் கூறும் வஞ்சினம் மிக்க நயமுடையதாகும். மாவன், ஆந்தை, அந்துவஞ்சாத்தன், ஆதனழிசி, இயக்கன் முதலியோர் இவனுக்குக் கண்போன்ற நண்பவராவர். இப் போரில் இவன் இறந்துபட்டான். இவன் மனைவியாகிய பெருங்கோப் பெண்டு சான்றோர் விலக்கவும் விலகாது கைம்மை நோன்பின் கடுமையை விளக்கித் தீப்பாய்ந்தாள். அக்காலை, அவள் பாடிய பாட்டும் இந்நூற்கண் உள்ளது. மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத் தடங்காத் தானை வேந்த ருடங்கியைந் தென்னொடு பொருது மென்ப வவரை ஆரம ரலறத் தாக்கித் தேரொ 5 டவர்ப்புறங் காணே னாயிற் சிறந்த பேரம ருண்க ணிவளினும் பிரிக அறநிலை திரியா வன்பி னவையத்துத் திறனி லொருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தே னாகுக மலிபுகழ் 10 வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற் பொய்யா யாணர் மையற் கோமான் மாவனு மன்னெயி லாந்தையு முரைசால் அந்துவஞ் சாத்தனு மாத னழிசியும் வெஞ்சின வியக்கனு முளப்படப் பிறரும் 15 கண்போ னண்பிற் கேளிரொடு கலந்த இன்களி மகிழ்நகை யிழுக்கியா னொன்றோ மன்பதை காக்கு நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலி னொரீஇப்பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே. (71) திணை : காஞ்சி; துறை : வஞ்சினக் காஞ்சி. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் பாட்டு. உரை : மடங்கலிற் சினைஇ - சிங்கம் போலச் சினந்து; மடங்கா உள்ளத்து அடங்காத் தானை வேந்தர் - மீளாத மேற்கோள் பொருந்திய உள்ளத்தினையும் மிகைத்துச் செல்லும் படையையு முடைய வேந்தர்; உடங்கு இயைந்து - தம்மில் ஒப்பக் கூடி; என்னொடு பொருதும் என்ப - என்னொடு பொருவேமென்று சொல்லுவர்; அவரை ஆர் அமர் அலறத் தாக்கி - அவ் வேந்தரைப் பொறுத்தற்கரிய போரின்கண்ணே அலறப் பொருது; தேரொடு அவர்ப்புறம் காணேனாயின் - தேருடனே அவருடைந்தோடும் புறக்கொடையைக் கண்டிலேனாயின்; சிறந்த பேரமர் உண்கண் இவளினு பிரிக - எனக்குச் சிறந்த பெரியவாய் முகத்தோடு பொருந்தின மையுண்ட கண்ணினை யுடைய இவளினும் நீங்குவேனாக; அறன் நிலை திரியா அன்பின் - அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய; அவையத்து - அவைக்களத்து; திறனில் ஒருவனை நாட்டி - அறத்தின் திறப்பாடில்லாத ஒருவனை வைத்து; முறை திரிந்து மெலிகோல் செய்தே னாகுக - முறை கலங்கிக் கொடுங்கோல் செய்தே னாகுக; மலி புகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் - மிக்க புகழையுடைய வையையாற் சூழப்பட்ட செல்வம் பொருந்திய ஊர்களில்; பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும் - பொய்யாத புதுவருவாயையுடைய மையலென்னும் ஊர்க்குத் தலைவனான மாவனும்; மன்னெ யில் ஆந்தையும் - நிலைபெற்ற எயிலென்னு மூரையுடைய ஆந்தையும்; உரைசால் அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும் - புகழமைந்த அந்துவஞ் சாத்தனும் ஆதனழிசியும்; வெஞ்சின இயக்கனும் - வெய்ய சினத்தையுடைய இயக்கனு மென; உளப்படப் பிறரும் - இவருட்படப் பிறரும்; கண் போல் நண்பிற் கேளிரொடு கலந்த - எனது கண்போலும் நண்பினை யுடைய நட்டாரோடு கூடிய; இன் களி மகிழ்நகை இழுக்கி யான் - இனிய செருக்கையுடைய மகிழ்நகையைத் தப்பியவ னாகி; மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த - பல வுயிரையும் பாதுகாக்கும் அரசர் குலத்திற் சிறந்த; தென்புலம் காக்கும் காவலின் ஒரீஇ - பாண்டிநாடு காக்கும் காவலின் நீங்கி; பிறர் வன்புலங் காவலின் மாறி - பிறருடைய வன்புலங்களைக் காக்கும் காவற்கண்ணே இக் குடிப்பிறப்பின் நீங்கி; யான் பிறக்கு - யான் பிறப்பேனாக எ.று. மெலிகோல் செய்தே னாகுக வென்பதனுள், ஆகுக வென்பது எங்குந் தந்துரைக்கப்பட்டது. ஒன்றோ வென்பது எண்ணின்கண் வருவதோர் இடைச்சொல்; அதனை முன்னும் பின்னும் கூட்டுக. விளக்கம் : மடங்கா வுள்ளத் தடங்காத் தானை: தொடங்கின் இடையில் மடங்குதல் ஊக்கமுடைய தானை வீரர்க்கு ஆகாமையாலும் தொகை மிகுதியால் அடங்கி நிற்றல் அமையாமையாலும் இவ்வாறு கூறினார். அறன் நிலை திரியா அன்பு: அறத்திற்கே அன்பு சார்பென்பவாதலால், அறம் நிலைகலங்காமைக்கு அன்பு இன்றி யமையாததாயிற்று. கண்ணன்ன நண்பரொடு கூடித் களித்தலை விட்டு வேறுபடும் குறிப்பு, கெடுவது காட்டும் குறியாதலால், “கேளி ரொடு கலந்த இன்களி மகிழ்நகை இழுக்கி யான்” என்று எடுத் தோதினான். மாறுதல், ஈண்டுப் பிறப்பு மாறுதல்; “இம்மை மாறி மறுமை யாயினும்” (குறுந். 49) என்றாற் போல. பிறக்கு: செய்கென்னும் வாய்பாட்டுத்தன்மை வினைமுற்று. இப் பாட்டின்கண், தென்புலங் காக்கும் பாண்டியர்குடிப்பிறப்பின் உயர்வு குறித்துரைக்கப்படுவது நோக்கத்தக்கது. இவ்வாறே, “மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது” (சிலப். 20:76-7) என வருவதும் ஒப்பு நோக்கத்தக்கது. (71) 72. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இப் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் சிற்றரசரும் பேரரசரு மாகிய எழுவருக்கும் தலையாலங்கானம் என்னுமிடத்தே பெரும் போருண்டாயிற்று. அக்காலத்தே, இவன் மிக இளையனா யிருந்தான். வேந்தர்தாமும் இவன் இளையன்தான் என இகழ்ந்து நால்வகைப் படையும் நிரம்ப வுடையேமெனத் தருக்கினர்; அதனால் அவர்கள் இவனை இகழ்ந்து கூறியதும் உண்டு. அச் சொற்களைக் கேட்ட நெடுஞ்செழியற்குச் சினத் தீக்கிளர்ந் தெழுந்தது. உடனே படையைப் பண்ணிப் போருக்கெழும் இச்செழியன் நெடுமொழிகள் சில சொல்லலுற்றான். நல்லிசைப் புலமையும் மாங்குடி மருதனார் முதலிய சான்றோர் கேண்மையு முடையனாதலின் அச்சொற்கள் அழகிய பாட்டாய் வெளி வந்தன. அப்பாட்டே ஈண்டு வந்துள்ள பாட்டு. இதன்கண், குடிபழி தூற்றும் கொடுங்கோன்மையும், புலவர் பாடும் புகழ் பெறாமையும், இரவலர்க் கீயாமையும் ஒரு வேந்தனைக் கீழ்மைப் படுத்துவன என்னும் உணர்வு இவன் உள்ளத்தே யூறி நிற்பது காண்மின். நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் இளைய னிவனென வுளையக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரு மாவும் 5 படையமை மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய 10 என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலே னாகுக ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் றலைவ னாக 15 உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் னிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க் கீயா வின்மையா னுறவே. (72) திணை : காஞ்சி; துறை : வஞ்சினக் காஞ்சி. பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாட்டு. உரை : நகுதக்கனர் நாடு மீக்கூறுநர் என - நம்மாற் சிரிக்கத்தக்கார் இவன் ஆளும் நாட்டை மிகுத்துச் சொல்லுபவர் எனவும்; இளையன் இவன் என - இவன்தான் இளையன் எனவும்; உளையக் கூறி - யான் வெறுப்பச் சொல்லி; படு மணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடு நல் யானையும் தேரும் மாவும் - ஒலிக்கும் மணி இரு மருங்கும் ஒன்றோடொன்று மாறி யிசைக்கும் பரந்த அடியினையும் பெரிய காலினையு முடைய உயர்ந்த நல்ல யானையினையும் தேரையும் குதிரையையும்; படை யமை மறவரும் உடையம் யாம் என்று - படைக்கலத் தொழில் அமைந்த வீரரையும் உடையேம் யாம் என்று; உறு துப்பு அஞ்சாது - எனது மிக்க வலிக்கு அஞ்சாதே; உடல் சினம் செருக்கி - மாறுபடுஞ் சினம் பெருகி; சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை - புல்லிய வார்த்தைகளைக் கூறிய சினம் பொருந்திய அரசரை; அருஞ்சமம் சிதையத் தாக்கி - பொறுத் தற்கரிய போரின்கண்ணே சிதறப் பொருது; முரச மொடு ஒருங்கு அகப்படேஎனாயின் - முரசத்தோடுகூட அவரைக் கைக்கொண்டிலேனாயின்; பொருந்திய என் நிழல் வாழ்நர் - பொருந்திய எனது குடைநிழற்கண் வாழ்வார்; செல் நிழல் காணாது - தாங்கள் சென்றடையும் நிழற் காணாதே; கொடியன் எம் இறை யென - கொடியன் எம்முடைய வேந்தனென்று கருதி; கண்ணீர் பரப்பி - கண்ணீரைப் பரப்பி; குடி பழி தூற்றும் கோலே னாகுக - குடிமக்கள் பழி தூற்றும் கொடுங்கோலை யுடையே னாகுக; ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக - உயர்ந்த தலைமையுடனே மேம்பட்ட கேள்வியையுடைய மாங்குடிமருதன் முதல்வனாக; உலக மொடு நிலைஇய - உலகத்தோடு நிலைபெற்ற; பலர் புகழ் சிறப்பின் புலவர் - பலரும் புகழும் தலைமையையுடைய புலவர்; பாடாது வரைக என் நிலவரை - பாடாது நீங்குக எனது நில வெல்லையை; புரப்போர் புன்கண் கூர - என்னாற் புரக்கப் படுங் கேளிர் துயரம் மிக; இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உற - இரக்குமவர்கட்குக் கொடாத வறுமையை யான் உற எ-று. என்நிழல் வாழ்நராகிய குடியென்க. உளையக் கூறியதனைத் தம்மிடத்திருந்து கூறியதாகவும், சிறுசொற் சொல்லியதனைப் போர்க்களத் தெதிர்ப்பட்டுக் கூறியதாகவும் கொள்க. இவனென் றார், தம் கருத்துக்கண் அணுமையான். அகப்படேனாயி னென்றது, ஈண்டுப் பிறவினைமே னின்றது. வேந்தரைத் தாக்கி அகப்படேனாயின், கோலேனாகுக, இன்மையானுற; என் நிலவரை புலவர் பாடாது வரைகவென மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. ‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’ என்பதனை நாட்டாரால் மீக்கூறப்பட்ட மந்திரிச் சுற்ற முதலாயினார் நகுதக்கன ரெனப் பிரித்துரைப்பினு மமையும்; நிலவரைப் புரப்போர் எனவும் பாடம். விளக்கம் : “நெடுஞ்செழியன் நாட்டை மீக்கூறுவோர் அவன் பகைவ ராகிய நம்மால் எள்ளி நகைக்கத்தக்கவாராவர்; இவன் மிக இளையன்” எனப் பகைவர் தம்மிடத்திருந்தே கூறிக் கொள்கின்றனர். போர்க் களத்தில் நேர்பட்டு நின்று “யானையும் தேரும் மாவும் மறவரும் உடையம்” எனத் தம்மை மிகுத்துச் சொல்லுகின்றனர். படையமை மறவர் என்ற விடத்துப் படை, படைக்கலத்தொழில் குறித்துநின்றது. அவர்கள் செயற்குரியது என் உறுதுப்புக்கு அஞ்சுவதாகும்; அது செய்யாது சினஞ் செருக்கி, அது காரணமாகச் சிறுசொல் சொல்லு கின்றா ரென்பதாம். அகப்படுதல், ஈண்டுப் பிறவினையாய் அகப் படுத்துதல் என்ற பொருள் தந்து நிற்கிறது. சிறப்பு - தலைமை. இரப்போர்க்குக் கொடாத இன்மையால் இம்மைப் புகழும், புலவர் பாடாது வரைதலால் மறுமையின்ப வாழ்வும் பெறா தொழிவேனாக என்று வஞ்சினம் கூறுகின்றான். (72) 73. சோழன் நலங்கிள்ளி சோழன் நலங்கிள்ளிக்கும் காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளிக்கும் பகைமை யுண்டாயிற்று. நெடுங்கிள்ளி உறையூரி லிருந்து ஆட்சி புரிந்துவந்தான். பகைமை மிக்குறவே நெடுங் கிள்ளி, இந் நலங்கிள்ளியை இகழ்ந்து போர்க் கெழுதற்குரிய சினத்தை யுண்டாக்கினான். நலங்கிள்ளி தானும் போர்க் கெழுந் தான். அக்காலத்தே, சினங் கெழுமிய அவன் தன் உள்ளத்தே நெடுங்கிள்ளி போர் தொடுத்தற்குக் காரணம் யாதாகலாமென வெண்ணி, “அரசு கட்டிலைக் கவர்தல் இந் நெடுங்கிள்ளிக்குக் கருத்தாயின், என் நல்லடி பொருந்தி ஈயென விரந்தால் அரசினையேயன்றி என் உயிரையுந் தருகுவேன்; அவ்வாறின்றித் துஞ்சு புலி இடறிய சிதடன் போலப் போர் தொடுத்து வறிதே மடிகின்றான்; இனி இவன் உய்ந்துபோதல் கூடாது” என நினைந்து வஞ்சினங் கூறுவானாய், “இவனை இப்போரில் வருந்தப் பொரேனாயின், என் மார்பின் தார் பொதுப்பெண்டிரின் பொருந்தா முயக்கத்தால் குழைவதாக” என்று கூறுகின்றான். இவனும் இனிய செய்யுள் செய்யும் செந்நாவினனாதலால், இவ் வஞ்சினம் இப் பாட்டு வடிவில் வருவதாயிற்று. மெல்ல வந்தென் னல்லடி பொருந்தி ஈயென விரக்குவ ராயிற் சீருடை முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம் இன்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்நிலத் 5 தாற்ற லுடையோ ராற்றல் போற்றாதென் உள்ள மெள்ளிய மடவோன் றெள்ளிதிற் றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக் கழைதின் யானைக் காலகப் பட்ட 10 வன்றிணி நீண்முளை போலச் சென்றவண் வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தன் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென் றாரே. (73). திணை : காஞ்சி; துறை : வஞ்சினக் காஞ்சி. சோழன் நலங்கிள்ளி பாட்டு. உரை : மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி - மெல்ல வந்து எனது நல்ல அடியை யடைந்து; ஈ என இரக்குவ ராயின் - எமக்கு ஈய வேண்டுமென்று தாழ்ந் திரப்பாராயின்; சீருடை முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம் - அவர்க்குச் சீர்மையை யுடைய முரசு பொருந்திய பழையதாய் வருகின்ற உரிமையை யுடைய எனது அரசாட்சி கொடுத்தலோ எளியது; இன் உயிராயினும் கொடுக்குவென் இந்நிலத்து - இனிய உயிரே யாயினும் கொடுப்பேன் இந்நிலத்தின்கண்; ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது - அமைச்சர் படைத்தலைவர் முதலாகிய வலியை யுடையோரது வலியைப் பாதுகாவாது; என் உள்ளம் எள்ளிய மடவோன் - என் உள்ளத்தை யிகழ்ந்த அறிவில்லா தோன்; தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல - யாவர்க்கும் விளங்கத் துயில்கின்ற புலியை இடறிய குருடன் போல; உய்ந்தனன் பெயர்தலோ அரிது - பிழைத்துப் போதலோ அரிது; கழை தின் மைந்துடை யானை கால் அகப்பட்ட வன்திணி நீள் முளை போல - மூங்கிலைத் தின்னும் வலியையுடைய யானையினது காலின்கண் அகப்பட்ட வலிய திணிய மூங்கிலது நீண்ட முளையை யொப்ப; சென்று - மேற்சென்று; அவண் வருந்தப் பொரேஎனாயின் - அவ் விடத்து வருந்தும்படி பொருதிலேனாயின்; பொருந்திய தீதில் நெஞ்சத்து - கூடிய தீதில்லாத நெஞ்சத்தால்; காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிரின் - காதல் கொள்ளாத பலவகைப்பட்ட கரிய கூந்தலையுடைய பொதுப்பெண்டிரது; ஒல்லா முயக்கிடை என் தார் குழைக - பொருந்தாத புணர்ச்சி யிடை என் மாலை துவள்வதாக எ-று. இரக்குவிராயி னென்று பாடமோதுவாரு முளர். தீதில் காதல் கொள்ளாவென இயைப்பினு மமையும். உள்ளமென்றது, உள்ளத்தாற் சூழும் சூழ்ச்சியை. தன் மேம்பாடு கூறுகின்ற இட மாதலின், நல்லடி யென்பது தற்புகழ்தலென்னும் குற்றமாகாது. விளக்கம் : சீருடை முரசு கெழு தாயத்து அரசு எனச் சிறப்பித்தது, பிறர்க்கு எளிதிற் கொடுத்தற்குக் கூடாமை விளக்கி நின்றது. ஆற்றலுடை யோர் ஆற்றலை யறிந்து அதற்கேற்ப வொழுகுதல் அறிவுடைமை யாதலால், அதனை யறியாமையால் பகைவேந்தனை “மடவோன்” என்கின்றான். புலி தான் பிறர் கண்ணிற் படாது தன் முழைக்கண்ணே துஞ்சும் இயல்பிற்று; அது மக்களும் விலங்கும் இனிது காணத் துஞ்சுவது போலத் தான் இனிதிருப்பது அறிந்து வைத்தும், அப் புலியை இடறும் குருடன் அப் புலியாற் கொல்லப்படுவது போல, இப் பகைவேந்தனும் இறத்தல் ஒருதலை யென்பான் “உய்ந்தனன் பெயர்தலோ அரிது” என்கின்றான். பொருட் பெண்டிர், “அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்”(குறள். 911) எனப்படு தலின், அவரை, “பொருந்திய, தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளா மகளிர்” என்றார். பொதுமகளிரை உயர்ந்தோர் கூடாராகலின், “குழைக வென் தாரே” யென்றான். (73) 74. சேரமான் கணைக்கா லிரும்பொறை இச்சேரமான், சான்றோர்களால் கோச் சேரமா னென்றும், சேரமான் என்ற பொதுப்பெயராலும் வழங்கப்படுவன். இதனால் இவன் காலத்தே, இவன் மிக்க சிறப்புடன் வாழ்ந்தவ னென்பது புலனாகும். இவன் பெரும் படையும் மிக்க போர்வன்மையு முடையவன். இவனுடைய தலைநகர் தொண்டி யென்பது. மேனாட்டு யவனர்களான பிளினி முதலியோர் இதனை டிண்டிஸ் என்று வழங்குகின்றனர். இந்நகர்க்கண் பெரிய கோட்டை யிருந்தது. இவன் தன்னொடு பகைத்துப் போருடற்றிய மூவன் என்பவனைக் கொன்று அவன் வாயிற் பல்லைப் பிடுங்கிக் கோட்டை வாயிற் கதவில் வைத்து இழைத்திருந்தா னெனப் பொய்கையார் கூறியுள்ளார். இவன் காலத்தை யடுத்தே சேரமான் கோக்கோதை மார்பன் தோன்றினான். சோழநாட்டை யாண்டு வந்த செங்கணானுக்கும் இக் கணைக்காலிரும்பொறைக்கும் யாது காரணத்தாலோ பெரும் பகை யுண்டாக, இருவரும் பெரும் படையுடன் கழுமலம் என்னுமிடத்தே பொரத் தொடங்கினர். போர் நிகழ்ந்தவிடம் குணவாயிற் கோட்டமெனத் தமிழ்நாவலர் சரிதையும், வெண்ணிப்பறந்தலை யென நற்றிணை முன்னுரை யும், திருப்போர்ப்புறமென இப்புறநானூற்றுக் குறிப்பும் கூறுகின்றன. இவன் பாசறைக்கண் தங்கியிருக்கையில் ஒருநாள் இரவு யானைப்படையிலிருந்த களிறொன்று மதஞ் செறிந்து தீங்கு செய்யலுற்றது. அதனால் பலரும் அஞ்சியலமந்தனர். அதனை யறிந்த சேரமான் சென்று அடக்கி வீரர் பலரும் “திரைதபு கடலின் இனிது கண்படுப்ப”ச் செய்தான். பின்னர்ப் போர் முடிவில் சேரமான் படையுடைந்து கெட்டது; அவனும் சோழன் கையகப் பட்டுக் கால்யாப் புற்றுச் சிறையிடப் பெற்றான். அவ்வா றிருக்கையில் ஒருநாள் சேரமான் நீர் வேட்கையுற்றுக் காவலர் களை நீர்கொணருமாறு பணித்தான். அவர் அவன் பணியை யவமதித்துச் சில நாழிகை கழித்துக் கொணர்ந்து கொடுத்தனர். அந்த மானத்தைப் பொறாத சேரமான் “அரசராயினார், குழவி யிறப்பினும், ஊன்தடி பிறப்பினும், இவை வாள் வாய்ப்பட்டு இறந்தாலன்றி நலமின் றெனக் கருதி அவற்றையும் வாளாற் போழ்ந்து அடக்கம் செய்வர்; அக் குடியிற் பிறந்த யான் சிறைப் பட்டுக் கிடந்து உயிர் நீத்தல் தீது; இத்தகைய மறக்குடியினரான எம் பெற்றோர் பகைவர்பால் உணவிரந்துண்டு உயிர் வாழுமாறு மக்களைப் பெறார்காண்” என்று நினைந்து, இதனை ஒரு பாட்டாக எழுதி வைத்து உயிர் நீத்தான். அப் பாட்டே ஈண்டு வந்துள்ள பாட்டு. குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் 5 மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணு மளவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே. (74) திணை : பொதுவியல்; துறை : முதுமொழிக்காஞ்சி. சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணா னோடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட் பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண் டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு. உரை : குழவி இறப்பினும் - பிள்ளை யிறந்து பிறப்பினும்; ஊன் தடி பிறப்பினும் - தசைத் தடியாகிய மணை பிறப்பினும்; ஆள் அன்றென்று வாளின் தப்பார் - அவற்றையும் ஆளல்ல வென்று கருதாது வாளோக்குதலில் தவறார் அரசராயிருக்க; தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய - பகைவர் வாளாற் படாது, சங்கிலியால் பிணிக்கப்பட்ட நாய் போலப் பிணித்துத் துன்பத்தைச் செய்து இருத்திய; கேளல் கேளிர் வேளாண் சிறு பதம் - கேளல்லாத கேளிருடைய உபகாரத்தான் வந்த தண்ணீரை; மதுகை யின்றி - இரந்துண்ணக் கடவேமல்லே மென்னும் மனவலி யின்றி; வயிற்றுத் தீத் தணிய - வயிற்றின் கண் தீயை யாற்றவேண்டி; தாம் இரந்துண்ணும் அளவை - தாமே இரந்துண்ணும் அளவினை உடையாரை; ஈன்மரோ இவ்வுலகத்தான் - அவ்வரசர் பெறுவார்களோ இவ் வுலகத்தின்கண் எ-று அளவை யுடையாரை அளவை யென்றார். இதன் கருத்து, சாக்குழவியும் ஊன்பிண்டமுமென இவற்றின் மாத்திரையும் பெற்றிலேமெனப் பிறர்மேல் வைத்துக் கூறியவாறு. கேளல்-கேளி ரென்றது. சிறைக்கோட்டங் காவலரை. அன்றி, இவன் ஆண்மை யுடையனல்ல னென்று வாளாற் கொல்லாராய்த் தொடர்ப்படு ஞமலி போல இடர்படுத் திருத்திய கேளல் கேளிர் வேளாண் சிறுபதத்தை மதுகையின்றி வயிற்றுத் தீத்தணிக்க வேண்டித் தாம் இரந்துண்ணு மளவாகக் குழவிசெத்துப் பிறப்பினும் ஊன் தடி பிறப்பினும் இவ்வுலகத்து மகப்பெறுவாருளரோவென வுரைப் பினுமமையும். அரசர்க்கு மானத்தின் மிக்க அறனும், பொருளும், இன்பமும், மில்லை யென்று கூறினமையின், இது முதுமொழிக் காஞ்சி யாயிற்று. விளக்கம் : “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்” (அகம்.61) என்ற கருத்துடையராதலின், பண்டைத் தமிழ்வேந்தர், குழவி யிறப்பினும் உறுப்பில் பிண்டம் பிறப்பினும், மூத்து விளியினும், நோயுற்றிறப்பினும், வாளாற் போழ்ந்து அடக்கம் செய்யும் மரபினரா யிருந்தனர். வாளோக்குதல் - வாளை யோச்சி வெட்டுதல். கேளல் கேளிர் - பகைவர். உண்ணீரைச் சிறுபதம் என்றார்; உணவாய் உண்ணப் படுதல் பற்றி. மதுகை-வலி; ஈண்டு மனவன்மை குறித்துநின்றது; மானத்தின் மிக்க அறமும், பொருளும், இன்பமு, மில்லை யெனக் கருதுதற் கேது வாகிய மனத்திட்பம். வயிற்றுத் தீ - பசி நோய். “தொடர்ப்படு ஞமலி யின்” என்றதற் கேற்பத் தொடர்ப்படுத்து என வருவித்துக்கொள் கின்றார். சிறைப்படுத்திய செயலை, ஞமலியின் “தொடர்ப்படுத் திடர்ப்படுத் திரீஇய” என்றார். குறிப்பறிந்து நல்கப் பெறாது வாய் திறந்து கேட்டுப் பெறுதலின் “இரந்துண்ணும் அளவை” யென மானமுடைமையின் மாண்பு தோன்றக் கூறுகிறான். (74) 75. சோழன் நலங்கிள்ளி சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளி யிட மிருந்து உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்துவந்தான். வருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின் இயல்பு பற்றிப் பேச்சுண்டாயிற்று. மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக் கொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண் வரும் இடுக் கண் பலவற்றையும் நோக்க, அரசுமுறை யென்பது எளிதன்று என்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, “அரசுமுறை மூத்தோர்க்குப் பின் அவர் வழி வரும் இளையோர்பால் முறைப் படி வரும் தாயமுறையினை யுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ்சிறப்பெய்திவிட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து பொருளீட்டக் கருதி னானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய சுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவ னாயின், அவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம்” என்றான். இங்ஙனம் சீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான். மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப் பாறர வந்த பழவிறற் றாயம் எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக் குடிபுர விரக்குங் கூரி லாண்மைச் 5 சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள் விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர் அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தா லம்ம தானே மையற்று விசும்புற வோங்கிய வெண்குடை முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. (75) திணை : பொதுவியல்; துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங் கிள்ளி பாட்டு. உரை : மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்தென - தம் குடியில் முதியோரைக் கூற்றம் கொண்டு போயிற்றாக; பால் தர வந்த பழ விறல் தாயம் - விதி தரப்பட்டுத் தம்பால் வந்த பழைய வெற்றியாலுண்டாகிய அரசுரிமையை; எய்தின மாயின் - பெற்றே மானால்; சிறப்பு எய்தினமென - இத் தலைமையைப் பெற்றேமெனக் கொண்டு; குடி புரவு இரக்கும் - தம் குடி மக்களை இறைவேண்டி யிரக்கும்; கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின் - மிகுதியில்லாத ஆண்மையையுடைய உள்ளஞ்சிறியோன் பெறின்; அது சிறந்தன்று மன் - அத்தாயம் அவனுக்குப் பரிக்க வொண்ணாதாம்படி கனத்தது மிகவும்; மண்டமர் பரிக்கும் மதனுடை நோன்றாள் - அடுத்துப் பொரும் போரைப் பொறுக்கும் மனவெழுச்சியையுடைத்தாகிய வலிய முயற்சியையுடைய; விழுமியோன் பெறுகுவ னாயின் - சீரியோன் பெறுவனாயின்; ஆழ் நீர் அறு கய மருங்கில் - தாழ்ந்த நீரையுடைய வற்றிய கயத்திடத்து; சிறு கோல் வெண் கிடை - சிறிய தண்டாகிய வெளிய கிடேச்சினது; என்றூழ் வாடு வறல் போல நன்றும் நொய்து - கோடைக்கண் உலர்ந்த சுள்ளியைப் பொலப் பெரிதும் நொய்து; மையற்று - குற்ற மற்று; விசும்புற ஒங்கிய வெண்குடை - விண்ணின்கண்ணே பொருந்த வுயர்ந்த வெண்குடையினையும்; முரசு கெழு வேந்தர் அரசுகெழு திரு - முரசினையுமுடைய அரசரது அரசாட்சியைப் பொருந்திய செல்வம் எ-று. குடிபுர விரக்கு மென்பது குடிமக்களைக் கொள்ளுங் கடமை யன்றி மிகத் தரவேண்டு மென்று இரத்தலை. தாயம் சிறியோன் பெறின், அது மிகவும் சிறந்ததன்று; வேந்தர் அரசு கெழு திரு விழுமியோன் பெறுகுவனாயின் நன்றும் நொய்தா லெனக் கூட்டி வினைமுடிவு செய்க. மன், ஆக்கத்தின்கண் வந்தது. அம்ம: அசைநிலை. விளக்கம் : தந்தை மூத்துக் கழிந்தவழி அவன்வழித் தோன்றும் அரசு முறையெனும் தாயமுறையை ஈண்டுப் “பழவிறல் தாயம்” என்றும், மூத்தோர் இறந்த பின்னே வரும் உரிமையுடைத் தென்றற்கு “மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தென” என்றும் கூறினான். உரிய கடமையைக் குடிமக்கள் தாமே நல்குவராதலின், கையிகந்த கடமை வாங்கும் வேந்தன் செயலைக் “குடிபுரவு இரக்கும் சிறியோன்” என்றார். குடி புரவு - குடிமக்களைப் புரத்தற் பொருட்டுப் பெறும் கடமை. மிக்க ஆண்மையே வேந்தற்கு வேண்டப்படுதலின், அஃதில்லாதானைக் “கூரிலாண்மைச் சிறியோன்” என்றான். மதன் - மனவெழுச்சி. கிடை - கிடேச்சு; அஃதாவது நெட்டி. என்றூழ், வெயில். சிறந்தன்று - மிகுதிப் பொருட்டாய், கனம் மிகுந்தது என நின்றது. மன்னென்றது ஆகும் என ஆக்கப் பொருள் தருதலின், ஆக்கம் என்றார். (75) 76. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில் தன்னை யெதிர்த்த முடிவேந்தர் இருவரும் குறுநில மன்னர் ஐவருமாகிய எழுவரும் தோற்றோடுமாறு தான் ஒருவனே வென்ற சிறப்பை மதுரை நக்கீரர், ஆலம்பேரி சாத்தனார், கல்லாடனார் முதலிய சான்றோர் பலர் புகழ்ந்திருக்கின்றனர். அவருள், இடைக்குன்றூர்கிழார் என்னும் சான்றோர் இச் செழியன் வெற்றி பெற்ற காலத்தில் இருந்தவர். அவர் இச் செழியன் ஒருவனாய் இருந்து பொருது வென்றதை, “ஒருவரை யொருவர் அடுதலும், ஒருவர்க் கொருவர் தொலைதலும் இவ் வுலகத்தே தொன்றுதொட்டு வருவன; அவ்வாறு அடுதலும் தொலைதலும் நிகழுமிடத்து வெற்றி பெற்றோர் பலரும் பலருடைய துணைபெற்று அதனைப் பெற்றது கேள்வி யுற்றுள்ளோமேயல்லது ஒருவனே தனித்து நின்று பலராய்க் கூடி யெதிர்ப்போரை வென்றது கேட்டிலம்; பாண்டியன் ஒருவனாய் நின்று தன் பீடும் செம்மலும் அறியாமல் எதிர்த்த எழுவர் நல்வலம் அடங்க வென்றது, இன்றுகாறும் யாம் கேட்டதன்று” என இப்பாட்டின்கண் வியந்து கூறியுள்ளனர். இடைக்குன்றூர் என்பது இவரதூர். இவர் வேளாளர். இவர் பாண்டியன் நெடுஞ்செழியன் ஒருவனே எழுவரை வென்ற செய்தியை வியந்தும், போர் செய்த திறத்தைப் புகழ்ந்தும், பகைவர் கருத்தழிந்த வகையைக் கட்டுரைத்தும், அவன் போர்க்குச் சென்ற நலத்தைப் பாராட்டியும் பாடியுள்ளார். சுருங்கச் சொல்லின், தலையாலங்கானப் போர் நிகழ்ச்சியை நேரிற் கண்டுரைக்கும் சான்றோருள் இவர் சிறந்தவர் என்பது மிகையாகாது. ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும் புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை இன்றி னூங்கோ கேளலந் திரளரை மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர் 5 நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப் பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் 10 பீடுஞ் செம்மலு மறியார் கூடிப் பொருது மென்று தன்றலை வந்த புனைகழ லெழுவர் நல்வல மடங்க ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே. (76) திணை : வாகை; துறை : அரசவாகை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது. உரை : ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று - ஒருவனை யொருவன் கொல்லுதலும், ஒருவற்கொருவன் தோற்றலும் புதிதன்று; இவ்வுலகத்து இயற்கை - இந்த உலகத்தின்கண் முன்னேதொட்டு இயல்பு; இன்றின் ஊங்கு கேளலம் - இன்றையின் முன் கேட்டறியோம்; திரள் அரை மன்ற வேம்பின் - திரண்ட தாளையுடைய மன்றத்திடத்து வேம்பினது; மாச்சினை ஒண் தளிர் - பெரிய கொம்பின்கண் உண்டாகிய ஒள்ளிய தளிரை; நெடுங் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து - நீண்ட கொடியாகிய உழிஞைக் கொடியுடனே விரவி; செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி - செறியத் தொடுக்கப்பட்ட தேன் மிக்க மாலையை; ஒலியல் மாலையொடு பொலியச் சூடி - வளைய மாலையுடனே சிறப்பச் சூடி; பாடின் தெண் கிணை கறங்க - ஓசையினிய தெளிந்த போர்ப்பறை யொலிப்ப; காண்தக - காட்சிதக; நாடு கெழு திருவின் பசும்பூண் செழியன்-நாடு பொருந்திய செல்வத் தினையுடைய பசும் பொன்னாற் செய்த பூணை யணிந்த நெடுஞ்செழியனது; பீடும் செம்மலும் அறியார் - பெருமையை யும் உயர்ந்த தலைமையையும் அறியாராய்; கூடிப் பொருதும் என்று தன்தலை வந்த-தம்மிற்கூடிப் பொருவேமென்று தன்னிடத்து வந்த; புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க - புனைந்த வீரக்கழலினையுடைய இரு பெரு வேந்தரும் ஐம்பெருவேளிருமாகிய ஏழரசருடைய நல்ல வென்றி யடங்க; ஒரு தானாகிப் பொருது களத்து அடல் - தான் ஒருவனாய் நின்று பொருது களத்தின்கட் கொல்லுதல் எ-று. ஒருவனை யொருவன் அடுதலும், தொலைதலும் புதுவ தன்று; இவ்வுலகத் தியற்கை; செழியன், பொருது மென்று வந்த எழுவர் நல்வல மடங்க ஒருவனாகித் தெரியலை மாலையொடு காண்டகச் சூடிக் கிணை கறங்கப் பொருது களத்து அடல் இன்றின் ஊங்கோ கேளலம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. விளக்கம் : வேம்பினது அடிப்பகுதி பருத்துத் திரண்டிருத்தலின், திரளரை யென்றாராக, உரைகாரர், “திரண்ட தாள்” என்றார். பவர் -கொடி வேம்பு அடையாளப் பூ; உழிஞை - போர்த்துறைக்குரிய பூ. ஒலியல் மாலை - வளைய மாலை. செம்மல் - செம்மையுடைமை; அதனை யுடையார் தலைவராதலின், செம்மல் தலைமை யாயிற்று. புனை கழல் எழுவராவார் சேரன், சோழன்,திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற எழுவர். பசும்பூண் பாண்டிய னென்னாது செழியன் என்றார். பசும்பூண் பாண்டிய னென்ற பெயரே யுடைய பாண்டி வேந்த னொருவன் உளனாதலின். (76) 77. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில் தேரூர்ந்து வந்து நின்ற காட்சியையும், அவன் பின்னர்ப் பகைவரொடு பொருது அவரைக் கொன்றவிடத் தமைந்த தோற்றத்தையும் கண்ட இடைக்குன்றூர் கிழார், நெடுஞ்செழியன் தேர்க்கொடிஞ்சிக்கண் நிற்கின்றானாயினும், “யார் கொல் அவன்;அவன் கண்ணி வாழ்க” என வியந்து வாழ்த்தி, “அவன் இளமைச் செவ்வி அண்மையிற்றான் கழிந்தான்; இது காறும் அணிந்திருந்த கிண்கிணியை நீக்கி இப்போதுதான் கழல் அணிந் தான்; சென்னியில் வேம்பின் தளிரும் உழிஞைக் கொடியும் விரவித் தொடுத்த கண்ணியுடையனானான்; இதுவரை யணிந் திருந்த தொடியை நீக்கிக் கையில் வில்லைப் பற்றிக்கொண்டு தேர்மொட்டில் நிற்கின்றான்; மார்பில் தாரணிந்துள்ளானாயினும் ஐம்படைத்தாலியை இன்னமும் கழித்திலன்;பாலருந்துவதை விட்டு இப்போதே உணவினையும் உண்ணத் தலைப்பட்டான்; இத்துணை இளையோன், புதியராய் மேன்மேல் வெகுண்டு வரும் வீரரைக் கண்டு வியப்பதும் செய்கின்றிலன்; இகழ்வதும் இலன்; அவர்மீது பாய்ந்து பற்றிக் கீழே கவிழ்ந்து அவர் தம் உடல் நிலத்தில் வீழக் கொன்றபோதும், அவன் முகத்தில் மகிழ்ச்சியோ, இவ்வாறு செய்தே மென்ற தருக்கோ ஒன்றும் தோன்றுகின்றிலது; இவன் வீரம் இருந்தவாறு என்னே” என இப் பாட்டின்கண் வியந்தோதுகின்றார். கிண்கிணி களைந்தகா லொண்கழ றொட்டுக் குடுமி களைந்தநுதல் வேம்பி னொண்டளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி 5 நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் யார்கொல் வாழ்கவவன் கண்ணி தார்பூண்டு தாலி களைந்தன்று மிலனே பால்விட் டயினியு மின்றயின் றனனே வயின்வயின் உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை 10 வியந்தன்று மிழிந்தன்று மிலனே யவரை அழுந்தப் பற்றி யகல்விசும் பார்ப்பெழக் கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை மகிழ்ந்தன்று மலிந்தன்று மதனினு மிலனே. (77) திணை : வாகை; துறை : அரசவாகை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது. உரை : கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு - சதங்கை வாங்கப்பட்ட காலிலே ஒள்ளிய வீரக்கழலினைச் செறித்து; குடுமி களைந்த நுதல் - குடுமி யொழிக்கப்பட்ட சென்னிக் கண்ணே; வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிலைந்து - வேம்பினது ஒள்ளிய தளிரை நெடிய கொடியாகிய உழிஞைக் கொடியோடு சூடி; குறுந் தொடி கழித்த கை சாபம் பற்றி - குறிய வளைகளை யொழிக்கப்பட்ட கையின்கண்ணே வில்லைப் பிடித்து; நெடுந் தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன் - நெடிய தேரினது மொட்டுப் பொலிவு பெற நின்றவன்; யார்கொல் - யாரோதான்; அவன் கண்ணி வாழ்க - யாரே யாயினும் அவன் கண்ணி வாழ்வதாக; தார் பூண்டு தாலி களைந்தன்றும் இலன் - தாரை யணிந்து ஐம்படைத்தாலி கழித்தலும் இலன்; பால்விட்டு அயினியும் இன்று அயின்றனன் - பாலை யொழிந்து உணவும் இன்றுண் டான்; வயின் வயின் - முறை முறையாக; உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை - வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை; வியந் தன்றும் இழிந்தன்றும் இலன் - மதித்தலும் அவமதித்தலும் இலன்; அவரை அழுந்தப் பற்றி - அவரை இறுகப் பிடித்து; அகல் விசும்பு ஆர்ப்பு எழ - பரந்த ஆகாயத்தின்கண்ணே ஒலி யெழ; கவிழ்ந்து நிலஞ் சேர அட்டதை - கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணே பொருந்தக் கொன்றதற்கு; மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலன் - மகிழ்ந்ததுவும் இவ்வாறு செய்தேமென்று தன்னை மிகுத்ததுவும் அதனினும் இலன் எ-று யார்கொல் என்றது வியப்பின்கட் குறிப்பு. இழித்தன் றென்பது இழிந்தன்றென மெலிந்து நின்றது. விளக்கம் : இளஞ்சிறார்க்குக் காலிற் கிண்கிணியும், தலையிற் குடுமியும், கையில் குறிய வளையும், மார்பில் ஐம்படைத் தாலியும் அணிவதும், பாலுணவளிப்பதும் பண்டைத் தமிழ்ச் செல்வர் மரபு. இளமை கழிந்து காளைப் பருவ மெய்தினார் காலிற் கழலும் தோளில் தொடி யும் மார்பில் மாலையும் அணிவர்; சோற்றுணவு உண்பர். ஈண்டு நெடுஞ்செழியன் இளமைச் செவ்வியை இன்னும் நன்கு கழிந்திலன் என்றற்கு இவற்றை விரித்துக் கூறினார். கொடுஞ்சி தேர்த்தட்டின் நடுவே மொட்டுப்போ லமைந்த இடம், அது மொட்டென்றும் கூறப் படும். அது கொடுஞ்சியெனப்பட்டது. தன்னொடு பொர வருவாருள் தக்கோரை மதிப்பதும், தகவிலாரை அவமதிப்பதும் செய்தல் மறவர்க்கு இயல்பு; அவ்வியல்பும் இவன்பால் காணப்படவில்லை. மேல்வரும் வீரரைக் கொன்று வீழ்த்துமிடத்து எய்தும் வெற்றியால் மகிழ்தலும் இயல்பு; அது தானும் இவனிடம் இல்லை. இவற்றைக் கண்டதால் வியந்து, “யார்கொல்” என்றார். (77) 78. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில்பாண்டியன் நெடுஞ் செழியனைப் போரெதிர்ந்த பகைவேந்தர் எழுவர் மேற்கொண்டு போந்த கொள்கை சீரிதன்மையால் அவர் கெட்டனர் என்பார் போல இப்பாட்டின்கண் இடைக்குன்றூர் கிழார், “எம் இறைவ னான நெடுஞ்செழியனது மலைத்தற்கரிய மார்பினை மதியாது யாமே விழுமியம், பெரியம்; நம்மொடு பொரும் இவனும் இளையன், கொள்ளத்தக்க கொள்ளையும் பெரிது, என இகழ்ந்த கருத்துடன் வந்தனர்; அவர் புறங்கொடுத் தோடுமாறு வென்றத னோடமையாத எங்கள் இறைவனான செழியன் அவர்தம் மகளிர் நாணமுற்று உயிர் விடுமாறு அவர்கட்குத் தொன்றுதொட் டுரியவாகிய ஊர்கட்கும் சென்று ஆங்கே அவ் வேந்தர்களைக் கொன்றழித்தான்” என்று பாடிக்காட்டுகின்றார். வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள் அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந் தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து 5 விழுமியம் பெரியம் யாமே நம்மிற் பொருநனு மிளையன் கொண்டியும் பெரிதென எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர் புறத்திற் பெயர ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர் 10 மாணிழை மகளிர் நாணினர் கழியத் தந்தை தம்மூ ராங்கண் தெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே. (78) திணை : வாகை; துறை : அரசவாகை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது. உரை : வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன்றாள் - வளைந்த சந்துகளாற் பொலிந்த வலி பொருந்திய போரின்; கண் நிலை தளராத பொறையினையுடைய தாளினையும்; அணங்கருங் கடுந் திறல் - வருந்துதற்கரிய மிக்க வலியையு முடைய; என்னை - என் இறைவன்; அளைச் செறி உழுவை இரைக்கு முணங்கு நிமிர்ந்து வந்தன்ன - முழையின்கட் கிடந்த புலி தான் விரும்பியதோர் இரையை நோக்கி மூரிநிமிர்ந்து வந்தாற்போன்ற; மலைப்பரும் அகலம் - மாறுபடுதற்கரிய மார்பத்தை; மதியார் சிலைத்து எழுந்து - மதியாராய் ஆர்த்து எழுந்திருந்து; விழுமியம் பெரியம் யாம் - சிறப்புடையேம் படையாற் பெரியேம் யாங்கள்; நம்மிற் பொருநனும் இளையன் - நம்மிற் பொருவானும் இளையன்; கொண்டியும் பெரிது - கொள்ளையும் பெரிது; என எள்ளி வந்த வம்ப மள்ளர் - என இகழ்ந்து வந்த நிலையில்லாத வீரர்; புல்லென் கண்ணர் புறத்திற் பெயர - புற்கென்ற கண்ணராய் நின்றவிடத்து நில்லாதே புறத்தே போக; அவர் ஈண்டு அடுதலும் ஒல்லான் - அவரை இப்போர்க்களத்தின்கண்ணே கொன்றிடுதலும் உடன்படானாய்; ஆண்டு - அவ்விடத்து; அவர் மாணிழை மகளிர் நாணினிர் கழிய-அவர் மாட்சிமைப்பட்ட ஆபரணத்தை யுடைய மகளிர் நாணினராய் இறந்துபட; தந்தை தம்மூர் ஆங்கண் - தந்தையருடையவாகிய தங்கள் ஊரிடத்து; தெண் கிணை கறங்கச் சென்று - தெளிந்த போர்ப் பறை யொலிப்பச் சென்று; ஆண்டு அட்டனன் - அவ்விடத்தே கொன்றான் எ-று. தந்தை தம்மூ ரென்றதனை , “ஏவ லிளையர் தாய்வயிறு கறிப்ப” என்றாற்போலக் கொள்க. தந்தை தம்மூ ரென்றது, தாம் தோன்றிச் செய்த நகரியன்றி உறையூரும் கருவூரும் முதலாகிய ஊர்களை. விளக்கம் : தாளில் அணிந்த வீரகண்டை இடையே தொடுக்கப்பட்ட சந்து களையுடையதாகலின், தொடை யென்றும், அதுதான் வளைவுடைய தாதல் பற்றி, “வணங்குதொடை” யென்றும் கூறினார். முணங்கு நிமிர்தல் - மூரி நிமிர்தல்; அஃதாவது தூங்கி யெழுந்தவுடன் கை களையும் உடம்பையும் நீட்டித் திமிர்விட்டுச் சோம்பலைப் போக்குதல் முன்பும், “முணங்கு நிமிர் வயமான்” (புறம். 52) என்றது காண்க. மலைத்தல் மாறுபட்டுப் பொருதல். ஆண்மையால் உளதாகும் சிறப்பினை யுடைமை தோன்ற, “விழுமியம்” என்றார். வம்ப மள்ளர் - புதியராய் வரும் வீரர். முன்பு வந்தோர் தோல்வியுற் றொழிதலின் புதியர் புதியராய் வந்து நீங்குதலின், “நிலையில்லாத வீரர்” என்றுரைத்தார். தோல்வியால் உளம் மழுங்கி ஒளியிழந்த கண்ண ராதலின், “புல்லென் கண்ணர்” என்றார். அவ்விடத் தென்புழி, அகரச் சுட்டுப் பின்னர் வரும் தந்தை தம்மூரைக் குறிக்கும். இளையர் பலராயினும், ஒவ்வொருவரையும் பெற்ற தாய் ஒருத்தியாதலால் தாயென்றாற் போல, ஊர் ஒருமையாற் கூறப்பட்டது. (78) 79. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவின்கண் பாண்டியன் நெடுஞ் செழியனுடைய வீரர்கள், பகைவர் படையை யழித்து வருகை யில், பகற்போது கழியலுற்றது. ஞாயிறு மறைத்தற்குச் சில நாழிகைக்கு முன்பே செழியன் செருக்களம் நோக்கி வந்தான். வந்தவன் காலைப்போதில் மூதூரிலுள்ள கயத்தில் மூழ்கி நீராடி வேம்பின்மாலை சூடிப் போர்க்குத் தெண்கிணை முன்பாகக் கறங்கிச் செல்ல, பின்னே பெருங் களிறொன்று நடந்து வருவது போலச் பெருமிதத்துடன் போர்க்களத்திற்கு வந்தான். பொர நிற்கும் வீரரும் பலராயிருந்தனர். இக்காட்சியைக் கண்ட இடைக்குன்றூர் கிழார் “பகற்போது மிகக் குறைவாக வுளதே; இவரனைவரும் படாது ஒருசிலர் உயிர் தப்புவர்போலும்” எனத் தம்முள் நினைந்து இப்பாட்டினைப் பாடியுள்ளார். மூதூர் வாயிற் பனிக்கய மண்ணி மன்ற வேம்பி னொண்குழை மலைந்து தெண்கிணை முன்னர்க் களிற்றி னியலி வெம்போர்ச் செழியனும் வந்தன னெதிர்ந்த 5 வம்ப மள்ளரோ பலரே எஞ்சுவர் கொல்லோ பகறவச் சிறிதே (79) திணை : வாகை; துறை : அரசவாகை. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது. உரை : மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி - தனது பழைய நகரிவாயின்கண் குளிர்ந்த பொய்கையின்கண்ணே மூழ்கி; மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து - மன்றத்திடத்து வேம்பினது ஒள்ளிய தளிரைச் சூடி; தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி - தெளிந்த ஓசையையுடையபறை முன்னாகக் களிறு போலப் பெருமிதத்தோடு நடந்து; வெம் போர்ச் செழியனும் வந்தனன் - வெய்யபோரையுடைய நெடுஞ்செழியனும் வந்தான்; எதிர்ந்த வம்ப மள்ளர் பலர் - அவனோடு பகைத்த நிலை யில்லாத மறவர்தாம் பலர்; பகல் தவச் சிறிது - பகற் பொழுது மிகச் சிறிதாதலால்; எஞ்சுவர் கொல் - அவருட் சிலர் படா தொழியவுங் கூடும் எ-று. போர்மடந்தையைப் புணர வருகின்ற கன்னிப்போ ராதலால், “பனிக்கய மண்ணி” யென்றார். கிணை முன்னர் வருதல், யானைக்கும் இவனுக்கும் ஒக்கும். விளக்கம் : கயம் மண்ணி - நீர்நிலையின்கண் மூழ்கி நீராடி; மண்ணிய சென்ற வொண்ணுத லரிவை” (குறுந் 292) என்றாற்போல. போர்ப் பறை கறங்கிக்கொண்டு முன்னே செல்லப்போர்க்களிறு பின்னே செல்வதுபோல, செழியனும் போர்ப்பறை கறங்கி முன்னே செல்லத் தான் பின்னே சென்றான் என்றறிக. பகல் மறையுமுன் ஒரு வீரரும் எஞ்சாமற் பொர வேண்டுமென்பது அவன் மொழிந்த வஞ்சின மாகலின், “எஞ்சுவர் கொல்லோ” என்றார்; என்றாராயினும், பகற் போது முடிவதற்கு முன்பே படை வீரர் அனைவரும் எஞ்சாமற் பட்ட னர் என அறிக. அரசு கட்டிலேறிய பின் முதன் முதலாகச் செய்யும் போராதலால், இது கன்னிப்போரெனப்பட்டது. (79) 80. சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி இக்கிள்ளி, முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியின் வேறு படுத்தற்குச் சான்றோரால் இவ்வாறு கூறப்பட்டான். இவன் பெயரில் போரவை யென்பது போர்வை யெனக் காணப்படுவது ஏடுபெயர்த் தெழுதினோரால் நேர்ந்த பிழை. இவன் தந்தை தித்தன் எனப்படுவன். அவன் செயலிடத்தே வெறுப்புற்ற இவன் வேறோர் ஊரில் வாழ்ந்துவந்தான். இவன் கட்டிளமையும் போர்வன்மையும் உடையன். ஒருகால், இவன் முக்காவல் நாட்டு ஆமூர் சென்று, அங்கே மல்லன் ஒருவனை மற்போரில் வென்று மேம்பட்டான். இவனுடைய ஆண்மை அழகு முதலிய பண்பு களில் பேரீடுபாடுற்ற நக்கண்ணையார் என்பார் இவன்பாற் பெருங்காதல் கொண்டார். அவர் அக்கிள்ளி சென்று தங்கிய ஆமூரில் இருந்தவர். பெருங்கோழி நாய்கன் என்பாற்கு மகளா ராவர்; நல்லிசைப் புலமையும் வாய்ந்தவர். அவர்க்குக் காதல் பெரிதாயிருந்ததேயன்றி, அவன் அவர்பாற்காதல் கொண் டொழுகிய குறிப்பொன்றும் கிடைத்திலது. பின்னர் இவன் எவ்வாறு முடிவேந்த னாயினன் என்றும், நக்கண்ணையார் என்னாயின ரென்றும் தெரிந்தில. போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனொடு பொருது வென்று நின்ற காலத்துச் சாத்தந்தையார் என்னும் சான்றோர் உடனிருந்து நேரிற் கண்டார். அக்காட்சி அவருள்ளத்தைக் கவர்ந்தமையின், இப்பாட்டின்கண் அம் மற்போரை விரித்துரைக்கின்றார். சாத்தந்தையார் என்பது சாத்தன் தந்தையார் எனப் பொருள் படுமாயினும் ஈண்டு இயற்பெயராகவே யுளது. சாத்தன் தந்தை யென்பது பொருளாயின், இவரது இயற்பெயர் கூறப்பட வேண்டும். இவர் இக்கிள்ளியின்பால் இளமை தொட்டே பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். பெருநற்கிள்ளி தந்தையை வெறுத்து முக்காவல் நாட்டு ஆமூரையடைந்திருக்கையில் தாமும் உடனிருந்து இவன் செயல்களைக் குறித்துக் கொண்டுள்ளார். ஆமூர் மல்லனை வென்றதும், பிற போர்களில் வீரரை வென்றதும் இவனது போர்த் திறமும் இவரால் விரியக் கூறப்பட்டுள்ளன. போரில் மடியும் மள்ளர் உம்பருலகில் அமர மகளிரை மணப்பர் என்று இவர் கூறுகின்றார். அம்பு தைப்பினும், வேல் பிறழினும், யானைக்கோட்டுநுதிமடுத்தூன்றினும் அடிபெயர்த்தோடாமை பீடுடையாளர்க்குச் சிறப்பெனக் கருதுவர். இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகால் மார்பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே 5 நல்கினு நல்கா னாயினும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதி லம்ம பசித்துப்பணை முயலும் யானை போல இருதலை யொசிய வெற்றிக் களம்புகு மல்லற் கடந்திடு நிலையே. (80) திணை: தும்பை; துறை: எருமை மறம். சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது. உரை : இன் கடுங் கள்ளின் ஆமூ ராங்கன் - இனிய அழன்ற கள்ளினையுடைய ஆமூரிடத்து; மைந்துடை மல்லன் மதவலி முருக்கி - வலியையுடைய மல்லனது மிக்க வலியைக் கெடுத்து; ஒருகால் மார்பு ஒதுங்கின்று - ஒருகால் மண்டியாக மார்பிலே மடித்து வைத்து; ஒருகால் வருதார் தாங்கி - ஒருகால் வருதார் தாங்கி - ஒருகால் அவன் செய்கின்ற உபாயத்தை விலக்கி; பின் ஒதுங்கின்று - முதுகின்கண் வளைத்து; பசித்துப் பணை முயலும் யானை போல - பசித்து மூங்கிலைத் தின்றற்கு முயலும் யானையை யொப்ப; இருதலை ஒசிய எற்றி - தலையுங் காலுமாகிய இரண்டிடமும் முறிய மோதி; களம்புகு மல்லன் கடந் தடு நிலை - அக்களத்தின்கட் புக்க அம் மல்லனை எதிர்ந்து நின்று கொன்ற நிலையை; நல்கினும் நல்கா னாயினும் - கண்டால் உவப்பினும் உவவானாயினும்; வெல்போர்ப் போர் அருந் தித்தன் காண்க - இவன் தந்தையாகிய வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய தித்தன் காண்பானாக எ-று. என்றது, தந்தையுடன் வெறுத்துப் போந்தான் அமருட் புகுந்து, இப்போர் செய்தானை அவன் விரும்பின் உவக்கின்றான், விரும்பாவிடின் அஞ்சுகின்றா னென்பதாம். “பணை முயலும் யானை போல ஒரு தலை யொசிய வொற்றி” என்று பாடமோதி, அம் மல்லன் முற்கூறாயினும் பிற்கூறாயினும் ஒருதலை முறிய மோதி யென்றுரைப்பாரு முளர். தில்; விழைவின்கண் வந்தது. விளக்கம் : கடுங் கள், புளிப்பு மிகுதியால் களிப்புற்றுச் சீறிப் பொங்கும் கள்; அதனையே “அழன்ற கள்” ளென்றார். தன்மேல் மண்டியாக இருப்போனைத் தள்ளிக் கீழ்ப்படுத்தற் பொருட்டுச் செய்யப்படும் மற்போர்ச் சூழ்ச்சி, “உபாயம்” எனப்பட்டது. பணை முயலும் - பணைக்கு முயலும் என நான்கனுருபு விரிந்தது. பெற்ற தந்தை யாதலின், கண்டால் உவப்பெய்தா தொழியான் என்ற கருத்தால் “நல்கினும்” என்றும், பெருநற்கிள்ளிபால் கொண்ட வெறுப்பால் ஒருகால் உவவானாயினும் வன்மை கண்டுநெஞ்சில் அஞ்சுவன் என்பதுதோன்ற, “நல்கானாயினும்” என்றும் கூறினார். (80) 81. சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி கோப்பெரு நற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூரின்கண் இருக்கையில் போருண்டாயிற்று. அப்போரில் பகைத்து வந்தோரை யெதிர்த்துப் பொரும் படையில் இக்கிள்ளி யிருந் தான். அப்படைக்குத்தலைமை தாங்கிப் பொரும் இவனது போராண்மையைக் கண்ட சாத்தந்தையார் பெருவியப்புற்று, இப்பாட்டின்கண்ணே “இவன் படையின் ஆர்ப்புக் கடலினும் பெரிது; களிறுகள் இடிபோல் முழங்குகின்றன; இந்நிலையில் இவன் கைப்படுவோர் யாவரோ? அவர் பெரிதும் இரங்கத் தக்கார்” எனப் பரவுகின்றார். ஆர்ப்பெழு கடலினும் பெரிதவன் களிறே கார்ப்பெய லுருமின் முழங்கலா னாவே யார்கொ லளியர் தாமே யார்நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் 5 கவிகை மள்ளன் கைப்பட் டோரே. (81) திணை : வாகை; துறை: அரசவாகை. சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது. உரை : ஆர்ப்பு எழு கடலினும் பெரிது - படையினது ஆரவாரம் எழுகடலும் கூடி யொலிக்கும் ஒலியினும் பெரிது; அவன் களிறு - அவனுடைய களிறு; கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனா -கார்காலத்துமழையின்கண்இடியினும் முழங்குதலை யமையா; நார் செறியத் தொடுத்த ஆர் கண்ணி - நாரால் பயிலத் தொடுக்கப்பட்ட ஆத்திக் கண்ணியையும்; கவிகை மள்ளன் கைப்பட்டோர் - இடக்கவிந்த கையினையுமுடைய வீரனது கையின் கட் பட்டோராகிய; அளியர் யார்கொல் - இரங்கத்தக்கார்தாம் யார்கொல் எ-று. விளக்கம் : களிற்றின் முழக்கமும் கிள்ளியின் கைப்படுவோர்பால் இரக்கமும் கூறுதலின்,ஆர்ப்புப்படையினது ஆரவாரமாயிற்று. கார்காலத்து இடி முழக்கம் குமுறு குரலாய் நெடிது நிகழ்தலின், யானை முழக்கிற்கு அஃதுவமையாயிற்று; கோடையிடி நெடிது நில்லாதென வறிக. கண்ணியும் கவிகையுமுடைய மள்ளன் என்க. சோழர் குடியிற் பிறந்தமையின், ஆத்திக்கண்ணியும், ஈகை அக் குடிப்பிறந்தோர்க் கியல்பாதலின் கவிகையும் கூறினார். கவிகை - வினைத்தொகை. கையகப் பட்டோர் யார்கொல் என மன மிரங்கிக் கூறினார்; அவர்தாம் கொலை யுண்டல் ஒருதலை யென்றற்கு. (81) 82. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி கோப்பெருநற்கிள்ளிபோரவையில்நிகழ்த்திய மற்போரின் விரைவினைக் கண்ட சாத்தந்தையார் இப்பாட்டின்கண், அவ் விரைவை மட்டில் வியந்து, மற்போர்க்கு வந்த மல்லன் தன் வெற்றிப் பயனாக ஆமூரைத் தனக்குரித்தாகக் கொள்ளக் கருதி வந்தான்; அவனை இக்கிள்ளி தான் வென்று அவன் எண்ணத்தை மிக விரைவில் சிதைத்தான் என்று பாடிப் பாராட்டியுள்ளார். சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டி னிணக்கு மிழிசினன் கையது போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ 5 ஊர்கொள வந்த பொருநனொ டார்புனை தெரிய னெடுந்தகை போரே. (82) திணை : வாகை; துறை: அரசவாகை. சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது. உரை : சாறு தலைக்கொண்டென - ஊரின்கண் விழாத் தொடங் கிற்றாகஅவ்விழாவிற்குதவப் போகவும்; பெண்ணீற்று உற்றென - தன் மனைவி பிள்ளை பெறுதலைப் பொருந்தினவளாக அவள் மெய்ந்நோவிற் குதவப்போகவும் வேண்டி; பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று - பெய்கின்ற மழையையுடைய ஞாயிறு வீழ்ந்த போழ்தின்கண்; கட்டில் நிணக்கும் இழிசினன் கையது - கட்டிலைப் பிணிக்கும் புலைமகன் கையதாகிய; போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று - வாரைச் செலுத்தும் ஊசி யினும் விரைந்தது; ஊர் கொள வந்த பொருநனொடு - ஊரைக் கொள்ளவந்த வீரனொடு; ஆர் புனை தெரியல் நெடுந்தகை போர் - ஆத்தியால்தொடுக்கப்பட்ட கண்ணியையுடைய பெருந்தகையது போர் எ-று. நெடுந்தகை போர், பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றின்கட் சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற்று உற்றென இழிசினன் கையதாகிய ஊசியின் விரைந்தன் றெனக் கூட்டுக. சாறுதலைக் கொண்டென அதற்கு உதவப்போகவும், பெண்ணீற் றுற்றென அதற்குதவப் போகவுமென வேறு வேறு கொள்க; ஒன்றாக வுரைப்பாரு முளர். விளக்கம் : ஈற்று - பிள்ளைப் பேறு. விழாவிற்கு உதவுதலும், மனைவி மெய்ந்நோவுக் குதவுதலும் இழிசினனுக்குக் கடமையாதலின், அவன் உள்ளத்தே விரைவு தோன்றுவது ஒருதலையாயிற்று. ஞாயிறு மறைதல் தையல் வேலைக்கு இடையூறாதலின், அஃது அவன் விரைவினை மிகுதிப்படுத்திற்று. மல்லனொடு பொருமிடத்துப் பெருநற்கிள்ளியின் கையும் காலும் விரைதற்கு இழிசினன் கைய தாகிய போழ்தூண்டூசி உவமமாயிற்று. ஊர் கொள வந்த வீரன் என்றத னால், மல்லன் போரவைக்கு வந்ததன் நோக்கம் வெளிப்படுவ தாயிற்று. (82) 83. போரவைக் கோப்பெருநற்கிள்ளி போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆமூர்க்கண், தன் தந்தையை வெறுத்து வந்திருந்த காலத்து அவன் கட்டிளமையும் போர் வன்மையும் நல்லழகும்கண்டு, அவ்வூர்ப் பெருங்கோழி நாய்கன் மகளாகிய நக்கண்ணையார் என்பார் அவன்பால் காதற்காமம் கொண்டார். அவரொரு சிறந்த புலவர்பெருமாட்டி யுமாவர். இப் பாட்டின்கண், அவர் கோப்பெருநற்கிள்ளி பொருட்டுத் தொடி நெகிழும் பசப்புற்றுத் தம் தாய்க் கஞ்சுவ தற்கும், ஊரிலுள்ள சான்றோர் தம் காதற் பெருமை யறிந்து மணம் புணர்த்த நினையாமைக்கும் வருந்திக் கூறியுள்ளார். பெருங்கோழி நாய்கன்என்றபெயர், இவர் உறையூரிடத்து வாழ்ந்த வணிகர் மரபினர்போலும் என நினைத்தற் கிடந் தருகிறது. மாநாய்கன் என்ற பெயர் இளங்கோவடிகளாற் கூறப் படுதலால் பெருஞ்கோழி நாய்கன் என்பது இயற்பெயராதற்கும் அமையுமென உணரலாம். நக்கண்ணன் என வரும் ஆண்பாற் பெயர்க்கேற்ப, நக்கண்ணை யென்பது பெண்பாற் பெயராகும். இவர் பாடியனவாக அகத்தி லொன்றும், நற்றிணையில் இரண்டும், புறத்தில் மூன்றுமாக ஆறு பாட்டுக்கள் உள்ளன. இவர் சோழன் போரவைக் கோப்பெருநற்கிள்ளிபால் கைக்கிளைக் காமக் காதல்கொண் டொழுகிய திறம் இப் பாட்டுக்களால் அறியலாம். அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே அடுதோண் முயங்க லவைநா ணுவலே என்போற் பெருவிதுப் புறுக வென்றும் 5 ஒருபாற் படாஅ தாகி இருபாற் பட்டவிம் மைய லூரே. (83) திணை . கைக்கிளை; துறை: பழிச்சுதல். அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது. உரை : அடி புனை தொடுகழற் மையணற் காளைக்கு - அடியின்கட் புனைந்த வீரக் கழலினையும் மை போன்ற தாடியினையு முடைய இளையோன்பொருட்டு; என் தொடி கழித்திடுதல் - எனது வளை என்னைக் கைவிடுதலான்; யான் யாய் அஞ்சுவல் - யான் யாயை அஞ்சுவேன்; அடு தோள் முயங்கல் - அவன் பகையைக் கொல்லுந் தோளைத் தழுவுதற்கு; அவை நாணுவல் - அவையின் கண் உள்ளாரை நாணுவேன்; என்றும் ஒருபாற் படாதாகி - எந்நாளும் யாயே யாதல் அவையே யாதல் ஒருகூற்றிற் படாதாகி; இருபாற் பட்ட இம் மையல் ஊர் - யாயும் அவையுமாகிய இரு கூற்றிற் பட்ட இம் மயக்கத்தை யுடைய ஊர்; என்போல் பெருவிதுப் புறுக - என்னைப்போல் மிக்க நடுக்க முறுவதாக எ-று. மையலூர்பெருவிதுப்புறுகவெனக்கூட்டுக. யாயில்லை யாயின் வளைகழலுதற் கஞ்சவேண்டா; அவை யில்லையாயின் முயங்குதற் கஞ்சவேண்டா வென்பது கருத்தாகக் கொள்க. ஒருபாற் படாதாகி இருபாற்பட்ட இம் மையலூர் என்பதற்கு அச்சமும் நாணுமுண்டாய் வருந்தும் என் கூற்றிலும் நில்லாது, என் காதலறிந்து அவனொடு கூட்ட நினையாத யாய் கூற்றிலும் நில்லாது, இருவர் கூற்றிலும் நின்று மயங்குகின்ற ஊரெனினும் அமையும். விளக்கம் : காதலொழுக்கம் மேற்கொண்ட மகளிர் தம் காதலரைப் பிரியினும் தலைக்கூடப் பெறாவிடினும் பசந்து உடம்பு நனி சுருங்கித் தொடியும் வளையும் கழல வருந்துவராதலின், இங்கேபெருநற் கிள்ளியைத் தலைக்கூடப்பெறாத நக்கண்ணையார், “மையணற் காளைக்குத் தொடி கழித்திடுதல் அஞ்சவல்” என்றும், தன்னொழுக் கத்திற்குத் தாய் இடையூறாதலின் “யா யஞ்சுவல்” என்றும் கூறினார். சான்றோர் கூடிய அவையினர் ஒருத்தியை ஒருவற்குத் திருமணத் தால் கூட்டி வைப்பவராதலின், அவர் தாம் விரும்பியவாறு தாமே சென்று கூடற்கு அவ் வவையினர் இகழ்வர் என்பது பற்றி, “அவை நாணுவல்” என்றார். தமது மையலை ஊர்மேலேற்றி “மையலூர்” என்றார். (83) 84. போரவைக் கோப்பெருநற்கிள்ளி பெருநற்கிள்ளிபால் காமக்காதல் கொண்டொழுகும் நக்கண்ணையார், அவன் வாழ்ந்த மனையின் சிறைப்புறத்தில் வாழ்ந்துவந்தனர். அவனை யடிக்கடி கண்டும் இருந்தார். அவ்வாறிருந்தும், அவனை மணந்து கோடற்குரிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்வில்லை; ஆயினும் அவன்பால் அவருக்குண் டாகிய காதல் பெருகிவருவதாயிற்று. அந்நிலையில் அவர் மிகவும் வருந்தி, “என் தலைவனாகிய கிள்ளி, தன்னாடு நீங்கிப் போந்து ஈண்டு வாழ்வதால் வறியனாய்ப் புற்கையுண்டு வருகின்றா னாயினும் தோட் பெருமை குன்றாதவன்;அவனை எளிதிற் காணுமாறு அவன் சிறைப்புறத்தே வாழினும் யான் பசப்புற்றுப் பொன்னிறமே பெறுவேனாயினேன்; அவன் போர்க்களம் புகின் போர் வீரர்க்கு ஏற்றிழிவுடைய துறைபோல வருத்தம் உண்டு பண்ணுகின்றான் ; எனவே, அவன் வீரர்க்கும் எனக்கும் ஒப்ப வருத்தத்தைச் செய்கின்றான் காண்” என்று இப்பாட்டின்கண் பரிந்து கூறுகின்றார். என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே யாமே, புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே போரெதிர்ந் தென்னை போர்க்களம் புகினே கல்லென் பேரூர் விழவுடை யாங்கண் 5 ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க் குமணர் வெரூஉந் துறையன் னன்னே. (84) திணை . கைக்கிளை; துறை: பழிச்சுதல். அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது. உரை : என்னை - என்னுடைய தலைவன்; புற்கை உண்டும் பெருந் தோளன் - தன் நாடிழந்த வறுமையால் புற்கை நுகர்ந்தா னாயினும்பகைவ ரஞ்சத்தக்கபெரிய தோளையுடையன்; யாம் புறஞ்சிறை யிருந்தும் பொன்னன்னம் - யாம் அவனுடைய சிறைப்புறத்திருந்தும் பலகாலும் காணப் பெறினும் மெய்யுறப் பெறாமையின் வருந்திப் பொன்போலும் நிறத்தை யுடையே மாயினேம்; போர் எதிர்ந்து என்னை போர்க்களம் புகின் - போரை யேற்று என் தலைவன் போர்க்களத்தின்கட் புகின்; கல்லென் பேரூர் - கல்லென்னும் ஒலியையுடைய பெரிய வூரின்கண்; விழவுடை ஆங்கண் - போர் செய்தற்கெடுத்த விழாவினையுடைய அவ்விடத்து; ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு - தோள்வலி பேசி இன்பமுற்றுப் போந்த வீரர்க்கு; உமணர் வெரூஉம் துறை அன்னன் - உப்பு விற்பார் அஞ்சத்தக்க ஏற்றிழிவுடைய துறையை யொப்பன் எ-று. என்னைபுற்கையுண்டும்பகைவெல்லும் பெருந்தோளனாம்; யாம் அவன் சிறைப்புறத்திருந்தும் பசப்பை வெல்லமாட்டாமை யால் பொன் போன்றன மெனத் தன் வேட்கை மிகுதி கூறியவாறு. அன்றி, இதற்கு, என்னை புற்கையுண்டும் வழங்கும் பெரிய தோளையுடையனாயும் நம்மிடத்து அருளின்மையின், அவன் சிறைப்புறத்திருந்தும் பொன்போற் பசந்தே மென்று அழிந்து கூறியதாகப் பொருளுரைப்பாரு முளர். உமணர் வெரூஉம் துறையன்னன் என்றதனாற் பயன், வருத்துங் கூற்றில் ஆடவரை யும் மகளிரையும் ஒக்க வருத்துவதல்லது, அருளுமாறு கற்றிலனோ வென்னும் நினைவிற் றாக்குக. விளக்கம் : கிள்ளி அரசகுமர னாதலின், அவன் புற்கையுண்டற்குக் காரணம் காட்டல் வேண்டி; “நாடிழந்த வறுமையால்” என அவன் வரலாறு காட்டினார். ஆமூர் மல்லனை அட்டு நின்றமையால் அவன்தோள் பெருமை விளங்கினமை கண்டு, “பெருந் தோளன் ” என்றார். பலகாலும் அவனைக் காணத்தக்க நிலையில் தாம் இருப்பினும், அவனை முயங்கப்பெறாமையின் கண் பசப்புற்றிருக்கு மாறு தோன்றப் “பொன்னன்னம்” என்றும், பெறுதற்கரிய நலம் பசலையால் உண்ணப்பட்டுக் கழிதற் கிரங்குதலின் “யாம்” என்றும் கூறினார். பசலையால் மகளிர் கண் பொன்போறல்,“பூப்போ லுண்கண் பொன்போர்த் தனவே” (ஐங்.16) என்பதனாலறிக. தம் வலியைத் தாமே வியந்து செருக்கி வந்து பின்பு அதனையிழந்த வீரரை, “ஏமுற்றுக் கழிந்த வீரர்” என்றார். (84) 85. போரவைக் கோப்பெரு நற்கிள்ளி போரவை கூட்டி மற்போர் விற்போர் முதலிய போர்களைச் செய்து மேம்படும் இயல்பினனான பெருநற்கிள்ளி, தொடக்கத் தில் ஆமூர் மல்லனொடு மற்போர் உடற்றிய காலத்தில் நக்கண்ணையார் அவன் மற்போரில் மல்லனை யட்டுநின்ற காட்சியை நேரிற் கண்டார். அப்போரைக் காண வந்திருந்த மக்களுள் ஒருசாரார் “கிள்ளியே வெல்வன்” என்ன, ஒரு சாரார், கிள்ளிக்கு வெற்றியில்லை என்றனர். “இருதிறத்தார் கூற்றையும் கேட்டயான் விரைந்தோடி, ஆங்கு நின்ற பனைமரத்தின் அடியில் அதனைப் பொருந்திநின்று மற்போரைக் கண்டேன்; அதன்கண் கிள்ளியாகிய என் தலைவனே வென்றி யெய்தினான்” என்று இப் பாட்டால் நக்கண்ணையார் கூறுகின்றார். என்னைக் கூரிஃ தன்மை யானும் என்னைக்கு நாடிஃ தன்மை யானும் ஆடா டென்ப வொருசா ரோரே ஆடன் றென்ப வொருசா ரோரே 5 நல்ல பல்லோ ரிருநன் மொழியே அஞ்சிலம் பொலிப்ப வோடி யெம்மில் முழாவரைப் போந்தை பொருந்திநின் றியான்கண் டனனவ னாடா குதலே. (85) திணை . கைக்கிளை; துறை: பழிச்சுதல். அவனைப் பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் பாடியது. உரை : என்னைக்கு ஊர் இஃது அன்மையானும் - என்னுடைய தலைவனுக்கு ஊர் இஃதல்லாமையானும்; என்னைக்கு நாடு இஃது அன்மையானும் - என்னுடைய தலைவனுக்கு நாடு இஃதல்லாமையானும்; ஆடு - அவனுக்கு இயல்பாய வென்றியை; ஆடென்ப ஒரு சாரோர் - அவனது வென்றி யென்று சிறப் பாகச் சொல்லுவர் ஒரு பக்கத்தார்; ஆடன்று என்ப ஒரு சாரோர் - அவனது வென்றி யன்றென்று சொல்லுவர் ஒரு பக்கத்தார்; பல்லோர் இரு நன்மொழி நல்ல - பலரும் ஒத்து ஒவ்வாமற் கூறும் இவ் விருவகைப்பட்ட நல்ல வார்த்தையும் நல்லவாயிருந்தன; அஞ் சிலம்பு ஒலிப்ப ஓடி - அவ்வாறு கூறினராயினும், அழகிய சிலம் பார்ப்ப ஓடிச் சென்று; எம்இல் - எம்முடைய மனையின்கண்; முழா வரைப் போந்தை பொருந்தி நின்று - முழாப் போலும் பக்கத்தையுடைய பனையைப் பொருந்தி நின்று; அவன் ஆடாகுதல் யான் கண்டனன் - எனது வளையும் கலையு முதலானவை தோற்கும் ஆண்மை யுடைமையின் அவனது வென்றியாதல் யான் கண்டேன் எ-று. பின்னும் ஒரு கால் என்னை யென்றதனால், இவரது ஆதரவு தோற்றி நின்றது. நல்ல வென்றது இகழ்ச்சிக் குறிப்பு. ஆடென்ற தூஉம் அவனைச் சுட்டியே கூறினமையின், இரு நன்மொழியும் நல்லவென்றா ரெனினு மமையும். யாதேனும் ஒன்றைச் சார்ந்து நின்று காண்டல் நாணுடைய குல மகளிர்க் கியல்பாதலின் “போந்தை பொருந்தி நின்று யான் கண்டனன்” என்றார்.வரும் பாட்டிலும், “சிற்றில் நற்றூண் பற்றி நின்று” ஒருத்தி வினவுதல் காண்க. விளக்கம் : பெருநற்கிள்ளி போர் உடற்றி நிற்றிநிற்குங்கால் அவனுக்கு வென்றி யென்று சிலர் சொல்லுதற்குரிய காரணம் இது வெண்பார், “என்னைக் கூரிஃதன்மையானும், என்னைக்கு நாடு இஃது அன்மை யானும்” என்றார். “ஆடன்” றெனப் பிறர் கூறுவது இவர்க்கு இன்னா தாய்த் தோன்றலின், இவ்வாறு காரணங் காட்டினார். அவற்கு வென்றி யுண்டாதலை “யான் கண்டனன்” என்றமையின், அதற்குக் காரணம் வளையும் கலையும் தோற்றோடத் தாம் நின்றமை யென வருவித் துரைத்தார். இருதிறத்தார் மொழியும் கிள்ளியைச் சுட்டி அவன் நினைவையே யெழுப்பினமையின், “இருநன் மொழியும் நல்ல” வென்றார். (85) 86. காவற் பெண்டு காவற் பெண்டென்பவர் சிறந்த மறக்குடியில் பிறந்து வளர்ந்து மறக்குடியில் வாழ்க்கைப் பட்டவர்; இனிய செய்யுள் செய்யும் சிறப்புடையவர். இவருக்கு மறம் மிக்க மகனெருவன் இருந்தான். ஒரு சால்புடைய மகள் அவர் மனைவிக்கு ஒரு நாள் போந்து “அன்னே, நின்மகன் யாண்டுளன்?” என வினவினள். அக் காலை, அவர் “அவன் போர்க் களத்தே விளங்கித் தோன்றுவன்; அவற்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் அதன் முழைக்கு முள்ள தொடர்பாகும்; அவனை ஈன்ற வயிறோ இது” வெனத் தம் வயிற்றைக் காட்டி யுரைத்தார். அவ்வுரையே இப் பாட்டு. சிற்றி னற்றூண் பற்றி நின்மகன் யாண்டுள னோவென வினவுதி யென்மகன் யாண்டுள னாயினு மறியே னோரும் புலிசேர்ந்து போகிய கல்லளை போல ஈன்ற வயிறோ விதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே (86) திணை: வாகை துறை: ஏறாண் முல்லை. காவற் பெண்டின் பாட்டு. இவர் பெயர் காதற்பெண்டென்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. செவிலித்தாயைக் காவற் பெண்டென்பதும் வழக்கு. ஈண்டஃது இயற்பெயராய் வந்தது: உரை: சிற்றில் நற்றூண்பற்றி-சிறிய இல்லின்கண் நல்ல தூணைப் பற்றி நின்று; நின் மகன் யாண்டுளனோ வென வினவுதி-நின் மகன் எவ்விடத் துளனோ வென்று கேட்பை; என் மகன் யாண்டுளனாயினும் அறியேன்; புலி சேர்ந்து போகிய கல்லளை போல- புலி கிடந்து போன கன் முழை போல; ஈன்ற வயிறோ இது- அவனைப் பெற்ற வயிறோ இஃது; போர்க் களத்தான் தோன்றுவன்-அவன் செருக்களத்தின் கண்ணே தோன்றுவன், அவனைக் காண வேண்டின் ஆண்டுச் சென்று காண் எ-று. ஈன்ற வயிறோ இது என்ற கருத்து: புலி சேர்ந்து போகிய அளை போல அவனுக் கென்னிடத்து உறவும் அத்தன்மைத் தென்பதாம். ஓரு மென்பதூஉம் மாதோ வென்பதூஉம் அசைச் சொல். விளக்கம் : சிற்றில்லின்கண் கூரையைத் தாங்கி நிற்பதுபற்றி, தூணை “நற்றூண்” என்றார்.என்மகன் போர்க்களத்திற்றான் விளக்க முறத் தோன்றுவன் என்பார், “தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே” என்றார். “யாண்டுள னாயினும் அறியேன்” என்றார், பிற விடங்களி லிருப்பின் அறியாமைக்கும் போர்க்களத் திருப்பின் அறிதற்கும் இயைபு வற்புறுத்தற்கு. அவன்பால் தமக்குள்ள தொடர்பை “ஈன்ற வயிறோ இதுவே” என்றார். (86) 87. அதியமான் நெடுமான்அஞ்சி அதியர் என்பார் குடியிற் பிறந்து சிறந்தமைபற்றி நெடுமான் அஞ்சியை அதியமான் நெடுமான் அஞ்சியென்று சான்றோர் கூறியுள்ளனர். அதியமான் என்பது அதிகைமான் என்றும் சில ஏடுகளிற் காணப்படுவது பற்றி, அதியர் என்பது அதிகையர் என்பதன் திரிபு என்றும், ஒரு காலத்தில் இவர் அதிகை யென்னும் ஊரில் வாழ்ந்திருந்து பின்னர்ச் சேரநாட்டிற் குடியேறி யிருத்தல் வேண்டும் என்றும், இதனால் அதிகையராகிய இவர் அதியர் எனப்படுவாராயின ரென்றும் அறிஞர் கருது கின்றனர். நெடுமான் அஞ்சி யென்பது இவன் பெயர். இவன் ஒரு குறுநில மன்னன்; இவனது தலைநகர் இக்காலத்தில் தருமபுரி யெனப்படும் தகடூராகும். இவன் சேரர்கட்குரியவனாய் அவர்க் குரிய கண்ணியும் தாரும் தனக்குரியவாகக் கொண்டவன். மழவர் என்னும் ஒருசார் கூட்டத்தார்க்கும் இவன் தலைவன். இதனால் இவனை “மழவர் பெருமகன்” என்றும் சான்றோர் கூறுப. இவனது ஆட்சியெல்லைநடு நாட்டுக் கோவலூரையும் தன்னகத்தே கொண்டிருந்தது. குதிரை மலை இவன் நாட்டின்கண்ணதாகும். முதன் முதலாகத் தமிழகத்திற் கரும்பினை வேற்று நாடுகளி னின்றும் கொணர்ந்தவர் இவனுடைய முன்னோராவர். பழம் புலவர்கள் இச் செய்தியை, “அதியமான் முன்னோர் விண்ணவரை வழிபட்டுக் கரும்பினை இவண் கொணர்ந்தன” ரென்றும், அவ் விண்ணவர் போந்து தங்குதற் பொருட்டு இவன தூர்க்கணொரு சோலையிருந்த தென்றும் கூறுவர். இவன் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனியொன்றைப் பெற்றான். அக் கனி தன்னை யுண்டாரை நெடிது நாள் வாழச் செய்யும் வலியுடையது. அதனைப் பெற்ற இவன் தானே யுண்டொழியாது நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க் கீந்து அழியா அறப்புகழ் பெற்றான். இவனுக்கு ஒளவையார்பால் பெரு மதிப்பும் பேரன்பும் உண்டு. ஒருகால் தன்னோடு மாறுபட்ட தொண்டைமானிடைச் சந்து செய்வித்தற்கு ஒளவையாரைத் தூது விடுத்தான். இறுதியில் இவன் சேரமான் தகடூரை முற்றுகையிட்டிருந்தபோது இவன் தன் பொருள், படை, துணை, முதலியன வலி குறைந்திருப்பதுணர்ந்து தன் அரணகத்தே அடைப்பட்டுக் கிடந்ததும் பின்னர்ப் போருடற்றி உயிர் துறந்ததும், தகடூர் யாத்திரை யென்னும் நூற்கண் விளங்கும். அந்நூல் இப்போது கிடைத்திலது; சிற்சில பாட்டுக்களே காணப்படுகின்றன. இவனைப் பாராட்டி ஒளவையார் பாடியுள்ள பாட்டுக்கள் பலவாகும். இந்த அதியமான் நெடுமான் அஞ்சிக்கு அத்தை மகள் ஒருத்தியுண்டு;அவளும் சிறந்த பாவன்மை யுடையவள். அவள் அஞ்சியை மணந்து இன்புற்ற நாளில், ஒருநாள் தான் கண்ட மலைச் சாரற் காட்சியை அஞ்சி யின் அவையில் இசைப்பாணர் புதுவகையான திறங்களைப் புணர்த்துப் பாடும் நலத்தை யோதிப் பாராட்டியுள்ளாள். ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சி தன்னை யெதிர்ந்த பகைவேந்தரொடு பொருதற்குச் சமைந்திருந்தான். பகைவர் தம்மிடையே யுள்ள மறவரது மறத்தை வியந்து கூறுவதனை ஒளவையார் கேள்வியுற்றார். உடனே, அவர் அஞ்சியின் வலி நலத்தை எடுத்துரைக்கக் கருதி, “பகை வீரர்களே, போர்க்களம் புகாதீர்கள்; எம்பால் ஒரு வீரனுளன்; அவன் , நாளொன்றுக்கு எட்டுத் தேர்களைச் செய்யும் பெருவன்மை படைத்த தச்சன், முப்பது நாள் அரிது முயன்று செய்ததொரு தேரை யொக்கும் பெருமை விரைவும் பெருந் திண்மையும் உடையன்” என்று இப்பாட்டால் குறித்தோதுகின்றார். ஒளவையார் சங்க மருவிய நல்லிசைப் புலவர் கூட்டத்துச் சிறந்தோருள் ஒருவர்; பெண்பாற் புலவருள் தலைமை பெற்றவர். தமிழகத்தில் வாழும் மக்கள் அனைவரிலும் இவர் பெயரைக் கேட்டறியாதார் ஒருவரும் இலர், அதியமான் ஒருகால் தன்னை யுண்டாரை நெடிது வாழச் செய்யும் நெல்லிக்கனி பெற்று, அதனை இவர்க்குத் தந்து நெடிது வாழச் செய்தான். அவன்நெடு மனைக்கண்இனிதிருந்து அவ்வப்போது இவர் அவனைப் பல பாட்டுக்கள் பாடிச் சிறப்பித்துள்ளார். அதியமான்பொருட்டு ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றார்; அதியமான் பகைவரைக் கடந்த செய்திகளை நன்கு எடுத்தோதியுள்ளார்; அதியமான் இறந்த காலையில் இவர் கையற்றுப் பாடிய பாட்டு நெஞ்சை நீராய் உருக்கும் நீர்மை யமைந்தது. அதியமான் மகன் பொகுட்டெழினி யென்பான் பிறந்த காலை முதல், அவன் அரசனாய் விளக்க மெய்துங்காறும் ஒளவையார் இருந்திருக் கின்றார். வேள் பாரியினது பறம்பை மூவேந்தரும் முற்றுகை யிட்டிருந்தபோது, அங்கிருந்த கபிலர் கிளிகளை வளர்த்து வெளியே விடுத்து நெற்கதிர் கொணர்வித்து அடைபட்டிருந்த மக்கட்கு நேர்ந்த உணவுக்குறையை நீக்கினாரென்பதும், வெள்ளி வீதியார் என்பார் தம் காதலனை யிழந்து வருந்திய செய்தியும் பிறவும் இவரால் குறிக்கப்பெறுகின்றன. இவர் பெயரால் தமிழகத்து வழங்கும் செய்திகள் பலவாகும். அவற்றை ஈண்டு விரிப்பிற் பெருகும். களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந் தெம்முளு முளனொரு பொருநன் வைகல் எண்டேர் செய்யுந் தச்சன் திங்கள் வலித்த காலன் னோனே. (87) திணை : தும்பை; துறை: தானை மறம். அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. உரை : களம் புகல் ஓம்புமின் தெவ்விர் - போர்க்களத்தின் கட்புகுதலைப் போற்றுமின், பகைவீர்; போரெதிர்ந்து - போரின் கண் மாறுபட்டு; எம்முளும் உளன் ஒரு பொருநன் - எங்களுள்வைத்தும் ஒரு வீரன் உளன்; வைகல் எண் தேர் செய்யும் தச்சன் ஒரு நாள் எட்டுத் தேரைச் செய்யும் தச்சன். திங்கள் வலித்த காலன்னோன் - ஒரு மாதங் கூடிக் கருதிச் செய்யப்பட்ட தொரு தேர்க்காலை யொப்பன் எ-று. போரெதிர்ந்து களம்புக லோம்புமின்,எம்முளும் உளன் எனக் கூட்டுக. எம்முளும் என்ற உம்மை சிறப்பும்மை. தேர்க் காலொடு உவமை, விரைவும் திண்மையுமாகக் கொள்க. விளக்கம் : பகைவர்தமதுமைந்துபொருளாகத் தருக்கிவந்தனராதலின், அவருக்கு மாற்றம் கூறுவாராய், “பகைவர்களே, நும்மிடையே வீரர் உளராதல் போல் எம்மிடையேயும் ஒரு வீரன் உளன்” என்பார், “எம்முளும் உளன் ஒரு பொருநன்” என்றார். “ஒரு நாள் எண் தேர் செய்யும் தச்சன்” என்றது, தச்சனது தொழில்நலம் தோற்றி நின்றது. மிக்க திண்மையும் செப்பமும் உடைமை தோன்ற, “திங்கள் வலித்த கால்” என்றார். (87) 88. அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சியொடு பொருது வெல்வதாக அவன் பகைவர் சிலர் தம்முட் பேசிக்கொண்டது ஒளவையார்க்குத் தெரிந்தது. அவர் அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாதெனத் தேர்ந்த ஒளவையார், அவர் தம்முடைய கூழைப்படை தார்ப் படை யென்ற இவற்றின் வலி நினைந்து தருக்குகின்றமை யறிந் தார். அவர் உடனே அப் பகைவரை நோக்கி, “நீவிர் அதிய மானைக் காணாமுன்பு கூழையையும், தாரையும், கொண்டு பொருது வெல்வோம் என்பது கூடாது; காண்பீராயின் அவ்வாறு நினைத்தற்கே அஞ்சுவீர்கள்” என்று இப் பாட்டால் அறிவுறுத்து கின்றார். யாவி ராயினுங் கூழை தார்கொண் டியாம்பொருது மென்ற லோம்புமி னோங்குதிறல் ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமகன் கதிர்விடு நுண்பூ ணம்பகட்டு மார்பின் 5 விழவுமேம் பட்ட நற்போர் முழவுத்தோ ளென்னையைக் காணா வூங்கே. (88) திணை : தும்பை; துறை: தானை மறம். அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. உரை : யாவிராயினும் - எப்பெற்றிப்பட்டீராயினும், கூழை தார் கொண்டு - அணியையும் தூசியையும் கொண்டு; யாம் பொருதும் என்றல் ஓம்புமின் - யாம் அவனோடு பொருவோ மென்று சொல்லுதலைப் பாதுகாமின்; ஓங்கு திறல் ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெரு மகன் - உயர்ந்த வலியையுடைய பாடஞ் செய்யும் விளங்கிய நெடிய வேலையுடைய இளை யோர்க்குத் தலைவனாகிய; கதிர் விடு நுண் பூண் - சுடர் விடுகின்ற நுண்ணிய தொழிலையுடைய பூண் அணிந்த; அம் பகட்டு மார்பின் - அழகிய வலிய மார்பினையும்; விழவு மேம் பட்ட நற்போர் முழவுத் தோள் - கள வேள்வி முதலாகிய விழாச் சிறந்த நல்ல போரைச் செய்யும் முழாப்போலும் தோளினையுமுடைய; என் ஐயைக் காணா வூங்கு - என் இறைவனைக் காண்பதற்கு முன்; கண்டால் அது செய்தல் அரிதாகலான் எ-று. என்னையைக் காணா வூங்கு யாவிராயினும் பொருது மென்றல் ஓம்புமின் எனக் கூட்டுக. விளக்கம் : அறிவு, ஆண்மை, பொருள், படை, முதலியவற்றால் மிகச் சிறந்திருக்கின்றீராயினும் என்பதற்கு “யாவிராயினும்” என்றார்; முடிவேந்தராயினும், குறுநில மன்னராயினும், ஒருவராயினும், பலராயினும், அடங்க இவ்வாறு கூறினா ரெனினு மமையும். கூழை- பக்கத்தும் பின்னரும் அணிவகுத்து வரும் படை; தார் - தூசிப்படை. பாடம்செய்த வேலும், வாளும், கூர்மையும் ஒளியுமுடைய வாதலால், “ஒளிறிலங்கு வாள்” என்றார். பாடஞ் செய்தலாவது கூர்மை மிகத் தீட்டி, அது துருவேறி மழுங்காவாறு நெய்யணிந்து தோலுறையுள் வைத்தல். பகடு - ஈண்டு வலிமை குறித்து நின்றது. விழவு மேம்பட்ட போர் என்றதனால், விழவு, கள வேள்வி முதலாயின குறிப்பதாயிற்று. கண்டவழித் தம் கூழையும் தாரும் போர்க்கு ஆற்றா வெனவுணர்ந்து அஞ்சி நீங்குவர் என்பது கருத்து. (88) 89. அதியமான் நெடுமான் அஞ்சி ஒருகால், அதியமானுடைய பகைவருள் ஒருவன் ஒளவையாரைக் கண்டு, “நுங்கள் நாட்டில் சிறந்த போரைச் செய்வோர் உளரோ?” என வினவினன். இரப்போர்க் கீயும் இசை நலமுடையோரைப் பாடிப் பரிசில் பெறும் பாண்மகள் போலச் செல்லும் ஒளவையார், அது கேட்டுச் சிறிதும் மனமஞ்சாராய்ப் பெருமிதத்துடன், “எங்கள் நாட்டில் எறியும் கோலுக் கஞ்சாது அதனை ஓச்சுந்தோறும் உடன்றெழும் பாம்பு போலச் சீறி யெழும் வீரர் பலர் உளர், அன்றியும், மன்றின்கண்கட்டப்பட்டிருக்கும் போர்ப்பறை காற்றாலசைந்து இசைக்குமாயின், போர் வந்து விட்டது போலும் என்று பொருக்கென எழும் தலைவனும் உளன் காண்” என்று இப்பாட்டாற் கூறுகின்றார். இழையணிப் பொலிந்த வேந்துகோட் டல்குல் மடவர லுண்கண் வாணுதல் விறலி பொருநரு முளரோநும் மகன்றலை நாட்டென வினவ லானாப் பொருபடை வேந்தே 5 எறிகோ லஞ்சா வரவி னன்ன சிறுவன் மள்ளரு முளரே யதாஅன்று பொதுவிற் றூங்கும் விசியுறு தண்ணுமை வளிபொரு தெண்கண் கேட்பின் அதுபோ ரென்னு மென்னையு முளனே. (89) திணை : தும்பை; துறை: தானை மறம். அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. உரை : இழை யணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல் - மணிக் கோவையாகியஅணியாற்பொலிந்த ஏந்திய பக்கத்தினை யுடைய அல்குலினையும்; மடவரல் - மடப்பத்தினையும்; உண்கண் - மையுண்ட கண்ணினையும்; வாள் நுதல் விறலி - ஒளி தங்கிய நுதலினையுமுடைய விறலி; பொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டென - என்னொடு பொருவாரு முளரோ நும்முடைய பெரிய இடத்தினையுடைய நாட்டின்கண் என; வினவல் ஆனாப் பொரு படை வேந்தே - என்னைக் கேட்ட லமையாத செருச் செய்யுந் தானையையுடைய வேந்தே; எறி கோல் அஞ்சா அரவின் அன்ன சிறு வன் மள்ளரும் உளர் - நீ போர் செய்யக் கருதுவை யாயின் எம்முடைய நாட்டின் கண்ணே அடிக்கும் கோலுக்கு அஞ்சாது எதிர்மண்டும் பாம்பு போன்ற இளைய வலிய வீரரும் உளர்; அதாஅன்று - அதுவே யன்றி; பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை - மன்றின் கண் தூங்கும் பிணிப்புற்ற முழவினது; வளி பொரு தெண்கண் கேட்பின் - காற்றெறிந்த தெளிந்த ஓசையையுடைய கண்ணின் கண் ஒலியைக் கேட்பின்; அது போர் என்னும் என்னையும் உளன் - அது போர்ப்பறை யென்று மகிழும் என்னுடைய தலைவனும் உளன் எ.று. தெண்கண் என்றது அதன்கண் ஓசையை. போரென்றது போர்ப் பறையை விளக்கம் : மணிக் கோவை, மணிமேகலை. கோடு - பக்கம். மடவரல் - மடப்பம்; “மடவரல் அரிவை” (குறுந் 321) என்றாற்போல. பொரு படை - போரைச் செய்யும் படை; அஃது ஈண்டுத் தானைமேல் நின்றது. தெண்கண் என்பது ஆகுபெயராய் ஒலியைக் குறித்தது. யானையின் மணியோசையைச் சேய்மையிற் கேட்போன் இஃது யானை என்பது போல, முழவோசைகாற்றால் உண்டாகக் கேட்பின், “அது போர்” என்பன என்றவாறாம். (89) 90. அதியமான் நெடுமான் அஞ்சி ஒருகால், அதியமான் தன்னைப் பகைத்துப் பொரக் கருதும் வேந்தருடன் போர்செய்தற்குச் சமைந்திருந்தான் அடிக்கடி நிகழும் போர்களால் வீரர் பலர் இறப்பதும், பொருட் கேடுண்டாவதும் அவன் நினைவிற் றோன்றி அசைவினைப் பிறப்பித்தன. போரைச் செய்யாது நிறுத்தின் வரும் கேடும் அவன் அறிவுக்குப் புலனாகா தொழியவில்லை. அந்நிலையில் அதனை யுணர்ந்த ஒளவையார் அதியமானைப் போர் செய்தற்கு ஊக்கவேண்டிய கடமை யுடையவரானார். இப் பாட்டால், “புலி சினந்தால் மான் கூட்டம் எதிர் நில்லா; ஞாயிறு சினந்தால் இருள் நில்லாது; பெருமிதப் பகட்டுக்கு வழியருமை கிடையாது; அவ்வாறே நீ களம் புகின் போர் செய்வார் இல்லை” யென்று கூறி யூக்கியுள்ளார். உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடைமல்கு குளவியொடு கமழுஞ் சாரல் மறப்புலி யுடலின் மான்கண முளவோ மருளின விசும்பின் மாதிரத் தீண்டிய 5 இருளு முண்டோ ஞாயிறு சினவின் அச்சொடு தாக்கிப் பாருற் றியங்கிய பண்டச் சாகாட் டாழ்ச்சி சொலிய அரிமணன் ஞெமரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையு முண்டோ 10 எழுமரங் கடுக்குந் தாடோய் தடக்கை வழுவில் வன்கை மழவர் பெரும இருநில மண்கொண்டு சிலைக்கும் பொருநரு முளரோ நீகளம் புகினே. (90) திணை : தும்பை; துறை: தானை மறம். அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. உரை : உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் - முரிந்த வளையை யொப்ப மலர்ந்த வெண்காந்தட் பூ; அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் - இலை தழைத்த குளவியுடனே நாறும் மலைச் சாரற்கண்; மறப்புலி உடலின் மான்கணம் உளவோ - மறத்தை யுடைய புலி சீறின் எதிர்நிற்கவல்ல மானினமும் உளவோ; மருளின விசும்பின் மாதிரத்து - மயங்கிய ஆகாயத்திடத்தும் திசையின்கண்ணும்; இருளும் உண்டோ ஞாயிறு சினவின் - இருளுமுண்டோ ஞாயிறு கொதித் தெழுமாயின்; பார் அச் சொடு தாக்கிய - பாரத்து மிகுதியால் பார் அச்சுமரத்தோடு வந்து தாக்கி; உற்று - உற இருத்தலின்; இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய - நிலத்தின்கட் குளித்த பண்டத்தை யுடைய சகடத்தினது ஆழ்ச்சியைப் போக்குவதற்கு; அரி மணல் ஞெமர - புனல் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும்; கற் பக - கல் பிளக்கவும்; நடக்கும் - நடக்க வல்ல; பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ, மனச்செருக்கினையுடைய கடாவிற்குப் போதற்கரிய துறையுமுண்டோ, இல்லையன்றே, அவை போல; எழு மரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை - கணைய மரத்தையொக்கும் முழந்தாளிலே பொருந்திய பெரிய கையாகிய; வழுவில் வன் கை - தப்பாத வன்மையைச் செய்யும் கையினையுடைய; மழவர் பெரும - வீரர்க்குத் தலைவ; இரு நிலம் மண்கொண்டு சிலைக்கும் - பெரிய நிலத்தின்கண் நினது மண்ணைக் கொண்டு ஆர்க்கும்; பொருநரும் உளரோ - வீரரும் உளரோ, இல்லையன்றே; நீ களம் புகின் - நீ போர்க் களத்திற் புகின் எ-று. மழவர் பெரும, நீ களம் புகின் பொருநரும் உளரோ, இல்லையன்றே யெனக் கூட்டி வினைமுடிவு செய்க. தடக்கையையுடைய பெருமவெனக் கூட்டி; வன்கையை மழவரொடு கூட்டி யுரைப்பினும் அமையும். இரு நிலமாகிய மண்ணென்பாரு முளர். மதப்பகடு என்பதூஉம் பாடம். விளக்கம் : காந்தட்பூ உடைந்தவளைபோலும் என்பதை, “வளையுடைந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்” (மலைபடு. 519) எனப் பிறரும் கூறுதல் காண்க. குளவி - மலைமல்லிகை. மருளுதல் - மயங்குதல் ; புகை போலும் முகிற்கூட்டம் பரவி நீலவானத்தை மறைத்தல். விசும்பின் மாதிரத்து, விசும்பினும் மாதிரத்தினும். தாக்கி யென்பது தாக்கிய வென்றும், உறுதலின் என்பது உற்று என்றும் நின்றன; “வினை யெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய” (சொல். 457) என்பது தொல் காப்பியம். இயங்குதல் ஈண்டுச் சேற்றிற் புதைதல் என்பதுபடவந்தது. அரிமணல் - நீரலையால் கொழிக்கப்பட்டமணல். வரிமணல் என்று பாடங்கொள்வர் நச்சினார்க்கினியர். ஞெமிர்தல் - பரத்தல். “தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து” (நெடுநல். 60) எனப் பிறரும் கூறுதல் காண்க. எழுமரம் - கணைய மரம். கை தாள்வரை நீண்டிருத்தல் ஆடவர்க்கு இலக்கணம் என்ப. வழுவில் வன் கை என்புழி, வழுவுதல் வழுக்குதல். மழவர் - ஒருவகை வீரர்; “உருவக் குதிரை மழவர்” (அகம்.1) என வருதல் காண்க. இவ்வுரைகாரர், இளைய வீரர் எனக் கொள்வர்; “மழவும் குழவும் இளமைப் பொருள” (சொல். 305) (90) 91. அதியமான் நெடுமான்அஞ்சி ஒருகால், வேட்டம் புரிவான் சென்ற அதியமான் தன் நாட்டில் நின்ற மலைக்குச் சென்றான். அம்மலையிடத்தே பிளவு ஒன்றுண்டு. அதன்கண் அருநெல்லி மர மொன்று இனிய கனி தாங்கி நின்றது. அதனை யுண்டோர் நெடிது வாழ்வ ரென்பர். வேட்டைக்குச் சென்ற அஞ்சி அந்நெல்லி மரத்தை யடைந்து அதன் தீங் கனியைப் பறித்துக் கொண்டு வந்தான். வந்தவன் அதனைத் தானே உண்டொழியாது, அப்போது தன்பால் வந்திருந்த ஒளவைக்குத் தந்தான். அதனை அவர் உண்ட பின்னர், அதனை யுண்டவர் நெடிது வாழ்வரென்றசெய்திதெரிந்தது.ஒளவையார் பெருவியப்புற்றுத் “தான்நெடிதுவாழ நினையாது,எனக்குத் தந்துஎன்னைநெடிதுவாழப்பண்ணியஅவனை வாழ்த்தலுற்று, “இந் நெல்லிக்கனியின் அருமை கருதாது எனக்குத் தந்து சாதலை நீக்கிய நீ நீலமணி மிடற்றுக் கடவுள்போல மன்னுவாயாக” என இப்பாட்டினைப் பாடி வாழ்த்தியுள்ளார். வலம்படு வாய்வா ளேந்தி யொன்னார் களம்படக் கடந்த கழறொடித் தடக்கை ஆர்கலி நறவி னதியர் கோமான் போரடு திருவிற் பொலந்தா ரஞ்சி 5 பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீல மணிமிடற் றொருவன் போல மன்னுக பெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா 10 தாத னின்னகத் தடக்கிச் சாத னீங்க வெமக்கீத் தனையே. (91) திணை : பாடாண்டிணை. துறை : வாழ்த்தியல். அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது. உரை : வலம்படு வாய் வாள் ஏந்தி - வென்றியுண்டான தப்பாத வாளை எடுத்து; ஒன்னார் களம் படக் கடந்த - பகைவர் களத்தின்கட்பட வென்ற; கழல் தொடித் தடக்கை - கழல விடப்பட்ட வீரவளை பொருந்திய பெரிய கையினையுடைய; ஆர்கலி நறவின் அதியர் கோமான்-மிக்க ஆரவாரத்தை செய்யும் மதுவினையுடைய அதியர் கோமான்; போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி - மாற்றாரைப் போரின்கட் கொல்லும் வீரச் செல்வத்தினையும் பொன்னாற் செய்யப்பட்ட மாலையை யுமுடைய அஞ்சி; பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி - நீ பால் போலும் பிறை நுதல் போலப் பொலிந்த திருமுடி யினையும்; நீலமணி மிடற்று ஒருவன் போல - நீலமணி போலும்கரியதிருமிடற்றினையுமுடைய ஒருவனைப்போல; மன்னுக - நிலைபெறுவாயாக; பெரும நீயே - பெரும நீ; தொல் நிலை பெருமலை விடரகத்து - பழைய நிலைமையையுடைய பெரிய மலையிடத்து விடரின்கண்; அருமிசைக்கொண்ட - அரிய உச்சிக்கட் கொள்ளப்பட்ட; சிறி யிலை நெல்லித் தீங்கனி - சிறிய இலையினையுடைய நெல்லியின் இனிய பழத்தை; குறியாது ஆதல் நின் அகத்து அடக்கி - பெறுதற் கரிதென்று கருதாது அதனாற் பெறும் பேற்றினை எமக்குக் கூறாது நின்னுள்ளே அடக்கி; சாதல் நீங்க எமக்கு ஈத்தனை - சாத லொழிய எமக்கு அளித்தாய் ஆதலால் எ-று. நீலமணி மிடற் றொருவன்போ லென்ற கருத்து. சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல, நீயும் சாவாதிருத்தல் வேண்டும் என்பதாம். அதியர் கோமான், அஞ்சி நெல்லித் தீங்கனி, எமக்கு ஈத்தாயாதலால், பெரும, நீ நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. பிறை நுதற் பொலிந்த சென்னி என்ப தற்குப் பிறைதான் நுதலிடத்தே பொலிந்த சென்னி யெனினு மமையும். விளக்கம் : வில்லும், வாளும், வேலும், ஏந்தி நிற்கும் வீரர்க்குத் தொடி செறிய அணியப்படின் இடையூறு செய்யுமாதலின், இனிது கழல இடப்பட்ட தென்றற்குக் “கழல் தொடி” என்றார். தொடி கழல விடப்பட்ட தாயினும் கை பெருமை குறைந்த தன்றென்றற்கு, “தடக்கை” யெனப்பட்டது. போர் அடு திரு: போரின்கட் பகைவர்களைக் கொல்லும் மனத்திட்பமும், வினைத்திட்பமுமே, திருவாகக் கருதப் படுகின்றன. பால் போலும் நிறத்தையுடைய பிறைத்திங்கள் இறைவன் முடியில் நுதல் போல விளங்குதலால் “பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி” என்றார். பிறை - இறைவன் நுதற்கண்ணே பொலிய விளங்கும் சென்னி யென்று உரைப்பினும் அமையும் என்றற்கு, “பிறை நுதல்..... அமையும்” என்றார். ஒருவன் - இறைவன் பெயர்களுள் ஒன்று; ‘ஒருவனென்னும் ஒருவ போற்றி’ எனச் சான்றோர் கூறி யிருத்தல் காண்க. நீலமணி மிடற் றொருவன் என்ற விடத்து, நீலமணி நிறம் நஞ்சுண்டமை நினைப்பித்து, “விண்ணோரமுதுண்டுஞ் சாவ ஒருவரும், உண்ணாத நஞ்சுண்டிருந்தருள்”செய்யும் சிறப்பைப் புலப்படுத்துகிறது. இறைவன் நஞ்சினைத் தானுண்டு அமுதினை விண்ணோர்க்கு வழங்கியது போல, அதியமானும் நெல்லிக்கனியை ஒளவைக்கீந்து சிறப்புற்றான். தன்னை நெடிதுவாழப்பண்ண வேண்டு மெனக் கருதிய அவன் கருத்தை வியந்த ஒளவையார், அவனும் இறைவன் போன்ற செய்கையுடையனாயது பற்றி, அவ்விறைவனே போல நிலைபெறுதல் வேண்டுமென்றெண்ணி, “ஒருவன் போல மன்னுகபெரும நீயே” என்றார். நெல்லிக்கனியின் அருமை தோன்றப் “பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட” என்றார். அருமிசை - ஏறுதற் கரிய உச்சி. ஆதல் - நீடிய உயிர் வாழ்க்கைக்கு ஆக்கமாதல். நெல்லிக்கனி தன்னை யுண்டார்க்குச் சாதல் உண்டாகாமை தருவது தோன்றச் “சாதல் நீங்க” என்றார். பிறிதோரிடத்தும், “அதிகா, வன் கூற்றின் நாவை அறுப்பித்தாய் ஆமலகம் தந்து” (தனிப் பாட்டு) என்பதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. (91) 92. அதியமான் நெடுமான்அஞ்சி அதியமான், தான் நெடிது உயிர்வாழ்தலினும் ஒளவையார் நெடிது வாழ்தல் உலகுயிர்கட்கு ஆக்கமாகும் என்ற பேரருளால் தான் பெற்ற நெல்லிக்கனியைத் தந்தருளியது கண்ட ஒளவையார் மனங் குழைந்து நாக்குழறித் தாம் நினைத்தவாறெல்லாம் அவனைப் பாராட்டக் கருதி, “நெடுமான் அஞ்சி, நீ என்பால் மிக அருளுதலால் என் சொல் தந்தையர்க்குத் தம் புதல்வர் சொல்லும் சொற்போல அருள் சுரக்கும் தன்மையனவாம்” என்று இப் பாட்டாற் கூறியுள்ளார். யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா பொருளறி வாரா வாயினுந் தந்தையர்க் கருள்வந் தனவாற் புதல்வர்தம் மழலை என்வாய்ச் சொல்லு மன்ன வொன்னார் 5 கடிமதி லரண்பல கடந்த நெடுமா னஞ்சிநீ யருளன் மாறே. (92) திணை : பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது, உரை : யாழொடுங் கொள்ளா - யாழோசை போல இன்பமும் செய்யா; பொழுதொடும் புணரா - காலத்தொடும் கூடியிரா; பொருள் அறி வாரா - பொருளும் அறிய வாரா; ஆயினும் -; தந்தையர்க்கு அருள் வந்தன புதல்வர்தம் மழலை- தந்தை யர்க்கு அருளுதல்வந்தன பிள்ளைகளுடைய இளஞ்சொல்; என் வாய்ச்சொல்லும் அன்ன- என்னுடைய வாயின்கட் சொல்லும் அத்தன்மையன; ஒன்னார் கடி மதில் அரண் பல கடந்த நெடுமான் அஞ்சி - பகைவரது காவலையுடையதாகிய மதிலையுடைய அரண் பலவற்றையும் வென்ற நெடுமானஞ்சி; நீ அருளன்மாறு - நீ அருளுதலால் எ-று. புதல்வர் மழலை தந்தையர்க்கு அருள் வந்தன; அஞ்சி, நீ அருளுதலால் என் வாய்ச்சொல்லும் அன்னவெனக் கூட்டுக. யாழென்றது - யாழிற் பிறந்த ஓசையை. பொருளும் என்னும் உம்மை, விகாரத்தால் தொக்கது. விளக்கம் : இளம் புதல்வர் வழங்குஞ் சொல்லோசையில் யாழினது இனிய ஓசை காணப்படாதாயினும், அவர்கள் சொல்வழிப் பிறக்கும் இன்பத்திற்கு யாழிசையின் இன்பம் நிகராகாது தாழ்வுபடும்; பெருந் துன்பம் போந்து வருத்துகின்றபோதும் தந்தையர்க்குப் புதல்வர் போந்து வழங்கும் சொல் நிரம்பாமையின் குறிக்கும் பொருள் விளங்காதாயினும், தந்தையர் அச் சொல்லைக் கேட்டற்குப் பெரிதும் விரும்புவர்.மழலை - இளஞ் சொல்; எழுத்து வடிவு பெறாது தோற்றும் இளஞ்சொல் லென்றும் கூறுவர். புதல்வர் மொழியும் மழலை பொருணலமும் இடச்சிறப்புமுடைய வல்லவாயினும் தந்தையரால் அருள்சுரந்து கேட்கப்படுதல் போல என் வாய்ச் சொல்லையும் நீ அருள் சுரந்து கேட்கின்றாய்; நின் அருள் இருந்தவாறென்னே என்பதாம். என் சொல்லென் றொழியாது வாய்ச்சொல் லென்றது. தமது பணிவு தோற்றி நின்றது. “கடிமதில் அரண்பல கடந்த நீ” யென்றது; அவனது போரடு திருவும் அதற்கேற்ப வேண்டும் மற மிகுதியும் உணர்த்திற்று. இன்ன செய்கையையுடைய நீஎன்பால் அருள் மிகச் சுரந்தொழுகுவது என்னை நின் மக்களுள் வைத்துப் பேணுகின்றஅன்புமிகுதியைக்காட்டுகின்ற தென்றவாறாயிற்று. (92) 93. அதியமான் நெடுமான்அஞ்சி அதியமான் பகைவர் எதிர்ந்த போர்க்களத்தில், அப்பகைவர் பலரையும் வென்று வெற்றி மேம்பட்டான்; ஆயினும் அவனுடைய முகத்தினும் மார்பினும் பகைவர் எறிந்த படையால் புண்கள் உண்டாயின. போர் முடிவில் வாகை சூடி வென்றி பெற்று நிற்கும் அவனுடைய புண்களைக் கண்ட ஒளவையார்க்குப் பெருமகிழ்ச்சி யுண்டாயிற்று. அதனால் அவர் தம்மகிழ்ச்சியை இப்பாட்டால்புலப்படுத்தினார்.இதன்கண், “பெருந்தகையே, நீ விழுப்புண் பட்டு ஓய்வு பெறுதலால், நின்னொடு பொருது உடைந்தோடி இழிவுற்ற பகை வேந்தர் நின் வாளால் சிதைந் தழிந்தமையின், நினக்குத் தோற்றார் என்ற பழியும், சுற்றத்தாற் கூடி வாளாற் போழ்ந்தடக்கும் சிறுமையும் இல்லாதபடி பட்டொழிந்தனர்; இனி நின்னைப் போரில் எதிர்ப்போர் இல்லை; ஆகவே நீ இனி முரசு முழங்கச் சென்றாற்றும் போர் எங்கே யுண்டாகப் போகிறது” என்ற கருத்துப் படப் பாடி யுள்ளார். திண்பிணி முரச மிழுமென முழங்கச் சென்றமர் கடத்தல் யாவது வந்தோர் தார்தாங் குதலு மாற்றார் வெடிபட் டோடன் மரீஇய பீடின் மன்னர் 5 நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதன் மறந்தவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புற் பரப்பினர் கிடப்பி மறங்கந் தாக நல்லமர் வீழ்ந்த 10 நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழந் தடக்கலு முய்ந்தனர் மாதோ வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத் தண்ணல் யானை யடுகளத் தொழிய அருஞ்சமந் ததைய நூறிநீ 15 பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே. (93) திணை: வாகை; துறை: அரசவாகை. அவன் பொருது புண்பட்டு நின்றானை அவர் பாடியது. உரை : திண் பிணி முரசம் இழும் என முழங்க - திண்ணிய பிணிப்பையுடைய முரசம் இழு மென்னும் ஓசையை யுடைத் தாய் ஒலிப்ப; சென்று அமர் கடத்தல் யாவது - மேற்சென்று போரை வெல்லுதல் இனி எங்கே யுளது; வந்தோர் - நின் னோடு எதிர்ந்து வந்தோர் ; தார் தாங்குதலு மாற்றார் - நினது தூசிப்படையைப் பொறுத்தற்கும் மாட்டாராய்; வெடிபட்டு ஓடல் மரீஇய பீடில் மன்னர் - சிதறிக் கெட்டுப் போதலிலே மருவிய பெருமையில்லாத அரசரது; நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ - நோயின் பக்கத்தான் இறந்த உடம்பை யணைத்து; காதல் மறந்து - தமது ஆசைத்தன்மையை மறந்து; அவர் தீது மருங்கு அறுமார் - அவர் வாளாற் படாத குற்றம் அவரிடத்தினின்றும் நீக்க வேண்டி; அறம் புரி கொள்கை நான்மறைமுதல்வர் - அறத்தைவிரும்பிய கோட்பாடுகளை யுடைய நான்கு வேதத்தையுமுடைய அந்தணர்; திறம் புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி - நல்ல கூற்றிலே பொருந்திய பசிய தருப்பைப் புல்லைப் பரப்பினராய்க் கிடத்தி மறம் கந்தாக - தமது ஆண்மையே பற்றுக்கோடாக; நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென - நல்ல பூசலிலே பட்ட மேற் பட்ட வீரக் கழலினையுடைய வேந்தர் செல்லும் உலகத்திலே செல்க வென்று; வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் - வாளோக்கி யடக்கும் இழிதகவும் பிழைத்தார்கள்; வரி ஞிமிறார்க்கும் வாய் புகு கடாஅத்து - வரியையுடைய தேனீ யொலிக்கும் வாயின்கண் வந்து புகுகின்ற மதத்தினையுடைய; அண்ணல் யானை - தலைமை பொருந்திய யானை; அடு களத் தொழிய - போர்க்களத்தின்கண்ணே பட; அருஞ்சமம் ததைய நூறி - பொறுத்தற்கரிய பூசற்கண்ணே சிதற வெட்டி; பெருந் தகை - பெரிய தகைமையையுடையாய்; நீ விழுப்புண்பட்ட மாறு - நீ சீரிய புண்பட்ட படியால் எ-று. பெருந்தகாய், நீ அருஞ்சமம் ததைய நூறி விழுப்புண் பட்டவாற்றால் நின்னோடு எதிர்ந்து வந்தோர்தாம் பீடின் மன்னர் விளிந்த யாக்கை தழீஇ நீள் கழன் மறவர் செல்வுழிச் செல்கென வாள் போழ்ந் தடக்கலும் உய்ந்தனராதலின், இனி நின்னோடு டெதிர்ப்பா ரின்மையின் முரசு முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவதெனக் கூட்டுக. சென்றமர் கடத்தல் யாவதென்றதனானும் வாள் போழ்ந் தடக்கலு முய்ந்தன ரென்றதனானும் வந்தோர் பட்டமை விளங்கும். இன்னும் இதற்கு நின் வாளாற் பட்டுத் துறக்கம் பெற்றதே யன்றி வாள் போழ்ந் தடக்கலு முய்ந்தனராதலின், அவர்க்குப் பிறர்மேற் சென்று அமர் கடத்தல் என்ன பயனுடைத்தென் றுரைப்பினு மமையும். இனி வந்தோராகிய மன்னர் நீ விழுப்புண் பட்டபடியாலே வாள் போழ்ந்த தடக்கலு முய்ந்தார்;இனி நின்னோ டெதிர்ப்பா ரின்மையின் மேற்சென்று அமர் கடத்தல் யாவதெனக் கூட்டி அதற்கேற்ப உரைப்பாருமுளர். தார் தாங்கலு மென்ற உம்மை இழிவுசிறப்பு. வாள் போழ்ந் தடக்கலு மென்பது நினக்குத் தொலைந்தா ரென்னும் இழிதகவே யன்றித் தமர் வாள் போழ்ந் தடக்கு மிழிவையும் உய்ந்தன ரென எச்சவும்மையாய் நின்றது. விளக்கம் : இழும் என்றது, முழவின் முழக்கத்தைக் குறித்து நின்றது. நின் தூசிப் படைக்கே ஆற்றாது கெட்டன ரென்பார், “தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு ஓடல்” மருவினர் என்றார். பகைவர் வாள்வாய்ப் படாது வெடிபட்டு ஓடி வீழ்ந்து மாண்டனர் என்பதாம். போரில் வேலும் வாளுமாகிய படையாற் பட்டோர் நோற்றவர் என்றும், ஏனை நோய் முதலியவாற்றால் இறந்தவர் நோலாதவரென்றும் பண்டையோர் கருதுவர்; “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்”(அகம். 61) என்று சான்றோர் கூறுதல் காண்க. நோலாத வேந்தரைப் “பீடில் மன்னர்” என்றார். தீது -வீரர் எறியும் படையால் இறவாமல் நோயுற்று இறந்த பழி, தருப்பையிற் கிடத்தி வாளாற் போழ்ந்து அடக்கியவழி, அவ்வழி, வழிவழியாகத் தொடராது என்ப. பசும்புல்- தருப்பை. அஃது உலர்ந்தவழியும் நிறம் மாறாது நெடிதிருத்தல் பற்றி, அவ்வாறு கூறப்பட்டது. வாளாற் போழுமிடத்து, அம்மன்னர்பால் வைத்த காதல் நீங்கி விடுதலால் “காதல் மறந்து” எனல் வேண்டிற்று. வாள் போழ்ந்தடக்கல் அவரது நோலாமையை யுணர்த்துதலின் அதுவும் இழிதகவாயிற்று இப் பீடில் மன்னர், நோலாமையால் வீரராற் படுவதுமின்றி, நோயுற்ற வாமையால் வாள் போழ்ந் தடக்கலுமின்றிப் பட்டழிந்தனராதலால், “வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர்” என்றார். வந்தோர், மன்னரை வான்போழ்ந் தடக்கும் அவ் விழிதகவும் பெறாது உய்ந்தனராதலின், “இனி நீ முரசம் முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவது” என்பதாம். தூசிப்படை, மருங்கிலும் பின்னும் அணிவகுத்து வரும் கூழைப் படையினும் வலிகுறைந்த தாதலால், “தார் தாங்கலு” மென்ற உம்மை இழிவு சிறப்பாயிற்று. (93) 94. அதியமான் நெடுமான்அஞ்சி திருவோலக்கத்தின்கண் அரசர் சூழ விருப்பினும் போர்க் களத்தேபடைநடுவண் இருப்பினும், ஒளவையார்க்கும் அவரொத்த புலவர்க்கும், அதியமான் இன்முகமும் இன்சொல்லும் உடைய வனாய் இருந்துவந்தான். அவனது அவ்வொழுகலாறு மிக்க மகிழ்ச்சி தந்தமையின் அதனை யவர் இப்பாட்டின்கண், “பெரும, நீ எமக்கு இனியையாய் ஒன்னாதார்க்கு இன்னா செய்பவனாய் உள்ளாய்” என்று சிறப்பித்துள்ளார். ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும வெமக்கே மற்றதன் துன்னருங் கடாஅம் போல 5 இன்னாய் பெருமநின் னொன்னா தோர்க்கே. (94) திணை: வாகை; துறை: அரசவாகை. அவன் பொருது புண்பட்டு நின்றானை அவர் பாடியது. உரை : ஊர்க்குறு மாக்கள் - ஊரின்கட் சிறுபிள்ளைகள்; வெண் கோடு கழாஅலின் நீர்த்துறை படியும் - தனது வெள்ளிய கோட்டைக் கழுவுதல் காரணமாக நீரையுடைய துறைக்கட் படியும்; பெருங் களிறு போல - பெரிய களிறு அவர்க்கு எவ்வாறு எளிதாய் இனிதாம் அவ்வாறே; எமக்கு பெரும இனியை - எங்களுக்குப் பெரும நீ இனியை; மற்று அதன் துன்னரும் கடாஅம் போல - மற்றதனுடைய அணைதற்கரிய மதம்பட்ட நிலைமை எவ்வாறு இன்னாதாம் அதுபோல; பெரும நின் ஒன்னாதோர்க்கு இன்னாய் - பெரும நின் பகைவர்க்கு இன்னாய் எ-று. கழாஅலின் என்பதற்குக் கழுவப்படுதலா லெனினு மமையும் விளக்கம் : மன வுணர்வு நிரம்பாமையின், இளஞ் சிறுவர்களைக் “குறு மாக்கள்” என்றார்; “மடக்குறு மாக்களோ டோரையயரும், அடக்கமில்போழ்து” (கலி.82) என்றாற்போல. மதம் பட்ட யானை பாகர்க் கடங்காது மறலு மாதலால், அது பற்றித் துன்னரும் கடாஅத்து நிலைமை யென்றார். பெருமைக்கும் வலிக்கும் களிறு உவமமாயிற்று. கடாஅம்; ஈண்டு ஆகுபெயராய்க் கடாம் உண்டாகிய நிலைமை குறித்து நின்றது, சுழாலின் என்றதற்குக் கழுவுதல் காரணமாக என்று கூறாமல், கழுவப்படுதலால் என்று பொருள் கூறினும் பொருந்தும் என்பதாம். பெரும என இருமுறை கூறியது அவரது காதன்மை யுணர்த்தி நின்றது. (94) 95. அதியமான் நெடுமான் அஞ்சி தொண்டைநாட்டையாண்டவேந்தர்க்குத் தொண்டைமான் என்பது பெயர். அதியமான் காலத்தே தொண்டைநாட்டை யாண்டதொண்டைமான், அதியமான்பால் பகைமை கொண்டான். தன்பால் படைவலி மிக்கிருப்பதாக வெண்ணி, அவ்வேந்தன் செருக்குற்றான். அவனது அறியாமையை யறிந்த அதியமான், போரின் கொடுமையையும். அதன்கண் அவன் வலியிழந்து கெடுவதன் உறுதியையும், அதனால் நாட்டுக்கும் நாட்டு மக்கட்கும் நேரும் கேட்டையும் தெளிந்து கொள்ளு மாறு அறிவித்ததற்கு ஒளவையாரை அவன்பால் தூதுவிட்டான். ஒளவையார் அவன்பாற் சென்று சேர்ந்தார். தொண்டைமான் தன் படைப்பெருமையை அவருக்குக் காட்ட வெண்ணி, அவரைத் தன் படைக்காலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று பலவேறு படைக்கலங்களைக் காட்டினான்.அவன் கருத்தறிந்த ஒளவையார் அதிகமான் படைக் கலங்களைப் பழிப்பது போலப் புகழ்ந்தும் தொண்டைமான் படைக்கலங்களைப் புகழ்வது போலப் பழித்தும் இப் பாட்டின்கட் கூறியுள்ளார். இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக் கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து கடியுடை வியனக ரவ்வே யவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து 5 கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும் உண்டாயிற் பதங்கொடுத் தில்லாயி னுடனுண்ணும் இல்லோ ரொக்கற் றலைவன் அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே. (95) திணை : பாடாண்டிணை;துறை: வாண்மங்கலம். அவன் தூதுவிடத் தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட அவர் பாடியது. உரை : இவ்வே - இவைதாம்; பீலியணிந்து - பீலி யணியப்பட்டு; மாலை சூட்டி - மாலை சூட்டப்பட்டு; கண் திரள் நோன் காழ் திருத்தி - உடலிடம் திரண்ட வலிய காம்பை அழகுபடச் செய்யப்பட்டு; நெய் அணிந்து - நெய்யிடப்பட்டு; கடி யுடை வியன் நகர - காவலையுடைய அகன்ற கோயிலிடத்தன; அவ்வே - அவைதாம்; பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து - பகைவரைக் குத்துதலாற் கங்கும் நுனியும் முரிந்து; கொல் துறைக் குற்றில என்றும் - கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டி லிடத்தனவாயின எந்நாளும்; உண்டாயின் பதம் கொடுத்து - செல்வ முண்டாயின் உணவு கொடுத்து; இல்லாயின் உடன் உண்ணும் - இல்லையாயின் உள்ளதனைப் பலரோடுகூட உண்ணும்; இல்லோர் ஒக்கல் தலைவன்- வறியோருடைய சுற்றத்திற்குத் தலைவனாகிய; அண்ணல் எம் கோமான் வை நுதி வேல் - தலைமையையுடைய எம் வேந்த னுடைய கூரிய நுனியையுடைய வேல் எ-று பீலி யணிந் தென்பது முதலாகிய வினையெச்சம் நான்கும் வியனகர வென்னும் குறிப்புவினையொடு முடிந்தன; இவற்றைச் செயவெனெச்ச மாகத் திரிப்பினு மமையும். “சிதைந்து கொற்றுறைக் குற்றில” வென்பது பழித்தது போலப் புகழ்ந்து கூறப் பட்டது. இவை வியனகர; வைந்நுதி வேலாகிய அவை கொற் றுறைக் குற்றிலிடத்தன வெனக்கூட்டுக. வினைக்குறிப்பாகலின் ஆக்கம் கொடுக்கப்பட்டது. இது கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறியவாறு. விளக்கம் : அணிந்து, சூட்டி, திருத்தி யென்னும் செய்தெ னெச்சங்கள் செயப்பாட்டு வினைப்பொருளில் வந்தன. இவ், அவ் என்பவை வகரவீற்றுச்சுட்டுப்பெயர். தொண்டைமானுடைய படைக் கொட்டி லிருந்து கூறுதலின் அதியமான் வேற்படையை “அவ்வே” யென்றார். கங்கு - வேலின் இலைப்பகுதியைத் தாங்கும் நடுவிடம். குற்றில் - குறுகிய இல், இவை வியன் நகர; அவை குற்றில் என்பதாம். நகர, குற்றில வென்பன குறிப்பு வினைமுற்று. பொருள் உளதாய விடத்துப் பிறரை யுண்பித்த பின்பே யுண்ணுமாறு தோன்ற, “உண்டாயின் பதங்கொடுத்து” என்றார். இல்லோர் ஒக்கல் தலைவன் - வறியோ ருடைய சுற்றத்துக்குத் தலைவன்; என்றும், அவ்வறியோர் வறுமை தீர்க்கும் தலைமைப்பணி புரிதலால்,“இல்லோர் ஒக்கல் தலைவன்”. என்றார். “ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே” (எச்ச.36) என்பது தொல்காப்பியம். இது பற்றியே, “வினைக்குறிப்பாகலின் ஆக்கம் கொடுக்கப்பட்ட” தென்றார். (95) 96. அதியமான் பொகுட்டெழினி அதியமான் நெடுமான் அஞ்சிக்கு மகனொருவன் உண்டென முன்பே கூறினாம். அவனே இப் பொகுட்டெழினி. அஞ்சியின் பால் பேரன்பு கொண்டிருந்த ஒளவையார் ஒருகால் பொகுட் டெழினியைக் கண்டார். இளமைச்செவ்வி யுடையனாதலால் அவன்பால் இன்பக் குறிப்பும் மறக் குறிப்பும் மிக்கு விளங்கின. இவை வரம்பு கடந்த வழித்தீங்கு பயக்கும் என்பதனால், இவ் விரண்டையும் விதந்து இப் பாட்டின்கண் ஒளவையார் அவனைப் பாராட்டிக் கூறியுள்ளார். அலர்பூந் தும்பை யம்பகட்டு மார்பின் திரண்டுநீடு தடக்கை யென்னை யிளையோற் கிரண்டெழுந் தனவாற் பகையே யொன்றே பூப்போ லுண்கண் பசந்துதோ ணுணுகி 5 நோக்கிய மகளிர்ப் பிணித்தன் றொன்றோ விழவின் றாயினும் படுபதம் பிழையாது மையூன் மொசித்த வொக்கலொடு துறைநீர்க் கைமான் கொள்ளு மோவென உறையுண் முனியுமவன் செல்லு மூரே. (96) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது. உரை : அலர் பூந்தும்பை அம் பகட்டு மார்பின் - மலர்ந்த பூவையுடைய தும்பைக்கண்ணியை யணிந்த அழகிய வலிய மார்பினையும்; திரண்டு நீடு தடக்கை என்னை இளையோற்கு - திரண்டு நீண்ட பெரிய கையினையுமுடைய என் இறைவன் மகன் இளையோனுக்கு; பகை இரண்டெழுந்தன - பகை இரண்டு தோன்றின; பூப்போல் உண்கண் பசந்து - அவற்றுள் பூப் போலும் வடிவினையுடைய மையுண்ட கண்கள் பசப்ப; தோள் நுணுகி - தோள் மெலிய; நோக்கிய மகளிர் பிணித் தன்று - தன்னைப் பார்த்த மகளிரை நெஞ்சு பிணித்ததனால் அவர் துனி கூருதலின் உள்ளதாயது; ஒன்று - ஒரு பகை; அவன் செல்லும் ஊர் - அவன் எடுத்துவிட்டுச் சென்றிருக்கும் ஊர்; விழவின் றாயினும் - விழா இல்லையாயினும்; படுபதம் பிழையாது - உண்டாக்கப்படும் உணவு யாவர்க்கும் தப்பாமல்; மையூன் மொசித்த ஒக்கலொடு - செம்மறி யாட்டுத் தசையைத் தின்ற சுற்றத்துடனே; துறைநீர் - யாறுங் குளனு முதலாகிய வற்றின் துறை நீரை; கை மான் கொள்ளும் என - அவன் யானை முகந்துண்ணு மெனக் கருதி; உறையுள் முனியும் -அவ்விடத்துஉறைதலைவெறுக்கும்;ஒன்று- அவ்வெறுத்ததனா லுளதாயது ஒரு பகை; ஆகப் பகை இரண்டு எ-று. பசந்து நுணுகி யென்னும் செய்தெனெச்சங்களைச் செயவெ னெச்சமாக்கி அவற்றைப் பிணித்தன்றென்னும் வினையோடு முடிக்க. ஓகாரம் அசைநிலை. இதனால் அவன் இன்பச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறியவாறு. விளக்கம் : அகன்ற மார்பும், திரண்ட தோளும், நீண்ட கையும், ஆண் மக்கட்குச் சிறந்தனவாதலால், “அம்பகட்டு மார்பின் திரண்டு நீடு தடக்கை” யென்றார். பசந் தென்பது பசப்ப வெனத் திரிக்கப்பட்டது. பிணித்தலால் உளதாகும் பயன் துனிகூர்தலாதலால், பிணித்தன் றென்பதற்கு. “பிணித்ததனால்.... உள்ள தாயது” என்றார். படை யெடுத்துச் சென்று முற்றுதலை, “எடுத்துவிட்டுச் சென்றிருக்கும்” என்றார். மொசித்தல் - உண்டல். கைம்மான் என வரற்பாலது எதுகை நோக்கிக் கைமான் என வந்தது. கைம்மான், கைம்மா வெனவும் வரும்; இது யானைக்குரியது. இளமைச் செவ்வியும், மெய்வன்மை யும் உடையனாதலின், இவற்றால் இன்பச்சிறப்பையும், வென்றிச் சிறப்பையும் பகையாகக்கூறியது இன்பமிகுதி கழிகாமமாய்ப் பகைவர்க் கெளிமையும், மற்றதன் மிகுதி குடியஞ்சும் கோலுடைமை யுமாய்த் தீது பயக்குமென்றற்கு. இவன்பால் இன்பச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் விளங்குவவாயின. (96) 97. அதியமான் நெடுமான்அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சிக்குத் திறைசெலுத்தற்குரிய வேந்தர் சிலர்அதனைச்செலுத்தாதுபோர்க்குச் சமைந்திருப்பதை ஒளவையார் அறிந்தார். அவர்கட்கு உண்மை யறிவித்தற்கும், அதுவே வாயிலாக அதியமானைப் பாராட்டுதற்கும் எண்ணி, இப்பாட்டினைப் பாடியுள்ளார். இதன்கண், “நெடுமான் அஞ்சி யேந்திய வாள் போரில் உழந்து உருவிழந்துள்ளது; வேல் மடை கலங்கி நிலை திரிந்துள்ளது; களிறுகள் பகைவர் களிற்றுத் திரளொடு பொருது தொடி கழிந்துள்ளன; குதிரைகள் போர்க் களக் குருதியிற் றோய்ந்து குளம்புகள் மறுப்பட்டுள்ளன; அவன் பகைவர் எறிந்த அம்புகளால் துளையுண்ட கேடயத்தை யேந்தி யுள்ளான்; இவற்றால் இவனைப் பகைத்துப் பொரக் கருதியவர் உய்ந்து போதல் இல்லை; ஆதலால், உங்கள் மூதூர் உங்கட்கு உரித்தாகல் வேண்டின், அவனுக்குரிய திறையைச் செலுத்தி யுய்மின்; மறுப்பீராயின், அவன் ஒருகாலும் பொறான்; யான் சொல்லுமிதனைக் கேளீராயின்; உங்களுடைய உரிமை மகளிர் தோளைப் பிரிந்து மடிதல் திண்ணம்; இதனை யறிந்து போர் செய்தற்கு நினைமின்” என்று பாடியுள்ளார். போர்க்குரைஇப் புகன்றுகழித்தவாள் உடன்றவர்காப் புடைமதிலழித்தலின் ஊனுற மூழ்கி யுருவிழந் தனவே வேலே, குறும்படைந்த வரண்கடந்தவர் 5 நறுங்கள்ளி னாடுநைத்தலிற் சுரைதழீஇய விருங்காழொடு மடைகலங்கி நிலைதிரிந்தனவே களிறே, எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர் குழூஉக்களிற்றுக் குறும்படைத்தலிற் 10 பரூஉப்பிணிய தொடிகழிந்தனவே மாவே, பரந்தொருங்கு மலைந்தமறவர் பொலம்பைந்தார் கெடப்பரிதலிற் களனுழந் தசைஇய மறுக்குளம் பினவே அவன்றானும், நிலந்திரைக்குங் கடற்றானைப் 15 பொலந்தும்பைக் கழற்பாண்டிற் கணைபொருத துளைத்தோ லன்னே ஆயிடை, உடன்றோ ருய்தல் யாவது தடந்தாட் பிணிக்கதிர் நெல்லின் செம்மன் மூதூர் நுமக்குரித் தாகல் வேண்டிற் சென்றவற் 20 கிறுக்கல் வேண்டுந் திறையே மறுப்பின் ஒல்வா னல்லன் வெல்போ ரானெனச் சொல்லவுந் தேறீ ராயின் மெல்லியற் கழற்கனி வகுத்த துணைச்சில் லோதிக் குறுந்தொடி மகளிர் தோள்விடல் 25 இறும்பூ தன்றஃ தறிந்தா டுமினே. (97) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி அதியமா னெடுமான் அஞ்சியை அவர் பாடியது. உரை : போர்க்கு உரைஇப் புகன்று கழிந்த வாள் - போரைச் செய்தற்குப் புடை பெயர்ந்து உலாவி விரும்பி உறை கழித்த வாட்கள்தாம்; உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின் - பகைத்தவரது கவலையுடைய அரணை யழித்தலால்; ஊன் உற மூழ்கி உரு இழந்தன - அவர் தசையின்கண்ணே உறக் குளித்துக் கதுவாய் போய் வடிவிழந்தன; வேல் - அவன் வேல்கள்தாம்; குறும்பு அடைந்த அரண் கடந்து - குறும்பர் சேர்ந்த அரண்களை வென்று; அவர் நறுங் கள்ளின் நாடு நைத்தலின் - அப்பகைவரது நறிய மதுவையுடைய நாட்டை யழித்தலால்; சுரை தழீஇய இருங்காழொடு - சுரையோடு பொருந்திய கரிய காம்புடனே; மடை கலங்கி நிலை திரிந்தன - ஆணி கலங்கி நிலைகெட்டன; களிறு - அவன் களிறுதாம்; எழூஉத் தாங்கிய கதவு மலைத்து - கணைய மரத்தால் தடுக்கப் பட்ட கதவைப் பொருது; அவர் குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின் - அப்பகைவரது திரண்ட களிற்றையுடைய அரணை யழித்தலால்; பரூஉப் பிணிய தொடி கழிந்தன - பரிய பிணித்தலை யுடையவாகிய கிம்புரிகள் கழன்றன; மா - அவன் குதிரைதாம்; பரந்து - பரந்து வந்து; ஒருங்கு மலைந்தவர் - ஒக்கப் பொருத வீரரது; பொலம் பைந்தார் கெட - பொன்னாற் செய்யப்பட்ட பசிய மாலையையுடைய மார்பு உருவழிய; பரிதலின் - ஓடுதலால்; களன் உழந்து அசைஇய மறுக் குறும்பின - போர்க்களத்தின்கட் பொருது வருந்திய குருதியான் மறுப் பட்ட குளம்பை யுடையவாயின; அவன் தானும்-; நிலம் திரைக்கும் கடல் தானை - நில வகலத்தைத் தன்னுள்ளே யடக்கும் கடல் போன்றபடையுடனே;பொலந்தும்பை- பொன்னானியன்ற தும்பைக் கண்ணியையுடைய; கழல் பாண்டில் கணை பொருதத்துளைத் தோலன்-கழல் வடிவாகவும் கிண்ணி வடி வாகவும் செய்து செறிக்கப்பட்டு அம்பு படுதலால் துளைப் பட்ட பரிசையை யுடையன்; ஆயிடை - அவ்விடத்து; உடன்றோர் உய்தல் யாவது - அவனால் வெகுளப்பட்டோர் பிழைத்தல் எங்கே யுளது; தடந்தாள் பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர் - பெரிய தாளிணையும் ஒன்றோடொன்று தெற்றிக் கிடக்கின்ற கதிரினையு முடைத்தாகிய நெல்லினையுடைய தலைமை பொருந்திய பழையவூர்; நுமக்கு உரித்தாகல் வேண்டின் நுங்கட்கு உரித்தாக வேண்டுவிராயின்; சென்று அவற்குத் திறை இறுக்கல் வேண்டும் - போய் அவனுக்குத் திறை கொடுத்தல் வேண்டும்; மறுப்பின் - கொடீராயின்; ஒல்வான் அல்லன் வெல் போரான் என - அதற்குடம்படுவா னல்லன் வெல்லும் பூசலையுடையான் என்று; சொல்லவும் தேறீராயின் - யான் சொல்லவும் தெளியீராயின்; மெல்லியல் கழல் கனி வகுத்த - நுமக்கு மெல்லிய தன்மையையும் கழல் மணியினது கனியால் கூறுபடுத்துச் சுருட்டப்பட்ட; துணைச் சில் ஓதி - இனமாகிய சிலவாகிய பனிச்சையையும்; குறுந் தொடி மகளிர் - குறிய வளையையுமுடைய உரிமை மகளிரது; தோள் விடல் இறும்பூ தன்று - தோளைப் பிரிந்துறைதல் வியப்பன்று; அஃது அறிந்து ஆடுமின் - அதனை யறிந்து போர் செய்ம்மின் எ-று. அறிந்தாடுமின் என்ற கருத்து, அறியிற் போர்செய்தல் அரிதென்பதாம். குறும்பு, சிற்றரண்.கடற் றானையினையும் பொலந்தும்பை யினையுமுடைய அவன்றானு மென்க. விளக்கம் : உரைஇ - உலாவி; “ஒன்றார் தேயப் பூமலைந் துரைஇ” (பதிற்.40) என்றாற் போல. கதுவாய் போய் - மிகவும் வடுப்பட்டு. நைத்தல் - அழித்தல்; நைவித்தல் நைத்தல் என வந்ததெனினுமாம். உள்ளே புழையுண்டாகச் செய்து அதன்கண்ணே காம்பைச் செருகி ஆணியிட்டு முடுக்கி வைத்தல்இயல்பு. குழூஉக்களிற்றுக்குறும்பு: குழுமியிருக்கும் யானைத்திரள் அரண் போறலின், களிற்றுக் குறும்பெனப்பட்டது. தொடி - ஈண்டுக் கிம்புரி மேற்று. தார் - ஆகு பெயரால் மார்பைக் குறித்தது. அசைவு - வருத்தம். நிலம் திரைக்கும் கடல் தானை - நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்கிக்கொள்ளும் கடல் போலும் தானை. கழல் பாண்டில் கணை - கழல்வடிவாகவும் பாண்டில் வடிவாகவும் வாயமைக்கப்பட்ட அம்பு. பரிசை - கேடயம். பிணிக் கதிர் - ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் கதிர்கள். செம்மல் - தலைமை. மறுப்பாவது - கொடாமையாதலின், மறுப்பின் என்ப தற்குக் “கொடீராயின்” என்றார். பனிச்சை - தலைமயிரை முடிக்கும் ஐவகையுள் ஒன்று. தோள் விடல் - தோளைப் பிரிந்துறைதல். “எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார்” (தொல்.பொ.கற்பு: 34) என்பவாகலின், போரிடத்தே மகளிரைப் பிரிந்து போந்து நெடிது தங்கி உயிரிழப்பது உறுதியாதல் குறித்துத் “தோள் விடல்” என்றா ரென்றுமாம். 98. அதியமான் நெடுமான்அஞ்சி தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்த அதியமானுக்கும் கோவலூரி லிருந்துஆட்சிபுரிந்துவந்த மலாடர் வேந்தனுக்கும் பகைமையுண்டாயிற்று. பகைமை முதிரவே அதியமான் பெரும் படையுடன் கோவலூரை நோக்கிச் செல்லத் தலைப்பட்டான். இடைநிலத்து வாழ்ந்துவந்த சிற்றரசர் அதியமான்படையினைக் கண்டுஅஞ்சி அலமரலாயினர் ஒளவையார், இந்நிகழ்ச்சிகளைக் கண்டு, “இனி இவனுடன் போரெதிர்ந்து நிற்கும் வேந்தரது நாடு என்னாகுமோ?” என்று நினைந்து இப்பாட்டின்கண், “வேந்தே, நின் யானைப்படை செல்லக் கண்ட வேந்தர் தத்தம் மதில் வாயில்கட்குப் பழைய கதவுகளை மாற்றிப் புதுக் கதவுகளை நிறுத்திப் புதிய கணைய மரங்களை யமைக்கின்றனர்; குதிரைப் படையைக் கண்டவர் காவற்காட்டின் வாயில்களைக் கவைத்த வேல் முட்களைப் பெய்து அடைக்கின்றனர்; வேற்படை கண்டவர் தம் கேடகங்கட்குப் புதிய காம்பும் கைந்நீட்டும் செறிக்கின்றனர்; மறவரது பெரும் படை கண்டவர் தம்தம் தூணிகளில் அம்பை யடக்கிக் கொள்கின்றனர்; நீயோ கூற்றத்தனையை; இனி நின் பகைவரது வயல்வளம் சிறந்த நாடு அவர் மனம் வருந்தி யிரங்கு மாறு கெடுவது திண்ணம்” என இவன் படைச் சிறப்பும் பகைவர் நாட்டழிவு குறித்த இரக்கமும் தோன்றப் பாடியுள்ளார். முனைத்தெவ்வர் முரணவியப் பொரக்குறுகிய நுதிமருப்பினின் இனக்களிறு செலக்கண்டவர் மதிற்கதவ மெழுச்செல்லவும் 5 பிணனழுங்கக் களனுழக்கிச் செலவசைஇய மறுக்குளம்பினின் இனநன்மாச் செலக்கண்டவர் கவைமுள்ளிற் புழையடைப்பவும் மார்புறச் சேர்ந்தொல்காத் 10 தோல்செறிப்பினின் வேல்கண்டவர் தோல்கழியொடு பிடிசெறிப்பவும் வாள்வாய்த்த வடுப்பரந்தநின் மறமைந்தர் மைந்துகண்டவர் புண்படுகுருதி யம்பொடுக்கவும் 15 நீயே, ஐயவி புகைப்பவுந் தாங்கா தொய்யென உறுமுறை மரபிற் புறநின் றுய்க்கும் கூற்றத் தனையை யாகலிற் போற்றார். இரங்க விளிவது கொல்லோ வரம்பணைந் திறங்குகதி ரலம்வரு கழனிப் 20 பெரும்புனற் படப்பையவ ரகன்றலை நாடே. (98) திணை: வாகை; துறை: அரசவாகை. திணை வஞ்சியும், துறை: கொற்றவள்ளையுமாம். அவனை அவர் பாடியது. உரை : முனைத் தெவ்வர் முரண் அவிய - போர்முனைக்கண் பகைவரது மாறுபாடு அடங்க; பொரக் குறுகிய நுதி. மருப்பின் நின் இனக் களிறு - பொருதலால் தேய்ந்து குறைந்த நுனையுடைத்தாகிய கோட்டையுடைய நினது இனமாகிய யானை; செலக் கண்டவர் - போகக் கண்ட பகைவர்; மதிற் கதவம் எழுச் செல்லவும் - தமது மதில்வாயிற் கதவங்களும் கணைய மரங்களும் புதியனவாக இடுதற்குப் பழையன போக்கவும்; பிணன் அழுங்கக் களன் உழக்கி - பட்டோரது பிணம் உருவழியப் போர்க்களத்தை யுழக்கி; செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் இனமா செலக் கண்டவர் - செல்லுத லால் வருந்திய குருதிக்கறை பொருந்திய குளம்பையுடைய நினது இனமாகிய நல்ல குதிரை போகக்கண்ட அப் பகைவர் தாம்; கவை முள்ளின் புழை அடைப்பவும் - கவைத்த வேல முள்ளால் காட்டு வாயில்களை யடைப்பவும்; மார்புறச் சேர்ந்து ஒல்கா - நின் பகைவரது மார்பின்கண் எறிந்த வழி ஆண்டுத் தைத்து நில்லாது உருவிப் போன; தோல் செறிப்பு இல் நின்வேல் கண்டவர் - உறையின்கட் செறித்தல் இல்லாத நின் வேலைக் கண்ட பகைவர்; தோல் கழியொடு பிடி செறிப்ப வும் - தமது கிடுகைக் காம்புடனே கைந்நீட்டுச் செறிக்கவும்; வாள் வாய்த்த வடும்பரந்த நின் மறமைந்தர்- வாள் வாய்க்கத் தைத்த வடுப்பரந்த நின்னுடைய மறத்தையுடைய வீரரது; மைந்து கண்டவர் - வலியைக் கண்ட அப் பகைவர்; புண் படு குருதி யம்பொடுக்கவும் - புண் பட்ட குருதியையுடைய அம்பைத் தூணியகத் தடக்கிக்கொள்ளவும்; நீயே - நீதான்; ஐயவி புகைப்பவும் தாங்காது - வெண்சிறுகடுகைக் காவலாகப் புகைப்பவும் தரியாது; ஒய்யென உறுமுறை மரபின் - விரைய வந்து பொருந்துதல் முறைமையையுடைய இயல்பின்; புற நின்று உய்க்கும் - புறத்தே நின்று உயிரைக் கொடுபோதும்; கூற்றத்து அனையை - கூற்றத்தை யொப்பை; ஆகலின் - ஆதலால்; போற்றார் இரங்க விளிவது கொல்லோ - பகைவர் இறங்கக் கெடுவது கொல்லோ; வரம்பு அணைந்து இரங்கு கதிர் அலம் வரு கழனி - வரம்பைச் சேர்ந்து வளையும் நெற்கதிர் சுழலும் கழனியொடு; பெரும்புனல் படப்பை - மிக்க நீர்ப் பக்கத்தையுடைய; அவர் அகன்றலை நாடு- அவரது அகன்ற இடத்தையுடைய நாடு எ-று. செலவு மென்பது முதலாய செயவெனெச்சங்கள் கூற்றத் தனையை யென்னும் வினைக்குறிப்போடு முடிந்தன. நீ கூற்றத் தனையை யாதலின் போற்றார் நாடு அவர் இரங்க விளிவதுகொல் லெனக் கூட்டுக. கொல்லும் ஓவும் அசைநிலை. விளக்கம் : செல்லவும், அடைப்பவும், செறிப்பவும், ஒடுக்கவும், புகைப்ப வும் கூற்றத்தனையையாயினை என முடிதலின் “செல்லவு...... முடிந்தன” என்றார். யானைக்கோடு நெடிதாயிருப்பது குறுகியதற்குக் காரணம் கூறுவார், “பொரக் குறுகிய” என்றார். கதவம் எழுச் செல்லவும் என்றது, கணைய மரத்தைப் புதுக்குதல் குறித்துநின்றது. குதிரைகள் விரைந்தோடு மிடத்துப் பிணங்களின் குருதி வழுக்குதலால் அவை வருந்துவது பற்றி, “செலவு அசைஇய” என்றார். கவை முள் - வேலமுள்; தோல் செறிப்பு - தோலாலாகிய உறையில் இடப்படுதல். தோல் - கேடயம். பிடி - கைப்பிடியாகிய காம்பு; இது கைந்நீட்டு எனப்பட்டது. படையெடாதவழி,பகைவர் பொருதலைச் செய்யாராதலால், “அம்பு ஒடுக்கவும்” என்றார். புறத்தே நின்று உயிரைக் கொண்டுபோதல் கூற்றுவற்கு இயல்பு. அலம் வரு கழனி - சுழலும் கழனி. அலம் வருதல், அலமருதல் போலச் சுழற்சிப் பொருளது. (98) 99. அதியமான் நெடுமான்அஞ்சி அதியமான்அரசுகட்டிலேறியதும்,தனக்கு முன்னோருடைய சிறப்பெல்லாம் தான் எய்தினான்; எழு பொறி யமைந்த இலாஞ்சனை பெற்றான்; தன்னோடு பொர வந்த அரசர் எழுவரை வென்றான். இவ்வாறு பெருஞ் சிறப்பெய்தியும் அமையாதுகோவலூர் மேற் படையெடுத்துச் சென்று அதற்குரிய வேந்தனை வென்று வாகை சூடினான். அக்காலை, அதனை யறிந்த ஆசிரியர் பரணர் அவனுடைய போர்வென்றியை அழகொழுகும் தமிழாற் பாடினார். ஒளவையாரும் இப் பாட்டின்கண் இச் செய்தி முற்றவும் தோன்றப் பாடியுள்ளார். அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும் அரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும் நீரக விருக்கை யாழி சூட்டிய தொன்னிலை மரபினின் முன்னோர் போல 5 ஈகையங் கழற்கா லிரும்பனம் புடையற் பூவார் காவிற் புனிற்றுப்புலா னெடுவேல் எழுபொறி நாட்டத் தெழாஅத் தாயம் வழுவின் றெய்தியு மமையாய் செருவேட் டிமிழ்குரன் முரசி னெழுவரொடு முரணிச் 10 சென்றமர் கடந்துநின் னாற்ற றோற்றிய அன்றும் பாடுநர்க் கரியை யின்றும் பரணன் பாடினன் மற்கொன் மற்றுநீ முரண்மிகு கோவலூர் நூறிநின் அரணடு திகிரி யேந்திய தோளே. (99) திணை: வாகை; துறை: அரசவாகை. அவன் கோவலூ ரெறிந் தானை அவர் பாடியது. உரை : அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் - தேவர்களைப் போற்றி வழிபட்டும் அவர்களுக்கு வேள்விக்கண் ஆவுதியை யருந்துவித்தும்; அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் - பெறுதற்கரிய முறைமையையுடைய கரும்பை விண்ணுலகத்தி னின்று இவ்வுலகத்தின்கட் கொடுவந்து தந்தும்; நீரக விருக்கை - கடலுக்குட்பட்ட நிலத்தின்கண்ணே; ஆழி சூட்டிய - சக்கரத்தை நடாத்திய; தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல - பழைய நிலைமை பொருந்திய முறைமையையுடைய நின்குடியிற் பழையோரை யொப்ப; ஈகையங் கழற்கால் - பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்த காலினையும்; இரும் பனம்புடையல் - பெரிய பனந் தோடாகிய தாரினையும்; பூவார் காவின் - பூ நிறைந்த காவினையும்; புனிற்றுப் புலால் நெடுவேல் - நாடோறும் புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலினையுமுடைய; எழு பொறி - ஏழிலாஞ்சனையும்; நாட்டத்து எழாஅத் தாயம் - நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரச வுரிமையை; வழுவின்று எய்தியும் அமையாய் - தப்பின்றாகப் பெற்றும் அமையாய்;செரு வேட்டு இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி - போரை விரும்பி யொலிக்கும் ஓசை பொருந்திய முரசினையுடைய ஏழரசரோடு பகைத்து; சென்று - மேற்சென்று; அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய அன்றும் - போரின்கண் வென்று நின் வலியைத் தோற்றுவித்த அற்றை நாளும்; பாடுநர்க்கு அரியை - பாடுவார்க்குப் பாட அரியை; இன்றும் பரணன் பாடினன் - இற்றை நாளும் பரணன் பாடினன்; நீ முரண்மிகு கோவலூர் நூறி-மாறுபாடுமிக்க கோவலூரை யழித்து வென்று; அரண் அடு திகிரி ஏந்திய தோள் - பிறவும் அரண்களை யழிக்கின்ற ஆழியைத் தாங்கிய நினது தோளை எ.று. இன்றும் பரணன் பாடின னென்றது, அவனும் தன் பெருமையாற் பாடினான்; பிறராற் பாடப்படுத லரிதென்றதாம். நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க் கரியை; திகிரி யேந்திய தோளை இன்றும் பரணன் பாடினன் எனக் கூட்டுக. கழற்காலை யும், புடையலையும், காவையும், வேலையுமுடைய நின் முன்னோர் போலத் தாயமெய்தியும் அமையாயெனமாறிக் கூட்டுக. நாடுதல் - ஆய்தல். மூவரொடு முரணியென்றும், முரணடு திகிரி யென்றும் பாடம். கொல், ஐயம், மன், அசைநிலை. பூவார் கா - வானோர் இவன் முன்னோர்க்கு வரம் கொடுத்தற்கு வந்திருந்ததொருகா. இவனுக்குப் பனந்தார் கூறியது, சேரமாற்கு உறவாதலின். எழுபொறி நாட்டமென்பதற்கு ஏழரசர் நாடுங் கூடி ஒரு நாடாய் அவ்வேழரசர் பொறியும் கூடிய பொறியோடு கூடிநின்று, நன்மையும் தீமையு மாராய்தலெனினு மமையும். விளக்கம் : அருந்துதல் - உண்பித்தல். இவண் தந்தெனவே, கரும்பு இருந்த விடம் அவணாகிய விண்ணுலக மெனப்பட்டது. வழிமுறை தொடர் பறாது வருதல்பற்றித் “தொன்னிலை மரபு” என்றார். ஈகை - பொன்புடையல்மாலை. நாடோறும் பகைவரைக் குத்திக் குருதிக் கறை தோய்ந்து புலால் நாறுதலால், “புனிற்றுப் புலால் நெடுவேல்” என்றார். அரணடு திகிரியென்புழித் திகிரி யென்றது, ஆழிப்படை போலும்.எழு பொறி யென்றது. ஏழ்வகை இலாஞ்சனையை; அவை கேழல் மேழி கலை ஆளி வீணை சிலை கெண்டை (கலிங். கடவுள். 18) என்பன. (99) 100. அதியமான் நெடுமான் அஞ்சி குடிக்குரிய முதன்மகன் பிறந்த காலத்தில், பிறந்த சின்னாட் கழித்துத் தந்தை போர்க்குரிய உடை உடுத்துச் சான்றோர் சூழச் சென்று அம்மகனைக் காண்டல் பண்டைத் தமிழர் மரபு. உலகிற் பிறந்த மகன், முதன்முதல் தன் தந்தையைக் காணுமிடத்து அவன் நெஞ்சில் போர்க்கோலமும் போர்மறமும் நன்கு பதிய வேண்டு மென்பது கருத்து. அக் காலநிலை போர்மறவரையே பெரிதும் வேண்டியிருந்தது. அதியமானுக்கு முதன் மகனாகிய பொகுட் டெழினி பிறந்த சின்னாட்குப் பின் அதியமான் அவனைக் காணச் சென்றான். அக்காலை ஒளவையார் அங்கே இருந்தார். அவர் அதியமானது போர்க்குரிய மறநிலையைத் தாம் குறைவறக் கண்ட காட்சியை இப் பாட்டின்கண் விளங்கக் கூறியுள்ளார். கையது வேலே காலன புனைகழல் மெய்யது வியரே மிடற்றது பசும்புண் வட்கர் போகிய வளரிளம் போந்தை உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு 5 வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச் சுரியிரும் பித்தை பொலியச் சூடி வரிவயம் பொருத வயக்களிறு போல இன்னு மாறாது சினனே யன்னோ உய்ந்தன ரல்லரிவ னுடற்றி யோரே 10 செறுவர் நோக்கிய கண்டன் சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே. (100) திணை: வாகை; துறை: அரசவாகை. அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது. உரை : கையது வேலே - கையின்கண்ணது வேலே; காலன புனை கழல் - காலின் கண்ண அணிந்த வீரக் கழல்; மெய்யது வியர் - உடம்பின்கண்ணது வேர்ப்பு; மிடற்றது பசும்புண்- மிடற்றின் கண்ணது ஈரம் புலராத பசிய புண்; வட்கர் போகிய வளர் இளம்போந்தை - பகைவர் தொலைதற் கேதுவாகிய வளரும் இளைய பனையினது; உச்சிக் கொண்ட - உச்சிக் கண்ணே வாங்கிக் கொள்ளப்பட்ட; ஊசி வெண் தோட்டு - ஊசித் தன்மையைப் பொருந்திய வெளிய தோட்டையும்; வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ - வெட்சியினது பெரிய மலரையும்; வேங்கைப் பூவுடனே விரவி; சுரி இரும் பித்தை பொலியச் சூடி - சுருண்ட கரிய மயிர் பொலிவுபெறச் சூடி; வரிவயம் பொருத வயக்களிறு போல - புலியொடு பொருத வலிய யானையை யொப்ப; இன்னும் மாறாது சினன் - இன்னமும் நீங்காது சினம் ஆதலால்; அன்னோ - ஐயோ; உய்ந்தனர் அல்லர் - பிழைத்தாரல்லர்; இவன் உடற்றியோர் - இவனைச் சினப்பித்தவர்கள்; செறுவர் நோக்கிய கண் - பகைவரை வெகுண்டு பார்த்த கண்; தன் சிறுவனை நோக்கி யும் சிவப்பு ஆனா - தன்னுடைய புதல்வனைப் பார்த்தும் சிவப்பமையா வாயின எ - று. காலன புனைகழ லென்பது வீரத்திற்கும் வென்றிக்கும் கட்டின; போர்தோறும் வென்று கட்டின வெனவுமாம். உம்மை: சிறப்பு. தோட்டையும் மலரையும் வேங்கையொடு விரைஇச் சூடிச் செறுவர் நோக்கிய கண் சிறுவனை நோக்கியும் சிவப்பானா; ஆதலால் அன்னோ, இவனுடற்றியோர் உய்ந்தன ரல்லரெனக் கூட்டி வினைமுடிவு செய்க. வட்கா ரென்பது வட்கரெனக் குறுகிநின்றது; வட்கர் - குற்ற மெனினுமமையும். விளக்கம் : நன்கு ஆறாத புண், பசும்புண் என்றும் ஈரம் புலராத பசும் புண் என்றும் கூறப்பட்டது. சுரிதல் - சுருளுதல். வரி வயம் - வரிகளை யுடைய புலி. போர்க்கோலம் கண்டு கூறுதலின், “உய்ந்தனரல்லர் இவன் உடற்றியோர்” என்றார். சிறுவரைக் காணின் செறுநரும் விழைவர்; இவன் மறம் அவரினும் மிக்க தென்பார், “சிறுவனை நோக்கியும் சிவப்பானா” வென்றார்; “செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்” (அகம்: 66) எனப் பிறரும் கூறுதல் காண்க. (100) 101. அதியமான் நெடுமான்அஞ்சி ஒருகால், ஒளவையார் அதியமானிடம் பரிசில் வேண்டிப் பாடிச் சென்றார். அவன் அவர்பால் மிக்க விருப்பும் மதிப்பு முடையனாதலால் விரும்பியவுடனே அவர்க்கு அதனை நல்காது சிறிது தாழ்த்தனன். ஆகவே, அவர்க்கு நெஞ்சில் வருத்தம் சிறிது தோன்றிற்று. ஆயினும். அவர் அவனது மனப்பண்பை நன்கறிந் திருத்தலின் நெஞ்சிற்குக் கூறுவாராய், “நெஞ்சே!வருந்த வேண்டா; அதியமானது பரிசிலைப் பெறும் காலம் நீட்டினும் நீட்டியாதாயினும், யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல நம் கையகத்ததென்றே கொள்; இது பொய்யாகாது” எனத் தெருட்டும் கருத்தால் இப்பாட்டைப் பாடியிருக்கின்றார். ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ அணிபூ ணணிந்த யானை யியறேர் 5 அதியமான் பரிசில் பெறூஉங் காலம் நீட்டினு நீட்டா தாயினும் யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யா காதே அருந்தே மாந்த நெஞ்சம் 10 வருந்த வேண்டா வாழ்கவன் றாளே. (101) திணை : பாடாண்டிணை; துறை : பரிசில் கடாநிலை. அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது. உரை : ஒரு நாள் செல்லலம் - யாம் ஒரு நாட் செல்லேம்; இரு நாள் செல்லலம் - இரண்டுநாட் செல்லேம்; பல நாள் பயின்று பலரொடு செல்லினும் - பலநாளும் பயின்று பலரொடு கூடச்செல்லினும்; தலை நாள் போன்ற விருப்பினன் - முதற் சென்ற நாள் போன்ற விருப்பத்தை யுடையன்; அணி பூண் அணிந்த யானை - அணிகல மணிந்த யானையையும்; இயல்தேர் அதியமான் - இயன்ற தேரையுமுடைய அதியமான்; பரிசில் பெறூஉங் காலம் - பரிசில் பெறுங் காலை; நீட்டினும் நீட்டா தாயினும் - நீட்டிப்பினும் நீட்டியாதொழியினும்; யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போல - யானை தனது கொம்பின திடையே வைக்கப்பட்ட கவளம் போல; கையகத்தது - நமது கையகத்தது அப் பரிசில்; அது பொய்யாகாது - அது தப்பாது; அருந்த ஏமாந்த நெஞ்சம் - உண்ண ஆசைப்பட்ட நெஞ்சே; வருந்த வேண்டா - நீ பரிசிற்கு வருந்த வேண்டா; அவன் தாள் வாழ்க - அவன் தாள் வாழ்வதாக எ-று. அதியமான் விருப்பினனென முன்னே கூட்டுக. கோட்டிடை வைத்த கவளம் போல என்றதற்கு, யானை வாயிற்கொண்டு நுகரு மளவும் கோட்டிடை வைத்த கவளம் போலப் பரிசில் கையகத்தது என்க; அன்றிக் களிறு கோட்டிடை வைத்த கவளத்தைச் சிறிது தாழ்த்ததாயினும், அஃது அதற்குத் தப்பாதவாறு போலப் பரிசில் சிறிது தாழ்ப்பினும், நமக்குத் தருதல் தப்பாது என்பதாக்கி யுரைப்பினு மமையும். தாளை முயற்சி யென்பாரு முளர். அருந்த வென்பது அருந்தெனக் கடை குறைக்கப்பட்டது. அருந்து என முன்னிலையாக்கி யுரைப்பினுமமையும். விளக்கம் : ஒரு நாள் இருநாள் அல்ல; பன்னெடு நாட்கள் தனித்துச் செல்வதின்றிப் பலரோடு கூடிப் பன்முறையும் சென்றதுபோதும் தலைநாளில் வரவேற்று வேண்டுவன அளித்தது போலவே நல்குவன் என அதியமானது கொடை நலத்தைப் பாராட்டியது இப்பாட்டு. தலை நாள் - முதல் நாள்; “தண்டாக் காதலும் தலைநாட் போன்மே” (அகம். 332) என்று பிறரும் கூறுப. கொடை யெதிர்வார் கொடைப் பொருளைப் பெறுதற்குத் தாழ்த்தால் தாழ்க்கலாமே யன்றி, அதியமான் கொடுத்தலில் தாழ்ப்பதிலன் என்பது தோன்ற, “பரிசில் தரூஉங் கால” மென்னாது. “பெறூஉங் கால” மென்றார். யானை கோட்டிடை வைத்த கவளம்அதன் வாய்ப்படுதலில் தவறாது; அது போல அவனது கொடையினை பெறுதல் தவறாது என்றதற்கு, “யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய் யாகாதே” யென்றார். இதற்குக் காட்டப்பட்ட பிறிது பொருள் உரையிற் கூறியதுபோல அத்துணைச் சிறப்பிலதாகலின், “உரைப்பினு மமையு” மென்றொழிந்தார். அருந்த ஏமாந்த வென்புழிப் பெயரெச்சத் தகரம் விகாரத்தால் தொக்கது.இக் கருத்தையே, உரைகாரர் “அருந்த வென்பது அருந்தெனக் கடைக் குறைக்கப்பட்ட” தென்றார். ஏமாந்த நெஞ்சே, நீ அருந்துவாயாக என்று பொருள்பட, “முன்னிலை யேவலாக்கி யுரைப்பினுமமையும்” என்றார். ஏமாத்தல் - ஆசைப் படுதல்; “காமர் நெஞ்ச மேமாந் துவப்ப” (புறம். 198) எனப் பிறரும் இப் பொருளில் வழங்குதல் காண்க. நெஞ்சம்; அண்மை விளி. வாழ்க அவன் என்பது, வாழ்கவன் என வந்தது.அருள்புரியுந் தக்கோரை, அவர் அருள் பெற்றோரும் பெற விழைவோரும் வாழ்த்துங்கால், அவர் திருவடியை வாழ்த்தும் மரபு கருதி, “வாழ்கவன் தாளே” என்றார். பிறாண்டும் இவ்வாறே “வாழ்கவன் தாளே” (புறம்.103) என வாழ்த்துதல் காண்க. (101) 102. பொகுட்டெழினி அதியமான் நெடுமானஞ்சியின் மகனான இப் பொகுட் டெழினி தன் தந்தைக்குத் துணையாக ஆட்சி புரிகையில், ஒளவையார் அவனைக் காணச் சென்றார். இவன் தன் குடிகட்கு உற்றுழி யுதவும் பேருள்ளமும் நிறைந்த கல்வியறிவு முடையவ னாய் விளங்குவது கண்டு, அவர், மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் கொண்டு, இப் பாட்டின்கண், “நெடியோய், நாணிறை மதிபோல் நீ விளங்குதலால், நின் நிழற்கண் வாழ்வார்க்குத் துன்ப மென்ப தில்லையாம்” என்று பாராட்டியுள்ளார். எருதே யிளைய நுகமுண ராவே சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே அவலிழியினு மிசையேறினும் அவண தறியுநர் யாரென வுமணர் 5 கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன இசைவிளங்கு கவிகை நெடியோய் திங்கள் நாணிறை மதியத் தனையையிருள் யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே. (102) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. அவன் மகன் பொகுட் டெழினியை அவர் பாடியது. உரை : எருது இளைய - எருதுகள் இளைய தாம்; நுகம் உணரா - நுகம் பூண்டலை யறியா; சகடம் பண்டம் பெரிது பெய் தன்று - சகடந்தான் பண்டம் பெரிதாக இடப்பட்டது; அவல் இழியினும் மிசை ஏறினும் - ஆதலால் அது , பள்ளத்தே யிழியினும் மேட்டிலே யேறினும்; அவணது அறியுநர் யார் என - அவ்விடத்து வரும் இடையூறறிவர் யார்தான் என்று நினைந்து; உமணர் - உப்பு வாணிகர்; கீழ் மரத்து யாத்த சேம அச்சன்ன - அச்சுமரத்தின் கண்ணே யடுத்துக் கட்டப்பட்ட சேம வச்சுப் போன்ற; இசை விளங்கு கவிகை நெடியோய் - புகழ் விளங்கிய இடக் கவிழ்ந்த கையையுடைய உயர்ந்தோய்; திங்கள் நாள் நிறை மதியத் தனையை - நீ திங்களாகிய நாள் நிறைந்த மதியத்தை யொப்பை; நின் நிழல் வாழ்வோர்க்கு இருள் யாவணது - ஆதலின், நின் நிழற்கண் வாழுமவர்கட்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது? எ-று. திங்கள் நாள் நிறை மதியத் தனையை யென்றது, அறிவும், நிறைவும், அருளு, முதலாகிய குணங்களா லமைந்தா யென்ற வாறாம். சேம வச்சன்ன வென்றது, ஏற்றிழிவுடையவழி அச்சு முறிந்துழிச் சேமவச்சு உதவினாற்போல நீ காக்கின்ற நாட்டிற்கு ஓரிடையூறுற்றால் அது நீக்கிக் காத்தற்குரியை யென்பதாம். “எருதே இளைய நுகமுண ராவே, சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே” யென்பது உவமங் கருதாது, சகடத்திற்கு வரும் ஏதம் குறித்து, உமணர் சேமவச்சு யாத்தற்குக் காரணமாய் நின்றது. விளக்கம் : “எருது இளையவாகலின் நுக முணரா; பண்டம் மிகப் பெய்யப் பெற்றுளது; அவண் நிகழ்வதனை யாவர் அறிகுவ” ரென்பது உமணர் தம்முட் கருதிக் கூறும் கூற்று. இக்கருத்து உமணர் சேமவச்சு யாத்துக் கோடற்கு ஏதுவாய் நிற்றலின், உரைகாரர், “எருதே.... காரணமாய் நின்றது” என்றார். கீழ் மரம், அச்சுமரம். “இசை விளங்கு நெடியோய்” என்பவர் பொகுட்டெழினியின் கொடை நலம் தோன்று தற்குக் “கவிகை நெடியோய்” என்று சிறப்பித்தார். “அரம்பையின் கீழ்க் கன்றும் கனியுதவும்” என்று கூறும் நன்னெறிக்கு இவன் தக்க சான்றாதல் இதனால் விளக்கமுறும். அவல் - பள்ளம்; மிசை - மேடு. அவண் உறும் இடையூற்றினை “அவணது” என்றார். உறுவது அறிபவர் அரியராதலின், “அறியுநர் யார்” என்றார். நாணிறை மதியம் - நாள்தோறும் வளர்ந்து நிறையும் முழுத்திங்கள். கலை நிரம்பிய திங்களை மதியமென வழங்குப. முழுத் திங்கள் தண்ணிய நிலவை மிகப்பொழிந்து இருளைப் போக்குதலின், “இருள்யாவணது?” என்றார். முழுத் திங்களை அவற்குவமை கூறினமையின், அவன் செய்யும் அருள் தண்ணிலவும் அவன் தாணிழலில் வாழ்வார்க் கெய்தும் துன்பம் இருளுமாயின. கீழ்மரத் தச்சிருப்பவும் சேமவச்சுக் கொண்டது கூறியதனால் அதியமானஞ்சி யிருப்பவும், பொகுட் டெழினி அவற்குத் துணையாய் இருந்தானென்பது தெள்ளிதாம். (102) 103. அதியமான் நெடுமான்அஞ்சி அதியமான்பால் பரிசில் பெற்றுச் சென்ற ஒளவையார் வழியில் ஒரு சுரத்தில் தன் சுற்றத்தோடு போந்து தங்கியிருந்த விறலி யொருத்தியைக் கண்டார். அவள் தான் உற்று வருந்தும் வறுமையைத் தெரிவித்து, “கவிழ்ந்து கிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்?” என ஏங்கியிருப்பது கண்டு, “சில்வளை விறலி, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமானஞ்சி யுள்ளான்; அவன்பாற் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருள் நிரம்ப வுடையன், அலத்தற்காலையாயினும் புரத்தல் வல்லன்; அவன் பாற் செல்க” என, இதனால் ஆற்றுப்படுத்துள்ளார். ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத் தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக் கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச் சுரன்முத லிருந்த சில்வளை விறலி 5 செல்வை யாயிற் சேணோ னல்லன் முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும் பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை 10 மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப அலத்தற் காலை யாயினும் புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே. (103) திணை : பாடாண்டிணை; துறை: விறலியாற்றுப்படை. அதியமா னெடுமானஞ்சியை அவர் பாடியது. உரை : ஒரு தலை பதலை தூங்க - காவினது ஒருதலைக் கண்ணே பதலை தூங்க; ஒரு தலை - ஒரு தலைக்கண்ணே; தூம்பகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி - துளையை யகத்தேயுடைய சிறிய முழாவைத் தூங்கும் பரிசு தூக்கி; கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என - இடுவோரின்மையின் ஏலாது கவிழ்ந்த என் மண்டையை இட்டு மலர்ந்த வல்லார் யார் எனச் சொல்லி; சுரன் முதல் இருந்த சில் வளை விறலி - சுரத்திடத்தே யிருந்த சிலவாகிய வளையையுடைய விறலி; செல்வை யாயின் - நீ அவன்பாற் போவையாயின்; சேணோன் அல்லன் - அவன் சேய்மைக்கண்ணானல்லன்; முனைசுட எழுந்த மங்குல் மாப் புகை - முனைப் புலத்தைச் சுடுதலா னெழுந்த இருட்சியை யுடைய கரிய புகை; மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் - மலையைச் சூழும் முகில் போல இளங்களிற்றைச் சூழும்; பகைப்புலத்தோன் - பகைவர் தேயத் திருந்தான்; பல்வேல் அஞ்சி - பல வேற்படையையுடைய அதியமான்; பொழுது இடைப்படாஅ - ஒருபொழுதும் ஓயாமல்; புலரா மண்டை - உண்ணவும் தின்னவும் படுதலான் ஈரம் புலராத மண்டை; மெழுகு மெல்லடையின் கொழு நிணம் பெருப்ப - மெழுகான் இயன்ற மெல்லிய அடை போலக் கொழுத்த நிணம் மிக; அலத்தற் காலை யாயினும் - உலகம் வறுமையுறுதலையுடைய காலமாயினும்; புரத்தல் வல்லன் - பாதுகாத்தலை வல்லன்; அவன் தாள் வாழ்க - அவன் தாள் வாழ்க எ-று. பதலை யென்பது ஒருதலை முகமுடைய தொரு தோற்கருவி. பகைப்புலத்தோ னென்ற கருத்து, பகைவர்போல் திறைகொண்ட பொருளுடையனாதலின், நீ வேண்டிய வெல்லாந் தருதல் அவனுக்கெளி தென்பதாம் உம்மை: சிறப்பு. சேணோ னல்ல னென்பதற்குப் பரிசில் நீட்டிப்பானல்லன் என்று உரைப்பினு மமையும் விளக்கம் : காவடியின் ஒருபுறம் பதலையும், ஒருபுறம் சிறுமுழாவும், சம எடைப்படத் தொங்கவிட்டாலன்றிக் காவிச் செல்ல முடியாதாகலின் “தூங்கத் தூங்கி” யென்றார். பகைப்புலத்தே இருக்குமாறு வற்புறுத் தற்குச் “சேணோ னல்லன்” என முன் மொழிந்தார். பொழுது இடைப் படாமையால் புலராத மண்டையைப் பொழுதிடைப் படா அப் புலரா மண்டை” யென்றார்.பெருப்ப என்புழிப் பெருத்தல் - மிகுதல். அடிசிறுத்து முகம் அகன்றிருப்பது பற்றி, நாட்டுப்புறங்களில் வாழும் மகளிர் ஒருவரோடொருவர் உறுப்பு நலம் பழித்து வைதுரைக்கு மிடத்துப் “பதலை மூஞ்சி” யென்று கூறுவர். இதனால், ஒருதலை முகமுடைய தோற்கருவியாகிய இதன் முகத்தியல்பு அறியப்படும். பகைப்புலத்தோன்பால் ஆற்றுப்படுத்துவது, அப் பகைப்புலத்தே திறையாகப் பெறப்படும் அனைத்தையும் நல்குவன் என்பது குறித்து நிற்றலின், “பகைப்புலத்தோன் .... என்பதாம்” என்றார் “அலத்தற் காலையாயினும் ” என்புழி உம்மை புரத்தலின் அருமையை மிகுதிப் படுத்தி நிற்றலின், “உம்மை சிறப்பு ” என்றார். நீட்டித்தலை எவ் வழியும் அறியாதானைப் பரிசில் நீட்டிப்பானல்லன் என்பது சிறப் பன்மையான், “நீட்டிப்பானல்ல னென்றுரைப்பினு மமையு” மென் றொழித்தார். அலத்தற்காலை யாயினும் மண்டை நிணம் பெருப்ப நல்கிப் புரத்தல் வல்லன் என இயைத்துக் கொள்க. நல்கி யென ஒருசொல் வருவித்துக் கொள்க. (103) 104. அதியமான் நெடுமான்அஞ்சி ஒருகால் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பொருது வெல்வது குறித்து அவனிருத்த தகடூரைப் பகைவேந்தர் தம் படையொடு போந்து முற்றுகையிடக் கருதினர். அதனை ஒற்றரால் அறிந்துவைத்தும் அதியமான் அஞ்சாது செய்வன செய்து வந்தான். அவனது திருவோலக்கத்திருந்த ஒளவையார் பகைவர் முயற்சியும் அதியமான் மனவுரமும் அறிந்து பகைவர்க்கு அதியமானது வலியைத் தெரிவித்தற்குச் செவ்வி நோக்கி யிருந்தார். இதற்குள் போர் மூண்டது; போரில் அதியமான் பகைமன்னரைத் தன் னகர்ப்புறத்தே வென்று வாகை சூடினான். தோற்ற வேந்தர்க்கு அறிவுறுக்கு மாற்றால் ஒளவையார் அதியமானது வாகை நிலையைப் பாராட்டி, “நீவிர் போருடற்றக் கருதியது அதியமான் இளையன் என்பது பற்றியாகும். அதனால் அவனை அவனிருந்த ஊரிடத்தே வெல்லுதலை விரும்பினீர்கள்; முழங்காலளவிற்றாய நீரிற் கிடப்பினும் முதலை பெருங்களிற்றையும் கொல்லும் வலியுடைத்தாம்; அம் முதலை போல்வன் அதியமான்; இன்று அறிவிக்கின்றேன்: இனியேனும் இவனை இளையன் என்று இகழ்வதை விடுத்து நும்மைப் பாதுகாத்து வாழ்மின் ” என இப்பாட்டின்கண் உரைத்துள்ளார். போற்றுமின் மறவீர் சாற்றுது நும்மை ஊர்க்குறு மாக்க ளாடக் கலங்கும் தாட்படு சின்னீர்க் களிறட்டு வீழ்க்கும் ஈர்ப்புடைக் கராஅத் தன்ன வென்னை 5 நுண்பல் கரும நினையா திளையனென் றிகழிற் பெறலரி தாடே. (104) திணை : வாகை; துறை: அரசவாகை. அதியமா னெடுமானஞ்சியை அவர் பாடியது. உரை : போற்றுமின் - நீங்கள் பாதுகாமின், மறவீர் - நும்மைச் சாற்றுதும் - நுமக்கு நாங்கள் அறிவிப்பேம்; ஊர்க்குறு மாக்கள் ஆட - ஊரின்கண் இளம்புதல்வர் ஆட; கலங்கும் தாள் படு சின்னீர் - கலங்குகின்ற காலளவான அளவிற்பட்ட நீருள்ளே; களிறு அட்டு வீழ்க்கும் - யானையைக் கொன்று வீழ்க்கும்; ஈர்ப்பு உடைக் கராஅத் தன்ன - இழுத்தலையுடைய முதலையை யொக்கும்; என்னை - என் இறைவனது, நுண்பல் கருமம் நினையாது - நுண்ணிய பல கருமத்தையும் நினையாதே; இளையன் என்று இகழின் - இளையனென்று மதியா திருப்பின்; ஆடு பெறல் அரிது - நுங்களுக்கு வென்றிபெறுதல் அரிது எ-று. மறவீர், நுமக்குச் சாற்றுதும்; என்னை இளையன் என்றிகழின் வென்றி பெறுதல் அரிது; ஆதலால், நீர் போற்றுமின் எனக் கூட்டுக. மீப்புடையென் றோதி மிகுதியை யுடைய வென்று செப்பினு மமையும். விளக்கம் : இளஞ் சிறுவர்களைக் “குறு மாக்கள்” என்றார், மனவுணர்வு நிரம்பாமையின். நிரம்பியவழிக் “குறு மகன்” என்றும், “குறு மகள்” என்றும் வழங்குதல் காண்க. ஆடுதல் - விளையாடுதல். தாள் படு சின்னீர் - தாள் மறையும் அளவிற்றான தண்ணீர். இடத்தால் வலி மிகுதலோடு இயல்பாகவே பெருங்களிற்றினையும் பற்றி யீர்த்துக் கொல்லும் வலியுடைத்தாதல் தோன்ற, “ஈர்ப்புடைக் கராஅம்” என்றார் “நெடும்புனலுள் வெல்லும் முதலை” (குறள்.495) என்றது பொது வியல்பு. என்னை - என் இறைவன். அதியமான் தனக்கு இறைவனென்றும், அவன் கராம் போலும் வலியுடையனென்றும் கூறியவாறு. நுண் பல கருமம் - நுணுகி யாய்ந்து செய்யும் பல்வகைக் கருமச் சூழ்ச்சி. இதனால், அதியமான் இளையனாயினும், இடத் தாலும், மெய் வலியாலும், வினை வலியாலும், பெரியனாகலின், அவனைப் பகைவர் வெல்லுதல் அரிதென்றவாறு. ஈர்ப்புடை யென்னாது மீப்புடை யென்று பாடமாயின், மீப்பு மிகுதி குறிக்கும் என்றற்கு “மீப்புடை.... அமையும்” என்றார். (104) 105. வேள் பாரி வேள் பாரி பாண்டிநாட்டுப் பறம்பு மலையைச் சூழ்ந்த நாட்டை யுடையன்; இப் பறம்புநாடு முந்நூறு ஊர்களை யுடையது. பறம்புமலை இப்போது பிரான்மலை யென வழங்கு கிறது; புதுக்கோட்டை நாட்டைச் சார்ந்திருக்கிறது. பாரி என்பான் வேளிர் குலத்தவனாதலின், இவனை வேள் பாரி யென்பது வழக்கு. இவர் வேளிர் குலத்தில் எவ்வி யென்பான் குடியிற் பிறந்தவன். பறம்பு நாட்டைச் சார இருந்த பாண்டி நாட்டுத் திருவாதவூரிற் பிறந்து சிறந்து விளங்கிய கபில ரென்னும் நல்லிசைப் புலவர்க்கு இவன் இனிய நண்பன்; ஒளவையாராலும் சிறப்பித்துப் பாடப்பெற்றவன்; வரையாது வழங்கும் வள்ளல்; காற்றில் அலைந்த முல்லைக்கொடியின்பால் அருள்கொண்டு அது கொழுகொம்பாகப் பற்றிப் படரும் பொருட்டுத் தான் ஊர்ந்து சென்ற தேரைத் தந்தவன். முடிவில் தமிழக மெங்கும் இவனது புகழ் பரவக் கண்டு அழுக்காறு கொண்ட தமிழ்வேந்தர் மூவராலும் சூழ்ச்சிவகையாற் கொலையுண்டனன். இவற்கு இரு மகளிர் உண்டு. இவற்குப் பின் கபிலர் இம்மகளிரை ஒளவையார் துணைக்கொண்டு தக்கார்க்கு மணம் புரிவித்துத் தாமும் உயிர் நீத்தார். இவன் காலத்துக்குப் பின்வந்த சான்றோர்கள் பலரும் ஆளுடைய நம்பி முதலிய அருட் குரவன்மார்களும் இவனையே கொடைக்கு எல்லையாகக் கொண்டு கூறினரெனின், மேலும் கூறல் மிகையாம். தமிழகத்துப் புரவலர் வரலாற்றில் வேள்பாரி சிறப்பிடம் பெறுதற்குரியன். இவன் நாட்டு மலைவளமும் சுனைநீர் நலமும் புலவர் பாடும் புகழ் படைத்தவை. கபிலர் ஒருகால் வறுமையால் வாடி வதங்கும் விறலி யொருத்தியைக் கண்டு அவளை வேள்பாரியிடம் சென்று அவனைப் பாடித் தனக்கு வேண்டுவன பெற்றுக்கொள்க வென இப்பாட்டின்கண் அவளை ஆற்றுப் படுத்தியுள்ளார். சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப் பெய்யினும் பெய்யா தாயினு மருவி 5 கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக மால்புடை நெடுவரைக் கோடுதோ றிழிதரும் நீரினு மினிய சாயற் பாரி வேள்பாற் பாடினை செலினே. (105) திணை : பாடாண்டிணை; துறை : விறலியாற்றுப் படை. வேள் பாரியைக் கபிலர் பாடியது. உரை : வாணுதல் விறலி - ஒளி தங்கிய நுதலினையுடைய விறலி; தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை - பெரிய இடத்தை யுடைய கனையின்கண் தழைத்த கரிய இதழையுடைய நீலத் தினது; வண்டு படு புது மலர் - வண்டு மொய்க்கும் புதிய மலரின்கண்; தண் சிதர் கலாவ - குளிர்ந்த துளி கலக்க; பெய்யினும் பெய்யா தாயினும் - மழை பெய்யினும் பெய்யா தொழியினும்; அருவி - அருவி; கொள் ளுழு வியன்புலத் துழை காலாக - கொள்ளிற் குழுத பரந்த நிலத்திடை நீரோடு காலாக ஓட; மால்புடை நெடு வரைக் கோடு தோறு இழிதரும்; கண்ணேணியையுடைய நெடியமலையினது சிகரந் தோறும் இழிதரும்;நீரினும் இனிய சாயல் - நீரினும் மிக இனிமை யுடைய; வேள் பாரிபால் பாடினை செலின் - வேள் பாரி பக்கலே நீ பாடிச் செல்லின்; சேயிழை பெறுகுவை - சிவந்த அணியைப் பெறுகுவை எ-று. விறலி, பாரிவேள்பாற் பாடினை செலின் சேயிழை பெறுகுவை யெனக் கூட்டுக. அவன் மலையாதலால் எக்காலமும் அருவி கோடுதோ றிழிதரு மெனப்பட்டது. புது மலர்த் தண் சிதர் கலாவப் பெய்யினும் பெய்யாதாயினும் காலாகக் கோடுதோ றிழிதரும் அருவி நீரினும் இனிய வென இயையும். எனவே அவன் குணங்கள் தோன்றி நின்றன. விளக்கம் : விறலியின் நுதலொளி அவளது இசையும் கூத்தும் வல்ல நலத்தை விளக்கி நிற்றலின், “வாணுதல் விறலி” யென்றார். தடவுவாய் - சுனைக்கு ஆகுபெயர். மாரியிற் பெய்த மழையைக் கோடையின் கண் உமிழும் வாய்ப்புடைய மலையாதலின், “அருவி கொள்ளுக் குழுத வியன்புலத்தில் நீரோடு காலாகக் கோடுதோறும் இழிதரும்” என்றார். பறம்பு மலையின் சுனைநீர் தட்பமும் இனிமை யும் உடையதென்று சான்றோரால் “பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்” (குறுந். 196) என்று பாராட்டப்படும். சிவந்த பொன்னாற் செய்த அணியைச் “சேயிழை” யென்றார். மால்பு - மூங்கிலின் கணுவினிடத்தே புள் செருகிய ஏணி; இதனைக் கண்ணேணி யென்றலும் வழக்கு. பாடுவார் பசி தீர்த்துப் பெருங்கொடை நல்கும் பண்பினன் பாரி யென்றற்கு, “பாடினை செலினே” யென்றார். மழை பெய்யாவிடத்து அருவி கோடுதோ றிழிதரும் என்றது. வருவாய் குன்றினும் பாரி தன் கொடை நலம் குன்றுவதிலன் என்பது முதலிய குணநலம் தோற்றுவித்தலின், உரைகாரர், “எனவே.....நின்றன” என்றார். (105) 106. வேள் பாரி நல்லிசைச் சான்றோராகிய கபிலர் இப்பாட்டின்கண், வேள் பாரி தன்னை நாடி வருவோர் அறிவாலும் குணஞ் செயல் களாலும் மிகத் தாழ்ந்தோராயினும் அவர்பாலும் அருள் புரிந்து அவர் வேண்டுவன நல்கிப் புரக்கும் கைவண்மையுடையவன் என அவனது கொடை நலத்தைச் சிறப்பித்துள்ளார். நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப் புல்லிலை யெருக்க மாயினு முடையவை கடவுள் பேணே மென்னா வாங்கு மடவர் மெல்லியர் செல்லினும் 5 கடவன் பாரி கைவண் மையே. (106) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. அவனை வேள் பாரியைக் கபிலர் பாடியது. உரை : நல்லவும் தீயவும் அல்ல - நல்லன வென்றும் தீயன வென்றும் சொல்லப்படுவன சூடும் பூ ஆதலால் அவை இரண்டினும் வைத்து எண்ணப்படாத; குவி இணர்ப் புல் லிலை எருக்க மாயினும் - குவிந்த பூங்கொத்தினையும் புல்லிய இலையையுமுடைய எருக்கம் பூவாயினும்; உடையவை - ஒருவன் உடையனவற்றை; கடவுள் பேணேம் என்னா - தெய்வங்கள் விரும்பேம் என்னா; ஆங்கு - அது போல; மடவர் மெல்லியர் செல்லினும் - யாதும் அறிவில்லாதாரும் புல்லிய குணங்களை யுடையாரும் செல்லினும்; பாரி கைவண்மை கடவன் - பாரி கைவண்மை செய்தலைக் கடப்பாடாக வுடையன் எ-று. குவியிணர்ப் புல்லிலை யெருக்கம் என்றது, முதற்கேற்ற அடையடுத்த ஆகுபெயர். உம்மை இழிவு சிறப்பு; மெல்லிய ரென்பதற்கு வறுமையுற்றா ரென்று முரைப்பர். விளக்கம் : எருக்குக் குவிந்த இணர்களை யுடைத்தென்பதை, “குவியிண ரெருக்கின் ததர்பூங் கண்ணி” (அகம். 301) என்று பிறரும் கூறுதல் காண்க. நறுமண மின்மையின், நற்பூ வகையிலும், இறைவன் சூடுதலின் தீய பூவகையிலும் சேராமையின், எருக்கம் பூவை, “நல்லவும் தீயவு மல்ல குவியிணர்ப், புல்லிலை யெருக்க மாயினும்” என்றார். குவியிணரும் புல்லிலையுமுடைமை எருக்கமாகிய முதற்குரிமையாதலின், இவை முதற்கேற்ற அடையாயின. ஆயினும், எருக்கம் ஈண்டு ஆகுபெயராய் எருக்கம் பூவை யுணர்த்தி நின்றது. பித்தேறினோரும் மடலூர்பவரும் ஆகிய நாண் கடை நின்றோர் சூடும் பூவாய் இழிக்கப்படுவது பற்றி உம்மை இழிவுசிறப்பாயிற்று. மெல்லிய ரென்றற்குப் புல்லிய குணமுடையோரெனப் பொருள் கூறினமையின், வறுமையுற்றாரென்று முரைப்ப” ரென்றார். 107. வேள் பாரி இப் பாட்டின்கண், ஆசிரியர் கபிலர், “நாட்டிற் புலவர் பலரும் ‘பாரி , பாரி’ யெனப் பாரி யொருவனையே புகழ்கின் றனர்; இவ்வுல குயிர்களைப் புரத்தற்கண் பாரி யொருவனேயன்றி மாரியும் உண்டே; இஃதென்ன வியப்பு ” என வியந்து கூறி யுள்ளார். பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனு மல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே. (107) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. அவனை வேள் பாரியைக் கபிலர் பாடியது. உரை : பாரி பாரி என்று - பாரி பாரி யென்று சொல்லி; பல ஏத்தி- அவன் பல புகழையும் வாழ்த்தி; ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் - அவ்வொருவனையே புகழ்வர் செவ்விய நாவை யுடைய அறிவுடையோர்; பாரி ஒருவனும் அல்லன் - பாரி யாகிய ஒருவனுமே யல்லன்; மாரியும் உண்டு-; ஈண்டு உலகு புரப்பது - இவ்விடத்து உலகத்தைப் பாதுகாத்தற்கு எ-று. உலகு புரத்தற்கு மாரியு முண்டாயிருக்கப் பாரி யொருவனைப் புகழ்வர் செந்நாப் புலவரெனப் பழித்தது போலப் புகழ்ந்தவாறு. விளக்கம் : ஒருவற் புகழ்வர் என்றவிடத்துப் பிரிநிலை யேகாரம் தொக்கது. செந்நாப் புலவர் என்றார், பிறர் புகழின் அது பொருளாகக் கொள்ளப் படா தென்றற்கு. மக்களுட் பிறர் இல்லையாயின், உலகு புரக்கும் தொழி லொப்புமையால் மாரியுண்டன்றோ; அதனைப் புகழ்ந்தற் கென்னை என்பதாம். “உறுமிடத் துதவாது” (புறம்.143) போதலும் மாரிக்கு இயல்பு; அச் சிறுமை யியல்பு பாரிபால் என்றும் இல்லாமை யால் செந்நாப் புலவர் பாரி யொருவனையே புகழ்ந்தன ரென வறிக. 108. வேள் பாரி இப்பாட்டின்கண் வேள் பாரியின் கொடையறத்தைச் சிறப்பிக்கத் தொடங்கிய கபிலர், “பாரிக்குரிய பறம்பு அவனைப் பாடி வருவார்க்குக் கூறுகூறாகப் பகுத்துக் கொடுக்கப்பட்டமை யின் அவர்களுடையதாயிற்று; இனி, வருவோர் ‘பறம்பில்லை யாயின், நீயே வேண்டு, மென்பராயின், தான் விரும்பும் கொடை யறத்தை மேற்கொண்டு அவர்வழி நிற்கலுறுவன்; அவர் ஏவல் வழி நிற்றலை வெறுத்து வாரேன் என்று நினைத்தலும் சொல்லு தலும் செய்யான்” என்று வற்புறுத்தியுள்ளார். குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி ஆர மாதலி னம்புகை யயலது சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு பாடின ரதுவே யறம்பூண்டு 5 பாரியும் பரிசில ரிரப்பின் வாரே னென்னா னவர்வரை யன்னே. (108) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. அவனை வேள் பாரியைக் கபிலர் பாடியது. உரை : குறத்தி மாட்டிய வறற் கடைக் கொள்ளி - குறத்தி மடுத்து எரிக்கப்பட்ட வற்றிய கடைக்கொள்ளி; ஆரம் ஆதலின் - சந்தனமாதலால்; அம் புகை - அதன் அழகியதாகிய புகை; அயலது - அதற்கு அருகாகிய; சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு - சாரற்கண் வேங்கையின் பூங்கொம்பின்கட் பரக்கும் பறம்பு; பாடினரது-பாடுவோர்க்குக் கூறிட்டுக் கொடுத்தலின் அவருடையதாயிற்று;அறம் பூண்டு - தன்மத்தைப் பரித்து; பாரியும் பரிசிலர் இரப்பின் - பாரியும் பரிசிலர் வேண்டுவராயின்; வாரேன் என்னான் - அவ்வழி வாரேன் என்னானாய்; அவர் வரையன் - அவர் எல்லையின் கண்ணே நிற்பன் எ-று . சந்தனப் புகை வேங்கையின்மிசைத் தவழும் பறம்பு எனவே, இவை யொழிய மரம் இன்மையும் பகைவர் சுடும் புகை யின்மையும் கூறியவாறாயிற்று. விளக்கம் : வேள்பாரியைப் போருடற்றி வேறல் அரிதென வுணர்ந்த தமிழ்வேந்தர், இரவலர் வடிவிற் போந்து அவனையே இரந்து நிற்ப, அவன் இரவலர் இன்மை தீர்க்கும் நல்லறத்தைக் கைக்கொண்டு அவர்வழிச் சென்று அவரால் கொலையுண்டானாதலின், அக் குறிப்புத் தோன்ற, “அறம் பூண்டு வாரேன் என்னான் அவர் வரையன்னே” என்றார். இரவலர் உருவில் வந்த வேந்தர் பாரி போல, அறம் பூணாது கொலை சூழ்ந்து பழி பூண்டனர். குறத்தி எரித்தலா லுண்டாகிய சந்தனப்புகை வேங்கைப் பூஞ்சினைத் தவழும் என்றது, வேள் பாரி இரவலர்க்குக் கொடுத்தலா லுண்டாகிய நல்லிசை முடிவேந்தர் மூவர் தலைமையை அகப்படுத் தோங்கிற்றென அவர் பகைமை கோடற்குரிய காரணம் காட்டி நிற்பது காண்க. இதனை வெளிப்படக் கூறல் முறையின்மையின் உள்ளுறுத்துரைத்தார். இப் பாட்டு வேள் பாரி யிறந்ததன் பின் பாடப்பட்டது. (108) 109. வேள் பாரி வேள்பாரிபால் மகட்கொடை வேண்டி மறுக்கப்பட்ட தமிழ் வேந்தர் அதுவே வாயிலாக அவன்பால் பகைமை மிக்கனர். மூவேந்தரும் ஒருவர் ஒருவராக அவனொடு பொருதற்குவந்து தோல்வி யெய்தினர். அதுகண்ட கபிலர், “தமிழ் வேந்தர்களே, ஒருவரேயன்றி மூன்று பேரும் ஒருங்கு கூடி நின்று இப் பறம்பினை முற்றுகையிட்டுக் கொள்ளினும் வேள் பாரியை வெல்லுதலும் அரிது; பாரியது இப் பறம்பினைக் கைப் பற்றலும் அரிது; பறம்பு நாட்டவர்க்கு வேண்டும் உணவு வகையில், உழவரது உழவினை வேண்டாதே இப் பறம்புமலை நால்வகை யுணவுப் பொருளை நல்கும்; அகல, நீள, வுயர, வகையில் பறம்பு வானத்தை யொக்கும்; அதிலுள்ள கனைகளோ வானத்துள்ள விண்மீன்களை யொக்கும்; ஆகவே நீவிர் மரந்தோறும் களிறு களைப் பிணித்து நிறுத்தி, இடந்தோறும் தேர்களை நிறுத்தி, உங்கள் மெய்ம்முயற்சியாலும், வாட்படையாலும், பறம்பினைப் பெறக் கருதுவது முடியாத செயல் எனத் தெளி மின்; அவ்வாறு கொள்ளக்கருதுவதும் அறியாமை. எனக்குத் தெரியும் அதனைக் கொள்ளும் வழி. அஃதோர் அரிய செயலன்று. நீவிர் நும் வேந்தர் வடிவினை மாற்றிக் கூத்தர் வேடமும், நும்முடைய மகளிர் விறலியர் வேடமும் கொண்டு வேள் பாரியின் திருமுன் சென்று ஆடலும் பாடலும் செய்வீராயின், அவன் அவற்றிற்கு வியந்து தன்னாட்டையும் மலையையும் ஒருங்கே யளிப்பன்” என இப் பாட்டின்கண் கூறியுள்ளார். அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினும் உழவ ருழாதன நான்குபய னுடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே 5 இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்க ணற்றவன் மலையே வானத்து 10 மீன்க ணற்றதன் சுனையே யாங்கு மரந்தோறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தோறும் பரப்பிய தேரினி ராயினும் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன் யானறி குவனது கொள்ளு மாறே 15 சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூத்தனும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே நாடுங் குன்று மொருங்கீ யும்மே. (109) திணை : நொச்சி; துறை : மகண் மறுத்தல். அவனை வேள் பாரியைக் கபிலர் பாடியது. உரை : அளிது பாரியது பறம்பு - இரங்கத்தக்கது பாரியுடைய பறம்பு; நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் - பெருமையைக் கொண்ட முரசினையுடைய நீயிர் மூவேந்தரும் சூழினும்; உழவர் உழாதன நான்கு பயன் உடைத்து - உழவரால் உழுது விளைக்கப்படாதன நான்கு விளையுளை யுடைத்து; ஒன்று - அவற்றுள் முதலாவது; சிறி இலை வெதிரின் நெல் விளையும் - சிறிய இலையையுடைய மூங்கிலினது நெல் விளையும்; இரண்டு - இரண்டாவது; தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும் - இனிய சுனையையுடைய பலாவினது பழம் ஊழக்கும்; மூன்று - மூன்றாவது; கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும் - கொழுவிய கொடியையுடைய வள்ளிக் கிழங்கு தாழ விருக்கும்; நான்கு - நான்காவது; அணி நிற ஓரி பாய்தலின் - அழகிய நிறத்தையுடைய ஓரி பாய்தலான்; மீ தழிந்து - அதன் மேற் பவர் அழிந்து; திணி நெடுங் குன்றம் தென் சொரியும் - கனத்த நெடியமலை தேனைப் பொழியும்; வான் கண் அற்று அவன் மலை - அகல நீள வுயரத்தால் வானிடத்தை யொக்கும் அவனது மலை; வானத்து மீன்கண் அற்று அதன் சுனை அவ்வானத்தின் கண் மீனையொக்கும் அம்மலையின் கட் சுனை; ஆங்கு - அவ்விடத்து; மரந் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் - மரந்தோறும் கட்டப்பட்ட யானையை யுடையீராயினும்; புலந்தொறும் பரப்பிய தேரினிராயினும் - இடந்தோறும் பரப்பப்பட்ட தேரையுடையீராயினும்; தாளில் கொள்ளலிர் - உங்கள் முயற்சியாற் கொள்ளமாட்டீர்; வாளில் தாரலன் - நுமது வாள் வலியால் அவன்தாரான்; யான் அறிகுவன் - அது கொள்ளுமாறுயான் அறிவேன். அதனைக் கொள்ளும் பரிசை; சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி - வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்ணி வாசித்து; விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர - நறு நாற்றத்தையுடைய தழைத்த கூந்தலையுடைய நும் விறலியர் பின்னே வர; ஆடினிர் பாடினிர் செலின் - ஆடினி ராய்ப் பாடினிராய்ச் செல்லின்; நாடும் குன்றும் ஒருங்கு ஈயும் - அவன் நுமக்கு நாட்டையும் மலையையும் கூடத் தருவன் எ-று. அளிதோ வென்பது, ஈண்டு வியப்பின்கண் வந்தது. ஓரி யென்பது தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீல நிறம்; முசுக்கலை யெனினு மமையும். குன்றம் தேன் சொரியுமென இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. நான்கு பயனுடைத்தென்று வைத்து, நெல் விளையும், பழம் ஊழ்க்கும், கிழங்கு வீழ்க்கும், தேன் சொரியும் என்று அவற்றின் செய்கை தோன்றக் கூறினா ரெனினும், கருதியது நெல்லும் பழமும் கிழங்கும் தேனுமாகக் கொள்க. வான்கணற்று அணிமலையே யென்று பாட மோதுவாரு முளர். வான்கணற் றென்றது மலையி னோக்கமும் பரப்பும். மீன்கணற்றென்றது, சுனையினது பன்மை யும் தெளிவும் சிறுமையும். ஈண்டுக் கண்ணென்ப தசைநிலை. தாளென்றது, படையறுத்தலும் அழித்தற்கு வேண்டும் கருவி முதலாயின வியற்றலும். விறலிய ரென்றது, அவர் உரிமை மகளிரை. விளக்கம் : நாட்பட்ட தேன் நிறம் மாறியது கண்டு “தேன் ஓரி பாய்ந்து விட்ட” தென இக்காலத்தும் குறவர் வழங்குகின்றனர். சொரிதல் தேனுக்குரிய வினையாயினும் குன்றம் தேன் சொரியுமெனக் குன்றத்துக் குரித்தாய் நிற்பதுபற்றி, “இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறி நின்ற” தென்றார். தாளிற் கொள்ளலாவது படைவலி யழித்தலும் அழித்தற்கு வேண்டும் கருவி முதலாயின இயற்றிக்கோடலும் ஆகிய செயல்களால் வென்று கொள்ளுதல். உரிமை மகளிர் விறலியராக, வேந்தர் பரிசிலராக வரின், பாரி நாடும் குன்றும் ஒருங்கேயீயும் என்றார். அவ்வாறு செய்ய அவர் மனங் கொள்ளார் என்று கருதிச் “செலின்” என்றார். “யான் அறிகுவேன் அது கொள்ளுமாறு”என்றது, நீவிர் கொள்ளும் திறமறியாது களிறும் தேரும் முதலாயின கொண்டு போருடற்றக் கருதினீர்; அச் செயல் நுமக்குப் பயன் தாராது என்பது பட நின்றது. யானறிகுவன் என்புழி, அன்னீறு தன்மைக்கண் வந்தது. வீழ்க்கும் நிலத்திற்குள்ளே - ஆழச் சென்றிருக்கும். கீழ் நோக்கிச் செல்வது பற்றி “வீழ்க்கும்” என்றார்; வீழ்ந்து வீழ் என்பனவும் இக்குறிப்பே யுடையவாதல் காண்க. 110. வேள் பாரி தமிழ் வேந்தர் மூவரும் பாரியின் பறம்பைத் தம் பெரும் படையுடன் போந்து முற்றிக்கொண்ட காலையில், கபிலர், அவர்க்குப் பாரியின் போராண்மையும் கை வண்மையும் எடுத்தோதுவாராய், “நீவிர் மூவிரும் கூடிச் சூழ்ந்தாலும் பாரியை வென்று அவன் பறம்பினைக் கைக்கொள்வது முடியாது; பறம்பு நாடு முந்நூறு ஊர்களை யுடையது; அம்முந்நூறூர்களையும் பரிசிலர் அவனைப் பாடித் தமக்குரிமை செய்துகொண்டனர். இனி அவனும் யாமுமே யுள்ளோம்; நீவிரும் அவர் போலப் பாடி வருவீராயின், எம்மையும் பெறலாம்; எஞ்சி நிற்கும் இப்பறம்பு மலையினையும் பெறலாம்” என்று கூறுகின்றார். கடந்தடு தானை மூவிருங் கூடி உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர் 5 யாமும் பாரியு முளமே குன்று முண்டுநீர் பாடினிர் செலினே (110) திணை : நொச்சி; துறை : மகண் மறுத்தல். மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது. உரை : கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிராயினும் - வஞ்சியாது எதிர் நின்று கொல்லும் படையினையுடைய மூன்று திறத்தீரும் கூடிப் பொருதீ ராயினும்; பறம்பு கொளற்கு அரிது - பறம்பு கொள்ளுதற்கு அரிது; முந்நூறு ஊர்த்து தண் பறம்பு நன்னாடு - முந்நூறு ஊரை யுடைத்து குளிர்ந்த நல்ல பறம்பு நாடு; அம் முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் -; நீர் பாடினிர் செலின் - நீயிர் பாடினிராய்வரின்; யாமும் பாரியும் உளம் - நுமக்கு யாமும் பாரியும் உள்ளேம்; குன்றும் உண்டு - அதுவேயன்றி மலையும் உண்டு எ-று. நீர் பாடி வரினும் பறம்பு நாடு பரிசிலர் முன்னே பெற் றமையின், அது நுமக்குக் கிடையாதென்பது கருத்தாகக் கொள்க. விளக்கம் : நாடு வேண்டிப் பொருவதிற் பயனில்லை; அந்நாட்டு ஊர் முந்நூறும் பரிசிலர்க் குரியவாய்விட்டன; எஞ்சி நிற்பது குன்ற மொன்றே; அதனை நும்மூர்க்குக் கொண்டு செல்ல முடியாது. வேள் பாரியோடு யானும் என்போலும் புலவர்களுமே நும்மாற் கொண்டு செல்லத்தக்க நிலையில் உள்ளோம். எம்மால் நுமக்காவதோர் செயலுமில்லை; ஆதலால், நீவிர் மீண்டு செல்வதே தக்கது என்று இகழ்ந்து கூறியதுமாம். இரவலரைப் புரக்கும் இயல்பினராகிய மூவேந்தரும் இழிந்த செயலாகிய இரவலர் செயலைச் செய்ய விரும்பாரெனக் கபிலர் எண்ணி ஏமாற்றமடைகின்றார். கபிலர் கூறியது போலவோ, அது போல்வதொரு சூழ்ச்சியினையோ அவர்கள் செய்து பாரியைக் கொன்றனர் என்ப. 111. வேள் பாரி இப்பாட்டின்கண் கபிலர், மூவேந்தரையும் நோக்கிப் பாரியின் தோளாண்மையைப் புகழ்ந்து, “நுமக்கு இப்பறம்பு கொள்ளுதற்கரிது” என்றவர், அவ்வியப்பு நீங்கா வுள்ளத்தோடு அப்பறம்பு மலையை நோக்கி, “பறம்பு மலையே, நீ பாரியாற் காக்கப் படுதலால் நின்னை வேல் கொண்டு பாடும் விறலி யொருத்தி நின் வேந்தாகிய பாரியைப் பாடி வருவாளாயின் அவள் கொள்ளுதற்கு எளிமையாய் உள்ளாய்” என்று கூறு கின்றார். அளிதோ தானே பேரிருங் குன்றே வேலின் வேறல் வேந்தர்க்கோ வரிதே நீலத், திணை மலர் புரையு முண்கட் கிணை மகட் கெளிதாற் பாடினள் வரினே. (111) திணை : நொச்சி; துறை : மகண் மறுத்தல். மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது. உரை: அளிது பேரிருங் குன்று-இரங்கத்தக்கது பெரிய கரிய குன்றம்; வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிது - அது வேலான் வெல்லுதல் வேந்தர்க்கோ அரிது; நீலத்து இணை மலர் யுரையும் - நீலத்தினது இணைந்த மலரை யொக்கும்; உண்கண் கிணை மகட்கு-மையுண்ட கண்ணையுடைய கிணையையுடைய விறலிக்கு; எளிது-; பாடினள்வரின் - பாடினளாய் வரின் எ-று. அளிதோ வென்றது, வியப்பின் கண் வந்தது. பாடினளாய் வரின் என்ற கருத்து அவட்கும் அவ்வாறின்றித் தன் பெண்மை யால் மயக்கி வென்றுகோடல் அரிதென்பதாம். விளக்கம்: உள்ளதன் உண்மை கூறிப் பாராட்டுகின்றாராகலின், “பேரிருங் குன்றே” என்றார். கிணை மகட்கும் தன் பெண்மையால் மயக்கி வென்றுகோடல் அரிதென்றார். இதனால். பாரியை இரந்து ஒன்று கோடல் எளிதேயன்றி, எவரும் மறைமுக மாகவோ நேர்முகமாகவோ வென்று கோடல் என்பது அரிதென்றவாறாம். (111) 112. வேள் பாரி மூவேந்தருடைய சூழ்ச்சியால் வேள்பாரி இறந்தபின், சான்றோராகிய கபிலர், அவன் மகளிரை வேறொரு நல்ல காப்புள்ள இடத்தே சேர்ந்துவிட, ஆங்கே ஒரு திங்கட்குமேல் அம் மகளிர் அவர் பாதுகாப்பில் இருந்து வந்தனர். ஆயினும், அம் மகளிர்க்குப் பாரியை யிழந்த துயரும் பறம்பினைத் துறந்த வருத்தமும் பெருங்கலக்கத்தைத் தந்தன. ஒருநாளிரவு முழுத் திங்கள் தன் பானிலவைப் பொழிந்துகொண்டு வானத்தே திகழ்ந்தது. அதுகண்ட அம் மகளிர்க்கு வருத்தம் கையிகப்பதாயிற்று. அஃதொரு பாட்டாய் வெளிவந்தது. அஃது இப்பாட்டு. அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின் எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின் வென்றெறி முரசின் வேந்தரெம் 5 குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே. (112) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை. பாரி மகளிர் பாடியது. உரை : அற்றைத் திங்கள் - மூவேந்தரும் முற்றியிருந்த அற்றைத் திங்களின்; அவ் வெண்ணிலவில் - அவ் வெள்ளிய நிலாவின் கண்; எந்தையும் உடையேம் - எம்முடைய தந்தையையு முடையேம்; எம் குன்றும் பிறர் கொளார் - எம்முடைய மலையையும் பிறர் கொள்ளார்; இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவில்- இற்றைத் திங்களது இவ் வெள்ளிய நிலவின் கண்; வென்று எறி முரசின் வேந்தர் - வென்றறைந்த முரசினை யுடைய அரசர்; எம் குன்றும் கொண்டார் - எம்முடைய மலையையும் கொண்டார்; யாம் எந்தையும் இலம்- யாம் எம்முடைய தந்தையையு மிழந்தேம் எ-று. திங்களை மாத மென்பாரு முளர். ஒருவனை மூவேந்தரும் முற்றியிருந்தும், வஞ்சித்துக் கொன்றமையின் “வென்றெறி முரசின் வேந்த” ரென்றது, ஈண்டு இகழ்ச்சி குறிப்பு. விளக்கம் : தந்தையையுங் குன்றையு மிழந்து தனிமைத் துயருழக்கு மகளிர், இழவாமுன் இருந்த நிலையினையும் உடன் நினைந்து வருந்துமாறு தோன்ற, “அற்றைத் திங்கள்..........கொளார்” என்றார். “வென்றெறி முரசின் வேந்தர்” என்றது, நல்வழியால் வென்று முழக்குதற்குரிய முரசினை, அல்வழியால் பாரியைக் கொன்று முழக்குகின்றமை தோன்ற நின்றமையின், இகழ்ச்சிக் குறிப்பினை யுடையதாயிற்று. (112) 113. வேள் பாரி வேள் பாரிக்கு மகளிர் இருவர் உண்டு. அவன் மூவேந்தர் சூழ்ச்சியால் இறந்தபோது அவர்கள் மணப்பருவ மெய்தியிருந் தனராதலால், அவர்களைத் தக்க பாதுகாப்பமைந்த இடத்தில் வைத்துத் தமிழ்நாட்டு வேந்தர்க்குத் திருமணம் செய்விப்பது தமது கடனாமெனக் கருதி, வேள் பாரி இறந்ததும், கபிலர் அவர்களை யழைத்துச் செல்வராயினர். செல்பவர், பார்ப்பாரிடை வைத்த பொருட்கும், பார்ப்பார்க்கும் ஏதம் செய்தலாகா தென்ற அக்கால அரசியன் முறைப்படி அம் மகளிரைப் பார்ப்பாரிடை அடைக் கலப்படுத்தக் கருதிச் செலவு மேற்கொண்டார். அந்நாளில் பார்ப்பாரைத் தீண்டாமைப் பேய் பிடிக்கவில்லை. பறம்பு நாட்டைப் பிரியுங்கால், இது காறும் தமக்கு உணவும் உறையுளும் நல்கி யின்புறுவித்த பறம்பினது நன்றியினை அவரால் மறக்க முடியவில்லை. அதனால் அவருளத்தே பிரிவாற்றாமை தோன்றிப் பேதுறுவித்தது. நெஞ்சு கலங்கிற்று. புலம்பும் பெரிதாயிற்று. அப் புலம்புரையே இப் பாட்டு. மட்டுவாய் திறப்பவு மைவிடை வீழ்ப்பவும் அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி நட்டனை மன்னோ முன்னே யினியே 5 பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர் நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே. (113) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை. அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது. உரை : மட்டுவாய் திறப்பவும் - மதுவிருந்த சாடியை வாய் திறப்பவும்; மைவிடை வீழ்ப்பவும் - ஆட்டுக் கிடாயை வீழ்ப் பவும்; அட்டு ஆன்று ஆனா - அடப்பட்டு அமைந் தொழியாத; கொழுந் துவை - கொழுவிய துவையையும்; ஊன்- ஊனையு முடைய; சோறும் - சோற்றையும்; பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி - விரும்பிய பரிசே தரும் மிக்க செல்வம் முதிர்ந்து; நட்டனை மன் முன் - எம்மோடு நட்புச் செய்தாய் முன்பு; இனி - இப்பொழுது; பாரி மாய்ந்தென - பாரி இறந்தானாக; கலங்கிக் கையற்று - கலங்கிச் செயலற்று; நீர் வார் கண்ணேம் தொழுது - நீர் வார் கண்ணையுடையேமாய்த் தொழுது; நிற்பழிச்சிச் சேறும் - நின்னை வாழ்த்திச் செல்லுதும்; பெரும் பெயர்ப் பறம்பே - பெரிய புகழையுடைய பறம்பே; கோல் திரள் முன் கை குறுந்தொடி மகளிர் - கோற்றொழிலாகச் செய்யப்பட்ட திரண்ட குறிய வளையை யணிந்த முன்கையினையுடைய மகளிரது; நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்து - மணங் கமழும் கரிய கூந்தலைத் தீண்டுதற் குரியவரை நினைத்து எ-று. பறம்பே, பெருவளம் பழுனி நட்டனை முன்பு; இனி நாறிருங் கூந்தல் கிழவரைப் படர்ந்து சேறு மெனக் கூட்டுக. மன் கழிவின் கண் வந்தது. வாழியும், ஓவும், அசைநிலை. ஆனாக் கொழுந் துவை யென்பதற்கு விருப்பமமையாத கொழுந் துவை யெனினு மமையும். விளக்கம் : மட்டு -கள்; ஆகுபெயரால் அது நிறைந்திருக்கும் சாடிக் காயிற்று. இடையறவின்றி அடப்படுமாறு தோன்ற, “அட்டான்றானா” என்றார். பாரியோ மாய்ந்தனன்; யாமும் செல்கின்றேம்; நிற்கின்ற நீ, வேள்பாரி யின் பெருமையும் புகழும் உலக முள்ளளவும் நிலைபெற்றோங்க நிற்கின்றாயாதலின், நீ வாழ்வாயாக என்பார், “வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே” என்றார். தாம் செல்லுதற்கும் காரணம் இது வென்பார், “மகளிர்க் குரிய கிழவரைப் படர்ந்து செல்கின்றே” மென்றார். மணந்த கணவனாலன்றி மகளிர் கூந்தல் பிறரால் நீண்டப் படாதாகலின், அம்மரபு நோக்கி, “மகளிர் நாறிங் கூந்தற்கிழவரைப் படர்ந்” தென்றார். கொழுந் துவை, தன்னை உண்பார்க்கு மேன் மேலும் விருப்பத்தை மிகுவிக்கும் சுவையுடைய தென்றற்கு, “விருப்ப மமையாத கொழுந்துவை யெனினு மமையும்” என்றார் உரைகாரர். (113) 114. வேள் பாரி பாரி மகளிரை அழைத்துக்கொண்டு செல்லுங்கால், நெடிது சென்றவழியும் பறம்புமலை தோன்றி நிற்பக் கண்ட மகளிர், “யாம் இத்துணை நெடிது போந்தும் நம் பறம்பு நமக்குத் தன் தோற்றத்தினை வழங்காநின்றது” என வியந்து கூறக் கேட்ட கபிலர் மனம் நொந்து கூறுவார். “நெடிய புகழானாகிய பாரியது பறம்பு ஈண்டு நின்று காணினும் தோன்றும்; அவனுளனாகிய காலத்து யாண்டு நின்று நோக்கினும் புகழுருவாய்த் தோன்றும்; இப்போதோ ஏனை மலைகளைப் போல வெறுங்கட்புலனாய்த் தோன்று மளவாயிற்” றெனக் கூறுகின்றார். ஈண்டுநின் றோர்க்குந் தோன்றுஞ் சிறுவரை சென்றுநின் றோர்க்குந் தோன்று மன்ற களிறுமென் றிட்ட கவளம் போல நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல் 5 வாரசும் பொழுகு முன்றிற் றேர்வீ சிருக்கை நெடியோன் குன்றே. (114) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை. அவன் மகளிரைக் கொண்டு போங் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. உரை : ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் - இவ்விடத்து நின்றோர்க்கும் தோன்றும்; சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற - சிறிது எல்லைபோய் நின்றோர்க்கும் தோன்றும் நிச்சயமாக; களிறு மென்று இட்ட கவளம் போல - யானை மென்று போடப்பட்ட கவளத்தினது கோதுபோல; நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல் - மதுப்பிழிந்து போடப் பட்ட கோதுடைத்தாகிய சிதறியவற்றினின்றும்; வார் அசும் பொழுகும் முன்றில் - வளர்ந்த மதுச்சேறொழுகும் முற்றத்தை யுடைய; தேர் வீசு இருக்கை நெடியோன் குன்று - தேர் வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை எ-று. நெடியோன் குன்று தோன்று மென்றது, புகழான் உயர்ந்து காணாதார்க்கும் செவிப்புலனாகத் தோன்றும் அவனுளனாய காலத்து; இப்பொழுது பிற மலை போலக் கட்புலனாகத் தோன்றுமள வாயிற்றெனக் கையற்றுக் கூறியவாறாகக் கொள்க. விளக்கம் : “ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை, சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற” என்றது, மகளிர் கூறியதனைக் கொண்டு கூறியது. இதனால், இவ்வாறு தோன்றும் மலை பாரி உளனாய காலத்து யாண்டிருந் தோர்க்கும் புகழ் வடிவாய்க் காட்சி யளித்தது என்பது எய்த நின்றது. பாரியை நினைக்குந்தோறும் அவனது கொடை கபிலரது நெஞ்சில் எழுந்து இன்புறுத்தலின், “தேர்வீ சிருக்கை நெடியோன்” என்றார். பிழிந்திட்ட கோதுடைச் சிதறலினின்றும் அசும்பொழுகும் என்றது, பாரியில்லாமையாற் பொலிவற்றிருப்பினும் யாம் கண்டு கண்ணீர் விட்டுக் கலுழுமாறு தோன்றாநின்ற தென் றொரு குறிப்புத் தோற்றுவித்தது. (114) 115. வேள் பாரி வேள் பாரியோடு தாம் இருந்த காலத்து அம் மலையிடத்தே வீழும் அருவிகளின் இனிய காட்சியைக் கண்டு மகிழ்ந்த திறத்தை அவன்மகளிர் தமக்குள்ளே பேசிக்கொண்டனராக, அது கேட்ட கபிலர் வருந்திக் கூறுவாராய், “இக்குன்றம், முன்பு பாரியிருந்த காலத்தில், ஒரு சார் அருவிகள் ஒலிக்க, ஒருசார் தன்பால் வந்த பாணருக்குத் தரும் பொருட்டு வடிக்கப்படும் இனிய கள் அருவிபோலக் கற்களை யுருட்டிக் கொண்டோடும்; மூவேந்தர் பால் பகைகொண்டு மாய்ந்த பாரியின் குன்றம் இந்தச் சிறப்பை யிழந்ததுகாண்” என்று வருந்திக் கூறுகின்றார். ஒருசா ரருவி யார்ப்ப வொருசார் பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் வாக்க வுக்க தேக்கட் டேறல் கல்லலைத் தொழுகு மன்னே பல்வேல் 5 அண்ணல் யானை வேந்தர்க் கின்னா னாகிய வினியோன் குன்றே. (115) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை. அவன் மகளிரைக் கொண்டு போங் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. உரை : ஒரு சார் அருவி ஆர்ப்ப - ஒருபக்கம் அருவி ஆர்த் தொழுக; ஒருசார் - ஒரு பக்கம்; பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் - பாணருடைய மண்டைகள் நிரம்ப வார்க்க வேண்டி; வாக்க உக்க தேக்கள் தேறல் - வடிக்க உக்க இனிய கள்ளாகிய தேறல்; கல்லலைத் தொழுகும் - கல்லை யுருட்டி யொழுகும்; பல்வேல்- பல வேற்படையுடனே; அண்ணல் யானை வேந்தர்க்கு - தலைமை பொருந்திய யானையையு முடைய வேந்தர்க்கு; இன்னானாகிய இனியோன் குன்று - கொடியோனாகிய இனியோன் மலை; மன் - அது கழிந்தது எ-று. குன்று தேறல் கல்லலைத் தொழுகும், இனி அது கழிந்த தென்று கூட்டுக. அருவியும் அவனுளனாயின் உளதாவதென்பது கருத்து. மன், கழிவின்கண் வந்தது. குன்று தேறல் கல்லலைத் தொழுகுமென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. விளக்கம் : முன்னைப் பாட்டு, “நறவுப் பிழிந்திட்ட கோதுடைச் சிதறல், வாரசும் பொழுகும்” என்றதாக, இப்பாட்டு, பாணரது மண்டை நிறையுமாறு சொரியும் தேறல் கல்லலைத் தொழுகும் என்கின்றது. வேள் பாரி, வேந்தர்க்கு இன்னானாகியும் இரவலர்க்கு இனியனாகி யும் ஒழுகினமை தோன்ற, “வேந்தர்க்கு இன்னானாகிய இனியோன்” என்றார். மன், கழிவின்கண் வந்தது; இதனால், பாரியும் இல்லை; அருவியும் இல்லையாயிற்றென்பதாம், வழிந் தொழுகும் தேறலின் மிகுதி தோன்றக் “கல்லலைத் தொழுகும்” என்றார். பாணர்க்குப் பெய்தற்குச் சொரிந்த தேறலின் மிகுதி கல்லலைத் தொழுகு மென்றது, வேள்பாரி இரவலர்க்கு வரையாது வழங்கியும் மிக்கிருந்த அவனது செல்வம் வேந்தர் உள்ளத்தே பகைமை தோற்றுவித்து. அதன் வாயிலாக அவன் உயிரைக் கொண்டுபோயிற்றென இரங்கும் குறிப்புடையதாதலை யுணர்க. (115) 116. வேள் பாரி பாரி மகளிரைப் பார்ப்பாரிடத்தே அடைக்கலப்படுத்திய கபிலர்; அவர்களைத் தக்க அரச குமாரர்கட்கு மணம்புரிவித்தல் வேண்டித் தமிழகத்துக் குறுநில மன்னர் பலரையும் காணச் சென்றார். செல்கையில் அடிக்கடி பாரியினது பறம்புநாட்டை யும் பறம்பு மலையையும் காண்பாராயினர்; அந்நாடும் கெட்டுப் புன்புலமாயிற்று; மலையும் பொலிவிழந்தது.அவற்றின் காட்சி அவர் காணுந்தோறும் அவர்க்கு மிக்க வருத்தத்தைத் தந்தது. இந்நிலையில் ஒருகால் பறம்பு நாட்டைக் கண்டார். பாரியிருந்த காலத்தே நாட்டு மகளிர் வரைமே லேறியிருந்து நாட்டில் பாரியொடு பொருதல் வேண்டி வரும் வேந்தர்களின் குதிரை களை யெண்ணிப் பார்ப்பது வழக்கம்; இப்போது அஃதொழிந் தமையின் அவர்கள் அந்நாட்டு வழியே செல்லும் உமணர்கள் கொண்டேகும் உப்பு வண்டிகளை யெண்ணிப் பார்ப்பது கண்டார். அதனை இப்பாட்டின்கண் உரைத்துள்ளார். தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள்வரு மல்குல் ஏந்தெழின் மழைக்க ணின்னகை மகளிர் புன்மூசு கவலைய முண்மிடை வேலிப் 5 பஞ்சி முன்றிற் சிற்றி லாங்கட் பீரை நாறிய சுரையிவர் மருங்கின் ஈத்திலைக் குப்பை யேறி யுமணர் உப்பொ யொழுகை யெண்ணுப மாதோ நோகோ யானே தேய்கமா காலை 10 பயில்பூஞ் சோலை மயிலெழுந் தாலவும் பயிலிருஞ் சிலம்பிற் கலைபாய்ந் துகளவும் கலையுங் கொள்ளா வாகப் பலவும் கால மன்றியு மரம்பயம் பகரும் யாண ரறாஅ வியன்மலை யற்றே 15 அண்ண னெடுவரை யேறித் தந்தை பெரிய நறவிற் கூர்வேற் பாரிய தருமை யறியார் போரெதிர்ந்து வந்த வலம்படு தானை வேந்தர் பொலம்படைக் கலிமா வெண்ணு வோரே. (116) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை. அவன் மகளிரைக் கொண்டு போங் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. உரை : தீ நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த - இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த; குவளைக் கூம்பவிழ் முழு நெறி புரள்வரும் அல்குல் - செங்கழுநீரினது முகை யவிழ்ந்து புறவித ழொடித்த முழுப்பூவாற் செய்யப்பட்ட தழையசையும் அல்குலையும்; ஏந்தெழில் மழைக்கண் - மிக்க அழகையுடைய குளிர்ந்த கண்ணினையும்; இன்னகை மகளிர் - இனிய முறுவலை யுமுடைய மகளிர்; புல் மூசு கவலைய - புல் மொய்த்த கவலையையுடையனவாகிய; முள் மிடை வேலி - முள்ளால் நெருங்கிய வேலியையும்; பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் - பஞ்சு பரந்த முற்றத்தையுமுடைய சிறிய மனையிடத்தின்கண்; பீரை நாறிய சுரை இவர் மருங்கின் - பீர்க்கு முளைத்த சுரை படர்ந்த விடத்தில்; ஈத்திலைக் குப்பை ஏறி - ஈத்திலையை யுடைய குப்பையின்கண்ணே ஏறி; உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுப - உமணர் உப்புச் செலுத்தும் சகடத்தை யெண்ணுவர்; நோகோ யான் - நோவேன் யான்; காலை தேய்கமா - எனது வாழ்நாள் கெடுவதாக; பயில் பூஞ்சோலை மயில் எழுந் தாலவும் - பயின்ற பூவையுடைய சோலைக்கண் மயிலெழுந் தாடவும்; பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் - பயின்ற மலையின்கண்ணேயேறி முசுக்கலை தாவி யுகளவும்; கலையுங் கொள்ளாவாக - அம்முசுக்கலையும் நுகர்ந்து வெறுத்தலாற் கொள்ளாவாம் பரிசு; காலமன்றியும் மரம் பலவும் பயம் பகரும் - காலமன்றாகவும் மரங்கள் பலவும் காயும் பழமு முதலாயினவற்றை விளைந்து கொடுக்கும்; யாணர் அறாஅ வியன்மலை அற்று - புதுவருவாயொழியாத அகன்ற மலையைப் போலும்; அண்ணல் நெடுவரை ஏறி - தலைமையை யுடைய வுயர்ந்த வரையின் கண்ணேயேறி; தந்தை பெரிய நறவின் கூர்வேல் பாரியது - தம்முடைய தந்தையாகிய மிக்க மதுவினையும் கூரிய வேலினையுமுடைய பாரியது; அருமை யறியார் - பெறுதற்கருமையை யறியாராய்; போர் எதிர்ந்து வந்த - போரேற்று வந்த; வலம்படு தானை வேந்தர் - வென்றிப் பட்ட சேனையையுடைய அரசரது; பொலம் படைக் கலிமா எண்ணுவோர் - பொன்னாற் செய்யப்பட்ட கல முதலிய வற்றையுடைய மனஞ் செருக்கிய குதிரையை யெண்ணுவோர் எ-று . வியன்மலை யென்றது, அரை மலையை; நெடுவரை யென்றது உச்சி மலையை: இன்னகை மகளிர், நெடு வரை யேறி வேந்தர் கலிமாவை யெண்ணுவோர், இப்பொழுது ஈத்திலைக் குப்பையேறி உமணர் உப்பொய் ஒழுகையை எண்ணுவர், இதற்கு நோவேன் யான்; எனது வாழ்நாள் கெடுவதாக வென வினைமுடிவு செய்க. அற்றே யென்னு மேகாரம் அசைநிலை. வியன்மலை அத்தன்மைத்தெனப் பிறிதொரு தொடராக்கி உரைப்பினு மமையும். விளக்கம் : குவளைக் கூம்பவிழ் முழு நெறி யென்ற விடத்துக் குவளை - செங்கழுநீர்; செங்கழுநீரின் முகை யவிழ்ந்து புறவிதழொடிக்கப்பட்ட பூ ஈண்டு முழுநெறி யெனப்பட்டது. இனி, அடியார்க்கு நல்லார், “முழு நெறிக் குவளை”(சிலப்.2,14) என்றதற்கு இதழொடிக்கப் படாத குவளை யென்ற பொருள்பட, “இதழொடிக் கப்படாதெனவே செவ்வி கூறிற்று” என்று கூறி இவ்வடிகளை யெடுத்துக் காட்டினர். கூம்பு - முகை. பருத்தியிற் கொண்ட பஞ்சினை நூற்றல் மகளிர் செயலாதலின் “பஞ்சி முன்றில்” என்றார். பறம்பு நாட்டில் வாழும் மகளிர் இப்போது உமணர் செலுத்தும் சகடத்தை யெண்ணுதல் கண்டு கபிலர் இரங்குகின்றவர், பாரியிருந்து அரசுபுரிந்த காலத்தே இம்மகளிர் பாரியொடு போர் வேட்டு வந்த வேந்தருடைய போர்க் குதிரைகளை யெண்ணி விளையாடியது நினைந்து வருந்துகின்றார். பகைவேந்தர் வந்த வண்ணம் இருந்ததற்குக் காரணம் கூறுவார், “பாரியது அருமை யறியார் போரெதிர்ந்து வந்த வலம் படு தானை வேந்தர்” என்றார். அரை மலை - மலையின் அடிப்பகுதி. சோலை யில் மயிலெழுந்தால, சிலம்பில் கலை பாய்ந்துகள, மரங்கள் கால மன்றியும் பயம் பகரும் புதுவருவாய் ஒழியாத அரைமலை அத் தன்மைத்தாக, உச்சி மலையில் மகளிர் ஏறி வேந்தருடைய குதிரை களை யெண்ணுவர் என்றும் உரை கூறுவ துண்டென்பார், “வியன் மலை அத்தன்மைத் தெனப் பிறிதொரு தொடராக்கி உரைப்பினு மமையும்” என்றார். வலம்படு தானை வேந்த ரென்றது, வலம்படு தானையினை யுடையராகியும், பாரியது அருமை யறியாது போரெதிர்ந்தமையின் கெட்டனரென்பது விளங்கநின்றது. பாரியைத் தந்தை யென்றார், தந்தைபோல நாட்டு மக்களை அவன் பேணிப் புரந்தமை தோன்ற. 117. வேள் பாரி பாரியது நாடு புன்புலமானது கண்டு வருந்தி வந்த கபிலர் அவன் மகளிர் இருந்த பார்ப்பார் மனையடைந்து கண்டது கூறலுற்றார்; கூறுபவர், “இம் மகளிர்க்குத் தந்தையாகிய வேள் பாரியது நாடு அவன் உளனாகிய காலத்தில் அவன் செங் கோன்மையால் மழை பிழையாது; சான்றோர் பலர் நிறைந் திருந்தது; அத்தகைய நாடு இன்று அவனை இழந்து புல்லிதாயிற்” றென இரங்கிப் பாடினர். அப் பாட்டே இது. மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும் தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் வயலக நிறையப் புதற்பூ மலர மனைத்தலை மகவை யீன்ற வமர்க்கண் 5 ஆமா நெடுநிரை நன்பு லாரக் கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப் பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும் 10 ஆய்தொடி யரிவையர் தந்தை நாடே. (117) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை. அவன் மகளிரைக் கொண்டு போங் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. உரை : மைம் மீன் புகையினும் - சனிமீன் புகைகளோடு கூடிப் புகையினும்; தூமம் தோன்றினும் - எல்லாத் திசையினும் புகை தோன்றினும்; தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும் -தென்றிசைக்கண்ணே வெள்ளி போக்குறினும்; வயலகம் நிறைய - வயலிடம் விளைவு மிக; புதல் பூ மலர - புதலிடத்துப் பூ மலர; மனைத்தலை மகவை ஈன்ற அமர் கண் ஆமா நெடு நிரை - மனையிடத்துக் குழவியை யீன்ற மேவிய கண்ணை யுடைய ஆமாவினது நெடிய நிரை; நன் புல் ஆர - நல்ல புல்லை மேய; கோல் செம்மையின் சான்றோர் பல்கி - கோல் செவ்விதாகலின் அமைந்தோர் பலராக; பெயல் பிழைப்பு அறியாப் புன் புலத்தது - மழை பிழைப்பறியாத புல்லிய நிலத்தின்கண்ணது; பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரைய - இளைய வெருகினது கூரிய பல்லை யொப்ப; பாசிலை முல்லை முகைக்கும் - பசிய இலையையுடைய முல்லை முகைக்கும்; ஆய் தொடி அரிவையர் தந்தை நாடு - நுண்ணிய தொழிலை யுடைய வளையினை யணிந்த மகளிரையுடைய தந்தை நாடு எ-று. பல்கி யென்பதனைப் பல்க வெனத் திரிக்க. அரிவையர் தந்தை நாடு, பெயல் பிழைப்பறியாப் புன்புலத்தது வெனக் கூட்டுக. என்றதனாற் போந்தது. புன்புலத்ததாயிருந்ததே! அது பெயல் பிழைப்பறியாமை கோல்செம்மையினான் உளதாய தன்றே! அவ்வாறு கோல் செவ்விதாக நிறுத்தியவனை இழப்பதே! யென்று அவன் நாடு கண்டு இரங்கியவாறாகக் கொள்க. விளக்கம் : மைம்மீன் - சனி; சனியைக் கரியவன் என்றும் கூறுப. “கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (சிலப்.10.102-3) என்பதற்கு உரை கூறிய அடியார்க்கு நல்லார், “கோள்களிற் சனிக்கோள் இடபம் சிங்கம் மீன மென்னும் இவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோ ளெழினும், விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக் கண்ணே பெயரினும்” என்பது. “கரியவன் - சனி; புகைக்கொடி; வட்டம் - சிலை - நுட்பம் - தூம மென்னும் கோள்கள் நான்கினும் தூமக்கோள்” என்றும் கூறுவது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. கோல் செம்மையுறாதவழிச் சான்றோர் இராராகலின், “கோல் செம்மையின் சான்றோர் பல்கி” என்றார். வெருகு - பூனை. ஆய் தொடியரிவைய ரென்றது - பாரி மகளிரை. சான்றோர் பல்கிப் பெயல் பிழைப்பறியாத நாடு இன்று பாரியை யிழந்து, அந் நலமுற்றும் கெட்டுப் புன்புல மாயிற்றென இரங்கியவாறாம், முகைக்கு மென்பது முகை யென்னும் பெயரடியாகப் பிறந்த பெயரெச்ச வினை. (117) 118. வேள் பாரி இப் பாட்டின்கண் சான்றோராகிய கபிலர் பறம்பு நாட்டு வழியே வருபவர், அதன் அழிவு கண்டு, “அறைகளையும் பொறைகளையும் இடையிடையே அமைய இணைத்தமைத்த கரையையுடைய சிறு குளம் மிக்க நீர் நிரம்பிப் பாதுகாப்பார் இன்மையின் கரையுடைந்து வீற்று வீற்றோடி யழிவதுபோல், பல்வகைக் குடிகள் நிறைந்து பாரியாற் காக்கப்பட்டிருந்த பறம்பு நாடு, அவன் இறந்ததும் கெட்டழிந்து போயிற்றே” என வருந்திப் பாடியுள்ளார். அறையும் பொறையு மணந்த தலைய எண்ணாட் டிங்க ளனைய கொடுங்கரைத் தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ கூர்வேற் குவைஇய மொய்ம்பிற் 5 றேர்வண் பாரி தண்பறம்பு நாடே. (118) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை. அவன் மகளிரைக் கொண்டு போங் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. உரை : அறையும் பொறையும் மணந்த தலைய - பாறையும் சிறு குவடும் கூடிய தலையை யுடையவாகிய; எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரை - எட்டாம் பக்கத்துப் பிறைபோலும் வளைந்த கரையை யுடைத்தாகிய; தெண்ணீர்ச் சிறு குளம் கீள்வது - தெளிந்த நீரையுடைய சிறிய குளம் பாதுகாப்பா ரின்மையின் உடைவது போலும்; கூர் வேல் குவைஇய மொய்ம்பின் - கூரிய வேலையேந்திய திரண்ட தோளை யுடைய; தேர் வண் பாரி -தேர்வண்மையைச் செய்யும் பாரியது; தண் பறம்பு நாடு - குளிர்ந்த பறம்பு நாடு எ-று. நாடு குளங் கீள்வதென இடத்து நிகழ் பொருளின்றொழில் இடத்து மேலேறி நின்றது. மாதோ: அசைநிலை. விளக்கம் : அறைகளையும், பொறைகளையும் இடையிடையே கரையாக அமையுமாறு பிறை வடிவில் ஏரிகட்குக் கரையமைக்கும் முறை பண்டுதொட்டே வருவதென்பது இதனாலும், மலைநாட்டு ஏரிகளைக் கண்டும் அறியலாம். அறை - பாறை. பொறை - சிறுகுவடு. சிறு குளம் என்றாராகலின், அதற்கேற்பக் கரையைப் “பாதுகாப்பார் இன்மை யின்” என்றார். உள்வழி, கரை கீள்வதற் கிடந் தாராரென வறிக. சிறு குளங்கள் நீர் நிரம்புங்காலத்து அதன் கரைகளைக் காவலர் இருந்து காக்கும் மரபு இன்றும் உண்டு. பண்டும் உண்டென்பதை, “சிறுகோட்டுப் பெருங்குளங் காவலன் போல, அருங்கடி யன்னையுந் துயில்மறந் தனளே” (அகம். 252) என்று சான்றோர் கூறுதல் காண்க. (118) 119. வேள் பாரி பறம்பு நாட்டின் அழிவு கண்டு வருந்தும் கபிலர், முன்பு அது புளிங்கறியும் தினையாகிய புதுவருவாயுமுடையதாய் விளங்கி யிருந்ததும், வேள் பாரி, நெடுஞ்சுரத்து நின்ற தனி மரம்போல் இரவலர்க்குப் பெருவண்மை புரிந்தொழுகியதும் நினைந்து, இப் பாட்டின்கண் கையற்றுப் பாடியுள்ளார். கார்ப்பெய றலைஇய காண்பின் காலைக் களிற்றுமுக வரியிற் றெறுழ்வீ பூப்பச் செம்புற் றீயலி னின்னளைப் புளித்து மென்றினை யாணர்த்து நந்துங் கொல்லோ 5 நிழலி னீளிடத் தனிமரம் போலப் பணைகெழு வேந்தரை யிறந்தும் இரவலர்க் கீயும் வள்ளியோ னாடே. (119) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை. அவன் மகளிரைக் கொண்டு போங் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. உரை : கார்ப்பெயல் தலைஇய - கார்காலத்து மழை பெய்து மாறிய; காண்பு இன் காலை - காட்சியினிய காலத்து; களிற்று முகவரியின் - களிற்று முகத்தின்கண் புகர் போல; தெறுழ் வீ பூப்ப - தெறுழினது மலர் பூப்ப ; செம்புற்று ஈயலின் - செம்புற் றின்கண் ஈயலை; இன் அளைப் புளித்து - இனிய மோரோடு கூட்டி அடப்பட்ட புளிங்கறியை யுடைத்து; மென்றினை யாணர்த்து - மெல்லிய தினையாகிய புதுவருவாயை யுடைத்து முன்பு; நந்துங்கொல் - இனி அது கெடுங்கொல்லோ; நிழலில் நீளிடைத் தனி மரம் போல - நிழலில்லாத நெடிய வழிக்கண் நின்ற தனிமரத்தை யொப்ப; பணை கெழு வேந்தரை இறந்தும் - முரசையுடைய அரசரின் மிகுத்தும்; இரவலர்க் கீயும் வள்ளி யோன் நாடு - இரவலர்க்கு வழங்கும் வண்மையை யுடைய வனது நாடு எ-று. பூப்ப வென்னும் வினையெச்சம் இன்னளைப் புளித் தென்னும் குறிப்பொடு முடிந்தது. வள்ளியோன் நாடு இன்னளைப் புளித்து; யாணர்த்து; அது நந்துங் கொல்லோ வெனக் கூட்டுக. தெறு ழென்றது, காட்டகத்த தொரு கொடி; புளிமா வென் றுரைப்பாரு முளர். விளக்கம் : நீரின்மையான் வாடி வதங்கிப் பொலிவழிந்திருக்கு கானம், கார்ப்பெயல் பெய்தவிடத்து, தழைத்துப் பூத்து வண்டினம் பாட, வரி நுணல் கறங்க, தெள்ளறல் பருகிய மானினம் துள்ளி விளையாடக் காண்பார்க்கு இனிய காட்சி வழங்குதலின், “கார்ப்பெயல் தலை இய காண்பின் காலை” யென்றார். பிறரும், “பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு, வான்றளி பொழிந்த காண்பின் காலை” (நற்.264) என்பது காண்க. புளிச் சோற்றை ஈயல் பெய்து அடும் பண்டையோர் மரபு, “வரகின் அவைப்புமா ணரிசி யொடு, கார்வாய்ப் பொழிந்த வீர்வாய்ப் புற்றத், தீயல்பெய் தட்ட வின்புளி வெஞ்சோறு” (அகம். 394) என்று சான்றோர் கூறுமாற்றாலும் அறியப்படும். ஈயல் பெய் தடப்படும் புளிச் சோற்றுக்கு வேண்டப்படும் இன் அளை, ஆட்டின் பழுக்கக் காய்ச்சிய பாலானாகிய தயிர் என்று ஈண்டுக் காட்டிய அகப்பாட்டு “சிறுதலைத் துருவின் பழுப்புறு விளைதயிர்” என்று கூறுகிறது. (119) 120. வேள் பாரி பாரி மகளிரை நல்ல பாதுகாப்புடைய இடத்துக்குக் கொண்டேகும் கபிலர், பறம்பு நாட்டின் வளத்தைக் கண்டு, இனி இவ் வளஞ்சிறந்த நாடு, பாரி யிறந்தமையின் காப்பாரின்றிக் கெட்டழியும் போலும் என வருந்திப் பாடியுள்ளார். வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவற் கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரத்துப் பூழி மயங்கப் பலவுழுது வித்திப் பல்லி யாடிய பல்கிளைச் செவ்விக் 5 களைகால் கழாலிற் றோடொலிபு நந்தி மென்மயிற் புனிற்றுப்பெடை கடுப்ப நீடிக் கருந்தாள் போகி யொருங்குபீள் விரிந்து கீழு மேலு மெஞ்சாமைப் பலகாய்த்து வாலிதின் விளைந்த புதுவர கரியத் 10 தினைகொய்யக் கவ்வை கறுப்ப வவரைக் கொழுங்கொடி விளர்க்காய் கோட்பத மாக நிலம்புதைப் பழுனிய மட்டின் றேறல் புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து நறுநெய்க் கடலை விசைப்பச் சோறட்டுப் 15 பெருந்தோ டாலம் பூசன் மேவர வருந்தா யாணர்த்து நந்துங் கொல்லோ இரும்பல் கூந்தன் மடந்தையர் தந்தை ஆடுகழை நரலுஞ் சேட்சிமைப் புலவர் பாடி யானாப் பண்பிற் பகைவர் 20 ஓடுகழற் கம்பலை கண்ட செருவெஞ் சேஎய் பெருவிற னாடே. (120) திணை : பொதுவியல்; துறை : கையறுநிலை. அவன் மகளிரைக் கொண்டு போங் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. உரை : வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல் - வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தையுடைய சிவந்த மேட்டு நிலத்து; கார்ப் பெயல் கலித்த பெரும்பாட்டு ஈரத்து - கார்காலத்து மழையான் மிகுந்த பெரிய செவ்வியையுடைய ஈரத்தின்கண்; பூழி மயங்கப் பல உழுது வித்தி - புழுதி கலக்கப் பல சால்பட வுழுது வித்தி; பல்லி ஆடிய பல்கிளைச் செவ்வி - தாளியடிக் கப்பட்ட பல கிளையையுடைய செவ்வியின்கண்; களை கால் கழாலின் - களையை யடியினின்றும் களைதலான்; தோடு ஒலிபு நந்தி - இலை தழைத்துப் பெருகி; மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப - மெல்லிய மயிலினது ஈன்றணிய பேடையை யொப்ப; நீடி - ஓங்கி; கருந் தாள் போகி - கரிய தண்டு நீண்டு; ஒருங்கு பீள் விரிந்து - எல்லாம் ஒருங்கு சூல் விரிந்து; கீழும் மேலும் எஞ்சாமை பல காய்த்து - கதிரினது அடியும் தலையும் ஒழியாமல் மிகக் காய்த்து; வாலிதின் விளைந்த - சீரிதாக விளைந்த; புது வரகு அரிய - புதிய வரகை யறுக்க; தினை கொய்ய - தினையை யரிய; கவ்வை கறுப்ப - எள்ளிளங் காய் கறுப்ப; அவரைக் கொழுங் கொடி விளர்க்காய் கோட் பதமாக - அவரையினது கொழுவிய கொடியின்கண் வெள்ளைக் காய் அறுக்கும் செவ்வியாக; நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் - நிலத்தின்கட் புதைக்கப்பட்ட முற்றிய மதுவாகிய தேறலை; புல்வேய் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து- புல்லாலே வேயப் பட்ட சிறியமனையின்கண் குடியுள்ள இடந்தோறும் நுகரக் கொடுக்க; நறு நெய்க் கடலை விசைப்ப - நறிய நெய்யிலே கடலை துள்ள; சோறு அட்டு - சோற்றை யட்டு ஊட்டுதற்கு; பெருந்தோள் தாலம் பூசல் மேவர - பெரிய தோளையுடைய மனையாள் கலம் பூசுதலைப் பொருந்த; வருந்தா யாணர்த்து - வருந்த வேண்டாத புதுவருவாயை யுடைத்து முன்பு; நந்துங் கொல் - இனியது கெடும் போலும்; இரும்பல் கூந்தல் மடந்தையர் தந்தை - கரிய பலவாகிய கூந்தலையுடைய மடந்தையர் களுக்குத் தந்தையாகிய; ஆடு மழை நரலும் சேட்சிமை - அசைந்த மூங்கில் இழைத்தொலிக்கும் உயர்ந்த உச்சியை யுடைய; புலவர் பாடி ஆனாப் பண்பின் - புலவர் பாடப் பட்டமையாத தன்மையையுடைய; பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட - பகைவரது புறங்கொடுத்தோடும் வீரக் கழலினது ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டு நின்ற; செரு வெஞ் சேஎய் பெருவிறல் நாடு - போரை விரும்பிய சேயை யொக்கும் பெரிய வென்றியை யுடையவனது நாடு எ-று. வித்தி ஆடிய செவ்வி யென இயையும். நந்தி யென்பது முதலாய வினையெச்சங்கள் விளைந்த வென்னும் பெயரெச்ச வினையோடும், அரிய வென்பது முதலாக மேவர வென்ப தீறாக நின்ற வினையெச்சங்கள் யாணர்த் தென்னும் குறிப்பு வினை யோடும் முடிந்தன. பகர்ந் தென்பது பகர வெனத் திரிக்கப் பட்டது. விசைப்பச் சோறட்டு மேவர வென இயையும். செரு வெஞ்சேஎய் பெருவிறலது சேட்சிமையையுடைய நாடு யாணர்த்து; அது நந்துங்கொல்லோ எனக் கூட்டுக. பெருந்தோ ளென்பது பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. வெப்புள் என வெம்மைக்கு அதுவும் ஒரு வாய்பாடாய் நின்றது. வெம்மை உள்ளும் முதிர்ந்த வெனினு மமையும். விளக்கம் : பல சால்பட வுழுதலால் நல்ல புழுதி தோன்றி எரு வேண்டாதே மிக்க பயனை விளைவிக்குமாதலின், “பூழி மயங்கப் பலவுழுது” என்றார்; “தொடிப்புழுதி கஃசா வுணக்கிற் பிடித்தெருவும், வேண்டாது சாலப் படும்”(குறள். உழவு-7) என்பர் திருவள்ளுவர். வரகுக் கொல்லைகளில் உண்டாகும் ஒருவகைக் களையைப் பல்லி யென்றே இக்காலத்தும் வழங்குகின்றனர். அது வரகுபோலவே இருப்பினும் பல்போலும் வெள்ளிய பூக்களையுடையதாகும். அவரையின் உள்ளிருக்கும் பரலை ஈண்டுக் கடலை யென்றார். தாலம் பூசல் - அகன்ற கலமாகிய தாலத்தே சோற்றை வாங்கிப் பிசைந்துண்டல். புலவரது புல வெல்லையைக் கடந்த புகழுடையனாகலின், பாரியின் புகழ்க்குரிய பண்புகளை, “புலவர் பாடி யானாப் பண்பு” என்றார். பகைவர் புறந்தந் தோடு மிடத்து, அவரது கம்பலை கண்டு, இத்தகைய மறமானமில்லாத மள்ளரொடு பொருதல் தன் மறமாண்புக் கிழுக்காதலின், பாரி நாணமுற்று, அவர் பின்னே செல்வ திலனாகலின், “கம்பலை கண்ட செருவெஞ் சேய்” என்றதற்கு, “ஆரவாரத்தைக் கேட்டு நாணிப் பின் செல்லாது கண்டு நின்ற” செரு வெஞ் சேய் என்று உரை கூறினார். பெருந்தோளென்றது - அடையடுத்துநின்ற சினையிற் கூறும் முதலறி கிளவி; அற்றாயினும் உரைகாரர், தொடர் மொழியாகக் கொண்டு, பெருந் தோளையுடையாளென விரித்தலின், “பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை” யென்றார். 121. மலையமான் திருமுடிக்காரி திருக்கோவலூர்க்கு மேற்கே பெண்ணையாற்றின் தென் கரைப் பகுதியும் தென்பகுதியும் பண்டை நாளில் மலாடு என்ற பெயரால் வழங்கப்பெற்றுவந்தது. அதற்குக் கோவலூரே தலைநகர். கபிலர் காலத்தே அக் கோவலூரிலிருந்து ஆட்சிபுரிந்த வேந்தன் திருமுடிக்காரி யென்பான். இவன் கடையெழு வள்ளல் களுள் ஒருவன். இவனது குதிரைக்கும் இவன் தன் பெயரே வைத்துப் பேணினன். இதனை “காரிக் குதிரைக் காரி” (சிறுபாண். 110) என்றும், “காரியூர்ந்து பேரமர் கடந்த, மாரியீகை மலையன்” (புற. 158) என்றும் சான்றோர் கூறுவர். இதனால் பண்டை நாளைத் தலைமக்கள் தம் பெயரையே தாம் இவர்ந்து பொரும் குதிரைக்கும் இட்டுப் போற்றுவ ரென்பதும் விளக்க முறுகிறது. செங்கைமாவின் தெற்கே பெண்ணையாற்றின் தென்மேற்கிலுள்ள முள்ளூர் இக் காரிக் குரியதாய்மிக்க பாதுகாப்புடன் விளங்கிற்று.ஒருகால், அதனைக் கைப்பற்றக்கருதி வடநாட்டு ஆரிய மன்னர் பெரிய வேற்படையொடு போந்து முற்றுகையிட்டனர். அதனை யறிந்த காரி, கோவலூரினின்றும் சென்று தன் வேற்படை கொண்டு தாக்கினானாக,அவ்வாரியர் கூட்டம் அரியேற்றின் முன் நரிக்கூட்டமென அஞ்சி நடுங்கி யோடிவிட்டது என்பார், “ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப், பலருடன் கழித்த வொள்வாள் மலையன, தொருவேற் கோடி யாங்கு” (நற்.170) என்று சான்றோர் கூறியுள்ளனர். இவன் புலவர் பாணர் முதலிய இரவலர் பலர்க்கும் களிறும் தேரும் பல நல்கிப் பெரும் புகழ் விளைத்தான். இவனைக் காரி யென்றும் , மலைய மான் என்றும் கோவற்கோமான் என்றும் கூறுவர். “துஞ்சாமுழவிற் கோவற்கோமான் நெடுந்தேர்க் காரி” (அகம்.35) யென்றும், “முரண் கொள் துப்பின் செவ்வேல் மலையன்” (குறுந்.312) என்றும் கூறுதல் காண்க. இத்துணைப் புகழ் படைத்த மலையன் தமிழ்வேந்தர் மூவர்பாலும் ஒத்த நட்புக்கடம் பூண்டு அவரவர்க்கும் வேண்டுங்கால் உதவிபுரிந்துள்ளான். கபிலர் பாலும் பேரன்புடையன். இவனது கோவலூரில் வாழ்ந்த பார்ப்பாரிடத்திற்றான் கபிலர் பாரி மகளிரை அடைக்கலப் படுத்திருந்தார். ஒருகால் கபிலர், திருமுடிக்காரியைக் காணச் சென்றார். மூவேந்தரையும் ஒப்பக் கருதும் கருத்தால் அவன் ஏனைப் புலவரோ டொப்பக் கபிலரையும் கருதி வேண்டும் சிறப்பினைச் செய்தான். அக்காலை அவர், “வேந்தே, யாவர்க்கும் ஈதல் எளிது; ஆயினும், ஈத்தது கொள்ளும் பரிசிலரது வரிசை யறிதலேயரிது. ஆதலால், புலவர்பால் வரிசை நோக்காத பொதுவாக நோக்கு தலை யொழிக” என இப் பாட்டின்கண் வற்புறுத்துகின்றார். ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ வரிதே பெரிதும் ஈத லெளிதே மாவண் டோன்றல் 5 அதுநற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே. (121) திணை: பொதுவியல்; துறை: பொருண்மொழிக் காஞ்சி. மலையமான் திருமுடிக் காரியைக் கபிலர் பாடியது உரை : ஒருதிசை ஒருவனை உள்ளி - ஒருதிசைக்கண் வள்ளியோ னாகிய ஒருவனை நினைந்து; நாற்றிசைப் பரிசில் மாக்கள் பலரும்வருவர் - நான்கு திசையினுமுள்ள பரிசின் மாக்கள் பலரும் வருவர்; வரிசைஅறிதல் அரிது - அவர் வரிசை யறிதல் அரிது; ஈதல் பெரிதும் எளிது; கொடுத்தல் மிகவும் எளிது- மா வண் தோன்றல் - பெரிய வண்மையையுடைய தலைவ; அது நற்கு அறிந்தனை யாயின் - நீ அவ் வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின்; புலவர்மாட்டு பொதுநோக்கு ஒழிமதி -அறிவுடை யோரிடத்து வரிசை கருதாது ஒருதரமாகப் பார்த்தலைத் தவிர்ப்பாயாக எ-று. விளக்கம் : பரிசின்மாக்கள் பலரும் வருவர் என்றவிடத்து, பலரும் என்றதனால், அவருள் வல்லவரும் மாட்டாதவரு மெனப் பலரும் இருப்பது பெறப்படும். பரிசிலர் என்ற முறையில் மாட்டாதவரோ டொப்ப வல்லவரையும் வைத்து நோக்குதல் மடவோர் செயலாத லால் அறிவுடையோர் வரிசையறிந் தீதல்வேண்டும் என்றதற்கு “ஈதல் எளிது; வரிசை யறிதல் அரிது” என்றார். “புலமிக் கவரைப் புலமையறிதல், புலமிக்க வர்க்கே” இயலுவ தொன்றாதலின் வரிசை யறிவது “அரிதாயிற்று” “பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வர் பலர்” (குறள்.528) என்று திருவள்ளு வனாரும் கூறுதல் காண்க. (121) 122. மலையமான் திருமுடிக்காரி திருமுடிக்காரி தன் வண்மையிற் சலியாதிருத்தலைக் கண்ட கபிலர் பெருவியப்புற்று, “திருமுடிக்காரி, நின் நாடு கடலாலும் கொள்ளப்படாது; பகைவேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப் படாது; ஆயினும் அஃது அந்தணர்க்குக் கொடைப் பொரு ளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்துக்குக் காரணம் அறியேன்” என்று இப் பாட்டிற் குறித்துள்ளார். கடல்கொளப் படாஅ துடலுந ரூக்கார் கழல்புனை திருந்தடிக் காரிநின் னாடே அழல்புறந் தரூஉ மந்தண ரதுவே வீயாத் திருவின் விறல்கெழு தானை 5 மூவரு ளொருவன் றுப்பா கியரென ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி வாழ்த்தினர் வரூஉ மிரவல ரதுவே வடமீன் புரையுங் கற்பின் மடமொழி அரிவை தோளள வல்லதை 10 நினதென விலைநீ பெருமிதத் தையே. (122) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. மலையமான் திருமுடிக் காரியைக் கபிலர் பாடியது. உரை : கடல் கொளப்படாது - கடலாற் கொள்ளப்படாது; உடலுநர் ஊக்கார் - அதனைக் கொள்ளுதற்குப் பகைவர் மேற் கொள்ளார்; கழல் புனை திருந்தடி காரி - வீரக்கழலணிந்த இலக்கணத்தால் திருந்திய நல்ல அடியையுடைய காரி; நின் நாடு- நினது நாடு; அழல் புறந்தரூஉம் அந்தணரது - அது வேள்வித்தீயைப் பாதுகாக்கும் பார்ப்பாருடையது; வீயாத் திருவின் விறல் கெழு தானை - கெடாத செல்வத்தினையும் வென்றி பொருந்திய படையையுமுடைய; மூவருள் ஒருவன் துப்பாகியர் என - மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டு மென்று; ஏத்தினர் தரூஉம் கூழ் - அம் மூவர்பானின்றும் வந்தோர் தனித்தனி புகழ்ந்து நினக்குத் தரும் பொருள்; நும் குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலரது - நுமது குடியை வாழ்த் தினராய் வரும் பரிசிலருடையது; வட மீன் புரையும் கற்பின் - ஆதலால் வடதிசைக்கண் தோன்றும் அருந்ததியை யொக்கும் கற்பினையும்; மட மொழி - மெல்லிய மொழியினையுமுடைய; அரிவை தோள் அளவு அல்லது - அரிவையுடைய தோள் மாத்திரையல்லது; நினது என இலை - நின்னுடையதென்று சொல்ல ஒன்றுடையை யல்லையா யிருக்கவும்; நீ பெருமிதத்தை - நீ பெரிய செருக்கினை யுடையையா யிராநின்றாய், இதற்குக் காரண மென்னையோ எ-று. ஏத்தினர் தரூஉ மென்று பன்மையாற் கூறியது, அவ்வேந்தன் அமைச்சரை;“மூவருள் யானொருவன்; எனக்குத் துப்பாகியர்” என அம்மூவரும் ஏத்தினார் தரூஉ மென் றுரைப்பினு மமையும். நாடு அந்தணரது; கூழ் இரவலரது; அரிவை தோள் அளவல்லதை நினக்கு உரித்தாகக் கூறுதற்கு யாதும் இல்லை யாயிருந்தது; நீ பெருமிதத்தை யுடையையாயிருந்தாயென வியந்து கூறியவாறு. விளக்கம் : காரியின் மலைநாடு உள்நாட்டதாகலின், “கடல்கொளப்படாது” என்றும், முடிவேந்தர் மூவரும் துணையாக விரும்பும் பெருவலி படைத்தவனாதலின், “உடலுநர் ஊக்கார்” என்றும் கூறினார். திருந்தடி என வாளாது கூறினமையின், “இலக்கணத்தால் திருந்திய அடி”என உரை கூறப்பட்டது. துணை வலியாக வேண்டுமென வேந்தர் விடுப்ப வரும் பொருளைக்கொண்டு இரவலர் பசிப்பிணி தீர்த்தலின், அதனைக் “கூழ்” என்றார். மூவருள் ஒருவன் துப்பாகியர் என்ற தற்கு “மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டும்” எனப் பொருள் கூறினமையின், வேறு வகையாகக் கூறப்படும் பொருளை, “மூவருள்..... அமையும் ” என்றார். பண்டைத் தமிழ்மக்கள் தம் தாளாற்றலால் ஈட்டிய பொருளை இரவலர்க்கீத்துப் பெறும் புகழையே புகழாகக் கருதுவர்; தாயத்தாற் பெற்ற செல்வத்தை வழங்கிப்பெறும் புகழை விரும்புவதிலர். இந்நூல் முழுவதும் தாளாற்றலாற் பெற்ற பொருளே பரிசிலர்க்கு வழங்கப்படுவதை யெடுத்தோதுவதைப் படிப்பவர் நன்கறிவர். பொருளை யீட்டியது போலத் தம் ஆண்மை நலத்தால் மணந்து கொள்ளப்பட்ட ராயினும், மகளிர் வாழ்க்கைத் துணையாகக் கருதப்பட்டமையின், கொடைக் குரியராகார் என்பது தமிழ் நூன் மரபு. அதனால், தன்னிற் பிரித்துப் பிறர்க்கு நல்கக்கூடிய பொருளன்மையின், “அரிவை தோளள வல்லதை, நினதென இலை” என்றார். மனைவியை விலைப் பொருளாகக் கருதி விற்றலும் பிறர்க் கீத்தலும் வடநூன்மரபு. 123. மலையமான் திருமுடிக்காரி ஒருகாற் புலமை நலஞ் சான்ற நல்லோரிடையே வள்ளல் களின் கொடைநலம் பற்றிப் பேச்சு நிகழ்ந்தபோது, நாநலம் சிறந்த கபிலர், “நாட்காலையிற் கள்ளுண்டு களிக்குங்கால் இரவலர் புகழுரை கேட்டு அவர்க்குத் தேர்கள் பலவற்றை வழங்குவது எத்தகைய வள்ளல்கட்கும் எளிதில் இயல்வதாம்; ஆகவே, அவரது கொடை, கள் மகிழ்ச்சியில் நிகழ்வதனால் செயற்கை யாம். மலையமான் திருமுடிக்காரி களியாப் போழ்தில் வழங்கும் தேர்களை நோக்கின், அவை அவனது முள்ளுர் மலையிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகும். ஆகவே, இஃது இயற்கைக் கொடை யெனத் தெளிமின்” என்று இப்பாட்டால் எடுத்துரைக்கின்றார். நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின் யார்க்கு மெளிதே தேரீ தல்லே தொலையா நல்லிசை விளங்கு மலையன் மகிழா தீத்த விழையணி நெடுந்தேர் 5 பயன்கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி யுறையினும் பலவே. (123) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. மலையமான் திருமுடிக் காரியைக் கபிலர் பாடியது. உரை : நாட்கள் உண்டு - நாட் காலையே மதுவை யுண்டு; நாள் மகிழ் மகிழின் - நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின்; தேர் ஈதல் யார்க்கும் எளிது - தேர் வழங்குதல் யாவர்க்கும் எளிது; தொலையா நல்லிசை விளங்கும் மலையன் - கெடாத நல்ல புகழ் விளங்கும் மலையன்; மகிழாது ஈத்த மது நுகர்ந்து மகிழாது வழங்கிய; இழை யணி நெடுந் தேர் - பொற்படை களால் அணியப்பட்ட உயர்ந்த தேர்; பயன் கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட - பயன் பொருந்திய முள்ளூர் மலையுச்சிக்கண் உண்டாகிய; மாரி உறையினும் பல - மழையினது துளியினும் பல எ-று. இதன் கருத்து, ஏனையோர் கொடை செயற்கை யென்றும் இவன் கொடை இயற்கை யென்றும் கூறியவாறு. விளக்கம் : செயற்கையாவது - மதுவுண்ட மகிழ்ச்சியால், தன்னால் நல்கப் படும் பொருள்களின் அருமை நோக்கும் இயற்கை யறிவிழந்து ஏற்குநர் ஏற்க வழங்குவது. இயற்கை - மது முதலியவற்றால் அறிவு நலங் குன்றாது ஏற்போர் வரிசை யறிந்து நல்குவது. மகிழ்தல் - மது வுண்டு மயங்குதல். “மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு” (குறுந். 165) எனச் சான்றோர் வழங்குதல் காண்க. மது மகிழ்ச்சியில் பிறர் நல்கும் கொடையளவினும்; அம் மயக்கமின்றியே, மலையமான் நல்கும் கொடையளவு நல்கும் கொடையளவு பெரிதென்பர், “மாரியுறையினும் பல” என்றார். 124. மலையமான் திருமுடிக்காரி இரவலர் புரவலரை நாடிப் புறப்படுங்கால் நன்னாள் நோக்குதலும் புள்நிமித்தம் காண்டலும் இயல்பு. “நாள் செய்வது நல்லோர் செய்யார்” என்பது தமிழகத்துப் பண்டுதொட்டே இயன்று வரும் வழக்கு. நாளும் நிமித்தமும் நலமாகாவழிப் பெறக் கருதும் பரிசில் எய்தாதென்று கருதினர். இவ்வண்ணம் கருதிக் கொண்டிருந்த சான்றோர் சிலரைக் கண்ட கபிலர் “மலையன் திருமுடியைக் காணச் செல்லும் இரவலர் நாளும் புள்ளும் நோக்கவேண்டுவதிலர்; அவன்பால் அடையினும்,செவ்வி நோக்குதலும், கூறத் தகுவன இவையென முன்னரே தம்முள் ஆராய்ந்து கோடலும் வேண்டா; அவனைப் பாடிச் சென்றோர் வறிது பெயர்வதில்லை” யென்று இப் பாட்டில் வற்புறுத்தி யுள்ளார். நாளன்று போகிப் புள்ளிடைத் தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது பெயர்குவ ரல்லர் நெறிகொளப் பாடான் றிரங்கு மருவிப் 5 பீடு கெழு மலையற் பாடி யோரே. (124) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. மலையமான் திருமுடிக் காரியைக் கபிலர் பாடியது. உரை : நாள் அன்று போகி - நல்ல நாளன்றாகப் போகி; புள் இடை தட்ப - புள் நிமித்தம் இடையே நின்று தடுப்ப; பதன் அன்று புக்கு - செவ்வியன்றாகச் சென்று கூடி; திறன் அன்று மொழியினும் - கூறுபாடன்றாக முனியும் வார்த்தைகளைச் சொல்லினும்; வறிது பெயர்குவர் அல்லர் - வறிதாக மீள்வா ரல்லர்;நெறி கொள - ஒழுங்குபட; பாடு ஆன்று இரங்கும் அருவி - ஓசை நிறைந்து ஒலிக்கும் அருவியையுடைய; பீடு கெழு மலையன் பாடியோர் - பெருமை பொருந்திய மலையை யுடைய யோனைப் பாடியவர்கள் எ-று. மலையற்பாடியோர் வறிது பெயர்குவ ரல்லரெனக் கூட்டுக அன்றி யென்பது அன்றெனத் திரிந்தது செய்யுளாகலின். வறி தென்னும் குறிப்பு வினையெச்சம், பெயர்குவ ரல்லரென்பதனுட் பெயர்தலோடு முடிந்தது. வறியரென் றுரைப்பாரு முளர். விளக்கம் : இன்றி யென்பது போல அன்றி யென்பதும் அன்று எனச் செய்யுளில் உகரவீறாக வரும் என்பவாகலின், ஈண்டு அன்றி யென்பது அன்று என வந்தது. இஃது ஆசிரியர் தொல்காப்பியனா ரால் எடுத்தோதப்படாது உரையிற் கொள்ளவைக்கப்பட்டமையின், உரைகாரர் “அன்றி...செய்யுளாகலின்” என்றார். பதம் - சென்று காண்டற்குரிய காலம். திறன் - கூறத் தகுவனவும் தகாதனவும் ஆகிய கூறுபாடுகள்; வாய்தவறிக் கூறத்தகாதன கூறினும் அவற்றைக் கொள்ளாது வேண்டுவன நல்குவன் என்பார், “திறனன்று மொழி யினும்” என்றார். (124) 125. மலையமான் திருமுடிக்காரி ஒருகால், சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போருடற்று வாராயினர். அப்போது சோழன் தன்னுடைய அமைச்சரை விடுத்து, மலையமானைத் தனக்குத் துணைவலி யாமாறு வேண்டினன். மலையமான் திருமுடிக்காரியும் அவற்குத் துணை யாய் நின்று வென்றி பெறுவித்து; பின்னர், தன் திருக்கோவலூரை யடைந்து இனிதிருந்தான். வழக்கம்போல் அவனைக் காண்டற்குச் சான்றோர் பலர் வந்தனர். வடம வண்ணக்கன் பெருஞ்சாத்த னாரும் அவரிடையே வந்திருந்தார். பெருஞ்சாத்தனார் வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் குடியேறிய பழங்குடி மக்களுள் ஒருவர். அக்குடியினரை வடமர் என்பது வழக்கு. இது இப்போழ்தும் பார்ப்பனரிடையே வழங்கு கிறது. பொன்னின் நோட்டம் பார்ப்பது இவரது தொழிலாதல் பற்றி, இவர் “வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்” எனப்படு வாராயினர். வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் என்பார் ஒருவர் உளர். அவர் பாண்டியன் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறனைப் பாடியுள்ளார். அவர் வேறு; இவர் வேறு. இவர் பாட்டிலும், “வில்லெறி பஞ்சி போல மல்குதிரை, வளிபொரு வயங்குபிசிர் பொங்கும்” (நற்.299) என அவர் கூறுவது போல, நிணந் தயங்கு கொழுங் குறைக்குப் “பருத்திப் பெண்டின் பனுவல்” கூறப்படுவது முதலிய இயைபு கண்டு இவரையும் பேரி சாத்தனாராகக் கொள்வாரு முளர். இப் பெருஞ்சாத்தனார் தேர்வண்மலையன் சோழற்குத் துப்பாகி வென்றியொடு வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி யுடன், “வேந்தே, நீ துணைசெய்த இப் போரின்கண் வென்றி யெய்திய சோழனும் யான் வென்றிபெற உதவியவன் இவனே யென நின்னைப் பாராட்டிக் கூறுவன்; தோல்வி யெய்திய சேர மானும், வல்வேல் மலையன் துணைபுரியா திருப்பனேல், இப்போரை வெல்லுதல் நமக்கு எளிதாயிருக்கும் என வியந்து கூறுவன். இருதிறத்தாரும் பாராட்டும் ஒருவனாய் விளங்கு கின்றனை. நின் செல்வ மிகுதியைக் காணப் போந்த யாமும் ஊனும் கள்ளும் மாறி மாறி யுண்பேமாயினேம்; முயன்று ஈட்டிய பொருள் கொண்டு நீ உண்ணும் உணவு அமிழ்தாய் நீண்ட வாழ் நாளை நினக்கு நல்குவதாக” எனப் பாராட்டியுள்ளார். பருத்திப் பெண்டின் பனுவ லன்ன நெருப்புச்சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை பரூஉக்கண் மண்டை யொடூழ்மாறு பெயர உண்கு மெந்தைநிற் காண்குவந் தசினே 5 நள்ளாதார் மிடல்சாய்த்த வல்லாளநின் மகிழிருக்கையே உழுத நோன்பக டழிதின் றாங்கு நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே குன்றத் தன்ன களிறு பெயரக் 10 கடந்தட்டு வென்றோனு நிற்கூறும்மே வெலீஇயோ னிவனெனக் கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு விரைந்துவந்து சமந்தாங்கிய வல்வேன் மலைய னல்ல னாயின் 15 நல்லமர் கடத்த லெளிதுமனமக்கெனத் தோற்றோன் றானு நிற்கூ றும்மே தொலைஇயோ னிவனென ஒருநீ யாயினை பெரும பெருமழைக் கிருக்கை சான்ற வுயர்மலைத் 20 திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே. (125) திணை : வாகை; துறை : அரசவாகை. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனை வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது. உரை : பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன - பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சுபோன்ற; நெருப்புச் சினம் தணிந்த - நெருப்புத் தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய; நிணந் தயங்கு கொழுங் குறை - நிணமசைந்த கொழுவிய தடிகளை; பரூஉக்கண் மண்டையொடு - பெரிய உடலிடத்தையுடைய கள் வார்த்த மண்டையொடு; ஊழ் மாறு பெயர - முறை முறையாக ஒன்றற்கொன்று மாறுபட; உண்கும் - உண்பேமாக; எந்தை - எம்முடைய தலைவ; நின் காண்கு வந்திசின் - நின்னைக் காண்பேன் வந்தேன்; நள்ளாதார் மிடல் சாய்த்த வல்லாள - பகைவரது வலியைத் தொலைத்த வலிய ஆண்மை யுடையோய்; நின் மகிழ் இருக்கை - நினது மகிழ்ச்சியையுடைய இருக்கைக்கண்; உழுத நோன் பகடு அழி தின்றாங்கு - உழுத வலிய பகடு பின் வைக்கோலைத் தின்றாற்போல; நீ நயந் துண்ணும் நறவு - நினது தாளாற்றலாற் செய்த பொருளை யாவர்க்கும் அளித்துப் பின் நீ விரும்பி யுண்ணும் கள்; நல் அமிழ்தாக - நல்ல அமிழ்தாக; குன்றத் தன்ன களிறு பெயர - மலைபோலும் யானை பட; கடந் தட்டு வென்றோனும்- எதிர்நின்று கொன்று வென்றவனும்; வெலீஇ யோன் இவ னென நிற்கூறும் - நம்மை வெல்வித்தோன் இவனென நின்னையே மகிழ்ந்து சொல்லும்; கழலணிப் பொலிந்த சேவடி - வீரக்கழலாகிய அணியாற் சிறந்த செய்ய அடியாலே; நிலம் கவர்பு - போர்க்களத்தைக் கைக்கொள்ளவேண்டி;விரைந்து வந்து சமம் தாங்கிய - விரைந்து வந்து போரைத் தடுத்த; வல்வேல் மலையன் அல்ல னாயின் - வலிய வேலினையுடைய மலைய னல்லனாயின்; நல்லமர் கடத்தல் நமக்கு எளிதுமன் என- நல்ல போரை வெல்லுதல் நமக்கு எளிதென; தோற்றோன் தானும் தொலைஇயோன் இவனென நிற்கூறும் - தோற்ற வனும் நம்மைத் தொலைவித்தோன் இவனென நின்னையே புகழ்ந்து சொல்லும்; ஒரு நீ ஆயினை- ஆதலால் நீ ஒருவனா யினாய்; பெரும-; பெருமழைக்கு இருக்கை சான்ற - பெரிய மழைக்கு இருப்பிடமாதற் கமைந்த; உயர் மலை - உயர்ந்த மலையை யுடைய; திருத்தகு சேஎய் - திருத்தக்க சேயை யொப்பாய்; நிற் பெற்றிசினோர்க்கு - நின்னை நட்பாகவும் பகையாகவும் பெற்றோர்க்கு எ-று. பனுவலன்ன நிணமென இயையும். நிலங்கவர்பென்பது கவர வெனத் திரிக்கப்பட்டது. எமது நிலத்தைக் கைக்கொண் டெனினு மமையும். தாளாற்றலாற் செய்த பொருளில் நல்லன வெல்லாம், பரிசிலர்க்கு வழங்கி எஞ்சியது உண்டலான் “அழிதின் றாங்கு” என்றார். காண்கு வந்தென்பன, ஒரு சொன்னீர்மைப் பட்டு உண்குமென்பதற்கு முடிபாய் நின்றன. உண்கு மென்றது சுற்றத்தை உளப்படுத்தி நின்றமையின், பன்மை யொருமை வழுவமைதியாய் நின்றது. மன்: கழிவின்கண் வந்தது. பெரும, சேஎய், வென்றோனும் வெலீஇயோன் இவனென நிற்கூறும்; தோற்றோனும் தொலைஇயோன் இவனென நிற் கூறும்; அதனால் நிற் பெற்றிசினோர்க்கு ஒரு நீ ஆயினையாதலால் நின் மகிழிருக்கைக்கண்ணே உண்கும் காண்கு வந்திசின்; பகடு அழிதின்றாங்கு நீ உண்ணும் நறவு நல்லமிழ்தாக வென மாறிக் கூட்டுக. நெருப்புச் சினந் தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை யென்பதற்கு எரியாது பூத்துக் கிடக்கின்ற தழல்போலும் நிணந் தயங்கு கொழுங்குறை யெனினு மமையும் பரூஉக்கண் மண்டை யென்பதற்குக் கள்ளையுடைய உடலிடம் பரிய மண்டை யெனினு மமையும். விளக்கம் : கொட்டையும் கோதும் நீக்கி நூற்றற்கேற்பத் தூய்மை செய்யப் பட்ட பஞ்சு போறலின் நிணத்தை, “பனுவ லன்ன நிணம்” என்றார். உரைகாரரும் “பனுவ லன்ன நிணமென வியையும்” என்றார். காண்கு என்னும் செய்கென்னும் வினைமுற்று வேறு வினை கொண்டு முடியுமாதலின் “காண்கு வந்திசின்” என்றார்; “செய்கென் கிளவி வினையொடு முடியினும், அவ்வியல் திரியா தென்மனார் புலவர்” (சொல். வினை.7) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. இது பற்றியே உரைகாரரும், “காண்குவந் தென்பன......நின்றன” என்றார். “பன்மை யுரைக்கும் தன்மைக் கிளவி, எண்ணியல் மருங்கிற் றிரிபவை யுளவே” (வினை.12) என்றமையின், உண்குமென்பது சுற்றத்தை உளப்படுத்தி நின்ற தென்றார். உண்கும் என்பது பன்மை யும் காண்கு வந்திசின் என்பது ஒருமையுமாகலின் உளப்பாட்டுத் தன்மைப்பன்மையாகிய உண்குமென்பது பன்மை யொருமை வழுவமைதியாயிற்று. வென்றோன் நன்றி யறிவால் நின்னைப் பாராட்டுதல் ஒருபுறமிருக்க, தோற்றோன் நின் போராண்மையை வியந்து “நம்மைத் தொலைவித்தவன் இவன்” என்று கூறுவன் என்பார், “தோற்றோன் தானும் தொலைஇயோன் இவனென நிற்கூறும்” என்றார். இவ்வாறு வென்றோனும் தோற்றோனும் ஆகிய இருவரும் ஒப்பப் பாராட்டுதல் பற்றி, “ஒருநீ யாயினை பெரும” என்றார். நண்பரும் பகைவரும் ஒப்பப் பாராட்டும் சிறப்பு முருகற் குரியதாகலின்,“நிற்பெற் றிசினோர்க்குத் திருத்தகு சேய் என்றார். பெற்றிசினோர்- நட்பாகவும் பகையாகவும் பெற்றோர். சேஎய் மலைக்குரியனாகலின், “பெருமழைக்கு இருக்கை சான்ற உயர் மலை” யுடைய சேய் என்றார். (125) 126. மலையமான் திருமுடிக்காரி மலையமான் கபிலர் பாடும் புகழ் பெற்று இனிதிருக்கையில் மாறோக்கத்து நப்பசலையார் அவனைக் காண்டற்கு வந்து, அவனுடைய முன்னோர் பகைவரை வென்று அவர் யானைகட் கிட்ட ஓடைப்பொன்னால் பொற்றாமரை செய்து தம்பால் வந்த பாணர்க்கு வழங்கினரென்றும், திருமுடிக்காரியின் புகழனைத்தை யும் எஞ்சாமல் இனிய பாட்டில் வைத்துக் கபிலர் பாடியள்ளா ரென்றும், மேலைக்கடலில் சேரமன்னர் கலஞ்செலுத்தி வாணிகம் செய்யத் தொடங்கியபின் வேற்றோர் எவரும் கலஞ்செலுத்தற் கஞ்சுவாராயின ரென்றும் குறிப்பிட்டு, “பெண்ணையாறு பாயும் நாடுடைய வேந்தே, முள்ளூர்க்குத் தலைவ, நின் குடிப்பெருமை யும் நின் புகழும் யாம் கூறவல்லேமல்லோம். ஆயினும் .இயன்ற அளவிற் கூறுவேம்; அன்றியும், சேரர் கலஞ்சென்ற குடகடலில் பிறருடைய கலஞ் செல்லமாட்டாதது போலக் கபிலர் பாடிய பின், எம்போல்வார் பாடல் செல்லாது; எனினும், எம்மை இன்மையானது துரப்ப நின் வள்ளன்மை முன்னின்று ஈர்ப்ப வந்து சில பாடுவேமாயினம்” என்று பாடியுள்ளார். ஒன்னார் யானை யோடைப்பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர் ஓடாப் பூட்கை யுரவோன் மருக 5 வல்லே மல்லே மாயினும் வல்லே நின்வயிற் கிளக்குவ மாயிற் கங்குல் துயின்மடிந் தன்ன தூங்கிரு ளிறும்பிற் பறையிசை யருவி முள்ளூர்ப் பொருந தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய 10 நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம் புலனழுக் கற்ற வந்த ணாளன் இரந்துசென் மாக்கட் கினியிட னின்றிப் பரந்திசை நிற்கப் பாடின னதற்கொண்டு சினமிகு தானை வானவன் குடகடற் 15 பொலந்தரு நாவா யோட்டிய வவ்வழிப் பிறர்கலஞ் செல்கலா தனையே மத்தை இன்மை துரப்ப விசைதர வந்துநின் வண்மையிற் றொடுத்தனம் யாமே முள்ளெயிற் றரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப 20 அண்ணல் யானையொடு வேந்துகளத் தொழிய அருஞ்சமந் ததையத் தாக்கி நன்றும் நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே. (126) திணை : பாடாண்டிணை. துறை : பரிசிற்றுறை. மலைய மான் திருமுடிக்காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. உரை : ஒன்னார் யானை ஒடைப்பொன் கொண்டு - பகை வருடைய யானையினது பட்டத்திற் பொன்னைக்கொண்டு; பாணர் சென்னி பொலியத் தைஇ - பாணரது தலை பொலியும்படி செய்து; வாடாத் தாமரை சூட்டிய - வாடாத பொற்றாமரையைச் சூட்டிய; விழுச்சீர் ஓடாப் பூட்கை உரவோன் மருக - சிறந்த தலைமையினையும் புறக்கொடாத மேற்கோளினையுமுடைய பெரியோன் மரபினுள்ளாய்; வல்லே மல்லே மாயினும் - ஒன்றைக் கற்றறியேமாயினும்; அறிவேமாயினும்; வல்லே நின் வயின் கிளக்குவ மாயின் - விரைய நின்னிடத்துப் புகழைச் சொல்லுவேமாயின்; கங்குல் துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின் - இராப்பொழுது தான் ஓரிடத்தே யுறங்குவது போன்ற செறிந்த இருளையுடைய சிறுகாட்டையும்; பறை இசை அருவி - பறை யொலி போலும் ஒலி பொருந்திய அருவியையுமுடைய; முள்ளூர்ப் பொருந - முள்ளூர்க்கு வேந்தே; தெறலரும் மரபின் நின் கிளையொடும் பொலிய - அழித்தற்கரிய தன்மையையுடைய நின் சுற்றத் துடனே பெருக; நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் - நிலத்தின்மேல் மிக்க மாந்தரெல்லாரினும்; புலன் அழுக்கற்ற அந்தணாளன் - அறிவின்கண் மாசற்ற அந்தணாளனாகிய கபிலன்; இரந்துசெல் மாக்கட்கு - இரந்து செல்லும் புலவர்க்கு; இனி இடன் இன்றி - இனிப் புகழ்தற்கு இடனில்லையாக; பரந்து இசை நிற்கப் பாடினன் - பரந்து புகழ் நிற்பப் பாடினான்; அதற்கொண்டு - அதனைக்கொண்டு; சினமிகு தானை வானவன் - சினமிக்க சேனையையுடைய சேரன்; குட கடல் பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ்வழி - மேல்கடலின்கண் பொன்னைத் தரும் நாவாய் செலுத்திய அவ்விடத்து; பிறர் கலம் செல்கலா தனையேம்- வேறு சிலர் மரக்கலம் போக மாட்டாத அத் தன்மையை யுடையேமாயும்; இன்மை துரப்ப - எமது மிடி துரக்க; இசை தர வந்து - நின் புகழ் கொடுவர வந்து; நின் வண்மையில் தொடுத்தனம் யாம்- நினது வண்மையிலே சில சொல்லத் தொடுத்தனம் யாங்கள்; முள் எயிற்று அரவு எறி உருமின் முரசு எழுந்தொலிப்ப - முட்போலும் பல்லினை யுடைய பாம்பை யெறியும் இடியேறு போல் முரசு கிளர்ந் தொலிப்ப; அண்ணல் யானையொடு - தலைமையையுடைய யானையுடனே; வேந்து களத் தொழிய - அரசு போர்க் களத்தின்கட் பட; அருஞ் சமம் ததையத் தாக்கி - பொறுத்தற் கரிய பூசலைச் சிதற வெட்டி; நன்றும் நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் - பெரிதும் பொருந்தாத பகைவரைத் தடுக்கும்; பெண்ணையம் படப்பை நாடு கிழவோய் - பெண்ணை யாற்றுப் பக்கத்தை யுடைய நாட்டை யுடையோய் எ-று. உரவோன் மருக, பொருந, நாடு கிழவோய்; நின் வயிற் கிளக்குவமாயின் அந்தணாளன் கிளையொடும் பொலிய இசை நிற்பப் பாடினன்; அதற்கொண்டு, பிறர் கலம் செல்லாத அனையேமாயும், இன்மை துரத்தலால் இசைதர வந்து நின் வண்மையிற் சில தொடுத்தேம் யாம் எனக் கூட்டி வினை முடிவு செய்க. மக்கட் கெல்லா மென்பது ஐந்தாவதன் மயக்கம். மக்கட் கெல்லாம் ஒக்க வெனினு மமையும். வண்மையிற் றொடுத்தனம் என்பதற்கு நின் வண்மையால் வளைப்புண்டன மெனினு மமையும். விளக்கம் : பகைவருடைய யானைகளைக் கொன்று அவற்றின் ஓடைப் பொன்னைக் கொண்டு தாமரைப் பூக்கள் செய்து பாணர்க்கு வழங்குவது பண்டையோர் மரபு. இதனை இவனுடைய முன்னோரும் செய்தன ரென்றதற்கு, “வாடாத் தாமரை சூட்டிய உரவோன் மருக” என்றார். கடல் மீதும் பொதுநீக்கி நிலவும் தமது அரசாணை (Maritime Supremacy) செலுத்திப் பண்டைத் தமிழ் வேந்தர் ஆட்சி புரிந்த திறம் தோன்ற, “சினமிகு........செல்கலாது” என்றார். இஃது ஆங்கிலேயர் நாட்டு வரலாற்றினும் காணப்படும் அரசியற் பண்பென அறிக. வல்லே யென்பது விரைந்தென்னும் பொருளதாயினும் வல்லவாறே என்று பொருள் கூறிக் கொள்ளினும் பொருந்தும். மக்கட்கெல்லாம் என்பது மக்களெல்லாரினும் என ஐந்தாவதன் பொருள்படுதலின், உரைகாரர் “ஐந்தாவதன் மயக்கம்” என்றார். மலையனையும் அவன் மலையையும் கபிலர் பாடிய செய்தியை மாறோக்கத்து நப்பசலையார், பிறாண்டும் “பொய்யா நாவின் கபிலன் பாடிய, மையணி நெடுவரை” (புறம். 174) என்று கூறியுள்ளார். மலையனுக்குரிய முள்ளூரில் முன்னொருகால் சோழ வேந்தனொருவன் புகலடைந்திருந்தா னென்பதையும் நப்பசலையாரே குறித்துள்ளார். ததைதல் - சிதறுதல். தாங்குதல் - தடுத்தல்; “வருதார் தாங்கி” (புறம். 52) என்றாற் போல. வண்மையில் தொடுத்தனம் என்றற்கு வண்மையிற் சிலவற்றைத் தொகுத்துக் கூறினேம் என்று உரை கூறினவர், வேறு பொருளும் கூற அமைதலின், “நின் வண்மையால் வளைப்புண்டனம்” என்று பொருள் உரைக்கினும் அமையும் என்றார். (126) 127. வேள் ஆய் வேளிர் குலத்துப் பாரிபோல ஆயும் வேளிர் குலத்தவன். இவன் பொதியின் மலையடியிலுள்ள ஆய் குடியைத் தலை நகராகக் கொண்டு அரசு முறை புரிந்தொழுகிய குறுநில மன்னன். இவன் ஆய் அண்டிரனென்றும் சான்றோராற் பாராட்டப்படு கின்றான். அண்டிரன் என்னும்சொற்குப் பொருள் விளங்க வில்லை. நற்றிணை யுரைகாரரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் “அண்டிரனென்பது ஆந்திரனென்னும் தெலுங்கச் சொல்லின் திரிபாதலின் இவன் தெலுங்கநாட்டின னெனவும், அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிரைக் கொணர்ந்தா ரென்றிருத்த லானே இவன் அவராற் கொண்டுவரப்பட்ட வேளிர் மரபின னெனவுங் கூறுவ” ரென்பர். தெலுங்கர்க்குரிய ஆந்திர ரென்னும் சொல் பிற்காலத்தில் காணப்பட்ட தாதலின், அண்டிர னென்பது ஆந்திர னென்பதன் திரிபென்றல் பொருந்தாது. அகத்தியனாற் கொண்டுவரப்பட்ட குடியினனாயின், இவனைப் பாடிய சான்றோர் அதனைக் குறிக்காமையின், அக்கூற்றும் ஏற்கற்பால தன்று. இவனுடைய கைவண்மையும் போராண்மையும் சான் றோர்களாற் பெரிதும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன. இவனுக்கும் கொங்கருக்கும் ஒருகால் போருண்டாயிற்று. அப்போழ்து இவன் கொங்கரை வென்று அவர் குட கடற்கரையிடத்தே யோடி யொளிக்குமாறு பண்ணினன். தமிழகத்தின் தெற்கின் கண்ண தாகிய பொதிய மலையும் ஆய் குடியும் அம் மலைக்குழுவிலுள்ள கவிர மலையும் புலவர் பாடும் புகழ் படைத்தவை யாகும். இவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் துறையூர் ஓடை கிழார், குட்டுவன் கீரனார், உமட்டூர் கிழார் மகனார் பரங் கொற்றனார், பரணர், காரிக்கண்ணனார் முதலிய சான்றோர் பாடிச் சிறப்பித்திருக்கின்றனர். இவருள் இவனைப் பல படி யாலும் பாராட்டிப் பாடியுள்ளவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ஆவர்; “திருந்துமொழி மோசி பாடிய ஆயும்” (புறம்.158) எனப் பெருஞ்சித்திரனார் கூறுவது காண்க. இவன் பரிசிலர்க்கு மிக்க பரிசில் வழங்க அவர்கள் அதனைப் பெற்றுச் செய்யும் ஆரவாரத்தை விதந்தோதும் “கருங்கோட்டுப் புன்னை” யென்று தொடங்கும் நற்றிணைப் பாட்டை (167)ப் பாடிய ஆசிரியர் பெயர் தெரிந்திலது. இவருட் பரங்கொற்றனார், “அரண்பல நூறி, நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன், சுடர் மணிப் பெரும்பூண் ஆஅய்” (அகம்.69) என்றும், பரணர், இவன் நாட்டுக் கவிரத்தைச் சிறப்பித்து, “தெனாஅது, ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற், கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்” (அகம். 168) என்றும், காரிக்கண்ணனார், “வியப்புடை இரவலர் வரூஉம் அளவை அண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை” (நற் 237) என்றும் பாடியுள்ளனர். ஏனையோர் பாட்டுக்கள் இந்நூற்கண் வந்துள்ளன. ஆசிரியர் ஏணிச்சேரி முடமோசியார், ஏணிச்சேரி யென்னும் ஊரினர். இஃது உறையூரின் பகுதியாகும். மோசி யென்பது இவரது இயற்பெயர். மோசி குடி யென்னும் ஓர் ஊரும் உண்டு. அவ்வூர் மதுரைமாநாட்டுக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. தொல்காப்பியவுரைகாரர் இவரை அந்தணராகக் கொள்வார். இவர் இப் பாட்டின்கண், “பிறர்க் கீயாது தாமே தமித்துண்டு தம் வயிறு நிரப்பும் ஏனைச் செல்வர் மனைகளிற் காணப்படும் ஆரவாரமும் பொலிவும், தன்பாலுள்ள களிறனைத்தையும் இரவலர்க்கு நல்கி இழையணிந்த மகளிரொடு புல்லிதாய்த் தோன்றும் ஆய் அண்டிரனது திருமனைக்கண் காணப்படா” என ஆயினது கொடை நலத்தைச் சிறப்பித்துள்ளார். களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் பாண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப 5 ஈகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றென்ப வா அய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி உரைசா லோங்குபுக ழொரீஇய 10 முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே. (127) திணை : பாடாண்டிணை. துறை: கடைநிலை. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : களங்கனியன்ன கருங் கோட்டுச் சீறியாழ் - களாம்பழம் போலும் கரிய கோட்டை யுடைத்தாகிய சிறிய யாழைக் கொண்டு; பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென - பாடும் இனிய பாட்டை வல்ல பாணர் பரிசில் பெற்றுக்கொண்டு போனார்களாக; களிறு இலவாகிய புல்லரை நெடுவெளில் - களிறுகள் இல்லையாகிய புல்லிய பக்கத்தையுடைய நெடிய தறியின்கண்ணே; கான மஞ்ஞை கணனொடு சேப்ப - காட்டு மயில்கள் தத்தம் இனத்தோடு தங்க; ஈகை அரிய இழையணி மகளிரொடு - பிறிதோர் அணிகலமு மின்றிக் கொடுத்தற்கரிய மங்கலிய சூத்திரத்தை யணிந்த மகளிருடனே; ஆஅய் கோயில் சாயின்று என்ப - ஆயுடைய கோயிலைப் பொலிவழிந்து சாய்ந்ததென்று சொல்லுப; சுவைக்கு இனிதாகிய குய்யுடை அடிசில் - நுகர்தற் கினிதாகிய தாளிப்பையுடைய அடிசிலை; பிறர்க்கு ஈவு இன்றி - பிறர்க்கு உதவலின்றி; தம் வயிறு அருத்தி- தம்முடைய வயிற்றையே நிறைத்து; உரை சால் ஓங்கு புகழ் ஓரீஇய - சொல்லு தற்கமைந்த மேம்பட்ட புகழை நீங்கிய; முரைசு கெழு செல்வர் நகர் - முரசு பொருந்திய செல்வத்தினை யுடைய அரசர் கோயில்; போலாது - இதனை ஒவ்வாது எ-று. என்றதன் கருத்து, செல்வர் நகர் பெருந்திரு வுடைமையின் சிறந்தது போன் றிருப்பினும், ஆய் கோயில் வறிதெனினும் இஃது அதனினும் சிறந்த தென்பதாம். ஆஅய் கோயில் சாயின் றென்ப; ஆயினும் முரசு கெழு செல்வர் நகர் இதனை யொவ்வாதெனக் கூட்டுக. விளக்கம் : வெளில்- யானை கட்டுந்தறி. யானை கட்டுந் தறிகளில் யானையில்வழி அவை பொலிவழிந்து தோன்றுமாதலின், “புல்லரைநெடுவெளில்” என்றார். மகளிர்க்கு மங்கலவணி யொழியப் பிறவெல்லாம் நீக்குதற்கும் உரியவாமாதலின், “ஈகை யரிய இழை” யென்றார். “உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன், றீவார்மேல் நிற்கும் புகழ்” (குறள்.242) என்பவாகலின், பிறர்க்கீதலின்றித் தம் வயிறு நிறைக்கும் வேந்தரை “உரைசால் ஓங்குபுக ழொரீஇய செல்வர்” என்றார். 128. வேள் ஆய் அண்டிரன் வேள் ஆய் அண்டிரன் பெருஞ்செல்வ முடையவனாதலின், அக்கால நிலைக்கேற்ப ஏனைச் செல்வமுடைய வேந்தர் அவன்புகழ் கேட்கப் பொறாது அவனொடு போருடற்றுவர்; அவ்வாறு வேற்றுவேந்தரது படையெடுப்பின்றி ஆய் இனிதிருந்து புகழ் வளர்ப்பது பற்றிச் சான்றோரிடையே பேச்சு நிகழ்ந்ததாக, ஆங்கே இருந்த ஏணிச்சேரி முடமோசியார், “போருடற்றற் கேதுவாகிய அழுக்காறு கொண்ட வேந்தர் உளராயினும், ஆயது போராண்மைக் கஞ்சி அமைந்திருந்தனரே யன்றி வேறில்லை; வேள் ஆய்அண்டிரன் இருக்கும் ஆய்குடி பொதியின் மலையடியிலுள்ள தென்பது அவர் அறியாத தன்று; அவ்வூர்புகல் பாணர் முதலிய பரிசிலர்க்கு எளிதே யன்றிப் போர் குறித்து வரும் வேந்தர்க்கு அரிது” என்ற கருத்தமைந்த இப்பாட்டின் வாயிலாக அவரது ஐயத்தை யகற்றினார். மன்றப் பலவின் மாச்சினை மந்தி இரவலர் நாற்றிய விசிகூடு முழவின் பாடின் றெண்கண் கனிசெத் தடிப்பின் அன்னச் சேவன் மாறெழுந் தாலும் 5 கழறொடி யாஅய் மழைதவழ் பொதியில் ஆடுமகள் குறுகி னல்லது பீடுகெழு மன்னர் குறுகலோ வரிதே. (128) திணை : பாடாண்டிணை. துறை : வாழ்த்து; இயன் மொழியுமாம். ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : மன்றப் பலவின் மாச்சினை மந்தி - ஊர்ப் பொதுவின்கண் பலவினது பெரிய கோட்டின்கண் வாழும் மந்தி; இரவலர் நாற்றிய - பரிசிலர் தூக்கி வைக்கப்பட்ட; விசி கூடு முழவின் பாடின் தெண்கண் - பிணிப்புப் பொருந்திய மத்தளத்தினது ஓசை இனிய தெளிந்த கண்ணை; கனி செத்து அடிப்பின் - பலாப்பழ மென்று கருதித் தட்டினவிடத்து; அன்னச் சேவல் - அதன்கண் வாழும் அன்னச் சேவல்; மாறு எழுந்து ஆலும் - அவ் வோசைக்கு மாறாக எழுந்து ஒலிக்கும்; கழல் தொடி ஆஅய் - கழல விடப்பட்ட வீரவளையையுடைய ஆயது; மழை தவழ் பொதியில் - முகில் படியும் பொதியின் மலை; ஆடுமகள் குறுகின் அல்லது - ஆடச் செல்லும் மகள் அணுகி னல்லது; பீடு கெழு மன்னர் குறுகலோ அரிது - பெருமை பொருந்திய அரசர் அணுகுதல் அரிது எ-று. இது கொடைச் சிறப்பும் வென்றியும் கூறியவாறாயிற்று. விளக்கம் : விசி - விசித்தல்; கட்டுதல் என்னும் பொருளதாம். “விசிப் பலகை” என்ற வழக்குண்மையுங் காண்க. பலாப் பழத்தையே கண்டு பயின்ற மந்தி, முழவினையும் பலாக்கனி யென்று கருதி, அதனைத் தட்டுவது தோன்ற “கனி செத்து அடிப்பின்” என்றார். “தூவற் கலித்த புதுமுகை யூன்செத்து, அறியா தெடுத்த புன்புறச் சேவல்” (மலைபடு.146-7) என வருதல் காண்க. ஆய் அண்டிரனது ஆய்குடி பொதியின் மலை யிடத்த தாகலின், “ஆஅய் மழைதவழ் பொதியில்” என்றார். ஆடுமகள் குறுகினல்லது மன்னர் குறுகுதல் அரிது என்றாற் போலப் பாரியது பறம்பைப் பற்றிக் கூறப்போந்த கபிலர், பாரியின் பேரிருங் குன்று, “வேந்தர்க்கோ அரிதே, நீலத் திணைமலர் புரையு முண்கண், கிணைமகட் கெளிதால் பாடினள் வரினே” (புறம்.111) என்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. (128) 129. வேள் ஆய் அண்டிரன் ஆய் அண்டிரன் தன்பால் வரும் பரிசிலர் யாவர்க்கும் மிக்க யானைகளை வழங்குவது கண்டு சான்றோர் வியப்புற்றாராக, ஏணிச்சேரி முடமோசியார் அவர்கள் தெளிவெய்துமாறு மாசு மறுவின்றி விளங்கும் வானத்தின்கண் எங்கும் சிற்றிடமுமின்றி விண்மீன்கள் பூத்து விளங்கினும் அவற்றின் தொகை, ஆய் அண்டிரன்பாலுள்ள களிறுகளின் தொகைக்கு நிகராகாது என்று இப்பாட்டாற் கூறியுள்ளார். குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்கமைப் பழுனிய தேறன் மகிழ்ந்து வேங்கை முன்றிற் குரவை யயரும் தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன் 5 ஆஅ யண்டிர னடுபோ ரண்ணல் இரவலர்க் கீத்த யானையிற் கரவின்று வான மீன்பல பூப்பி னானா தொருவழிக் கருவழி யின்றிப் பெருவெள் ளென்னிற் பிழையாது மன்னே. (129) திணை : பாடாண்டிணை. துறை : இயன்மொழி. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : குறி யிறைக் குரம்பை - குறிய இறப்பையுடைய சிறிய மனையின்கண்; குறவர் மாக்கள் - குறமக்கள்; வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து - வளைந்த மூங்கிற் குழாயின் கண் வார்த்திருந்து முதிர்ந்த மதுவை நுகர்ந்து; வேங்கை முன்றில் குரவை அயரும் - வேங்கை மரத்தையுடைய முற்றத்தின் கண் குரவைக் கூத்தை யாடும்; தீஞ் சுளைப் பலவின் மாமலைக் கிழவன் - இனிய சுளையை யுடைத்தாகிய பலாமரத்தை யுடைய பெரிய மலையை யுடையோன்; ஆ அய் அண்டிரன் - ஆயாகிய அண்டிரன்; அடு போர் அண்ணல் - கொல்லும் போரைச் செய்யும் தலைவன்; இரவலர்க்கு ஈத்த யானையின் - அவன் இரப்போர்க்குக் கொடுக்கப்பட்ட யானைத்தொகை போல; கரவின்று வானம் மீன் பல பூப்பின் - மேகம் மறைத்த லின்றி வானம் பல மீனையும் பூக்குமாயின்; ஆனாது - அமை யாது; ஒருவழிக் கருவழியின்றி - ஓரிடத்தும் கரிய இடம் இல்லையாக; பெரு வெள்ளென்னின் - பெருக வெண்மையைச் செய்யுமாயின்; பிழையாது மன் - அம்மீன்றொகை அதனுக்குத் தப்பாது எ-று. யானையிற் பிழையாதென இயையும். மன் : அசை விளக்கம் : தேனை மூங்கிற் குழாய்களிற் பெய்துவைத்துக் களிப்பு மிகு வித்தல் பண்டையோர் மரபாதலின், “வாங்கமைப் பழுனிய தேறல்” என்றார்; பிறரும் “நீடமை விளைந்த தேக்கட் டேறல்” (முருகு. 195) என்பது காண்க. மாமலைக் கிழவன் என்றது. ஆய்அண்டிரன் பொதிய மலைக் குரியனாதல்பற்றி. வானத்தில் வெற்றிடம் சிறிது மின்றி எங்கும் விண்மீன்களே பூக்கின் அவற்றின் தொகை, ஆய் , இரவலர்க் கீத்த யானைத் தொகைக்கு நிகராகும் என்பார், “யானையிற் பிழையாது” என்றார். மீன் பூக்காத இடத்து வானம் கரிதாய்த் தோன்றுதலின், அதனைக் “கருவழி” யென்றார். வானமெங்கும் விண்மீன்களே நிறையப் பூத்தவழி எங்கும் அவற்றின் வெள்ளொளி பரந்து வெளிதாய்த் தோன்றுமாதலின், “பெருவெள் ளென்னின்” என்றார். பிழைத்தல் நிகராகாமை. “பெருவெள்ளென்னின்” என்றத னால், பெருவெள்ளென்னுமாறு விண்மீன்களும் தோன்றா; ஆகவே, அவற்றின்தொகையும் யானைக்கு நிகராகா என்பதாம். (129) 130. வேள் ஆய் அண்டிரன் ஆய்அண்டிரன் திருமனைக்கண் ஏணிச்சேரி முடமோசியார் தங்கியிருந்த காலையில், அவன்பால் வந்த பரிசிலர் பலர்க்கும் அவன் களிறுகளை மிகுதியும் வழங்குவது கண்டு பெருவியப்புக் கொண்டார். அதனால் அவர் அவனை நோக்கி, “ஆயே! நின்னை யும் நின் மலையையும் பாடிவரும் பரிசிலர் பலர்க்கும் மிக்க யானைகளை வழங்குகின்றாய்; அவற்றின் தொகைகளை நோக்கின், நீ முன்பு கொங்கரொடு பொருத காலத்தில் அவர்கள் நினக்குத் தோற்றுக் கீழே எறிந்துவிட்டு உயிர் தப்பி மேலைக் கடற்கரைப் பகுதிக்கு ஓடிய காலத்தில் அவர் எறிந்து சென்ற வேல்களினும் பலவாக வுள்ளன. யானைகள் இத்துணை மிகுதியாக இருத்தற்குக் காரணம் நோக்கினேன்; ஒன்றும் புலனாகவில்லை. ஒருகால் நின் நாட்டு இளம்பிடி ஒரு சூலுக்குப் பத்துக் கன்று ஈனுமோ?” என்று இப்பாட்டிற் றம்வியப்புத் தோன்றக் குறித்துள்ளார். விளங்குமணிக் கொடும்பூ ணாஅய் நின்னாட் டிளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ நின்னுநின் மலையும் பாடி வருநர்க் கின்முகங் கரவா துவந்துநீ யளித்த 5 அண்ணல் யானை யெண்ணிற் கொங்கர்க் குடகட லோட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே. (130) திணை : பாடாண்டிணை. துறை : இயன்மொழி. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : விளங்கு மணிக் கொடும்பூண் ஆஅய் - விளங்கிய மணிக ளான் இயன்ற வளைந்த பூணாகிய ஆரத்தையுடைய ஆயே; நின் நாட்டு இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனுமோ - நினது நாட்டின்கண் இளைய பிடி ஒரு கருப்பம் பத்துக்கன்று பெறுமோதான்; நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு - நின்னையும் நின் மலையையும் பாடிவரும் பரிசிலர்க்கு; இன்முகம் கரவாது - இனிய முகத்தை யொளியாது வெளிப் படுத்தி; உவந்து - காதலித்து; நீ அளித்த அண்ணல் யானை எண்ணின் - நீ கொடுத்த தலைமையை யுடைத்தாகிய யானையை யெண்ணின்; கொங்கர்க் குடகடல் ஒட்டிய ஞான்றை - நீ கொங்கரை மேல்கடற்கண்ணே ஒட்டப்பட்ட நாளில்; தலைப் பெயர்த் திட்ட வேலினும் பல - அவர் புறங்கொடுத்தலால் தம்மிடத்தினின்றும் பெயர்த்துப் போகடப்பட்ட வேலினும் பல எ-று. தலைப்பெயர்த் திட்ட வேலென்ற கருத்து, படைக்கல மில்லாதாரை ஏதஞ்செய்வா ரில்லையாதலின் , தம்முயிர்க்கு அரணாகப் பெயர்த்திடப்பட்ட வேலென்பதாம்; அன்றிப் புறக்கொடுத்தோடுகின்றார் முன்னோக்கிச் சாய்த்துப் பிடித்த வேல் என்பாரு முளர். இதனால் வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் கூறியவாறு. விளக்கம் : யானை ஒரு சூலுக்கு ஒரு கன்றுதான் ஈனுமேயன்றிப் பல கன்றுகளை யீனாது; யானைகளின் தொகை மிகுதி கண்டு வியந்து கூறுதலின் இவ்வாறு கூறினார். ஆய் கோயிலின் வெளியில் முழுதும் யானைகள் மிகுதியாகத் தொகுக்கப்பட்டிருக்கும் என்பதைச் சான்றோர், “இரவலர் வரூஉ மளவை அண்டிரன், புரவெதிர்ந்து தொகுத்த யானை” (நற்.237) என்பது காண்க. இரவலர்க்குக் கொடுக்கும் திறத்தை “இன்முகம் கரவாது உவந்துநீ யளித்த” என்றும் கொடுக்கப்பட்ட யானைகளின் இயல்பை, “அண்ணல் யானை” யென்றும் குறித்துள்ளார். யானைக்கொடை வாயிலாக அண்டிரன் கொங்கரை வென்ற திறத்தையும் குறிக்கக் கருதலின், “கொங்கர்க் குடகடலோட்டிய ஞான்றைத் தலைப்பெயர்த்திட்ட வேல்” என்றார். 131. வேள் ஆய் அண்டிரன் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், ஆய் குடியின் நீங்கிக் காட்டு நாட்டிற் புகுந்து அதன் இயற்கைவளம் காணச் சென்றார். காடுகளில் எங்கும் யானைகளின் நிரை மிகுதியாக மேய்வதை அவர் நேரிற் கண்டார். மோசியார், யானை மிக்க காட்டுநாட்டவ ரல்லராதலின், அவர்க்கு வியப்பு மிகுதியாயிற்று. யானைகளின் மிகுதி கண்டு அவர்நெஞ்சில் ஆய் அண்டிரனது யானைக் கொடை பற்றிய நினைவு எழுந்தது. அருகிருந்தோரை நோக்கி, “இக்காடுகள் ஆய் அண்டிரனுடைய குன்றங்களைப் பாடி னவோ? அவனையும் அவன் குன்றத்தையும் பாடும் பரிசிலர் களைப் போல மிக்க யானைகளை இவையும் உடையவாயிருக் கின்றனவே!” என்ற கருத்துப்பட இப்பாட்டைப் பாடியுள்ளார். மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடையவிக் கவின்பெறு காடே (131) திணை : பாடாண்டிணை. துறை : இயன்மொழி. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : மழைக் கணம் சேக்கும் மாமலைக் கிழவன் - முகிலினம் சென்று தங்கும் உயர்ந்த மலைக்குத் தலைவன்; வழைப்பூங் கண்ணி - சுரபுன்னைப் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணி யினையும்; வாய் வாள் அண்டிரன் - வாய்த்த வாளினையு முடைய அண்டிரனது; குன்றம் பாடினகொல் - மலையைப் பாடினவோ; இக்கவின் பெறு காடு - இந்தக் கவினையுடைய காடு; களிறு மிக உடைய - களிறுகளை மிகவுமுடைய எ- று யானைக்குப் பிறப்பிடமாயிருக்கிற காட்டிலும் அண்டிரனைப் பாடினோர் யானை மிகவு முடையரென்று அவன் கொடைச் சிறப்புக் கூறியவாறு. ஆய்க்கு அண்டிர னென்பதும் ஒரு பெயர். விளக்கம் : மாமலைக் கிழவனாகிய அண்டிரனுடைய குன்றம் பாடின கொல்லோ, இக் கவின்பெறு காடு களிறு மிக வுடையவாகலான் என இயையும் தன்னையும் தன் மலையையும் பாடி வருவோர்க்கு எண்ணில்லாத யானைகளை ஆய் அண்டிரன் கொடுப்பதை நேரிற் கண்டு மகிழ்ந்துள்ளாராகலின், “இக்கவின்பெறு காடு களிறுமிக வுடையவாகலான், குன்றம் பாடினகொல்லோ” என்றார். ஆய் அண்டிரனைப் பாடிய பரிசிலர் அவன் நல்கும் உணவாலும் அணிகலங்களாலும் கவின்பெறுவதோடு களிறுகளையும் மிகப் பெற்றுச் செல்வதுபற்றி, “இக் கவின் பெறுகாடு” என்று சிறப்பித்தார். பசுந்தழை போர்த்துப் பூவும் காயும் கனியும் தாங்கிநிற்பது விளங்க, “கவின்பெறு காடு” எனச்சிறப்பிக்கப்பட்டது .மழைக்கணம் -முகிற்கூட்டம். சேக்கும்- தங்கும். வழை - சுரபுன்னை. 132. வேள் ஆய் அண்டிரன் ஆய் அண்டிரனுடைய பெருங்கொடையும் பேரன்பும் பெற்ற ஏணிச்சேரி முடமோசியார், அவன் பால் சின்னாள் தங்கி அவன் நற்பண்புகளையும் அவனது நட்புப் பயில்தோறும் நூல் நயம்போல் இன்பந்தருவதையும் உணர்ந்து, இத்தகைய பெருந் தகையின் பேரன்பினை முன்பே பெறா தொழிந்த தமது நிலைமைக் கிரங்கி, “இவ்வுலகில் எத்துணையுயர்ந்தோர்க்கும் முன்னே வைத்து நினைத்தற்குரிய பெருந்தகையை முன்னே நினையாது ஏனைச் செல்வரை நினைந்து, பின்பே இவனை நினைந்தேன்; அவரது பொருள் சேராத புகழைப் பாடினேன்; அவரது பொய்ப் புகழைப் பிறர் பாடக் கேட்டேன்; இவற்றை முறையே செய்த என் நெஞ்சும், நாவும், செவியும் அழிக” எனத் தம்மை நொந்து கொண்டு, “வடதிசைக்கண் இமயம் நிற்பதுபோல, இத் தென்றிசைக் கண் இவ் வாய்குடி நில்லாதாயின், இவ்வுலகம் கீழ்மேலதாகி அழிந்துபடும்” என்று இப் பாட்டிற் குறித்துள்ளார். முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே பாழூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே நரந்தை நறும்புன் மேய்ந்த கவரி 5 குவளைப் பைஞ்சுனை பருகி யயல தகரத் தண்ணிழற் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான்றோ யிமயம் தென்றிசை யாஅய்குடி யின்றாயிற் பிறழ்வது மன்னோவிம் மலர்தலை யுலகே. (132) திணை : பாடாண்டிணை. துறை : இயன்மொழி. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேன் - யாவரினும் முன்னே நினைக்கப்படுமவனைப் பின்பே நினைத்தேன் யான்; என் உள்ளம் ஆழ்க - அவ்வாறு நினைந்த குற்றத்தால் என துள்ளம் அமிழ்ந்திப் போவதாக; என் நா போழ்க - அவனை யன்றிப் பிறரைப் புகழ்ந்த நாவும் கருவியாற் பிளக்கப்படுவதாக; என் செவி பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க- அவன் புகழன்றிப் பிறர் புகழைக் கூறக் கேட்ட எனது செவியும் பாழ்பட்ட வூரின்கண் கிணறு போலத் தூர்வதாக; நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி - நரந்தையையும் நறிய புல்லையும் மேய்ந்த கவரிமா; குவளைப் பைஞ்சுனை பருகி - குவளைப் பூவை யுடைய பசிய சுனையின் நீரை நுகர்ந்து; அயல தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும் - அதன் பக்கத்தவாகிய தகரமரத்தினது குளிர்ந்த நிழலின்கண் தனது பிணையுடனே தங்கும்; வடதிசையது வான் தோய் இமயம் - வட திசைக் கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமய மலையும்; தென் திசை ஆய்குடி இன்றாயின் - தென்றிசைக்கண் ஆய் குடியும் இல்லையாயின்; இம் மலர்தலை யுலகு பிறழ்வது மன் - இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம் கீழ் மேலதாகிக் கெடும் எ-று. முன்னுள்ளுவோனைப் பின்னுள்ளினேன் என உள்ளம் ஆழ்தற்குக் காரணம் கூறினமையான், பிறரைப் புகழ்ந்த நாவெனவும் பிறர் புகழ் கேட்ட செவியெனவும் ஏனைய வற்றிற்கும் காரணம் வருவித்துரைக்கப்பட்டது. அன்றி வடதிசை, தேவருலகோ டொத்தலான் இமயத்தால் தாங்க வேண்டுவ தில்லை; தென்றிசைக்கண் ஆய்குடி தாங்கிற்றில்லையாயின் இவ்வுலகு பிறழும்;அதனால் இமயத்துக்கு முன் உள்ளப் படுவோனைப் பின்னுள்ளினே னாதலால் எனதுள்ளம் ஆழ்க; எனது நா போழ்க; எனது செவி தூர்வதாக வென்றதாக்கி உரைப்பினு மமையும். விளக்கம் : இமயத்தின்கண் கவரிமான் நரந்தை நறும்புல் மேய்ந்து சுனைநீர் பருகித் தகரத் தண்ணிழல் வதியும் என இவர் கூறியது போலக் குமட்டூர்க் கண்ணனார், “கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி, பரந்திலங் கருவியொடு நரந்தம் கனவும், ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்” (பதிற். 11) என்பது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. நரந்தை, நரந்தம் எனவும் வழங்கும்; இஃது ஒருவகைப் புல். இத்தகைய சிறப்பினையுடைய இமயமுளதாகவும், தென்றிசைக்கண் ஆய்குடி யின்றாயின், இம்மலர்தலை யுலகு பிறழுமாகலின் இதற்குரிய ஆய்அண்டிரனை முன்னே நினையாது விட்ட குற்றத்தால் என் உள்ளம் ஆழ்க எனத் தன்னை நொந்து கொண்ட வாறு. நரந்தை நறும்புல் லென்றது உம்மைத் தொகை. தகரம், ஒருவகை மரம். இனிச் சில பிரதிகளில், “இமயத்திற் கொருதரமாக உலகத்தைத் தாங்கும் ஆய் உளனாகவும், பிறரிசையைக் கேட்ட செவி தூர்க; கேட்டுப் பிறரை நினைத்த உள்ளம் ஆழ்க; நினைத்துப் பிறரைப் பாடிய நாப் போழ்வதாக வென உள்ளமொழிந் தனவற்றிற் கும் காரணம் வருவித்துக்கொள்க” என்றோர் உரை காணப்படுகிறது. 133. வேள் ஆய்அண்டிரன் ஆய்அண்டிரனைக் கண்டு அவன் புகழ்பாடி மிக்க களிற்றுப் பரிசு பெற்றேகும் விறலி யொருத்தி, அவன் பெயரைக் கேட்ட வளவன்றி நேரிற் கண்டறியாத வேறொரு விறலியைக் கண்டு, அவளது அறியாமைக் கிரங்கி, “விறலி நீ ஆய்அண்டிரனைக் கண்ணிற் கண்டதில்லை. காண விரும்பினையாயின் இப்பொழுதே நின் கொண்டைமேற் காற்றடிக்க மயில் போல் கவினுற நடந்து சென்று அவனைக் காண்பாயாக” என்ற விறலியாற்றுப்படை வாயிலாக இவனது புகழை முடமோசியார் இப் பாட்டில் மொழிந்துள்ளார். மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது காண்பறி யலையே காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின் விரைவளர் கூந்தல் வரைவளி யுளரக் 5 கலவ மஞ்ஞையிற் காண்வர வியலி மாரி யன்ன வண்மைத் தேர்வே ளாயைக் காணிய சென்மே. (133) திணை : அது; துறை : விறலியாற்றுப்படை. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : மெல்லியல் விறலி - மெல்லிய இயல்பினையுடைய விறலி; நீ நல்லிசை செவியிற் கேட்பி னல்லது - நீ நல்ல புகழைச் செவியாற் கேட்பினல்லது; காண்பறியலை - அவன் வடிவைக் காண்டலறியாய்; காண்டல் வேண்டினை யாயின் - காண்டலை விரும்பினாயாயின்; மாண்ட நின் விரைவளர் கூந்தல் வரைவளி உளர - மாட்சிமைப்பட்ட நினது மணம் வளரும் கூந்தலிலே வரையிடத்துக் காற்று வந்தசைப்ப; கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி - பீலியையுடைய மயில்போலக் காட்சி யுண்டாக நடந்து; மாரி அன்ன வண்மைத் தேர் வேள் ஆயை - மழைபோன்ற வண்மையையுடைய தேரினையுடைய வேள் ஆயை; காணிய செம்மே - காணச் செல்வாயாக எ-று. “விரைவளர் கூந்தல் வரைவளி யுளர” வென்றது, “கொண்டைமேற் காற்றடிக்க” என்பதொரு வழக்குப்பற்றி நின்றது. என்றதனாற் பயன், பிறிதொன்றால் இடையூறில்லை யென்பதாம். ஆய் மாரி யன்ன வண்மையனாதலின் விறலியை அம் மாரியைக் கண்ட மயில்போலக் களித்துச் செல் லென்ற வாறாம். யாழ நின்றென்று பாடமோதுவாரு முளர். விளக்கம் : மாண்ட நின் என்புழி, யாழ நின் என்றும் பாடமுண்டென உரைகாரர் கூறுகின்றார். யாழ வென்பது அசைநிலை ஆயது புகழ் கூறக்கேட்ட மாத்திரையே காண்டல்வேட்கை மிக்கு மெலிவுற்று நின்றமை தோன்ற, “மெல்லியல் விறலி” யென்றார். வளி யுளரப்பட்ட கூந்தல் மயிற்றோகைபோல் விளங்குதலால், மயில்போற் செல்க என்றார். “கொடிச்சி கூந்தல் போலத் தோகை யருஞ்சிறை விரிக்கும்” (ஐங்.300) என்று சான்றோர் கூறுதல் காண்க. ஆயின் கொடையை மாரியன்ன வண்மை யென்றது, பயனோக்காது வேண்டுமிடத்து நீரைச் சொரியும் மாரிபோல, ஆய்அண்டிரனும் இரப்பார்க் கீதல் தன் கடனெனக் கருதி யொழுகினா னென்பது வற்புறுத்தி நின்றது. இம்மைச் செய்தது மறுமைக் காமெனும், அறவிலை வணிகன் ஆயலன்” (புறம்.134) என்று பிறாண்டும் இவ்வாசிரியர் கூறுதல் காண்க. 134. வேள் ஆய்அண்டிரன் “உலகத்துச் செல்வர் பலரும் தம்பால் உள்ள செல்வத்தைப் பரிசிலர்க்கு வழங்குவது இம்மையிற் புகழும் மறுமையிற் றுறக்க வின்பமும் குறித்தேயாகும்; ஆகவே, இப்பயன் கருதிக் கொடை வழங்கும் அவர்கள், பொருள் கொடுத்து மறுமை யின்பம் கோடலின், ஓராற்றால் அறவிலை வணிகரே யாவர்; அவர் தொகையுள் ஆய்அண்டிரனும் அமைவன் போலும்”எனச் சான்றோரிடையே ஒருகால் பேச்சு நிகழ்ந்ததாக, ஏணிச்சேரி முடமோசியார், “ஆய் அத்தகைய னல்லன்; இல்லார்க்கு வேண்டுவன நல்கி அவரையும் தம்மைப்போல, உலகியலில் நுகர்வன நுகர்வித்தல் உடையோர்க்குக் கடனாம் என்னும் சால்பு சான்றோர்க்குரியது; அதனையே சான்றோரும் செய்வர்; அவ்வாறே தானும் அச்சான்றோர் நெறி ஒழுகுதல் தக்கதென நிகழ்வது ஆய் அண்டிரனது கொடை” என இப்பாட்டின்கண் அச் சான்றோர்க்கு வற்புறுத்தியுள்ளார். இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிக னாயலன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே. (134) திணை : பாடாண்டிணை. துறை : இயன்மொழி. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : இம்மைச் செய்தது - இப் பிறப்பின்கட் செய்த தொன்று; மறுமைக்காம் - மறுபிறப்பிற் குதவும்; எனும் அறவிலை வணிகன் ஆய் அலன் - என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறங்கொள்ளும் வணிகன் ஆய் அல்லன்; சான்றோர் பிறரும் சென்ற நெறி என - அமைந்தோர் பிறரும் போயவழி யென்று உலகத்தார் கருத; ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மை - அந்த நற்செய்கையிலே பட்டது அவனது கைவண்மை எ-று. அன்றி, ஆய் அறவிலை வணிகன் அல்லன் ; பிறரும் சான்றோர் சென்ற நெறி யெனக் கருதி அச் செய்கையிலே பட்ட தன்று அவன் கைவண்மை யென்றுரைப்பாரு முளர். இதற்குப் பட்டன்றென்பது மறைப்பொருள் படாமையின், பட்டதன் றென்பது பட்டன்றென விகாரமாகக் கொள்க. விளக்கம் : மறுமைப் பயன் அறப்பயனாதலின், இம்மையில் நலம் செய்து மறுமையில் இன்பம் கருதுவோரை “அறவிலை வணிகர்” என்றார். அமைந்தோர் - நற்பண்புகளால் நிறைந்தவர். என என்பதற்கு என்று கருத வென்றுரைத்தவர் கருதுதலைச் செய்தற்குரியவர் இவரென்பார் “உலகத்தார்” என்றார். பட்டன்று - பட்டது; “அணிந்தன்று” என்றாற் போல. பிறர் கூறுமாறு உரை கொள்வதாயின், பட்ட தன்றென்பது பட்டன்றென நின்றதென வுரைத்தல் வேண்டும்; இன்றேல், பட்டன் றென்பது எதிர்மறைப் பொருள் தாராது என அறிக. (134) 135. வேள் ஆய்அண்டிரன் ஏணிச்சேரி முடமோசியார், முதன்முதலாக ஆய் அண்டிரனுடைய வண்மை, ஆண்மை, உடைமை முதலிய வற்றான் உளதாகிய புகழைக் கேள்வியுற்று அவனைக் காணச் சென்றார். அவனும் அவனது புலமை நலமும், மனநலமும் கேள்வியுற்றிருந்தானாதலின், அவரை அவர் வரிசையறிந்து வரவேற்றுத் தக்க சிறப்பினைச் செய்தான் அவன் வழக்கம் போல் மிக்க வளவிய களிறும், மாவும், தேரு, முதலிய பலவற்றைப் பரிசிலாகத் தர முற்பட்டான். அதனையறிந்த மோசியார், தாம் கூறக்கருதுவதை நேர்முகமாகக் கூறின், அவன் அன்பு மிக வுடைமையாற் பட்டாங்குக் கொள்ளானென்று நினைந்து ஒரு பாணன் கூற்றாக வரும் பரிசிற்றுறைப் பாட்டொன்றில் வைத்து, “மாவேள் ஆய், விறலி யென்பின்னே வர, படுமலைப் பண்ணுக் குரிய சிறிய யாழை ஒருபுடை தழுவிக் கொண்டு நின்னுடைய நல்லிசையை நினைந்து வரும் யான்,இப்போது வந்தது, நின்னைக் காண்டல் வேண்டியே யன்றிக், களிறும், மாவும், தேரும், வேண்டி யன்று; நின் செல்வத்தைப் பரிசிலர், தமதென வளைத்துக் கொள்வாராயின்,“ இல்லை, இஃது எனது” என்று சொல்லுதலை யறியாத வண்மை நிறைந்த மனமுடைய நீ பல்லூழி வாழ்வாயாக” என்று வாழ்த்திப் பாடினார். அப்பாட்டே இப்பாட்டு. இத் தொகை நூலில் பாட்டுக்கள் பலவும் அவரவர் வரலாற்று முறை பற்றித் தொகுக்கப்படாமையின் இஃது ஈண்டுக் காணப்படுகிறது. கொடுவரி வழங்குங் கோடுயர் நெடுவரை அருவிடர்ச் சிறுநெறி யேறலின் வருந்தித் தடவரல் கொண்ட தகைமெல் லொதுக்கின் வளைக்கை விறலியென் பின்ன ளாகப் 5 பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் வரிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்பப் படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ் ஒல்க லுள்ளமொ டொருபுடைத் தழீஇப் புகழ்சால் சிறப்பினின் னல்லிசை யுள்ளி 10 வந்தனெ னெந்தை யானே யென்றும் மன்றுபடு பரிசிலர்க் காணிற் கன்றொடு கறைபடி யானை யிரியல் போக்கும் மலைகெழு நாடன் மாவே ளாஅய் களிறு மன்றே மாவு மன்றே 15 ஒளிறுபடைப் புரவிய தேரு மன்றே பாணர் பாடுநர் பரிசில ராங்கவர் தமதெனத் தொடுக்குவ ராயி னெமதெனப் பற்ற றேற்றாப் பயங்கெழு தாயமொ டன்ன வாகநின் னூழி நின்னைக் 20 காண்டல் வேண்டிய வளவை வேண்டார் உறுமுரண் கடந்த வாற்றற் பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே. (135) திணை : பாடாண்டிணை. துறை : பரிசிற்றுறை. ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது. உரை : கொடு வரி வழங்கும் கோடுயர் நெடு வரை - புலி இயங்கும் சிகர முயர்ந்த நெடிய மலையின்கண்; அரு விடர் சிறுநெறி ஏறலின் - ஏறுதற்கரிய பிளப்பின்கண் சிறிய வழியை யேறுத லான்; வருந்தி - வருத்தமுற்று; தடவரல் கொண்ட - உடல் வளைவைப் பொருந்திய; தகை மெல் ஒதுக்கின் - பயில அடியிட்டு நடக்கின்ற மெல்லிய நடையினையுடைய; வளைக் கை விறலி என் பின்னளாக - வளையையணிந்த கையையுடைய விறலி என் பின்னே வர; பொன் வார்ந்தன்ன- பொன்னைக் கம்பியாகச் செய்தாற்போன்ற; புரி அடங்கு நரம்பின் - முறுக்கடங்கிய நரம்பினையுடைய; வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப - வரிப் பொருண்மையோடு பயிலும் பாட்டு நிலந்தோறு மாறி மாறி யொலிப்ப; படுமலை நின்ற பயம் கெழு சீறி யாழ் - படுமலைப் பாலை நிலைபெற்ற பயன் பொருந்திய சிறிய யாழை; ஒல்கல் உள்ளமொடு - தளர்ந்த நெஞ்சத்துடனே; ஒருபுடைத் தழீஇ - ஒரு மருங்கிலே யணைத்துக்கொண்டு; புகழ்சால் சிறப்பின் நின் நல்லிசை யுள்ளி - புகழ்தற்கமைந்த தலைமையையுடைய நினது நல்ல புகழை நினைத்து; எந்தை யான் வந்தனென் - என்னுடைய இறைவா, யான் வந்தேன்; என்றும் - எந்நாளும்; மன்று படு பரிசிலர்க் காணின் - மன்றத்தின்கண் வந்த பரிசிலரைக் காணின்; கன்றொடு கறை யடி யானை இரியல் போக்கும் - கன்றுடனே கறை பொருந்திய அடியையுடைய யானையை அணியணியாகச் சாய்த்துக் கொடுக்கும்; மலை கெழு நாடன் - மலையையுடைய நாடனே; மா வேள் ஆய் - மா வேளாகிய ஆயே; களிறும் அன்று- யாம் வேண்டியது யானையும் அன்று, மாவும் அன்று, குதிரையும் அன்று; ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்று - விளங்கிய பொற்படையையுடைய குதிரையிற் பூட்டப் பட்ட தேரும் அன்று; பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கவர் - பாணரும் புலவரும் கூத்தர் முதலாயினாருமாகிய அவர்கள்; தமதெனத் தொடுக்குவராயின் - தம்முடைய பொருளென வளைத்துக் கொள்வாராயின்; எமது எனப் பற்றல் தேற்றா - அதனை யெம்முடைய தென்று அவர்பானின்றும் மீண்டு கைக்கொள்ளுதலைத் தெளியாத; பயங்கெழு தாய மொடு - பயன் பொருந்திய உரிமையோடு கூடி; அன்னவாக நின் ஊழி - மற்றும் அத்தன்மையவாக நின்னுடைய வாழ்நாள்கள்; நின்னைக் காண்டல் வேண்டிய அளவை - யான் வந்தது நின்னைக் காண்டல்வேண்டிய மாத்திரையே; வேண்டார் உறு முரண் கடந்த ஆற்றல் - பகைவரது மிக்க மாறுபட்டை வென்ற வலியையுடைய; பொதுமீக் கூற்றத்து நாடு கிழவோய் - யாவரும் ஒப்பப் புகழும் நாட்டை யுடையாய் எ-று. நாடு கிழவோய், யான் வந்தது, களிறு முதலியன வேண்டி யன்று; நின்னைக் காண்டல் வேண்டிய அளவே; நின்னூழி அன்னவாக வெனக் கூட்டுக. அல்லதூஉம், யானை முதலாயின வன்றிப் பிறவற்றையும் பாணர் முதலாயினோர் தமதெனத் தொடுக்குவராயினென இயைத்துரைப்பினு மமையும். கொடுவரி; பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை; ஆகுபெயருமாம். இனி, ததை மெல்லொதுக்கின் எனவும், வடிநவில் பனுவல் எனவும் ஒளிறு நடைப் புரவிய எனவும் பாடமோதுவாரு முளர். வடிநவில் பனுவல் புலம்பெயர்ந் திசைப்ப வென்று கொண்டு வடித்தல் பயின்ற பாட்டை இசைதொறும் பெயர்த்து வாசிக்க வென்றுரைப்பாருமுளர். பொதுமீக் கூற்றம், பொதியிலுமாம். விளக்கம் : வளைந்த வரிகளை மேனி முழுதும் உடைமைபற்றிப் புலிக்குக் கொடுவரி யென்று பெயராயிற்று. வளைந்த வரிகளையுடைய புலியென விரிதல்பற்றி, இதனைப் பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை யென்றும், இஃது இயற்பெயரன்மையான், “ஆகுபெயருமாம்”என்றும் கூறினார். இவ் வியைபு குறித்தே சில உரைகாரர், இதனை அன்மொழித்தொகை யாகுபெயரென்றும் கூறுகின்றனர். தடவரல் வளைவு. வரிப் பொருண்மையாவது, அவரவர் பிறந்த நிலத்தன்மையும், பிறப்பிற்கேற்ற தொழிற் றன்மையும் தோன்றக் கூறுதல். இது வரிக் கூத்து. வரிப்பாட்டாவது, தெய்வஞ் சுட்டியும் மக்கட் சுட்டியும் “பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆற னியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும்” வருவது. படுமலை ஒருவகைப் பண்; இது கைக்கிளை குரலாக நிறுத்துப் பாடுவது என்ப. யாழை ஒருபுடைத் தழீஇக் கொண்ட தான் உள்ளம் தளர்ந்ததற்குக் காரணம் கூறாராயினும், நெடுவரை யருவிடர்ச் சிறுநெறி யேறிவந்த தென்பது விறலிக்குக் கூறியவாற்றால் துணியப்படும். பரிசிலர் தொடக்கத்தே மன்றத்தே தங்கிப் பின்னரே மறுகுதோறும் சென்று பாடுபவாதலின், “மன்றுபடு பரிசிலர்” என்றார். தொடுத்தல்-வளைத்துக் கொள்ளுதல். பொதுவாக யாவராலும் மேலாய சொற்களாற் பாராட்டப்படும் புகழ் “பொதுமீக் கூற்ற” மெனப்பட்டது; மீக்கூறுதல்-புகழ்தல்; “மீக்கூறும் மன்னனிலம்” (குறள் - 386). பொதியில், சான்றோர் யாவராலும் மீக்கூறப்படும் சிறப்புடையதாதலால், “பொதுமீக்கூற்றம் பொதியிலுமாம்” என்றார். “பொதியி லாயினும் இமய மாயினும்... ஒடுக்கம் கூறார் உயர்ந்தோ ருண்மையின்” என அடிகள் கூறுதல் காண்க. 136. வேள் ஆய் அண்டிரன் துறையூர் என்பது காவிரிக்கரைக்கண் உள்ளதோ ரூர். இவ்வூரில் ஓடைகிழார் என்னும் சான்றோர் வாழ்ந்தனர். இவர் வறுமை மிக்குப் பொதியின்மலைக் கிழவனாகிய ஆய் அண்டிரனைப் பாடிப் பரிசில் பெறக் கருதி, அவனது ஆய் குடிக்குச் சென்று அவனைக் கண்டார். அப்போது அவர் தமது வறுமைத் துன்பத்தை இப் பாட்டில் அமைத்து, “வேந்தே, என் உடையிலுள்ள தையலில் வாழும் சீலைப்பேன் ஒருபால் என்னைப் பகைத்துத் துன்புறுத்துகிறது; உணவின்றி வருந்தும் என் சுற்றத் தோடு என்னை வருத்தும் பசிநோய் ஒருசார் துன்புறுத்துகிறது; எவரிடத்தேனும் பரிசில் பெற்றுச் செல்லின், வழியில் ஆறலைத்து அதனையும் பறித்துக் கொள்ளும் கள்வரது அச்சம் ஒருமருங்கு வருத்தத்தைச் செய்கிறது. இத் துன்பங்களனைத்தையும் போக்கி எம்மை அருள வல்லவன் ஆய்அண்டிரன் எனக்கேட்டு அவன் புகழை விரும்பி யாங்கள் நெடுஞ்சுரங் கடந்து வந்துள்ளோம். எங்கட்கு ஈபவரே ஒரு பயனும் கருதாது பிறர்க்கு ஈபவராவர்; ஒருபயன் கருதிப் பிறர்க்கீபவர் தமக்கே ஈபவராவர்; இவ்வளவே யான் சொல்வேனாக, நீ நின் தகுதிக்கேற்ப வேண்டுவன வழங்குக. யாங்கள் அப் பரிசிலைக்கொண்டு எம் துறையூரின்கண்ணே யிருந்து உண்டு மகிழ்ந்து, எம்மூர்த் துறையிடத்து மணலினும் பல யாண்டு நீ வாழ்வாயாக என வாழ்த்தி மகிழ்வோம்” என்று பாடியுள்ளார். யாழ்ப்பத்தர்ப் புறங்கடுப்ப இழைவலந்த பஃறுன்னத் திடைப்புரைபற்றிப் பிணிவிடாஅ ஈர்க்குழாத்தோ டிறைகூர்ந்த 5 பேஎற்பகையென வொன்றென்கோ உண்ணாமையி னூன்வாடித் தெண்ணீரிற் கண்மல்கிக் கசிவுற்றவென் பல்கிளையொடு பசியலைக்கும் பகையொன்றென்கோ 10 அன்னதன்மையு மறிந்தீயார் நின்னதுதாவென நிலைதளர மரம்பிறங்கிய நளிச்சிலம்பிற் குரங்கன்னபுன் குறுங்கூளியர் பரந்தலைக்கும் பகையொன்றென்கோ 15 ஆஅங். கெனைப்பகையு மறியுநனாய் எனக்கருதிப் பெயரேத்தி வாயாரநின் னிசைநம்பிச் சுடர்சுட்ட சுரத்தேறி இவண்வந்த பெருநசையேம் 20 எமக்கீவோர் பிறர்க்கீவோர் பிறர்க்கீவோர் தமக்கீபவென அனைத்துரைத்தனன் யானாக நினக்கொத்தது நீநாடி நல்கினை விடுமதி பரிசி லல்கலும் 25 தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை நுண்பல மணலினு மேத்தி உண்குவம் பெருமநீ நல்கிய வளனே. (136) திணை : பாடாண்டிணை. துறை : பரிசில்கடாநிலை. அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது. உரை : யாழ்ப் பத்தர் புறம் கடுப்ப - யாழ்ப் பத்தரினது புறத்தை யொப்ப; இழை வலந்த பல் துன்னத்து - இழை சூழ்ந்த பல தையலினது; இடைப் புரை பற்றி - இடைக்கண் உளவாகிய புரைகளைப் பற்றி; பிணிவிடாஅ ஈர்க் குழாத்தோடு - ஒன்றோ டொன்று தொடர்ந்த பிணிப்பு விடாதே கிடக்கின்ற ஈரினது திரளோடு; இறை கூர்ந்த பேஎன் பகையென ஒன்று என்கோ - தங்குதல் மிக்க பேனாகிய பகையை ஒரு பகை யென்பேனோ; உண்ணாமையின் ஊன் வாடி - உண்ணாமையின் உடம்பு புலர்ந்து; கண் தெண்ணீரின் மல்கி- கண் தெளிந்த நீரால் நிறைந்து; கசிவுற்ற என் பல் கிளையொடு - வியர்ப்புற்ற எனது பல சுற்றத்தோடு; பசி அலைக்கும் பகை ஒன்றென்கோ - பசிநோய் வருத்தும் பகையை ஒரு பகை யென்பேனோ; அன்ன தன்மையும் அறிந்தீயார் - அப்பெற்றிப்பட்ட எனதியல்பையும் அறியாராய்; நின்னது தா என - நின் கைப்பொருளைத் தாவென்று சொல்லி; நிலை தளர - எம்முடைய நிலைகள் தளரும்படி; மரம் பிறங்கிய நளிச் சிலம்பின் - மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில்; குரங்கன்ன புன் குறுங்கூளியர் - குரங்கு போலப் பறித்துக்கொள்ளும் இயல்பையுடைய புல்லிய குறிய ஆறலை கள்வர்; பரந் தலைக்கும் பகை ஒன்றென்கோ - பரந்து வந்தலைக்கும் பகையை ஒரு பகை யென்பேனோ; எனைப் பகையும் அறியுநன் ஆய் எனக் கருதி - எல்லாப் பகையும் அறிவான் ஆயே யெனக் கருதி; வாயாரப் பெயரேத்தி - எமது வாக்கினால் மிகவும் நினது பெயரை வாழ்த்தி; நின் இசை நம்பி - நின்னுடைய புகழை நச்சி; சுடர் சுட்ட சுரத்து ஏறி - ஞாயிறு சுடப்பட்ட சுரத்தின்கண்ணே யேறி; இவண் வந்த பெருநசையேம் - இவ்விடத்துவந்த பெரிய நச்சுதலை யுடையேம்; எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் - இங்ஙனம் வறுமையுற்ற எங்களுக்கு ஒன்றை இடுவோரன்றோ பயன் கருதாது பிறர்க்கு இடுபவர்களாவாரெனவும், பிறர்க் கீவோர் தமக்கு ஈப வென - எம்மை யொழிந்த பிறர்க்கிடுவாரன்றோ பயன் கருதி யிடுதலால் தங்களுக்கே இடுவோ ரெனவும்; அனைத்து யான் உரைத்தனன் ஆக - அவ்வளவாக யான் சொன்னேனாக; நினக் கொத்தது நீ நாடி- நினக்குப் பொருந்தியது நீ ஆராய்ந்து; பரிசில் நல்கினை விடுமதி - எமக்குப் பரிசில் தந்தனையாய் விடுவாயாக; அல்கலும் - நாடோறும்; தண் புனல் வாயில் துறையூர் முன்றுறை -குளிர்ந்த நீரோடும் வாய்த்தலைகளை யுடைய துறையூரின்கண் துறை முன்னர்; நுண் பல மணலினும் ஏத்தி - நுண்ணிய பல மணலினும் பல நாள் வாழ்க வென வாழ்த்தி; உண்குவம் - உண்பேம்; பெரும -; நீ நல்கியவளன் - நீ தந்த செல்வத்தை எ-று. பெரும, நீ நல்கிய வளத்தை அல்கலும் ஏத்தி உண்பேம்; நினக் கொத்தது நீ நாடிப் பரிசில் நல்கினை விடுமதி யெனக் கூட்டுக. ஆயென வென்பதற்கு ஆயென்று பிறர் சொல்லவென்றும், எமக்கீவோர் பிறர்க் கீவோர் என்பதற்கு எமக் கீவோர் எம் வறுமை கண்டு வருத்தமுறுவோர் யாவர்க்கும் ஈவோ ரெனவும், பிறர்க்கீவோர் தமக்கீபவென்றதற்குப் பிறர்க்குக் கொடுப்போர் அக் கொடுக்கப்படுகின்றோர் தமக்கே கொடுப் போராவ ரெனவு முரைப்பாரு முளர். கசிவுற்ற வென்பதற்கு இரக்கமுற்ற வெனினு மமையும். பேஎற் பகையென வென்புழி எனவும், ஆங்கெனைப் பகையு மென்புழி ஆங்கும் அசைநிலை. கண் தெண்ணீரின் மல்கி யெனவும் வாயாரப் பெயரேத்தி யெனவும் மாற்றப் பட்டன. விளக்கம் : உண்ணாமையால் உடல் வாடுதலும் வியர்த்தலும் இயல்பாதலின், “ஊன்வாடிக் கசிவுற்ற என் பல்கிளை” யென்றார். ஆறலை கள்வர் மலைகளில் குரங்கு போல மறைந்திருந்து வழிப்பறி செய்வது தோன்ற, “குரங்கன்ன புன் குறுங்கூளியர் பரந்தலைக்கும் பகை” யென்றார். துறையூர் தமதூராதலின், அதனையே விதந்தோது கின்றார். 137. நாஞ்சில் வள்ளுவன் திருக்குறட் செல்வத்தைச் செந்தமிழ்க்கு வழங்கி உலகு புகழும் நிலைப்புகழ் பெற்ற திருவள்ளுவர் போல, வள்ளுவ னென இயற்பெயர் பெற்ற கொடைவள்ளல் இந் நாஞ்சில் வள்ளுவன். நாஞ்சில் மலையும் அதன் அடிப்பகுதியிலுள்ள நாஞ்சில் நாடும் இவ்வள்ளுவற்குரியவை. இவன் சேர மன்னர்க்குக் கீழிருந்து வாழும் சிற்றரசன். இவன் முன்னோர் போரிற் புறங்கொடாத புகழ் பெற்றவர். இவற்கு முடிவேந்த னான சேரன், இவன்பால் பெருமதிப்பும் பேரன்புமுடையவனாய் இவன் வேண்டியன யாவும் வேண்டியவாறே இவற்கு வழங்கினன். அதனால் இவனும் அவன்பொருட்டுச் சாதல், தன்னை விற்றாயினும் கொள்ளத்தக்கதெனக் கருதும் வீறு கொண்டிருந்தான். ஒளவையாரால் இவன் பெரியோர் வரிசையுள் வைத்துப் போற்றப்பட்டவன். இவனது சான்றாண்மையை வியந்த ஒரு சிறைப் பெரியனார் இவனைப் பெற்ற தாய் தந்தையர் தவத்தைப் பாராட்டி, “நின் தந்தை தாய் வாழியர் நிற்பயந் திசினோரே” யென்று வாழ்த்தியுள்ளார். “இவன் தந்தை யென்னோற்றான் கொல்லென்னும் சொல்” நிகழுமா றொழுகிய இவனது ஒழுக்கம் திருவள்ளுவர் திருவுள்ளத்திருந்து விளக்கஞ் செய்திருப்பது இதனால் நன்கு புலனாகிறது. இவனை ஒரு சிறைப் பெரியனார். மருதனிளநாதனார், ஒளவையார் என்ற சான்றோர் மூவரும் பாடியுள்ளனர். இவருள் ஒளவையார் இவனைச் சிறிது அரிசி வேண்டினாராக, அவர்க்கு இவன் பெரியதொரு களிற்றினை நல்கினான். அதனை வியந்து அவர் பாடிய பாட்டு மிக்க சுவையுடையதாகும். இப்போதுள்ள நாகர்கோவிலைச் சூழவுள்ள நாடு நாஞ்சில் நாடு எனப்படுகிறது. ஆங்குள்ள மலைகளுள் நாஞ்சில்மலை இன்னதெனத் தெரிந்திலது. ஆதலால், வள்ளுவனது நாஞ்சில்மலையும் அவனது நாடும் இவையெனத் தெளிதற்கு வேண்டும் விளக்கமில்லாமல் இருக்கின்றன. உடுமலைப் பேட்டைக்குத் தெற்கிலுள்ள மலைத்தொடர்களிற் றோன்றி யோடும் காட்டாறுகளுள் ஒன்று நாஞ்சிலாறு என்னும் பெயர் கொண்டுளது. உ.வே. சாமிநாதையரவர்களும் இது குறித்து ஒன்றும் கூறமாட்டா தொழிந்தனர்.இவ்வள்ளுவன் சேர மன்னன் ஆதரவு பெற்றவனென்பது கொண்டு, இவனது நாடு சேரநாட் டெல்லையில் தமிழகத்தைச் சாரவிருந்த தென்பது ஒருதலை. இனி, இவனைப் பாடிய சான்றோருள் ஒரு சிறைப் பெரிய னார் பெயர் சில ஏடுகளில் ஒரு சிறைப் பெயரினார் என்றும் காணப்படுகிறது. இவர் நாஞ்சில் வள்ளுவனது நாட்டிலே பிறந்து வளர்ந்து நல்லிசைப் புலமை நிறைந்தவர். இவர்க்கு வள்ளுவன் ஆட்சி நலத்திற் பேரீடுபாடு உண்டு. நாட்டில் உள்ள சான் றோர்க்குப் பெருந்திரு வுடையரான தமிழ்வேந்தர் மூவரையும் பாடுதற்குப் பேரவா வுண்டாதல் இயல்பாயினும், தமக்கு வள்ளுவனைக் காட்டிலும் அவர்கள் மேம்பட்டவராகத் தோன் றாமையின், அவரைப் பாடுவதற்குச் சிறிதும் அவாவாதவர். நாஞ்சில் நாட்டில் விதைத்த வித்து மழையில்லை யெனக் கெடுதலின்றிக் கரும்புபோல வளமுற வளர்ந்து விளையும் என்றும், கோடையால் நீர்நிலைகள் வற்றுவதில்லை யென்றும், கடனோக்கி யோடும் ஆறுகள் தெளிந்த நீருடனே வேங்கைப் பூக்களைக் கொண்டு செல்லும் என்றும் பாடி, “பெருங்கல் நாடனே, நீ வாழ்வாயாக; நின்னைப் பெற்றமையால் நின் தந்தைதாயர் வாழ்க” என்று பாராட்டியுள்ளார். இரங்கு முரசி னினஞ்சால் யானை முந்நீ ரேணி விறல்கெழு மூவரை இன்னு மோர்யா னவாவறி யேனே நீயே, முன்யா னறியு மோனே துவன்றிய 5 கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது கழைக்கரும்பி னொலிக்குந்து கொண்டல் கொண்டநீர் கோடை காயினும் கண்ணன்ன மலர்பூக்குந்து கருங்கால் வேங்கை மலரி னாளும் 10 பொன்னன்ன வீசுமந்து மணியன்னநீர் கடற்படரும் செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருத சிறுவெள் ளருவிப் பெருங்க னாடனை நீவா ழியர்நின் றந்தை 15 தாய்வா ழியர்நிற் பயந்திசி னோரே. (137) திணை : பாடாண்டிணை. துறை : இயன்மொழி; பரிசிற்றுறையு மாம். நாஞ்சில் வள்ளுவனை ஒருசிறைப் பெரியனார் பாடியது. உரை : இரங்கு முரசின் - ஒலிக்கும் முரசினையும்; இனம் சால் யானை - இனமமைந்த யானையையுமுடைய; முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை - கடலாகிய எல்லையையுடைய நிலத்தின் கண் வென்றி பொருந்திய மூவேந்தரை; இன்னும் ஓர் யான் அவா வறியேன் - இன்னமும் யானொருவனே பாடும் அவாவை யறியேன்; நீயே முன் யான் அறியுமோன் - நீதான் முன்னே தொடங்கி யான் அறியுமவன்; துவன்றிய கயத்திட்ட வித்து - நீர்நிறைந்த பள்ளத்தின்கண் விதைத்த வித்து; வறத்திற் சாவாது - நீரின்மையாற் சாவாது; கழைக் கரும்பின் ஒலிக் குந்து - கரும்புபோலத் தழைக்கும்; கொண்டல் கொண்ட நீர் - மழையால் முகந்து சொரியப்பட்ட நீர்; கோடை காயினும் கண்ணன்ன மலர் பூக்குந்து - கோடை காயினும் மகளிர் கண்போன்ற குவளைமலர் பூக்கும்; கருங்கால் வேங்கை மலரின் - கரிய தாளையுடைய வேங்கை மலரின்; நாளும் பொன்னன்ன வீ சுமந்து - நாடோறும் அப் பொன்போலும் பூவைச் சுமந்து; மணியன்ன நீர் கடற் படரும் - மணிபோலும் நீர் கடற்கட் செல்லும்; செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந - செவ்விய மலைப்பக்கத்தையுடைய நாஞ்சிலென்னும் மலையை யுடைய பொருந; சிறு வெள்அருவிப் பெருங்கல் நாடனை - சிறிய வெளிய அருவியையுடைய பெரிய மலையையுடைய நாட்டை யுடையாய்; நீ வாழியர் - நீ வாழ்வாயாக; நிற்பயந் திசினோர் நின்தந்தை தாய் வாழியர்- நின்னைப் பெற்றோ ராகிய நின் தந்தையும் தாயும் வாழ்க எ-று. நீர் மலர் பூக்குமென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்து மேல் ஏறிநின்றது.கோடைக்காயினு மென்பது பாட மாயின், கோடைக்கட்காயினு மென்றாலும், கோடைக்கணாயினு மென்றானு முரைக்க. முன்னின்ற பெயரெச்ச மூன்றும் நாஞ்சிலென்னும் நிலப்பெயர் கொண்டன. தன் பழமை தோன்றப் புகழ்ந்து கூறுவான்,மூவரையும் பாடுமவாவை இன்னுமறியே னென்றதாகக் கொள்க. விளக்கம் : விறல் கெழு மூவரென்றது, சேர சோழ பாண்டியர்களை. ஏணி - எல்லை; “நளியிரு முந்நீ ரேணியாக” (புறம். 35) என்புழிப்போல. அவாவறியேன் - பாட விரும்பி யறியேன். தமிழ்ச் சான்றோ ரனைவர்க்கும் தமிழ் மூவேந்தரைப் பாடுதற் கியல்பாகவே அவா வுண்டாகுமாயினும்; யானொருவனே அவ்வாறு அவாவாதவன் என்பார், “இன்னும் ஓர் யான் அவாவறியேன்” என்றார். கண்ணன்ன மலர் எனப் பொதுப்படக் கூறினமையின், சிறப்புடைய மகளிர் கண்ணென்பது கொள்ளப்பட்டது. இப்போதுள்ள நாஞ்சில் நாட்டி லுள்ள மலைகளுள் நாஞ்சில்மலையின்ன தெனத் தெரிந்திலது. பூத்தல்வினை மலர்க்குரித்தாயினும், நீரின் வினையாகக் கூறப்படு தலின், மலரின்வினை அதற்கிடமாகிய நீர்மேலேறி நின்றதென்றார். நிலப்பெயர் - இடப்பெயர். “விறல்கெழு வேந்தர் மூவரையும் அறியேன். நீயே யான்முன் னறியு மோன்” என்றது, இவ்வாசிரி யர்க்கு இவன்பாலுள்ள பழமைத் தொடர்பு விளக்குவது காண்க. மணி, பளிங்கு மணி. “பளிங்கு வகுத்தன்ன தீநீர்” (புறம்.150) என்று பிறரும் கூறுதல் காண்க. ஒலிக்கும், பூக்கும், படரும் என்ற பெயரெச்சம் மூன்றும் நாஞ்சில் என்னும் இடப்பெயர். கொண்டன. ஒலிக்கும், பூக்கும் என்பன, உம் உந்தாய் நின்றன. (137) 138. நாஞ்சில் வள்ளுவன் ஒருகால், மதுரை மருதன் இளநாகனார் நாஞ்சில் வள்ளு வனையடைந்து அவனால் மிக்க பரிசில் தரப்பெற்றுச் சென்றார். செல்பவர் வழியில் பாணர் கூட்டமொன்று வரக் கண்டு, அவர் களில் மூத்தோனை நோக்கி, “நீ செல்வர் பிறரை நினையாது, நாஞ்சில் வள்ளுவனை நினைந்து போவது நோக்க, நீ விரிந்த பெரிய மனமுடையனாகத் தோன்றுகின்றாய்; நீ குறித்துச் செல்லும் வள்ளலோ பின்றையோ, நாளையோ வாவென மொழிபவ னல்லன்” என்றாராக, அவன், தான் இதற்கு முன்பும் அவன்பாற் சென்று பரிசில்பெற்று வந்தமை தெரிவித்து, இனி அவ்வாறு பெற முடியுமோ என மையல்நோக்கம் கொண்டான். அவற்கு மருதன்இளநாகனார், “அவன் கிளியீடு வாய்த்தாற் போல்பவன்; அவன்பாற் செல்லும் நின்னை முன்னே வந்து போன பழைய பாண னெனத் தெரிந்துரைப்பார் யாவருளர்? நீ இன்னே இனிது செல்க” என இப்பாட்டின்கண் குறித்துரைத் துள்ளார். ஆனினங் கலித்த வதர்பல கடந்து மானினங் கலித்த மலைபின் னொழிய மீனினங் கலித்த துறைபல நீந்தி உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ் 5 சிதாஅ ருடுக்கை முதாஅரிப் பாண நீயே பேரெண் ணலையே நின்னிறை மாறி வாவென மொழியலன் மாதோ ஒலியிருங் கதுப்பி னாயிழை கணவன் கிளிமரீஇய வியன்புனத்து 10 மரனணி பெருங்குர லனைய னாதலின் நின்னை வருத லறிந்தனர் யாரோ. (138) திணை : பாடாண்டிணை. துறை : பாணாற்றுப்படை. அவனை மருதன் இளநாகனார் பாடியது. உரை : ஆனினம் கலித்த அதர்பல கடந்து - பெற்றத்தினது இனம் மிக்க வழிபலவும் வந்து; மான் இனம் கலித்த மலை பின் னொழிய - மான்திரள் மிக்க மலை பின் கழிய; மீனினம் கலித்த துறைபல நீந்தி - மீனினம் தழைத்த துறை பலவற்றையும் நீந்தி; உள்ளி வந்த - நினைத்து வந்த; வள்ளுயிர்ச் சீறியாழ் - வள்ளிய ஓசையை யுடைத்தாகிய சிறிய யாழையும்; சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண - சிதாராகிய உடையையுமுடைய மூத்த பாணனே; நீ பேரெண்ணலை - நீதான் அவன்பாற் சில கருதிப் போகின்றமையின் பெரிய எண்ணத்தையுடையை; நின் இறை - நின்னுடைய தலைவன்; மாறி வா என மொழியலன் - இப்பொழுது போய்ப் பின்னொரு நாட் பரிசிற்கு வாவென்று சொல்லான்; ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன் - தழைத்த கரிய கூந்தலையுடைய ஆயிழைக்குத் தலைவன்; கிளி மரீஇய வியன் புனத்து - கிளி மருவிய அகன்ற புனத்தின்கண்; மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின் - மரப்பொதும்பின்கண் வைத்த பெரிய கதிரை யொப்பனாதலின்; நின்னை வருதல் அறிந்தனர் யார் - நீ அவன்பாற் பரிசில்பெற்று வருதற்கண் நின்னைப் பழைய பாணன் என்று அறிவார் யார் எ-று. “நின்னை வருதல் அறிந்தனர் யார்” என்றதன் கருத்து, நின்னை யறிவாரும் அறியாத தன்மையை யாவை யென்பதாம். அறிவார் யாரென்பது அறிந்தனர் யாரெனக் காலமயக்கமாயிற்று. நினக்கு அவன் பரிசில் தப்பாமல் தருமென்பான் “நின்னிறை” யென்றான். “கிளி மரீஇய வியன்புனத்து மரனணி பெருங்குர லனையன்” என்றது. கிளியீடு வாய்த்தாற் போல்வனென்னும் வழக்குப் பற்றி நின்றது. விளக்கம் : துறை-நீர்த் துறை. முதுமையையுடைய பாணனை முதாஅரிப் பாணன் என்றார்; முதிர்ந்த காயை முதாரிக்காய் என்பது போல. பெருங்கொடை வேந்தர் பலர் இருப்பவும், நாஞ்சில் வள்ளுவனை நயந்து சேறலின், “பேரெண்ணலை” யென்றார். எண்ணல்-எண்ணம். அறிந்தனர் யார் என்றவிடத்து, அறிதற்குரிய நின்னைப் பழைய பாணன் என்று அறிவார் யார் என்பது வருவிக்கப்பட்டது. பரிசில் பெற்றவழி இப்பாணனது பண்டைநிலை, பெற்ற செல்வத்தால் மறைந்துபோமென்பது எய்த “அறிந்தனர் யார்” என்றதன் கருத்து “நின்னை யறிவாரும் அறியாத தன்மையை யாவையென்பதாம்” என்றார். அறிவார் யார் என எதிர்காலத்தில் கூறற்பாலதனை இறந்த காலத்தாற் கூறியது காலமயக்கம். இது தெளிவுபற்றி வந்தது. பண்டும் பரிசில் தந்து சிறப்பித்துள்ளதோடு இப்போதும் அது தருதற்குச் சமைந்திருத்தலின், “நின்னிறை” என்றான்; எனவே, அவன் பரிசில் பெறுவது தப்பாதாயிற்று. கிளியீடு வாய்த்தாற்போல வென்பது பிற்காலத்தே “இல்லார்க்குக் கிழியீடு வாய்த்தாற் போல” என வழங்குவதாயிற்று. 139. நாஞ்சில் வள்ளுவன் பிறிதொருகால், மருதனிள நாகனார் வள்ளுவன்பால் பரிசில் பெறுதல் வேண்டிச் சென்றார். தமக்குப் பரிசில் இன்றியமை யாமையும் அதனை விரையப் பெறவேண்டி யிருத்தலையும் அவற்கு நேரே யுரைத்தல் இயலாமையின், பாணன் ஒருவன் விரும்பிக் கேட்கும் வாய்பாட்டால், இப்பாட்டின்கண் வைத்து, “வேந்தே, என் பின்னே வரும் இளைய மகளிரும் விறலியரும் வாழ்தல் வேண்டி யான் பொய் கூறுவேனல்லேன்; மெய்யே கூறுகின்றேன்; எனது இப்போதைய நிலைமை நீ மனம் கனிந்து நல்கும் காலத்தை நோக்கியிருத்தற் கேற்றதன்று. நினக்குரிய முடிவேந்தனாகிய சேரனோ, நினக்கு வேண்டியவற்றை வேண்டி யாங்குக் கொடுத்தற்கு அஞ்சான்; அவன்பொருட்டு நீ சாதற்கும் அஞ்சாய்; ஒருகால் போருண்டாயின், நின் செவ்வி கிடைக்குந் துணையும் என் சுற்றம் பசித் துன்பத்தைப் பெறாது; ஆதலால் யாம் வேண்டும் பரிசிலை இன்னே தருவாயாக” எனக் குறித்துள்ளார். சுவலழுந்தப் பலகாய சில்லோதிப் பல்லிளைஞருமே அடிவருந்த நெடிதேறிய கொடிமருங்குல் விறலியருமே 5 வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன் மெய்கூறுவல் ஓடாப் பூட்கை யுரவோர் மருக உயர்சிமைய வுழாஅ நாஞ்சிற் பொருந மாயா வுள்ளமொடு பரிசி லுன்னிக் 10 கனிபதம் பார்க்குங் காலை யன்றே ஈத லானான் வேந்தே வேந்தர்க்குச் சாத லஞ்சாய் நீயே யாயிடை இருநில மிளிர்ந்திசி னாஅங் கொருநாள் அருஞ்சமம் வருகுவ தாயின் 15 வருந்தலு முண்டென் பைதலங் கடும்பே. (139) திணை : பாடாண்டிணை. துறை : பரிசில் கடாநிலை. அவனை அவர் பாடியது. உரை : சுவல் அழுந்தப் பல காய - தோள் வடுப்படப் பல முட்டுக் களையும் காவிய; சில்லோதிப் பல் இளைஞரும் - சிலவாய மயிரையுடைய பல இளையோரும்; அடி வருந்த நெடிது ஏறிய - அடிவருந்த நெடும்பொழுது ஏறிய; கொடி மருங்குல் விறலி யரும் - கொடிபோலும் இடையினையுடைய விறலியரும் என இவர்; வாழ்தல் வேண்டி - வாழ்தலை விரும்பி; பொய் கூறேன் மெய் கூறுவல் - பொய் சொல்லேன் மெய் சொல்லுவேன்; ஓடாப் பூட்கை உரவோர் மருக - புறங்கொடாத மேற் கோளையுடைய வலியோர் மரபி லுள்ளானே! உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருத - உயர்ந்த உச்சியை யுடைத்தாய் உழப்படாத நாஞ்சிலென்னும் பெயரையுடைய மலைக்கு வேந்தே; மாயா உள்ளமொடு- மறவாத நினைவுடனே; பரிசில் உன்னி- பரிசிற்கு வந்து பொருந்தி; கனி பதம் பார்க்கும் காலை யன்று - பின்பு நின்று நின் மனம் நெகிழும் செவ்வி பார்க்கும் காலமன்று யான் வறுமையுற்று நிற்கின்ற நிலைமை; ஈதலானான் வேந்து - நினக்கு வேண்டிற்றுத் தருதலை அமையான் நின்னுடைய அரசன்; வேந்தற்குச் சாதல் அஞ்சாய் நீ - அவ்வரசன் பொருட்டுச் சாதலுக்கு அஞ்சாய் நீ; ஆயிடை - அவ்விடத்து; இரு நிலம் மிளிர்ந்திசி னாஅங்கு - பெரிய நிலம் பிறழ்ந்தாற் போல; ஒருநாள் அருஞ்சமம் வருகுவ தாயின் - ஒருநாள் பொறுத்தற்கரிய பூசல் வருவதாயின்; வருந்தலு முண்டு என் பைதலங் கடும்பு - வருந்துதலுமுளதாம் பசித் துன்பத்தையுடைய சுற்றம் எ-று. அதனாற் போர் வருதன் முன்னே பரிசில் தந்து விடுவாயாக வென்பது கருத்து. வேந்து என்றது சேரனை. விளக்கம் : அழுந்தியவழி வடு வுண்டாதலால், அழுந்த வென்றதற்கு வடுப்படவென வுரை கூறினார். இளைஞரென்றது, சில்லோதி யென்ற அடைச்சிறப்பால் பெண்பால் குறித்து நின்றது. புரை தீர்ந்த நன்மை பயக்குமாயின், பொய்ம்மையும் வாய்மையாம் என்பது கொண்டு, “வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்” என்றார். நாஞ்சில் உழுகின்ற கலப்பைக்கும் பெயராதலின், நாஞ்சில் மலையை “உழாஅ நாஞ்சில்” என வெளிப்படுத்தார். பரிசில் உன்னி - பரிசில் கருதிப் போந்து என்று பொருள்படுதலின், பரிசிற்கு வந்து பொருந்தி யென்றார். பரிசில் துன்னி என்றும் பாடம் கூறுவர். கனி பதம் - மனம் அருளாற் கனிந்து நெகிழும் காலம். வேந்து ஈதலானான் என்றும், அவற்கு நீ சாதல் அஞ்சாய் என்றும் கூறுதலின், நாஞ்சில் வள்ளுவன் குறுநில மன்னனென்றும், “வேந்தென்றது சேரனை” என்பதனால், இவ் வள்ளுவற்குத் தலைமை வேந்தன் சேரன் என்றும் அறியலாம். “அருஞ்சமம் வருகுவதாயின்” என்றது, அச்சமத்தின்கண் ஈடுபடின் நின் செவ்வி எமக்குக் கிடைத்த லரிதாம்; அதனால் எம் சுற்றத்தின் பசித்துன்பம் நீங்குவது நீட்டிக்கும் என்றவாறு. “அதனால்....கருத்து” என்பது குறிப்பெச்சம். (139) 140. நாஞ்சில் வள்ளுவன் ஒருகால் நாஞ்சில் வள்ளுவனது நாட்டிற்கு ஒளவையார் விறலியர்பலர் சூழ்வரச் சென்றிருந்தார். அக்காலை அவ்விறலியர் தாம் தங்கியிருந்த மனைப்பக்கத்தே முளைத்துத் தழைத்திருந்த கீரைகளைப் பறித்துச் சமைக்கலுற்றனர். அவர்கட்கு அதன் கண்ணுறையாக இடற்குத் துவரையரிசி இல்லை. அதனால் அவர் பொருட்டு ஒளவையார் வள்ளுவனிடம் சென்று சில அரிசி தருமாறு வேண்டினர். அவன் அவரது வரிசையும் தன் நிலைமை யும் சீர்தூக்கி மலைபோல்வதொரு களிறு சுமக்கும் அளவில் களிற்றின்மேலேற்றி விடுத்தான். ஒளவையார் அவன் கொடை மடத்தை வியந்து, ஏனைச் சான்றோர்களை நோக்கி, “செந்நாப் புலவீர், நாஞ்சில் வள்ளுவன் மடவன்போலும். யாம் சில அரிசி வேண்ட, எமக்கு மலைபோல்வதொரு களிற்றை நல்கினானே! இப்பெற்றிப்பட்டதொரு கொடைமடமும் உண்டுகொல்! பெரியோர் தமது செய்தற்குரிய கடமையை முன்பின் ஆராய்ந்து செய்யாரோ? கூறுமின்” என்று இப் பாட்டைப் பாடியுள்ளார். தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர் வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில 5 அரிசி வேண்டினெ மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர் தேற்றா வீகையு முளதுகொல் 10 போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே. (140) திணை : பாடாண்டிணை. துறை : பரிசில் விடை. அவனை ஒளவையார் பாடியது. உரை : தடவு நிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன் - பெரிய நிலைமையையுடைய பலாமரத்தை யுடைத்தாய நாஞ்சில் மலைக்கு வேந்தன்; மடவன் மன்ற - அறிவு மெல்லியன் நிச்சயமாக; செந்நாப் புலவீர் - செவ்விய நாவையுடைய புலவீர்; வளைக் கை விறலியர் - வளையணிந்த கையையுடைய விறலியர்; படப்பைக் கொய்த அடகின் கண்ணுறையாக - மனைப் பக்கத்தின் கட் பறித்த இலைக்கு மேல் தூவுவதாக; யாம் சில அரிசி வேண்டினேமாக - யாங்கள் சில அரிசி வேண்டினேமாக; தான் வரிசை அறிதலின் - தான் பரிசிலர்க் குதவும் வரிசை யறிதலான்; தன்னும் தூக்கி - எம் வறுமையைப் பார்த்தலே யன்றித் தனது மேம்பாட்டையும் சீர்தூக்கி; இருங் கடறு வளைஇய - பெரிய சுரஞ் சூழ்ந்த; குன்றத் தன்னதோர் பெருங் களிறு நல்கியோன் - மலை போல்வதொரு பெரிய யானையை யளித்தான்; அன்னதோர் தேற்றா ஈகையும் உளது கொல் - ஆதலான் ஒருவர்க்கு ஒன்றனைக் கொடுக்குமிடத்து அப் பெற்றிப்பட்டதொரு தெளியாக் கொடையும் உளதோ தான்; பெரியோர் தம் கடன் போற்றார் - பெரியோர் தாங்கள் செய்யக் கடவ முறைமையைத் தெரிந்து பாதுகாத்துச் செய்யார்கொல் எ-று. பிறவென்ப தசைநிலை. கொல்லென்பது பின்பும் கூட்டி யுரைக்கப் பட்டது. விளக்கம் : “தடவும் கயவும் நளியும் பெருமை” (தொல்.உரி.22) என்ப வாகலின், தடவு நிலை யென்றதற்குப் பெரிய நிலைமை யெனப் பொருள் கூறினார். மறந்தும் பொய்கூறா நாவினராகலின், புலவரைச் “செந்நாப் புலவீர்” என்றார். அவர்கள் இவர்க்கு வள்ளுவனுடைய அறிவு நலத்தைப் பாராட்டிக் கூறியிருத்தலின், அவர்களை நோக்கி, “நாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற” என்றார். மேலே மடவன் என்பதனைச் சாதித்தற்குரிய ஏதுவை விரித்துக் கூறலின் மடவன் “மன்ற” என்றார். அரிசி யென்றது - துவரையின் பருப்பினை; அதனைத் துவரை யரிசி யென்பதும் வழக்கு. பெருங்களிறு சுமக்கும் அளவாய துவரையை அக் களிற்றோடு நல்கியதை, பெருங்களிறு நல்கினான் என்றார். தேற்றா ஈகை பெரியோர்பால் உண்டென்ப வாயின், பெரியோர் தாம் தம் கடனைப் போற்றார் கொல்லோ என்பதுபட, “போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே” என்றார். கண்ணுறை - வியஞ்சனம்; துணைக்கறி. (140) 141. வையாவிக்கோப் பெரும்பேகன் பண்டைத் தமிழகத்துக் குறுநில மன்னர்களில் எவ்வியர் குடி, ஆவியர் குடி, அதியர் குடியெனப் பல குடிகள் உண்டு. வேள் பாரி எவ்விகுடியிலும் அதியமான் நெடுமானஞ்சி அதியர்குடியினும் பிறந்து பிறங்கினாற் போல, வையாவிக் கோப் பெரும்பேகன் ஆவியர்குடியிற் பிறந்து சிறந்தவன். ஆவியர் முதல்வனான வேள்ஆவி யென்பான் பண்டைப் பொதினி நகர்க்கண் இருந்து அரசு புரிந்தவன். அப் பொதினி பிற்றை நாளில் பழனி யென்றும், பின்பு வையாவி யென்பது வையாபுரியென்றும் மருவி வழங்க லாயின. இது திரு ஆவி நன்குடி யெனவும் வழங்கும். வையாவிக் கோப் பெரும்பேகன் பெருவள்ளலாவன். ஒருகால் மயிலொன்று கார்முகில் வரக் கண்டு களித்துத் தன் தோகையை விரித்தாட, அதுகண்ட பேகன், அதன் ஆடலை வியந்தும் குளிரால் நடுங்கு கின்றதென நினைந்தும் தனக்கு உடையும் போர்வையுமாகிய உயரிய ஆடையை யளித்துப் புலவர் பாடும் புகழ் மேம்பட்டான். இத்தகைய அருணிரம்பிய வள்ளலாகிய பேகனுக்குத் திண்ணிய கற்பமைந்த மனைவியார் ஒருவர் உண்டு. அவர் பெயர் கண்ணகி யென்பது. கண்ணகியாரோடு கூடிக்காதல் வாழ்வு நடாத்தும் பேகனுக்கு, அவன் நாட்டு நல்லூரின்கண் வாழ்ந்த பரத்தை யொருத்திபால் புறத்தொழுக்க முளதாயிற்று. நாளடைவில் அப்புறத் தொழுக்கம் முறுகி வளரவே, அவன் கண்ணகியைக் கைதுறந் தொழுக லுற்றான். கண்ணகியார்க்குக் கலக்கம் பெரி தாயிற்று. இதன் விளைவு தீதா மென்றறிந்த அக்கண்ணகியார் பெரிதும் வருந்தலுற்றார். அவர்பொருட்டுக் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் முதலியோர் பேகன்பாற் சென்று தகுவன கூறித் தெருட்டலுற்றனர். பின்னர் அவனும் தேறித் தன் மனைவியாரொடு கூடி இனிதிருந்து நல மெய்தினான். ஆசிரியர் பரணர், வையாவிக்கோப் பெரும்பேகன் களி மயிற்குப் போர்வை யளித்துப் புகழ் மேம்படுவது கேள்வியுற்று அவனைக் காணச் சென்றார். அவனும் அவர் வரிசை யறிந்து பெரும்பொருள் நல்கிச் சிறப்பித்தான். அதனைப் பெற்றுக் கொண்டு வருங்கால், அவர் வழியில் பரிசில் தருவாருளரோ வென வறுமையுற்று வருந்தி வரும் பாணனொருவனைக் கண்டார். அவனும் இவரை, “நீவிர் யார்? ” என வினவ, இவர் அவனைப் பேகன்பால் ஆற்றுப்படுப்பாராய், தம்மை யொரு பாணனாகக் காட்டிக்கொண்டு, “இரவல, யாமும் வள்ளல்பேகனைக் காணாமுன் நின்னினும் புல்லியேமாயிருந்தேம். அவனைக் கண்டபின் இத்தன்மையே மாயினேம். நீயும் அவன்பாற் செல்க. அவன் மஞ்ஞைக்குப் படாம் ஈந்தவன்; எத்துணையாயினும் இரப்பார்க் கொன்று ஈதல் நன்று என்று கருதுபவன்; அவன் கொடை மறுமைப்பயன் நோக்குவ தன்று; பிறர் எய்தி வருந்தும் வறுமைத் துன்பத்தைப் போக்குவதையே நோக்கி நிகழ்வது. ஆதலால், நீ அவன்பால் இன்னே செல்வாயாக” என்ற கருத்துப் படப் பாடினார். அப்பாட்டே இது. பாணன் சூடிய பசும்பொற் றாமரை மாணிழை விறலி மாலையொடு விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர் 5 யாரீ ரோவென வினவ லானாக் காரெ னொக்கற் கடும்பசி யிரவல வென்வே லண்ணற் காணா வூங்கே நின்னினும் புல்லியே மன்னே யினியே இன்னே மாயினே மன்னே யென்றும் 10 உடா அ போரா வாகுத லறிந்தும் படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் எத்துணை யாயினு மீத்த னன்றென மறுமை நோக்கின்றோ வன்றே 15 பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே. (141) திணை : பாடாண்டிணை. துறை : பாணாற்றுப்படை; புலவராற்றுப் படையுமாம். வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது. உரை : பாணன் சூடிய பசும்பொன் தாமரை - பாணன் சூடிய ஓட்டற்ற பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப்பூ; மாணிழை விறலி மாலையொடு விளங்க - மாட்சிமைப்பட்ட அணி யினையுடைய விறலி யணிந்த பொன்னரி மாலையுடனே விளங்க; கடும் பரி நெடுந்தேர் பூட்டு விட்டு அசைஇ - கடிய குதிரையைப் பூண்ட நெடிய தேரைப் பிணிப்பு விட்டு இளைப்பாறி; ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர் - ஊரின்கண் இருந்தீர் போலச் சுரத்திடை இருந்தீர்; யாரீரோ என - நீர் யாவிர் பாணரோ என; வினவலானா - எம்மைக் கேட்டலமையாத; காரென் ஒக்கல் கடும் பசி இரவல - புல்லென்ற சுற்றத்தையும் மிக்க பசியையுமுடைய இரவலனே; வென்வேல் அண்ணல் காணா ஊங்கு - வென்றி வேலை யுடைய தலைவனைக் காண்பதன் முன்; நின்னினும் புல்லியேம் மன் - யாம் நின்னினும் வறியேம்; இனி - இப்பொழுது; இன்னேம் ஆயினேம் - அவ்வறுமை நீங்கி இத் தன்மையே மாயினேம்; என்றும் - எந்நாளும்; உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் - உடா போராவாதலை யறிந்துவைத்தும்; படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ - படாத்தினை மயிலுக்குக் கொடுத்த எம் இறைவன்; கடாஅ யானைக் கலிமான் பேகன் - மதமிக்க யானையினையும் மனஞ் செருக்கிய குதிரையினையுமுடைய பேகன்; எத்துணையாயினும் ஈத்தல் நன்றென - எவ்வளவாயினும் கொடுத்தல் அழகிதென்று; மறுமை நோக்கின்றோ அன்று - மறுபிறப்பை நோக்கிற்றோ வெனின் அன்று; பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மை - பிறரது மிடியைக் கருதிற்று அவனது கைவண்மை எ-று. எங்கோ பேகன்; அவன் கைவண்மை மறுமை நோக்கிற் றன்று பிறர் வறுமை நோக்கிற் றெனக் கூட்டுக. “நின்னினும் புல்லியேம் மன்” என்பது “பண்டு காடு மன்” என்பது போல் நின்றது. ஒழிந்த மன் : அசைநிலை. விளக்கம் : பாணாற்றுப்படை வாயிலாகப் பேகன் புகழைப் பாராட்டுகின் றனர், தம்மையும் பாணனாக நாட்டிக்கொண்டமையின், தம்மைக் காணும் பாணன்முன் தாமிருக்கும் நிலையினை, பாணன் சூடிய தாமரைப் பூவும், விறலி யணிந்த பொன்னரி மாலையும், விளக்கமுற விருப்பதை யெடுத்தோதினார்; சுரத்திடத்தே யிருந்தாராயினும் வேண்டுவ நிரம்பப்பெற்று இனிதிருத்தல் தோன்ற, “ஊரீர் போல இருந்தனிர்” என்றதாகக் கூறினார். இதனால் பேகனது காவற்சிறப்பும் ஓராற்றால் வெளிப்படுகிறது. வறுமையால் வாடி, மேனியும், முகமும், கறுத்துத் தோன்றுதலால், “காரென் ஒக்கல்” என வேண்டிற்று. தமது செல்வ நிலை, வந்த பாணன் இனிது கண்டறிய விளங்குதலால, “இன்னேமாயினேம்” என்றொழிந்தார். மயில்கள் படாம் பெறின், அவற்றை உடுப்பதோ மெய்ம்மறையப் போர்த்துக்கொள்வதோ செய்யாவாயினும், மயிற்குப் படாஅம் நல்கின கொடை மடம் விளங்க, “உடாஅ போரா ஆகுத லறிந்தும்” என்றார். உடா, போரா எனப் பன்மையாற் கூறியது, மயில்கள் பலவும் எஞ்சாமல் அடக்கி நின்றது. மயில்களின் பொதுவியல்பாகிய இதனை யறிந்து வைத்தும், படாஅம் ஈந்தான் என்றது, நும்பால் வேண்டப்படாத மிகச் சிறந்த பொருளையும் அவன் நுமக்கு மிக நல்குவன் என்ற குறிப்புத் தோன்ற நின்றது. படாம் - துகில். ஈத்தல் நன்றென மறுமை நோக்காது வறுமை நோக்கின்று என இயையும். மன்: ஒழியிசை. (141) 142. வையாவிக்கோப் பெரும்பேகன் வையாவிக்கோப் பெரும்பேகனது கொடைநலத்தைப் பற்றிச் சான்றோரிடையே ஒரு சொல்லாடல் நிகழ்ந்தபோது, அவருட் சிலர் அவன் மஞ்ஞைக்குப் படாம் ஈத்ததும், தன்பால் வரும் இரவலருள் முன் வந்தோர் பின் வந்தோரென அறியாது வழங்குவதும் பற்றி அவற்கு மடம்பட மொழிந்தனர். அது கேட்ட பரணர், “கழற்கால் பேகன் வரையாது வழங்குமுகத்தால் மாரி போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரின்கண் மடம்படுவதிலன்” என்ற கருத்தமைந்த இப் பாட்டைப் பாடிக் காட்டியுள்ளார். அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும் உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும் வரையா மரபின் மாரி போலக் கடாஅ யானைக் கழற்காற்பேகன் 5 கொடைமடம் படுத லல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே. (142) திணை : பாடாண்டிணை. துறை: இயன்மொழி. வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது. உரை : அறு குளத்து உகுத்தும் - வற்றிய குளத்தின்கண்ணே பெய்தும்; அகல் வயல் பொழிந்தும் - அகன்ற விளை நிலத்தின் கண்ணே சொரிந்தும்; உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் - இவ்வாறு குளத்தும் விளைநிலத்தும் பெய்யாது களர்நிலத்தை நிறைத்தும்; வரையா மரபின் - எவ்விடத்தும் வரையாத மரபினையுடைய; மாரிபோல - மழை போல; கடாஅ யானைக் கழற்கால் பேகன் - மதமிக்க யானையினை யுடைய கழல்புனைந்த காலையுடைய பேகன்; கொடை மடம் படுதலல்லது - கொடையிடத்துத் தான் அறியாமைப் படுத லல்லது; பிறர் படைமயக்குறின் - பிறர் படை வந்து கலந்து பொரின்; படை மடம் படான் - அப் படையிடத்துத் தான் அறியாமைப் படான் எ-று. படை மட மென்றது, வீரரல்லாதார்மேலும் முதுகிட்டார் மேலும் புண்பட்டார்மேலும் மூத்தார் இளையார்மேலும் செல்லுதல். விளக்கம் : வேண்டுமிடம் இது, வேண்டாவிடம் இது என்னும் வரையறை யின்றி யாண்டும் வரையாது பொழிவது மாரி யென்றதற்கு, “அறுகுளத் துகுத்தும் அகல்வயல் பொழிந்தும், உறுமிடத் துதவாது உவர்நில மூட்டியும், வரையா மரபின் மாரி” யென்றார். என்றது பேகனும் தன்பால் வரும் இரவலர், வல்லாராயினும், மாட்டாராயினும், பழையோராயினும் புதியோராயினும், யாவர்மாட்டும் வரையாது வழங்குவனென்றவாறாம். இவ்வாறு வழங்குதற்கண் வேறுபாடு நோக்காமையின் “கொடை மடம்படுத லல்லது” என்றார். இனி, ஞானாமிர்த வுரைகாரர், “கொடை மடம் படுதல் அகாரணத்தாற் கொடை கொடுத்த” லென்பர். மயங்குதல் - கலத்தல். தேற்றா வீகை யென ஒளவையார் கூறியதும் இக் கொடைமடத்தையேயாம். (142) 143. வையாவிக் கோப்பெரும் பேகன் வையாவிக் கோப்பெரும் பேகன் நல்லூர்ப் பரத்தையொடு பூண்ட புறத்தொழுக்கம் முறுகியதனால் தன் மனைவியாகிய கண்ணகியாரைக் கைதுறந்தானாக, அக் கண்ணகியார் பொருட்டுச் சான்றோராகிய கபிலர், அப் பேகனிடம் சென்று அவன் தெருளத் தகுவன கூறக் கருதி, இப் பாட்டின்கண், பாணனொருவன் கூற்றில் வைத்து, “கடவுளை வழிபட்டு மழை நீங்கத் தினை விளைதலால் அதனைக் குறவர் உண்ணும் மலை நாடனாகிய பேகனே, நெருநல் யாங்கள் மலைச்சாரற் சீறூர்க்குப் போந்து பசி வருந்துதலின் உணவு வேண்டி, நின்னையும் நின் மலையையும் பாடி நின்றேம்; அப் பாட்டிசை கேட்டு இளமகள் ஒருத்தி கண்ணீர் மார்பகம் நினைப்பக் குழலிசைப்பது போலப் புலம்பினாள். அவள் யாரோ; மிகவும் நின்னால் அளிக்கத்தக்க வளாய் உள்ளாள்” என்று கூறியுள்ளார். மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய் மாரி யான்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய வுவகையர் சாரற் 5 புனத்தினை யயிலு நாட சினப்போர்க் கைவள் ளீகைக் கடுமான் பேக யார்கொ லளிய டானே நெருநற் சுரனுழந்து வருந்திய வொக்கல் பசித்தெனக் குணில்பாய் முரசி னிரங்கு மருவி 10 நளியிருஞ் சிலம்பிற் சீறூராங்கண் வாயிற் றோன்றி வாழ்த்தி நின்று நின்னுநின் மலையும் பாட வின்னா திகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் முலையக நனைப்ப விம்மிக் 15 குழலினை வதுபோ லழுதனள் பெரிதே. (143) திணை : பெருந்திணை. துறை : குறுங்கலி; தாபத நிலையுமாம். அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரண மாக அவனைக் கபிலர் பாடியது. உரை : மலைவாள் கொள்க என - மலையை மழை வந்து சூழ்க வென்று; உயர் பலி தூஉய் - மிக்க பலியைத் தூவி; மாரி ஆன்று மழை மேக்கு உயர்க வென - அம் மழை மிகப் பெய்தலான் அப் பெயல் அமைந்து முகில் மேலே போவதாக வேண்டு மென; கடவுள் பேணிய குறவர் மாக்கள் - தெய்வத்தைப் போற்றிய குறமாக்கள்; பெயல் கண் மாறிய உவகையர் - மழை இடத்து மாறிய உவகையராய்; சாரல் புனத்தினை அயிலும் நாட - மலைச்சாரற்கண் புனத்தினையை யுண்ணும் நாட; சினப் போர் - சினத்தினாற் செய்யும் போரையும்; கைவள் ஈகை - கை வண்மையாற் கொடுக்கும் கொடையினையுமுடைய; கலிமான் பேக - விரைந்த குதிரையையுடைய பேக; அளியள் யார் கொல்- அவ் வருளத்தக்காள் யாரோதான்; நெருநல் - நேற்று; சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென - சுரத்தின் கண்ணே நடந்து வருந்திய எனது சுற்றம் பசித்ததாக; குணில் பாய் முரசின் - கடிப்பு அறையப்பட்ட முரசு போல; இரங்கும் அருவி - ஒலிக்கப்பட்ட அருவியையுடைய; நளி இருஞ் சிலம்பின் சீறூராங்கண் - பெரிய உயர்ந்த மலைக்கண் சிறிய ஊராகிய அவ்விடத்து; வாயில் தோன்றி - வாயிற்கண்ணே வந்து தோன்றி; வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாட - வாழ்த்தி நின்று நின்னையும் நின் மலையையும் பாட; இன்னாது இகுத்த கண்ணீர் - அப்பொழுது இன்னாதாகச் சொரியப்பட்ட கண்ணீரை; நிறுத்தல் செல்லாள் - ஒழித்தல் மாட்டாளாய்; முலையகம் நனைப்ப விம்மி - முலையிடத்தை நனைப்பப் பொருமி; குழல் இனைவது போல் பெரிது அழுதனள் - குழல் இரங்கி யொலிப்பது போல் மிகவும் அழுதாள் எ-று. மழை வேண்டுங் காலத்துப் பெய்வித்தற்கும் வேண்டாக் காலத்தொழித்தற்கும் பலிதூஉய்ப் பேணிய குறவராகிய மாக்க ளென்க. குறவர் மாக்கள்: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. மாக்கள் புனத்தினை அயிலும் நாட, பேக, என் ஒக்கல் பசித்தென வாயிற் றோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாடக் குழல் இனைவதுபோல அழுதாள்; அவ் வளிக்கத்தக்கான் யார்கொல், அவள்பால் அருள் பண்ணத் தகுமென வினைமுடிக்க. இது, நின் மலையிற் குறவர் மாக்கள் கடவுட்பேணி மழை வேண்டிய பொழுது பெற்றுத் தாம் வேண்டு முணவு நுகரு மாறுபோல, இவளும் நின் அருள்பெற்று இன்பம் நுகர்வாளாக வேண்டு மென்பதொரு நயந்தோன்ற நின்றது. மழை மிகப் பெய்தலா னென்பது ஆற்றலாற் கூறப்பட்டது. பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனோடு கூட்டலுறுவார், அருள் பண்ண வேண்டுமென்று இரந்து கொண்டு கூறினமையின், குறுங்கலியாயிற்று. விளக்கம் : மழை குறித்துக் குறவர் கடவுளைப் பேணும் மரபை நற்றிணைப் பாட்டொன்று “மலைவான் கொள்கெனக், கடவுளோங்கு வரை பேண்மார் வேட்டெழுந்து, கிளையொடு மகிழுங் குன்ற நாடன்” (நற். 165) என்று கூறுதல் காண்க. ஊர்க்குப் புறத்தேயுள்ள மன்றினை “வாயில்” என்றார். கண்ணகியார் அழுதுகுத்த கண்ணீர் இனிதன்று; இன்னாமை விளைவிப்ப தென்பார், “இன்னா திகுத்த கண்ணீர்” என்றார். நின்னையும் நின் மலையையும் பாடக் கேட்டு மகிழ வேண்டிய கண்ணகியார், கண்ணீருகுப்பது இன்னாதாக அதனை நிறுத்துமாறு யாம் வேண்டிய வழியும் நிறுத்தாது அழுதன ரென்பார், “குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிது” என்றார். இதனாற் பயன், அவரது கண்ணீர் இன்னாதாகலின் விரைந்து சென்று அதனைத் துடைத்து நிறுத்தல் வேண்டும் என்பதைக் குறிப்பெச்சத்தாற் பெற வைத்தார். கண்ணகியார் பொருட்டுப் பேகன் மனந்தெருள்விக்கச் சென்றவிடத்து, அவனது நாட்டுக் குறவர் செயலை விதந்தோதியதன் கருத்து இதுவென்பார், “இது நின் மலையிற் குறவர் மாக்கள்.............. நயந்தோன்ற நின்ற” தென்றார். மழை மேக்குயர்கவென வேண்டுவது அது மிகப் பெய்த காலத்தாகலின், மிகப் பெய்தலான் என்பதை வருவித்தது ஆற்றலால் என்றார். முன்னும் பின்னும் நிற்கும் சொற்கள் இயைதற்குரிய இயையு ஆற்றலெனப்படும். (143) 144. வையாவிக் கோப்பெரும் பேகன் கண்ணகியாரைக் கை துறந்தொழுகும் பேகனுடைய புறத்தொழுக்கத்தைக் கேள்வியுற்ற பரணர், அக் கண்ணகியார் பொருட்டு அவன்பாற் போந்து பாணனொருவன் கூற்றில் வைத்து அவன் தெருளுமாறு, “வயங்கு புகழ்ப் பேக, முன்னாள், யாங்கள் இவண் இருண்மாலைப்போதில் போந்து நின் கானத்தைப் பாடினேமாக, இளமகளா ரொருவர் கண் கலுழ்ந்து எம் முன்னே வந்து அழுதுநின்றார்; உடனே யாங்கள் அவரைத் தொழுது ‘நீவிர் எம் தலைவனாகிய பேகனுக்குக் கிளைமை யுடையீரோ, வென வினவினேம்; அவர் தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, ‘யாம் அவன் கிளைஞரல்லேம்; எம்போல்வாள் ஒருத்தியின் நலத்தை விழைந்து நாடோறும் அவளுறையும் நல்லூர்க்குத் தேரேறி வந்து போகின்றா னெனப் பலரும் கூறாநிற்பர்’ என்று உரைத்தார். ஆதலால், அவரை நீ அருளாயாதல் கொடிதுகாண்” என்ற பொருளமையப் பாடியுள்ளார். அருளா யாகலோ கொடிதே யிருள்வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினே மாக நீனறு நெய்தலிற் பொலிந்த வுண்கண் 5 கலுழ்ந்துவா ரரிப்பனி பூணக நனைப்ப இனைத லானா ளாக இளையோய் கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென யாந்தற் றொழுதனம் வினவக் காந்தள் முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா 10 யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி எம்போ லொருத்தி நலனயந் தென்றும் வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன் ஒல்லென வொலிக்குந் தேரொடு முல்லை வேலி நல்லூ ரானே. (144) திணை : பெருந்திணை. துறை : குறுங்கலி; அவனை யவள் காரண மாகப் பரணர் பாடியது. உரை : அருளா யாகல் கொடிது - அருள் பண்ணாயாதல் கொடிது; இருள் வர - மாலைக்காலம் வந்த அளவிலே; சீறியாழ் செவ்வழி பண்ணி - சிறிய யாழை இரங்கற் பண்ணாகிய செவ்வழி யென்னும் பண்ணிலே வாசிக்கும் பரிசு பண்ணி; நின் காரெதிர் கானம் பாடினேமாக - நினது மழையை யேற்றுக் கொண்ட காட்டைப் பாடினேமாக; நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண் - நீல நறுநெய்தல் போன்று பொலிந்த மையுண்ட கண்கள்; கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப - கலங்கி வீழ்ந்த இடைவிட்ட துளிகள் பூணை யுடைய மார்பை நனைப்ப; இனைதல் ஆனாளாக - வருந்துதல் அமையா ளாக; இளையோய் கிளையை மன் எம் கேள் வெய்யோற்கு என - இளையோய், கிளைமையையுடையையோ எம்முடைய கேண்மையை விரும்புவோனுக்கென; யாம் தன் தொழுதனம் வினவ - யாங்கள் தன்னை வணங்கிக் கேட்டே மாக; காந்தள் முகை புரை விரலின் கண்ணீர் துடையா - அவள் காந்தள் மொட்டுப்போலும் விரலாலே தன் கண்ணீரைத் துடைத்து; யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் - நாங்கள் அவனுடைய கிளைஞரேமல்லேம்; கேள் - கேட்பாயாக நீ ; இனி - இப்பொழுது; எம் போல் ஒருத்தி நலன் நயந்து - எம்மை யொப்பாள் ஒருத்தியுடைய அழகைக் காதலித்து; என்றும் வரூஉம் என்ப (என்றாள்)- எந்நாளும் வருமென்று பலரும் சொல்லுவரென்று கூறினாள்; வயங்கு புகழ்ப் பேகன் - விளங்கிய புகழையுடைய பேகன்; ஒல்லென ஒலிக்கும் தேரொடு - ஒல்லென முழங்கும் தேருடனே; முல்லை வேலி நல்லூரான் - முல்லை வேலியையுடைய நல்லூரின்கண் எ-று. கிளையையோ வென ஓகாரமும் என்றாளென ஒரு சொல்லும் வருவித்துரைக்கப்பட்டன. நின் கானம் பாடினேமாக, இனைத லானாளாக, நயந்து நல்லூரின்கண் என்றும் வரூஉ மென்ப என்றாள்; அவனை அருளாயாதல் கொடிதெனக் கூட்டி வினை முடிவு செய்க. எம்போ லொருத்தி யென்றது, உவமை கருதாது வன்மை யுரைதோன்ற நின்றது; எம்மைப்போலும் பொதுமக ளொருத்தி யென அவளை யிழித்துக் கூறியவாறுமாம். இனி, யாம் தற்றொழு தனம் வினவினேமாக, அவளாயத்தார் தம் விரலால் அவள் கண்ணீரைத் துடைத்து, யாம் அவன் கிளைஞரே மல்லேம்; இது புகுந்தவாறு யாம் கூறக் கேளென முன்பு கூறி, பின் பேகன் எம்போ லொருத்தி நலனயந்து நல்லூரின்கட் சென்று வரு மென்று சொன்னார்கள்; இவ்வாறு இளையோரும் ஆயத்தோரும் உறும் துன்புறவு தீர்த்து அருளாயாதல் கொடிதென வுரைப்பினு மமையும். விளக்கம் : கண்ணகியாரை அருளவேண்டுமென முகம் புகுகின்றா ராதலின், தொடக்கத்தே, “அருளா யாகலோ கொடிதே” யென்றார். அருளாவழிக் கண்ணகியார் உயிரிழத்தலும் பேகனுக்குப் பழி யுண்டாதலும் கொடுமையாய் முடியும். கார்காலத்து மழையால் கானம் இனிய காட்சி வழங்கிப் பிரிந்த காதலர் கூடி யின்புறுதற்கு இனிய செவ்வி பயத்தலின், “காரெதிர் கானம்” என்றார். அரசன் தேவியாவது விளங்க, “யாம் தன்னைத் தொழுது வினவினேம்” என்றார். “எம்போல் ஒருத்தி” யென்று கண்ணகி கூறியது “கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினும், உள்ளத் தூட லுண்டென மொழிப” (தொல். பொருள்.39) என்பதனால் ஊடற் குறிப்புணர நின்றது. அவனால் துறக்கப்பட்ட தமது தனிமையை வெறுத்துக் கூறும் குறிப்புடையதாதல் பற்றி, எம்போல் ஒருத்தி யென்றதை ஆசிரியர் கொண்டெடுத்து மொழிந்தார். பரத்தையது நலம் கண்ணகியின் நலத்தின் மிக்கதன்று, ஒத்திருப்பதே; அவ்வாறாக ஒருபாற் கோடல் முறைமையாகாதெனத் தெருட்டுமாறு தோன்ற, “எம்மைப் போலும் பொதுமக ளொருத்தியென இழித்துக் கூறியவாறு மாம்” என்றார். “என்ப” என்றது, கண்ணகியார்க்குப் பாங்காயினார் உரைத்தமை பெறப்படும். என்றாள் என முடிக்குஞ் சொல் கூறிற்றிலர், கண்ணகியார் கூற்று முடியு முன்னே தாம் இடையற்று விரைந்து போந்தமையும், முடியுங்காறும் இருந்து கேட்டற்குத் தாம் மனங் கொள்ளாமையும் பேகன் அறியப் புலப்படுத்தற்கு. இதனைக் கைக்கிளைவகைப் பாடாண் பாட் டென்பர் நச்சினார்க்கினியர். (144) 145. வையாவிக் கோப் பெரும்பேகன் சான்றோராகிய பரணர் இவ்வண்ணம் பாடக் கேட்ட பெரும் பேகன், அவர் வரிசைக்கும் தன் தகுதிக்கும் ஏற்பப் பரிசில் நல்கச் சமைந்தான். அதனை முன்னத்தால் அறிந்த பரணர், இடைமறித்து, “மயில் பனிக்குமென அருள்கொண்டு படாம் நல்கிய பேக, யாங்கள் பசித்து வந்தோம் இல்லை; எம்மாற் புரக்கப்படும் சுற்றமும் எம்பால் இல்லை, நீ அறஞ்செய்தல் வேண்டும்; அருளறத்தை விரும்பும் அண்ணலாகிய நீ, அதனால், இன்றிரவே புறப்பட்டுத் தேரேறிச் சென்று அவளுடைய அருந்துயரைக் களைவாயாக; இதுவே யாம் நின்னை இரந்து பெறும் பரிசில்” என்று இப்பாட்டிற் கூறியுள்ளார். மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப் படாஅ மீத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக பசித்தும் வாரேம் பாரமு மிலமே 5 களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ் நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி அறஞ்செய் தீமோ அருள்வெய் யோயென இஃதியா மிரந்த பரிசிலஃ திருளின் இனமணி நெடுந்தே ரேறி 10 இன்னா துறைவி யரும்படர் களைமே. (145) திணை : பெருந்திணை. துறை : குறுங்கலி; அவனை யவள் காரணமாக அவர் பாடியது. உரை : மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளி - மெல்லிய தகைமையையுடைய கரிய மயில் குளிரால் நடுங்கு மென்று அருள் செய்து; படாஅம் ஈத்த - படாம் கொடுத்த; கெடாஅ நல் இசை - அழியாத நல்ல புகழினையுடைய; கடாஅ யானைக் கலிமான் பேக - மதம்பட்ட யானையையும் மனம் செருக்கிய குதிரையையுமுடைய பேக: பசித்தும் வாரேம் - யாம் பசித்தும் வருவே மல்லேம்; பாரமும் இலம் - எம்மாற் பரிக்கப் படும் சுற்றமு முடையேமல்லேம்; களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ் - களாப்பழம் போன்ற கரிய கோட்டையுடைய சிறிய யாழை; நயம் புரிந் துறையுநர் - இசையின்பத்தை விரும்பி யுறைவார்; நடுங்கப் பண்ணி - அவ்விசை யின்பத்தால் தலை யசைத்துக் கொண்டாடும்படி வாசித்து; அறம் செய்தீமோ - அறத்தைச் செய்வாயாக; அருள் வெய்யோய் என - அருளை விரும்புவோ யென; இஃது யாம் இரந்த பரிசில் - இது நின்பால் யாம் இரந்த பரிசில்; அஃது - அஃதாவது; இருளின் - இற்றை யிரவின்கண்; இன மணி நெடுந்தேர் ஏறி - இனமாகிய மணியையுடைய உயர்ந்த தேரை ஏறிப்போய்; இன்னாது உறைவி - காண்டற்கு இன்னாதாக உறைகின்றவள்; அரும் படர்களைமே - பொறுத்தற்கரிய நினைவாலுண்டாகிய நோயைத் தீர்ப்பாயாக எ-று. பேக, இன்னா துறைவி அரும் படர் களை; யாழைப் பண்ணி யாம் இரந்த பரிசில் இது எனக் கூட்டுக. இதுவென்றது, அப்படிப் படர் களைதலை. ‘மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளிப் படாஅ மீத்த கெடா நல்லிசைக், கடாஅ யானைக் கலிமான் பேக; என்ற கருத்து; இவ்வாறு ஒரு காரணமின்றியும் அருள் பண்ணு கின்ற நின்னால் வருந்துகின்ற இவட்கு அருளா தொழிதல் தகாதென்பதாம். இனி, அருள் வெய்யோய், யாம் இரந்த பரிசில், அறஞ் செய்ய வேண்டுமென்று கூறுமிது; அவ்வறந்தான் யாதென்று கேட்பின், நின்பால் அருள் பெறாமையின் இன்னாதுறைவி அரும் படரைநீ சென்று களைதல்; அதனைச் செய்வாயாக வெனக் கூட்டி யுரைப்பினு மமையும். பனிக்கு மென்றஞ்சி யென்பதூஉம் பாடம். விளக்கம் : மடத்தகை யென்றவிடத்து மடமை-மென்மை. பரிக்கப்படுவது பாரம் அதனால் பரிக்கப்படும் சுற்றத்தாரைப் பாரம் என்றார். இசையிடத்துப் பிறக்கும் இன்பம்; ஈண்டு நயம் எனப்பட்டது. அறமாவது செய்யத் தகுவது. தம்மாற் காதலிக்கப்பட்டாரைத் தலையளித்தல் தலைவர்கட்கு அறமாதலால், காதலியாகிய கண்ணகிக்குத் தலையளி செய்க என்பார் “அறஞ் செய்தீமோ” என்றார். அஃதென்பது நின்று வற்றாவாறு பொருளமைதி காட்டுதற்கு, “இனி அருள் வெய்யோய்.... அமையும் ” என்றார். (146) 146. வையாவிக் கோப்பெரும் பேகன் அந்நாளில், சேர மன்னருள் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையைப் பாடி, அவன் தந்த நாட்டரசைத் தான் மேற் கொள்ளாது அவனையே மேற்கொண்டு ஆட்சி புரியுமாறு இரந்து பின்னின்று வண் புகழ் பெற்று விளங்கின சான்றோர் அரிசில் கிழார் என்பவர். அவரது ஊராகிய அரிசில் என்பது அரிசிலாற்றங்கரையில் விளங்கிய ஊராகு மென்று அறிஞர் கருதுவர். வேளாண்குடித் தோன்றலாகிய இக் கிழார் தகடூரிடத்தே இரும்பொறையொடு பொருது வீழ்ந்த அதியமான் எழினி யிடத்தும் நல்ல அன்புடையர். தகடூரை வென்றதனாற் சேரனுக் குண்டாகிய சிறப்பைப் பதிற்றுப்பத்து எட்டாம் பத்தினும், வீழ்ந்த எழினியின் சிறப்பை இத் தொகை நூற்கண் வரும் “கன்றம ராய” மெனத் தொடங்கும் பாட்டினும் (230) பாராட்டிப் பாடியுள்ளார். சேரனது பண்பை, “மன்பதை காப்ப அறிவு வலியுறுத்து, நன்றறியுள்ளத்துச் சான்றோ ரன்ன நின் பண்பு” (பதிற்.72) என்றும், தான் உணர்வன முழுதுணர்ந்து பிறர்க் குரைத்து நல்வழிப்படுத்தும் நரைமூதாள னாகிய புரோகிதனைத் தெருட்டிய நலத்தை “வண்மையு மாண்பும் வளனு மெச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க் கென, வேறுபடு நனந்தலைப் பெயரக், கூறினை பெரும” (பதிற். 74) என்றும் பாராட்டுவர். தகடூரை யெறிதற்கு முன் சேரன்பொருட்டு இவர் அதியமான் எழினியை யடைந்து சேரனது படைப் பெருமையை யுணர்த்திய ஞான்று அவன் கேளாதொழிந்தனன். அதனை, “பொறைய, நின் வளனு மாண்மையும் கைவண் மையும், மாந்த ரள விறந்தனவெனப் பன்னாள், யான்சென்றுரைப்பவுந் தேறார் பிறரும், சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென, ஆங்குமதி மருளக் காண்குவல், யாங்குரை ப்பேனென வருந்துவல் யானே” (பதிற் 73) என்று கூறுகின்றார். தகடூரை எழினி காத்த நலத்தை, “வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும், வில்பயில் இறும்பின் தகடூர்” (பதிற். 78) என்பர். இப்போரில் அதியமான் எழினி வீழ்ந்தது கண்டு கையற்று வருந்திய அரிசில்கிழார், “பொய்யா எழினி பொருதுகளஞ் சேர, ஈன்றோள் நீத்த குழவி போல, தன்னமர் சுற்றம் தலைத்தலை இனைய, கடும்பசி கலக்கிய விடும்பைகூர் நெஞ்சமொடு நோயுழந்து வைகிய உலகம்” (புறம். 230) என மொழிந்து, கூற்றம், “வீழ்குடி யுழவன் வித்துண் டாங்கு” எழினியை யுண்டு தனக்கே கேடு செய்துகொண்ட தெனக் கூறினார். போரிற் புண்பட்ட வீரனை, மகளிர் புண்ணுக்கு மருந்தும், செவிக்கும் உள்ளத்துக்கும் இனிய இசையும் வழங்கி யோம்பும் திறனும், புண்பட்டு விழும் வீரனைச் சான்றோர் பாராட்டுங்கால் அவன் நாணத்தால் தலையிறைஞ்சும் பண்பும் பிறவும் மிக்க சுவையமைய இவராற் பாடப்பட்டுள்ளன. இவ்வண்ணம் நல்லிசைப் புலமையால் சிறப்புற்று விளங்கும் அரிசில்கிழார்க்குப் பெரும்பேகன் கண்ணகியாரைத் துறந்து புறத்தொழுகும் செயல் செவிப்புலனாயிற்று. அவர் அவன்பால் அடைந்து அவன் நலம் பாராட்டினர். அவனும் இவர்க்குப் பெரும் பரிசில் நல்கினன்; அவர், “என்னை நயந்து பரிசில் நல்குவையாயின், யான் வேண்டும் பரிசில் ஈதன்று; நீ அருளாமை யால் அருந்துயருழக்கும் அரிவை, நின் அருட்பேற்றால் தன் கூந்தலை முடித்துப் பூச்சூடுமாறு நின் தேரும் குதிரையும் பூட்டுற்று அவள் மனைக்குச் செல்லுதல் வேண்டும்; இதுவே யான் வேண்டும் பரிசில்” என்ற கருத்தமைந்த இப்பாட்டைப் பாடியுள்ளார். அன்ன வாகநின் னருங்கல வெறுக்கை அவைபெறல் வேண்டே மடுபோர்ப் பேக சீறியாழ் செவ்வழி பண்ணிநின் வன்புல நன்னாடு பாட வென்னை நயந்து 5 பரிசி னல்குவை யாயிற் குரிசினீ நல்கா மையி னைவரச் சாஅய் அருந்துய ருழக்குநின் றிருந்திழை யரிவை கலிமயிற் கலாவங் கால்குவித் தன்ன ஒலிமென் கூந்தற் கமழ்புகை கொளீஇத் 10 தண்கமழ் கோதை புனைய வண்பரி நெடுந்தேர் பூண்கநின் மாவே. (146) திணை : பெருந்திணை. துறை : குறுங்கலி; அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது. உரை : அன்ன வாக - அத்தன்மையவாக; நின் அருங்கல வெறுக்கை அவை - நின்னால் தரப்பட்ட பெறுதற்கரிய ஆபரணமும் செல்வமுமாகிய அவை; பெறல் வேண்டேம் - பெறுதலை விரும்பேம்; அடு போர்ப் பேக - கொல்லும் போரையுடைய பேக; சீறியாழ் செவ்வழி பண்ணி - சிறிய யாழைச் செவ் வழியாகப்பண்ணி வாசித்து; நின் வன்புல நன்னாடு பாட - நினது வலிய நிலமாகிய நல்ல மலை நாட்டைப் பாட; என்னை நயந்து பரிசில் நல்குவை யாயின் - என்னைக் காதலித்துப் பரிசில் தருகுவையாயின்; குருசில் - தலைவனே; நீ நல்காமையின் - நீ அருளாமையால்; நைவரச் சாஅய் - கண்டார் இரங்க மெலிந்து; அருந் துயர் உழக்கும் நின் திருந்திழை அரிவை - அரிய துயரத் தான் வருந்தும் உன்னுடைய திருந்திய அணியையுடைய அரிவையது; கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன ஒலிமென் கூந்தல் - தழைத்த மயிலினது பீலியைக் காலொன்றக் குவித்தாற் போன்ற தழைத்த மெல்லிய கூந்தற்கண்ணே; கமழ் புகை கொளீஇ - மணம் கமழும் புகை யைக் கொள்ளுவித்து; தண் கமழ் கோதை புனைய - குளிர்ந்த மணங் கமழும் மாலையைச் சூட; வண்பரி நெடுந் தேர் நின் மா பூண்க - வளவிய செலவை யுடைய உயர்ந்த தேரை நின் குதிரைகள் பூண்பனவாக எ-று. அன்னவாக வென்றது, இரவலர்க்கு அருங்கல வெறுக்கை களை எளிதிற் கொடுப்பை யன்றே; அவ் வெறுக்கை எமக்கும் எளிதாக என்றவாறாம். விளக்கம் : இரவலராகிய எம்பால் நீ செய்யும் அருளும் கொடையும் என்றும் திரியாது எளிதில் அமையும் அத்தன்மையவேயாக இருப்ப, நின் மனைவிபாற் செய்யும் தலையளியிற்றான் அத்தன்மை சிறிது திரிந்தனை யென்பதுபட, “அன்னவாக” என்றார். செவ்வழி - இரங்கற் பண். நின் அரிவைக் குண்டாகிய துயரத்தை அவள் வாய்திறற் துரையாதே மெய்யே நன்கு புலப்படுமாறு மெலிந்து காட்டுகிற தென்பார்,“நைவரச்சாய்” என்றும், நீ அருளாமையால் வந்ததென்பார், அது “நல்காமையின்” என்றும் கூறினார். மகளிர் கூந்தற்கு மயிற் கலாவத்தை யுவமை கூறுதல் மரபு; பிறரும், “ஒலிமயிற்கலாவத் தன்ன இவள், ஒலிமென் கூந்தல்” (குறுந். 225) என்பது காண்க. கணவனைப் பிரிந்த மகளிர் தம்மை ஒப்பனை செய்து கொள்வதி லராகலின், “கமழ்புகை கொளீஇத் தண்கமழ் கோதை புனைய” என்றார். (146) 147. வையாவிக் கோப் பெரும்பேகன் இந்நிலையில் பெரும்பேகனைத் தெருட்டற்குப் போந்த சான்றோர்களுள் பெருங்குன்றூர்கிழார் என்பாரும் ஒருவர். இவர் சோழவேந்தனான உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் கண்டு தாமுற்ற வறுமை யறிவித்துப் பரிசில் பெற்றவர். பின்னர் ஒருகால் இவர் குடக்கோப் பெருஞ்சேரலிரும்பொறையைக் கண்டார். அவனுக்குத் தம்மைப்பற்றி வருத்தும் வறுமைத் துன்பத்தையும், தாம் பிரிந்துறைதலின் தம்முடைய மனைவியார் எய்தும் வருத்தத்தையும் தெரிவித்தார். அவன் ஒன்றும் கொடானாக, அவனை நோக்கி, “நும்ம னோரும் இனைய ராயின் எம்ம னோர்இவண் பிறவலர்” (புறம்.211) என்றும், “முன்னாள் கையுள் ளதுபோற் காட்டி வழிநாள், பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம், நாணா யாயினும் நாணக் கூறி”(புறம்.211)னை யென வருந்தி யுரைத்துத் திரும்பினர். பின்னர் அவர், பெருஞ்சேரல் இரும்பொறையின் றம்பி இளஞ்சேரலிரும்பொறையைக் கண்டார். அவன் நல்லறிவினனாகலின் பெருங்குன்றூர்கிழாரை நன்கு வரவேற்று இனிது சிறப்பித்தான். அவர் அவன்மேல் பதிற்றுப் பத்துட் காணப்படும் ஒன்பதாம் பத்தைப் பாடினர். அவனும், அதனை வியந்து மகிழ்ந்தேற்று, “மருளில்லார்க்கு மருளக் கொடுக்கவென்று உவகையின் முப்பத்தீராயிரம் காணங் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற் காகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்பு மறம் விட்டான்” என்ப. அப்பத்தின்கண், இளஞ்சேரலிரும்பொறையை, “பாடுநர் கொளக் கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர், கொலக் கொலக் குறையாத் தானைச் சான்றோர், வண்மையும் செம்மையும் சால்பும் அறனும், புகன்று புகழ்ந் தசையா நல்லிசை, நிலந்தரு திருவின் நெடியோ” (பதிற்.82) னென்றும், “வானி நீரினும் தீந்தண் சாயலன்” (பதிற் 86) என்றும், “விறல் மாந்தரன் விறல்மருக, ஈர முடைமையின் நீரோ ரனையை அளப் பருமையின் இருவிகம் பனையை, கொளக்குறை படாமையின் முந்நீரனையை, பன்மீ னாப்பண் திங்கள் போலப், பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை” (பதிற். 90) என்றும் பாராட்டி, “பல்வேல் இரும் பொறை நின்கோல் செம்மையின், நாளி னாளின் நாடுதொழு தேத்த, உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ, அரசியல் பிழை யாது செருமேந் தோன்றி, நோயிலை யாகியர் நீயே” (பதிற்.81) என்றும், “நின்னாள், திங்கள் அனைய வாக திங்கள், யாண்டோ ரனைய வாக யாண்டே, ஊழி யனைய வாக வூழி, வெள்ள வரம்பினவாக” என்றும், “மாகஞ் சுடர மாவிசும் புகக்கும், ஞாயிறு போல விளங்குதி” (பதிற். 88) யென்றும், வாழ்த்தி யிருப்பதும் பிறவும் மிக்க இன்பந் தருவனவாகும். இங்ஙனம் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையாற் பெருஞ் சிறப்பெய்திய பெருங்குன்றூர்கிழார் கபிலர்பால் நன்மதிப்புடையர். “வயங்குசெந் நாவின், உவலை கூராக் கவலையில் நெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்” (பதிற். 85) என்பதனால் இஃது இனிது விளங்கும். இக் கபிலர் முதலியோர் வையாவிக்கோப் பெரும்பேகனை யடைந்து, அவனைத் தெருட்டும் செயல்வகை யறிந்து தாமும் அவனைக் காண வந்தார். இவரையும் அப்பேகன் மிக்க சிறப்புடன் வரவேற்றுப் பரிசில் நல்கத் தலைப்பட்டான். ஆனால், இவரோ, ஒரு பாணன் கூறும் கூற்றில் வைத்து, “நெருநல் யாம் போந்து யாழிசைந்துச் செவ்வழிப் பண்ணைப் பாடக் கேட்டு ஒருபாற் கண்ணீரும் கம்பலையுமாய் நின்று ஒரு தனிமகள் தன் மையிருங் கூந்தல் மண்ணுதலும் பூச்சூடலுமின்றி வருந்தக் கண்டேன். அவன் தன் கூந்தலை மண்ணிப் பூச்சூடி மகிழுமாறு நீ அவளை யருளுதல் வேண்டும்; ஆவியர் குடித் தோன்றலாகிய நீ அது செய்தலே எமக்குத் தரும் பரிசிலாம்” என்ற பொருளமைய இப் பாட்டைப் பாடினார். கன்முழை யருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக் கார்வா னின்னுறை தமியள் கேளா நெருந லொருசிறைப் புலம்புகொண் டுறையும் 5 அரிமதர் மழைக்க ணம்மா வரிவை நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் கஞல வின்று பெயரின் அதுமனெம் பரிசி லாவியர் கோவே. (147) திணை : பெருந்திணை. துறை : குறுங்கலி; அவள் காரணமாக அவனைப் பெருங் குன்றூர்கிழார் பாடியது. உரை : கன் முழை அருவிப் பன்மலை நீந்தி - கன்முழைக்க ணின்று விழும் அருவியையுடைய பல மலைகளை அரிதிற் கழித்து; சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை - சிறிய யாழைச் செவ்வழி யென்னும் பண்ணை வாசிக்கும்படியாகப் பண்ணி வாசித்து வந்ததற்கு; கார் வான் இன்னுறை - கார்காலத்து மழையினது இனிய துளி வீழ்கின்ற ஓசையை; தமியள் கேளா - தமியளாகக் கேட்டு; நெருநல் - நேற்று; ஒரு சிறைப் புலம்பு கொண்டுறையும் - ஒருபக்கத்துத் தனிமைகொண்டிருந்த; அரி மதர் மழைக்கண் அம்மா அரிவை - அரி பரந்த மதர்த்த குளிர்ச்சியையுடைய கண்ணினையும் அழகிய மாமை நிறத் தினையுமுடைய அந்த அரிவையது; நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல் - நெய்யாற் றுறக்கப்பட்ட மைபோலும் கரிய மயிரை; மண்ணுறு மணியின் மாசற மண்ணி - ஒப்பமிடப் பட்ட நீலமணியினும் மாசறக் கழுவி; புது மலர் கஞல - செவ்வி மலர் நெருங்கும் பரிசு; இன்று பெயரின் - இன்று வருவை யாயின்; அது மன் - அதுவாகும்; எம் பரிசில் -எம்முடைய பரிசில்; ஆவியர் கோவே - ஆவியருடைய வேந்தே எ-று. உறை, துளி; என்றது, ஆகுபெயரால் துளியி னோசையை. மன் : அசை. சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததற்கு அரிவை கூந்தல் புதுமலர் கஞலும்படி, அவள்பால் என்னொடும் வரின் எம் பரிசில் அதுவெனக் கூட்டுக. நெய் பூசுதலோடு பேணுதலைத் துறந்த வெனினுமமையும். செவ்வழி பண்ணி வந்தது, புதுமலர் கஞல வென்று இயைத்துரைப்பாரு முளர். விளக்கம் : பேகனுடைய மலைநாடு குன்றுகளாற் சூழப்பட்டிருத்தலின், “கன்முழை யருவிப் பன்மலை நீந்தி” யென்றார். கார்காலத்தில் மகளிர் தம் காதலரைப் பிரிந்திருத்தலை யாற்றாராகலின், “கார்வான் இன்னுறை தமியள் கேளா” என்றார். உறை - மழைத்துளி. இஃது ஆகுபெயராய், அத்துளி வீழும் ஓசைமேல் நின்றது. புலம்பு தனிமை. “அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை” யென்றது இன்ன சிறப் புடைய அரிவை. தனிமைத் துன்புற்றுக் கூந்தல் நெய்யும் பூவும் அணிதலின்றிப் பொலிவிழந்திருப்பது கூடாதென்பதுபட நின்றது. நீ அவள்பால் சென்று அருளுதல் வேண்டும், என்பார். அருள் பெற்றவழி அவள் செய்துகொள்ளும் ஒப்பனையையெடுத் தோதினார், தமக்குச் சால்பு அதுவாகலின். காதலன்புடைய மனைவியும் கணவனுமாயினார் பிரிந்திருப்பின், இருவரையும் ஒன்றுபடுத்தி வாழ்வு இனிது நடாத்தப் பண்ணுதல் சான்றோர்க்குச் சால்பென்பது, “சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய” (தொல்.கற். 13) என்றும் “நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ” (குறுந்.146) என்றும் வருவனவற்றால் அறியப்படும். (147) 148. கண்டீரக் கோப் பெருநள்ளி இவன் வள்ளல்கள் எழுவருள் ஒருவன். இவ்வள்ளல்கள் ஈகையாகிய செந்நுகத்தைப் பூண்டு தமிழுலகத்தைத் தாங்கின ரென இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் கூறுவர். இந்நள்ளி கண்டீரக் கோவென்றும் கண்டீரக்கோப்பெரு நள்ளி யென்றும் கூறப்படுவன். இளங்கண்டீரக் கோவும் உண்மையின், இவன் பெருநள்ளி யெனப்பட்டான். பெருமை இவற்கே சிறப்புரிமை யாதல் தோன்றப் பெருங் கண்டீரக் கோவென்னாது “பெருநள்ளி” யெனச் சான்றோர் பெரிதும் பேணிப் பாராட்டினர். தோட்டி யென்னும் மலையைத் தன்னகத்தேயுடைய நாடு கண்டீர நாடாகும். இவனது இக் கண்டீர நாடு மலை நாடாதலின், இவனை “நளிமலை நாடன் நள்ளி” யென்று பாராட்டுவர். இவனது கொடைநலத்தைப் பெரிதும் நுகர்ந்தவர் வன்பரண ரென்னும் சான்றோராவர். ஆசிரியர் பரணரின் வேறுபடுத்தறி தற்கு இவரது வன்பரணரென்னும் பெயரே நன்கமைந்திருக்கிறது. இவர் நள்ளியையே யன்றி ஓரி யென்னும் வள்ளலையும் பாடியுள்ளார். இவருக்குப் பிற்காலத்தவரான பெருஞ்சித்திரனார், இவனை, “ஆர்வமுற்று, உள்ளி வருநர் உலைவு நனிதீரத், தள்ளா தீயுந் தகைசால் வண்மைக், கொள்ளா ரோட்டிய நள்ளி” (புறம். 158) என்று சிறப்பித்துள்ளார். இனி, இப்பாட்டின்கண், வன்பரணர் நள்ளியை யடைந்து அவனது விறலையும் கொடையையும், பாராட்ட, அவன் “சான்றீர், நீவிர் கூறும் நலம் பலவும் என்பால் உளவோ என ஐயுறுகின்றே” னென்ற குறிப்புப்படச் சில நல்லுரை வழங்கினனாக, “பீடில்லாத வேந்தரை அவர் செய்யாதவற்றைச் செய்ததாகப் பொய் புனைந் துரைத்தற் கேதுவாகும் வறுமை நின்கொடையால் எம்பால் இல்லையாதலின், எமது நாக்கு ஒருவரையும் அவர் செய்யாதன கூறிப் பாராட்டற்கு அறியாது” என்று அவற்கு விடையிறுத்துள்ளார். கறங்குமிசை யருவிய் பிறங்குமலை நள்ளிநின் அசைவி னோன்றா ணசைவள னேத்தி நாடொறு நன்கலங் களிற்றொடு கொணர்ந்து கூடுவிளங்கு வியனகர்ப் பரிசின்முற் றளிப்பப் 5 பீடின் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்றெஞ் சிறுசெந் நாவே. (148) திணை : பாடாண்டிணை; துறை : பரிசிற்றுறை. கண்டீரக்கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது. உரை : மிசை கறங்கு அருவிய - உச்சிக்கணின்றும் ஆலித் திழிதரும் அருவியினையுடைய; பிறங்கு மலை நள்ளி - உயர்ந்த மலையை யுடைய நள்ளி; நின் அசைவில் நோன்றாள் நசை வளன் ஏத்தி - நினது தளர்ச்சியில்லாத வலிய முயற்சியானாய நச்சப்படும் செல்வத்தை வாழ்த்தி; நாடொறு நன்கலம் களிற்றொடு கொணர்ந்து - நாடொறும் நல்ல அணிகலத்தைக் களிற்றொடு கொணர்ந்து; கூடு விளங்கு வியன் நகர் - நெற்கூடு விளங்கும் அகலிய நகரின்கண் இருந்து; முற்று பரிசில் அளிப்ப - சூழ்ந் திருந்த பரிசிலர்க்கு அளித்து விடுவதால்; பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி - பிறர்க் கீயும் பெருமையில்லாத அரசரைப் புகழும் புகழ்ச்சியை விரும்பி; செய்யா கூறிக் கிளத்தல் எய்யா தாகின்று - அவ்வரசர் செய்யாதனவற்றைச் சொல்லி அவர் குணங்களைக் கூறுதலை அறியாததாயிற்று; எம் சிறு செந் நா- எம்முடைய சிறிய செவ்விய நா எ-று. பொய் கூறாமையிற் “சிறு செந்நா” என்றார்; தற்புகழ்ந்தாரா காமற் “சிறு செந்நா” என்றார். அருவிய வென்பது விகாரம். நள்ளி, நீ பரிசில் முற்றளித்தலால், எம் சிறு செந்நா நின் நசைவள னேத்தி, மன்னரைப் புகழ்ச்சி வேண்டிக் கிளத்தல் எய்யாதா கின்றது எனக் கூட்டுக. நின்னசைவள னேத்திக் கொணர்ந்து முற்றளித்தலா லெனப் பரிசிலர் மேலேற்றி யுரைப்பினு மமையும். விளக்கம் : வளமுடைமைக் கழகு பலராலும் நச்சப்படுந் தன்மை யாதலின், “நசை வளன்” என்றார். வீடுகளின் தெருப்புறத்தே நெற்கூடமைத்தல் பண்டையோர் மரபு; இன்றும் சிற்றூர்களில் இக்கூடுகள் காணப்படும். முற்றுதல் - சூழ்தல். பாணர் சூழ்ந்திருந்து வளம் பெற்றுச் செல்ப வாகலின், “முற்று பரிசில்” என்றார். “பாண் முற்றிருக்கை” என்று சான்றோர் வழங்குதல் காண்க. பீடில் மன்னர் என்றவிடத்துப் பீடு, பிறர்க்கீயும் பெருமை மேற்று. அருவி யென்பது அருவிய வென அகரம் பெற்று வந்தது விகார மென்கின்றனர்; இதனைப் பெயரெச்சக் குறிப்பாகக் கோடல் நேரிது. நின்னை யேத்தி, நீ தரும் நன்கலமும் களிறும் கொணர்ந்து தம்மை முற்றும் இரவலர்க்குப் பரிசிலர் அளித்தலால் என வுரைப்பினும் அமையு மென்பார், “நின்னசை.... அமையும்” என்றார். (148) 149. கண்டீரக்கோப் பெருநள்ளி கண்டீரக் கோப்பெரு நள்ளியின், பரிசில் பெற்று விருந் துண்டு மகிழ்ந்திருக்கும் கூட்டத்தே ஒருகால் ஒரு சிறு நிகழ்ச்சி தோன்றிற்று. அவருள், பாடற்குரிய பாணர், காலையில் இசைத் தற்குரிய மருதப் பண்ணையும் மாலையிற் பாடற்குரிய செவ்வழிப் பண்ணையும் முறை மயங்கி முறையே மாலையிலும் காலையிலும் தவறிப் பாடினர். அது குறித்து வியப்புற்ற நள்ளி, அவர்க்குத் தலைமை தாங்கும் வன்பரணரை வினவினனாக, அவர் வித்தகம் பட, “நள்ளி! காலையில் மருதமும் மாலையிற் செவ்வழியும் பாடுதல் வரலாற்று முறை; நீ அவர்க்கு வறுமை புலனாகா வண்ணம் வேண்டுவன நிரம்ப வளித்து ஓம்புதலால் அம்முறையினை மறந்தனர்” என்ற கருத்தை இப்பாட்டின்கண் அமைத்துப் பாடியுள்ளார். நள்ளி வாழியோ நள்ளி நள்ளென் மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி வரவெமர் மறந்தன ரதுநீ 5 புரவுக்கடன் பூண்ட வண்மை யானே. (149) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. கண்டீரக்கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது. உரை : நள்ளி வாழி - நள்ளி, வாழ்வாயாக; நள்ளி -; நள்ளென் மாலை - நள்ளென்னும் ஓசையையுடைய மாலைப்பொழுதின் கண்; மருதம் பண்ணி - மருத மென்கின்ற பண்ணை வாசித்து; காலை - காலைப்பொழுதின்கண்; கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி - கைவழியாகிய யாழின்கண் செவ்வழி யென்னும் பண்ணை வாசித்து; வரவு எமர் மறந்தனர் - வரலாற்று முறைமையை எம்முடைய பாணர் சாதியிலுள்ளார் மறந்தார்; அது - அவ்வாறு மறந்தது; நீ புரவுக்கடன் பூண்ட வண்மையான் - நீ கொடுத்து ஓம்புதலைக் கடனாக மேற்கொண்ட வண்மையான் எ-று. கையகத் தெப்பொழுதும் இருத்தலான் யாழைக் கைவழி யென்றார், ஆகுபெயரான். வரவவர் மறந்தனர் என்பதூஉம் பாடம். விளக்கம் : காலையில் மருதப் பண்ணும், மாலையிற் செவ்வழிப் பண்ணும் இசைத்தற் குரியவாம். நள்ளியால் அளிக்கப்பட்ட பாணர், இசை மரபை மறந்து, செவ்வழியைக் காலையிலும் மருதத்தை மாலை யிலும் முறைபிறழ்ந் திசைக்கின்றார் என்பார், “மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி” இசைநூன் முறையை மறந்தனர் என்றார். வரவு - இசைநூல் வரலாற்று முறைமை.. இப்பிழைக்கும் எமர் காரண மல்லர்; நினது வண்மை அவரை அம்முறையை மறக்கச் செய்த தென்பதாம். 150. கண்டீரக் கோப் பெருநள்ளி கண்டீரக் கோப்பெரு நள்ளிபால் பெருநட்புக் கொண் டொழுகிய சான்றோர் வன்பரணர். இவரைப் பரணரின் வேறுபட வுணர வன்பரண ரென்றனர் சான்றோர். ஈண்டு நள்ளியைத் தாம் கண்டது கூறுமாறு போல, வல்விலோரியைச் சுரத்திடத்தே கண்டு இவர் பரிசில் பெற்று மேம்பட்டனர். இவர் பாட்டுக்கள் இலக்கிய நலம் சிறந்தவை இப்பாட்டின்கண் தாம் முதன்முதலாக அவனைக் கண்டதும், அவன் தலையளி செய்ததும் சான்றோர்க் குரைப்பாராய், “வறுமையுற்று வருந்திய யான் இரவலர் சுற்றத் துடனே புறப்பட்டு நள்ளியினது கண்டீர நாட்டுக்குப் பல கல்லும் கானமும் கடந்து சென்றேன். ஒரு நாள் வழி நடை வருத்த மிகுதி யால் யாங்கள் காட்டிடத்தே ஒரு பலாமரத்தின் அடியில் அமர்ந் திருந்தேம். மான்கணத்தை வேட்டம் புரிந்து அவற்றின் குருதி தோய்ந்து சிவந்த கழற்காலும் மணி விளங்கும் சென்னியு முடைய செல்வத் தோன்ற லொருவன் எம்பால் போந்து, எம் வருத்த முற்றும் எம் முகநோக்கித் தேர்ந்து கொண்டானாக, அவனைக் கண்டு எழுந்த என்னைக் கைகவித்திருக்கச்செய்து, தன்னொடு போந்து காட்டிடத்தே பரந்திருந்த வில்லுடை இளையர் திரும்பப் போதருமுன், தன் கையிலிருந்த தீக்கடை கோலால் தீ மூட்டிக் கானிடைக் கொன்ற விலங்கின் ஊனைக் காய்ச்சி எம்மை யுண்பித்தான். உண்டு பசிதீர்ந்த யாங்கள், மலைச்சாரலில் ஒழுகிய அருவிநீரைப் பருகி அயர்வு நீக்கினேமாக, “எம்பால் வீறு பொருந்திய நன்கலம் வேறில்லை; யாம் காட்டு நாட்டிடத்தேம்” என்று மொழிந்து தன் மார்பிற் பூண்டிருந்த முத்தாரத்தையும் முன்கையிலணிந்திருந்த கடகத்தையும் தந்தான். யாங்கள் அவன் வள்ளன்மையை வியந்து, “ஐய, நீவிர் யார்? நும்முடைய நாடு யாது? ” என வினவினேம்; அவன் ஒருமொழியேனும் விடையாக மொழியாது எம்பால் விடைபெற்றுச் சென்றான். பின்னர், யாங்கள் வழியில் பிறமக்கள் தம்முட் பேசிக்கொண்ட சொற் களால், இவ்வாறு அருள்செய்த வள்ளல், தோட்டிமலைக்குரிய கன்மலைநாடனான கண்டீரக் கோப் பெருநள்ளியெனத் தெரிந்து தெளிந்தேம்”என்று கூறியுள்ளார். கூதிர்ப் பருந்தி னிருஞ்சிற கன்ன பாறிய சிதாரேன் பலவுமுதற் பொருந்தித் தன்னு முள்ளேன் பிறிதுபுலம் படர்ந்தவென் உயங்குபடர் வருத்தமு முலைவு நோக்கி 5 மான்கணந் தொலைச்சிய குருதியங் கழற்கால் வான்கதிர்த் திருமணி விளங்குஞ் சென்னிச் செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன் தொழுதனெ னெழுவேற் கைகவித் திரீஇ இழுதி னன்ன வானிணக் கொழுங்குறை 10 கானதர் மயங்கிய விளையர் வல்லே தாம்வந் தெய்தா வளவை யொய்யெனத் தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டுநின் இரும்பே ரொக்கலொடு தின்மெனத் தருதலின் அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி 15 நன்மர னளிய நறுந்தண் சாரற் கன்மிசை யருவி தண்ணெனப் பருகி விடுத்த றொடங்கினே னாக வல்லே பெறுதற் கரிய வீறுசா னன்கலம் பிறிதொன் றில்லைக் காட்டுநாட் டேமென 20 மார்பிற் பூண்ட வயங்குகா ழாரம் மடைசெறி முன்கைக் கடகமோ டீத்தனன் எந்நா டோவென நாடுஞ் சொல்லான் யாரீ ரோவெனப் பேருஞ் சொல்லான் பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே 25 இரும்புபுனைந் தியற்றாப் பெரும்பெயர்த் தோட்டி அம்மலை காக்கு மணிநெடுங் குன்றிற் பளிங்குவகுத் தன்ன தீநீர் நளிமலை நாட னள்ளியவ னெனவே. (150) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. கண்டீரக்கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது. உரை : கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகன்ன - கூதிர்காலத்துப் பருந்தினது கரிய சிறகை யொத்த; பாறிய சிதரேன் - துணி யாகிய சீரையை யுடையேனாய்; பலவு முதல் பொருந்தி - பலாவடியைப் பொருந்தி; தன்னும் உள்ளேன் - தன்னையும் நினையேனாய்; பிறிது புலம் படர்ந்த - வேற்றுநாட்டின்கட் சென்ற; உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி - எனது ஓய்ந்த செலவானுளதாகிய வருத்தத்தினையும் மிடியையும் பார்த்து; மான் கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால் - மானினது திரளைத் தொலைத்த குருதி தோய்ந்த அழகிய வீரக்கழலினையுடைய காலினையும்; வான் கதிர்த் திருமணி விளங்கும் சென்னி - வாலிய ஒளியையுடைய அழகிய நீலமணி விளங்கும் உச்சியையுமுடைய; செல்வத் தோன்றல் - செல்வத் தையுடைய தலைவனாகிய; ஓர் வல்லில் வேட்டுவன் - ஒரு வலிய வில்லினையுடைய வேட்டுவன்; தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ - தன்னை யஞ்சலி பண்ணினேனா யெழுந் திருப்பேனைக் கைகவித் திருத்தி; இழுதின் அன்ன வால் நிணக் கொழுங்குறை - நெய்யிழுதுபோன்ற வெள்ளிய நிணத்தை யுடைய கொழுவிய தடியை; கானதர் மயங்கிய இளையர் - காட்டுவழியின்கண் வழிமயங்கிப் போகிய இளையர்; தாம் வல்லே வந்தெய்தா அளவை - தாம் விரைய வந்து பொருந்து வதற்கு முன்னே; ஓய்யென - கடிதாக; தான் ஞெலிதீயின் விரைவனன் சுட்டு - தான் கடைந்த தீயான் விரைந்து சுட்டு; நின் இரும் பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்- நினது மிகப் பெரிய சுற்றத்துடனே தின்மி னென்று தருதலான; அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி அதனை யாங்கள் அமிழ்துபோலத் தின்று சுடுகின்ற பசி தீர்ந்ததாக; நன் மரன் நளிய நறுந் தண் சாரல் கல் மிசை அருவி தண்ணெனப் பருகி - நல்ல மரச்செறிவையுடைய நறிய குளிர்ந்த மலைச் சாரற்கண் மலையுச்சியினின்றும் வீழ்ந்த அருவிநீரைக் குளிரக் குடித்து; விடுத்தல் தொடங்கினேனாக - விடைகொள்ளத் தொடங்கி னேனாக; வல்லே - விரைய வந்து; பெறுதற்கரிய வீறுசால் நன் கலம் - பெறுதற்கரிய பெருமை யமைந்த நல் அணிகலங்கள் தருதற்கு; பிறிதொன்றில்லை காட்டு நாட்டேம் என- வேறொன் றில்லை யாம் காட்டுநாட்டின்கண்ணேம் எனச் சொல்லி; மார்பிற் பூண்ட வயங்கு காழ் ஆரம் - தனது மார்பிற் பூணப் பட்ட விளங்கிய முத்து வடங்களையுடைய ஆரத்தை; மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன் - கொளுத்துச் செறிந்த முன்கைக் கணிந்த கடகத்துடனே தந்தனன்; எந்நாடோ என நாடும் சொல்லான் - நும்முடைய நாடு எந்நாடோ என்று கேட்ப நாடும் சொல்லிற்றிலன்; யாரீரோ எனப் பேரும் சொல்லான் - நீர் யாரெனக் கேட்பப் பெயரும் சொல்லிற்றிலன்; பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசின் - அவன் நாடும் பெயரும் பிறர் பிறர் வழியின்கண்ணே சொல்லக்கேட்டேன் யான்; இரும்பு புனைந் தியற்றாப் பெரும் பெயர்த் தோட்டி - இரும்பாற் புனைந்து செய்யப்படாத மிக்க புகழையுடைய தோட்டியாகிய; அம் மலை காக்கும் - அம் மலையைக் காக்கும்; அணி நெடுங் குன்றின் - அழகிய பெரிய பக்கமலையினையும்; பளிங்கு வகுத்தன்ன தீ நீர் - பளிங்கை வகுத்தாற்போன்ற வெளிய நிறத்தையுடைய இனிய நீரையுமுடைய; நளி மலை நாடன் நள்ளி அவன் என - பெரிய மலைநாட்டையுடைய நள்ளி அவன் என எ-று. நீங்கி - நீங்க. பலவு முதற் பொருந்தித் தொழுதனென் எனவும், மலை காக்கும் நள்ளி யெனவும் இயையும். அவன் நள்ளி யெனப் பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசின் எனக் கூட்டுக. விளக்கம் : அழுக்கேறிக் கிழிந்திருக்கும் உடை நீரில் நனைந்த பருந்தின் சிறகுபோல இருக்கும்; இதனைப் பிறரும், “நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன, நிலந்தின் சிதாஅர்” (பதிற்.12) என்பர். வருத்தமும், உலைவும், முறையே செலவா னுளவாகிய வருத்தத்தையும், வறுமைத் துன்பத்தையும் குறித்துநின்றன. கழற்காலும் மணிவிளங்கும் சென்னியுமுடைய செல்வத் தோன்றல் என இயையும். செல்வத் தோன்றலைக் கண்டு தொழுதற்கெழுந்த என்னை, வருத்தமும் உலைவும் நோக்கி அருள் கொண்டு எழாவாறு தடுத்து இருக்கச் செய்தான் என நள்ளியின் அன்பு நலத்தைக் “கைகவித் திரீஇ” யென்பதனால் தோற்றுவித்தார். பல்வேறிடங்களிற் சிதறிச் சென்றி ருந்த இளையர் வந்து தொக்கவழி, தன் பெயரும் வரவும் வெளிப் படுமெனக் கருதி, “இளையர் வல்லே வந்தெய்தா அளவை” என்றார். காய் பசி நீங்கி யென்றவிடத்து, நீங்கி யென்பது நீங்கவெனத் திரிக்கப்பட்டது. விடுத்தல் தொடங்கினேன் - விடைகொள்ளத் தொடங்கினேன். மடை - மடுக்கப்படுவது; பற்றவைப்பு. நன்கலம் கடகமொடு ஈந்தான்; பசித்துயர் போக்கி, நன்கலம் ஈந்தானைப் பெயரும் நாடும் கூறுமாறு கேட்டேன்; எனக்கு அவற்றை யவன் கூறிற்றிலன் என்பார், அவனது செல்வப் பணிவுடைமையின் சிறப்புப் புலப்பட, “எந்நாடோ வென நாடுஞ் சொல்லான், யாரீரோ வெனப் பேருஞ் சொல்லான்” என்றார். வழிக் கேட்டிசின் - வழியின்கண் பிறர் தம்மிற் கூறக் கேட்டேன். முன்னிலைக்குரிய இசின், கேட்டிசின் எனத் தன்மைக்கண் வந்தது; “இகுமுஞ் சின்னும் ஏனையிடத் தொடுந், தகுநிலை யுடைய என்மனார் புலவர்” (தொல். இடை - 27) என்பதனால் இஃதமைவதாயிற்று. மதுரைக்குத் தெற்கிலுள்ள மலைநாட்டில் ஒரு பகுதி கண்டீரக் கோப் பெரு நள்ளிக் குரியதாகும். நள்ளி யென்னும் பெயருடையதோர் ஊர் அந்நாட்டில் உளது. (150) 151. இளவிச்சிக் கோ இவ்வேந்தனுடைய இயற்பெயர் தெரிந்திலது. விச்சி யென்பது ஒரு மலை. அதனைச் சூழ்ந்த நாடு விச்சி நாடென்றும், அந் நாட்டரசன் விச்சிக்கோ வென்றும் வழங்குப. விச்சியின் இளவரசன் இளவிச்சிக் கோ எனப்பட்டான். இளவிச்சிக் கோவும், இளங்கண்டீரக் கோவும் நெருங்கிய நண்பர்.கண்டீரக்கோப்பெரு நள்ளிக்கு இளையோனாதலின் இவன் இளங்கண்டீரக்கோ எனப்படுவானாயினான்.ஒருகால்,இளங்கண்டீரக் கோவின் திருமனையில் இளவிச்சிக் கோவும் வந்திருந்தான். இருவரும் ஒருங்கிருக்கையிற்சான்றோரான பெருந்தலைச் சாத்தனார் கண்டீரக் கோவைக் காண வந்தார். வந்தவர், இளங்கோக்கள் இருவரையும் கண்டார். இருவரும் அவரை மனங் கனிந்து வரவேற்றனர். ஆயினும், அச் சான்றோர் இளங்கண்டீரக் கோவைப் புல்லிக் கொண்டு இளவிச்சிக் கோவைப் புல்லா தொழிந்தார். இளவிச்சிக்கு இதுமிக்க வருத்தத்தைச் செய்தது. அவன் கள்ளமில் உள்ளத்தனாகலின் சிறிதும் தாழாது, “என்னை நீவிர் புல்லாதொழிந்ததேன்?” என்று வினவினன். அவற்குப் பெருந்தலைச் சாத்தனார் விடையிறுப்பாராய், இப்பாட்டின்கண், “வேந்தே, இக்கண்டீரக்கோ வண்மையால் புகழ் சிறந்தவன். இவன் நாட்டில் மனைக்கிழவன் சேட்புலம் சென்றிருப்பினும், மனைக்கிழமை பூண்ட மகளிர் தம் தகுதிக்கேற்பனவற்றை இரவலர்க் கீந்து இசை வளர்ப்பர். அதனால் இக் கண்டீரக் கோவைப் புல்லினேன். நின் முன்னோருள் முதல்வன் பெண் கொலை புரிந்த நன்னனாவான். நின் நாடு பாடி வருவார்க்குக் கதவடைத்து மறுக்கும் நீர்மையது. அதனால் எம் போல்வார் நினது விச்சி மால்வரையைப் பாடுதலொழிந்தனர். அதனால் அம் மலைக்குரிய நின்னைப் புல்லே னாயினேன்” என்று கூறினார். ஒருகால் குடக்கோ இளஞ்சேர லிரும்பொறை, சோழ பாண்டியரொடு கூடிப் பொருத விச்சிக்கோவை வென்று வீழ்த்தினானெனப் பதிற்றுப்பத்திலுள்ள ஒன்பதாம் பத்தின் பதிகம் கூறுகிறது. பாரிமகளிரை மணஞ்செய்து கொள்ளுமாறு கபிலரால் வேண்டிக்கொள்ளப்பட்ட வேந்தருள் விச்சிக்கோவும் ஒருவன்; அவனை அக்காலை அவர், “நிணந்தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடுவேல், களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை, விளங்குமணிக் கொடும்பூண்விச்சிக்கோ” (புறம். 200) எனப் பாராட்டியுள்ளார். ஒருகால் இவ் விச்சிக்கோக்களில் ஒருவன் பெருவேந்தர் மூவருடன் போரிட்டு வீழ்ந்தான். அவனால் அலைக்கப்பட்ட குறும்பூர் என்னும் ஊரிலுள்ளார் பேராரவாரம் செய்தனரென்பதை, “வில்கெழு தானை விச்சியர் பெருமகன், வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர், புலிநோக் குறழ்நிலை கண்ட கலிகெழு, குறும்பூ ரார்ப்பினும் பெரிது” (குறுந். 328) எனப் பரணர் கூறியுள்ளார். இனி, பெருந்தலைச் சாத்தனா ரென்னும் சான்றோர் பெருந்தலை யென்னும் ஊரினர். இப் பெயரால் தமிழகத்திற் பலவூர்களுண்மையின், இவர் இன்ன நாட்டின ரெனத் துணிய முடியவில்லை. அகநானூற்றுப் புலவர் நிரலில் இவர் பெயர் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனாரென்று (224) காணப்படுதலின், இவர் தந்தை ஆவூர் மூலங்கிழார் என்பதும், இவரின் பெற்றோர் இருந்தது ஆவூர் மூலமென்பதும், இவர் வாழ்ந்தது பெருந்தலை யென்பதும் துணிபாம். இவர்க்குத் தலை பெருத்திருந்த காரணத்தால், பெருந்தலைச் சாத்தனாரெனப் பட்டாரென்பாரு முண்டு. இவர் புலமை சிறந்து மேம்படுங்கால், வறுமையுற்றுக் கோடைமலைத் தலைவனும் பண்ணி யென் பாற்குப் பின் வந்தோனுமாகிய கடிய நெடுவேட்டுவ னென்னும் செல்வனைக் கண்டு பரிசில் கேட்ப, அவன் பரிசில் நீட்டித்தான். பின்னர் அவர் சேரமான் ஒருவனால் பல் பிடுங்கப்பட்ட மூவ னென்பான்பாலும் பரிசில் பெறாது வருந்திச் சென்றார். முடிவில் முதிரமலைக்குரிய குமண வள்ளலைக் காட்டிற் கண்டு பாடி, அவன் தலைதருவான் வாளீய அதுபெற்றுச் சென்று இளங் குமணனைக் கண்டு வாளைக் காட்டி இருவரையும் பண்டுபோல் அன்புகொள்ளச் செய்து சிறப்புற்றார். கடிய நெடுவேட்டுவற்கு முன்பிருந்த பண்ணியென்பான்பாண்டி வேந்தற்குத் தானைத் தலைவனென்றும், அவன் வேள்வி செய்து விழுப்பமுற்றதை, “வரைநிலை யின்றி இரவலர்க் கீயும், வள்வாயம்பிற் கோடைப் பொருநன், பண்ணி தைஇய பயங்கெழு வேள்வி” (அகம்.13) யென்றும் கூறுவர். இவர், காதலர்ப் பிரிதலினும் கொடிது இன்மையது இளிவு என்பதும், ஆடவன் ஒருவன் போர் செய்யுந் திறத்தைத் தன் மனைவிக்குக் கூறுவதும் மிக்க சுவையுடையன வாகும். பண்டும் பண்டும் பாடுந ருவப்ப விண்டோய் சிமைய விறல்வரைக் கவாஅற் கிழவன் சேட்புலம் படரி னிழையணிந்து புன்றலை மடப்பிடி பரிசி லாகப் 5 பெண்டிருந் தம்பதங் கொடுக்கும் வண்புகழ்க் கண்டீ ரக்கோ னாகலி னன்றும் முயங்க லான்றிசின் யானே பொலந்தேர் நன்னன் மருக னன்றியு நீயும் முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப் 10 பாடுநர்க் கடைத்த கதவி னாடுமழை அணங்குசா லடுக்கம் பொழியுநும் மணங்கமழ் மால்வரை வரைந்தன ரெமரே. (151) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. இளங்கண்டீரக் கோவும் இளவிச்சிக் கோவும் ஒருங்கிருந்த வழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீரக் கோவைப் புல்லி இளவிச்சிக் கோவைப் புல்லாராக, என்னை என்செயப் புல்லீராயினீ ரென அவர் பாடியது. உரை : பண்டும் பண்டும் படுநர் உவப்ப - முன்பேயும் முன்பேயும் பாடுவார் விரும்ப; விண் தோய் சிமைய விறல் வரைக்கவாஅன் - விசும்பைப் பொருந்திய உச்சியையுடைய சிறந்த மலைப் பக்கத்து; சேட் புலம் கிழவன் படரின் - நெடுந்தூரத்தே தம் கணவன் செல்லின்; இழை யணிந்து - ஆபரணத்தை யணிந்து; புன்றலை மடப்பிடி - புல்லிய தலையையுடைய மெல்லிய பிடியை; பரிசிலாக - பரிசிலாகக் கொண்டு; பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் - அவர் பெண்டிரும் தம் தரத்திலே பரிசில் கொடுக்கும்; வண் புகழ்க் கண்டீரக் கோனாகலின் - வள்ளிய புகழையையுடைய கண்டீரக் கோனாதலாலே; நன்றும் யான் முயங்கல் ஆன்றிசின் - பெரிதும் யான் தழுவிக்கொள்ளுதலை யமைந்தேன்; பொலம் தேர் நன்னன் மருகன் அன்றியும் - பொன்னாற் செய்யப்பட்ட தேரினையுடைய நன்னன் மரபினுள்ளாயாத லன்றியும்; நீயும் முயங்கற்கு ஒத்தனை மன் - நீயும் தழுவுதற்குப் பொருந்தினாய், ஆயினும்; வயங்கு மொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின் - விளங்கும் மொழியை யுடைய பாடுவார்க்கு அடைத்த கதவு காரணமாக; ஆடு மழை அணங்கு சால் அடுக்கம் பொழியும் - இயங்கும் முகில் தெய்வமமைந்த அரைமலைக்கண்ணே சொரியும்; மணங் கமழ் மால் வரை எமர் வரைந்தனர் -நுமது மணநாறும் உயர்ந்த மலையை எம் முள்ளார் பாடுதலை நீக்கினார், ஆதலான் முயங்கிற்றிலேன் எ-று. பெண்டிரும் தம் பதம் கொடுக்குமெனவே ஆடவரும் தம் தரத்தே களிறு கொடுத்தல் போந்தது. “கிழவன்” என்பது “ஏவலிளையர் தாய் வயிறு கறிப்ப” என்பது போலப் பன்மை சுட்டி நின்றது. “நன்னன் மருக னன்றியும்” என்றதற்கு, “பெண் கொலை புரிந்த நன்னன் போல, வரையா நிரையத்துச் செலீ இயரோ அன்னை” (குறுந். 292) என்றமையின், அதுவும் வரைதற்கு ஒரு காரணமாக வுரைப்பாருமுளர். பதமென்றது, பரிசிலை. மன்: ஒழியிசைக்கண் வந்தது. விளக்கம் : விறல் மலை - சிறந்த மலை; கவான் - மலைப்பக்கம்; மனைக் கிழவன் சேட்புலம் சென்றால், மனைக்கிழத்தி தன் தகுதிக்கேற்ப வழங்குவ வழங்கிக் குடிப்புகழைப் பேணுதல் கற்பு மாண்பாதலின், “பெண்டிரும் தம் பதம் கொடுக்கும்” என்றார். “மனையோள், பாண ரார்த்தவும் பரிசில ரோம்பவும், ஊணொலி யரவமொடு கைதூ வாளே” (புறம்.334) என்று பிறரும் கூறுதல் காண்க. பெண்டிரும் என்ற உம்மை எச்சவும்மையாகலின், “பெண்டிரும்....போந்தது” என்றார். நன்னன் மருகனாதலால் தழுவிக்கொள்ளற் கொருவா றமைந்தாயாயினும், எமர் பாடுதல் வரைந்தனராதலின், தழீஇக் கொள்ளே னாயினேன் என்பதாம். இங்ஙனம் கொள்ளுமிடத்து, பொலந் தேர் நன்னன், செங்கை மாத்து நன்னன் சேய் நன்னனாகக் கோடல் அமையும். வாளா நன்னன் என்றமையான் பெண் கொலை புரிந்த நன்னனென்று கொண்டு, தழுவாமைக்கு அந்நன்னன் மருகனாதல் காரணமாகக் கொண்டுரைப்பவரும் உண்டென்றார். அடுக்கம்-மலைப்பக்கம்; அரைமலையுமாம். தாய் என்னும் ஒருமை, இளையரை நோக்கப் பன்மை சுட்டி நிற்பதுபோல, கிழவன் என்பதும் பன்மை சுட்டிநின்ற தென்பதாம். (151) 152. வல்வி லோரி வேள் பாரி முதலாகக் கூறப்படும் வள்ளல்கள் நிரலில் கூறப்படும் வல்வி லோரி இவனே. இவனைக் “கொல்லியாண்ட வல் வில் ஓரி” (புறம். 148) எனப் பெருஞ்சித்திரனார் கூறுவது காண்க. இவனை ஆதனோரி யென்றும் சான்றோர் வழங்குப. இக் கொல்லிமலை, பலா, கருவாழை முதலிய கனியுடை மரங்கள் நிறைந்தது. இம் மலையில் தெய்வங்கள் கூடி அழகு மிக்க பாவை யொன்றைச் செய்துவைத்திருந்தன என்று சான்றோர் கூறுவர். வனப்பு மிக்க மகளிர்க்கு அப் பாவையைச் சான்றோர் உவமமாகக் கூறுவது வழக்கம். அம்மலை ஓரிக்குரியதாயினும் அதனைச் சேர மன்னர் தமக்குரியதாக்கிக் கொள்ளக் கருதியிருந்தனர். அதனால் அவர்கள் முள்ளூர் மன்னனாகிய காரி யென்பானுக்கும் இந்த வல் வில் ஓரிக்கும் பகைமை தோற்றுவித்து, அதுவே வழியாக அக் கொல்லியைக் காரி யென்பான் கைப்பற்றித் தமக் களித்துவிட வேண்டுமென ஏற்பாடு செய்துகொண்டனர். இதனைத் தன் ஒற்றர்களால் அறிந்துகொண்ட ஓரி, காரியின் முயற்சியைக் கெடுத்தற்குப் போர் தொடுத்தான். ஓரியும் காரியும் தத்தமக்குரிய ஓரி, காரி யென்ற குதிரைமேலேறிப் பொரத் தொடங்கினர். காரிக்குச் சேரர்படை துணை செய்தது. முடிவில் முள்ளூர் மன்னனான காரி ஓரியைக் கொன்று அவனது கொல்லி மலையைத் தான் முன்பு செய்துகொண்ட ஏற்பாட்டிற்கியையச் சேரர்க் களித்தான். இதனைக் கல்லாடனார், “செவ்வேல், முள்ளூர் மன்னன் கழறொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரர்க்கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகம். 209) என்று கூறியுள்ளார். ஓரியைக் கொன்று சிறப்புற்ற காரி, பின்னர்த் தன் பகைவர் நாட்டிற் புகுந்த காலை ஆண்டெழுந்த ஆரவாரம் பெரிதாயிற்றென்பார், கபிலர், “பழவிறல் ஓரிக்கொன்ற வொருபெருந் திருவிற், காரி புக்க நேரார் புலம்போல் கல்லென் றன்றால்” (நற். 320) என்று குறித்துள்ளார். இவ்வல்வில் ஓரி பெரிய கொடையாளி; இசைத் துறையில் மிக்க ஈடுபாடுடையன்; இரவலரைப் புரக்கும் பெருங் கடப்பாடுடை யன். இவனைக் கபிலர், கல்லாடர், வன்பரணர் முதலியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். இவற்குப் பல ஆண்டுகட்குப் பின்னர்த் தோன்றிய இடைக் கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரும் பெருஞ்சித்திரனாரும் வள்ளல்கள் வரிசையுள் வைத்து இவனைப் பாடியுள்ளனர். இவருள், வன்பரணர் கொல்லி மலையைச் சார்ந்த சுரத்திடத்தே பாண் சுற்றத்தோடு சென்றுகொண்டிருக்கையில், வேட்டங் காரணமாக ஆங்கு வந்திருந்த வல்வி லோரியைக் கண்டு பரிசில் பெற்ற திறத்தை இப்பாட்டின்கட் குறித்திருக்கின்றார். ஓரி யென்பான் வேட்டம் புரியுங்கால், யானை யொன்றை வீழ்த்தற்குப் புலி யொன்று அற்றம் நோக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். உடனே அவன் தனது வலிய வில்லில் அம்பு தொடுத்து யானை மேல் எய்தான்: அஃது அவ் யானையை வீழ்த்தி அற்றம் நோக்கி நின்ற புலியின் அகன்ற வாயுள் தைத்து ஊடுருவிச் சென்று கொன்று, வழியில் நின்ற கலைமானை மடித்து, அண்மையி லிருந்த காட்டுப்பன்றியை வீழ்த்தி, அதன் அயலிருந்த புற்றிற் கிடந்த உடும்பின் உடலிற் றைப்புண்டு வீழ்ந்தது. இதனைக் கண்டு பெருவியப்புற்ற வன்பரணர், இத்துணைச் சிறப்பமைந்த வில்லாளனாகிய இவன் ஒரு செல்வத் தோன்றலா மென எண்ணி, தன் பாண் சுற்றத்துடனே அவனை வணங்கித் தலைவன் திருமுன் பாடற்கமைந்த இருபத்தொரு பாடற்றுறையும் பாடி நிற்ப, அவன் தானெய்த மானின் தசையையும், மதுவையும், தன் மலையிற் கிடைக்கும் பொன்னையும், தந்து சிறப்பித்தனுப்பினான் என இப்பாட்டிற் கூறுகின்றார். கொல்லிமலை சேல மாநாட்டில் நாமக்கல்லைச் சார்ந்த மங்கலத்துக்கு அருகில் உள்ளது. வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி பேழ்வா யுழுவையைப் பெரும்பிறி துறீஇப் புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி யுரற்றலைக் கேழற் பன்றி வீழ வயல 5 தாழற் புற்றத் துடும்பிற் செற்றும் வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன் புகழ்சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும் கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்றிவன் விலைவன் போலான் வெறுக்கைநன் குடையன் 10 ஆரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற் சார லருவிப் பயமலைக் கிழவன் ஓரி கொல்லோ வல்லன் கொல்லோ பாடுவல் விறலியோர் வண்ண நீரும் மண்முழா வமைமின் பண்யாழ் நிறுமின் 15 கண்விடு தூம்பிற் களிற்றுயிர் தொடுமின் எல்லரி தொடுமி னாகுளி தொடுமின் பதலை யொருகண் பையென வியக்குமின் மதலை மாக்கோல் கைவலந் தமினென் றிறைவ னாகலிற் சொல்லுபு குறுகி 20 மூவேழ் துறையு முறையுளிக் கழிப்பிக் கோவெனப் பெயரிய காலை யாங்கது தன்பெய ராகலி னாணி மற்றியாம் நாட்டிட னாட்டிடன் வருது மீங்கோர் வேட்டுவ ரில்லை நின்னொப் போரென 25 வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் தானுயிர் செகுத்த மானிணப் புழுக்கோ டானுருக் கன்ன வேரியை நல்கித் தன்மலைப் பிறந்த தாவி னன்பொன் பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச் 30 சுரத்திடை நல்கி யோனே விடர்ச்சிமை ஓங்கிருங் கொல்லிப் பொருநன் ஓம்பா வீகை விறல்வெய் யோனே. (152) திணை : பாடாண்டிணை; துறை : பரிசில் விடை. வல்வி லோரியை வன்பரணர் பாடியது. உரை : வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி - ஆனையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு; பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ - பெரிய வாயை யுடைய புலியை இறந்துபாட்டை யுறுவித்து; புழல் தலைப் புகர்க் கலை உருட்டி - துளை பொருந்திய கோட்டை யுடைத் தாகிய தலையினையுடைய புள்ளிமான் கலையை யுருட்டி; உரல் தலைக் கேழற்பன்றி வீழ - உரல்போலுந்தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து; அயலது - அதற்கு அயலதாகிய; ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் - ஆழ்தலை யுடைய புற்றின்கட் கிடக்கின்ற உடும்பின்கட் சென்று செறியும்; வல்வில் வேட்டம் வலம்படுத்தி ருந்தோன் வல்வில்லாலுண் டாய வேட்டத்தை வென்றிப் படுத்தியிருந்தவன்; புகழ் சால் சிறப்பின் அம்பு - புகழமைந்த சிறப்பினையுடைய அம்பு; மிகத்திளைக்கும் கொலைவன் யார்கொலோ கொலைவன் - ஏத் தொழிலிலே மிகச் சென்றுறுதற்குக் காரணமாகிய கொலைவன் யாரோதான் கொலைவன்; மற்று இவன் விலைவன் போலான் - மற்று இவன் விலை யேதுவாகக் கொன்றானாக மட்டான்; வெறுக்கை நன்கு உடையன் - செல்வத்தை மிக வுடையனாயிருந்தான்; ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் - சந்தனம் பூசிப் புலர்த்திய அழகிய பரந்த மார்பினையுடைய; சாரல் அருவிப் பய மலைக் கிழவன் - சாரற்கண்ணே அருவியை யுடைய பயன் படு மலைக்குத் தலைவனாகிய; ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ - ஓரியோ அல்லனோதான், அவனாகத் தகும்; பாடுவல் விறலி ஓர் வண்ணம் - யான் பாடுவேன்,விறலி, ஒருவண்ணம்; நீரும் முழா மண் அமைமின் - நீங்களும் முழாவின்கண்ணே மார்ச்சனையையிடுமின்; யாழ் பண் நிறுமின் - யாழிலே பண்ணை நிறுத்துமின்; கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின் - கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது கைபோலும் வடிவையுடைய பெரு வங்கியத்தை இசையுங் கோள்; எல்லரி தொடுமின் - சல்லியை வாசியுமின்; ஆகுளி தொடுமின் - சிறுபறையை அறையுங்கோள்; பதலை ஒரு கண் பையென இயக்குமின் - பதலையில் ஒரு முகத்தை மெல் லெனக் கொட்டு மின்; மதலை மாக் கோல் வலம் தமின் என்று சொல்லுபு குறுகி - கரிய கோலைக் கையின் கண்ணே தாருங்கோள் என்று சொல்லி யணுகி; இறைவனாகலின் மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி - தலைவனாதலாலே இருபத்தொரு பாடல் துறையையும் முறையாற் பாடி முடித்து; கோ எனப் பெயரியகாலை - பின்னர்க் கோவே யென்று அவன் பெயர் கூறிய காலத்து; ஆங்கு அது தன் பெயராகலின் நாணி - அவ்விடத்து அவ் வார்த்தை தன் பெயராதலால் நாணி; மற்று - பின்னை; யாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும் - யாங்கள் நாட்டிடத்தோறும் நாட்டிடந்தோறும் சென்று வருவேம்; ஈங்கு ஓர் வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என - இவ்விடத்து ஒரு வேட்டுவரும் இல்லை நின்னை யொப்போர் என; வேட்டது மொழியவும் விடா அன் - யாம் விரும்பியது கூறவும் அதற்குக் காலந் தாரானாய்; வேட்டத்தில் தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு - வேட்டையின்கண் தான் எய்த மானினது நிணத்தையுடைய தசையினது புழுக்குடனே; ஆன் உருக்கன்ன வேரியை நல்கி - ஆவின் நெய்யை யுருக்கினாற் போன்ற மதுவைத் தந்து; தன் மலைப் பிறந்த தாவில் நன் பொன் பன்மணிக் குவையொடும் விரைஇ - தன்னுடைய மலையின்கட் பிறந்த வலியில்லாத நல்ல பொன்னைப் பல மணித் திரளுடனே கலந்து; கொண்ம் எனச் சுரத்திடை நல்கியோன் - இதனைக் கொண்மின் எனச் சொல்லிச் சுரத்திடத்தே எமக்குத் தந்தான்; விடர்ச் சிமை ஒங்கிருங் கொல்லிப் பொருநன் - முழையை யுடைத்தாகிய உச்சியையுடைய உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன்; ஒம்பா ஈகை விறல் வெய்யோன் - பாதுகாவாத வண்மையினையுடைய வென்றியை விரும்புவோன் எ-று. புழலென்றது, ஆகுபெயரால் புழலையுடைய கோட்டை களிற்றுயிரென்றது, ஆகுபெயரால் களிற்றினது கைபோலும் வடிவையுடைய பெருவங்கியத்தை. பாடுவல் விறலி ஓர் வண்ணம் என்றது. நீயும் ஒன்று பாடுவாயாக வென்னும் நினைவிற்று. நீரும் என்றது கூட்டத்தை, மூவேழ் துறையு மென்றது, வலிவு மெலிவு சமமென்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்று ஏழு தானம் முடித்துப் பாடும் பாடற் றுறையை; அன்றி, இருபத்தொரு நரம்பால் தொடுக்கப்படும் பேரியாழ் எனினுமமையும். தம்மி னென்பது தமின் எனக் குறைந்து நின்றது. கொல்லிப் பொருநனாகிய விறல் வெய்யோன் கோவெனப் பெயரிய காலை, அது தன் பெயராகலின் நாணி வேட்டது மொழியவும் விடானாய் நல்கியோனெனக் கூட்டுக. விளக்கம் : யானை வீழ்த்த அம்பாதலின், “விழுத்தொடைப் பகழி” யென்றார். இதனை விடுத்த ஓரியை, “வல் வில் வேட்டுவன்” என்றார். ஒரு தொடையில் களிறைக் கொன்று புலியைக் கொன்று, மானையுருட்டி, பன்றியை வீழ்த்தி, உடும்பிற் சென்று செறிதலின், ஒரு தொடுப்பில் இத்துணை யுயிர்களைக் கொன்றமையின், “கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்றிவன்” என்றார். ஓரியின் தோற்றம் செல்வம் மிகவுடைய னென்பதை விளக்கினமையின், “விலைவன் போலான்” என்றும், “வெறுக்கை நன்குடையன் என்றும் கூறினார். மண்-மார்ச்சனை. பெருவங்கியத்தைக் களிற்றுயிர் என்றார், அது களிற்றின் கைபோலும் வடிவுடையதாதல் பற்றி. வண்ணம் இசைப் பாட்டு வகை, “பிழையா வண்ணங்கள் பாடிநின்றாடுவார், அழை யாமே யருள் நல்குமே” (ஞானசம்.54:5) என வருதல் காண்க. “மதலை மாக்கோல் கைவலம் தம்மின்” என்பதன் உரையில், “நமது பிறப்புணர்த்தும் கரிய கோல்” என அச்சுப் பிரதியிற் காணப்படும் பகுதி சில ஏடுகளில் இல்லை. மூவேழ் துறைகளை, “இசைத்தமைத்த கொண் டேழேயேழே நாலேமூன்றியலிசை யியல்பா, வஞ்சத் தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்” (ஞானசம். 126:11) என்று ஞானசம்பந்தரும் குறித்தன ரென்பர். தம்முன் நிற்போன் வல்விலோரி யென்பதை அறியாராயினும், தாம் வந்திருப்பது அவனது நாடும் காடுமா மென்பதை யறிந்திருத்தலின், அவன் பெயரைக் கோவென்ற சொல்லால் சுட்டி யுரைத்ததை, “கோவெனப் பெயரிய காலை” என்றார். அவனது வல்வில் வேட்டத்தை நேரிற் கண்டமையின், அதனை விதந்தோதற்கு விரும்பின விருப்பை, “வேட்டது மொழிய வும்” என்றார். ஆன் ஆகுபெயரால் அதனது நெய்யை யுணர்த்திற்று. தன்பாற் பேரன்பு கொண்டு தனது புகழைத் தன் முன் பாடிய பரிசிலரை வெறிது விடுத்தல் விழுப்ப மன்றென, ஓரி, மானிணமும் தேனும் பொன்னும் மணியும் கொடுத்தானென்றார். (152) 153. வல்வி லோரி வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர்சுற்றம், ஒருகால் தமக்குரிய பாடுதலும், ஆடுதலும், ஆகிய செயல்களைச் செய்யாது சோம்பியிருந்தது. அதுகண்ட சான்றோர் சிலர் வியப்புற்று வன்பரணரை வினவினாராக, அவர்கட்கு அவர், “என் பாண்சுற்றத்தார் கொல்லிப் பொருநனாகிய வல்வி லோரியைக் காணச் சென்றனர்; அவர்கட்கு அவன் பொன்னரி மாலையும் பிற கலன்களும், களிறுகளும், நல்கிச் சிறப்பித்தான்; அவன்பாற் பெற்ற பெருவளத்தால் அவர் பசி யறியாராயினர்; அதனால் அவர் தமக்குரிய பாடலும் ஆடலும் மறந்தொழிந்தனர்” என இப் பாட்டின்கட் குறித்துரைக்கின்றார். மழையணி குன்றத்துக் கிழவ னாளும் இழையணி யானை யிரப்போர்க் கீயும் சுடர்விடு பசும்பூட் சூர்ப்பமை முன்கை அடுபோ ரானா வாத னோரி 5 மாரி வண்கொடை காணிய நன்றும் சென்றது மன்னெங் கண்ணுளங் கடும்பே பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை வானார்த் தொடுத்த கண்ணியுங் கலனும் யானை யினத்தொடு பெற்றனர் நீங்கிப் 10 பசியா ராகன் மாறுகொல் விசிபிணிக் கூடுகொ ளின்னியங் கறங்க ஆடலு மொல்லார்தம் பாடலு மறந்தே. (153) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. வல்வி லோரியை வன்பரணர் பாடியது. அவனை அவர் பாடியது. உரை : மழை யணி குன்றத்துக் கிழவன் - முகில் சூழ்ந்த மலைக்குத் தலைவன்; நாளும் இழையணி யானை இரப்போர்க்கு ஈயும் - நாடோறும் பட்டமுதலாகிய பூண்களை யணிந்த யானையை இரப்போர்க்குக் கொடுக்கும்; சுடர் விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன் கை- கதிர் விடுகின்ற பசும்பொன்னாற் செய்த அணியினையும் வளைந்த கடகமமைந்த முன் கையினையு முடைய; அடுபோர் ஆனா ஆதன் ஓரி - கொல்லும் போர் அமையாத ஆதனோரியது; மாரி வண் கொடை காணிய - மழைபோலும் வள்ளிய கொடையைக் காண்டற்கு; நன்றும் சென்றது எம் கண்ணுளங் கடும்பு - மிகவும் சென்றது எம்முடைய கூத்தச் சுற்றம்; பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை - குளிர்ந்த நீரின்கட் பூவாத மணிமிடைந்த குவளைப் பூவை; வால் நார்த் தொடுத்த கண்ணியும் - வெள்ளிய நாரால் தொடுக்கப்பட்ட பொன்னரி மாலையினையும்; கலனும் - பிற அணிகலங் களையும்; யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி - யானை யணிகளுடனே பெற்றனராய் நீங்கி; பசியா ராகல் மாறுகொல் - பசியாராதலானே கொல்லோதான்; விசி பிணிக் கூடுகொள் இன்னியம் கறங்க - வாரால் வலித்துப் பிணிக்கப்பட்ட பல கருவியும் தொகுதி கொண்ட இனிய இயங்கள் ஒலிப்ப; ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்து - அச்சுற்றத்தார் ஆடுதலு மாட்டாராயினார் தமது பாடுதலையும் மறந்து எ-று. சூர்ப்புடையதனைச் சூர்ப்பென்றார். “குடிமை ஆண்மை” (தொல்.சொல். கிளவி.57) தொடக்கத்தன நின் றாங்கே நின்று உயர்திணை முடிபும் பெறுதலின், இக் கடும்பென்பதும் பொரு ணோக்கால் முடிபு பெற்றது. கண்ணுளங் கடும்பென நின்றவழி, அம்: அல்வழிச் சாரியை; மன்:அசைநிலை. ஓரி வண்கொடை காணிய கண்ணுளங் கடும்பு சென்றது; சென்ற பின்றை அக் கடும்பாயினோர் தமது பாடலுமறந்து ஆடலு மொல்லாராயினார்; அதற்குக் காரணம் பசியாராகன் மாறு கொல் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. நுண்பூணென்று பாடமோதுவாரு முளர். விளக்கம் : சூர்ப்பு - வளைவு; சூர்ப்பமைந்த கடகத்தைச் சூர்ப் பென்றார்; “சூர்ப்புறு கோல்வளை செறிந்த முன்கை” (அகம். 142) என்றும், சூர்ப்புறு வளையைச் “சூரமை நுடக்கத்து” (ஐங். 71) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. கொடை வழங்குமிடத்து, கொடுப்பாரது இன்முகமும் பெறுவாரது சிறப்பும் காண்டற்கினிமை நல்குதலின், “வண்கொடை காணிய சென்றது கடும்பு” என்றார். மணி குயிற்றிப் பொன்னாற் செய்யப்பட்ட குவளையை “மணிமிடை குவளை” யென்றும், ஏனைக் குவளையிற் பிரித்து வெளிப்படுத்தற்குப் “பனிநீர்ப் பூவா மணி மிடை குவளை” யென்றும் கூறினார். வால் - வெண்மை; வெண்ணிறத்தையுடைய வெள்ளிக்காயிற்று. கூடுகொள் இன்னியம் என்றவிடத்துக் கூடு - தொகுதியாம். பிறர்பாற் சென்று இரத்தற்குரிய வறுமையுளதாயவிடத்து, தாம் கற்ற கல்வியை வளம்படுத்தற் பொருட்டு நாளும் அதனைப் பயிறல் வேண்டும்; அம்முறையே இவர் தம்முடைய பாடல் மறந்து ஆடலும் கைவிட்டிருத்தலின், வறுமையுறாத வளமுடையராயினர் என்பது விளங்குதலின், “பசியாராகன் மாறுகொல்” என்றார். (153) 154. கொண்கானங் கிழான் கொண்கான நாடு என்பது பிற்காலத்தே கொங்கண நாடு என மருவி வழங்குவதாயிற்று. இது சேலம் கோயமுத்தூர் மாநாடு களின் கீழ்ப்பகுதி நாடாகும். இந் நாட்டுக் கொங்கு வேளாளர் குடியிற் சிறந்த வள்ளலாக விளங்கினவன் இக் கொண்கானங் கிழான். இந் நாடு பொன்வளம் சிறந்தது இதனால் இதனைப் “பொன்படு கொண்கானம்” (நற் 391) என்று சான்றோர் பாராட்டி யுள்ளனர். மேனாட்டு ஆராய்ச்சியாளர் இப் பகுதியைக் கண்ணுற்று, “ஒரு காலத்திற் பொன்வளஞ் சிறந்திருந்து இது போது குறைந்து போயிற்”1றென்று கூறியுள்ளார். இக் கொண்கானங்கிழான் பெருஞ் செல்வத் தோன்றல் அல்லனாயினும் தன்பால் நாடிவரும் பரிசிலர்க்கு இயன்றன நல்கி இன்புறுத்தும் ஈகை யியல்பினன். ஈகைக்கேற்ற தாளாண்மையும் அதன் சிறப்புக் காக்கமாகும் தோளாண்மையும் இவன்பால் மிக்கிருந்தமையின் புலவர்பலரும் இவனைப் பாடிப் பாராட்டினர். ஆசிரியர் மோசிகீரனார் சேரமான் தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும் பொறையால் நன்கு மதித்துப் பேணப்பெற்ற பெருமை யுடைய ரென்பதை முன்பே (புறம். 50) கண்டுள்ளோம். இத்தகைய பெரும்புலவர் இக் கொண்கானங் கிழானையும் பாடிப் பரவின ரெனின், இவனது சிறப்புத் தெளிய வுணரப்படும். தன்பால் மோசிகீரனார் வரக் கண்ட இப்பெரியோன், “பெருவேந்தராற் பேணிப் பாராட்டப்படும் பெருந் தகுதி வாய்ந்த தாங்கள் மிக எளிய என்பால் எழுந்தருளி எனது ஈகையினைப் பாராட்டுவது என் நல்வினைப் பயனே” என்றுரைத்து, “இவர் வரிசைக் கேற்ப யான் வழங்கும் வளம் பெற்றிலேனே” எனத் தனக்குள் எண்ணமிட லானான். அதனை யுணர்ந்துகொண்ட கீரனார் “பரந்த கடலருகே செல்லினும், நீர் வேட்கைகொண்ட மக்கள் சிற்றூறலையே நாடிச் செல்வர்; அதுபோல், புலவர் வேந்தராற் பெரிதும் பேணப்படுவா ராயினும் வள்ளியோரை நாடிச் செல்வது அவர்க் கியல்பு; அவ்வியல்பே பற்றி யான் நின்னை யுள்ளி வந்தேன்; ஈயென இரத்தல் அரிதே தவிர, நின் ஆண்மையினையும் நின் கொண் கானத்தையும் பாடுதல் எனக்கு எளிது; மேலும், பெற்றது சிறிதா யினும் அதுவே ஊதியமாகக் கருதுபவன் யான்” என்ற கருத்துப் பட இப் பாட்டினைப் பாடியுள்ளார். திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும் அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும் சின்னீர் வினவுவர் மாந்த ரதுபோல் அரச ருழைய ராகவும் புரைதபு 5 வள்ளியோர்ப் படர்குவர் புலவ ரதனால் யானும், பெற்ற தூதியம் பேறியா தென்னேன் உற்றென னாதலி னுள்ளிவந் தனனே ஈயென விரத்தலோ வரிதே நீயது நல்கினு நல்கா யாயினும் வெல்போர் 10 எறிபடைக் கோடா வாண்மை யறுவைத் தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத் தண்பல விழிதரு மருவிநின் கொண்பெருங் கானம் பாடலெனக் கெளிதே. (154) திணை : பாடாண்டிணை; துறை : பரிசிற்றுறை. கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது. உரை : திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும் - திரை யலைக்கும் கடலினது கரைக்கண் அணியவிடத்தே போகினும்; அறியுநர்க் காணின் - அறிவாரைக் காணின்; வேட்கை நீக்கும் சின்னீர் வினவுவர் மாந்தர் - நீர் வேட்கையினைத் தணிக்கும் சிறிய நீரைக் கேட்பர் உலகத்து மக்கள்; அது போல் - அது போல்; அரசர் உழைய ராகவும் -வேந்தரிடத்தராகவும்; புரைதபு வள்ளியோர்ப் படர்குவர் புலவர் - குற்றந் தீர்ந்த வள்ளியோரை நினைத்துச் செல்வர் அறிவுடையோர்; அதனால் - ; யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் - யானும் பெற்றதனைப் பயனாகக் கொண்டு பெற்ற பொருள் சிறிதாயினும் இவன் செய்தது என்னென்று இகழேன்; உற்றனென் ஆதலின் - வறுமையுற்றே னாதலின்; உள்ளி வந்தனென் - நின்னை நினைத்து வந்தேன்; ஈ யென இரத்தல் அரிது - எனக்கு ஈயாயென்று இரத்தல் அரிது; நீ அது நல்கினும் நல்கா யாயினும் - நீ அப் பரிசிலைத் தரினும் தாராயினும்; வெல் போர் எறி படைக்கு ஒடா ஆண்மை - பூசலிடத்து எறியும் படைக்கலத்துக்குப் புறத்து அடியிடா ஆண்மையையும்; அறுவைத் தூவிரி கடுப்பத் துவன்றி - துகிலினது தூய விரியை யொப்ப நெருங்கி; மீமிசைத் தண் பல இழிதரும் அருவி - உச்சியினின்றும் பலவாய் இழியும் குளிர்ந்த அருவியையுடைய; நின் கொண்பெருங்கானம் பாடல் எனக்கு எளிது - நினது கொண்கானத்தையும் பாடல் எனக்கு எளிது எ-று. புரை தப வென்று பாடமோதிப் புரையா தபப் படர்குவ ரெனினு மமையும். நீ அது நல்கினும் நல்காயாயினும், ஈயென விரத்தல் எனக்கு அரிது; நினது ஆண்மையையும் கொண் பெருங்கானத்தையும் பாடல் எனக் கெளிதெனக் கூட்டி வினை முடிவு செய்க. விளக்கம் : கடற்கரையில் நிற்பினும், கடல்நீர் வேட்கை தணிவிக்கும் இயல்பிற் றன்மையின், இனிய நீர்நிலை இருக்குமிடத்தையறிந்த வரைக் காணின், அதனை யடைதற்குரிய நெறியைக் கேட்பர் ஆதலின், “அறியுநர்க் காணின்” என்றார். பெருஞ் செல்வம் படைத்த வேந்தராயினும் அவர்பால் புரை தீர்ந்த வண்மையில்லையாயின், புலவர், அதனையுடையாரையே நாடிச் செல்வரென்பார், “புரைதபு வள்ளியோர்ப் படர்குவர் புலவர்” என்றார் பெற்றது ஊதியம் என்புழி, என ஒரு சொல் வருவித்து, எனக்கொண்டு எனப் பொருள் உரைத்துக் கொள்க. பெற்றது எத்துணையாயினும் அதன் நிறைவு குறைவு காணேன் என்பார், “பேறு யாது என்னேன்” என்றார் . அங்ஙனம் காணாமைக்குக் காரணம் தானுற்ற வறுமையே யென்பார், “உற்றனெ னாதலின்” என்றார். நின்பாற் போந்த எனக்கு இனி எளிமையும் அருமையுமாவன யாவையெனின், ஈயென இரத்தல் அருமை, நின் பெருமையையும் நின் கொண்கானத்தையும் பாடுதல் அருமை யன்று, எளிமை என்பாராய்“எறிபடைக் கோடா ஆண்மையும் கொண்பெருங் கானமும் பாடலெனக் கெளிதே” என்று கூறுகின்றார். புரைதபப் படர்குவ ரென இயைப்பின், வறுமைத் துயர் கெடுமாறு கருதி வள்ளியோரை நினைந்து செல்வரெனவுரைக்க. (154) 155. கொண்கானங் கிழான் கொண்கானங் கிழானது வண்மைநலத்தைப் பெற்று இன்புற்ற மோசிகீரனார் இப் பாட்டின்கண் அவன் பாணர் கூட்டத்துக்கு வேண்டுவன நிரம்ப நல்கி அவரது வறுமையைப் போக்கி யாதரிக்கும் சிறப்பினைப் பாணாற்றுப்படை வாயிலாக வற் புறுத்துகின்றார். வணர்கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ உணர்வோர் யாரென் னிடும்பை தீர்க்கெனக் கிளக்கும் பாண கேளினி நயத்திற் பாழூர் நெருஞ்சிப் பசலை வான்பூ 5 ஏர்தரு சுடரி னெதிர்கொண் டாஅங் கிலம்படு புலவர் மண்டை விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் தண்டா ரகல நோக்கின மலர்ந்தே. (155) திணை : பாடாண்டிணை; துறை : பாணாற்றுப்படை. கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது. உரை : வணர் கோட்டுச் சீறியாழ் வாடு புடைத் தழீஇ - வளைந்த கோட்டையுடைய சிறிய யாழை உலர்ந்த மருங்கிலே தழுவிக் கொண்டு; உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என - அறிவோர் யார்தாம் எனது துன்பத்தைத் தீர்க்க வென்று; நயத்தின் கிளக்கும் பாண - நயத்திற் சொல்லும் பாண; இனி கேள் - யான் சொல்லுகின்றதனை இப்பொழுது கேட்பாயாக; பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ - பாழூரின்கண் நெருஞ்சி யினது பொன்னிறத்தையுடைய வாலிய பூ; ஏர் தரு சுடரின் எதிர் கொண் டாஅங்கு - எழுகின்ற ஞாயிற்றை எதிர்கொண்டாற் போல; இலம்படு புலவர் மண்டை - வறுமையுற்ற யாழ்ப் புலவரது ஏற்கும் மண்டை; விளங்கு புகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் - விளங்கிய புகழையுடைய கொண்கானங் கிழானது; தண் தார் அகலம் மலர்ந்து நோக்கின - குளிர்ந்த தாரையுடைய மார்பத்தை மலர்ந்து நோக்கின எ-று. ஏர் தரு சுடரி னெதிர்கொண்டாங் கென்புழி, இன், சாரியை; அது தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண் வந்தது; அன்றி, ஐகாரம் விகாரத்தால் தொக்க தெனினு மமையும். நயத்திற் கிளக்கும் பாண வென வியையும்; நயத்தின் அகலம் நோக்கின வென இயைப்பினு மமையும். மண்டை அகலம் நோக்கி மலர்ந்த வென்ற கருத்து, கொடுக்கும் பொருள் மார்பின் வலியால் உளதாமாகலின், அகல நோக்கின வென்றதாகக் கொள்க. விளக்கம் : வணர் - வளைவு. வாடு புடை - வறுமையால் வாடிய இடை; இதனை உலர்ந்த மருங்கென்றார் உரைகாரர். பாணனாகிய எனக் கீவோர் முத்தமிழின் ஒரு பகுதியாகிய இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஈவோராவர் என்பதனை யுணர்வோர் என்னை வறுமைத் துயர் வருத்தவிடார் என்று பாணன் கூறுகின்றா னென்பார், “உணர்வோர் யாரென் இடும்பை தீர்க்கென நயத்திற் கிளக்கும் பாண” என்றார். சீர்த்த சிலவாய சொற்களால் கேட்போர் உளங்கொள்ளத் தக்க வகையில் இனிது கூறுதல் “நயத்திற் கிளத்தல்” என்றார். நெருஞ்சிப் பூ ஞாயிற்றை நோக்கி நிற்குமென்பதை, “வானிடைச் சுடரொடு திரிதரு நெருஞ்சி” (அகம். 336) என்று பிறரும் கூறுப. சுடரென்ற விடத்து ஐயுருபு தொக்கதனால் தோற்றம் வேண்டாத் தொகுதி யாயிற்று. இத்தொகைக்கண், ஐயுருபு தொக்கதற்கு அமைதி கூறலுற்று “ஐகாரம் விகாரத்தால் தொக்க தெனினு மமையும்” என்றார். தண்டார கலம் நோக்குமிடத்து அதன் அகலமும் வலியும் தாளாண்மையாற் பொருளீட்டும் குறிப்பை வற்புறுத்தலின், அகலம் நோக்கி மண்டை மலர்ந்த தென்றார். உரைகாரரும் மண்டை .......கொள்க” என்றார். 156. கொண்கானங் கிழான் கொண்கானங் கிழானது விருந்துண்டு மகிழ்ந்திருக்கும் மோசி கீரனார் அவனது கொண்கான மலையைக் கண்டு பாடக் கருதினார். பாடுமிடத்து அக்கொண்கானத்துக் கிழானையும் பாட நினைந்து, அவனுடைய கொடைச் சிறப்பையும் வென்றிச் சிறப்பையும் பொருளாக நிறுத்தி, “இக் கொண்கானம் பிறர் குன்றம்போலாது இரண்டு நலங்களையுடைத்து: ஒன்று இரப் போருடைய கடன்காரர்களால் வளைப்புண்டிருக்கும்; மற்றொன்று கொண்கானங் கிழானுக்குத் திறை செலுத்தி மீளும் சிற்றரசர்களால் சூழப்பட்டிருக்கும்” என்று பாடியுள்ளார். ஒன்றுநன் குடைய பிறர்குன்ற மென்றும் இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம் நச்சிச் சென்ற விரவலர்ச் சுட்டித் தொடுத்துணக் கிடப்பினுங் கிடக்கு மஃதான்று 5 நிறையருந் தானை வேந்தரைத் திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலு முடைத்தே. (156) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியது. உரை : பிறர் குன்றம் - பிறருடைய மலைகள்; நன்கு ஒன்று உடைய வண்மையாதல் வலியாதல் நன்மையொன்று உடைய; இரண்டு நன்கு உடைத்து கொண்பெருங் கானம் - எந்நாளும் இரண்டு நன்மையை யுடைத்துக் கொண்கான மென்னு மலை; அது-; நச்சிச் சென்ற இரவலர் சுட்டி - தன்பால் பரிசில் நச்சிப் போன இரப்போர் காரணமாக; தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் - தான் அவர்க்கு முன்பு கடன் கொடுத்தோராலே வளைப் புண்ணப்பட்டுக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று - அதுவன்றி; நிறையருந் தானை வேந்தரை - நிறுத்தற்கரிய படையையுடைய அரசரை; திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்து - திறைகொண்டு அவரை மீட்கும் தலைமையுமுடைத்து எ-று. இரவலர் சுட்டி யென்று பாடமோதி, இரவலர் கருதிக் கொண்டு புகழ்களைத் தொடுத்துண்ணக் கிடக்கினும் கிடக்கும் எனவும், இரவலர் எமது எமதென்று கூறிட் டுண்ணக் கிடக்கினும் கிடக்கும் எனவும் உரைப்பினு மமையும். இது கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறியவாறு. விளக்கம் : கொண்பெருங்கானக் குன்றத்துக்கும் ஏனைக் குன்றங்கட்கு முள்ள வேற்றுமை கூறுவார், கொண்பெருங்கானம் வண்மையும், வலியுமாகிய, இரு நலங்களையும் உடைத்து; ஏனைக் குன்றங்கள் இரண்டினுள் ஒன்றே யுடைய என்றார். இவையே யன்றி, கொண் பெருங் கானம் இரவலர்க்குக் கடன் கொடுத்தோராலும் திறை செலுத்தும் வேந்தராலும் சூழப்பட்டிருக்கும் என்றார். எனவே, இச் சிறப்பு ஏனைக் குன்றங்கட்கு இல்லை யென்பதாம். இரவலர்க்குக் கடன் கொடுத்தோர், இரவலர் பரிசில் பெறுவதில் தப்பாராகலின் தமக்குரிய கடனைத் தாம் தவறாதே பெறலாம் என்ற கருத்தால் குன்றத்தைச் சூழ்ந்திருந்தன ரென்றாரெனக் கொள்க. (156) 157. ஏறைக்கோன் ஏறைக் கோனை ஏறை யென்றும் வழங்குப. நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுரை யெனப்படுவோர் வரிசையுட் காணப்படும் ஏற்றை வேறு, ஏறைக் கோன் வேறு. இவனைப் “பெருங்கல் நாடனெம் மேறைக்குத் தகுமே” என்றதனால், ஏறை யென்பது இயற்பெயராதல் விளங்குகிறது. ஆண் மக்கட்கு ஆற்றல் பொருளாக ஏற்றை யென்றும் ஏறையென்றும் பெயர்கள் அக் காலத்து வழங்கின வென்று இதனால் அறியலாம். இவன் குறிஞ்சிநிலத்துக் குறவர்க்குத் தலைவன்; வில்லும் வேலும் வல்லவன்; காந்தட்பூவாற் றொடுத்த கண்ணி சூடுபவன்; தனக் குரியோர் பிழை செய்யின் அதனைப் பொறுத்தலும், பிறர்க் குண்டாகிய வறுமை கண்டு நாணுதலும், படையாளுமிடத்துப் பழிபடாமையும், வேந்தர் அவைக்களத்துப் பெருமிதமுற்று விளங்குதலும், ஏறைக்கோனுடைய சீரிய பண்புகளாகும் இவனைக் குறமகள் இளவெயினி யென்பார் இப்பாட்டால் சிறப் பிக்கின்றார். வேறுநிலத் தலைவர்களும் சான்றோர்களும் கூடிய அவை யின்கண், சான்றோராகிய குறமகள் இளவெயினி யென்பார் தமது நாட்டுத் தலைவன் பண்புகளை யெடுத்தோத வேண்டிய நிலை யுண்டாயிற்று; அப்போழ்து, அவர், “தமர் பிழை பொறுத்தல் முதல் வேந்தர் அவையில் ஓங்க வீற்றிருத்தல் ஈறாகக் கூறப்படும் பண்புகள் நும்மோர்க்குத் தகுவனவல்ல; பெருங்கல் நாடனாகிய எம் ஏறைக்கே தகும்” என இப்பாட்டைப் பாடியிருக்கின்றார். ஏறைக்கோனைத் தலைவனாகக் கொண்ட குறமக்களுள் ஒருவராதலின், இளவெயினியார் குறமகள் இளவெனியார் எனக் குறிக்கப்படுகின்றார். முதுவெயினியா ரல்லரென்பது தோன்ற, “இளவெயினி” யென்ற பெயர் சிறந்து நிற்கிறது. “நும்மோர்க்குத் தகுவனவல்ல” என்றும், “எம் ஏறைக்குத் தகும்” என்றும் இவர் கூறு வன இவரது உள்ளத்தின் இளமைப் பண்பை வற்புறுத்துகின்றன. இளவெயினனார் என்னும் சான்றோர் ஒருவரும், குறமகள் குறி யெயினியார் என்னும் சான்றோர் ஒருவரும், நற்றிணைப் புலவர் வரிசையுட் காணப்படுகின்றனர். இவ்விளவெயினியாரே நற்றிணையில்வரும் குறியெயினி யாராகலாம் என்றும் இப் புறப்பாட்டு இளமைக் காலத்தும், நற்றிணைப் பாட்டுப் பிற்காலத்தும் பாடப்பட்டிருக் கலாமென்றும், நற்றிணைப் பாட்டில், இவர் “நின்குறிப் பெவனோ தோழியென்குறிப்பு, என்னொடு நிலையா தாயினும் என்றும், நெஞ்சு வடுப்படுத்துக் கெடவறி யாதே” (நற். 357) என்று பாடிய சிறப்பால் குறிப் பெயினியார் என்று பெயர் பெற்றிருக்க வேண்டு மென்றும், அப் பெயர் ஏடெழுதினோரால் குறியெயினியாரென வெழுதப் பட்டிருக்க வேண்டுமென்றும் நற்றிணை யுரைகாரர் கூறுகின்றார். தமர்தற் றப்பி னதுநோன் றல்லும் பிறர்கை யறவு தானா ணுதலும் படைப்பழி தாரா மைந்தின னாகலும் வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலும் 5 நும்மோர்க்குத் தகுவன வல்ல வெம்மோன் சிலைசெல மலர்ந்த மார்பிற் கொலைவேற் கோடற் கண்ணிக் குறவர் பெருமகன் ஆடுமழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை எற்படு பொழுதி னினந்தலை மயங்கிக் 10 கட்சி காணாக் கடமா னல்லேறு மடமா னாகுபிணை பயிரின் விடர்முழை இரும்புலிப் புகர்ப்போத் தோர்க்கும் பெருங்க னாடனெம் மேறைக்குத் தகுமே. (157) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. ஏறைக்கோனைக் குறமகள் இளவெயினியார் பாடியது. உரை : தமர் தன் தப்பின் அது நோன்றலும் - தனக்குச் சிறந்தார் தன்னைப் பிழைப்பின் அது பொறுத்தலும்; பிறர் கையறவு தான் நாணுதலும் - பிறருடைய மிடிமைக்குத் தான் நாணு தலும்; படைப் பழி தாரா மைந்தின னாகலும் - படையிடத்துப் பிறர் பழிக்கப்படாத வலியையுடையனாதலும்; வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும் - அரசுடைத்தாகிய அவைக் களத்தின்கண் மேம்பட்டு நடத்தலும்; நும்மோர்க்குத் தகுவன வல்ல- நும்மான் மதிக்கப்படும் தலைவர்களுக்குத் தகுவன வல்ல; எம்மோன் - எம்முடைய தலைவன்; சிலை செல மலர்ந்த மார்பின் - வில்லைப் பூரணமாக வலித்தலான் அகன்ற மார் பினையும்; கொலை வேல் - கொல்லும் வேலினையும்; கோடல் கண்ணிக் குறவர் பெருமான் - காந்தட் பூவாற் செய்த கண்ணி யினையுமுடைய குறவர்க்குத் தலைமகன்; ஆடுமழை தவிர்க்கும் பயம் கெழுமீமிசை-இயங்குகின்ற முகிலைத் தனது உயரத்தால் தடுக்கும் பயன் பொருந்திய மலையினது உச்சிக்கண்; எற்படு பொழுதின் - ஞாயிறு படுகின்ற காலத்தில்; இனம் தலை மயங்கிக் கட்சி காணாக் கடம் - இனத்தினின்றும் தலை மயங்கித் தான் சேரும் சேக்கையைக் காணாத நாட்டின்கண்; மான் நல் லேறு மடமான் நாகு பிணை பயிரின் - மானினது நல்ல கலை மடப்பத்தினையுடைய மானாகிய இளம் பிள்ளையைப் பயிரான் அழைப்பின்; விடர் முழை இரும் புலிப் புகர்ப் போத்து ஒர்க்கும் - அவ்வோசையை விடராகிய முழையின்கண் கிடக்கின்ற பெரும்புலியாகிய புகர் நிறத்தினையுடைய ஏறு செவி தாழ்த்துக் கேட்கும்; பெருங்கல் நாடன் எம் ஏறைக்குத் தகும் - பெரிய மலைநாடனாகிய எம்முடைய ஏறைக்கோனுக்குப் பொருந்தும் எ-று. சிலை செல மலர்ந்த மார்பு என்பதற்கு மலை தோற்க மலர்ந்த மார்பெனினு மமையும். தலைமயங்கி யென்பதனுள், தலை: அசைநிலை. விளக்கம் : “குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை” யென்றும், “அன்பெனப் படுவது தன்கிளை செறாமை” (கலி.133) என்றும் சான்றோர் கூறுதலின், தமர் பிழை செய்யின் அதனைப் பொறுப்பது சீரிய பண்பாயிற்று. “விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற், கேளாது நட்டார் செயின்” (குறள்.804) என்று திருவள்ளுவனாரும் கூறுவர். பிறர் வறுமை கண்டவழி, அதனை முன்பே கண்டு தீர்க்காமை தமது குற்றமாகக் கருதி நாணுதல் சான்றோர்க் கியல் பாதலின், “பிறர் கையறவு தான் நாணுதல்” என்றார். அறிவு, ஆண்மை, பொருள், படைகளால், சிறந்தார்க் கல்லது வேந்துடையவையின்கண் பெருமிதந் தோன்றாதாகையால், வேந்துடை யவையத் தோங்குபு நடத்தலை விதந்தோதினார். எம்மை யுடையோன் என்பது எம்மோன் என நின்று தலைவற்காயிற்று. விற்பயிற்சியால் மார்பகலுதலும், அதன் அகலம் வலிய வில்லை நன்கு வளைத்தற்கு ஏதுவாதலும் கண்டு, “சிலைசெல மலர்ந்த மார்பு” என்றார். தன்னாட்டுமலை நீர் சுமந் தேகும் முகிலைத் தடுத்துத் தன்பால் நீரைப் பெய்வித்துக்கொள்ள, தான், தனக்கஞ்சி வாழும் பகைவேந்தர் பிறர்துணை வேண்டி முயல்வதனைக் குறிக்கொண்டு நோக்கும் நாடும் காவற்சிறப்பும் ஏறைக்கோனுக் குண்டென்பதை உள்ளுறுத் துரைத்தார். 158. குமணன் குமணன் கடையெழு வள்ளல்கட்குக் காலத்தாற் பிற்பட்டவன்; இவன் முதிரமலையைச் சார்ந்த நாட்டை யாண்ட குறுநில மன்னன். இந்நாடு இயல்பாகவே நல்ல வளம் சிறந்தது. இம் முதிரமலை பழனிமலைத் தொடர்களுள் உள்ளது. இதன் அடியில் குமண மங்கலம் என்னுமொரு சிற்றூரு முண்டு. இந்நாடு உடுமலைப் பேட்டையைத் தன்னகத்தே கொண்டிருந்த தாகும். வள்ளல் பேகன் காலத்தில் ஆவியர் குடிக்குரியதாயிருந்த நாடு, பிற்காலத்தே குமணனுக் குரியதாயிற்று. இக் காலநிலையில் வைத்து நோக்கின், பழனித் தாலுகாவின் தென்மலைப் பகுதியும் உடுமலைப் பேட்டைத் தாலுகாவின் தென்கீழ்ப் பகுதியும் குமணனுக்குப் பண்டு உரியவாயிருந்தன என்னலாம். இந்நாட்டு வேந்தனாகிய குமணனுடைய ஆட்சிநலத் தாலும் தோளாற்றலாலும் நாட்டின் செல்வநிலை வழங்கத் தவா வளமுடையதாக இருந்தது. செல்வத்துப் பயனே ஈதல் என்பதை நன்கறிந்து, இரவலர்க் கீதலும் அதனால் இசையுண்டாக வாழ் தலுமே தன் வாழ்வில் பெறக்கூடிய ஊதியமாகக் கருதித் தன்பால் வரும் புலவர், பாணர், கூத்தர் முதலாயினார்க்குப் பெருங் கொடை புரிந்து புகழ் மேம்படுவானாயினன். இக் குமணற்கு இளவல் ஒருவன் இருந்தனன்; அவன் பெயர் இளங்குமணன் என்பது. அவற்குத் தன் மூத்தோனாகிய குமணற் குண்டாகிய புகழ் கண்டதும், நெஞ்சில் அழுக்காறுண்டாயிற்று. அதனை வளர்த்துத் தீவினைப் பயனை விளைவித்தற்குரிய சிற்றினச் சேர்க்கையும் அவற்குளதாயிற்று. முடிவில் இளங்குமணன் குமணனது நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு அவனைக் கோறற்கும் வழி தேடினன். குமணன் காடு சென்று அதனுள் உயிர் வாழ்வாயினன். ஒருகால், பரிசில் வேண்டிவந்த பெருந்தலைச் சாத்தனார் அவனைக் காட்டிற் கண்டு பாடிப் பரவினர். அவன், அவர்க்குப் பொருள் வழங்கும் நெறியால் தன் வாளை அவர் கையில் தந்து தன் தலையைக் கொய்துகொண்டு தன் தம்பிக்குக் காட்டி, வேண்டும் பொருள் பெற்றுச் செல்லுமாறு வேண்டினன். பேருள்ளம் படைத்த பெருந்தலைச் சாத்தனார், வாளை மட்டும் கொண்டு சென்று இளங்குமணற்குக் காட்டித் தன் புலமை நலத்தால் அவற்கு நல்லறிவு கொளுத்தி, அவனைத் தன் அண்ணன் குமணனை யடைந்து வணங்கிப் பண்டுபோல் இனிது வாழுமாறு பண்ணி னார். இவனைப் பாடிப் பரிசில் பெறுமாற்றால் இவன் வாழ்க்கை வரலாற்றில் பங்குகொள்ளும் சான்றோர் இருவர்; அவர்கள் பெருஞ் சித்திரனாரும் பெருந்தலைச் சாத்தனாருமாவர். இவருள் பெருஞ்சித்திரனார் குமணன் இனிது வாழ்ந்திருக் குங்கால் மிக்க வறுமையுற்று வெளிமான் என்னும் வேந்தன்பால் சென்றார்; அக்காலை அவன் துஞ்சினானாயினும், துஞ்சுங்கால் தன் தம்பி இளவெளிமானை யழைத்து, இவர்க்குப் பரிசில் வழங்குக வெனப் பணித்தான்; ஆனால், அவன் இவர் வரிசை நோக்காது சிறிது வழங்கினான். அதனைக் கொள்ளாத பெருஞ் சித்திரனார் குமணனை யடைந்து பாடி, அவன் பகடு கொடுப்பக் கொண்டு சென்று வெளிமானது ஊர்க் கடிமரத்தில் அதைக் கட்டி விட்டுச் சென்று இளவெளிமானைக் கண்டு அவற்குத் தாம் பெற்ற பெருவளத்தைத் தெரிவித்தார். பின்பு அவர், வறுமைத் துயர் ஒருபுறம் வருத்த, நெடுநாள் பிரிந்திருக்கும் பிரிவுத்துயர் மற்றொருபுறம் வருத்த வருந்தி நிற்கும் தன் மனைக்கிழத்தியாரை யடைந்து தாம் பெற்ற பெருஞ் செல்வத்தைப் பெறார்க்கும் பிறர்க்கும் வழங்கித் தாமும் உண்டு இனிதிருந்தார். இப்பாட்டின்கண் பெருஞ்சித்திரனார் குமணன் தந்த பெருவளத்தைப் பெறுங்கால், அவனை இனிய தமிழால் வாழ்த்து கின்றார். இதன்கண் பாரி, ஓரி, காரி, எழினி, பேகன், ஆய், நள்ளி யென்ற வள்ளல்கள் எழுவரையும் எடுத்தோதி, “இவ்வெழு வர்க்குப் பின்னே இரவலர் இன்மை தீர்த்தற்கு யான் உள்ளேன் என்று மேம்பட்டிருக்கும் நின்னை யடைந்தேன்; முதிரமலைத் தலைவ, குமண, என்னை ஏற்றுப் பேணிச் சிறப்பித்த நீ வண்மை யாலும், வேற்படை நல்கும் வென்றியாலும் மேம்படுவாயாக” என வாழ்த்துகின்றார். முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும் அரசுடன் பொருத வண்ண னெடுவரைக் கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக் 5 கொல்லி யாண்ட வல்வி லோரியும் காரி யூர்ந்து பேரமர்க் கடந்த மாரியீகை மறப்போர் மலையனும் ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற் கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும் 10 ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை அருந்திறற் கடவுள் காக்கு முயர்சிமைப் பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி மோசி பாடிய வாயு மார்வமுற் றுள்ளி வருந ருலைவுநனி தீரத் 15 தள்ளா தீயுந் தகைசால் வண்மைக் கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங் கெழுவர் மாய்ந்த பின்றை யழிவரப் பாடி வருநரும் பிறருங் கூடி இரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவண் 20 உள்ளி வந்த னென் யானே விசும்புறக் கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி ஆசினிக் கவினிய பலவி னார்வுற்று முட்புற முதுகனி பெற்ற கடுவன் துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும் 25 அதிரா யாணர் முதிரத்துக் கிழவ இவண்விளங்கு சிறப்பி னியறேர்க் குமண இசைமேந் தோன்றிய வண்மையோடு பகைமேம் படுகநீ யேந்திய வேலே. (158) திணை : பாடாண்டிணை; துறை : வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையுமாம். குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது. உரை : முரசு கடிப்பு இகுப்பவும் - முரசு கடிப்பு அறையவும்; வால் வளை துவைப்பவும் - வெள்ளிய சங்கு முழங்கவும்; அரசுடன் பொருத அண்ணல் - வேந்தருடனே பொருத தலைமையை யுடைய; நெடுவரை கறங்கு வெள்ளருவி கல் அலைத் தொழுகும்- நெடிய மலைக்கண் ஒலிக்கும் வெளிய அருவி கல்லை யுருட்டி யோடும்; பறம்பின் கோமான் பாரியும் - பறம்பிற்கு வேந்த னாகிய பாரியும்; பிறங்கு மிசைக் கொல்லி ஆண்ட வல்லில் ஓரியும் - உயர்ந்த உச்சியையுடைய கொல்லிமலையை ஆண்ட வலிய வில்லையுடைய ஓரியும்; காரி ஊர்ந்து பேரமர் கடந்த - காரி யென்னும் பெயரையுடைய குதிரையைச் செலுத்திப் பெரிய பூசலை வென்ற; மாரி ஈகை - மாரிபோலும் வண்மை யையும்; மறப்போர் மலையனும் - மிக்க போரினையுமுடைய மலையனும்; ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல் - செலுத்தப் படாது உயர்ந்த குதிரை யென்னும் மலையையும் கூரிய வேலையும்; கூவிளங் கண்ணி - கூவிளங் கண்ணியையும்; கொடும் பூண் எழினியும் - வளைந்த ஆரத்தையுமுடைய எழினி அதியமானும்; ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை - மிகக் குளிர்ந்த மலையின்கண் இருள் செறிந்த முழையினையும்; அருந் திறல் கடவுள் காக்கும் - மலைத்தற்கரிய வலியினை யுடைய தெய்வம் காக்கும்; உயர் சிமைப் பெருங் கல் நாடன் பேகனும் - உயர்ந்த சிகரங்களையுமுடைய பெரிய மலைநாட னாகிய பேகனும்; திருந்து மொழி மோசி பாடிய ஆயும் - திருந்திய சொல்லையுடைய மோசி யென்னும் புலவனாற் பாடப்பட்ட ஆயும்; ஆர்வ முற்று உள்ளி வருநர் உலைவு நனிதீர-ஆசைப்பட்டுத் தன்னை நினைந்து வருவாருடைய வறுமை மிகவும் நீங்க; தள்ளாது ஈயும் தகைசால் வண்மை - தவிராது கொடுக்கும் கூறுபாடமைந்த வண்மையினையுடைய; கொள்ளார் ஓட்டிய நள்ளியும் என - பகைவரைத் துரத்திய நள்ளியும் எனச் சொல்லப்பட்ட; எழுவர் மாய்ந்த பின்றை - எழுவரும் இறந்த பின்பு; அளி வரப் பாடி வருநரும் பிறரும் கூடி-கண்டாருக்கு இரக்கம் வரப்பாடி வருவாரும் பிறரும் கூடி; இரந்தோர் அற்றம் தீர்க்கு என - இரந்தோரது துன்பத்தைத் தீர்க்கக் கடவேன் யான் என்று நீ இருத்தலால்; விரைந்து இவண் உள்ளி வந்தனென் யான் - விரைந்து இவ்விடத்தே பரிசில் பெற நினைந்து வந்தேன் யான்; விசும்புறக் கழை வளர் சிலம்பின் - வானத்தின்கண்ணே பொருந்த மூங்கில் வளரும் மலையின்கண்; வழையொடு நீடி ஆசினிக் கவினிய - சுரபுன்னை யோடு ஓங்கி ஆசினியொடு அழகு பெற்ற; பலவின் ஆர்வுற்று - பலாவின்கண் ஆசைப்பட்டு; முட்புற முது கனி பெற்ற கடுவன் - முள்ளைப் புறத்தேயுடைய முதிர்ந்த பலாப் பழத்தைப் பெற்ற கடுவன்; துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும் - பஞ்சு போலும் மயிரையுடைத்தாகிய தலையினையுடைய மந்தியைக் கையால் குறி செய்து அழைக்கும்; அதிராயாணர் முதிரத்துக் கிழவ - தளராத புது வருவாயையுடைய முதிரமென்னும் மலைக்குத் தலைவ; இவண் விளங்கு சிறப்பின் - உலக முழுவதிலும் விளங்குகின்ற தலைமையினையும்; இயல் தேர்க் குமண - இயற்றப்பட்ட தேரினையுமுடைய குமணனே; இசை மேந்தோன்றிய வண்மையோடு - புகழ் மேம்பட்ட வண்மை யுடனே; பகை மேம்படுக நீ ஏந்திய வேல் - பகையிடத்து உயர்க நீ எடுக்கப்பட்ட வேல் எ-று. ஆசினி யொடுங் கவினிய வென ஒடு விரித்துரைக்கப் பட்டது. ஆசினி யென்பது ஒரு மரம்; ஈரப் பலா வென்பாரு முளர். ஆர்வுற்றுப் பயிரும் என்க. பாடி வருநரும் பிறரும் கூடி இரந்தோர் அற்றம் தீர்க்க வேண்டுமெனக் கருதியென் றுரைப்பாரு முளர். விளக்கம் : முரசும், சங்கும் முழங்கப் போந்து தமிழ்வேந்தர் (மூவேந்தரும் போந்து) பாரியொடு பொருதனர்; “முரசு முழங்கு தானை மூவர்” (பெரும்: 33) என்பவாகலின், முரசும் சங்கு முடைய அரசென்றது மூவேந்தரையாயிற்று. திருமுடிக்காரி யூர்ந்த குதிரைக்குக் காரி யென்றும், ஓரியின் குதிரைக்கு ஓரி யென்றும் பெயர்; இதனை, “காரிக் குதிரைக் காரியொடு மலைந்த, ஓரிக் குதிரை யோரியும்” (சிறுபாண். 110 - 1) என்பதனாலறிக. இப்பாட்டு “மலையன்” என்றும், சிறுபாணாற்றுப்படை, “காரி” யென்றும் கூறலின், இம் மலையன், மலையமான் திருமுடிக்காரி யென்பவனாயிற்று. அதியமான் நெடுமான் அஞ்சியின் தந்தை பெயர் எழினி யென்பது. அதனாற்றான், அஞ்சி, தன் மகனுக்கும் எழினி யெனப் பெயர் வைத்தான். தந்தையை நோக்கத் தன் மகனைத் தன் தந்தைக்குப் பெயரன் என்பது வழக்காயிற்று. தந்தை பெயரையும் உடன்கூட்டி “எழினி யதியமான்” என்றலும் தமிழியல்பாதலால், இங்கே “எழினி” யென்றார். “அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி” என இவனே கூறப்படு மாறு காண்க. “அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல் நாடன், பேகன்” என்றலின், பேகனது பொதிணி (பழனி, ஆவிநன் குடி) யில் முருகன் கோயில்கொண்டிருந்தா னெனக் குறிப்பாய் உணரலாம். திருந்து மொழி மோசி யென்றது, உறையூர் ஏணிச்சேரி முட மோசியாரை. இவர் ஆய்அண்டிரனைப் பாடியுள்ள பாட்டுக்கள் பலவற்றையும் முன்பே 127 ஆம் பாட்டு முதலியவற்றால் அறியலாம். தன்னை நோக்கி வந்த வன்பரணருடைய “உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி, வல்வில் வேட்டத்திற் றான் கொன்ற மான் கணத்தின் ஊனை நல்கி, பெறுதற்கரிய வீறுசால் நன்கலம், கடக மொடு” (புறம். 150) ஈத்ததை நினைவிற் கொண்டு, “உள்ளி வருநர் உலைவுநனி தீரத், தள்ளா தீயும் தகைசால் வண்மை” யையுடைய நள்ளி யென்றார். ஆர்வம், கடைக்குறைந்து “ஆர்வு” என வந்தது. மலையன் காரியூர்ந்து ஓரியொடு செய்த போரைப் “பேரமர்” என்றார்;அவன் ஓரியைக் கொன்று அவனது கொல்லி மலையைச் சேரலர்க் கீந்த போர் அதுவாகும்; அதனை, “முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலர்க் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகம்.209) எனச் சான்றோர் கூறுப. வழையொடு நீடி யென்றாற் போல, ஆசினியொடு கவினிய என எடுத்தோதாமையின், “ஒடு விரித் துரைக்கப்பட்ட” தென்றார். “என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி, ஒன்று வழியுடைய வெண்ணினுட் பிரிந்தே” (தொல்.சொல்.இடை,46) என்பது ஒடுவை விரித்தற்கு இலக்கணம். (159) 159. குமணன் பெருஞ்சித்திரனார், இப்பாட்டின்கண், வறுமைத் துயரால் தன்னைப் பெற்ற முதிய தாயும், இனிய மனைவியும், பலராகிய மக்களும் உடல் தளர்ந்து மேனி வாடிக் கிடப்பதும் அவர் நெஞ்சு மகிழுமாறு தான் பொருள் பெற்றுச் செல்லவேண்டி யிருப்பதும் எடுத்தோதி, “யான் களிறு முதலிய பரிசில் பெறுவே னாயினும் முகமாறித் தரும் பரிசிலைப் பெற விரும்பேன்; நீ உவந்து யான் இன்புற விடை தருவையேல் குன்றிமணி யளவிற் றாயினும் நீ தரும் பரிசிலை விரும்பி யேற்றுக் கொள்வேன்; எனக்கு அவ் வின்பமுண்டாகும் வகையில் என்னை யருள வேண்டுகின்றேன்” என்று கூறுகின்றார். வாழு நாளோ டியாண்டுபல வுண்மையின் தீர்தல்செல் லாதென் னுயிரெனப் பலபுலந்து கோல்கா லாகக் குறும்பல வொதுங்கி நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று 5 முன்றிற் போகா முதிர்வினள் யாயும் பசந்த மேனியொடு படரட வருந்தி மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள் பிசைந்துதின வாடிய முலையள் பெரிதழிந்து குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த 10 முற்றா விளந்தளிர் கொய்துகொண் டுப்பின்று நீருலை யாக வேற்றி மோரின் றவிழ்ப்பத மறந்து பாசடகு மிசைந்து மாசொடு குறைந்த வுடுக்கைய ளறம்பழியாத் துவ்வா ளாகிய வென்வெய் யோளும் 15 என்றாங், கிருவர் நெஞ்சமு முவப்பக் கானவர் கரிபுன மயக்கிய வகன்கட் கொல்லை ஐவனம் வித்தி மையுறக் கவினி ஈனல் செல்லா வேனற் கிழுமெனக் கருவி வானந் தலைஇ யாங்கும் 20 ஈத்த நின்புக ழேத்தித் தொக்கவென் பசிதினத் திரங்கிய வொக்கலு முவப்ப உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலெ னுவந்துநீ இன்புற விடுதி யாயிற் சிறிது 25 குன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண அதற்பட வருளல் வேண்டுவல் விறற்புகழ் வரிசையில் விழுத்திணைப் பிறந்த இசைமேந் தோன்றனிற் பாடிய யானே. (159) திணை : பாடாண்டிணை; துறை : பரிசில் கடாநிலை. குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது. உரை : யாண்டு பல உண்மையின் - தனக்குச் சென்ற ஆண்டுகள் பலவுண்டாதலின்; தீர்தல் செல்லாது என் உயிர் என - இன்னும் போகின்றதில்லை எனதுயிர் என்று சொல்லிக் கொண்டு; வாழு நாளோடு பல புலந்து - வாழும் நாளோடு பலவாக வெறுத்து; கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி - தான் பிடித்த தண்டே காலாகக்கொண்டு ஒன்றற்கொன்று அணுகப் பல அடியிட்டு நடந்து; நூல் விரித் தன்ன கதுப்பினள் - நூலை விரித்தாற்போலும் மயிரை யுடையவளாய்; கண் துயின்று முன்றிற் போகா முதிர்வினள் யாயும் - கண் மறைந்து முற்றத் திடத்துப் புறப்பட மாட்டாத மூப்பை யுடைய தாயும்; பசந்த மேனியொடு - பசப்புற்ற மேனியுடனே; படர் அட வருந்தி - நினைவு வருத்த வருந்தி; மருங்கில் கொண்ட பல் குறு மாக்கள்- மருங்கிலே யெடுத்த பல சிறு பிள்ளைகள்; பிசைந்து தின வாடிய முலையள் - பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினை யுடையளாய்; பெரிது அழிந்து - மிகவும் வருந்தி; குப்பைக் கீரை கொய்கண் அகைத்த முற்றா இளந்தளிர் கொய்து கொண்டு - குப்பையின்கண் படுமுதலாக வெழுந்த கீரையினது முன்பு கொய்யப்பட்ட கண்ணிலே கிளைத்த முதிராத இளைய தளிரைப் பறித்துக்கொண்டு; உப்பின்று நீர் உலையாக ஏற்றி - உப்பின்றியே நீரை உலையாகக் கொண்டு ஏற்றிக் காய்ச்சி; மோர் இன்று - மோர் இன்றி; அவிழ்ப் பதம் மறந்து - அவிழாகிய உணவை மறந்து; பாசடகு மிசைந்து - பசிய இலையைத் தின்று; மாசொடு குறைந்த உடுக்கையள் - மாசோடு கூடித் துணிபட்ட உடையினளாய்; அறம் பழியா - அறக் கடவுளைப் பழித்து; துவ்வாளாகிய என் வெய்யோளும் - உண்ணாளாகிய என்னை விரும்பியோளும்; என்ற - என்று சொல்லப்பட்ட; இருவர் நெஞ்சமும் உவப்ப - இருவருடைய நெஞ்சமும் காதலிப்ப; கானவர் கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை - வேடர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண்; ஐவனம் வித்தி - ஐவன நெல்லோடு வித்தி; மையுறக் கவினி - இருட்சியுற அழகு பெற்று; ஈனல் செல்லா ஏனற்கு - கோடை மிகுதியான் ஈன்றலைப் பொருந்தாத தினைக்கு; இழுமெனக் கருவி வானம் தலைஇ யாங்கும் - இழுமென்னும் அனுகரண வொலியுடனே மின்னும் இடியு முதலாகிய தொகுதியை யுடைய மழைத் துளியைச் சொரிந்தாற் போல; ஈத்த நின் புகழ் ஏத்தி - தந்த நினது புகழை வாழ்த்தி; பசி தினத் திரங்கிய தொக்க என் ஒக்கலும் உவப்ப - பசி தினலால் வருத்தமுற்ற ஈண்டிய எனது சுற்றமும் மகிழ; உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும் - மேம்பட்டு ஏந்திய கோட்டையுடைய கொல் யானையைப் பெறினும்; தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்- முகமாறித் தரும் பரிசிலைக் கொள்ளேன்; உவந்து நீ இன்புற விடுதி யாயின் - மகிழ்ந்து நீ யான் இன்புற விரையத் தந்து விடுவையாயின்; சிறிது குன்றியும் கொள்வல் - சிறிதாகிய குன்றி யென்னும் அளவையுடைய பொருளாயினும் கொள் வேன்; கூர் வேல் குமண - கூரிய வேலையை யுடைய குமணனே; அதற்பட அருளல் வேண்டுவல் - அவ் வின்புறு தற் கண்ணே பட அருளுதலை வேண்டுவேன்; விறல் புகழ் வசை யில் விழுத்திணை பிறந்த - வென்றிப் புகழையுடைய வசையில்லாத சிறந்த குடியின்கட் பிறந்த; இசைமேந் தோன்றல் - இசை மேம்பட்ட அண்ணலே; நிற் பாடிய யான் - நின்னைப் பாடிய யான் எ-று. குமண, இசை மேந் தோன்றல், நிற்பாடிய யான், கொல் களிறு பெறினும் தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; இருவர் நெஞ்சமும் உவப்ப ஒக்கலும் உவப்ப, உவந்து இன்புற விடுதி யாயின் குன்றியுங் கொள்வேன்; அதற்பட அருளல் வேண்டுவல் எனக் கூட்டி வினை முடிவு செய்க. “வாழு நாளோடு யாண்டு பல வுண்மையின்” என்பதற்கு இன்ப நுகர்ந்து கழிந்து இளமை நாளுடனே மூப்பு வந்து துன்புற்ற யாண்டு பல வுண்மையின் எனினு மமையும். குன்றியு மென்ப தற்குக் குறைந்து மென்றுரைப்பாரு முளர். ஆங்கும் என்னும் உம்மை இசைநிறை. விளக்கம் : உரைகாரர், படுமுதல் என்றது - பிறர் விதைக்க முளையாது தானே காற்றாலும் நீராலும் பிற வுயிர்களாலும் விதை சிதறப்பட்டுப் தானே முளைத்தது என்றவாறு. முகமாறித் தரும் பரிசில் - வருந்தியும் வருத்தியும் நல்கப் பெறும் பரிசில். பரிசிலின் இன்றியமையாமையும், அதனைப் பெறுதற்கண் தாம் கொண்ட கருத்தும் என இருகூறாகப் பெருஞ்சித்திரனார் குமணனைப் பரிசில் கடாவும் நிலை கருதத் தக்கது. இன்றியமையாமை, தாயும், மனைவியும், ஒக்கலும், வருந்தும் வருத்தங் கூறுமாற்றால் விளக்குகின்றார். ஈன்ற தாய், முதுமை மிக்க மயிர் நரைத்துக் கண்ணொளி யவிந்து கோல் காலாக முன்றிற் போகமாட்டாத நிலையினளாதலைக் கூறி, வறுமைத் துயரால் அவருரைக்கும் உரையினை, “வாழு நாளோடு யாண்டுபல வுண்மை யின், தீர்தல் செல்லாது என் உயிர்” என்று கொண்டெடுத்து மொழிந்தார். பல மக்களைப் பெற்றுக் கணவனொடு புலந்து பல கூறும் உரிமை மிக்க நிலையினளாகியும் தம் மனைவி, தம்மை வெறாது “அறம் பழியாத் துவ்வாளாகிய” நிலையினைக் கூறி, அந் நிலையினும் தம்மை வெறாது விளங்கும் வீறு பாட்டினை, “என் வெய்யோளும்” எனக் குறித்தார். குப்பைக் கீரையைக் கொள்ளுமிடத்தும், கணுவிற் றழைத்த முற்றா இளந்தளிரையே கொண்டது கூறியதனால், மனைவி யின் வளத்தக்க வாழ்க்கைத் துணையாம் இயல்பினை வற்புறுத்து கிறது. “இருவர் நெஞ்சமும் உவப்ப” நல்குக வென்றது. மனைவாழ்வு இன்பமாதற் பொருட்டு. இவ் வறுமை நிலையினும் ஒக்கல் சூழ வாழுமாறு தோன்ற, “தொக்க என், பசிதினத் திரங்கிய ஒக்கல்” என்றார். தந்தையைக் கூறாமையின், இக் காலத்தே இவர் தந்தை இறந்து போனமை விளங்குகிறது. “ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க, சான்றோர் பழிக்கும் வினை” (குறள். 656) என்றமையின், “கொல் களிறு பெறினும் தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென்” என்றும், “இன்புற விடுதியாயின், குன்றியுங்கொள்வல்” என்றும் தம் உட்கோள் கூறினார். “அதற்பட அருளல் வேண்டும்” என்றது, வறுமையால் நொந்துள்ள தம் உள்ளம், மேலும் நோயுற்றுக் கெடாவாறு தெரிவித்துக் கொண்டவாறாம். (159) 160. குமணன் தன்பாற் போந்த பெருஞ்சித்திரனார் வறுமையால் வாடிய மேனியும் தளர்ந்த நடையு முடையரா யிருப்பதைக் கண்ட பெருவள்ளலாகிய குமணன், அவரை அவர் வேண்டியவாறு விரைந்து பரிசில் தந்து விடாது, சின்னாள் தன்பால் இருத்தி நல்லுணவு தந்து, உடல் வளம் பெறச் செய்து பின்பு விடுத்தல் வேண்டும் எனக் கருதிக் கருதியவாறே சின்னாள் இருப்பித்தான். இருந்தவர், அவன் தந்த இனிய உணவுண்டு ஓரளவு உடல் வளம் பெற்றாராயினும் வறுமைத் துயர் உழக்கும் தன் மனைவி மக்களையும் ஒக்கலையும் நினைந்து வருந்தத் தொடங்கினார். ஒருகால் அவ் வருத்தம் கைகடந்து ஒரு பாட்டாய் வெளி வந்தது. அஃது இப் பாட்டு. இப் பாட்டின்கண் அவர் குமணனது வள்ளன்மையைச் சான்றோர் தமக்குத் தெரிவித்து, அவன்பால் தம்மை ஆற்றுப் படுத்தலும், அதனால் தாம் அவன்பாற் போந்ததும் விளங்கக் கூறி யுள்ளார்; மேலும், வறுமையால் அல்லலுற் றுழக்கும் மனைவியின் துன்பத்தையும், அம் மனைவியார் தம் மக்கட்குப் பசிநோய் தெரியாவாறு மறப்புலி யுரைத்தும், மதியங்காட்டியும், கணவனது பொடிந்த முகச்செவ்வி காட்டுமாறு வினவியும் இனிய சொல்லாட்டால் இன்புறுத்துவதும் பிறவும் நெஞ்சுருக நினைந்து கூறுகின்றார். முடிவில், இத்துணைத் துன்பமுறினும், “இல்லானை இல்லாளும் வேண்டாள்” என்பதை மறுத்தொழுகும் மனை மாண்புடைய மனையாட்டியார் மனமகிழுமாறு தமக்குச் “செல்லாச் செல்வம் ” மிகத் தந்து விரைய விடை தருதல் வேண்டு மென வேண்டுகின்றார். உருகெழு ஞாயிற் றொண்கதிர் மிசைந்த முளிபுற் கானங் குழைப்பக் கல்லென அதிர்குர லேறொடு துளிசொரிந் தாங்குப் பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை 5 அவிழ்புகு வறியா தாகலின் வாடிய நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்ணெனக் குய்கொள் கொழுந்துவை நெய்யுடை யடிசில் மதிசேர் நாண்மீன் போல நவின்ற சிறுபொ னன்கலஞ் சுற்ற விரீஇக் 10 கேடின் றாக பாடுநர் கடும்பென அரிதுபெறு பொலங்கல மெளிதினின் வீசி நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் மட்டார் மறுகின் முதிரத் தோனே செல்குவை யாயி னல்குவன் பெரிதெனப் 15 பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந் துள்ளந் துரப்ப வந்தனெ னெள்ளுற் றில்லுணாத் துறத்தலி னின்மறந் துறையும் புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் 20 கூழுஞ் சோறுங் கடைஇ யூழின் உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு மறப்புலி யுரைத்து மதியங் காட்டியும் நொந்தன ளாகி நுந்தையை யுள்ளிப் பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும் 25 வினவ லானா ளாகி நனவின் அல்ல லுழப்போண் மல்லல் சிறப்பச் செல்லாச் செல்வ மிகுத்தனை வல்லே விடுதல் வேண்டுவ லத்தை படுதிரை நீர்சூழ் நிலவரை யுயரநின் 30 சீர்கெழு விழுப்புக ழேத்துகம் பலவே. (160) திணை : பாடாண்டிணை; துறை : பரிசில் கடாநிலை. குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது. உரை : உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த - உட்குப் பொருந்திய ஞாயிற்றினது ஒள்ளிய சுடர் தின்னப்பட்ட; முளி புல் கானம் குழைப்ப - முளிந்த புல்லையுடைய காடு தளிர்ப்ப; கல்லென் அதிர் குரல் ஏறொடு துளிசொரிந் தாங்கு - கல்லென ஓசையுண்டாக நடுக்கத்தைச் செய்யும் ஓசையையுடைய உரு மேற்றுடனே கூடித் துளியைப் பொழிந்தாற்போல; பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை - பசி தின்னப்பட்டு உலர்ந்த வேர்ப் புடைய உடம்பு; அவிழ் புகுவு அறியா தாகலின் - அவிழ் புகுவதறியாதாகலான்; வாடிய நெறி கொள் வரிக் குடர் குளிப்ப - வாட்டமுற்ற முடக்கங் கொண்ட பல வரியையுடைய குடர் தன் கண்ணே மூழ்கும் பரிசு குளிர; குய் கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில் - தாளிப்புச் சேரப்பட்ட கொழுவிய துவையோடு கூடிய நெய்யுடைய அடிசிலை; மதி சேர் நாண் மீன் போல - திங்களைச் சேர்ந்த நாளாகிய மீனை யொப்ப; நவின்ற சிறுபொன் நன்கலம் சுற்ற இரீஇ - பயின்ற பொன்னாற் செய்யப்பட்ட சிறிய நல்ல கலங்களைச் சூழ வைத்திருத்தி யூட்டி; கேடின்றாக பாடுநர் கடும்பென - கேடு இல்லையாக பாடுவாரது சுற்றம் எனச் சொல்லி; அரிது பெறு பொலங்கலம் எளிதினின் வீசி - பெறுதற்கரிய பொன் னாற் செய்யப்பட்ட அணிகலங்களை யெளிதாக வழங்கி; நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன் - தன்னுடைய நட்டோரினும் எம் மோடு நட்புச் செய்த நல்ல புகழையுடைய குமணன்; மட்டார் மறுகின் முதிரத்தோன் - மது நிறைந்த தெருவினையுடைய முதிரமென்னும் மலையிடத்தான்; செல் குவை யாயின் பெரிது நல்குவன் என - நீ அவன்பாற் செல்வை யாயின் நினக்கு மிகவுந் தருவ னென; பல் புகழ் நுவலுநர் கூற - நினது பல புகழையும் சொல்லுவார் சொல்ல; வல்விரைந்து உள்ளம் துரப்ப வந்தனென்- அது கேட்டுக் கடிதாக விரைந்து எனது உள்ளம் செலுத்துதலான் வந்தேன்; இல் உணா துறத்தலின் - எனது மனை உண்ணப் படுவனவற்றைக் கைவிடுதலான்; எள்ளுற்று இல் மறந்து உறையும் - அம் மனையை யிகழ்ந்து நினையாது உறைகின்ற; புல்லுளைக் குடுமிப் புதல்வன் - புல்லிய உளைமயிர் போலும் குடுமியை யுடைய புதல்வன்; கூழும் சோறும் கடைஇ - கூழையும் சோற்றையும் வேண்டி முடுகி; ஊழின் - முறை முறையே; உள்ளில் வறுங்கலம் திறந்து அழக்கண்டு - உள்ளொன்றில்லாத வறிய அடுகலத்தைத் திறந்து அங்கு ஒன்றும் காணாது அழ அதனைப் பார்த்து; மறப் புலி உரைத்தும் - மறத்தையுடைய புலியை வரவு சொல்லி அச்ச முறுத்தியும் மதியங் காட்டியும் - அம்புலியைக் காட்டியும்; நொந்தன ளாகி - அவற்றால் தணிக்க அருமையின் வருந்தின ளாய்; நுந்தையை உள்ளிப் பொடிந்த நின் செவ்வி காட்டு என - நின் பிதாவை நினைந்து வெறுத்தநின் செவ்வியைக் காட்டெனச் சொல்லி; வினவலானாளாகிப் பலவும் நனவின் அல்லல் உழப்போள் - கேட்டல் அமையாளாய் மிகுதிப்பட நனவின் கண்ணும் துயர முறுவோள்; மல்லல் சிறப்ப - வளப்பம் மிக; செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே விடுதல் வேண்டுவல் - தொலையாத செல்வத்தை மிகுத்தனையாய் விரையப் பரிசில் தந்து விடுத்தலை விரும்புவேன் யான்; படு திரை நீர் சூழ் நிலவரை உயர- ஒலிக்குந் திரையையுடைய நீராற் சூழப்பட்ட நில வெல்லையிலே ஓங்க; நின் சீர் கெழு விழுப் புகழ் பல ஏத்துகம் - நினது சீர்மை பொருந்திய சிறந்த புகழைப் பலவாக வாழ்த்துவேம் எ-று. அத்தை: அசைநிலை. நன்கலம் இரீஇ அடிசிலைக் குடர் குளிப்பத் தண்ணென ஊட்டி யென்க. ஊட்டி யென ஒருசொல் தரப்பட்டது. “நட்டோர் நட்ட” வென்பதற்கு நட்டோரை நாட்டிய வெனினு மமையும். “செல்லாச் செல்வ மீத்தனை” யென்பதூஉம், “நிலவரை யுணர” என்பதூஉம் பாடம். விளக்கம் : “கருவி வானம் தலைஇ யாங்கும்” (புறம்.159) என்றும், இப்பாட்டில் “கல்லென அதிர்குர லேறொடு துளிசொரிந் தாங்கு” என்றும் மழை முகிலை உவமம் கூறினார். மேகம் கடற்குச் சேறலும் நீர்பகுதலும் கொணர்ந்து வெம்பிய கானம் குழைப்பப் பெய்வதும் அதற்குக் கடன் என்றும், காரெதிர் கானத்துக்கு அந்நீரை யுண்டு தழைத்தல் முறை யென்றும் காட்டி, அவ்வாறே, பொருள்வினை வயிற் பிரிந்து சேறலும், பொருள் கொணர்ந் தீட்டலும், வறுமையால் வாடுவார் தழைப்ப வழங்கலும் கடன் என்றும், இரவலர் அக் கொடையேற்று இயலும் இசையும், கூத்துமாகிய தமிழ் தழைப்ப வாழ்தல் முறையென்றும் சுட்டியவாறாம். புலவரால் இயலும், பாணரால் இசையும், கூத்தரால் கூத்தும் தழைப்பனவாம். குமணன் தன்னைப் பேணும் நலத்தை நேரிற் கூறலாகாமையின், பிற சான்றோர் தமக்குரைத்தவாறே அவர் கூற்றைக் கொண்டு கூறுவார் போல விரித்துக் கூறி, அதுவே ஏதுவாகத் தாம் வந்த வரலாறு கூறினார். பின்பு விடைபெறக் கருதுகின்றாராதலின், மனைவியின் துன்பநிலை கூறி “வல்லே விடுத்தல் வேண்டும்” என்று வேண்டினார். தம் புதல்வன் பசையற்றுத் திரிதற்கு ஏது கூறுவார், “இல் உணாத் துறத்தலின் இல் மறந்து” உறைகின்றான் என்றார். இளஞ்சிறார் அழுகையை மறப்புலி காட்டல் முதலியவற்றால் தீர்க்குமாறு கூறினார். கனவில் வருந்தும் வருத்தம் அறிய வாராமையின், “நனவின் அல்லலுழப்போள்” என்றார். (160) 161. குமணன் பெருஞ்சித்திரனார் குமணனிடத்தில் இருக்கையில், அவர் நெஞ்சம் அடிக்கடி தன் மனைவி மக்கள் எய்தி வருந்தும் வறுமை நிலையை யெண்ணி யெண்ணி வருந்துவதாயிற்று. இவரது மன நிலையை யறிந்ததும் குமணனும் அவர்க்குப் பெருஞ்செல்வம் தந்து சிறப்பிக்க எண்ணினான். பெருஞ் சித்திரனார் அவன் திருமுன் சென்று, “வேந்தே, யான் மலைபோலும் யானை யூர்ந்து என்னுடைய ஊர்க்குச் செல்ல விரும்புகின்றேன்; யானை மேலேறிச் செம்மாந்து போதரும் என் செல்வ நிலையை என் மனைக்கண்ணிருந்து பெருந்துன்ப முழக்கும் என் மனை யாட்டி கண்டு வியக்க வேண்டும்; அதற்கேற்ற செல்வம் தரு வாயாக. அதனைப் பெறுதற்குரிய தகுதி என்பால் உளதாயினும் இலதாயினும் நீ என் தகுதி நோக்காது, நின் தகுதி நோக்கி அதற் கேற்ப வழங்குக. யான் கொடாத பிறவேந்தர் நாணச் செல்லும் கருத்துடையேன்; என் வேண்டுகோளை ஏற்றருள்க” என இப் பாட்டால் வேண்டி, அவன் மிக்க செல்வத்தோடு பகடொன்று கொடுக்கப்பெற்றுச் செல்கின்றார். நீண்டொலி யழுவங் குறைபட முகந்துகொண் டீண்டுசெலற் கொண்மூ வேண்டுவயிற் குழீஇப் பெருமலை யன்ன தோன்றல சூன்முதிர் புருமுரறு கருவியொடு பெயல்கட னிறுத்து 5 வளமழை மாறிய வென்றூழ்க் காலை மன்பதை யெல்லாஞ் சென்றுணக் கங்கைக் கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங் கெமக்கும் பிறர்க்குஞ் செம்மலை யாகலின் அன்பி லாடவர் கொன்றாறு கவரச் 10 சென்றுதலை வருந வல்ல வன்பின்று வன்கலை தெவிட்டு மருஞ்சுர மிறந்தோர்க் கிற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயரவெனக் கண்பொறி போகிய கசிவொ டுரனழிந் தருந் துய ருழக்குமென் பெருந் துன் புறுவிநின் 15 தாள்படு செல்வங் காண்டொறு மருளப் பனைமருள் டடக்கையொடு முத்துப்பட முற்றிய உயர்மருப் பேந்திய வரைமரு ணோன்பக டொளிதிக ழோடை பொலிய மருங்கிற் படுமணி யிரட்ட வேறிச் செம்மாந்து 20 செலனசைஇ யுற்றனென் விறன்மிகு குருசில் இன்மை துரப்ப விசைதர வந்துநின் வண்மையிற் றொடுத்தவென் னயந்தனை கேண்மதி வல்லினும் வல்லே னாயினும் வல்லே என்னளந் தறிந்தனை நோக்காது சிறந்த 25 நின்னளந் தறிமதி பெரும வென்றும் வேந்தர் நாணப் பெயர்வேன் சாந்தருந்திப் பல்பொறிக் கொண்ட வேந்தெழி லகலம் மாணிழை மகளிர் புல்லுதொறும் புகல நாண்முர சிரங்கு மிடனுடை வரைப்பினின் 30 தாணிழல் வாழ்நர் நன்கல மிகுப்ப வாளம ருழந்தநின் றானையும் சீர்மிகு செல்வமு மேத்துகம் பலவே. (161) திணை : பாடாண்டிணை; துறை : பரிசிற்றுறை. குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது. உரை : நீண்டொலி அழுவம் குறைபட முகந்து கொண்டு - பெரிதாய் ஒலிக்கின்ற பரப்பினையுடைய கடல் குறைபட நீரை முகந்துகொண்டு; ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ - விரைந்த செலவையுடைய முகில்கள் வேண்டியவிடத்தே திரண்டு; பெருமலை யன்ன தோன்றல - பெரிய மலைபோலுந் தோற்றத்தை யுடையவாய்; சூல் முதிர்பு - சூல் முதிர்ந்து; உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து - உருமேறிடிக்கும் மின் முதலாகிய தொகுதியுடனே கூடிப் பெயலை முறையாகப் பெய்து; வள மழை மாறிய என்றூழ்க் காலை - வளத்தைத் தரும் மழை நீங்கிய கோடைக்காலத்து; மன்பதை யெல்லாம் சென்றுண - உயிர்ப்பன்மைகளெல்லாம் சென்று நீருண்டற்கு; கங்கைக் கரைபொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு - கங்கையினது கரையைப் பொரும் மிக்க வெள்ளம் நிறைந்து தோன்றியவாறு போல; எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின் - எங்கட்கும் பிறர்க்கும் தலைமையுடையை யாதலின்; அன்பில் ஆடவர் கொன்று ஆறு கவர - யாவரோடும் உறவில்லாத ஆறலை கள்வர் கொன்று வழியிலே அடித்துப் பறித்தலால்; சென்று தலைவருந அல்ல - போய் முடிவன வல்ல; அன்பின்று வன்கலை தெவிட்டும் அருஞ் சுரம் இறந் தோர்க்கு - அருஞ் சுரமாயிருக்கத் தம்முயிர்மேல் அன்பின்றி வலிய கலை கிடந்து அசையிடும் போதற்கரிய அச்சுரத்தின் கண்ணே அள வின்றிப் பிரிந்தவர்க்கு; இற்றை நாளொடும் யாண்டு தலைப் பெயர என - இற்றை நாளொடுங் கூடி யாண்டு கழிக வெனச் சொல்லி; கண் பொறி போகிய கசிவோடு உரன் அழிந்து - கண்ணொளி மழுங்கிய இரக்கத்துடனே வலி கெட்டு; அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி - பொறுத்தற்கரிய துன்பமுறும் எனது பெரிய வறுமை யுறுவோள்; நின் தாள் படு செல்வம் காண் டொறும் மருள - நினது முயற்சியாலுண்டாகிய செல்வத்தைக் காணுந்தோறும் வியப்ப; பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய உயர் மருப்பு ஏந்திய - பனையை யொக்கும் பெருங்கையுடனே முத்துப் படும்படி முதிர்ந்த உயர்ந்த கொம்பேந்திய; வரை மருள் நோன் பகடு - மலையை யொக்கும் வலிய களிற்றை; ஒளி திகழ் ஓடை பொலிய - ஒளி விளங்கும் பட்டம் பொலிய; மருங்கில் படு மணி இரட்ட ஏறி - பக்கத்தே யொலிக்கும் மணி ஒன்றற்கொன்று மாறி யொலிப்ப ஏறி; செம்மாந்து செலல் நசைஇ உற்றனென் - தலைமை தோன்ற இருந்து போதலை விரும்பினேன்; விறல் மிகு குருசில்- வென்றி மிக்க தலைவனே; இன்மை துரப்ப இசை தர வந்து - எனது வறுமை பின்னே நின்று துரத்த நின் புகழ் கொடுவர வந்து; நின் வண்மையில் தொடுத்த என் நயந்தனை கேண்மதி - நினது கைவண்மையிலே சிலவற்றைத் தொடுத்த வென்னைக் காதலித்துக் கேட்பாயாக; வல்லினும் வல்லே னாயினும் - சிலவற்றைச் சொல்ல அறிவே னாயினும் அறியேனாயினும் - வல்லே என் அளந்து அறிந்தனை - விரைய என் கல்வி யறிவை ஆராய்ந்தறிந்தனையாய்; நோக்காது சிறந்த நின் அளந்து அறிமதி - ஆராயாது சிறந்த நின் அளவை அளந்தறிவாயாக; பெரும - பெருமானே; என்றும் - எந்நாளும்; வேந்தர் நாணப் பெயர்வேன் - எனது மிகுதியைக் கண்டு அரசர் நாணும்படி பெயர்வேன்; சாந்து அருந்திப் பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் - சாந்து பூசப்பட்டுப் பல நல்ல இலக்கணத்தைப் பொருந்திய மேம்பட்ட அழகினையுடைய மார்பை; மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல - மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய மகளிர் புல்லு தொறும் விரும்ப; நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்- நாட் காலையே முரசு முழங்கும் இடனுடைத்தாய எல்லையின் கண்; நின் தாணிழல் வாழ்நர் நன்கலம் மிகுப்ப - நினது தாணிழற் கண் வாழ்வார் நல்ல ஆபரணத்தை மிகுப்ப; வாள் அமர் உழந்த நின் தானையும் - வாளாற் செய்யும் போரின் கண்ணே உழக்கப் பட்ட நினது படையையும்; சீர் மிகு செல்வமும் பல ஏத்துகம் - நினது சீர்மிக்க செல்வத்தையும் பலபடப் புகழ்வோம் எ-று அருஞ் சுரம் சென்று தலைவருவன வல்ல வென முற்றாக்கி, அவ்வருஞ் சுரம் இறந்தோ ரெனவும், அன்பின்றி யிறந்தோ ரெனவும் கூட்டுக. நின் வண்மையிற் றொடுத்த வென்பதற்கு நின் வண்மையால் வளைத்துக் கொள்ளப்பட்ட வெனினு மமையும். புகல, மிகுப்ப வென்னும் செயவெனெச்சங்கள் வாளம ருழந்த வென்னும் பிறவினையொடு முடிந்தன. துன்புறவி மருளப் பகடேறிச் செல்ல நசைஇ உற்றனென் எனவும், மகளிர் புகலத் தாணிழல் வாழ்நர் நன்கல மிகுப்ப வாளம ருழந்த நின் தானையும் செல்வமும் ஏத்துக மெனவும் கூட்டுக. விளக்கம் : கார்காலத்து இமயத்திற் பெய்த மழைநீர், பனியாய் உறைந் திருந்து, கோடையில் உருகிக், கங்கையிற் பெருகி வரு மென்ப; அதனால் தாளாண்மையாலும் போராண்மையாலும் ஈட்டப்பெற் றிருந்த குமணன் செல்வம், பரிசிலர்க்கு வறுமைக் காலத்திற் பயன்படுதலின், கங்கை யாற்றை யுவமித்து, “கங்கை நீர் நிறைந்து தோன்றியாங்கு எமக்கும் பிறர்க்கும் செம்மலை” யென்றார். இனி, தன் மனைக்கண் இருக்கும் மனைவி தன்னை நினைந்து, துன்புறுந் திறத்தை யெடுத்தோதுவாராய், சுரத் தருமையை “அன்பில் ஆடவர் கொன்றாறு கவர” கடை போகச் சென்று முடியும் இயல்பிற்றன்று என்றும், அச் சுரத்தின்கண் நெடிது சென்றவர்க்குக் கேடுண்டாமென அஞ்சும் திறத்தை, “இற்றை நாளொடும் யாண்டுதலைப் பெயர வென” நினைந்து உரன் அழிந்து, “அருந்துய ருழக்கும் பெருந் துன்புறுவி” யென்றும், சிறிது கொடுத்து எள்ளிய இளவெளிமான் கண்டு நாணச் செல்லவேண்டுமென்ற வேட்கையால், “என்றும் வேந்தர் நாணப் பெயர்வேன்” என்றும் , குமணன் செய்த போர்களால் விளைந்த நலத் தால் அவன் தாணிழல் வாழ்வாரும் நன்கலம் இரவலர்க்களிக்கும் பெரும்புகழ் பெற்றனரென்றும் கூறி, அவனுடைய தானையையும் செல்வத்தையும் பாராட்டியுள்ளார். (161) 162. இளவெளிமான் வெளிமான் என்பான் ஒரு கொடை வள்ளல்; தன்பால் வரும் பரிசிலர் வரிசை யறிந்து வேண்டுவன நல்கும் வீறுடையவன். ஒருகால், வறுமைத் துயரால் வாட்டமுற்ற பெருஞ்சித்திரனார் இவ் வெளிமான்பால் சென்றார். இவர்க்கு வேண்டுவன நல்க விழைந்தானாயினும், தான் துஞ்சும் நிலையில் இருந்தமையின், தன் தம்பியாகிய இளவெளிமானை யழைத்து “இவர்க்கு வேண்டுவன நல்குக” என்றான். இளவெளிமான் வெளிமானைப் போல அத்துணை விரிந்த மனப்பண்பும், புலவர் வரிசையறியும் நல்லறிவும் உடையவ னல்லன். அதனால் அவன் வெளிமான் குறித்த அளவில் மிகவும் குறைத்துக் கொடுத்தான். அதனை ஏற்றற்குப் பெருஞ்சித்திரனார் விரும்பிற்றிலர். அவர், “கொல் களிறு பெறினும் தவிர்ந்து விடு பரிசிலர்” கொள்வ திலர்; உவந்து இன்புற விடுப்பின் குன்றியும் கொள்ளும் இயல்பினர். அதனால் அவர் இளவெளிமான் தந்ததை ஏலாது பாடிய பாட்டு “எழுவினி” (புறம். 207) எனத் தொடங்கும் புறப்பாட்டு “பெரிதே யுலகம் பேணுநர் பலரே” எனக் குமணன் பால் சென்று பகடு பெற்று அதன் மேல் ஏறிச் “செம்மாந்து” போந்தார். போந்தவர் நேரே தம் மூர்க்குச் செல்லாது வெளிமானூர்க்கு வந்தார். அப்பகட்டினை வெளிமானூர்க் காவல்மரத்திற் கட்டிவிட்டு நேரே சென்று இளவெளிமானைக் கண்டார். “வேந்தர் நாணப் பெயர்வேன்” என்று குமணன்பால் கூறிப் போந்தவாறே இவ் விளவெளிமான் நாணுமாறு “நீ இரவலர் பலரையும் புரப்பவன் அல்லை; இரவலரைப் புரப்பார் இல்லாமலும் இல்லை. இரவலர் உண்மை யும், புரவலர் உண்மையும் என்னையும் வள்ளல் குமணனையும் பார்த்து அறிந்துகொள்க. குமணன் எனக்குத் தந்த யானைப் பரிசிலைக் காண்பாயாக; அவ் யானையை நின் ஊர்க் கடி மரத்திற் பிணித்துள்ளேன்” என்று இப் பாட்டாற் கூறிக் காட்டு கின்றார். இரவலர் புரவலை நீயு மல்லை புரவல ரிரவலர்க் கில்லையு மல்லர் இரவல ருண்மையுங் காணினி யிரவலர்க் கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க் 5 கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் றோன்றல் செல்வல் யானே. (162) திணை : பாடாண்டிணை; துறை : பரிசில் விடை. அவர் வெளி மானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் பரிசில் கொடு வென, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய்க் குமணனைப் பாடிக் குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று வெளிமானூர்க் கடிமரத்து யாத்துச் சென்று அவர் சொல்லியது. உரை : இரவலர் புரவலை நீயும் அல்லை - இரப்போர்க்கு ஈந்து பாதுகாப்பாய் நீயு மல்லை; புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் - புரப்போர் இரப்போர்க்கு இல்லையுமல்லர்; இனி இரவலர் உண்மையுங் காண் - இனி இரப்போருண்டாதலை யும் காண்பாயாக; இனி இரவலர்க்கு ஈவோ ருண்மையும் காண் - இனி இரப்போர்க்கு இடுவோ ருண்டாதலையும் காண் பாயாக; நின் ஊர்க் கடிமரம் வருந்தத் தந்து - நின்னுடைய ஊரின்கண் காவலையுடைய மரம் வருந்தக் கொடுவந்து; யாம் பிணித்த நெடு நல்யானை எம் பரிசில் - யாம் கட்டிய உயர்ந்த நல்ல இலக்கணமுடைய யானை எமது பரிசில்; கடுமான் தோன்றல் - விரைந்த செலவினையுடைய குதிரையையுடைய தலைவனே; யான் செல்வல் - இனி யான் போவல் எ-று. யான் போவல் என்ற கருத்து, முன் சிறிது கொடுப்பக் கொள்ளாத மிகுதி தோன்ற நின்றது. இரவல ருண்மையுங் காணினி யென்ற கருத்து, இரப்போர்க்குப் பெருந்தன்மை யுளதாதல் என்னளவிலே காண் என்பதாம். “யாம் பிணித்த” என்னும் பன்மை பெருமிதந் தோன்ற நின்றது. “நடைவயிற்றோன்றும் இருவகை விடையும்” (தொல். புறத்.36) என்பதனால் இது பெறாது பெயர்ந்த பரிசில் விடை. விளக்கம் : இளவெளிமான் சிறிது கொடுத்தது, “இரப்பவர் என் பெறினும் கொள்வ” ரென்றும், சிறிது கொடுப்பினும் கொடாது மறுப்பினும் தன்னையே மீளப் போந்தடைவர் என்றும் கருதிய கருத்தைப் புலப்படுத்தினமையின், “இரவலர் புரவலை நீயு மல்லை” யென்றும், “புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்” என்றும் கூறினார். குமணன் தந்த யானைப்பரிசிலை வெளிமானூர்க் கடிமரத்திற் பிணித்திருத் தலின், “நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த நெடுநல் யானை” யென்றும், இதுபோலும் பெருஞ் செல்வத்தை நல்கும் புரவலரும், பெறும் என்போலும் இரவலரும் உளரெனக் காட்டுவதே கருத்தாகலின், “யான் செல்வல்” என்றும் பெருமிதம்படக் கூறினார். 163. குமணன் குமணன்பால் பெருஞ்செல்வம் பரிசிலாகப் பெற்றுப் போந்த பெருஞ்சித்திரனார் அதனைத் தம் மனைவிபால் தந்து எல்லோர்க்கும் கொடுத்து இன்புறுமாறு பணிக்கின்றவர் இனிய இப்பாட்டினைப் பாடினார். இதன்கண் எல்லோருக்கும் என்பதை வகுத்து, “நின்னை விரும்புவோர், நின்னால் விரும்பப் படுவோர், நின் கிளைஞராகிய மூத்த மகளிர், கடன் நல்கியோர் முதலிய பலர்க்கும் வழங்குக. அவ்வாறு வழங்குமிடத்து இன் னார்க்கு வழங்குகின்றோ மென்றும் என்னைக் கேட்டல் வேண்டும் என்றும் கருதற்க; இச் செல்வ முற்றும் முதிரமலைக்குத் தலைவ னான குமணன் தந்தது” என்று இனிமை கனியக் கூறியுள்ளார். பண்டை நாளில் பரிசில் பெற்ற பரிசிலர், தாம் பெற்ற பரிசிற் பொருளின் பாற்கொண்டிருந்த மனப்பான்மையினை இப்பாட்டு ஒரு வகையில் நமக்கு எடுத்துக்காட்டுவது காண்மின். நின்னயந் துறைநர்க்கு நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் 5 இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமண னல்கிய வளனே. (163) திணை : பாடாண்டிணை; துறை : பரிசில். பெருஞ் சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது. உரை : நின் நயந் துறைநர்க்கும் - நின்னைக் காதலித்துறையும் நின் சார்வாய மகளிர்க்கும்; நீ நயந் துறைநர்க்கும் - நீ அன்பு செய் தொழுகப்பட்ட மகளிர்க்கும்; பன் மாண் கற்பின் நின்கிளை முதலோர்க்கும் - பல குணங்களும் மாட்சிமைப்பட்ட கற்பினை யுடைய நினது சுற்றத்து மூத்த மகளிர்க்கும்; கடும்பின் கடும் பசி தீர நின் நெடுங் குறிஎதிர்ப்பை நல்கியோர்க்கும் - நமது சுற்றத்தினது மிக்க பசி நீங்க நினக்கு நெடுநாட்படக் குறித்த எதிர்ப்பைத் தந்தோர்க்கும்; இன்னோர்க் கென்னாது - மற்றும் இன்ன தன்மையா ரென்றுகருதாது; என்னொடும் சூழாது - என்னொடு கூடி உசாவுவதும் செய்யாது; வல்லாங்கு வாழ்தும் என்னாது - சதுரப்படக் குடிவாழ்க்கை வாழக்கடவே மென்று கருதாது; நீயும் எல்லோர்க்கும் கொடுமதி - நீயும் யாவர்க்கும் வழங்குவாயாக; மனைகிழவோயே - எனது மனைக்குரியோயே; பழந் தூங்கும் முதிரத்துக் கிழவன் - பலாப்பழ முதலாயின தூங்கும் முதிரமென்னும் மலைக்குத் தலைவ னாகிய; திருந்து வேல் குமணன் நல்கிய வளன் - திருந்திய வேலையுடைய குமணன் நல்கிய செல்வத்தை எ.று. மனை கிழவோய், குமணன் நல்கிய செல்வத்தை நீயும் எல்லோர்க்கும் கொடுமதி யெனக் கூட்டுக. நின் பன் மாண் கற்பின் கிளை முதலோர்க்குமென வியையும்; நின்றாங் குரைப்பினு மமையும். நீயு மென்ற உம்மை யானும் கொடுப்பேன், நீயுங் கொடு வென எச்சஉம்மையாய் நின்றது. விளக்கம் : கிளை முதலோர் என்றது, சுற்றத்தோரில் மூத்த மகளிர். குறி யெதிர்ப்பை - யாம் இப்போது நல்கின் அப்போது நமக்கு நல்குவர் என்று கருதி வழங்கும் கடன் பொருளைப் பெற்றுப் போந்த முதன்மை தன்பாலிருத்தலின், “என்னொடும் சூழாது” என்றும், பொருளுளதாய காலத்துச் சிறிது பற்றுள்ளங் கொண்டு வாழின் வறுமைத் துயர்க் கிடமிராது என்று கருதற்க வென்பார், “வல்லாங்கு வாழ்து மென் னாது” என்றும், இச் செல்வம் குமணன் தந்தது; தன் செல்வத்தில் அவனே பற்றுள்ளம் கொள்ளாத போது நாம் பற்றுவைத் தற்கு உரிமையில்லையாகலின் இச்செல்வத்தைக் காணுந்தோறும் அவனை நினைந்து வாழ்த்துவதல்லது செய்வது பிறிதில்லை யென்பார், “திருந்து வேல் குமணன் நல்கிய வளன்” என்றும் கூறினார். (163) 164. குமணன் தம்பியாகிய இளங்குமணன் தன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டு தன்னையும் கோறற்குச் சூழ்ந்ததறிந்து குமணன், நாட்டின் நீங்கிக் காட்டை யடைந்து வாழ்ந்து வந்தான். அக் காலத்தே பெருந்தலைச் சாத்தனார் வறுமையுற்று, அவன்பாற் பரிசில் பெற முதிரத்துக்கு வந்தார்; வந்தவர், நாட்டில் நிகழ்ந் திருக்கும் செய்தி யறிந்து ஏமாற்ற மடைந்தாராயினும், இளங் குமணன் மனவன்மை யில்லாதவன் என்பதைச் சூழ்ந்தறிந்து உடன்பிறந்தார் இருவர்க்கிடையே நிலவிய பகைமையைப் போக்கி ஒற்றுமை யுளதாக்குவதற்கு முயல்வாராயினர். வேறு நெறி யொன்றும் புலப்படாமையால், காட்டில் குமணன் இருக்கு மிடத்தை யறிந்து அவன்பாற் சென்று சேர்ந்தார். ஆங்கே அவற்குத் தம் கருத்தைப் புலப்படுத்தாது தம்பால்நின்று வருந்தும் வறுமைத் துன்பத்தை யெடுத்து விளங்க வோதி, “வேந்தே, நீ வயிரியர் வறுமை தீர்க்கும் குடிப்பிறத்தவன்; வறுமையுற்று வாடும் என் மனையாள் துன்பத்தைக் காணமாட் டேனாய் நின்னை நினைந்து போந்தேன்; என் நிலை இதுவாகும்; இந்நிலையில் யான் நின்னை வளைத்துக் கொண்டு ஏதேனும் பரிசில்பெற் றல்லது மீளேன்” என இப்பாட்டின் கட் குறித்துரைக் கின்றார். ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்மையிற் றோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை 5 சுவைத்தொ றழூஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வ நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத் 10 தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே. (164) திணை : பாடாண்டிணை; துறை : பரிசில் கடாநிலை. தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது. உரை : ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் - அடுதலை மிகவும் மறந்த புடை யோங்கிய அடுப்பின்கண்; ஆம்பி பூப்ப - காளாம்பி பூப்ப; தேம்பு பசி உழவா - உடம்பு மெலியும் பசியான் வருந்தி; பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி - பாலின்மையால் தோலாந்தன்மையுடனே திரங்கி; இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை - துளை தூர்ந்த பொல்லாத வறிய முலையை; சுவைத்தொறு அழூஉம் தன் மகத்துமுக நோக்கி - வறிதே சுவைக்குந்தோறும் அழுகின்ற தனது பிள்ளையது முகத்தைப் பார்த்து; நீரோடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் - நீரால் நிரம்பிய ஈரிய இமையையுடைய குளிர்ந்த கண்ணையுடைய; என் மனையோள் எவ்வம் நோக்கி - என் மனைவியது வருத்தத்தைப் பார்த்து; நினைஇ நிற்படர்ந்தி சின் - இந்த வருத்தம் தீர்த்தற்குரியாய் நீ யென நினைந்து நின்பால் வந்தேன்; நற்போர்க் குமண - நல்ல போரையுடைய குமண; என் நிலை அறிந்தனை யாயின் - எனது வறுமை நிலையை நீ யறிந்தாயாயின்; இந் நிலை - இவ்வாறு வறு மையுற்று நின்ற நிலைமைக்கண்; தொடுத்துங் கொள்ளா தலையலென் - வளைத்தாயினும் பரிசில் கொள்ளாது விடேன்; அடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் - பலவாக அடுக்கப்பட்ட பண்ணுதலமைந்த நரம்பினையுடைய தோலாற் போர்க்கப் பட்ட நல்ல யாழையும்; மண்ணமை முழவின் - மார்ச்சனை நிறைந்த மத்தளத்தினையுமுடைய; வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோய் - கூத்தரது மிடியைக் கெடுக்கும் குடியின்கட் பிறந்தோயாதலால் எ-று. அடுதலை மிகவும் மறத்தலால் தேய்வின்றி உயர்ந்த அடுப்பென்றாராம். குமண, நீ இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோ யாதலால், இந்நிலை தொடுத்தும் கொள்ளாது அமையலென் எனக் கூட்டுக. விளக்கம் : தேம்பு பசி - உடல் மெலிந்து கெடுதற்கு ஏதுவாகிய பசி. இப் பசியால் சாத்தனாருடைய மனைவியிடத்துப் பால் இலதாயிற்று. பொல்லா வறுமுலை யென்றார், பெற்ற சேய்க்குப் பயன்படாது பாலின்மையால் மிக்க மனநோயைத் தருதல் பற்றி. சேய் துயரும், தாய் துயரும் கண்ட யான் வேறொருவரையும் நினையாது நின்னையே நினைத்தேன் என்பார், “நினைஇ நிற்படர்ந்திசினே” என்றார். நற்போர்க் குமண வென்றது, தன் பசிநோயைப் போக்குதற்கு இன்றியமையான் என்பது சுட்டி நின்றது. “வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தோய்” என்றது, என் போலும் புலவர் வறுமை தீர்ப்பதும் நினக்குக் கடனா மென்பதாம். ஆகவே, யான் நின்னைவளைத்துக் கொண்டு போதற் குரிமையு முண்டென்று கூறுவார், “தொடுத்துங் கொள்ளா தமையலென்” என்றார். (164) 165. குமணன் காடு பற்றியிருக்கும் தன்பால் வந்து தம் வறுமைத் துன்பத்தை யெடுத்தோதிப் பாடிய பெருந்தலைச் சாத்தனாரது பாட்டின் கருத்தையும் அவர் உள்ளத் தமைதியையும் ஓர்ந்துணர்ந்தான் குமணன். தன்பாற் பொருளில்லையாயினும், தன்னுடல் சிறந்த பொருளாதலையும் அதன்கண் தலை சிறந்த வுறுப்பாதலையும், அதனைக் கொண்டு காட்டினால் தன் தம்பியாகிய இளங் குமணன், மிக்க பொருள் தருவதாய் நாட்டு மக்கட்குத் தெரி வித்திருத்தலையும் நினைந்து, தன் தலையைக் கொய்து கொண்டு சென்று வேண்டும் பொருள் பெற்று வறுமைத் துயரைப் போக்கிக் கொள்கவென்று தன் வாளை யெடுத்துக் குமணன் பெருந்தலைச் சாத்தனார் கையில் தந்தான். கைந்நடுங்க, உளம் பதைக்க, அதை வாங்கிய சாத்தனார், காற்றினும் கடிதாய் இளங்குமணன்பால் சென்று, “யான் நின் முன்னோனைக் கண்டு பாடி நின்றேன்; அவன், யான் பொருளின்றி வறிதே வாடிச் செல்வது, நாடிழந்த தன் துயரினும் பெரிதாம் என நினைந்து, வேறு தன்பால் சிறந்த பொருள் இல்லாமையால் தன் தலையை யரிந்து கொள்ளுமாறு தன் வாளைத் தந்துளான்; யானும் அது பெற்றுப் பேருவகையுடன் வருகிறேன்” என்றுரைத்து, வாளையும் நன்கு காணச் செய்து, “இவ்வுலகத்தில் நிலைபேறு கருதினோர் தம் புகழ் நட்டு உயிர் மாய்ந்தனர்; பிற செல்வர்கள், வறுமையால் தம்மை இரந்தோர்க்கு ஒன்றும் கொடாது இறந்து, தாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இவ்வுலகத்தோடு தொடர்பின்றி மறைந்து போயினர்காண்” எனத் தெருட்டினர். இதனை இப்பாட்டின்கட் காண்க. இதைக் கண்டு நல்லுணர்வு பெற்ற இளங்குமணன் தன் முன்னோனை நாடி யடைந்து தன் தவற்றுக்கு வருந்தி அவனை நாட்டில் இருத்தி அவன்வழி நின்று ஒழுகும் நற்செயலால் இன்புற்றான்; நாடு முற்றும் நலம் பெருகிற்று. மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வர் இன்மையி னிரப்போர்க்கீஇ யாமையிற் 5 றொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே தாடாழ் படுமணி யிரட்டும் பூநுதல் ஆடியல் யானை பாடுநர்க் கருகாக் கேடி னல்லிசை வயமான் றோன்றலைப் பாடி நின்றனெ னாகக் கொன்னே 10 பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென் நாடிழந் ததனினு நனியின் னாதென வாடந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின் ஆடுமலி யுவகையொடு வருவல் 15 ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. (165) திணை : பாடாண்டிணை; துறை ; பரிசில் விடை. தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டுவந்து இளங் குமணற்குக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது. உரை : மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் - எப்பொருளும் நிலையாத இவ்வுலகத்தின்கண் நிலைபெறுதலைக் கருதி னோர்; தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனர் - தம்முடைய புகழைப் பூமியிடத்தே நிறுத்தித் தாங்கள் இறந்தார்கள்; துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் - நணுகுதற்கரிய தலைமையையுடைய மிக்க செல்வர்; இன்மையின் இரப் போர்க்கு ஈயாமையின்- வறுமையால் இரப்போர்க்குக் கொடாமையின்; தொன்மை மாக்களின் தொடர்பு அறியலர் - பழைய வண்மையையுடைய மாக்கள் போல் பின்னும் தம் பெயரை நிறுத்தி உலகோடு தொடர்ந்து போதுதலை யறியார்; தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல் ஆடியல் யானை - தாளின்கண் தாழ்ந்த ஓசையையுடைய மணி ஒன்றற்கொன்று மாறி யொலிக்கும் புகர் நுதலையுடைய வென்றியியன்ற யானையை; பாடுநர்க்கு அருகா - பாவலர்க்கு மிகக் கொடுக்கும்; கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனெனாக - அழிவில்லாத நல்ல புகழையுடைய வலிய குதிரையையுடைய தலைவனைப் பாடி நின்றேனாக; கொன்னே - பயனின்றியே; பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் - பெருமை பெற்ற பரிசிலன் வாடினனாகப் பெயர்தல்; என் நாடு இழந்ததனினும் நனி இன்னாதென- எனது நாட்டை இழந்ததனினும் மிக இன்னாது என நினைந்து; வாள் தந்தனன் தலை எனக்கீய- வாளைத் தந்தான் தனது தலையை எனக்குத் தருவானாக; தன்னில் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் - ஆங்குத் தரு தற்குத் தன்னிற் சிறந்த பொருள் வேறொன்றில்லாமையின்; ஆடு மலி உவகையொடு வருவல் - வென்றி மிக்க உவகையான் வந்தேன்; ஓடாப் பூட்கை நின் கிழமையோன் கண்டு - புறக் கொடாத மேற்கோளையுடைய நின் தமையனைக் கண்டு எ-று. வருவ லென்பது கால மயக்கம். மன்னுதல் குறித்தோர் புகழ் நிறுத்துதலும், புகழ் நிறுத்தாதோர் மன்னாராதலும் இவ்வாறன்றோ வென்பது கருத்தாகக் கொள்க. நின் கிழமையோற் கண்டு வருவலெனவும், வயமான் தோன்றலைப் பாடிநின்றேனாகப் பரிசிலன் கொன்னே பெயர்தல் இழந்ததனினும் இன்னாதெனத் தன்னிற் சிறந்தது பிறிதொன்றின்மையின், தலை எமக் கீய வாள் தந்தனன், ஆதலால், ஆடு மலி உவகையின் வருவல் எனவும் கூட்டுக. “கிளைமை யோற்கண்” டென்று பாட மோதுவாரு முளர். விளக்கம் : மன்னா வுலகத் தென்றவிடத்து, மன்னாமைக்குரிய வினை முதலாகிய எப்பொருளும் என்பது வருவிக்கப்பட்டது. உலகமும் மன்னாதாயின், புகழ் நிறுவுதல் கூடாதாகும். உலகத்தில் மன்னுவது புகழொன்று தவிரப் பிற எப்பொருளும் இல்லை யென்பதைத் திருவள்ளுவரும், “ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற், பொன்றாது நிற்பதொன்றில்” (குறள். 233) என்றும், பிறரும். “நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத்து” (பதிற். 14) என்றும் கூறுதல் காண்க. இரப்போர் இரத்தற் கேதுவாகலின், “இன்மையின் இரப்போர்” என்றார். புகழே உலகத்தோடு தொடர்புற்று அது பொன்றுங்காறும் உடன் தொடர்ந்து நிற்பதாகலின், புகழ் செய்யாதாரை, “தொடர்பறியலர்” என்றார். புகழ் பயப்பது ஈத்தலாதலின் “ஈயாமையின் தொடர் பறியலர்” என்றும், ஈத்துப் புகழ் நிறுவாதார் மனவுணர்விலராகலின், “மாக்க” ளென்றும் குறித்தார். பாடு - பெருமை. “நயனுடையா னல் கூர்ந்தா னாதல் செயு நீர, செய்யா தமைகலா வாறு” (குறள். 229) என்பதனால், “நாடிழந் ததனினும் நனியின்னா” தெனக் கருதினான்.தன் தலையைக் கொணர்வார்க்குப் பெரும்பொருள் தருவதாகக் குமண னறிய, அவன்தம்பி நாட்டிற் பறையறைவித்திருந்ததை யுட்கொண்டு, “தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்” என்றும், ஈத்த லாகாமைக்குரிய நிலையுண்டாய போழ்தும், தன் பூட்கையிற் பின்னிடாது தலை கொடுத்த செயலை வற்புறுத்தற்கு, “ஓடாப் பூட்கைக் கிழமையோன்” என்றும் கூறினார். (165) 166. கௌணியன் விண்ணந்தாயன் இவன் சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்று கூறப்படுகின்றான். பூஞ்சாற்றூர் தஞ்சைச் சில்லாவில் உள்ளது. கௌண்டின்னிய கோத்திரத்துப் பார்ப்பனர் கௌணியர் எனப்படுகின்றனர். சீர்காழித் திருஞானசம்பந்தரும் கௌணியராவர். மேலும் கௌணியப் பார்ப்பார் அனைவரும் தமிழ்ப்பற்று மிகவுடையரா யிருப்பது குறிக்கத்தக்கது. விண்ணன் என்பது இவன் தந்தை பெயர்; இவன் இயற்பெயர் தாயன் என்பது. அரிவாள் தாய நாயனாரும், தாயன் என்ற பெயருடையர். இக்காலத்தும் மக்கட்குத் தாயன், தாயப்பன் என்று பெயர் வழங்குவதுண்டு. இவனுடைய முன்னோர் வடமொழி வல்லுநராய்ச் சொல்வன்மையிற் பெயர் பெற்றிருந்தனர். வேள்வி பல செய்தனர். இவன் ஒருகால் சிறந்ததொரு வேள்வி வாயிலாகப் பெருவிருந்து செய்தான். அதற்கு ஆசிரியர் ஆவூர் மூலங்கிழாரும் சென்றிருந்தார். அவ் வேள்வியில் இவனுடைய மனைவியர் தமக்குரிய ஏவல் கேட்டு நிற்ப, நெய்யை நீரைப்போல் வழங்கி வேள்வி செய்ததும் விருந்து செய்ததும் கண்டு வியந்த ஆவூர் மூலங்கிழார், இப்பாட்டின்கண், இவற்றையெல்லாம் பொருளாக நிறுத்திப் பாடி முடிவில், “நீ இப்போது தந்த பரிசிலைக் கொண்டு காவிரிக் கரையில் உள்ள எம்முடைய ஆவூர் மூலத்தில் நின் புகழ் பாடி உண்டும் தின்றும் ஊர்ந்தும் மகிழ்ந்திடுவோம்; நீ இமயம் போல இந் நிலமிசை நிலைபெறுவாயாக” என வாழ்த்துகின்றார். நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த வீரிரண்டின் ஆறுணர்ந்த வொருமுதுநூல் 5 இகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ் துறையு முட்டின்று போகிய உரைசால் சிறப்பி னுரவோர் மருக 10 வினைக்குவேண்டி நீபூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சை சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய மறங்கடிந்த வருங்கற்பின் அறம்புகழ்ந்த வலைசூடிச் 15 சிறுநுதற்பே ரகலல்குற் சிலசொல்லிற்1 பலகூந்தலின் நிலைக்கொத்தநின் றுணைத்துணைவியர் தமக்கமைந்த தொழில்கேட்பக் காடென்றா நடென்றாங் 20 கீரேழி னிடமுட்டாது நீர்நாண நெய்வழங்கியும் எண்ணாணப் பலவேட்டும் மண்ணாணப் புகழ்பரப்பியும் அருங்கடிப் பெருங்காலை 25 விருந்துற்றநின் றிருந்தேத்துநிலை என்றுங் காண்கதில் லம்ம யாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும் தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண் 30 உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம் செல்வ லத்தை யானே செல்லாது மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவள ரிமயம் போல நிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே. (166) திணை : வாகை; துறை : பார்ப்பன வாகை. சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது. உரை : நன்றாய்ந்த நீள் நிமிர் சடை முது முதல்வன் - பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினையுடைய முதிய இறை வனது; வாய் போகாது - வாக்கை விட்டு நீங்காது; ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முது நூல் - அறமொன்றையே மேவிய நான்கு கூற்றையுடைத்தாய் ஆறங்கத்தாலும் உணரப் பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு; இகல் கண்டோர் மிகல் சாய்மார் - மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச்சமயத்தோரது மிகுதியைச் சாய்க்க வேண்டி; மெய் அன்ன பொய் உணர்ந்து - அவரது மெய் போன்ற பொய்யை உளப்பட் டறிந்து; பொய் ஓராது மெய் கொளீஇ - அப்பொய்ம்மையை மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி; மூவேழ் துறையும் முட்டின்று போகிய - இருபத்தொரு வேள்வித் துறை யையும் குறையின்றாகச் செய்து முடித்த; உரை சால் சிறப்பின் உரவோர் மருக - புகழ் அமைந்த தலைமையையுடைய அறிவுடை யோர் மரபிலுள்ளானே; வினைக்கு வேண்டி நீ பூண்ட புலப் புல்வாய்க்கலைப் பச்சை - வேள்வித் தொழிற்கு வேண்டி நீ போர்க்கப்பட்ட காட்டுநிலத்து வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத் தோல்; சுவல் பூண் ஞாண் மிசைப் பொலிய - நினது தோளின்கண் இடப்பட்ட பூணு நூன்மீதே சிறந்து தோன்ற; மறம் கடிந்த அருங் கற்பின் - கொடுமையை நீக்கிய பெறுதற் கரிய கற்பினையும்; அறம் புகழ்ந்த வலை சூடி - அற நூல் புகழ்ப் பட்ட சாலகத்தைச் சூடி; சிறு நுதல் பேர் அகல் அல்குல் - சிறிய நுதலினையும் பெரிய அகன்ற அல்குலையும்; சில சொல் லின் பல கூந்தல் - மெத்தென்ற சொல்லையும் பலவாகிய கூந்தலையுமுடைய; நின் நிலைக் கொத்த நின் துணைத் துணைவியர் - நின்னுடைய நிலைமைக்கு மனமொத்த நின்னுடைய துணைவியராகிய காதலிமார்; தமக்கு அமைந்த தொழில் கேட்ப - தத்தமக்குப் பொருந்திய ஏவற்றொழிலைக் கேட்டுச் செய்ய; காடு என்றா நாடு என்றா ஆங்கு - காடென்றும் நாடென்றும் சொல்லப்பட்ட அவ்விடத்தின்கண்; ஈரேழின் இடம் முட்டாது - காட்டுள் எழுவகைப்பட்ட பசுவானும் நாட்டுள் எழுவகைப்பட்ட பசு வானும் முட்டாது; நீர் நாண நெய் வழங்கியும் - நீர் நாணும் பரிசு நெய்யை வழங்கியும்; எண் நாணப் புகழ் பரப்பியும் -எண்ணிறப்பப் பலவேள்விகளை வேட்டும்; மண் நாணப் புகழ் - மண் பெறாமல் புகழைப் பரப்பியும்; அருங் கடிப் பெருங்காலை - அவ்வாறு பெறு தற்கரிய விளக்க முற்ற வேள்வி முடிபாகிய பெரிய காலத்து; விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை - விருந்தினரைப் பொருந்திய நினது திருந்திய மேம்பட்ட நிலைமையை; என்றும் காண்கதில் யாம் - எந்நாளும் காண் போமாக யாங்கள்; குடாஅது பொன்படு நெடுவரை புயல் ஏறு சிலைப்பின் - மேற்றிசைக்கண் பொன் படுகின்ற நெடிய குடக மலைக்கண் ணே முகிலின்கண் இடி யேறு முழங்கின்; பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும் - பூப்பரந்த புதுநீரையுடைய காவிரி உலகத்தைப் புரக்கும்; தண்புனல் படப்பை எம்மூர் ஆங்கண் - குளிர்ந்த புனற்பக்கத்தையுடைய எம்மூரிடத்தின்கண் ; உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் செல்வல் யான் - உண்ணப்படுவனவற்றை உண்டும் தின்னப்படுவனவற்றைத் தின்றும் ஏறப்படுவனவற்றை யேறியும் கொண்டாடுவேமாகப் போவேன் யான்; செல்லாது மழை அண்ணாப்ப நீடிய நெடுவரை - போகாது மழை தலையெடுப்ப உயர்ந்த நெடிய பக்க வரைகளை யுடைத்தாய்; கழை வளர் இமயம் போல - மூங்கில் வளரும் இமயமலை போல; நிலீஇயர் நீ நிலமிசை யானே - நிலை பெறுவாயாக நீ நிலத்தின்மேலே எ-று. முதுமுதல்வன் வாய்போகாதென்ற கருத்து, அப் பெரி யோனாலும் எக்காலமும் அத்தியயனம் பண்ணப்படு மென்ற தாகக் கொள்க. “வாய் போகா தொன்று புரிந்த” வென்பதற்கு மெய்ம்மை நீங்காமல் வீடொன்றையுமே புரிந்தவென்றும், “பொய் யோராது” என்பதற்குத் தாம் பொய்ம்மையை விசாரியா தென்றும், “மூவேழ் துறை ” யென்பதற்கு இருபத்தொரு கூறுபட்ட தருக்க நூலென்றும், “ஈரேழின் ” என்பதற்குக் காட்டுள் ஏழு நாளும் நாட்டுள் ஏழுநாளு மென்றும், “கற்பின் வலை சூடி” யென்பதற்குக் கற்பினால் வலைசூடி யென்றும் உரைப்பினு மமையும். உரவோர் மருக, பொலியக், கேட்ப, வழங்கியும் வேட்டும், பரப்பியும் இவ்வாறு விருந்துற்ற நின் திருந்தேந்து நிலை, என்றும் இன்றுபோலக் காண்பேமாக யாமும்; எம்மூரிடத்து உண்டும் தின்றும் ஊர்ந்தும் இவ்வாறு செய்து நீ தந்த பரிசில் கொண்டு கொண்டாடுவேமாகச் செல்வேன்; நீதானும் இமயம்போல நிலைபெறுவாயாக வென முடிக்க. நன்றாய்ந்த ஒரு முதுநூ லெனவும், கற்பையும் நுதலையும் அல்குலையும் சொல்லையும் கூந்தலையுமுடைய துணைவியர் வலைசூடித்தொழில் கேட்ப எனவும், செல்லாது நிலீஇயர் எனவும் இயையும். மூவேழ் துறையு மென்பதற்கு இருபத்தொரு கூறுபட்ட அருத்த நூலென்பாருமுளர். விருந்தென்றது அதிதி களை; அன்றி, உறுப்புத்தோல் முதலியவற்றால் புதுமையுற்ற வெனினு மமையும். தில் : விழைவின்கண் வந்தது. காவிரி பரக்கும் என்பதூஉம் பாடம். விளக்கம் : பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந் தாயன் செய்த வேள்வி விருந்தில் வேளாளராகிய ஆவூர் மூலங்கிழாரும் பேணப் படுவது இதனால் விளங்குதலின், வேள்விக் காலங்களிலும் பண்டை நாளில் சாதி வேறுபாடு பார்ப்பனரால் மேற்கொள்ளப்படவில்லை யென்று தெளியத் தெரிகிறது. வைதிக நெறியை வற்புறுத்தும் சைமினியின் கொள்கை சங்க காலத்தே தமிழகத்தில் பரவி யிருந்தமை இப்பாட்டாலும் அறியப்படுகிறது. வேதநூல் உலகிய லொழுக்கத்திற்குரிய அறத்தையே வற்புறுத்துவ தென்பவாகலின், ஒன்று புரிந்த என்றதற்கு “அறமொன்றையே மேவிய” என உரை கூறி னார்; “உலகியல் வேதநூ லொழுக்க மென்பது” (திருஞான. 820)என்று சேக்கிழார் கூறுவது காண்க. இகல் கண்டோர்- வேத நூலை மேற்கொள்ளாது மாறுபட்டவர். அவர்களைப் புத்தர் முதலாயினா ரென உரைகாரர் கூறுகின்றார். சங்கத்தொகை நூல்களில் புத்தர் சமணர் முதலிய சமயத்தவரைப் பற்றிய குறிப்புக்கள் இன்மையின், இது பொருந்தாமை யுணரப்படும். வேள்விகள் வகையால் மூன்றும், ஒவ்வொன்றும் எவ் வேழாய் விரிதலின் விரியால் இருபத்தொன்று மாதலின், “மூவேழ் துறை” யென்றார்; வகை மூன்றும், சோமயக்ஞம், அவிர்யக்ஞம், பாகயக்ஞம் என்பனவாம். வேள்வி செய்யுமிடத்து, வேள்வித் தலைவன் மனைவியர் அணியும் ஒருவகை யுடைக்குச் சாலகம் என்று பெயர் என்பர். வைதிகர் பல மகளிரை மனைவியராக மணக்கலாம் என்பது விதி. சில யாகங்கட்குப் பத்தினிகள் மூவருக்குக் குறையாதிருக்க வேண்டுமென்னும் விதியுண்டென, திரு.உ.வே. சாமிநாதையர் குறிக்கின்றார். நூற்றுறையில் இகல் கண்டோர் மிகல் சாய்த்தான் என விண்ணந்தாயனைக் கூறலின், மூவேழ் துறை யென்றதற்கு, “இருபத்தொரு கூறுபட்ட தருக்க நூல்” என்று கொள்ளல் அமையுமென உரைகாரர் குறிப்பதும் அமைவதாம். வேள்வி முதலிய செயல்கள் வட வாரிய முறையில் நடைபெறுதலின், அதற் கேற்பவே அவனை, “இமயம் போல நிலீஇய” ரென வாழ்த்தினார். 167. ஏனாதி திருக்கிள்ளி திருக்கிள்ளி யென்பான், சோழநாட்டுக் குறுநில மன்னருள் ஒருவன்; சோழ வேந்தற்குப் படைத்துணையாய்ப் பல போர் களைச் செய்து மேம்பட்டவன்; பகைவரைப் படைக் கலங்களாற் புண்பட்ட மேனியும், பகைவர் புறங்காண்டலாலும் இரவலர்க்கு வரையாது வழங்கலாலும் இசைபெற்ற நல்வாழ்வும் உடையன். ஏனாதி யென்பது முடிவேந்தர்களால் கொடுக்கப் படும் சிறப்புப் பெயர். இவன் காலத்தே, சோழவேந்தன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியும் சேரமான் குட்டுவன்கோதையும் சிறப்புற்றிருந்தனர். குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் வாழ்ந்தானாயினும், ஏனை யிருவரையும் போல அத்துணைச் சிறப்பில னாயினன். சோழவேந்தற்குப் படைத்துணைவனாக இத் திருக்கிள்ளியோடு சோழிய வேனாதி திருக்குட்டுவனும் விளங்கினான். அக்காலத்தே கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனாரென்னும் சான்றோர் இத் திருக்கிள்ளியின் வண்மையும் நல்லிசையும் கேள்வியுற்று இவன்பால் வந்து சேர்ந்தார். திருக் கிள்ளியும் அவரை யன்புடன் வரவேற்றுச் சிறப்பித்தான், மதுரைக் குமரனார் திருக்கிள்ளியின் மேனி முற்றும் வாள் வடுவுற்று அவனது போர்த்திறத்தை வெளிப்படுத்தும் நலத்தை வியந்து பழிப்பது போலப் புகழ்ந்து ஒரு பாட்டினைப் பாடினார். அதன்கண், திருக்கிள்ளியையும் அவன் பகைவரையும் ஒப்ப நிறுத்தி, “நீ வடுப் பொருந்திய யாக்கையை யுடையனாதலின் கண்ணுக்கு இனிய னல்லை; புகழுடைமையால் கேட்டற் கினியை. நின் பகைவரோ போர்க்கஞ்சி ஒடுங்கி வாழ்வதனால் மெய் சிறிதும் வடுவுறாது கேட்டற்கு இனியரல்லராயினும் காண்டற்கு இனியராயுள்ளனர். இருவீரிடத்தும் இனிமையும் இன்னாமையும் இருப்பவும் அறிவுடைய உலகம் உன்னையே வியந்து கூறுகிறதே! காரணம் என்னையோ?” என்று வினவுவார் போலக் குறித்துப் பாடியுள்ளார். நீயே, அமர்காணி னமர்கடந்தவர் படைவிலக்கி யெதிர்நிற்றலின் வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு கேள்விக் கினியை கட்கின் னாயே 5 அவரே, நிற்காணிற் புறங்கொடுத்தலின் ஊறறியா மெய்யாக்கையொடு கண்ணுக் கினியர் செவிக்கின் னாரே அதனா, னீயுமொன் றினியை யவருமொன் றினியர் ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க் 10 கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி நின்னை வியக்குமிவ் வுலகமஃ தென்னோ பெரும வுரைத்திசி னெமக்கே (167) திணை : அது; துறை : அரசவாகை. ஏனாதி திருக்கிள்ளி யைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. உரை : நீயே நீதான்; அமர் காணின் அமர் கடந்து - போரைக் காணின் அப்போரை வென்று; அவர் படை விலக்கி எதிர் நிற்றலின் - அப்பகைவரது படையை விலக்கி எதிர் நிற்றலான்; வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு-வாள் வாய்க்கத் தைத்த வடுஅழுந்தின உடம்புடனே; கேள்விக்கு இனியை - கேட்ட செவிக்கு இனியை; கட்கு இன்னாய் - கண்ணுக்கு இன்னாய்; அவர் - பகைவராகிய அவர்தாம்; நிற்காணின் புறங் கொடுத்தலின் - நின்னைக் காணிற் புறந்தருதலால்; ஊறறியா மெய் யாக்கை யொடு - புண்ணறியாத உடம்பாகிய வடி வுடனே; கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னார் - கண்ணுக்கு இனியர் செவிக்கு இனியரல்லர்; அதனால் -; நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் - இங்ஙனம் நீயு மொன்றினியை அவரு மொன்றினியர்; ஒவ்வா யாவுள - இனி அவரொவ்வாதன வேறு யாவை யுள; வெல் போர்க் கழல் புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி - வெல்லும் போரினைச் செய்யும் வீரக் கழலணிந்த திருந்திய அடியினையும் கடிய செலவினையுடைய குதிரையையு முடைய கிள்ளி; நின்னை வியக்கும் இவ்வுலகம் - நின்னை மதித்திருக்கும் இவ்வுலகம்; அஃது என்னோ - அதற்குக் காரணம் யாதோ; பெரும எமக்கு உரைத்திசின் - பெருமானே எமக்குச் சொல்லுவாய் எ-று. நீ கட்கின்னாய் எனப் பழித்தது போலப் புகழ்தலும் அவர் கட்கினிய ரெனப் புகழ்ந்தது போலப் பழித்தலும் சில அணி தோன்ற நின்றன. விளக்கம் : வாளை யெறியுமிடத்து, அதன் வாய் சென்று நன்கு பொருந்து வதால் உண்டான புண்ணாலாகிய வடுவை, “வாள் வாய்த்த வடு” என்றார். இன்னாய் என்றது, ஈண்டு அழகின்மை தோன்ற நின்ற தாயினும். குறிப்பாய் இன்பந் தருவதாயிற் றென்பதுபட நின்றது. புறந்தந்தார்மேல் வாள் முதலிய படைகளைத் தூய வீரராயினார் எறியாராகலின், “புறங் கொடுத்தலின் ஊறறியா மெய் யாக்கை” யென்றார். மெய்யும் யாக்கையும் உடம்பையே சுட்டி நின்றன வாயினும், வேறுபடுத்தற்கு உரைகாரர் யாக்கையை வடிவாக்கி “மெய்யாகிய வடிவு” என்றுரைத்தார். விழுப்புண் படாத மெய், மறச் சிறப்பின்றி என்பும், நரம்பும், தோலும், ஆகிய இவற்றால் யாக்கப் பட்டு யாக்கை யெனப்படற் கமைந்து வடிவு தோற்றுதலைப் பயனாகக் கொண்டிருத்தலை வற்புறுத்தியவாறு.“நீயுமொன்றினியை அவரு மொன் றினிய” ரென்றது, தம் கூற்றைச் சிறப்பித்துக் காட்டுதற்குக் கொண்ட பொதுமொழி. கண்ணும் செவியுமாகிய இரண்டற்கும் ஒப்ப இனியராதல், புகழ் கருதி அறநெறியில் ஒழுகுவார்க்கு இயலா தாயினும் செவிக்கினிய புகழுடையராதல் பற்றி ஒருவரை அறிவுடை யுலகம் வியக்கு மென்பதை அறிந்துவைத்தும், “என்னோ பெரும உரைத் திசி னெமக்கே” யென்றது, மதுரைக் குமரனாரின் சொன்னலம் தோற்றுவித்து நின்றது. இது வஞ்சப்புகழ்ச்சி யென்னும் அணி. (167) 168. பிட்டங்கொற்றன் பிட்டங்கொற்ற னென்பான் சேரமான் கோதைக்குப் படைத் துணைவன்; பேராண்மையும் கைவண்மையும் ஒருங்குடை யவன்; சான்றோர் பலரும் பாராட்டும் தகுதி பெற்றவன். இவன் குதிரை மலையைச் சார்ந்த நாட்டை யுடையவன். வேங்கைப் பூவால் தொடுத்த கண்ணி இவற்குரியதாகும். காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் இவன்பால் மிக்க ஈடுபாடுடை யராவர். போருடற்றிப் பெற்ற செல்வ முழுதும் இவன் இரவலர்க் கீத்துப் புகழ் வளர்த்தலிலேயே பயன்படுத்தினான். இவ் வாறிருக்கையில், கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனா ரென்பார், தமிழக முழுதும் உள்ள பரிசிலர் பலரும் இப் பிட்டங்கொற்றன் புகழைப் பெரிதெடுத்துப் பேசுவது கேட்டுப் பிறரை வினவினார்; அவர்களும் “சான்றோர் பலரும் பிட்டங்கொற்றனைப் பாடு வதில் பெருவிருப்புடையர்” என்றனர். அவர்க்கு இக் கொற்றனைக் காண்டலில் விருப்பமுண்டாக, விரைந்து சென்று கண்டு இப்பாட்டைப் பாடினார். இதன்கண் அவர், குதிரைமலைக் குறவர் விருந்தோம்புந் திறத்தை விரித்தோதி, “வில்லோர் பெரும, கொற்ற, இத் தமிழகத்தில் ஈயா மன்னர் கேட்டு நாணு மாறு, பரிசிலர் பலரும் நின் புகழையே பாடுவர் என்று சான்றோர் கூறுகின்றனர்” என்று குறித்துள்ளார். கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் பெயர், கருவூர்க் கந்தபிள்ளை சாத்தனாரென்றும் காணப்படுகிறது. இவர் சேர வேந்தர்பால் மிக்க அன்புடையவர்; அவரது ஈகைச் சிறப்பை அகப்பாட்டொன்றில் “காடுமிக நெடிய வென்னார் கோடியர், பெரும்படைக் குதிரை நற்போர் வானவன், திருந்துகழற் சேவடி நசைஇப் படர்ந்தாங்கு” (அகம். 309) என்று சிறப்பித்துள்ளார். இவ்வியைபால் சேரர் படைத்துணைவனாகிய பிட்டங்கொற் றனை இவ்வாறு இப்பாட்டில் பாராட்டியுள்ளார். அருவி யார்க்குங் கழைபயி னனந்தலைக் கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட் கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு கடுங்கட் கேழ லுழுத பூழி 5 நன்னாள் வருபத நோக்கிக் குறவர் உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை முந்துவிளை யாணர் நாட்புதி துண்மார் மரையான் கறந்த நுரைகொ டீம்பால் மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி 10 வான்கே ழிரும்புடை கழாஅ தேற்றிச் சாந்த விறகி னுவித்த புன்கம் கூதளங் கவினிய குளவி முன்றிற் செழுங்கோள் வாழை யகலிலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல் 15 நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி வடிநவி லம்பின் வில்லோர் பெரும கைவள் ளீகைக் கடுமான் கொற்ற வையக வரைப்பிற் றமிழகங் கேட்பப் பொய்யாச் செந்நா நெளிய வேத்திப் 20 பாடுப வென்ப பரிசிலர் நாளும் ஈயா மன்னர் நாண வீயாது பரந்தநின் வசையில்வான் புகழே. (168) திணை: பாடாண்டிணை; துறை : பரிசிற்றுறை; இயன் மொழியும், அரசவாகையுமாம். பிட்டங்கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் பாடியது. உரை : அருவி ஆர்க்கும் கழை பயில் நனந்தலை - அருவி ஒலித் திழியும் வேய் பயின்ற அகன்றவிடத்து; கறி வளர் அடுக்கத்து - மிளகு கொடி வளரும் மலைச்சாரலினிடத்து; மலர்ந்த காந்தள் கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி - மலர்ந்த காந்தளினது கொழுவிய கிழங்கு பிறழக் கிளறி; கிளையொடு - தன் இனத் தோடே கூட; கடுங்கண் கேழல் உழுத பூழி - தறுதண்மையை யுடைய கேழல் உழுத புழுதிக்கண்ணே; நன்னாள் வரு பதம் நோக்கி - நல்ல நாள் வந்த செவ்வியைப் பார்த்து; குறவர் உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறுதினை - குறவர் அந்நிலம் உழாதே அதுவே யுழவாக வித்திய பரிய தோகையையுடைய சிறிய தினை; முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் - முற்பட விளைந்த புதுவருவாயாகிய கதிரை நல்ல நாளின் கண்ணே புதிதுண்ண வேண்டி; மரையான் கறந்த நுரை கொள் தீம் பால் - மரையாவைக் கறந்த நுரை கொண்ட இனிய பாலை; மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி - மான் தடி புழுக்கப்பட்ட புலால் நாறும் பானையினது; வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி - நிணந் தோய்ந்த வெளிய நிறத்தினை யுடைய பெரிய புறத்தைக் கழுவாதே உலை நீராக வார்த்து ஏற்றி; சாந்த விறகின் உவித்த புன்கம் - சந்தன விறகான் உவிக்கப் பட்ட சோற்றை; கூதளம் கவினிய குளவி முன்றில் - கூதாளி கவின்பெற்ற மலைமல்லிகை நாறும் முற்றத்து; செழுங் கோள் வாழை அகல் இலை பகுக்கும் - வளவிய குலையையுடைய வாழையினது அகன்ற இலைக்கண்ணே பலருடனே பகுத் துண்ணும்; ஊராக் குதிரைக் கிழவ - ஊரப்படாத குதிரை யென்னும் மலைக்குத் தலைவ; கூர் வேல் - கூரிய வேலையும்; நறை நார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி - நறைக்கொடியின் நாரால் தொடுக்கப்பட்ட வேங்கைப் பூமாலையினையும்; வடி நவில் அம்பின் - வடித்தல் பயின்ற அம்பினையுமுடைய; வில்லோர் பெரும - வில்லாட்களுக்குத் தலைவ; கைவள் ஈகைக் கடுமான் கொற்ற - கையான் வழங்கும் வள்ளிய கொடை யினையும் கடிய குதிரையையுமுடைய கொற்ற; வையக வரைப்பில் தமிழகம் கேட்ப - உலகத் தெல்லையுள் தமிழ்நாடு கேட்க; பொய்யாச் செந்நா நெளிய ஏத்தி - பொய்யாத செவ்விய நா வருத்தும்படி வாழ்த்தி; நாளும் பாடுப என்ப பரிசிலர் - நாடோறும் பாடுவரென்று சொல்லுவர் பரிசிலர்; ஈயா மன்னர் நாண - கொடாத வேந்தர் நாண; வீயாது பரந்த நின் வரையில் வான் புகழ் - கெடாது பரந்த நினது வசையில் லாத வாலிய புகழை எ-று. கிழவ, பெரும, கொற்ற, பரிசிலர் நின் புகழை யேத்திப் பாடுப வென்ப; அதனால் யானும் நின்பாற் பரிசில் பெற்றுப் பாடுவேனாக வேண்டுமெனப் பரிசிற்றுறைக் கேற்கக் கூறிய தாக்குக. ஊராக்குதிரை, மலைக்கு வெளிப்படை. நறை, பச்சி லைக் கொடி. விளக்கம் : பன்றி நிலத்தைக் கிளறுமிடத்துக் காந்தளினது வெண்மையான கிழங்கு வெளிப்பட்டுத் திகழ்தல்பற்றி, “கிழங்கு மிளிரக் கிண்டி” யென்றார். விதைத்தற்கும் விதைத்தவை முளைத்து விளைந்தபின் அவ்விளைவை யுண்டற்கும் நன்னாள் பார்ப்பது வழக்கமாதலின், “நன்னாள் வருபதம் நோக்கி”யென்றும், “யாணர்நாள் புதி துண்மார்” என்றும் கூறினார். விருந்தூட்டி யுண்ணும் சிறப்புத் தோன்ற “அகலிலையுண்ணு” மென்னாது “பகுக்கும்” என்றார். உவித்தல்-, சமைத்தல். நறைக் கொடியிலிருந்து நாரெடுத்துக் கண்ணி தொடுத்தலை, “நறைநார் வேங்கைக் கண்ணியன்” (அகம். 282) எனச் சான்றோர் கூறுதலாலறிக. “அதனால் யானும் நின்பாற் பரிசில் பெற்றுப் பாடுவேனாகவேண்டு” மென்பது குறிப்பெச்சம். (168) 169. பிட்டங்கொற்றன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பிட்டங்கொற்றனைக் காண விழைந்து அவன் செவ்வி காண முயன்றார். முயலுந்தோறும் அவன் போரில் ஈடுபட்டுப் படை யகத்திருந்ததனால் அவனது செவ்வி யரிதாயிற்று. ஒருகால் அவன் செவ்வி கிடைத்தது. அவன் உடனே போருக்குச் செல்ல வேண்டிய கடமையு மிருந்தது. கிடைத்த செவ்விக்கண்ணே தாம் பரிசில் பெற்றுச் செல்லவேண்டி இப்பாட்டின்கண் “பெரும, நும்முடைய படை பகைமேற் செல்லும் போது நீ அதன் முன்னே நிற்கின்றனை; பகைவர் நும்மேல் வருங்கால், நுமது கூழைப் படையைத் தாங்கி ஆற்றிடைக் குறுக்கே நிற்கும் கற்சிறை போல் நிற்கின்றனை; இந் நிலையால் யான் வருந்தோறும் நின் செவ்வி கிடைப்பதரிதாயிற்று. ஆதலால், இன்னே எனக்குப் பரிசில் தந்து விடைதர வேண்டு கிறேன். பொருநரால் தொலைக்க முடியாத நின் வென்றி விளங்குவதாக” என்று விளம்புகின்றார். நும்படை செல்லுங் காலை யவர்படை எடுத்தெறி தானை முன்னரை யெனாஅ அவர்படை வரூஉங் காலை நும்படைக் கூழை தாங்கிய வகல்யாற்றுக் 5 குன்றுவிலங்கு சிறையி னின்றனை யெனாஅ அரிதாற் பெருமநின் செவ்வி யென்றும் பெரிதா லத்தையென் கடும்பின திடும்பை இன்னே விடுமதி பரிசில் வென்வேல் இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார் 10 இகலின ரெறிந்த வகலிலை முருக்கின் பெருமரக் கம்பம் போலப் பொருநர்க் குலையாநின் வலன்வா ழியவே. (169) திணை: பாடாண்டிணை; துறை : பரிசில் கடாநிலை. அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. உரை : நும் படை செல்லுங் காலை - நும்முடைய படை பகைவர் மேற் போங்காலத்து; அவர் படை எடுத் தெறி தானை முன்னரை எனாஅ - அவரது படையாகிய வேல் முதலாயவற்றை ஓங்கி யெறியும் படைக்கு முன்னே நிற்பை யாகலானும்; அவர் படை வரூஉங் காலை - அவர் படை அடர்த்து வருங் காலத்து; நும் படைக் கூழை தாங்கிய - நும் படையினது அணியைத் தாங்க வேண்டி; அகல்யாற்றுக் குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ- அகன்ற ஆற்றின்கண் குறுக்கே தடுத்துக் கிடக்கின்ற மலையை யொப்ப அதனைத் தடுத்து நின்றாயாதலானும்; பெரும - பெருமானே; நின் செவ்வி அரிது என்றும் - நின்னைக் காணலாங் காலம் பெறுதலரிது எந்நாளும்; என் கடும்பினது இடும்பை பெரிது - எனது சுற்றத்தினது இடும்பை பெரிதாத லால்; இன்னே பரிசில் விடுமதி - நீ இப்பொழுதே எனக்குப் பரிசில் தந்து விடுவாயாக; வென்வேல் இளம் பல் கோசர் - வென்றி வேலையுடைய இளைய பல கோசர்; விளங்கு படை கன்மார் - விளங்கிய படைக்கலங் கற்பார்; இகலினர் எறிந்த - மாறுபட்டனராய் எறிந்த; அகல் இலை முருக்கின் பெருமரக்கம்பம் போல - அகன்ற இலையையுடைய முருக்காகிய பெரிய மரத்தாற் செய்யப்பட்ட தூணமாகிய இலக்கைப் போல; பொருநர்க்குலையா நின் வலன் வாழிய - பொருவார்க்குத் தொலையாத நினது வென்றி வாழ்வதாக எ-று. எனா என்பன எண்ணிடைச்சொல். எளிதாலத்தை யென்று பாட மோதுவாரு முளர். விளக்கம் : முன்னர் என்பது முன்னிலைக்குறிப்பு வினையாய் முன்னரையென வந்தது; முன்னே நிற்பா யென்பது பொருள். பின்னே அணி வகுத்து வரும் படை கூழைப்படை. அகல் யாற்றுக் குன்று விலங்கு சிறை, அகல் யாற்றுக் குன்று சிறை, விலங்கு சிறை யென இயையும்; குன்று சிறை குன்றாகிய சிறை; குறுக்கே தடுத்துக் கிடக்கும் சிறை யென வரும். “வருவிசைப் புனலைக் கற்சிறை போல, ஒருவன் தாங்கிய பெருமை” (தொல். புறத்.8) என்பது காண்க. சிறை, அணை. ஒன்று மேற்சேறல், ஒன்று வருபடை தாங்கல் என்ற இரண்டினும் நீ இருபடைக்கும் இடையே நிற்றலின், “என்றும் நின் செவ்வி எமக்கு அரிதாயிற்” றென்றார். நின் செவ்வி பெறுவதோ அரிது; என் கடும்பின் இடும்பையோ பெரிது என்றது, விரையப் பரிசில் தர வேண்டுமென்பதை வற்புறுத்துகிறது. கோசர், ஒருவகை வீரர்; இவரைப் பற்றிப் பல குறிப்புக்கள் சங்கத்தொகை நூல்களில் காணப்படுகின்றன; இவர் சொன்னலமுடையர். அத்தை, ஆல் என்பன அசைநிலை. (169) 170. பிட்டங்கொற்றன் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனைப் பாடி அவன் தந்த சிறப்புக்களைப் பெற்று இனிதிருந்த உறையூர் மருத்துவன் தாமோதரனார், சேரமான் கோதையின் படைத் துணைவனான பிட்டங் கொற்றனுடைய வண்மையும் போர் வன்மையும் கேள்வியுற்று அவன்பால் பெருமதிப்புடையரானார். குதிரைமலையைச் சார்ந்த அவனது நாட்டிற்குச் சென்று அவனைக் கண்டு இன்புற்றார். அவனும் அவரை வரவேற்றுத் தன்பால் சின்னாள் இருக்கச் செய்தான். அக்காலை, கொற்றனொடு பொரக் கருதிய பகைவர் போர்தொடுத்தற்குச் சமைந் திருந்தனர். அதனை ஒற்றரால் அறிந்தபோது, அவையிடத்திருந்த தாமோதரனார் அப் பகைவரது ஒற்றர் அறியுமாறு இப்பாட்டால் கொற்றனது வல்லாண்மையை விதந்தோதினார். இதன்கண், “பகைவர்களே, மலை நாடனாகிய கொற்றனைக் குறுகுதற்கு நினையாதீர்கள். அவன் விறலியர்க்கு முத்தையீந்து, தேறலால் பாண்கடும்பு அருத்தித்தன்னை நயந்தவர்க்கு மென்மைத் தன்மையும் நயவார்க்கு வன்மைத் தன்மையுமுடைனாய் விளங்குகின்றான். பகைவர்க்குக் கொல்லன் கூடத்தா லெறியும் உலைக்கல் போலும் வல்லாண்மை யுடையன்; அதனால் நீவிர் குறுகின் கெட்டழிவது திண்ணம்” என்று கூறியுள்ளார். மரைபிரித் துண்ட நெல்லி வேலிப் பரலுடை முன்றி லங்குடிச் சீறூர் எல்லடிப் படுத்த கல்லாக் காட்சி வில்லுழு துண்மார் நாப்ப ணொல்லென 5 இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப வலிதுரந்து சிலைக்கும் வன்கட் கடுந்துடி புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோ டிரட்டும் மலைகெழு நாடன் கூர்வேற் பிட்டற் குறுக லோம்புமின் றெவ்வி ரவனே 10 சிறுகண் யானை வெண்கோடு பயந்த ஒளிதிகழ் முத்தம் விறலியர்க் கீத்து நார்பிழிக் கொண்ட வெங்கட் டேறல் பண்ணமை நல்யாழ்ப் பாண்கடும் பருத்தி நசைவர்க்கு மென்மை யல்லது பகைவர்க் 15 கிரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன் விசைத்தெறி கூடமொடு பொரூஉம் உலைக்கல் லன்ன வல்லா ளன்னே. (170) திணை : வாகை; துறை : வல்லாண்முல்லை; தானை மறமுமாம். அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது. உரை : மரை பிரித் துண்ட நெல்லி வேலி - மரையாவாற் பிரித் துண்ணப்பட்ட நெல்லியாகிய வேலியை யுடைத்தாய்; பரலுடை முன்றில் - அதனது விதையாகிய பரலுடைத்தாகிய முற்றத் தினையுடைய; அங் குடிச் சீறூர் - அழகிய குடியை யுடைய சிறிய வூரின்கண்; எல் அடிப் படுத்த - பகற் பொழு தெல்லாம் வேட்டையாடித் திரிந்த; கல்லாக் காட்சி வில்லுழு துண்மார் நாப்பண் - கல்வியில்லாத காட்சியையுடைய வில்லாகிய ஏராலுழு துண்பாருடைய நடுவே; ஒல்லென - ஒல்லென்னு மோசையை யுடைத்தாக; இழி பிறப்பாளன் - இழிந்த பிறப்பினையுடைய புலையன்; கருங் கை சிவப்ப - தனது வலிய கை சிவப்ப; வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந்துடி - வலியான் முடுக்கிக் கொட்டும் வலியகண்ணை யுடைய அச்சத்தைச் செய்யும் துடி; புலி துஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்-புலி கிடக்கும் நெடிய மலையின்கண் பேராந்தையோடு கூடி யொலிக்கும்; மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் - மலை பொருந்திய நாட்டை யுடையனாகிய கூரிய வேலையுடைய பிட்டனை; குறுகல் ஓம்புமின் தெவ்விர் - அணுகுதலைப் பாதுகாமின் பகைவீர்; அவனே - அவன்தான்; சிறுகண் யானை வெண்கோடு பயந்த ஒளி திகழ் முத்தம் - சிறு கண்ணையுடைய யானையினது வெளிய கோடு தரப்பட்ட ஒளி விளங்கு முத்தத்தை; விறலியர்க்கு ஈத்து - விறலியருக்குக் கொடுத்து; நார் பிழிக் கொண்ட வெங்கள் தேறல் - நாரைப் பிழிந்து கொள்ளப்பட்ட விரும்பத்தக்க கள்ளாகிய தெளிவை; பண்ணமைநல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி - பண் பொருந்தின நல்ல யாழினையுடைய பாணர் சுற்றத்தை நுகர்வித்து; நசைவர்க்கு மென்மை யல்லது - இவ்வாறு தன்பால் பரிசில் நச்சி வந்தோர்க்கு மெல்லியனா யிருத்தலல்லது; பகைவர்க்கு; இரும்பு பயன்படுக்கும் கருங்கைக் கொல்லன் - இரும்பைப் பயன்படுத்து கின்ற வலிய கையை யுடைய கொல்லன்; விசைத் தெறி கூடமொடு பொரூஉம் - விசைத் தடிக்கப்பட்ட கூடத்தோடே யேற்று மாறு படும்; உலைக் கல் அன்ன - உலையிடத்து அடைகல் போலும்; வல்லாளன் - வலிய ஆண்மையையுடையன் எ-று. பிட்டன் நசைவர்க்கு மென்மையல்லது பகைவர்க்குக் கல்லன்ன வல்லாளனாதலால், தெவ்வீர், அவனைக் குறுக லோம்புமின் எனக் கூட்டுக வலிதுரந் தென்பதற்கு மாற்றார் வலியைக் கெடுத் தெனினுமமையும். நார் பிழிக் கொண்ட வென்பதற்கு, கோதைப் பிழிந்து கொண்ட வெனினு மமையும். விளக்கம் : மரையா - காட்டுப்பசு; ஒருவகை விலங்கென்பர் உ.வே. சாமி நாதையர். இது நெல்லிக்காயைத் தின்னுமிடத்து அதன் கொட்டையை வெளியே துப்பி விடுதலால், “மரையா பிரித்துண்ட நெல்லிப் பரல்” என்றார். மனைகளில் நெல்லி மரங்கள் வேலியாக வைக்கப்பட்டுள்ளன. “நெல்லி, மரையின மாரு முன்றில்” (குறுந்.235) என்று பிறரும் கூறுதல் காண்க. வேட்டுவரை வில்லுழு துண்மார் என்றார்; வில்லுடைய மறவரைத் திருவள்ளுவரும் “வில்லே ருழவ” ரென்பர். எல் அடிப் படுத்தல் - இரவுப்போது முற்றும் வேட்டையாடித் திரிதல். துடி மிக்க வன்மையும் கடிய வோசையு முடையதாகலின் இழிபிறப்பாளன் தன் வலி முழுதும் செலுத்தி முழக்குகின்றானென்றற்குக் “கருங்கை சிவப்ப, வலிதுரத்து சிலைக்கும்...துடி”யென்றார். துடி யொலியும்குடிஞையாகிய பேராந்தையின் ஒலியும் ஒப்ப எதிரொலிக்கும் என்பார், “குடிஞையோ டிரட்டும்” என்றார். யானையின் கோடு மிகவும் முதிர்ந்தவழி அதன் நுனியில் முத்துண்டாமென்ப; “முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற” (பதிற். 32) என்று சான்றோர் கூறுதல் காண்க. நார் பிழிக் கொண்ட வெங்கள் - நாரால் வடிகட்டிக் கொள்ளப்பட்ட வெவ்விய கள். வெம்மை - வேண்டற்பொருட்டு. விறலியர்க்கு முத்தும், பாணர்க்கு வெங்கட்டேறலும் கொடுக்கப் படுகின்றன. நசைவர், பரிசில் நச்சிவரும் இரவலர். கருங்கை யென்ற விடத்துக் கருமை, வன்மை. உலைக் கல், பட்டடைக் கல். “உலைக்கல் லன்ன வல்லாளன்” எனப் பிட்டங்கொற்றனைக் கூறியது, பகைவரால் தாக்கிக் கெடுக்க முடியாத அவனது மெய்வன்மை குறித்துநின்றது. நாரென்பதற்குக் கோது எனப் பொருள்கொண்டு, நார் பிழிக் கொண்ட வென்பதற்குக் கோதைப் பிழிந்து கொண்டென வுரை கூறினும் பொருந்து மென்றார். (170) 171. பிட்டங் கொற்றன் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், பன்முறையும் பிட்டங் கொற்றனைக் காண்டற்குச் செவ்வி பெறாதிருந்து முடிவில் ஒருகால் அச் செவ்வி பெற்று, தமது செவ்வி பெறா நிலையும் பெறுதலின் அருமையும் தமது சுற்றத்தின் வறுமையும் விளங்க இனியதொரு பாட்டைப் பாடிய செய்தியை முன்பு “நும்படை செல்லுங்காலை” (புறம். 169) யென்று தொடங்கும் பாட்டிற் கண்டோமன்றோ! அப்பாட்டின் நலத்தில் ஈடுபட்ட பிட்டங்கொற்றன், ஒருமுறைக்குப் பன்முறை அவர்க்குப் பெரும் பரிசில் நல்கினான். கண்ணனார்க்கு அவனது வண்மையின்பாலும் அன்புடைமையின்பாலும் பெருமதிப்புண்டாயிற்று. அவற்றை யெடுத்தோதிப் பாராட்டுதலில் அவர்க்கு விருப்பம் மிக வுண்டாயிற்று. அவரைச் சூழ்ந்திருந்த சான்றோர், “நீவிர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பாண்டியன் வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி யாகிய முடிவேந்தராற் சிறப்பிக்கப்பெறும் பெரும் புலமையுடையீராதலின், நும்பால் இக்கொற்றனது அன்பு பெரிதாக இருக்கலாம்; அவன்பால் நுமக்கு அன்பு பெரிதாக லென்னையோ?”வெனக் கூறும் கருத்தின ராயினர். அதனை யுணர்ந்துகொண்ட காரிக்கண்ணனார், இப் பாட்டின்கண், இக்கொற்றன் யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போ னாயினும், “பிறர்க்கும் அன்ன அறத்தகையன்; அவன் உள்ளடி முள்ளும் நோவ உறாற்க; ஈவோர் அரியராகிய இவ்வுலகின்கண், வாழ்வோர் வாழும் பொருட்டு அவன் தாள் வாழ்க” என்று குறித்துரைக்கின்றார். இன்று செலினுந் தருமே சிறுவரை நின்று செலினுந் தருமே பின்னும் முன்னே தந்தனெ னென்னாது துன்னி வைகலுஞ் செலினும் பொய்யல னாகி 5 யாம் வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன் தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப அருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்றன் இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும் களமலி நெல்லின் குப்பை வேண்டினும் 10 அருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே அன்ன னாகலி னெந்தை யுள்ளடி முள்ளு நோவ வுறாற்க தில்ல ஈவோ ரரியவிவ் வுலகத்து 15 வாழ்வோர் வாழவவன் றாள்வா ழியவே. (171) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. உரை : இன்று செலினும் தரும் - இன்று போகினும் தருவன்; சிறு வரை நின்று செலினும் தரும் - சிறிதுநாட் கழித்துப் போகினும் தருவன்; பின்னும் முன்னே தந்தனென் என்னாது - பின்னையும் முன்னே தந்தே னென்னாது; துன்னி வைகலும் செலினும் - பயின்று நாடோறும் செல்லினும்; பொய்யலனாகி - பொய் யானாகி; யாம் வேண்டியாங்கெம் வறுங்கலம் நிறைப்போன்- யாம் வேண்டினபடியே எம்முடைய வறிய கலத்தை நிரப்புவோன்; தான் வேண்டியாங்கு - தான் விரும்பினபடியே; தன் இறை உவப்ப - தன்னுடைய அரசன் உவப்ப; அருந் தொழில் முடியரோ - செய்தற்கரிய போர்த் தொழில்களை முடிப்பானாக; திருந்து வேல் கொற்றன் -திருந்திய வேலை யுடைய கொற்றன்; இனமலி கதச்சே களனொடு வேண்டினும் - இனமாகிய மிக்க வெவ்விய சேக்களைத் தொழுவோடே வேண்டினும்; களமலி நெல்லின் குப்பை வேண்டினும் - களத்தின்கண் மலிந்த நெல்லின் குவையை வேண்டினும்; அருங் கலம் களிற்றொடு வேண்டினும் - பெறுதற்கரிய அணிகலங் களைக் களிற்றுடனே வேண்டினும்; பெருந் தகை - பெரிய தகைமையை யுடையான்; பிறர்க்கும் அன்ன அறத் தகையன் - பிறர்க்கும் அத்தன்மைய அறஞ்செய்யும் கூற்றையுடையான்; அன்னன் ஆதலின் - அத்தன்மையனாதலால்; எந்தை உள்ளடி முள்ளும் நோவ உறாற்கதில் - எம்முடைய இறைவனது உள்ளடிக்கண் முள்ளும் உளப்பட நோவச் சென்று உறா தொழிய வேண்டும்; ஈவோர் அரிய இவ்வுலகத்து - ஈவோர் அரிதாகிய இவ் வுலகத்தின்கண்; வாழ்வோர் வாழ - உயிர் வாழ்வோர் வாழும் பரிசு; அவன் தாள் வாழிய - அவனது தாள் வாழ்வதாக எ-று . பிறர்க்கும் என்பது எச்சம். தில்: விழைவின்கண் வந்தது, திருந்துவேற் கொற்றன், பெருந்தகை, சேக்களனொடு வேண் டினும் நெல்லின் குப்பை வேண்டினும், அருங் கலம் களிற்றொடு வேண்டினும், நமக்கே யன்றிப் பிறர்க்கும் அத்தன்மைய அறஞ் செய்யும் தகுதியை யுடையன்; யாம் வேண்டியாங்கு எம் வறுங்கலம் நிறைப்போன்; தான் வேண்டியாங்குத் தன் இறை யுவப்ப, அருந்தொழில் முடிப்பானாக வேண்டுவது; எந்தை உள்ளடி முள்ளும் நோவ வுறாற்க; வாழ்வோர் வாழ அவன் தாள் வாழிய வெனக் கூட்டுக. வாழ்வோர் வாழ்வு என்றோதி, வாழ்வோர் வாழும் வாழ்வெல்லாம் அவன் தாள் வாழ்க வென் றுரைப்பினு மமையும். தாளை முயற்சி யெனினு மமையும். விளக்கம் : துன்னியிருந்து வைகலும் சென்றாலும் பொய்த்தல் இலன் என்றவிடத்து துன்னுதல் பயிலுதல் குறித்து நின்றது. பலகாலும் பயின்றார்க் கன்றித் துன்னியிருத்தல் அமையா தென்க. யாம் வேண்டுமாறே எமக்கு அளிப்பன், தான் வேண்டியவாறே தான் மேற்கொள்ளும் அரிய தொழில்களைச் செய்தல் வேண்டும் என்றும், அவ்வருந்தொழில் அவன்வேந்தர்க்கும் உவப்பினை யளித்தல் வேண்டுமென்றும் கூறினார். அருந்தொழில் முடித்தலின் பயன் அவன் வேந்தனது உவப்பைப் பெறுதலாதலின், “தன் இறை யுவப்ப” என்றார். இன்று இவன்பால் இருந்து பலகாலும் பரிசில் பெறும் நமக்கேயன்றி, ஓரொருகாற் போந்து வேண்டும் பிற பரிசிலர்க்கும் இவ் வண்ணமே நல்குவனென்றற்குப் “பிறர்க்கு மன்ன அறத் தகையன்” என்றார். பிறர்க்கு மென்ற உம்மை நம்மையு மெனத் தழுவி நிற்றலின், எச்சவும்மையாயிற்று. ஏர்க் களம் பாடுவோர்க்கு “இனமலி கதச்சேக் களனொடு ” தருதலும், நெல்லின் குப்பை தருதலும், போர்க்களம் பாடுவோர்க்கு அருங் கலம்களிற்றொடு நல்குதலும் பற்றி, இவற்றைப் பகுத்துக் கூறினார். அவனுக்குச் சிறு தீங்கும் வரலாகாதென மிக்க ஆர்வத்தோடு வாழ்த்துகின்றாராகலின், “எந்தை யுள்ளடி முள்ளும் நோவ வுறாற் கதில்ல” என்றார். செல்வர் பலராகிய வழியும் ஈதன் மனப்பான்மை யுடையார் மிகச் சிலரே யாதலால், “ஈவோ ரரிய இவ்வுலகத்” தென்றும், வாழ்வோர் இனிது உயிர் வாழ்தற்கு இவனது தோளாண்மையும் தாளாண்மையும் அரணும் ஆக்கமுமா மென்பார், “வாழ்வோர் வாழ அவன்தாள் வாழியவே” என்றும் கூறினார். இனி, வாழ்வோர் வாழ்வெல்லாம் இவன் வாழ்க என உரைப்பினும் அமையு மென்றார். (171) 172. பிட்டங்கொற்றன் வடமவண்ணக்கன் தாமோதரனா ரென்னும் சான்றோர் ஒருகால் பிட்டங்கொற்றனைக் கண்டு பாடி, அவன் தந்த பெருவளத்தால் இன்புற்றார். அக்காலை, தான் பெற்ற இன்பத் தைப் பாண னொருவன் தன் சுற்றத்தார்க் குரைக்கும் துறையில் வைத்து இப்பாட்டால் வெளிப்படுத்தியுள்ளார். பிட்டங் கொற்றன் பால் பரிசில் பெற்ற பாணனொருவன், “உலையேற்றி நிரம்பச் சோற்றை யாக்குக; மதுவையும் நிறைய வுண்டாக்குக; விறலியர் சிறந்த அணிகளை யணிந்து கொள்க; இனி நாளைக்கு என்செய்வே மென வெண்ணி யிரங்குதல் வேண்டா; இல்லை யாயின் பிட்டங்கொற்றன் நமக்கு வேண்டுவனவற்றை நிரம்ப நல்குவன்; நாம் செய்ய வேண்டுவதெல்லாம் பிட்டங்கொற்றன் வாழ்க; அவன் தலைவனான சேரமான் கோதை வாழ்க; இவரைப் பகைத்த மன்னர்களும் வாழ்கவென வேண்டுவதேயாம்” என்று கூறுகின்றான். இத் தாமோதரனார் வடநாட்டினின்றும் தமிழ்நாட்டிற் குடியேறிய வடமர் குடியிற் றோன்றி வண்ணக்கர் தொழில் மேற்கொண்டிருந்தவர். செந்தமிழ்ப் புலமை நலமும் சிறந்து சீரிய செய்யுள் செய்த சிறப்பால் சான்றோர் தொகையுள் ஒருவ ராயினார். தலைவன் புறத்தொழுக்கம் மேற்கொண்டானாக, அவன் பொருட்டுச் சென்ற பாணன், தலைவியின் தோழியை நோக்கி, “தலைவன் யாரினும் இனியன், பேரன்பினன்” என்று சொல்லி வாயில் வேண்டி நிற்க. அவனை மறுக்கும் தோழி, “உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல், சூல்முதிர் பேடைக் கீனில் இழைஇயர், தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின், நாறா வெண்பூக் கொழுதும், யாண ரூரன்” (குறுந் 85) என்னுமாற்றால், தலைவனது பரத்தைமையின் சிறப்பின்மையை வற்புறுத்துவது இவரது புலமை நலத்தை விளக்கிக் காட்டுகின்றது. இதன் நலங்கண்டு வியந்த மணிவாசகனார், சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக் கிற்றுணைச் சேவல் செய்வான், தேன்முதிர் வேழத்தின் வெண்பூக் குதர் செம்மலூரன்” (திருக்.319)என்றும், சேரமான் பெருமாள், “மனையுறை குருவி வளைவாய்ச் சேவல், சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி, ஈனி லிழைக்க வேண்டி யானா, அன்புபொறை கூர மேன்மேன் முயங்கிக் கண்ணுடைக் கரும்பி னுண்டோடு கவரும்” (திருவாரூர் மும்மணிக். 19) என்றும் தத்தம் நூல்களில் மேற்கொண் டுரைத்திருப்பதே இத்தாமோதர னாரின் புலமை நலத்துக்குச் சான்று பகருகின்றது. ஏற்றுக வுலையே யாக்குக சோறே கள்ளுங் குறைபட லோம்புக வொள்ளிழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக அன்னவை பிறவும் செய்க வென்னதூஉம் 5 பரியல் வேண்டா வருபத நாடி ஐவனங் காவலர் பெய்தீ நந்தின் ஒளிதிகழ் திருந்துமணி நளியிரு ளகற்றும் வன்புல நாடன் வயமான் பிட்டன் ஆரமர் கடக்கும் வேலு மவனிறை 10 மாவள் ளீகைக் கோதையும் மாறுகொண் மன்னரும் வாழியர் நெடிதே. (172) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது. உரை : உலை ஏற்றுக - உலையை யேற்றுக; சோறு ஆக்குக - சோற்றை ஆக்குக; கள்ளும் குறைபடல் ஓம்புக - மதுவையும் நிறைய வுண்டாக்குக; ஒள்ளிழை பாடுவல் விறலியர் கோதையும் புனைக - விளங்கிய அணிகலத்தையுடைய பாடுதல் வல்ல விறலியர் மாலையும் சூடுக; அன்னவை பிறவும் செய்க - அத் தன்மையன மற்றும் செய்க; என்னதூஉம் பரியல்வேண்டா- சிறிதும் இரங்குதல் வேண்டா; வருபதம் நாடி - மேல் வரக் கடவ வுணவை ஆராய்ந்து; ஐவனம் காவலர் பெய் தீ நந்தின் - ஐவனநெல்லைக் காப்பார் காவற்கிடப்பட்ட தீ அவ்விடத்துக் கெட்டகாலத்து; ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் - ஒளி விளங்கும் திருந்தின மாணிக்கம் செறிந்த இருளைத் துரக்கும்; வன்புல நாடன் - வலிய நிலமாகிய மலைநாட்டை யுடையவன்; வய மான் பிட்டன் - வலிய குதிரையை யுடைய பிட்டன்; ஆரமர் கடக்கும் வேலும் - பொருதற்கரிய போரை வெல்லும் வேலும்; மாவள் ஈகைக் கோதையும் - அவன் தலைவனாகிய வள்ளிய கொடையையுடைய கோதையும்; மாறுகொள் மன்னரும் நெடிது வாழியர் - அவனோடு பகைத்த வேந்தரும் நெடிது வாழ்க எ-று. பிட்டன் வேலும், கோதையும், மாறு கொள் மன்னரும் நெடிது வாழியர்; அதுவே வேண்டுவது; மேல்வரும் உணவைத் தேடி என்னதூஉம் பரியல் வேண்டா; ஆதலால் ஏற்றுக; ஆக்குக; ஓம்புக; கோதையும் புனைக; பிறவும் செய்க என மாறிக் கூட்டுக. மாறு கொள் மன்னரும் வாழிய ரென்ற கருத்து, இவன் வென்று திறை கொள்வது அவருளராயி னென்பதாம். விறலிய ரென்றது, ஈண்டு முன்னிலைக் கண் வந்தது. வேண்டா வென்பது வினை மேனின்றதொரு முற்றுச்சொல். அன்னவை பிறவும் என்றது, பூசுவன, உடுப்பன, பூண்பன முதலாயினவற்றை. வருவது நாடி யென்றோதி, ஐவனத்துக்கு வரும் இடையூறு நாடி யென்று அதனைக் காவ லென்பதனான் முடிப்பினும் அமையும். விளக்கம் : “பிட்டங்கொற்றனும் அவன் இறையாகிய சேரமான் கோதையும் அவரொடு மாறுபட்டுப் பொரும் மன்னரும் வாழ்வதே நாம் வேண்டுவது; உணவு கருதி வருந்தன்மின்; அது தானே கிடைக்கும்” என்றது, பிட்டங்கொற்றனது வள்ளன்மையால் விளைந்த பெருமிதம். பிட்டங்கொற்றன் தரும் உணவு குறையின், அவனிடத்தே அவன் இறைவனாகிய கோதை தரும் உணவு வந்து நம் பசி நீக்கும்; இவ்வாறு ஒருவர் தருவது குறையின், மற்றவர் தருவது நிறைக்கு மென்பது, “காவலர் பெய்தீ நந்தின், திருந்துமணி நளியிரு ளகற்றும்” என்பத னால் உள்ளுறுத் துரைத்தலின், “வருபதம் நாடி என்னதூஉம் பரியல் வேண்டா” என்றும், “மாவள்ளீகைக் கோதை” என்றும் கூறினார். பகை மன்னர் என்னாது “மாறுகொண் மன்ன” ரென்றது, பொருளால் மிக்குச் செருக்கி மாறுபடும் மன்னர் என்றவாறு. பொருள் மிகினல்லது மாறுகோள் உணர்வு பிறவாதென அறிக, அதனாற்றான் உரைகாரர் மாறுகொள்....அவருளராயி னென்பதாம்” என்றார். விறலியர் என்றது, அண்மை விளியாதலின் முன்னிலைக்கண் வந்த தென்றார். ஐவனத்துக்கு வருபதம் நாடிக் காவலைச் செய்பவரென முடிப்பினும் அமையும் என்பது. (172) 173. சிறுகுடிகிழான் பண்ணன் சிறுகுடி யென்பது, சோழநாட்டில் காவிரிக்கரையில் இருந்ததோர் ஊர். இச் சிறுகுடியில் வாழ்ந்த வேளாளர் தலைவன் இப் பண்ணன். இவன் போராண்மையும், கைவண்மையும் மிக வுடையவன். புலவர் பாடும் புகழ் பெற்ற இவனை மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார், கோவூர் கிழார், செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் என்ற சான்றோர்கள் பெரிதும் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். “தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன் பண்ணன்” (அகம். 54) எனக் கொற்றங்கொற்றனாரும், இவனது பேராண்மையை வியந்து, “வென்வேல் இலைநிறம் பெயர வோச்சி மாற்றோர், மலைமருள் யானை மண்டம ரொழித்த, கழற்கால் பண்ணன்” (அகம்.177) என்று செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனாரும் கூறுவர். மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். ஒரு கால் இவனைக் காணச் சென்றபோது இவன் அவரது “இடுக்கண் இரியல் போக” (புறம். 388) தான் உடையவற்றை நிரம்பக் கொடுத்துக் கொடை மேம்பட்டான். இப் பண்ணனுக்கும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனுக்கும் நெருங்கிய நட்புண்டு. இக்கிள்ளி வளவனைக் காணச் சென்ற கோவூர் கிழார், அவன் இரவலர்க்கு வழங்கும் கொடை நலத்தைப் பாராட்டலுற்றுச் சிறுகுடி கிழான் பண்ணன்பால் அவன் கொண்டிருந்த நட்பு நலத்தையும் உடன் கூட்டி “கைவள்ளீகைப் பண்ணன் சிறுகுடி”(புறம். 70) என்று பாராட்டி யுள்ளார். பண்ணன் சிறு குடிக்கு வடக்கே கான்யாறும் தண்ணீர்க் கயமும் இருந்தன. அவையும் சான்றோர்களால் குறிக்கப்பட் டுள்ளன. சோழ வேந்தனான குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நோக்க, சிறுகுடி கிழான் பண்ணன் எளியனாயினும், அவ்வளவன் இப் பண்ணனிடம் கொண்டிருந்த அன்புறு நட்புப் பண்ணனை ஓர் இனிய தீந்தமிழ்ப் பாட்டால் பெரிதும் பாடிப் பரவச் செய் துள்ளது. “இனையர் இவர் எமக்கு இன்னம்யா மென்று, புனை யினும் புல்லென்னும் நட்பு” (குறள். 790) என்பதை நன்குணர்ந் தவனாகலின், இச் சிறுகுடி கிழானான பண்ணன் தன்பொருட்டு மாற்றோருடைய மலைபோலும் யானைகளைப் போரிற் கொன்று சிறந்த மறப் பண்பினையோ, தன்பாற் கொண்ட அன்பினையோ எடுத் தோதாது, அவனது கொடை நலத்தையே விதந்தோது மாற்றால் தன் உள்ளன்பினை வெளிப்படுத்தக் கருதி இப்பாட் டினைப் பாடினான். பாடியவன் அதனையும் தன் கூற்றாகக் கூறாது பாணனொருவன் கூற்றில் வைத்துப் பாடியுள்ளான். இதன்கண், பண்ணன்பால் பரிசில் பெறப் போகின்ற பாணனொருவன், சிறுகுடியை யணுகிய அளவில், பண்ணன்பால் பரிசில் பெற்று வரும் பாணர் சிலரைக் காண்கின்றான். அவர்கள் பண்ணனை வாழ்த்திக்கொண்டு வருகின்றனர். அவர்களை ஒன்று வினாவக் கருதி, “யான் வாழும் நாளும் பண்ணன் வாழ் வானாக” என்று வாழ்த்திப், “பரிசில் பெற்ற பாணர்களே, இப் பாணனது சுற்றம் எய்தி வருந்தும் வருத்தத்தைக் காண்மின்; பண்ணன் மனையிலுண்டாகும் ஊணொலி யரவமும் கேட் கிறது; எறும் பொழுக்குப் போல இளஞ்சிறார்கள் சோறுடைக் கையராய் வேறுவேறாகப் போவதையும் காண்கிறோம்; இவற்றைக் கேட்டும் கண்டும் அமையாது கடும்பினது வருத்தம் மிகுதலால், பசிப்பிணி மருத்துவனாகிய பண்ணனது இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் எனப் பலகாலும் கேட்கின்றோம்; எங்கட்குச் சொல்லுங்கள்” என்று கேட்கின்றான். யான்வாழு நாளும் பண்ணன் வாழிய பாணர் காண்கிவன் கடும்பின திடும்பை யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன ஊணொலி யரவந் தானுங் கேட்கும் 5 பொய்யா வெழிலி பெய்விட நோக்கி முட்டை கொண்டு வற்புலஞ் சேரும் சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச் சோறுடைக் கையர் வீறுவீ றியங்கும் இருங்கிளைச் சிறாஅர்க் காண்டுங் கண்டும் 10 மற்று மற்றும் வினவுதுந் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே. (173) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது. உரை : யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய - யான் உயிர் வாழும் நாளையும் பெற்றுப் பண்ணன் வாழ்வானாக; பாணர்- பாணரே; காண்க இவன் கடும்பினது இடும்பை - காண்பீராக இந்தப் பரிசிலனது சுற்றத்தினது வறுமையை; யாணர்ப் பழு மரம் - புதுவருவாயை யுடைத்தாகிய பழுத்த மரத்தின் கண்ணே; புள் இமிழ்ந்தன்ன - புள்ளினம் ஒலித்தாற் போன்ற; ஊண் ஒலி அரவந்தானும் கேட்கும் - ஊணாலுண்டாகிய ஆரவாரந் தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி - காலந்தப்பாத மழை பெய்யுங் காலத்தைப் பார்த்து; முட்டை கொண்டு வற்புலம் சேரும் - தம் முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலத்தினை யடையும்; சிறு நுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்ப - மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்தை யொப்ப; சோறுடைக் கையர் - சோறுடைக் கை யினராய்; வீறு வீறு இயங்கும் - வேறு வேறு போகின்ற; இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் - பெரிய சுற்றத்தாரோடும் கூடிய பிள்ளைகளைக் காண்பேம்; கண்டும் மற்றும் மற்றும் வினவுதும் - கண்டு வைத்தும் எம் பசி வருத்தத்தானும் வழி வரல் வருத்தத்தானும் பின்னரும் பின்னரும் விதுப்புற்றுக் கேளா நின்றேம்; தெற்றென - தெளிய; பசிப்பிணி மருத்துவன் இல்லம் - பசி நோய் தீர்க்கும் மருத்துவனது மனை; அணித்தோ சேய்த்தோ - அணித்தோ தூரிதோ; எமக்குக் கூறுமின் - எங்களுக்கு நீர் சொல்லுமின் எ-று. காண்க இவனென்பது காண்கிவ னெனக் கடைக்குறைந்து நின்றது. தானென்பது அசைநிலை. இது பரிசில் பெறப்போகின் றான் வருகின்றவரைக் கண்டு வினவுவான் பண்ணனது இயல்பு கூறி வாழ்த்தியவாறு. இனி, பரிசிலன் தான், அரவமும் கேட்கும்; சிறாரைக் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும் வினவுதும்; நீர் எமக்குப் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின் என்னாநின்றான்;இவன் கடும்பினது இடும்பையைப் பாணர் காண்க; இங்ஙனம் எம்போலும் இரவலர் வறுமையைத் தீர்க்கின்ற பண்ணன் வாழிய வென்று பெறப் போகின்றானைக் கண்டு பெற்று வருகின்றான் பக்கப்பாணரை நோக்கிக் கூறியதாக வுரைப்பினு மமையும். இதற்கு என்னாநின்றானென ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது. அன்றியும், பரிசிற்குச் செல்கின்றான், பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்தோ செய்த்தோ வென்று பலகாலும் வினவ, அதனை யுட்கொண்டு ஊணொலி யரவமும் கேட்கும்; இருங் கிளைச் சிறார்க் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும் வினவுது மெனச் சாதியொருமையா லுளப்படுத்திக் கூறிப் பின்பு, இங்ஙனம் காணவும் கேட்கவும் படுவது நுமக்கு ஏற அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கென்று அவரை நோக்கி கூறிப், பின்பு இங்ஙனம் என் வறுமையும் தீர்த்து, இவன் வறுமையும் தீர்க்க விருக்கின்ற பண்ணன் யான் வாழும் நாளும்பெற்று வாழ்வானாக வெனப் பரிசில் பெற்று வருகின்றான் தன் பக்கப் பாணரை நோக்கிக் கூறியவாறாக வுரைப்பாருமுளர். இனி, செல்கின்ற பக்கப் பாணருள் ஒருவன் ஆண்டு நிற்கின்ற பாணன் பக்கப்பாணரை நோக்கிக் கூறியதாக வுரைப்பாரு முளர். ஈண்டும் இவனென்றது பரிசிலனை. மற்றும் மற்றும் வினவுந் தெற்றென என்று பாடமோதுவாரு முளர். விளக்கம் : மரம் பழுத்த விடத்துப் புள்ளினம் தத்தங் கிளையோடு போந்து கனியுண்டு களித்து ஆரவாரித்தல் இயல்பாதலின், “யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந் தன்ன வூணொலி யரவம்” என்றார்; “கனி பொழி கானங் கிளையொ டுணீஇய, துனைபறை நிவக்கும் புள்ளினம்” (மலைபடு 54-5) என்பது காண்க. எறும்பினம் தரையிலுள்ள அளைகளில் வாழ்வன வாதலாலும், மழைபெய்து விடின், அளைக் கண் நீர் புக்கு அவற்றின் முட்டைகளைச் சிதைக்குமாகலானும், மழை வரவு காட்டும் காற்றினைக் கொண்டு அறிந்து மேட்டிடத்து அளைகளில் தம் முட்டைகளைக் கொண்டு சேர்க்கும் இயல்பின வாம். யானைகள் தம் முடற்பெருமை குறித்துத் தம்முள் அணி வகுத்துச் சேறல் போல, எறும்புகளும் தம் மினப் பன்மை குறித்துச் சாரை சாரையாய் ஒழுங்குகொண்டு செல்லும் இயல்பினவாம். பெய்யா வெழிலி யென்று பாடமாயின், அதற்கு எறும்பு முட்டை கொண்டேகுங் காலத்துப் பெய்யாததுபோல் தோன்றும் எழிலி யெனக் கூறினும் அமையும். பெய்விடம் என்ற விடத்து இடம் காலம் குறித்து நின்றது. வன்புலத்தில் நீர் அளைகளில் சுவறாதாகலின், “வற்புலம் சேரும்” என்றார். பசியை நோயென்றும், உணவை மருந் தென்றும் வழங்குமாறுபற்றி, உணவு வழங்கும் பண்ணனை, “பசிப்பிணி மருத்துவன்” என்றார். விதுப்பு, விருப்பத்தாலுண்டாகும், உள்ளத்துடிப்பு. “இவன் கடும்பினது இடும்பை காண்க” அதற்கேற்பக் “கண்டும் மற்றும் மற்றும் வினவுவது” மாகலின், “தெற்றென எமக்குக் கூறுமின்” என்றான். அணித்தோ சேய்த்தோ கூறுமின் என்னாநின்றான் என்பதில் என்னாநின்றா னென ஒருசொல் வருவித்துப் பாணன் கூற்றினை முடித்தல் வேண்டிற்று. அதனால், “இதற்கு......... உரைக்கப்பட்ட ” தென்றார். பக்கப்பாணரை நோக்கிக் கூறு மிடத்து, “காண்க இவன்” என்றவிடத்து, இவன் என்றது பரிசிலனை யாதலின், “ஈண்டும்....... பரிசிலனை” யென்றார். ஈண்டுக் காட்டப்படும் உரை வேறுபாடுகள் அனைத்தும் பொருள் வகையில் பொருத்த முடையவே. 174. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் இத் திருக்கண்ணன் மலையமான் திருமுடிக்காரியின் வழி வந்தோனாவன். இவனைக் காரியின் மக்களுள் ஒருவனாகவும் கருதுகின்றனர். சோழவேந்தர்கட்குத் துணைபுரிந்து அதனால் ஏனாதி யென்னும் மாராயம் பெற்றதுபற்றி, இவனைச் சான்றோர் “சோழிய வேனாதி திருக்கண்ணன்” என்று குறிக்கின்றனர். மலையமான் திருமுடிக்காரி இறந்தபின் இவனே அவனது நாட்டுக்கரசனாகிச் சிறந்தான். இவனுடைய முன்னோர்கள், ஒருகால் சோழநாட்டு வேந்தன் ஒருவன் தன் பகைவரொடு பொருது வெல்லும் வலியழிந்து அஞ்சி யோடி மலையமான் களுக்குரிய முள்ளூரின் கண் ஒளித்திருந்தானாக, சோழநாடு ஞாயிற்றை யிழந்த உலகம்போல அரசனை யிழந்து வருந்துவ தாயிற்று. அதனை யறிந்த மலையமான் முள்ளூர்க்குச் சென்று சோழனைக் கொணர்ந்து சோழ நாட்டு வேந்தனாக்கி அவனது வெண் குடையும் அரசும் நிலைபெறச் செய்தனன். இத்தகைய சீரியோர் வழிவந்தவனாகலின், திருமுடிக்காரி யிறந்ததனால் பொலிவிழந்து வருந்திய குடிகட்கு இவன் வேந்தனாகி நலம் புரிந்தான். இவ்வாறு வேந்தாகியபோது இவனை மாறோக்கத்து நப்பசலையார் கண்டு இப்பாட்டைப்பாடி, இதன்கண், “காவிரி நாடு அரசின்றி அல்லலுற்ற காலத்து முள்ளூரில் இருந்த சோழவேந்தனைக் கொணர்ந்து சோழநாட்டவர்க்கு வேந்தனாக்கிய உரவோர் வழி வந்தோனே, நின் முன்னோனாகிய திருமுடிக்காரி உயர்ந்தோருலகம் பெயர்ந்தானாக, நாடு, மழையின்மையால் கோடையில் உயிர்கள் எய்தும் வருத்தம் போல மிக்க வருத்தத்தை எய்திற்று. கோடை வெப்பத்தைப் பெருமழை பெய்து போக்கிக் குளிர்ச்சியைச் செய்வதுபோல, நீ தோன்றி நாட்டவர்க்கு இன்பத்தைச் செய்தாய்; ஆதலால், நின்னாட்டவர்க்குக் குறை யொன்றும் இல்லையாம்” என்று கூறியுள்ளார். அணங்குடை யவுணர் கணங்கொண் டொளித்தெனச் சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணா திருள்கண் கெடுத்த பருதி ஞாலத் திடும்பைகொள் பருவர றீரக் கடுந்திறல் 5 அஞ்சன வுருவன் றந்து நிறுத்தாங் கரசிழந் திருந்த வல்லற் காலை முரசெழுந் திரங்கு முற்றமொடு கரைபொரு திரங்குபுன் னெரிதரு மிகுபெருங் காவிரி மல்ல னன்னாட் டல்ல றீரப் 10 பொய்யா நாவிற் கபிலன் பாடிய மையணி நெடுவரை யாங்க ணொய்யெனச் செருப்புகன் மறவர் செல்புறங் கண்ட எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை அருவழி யிருந்த பெருவிறல் வளவன் 15 மதிமருள்வெண்குடை காட்டி யக்குடை புதுமையி னிறுத்த புகழ்மேம் படுந விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூட் சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன் ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணீஇயர் 20 உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தன னாகலின் ஆறுகொன் மருங்கின் மாதிரந் துழவும் கவலை நெஞ்சத் தவலந் தீர நீதோன் றினையே நிரைத்தா ரண்ணல் கல்கண் பொடியக் கானம் வெம்ப 25 மல்குநீர் வரைப்பிற் கயம்பல வுணங்கக் கோடை நீடிய பைதறு காலை இருநில நெளிய வீண்டி உருமுரறு கருவிய மழைபொழிந் தாங்கே. (174) திணை : வாகை. துறை : அரசவாகை. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணனை* மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. திருக்கண்ணனுக்கு மாறாகத் திருகிள்ளியென்று பாடங்கூறுவதுமுண்டு அப்பாடம் பொருந்துவதென்று. உரை : அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென - பிறரை வருத்தும் அச்சத்தினையுடைய அசுரர் திரள் கொண்டு போய் மறைத்தார்களாக; சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது - சேய்மைக்கண்ணே விளங்காநின்ற தலைமையினை யுடைய ஞாயிற்றைக் காணாமையால்; இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து - இருளானது உலகத்தாரது கண்ணை மறைத்த வட்டமாகிய உலகத்தினது; இடும்பை கொள் பருவரல் தீர - நோய் கொண்ட துன்பம் நீங்கும் பரிசு; கடுந் திறல் அஞ்சன உருவன் - மிக்க வலியை யுடைய அஞ்சனம்போலும் நிறத்தை யுடைய திருமேனியையுடைய கண்ணன்; தந்து நிறுத்தாங்கு - அந்த ஞாயிற்றைக் கொண்டுவந்து இவ் வுலகத்தின்கண் அந்த காரம் நீங்கும் பரிசு ஆகாயத்தின்கண்ணே நிறுத்தினாற்போல; அரசிழந் திருந்த அல்லற்காலை - பகை வேந்தரோடு பொருது உடைந்து போதலால் தம் வேந்தனையிழந்துழலும் இன்னா மையையுடைய பொழுதின்கண்; முரசு எழுந் திரங்கும் முற்ற மொடு - முரசு கிளர்ந்து முழங்கும் செண்டு வெளியையுடைய கோயிலுடனே; கரையைப் பொருது இரங்கு புனல் நெரி தரு மிகு பெருங் காவிரி - கரையைப் பொருது முழங்கும் நீராலே யுடைந்து ஆழ்ந்தோடுகின்ற மிக்க பெரிய காவிரியையுடைய; மல்லல் நன்னாட்டு அல்லல் தீர - வளவிய நல்ல நாட்டினது துயரம் கெட; பொய்யா நாவின் கபிலன் பாடிய பொய்யாத நாவினை யுடைய கபிலனாற் பாடப்பட்ட; மை யணி நெடுவரை ஆங்கண் - முகிலணிந்த பெரிய மலையிடத்து; ஒய்யென - விரைய; செருப் புகல் மறவர் செல்புறங் கண்ட - போரை விரும்பும் மறவர் ஓடு புறங் கண்ட; எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை - இகழ்ச்சியற்ற தலைமையினை யுடைய முள்ளூரின் மலையுச்சி யின்கண்; அரு வழி இருந்த பெருவிறல் வளவன்- பிறரால் காண்டற்கரிய இடத்தின்கண் இருந்த பெரிய வென்றியையுடைய சோழனது; மதி மருள் வெண்குடை காட்டி - திங்கள் போலும் வெண்குடையைத் தோற்றுவித்து; அக் குடை புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந - அக் குடையைப் புதுமையுண்டாக நிலைபெறுவித்த புகழ் மேம்படுந; விடர்ப் புலி பொறித்த கோட்டை - வரை முழைஞ்சில் வாழும் புலியை யெழுதப்பட்ட இலாஞ்சனையுடைய கோட்டையையும்; சுடர்ப் பூண் - விளங்குதலையுடைய அணிகலத்தினையும்; சுரும்பார் கண்ணி பெரும் பெயர் நும் முன் - வண்டார்க்கப்பட்ட கண்ணியையும் பெரிய புகழினையுமுடைய நும்முன்னாகிய தந்தை; ஈண்டுச் செய் நல்வினை ஆண்டு உயர்ந்தோர் உலகத்துச் சென்று உணீ இயர் - இவ்வுலகத்துச் செய்யப்பட்ட நல்ல அறத்தின் பயனை ஆண்டாகிய தெய்வலோகத்துப் போய் நுகரவேண்டி; பெயர்ந்தனன் ஆகலின் - போனானாதலின்; ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் - நல்ல நெறியைக் கொன்ற பக்கத்தினையுடைய திசை யெங்கும் சூழ்வரும்; கவலை நெஞ்சத்து அவலம் தீர - கவலையுற்ற மனத்தின்கண் வருத்தம் கெட; நீ தோன்றினை - நீ வந்து தோன்றினாய்; நிரைத்தார் அண்ணல் - இணைந்த மாலையையுடைய தலைவ; கல் கண் பொடிய - மலையிடம் பொடிய; கானம் வெம்ப - காடு தீ மிக; மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்க - மிக்க நீரெல்லையையுடைய நீர்நிலைகள் பலவும் முளிய; கோடை நீடிய பைதறு காலை - இவ்வாறு கோடை நீடப்பட்ட பசுமையற்ற காலத்து; இரு நிலம் நெளிய - பெரிய நிலங் குழியும் பரிசு; ஈண்டி - திரண்டு; உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கு - உருமேறு முழங்கும் மின் முதலாயின தொகுதியையுடைய மழைசொரிந்தாற் போல எ-று. முற்ற மென்றது, அதனையுடைய கோயிலை. வெளி முற்ற மொடு வெண்குடை காட்டி யென இயைப்பினு மமையும். கோட்டை வெளியாகிய சுடர்ப்பூ ணென்றுமாம். ஞாயிற்றை அஞ்சன வுருவன் தந்து நிறுத்தாங்கு முற்றமொடு நாட்டு அல்லல் தீர, வளவன் வெண்குடை காட்டி அக்குடை நிறுத்த புகழ் மேம் படுந, நிரைத்தார் அண்ணல், நும்முன் பெயர்ந்தனனாகலின், நெஞ்சத்து அவலம் தீர, பைதறு காலை மழை பொழிந் தாங்கு நீ தோன்றினை; ஆதலால், இவ் வுலகத்திற்குக் குறையென்னை எனக் கூட்டி வினை முடிவு செய்க. அவுணர் கணங்கொண் டொளித்தென ஞாயிறு காணாத பருவரல் தீர அஞ்சன வுருவன் தந்து நிறுத்தாங் கென்பது, தேவர்களும் அசுரர்களும் பொருவழிப் பகலும் இராப்போல இயங்கித் தாம் போர் செய்தற்பொருட்டு அசுரர் ஞாயிற்றைக் கரந்தார்கள்; ஞாலம் அதனால் உள்ள பருவரல் தீரத் திருமால் அதைக் கொண்டுவந்துவிட்டதொரு கதை. விடர்ப்புலி பொறித்த கோட்டை யென்றதனால், சோழ னொடு தொடர்புபட்டு அவனுக்குத் துப்பாதல் தோன்றி நின்றது. ஆறு கொள் மருங்கின் என்று பாடமோதுவாரு முளர். விளக்கம் : சோழனுக்கு ஞாயிறும், சோழனில்லாத காவிரி நாட்டிற்கு இருள் சூழ்ந்த வுலகும், சோழனைக் கொணர்ந்த மலையமானுக்குத் திருமாலும் உவமை. சோழன் இல்லாதபோது அவனது தலைநகரும் வளஞ் சிறந்த நாடும், அல்லலுற்ற செய்தியை, “முரசெழுந் திரங்கு முற்றமொடு” என்றும், “புனல் நெரிதரு மிகுபெருங் காவிரி மல்லல் நன்னா”டென்றும் குறித்தார். மலையமானுடைய முள்ளூர் மலையைக் கபிலர் “பயன்கெழு முள்ளூர் மீமிசை” (புறம்.123) என்று பாடி யுள்ளார். முள்ளூர் மலையை அவர் காவலும் பகைவர்க்குக் கொள்ளற் கருமையும் உடைய தென்றற்கு, “செருப்புகல மறவர் செல்புறங் கண்ட, எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை” யென்றார். சோழன் ஒளிந்திருந்த இடத்தை “அருவழி” யென்று குறித்துள்ளார். வளஞ் சிறந்த நாடு முற்றும் தான் அடைதற்குரிய வகையில் வந்திருப்பவும், அதனை நினையாது சோழற்கே யுரித்தாக்கி அவனையே அரசனாக்கிச் சிறப்பித்தமையின், “புகழ் மேம்படுந” என்றார். சோழர்க்குரிய துணைவனாதலின், திருமுடிக்காரி தன் கோட்டையில் புலிப்பொறி வைத்திருந்தானாகலின், “விடர்ப் புலி பொறித்த கோட்டை” யென்றார். இவ்வுலகத்தே செய்யப்படும் நல்வினைக்குரிய இன்பம் மறுமையில் மேலுலகத்துத் தோன்றி நுகரப் படும் என்பதுபற்றி, “ஈண்டுச்செய் நல்வினை ஆண்டுச்சென் றுணீஇயர், உயர்ந்தோ ருலகத்துப் பெயர்ந்தனன்” என்றார். காரி இறந்தபின் நாட்டுக்குண்டாகிய நிலை “கோடை நீடிய பைதறு காலை” யாகவும், திருக்கண்ணன் தோன்றியது மழைபோல்வதாகவும், அவன் தலையளி மழை நீராகவும் குறிக்கின்றார். முற்றமென்றது, ஆகுபெயரால் அரசன் கோயிற்காகித் தலைநகரைக் குறித்துநின்றது. பண்டேபோல் தலை நகரையும், வெண்குடையையும் காட்டிப் புதுமையின் நிறுத்த வெனவுரைப்பினும் அமையும் என்றற்கு, “வெளிமுற்றமொடு வெண்குடை காட்டி யென இயைப்பினு மமையு” மென்றார். பெரும்பெய ரென்ற விடத்துப் பெயர் புகழ் குறிப்பது.(176) 175. ஆதனுங்கன் ஆதன் அழிசி, ஆதன் அவினி யென்பாரைப்போல ஆதன் நுங்கனும் ஒரு குறுநில மன்னன். வேங்கடத்தைச் சார்ந்த நாடு இவனதாகும். வேங்கடமலையும் இவற்கே யுரியதாகும். இவனுக்குப் பின் வந்தவனே வேட்டுவர் தலைவனான புல்லி யென்பான். புல்லி ஆதனுங்கனுக்கு முற்பட்டவனென்று கருதுபவரும் உண்டு. வேங்கடத்தில் இப்போது திருமால் கோயிலிருக்கும் பகுதியே ஆதனுங்கன், புல்லி முதலாயினோர் இருந்து நகரமைத்து வாழ்ந்த விடமாகும். சங்கச் சான்றோர் காலத்துக்குப் பின்னும் இளங்கோவடிகள் காலத்துக்கு முன்னு மாகிய இடைக்காலத்தில் இவ்விடத்தே திருமாலுக்குக் கோயிலுண்டாயிற்று. வேங்கடம் இன்றும் அழகிய சிறு சிறு அருவிகளாற் பொலிவதுபோலப் பண்டும் பொலிவுற்றிருந்த தென்பதை, “கல்லிழி யருவி வேங்கடம்” (புறம்.389) என்று சங்கச் சான்றோரும், “வீங்குநீரருவி வேங்கடம்” (சிலப். 11:41) மென்று இளங்கோவடிகளும் கூறுதல் காண்க. இவ்வாதனுங்கன் இரவலர் இன்மை தீர்க்கும் இனிய வுள்ளமும், சான்றோர் சால்பறிந்து பேணும் பெருந்தகைமையும் உடையன். இவன்பால் கள்ளில் ஆத்திரையனார் என்னும் சான்றோர் மிக்க அன்பு பூண்டவர். கள்ளில் என்பது தொண்டைநாட்டிலுள்ளதோர் ஊர். ஆத்திரையன் என்பது இவரது இயற்பெயர். இஃது ஆத்திரேயன் என்பதன் மரூஉ வென்றும், எனவே, இவர் பார்ப்பனராவாரென்றும் கருதுவர். இதனை ஆதிரையா னென்பதன் மரூஉவாகக் கோடற்கும் இடனுண்டு. ஒருகால் ஆத்திரையனார் தமது ஊராகிய கள்ளிலைவிட்டு வேங்கடத்துக்குச் சென்ற ஆதனுங்கனைக் கண்டு அளவளாவியிருந்தார். இருவரும் சொல்லாடுகையில் ஆத்திரை யனார் தமக்கு ஆதனுங்கன்பால் உள்ள அன்பினை யெடுத்தோத வேண்டிய நிலையுண்டாயிற்று. அவர், “இறைவ, நீ எப்போதும். என் நெஞ்சில் இடம் பெற்றுள்ளாய்; என் நெஞ்சைத் திறப்போர் நின்னை அங்கே காண்பார்; பலரையும் புரத்தலை மேற்கொண் டிருக்கும் அறத்துறையாகிய நின்னை ஒரு காலும் மறவேன்; மறத்தற்குரிய கால மொன்றுண்டாயின், அஃது என்னுயிர் என்யாக்கையை விட்டுப் பிரிந்தேகும் காலமாமே யன்றிப் பிறிதில்லை” யென்ற கருத்துடைய இப் பாட்டைப் பாடினார். பின்பு ஒருகால், இவர் வேங்கடஞ் சென்றபோது, ஆதனுங்கன் இறந்தானாக அவன் வழித்தோன்ற லாகிய நல்லேர் முதியன் என்பானைக் கண்டார். அவனும் இவரை வரவேற்று இன்புறுத்தச் சமைந்திருந்தான். அவனை இவர், “ஆதனுங்கன் போல நீயும் பசித்த வொக்கல் பழங்கண் வீட, வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும” (புறம்.389) என்று கூறு மாற்றால் ஆதனுங்கனைத் தாம் மறவாமையை விளக்கினார். ஆதியருமன் என்றொரு வள்ளலும் இவ் வாத்திரையனாரால் (குறுந்.893) பாராட்டப்படுகின்றான். எந்தை வாழி யாத னுங்கவென் நெஞ்சந் திறப்போர் நிற்காண் குவரே நின்னியான் மறப்பின் மறக்குங் காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் 5 என்னியான் மறப்பின் மறக்குவென் வென்வேல் விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர் திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக விடைகழி யறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும் 10 பலர்புர வெதிர்ந்த வறத்துறை நின்னே. (175) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது. உரை : எந்தை வாழி - என்னுடைய இறைவ வாழ்வாயாக; ஆதன் நுங்க -; என் நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவர் - யான் ஒன்றைச் சொல்ல நினைப்பின் நினது புகழல்லது சொல் லாமையான், என் நெஞ்சை வெளிப்படுத்திக் காணலுறுவோர் ஆங்கு நின்னைக் காணாநிற்பர்; நின் யான் மறப்பின் - நின்னை யுடைய யான் நின்னை மறப்பின்; மறக்குங்காலை - மறக்குங் காலமாவது சொல்லக் கேட்பாயாக; என் உயிர் யாக்கையிற் பிரியும்பொழுதும் - என்னுடைய உயிரானது என் உடம்பை விட்டு நீங்கும் காலத்தும்; என் யான் மறப்பின் - என்னை யான் மறக்குங்கால முண்டாயின்; மறக்கு வென் - அப்பொழுது மறப்பேனல்லது மறவேன்; வென்வேல் விண்பொரு நெடுங்குடை - வென்றி வேலையுடைய விசும்பைத் தோயும் நெடிய குடையினையும்; கொடித் தேர் - கொடி யணிந்த தேரினையுமுடைய; மோரியர் - நிலமுழுது மாண்ட மோரியரது; திண் கதிர் திகிரி திரிதர - திண்ணிய ஆர் சூழ்ந்த சக்கரம் இயங்குதற்கு; குறைத்த - குறைக்கப்பட்ட; உலக இடை கழி அறைவாய் - வெள்ளி மலைக்கு அப்பாலாகிய உலகத் திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண்; நிலைஇய- தேவர்களால் நிறுத்தப்பட்டு இருபொழுதும் ஒருபெற்றியே நிலைபெற்று விளங்கும்; மலர்வாய் மண்டிலத்தன்ன - பரந்த இடத்தையுடைய ஆதித்தமண்டலத்தை யொப்ப; நாளும் பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே - நாடோறும் இரவு பக லென்னாமல் பலரையும் காத்தலை ஏற்றுக்கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்துறையாகிய நின்னை எ-று. எந்தை வாழி, ஆதனுங்கனே, மண்டிலத் தன்ன அறத்துறை நின்னை, நின்னுடையேனாகிய யான் மறப்பின் மறக்குங் காலமாவது என் யான் மறப்பின் மறக்குவென்; ஆதலால், என் நெஞ்சைத் திறப்போர் நிற்காண்குவரெனக் கூட்டி வினை முடிக்க. மோரியராவர், சக்கரவாள சக்கரவர்த்திகள்; விச்சாதரரும் நாகருமென்ப. திகிரி திரிதரக் குறைந்த என்றோதி, சக்கர வாளத்திற்கப்பாற்பட்ட உலகத்து மோரியர் திகிரி ஊடறுத்துச் சேறலின் குறைந்த பிளவுபட்ட வாயிற்கு அப்பாலாகிய உதய கிரிக்கண் நிலைபெற்ற ஆதித்த மண்டலமென் றுரைப்பாரு முளர். விளக்கம் : நெஞ்சில் உள்ளது தான் சொல்வழி வெளிப்படும் என்பது குறித்து, “நின்புகழல்லது சொல்லாமையால்”எனக் காரணம் காட்டி னார். அன்பு செய்யப்பட்டார் அன்புடையார் நெஞ்சில் உறைவ ரென்பது, “நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல், அஞ்சுதும், வேபாக் கறிந்து” (குறள். 1128) என்பதனாலும் தெளியப்படும். உயிர் உடம்பின் நீங்குங் காலத்துக் கருவி கரணங்கள் ஓய்ந்து போதலின், “மறக்குங்காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும்பொழுது” என்றார். “என்னை யான் மறக்குங்கால முண்டாயின்” என்றவிடத்து, “உண்டாயின்” என்பது “உண்டாதல் என் செயலன்று; காலத்தின் செயல். அக்காலத்தே யான் மறப்பேனேயன்றி, உடம்பொடு கூடியிருக்குங்கால் ஒருகாலும் மறவேன்” என்பது. உயிர் உடம்பின் நீங்கியவழிப் பிறப்பு வேறுபடு தலாலும் மறதியுண்டா மென்பதை, “சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின், பிறப்புப்பிறி தாகுவ தாயின், மறக்குவேன் கொல்லென் காதல னெனவே” (நற். 397) எனச் சான்றோர் கூறுதல் காண்க. மோரியராவார் வடநாட்டில் வாழ்ந்த அரச பரம்பரையினர். அவர்கள் போர் குறித்துத் தம் நாட்டின் தென்பகுதி நோக்கிப் படையெடுத்து வருங்கால், ஆங்கே ஒரு மலைத்தொடர் குறுக்கிடவே, அதனை ஒருபுறத்தே வெட்டி வழிசெய்து படைக் கருவிகளும் பிறவும் கொணரும் சகடங்கள் இனிது வருவித்தனர். இச்செய்தியை மாமூலனாரும் பரங்கொற்றனாரும் குறித்துள்ளனர். இம் மோரியரைப் பற்றி உரைகாரர் ஞாயிற்று மண்டிலம் ஏனை எல்லா மண்டிலங்களினும் பெரிதென்பதற் கேற்ப, இச் சான்றோர், இதனை “மலர்வாய் மண்டிலம்” என்றது போற்றத்தக்கது. 176. ஓய்மான் நல்லியக்கோடன் ஓய்மான் என்பது ஓய்மா நாட்டை யுடையவன் என்று பொருள்படும். திண்டிவனத்தைச் சார்ந்த நாடு முற்காலத்தில் ஓய்மானாடென வழங்கிற்று. இதன்கண் மாவிலங்கை, வேலூர், எயிற்பட்டினம், கிடங்கில், ஆமூர் என்ற வூர்கள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. நல்லியக் கோடன் மாவிலங்கையில் இருந்து கொண்டு இந்நாட்டை யாட்சிபுரிந்து வந்தான். இவனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரும் புறத்திணை நன்னாகனாரும் பாடியுள்ளனர். இடைக்கழி நாடு ஓய்மானாட்டுக்குக் கிழக்கே கடற்கரைப் பகுதியாகும். இதனை இக்காலத்தும் இடைக்கழி நாடென்றே கூறுவர். கிடங்கிலில் இடிந்து சிதைந்த அகழியும் கோட்டையும் உண்டு. ஓய்மான் நல்லியக்கோடற்குப் பின் வந்தவன் ஓய்மான் வில்லியாதனென்பானாவன். அவனை நல்லியாதனென்றும் கூறுவர். நல்லியக்கோடனுடைய குணம் செயல் கொடைநலம் முதலிய பலவும் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரால் சிறுபாணாற்றுப் படையில் அழகுறக் கூறப்பட்டுள்ளன. “செய்ந்நன்றி யறிதலும் சிற்றினமின்மையும், இன்முக முடைமையும் இனியனாதலும், அஞ்சினர்க் களித்தலும், வெஞ்சின மின்மையும், ஆணணி புகுதலும், அழிபடை தாங்கலும், கருதியது முடித்தலும், காமுறப் படுதலும், ஒருவழிப் படாமையும் ஓடிய துணர்தலும், அரிவைய ரேத்த அறிவுமடம் படுதலும், அறிவு நன்குடைமையும், வரிசை யறிதலும், வரையாது கொடுத்தலும்,” (சிறுபாண். 207-17) பிறவும் இவனுடைய சிறப்புப் பண்புகளாக நத்தத்தனாரால் குறிப்பிடப்படுகின்றன. தன்னை யடைந்த இரவலரைத் தானே நேர் நின்று உண்பித்தலிலும், பகைமன்னரை வென்று அவர் தரும் திறைப் பொருளைக் கொண்டு நயவர், பாணர் முதலியோர்க் களித்து, அவர் வறுமை தீர்த்தலிலும் இவன் பெருவிருப்ப முடையவன். “நன்மா விலங்கை மன்ன ருள்ளும், மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள், உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்” என்றும், “பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை நல்லியக் கோடன்” என்றும், “குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச், செல்லிசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடன்” என்றும் பாராட்டுவர். இதனால் இவன் ஓவியர் குடியிற் பிறந்தவன் என்றும் அறியலாம். ஓவியர் மா நாடென்பது, ஓய்மா நாடென மருவியது போலும். நல்லியக்கோடன் மாவிலங்கையில் இருந்து ஆட்சிபுரிந்து வருகையில் புறத்திணை நன்னாகனார் என்னும் சான்றோர் இவனைக் காணப் போந்தார். அக்காலத்தே வேங்கடத்தைச் சூழ்ந்த நாட்டிலுள்ளதாய கரும்பனூர் சென்று அங்கேயிருந்த கரும்பனூர் கிழானைப் பாடிப் பரிசில் பெற்றுப் பன்னாள் தம் மனைக் கண்ணேயிருந்து இரத்தலை நினையாதிருந்த இவர், தன்பால் வரக் கண்ட நல்லியக்கோடன் இவர்க்கு மிக்க பரிசில் நல்கிச் சிறப்பித்தான். அதனால் வியப்பு மிகக்கொண்ட நன்னாகனார், தன் ஊழை வியந்து “வாழியெற் புணர்ந்த பாலே ” எனப் பாராட்டி, “பெருமா விலங்கைத் தலைவனான நல்லியக் கோடன் வறியவர் தொடுக்கும் புகழ்மாலை சூடுபவன்; அவனை நீ புரவலனாகப் பெற்றனை; இனி உனக்குக் குறைவில்லை” என்றுரைத்து, “பாரியது பறம்பிலுள்ள சுனைத் தெண்ணீர் தேடிச் சென்று கொள்ளவேண்டாமல் ஓரூரின்கண்ணே கிடைக்கு மாயின் வேண்டும்போது எடுத்துக்கொள்ளலாமென நெகிழ்ந் தொழிபவரைப் போல, நல்லியக்கோடன் நம் நாட்டவனாதலின், வேண்டும்போது சென்று கண்டுகொள்ளலாமெனப் பன்னாள் களைக் கொன்னே கழித்துக், கழிந்தவற்றை நினைந்து எனது நெஞ்சம் இரங்குகின்றது; அது வேண்டா இனி இன்றேபோல் என்றும் அவன் தொடர்பு பெற்று இனிதிருக்கலாம்” என்று கூறும் கருத்தால் இப்பாட்டைப் பாடியுள்ளார். புறத்திணை நன்னாகனார் தொண்டைநாட்டவர். புறத் திணைப் பாட்டுக்கள் பாடுவதில் சிறந்திருந்தமை பற்றிச் சான்றோர் இவரைப் புறத்திணை நன்னாகனார் எனச் சிறப்பித்திருக்கின்றனர். இவர் இவன் காலத்தும் இவற்குப் பிற்போந்த வில்லியாதன் காலத்தும் இருந்தவர். இவரது ஆழ்ந்த புலமைநலம் இப் பாட்டின் கண்ணும் பிறவற்றினும் இனிது விளங்கக் காணலாம். ஓரை யாயத் தொண்டொடி மகளிர் கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின் யாமை யீன்ற புலவுநாறு முட்டையைத் தேனா றாம்பற் கிழங்கொடு பெறூஉம் 5 இழுமென வொலிக்கும் புனலம் புதவிற் பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் 10 ஓரூ ருண்மையி னிகந்தோர் போலக் காணாது கழிந்த வைகல் காணா வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன் கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே. (176) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது. உரை : ஓரை ஆயத்து ஒண்டொடி மகளிர் - விளையாட்டுத் திரட்சிக்கண் ஒள்ளிய வளையையுடைய மகளிர்; கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின் - கேழற்பன்றி யுழுத கரிய சேற்றைக் கிளறின்; யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை - அதன் கண்ணே யாமை ஈனப்பட்ட புலால் நாறு முட்டையை; தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் - தேனாறும் ஆம்பலினது கிழங்குடனே பெறும்; இழும் என ஒலிக்கும் புனலம் புதவின் பெருமா விலங்கைத் தலைவன் - இழுமென்னும் அனுகரண முண்டாக முழங்கும் நீர் வழங்கும் வாய்த்தலை களையுடைய பெரிய மாவிலங்கை யென்னும் ஊர்க்குத் தலைவன்; சீறியாழ் இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை உடையை - சிறிய யாழையுடைய வறியோர் தொடுக்கும் புகழ் மாலை சூடும் நல்லியக்கோடனைத் துணையாக நீயுடையை யாதலான்; எற்புணர்ந்த பாலே வாழி - என்னைப் பொருந்திய விதியே நீ ஒரு குறையுடையை யல்லை வாழ்வாயாக; பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண்ணீர் - பாரியது பறம்பின்கண் குளிர்ச்சி யையுடைய சுனையிடத்துத் தெளிந்த நீர்; ஓரூர் உண்மையின்- போய்த் தேடிக்கொள்ள வேண்டாமல் ஓரூரின் கண்ணே யுண்டாதலின்; இகந்தோர் போல - அதனை யாம் வேண்டிய பொழுது உண்கின்றோமென்று நெகிழ்ந் திருந்தாரை யொப்ப; காணாது கழிந்த வைகல் - அவனைக் காணாதொழிந்த நாள்கள்; காணா வழி நாட்கு இரங்கும் -எனக்கு நாள்களாய்க் கழிந்தன வல்லவென்று உட்கொண்டு அவனொடு தொடர்ந்த நட்பு இன்றேபோல இடையறாது செல்லவேண்டுமென்று பின்வரு நாளைக்கு இரங்காநின்றது; என் நெஞ்சம் - என்னுடைய நெஞ்சம்; அவன் கழி மென் சாயல் - அவனது மிக்க மெல்லிய சாயலைக் காணுந்தோறும் நினைந்து எ-று. என் நெஞ்சம் அவன் சாயலைக் காணுந்தோறும் நினைந்து வழிநாட்கிரங்கும்; என்னைப் புணர்ந்த விதியே, நீ நல்லியக் கோடனை யுடையை யாதலால், நீ என்ன குறையையுடையை; நீ வாழ்வாயாக வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. “இல்லோர் சொன்மலை” யென்பதற்கு இல்லோர் சொல்லைச் சூடுமென்றும், “எற்புணர்த்த பாலே” என்றோதி என்னை அவனொடு கூட்டிய விதியே என்றும், “வழிநாட்டு இரங்கும்” என்பதற்கு இன்னும் இவனொடு தொடர்ந்த நட்பு இடையற்றுக் கழியுங் கொல் என்று இரங்குமென்றும் உரைப்பாரு முளர். விளக்கம் : ஓரை - விளையாட்டு, விளையாட்டு மகளிர் சேற்றைக் கிளறிய வழி, யாமை முட்டையும், ஆம்பற்கிழங்கும் தாமே வெளிப்படப்பெறுவர் என்றது ஓய்மா நாட்டவர் பெருமுயற்சியின்றியே அரிய பொருள்களைப் பெறும் நல்வளமுடைய ரென்றவாறு. யாமை தன் முட்டையை மறைவிடத்தே யீன்று புதைத்துவிடுமென்றும், அம் முட்டை வட்டுப் போலிருக்குமென்றும் கூறுப. வாய்த்தலைகளில் கதவமைத்து நீரை அளவறிந்து செலவிடுபவாதலின், விட்டவழிப் பெருகிவரும் நீரினது முழக்கத்தை விதந்து, “இழுமென வொலிக்கும் புனலம் புதவு” என்றார். பிறரும், “புனலம் புதவின் மிழலை” (புறம்.24) என்பது காண்க. “நல்லியக் கோடனை யுடையை” யென்று ஊழினைப் பாராட்டிக் கூறியது, அவனால் வேண்டுவனவற்றைக் குறைவறப் பெறுமாறு விளக்குதலின், நல்லியக் கோடனை, யுடையையாகலான், நீ ஒரு குறையை யுடையையல்லை” யென்றார். பாரி பறம்பிலுள்ள சுனைநீர் மிக்க தட்பமும் சுவையும் பெறற் கருமையு முடையதாகலின் சான்றோரால் “கைவண் பாரி தீம்பெரும் பைஞ்சுனை” (அகம். 78) என்றும், “பாரி பறம் பிற் பனிச்சுனைத் தெண்ணீர்” (குறுந்.196) என்றும் பாராட்டப்படும். உள்ளூரிற் பெறப்படும் அரிய பொருள் ஒருவர்க்கு அரிதாகாது மிக எளிதாய்க் கருதப்படுவது பற்றி, “ஒரூருண்மையின் இகந்தோர் போல” என்றார். காணும் நாளில் நல்லியக்கோடனது சாயலின் நலனைக் கண்டுகண்டு இதனைப் பெறாது பல நாள்கள் வீணே கழிந்தனவே என்றும், இனிவரும் நாள்களிலும் இந்நலன் இடையறாது உளதாக வேண்டுமே யென்றும் எழும் நினைவால் இரக்கம் உண்டாகலின், “காணாது கழிந்த வைகல் காணா” என்றும், “என் நெஞ்சம் வழிநாட் கிரங்கும்” என்றும் கூறினார். இது, “வாராக் காற் றுஞ்சா வரிற்றுஞ்சா ஆயிடை ஆரஞ ருற்றன கண்” (குறள். 1179) என்றாற் போல ஆராமை குறித்துநின்றது. சாயல் - மென்மை..இஃது ஆண்பாற்கும் உரித்தென்பது, “நீரினும் இனிய சாயற் பாரிவேள்” (புறம் - 105) என்பதனா லறியப்படும். 177. மல்லிகிழான் காரியாதி காரியாதி யென்பவன் மல்லி யென்னும் ஊர்க்குத் தலைவன். இது சீவில்லிபுத்தூர் நாட்டின்கண் உள்ளதோர் ஊர். இவன் வேளாண்குடி முதல்வனாய்ப் பரிசிலர்க்கு வேண்டுவன வழங்கிப் புலவர் பாடும் புகழ் பெற்றவன். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பன் விண்ணந்தாயனை யும் பாடிப் பரிசில் பெற்று மேம்பட்ட ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் காரியாதியின் ஊராகிய மல்லிக்குச் சென்று அவனது கைவண்மையைக் கண்களிப்பக் கண்டார். அங்கே இம்மல்லி கிழான் தந்த கள்ளை அவ்வூரிடத்துக் குறிய பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் நிரம்ப வுண்டு தேக்கெறிந்து புளிச்சுவையை விரும்பிக் களாப்பழத்தையும், துடரிப்பழத்தையும், விரவி யுண்பதையும், பின்பு கான்யாற்றின் எக்கர் மணற்குன்றேறியிருந்து குடநாட்டு மறவர் எறிந்து கொணர்ந்த எய்ப்பன்றியின் கொழுவிய நிணங் கலந்து சமைத்த சோற்றை வருவார்க் களித்துத் தாமும் பனையோலையில் வைத்து விடியற்காலையில் உண்பதையும் கண்டனர். உடனே அவர் நெஞ்சில் இவ்வா றுண்ணும் பரிசிலர், வேந்தர் நெடுநகர் முன்னே நின்று கண் சிவக்க, நாவுலரப் பாடிக் களிறு முதலிய பரிசில் பெறுவது தோன்றிற்று. வேந்தர் செய்யும் களிற்றுக் கொடையையும், இக்காரியாதி விடியலில் தரும் சோற்றையும் சீர் தூக்கினார்; “மன்னர் ஒண்சுடர் நெடுநகர், வெளிறு கண்போகப் பன்னாள் திரங்கிப், பாடிப் பெற்ற பொன்னணி யானை, பெரும்புலர் வைகல் சீர்சா லாது” என்ற கருத்தமைந்த இப் பாட்டைப் பாடி, இதன்கண் மேலே தாம் கண்ட காட்சியைச் சொல்லோவியம் செய்துள்ளார். ஒளிறுவாண் மன்ன ரொண்சுடர் நெடுநகர் வெளிறுகண் போகப் பன்னாட் டிரங்கிப் பாடிப் பெற்ற பொன்னணி யானை தமரெனின் யாவரும் புகுப வமரெனில் 5 திங்களு நுழையா வெந்திரப் படுபுழைக் கண்மாறு நீட்ட நணிநணி யிருந்த குறும்பல் குறும்பிற் றதும்ப வைகிப் புளிச்சுவை வேட்ட செங்க ணாடவர் தீம்புளிக் களாவொடு துடரி முனையின் 10 மட்டற னல்யாற் றெக்க ரேறிக் கருங்கனி நாவ லிருந்துகொய் துண்ணும் பெரும்பெய ராதி பிணங்கரிற் குடநாட் டெயினர் தந்த வெய்ம்மா னெறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் ளமலை 15 வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய இரும்பனங் குடையின் மிசையும் பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே. (177) திணை : பாடாண்டிணை; துறை : இயன்மொழி. மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது. உரை : ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் - விளங்கிய வாளையுடைய வேந்தரது ஒள்ளிய விளக்கத்தினையுடைய உயர்ந்த கோயிற் கண்; கண் வெளிறு போக - கண்ணொளி கெட; பன்னாள் - பன்னாள் நின்றுலர்ந்து; பாடிப் பெற்ற பொன்னணி யானை - அவ்விடத்துப் பாடிப் பெற்ற பொற்படை யணிந்த யானை; தமரெனின் யாவரும் புகுப - தமக்குச் சிறந்தாராயின் எல்லாரும் எளிதிற் புகப் பெறுவர்; அமரெனின் திங்களும் நுழையா- போராயின் திங்க ளாலும் நுழையப்படாத; எந்திரப் படு புழை - பொறிகளைப் பொருந்திய இட்டிய வாயிலை யுடைத்தாய்; கள் மாறு நீட்ட - கள்ளை யொருவர்க்கொருவர் மாறு மாறாக நீட்டிட; நணி நணி இருந்த குறும் பல் குறும்பின் - ஒன்றற்கொன்று அணித் தாயிருந்த குறிய பல அரணின் கண்ணேயிருந்து; ததும்ப வைகி - அக்கள்ளை நிரம்பவுண்டு காலங் கழித்து; புளிச் சுவை வேட்ட செங்கண் ஆடவர் - பின்னைச் செருக்கினால் விடாய் மிக்குப் புளிச்சுவையை விரும்பிய மதத்தாற் சிவந்த கண்ணை யுடைய ஆண்மக்கள்; தீம் புளிக் களாவொடு துடரி முனையின் - இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப் பழத்தைத் தின்று வெறுப்பின்; மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி - கரை மரத்துப் பைந்தேன் அரித் தொழுகுகின்ற நல்ல கான்யாற்றினது மணற்குன்றின் கண்ணேயேறி; கருங்கனி நாவல் இருந்து - கொய்துண்ணும் கரிய நாவற்பழத்தைப் பறித்து இருந் துண்ணும்; பெரும் பெயர் ஆதி - பெரிய பெயரை யுடையனாகிய ஆதியினது; பிணங்கரில் குட நாட்டு - பிணங்கிய அரில் பட்ட காட்டையுடைய குடநாட்டின்கண்; எயினர் தந்த எய்ம்மான் எறி தசை - மறவர் எய்து கொடு வரப்பட்ட எய்ப்பன்றியினது கடியப்பட்ட தசையினது; பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை - செவ்வியையுடைய நிணமிக்க புதிய வெண்சோற்றுக் கட்டியை; வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய - வருவார்க்கெல்லாம் ஒப்பக் கொடு வந்து சொரிய; இரும் பனங்குடையின் மிசையும் பெரிய பனை யோலையான் இயன்ற குடையிலே நுகரும்; பெரும்புலர் வைகறைச் சீர் சாலாது - பெரிய புலர்ச்சியையுடைய விடியற் காலத்துச் சீருக்கு நிகரொவ்வாது எ-று. எந்திரப் புழையையுடைய நணிநணியிருந்த குறும்பிற் கள்மாறு நீட்டத்ததும்பவுண்டு வைகிப் புளிச்சுவை வேட்ட ஆடவர் முனையின் எக்கரேறி யிருந்து நாவற்கனி கொய் துண்ணு மென இயையும். பாடிப் பெற்ற யானையும் பன்னாள் திரங்கிப் பெற்றமையின், பனங்குடையின் மிசையும் வைகறைச் சீர் சாலாதென்றார். வெளிறுகண் போகப் பாடியெனக் கூட்டி, வெண்மை இடத்தினின்றும் நீங்கப் பாடி யெனினு மமையும். வைகறைச்சீர் சாலாதென்றது, அக்காலத்து அவன் செய்யும் சிறப்பினை நோக்கி. “கைம்மாறு நீட்டி நணிநணி யிருந்து குறும்பல் குறும்பின் ததும்ப உண்டு வைகி” என்று பாட மோதுவாரு முளர். விளக்கம் : மன்னரை “ஒளிறுவாண் மன்ன” ரென்றும்,அவர் மனையை, “ஒண்சுடர் நெடுநக” ரென்றும் கூறியது தாம் வேண்டிய சிறப்பின்மை முடித்தற்கு. கண் வெளிறு போதல், மரம் வெளிறு போவதுபோலப் பயனாகிய ஒளி இல்லையாதல். ஒளியிழந்த கண் வெளிதாதலை இன்றும் காணலாம். கண் ணென்பதற்கு இடமெனப் பொருள் கொண்டு வெண்மைப்பகுதி கண்ணிடத்தினின்றும் நீங்க என்று உரைத்தலு முண்டென்பர் உரைகாரர். வெண்மை நீங்குதலாவது நெடுங்காலம் பாடுதலால் நன்கு சிவந்துவிடுதல். ஆதிக்குத் தமராயினர் இனிது புகுப என்றதனால் மாறுபட்டோர் புகுதற்கரிதாதலும் காட்டினார். காரியாதியின் அரண்களில் அமைந்திருந்த எந்திரப் படு புழையின் இயல்பு கூறுவார், போர்க்காலத்தே காவற் சிறப்பு இப் பெற்றித்து என்றதற்கு “அமரெனின் திங்களும் நுழையாது” என்றார். கள்ளை மிகவுண்டவழி அதன் களிப்பால் கண்சிவத்தலின், கள்ளுண்டு மதர்க்கும் ஆடவரைச் “செங்க ணாடவர்” என்றார். துடரி-ஒரு வகைப் பழம்; ஈச்சம் பழம் என்றும் கூறுப. இருந்து கொய்துண்ணும் என்பதைக் கொய்து இருந்துண்ணும் என மாறுக. பிணங்கு அரில் குடநா டென்பதில், அரில் என்பது ஆகு பெயராய் அரில் பட்ட காட்டை உணர்த்திற்று. அரில் பிணக்கு; செடி கொடிகள் தம்மிற் செறிந்து பின்னிக்கிடப்பது. பெருத்த என்புழிப் பெருத்தல் மிகுதல். இருள் மயங்கு வைகறையின் வேறுபடுத்த, “பெரும்புலர் வைகறை” யென் றார். பனையோலையாற் செய்யப்பட்டு உட்குடைவாக இருத்தலின், “பனங்குடை” எனப்பட்டது. இம் மல்லிகிழானுக்கு இப்போதுள்ள சீவில்லிபுத்தூர் உரியது. சீவில்லிபுத்தூர் வைத்தியநாதசாமி கோயில் கல்வெட்டுக் களிலும், ஆண்டாள் கோயில் கல்வெட்டுக்களிலும் “மல்லிநாட்டுச் சீவில்லிபுத்தூர்” என்றே குறிக்கப்படுகிறது. இந்த மல்லிநாட்டுப் புத்தூரே பின்னர் மல்லிபுத்தூர் என்றும், பிற்காலத்தில் வில்லி புத்தூரென்றும் மருவியது. வில்லிபுத்தூராகி வழங்கிய காலத்தில் பெரியாழ்வாரும், திரு ஆண்டாளும் தோன்றி இதனைத் தம்முடைய தெய்வப் பாடலால் சீவில்லிபுத்தூராகுமாறு செய் தனர். இவ்வூர்க்கு அவ்வப்போது மலையிலிருந்து வரும் பழையரே இப்பாட்டின்கட் கூறப்படும் குடவராக இருக்கலாம். இப் பழையர் “பளியர்” என இந்நாட்டவரால் வழங்கப்படு கின்றனர். 178. பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டியன் கீரஞ்சாத்தன் என்பான் முடிவேந்த னல்லன். பாண்டிவேந்தர்க் கீழ் இருந்த குறுநிலத் தலைவன். கீரன் என்பானுடைய மகனாதலின் கீரஞ்சாத்தன் எனப்பட்டான். ஆவூர் மூலங்கிழார் அவனைக் காணச் சென்றிருந்தபோது, சான்றோர்பால் அவன் காட்டிய அன்பு அவர் உள்ளத்தைக் கவர்ந்தது. போரில் அவன் தன் படைக் காரணமாக முந்துற்று நிற்கும் திறமும் இவர்க்கு நன்கு தெரியவந்தது. பின்பு அவன் செய்த சிறப்பினைப் பெற்று மகிழ்வெய்திய ஆவூர் மூலங்கிழார் அவன்பாற் கண்ட நலங்களை இப்பாட்டின்கண் குறித்துரைக் கலுற்று, “யானைகளும், போர்க் குதிரைகளும் நின்று செருக்கும் கீரஞ்சாத்தனுடைய நெடுநகர் முன்றிலில், மணல் பரந்து இனிய காட்சி வழங்கும்; அவ்விடத்தே புக்க சான்றோர் பசியின்மையின் உண்ணாராயின், தன்னொடு சூளுற்று, உண்டல்வேண்டு மெனப் பெரிதும் இரந்து வேண்டிக்கொள்வன். இவ்வாறு எம்பால் இனிய சாயலையுடையனாயினும், போரிடத்துத் தன் வீரர் தம் உள்ளூரிடத்தே குடிமயக்கத்தால் வஞ்சினங் கூறிவிட்டுப் பகைவர் எறியும் படைக்கஞ்சி யுடைந்து பிறக்கிடுவாராயின், கீரஞ்சாத்தன் சரேலென அவ்விடத்தை யடைந்து அவர்க்கு அரணாகத் தானே முந்துற்றுச் செல்வன்” என்று கூறுகின்றார். கந்துமுனிந் துயிர்க்கும் யானையொடு பணைமுனிந்து காலியற் புரவி யாலு மாங்கண் மணன்மலி முற்றம் புக்க சான்றோர் உண்ணா ராயினுந் தன்னொடு சூளுற் 5 றுண்மென விரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன் ஈண்டோ வின்சா யலனே வேண்டார் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பிற் கள்ளுடைக் கலத்த ருள்ளூர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறுபே ராளர் 10 அஞ்சி நீங்கும் காலை ஏம மாகத் தாமுந் துறுமே. திணை : வாகை;துறை : வல்லாண்முல்லை. பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது. உரை : கந்துமுனிந்து உயிர்க்கும் யானையொடு - கம்பத்தை வெறுத்து நெட்டுயிர்ப்புக் கொள்ளும் யானையொடு; பணை முனிந்து கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் - பந்தியை வெறுத்துக் காற்றுப் போலும் இயல்புடைய குதிரை ஆலிக்கும் அவ்விடத்து; மணல் மலி முற்றம் புக்க சான்றோர் - இடு மணல் மிக்க முற்றத்தின்கட் புக்க சான்றோர்; உண்ணா ராயினும்- அப்பொழுது உண்ணா ராயினும்; தன்னொடு சூளுற்று உண்மென இரக்கும் - தன்னுடனே சார்த்திச் சூளுற்று உண்மி னென்று அவரை வேண்டிக்கொள்ளும்; பெரும்பெயர்ச் சாத்தன் - பெரிய பெயரையுடைய சாத்தன்; ஈண்டோ இன் சாயலன் - எம் போல்வாரிடத்து இனிய மென்மையை யுடை யன் ; வேண்டார் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பில் - இங்ஙனம் மெல்லியனாயினும் விரும்பாதா ரெறியும் படைக் கலம் தம்மிற் கலந்த அஞ்சத்தக்க போரின்கண்; கள்ளுடைக் கலத்தர் - வீரபானத்தையுடைய கலத்தினராய்; உள்ளூர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறு பேராளர் - அதனையுடைய செருக்கான் ஊர்க்குள்ளே யிருந்து சொல்லிய வீரம் மேம் பட்ட வார்த்தையைப் போரின் கண் மறந்த சிறிய பேராண்மை யையுடையோர்; அஞ்சி நீங்குங்காலை - போர்க்களத்து அஞ்சிப் புறங்கொடுத் தோடுங் காலத்து; ஏமமாக - அவர்க்கு அரணாக; தான் முந்துறும் - தான் வலியான் முந்துற்று நிற்பன் எ-று. நெடுமொழி மொழிதலாற் பேராண்மையும், பின் அதனை மறத்தலாற் சிறுமையு முடைமையின், “சிறு பேராள”ரென்றார். “நெடுமொழி மறந்து ” என்பதூஉம் பாடம். விளக்கம் : முற்றம் புக்க சான்றோர் “உண்ணாராயினும்” என்றதற்கு ஏது இது வென்பார், “அப்பொழுது உண்ணாராயினும்” என்றார்; பின்னர் உண்ணாது போகாரென்றற்கு. தன்னொடு சூளுறுதலாவது; “உண்ணீராயின் யானு முண்ணேன்” என்பது. சிறுபேராளர் அஞ்சி நீங்குமிடம் ஆண்டாதலின், ஈண்டென்றதற்கு எம்போல்வாரிடம் என்றார். அஞ்சி நீங்கும் சிறுபேராளர், நெடுமொழி கூறிய காலமும் இடமும் குறிப்பார், “கள்ளுடைக் கலத்தர் உள்ளுர்க் கூறிய நெடு மொழி” என்றார். அஞ்சி நீங்கு மிடம் இது வென்றற்கு, “வேண்டார் எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்” பென்றார். ஞாட்பு-போர். ஈண்டு இன்சாயலனாகும் இக் கீரஞ்சாத்தன், தன் மறவர் அஞ்சுங் காலை, ஏமமாக முந்துற்றுத் தறுகண்மை மிக வுடையனாம் என்பார், “முந்துறும்” எனக் காரியத்தின் வைத்து உபசரித்தார். (178) 179. நாலை கிழவன் நாகன் பாண்டி நாட்டிலுள்ள நாலூரென்னு மூர்ப்பெயர் நாலை யென மரீ இயிற்று. இந்நாலூர் அருப்புக்கோட்டை நாட்டின்கண் உள்ளது. திருமுனைப்பாடி நாட்டிலுள்ள நாலூர் (A.R. 513/1921) இந் நாகனுக்குரியதன்று. அவ்வூர்க்குத் தலைவனான நாகன், நாலைகிழான் நாகன் என்று சிறப்பிக்கப்படுகின்றான். இவன் பாண்டி வேந்தனுக்குத் துணையாய் நின்று, படை வேண்டு மிடத்துப் படைத்துணை புரிந்தும், வினைசெயல் வேண்டுமிடத்து அதற்குரிய கருத்துக்களை வழங்கியும் விளங்கினான். இச்செயல் களால் இவற்குப் பெருஞ்செல்வ முண்டாக, அதனை இவன் பரிசிலர்க்கு வழங்கி நற்புகழ் நிறுவினான். இவன் காலத்திருந்த பாண்டியன் பெயர் தெரிந்திலது. அவன் மண் பல தந்த பாண்டியன் எனப்படுவதுபற்றி, அவனை நிலந்தரு திருவிற் பாண்டிய னெனக் கருதுபவரும் உண்டு. நிலந்தரு திருவிற் பாண்டியன் கடல்கோட் காலத்துக் குமரிக்கு வடக்கிலுள்ள தமிழகத்துக் குடியேறிய பரதவர்க்குத் தலைமை தாங்கிப் போந்து அந்நிலத்தை வென்று தந்தவன். அவனுக்குப் பின் பல வேந்தர் தோன்றிப் பாண்டி நாட்டைச் செம்மைப்படுத்தி மதுரையைத் தலைநகராகக், கொண்டனர். இவ்வாறு பாண்டிநாடு செவ்வையுற நிறுவப்பட்ட பின், இப்பாட்டிற் கூறப்பட்ட பாண்டியன் உளனாதலின் இவனை நிலந்தரு திருவிற் பாண்டிய னெனக் கோடல் பொருந்தாது. நாலைகிழவனான நாகனைக் காணப்போந்த வடநெடுந் தத்தனார் என்னும் சான்றோர், தமக்கு இந்த நாகனைப்பற்றிப் பலரும் கூறிய செய்தியை இப்பாட்டின்கண் வைத்துப் பாடி, இவன் தந்த சிறந்த பரிசிலைப் பெற்று இன்புற்றார். இதன்கண், “இவ்வுலகில் பாரி முதலிய வள்ளல்கள் இறந்தொழிந்தனர்; இரப்போர் குறிப்பறிந் தீயும் வேந்தரும் இலராயினர்; இந் நிலையில் வறுமையுற் றிரக்கும் என் மண்டையை ஈத்து மலர்ப் பவர்யாவருளர்” எனப் பரிசிலரைக் கேட்க, அவர் பலரும் “பாண்டியன் மறவனான நாலை கிழான் நாகன் உளன்; அவன் படை வேண்டும்வழி வாளுதவியும், வினை யாராய்ச்சி வேண்டும் வழி அறிவுதவியும், வேந்தனுக்குத் துணைபுரிபவன். தோலாத நல்ல புகழையுடையவன்; அவன்பாற் செல்க”என்றனர்; அதனால் யான் அவன்பாற் சென்று பரிசில் பெறுவேனாயினேன் என்ற கருத்தமைத்துள்ளார். வடநாட்டினின்றும் தென்னாட்டிற் குடி புகுந்த பழங்குடியிற் றோன்றியது பற்றி, நெடுந்தத்தனார், வட நெடுந்தத்தனார் என்று கூறப்படுகின்றார். ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென ஏலாது கவிழ்ந்தவென் னிரவன் மண்டை மலர்ப்போர் யாரென வினவலின் மலைந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த 5 திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன் படைவேண்டுவழி வாளுதவியும் வினைவேண்டுவழி அறிவுதவியும் வேண்டுப வேண்டுப வேந்தன் றேஎத் தசைநுகம் படாஅ வாண்டகை யுள்ளத்துத் 10 தோலா நல்லிசை நாலை கிழவன் பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவே னாகற் கூறினர் பலரே. (179) திணை : வாகை;துறை : வல்லாண்முல்லை. நாலை கிழவன் நாகனை வடநெடுந்தத்தனார் பாடியது. உரை : ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென - உலகத்தின் மேல் வண்மையுடையோர் இறந்தாராக; ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை - பிறர்பால் ஏலாது கவிழ்ந்த எனது இரத்தலை யுடைய மண்டையை; மலர்ப்போர் யார் என வினவலின் - ஏற்கும் பரிசு இட்டு மலர்த்த வல்லார் யார் என்று கேட்டலின்; மலைந்தோர் விசி பிணி முரசமொடு - தன்னொடு மாறு பட்டோரது வலித்துப் பிணிக்கப்பட்ட முரசத்தோடு; மண் பல தந்த - மண் பலவற்றையும் கொண்ட; திருவீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்- திருமகள் விரும்பிய நுண்ணிய தொழில் பொருந்திய ஆபரணத்தையுடைய பாண்டியன் மறவன்; படை வேண்டுவழி வாள் உதவியும் - அவனுக்குப் படைவேண்டிய விடத்து வாட்போரை யுதவியும்; வினை வேண்டுவழி அறிவு உதவியும் - அரசியற்கேற்ற கருமச்சூழ்ச்சி வேண்டியவிடத்து அமைச்சியலொடு நின்று அறிவு உதவியும்; வேண்டுப வேண்டுப - இவ்வாறு வேண்டுவன பலவும்; வேந்தன் தேஎத்து - அவ்வரசனிடத்துதவி; நுகம் அசைபடாஅ ஆண்டகை உள்ளத்து - தான் பூண்ட நுகம் ஒரு பாற் கோடித் தளராமற் செலுத்தும் பகடு போல ஆண்மையினும் சூழ்ச்சியினும் தளராத ஆண்மைக் கூறுபாடு பொருந்திய ஊக்கத்தினையும்; தோலா நல்லிசை நாலைகிழவன் - தோலாத நல்ல புகழையு முடைய நாலை கிழவன்; பருந்து பசி தீர்க்கும் நற்போர் திருந்து வேல் நாகன் - பருந்தினது பசி தீர்க்கும் நல்ல போரைச் செய்யும் திருந்திய வேலையுடைய நாகனை; பலர் கூறினர் - பலரும் சொன்னார் எ-று. பருந்து பசி தீர்க்கும் வேல் என இயையும். விளக்கம் : மண்டை-உண்கலம். அடி குவிந்து வாய்விரிந்திருப் பதனாலும், ஏற்கும்போது அதன் வாய் தோன்ற ஏந்துவதும், ஏலாப்போது கவிழ்ந்து வைப்பதும் இயல்பாதல் பற்றி, “ஏலாது கவிழ்ந்த மண்டை” யென்றும் இட்டு “மலர்ப்போர்” என்றும் கூறினார். நாகனைப் பாடப் போந்தவர், அவன் இறைவனான பாண்டியனை, “மண்பல தந்த பாண்டியன்” என்றது, அங்ஙனம் அவன் மண்பல கோடற்கும் இந் நாகனே படை வேண்டுவழி வாளும், வினை வேண்டுவழி அறிவும் உதவினா னென்பது வற்புறுத்தற்கு. “அசைநுகம் படாஅ” வென்றது குறிப்புருவக மாதலின், அதனை விரித்து, “தான் பூண்ட நுகம் ஒருபாற் கோடித் தளராமல் செலுத்தும் பகடுபோல ஆண்மையினுஞ் சூழ்ச்சியினும் தளராத” என்று உரை கூறினார். தீர்க்கு மென்னும் பெயரெச்சம், நற்போரைக் கொள்ளாது வேலைக்கொண்டு முடியும் என்பார், “பருந்து பசி தீர்க்கும் வேல் என இயையும்” என்றார். பருந்துபசி தீர்க்கும் வேல், திருந்து வேல் எனவும், நற்போர் நாகன் எனவும் இயையும். (179) 180. ஈர்ந்தூர்கிழான் கோயமான் ஈர்ந்தூர் என்பது இக்காலத்தே கொங்கு நாட்டில் ஈஞ்சூர் என வழங்குகிறது. கோயமான் என்பான், இவ்வூரிலிருந்து சோழ வேந்தர்க்குத் துணைபுரிந்தவன். இவன் பெருஞ்செல்வ னல்லனா யினும், இரப்போர்க்கு இல்லை யென்னாது ஈயும் சிறப்பால் புலவர் பாடும் புகழ் பெற்றான். இவன் முடிவேந்தர்பொருட்டுப் போருடற்றி, அதனால் வரும் பொருளைப் பரிசிலர்க்கு வழங்கும் பான்மையன். சேரமான் குட்டுவன் கோதை, சோழன் இலவந் திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னி, சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் ஆகிய முடிவேந்தரைப் பாடிப் பெரும் பரிசில் பெற்ற கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார், இவனையும் இப்பாட்டிற் பாடியுள்ளா ரெனின், இவன் கொடுக்கும் கொடைப் பொருளினும் கொடுத்தற் கமைந்த குணநலமே, பண்டை நல்லிசைச் சான்றோரை இவன்பால் வருவித்துப் பாடச் செய்ததென்பது தெற்றெனத் தெளியற்பாற்று. இவனைப் பாடி இவன் தந்த பரிசிலைப் பெற்று இன்புற்ற குமரனார், இப்பாட்டின் கண்ணே பரிசில் பெற்ற பாணனொரு வன், பெறாமையால் கொடுப்பாரை யறியும் வேட்கையனாய் வரும் வேறொரு பாணனுக்குக் கூறுவானாய், “பாண்பசிப் பகைஞன் ஒருவன் ஈர்ந்தையில் உள்ளான்; அவன் நிரம்பக் கொடுக்கும் அத்துணைச் செல்வமுடைய னல்லனாயினும், இல்லையென மறுக்கும் சிறுமையுடையனல்லன்; போரிற் புண்பட்டு வடு நிறைந்த யாக்கை யுடைவன்; நினக்கு வறுமை கெட விருப்பமாயின், எம்மொடு வருக; யாம் சென்று அவனை இரப்போமாயின், அவன் தன்னூர்க் கொல்லனை வருவித்து, அவற்கு நம் உண்ணா வயிற்றினைக் காட்டி, ‘உடனே வேல் வடித்துக் கொடு; யான் சென்று போருடற்றிப் பொருள் கொணர்ந்து, இவர்தம் பசி தீர்த்தல் வேண்டும்’ என்று சொல்லி யிரப்பான்” என்று பாடியுள்ளார். நிரப்பாது கொடுக்குஞ் செல்வமு மிலனே இல்லென மறுக்குஞ் சிறுமையு மிலனே இறையுறு விழுமந் தாங்கி யமரகத் திரும்புசுவைக் கொண்ட விழுப்பு ணோய்தீர்ந்து 5 மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கையன் கொடை யெதிர்ந் தீர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன் இன்மை தீர வேண்டி னெம்மொடு நீயும் வம்மோ முதுவா யிரவல 10 யாந்தன் னிரக்குங் காலைத் தானெம் உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க் கருங்கைக் கொல்லனை யிரக்கும் திருந்திலை நெடுவேல் வடித்திசி னெனவே. (190) திணை : வாகை; துறை : பாணாற்றுப் படையு மாம். ஈர்ந்தூர் கிழான் தோயன்மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. உரை : நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலன் - நாடோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வமும் உடையானல்லன்; இல்லென மறுக்கும் சிறுமையும் இலன் - இங்ஙனம் வறிஞனா யினும் இரந்தோர்க்கு இல்லையெனச் சொல்லி மறுக்கும் புன்மையு முடையனல்லன்; இறையுறு விழுமம் தாங்கி - தன் அரசுக்கு வந்துற்ற போரானமைந்த இடும்பைகளைத் தான் பொறுத்து; அமரகத்து இரும்பு சுவைக்கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து - அந்தப் போரின்கண் படைக்கலங்கள் சுவைக் கொண்ட சிறந்த புண்ணாகிய நோய் தீர்ந்து ; மருந்துகொள் மரத்தின் வாள் வடு மயங்கி - மருந்து வாங்கிக்கொள்ளப்பட்ட மரம்போல வாளுற்ற வடு ஒன்றோடொன்று விரவி; வடு வின்று வடிந்த யாக்கையன் - ஆண்மைக் குறைபாடின்மையின் வசையின்றி அழகுபெற்ற உடம்பை யுடையனாய்; கொடை யெதிர்ந்து - வண்மையை யேற்றுக்கொண்டு; ஈர்ந்தையோன் - ஈர்ந்தையென்னு மூரின்கண்ணே யிருந்தான்; பாண் பசிப் பகைஞன் - பாணரது பசிக்குப் பகைவனாயவன்; இன்மை தீரவேண்டின் - நினது வறுமை நீங்க வேண்டுவையாயின்; நீயும் வம்மோ - எம்முடனே நீயும் வாராய்; முதுவாய் இரவல - முதிய வாயையுடைய இரவல; யாம் தன் இரக்குங்காலை - யாம் தன்னை யிரக்கும்பொழுது; தான் எம் உண்ணா மருங்குல் காட்டி - தான் எம்முடைய உண்ணாத மருங்கினைக் காட்டி; தன்னூர்க் கருங்கைக் கொல்லனை இரக்கும் - தன்னுடைய ஊரின் வலிய கையினையுடைய கொல்லனை வேண்டிக் கொள்ளாநிற்கும் அவன்; திருந்திலை நெடுவேல் வடித்திசின் என - திருந்தின இலையையுடைய நெடிய வேலை வடிப்பா யாக எனச் சொல்லி எ-று. பாண் பசிப் பகைஞன், ஈர்ந்தையோன்; அவன் தன்னை யாம் இரக்குங்காலைத் தான் எம் மருங்கைக் காட்டி, வேலை வடித்திசின் எனக் கொல்லனை யிரக்கும்; இரவல, இன்மை தீரவேண்டின், எம்மொடு நீயும் வருவாயாக வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. இரக்குமென்று இழித்துக் கூறியது, பலகாலும் வடிக்க வேண்டுத லானும் பசிக்கு உதவ வேண்டுதலானும். விளக்கம் : நிரப்பாது கொடுத்தலாவது, இலனென்னும் எவ்வம் உரையா வாறு கொடுத்தல்; நாடோறும் தொடர்ந்து கொடுத்தாலன்றி, நிரப்பாது கொடுக்கும் கொடையாகாமையின், “நாடொறும் தொடர்ந்து கொடுக்கும்” என்று உரைத்தார். நிரப்பு-இன்மை. “இல்லென இரந் தோர்க்கொன் றீயாமை இளிவு” (கலி. 2) என்பவாகலின், இல்லென மறுத்தல் சிறுமையாயிற்று. இரும்பென்றது-இரும்பாற் செய்யப்பட்ட போர்க் கருவிகள். விழுப்புண்-முகத்தினும் மார்பினும் பட்ட புண். மருந்துகொள் மரம்-ஈண்டு அத்திமரம் என்க. அத்திமரத்தின் பால் புண்ணுக் கிடுப. அதனால் அதன் அடிப்பகுதி வெட்டுப்பட்ட வடுக்கள் நிரம்பியிருத்தலின், வடுப்பட்ட யாக்கைக்கு உவமையா யிற்று. வாஅள் வடு நிறைந்திருப்பினும், ஆண்மைக்குறைவா லுண்டாகும் வசையும் மெய்வலிக் குறைவாலுளதாகும் மெலிவும் இல்லாதவன் என்றற்கு, “வசையின்று வடிந்த யாக்கையன்” என்றார். தன் தாணிழற்கீழ் வாழும் கொல்லனைத் தான் இரத்தல் அமையா தாகலின், அதற்கு அமைதிகூறல் வேண்டி, “இரக்கும்...... உதவ வேண்டுதலானும்” என்று உரைகாரர் கூறினார். 181. வல்லார் கிழான் பண்ணன் வல்லார் என்பது ஓரூர். இவ்வூர்க்குத் தலைவன் பண்ணன். சிறுகுடி கிழான் பண்ணன்போல இவனும் கைவண்மையும், போர்வண்மையு முடையவன். சிறுகுடி சோழநாட்டு மென்புலத்து ஊராக, இவ்வல்லார் காட்டு நாட்டு வன்புலத் தூராகும். இவ் வூரைச் சுற்றி வலிய அரண் உண்டு. அதனைச் சார்ந்து காவற் காடும் உண்டு. இவ்வூர் மன்றில் விளா மரங்கள் நின்று தழைத்துக் காய்த்துக் கனிந்திருக்கும். அம் மன்றினைச் சார்ந்திருக்கும் மனைகளில் முன்றிலில் இவ்விளாவின் கனிகள் உதிரும்; அம் மனைகளின் வாழும் மறத்தியருடைய புதல்வர் விளவின் பழம் உதிருந்தோறும் ஓடிச் சென்றெடுப்பர். அதேகாலத்தில் புறத்தே காவற்காட்டில் வாழும் பிடியானை யீன்ற இளங்கன்று ஓடிவந்து விளவின் உதிர்ந்த கனியை யெடுக்கும். இத்தகைய நலம் சிறந்த ஊராகிய வல்லார் பண்ணனுக் குரியதாகும். இவனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியா ரென்னும் புலவர் ஒருகால் போந்து இனிய பாட்டுப் பாடிச் சிறப்பிக்க, இவனும் அவர்க்கு வேண்டும் பரிசிலை நன்கு மகிழ்வித்தான். இப்புலவர் தும்பியின் கருமையும், சிறுமையும், விதந்தோதிச் சிறப்புறப் பாடியது கொண்டு சான்றோர் இவரைச் சிறப்பாகக் கருந்தும்பியார் என அழைப்பாராயினர். அப்பாட்டுக் கிடைத்திலது. இப்பாட்டின்கண், சிறுகருந்தும்பியார் பாணர்க்குக் கூறும் முறையில் வல்லார் என்னும் ஊரின் அமைதியை யெடுத்தோதி, “பாணனே, பண்ணன் வல்லாரென்னும் ஊரின்கண் உள்ளான்; வறுமையால் உண்ணாது வருந்தும் நின் சுற்றம் உண்டு வாழ்தல் வேண்டுவையாயின், வல்லார் கிழானான பண்ணன் பகைப்புலம் நோக்கிச் செல்லுதற்குள்ளே உன் பசிக்குப் பகையாகிய பரிசில் பெறுதற்கு இப்போதே செல்வாயாக” என்று கூறுமாற்றால் போரெனிற் புகலும் பண்ணனது ஆண்மையினை விதந் தோது கின்றார். இனி, இத் தொகைநூற்கண்ணுள்ள “ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை” (புறம். 265) என்று தொடங்கும் கையறு நிலைப் பாட்டு இப்பண்ணன் கரந்தைப் போரிற்பட்டு நடுகல்லில் நின்ற நிலையைக் குறிக்கின்றது. அதனைப் பின்னர்க் காணலாம். மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் கருங்க ணெயிற்றி காதன் மகனொடு கான விரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும் பெருங்குறும் புடுத்த வன்புல விருக்கைப் 5 புலாஅ வம்பிற் போரருங் கடிமிளை வலாஅ ரோனே வாய்வாட் பண்ணன் உண்ணா வறுங்கடும் புய்தல் வேண்டின் இன்னே சென்மதி நீயே சென்றவன் பகைப்புலம் படரா வளவைநின் 10 பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே. (181) திணை : வாகை; துறை : பாணாற்றுப் படையு மாம். வல்லார்கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் பாடியது. உரை : மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் - மன்றத்தின் கண்ணே நிற்கப்பட்ட விளாவினது மனையிடத்து வீழ்ந்த விளாம்பழத்தை; கருங்கண் எயிற்றி காதல் மகனொடு - கரிய கண்ணை யுடைய மறத்தி காதல் மகனுடனே; கான இரும்பிடி கன்று தலைக் கொள்ளும்-காட்டுவாழும் கரிய பிடியினது கன்று வந்தெடுக்கும்; பெருங் குறும்பு உடுத்த வன்புல இருக்கை - பெரிய அரண் சூழ்ந்த வலிய நிலத்தின்கண் ஊராகிய இருப்பை யும்; புலாஅல் அம்பின் - புலால் நாறும் அம்பினையும்; போர் அருங்கடிமிளை - பொருதற்கரிய காவற்காட்டினையு முடைய; வலாஅ ரோன் - வல்லாரென்கிற ஊரிடத்தான்; வாய் வாள் பண்ணன் - வாய்த்த வாளையுடைய பண்ணன்; உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின் - நினது உண்ணப்பெறாத வறிய சுற்றம் உண்டு பிழைத்தல் வேண்டுவையாயின்; நீ இன்னே சென்மதி - நீ இப்பொழுதே செல்வாயாக; சென்று அவன் பகைப்புலம் படரா அளவை - போய் அவன் வேற்றுப் புலத்துச் செல்லாத எல்லையில்; நின் பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கு - நினது பசிக்குப் பகையாகிய பரிசிலை நினது வறுமையைக் காட்டினையாய்க் கொள்ளுதற்கு எ- று. அம்பிற் போரருங் கடிமிளை என்பதற்கு, அம்பாற் பொரு தற்கரிய கடிமிளை யெனினு மமையும். காட்டிப் பரிசில் கொள்ளு தற்கு இன்னே சென்மதி யெனக் கூட்டுக. மதி : முன்னிலை விளக்கும் அசை. விளக்கம் : மறவர் மனை மன்றத்தின் அருகே அதனைச் சார இருத்தலின், மன்றத்தில் நிற்கும் விளாமரத்தின் பழம் மனையின் முன்றிலில் விழுகிறதென்றார். பிடியானை கடிமிளையில் வாழ்வதென்றும், மறவர் இருக்கை புறஞ்சேரி யென்றும் கொள்க. அதனை யடுத் திருப்பது அகழும் அரணுமாதலின், இரண்டு மகப்பட “பெருங் குறும்பு” என்றார். கடி மிளையும் ஆழ் கிடங்கும் உயர் மதிலும் அம்புடை யெயிலும் என அரண்களை வகுத்துரைக்கும இயைபு கொண்டு, இவ்வாறு கூறப்பட்டது. “கடிமிளைக் குண்டு கிடங்கி, னெடுமதில் நிரை ஞாயில் அம்புடையாரெயில்” (பதிற். 20) எனப் பிறரும் கூறுதல் காண்க. புலால் நாறும் அம்பினையும், வாய் வாளையு முடைய பண்ணனென்றும், இருக்கையையும் கடிமிளையையு முடைய வலாரென்றும் இயைப்பது நேரிது. (181) 182. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி இளம்பெருவழுதி யென்பான், பாண்டிவேந்தருள் ஒருவன். கடலிற் கலஞ்செலுத்திப் பிறநாடுகட்குச் சென்று வாணிகஞ் செய்தலும், மீன் பிடித்தலும், முத்துக்குளித்தலும் பண்டைப் பாண்டியர் மேற்கொண்டிருந்த தொழில். பாண்டிவேந்தரும் இத்தொழிற்கு வேண்டும் ஆதரவு புரிந்துவந்தனர். தமிழரசர் கடாரம், சாவகம், ஈழம் முதலிய நாட்டின்கட் கலஞ்செலுத்திப் படை கொண்டு சென்றுபோருடற்றி, அரசு முறை நிறுவிய செய்தி, கடார முதலிய நாட்டு வரலாறுகள் குறித்தோதுகின்றன. அங்ஙனம் சென்ற கலங்களில் அரச குமரரும், பரத குமரரும் செல்வது வழக்கம். பாண்டிநாட்டு அரசகுமரருள், இளம்பெருவழுதி, இளமையிலே கற்பவை கசடறக் கற்று, அக்கல்விக்குத் தக ஒழுகும் மேம்பாடுடையவன். அவன் அவ்வப்போது பாடிய பாட்டுக்கள் சான்றோர்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்தன. அத்தகைய நலம் வாய்ந்த அவன் கலமூர்ந்து செல்கையில், கலங் கவிழ்ந்து மாண்டான். அதனால் அவனைச் சான்றோர் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியென்று குறித்தனர். கடலுள் மாய்வதற்கு முன், அவன் சான்றோர் சான்றாண்மையை வியந்து கூறுவானாய்த், தமக்கென முயலாது பிறர்க்கென முயலும் பெரியோர் உளராத லால் இவ்வுலகம் உளது; இன்றேல், இது மண்புக்கு மாயும் என்ற கருத்தால், “தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர் இந்திரர் அமிழ்தம் கிடைப்பதாயினும் அதனைத் தமித்திருந்துண்ணார்; யாரையும் வெறார்; பிறர் அஞ்சுவ தஞ்சுவர்; அஞ்சி அதனைத் தீர்த்தற்கண் சோம்பார்; புகழ்ப் பொருட்டுத் தம் உயிரையும் ஈவர்; பழியால் உலக முழுதாளும் உயர்வு வரினும் வேண்டார்; மனக் கவலையுங் கொள்ளார்; இவ்வியல்பினோடு பிறர் நலம் பேணும் பெரியோர் உளர்; அவரால் இவ்வுலகம் உளதா கின்றது” என்று இப்பாட்டைப் பாடியுள்ளான். உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர் அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் 5 புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர யர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந ருண்மை யானே. (182) திணை : பொதுவியல். துறை : பொருண்மொழிக் காஞ்சி. கடலுண் மாய்ந்த இளம்பெருவழுதி பாட்டு. உரை : உண்டால் அம்ம இவ்வுலகம் - உண்டேகாண் இவ்வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் - இந்திரர்க்குரிய அமிழ்தம் தெய்வத்தானாதல் தவத்தானாதல் தமக்கு வந்து கூடுவதாயி னும்; இனிதெனத் தமியர் உண்டலும் இலர் - அதனை இனி தென்று கொண்டு தனித்து உண்டலும் இலர்; முனிவிலர் - யாரோடும் வெறுப்பிலர்; பிறர் அஞ்சுவது அஞ்சித் துஞ்சலும் இலர் - பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அது தீர்த்தற்பொருட்டு மடிந்திருத்தலு மிலர்; புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் - புகழ் கிடைக்கின் தம்முடைய உயிரையும் கொடுப்பர்; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் - பழியெனின் அதனால் உலகமுழுதும் பெறினும் கொள்ளார்; அயர்வு இலர் - மனக்கவற்சியில்லார்; அன்ன மாட்சி அனைய ராகி - அப்பெற்றித்தாகிய மாட்சிமைப்பட்ட அத்தன்மைய ராகி; தமக்கென முயலா நோன்றாள் - தமக்கென்று முயலாத வலிய முயற்சியையுடைய; பிறர்க்கென முயலுநர் - பிறர் பொருட்டென முயல்வார்; உண்மை யான் - உண்டாதலான் எ-று. அஞ்சித் துஞ்சலு மில ரென மாறிக் கூட்டுக. இவ்வுலகம் பிறர்க்கென முயலுந ருண்மையான் உண்டெனக் கூட்டுக. ஆலும், அம்மவும், அசை. விளக்கம் : இந்திரரென்றது-ஈண்டுத் தேவர்களை. அமிழ்தம் அவரது உணவாகலின், அவர் விரும்பின் வந்தெய்தும்; வையத்தினும், தவம் மிகப் பெரியதாகலின், தவத்தால் வந்தெய்தலாம். அதனால், “தெய்வத்தானாதல் தவத்தானாதல் தமக்கு வந்து கூடுவதாயின்” என்றார், “வையமும் தவமும் தூக்கின் தவத்துக், கையவி யனைத்து மாற்றாது” (புறம்.358) என்று சான்றோர் கூறுதல் காண்க. “தெண்கட லமிர்தம் தில்லையானருளால் வந்தால்” (திருக்கோ.12) என்பத னாலும், அமுதம் மக்கள் முயற்சியால் பெறலாகாமை யுணரப்படும். யாவர்பாலும் அன்புடைய ரென்றற்கு “முனிவிலர்” என்றும், பிறர் அஞ்சுவதெல்லாம் பழியாகலின், அதற்குத் தாமும் அஞ்சினர். அச்ச முண்டாகிய வழிச் செயலறுதி யுண்டாதலின், அதனை மறுத்து, அஞ்சத்தகும் துன்பத்தைப் போக்கச் சோம்புதலுறார் என்பான், “துஞ்சலு மிலர்” என்றான், குற்றப்படலும் அதனால் மனத்தே கவலையும் எய்துவதும்இல ரென்றற்கு, “அயர்விலர்” என்றும், மேற் குறித்த குணஞ்செயல்களையுடையா ரென்பான், குணத்தை “அன்ன மாட்சி” யென்றும், செயல்களை “அனையராகி” யென்றும் கூறினான். (182) 183. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாண்டியருள் நெடுஞ்செழியன் என்னும் பெயருடைய வேந்தர் பலர் இருந்திருத்தலின், அவரின் வேறுபடுத்தற்கு இவனைச் சான்றோர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என இவனது வென்றிச்செயலை யெடுத்தோதிச் சிறப்பித்துள்ளனர். ஆரியப்படை யென்பது வடவாரிய நாட்டுப் படைவீரர்களை யாகும். தென்குமரிக்குத் தெற்கிலிருந்த தமிழகம் கடல் கோட் படவே, பாண்டியரும் சோழரும் சேரரும் “இடஞ் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப” நிலம் வேண்டி வடபுலத்தே முன்னேறிச் சென்று கொண்டிருக்கையில், வடவாரியரும் தென்பகுதி நோக்கி வந்த வண்ணமிருந்தனர். அங்ஙனம் வருவாரைக் கற்சிறைபோலத் தாங்கி நிற்றலும், அடிவீழ்ந்து புகலடைந்தோரைப் பேணி யோம்புதலும் தமிழ் மூவேந்தருடைய செயல்களாயின. ஆதலாற்றான் பண்டைத் தமிழ் நூல்கள், தமிழ்க் கருத்துக்கள் பலவாகவும் வடவாரியக் கருத்துக்கள் சிலவாகவும் கொண் டுள்ளன. தமிழ்க் கருத்துக்களே நிறைந்திருந்த இலக்கணங்களும் இலக்கியங்களும் குறிக்கொண்டு தேடியழிக்கப்பட்டன. வட வாரியக் கருத்துக்கள் சிலவாகவாயினும் உடைய பழந்தமிழ் நூல்களே உளவாயின. இப்போதுள்ள சங்க இலக்கியங்கள் நூற்றுக்கு மூன்று விழுக்காடேனும் வடவாரியக் கருத்துக்களை யுடையவா யிருத்தலாற்றான் நிலை பேறு பெற்றன. அடைக்கலம் புக்கு உட்பகையாய்ப் பொரவந்த ஆரியப்படையினை வஞ்சியாது பொருது வெற்றி கொண்ட மாண்பினால் இந்நெடுஞ்செழியன் “ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாய்” விளங்கலுற்றான். கோவலனைக் கொலைபுரிந்த பாண்டியன் நெடுஞ்செழியனையும் இளங்கோவடிகள், “வடவாரியார் படைகடந்து, தென்றமிழ்நா டொருங்குகாணப், புரைதீர்கற்பின் தேவி தன்னுடன், அரைசு கட்டி லிற்றுஞ்சிய, பாண்டியன் நெடுஞ்செழியன்” என்பர். இவ்வேந்தனது நாடு நானிலத் தைந்திணை வளமும் பெருக வுடைய தாயினும், கல்வி வளம் பெறாதாயின், சீரழியு மென் பதைத் தெளிய வுணர்ந்தான். நாட்டுமக்கள் கல்வியறிவுடைய ராதல் வேண்டி, “கல்வி வழங்கும் ஆசிரியனுக்கு உற்றவிடத் துதவுதல் வேண்டும்; வேண்டுமளவிற்கு மிகவே அவற்குப் பொருள் வழங்குதல் வேண்டும்; மிக்க பொருள் கொடுத்தவழி யும் ஆசிரியனை வழிபடுதற்கு வெறுப்படைதலாகாது; இவ் வாறெல்லாம் செய்து கல்வி கற்பது நன்று” எனத் தொடங்கி இப் பாட்டின்கண். கல்வியில்லாற்குத் தான் பிறந்த குடும்பத்திலே தன்னைப் பெற்ற தாயாலும் சிறப்பளிக்கப்படமாட்டாது என்றும், அவன் நாட்டு அரசு முறையும் கல்வியறிவுடையோனையே துணையாகக் கொள்ளுமே தவிரக் கல்லாதானை யேலா தென்றும், கற்றோன் கீழ்நிலையிற் பிறந்தானாயினும், அவற்குத் தலைமை யுண்டாகும்; மேல்நிலையிற் பிறந்தோனும் அக் கீழ்ப்பிறந்தான் தலைமையிற்றான் அக் கல்விகுறித்து வழி பட்டொழுக வேண்டுமென்றும், இவ்வாற்றால் குடும்பமும் சமுதாயமும் அரசியலும் யாவையும் கல்வி நலத்தால் சிறப்படைதலால் கற்றல் நன்று என்றும் வற்புறுத்தியுள்ளான். உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும் 5 ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பா லொருவன் கற்பின் 10 மேற்பா லொருவனு மவன்கட் படுமே. (183) திணை : பொதுவியல். துறை : பொருண்மொழிக் காஞ்சி. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் பாட்டு. உரை : உற்றுழி உதவியும் - தன் ஆசிரியற்கு ஓர் ஊறுபாடு உற்றவிடத்து அது தீர்த்தற்கு உவந்து உதவியும்; உறுபொருள் கொடுத்தும் - மிக்க பொருளைக் கொடுத்தும்; பிற்றை நிலை முனியாது கற்றல் நன்று - வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல் ஒருவருக்கு அழகிது; பிறப்பு ஓரன்ன உடன் வயிற் றுள்ளும் - அதற்கு என்னோ காரணமெனின், பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும்; சிறப்பின் பாலால் - கல்வி விசேடத்தால்; தாயும் மனம் திரியும் - தாயும் மனம் வேறுபடும்; ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் - ஒரு குடியின்கட் பிறந்த பலருள்ளே; மூத்தோன் வருக என்னாது -; அவருள் அறிவுடையோன் ஆறு -அவருள் அறிவுடையோன் சென்ற நெறியே;அரசும் செல்லும் அரசனும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்- வேறுபாடு தெரியப் பட்ட நாற்குலத் துள்ளும்; கீழ்ப்பால் ஒருவன் கற்பின் - கீழ்க்குலத்துள் ஒருவன் கற்பின்; மேற்பால் ஒருவனும் அவன் கட் படும் - மேற் குலத்துளொருவனும் இவன் கீழ்க்குலத் தானென்று பாராது கல்விப்பொருட்டு அவனிடத்தே சென்று வழிபடுவனாதலான் எ-று. விளக்கம் : உற்றுழி யுதவுக என்றும், உறு பொருள் கொடுக்க என்றும் அறிவுறுத்தவன் “பிற்றை நிலைமுனியாது கற்க” என்றது, இவ் விரண்டும் செய்தவழித் தன்பால் உயர்வும் இவற்றைப் பெறும் ஆசிரியன்பால் தாழ்வும் உண்டாதலால் அவ்வுயர்வுவழித் தோன்றும் மானம் ஆசிரியன் ஆணைவழி நின்று தாழ்ந்து கேட்டற்குத் தடை செய்யும்; அதனால் கல்வியறிவு நன்கு பெறப்படாமையோடு மாணாக்கர்க்குக் கடைமைநிலையும் உண்டாதலால், அம்மானம் அறநெறிப்பட்ட மானமாகாதென விலக்கிப் “பிற்றைநிலை முனியாது கற்க” என்றான். ஆசிரியற்கு உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் மாணாக்கன் தன் பொருணிலையில் உயர்ந்தானாயினும், அவ்வுயர்வை மனங்கொள்ளாது பணிவுடையனாதல் அறமாத லாலும், பணிவிலனாதல் அறத்துக்கு மாறாதலாலும், செல்வ மாணாக்கன் ஆசிரியன்பால் பணிவிலனாகும் மானம் “அறநெறிப் பட்ட மானமாகா” தாயிற்று. கல்வி பயிலும் மாணாக்கன் தன் ஆசிரியனுக்கு ஓரளவு பொருள் கொடுத்தற்குக் கடமைப்பட்டவனே. உரிய அளவு பொருள் கொடுத்தலின், ஆசிரியனுக்கு ஊறுபாடுற்ற விடத்து உதவுதல் வேண்டா எனக் கருதற்க என்றற்கு “உற்றுழி யுதவுதல் எல்லார்க்கும் பொதுவாய் அறமாதலின் அதனை முதலிலும், உறுபொருள் கொடுத்தல் செல்வமுடையார்க்கே இயல்தாகலின், அச்சிறப்புப்பற்றி அதனைப் பின் வைத்தும் மொழிந்தான். இக்காலக் கல்வித் துறையில் இவ்வுணர்வு அறவே யில்லாதொழிந்தமையின், ஆசிரியர்களை அடிமைக ளாக் கருதி யல்லற்படுத்தும் கீழ்மைப் பண்புடைய செல்வமாக்கள் கல்வித் துறைகட்குத் தலைவர்களாகத் தோன்றி, நாட்டு மக்களின் நல்லறிவை முளையிலே கெடுத்து, அவரிடையே ஒருமை யுணர்வும் சீர்த்த புலமையும் உண்டாகாவாறு செய்துவிட்டதை இக்காலநிலை யெடுத்துக் காட்டுகிறது. உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் கல்வி பயிலும் மாணாக்கற்குப் பிற்றைநிலை எற்றுக்கு வேண்டுவது? ஒருவர்பால் அரிய பொரு ளொன்று உளதாயின் அதனைப் பெற முயல்வோர் அவர்க்கு உற்றுழி யுதவி அவர் அன்பைப்பெற முயல்வர்; அன்புளதானாலன்றி அருமையுடைய பொருளைக் கொடுத்தற்கு அவர்க்கு மனமுண் டாகாது. அல்லதூஉம், அவ்வரிய பொருள் விலைகொடுத்துப் பெறற் பாலதாயின், அதன் விலையினும் மிக்க பொருளைக் கொடுத்துப் பெற முயல்வர். இஃது என்றும் காணக்கூடிய உலகியல் நிகழ்ச்சி. ஆசிரியன்பால் உள்ள பொருளோ, அவன் மனங் கனிந்து வழங்குதல் வேண்டு மெனத் தானே விழைந்து கொடுத்தாலன்றி, வேறு எவ் வகையாலும் எத்திறத்தாராலும் பெறக்கூடியதன்று. இதனைக் கொங்கு வேளிர், “அரசின் ஆகாது ஆணையின் ஆகாது” என்றது ஈண்டு நினைவு கூரத்தக்கது. அன்பும் வழிபாடுமே ஆசிரியன் பாலுள்ள அறிவுச் செல்வத்தைப் பெறுதற்கு வாயிலாவன. ஆனது பற்றியே இப்பாண்டியன், “உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும்” அன்பு செய்க; “பிற்றைநிலை முனியாது ” வழிபடுக என்று எடுத்த எடுப்பிலேயே வற்புறுத்தினான். திருவள்ளுவரும் “உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்” உயர்ந்தோர் என்றும், அவ்வாறு “கல்லாதவர் கடையரே” என்றும் கூறினார். பெற்ற தாய்க்குத் தன் வயிற்றிற் பிறந்த பிள்ளை எத்துணைப் பொலிவற் றிருப்பினும் மனவெறுப்புண்டாகாது; திருவள்ளுவர், “ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்” (குறள் - 903) என்பது காண்க. அத்தகைய தாயும் தன்மகன் கல்வியில்லாமையாற் கடையனானானென்பது காண அருவருப்புக் கொள்வளென்பான், “தாயும் மனம் திரியும் ” என்றான். “தம்மிற்றம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க் கெல்லாம் இனிது” (குறள் 78) என்பது, பெற்றோர்க்கும் கற்றோர்க்கும் நோக்கமாதலின், மாநிலத்து மன்னுயிர்க் கின்ப வாழ்வு வழங்கும் அரசு முறை அறிவுடையோனையே நோக்கி யியங்கும் என்பான், “அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்” என்றான். அறிவுடையோன், “படை வேண்டுவழி வாளுதவலும், வினை வேண்டுவழி அறிவுதவலும்” கடன் என்பதை வடநெடுந்தத்தனார் உரைத்தவாற்றால் இனிதறிய லாம். பார்ப்பார் அரசர் வணிகர் வேளாளரென்ற நால்வகை யினையும் “நாற்பால்” என்றான். இது வடவாரியப் பகுப்பு முறை. தமிழகத்தில் தமிழ் மக்களிடையே இப் பாகுபாடு இன்றும் கிடையாது; என்றும் இருந்ததில்லை. வடவாரிய நூல்களை யடிப்படையாகக் கொண்டெழுந்த “இந்து லா” (Hindu Law)வில் மட்டில் இருக்கிறது. வேளாளர் கீழ்ப்பாலாராயின், அவர்க்குரிய தொழிலான உழவு உயர் தொழிலாகத் திருவள்ளுவர் முதலாய சான்றோர்களால் உயர்த்துக் காட்டப்படமாட்டாது. கல்வியறிவு நாற்பாலார்க்கும் பொதுவாதலின், அறிஞனை இப்பாற்பாகுபாடு கட்டுப்படுத்தா தென்றற்கு, “கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பாலொருவனும் அவன்கட் படுமே” என்றான். “கீழ்ப்பா லொருவன் கற்பின்” என்றாற்போல “மேற்பா லொருவன் கல்லானாயின் அவனும்” என்னாது, “மேற்பா லொரு வனும்” என்றும், உரைகாரர், “மேற்குலத்துள் ஒருவனும்” என்றும் கூறியது, மேற்பாலா னொருவன் கற்றவனாயினும், கீழ்ப்பாலொருவன் கற்றுத் தலைவனாயின், அவன்பாற் சென்று வழிபடுதற்குரியன் என்பதை வற்புறுத்துகிறது. 184. பாண்டியன் அறிவுடை நம்பி பாண்டியன் அறிவுடை நம்பி பாண்டிநாட்டை யாண்டு வருகையில் சோழநாட்டு உறையூரில் கோப்பெருஞ் சோழனிருந்து ஆட்சி புரிந்தான். பாண்டிநாட்டுப் பிசிர் என்னும் ஊரிலிருந்து சான்றோரான ஆந்தையார் கோப்பெருஞ் சோழனைக் காணா மலே அவனுடைய குண நலனும் ஆட்சிநலமும் சான்றோராற் கேள்வியுற்று, அவன்பால் பெருநட்புப் பூண்டனர். அந்நட்பு “உயிர்கலந் தொன்றிய செயிர்தீர் நட்பாய்”க் கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்து உயிர்விட்டவழி இவரும் உயிர் விடுதற் கேது வாயிற்று. பாண்டிநாட்டுச் சான்றோராகிய பிசிராந்தையார்க்குத் தம் நாட்டு வேந்தனான பாண்டியன் அறிவுடைநம்பிபால் பிறவாமல், சோழநாட்டுக் கோப்பெருஞ் சோழன்பால் பெருநட்புள தாயிற்றெனின், இச் சான்றோருடைய அன்பைப் பெறுதற்குரிய நலம் இப்பாண்டியன்பால் இல்லை யென்பது தானே பெறப்படும். இப்பாண்டியன் தன் குடிகளிடத்து இறை வாங்கும் நெறியிற் பெருந்தவறு செய்தான். இவன்பால் சூழ்ந்த அரசியற் சுற்றத்தார் இவனை இடித்துரைத்து நெறிப்படுத்தும் நேர்மையின்றி, நீர் போகும் வழிப் புல் சாய்ந்து கொடுப்பதுபோல, இவன் விழைந்த வழியெல்லாம் நுழைந்து கொடுத்து அரசியலில் வாழும் மக்கட்குத் துன்பமுண்டாக்கினர். மக்கள்பால் வேந்தனுக்கு அன்பு சுருங்கியதாயிற்று. குடிகளை மிக வருத்தி இறை வாங்குவதில் அவ்வேந்தன் விருப்புடையனாயினான். இதனைக் காணப் பொறாத சான்றோர் பிசிராந்தையாரை அரசன்பால் விடுத்து நல் லறிவு கொளுத்துமாறு வேண்டினர். அவரும் அரசன் செயல் வகைகளைத் தாமே ஆராய்ந்தார். குற்றம் அரசனது இறை வாங்குந் திறத்திலும் அதற்குத் துணைசெய்யும் அரசியற் சுற்றத்தார் திறத்திலும் இருப்பது கண்டார். அரசன் ஆடல் பாடல் முதலிய இன்பத் துறைகளில் எளியனாயிருப்பதும் தெரிந்தது. இக்குறை களை அரசற் கெடுத்துரைத்து நெறிப்படுத்துவது நாட்டுக்கு இன்றியமையாத பணியும் சான்றோர்க்குத் தாம் செய்யக்கடவ கடனுமாதலை யுணர்ந்தார்; பாண்டியனைச் சென்று கண்டார். ஆந்தையார் கோப்பெருஞ் சோழன் முதலிய பெருவேந்தர் பாராட்டிக் கேண்மை கொள்ளும் புலமை நலம் சிறந்திருப்பதை நன்கறிந்தவனாகலின், வேந்தனும் அவரை விருப்போடு வரவேற் றான். அக்காலை, இப் பாட்டினைப் பாடிக் காட்டி அப்பாண்டி யனை நெறிப்படுத்தினார். இதன்கண், “களிற்றியானைக்கு உணவாகும் நெல், அது விளையும் நிலத்திலிருந்து கொணரப் பட்டுங் கவளங் கவளமாகக் கொள்ளப்படுமாயின், விளை நிலம் ஒருமா அளவினும் குறைந்த தாயினும் பல நாள்கள் அக் களிற்றுக்கு உணவு தரவல்லதாம். யானைக்கென்று நூறுமா நிலத்தை விட்டு நெல் விதைப்ப, அது விளைந்து சாய்ந்து கிடக்கையில் அதனைத் தனியே மேயவிடின், அதன் வாய் புகுமளவினும் கால்களால் கெடுவது மிகுதியாகும்; இவ்வாறே வேந்தனும் தான் பெறுதற்குரிய அரசிறையை நெறியறிந்து முறையே கொள்வானாயின், நாடு பெரும் வளம் படைத்துச் செல்வத்தாற் புகழ் பெறும்; அவ்வேந்தன் நாடோறும் வரிசை யறியுந் திறமில்லாச் சுற்றம் சூழத்தானும் மெல்லியனாய்க் குடிகள்பால் அன்பின்றி மிக்க இறையை வாங்கலுறுவானாயின், யானை புக்க விளை நிலம் போல, அவற்கும் பொருள் சேராது; நாடு கெட்டழியும்” என்று செவியறியுறுத்துள்ளார். காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் நூறுசெறு வாயினுந் தமித்துப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் 5 அறிவுடை வேந்த னெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் 10 யானை புக்க புலம்போலத் தானு முண்ணா னுலகமுங் கெடுமே. (184) திணை : பாடாண்டிணை; துறை : செவியறிவுறூஉ. பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது. உரை : காய் நெல் அறுத்துக் கவளங் கொளின் - காய்த்த நெல்லை யறுத்துக் கவளமாகக் கொள்ளின்; மா நிறை வில்லதும் - ஒரு மாவிற் குறைந்த நிலத்திற் கதிரும்; பல்நாட் காகும் - பல நாளைக்காகும்; நூறு செறு வாயினும் - நூறு செய்யாயினும்; தமித்துப் புக்கு உணின் - யானை தனித்துப் புக்கு உண்ணுமாயின்; வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் -அதனது வாயின்கட் புகுந்த நெல்லினும் கால் மிகவும் கெடுக்கும்; அறிவுடை வேந்தன் - அப்பெற்றியே அறிவுடைய அரசன்; நெறி அறிந்து கொளின் - இறை கொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின்; நாடு கோடியாத்துப் பெரிது நத்தும் - அவன் நாடு கோடிப் பொருளினை யீட்டிக்கொடுத்துத் தானும் மிகவும் தழைக்கும்; கிழவன் மெல்லியனாகி - வேந்தன் அறிவால் மெல்லியனாகி; வைகலும் - நாடோறும்; வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு - தரமறியாத உறுதி கூறாது அவன் விரும்புவதனையே தானும் கூறும் ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி; பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் - அன்பு கெடக் கொள்ளும் பொருட் டொகுதியை விரும்பின்; தானும் உண்ணான் உலகமும் கெடும் - தானும் உண்ணப்பெறான் உலகமும் கெடும் எ-று பரிவு தவ என்றோதி, அக்குடிகட்கு வருந்த மிக வென்று உரைப்பாரு முளர். விளக்கம் : மா, குழி, வேலி யென்பன நிலவளவை வகை. இருபது மா கொண்டது ஒரு குழி; நூறு குழி கொண்டது ஒரு வேலி. செய்யென்பது ஒரு தளை. கோடி,மிக்கதோர் அளவினைக் குறிப்பது. நந்தும்-, தழைக்கும்; நந்துதல் இப்பொருட்டாதல், “நத்தம்போற் கேடு முளதாகும் சாக்காடும்” (குறள். 235) என்பதனாலு மறியப்படும். மெல்லியன், அறிவால் வன்மையில்லாதவன்; “வெள்வே லண்ணல் மெல்லியன் போன்ம்” (பதிற். 51) வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர்” (குறள். 528) என்பதனால் வரிசையறிதல் இன்றியமையாமை யறிக. இப்பாட்டின் கருத்தையே, “வாய்ப்படுங் கேடுமின்றாம் வரிசையி னரிந்து நாளும், காய்த்தநெற் கவளந் தீற்றின் களிறுதான் கழனி மேயின், வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளின், நீத்தநீர் ஞாலமெல்லா நிதிநின்று சுரக்கும் மன்றே” (சீவக.2907) என்று திருத்தக்கதேவர் கூறுதல் காண்க. 185. தொண்டைமான் இளந்திரையன் கச்சியைத் தலைநகராகக்கொண்ட தொண்டைநாட்டு வேந்தர்கள் தொண்டைமான் என்று சொல்லப்படுவர். அவர் களைத் தொண்டையர் என்றும் வழங்குவர். இவ்விளந்திரையனை யும் சான்றோர் “தொண்டையோர் மருக” என்பர். தொண்டை நாட்டுக்கு வடக்கெல்லை வேங்கடமாகும். “வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர், இனமழை தவழும் ஏற்றரு நெடுங் கோட்டு, ஓங்குவெள் ளருவி வேங்கடம்” (அகம். 213) எனச் சான்றோர் கூறுதல் காண்க. இதற்குத் தென்னெல்லை பெண்ணை யாறும், மேலெல்லை வடார்க்காட்டையும் சேலமா நாட்டையும் பிரிக்கும் சவ்வாது மலைத்தொடருமாமென்பது கல்வெட்டுக் களால் அறிகின்றோம். இத் தொண்டையரை, “உரவுவாள் தடக்கைக் கொண்டி யுண்டித் தொண்டையோர்” (பெரும்பாண் 454,5) என்றும், “பொருவார் மண்ணெடுத் துண்ணும் அண்ணல் யானை வண்டேர்த் தொண்டையர்” (குறுந். 260) என்றும், “வினை நவில் யானை விறற்போர்த் தொண்டையர்” (அகம். 213) என்றும், சான்றோர் கூறுவதை நோக்கின், இத் தொண்டையர் யானைப்படை கொண்டு பெரும்போ ருடற்றும் சிறப்புடைய ரென்பது தெளிவாம். அதியமான் நெடுமானஞ்சியின் பொருட்டு ஒளவையார் தூது சென்றதும், இத் தொண்டைமான்களில் ஒருவனிடமேயாகும். இத் தொண்டைமான்களில் இளந்திரையன் என்பவன் மிக்க சிறப்புடையவன். இவனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார், “இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் பிறங்கடை அந்நீர்த், திரை தரு மரபின் உரவோன் உம்பல்” (பெரும்பாண். 29 - 31) என்பதனால்,இவன் முன்னோன் திரைகடல் வழியாகப் போந்து தொண்டை நாட்டுக்கு வேந்தனாயினானென்று, அவன் வழித்தோன்றல் இவனென்றும் அறியலாம். வென்வேற்கிள்ளி யென்னும் சோழனுக்கும், நாகநாட்டு வேந்தன் மகள் பீலிவளை யென்பாட்கும் பிறந்து, கடலில் கலமூர்ந்து வருங்கால் அது சிதைந்ததாக, இவன் திரையில் மிதந்து கரை யடைந் தானென மணிமேகலை கூறுகிறது. பின்பு அவன் அக்காரணத்தால் திரை யனெனப்பட்டா னென்றும், வேந்தன் மகனென்றற் கடையாள மாகத் தொண்டைக்கொடி யணிந்திருந்ததுபற்றி அவன் தொண்டைமானாயினான்; அவனாண்ட நாடு தொண்டை நாடாயிற்றென்றும் கூறுப. இத்திரையன், தமிழ் வேந்தர் மூவருள்ளும் “அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்” உடைமையாற் சிறந்தவனென்றும், “குணகடல் வரைப்பின் முந்நீர் நாப்பண், பகற்செய் மண்டிலம் பாரித் தாங்கு, முறைவேண்டு நர்க்கும் குறைவேண்டு நர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி” மேம்பட்டவ னென்றும், “புலவர் பூண்கட னாற்றிப் பகைவர், கடிமதி லெறிந்து குடுமி கொள்ளும், வென்றி யல்லது வினையுடம் படினும், ஒன்றல் செல்லா” உரவோனென்றும், அவன் நாட்டில் ஆறலை கள்வரும் பிற தீங்கு புரிவோரும் இலரென்றும் பெரும்பாணாற்றுப்படை பெரிதெடுத்துப் பேசுகின்றது. இவ்வாறு செங்கோன்மையால் சிறப்புமிக்க இளந்திரையன் ஆட்சியில் அளியுந் தெறலும் எளிய முறையில் நடந்தன. இவனைப் பகைத்து மலைந்த வேந்தர்களின் மன்றங்கள் பாழ்பட்டன; இவனை நயந்தவர் நாடுகள் நன்பொன் பூப்ப நலமிகுந் தோங்கின. நாடோறும் வேந்தர் பலரும் பல்வேறு வகையில் பணிந்து, “நட்புக் கொளல்வேண்டி நயந்திசி னோரும், துப்புக் கொளல் வேண்டிய துணையி லோரும், கல்வீ ழருவி கடற்படர்ந் தாங்கு” இவன்பால் வந்தவண்ண மிருந்தனர். இவர்கட்கு வேண்டுவன வற்றை அருளிய இவ் விளந்திரையன்,அரசியலின் செம்மை குறித்து அவர்கட்குச் சில அறிவுரைகளும் வழங்கினன். அவற்றுட் சில பாட்டுமாம். இங்கே காட்டப்படும் பாட்டு அவற்றுள் ஒன்றாகும். இதன்கண் “அரசியலை ஒரு சகடமாக வுவமித்து, சகடத்தை உகைப்பவன் உகைக்குந் திறத்தை மாண்புற அறிந்தா னாயின், அஃது இடையூறு சிறிதுமின்றி இனிது செல்லும். அத்திறம் அறியானாயின், நெறியல்லா நெறியிற் சென்று சேற்றில் அழுந்தி மிக்க துன்பத்துக் குள்ளாவன்.அவ்வாறே அரசியலை நடத்தும் வேந்தன் அரசியல் முறையைத் திறம் பட அறிந்தா னாதல் வேண்டும்; அதனால் நாடு நலம் பெறும்; அவனும் சீர்பெறுவான்; அறியானாயின், உட்பகை புறப்பகைகளாகிய சேற்றில் அழுந்திக் கெடுவன்” என்று அறிவுறுத்துள்ளான். கால்பார் கோத்து ஞாலத் தியக்கும் காவற் சாகா டுகைப்போன் மாணின் ஊறின் றாகி யாறினிது படுமே உய்த்த றேற்றா னாயின் வைகலும் 5 பகைக்கூ ழள்ளற் பட்டு மிகப்பஃ றீநோய் தலைத்தலைத் தருமே. (185) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி, தொண்டைமான் இளந்திரையன் பாட்டு. உரை : கால் பார் கோத்து - உருளையையும் பாரையும் கோத்து; ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு - உலகின்கண்ணே செலுத்தும் காப்புடைய சகடந்தான்; உகைப்போன் மாணின் - அதனைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின்; ஊறு இன்றாகி ஆறு இனிது படும் - ஊறுபாடில்லையாய் வழியை இனிதாகச் செல்லும்; உய்த்தல் தேற்றானாயின் - அவன் அதனை இனிதாகச் செலுத்துதலைத் தெளியமாட்டானா யின்; வைகலும் பகைக்கூழ் அள்ளற்பட்டு - அது நாடோறும் பகையாகிய செறிந்த சேற்றிலே யழுந்தி; மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தரும் - மிகப் பல தீய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும் எ-று. இஃது உலகாளும் முறைமை கூறுதலை யுட்கொண்டு சகடம் செல்லுறுமாற்றைக் கூறினமையின், நுவலா நுவற்சி யென்னும் அலங்கார மாயிற்று; ஒட்டென்று கூறுவாருமுளர். அன்றி, இதற்கு உலகத்தின்கண்ணே உலகியற்கையை நிறுத்தி, அதனோடு ஞாலத்தின்கண்ணே செலுத்தப்படும் காப்பாகிய சகடம் தன்னைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின், தனக்கு ஓரிடையூறின்றாகி நெறிமுறைமையே நடக்கும்; அதனைச் செலுத்துதல் தெளியா னாயின், அச் சாகாடு மறுதலை யென்னும் செறிந்த அள்ளலிலே அகப்பட்டுத் தனக்கும் தன்கீழ் வாழ்வார்க்கும் மிகப் பலவாகிய தீக்கேட்டினை மேன்மேலே தருமெனவும் பொருளுரைப்பர். இப் பொருட்குப் பாரென்றது, உலகியற் கையை. கால் - உருளை. விளக்கம் : உலகாளு முறைமை கூறுதலை யுட்கொண்டு உரைக்கு மிடத்து, அரசியலாகிய சகடத்தை யுகைப்போனாகிய வேந்தன் மாட்சிமைப் படின், ஊறுபாடின்றி ஆட்சியைக் கடைபோக இனிது செலுத்துவன்; அதனைச் செலுத்து முறைமையை அறியானாயின், நாளும் உட் பகையும் புறப்பகையுமாகிய இவற்றிடையே அகப்பட்டுத் தனக்கும் தன்னாட்டவர்க்கும் மிகப் பல துன்பத்தை மேன்மேலும் செய்து கொள்வன் என வரும். இப் பாட்டின் கருத்தைத் திருத்தக்கதேவர், “ஆர்வலஞ் சூழ்ந்த ஆழி யலைமணித் தேரை வல்லான், நேர்நிலத் தூருமாயின் நீடுபல் காலஞ் செல்லும், ஊர்நில மறிதல் தேற்றா தூருமேல் முறிந்து வீழும், தார்நில மார்ப வேந்தர் தன்மையு மன்ன தாமே” (சீவக. 2909) என்று கூறுதல் காண்க. 186. மோசிகீரனார் மோசிகீரனார், சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறையையும், கொண்கானங் கிழானையும் பாடிப் பெரும் பரிசில் பெற்று மேம்பட்டவர். வினையான் மிக்க வேந்தர் போந்து தானையொடு சூழ்ந்துகொண்ட காலையில், தன் தானை யழியவே, “இனித் தன்னையின்றித் தன் எயில்சூழ் இருக்கைக்கு வேறு அரணில்லை” யென்பதைத் தெரிந்து நன்னனென்பான், தான் தங்கியிருந்த கானத்தினின்றும் வெளிப்பட்டு வந்து தான் பிடித்த வேலைக் கைவிடாது பகைவரை வென்று தன் பண்டைப் புகழை நிறுவிய சிறப்பினைப் பெரிதும் பாராட்டிப் பேசுவர். ஆய் அண்டிரனுக்குரிய பொதியமலையிலுள்ள வேங்கையும் காந்தளும் போல மகளிர் மேனி மணங்கமழும் என்பர். இத்தகைய சிறப் பமைந்த இக்கீரனார் தம்மோடொத்த சான்றோர் சூழ வேந்துடை யவையத்திருந்தகாலை அரசற்கும் அவர் குடை நிழல் வாழும் குடிகட்குமுள்ள தொடர்புபற்றி ஓர் ஆராய்ச்சி நிகழ்ந்தது; உயிர்க்கும் உடம்புக்குமுள்ள தொடர்பே அரசர்க்கும் அவன் நாட்டிற்கும் உள்ள தொடர்பு என்பது அவ்வாராய்ச்சியின் முடிபாயிற்று. ஆகவே, உடம்பின்நலத்துக்கும், கேட்டுக்கும் உயிரினது உண்மையும் இன்மையுமே ஏதுவாதல் போல, வேந்தன் உளனானால் நாடு நலமுறுதலும் இலனாயின் கெடுதலும் ஒருதலை என்றனர் ஒருசாரார். உடம்பின் நலத்துக்கு நெல்லும் நீரும் ஏதுவாம்; அவை யுள்வழியே உயிருண்மையும், அரசுண்மையும் காணலாம். ஆகவே, நெல்லும், நீரும் உலகிற்கு உயிராவன என்றனர் பிறிதொரு சாரார். இவ்வாறு நாட்டிற்கு அரசே உயிரென்பாரும், பொருளே உயிரென்பாரும் எனச் சான்றோர் இருதிறத்த ராகவே ஆங்கிருந்த மோசிகீரனார், “நாடாளும் வேந்தனாவான், இவ்வுலகிற்கு யானே உயிர்; ஏனை நெல்லுமன்று; நீருமன்று என்பதை அறிந்தொழுகும் அரசுமுறை உயிர்நிலையாம்” என்ற கருத்துப்பட இப் பாட்டினைப் பாடிக் காட்டினார். நெல்லு முயிரன்றே நீரு முயிரன்றே மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் அதனால், யானுயி ரென்ப தறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. (186) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி, மோசிகீரனார் பாடியது. உரை : மன்னன்உயிர்த்து மலர்தலை உலகம் - வேந்தனாகிய உயிரை யுடைத்து பரந்த இடத்தையுடைய உலகம்; அதனால்-; நெல்லும் உயிரன்று - இவ் வுலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிர் அன்று; யான் உயிர் என்பது அறிகை - யான் உயிரென்பதனை யறிகை; வேல் மிகு தானை வேந்தற்குக் கடன் - வேலான் மிக்க படையையுடைய அரசனுக்கு முறைமை எ-று. மன்னன் உயிர்த்தென்ற கருத்து: உயிரை யாக்கும் நெல்லும் நீரும் உளவாவது மன்னன் முறைசெய்து காப்பின் என்றதாம். விளக்கம் : “நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு, உயிரும் உடம்பும் படைத் திசினோர்” (புறம். 18) எனச் சான்றோர் கூறுதலால், “நெல்லும் உயிரன்று நீரும் உயிரன்று” என்றார். உயிரும் உடம்பும் கூடி நின்ற வழியும் உயிர்க்குயிராய் நின்றியக்கும் திருவருள்போல அரச முறை இன்றியமையாமையின், அதனைச் செலுத்தும் தானே உலகிற்கு உயிராதலை யறிந்து, உயிர் தானின்ற உடம்புக்குளதாகும் நோயைத் தான் நுகர்ந்தும் அதனைப் பேணுதல்போல, உலகு புரத்தற்கண் உள்ள துன்பமனைத்தையும் தானேற்று அதனைக் காப்பது கடன் என்பார், “யானுயி ரென்ப தறிகை கடன்” என்றார். “இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம், உழத்தொறூஉம் காதற் றுயிர்” (குறள். 940) எனச்சான்றோர் கூறுதலால் உயிரது செயல் நலம் தெளியப்படும். திருத்தக்கதேவர் இக் கருத்தை. “நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாம் நீருயிர் இரண்டுஞ் செப்பிற், புல்லுயிர் புகைந்து பொங்கு முழங்கழல் இலங்கு வாட்கை, மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய், நல்லுயிர் ஞாலந் தன்னுள் நாமவேல் நம்பி என்றான்” (2908) எனக் கூறுவர். 187. ஒளவையார் நிலத்தின் நீர் நில வளங்கட்கேற்ப அந் நிலத்து வாழும் மக்கட்குப்பண்பும் செயலும் இயைபு படுகின்றன. நாட்டவர்க்கு அவ்வக் காலங்களில் செய்வன செய்து, பெறுவன பெற்றுக் கல்வி கேள்விகளில் மேம்படும் நலமும் காட்டவர்க்கு வேட்டம் புரிவதே பொதுச் செயலாதலின், தறுகண்மை போர்ச்செயல் வண்மை களில் மேம்படு நலமும், பள்ளத்தில் வாழ்பவர்க்கு நீர்வளம் வாய்த்தலாற் பொருள் மிக வுண்டாதலின் ஈதல் மனப்பான்மை யும், மேட்டு நிலத்தவர்க்குச் செட்டும் சிக்கனமுமா யிருக்கும் திறமுமாகிய நலங்களும் உண்டாகின்றன எனும் நிலநூல் வழக்கு, ஒருகால் ஒளவையார் ஆராய்ச்சிக்கு வந்தது. நாடும் காடும் அவலும், மிசையு,மென்ற பாகுபாடு நிலத்தின்கட் காணப்படுதல் போல நிலத்து வாழும் மக்களிடையே ஆண்களும் பெண்களும் இளையரும், முதியரும், என்ற பாகுபாடு தோன்றக் கண்டார்.அவருள் ஆண்மையும், இளமையும், சிறக்கும் ஆடவர் நல்லராயவழி யாவரும் நல முடையராதலும், அவரால் நாடுகள் நல்லிசை பெறுதலும் கண்டு, “நிலமே, நின்பால் எவ்வழி ஆடவர் நற்பண்பும் நற்செயலு முடையராய் விளங்குகின்றனரோ, அவ்வழி நின்னை நன்னா டெனச் சான்றோர் பாராட்டுகின்றனர்; காண்” என்ற கருத் தமைந்த இப் பாட்டைப் பாடினார். நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவ ராடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே. (187) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி, ஒளவையார் பாடியது. உரை : நிலனே -; நாடாக ஒன்றோ - நீ ஒன்றில் நாடேயாக; காடாக ஒன்றோ - ஒன்றிற் காடேயாக; அவலாக ஒன்றோ - ஒன்றிற் பள்ளமேயாக; மிசையாக ஒன்றோ - ஒன்றில் மேடே யாக; எவ்வழி நல்லவர் ஆடவர் - எவ்வாறாயினும் எவ்விடத்து நல்லர் ஆண்மக்கள்; அவ்வழி நல்லை வாழி - அவ்விடத்து நீயும் நல்லை யல்லது நினக்கென ஒரு நலமும் உடையையல்லை வாழி எ-று. தீய நிலனே யாயினும் நல்லோருறையின் நன்றெனவும், நல்ல நிலனே யாயினும் தீயோ ருறையின் தீதெனவும், தன்னிடத்து வாழ்வாரியல்பல்லது தனக்கென ஓரியல்புடைய தன்றென நிலத்தை இழித்துக் கூறுவதுபோல உலகத்தியற்கை கூறியவா றாயிற்று. ஒன்றோ வென்பது எண்ணிடைச் சொல். விளக்கம் : ஆக வென்பது நான்கு இடத்தும் கடைக்குறைந்து முடிந்தது. நற்பண்பும் நற்செயலுமுடையாரை “நல்லர்” என்றார். ஆடவன்: இளமைச் செவ்வி நிரம்பினானை ஆடவனென்றல் இயல்பு. வாழ்விற் பெறற்குரிய நலமுற்றும் பெறுதற்குரிய செவ்வி இளமை; அதனால் “இளமையிற் சிறந்த வளமையு மில்லை” என்ப சான்றோர். அவ் வளமைக்குச் சிறப்பு நற்பண்பும் நற்செயலு முடைமையாதலின், அதனையுடையாரே நாட்டின் நலத்துக்கும் இசைக்கும் காரணராய் அவற்றைத் தாங்கும் தூண்களுமாவார்; ஆதலாற்றான், அவர் நன்மையினையே விதந்தோதினார். 188. பாண்டியன் அறிவுடை நம்பி பிசிராந்தையாரால் நெறிப்படுத்தப்பெற்ற பாண்டியன் அறிவுடை நம்பி, இன்பத்துறையில் எளியனாயிருந்து மக்கட்பேறின்றி யிருந்து பின்னர் அதனைப் பெற்று இன்புற்றான். தன் பெயருக்கேற்ப நல்லறிவுடைய நம்பியாய்த் திகழ்தலின், தான் பெற்ற இன்பத்தைப் பிறர்க்குக் காட்ட எண்ணினான். “இம்மை யுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமும் மறுவின் றெய்துப, செறுநரும் விளையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்மலோ ரெனப், பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம், வாயே யாகுதல்” (அகம்.69) கண்டு, அந் நலங்களை யெடுத்தோதுதலை விடுத்து, இளஞ்சிறார்கள் செய்யும் இன்பச் சிறுதொழில்களையே கண்டு எடுத்தோத விழைந்தான். செல்வ வாழ்வென்பது தமித்துண்டலின்றி விருந்தோடுண்பதாற்றான் இன்பந் தருவதாகும் என்பதைக் கண்டான். கண்டவிடத்தும், அவ்வின்பமும் இளஞ்சிறார் தம்முடைய சிறுகை நீட்டிக் குறுகுறு நடந்துவந்து, தம் பெற்றோர் உண்ணும் உணவிற் றம் இரு கையையும் இட்டும், தொட்டும், கவ்வியும், துழாவியும், தம் உடலெங்கும் சிதறியும் இன்பச் சிறுதொழில் புரிய, அவர் சிதைத்துச் சிதறப் படும் உணவை அவர் உண்ணுங்கால் உண்டாகும் இன்பம் பெரிதாதலை யறிந்தான். அப்போது அவ் விளஞ்சிறார் மிழற்றும் சொல்லும், செய்யும் செயலும், கண்ணுக்கும், செவிக்கும் உடலுக்கும், இன்பந் தந்து அறிவை மயக்குதலின், செல்வத்தின் அருமையாதல் உணவின் இன்றியமையாமையாதல் அறிவிற்குப் புலனாகாதாக, உயிர் வாழ்வின் பயன் இதுவே யென உயிர் அமைந்து போதலை யுணர்ந்தான். இன்ன நலம் சான்ற மக்களைப் பயவாதார்க்கு உயிர் வாழ்வால் முடிக்கக்கூடிய பொருளே யில்லை என்று யாப்புறுப்பான் இப் பாட்டைப் பாடியுள்ளான். படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் 5 நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே. (188) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி, பாண்டியன் அறிவுடை நம்பி பாட்டு. உரை: படைப்புப் பல படைத்து - படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்து; பலரோடு உண்ணும் - பலருடனே கூடவுண்ணும்; உடைப் பெருஞ் செல்வ ராயினும் - உடைமை மிக்க செல்வத்தை யுடையோராயினும்; இடைப் பட - காலம் இடையே யுண்டாக; குறு குறு நடந்து - குறுகக் குறுக நடந்து சென்று; சிறு கை நீட்டி - சிறிய கையை நீட்டி; இட்டும் - கலத்தின்கட் கிடந்ததனைத் தரையிலே யிட்டும்; தொட்டும் - கூடப் பிசைந்து தோண்டியும்; கவ்வியும் - வாயாற் கவ்வியும்; துழந்தும் - கையால் துழாவியும்; நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் - நெய்யையுடைய சோற்றை உடம்பின்கட் படச் சிதறியும்; மயக்குறும் மக்களை இல்லோர்க்கு - இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் புதல்வரை இல்லாதார்க்கு; பயக் குறை இல்லை - பயனாகிய முடிக்கப்படும் பொருளில்லை; தாம் வாழும் நாள் - தாம் உயிர் வாழும் நாளின்கண் எ-று. தொட்டென்பதற்குக் கூட வாரிப் பிடித்தெனினு மமையும், குறையென்பது முடிக்கப்படுங்கால் முடிக்கப்படும் பொருள். இனிப் பயக்குறை யுள்ளதென ஒருசொல் வருவித்துத் தாம் வாழும் நாளும் இல்லையென்று கூறுவாரு முளர். விளக்கம்: படைப்பு-படைக்கப்படும் செல்வம்; “வாழிய பெரும நின் வரம்பில் படைப்பு” (புறம் 22) என்றார் பிறரும். பலரோடுண்ணும் செல்வர், உடைப்பெருஞ் செல்வர் என இயையும் பெருமை மிகுதி குறித்தலின், உடைப் பெருஞ் செல்வ ரென்றதற்கு உடைமை மிக்க செல்வ ரென்றார். மயங்குவது அறிவாகலானும், மக்கள் மயக்கத்தைத் தரும் பொருளாகாமையாலும், மயக்குறு மக்க ளென்றதற்கு அறிவை இன்பத்தான் மயக்கும் புதல்வ ரென்றார். குறை - இன்றியமையாப் பொருள். மக்களை யில்லோர்க்குப் பயன் குறைவாகவேயுளது; வாழும் நாளும் இல்லை என்று உரை கூறுதலு முண்மையின், “இனி....கூறுவாரு முள” ரென்றார். 189. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் மதுரைக் கணக்காயனாருடைய இயற்பெயர் தெரிந்திலது. மதுரையில் அக்காலத்தில் சிறந்த ஆசிரியராக இருந்து பலர்க்கு அரிய நூல்களை ஓதுவித்த சிறப்பால் இவர் கணக்காய னாரென்றே வழங்கப்பட்டனர். இவருடைய மகனார் நக்கீரனா ராவர். இவர் காலத்துப் புலவர்களுள் இவர் தலைமைப் புலவராய் விளங்கினதுகொண்டே “தந்தைய ரொப்பர் மக்களென் பதனால்” (தொல். கற்பு: 6) இவரின் தந்தையாரின் சிறப்பு இனிதுணரப் படும். நக்கீரனார்க்குக் கீரங்கொற்றனா ரென்பவர் மகனாராவர். இந் நக்கீரனார், பொதுவாகத் தமிழ் மூவேந்தரையும் வேண்டு மிடங்களிற் சிறப்பித்துப் பாடியிருப்பினும் சிறப்பாகப் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் பாடிப் பெரும்பரிசில் பெற்றவர்; முருகாற்றுப்படை பாடி முருகன் திருவருள் சிறக்கப் பெற்றவர். தமிழகம் முழுதையும் நன்கறிந்தவர். இவர் அந்தணரல்லர். இத்துணைச் சிறப்புடைய புலமை சிறந்த நக்கீரனார் மலையும், காடும், நாடும், கடலுமாகிய எப்பகுதியிலும் வாழும் மக்கள் பலருடைய முயற்சி முற்றும் தம் புலமைக்கண்ணால் நோக்கி னார். எல்லாருடைய உள்ளமும் பொருளீட்டற்கண் பேரார்வ முற்று இயங்குவது தெரிந்தது. நாடுகட்குத் தலைமை தாங்கிய வேந்தர் பொதுச்சொற் பொறாது அரசு புரிவதும், காடுகளில் வாழும் விலங்குகளைப் வேட்டையாடித் திரியும் வேட்டுவர் இரவும், பகலும், தமக்குரிய விலங்குகளைப் படுப்பதையே எண்ணி முயல்வதும் நக்கீரர் கருத்தை யீர்த்தன. இவரது உழைப்பின் முடிவென்னை யென்று ஆராய்ந்தார். இவரனைவர்க்கும் வேண்டுவன உண்டியும் உடையுமே யென்றும், அவற்றுள் உண்பது நாழியும் உடுப்பவை இரண்டுமாமென்றும், பிற வகை யில் ஒரு வேற்றுமையு மில்லை யென்றும் துணிந்தார். இவற்றை நோக்கின், வேண்டுவன சிறிதும், ஈட்டுவன பெரிது மாதலின், மிக்கு நிற்கும் செல்வத்தால் செய்ய வேண்டுவது ஈதலாகிய அறமே என்றும், செய்யாது தாமே துய்க்கக் கருதின் அறமும், பொருளும், இன்பங்களும், பெறப்படாவாம் என்றும் கண்டார். இக்கருத்துக்களை இப்பாட்டின்கண் வைத்துப் பாடியுள்ளார். தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான் கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் 5 உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே பிறவு மெல்லா மோரொக் கும்மே செல்வத்துப் பயனே யீதல் துய்ப்பே மெனினே தப்புந பலவே. (189) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி, மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது. உரை : தெண் கடல் வளாகம் - தெளிந்த நீராற் சூழப்பட்ட உலக முழுதையும்; பொதுமை யின்றி - பிற வேந்தர்க்குப் பொதுவாத லின்றித் தமக்கே யுரித்தாக ஆண்டு; வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் - வெண்கொற்றக்குடையால் நிழல்செய்த ஒரு தன்மையை யுடையோர்க்கும்; நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான் - இடையாமத்தும் நண்பகலும் துயிலானாய்; கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் - விரைந்த செலவை யுடைய மாக்களைப் படுக்கக் கருதிச் செல்லும் கல்வியில்லாத ஒருவனுக்கும்; உண்பது நாழி - உண்ணப்படும் பொருள் நாழி; உடுப்பவை இரண்டே - உடுக்கப்படுமவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக்கும் - பிறவு மெல்லாம் ஒக்குமாதலால்; செல்வத்துப் பயன் ஈதல் - செல்வத்தாற் பெறும் பயனாவது கொடுத்தல்; துய்ப்பேம் எனின் தப்புநபல - செல்வத்தை யாமே நுகர்வே மென்று கருதின் தவறுவன பல எ-று. பல வென்றது, அறம் பொருள் இன்பங்களை. பகலை யொரு மாத்திரை யென்றும், கடுமாவை யானை யென்றும், கல்லாத ஒருவனைப் பாகனென்றும் உரைப்பாரு முளர். விளக்கம் : கொண்ட கொள்கையில் ஒருமை யுணர்வும், அதற்கு வேண்டும் செயற்பண்பும் இல்வழி, அதனாற் பெருமை யுண்டாகாமையால் “ஒருமையோர்” என்றார். “ஒருமை மகளிரே போலப் பெருமையும், தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு” (குறள். 974) என்ப. அரைக்கு நான்கு முழமும், மேலுக்கு இரண்டு முழமுமாக இரண்டாடை வேண்டு தலால், “உடுப்பவை இரண்டே” என்றார். உண்டல், உறங்கல், இனம் பெருக்குதல் முதலியன “பிறவும்” என்பதனுள் அடங்கும் ஓரொக்கும் என்புழி, ஓர் என்பது அசைநிலை. உயிர்கட் குறுதிப் பொருளென உயர்ந்தோரால் எடுத்துள்ள அறமும் பொருளும் இன்பமும் “பல” வெனப்பட்டன. பகலில் உறங்குதல் கூடாதாகலின், அதற்கு ஒரு மாத்திரை யென்று கொண்டு, “நள்ளிரவிலும் ஒரு மாத்திரை யளவும் தூங்கான்” என்பாரு முளர். கடுமாப் பார்க்கும் ஒருவனென்றது, அவ் வேந்தனுடைய யானைப்பாகனைக் குறித்த தாக வுரைப்பதும் உண்டு. உரைப்பவே, அரசனையும் அவன் அடிப் பணி புரியும் எளிய பணியாளையும் நோக்கின், இருதிறத்தாரும் உண்டி யுடை வகையில் ஒப்பரென்பது கண்டவாறாம். பெரிதீட்டித் தமித்துண்பவர்பால் செல்வம் மிகுதலால், அம் மிகுதிக் காட்சி சிறிதீட்டிப் பலர் சூழ இருந்துண்பவராகிய வறியார்க்கு, அறிவுநலம் கேடெய்துவதற்கு ஏதுவாகிறது. அதுவே செல்வர்க்கும் எளியோர்க் கும் இடையே ஒற்றுமை நிலைபெறாவாறு தீய கருத்தும் செயலும் பிறப்பிக்கிறது. அதனால், செல்வர் வறியராகிய எல்லாருடைய வாழ்வும் பொருட் குறையுற்று, அறமும் இன்பமும் குன்றிச் சீரழிவது ஒருதலை என்பது பற்றி, “தப்புந பல” வென்றா ரென்றறிக. இதனால், செல்வர் ஈதலைக் கடனாகக் கோடல் அறனாம் என்றும், அஃது அவர்கட்கே யன்றி, மக்களுலகுக்கே நலம் பயப்பதாம் என்றும் துணிபாம். இந்த அறவுணர்வுக் குறைவே இக்காலத் தொழிலாளர் கிளர்ச்சிக்கும், பொருள் முட்டுப்பாட்டுக்கும், வாழ்வு நிரம் பாமைக்கும் வாயிலாதல் தெற்றெனத் தெளியப்படும். (189) 190. சோழன் நல்லுருத்திரன் சோழன் நல்லுருத்திரன் என்பான், சங்க நூற் காலத்துச் சோழ வேந்தர்களுள் காலத்தாற் பிற்பட்டவனென்பதை இவன் பெயரே நன்கு தெரிவிக்கின்றது. ஆயினும், இவன் உயர்ந்த உள்ளமும் பரந்த கல்வி கேள்வியும் சிறந்த வினைத்திட்பமும் கொண்டவன். முடி வேந்தனாகலின், எப்போழ்தும் இவனைக் குறுநில மன்னரும் செல்வ மக்களும் சூழ்ந்து கொண்டேயிருப்பர். இவர்களின் துணைகொண்டு இவன் அரிய செயல்கள் பல செய்து மிக்க பொருளும் நல்ல புகழும் பெற்றான். இச் செயல்களைச் செய்யு மிடத்துத் தனக்குத் துணையாயிருந்த மன்னரும் செல்வருமாகிய சுற்றத்தாரின் குணஞ்செயல்களைப் பயின்று அறியும் வாய்ப்பு இவனுக்குச் சிறப்புற அமைந்தது. அவருள் சிலருடைய கூட்டுற வால் ஆக்கமும், வேறு சிலருடைய துணையால் கேடுமுண்டாகக் கண்டு அவர்களை யாராய்ந்தான். ஆக்கத்திற்குத் துணையா யிருந்தவர் உயர்ந்த உள்ளமும், தாம் மேற்கொண்டு கடைப் பிடிக்கும் அறக் கொள்கையின் வழுவா தொழுகும் மனத் திட்பமும், அதற்கு மாறுபடவும், வேறுபடவும் வரும் பொருள் எத்துணைச் சீரிதாயினும் வேண்டாத விறலும் உடையராதலைக் கண்டான். கேடு நேர்ந்த காலத்து அதற் கேதுவாயிருந்தவரை ஆராய்ந்தவழி, அவர்கள், ஏனையர்போல உள்ளத் துயர்வும் கடைப்பிடியும் விறலும் இலராயினும், உழைப்பார் உழைக்க அவர்தம் உழைப்புவழி வரும் ஊதியத்தை நேர் முகமாகவோ மறைமுகமாகவோ சிறுகச் சிறுகத் தாம் பறித்துக்கொள்ளும் பண்பும் அதற்கேதுவாகிய குறுகிய வுள்ளமும், தன்னலச் சூழ்ச்சி யும், ஒன்று உற்றவிடத்துத் தம்மை விற்றுவிடத்தக்க கீழ்மையும் உடையராதலை யறிந்தான். உடனே இக் கீழோரை விலக்கி ஏனையோரைத் தழீஇக் கொள்ளுமிடத்து இப் பாட்டினைப் பாடியுள்ளான். இதன்கண், எலிபோலும் மனமும் தாமுடைய வற்றை மேன்மேலும் பெருக்கிக் கொள்ளும் உள்ளமுமுடையா ருடைய கேண்மை எமக்கு வேண்டா; தான் செய்யும் வேட்டத் தின்கண் மிக்க பசியுற்ற காலையும் இடம் வீழ்ந்ததை விடுத்து வலம் வீழ்ந்ததையே யுண்ணும் விறல் படைத்த புலிபோலும் மனமும் உரனமைந்த உள்ளமும் உடையவர் நட்புக்கலந்த வாழ்வே வேண்டுவதாம் என்று இசைத்துள்ளான். விளைபதச் சீறிட நோக்கி வளைகதிர் வல்சி கொண்டளை மல்க வைக்கும் எலிமுயன் றனைய ராகி யுள்ளதம் வளன்வலி யுறுக்கு முளமி லாளரொ 5 டியைந்த கேண்மை யில்லா கியரோ கடுங்கட் கேழ லிடம்பட வீழ்ந்தென அன்றவ ணுண்ணா தாகி வழிநாட் பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந் திருங்களிற் றொருத்த னல்வலம் படுக்கும் 10 புலிபசித் தன்ன மெலிவி லுள்ளத் துரனுடை யாளர் கேண்மையொ டியைந்த வைக லுளவா கியரோ. (190) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி, சோழன் நல்லுருத்திரன் பாட்டு. உரை : விளை பதச் சீறிடம் நோக்கி - விளைந்த செவ்வியை யுடைய சிறிய இடத்தைப் பார்த்து; வளை கதிர் வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் - வளைந்த கதிராகிய உணவைக் கொண்டு முழையின்கண்ணே நிறைய வைக்கும்; எலி முயன் றனையராகி - எலி முயன்றாற்போலும் சிறிய முயற்சி யராகி; உள்ள தம் வளன் வலியுறுக்கும் உளமி லாளரொடு - உள்ள தம்முடைய செல்வத்தை நுகராது இறுகப் பிடிக்கும் உள்ள மிகுதி யில்லாருடன்; இயைந்த கேண்மை இல்லாகியர் - பொருந்திய நட்பு இல்லையாக; கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென - தறுகண்மையை யுடைய கேழலாகிய பன்றி தனது இடப்பக்கத்தே பட வீழ்ந்ததாக; அன்று அவண் உண்ணா தாகி - அன்று அவ்விடத்து உண்ணாதாகி; வழி நாள் பெரு மலை விடரகம் புலம்ப - பிற்றைநாள் பெரிய மலையின் கண் தனது முழையிடம் தனிமைப்பட; வேட்டெழுந்து - உணவை விரும்பி யெழுந்து; இருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் - பெரிய களிறாகிய ஒருத்தலை நல்ல வலப்பக்கத்தே படப் படுக்கும்; புலி பசித்தன்ன - புலி பசித்தாற்போலும்; மெலிவில் உள்ளத்து உரனுடையாளர் கேண்மையோடு - குறைவில்லாத மேற்கோளையுடைய வலியையுடையோர் நட்போடு; இயைந்த வைகல் உளவாகியர் - பொருந்திய நாட்கள் உளவாகுக எ-று. சீறிட மென்றது விளைந்து முற்றியபின் அறுப்பதற்கு முன் னாகிய இடத்தை. இல்லாகியர் , உளவாகியர் என்பன ஈண்டு வியங்கோட் பொருளவாய் நின்றன. விளக்கம் : விளைந்து முற்றியபின் அறுப்பதற்கு முன்னாகிய இடம், அறுத்த சின்னாள்களில் மறுபடியும் உழப்பட்டு மாறிவிடுதல் பற்றி, “சீறிடம்” எனப்பட்ட தென்றார். தன் அளை நிறைய வைத்துக் கொண்ட தாயினும், அதற்கென்று உழைத்தவர் வேறாக, அவர துழைப்பின் பயனாக வந்த விளைவைத் தான் கவர்ந்து கோடலின், “சிறிய முயற்சி” யென்றார். உள்ள மிகுதி - உள்ளத்தின் உயர்வு; “மாந்தர்தம் உள்ளத்தனைய துயர்வு” (குறள். 595) என்பது காண்க. உள்ளத்தில் மெலிவு இல்வழி, உயர்வும் அதனைச் செயற்படுத்தற் குரிய திண்மையும் ஒருங்குண்டாதலின், “மெலிவில் உள்ளத் துரனுடையாளர்” என்றார். புலி இடம் வீழ்ந்த துண்ணாது என்பதைப் பிற சான்றோரும், “தொடங்கு வினை தவிரா வசைவி னோன்றாள், கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம் படின், வீழ்களிறு மிசையாப் புலி” (அகம். 29) என்று கூறுதல் காண்க. 191. பிசிராந்தையார் பிசிராந்தையார் தமதூராகிய பிசிரில் இருக்கையில் உறை யூரிலிருந்து அரசுபுரிந்த கோப்பெருஞ்சோழனுடைய குணநலங் களைக் கேள்வியுற்று அவனைக் காண்டல் வேட்கை மிக்கிருந்தார். கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையார் நலங்களைக் கேள்வி யுற்றுப் பெரு நட்பினைத் தன்னுள்ளத்தே வளர்க்கலுற்றான். இருவருடைய நட்புணர்ச்சிகள் தாமே மிக்கு ஒருவரொருவர் தம் பெயரைக் கூறுமிடத்து, தத்தம் நண்பர் பெயரை இணைத்துக் கூறிக்கொள்ளும் அளவில் சிறந்து நின்றன. கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கப் புக்கபோது சான்றோர் பலர் அவனுடன் வடக் கிருப்பாராயினர். அக்காலை அவன், பிசிராந்தையாரைக் காண விழைந்தான். ஒத்த உணர்ச்சியினராதலால் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கப் புக்க தறியாது அவனைக் காண்டல் வேண்டிப் பாண்டியநாட்டை விட்டுப் புறப்பட்டு உறையூர் வந்தார். அவர் வந்து சேர்தற்குள் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர்விட்டானாக, அவற்கு நடுகல்லும் நாட்டப் பட்டுவிட்டது. பிசிராந்தையார் மனஞ் சோர்ந்து வருந்தினார். சிறிது தெளிந்ததும் அருகிருந்த சான்றோருடன் கோப்பெருஞ் சோழன் குணநலங்களைப் பேசி அளவளாவிக் கொண்டிருக்கை யில் சிலர், “சான்றீர்!யாங்கள் உங்களை நெடுங்காலமாகக் கேள்வியுறுகின்றோம்; உங்கள் வாழ்நாளும் பலவாயினவே; இதனை நோக்க, உங்கட்கு நரை உளவாக வேண்டும்; அவை சிறிதும் நும்பால் காணப்படவில்லையே! என்னோ காரணம்?” என் வினவினர். அவர்கட்கு இப்பாட்டால் , “நரைதிரைகட்குக் காரணம் முதுமையன்று; மனக் கவலையோ; எனக்குக் கவலை கிடையாது; அதற்குக் காரணம் என் குடியிலோ, ஊரிலோ, நாட்டிலோ கவலையுண்டாதற்குரிய நிலைகள் இல்லை; எவ்வா றெனின் என் குடியில் என் மனைவி மக்கள் அறிவு நிரம்பியவர்கள்; என் ஏவலர் என் குறிப்புப் பிழையா தொழுகுபவர்; எங்கள் ஊரில் ஆன்றவிந் தடங்கிய கொள்கையையுடைய சான்றோர் பலர் உளர்; நாட்டு வேந்தனும் அறமல்லது செய்யான்” எனத் தமது புலமையும் சான்றாண்மையும் சிறந்து விளங்குமாறு கூறினார். யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர் யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும் 5 அல்லவை செய்யான் காக்கு மதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழு மூரே. (191) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி, கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கேட்குங் காலம் பலவாலோ, நரை நுமக்கில்லையாலோ என்ற சான்றோர்க்கு அவர் சொற்றது. உரை : யாண்டு பல வாக - நுமக்குச் சென்ற யாண்டுகள் பலவா யிருக்க; நரையில வாகுதல் யாங்காகியர் என - நரையில்லை யாகுதல் எப்படி யாயினீரென; வினவுதி ராயின் - கேட்பீரா யின்; என் மாண்ட மனைவியொடு மக்களும் நிரம்பினர்- என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களை யுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினார்; யான் கண்டனையர் என் இளையரும் - யான் கருதிய அதனையே கருதுவர் என்னுடைய ஏவல் செய்வாரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் - அரசனும் முறையல்லாதன செய்யா னாய்க் காக்கும்; அதன் தலை - அதற்கு மேலே; யான் வாழும் ஊர் - யான் இருக்கின்ற ஊரின்கண்; ஆன்று அடங்கி அவிந்த கொள்கை - நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டு முயர்ந்தாரிடத்துப் பணிந்து ஐம்புலனு மடங்கிய கோட்பாட் டினையுடைய; சான்றோர் பலர் - சான்றோர் பலராதலான் எ-று. ஆன்றவிந் தடங்கிய வென்பதற்குக் கல்வியால் நிறைந்து அதற்கேற்பச் சுவை முதலியவற்றிற் செல்லும் அறிவவிந்து மனமொழிமெய்களான் அடங்கிய வெனினு மமையும். யாங் காகிய ரென்பதற்கு எவ்வாறாயிற் றென்றும், எப்படியாலாயிற் றென்றும் பொருள் கூறுவாரு முளர். விளக்கம் : மனைக்கிழத்தி நற்குண நற்செய்கைகளை யுடைய ளாதல் அவட்கு மாண்பு. மக்கள்பால் நிரம்புதற் கமைந்தது அறிவாதலால் “அறிவு நிரம்பினார்”என்று உரை கூறினார். மனை வாழ்வாலும், மிகப் பெற்று வளர்த்தலாலும் மனைவிக்கும் இயற்கையறிவு மிகுந்து நிரம்புதலின் “மனையொடு” எனச் சிறப்பித்தார். “செறிவு நிறைவும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையு பெண்பா லான”(பொருள். 15) எனத் தொல்காப்பியனார் எடுத்தோதுதல் காண்க. இளையர் ஏவலர். ஆன்றவிந் தடங்கிய கொள்கை யென்பதை, ஆன்று அடங்கிய விந்த கொள்கையென மாறிக் கூட்டுக. குணங்களால் அமைந்தவழி அடக்கமும், அதுவே வாயிலாக ஐந்தவித்தலும் உண்டாதல்பற்றி, இவ்வாறு உரை கூறப்பட்டது கிடந்தபடியே கொள்வார்க்கு இது பொருள் என்பார், ஆன்றவிந் தடங்கி....... அமையும்” என்றார். (191) 192. கணியன் பூங்குன்றனார் கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள மகிபாலன்பட்டி யென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப் பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற் றென்பதை, அவ்வூர்க் கோயில் கல்வெட்டால் அறிகின்றோம். பூங்குன்றம் இப்போது குடக மலை யென வழங்குகிறது. மகா மகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாராகிய தமிழ்ப் பேராசிரியரும் இவ்வூரினராவர்.இவ்வூர் பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது இதன் சிறப்பை வற்புறுத்துகிறது. இச் சான்றோர்,இடரினும் தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும் எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ் செய்தாரென ஒருவரைப் பாராட்ட லும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும் இல்லாதவர். இவ்வாறே பெரியோரென ஒருவரைப் புகழ்தலும் சிறியோ ரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்தும் தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களாலும் நடைமுறையானும் நன்கறிந்தவர். இப்பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர். இதனைக் கண்ட அக்காலச் சான்றோர்க்கு வியப் புண்டாயிற்று. சிலர் முன் வந்து “பாடுபெறு சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?” என்றாராக, மேலே கூறிய தம் கருத்துக்களையமைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார். யாது மூரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் 5 இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலு மிலமே மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் 10 முறைவழிப் படூஉ மென்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்த லதனினு மிலமே. (192) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி, கணியன் பூங்குன்றன் பாட்டு. உரை : யாதும் ஊர் - எமக்கு எல்லாம் ஊர்; யாவரும் கேளிர் - எல்லாரும் சுற்றத்தார்; தீதும் நன்றும் பிறர் தர வாரா - கேடும் ஆக்கமும் தாமே வரினல்லது பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன - நோதலும் அது தீர்தலும் அவற்றை யொப்பத் தாமே வருவன; சாதலும் புதுவ தன்று - சாதலும் புதி தன்று, கருவிற் றோன்றிய நாளே தொடங்கி யுள்ளது; வாழ்தல் இனிதென மகிழ்ந் தன்றும் இலம் - வாழ்தலை யினிதென்று உவந்தது மிலம்; முனிவன் இன்னா தென்றலும் இலம் - ஒரு வெறுப்பு வந்த விடத்து இன்னாதென்று இருத் தலும் இலம்; மின்னொடு வானம் தண் துளி தலைஇ - மின் னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலான்; ஆனாது - அமையாது; கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று -கல்லை யலைத் தொலிக்கும் வளவிய பேரியாற்று; நீர் வழிப் படூஉம் புணை போல் - நீரின் வழியே போம் மிதவை போல; ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது - அரிய வுயிர் ஊழின் வழியே படும் என்பது; திறவோர் காட்சியின் தெளிந்தனம் - நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தெளிந்தே மாகலான்; மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலம் - நன்மையான் மிக்கவரை மதித்தலும் இலம்; சிறியோரை இகழ்தல் அதனினும் இலம் - சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினு மிலேம் எ-று. தலைஇ யென்பதனைத் தலைய வெனத் திரிக்க. “முனிவி னின்னா தென்றலு மிலமே” என்றதற்கு, முன்னே கூறிய வாழ்தலை வெறுப்பான் இன்னாதென்று இகழ்ந்திருத்தலு மில்லே மெனினும் அமைதியும். விளக்கம் : யாவரும் கேளிராகியவழி அவருறையு மிடமெல்லாம் ஊராதலின், “யாதும் ஊரே” யென்றார். பிறர் தர வாரா வெனவே தாமே வரு மென்பதும், புதுவ தன்றெனவே கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்பதும் வருவிக்கப்பட்டன. ஊழின் உண்மை யும் அதன் செயற்கூறும் காட்சியளவையானன்றிக் கருத்தளவையா னறிந்து நூல்களால் குறிக்கப்பட்டிருத்தலின், “திறவோர் காட்சியிற் றெளிந்தன” மென்றார். மாட்சியிற் பெரியவர் - மாட்சியால் மிக்கவர். மாட்சியாற் குறைந்தவர் - சிறியவர். தலைஇ யென்பது தலைஇய வென்பதன் திரிபாதலால், “தலைஇ....திரிக்க” என்றார். (192) 193. ஓரே ருழவர் ஓரே ருழவரது இயற்பெயர் தெரிந்திலது. தேர்கொண்டு சென்ற வினையை முடித்த தலைமகனொருவன்,வினைமுடிவில் விளையும் இன்பத்தினும் மிக்க இன்பந் தரவல்ல தன் காதலியை நினைந்து மீளலுற்றான். தன்னைப் பிரிந்து வருந்தியுறையும் காதலியின் ஆற்றாமையையும் விரைந்து சென்று அவளைக் காண்டற்குப் பெருவிழைவு கொண்டிருக்கும் தன் வேட்கை யுள்ளத்தையும் மனக்கண்ணிற் கண்டு ஆற்றானாய்த் தன் பாகனை நோக்கிக் கூறுங் கருத்தால் இவர் ஒரு பாட்டுப் பாடியுள்ளார். தன் காதலியிருக்கும் ஊர் நெடுந்தொலைவி லிருப்பதென்பதை, “ஆடமையுரையும் வனப்பின் பணைத்தோள், பேரமர்க் கண்ணி இருந்த ஊர், நெடுஞ்சே ணாரிடை யதுவே” என்றும், அந் நெடுஞ்சேண் ஆரிடையை விரையக் கடந்து சென்று பணைத் தோளும் அமர்க்கண்ணுமுடைய காதலியை யடைதற்குத் துள்ளித் துடிக்கும் நெஞ்சின் நிலையை, “நெஞ்சே! ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து, ஓரே ருழவன் போலப், பெருவிதுப்புற் றன்றால், நோகோ யானே” (குறுந். 131) என்றும் பாடினார். இதன்கண் வினைமுடித்து மீளும் காதற் றலைமகன் தன் காதலியைக் கூடற்கு விரைந்து துள்ளித் துடிக்கும் நெஞ்சின் இயல்பு சொல்லப் படுகிறது. ஈரம் பட்ட செவ்வி வாய்ப்பக் கண்ட உழவன் அச்செவ்வி நீங்குதற்குள் உழுது வித்தற்கு விரைகின்றான்; அவன்பால் உள்ளது ஓரேரே; அதனால் அவன் நெஞ்சு துடிக் கிறது. அத்துடிப்பினைத் தலைமகன் நெஞ்சத்துடிப்புக்குவமை கூறிய சிறப்பால் இவரைச் சான்றோர் ஒரே ருழவரென்றே அழைப்பாராயினர். இச்சான்றோர், இல்வாழ்க்கை இடும்பைக்கே கொள்கல மாதலை நன்குணர்ந்தார்; வாழ்விலும் இன்பப் பகுதியினும் துன்பப் பகுதியே மிக்கிருப்பதும் கண்டார்; இன்பமும், துன்பமும்; நண்பகலும் இரவும் போல மாறிமாறி வேறுவேறியல்பினவாய் வந்த வண்ணமாய் இருப்பதும் புலனாகாமல் இல்லை. மனைவியும் மக்களும், ஒக்கலும், பிறரும், தம்மை இன்றியமையாராதலையும் அறிந்தார். துன்பம் வந்துசுடச்சுடத் தாக்குங் காலத்தில், அவரது உள்ளம் துறவு பூண்டு தாபதநெறியிற் சென்று விடலாமா வென எண்ணத் தொடங்கிற்று. சென்றொழிந்தால் தம்மைச் சார்ந் திருக்கும் பலர் வருந்த நேருமென்ற கவலை ஒருபால் வருத்திற்று. ஒக்கலும் மக்களுமாய் வாழும் வாழ்வின் இன்பம் புலனாயிற்று. அவ் வின்ப வாழ்வும் நன்னெறியே யென்பது நினைவிற்கு வந்தது. ஒக்கல் வாழ்க்கை யில்லார்க்கே துறவும் தாபத வொழுக்கும் தகும்; அதனையுடையார் அந்நெறியில் ஓடிச் சென்று உய்தல் என்பது கூடாது; அஃது அவர்கள் காலைக் கட்டிச் செல்ல வொட்டாமல் தடுக்கும் என்ற கருத்துப்பட இப் பாட்டைப் பாடியுள்ளார். அதளெறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவ னாட்டும் புல்வாய் போல ஒடி யுய்தலுங் கூடுமன் ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே. (193) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக் காஞ்சி, ஒரே ருழவர் பாட்டு. உரை : அதள் எறிந்தன்ன - தோலைப் புடைத்து வைத்தாற் போன்ற; நெடு வெண்களரின் - நெடிய வெளிய களரின் கண்; ஒருவன் ஆட்டும் புல்வாய் போல - ஒருவன் அலைக்கும் புல்வாய் ஓடிப் பிழைக்குமாறு போல; ஓடி உய்தலும் கூடும் மன் - யானும் நன்னெறிக்கண்ணே யொழுகிப் பிழைக்கவும் கூடும்; ஒக்கல் வாழ்க்கை - சுற்றத்தோடு கூடி வாழும் இல் வாழ்க்கை; கால் தட்கும் - அதன்கட் செல்லவொட்டாது காலைத் தளையா நிற்கும் ஆதலான் உய்தல் கூடாது எ-று. மன், கழிவின்கண் வந்தது. மா : அசைநிலை விளக்கம் : தோலைப் புடைத்துவைத்தலாவது, தோலையுரித்து அதனை மேல் கீழாகத் திருப்பி வைத்தல். ஆட்டுதல் - அலைத்தல், “முள்ளி வேரளைக் கள்வளனாட்டிப், பூக்குற் றெய்திய புனல்” (ஐங்.23) என்றாற்போல. புல்வாய் - மான். களரில் நின்ற மான், தன்னைத் துரத்தும் ஒருவன், தான் வழுக்கி வீழ்தற் கிடமுண்மையின், “ஓடியுய்தல் கூடும்” என்றார். நன்னெறி களர் போல்வ தென்றது, ஒக்கல் வாழ்க்கை செல்லவொட்டாது தடுக்கும் சேறும் வழுக்குப் பகுதியுமாத் தளைத் தலின், எவ்வகையாலும் தன்னை இன்றியமையாத மனைவாழ்வே ஒருவனுக்கு ஒக்கல் வாழ்க்கை யாதலால், அதனை எடுத்தோதினார். இப் பாட்டின்கண் ஆசிரியர். தான் இல்வழி தாங்குவாரின்றிக் கெட்டுத் தலைத்தலைச் சிதறியோடி, அறமும் பொருளும் இன்பமும் பெறும் வகைகெட்டு அழியத்தக்க மனைவாழ்க்கையில் இருப் போனே உய்தல் கூடாத இயல்பினன் என்று குறிக்கப்படுகின்றான். ஆசிரியர் தொல்காப்பியர் “காமஞ் சான்ற கடைக்கோட் காலை, ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி,, அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்றதும் இக் கருத்தையே வற்புறுத்துவதை அறிந்து கொள்க. இக் கருத்தையே திருத்தக்கதேவர், “காட்டகத் தொருமகன் துரக்கு மாக்கலை, ஓட்டுடைத் தாமெனின் உய்யும் நங்களை, ஆட்டியிட் டாருயிர் அளைந்து கூற்றுவன், ஈட்டிய விளைமதுப் போல உண்ணுமே” (சீவக. 2919) என்றார். (193) 194. பக்குடுக்கை நன்கணியார் இந் நன்கணியார் பெயரை யடுத்துச் சிறப்பிக்கும் பக்குடுக்கை யென்பது இவரது ஊர்ப் பெயராகவும் என்றும், பக்கு என்பது பையென்னும் பொருள்படுதலின்; இவர் பையையே உடையாக வுடுப்பவ ரென்றும் அறிஞர் கருதுகின்றனர். ஒருவருக்கு உடுப்பவை இரண்டாக வேண்டி யிருப்பவும், ஒன்றையே இரண் டாகப் பகுத்துடுக்கும் காரணத்தால் பக்குடுக்கை நன்கணியா ரெனப்பட்டா ரென்றற்கும், ஒருவரது வறுமைநிலையைப் பக்குடுக்கை யெனச் சிறப்பித்துரைத்த நலம் கண்டு, சான்றோர் இவரை இவ்வாறு சிறப்பித்துப் பாராட்டினர் என்றற்கும் இட னுண்டு. நன்கணி யென்பது இவர தியற்பெயர். இவர் காலத்தே நாட்டில் வாழ்ந்த வேந்தர்கட்கும் ஏனைச் செல்வர்கட்கும் உலக வாழ்வில் பெரு விருப்பந் தோன்றி, “மெய்வலி யுடையார்க்கே இவ்வுலகம் உரியது; உலகத்திற் பிறந்தா ரனைவர்க்கும் பொதுவென்பது பொருந்தாது” என்றும், “அவ் வலியைக் கெடாது பேணிக் கொள்ளற்குச் செல்வம் இன்றியமையாமையின், செல்வந் தேடுவது வலியுடையார்க் கேற்ப” தென்றும் கருதி, அவற்றிற்கேற்ப நாளும் போரும் பொரு ளீட்டமுமே நினைந்தொழுகப் பண்ணிற்று இதன் விளைவாக நாட்டில் இன்பவாழ்வுக் கிடனில்லையாயிற்று. இதனைக் கண்டார் நம் பக்குடுக்கை நன்கணியார். “இவ்வுலகம் இனிதன்று; ஒரு மனையில் மணப்பறை முழங்குகிறது. ஒருத்தி பூவணியாற் பொற்புற்று விளங்க, ஒருத்தி கணவனைப் பிரிந்து கண் கலங்கி நிற்கிறாள். இவ்வா றமையுமாறு இவ்வுலகினைப் படைத்தவன் பண்பறிந் தொழுகும் பாடில்லாதவ னேயாவன். இவ்வுலகின் இத் தன்மையை யறிந்தவன் இதனிடையே கிடந்து உழல வேண்டு மென்பதன்று. இதனிற் சிறந்த இன்ப வுலகத்து இன்ப வாழ்வு காண்டலை வேண்டியவனாவான்” என இப் பாட்டால் வற் புறுத்தலானார். ஓரி னெய்தல் கறங்க வோரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர் பைத லுண்கண் பனிவார் புறைப்பப் 5 படைத்தோன் மன்றவப் பண்பி லாளன் இன்னா தம்மவிவ் வுலகம் இனிய காண்கித னியல்புணர்ந் தோரே. (194) திணை : பொதுவியல்; துறை : பெருங்காஞ்சி. பக்குடுக்கை நன்கணியார் பாடியது. உரை : ஓர் இல் நெய்தல் கறங்க - ஒரு மனையின்கண்ணே சாக்காட்டுப் பறை யொலிப்ப; ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப - ஒரு மனையின்கண்ணே மணத்திற்குக் கொட்டும் மிகக் குளிர்ந்த முழவினது ஓசை மிக வொலிப்ப; புணர்ந்தோர் பூ அணி அணிய - காதலரோடு கூடிய மகளிர் பூவணியை யணிய; பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப - பிரிந்த மகளிரது வருத்தத்தையுடைய உண்கண்கள் நீர் வார்ந்து துளிப்ப; படைத்தோன் மன்ற - இப்பரிசு ஒத்து ஒவ்வாமைப் படப் படைத்தான் நிச்சிதமாக; அப் பண்பிலாளன் - அப் பண்பில்லாதோனாகிய நான்முகன்; இன்னாது அம்ம இவ் வுலகம் - கொடிது இவ்வுலகினது இயற்கை; இதன் இயல்பு உணர்ந்தோர் இனிய காண்க - ஆதலான் இவ்வுலகினது தன்மை யறிந்தோர் வீட்டின்பத்தைத் தரும் நல்ல செய்கை களை அறிந்து செய்து கொள்க எ-று. காண்க வென்பது காண்கெனக் குறைக்கப்பட்டது. இதன் இயல்புணர்ந்தோர் இவ்வின்னாமையை இனியவாகக் காண்க வென்றுரைப்பினு மமையும். விளக்கம் : மணவொலி கேட்பார்க்கு இன்பமும் குளிர்ச்சியும் பயப்ப தாகலின், “ஈர்ந்தண் முழவின் பாணி” யென்றார். பாணி-ஈண்டு இனிய ஓசை யென்னும் பொருளதாயிற்று. நெய்தற்பறை கேட்டார்க்கு வருத்தம் பயத்தலின், வாளா நெய்தலென் றொழிந்தார். படைத்தான் என்ற வினைமுற்றின் ஈற்றயலாகாரம் செய்யுளாகலின் ஓகார மாயிற்று. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்பது பற்றி, எல்லார்க்கும் ஒரு தன்மைப்பட அமைக்காது வேறுபட வமைத்தமை யின் நான்முகனைப் “பண்பிலாளன்” என்றார். சுட்டு-உலகறி சுட்டு. 195. நரிவெரூஉத்தலையார் நரிவெரூஉத்தலையார் ஆழ்ந்த புலமை யுள்ளம் படைத்த சான்றோராவர். இன்பம் துன்பம் என்ற இருவகைக் காட்சி களையும் ஆழ்ந்து நுணுகிச் சென்று அகன்று ஓங்கும் அறிவுநெறி இவர்பால் நன்கமைந்துளது. காதலன் பிரிந்தானாக, அப்பிரிவுத் துன்பத்தை யாற்றாத தலை மகளைக் கண்ட தோழி, “மெல்லிய இயல்பினையுடைய இவள், இதனை ஆற்றுவளோ” எனத் தனக்குள்ளே யெண்ணிக் கலங்கினாள். தலைமகளோ, அதனைக் குறிப்பால் அறிந்துகொண்டாள். காதலன் தனக்குரிய கடமை குறித்துப் பிரிந்துள்ளான்; காதலினும் கடமை பெரிது; அது குறித்து ஆற்றுதல் கற்புடைய மகட்குக் கடன் என்பதை நன்குணர்ந்தாள். தன் கற்புமாண் பறியாத தோழிக்கு அதனைக் கூறுதல் நன்றன்றெனக் கொண்டாள். காதற்காமத்துறைக்கண் பிரிவுபற்றி நிகழும் துன்பத்தையறியாள் போலப் பேசலுற்று, “தலைவன் பிரிந்தானாக, என் கண்கள் உறங்காவாயின; இதுதான் காமநோய் என்பதோ?” என்பதுபட, “மெல்லம் புலம்பன் பிரிந் தெனப், பல்லித ழுண்கண் பாடொல் லாவே....அது கொல் தோழி காம நோயே” (குறுந். 5) என்றா ளெனப் பாடிக்காட்டுகின்றார். தலைமக னொருவன் தான் காதலித்த தலைவியை மணப்பதற் கிடையே பிரிந்து செல்ல வேண்டிய கடமை யுண்டாகிறது. அவன் தோழியை நோக்கி, “யான் வருந்துணையும் இவளைப் பாதுகாப்பாயாக” என்கின்றான். அவற்குத் தோழி, “நீ இவளை விட்டுப் பிரிந்தே மெனக் கைவிட்டுப் பிரியுநாள் வரட்டும்; அப்போதுதானே இது கூறல் வேண்டுவது” என்றாள்; தலைமகன் அது கேட்டு வருந்தினான்; “தலைவ, நீ உண்மையாகவே வருந்தினாயாயின் ஒன்று செய்; நீ இவள்பால் நுகர்ந்த நலம் உண்டன்றோ? அதனைத் தந்துவிட்டுச் செல்” என நகையாடு வாளாய், “விட்டென விடுக்குநாள் வருக, அது நீ, உண்ட என் நலனே” (குறுந்.236) என்றாளெனக் கூறுகின்றார். இவ்வாறு இரண்டு பாட்டுக்களாலும், தலைவி, தோழி யென்ற இரு வருடைய மனமாண்புகளை ஆழ அகழ்ந்தெடுத்துக் காட்டும் இந் நரிவெரூஉத்தலையாரது புலமை நலத்தை ஒருவாறு காணலாம். சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறையைக் கண்டு தம்முடம்பு நலமுறப் பெற்ற இவர், இவ்வாறு தமக்கு நலஞ் செய்த அவனது தோற்றச் சிறப்புக் கெடாது நிலைபெறுமாறு கூறிய புலமை யுரையை “எருமை யன்ன” (புறம். 5) எனத் தொடங்கும் புறப்பாட்டிற் கண்டோம். இப்பாட்டின்கண் இவர் காலத்துச் சான்றோர் சிலர் பரிசிற்றுறை யிலும் அகத்துறையிலும் தம் புலமை வளத்தையும் போர்த் துறையில் மெய் வளத்தையும் பயன்படுத்தக் கண்டு நன்னெறிக் கண் பயன்படுத்துமாறு அறிவுறுத்த முற்பட்டு, “நரைத்து முதிர்ந்த சான்றீரே, கூற்றுவன் போந்து நும் முயிரைப் பற்றுங்கால் நீவிர் வருந்துவீர்கள்; உங்களால் மக்கட்கு நல்லது செய்தல் இயலா தாயின், அவர்கட்குத் துன்பம் விளைக்கும் துறையில் வேந்தர் களையும் பிறரையும் ஊக்குதலாகிய அல்லது செய்தலை ஒழிமின்; அதுவே எல்லார்க்கும் உவப்பைத் தருவது; நன்னெறியுமாவது” எனத் தெருட்டியுள்ளார். பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் 5 பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான் எல்லாரு முவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே. (195) திணை : பொதுவியல்; துறை : பொருண்மொழிக்காஞ்சி. நரிவெரூஉத் தலையார் பாடியது. உரை : பல் சான்றீரே பல் சான்றீரே - பல அமைந்த குணங்களை யுடையீர், பல அமைந்த குணங்களை யுடையீர்; கயல் முள் ளன்ன நரை முதிர் திரை கவுள் - கயலினது முட்போன்ற நரை முதிர்ந்த திரைந்த கதுப்பினையும்; பயனில் மூப்பின் - பயனில் லாத முதுமையையுமுடைய; பல் சான்றீர் - பல அமைந்த குணங்களை யுடையீர்; கணிச்சிக் கூர்ப்படை கடுந்திறல் ஒருவன் - மழுவாகிய கூரிய படைக்கலத்தினையும் கடிய வலியினையுமுடைய ஒருவன்; பிணிக்குங் காலை இரங்குவிர் - பாசத்தாற் கட்டிக் கொண்டு போங்காலத்து இரங்குவீர் நீர்; நல்லது செய்தல் ஆற்றீராயினும் - நல்வினையைச் செய்ய மாட்டீராயினும்; அல்லது செய்தல் ஓம்புமின் - தீவினையைச் செய்தலைப் பரிகரிமின்; அதுதான் எல்லாரும் உவப்பது - அதுதான் யாவரும் புகழ்வ ரென்றது; அன்றியும் - ஒழியவும்; நல்லாற்றுப் படூஉம் நெறியும் அது - நல்ல நெறியின்கண்ணே செலுத்தும் வழியும் அதுதான் எ-று. பலராகிய சான்றீரென்பது, பல்சான்றீரெனத் தொக்கது; “பல்குட்டுவர்” (மதுரை. 105) என்பது போல. பலவாகிய குணங்களால் அமைந்தீர் எனினு மமையும். பயனின் மூப்பென்று வைத்துப் பல் சான்றீரே யென்றது, இகழ்ச்சிக்குறிப்பு. அடுக்கு விரைவின்கண் வந்தது. விளக்கம் : கயல் முள் - கயல் மீனினுடைய முள். நன்னெறிக்கண் வாழ் நாள் கழியாமையின், “பயனில் மூப்பு” என்றார். வெல்லற் கருமை பற்றிக் கூற்றுவனைக் “கடுந்திற லொருவன்” என்றார். கயிற்றாற் கட்டி உயிரை யீர்த்துச் செல்வ னென்ப வாகலின், “பிணிக்குங் காலை” யென்றார். நல்லது செய்தலினும், தீயது செய்யாமை துன்பம் இல்லாதிருத்தற் கேதுவாகலின், “அல்லது செய்த லோம்புமின்” என்றும், தீயவை தீய பயத்தலால், அவை தீயினும் அஞ்சப்படுதலின், தீயதென வாயாற் சொல்லற்கும் விரும்பாது “அல்லது” என்றும் கூறினார். நல்லது செய்தலினும் தீயது செய்யாமை எல்லார்க்கும் எளிதின் இயைவதுபற்றி, “எல்லாரும் உவப்பது” என்றும், நல்லது செய்து நலம் பெறுதற்குரிய நன்னெறியு மதுவாகலின், “நல்லாற்றுப் படூஉம் நெறியு மாரதுவே” யென்றும் வற் புறுத்தினார். 196. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பாண்டி நாட்டிலிருந்து அரசுபுரிந்து வருகையில், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் முதலிய பேரரசர்களைப் பாடி அவர்கள் தந்த பரிசில் பெற்றுச் சிறப்புற்றிருந்த ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார், இந்த நன்மாறனுடைய மேம்பாட்டைக் கேள்வியுற்று இவன்பால் வந்தார். இவன் மதுரை மருதனிள நாகரால், “கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்,பிறைநுதல் விளங்கு மொருகண் போல, வேந்து மேம்பட்ட பூந்தார் மாற” னென்று பாராட்டவும், மதுரைக் கணக்காயனார் மகனாரால், மணிமிடற்றோனும், பனைக்கொடியோனும், திருமாலும், முருகனும் என்ற “ஞாலம் காக்கும் கால முன்பின், தோலா நல்லிசை நால்வ” ரையும் ஒவ்வோராற்றலின் ஒத்தலின், இப் பாண்டிற்கு “அரியவும் உளவோ?” என வியந்து, “வெங்கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத் தண்கதிர் மதியம் போலவும், நின்று நிலைஇயர் உலகமோ டுடனே” என வாழ்த்தவும், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனாரால், “இமிழ் குரல் முரச மூன்றுட னாளும், தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்” தெனச் சிறப்பிக்கவும் பெற்றிருத்தலின், இவனைக் காண்பதில் ஆவூர் மூலங்கிழார்க்கு விருப்பமுண்டாதாயிற்று. அக்காலை அவர்க்கு வறுமைத் துன்பமும் வந்து பொருந்தி யிருந்தது. இந்நிலையில் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன் மாறன் இவர்க்குச் செவ்வி கொடானாயினன். செவ்வி பெறுதல் வேண்டிச் சின்னாள் தங்கினார். செவ்வி பெற்றுத் தமது புலமை நலத்தையும் தோற்று வித்தார். ஓரொருகால், அவரைச் சிறப்பிக்கக் கருதினான்போல நன்மாறனும் நடந்துகொண்டானே யன்றிப் பரிசில் நல்கினானில்லை. ஆவூர் மூலங்கிழார்க்கு உள்ளத்தே அடங்காத வெம்மை யுண்டாயிற்று. அது பொங்கி வெளியே ஒரு பாட்டாய் வெளிவந்தது. அந்த இப்பாட்டின்கண், “வேந்தே, இயல்வதனை இயலுமெனச் சொல்லி யீதலும், இயலாததனை இயலா தெனச் சொல்லி விடுதலும், தாளாண்மையுடையார்க் குரிய நற்செயல்களாகும். இயலாததை இயலும் என்றலும், இயல்வதனை இயலாதென்றலும் இரப்போரை ஏமாற்றும்-புகழைக் கெடுத்துக் கொள்ளும் செயல்களாம். இரப்போராகிய எமது வாழ்வில் இக்குறைபடும் செயல்கள் புரவலர்பால் உளவாதலை இதுகாறும் கண்டதில்லை; இப்போதே கண்டோம். வேந்தே, நின் வாழ்நாள் சிறக்க; நின்புதல்வர் நோயிலராகுக; பனி யென்றும் வெயி லென்றும் பாரேன்; கற்புடை என் மனைவியை நினைத்து யான் செல்கின்றேன்” என்ற கருத்தைப் புலப்படுத்தினார். இலவந் திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனும், தன் தவற்றுக்கிரங்கி அவர்க்கு வேண்டுவன நல்கி விடுத்தான். ஒல்லுவ தொல்லு மென்றலும் யாவர்க்கும் ஒல்லா தில்லென மறுத்தலு மிரண்டும் ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே ஒல்லா தொல்லு மென்றலு மொல்லுவ 5 தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே இரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை அனைத்தா கியரினி யிதுவே யெனைத்தும் சேய்த்துக் காணாது கண்டன மதனால் 10 நோயில ராகநின் புதல்வர் யானும் வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை நாணல தில்லாக் கற்பின் வாணுதல் மெல்லியற் குறுமக ளுள்ளிச் 15 செல்வ லத்தை சிறக்கநின் னாளே. (196) திணை : பாடாண்டினை; துறை : பரிசில் கடாநிலை. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங்கிழார் பாடியது. உரை : ஒல்லுவது ஒல்லும் என்றலும் - தம்மாற் கொடுக்க இயலும் பொருளை இயலுமென்று சொல்லிக் கொடுத்தலும்; யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும் - யாவர்க்கும் தம்மாற் கொடுக்க இயலாத பொருளை இல்லை யென்று சொல்லி மறுத்தலுமாகிய; இரண்டும் ஆள்வினை மருங்கில் கேண்மைப் பால - இரண்டும் தாளாண்மைப் பக்கத்து உளவாகிய நட்பின் கூற்றினுள்ளன; ஒல்லாது ஒல்லும் என்றலும் - தனக்கு இயலாததனை இயலு மென்றலும்; ஒல்லுவது இல்லென மறுத் தலும் - இயலும் பொருளை இல்லையென்று மறுத்தலு மாகிய; இரண்டும் வல்லே இரப்போர் வாட்டல் - இரண்டும் விரைய இரப்போரை மெலிவித்தல்; அன்றியும் புரப்போர் புகழ் குறைபடூஉம் வாயில் - அன்றியும் ஈவோர் புகழ் குறைபடும் வழியாம்; இனி அனைத்தாகியர்- இப்போழுது நீ எம்மளவிற் செய்த செய்தியும் அத்தன்மைத் தாகுக; இது அனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம் -இஃது எத்துணையும் எங்குடி யிலுள்ளார் முன்பு காணாதது யாம் கண்டேம்; அதனால் - அத் தீங்கினால்; நின் புதல்வர் நோயிலராக - நின் பிள்ளைகள் நோயின்றியே யிருப்பாராக; யானும் வெயிலென முனியேன் - யானும் வெயிலென்று நினைந்து போக்கை வெறேனாய்; பனியென மடியேன் - பனியென்று கொண்டு மடிந்திரேனாய்; கல் குயின் றன்ன என் நல்கூர் வளிமறை - விட்டு நீங்காமையால் கல்லாற் செய்தாற்போன்ற என் நல்குரவின் மிகுதியான் வளி மறையாகிய மனையிடத்து; நாணலது இல்லாக் கற்பின் - நாணல்லது வேறில்லாத கற்பினையும்; வாணுதல் மெல்லியல் - குறுமகள் உள்ளி- ஒளியை யுடைத்தாகிய நுதலினையும்- மெல்லிய இயலினையுமுடைய குறுமகளை நினைந்து; செல்வல் - போவேன்; நின் நாள் சிறக்க - நின்னாயுள் மிகுவதாக எ-று. “நோயிலராக நின் புதல்வர்” என்பதூஉம், “சிறக்க நின் நாள்” என்பதூஉம் குறிப்புமொழி. அன்றி, பரிசில் மறுத்தலான் இவன் புதல்வர்க்கும் இவனுக்கும் தீங்கு வருமென்றஞ்சி நோயிலராக வெனவும், சிறக்க நின் நாளெனவும் கூறினாராக வுரைப்பினு மமையும். நல்குர வென்பது நல்லெனக் குறைந்துநின்றது. “கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை” யென்பதற்குக் கல்லாற் செய்தாற்போன்ற பயன் கொள்ளாத யாக்கையுடைய எனது நல்கூர்ந்த வளிமறை யெனவும், கல்லைத் துளைத்தாற் போன்ற காற்றடை மாத்திரையாகச் செய்யப்பட்ட நல்கூர்ந்த என் மனை யெனவு முரைப்பாரு முளர். விளக்கம் : கொடுப்பது போல காட்டிக் கொடாது நீட்டித்தமையின், இஃது இரப்போர் வாட்டலன்றியும், புரப்போர் புகழ் குறைபடும் வாயிலு மாதலின், “அனைத்தாகியர்” என்றார். இதனைக் கூறும் பொருட்டே “ஒல்லுவ தொல்லு மென்றலும்” முதலாயவற்றை யெடுத்தோதினார். என்றல், என்று சொல்லிக் கொடுத்தல் அத்தை-அசைநிலை. கண்டனம் எனத் தன்மைக்கண் கூறுதலின், காணாமை தம் குடியி லுள்ளோர் வினையாயிற்று. அதனால், எம் குடியிலுள்ளார் முன்பு காணாதது யாம் கண்டேம் என்றார். எனவே, இப் பாண்டியன் முன்னோரும், இதுகாறும் பரிசில் நீட்டித்தது இல்லை யென்றா ராயிற்று. குடிப் பிறப்புக்கு மாறாகச் சான்றோர் நோவன செய்த குற்றத்தால் நின் புதல்வர் நோயுற்று வருந்துவ ரென்பார், “அதனால் நோயிலராக நின் புதல்வர்” என்று குறிப்பு மொழியாற் கூறினார். குறிப்புமொழியாவது, “எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப், பொருட்புறத் ததுவே குறிப்புமொழி யென்ப” (தொல் செய். 177) என்பதனாலறிக; இதனை எதிர்மறைக் குறிப்பென்றும், கூற்றிடை வைத்த குறிப்பென்றும் கூறுவர். முனிவுக்குப் பொருள் வெயி லன்மையின், போக்கை யென்பது வருவிக்கப்பட்டது. நல்குரவு கூர் வளிமறை யென வரற்பாலது, நல்கூர் என வந்ததற்கு அமைதி காட்டுவார், “நல்குர வென்பது நல்லெனக் குறைந்துநின்றது” என்றார். நல், வறுமை. நீங்காது பிணித்துக்கொண்டிருத்தலால் வறுமையை, “கல்குயின் றன்ன வறுமை” யேன்றார். மனையின் மேற்கூரை வெயிலும், பனியும், மழையும், மறையா தொழியினும், சுவர் நின்று காற்றை மறைப்பது தோன்ற, “வளி மறை” யென்றார். (196) 197. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் சோழன் கரிகாற் பெருவளத்தானைத் திருமாவளவன் என்றும் சான்றோர் கூறுபவாதலின் இவ் வளவன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவ னெனச் சிறப்பிக்கப்படுகின்றான். இவன் காலத்தே, சேரநாட்டில் சேரமான் குட்டுவன் கோதையும் பாண்டிநாட்டில் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஆட்சி புரிந்தனர். சேரமான் குட்டுவன் கோதையையும், சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியையும், பாடிச் சிறப்புற்ற கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார், நலங்கிள்ளி சேட்சென்னிக்குப் பின் தோன்றிய இப் பெருந்திருமா வளவனை ஒருகால் காணப்போந்தார். இவரது மனப் பண்பை யறியாது, செல்வச் செருக்கால் கண் மூடியிருந்த வளவன் தான் தரவிருந்த பரிசிலை நீட்டித்தான். அதனால் குமரனார்க்கு வருத்த முண்டாகவே, தமது மனக்கோளைப் புலப்படுத்தும் இந்த அழகிய பாட்டைப் பாடினார். இதன்கண், “வேந்தே! யாங்கள்அரசர் நெடுந்தேர்களை யுடையரென்றோ, கடல் போலும் படையினையுடைய ரென்றோ, மேற்சென்ற போர்க ளனைத்தினும் வென்றி மிகுபவரென்றோ கருதி, அவர் களை வியந்து பாராட்டும் பண்பினோ மல்லோம். எம்மால் வியந்து பாராட்டப்படுபவர் சீறூர் மன்னராயினும் எம் பாடறிந்தொழுகும் பண்புடையாரே யாவர். எத்துணைத் துன்பம் வந்தெய்தினும், உண்மை யுணர்வும் நல்லறிவும் இல்லாதவர் எவரோ, அவ ருடைய செல்வத்தைச் சிறிதும் வேண்டேம்; நல்லறிவுடையவர் மிக்க வறுமை யுற்றாராயினும், அவ்வறுமை பயன்படுவதாகலின், அதனைப் பெரிதும் மதித்துப் பாராட்டுவேம்” என்று குறித்தார். பெருந்திருமாவளவன், நல்லிசைப் புலவர் பெருமானுடைய மனக்கோளும் அறிவு கொளுத்தும் ஆண்மையும் நினைந்து அவர்க்குப் பெரும் பரிசில் நல்கிச் சிறப்பித்தான். மதுரைக் குமரனார் இப் பாட்டின்கண், பாடறிந் தொழுகும் பண்பில்லாத வேந்தர் எத்துணைப் பெரியராயினும், அவர் களைப் பொருளாகக் கொள்ளே மெனச் செம்மாந்து கூறும் இக் கூற்று, பெருந்திருமா வளவன் தொடக்கத்தில், தன் பொருளும் படையும் பெருமையுமெண்ணி இறுமாந்திருந்தமையும், அதனால் அவன் அவர்க்குப் பரிசில் தர நீட்டித்தமையும் தோற்றுவிக் கின்றது.இவரோரன்ன மனத்திட்ப மமைந்த தமிழ்ப் பெரும் புலவர்கள் இன்றும் தோன்றற்குரிய வாய்ப்புக்கள் நாட்டில் உண்டாவது கண்டு தமிழகம் இறும்பூது கொள்கின்றது. வளிநடந் தன்ன வாச்செல லிவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரின ரெனாஅக் கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றின ரெனாஅ 5 உருமுரற் றன்ன வுட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றிய ரெனாஅ மண்கெழு தானை யொண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலேமே எம்மால் வியக்கப் படூஉ மோரே 10 இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கட் குற்றடகு புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் சீறூர் மன்ன ராயினும் மெம்வயிற் பாடறிந் தொழுகும் பண்பி னாரே 15 மிகப்பே ரெவ்வ முறினு மெனைத்தும் உணர்ச்சி யில்லோ ருடைமை யுள்ளேம் நல்லறி வுடையோர் நல்குர வுள்ளுதும் பெருமயா முவந்துநனி பெரிதே. (197) திணை : பாடாண்டினை; துறை : பரிசில் கடாநிலை. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது. உரை : வளி நடந் தன்ன வாச் செலல் இவுளியொடு - காற்று இயங்கினாற்போலும் தாவுதலுடைத்தாகிய கதியையுடைய குதிரையொடு; கொடி நுடங்கும் மிசைய தேரினர் எனாஅ - கொடி நுடங்கும் உச்சியையுடைய தேரினையுடைய ரெனவும்; கடல் கண்டன்ன ஒண்படைத் தானையொடு - கடலைக் கண்டாற் போலும் ஒள்ளிய படைக்கலத்தையுடைய சேனை யுடனே; மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ - மலை யோடு மாறுபட்டுப் பொரும் களிற்றினையுடைய ரெனவும்; உரும் உரற் றன்ன உட்கு வரு முரசமொடு - இடி முழங்கினாற் போலும் அஞ்சத்தக்க முரசத்தோடு; செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ - போரின் மேம்படும் வெற்றியினையுடைய ரெனவும்; மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் - நிலத்தைப் பொருந்தின படையினையுடைய ஒள்ளிய பூணினையுடைய அரசர்; வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலம் வெண் கொற்றக்குடை நிழற்றப்படும் செல்வத்தை மதித்த லில்லேம்; எம்மால் வியக்கப்படூஉமோர் - எங்களால் மதிக்கப்படுவோர்; இடு முள் படப்பை - இடப்பட்ட முள்வேலியையுடைய தோட்டத்து; மறி மேய்ந் தொழிந்த - மறி தின்ன வொழிந்து நின்ற; குறு நறு முஞ்ஞை கொழுங்கண் குற்றடகு - குறிய நாற்றத்தினையுடைய முஞ்ஞையது கொழுவிய கண்ணிற் கிளைக்கப்பட்ட குறிய இலையை; புன் புல வரகின் சொன்றி யொடு பெறூஉம் - புல்லிய நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற; சீறூர் மன்ன ராயினும் -சிறிய வூரையுடைய வேந்தராயினும்; எம் வயின் பாடறிந் தொழுகும் பண்பினோர் - எம்மிடத்துச் செய்யும் முறைமையை யறிந்து நடக்கும் குணத்தினையுடையோர்காண்; மிகப்பேர் எவ்வம் உறினும் - யாம் மிகப் பெரிய துன்ப முறினும்; எனைத்தும் உணர்ச்சியில்லோர் உடைமை யுள்ளேம் - சிறிதும் அறிவிலா தோருடைய செல்வம் பயன்படாமையின் அதனை நினையேம்; நல்லறிவுடையோர் நல்குரவு - நல்லறிவினை யுடையோரது வறுமை பயன் படுதலின் அதனை; பெரும - பெருமானே; யாம் உவந்து நனி பெரிது உள்ளுதும் - யாம் உவந்து மிகப் பெரிதும் நினைப்பேம் எ-று. எனா வென்பது, எண்ணிடைச் சொல். விளக்கம் : வாவுதல்-தாவுதல், இதனால் குதிரையை “வாம்பரி” யென்றலு முண்டு. பாடறிந் தொழுகும் பண்பிலா வேந்தருடைய தேரும், களிறும், வென்றியும், மிகச் சிறந்தனவாயினும், எம்மாற் பொருளாகக் கருதப்படா வெனத் தமது கருத்தை வற்புறுத்தற்கு, அவை ஒவ் வொன்றனையும் வகுத்தும் சிறப்பித்தும் கூறினார். பரிசிலர்க்கு வழங்குதற் குரியவாகலின் தேரையும் களிற்றையும், பொருட்கு வருவாயாதலின் வென்றியையும் எடுத்தோதினார். முஞ்ஞை யென்றது, இப்போது முன்னைக்கீரை யென வழங்குகிறது.பசுமுன்னை எருமை முன்னை என்ற வகையிரண்டனுள், பசு முன்னையே ஈண்டைக்குப் பயன்படுவது. பாடறிந்தொழுகும் பண்புடையவர் நல்லறிவுடையராதல் வெளிப்படையாதலால், அப்பண்பிலாரை “உணர்ச்சியில்லோர்” என்றார். நல்லறிவுடையோர் நல்குரவு உள்ளுதும் என்றது, “பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர், கழிநல் குரவே தலை” (குறள். 657) என்ற திருவள்ளுவர் கருத்தைப் புலப்படுத்துகிறது. 198. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் வடம வண்ணக்கன் பேரி சாத்தனா ரென்பார், அகப் பாட்டுக்கள் பல பாடிய சான்றோராவர். மதுரைக் குமரனார் போல, அத்துணைப் புலமை வீறு படைத்தவரல்ல ரெனினும், தம் கருத்தை நயமான முறையில் வெளிப்படுத்தும் திறலுடையவர். பொன்னோட்டம் பார்க்கும் தொழிலினராதலை வடமவண்ணக் கன் என்ற சிறப்பு இனிது காட்டுகிற தெனினும், இவர் வழங்கும் குறிப்புமொழிகள் நல்ல சான்று கூறி வற்புறுத்துகின்றன. இவர், இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனைப் பன்முறை கண்டு பழகியவர். அவர் நெடுந்தொலைவிலுள்ள நாடுகட்குச் செல்லவேண்டி யிருந்தமையின், அவனைக் கண்டு விடைபெற்றுப் போக ஒருகால் வந்தார். அக்காலை, அவன் முதுமையுற்றிருந்தான். அவன் மக்கள் பலரும் நல்ல ஆடவராய்த் தமிழக மெங்கும் திரிந்து, வெற்றிச் செல்வமும், பொருட் செல்வமும் கொணர்ந்தனர். மக்கட் செல்வத்தாலும், அரசியற் செல்வத் தாலும் நன்மாறன் செருக்குற்றுப் பேரி சாத்தனார்க்குப் பரிசில் தாராது நீட்டித்தான். ஆவூர் மூலங்கிழாரையும் இவ்வாறே இகழ்ந்து, பின்பு அவர் வெகுண்டு பாடக்கேட்டுப் பரிசில் தந்த அந்த மனப் பண்பே இப்போதும் அவன்பால் இருந்தது. ஒரு சில மக்களைப் பெற்று, அவர் இளமைப்பருவ நீங்கா முன்பே அத்துணைச் செருக்குற்ற இவன், அம்மக்கள் மறங் குன்றா ஆடவ ராய் நாடு முற்றும் சென்று வென்றி நிலைநாட்டி வரும் இந் நாளில், அச்செருக்கு மிகத் தடித்திருப்பதில் வியப்பில்லை யன்றோ? இதனால் நம் வடமவண்ணக்கரான பேரிசாத்தனார் மனம் புழுங்கி இப்பாட்டைப் பாடி விடை பெறலானார். இதன்கண், “வேந்தே! ஆலமர் கடவுள் போலும் நின் செல்வத்தைக் கண்டு பாராட்டி, நின் கற்புடைய மனைவி பயந்துள்ள மக்கள் பொலிக என வாழ்த்தி, நீ தரும் பரிசில்மேலெழுந்த வேட்கையால் கனவினும், நனவினும் அரற்றும் என் நெஞ்சம் இன்புற்று மகிழு மாறு இன்று கண்டேன்; இனி விடைபெற்றுக் கொள்கிறேன்; நின் கண்ணி வாழ்க; தமிழக முழுவதும் வென்று பெரும்பொரு ளீட்டிய நின்னைப் போலும் நின் மக்கள், பகைவர் வருந்த வென்று அவர் செல்வ முற்றும் கொணர்ந்து தொகுத்த நின் முன்னோர் போலக் கண்ணோட்ட முடையராகுக. ஆண்டும் நாளும் மிக்குக் கடல் நீரினும், நீர் கொழிக்கும் மணலினும், நீரைப் பொழியும் மழைத் துளியினும் பெருகுக; நின் மக்கள் பெறும் மக்களைக் காணுந்தோறும் செல்வமும் புகழும் சிறந்து நீ நீடு வாழ்க; யான் சேய நாட்டிற்குச் செல்கின்றேன்; நின் அடி நிழற் கண் பழகிய யான் வானம்பாடி போல நின் புகழை நச்சி யிருப்பேன்; என்னை மறவா தொழிவாயாக” என்று குறித் திருப்பது மிக்க உருக்கமானது. அருவி தாழ்ந்த பெருவரை போல ஆரமொடு பொலிந்த மார்பிற் றண்டாக் கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோள் பயந்த மணிமரு ளவ்வாய்க் 5 கிண்கிணிப் புதல்வர் பொலிகென் றேத்தித் திண்டே ரண்ண னிற்பா ராட்டிக் காதல் பெருமையிற் கனுவினு மரற்றுமென் காமர் நெஞ்ச மேமாந் துவப்ப ஆலமர் கடவு ளன்னநின் செல்வம் 10 வேல்கெழு குருசில் கண்டே னாதலின் விடுத்தனென் வாழ்கநின் கண்ணி தொடுத்த தண்டமிழ் வரைப்பகங் கொண்டி யாகப் பணித்துக்கூட் டுண்ணுந் தணிப்பருங் கடுந்திறல் நின்னோ ரன்னநின் புதல்வ ரென்றும் 15 ஒன்னார் வாட வருங்கலந் தந்துநும் பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின் முன்னோர் போல்கிவர் பெருங்கண் ணோட்டம் யாண்டு நாளும் பெருகி யீண்டுதிரைப் பெருங்கட னீரினு மக்கடன் மணலினும் 20 நீண்டுயர் வானத் துறையினு நன்றும் இவர்பெறும் புதல்வர்க் காண்டொறு நீயும் புகன்ற செல்வமொடு புகழினிது விளங்கி நீடு வாழிய நெடுந்தகை யானும் கேளில் சேஎய் நாட்டினெந் நாளும் 25 துளிநசைப் புள்ளினின் னளிநசைக் கிரங்கிநின் அடிநிழற் பழகிய வடியுறை கடுமான் மாற மறவா தீமே. (198) திணை : பாடாண்டினை; துறை : பரிசில் கடாநிலை. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது. உரை : அருவி தாழ்ந்த பெருவரை போல - அருவி தாழ்ந்த பெரிய மலை போல; ஆரமொடு பொலிந்த மார்பின் - ஆரத்தோடு பொலிந்த மார்பின்கண்; தண்டா- வேட்கை தணியாத; கடவுள் சான்ற கற்பின் - தெய்வத்தன்மை யமைந்த கற்பினையும்; சேயிழை மடவோள் பயந்த - செய்ய ஆபரணத்தையுமுடைய உன்னுடைய மடவோள் பெறப்பட்ட; மணி மருள் அவ் வாய்க் கிண்கிணிப் புதல்வர் - பவழ மணிபோன்ற அழகிய வாயையும் கிண்கிணியையு முடைய புதல்வர்; பொலிக என்றேத்தி - பொலிக வென்று வாழ்த்தி; திண் தேர் அண்ணல் - திண்ணிய தேரையுடைய வேந்தே; நிற் பாராட்டி - நின்னைப் புகழ்ந்து; காதல் பெருமையின் கனவிலும் அரற்றும் - பரிசிலின்மேல் அன்பு பெரிதாகலின் கனவின்கண்ணும் நின் புகழையே கூறும்; என் காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப - எனது விருப்பத்தை யுடைய நெஞ்சம் இன்புற்று மகிழ; ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம் - ஆலிலையின்கண் மேவிய திருமால் போலும் நின்னுடைய செல்வத்தை யெல்லாம்; வேல் கெழு குருசில் - வேலையுடைய தலைவ; கண்டேனாதலின் - கண்டேனாத னால்; விடுத்த னென் - விடை கொண்டேன்; வாழ்க நின் கண்ணி - வாழ்க நினது கண்ணி; தொடுத்த தண்தமிழ் வரைப்பகம் - தொடர்புபட்ட குளிர்ந்த தமிழ்நாட் டெல்லை முழுதும்; கொண்டியாகப் பணித்துக் கூட்டுண்ணும் - கொள்ளையாக் கொண்டு நின்பகைவரைத் தாழ்த்து அவர்கள் பொருள்களை யும் வாங்கிக்கொண்டு உண்ணும்; தணிப் பருங் கடுந்திறல் நின்னோ ரன்ன நின் புதல்வர் - தணித்தற்கரிய மிக்க வலியை யுடைய நின்னை யொக்கும் வலியையுடைய நின்னுடைய மைந்தர்; என்றும் ஒன்னார் வாட - எந்நாளும் பகைவர் தேய; அருங்கலம் தந்து - அவருடைய பெறுதற் கரிய அணிகலத்தைக் கொண்டுவந்து; நும் பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த - நும்முடைய பொன்னுடைய நெடிய நகரின்கண் பொலிய வைத்த; நின் முன்னோர் போல்க இவர் பெருங் கண் ணோட்டம் - நின்னுடைய முன்னுள்ளோரைப் போல்க இவருடைய பெரிய கண்ணோட்டம்; யாண்டும் நாளும் பெருகி - யாண்டும் நாளும் மிக்கு; ஈண்டு திரைப்பெருங் கடல் நீரினும் - செறிந்த திரையையுடைய பெரிய கடனீரினும்; அக் கடல் மணலினும் - அக் கடல் கொழித்திடப்பட்ட மணலினும்; நீண்டு உயர் வானத் துறையினும் - நீண்டுயர்ந்த மழையின் துளியினும்; நன்றும் - பெரிதும்; இவர் பெறும் புதல்வர்க் காண்டொறும் - இவர் பெறும் பிள்ளைகளைக் காணுந் தோறும்; நீயும் புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி -நீயும் விரும்பிய செல்வத்துடனே புகழும் இனிதாக விளங்கி;நீடு வாழிய- நெடுங் காலம் வாழ்க; நெடுந்தகை - பெருந்தகாய்; யானும் கேளில் சேஎய் நாட்டின் - யானும் உறவில்லாத தூரிய நாட்டின்கண்ணே; எந்நாளும் - நாடோறும்; துளி நசைப் புள்ளின் - துளியை நச்சு தலையுடைய வானம்பாடி யென்னும் புட்போல; நின் அளி நசைக்கு இரங்கி - நின்னுடைய வண்மை நசையான் இரங்கி; நின் அடி நிழல் பழகிய அடியுறை - நினது அடிநிழற்கண் பழகிய அடியின் வாழ்வேன்; கடு மான் மாற - விரைந்த செலவையுடைய குதிரையையுடைய மாறனே; மறவா தீமே - நீ செய்த செயலை மறவா தொழிவாயாக எ-று. புதல்வர் மார்பிற் பொலிகெனக் கூட்டினுமமையும். “ஆலமர் கடவுளன்னநின்” என்பதற்கு, ஆலின் கீழமர்ந்த முக்கட்செல்வனாகிய கடவுளை யொப்ப, என்றும் நிலை பெற்றிருப்பே னென்றிருக்கின்ற நின்னென்றுரைப்பினு மமையும். “நின் முன்னோர் போல்கிவர் பெருங் கண்ணோட்ட” மென்றது, அவரும் வழங்காது வைத்தலின் கண்ணோட்ட மிலர்; இருவரும் அவரை யொக்கக் கண்ணோட்ட மிலராக வென்பதாயிற்று. “முன்னோர் போல்கிவர்பெருங் கண்ணோட்ட மெனவும், “ வாழ்க நின் கண்ணி” யெனவும், “நீடு வாழிய” ரெனவும் நின்றவை குறிப்பு மொழி; அன்றி, என்னிடத்து நீ செய்த கொடுமையால் நினக்குத் தீங்கு வரும்; அது வாராதொழிக வென வாழ்த்தியதூஉமாம். “மறவாதீமே” என்றது, என் அளவில் நீ செய்த செய்தியை மறவாதொழி என்பதாயிற்று. யாண்டும் நாளும் பெருகி யென்பதற்கு, நின்னாளே திங்க ளனையவாக; அத்திங்கள் யாண்டோ ரனையவாக; ஆண்டே ஊழி யனைய வரம்பினவாக என்பது கருத்தாகக் கொள்க. விளக்கம் : அருவியை ஆரமாக உருவகஞ் செய்தல்போல, ஈண்டு, ஆரம் அருவியாகக் கூறப்பட்டது தெய்வம்போலப் பெய்யென மழை பெய்யும் கற்பு மாண்புடைய ளென்றதற்குக் “கடவுள் சான்ற கற்பின் சேயிழை மடவோள்” என்றார்; “கடவுட் கற்பின் மடவோள்” (அகம். 314) எனப் பிறரும் கூறுவர். பவழமணி போலும் சிவந்த வாய் என்றதற்கு “மணிமருள் அவ்வாய்” என்றார்; சான்றோரும், “மணி புரை செவ்வாய்” (அகம். 66) என்று சிறப்பித்தல் காண்க. நனவு முற்றும் பரிசிலையே நினைத்தும் பேசியும் இருத்தலின், “கனவிலும் அரற்றும் என்காமர் நெஞ்சம்” என்றார். ஆலமர் கடவுளென்றது, முக்கட் செல்வனையும் குறிக்குமாயினும், உரைகாரர் ஆலிலை யின்கண் மேவிய திருமாலைக் குறிப்பதாகக் கொண்டார். ஆரமொடு பொலிந்த மார்பும், அதன்பால் வேட்கை தணியாது கூடியிருக்கும் “கடவுள் சான்ற கற்பிற் சேயிழை மடவோ”ளும் மிக்க செல்வமும் விளங்கக் கண்டு இப் பேரிசாத்தனார் பாடுதல் பற்றி, தண்டமிழ் வரைப்பகத்து, வேந்தரைப் பணித்து அவரது நன்கலத்தை நீ கொணர்ந்து தொகுத்ததுபோல நின் புதல்வரும் ஒன்னார் வாட அருங் கலம் கொணர்ந்து நின் நெடுநகர் வைத்துள்ளனர்; இவ்வகை யில் நின்னை யொப்பாராயினும், நின்பால் இல்லாமையால், பெரிய கண்ணோட்டத்தில் “நின் முன்னோர் போல்க”என்றார். இனி, நின்பால் பெருங் கண்ணோட்டமில்லாமை, நின் முன்னோர்பாலும் இல்லாமையைக் காட்டுதலின், அவர்போல இவரும் இருப்பாராக வென்றாரெனக் கொண்டு, “நின் முன்னோர்........என்பதாயிற்று” என உரைகாரர் குறிக்கின்றார். நீடு வாழ்கவென வாழ்த்துபவர் யாண்டும் நாளும் கடல் நீரினும் மணலினும் மழைத்துளியினும் பல சொல்லி வாழ்த்தியதன் கருத்து இதுவென்றற்கு, “என்னிடத்து நீ செய்த கொடுமையால் நினக்குத் தீங்கு வரும்; அது வாராதொழிக வென வாழ்த்தியதூஉமாம்” என்றார். “என்னளவில் நீ செய்த செய்தியை மறவா தொழி” யென்றது, மறந்தால், நின்னைப் பாடிவரும் ஏனைச் சான்றோர்களையும் இவ்வாறு வருத்தி, அவர் நொந்து கூறும் வசைகளையேற்று வருந்துவாய் என்றவாறு. கேளாந் தன்மையுடைய நீ புறக்கணித்தமையால் யான் “கேளில் சேஎய் நாட்” டுக்குச் செல்கின்றேன் என்றார். ஆங்கிருந்தேனாயினும், நின்னை நினையா தொழியேனென்பார், “எந்நாளும் துளிநசைப் புள்ளின் நின் னளிநசைக் கிரங்கிநின் னடிநிழற் பழகிய அடியுறை” யென்றார். அடிக்கீழ் உறைவாரை அடியுறையென்பது வழக்கு; அடியார் என்பது போல். 199. பெரும் பதுமனார் பெரும்பதுமனார் என்னும் இச்சான்றோர், அகப்பாட்டும் புறப் பாட்டுமாகிய பல பாட்டுக்களைப் பாடிச் சிறப்புற்றவர். களவிற் காதலொழுக்கம் பூண்ட ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை யொருவர் இன்றியமையா அளவில் திருமணத்திற்குரிய முயற்சி யில் ஈடுபட்டனர். பெற்றோர் களவொழுக்கத்தை யறியாமை யான் வரைவிற்குடன்படாராயினர். இற்செறிப்பு மிக்கதனால் இருவரும் உடன்போக்கிற் றலைப்பட்டனர்; புறப்பட்டும் வெளிப் போய் விட்டனர்; வழியருமையும் நினைந்திலர்; இடையில் எய்தக்கூடிய ஊறுகளையும் எண்ணிற்றிலர். காதலியை முன்னே செல்வித்து காதலன் பின்னே காவல்புரிந்து சென்றான். இரவுப் போதென்றும் எண்ணாது செல்லும் அவர்களைக் கண்ட இப்பெரும்பதுமனார் காதற்காமப் பிணிப்பின் வன்மையினை யுணர்ந்து. “வையெயிற்றையள் மடந்தைமுன் னூற்று,எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம், கல்லொடு பட்ட மாரி, மால்வரை மிளிர்க்கும் உருமினுங் கொடிதே” (நற்.2) யென்றும், இருவர் மனநிலையினையுந் தேர்ந்து, “வில்லோன் காலன் கழலே தொடியோன் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர், யார்கொல் அளியர் தாமே” (குறுந்.7) என்றும் பரிந்து பாடுகின்றார். மீளிப் பெரும்பதுமனார் என்றொரு சான்றோருளர். இவரைப் பெரும் பதுமனார் எனப் பொதுவாகவும், அவரை மீளிப் பெரும் பதுமனா ரெனச் சிறப்பித்தும் சான்றோர் கூறுதலின், இருவரும் ஒருவரல்ல ரென்பது துணியப்படும். ஒருகால் கூத்தரும், பாணரும், பொருநரும், புலவரும், விறலி யருமாகிய இரவலர் பலரும், செல்வரைப் பாடி அவர் தரும் பரிசிலை இரந்து பெறுவதைத் தொழிலாகக் கொண்ட; நாளும் கொடுக்கும் பண்புடைய செல்வரையே தேடித் திரிவதுபற்றிச் சான்றோருடையே ஆராய்ச்சியுளதாயிற்று. ஆலமரம் பழுத்த காலத்து அதனைப் புள்ளினும் பலவும் சேர்ந்துண்டு மகிழும்; நெருநற் போந்து உண்டோமாகலின், இன்று வேறு மரத்துக்குச் செல்வே மென்னாது, நாடோறும் அம் மரத்தையே யடைந் துண்டு, அம்மரம் பழ முழுவதும் ஒழிந்த காலத்தே வேறு பழுமரம் நாடிச் செல்லும்; இரவலரும் பழந்தேர்ந் துண்ணும் பறவை போலும் இயல்பினர். தம்மை விரும்பி வரவேற்றுப் பேணும் வண்மை யுடையோரைச் சூழ்ந்திருந்து அவர் செல்வத்தைத் தமதாகக் கருதி யுண்டலும், அவரது வறுமையைத் தமது வறுமை யாகக் கருதி யமைதலும் இரவலர்கட்கு இயல்பு என்று இப் பாட்டைப் பாடினார். கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம் நெருந லுண்டன மென்னாது பின்னும் செலவா னாவே கலிகொள் புள்ளினம் அனையர் வாழியோ விரவல ரவரைப் 5 புரவெதிர் கொள்ளும் பெருஞ்செய் யாடவர் உடைமை யாகுமவ ருடைமை அவர், இன்மை யாகு மவரின் மையே. (199) திணை : பாடாண்டினை; துறை : பரிசில் கடாநிலை. பெரும்பதுமனார் பாட்டு. உரை : கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் - தெய்வ முறையும் ஆலமரத்தினது பெரிய கொம்பின்கட் பல பழத்தை; நெருநல் உண்டனம் என்னாது - நென்னலுமுண்டே மென்னா வாய்; பின்னும் செலவு ஆனா கலி கொள் புள்ளினம் - பின்னும் அவ்விடத்துப் போதலை யமையா ஒலி பொருந்தின புள்ளினம்; அனையர் இரவலர் - அத்தன்மையினையுடையார் இரப்போர்; அவரைப் புரவெதிர் கொள்ளும் பெருஞ் செய் யாடவர் உடைமை யாகும் - அவரைக் காத்தற்கு எதிர்ந்துகொள்ளும் மிக்க செய்கையையுடைய ஆண் மக்களது செல்வமாகும்; அவர் உடைமை - அவ்விரப்போர் செல்வம்; அவர் இன்மை யாகும் அவர் இன்மை - அவ் வாண்மக்களுடைய வறுமையாகும் அவ்விரப்போருடைய வறுமை எ-று. வாழியும் ஓவும் அசைநிலை. விளக்கம் : ஆலமரத்திற் கடவுள் உறையு மென்பது வழக்கு. “துறையு மாலமும் தொல்வழி மராமும், முறையுளிப் பராய்” (கலி. 104) என்று சான்றோர் கூறுதல் காண்க. கடவுள் ஆலத்தின் தடவுச்சினை பூத்துக் காய்த்துப் பழுத்தல் கடன்; அது பழமுடைத்தாதலைத் தேர்ந்து போந்துண்டல், புள்ளினம் அப்பழங்களைச் செய்துகொள்ள மாட்டாமையான் இறைவன் படைத்த அமைப்பு. பழங்களை யுண்டு செல்லும் புள்ளினம், விதைகளைப் பல்வேறிடங்களிற் சொரிந்து பழுமரத்தின் இனத்தைப் பல்குவிப்பது போல, இரவலரும் தமக்குப் பரிசில் தந்து சிறப்பிப்பார் புகழை நாட்டின் பல்வேறிடங்களிலும் பரப்பி, ஆங்காங்கு வள்ளன்மை யுடையாரைத் தோற்றுவிப்பர்; அச் செயல் வாயிலாக வலியும் படையு முடையார்பால் தொகும் பொருள் அவையில்லார்க்குப் பயன்பட்டு உலக வாழ்வைச் செம்மைப்படுத்தும் என்பது கருத்து, இதனாற்றான். “கலிகொள் புள்ளினம் அனையர் இரவலர்” என்றார். மேலும், வள்ளியோரைச் சூழ்ந்திருக்கும் புலவர் முதலிய இரவலர், அவர் வழங்குதற் கெடாவாறு செய்வன செய்தற் குரிய உறுதி கூறுதலும் அவர் செயலாதல்பற்றி, “அனைய” ரென் றொழியாது, “பெருஞ்செய் யாடவ ருடைமையாகுமவருடைமை, அவரின்மை யாகு மவரின் மையே” என்றார். வள்ளியோர்க்குப் பொருளுறுதி காட்டும் நலத்தைச் சான்றோர்களாகிய குடபுலவியனார், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் முதலியோராலும், அவரின்மை தமதாகக் கருதிப் பேணும் நலத்தைக் கபிலர், பிசிராந்தையார், ஏணிச்சேரி முடமோசியார் முதலிய சான்றோர்களாலும் அறிக. இரவலரை வாழ்த்துவது ஈண்டுக் கருத்தன்மையின், “வாழியோ” என்ற விடத்து வாழியும் ஓவும் அசைநிலை யாயின. 200. விச்சிக்கோ விச்சிக்கோ என்பான், இளங்கண்டீரக்கோவோடு நட்புற்று அவனோடிருந்து, பெருந்தலைச் சாத்தனாரால் தெருட்டப்பட்ட இள விச்சிக்கோவுக்கு முன்னோன். விச்சி நாடென்றும் இந் நாட்டவர் விச்சியரென்றும் சான்றோர் கூறுப. “வில்கெழு தானை விச்சியர் பெருமகன்” (குறுந்.328) என்று ஆசிரியர் பரணர் குறிப்பது காண்க. பாரி யிறந்தபின், அவன்மகளிரைக் கொணர்ந்து திருக் கோவலூரில் பார்ப்பாரிடத்தே அடைக்கலப்படுத்திய கபிலர், அவர்களைத் தக்க அரச குமரர்கட்கு மணம்புரிவித்தல் கருதி, இந்த விச்சிக்கோவை யடைந்தார். விச்சிக்கோவும் பாரி மகளிரை மணந்துகோடற்குரிய தகுதியுடையனா யிருந்தான். விச்சிக் கோவும் கபிலரை வரவேற்றுச் சிறப்பித்தான். அவர் அவனை நோக்கி, “விச்சிக்கோவே! யான் கொணர்ந்திருக்கும் இம் மகளிர், முல்லைக்கு நெடுந்தேர் அளித்த பரந்தோங்கிய சிறப் பினையுடைய வேள் பாரியின் மகளிர். யானொரு பரிசிலன்; அந்தணன்; யான் மகட்கொடை புரிதற்குத் தகுதியுடையேன். இவரை மணந்து கோடலே யான் நின்பால் பெறும் பரிசில்” என்ற கருத்துப்படும் இப்பாட்டைப் பாடினார். பனிவரை நிவந்த பாசிலைப் பலவின் கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக் 5 கழைமிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேற் களங்கொண்டு கனலுங் கடுங்கண் யானை விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை 10 நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர் யானே, பரிசிலன் மன்னு மந்தண னீயே வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன் 15 நினக்கியான் கொடுப்பக் கொண்மதி சினப்போர் அடங்கா மன்னரை யடக்கும் மடங்கா விளையு ணாடுகிழ வோயே. (200) திணை : பாடாண்டினை; துறை : பரிசிற்றுறை. பாரிமகளிரை விச்சிக்கோனுழைக்கொண்டுசென்ற கபிலர் பாடியது. உரை : பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் கனி - குளிர்ந்த மலையின்கண் ஓங்கிய பசிய இலையையுடைய பலாவினது பழத்தை; கவர்ந் துண்ட கருவிரல் கடுவன் - கவர்ந்துண்ட கரிய விரலையுடைய கடுவன்; செம்முக மந்தியொடு சிறந்து - சிவந்த முகத்தையுடைய தனது மந்தியுடனே பொலிந்து; சேண் விளங்கி - சேய்மைக்கண்ணே விளங்கி; மழை மிசை யறியா மால்வரை யடுக்கத்து - முகிலாலும் உச்சி யறியப்படாத உயர்ந்த மலைப் பக்கத்து; கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப - மூங்கிலுச்சியின்கண் துயிலும் மலையகத்துத் தாழ்ந்த வரையை யுடையோய்; நிணம் தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடு வேல் - நிணத்தைத் தின்று களித்தே நெருப்புப்போலும் தலையையுடைய நெடிய வேலினையும்; களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை - களத்தைத் தனதாக்கிக்கொண்டு காயும் தறுகண்மையையுடைய யானையினையும்; விளங்கு மணிக் கொடும்பூண் விச்சிக்கோவே - விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரணத்தினையுமுடைய விச்சிக் கோவே; இவர் - இவர்கள்தாம்; பூத்தலை அறாஅப் புனை கொடிமுல்லை - பூவைத் தனது தலையின்கண் மாறாத அலங்கரித்தாற்போலும் கொடி முல்லைதான்; நாத் தழும்பு இருப்பப் பாடா தாயினும் - நாத் தழும்பேறப் பாடாதாயினும்; கறங்கு மணி நெடுந்தேர் கொள்க எனக் கொடுத்த - ஒலிக்கும் மணியையுடைய நெடிய தேரைக் கொள்க வென்று சொல்லிக் கொடுத்த; பரந்து ஓங்கு சிறப்பின் பாரிமகளிர் - பரந்து மேம்பட்ட தலைமையினையுடைய பாரிக்கு மகளிர்; யான் பரிசிலன்-:மன்னும் அந்தணன் - அதுவன்றியும் நிலைபெற்ற அந்தணன்; நீ-; வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் - பகைவரைப் போர் செய்யு முறைமையாற் பொருது தாழ்விக்கும் வாளால் மேம்படுபவன் ஆதலால்; நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி - நினக்கு யான் தரக் கொள்வாயாக; அடங்கா மன்னரை யடக்கும் - சினத்தையுடைய போராலே வேந்தரை மிகையடக்கும்; மடங்கா விளையுள் நாடு கிழவோய் - மடக்கப்படாத மிக்க விளைதலையுடைய நாட்டை யுடை யோய் எ-று. மடக்குதல் - போகம் ஒருக்குதல். பலவின் கனி கவர்ந்து உண்ட கடுவன், மந்தியொடு சிறந்து சேண் விளங்கிக் கழை மிசைத் துஞ்சும் என்றதனால், நீயும் இவரை வரைந்துகொண்டு இன்புற்று வாழ்தல் வேண்டுமென்பது தோன்ற நின்றது. “யானே பரிசிலன்” என்பதனால் நினக்கு என் குறை முடிக்க வேண்டு மென்பதூஉம். “அந்தணன்” என்றதனால், யான் தருதற்குரியேன் என்பதூஉம் கொள்ளப்படும். உலகத்து மகட்பேசிவிடக் கொடுத்தலை யன்றித் தாமே இவரைக் கொள்வாயாக என்று இரந்து கூறினமையின், இது, பரிசிற்றுறையாயிற்று. விளக்கம் : மலையிடத்தே நின்று காய்ப்பினும், பலா, குறவராற் காக்கப் படுதலின், காவல ரறியாது கொண்டமை தோன்ற, “பலவின் கனி கவர்ந் துண்ட கடுவன்” என்றார். கடுவனுக்கு விரல் கறுத் திருத்தலும் மந்திக்கு முகஞ் சிவந்திருந்தலும் இயல்பாதலின், “கருவிரல் கடுவ” னென்றும் “செம்முக மந்தி” யென்றும் கூறினார். மலையிடத்தே பல்வகைக் காட்சிகள் காணப்படுவனவாயிருக்க, பலாக்கனி யுண்ட கடுவன் மந்தியொடு கூடிக் கழைமிசைத் துஞ்சும் காட்சியை வரைந் தெடுத்தோதியதன் கருத்து இது வென்பாராய், உரைகாரர் “பலவின்..... தோற்றி நின்றது” என்றார். பகைவர் உடலைக் குத்தி நிணத்தைச் சிதைத்தழிப்பது பற்றி, “நிணந்தின்று செருக்கிய” என்றார். இஃது இலக்கணை. சிறப்பு-தலைமை. பெண்பேசுதற்கும் கொடுத்தற்கும் தூது போதலும், காதல ரிருவருள் ஒருவர்க் கொருவரது காம நிலை யுரைத்தலும், இவைபோல்வன பிறவும் செய்தலும் பார்ப்பனர்க்கு அமையுமெனத் தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் நூல்கள் கூறுதலின், “மன்னும் அந்தணன்” என்றார். யான் எனக்குரிய முறையில் செய்வன செய்தல்போல, நீயும் நினக்குரிய செயலாகிய வாண்மேம் படுதலை முறைபிறழாது செய்கின்றா யென்பார், “வரிசையில் வணக்கும்” என்றார். யான் அந்தணன்; நீ வாள் மேம்படும் மரபினாய் என்பதாம். வாள் மேம்படு மரபிற் றோன்றியதற் கேற்ப வேந்தர் மிகையை யடக்குகின்றாயென்பார், “அடங்கா மன்னரை யடக்கும் கிழவோய்” என்றார். போகம் பல தலையாப் பல்கிப் பெருகுதலின், மடக்குதல் “போக மொருக்குதல்” எனப் பட்டது. ஒருக்குதல் - வரையறுத்தல். பாரிமகளிரைக் கபிலர் மீள இருங்கோவேளிடம் கொண்டு செல்லுகின்றாராதலின், விச்சிக்கோ அவர் வேண்டுகோளை ஏற்கவில்லை யென்பது விளங்குகிறது.  பாடல் அகர வரிசையும் எண்களும் அகன்தலை வையத்துப் 371 அஞ்சுவரு மரபின் 211 அடல் அரும் துப்பின் 335 அடிபுனை தொடுகழல் 83 அடுநை ஆயினும் 36 அடுமகள் முகந்த 399 அணங்குடை நெடும் 52 அணங்குடை அவுணர் 174 அணித்தழை நுடங்க 340 அத்தம் நண்ணிய 313 அதளெறிந் தன்ன 193 அந்தோ எந்தை 261 அமரர்ப் பேணியும் 99 அரிமயிர்த் திரள் 11 அருப்பம் பேணா 224 அருவி தாழ்ந்த 198 அருவி யார்க்கும் 168 அருளா யாகலோ 144 அரைசு தலைவரினும் 354 அலங்குகதிர் சுமந்த 375 அலர்பூந் தும்பை 96 அழல் புரிந்த 29 அழலவிர் வயங்கி 222 அளிதோ தானே பாரி 109 அளிதோ தானே பேரிரும் 111 அளிய தாமே சிறு 248 அற்றைத் திங்கள் 112 அறவை நெஞ்சத் 390 அறுகுளத் துகுத்தும் 142 அறையும் பொறையும் 118 அன்னச் சேவல் 67 அன்னவாக 146 ஆசா கெந்தை 307 ஆசில் கம்மியன் 353 ஆடியல் அழல் 229 ஆடுநடைப் புரவி 240 ஆடுநனி மறந்த 164 ஆர்கலி யினனே 337 ஆர்ப்பெழு கடலினும் 81 ஆரந் தாழ்ந்த 59 ஆவும் ஆனியல் 9 ஆன்முலை அறுத்த 34 ஆனா ஈகை 42 ஆனினம் கலித்த 138 இம்மைச்செய்தது 134 இமிழ்கடல் வளைஇய 19 இரங்கு முரசின் 137 இரவலர் புரவலை 162 இருங்கடல் உடுத்த 363 இருப்புமுகம் செறித்த 369 இரும்பனை வெண்தோடு 45 இரும்பிடித் தொழுதி 44 இரும்புமுகம் சிதைய 309 இருமுந்நீர் குட்டமும் 20 இல்லடு கள்ளின் 329 இல்லாகியரோ 232 இவ்வே பீலி 95 இவரியார் என்குவை 201 இவற்கீத் துண்மதி 260 இவனியார் என்குவை 13 இழையணிப் பொலிந்த 89 இளையரும் முதியரும் 254 இளையோர் சூடார் 242 இன்கடுங் கள்ளின் 80 இன்று செலினும் 171 இனிநினைந் திரக்க 243 ஈண்டுநின் றோர்க்கும் 114 ஈயென இரத்தல் 204 ஈரச்செவ்வி 286 ஈன்று புறந்தருதல் 312 உடும்புரித் தன்ன 68 உடையன் ஆயின் 315 உடைவளை கடுப்ப 90 உண்டால் அம்ம 182 உண்போன் தானும் 347 உருகெழு ஞாயிற் 160 உருமிசை முரச 373 உவவுமதி உருவின் 3 உழுதூர் காளை 322 உள்ளாற்றுக் கவலை 219 உற்றுழி உதவியும் 183 ஊர்க்குறு மாக்கள் 94 ஊர்நனி இறந்த 265 ஊர்முது வேலி 326 ஊனும் ஊணும் 381 எஃகுளம் கழிய 282 எங்கோன் இருந்த 54 எந்தை வாழி 175 எமக்கே கலங்கல் 298 எருது காலுறா 327 எருதே இளைய 102 எருமை அன்ன 5 எழுவினி நெஞ்சம் 207 எறிபுனக் குறவன் 231 என்திறத் தவலம் 253 என்னைக் கூரிஃ 85 என்னை புற்கை 84 என்னை மார்பில் 280 எனைப்பல் யானையும் 63 ஏர் பரந்த வயல் 338 ஏற்றுக உலையே 172 ஏற்றுவலன் உயரிய 56 ஏறுடைப் பெருநிரை 259 ஐயோ எனின் 255 ஒண் செங்குரலி 283 ஒண்பொறிச் சேவல் 338 ஒருசார் அருவி 115 ஒருதலைப் பதலை 103 ஒருதிசை ஒருவனை 121 ஒருநாள் செல்லலம் 101 ஒருவனை ஒருவன் 76 ஒல்லுவ தொல்லும் 196 ஒளிறுவாள் மன்னர் 177 ஒன்று நன்குடைய 156 ஒன்னார் யானை 126 ஓங்குமலைப் பெருவில் 55 ஓரில் நெய்தல் 194 ஓரை ஆயத்து 176 ஓவத்தன்ன 251 கடந்தடு தானை 110 கடல்கிளர்ந் தன்ன 295 கடல் கொளப் படாஅது 122 கடவுள் ஆலத்து 199 கடற்படை அடற் 382 கடுங்கண்ண கொல் 14 கடுந்தேர் குழித்த 15 கடும்பின் அடுகலம் 32 கண்ணி கார்நறும் 1 கதிர்மூக் காரல் 249 கந்து முனிந்து 178 கல்லறுத் தியற்றிய 331 கலம் செய்... அச்சு 256 கலம் செய்... இருள் 228 கலை உணக்கிழிந்த 236 கவைக்கதிர் 215 கழிந்தது பொழிந் 203 கள்ளின் வாழ்த்தி 316 களங்கனி அன்ன 127 களம் புகல் 87 களர்ப்படு கூவல் 311 களரி பரந்து 356 களிறணைப்ப 345 களிறுகடைஇய 7 களிறு நீறாடிய 225 களிறு பொரக் 306 களிறு முகந்து 368 கறங்குமிசை அருவிய 148 கறங்கு வெள்ளருவி 252 கன்முழை அருவி 147 கன்றமர் ஆயம் 230 காமரு பழனக் 334 காய்நெல் அறுத்து 184 கார்ப்பெயல் தலைஇய 119 காரெதிர் உருமின் 361 கால்பார் கோத்து 185 காலனும் காலம் 41 கானக் காக்கை 342 கானல் மேய்ந்து 374 கானுறை வாழ்க்கை 33 கிண்கிணிகளைந்த 77 கீழ்நீரால் 396 குய்குரல் மலிந்த 250 குயில்வாய் அன்ன 269 குழவி இறப்பினும் 74 குறத்தி மாட்டிய 108 குறியிறைக் குரம்பை 129 குன்று தலை மணந்த 357 குன்று மாலையும் 208 கூதிர்ப் பருந்தின் 150 கெடுக சிந்தை 279 கேட்டல் மாத்திரை 216 கையது கடனிறை 69 கையது வேலே 100 கொடுங்குழை மகளிர் 304 கொடுவரிவழங்கு 135 கொண்டைக் கூழை 61 கொய்யடகு வாட 318 கோட்டம் கண்ணி 275 கோதை மார்பில் 48 சாறுதலைக் கொண்டேன 82 சிலையுலாய் நிமிர்ந்த 394 சிற்றில் நற்றூண் 86 சிறப்பில் சிதடு 28 சிறப்புடை மரபில் 31 சிறாஅர் துடியர் 291 சிறியகள் பெறினே 235 சுவலழுந்தப் பல 139 செஞ்ஞாயிற்றுச் 30 செந்நெல் உண்ட 344 செய்குவம் கொல்லோ 214 செருப்பிடைச் 257 செற்றன் றாயினும் 226 சேயிழை பெறுகுவை 105 சேற்றுவளர் தாமரை 27 ஞாயிற் றன்ன 362 ஞாலமீமிசை 179 தடவுநிலைப் பலவின் 140 தண் துளி பல 391 தமர்தற்றப்பின் 157 தலையோர் நுங்கின் 225 திண்தேர் இரவலர் 241 திண்பிணி முரசம் 93 திரைபொரு முந்நீர் 154 தீங்கனி இரவமொடு 281 தீநீர்ப் பெருங்குண்டு 116 துடி எறியும் 287 தூங்கு கையால் 22 தூர்ந்த கிடங்கில் 350 தெண்கடல் வளாகம் 189 தென்குமரி வட 17 தென் பரதவர் 378 தென் பவ்வத்து 380 தேஎம் கொண்ட 352 தேஎம் தீந்தொடை 70 தொடியுடைய தோள் 239 தோல்தா தோல்தா 300 நகுதக் கனரே 72 நஞ்சுடை வாலெயிற்று 37 நரம் பெழுந்து 278 நல்யாழ் ஆகுளி 64 நல்லவும் தீயவும் 106 நள்ளி வாழியோ 149 நளிகடல் இருங் 26 நளியிரு முந்நீர் ஏணி 35 நளியிரு நாவாய் 66 நறவும் தொடுமின் 262 நறுவிரை துறந்த 276 நன்றாய்ந்த 166 நனிபேதையே 227 நாகத் தன்ன 367 நாட்கள் உண்டு 123 நாடன் என்கோ 49 நாடா கொன்றோ 187 நாளன்று போகி 124 நிரப்பாது கொடுக்கும் 180 நிலம்பிறக் கிடுவது 303 நிலமிசை வாழ்நர் 43 நிறப்படைக் கொல்காய் 293 நின்னயந் துறைநர்க்கும் 163 நினைக்கும் காலை 217 நீடுவாழ் கென் 237 நீண்டொலி அழுவம் 161 நீயே, அமர் 167 நீயே, தண்புனல் 58 நீயே, பிறர் 40 நீயே, புறவின் 46 நீர் நுங்கின் 389 நீர் மிகிற் சிறையும் 51 நீரற வறியா 271 நீருட் பட்ட 333 நீலக் கச்சை 274 நுங்கோ யாரென 212 நுதிவேல்கொண்டு 349 நும்படை செல்லுங் 169 நெடு நீர நிறை 386 நெல்லரியும் 24 நெல்லும் உயிரன்றே 186 நோகோ யானே 234 படுமணி மருங்கின 351 படைப்புப் பல 188 பண்டும் பண்டும் 151 பதி முதற் பழகா 393 பயங்கெழு மாமறை 266 பரலுடை மருங்கில் 264 பருத்திப் பெண்டின் 125 பருத்தி வேலிச் 299 பருதி சூழ்ந்த 358 பல்சான் ...கயல் 195 பல்சான் ...குமரி 301 பல்சான் ...செல் 246 பலர்க்கு நிழலாகி 223 பன்மீன் இமைக்கும் 270 பனி பழுனிய 377 பனிவரை நிவந்த 200 பாசறை யீரே 285 பாடுநர்க் கீத்த 221 பாணர் சென்னி 244 பாணர் தாமரை 12 பாணன் சூடிய 141 பாரி பாரி 107 பால் கொண்டு 310 பாறு படப் 359 பிறங்கிலை 346 பிறர் வேல் 332 புல்லென் அடைமுதல் 328 புலவரை இறந்த 21 புலிப்பாற் பட்ட 323 புறவின் அல்லல் 39 பூவற் படுவில் 319 பெரிதாராச் 360 பெருங்களிற்றடி 263 பெருஞ்சோறு 220 பெருநீர் மேவ 297 பொய்கை நாரை 209 பொய்யா கியரோ 233 பொரிப்புறப் பூழின் 321 பொன் வார்ந் தன்ன 308 பொன்னும் துகிரும் 218 போர்க்குரைஇ 97 போற்றுமின் 104 மட்டுவாய் 113 மடங்கலில் 71 மடத்தகை மாமயில் 145 மண்கொள 288 மண்டமர் அட்ட 213 மண் திணிந்த 2 மண்முழா மறப்ப 65 மணி துணர்ந்தன்ன 272 மதி நிலாக்கரப்ப 398 மதியேர் வெண்குடை 392 மதிலும் ஞாயில் 355 மயங்கிருங் கருவி 365 மரைபிரித் துண்ட 170 மலைவான் கொள் 143 மழைக் கணம் 131 மழையணி குன்றத் 153 மன்பதை காக்கும் 210 மன்றப் பலவின் 128 மன்ற விளவின் 181 மன்னா உலகத்து 165 மனைக்கு விளக் 314 மாக விசும்பின் 400 மாசற விசித்த 50 மாவாராதே 273 மீனுண் கொக்கின் 277 மீன் திகழ் 25 மீன் நொடுத்து 343 முட்கால் காரை 258 முதில்வார் இப்பி 53 முந்நீர் நாப்பண் 60 முரசு கடிப் 158 முழங்கு முந்நீர் 18 முற்றிய திருவின் 205 முன்றில் முஞ்ஞை 320 முன்னுள்ளு வோனை 132 முனைத் தெவ்வர் 98 மூத்தோர் மூத்தோர் 75 மூதூர் வாயில் 79 மெல்ல வந்தென் 73 மெல்லியல் விறலி 133 மென் பாலான் 384 மென் புலத்து 395 மைம்மீன் 117 யாங்குப் பெரி 245 யாண்டு பலவாக 191 யாது மூரே 192 யாவிராயினும் 88 யாழ்ப் பத்தர் 136 யாழொடும் 92 யான் வாழும் 173 யானே பெறுக 379 யானை தந்த 247 வடாஅது பனி 6 வணங்குதொடை 78 வணர்கோட்டு 155 வயலைக் கொடி 305 வருகதில் வல்லே 284 வருதார் தாங்கி 62 வரை புரையும் 38 வல்லார் ஆயினும் 57 வலம்படுவாய் 91 வழிபடுவோலை 10 வள்ளியோர் 47 வள்ளியோர்க் காணா 370 வள்ளுகிர 287 வளரத்தொடி 260 வளிநடந் தன்ன 197 வாடாமாலை 364 வாயிலோயே 206 வாழும் நாளோ 159 வாள் வலந்தர 4 விசிபிணித் தடாரி 372 விசும்பு நீத்த 376 வியன்புலம் 339 விழுக்கடிப் பறை 366 விளங்குமணி 130 விளைபதச் 190 வினைமாட்சிய 16 வெட்சிக் கானத் 202 வெடி வேய் 302 வெண்குடை மதி 294 வெண்நெல் அரிநர் 348 வெப்புள் விளைந்த 120 வெருக்கு விடை 324 வெள்ளிதென் 388 வெள்ளி தோன்ற 385 வெள்ளியும் இருவிசும் 397 வெள்ளை வெள் 286 வெளிறில் நோன் 23 வெண் வேல் 317 வேட்ட வேந்தனும் 336 வெண் வேல் 317 வேட்ட வேந்தனும் 336 வேந்தற் கேந்தி 292 வேந்துகுறை 341 வேந்துடைத் தானை 330 வேம்பு சினை 296 வேழம் வீழ்த்த 152 வையம் காவலர் 8 முற்றிலும் இல்லாத பாடல்கள்: 267'80 268 இடையில் இல்லாத பாடல்கள்: 282, 283, 285, 288, 306,'80 317, 321, 323, 328, 333, 334, 335, 337, 339, 340, 341, 345, 347, 352, 353, 357, 361, 362, 366, 373, 377, 379, 380, 383, 384, 387, 388, 390, 391, 393, 395, 396, 398, 399, 400. பிற்பகுதி இல்லாத பாடல்கள்: 244, 355, 361 முதல் இல்லாமல் இருந்த பாடல்கள் இரண்டும் (328, 370) உரைவேந்தர் ஒளவைக்குக் கிடைத்த சுவடிகள் வழியாக முதல் பெற்றன. இடையில் இல்லாத பாடல்களின் சில பகுதிகள் நிரம்பின: முழுவதும் நிரம்பினவும் உண்டு: அவை: 337, 345, 357, 377, 379, 384, 390, 393 என்பவை. குறிப்பு : தொடக்கம் முதல் 266, ஆம்பாடல் முடியப் பழைய உரை உள்ளது. 266க்கு மேல் இரண்டு பாடல்கள் (267, 268) கிடைக்கவில்லை. 282 ஆம் பாடலுக்குமேல் பாடலில் முதல், இடை, கடை திணை, துறை, பாடியோர், பாடப்பட்டோர் விடுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இவற்றால் உரைகண்டாராலேயே நூல்கள் காக்கப்பட்டன; விளக்கம் பெற்ற என்பன புலப்படும். உரைவேந்தர், ஒளவை பதிப்பால், பதிப்பித்த நூல்களையும் ஏட்டுச் சுவடிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தலின் நலம் புலப்படும். அவர் பதிப்பால் பாடியவர் பாடப்பட்டவர் பெயர்கள் செப்பமும் செழுமையும் பெற்றன. கல்வெட்டு வரலாறு ஆய்வால் அவை மேலும் தெளிவடைந்தன. இவற்றை எண்ணல் எதிர்கால நலப்பாடாம்.