உரைவேந்தர் தமிழ்த்தொகை 19 ஐங்குறுநூறு - 2 உரையாசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 19 உரையாசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8 + 512 = 520 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 325/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் புறவுரை மருதம் முதல் முல்லை யீறாக ஐந்து நூறு பாக்களையுடைய இவ்வைங்குறுநூறு நல்லிசைச் சான்றோர் ஐவரால் ஆக்கப் பெற்றது. இதனை, மருதம் ஓரம்போகி நெய்தல் அம்மூவன் கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய பாலை ஒதலாந்தை பனிமுல்லை பேயனே நூலை ஒது ஐங்குறு நூறு. என்ற பழைய வெண்பா தொகுத்துக் கூறுகிறது. இந்த ஐந்து நூறுகளையும் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; தொகுப்பித்த வள்ளல் கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னன். இவ் வைங்குறுநூற்றில் உள்ள பாட்டுக்கள் யாவும் தமிழ்க்கே சிறப்பாக வுரிய பொருளிலக்கணப் பகுதியில் காணப்படும் அகப்பொருள் நலங்களையே உரைக்கின்றன. அவை களவும் கற்பும் என்ற இருவகை ஒழுக்கங்கள் எனப்படும். ஒழுக்கமாவது மக்கள் இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்தற் பொருட்டுச் செய்வனவும் தவிர்வனவும் இவையெனச் சான்றோர்கள் கண்டு உணர்ந்து உரைத்த அறமாகும். அறங்கூறும் பெருந்தோன்றலாகிய திருவள்ளுவப் பெருந்தகை, களவு என்பது தவிரத் தகுவ தென்பது பற்றிக் கள்ளாமை என எதிர்மறைத் தலைப்பிட்டு அதன் தீமையை விரித்துரைத்தனர்; அற்றாக, அக்களவினைக் கொள்ளத்தக்க ஒழுக்கமாகப் பொருளிலக்கணம் கூறுவது யாங்ஙனம் என ஐயுறுவோரும் உண்டு. ஐயம் அறுப்பது குறித்து அகலவுரை பல வழங்கினோரும் உண்டு. ஒருவர்க்கு உரிய பொருளை அவர் அறியாதவாறு கவர்ந்துகொள்வது களவு என்பது. வாழ்க்கைத் துணையை நாடிநிற்கும் இளமைச் செவ்விக் கண், இனம் பெருக்கும் உணர்ச்சி, உடலூழாய் நின்று, உயிரறிவைத் தன்னடிப் படுத்தி, உடலின் புறத்தே ஒளியும் அழகும் உறுவித்து நிற்பது உயிர்நூல் காட்டும் உண்மை. இப்பெற்றித் தாய இளமையில் பெண்மகள் ஒருத்தியின் உள்ளத்தை அவளையறியாமல் ஓர் ஆண்மகனும், ஓர் ஆண்மகன் உள்ளத்தை அவனை அறியாமல் ஒரு பெண்மகளும் கவர்ந்து கொள்ளும் செயல் இங்கே களவு என்று குறிக்கப்படுகிறது. நிறையிழந்த சீவகன், “வெஞ்சின வேழமுண்ட வெள்ளிலின் வெறியமாக, நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணால் கவர்ந்த கள்வி” என்பதாகத் திருத்தக்க தேவரும், “பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும், எண்வழி உணர்வும் நான் எங்கும் காண்கிலேன், மண்வழி நடந்து அடிவருந்தப் போனவன், கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்” என நிறையிழந்த சீதை கூறுவதாகக் கம்பரும் உரைப்பன மேற்கூறிய பொருளை வற்புறுத்தும். தவிரத் தகுவதாகிய களவு, பொருளைக் கவர்ந்தார்க்கும் கவரப்பட்டார்க்கும் இடையே வெறுப்பும் பகையும் விளைத்துத் துன்பத்தைப் பயப்பது போலாது இவ்வுள்ளக் களவு இருவர்க்கும் இடையே உவப்பும் உழுவலன்பும் விளைத்து இன்பமே பயத்தலின் இக்களவு அறமாகவும் ஒழுக்கமாகவும் கருதப்படுகிறது. இக்களவை மேனிகழும் இல்லறமாகிய கற்பறத்துக்கு வழிநிலையெனப் பழந்தமிழ்ச் சான்றோர் கொண்டனர். உள்ளத்தால் காதலுறவு பூண்ட ஒருவனும் ஒருத்தியும் கற்பின்கண் உலகவர் அறியத் தமது காதலைப் புலப்படுத்தி ஒழுகுவர்; களவின்கண் அதனைத் தம்மைப் பெற்றோரும் அறியாதவாறு மறைத்து ஒழுகுதலால், அது களவொழுக்கம் எனப்படுகிறது. களவுவழித் தோன்றும் கற்புமணம் போல வடநூலாரிடையும் ஒருவகை மணம் உண்டு; அதனைக் காந்தருவம் என்பர். ஒருவரையொருவர் தனித்துக்கண்டு காதலுறவு கொள்ளும் களவு காந்தருவம் போல்வது என்பர். காந்தருவ மணத்தார், ஒருவரையொருவர் கண்டவுடனே கருத்து ஒருமித்துக் காமம் கையிகந்து கூடி மகப் பெற்றுக் கொள்வதும் உண்டு. சுருங்கச் சொல்லின், காந்தருவத்தில் கழிகாம விலங்குணர்ச்சி வீறுகொண்டு விளங்கும். களவின்கண் அறவுணர்வு மேம்பட்டு விளங்க விலங்குணர்ச்சி ஒடுங்கிக் கிடக்கும்; அதனால் அக்காலத்தே மகப்பேற்றுக்குரிய மெய்யுறு புணர்ச்சியோ, மகப்பெறுதலோ இல்லை. மகப்பெறு கூட்டமும் மகப்பேறும் கற்பொழுக்கமாகும்; ஆகவே. களவின்கண் கற்பிற்போல அறிவும் நிறையும் மக்கட் பண்பும் முற்பட்டு நிற்றல் இன்றியமையாததாயிற்று. சகுந்தலையும் துட்யந்தனும் தனித்துக் கண்டு கழிகாமத்துக்கு இரையாகிக் கூடி மகப்பெற்றது காந்தருவத்துக்கு நேரிய எடுத்துக்காட்டு. ஆயிரக்கணக்கில் காணப்படும் பழைய தமிழ் அகப்பொருட்பாட்டுக்களில் களவின்கண் மகப்பேறு நிகழ்ந்ததாக இதுகாறும் ஒன்றேனும் கூறியதில்லை. அதற்குரிய பழைய இலக்கண நூல்களும் ஒரு சிறு குறிப்பும் காட்டவில்லை. கற்பின்கண் பரத்தையிற் பிரிவு என்பது ஒரு நிகழ்ச்சி; ஒரு காலத்தே அப்பரத்தையர் இருப்பு ஒரு குற்றமாகக் கருதப்படாமல் இருந்தது; இது முன்னுரைக்கண் விளக்கப்பட்டுள்ளது. பொருள் வினை கல்வி ஆகியவை காரணமாகப் பிரிதல் சிறப்புடைய ஆண்மகனுக்குக் கடனாதல் போலப்பரத்தையரிற் பிரிவு கடமையன்று. ஓரொருகால் காதல் சிறப்பது குறித்துத் தலைமகன் பரத்தையரிற் பிரிந்தான் போலக் கூறும் மரபு கற்பனையுலகில் உண்டு. அக்கற்பனை தலைமகனது தலைமை மாண்புக்கு இழுக்காகாது எனக் கொள்க. இனி இந்நூல் உரையினையும் முன்னுரையையும் நோக்குமிடத்து உரையில் இறைச்சிப்பொருள் காட்டியது வியப்புப் பயக்கும். முன்னுரைக்கண் காணப்படும் ஆராய்ச்சி, உரை முடிந்த பல்லாண்டுகட்குப் பின்பு நிகழ்ந்ததென்பது அறிஞர் உலகுக்கு இதனால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. “ஞாலம் நின்புகழே மிகவேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” “அவ்வை” காந்திநகர் மதுரை 20-10.1958 ஒளவை சு.துரைசாமி. உள்ளடக்கம் பதிப்புரை iii புறவுரை v நூலடக்கம் குறிஞ்சி 21. அன்னாய்வாழிப் பத்து. 7 22. அன்னாய்ப்பத்து. 23 23. அம்மவாழிப் பத்து 37 24. தெய்யோப்பத்து 50 25. வெறிப்பத்து 65 26. குன்றக்குறவன் பத்து 86 27. கேழற்பத்து 101 28. குரக்குப்பத்து 124 29. கிள்ளைப்பத்து 146 30. மஞ்ஞைப்பத்து. 166 பாலை 31. செலவழுங்குவித்த பத்து 195 32. செலவுப் பத்து 213 33. இடைச்சுரப் பத்து 230 34. தலைவி இரங்குபத்து 246 35. இளவேனிற் பத்து 264 36. வரவுரைத்த பத்து 273 37. முன்னிலைப்பத்து 288 38. மகட்போக்கியவழித் தாய்இரங்கு பத்து 305 39. உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து 325 40. மறுதரவுப் பத்து. 342 முல்லை 41. செவிலி கூற்றுப்பத்து 362 42. கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 376 43. விரவுப்பத்து 388 44. புறவணிப் பத்து 400 45. பாசறைப்பத்து 406 46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து 424 47. தோழி வற்புறுத்த பத்து 437 48. பாணன்பத்து 452 49. தேர் வியங்கொண்ட பத்து 474 50. வரவுச்சிறப்புரைத்த பத்து 485 பத்துக்களின் அகராதி 497 பாடல் முதற்குறிப்பு அகராதி 498  ஐங்குறுநூறு மூலமும் விளக்கவுரையும் மூன்றாவது ஆசிரியர் : கபிலர் பாடிய குறிஞ்சி தமிழகத்துப் பொருள் நூல் மரபு வகுத்த நிலப் பாகுபாட்டுள் குறிஞ்சி என்பது ஒன்று; இதன்கண் மலைகளும் அவற்றைச் சார்ந்த நிலப்பகுதிகளும் அடங்கும். "சேயோன் மேய மைவரை யுலகம் 1" என ஆசிரியர் தொல்காப்பியனார் குறிப்பது இக் குறிஞ்சியே. முகில் தவழும் முடிகொண்டு விளங்கும் மலை நாடாகிய குறிஞ்சியை அவர் மைவரை யுலகம் என்று உரைக்கின்றார். இக்குறிஞ்சியில் வாழ்பவர் குறவர் எனப்படுவர். மலைமுகடு களிலும் சரிவுகளிலும், மலையைச் சார்ந்த பகுதிகளிலும் விளை யும் ஐவனநெல்லும் மூங்கிலரிசியும் இவர்கட்குப் பண்டை நாளில் சிறந்த உணவுப் பொருள்கள். வளவிய இடங்களில் நிற்கும் சந்தனம் தேக்கு முதலிய மரங்களை வெட்டி ஆங்குள்ள காடு களை யழித்து நிலத்தை உழுது தினைவிதைத் தலும் வள்ளி முதலிய கிழங்குகளைப் பயிர் செய்தலும் அவர்களுடைய உழவுவினை; தேன் அழித்தலும் வேட்டையாடு தலும் அவர்கள் தொழிலாதல் பற்றி அவர்கள் வேட்டுவர் என்றும் கூறப்படுவர். மலைகளிற் காணப்படும் குறிஞ்சி, சந்தனம், தேக்கு, திமிசு, வேங்கை முதலிய மரங்கள் இவர்கள் வாழ்வில் பயன்படுகின்றன. புலியும் யானை யும் கரடியும் பன்றியும் பிறவும் இந்நிலப்பகுதியில் வாழும் விலங்குகள்; கிளிவகைகளும் மயில்களும் பிறவும் இங்கே தோன்றும் புள்ளினங்கள் மலைச்சுனைகளும், அருவிகளும், ஆறுகளும் மலைவாழ்பவர்க்கு நீர்நிலைகள். காந்தளும் வேங்கை யும் சுனைக் குவளையும் பிறவும் இம்மக்கள் விரும்பும் பூக்கள். குறிஞ்சி நிலத்தவர் உறையும் இடங்களில் குறிஞ்சியாழின் இனிய இசை கேட்கப்படும்; தொண்டகம், முருகியம் முதலிய பறை களின் முழக்கமும் உடன் நிலவுகின்றது. ஊர்கள், குன்றக்குடி, சிறுகுடி யெனவும், கல்லடைக் குறிச்சி 1, வேள்குறிச்சி 2 எனவும் பெயர் பெற்றுள்ளன. சுனைகுடைதலும் அருவியாடுதலும் இம்மக்களது நீர் விளை யாட்டு. இவர்கட்கு வழிபடுகடவுள் முருகன். அவன் இளஞாயிறு போலும் செந்நிறம் உடைய னாகலின், அவனைச் சேயோன் என்றும், சேய் என்றும் கூறுவர்; தொல்காப்பியரும் அவ்வியல்பு தோன்றவே, "சேயோன் மேய மைவரை யுலகம்" என்று குறித்துள்ளார். அகப்பொருள் நெறிக்கண் புலனெறி வழக்கம் செய்த சான்றோர் இப்பகுதிக்குக் கூதிர்க்காலமாகிய பெரும் பொழுதை யும், நள்ளிரவு கொண்ட இடையாமமாகிய சிறுபொழுதையும் வகுத்துள்ளனர். "குறிஞ்சி கூதிர்யாமம் என்மனார் புலவர்" என்பது தொல்காப்பியம். கூதிர் என்றது ஐப்பசியும் கார்த்திகையு மாகிய இரு திங்களுமாகும். அன்பின் ஐந்திணை ஒழுக்கத்துள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆகிய கால வொழுக்கம் இக்குறிஞ்சிக்குரியதென அமைத்துள்ளனர். தலைமைப் பண்பு களே உருவாக அமைந்த கட்டிளங்காளை யொருவனும், அவ்வியல்பிற் குன்றாது கற்பும் பொற்புமே வடிவாய் அமைந்த இளநங்கை ஒருத்தியும் ஒருவரை ஒருவர் தனித்துக் கண்டு காதலுறவு கொள்வது இவ்வொழுக்கத்தின் விழுப்பமாகும். இவ்வொழுக்கத்துக்குக் கூதிர்க்காலம் சிறந் தமையை விளக்கப் புகுந்த நச்சினார்க்கினியர், "இருள் தூக்கித் துளிமிகுதலின் சேறல் அரிதாகலானும், பானாட் கங்குலில் பரந்துடன் வழங்காது மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்று வதிதலின் காமக்குறிப்புக் கழியப் பெருகுதலானும், காவல்மிகுதி நோக்காது வரும் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங் கால் இன்பம் பெருகுதலின் இந்நிலத்துக்குக் கூதிர்க்காலம் சிறந்தது எனப்படும்" என்பர். இக்குறிஞ்சித்திணை பொருளாக இந்நூற்கண் காணப்படும் நூறு பாட்டுக்களையும் பாடியவர் கபிலர் என்னும் புலவர் பெருமகனாவர். இவையே யன்றி, அகம், புறம், பதிற்றுப்பத்து, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும், பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் இவர் பாடியன உண்டு. கபிலர், பாண்டிநாட்டு மதுரை நகர்க்குக் கிழக்கில் உள்ள வாதவூரில் பிறந்தவர் என்று வழிவழியாக ஒரு செய்தி நிலவு கிறது. இவரைப் "புலனழுக் கற்ற அந்தணாளன்" எனச் சங்ககாலச் சான்றோர் பாராட்டிக் கூறுவர். இவரே தம்மை, "யானே பரிசிலன் மன்னும் அந்தணன்" என்று தெரிவிக்கின்றார். வாத வூரை அவ்வூர்க் கல்வெட்டுக்கள், தென்பறம்பு நாட்டு வாதவூர் என்று குறிக்கின்றன. பறம்புநாடு அந்நாளில் வேள் பாரிக்கு உரியதாயிருந்தது. கபிலர் அவன்பால் நெருங்கிய நட்புற்று அவன் இறந்தபின் அவன் மக்களைத் திருக்கோவலூர்க்குக் கொண்டு சென்று, அவ்வூரிலிருந்து மலாடு என்ற பகுதியை ஆண்ட மலையமான் திருமுடிக்காரியின் மைந்தர்களுக்குத் திருமணம் செய்து கொடுத்தார். அதற்கிடையே சேரநாடு சென்று அங்கே இருந்து ஆட்சி செய்த செல்வக்கடுங்கோவாழியா தனைச் செந்தமிழால் சிறக்கப் பாடினார்; அவன் அவரது புலமை நலம் கண்டு வியந்து, "சிறுபுறம் என நூறாயிரம் காணம் பொன் கொடுத்து நன்றா என்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்." நன்றா என்பது பிற்காலத்தே நணா என மருவித் திருஞானசம்பந்தர் திருநணா என்று பாடும் சிறப்புற்றது; அதனைச் சூழ்ந்த பகுதி கபிலர்க்குக் கொடுக்கப்பட்ட தென்பதற்குச் சான்றாக, அங்கே கபிலக் குறிச்சி என்றோர் ஊரும் இன்றும் உளது. முடிவில், திருக்கோவ லூரில் பாரிமகளிரை மணஞ்செய்து தந்து தமது நட்புக்கடனை ஆற்றி அவ்வூரருகில் ஓடும் பெண்ணையாற்றின் துருத்தியில் வடக் கிருந்து உயிர் நீத்தார். கபிலர் அவ்விடத்தே இப்போது ஒரு பெரிய கற்பாறைதான் உளது. எஞ்சிய மரமும் செடிகளும் மண்ணும் பிறவும் ஆற்றில் கரைந்தொழிந்தன. திருக்கோவலூர்க் கல் வெட்டொன்று இச் செய்தியைச் சிறப்பித்து, "மொய்வைத் தியலும் முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் டடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க் குதவிப் பெண்ணை அலைபுன லழுவத் தந்தரிட் சம்செல மினல்புகு விசும்பின் வீடுபே றெண்ணிக் கனல்புகும் கபிலக் கல்லது 1" என்று இசைக்கின்றது. கபிலர், வேள்பாரி இறந்த பின்னர், செல்வக் கடுங்கோ வாழியாதனைச் சென்று கண்டபோது, "மலர்ந்த மார்பின் மாவண் பாரி, முழவுமண் புலர இரவலர் இனைய, வாராச் சேட்புலம் படர்ந்தான் அளிக்கென, இரக்கு வாரேன்" என்று கூறி, "ஈத்தொறும் மாவள்ளியன் என நுவலும் நின், நல்லிசை தர வந்திசினே" என்று உரைத்துள்ளனர். பாரி பிரிந்தமை ஆற்றாது இவர் வருந்திப் பாடிய பாட்டுக்களும், அவன் பெண்மக்களை மணஞ் செய்து கொடுத்தற்காக அவர் செய்த முயற்சியும் புறநானூற்றின்கண் உள்ளன. தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து தனித்தொழுகிய வையாவிக்கோப் 2 பெரும் பேகனை அவன் இருந்த ஆய்க்குடிக்கண் சென்று கண்டு அவள்பொருட்டுத் தகுவன கூறி அவன் மனத்தை அவளொடு கூடி வாழும் வாழ்க்கைக்கண் ஒன்றுபடுவித்த இக்கபிலரது சிறப்பு நினைக்குந் தோறும் இன்பம் தருவதொன்று. சேரநாட்டு வடபகுதியான ஆரிய நாட்டின்கண் வாழ்ந்த பிரகத்தன் என்னும் ஆரியவரசன் செல்வக்கடுங்கோவின் சிறந்த துணையால் கபிலரைக் கண்டு, தமிழ் எனச் சிறப்பித்துக் கூறப் படும் அகப்பொருள் நலத்தை அறிய விழைந்தானாக, அவன் பொருட்டுக் கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்ற இனிய நெடும் பாட்டைப் பாடித் தமிழ் ஒழுக்கத்தின் தனிமாண்பினைப் புலப் படுத்தினார். இவருடைய வரலாறு புலமைநலம் ஆகிய இயல்பு களை விளக்கித் தனியே நூல்கள் பல எழுதப்பட்டுள்ளன வாகலின் ஈண்டு விரித்தல் வேண்டாத தொன்று. ஒளவையார் திருவள்ளுவர் முதலியோர் பெயர்களோடு இணைத்து இவரைப்பற்றி யும் பொய்க்கதைகள் பல கூறுவ துண்டு. இக்கபிலர் வேறு, பதினோராந் திருமுறையில் கூறப்படும் கபில தேவர் வேறு; இருவரையும் ஒருவராகக் கருதுபவரும் உண்டு. இவராற் சிறப்பிக்கப் பெற்ற தலைவர்கள் பலர்; மேலே கூறிய சிலர் போக நள்ளி முதலிய பலருடைய குறிப்புக்கள் இவருடைய பாட்டுக்களிற் காணப்படும். கபிலர் பாடிய பாட்டுக்கள் பலவற்றுள்ளும் குறிஞ்சித் திணைப் பாட்டுக்களே பெரும்பாலன. வேறு சிலவும் குறிஞ்சியைச் சார்ந்தனவாகவே இருத்தலால் இவரைக் குறிஞ்சிப் புலவர் என்பது தவறாகாது. குறிஞ்சிக் காட்சிகளில் இவர் பேரீடுபாடு உடையவ ராதலால், அவ்வப்போது கண்ட காட்சி களைத் தாம் பாடும் பாட்டுக்களில் சொல்லோவியம் செய்து நம்மை இன்புறுத்துகின்றார். வாழையும் பலாவும் கனிந்து தேனொழுக நிற்கும் மலைச்சாரலில், தேன் நிறைந்த சுனையை அடைந்து, அது மயக்கந் தரும் என்பதை "அறியாது உண்ட கடுவன் அயலது, கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது, நறுவீ அடுக்கத்து மகிழ்ந்து (கள்மயக்கமுற்று) கண்படுக்கும் 1" என்ப தும், மலைச்சாரலில் அருவி யொலிக்க, மலர்ந்த பூக்களிடத்தே வண்டினம் பாட, மந்தியினம் பார்த்திருக்க மயிலாடுவது கண்ட கபிலர், மயிலை ஒரு விறலியாகவும், அருவி முதலியவற்றை ஆடற் கேற்ப முழங்கும் இன்னியமாகவும் தொடுத்து, "ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின், கோடை யவ்வளி குழலிசை யாகப், பாடின் அருவிப் பனிநீர் இன்னிசை, தோடமை முழவின் துதைகுரலாகக், கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு, மலைப்பூஞ் சாரல் வண்டுயா ழாக, இன்பல் இமிழ்இசை கேட்டுக் கலிசிறந்து, மந்தி நல்லவை மருள்வன நோக்கக், கழைவளர் அடுக்கத்து இயலி ஆடுமயில், விழவுக்கள விறலியின் தோன்றும் 1" என்பதும் படித்து இன்புறற்பாலன வாகும். இவரது குறிஞ்சிக்காட்சியில், யானையொன்று எதிரே தோன்றி, புலி யொடு பொருது அதனைக் கொன்று குருதி படிந்த கோட்டுடன் போந்து தன் பிடியொடு கூடி, வாழைகள் நிறைந்த மலைச்சாரலில் வண்டினம் பாடக் கேட்டு இனிது உறங்குகிறது2. பிறி தோரிடத்தே அருவி நீரிற் பாய்ந்த மந்தியொன்று ஆங்கு மிதந்த பலாப்பழத்தைப் புணையாகக் கொண்டு நீந்திச் சென்று துறை யடைவது கண்டு மகிழ்கின்றோம்.3 இக்குறிஞ்சி நிலத்தில் வாழ்பவர் செயலையும் நம் கபிலர் ஆங்காங்கு நமக்குக் காட்டுவதில் தவறுவதிலர். தன் குட்டியொடு கூடி யிருந்த பெண் பன்றியை வேட்டுவரும் அவருடைய நாய்களும் அணுகாதவாறு பொருது வெருட்டி விட்டு, தனது அப்பெண்பன்றியும் குட்டியும் வேறிடம் பெயர்வித்த ஆண் பன்றி, சிதைந்தோடிய வேட்டுவர் மீளத் திரும்பிவரும் குறு வழியில் நின்று கொண்டிருக்கிறது. அதனைக் கானவன் காணு கின்றான்: அதன்செயல், பகைவர் வருதற்குரிய குறுவழி யில் விலங்கி நின்று மேல்வரும் படைமறவரோடு அஞ்சாது எதிர் நின்று போருடற்றும் தன் தலைவன் செயலை ஒத்திருப்பது கண்டு வியந்து அதனைக்கொல்லாமல் விடுத்துச் செல்கின்றான்4. ஒருகால் கபிலர் கானவனொருவன் எறிந்த கவண்கல் வழியே தமது கட்பார்வையைச் செலுத்துகின்றார். "வன்கைக் கானவன், கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல், உடுவுறு கணையிற் போகிச், சாரல் வேங்கை விரியிணர் சிதறித் தேன்சிதையூஉப் பலவின் பழத்துள் தங்கும் 5" காட்சி அவரை இன்புறுத்துகிறது. வேட்டுவர் தலைவன் தன் மார்பில் அணிந்த மாலை பூக்கள் உதிர்ந்து வெறிதே கிடந்தசைய வந்து நின்றான். அதனை நோக்கிய கபிலர், "பூச்சோர் மாலை, ஏற்றிமில் கயிற்றின் எழில்வந்து துயல்வர 1" என அக் காட்சியை நம் மனக்கிழியில் எழுதிவிடுகின்றார். இவ்வாறு சொல் நிகழுமிடமெல்லாம் இனிய குறிஞ்சிக்காட்சிகளைக் காட்டும் கபிலர், அவர்களின் நினைவும், சொல்லும், செயலும், எங்ஙனம் இயலுகின்றன என்பதை ஈடும் எடுப்பு மில்லாத இன்சொற்களால் காட்டுகின்றார். அவற்றை இனிவரும் பாட்டுக்களிற் காணலாம். 21. அன்னாய்வாழிப் பத்து. இப்பகுதிக்கண் வரும் ஒவ்வொரு பாட்டும் "அன்னாய் வாழி" யென்ற தொடராலே தொடங்கும் சிறப்புப்பற்றி இஃது இப்பெயர் பெறுவதாயிற்று. 201. அன்னாய் வாழிவேண் டன்னை யென்னை தானு மலைந்தா னெமக்குந் தழையாயின பொன்வீ மணியரும் பினவே என்ன மரங்கொலவர் சார லவ்வே. இது, நொதுமலர் வரைவின்கட் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. உரை : அன்னாய், இதனை விரும்பிக்கேள்: தலைமகனுடைய மலைச்சாரலி லுள்ளவை எத்தன்மைவாய்ந்த மரங்கள் கொல்லோ கூறுக. அவை அணிவதற் குரிய பூவையுடைமை யான், எம் தலைவனும் அணிந்து கொண்டான்; எமக்கும் அங்ஙன மாயினதோடு அமையாது தழையாகவும் உதவின; அவை பொன்போலும் பூக்களையும் நீலமணி போலும் அரும்புகளையு முடைய வாகும் என்றவாறு. "அன்னை வாழி வேண்டு அன்னை 2" என்றாற் போல, ஈண்டு அன்னாய் வாழி வேண்டு என வந்தது. "ஐ ஆயாகும் 3" என்றதனால், அன்னை, அன்னாய் என வந்தது. இனி வரு மிடங்களிலும் இதுவே கூறிக்கொள்க. "அன்னை என்னை என்றலும் உளவே 4" என்பதனால், தலைவனை, என்னை, என் றாள்; இது சொல்லினும் எழுத்தினும் தோன்றா மரபிற்றாயினும், "தொன்னெறி முறைமை" பற்றிக் கொள்ளப்படும். என்ன மரங்கொல் என்றது வேங்கை மரத்தைக் கருதி நின்றது. வேங்கை மரம் பொன்னிறமலரும் மணிபோன்ற அரும்பும் உடைத்தாதல், "மன்ற வேங்கை மணநாட் பூத்த, மணியே ரரும்பின் பொன்வீ தாஅய் 1" என்பதனால் அறிக. என்னை தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின என்றதனால் தலைவன் பூத்தரு புணர்ச்சி கொண்டதும், தழை யுதவியதும் பெற்றாம். தலைமகள் வேங்கைப் பொழிலகத்தே தலைமகனைத் தலைக்கூடினமை வெளிப்படுப்பாள் போன்று ஏத்தல் என்னும் அறத்தொடுநிலை குறிக்கின்றா ளாகலின், பொன்வீ மணியரும்பின, என்ன மரங்கொல் என்றாள். அறத்தொடுநிலைக்கண் தோற்றுவாயாகத் தலைமகனை வேறு பட நிறுத்தித் தானும் மலைந்தான் என ஒருமை வாய்ப் பாட்டாற் கூறியவள், தழையேற்பித்து உயிரொன்றிய கேள்வ னாயினமை உணர்த்தற்கு அவர் எனப் பன்மை வாய்பாட்டாற் கூறினாள். "நாற்றமும் தோற்றமும் 2" என்ற சூத்திரத்து "முன்னிய அறனெனப் படுதல்என்று இருவகைப், புரைதீர் கிளவித் தாயிடைப் புகுப்பினும்" என்ற விடத்து நிகழும் அறத்தொடு நிலையில், இது தழையும் கண்ணியும் தந்தான் என்பதுபடக் கூறியது என இளம்பூரணரும், "தோழி தழை தந்தான் என அறத்தொடு நின்றது 3" என நச்சினார்க்கினியரும் கூறுவர். 202. அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாட னூர்ந்த மாவே. இது, தலைமகன் வரைதல்வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது. உரை : அன்னாய், இதனை விரும்பிக்கேள்: நம்மூர்க்கண் வாழும் பார்ப்பனச் சிறுவர்களைப் போல மலைநாடனாகிய தலைவன் ஊர்ந்து போந்த குதிரையும் குடுமி பொருந்திய தலையை யுடையன காண் என்றவாறு. "அன்னை யென்னையென்றலும் உளவே 1" என்பதனால் தோழி தலைவியை அன்னாய் என்றது அமைவதாயிற்று. குடுமித் தலைய என்புழிக் குடுமி, குதிரையின் தலையில் இரு காது கட்கும் இடையே நெற்றியில் வீழும் உளைமயிர். "மானுளை யன்ன குடுமித், தோல்மிசைக் கிடந்த புல்லண லோனே 2" என்று பிறரும் கூறுதல் காண்க. வரைதல் வேண்டித் தலைமகன் தானே வருகின்றதனை தோழி நேரே கண்டமை தோன்ற, நாடன் ஊர்ந்த மா என்றாள். குதிரையினது நெற்றிமயிர் சிலவாய மயிர் பொருந்திய குடுமியை யொத்தலினாலும், முன் குடுமியை யுடையராதல் பார்ப்பனமாக் கட்கு ஆசாரவிதியாகலினாலும், அதனை யுடைய பார்ப்பனக் குறுமகவை உவமித்துக் கூறினாள். திருக்குடந்தைச் சவையப்பநாயனை வைது பாடிய காள மேகப்புலவர், அவன் முன்குடுமி யுடையனாதலைச் சுட்டி, "சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா 3" என்று உரைப்பத னால், பிற்காலத்தும் இவ்வழக்காறு இருந்தமை தெளிவாம். 203. அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட் டுவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலுழி நீரே. இஃது, உடன்போய் மீண்ட தலைமகள், "நீ சென்ற நாட்டு நீர் இனிய வல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்?" எனக் கேட்ட தோழிக்குச் சொல்லியது. பழைய உரை : மானுண்டு கழித்த கலங்கற் சின்னீர் அருந்தக் கூடா வாயினும், அருந்தினேனுக்குத் தேன் மயங்கு பாலினும் இனியவாயின என்றது, அவன் நாட்டு நீர் நலமும் அன்புடைமையும் உணர்த்தியவாறு. உவலை, தாழ்வு; கீழ்மையுமாம். உரை : அன்னாய், இதனை விரும்பிக்கேள்: அவர் நாட்டிலுள்ள இலைகள் உதிர்ந்து மட்கிய பள்ளத்தின் அடியில் மாவினம் உண்டு கலக்கிக் கழித்த கலங்கற் சின்னீர், நம் பூந்துடவைக்கண் பெறப்படும் தேன் கலந்த பாலினும் இனிமை யுடையவாகும் காண் என்றவாறு. தம் பொருளாகிய ஆனிரைகட்குரிய உணவுப் பொருள் களைத் தொகுத்துவைத்தற்கும், தம் உணவுக்கு வேண்டிய காய்கறிகளைப் படைத்துக் கோடற்கும் மனைப் புறத்தே அமைத் துள்ள தோட்டக்கால் படப்பை எனப்படும். இக்காலத்தும் வைக்கோற் படப்பை என வழங்குவர். படப்பை, படைப்பை என்பதன் மரூஉ. படப்பையிலுள்ள மரங்களில் கட்டப்பட்ட தேன், படப்பைத்தேன் எனப்பட்டது. மயங்குதல், கலத்தல். பண்டையோர் பாலில் கலந்துண்டது தேனேயன்றி இன்று வழங்கும் சருக்கரை யன்று; "பாலொடு தேன் கலந்தற்று 1" என்பது காண்க. உவலைக்கூவல், தாழ்வான பள்ளம். மா, எருமை முதலிய விலங்குகள். இது "னகரம் ஒற்றும் ஆவும் மாவும்2" என்பதனால் மான் என வந்தது. உண்ண என்பது உண்டு எனத் திரிந்தது. "வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய 3" என்பது காண்க. கலுழி - கலங்கல். ஈக்களை வாட்டியும் ஆன்களை மயக்கியும் ஈட்டிய தேனை யும் பாலையும் கலந்துண்டலினும், தம்மிடத்து உளவாகிய பொருள் சிறிதெனினும், அறவோர்க்கு அளித்தல் முதலிய நல்லறத்திற் பகுத்தளித்து எஞ்சியது உண்டல் ஏற்றமுடைத் தாகலின், தேன்மயங்கு பாலினும் இனிய என்றாள்; "உற்றார்க் குரியர் பொற்றொடி மகளிர்" என்பவாகலி னாலும், கற்புடைய மகள் "கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் 1" என்பவாகலி னாலும், நீ கொடுக்கும் தேன் மயங்குபால் உயர்ந்ததாயினும் எனக்கு இனிதாயிற்றன்று என்றும், அவர் நாட்டில் நீர் அரிதாயினும், அவ் வரிய நீர் தானும் மானுண்டு எஞ்சிய கலுழி நீர் எனினும் உண்டற்கு இனிதெனக் குறிப்பால் உயர்த்தியும் கூறினாள். மானுண்டு எஞ்சிய கலுழி நீர் எனவே, அஃது உண்டற் கேற்றது அன்மை பெறப்படும். "வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில், குளவி மொய்த்த அழுகற் சின்னீர், வளையுடைக் கையள் எம்மொடு உணீஇயர், வருகதில் அம்ம தானே 2" எனத் தலைமகன் நினைந்துரைக்குமாறு காண்க. "எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே 3" என்பதன் உரையில், இதனைக் காட்டி, "இஃது உடன்போய் மீண்ட தலைவி. நீ சென்ற நாட்டு நீர் இனியவல்லவே, எங்ஙனம் நுகர்ந்தாய் என்ற தோழிக்குக் கூறியது" என்பர் நச்சினார்க்கினியர். 204. அன்னாய் வாழிவேண் டன்னையஃ தெவன்கொல் வரையர மகளிரி னிரையுடன் குழீஇப் பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி நல்ல ணல்ல ளென்ப தீயேன் றில்ல மலைகிழ வோற்கே. இது வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத் தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பழைய உரை : நல்லள் நல்லள் என்பது அலர் அறிவுறீஇயது. உரை : அன்னாய், யான் கூறுகின்ற இதனை விரும்பிக் கேள்: வரையின்கண் வந்து ஆடும் சூரரமகளிரைப் போல் பிற மகளிரெல்லாம் தம்மிற் கூடிக்கொண்டு யான் இயங்குமிட மெல்லாம் ஒழியாது நோக்கி நல்லள் நல்லள் எனப் பல காலும் என்னைக் கூறாநிற்பர். அப்பெற்றியேன், மலைநாட னாகிய தலைமகற்குமட்டில் தீயேனா யிராநின்றேன்; அஃது என்னையோ, கூறுக என்றவாறு. அஃது என்னும் சுட்டு "மகளிரால் நல்லள் எனப்படும் யான் தலைமகற்குத் தீயேனாயினேன்" என்பது குறித்து நின்றது. "முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே 1" என்பவாகலின், சுட்டு முன்னர்க் கூறப்பட்டது. பெயர்வுழி பெயர்வுழி என்றும், நல்லள் நல்லள் என்றும் நின்ற அடுக்கு ஒருசொல் பலகாலும் நிகழ்தலை உணர்த்தலின், "பொருளொடு புணர்தல்." தன்னை நல்லள் என்போரும் மிக்க உருவும் திருவுமுடையரே என்றற்கு வரையரமகளிரின் என்றாள். மகளிர் குழீஇய விடத்துப் பெரும்பான்மையும் அலரெடுத் துரைத்தலும், புறங்கூறுதலும் நிகழு மாயினும், இவர் குழுவில் அது நிகழ்தலின்றித் தலைமகள் நலமே இயம்பப் பெற்றமை, மகளிரின் நிரையுடன் குழீஇ என்றதனாற் பெற்றாம். ஏதிலார்க்கு நல்லளாய்த் தோன்றும் யான் தலைமகற்கு அப்பெற்றிய ளல்லே னாயினேன் என்பது ஒழிய நின்றமையின், தில்ல ஒழியிசைக்கண் வந்தது. பெயரும் இடந்தோறும் என்பாற் கிடக்கும் பெண்மைக் குணமும் பெருங்கவினும் கண்ட மகளிர், அத்துணைச் சிறப் பினைத் தாம் பெற்றிலாமை குறித்துப் பொறாது புறங்கூறற்பால ராயினும், அது செய்யாது புகழ்ந்து பாராட்டுகின்றன ரென்பாள் நல்லள் நல்லள் என்ப என்றும், அவ்வாறே என் நலம் பாராட்டும் பான்மைய னாகிய தலைமகன், அது செய்தற்கு விரைய வந்து கூடானாயினன் என்பாள், மலைகிழவோற்குத் தீயேன் தில்ல என்றும் கூறினாள். ஏனை மகளிர்க்குப் புலனாகி அவராற் சிறப்பிக்கப்படும் எனது நலம் அவற்குத் தீமையாய்த் தோன்றி அவன் என்னை மறக்கச் செய்தது என்பாள் தீயேன் என்றும், அத்தீமைக்குக் காரணம் தனக்குப் புலனாகாமையின், எவன் கொல் என்றும் கூறுகின்றாள். 205. அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி நனிநா ணுடைய ணின்னு மஞ்சும் ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன் மலர்ந்த மார்பிற் பாயல் துஞ்சிய வெய்யள் நோகோ யானே. இது, நொதுமலர் வரைவு வேண்டி விட்டுழித் தலைமகட்கு உளதாகிய வருத்தம் நோக்கி, "இவள் இவ்வாறு ஆதற்குக் காரணம் என்னை?" என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. உரை : அன்னாய், யான் கூறுகின்ற இதனை விரும்பிக்கேள் : என் தோழியாவாள் மிக்க நாணமுடையளாய்த் தாயாகிய நின்னை யும் மிக அஞ்சும் நீர்மையளே யாயினும், மிக்குற்றொழுகும் வெண்மையான அருவிகள் நிறைந்த உயர்ந்த மலைநாட னுடைய அகன்ற மார்பின்கண் கிடந்து பெறும் இனிய உறக்கத்தைப் பெறுதற்கு விரும்பினளாகலான், யான் வருந்துத லல்லது பிறிதொன்றும் செய்யகில்லேனாயினேன் என்றவாறு. மகளிர்க்கு இயற்கையாக அமைந்த நாணம்அச்சங்களின் அளவினும் இவள்பால் அவை மிக்குள்ளன என்பது கருத்தாதலின் நனி யென்றது பின்னும் கூட்டப்பட்டது. ஒலிவெள்ளருவி என்றவிடத்து ஒலித்தல் மிகுதிப் பொருட்டு; "ஒலிவெள் ளருவி ஒலியில் துஞ்சும் 1" என்றாற்போல. மலர்ந்த மார்பு என்புழி மலர்தல் - விரிதல். "மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே 2" எனப் பிறரும் கூறுதல் காண்க. வெய்யள், வேண்டற் பொருட்டாய வெம்மை என்னும் உரிச்சொல் லடியாகப் பிறந்த வினைக் குறிப்பு முற்று. நோகோ யானே என்றது தன்பால் வேறு செயலின்மை தோன்ற நின்றது. அவட்கு உளதாகிய வேறுபாட்டுக்குரிய காரணத்தை அவளறிய நீ என்னைக் கேட்பினும் பொறாது இறந்து படும் அத்துணைப் பெருநாணமுடையள் என்பாள், நனி நாணுடையள் என்றும், தனக்குற்ற வேறுபாட்டை நீ அறிதற்குப் பெரிதும் அஞ்சுகின்றாள் என்பாள், நின்னும் நனியஞ்சும் என்றும் தோழி கூறினாள். நற்றாயினும் களவின்கண் அருமறை அறிதற்கண் செவிலி சிறந்த தாயாயினும் அவள்பாலும் அதனைப் புலப் படுத்துதற்கு அஞ்சுகின்றாள் என்பதுபட நிற்றலின், உம்மை சிறப்பு; "ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாயெனப் படுவோள் செவிலி யாகும் 1" என ஆசிரியர் உரைப்பது காண்க. பஞ்சியும் மலரும் பரப்பிய மெல்லணையில் கிடப்பினும், மகளிர்க்குக் காதலன் மார்பிற் கிடந்து உறங்குதலில் வேட்கை மிக்கிருக்கு மென்பது பற்றி, மலர்ந்த மார்பிற் றுஞ்சிய வெய்யள் என்றாள். "இன்றுயில் மார்பிற் சென்ற வென் நெஞ்சே 2" என்றும், "மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ 3" என்றும் பிறரும் கூறுதல் காண்க. ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன் என்றது புனல்தரு புணர்ச்சி கூறியவாறு. ஓங்குமலை நாடன் என்பது ஏத்தல்; ஒலிவெள்ளருவி என்பது குறிப்பால் ஏதீடும், துஞ்சிய வெய்யள் என்றது வேட்கையுரைத்தலுமாம். நனி நாணுடைமையும், பேரச்சமுடைமையும், அவள் தான் உற்றது உரைக்க லாகாவகைத் தடுத்தலால், அவள் பொறாது கலக்குற்று வேறுபடுவது கண்டு யான் ஆற்றே னாயினேன் என்பாள், நோகோ யானே என்று தோழி கூறினாள். நொதுமலர் வரைவு வேண்டி விட்டமையின் பெருநாணும், அதனால் உளதாகும் ஏதம்பற்றி அச்சமும் உடைமையால் மேனி வருந்திக் காட்டினாள் என்று செவிலிக்கு விடையிறுத்தவாறு. நாடன் மார்பில் துஞ்ச விரும்புதலை நாணாலும் அச்சத்தாலும் பிறர்க்கு உணர்த்தலாகாமை கூறி அறத்தொடு நின்றவாறு; "நோயலைக் கலங்கிய மதனழி பொழுதின், காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும், யாமே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்க, .......... என்ன மகன்கொல் தோழி 4" எனத் தலைவி கூறுமாற்றாலும் இக்கருத்து உணரப்படும். "முன்னிலை அறனெனப் படுதல்என்று இருவகைப், புரைதீர் கிளவித் தாயிடைப் புகுப்பினும் 5" என்றவிடத்து நிகழும் அறத்தொடுநிலை வகையில் இது தோழி தலைவியது வேட்கை கூறியது என்பர் இளம்பூரணர். 206. அன்னாய் வாழிவேண் டன்னை யுவக்காண் மாரிக் குளத்துக் காப்பா ளன்னன் தூவலி னனைந்த தொடலை யொள்வாட் பாசி சூழ்ந்த பெருங்கழல் தண்பனி வைகிய வரிக்கச் சினனே. இஃது இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. உரை : அன்னாய், யான் கூறுகின்ற இதனை விரும்பிக் கேள் : மழை பெய்ய நிறைந்த குளத்தின் கரைக்கண் நின்ற காவ லாளனை ஒப்பான் ஒருவன், மழைநீரால் நனைந்த தூக்கிட்ட ஒள்ளிய வாளைத் தூக்கிப் பாசிகள் சூழ்ந்த பெரிய கழ லணிந்து, தண்ணிய பனியால் இறுகிய வரிந்து கட்டப்பட்ட கச்சுடையனாய் வாராநின்றான்; உங்கே அவனைக் காண் பாயாக என்றவாறு. உவக்காண் என்பது ஒட்டி நின்ற சுட்டிடைச்சொல் என்பர் பரிமேலழகர் 1. இடைவிடா மழையால் நீர் நிறைந்த குளம் என்றற்கு மாரிக்குளம் என்றார். கரை உடைந்து ஏதம் விளை வியாமைப் பொருட்டுப் பண்டை நாளில் குளங்கட்குக் காவலர் களை நிறுவுவது மரபு; "தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல், எறிதிரைத் திவலை தூஉஞ் சிறுகோட்டுப், பெருங்களங் காவலன் போல 2" என்று சான்றோர் குறித்தல் காண்க. காப்பாள், காப்பு, காவல்; "வாய் காவாது பரந்து பட்ட, வியன்பாசறைக் காப்பாள 3" எனப் பிறரும் கூறுப. தூவல் - மழைத்துளி. தூக் கிட்டுத் தோளிடைக் கோத்துப் பக்கத்தே தொங்கும் வாளைத் தொடலை வாள் என்றார். "கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர் 4" என்று சான்றோர் கூறுவதனால் தொடலை வாளின் இயல்பு உணரப்படும். குளங்காவல் புரியுமிடத்துக் கரையிடை உடைப்புத் தோன்றின் கல்லும் மரமும் துணித்து உடனே அடைத்தற்கு ஏற்புடை மையின், தொடலை வாள் வேண்டப்பட்டது. உயிர் கொடுத்துப் புகழ்கொள்ளும் மற மாண்புடைய ஆடவர் கழல் அணிதல் மரபு. காப்பாளன்னன், வாளைத்தூக்கி, கழல்யாத்துக் கச்சினனாய் வாராநின்றான் என ஒருசொற் பெய்து முடிக்க. இரவுக்குறிக்கண் வருவான் வழியில் உளவாகும் ஏதங் கருதி வாளும், வினைசெய்யும் தொழிலராய ஆடவர்க் கியல்பாகலின் கழலும், செலவு மேற்கொண்டமையின் கச்சும் உடையனா கலின், அவற்றை அணிந்து தோன்றும் காப்பாளோடு உவமித்துக் காப்பாளன்னன் என்றாள். வினையில் வழி வாளை உறையிற் பெய்து தூக்கிட்டிருத்தலினாலும், மழைக்கண் நனைந்துளா னாகலினாலும், தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள் என்றும், நெறியிடை நின்ற நீர்க்கண் படர்ந்த பாசி வருமவன் கழலிற் பிணைந்து அறுபட்டமையின், பாசி சூழ்ந்த பெருங்கழல் என்றும் கூறினாள். மழையால் நீர்நிறைந்து நிற்கும் குளத்தின் கரையைக் காத்தற்பொருட்டுச் செல்லும் காவலனை யொப்பான் என்றதனால், இவனும் தன்பால் காதல் சிறந்திருக்கும் காதலியின் உயிர்க்காவற் பொருட்டு மழையால் நனைந்து வருகின்றான் எனத் தலைவியின் பொருட்டு வந்தமையும், அவள் அவனை இன்றி யமையாமையும் குறிப்பால் உணரக் கூறினாளாயிற்று. இனி, மாரிக் குன்றத்துக் காப்பாளன்னன் என்றும், பாசி தூர்ந்த என்றும் பாடமுண்டு. மழையால் நனைந்த குன்றம் போலும் தோற்றத்தையுடைய காப்பாள் என்றும், பாசிகள் சூழ்ந்து அடையப்பட்ட அரும்புகளை யுடைய கழல் என்றும் முறையே பொருள் உரைத்துக் கொள்க. அதனால் சிறப்புடைய பொருட்பேறு இன்மை உணர்க. தோழி தலைவியை அன்னை என்றல் அமையும் என்றற்கு நச்சினார்க்கினியர் இதனைக் காட்டுவர். 1 207. அன்னாய் வாழிவேண் டன்னை நன்றும் உணங்குவ கொல்லோநின் றினையே யுவக்காண் நிணம்பொதி வழுக்கிற் றோன்றுமவர் மணிநெடுங் குன்றம் மழைதலை வைத்தே. இது, 'மழை யின்மையால் தினை யுணங்கும்; விளைய மாட்டா; புனங் காப்பச் சென்று அவரை எதிர்ப்படலாம்' என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று என வெறுத்திருந்த தலை மகட்குத் தோழி சொல்லியது. உரை : அன்னாய், இதனை விரும்பிக்கேள்: அவர்தம் நீலமணி போலும் நெடிய குன்றம் மேகங்கள் தன் முடியிலே படியக் கொண்டு, நிணம் மிக்க ஊன்தடிமேல் பொதிந்து மூடிய வழுக்குப் போலத் தோன்றுதலைக் காண்பாயாக. அதனால், நின் தினை பெரிதும் உணங்கமாட்டா. "உணங்கு மாகலின் அவரை எதிர்ப்பட லாகாது' என எண்ணி வருந்துதல் ஒழிக என்றவாறு. கொல்: அசைநிலை. ஓகாரம்: எதிர்மறை. நன்றும் உணங்குவ கொல்லோ என்றது, சிறுபான்மை உணங்கினும் மழை வந்தபின் அவை பெரிதும் தழைக்கும் என்பது உணர நின்றது. வழுக்கு - கொழுவிய ஊன்றடிமேல் வெண்ணெய் போலப் படிந்து தோன்றுவது. இதனை ஊன் என்றும் கூறுவர். மணியுடைமையே யன்றி மணியின் நிறமும் உடைமைபற்றி மணிநெடுங்குன்றம் என்றார். மணிநிற மால்வரை எனப் பிறாண்டும் 1 கூறுப. ஏனை வருமிடங்களினும் கூறிக் கொள்க. யான் காக்கும் இத்தினை மழையின்மையால் உணங்கா நின்றன வாகலின், தினைக்காவலொழிந்து மீள மனைக்குச் சென்று செறிப்புண்டு தலைமகனை எதிர்ப்படும் திறத்தை இழப்பே மாயினோம் எனத் தலைமகள் வருந்திக் கூறியதனைக் கொண் டெடுத்து மொழிதலின், தோழி, நின் தினை உணங்குவ அல்ல என்றாள். உணங்கின போலத் தோன்றினும், அங்கே மலை முடியில் மழைமுகில் படிதலின், இனிவரும் மழையால் பெரிதும் தழைத்தல் ஒருதலை என்றற்கு நன்றும் என்று சிறப்பித் தாள். அண்மையில் தோன்றுதல் பற்றி மணிநெடுங் குன்று என்றவள், அதன் முடியில் படிந்து தோன்றும் வெண்மையும் கருமையுங் கலந்த கார் முகிலைக் காட்டி, மழைதலை வைத்துத் தோன்றும் என்று உரைத்தாள். வெயிற்படாமல் நிழலிடைப் பொதிந்து வைத்த நிணமிக்க ஊன் வெள்ளிய வழுக்குப் படிந்து தீ நாற்றம் கமழ்ந்து தோன்றுமாறு போல, மணிக்குன்று கார்முகில் படிந்து மழைக்காற்று வீசநின்றது என்றும், எனவே இனி மழை வருதல் ஒருதலை என்றும் வற்புறுத்தியவாறாயிற்று. வழுக்கினைக் கூறியது - கூதிர்க்காலத்து மழை முகில் என்றற்கு. மழைமுகிலை முடியில் தாங்கித் தோன்றும் நெடுங் குன்றம் வழுக்குத் தோன்றிய நிணம்போலத் தோன்றினாற் போல, உணங்கித் தோன்றிய தினை, தலைமகனை எதிர்ப்படல் அருமை போல நினக்குக் காட்டிற்று என்றும், அவர் நெடுங்குன்றம் மழைமுகிலை முடிமேற்கொண்டு மழை வரவினை வற்புறுத்துவ தனால், நின் காதலர் நின்பால் நிறைந்த காதல் கொண்டு ஒழுகுவராதலின், எவ்வழியும் நீ அவரைத் தலைப்பட்டு இன் புறுதல் ஒருதலை என்றும் உள்ளுறுத் துரைத்தவாறு. உணங்கல கொல்லோ என்றும், மழைதலை வைத் தவர் மணிநெடுங் குன்றே என்றும் பாடமுண்டு. உணங்கல கொல்லோ என்பதற்குக் கொல்லும், ஓவும், அசைநிலை எனக் கொள்க. 208. அன்னாய் வாழிவேண் டன்னை கானவர் கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கைப் பொன்மலி புதுவீத் தாஅமவர் நாட்டு மணிநிற மால்வரை மறைதோ றணிமலர் நெடுங்க ணார்ந்தன பனியே. இது, செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப்பட்ட பின்பு, இவள் இவ்வாறு பட்ட வருத்தமெல்லாம் நின்னின் தீர்ந்தன என்பது குறிப்பாய்த் தோன்ற அவட்குச் சொல்லியது. பழைய உரை: கிழங்கு அகழ்குழி நிறைய வேங்கைமலர் பரக்கும் என்றது, கொள்வார்க்குப் பயன்பட்டுத் தமக்கு வந்த குறையைத் தம் புகழ் நிறைக்கும் பெருமையுடையர் என்பதாம். உரை : அன்னாய், குறவர் கிழங்கு எடுத்தற்பொருட்டுக் கல்லிய நெடிய குழிகள் நிறைய வேங்கையின் பொன்போலும் புதிய பூக்கள் சென்று படியும் அவருடைய நாட்டின்கண் நிற்கும் நீலமணியின் நிறங்கொண்ட பெரிய மலை மறையுந்தொறும் அழகிய பூக்கள் போலும் நீண்ட கண்கள் நீர்சொரிந்தன என்றவாறு. குறிஞ்சிநில மக்களைக் கானவர் என்பதும் வழக்கு. மலை நாட்டவர் வள்ளிக்கிழங்கு பயிர்செய்பவ ராதலின், அதற் கென்று வகுத்த குழியைக் கிழங்கு அகழ் நெடுங்குழி என்றார். வேங்கையின் பூ பொன்னிறத்தது. "வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர், வேண்டிய குறமகள் 1" என்று சான்றோர் குறிப்பது காண்க. மலை நாடுகளில் பகற்போதில் மழைமுகில் படிந்து மலைமுகடு தோன்றாதவாறு மறைப்பது இயல்பு. காதலர்க்குரிய இடமும் பொருளும் காணின், அவை அவரைக் கண்டாற் போலும் இன்பம் செய்வதுபற்றி, மறைந்த வழித் துன்பம் உண்டாவதாயிற்று என உணர்க. "உள்ளாராயினும் உளனே அவர்நாட்டு....... நெடும்பெருங் குன்றத்துப், பாடின் னருவி சூடி, வான்றோய் சிமையம் தோன்ற லானே 2" என்று பிறரும் உரைப்பது காண்க. மணிநிற மால்வரையைக் காணுந்தோறும், அதனை உடைய தன் காதலனைக் கண்டாற்போலத் தேறி இன்புற்றாள் என்றற்கு, மால்வரை மறைதோறு, அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே என்று கூறினாள். "அவர் நாட்டுக்குன்றம் நோக்கினென் தோழி, பண்டை யற்றோ கண்டிசின் நுதலே 3" என்று தலைவி கூறுதல் காண்க. துன்பத்தின் நீங்கியோர், மகிழுங்கால், அத் துன்பநிலை கூறி மகிழ்வ ராகலின், ஈண்டும் வரைவு மாட்சிமைப் பட்டமையால் மகிழ்ச்சியுறும் தோழி, அது நிகழ்வதன் முன் தலைவி வருந்திய செயலினை, மால்வரை மறைதோறு, அணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே என்றாள். "விரவும் பொருளும் விரவும் என்ப4" என்பதனால் நிகழ்ந்தது கூறி இன் புறுதல் கொள்க. கானவர் கிழங்கு அகழ்தற்பொருட்டு எடுத்த குழி நிறைய வேங்கையின் மலர்கள் பரக்கும் என்றது, தலைமகனது நட்பின் பொருட்டு இவள் எய்திய வருத்தமெல்லாம் நின் முயற்சியால் வரைவு மாட்சிமைப்படுதலின் இன்பமாய் நிறைவதாயிற்று என உள்ளுறை கொள்க. 209. அன்னாய் வாழிவேண் டன்னை நீமற் றியானவர் மறத்தல் வேண்டுதி யாயின் கொண்ட லவரைப் பூவி னன்ன வெண்டலை மாமழை சூடித் தோன்றலா னாதவர் மணிநெடுங் குன்றே. இது வரைவிடை வைத்துப் பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. பழைய உரை: வேண்டலை மாமழை சூடித் தோன்றல் ஆனாது என்றது, மழை பெய்தற்குக் கால்வீழ்ந்த இருட்சியால் மறையப்பெறாது விளங்கித் தோன்றுதலை நோக்கி எனக் கொள்க. உரை : அன்னாய், யான் கூறுகின்ற இதனை விரும்பிக் கேள்: யான் அவரைச் சிறிது மறந்து அமைதல் வேண்டும் என்று கூறுகின்றனை யாயினும், கீழ்க்காற்று வீசுதலால் மலரும் அவரைப் பூவைப் போல வெண்மையான உச்சியினையுடைய பெரிய முகில் தவழும் முடியையுடையதாய் மணிநிறங் கொண்ட குன்றம் தோன்றுதல் அமையாது; ஆகலின், யான் அவரை மறக்குமாறு யாது? கூறுக என்றவாறு. என்றது, நீ கூறினும், யான் மறக்கவொண்ணாதவாறு மணி நெடுங்குன்றம் தோன்றி அவர் வரவு நினைப்பித்தலின், யான் மறக்ககில்லேன் என்றவாறாம். கொண்டல் - கீழ்க்காற்று. அது வீசும் பனிக்காலத்தில் அவரை பூக்குமாகலின், 'கொண்டல் அவரை' என்றார். "பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால், கொழுங்கொடி அவரை பூக்கும், அரும்பனி அற்சிரம் வாரா தோரே 1" என்றும், "அவரைப் பைம்பூப் பயில அகல்வயல், கதிர்வார் காய்நெல் கட்கினிது இறைஞ்சச், சிதர்சினை தூங்கும் அற்சிரம் 1" என்றும் வருதல் காண்க. அற்சிரம் - பனிக்காலம். செய்தற்குக் கூடாத ஒன்றினைச் செய்தல் வேண்டும் எனப் பணிக்கின்றாய் என மறுக்கும் குறிப்புத் தோன்ற, 'அன்னாய் வாழி வேண்டு அன்னை' எனத் தலைவி தோழிக்குக் கூறு கின்றாள். யான் அவரை மறத்தல் வேண்டும் என்று நீ கூறுவதனை உடன்படுகின் றேன் என்பாள், நீமற்று யான் அவர் மறத்தல் வேண்டுதி என்று அவள் கூறியதனையே கொண்டெடுத்து மொழிந்தாள். கூற்றவண் இன்மையின் கொண்டெடுத்து மொழி யும் கூற்றன்மையின் குறிப்பு வேறு என்பதுபட ஆயின் என்றும், அவ்வாறு மறத்தல் கைகூடுவது அவர் மணிநெடுங்குன்று தோன்றாது மறையினன்றோ? மற்று, அது மறையாது தோன்றா நிற்கின்றதுகாண் என்பாள், தோன்றல் ஆனாது என்றும், வெண்டலை மாமழை கூடி அதனை மறைத்தற்கு முயன்றும், அவர் குன்றம் தனது நெடுமையால் மறையாது என்பாள், நெடுங்குன்று என்றும் கூறினாள்; என்றது, மறத்தல் வேண்டும் என நீ எனக்கு உரைப்பது, மணிநெடுங்குன்றத்தைத் தோன்றாத வாறு மறைக்க முயல்வது போலும் என்றாளாம். மறுத்தல் வேண்டும் என்ற பாடத்துக்கு, யான் அவர்வரின், கொள் ளாது மறுத்தல் வேண்டும் என்பா யாயின் என்று கூறிக் கொள்க. 210. அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைப் புலவுச்சேர் துறுக லேறி யவர்நாட்டுப் பூக்கெழு குன்ற நோக்கி நின்று மணிபுரை வயங்கிழை நிலைபெறத் தணிதற்கு முரித்தவ ளுற்ற நோயே. இது, காப்புமிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு தெய் வத்தினானாயிற் றென்று வெறியெடுப்புழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. பழைய உரை: புலவுச்சேர் துறுகல் என்றது, யாவும் தெய்வத்தினான் ஆயின என்று மறி முதலாயின கொன்று புலவு நாறும் நம் குன்று என்பதாம். உரை : அன்னாய், இதனை விரும்பிக்கேள்: நம் படப்பைக்கண் மறி முதலியவற்றைக் கோறலால் புலால் கமழும் துறுகல்லின் மேல் ஏறி, அவர் நாட்டின்கண் உள்ள பூக்கள் பொருந்திய குன்றத்தை நோக்கி, நீலமணிபோல விளங்கும் இழையை யணிந்த இவள் நிற்கும் நிலை பெறின், இவளுற்ற நோய் தணிதற்கும் உரியதாகும் என்றவாறு. என்றது, குன்றம் நோக்குந்தோறும் அது தனக்குரிய தலை வனை நினைப்பித்து அவனைக் கண்டாற் போல்வதோர் மகிழ்ச்சி எய்துவித்தலின், காப்புமிகுதியால் அது பெறாது வருந்துகின்றாள்; அவள் அக்குன்றம் நோக்குமாறு காப்பு நெகிழ்விப்பின், மெலிவு நீங்கி நோய் தணிவள் என்பதாம். எனவே, குன்றின் சாரலில் அதன் தலைவனொடு இவள் தலைப்பெய்தமை யுடைமை கூறி அறத் தொடு நின்றாளாம். படப்பை - தோட்டத்தின் ஒரு கூறு. படப்பைக்கண் துறுகல் உண்மை, "துறுகல் நண்ணிய கறியிவர் படப்பைக், குறியிறைக் குரம்பை நம்மனை 1" என்பதனால் அறிக. படப்பைக்கண் குன்றவர் கூடி வேலை நட்டு நெடுவேளைப் பரவுங்கால், மறி முதலாயினவற்றைத் துறுகன்மேல் நிறுத்திக் கொல்பவாதலின், புலவுச்சேர் துறுகல் என்றார். நிற்ப எனற்பாலது நின்று எனத் திரிந்தது; "வானின் றுலகம் வழங்கி வருதலால் 2" என்றாற்போல. தலைமகட்கு உண்டாகிய மெலிவைப் புலப்படுத்திய சிறப்புத் தோன்ற வயங்கிழை என்றார். மறி முதலியவற்றின் உயிர் காக்கப்படுதலே யன்றி இவளது நோய் தணிதற்கும் என நிற்றலின், உம்மை எச்சப்பொருட்டு. "மறியுயிர் வழங்கா அளவைச் சென்று யாம் செலவரத் துணிந்து 3" எனப் பிறாண்டும் தோழி கூறுமாறு காண்க. நீ நினைக்குமாறே வெறியெடுத்தலால் இவள் உற்ற நோய் ஒருகால் தணிதலேயன்றி அவர் நாட்டுக் குன்றம் நோக்கி நிற்பினும் தணியும் என்பதுபட உம்மை நின்றது எனினுமாம். இழை மணி போல் வயங்குதல், "மணியுரு விழந்த அணியழி தோற்றம், கண்டே கடிந்தனம் செலவே 1" என்று பிறர் கூறுமாற்றானும் உணர்க. தலைமகள் இற்செறிப்புண்டு காப்புமிகுதியால் தலை மகனை எதிர்ப்பட இயலாது வருந்துதலை உட்கொண்டு செவிலி அயிராமைப் பொருட்டு நம் படப்பை என்றும், வழிபாட்டுக்கு ஆகாது யாம் ஏறி விளையாடுதற்குரிய துறுகல் என்பாள், புலவுச்சேர் துறுகல் என்றும், ஏறி நின்று நோக்குவ தொன்றே வேண்டுவது, அது நீ எடுக்கும் வெறிக்கு இடையூறன்று என்பாள், நோக்கி நிற்ப என்றும், மணி யுரு விழந்து கையினும் தோளினும் நில்லாது இழைகள் கழன்று ஓடுமாறு மெலிவுற்ற தலைமகட்கு அது நோய்தணி மருந்தாம் என்பாள், வயங்கிழை நிலைபெறத் தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோய் என்றும் கூறினாள். அவர்நாட்டுப் பூக்கெழு குன்றம் என்றது, தலை மகட்குத் தலைவனொடு உளதாகிய பூத்தரு புணர்ச்சி புலப்படுத்தவாறு. இஃது ஏதீடு. குன்றம் நோக்கி நிற்பவே, அது நோய்தணிதற்கு உரித்து என்றதனால், செவிலி தலைமக்களிடை நட்புண்மை யுணர்ந்து நற்றாய் முதலியோர்க்கு அறத்தொடு நிற்பாளாவது பயன். இது வேட்கையுரைத்தல். 22. அன்னாய்ப்பத்து. இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்கள் இறுதியில் அன்னாய் என்னும் சொற்கொண்டு முடிதலின் இஃது இப்பெயர்த்தாயிற்று. முன்னது பாட்டின் முதற்கண் நின்ற தொடர்பற்றிப் பெயர் கொண்டாற்போல, இது பாட்டின் இறுதிக்கண் நின்ற சொற் பற்றிப் பெயர் கொண்டது. அன்னை என்பது, "ஐ ஆயாகும்" என்றதனால் அன்னாய் என நின்றது. 211. நெய்யொடு மயக்கிய வுழுந்துதூற் றன்ன வயலையஞ் சிலம்பின் றலையது செயலையம் பகைத்தழை வாடு மன்னாய். இது, தலைமகன் ஆற்றாமை கண்டு கையுறை ஏற்ற தோழி தலைமகள் தழை ஏற்க வேண்டிக் கூறியது. உரை : அன்னாய், நெய்பெய்து துவைக்கப்பட்ட உழுந்தின் மணிபோன்ற வயலைக்கொடி படர்ந்த மலைமுடியின்கண் தழைத்த அசோகின் தளிரால் தொடுக்கப்பட்ட பகைத்தழை இனி வாடுமாகலின், ஏற்றருள்க என்றவாறு. உழுந்துதூறு என்றது - உழுந்தின் காயை உலர்த்தித் துவைத்து எடுத்து தூற்றப்பட்டது. தூறப்பட்டது தூறு, மணியினை நெய் பெய்து மயக்கியவழி நிறமும் ஒளியும் பெறுதலின், நெய்யொடு மயக்கிய உழுந்து தூறு என்றும், வயலை படர்ந்த நிலம் நெய்யொடு மயக்கிய உழுந்தினைப் பரப்பியது போறலின், நெய்யொடு மயக்கிய உழுந்துதூற் றன்ன என்றும் கூறினார். வயலைக்கொடி செந்நிறத்த தாகலின், செறிந்து விளங்கும் அதன் கரிய இலைகளும் வெள்ளிய பூக்களும் கொள்ளப்படும். இவை தம்மில் விரவிப் படர்ந்து தோன்றும் காட்சிக்கு நெய் பெய்து பரப்பிய உழுந்தின் தூறு உவமமாயிற்று. வயலைக்கொடி படர்ந்த சிலம்பின் உச்சியின்கண்ணதாய செயலைத்தழை நாம் பெறற் கரிதாயினும், பெற்றவழி அணியாது விடின், அது வாடிப் பயனின்றாம் ஆதலால் ஏற்றருள்க என்பாள், செயலையம் பகைத்தழை வாடும் என்றாள். பகைத்தழை என்றற்கு மேலே கூறினாம் 1. சிலம்பின் தலையிடத்த தாய்ப் பெறுதற்கு அரிதுமாய தழையை எளிதிற் பெறத் தந்தமை யால், இஃது ஏற்கற்பால தென்றாளுமாம். அரிதிற் பெறற்பாற்றாய தழையை யாம் தேடி வருந்தாவகையில் தானே எளிதில் தந்தான் என்றதனால், வரைவு வேண்டியவழித் தமர் மறுத்தல் முதலிய அருமைசெய்து அலைப்பினும், வென்றி பெற முயன்று வரைந்து கொள்ளும் தாளாண்மையன் என்று தலைவனது உரனுடைமை சுட்டியவாறு. அன்றியும், வயலைச் சிலம்பின் தலையதாகிய செயலைத்தழை என்றதனால், நாம் பேணி வளர்க்கும் வயலை, தன் அடிக்கண் வளர நின்றமையின் செயலையின் தழையை வாடவிடுதல் நமக்கு அறமன்று எனத் தோழி கூறினாளாயிற்று. மறைந்தவ ளருகத், "தன்னொடும் அவளொடும் முன்னமுன் தளைஇப், பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கின் 1" என்பதற்கு இதனை எடுத்துக்காட்டுவர் இளம்பூரணர். உழுந்து தூற்றன்ன என்ற பாடத்துக்கு உழுந்தினது தூறு போன்ற வயலைக்கொடியின் தூறுகள் நிறைந்த சிலம்பு என்றுரைப்பினும், நெய்யொடு மயக்கிய என்பது இயையாமை காண்க. 212. சாந்த மரத்த பூழி லெழுபுகை கூட்டுவிரை கமழு நாடன் அறவற் கெவனோ நாமகல் வன்னாய். இது, வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுத்த வழித் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. பழைய உரை : சாந்தமரத்தின் இடை நிலத்து உளவாகிய அகில் சுடுபுகை அச் சந்தனப்பூ நாற்றத்தோடு கமழும் நாடன் என்றது, தனக்கு வந்த வருத்தம் பாராது தனக்குத் துணையாயினார் நலத்தொடுங் கூடி எல்லார்க்கும் பயன்பட ஒழுகும் ஒழுக்கத்தை உடையான் என்பதாம். உரை: அன்னாய், சந்தனமரத்தின் இடைநிலத் துளவாகிய அகிலைச் சுடுதலால் எழும் புகை அச் சந்தனப் பூவின் நாற்றத் தோடு கூடி மணம் கமழும் நாடன் அறவோனாகலின், நாம் அவன் பொருட்டு மகட்கொடை மறுத்தல் என்னையோ? கூறுக என்றவாறு. பூழில் - அகில். "சாந்தம் பூழிலொடு பொங்குநிரை சுமந்து 2" என வருதல் காண்க. அறவன் - வாய்மை ஆகிய நல்லற முடையன். "ஒண்செங் காந்தள் அவிழும் நாடன், அறவ னாயினும் 3" என்றார் பிறரும். அகல்வு - ஈண்டு மறுத்தற்கண் வந்தது. நாடன் தங்கட்கு உண்டாய இடையூறுகளைக் களைந்து தனது நட்பினைத் தந்தனன் எனக் குறிப்பால் ஏதீடு கூறி அறத் தொடு நிற்கின்றானாகலின், தோழி தலைவனை அறவன் என்றும், அறவோர்க்கு அளித்தல் முறைமையாக, மறுத்தல் முறையன்று என்பாள் நாம் அகல்வு எவனோ என்றும் கூறினாள். சந்தனச் சோலையிடையே எரிக்கப்பட்ட அகிற்புகை சந்தனத்தின் மணம் கலந்து கமழும் நாடன் என்றது, மலைச் சாரலில் மதக்களிறு வென்று வந்தவன் அது கண்டு வெருவிய எம்மைத் தலையளித்த உரவோனாவன் என உள்ளுறையால் ஏதீடு கூறினாள் என்றவாறு. 213. நறுவடி மாஅத்து மூக்கிறு புதிர்ந்த ஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர் உறைவீ ழாலியிற் றொகுக்குஞ் சாரல் மீமிசை நன்னாட் டவர்வரின் யானுயிர் வாழ்தல் கூடு மன்னாய். இது, வரைவொடு வருதலைத் துணிந்தான் என்பது தோழி கூறக்கேட்ட தலைமகள் சொல்லியது. பழைய உரை : மாவின் மூக்கிற்று உதிர்ந்த வடுக்களை ஆலி போலத் தொகுக்கும் நாட்டையுடையார் என்றது, விரும்புவன வற்றுக்குத் தாமாக முயலாது பெற்றுழிப் பேணும் இயல்புடையார் என்றவாறு. உரை : அன்னாய், நறிய வடுக்கள் நிறைந்த மாமரத்தின் காம்பு அற்று உதிர்ந்த, மிகக் குளிர்ந்த, பெரிய வடுக்களைப் பாலை நிலத்து இயங்கும் குறவர் மழையொடு வீழும் ஆலிபோலத் தொகுக்கும் சாரலையுடைய மிக உயர்ந்த நல்ல நாட்டினை யுடையவர் வரைவொடு வருதல் துணிந்தாலன்றி யான் உயிர்வாழ்தல் கூடாது என்றவாறு. மாவின் வடு, மாவின் முற்றாத காய். இது வடுயென்றும் வழங்கும். "நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 1" என்பது காண்க. மூக்கு - காம்பு; "பெண்ணைத் தேனுடை யழிபழம்...... மூக்கிறுபு, அள்ளல் இருஞ்சேற் றாழப் பட்டென 2" எனப் பிறரும் கூறுதல் காண்க. மீமிசை, "ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார் 1" என்பதனால் அமைந்தது. பாலையாவது முல்லை யும் குறிஞ்சியும் காலத்தால் இயல்பழிந்து வேறுபட்ட நிலம்; "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவம் கொள்ளும் 2" என்பது காண்க. நன்னாட்டவர் வரின், யான் உயிர்வாழ்தல் கூடும் என்றது, தலைமகன் வரைவொடு வருதல் அறிந்தமை உணர நின்றது. உள்ளுறையால் தலைவனது காதல் மாண்பினைக் கூறுகின்றா ளாதலின், அவன் வரைவு துணிந்தமை கேட்டு யான் உயிர் வாழ்தல் கூடும் என்றாள். மாவினின்றும் தாமாக உதிர்ந்த மாவடுக்களைக் குறவர் ஆலிபோலத் தொகுத்துக்கொள்ளும் நாட்டவராதலின், என்னின் நீங்கித் தானாகச் சென்று வீழ்ந்த நெஞ்சினைப் பெரும்பேறாக ஏற்றுக்கொள்வர் என்பது உள்ளுறை. 214. சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழம் இருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற் பெருந்தே னிறாஅல் கீறு நாடன் பேரமர் மழைக்கண் கலிழத்தன் சீருடை நன்னாட்டுச் செல்லு மன்னாய். இது, தலைமகன் ஒருவழித் தணப்பல் என்று கூறியவதனை அவன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. பழைய உரை : பலவின்பழம் பிறர்க்குப் பயன்படாது கல்லளையில் வீழ் கின்றுழி அவ்விடத்து உளதாகிய தேனிறாலினையும் சிதைக்கும் என்றது, தன்னாற் பெற்ற நலம் எங்கள் இயற்கை நலத்தினையும் சிதைக்கின்றது என்பதாம். இது கேட்டுக் கடிதின் வரைவானாவது பயன். உரை : அன்னாய், மலைச்சாரலில் நின்ற பலாமரத்தினது கொழு விய துணர்களின் இடையே பழுத்த நறிய பழம் பெரிய கற்களின் பிளப்பிடை உளதாகிய அளையின்கண் வீழ்ந்த தாகப் பாறையிற் கட்டப்பட்ட தேனடை சிதைந்து தேன் சொரியும் நாடன், பெரியவாய் மதர்த்துக் குளிர்ந்த நின் னுடைய கண்கள் நீர் சொரியத் தன் விழுப்பம் அமைந்த நல்ல நாட்டுக்குச் செல்லுவானாயினன் என்றவாறு. சாரலிடத்தே கொழுவிய துணரிடையே விளைந்த நறுவிய பழம் யார்க்கும் பயன்படாவகையில் ஒழிந்தமை உணர்த் தற்கு இருங்கல் விடரளை வீழ்ந்தென என்றார். "மாச்சினைச் சிறந்த கோண்முதிர் நறும்பழம், விடரளை வீழ்ந்துக் காங்குச் சேணும் சென்றுக் கன்றே 1" எனப் பிறரும் கூறுதல் காண்க. ஏனை மரங்களிற் காணப்படும் தேனடையினும் மலைத் தேனடையில் தேன் மிக்கிருத்தல் பற்றிப் பெருந்தேன் எனப் பட்டது. பேரமர்க்கண் - மழைக்கண் என இயையும். மதர்த்துக் காதிற் குழையொடு பொரும் கண் என்பது பற்றிப் பேரமர்க் கண் என்றார் என்றலும் ஒன்று. சீர் - செல்வத்தால் உளதாகும் விழுப்பம். தலைமகன் சிறைப்புறத்தான் ஆயினமை அறிந்து அவன் கேட்குமாறு கூறுதலின், கவவிய கை சிறிது நெகிழினும் ஆற்றாத பெருமென்மையளாகிய நீ, கண்கள் நீர்சொரியப் பிரிவது நன்றன்று என்பாள், பேரமர் மழைக்கண் கலிழ என்றும், தான் உள்வழித் தன் உயிர் போல் உடனிருத்தற்குரிய நின்னைப் பிரிந்து தன்னூர்க்குச் செல்கின்றான் என்றற்குத் தன் சீருடை நன் னாட்டுக்குச் செல்லும் என்றும் கூறினாள். தலைவன் செல்லும் ஊரைச் சீருடை நன்னாடு என்று சிறப்பித்தாள், அவன் பிரிவால் தலைவி பசப்பும் மெலிவும் எய்திச் சீரும் நன்மையும் இழந்து வருந்துவள் என்பதை உள்ளுறைக்கண் கூறுதலின். பலவின் நறும்பழம் விடரளையில் வீழ்வது தேன் இறாலைச் சிதைக்கும் என்றதனால், தலைமகன் பிரிவு தலைமகளது மேனிநலம் சிதை விக்கும் என உள்ளுறை கொள்க. பழைய வுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதல் அறிக. 215. கட்டளை யன்ன மணிநிறத் தும்பி இட்டிய குயின்ற துறைவயிற் செலீஇயர் தட்டைத் தண்ணுமைப் பின்ன ரியவர் தீங்குழ லாம்பலி னினிய விமிரும் புதன்மலர் மாலையும் பிரிவோர் அதனினும் கொடிய செய்குவ ரன்னாய். இஃது இரவுக்குறி நயந்த தலைமகள் பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. உரை : அன்னாய், தட்டையும் தண்ணுமையுமாகிய கருவிகளின் பின் வாச்சியக்காரர் இசைக்கும் தீவிய குழலாகிய ஆம்ப லினும் இனியவாய்ப் பொன்னுரை கல்போலும் நீல மணி யின் நிறத்தையுடைய தும்பிகள் ஒலிக்கும் புதல்கள் மலரும் மாலைக்காலத்திற் பிரியாமையைக் கருதாது பிரிவோர் அம்மாலையினும் வருத்துவனவற்றைச் செய்வாராகலின், சிறியவாய் நெருங்கிய துறைக்கண் நீ செல்வாயாக என்றவாறு. பொன் உரைத்த கட்டளைக்கல் போல வரிகள் கிடந்த சிறகுகளை உடையவாதல் பற்றித் தும்பியைக் கட்டளை யன்ன தும்பி யென்றும், அக்கட்டளைக்கல்லின் நிறத்தினும் தும்பியின் நிறம் நீலம் கலந்துள்ளமை பற்றிக், கட்டளை யன்ன என்றதோடு ஒழியாது மணிநிறத் தும்பி என்றும் கூறினார். "அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி 1" என்றும், "நறுந்தா தாடிய தும்பி பசுங் கேழ்ப், பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் 2" என்றும், "காந்த ளூதிய மணிநிறத் தும்பி 3" என்றும் கூறுப பிறரும். "முதலும் சினையுமென் றாயிரு பொருட்கும், நுதலிய மரபின் உரியவை யுரிய 4" என்றதனால், கட்டளையுவமை தும்பிக்கும், மணியுவமை நிறத்துக்கும் உரிய வாக்கிக் கொள்க. தட்டை யாவது "மூங்கிலைக் கணுக்கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசைஉண்டாக ஒன்றிலே தட்டுவதோர் கருவி"5 இட்டிய என்றது சிறுமை உணர்த்தும் சொல்; "ஆகாறு அளவு இட்டிது ஆயினும் 6" என்றாற் போல. புணர்ந்தோர் பூ மகிழ்ந்தணியப் பிரிந்தோர் வருந்த வருத்தும் இயல்பிற்றாகலின், மாலைப்போது பிரிவுக்கு ஆகாமை தோன்ற, மாலையும் பிரிவோர் என்றும், நாம் நயந்து குறித்த இரவுக்குறி ஒழித்துப் பகற்குறி வேண்டி வந்துழி, நாம் கூடேமாயின், இரவின்கண் உறக்கமின்மை முதலியவற்றைச் செய்து வருத்துவர் என்பாள், அதனினும் கொடிய செய்குவர் என்றும் கூறினாள். தும்பி இமிரும் புதன்மலர் மாலையும் பிரிவோர் என்றது இன்பத்தை வெறுத்தல். 216. குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை நெடும்புதற் கானத்து மடப்பிடி யீன்ற நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின் பழந்தூங்கு கொழுநிழ லொளிக்கும் நாடற்குக் கொய்திடு தளிரின் வாடிநின் மெய்பிறி தாத லெவன்கொ லன்னாய். இது, வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறியது. பழைய உரை : புலியேற்றை பிடி யீன்ற குழவியைக் கொள்ள வேண்டிக் காலம் பார்த்து மறைந்திருக்கும் நாடன் என்றது, தன் வஞ்சனை யாலே நின் பெண்மையை வௌவுகின்றான் என்பதாம். உரை : அன்னாய், குறுகிய முன்கால்களையுடைய பெரிய புலி யின் கொலைத்தொழிலில் வல்ல ஆண், நெடிய புதர்கள் நிறைந்த கானத்தில் மடப்பம் பொருந்திய பிடியானை யீன்ற அசைந்த நடையினையுடைய கன்றினைக் கோடற்பொருட்டுப் பலாமரத்தின் பழங்கள் நாலுகின்ற கொழுவிய நிழலில் ஒளித்திருக்கும் நாடன்பொருட்டு, நீ கொய்திடப்பட்ட தளிர் போல் வாட்டமுற்று மேனி வேறுபடுதல் என்னையோ? கூறுக என்றவாறு. புலியின் ஆணை ஏற்றை என்றார்; "ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம், ஏற்றைக் கிளவி யுரித்தென மொழிப 1", "குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை, பூநுத லிரும்பிடி புலம்பத் தாக்கித், தாழ்நீர் நனந்தலைப் பெருங்களி றடூஉம் 1" என வருதல் காண்க. பின்கால்களினும் முன்கால் குறுகி யிருத்தல் பற்றிக் குறுங்கை எனப்பட்டது. "குறுங்கை யிரும்புலி பொரூஉம் நாட 2" எனப் பிறாண்டும் கூறுப. இளம்பிடியின் கன்று உடல் வளவிதாதலின், மடிப்பிடி யீன்ற குழவி என்று சிறப்பித்தார். யானையினத்துக்கு இயல்பாதல் தோன்ற நடுங்குநடைக் குழவி என்றார். நடுங்குதல் - அசைதல். பலவின் பழம் கருதி மடப்பிடி கன்றொடு வருமென எண்ணி அப்பலாவின் கொழுவிய நீழற்கண் புலி ஒடுங்குமென அறிக. கொய்திட்ட தளிர் மரத்திற் பிரிக்கப்பட்டமையால் பசை குன்றி வாடுதல் போல, தமரிற் பிரித்துத் தானும் வரையாது நீட்டித்துத் தங்குகின்றான் எனச் சிறைப்புறத்தானான தலைமகன் கேட்க உரைத்தலின், கொய்திடு தளிரின் வாடி என்றும், மெய் வேறுபட்டவழிப் பிறர் அலர் கூறிப் பழிப்ப ரென்பது தோன்ற மெய் பிறிதாதல் என்றும் தோழி கூறினாள். மெய்பிறிதாதல் என்றது உண்டியிற் குறைதல், உடம்புநனி சுருங்கல் முதலியனவாம். தான் வரைவு நீட்டித்தலால் நீ மெய் வேறுபட்டு வருந்துதலை அறிந்து விரைந்து போந்து வரை யானாய்த் தனக்கு வேண்டிய நலமே விரும்பி யொழுகுவான் ஒரு நன்மையும் புரியானாகலின், அவனை நினைந்து நிற்றலிற் பயனின்று என்பாள் எவன்கொல் என்றாள். புலியேற்றை மடப்பிடியின் கன்றினைக் கோடற்குப் பல வின் கொழுநிழற்கண் ஒளித்திருக்கும் என்றதனால், தலைமகன் நின் பெண்மைநலம் கவர்தலைக் கருதிக் களவே விரும்பி யொழுகுகின்றான் என உள்ளுறுத்து உரைத்தா ளாயிற்று. இது உவம மருங்கில் தோன்றும் துனியுறு கிளவி. பழைய வுரை காரர்க்கும் இதுவே கருத்தாதல் அறிக. "நாற்றமுந் தோற்றமும் 3" என்ற சூத்திரத்து, "செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினும், என்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ, அன்புதலை அடுத்த வன்புறைக் கண்ணும், என்புழி, "அன்புதலை அடுத்த வன்புறையாவது தலைவன் இன்றியமையான் என ஆற்றுவித்தல்" என்று கூறி, அதற்கு இதனை மேற்கோளாகக் காட்டுவர் இளம்பூரணர். 217. பெருவரை வேங்கைப் பொன்மருள் நறுவீ மானினப் பெருங்கிளை மேய லாரும் கானக நாடன் வரவுமிவண் மேனி பசப்ப தெவன்கொ லன்னாய். இது, வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சி உணர்ந்த தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது. பழைய உரை : இவண் என்றது இவ்விடத்து என்றவாறு. வேங்கைப் பூவை மானினம் ஆரும் என்றது. அவன் மனைப் பெருஞ்செல்வம் நின் கிளையாகிய நாங்களும் நின்னோடு நுகர்வேம் என்பதாம். உரை : அன்னாய், பெரிய மலைக்கண் நின்ற வேங்கை மரத்தின் பொன்போலும் நறுவிய பூக்களை மானினங்களின் பெரிய சுற்றம் பலவும் மேய்ந்துண்ணும் கானத்தை யுடைய நாடன் இவ்விடத்து வந்தானாகவும், நீ நின் மேனி பசலை பாய்ந்து நிற்றல் என்னை? என்றவாறு. பொன்மருள் நறுவீ என்றவிடத்து மருள் உவமஉருபு. "வேங்கைப் பொன்மருள் நறுவீ கல்மிசைத் தாஅம் 1" எனப் பிறரும் கூறுதல் காண்க. மானினம் என்றதனோடு பெருங்கிளை யென மிகுத்தது, மான்திரளே யன்றி ஏனை அதன் இனமாய விலங்குகளையும் அகப்படுத்து நின்றது. "பசித்த ஆயத்துப் பயனிரை தருமார், பூவாட் கோவலர் கொய்துகட் டழித்த வேங்கை 2" என்பது காண்க. மேயலாரும் என்றது ஒரு சொல் லாய் மேயும் என்பது பட வந்தது. வரவும்: உம்மீற்று விரைவுப் பொருட்கண் வந்த வினையெச்சம். இவண் என்னாது, இவள் என்று கொள்ளின், தோழி செவிலிக்கு உரைப்பதாய் அகப் பொருள் நெறிக்கு மாறுபடும் என அறிக. நாடன் வரின் மகிழ்ந்து உவக்கும் பான்மையை ஆகிய நீ பசந்து மெலிதல் ஆகாது என்பாள், மேனி பசப்பது எவன் கொல் என்றாள். இதனால் தலைவி ஆற்றாளாயினமையும், கானக நாடன் வரவும், இவண் என்றதனால் தலைவன் வந்தமையும் கூறினாளாம். மேனி பசப்பதெவன் என்றது பசலைபாய்தல். வரவும் என்றது அவன் வாராத காலத்தின் நீட்டம் உணர நின்றது. வேங்கையின் பொன் மருள் பூவினை மானினத்தின் பெருங் கிளை மேயும் என்றது, தலைமகன் வரவால் வரைவு மாட்சிமைப் படுதல் கண்டு நின் கிளையேமாகிய யாங்கள் இன்புறாநின்றேம் எனத் தோழி கூறியவாறு. இஃது இனிதுறு கிளவி. 218. நுண்ணேர் புருவத்த கண்ணு மாடும் மயிர்வார் முன்கை வளையுஞ் செறூஉம் களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி எழுதரு மழையிற் குழுமும் பெருங்கன் னாடன் வருங்கொ லன்னாய். இது, தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, "இஃது என்னாங் கொல்" என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக் கண்டு "கடிதின் வந்து வரைவான்" எனச் சொல்லியது. பழைய உரை : தன்னாற் கொள்ளப்பட்ட களிறு தப்பினதற்குப் புலி கதம் சிறந்து குழுமும் என்றது, நினைத்தவற்றிற்குக் குறை வரின் அதற்கு வெகுண்டு முடிப்பான் என்றவாறு. உரை : அன்னாய், நுண்ணியவாய் அழகு பொருந்திய என் புருவத்தையுடைய கண் துடித்தலினாலும், மயிர் ஒழுகிய முன்கைக்கண் அணிந்த வளைகள் நெகிழாது செறிதலி னாலும், களிற்றினைக் கொள்ளுமிடத்து வழுவியவதனால் சினம் மிக்கு எழுந்த புலி, எழுகின்ற மேகங்களைப் போல முழங்கும் பெரிய மலைநாடன் வருவா னாகலின், நீ வருந்துதல் ஒழிவாயாக என்றவாறு. மகளிர்க்கு இடக்கண் துடித்தல் நன்னிமித்த மாகலின், கண்ணும் ஆடும் என்றார்; "பல்லியும் பாங்கொத்து இசைத்தன, நல்லெழி லுண்கணும் ஆடுமா லிடனே 1" என்றும், "பூங்கண் இடமாடுங் கனவுந் திருந்தின, ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப, வீங்கிய மென்றோள் கவினிப் பிணிதீரப், பாங்கத்துப் பல்லி படும் 2" என்றும் சான்றோர் கூறுதல் காண்க. கண்ணு றுப்புப் புருவத்தையும் உளப்படுத்தி நிற்றலின் புருவத்த கண் என்றார். கண்ணாடுதலாவது, புருவம் துடித்தல். வளைசெறிதலும் நன்னிமித்தமே யாம்; "சுரிவளை பொலிந்த தோளும் செற்றும், வருவர்கொல் வாழி தோழி 3" எனச் சான்றோர் உரைப்பது காண்க. வருங்கொல் என்புழிக் கொல் என்பது அசைநிலை. களிறு கோடலிற் பிழைபட்ட புலி சினஞ்சிறந்து முழங்கும் என்பது, "களிற்றிரை பிழைத்தலின் கயவாய் வேங்கை, காய்சினம் சிறந்து குழுமலின் வெரீஇ, இரும் பிடி யிரியும் 4" என்பதனாலும் அறிக. தமர் வரைவு மறுத்தமை அறிந்து கண் கலுழ்ந்து மேனி மெலிந்து ஆற்றாளாகிய தலைமகட்கு, உள்ளுறையால் தலைவ னது ஆண்மை நலம் கூறி ஆற்றுவிக்கின்ற தோழி, தன் கண் துடித்துக் காட்டினமையும், வளை செறிந்தமையும் ஆகிய நன் நிமித்தம் தோன்றுவது கூறுவாள், கண்ணும் ஆடும், வளையும் செறூஉம் என்றும், இவ்வாற்றால் தலைமகன் போந்து வரைந்து கோடல் ஒருதலை என்பாள் பெருங்கல் நாடன் வரும் என்றும் கூறினாள். இனி, "நாற்றமும் தோற்றமும் 5" என்ற சூத்திரத்து, "அவன் வரைவு மறுப்பினும்" என்புழி இதனைக் காட்டி, இது தமர் வரைவு மறுத்துழி ஆற்றாத தலைவிக்குத் தோழி தீய குறி நீங்கித் தனக்கு நற்குறி செய்யக் கண்டு 'கடிதின் வரைவர்' எனக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். 219. கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ இருங்கல் வியலறை வரிப்பத் தாஅம் நன்மலை நாடன் பிரிந்தென ஒண்ணுதல் பசப்ப தெவன்கொ லன்னாய். இது, வரைவிடைப் பிரிந்த அணுமைக்கண்ணே ஆற்றா ளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. பழைய உரை : வேங்கைமலர் அகலறையிலே பரக்கும் நாடன் என்றது, நம் பொல்லா ஒழுக்கம் மறைய நல்லொழுக்கம் நமக்கு உதவும் நன்மையை யுடையான் என்பதாம். உரை : அன்னாய், கரிய காலினையுடைய வேங்கையின் கரிய புறவிதழையுடைய ஒள்ளிய பூக்கள் பெரிய மலையின் அகன்ற பக்கமலையின்கண் உதிர்ந்து பரந்து அழகு செய்யும் நல்ல மலைநாட்டினையுடையவன் பிரிந்தானாக, பிரிந்த அணிமைக் கண்ணே நீ ஒள்ளிய நுதல் பசந்து காட்டுதல் என்னையோ? கூறுக என்றவாறு. வேங்கைமரத்தைக் கருங்கால் வேங்கை என்பது பெரு வழக்கு, "சுரும்புண விரிந்த கருங்கால் வேங்கை 1" என்பர். தகடு, இதழ்; "கருந்தகட்டு உளைப்பூ மருது 2" என்பதனால் அறிக. "அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மாத்தகட்டு ஒள்வீ 3" எனப் பிறாண்டும் இவரே கூறுதல் காண்க. வியலறை, அகன்ற கற்பாறை. வரைவிடைவைத்துப் பிரிந்தோன் தன் செய்வினை முற்றி வருதற்குள், அவன் தெளித்த சொல்லைத் தேறி இராது பிரிவுள்ளி மேனி வேறுபடுதல் நன்றன்று என்பாள், ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் என்றாள். நன்று, புறத்தார்க்குப் புலனாகி அல ராகாமை. நுதல் பசப்ப என்றது, பசலைபாய்தல். வேங்கையின் மலர் வியலறைக்கண் பரக்கும் என்றது, நீ பசப்பது புறத்தார்க்குப் புலனாகி ஊரெங்கும் அலராய் விடும் எனத் தோழி உள்ளுறுத்து உரைத்தவாறு காண்க. பழைய வுரைகாரர், இவ்வுள்ளுறையைத் தலைமகன் மேலேற்றி, வேங்கையின் ஒள்வீ வியலறைக்கண் பரப்பது போலத் தான் நின்னை வரையுமாற்றால் தன் பெருமை நலம் ஊரறியச் செய்வன் என்ற கருத்துப்பட உரைத்தார். இது வரைவிடை வைத்துப் பிரிந்துழித் தலைவி ஆற்றாமை கண்டு தோழி கூறியது; இது குறிஞ்சியுட் பாலை என்பர் நச்சினார்க்கினியர் 1. 220. அலங்குமழை பொழிந்த வகன்க ணருவி ஆடுகழை யடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவள் மயங்கிதழ் மழைக்கண் கலிழு மன்னாய். இது நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத் தொடு நின்றது. பழைய உரை : அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி ஆடுகழை அடுக்கத்து இழிதரும் நாடன் என்றது, இவள்மேல் வைத்த தண்ணளி நம்மிடத்தும் வந்து இடையறாது ஒழுகும் என்றவாறு. உரை : அன்னாய், அசைகின்ற மழை பொழிய வந்த அகன்ற இடத்தையுடைய அருவி, ஒலிக்கின்ற மூங்கில் வளர்ந்த மலைப் பக்கத்தே ஒழுகும் நாடனுடைய பெரிய மலைபோன்ற, திரு வீற்றிருந்த வெற்றி பொருந்திய அகன்ற மார்பை முயங்காது கழிந்த நாள்களில் அதனையே நினைந்து இவள் இணை யொத்த மலரிதழ் போலும் குளிர்ந்த கண்கள் நீர் சொரியா நிற்கும்காண் என்றவாறு. மழைமுகில் காற்றில் மிதந்து வருவதாகலின், அலங்குமழை எனப்பட்டது. பொழிந்த என்னும் பெயரெஞ்சு கிளவி காரியத் தின் மேனின்றது. பெருவரை யன்ன மார்பு, திருவிறல் மார்பு, வியன்மார்பு என இயையும். உயர்வு, அகலம், திண்மை, முதலிய பேரியல்புகளால் சிறந்த மலைகளை விறன்மலை 2, விறல் வரை 3 என்பது பற்றி, அவ்வியல்புகளால் ஒத்த தலைமகன் மார்பினைப் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு என்று சிறப்பித்தார்; தலைமக்கள் மார்பு திருவீற்றிருக்கும் சிறப்புக் கருதி இவ்வாறு கூறினார் என்றலும் ஒன்று. திருத்தக்கதேவர், "திருவீற் றிருந்த மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள் 1" என்பது காண்க. மயங் கிதழ், இணையொத்த மலர்இதழ் போன்ற கண்ணிமை மேற்று. "மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே 2" என்று பிற சான்றோரும் கூறுவர். தலைமகனோடு தொடர்புண்டாய திறத்தைச் சுட்டி, அகன் கண் அருவி இழிதரும் நாடன் என்றும், அவற்கே தலைவி உரியளாய்க் களவொழுக்கம் பூண்டமை விளங்க, முயங்காது கழிந்த நாள் இவள் கண் கலிழும் என்றும் கூறினாள். முயங்குந்தோறும் புத்தின்பம் பயந்து, பாயலாய்ப் பயன் நல்கிய சாயல் மார்பாகலின், வியன்மார்பு என்றாள். நாடனது வியன் மார்பு முயங்காது கழியும் நாள் பேதுற்றுக் கண் கலுழும் இவள், நொதுமலர் வரைந்தவழி உயிர் வாழாள் என்பதுபட நிற்றலின், இஃது உண்மை செப்பல். மழைபொழியத் தோன்றிய அகன்ற அருவிகள் அடுக்கத் திடை இழியும் நாடன் என்றது, தலைவன் புரிந்த தலையளியால் உயிர் வாழ்கின்றாள் என்றும், எனவே நொதுமலர்க்கு வரைவுடன் படின் உயிர்வாழாள் என்றும் உள்ளுறுத்தவாறு. இஃது, எளித்தல் ஏத்தல் என்ற அறத்தொடுநிலைப் பகுதி களுள் உண்மைசெப்பலாம் என்பர் இளம்பூரணர். 3 "நாற்றமும் தோற்றமும்" என்ற சூத்திரத்து "அவன் வரைவு மறுப்பினும் 4" என்றதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 23. அம்மவாழிப் பத்து இதன்கண் வரும் பாட்டுக்கள் பத்தும் "அம்ம வாழி" என்று தொடங்கும் சிறப்பு நோக்கி, இஃது இப்பெயர்த்தாயிற்று. 221.அம்ம வாழி தோழி காதலர் பாவை யன்னவென் னாய்கவின் தொலைய நன்மா மேனி பசப்பச் செல்வ லென்பதம் மலைகெழு நாட்டே. இஃது, ஒருவழித் தணந்து வரைதற்கு வேண்டுவன முடித்து வருவல் என்று தலைமகன் கூறக் கேட்ட தலைமகள் அவன் சிறைப் புறத்தானாய்க் கேட்பத் தோழிக்குச் சொல்லியது. பழைய உரை : கடிதின் வரைதல் பயன். உரை : தோழி, கேட்பாயாக: பாவை போலும் என் அழகு கெடவும், நல்ல மாமைநிறம் கொண்ட என் மேனி பசலை பாயவும், காதலர் தம் மலை பொருந்திய நாட்டிற்குச் செல் வேன் என்று கூறுகின்றனர்; ஆகலின் யாம் செயற்பாலது என் என்றவாறு. அம்ம வாழி தோழி யென்றது, தலைவியது ஆற்றாமை தோன்ற நின்றது. பாவை யன்ன என் ஆய்கவின் என்பது மகளிர் உருநலம் பற்றி வழங்கும் வழக்கு. தன் கவினையும் மேனியையும் விதந்தோதியது, அவற்றின் தொலைவு குறித்து வருந்துகின்றமையின், மாயாத என் ஆய்கவின் மாய்ந்து கெடவும், கெடாத என் மேனி பசலை பாய்ந்து கெடவும் பிரியத் துணிந்தார் என்பாள், பாவை யன்ன என் ஆய்கவின் தொலைய என்றாள். பாவையின் இயல்பினைக் "கால்பொருது இடிப்பினும் கதழுறை கடுகினும், உருமுடன்று எறியினும் ஊறுபல தோன்றினும், பெருநிலம் கிளரினும் திருநல வுருவின், மாயா இயற்கைப் பாவை 1" என்பதனால் அறிக. காதலர் தம்மால் அன்பு செய்யப்பட்டார். வருந்துவனவற்றைச் செய்யாராக, இவர் செய்யத் துணிந்தார் என்பாள், காதலர் என்று பன்மையிலும் செல்வல் என்ப என்று ஒருமையிலும், சென்ற விடத்துக் கவின் தொலைதலும் மேனி பசத்தலும் ஒருதலையாகலின், யான் ஆற்றகில்லேன் என்றும் கூறினாள். "இட்டுப் பிரிவிரங்கினும் 2" என்பதற்கு இதனை எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர். 222. அம்ம வாழி தோழி நம்மூர் நளிந்துவந் துறையு நறுந்தண் மார்பன் இன்னினி வாரா மாறுகொல் சின்னிரை யோதியென் னுதல்பசப் பதுவே இது, குறி இரண்டன்கண்ணும் வந்து ஒழுகும் தலைமகன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழி நின் நுதல் பசத்தற்குக் காரணம் என்னை என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக: நம்மூர்க்கண் செறிந்து வந்துறையும் நறிய குளிர்ந்த மார்பினையுடைய தலைமகன் இப்பொழுது வாராமையால், சிலவாய் நிரையுற்ற கூந்தலையுடைய என் நுதல் பசலை பாய்வதாயிற்று என்றவாறு. நளிந்து, செறிவுப் பொருளில் வரும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம். "நளிந்துபலர் வழங்காச் செப்பம் துணியின் 1" என்றும், "நளிந்தனை வருதல் உடன்றன ளாகி 2" என்றும் வழங்குவர். இனி: காலப்பெயர்; "இனியணி யென்னும் காலையும் இடனும் 3" என்று ஆசிரியர் குறிப்பது காண்க. இன்னினி என்பது "தம்மியல் கிளப்பின் தம்முன் தாம் வரூஉம் எண்ணின் தொகுதி 4" போல்வதோர் மரூஉ முடிபு. இனி இனி என்பது, "வல்லெழுத்து மிகினு மான மில்லை, ஒல்வழி யறிதல் வழக்கத் தான 5" என்பதனுள், "வழக்கத்தான" என்றதனால் இகரம் கெடுத்து, "குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டல் 6" என்ற தனால் இன்னினி என முடித்துக் காட்டலும் ஒன்று. மாறு: ஏதுப் பொருள் படுவதோர் இடைச்சொல் என்பர் 7. இருவகைக் குறிக்கண்ணும் வந்து கூடி இன்பம் துய்ப்பித் தானாகலின், நளிந்து வந்து உறையும் நறுந்தண் மார்பன் என்றும், இப்பெற்றியோன் இடையிட்டு வருதலோடு இது போழ்து போந்து சிறைப்புறத்தா னாதலை அறிந்து அவற்குத் தன் ஆற்றாமை உணர்த்துவாள், இன்னினி வாரா மாறுகொல் என்றும் கூறினாள். சின்னிரை யோதி என்பதனை விளியாக் கினுமாம். நுதல் பசப்பது என்றது பசலைபாய்தல். 223. அம்ம வாழி தோழி நம்மலை வரையா மிழியக் கோட னீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும் தண்பனி வடந்தை யற்சிரம் முந்துவந் தனர்நங் காத லோரே. இது, வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத் திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக: நம் மலைப்பக்கத்தே நீர் மிக்கு ஒழுக, செங்காந்தளின் நீண்ட இதழ்கள் மலர, காதலரைப் பிரிந்த மகளிரும் ஆடவரும் செயலற்று வருந்தப் போந்து வருத்தும் மிக்க குளிர்ச்சியினையுடைய வாடைக்காற்று அலைக்கும் முன்பனிப்பருவம் வருதற்கு முன்பே நம் காதலர் வந்தனர்; ஆகலின், யாம் அவ்வாடையால் துன்பம் எய்துவே மல்லேம் என்றவாறு. ஆம், நீர். கோடல், செங்காந்தள். வடந்தை, வாடைக்காற்று; "வடந்தை தூக்கும் வருபனி யற்சிரம் 1" என்று பிறரும் கூறுதல் காண்க. அற்சிரம் - முன்பனி. இஃது அச்சிரம் எனவும் வழங்கும்; "அரிதின் தோன்றும் அச்சிரக் காலையும் 2" எனவரும். அக்காலத்தில் காதலர்ப் பிரிந்த மகளிர் கையற்று வருந்துவர் என்பது, "அகன்றுறை மகளிர் அணிதுறந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று 3" என்பதனால் அறிக. வடந்தை அற்சிரம் செய்யும் வருத்தம் தலைமகட்கு எய்தாது என்பாள், முந்து வந்தனர் நம் காதலோரே என்றாள். இனி, "நாற்றமும் தோற்றமும் 4" என்ற சூத்திரத்துப் "பாங்குற வந்த நாலெட்டு வகையும்" என்றவிடத்து "வகை" யாற் கொள் வன எனக் கொண்டு "இது வரைவிடைப் பிரிந்தோன் குறித்த பருவத்திற்கு முன் வருகின்றமை அறிந்த தோழி தலைவிக்குக் கூறியது" என்பர் நச்சினார்க்கினியர். 224. அம்ம வாழி தோழி நம்மலை மணிநிறங் கொண்ட மாமலை வெற்பின் துணிநீ ரருவி நம்மோ டாடல் எளிய மன்னா லவர்க்கினி அரிய வாகுதன் மருண்டனென் யானே. இஃது, இச்செறிப்புணர்ந்த தலைமகள் ஆற்றாளாய்த் தலை மகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி! கேட்பாயாக: நம்முடைய மலையாகிய நீலமணி யின் நிறத்தையுடைய பக்கமலையின்கண் ஒழுகும் தெளிந்த நீரினையுடைய அருவியில் பண்டெல்லாம் நம்மோடு கூடி யாடுதல் அவர்க்கு எளிதாயிருந்தது; இப்பொழுது அஃது அரிதாகுதல் குறித்து யான் மறுகுகின்றேன் என்றவாறு. இனி என்றதற் கேற்பப் பண்டெல்லாம் என்பது வருவிக்கப் பட்டது. துணிநீர் - தெளிந்தநீர்; "துணிநீர் இலஞ்சி 1" என்றாற் போல. அருவியாடுதல் எளிதாயிருந்தது ஒழிந்து அரிதாயிற்று என்பதுபட நிற்றலின், மன் ஒழியிசை. "ஆர்கலி வெற்பன் மார்பு புணையாகக், கோடுயர் நெடுவரைக் கவாஅன் பகலே, பாடின் னருவி ஆடுதல் இனிதே 2" எனப் பிறரும் அருவியாடல் விருப்ப முணர்த்தியவாறு அறிக. அருவியாடல் முதலிய செயல்களால் தம் ஒழுக்கம் தமரால் உணரப்பட்டமையும், அதனால் அவர் இற்செறித்தமையும் குறிப்பா லுணர்த்துவாள், இனி அரிய வாகுதல் மருண்டனென் யானே என்று கூறினாள். தலைமகன் சிறைப்புறத்தா னாகலின், ஆடல் எளியமன்னால் அவர்க்கு என்றாள். இது முட்டுவயிற் கழறல். 225. அம்ம வாழி தோழி பைஞ்சுனைப் பாசடை நிவந்த பனிமலர்க் குவளை உள்ளகங் கமழுங் கூந்தன் மெல்லியல் ஏர்திக ழொண்ணுதல் பசத்தல் ஓரார் கொல்லோ காத லோரே. இது, மெலிவு கூறி வரைவுகடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றா ளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது. உரை : தோழி! கேட்பாயாக: பசிய சுனைக்கண் பசுமையான இலைகளினிடையே உயர்ந்து விளங்கும் குளிர்ந்த மலராகிய குவளையின் மணம் உள்ளே கமழும் கூந்தலும் மெல்லிய இயலுமுடைய நினது அழகு திகழும் ஒள்ளிய நுதல் பசலை பாய்ந்து ஒளி கெடுதலை நம் காதலர் அறியார்கொல்லோ? நன்கு அறிவாராகலின் நீட்டியாது விரையவருவர் காண் என்றவாறு. மகளிர் கூந்தலினுள் மணம் எழும் என்றும், அது குவளைப் பூவின் மணம் போல்வதென்றும் கூறுவர். "குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை, வண்டுபடு வான்போது கமழும், அஞ்சி லோதி 1" எனவும், "குவளைக் குறுந்தாள் நாண்மலர் நாறும், நறு மென் கூந்தல் 2" எனவும் சான்றோர் ஓதுமாறு காண்க. மெல் லியல்: விளி. கொல்: அசைநிலை. ஓகாரம்: எதிர்மறை. தலைவன் வரைவு நீட்டித்தமை கண்டு ஆற்றாமையால் தலைவி கூந்தல் அவிழ்ந்து உடம்பு நனிசுருங்கி மெலிந்து காட்டினமை தோன்ற, குவளை உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல் என்றும், ஒளி திகழும் நுதல் பசந்தமைக்கு வருந்து வாளாய், ஏர்திகழ் ஒண்ணுதல் பசத்தல் என்றும், நினது ஆற்றாமை மிக்க இந்நிலையினைத் தலைவர் அறியாரல்லர், நன்கு அறிவர் என்பாள், ஓரார்கொல்லோ என்றும், அறிவராகலின் அவர் சிறிதும் தாழாது வருவர், அத்துணைப் பெருங்காத லுடையார் என்பாள், காதலோர் என்றும் தோழி கூறினாள். மெல்லியல் என்றது உடம்பு நனி சுருங்கல். ஒண்ணுதல் பசத்தல் என்றது பசலை பாய்தல். ஓரார் கொன்னங் காதலோர் என்ற பாடத்துக்கு அறியார் போலும், அறிவராயின் நீட்டியாது வருவர்காண் நம் காதலர் என வுரைக்க. அதனால் தலைமகன்பால் தோழி அறியாமை காட்டி வழுப்படுமாறு அறிக. 226. அம்ம வாழி தோழி நம்மலை நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள் கொங்குண் வண்டிற் பெயர்புபுற மாறிநின் வன்புடை விறற்கவின் கொண்ட அன்பி லாளன் வந்தன னினியே. இது, வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக: நம்முடைய மலையிடத்து நறிய குளிர்ந்த பக்க மலையில் மண நாறும் பூவின் குலைகளை யுடைய காந்தளின் தேனை யுண்ணும் வண்டைப் போல் நம்மின் நீங்கி நின் வலிமையினையுடைய மிக்குற்ற அழகினைக் கவர்ந்து கொண்ட அன்பிலியாகிய தலைமகன் இப்பொழுது வந்தனன், காண்பாயாக என்றவாறு. சிலம்பு - மலை : ஈண்டு மலைச்சிலம்பு என்றதனால், ஒரு மலையை யடுத்துச் சேர இருக்கும் பக்கமலை யெனக் கொள்க. காந்தள், மலைநிலத்துக்குச் சிறப்பாக உரியதாகலின் சிலம்பின் நாறு குலைக்காந்தள் என்றார். காந்தட்பூ குலைகுலையாக இருப்பது பற்றிக் குலைக்காந்தள் என்பது பெருவழக்கு. "சிலம் புடன் கமழும் அலங்குகுலைக் காந்தள் 1" "காந்தள், கமழ்குலை யவிழ்ந்த நயவருஞ் சாரல் 2" என வருவன காண்க. பூவில் தேனை உண்டபின் வேறு பூத்தேர்ந்து நீங்குதல் வண்டின் இயல்பு 3 விறற்கவின் - ஈண்டு மிகுதிப்பொருட்டு. குலைகளாகிய பூவினையுடைய காந்தளின் தேனை உண்ட வண்டைப் போலத் தலைவனும் நாணம் சாயல் முதலிய பெண்மைக் குணங்களையுடைய தலைவியின் நலனை நுகர்ந்து, கொங்குண்டபின் அவ்வண்டு அக்காந்தளைப் பிரிந்து புறமாறு தல் போல் அவளைப் பிரிந்து நீட்டித்தான் என நிரனிறையாகக் கொள்க. புறம் மாறுதல் - இடம் பெயர்தல். புறமாறி என்றது, தலைவன்பாற் பரத்தமைபட உரைத்தவாறு. தலைவன் பிரிந்த விடத்துத் தலைவி தன் ஆற்றாமை ஏதுவாக உடம்பு மெலிந்து மேனிநலம் இழந்தாளாகலின், அதுபற்றி இரங்குவாள், வன்புடை விறற்கவின் என்றும், தலைமகன் அதனைக் கருதாது பிரிந்தும் நீட்டித்தும் வந்தமையின் அவனை அன்பிலாளன் என்றும் கூறினாள். "ஒன்றித் தோன்றும் தோழி மேன" என்றத னால், இது தோழி அழிவில் கூட்டத்து முனிவு மெய்ந்நிறுத்தல். 227. அம்ம வாழி தோழி நாளும் நன்னுதல் பசப்பவு நறுந்தோண் ஞெகிழவும் ஆற்றலம் யாமென மதிப்பக் கூறி நப்பிரிந் துறைந்தோர் மன்றநீ விட்டனை யோவவ ருற்ற சூளே. இஃது, ஒருவழித் தணந்து வந்த தலைமகன் சிறைப் புறத் தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக: நும்மைப் பிரிந்து தனித்துறைதல் யாம் ஆற்றேம் என நம் மனங்கொளச் சொல்லிப் பின்னர் நாடோறும் நம்முடைய நல்ல நுதல் பசப்பெய்தவும், நறிய தோள் மெலிவெய்தவும் நம்மைப் பிரிந்து நீட்டித்து வந்தோர் தெளிவாக அன்பில ராதலின், அவர் நம்மோடு உற்ற சூளினை நீ கொள்ளாதொழிந்தனையோ? கூறுக என்றவாறு. என்றது, அச்சூள் கொள்ளற்பால தன்று என்பதாம். பிரிவாற்றாமையால் உளவாகும் மெலிவினைப் புலப் படுத்தற்கண் நுதலும் தோளும் சிறந்து நிற்றலின் அவற்றை எடுத்தோதினார். "மென்றோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும், பொன்போல் விறற்கவின் தொலைத்த, குன்ற நாடன் 1" எனப் பிறாண்டும் உரைத்தல் காண்க. பசப்பவும் ஞெகிழவும் என அடுக்கிநின்ற எச்சவினைகள் பிரிந்து என்பதனோடு முடிந்தன. மதிப்பக் கூறல், மனங்கொளச் சொல்லுதல். ஆற்றலம் யாம் என்றது, தலைமகன் கூற்றினைக் கொண்டெடுத்து மொழிந்தது. இனி, ஆற்றலம் யாம் என்ற இதனைத் தோழி கூற்றாக வைத்துத் தமது கூற்றினையே எடுத்தோதியதாகக் கொள்ளலும் ஒன்று. அப்பொருட்குத் தொக்கு நின்ற சிறப்பும்மையை விரித்துக் கொள்க. தலைவன் பிரிந்தவிடத்துத் தலைமகள் வேறுபடுதல், "நன்னு தல் பசப்பவும், பெருந்தோள் நெகிழவும், உண்ணா வுயக்கமொடு உயிர்செலச் சாஅய், இன்ன மாகவும் இங்குநத் துறந்தோர், அறவ ரல்லர் 1" எனப் பிறரும் கூறுமாற்றா னறிக. தம்மாட்டு அன்பு செய்தார்க் குளவாகும் பசப்பும் மெலிவுங் கருதாது பிரிவோர் அறவரல்லர் என்பாள், குறிப்பால் மன்ற என்றும், அப்பெற்றி யோர் தெளித்த சூளினைத் தேறி யிருத்தலில் பயனின்று ஆகலின், விட்டனையோ அவர் உற்ற சூளே என்றும் கூறினாள். "நீவிர் வருந்த யாம் பிரியேம், பிரியின் ஆற்றேம்" என்று கூறிப் பின்னர்ப் பிரிந்து சென்றதே யன்றிப் பிரிவாற்றி உறைந்தோர் பொய்யர் ஆகலின், அவர் செய்யும் சூளுறவும் மெய் யெனக் கோடற்பாற்று அன்று என்றற்கு மன்ற விட்டனையோ என்றாள். 228. அம்ம வாழி தோழி நம்மூர் நிரந்திலங் கருவிய நெடுமலை நாடன் இரந்து குறையுறாஅன் பெயரின் என்னா வதுகொனம் மின்னுயிர் நிலையே. இது, தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி அறத்தொடு நின்றது. பழைய உரை : நிரந்து இலங்கு அருவிய நெடுமலை நாடன் என்றது, சேர்ந் தாருடன் இடையறாத நட்பையுடையன் என்றவாறு. உரை : தோழி, கேட்பாயாக: இடையறவு படாது ஒழுகும் அருவிகளையுடைய நெடிய மலைநாடன் நம்மூர்க்கண் வந்து நம் தமர்பால் வேண்டிய குறை பெறானாய் மீள்வானாயின், நம்முடைய இனிய உயிர் நிலைபெறுவது எவ்வாறாம் என்ற வாறு. நிரந்திலங்குதல் - இடையறாது ஒழுகுதல்; "நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் 1" என்றாற்போல. அருவிக்கு இலங்குதல் நீர் ஒழுக்கம் என அறிக. "இலங்கு வெள்ளருவி 2" எனவும், "வாளிலங் கருவி தாஅய் 3" எனவும் வரும். அருவிய, பெயரெச்சக்குறிப்பு. குறை, இன்றி அமையாத காரியம். உறுதல் - ஈண்டுப் பெறுதல் என்னும் பொருட்டு. நம் இனிய உயிர் நிற்றற்குக் காரணம் மலை நாடனது நட்பாகலின், அவன் நம்மைப் பெறாது பெயரின் அவன் நட்பை யிழந்து நாம் உயிர் வாழ்தல் கூடாது என்பாள், என்னாவதுகொல் நம் இன்னுயிர்நிலை என்றாள். இவ்வாறு வருத்தம் மிக்க வழித் தலைவி, "இன்னும் வாரா ராயின், என்னாம் தோழிநம் இன்னுயிர் நிலையே 4" என்பது உண்மையின், ஈண்டுத் தோழி கூறினாள். உடம்பின்கண் உயிர் வேற்றுமையின்றி அதன்வழி நின்று அதனால் வரும் துன்பங்களை நுகர்ந்தவிடத்தும் வெறாது உடனிருந்து இன்பம் நல்கும் பண்பு நோக்கி இன்னுயிர் என்றாள். "துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் 5" என்று சான்றோர் கூறுதல் காண்க. நிரந்து என்பதற்கு மேவி என்ற பொருள் கொள்ளின், நம்மூர்க்கண் மேவி விளங்கும் அருவிகளையுடைய நெடுமலை நாடன் என்பது பொருளாம். ஆகவே, நின்மேல் வைத்த தண்ணளி யால் இவ்வூர்க்கட் போந்து ஒழுகிய தலைமகன் என அவனைக் குறிப்பாற் சிறப்பித்தாளாம். நிரந்து, மேவியென்னும் பொருட் டாதல், "விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் 1" என்பதற்கு ஆசிரியர் மணக் குடவர் கூறிய உரையான் அறிக. 229. அம்ம வாழி தோழி நாமழப் பன்னாள் பிரிந்த வறனி லாளன் வந்தன னோமற் றிரவிற் பொன்போல் விறற்கவின் கொள்ளுநின் னுதலே. இது, வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டுத் தலைமகட்கு எய்திய கவினைத் தோழி தான் அறியாதாள் போன்று அவளை வினாயது. உரை : தோழி, இதனைக் கேட்பாயாக: நாம் புலம்பி அழ அதனை நினையாது பன்னாட்காறும் பிரிந்துறைந்த அற னில்லா னாகிய தலைமகன் வந்தான்கொல்லோ, நின் நுதல் இராக்காலத்தே பொன்போலச் செறிந்த அழகினைக் கொள்ளுவதாயிற் றாகலான் என்றவாறு. அறனிலாளன் - அறனின்மையை ஆள்பவன். அறவோர்பாற் காணப்படும் செந்தண்மைக் குரிய சொல்லும் செயலும் இல் லாரை அறனிலாளர் என்ப. களவின்கண் "திருநுதற் குறுமகள்" ஒருத்தியின் "அணிநலம் வௌவிய" ஒருவன், பின்பு, அவளைக் கைவிட்டு யான் அறியேன் என்று சூள்செய்து கெட்டானாக, அவனைச் சான்றோர், "அறனிலாளன் 2" என்று வெறுத்துக் கூறியது காண்க. அகப்பொருள் நெறிக்கண், ஒரோவழிச் செவிலி யும் தோழியும் தலைமகளும் தலைவனை அறனிலாளன் எனப் பழித்தல் உண்டு. உடன்போக்கின்கண், தலைமகளை வளர்த் தெடுத்த தன்னை அறியாது தலைமகன் கொண்டு சென்றது அறனின்மை என்பது பற்றி, "அறனி லாள னொடு இறந்தனள் 3" என்றும், "அறனி லாளன் தோண்ட 4" என்றும் செவிலி கூறுவள். களவினால் தன்னை இன்றி அமையாளாகிய தலைவி வருந்தப் பிரிந்தமை குறித்து "அறனிலாளர் கண்ட பொழுதின் 5" என்றும், "அறனிலாளன் புகழ் 6" என்றும் கூறுப. ஓகாரம் வினா. தன்னைக் காதலித்தார் புலம்புற்று வருந்தப் பிரிதலும், பிரிந்து நீட்டித்தலும் காதலர்க்கு அறமாகா வாகலின், அவற்றைச் செய்தமை குறித்துத் தலைமகனை அறனிலாளன் என்றாள். "வருதும் என்ற நாளும் பொய்த்தன, வரியே ருண்கண் நீரும் நில்லா, தண்கார்க் கீன்ற பைங்கொடி முல்லை, வைவாய் வான்முகை யவிழ்ந்த கோதை, பெய்வனப் பிழந்த கதுப்பு முள்ளார், அருள்கண் மாறலோ மாறுக வந்தில், அறனஞ் சலரே யாயிழை நமரெனச், சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் 1" என்றார் பிறரும். புணர்ந்த மகளிர்பால் மெய்ப்பட்டுத் தோன்றும் நுதற் கவின் தலைமகள்பால் நிகழக் கண்டமையான், வந்த னனோ என்று வினவினாள். தன்னை இன்றியமையேமாகிய நாம் ஆற்றாது அழஅழப் பிரிந்து சென்றதேயன்றி ஆங்கே நீட்டித்துத் தங்கினமை தலை மகற்கு அறமாகாது என்பாள், நாமழப் பன்னாள் பிரிந்த அறனிலாளன் என்றும், நின் நுதல் கொள்ளும் கவின் தலைமகன் வரவைத் தெரிவித்தலின், வந்தனன் என்பது அறிவேனாயினும், நின்னிற் பிரியாது உறையும் யான் அறியாதொழிந்தமையான் இரவுப்போதில் வந்திருத்தல் வேண்டுமெனக் கருதுகின்றேன் என்பாள், வந்தனனோ மற்று இரவின் என்றும் தோழி கூறி னாள். ஈண்டுத் தலைமகன் அருள் கண்மாறி அறனிலனா யினான் எனத் தோழி கூறல் வழுவாயினும், "மங்கல மொழியும் வைஇய மொழியும், மாறி லாண்மையிற் சொல்லிய மொழியும், கூறியன் மருங்கிற் கொள்ளு மென்ப 2" என்பதனால் அமைந்தது. 230. அம்ம வாழி தோழி நம்மொடு சிறுதினைக் காவல னாகிப் பெரிதுநின் மென்றோ ணெகிழவுந் திருநுதல் பசப்பவும் பொன்போல் விறற்கவின் றொலைத்த குன்ற நாடற் கயவர்நன் மணனே. இது, தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி மறுப் பர்கொல்லோ என்று அச்சமுறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக : பண்டு நாம் தினைக்காவற்குச் சென்றவிடத்தும் நம்மோடு கூடிச் சிறிய தினையைக் காவல் செய்வானாகிக் கூட்டம் பெற்றும், பின் வரைதற்பொருட்டு நின் மெல்லிய தோள் மெலிந்து வளை நெகிழவும், அழகிய நுதல் பசப்பெய்தவும் பிரிந்து சென்று, அதனாற் பொன்போற் செறிந்த அழகினைத் தொலைத் தழித்த குன்றினையுடைய நாடற்கு நமர் நல்ல மணத்தைச் செய்வராகலின், நீ நம் தமர் மறுப்பர்கொல்லோ என்று அஞ்சுதல் ஒழிக என்றவாறு. மென்றோள் நெகிழவும் என்புழி இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மே னின்றது. 'மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்,' "இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு, அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற், காமக் கூட்டம்" எனச் சிறப்பிக்கப்பெறும் களவுவழிப் பிறந்து, "கரணமொடு புணரக், கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக், கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வ" தாகலின், நன்மணன் என்றார். இல்லிருந்து நல்லறம் புரிந்து "சிறந்தது பயிற்றும்" சிறப்பிற் றாதலின், நன்மணன் என்றா ரெனினுமாம். இயற்கைப் புணர்ச்சி பெற்ற தலைமகன் தோழியை மதி யுடம்படுப்பான் ஊரும் பேரும் கெடுதியும் வினாய் வந்த போது அன்றித் தோழி அவனை அறியாளாகலின், அறிந்த காலத்தை நினைவுறுத்துவாள் போன்று, சிறுதினைக் காவலனாகி என்றும், பின்னர் அவன் அவளால் வரைவு முடுக்கப்பட்டுப் பிரிந்தவழித் தலைவி ஆற்றா ளாயினமையால் மென்றோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும் என்றும், வரைவு இடை வைத்துப் பிரிந்தோன் குறித்த பொழுதின்கண் வாராது நீட்டித்தலால் தலைவி உடம்பு சுருங்கி மேனி வேறுபட்டுக் காட்டினமையின், பொன்போல் விறற்கவின் தொலைத்த குன்ற நாடன் என்றும் கூறினாள். இதனாற் பயன், தலைவி தமரால் மணன் அயர்தற் குரியவன், தன்னைக் களவிற் கூடி மகிழ்வித்தும், ஒருவழித் தணந்து உளம் நெகிழ்வித்தும் ஒழுகின குன்றநாடனே என்று தேறி அச்சம் நீங்குவள் என்பதாம். இதன்கண், சிறுதினைக் காவலனாகி என்றது தோழியிற் புணர்வு. மென்றோள் நெகிழவுந் திருநுதல் பசப்பவும், பொன் போல் விறற்கவின் தொலைத்த குன்றநாடன் என்றது வரைவிடை வைத்த பிரிவு. இதனை, "வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும், ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக, வரையாது பிரிதல் கிழவோற் கில்லை 1"என்ற சூத்திரத்துள், "மூன்றுமென முற்றும்மை கொடாது கூறினமையின் ஏனைப் பிரிவுகளின் வரையாது பிரியப் பெறும்" என்று கொண்டு, "அவை வரைதற்குப் பொருள்வயிற் பிரிதலும், வேந்தற் குற்றுழிப் பிரிதலும், காவற்குப் பிரிதலு மென மூன்றுமாம்" என்றும் கூறி அடக்குக. "நாற்றமும் தோற்றமும் 2" என்ற சூத்திரத்து, "ஆங்கதன் தன்மையின் வன்புறை" என்பதற்கு இதனை மேற்கோளாக்குவர் இளம்பூரணர். 24. தெய்யோப்பத்து இஃது ஒவ்வொரு பாட்டிலும் ஈற்றில் தெய்யோ என்னும் இடைச்சொல் வரத் தொடுத்த பகுதியாகலின், இப்பெயர்த் தாயிற்று. தெய்ய என்னும் இடைச்சொல் தொல்காப்பியத்துட் காணப் படாதாயினும், பின் வந்த தொகைநூல்களிற் காணப் படுவது பற்றித் தொல்காப்பிய வுரைகாரர்களால், "கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற்றியலான் உணர்ந்தனர் கொளலே 3" என்ற விதியின்கீழ்க் காட்டப்படுகின்றது. "உதுக் காண் தெய்ய உள்ளல் வேண்டும் 4" "தங்கினி ராயின் தவறோ தெய்ய 5" "ஒண்டொடி ஞெமுக்கா தீமோ தெய்ய 6" "அம்பல் வாய்த்த தெய்ய 7" "பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய 8" "தங்கின் எவனோ தெய்ய9" எனத் தொகைநூல்களில் வருவது காண்க. இத் தெய்ய என்பது சிறுபான்மை தெய்யோ என இப்பத்தின்கண் வரும் பாட்டுத் தோறும் வருகிறது. வேறு தொகைநூல்களில் இவ்வாறு வாராமை குறித்து, இப்பத்துத் தெய்யோப்பத்து எனப்பட்டது போலும். 231. யாங்குவல் லுநையோ வோங்கல் வெற்ப இரும்பல் கூந்தற் றிருந்திழை யரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவே தெய்யோ. இஃது ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. உரை : உயர்ந்த மலையையுடையாய், கரிய பலவாகிய கூந்தலை யும் திருந்திய இழைகளையு முடைய அரிவை யாவாள் தேமலோடு கூடிய மாமைநிறம் தேய, அவ்விடத்துப் பசலை இடையீடின்றிப் பரவப் பிரிதல் எவ்வாறு வல்லையா யினையோ? கூறுக என்றவாறு. மகளிரின் கரிதாய்த் திரண்ட கூந்தலை இரும்பல் கூந்தல் என்பது வழக்கு; "இரும்பல் கூந்தல் கொடிச்சி 1" என இந் நூலுள்ளும், "இரும்பல் கூந்தற் சேயிழை மடந்தை 2" எனப் பிறநூலுள்ளும் வருதல் காண்க. இதுவே, "இரும்பல் ஒலிவருங் கூந்தல் 3" என்றும், "பல்லிருங் கூந்தல் 4" என்றும் வழங்கும். திதலை - தேமல்; இது மகளிர் மார்பு வயிறு அல்குல் ஆகிய இடங்களிற் படர்வது. "திதலை மென்முலை 5" எனவும், "திதலை யவ்வயிறு 6" எனவும், "திதலை யல்குல் 7" எனவும் சான்றோர் குறிப்பர். மாமை - மாந்தளிர் நிறத்தின் தன்மை. நோயின் றியன்ற இளமகளிர் மாமைநிறமும் திதலையும் கொண்டிருப்பர்; "நோயின்றி யன்ற யாக்கையர் மாவின், அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும், பொன்னுரை கடுக்கும் திதலையர் 8" என்பதனால் திதலையும் மாமையும் சேர்ந்து இலகும் சிறப்பு விளங்கும். பசலை தோன்ற மாமை கெடுவது, "பசலை யுணீ இயர் வேண்டும் திதலை யல்குலென் மாமைக்கவினே 9" என்பதனாலும் அறியப்படும். தெய்யோ என்பது, "தம்மீறு திரிதலும் 10" என்ப தனால் திரிந்து வந்த தெய்ய என்னும் இடைச்சொல்; அசை நிலை. விளக்கற்றம் பார்க்கும் இருள்போலத் தலைவன் பிரிவற்றம் பார்த்துப் பசலை பாய்தலின் பசலை பாயப் பிரிவு என்றும், ஒளிமுன் நின்ற பொருள் அது நீங்கியவழித் தன் பொலிவழிதல் போலத் தலைவன் பிரிந்த விடத்துத் தலைவியின் மாமையொளி தேய்தல் பற்றித் திதலை மாமை தேய என்றும் கூறினாள். தேய்தல், "அல்லவை தேய அறம் பெருகும் 1" என்புழிப் போலத் தன் பகையாய பசலை பாய்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல் என்க. ஒத்த அன்புடையார் இருவருள் ஒருவர் பிரிந்தவழி மற்றவர் ஆற்றாராய் வருந்த, அப்பிரிந்தவர்தாமும் ஆற்றாராய் மீளுத லன்றி மேலும் பிரிந்து சேறல் செய்யாராக, நீ அதனைச் செய்தமை யானும், பண்டெல்லாம், இது செய்யாமை தோன்ற ஒழுகினமை யானும், இச் செயற்கு வேண்டும் வன்மை நீ பிறிதோரிடத்துப் பிறிதோராற்றாற் பெற்றாயாதல் வேண்டு மென்பாள், யாங்கு வல்லுநையோ என்றாள். இது பொருட் பயன்பட வந்த அறக்கழிவுடைய வழக்கு. "ஈங்குவளை நெகிழப் பிரிதல், யாங்கு வல்லுநையோ ஈங்கிவட் டுறந்தே 2" எனப் பிறாண்டும் வருதல் காண்க. திதலை மாமை தேய என்றது உடம்பு நனி சுருங்கல். பசலை பாய என்றது பசலை பாய்தல். பிரிவு யாங்கு வல்லுநையோ என்றது, அழிவில் கூட்டத்து அவன் பிரி வாற்றாமை. 232. போதார் கூந்த லியலணி யழுங்க ஏதி லாளனை நீபிரிந் ததற்கே அழலவிர் மணிப்பூ ணனையப் பெயலா னாவென் கண்ணே தெய்யோ. இஃது ஒருவழித் தணந்து வந்த தலைமகன், "நான் பிரிந்த நாட்கண் நீவிர் என்செய்தீர்?" எனக் கேட்கத் தோழி கூறியது. உரை : பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய என் தோழியின் இயலும் அணியும் வருந்த, ஏதிலாளனாகிய நீ பிரிந்ததன் பொருட்டு, என் கண்கள், அழல் போல் விளங்கும் மணிபதித்த மார்பின் அணிகள் நனையுமாறு நீர் உகுத்தலை அமையா வாயின என்றவாறு. போதார் கூந்தல் என்றது தலைமகளை. இயலணி, உம்மைத்தொகை. அன்பிலனாய்ப் பிரிந்தான் எனத் தலைவனை ஏதிலாளன் என்றது, அவன்வயிற் பரத்தைமையும் தன்வயின் உரிமையும் தோன்றுதற்கு. "ஏதி லாளர் இவண்வரின் போதிற், பொம்ம லோதியும் புனையல், எம்மும் தொடாஅல் என்குவ மன்னே 1" என்று பிறாண்டுத் தலைவி கூறுதல் காண்க. ஐ: சாரியை. சிவந்த மணிகள் இழைத்த பூண்க ளாதலின், அவற்றின் ஒளியை விதந்து அழலவிர் மணிப்பூண் என்றார்; "அழலவிர் வயங்கிழை 2" என்றார் பிறரும். அழுங்க, நனையப் பெயலானா என இயைத்தலும் ஒன்று. தலைமகள் இயலும் அணியும் இழந்து வருந்த, அது கண்டு ஆற்றாத யான் கண்ணீர் சொரிய, நீ அன்பில்லாது அகன்றனை என்பாள் ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே என்றாள். இயல் அழுங்குதலாவது, "புறஞ்செயச் சிதைத்தல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையற வுரைத்தல் 3" முதலியனவும், கண்டு யில் மறுத்தலும், கனவொடு மயங்கலும் பிறவும் செய்தொழு குதல். அணி யழுங்குதலாவது பூவும் சாந்தும் பூணும் துகிலும் வெறுத்தலும், தொடியும் வளையும் நெகிழ நிற்றலும், பிறவும் செய்தொழுகுதல். இயலணி என்றது தலைவியை எனக் கருது வாருமுளர். ஏதி லாட்டியை நீ பிரிந்ததற்கே என்ற பாடத்துக்கு, காதலி யெனக் கருதாது ஏதிலாட்டியாகக் கருதி நீ பிரிந்ததன் பொருட்டு என்று உரைக்க. 233. வருவை யல்லை வாடைநனி கொடிதே அருவரை மருங்கி னாய்மணி வரன்றி ஒல்லென விழிதரு மருவிநின் கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ. இஃது ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலை மகற்குத் தோழி சொல்லியது. பழைய உரை : ஆய்மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவி நின் கல்லுடை நாட்டு என்றது, செல்லின் வரைதற்கு வேண்டுவன கொண்டு வருவாயாக என்று உணர்த்தியவாறு. உரை : அரிய மலைப்பக்கத்தே நுண்ணிய மணிகளைக் கவர்ந்து கொண்டு, ஒல்லென்னும் ஓசையிட்டு இழியும் அருவிகளை யுடைய நின் மலைநாட்டிற்குச் செல்லுதல் ஒழிக ; சென்றவழி நீ விரைந்து வருவாயல்லை; அதனால் முன்பனிப் பருவத்தைச் செய்யும் வாடைக் காற்றுப் போந்து தனித்தாரைப் பனிப்பித்து வருத்துமாகலான் என்றவாறு. அருவரை - உயரிய மலை. வருவையல்லை யென்பது, விரைய வரைகுவல் எனத் தலைவன் கூறியதனை எடுத்து மறுத் துரைக்குமாறு தோன்ற நின்றது. ஆய்மணி -அழகிய மணிவகை. "ஆய்மணி பொதியவிழ்ந் தாங்கு 1" என்ப. மணிகள் கல்லிடைப் பிறப்பன வாகலின் கல்லுடை நாடு என்றார். "கற்பா லுமிழ்ந்த மணி 2" என்று தேவரும் கூறுவர். "வருவை யல்லை" என்றவள் நின் வாராமையே யன்றி, முன்பனிப்பருவம் எய்தித் தனித்தாரை வருத்துமாக அவ் வருத் தத்தை இவள் ஆற்றாள் என்பாள், வாடை நனிகொடிதே என்றும், எனவே இந்நிலையில் நீ பிரிதல் ஆகாது என்பாள் செல்லல் என்றும் தோழி கூறினாள். கல்லுடை நாட்டுச் செல்லல் என மறுக்கும் தோழி, ஆய்மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவி என்றது, இதனின் மேலும் தலைமகன் பிரிவானேல், அவனை "நீ செல்லின் வரை தற்கு வேண்டுவன கொண்டு வருவாயாக" என்றற்கு. பழைய வுரைகாரர்க்கும் இது கருத்தாதல் அறிக. 234. மின்னவிர் வயங்கிழை ஞெகிழச் சாஅய் நன்னுதல் பசத்த லாவது துன்னிக் கனவிற் காணு மிவளே நனவிற் காணாணின் மார்பே தெய்யோ. இஃது, இடைவிடாது வந்து ஒழுகாநின்றே களவு நீடாமல் வரைதற்கு முயல்கின்ற தலைமகன், தலைமகள் வேறுபாடு கண்டு இதற்குக் காரணம் என் னென்று வினாவியவழி, நின்னைக் கனவிற் கண்டு விழித்துக் காணாளாய் வந்தது எனத் தோழி சொல்லி வரைவு முடுக்கியது. உரை : மின்போல் ஒளியிட்டு விளங்கும் இழைகள் நெகிழுமாறு மெலிந்து நல்ல நுதலும் பசந்து காட்டுதற்குக் காரணமாவது, கனவின்கண் நின் மார்பினை நெருங்கி முயங்கிக் கண்டவள் துயிலுணர்ந்து நனவில் அது காணாளாயினமையே என்ற வாறு. நாளும் தலைப்பெய்து ஒழுகுமிடத்துத் தலைவிபால் மெலிவு தோன்றி மெய்ப்பட்டமை கண்டு இதற்குக் காரணம் என்னை எனத் தலைமகன் வினாவினா னாகலின், வயங்கிழை ஞெகிழச் சாஅய் நன்னுதல் பசந்தாள் என்றும், அதற்குக் காரணம், நனவிற் காணாள் நின் மார்பு என்றும் கூறினாள். பசத்தல் ஈண்டுக் காரணத்தின் மேற்று. கனவிற் கண்டது நனவின் எய்துதல், தேவர்க் காயினும் இசைதல் செல்லா தெனினும், அதனை அறியாத இவள் நனவிற் காணாமையே காரணமாக உடல் மெலிந்து நுதல் பசந்து வேறுபட்டாள் என்பதாம். வயங்கிழை நெகிழச் சாஅய் என்றது உடம்பு நனிசுருங்கல். நன்னுதல் பசத்த லாவது என்றது பசலை பாய்தல். கனவிற் காணும் இவளே என்றது கனவொடு மயங்கல். நனவிற் காணாள் என்றது கண்துயில் மறுத்தல். நெகிழ்ந்து நீங்கும் இழைகள் பொருட்டும், பசந்து ஒளிமழுங்கும் நுதலின் பொருட்டும் இரங்குவாள், மின்னவிர் வயங்கிழை என்றும், நன்னுதல் என்றும் கூறினாள். "கேட்டிசின் வாழி தோழி யல்கற், பொய்வ லாளன் மெய்யுற மரீஇ, வாய்த் தகைப் பொய்க்கனா மருட்டற் றெழுந்து, அமளி தைவந் தனனே1" எனத் தலைமகள் கன வொடு மயங்கி நனவின் அரற்றிய வாறு காண்க. வேறுபாட்டுக்குத் தோழி காரணம் கூறவே, நனவினும் பிரிவின்றிக் கூட்டம் பெறுமாறு வரைவாயாக என்றாளாதலும் பெறப்பட்டது. 235. கையற வீழ்ந்த மையில் வானமொடு அரிதே காதலர்ப் பொழுதே யதனால் தெரியிழை தெளிர்ப்ப முயங்கிப் பிரியல மென்கமோ வெழுகமோ தெய்யோ. இஃது உடன்போக்கு நேர்வித்த பின்பு, தலைமகன் உடன் கொண்டு போவான் இடையாமத்து வந்துழித் தலைமகட்குத் தோழி சொல்லியது. உரை : ஒரு பக்கத்தே முற்றவும் சென்று ஒடுங்கினமையால், முகிலினமே யில்லாத வானமும், காதலரைக் கூடும் பொழு தும் பெறல் அரிதாகலின், இவை எய்தப்பெற்ற இப்பொழுதின் கண் ஆய்ந்த இழைகள் ஒலிக்கக் காதலரை முயங்கி, இனி யாம் நின்னைப் பிரியேம் என்று கூறுவேமோ?. அது பற்றி உடன் போவதற்கு எழுவேமோ? கூறுக என்றவாறு. கை - பக்கம், அற வீழ்தல், முற்றவும் திரண்டு சென்று ஒடுங்குதல். மை, முகில்; "மையற விளங்கிய மணிநிற விசும்பில் 1" என்று பிறரும் கூறுப. எஞ்ஞான்றும் இயங்கா நிற்கும் காற்றின் வழிப்படுவதனால், வானம் முகிலின்றிக் காணப்படுவது அருமை யாகலின் அரிது என்றார். காதலர்ப் பொழுது, காதலரைக் கூடற்கு வாய்க்கும் பொழுது. அரிது காதலர்ப் பொழுது என்றது, அப் பொழுது வாய்த்துழித் தாழாது பயன்கோடல் அறிவுடைமை என்றவாறு. வானம் முகிலின மின்றி யிருத்தலும், களவின்கண் புறத் தார்க்குப் புலனாகி அலராதற்கு அஞ்சித் தலைமகன் பிரிந்து ஒழுகுவதால் இடையீடின்றிய கூட்டமும் ஓரொருகா லன்றி அரியவாகலின், வானமொடு அரிதே காதலர்ப் பொழுதே என்றாள். உடன்போக்குத் துணிந்தார்க்கு மையுறைவானம் ஆகாமையின், மையில் வானமொடு என்றாள். தலைமகள் தான் உடன் கொண்டு போவான் வந்தானொடு செல்லின் இடையறாக் கூட்டம் பெற்று மகிழலாம் என்றும், ஈண்டை இருப்பின் பிரியாத காலமும் முயக்கமும் பெறல் அரி தென்றும் கூறுவாள், பிரியலம் என்கமோ என்றும், பிரியலம் என்றவழி, தலைமகன் உடன் போக்குத் துணியின், தாமும் அதற்கு உடம்பட வேண்டுதலின் எழுகமோ என்றும் கூறினாள். மையில் வானமும், காதலர்ப் பொழுதும் பெறல் அரிது எனக் கூறி தலைமகளைப் போக் குடன்படுத்து தலான், இது "தலைவரு விழுமநிலை யெடுத்து 1" உரைத்தல். 236. அன்னையு மறிந்தன ளலரு மாயின்று நன்மனை நெடுநகர் புலம்புகொள வறுதரும் இன்னா வாடையு மலையும் நும்மூர்ச் செல்க மெழுகமோ தெய்யோ. இது களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும் உணர்த்தித் தோழி உடன்போக்கு நயந்தாள் போன்று வரைவு கடாயது. உரை : நாம் கொண்டுள்ள களவொழுக்கத்தினை அன்னையும் அறிந்தனள்; அயலாரும் அறிந்து அலர் தூற்றுவாராயினர்; நல்ல மனைக்கண் நின்ற நெடிய இல்லின்கண் தனித்து வருந்தப் போதரும் கொடிய வாடைக் காற்றும் அலைப்பதாயிற்று; அதனால் யாம் இவற்றை எய்தாவகை நும்மூர்க்குச் செல்வேமாய் எழுவேமோ? கூறுக என்றவாறு. காப்பு மிகுதியும் அலரும் காட்டி, இனி வரைவல்லது வேறு செய்தி யில்லை யென்பது படத் தலைவற்கு உரைக்கலுறுகின்ற மையின், அன்னை யறிவும் அலரும் எடுத்தோதப்பட்டன. ஊர் நடுவே காப்பமைந்த இடத்தே அமைந்த பேரில்லம் என்பது பற்றி, நன்மனை நெடுநகர் என்றார்; "நன்மனை நெடுநகர்க் காவல ரறியாமை 2" எனப் பிறரும் குறிப்பது காண்க. உறுதரல் - மெய்யைத் தீண்டுதல்; "வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப்படும் 3" என்றாற் போல. தனித்து உறையும் மகளிர்க்கு வெம்மை மிகுத் தலின் இன்னா வாடை என்றார். உடன்போக்குக்கு ஒவ்வாத நிலையில் அதனை ஒருப்படுமாறு தோன்றக் கூறியது நகையாடிக் கூறுவது என்க. அன்னை யறிவும் அலரும் இற்செறிப்பிற்குக் காரணமாத லாற் பின்னை யாம் நின்னைக் கூடல் அரிதாம்; கூட்டம் இன்றித் தனித்து உறையின், வாடைக்காற்றுப் போந்து ஆற்றொணாத் துன்பம் பயக்கும். இங்கு, இற்செறிப்பும் வாடையின் பனிப்பும் பெற்றுக் கூட்ட மின்றி வருந்துதலினும் நின்னொடு கூடிக் கடத்தற்கரிய சுரம் பல கடந்தேனும் நும்மூர்க் கேகுதல் நன்று என்பாள், நும்மூர்ச் செல்கம் எழுகமோ என்றாள். எனவே, போக்கொருப்படுப்பாள் போன்று கூறினும், அன்னை யறிவும், அயலவர் அலர் கூறலும், நெடுநகர் புலம்புகொள என்று தனிமை கூறுமுகத்தால் மேனி மெலிவும் கூறினமையால், வரைவு கடாவுவதே கருத்தென அறிக. இவை, "பொழுதும் ஆறும் 1" என்ற சூத்திரத்துப் "புரைபட வந்த அன்னவை பிறவும், வரைதல் வேட்கைப் பொருள என்ப" என்றதனாற் கொள்ளப்படும். அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று என்றது முட்டு வயிற் கழறல். நன்மனை நெடுநகர் புலம்பு கொள இருத்தல் அவன் புணர்வு மறுத்தல்; என்னை? தமரையும் அலரையு மஞ்சி, வரைவுகடாதற் கருத்தால், அவன்புணர்ச்சியை விலக்கி எழுந்த உள்ளத்தளா யிருக்கின்றா ளாகலின். இன்னா வாடை யும் அலையும் என்றது துன்பத்துப் புலம்மல். இவை தோழி குறிப்பாயினும், "ஒன்றித் தோன்றும் தோழி மேன 2" என்னும் இலக்கணத்தால் தலைமகள் குறிப்பெனவே கொள்க. "நாற்றமும் தோற்றமும் 3" என்ற சூத்திரத்து "எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும்" நிகழும் கூற்றுக்கு இதனை மேற்கோளாகக் காட்டுவர் இளம்பூரணர். தோழி தானே படைத்து மொழியும் பகுதிகளுள் "நல்வகை யுடைய நயத்திற் கூறிப் படைக்கவும் பெறுமே 4" என்றதற்கு இதனை எடுத் தோதுவர் நச்சினார்க்கினியர். 237. காமங் கடவ வுள்ள மினைப்ப யாம்வந்து காண்பதோர் பருவ மாயின் ஓங்கித் தோன்று முயர்வரைக் கியாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ. இஃது அல்ல குறிப்பட்டு நீங்கிய தலைமகனை வந்திலனாகக் கொண்டு அவன் பின்பு வந்துழி அவற்குத் தோழி சொல்லியது. உரை : எம்மிடை யெழுந்த காதல் செலுத்துதலால் மனம் வருந்தி யாமே போந்து நின்னைக் காண்பதோர் காலமும் எய்து மாயின், பிழைப்பின்றிச் சேறற்பொருட்டு இஃதோ உயர்ந்து தோன்றும் மலைக்கு நும்மூர் எவ்விடத்ததோ? கூறுக என்ற வாறு. விகாரத்தால் தொக்க ஏயும் உம்மையும் தலைமகள் தானே சென்று தலைமகனைச் சேர்தல் இலக்கணம் அன்று என்பது உணர நின்றன; என்னை, "உடம்பு முயிரும் வாடியக் காலும், என்னுற் றனகொல் இவையெனின் அல்லது, கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை 1" என்றார்ஆகலின். கடவல் - செலுத்தல். இனைதல் - வருந்துதல். "ஓங்கித் தோன்றும் உயர்வரை" என்புழி ஒருபொருட் கண் வந்த இருசொற்கள், "ஒருபொருள் இருசொற் பிரிவில வரையார் 2" என்ற சூத்திரத்து "வரையார்" என்றதனால் பிரிந்து நிற்றல் கொள்க. "சேணிடை, ஓங்கித் தோன்றும் உயர்வரை, வான்றோய் வெற்பன் 3" எனப் பிறரும் கூறுதல் காண்க. இதற்குப் பிறவாறும் உரைப்பர். இயற்கைப் புணர்ச்சி பெற்ற தலைமகன் வரைவு மேற் கொள்ளாது காமக்காதல் சிறத்தற் பொருட்டுக் குறிவழி ஒழுகு வானாக, தலைவி காமம் சிறந்து நிற்குமாறு தோன்ற, காமம் கடவ என்றும், காமக்கூட்டம்தானும் இடையறாது நிகழ் தலின்றிப் பிரிவால் இடையீடுபடுதலின் உள்ளம் இனைப்ப என்றும், யாம் காமம் சிறந்தும், நின் பிரிவாலும், ஆற்றிடை யுளவாகும் ஏதங்களை ஆய்தலாலும் மனம் வருந்தியும் நிற்ப, நீ அவற்றை ஓராது அன்பின்றி வாராதொழிந்தனை; ஆயினும், நின்னை இன்றியமையாமையின் யாம் ஆற்றுமாறு பிறிதில்லே மாகலின் என்பாள் யாம் வந்து காண்பதோர் பருவ மாயின் என்றும் கூறினாள். "அருங்கடி யன்னை காவ னீவிப், பெருங்கடை யிறந்து மன்றம் போகிப், பகலே பலருங் காண வாய்விட்டு அகல் வயற் படப்பை யவனூர் வினவிச், சென்மோ வாழி தோழி 1" எனப் பிறாண்டும் வருதல் காண்க. ஈண்டுக் காட்டிய நற்றிணைப் பாட்டு, "ஒருசிறை நெஞ்சமொடு உசாவுங் காலை, உரிய தாகலு முண்டென மொழிப 2" என்ற சூத்திரத்து உம்மையால் தோழி யொடு உசாவுங் காலத்து உண்டென அமைந்தது. வரைக்கண்ண தாயின் பிறரை வினவாது நேரே நெறிபற்றி வருதல் கூடுமாயினும், வருவ லென்றவன் வாராது பொய்த் தமையால் தெருளாதாள் போன்று, வரைக்கு யாங்கு எனப்படு வது நும்மூர் என்றும், சொல் திறம்பினோர் வாழுமூர் யாவரா னும் இழித்துக் கூறப்படும் இயல்பு நோக்கி, யாங்கு எனப் படுவது என்றும் வினவினாள். பலரறிய ஓங்கித் தோன்றுதலின் வரைக்கு என்றாள் என்க. காமம் கடவ என்றது காதல் கைம்மிகல்; உள்ளம் இனைப்ப என்றது ஏதம் ஆய்தல். "நாற்றமும் தோற்றமும் 3" என்ற சூத்திரத்து "நாடும் ஊரும் இல்லும் குடியும், பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி, அவன் வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ, அனைநிலை வகை யான் வரைதல் வேண்டினும் 4" என்ற விடத்து, இதனைக் காட்டி, இஃது ஊர்பற்றி வந்தது என்பர் இளம்பூரணர். இனி நச்சினார்க் கினியர் இஃது ஊரை இறப்பக் கூறியது என்பர். 238. வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினுங் குரூஉமயிர்ப் புருவை யாசையி னல்கும் மாஅ லருவித் தண்பெருஞ் சிலம்ப நீயிவண் வரூஉங் காலை மேவரு மாதோவிவ ணலனே தெய்யோ. இது வரையாது வந்தொழுகும் தலைமகனுக்கு "இவள் கவின் நீ வந்த காலத்து வருதலால் நீ போன காலத்து அதன் தொலைவு உனக்கு அறியப்படாது எனத் தோழி சொல்லி வரைவுகடாயது. உரை : நீண்ட கொம்பும் வலியுமுடைய ஆட்டுக் கிடாய் வாராது பொய்ப்பினும் நல்ல நிறமுற்ற மயிரினையுடைய பெண்யாடு பின்னரேனும் அது வருதல் கூடும் என்னும் ஆசையாலே தங்கும் பெரிய அருவிகளையுடைய குளிர்ந்த பெரிய சிலம்பினை யுடையாய், இவளது கவின் நீ இங்கு வருங்காலை வருதலால், நீ செல்லுங்காலத்து அது கெடுதலை அறியாயாயினை என்றவாறு. நீ செல்லுங்காலத்து முதலியன குறிப்பெச்சம். புருவை - ஆடு. இஃது இன்றும் பாண்டி நாட்டு மக்கள்வழக்கில் இருக் கிறது. "செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை. பாடின் தெண் மணித் தோடுதலைப் பெயர 1" என்றார் பிறரும்; "புருவைப் பன்றி வருதிற நோக்கி 2" எனவரும் பாட்டிற்குப் பழைய வுரைகாரர் இளமை யென்று கூறுதலால், இதற்கு, நிறமுற்ற மயிரினையுடைய இளமை பொருந்திய ஆடு அது வரும் திசையை ஆர்வத்துடன் நோக்கி நிற்கும் என்று உரைப்பினுமாம். அது பொருளாயின், ஆசை என்பது திசையென்னும் பொருட்டு. ஆயினும், விருப்பம் என்ற பொருளே தொல்காப்பியர் காலமுதலே "காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி 3" எனப் பயில வழங்கி வருதலின், முன்னதே சிறப்புடைத்து எனக் கொள்க. தலைவியது நலம் தலைமகன் வர வருதலும் பிரியப் பிரிதலு முடைய தென்பது, "வந்தன னோமற்று இரவில், பொன்போல் விறற்கவின் கொள்ளுநின் நுதலே 4" என உடன்பாட்டாலும், "பசலைநம் காதலர், தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்த லானே 5" என மறைமுகத்தாலும் சான்றோர் புலப்படுத்துவது காண்க. தலைவியது நலம் தொலைவது கூறித் தலைவனை வரைவு கடாவும் கருத்தினளான தோழி, தலைவன் தலைமகளது நலம் பாராட்டக் கேட்டு, இந்நலம் நீ போந்து காணும் போது சிறந்து தோன்றுமாயினும், பிரிந்தவழித் தானும் தொலைந்து போகிறது என்பாள், நீ இவண் வரூஉங்காலை மேவரு மாதோ இவள் நலன் என்றாள். எனவே, வாராக் காலை இவள் நலம் தொலைந்து காட்டும் என்று கூறி, அதனை அயலார் அறியின் ஏதமா மாகலின், நீ வரைந்து கோடலே தக்கது என வரைவு கடாயவாறாம். வார்கோட்டு வயத்தகர் வாராது மாறினும் பின் அது வரக்கூடு மென்னும் ஆசையாலே புருவை தங்கும் என்றது, "நீ நின் வரவுகளில் குறித்த வண்ணமே வாராது மாறி நீட்டித் தாலும், நின்னைக் காணலாம் என்னும் ஆசையாலே இவள் உயிர் வாழா நின்றாள்" என உள்ளுறுத்து உரைத்தவாறு உணர்க. இஃது இன்றியமையாமை கூறி வரைவு கடாதல். நீ யவண் வரூஉங் காலை என்பது பாடமாயின், நீ அக்குறியிடத்து வருங்கால் என உரைக்க. 239. சுரும்புணக் களித்த புகர்முக வேழம் இரும்பிணர்த் துறுகற் பிடிசெத்துத் தழூஉநின் குன்றுகெழு நன்னாட்டுச் சென்ற பின்றை நேரிறைப் பணைத்தோ ணெகிழ வாரா யாயின் வாழேந் தெய்யோ. இது வரைவிடை வைத்துப் பிரிவல் என்ற தலைமகற்குத் தோழி கூறியது. பழைய உரை : மதவேழம் துறுகல்லைப் பிடி யென்று தழுவும் நாட னாதலால் நினக்குத் தகுதியில்லாதாள் ஒருத்தியைத் தகுதியுடையா ளென்று நீ வரையவும் கூடும் என நகையாடிக் கூறியது. உரை : சுரும்புண்ணுமாறு பெருகும் மதக்களிப்பினையும் புள்ளி யுற்ற பட்டம் அணிந்த முகத்தினையுமுடைய யானை, கரிய சருச்சரை பொருந்திய துறுகல்லைப் பிடியானை எனக் கருதிச் சென்று தழுவும் குன்று பொருந்திய நின் நல்ல நாட்டுக்குச் சென்றபின் இவளுடைய நேரியவாய் இறை பொருந்திய தொடி பெரிய தோள்களிலிருந்து நெகிழுமாறு நீ வாரா யாயின் யாம் உயிர் வாழேம் என்றவாறு. யானைகள் பொழியும் மதநீரை வண்டுகள் உண்டல் இயல் பாகலின், சுரும்புணக் களித்த என்றார்; "வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்துப், பொறிநுதற் பொலிந்த வயக்களிற் றொருத்தல் 1" என்றார் பிறரும். "சுரும்புணக் களித்த" என்ற விடத்து உண என்றதனைப் பெயராக்கி, "சுரும்புகள் தாம் பலவகை உணவும் உள்வழி அவ்வக் காலத்து ஆண்டுச் சென்று ஏறியும் இழிந்தும் சுழன்றும் மெய் வருந்தாது அவையெல்லாம் ஒருகாலத்தே ஒருவழி உண்ணும் உணவு 2" கிடைக்க உண்டு களித்த என உரைத்தலும் ஒன்று. துறுகல் பிடியானை போலத் தோன்றுதலின், வேழம் இரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூஉம் என்றார். "உதுக்காண், பிடிதுஞ்சு வன்ன அறைமேல நுங்கின், தடிகண் புரையுங் குறுஞ்சுனை 3" எனப் பிறரும் கூறுதல் காண்க. துறுகல் பிணருடைமை, "இரும்பிணர்த் துறுகல் 4" எனப் பிறர் கூறலாலும் அறிக. இறை - ஆகுபெயர். இஃது இப் பொருட்டாதல், "வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர் 5" என்பதன் உரையால் உணர்க. வரைவிடை வைத்துப் பிரிவல் என்ற தலைமகற்குப் பிரிவு உடன்படுவாள், நீ சென்று விரைந்து வாராயாயின் என்றாள். சென்றவிடத்தும், விரைந்து வாராவிடத்து மாகிய ஈரிடத்தும் தலைமகள், அவன் பிரிவுள்ளி உடல் மெலிதல் ஒருதலை யாகலின், சென்ற பின்றை, நேரிறைப் பணைத்தோள் நெகிழ, வாரா யாயின் என்றாள். வாரா தொழிதற் குரிய ஏதுவினை உள்ளுறுத்து உரைத்தலின், வாரா யாயின் வாழேம் என்றது, விரைந்து வரைவொடு வருதல் வேண்டும் எனத் தலைமகனை முடுக்கியவாறு. மதவேழம் தகுதியில்லாத துறுகல்லை இரும்பிணருடைமை பற்றிப் பிடியெனக் கருதித் தழுவும் நாடனாதலின், நின் தலை மைக்குத் தகுதியில்லாத வேறு ஒருத்தியைப் பெண்மை நல முடைமை பற்றிக் கருதி நீ வரையவும் கூடும் என உள்ளுறை கொள்க. பழையவுரையும் இதுவே கூறிற்று. நேரிறைப் பணைத்தோள் நெகிழ என்றது உடம்பு நனிசுருங்கல். வேழத்தின் மதநீர், சுரும்பினம் வருத்தமின்றிப் பல வகை உணவும் ஒருகாலத்து ஒருவழிப் பெற்றுண்ணும் உணவாகும் என்றதனால், நின்பாலுள்ள பொருள் சுற்றத்தார் பலரும் ஒருங் கிருந்து உவந்துண்ணும் அளவிற்றாகவும் நீ வரைவு இடை வைத்துப் பொருள்வயிற் பிரிகின்றவாறு என்னை என இறைச்சி தோன்றுமாறு காண்க. 240. அறியே மல்லே மறிந்தன மாதோ பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாந்த நாறு நறியோள் கூந்த னாறுநின் மார்பே தெய்யோ. இது, தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதானமை அறிந்து தலைமகள் புலந்தவழி, அவன் அதனை இல்லை என்று மறைத் தானாக, தோழி சொல்லியது. உரை : பொறியும் வரியும் பொருந்திய சிறகுகளையுடைய வண்டின் கூட்டங்கள் மொய்ப்பச் சந்தனத்தின் மணம் வீசும் நறியவளது கூந்தலின் மணத்தை நின் மார்பு கமழுதலால் நினக்குப் புறத்தொழுக்கம் உண்மையை யாம் அறியே மென எண்ணற்க, நன்கறிவேம் என்றவாறு. தன்பால் புறத்தொழுக்கம் இல்லை யெனத் தலைமகன் கூறினானாக, அவன் கூற்றை மறுத்து அவ்வொழுக்கம் அவன் பால் உண்மையினை எடுத்துக் கூறுதலின், அறியே மல்லேம் என்று ஒழியாது, அறிந்தனம் என்றும், அதற்கு ஏது இஃது என்பாள், நறியோள் கூந்தல் நாறும் நின் மார்பு என்றும் கூறினாள். "பிறர்கூந்தல் மலர்நாறும் மார்பினை ஈங்கு எம்மில் வருவதை 1" என்று பிறரும் உரைப்பது காண்க. நின்னைக் கூடிய பரத்தை நின் மார்பில் இன்றுயில் பெறுதலின், அவளது கூந்தல் மார்பிற் படிதலால் நின் மார்பு நறுமணம் கமழ்வதாயிற்று என்றற்கு, நறியோளுடைய கூந்தல் மணம் நின்மார்பு நாறுகின்றது என்றாள். பொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச் சாந்தம் நாறும் நறியோள் எனப் பரத்தையைக் கூறியது, ஆடவராகிய வண்டினம் சூழ்வரத் தன்னை மிகவும் வியந்து பாணரும் பிறரும் புகழ்ந்து பாடும் நலமுடையாள் எனப் புகழ்வாள் போல் இகழ்ந்து கூறியவாறு. "பரத்தையை ஏத்தினும், "உள்ளத்து ஊடல் உண் டென மொழிப 1" ஆகலின், இதுவும் புலவியென உணர்க. "திணைமயக் குறுதலும் கடிநிலை யிலவே 2" என்ற சூத்திர வுரையில் இப்பாட்டுக் குறிஞ்சிக்கண் மருதம் மயங்கிற்றெனக் கொண்டு, "இது புறத்தொழுக்கம் இன்று என்றாற்குத் தோழி கூறியது" என்றும், "இரந்து குறையுற்ற கிழவனை 3" என்ற விடத்து, "வாய்மை கூறலும்" என்றதற்கு இதனைக் காட்டி, இது வாய்மை கூறியது என்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 25. வெறிப்பத்து வெறி பொருளாக வரும் பாட்டுக்கள் பத்துக் கொண்ட பகுதியாகலின், இது வெறிப்பத்து என்னும் பெயர் பெறுவ தாயிற்று. வெறி யென்பது மணம் என்னும் பொருள்படுவதொரு பழந்தமிழ்ச் சொல். வெறிமலர், வெறிகமழ் பொழில், என்றெல் லாம் சான்றோர் செய்யுட்களில் இச்சொல் பெரிதும் வழங்கும். சொல்வடிவே நோக்கின், இது மிகுதிப்பொருளில், வெறுக்கை, வெறுத்த கேள்வி எனவரும் பெயரும் வினையுமாகிய சொற்களின் முதனிலையாகிய வெறு என்னும் உரிச்சொல் லடியாகப் பிறந் தமை தோன்றும். ஆகவே, அழகும் ஒளியும் இளமை நலமும் திகழும் செடிகொடிகளின் பூக்களிடைச் சிறந்து நிற்கும் மிகுமணம் வெறி யென்ற சொல்லால் வழங்கப்படுவதாயிற்று. கருமுகில் தவழும் மலையகத்தே இரவுப்போதில் இருளும் குளிரும் செய்யும் இன்னல் பொறாது ஒடுங்கி உறையும் தனக்கு நாட்காலையில் அழகிய ஒளி செய்து போதரும் ஞாயிற்றால் இருள் நீக்கமும் உள்ளக்கிளர்ச்சியும் உடலூக்கமும் கிளர்ந் தெழுவது கண்டு அதனையே முழுமுதற் பொருளாகப் பரவினான் தமிழ் முதன்மகன். ஞாயிறு தோன்றும் நாட்காலையில் மலை யணைந்த காடுகள் இளமைத்தளிர் பரப்பிப் பூக்கள் மலர்ந்து எங்கும் இன்ப மணம் திகழ்வதும், மாவும் புள்ளும் தத்தம் தொழில் புரிவதும், மக்கள் அறிவு விளக்கமும் தெளிவும் பெறு வதும் ஓர்ந்து, இவற்றிற்கு உள்ளீடு இளமை, அழகு, மணம், அறிவு முதலிய நலங்களே என்பதைக் கண்டான்; ஞாயிறு, காலையில் தோன்றுவதும், மாலையில் மாய்வதும் கண்டு, தோற்றமும் ஈறும் இன்றி என்றும் ஒருபடித்தாய் நிலவுவதாய், ஞாயிற்றுக்கும் அதற்கு இடமாகிய வானத்துக்கும் கடலுக்கும் கடல் சூழ்ந்த நிலவுலகத்துக்கும் எல்லாவற்றிற்கும் முழு முதலாய் உள்ளதொரு பொருள் உண்டு எனத் தெளிந்தான்; தனக்கும் தான் பெறும் நலங்கட்கும் முதல் அதுவே யெனக் கொண்டு, செல்வக் காலை அல்லற்காலை யாகிய இருபோதினும் அதனை நினைந்து வழிபடலானான். அழகு திகழும் தளிரிடத்துத் தோன்றும் இளமையும், மலர்களிடையே தோன்றும் மணமும், மாவும் புள்ளுமாகிய பிறவுயிர்களிடத்தே தோன்றும் கிளர்ச்சியும், நாட்காலையில் நெடுங்கடலும் வானும் தொடுமிடத்தே எழும் ஞாயிற்றின் எழுச்சியில் விளங்கும் ஒளியும் அழகும் அம்முதற்பொருளால் அருளப்படுவன என்பது அவற்குப் புலனாயிற்று. அப்புலனெறியே கண்டபோது அழகும் இளமையும் மணமும் ஒளியும் தெளிவும் "நன்பக லமையமும் இரவும் போல, வேறுவேறு இயல வாகி" நிலவுவது விளங்கவே, இவற்றிற்கு முழுமுதலாகும் முதற்பொருள், மாறா அழகும், மாறா இளமையும், மாறாத மணமும், மாறாத ஒளியும், தெளிவு முடைய தென்பது தெரிந்தது. மாறாத அழகு முதலிய நலங்களெல்லாவற்றையும் ஒருங்கே ஒருசேரத் தொகுத்து உணர்த்தவல்லதொரு சொல்லைத் தேர்ந்தான். அது, முருகு என்னும் சொல்லாகும். அதனால் அம் முழுமுதற்பொருளை முருகு என்று பெயரிட்டு வழிபடலானான். இம்முருகினைக் காண்டற்கு "மாக்கடல் நிவந்தெழுதரு செஞ்ஞாயிறு" முதற் பொரு ளாயினமையின், முருகின் நிறமும் செஞ்ஞாயிற்றின் செம்மைநிறம் எனக் கொண்டு, அதனைச் சேயோன் என வழங்கினான். சேயோன் - செம்மை நிற முடையவன். நிலவுலகின் உயர்நிலையாகிய மலைமுடியில் வாழ்ந்த முன்னோனாகிய முதன்மகன் சேயோனாகிய முருகினை முழு முதற்பொருளாகக் கண்டு வழிபடத் தொடங்கவே, மலை யுறையும் குறிஞ்சி நிலமக்கட்கு அவனே வழிபடுகடவுளானான். இது தொல்காப்பியர் காலத்துக்குப் பல்லாயிர மாண்டுகட்கு முன்பே நிலவிய கொள்கை யாதலின், இதனை உணர்த்தப் புகுந்த போது அவர் "சேயோன் மேய மைவரை யுலகம்" என்று தெரிவித்தார். தொடக்கத்தில் முருகினது உண்மை காட்டிய செஞ்ஞாயிற்றின் தீவிய ஒளியில் இளந்தளிரும் மணமலரும் மலர்த்தேனும் சிறந்து தோன்றி முதன்மகன் உள்ளத்தை முருகன் கண் தோய்விக்கவே அவற்றையே அம்முருகிற்கு முதற்கண் கையுறையாகப் பெய்து வணங்கினான். அக் கையுறைக்குப் பலி யென்பது பெயர். தளிரைத் தளிர்ப்பலி எனவும், பூவைப் பூப்பலி எனவும் பண்டையோர் வழங்கினார். பின்னர்த் தன்பால் இளமை யும் வளமையும் ஒளியும் தெளிவும் உண்டாக்கிய பூவும் தேனும் உண்பொருளும் பிறவும் முருகிற்குப் பலியாகப் படைக்கப் பட்டன. ஊனுணவும் ஒருவகையில் தன் உடற்கு ஆக்கம் தருவது கண்டு அதனையும் பலியிடலானான். அஃது உயிர்ப்பலி என வழங்கிற்று. முருகனை வழிபடும் இடத்தே நறுமணம் மிக்க பூவும், தளிரும், புகையும் மிக்கு, எங்கும் இனிய மணமே நிலவும்; ஆகலின் அதனை வெறிக்களம் என முன்னோர் வழங்கினர். இவ்வழிபாடு வெறி என்றும், வெறியயர்தல் என்றும் பெயர் பெறுவதாயிற்று. வெறிக்களத்தே வழிபடப்பெறும் முருகினை யும் ஒரோவழி வெறி என்றும் சான்றோர் குறிப்பர். "வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் 1" என்பதனால், வெறிக்களம் வெறிமனை என்றும் குறிக்கப்படுவதை அறிகின்றோம். "சால்வ தலைவ எனப் பேஎ விழவினுள், வேலன் ஏத்தும் வெறியும் உளவே 2" என்று கூறுவதனால், வெறி முருகவேள் வழிபாட்டுக்குப் பெயரா தல் தெளியப்படும். முருகனை நோக்கி வெறியயரும் இடத்தில் மக்கள் பலரும் ஒருங்கு கூடி வழிபடுவராதலின், அவ்வழிபாடு ஒழுங்காக நிகழ்தற்கு ஒருவன் முன்னணியில் நிற்பன். அவன் முருகனது வேற் படையைக் கையிலேந்தி யிருப்பது மரபு. அதனால் அவனை வேலன் என்றும், அவன் வெறி அயரும் முறை முற்றும் அறிந் திருப்பது பற்றி, "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் 1" என்றும் ஆசிரியர் குறித்துரைக்கின்றார். பருந்து ஒன்று வானத்திற் பறக்க எழுங்கால் அதன் எழுச்சியை, "நெடுவிளிப் பருந்தின் வெறி 2" எனச் சான்றோர் கூறுவர்; அதுவே வெறிக்களத்துக்கும் பெயராகக் கூறப்படுதலின், வெறியயர்களமும் பருந்தின் வட்டம் போல முழு வட்டமாக இருக்குமெனக் கருதலாம். களத்தின் நடுவே வேற்படையை நட்டு அதனைச் சுற்றி வட்டமாக அமைத்த இடத்தை வெறிமனை யெனக் கூறுவதும் உண்டு. வெறியயர் களமெல்லாம் வழிகள் சில வந்து கூடும் சந்திகட்கு அருகில் அமைக்கப்படுகின்றன; அவ் விடத்தை நூலோர் "செல்லாற்றுக் கவலை 3" என்பர். வெறியயரக் கருதுவோர் முதற்கண் அதனை வேலற்கு உணர்த்துவர். அவன் மேலே குறித்த "செல்லாற்றுக் கவலையில்" இடம் கண்டு, வெறிக்களம் அமைப்பன். நன்கு அமைந்த களத் தின் கண் "வேலை நடுவிற் கொண்ட வெறிமனையில் புதுமணல் பரப்பிச் செந்நெல்லின் வெண்பொரியும் 4" பல்வகைப் பூக்களும் சொரிந்து அழகுறுத்துவன். மேலே பந்தர் அமைத்துப் "பசுந்தழை யும் கடம்பின் மலரும் 5" வேறுபல "நறுமணங் கமழும் பூக்களும் 6" கொண்டு இனிய காட்சியமையச் செய்து, மறி யறுத்து அதன் குருதி கலந்த செந்தினையை வெறிமனையில் தூவி, பல்வேறு இயங்கள் இயம்ப மணி இயக்கி நறும்புகை எடுத்துப் பூப்பலி இடுவன். மகளிரும் பிறரும் குறிஞ்சிப்பண்ணிற் பாட்டுக்கள் பாடுவர். இவ்வெறியின் வேறாக முருகவேட்குக் குன்றவர் கூடி விழா அயர்தலும், அக்காலையில் அவர்கள் தம்மிற் கூடிக் குரவைக் கூத்து ஆடுவதும் உண்டு. இவ்விழவும் குரவையும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் குறமகளிர் முன்னணியில் நிற்பர். இவை மழை வேண்டும் போதினும் வேண்டாப் போதினும் குன்றவர்களால் நிகழ்த்தப் பெறுகின்றன. இக்காலத்தும் மேற்கு மலையில் வாழும் தொல்குடி மக்களிடையே இவ்விழாவும் குரவையும் நடைபெறு கின்றன. காலக்கழிவால் சில நிகழ்ச்சிகள் வேறுபட்டன வாயினும், பல கூறுகள் பழந்தமிழ் நூல்கள் காட்டும் முறையில் அமைந் துள்ளன. அவற்றைத் திரு. நாகமையர், தரிஸ்டர், கோபாலன் நாயர் முதலியோர் எழுதிய பழங்குடிமக்கள் இயல்பு கூறும் நூல்களிற் காணலாம். வெறியயர்வது மாத்திரம் பெரும்பாலும் வேலனாலே நிகழ்கின்றது. இளமையும் வனப்புமுடைய மகளிர் உடல் நலம் குன்றுவராயின், அது நீங்குதற் பொருட்டு அவர்களுடைய பெற்றோர் வேலனைக் கொண்டு வெறி அயர்வர். மருந்தாலும் பிறவற்றாலும் நீங்காத நோய் இவ்வெறியால் நீங்கும் என்பது கொள்கை. இளநங்கை யொருத்தி நலம் குறைந்தா ளெனின், அவளுடைய தாய் கட்டும் கழங்கும் கொண்டு அவள் நலக் குறைவுக் குரிய காரணத்தை ஆராய்வள். அவற்றை ஆராய்ந்து கூறுவோர் பெரும்பாலும் முதுமகளிரே யாவர். வேலனும் சிறுபான்மை கழங்குகொண்டு நோய்க்காரணம் அறிதல் உண்டு. "அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன், கிளவியின் தணியின் நன்றுமன் 1" எனச் சான்றோர் கூறுவது காண்க. வேலனைக் கொண்டு மகளுற்ற மெலிவுக்குக் காரணம் ஆராயின், அவன் "வெறியயர்தலால் இந்நோய் தீரும்" என்பான். அவ் வெறியயர் களத்தில் வேலன் முருகன்பெயரை வாழ்த்தித் தன் மேல் முருக வேள் வந்துற்றதாக ஆடுவன்; ஆடுதற் கேற்பப் பல்வகை இயங் களும் இயம்பும். வெறியயருமிடத்துக் கூடியிருக்கும் குன்றவர் களுள் ஆடவரும் மகளிரும் சேர்ந்து முருகன் புகழைப் பாடிக் குரவைக் கூத்தும் ஆடுவர்; இவ்வண்ணம் வெறியயர்தல் கொட்டும் பாட்டும் கூத்தும் கலந்து நிகழ்வது பற்றி, இதனை வெறியாடல் என்றும் சான்றோர் குறிக்கின்றனர். வெறியாடும் வேலன் மகட்குண்டாகிய நோய் முருகனால் உண்டாயிற் றென்று உரைத்து நோய்க்கு மருந்தாக முருகனுக் குரிய பூக்களைத் தந்து அவள் கூந்தலில் முடிக்கச் செய்வன். "வேலன் வந்தெனப், பின்னுவிடு முச்சி அளிப்பா னாதே 2" என வருதல் காண்க. உடல்நலங் குன்றி மேனி வேறுபடும் இளமகளிர் பொருட்டு வெறியாடுமிடத்து, அவர்களை நீராட்டி ஒப்பனைசெய்து வெறியயர்களத்தே நிறுத்தி வேலன் முருகனை வழிபட்டுப் பல்வகை இயங்கள் இயம்ப, பறை முழங்க, முருகனது வேலைக் கையிலேந்திக் களத்தில் ஆடுவன். அக்காலை அங்கே நிற்கும் மகளிர் சிலர் உடல் நடுங்கி மருண்டு ஆடுவதும் செய்வர். அதனை "வெறியுறு நுடக்கம் 1" என்பர். மகளிர் எய்தும் மேனி வேறுபாடு வெறியாட்டால் தீரும் என்ற கருத்தில், "வெறியென உணர்ந்த உள்ளமொடு மறியறுத்து, அன்னை அயரும் முருகு 2" "வெறியென உயங்கும் அரியள் அன்னையை 3" "அறியா தயர்ந்த அன்னைக்கு வெறியென, வேலன் உரைக்கும் என்ப 4" "வெறி யென வுணர்ந்த வேலன் 5" என்று சான்றோர் கூறுவது பெரும் பான்மை. இவ்வெறியாட்டின்கண் வேலன் செய்யும் வழிபாடு காந்தள் என்றும் வழங்கியுளது. இதனை ஆசிரியர் "வெறியாட் டயர்ந்த காந்தள் 6" என்பது காண்க. இக்காந்தள் என்னும் சொல் பிற்காலத்தில் கந்தழி யெனத் தவறாக ஏடெழுதினோரால் எழுதப்பட்டுவிட்ட தென்றும், அதனை ஆராய்ந்து காணாது உரைகாரர்கள் கந்தழி யென்றே கொண்டு தத்தமக்குத் தோன்றிய வாறு உரைத்தன ரென்றும் நன்கு பொருந்துமாறு பேரா சிரியர் நாவலர், ச. சோமசுந்தர பாரதியவர்கள் கூறுகின்றார். இவ்வெறியே பொருளாக அழகிய பாட்டுக்கள் பாடியது பற்றிச் சங்ககாலச் சான்றோர் ஒருவர் வெறி பாடிய காமக் காணியார் என்று சிறப்பித் துரைக்கப்பெறுகின்றார். அம் முறையே, இங்கே தொகுக்கப்பட்டுள்ள பாட்டுக்களில் வெறியே சிறப்பாகப் பாடப்பெறுவதைக் காணலாம். 241. நாமுறு துயர நோக்கி யன்னை வேலற் றந்தா ளாயினவ் வேலன் வெறிகமழ் நாடன் கேண்மை அறியுமோ தில்ல செறியெயிற் றோயே. இஃது, இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு இஃது எற்றினா னாயிற்று என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்கு மாற்றால் தலைமகட்குச் சொல்லியது. உரை : நெருங்கிய பற்களையுடையோய், நாம் எய்தியுள்ள துயரத்தை நம் அன்னை கண்டு, அதற்குக் காரணம் அறிவாளாய் வெறியெடுத்தற்கு வேலனைத் தருவித்துள்ளாள்; ஆயினும், அவ்வேலன், மணம் கமழும் நாடனொடு நம்மிடை உளதாகிய நட்பினை அறிவான்கொல்லோ? அறியான்கொல்லோ? என்றவாறு. தலைமகட் குளதாகிய உடல்மெலிவு வேறு காரணங்களால் தோன்றிய தன்று என்பது தோன்ற நாமுறு துயரம் எனல் வேண்டிற்று. மெலிவுக்கு ஏதுவாகியது பற்றித் துயரம் என்றார். அவ்வேலன் என்ற சுட்டு, வேலன் எல்லாவற்றிற்கும் வெறியல்லது வேறே காரணமுண்மை அறியாதவன் என்பது பட நின்றது. தில்ல - அசைநிலை. செறியெயிற்றோய் என்றது செவிலியை. தலைமகனோடு பயின்று ஒழுகாவாறு இற்செறிக்கப் பட்டமையால், தான் அவனொடு தலைப்பெயல் ஆகாமையின், கண்படையின்றியும், உடம்பு நனிசுருங்கியும் மேனி வேறுபட்டுக் காட்டினமையின், நாம் உறுதுயரம் நோக்கி என்றும், அது கண்ட தாய், "கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப், பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ, முருகன் ஆரணங் கென்றலின் அதுசெத்து, ஓவத்தன்ன வினைபுனை நல்லிற், பாவை யன்ன பலராய் மாண்கவின், பண்டையிற் சிறக்கவென் மகட்கு எனப் பரைஇக், கூடுகொள் இன்னியம் கறங்கக் களன்இழைத்து, ஆடணி நயந்த அகன்பெரும் பந்தர், வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர், ஐதமை பாணி யிரீஇக் கைபெயராச், செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன் 1" வெறியயர்கின்றான் என்பாள், வேலன் தந்தா ளாயினும் என்றும் கூறினாள். அவ்வேலன் நமக்கும் நாடற்கு முள்ள கேண்மையை அறிந்து பலரும் அறிய உரைப்பனேல், அஃது அலராய் நம்மை வருத்தும் என்று அறி யாது, "அறிவர் உறுவிய அல்லல்கண்டு அருளி, வெறிகமழ் நெடுவேள் நல்குவன் எனினே, செறிதொடி உற்ற செல்லலும் பிறிதுஎனக், கான்கெழு நாடன் கேட்பின் 1" தலைமகள் உயிர் வாழ்தல் அதனினும் அரிது என்று கூறுவாள், நாடன் கேண்மை அறியுமோ என்று மொழிந்தாள். வேலன் அறிந்து உரைப்பினும் அறியாது உரைப்பினும் இருவழியும் நம் துயரம் நீங்குமா றில்லை என்றாளாம். "மறைந்தவற் காண்டல் 2" என்ற சூத்திரத்து "வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும்" தலைவிக்குக் கூற்று நிகழும் என்பதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர். 242. அறியா மையின் வெறியென மயங்கி அன்னையு மருந்துய ருழந்தன ளதனால் எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ் ஆய்மல ருண்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே. இது, தலைமகள் அறத்தொடுநிலை நயப்ப வேண்டித் தோழி அவட்குச் சொல்லியது. உரை : நிரல்பட நின்ற இதழ்களையுடைய மலர்கள் பலவற் றுள்ளும் ஆய்ந்து கொண்ட மலர்போலும் மையுண்ட கண்கள் பசப்பெய்துமாறு சேய்மைக்கண் தோன்றும் மலை யினையுடைய நாடன் தன் பிரிவாற் செய்த நோயினை, அறியாமையால், வெறியயர்ந்து தீர்ப்பான் முயன்று, அன்னை யும் மிக்க துயருழந்து வருந்தினாள். ஆகலின், அவன் செய்த நோயினை அவள் அறியாதொழிதல் நன்றன் றாகலான், அதனை அறிவித்தல் வேண்டும் என்றவாறு. அறிதற்குரிய கேண்மையைப் பின்னர்க் கூறலின் அறி யாமையின் என்றும், வெறி அயர்ந்தவழித் தீர்தற்குரிய நோயினை வெறி என்றும் கூறினார். அறத்தொடுநிலை வகை யால் அறிவித்தாலன்றி அறிதற்கு அருமைபற்றி அன்னை எய்திய துயர் அருந்துய ராயிற்று. "எய்யாமை அறியாமை 1" ஈண்டுப் பிறவினை மேல் நின்றது. நன்று அல்லது கொடிதாகலின், கொடிது என்றார். சேய்மலை நாடனாகிய தலைமகன் கூடிப் பிரிந்தமையால் உண்டாதல் பற்றி நாடன் செய்த நோய் எனல் வேண்டிற்று, "அரிமத ருண்கண் பசப்பநோய் செய்யும், பெருமான் 2" எனப் பிறாண்டும் கூறுவது காண்க. சேய்மலை நாடன் பிரிந்ததனால் தலைமகள் கண்கள் பசந்து மேனி வேறுபட்டா ளாகலின், ஆய்மலர் உண்கண் பசப்ப என்றும், அது நாடன் காரணமாக உண்டாயிற்று என்று அறி வாளேல் வெறி விரும்பா ளென்பாள், அறியாமையின் வெறி யென மயங்கி என்றும், ஆராய்கின்றவர் உண்மை யறிந்தாலன்றி அதனைப் பயனுடைய செயல் எனக் கொள்ளா ராகலின், அவள், கட்டினும் கழங்கினும் வெறியினும் பிறவற்றினும் முயன்றது வாளா முயற்சித் துன்பமே தந்தமையின், அன்னையும் அருந் துயர் உழந்தனள் என்றும், இனி நாமேயாதல் அறத்தொடுநிலை வகையால் உணர்த்தாவிடின், அவள் அத்துயரத்தைப் பொறாள் என்பாள், எய்யாது விடுதலோ கொடிதே என்றும் கூறினாள். வெறி முதலியவற்றால் உண்மை அறிய முயன்றவள், அதனை அறியாமையால் மயங்கினளாகலின், அன்னையும் அருந்துயர் உழந்தனள் என்றா ளென்றும், முன்னர் அறியாமையினால் அருந்துயர் உழந்தவள், பின்னரும் அறியாமையினால் வருந்தல் நன்றன் றாகலின், கொடிது என்றாள் என்றுமாம். ஆகவே, நாம் அறிவித்தலே கடன் என்பது குறிப்பெச்சம்; "அன்னைக்கு, அறிவிப் பேங்கொல் அறியலங் கொல்லென, இருபாற் பட்ட சூழ்ச்சி யொருபாற், சேர்தல் நன்று 3" ஆகலின். அன்னை அறியாமையின் வெறியென மயங்கி அருந்துயருழத் தலை, "சிறந்திவள், பசந்தனள் என்ப துணராய் பன்னாள், எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி, வருந்தல் வாழிவேண்டு அன்னை 4" என்பதனால் உணர்க. அதனால் அறியாது விடுதலோ கொடிதே என்றும் பாடமுண்டு. "களவல ராயினும் 1" என்ற சூத்திரத்துக் "கட்டினும் கழங் கினும் வெறியென இருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்" என்பதற்கு இதனைக் காட்டி, "இது வெறியென அன்னை மயங்கினமை கூறிற்று" என்பர் நச்சினார்க்கினியர். 243. கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி அறியா வேலன் வெறியெனக் கூறும் அதுமனங் கொள்குவை யனையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே. இது, தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. பழைய உரை : அறியா வேலன் யாது கேட்பினும் வெறியெனக் கூறும்; அவனை இதற்கும் கேட்க மனங்கொள்ளா நின்றாய் என்றவாறு. உரை : அன்னாய், இவளுடைய புதுமலர் போலும் குளிர்ந்த கண்கள் தனிமையுற்றுக் கலுழ்தற் கேதுவாகிய நோய்க்குக் காரணம், மிளகு வளரும் மலையின்கண் உறையும் கடவுளைப் பரவி வெறியயர்த லல்லது பிறிதியாதும் அறியாத வேலனைக் கேட்டு, அவன் வெறி யென்று கூறும் இயல்பின னாகலின், வெறியெடுத்தல் வேண்டும் என்றானாக, நீ அவன் சொல் வதையே மனத்திற் கொள்ளாநின்றாய். இவள் உற்ற நோய்க்கு மருந்து வெறியன்று எனத் தெளிவாயாக என்றவாறு. கறி - மிளகு. கறிவளர் சிலம்பிற் கடவுள், முருகவேள். கழங்கின்கண் கடவுளைப் பரவி இவட்கு உற்ற நோய் முருகனா லாயது என்றும், அது வெறியெடுத்தால் நீங்கும் என்றும் கூறுவ னாகலின், கடவுட் பேணி வேலன் வெறியெனக் கூறும் என்றார். "அறியா தயர்ந்த அன்னைக்கு வெறியென, வேலன் உரைக்கும் என்ப 2" எனப் பிறரும் கூறுதல் காண்க. அது, வெறி. அது மனங்கொள்குவை என்றது குறிப்பால், அது கொள்ளற்கு உரித்தன்று என்பது தோன்ற நின்றது. "அன்னையும் அதுவென உணரும் 3" எனப் பிறரும் கூறுதல் காண்க. வேலனைப் படிமத்தான் என்று கூறி, "செவ்வேள் வேலைத் தான் ஏந்தி நிற்றலின் வேலன் என்றார்" என்பர் நச்சினார்க் கினியர். வேலன், வெறியெனக் கூறுத லொழிய, அதனால் இவட்கு உண்டாய நோய் தீர்க்கும் மருந்து அறியான் என்பாள், அறியா வேலன் என்றும், அவன் தன் கூற்றைப் பிறர் ஏற்க வேண்டும் என்பதற்காகவே முதற்கண் கடவுளைப் பரவுகின்றான் என்றற்குக் கடவுட் பேணி என்றும் கூறினாள். அவன் மருந்தறியான் என்பது, "வெறியென உணர்ந்த வேலன் நோய்மருந்து, அறியான் ஆகுதல் அன்னை காணிய 1" என வருதலால் அறியப்படும். யாது வினவினும் அது முருகனால் விளைந்தது எனக் கூறுவ தொன்றை யன்றி வேலன் இவள் நோய் தீரும் மருந்துவகை அறியானாக, அதனை அறியாது நீ இவள் நோயையும் அவனிடம் கூறி அவன் கூறுமாறு வெறியயரக் கருதுகின்றனை; அதனாற் பயன் யாதும் இல்லை என்று தோழி வெறி விலக்கியவாறாம். வெறியெனக் கூறுமது மனங்கொள்குவை எனவே, யாம் குறிப்பாலும் வெளிப்படையாலும் உணர்த்துவனவற்றையாதல், அறிவிலார்பால் ஒன்று கேட்டறிதல் அறிவுடைமை அன்றென் பதையாதல் நின் மனத்துட் கொள்ளாயாயினை யெனச் செவிலி மேல் அறியாமை கூறியவாறு அறிக. மழைக்கண் புலம்பிய நோய்க்கு என்பது இன்பத்தை வெறுத்தலும், பசலை பாய்தலுமாம். எளித்தல், ஏத்தல் என்ற அறத்தொடுநிலைப் பகுதிகளுள் இது வேட்கையுரைத்தல் என்பர் இளம்பூரணர். வேட்கை யுரைத்த லாவது "தலைவியைத் தலைவற்குக் கொடுக்க வேண்டும் என்பதுபடக் கூறுதல்"2 என்பர். "நாற்றமும் தோற்றமும்" என்ற சூத்திரத்துக் "களம்பெறக் காட்டினும் 3" என்புழி இதனைக் காட்டி இது தாயறியாமை கூறி வெறி விலக்கியது என்பர் நச்சினார்க்கினியர். 244. அம்ம வாழி தோழி பன்மலர் நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை குன்றம் பாடா னாயின் எவன்பயஞ் செய்யுமோ வேலற்கவ் வெறியே. இது, வெறியாடல் துணிந்துழி விலக்க லுறும் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக: வெறியாட லுறும் வேலனுக்கு அவ்வெறி என்ன பயனைச் செய்வதாகும், பலவாகிய மலர்கள் பொருந்திய நறுவிய குளிர்ந்த சோலைகள் நிறைந்த நாடுகளை யுடைய நெடிய புகழோனாகிய தலைமகனது குன்றத்தைப் பாடாதொழிவானாயின்? என்றவாறு. குன்றம் பாடுதலாவது, "கொடிச்சியர் கூப்பி வரைதொழு கைபோல், எடுத்த நறவின் குலையலங் காந்தள், தொடுத்ததேன் சோரத் தயங்குந்தன் னுற்றார், இடுக்கண் தவிர்ப்பான் மலை 1" என்று பாடுவது போல்வது. வெறியாட்டினும் குரவைக் கூத்தினும் குன்றவர் தம்முடைய தலைவனுடைய குன்றத்தைப் பாடுவது வாழ்த்துவகை யாகலின், குன்றம் பாடானாயின் என்றார். வேலன் வெறியயருங்கால் முதற்கண் தலைமகனது குன் றத்தைப் பாடுதலால், தான் கூறுவன வாயாதல் பெறுகின்றான் என்றும், அது செய்யானாயின், அவன் கூற்றுப் பொய்யாகி ஒரு பயனையும் எனக்கேயுமன்றி அவற்கும் செய்யாதொழியும் என்றும் கூறுவாள், குன்றம் பாடானாயின், எவன் பயஞ் செய்யுமோ என்றாள். தனக்குப் பயன்படுதல், தலைமகன் உறுபெயர் கேட்டு மகிழ்வெய்துதல்; வேலற்குப் பயன், வெறி யாடல் வாய்த்தமை குறித்து மகிழ்வும் பொருளும் பெறுதல். இஃது உறுபெயர் கேட்டல். "நாற்றமும் தோற்றமும் 2" என்ற சூத்திரத்துக் "களம்பெறக் காட்டினும்" என்புழித் தலைவியை முன்னிலையாக்கிக் கூறு தற்கு இதனையே இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் காட்டினர். 245. பொய்யா மரபி னூர்முது வேலன் கழங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி முருகென மொழியு மாயின் கெழுதகை கொல்லிவ ளணங்கி யோற்கே. இது தலைமகன் சிறைப்புறத்தானாக வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. பழைய உரை : கன்னம் என்பது நோய் தணித்தற்குப் பண்ணிக் கொடுக்கும் படிமம். கெழுதகை என்பது உரிமை. இவளை அணங்கியோற்கு வெறியாட்டு உரிமையன்று என்பதாம். உரை : பொய்த்தல் இல்லாத மரபினையும் ஊர்க்கண் வாழும் முதுமையுமுடைய வேலன், கழங்கு நிறுத்தி, அதன்கண் தான் வழிபடுதெய்வம் வரப் பண்ணிப் பின்னர் அதற்குக் கன்னத்தை அணிந்து, வெறி யாடி இவளை அணங்கியோன் முருகனா வான் என்று மொழிவானாயின், இவளை மெய்யாற் கூடித் தன் ஒழுக்கத்தால் மெலியச் செய்த தலைமகற்கு அவ்வெறி யாட்டு உரித்தாங்கொல்லோ? கூறுக என்றவாறு. வேலன் வெறியாடிக் கூறுவன உண்மை என்ப வாகலின், பொய்யா மரபின் என்றும், அவன் ஊருக்கு ஒருவனாய் முதுகுடியில் தோன்றி வருபவனாகலின், ஊர் முதுவேலன் என்றும் கூறினார். கழங்கு - கழற்காய். இவற்றைக் கொண்டு வேலன் குறிகூறுமாறு: தன் தலையில் ஆடை கட்டி, சிறிய பைகள் நாலவிட்ட பல கிளைகளை உடைய வளைந்த கொம்பொன்றி னால், கழற்காய்களை முருகன் முன்வைத்து அள்ளி யெடுக் குங்கால் கண்டு கூறும் ஒருவகைக் குறி. இதனை, "அறுவை தோயும் ஒருபெருங் குடுமிச், சிறுபை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல்ஆகுவ தறியும் முதுவாய் வேல, கூறுக மாதோநின் கழங்கின் திட்பம் 1" என்பதனால் அறிக. முருகு, முருகன். கன்னம் என்பது - நோய் தணிதற்குப் பண்ணிக் கொடுக்கும் மந்திரத்தகடு உள்ளே வைத்துக் கட்டிய தாயத்தை 2; இது பொன்னாலும் செய்யப்படும் என்பது, "பொன்செய் கன்னம் பொலிய 1" என்பதனாலும் அறியலாம். கழங்கு மெய்ப்படுத்த லாவது இது தெய்வத்தா னாயிற்றோ பிறிதொன்றினா னாயிற்றோ எனத் தெய்வம் பராவி அக்கழற்காய்களை எண்ணிப் பார்த்தல் என்றும், கழற்காய்களைத் தொகுத்து அவற்றிற்கு மஞ்சட் காப்புக் கட்டி, "இம் மையல் தீருங்காறும் இக்காப்பினை அணிந்திருக்க" எனக் கட்டுவது கன்னம் என்றும் கூறுப. கெழுதகை, உரிமை. "யாமெம் தாங்கவும் தாந்தம், கெழுதகை மையின் அழுதன தோழி 2" என்பதனாலும் அறிக. அன்னை வேண்ட வேலன் அயரும் வெறியாட்டின்கண் நம் குடிக்கு அலரும், தலைமகற்குப் பழியும் எய்தக் கூறுவனோ என்று அஞ்சின ளாகலின், பொய்யா மரபின் ஊர்முது வேலன் என்றும், அவன் முருகென மொழிவனாயின், அஃது அவனது பொய்யா மரபினொடு மாறுபடுதலின், கெழுதகைகொல் இவள் அணங்கி யோற்கே என்றும் கூறினாள். மொழியு மாயின் என்றது மொழியாமையும் உணர நின்றது. எதிர்மறை ஓகாரம் விகாரத்தால் தொக்கது. இது கூறியதாற் பயன், அன்னை வேண்ட வெறியாடலுறும் வேலன், பொய்யா மரபின னாகலின், தான் கழங்கு மெய்ப்படுத்தும் கன்னம் தூக்கியும் வெறி எடுத்து இவள் அணங்கியோன் இன்னானென உண்மை கூறிவிடின், அது நினக்குப் பழியும் எங்குடிக்கு ஏதமும் பயக்கு மாகலின் நீ விரைந்து வரைந்து கொள்வாயாக எனச் சிறைப்புறம் நின்ற தலைமகன் கேட்ப வரைவு கடாயவாறாம். 246. வெறிசெறித் தனனே வேலன் கறிய கன்முகை வயப்புலி கழங்குமெய்ப் படூஉப் புன்புலம் வித்திய புனவர் புணர்த்த3 மெய்ம்மை யன்ன பெண்பாற் புணர்ந்து மன்றிற் பையு டீரும் குன்ற நாட னுறீஇய நோயே. இது வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத் தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. பழைய உரை : பயிர் விளைப்பார் விலங்குகள் நலியாமைக்குக் கழலைக் கண்ணாக வுறுத்திப் பொய்ம்மை வகையாற் பண்ணி வைத்த பெண்பாற் புலியைப் புணர்ந்து புலிப்போத்துப் படப்பை நடுவே துயரம் தீருமென்றது, வரைந்து கொள நினையாது இக்களவிற் புணர்கின்ற மாயப்புணர்ச்சியானே இன்பம் முடிய நுகர்கின்றான் என்பதாம். உரை : மலையிடத்தே புன்செய்க் கொல்லையில் தினைப் பயிரை விதைத்த குறவர் விலங்குகள் போந்து அழிக்காதவாறு கழங் கினைக் கண்ணாகப் பொருத்தி மெய்யான பெண் புலி போலச் செய்தமைத்த பொய்ப்புலியை, மிளகுக் கொடி படரும் கல்முழைஞ்சினுள் வாழும் வலிய புலியின் ஏறு போந்து கூடிப் புனத்திடையே அமைத்த மன்றிற் கிடந்து தன் வருத்தம் நீங்கும் குன்றத்தையுடைய நாடனாகிய தலைமகனால் உண்டாகிய நோயின்பொருட்டு வேலன் வெறி அயர்தற்கு உரியவற்றை ஒழுங்காகச் செய்யலுற்றான். இஃது என்னாகுமோ? என்றவாறு. கறி - மிளகுக்கொடி. கழங்கு - கழற்காய். மெய்யென்னா ராயினும் மெய்ம்மைத் தோற்றத்தைத் தருதற்குக் கண் சிறந் தமையின், கண்ணே கொள்ளப்பட்டது. புன்புலம், ஈண்டுத் தினைவித்திய புன்செய்; "புன்புல மயக்கத்து விளைந்தன தினையே 1" என்பது காண்க. புனவர் - குன்றவர். "இதைமுயல் புனவன் 2" என வழங்குவ தறிக. பொய்யாகப் புணர்த்தமை அறியாமையின் வயப்புலி எய்திய வருத்தம் பையுள் எனப் பட்டது. புலத்தின் இடையே பரண் நிறுத்துதற் பொருட்டும் விளைந்தவிடத்துத் தினைக்கதிர்களைத் தொகுத்தற்பொருட்டும் விடப்பட்ட நடுவிடம் மன்று என உணர்க. நோய் என்ற விடத்துப் பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபு தொக்கது. தலைமகன் சிறைப்புறத்தா னானமை அறிந்து அவன் கேட்பக் கூறுகின்றா ளாதலின், குன்ற நாடன் உறீஇய நோய் என்றும், நோயால் விளைந்த மேனி மெலிவு கண்டு ஆராய்ந்து வெறி யெடுத்தற்கு அன்னை ஆவன செய்யுமாறு உணர்த்துவாள், வேலன் மேலேற்றி வெறி செறித்தனனே வேலன் என்றும் கூறினாள். பிறாண்டு, "அணங்கறி கழங்கின் கோட்டம் காட்டி, வெறியென வுணர்ந்த உள்ளமொடு மறியறுத்து, அன்னை அயரும் முருகு 1" என்று பிறரும் கூறுதல் காண்க. உள்ளுறையால் தலைமகன் வரைதலை மேற்கொள்ளாது களவின்கண் பெறும் இன்பத்தையே நயந்தொழுகுதலை உணர்த் தினமையின், வேறு தன்னால் செயற்பாலது இன்மை தோன்ற, இஃது என்னாகுமோ என்பது குறிப்பிற் பெற மொழிந்தாள். கன்முகையில் வாழும் வயப்புலி புனவர் பொய்யாகப் புணர்த்த பெண்புலியைக் கூடிப் பையுள் தீரும் என்றதனால், உயர்குடி மகனாகிய தலைமகன் களவின்கண் தலைப்பெய்து பெறும் இன்பமொன்றே நுகர்ந்து அமைகின்றான் என்றாளாம். பழையவுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதல் காண்க. கழங்குகட்படூஉ என்றும், உறீஇய நோய்க்கே என்றும் பாடமுண்டு. 247. அன்னை தந்த தாகுவ தறிவென் பொன்னகர் வரைப்பிற் கன்னந் தூக்கி முருகென மொழியு மாயின் அருவரை நாடன் பெயர்கொலோ வதுவே. இது, வெறி விலக்கலுறும் தோழி தமர்கேட்பத் தலைமகளை விளவுவாளாய்ச் சொல்லியது. உரை : அன்னை வெறியயர்தற்பொருட்டு வேலனைக் கொணர்ந் தமையும், அவன் எடுக்கும் வெறியால் விளையும் பயனையும் யான் நன்கு அறிவேனாகலின், அழகிய மனையிடத்தே வெறி யாடிக் கன்னத்தை அணிந்து "இவளை அணங்கியோன் முருகன்" என அவ்வேலன் கூறுவானாயின், அம் முருகு என்னும் பெயர் அரிய மலைநாடனது பெயர் ஆகுமோ? கூறுக என்றவாறு. எனவே, அஃது அருவரைநாடன் பெயரன்றாகலின், அவ் வெறியாட்டுப் பயனில் செயலாம் என வெறிவிலக்கிய வாறாம். தந்தது - வேலனைத் தருவித்தது. ஆகுவது - வெறியயர்தல்; "நன்னுதல் பசந்த படர்மலி அருநோய், அணங்கென உணரக் கூறி வேலன், இன்னியம் கறங்கப் பாடி, பன்மலர் சிதறிப் 1" பரவுவதனை ஆகுவது என்றார் எனினுமாம். வெறியயரும் வேலன், "எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் 2" என்பது ஒருதலையாகலின், முருகென மொழியு மாயின் என்றும், இவட்கு இந்நோய் செய்தான் அருவரை நாட னாகலின், அவனை முருகு எனல் பொருந்தாதென்பாள், அது அருவரை நாடன் பெயர் கொலோ என்றும் கூறினாள். தமர் கேட்பின் இவட்கு இம்மெலிவு தெய்வத்தானா யிற்றன்று என வெறிவிலக்குதல் பயன். 248. பெய்ம்மணன் முற்றங் கவின்பெற வியற்றி மலைவான் கொண்ட சினைஇய வேலன் கழங்கினா னறிகுவ தென்றால் நன்றா லம்ம நின்றவிவ ணலனே. இது, தலைமகள் வேறுபாடு கழங்கினால் தெரியும் என்று வேலன் கூறியவழி, அதனைப் பொய்யென இகழ்ந்த தோழி வெறிவிலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது. உரை : மலையையும் வானையும் வென்றுகொண்ட சினத்தை யுடைய முருகனது வேலை ஏந்திய வேலன் புதுமணல் இடப் பட்ட முற்றம் அழகுபெற அமைத்துக் கழங்கு மெய்ப்படுத்துக் காணவல்ல தொன்று என்றால், இவள்பால் நின்ற கற்புநலம் நன்றுகாண். என்றது, இவளது கற்பின் மாண்பு கழங்கினால் அளத்தற் குரியதன்று என்றவாறு. ஏகாரம், தேற்றம். சிறப்பும் தெய்வவழிபாடும் நிகழுங் காலங்களில் பழமணல் மாற்றிப் புதுமணல் பெய்து அழகு செய்தல் மரபாதலின், பெய்ம்மணன் முற்றம் கவின்பெற என்றார்; "பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு, மெய்ம்மலி கழங்கின் வேலற் றந்தே 1" என்பது காண்க. சிறப்புக் குறித்துச் செய்யப்படுதலின், இயற்றி என்றும், வேலன் ஏந்திய வேல் செவ்வேளினது வேலாகலின், மலைவான் கொண்ட சினைஇய வேல் என்றும் கூறப்பட்டன. மலை என்றது குருகு பெயர்க் குன்றம். வான் என்றது வானவர் தலைவனாகிய இந்திரன் முதலியோரை; ஆகுபெயர். "நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக், குருகொடு பெயர்பெற்ற மால்வரை யுடைத்து, மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை 2" என்றும், "ஓங்குவிறற் சேஎய், ஆரா வுடம்பின்நீ யமர்ந்து விளையாடிய, போரால் வறுங்கைக்குப் புரந்தர னுடைய, அல்லலி னனலன்றன் மெய்யிற் பிரித்துச், செல்வ வாரணங் கொடுத்தோன் வானத்து, வளங்கெழு செல்வன்றன் மெய்யிற் பிரித்துத், திகழ்பொறிப் பீலி யணிமயில் கொடுத்தோன், திருந்துகோன் ஞமன்றன் மெய்யிற் பிரிவித், திருங்கண் வெள்யாட் டெழின்மறி கொடுத்தோன் 3" என்றும் வருவனவற்றால் உணர்க. "மலைவான் கொள்கென உயர்பலி தூஉய் 4" என்புழிப்போல, மேகங்கள் சூழ்ந்துகொண்ட மலையைச் சினந்தழித்த வேல் என்றுமாம். மலைவான் என்பதை வானீற்று வினையெச்சமாகக் கொண்டு உரைகூறுவது முண்டு. அறிகுவது என்பது, அறிந்து செய்யும் மறியறுத்தல் வெறியாடல் முதலிய வற்றால் தலைவி மேனிவேறுபாடு நீங்குவது குறித்து நின்றது. ஆல்: அசை; அம்ம: உரையசை. நலன், குறிப்புமொழி யாய்த் தலைமகளது வேறுபாடு தோற்றுவித்தது. வேலன் தாங்கி நிற்கும் வேல் மலையைக் கிழித்து வானத் துக்குக் காப்பு வழங்கும் அத்துணை வன்மையும் வினைத்திறமும் உடையதாயினும், இவளது கற்பின் திண்மைமுன் செல்லாது என்பாள், மலைவான் கொண்ட சினைஇய வேலன் என்றாள். இவட்குற்ற வேறுபாட்டை வேலன் எடுக்கும் கழங்கும் வெறியும் தீர்க்கும் வன்மையும் தகுதியு முடையவல்ல என்பது தோன்றக் கழங்கினான் அறிகுவது என்றால் என்றும், இவற்றாலெல்லாம் நீங்காமல் இவளது மெய்ப்பட்டு நிற்கும் வேறுபாடு, தலை மகன்பால் கொண்ட தொடர்புவழித் தோன்றித் திகழும் கற்பறம் என்றற்கு நின்ற இவள் நலம் என்றும், எனவே, இவற்றைக் கைவிட்டுத் தலைமகன் வரின் அவற்கு மகட் கொடை நேர்வது நன்று என்றும் தோழி உரைத்தவாறாம். நன்றால் என்றும் அம்ம என்றும் கூறியது வெறிமுதலியவற்றின் பயனின்மையைச் சுட்டி நின்றது. "களவல ராயினும் 1" என்ற சூத்திரத்துக் "கட்டினும் கழங் கினும் வெறியென இருவரும், ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்" என்பதற்கு இதனைக் காட்டி, இது வேலன் கழங்குபார்த்தமை கூறிற்று என்பர் நச்சினார்க்கினியர். 249. பெய்ம்மணல் வரைப்பிற் கழங்குபடுத் தன்னைக்கு முருகென மொழியும் வேலன் மற்றவன் வாழிய விலங்கு மருவிச் சூர்மலை நாடனை யறியா தோனே. இது, வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. உரை : விளங்குகின்ற அருவிகளையுடைய அச்சம் பொருந்திய மலைநாடனை அறியானாய், புதுமணல் பரப்பிய விடத்தே கழங்கு வைத்து, "இவட்கு உண்டாய மெலிவின் காரணம் முருகன்" என வேலன் அன்னைக்கு மொழிந்தானாக, அன்னை யும் அதனை மெய்யெனக் கொண்டு அமைந்தாளாகலின், அவ்வேலன் வாழ்வானாக என்றவாறு. வெறியெடுத்தற்கு முன்னர் நிகழ்த்தும் ஆராய்ச்சியாய கழங்கு வைத்துக் காண்டல் மனைக்கண் நிகழ்தலின், அது பற்றி ஒப்பனை செய்யப்பட்ட மனையகம் என்றற்கு, பெய்ம்மணல் வரைப்பு என்றார்; "முன்னர்ப் பெய்ம்மணல் முற்றம் 2" என்றதும் இக்கருத்துப் பற்றியே என்க. முருகென மொழிதல் வேலற்கு இயல்பு என்பது தோன்ற, மொழியும் என்றார். மொழியும் என்றது, "முந்நிலைக் காலமும்.... நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் 1" லாகலின் இறந்த காலம் கொள்ளப்பட்டது. சூர் - அச்சம். சூர்மலைநாடன் என்பதற்கு அச்சம் தரும் தெய்வத்தையுடைய மலைநாடன் எனினுமாம். "வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும், சூர்மலை நாடன் 2" என்றார் பிறரும். வேலன் இவட்கு நோய்செய்த மலைநாடனை யறியாது அறிவான் போலக் கழங்குபடுத்து முருகு என மொழிந்தானாக, அன்னை அதனை மெய்யெனக் கொண்டாள்; இஃதன்றோ அவள் அறியாமை இருந்தவாறு எனத் தாயுழை அறியாமையும் வேலனது பொய்ம்மையும் கூறி இகழ்ந்தவாறு. நாடன் செய்த நோயினை அவனது மலைக்கண் உறையும் அச்சந்தரும் தெய்வம் தந்ததாகப் பிறழ உணர்ந்துகொண்டு வேலன் உரைத்தனன் என்றுமாம். சூர்மலை நாடனைக் கூறித் தலைமகள் குடிக்குப் பழியும் அலரும் விளையாவகை முருகு என மொழிந்தா னாகலின், அவன் வாழிய என்றாள். நோய் செய்தானை விடுத்து, அது செய்யாத முருகனைக் கூறிய குற்றத்திற்கு இரங்குவாள், அவன் வாழிய என்றாள் எனினுமாம். இலங்கும் அருவிச் சூர்மலை நாடன் என்றது அறத்தொடுநிலைப் பகுதியாய ஏதீடு உணர்த்தியவாறாம். 250. பொய்படு பறியாக் கழங்கே மெய்யே மணிவரைக் கட்சி மடமயி லாலுநம் மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன் ஆண்டகை விறல்வே ளல்லனிவள் பூண்டாங் கிளமுலை யணங்கி யோனே. இது தலைமகட்கு வந்த நோய் முருகனால் வந்தமை இக் கழங்கு கூறிற்றென்று வேலன் சொன்னான் என்பது கேட்ட தோழி அக்கழங் கிற்கு உரைப்பாளாய்ச் செவிலி கேட்குமாற்றால் அறத்தொடுநிலை குறித்துச் சொல்லியது. உரை : பொய்ம்மையிற்பட்டு மெய்ம்மையை அறியமாட்டா தொழிந்த கழங்கே, இவளுடைய பூணாரம் தாங்கிய இள முலை வருந்தப் புல்லி நட்புற்றவன், மணிகள் நிறைந்த மலைச் சாரற் காட்டின்கண் மடப்பம் பொருந்திய மயில்கள் மகிழ்ந்து ஆலும், விரிந்த வள்ளிக்கொடிகள் நிறைந்த கானத்துக்கு உரியனாகிய ஓர் ஆண்டகையாகும்; வெற்றி யினையுடைய கடவுளாகிய செவ்வேள் அல்லன் என அறிவாயாக என்றவாறு. கழங்கே, அணங்கியோன், கிழவோனாகிய ஆண்டகை, வேளல்லன் என அறிக எனச் சில சொற்பெய்து முடிக்க. அணங்கி யோன் வேள் அல்லன், கிழவோனாகிய ஆண்டகை என முடிப் பினுமாம். கட்சி - காடு; "வேங்கை வீயுகும் ஓங்குமலைக் கட்சி, மயிலறி பறியா மன்னோ 1" "நனவுறு கட்சியின் நன்மயி லால, மலையுடன் வெரூஉம் மாக்கல் வெற்பன் 2" எனச் சான் றோர் வழங்குதல் காண்க. வள்ளியங்கானம், வள்ளிக்கொடிகள் காடுபோல் படர்ந்துள்ளமை பற்றி இவ்வாறு கூறப்பட்டது; "வாடா வள்ளியங்காடு படர்ந் தோரே 3" என்றார் பிறரும். இனி, வள்ளிமலையைச் சார்ந்த காடு என்றுமாம். இப்பகுதி முதல் இராசராசன் காலத்தும் அவற்கு முன்பும் "சயங்கொண்ட சோழமண்டலத்துப் பெரும்பாணப்பாடி நாட்டுத் துய்ய நாட்டு, வள்ளிமலைப் பற்று 4" என்று கல்வெட்டுக்களில் வழங்கி வந்துள்ளது. வேலனைப் பொய்யா வாய்மையன் என்று கருதி அவனைத் தருவித்து அவன் கழங்கு கொண்டு உரைப்பனவற்றை மதித்துப் பேணுவது மரபாதலின், ஈண்டு அவனது கழங்குரை பொய்த்தமை கண்டு வியந்து கூறுவாளாய்ப் பொய்படுபு அறியாக் கழங்கே என்றும், கழங்கினால் அறிந்து கட்டுரைத்தற்குப் பொருளாவோன் இன்னான் என்பாள், மணிவரைக் கட்சி மடமயில் ஆலும் மலர்ந்த வள்ளியங் கானங்கிழவோன் என்றும், அவனே தலமகளைக் களவிற் கூடி நட்புச் செய்து இப்போது இவட்கு இம்மெலிவை எய்துவித்தவன் என்பாள், பூண்தாங்கு இளமுலை அணங்கியோன் என்றும், அவன் மக்களினத்தில் உள்ள ஆடவன் என்றற்கு ஆண்டகை என்றும், அவனைத் தெய்வமாகிய முருக வேள் என்பது குற்றம் என மறுப்பாளாய், விறல் வேள் அல்லன் என்றும் உரைத்தாள். வேலன் அதனைத் தன் கூற்றாக மொழியாது கழங்கு கூறுவதாக மொழிதலின், கழங்கினை நோக்கித் தோழி இது கூறினாள் என்க. மணிவரைக் கட்சியில் மயிலாடுவது கண்டு தலைமகளைத் தலைமகன் எதிர்ப்பட்டுக் கூடி நட்புச் செய்தான் என்பது குறிப்பாய்த் தோன்ற மணிவரைக் கட்சி மடமயி லாலும் என்றாள்; இஃது உண்மை செப்பல் என்னும் அறத் தொடு நிலை. "நாற்றமும் தோற்றமும் 1" என்ற சூத்திரத்து "அவள் விலங் குறினும் களம்பெறக் காட்டினும்" என்ற விடத்துக் களம் பெறக் காட்டியவழிக் கழங்கினை முன்னிலையாகக் கூறுவதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர்; கழங்கு பார்த்துழிக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர் 2 மடமயிலாயம் என்றும், வரைதரு வள்ளியங் கானம் என்றும் பாடமுண்டு. 26. குன்றக்குறவன் பத்து இதன்கண் வரும் பாட்டுக்கள் பத்தும் குன்றக் குறவன் என்ற தொடரால் தொடங்கி நடத்தலின், அச்சிறப்புக் குறித்து இஃது இப்பெயர்த்தாயிற்று. 251. குன்றக் குறவ னார்ப்பி னெழிலி நுண்ப லழிதுளி பொழியு நாட நெடுவரைப் படப்பை நும்மூர்க் கடுவர லருவி காணினு மழுமே. இது வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. பழைய உரை : நும்மூர்க் கடுவரல் அருவி காணினும் அழும் என்றது, அது நின் மலையினின்றும் வீழ்கின்ற அருவி என்றுகொண்டு அதற்கு நின் கொடுமை கூறி இவள் அழும் என்றவாறு. குறவன் உழவு முதலாகிய வினைக்கு ஆர்ப்பின் அதற்கு இன்றியமையாத நீரை நுண்மழை பொழியும் நாடனாகிவைத்தும் எம் வேட்கை அறிந்து அதற்குத் தக ஒழுகுகின்றிலை என்பதாம். உரை : குன்றத்துக்கண் வாழும் குறவன் தன் தமர்உடன் சூழ, மழைவேண்டிக் கடவுளைப் பரவுங்கால் ஆரவாரிப் பானா யின், அம் மழை நுண்ணிய பலவாகிய மிக்க பெயலைப் பொழியும் நாடனே, நெடிய வரையைச் சார்ந்த தோட்டங் களையுடைய நும்மூர்க்கட் செல்லும் விரைந்த செலவினை யுடைய அருவியைக் காணினும், அது நின் மலையினின்றும் வீழ்கின்ற அருவி யென்றுகொண்டு அழாநிற்பள் என்றவாறு. மழை வேண்டுங்காலத்துப் பெய்வித்தற்கும் வேண்டாக் காலத்து ஒழித்தற்கும் குறவர் கடவுளைப் பேணுதல் மரபென்பது, "மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய், மாரி யான்று மழைமேக் குயர்கெனக், கடவுட் பேணிய குறவர் மாக்கள் 1" என்ற இவரது புறச்செய்யுளான் அறிக. அழிதுளி என்பது, ஈண்டு, "அழிபசி 2" என்புழிப் போல மிக்க பெயல் என்னும் பொருட்டு. விளைபுலங்களில் மழைநீர் நிரம்புதற்பொருட்டுச் செய்துவைத்த காலும் வரம்பும் விளைபயனும் கெடப் பொழிதலின், அழிதுளி என்றார் என்க. "அகலிரு விசும்பகம் புதையப் பாஅய்ப், பக லுடன் கரந்த பல்கதிர் வானம், இருங்களிற் றினநிரை குளிர்ப்ப வீசிப், பெரும்பெயல் அழிதுளி பொழித லானாது 3" எனச் சான்றோர் கூறுதலானும் உணர்க. கடுவரல், விரைந்த செலவு; "கடுவரற் கான்யாறு 4" என்றாற் போல. இடையறா நீரொழுக்க முடைய அருவிகளையுடைய மலைநாடனாயினும் என்மாட்டுத் தன் தண்ணளியை இடை யறாது செய்வானல்லன் என வருந்துகின்றாள் என்பாள், கடுவரல் அருவி காணினும் அழுமே என்றாள். குறவன் தனக்கு இன்றியமையாத தினை நீரின்மையால் வாடுதல் கண்டு, அவ்வாட்டங்கெடக் கடவுட் பேணி ஆர்த்த விடத்து, எழிலி நுண்பல் அழிதுளி பெய்வது போல, நினக்குத் துப்பாகிய இவள் நலம், அலர் முதலியவற்றால் வாடுதல் கண்டு யாம் நின்னை வேண்டியவிடத்து, நீ அவ்வலர் கூறுவார் வாயடங்க வரைந்துகொள்க என உள்ளுறுத்து உரைத்தவாறு உணர்க. நின்மலையிற் குறவன் ஆர்ப்பினைச் செய்து வேண்டும் மழை பெற்றுத் தன் விளைபயனை நுகர்தல் போல, இவளும் தன் நலங்கெடாது நின் அருளைப்பெற்று இடையறா இன்பம் நுகர் வாளாதல் வேண்டும் என்ப தொரு நயமும் தோன்றியவாறு காண்க. காணினும் அழுமே என்றது துன்பத்துப் புலம்பல். 252. குன்றக் குறவன் புல்வேய் குரம்பை மஞ்சா டிளமழை மறைக்கு நாடன் புரையோன் வாழி தோழி விரைபெயல் அரும்பனி யளைஇய கூதிர்ப் பெருந்தண் வாடையின் முந்துவந் தனனே. இது வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத் திற்கு முன்னே வந்தானாக உவந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. பழைய உரை : குறவனது புல்வேய் குரம்பைப் பொல்லாங்கினை இளமழை மறைக்கும் நாடன் என்றது, பிரிவின்கண் தங்கட்கு வந்த துன்பத்தை இவன் மறைத்தது நோக்கிக் கூறியவாறு. உரை : தோழி, குன்றத்துக்கண் வாழும் குறவனுடைய புல்லால் வேயப்பட்ட வீட்டினைப் புகைமுகிலாய் அசையும் இளமழை தாழ்ந்து கண்ணுக்குத் தோன்றாவகை மறைக்கும் நாடன், விரைந்த மழையையும், பொறுத்தற் கரிய பனியையும் கலந்து வீசும் கூதிர்ப்பருவத்துப் பெரிய தண்ணிய வாடைக்காற்று வருவதன்முன்னே தான் வந்தா னாகலின், அவன் உயர்ந் தோனாய் வாழ்வானாக என்றவாறு. புல்வேய் குரம்பை, புல்லைக் கூரையாக வேய்ந்த வீடு. புல்லென்றது, மலைகளில் நீண்டு வளர்ந்திருக்கும் பைஞ் சாய்க் கோரைப்புல்; இது மஞ்சம்புல் என்றும் எருவைப் புல்லென்றும் வழங்கும். "எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி 1" என்பதனால் அறிக. பனை தெங்கு முதலியனவும் புல்லென்னும் இனத்தைச் சேர்ந்தவையாகலின், அவற்றின் ஓலை வேய்ந்த வீடும் புல்வேய் குரம்பை எனப்படும். செல்வ ரல்லாத மிக்க எளியராகிய மக்கள் புல்வேய் குரம்பையில் வாழ்வர்; அது பற்றியே சான்றோர், "படலைப் பந்தர்ப் புல்வேய் குரம்பை, நல்கூர் சீறூர் 2" என்றும், "சிறப்பும் சீரு மின்றிச் சீறூர், நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை3" என்றும் உரைப்பது காண்க. புகைபோல் திரண்டு செல்லும் வெண்முகில் மஞ்சு எனவும், கரும்புகைபோல் பரந்து சிறுசிறு மழைத்துளியைச் சிதறிச் செல்லும் மழைமுகில் இள மழை எனவும் வழக்கிலும் நூல்களிலும் காணப்படும். இவை மழைக்காலத் திறுதியில் தோன்றிப் பனிப்பருவத்திற் பெருகிப் பரவி நிற்கும். "புகைபுரை அம்மஞ் சூர 4" என்றும், "ஆடியல் இளமழைப் பின்றை, வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே5" என்றும் வருவன காண்க. காற்றில் மிக நொய் தாய் மிதந்து அசைந்து செல்லுதல் பற்றி, இதனை ஆடியல் இளமழை என்று கூறுவர். "ஆடியல் இளமழை சூடித் தோன்றும், பழந்தூங்கு விடரகம் 6" என்றார் பிறரும் "இளவாடை 7" என வழங்குவ துண்மை யின், "பெருந்தண்வாடை" என்றார்; தட்பமிகுதி தோன்ற. நாடன் வந்தனன் ஆகலின், புரையோன், வாழி எனக் கூட்டி முடிக்க. "பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப 8" என்ற விடத்து, "உரித்து என்றதனால் கூதிர் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க." எனவே, பனியும் கூறப்பட்டது. கூதிர்க்கண், "இருள் தூங்கித் துளி மிகுதலில் சேறல் அரிதாக லானும், பானாட் கங்குலிற் பரந்துடன் வழங்காது, மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்று வதிதலின் காமக் குறிப்புக் கழியவே பெருகுதலானும் 9" முந்து வந்தனன் என்றும், இவ் வாறு காலத்தின் சிறப்பும், காதலியாகிய நினக்குத் தான் வாரா தொழியின் உளதாகிய வருத்தமும் ஒப்ப நோக்கிப் போந்தவன் பெரிதும் நயனுடையான் ஆகலின், புரையோன் என்றும், வாழி என்றும் கூறினாள். "புரைய மன்ற புரையோர் கேண்மை 1" என்பது காண்க. குறவனுடைய புல் வேய்ந்த குரம்பையின் புன்மை புலனாகா வாறு இளமழை மறைக்கும் நாடன் என்றது, தன் பிரிவின்கண் தலைமகட்கு உண்டாகிய மெலிவு பிறர்க்குப் புலனாகாவாறு குறித்த பருவம் வருமுன்பே வந்து தலைமகன் மறைத்த சிறப்பு நோக்கி என்க. இஃது அறனளித் துரைத்தல். மன்றாடு இனமழை என்றும் பாடமுண்டு. "கிழவோட்கு உவமம் ஈரிடத்து உரித்தே 2" என்பதன் உரையில் இதனைக் காட்டி, "இக் குறிஞ்சிப் பாட்டினுள் வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற்போல வாடை செய்யும் நோயைத் தீர்க்க வந்தா னென்று உள்ளுறை உவமம் செய்தவாறு கண்டுகொள்க" என்பர் பேராசிரியர். மேலும், அவர் இதன் கண், பெருந்தண் வாடையின் முந்து வந்தோன் என்பது பிரிவன்றாகலின் ஈரிடம் என்ற (பாடம் கோட)லே வலிதென்பது என்பர். 253. குன்றக் குறவன் சாந்த நறும்புகை தேங்கமழ் சிலம்பின் வரையகங் கமழும் கானக நாடன் வரையின் மன்றலு முடையள்கொ றோழி யாயே. இது வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவொடு புகுதராநின்றான் என்பது தோழி கூறக் கேட்ட தலைமகள் அவட்குச் சொல்லியது. பழைய உரை : தேன் நாறுகின்ற மலைக்கண்ணே குறவன் சாந்த நறும்புகை கமழும் என்றது, நம் மனைக்கண்ணே செய்கின்ற சிறப்புக்கு மேலே மணவினையால் அவர் செய்யும் சிறப்பு மிகும்...... வண்ணம் விளைப்பாள்கொல் என்றவாறு. உரை : தோழி, குன்றத்துக்கண் வாழும் குறவன் எழுப்பிய சந்தனக்கட்டையின் நறிய புகை தேன் நாறுகின்ற சிலம்பின் பக்கமலையகத்தே மணம் வீசுங் காடுகளையுடைய நாடன் போந்து வரைந்துகொள்வானாயின், நம் அன்னை தன் மனை யின் கண்ணும் ஒரு வதுவைச்சிறப்புச் செய்தலை உடைய ளாவளோ? கூறுக என்றவாறு. என்றது, கானகநாடன் போந்து நம்மை வரைந்துகொள்ளுங் கால், நம் அன்னை வேறும் ஒரு மணவினையால் அவர் செய்யுஞ் சிறப்பினும் மிக்க சிறப்புச் செய்தலை உடைய ளாவளோ? அன்றி, தன் மனைக்கட் செய்யும் சிறப்பினால் அவர் சிறப்பு மிகுமாறு செய்வளோ? யாதோ? யான் அறியேன் என்பதாம். சாந்த நறும்புகை, சந்தனக் கட்டைகளை எரித்தலால் எழும் புகை. பாரியது பறம்பைப் பாடுங்கால், இந்நூலாசிரியர், இக்கருத்தே தோன்ற, "குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி, ஆர மாதலின் அம்புகை யயலது, சாரல் வேங்கைப் பூஞ்சினை கமழும், பறம்பு 1" என்பது காண்க. தலைமகன் வரைவொடு வந்தமை தோழி கூறக்கேட்டு மகிழ்ந்த உள்ளத்தளாய்த் தலைவி கூறுதலின், கானக நாடன் வரையின் என்றும், வரைவுக்கு உடன்படுதலோடு அமையாது மணநிகழ்ச்சியை இங்கே நிகழ்த்துதற்கும் விருப்ப முடைய ளாவள் என்பது தோன்ற, மன்றலும் உடையள்கொல் என்றும் கூறினாள். நம் அன்னை எனக்கு வதுவை நன்மணம் தன் அகத்தே நடைபெறுவித்தலை, விரும்பி, கானகநாடன் வரைந்து கொண்ட காலையும், அவனின் மிக்க சிறப்புச் செய்யும் கருத்தின ளாயினள் என்பாள், மன்றலும் உடையள்கொல் தோழி யாயே என்றாள். "எம்மனை முந்துறத் தருமோ, தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே 2" என்றும், "நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும், எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச், சொல்லின் எவனோ 1" என்றும் வருவனவற்றால், நற்றாய் தன் மகட்கு வதுவைச் சிறப்புத் தன்னகத்தே நிகழ்த்தும் விருப்ப முடை யளாதல் பெறப்படும். தேங்கமழ் சிலம்பின் வரையக மெல்லாம் குறவன் சுட வெழுந்த சந்தனநறும்புகையின் மணம் கமழும் நாடனாதலால், நம் மனைக்கட் செய்யப்படும் சிறப்புக்களினும், மணவினையால் தான் செய்யும் சிறப்பு மிகச் செய்வன் என்றவாறாம். 254. குன்றக் குறவ னார மறுத்தென நறும்புகை சூழ்ந்து காந்த ணாறும் வண்டிமிர் சுடர்நுதற் குறுமகள் கொண்டனர் செல்வர்தங் குன்றுகெழு நாட்டே. இஃது உடன்போக்கு உடன்பட வேண்டிய தோழி தலை மகட்குச் சொல்லியது. உரை : குன்றத்துக்கண் வாழும் குறவன் சந்தன மரத்தை அறுத்துச் சுட்டானாக, அதனுடைய நறுவிய புகை சூழ்ந்து காந்தள்மலர்களோடு மணம் கமழும், வண்டுகள் ஒலிக்கும் ஒளி பொருந்திய நுதலினையுடைய இளையமகளே, நின்னைத் தம் குன்றுகள் பொருந்திய நாட்டிற்கு உடன்கொண்டு செல்லத் துணிந்தன ராகலின், நீ நாணாது அதற்கு உடன்பட்டு எழுவாயாக என்றவாறு. சந்தனத்தின் புகையும் காந்தள் மலரின் மணமும் ஒருங்கு கமழ்தல் தோன்ற நறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும் என்றார். நறும்புகை சூழ்ந்து நாறும், காந்தள் நாறும் என இயைக்க. இனி, சூழ்ந்து என்பதனைச் சூழ என்பதன் திரிபு எனக் கொண்டு, நறும்புகை சூழ, காந்தள் நாறும் நுதல் என இயைத்தலும் ஒன்று. நுதல் காந்தள் நாறும் என்பதைப் பிறரும், "காந்தள் மென்பிணி முகையவிழ்ந் தலர்ந்த, தண்கமழ் புதுமலர் நாறும்நறு நுதற்கே 2" என்பது காண்க. மலரின் மணம் கமழும் நுதலாதலின், அதனை வண்டு மொய்த்து அரற்றுவதாயிற்று என்பார், வண்டிமிர் சுடர்நுதல் என்றும், இயற்கை யறிவின் செவ்விய ஒளி திகழ் வதுபற்றிச் சுடர் நுதல் என்றும் கூறினர். "அறிவும் அருமையும் பெண்பா லான 1" என்பர் ஆசிரியர். உடன்போக்குத் துணிந்தவன் செல்லுதல் ஒருதலையாகலின் செல்வர் என்றாள். நின் தமர் மகட்கொடை மறுத்தமையின், வேறே செயல்வகை இன்மையான் காதலர் தம்மோடு கொண்டு தலைக்கழிதலைத் துணிந்து வந்தன ரென்பதற்கு, கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே என்றாள். உள்ளுறையால் விளைவு கூறித் தேற்றுகின்றா ளாகலின், நாணழிவு நினைந்து வருந்தற்க என்பது குறிப்பாற் பெறவைத்தாள். குன்றக்குறவன் சந்தன மரத்தை அறுத்துக் கொணர்ந்து சுடுதலால் எழுந்த புகை காந்தளின் மணத்தை நாற வண்டுகள் ஆரவாரிக்கும் என்றது, தலைமகன் நின்னை இவணின்று உடன் கொண்டு சென்று தன் மனைக்கண் வதுவை நன்மணம் அயரும் சிறப்பைத் தமர் கேட்டு மகிழ்வரென உடன்படுத்தியவாறாம். 255. குன்றக் குறவன் காதன் மடமகள் வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள் ஐய ளரும்பிய முலையள் செய்ய வாயினண் மார்பினள் சுணங்கே. இது நின்னாற் காணப்பட்டவள் எத்தன்மையள் என்ற பாங் கற்குத் தலைமகன் சொல்லியது. உரை : குன்றத்துக்கண் வாழும் குறவனுடைய அன்புடைய மகள், வரைக்கட் போந்தாடும் அரமகளிர் போலும் சாயலும், அழகும், மலரரும்பு போலும் முலையும். சிவந்த வாயும், தேமல் படர்ந்த மார்பும் உடையள்; ஆகலின், நீ அவளைக் காணின் என்னைக் கழறி யுரையாய் என்றவாறு. குடிப்பிறப்பும் தலைமையும் தோன்றக் குன்றக் குறவன் காதல் மடமகள் என்றார். மடமகள், சாயலள், ஐயள், முலையள், வாயினள், மார்பினள் ஆவள் என முடிக்க. ஐ - அழகு. ஏனை மகளிர் கண்டு வியக்கத்தக்க அழகுடைமை பற்றி ஐயள் என்றார். காமச்செவ்வி எய்திய மகளிர்க்கு மார்பின்கண் பரந்து தோன்றும் தேமல் சுணங்கு எனப் பட்டது. அரும்பு போல்வதனை அதன் வினைப்படுத்து அரும்பிய முளையள் என்றார். ஆகலின் முதலியன குறிப்பெச்சம். குன்றக் குறவன் மகள் தன்னால் காதலிக்கப்படும் மடப்பமும் காமச்செவ்வியு முடையள் என்பது தோன்றக் காதல் மடமகள் என்றும், இயற்கைப் புணர்ச்சி பெற்ற விடத்து, அவள் தன் ஆயவெள்ளம் வழிபடச் சென்று சேரக் கண்டு அவளுடைய அருமையையும், ஆயவெள்ளத்தின் மிகுதியையும் நோக்கிப் பெறலரியள் என எண்ணி மயங்கினா னாகலின் வரையர மகளிர்ப் புரையும் சாயலள் என்றும் கூறினான். அருமைக்கு வரையர மகளிரைக் கூறுதல் மரபு. பிறரும், "கெடாஅ நல்லிசைத் தென்னன் தொடாஅ, நீரிழி மருங்கிற் கல்லளைக் கலந்த அவ் வரையர மகளிரின் அரியள் 1" என்பது காண்க. சாயற்கு மயிலைக் கூறாமையும் இக்கருத்தே பற்றி யென அறிக. முலையும் வாயும் மார்பும் கூறியது, தன் பெருவேட்கையை உணர்த்தற்கு. வரையர மகளிர் போலும் சாயலள் என்றது வரையரமகளிர் விளையாட்டயரும் மலைப்பக்கமென இடமும், அரும்பிய முலையள், செய்ய வாயினள், மார்பினள் சுணங்கே என்றது இயலும் கூறியவாறு. இயற்கைப்புணர்ச்சி எதிர்ப் பாட்டின்கண், தான் அவளை மக்களினத்து மகளோ, தெய்வமகளோ என ஐயுற்றுத் தெளிந்தா னாகலின், முதற்கண் குறவன் காதன் மடமகள் என்றும், தெய்வமகளோ என மயங்குதற்குக் காரணமாயிருந்த சாயலைப் பின்னர், வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள் என்றும் கூறினான் எனக் கொள்க. 256. குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்றள் இளைய ளாயினு மாரணங் கினளே. இது நீ கூறுகின்றவள் நின்னை வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குத் தலைமகன் சொல்லியது. உரை : குன்றத்துக்கண் வாழும் குறவனுடைய அன்புடைய மடப்பம் பொருந்திய மகள் வண்டுகள் மொய்க்கும் கூந்தலை யும் குளிர்ந்த தழையையு முடைய கொடிச்சியாவாள்; அவள் வளை அணிந்து முளைபோல் ஒளிவிடும் பற்களையுடைய இளையவ ளாயினும் கண்டார்க்குத் தடுத்தற்கரிய வருத் தத்தைச் செய்யும் அணங்கேயாவள் என்றவாறு. கொடிச்சி - குறிஞ்சிநிலத்து மகளிர்க்குப் பெயர்; "தேனாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை 1" என்றும், "குறவர் மகளிரேம் குன்றுகெழு கொடிச்சியேம் 2" என்றும் கூறுதல் காண்க. முளை வாள் எயிற்றள் என்றவிடத்து, முளை கூர்மையும்; வாள் ஒளியும் குறித்தன. வளையும் எயிறும் இளமை விளங்க நின்றன. அணங்குபோல் கண்டார்க்கு வருத்தம் செய்வதுபற்றி அணங் கினள் என்றார். "ஆயும் அறிவின ரல்லார்க்கு அணங்கு என்ப 3" என்பதனால் இது பொருளாதல் தெளிக. உம்மை, தெரிநிலை; ஏகாரம்: தேற்றம். கூந்தல் முடித்தல், தழையறிந் தணிதல், மொழி நிரம்புதல் முதலியன இல்லாத இளம்பருவத்தள் எனத் தலைமகளது இளமை கூறித் தன்னை மறுத்த தோழிக்கு, "நன்மல ராய்ந்தணியுங் கூந்தலும், மேதக்க தழையணியும் மதுகையும் உடையளாயி னாளை" வருத்தும் பருவத்த ளல்லள் எனல் ஆகா தென்பான், வண்டுபடு கூந்தல் தண்டழைக் கொடிச்சி என்றான். மேலும், முளைவாள் எயிறும், இளமையுமுடையள் என்று தோழி கூறிய தனையே கொண்டு, அப்பெற்றிய ளாயினும், தனக்கு உரித் தல்லாத அணங்குதற் றன்மை மிக்குடையளாய்த் தன்னாற் காணப்பட்டாரை வருத்துமாறு வல்லளாயினாள் என்பான், இளைய ளாயினும் ஆரணங்கினளே என்றான். இது வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.4 இனி, இளம்பூரணர். "பண்பிற் பெயர்ப்பினும் 5" என்பதற்கு இதனைக் காட்டினாராக, "இஃது இளையள் எனப் பெயர்த்துழித் தலைவன் கூறியது 1" என்றார் நச்சினார்க்கினியர். 257. குன்றக் குறவன் கடவுட் பேணி இரந்தனன் பெற்ற வெல்வளைக் குறுமகள் சேயரி நெடுங்கண் கலிழச் சேயதாற் றெய்யநீ பிரியு நாடே. இது வரைவிடை வைத்துப் பிரிவல் என்ற தலைமகற்குத் தோழி உடன்படாது கூறியது. உரை : குன்றத்து வாழும் குறவன் தான் கடவுளை இரந்து வழி பட்டுப் பெற்ற, விளங்குகின்ற வளை அணிந்த இளையவ ளாகிய இவளுடைய சிவந்த அரி பரந்த நீண்ட கண்கள் நீர் சொரியுமாறு, நீ பிரிந்து செல்லும் நாடு சேய்மைக்கண்ண தாகலின், இவள் நின் பிரிவை ஆற்றாள் என்பதறிக என்றவாறு. குறவரிடையே பெண்மக்கட் பேறு அரிதாகலின், அவ் வருமை தோன்றக் கடவுட் பேணி இரந்தனன் பெற்ற குறுமகள் என்றார். ஆடவருள் ஆண்மை வளம் மிக்குற்றார்க்குப் பெண்மகப்பேறு அரிதாம் என்பது இன்றைய விஞ்ஞான நெறி யில்2 கண்டது. பிரிவின்கண் ஆற்றாமையை முற்படக் காட்டு தலின், நெடுங்கண் கலிழ என்று எடுத்துரைத்தார். வரைவிடை வைத்த பிரிவு சேய்மைக்கண் செல்லும் செலவின் மேலதாதல் அறமன்மையின், சேயதென அதனை ஏதுவாக்கிக் கூறினார். தெய்ய: அசைநிலை. தந்தை தவம் செய்து பெற்றுத் துன்ப மறியாமை வளர்த்தான் என்பாள், குன்றக் குறவன் கடவுட் பேணி, இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள் என்றும், எனவே, அவள் சிறிது துன்பம் எய்தினும் பொறாள் என்றற்குச் சேயரி நெடுங்கண் கலிழ என்றும், நீ பிரிந்து செல்லின் விரைவின் மீளுதல் ஆகா தாகலின் இவள் ஆற்றாது இறந்து படுவாள் என்பாள், சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே என்றும் கூறினாள். சேயரி நெடுங்கண் கலிழ என்றது துன்பத்துப் புலம்பல். ஆயரி நெடுங்கண் என்றும் பாடமுண்டு. 258. குன்றக் குறவன் காதன் மடமகள் அணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரையு மாயின் கொடுத்தனெ மாயினோ நன்றே கெடுத லானாது நன்னுத றுயரே. இது வரைவு வேண்டிவிட மறுத்துழித் தோழி தமர்க்குரைப் பாளாய்ச் சொல்லியது; வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி அவன் மலைகாண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லிய தூஉமாம் 1. உரை : குன்றக் குறவனுடைய அன்புடைய மடமகளாகிய அழகிய மயில் போன்ற, அசைந்த நடையினையுடைய கொடிச்சியைப் பெரிய மலைநாடன் வரைந்து கொள்வா னாயின், அவற்கு நாம் மகட்கொடை நேர்ந்தேமாயின் நன்றாம்; இன்றேல், நல்ல நெற்றியையுடைய இவளுடைய துயர் கெடாது மிகுமாகலான் என்றவாறு. கொடி போலும் மகளிர்க்கு நடையில் அசைவு இயல்பாய் அமைந்து அழகு செய்தலால், அசைநடைக் கொடிச்சி என்றார். "அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி 2" என்று பிறரும் கூறுதல் காண்க. ஓகாரம் அசைநிலை. காதல் மாட்சிமைப்படுவது குறித்துத் தலைமகன் களவே விரும்பி வரையாது ஒழுகினானாக, தலைமகள் நுதல் பசந்து மேனி வேறுபட்டு எய்திய துயரத்தை நன்னுதல் துயர் என்றும், தலைமகனது பெருமையும் தகுதியும் தோன்ற, பெருவரை நாடன் வரையும் ஆயின் என்றும், அவன் வரைவு வேண்டி விட்டவழி அவனது பெருமையும் இவளது துயரும் நோக்காது தமர் மகட்கொடை மறுப்பது நன்றன்று என்பாள், கொடுத்தனெ மாயினோ நன்று என்றும், மறுப்பின், இவள் துயர் கெடுவதின்றி இவட்கு இறந்துபாடு எய்துவிப்பது ஒருதலை என்பாள் கெடுதல் ஆனாது என்றும் கூறினாள். "சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது, வான்றோய் வன்ன குடிமையும் நோக்கித், திருமணி வரன்றும் குன்றங் கொண்டுஇவள், வருமுலை யாகம் வழங்கினோ நன்றே 1" என்று பிறரும் கூறுவது காண்க. இரண்டாவதாய் நிற்கும் துறை பொருளாயின், தலைமகன் விரைந்து வரைதல் வேண்டும் என்றற்கு வரையுமாயின் என்றும், தமர் மகட்கொடை மறாது நேர்வர் என்பது தோன்றக் கொடுத் தனெ மாயினோ நன்று என்றும், வரைவு நீட்டித்தலால் தலைவியது துயர் கெடாது மிகுவதாயிற்று என்றற்குக் கெடுத லானாது நன்னுதல் துயர் என்றும் கூறியவாறாகக் கொள்க. வரையாதொழுகும் தலைவனைப் பெருவரை நாடன் எனச் சிறப்பித்தது, நாடனது வரை தன் பெருமையால் தலைவிக்குக் காட்சி தந்து அதுவே பற்றுக்கோடாக வாழச்செய்த மாண்பு பாராட்டி என்க. இன்னு மாறாது நன்னுதல் துயரே என்றும் பாடமுண்டு. தலைமகன் வரைவுவேண்டி விட்டமை கண்ட பின்னும் துயர் அமையாது என்றும், மாறாது என்ற பாடத்துக்குத் துயர் நீங்காதாயிற்று என்றும் உரைக்க. இனி, "நாற்றமும் தோற்றமும் 2" என்ற சூத்திரத்து "அவன் வரைவு மறுப்பினும்" என்புழி நிகழும் கூற்றுக்கு இதனைக் காட்டு வர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். 259. குன்றக் குறவன் காதன் மடமகள் மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலையுறை கடவுட் குலமுதல் வழுத்தித் தேம்பலிச் செய்த வீர்நறுங் கையள் மலர்ந்த காந்த ணாறிக் கலிழ்ந்த கண்ணளெம் மணங்கி யோளே. இது வரையத் துணிந்த தலைமகன், வரைவு முடித்தற்குத் தலைமகள் வருந்துகின்ற வருத்தம் தோழி காட்டக் கண்டு இனி அது கடிதின் முடியுமென உவந்த உள்ளத்தனாய்த் தன்னுள்ளே சொல்லியது. உரை : குன்றக் குறவனுடைய அன்புற்ற மடமகள் மன்றத்து நின்ற வேங்கைமலருட் சிலவற்றைக் கொண்டு மலையின்கண் உறையும் கடவுட்கு எடுத்த கோயிலில் எழுந்தருளும் முதற்பொருளாகிய இறைவனை வழிபட்டு இனிய பலியிட்டுக் குளிர்ந்த நறிய கையினையும், மலர்ந்த காந்தளின் மணம் வீசும் நீர் சொரிந்த கண்ணையு முடையளாய் எம்மை வேட்கை மிக்கு வருந்தச் செய்தாள்; ஆகலின் இவளை இனி விரைவில் வரைந்து கோடல் இயலும் காண் என்றவாறு. மடமகள் வழுத்திக் கையளாய்க் கண்களால் அணங்கினாள் என இயைக்க. ஊர்நடுவே அமைந்த மன்றத்தின்கண் நிற்பதுபற்றி வேங்கை மரத்தை மன்ற வேங்கை என்றார். கடவுட்குலம், கோயில். இது தேவகுலம் எனவும் வழங்கும்; "ஊரானோர் தேவகுலம்" என்றாற்போல. முதல் என்றது கோயிலின்கண் எழுந்தருளும் முதற்பொருளாகிய மலைக்கடவுள் தேனாகிய பலி தேம்பலி எனப்பட்டது. வேங்கைப்பூ. பூப்பலியும் குறவர் ஈட்டிய தேன் தேம்பலியு மாயின. தேன் சொரிந்து பூவிட்டு வழிபட்ட மையின், கையை ஈர்நறுங்கை என்றார். கூந்தற்குக் காந்தள் மணம் இயற்கை; "காந்தள் நாறும் குறுமகள் 1" என்றமை காண்க. மனமுருகி வழிபட்டமையின், கண்கள் நீர் சொரிந்தமை பற்றிக் கலிழ்ந்த கண்ணள் என்றார். குறவரது கடவுள் மலையில் உறையும் என்பது, "அணங் கொடு நின்றது மலைவான் கொள்கெனக், கடவுள் ஓங்குவரை பேண்மார் 2" என்பதனாலும் அறிக. பிரியேன் எனச் சூளுறவு செய்தவன், பிரிந்து தன்னை ஆற்றாமையால் மெலியச் செய்தமையான், அவற்குத் தீங்கு வருமென்று அஞ்சிக் கடவுளைப் பரவுகின்றா ளாகலின், கடவுட் குலமுதல் வழுத்தித், தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள், மலர்ந்த காந்தள் நாறிக், கலிழ்ந்த கண்ணள் என்றாள். கற்புடைய மகளிர் பிற தெய்வம் தொழும் கடப்பாட்டின ரல்லராயினும், பிரியேன் என்றவன் பிரிந்த கொடுமை பற்றி "மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள், கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங், கொடிய ரல்லர்எங் குன்றுகெழு நாடர் 1" என வேண்டுதலின் அமைந்ததாம். அன்றி, வரையாது வைத்துப் பிரிந்தவன் குறித்த காலத்தில் வந்தெய்தி விரைவில் வரைதல் வேண்டுமெனக் கடவுட்குப் பலியிட்டுப் பரவினள் எனினு மாம். "யாமும், வல்லே வருக வரைந்த நாளென, நல்லிறை மெல்விரல் கூப்பி, இல்லுறை கடவுட் கோக்குதும் பலியே 2" என்றார் பிறரும். தலைப்பெய்த விடத்தன்றி மற்றைய போதுகளில், அவள் நினைவு தன் மனத்தே தோன்றி வேட்கை மிகுவித்து வருத்துதலின், அணங்கியோள் என்றும், என்பொருட்டு இயன்ற காதலால் கடவுட் குலமுதல் வழுத்தி வழிபடும் அவள் உடன்போக்கு வலிப்பினும் உடன்படுவா ளென்றும், அதனால் தான் அவளை வரைதல் விரைவின் முடியு மென்றும் மகிழ்கின்றான் என்பதாம். 260. குன்றக் குறவன் காதன் மடமகள் மென்றோட் கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல பைம்புறப் படுகிளி யோப்பலள் புன்புல மயக்கத்து விளைந்தன தினையே. இது பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி இனிப் புனம் காவற்கு வாரேம் எனக் கூறி வரைவு கடாயது. பழைய உரை : விளைந்தன என்றது முற்றின என்றவாறு. 3 உரை : புன்செய்க்கண் உழுது புழுதி செய்யப்பட்ட நிலத்து வித்திய தினை முற்றினமையான், அதனை அறுத்து மனைக்கட் சேர்ப்ப ராகலின், பசிய புறத்தையுடைய கிளிகளை ஒப்புதல் செய்யாள்; ஆகவே, குன்றக் குறவனுடைய அன்பு மிக்க மடமகளாகிய, மெல்லிய தோள்களையுடைய கொடிச்சியை இனிப் பெறுதற்கு அரிது காண் என்றவாறு. தினை விளைந்தன; கிளி ஓப்பலள்; ஆகலின், பெறற் கரிது தில்ல எனக் கூட்டி வினைமுடிவு செய்க. புன்புல மயக்கம், காடு கெடுத்து நிலங்கண்டு புழுதியுற உழுது பண்படுத்திய புன்செய் நிலம்; "கானவர், கரிபுன மயக்கிய அகன்கட் கொல்லை 1" என்பது காண்க. பசுமை நிறம் உடைமை பற்றிக் கிளியைப் பைம்புறப் படுகிளி என்றார். படுதல் - ஈண்டுத் தினைப்புனத்தே தோன்றிக் கதிர்களை மேய்தல். தில்ல: அசைநிலை: இதுகாறும் பெற்றுப் போந்த கூட்டம் இனிக் கழிந்தது என்பது பட நிற்றலின், ஒழியிசையுமாம். தினை விளைந்து முற்றாதவழி யாம் கிளி கடிவேமாய் நின்னைத் தலைப்பெய்வேமாக, நீயும் அவளைப் பெற்று மகிழ் வாயாயினை; அவள் இனி இப்புனம் வாராள் என்பாள், பைம் புறப் படுகிளி யோப்பலள், புன்புல மயக்கத்து விளைந்தன தினையே என்றாள், எனவே குறிப்பால் யாம் கிளி கடிந்து பேணிய தினை முற்றிப் பயன் தந்தாங்கு, நீ இவளைத் தலை பெய்து கொண்ட நின்நட்பு வரைவால் சிறப் பெய்துதல் வேண்டும் என்று கூறினாளாம். தினை விளைவினால் தலைமகன் பெறுதற்கு அரிதா யொழிந்த கூட்டத்திற்கு இரங்குவாள், மென்றோள் கொடிச்சி என்றாள். "நாற்றமும் தோற்றமும் 2" என்ற சூத்திரத்துக் "காதல்மிகுதி யுளப்படப் பிறவும்" என்புழிப் பிறவும் என்ற இலேசினால் இதனை அதன்கண் அமைப்பர் இளம்பூரணர். "இது, புனங் காவல் இனி இன்று என்பது" என்பர் நச்சினார்க்கினியர். 27. கேழற்பத்து கேழல் என்பது காட்டுப்பன்றி. குறிஞ்சி நிலத்தில் வாழும் விலங்குகளுள் இது பொருளாக இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்கள் அமைந்திருப்பது பற்றி இப்பத்து இப்பெயரினைப் பெறுவதாயிற்று. மக்கள் வாழும் இடங்களில் ஒருசிலரால் வளர்க்கப்பெறும் பன்றியினத்தைச் சேர்ந்தது கேழல். ஒருகாலத்தில் இப்பன்றிகள் யாவும் காடுகளில் வாழ்ந்து வந்தன. 5000 ஆண்டுகட்கு முன்பே மக்கள் பன்றிகளைப் பிடித்து வளர்க்கும் பழக்கம் சீனாவில் உண்டாகியிருக்கிறது. மேனாட்ட வர்க்கு கி.மு. 1500 ஆண்டு அளவில் பன்றியாகிய இவ்விலங் குண்மையே தெரிய வந்தது. பன்றியினத்திற் பல்வேறு வகைகள் இருந்துள்ளன. அவை பெரும்பாலும் மக்களால் அழிப்புண்டு ஒழிந்தன. இப்போது இருவகைப் பன்றிகளே நிலவுலகில் வாழ்கின்றன. நம் நாடுகளில் வாழ்ந்தனவும் வாழ்வனவும் ஒரு வகை1. அமெரிக்கப் பன்றி வெள்வாய்2 என்றும் மிடற்றணி3 என்றும் இருவகையாகும். இவை இரண்டனுள் வெள்வாய்ப் பன்றி கொடுமையுடையது; மிகக் கூரிய கோடுகொண்டு மக்களுக்குப் பெருந்தீங்கு செய்ய வல்லது. சில போதுகளில் இவை வேட்டை நாய்களையே தாக்கி நார் நாராய்க் கிழித்தெறிந்து விடுவதும் உண்டு. ஏனை மிடற்றுப் பன்றி அத்துணைக் கொடுமையுடையதன்று. இருவகையும், பழவகை களையும் கிழங்குகளையும் தின்று உயிர் வாழ்வன. பிற விலங்கு கள் செய்துள்ள வளைகளிலும் மரப்பொந்துகளிலும் இவை உறைகின்றன. அமெரிக்கப் பன்றியின் இனமல்லாத ஏனைப்பன்றிகள் அமெரிக்க நாடுகளின் வேறான ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆத்திரேலியா என்ற இந்த நாடுகளில் வாழ்கின்றன. நம் நாட்டுக் கேழல் இந்த இனத்தைச் சேர்ந்தவை. இவை நம் நாட்டுக் காடுகளிலும் காணப்படுகின்றன. கிழக்கிந்தியத் தீவுகளில் ஒரு வகைப் பன்றிகள் உண்டு. அவற்றிற்கு நான்கு கோடுகள் கலைமான் கொம்பு போல் வளைந்து தோன்றுகின்றன; அவற்றின் காலும் மெல்லியவாய் நீண்டிருக்கும் ஆணுக்கு நான்கு கோடு உண்டு. அதனால் அவற்றைக் கலைப்பன்றி 4 என வழங்குகின்றனர். அவை நன்கு நீந்தவும் வல்லன; ஒரு தீவுக்கும் மற்றொரு தீவுக்கும் இடையில் உள்ள கடற் பகுதியை மிக எளிதில் அவை நீந்திச் செல்கின்றன. ஆப்பிரிக்காவில் சகாராவின் தென்பகுதியில் சில கேழற் பன்றிகள் வாழ்கின்றன. அவற்றுள் சில மிக நல்லனவாகும். ஒருசில கொடியனவும் உண்டு. நீண்ட வாலும் பருத்த உடலும் உடைய அவை பெரிய பெரிய கோடுகளைக் கொண்டுள்ளன. பிற விலங்குகள் குடைந்து விட்டுச் சென்ற மண்ணளைகளில் இப்பன்றிகள் புகுந்து வாழும். இந்தப் பன்றி மண்ணளைக்குள் புகும்போது தன் முகத்தை வாயிற் புறமாக வைத்துப் பின்புற மாகவே அளைக்குள் செல்லும்; அவ்வாறு செய்வது, பகையுயிர் ஏதேனும் தன்னைத் தொடர்ந்து வரின் அதனை எளிதில் தாக்குதற் காகவேயாம். சென்ற 1904-ஆம் ஆண்டு இத்தகைய பன்றி யினத்தில் மிகப் பெரிய ஒன்று ஆப்பிரிக்காவில் காணப்பட்டது. மேனாடுகளின் சில பகுதிகளில் இக் கேழலினம் மறைந்து போயின. பிரிட்டன் தீவுகளில் இவை நானூறு ஆண்டுகட்கு முன்பே மறைந்து போயின. ஐரோப்பாவில் சதுப்புநிலப் பகுதி களில் ஒருசில அருமையாய்க் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் பிரிட்டன் தீவுகளில் கேழல்களை வேட்டை யாடும் உரிமை ஒருசிலர்க்கே இருந்தது. பன்றி வேட்டை யாடுதலைப் பாராட்டி மேனாட்டுப் பாவலர் பாட்டுக்கள் பல பாடியுள்ளனர். கிறித்துவ விழாவில் பன்றியின் தலைக்கு நன் மதிப்பு உண்டு; அவ்விழாவில் பன்றியின் தலைவன் பொருளாகப் பெருமிதமான செயற் சிறப்பும் பாராட்டும் நடைபெறுமாம். போர்வீரர் மறத்துக்குப் பன்றி நல்ல எடுத்துக்காட்டாதலு முண்டு. கேழல் வேட்டம் புரிவோர் குதிரை யூர்ந்தும் வேட்டை நாய் களைத் துணைகொண்டும் செல்வர். இனி நம் நாட்டுக் கேழற் பன்றிகளைக் காண்போம். நம்நாட்டு மலைக்காடுகளில் இக்கேழல் தன் னிச்சையில் வளர்ந்து கொழுத்து உடல் வளத்திலும் மெய்வன்மையிலும் உருவமைப்பிலும் சிறிது வேறுபட்டுள்ளது. அதன் கீழ்வாயில் முன்னே இருபற்கள் கோடுபோல் மேல்வாய்க்குமேல் வெளியே நீண்டு மிக்க கூர்மையும் பெருவன்மையும் கொண்டுள்ளன. அதன் உடல்மயிர் கரியநிறமும் வன்மையும் உடையது. பிடரி மயிர், ஏனை உடற் பகுதிகளில் உள்ளவற்றினும் வலி மிகுந்து இருப் பூசிபோல் நிமிர்ந்து நிற்கும். ஊர்ப்புறங்களில் வாழும் பன்றிகளினும் காட்டுப் பன்றி யாகிய கேழல்கள் உடல் வன்மையிலும் விரைந்த செலவிலும் மேன்மையும் சிறப்பும் உடையவை. மூன்றடி உயரமும் நாலரை யடி நீளமும் உடையனவும் இவற்றுள் உண்டு. இவை எருமை போலச் சேற்றுநிலத்திலும் புல்லும் புதலும் நிறைந்த நீர்ப் பாங்குகளிலும் வாழும் இயல்பின. பகற்போதில் ஞாயிற்றின் வெம்மையை விரும்பாது இருட்செறிவுகளில் வீழ்ந்து கிடந்து இருட்போதுகளில் இரை தேடி யுண்பது இவற்றின் மாண்பு. இவற்றுள் முதுமையுற்றவை மட்டில் தனித்து உறையும்; ஏனை யவை கூட்டத்தில் இருக்கும். பன்றியின் பெண் ஒருகாலத்தில் ஆறுமுதல் பத்துக் குட்டி களை ஈனும் என்ப. பெண்ணினும் ஆணே கொடுமை மிகுந்த தெனினும், புனிறு தீராக் காலையில் பெண்பன்றியின் வெம்மை யும் கொடுமையும் சிறந்து தோன்றுகின்றன. கேழற்குட்டிகள் மிக்க மென்மையுடையவை யாதலின், அவற்றை நாடி உண்டற்கு பகையுயிர்கள் பல வேட்டையாடுகின்றன. ஒரு பன்றி பல குட்டிகளை ஈன்றதாயினும் முடிவில் எஞ்சி நிற்பன ஒன்று இரண்டே. பன்றிக்குருளையின் உடலில் மெல்லிய வரிகள் பல காணப்படும். நம் தமிழகத்தில் கேழல்கள் குறிஞ்சி முல்லையாகிய இரு பகுதிகளிலும் மிகுதியாக இருந்துள்ளன. பாலைப் பகுதியில் மிக அருமையாக உளது. இதன் கரிய நிறமும் பிடரிமயிரும் கண்ட சான்றோர் "இரும்பிணர் எருத்தின் இருள்துணிந் தன்ன, ஏனம் 1" என்று குறிக்கின்றார். இது பெரும்பாலும் இரவுப்போதில் இரைதேடித் திரிவதாகலின், இதன் கட்பார்வையை வியந்து "கடுங்கட் கேழல் 2" என்றும், இதனுடைய வளைந்த பல் யானைக் கோடு போலத் தோன்றுவது பற்றி மருப்பு என்றும் கூறுவர்; "வளைமருப்பு ஏனம் 3" என்றும் "கேழல் வளை மருப்பு 4" என்றும் "வளை வெண் மருப்பின் கேழல் 5" என்றும் பண்டையோர் வழங்குவது காண்க. கேழற் பன்றியின் கரிய முகத்தில் வெண் ணிறம் கொண்டு வளைந்து தோன்றும் மருப்பை, அகத்திப் பூவோடும் இளம்பிறையோடும் உவமஞ்செய்து இன்புறுவது தமிழ்ப்புலமைச்செல்வத்தின் செயல்வகையுள் ஒன்று : "புகழா வாகைப் பூவின் அன்ன, வளைமருப் பேனம் 1" எனவும் "இளம் பிறை யன்ன கோட்ட கேழல் 2" எனவும் வருவனவற்றால் அறிக. குறிஞ்சி நிலத்தில் வாழும் புனவர்கட்கு இக்கேழல்கள் ஒருவகையில் உதவியாகவும் பல வழிகளில் பகையாகவும் இருந்துள்ளன. தினைப்புனங்கள் தினை விதைப்பதற்குமுன் கரம்புபட்டுக் காந்தளும் கோரைப்புல்லும் செறிந்திருக்கும். புதுப்பெயல் பொழிந்ததும், இக்கேழல் அப்புனத்துள் புகுந்து காந்தள் முதலியவற்றின் கிழங்குகளை அகழ்ந்து உண்ணும்; அதனால் புனக்கொல்லை முழுதும் நன்கு உழுததுபோல் புழுதி யாய்விடும்; அது காணும் புனவர், வேர் அறுந்து வாடிக் கிடக்கும் காந்தள் முதலியவற்றைக் களைந்து விட்டுத் தினை விதைத்தற் குரிய காலம் எய்தியதும் உழாமலேயே அத் தினையை விதைத்து விடுவர்; தினையும் அவ்வழியே நன்க வளர்ந்து விளைந்து சிறக்கும். "மலர்ந்த காந்தள், கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு, கடுங்கட் கேழல் உழுத பூழி, நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர், உழாது வித்திய சிறுதினை 3" என்றும், "கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பில், தலைவிளை கானவர் கொய்தனர் பெயரும் 4" என்றும் அறிஞர் அறிவிப்பது காண்க. தான் கிழங்கு அகழ்ந்து செய்த பூழியில் புனவர் வித்தி விளைக்கும் தினையைக் காணும்போது தனக்கு அதனை உண் டற்கு உரிமையுண்டு என்று கருதினாற் போல, இரவுப்போதில் அது தன் கிளை சூழ வந்து தினையை மேய்ந்தழிப்பது உண்டு; "மென்றினை மேய்ந்த தறுகட் பன்றி 5" "நன்பொன் னன்ன புனிறுதீர் ஏனல், கேழல் மாந்தும் 6" எனச் சான்றோர் குறிப்பன காண்க. இவ்வாறு தாம் விளைக்கும் தினைக்கு ஊறுசெய்து அழிப்பது பற்றிக் கானவர் இப்பன்றியை வேட்டம் புரிந்து கொல்லுதலை மேற்கொண்டனர். தொகை நூல்களில் பன்றியை உணவு குறித்து வேட்டை யாடுவது அருகியே உளது. பன்றியை வீழ்த்தற்குப் பெருங்கற்களின் இடையே பொறி யமைத்து வைப்பதும் உண்டு. இதனை "விளைபுனம், நிழத்தல் அஞ்சிப் புழைதொறும் மாட்டிய, இருங்கல் அரும்பொறி உடைய ஆறே1" என்றும் "தினையுண் கேழல் இரியப் புனவன், சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் 2" என்றும் வருவனவற்றால் அறியலாம். காட்டுயானை களைப் பிடிப்பதற்குச் செய்வது போல், இவற்றையும் வரும் வழியில் குழிகள் அமைத்து அவற்றுள் வீழ்வித்துக் கொல்வது பண்டு குறவர் கொண்டிருந்ததொரு நெறி. "சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின், வீழ்முகக் கேழல் அட்ட பூசல் 3" என மாங்குடி மருதனார் குறிக்கின்றார். நீர் நிலைகட்கு நீர் அருந்த வருங்கால் ஆங்கே ஒளித்திருந்து இவற்றைத் தாக்கியும் கொல்வதுண்டு; "வான்மடி பொழுதில் நீர்நசைஇக் குழித்த, அகழ்சூழ் பயம்பின் அகத்தொளித் தொடுங்கிப், புகழா வாகைப் பூவின் அன்ன, வளைமருப் பேனம் வரவுபார்த் திருக்கும், அரைநாள் வேட்டம் 4" என்பதனால் இது தெளியப்படும். இக்கேழல்களைச் செந்நாய்க்கூட்டமும் புலியும் மிகவும் விரும்பிக் கொன்று தின்கின்றன. "செந்நாய் கேழலைக் கொன்று குருதி சொரிய ஈர்த்தேகும் எனவும் அக்குருதியைக் கழுகினம் இருந்து அருந்து மெனவும் 5" புலியேறு கேழலைத் தாக்கி வீழ்த்துங்கால் அது வலத்தில் வீழாது இடப்பக்கத்தே விழு மாயின், "புலி அன்ற உண்ணாது கழியு மெனவும் 6" "செந்நாய் தன் பிணவின் பொருட்டு இக்கேழலை வேட்டம் புரியுமெனவும் 7" சான்றோர் பலவகையில் பாடியுள்ளனர். இப்போது கேழற் பன்றியின் ஊனை மக்களிற் பலர் உண்கின்றனர். உலகிலுள்ள கொடிய விலங்குகளில் நம்நாட்டுக் கேழற் பன்றியே தலையாயது என்று உயிர் நூலறிஞர் உரைக்கின்றனர். பகையினத்தால் மிகப்பெரும் புண்பட்ட போதிலும் வாய்த்த விடத்து மக்களையும் குதிரைகளையும் பெரிய களிற்றியானை களையும் ஒரு சிறிதும் தயக்க மின்றித் தாக்கும் தறுகண்மையால் இக்கேழல்கள் சிறந்து விளங்குகின்றன. பெருங்குதிரை யொன்று சிக்கிக் கொள்ளின் அதனை ஒரே குத்தில் இரண்டாய்ப் பிளந் தெறிந்துவிடும் இப்பன்றி விரைவாக ஓடக் கூடியதே; ஆயினும் நெடுந்தொலைவு இதனால் ஓட இயலுவதில்லை. 200 ஆண்டுகட்குமுன் ஐரோப்பியர் நம்நாட்டில் வந்து இடம்பெற்ற போது இக்கேழற்பன்றியை வேட்டையாடத் தொடங்கினர். தொடக்கத்தில் கரடிகளை வேட்டையாடி வந்தோர், அவற்றின் தொகை குறைந்து போகவே இப்பன்றிகளை வேட்டையாடத் தொடங்கினர். மேனாட்டார் குதிரை யூர்ந்து வேட்டைநாய்கள் துணை செய்ய இக்கேழல்களை வேட்டை யாடுவர். அவர்கள் எறியூசி கொண்டு முதலில் வேட்டையா டினர்; அதன் பின் ஐந்தடி நீளமுடைய எறிவேல் கொண்டு வேட்டையாடுவாராயினர். பிரிட்டன் நாட்டில் நடக்கும் நரி வேட்டை போலவே இவர்கள் இவ்வேட்டையாடலைச் செய் தனர். இப்பன்றி வேட்டைக்கெனக் கழகங்கள் நிறுவிப் போட்டிப் பந்தயங்கள் நடத்தினர். அவற்றுள் 1869-ஆம் ஆண்டு நடந்த பன்றிவேட்டையே சிறந்ததாகப் பாராட்டிக் கூறுகின்றனர். 1800 ஆண்டுகட்குமுன் கானவன் ஒருவன் பன்றி வேட்டம் புரியச் சென்றவன், அப்பன்றியின் மறமாண்பு கண்டு வியந்த திறத்தை இந்நூலாசிரியரான கபிலர் கூறுவது ஈண்டு நினைவு கூர்வது நன்று; அதனை இக் குறிஞ்சிப்பகுதி முன்னுரைக்கண் காண்க. இனி இக்கேழற்பன்றி பொருளாக இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்களைக் காண்போம். 261. மென்றினை மேய்ந்த தறுகட் பன்றி வன்க லடுக்கத்துத் துஞ்சு நாடன் எந்தை யறித லஞ்சிக்கொல் அதுவே தெய்ய வாரா மையே. இஃது, அல்லகுறிப் பட்டுத் தலைமகன் நீங்கினமை அறியாதாள் போன்று தோழி பிற்றைஞான்று அவன் சிறைப் புறத்தானாய் நிற்பத் தலைமகட்குச் சொல்லியது. பழைய உரை : தினைமேய்ந்த பன்றி கல்லடுக்கத்துத் துஞ்சும் நாடன் என்றது, தான் வேண்டின இன்பம் நுகர்ந்து இனிது கண்படுவதல்லது வரைதற்கு வேண்டுவன முயலாதான் என்றவாறு. உரை : மெல்லிய தினையை மேய்ந்த மறம் பொருந்திய பன்றி, வலிய கற்கள் நிறைந்த மலைப்பக்கத்தே உறங்கும் நாட னாகிய தலைமகன் வாரானானது, நம் தந்தை அறிவன் என்று அஞ்சியே போலும்; பிறிது காரணம் இன்மையின், அதுவே யாம் என்றவாறு. தினையின் தாளும் விளையும் செவ்வியிலுள்ள தினையும் மிக்க மென்மையுடைமை பற்றி மென்றினை என்றும், மக்க ளுடைய ஆரவாரத்துக்கும் அச்சுறுத்தலுக்கும் பின்னிடாது கருதியதைச் செய்தே முடிக்கும் உறைப்புக் கேழலின் சிறந்த பண்பாதலின், தறுகட்பன்றி என்றும் சிறப்பித்தார். நாடன் வாராமை அஞ்சிக்கொல் என முன்னும் கூட்டிக் கொள்க. வாராமை அதுவே என்றது துணிந்துரைத்தல். கொல்: ஐயம். தெய்ய: அசைநிலை. கேழல் தினைமேய்தலை, "தினையுண் கேழல் இரிய 1" எனப் பிறர் கூறுதலானும் அறிக. தலைமகன் சிறைப்புறத்தானாதலை அறிந்து அவன் கேட்ப உரைக்கின்றமையின், அவன் வாராமைக்குக் காரணம் ஆராய் வாள் போன்று, தந்தையின் வலியும் கொடுமையும் அறிந்து, வரின் தனக்கு ஏதமாம் என்று உணர்ந்து அஞ்சியே தலைமகன் வாரானாயினான் எனப் படைத்து மொழிவாள், எந்தை அறிதல் அஞ்சிக்கொல் என்றவள், மேலும் அதுவே தெய்ய வாரா மையே என்று கூறினாள். இவ்வாறு ஒரு காரணம் படைத்துக் கொண்டு கூறுதலால், அஃது உண்மை யென வற்புறுத்துவாள் போன்று, ஐயமும் தெளிவும் முறையே தொடுத்துக் கூறினாள். அல்ல குறிப்பட்டுத் தலைமகன் நீங்கினான் என்பதனை அறிந்து வைத்தும், அறியாதாள் போன்று, வரைவு கடாவும் கருத் தினளாய்க் கூறுதலின், அதுவே தெய்ய என்றாள். அறிந்தது ஒன்றனை அறியாதாள் போன்று தோழி கூறுதல் வழுவாயினும், வரைவுகடாதற்கண் அமையும் என்க; என்னை : "இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி, நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும், வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலும், நல்வகை யுடைய நயத்திற் கூறியும், பல்வகை யானும் படைக்கவும் பெறுமே 1" என்ப வாகலின். இது வந்த கிழவனை மாயஞ் செப்பியது. புனங்காப்போர்க்கு அஞ்சாது தான் கருதிய மென் றினையைத் தன் தறுகண்மையால் வயிறார மேய்ந்த பன்றி வன்கல் லடுக்கத்து இனிது உறங்கும் நாட னாயினும், நின் தந்தைக்கு அஞ்சிய அச்சத்தால் கருதிய கூட்டமும் பெறாது தன் மனைக்கண் ஒடுங்கினான் என உள்ளுறைக் கண் துனியுறு கிளவி தோன்றக் கூறுமாறு காண்க. பழைய வுரைகாரர்க்கும் இதுவே கருத் தாதல் அறிக. அதுவே மன்ற என்றும் பாடம். வாராமைக்கு ஏது அச்சம் என்று தோழி கூறுவது படைத்து மொழியே யன்றி உண்மையன்று ஆதலின், தெய்ய என்ற பாடமே சிறப்புடைத்தாதல் அறிக. மன்ற என்பது தேற்றப் பொருட்டு. "மறைந்தவற் காண்டல்" என்ற சூத்திரத்து "அச்சம் நீடினும்" என்பதற்கு இதனை உதாரணமாக்குவர் தொல்காப்பிய உரை காரர் 2 262. சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி துறுக லடுக்கத்துத் துணையொடு வதியும் இலங்குமலை நாடன் வரூஉம் மருந்து மறியுங்கொ றோழியவன் விருப்பே. இது, வரைந்துகொள்ள நினைக்கிலன் என வேறுபட்ட தலை மகள், "அவன் நின்மேல் விருப்பமுடையன், நீ நோகின்றது என்னை?" என்ற தோழிக்குச் சொல்லியது. பழைய உரை : சிறுதினை மேய்ந்த தறுகட்பன்றி துறுகல் அடுக்கத்துத் துணை யொடு வதியும் நாடன் என்றது, களவொழுக்கத்தான் வரும் சிற்றின்ப மின்றியே வரைந்துகொண்டு நின்னொடு ஒழுகுவன் எனத் தோழி கூறியவதனைத் தலைமகள் கொண்டு கூறிற்று எனக் கொள்க. உரை : தோழி, சிறியவாகிய தினையை மேய்ந்த தறுகண்மையை யுடைய பன்றி, நெருங்கிய கற்கள் நிறைந்த மலைப்பக்கத்தில் தன் துணைப்பன்றியொடு தங்கும் விளங்குகின்ற மலைநாடன் வருதற்குக் காரண மாகிய அவனது அருள், யானுற்ற நோய்க்கு மருந்தாகலின், அத்தன்மையை அவனது அருளுள்ளம் அறியுங் கொல்லோ என்றவாறு. பன்றி துணையொடு வதியும் மலை, இலங்கும் மலை என இயையும். தினை மேய்ந்த. பன்றி அடுக்கத்து வதிதல், "சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல், துறுகட் கண்ணிக் கானவர் உழுத, குலவுக்குரல் ஏனல் மாந்தி ஞாங்கர், விடரளைப் பள்ளி வேங்கை யஞ்சாது, கழைவளர் சாரல் துஞ்சும் நாடன் 1" என்பதனாலும் அறியப்படும். வரூஉம் மருந்து என்பது "நின்முகம் காணும் மருந்தினேன் என்னுமால் 2" என்புழிப் போலக் காரணகாரியப் பொருள் தந்து வினைப்பெயர் கொண்டது. விருப்பு ஆகுபெயர். காரண காரியங்கள் தம்முள் வேறல்ல வாகலின் "காட்சியை மருந் தென்றான்" என்பர் சேனாவரையர். அங்ஙனமே வரவினை மருந்தென்றார் எனினும் ஒக்கும் என்க. மருந்து ஈண்டு மருந்தாந் தன்மை. "வறிதால் இகுளையென் யாக்கை, இனி, அவர் வரினும் நோய்மருந் தல்லர், வாராது அவண ராகுக காதலர் 3" என்புழியும் வரவு மருந்தென வழங்கப்படுமாறு உணர்க. அவன் வாராமை குறித்து மெலிந்து வருந்துகின்றவள், தோழி "நின்மேல் அன்புடையனாகலின் நீ மெலிகின்றது என்னை?" என அவன் விருப்பமுடைமை உணர வுரைத்த சொற்களான் மகிழ் கின்றா ளாகலின், மருந்தும் அறியுங்கொல் என்றும், அவன் விருப்பம் உணர்த்தும் நின் சொற்கள் யான் ஆற்றியிருத்தற்கு மருந்தானாற் போல அவன் வரைந்து கொள்ளுதலையும் செய்யு மாயின் நன்றென்பாள், வரூஉம் மருந்தும் அறியுங்கொல் என்றும், அவள் வந்தாலன்றித் தன்மெலிவு தீராது என்பாள் அவன் வரவினையே மருந்து என்றும் கூறினாள். அவனது விருப்ப முடைமை தன் வரைப்பட்ட என்னைத் தன் வாராமையால் வருத்துதலின் நோயாதலே யன்றி, வரலால் அது தீரும் மருந்து மாதலை அறியுங்கொல்லோ என்பதுபட நிற்றலின், உம்மை எச்சப்பொருட்டு. "மறைந்தவற் காண்டல் 1" என்பதன் உரையில், பிரிந்தவழிக் கலங்கியதற்குச் செய்யுள் காட்டலுற்றவர், "உறங்காமையும் உண்ணாமையும் கோலஞ் செய்யாமையும் சொல்லுதல்" என வுரைத்து, "இவ்வழி நீ வருந்தாதி, நின்மாட்டு அன்பு பெரி துடையன்" எனத் தோழி ஆற்றுவித்தவழி ஆற்றாமையால் தலைவி கூறியதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர். 263. நன்பொ னன்ன புனிறுதீ ரேனல் கட்டளை யன்ன கேழன் மாந்தும் குன்றுகெழு நாடன் றானும் வந்தனன் வந்தன்று தோழியென் னலனே. இது, வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டமை அறிந்த தலைமகள், "நீ தொலைந்த நலம் இன்று எய்திய காரணம் என்னை?" என்ற தோழிக்குச் சொல்லியது. பழைய உரை : பொன் போன்ற தினையைக் கேழல் மாந்தும் நாடன் என்றது, தன் நாட்டு வாழும் விலங்குகளும் தமக்கு வேண்டுவன குறை வின்றிப் பெற்று இன்பம் நுகரும் நாடன் என்றவாறு. உரை : தோழி, நல்ல பொன்னை யொத்த ஈன்றணிமை தீர்ந்த தினையைப் பொன்னுரை காணுங் கட்டளைக் கற்போலும் நிறமுடைய பன்றி மேய்ந்து உண்ணும் குன்றுகள் பொருந்திய நாடனும் வந்தா னாகலின் என் நலனும் வந்து எய்துவதாயிற்று என்றவாறு. பொன்னுக்கு நன்மை ஓடுதலின்மை. புனிறுதீர் ஏனல் என்றது முற்றின தினையை. "புனிறுதீர் பெருங்குரல் நற்கோட் சிறுதினை 1" எனப் பிறாண்டும் கூறுப. பழுத்து முதிர்ந்த தினையை நன்பொன் அன்ன ஏனல் என்றதற் கேற்ப அதனிடைப் புகுந்த கரிய நிறத்தையுடைய கேழலைக் கட்டளை யன்ன கேழல் என்றார். பொன்னும் கட்டளையும் நிறம்பற்றி வந்த உவமம். "புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை 2" என்றும், "பரூஉமயிர்ப் பன்றி, பொன்னுரை கட்டளை கடுப்பக் காண் ரக், கிளையமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து, கண்ணினிது படுக்கும் நன்மலை நாடன் 3" என்றும் சான்றோர் கூறுதல் அறிக. நாடன் தானும் என்றது படுத்தலோசையால், தலைமகன் பிரிந்து நீட்டித்தமையும் தலைமகளது ஆற்றாமை மிகுதியும் உணர்த்திற்று; என்னை, நெஞ்சின் மிக்கது வாய் சோர்ந்து சொல்லாய் நிகழு மாகலின். எண்ணும்மை விகாரத்தால் தொக் கது. அவன் வர வருதலும் பிரியத் தொலைதலும் என் நலத்துக்கு இயல்பென்பாள், நாடன் தானும் வந்தனன், வந்தன்று தோழி என் நலனே என்றாள். "நீ இவண் வருஉங்காலை, மேவரு மாதோ இவள் நலனே தெய்யோ 4" என்று முன்னரும் கூறியவாறு காண்க. 264. இளம்பிறை யன்ன கோட்டட கேழல் களங்கனி யன்ன பெண்பாற் புணரும் அயந்திகழ் சிலம்ப கண்டிகும் பயந்தன மாதோநீ நயந்தோள் கண்ணே. இது வரையாது வந்தொழுகும் தலைமகனைப் பகற் குறிக் கண்ணே எதிர்ப்பட்டுத் தோழி வரைவுகடாயது. பழைய உரை : கேழல் பிணவைப் புணரும் என்றது....... அறிவில்லாதன ஒழுகும் ஒழுக்கமும் நின்மாட்டுக் கண்டிலேம் என்றவாறு. உரை : கலை முதிராத பிறைத்திங்கள்போல் வளைந்த மருப் பினையுடைய பன்றி களங்கனிபோற் கரிய பெண் பன்றியோடு கூடிச் சென்று அருந்தும் நீர் மிக்க சிலம்பினையுடையாய், நீ விரும்பும் இவளுடைய கண்கள் பசலை பூத்திருத்தலைக் காண்பாயாக என்றவாறு. பன்றியின் கோடு இளம்பிறை போலும் வடிவும் நிறமும் உடைமை பற்றி இளம்பிறை யன்ன கோட்ட கேழல் என்றார். "பிறையுறழ் மருப்பின் கருங்கட் பன்றி 1" எனப் பிறரும் கூறுதல் காண்க. களங்கனி - களாவின்பழம்; இது கருநிறமுடையது; "களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல் 2" என்ப. அயம் - நீர். "அருவி ஆர்க்கும் அயந்திகழ் சிலம்பு 3" என்பதனாலும் அறிக. புணர்ந்து சென்று அருந்தும் அயம் எனற்பாலது, புணரும் அயம் என நின்றது. எதுகை நோக்கிப் பசந்தன என்றபாலது பயந்தன என்றாயிற்று. நீ வரைந்துகொள்ளாது குறிவழி யெய்திக் கூட்டம் தரு குவை; ஆயினும் நின் பிரிவு நினைந்து இரங்கியும் ஏதம் ஆய்ந்து மேனி மெலிந்து வேறுபட்டுக் கண் பசந்தும் தலைமகள் வருந்து கின்றா ளாகலின், பயந்தன மாதோ நீ நயந்தோள் கண்ணே என்றும், நின்னால் விரும்பப்பட்டாள் இவ்வேறுபாடு எய்த, அதனை நீ அறியாதிருத்தல் ஆகாது என்பாள், நீ நயந் தோள் கண்ணே என்றும் கூறினாள். இது தலைவனைப் பேதைமை யூட்டியது. பயந்தன மாதோ என்றது பசலைபாய்தல். இனி, இவ் வேறுபாடு தமர் அறியின் இவளை இற்செறிப்பா ராகலின் நீ வரைந்துகொள்வதே கடன் என வரைவு கடாயவாறாம். கேழற்பன்றி வேண்டுவதாகிய நீரைத் தன் பெண் பன்றி யோடு கூடிச் சென்று அருந்துவது போல, நீயும் நினக்கு வேண்டுவ தாகிய இன்பத்தை நின் காதலியை வதுவையிற் கூடி நுகர்தல் வேண்டும் எனத் தோழி குறிப்பால் வரைவு கடாயினா ளாயிற்று. இவ்வுள்ளுறைப் பொருள் பழைய வுரையில் சிதைந்துவிட்டது. 265. புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை வளைவெண் மருப்பிற் கேழற் புரக்கும் குன்று கெழு நாடன் மறந்தனன் பொன்போற் புதல்வனோ டென்னீத் தோனே. இது, பரத்தை யிடத்தானாகத் தலைமகன் விடுத்த வாயின் மாக்கட்குத் தலைமகள் சொல்லியது. பழைய உரை : புலியாற் கொல்லப்பட்ட தன் பிணவின் குட்டியைத் தந்தை யாகிய கேழல் புரக்கும் நாடன் என்றது, பரத்தையர் காரணமாக யான் இறந்தால் தன் புதல்வனைத் தானே வளர்க்கத் துணிந்து என்னை நீத்தான் என்பதாம். உரை : புலியாற் கொல்லப்பட்ட பெண்பன்றியின் அழகிய வரிகள் பொருந்திய குட்டியை வளைந்த வெண்மையான கோட்டினையுடைய ஆண்பன்றி காக்கும் குன்றுகள் பொருந் திய நாடன் எம்மிடை வருதலை மறந்து பொன் போலும் மகனையும் அவற்குத் தாயாகிய என்னையும் நீத்தொழிந்தா னாகலின் அவன்பொருட்டு நீவிர் வாயில் வேண்டுவது என்னை? என்றவாறு. புலிகொல் பெண்பால் என்னும் தடுமாறு தொழிற்பெயர் பூவரிக் குருளை கேழல் புரக்கும் என்ற "மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரியப்பட்டது. 1" மறந்தனன், முற்றெச்சம். பெறற் கருமை பற்றிப் புதல்வனைப் பொன்னோடு உவமித்தல் பண்டை யோர் மரபு. "தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும், பொன் போற் புதல்வன் 2" என்று பிறரும் கூறுவர். பொன் பெறற்கருமை குறித்து வருதலை "வாடிய மேனியர் பொன்நிறை சுருங்கார் 3" என்ற விடத்துப் பொன்னிறை என்றதற்குப் பெறுதற்கரிய நிறை என்று நச்சினார்க்கினியர் உரை கூறுவதனால் அறிக. மறந்தில னாயின், புதன்வனையும் தன்னையும் நீத்தொழு கான்; ஆகலின், மறந்தனன் என்றும், உடற்கு நன்கலனாய் அணிசெய்யும் பொன்போல் மனைமாட்சிக்கு நன்கலனாய் விளங்குதலின் மகனைப் பொன்போற் புதல்வன் என்றும், தன் குலம் விளக்கும் சால்புடைய மகன் தன்னினும் உயர்ந்தோ னாதல் பற்றிப் புதல்வனோடு என்றும், தன் பிரிவால் மிக்க துன்ப முற்று வருந்தும் என் வருத்தமும் நோக்கிற்றிலன் என்பாள், என் நீந்தோனே என்றும் கூறினாள். இது களவுக்காலத்துப்போல் அன்றிக் கற்புக்காலத்துப் பிரிவாதலின், புறத்தார்க்குப் புல னாகாமை மறைக்கப்படா தாகலான், ஆற்றாது வாயில்கட்குக் கூறுவாளாயினாள். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரி வாற்றாமை. புலியால் கொல்லப்பட்ட பெண்பாற் பன்றி யிடத்துக் கொண்ட காதலால் கேழல் அஃது ஈன்ற குட்டிகளைப் புரக்கும் நாடனாயினும், தலைமகன் தன் பரத்தைமையால் வீழ்த்தப்பட்ட என்பால் அன்பிலனாதலோடு யான் ஈன்ற என் மகன்பாலும் அன்பிலனாய்ப் பிரிந்தேகினான் எனத் துனியுறு கிளவியைத் தலைவி உள்ளுறுத் துரைத்தாள். இது வாயில்களுக்குத் தலைவி கூறியது என்பர் நச்சினார்க் கினியர். புலிகொள் பெண்பால் என்ற பாடத்துக்குப் புலியாற் கொன்று கொண்டுபோகப்பட்ட பெண்பன்றி என உரைக்க. 266. சிறுக்கட் பன்றிப் பெருஞ்சின வொருத்தலொடு குறுக்கை யிரும்புலி பொரூஉ நாட நனிநா ணுடைய மன்ற பனிப்பயந் தனநீ நயந்தோள் கண்ணே. இது, நொதுமலர் வரைவு பிறந்துழித் தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறித் தலைமகனை வரைவு கடாயது. பழைய உரை : பன்றியொருத்தலொடு புலி பொரும் என்றது, நினக்கு நிகரல் லாதார் வந்து தலைப்படவும் அதனை நீக்காது இடங்கொடுத்து ஒழுகா நின்றாய் என்பதாம். உரை : சிறிய கண்களையுடைய பன்றியின் மிக்க சினம் பொருந் திய ஆணோடு குறுகிய முன்கால்களையுடைய பெரிய புலி பொருகின்ற நாடனே, நீ விரும்பிய இவளுடைய கண்கள் தெளிவாக மிக்க நாணுடையவை யாகலின், பசந்து நீர் சொரிவனவாயின என்றவாறு. சிறுக்கண், குறுக்கை என்பன வலிக்கும்வழி வலித்தல். இப்பண்புதொகுமொழிகள் "புணரியல் நிலையிடை உணரத் தோன்றா" வாயினும், தொடைநோக்கி வலித்தமை கொள்க. "வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் 1" என்ற புற னடையால் அமைத்தலும் ஒன்று. ஒருத்தல், ஆண்பாற் பெயர். "ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்....... யாத்த ஆண்பாற் பெயரென மொழிப 2" என ஆசிரியர் கூறுதல் காண்க. பன்றியிற் புலி சிறந்ததாயினும், ஈண்டுப் பன்றியின் வன்மை தோன்றப் பெருஞ்சின வொருத்தல் என்றும், புலியின்பால் அது சிறவாமை தோன்றக் குறுக்கை யிரும்புலி யென்றும் கூறினார். நீ நயந்தோள் நொதுமலர் வரைவு பிறந்தமையினாலும், தன்னுறு வேட்கையைத் தானே கூறலாகாமையினாலும், நாண மிகுதியால் ஆற்றாளாயினள் என்பாள், அதனைக் கண்மே லேற்றி, நனி நாணுடைய மன்ற, பனிப் பயந்தன நீ நயந்தோள் கண்ணே என்று கூறினாள். "தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல், எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை, பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப், பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப 3" என்பதனால் அதனைத் தோழி யுணர்ந்து கூறினாள். நொதுமலர் வரைவு பிறந்தமை கண்டு ஆற்றாது கண் கலுழ்ந்து வேறு படுதலைக் கண்டும் நீ வரையாதொழுகுதல் நாணுடைமையன்று என்பாள், குறிப்பால் நாணுடைய என்றும், மேனி வேறுபாடு நோக்கி அயலார் கூறுவனவற்றால் நாணி வருந்துகின்ற தலைமகள் வேற்றுவரைவு முற்று மாயின் உயிர்வாழாள் என்றற்கு நனி நாணுடைய மன்ற என்றும் கூறினாள் என்க. தலைமகளின் நாணுடைமையை விதந்து கூறியது, நாண்கெட வரின் உயிர் வாழாள் என்றற்கு. இவ்வாறு நாணுடைமையும், மேனிவேறு பாடும் கூறித் தோழி வரைவுகடாதல், "புரைபுட வந்த அன்னவை4" என்புழி யடங்கும். எளிதில் தன்னால் வீழ்த்தப்படுதற்குரிய பன்றி யொருத்த லொடு இரும்புலி நாணாது பொரும் என்றது, வேற்றுவரைவு வருதல் கண்டும் நாணாது களவே விரும்பி ஒழுகுவாயாயினை எனத் தோழி உள்ளுறுத்தவாறு. பழைய வுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதல் அறிக. பனிப் பயந்தன என்றது பசலைபாய்தல். நனிநாணுடையை என்று பாடமாயின் அஃது எதிர்மறைக் குறிப்புமொழியாய் மிகவும் நாணுடையையல்லை என்பது பட நின்றதாம். நனிநாணுடைமையம் என்றும் நனிநாணுடையம் என்றும் பாடமுண்டு. 267. சிறுகட் பன்றிப் பெருஞ்சின வொருத்தல் துறுக லடுக்கத்து வில்லோர் மாற்றி ஐவனங் கவருங் குன்ற நாடன் வண்டுபடு கூந்தலைப் பேணிப் பண்பில சொல்லும் தேறுதல் செத்தே. இது, தலைமகளைத் தலைவன் வரைவலெனத் தெளித்தான் என்று அவள் கூறக் கேட்ட தோழி அவன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. பழைய உரை : பண்பில சொல்லும் என்றது, பொய்ம்மொழிகளைச் சொல்லும் என்றவாறு. தேறுதல் செத்தே என்றது, தான் சொன்ன சொற்களை இவள் மெய்யாகக் கொள்ளும் என்பது கருதி என்றவாறு. பன்றி யொருத்தல் காவலரை யோட்டி ஐவனநெல் கவரும் என்றது, களவினிற் காவலரை வென்று பெறும் இன்பமே விரும்பு வான் என்றவாறு. உரை : சிறிய கண்களையுடைய பன்றியின் மிக்க சினத்தையுடைய ஆண், துறுகற்கள் நிறைந்த மலைப் பக்கத்து வில்லேந்தும் குறவரை வெருட்டி, அவராற் காக்கப்படும் ஐவனநெல்லைக் கவரும் குன்றுகளையுடைய நாடன், வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய இவளை விரும்பி, இவள், தான் கூறுவன வற்றைப் பண்புடையவை எனத் தெளிந்து கொள்வாள் என்பது கருதிப் பண்பிலவாய சொற்களைச் சொல்லுவா னாயினன் என்றவாறு. துறுகல் அடுக்கத்து மேலும் இடையிலும் ஒளித்திருந்து நெல் கவர வரும் கேழலைத் தாக்குவது பற்றி, துறுகல் அடுக்கத்தை விதந்தோதினார். வில்லோர் அம்புக்கு இலக்காகாது விலகுதலால் அவர் தளர்ந்தொழியச் செய்வதனை ஈண்டு மாற்றுதல் என்றார். ஐவனம், ஒரு வகை நெல்; இதனை வெதிர்நெல் என்பதும் வழக்கு. மலைச்சாரற் காடுகளைத் தீயிட்டுக் கொளுத்திச் செய்த புன் செய்க் கொல்லையில் "ஐவனநெல் கானவர்களால் விளைவிக்கப் பெறுகிறது1" அவர்கட்கு இந்த "ஐவனமும் உணவுப்பொருளாகும்.2" ஐவனம் விளையுங்கால் கானவர் இரவில் காட்டுவிலங்குகள் வந்து அழிக்காவண்ணம் காவல்புரிவர்; அப்போது "இரவுமுற்றும் தீ எரிக்கப்படும். 3" பண்பு, மெய்ம்மைப் பண்பு; அஃதாவது சொல்லும் செய லும் ஒத்தொழுகும் பண்பாடு. வரைவல் என்று சொல்லி வரை யாது ஒழுகுகின்றா னாகலின், அவனைப் பண்பில சொல்லும் என்றும், தலைமகளும் அவன்மேற் கொண்ட ஆராக் காதலால், "அவன் வரம்பிறத்தல் அறம் தனக்கு இன்மையின் 4" அவன் கூறியவற்றை ஆராய்தலின்றி ஏற்று ஒழுகும் இயல்பினள் என் பதைத் தலைமகன் நன்குணர்ந்துளான் என்பாள், தேறுதல் செத்தே என்றும் கூறினாள். பொய் கூறாரெனத் தம்மைத் தெளிந்தார்மாட்டுத் தலைமகன் அதனைக் கூறி யொழுகுதல் அறனன்று என்றாளாம். இதனாற் பயன் தலைமகன் தெருண்டு வரைவானாவது. பன்றியொருத்தல் காவலரை மாற்றி ஐவனநெல்லைக் கவரும் நாடனாகலின் தலைமகன் தலைமகள்பால் இனிய சொற்களைச் சொல்லி மாற்றி அவள் நலன் நுகர்ந் தொழுகுதலைச் செய்கின்றானே யன்றி வரைந்துகோடலை நினைக்கின்றிலன் எனத் தோழி குறிப்பாய் வரைவுகடாயினாள் எனக் கொள்க. 268. தாஅ யிழந்த தழுவரிக் குருளையொடு வளமலி சிறுதினை யுணீஇய கானவர் வரையோங் குயர்சிமைக் கேழ லுறங்கும் நன்மலை நாடன் பிரிதல் என்பயக் கும்மோ நம்விட்டுத் துறந்தே. இஃது, "அவன் குறிப்பிருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்தல்லது வரையமாட்டான் போன்றிருந்தது" என்று தலைமகள் கூறக் கேட்ட தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக அவட்குச் சொல்லியது. பழைய உரை : தாயிழந்த குருளையோடே தினையை உண்டு கேழல் உறங்கு கின்ற இத்தன்மையையுடைய நாடனாதலால் இவ்வாறு நிகழ்தல் கூடாது என்பதாம். உரை : தாயை இழந்த பருத்த வரிகளையுடைய பன்றிக்குட்டி யுடன் வளம்மிக விளைந்த சிறுதினையை உண்ணக் கருதிக் கானவர் வாழும் மலையினது உயர்ந்த உச்சிக்கண் பகற் போதில் ஆண்பன்றி உறங்கும் நல்ல மலைநாடன் நம்மைத் துறந்து செல்லுவானாயின், அஃது அவற்கு எப்பயனைத் தருமோ? அறியேன் என்றவாறு. தழுவரி - நெருங்கிய வரிகள். குருளை - குட்டி; "நாயே பன்றி புலி முயல் நான்கும், ஆயுங் காலைக் குருளை என்ப 1" என ஆசிரியர் கூறுதல் காண்க. கேழல், குருளையொடு, உணீஇய, உறங்கும் என இயையும். நாடன் நம் விட்டுத் துறந்து பிரிதல் என்பயக்கும்மோ எனக் கூட்டி இயைக்க. விடுதல் - தனிப்ப விடுதல். துறத்தல் - உள்ளத்தே பிரிதற்குரிய துணிவு கொளல். பிரிதல் - மெய்யால் நீங்குதல். ஓகாரம், எதிர்மறை. கேழல் இரவுப்போதில் இரைதேடி மேயும் இயல்பிற் றாகலின், உறங்கு தற்குரிய பகற்போது வருவிக்கப்பட்டது. தழுவரிக் குருளை யென்றற்குத் தாயை யிழந்தமையால் தந்தையைத் தழுவிச் செல்லும் வரி பொருந்திய குருளை யெனினு மாம். நம்மைத் துறந்து நன்மலை நாடன் பிரிதல் என்றது, "அவன் குறிப்பிருந்தவாற்றால் நம்மைப் பிரிந்தல்லது வரைய மாட்டான் போன்று இருந்தது" எனத் தலைமகள் கூறியதனைக் கொண்டு கூறியதாம். தன்னை யின்றியமையாத நம்மைத் துறந்து பிரிதலால், அவன் பெறலாகும் பயன் ஒன்றும் இல்லை என்பாள், என் பயக்கும்மோ என்றாள். வளம் மலிந்த தினையைக் குருளையுடன் உண்ணக் கருதிக் கேழல் உயர்சிமைக்கண் உறங்கும் என்றது, நலம் முதிர்ந்த நின்னை வரைந்துகோடலை எண்ணி நின்பாற் பிறந்த காதலுடன் பிரிந்துறைதலைத் தலைமகன் கருதுகின்றான் என்று தோழி கூறியவாறு. இவ்வண்ணம் பிரிந்தானாயின், நாம் நலம் துறந்து கெடுவதன்றி வேற பயன் இன்று என்பாள் என் பயக்குமோ என்றாள். இனிக் கேழல் குருளையைத் தன் உடன்கொண்டு சென்று தினையுண்பான் உறங்கும் நாடனாகவும், நின்னையும் தன் உடன்கொண்டு வரைந்துகோடலை எண்ணாது இவண் விடுத்துப் பிரிதலைக் கருதுவது என்னை என்றற்கு என் பயக்கும்மோ என்றாள் என்றுமாம். பழையவுரைகாரர், சிறுதினை யுணீஇக் கேழல் உறங்கும் என்று பாடங்கொண்ட மையின், "தினையையுண்டு கேழல் உறங்குகின்ற இத்தன்மையை யுடைய நாடனாதலால் இவ்வாறு நிகழ்தல் கூடாதென்பதாம்" என்பாராயினர். வளமலை சிறுதினை உணீஇ யுறங்கும் என்றும் பாடம் உண்டு. உணீஇய வுயங்கும் என்ற பாடத்துக்கு, ஒருபால் பிணவின் பிரிவு வருத்த ஒருபால் கானவர்காவல் வருத்தக் கேழல் குருளையொடு தினையுண்டற்கு வருந்தும் என்றது, ஒருபால் நலந்தொலைவும் ஒருபால் இற்செறிப்பும் வருத்த இடையே தலைவி தலைவன் தந்த காதலொடு அழிவில் கூட்டம் பெறுதற்கு வருந்தியுறைகின்றாள் எனத் தோழி சிறைப்புறத்தானாகிய தலைமகனைக் குறிப்பால் வரைவு முடுகியவாறாகக் கொள்க. கேழல் தன் குருளையை உடன்கொண்டு சென்று தினை யுண்பான் உயர்சிமைக்கண் உறங்கும் நாடனாகலின் நின்னை உடன்கொண்டு சென்று வரைந்து கொள்வான் எண்ணாது, அவன் பிரிதலைக் கருதுவது பயனின் றென்றாள் என்றுமாம். 269. கேழ லுழுதெனக் கிளர்ந்த வெருவை விளைந்த செறுவிற் றோன்று நாடன் வாரா தவணுறை நீடி னேர்வளை இணையீ ரோதி நீயழத் துணைநனி யிழக்குவென் மடமை யானே. இது, குறைநயப்பக் கூறித் தலைமகளைக் காட்டிய தோழி, அவன் இடையிட்டு வந்து சிறைப்புறத்து நின்றுழித் தலைமகட்குச் சொல்லியது. பழைய உரை: துணைநனி இழக்குவென் மடமையான் என்றது, நீ எனக்குத் துணையாதலை இழப்பேன் யான், அவனைத் தேறி முன் செய்த மடமையான் என்றவாறு. இறந்துபடுவேன் என்பதாம். நீ அழவாராது அவண் உறை நீடின் எனக் கூட்டுக. கேழல் உழுததாக எருவை நெல் விளைந்த செறுப் போலத் தோன்றும் என்றது, வேட்கை நலியத் தனக்கு வந்த வருத்தத்தானே தலைசாய்ந்து நல்லாரைப் போல ஒழுகிய துணையே யுள்ளது என்பதாம். உரை : பன்றி யுழுததாக ஓங்கி யெழுந்த கோரை நெல்விளை வயல்போலப் பொலிந்து தோன்றும் நாட்டினை யுடையோன், அழகிய வளையும், கடையொத்த நெய்ப்பினை யுடைய கூந்தலு முடையாய், நீ புலம்பியழ. இவண் வாராது அவன் பிரிந்துறைதலையே நீட்டிப்பா னாயின், அவன் குறைநயப்பக் கூறியவற்றைத் தெளியாது நின்னை அவனாடு தலைக்கூட்டிய யான் என் மடமையால் நினக்குத் துணையாதலை இழப் பேனாவேன் என்றவாறு. எருவை, பஞ்சாய்க் கோரை. "எருவை நறும்பூ நீடிய பெருவரை 1" என்றார் பிறரும். நீ, யழ, அவணுறை, நீடின் எனக் கூட்டுக. பன்றிகள், காந்தள் வள்ளி முதலியவற்றின் கிழங்குகளை உண்டற்பொருட்டுக் கிளைத்தமண் நன்கு உழுதது போறலின், கேழல் உழுதென என்றும், அதனால் புழுதி படிந்து எருவைக் கோரை வளம்பட வளர்தல் கண்டு, கிளர்ந்த எருவை என்றும் கூறினார். விளைந்த செறு - விளைந்த நெல்வயல். உறை - உறைதல்; முதனிலைத் தொழிற்பெயர். ஓதி, நாடன் நீடின் நீ அழ, மடமையான் துணை நனி இழக்குவென் என முடிக்க. துணை - துணையாந்தன்மை. துணையாந்தன்மை இழத்தலாவது துணையா யிருக்கும் திறமின்றி இறந்துபடுவேன் என்றவாறு. அவன் பிரிவாற்றாது, தலைமகள் வளைநெகிழ்ந்து, கூந்தல் சரிந்து வேறுபட்டமையால் அவளை நேர்வளை, இணையீரோதி என்றாள். நாடன் வாராது அவணுறைதல் நீடுமாயின், உடம்புநனி சுருங்கி வேறுபட்டு நீ ஆற்றாமையாற் பிறிதுபடுதற் காற்றாது யான் உயிர் இறப்பேன் என்பாள், துணைநனி யிழக்குவென் என்றாள். தோழியிற் கூட்டத்துக் குறை நயந்தபோது அவன் கூறியவற்றை நன்கு ஆராயாது அவனொடு தலைக்கூட்டிய கேண்மை, தோழி யாகிய தான் ஆய்ந்தாய்ந்து கொள்ளாத தொன்றாய்த் தான் "சாம் துயரந் தருவதாயிற் றாகலின்1" அச்செயற்குக் காரணமாய தன் அறியாமைக்கு இரங்கித் துணைநனி இழக்குவென் மடமை யானே என்றாள். இனி, கேழல் உழுததனால் கிளர்ந்தெழுந்த எருவைப் புல் விளைந்த நெல்லைப்போலத் தோன்றும் நாடன் என்றதனால், தலைவனொடு உளதாகிய தொடர்பினால் தலைவி மேனிக்கண் தோன்றிய வேறுபாட்டை இளமைக்கதிர்ப்புப் போலும் எனத் தோழி மறைத்து ஒழுகியவாறு கூறினாளாம். ஆகவே, தலைமகன் பிரிந்து உறைதற்கண் நீட்டித்தால் தலைவியது வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகிக் களவை வெளிப்படுத்தும் எனவும், அதனால் தான் இறந்துபடுதல் ஒருதலை யெனவும் கூறுவாள், நீயழத் துணைநனி இழக்குவென் என்றும், இவ்வளவிற்கும் காரணம் இது வென்பாள் மடமையானே என்றும் கூறினாள் எனினும் அமையும். 270. கிழங்ககழ் கேழ லுழுத சிலம்பில் தலைவிளை கானவர் கொய்தனர் பெயரும் புல்லென் குன்றத்துப் பலம்புகொள் நெடுவரை காணினுங் கலிழுநோய் செத்துத் தாம்வந் தனர்நங் காத லோரே. இது, வரைவு காரணமாக நெட்டிடை கழிந்து பொருள் வயிற் போகிய தலைமகன் வந்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத் தளாய்த் தலைமகட்குச் சொல்லியது. பழைய உரை : கிழங்ககழ் கேழல் உழுத புழுதிக்கண்ணே வித்த விளைந்த பயிர் கானவர் கொய்யும் சிறப்புடையதேனும், அவன் அவ்விடத்து உறையாமையின் தனக்குப் புல்லென்று தோன்றுதலால் புல்லென் குன்றம் எனவும், புலம்புகொள் நெடுவரை எனவும் இழித்துக் கூறப்பட்டதெனக் கொள்க. உரை : கிழங்குகளை அகழ்ந்து எடுக்கும் பன்றிகள் தம் கோடு களால் உழுத புழுதி நிறைந்த சிலம்பில், கானவர் விதைப்ப விளைந்த முதல்விளைவினைக் கொய்துகொண்டு நீங்குதலால் புல்லென்று தோன்றும் குன்றத்து, அன்னோர் கூட்டத்தை யின்றித் தனித்த தோற்றத்தைக் கொண்ட நெடிய பக்கமலையைக் கண்டாலும் கலுழ்தற்குக் காரணமான நோயைக் கருதி நம் காதலர் தாம் மேற்கொண்ட வினைமுடித்து வந்தன ராகலின் நீ மகிழ்வாயாக என்றவாறு. காந்தள், வள்ளி, கோரை முதலியவற்றின் கிழங்குகளை அகழ்ந்துண்டல் கேழல்கட்கு இயல்பாகலின், மலைப்பக்கம், கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பு எனப்பட்டது. கிழங்கு ஈண்டு இஞ்சிக்கிழங்கு என்பாரும் உளர். அதனைக் கேழல்கள் அகழ்ந் துண்டல் மரபன்மை யறிக. தலைவிளைவு - முதல் விளைச்சல். விளைவின் முன்னர்ச் சிலம்பின்கண் வித்திய தினைப்பைங்கூழ் பச்செனத் தோன்றிக் காண்பார்க்கு அழகுசெய்தலாற் பொலிந்து தோன்றும் குன்றம், அது முற்றியதனால் கானவர் கொய்து பெயர்ந்த பின் அப்பொலிவு குன்றுதலின், புல்லென் குன்ற மென்றும், விளைவு முற்றாதவிடத்து அதனைக் கவர்வான் வரும் விலங்கு களாலும், புட்களாலும், அவற்றைக் கடிதற்குப் போந்து காவல் செய்யும் கானவர் குழுவானும் விளங்கிய குன்றம், அவ்விளக்க மின்மையின், புலம்புகொள் நெடுவரை என்றும் கூறப்பட்டது. கலிழும் நோய், கலிழ்தற்குக் காரணமாகிய நோய். தினைவிளைவும் மாவும் புள்ளும் மக்கட் கூட்டமும் கொண்டு இனிய காட்சி வழங்கிற் றாயினும், தலைமகன் பிரிவின்கண், குன்றமும் நெடுவரையும் தலைமகள் நினைவில் தலைவன் நினைவை யெழுப்பி வருத்தினமை பற்றிப் புல்லென் குன்றம் என்றும், புலம்புகொள் நெடுவரை என்றும் தோழி கூறினாள். அதனைக் காணுங்கால், பண்டு தான் மேற் கொண் டிருந்த புனங்காவலும், தலைமகனை எதிர்ப்பட்டு நட்புற்றமை யும், புணர்வின் இன்பமும், பிரிவுத்துன்பமும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றித் தலைவி யுள்ளத்தை அலைத்தமை குறித்து, காணினும் கலிழும் என்றும், அத்துன்பம் தனது வரவானன்றித் தீராமை உணர்ந்து தலைமகன் வந்தனன் என்றற்கு, நோய் செத்துத் தாம் வந்தனர் என்றும், ஈண்டு யாம் உற்ற துன்பத்தை ஆண்டு அவர்தாம் உணர்தற்கு ஏது, அவர்பால் நம்மிடை யுளதாகிய காதல் என்பாள், நம் காதலோர் என்றும் கூறினாள். இது, துன்பத்துப் புலம்பல். உள்ளுறையால் தலை மகனது வரவு வரைவு கண்ணிய தென்று குறித்தமையின், வாளாது வந்தனர் என்றா ளென்க. சிலம்பில் விளைந்த தலைவிளைவைக் கானவர் கொய்து கொண்டு பெயர்வர் என்றது, தலைமகனைத் தலைப்பட்டுக் கூடியதன் தலைவிளைவாகிய வரைவினை நீ தலைமகன் வரவால் பெறுவா யாயினை என்றவாறு. பின் விளைவன மணமும் மனையறமும் மகப்பேறும் முதலாயினவாம். 28. குரக்குப்பத்து பாட்டுத்தோறும் குரங்காகிய கருப்பொருளே சிறந்து வரத் தொகுக்கப் பெற்றமையின், குரக்குப்பத்து என்னும் பெயர்த் தாயிற்று. உலகிலுள்ள உயிர்வகைகளுள் மக்களுயிர் உயர்ந்து விளங்கு வதுபோல அஃறிணை உயிர்வகைகளில், முகத்திற் கண் கொண்டு பொருள்களை நேரே முற்ற நோக்கும் பெற்றிமையால் உயர்ந்தது குரங்கு. "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி" மேன்மையுற்று வளர்ந்து போந்த உயிரினத்துள் மக்களுயிர், குரங்குயிராய் இருந்தே இந்நிலை யெய்திற்று என்பது ஒருசார் ஆராய்ச்சியாளர் கொள்கை. குரக்கினத்துள் ஆண் கடுவன் என்றும், பெண் மந்தி என்றும், குட்டி பறழ் என்றும் பார்ப்பென்றும் தமிழ்நூல்களில் வழங்கும். குரக்கினத்துள் பலவகை யுண்டு. இவை பொதுவாக வாலுடையன வாலில்லாதன என இருவகையாம். வாலில்லாதன கொரில்லா, சிம்பஞ்சி என வகைப்படும், அவற்றுள் சிம்பஞ்சி ஆப்பிரிக்காவின் மேலைப்பகுதியிலும் நடுப்பகுதியிலும் வாழ்கிறது; நன்கு வளர்ந்த கடுவன் ஐந்தடி உயரம் இருக்கும். பழங்கள் விதைக்கொட்டைகள் பசுந்தழைகள் இதற்கு உணவு. கொரில்லா ஆறடி உயரம் வளரும். இஃது ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதியிலுள்ள காடுகளில் உளது; உணவுக்காக அடிக்கடி இடம்விட்டு இடஞ்செல்லும் இயல்புடையது; நடக்கும்போது கைகளை ஊன்றி நான்குகால் விலங்கு போலவே செல்லும்; ஆயினும் கையை முடக்கிப் புறங்கையை ஊன்றிச் செல்லுகிறது. கொரில்லாக்கள் மரத்தில் ஏறாமல் தரையிலேயே வாழ்கின்றன. ஓராங்குட்டான், சுமத்திரை, போரணியோ தீவுகளில் சதுப்புநிலக் காடுகளில் உளது. ஒராங்குட்டான் என்னும் மலேயாமொழிக்குக் காட்டுமனிதன் என்பது பொருள். ஏனையவற்றைப் போலின்றி இவற்றின் கைகால்கள் காட்டு மரங்களில் வாழ்தற் கேற்ப அமைந்துள்ளன. ஒராங் குட்டான் முப்பதாண்டுகள் வாழ்கிறது. கிப்பன் குரங்குகள் கிழக் காசியக் காடுகளில் உள்ளன; வாலில்லாத இனத்துள் இவை உருவில் சிறியவை. நன்கு வளர்ந்தது மூன்றடி உயர மிருக்கிறது. இவை பறவைகளையும், பழவகை, தழை, வகைகளையும் உண்கின்றன. ஏனைய பலவும் வாலுடையனவே. நிலவுலகில் வெம்மை யான நிலப்பகுதிகளில்தான் குரக்கினம் காணப்படுகிறது. சில வகைக் குரங்குகள் மிக்க குளிரையும் தாங்கி உயிர்வாழக் கூடியனவாகும். அவை இமயமலைப் பகுதியிலும், திபேத்து, சீனநாட்டு வடமேற்குப் பகுதி ஆகிய இடங்களிலும் வாழ் கின்றன. ஐரோப்பாவில் சிபிரால்டர் பகுதியில் ஒருவகைக் குரக்கினம் உண்டு. ஆத்திரேலியாவில் குரங்கே கிடையாது. மடகாசிகர், நியூகினியா, மேற்கிந்தியத்தீவுகள் ஆகிய இப்பகுதி களிலும் குரக்கினம் இல்லை. குரங்குகள் யாவும் மரஞ்செறிந்த காடுகளில் மரங்களையே இடமாகக் கொண்டு வாழ்வன என்பது நாடறிந்த செய்தி. "குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பில்லை" என்பது பழமொழி; ஆயினும், ஆப்பிரிக்காவில் பாபூன் என்னும் ஒருவகைக் குரங் கினம் இவ்விதிக்கு விலக்காக உளது. மருதம் நெய்தல் பாலை என்ற இந்த நிலப்பகுதிகளில் இவை கூட்டம் கூட்டமாய் வாழ் கின்றன. தரையிலேயே இவற்றின் வாழ்வுமுழுதும் பெரும்பாலும் கழிகிறது. குரங்குகளின் வாய்க்குள் இருமருங்கிலும் இரு பைகள் உண்டு. உண்ணும் உணவை முதலில் விரைவாக எடுத்துக் கடித்துப் பைக்குள் அடக்கிக்கொண்டு பின்னர் ஓரிடத்தே ஆர அமர்ந்து உண்பது அவற்றிற்கு வழக்கம். ஒருசிலவற்றிற்கு இப்பைகள் இருப்பதில்லை, அமெரிக்கநாட்டுக் குரங்குகட்கு இப்பைகள் அறவே கிடையா. மேலும் அமெரிக்கக் குரங்குகட்கு வேறொரு சிறப்பியல்பும் உண்டு. குரங்குகளின் வாலின்கீழ் எருவாய்ப் பகுதியில் சிவந்த உறுதியான இரு தோற்பட்டை யுண்டு; அதனால் அவை எவ்விடத்திலும் நன்கு உட்கார இயலுகிறது. இப்பட்டை அமெரிக்கக் குரங்குகட்கு இல்லை. அன்றியும் தென்னமெரிக்காவிலுள்ள ஒருவகைக் குரங்குகள் தம் வாலைக் கைபோல் பயன்படுத்துகின்றன. வாலினால் மரக் கிளையைப் பற்றிக்கொண்டு கைகால்களைத் தொடங்கவிட்டு ஊசலாடும் இயல்பு அவற்றிற்கு நன்கு வாய்த்துள்ளது; சிறு கிளைகளை ஈர்த்துக் கிழிப்பதும், வேரூன்றிய செடிகளை வேரோடுபற்றிப் பிடுங்குவதும் இவற்றிற்கு வாலினாலே ஆகின் றன. அமெரிக்கக்குரங்குகளின் மூக்குத் துளைகட்கு இடைவெளி ஏனை எந்நாட்டுக் குரங்குகட்கும் இல்லாத அளவில் அகன் றுள்ளது. அமெரிக்கநாட்டுப் பிரேசில்பகுதியில் தான் பல்வேறு வகைக் குரக்கினங்கள் உள்ளன. இவை வடக்கே மெக்சிகோ நாடுவரையிலும் காணப்படும். அதற்குமேல் குளிர்மிகுதலின் குரங்குகள் இருப்பதில்லை. இவ்வினங்களில் சிலம்பிக்குரங்கு வகை ஒன்று. அஃது அமைதியாகவும் எளிதில் மக்களோடு பழகுவதாகவும் உளது; குளிர்மிக்க நாடுகளில் வாழக் கூடிய வாய்ப்பும் அதற்கு இயல்பாக அமைந்திருக்கிறது. பூனைக்குரங்கு என்ற இனம், தசை செறிந்த வட்டமான முகமும் அகன்ற கண்ணும் மயிர் அடர்ந்து பருத்து நீண்ட வாலும் உடையது. இக்குரங்கு இரவுப்போதுகளில் வெளிப்பட்டுச் சிறு சிறு பூச்சி களையும் பறவைகளையும் தேடி யுண்டு, பகற் போதுகளில் பெருமரப் பொந்துகளில் ஒடுங்கி உறையும். இவற்றின் வேறாக நரிபோல் ஊளையிடும் நரிக்குரங்குகளும், பறவைபோல் கூவும் சிறுகுரங்குகளும், கைகால்களில் அணில்போல் கூரிய விரல் படைத்த அணிற் குரங்குகளும் தென்னமெரிக்காவில் உண்டு. வெம்மை நிலங்களில் வாழ்வதற்குரிய குரக்கினம் குளிர் நாடாகிய ஐரோப்பாவைச் சேர்ந்த சிபிரால்டரில் வாழ்வது ஆராய்ச்சியாளர்க்கு வியப்புத் தருகிறது. ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவும் ஐரோப்பாவும் கடலாற் பிரிக்கப்படாமல் நிலமாகவே தொடர்புற்றிருந்தன வாகலான், அக்காலத்தில் இக்குரக்கினம் இங்கே போந்து தங்கியிருக்கலாம் என்பது ஒருசார் ஆசிரியர் கொள்கை. பண்டை நாளைய சுபானியர்களில் எவ ரேனும் இதனை அண்மையிலுள்ள ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வந்திருக்கலாம் என்பது வேறொரு சாரார் கொள்கை. இக்குரங்குகள் இப்பகுதியிலிருந்து எப்போது வேரோடு தொலைந்து மறைகின்றனவோ, அப்போது பிரித்தானியர் இப்பகுதியினின்றும் போய்விடுவர் என்ற கொள்கை அங்கே இன்றைய மக்களிடையே நிலவுகிறது. பிரித்தானியருக்கும் இப்பகுதியிலுள்ள குரக்கினத்துக்கும் யாது தொடர்போ! நம் நாடு வெம்மை செம்மையுற அமைந்த நாடாகலின், இங்கே குரங்குகள் பல்கி யிருப்பதில் வியப்பில்லை. குரக் கினத்தைச் சிறப்பித்தே சீர்த்த காவியம் பாடிக் களிக்கின்ற நாடு நமது. இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போரை உரைக்கும் இக்காவியத்தில் அனுமனும் அனுமனைச் சேர்ந்த குரக்கினமும் இல்லையாயின், காவியமேது? நம்நாட்டுக் குரங்கு களில் செங்குரங்கு கருங்குரங்கு என இருவகை உண்டு. முகஞ் சிவந்தது செங்குரங்கு, கரியது கருங்குரங்கு. கருங்குரங்கினை முசுக்கலை எனவும், ஊக மெனவும் வழங்குவர். செங்குரங்கைக் குரங்கென்றே பொதுவாக வழங்குவது இயல்பு. இக்குரங்குகள் ஒன்றோடொன்று அன்பு செய்து கலந்து வாழும் திறம் அறிஞர்கள் நன்கு அறிந்தது. அதனால் இவை எப்போதும் கூட்டமாய் வாழ்கின்றன. தாம் வாழும் இடத்தில் போதிய உணவு கிடையாதாயின் இவை வேறு இடங்கட்குத் திரண்டு செல்லும். அங்ஙனம் செல்லுங்கால் முதிர்ந்த குரங்கு இவற்றிற்குத் தலைமை தாங்கி முன்னே செல்லும். இளங்குரங்கு களில் எவையேனும் ஒழுங்கு தவறிச் சிதறிச் செல்லுமாயின், உடனே குரக்குத் தலைவன் அவற்றைச் சீறித் தாவிப் பற்றிக் கடித்தோ அடித்தோ தக்காங்கு ஒறுத்துச் செம்மை நெறியில் நிற்கச் செய்யும். வேறு பகையினம் போந்து இக்கூட்டத்தைத் தாக்குமாயின், பெண்குரங்குகளையும் குட்டிகளையும் ஆண் குரங்குகள் சூழ்ந்து காத்து நின்று பகையினத்தோடு கடும்போர் உடற்றும். அவற்றுள் ஒன்று இறந்துவிடின் ஏனையாவும் ஒன்று கூடி அதன்பொருட்டுப் புலம்பி வருந்துவது காண்போர் மனத்தை உருக்கும்? தன்மைத்து. அதுபற்றியே கானவரும் வேட்டுவரும் குரக்கினத்தைக் கொல்ல நினைப்பதில்லை; கொல்லுவதும் இல்லை. குட்டி ஈன்று அவைகளைப் பேணி வளர்ப்பதிலும், அன்பு செய்வதிலும், அவற்றிற்குத் தீங்குண்டாகாதவாறு காப்பதிலும் குரக்கினம் சிறந்து விளங்குகிறது. குரங்கின்பாற் காணப்படும் தாய்மைப்பண்பு பெரிதும் மதிக்கத் தகுவதொன்று. தான் ஈன்ற குட்டி தன் முதுகின்மேல் ஏறிக் குதிரைவாதுவன் போல் தன்னைச் செலுத்தத் தான் அதன் குறிப்பின்படி குதிரைபோல் நடந்து அதற்கு இன்ப மூட்டும் தாய்மந்தியின் செயல் காண்போர்க்கு மிக்க இன்பம் தருவதொன்று. குட்டியொன்று இறந்துபடின், சில மந்திகள் ஓரிரு நாள்கள் அதனைத் தம் மெய்யில் தழுவிக் கொண்டே கிடந்து வருந்தும்; இவ்வாறு ஒருதாய்க்குரங்கு உயிர் நீத்த தன்குட்டியை ஆறுநாள்கள் வரைத் தானே சுமந்து வருந் தினதை உயிர்நூலறிஞர் கண்டிருக்கின்றனர். இவ்வாறு வருந்தும் நாள்களில் அது நீர்குடியாமலும் உணவு கொள்ளா மலும் ஏனையவற்றோடு கூடி விளையாடாமலும் இருக்கும். அதன் துயரைப் போக்குதற்கு அதன் கடுவனும் ஏனைக் குரங்குகளும் எத்துணையோ நன்முயற்சிகளைச் செய்கின்றன. தம் குட்டி இறந்துவிடின், அதனை எறிந்துவிட்டுவேறொன்றின் குட்டியைத் திருடிக்கொண்டு தமது போல அன்பு செய்து ஒழுகும் மந்திகளும் உண்டு. தினையை உணக்கிய மகளிர் சுனையில் நீராடச் சென்ற செவ்வி நோக்கி "ஒருமந்தி போந்து தினையைக் கவர்ந்துண்பதும் 1" அருவியிற் பாய்ந்த குரங்கொன்று அங்கே வீழ்ந்து மிதந்த "பலாக்கனியைப் புணையாகக் கொண்டு நீந்துவதும் 2" சங்க நூல்களில் காணப்படுகின்றன. மகவுடை மந்திகள் கீழே இருப்பக் கடுவன் பழமரங்களில் ஏறிப் பழங்களை உதிர்ப்ப, அவற்றுள் ஏற்பனவற்றை எடுத்துக் குட்டிக்குத் தந்து தாமும் உண்ணும் அழகிய காட்சி1 சான்றோர் செய்யுட்களிலும் பிரேசில்நாட்டுக் குறிப்புகளிலும் காட்சி தருகிறது. பலாவின் முதுகனி யொன்றைப் பெற்ற கடுவன் அதனை உண்பது குறித்துத் தன் "காதல் மந்தியைக் கையிட் டழைப்பதும் 2" தினைக்கொல்லையுட் சென்று தினைக்கதிர் கொய்த கடுவனும் மந்தியும் மலைப்பக்கத்துத் துறுகல் மேல் இருந்து "ஞெமிடித் தின்பதும், 3" காட்டுப் பசுவொன்று கன்றூட்டி யுறங்குவது கண்ட மந்தி தன் சுற்றத்தை வாயடக்கி மெல்லக் குறுகி அதன்மடியைப் பற்றித் தன் பார்ப்பின் கையில் பால்பிழிவதும் 4" இனிய இலக் கியக் காட்சிகளாகும். ஒருமந்தியின் கணவன் இறந்ததாக அதன் பிரிவாற்றாது தன் குட்டியை இனத்திடம் தந்து, அது வரையேறிப் பாய்ந்து உயிர் செகுத்துக்கொண்ட காட்சியைக் கருந்தோட் கரவீரன் என்பார்5 குறிக்கின்றார். தன் கண்ணுக்கு இனிய காதலனாகிய கடுவ னொடு கூடிய இளமந்தி, தன் செயலை ஏனைக் குரக்கினம் அறிதற்கு நாணிச் சுனைநீரில் தன் நிழலை நோக்கித் தலை மயிரைத் திருத்திக் கொள்ளுவதை 6 மருதன் இளநாகனார் வரைந்து காட்டுகின்றார். இவை பொருளாக இந்நூற்கண் வரும் பாட்டுக்களை இனிக் காண்போம். 271. அவரை யருந்த மந்தி பகர்வர் பக்கிற் றோன்று நாடன் வேண்டிற் பல்பசுப் பெண்டிரும் பெறுகுவன் தொல்கே ளாகலி னல்குமா லிவட்கே. இது, தலைமகன் வரைவுவேண்டிவிடத் தமர் மறுத்துழிச் செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. பழைய உரை : அவரையை நிறையத் தின்ற மந்தி பண்ட வாணிகர் பைபோலப் தோன்றும் நாடன் என்றது, ஆண்டு வாழ்வனவும் மேலாம் உணவு களில் குறைவின்றி வாழும் நாடன் என்றவாறு. பல் பசுப் பெண்டிரும் என்றது, வரைவெதிர் கொள்ளார் தமர் மறுத்த தீங்கினைத் தங்கள் மேலேற்றி இத்தீங்கு செய்யாது தான் நினைத்தவழி ஒழுகும் குணமுடைய பெண்டிர் பலரையும் பெறுகு வன் அவனே வேண்டின் எனக் கொள்க. பசுப்போற் பெண்டிரும் என்று பாடமோதுவாரு முளர். உரை : அவரையை நிறைய உண்ட மந்திகள் பண்டம் பகரும் வணிகருடைய பைபோலத் தோன்றும் நாடன் மகட்கொடை வேண்டுவானாயின், பல பசுப் போலும் இயல்பினையுடைய பெண்டிர் பலரைப் பெற்றோர் மறாது தரப்பெறுவனாயினும், அவ்விடத்து, அவன் தானும் பழைமையான உறவினையுடைய னாகலின் இவள் பொருட்டு அவரெல்லார்க்கும் தரற்குரிய வற்றை ஒருங்கே நல்குவன் என்றவாறு. அவரை - வரைக்கொடி; ஈண்டு ஆகுபெயரால் அதன் காய்மேல் நின்றது. இது குறிஞ்சி முல்லை யாகிய நிலங்களில் வாழ்வார்க்கு உணவுப்பொருள்; "கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு, இந்நான் கல்லது உணாவும் இல்லை 1" என்பது காண்க. அவரை முல்லைநிலத்துப் புதல்களிலும், குறிஞ்சியின் தினைப்புனத்து இருவியிலும் படர்ந்து வளரும்; "புதல பூங்கொடி அவரை 2" எனவும் "சிறுதினை மறுகால், கொழுங்கொடி யவரை பூக்கும் 3" எனவும் சான்றோர் கூறுப. அவரையின் இலை மும்மூன்றாக இருக்கும்; இலையும் கொடியும் கொழுவியன; "கோழிலை அவரைக் கொழுமுகை 4" என்பர். இது முல்லை மலரும் கார் காலத்தே பூப்பது. அவரையின் பூ புறம் சிவந்து பவழம் போல் வது; "பைந்நனை அவரை பவழங் கோப்ப 5" எனவரும். இதன் இதழ் வெளிதாதலின், "அவரைப், பூவின் அன்ன வேண்டலை மாமழை 1" என உவமம் செய்ப. அவரையின் சிவந்த பூ வளைந்து தோன்றுவதுபற்றிக் கிளியின் வாய்க்கு உவமையாக, "பைங்கொடி யவரை கிளிவா யொப்பின் பன்மலர் 2" என்று சான்றோர் கூறுவர். இதன் காய் வளைந்திருப்பதனால், "இருவிதொறும், குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை 3" என்றனர். இக்காயை மக்களே யன்றிக் கிளிகளும் படிந்துண்பது வழக்கம். "காய்த்த அவரைப் படுகிளி 4" என்பது காண்க. ஈண்டு, இதனைக் குரங்கின் மந்தி தின்று வாயின் இரு மருங்கினும் அடக்கிக் கொண்டிருப்பது கூறப்படுகிறது. ஆர்ந்த என்பது அருந்த என நின்றது. பகர்தல் விற்றல் ஆகலின், விற்பனை செய்யும் வணிகரைப் பகர்வர் என்றார். பக்கு, பை. "பக்கழித்துக் கொண்டீ 5" எனவரும். பசுப்பெண்டிர் பசுவைப் போலும் இயல்புடைய பெண்டிர். பசு தன்னால் அன்பு செய்யப்பட்ட கன்றின்வழி நின்றொழுகுதல் போலத் தம்மாற்காதலிக்கப்பட்டோர் நினைவுவழி யொழுகும் மகளிரைப் பசுப்பெண்டிர் என்றார். "மூத்தார் இளையார் பசுப் பெண்டிர் 6" "பார்ப்பார் அறவோர் பசுப்பத்தினிப் பெண்டிர். 7" எனவருதல் காண்க. பசுப்போலும் அறப்பண்புடைய மகளிர் அரியராகலின், அவரைப் பசுப்போல் பெண்டிர் என்றும், அப்பெண்டிரும் பலருளர் என்றற்குப் பன்மைவாய்பாட்டிலும் கூறினாள். நாடன் வேண்டின் என்றது, தலைமகளை யன்றிப் பிறபெண்டிரைத் தலைமகன் வேண்டாமை யுணர நின்றமையின், இது வேட்கை யுரைத்தல். பெண்டிரும் என்புழி நின்ற உம்மையால், தலை மகன்பால் "பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோடு, உருவு நிறுத்த காமவாயில், நிறையே யருளே யுணர்வொடு திருவென, முறையுறக் கிளந்த ஒப்பினது வகை 8" யாவும் அமைந்தமை கூறியவாறாயிற்று. இதனாற் பயன், தமர்கேட்டு மகட்கொடை நேர்தற்குரிய தகுதியுடைமை கண்டு உடன் படுவாராவது; என்னை? "நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் 1" என்னும் கொள்கையின ராகலின். கழிந்த பிறப்பில் தொடர்ந்த கேண்மை யால் இப்பிறப்பில் களவுவழி வந்த கேண்மையன் என்பாள் தொல் கேள் என்றும், இவள்பொருட்டு நீவிர் வேண்டுவன முற்றும் தரவல்ல திருவினன் என்றற்கு நல்குமால் இவட்கே என்றும் கூறினாள். இஃது உண்மை செப்பல். தொல்கேள் இப்பொருட்டாதல், "பழங்கேண்மை கண்டறியா தேன்போல் கரக்கிற்பென் மற்கொலோ 2" என்பதனால் அறிக. இனி, நாடன் வேண்டின் பெண்டிரும் பெறுகுவன் என்றது, தலைமகள் அவனையல்லது பிறரை வேண்டாள் என்றும், இவள் பொருட்டு அவன் யாவும் நல்கும் என்றது, அவனையன்றிப் பிறர்க்கெனின் உயிர் வாழாள் என்றும் குறிப்பால் தோழி கூறி னாளாம். இதற்குப் பிறவாறும் உரைப்ப. அவரையை யுண்ட மந்தி வணிகரது பக்குப் போலத் தோன்றும் நாட னாகலின், தமர் அவனது கேண்மைச் சிறப்பை அறியாது ஏனோர் போலக் கருதி மகட்கொடை மறுத்தார் எனத் தோழி உள்ளுறுத் துரைத்தவாறு அறிக. பசுப்போற் பெண்டிரும் பெறுகுவன் என்ற பாடத்துக்குப் பசுத்திரளைப் பெறுவது போலப் பெண்டிர்பலரைத் தன் ஆண்மையால் பெறுகுவன் என வுரைக்க. இதனாற் பொருள் சிறவாமை யறிக. 272. கருவிரன் மந்திக் கல்லா வன்பறழ் அருவரைத் தீந்தே னெடுப்பி யயல துருகெழு நெடுஞ்சிமைப் பாயு நாடன் இரவின் வருத லறியான் வரும்வரு மென்ப டோழி யாயே. இஃது, அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் சிறைப்புறத் தானாக முன்னைநாள் நிகழ்ந்தனைத் தோழிக்குச் சொல்லுவாள் போன்று தலைமகள் சொல்லியது. பழைய உரை : மந்திக்கு ஒருமகவாகிய பார்ப்பு மலைக்கண் பெருந்தேன் இறாலைக் கிளர்ந்து எழுப்பி ஈக்கு வெருவி அதன் அயற் சிகரத் திலே பாயும் என்றது, தான் நுகரக் கருதி வந்து நம்மை உணர்த்திச் சுற்றத்தார் பலரும் உணர்ந்த அதற்கு வெருவிப் பெயர்வான் என்றவாறு. உரை : தோழி, கரிய விரலையுடைய மந்தியின் நல்லறிவில்லாத வலிய குட்டி, ஏறுதற்கரிய வரையிடத்துத் தீவிய தேனை அழிப்பான் தேனீக்களை எழுப்பி, அவை கொட்டுதற் கஞ்சி அயலதாகிய உட்குப் பொருந்திய நெடிய உச்சிக் கண் பாய்ந் தோடும் நாடன் இரவுக்குறிக்கண் வருதலை அறியானாக, அவனை வருகின்றான் வருகின்றான் என யாய் பன்முறையும் கூறாநிற்பள் காண் என்றவாறு. முகம் போலாது மந்தியின் விரல் கறுத்திருத்தலின், கருவிரல் மந்தி எனப்பட்டது. இது செய்யின் இது விளையும் என்னும் நல்லுணர்வு பெறாத இளமைச் செவ்வி தோன்றக் கல்லா வன்பறழ் என்றார்; கல்வியின் பயன் அதுவாகலின். "கல்லா வன்பார்ப்பு1" எனப் பிறாண்டும் கூறுப. குரங்கிற் குரிய தொழிலை அறியாமை பற்றி இவ்வாறு கூறினா ரென்றலு மொன்று; ஆயினும் கல்லாமையைக் குரங்கினத்துக்கே பொது வாகப் கூறுதல் மரபு. "கல்லாக் கடுவன்2" என்றும், "கல்லா மந்தி3" என்றும் நூலோர் நுவல்வது நோக்குக. பறழ், குட்டி. தாயா கிய மந்தி விலக்கவும் விலகாது தேனை அழித்தற்கு ஓடும் பேதைமைத்தடிப் புடைமைபற்றி வன்பறழ் என்றார் என்க. ஏறுதற் கருமையின் அருவரை எனப்பட்டது. தேனீக்கள் அடை வைக்கும் இடமும் அதுவே என அறிக உரு, உட்கு. நெடுஞ்சிமை யின் உருவுடைமை நோக்காது பாயும் எனவே, ஈக்கள் கொட்டு தற்கு அஞ்சினமை பெறப்படும். வாரான் என்னாது வருதல் அறியான் என்றது, வருவதிலன், ஒருகால் வரினும் பிறர் அறியா வகை வருமாறு தெரிந்திலன் என்பதுபட நின்றது. முன்னை யிரவில் தான் அல்லகுறிப்பட்டு உழந்த அல்லலைக் குறிப்பாலுணர்த்துவாள், இரவின் வருத லறியான் என்றும், வாராதானை வந்தான் என்று யாய் மருண்டு கூறுகின்றாள் என்பாள், வரும் வரும் என்பள் யாய் என்றும் கூறினாள். அடுக்கு வன்புறை குறித்து நின்றது. மந்தி விலக்குவது இரவுக்குறி விலக்கிய குறிப்பாகவும், வன்பறழ் தலைவனாகவும், தேனீ சுற்றத்தாராகவும், பறழ் நெடுஞ்சிமையிற் பாய்ந்தது தலைவன் பெயர்ந்து சென்றதாகவும் உள்ளுறையுவமம் கொள்க. யாய் வரும்வரும் என்பள் என்றது தாய் அறிந்தமை கூறி இரவுக்குறி மறுத்து வரைவு கடாவியவாறு. நெடுஞ்சினை என்பது பாடமாயின், மலையின் சிமையம் அதற்குச் சினையாகும் இயைபு குறித்துச் சினை எனப்பட்டது என்க. 273. அத்தச் செயலைத் துப்புற ழொண்டளிர் புன்றலை மந்தி வன்பற ழாரும் நன்மலை நாட நீசெலின் நின்னயந் துறைவி யென்னினுங் கலிழ்மே. இது, வரைவிடைவைத்துப் பிரியும் தலைமகன் நின் துணை வியை உடம்படுவித்தேன்; இனி நீயே இதற்கு உடன் படாது கலிழ்கின்றாய் என்றாற்குத் தோழி கூறியது. பழைய உரை : பிரிவு உடம்பட்டாளே யாயினும் நீ பிரிந்துழி ஆற்றாள் என்பதாம். அசோகந்தளிரை மந்திப்பார்ப்பு அருந்தும் என்றது, இளமை கழிவதற்கு முன்னே வரைதல் வேண்டும் என்பதாம். உரை : வழிக்கண்நின்ற அசோகினது பவளம் போலும் ஒள்ளிய தளிர்களைப் புல்லிய தலையினையுடைய மந்தியின் வலிய குட்டி உண்ணும் நல்ல மலைநாடனே, நீ பிரிந்து செல்லின் நின்னை விரும்பி நின் பிரிவுடன்பட்டு ஈண்டு உறைபவள் பின்னர் ஆற்றாது என்னினும் மிகக் கலுழ்ந்து வருந்துவள், காண் என்றவாறு. பெருவழிகளில் நெல்லி மரங்களை வழிக்கரையில் நிரல்பட வளர்ப்பது பண்டைத்தமிழர் மரபு. வழிக்கரையில் நிற்பதுபற்றிச் செயலை, அத்தச்செயலை எனப்பட்டது; "அத்த நெல்லி 1" எனவும், "அத்தப் பலவு 2" எனவும் சான்றோர் உரைப்பது காண்க. செயலையின் தளிர் செந்நிறத்ததாதலின், துப்புறழ் ஒண்டளிர் என்றார்; பிறரும், "ஊட்டி யன்ன ஒண்டளிர்ச் செயலை 3" "அழலேர் செயலை 4" என்று கூறுவர். இளந் தளிர்களை உண்டல் குரங்குகட்கு இயல்பு; "முறிமேய் கடுவன் 5" "குளவி மேய்ந்த மந்தி 6" எனப் பின்னரும் கூறுப. மந்தியின் தலைமயிர் சிலிர்த்துத் துய் போறலின், புன்றலை மந்தி என்றார்; எனைச் சான்றோரும் "புன்றலை மந்தி 7" "துய்த்தலை மந்தி 8" என்று குறிப்பர். உறைவி - உறைபவள்; "உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம்படுவி 9" என்றாற் போல. தலைமகள் நின் பிரிவுடன்பட்டா ளாயினும், நீ பிரிந்துழி ஆற்றா ளென்பதாம். நின்னைச் சிறிது பிரியினும், ஆற்றாது நின்னையே நினைந்து வாய்வெருவி வருந்துமவள் நீ பிரிதற்கு உடன்படாள்; மற்று நின் வரம்பிகத்தல் தன் கடனன்று என்னும் கற்புடைமையால் உடம்பட்டாளாதல் வேண்டு மென்பாள், நின்னயந்துறைவி என்றும், தன் இளமையால் என்னினும் விரைந்து உடன்பட்டாளாகலான், பிரிவின்கண் என்னினும் ஆற்றாளாவள் என்றற்கு என்னினும் கலிழ்மே என்றும் கூறி னாள். மந்தியின் வன்பறழ் செயலையின் தளிர் முற்றி நிறம் மாறு முன்பே உண்டாற் போல, நீயும் இவள் இளமை கழிந்து காமச் செவ்வி மாறுமுன்பே வரைந்து கோடல் வேண்டும் என்பது உள்ளுறை. "இளமை கழிந்த பின்றை வளமை, காமம் தருதலும் இன்றே 10" என்று சான்றோர் கூறுதல் காண்க. 274. மந்திக் கணவன் கல்லாக் கடுவன் ஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைந்துடன் குன்றுய ரடுக்கங் கொள்ளும் நாடன் சென்றனன் வாழி தோழியென் மென்றோட் கவினும் பாயலுங் கொண்டே. இது, வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. பழைய உரை : மந்திக் கணவனாகிய கல்லாக் கடுவன் புலி முழக்கிற்கு அஞ்சி வரையகத்துப் பாயும் நாடன் என்றது, நமக்கு உரியனாய் ஒழுகு கின்றவன் யாம் எம்மைப் பாதுகாத்து உரைக்கின்ற உரைக்கு அஞ்சிச் சென்றான் என்பதாம். உரை : தோழி, மந்திக்குக் கணவனாய் மேல் விளைவ தறியும் கல்வி யில்லாத கடுவன், ஒள்ளிய நிறம் பொருந்திய வலி யுடைய புலி முழங்குதலால் வெருவி யோடிக் குன்றின் கண் உயர்ந்த மலைப்பக்கத்தை அடையும் நாடன், என் மெல்லிய தோளழகும், அதனைச் செறிய எய்தும் உறக்கமும் என் னிடத்தே இலவாகச் செய்து, தான் என்னைப் பிரிந்து சென்றான்; அவன் வாழ்வானாக என்றவாறு. குழுமல் - முழக்குதல், "கயவாய் வேங்கை காய்சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ 1" என்றும், "கொடுவரிச் செங்கண் இரும்புலி குழுமுஞ் சாரல்" என்றும் வருவனவற்றாலுணர்க. பாயல் - உறக்கம். தலைமகன் பிரிவினால் வருந்துபவள், புறத்தார்க்குப் புலப் படுத்தும் தோள்மெலிவும், அதற்குக் காரணமாய ஆற்றாமையும் கண்டு அஞ்சி யிரங்குவாள், மென்றோட் கவினும் பாயலும் கொண்டே என்றும், தன்னை யின்றி அமையாத இவள் தோள் மெலிந்து கண்ணுறக்கம் இன்றி வருந்திநிற்கத் தான் சென்று இனிதிருக்கின்றான் என்பாள் சென்றனன் என்றும், தன் பொருட்டுப் பிறர் வருந்தாநிற்ப அது காணாது இன்புறுவோர்க்கு எய்தும் பழி அவற்கு வாராமை குறித்து வாழி என்றும் கூறினாள். கல்லாக் கடுவன் புலி குழுமல் கேட்டு அஞ்சிக் குன்றுயர் அடுக்கம் கொள்ளும் என்றது, வேற்றுவரைவு வருமென யாம் படைத்து மொழிந்தமை கேட்டு அஞ்சி வரைபொருட்குச் சென்றான் எனத் தலைமகன், செலவுக்குரிய காரணத்தை உள்ளுறுத்து உரைத்தவாறு. அவன் கவினும் பாயலும் கொண்டு சென்றானாயினும் வரைபொருள் முற்றி விரைந்து வருவானாக என்னும் விழைவு தோன்ற வாழி என்றாள் என்றுமாம். 275. குரங்கின் றலைவன் குரூஉமயிர்க் கடுவன் சூரலஞ் சிறுகோற் கொண்டு வியலறை மாரி மொக்குள் புடைக்கு நாட யாநின் னயந்தன மெனினுமெம் ஆய்நலம் வாடுமோ வருளுதி யெனினே. இது, வரையாது வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வரு தலால் எதிர்ப்பாடு பெறாத தோழி குறியிடத்து எதிர்ப்பட்டு அவன் கொடுமை கூறி நெருங்கிச் சொல்லியது. பழைய உரை : நின் நயந்த எம் நலம் வாடுதல் ஒருதலை யன்றே? அங்ஙன மாயினும் நின்னை யாங்கள் நயந்ததனை வெருளாது அருளப் பெறின் எம் நலம் வாடுமோ? என்றவாறு. குரங்கின் தலைவனாகிய கடுவன் சூரற்கோலைக் கொண்டு தானே அழிகின்ற மாரிமொக்குளைப் புடைத்து அழிக்கும் நாட என்றது, நின்னை நயந்த எங்கள் நலம் நீ வரையாமலே அழிகின்றது; இதனை நீ இவ்விடையிட்ட ஒழுக்கத்தாலே அழியாநின்றாய் என்பதாம். உரை : குரங்கின் தலைவனாகிய நிறம் பொருந்திய மயிரினை யுடைய கடுவன் சூரலின் சிறிய கோலைக்கொண்டு அகன்ற மலைப்பக்கத்தே யுள்ள மழைநீரா னாய மொக்குளைப் புடைக்கும் நாடனே, யாம் நின்னை விரும்பினேமாகலின், நலந்தொலைவு எய்தக்கடவே மாயினும் இடையறா ஒழுக்கத் தான் நீ எமக்கு அருளுவையாயின், எங்கள் அழகிய நலம் வாடாதன்றோ? என்றவாறு. தன்னை நயந்தாரைத் தான் நயத்து தலையளி செய்தல் தலைமகனுக்குக் கடனாக, நீ அது செய்யாதொழிந்தனை என்பாள், யாம் நின் நயந்தனம் என்றும், அந்நயப்பால் யாம் நலம் வாடக் கடவேம் என்பது ஒருதலை யன்று என்பாள், எனினும் என்றும் கூறினாள். கூறவே, அவள் நலம் வாடுதற்குக் காரணம் அவனது அருளாமை என்றும், அவ் வாட்டந்தானும் அழிவில் கூட்டத்தால் அருளுவையாயின் இன்றாம் என்றற்கு, ஆய்நலம் வாடுமோ அருளுதி யெனின் என்றும் கூறினா ளாயிற்று. நயந்தனம் எனத் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் படத்தோழி கூறுதலின், அருளுதி யெனின் என அவள் நெருங்கி யுரைப்பது அமையும் என அறிக. யாம் நின் நயந்தன மெனினும் என்றது தன்னை யழிதல்; ஆய்நலம் வாடுமோ என்றது, வாட்டம் புறத்தார்க்குப் புலனாகி அலர் விளைக்கும் என நலத்தின் மேல் வைத்துத் தீமை கூறல். இவை புரைபட வந்தன வாயினும் வரைதல் வேட்கைப் பொருள வாகலின் அமைந்தன. 276. மந்திக் காதலன் முறிமேய் கடுவன் தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப் பொங்க லிளமழை புடைக்கு நாட நயவா யாயினும் வரைந்தனை சென்மோ கன்முகை வேங்கை மலரும் நன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே. இது, வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. பழைய உரை : மேல் கருக்கொண்டு முற்றிப் பயன்படுவதாய இளமுகிலைக் கடுவன் நறைக்கொடிகொண்டு புடைக்கும் நாட என்றது, வரைந்து மகப்பெறுதற்கு உரியளாகிய இவளை இம் மறைந்த ஒழுக்கத்தாலே கொலை சூழ்கின்றாய் என்பதாம். கல்முகை வேங்கை மலரும் நாட என்றதனால் வரைதற்குரிய பருவமும் கூறியவா றாயிற்று. உரை : மந்தியின் காதலனாய்த் தளிர்களையுண்ணும் கடுவன் தண்ணிதாய் மணம் கமழும் நறைக்கொடி கொண்டு அகன்ற மலைப்பக்கத்துப் படியும் இளமுகிலைப் புடைக்கும் நாடனே, கல்லிடையே அரும்பிய முகைகளையுடைய வேங்கை மலரும் நல்ல மலைநாடனுக்குரிய பெண்டு எனப்படுமாறு வரைந்து கொண்டு செல்வாயாக என்றவாறு. நறைக்கொடி நறவங்கொடி என்றும் வழங்கும். முறியெனப் பொதுப்படக் கூறியதனால், செயலை, குளவி முதலிய தளிர் களைக் கொள்க. "கறிவளர் அடுக்கத் தாங்கண் முறியருந்து, குரங்கு ஒருங் கிருக்கும் 1" என்ப. பொங்கல் என்பது மிகுதிப் பொருட்டாயினும், ஈண்டுத் திரள்திரளாய் எழுதலை யுணர்த் திற்று; "பெய்து புலந்திறந்த பொங்கல் வெண்மழை 2" எனப் பிறருங் கூறுதல் காண்க. கன்முகை வேங்கை மலரும் யென்ப தற்குக் கல்முழைஞ்சினுள் நின்ற வேங்கை மலரும் எனினுமாம். முகை - முழைஞ்சு. "கன்முகை வயப்புலி 3" எனப் பிறாண்டுங் கூறியவாற்றா னறிக. பெண்டு - மனைவி. "ஊரார் பெண்டென மொழிய என்னை 4" என்றார் பிறரும். நின்னை யின்றியமையாது விரும்பும் இவளைத் தலைவ னாகிய நீ வரைந்து கோடலைச் செய்யாது நீட்டிக்கின்றா யாகலின், நயவா யாயினும் என்றும், நின் முயக்கின்பம் இன்றேனும், நின் பெண்டு எனப்படுதல் பெறின், இவள் இறந்து படாது உயிர் வாழ்வாள் என்பாள், நன்மலை நாடன் பெண்டு எனப்படுத்தே என்றும் கூறினாள். மேன்மேற் படிந்து குளிர்ந்து மழைபெயற் குரிய இள முகிலைக் கடுவன் நறைக்கொடி கொண்டு அலைக்கும் நாட என்றது, வரைந்து கூடி மகப்பெறுதற் குரியளாகிய இவளைக் களவையே நீட்டித்து அலைக்கின்றாய் என்பதாம். 277. குறவர் முன்றின் மாதீண்டு துறுகற் கல்லா மந்தி கடுவனொ டுகளும் குன்ற நாட நின் மொழிவ லென்றும் பயப்ப நீத்த லென்னிவள் கயத்துவளர் குவளையி னமர்த்த கண்ணே. இது, வரையாது வந்தொழுகும் தலைமகன் புணர்ந்து நீங்குழி எதிர்ப்பட்ட தோழி வரைவுகடாயது. பழைய உரை : குறவர் முன்றிலில் மா தீண்டு துறுகற்கண்ணே நாணாது மந்தி கடுவனோடு உகளும் நாட என்றது, சுற்றத்தார் நடுவே இவ் வொழுக்கம் புலனாகிய ஞான்று விளையும் ஏதத்திற்கு நாணாதோய் என்பதாம். உரை : குறவர் இன்முன் நிறுத்திய மாதீண்டு துறுகல்லில் கல்லா மந்தி தன் கடுவனோடு தாவியாடும் குன்றங்களையுடைய நாடனே, நின்னை ஒன்று வினவுவல்: குளங்களில் வளரும் குவளை மலரைப் போல அமர்த்த இவளுடைய கண்கள் பசலை பாயும்படி இன்றை இல்லையாயினும் என்றேனும் பிரிந்துசேறல் யாது கருதியோ? கூறுக என்றவாறு. மாதீண்டு துறுகல், ஆதீண்டு குற்றி போல மாவினம் தினவு தீர்த்துக்கோடற்பொருட்டு நிறுத்தப்படுவது. மந்தி கடுவனோடு உகளுதலை விதந்து "அள்ளிலைப் பலவின் கனிகவர் கைய, கல்லா மந்தி கடுவனோ டுகளும், கடுந்திற லணங்கின் நெடும்பெருங் குன்றம் 1" எனப் பிறரும் கூறுதல் காண்க. பயத்தல் - பசத்தல். அமர்த்தல் - மாறுபடுதல். மேவற் பொருட்டாகிய அமர்தல், அமர்த்தலென நின்றது எனவும் கூறுப. நாடோறும் தலைமகளைக் குறியிடத்தே எதிர்ப்பட்டுக் கூடுதலும் பின்னர்ப் பிரிதலும் செய்தொழுகும் இக்களவினை விலக்கி, வரைந்துகொண்டு, என்றும் பிரிவறியாத பேரின்பத்தில் திளைக்க வேண்டும் என்னும் விழைவினால் தலைமகனை வரைவுகடாவுவான் சொல்லாடுகின்றாளாகலின், நின் மொழி வல் என்று முகம்புகுந்தாள். நாடோறும் குறியிடத் தெய்திக் கூடுதலின் ஒழியாத பெருங்காதல் உடையை என்றற்கு என்றும் என்றும், இவ்வண்ணம் இடையறவு இன்றிக் கூடுதலை விரும்பும் நீ, கூடியபின் பிரிவது கூடாது என்பாள் நீத்தல் என் என்றும், நின் பிரிவால் இவள் கண் பசந்து வேறுபடுதலை அறிதல் வேண்டும் என்றற்கு, பயப்ப நீத்தல் என் என்றும் கூறினாள். இருதலையும் காதற்காமம் சிறப்பது குறித்துத் தலைமகன் புணர்வும் பிரிவும் நிகழ்த்தி யொழுகுகின்றான் என்பதைத் தோழி அறிந்துளா ளாயினும், தலைமகள்பால் அது சிறந்தமை யுணர்த்தி வரைவு கடாவும் கருத்தின ளாகலின் என் என்று கடாவினாள் என அறிக. கயத்துவளர் குவளை என்றது, குவளைக்குக் கயம் இன்றி யமையாதவாறு போல நீ இவட்கு இன்றியமையா யாயினை எனக் காதற்சிறப்பும், கயத்தின் நீங்கியவழிக் குவளை பசந்து சாம்புவது போல நின்னின் நீங்கியவழி இவள் கண் பசந்து வேறுபடுவளெனப் பயப்பதற்கு ஏதுவும் சுட்டி நின்றது. பசலை பாய்ந்து மேனி வேறுபட்டா ளாயின் அதனைத் தமர் அறிந்து இற்செறிப்பு முதலிய இடையீடு செய்வராகலின், பயப்ப நீத்தல் என் என வெளிப்படையாலும் இடையூறு கூறி வரைவு கடாயவாறும் கொள்க. குறவர் முன்றிலில் கல்லா மந்தி ஏதம் நினையாது கடுவனோடு உகளும் என்றது, மனையின் அகத்தும் புறத்தும் அமைந்த குறியிடத்தே கூட்டத்துக்கு உண்டாகும் ஏதம் நினையாது இன்றியமையாக் காதலால் கூடி யொழுகுகின்றாள் என உள்ளுறையால் இருவகைக் குறியையும் விலக்கிக் குறிப்பால் வரைவுகடாவிய வாறு. இரவுக்குறி இல்லகத்ததெனவும் பகற்குறி புறம் எனவும் ஆசிரியர் கூறுப. 1 278. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல் குரங்கின் வன்பறழ் பாய்ந்தென விலஞ்சி மீனெறி தூண்டிலி னிவக்கு நாடன் உற்றோர் மறவா நோய்தந்து கண்டோர் தண்டா நலங்கொண் டனனே. இது, வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத் தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பழைய உரை: குரங்கு தன்மேல் இருந்துழி வளைந்து, அது பாய்ந்து போவுழி நிமிர்கின்ற மூங்கிற்கோல் மீனெறி தூண்டில் போல ஓங்கும் நாடன் என்றது, தன் நெஞ்சத்து அன்புளதாகிய காலத்து வளைத்து வளைத் தொழுகி அன்பற்ற காலத்துப் பணிவின்றித் தலைமை செய்து நம் நலம் கொண்ட தன் கொடுமை தோன்ற ஒழுகுகின்றான் என்பதாம். உரை : மலைக்கண்ணுள்ள மூங்கிலின் கணுவிடத்தெழுந்த கோலின் மேலிருந்து குரங்கினது வலிய குட்டி பாய்ந்ததாக, அக்கோல் குளத்தின்கண் மீன் பிடிப்பதற்கு வைத்த தூண் டிலைப் போலத் தாழ்ந்திருந்து நிமிரும் நாடன் தன்னைச் சார்ந்தோர்க்கு என்றும் மறக்கலாகாத நோய் தந்து, கண் கொள்ளாக் கவின்மிக்க அவரது நலத்தைக் கவர்ந்து கொண் டனன்; அவர்தாமும் தம் நலமிழந்து வருந்துவா ராயினர்காண் என்றவாறு. வெதிர், வெதிரம் என நின்றது. இலஞ்சி - நீர்நிலை. மீனெறி தூண்டில் - மீனைக் கரையிடத்துத் தூக்கி யெறியும் கழைக்கோல். தாழ்ந்திருந்த மூங்கில் நிமிர்வதனை மீனெறி தூண்டிற் குவமித்தல், "ஏனல் காவலர் கவணொலி வெரீஇக், கான யானை கைவிடு பசுங்கழை, மீனெறி தூண்டிலின் நிவக்கும், கானக நாட 1" எனப் பிறரும் கூறுதல் காண்க. தன்னைக் கூடிய காதலன் பிரிவு இடை வைத்து வரையாது ஒழுகுதலின், தலைமகள் அவனையே நினைந்து வருந்து கின்றா ளாகலின், உற்றோர் மறவா நோய் தந்து என்றும், அதனால் அவள் தன் மேனி வேறுபட்டு, நலம் கெடுதற் கிரங்கி, கண்டோர் தண்டா நலம் கொண்டனன் என்றும் கூறினாள். தண்டா நலம் என்றது, கழிந்ததற்கு இரங்கிக் கூறியது. நலங்கொண்டு நோய் தருதல் காதலர்க்கு அறமன்று எனத் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறியது, நோய் பயக்கும் நலக்கேடு கூட்டத்துக்கு இடையூறு பயக்குமெனக் குறிப்பால் வரைவுகடாயது. வெதிரத்துக் கோல் மீனெறி தூண்டிலின் நிவக்கு மாயினும் அது தூண்டில் போல் பிறவுயிர்க்குத் தீங்கு செய்யாதாக, தலை மகன் வரையா தொழுகும் ஒழுக்கம் எனக்குத் தீங்காயினவாறு என்னை என இறைச்சி தோன்றுதல் காண்க. "இறைச்சி தானே பொருட்புறத்ததுவே" என்றும் "இறைச்சியிற் பிறக்கும் பொருளு மாருளவே 1" என்றும் ஆசிரியர் கூறுப. 279. கல்லிவ ரிற்றி புல்லுவன வேறிக் குளவி மேய்ந்த மந்தி துணையொடு வரைமிசை யுகளு நாட நீவரிற் கல்லகத் ததுவெம் மூரே அம்பற் சேரி யலராங் கட்டே. இது, இரவுக்குறி வேண்டும் தலைமகனைத் தோழி வர வருமை கூறி மறுத்தது. பழைய உரை : எம்மூர் என்றது, சூழ்ந்த மலைகளின் நடுவகத்தது எம்மூர் என்றவாறு. இற்றிமேற் படர்ந்த குளுவித்தளிரை மேய்ந்து வரையகத்திலே மத்தி கடுவனோடு உகளும் நாடனாதலான் இதற்கு முன்பு இவள் நின்னொடு நுகர்ந்ததே கொண்டு இனி இவள் நின் பதிக்கண் வாழ்தல் வேண்டும் என்பதாம். உரை : கற்களின் மேலோடும் இற்றிமரத்தின் வேரையும், வேறு பற்றுவனவற்றையும் பற்றிச் சென்று, அவ்விற்றிமேற் படர்ந்த குளவித்தளிரை மேய்ந்த மந்தி, தன் துணைக்குரங்கோடு கூடி மலையின்மேல் தாவி யாடுகின்ற நாடனே, கற்கள் சூழ்ந்த மலைகளின் நடுவகத்த தாகிய எமது ஊர், அம்பல் மொழியும் சேரியும் அலர்விளைப்பார் உறையும் இடமும் உடையது; ஆகவே நி வருதல் நன்றன்று என்றவாறு. இற்றி - ஒருவகை மரம். இக்காலத்தார் இதனை இத்தி என வழங்குப. இதன்வேர் கற்களின்மேற் பரவியிருத்தலின், அதனைப் பற்றி யேறிச் சென்று மந்தி குளவித்தளிரை மேய்ந்ததெனக் கொள்க. "புல்வீழிற்றிக் கல்லிவர் வெள்வேர், வரையிழி யருவியிற் றோன்றும் நாடன் 1" எனப் பிறாண்டும் இவரே கூறுமாறு உணர்க. குளவி - காட்டுமல்லிகை. குளவி - மிக்க மணமுடைய பூவையுடையது. இது புதல் புதலாக அரிய இடங்களில் வளர்ந் திருக்கும். "குளவித் தண்புதல் 2" என்றும், "நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற, குளவி 3" என்றும் சான்றோர் கண்டுரைப்பது காண்க. எளிதில் சென்ற டைதற்குரிய இடத்தில் இருத்தலின், மந்தி இற்றிவேரைப் பற்றிச் சென்று குளவியை மேய்வதாயிற் றென அறிக. ஊர்க்குப்புறமாய்ச் சேர இருப்பது சேரி. ஊரகம் அலரும், புறமாய சேரி அம்பலும் உடைய என்பது கருத்து. நீவரின் என்றது, நீ வாராதொழிதல் நன்றென்பது பட நின்றது. எம்மூர் மலைகள் சூழ்ந்த நடுவகத்த தாகலின், செவ்விய நெறியின்றிக் கொடிய விலங்குகள் இயங்கும் படுவழிகளை யுடைத் தென்பாள், கல்லகத்தது எம்மூரே என்றும், எம்மூரி லுள்ளார் இயல்பாகவே அம்பலும் அலரும் கூறுவராகலின், நீ வரின், அது பெருங் கௌவையாம் என்பாள், அம்பற் சேரி யலராங் கட்டே என்றும் கூறினாள். இவை ஏதமாய்தல். "அம்ப லென்பது சொல் நிகழாதே முகிழ்முகிழ்த்துச் சொல்வது; இன்ன தின் கண்ண தென்பது அயலறிய லாகா தென்பது. அலரென்பது இன்னானொடு இன்னாளிடையது போலும் பட்டது என விளங்கச் சொல்லி நிற்பது. அம்பலென்பது பெரும் போதாய்ச் சிறிது நிற்க அலருமென நிற்பது; அலரென்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற் போல நிற்கும் நிலைமை 4" என்பர். இற்றியின் வேரையும் வீழ்தையும் பற்றி ஏறிய மந்தியும் கடுவனும் ஆண்டுப்படர்ந்த குளவியின் தளிரை மேய்ந்து இன்புறும் என்றது, களவு நெறி பற்றிக் காதலன்பு வாழ்வில் தலைப்பட்ட நீவிர் இருவரும் இனிக் கற்புவழி மணந்து இல்லிருந்து நுகரும் நல்லின் பத்தை எய்துதல் வேண்டும் எனக் குறிப்பாய் வரைவு கடாவியவாறு. 280. கருவிரன் மந்திக் கல்லா விளம்பார்ப் பிருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோல் மதிபுடைப் பதுபோற் றோன்று நாட வரைந்தனை நீயெனக் கேட்டியான் உரைத்தனெ னல்லேனோ வஃதென் யாய்க்கே. இது, புணர்ந்துடன் போகிய தலைமகன் தலைமகளைக் கரண வகையான் வரைந்தானாக, எதிர்சென்ற தோழிக்கு "இனி யான் இவளை வரைந்தமை நுமர்க்கு உணர்த்த வேண்டும்" என்றானாக அவள் சொல்லியது. பழைய உரை : குரங்கின் இளம்பார்ப்பு இருவெதிர்ங்கழை ஏறி மதிபுடைப்பது போல் தோன்றும் நாட என்றது, தீங்குசெய்வாயைப் போலத் தோன்றுவ தல்லது உண்மைவகையாற் செய்யாய் என்பதாம். உரை : கரிய விரலையுடைய மந்தியின் கல்லாத இளைய குட்டி பெரிய மூங்கிலின் பசிய கழைமே லேறிச் சிறுகோலைக் கொண்டு மதியத்தைப் புடைப்பது போலும் தோற்றத்தைச் செய்யும் நாடனே, நீ இவளைக் கரண வகையான் வரைந்தனை யெனக் கேட்ட யான் விரைந்து அதனை யாய்க்கு உரைத்தேன் காண். என்றவாறு. மந்தியின் குட்டியைப் பறழ் என்பதே யன்றிப் பார்ப்பு என்பதும் உண்டு; "மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும், அவையும் அன்ன அப்பாலா1" என ஆசிரியர் கூறுவர். வெதிர்- மூங்கில்வகை. இதன் நுனிப்பகுதி ஈண்டுக் கோல் எனக் குறிக்கப்படுகிறது. நெடிதுயர்ந்து தோன்றும் வெதிர்ங்கோல் வானத்தைத் தொடுவது போலத் தோன்றுதலின், அதன் நுனிக் கண் தங்கிய பார்ப்பு, வானத்திற் காணப்படும் மதியைப் புடைப் பதுபோலக் காட்சி தருவது பற்றி, மதி புடைப்பது போல் தோன்றும் என்றார். நீ வரைந்தனை என்றது பிறர் கூறிய கூற்றைக் கொண் டெடுத்து மொழிந்தது. தலைமகன் தன் வாய்மை குன்றாது தலைவியைக் கரணவகையால் மணந்தான் என்று பிறர் கூறக் கேட்டேன் என்பாள் கேட்டு என்றவள், தன் உள்ளம் நிறைந் தெழுந்த உவகையால் மேலே சொல்லாடாது கண்ணினும் முகத்தினும் விளங்கக் காட்டினாளாகலான், பின்னர்த் தான் தலைமகற்கு விடை யிறுக்கும் வாயிலாக, அவன் வரைந்த செய்தியை அஃது என்றும், அதனை விளங்க உரைத்தமை தோன்ற உரைத்தனெனல் லெனோ என்றும் கூறினாள். இருவெதிர் ஈர்ங்கழை யேறி அதன்மிசை இனிதிருக்கும் குரங்கின் பார்ப்பு, மதியைப் புடைத்து வருத்துவது போலத் தோன்றும் நாடன் என்றது, களவுவழி யொழுகி உடன்போக்கின் முடிவில் கரணவகையால் மணந்து இன்புறும் நீ, மதிபோல் உயர்ந்த எம் குடிக்குத் தீங்கு செய்வாய் போல என் யாய்க்குத் தோன்றாநின்றனை எனத் தாயர் முதலியோர் கொண்ட கருத் தினைத் தோழி உள்ளுத்து உரைத்தவாறு. இனி, "தலைவரும் விழுமநிலை 1" என்ற சூத்திரத்து "இயல் புற நாடின்" என்றதனால், "தலைவன் கரணவகையால் வரைந் தானாக எதிர்சென்ற தோழிக்கு யான் வரைந்தமை நுமர்க்கு உணர்த்தல் வேண்டும் என்றாற்கு அவள் உணர்த்தினேன் என்றது என்பர் நச்சினார்க்கினியர். 29. கிள்ளைப்பத்து கிள்ளை பொருளாக வரும் பாட்டுக்கள் பத்தின் தொகுதி யாகலின் இது கிள்ளைப்பத்து எனப்பட்டது. புள்ளினத்துள் கிள்ளையினம் பெரிது. இது வகையால் ஆறாகப் பிரியினும் விரித்து நோக்குங்கால் ஐஞ்ஞூறு இனமாகக் காணப்படுகிறது. வெம்மை நிலப் பகுதிகளிலும் அவற்றைச் சார்ந்த நிலங்களிலும் கிள்ளைகள் வாழ்கின்றன. மலேயா, ஆத்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவை மிக்கிருப்பினும் ஏனை எல்லாவற்றினும் தென்னமெரிக்காவில் தான் மிகுதியும் பல்கி யிருக்கின்றன. நம் நாட்டில் கிள்ளையினம் குறைவே; ஆப்பிரிக்காவில் நம் நாட்டினும் மிகக் குறைவு. ஐரோப்பாவில் கிள்ளையினமே கிடையாது. வட அமெரிக்கா வின் தென்பகுதியில் சில இடங்களில் ஒருவகைக் கிள்ளை வாழ்கின்றது. கிள்ளைகள் அறுபது முதல் எண்பது ஆண்டுகள் உயிர் வாழும் உரன் படைத்தவை. கிள்ளைகள் யாவும் பொதுவாக மரங்களில் வாழ்வன. ஆதலான் அதற் கேற்பவே அவற்றிற்குக் கால்களும் வாயல குகளும் அமைந்துள்ளன. கால்கள் ஒருவகை உறுதியான செதிள் களால் மூடப்பட்டிருக்கின்றன. சில கிள்ளைகட்குக் கால்கள் குறுகியும் சிலவற்றிற்கு நீண்டும் இருப்ப துண்டு. கிளியின் வாயலகு சிறியது; ஆயினும் வன்மை வாய்ந்து நுனி வளைந்திருக்கும். சில கிள்ளைகளின் மேலலகு நெளிக்கவும் விரிக்கவும் தக்க வகையில் உளது. கிளிகள் மரமேறுங்கால் அவற்றின் கால்களினும் வாயலகே பெரிதும் பயன்படும். நம் நாட்டில் காணப்படுவன பலவும் சிறுகிளியினம். பெருங்கிளி யினமும் கிள்ளையினத்துள் உண்டு. அவற்றின் வாயலகு வியக்கத்தக்க பெருவன்மை யுடையது. இப்பெருங்கிளிகள் பிரேசில் நாட்டில் மாக்கா1 என்ற பெயரால் வாழ்கின்றன. ஒருவன் சம்மட்டி கொண்டு உடைக்கக் கூடிய சில கொட்டைகளைப் பெருங்கிளியின் அலகு மிக எளிதில் உடைத்து மாவாக்கி விடுகிறது. பெருமரங்களைத் துளைத்துக் கூடமைப்பது அவற்றின் இயல்பு. அத்தொழிற்கு அவற்றின் வாயலகு பெருங் கருவியா யுளது. அவற்றின் முட்டைகள் வெண்மை நிறமுடை யன. பெருங்கிளியினம் இரண்டு மூன்று முட்டைகட்குமேல் இடுவதில்லை. தாயும் தந்தையுமாகிய இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்றிருந்து அம்முட்டைகளை அடைகாக்கும். கிளிகள் யாவும் பழவகைகளையும் கொட்டைகளையும் உணவாகக் கொள்கின்றன. தாம் உண்ட வுணவில் செரித்தும் செரிக் காமலும் இருக்கும் உணவை வெளிக் கொணர்ந்து பார்ப்புக் கட்கு அளிப்பது கிள்ளையினத்தின் சிறப்புப் பண்பாகும். கிளிகள் பலவும் கூட்டம் கூட்டமாக ஆரவாரம் செய்து கொண்டு வாழும். வெள்ளிடைகளிலும் வெயில் பரந்த தோட்டங்களிலும் இவை விருப்பத்தோடு தங்கும். நியூசிலந்தில் ஒருவகைக் கிளியினம் ஆடுகளின் குண்டிக்காயைச் சூழ்ந்துள்ள நிணத்தைக்குடைந்து உண்கின்றன என்றும், அதனால் அந்நாட்டிற் பல ஆடுகள் இறந்தொழிகின்றன என்றும், அந்நாட்டிற்கு ஆடுகள் வந்து சேர்ந்தபின்பே அக்கிளிகட்கு அக்கொடிய பழக்கம் உண்டாயிற்றென்றும் அந்நாட்டவர் உரைக்கின்றனர். அவை ஏனைக் கிள்ளையினம் போலாது இடைப்பனிக்காலத்தே பனிமூடிய மலைமுடியிலும் பனிப்பாறை களிலும் கூடமைக்கின்றன; அதனால் அவ்வினத்தை மலைக் கிள்ளை என்று பெயர் குறிக்கின்றனர். நியூகினியாவில் வாழும் கிளிகள் இரண்டரையடி நீள முள்ளன. அமெரிக்காவில் வாழ்வன பொதுவாக மூன்றடி நீளமாகும். இடைஅமெரிக்காவில் உள்ளவை மூன்றடி நீள மிருப்பினும், அவற்றின் வால்மட்டில் இரண்டடி நீளம் உளது. அங்கே காணப்படும் பச்சைக் கிளியும் நீலக்கிளியும் ஆப்பிரிக்கா வில் வாழும் காதற் கிளியும்1 ஐந்து அங்குல நீளமே யுள்ளன. நியூகினியாவில் குறுங்கிள்ளை 2 என்றோர் இனமுண்டு. அஃது இரண்டு அங்குல நீளமேயாகும். ஆப்பிரிக்காவில் சாம்பல்நிற முடைய கிளிகள் வாழ் கின்றன. அவற்றின் வால் நீண்டு சிவந்துள்ளது. பொதுவாகக் கிள்ளையினம் யாவும் பசுமைநிற முடையவே; எனினும், பொன்மை, நீலம், சிவப்பு, வெண்மை, கருமை ஆகிய நிற முடையனவும் உள்ளன. அமெரிக்காவிலுள்ள மாக்காக்கிளி 3 பெருவனப் புடையதாகக் கருதப்படுகிறது. வனப்பிலே யன்றி ஆரவாரம் செய்வதிலும் பெருமை அவற்றிற்கே யாகும். ஆத்தி ரேலியப் பகுதியிலுள்ள கிள்ளை செம்மை கலந்த நீலநிறமான தலையும், நீலமும் பசுமையும் பொருந்திய இறகும், சிவந்த குஞ்சியும் 4 கொண்டுள்ளன. இவற்றின் வேறாகக் கொண்டை யுடைய கிளிகளும் அங்கே வாழ்கின்றன. அவற்றின் காலும் அலகும் மிகவும் குறுகி யிருக்கின்றன. இவை பெரும்பாலும் வெண்மைநிற முடையவை யெனினும் முதுகிலும் வாலிலும் செந்நிறமோ பொன் நிறமோ பொருந்தியிருக்கின்றன. சில கிள்ளையினத்துக்கு வயிற்றுப்பகுதி சிவந்தும் முதுகு சாம்பல்நிறம் பெற்று முள்ளன. சில தலைமட்டில் சிவந்து உடல் முழுதும் சாம்பல்நிறமே பரவி யிருப்பது உண்டு. சில கிளிகள் உடல் முழுதும் கருமைநிறம் பெற்று வாற்பகுதி சிவந்து தோன்றும். கருங்கிள்ளைகளுட் சில வெண்கருமை நிறம் கொண்டு இருகன்னமும் சிவந்துள்ளன. கிள்ளைகளுள் இந்த இனமே உடல் பருத்தவையாகும்; அலகின் வன்மையிலும் சிறந்தவை. ஆத்திரேலியாவின் தென்பகுதியில் வாழும் வெள்ளைக்கிளிகள் மிக்க அழகுடையன. அவை அலகின் கீழும் மார்பிலும் இறகடி யிலும் சிவந்து விளங்கும். அந்நாட்டிலே ஐவண்ணக் கிளிகள் சிறந்து உள்ளன. அக்கிள்ளையின் மேனியில் பசுமை, நீலம், வெண்மஞ்சள், கருமை ஆகிய வண்ணங்கள் விரவி யிருக்கின்றன. அதன் உடல் நீளத்தில் வால் செம்பாதி; அஃது ஏழரை அங்குலம். கிளிவகை பலவும் பிடித்துப் பழக்குதற் கேற்ற பண்பாடுடை யவை. பச்சைக்கிளி, சாம்பற்கிளி, மாக்காக்கிளி எனவரும் இக்கிள்ளைகள் பேசப்பழகும் இயல்புடைமையால் பன் னூறாண்டுகட்கு முன்பே மக்கள் இவற்றைப் பிடித்துக் கூட்டில் வைத்துப் பேச்சுக் கற்றுக்கொடுத்து அவை மிழற்றும் மழலை கேட்டு இன்புற்றனர். வேள்பாரியின் பறம்பினைத் தமிழ்வேந்தர் முற்றிக்கொண்டபோது அங்குள்ள கிளிகள் வேற்றுப் புலங்கட்குச் சென்று நெற்கதிர்களைக் கொணர்ந்தன என ஒளவையாரும், நக்கீரனாரும் கூறுகின்றனர். பண்டைத் தமிழ் நன்மக்களோடு நெருங்கிப் பழகியதனால், உரோமானியர் இக்கிளிகளைக் கொண்டு சென்று வளர்த்தனர். அந்நாளை யவனப் பெண்கள், "வெல்க சீசர்" என்று சொல்லுமாறு பயிற்றி யிருந்தார்களென வரலாறு கூறுகிறது. எய்தன் 1 என்னும் ஒரு பாண்பெருமகன் பேணி வளர்த்த கிளி அவன் பாடிய பாட்டைப் பாடுமாம். விவிலிய நூலில் உள்ள 104ஆம் சங்கீதத்தை 1802 ஆம் ஆண்டில் ஒரு கிளி பாடிற்றென மேனாட்டார் குறித்துள்ளனர். இதை நோக்க, "பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு, வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலை யாமே 2 எனத் திருஞான சம்பந்தர் சொல்வது எத்துணை இன்பமாக வுளது காண்மின். இக்கிள்ளை பொருளாக வைத்துப் பிற்காலப் புலவர் கிள்ளைவிடு தூது பாடித் தாம் இன்புறுவதுடன் உலகு இன்புறக் கண்டு உவகை மீதூர்ந்தனர். 281. வெள்ள வரம்பி னூழி போகியும் கிள்ளை வாழிய பலவே யொள்ளிழை இரும்பல் கூந்தற் கொடிச்சி பெருந்தோட் காவல் காட்டி யவ்வே. இஃது, ஆயத்தோடு விளையாட்டு விருப்பினாற் பொழி லகம் புகுந்த தலைவியை எதிர்ப்பட்டு ஒழுகுகின்ற தலைமகன் அவள் புனங்காவற் குரியளாய் நின்றது கண்டு மகிழ்ந்து சொல்லியது. உரை : ஒள்ளிய இழையினையும் கரிய பலவாகிய கூந்தலையு முடைய கொடிச்சி பெரிய தோளாற் புரியும் புனங்காவலை மேற்கொண்டாள் என்பதைக் காட்டினவாகலின், பலவாய் வந்து படியுங் கிளிகள் வெள்ளமென்னும் பேரெண்ணை வரம்பாக வுடைய ஊழியாகிய காலம் முடியினும் முடியாது நெடிது வாழுமாக என்றவாறு. வெள்ளம் - நூறாயிரம் என்னும் பேரெண்ணுக்கு மேலே கூறப்படும்; தாமரை, வெள்ளம் ஆம்பல் எனப்படும் கழிபே ரெண்களுள் இடையாயது. "ஐயம் பல்லென வரூஉம் இறுதி 1" யையுடைய எண்ணுப்பெயர் அவை. ஊழிபோகியும் போகாது வாழ்க என்றற்குப் போகியும் என்றார். கிள்ளைகள் இனிது பேணப்படின் 60 முதல் 80 ஆண்டுகள் வாழ்கின்றன என உயிர் நூலறிஞர் கூறுவர். காலத்துக்கு எஞ்ஞான்றும் கழிவது தொழிலே யன்றி நிற்பதன்மையின் போகியும் எனல் வேண் டிற்று. மகளிர்க்குத் தோள் பெருத்தல் இலக்கணமாகலின், பெருந் தோள் என்றும், தட்டை யொலித்தற்கும் கவண் எறிதற்கும் தோளாற்றல் சிறப்ப வேண்டியிருத்தலின், அது கொண்டு செய்யும் காவற்றொழிலைப் பெருந்தோட் காவல் என்றும் சிறப்பித்தார். காட்டிய, அன்பெறாது வந்த அகரவீற்றுப் பலவறி முற்றுச் சொல். கவணும் தட்டையும் கொண்டு புனத்திற் படியும் கிளிகளை ஓப்புங்காலத்து, அவை கதுமென எழுதலால், அவள் புனங்காவற் குரியளாய் நின்றது உணர்ந்து ஆண்டுச் சென்று அவளைக் கண்டானாகலின், பெருந்தோட் காவல் காட்டியவ்வே யென்றும், கருவியால் ஓப்பினாளாயினும், மொழியால் இன மெனக் காட்டுதலின், கிளிகள் மீட்டும் போந்து படிந்து அவள் புகழ்விளக்குதலின், கிள்ளை வாழிய பலவே என்றும், அது குறித்து அக்கிளிகட்குத் தன் நன்றியை அறிவிக்குமுகத்தால் வாழ்த்துதலால், வெள்ள வரம்பின் ஊழி போகியும் என்றும் கூறினான். "நன்றே செய்த உதவி 1" எனப் பிறாண்டும் கூறுதல் காண்க. வாழிய பலவே என்பதற்குப் பல்லூழி' காலம் வாழ்க எனினுமாம். தான் எதிர்ப்பட்டுக் கூடுதற்கண், தனக்கு இன்பம் தந்து மகிழ்வித்த பெருமை நோக்கி, பெருந்தோள் என்று விதந்தோதினான் என்றலும் ஒன்று. "மெய்தொட்டுப் பயிறல் 2" என்ற சூத்திரத்துச் "சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி" என்புழிச் சொல்லிய என்றதனால் அமையும் கிள்ளை வாழ்த்துக்கு இதனைக் காட்டினர் நச்சினார்க் கினியர். 282. சாரற் புனத்த பெருங்குரற் சிறுதினைப் பேரமர் மழைகட் கொடிச்சி கடியவும் சோலைச் சிறுகிளி யுண்ணும் நாட ஆரிருள் பெருகின வாரல் கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே. இஃது, இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து நீங்குழி அவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது. பழைய உரை : கொடிச்சி கடியவும் சோலைச் சிறுகிளி தினையை உண்ணும் நாட என்றது, காவலர் காத்தொழுகவும் களவொழுக்கத்தையே விரும்பா நின்றாய் என்பதாம் என்றவாறு. உரை : மலைச்சாரலில் அமைந்த புனத்தகத்தே விதைக்கப் பட்டனவாகிய பெரிய கதிர்களையுடைய சிறுதினையைப் பெரிய மதர்த்த கண்களையுடைய கொடிச்சியாகிய குறமகள் கடியவும், சோலைகளில் வாழும் சிறிய கிளிகள் ஓவாமல் அத்தினையை யுண்டலைச் செய்யும் நாடனே, நிறைந்த இருள் பெருகின வாகலினாலும், நீ வரும் வழிகளும் கோட்டினை யுடைய மாவாகிய யானை முதலிய கொடிய விலங்குகள் இயங்கும் காட்டிடத்தன வாகலினாலும் நீ வாராதொழி வாயாக என்றவாறு. கொடிச்சி கடியவும், சிறுகிளி தினை உண்ணும் நாட என இயைக்க. சாரற்புனம் - சாரலிடத்தே யுள்ள புனக்கொல்லை. குரல் - கதிர். சிறுதினை என்றவிடத்துச் சிறுமை, தினை யரிசியைச் சிறப்பித்தது. உண்ணும் - உண்ணுதலைச் செய்யும். தட்டையும் கவணும் கொண்டு ஓப்பிய வழியும் சோலைக் கிளிகள் தம் சிறுமையால் ஓவாமல் உண்ணுதலையே விடாது செய்கின்றன என்றற்குச் சிறுகிளி உண்ணும் என்றார். வாரல் - அல்லீற்று எதிர்மறை வியங்கோள்முற்று. பெருமையும் குளிர்ச்சியு முடைய வாயினும் நோய் செய்யும் தன்மையு முடைமையான் மாறுபடுதலின், பேரமர் மழைக்கண் எனப்பட்டது. கோட்டுமா, கோடுகளையுடைய மாக்கட்குப் பொதுவாயினும், தலைமையும் பெருமையும் பற்றிக் களிற்றின் மேல் நின்றது. உள்ளுறையால், தான் பகற்குறி மறுத்து வரைவு கடாவின மையும் தலைமகன் அதனைத் தெருளாது இரவுக்குறி வருகென்ற தாகக் கொண்டு வந்தமையும் குறிக்கின்றா ளாகலின், வெளிப் படையாக வாரல் எனத் தோழி கூறினாள். ஆரிருள் என்றது இரவின்கண் வருதலின் அருமையும், கோட்டுமா என்றது விலங்குகளின் கொடுமையும், காட்டக நெறி யென்றது நெறி யின் இன்னாமையும் சிறப்பித்து நின்றன. எனவே இஃது இருள் பெருகியதோடு நெறியும் கோட்டுமா வழங்கும் காட்டகத்தது என்றது இரவுக்குறி யருமையும், நெறியது ஏதமும் கூறி மறுத்த வாறு. ஆகவே, "பொழுதும் ஆறும் காப்பும் என்றிவற்றின், வழுவினாகிய குற்றங் காட்டலின்," இது வரைதல் வேட்கைப் பொருட்டே என அறிக. கொடிச்சி கடியவும் கடியாது சிறுகிளி சிறுதினை உண்ணும் நாட னாதலின், யான் பகற்குறி விலக்கவும் விலகாது இரவுக் குறிக்கண் வந்து கூடுதலை விரும்புகின்றாய் என உள்ளுறை காண்க. இனி, "நாற்றமும் தோற்றமும் 1" என்ற சூத்திரத்து "ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்" என்றதற்கு இதனைக் காட்டி இஃது ஆறின்னாமை கூறியது என்பர் இளம்பூரணர். சாரற் புறத்த என்றும், உன்னும் என்றும் பாடமுண்டு. 283. வன்கட் கானவன் மென்சொன் மடமகள் புன்புல மயக்கத் துழுத வேனல் பைம்புறச் சிறுகிளி கடியு நாட பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே. இது, தோழி வாயின்மறுக்கவும், தலைமகன் ஆற்றாமை கண்டு தலைமகள் வாயில்நேர, அவன் பள்ளியிடத்தானாயிருந் துழிப் புக்க தோழி கூறியது. பழைய உரை : பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப்படூஉம் பெண்டு தவப் பலவே என்றது, தம் தமராயுள்ளார் நின் குறை பலவும் கூறி நீப்பினும், நின் பொய்வலைப்படூஉம் பெண்டிர் பலர் என்றவாறு. இவளும் அவருள் ஒருத்தி என்பதாம். தினைப்புனத்துப் பலவாய்ப் படிகின்ற கிளிகளை ஒருத்தி தன்னாற் காக்க முடியா தாயினும் அவற்றை அவள் கடிய முயலும் நாட என்றது, நின்னோடு இன்பநுகர்ச்சி விரும்பும் மகளிரை யாங்கள் விலக்க முயல்கின்றது முடியா தென்பதாம். உரை : வன்கண்மை மிக்க கானவன் புன்செய் நிலத்தே உழுது வித்திய ஏனலின்கட் படியும் பசிய புறத்தையுடைய சிறுகிளி களை, அவனுடைய மெல்லிய சொல்லும் மடமையுமுடைய மகள் ஒப்பும் நாடனே, தமராயினார் நின்மாட்டுப் பெருங் குறைகள் கண்டு பலபடக்கூறி விலக்கினும் விலகாது, நின் பொய்ம்மொழியாகிய வலையின்கட் படும் பெண்டிர் மிகப் பலர் என்றவாறு. உழுத ஏனல் - உழுது வித்தி விளைத்த ஏனல். ஏனல் - தினை. தினை விளையுங் காலத்தை ஏனற்பருவம் என இக்காலத்தும் கொண்கான நாட்டவர் வழங்குவர். "புன்புல மயக்கம் 1" காண்க. பெரிய கூறி என்புழிப் பெரிய என்றது பொறுத்தற் கரிய பெரிய குற்றங்கள் என்பதுபட நின்றது இனி, பலவாய குற்றங்களை விரியக் கூறி நீப்பினும் என்றுமாம். "பெரிய வோதினும் சிறிய வுணரா... பாடின் மன்னர் 1" எனப் பிறரும் கூறுதல் காண்க. பொய்புனைந்துரைக்கும் இன்சொல்லை, பொய்வலை என்றார். பெண்டு என்பது, வேந்து, அரசு என்றாற்போல உயர்திணைப் பொருண்மைக்கண் வந்த அஃறிணைச் சொல்லா தலின், தவப்பலவே என அஃறிணை முடிபு பெற்றது; "துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே 2" என்றாற்போல. தவ - உரிச்சொல். கானவன் உழுத ஏனற்கண், மடமகள் கிளிகடியும் நாட, தமர் கூறி நீப்பினும், வலைப்படும் பெண்டு தவப்பல என இயையும். கேட்போர் மனத்தில் ஒரு சிறிதும் அன்பு தோன்றாத வகையில் பொறுத்தற்கரிய பெரிய குற்றங்களைப் படைத்து மொழிந்து நீக்கினும் என்பாள், பெரிய கூறி நீப்பினும் என்றும், பின்னர் நீ போந்து பொய்யே சொல்லினும், அச்சொல்லைக் கேட்டு மறுத்து நீங்கும் வன்மையுடைய மகளிர் எவரும் இலர் என்பாள், பொய்வலைப் படூஉம் பெண்டு தவப்பலவே என்றும் கூறினாள். கூறுதலாவது ஈண்டுத் தலைவனது புறத் தொழுக்கத்தை இடத்தொடும் காலத்தொடும் படுத்துச் சான்று காட்டிக் கூறிட்டு மொழிதல்: அஃதாவது இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னார் அறிய இவ்வண்ணம் நிகழ்ந்ததென மொழிதல். பைம்புறச் சிறுகிளி - பசுமையான நிறம் பொருந்திய சிறிய கிளி. "பயில்குரல் கவரும் பைம்புறக் கிளியே 3" என்றார் பிறாண்டும். தந்தை உழுத ஏனற்கண் படியும் கிளைகளை அவன் மட மகள் கடியவும், அவளது சொல்லின் மென்மை நயந்து கிளிகள் படிதலால் அவள் மாட்டாளாயினவாறு போல, யாங்கள் நின்னை மறுத்தேமாயினும், நின் மார்பு தரும் இன்பம் நயந்து கூடும் மகளிரை விலக்கும் வன்மையிலே மாயினேம் எனத் தோழி உள்ளுறுத்துரைத்தாள் எனக் கொள்க. "பெரிய கூறி நீப்பினும்" "எள்ளின் இளிவாமென்றெண்ணி" அவன்திறமே உள்ளி உறைகின்றா ளாகலின், தலைவி வாயில் நேர்ந்து கூடினாள் என்பதாம். இது புரையறம் தெளிதல். இனி, பெரிய கூறி நீ நீப்பினும் என்று பாடம் கொண்டு அதற்கேற்பப் பொருள் உரைப்பது முண்டு. அது பொருளாயின், பிரிவென்பதே இனி நிகழாதெனத் துணியுமளவு பெரிய சூளுறவு களைச் சொல்லிப் பின் அவை பொய்ப்ப நீ பிரிந்தா யாயினும் என்பாள், பெரிய கூறி நீ நீப்பினும் என்றாள் என்றும், நீ போந்து கூறும் இன்சொல் வலையில் அகப்படாது நீங்கும் மகளிர் இலர் என்றற்குப் பொய் வலைப்படூஉம் மகளிர் பலர் என்றாள் என்றும் உரைக்க. "இல்வழங்கு மடமயில் பிணிக்கும், சொல் வலை வேட்டுவ னாயினன் முன்னே 1" என்பது காண்க. இது தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப் பள்ளியிடத்துச் சென்ற தோழி சொல்லியது என்பர் நச்சினார்க்கினியர்.2 284. அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால் இருவி நீள்புனங் கண்டும் பிரிதல் தேற்றாப் பேரன் பினவே. இது தினையரிந்துழிக் கிளியை நோக்கிக் கூறுவாள் போற் சிறைப்புறமாக ஓம்படுத்தது. உரை : குன்றத்தின்கண் வாழும் குறவர் வித்திய கொய்யப்படும் தினையின் பசிய தாளாகிய இருவி நிற்கும் நீண்ட தினைப் புனத்தைக் கண்டு சிவந்த வாயையுடைய பசிய கிளிகள் அப்புனத்தைப் பிரிதலைத் தெளியாத மிக்க அன்பினை யுடைய வாகலான், அவை அளிக்கத்தக்கனவாம் என்றவாறு. இருவி - தினையை அரிந்து கொண்டவழி நிலத்தில் நிற்கும் அரிதாள். தினைப்புனம் முழுதும் இருவியே நின்று காட்சி தருதலின் இருவி நீள்புனம் என்றார். பண்டு தினையுதவியது பற்றிப் புனத்தின்பால் உண்டான அன்பு இப்பொழுது அத்தினை யில்லையாயினும் பிரியாவாறு பிணித்தலின், பிரிதல் தேற்றாப் பேரன்பின என்றார். உறின் நட்டு அறின் ஒருவுவது அன்புடை யார் செயலன் றென்பது பற்றிப் பேரன்பு கூறப்பட்டது. பிரிதல் தேற்றா என்பது, "உய்த்தல் தேற்றானாயின் 3" என்றாற் போல்வது. வறும்புனங் கண்டு ஆற்றாது மிழற்றித் திரிவது பற்றி, செவ்வாய்ப் பைங்கிளி என்றும், அதற் கெய்திய வருத்தம் கண்டு உள்ளம் இரங்குதலின், அளிய தாமே என்றும், வேறு புனங் கட்குச் செல்லாது அலமருவதுபற்றி இருவி நீள்புனம் கண்டும் பிரிதல் தேற்றா என்றும், அதற்கு ஏது இது வென்பாள், பேரன்பின என்றும் கூறினாள். தாம் பண்டு போந்து உணவுண்டு இனிது வாழ்தற்கேதுவா யிருந்த தினை இதுபோது இல்லையாயினும், கிள்ளை அதன் இருவி கண்டு பிரியாப் பேரன்புடைய வாதல் போலப் பண்டு இவண் போந்து கூடி இன்ப நுகர்தற் கேதுவாயிருந்த இவள் இளமை நலம் புதல்வர்ப் பயந்து முதுமை யெய்துதலாற் குறை யினும், பிரியாப் பேரன்புடையையாய் வாழ்வாயாக என ஓம்படுத்தவாறறிக. சுட்டென்னும் உள்ளுறை யுவமம். 285. பின்னிருங் கூந்த னன்னுதற் குறமகள் மென்றினை நுவணை யுண்டு தட்டையின் ஐவனச் சிறுகிளி கடியு நாட வீங்குவளை நெகிழப் பிரிதல் யாங்குவல் லுநையோ வீங்கிவட் டுறந்தே. இஃது, ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. பழைய உரை : குறமகள் தினைப்பிண்டியை யுண்டு ஐவனச் சிறுகிளி கடியும் நாட என்றது, நின்னோடு இக்காலத்து இன்பம் நுகர்ந்து பின்பு நின் மனைச் செல்வமும் பிறமகளி ரொழியத் தானே நுகரும் வேட்கை யுடையாளைப் பிரிந்து ஒழுகுகின்றாய் என்பதாம். உரை : பின்னப்படும் கரிய கூந்தலையும், நல்ல நெற்றியையு முடைய குறமகள், மெல்லிய தினையின் மாவை யுண்டு, தட்டையினால் ஐவன நெல்லின்கட் படியும் சிறுகிளிகளை யோப்பும் நாடனே, இங்கு இவளுடைய பெரிய வளைகள் நெகிழ்ந்தோடும்படி இவளைத் துறந்து பிரிதலைச்செய்ய நீ எவ்வாறு வல்லையாயினையோ? அறியேன் என்றவாறு. நுவணை - தினைமா; "மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் 1" என்ப பிறரும். ஐவனத்தின் கதிர் கவரும் கிளியை ஐவனச் சிறுகிளி யென்றார். ஐவனம் - மலைநெல். தட்டை - கிளிகடியும் கருவி. துறந்து பிரிதல் யாங்கு வல்லுநை யாயினையோ என ஆக்கங்கொடுத்து முடிக்க. வினையினெச்சம் வினைப் பெயரொடு முடிதல், "வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும், நினையத் தோன்றிய முடிபாகும்மே, ஆவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே 2" என்புழி, "நினையத் தோன்றிய" என்றதனால் அமையும். செய்யுளாகலின் ஆக்கம் எஞ்சி நின்றது. பிரிந்தவழி இவள் ஆற்றாமையால் மிக்க துன்புறுவாளாக, அத்துன்ப மெய்த இவளைப் பிரிதல் மிக்க வன்கண்மை யுடை யார்க் கன்றிக் கூடாத செயலென்பாள், யாங்கு வல்லுநையோ என்றாள். "வீங்குவளை நெகிழப் பிரிதல்" என்றது உடம்பு நனிசுருங்கல். எனவே, இவளை ஆற்றுவிக்கும் திறமும் திண்மையு மின்றி யான் பெரிதும் வருந்தாநின்றேன் என்றாளாயிற்று. ஒருவழித் தணத்தல் என்பது காதல்வாழ்வின் இடையே கடமை காரணமாக நிகழும் பிரிவு. காதற்காமம் தோன்றிய விடத்து அது கணந்தோறும் கடல்போற் பெருகி, அறிவு நிறை பொறை முதலிய ஆண்மைநலம் அனைத்தையும் அடிப்படுத்தித் தான் ஓங்கிநிற்கும்; "வான்தோய் வற்றே காமம் 3" "இன்பம் கடல்மற்றுக் காமம் 4" எனவும், "பொறையென் வரைத்தன்றிப் பூநுதல் ஈத்த, நிறையழி காமநோய் நீந்தி-அறையுற்ற, உப்பியல் பாவை உறையுற்றது போல, உக்குவிடும் என் உயிர் 5" எனவு;ம் சான்றோர் உரைப்பது காண்க. இத்துணை ஆற்றல் இதற்கு இலதாயின் உலகில் உயிர்வாழ்க்கை நிலைபெறாது என்பதும் அறிக. இப்பெற்றித்தாய காதற்காமம் தோன்றிப் பெருகுங்கால் கடமையுணர்வு கெடாது நிலவல் வேண்டுதலின் இரண்டற்கும் இடையற வின்றிப் போர் நிகழும்; அப்போரில் காமத்தை அடிப்படுத்திக் கடமை வெற்றிபெறத் திகழும் காளையர் மக்கட் பண்பால் உயர்ந்து தலைமக்களாவர்: களவின்கண் வரைவிடை வைத்து நிகழும் பிரிவுகள் யாவும் காமத்தை அடக்கி அறநெறிப்படுத்தி மேம்படும் கட்டாண்மைக் கடமை யுணர்வுகளின் வெற்றிச்செயல்கள் என விளங்க உணர்தல் வேண்டும் என்பது அகப்பொருளுரைக்கும் அறம். குறமகள் தினைமாவை யுண்டு தட்டையினால் ஐவன நெல்லைக் கவரும் கிளிகளைக் கடிவள் என்றதனால் நின்னால் துறக்கப்பட்ட இவள், நின் பிரிவுத்துன்பத்தை உட்கொண்டு, தன் நிறையினால் பிறரறியாவண்ணம் தன் மறையினைக் காத்தொழு கினாள் என உள்ளுறையால் தலைமகள் ஆற்றியிருந்தமை கூறிய வாறு. 286. சிறுதினை கொய்த விருவி வெண்காற் காய்த்த வவரைப் படுகிளி கடியும் யாண ராகிய நன்மலை நாடன் புகரின்று நயந்தனன் போலும் கவருந் தோழியென் மாமைக் கவினே. இஃது, உடன்போக்குத் துணிந்த தலைமகன் அஃதொழிந்து தானே வரைவிடைவைத்துப் பிரிய நினைந்ததனைக் குறிப் பினான் உணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகன் வரைவிடைவைத்துப் பிரிவல் என்றவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியதூஉமாம். பழைய உரை : புகர் என்றது உடன்போதலை. தினையிற் கடிந்த கிளியைத் தினை யரிகாற்கண் விளைந்த அவரைக்கண்ணும் கடியும் நாடன் என்றது, வரையாது ஒழுகுதலன்றி உடன்போதலையும் நம்மை விலக்கா நின்றான் என்பதாம். உரை : தோழி, சிறுதினைகள் கொய்யப்பட்ட அரிதாளாகிய வெள்ளிய காலில் வளர்ந்து காய்த்த அவரையின்கட் படியும் கிளிகளை ஓப்பும் புதுவருவாயினையுடைய நல்ல மலைநாடன் இன்று புகரை விரும்பினான் போலும், என் மாமைக்கவின் விளர்ப்பதும் தளிர்ப்பதுமாய்த் தடுமாறுமாகலான் என்ற வாறு. தினை யரிந்தபின் அதன் தாள் நின்ற நிலத்தை உழாது அதனிடையே அவரையை விதைப்பது மரபு; கொய்வார் நடந்த நடையே உழவாகவும், ஆங்கு நிலத்திடை நின்ற ஈரமே நீர் வளமாகவும் கொண்டு அவரை வேரூன்றி வளர்ந்து பயன் தரும். "சிறுதினை மறுகால் கொழுங்கொடி அவரை பூக்கும் 1" என்றும், "இருவிதொறும், குளிர்புரை கொடுங்காய் கொண்டன அவரை 2" என்றும் சான்றோர் கூறுவது காண்க. இவ்வண்ணமே மருத நிலத்தவர், நெல்லரிதாளில், உழுந்து பயறு முதலியவற்றை வித்திப் பயன்பெறுவர் என அறிக. யாணர்- புதுமை; ஈண்டுப் புது வருவாய் மேற்று. கவர்த்தல் - ஈண்டு ஒருபாற்படாது தடு மாறுதல்: "பல்வேறு கவர்பொருள் நாட்டத் தானும் 3" என்றாற் போல. மாமைக் கவின் - மாந்தளிர் போலும் நிறம் திகழும் அழகு. புகர் என்பது குற்றம்; "புகரறு சிறப்பு 4" என்றாற்போல. களவொழுக்கத்தின்கண் தலைமகன் வரைதற் பொருட்டுத் தன் தலைமைப்பண்பினின்றும் தலைப்பிரியாத நெறியிற் செய்யும் வினைவகைகளுள் உடன்போக்கு அடங்காமைபற்றி இது புகர்நெறியாம் என்ற கருத்தால் இவ்வாறு ஆசிரியர் கபிலர் கூறுகின்றார் போலும். பெரும் பாலும் மகட் கொடை மறுத்த வழித் தலைமகளது தலையாய கற்பினைக் காத்தற்பொருட்டாய இது, தலைமக்கள் தகுதிக்குப் புகராயினும் அறமாதலின் அமையும் எனக் கொண்டு மேற் கோடலால், பண்டைத் தமிழ்ச்சான்றோர் பொருணெறிக்கண் இதனையும் அன்பொழுக்கத்து அறநெறியாக இலக்கணம் அமைத்திருப்பது ஈண்டு நினைவுகூர்தற்பாலது. "ஒருதலை யுரிமை வேண்டியும் மகடூஉப், பிரிதல் அச்சம் உண்மை யானும், அம்பலும் அலரும் களவுவெளிப் படுக்கும் என்று, அஞ்ச வந்த ஆங்கிரு வகையினும், நோக்கொடு வந்த இடையூறு பொருளினும், போக்கும் வரைவும் மனைவிக்கண் தோன்றும் 5" என ஆசிரியர் உரைப்பது காண்க. புகரென்றது உடன்போதலை யென்பது பழையவுரை, இடையிட்டொழுகுங் களவே விரும்பாது உடன்போக்கினைத் துணிந்தான் என்பாள் புகர் இன்று நயந்தனன் என்றும், அது துணிந்தவன் பின்னர் அதனை ஒழிந்து வரைவிடை வைத்த பிரிவு நினைந்தமையின், நயந்தனன் போலும் எனக் குறிப்பால் நய வாமை யுணரவும், பிரிந்தவழித் தன் மாமைக்கவின் பசலை பாய்ந்து வேறுபடு மென்பாள், கவரும் தோழி என் மாமைக்கவினே என்றும் கூறினாள். உடன் போக்குத் துணியக் கேட்டவழி மகிழ்ச்சியால் நுதலொளியும் மாமைக்கவினும் சிறக்கப் பெற்றவள், அவன் பிரிய நினைந்தமை யுணர்ந்தவழிக் கெடுதல் குறித்துத் தன் மாமைக்கவினை விதந்து கூறினாள். இனி, அவன் உடன்போக்குத் துணிந்தவழித் தந்த மாமைக்கவினை, அஃது ஒழிந்தவிடத்துக் கவர்ந்துகொள்வா னெனக் கூறினா ளெனவு மாம். என் மாமைக்கவின் உடலெங்கும் பரவி விளங்குகின்றமை யின், அது கெடும்வகைப் பிரிவாகிய குற்றம் செய்ய விரும்பினன் போலும் என்றுமாம். உரை இரண்டற்கும் ஒக்கும். புகரின் றுய்ந்தனன் என்ற பாடத்துக்கு வரையா தொழுகுத லால் வரும் ஏதத்தின் நீங்குவான் உடன்போக்குத் துணிந்தனன் போலும் என்றும், வரைதற்பொருட்டுப் பிரியத் துணிந்தனன் போலும் என்றும் உரைக்க. "நாற்றமும் தோற்றமும் 1" என்ற சூத்திரத்து "காதன் மிகுதி யுளப்படப் பிறவும்" என்புழிப் பிறவும் என்றதனான் தலைவனைப் பழித்தலுங் கொள்க என்று கூறி அதற்கு இது தலைவனைப் பழித்ததாகக் கூறுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். 287. நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வெரூஉ நாட வல்லை மன்ற பொய்த்தல் வல்லாய் மன்றநீ யல்லது செயலே. இஃது, இன்ன நாளில் வரைவல் எனக்கூறி அந்நாளில் வரையாது பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது. பழைய உரை : தமக்கு ஓர் இடையூறும் செய்யாத, நெடுவரைக்கண்ணே வாழும் வருடையைத் தினைமேய்கின்ற கிள்ளை வெரூஉம் நாட என்றது, நீ சொன்ன போழ்தே எம் சுற்றத்தார் வரைவிற்கு இடையூறு செய்யார் என்பது அறியாது வெருவுகின்றாய் என்பதாம். உரை : நெடிய மலைமேல் வாழ்வதாய குறுங்கால்களை யுடைய வருடைமானைக் கண்டு தினையை யுண்கின்ற கிளிகள் அஞ்சி யோடும் நாடனே, நன்றல்லது செய்தல் வல்லுவை யல்லை யாயினும் பொய் கூறுதலின் நீ தெளிவாக வல்லை யாயுள்ளா யாகலின், யாம் நினக்குக் கூறுவ தென்னை என்றவாறு. வருடை - ஒருவகை மான். "செவ்வரைச் செச்சை வருடை மான்மறி, சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப், பெருவரை நீழல் உகளும் நாடன் 1" என்று பிறாண்டுங் கூறுவர். கூட்டமாய்ப் போந்து தினைப்புனத்திற்குட் படிந்து உண்பது பற்றி, தினைபாய் கிள்ளை யென்றார். மன்ற - தெளிவுப்பொருட் டாய இடைச்சொல். வல்லாய் என்பது வல்லையல்லை யென எதிர்மறைக்கண் வந்தது "யாவதும் வல்லா கொல்லோ தாமே 2" என்றாற் போல. இன்ன நாளிற் போந்து வரைவல் எனக் கூறிச் சென்றவன், பின்பு அது செய்யாது நீட்டித்தமையின், வல்லைமன்ற பொய்த்தல் என்றும், பொய்ம்மையில் வல்லுந ராயினார்க்கு அறமல்லது யாதும் எளிதின் இயலுவதாக, நீ அதனையும் செய்யாது இவண் போந்து இவளை அருளுவதாகிய அறத்தைச் செய்கின்றாய் என்பாளாய், வல்லாய் மன்ற நீ அல்லது செயலே என்றும் கூறினாள். அல்லது வரையாமையாற் கொலை சூழ்தல்; அதனை யொழியப் பொய்ம்மையின் மிக்கது பிறி தில்லை யாகலின், அல்லது என்றாள். இன்ன நாளில் வரைவல் எனக் கூறிய தலைமகன் நாளுற வரையாதொழிவதே யன்றி வாராமையும் செய்யின், தலைமகள் இறந்துபடுவதன்றி வேறு செய்திறம் இலள் என்பது உணர்ந்து அஞ்சி வந்தமையான், அவனை நீ அல்லது செய்தற்கு வல்லுவை யல்லை என்றாள். இங்ஙனம் தலைமகன் கொண்ட அச்சத்தைப் பிறிதொன்றாகத் திரித்து உள்ளுறையில் குறிப்பாய்ப் பழித்தாளா கலின், இதனால் நீ வரைதலும் செய்யாது, வாராமையால் எம்மை இறந்துபா டெய்தவும் விடாது, வறிதே துன்பத்துள் ஆழ்ந்து வருந்தச் செய்வது நன்றன்று என, வெளிப்படையாய்த் தலைவன் எய்தக்கடவ இன்பம் உயர்தற்பொருட்டுத் தோழி உறழ்ந்து கூறியது காண்க. இஃது "உயர்மொழிக் குரிய வுறழுங் கிளவி, ஐயக் கிளவி யாடூஉவிற் குரித்தே 1" என்புழி "உறழுங் கிளவி" எனப் பொதுப்படக் கூறினமையாற் கொள்ளப்படும். "நாற்றமும் தோற்றமும் 2" என்ற சூத்திரத்துக் "காதல் மிகுதி யுளப்படப் பிறவும்" என்றவிடத்துப் பிறவும் என்ற இலேசினால், இது தலைவனைப் பழித்தது என இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் 3 கொள்வர். 288. நன்றே செய்த வுதவி நன்றுதெரிந் தியாமெவன் செய்குவ நெஞ்சே காமர் மெல்லியற் கொடிச்சி காப்பப் பல்குர லேனற் பாத்தருங் கிளியே. இது, கிளிகள் புனத்தின்கட் படியாநின்றன என்று தலைவியைக் காக்க ஏவியவழி, அதனை யறிந்த தலைமகன் உவந்து தன்னெஞ் சிற்குச் சொல்லியது. உரை : நெஞ்சே, அழகிய மெல்லிய இயல்பினையுடைய குற மகள் காவல் செய்ய, பலவாகிய கதிர்களையுடைய தினைப் புனத்தே பரவிப் படியும் கிளிகள் செய்த உதவி நன்றாகலான், அந்நன்றியினைத் தெளிந்து நாம் செய்யத்தகும் செயல் யாதோ? கூறுக என்றவாறு. கிளி உதவி நன்று செய்த என முடிப்பினும் அமையும். அதுவெனச் சுட்டியொழியாது நன்று எனப் பெயர்த்தும் கூறியது, செய்யாமற் செய்த பெருநன்றி என்பது யாப்புறுத்தற்கு. பாத்தரல் - பரந்துவருதல். கிளிகள் ஏனற்கதிர்களைக் கவரும் விருப்பால் புனம் நோக்கிப் பாத்தருதலான், தினை கதிர் கொண்டமையும், தலைமகள் கிளி கடிவாள் அப்புனம் மேவிக் காவல்புரிதலும் சேய்மைக் கண்ணேயே அறிந்தா னாகலின், அதனை உணர்த்திய கிளிமே லேற்றி, நன்றே செய்த உதவி என்றும், அந் நன்றிதானும் பின்னர்த் தெளிந்தவிடத்துச் செய்யாமற் செய்த வுதவியாய், படிதற்கு வையகமும் பறத்தற்கு வானகமும் அக்கிளிகட்குக் கொடுப்பினும் ஆற்றாச் சிறப்பிற்றாய் விளங்குதலின், யாம் எவன் செய்குவம் என்றும் கூறினான். "பண்பிற் பெயர்ப்பினும் 1" என்ற சூத்திரத்து "அவட்பெற்று மலியினும்" என்பதனை இரட்டுற மொழிதல் என்பதனால் இதற்கமைத்து, இது பகற்குறிக்கண் கிளி புனத்தின்கண் படிகின்ற தென்று தலைவியைக் காக்க ஏவியதனை அறிந்த தலைவன் அவளைப் பெற்றேம் என மகிழ்ந்து கூறியது என்பர் நச்சினார்க் கினியர். 289. கொடிச்சி யின்குரற் கிளிசெத் தடுக்கத்துப் பைங்குர லேனற் படர்தருங் கிளியெனக் காவலுங் கடியுநர் போல்வர் மால்வரை நாட வரைந்தனை கொண்மே. இஃது, இற்செறித்த பின்னர்த் தோழி வரைவுகடாவுழி முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல் என்றாற்கு அவள் சொல்லியது. உரை : பெரிய மலைநாடனே, கொடிச்சியாகிய தலைமகளின் இனிய குரலோசையைக் கிளியோசை யெனக் கருதி மலை யடுக்கத்து வளர்ந்த பசிய கதிர்களையுடைய தினைப் புனத் தினை யுள்ளிக் கிளிகள் போதரும் என எண்ணித் தமர் இவளை விடுத்துத் தினைப்புனக் காவல் செய்தலையும் நீக்குவார் போன்றுளா ராகலின், நீ விரைய வரைந்து கோடலே தக்கது என்றவாறு. கிளி - ஆகுபெயர். இன்குரல் கிளிசெத்து ஏனற் படர் தருமெனக் காவலுங் கடியுநர் போல்வர் என இயைக்க. உள்ளுதற் பொருட்டாய படர்தரும் என்றது உள்ளிப் போதரு மென நின்றது. காவலும் என்புழி உம்மை சிறப்பு; எச்சவும்மையாகக் கொண்டு, தலைமகளைப் புனத்திற்கு ஏவாமையே யன்றிக் காவலும் நீக்குவார் போன்று உள்ளார் என்றுமாம். தலைமகளைத் தினைக்கட் படியும் கிளி கடியுமாறு ஏவுதல், "வளைவாய்ச் சிறுகிளி விளைதினை கடியச், செல்கென் றோளே யன்னை 1" என வருதலாலறிக. முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல் என்ற தலைமகற்கு, இவளை ஏவியவழி, இவள் குரலைக் கேட்டுக் கிளிகள் தம் இனமெனக் கருதித் திரண்டு போந்து புனத்தின்கட் படிதல் கண்டு இவள்காவலை நீக்குவராராயின ரென்பாள், காவலுங் கடியுநர் போல்வர் என்றும், அது நோக்கித் தாழ்க்காது விரைந்து வரைதலே செயல் வேண்டுவது என்றற்கு வரைந்தனை கொண்மே என்றும் கூறினாள். தினை காவல் செய்யுமாறு ஏவாவழி, தினைக்கதிர்களைக் கிளிகள் கவர்ந்து கொள்ளு மென்ற அச்சமும், ஏவியவழியும் அவை போந்து அது செய்தல் குறித்து அவலமும் தோன்றித் தமர் மனத்தை அலைத்தலின், புனவர் காவல் கடிவாராயினர் என்ற வாறு. கொடிச்சியின் இனிய ஓசையைத் தம் ஓசையெனக் கருதி மலையடுக்கத்து விளைந்த பசிய கதிர்களையுடைய தினைப் புனத்துப் படருங் கிளிகளை ஓப்பிக் காவல் செய்தலையும் விடுத்தார் போன்றுளர் தமர் என்று உரைப்பின், எனவென் இடைச்சொல் நின்றுவற்றுதல் காண்க. மலைந்தனை கொண்மோ என்ற பாடத்துக்கு, கரணவகையான் வதுவை சூடிக்கொள் வாயாக என்றுரைக்க. மகளிர்க்கு மாலை என்றும் பெயராகலின், அதற்கேற்ப மலைந்தனை கொண்மோ என்றாளென்க. "பூப்புனை மாலை புனையு மாதரும், தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியும், கோச்சேரன் பெயருங் கோதையென் றாகும் 2" என்பதனால் மகளிர்க்கு மாலை யென்பதும் பெயரா யிற்று. "நாற்றமும் தோற்றமும் 3" என்ற சூத்திரத்து "காதல் மிகுதி யுளப்படப் பிறவும்" என்புழி வரும் பிறவும் என்ற இலேசினால் இதனை அமைப்பர் இளம்பூரணர். "வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல், மரீஇய மருங்கின் உரித்தென மொழிப 4" என்பதனுள் அடக்குவர் நச்சினார்க்கினியர். 290. அறம்புரி செங்கோன் மன்னனிற் றானனி சிறந்தனள் போலுங் கிள்ளை பிறங்கிய பூக்கமழ் கூந்தற் கொடிச்சி நோக்கவும் படுமவ ளோப்பவும் படுமே. இது, காவல்மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய தலைமகன் வந்துழி, அவன் கேட்டு வெறுப்புத் தீர்தற் பொருட்டால் தினைப்புனம் காவல் தொடங்காநின்றாள் என்பது தோன்றத் தோழி கூறியது. உரை : அறத்தைச் செய்கின்ற செங்கோன்மையையுடைய மன்னனைப் போலப் பூக்களின் மணம்கமழும் கூந்தலை யுடைய கொடிச்சியாகிய தலைமகள் மிகவுயர்ந்தாள்; கிள்ளை களும் உயர்ந்தன, அவளால் உவந்து நோக்கப்படுதலே யன்றி விரைந்து கடியவும் படுமாகலான் என்றவாறு. செவ்விய கோல் போறலின் அரசன்நீதி செங்கோல் எனப்படுவது மரபு. அஃது அளியும் தெறலும் என இருவகையின் இயன்ற அறப்பயன் விளைத்தலின் அறம் புரி செங்கோல் எனப்படுவதாயிற்று. நல்லது செய்வோரை நயந்து அருள் செய்வது அளி; அல்லது செய்வோரைக் கடிந்து ஒறுப்பது தெறல். போலும்: உரையசை. பிறங்குதல் - உயர்தல். சிறந்தனள் பிறங்கிய என்பன துணிவும் விரைவும் பற்றி இறந்தகாலத்து வந்தன. அவளென்புழி ஆலுருபு தொக்கது. தான் - அசை. மன்னனின் கொடிச்சி நனிசிறந்தனள்; கிள்ளை பிறங்கிய, அவள் நோக்கவும் ஓப்பவும் படுமாகலான் என இயையும். அறம் புரிதற்கண் செங்கோன்மை நல்லது செய்தலினும் அல்லது தோன்றின் அதனை விரையாது மடியாது ஆராய்ந்து கடிதல் முறையாகலின், புனத்துக்கு அல்லது செய்யும் கிள்ளையை விரைந்து கடியும் செயல்முறை பற்றித் தலைவியை நனி சிறந் தனள் என்றாள். "அல்லது கடியுமிடத்தும் அது செய்தாரைக் கடிதோச்சி மெல்ல எறிதல் செங்கோன்மை யாயினும் 1" கடிதோச்சுமிடத்துக் கண் சிவந்து அச்சம் விளைத்தல் போலாது தலைவியால் உவந்து நோக்கப்படுமாறு தோன்ற, கிள்ளை அவள் நோக்கவும் படும் என்றும், அதனால் செய்தற்குரியது செய்யப்படாது கழிதலின்று என்றற்கு ஓப்பவும்படும் என்றும், இவ்வாறு தெறுமிடத்தும் அகத்தாலேயன்றி முகத்தாலும் அளியுற நோக்கப்படுதல் செங்கோன் மன்னன் குடைநிழல் வாழ்வார்க்கும் இல்லாத சிறப்பாதலின் கிள்ளை பிறங்கிய என்றும் கூறினாள். தலைவியால் கடியப்படும் கிள்ளையும் அவள் புனங்காவல் புரியுங்கால் பிறங்குகின்றன எனின், தலைமகன் கூட்டம் பெறுதல் ஒருதலை யென்பது தானே பெறப்பட்டது. தாநனி என்றும், சிறந்தன என்றும் பாடமுண்டு. "மன்ன னென்றது தலைமகனை" யென்ற பழையவுரைக் குறிப்புச் சில ஏடுகளில் இல்லை. 30. மஞ்ஞைப்பத்து. இதன்கண் வரும் பத்துப்பாட்டுக்களினும் மயிலாகிய கருப்பொருளே சிறந்து வருதலின், இப்பகுதி இப்பெயர்த் தாயிற்று. மஞ்ஞை என்பது மயில்களைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல். இம்மயில்கள் காட்டில் வாழும் கோழியினத்தைச் சேர்ந்தவை. ஆயினும், ஏனைக் கோழிகட்கு இல்லாத நெடிய தோகை இருப்பதுதான் இம்மயிற்குச் சிறப்பு. மயிலின் ஆணைச் சேவல் எனவும், பெண்ணைப் பெடை பேடை எனவும் இக்காலத்தே வழங்குகின்றனர். மயிற்சேவலைப் போத்து என வழங்குதலும் உண்டு என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். 1 அவர் காலத்தில் ஆண்மயிலைச் சேவல் என்னும் வழக்காறு கிடையாது. அது பற்றியே அவர், "சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும், மாயிருந் தூவி மயிலலங் கடையே 2" என்று ஓதுவாராயினர். மயிற்போத்துக்குத் தோகை யுண்டு. அதனை அது விசிறி போல் விரித்தலும் சுருக்குதலும் செய்யும். மயிற்றோகையில் இடையிடையே கண்போல் அழகிய பொறியுண்டு. கண் போறலின் அவற்றைக் கண்ணென்றே எல்லா நாட்டாரும் குறிக்கின்றனர். மயிலின் ஆணுக்குத் தான் நீண்ட தோகையும் தலையில் சிறு விசிறிபோன்ற மெல்லிய கொண்டையும் உண்டு. ஒரு மயிற்போத்துக் குரிய தோகை முழுவளர்ச்சி பெற மூன்று ஆண்டுகளாகும். மயில்கள் இந்திய நாடு முதல் கிழக்கே யுள்ள கிழக்கிந்தியத் தீவுகள் முடிய வுள்ள நிலப்பகுதியில் காடுகளில் பெருகி வாழ் கின்றன. நாட்டிலேயன்றி உயரிய மலைகளிலும் இம்மயில்கள் காணப்படும். மழைக்காலத்தில் மலைமுகடுகளி லிருந்து கீழ் நிலத்துக்கு இறங்கிவிடுவது மயில்களின் இயல்பு. காட்டில் விளைந்து உதிரும் புல் மணிகளும் கிழங்குவகைகளும் சிறுசிறு பழங்களும் புழு பூச்சிகளும் இவற்றிற்கு உணவாவன. நம் நாட்டுப் பண்டைய உயிர்நூல் அறிஞர்களுள் அமிச தேவர் என்பார், மயில்களை அறுவகையாக வகுத்து அவற்றை மயூரம், பாரி, நீலகண்டி, பாம்புணி, சிகாவளம், கேகயம் என்று எடுத்தோதுகின்றார். இவற்றுள், மயூரம் பசுமைநிறமும் நீண்ட கழுத்தும் கால்களும் உடையவை; பாரி வகை, மிக்க உயரமும் அகன்ற கொண்டையும் கொண்டுள்ளன; மேனிமுழுதும் பன்னிறம் பரந்திருக்கும். கருநீனிறக் கழுத்தோடு உடல் சிறுத்தும் கால்குறுகியும் இருப்பன நீலகண்டி; இவை ஆடும் போது ஒருகாலை யூன்றிச் சுழன்றுசுழன்று குதித்தாடுவது சிறப்பு. பாம்புகளைத் துரத்திக் கொன்று தின்பவை பாம்புணிமயில் என்று பெயர் பெறுவன; இவை மக்களைக் கண்டால் சினங்கொண்டு குத்தும். சிகாவளம் நீண்ட கழுத்தும் நெடிய அலகும் உடையவை. பெண்கள் ஆடும் நடனத்தைக் கண்டால் தானும் அவ்வாறே ஆடும் இயல்புடையது இச் சிகாவளம். கேகயம் "கே" "கா" என்று அகவுவதால் இப்பெயர் பெறுகிறது. வெயில் வெம்மையைத் தாங்கும் வன்மையில்லாமை யால் இவை எப்போதும் நீர்நிலைகளின் கரைகளிலும் இருண்டு குளிர்ந்திருக்கும் புதர்களிலும் விரும்பியுறைகின்றன. இவ்வினத் துள் பெடைக்கும் ஓரளவு தோகையுண்டு; ஆனால் கொண்டை மட்டும் கிடையாது; பிறந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகட்குப் பின்பே இவை சினையீனும் செவ்வியைப் பெறுகின்றன என அமிசதேவர் கூறுகின்றார். இந்தோசீனாவில் ஒருவகை மயில் உண்டு. அதன் தோகை ஏழடி நீளமாகும். அஃது இருள்படச் செறிந்த பெருங்காடுகளில் தான் காணப்படுகிறது. ஏனை மயில்களை விட அது மிகவும் பெரியது. பெருங்காடுகளின் நடுவே சமநிலம் கண்டு ஒரு பகுதியை வரைந்து கொண்டு, அதன்கண் கல்லும் முள்ளும் சிறிதும் இல்லாதவாறு தூய்மை செய்து அவ்விடத்தே நின்று தன் நீண்ட தோகையை விரித்து ஆடும். இளவேனிற் காலத்தில் பூம்புதல்களும் மரங்களும் புதுத்தளிரும் பசுந்தழையும் கொண்டு இனிய காட்சி வழங்கும்போது, வானத்தில் வெயில் வெம்மையைத் தணிப்பது குறித்து இளமழை தவழுங்கால் இம்மயில்களின் கூத்துக் காணப்படுகிறது. அக்காலை அதன் ஆட்டத்திலும் தோகை விரிப்பின் தோற்றத்திலும் ஈடுபட்டுப் பெடைமயில் வேட்கை மிக்கு அதனை நெருங்கும். தன் பெடை யின் மனத்தைக் கவர்தற்பொருட்டுத் தோகையை விரித்து ஆடும் இதன் காட்சி காண்பார் கண்கட்குப் பெருவிருந்தாய் இன்பம் செய்யும். பெடையின்பொருட்டு மயிற்போத்துக்கள் பிற மயில் களோடு போர் செய்வதும் இயல்பு. அக்காலை மயிர் சிலிர்த்துக் கொண்டு தன் அலகாலும் கால் விரலாலும் ஒன்றையொன்று தாக்கிக் கடும்போர் செய்யும். பெடைமயில் பத்து முதல் பதினான்குவரை முட்டையிடும். முட்டையின் உள்ளிருக்கும் நீர் பன்னிற வண்ணங் கொண்டு உளது. அந்நிறங்களே பின்னர் அதன் மேனியில் விரிந்து காட்சிதரும். மயிற்குஞ்சுகள் இளமையில் தோற்றத்தால் ஆண்பெண் வேற்றுமை தெரியாதவாறு மென் சிறை மூடிக் கிடக்கின்றன. மிகப்பழங் காலத்தேயே மக்கள் மயில்களைப் பிடித்து மனைகளில் வைத்து வளர்க்கலுற்றனர். இம்மயில்களிடத்தே யவனர்களுக்குப் பேரீடுபாடு உண்டு. அவர்கள் பண்டைநாளில் அழகுக்காகவும் உணவுக்காகவும் இம்மயில்களை நம்நாட்டி னின்று கொண்டு போயினர். பின்னர் அவர்கள் அவற்றை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றனர். அதற்குமுன் ஐரோப்பி யருக்கு இம்மயில் தெரியாது. நம் நாட்டிலும் இலங்கை மலேசியா கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய இந்நாடுகளிலும் நீர்வள மிக்க பகுதியில் உள்ள காடுகளில் ஒருவகைப் புள்ளினம் மயில்போல் காட்சி தருகின்றது. ஆயினும் மயில்போல் மக்கள் மனம் விரும்பத்தக்க மாண்பும் வனப்பும் அவற்றின்பால் இல்லை. இம்மயில்களை நம் பண்டைத் தமிழ்ச்சான்றோர் நன்கு ஆராய்ந்துள்ளனர்; இவற்றை இந்நாளைய உயிர்நூல் அறிஞர் போலவே கோழியினத்தோடு சேர்த்தே எண்ணினர். மலைக் காடுகளில் இவை காணப்படும் இயைபு கண்டுரைக்கும் அறிஞர், "பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக், கோழி வயப்பெடை இரிய 1" எனக் கோழிகளிடையே வைத்துக் கூறுவதுகொண்டு அறியலாம். மயிலினங்கள் பெரும்பாலும் மலையும் மலையடுக்கங்களுமாகிய குறிஞ்சிநிலக் காடுகளிலும் கற்பாறைகளிலும் காட்சி வழங்குகின்றன. "மலையமயில் அகவ மலைமாசு கழியக், கதழும் அருவி யிழியும் 2", "மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந் தாலும், பீலி மஞ்ஞை 3" "கலைதாய உயர்சிமையத்து மயில் அகவும் மலிபொங்கர் 4" "கன்மிசை மயி லால 5" என வருவன பலவும் இதற்கு ஏற்ற சான்றாகும். மலைகளிலே சிறப்ப வாழ்வனவாயினும் ஏனை முல்லை மருதம் முதலிய நிலப்பகுதிகளிலும் மயில்கள் காணப்படுகின்றன. "கான மஞ்ஞைக் கணம் 6" "கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை, அயிரியாற் றடைகரை வயிரின் நரலும் 7" என்று சான் றோர் குறிப்பர். மருதவயற்புறத்து நிற்கும் சோலைகளும் மயில் கட்குச் சீர்த்த இடமாகின்றன. "செந்நெல் உண்ட பைந் தோட்டு மஞ்ஞை, செறிவளை மகளிர் ஓப்பலின் பறந்தெழுந்து, துறைநணி மருதத் திறுக்கும் 8" "கழனி யுழவர் தண்ணுமை இசைப்பின், பழன மஞ்ஞை மழைசெத்து ஆலும் 9" என்பன காண்க. இங்ஙனம், குறிஞ்சி முல்லை மருதம் என்ற நிலப்பகுதிகளில் காணக் கூடிய மஞ்ஞையினம் நீண்ட தோகையும் குறுகிய சிறகுகளு முடையவை; ஆதலால் இவை நெடுந்தொலைவு பறந்து செல்லும் இயல்பினவல்ல. கோழிபோல் பெரும்பாலும் நடையில் சிறந்தன எனினும், இவை பெருமரங்களில் எப்போதும் காட்சி தருகின்றன. குறிஞ்சி முல்லைக் காடுகளிலும் மருதப் பூம்பொழில் களிலும் இவை பெருமரங்களில் வைத்தே குறிக்கப் படுவதைப் பார்க்கலாம். மலைகளில் பெருங்கற்களின் முகட்டில் காணப் படும் மயில்கள், வேங்கை, மராஅம், குருந்து, காஞ்சி, மருது முதலிய மரங்களிலே உள்ளன. "வேங்கையின் சினையில் வீற்றிருக்கும் மயில் அதன்கண் ஏறிப் பூக்கொய்யும் மகளிர் போலத் தோன்று கிறது. 1" "மலைவேங்கையில் இருந்த மயில் மராமரத்தின் உச்சியில் தங்குவதும் 2" "குருந்தமரத்தில் இருந்து குலவுவதும் 3" மருதவயற் புறம் வந்த மயில்கள் காஞ்சி யிலும் மருதமரத்திலும் இருந்து இனிய காட்சி வழங்குவது முண்டு, "முடக்காஞ்சிச் செம்மருதின் மடக்கண்ண மயில்ஆல 4" எனச் சான்றோர் உரைப்பது காண்க. மயில்கள் கோழிகளைப் போலவே "வைகறைப் போதிலும் அந்திமாலையிலும் 5" கூவும். மயிற் கூவலை அகவுதல் என்பது வழக்கு. அதன்குரல் அரித்த ஓசையுடைமை பற்றி, "ஆடுசீர் மஞ்ஞை அரிகுரல் 6" எனப்படும். இசைத் தமிழ்த்துறையில் காணப்படும் திறவகையில் இதுவும் ஒன்றாகப் பரிபாடல் குறிக்கின்றது. எனவே, மயில் எடுக்கும் ஓசையிலும் இசைக்குரிய இனிமைப்பண்பு கண்டுளது பண்டைய இசைப்புலமை என்பது காண்க. எனினும், இயற்றமிழ்ச் சான்றோர் குயிலோசையிற் போல மயிலோசையிலும் அன்பின் ஐந்திணைக்குரிய நெறியில் பொருள் நலங் கண்டு, "தோகை ஆர்குரல் மணந்து தணந்தோரை, நீடன்மின் வாரும் என்பவர்சொற் போன்றனவே 7" என்று வியந்து பாடுகின்றனர். இனி, மயிலின் தலையில் அழகிய சிறு கொண்டை உளது அன்றோ! அது வாகையின் பூப்போல இருப்பது நோக்கி, "குமரி வாகைக் கோலுடை நறுவீ, மடமாத் தோகைக் குடுமியின் தோன்றும் 1", "வாகை யொண்பூப் புரையும் முச்சிய தோகை 2" என வருவன காண்க. மயிலின் கழுத்துக் காயாம்பூவின் நிற முடையது. "புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை, மென் மயில் எருத்தின் தோன்றும் 3" என ஒளவையார் குறிக் கின்றார். நொச்சி இலையின் கொத்துப் போல்வது மயிலின் காலடி என்பது யாவரும் நன்கறிந்த தொன்று. இதனையே சான்றோர் விதந்து, "மயிலடி இலைய மாக்குரல் நொச்சி 4" எனப் பாடினர். மயிலுக்குள்ள சிறப்பெல்லாம் அதனுடைய அழகிய கண் பொருந்திய நீண்ட தோகையேயாகும். தோகை என்னும் சொல் பொதுவாக நெல்லின் தோட்டுக்கும் 5 நாய் வாலுக்கும் 6 வழங்குமாயினும் சிறப்பாக மயிலுக்கே உரியதாகும்; ஆதலால், மயிலைத் தோகை யென்றே பண்டையோர் பெரிதும் வழங் கினர். பண்டு தமிழகத்துக்கும் மேலை யவனநாட்டுக்கும் நடந்த வணிகப்பொருள்களுள் ஒன்றாகிய மயில் யவனர்களால் தொகி7 என்றே அவர்கள் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. வானமாமலையி லிருந்து மேலைக் கடற்கரைப்பகுதியில் வீழ்ந்தோடும் வானி யாற்றின் கரைமருங்கு நின்ற சோலைகளில் மயில்கள் மிக வாழ்ந்தமைபற்றி அங்கிருந்த பேரூர் தோகைக் கா 8 என்று பெயர்பெற்று விளங்கிற்று. வானியாறு இப்போது சிராவதி யென்றும்; தோகைக்கா ஜோக் 9 என்றும் வழங்குகின்றன. இத்தோகையை மயில் விரிக்கவும் சுருக்கவும் கூடும். மயிலின் வனப்பு அது தன் தோகையை விரித்துக் கொண்டு ஆடும்போது தான் விளங்கித் தோன்றும். "மிசைபடு சாந்தாற்றி போல எழிலி, இசைபடு பக்கம் இருபாலும் கோலி, விடுபொறி மஞ்ஞை பெயர்புடன் ஆட, விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப, முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத, யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப், பாணி முழவிசை அருவிநீர் ததும்ப, ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும், இரங்கும் முரசினான் குன்று1" என்று நல்லச்சுதனார் பரிந்து பாடுவது காண்க. மயில்கள் தோகையை விரித்துக்கொண்டு அங்கு மிங்கும் அசைந்து நடந்து இயலும் இக்காட்சி காண்பார்க்கு மிக்க இன்பம் தருவதொன்று. நின்றாங்கு நில்லாது நடந்து கொண்டே யிருப்பது மயில் ஆடுவது போலத் தோன்றலின், யாவரும் "மயில் ஆடுகிறது" என்றே கூறுவர். வானத்தில் மழைமுகில் எழுந்து பரக்கும்போதும், மழை பொழிந்த பின்னரும் மயில்களுக்கு ஆடற்கண் விருப்பமுண்டாகிறது. ஒரோவழித் தன் காதற் பெடையின் கருத்தை ஈர்ப்பதற்கு இந்தக் களியாட்டத்தை மயிற்போத்து மேற்கொள்ளுகிறது; "வான்தளி பொழிந்த காண் பின் காலை, அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும், மணிபுரை எருத்தின் மஞ்ஞை 2" எனச் சான்றோர் கூறுவது காண்க. நீண்ட தோகையைத் தாங்கிக்கொண்டு மயில் அசைந்த நடையிட்டு செல்வது நல்லியல்பு படைத்த இளமங்கையரின் இனிய நடையொத்திருக்கும். இது பற்றியே, "கல்வ மஞ்ஞையிற் காண்வர இயலி 3" "மயில்கண் டன்ன மடநடை மகளிர் 4" "மடமயி லன்னஎன் நடைமெலி பேதை 5" என அறிஞர் பலரும் அறிந்துரைக்கின்றனர். இம்மயில்களைக் கானவர் வலைவைத்துப் பிடிப்பர். அக் காலை அதனைக் காண்பார்க்கு மிக்க வருத்தம் உண்டாகும். "ஓரி முருங்கப் பீலி சாய, மயில் வலைப்படுவதை 6" முன்னை யோர் நன்கு கூறியுள்ளனர். மயில்கள் பாம்புகளைக் காணில் விடாது தொடர்ந்து சென்று கொல்லும்; அவற்றுள்ளும் கொடு நஞ்சு படைத்த நாகத்தைக் காணின், "அதனைப் படம்விரிக்கப் பண்ணிக் குத்திக் கொல்வதில் மயில் பெருங்கிளர்ச்சி கொள் கிறது7" "பாகற்கொடியில் பழுத்திருக்கும் சிவந்த கனிகளை யுண்பதில் அவற்றிற்கு விருப்பம் மிகுதியுமுண்டு 8" என்பர். செல்வர் மனைகளில் இம்மயில்களை வளர்ப்பது பெருவழக்காக இருந்தது. இப்போது இவற்றின் தொகை குறைந்து வருவது யாவரும் அறிந்த தொன்று. 291. மயில்க ளாலக் குடிஞை யிரட்டும் துறுகல் லடுக்கத் ததுவே பணைத்தோள் ஆய்தழை நுடங்கு மல்குற் காதலி யுறையு நனிநல் லூரே. இது, வரைவிடைவைத்துப் பிரிந்து மீள்கின்ற தலைமகன் சொல்லியது. பழைய உரை : மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் என்றது, தான் அயரும் வதுவைச் சிறப்புக் கூறியவாறு. உரை : பருத்த தோள்களையும் மெல்லிய தழையணிந்து நுடங்கும் அல்குலையு முடைய எம் காதலி உறையும் மிக்க நன்மை பொருந்திய ஊர், மயில்கள் ஆடக் குடிஞைப் புள்ளாகிய பேராந்தை முதலியவைகள் ஒலி செய்யும் துறுகற்கள் நிறைந்த மலைப்பக்கத்தது காண் என்றவாறு. ஆலுதல் - ஆடுதல். குடிஞை - பேராந்தை; மக்கள் வழங் குதல் அரிதாகவுள்ள மலைப்பாறைகளிலும் பாலை நிலங்களிலும் வாழ்வது. இதன் குரல் குறுந்தடி கொண்டு அறையப்படும் சிறுபறை யோசை போல் இருப்பதுபற்றி, "உருள்துடி மகுளியிற் பொருள்தெரிந் திசைக்கும், கடுங்குரற் குடிஞை 1" என்றும், "விரலூன்று படுகண் ஆகுளி கடுப்பக், குடிஞை யிரட்டும் நெடுமலை யடுக்கத்து 2" என்றும் சான்றோர் கூறுப. இதனால், மயிலினது ஆடற் கேற்பக் குடிஞையின் குரல் சிறுபறை கொட்டு வது போல இசைக்கும் என்பதாயிற்று. நல்லூர் துறுகல் அடுக் கத்தது என இயையும். பிரிந்து மீள்கின்ற தலைமகற்குச் சேய்மைக்கண் தோன்றுவது துறுகல் லடுக்க மாகலின், அதனையே எடுத்து ஓதலுற்றவன், மயில்கள் ஆலுவது கண்டு பின்னர்க் குடிஞை இரட்டுவது கேட்டலின், அம்முறையே மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் என்றான். ஒலியினும் ஒளி விரைந்து செல்வதாகலின், இது முறையாயிற் றென அறிக. பிரிந்த காலையில் தலைமகளை இரவுக்குறிக்கண் தலைப் பெய்து கண்டமை நினைவுக்கு வருதலால், கருமுகில் பரந்த இருவிசும்பின்கண் மீனும் மதியமும் தோன்றா வகையிற் பேரிருள் நிறைந்த நள்ளிரவில், வேல் கோலாக, பேராந்தைகள் அலறக் கல்லதர் கடந்து சென்று குறியிடத் தெதிர்ப்பட்டுத் தலைமகளைக் கூடிய செய்தியை மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறுகல் அடுக்கத் ததுவே என்றும், கூடியவழித் தன்னை ஆர்வத்தோடு தழுவி வரவேற்ற அவள் தோளைச் சிறப்பித்துப் பணைத்தோள் என்றும் கூறினான். களவின்கண் இன்பம் மிகுமாறு ஒழுகிய ஞான்று, தன்மேற் கொண்ட காதலால் தன் குறிப்பின்வழி ஒழுகியவள் உறையும் ஊராகலின், நல்லூர் என்றும், அன்னவள் இனிக் கற்பின்வழி நின்று இல்லிலிருந்து புரியும் நல்லறத்திற்குத் துணையாகும் மிகுநலம் குறித்து, நனிநல்லூர் என்றும் கூறினானாம். இனித் தன் காதலி யுறையும் ஊராகலின், நல்லூர் என்றும், அவளைத் தன் வாழ்க்கைத் துணையாக வரைந்து இன்புறும் வேட்கை மிகுதலால், நனிநல்லூர் என்றும் கூறினான் எனினுமாம். 292. மயில்க ளாலப் பெருந்தே னிமிரத் தண்மழை தலைஇய மாமலை நாட நின்னினுஞ் சிறந்தன ளெமக்கே நீநயந்து நன்மனை யருங்கடி யயர எந்நலஞ் சிறப்பயா மினிப்பெற் றோளே. இது, பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவை முடித்தவளை இல்லத்துக் கொண்டு புகுந்துழித் தலைமகள் உவந்து சொல்லியது. பழைய உரை : மழைப்பருவம் வேண்டி யிருக்கின்ற மயில்கள் ஆலத் தேன்கள் இமிர மழை பெய்யும் நாட என்றது யாங்கள் கருதி யிருக்கின்ற பெரும்பொருளை உவப்ப முடித்தனை என்றவாறு. உரை : மயில்கள் ஆலப் பெரிய வண்டினம் ஒலி செய்யக் குளிர்ந்த மேகங்கள் மழைபெய்யப்பட்ட பெரிய மலை நாடனே, நீ விரும்பி நம் நன்மனைக்கட் கொணர்ந்து பெறுதற்கரிய பெரும்பொருள் வதுவை செய்தலால் எமது நலமும் மிகு தலின், இப்போழ்து யாம் தங்கையாகப் பெற்ற இவள் எமக்கு நின்னினும் சிறப்புடைய ளாயினள் என்றவாறு. பெருந்தேன் - பெரிய வண்டினம். தேனென்னும் சொல் தேனுண்ணும் வண்டிற்கும் பொதுவாகிய பெயராகலின், ஈண்டு இமிர என்னும் முடிக்குஞ் சொல்லால் பொதுமை நீங்கினமை அறிக. "பெருந்தேன் இழைக்கும் நாடன் 1" என இச்சொல் தேனைக் குறிப்பது காண்க. அருங்கடி, ஈண்டுப் பின்முறை ஆக்கிய பெரும்பொருள் வதுவை. பெற்றோள், "செயப்படுபொருளைச் செய்தது போல 2" உரைக்கும் வாய்ப்பாடு; "இல்வாழ்வான் என்பான் 3" என்றாற்போல. "பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவை" என்பது, முன்னர் எய்திய வதுவைமனைவிக்குப் பின்னர் உலகியல் அமைதி குறித்தும், மகப்பேறு குறித்தும் முறையாற் செய்துகொள்ளப்படும் பெரிய பொருளாகிய வதுவையாகும்; அஃதாவது இரண்டாம் மனைவி. உலகியலில், மக்கள், இளமையில் பெற்றோரைச் சார்ந்தும், முதுமையில் மக்களைச் சார்ந்தும் வாழும் திறத்தால் ஏனை உயிரினங்களினும் வேறுபடும் சிறப்புடையர். ஏனை உயிரினங் கள் யாவும் இளமை கழிந்ததும் பெற்ற உயிரோடு ஒருபற்று மின்றி மீளாப் பிரிவுற்று நீங்கும். இவ்வகையில் முதுமைக் காலத்துப் பற்றுக்கோடாம் வகையில், மக்கட்பேறு பொருட் பேறு போல் இன்றியமையாதாயிற்று. திருவள்ளுவரும் "தம் பொருள் என்ப தம் மக்கள் 4" என்றும், முதுமைக்கண் தம்மைப் பெற்றோர்க்குத் தாம் பற்றுக்கோடாதல் கடன் என்பது அறிந் தொழுகும் மக்கட் பேற்றின் மாண்பினை, "பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்ல பிற 1" என்றும் உரைத்தருளுவது காண்க. தன் வாழ்க்கைத்துணையாகிய தலைமகள்பால் மக்கட்பேறு இல்லையாயின், அது குறித்து வேறொருத்தியைப் பின் முறையாக வதுவை செய்து கோடல் உலகியல் அமைதியாயிற்று. மக்கட்பேறெய்தியபின் வேறொருத்தி மனையாட்டியாதல் தமிழ்மரபன்று; பிறர் உளராயின், அவர் அனைவரும் இற்பரத்தையர் எனப்படுவர். அவர் பெறும் மக்கள் முதுமைப் பற்றுக்கோடாம் கடப்பாடுடைய ரல்லர் என்பது தமிழ்நூன் முடிபு. இற்பரத்தையர் பொதுமகளிராகாது ஒருவற்கே உரிமையானவர் என்பது பற்றிப் பிற்காலத்தார் அவர்களை உரிமை மகளிர் என்று குறிப்பாராயினர். நல்லறம் புரியும் இல்ல மாகலின், நன்மனை என்றும், பெரும்பொருளாகிய மக்கட்பேறு கருதியதும், பயில நிகழாது மிக அருகியது மாகிய வதுவையாகலின். அருங்கடி என்றும், இப் பின்முறை வதுவை பெருங்குலக் கிழத்தியுடன் தானும் ஓருயிர்க் கீருடம்பாய் ஒன்றுபட்டு ஒழுகுதலால் எய்த லாகும் சிறப்பு நோக்கி, எம்நலம் சிறப்ப என்றும், பிரிதலும் கூடுதலும் பொருந்திய நின் கேண்மையினும், என்றும் பிரிதலில்லாத கேண்மையுடையளாவாள் இவள் என்பாள், நின்னினும் சிறந் தனள் எமக்கே என்றும் கூறினாள். இதனாற் பயன் தலைவன் இப்பெற்றியாளைக் கைவிட்டுப் பரத்தைமை செய் தொழுகுவது நினைந்து, பரத்தைமையைக் கையொழித்துப் பிரியாக் காதல னாவது. இது "பின்முறை யாக்கிய பெரும் பொருள் வதுவைத், தொன்முறை மனைவி எதிர்பாட 2" டின்கண் நிகழ்த்தும் கூற்று. அஃதாவது, அப் புதுமணமகளைத் தொன்முறை மனைவி விளக்கு முதலிய மங்கலங்களைக் கொண்டு எதிரேற்றுக் கொள்வாள் மகிழ்ந்து கூறுவதாம். மயில் ஆலுவதும், தேன் இமிருவதும், மழை பெய்வதும், என்னுமிவை, பெரும்பொருள் வதுவைக் காலத்து மக்கள் மகிழ்ச்சி மிக்குக் குரவையாடலும், இன்னியம் பல இசைத்தலும், பெரும்பொருள் வதுவை கொண்ட மகட்கும் பிறர்க்கும் தலை மகள் அருள் செய்வதும் சுட்டி நின்றன. நின்னினும் சிறந்தனள் எமக்கே என்றது, பிரிவாற்றாமை. அருங்கடி யயர, எந்நலம் சிறப்ப என்றது, அருண்மிக வுடைமை. 293. சிலம்புகமழ் காந்த ணறுங்குலை யன்ன நலம்பெறு கையினென் கண்புதைத் தோயே பாய லின்றுணை யாகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீயல துளரோவென் னெஞ்சமர்ந் தோரே. இது, பகற்குறியிடம் புக்க தலைமகன் தலைவி பின்னாக மறையவந்து கண்புதைத்துழிச் சொல்லியது. பழைய உரை : நீயலது உளரோ என் நெஞ்சமர்ந் தோரே என்றது, நீ யல்லது பிறர் உளராயினன்றே நான் கூறுவது அறிதல் வேண்டிக் கண் புதைக்கற்பாலது? அஃது இல்லாதவழிப் புதைப்பது என்? என்று அவள் பேதைமை யுணர்த்தியதாம். உரை : சிலம்பின்கண் மணம் வீசுகின்ற காந்தளினது நறிய பூங்குலை போலும் அழகுபெற்ற கைகளால் என் கண்களைப் புதைத்தோய், உறக்கத்திற்கு இனிய துணைவியாகிய பருத்த தோள்களையும் மயில்போலும் மாட்சிமையுமுடைய மடந்தை யாகிய நின்னைத் தவிர என் னெஞ்சத் தமர்ந்த காதலர் வேறுளரோ? இலரன்றே என்றவாறு. காந்தள் குறிஞ்சிநிலப் பூவாகலின், சிலம்பு கமழ் காந்தள் எனப்பட்டது. "நறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தள் 1" என்பது காண்க. காந்தள் எனப் பொதுப்படக் கூறியவதனால், சிறப்புடைய செங்காந்தட்பூக் கொள்ளப்பட்டது. இதன் பூக்கள் குலைகுலையாய்த் தோன்று மென்பது, "குருதிப்பூவின் குலைக் காந் தட்டே 2" என்றும், "மலைச் செங்காந்தள் 3" என்றும் சான்றோர் குறிப்பது காண்க. காதலர் இருவர் ஒருவரை யொருவர் எதிர்நோக்கி நின்று கூடுமிடத்து, அவ் வெதிர்நோக்கி நின்றாரைப் போதந்து கூடு வோர் அவரறியாமைப் போந்து கண்புதைத்துக் கூடி மகிழ்தலை, "நின்றோ ளெய்திக், கைகவியாச் சென்று கண்புதை யாக் குறுகிப், பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித், தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ 1" எனப் பிறரும் கூறுதல் காண்க. மகளிர் கைக்குக் காந்தளை உவமை கூறல் மரபு; "கைபோற் பூத்த கமழ்குலைக் காந்தள் 2" என்று சான்றோர் உரைப்பர். பாயல் இன்றுணை, உடன்கிடந்து உறங்குதற்கு இனிய துணை; "இவள் பழன வூரன் பாயல்இன் றுணையே 3" எனப் பிறரும் கூறுவர். காதலன் தன் கூந்தலிற் கிடந்து உறங்குதலை மகளிரும் விரும்பு வர்; "பயிலிருங் கதுப்பின் பாயலும் உள்ளார் 4" எனப் பிரிவிடை வருந்தும் ஒருத்தி கூறுதல் காண்க. மாட்சி - சாயல்; தோகைக்கு மாட்சி அதுவாகலின். தனக்குப் பின்னே போந்து தன் இரு கைகளாலும் கண்ணைப் புதைத்தவுடன், அவற்றை மெல்ல நீக்கித் தன் கையில் பற்றிக் கொண்டு பேசுதலின், காந்தள் நறுங்குலை யன்ன கை என்றும், அதனால் தனக்கு மிக்க இன்ப முண்டா தலின், நலம்பெறு கை என்றும், ஏனை அறிவு ஆண்மை வினைகட்குத் துணையாவாரின் நீக்குதற்குப் பாயல் இன் துணை என்றும், கண்ணகத்தேயன்றி என் நெஞ்சகத்தும் நின்னை யன்றிப் பிறர் எவரும் இலராதலை அறிந்திலைபோலும் என்றற்கு நீயலது உளரோ என் நெஞ்சமர்ந்தோர் என்றும், களவின்கண் தலைமகனிடத்தே பரத்தமை ஒழுக்கம் நிகழ்வதின்மையின் கண்புதைத்தோய் என்று எடுத்து மொழிந்து, வன்புறை தோன்ற நீயலது உளரோ என்றும் கூறினான். "வேளா ணெதிரும் விருப்பின்கண் 5" நிகழும் கூற்று. குறிவழிக் கண்டு கூறுதல் என்று கூறி, அவ்வழித் தலைவிக்குக் கூறியதாக இதனைக் காட்டி, இது தலைவி கண் புதைத்தவழித் தலைவன் கூறியது என்பர் இளம்பூரணர். "கரணத்தின் அமைந்து முடிந்த காலை 6" என்னும் சூத்திரத்து "எண்ணருஞ் சிறப்பின் கிழவோன் மேன" என்புழிச் "சிறப்பின்" என்றதனால் இதனைக்காட்டி யமைப்பர் நச்சினார்க்கினியர். 294. எரிமருள் வேங்கை யிருந்த தோகை இழையணி மடந்தையிற் றோன்று நாட இனிதுசெய் தனையா லெந்தை வாழியர் நன்மனை வதுவை யயரவிவள் பின்னிருங் கூந்தன் மலரணிந் தோயே. இது, வதுவை செல்லாநின்றுழித் தலைமகற்குத் தோழி சொல்லியது. பழைய உரை : இனிது செய்தனையால் என்றது, வதுவையில் தலைவிக்கு மலரணியக் கண்ட தோழி "இவ்வாறு ஆம்படி அன்றே சூட்டினை" எனச் சொல்லியவாறாம். மலர்ந்த வேங்கைக்கண் இருந்த தோகை இழையணி மடந்தை யின் தோன்றும் நாட என்றது, நீ வரையா தொழுகுகின்ற ஞான்றும் நின் தமர் பொன்னணிந்த இன்று போலச் சிறப்ப ஒழுகினாய் என்பதாம். உரை : நெருப்புப் போலும் மலர்களையுடைய வேங்கை மரத்தின் கண் இருந்த மயில் கலன்களை யணிந்த மகளிர் போலத் தோன்றும் நாடனே, நன்மனைக்கண் வதுவை நிகழும் இப் பொழுது இவளுடைய பின்ன லுற்ற கரிய கூந்தற்கண் மலரை யணிந்தனை; இதனைப் பண்டே செய்தனை யாயினும் இப் பொழுது இனிதே செய்தனையாகலின், எந்தையே நீ நெடிது வாழ்க என்றவாறு. வேங்கையின்பூ நெருப்புப் போலும் நிறமுடைமை பற்றி எரிமருள் வேங்கை என்றார்; பிறரும் "எரியகைந் தன்ன வீததை யிணர, வேங்கையம் படுசினை 1" என்றும், "அழற்சினை வேங்கை 2" என்றும் கூறுதல் காண்க. உயரிய மரஞ்செடிகள் அடர்ந்த பெருமலைகளில் வாழும் இயல்பின வாதலின், அங்கே பருத்து உயர்ந்து நிற்கும் வேங்கைமரங்களில் மயில்கள் காணப்படுவது கொண்டு, வேங்கைக்கண் இருக்கும் மயிலை விதந்து கூறினார். பிறாண்டும் "விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை 3" என்றும், பிறரும், "நன்னாள் பூத்த நாகிள வேங்கை, நறுவீ யாடிய பொறிவரி மஞ்ஞை 1" என்றும் கூறுவர். அந்நிலையில் அம்மயில் களின் தோற்றம் வயங்கிழை அணிந்த மகளிர் போல இருக்கும் என்பார், தோகை இழையணி மடந்தையின் தோன்றும் என்றார். பிறிதோர் இடத்தும், "வேங்கைப் பெருஞ்சினைத் தோகை, பூக்கொய் மகளிரின் தோன்றும் 2" என்பது காண்க. நாட, அணிந் தோய், இனிது செய்தனை; நுந்தை வாழியர் என இயைக்க. "பெற்றோற் பெட்கும் பிணையை யாகென" முதுமகளிர் வாழ்த்த, "பேரிற் கிழத்தி ஆகுக எனத் தமர்தர 3" அவரும் பிறரும் அறியத் தலைமகன் தலைமகள் கூந்தலில் மலர் சூட்டித் தன் பெண்டெனப்படுத்தல் கண்டு மகிழ்பவள், பின்னிருங் கூந்தல் மலரணிந்தோய் என்றும், பண்டு களவின்கண் இது செய்தா யாயினும் ஆண்டு அது நினக்கும் இவட்கும் இனிது; ஈண்டு நுமக்கே யன்றித் தமர்க்கும் பிறர்க்கும் இனிதாயிற் றென்பாள், இனிது செய்தனையால் என்றும், இவ்வகையால் இங்கே கால் கொள்ளும் அன்பும் அறமும் நும் வாழ்க்கையின் பண்பும் பயனுமாய் நெடிது வாழ்க என்றற்கு எந்தை வாழியர் என்றும் கூறினாள். அன்பானும் அறத்தானும் சிறந்த தலைமகனது அருள் நிழலில் வாழ்பவ ளாதலின், வழிபாட்டு முறைபற்றி எந்தை என்றாள். "இனிது செய்தனையால் எந்தை வாழிய, பனிவார் கண்ணள் பலபுலந் துறையும், ஆய்தொடி யரிவை கூந்தற், போதுகுர லணிய வேய்தந் தோயே 4" எனப் பிறாண்டும் தோழி கூறுவது காண்க. "பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் 5" என்ற சூத்தி ரத்து, "அற்றமழி வுரைப்பினும்" என்புழி நிகழும் கூற்றுக்கு இதனை உதாரணமாக்குவர் இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும். நுந்தை வாழியர் என்றும் பாடமுண்டு; அதற்குத் தலை மகனைத் தலைக்கூடிய ஞான்று தோன்றிய அன்பிற் குன்றாது அறத்தாற்றின்கண் ஒழுகிய தலைமகனது சான்றாண்மை கண்டு வியக்கின்றவள், அதற்கு ஏதுவாகிய அவன் தந்தையை விதந்து நுந்தை வாழியர் என்றாள் எனக் கொள்க. 295. வருவது கொல்லோ தானே வாரா தவணுறை மேவலி னமைவது கொல்லோ புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை இருவி யிருந்த குருவி வருந்துறப் பந்தாடு மகளிரிற் படர்தரும் குன்றுகெழு நாடனொடு சென்றவென் னெஞ்சே. இது, தலைமகன் வரைவிடை வைத்துப் பிரிந்து நீட்டித்துழி, உடன்சென்ற நெஞ்சினைத் தலைமகள் நினைந்து கூறியது. பழைய உரை : புனவர் கொள்ளிக்கு அஞ்சித் தன் புகலிலே செல்லும் மயில் புனம் கொய்த பின்பு அரிதாளிலே இருந்த குருவி எழுவது விழுவதாய் வருந்துறச் சிறகை விரித்து ஆடிச் செல்லும் நாடன் என்றது, பின்பு வரைந்து கொள்ளக் கருதாதே அலரஞ்சித் தன் மனைவயிற் சென்றவன் இக்காலத்து யானும் என் ஆயத்தாரும் வருந்துறப் பிரிந்தான் என்பதாம். உரை : புனத்தில் வாழ்வாரது நெருப்புக் கொள்ளிக்கு அஞ்சித் தனக்குரிய புகலிடம் நோக்கிச் செல்லும் மயில், புனங்கொய்த பின்பு அரிதாளிலே இருந்த குருவி வருந்தச் சிறகை விரித்துப் பந்தாடும் மகளிரைப் போல, அசைந்தாடிச் செல்லுங் குன்றுகள் பொருந்திய நாடனொடு சென்ற எனது நெஞ்சம் வருவதாகுமோ, அன்றி வாராது அவ்விடத்தே உறைதலை விரும்பி அமையுமோ? யாதோ? அறிகிலேன் என்றவாறு. உறை - உறைதல்; முதனிலைத் தொழிற்பெயர். மேவல்- விரும்புதல். வரற்பாலது வாராதாயின் அதற்கு ஏது வேண்டுத லின், அவணுறை மேவலின் என்பா ராயினர். புனவர்-தினைப் புன முடையோர்; மருதநிலத்துக் காணியாளர் போல. புகல்- புகலிடம். நாடன் இன்னுயிர்க் காதல னாகலின், ஒருவினை ஒடு உயர்பின் வழித்தாயிற்று. புனவர் கொள்ளியாவது புன்புலத்தை மயக்கித் தினை முதலிய வித்திப் பயன்பெறுதற்பொருட்டுப் புலத்தில் நின்ற காட்டைக் குறவர் தீயிட்டுக் கொளுத் தும் நெருப்பு. புகல் - விரும்பி யுறையுமிடம். தினையரிதாளில் தழைத்த பயிரின்கண் தோன்றும் புல்லிய கதிர்களையும் புழு பூச்சிகளையும் மேய்ந்துண்ணும் சிறுபுள்ளினத்தை, இருவி யிருந்த குருவி என்றார். துள்ளியும் தொடர்ந்தும் ஓடும் பந்தின் வழி அதனை யாடும் மகளிர் அசைந்தோடி ஆடுதலின், தன் புகலிடம் நோக்கி நீண்ட தோகை அசைந்து செல்லும் இயைபு நோக்கி, பந்தாடு மகளிரின் என்றார். தானே என்றது கட்டுரைச் சுவைபட வந்தது. தலைமகளும் "ஆயமொடு கெழீஇப், பந்துவழிப் படர்குவ1" ளாகலின், பந்தாடு மகளிரைக் கூறினாள், தான் பந்தாடும் பான்மைய ளாயினும் அஃதொழிந்து நெஞ்சழிந்து நின்றமையின். வருவது கொல்லோ, வாராது அவணுறை மேவலின் அமைவது கொல்லோ என்றது, ஆங்கு நெஞ்சழிதல். வருவது கொல்லோ என எண்ணினவள், வாராமைக்குரிய ஏதுக்கள் யாவையென ஆராய்ந்து, ஒருகால் தலைவர் அருளாமை யால் இவண் வந்து என் வேறுபாடு நோக்கி மருண்டு அவர்பாலே சென்று சேர்ந்ததோ, அன்றி, அவர்பால் என் உயிரையும் உடன் கொண்டு சேறற் குரிய நெறி ஆராய்கின்றதோ என எண்ணி, அவற்றை மறுத்து, "குன்ற நாடன், குடிநன் குடையன் கூடுநர்ப் பிரியலன், கெடுநா மொழியலன் அன்பினன் 2" எனத் துணிந்து அவன்பாலே இருந்து அவன் மேவனசெய்து இன்புறுகின்ற தாகல் வேண்டும் என்பாள், அவணுறை மேவலின் வாராது அமைவது கொல்லோ என்றாள். "தொன்னன் இழந்தவென் பொன்னிற நோக்கி, யேதி லாட்டி யிவளெனப், போயின்று கொல்லோ 3" என வேறுபாடு நோக்கி மருண்டமையும், "நாணினை நீக்கி உயிரோடு உடன்சென்று, காணப் புணர்ப்பதுகொல் நெஞ்சு 4" என உயிர்கொண்டு போதலைச் சூழ்ந்தமையும் தலைவி நினைக்குமாறு காண்க. இது, "கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை" என்றமையான், தன்னெஞ்சம் சென்று சேர்தல், "ஒரு சிறை நெஞ்சமொடு சாவுங்காலை, யுரிய தாகலும் உண்டென மொழிப 1" என்பதனால் அமையும். "மறைந்தவற் காண்டல் 2" என்ற சூத்திரத்துப் "பிரிந்தவழிக் கலங்கினும்" என்றதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும். 296. கொடிச்சி காக்கும் பெருங்குர லேனல் அடுக்கன் மஞ்ஞை கவரு நாட நடுநாட் கங்குலும் வருதி கடுமா தாக்கி னறியேன் யானே. இஃது, இரவுக்குறி வருகின்ற தலைமகற்குத் தோழி ஆற்றருமை கூறி மறுத்தது. பழைய உரை : அறியேன் யான் என்றது, இதனால் விளைவன யான் அறியேன் என்பதாம். குறத்தி காக்கும் தினையை மஞ்ஞை கவரும் நாட என்றது, நின் நாட்டுக்குத் தக்க களவின் நுகர்ச்சியே விரும்புகின்றாய் என்பதாம். உரை : கொடிச்சி யாகிய தலைமகள் காக்கும் பெரிய கதிர்களை யுடைய தினையை மலைப்பக்கத்தே வாழும் மயில்கள் கவரும் நாடனே, கங்குல் நடுநாளாகிய நள்ளிரவில் வருகின்றனை யாகலின், வரும் நெறியின்கண் அச்சம் பொருந்திய விலங்குகள் நின்னைத் தாக்கின், யாது விளையுமோ அறிகிலே னாகலின், இனி இரவுக்குறி வருதலைத் தவிர்க என்றவாறு. கடுத்தல், அச்சப் பொருட்டாய கடியென்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த வினை. கடுமா - யானை புலி முதலியன. தினைக்கதிரை மயிலுண்டல், "புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக், கடியுண் கடவுட் கிட்ட சில்குரல், அறியா துண்ட மஞ்ஞை 3" என்பதனாலும் அறிக. உம்மை, பகற்குறிக்கண் வந்தமையும் தழுவி நிற்றலின் எச்சப்பொருட்டு; வரவருமை யுணர்த்தலின் சிறப்பும்மையுமாம். இரவுக்குறி வந்தானை அன்புடன் தழீஇக்கொண்டு இனி வாராவகை விலக்குகின்றாளாகலின், நடுநாட் கங்குலும் வருதி யென்றும், வரும்நெறி கடுமா வழங்கும் கொடுமை யுடையதெனத் தான் ஏதம் ஆய்ந்து வருந்துமாறு தோன்ற, கடுமா தாக்கின் என்றும், உடனே இறந்து படுதலை யன்றி வேறு செய்திறம் அறியேம் என்றற்கு அறியேன் யான் என்றும் கூறினாள். கடுமா தாக்கின் என்றது ஏதமாய்தல். அறியேன் யான் என்றது கலக்கம். இனி, கடுமா தாக்கின் அதனை நீ கொன்று வேறல் ஒருதலை யாயினும், அது செய்யும் முழக்கத்தால் தமர் நின் வரவறிவரேல் பெருந்தீங்கு விளையும்; "தாம் செத்து உலகாள்வார் இல்லை, அதுபோல இவ்வொழுக்கம் ஒழுகற்பாலீரல்லீர்" எனத் தோழி மறுத்தா ளென்றுமாம். கொடிச்சி காக்க விளங்கும் தினைக்குரலைப் பல இடை யீடுகட் கிடையே மஞ்ஞை கவரும் என்றதனால், தாயர் தந்தை யரது காவலில் சிறக்கும் தலைமகளது கூட்டத்தை இடை யீடின்றிப் பெறுதற்கு நீ விரைந்து வரைதல் வேண்டுமெனக் குறிப்பால் தோழி வரைவு கடாயினாள் எனக் கொள்க. பழைய வுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதல் அறிக. 297. விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை பூக்கொய் மகளிரிற் றோன்று நாட பிரியினும் பிரிவ தன்றே நின்னொடு மேய மடந்தை நட்பே. இஃது, ஒருவழித் தணந்து வரையவேண்டு மென்ற தலை மகற்குத் தோழி கூறியது. பழைய உரை : மலர்ந்த வேங்கைச் சினைக்கண் இருந்த தோகை மலர் கொய்யும் மகளிரைப் போலத் தோன்றும் நாட என்றது, நீ மனத்தால் எங்கட்கு நல்லது புரியா யெனினும் நன்மை செய்கின்றாய் போலத் தோன்றுகின்றாய் என்பதாம். உரை : பூத்து விரிந்த மலர்களையுடைய வேங்கை மரத்தின் பெரிய கிளைகளிடத்தே தங்கிய மயில் பூக்கொய்யும் மகளிர் போலத் தோன்றும் நாடனே, நீ பிரிவாயாயினும் நின்னொடு பொருந்திய மடந்தையின் நட்புப் பிரிவென்ப தொன்று உண்டென உட்கொள்ளும் இயல்புடைய தன்று என அறிக என்றவாறு. பூவின் விரிந்த பண்பினை வேங்கைமேல் ஏற்றி விரிந்த வேங்கை என்றார். "விரியிணர் வேங்கை 1" எனவும், "வேங்கை விரியிண ரூதி 1" எனவும் சான்றோர் உரைப்பது காண்க. வேங்கைக்கண் இருந்த மயில் பூக்கொய் மகளிர் போலத் தோன்று தலை, "அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மேக்கெழு பெருஞ்சினை யிருந்த தோகை, பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன் 2" என வெள்ளிவீதி யார் பாட்டினும் வருதல் காண்க. பிரிந்து சேறல் வேண்டு மென்னும் எண்ணம் நிகழ்தற்கு நின் நெஞ்சு இடம் தரினும் என்பாள், பிரியினும் என்றாள். இனிப் பிரிவது அன்றே என்புழி ஏகாரம் எதிர்மறையாகக் கொண்டு பிரிவதாம் எனவும், எனவே, மடந்தையது நட்பு நீ பிரியக் கருதினும் பிரிந்ததாகவே கொண்டு அவட்குப் பெருந்துயரைச் செய்யும் எனவும் உரைப்பினும் ஆம். நீ பிரிவா யாயினும் மடந்தையின் நட்புப் பிரிவை உட்கொள்ளும் இயல்புடைத் தன்று என்றதனால், அந் நட்புக் கந்தாக அவள் உயிர் வாழ்கின்றா ளென்றும், அப் பெற்றியாளைப் பிரிந்து உறைதல் நன்றன் றென்றும் கூறினாளாம். வேங்கைப் பெருஞ்சினைக்கண் தோகை வாளாது இருப் பினும் பூக்கொய்யும் மகளிர் போலத் தோன்றாநிற்கும் என்றது, நீ வரைவு கருதிப் பிரிதலை நினைந்தாய் ஆயினும் அஃது எமது உயிரைக் கொல்லும் செயல்போல எமக்குத் துயர்விளையா நிற்கிறது என உள்ளுறையால் செலவழுங்குவித்தவாறு. பிரியா யன்றே என்பது பாடமாயின், நீ மெய்யாற் பிரியினும் மனத்தாற் பிரியாயன்றோ என்றவாறென்க. 298. மழைவர வறியா மஞ்ஞை யாலும் அடுக்க னல்லூ ரசைநடைக் கொடிச்சி தானெம் மருளா ளாயினும் யாந்தன் னுள்ளுபு மறந்தறி யேமே. இது, தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட் குணர்த்திய வழி, அவள் நாணத்தினால் மறைத்தொழுகிய வதனைக் கூறக் கேட்ட தலைமகன் சொல்லியது. பழைய உரை : மழையினது வரவை அறிந்து மஞ்ஞை ஆலும் என்றது, யான் நின்னிடத்து வருகின்ற வரவினை யறிந்து இதற்கு அவள் மகிழா நிற்கும்; நீ கூறுகின்றது பொய் என்பதாம். உரை : மழைவரவினை யறிந்து மயில்கள் ஆலுகின்ற மலைப் பக்கத்தாகிய நல்லூர்க்கண் வாழும் அசைந்த நடையினை யுடைய கொடிச்சியாகிய தலைமகள் எமக்குத் தன் அருளைச் செய்யா ளாயினும், யாம் அவளையே நினைந்து ஒருபோதும் மறந்தறியேம் என்றவாறு. மழை - மழைமுகில். அறியா - செய்யா வென்னும் வாய் பாட்டு வினையெச்சம். கருமுகிற் கூட்டம் எழுந்து வானத்திற் பரந்து வருவது காணின் தோகைமயில், அதுபோது வரும் குளிர்காற்றால் உள்ளம் கிளர்ந்து தன் தோகையை விரித்து ஆடுவது இயல்பாதலால், மழை வரவறியா மஞ்ஞை ஆல என்றார். அடுக்கல் - பெருங்கற்கள் நிறைந்த குன்று. தலைமகற்கும் தனக்கும் இயற்கைப்புணர்ச்சி வகையால் உண்டாகிய உறவினைத் தோழி அறிதற்கு நாணி வெளிப்படை யாகத் தலைவி குறைநேராளாகவே தோழி குறைமறுத்தமை பொறாது தான் எம் அருளா ளாயினும் என்றான். அருளா ளாயினும் என்றது, அருளாமைக்குரிய காரணம் யாதும் என்பால் இல்லை யென்பது பட நின்றது. அருளப்படுதற் குரிய தன் பெருங்காதலைத் தோழிக்கு உணர்த்தும் கருத்தால் யாம் தன்னுள்ளுபு மறந்தறியேம் என்றான். உள்ளுறையால் தலைவிக்கும் தனக்கும் முன்பே உளதாகிய உறவினைக் குறிப் பால் உரைத்தமையான், வெளிப் படையாக என்பால் உள்ளு தலும் மறத்தலும் இலவாயின என்றான். உள்ளுதல் - மறந்த தொன்றினை நினைவு கூர்தல். "உள்ளினே னென்றேன்மற்று என்மறந்தீர் என்று என்னைப், புல்லாள் புலத்தக்க னள் 1" என்பதனால் அறிக. இதன்கண் முன்னது பண்பிற் பெயர்த்துழிக் கூறுதலும், பின்னது பரிவுற்று மெலிதலுமாம்; என்னை: "பண்பிற் பெயர்ப் பினும் பரிவுற்று மெலியினும், அன்புற்று நகினும் அவட்பெற்று மலியினும், ஆற்றிடை யுறுதலும் அவ்வினைக் கியல்பே 1" என்பவாகலின். மழைவரவு அறிந்து மயில்கள் ஆலுமாறு போல யான் வந்தன னென்பதை நின் தலைவி அறிந்தால் அருள்வந்த சொல்லும் செயலுமுடையளாவள் காண் என உள்ளுறை கூறியவாறு காண்க. இது குறி பிழைத்தவழித் தோழிக்குச் சொல்லியது 2 என்பர். இளம்பூரணர். "பண்பிற் பெயர்ப்பினும் 3" என்ற சூத்திரத்துப் பரிவுற்று மெலி தற்கு மேற்கோளாகக் காட்டுவர் நச்சினார்க் கினியர். 299. குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அஞ்சி லோதி யசைநடைக் கொடிச்சி கண்போன் மலர்தலு மரிதிவள் தன்போற் சாயன் மஞ்ஞைக்கு மரிதே. இஃது, இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கிய நிலைமைக் கண் தலைமகள் ஆயவெள்ளத்தோடு கூடி நிற்கக் கண்ட தலைமகன் மகிழ்ந்த உள்ளத்தனாய்த் தன்னுள்ளே சொல்லியது. பழைய உரை : குன்றநாடன் என்றது, அந்நிலத்துக்கு உரியனாகிய முருகனை. உரை : குன்றுகளையுடைய நாடன் குன்றுகளின் சாரலி லுள்ள பசிய சுனைக்கட் பூத்த அகன்ற வாயை யுடைய குவளைமலர் தானும், அழகிய சிலவாகிய கூந்தலையும் அசைந்த நடை யினையுமுடைய கொடிச்சியாகிய தலைமகளின் கண் போல மலர்தல் அரிது; இவளைப்போலும் சாயலைப் பெறு தல் மயிலுக்கும் அரிது என்றவாறு. குன்ற நாடன் - முருகன். கவாஅன் - மலைப்பக்கம். குன்றத்துக் கவாஅன் எனப் பெயர்த்தும் கூறியதனால், குன்ற நாடன் என்றது வாளா பெயராய் நின்றது. ஏனைத் தாமரையும், ஆம்பலும் போலக் குவியாது விரிய மலர்ந்து நிற்கும் அகவிதழ் உடைமையின், பகுவாய்க் குவளை என்றார். சாயல் - மென்மை. குவளை கண்போல மலர்தலும், மயில் சாயல் பெறு தலும் பொதுவியல் பாகலின், இரண்டையும் எடுத்தோதினார். இஃது ஒரீஇக் கூறிய வெளிப்படை யுவமம். தலைமகளின் கண் களையும், சாயலையும் உயர்த்திக் கூறுவது கருத்தாகலின் பட் டாங்கு உவமம் கூறும், "உவமத் தன்மையும் உரித்தென மொழிப, பயனிலை புரிந்த வழக்கத் தான 1" என்புழி அடங்கா தாயிற்று. குன்றுகள் நிறைந்த குறிஞ்சிக் கடவுளாகிய முருகன் சிறப்புற விரும்பும் குன்றம் என்றற்குக் குன்றநாடன் குன்றம் என்றும், அவன் தோன்றி வளர்தற்கு இடமாய்ச் சிறந்த சுனை என்றற்கு குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனை என்றும் உயர்த்துக் கூறியது, தான் வேண்டிய உயர்வு முடித்தற்கு. முருகற்குரிய சுனை யாயினும், ஆண்டுப் பூத்த குவளைதானும் இவளது கண்போல மலரு மாயினும் காதற்குறிப்பை யுணர்த்தும் கவினுடையது அன்மையின் நிகராதல் இல்லை யென்பான், கண்போல் மலர்தலும் அரிது என்றான். "காணிற் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும் மாணிழை நோக்கொவ்வேம் என்று 2" என்று சான்றோர் கூறுதல் காண்க. செவ்வேள் விரும்பி யூரும் சிறப்புப் பெற்றதாகலின், அவன் குன்றத்து வாழும் மயிற்கு இவளது சாயல் பெறுவது இயலு மாயினும், புணர்ச்சிக்குரிய மென்மை சான்ற சாயல் பெறல் அரிது என்றற்கு இவள் தன்போற் சாயல் மஞ்ஞைக்கும் அரிது என்றான். இஃது அவட் பெற்று மலிதல். "மெய் தொட்டுப் பயிறல் 3" என்றவிடத்து, "தோழி குறை யவட் சார்த்தி மெய்யுறக் கூறலும்" என்புழி இஃது இருவரும் உள்வழி வந்த தலைவன், தலைவியின் தன்மை கூறவே, இவள் கண்ணது இவன் வேட்கை என்று தோழி குறிப்பான் உணரக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். 300. கொடிச்சி கூந்தல் போலத் தோகை அஞ்சிறை விரிக்கும் பெருங்கல் வந்தன னெதிர்ந்தனர் கொடையே அந்தீங் கிளவி பொலிகநின் சிறப்பே. இது, தலைமகன் றானே வரைவு வேண்டிவிடச் சுற்றத்தார் கொடை நேர்ந்தமை தலைமகட்குத் தோழி சொல்லியது. பழைய உரை : கொடிச்சி கூந்தல் போறல் வேண்டி மஞ்ஞை சிறகை விரிக்கும் வெற்பன் என்றது நின் மகிழ்ச்சிக்குத் தக நின் தமர் மகிழ்ச்சி கூர்ந்தார் என்பதாம். உரை : கொடிச்சி யாகிய குறமகளின் கூந்தல் போலுமாறு மயில் தன் அழகிய சிறகுகளை விரித்து ஆடும் பெரிய கற்கள் நிறைந்த மலையையுடையனாகிய தலைமகன், தானே மகட்கொடை வேண்டி வந்தானாக, நமர் அது நேர்ந்தன ராகலின், அழகிய இனிய சொற்களையுடையாய், இனி நின் சிறப்பு மேம்படுமாக என்றவாறு. கொடிச்சியின் சாயல் தன்னொடு நிகர்த்தல் கண்டு அமை யாது மயில் அவளது கூந்தல் போலுமாறு தன் தோகைக்கண் உள்ள சிறகை விரித்துத் தோன்றும் என்பாள், தோகை அஞ்சிறை விரிக்கும் என்றார். கொடை எதிர்ந்தனர் என்றது மகட் கொடை வேண்டி வந்த தலைமகனுக்குத் தலைமகளை நேர்ந்தார் என்பதாம். சிறப்பு, "கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும், பிறவு மாகிய மாண்புகள் 1". எதிர்ந்தனர் கொடையே என்றது தலைமகள் ஏக்கற் றிருந்தமை யுணர நின்றது. இனி, இல்லறம் புரிந்து மக்களொடு துவன்றிச் சிறந்தது பயிற்றல் சிறப்பாகலின், பொலிக நின் சிறப்பே என்றாள் என்றும், நீ அவன் பிரிவால் இழந்த நலம் பெற்று ஏனை அலர்கூறுவார் வாயடங்க வதுவை நன்மணம் பெற்று வாழ்க்கைச் சிறப்பு எய்துவாயாக என்றா ளென்றுமாம். ஆசிரியர் கபிலர் பாடிய குறிஞ்சி முற்றும். 1. தொல். பொ. 5 1. A.R. 90 of 1907. 2. A.R. 124 of 1907. 1. S.I.I. Vol. vii. NO. 863. 2. வையாவி என்பது ஆவியர் என்னும் குடிவகையின் ஒருகிளை. ஆவிநாடு, பழனித் தாலூகாவில் அமராவதி ஆற்றின் கீழ்க்கரையையும் திண்டுக்கல்லுக்குச் சிறிது மேற்கிலுள்ள குன்றையும் எல்லையாகக் கொண்டது; ஆவியர் வாழ்ந்த ஆவிகுடி ஆவிநன்குடி எனப்படும். ஆவி நன்குடி பிற்காலத்தே பழனி யாயிற்று; ஆவிகுடி ஆயக்குடி என மருவிவிட்டது. பழனியை வையாபுரி என்பது வையாவிபுரி என்பதன் சிதைவு. பழனியிலுள்ள சிற்றேரியை வையாவி என்று இன்றும் வழங்குகின்றனர். 1. அகம். 2. 1. அகம். 82. 2. அகம். 332. 3. அகம். 382. 4. அகம். 248. 5. அகம். 292. 1. அகம். 248. 2. ஐங். 101. 3. தொல்.பொ. 123. 4. தொல்.பொ. 246. 1. அகம். 232. 2. தொல்.பொ. 112. 3. தொல்.பொ. 207. 1. தொல். பொ. 246. 2. புறம். 310. 3. த.நா. ச. 217 இன்றும் சில வைதிகப் பார்ப்பனரிடத்தே இஃது இருந்து வருவதைத் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற் காவிரியின் வடகரை ஊர்களில் காணலாம். 1. குறள். 1121. 2. தொல்.எழுத்து. 231. 3. தொல்.சொல். 457. 1. நற். 110. 2. குறுந். 56. 3. தொல்.பொ. 42. 1. தொல்.சொல். இளம். 39. 1. நற். 77. 2. அகம். 314. 1. தொல்.பொ. 124. 2. அகம். 40. 3. குறுந். 73. 4. நற். 94. 5. தொல்.பொ. 112 1. குறள். 1185. 2. அகம். 252. 3. புறம். 22. 4. மதுரை. 635-6. 1. தொல்.பொ. 246. 1. ஐங். 208. 1. அகம். 52. 2. அகம். 378. 3. குறுந். 249. 4. தொல். பொ. 45. 1. குறுந். 82. 1. அகம். 294. 1. அகம். 272. 2. குறள். 11. 3. அகம். 242. 1. அகம். 5. 1. ஐங். 187. 1. தொல்.பொ. 112. 2. பதிற். 87. 3. குறுந். 284. 1. ஐங். 61. 2. நற். 372. 1. தொல்.சொல். 460. 2. சிலப். 11 : 64 - 6. 1. நற். 116. 1. குறுந். 392. 2. நற். 25. 3. நற். 17. 4. தொல்.பொ. 281. 5. குறிஞ். 43. உரை. 6. குறள். 478. 1. தொல்.பொ. 604. 1. நற். 36. 2. ஐங். 266. 3. தொல்.பொ. 112. 1. நற். 257. 2. புறம். 224. 1. கலி. 10. 2. ஐந். எழு. 41. 3. குறுந். 260. 4. அகம். 221. 5. தொல்.பொ. 114. 1. நற். 168. 2. முருகு. 27 - 8. 3. புறம். 202. 1. தொல்.பொ. 9. 2. அகம். 382. 3. அகம். 179. 1. சீவக. 1930. 2. நற். 5. 3. தொல்.பொ. 112. 4. தொல்.பொ. 207. 1. நற். 201. 2. தொல்.பொ. 109. 1. மலைபடு. 197. 2. பதிற். 52 : 16. 3. தொல். எழுத்து. 236. 4. தொல். எழுத்து. 482. 5. தொல். எழுத்து. 246. 6. தொல். எழுத்து. 160. 7. புறம். 4 உரை. 1. அகம். 378. 2. சிலப். 14 : 105. 3. சிலப். 247. 4. தொல்.பொ. 114. 1. அகம். 236. 2. குறுந். 353. 1. நற். 105. 2. குறுந். 270. 1. குறுந். 239. 2. நற். 313. 3. ஐங். 99. 1. ஐங். 230. 1. அகம். 85. 1. குறள். 648. 2. நற். 257. 3. அகம். 278. 4. குறுந். 319. 5. குறள். 940 1. குறள். 648. 2. அகம். 256. 3. அகம். 219. 4. அகம். 207. 5. ஐங். 118. 6. நற். 275. 1. அகம். 144. 2. தொல்.பொ. 244. 1. தொல்.பொ. 141. 2. தொல்.பொ. 112. 3. தொல்.சொல். 298. 4. குறுந். 81. 5. குறுந். 345. 6. அகம். 60. 7. அகம். 100. 8. நற். 35. 9. நற். 67. 1. ஐங். 281. 2. அகம். 373. 3. நற். 6. 4. குறுந். 19. 5. நற். 380. 6. அகம். 86. 7. அகம். 119. 8. முருகு. 143 - 5. 9. குறுந். 27. 10. தொல்.சொல்.இளம். 246. 1. குறள். 96. 2. ஐங். 285. 1. குறுந். 191. 2. கலி. 137. 3. தொல்.பொ. 266. 1. நற். 239. 2. சீவக. 4. 1. குறுந். 30. 1. நற். 231. 1. தொ.பொ. 231. 2. அகம். 22. 3. குறள். 665. 1. தொல்.பொ. 210. 2. தொல்.பொ. 39. 3. தொல்.பொ. 112. 4. தொல்.பொ. 237. 1. தொல். பொ. 203. 2. தொல். சொல். 460. 3. அகம். 42. 1. நற். 365. 2. தொல். பொ. 204. 3. தொல். பொ. 112. 4. தொல். பொ. 114. 1. நற். 321. 2. அகம். 88. 3. தொல்.பொ. 107. 4. ஐங். 229. 5. குறுந். 399. 1. அகம். 78. 2. சிலப். 2 : 28 அடி. உரை. 3. கலி. 108. 4. அகம். 57. 5. கலி. 66. 1. கலி. 13. 1. தொல். பொ. 233. 2. தொல். பொ. 12. 3. தொல். பொ. 237. 1. நற். 43. 2. பரி. 5 : 14 - 5. 1. தொல்.பொ. 60. 2. அகம். 299. 3. குறுந். 263. 4. தொல்.பொ. 53. 5. அகம். 98. 6. குறுந். 114. 1. நற். 282. 2. நற். 51. 1. பதிற். 51. 2. நற். 47. 3. நற். 173. 4. நற். 273. 5. குறுந். 360. 6. தொல். பொ. 60. 1. அகம். 98. 1. அகம். 98 2. தொல்.பொ. 109. 1. தொல்.சொல். 342. 2. கலி. 82. 3. அகம். 52. 4. நற். 351. 1. தொல்.பொ. 115. 2. நற். 273. 3. குறுந். 111. 1. குறுந். 360. 2. தொல்.பொ. 112. 3. தொல்.பொ. 114. 1. கலி. 40. 2. தொல்.பொ. 112. 1. அகம். 195. 2. Talisman. 1. அகம். 137. 2. குறுந். 241. 3. இந்த அடி. சீர்காழி திரு. கோவிந்தசாமி ரெட்டியார் கையெழுத்துப் படியில் காணப் பட்டது. 1. ஐங். 260. 2. அகம். 140. 1. நற். 47. 1. நற். 322. 2. அகம். 388. 1. நற். 268. 2. பரி. 5. 3. பரி. 5, 54 - 62. 4. புறம். 143. 1. தொல்.பொ. 115. 2. ஐங். 248. 1. தொல்.சொல். 242. 2. குறுந். 105. 1. நற். 13. 2. அகம். 392. 3. குறுந். 216. 4. A.R.No. 96 of 1921. 1. தொல்.பொ. 112. 2. தொல்.பொ. 114. 1. புறம். 143. 2. குறள். 226. 3. அகம். 214. 4. புறம். 18. 1. நற். 156. 2. அகம். 87. 3. அகம். 369. 4. அகம். 97. 5. நற். 229. 6. அகம். 271. 7. நற். 364. 8. தொல்.பொ. 7. 9. தொல்.பொ. 6 உரை. 1. நற். 1. 2. தொல்.பொ. 304. 1. புறம். 108. 2. அகம். 195. 1. ஐங். 399. 2. அகம். 238. 1. தொல்.பொ. 209. 1. அகம். 342. 1. அகம். 58. 2. நற். 276. 3. குறள். 918. 4. தொல்.பொ. 21. 5. தொல்.பொ. 100. 1. தொல்.பொ. 103. 2. Dr. Mark Henry Prank : Engenics and Sex Relations for Men and Women. P. 103 - 5. 1. இது வரைவு வேண்டிவிட மறுத்துழித் தமர்க்குரைப்பாளாய் வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி அவன்மலைகாண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லியது என அச்சுப்படியிற் காணப்படுகிறது. 2. குறுந். 214. 1. தொல்.பொ. 114. நச்சி. மேற் 2. தொல்.பொ. 112. 1. ஐங். 254. 2. நற். 165. 1. குறுந். 87. 2. அகம். 282. 3. இஃது அச்சுப்படியில் இல்லை. 1. புறம். 159. 2. தொல்.பொ. 114. 1. The peccaries of America. 2. White lipped. 3. Collard peccary. 4. Pig Deer. 1. மலைபடு. 246-7. 2. புறம். 190. 3. பெரும்பாண். 110. 4. அகம். 223. 5. ஐங் 265. 1. பெரும்பாண். 109-10. 2. ஐங். 264. 3. புறம். 168. 4. ஐங். 270. 5. ஐங். 261. 6. ஐங். 263. 1. மலைபடு. 193-5 2. நற். 119. 3. மதுரை. 294-5. 4. பெரும்பான். 105-11. 5. அகம். 111. 6. புறம். 190. 7. ஐங். 323. 1. நற். 119. 1. தொல்.பொ. 237. 2. குளம். தொல்.பொ. 109. நச்சி. தொல். பொ. 111. 1. நற். 386. 2. குறிஞ். கலி. 24. 3. நற். 64. 1. தொல்.பொ. 109. 1. குறிஞ்சி. 37-8. 2. குறுந். 133. 3. அக. 178. 4. ஐங். 238. 1. அகம். 322. 2. நாலடி. 103. 3. நற். 365. 1. தொல்.சொல். 56. 2. புறம். 9. 3. சீவக. 2380. 1. தொல். எழுத்து. 483. 2. தொல். பொ. 555. 3. தொல். பொ. 118. 4. தொல். பொ. 180. 1. புறம். 159. 2. நற். 373. 3. புறம். 172. 4. தொல்.பொ. 120. 1. தொல்.பொ. 561. 1. நற். 261. 1. குறள். 792. 1. குறுந். 335. 2. அகம். 382 1. குறுந். 278. 2. புறம். 158. 3. நற். 22. 4. நற். 57. 5. குறுந். 69 6. நற். 151. 1. புறம். 335. 2. அகம். 104. 3. குறுந். 82. 4. அகம். 217. 5. சிறுபாண். 164. 1. ஐங் 209. 2. குறுந். 240. 3. மலைபடு. 109-10. 4. ஐங். 286. 5. கலி. 65. 6. ஆசா. 65. 7. சிலப். 21 : 53. 8. தொல்.பொ. 273. 1. புறம். 345. 2. கலி. 39. 1. ஐங். 280. 2. அகம். 252. 3. அகம். 378. 1. அகம். 241. 2. ஐங். 351. 3. அகம். 68. 4. அகம். 188. 5. ஐங். 276. 6. ஐங். 279. 7. நற். 379. 8. நற். 57. 9. அகம். 136. 10. நற். 126. 1. அகம். 221. 1. குறுந். 288. 2. அகம். 217. 3. ஐங்குறு. 248. 4. ஐங்குறு. 113. 1. அகம். 388. 1. தொல். பொ. 131 - 2. 1. குறும். 54. 1. தொல்.பொ. 229 - 30 1. குறுந். 106. 2. அகம். 182. 3. அகம். 272. 4. இறை.அ.பொ.22.உரை 1. தொல்.பொ. 567. 1. தொல். பொ. 39. 1. Macaw. 1. Love birds. 2. Pigmy parrots. 3. Macaws of America. 4. Cap. 1. Hayden. 2. திருஞான. 132-1. 1. தொல்.எழுத்து. 393. 1. ஐங். 288. 2. தொல்.பொ. 102. 1. தொல். பொ. 112. 1. ஐங். 260 1. புறம். 375. 2. புறம். 3. நற். 13. 1. புறம். 252. 2. தொல்.பொ. 12. 3. புறம். 1. பதிற். 30. 2. தொல்.சொல். 432. 3. குறுந். 102. 4. குறள். 1166. 5. கலி. 138. 1. குறுந். 82. 2. மலைபடு. 109-10. 3. தொல். பொ. 114. 4. மதுரை. 765. 5. தொல். பொ. 225. 1. தொல். பொ. 112. 1. குறுந். 187. 2. ஐங். 333. 1. தொல். பொ. 238. 2. தொல். பொ. 112. 3. தொல். பொ. 114. 1. தொல். பொ. 103. 1. குறுந். 141. 2. திவா. கக. 3. தொல். பொ. 112. 4. தொ.பொ. 208. 1. குறள். 562. 1. மரபு. 44. 2. மரபு. 49. 1. முருகு. 309-11. 2. பரி. 6 : 6-7. 3. பெரும்பாண். 330-1. 4. மதுரை. 332-3. 5. கலி. 27. 6. புறம். 127. 7. அகம். 177. 8. புறம். 344. 9. பதிற். 90. 1. குறுந். 26. 2. கலி. 36. 3. அகம். 85, 242, 272, 378. 4. பொருந். 189-92. 5. மதுரை. 675 ; குறுந். 391. 6. பரி. 17 : 19. 7. பரி. 14 : 8-9. 1. குறுந். 347. 2. பரி. 14, 7-8. 3. குறுந். 183. 4. நற். 115,305 குறுந். 138. 5. அகம். 13. 6. அகம். 122 7. Togi 8. அகம். 15 9. Joag of Joag Falls 1. பரி. 20 : 30-8. 2. நற். 264. 3. புறம். 133. 4. முருகு. 205. 5. அகம். 63 6. குறுந். 244. 7. அகம். 108. 8. அகம். 177. 1. அகம். 69. 2. மலைபடு. 140 -1. 1. குறுந். 3. 2. தொல்.சொல். 3. குறள். 41. 4. குறள். 63. 1. குறள். 61. 2. தொல். பொ. 172. 1. ஐங். 226. 2. குறுந். 1. 3. நற். 173. 1. அகம். 9 2. பரி. 19 : 76. 3. ஐங். 96 4. குறுந். 254. 5. தொல். பொ. 105. 6. தொல். பொ. 146. 1. நற். 379. 2. அகம். 398 3. ஐங். 297. 1. அகம். 86. 2. ஐங். 297. 3. அகம். 86. 4. அகம். 104. 5. தொல். பொ. 148. 1. அகம். 153. 2. அகம். 352. 3. நற். 56. 4. ஐந். எழு. 32. 1. தொல். பொ. 204. 2. தொ. பொ. இளம். 109. நச்சி. 111. 3. குறுந். 105. 1. அகம். 38. 2. அகம். 132. 3. குறுந். 26. 1. குறள். 1316. 1. தொல். பொ. 103. 2. இளம். தொல். பொ. 105. 3. தொல். பொ. 103. 1. தொல். பொ. 309. 2. குறள். 1114. 3. தொல். பொ. 102. 1. தொல். பொ. 152. ஐங்குறுநூறு மூலமும் விளக்கவுரையும் நான்காவது ஆசிரியர் : ஓதலாந்தையார் பாடிய பாலை அகனைந்திணைக்கண் வரும் திணைகளுள் பாலை என்பது ஒன்று. பாலையாவது நீர்வளமின்றி வெயில் வெம்மை மிக்கு நிலவும் நிலப்பகுதி. இச்சொல்லைக் கேட்கும்போது வட இந்தியாவிலுள்ள தார் பாலைவனமும், ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா பாலைவனமும் நினைவுக்கு வரும். அத்தகைய கொடுமை மிக்க நிலப்பகுதி நம் தமிழகத்தில் யாண்டும் இல்லை. இங்கே பாலை யெனப் படுவது ஏனை நிலங்களில் உள்ளது போல நீர்நில வளமின்றி, கல்லும் முள்ளும் முரம்பும் பரற்கற்களும் மணலும் பொருந்தியுள்ள நிலப்பகுதி யெனக் கொள்ளல் வேண்டும். இதன் இயல்பு குறிக்கப் போந்த இளங்கோவடிகள், “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவம் கொள்ளும் 1” என்று உரைத்துள்ளனர். இதனையே, “வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம், நெருப்பெனச் சிவந்த உருப்பவி ரங்காட்டு, இலையில மலர்ந்த முகையில் இலவம் 2” என முல்லை முறைமை திரிந்து பாலையாயின வாறும், “சீறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில், ஏறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந்து இயங்குநர், ஆறுகெட விலங்கிய அழலவிர் ஆரிடை 1” எனக் குறிஞ்சி முறைமை திரிந்து பாலையாயினவாறும் காண்க என அடியார்க்குநல்லார் விளக்கியுரைப்பது பாலையின் வரலாற்றைத் தெரிவிக்கிறது. தமிழகத்து நிலப்பகுதியைக் குறிஞ்சி முதலாக வகுத்துக் கொண்ட பண்டைநாளைத் தமிழறிஞர் பாலைக்கு நிலம் வகுக்க வில்லை. அவர்கள் காலத்தில் குறிஞ்சியும் முல்லையும் முறைமை திரிந்து பாலைநிலத்தை உண்டாக்கவில்லை; இயற்கையாகவே பிற நாடுகளில் உள்ளது போலப் பாலைப்பகுதி இருக்கவும் இல்லை. அதனால் ஆசிரியர் தொல்காப்பியர், பொருளிலக் கணம் கூறும் போது “முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென 2” நான்குமே உரைத்தார். ஆயினும், சான்றோர், பாலைநிலம் தோன்றுதற்குரிய இயல்புகள் ஆங்காங்கு இருந்தமை கண்டு பொதுவகையில் பாலைத்திணை யென ஒன்றை உரைத்துப் போந்தனர். அதுபற்றிப் பாலை பொதுத்திணை என்றும் வழங்குப் படுவதாயிற்று. நடுவுநிலைத்திணை யாகிய பாலைக்கு நண்பகற்போதும் இளவேனில் முதுவேனிலாகிய இருவகை வேனிலும் உரியன வாம்; ஆயினும், பின்பனிக் காலமும் பாலைக்கு உரியதாகல் உண்டு. அதனால் ஆசிரியர், “பின்பனி தானும் உரித்தென மொழிப 3” என்றனர். இந்நிலத்திலும் எயினர் எயிற்றியர் என்னும் மக்கள் வாழ்ந்தனர். மறவர் மறத்தியர்க்கும் ஆறலைகள்வர்க்கும் பிற கொடியவர்க்கும் இப்பகுதி வாழ்நிலம் என்பர். இப்பகுதியில் விளைபொருள் இல்லாமையால் இம்மக்கள் வழிச்செல்வோரை அலைத்துப் பெறும் பொருளும் ஏனை நிலப்பகுதியிற் புகுந்து சூறையாடிக் கொணரும் பொருளும் ஆகிய இவற்றால் உண்டும் உடுத்தும் வாழ்வர். இங்குள்ள குறுங்காடுகளில் உழைமானும் பிறவும் வாழ்கின்றன. காட்டுக் கோழிகளும், பருந்து கழுகு முதலிய புள்ளினங்களும் பாலையில் காணப்படும். மராமரங் களும், ஓமை, வேல், இலவம், ஈந்து முதலிய மரங்களும் இங்கே உள்ளன. துடி முதலியன எயினர்கட்குரிய பறை; கொலையும் புலையும் ஆறலைத்தலும் சூறையாடலுமே இங்கே நிகழும் தொழில். இப்பாலைக் குரியது செங்கோட்டியாழ் என்றும், பாடுதற்குரிய பண் காந்தாரபஞ்சமம் என்றும் அடியார்க்கு நல்லார் அறிவிக்கின்றார். நீர் இல்லாமையே பாலைக்கு இயல் பாகலின் ஈண்டு உள்ளதெல்லாம் வெயிலவன் வெம்மையே யன்றி வேறில்லை. “அறுநீர்ப் பைஞ்சுனை ஆம்அறப் புலர்தலின், உகுநெல் பொரியும் வெம்மை1” எனச் சான்றோர் உரைப்பது காணலாம். கவலைக்கிழங்கும் இங்குள்ளோர்க்கு உணவாவ துண்டு. இங்கே கிடைக்கும் பூக்களில் இலவம்பூ சிறப்புடையது. இங்கே வாழும் மக்களுக்கு ஞாயிறும் கொற்றவையும் கடவு ளாகும். இப்பாலை இடமாக நிகழும் அகப்பொருள் ஒழுக்கம் பிரிவும் பிரிவு நிமித்தமு மாகும். பிரிவு எனப் பொதுப்படக் கூறியதனால், களவின்கண் தலைமகன் தலைமகளை உடன் கொண்டு செல்லும் உடன்போக்கும் இதனுள் அடங்கும். பரத்தையிற் பிரிவு தலைமகள் ஊடுதற்கு நிமித்த மாகலின் மருதத்திணைக்கு உரியது. மேலும், அப்பிரிவு சான்றோர் விதந்து பேசும் உடன்போக்குப் போலச் சீரிய ஒழுக்கமு மன்று; ஆகலான், அஃது இப்பிரிவின்கண் அடங்காது என அறிக. பாலை பொருளாக இப்பகுதிக்கண் வரும் நூறு பாட்டுக் களையும் பாடியவர் ஓதல் ஆந்தையாராவர். இவற்றின் வேறாக அவர் பாடியன சில குறுந்தொகையில் உள்ளன. ஓதல் ஆந்தையார் பிசிராந்தையார் போல ஓதல் என்னும் ஊரினர். இவ்வூர் ஓதலூர் என்ற பெயருடன் மேலைக் கடற் கரைப் பகுதியில் குட்ட நாட்டில் உள்ளது. இந்நாளில் மலையாள மாவட்டத்துப் பொன்னானி தாலூகாவைச் சேர்ந்த பகுதிக்கண் உளது என்பேமானால் இனிது விளங்கும். பிசிர்க்குடி பிசிர் என வழங்கினாற் போல ஓதலூர் ஓதல் எனக் குறுகி நின்றது. ஆந்தை யார் என்பது இவரது இயற்பெயர். ஆந்தை என்னும் பெயர், தொடக்கத்தில் ஆதனுக்குத் தந்தை என்ற பொருள் படத் தோன்றிப் பின்னர்ப் பலர்க்கு இயற்பெயராய் நிலவுவதாயிற்று. இவரது குட்டநாடு தெற்கிலுள்ள நாஞ்சில்நாடு போல நெல்வளம் சிறந்தது. இக் குட்ட நாட்டில் தான் முடிநாகனாரது முரஞ்சி யூரும், கோதமனாரது பாலையூரும் உள்ளன. பதிற்றுப்பத்துப் போல இத் தொகைநூலும் சேரமன்னருடைய தொடர்புடைய தாகலின், ஓதலாந்தையார் சேரர் தொடர்பு பெற்ற சான்றோருள் ஒருவர் என்பது தெளிவாகிறது. ஆந்தையார் பாட்டுக்களில் பெரும்பாலன பாலைப் பாட்டுக்களே யாகும். ஒன்று தான் முல்லைக் குரியது. குட்ட நாட்டை அடுத்துள்ள பகுதி பாலையே; அன்றியும் அதற்குக் கிழக்கில் உள்ள பாலைக்காடும் பிறவும் பாலை நிலப் பகுதிகளாக இருத்தலின், பாலைப் பாட்டுக்களை வரைந்துகொண்டு இவர் விதந்து பாடுவது பொருத்தமேயாகும். இவர் காட்டும் பாலை நிலம் நீர்வளம் ஒன்றுதான் குறைந்திருக்கிறதே யன்றி ஏனை நிலவளமும் உயிர்வளமும் குறையவில்லை. இப்பாலைப்பகுதி மலையும் மரங்களும் பொருந்தி வெயில்வெம்மை சிறந்து தோன்றுகிறது. இப்பாலைக்காட்டில் ஓதலாந்தையார் வேனிற் காலத்துக் காட்சியில் நம்மை ஈடுபடுத்துகின்றார். வெள்ளோத்திரம், ஆல், அரையம், மராமரம், இலவமரம், நுணா, கோங்கு, குரா, பாதிரி, புன்கு, மா, இருப்பை, வேம்பு ஆகிய மரங்கள் பல்கியுள்ளன. களிறு வழங்கும் பகுதிகளில் இருப்பைமரங்களின் பூக்கள் உதிர்ந்து, களிற்றியானையின் காலடி தெரியாதபடி மறைத்துவிடுகின்றன. குராமரங்களின் பூவைச் சான்றோர் செய்யாப்பாவை யென்று சிறப்பித்துரைக்கின்றனர். பாதிரி மரங்களில் குயில்கள் இருந்து கூவுகின்றன. மரா மரத்தின் பூவிதழ்கள் வலம்புரி போல் சுரிந்துள்ளன. இளமகளிர் காட்டாற்றின் கரையில் நிற்கும் பாதிரி மரத்தின் நிழலில் தங்கி அதன் பூக்களைக் கொண்டு மாலை தொடுக் கின்றனர்; சில மகளிர் பொன்னிறம் பூத்த கோங்கமும் வேங்கை யும் கலந்து ஒருசேரத் தொடுத்து அணிகின்றனர். அதிரற் பூவை அணிபவர் ஒருசிலர். வழிச்செல்வோர் வெள்ளோத்திரத்தின் பூவைச் சூடிக்கொள்வர். வேங்கைமரத்தில் ஏறிப் பூக்கொய்வோர் பஞ்சுரப் பண்ணைப் பாடுவர். அரையமரத்தின் இலைகள் காற்றால் அசையும் ஒலி கேட்டு அதனுடைய பழம் உண்ண வரும் புள்ளினம் அஞ்சி நீங்குகின்றன. நெடி துயர்ந்து நிற்கும் இலவமரத்தின் பூ காற்றிற் பறந்து உதிர்வது வானத்திலிருந்து இடித்து வீழும் மீன் போன்ற காட்சி தருகிறது. சில இலவமரங்கள் பூத்து விளங்கும் தோற்றம் மலைகள் தீப் பிடித்து எரிவதுபோல வுளது. கோவலர்கள் தாம் மேய்க்கும் ஆனிரையின் பொருட்டுத் தோண்டிய பள்ளங்களை யானைகள் நீர் வேட்கை யுற்றுப் போந்து வளைத்துக்கொள்கின்றன. மூங்கில்கள் தம்மில் இழைந்து தீப்பற்றி எரிவது கண்டு புலியும் அரிமாவும் அஞ்சி ஓடுகின்றன. தன் பிணவு பசித்து வருந்துவது கண்டு ஆற்றாத செந்நாயின் ஆண், காட்டுப்பன்றிகளின் வரவு நோக்கி நிற்கிறது. தன் பெட்டையைக் கூடி யிருந்து நீங்கும் செந்நாய் மான் பிணை யொன்று தன் மறி (கன்று) யுடன் நிற்பது கண்டு அன் புணர்வால் ஒரு தீங்கும் நினையாது போகிறது. புலிக்குத் தப்பி யோடிய ஆண்மான் தன் பிணையொடு கூடித் தன் ஆண்குரலை எடுத்து இசைக்கின்றது. இவ்வழியே முல்லை நிலத்துக்குச் செல்வோமாயின், அங்கே கட்டிளமை நலம் கனியும் ஒருவனும் ஒருத்தியும் இல்லிருந்து நல்லறம் புரியும் பெருமனை காணப்படுகிறது. காதலன் யாதோ ஒரு கடமை குறித்து வெளியூர் சென்றுள்ளான்; கார்கால வரவில் மீண்டு வருவதாகச் சொல்லியிருக்கின்றான். கார்காலம் வந்து விட்டது; அதன் அறிகுறியாக அருகில் நின்ற கொன்றை மரம் அழகுறப் பூத்து நிற்கிறது. காடும் தழைத்துக் கார்காலக் காட்சி தருகின்றது. குறித்த பருவம் வந்தும் காதலன் வர வில்லையே, என் செய்வது என எண்ணமிட்டுத் தோழி ஏக்கமுறு கின்றாள். அது கண்ட அக் கற்புடை நங்கை, தோழியை நோக்கி, “கானம் கார் எனக் கூறினும், யானோ தேறேன். அவர் பொய்வழங்கலர் 1” என்று கூறுகின்றாள். தோழி வியந்து அவளை மகிழ்ந்து நோக்கு கிறாள். இன்னோரன்ன காட்சிகளை இனிவரும் இவருடைய பாட்டுக்களில் காணலாம். 31. செலவழுங்குவித்த பத்து செலவழுங்குவித்த பத்து எனப்படும் இது செலவு மேற் கொண்ட தலைவனைச் செல்லாவாறு அழுங்குவிப்பது பொரு ளாக வரும் பாட்டுக்களின் தொகுதி யாகலின், இவ்வாறு பெயர் இது பெறுவதாயிற்ற. அழுங்குதல் மனம் சோர்தல். செலவின் கண் அழுங்குவது செல்லா தொழிவதன்று; செலவின் கண் செல்லும் தலைமகனது உள்ளத்தை அதன்கண் செல்லாதவாறு தவிர்க்கும் சொற்களைச் சொல்வது. ஈண்டுச் செலவு என்பது தலைமகன் தன் மனையினின்றும் பிரிந்து செல்வது. தலைமக்கள் வாழ்வில் பிரிவு நிகழ்வது ஏன்? களவுநெறியிற் காதலுற்றுக் கற்புநெறியில் கடி மணம் புரிந்துகொண்டு இல்லிருந்து அறம் செய்து வரும் காதலர் இருவரிடையே இன்பமே நிலவுகிறது; அவருடைய நினைவும் சொல்லும் செயலும் இன்பமாகவே இலங்குகின்றன. இவ்வின்பத் துக்குப் பொருள் அரணும் ஆக்கமுமாகும். அப்பொருளும், ஆற்றுநீர்ப் பெருக்குப்போல் வரவும் நிலைபேறும் உடையதாகல் வேண்டும். அவ்வுடைமைக்குக் காலமும் இடமும் அறிந்து செய்யும் வினை சிறந்த ஏதுவாகும். பொருளின் ஆக்கம் வினையை யின்றி அமையாது. எனவே, செல்வ வாழ்வுக்குப் பொருளும் வினையும் ஏதுவும் பயனுமாய் இயைந்துள்ளமை தெளிவாகும். இவ்விரண்டையும் செய்வது மனையறம் புரியும் மக்கட்கு நலமாம். 'நல்லவை யெல்லாம் கடன் என்ப.’ கடமை யடிப்படையில் புகழ் நிலைபேறு கொள்கிறது. இவ்வாற்றால் புகழ் புரிந்த இல்வாழ்க்கைக்குப் பொருளும் வினையும் இன்றி யமையாதன வாகின்றன. பொருளும் வினையும் பயக்கும் பயனை வைத்து நுகரும் இடம் மனை. பொருளும் வினையும் உள்ள இடம் மனைக்குப் புறம்பே யாகும். புகழ்பெறுதல் வேண்டி மனைவாழ்வில் இருப் போர் பொருளும் வினையும் குறித்து மனையின் நீங்கிச் செல்ல வேண்டியவ ராவர். பொருள் என்றது, உணவுப்பொருள் முதல் கல்விப்பொருள் ஈறாகப் பலவேறு வகைப் பொருளைக் குறிக்கும். வினையென்பது பொருளைச் செய்தற்குரிய தொழில் முதல் நாடுகாத்தற்குச் செய்யும் போர்த்தொழில் ஈறாக எல்லாத் தொழிலையும் உளப்படுத்தி நிற்கும். பொருளைச் செய்த லாவது, நாட்டில் விளையும் பொருளை மிகுமாறு வளப்படுத் தலும், மிக்க பொருளைக் குறைந்த நாடுகட்குக் கொண்டு சேறலும், இல் பொருளை உள்ள நாடுகளினின்று கொணர்தலும் செய்தொழுகுதல். நாட்டிடையே முறைசெய்து அறம் வளர்த் தலும் குறைகடிந்து நிறைவுசெய்தலும் இவ்வினை வகையே யாகும். இவை யில்வழி மனைவாழ்வும் நாட்டின் பொதுவாழ்வும் நலமெய்தாமையின், இவை குறித்து மனையின் நீங்கிச் செலவு மேற்கோடல் இளமை முதுமை யாகிய இரு காலத்தும் ஆட வர்க்குக் கடனாகும். மிக்க இளமையும் மிக்க முதுமையும் பொருள் வினைகளைச் செய்தற்கு ஆகாமையின், இடை நின்ற இளமை வளமுடையோர் இவை குறித்துப் பிரிந்தொழுகுவதே இங்கே செலவு என்று குறிக்கப்படுகிறது. இளமை அகவளர்ச்சியினும் புறவளர்ச்சி சிறந்து அழகும் வனப்பும் கொண்டு திகழும். செடி கொடிகட்குத் தளிரும் மலரும் தோன்றும் செவ்வி போல, மக்களினத்துக்கு இளமைச் செவ்வி அமைந்துளது. மலரிடத்துத் தோன்றும் மணமும் அழகும் அதன் இனப் பெருக்கத்தைக் குறிக்கொண் டிருப்பது போல, இளமைக் கண் தோன்றும் அழகும் காமமும் மக்கள் இனப் பெருக்கத்துக்கு இன்றியமையாதனவாகும். ஏனையுயிர்கள், இனப்பெருக்கம் கருதித்தோன்றும் மணம் அழகு முதலிய வற்றைத் தம்வரை நிறுத்தி நெறிப்படுத்தும் வன்மையுடைய வல்ல; மக்களினம் ஒன்றுதான் அவ்வன்மை கைவரப் பெற்றது. அதனால் அழகு மணம் பரப்பிக் காதலின்பம் நல்கும் காமச்செவ்வி மக்கள்பால் வன்மை கொண்டு வயங்குகிறது. மக்களது அறிவு காமக்காதலைத் தன்வழி நிற்கச்செய்து ஒழுகுமிடத்து, இன்பமும் பொருளும் அறமும் பெற்றுச் சிறக்கின்றது; மாறுபட்ட விடத்துத் துன்பமும் வறுமையும் தொலையாப் பழியும் கொண்டு துயருறுகிறது. மக்கள் அறிவைத் தன்னடிப்படுத்திக்கொள்ளும் வன்மை காதற்காமத்துக்கு இல்லையாயின் இனப்பெருக்கம் குன்றும்; ஆயினும், காதற்காமத்தின் வன்மை வணக்க வணங்கி நெறியின் இயங்கும் நீர்மையது. அதன் அவ்வன்மை யுணர்ந்து, மக்கள் அறிவுவன்மையால் அதனை வணக்கி வாழ்வதால் வாழ்வு வளம் பெறுகின்றனர். மக்கள்அறிவு உயிர் வளர்ச்சியையும், காதற்காமம் உடல் வளர்ச்சியையும் சார்ந்தவை. கல்வி கேள்வி சூழ்நிலைகளால் உயிர்வளர்ச்சியும் உணவு வகையால் உடல் வளர்ச்சியும் உண்டா கின்றன. உடல் வளர்ச்சியின் உயிர்வளர்ச்சி ஒத்தும் உயர்ந்தும் இருக்குமாயின், உயிரறிவு காதற்காம வுணர்ச்சியைத் தன்வரை நிறுத்தி இன்பமும் சிறப்பும் எய்துகிறது. இந்நிலையில் வளரும் அறிவுக்கும் காதற்காமத்துக்கும் இளமையுள்ளம் போர்க்கள மாகிறது. இங்கே பொருள்வினை பற்றிய கடமை யொருபாலும், காதற்காமம் தரும் உணர்ச்சி ஒருபாலும் உயிரறிவை ஈர்க்கும். கடமைவழிச் செல்லும் உயிரறிவு பெருமையும் தலைமையும் பெறுகிறது. உடல்வன்மையை நோக்க, இளமைக்கண் போதிய உலகியற் பயிற்சி யின்மையால் உயிரறிவு, கல்விகேள்விகளின் துணையின்றிக் காதற்காமத்தின் வன்மையை அடக்கி வணக்கும் திண்மையின்றிச் சாய்ந்தொழிவது பெரும்பான்மை. அதனால், இளமையை நெறிப்படச் செலுத்திப் பெருமை பெறும் சான் றோர் உலகில் மிகச் சிலரே உள்ளனர். இக் கருத்தையுட் கொண்டு திருவள்ளுவர், “செயற்கரிய செய்வார் பெரியர்” என்று தெருட்டி யுரைப்பது நினைவு கூரத்தக்கது. மக்களுள் தலைமைப் பண்புகளெல்லாம் ஒருங்கு படைத்த ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவரை * நாட்டிக் கொண்டு அவர் உள்ளத்தே காதற்காமமும் கல்விகேள்விகளின் துணையை நன்கு பெற்ற உயிரறிவும் ஆற்றும் போர்வகையினை அகனைந்திணை யொழுக்கம் என்ற பெயரால் பண்டைத் தமிழாசிரியன்மார் புலனெறி வழக்கம் செய்துள்ளனர். தலைமைப் பண்புடைய தலைமகன் ஒருவன் மனை வாழ்க் கையில் மேலே கூறிய பொருள்வினை குறித்து மனையின் நீங்கிப் பிரிந்து செல்ல வேண்டிய கடமை யுடையனாகின்றான். அவற் றின்மேற் சென்ற உள்ளத்தைக் காதற்காமம் தாக்கி அவன் மேற்கொண்ட பிரிவைக் கையொழியுமாறு முயல்கிறது; அவ் வாறே தலைமகள் உள்ளத்தையும் தலைமகன்பிரிவுக்கு உடன் படாதவாறு செய்ய முற்படுகிறது. இருவரும் தம் தலைமைப் பண்பால் அதனை வென்று மேன்மையுறுவது பொருளாக நெஞ்சினோடும் தோழியோடும் சொல்லாடுவர். வில்வணக்கம் பகையை வீழ்த்துவது குறிப்பது போல, இருவரிடத்தும் தொடக் கத்தில் காதற்காமக் கிளர்ச்சிக்கு உயிரறிவு வணங்கியது போன்ற சொற்கள் வெளிவரும். தலைவனினும் தலைவிபால் உயிரறிவு மென்மை மிக்கது போல் நின்று ஆற்றாமை யுணர்த்தும் சொல் லும் செயலும் தோற்றுவித்துத் தலைமகன் உள்ளத்தில் எழும் காமக்கிளர்ச்சியைத் தூண்டி, செலவின் மேற்சென்ற அவனது திண்மையைச் சிதைக்க முயலும். சிதையா வுள்ளம் படைத்த அச்செம்மல், சிதைந்தான் போல் வருந்துமாறு செய்வது செல வழுங்குவித்தல் எனப்படும். இதுபற்றியே ஆசிரியர், “செலவிடை அழுங்கல் செல்லாமை யன்று” என்றும், அவன் ஆற்றத் தகுவன வற்றை நன்கு வற்புறுத்தி விட்டுச் செல்வன் என்பார், “வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்1” என்றும் கூறுவாராயினர். 301. மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர் அருஞ்சுரஞ் செல்வோர் சென்னிக் கூட்டும் அவ்வரை யிறக்குவை யாயின் மைவரை நாட வருந்துவள் பெரிதே. இது பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது. பழைய உரை : வெள்ளிலோத்திரத்துக் குளிர்ச்சியையுடைய மலரை ஆற்றின் வெம்மை தீரச் செல்வோர் அணிந்து செல்வர் என்றுழி வெம்மை கூறியவா றாயிற்று. உரை : கருமுகில் தவழும் மலைநாடனே, பெரிய வெள்ளிய ஓத்திரத்தின் குற்றமில்லாத வெண்மையான பூங்கொத்தினைக் கடத்தற் கரிதாகிய பாலைநிலத்திற் செல்வோர் தம் தலையில் அணிந்து கொள்ளும் அழகிய மலையைக் கடந்து செல்குவை யாயின், இவள் பெரிதும் வருந்துவள்காண் என்றவாறு. ஓத்திரம், வெள்ளிலவு என்றும், வெள்ளிலோத்திரம் என்றும் வழங்கும்; இஃது ஒருவகை மரம்; முரம்புநிலக் காடுகளில் வளர்வது. ஓத்திரமரம் வழுவழுப்பான வெண்மையான பட்டை மூடி நெடிது உயர்ந்து வளரும் மரமாதலால் மால் வெள்ளோத் திரம் என்றார். இலவ மரத்தின் வகையாதல் பற்றிப் பிற்காலத்தார் இதனை வெள்ளிலோத்திரம் என வழங்குவா ராயினர். இதன் பூ வெண்ணிறமும் நறுமணமும் உடையது. இதன் உதிர்ந்த பூக்களை அரைத்துச் சாந்து செய்து அணிவதும், இவற்றால் தொடுக்கப் பட்ட மாலையைச் சிறப்புற அணிந்து கொள்வதும் பண்டை வழக்கு. “வாச முண்ட மாருதம் வண்டு பாட மாடவாய், வீச வெள்ளி லோத்திரப் பொதும்பர் பாய்ந்து விம்முமே 1” என்றும், “வெள்ளி லோத்திரத்தின் பூம்பொருக் கரைத்த சாந்தின், காசறு குவளைக் காம ரகவிதழ் பயில மாட்டி 2” என்றும், “வெள்ளி லோத்திரம் விளங்கும் வெண்மலர்க், கள்செய் மாலையர் 3” என்றும் வருவனவற்றா லுணர்க. மிகவும் வெண்மையாக இருப்பது தோன்ற மையில் வாலிணர் எனப்பட்டது. இதன் பூங்கொத்துக்களை வெயில் வெம்மை தாக்காமைப் பொருட்டு வழிச்செல்வோர் தலையில் சூடிக் கொள்வது கண்டு, அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் என்றார். கற்புக்காலத்தில் மனையிலிருந்து மாண்புறும் தலைமகன் பொருள் குறித்துப் பிரியும் கடமையுடையனாகித் தன் கருத்தைத் தலைமகட்குத் தெரிவிக்குமாற்றால் தோழிபால் உரைத்தானாக, அவன்பிரிவைத் தலைமகள் ஆற்றாள் என்பதுபற்றி அவனைச் செலவழுங்குவிக்கலுற்று, இம்மலை நாட்டில் வாழ்பவர் ஒரு கால் ஆண்டுத் தோன்றும் மலைக்குச் செல்வராயின், இடையில் கிடக்கும் நிலம் சுரமாதலின், அதன் வெம்மைக்கு ஆற்றாது வெள்ளோத் திரத்தைத் தலையிற் சூடிக்கொள்வர் என்பாள், வெள்ளோத்திரத்து வாலிணர் அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் அவ்வரை என்றும், அம்மலைக்கு நீ செல்லி னும் பொறாத தலைமகள், அவ்வரையை இறந்து செல்குவை யாயின் ஆற்றாது மிகவும் வருந்துவளாதலால் நீ மேற்கொண்ட செலவினைத் தவிர்க என்பாள், அவ்வரை இறக்குவை யாயின் வருந்துவள் பெரிதே என்றும் கூறினாள். கண்ணிற் காணத் தோன்றுதலுடைமை பற்றி, அவ்வரை என்றாள் என அறிக. நீ பிரியக் கருதும் காலம் பனிநாளை முற்கொண்டு நிற்றலின், நின் பிரிவின்கண் எய்தும் பனிநாள்களையும் அதனோடு வரும் வாடையினையும் ஆற்றாது தலைமகள் மிகவும் வருந்துவாள் என்றற்கு மைவரை நாட என்றாள். “தண்ணென ஆடிய இள மழைப் பின்றை, வாடையும் கண்டிரோ வந்துநின் றதுவே1” எனப் பிறாண்டும் தோழி செலவு அழுங்குவித்தமை காண்க. 302. அரும்பொருள் செய்வினை தப்பற்கு முரித்தே பெருந்தோ ளரிவை தகைத்தற்கு முரியள் செல்லா யாயினோ நன்றே மெல்லம் புலம்ப விவளழப் பிரிந்தே. இது பொருள்வயிற் பிரியுந் தலைமகன் பிரிவுடன்படுத்த வேண்டும் என்றானாக, அவற்குத் தோழி சொல்லியது. உரை : மெல்லம் புலம்ப. பெறுதற்கரிய பொருள் செய்தற்கு நீ செய்யும் வினை முற்றுதலின்றித் தவறுதலுமுரித்து; பெரிய தோளினையுடைய அரிவையாவாள் நின் பிரிவுக்கு உடன் படாது தடுத்தற்கு முரியள்; ஆகலான், இவள் நின் பிரிவாற் றாது வருந்த நீ பிரிந்து செல்லா தொழியின் நன்றாகும் என்றவாறு. பொருளினது அருமையும் இன்றியமையாமையும் வற்புறுத் தற்கு அரும்பொருள் என்றும் செய்வினை என்றும் தலைவன் வற்புறுத்தினா னாகலின், அப்பெற்றித் தாயினும், அது கருதிய வாறு கைகூடாதுஒழிதற்கும் உரியதென அதனைப் பழித்து, அரும்பொருள் செய்வினை தப்பற்கும் உரித்து என்று கொண் டெடுத்து மொழிந்தாள். “ நல்லவை யெல்லாம் தீயவாம் தீயவும், நல்லவாம் செல்வம் செயற்கு 1” என்று சான்றோர் கூறுவது காண்க. பேரறிவும் பிரிவாற்றும் மதுகையும் உடையளாதலின் அவட்கு நீ தக்காங்கு உரைத்தல் வேண்டும் என்பான், பெருந் தோள் அரிவை என்றா னாகலின், அதனையே கொண்டெடுத்து, அப் பேரறிவும் மதுகையுமே கொண்டு பொருளின் நிலைபேறின்மை சுட்டி உடன்படாது மறுக்கவும் வல்லள் என்பாளாய்த் தோழி, பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் என்றாள். இனி, சொல்லின் பிரிவில்லையாம் எனக் கருதிச் சொல்லாது பிரிகுவை யேல், இவள் ஆற்றாது அழுவதே பொருளாகக் கொள்வள்; இவ்வாறு இவள் அழஅழப் பிரிந்து சேறல் நினக்கு நன்றன்று என்பாள், இவள் அழப் பிரிந்து செல்லாயாயினோ நன்று என்றாள். “யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்குச், சொல்லா தேகல் வல்லு வோரே2” என்றதனால் சொல்லாது ஏகலும் உண்டென அறிக. பிரிவுரைக்கும் தலைமகனை, மெல்லம் புலம்ப என்று தோழி கூறியது, சொல்லாதேகும் வன்கண்மையை மேற்கொண்டு செல்லுதல் வேண்டா எனத் தான் செலவழுங்குவிக்கும் செயலை முடித்தற்கு. தப்பற்கும் உரியள் என்ற பாடம் பொருட்பேறின்று. 303. புதுக்கலத் தன்ன கனிய வாலம்3 போகி றடுக்கும் வேனி லருஞ்சுரம் தண்ணிய வினிய வாக எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே. இது சுரத்தருமை கூறி உடன்செலவு மறுக்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. உரை : தலைவ, புதிய மட்கலத்தைப் போலும் நிறம் பொருந்திய பழங்களையுடைய ஆலமரம் தன்னை யடைந்த புள்ளினம் தன்னிற் பிரிந்து செல்லாவகைத் தடுக்கும் வேனிலின் வெப்பம் மிக்க அரிய காடுகள், தண்மையும் இனிமையு முடையவாக, நீ எம்மையும் உடன்கொண்டு செல்வாயாக என்றவாறு. தண்ணிய இனியவாக எம்மொடும் சென்மோ என்றாளா யினும், எம்மொடும் செல்லின், தண்ணியவும் இனியவுமாம் என்பது கருத்தாகக் கொள்க. போகில், பறவை; “பருத்திப், பொதிவயிற் றிளங்காய் பேடை யூட்டிப், போகில் பிளந்திட்ட பொங்கர் வெண்காழ், நல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்1” என்பதனாலும், “வேனில் அரையத் திலையொலி வெரீஇப், போகில் புகாவுண் ணாது2” என்று பிறாண்டும் கூறுதலாலு மறிக. வேனில் வெப்பத்தால் உழந்த தாம் கனியும் தண்ணிய உறையுளும் பெற்றமையின் ஆலமரத்தினைப் புள்ளினம் நீங்கா துறையு மாயினும், அதற்குக் காரணமாதல் நோக்கி ஆலம் போகில் தடுக்கும் என்றார். வேனில் வெப்பத்திற் காற்றாது உயங்கிப் போதரும் புள்ளுக்குக் கனியும் நிழலும் தந்து காத்தலின், கனிய ஆலம் போகில் தடுக்கும் என்றா ரென்றுமாம். மோ: முன்னிலை யசை. விடலை: திணைப்பெயர். வேனில் வெம்மையும் சுரநெறிகளின் இன்னாமையும் கூறி உடன்செல்லுதல் ஆகாதெனத் தலைமகன் உரைத்தானாக, உள்ளுறையால் அவை இலவாதல் கூறலின், அருஞ்சுரம் தண் ணிய இனிய வாக என்றும், ஆகவே தம்மையும் உடன் கொண்டு செல்லுதல் தீதன்று என்றற்கு எம்மொடும் சென்மோ என்றும் கூறினாள். எனவே, நீ இல்வழி எமக்கு இம்மனை இனிதாகாது என்றாளாயிற்று; பிறாண்டும், “பெருங்காடு இன்னா என்றி ராயின், இனியவோ பெரும தமியேற்கு மனையே 3” என வருவது காண்க. வேனில் வெம்மைக்கு ஆற்றாது வரும் புள்ளினங்கட்கு ஆலம் தண்ணிய நிழலும் இனிய கனியும் உதவுமாறு போல, எமக்கு நின் கூட்டத்தாலும் உடனுறைவாலும் சுரம் இனியவும் தண்ணியவுமாம் என உள்ளுறை கொள்க. வெஞ்சுரத்து அரிய வழிகளைச் செல்வதற்கு மகளிர் ஆற்றா ராகலின், இதனால் தலைமகன் செலவழுங்குதல் பயனாயிற்று. 304. கல்லாக் கோவலர் கோலிற் றொட்ட ஆனீர்ப் பத்தல் யானை வௌவும் கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியற் புயனெடுங் கூந்தல் புலம்பும் வயமான் றோன்றல் வல்லா தீமே. இது பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. பழைய உரை : வல்லாதீமே என்றது, எல்லாம் வல்லாயாயினும் இது மாட்டாயா தற்கு மேற்பட்ட தலைமை யில்லை என்றவாறு. உரை : வலிமிக்க குதிரையினையுடைய தலைவனே, கல்வியில் லாத கோவலர்கள் தம் கைக்கோலால் தோண்டிய ஆனீர் நிறைந்த பள்ளத்தை யானைகள் வௌவும் கற்கள் பொருந்திய கவர்த்த வழியை நீ சென்றால், மெல்லிய இயல்பினை யுடைய இவள் புலம்புற்று வருந்துவா ளாகலின் நீ செல்லுதல் வல்லை யல்லையாகுக என்றவாறு. கல்வி, தொழிற் குரிய பயிற்சி மேற்று. ஏறுடை யின நிரைகட்கு நீர் பெறுதல் வேண்டிப் பள்ளங்கள் தோண்டுதல் கோவலர்க்கு மரபாகலின், கோவலர் கோலில் தொட்ட ஆனீர்ப்பத்தல் என்றார். ஆனீர், ஆனிரைக் குரிய நீர். பத்தல், பள்ளம். கல்லாக் கோவல ராதலின் கணிச்சி கொண்டு தோண்டற் குரிய பத்தலைக் கோல்கொண்டு தோண்டுவா ராயினர் என அறிக. வன்னில மாதலால் எளிதில் தோண்டக் கூடாமை பற்றிக் கோவலர் நீர் வறண்ட பள்ளங்களினிடத்தே இக்குழிகளைத் தோண்டுதலின், தொட்ட பத்தல் என்றும், அதுவும் ஆனிரைகட் காக எடுத்த தென்றற்கு ஆனீர்ப் பத்தல் என்றும், வெயில் வெம்மையால் வேட்கை மிக்கு வரும் களிற்றினம் நீர் அருமை குறித்துப் பிறவினங்களை வெருட்டிவிட்டுத் தாமே சூழ்ந்திருந்து உண்டலின் யானை வௌவும் என்றும் கூறினார். “நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய, கொடுவாய்ப் பத்தல் 1” எனவும், “பயநிரைக் கெடுத்த மணிநீர்ப் பத்தல் 2” எனவும், “ஆன்வழிப் படுநர் தோண்டிய பத்தல், யானை யினநிரை கவரும் 3” எனவும் சான்றோர் கூறுவது காண்க. குதிரை இவர்ந்து செல்வது பற்றி வயமான் தோன்றல் என்றும், அதற்கும் செலவு அரிய வழி என்றற்கு, கல்லதர்க் கவலை என்றும், நின் செலவைத் தலைமகட்கு யான் சொல்லப் புகின் அவள் என்னைப் பார்த்தலும் செய்யாள் என்றற்கு, புயல் நெடுங் கூந்தல் என்றும், பிரிந்தால் சிறிதும் ஆற்றாது வேறுபடும் திறத்தை உள்ளுறைக்கண் கூறலின், மெல்லியல் என்றும், மெல்லியோர் புலம்ப ஒரு செயலை வல்லுநர் செய்வது வன்மை யாகாது என்பாள் வல்லாதீமே என்றும் கூறினாள். கோவலர் நிரைகளின் பொருட்டுத் தோண்டிய பத்தலை யானை வௌவும் என்றமையான், நீ நுகர்தற் குரித்தாய்ச் சிறந்த இவள் நலம் பசலை யுணப்பட்டுக் கழியும் என்றாளாம். “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது, நல்லான் தீம்பால் நிலத்துக் காங்கு, எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது, பசலை யுணீஇய வேண்டும், திதலை யல்குலெம் மாமைக் கவினே 4” என்று பிறாண்டும் வெளிப்படக் கூறப்படுவது காண்க. கூவல் தோண்டிய என்றும் பாடமுண்டு. கல்லாக் கோவலர் என்றது நோக்க இப்பாடம் பொருட் சிறப்பெய்தாமை உணர்க. 305. களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது பசிதின வருந்தும் பைதறு குன்றத்துச் சுடர்த்தொடிக் குறுமக ளினைய எனைப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே. இஃது உடன்போக்கொழித்துத் தனித்துச் செல்வல் என்ற தலைமகற்குத் தோழி கூறியது. பழைய உரை : களிறுபிடி....... வருந்தும் என்றது, நீ அவற்றைக் கண்டால் செல்லாய் என்பதாம். உரை : தலைவ, களிற்றியானை தன் பிடியானையைத் தழுவி, வேனில் வெப்பம் தெறுதலால் உணவொன்றும் பெறலா காமையின், அது பெறலாகும் வேறு புலங்களை முன்னிச் செல்லுதலும் செய்யாது, பசிப்பிணி வருத்த வருந்தி உயங் கும் பசுமையற்ற குன்றத்துக்கு, ஒளி விடும் வளை யணிந்த இளையவளாகிய இவள் நின் பிரிவாற்றாது அழுது புலம்ப, இவளை நீங்கிச் செல்லும் நின் செலவு யாது பயனைச் செய்யும்? கூறுக என்றவாறு. களிறு வேனில் வெம்மைக்கு ஆற்றா தாயினும், தான் தழுவி நிற்கும் பிடியானை உடன்வர மாட்டாமையின், அதனைத் தனிப்ப விடுத்துச் சேறற்கு அஞ்சிப் பிற புலம் படராது என்றும், தோன்றி நிலவும் சிறுபொழுதை யன்றிப் பிரிவுத்துன்பம் போல் நினைவின்கண் நின்று நினைத்தொறும் துன்பம் பயவாமையின், அதனை ஆற்றி யிருக்கு மென்பாள், பசிதின வருந்தும் என்றும், வெம்மையால் பசுமையின்றிப் புற்கள் கரிந்தமையின், பைதறு குன்றம் என்றும் கூறுப. பைது, பசுமை. தனக்கு உரியார் அழுது புலம்பத் தான் பிரிந்து சென்று செய்யும் பொருள் நன்றாகாது என்பாள், எனைப் பயம் செய் யுமோ என்றும், பிரிந்தவழித் தலைமகட் குளவாகும் மேனி வேறுபாடும் அவலமும் நோக்கி இரங்குவாள் குறிப்பு மொழி யால், சுடர்த்தொடி என்றும், அவளிடத்து நுகரப்படும் இன்பம் சிறத்தற் கேதுவாகிய இளமை நில்லாது கழியும் என்பாள், குறுமகள் என்றும் கூறினாள், வெளிப்பட மொழிதல் செந்நெறி யன்மையின். பிடி தழீஇய களிறு உணவின்றிப் பசியால் வருந்தியாயினும் தன்கட் பிரிவு நிகழாவாறு முயலும் என்றது, அத்துணை அன் பினை யுணர்த்தும் குன்றத்துக்குச் செல்லின், நீயும் இவளை நினைந்து அன்பு நெருக்குதலால் வருந்துவை யாதலின் நீ செய்யும் வினை பயன் தாராது எனச் செலவழுங்குவித்தவாறு. 306. வெல்போர்க் குரிசில்நீ வியன்சுர னிறப்பின் பல்கா ழல்கு லவ்வரி வாடக் குழலினு மினைகுவள் பெரிதே விழவொலி கூந்தன் மாஅ யோளே. இது பிரியும் தலைமகற்குத் தோழி தலைமகள் பிரிவாற்றாமை கூறியது. உரை : வெல்லுகின்ற போரையுடைய தலைவனாகிய நீ அகன்ற காட்டிடத்தைக் கடந்து செல்லின், பலவாகிய மணிகள் கோத்த மேகலை யணிந்த அல்குலிடத்து அழகிய வரிகள் வாட்டம் எய்த, நின் பிரிவாற்றாமையால், மணவிழாவிற் போல நறு மணம் கமழும் கூந்தலையும் மாமைநிறத்தையு முடைய இவள் குழல் ஒலிப்பது போல் மிகவும் அழாநிற்பள் என்றவாறு. நிகழும் போர் எல்லாவற்றினும் வெற்றியே பெறுவதுபற்றி வெல்போர்க் குரிசில் என்ப, “வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ 1” என்றாற்போல. வியன் சுரன், விரிந்த பாலைநிலத்து வழி. காழ், மணிகள்; முத்து வடமுமாம். வளவிய மகளிருடைய வயிற்றிலும் குறங்கிலும் விளங்கும் வரிகள் ஆங்குக் கிடந்து அழகு செய்தலின் அவ்வரி எனப்படும். இன்பக்காலத்து எழில் செய்யும் இவை துன்பக்காலத்து மேனி வாட்டத்தால் தோல்சுருங்கும் போது மறையும். அல்குல் 2, இடைக்கும், முழந்தாளுக்கும் இடையிலுள்ள உடற்பகுதி. ஈண்டு அணியப்படும் மேகலை அல்குல் எனப்பட்டது. அல்குலிடத்து மேகலை அணிபவாக லின் பல்காழல்குல் எனப்பட்டது. “பல்காசு நிரைத்த சில்கா ழல்குல் 3” என்றார் பிறரும். “அல்கு லவ்வரி வாடத் துறந்தோர் 4” என்றும், “திதலை யல்குல் அவ்வரி வாடவும், அத்தமா ரழுவ நத்துறந் தருளார் 5” என்றும் சான்றோர் கூறுதலால், அல்குலிடத்து வரியுண்மையும், அது பிரிவு நிகழ்ந்துழி வாட்டமெய்தலும் அறிக. மகளிர் அழுகுரற்குக் குழலை யுவமித்தல் மரபு. “குழல் இனைவதுபோல அழுதனள் பெரிதே 1” என்ப; குழல் எனப் பொதுப்படக் கூறினும் அழுகையொலிக்குச் சிறந்த ஆம்பற் குழல் கொள்ளப்படும்; “இயவ ரூதும், ஆம்பலங் குழலி னேங்கிக், கலங்கஞ ருறுவோள் 2” என்பது காண்க. விழவொலி கூந்தல், விழாக்காலத்திற் போல நறுமணம் தழைத்துக் கமழும் கூந்தல். விழா, ஈண்டுச் சிறப்புடைய திரு மணத்தின் மேற்று. “வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள 3” “வதுவை நாறும் வண்டுகமழ் ஐம்பால் 4” என்றும், பல்வகைப் பூக்கள் மலர்ந்து மணம் கமழும் கானத்தை, “மணமனை கமழும் கானம் 5” என்றும் உரைப்பது காண்க. மாயோள், மாமைநிற முடையவள். நீ செல்வுழியெல்லாம் ஊறின்றி வென்றி யெய்தும் பேராண்மை யுடையை யென்பதை அறிந்துள ளாயினும், நின் பிரிவாற்றும் மதுகை யிலள் என்றற்கு, வெல்போர்க் குரிசில் என்றாள். உண்டியிற் குறைந்து உடம்பு நனி சுருங்கி வேறுபடுவள் என்றற்கு அல்குல் அவ்வரி வாட என்றும், கேட்கும் மாவும் புள்ளும் மனங்கரைந்து உருகுமாறு இசைக்கும் குழலொலியினும் இவளது அழுகையொலி, கேட்பார்க்கு அவள்பால் இரக்க மேயன்றிப் பிரியும் நின்பால் பழியும் தோற்றுவிக்கும் என்பாள், குழலினும் இனைகுவள் என்றும், நீ மீளுங்காறும் தன் கூந்தலிற் பூச்சூடாள் என்பது குறிப்பித்து விழவொலி கூந்தல் என்றும் எண்ணிக் கூறினாள். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரி வாற்றாமை. இதனுள் குழலினும் இரங்குவள் என்று பிரிந்தவள் இரங்கு தற் பொருள்படத் தோழி தலைவரும் விழுமம் தலைவற்குக் கூறினாள் என்பர் நச்சினார்க்கினியர் 6. 307. ஞெலிகழை முழங்கழல் வயமா வெரூஉம் குன்றுடை யருஞ்சுரஞ் செலவயர்ந் தனையே நன்றில கொண்கநின் பொருளே பாவை யன்னநின் றுணைப்பிரிந்து வருமே. இது பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக் கூறியவழித் தோழி அதனை இழித்துக் கூறியது. உரை : மூங்கிலாற் கடையப்பட்ட கழையிடத்து எழுந்த முழங்கு கின்ற நெருப்பினை வலியினையுடைய புலிகள் அஞ்சியோடும் அரிய காடுகள் பலவும் கடந்து பொருள் செய்வான் சேறல் மேற்கொண்டனை; கொண்கனே, பாவைபோலும் நின் னுடைய துணைவியைப் பிரிந்து செயின்அல்லது வாராதாக லான், நின் பொருள்பால் அறம் இல்லைகாண்; அவளொடு கூடிச் செய்வதே பொருளாகலின், நீ செலவொழிக என்ற வாறு. ஞெலிகழையும் முழங்கழலும் வினைத்தொகை. வெயில் வெம்மையால் மூங்கில்கள் தம்மில் இழையப் பிறந்த அழல் மலையெங்கும் பரந்து முழங்குதலின் ஞெலிகழை முழங்கழல் எனப்பட்டது. பிறரும், “கனைகதிர் தெறுதலின் கடுத்தெழுந்த காம்புத்தீ, மலைபரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கழல் 1” என்பது காண்க. பொருள் நன்றில, துணைப்பிரிந்து வருமாகா லான் என இயையும். அவளொடு கூடி என்பது முதலாயின குறிப்பெச்சம். மழை பெய்து குளம் நிறைந்தது என்றாற்போலப் பிரிந்து என்றது காரணப்பொருளில் வந்தது. துணைவியொடு கூடி அறத்தாற்றிற் செய்யும் பொருள் போலாது, அவள் துன்புற்று வருந்தச் செய்யப்படுதலின், நன்றில கொண்க நின் பொருளே என்றும், நன்றும் தீதுமாகியஇருவழி யானும் செய்யப்பட்டு நிலைபேறின்றிக் கழியும் பொருள் போலாது, திருநல வுருவின் மாயா இயற்கைய ளென்பாள், பாவை யன்ன நின் துணை யென்றும் கூறினாள். பாவை அன்ன இயல்பு, “கால்பொரு திடிப்பினும் கதழுறை கடுகினும், உரு முடன் றெறியினும் ஊறுபல தோன்றினும், பெருநிலம் கிளரினும் திருநல வுருவின், மாயா வியற்கைப் பாவை 2” என்பதனால் அறிக. “கடம்இறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ, வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள், தடமென் றோள் பிரியாமை பொருளாயின் அல்லதை 1” என்றும், “வரு விருந்தோம்பித்தன் னகர்விழையக் கூடின், இன்னுறல் வியன் மார்ப அதுமன் நும் பொருளே 2” என்றும் வருதல் கொண்டு துணைவியொடு கூடிச் செய்தல் பொருளாதல் கொள்க. ஞெலிகழையிடத்துப் பிறந்த முழங்கழல் கண்டு வயமா வெரூஉம் என்றது, அன்பொடு புணர்ந்த நும் இன்பவாழ்வில் தோன்றிய இப்பொருட்பிரிவு கண்டு யாம் அஞ்சுகின்றேம் என்றவாறு. 308. பல்லிருங் கூந்தன் மெல்லிய லோள்வயின் பிரியா யாயினு நன்றே விரியிணர்க் காலெறு ழொள்வீ தாஅய முருகமர் மாமலைப் பிரிந்தெனப் பிரிமே. இது, “பிரிவல்” என்ற தலைமகற்குத் தோழி, “பிரியா தொழியப் பெறின் நன்று; பிரிவையாயின் இம்மாலை இப்பருவத்து எங்களை விட்டுப் பிரிந்தாற் பிரிக” எனச் சொல்லியது. உரை : பலவாகிய கரிய கூந்தலையும் மெல்லிய இயல்பினையு முடைய தலைமகளைப் பிரியாதொழிகுவையாயின் நன்று; பிரிவதே பொருளாயின், விரிந்த கொத்துக்கள் பொருந்திய வலிய காலையுடைய எறுழமரத்தின் ஒள்ளிய பூக்கள் பரந்த முருகன் விரும்பும் இப்பெரிய மலையிடத்து இப்பருவத்தே எங்களைவிட்டுப் பிரிக என்றவாறு. கரிய நீண்ட மயிர்த்திரளாதல் பற்றிக் கூந்தல் பல்லிருங் கூந்தல் எனச் சிறப்பிக்கப்பட்டது. “பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்3” எனப் பிறரும் கூறுதல் காண்க. உம்மை: எச்சப் பொருட்டு. கால் எனப் பொதுப்படக் கூறினமையின் வன்மை கொள்ளப்பட்டது. கால், அடிப் பகுதி; “கருங்கால் வேங்கை 4” “செங்காற் பலவு 5” என்றாற்போல. எறுழ், எறுழமரம்; இதன்பூ நெருப்புப் போலும் நிறமுடைமை பற்றி “எரிபுரை எறுழம்6” எனச் சான்றோர் சிறப்பித்துரைக்கின்றனர். ஒள்வீ தாஅய மலை, முருகமர் மலை என இயையும். பிரியின் எனற்பாலது பிரிந்தென எனத் திரிந்தது. “வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய1” என்பது தொல்காப்பியம். பிரிமே என்பது “அட்டி லோலை தொட்டனை நின்மே 2” என்றாற்போல முன்னிலைக்கண் வந்தது. முருகமர் மலை யென்றார், முருகன் மலையுறை கடவுளாதலின். எறுழ் வீ தாஅய் முருகு அமர்மலை என இயைத்து எறுழம்பூவின் மணங் கமழும் மலை யென்றுமாம். செலவுக் கருத்துணர்ந்து அழுங்குவிக்கும் செயலினளாதலின் தோழி செல்லா யாயினும் நன்று என்றாள். செல்லாவழிப் பிரிவும், அது வாயிலாகத் தலைமகட்கு வருத்தமும் இல்லையா தலின் மெல்லியலோள் வயின் செல்லாயாயின் நன்றே என்பா ளாயினள். பிரிதலே பொருளாயின், இம் மலையிடத்து இவ்வேனிற் பருவம் நீங்காவாறு செய்து அதன்கண்ணே எம்மை இருத்திச் செல்க என்பாள், பிரிந்தென இம்மாமலைப் பிரிமே என்றாள். எறுழம் பூப்பது வேனிற்பருவத்தே யாகலின், அதன் ஒள்வீ தாய மலை எனக் கூறியது, மலையிடத்தே வேனிற்பருவம் நின்றமை குறித்தவாறாயிற்று. வேனிற்பருவம் நிலைபேறின்றிக் கழிவதாகலின், அதன்கண் தலைமகளை நீங்காவாறு இருத்திப் பிரிவது கூடாமையின், தோழி பிரிமே என்றது, செல்லற்க என்று செலவழுங்குவித்ததாம். ஒள்வீ தாய மாமலை யென்று ஒழியாது முருகமர் மாமலை என்றது, அன்பின்றிப் பிரிந்தார் மலை பூத்தல் கூடா தென்றும், பிரியேன் என்று சொல்லி மணந்து பின், பிரிவாரை முருகக்கடவுள் தெறும் என்றும் கொண்டு தலைமகள் வேறுபட்டு வருந்துவள் என்பது சுட்டி நின்றது. 309. வேனிற் றிங்கள் வெஞ்சுர மிறந்து செலவயர்ந் தனையால் நீயே நன்றும் நின்னயந் துறைவி கடுஞ்சூற் சிறுவன் முறுவல் காண்டலி னினிதோ இறுவரை நாடநீ யிறந்துசெய் பொருளே. இது பொருள்வயிற் பிரிவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. உரை : முறிந்த மலைப்பக்கத்தையுடைய நாடனே, நீ வேனிற் பருவத்தின்கண் வெவ்விய சுரத்தைக் கடந்து பொருள்வயிற் பிரியக் கருதினை யாயின், நீ பிரிந்து செய்யும் அப்பொருள், நின்னைப் பெரிதும் விரும்பி யுறையும் இவளுடைய முதற் சூலில் தோன்றிப் பிறந்த சிறுவனுடைய இளநகையைக் காண்டலாற் பெறலாகும் இன்பத்தினும் இனிதாமோ? கூறுக. என்றவாறு. திங்கள், ஈண்டுப் பருவத்தின் மேற்று; “கோடைத் திங்களும் பனிப்போள் 1” என்புழிப் போல. வேனிற்றிங்களில் சுரம் “காலை யும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல் மாறி நீரும் நிழலும் இன்றி நிலம் பயந்துறந்து புள்ளும் மாவும்” புலம்புறக் கிடத்தலின் வெஞ்சுரம் என்றார். நன்று என்னும் உரிச்சொல் மிகுதிப்பொருட்டு; “நன்று பெரி தாகும் 2” கடுஞ்சூல், தலைச்சூல்; “கடுஞ்சூல் மகளிர் 3”: புதுமைப் பொருட்டாய கடி யென்னும் உரிச்சொல் திரிந்து கடுஞ்சூல் என வந்தது. இறுவரை, கற்கள் முறிந்து சரிந்து கிடக்கும் பக்கத்தையுடைய மலை. “இருங்கல் லிகுப்பத்து இறு வரை 4” என்பது காண்க. சரிவின்றி நெட்டாக உயர்ந்திருக்கும் மலையும் இறுவரை எனப்படும்; “இறுவரை புரையுமாறு இருகரை யேமத்து 5” என்பதன் உரை காண்க. மகன் பிறந்த பின்னும் கணவன் பால் அன்பு பெருகி நிற்கும் கற்புக்கடனை வியந்து நன்றும் நின் நயந்துறைவி என்று தலைமகளை விதந்து கூறினாள். தலைச்சூலிற் பிறந்த முதல் மகன்பால் பெற்றோர்க்குப் பேரன்பு நிகழ்தல் கண்டு கடுஞ்சூற் சிறுவன் என்றும். மக்களின் சொற்கேட்டல் செவிக்கின்பமும், மெய்தீண்டல் உடற்கின்பமும் தருதல் போல இளநகை காண்டல் கட்கின்பம் பயத்தலின் முறுவல் காண்டலின் என்றும், நீ இறந்துசெய்யும் பொருள், நினக்கே யாகாது, நின் பெற்றோரை நோக்கிநின் நல்வினையாலே அவர்பாற் சேறலின், நினக்கேயாய் நின்மகன் செய்யும் பொருள்போல் நீ செய்யும் பொருள் சிறந்த தன்மையின், சிறுவன் முறுவல் காண்டலின் இனிதோ என்றும் கூறினாள். “தம்பொரு ளென்ப தம் மக்கள் அவர்பொருள், தந்தம் வினையான் வரும் 1” என்பதனால் மக்கள் சிறந்த பொருளாதல் அறிக. இருமையும் பயத்தற் சிறப்புடைய ஏனைச் செல்வம் போல, மக்கட் செல்வமும் “இம்மை யுலகத் திசையொடும் விளங்கி, மறுமை யுலகமும் மறுவின் றெய்துப, செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச், சிறுவர்ப் பயந்த செம்மலோ ரெனப், பல்லோர் கூறிய பழமொழி யெல்லாம், வாயே யாகுதல் 2” யாவரும் அறிந்ததொன் றாகலின், இது பயவுவமம். 310. பொலம்பசும் பாண்டிற் காசுநிரை யல்குல் இலங்குவளை மென்றோ ளிழைநிலை நெகிழப் பிரிதல் வல்லுவை யாயின் அரிதே விடலையிவ ளாய்நுதற் கவினே. இது பிரிகின்ற தலைமகற்குத் தோழி, நீ நினைக்கின்ற கருமம் முடித்தாயாயினும், இவள் நலம் மீட்டற் கரிது எனச் சொல்லிச் செலவழுங்குவித்தது. உரை : தலைவ, பொன்னாற் செய்யப்பட்ட பசிய பாண்டிலைச் சுற்றி மணிகள் கோத்தணிந்த அல்குலையும், விளங்குகின்ற வளைகளையும் மெல்லிய தோள்களையுமுடைய இவள் அவ்வணிகள் நின்ற நிலையின் நெகிழ்ந்து நீங்க, நீ பிரிந்து செய்யும் வினையை முடித்தல் வல்லையாயினும், நின் பிரிவால் இவளிடத்து நீங்கிக் கெடும் சிறுநுதலின் அழகு பெறற்கரிது காண் என்றவாறு. பாண்டில், பொன்னால் வட்டமாகச் செய்யப்படுவதோர் அணிவகை. இதனைச் சுற்றி மணிகள் கோத்து மேகலையோ டணிதல் பண்டை மரபாகலின், பொலம்பசும் பாண்டிற் காசுநிரை யல்குல் என்றார். இதனைப் “பொன்செய் பாண்டிற் பொலங்கலம் 3” எனப் பிறாண்டும் கூறுவர். “பவழக் காசொடு பன்மணி விரைஇத், திகழக் கோத்த செம்பொற் பாண்டில் 1” என இக்கருத்தைக் கொங்குவேளிர் விளக்கிக் காட்டுவர். பிரிந்தவழி மேற்கொண்ட பொருள்வினைகளை முடித்தல்லது மீளாமை தலைமகற்குத் தலைமைப்பண்பாதலின், பிரிந்து வினைமுடித் தலைப் பிரிதல் என்றே கூறினார். ஆயின் என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. மகளிர்க்கு நுதல் சிறுத்தல் சிறப்பாதலின், ஆய்நுதல் எனப்பட்டது. “நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி 2” என்பது காண்க. பிரிந்தவழி யெய்தும் மெலிவினால், வளையும் இழையும் நெகிழ்தல் ஒருதலையாகலின், நிலைநெகிழ என்றும், காதலாற் பிணிப்புண்டு ஈருடலும் ஓருயிருமாய் நிற்பார் ஒருவரினொருவர் பிரிதல் அருமை தோன்றப் பிரிதல் வல்லுவையாயின் என்றும், அரிதிற் பிரிதலும், பிரிந்து வினைமுடித்தலும் வல்லா யாயினும், இவள் நுதற்கவினை மீட்கும் வன்மை யுடையை யல்லை என் பாள், கவின்மேல் ஏற்றி அரிது என்றும் கூறினாள். “நின் அளி பெற நந்தும்இவள் ஆய்நுதற் கவினே 3” எனப் பிறரும் கூறுதல் காண்க. 32. செலவுப் பத்து இதன்கண் வரும் பாட்டுக்கள் பத்தும் தலைமகன் தலை மகளின் நீங்கிச் சென்றவிடத்து அச்சென்றமை பொருளாக வந்த வற்றின் தொகுதி யாகலின், இஃது இப்பெயர் எய்துவதாயிற்று. கற்புநெறி நின்றொழுகும் பொற்புடை மனைவாழ்வின் கண் கடமை பற்றிப் பொருள்வினை குறித்துத் தலைமகன் தலை மகளின் நீங்கிப் பிரிந்தேக வேண்டிய நிலை உண்டாவது இயற்கை. அக்காலை அவனது உள்ளம் கடமையும் காதலும் தம்மிற் பொருது நிற்கும் போர்க்களமாகும். போர்முடிவு கடமையின் வெற்றியாக முடியும். தலைமகன் உள்ளம் கடமைவழிச் செல்லும். செலவு ஒருப்பட்டவன் தன் கருத்தை முதற்கண் தோழிக்குச் சொல்லித் தலைமகட்கு உணர்த்துவிப்பன்; தானும் பள்ளி யிடத்தனாகியபோதும் பிறாண்டும் குறிப்பினால் தன் பிரிவுக் கருத்தைப் புலப்படுத்துவன். சிறப்புடைய வாழ்வு கடமை வழி நின்றால் இல்வாழ்வின் பயன் இனிது எய்தும் என்பதைத் தோழி நன்கு அறிவாளாயினும், தலைமகட்குத் துணையாய் நின்று அவள் எய்தும் பிரிவுத்துன்பத்தை உடனிருந்து அறிந்து ஆற்று விக்கும் கடமையுடைமையால் தலைவனைச் செலவழுங்கு விப்பள். அவளால் தலைவனது உள்ளம் கடமைவழி இயங்கு தற்கு உறுதிபெறுவது பெரும்பான்மை. தலைவியும், ஒரோவழி அவனைச் செலவழுங்குவித்தலும் செய்வள். இவ்வாற்றால் தலைமகன் உள்ளம் செலவின்கண் உறுதியும் காதலின் மாண்பும் நன்கு உணர்ந்துகொள்ளும். உறுதியுள்ளம் படைத்த தலைவன் முடிவில் பிரிந்தே போவன்; பிரியுங்கால், தலைவியது ஆற் றாமைக் கஞ்சிச் சொல்லாதே பிரிவதும் உண்டு. ஒன்றியிருக்கும் உயிர்ப்பொருள் இரண்டும் ஒன்றினொன்று பிரிந்தவழி, ஒவ்வொன்றும் பிரிவாற்றாது துடிப்பதும் வருந்து வதும் இயல்பு. அவ்வியற்கைநெறியே பிரிவின்கண் தலைவியது உள்ளம் பிரிவாற்றாது துடித்து வருந்தும். அவ்வருத்தத்தின்கண் அவள் தலைமகன் சென்றது பொருளாகச் சில சொல்லுவள்; அவட்குத் துணைநின்று ஆற்றுவிக்கும் தோழியும் சில சொல்லு வள். அவற்றை இப்பகுதிக்கண் காணலாம். களவின்கண், தலைமகட்குத் தன்பால் உண்டாகிய காதல், தன்னை இன்றியமையாத அளவிற் பெருகி முறுகுமாறு ஒழுகிய தலைமகன், அந்நிலை எய்தியது உணர்ந்ததும், அவளை வரைந்து கொள்ளத் துணிந்து, அவள் பெற்றோர்பால் சான்றோரை மகட்கொடை வேண்டி விடுவன். இதற்கிடையே, வேறு சிலர் மகட்கொடை வேண்டுதலும் உண்டு. தான் விடுத்த சான் றோர்க்கு மகட்கொடை மறுப்பினும், அயலார்க்கு மகட் கொடை நேர்வது போல் தோன்றினும், தலைமகள் பெருங் கற்பின ளாதலின் ஆற்றாது உயிர்விடுவ ளாதலால், அவளைப் பெற்றோர் அறியாவகையிற் கொண்டுதலைக்கழிவது முண்டு. அஃதொழிய வேறு வழியின்மை காணும் தோழியும் தலைமகளும் அதற்கு உடன்படுவர். குறித்த நாள் இரவில், தோழி கையடை செய்யத் தலைமகன் தலைமகளைத் தன்னுடன் கொண்டு போவன். இஃது உடன்போக்கு என்று வழங்கும். இஃது அறக்கழிவுடைய செயலாயினும், தலைமகளது கற்பறம் பேணும் நெறியில் இன்றியமையாமைபற்றிச் சான்றோர் உடன்போக் கினை ஒழுக்காறாகவே கொண்டுள்ளனர். “இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின், சிறந்தானை வழிபடீஇச் சென்றனள், அறம் தலை பிரியா ஆறுமற்று அதுவே 1” எனச் சான்றோர் உரைப்பது காண்க. உடன்போக்கு, “அறம் தலைப்பிரியா ஆறு” என்பது பற்றியே ஆசிரியர் தொல்காப்பியனாரும், உடன்போக்கில் நிகழ்வனவற்றை மேற்கொண்டு இலக்கணம் அமைப்பாராயினர். அவரது கருத்தை அறியும் நுண்ணறிவு இன்மையால், ஆராய்ச்சி யாளர் சிலர், இவ்வுடன்போக்கு நெறியை இகழ்ந்துரைக்கத் தமது வெண்மை விளங்க நின்றதும் உண்டு. இவ்வண்ணம் உடன் போக்கு என்னும் செலவு பிறந்தவழி, அச்செலவின்கண் நிகழ்ந்த வற்றைச் சொல்லும் பாட்டுக்களும் இப்பத்தின்கண் உள்ளன. 311. வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஆரிடைச் செல்வோ ராறுநனி வெருஉம் காடிறந் தனரே காதலர் நீடுவர் கொல்லென நினையுமென் னெஞ்சே. இஃது, ஆற்றது அருமை நினைந்து நீ ஆற்றாயாதல் வேண்டா, அவர் அவ்வழி முடியச் சென்றார் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. உரை : காட்டிடை நின்ற வேங்கைமரத்தில் ஏறிப் பூக்கொய் வோர், பஞ்சுரம் என்னும் பண்ணினைப் பாடுவாராயினும், அரிய நெறியின்கட் செல்வோர் அது கேட்பினும், அவ்வழி யிடைச் செல்லுதற்கு அஞ்சும் காட்டினை, நம் காதலர் முற்றவுங் கடந்து சென்றனராதலால், என் நெஞ்சம்.. அவர் விரைய வாராது நீட்டிப்பர்கொல்லோ என நினையாநின்றது என்றவாறு. வேங்கைப்பூவைக் குறிஞ்சிநில மகளிர் பெரிதும் விரும்பி அணிவர்; அதனால் அவர்கள் வேங்கைமரத்தில் ஏறிப் பூக் கொய்வர்; அக்காலை அவர்கள் பேராரவாரம் செய்வது மரபு. “கருங்கால் வேங்கை யிருஞ்சினைப் பொங்கர், நறும்பூக் கொய் யும் பூசல் 1” எனவும், “கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப், பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமகள், இன்னா இசைய பூசல் பயிற்றலின் 2” எனவும் சான்றோர் உரைப்பது காண்க. இவ் வாறு குறமகளிர் வேங்கை கொய்யுங்கால் பஞ்சுரம் என்னும் பாலைப்பண்ணைப் பாடுவது பற்றி வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் என்றார். பாலையில் வாழும் புறாக் களும் இப்பஞ்சுரமே இசைக்கும் என்பாராய், “வெஞ்சுரம் செல்வோர் வினைவழி யஞ்சப், பஞ்சுர வோசையிற் பையெனப் பயிரும், வெஞ்சிறைச் செங்கால் நுண்பொறிப் புறவே 3” என்று பிறரும் கூறுதல் காண்க. தலைமகன் செல்லுதற்குரிய சுரத்தின் வெம்மையையும் கொடுமையையும் நினைந்து வருந்திய தலைமகள் ஆற்றி யிருப் பள் எனத் தோழி, சுரத்தை இனிது கடந்து சென்று சேர்ந்தார் என்றாளாக, அது கேட்டு மகிழ்வாளாய்த் தலைவி, அவள் கூற்றையே கொண்டெடுத்து, காடு இறந்தனரோ காதலர் என்றாள். அதனால் உவகை கொண்ட தோழியை நோக்கி, யான் மகிழ்ந்தேனாயினும், சுரத்தின் கொடுமையைப் பொருளாக நினையாவாறு அவர் உள்ளத்தைப் பிணித்து நிற்கும் வினையின் அருமை நோக்கி, விரைய முடியாது நீட்டிப்பரோ என அஞ்சு கின்றேன் என்பாள், நீடுவர் கொல்என நினையும் என் நெஞ்சு என்றும் கூறினாள். 312. அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ வறனுண் டாயினு மறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற வருவிக் கோள்வ லென்னையை மறைத்த குன்றே. இஃது, உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி, “நின் ஐயன்மார்பின் துரந்து வந்தவிடத்து நிகழ்ந்தது என்னை?” என்ற தோழிக்கு, நிகழ்ந்தது கூறித் தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது. உரை : ஒளியினால் வனப்பு மிகவுடைய அருவிகளை யுடைத் தாய், உடன்போக்கின்கண் எம்மைத் தொடர்ந்து போந்த தமர் அறியாவாறு வலிமிக்க என் தலைவனை மறைத்து உதவிய குன்றம், எங்கும் வறம் உண்டாயினும், நீர் வறங்கூராத அறம் நிறைந்து மிக ஓங்குவதாக என்றவாறு. சாலியர்: நிறைக என்றும் பொருட்டாய வியங்கோள்முற்று. அறம், மாரிக்கண் மிகப்பெற்றுக் கோடைக்கண் அருவியாகப் பெருகி வீழும் நீர்வள முடைமை. வறம், ஈண்டுக் கடுங்கோடை மேற்று. அருவிக் குன்று என இயையும். கருவரைக்கண் ஒளி திகழ்ந்து வீழ்தலின் வாள் வனப்புற்ற அருவி என்றார். “வரைதாழ்பு வாணிறங் கொண்ட அருவித்து 1” என்று பிறரும் கூறுவர். கோள்வல் என்னை என்புழிக் கோள், கடைப்பிடி; என்னை, தலைவன். தாம் பூண்ட ஒழுக்கம் கெடாவகை மறைதற்கு இடந் தந்து உதவினமையின், அடுக்கு, காதற்சிறப்பு உணர நின்றது. தமருடைய வன்கண்மையும் தலைவனது மறமாண்பும் போர் நிகழின் வரும் ஏதமும் எண்ணிப் பெருங்கலக்குற்று வருந்தின தலைவி, இடைநின்று தலைவனை மறைத்துப் போருண்டாகாத வாறு தடுத்த குன்றினது சிறப்பும் தன் ஆராமையும் தோன்ற அறங்சாலியரோ அறஞ்சாலியரோ என அடுக்கிக் கூறினாள். “மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி, அமர்வரின் அஞ் சேன் பெயர்க்குவென், நுமர்வரின் மறைகுவன் மாஅ யோளே 2” என்று தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்துக் கூறினா னாகலின், கோள்வல் என்னை என்றாள். இது, “வீளைப் பருந்தின் கோள்வல் சேவல் 3” என்புழிப்போலத் தான் கருதியது கருதியாங்குத் தப்பாது கொள்ளும் வன்மை உணர்த்திற்று. தன்னுடைய தமரொடு பொருவதாயின், தலைமகற்கு ஏதம் நிகழுமோ எனக் கவன்று தலைமகள் இறந்து படுமாகலின், அவள் அவ்வாறு கவலாதவாறு மறைந்தானாகலின், அஃது அவன் தலைமைக்கு இழுக்காகாமையான் மறைத்த குன்று என்றாள்; “அமரிடை யுறுதர நீக்கிநீர், எமரிடை யுறுதர ஒளித்த காடே 1” எனப் பிறாண்டும் தலைவி கூறுதல் காண்க. “எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே 2” என்பதன் உரையில் இதனைக் காட்டி, “நின் ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என் என்ற தோழிக்குத் தலைவி தலைவனை மறைத்த மலையை வாழ்த் தியது” என்பர் நச்சினார்க்கினியர்; இது தமர் வந்துற்றவழிக் கூறியது என்பர் இளம்பூரணர். வாள்வயப்புற்ற என்றும், கோள்வரும் என்னையை என்றும் பாடமுண்டு. 313. தெறுவ தம்ம நும்மகள் விருப்பே உறுதுய ரவலமொ டுயிர்செலச் சாஅய்ப் பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க நாடிடை விலங்கிய வைப்பின் காடிறந் தனணங் காத லோளே. இது, தலைமகள் புணர்ந்துடன் போகியவழிச் செவிலி ஆற்றாமை கண்ட நற்றாய் அவட்குச் சொல்லியது. பழைய உரை : தெறுவது என்றது, யான் அவள்மேல் வைத்த காதல் என்னால் தெறப்படுவது என்றவாறு. உரை : மிக்க துயரம் காரணமாகத் தோன்றும் அவலத்தால் உயிர் நீங்குமாறு மெலிந்து பாழ்படும் என்னெஞ்சம், தன்னை நினைத்தலால் வருத்தம் மிக்குக் கலக்க மெய்த, நம்மாற் காதலிக்கப்பட்ட அவள், நாடுகள் பல இடையிட்ட இடத் தினையுடைய காடுகளைக் கடந்து சென்றன ளாகலின், அவள்மேற் சென்ற என் காதல் துன்புறுத்துவதாயிற்றுக்காண் என்றவாறு. தெறுவது, துன்பம் செய்வது; “தெறுவ தம்மஇத் திணைப் பிறத் தல்லே 3” என்று பிறரும் கூறுவது காண்க. விருப்பு, ஈண்டுக் காதல் மேற்று. இன்ப ஒளியின்றித் துன்பவிருள் படிந்து நினைத்தற் றொழிற்கு இடமாகாது செயலற்று வருந்தும் நெஞ்சு, பாழ்படு நெஞ்சம் எனப்பட்டது. இடை விலங்கிய வைப்பு, ஈண்டுத் தலைமக்கள் நாட்டின் இடையே இனிது சென்று சேர்தற்கியலா வாறு குறுக்கே மாறாய்க் காடு பரந்து கிடக்கும் இடம். அவலம், பிறர் புலனுக்குத் தோன்றி நிற்கும் வருத்தம். இது காதல் செய்து ஓம்பிய தலைமகளை இழந்தது பொருளாகப் பிறந்த துயரின் வழித் தோன்றுதலின், உறுதுயர் அவலம் என்றார்; “இளிவே இழவே அசைவே வறுமையென, விளிவில் கொள்கை அழுகை நான்கே 1” என்று ஆசிரியர் கூறுவது காண்க. ஒடு ஆனுருபின் பொருட்டு. இதனை “அன்ன பிறவும் அதன்பால என்மனார் 2” என்பதனால் அமைப்பர். தன்னாற் காதலிக்கப்படும் பொருள் நெஞ்சின்கண் நின்று இன்பந்தர நுகர்ந்தவள், அது நீங்கியவழி, வைப்புழி மறந்த வறியோன் போல வாடுகின்றா ளாகலின் பாழ்படு நெஞ்சம் என்றும், அவள் ஆடிடமும் பயில்பொருளும் காண்டொறும் உள்ளத்தில் துயர்மிகுதலின் படரடக் கலங்க என்றும், இல் இகவா இளம்பருவத்தே நம் அன்பினை நெகிழ்த்துச் சென்றவள், வேற்றுநாட் டகவயின் செல்லின் நம் அன்பினை அறவே மறந் தொழிவள் என்பாள், நாடிடை விலங்கிய வைப்பின் காடிறந் தனள் என்றும், அன்னவள் நம்மாட்டு அன்பில ளாயினும், நாம் அவள்மாட்டுச் செய்த அன்பு பெரிதாய் அவளது பிரிவாற்றாது நம்மை வருத்துவ தாயிற்று என்பாள், தெறுவது அம்ம நும்மகள் விருப்பே என்றும் கூறினாள். கற்பின்கண் தானும் செவிலியும் ஒத்து ஒழுகுதலின், நம் காதலோளே என்றும், களவின்கண் தன்னினும் செவிலி தலைமகட்குச் சிறந்தாளாய் ஒழுகுதலின், நும்மகள் விருப்பே என்றும் கூறினாள். “ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின், தாய் எனப் படுவோள் செவிலி யாகும். 3” என்பது விதி. இது, “தன்னும் அவளும் 4” என்ற சூத்திரத்து, “ஆகிய கிளவியும் அவ்வழி யுரிய” என்பதனை மொழிமாற்றி, “அவ்வழி யாகிய கிளவியு முரிய” என்று கொண்டு, நற்றாய் தலைமகளின் அன்பின்மை கூறியதாகக் கொள்க. “களவல ராயினும் 5” என்ற சூத்திரத்துப் “பிரிவி னெச்சத்தும்” என்புழி இதனைக் காட்டி, “இது பின்செல்லாது வருந்தி யிருந்த செவிலியைக் கண்ட நற்றாய் கூறியது” என்றும், இது நற்றாய் கூற்றாய்ச் “செவிலி மேன” ஆயிற் றென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். 314. அவிர்தொடி கொட்பக் கழுதுபுக வயரக் கருங்கட் காக்கையொடு கழுகுவிசும் பகவச் சிறுகண் யானை யாள்வீழ்த்துத் திரிதரும் நீளிடை யருஞ்சுர மென்பநம் தோளிடை முனிநர் சென்ற வாறே. இது, தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களிற் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி, விளங்குகின்ற தொடியினை யணிந்த பேய்மகள், ஆறலைக்கப்பட்ட இடத்தின்கண் இறந்தோர் கருந்தலை தேடித்திரிய, அவள் ஊர்ந்து போந்த கழுது அவர்தம் நிண மாகிய உணவு தேடியுண்ண, எஞ்சியவற்றை உண்ணும் கரிய கண்களையுடைய காக்கையும் கழுகும் விசும்பின்கண் கத்தித் திரிய, சிறிய கண்களையுடைய யானை. எதிர்ப்பட்ட மறவரைக் கொன்று திரியும் நீண்ட இடத்தினையுடைய கடத்தற்கரிய காடு என்று கூறுவர் நம் தோளிடத்து விருப்பமின்றிச் சென் றோரது நெறியினை; அது கேட்டு என் நெஞ்சம் கவலாநின்றது என்றவாறு. அது கேட்டு என்பது முதலாயின குறிப்பெச்சம். அவிர் தொடி, அவிர்தொடியையுடைய பேய்மகள்; அன் மொழித் தொகை. தொடி, யானைத் தந்தத்தாற் செய்யப்பெற்ற பூண்; இதனை மகளிர் தாம் அணிந்த வளை நெகிழாவகை முன்கையில் அணிப. பேய்மகள் இறந்தார் தலையை யுண்பவள்; “விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப், பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு, கணநரி யோடு கழுதுகளம் படுப்ப 1” என்றும், “உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள், குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரல், கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந் தலை, ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி 2” என்றும் வருவன வற்றாலும், அவள் கழுதூர்ந்து வருதல். “கவைத்தலைப் பேய் மகள் கழுதூர்ந்து இயங்க 1” என்று வருதலாலும் உணர்க. “கழுது, பேயில் ஒருசாதி யென்பர்” நச்சினார்க்கினியர். பேய்மகளிரைச் சவந்தின் பெண்டிர் என்று பிற்காலத்தார் கூறுப. அவர்கள், இக்காலத்தே மலைப்புறங்களில் வாழும் தடவர், இறவுளர், முதுவர், காடர் என்பார் போல, சங்ககாலத்தில் மக்களினம் வழங்காத பாலைநிலங்களில் வாழ்ந்த மக்கள்; பிணந்தின்னும் இயல்பினராய் 2 இருந்தமையின் அவர்களைப் பேய்மகளிர், கழுது, கூளி எனப் பல திறமாகக் கூறினர். அவர் கூட்டம் காலப்போக்கில் அழிந்துபோயிற்றென அறிக. பாரத ராமாயணங்களிலும் ஒரு சில பழம்புராணங்களிலும் காணப் படும் அரக்கரினம் இக்கூட்டத்தினரையே யாம். இவர்கள் தென்கடல் நாட்டுக்குத் தெற்கிலும் மேற்கே ஆப்பிரிக்கா முதல் கிழக்கே ஆத்திரேலியா வரையில் இருந்த நிலப்பகுதிகளிலும் ஒருகாலத்தில் வாழ்ந்தனர். அந்நாடுகளிற் பெரும்பாலன கடற்குள் மூழ்கினமையின் அவர்கூட்டம் பெரிதும் மறைந்தொழிந்தது எஞ்சிநின்ற ஒருசிலர் நன்மக்கள் வாழ்வில் பழகிப் பிணந் தின் றலைக் கைவிட்டனர். முனிநர் என்புழி முனிதல் வெறுத்தல். புகவு: “குறியதன் இறுதிச் சினைகெட வுகரம், அறிய வருதல் செய்யுளுள் உரித்தே 3” என்பதனாற் செய்யுள்முடிபு எய்திய பெயர்ச்சொல். இதன் சொன்னிலை புகா என்பது; “புகாஅக் காலை 4” என்றும், “புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கம் 5” என்றும் சான்றோர் கூறுதல் அறிக. யானை ஆள்வீழ்த்துத் திரிதல், “நீளிடை, ஆட்கொள் யானை யதர்பார்த் தல்கும் 6” எனப் பிறரும் கூறினர். ஆள், பாகனு மாம். கருங்கண், சிறுகண் என்பன வாளாது இயற்கை அடை யாய் நின்றன; அன்றி, ஈரமின்மையும், “அறிந்தறிந்தும் பாக னையே கொல்லும் 7” சிறுமையும் முறையே யுடைமை உணர நின்றன எனினுமாம். பேய்மகளிரும் கழுதும் காக்கையும் கழுகும் இயங்கும் சுரம் எவர்க்கும் விருப்பத்தைத் தாராதாகலின், அதனை விரும்பிச் சென்றார் நம் தலைவர் எனின், அவர்க்கு நம்மிடை இன்பம் இல்லை என்பது இனிது விளங்கும் என்றற்குச் சுரத்தின் கொடு மையை எடுத்து மொழிந்தாள். நம் தோளிடைப் பெறலாகும் இன்பத்தினை வெறுத்தில ராயின், நீளிடை யருஞ்சுரம் செல்லார் என்னும் கருத்துத்தோன்ற, தோளிடை முனிநர் சென்ற வாறே என்றாள். “மலையுடை யருஞ்சுரம் என்பநம், முலையிடை முனிநர் சென்ற வாறே1” என்றார் பிறரும். 315. பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கட் பூசல் கேளார் சேய ரென்ப இழைநெகிழ் செல்ல லுறீஇக் கழைமுதிர் சோலைக் காடிறந் தோரே. இது, தலைமகன் சொல்லாது பிரிந்துழித் தலைமகள் வேறு பாடு கண்ட தோழி இரங்கிச் சொல்லியது. பழைய உரை : பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கட் பூசல் என்றது, அவர் போகின்ற காலத்து விலக்காத வகைத் துயின்றீர் எனக் கண்ணொடு புலந்து கூறுகின்ற பூசல். உரை : தன்னால் துறக்கப்பட்டோர்க்குத் தன் பிரிவால் இழைகள் நெகிழ்ந்தோட வல்ல துயரத்தை உறுவித்து மூங்கில்கள் நிறைந்த சோலைகளையுடைய காடுகளைக் கடந்து, மிக்க சேய்மையிற் சென்றுள்ளா ராகிய காதலர், பிரிந்தபொழுது அயர்ந்து உறக்கங் கொண்டமை பொருட்டுக் குளிர்ந்த மலர்போல் நீண்ட நின்கண்களால் விளைகின்ற ஆகுலத்தைக் கேளார்; கேட்பாரெனக் கலங்குதலாற் பயன் என்? என்றவாறு. பாயல், உறக்கம். பனிமலர், குளிர்ந்த தாமரை; நீலம், குவளை, நெய்தல் முதலிய நீர்ப்பூக்கட்கும் பொதுப்பெயர். நெடிய கண்கள் பசத்தலால் அலர் தோன்றி வருத்துவதும் அதனால் தலைமகள் ஆற்றாமை மிகுவதும் குறித்து நெடுங்கட் பூசல் என்றார். “வாடுதோட் பூசல்” எனத் திருவள்ளுவனாரும் 1, “இருந்தணை மீது பொருந்துழிக் கிடக்கை, வருந்துதோட் பூசல் களையும் மருந்தென, உள்ளுதொறும் படூஉம் பல்லி 2” என்று பிறரும் கூறுதல் காண்க. பூசல்: ஆகுபெயர். என்ப: அசைநிலை. இறந்தோர்: என்றமையான், சொல்லிப் பிரியும் அன்பு நிலையைக் கடந்து தலைமகன் சொல்லாது பிரிந்தனன் என்பது பெற்றாம். தலைமகன் பிரிவன் என்ற குறிப்புணராது கண்கள் அயர்ந்து உறங்கினமை தோன்றப் பாயல் கொண்ட என்றும், பிரி வுணர்ந்து ஆற்றாமையால் கண்கள் பசந்து நீர்சொரிந்து வருந் தினமையின், பனிமலர் நெடுங்கண் என்றும், அதனால் அலர் பிறப்ப ஆற்றாது வருந்தினமை விளங்க, நெடுங்கட் பூசல் என்றும், கண் பசந்ததோடு, தொடியும் வளையும் நெகிழுமாறு மேனி வாடியவழிப் பிறந்த தோட்பூசலை இழைநெகிழ் செல் லல் உறீஇ என்றும், இவ்வண்ணம் நின் கண்ணும் தோளும் செய்யும் பூசல், காடிறந்து சென்ற காதலர் செவிப்புலம் சென்று சேரா என்பாள், கேளார் என்றும், எனவே, அன்பின்றிச் சொல் லாது பிரிந்தார் பொருட்டு, ஆற்றாது வருந்துதலைக் கைவிட்டு விரையத் தாம் மேற்கொண்ட வினை முற்றி மீள்வாராக என வேண்டுதலே செயற்பாலது எனத் தோழி கூறினாள் என்று உணர்க. “இழைநெகிழ் செல்லல் உறீஇ” என்றது உடம்பு நனிசுருங்கலும், அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற் றாமையுமாம். 316. பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்தத் தேரக லல்கு லவ்வரி வாட இறந்தோர் மன்ற தாமே பிறங்குமலைப் புல்லரை யோமை நீடிய புலிவழங் கதர கானத் தானே. இது, தலைமகள் மெலிவிற்கு நொந்து தலைமகன் பிரிவின் கண் தோழி கூறியது. உரை : உயர்ந்த மலைப்பக்கத்தே புல்லென்ற அரையினை யுடைய ஓமைமரங்கள் நிறைந்த, புலிகள் இயங்காநிற்கும் கானத்தின்கண், பொன்னாற் செய்யப்பட்ட பாண்டி லாகிய பொன்னணி நெகிழ்ந்தொழிய, தேர்த்தட்டுப் போலும் அகன்ற அல்குலின்கட் கிடந்த அழகிய வரிகள் வாட்ட மெய்த, நம்மைத் தெளிவாகப் பிரிந்து சென்றா ராகலான், நாம் ஆற்றுமாறு என்னையோ? அறியேன் என்றவாறு. பாண்டிலைச் சுற்றிக் கோக்கப்படும் பொற்காசுகள் ஈண்டுப் பொலங்கலம் எனப்பட்டன. பொற்கலம் பொலங்கலம் என வந்தது. அல்குற்குத் தேர்த்தட்டு, தலையகன்று அடிசுருங்கித் தோன்றுவது பற்றி வந்த மெய்யுவமம். இறந்தார் என்பது “ஆ வோ வாகும் 1” என்பதனால் இறந்தோர் என வந்தது. பாண்டிற் பொலங்கலம் என்பதனைப் பொலம்பசும் பாண்டில் என்புழிக் கூறினாம். ஓமை மரத்தின் அடிப்பகுதி பொலிவின்றிப் பொருக்கு களையுடையதாய் நிற்றலின், புல்லரை யோமை யெனப்பட்டது. மேலே செதிள்கள் பல கொண்டு பொருக்குகள் நிறைந்து இருத்தலால், “இருங்கழி முதலை மேந்தோல் அன்ன கருங்கால் ஓமை 2” எனவும், அதன் உட்பட்டை சிவந்திருப்பதுபற்றி, “பொரி யரை யோமைப் பெரும்பொளிச் சேயரை 3” எனவும் சான்றோர் குறிப்பது காண்க. புலிவழங் கதர கானத் தானே என்றது, வழியருமை நினைந்து கூறுதல். பிரிவாற்றாது மெலிவாட்குப் பிரிவுக் கேதுவாகிய பொருள் மிக்குத் தோன்றுதலின், பொலங் கலம் நந்த என்றாள். தேரகல் அல்குல் அவ்வரி வாட என்றது, அவன் பிரிவாற்றாமையான் உடம்பு நனி சுருங்கல். தலைமகன் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்கு ஆற்றுந் திறமாவன கூறுதற்குரிய தோழி, நீர் செல்லும்வழிச் சாய்ந்து நீரின் செலவுக்கடுமை ஆற்றும் புல்லினம் போல, உயிர்த் துணையாகிய தலைமகள் எய்தும் துன்பத்தையே தானும் எய்தி உழந்து ஆற்றுவிப்பாளாய், பொலங்கலம் நந்த, அல்குல் அவ்வரி வாட இறந்தோர் மன்ற தாமே என்றாள். மனையின் கண் இருந்து பிரிந்தொழுகும் எல்லை கடந்து, நாட மலை காடு முதலியவற்றை இடையிட்டு நெடிது பிரிதல் பற்றிப் பிரிந்தோர் என்னாது இறந்தோர் என்றாள். இறத்தல், எல்லை கடத்தல். பிரிந்தவன் விரைய வாராது நீட்டித்தலின், நம்மைத் துறந்ததே யன்றி மறந்துவிட்டனர் போலும் என்பாள் குறிப்பால், இறந் தோர் மன்றதாமே என்றாள். காதலர்க்கு நம்மினும் பொருளே காதல் என்பாள், பொன்செய் பாண்டிற் பொலங்கலம் நந்த என்றாள் என்றுமாம். 317. சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப் பைதற வெந்த பாலை வெங்காட் டருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச் சென்ற நெஞ்ச நீடிய பொருளே. இது, தலைமகன் பிரிந்து நீட்டித்துழி, நெஞ்சினைத் தூது விட்ட தலைமகள், அது வாராது தாழ்த்துழித் தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி, பாழெய்திப் பசுமை யில்லையாய் வெந்து கரிந்து பாழாகிய வெவ்விய காட்டினிடத்ததாகிய அரிய சுரத்தைக் கடந்து சென்ற காதலர்பால் தூதுசென்ற என் நெஞ்சம் விரைய வாராது நீட்டித்தலின் பொருள் தெரிந்திலது; ஆக லின், அதனை ஆராய்வோம். வருக என்றவாறு. பைது, பசுமை. பாழ்பட்டுப் பைதற வெந்த பாலை என்றது, வேனில் வெப்பத்தால் வழங்குநரும் வழங்குநவும் இன்றிப் பாழ்பட்டு, ஓரறிவுயிராகிய புல்லும் நிலைகெட்டு வெந்து கரிந்து பரல்மிக்க காடாய்த் தோன்றும் பாலை யென்பதாம். பாலை நிலத்திற் காணப்படும் மரங்களுள் பாலைமரம் சிறந்தமை பற்றி, நெடுஞ்சுரம் பாலை எனப்படும் என்பதும் ஒன்று. நீடிய பொருள், விரைந்து மீளாமைக்குக் காரணம். தலைமகன்பால் தூதுசென்ற நெஞ்சம் தன்னிடமே வந்து சேர்தற்பாலதாகவும் வாராமைக்குக் காரணமொன்று உளதாகல் வேண்டு மாகலின், சூழ்கம் வம்மோ எனத் தோழியை அழைத் தாள். ஆராய்ச்சி யெல்லாம் தான் தேர்ந்துகொண்ட இனத் தோடே எண்ணிச் செய்தற்கு உரியவாகலின் சூழ்ச்சித் துணை யாகிய தோழியைத் தோழி என்றாள். தலைமகனை நினைந்த நெஞ்சத்தில் அந்நினைவு விடாது நிகழ்தலின், சென்ற நெஞ்சம் என்றும், நீடிய பொருளே யென்றும் கூறினாள். இஃது, “உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல், மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்தும் 1” என்புழி அடங்கும். பிரிவுத் துன்பத்தாற் பேதுறும் மகளிர்க்குத் துணையாவது அவர் நெஞ் சல்ல தின்மையின், அது பற்றி இது கூறுவாளாயினள் என்றுமாம். “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய, நெஞ்சம் துணையல் வழி 2” என்ப வாகலின். “அவனறி வாற்ற அறியு மாகலின் 3” என்ற சூத்திரத்துப் “பல்வேறு நிலை” என்றதனால், இது நெஞ்சினைத் தூதுவிட்டுக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். 138. ஆய்நலம் பசப்ப வரும்படர் நலிய வேய்மருள் பணைத்தோள் வில்லிழை நெகிழ நசைநனி கொன்றோர் மன்ற விசைநிமிர்ந் தோடெரி நடந்த வைப்பிற் கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே. இது, நம்மைப் பிரியார் என்று கருதியிருந்த தலைமகள் அவன் பிரிந்துழி இரங்கிச் சொல்லியது. உரை : ஓசை மிக்குப் பலவிடத்தும் பரவிச் செல்லும் தீ எரித்த இடத்தினை யுடைய முடிகளால் உயர்ந்து செறிந்த மலை யினைக் கடந்து சென்ற தலைவர், அழகிய என் நலம் கெட்டுப் பசலை பாயவும், அவர்மேல் உளதாகிய நினைவு வருத்தலால், மூங்கில் போலும் பருத்த தோளிடத்து அணிந்த ஒளி யுமிழும் மணிகள் நெகிழ்ந்து நீங்கவும் பிரிந்து, நம் மனத்தெழும் விருப்பத்தைப் பெரிதும் அழித்தொழிந்தனர் காண் என்றவாறு. ஆய்கவின்4 என்றாற் போல ஆய்நலம் அழகின்மேல் நின்றது. ஆய்தல், ஈண்டு மெலிவின் மேலதாயின் பசப்ப என்பது வேண்டா கூறலாம். அரும்படர், மிக்க துன்பம்; மிக்கவழித் துன்பம் பொறுத்தற் கரிதாகலின், அரும்படர் எனப்பட்டது. பணைத்தோள், பெரியதோள்; தோள் பெருத்தல் மகளிர்க்கு இலக்கணம் என அறிக; “அகல் அல்குல் தோள்கண் என மூவழிப் பெருகி 1” எனப் பிறரும் கூறுப. நசை கொன்றார் என்பது, நன்றி கொன்றார் என்றாற்போல நின்றது. இசை, தீயின் முழக்கம்; “முழங்கழல் 2” என்பது காண்க. விசை நிமிர்ந்து எனக் கொண்டு, விரைவு மிகுந்து என்று உரைப்பினும் அமையும். நின்று எரியாது காற்றின்வழிப் படர்ந்து செல்வதுபற்றி ஓடெரி எனவும், எதிர்ப் பட்ட எதனையும் விடாது வெதுப்பிச் சேறலின் நடந்த எனவும் கூறினார்; “கனையெரி நடந்த கல்காய் கானம் 3” என்பது காண்க. வைப்பினையும் மலையினையும் இறந்தோர் என்க. வைப்பு, பாலைநிலம். பசையற வெதுப்பும் தீ நடந்த வைப்பினையும் கோடுயர் மலையினையும் கடந்து சென்றார்க்கு நம்பால் நசை யற மறந்து சேறல் அரிதன்று என்றற்கு, ஓடெரி நடந்த வைப்பு என்றும், தன்னாற் காதலிக்கப் பட்ட யாம் நலமிழந்து, படர்மிகுந்து இழை நெகிழ்ந்து வருந்துதலை அறிந்து வாராமையின், தலைமகன் தன் அன்பினை முற்றும் மறந்தொழிந்தான் என இரங்குவாள், நசை நனி கொன்றார் என்றும், இனிப் பிரியார் எனத் தான் கருதுமாறு ஒழுகியவன், கடத்தற் கரிய கானம் கடந்து, தன்னால் ஆற்றுதற் கரிய துன்பமும் தந்தமையான், “கொன்றோர்” என்றதனோ டமையாது மன்ற என்றும் கூறினாள். அன்பு மறவாராயின், தன்னால் அன்பு செய்யப்பட்டவர்க்கு எய்தும் துன்பத்தைத் துடைத்தலைக் கருதாது அவர் பிரிவே கருதிச் செல்லார் என்ப தாம். ஆய்நலம் பசப்ப, என்பது, பசலைபாய்தல். அரும்படர் மெலிய என்றது, துன்பத்துப் புலம்பல். பணைத் தோள் வில்லிழை நெகிழ என்றது, உடம்பு நனி சுருங்கல். 319. கண்பொர விளங்கிய கதிர்தெறு வைப்பின் மண்புரை பெருகிய மரமுளி கானம் இறந்தன ரோநங் காதலர் மறந்தன ரோதில் மறவா நம்மே. இது, தலைமகன் பிரிந்துழி அவன் உணர்த்தாது பிரிந்தமை கூறிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. உரை : தோழி, கண்ணொளியோடே மாறுபட விளங்குகின்ற வெயில் மிகுந்து வருத்தும் இடத்தினையுடைத்தாய், மண் மேடுகள் பெருகிய, மரங்கள் கரிந்து உலர்ந்த கானத்தை நம் காதலர் கடந்து சென்றனர்கொல்லோ? தம்மை மறவா துறையும் நம்மை மறந்தார்கொல்லோ? மறந்தாரே ஆவர், காண் என்றவாறு. கண்ணளவாய் நில்லாது இறப்பவும் மிக்குத் திகழ்தல் பற்றிக் கண்பொர விளங்கிய கதிர் என்றார். “கண்பொர விளங்கிய விண் பொரு வியன்குடை 1” என்று பிறரும் கூறுவர். வைப்பு, ஊர்களாயின், மண்புரை யென்றது, மண்ணாற் கூரை வேய்ந்த வீடுகள் மேற்றாம். மண்புரை, மண்மேடுகள்; மட்குன்றங்களு மாம். வெப்பமிகுதியால் மரங்கள் அழிந்தமையின் மண் நிறைந்த மேடுகளும் குன்றுகளுமே நிற்றலான், மண்புரை பெருகிய மரமுளி கானம் என்றார். முளிதல், உலர்தல், “உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த, முளிபுற் கானம் 2” என்பதனால் அறிக. தில், அசைநிலை. கண்ணாற் காண்டற்கும் மெய்யால் நடத்தற்கும் அரிய கானத்தைக் கடந்து தலைமகன் சென்றான் என்பது தோழி முதலாயினாரால் அறிந்ததும், தலைமகள் ஆற்றாளாயினமையின், அவர்கூற்றையே கொண்டெடுத்துக் கானம் இறந்தனரோ நம் காதலர் என்றாள்; என்றவள், நம் காதலர் என்றது நம்பால் காதலுடையர் எனவும், நமது காதலையுடைய ரெனவும் இரு பொருள்பட நிற்றலின், காதலர் நமது காதலை உடைய ராகலின், நாம் அவரை மறவேமாயினேம் என்பாள், மறவா நம்மே என்றும், ஆராயுமிடத்து அவர் தமது காதலை நம்பாற் செலுத்து கின்றாரில்லை என்பது அவர் நமக்குச் சொல்லாது பிரிந்தமையே நன்கு உணர்த்தாநிற்கு மாகலின், நம்மை மறவாமைக்குரிய காதல் அவர் மனத்து இன்றென்பாள், மறந்தாரே ஆவர் என்றும் கூறினாள். “எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க, அம்மென் இணர அடும்புகாள் அன்னங்கள், நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்1” எனத் தலைவி வருந்திக் கூறுமாறு காண்க. மறவா நம்மே என்றது, ஓராற்றால் தன்வயின் உரிமை யும், மறந்தனரோ என்றது அவன்வயிற் பரத்தைமையும் சுட்டி நிற்றல் காண்க. 320. முள்ளரை யிலவத் தொள்ளிணர் வான்பூ முழங்கழ லசைவளி யெடுப்ப வானத் துருமுப்படு கனலி னிருநிலத் துறைக்கும் கவலை யருஞ்சுரம் போயினர் தவலி லருநோய் தலைத்தந் தோரே. இது, தலைமகன் பிரிந்துழிச் சுரத்து வெம்மை நினைந்து தலைமகள் சொல்லியது. உரை : முட்கள் பொருந்திய அடிமரத்தினையுடைய இலவமரத் தின் ஒள்ளிய கொத்திடை மலர்ந்த வெண்மையான பூக்கள், முழங்குகின்ற நெருப்பினை அலைத்தற்கெழுந்த காற்று எடுத்து வீசுதலால், விசும்பிலே இடியின்கட் பிறக்கும் நெருப்புப்போலப் பெரிய நிலத்தின்கண் உதிரும் கவர்த்த வழிகளை யுடைய அரிய காட்டைக் கடந்து சென்றா ராயினும், நமக்குக் கெடாத பொறுத்தற் கரிய நோயினைத் தந்தனர்காண் என்றவாறு. அரையில் முள்ளுடைய இலவமரத்தை முள்ளிலவு என்பர். “முளிகொடி வலந்த முள்ளரை இலவம் 2” என்று பிறரும் கூறுதல் காண்க. அழலெழும் போது சூழவுள்ள காற்று வெம்மை யுற்று மேலே செல்வதால், புறத்தேயுள்ள காற்று ஆண்டுப் போந்து தானும் வெம்மையுற்று நீங்கும்; இவ்வாற்றால் அசைவளி தோன்றுவதும் அழல் எங்கும் பரவுவதும்பற்றி, முழங்கழல் அசைவளி எடுப்ப என்றும், அக்காற்றால் உதிரும் இலவம்பூ ஒளியாலும் நிறத்தாலும் தீச்சுடரை ஒத்தலின், உருமுப்படு கனலின் உறைக்கும் என்றும் கூறினார். “நீளரை யிலவத்து ஊழ் கழி பன்மலர், விழவுதலைக் கொண்ட பழவிறல் மூதூர், நெய் யுமிழ் சுடரின் கால்பொரச் சில்கி, வைகுறு மீனின் தோன்றும் 1” எனப் பிறரும் கூறுவது காண்க. கவலை, கிளைவழி. தவல், கெடுதல். தலைமகன் சென்ற சுரம் அருஞ்சுரம் என்றதனால், தலை மகள் உள்ளத்தில் ஆற்றுதற்கரிய நோய் உண்டாக, உண்மைநெறி ஈதென உணராவாறு மயக்கும் பலதலையான வழிகள் பொருந்தி யது அச் சுரம் என்ற சொல் அந்நோயை மிகுவித்தமையின் தவலில் அருநோய் என்றாள். அசைவளி எடுப்ப உதிரும் இலவத்தின் ஒள்ளிணர் வான்பூ உருமுப்படு கனல் போலத் தோன்றும் என்றது, பொருள்நசை கடவுதலால் தலைமகன் செலவால் உளதாகிய பிரிவு, பொறுத்தற் கரிய பெருந்துயராய் என்னை வருத்துகின்றது எனத் தலைமகள் கருதிக் கூறுவதை உணர்த்துமாறு அறிக. 33. இடைச்சுரப் பத்து தலைமகன் செயல்வகைகளுள் இடைச்சுரத்து நிகழ்வன பொருளாக வரும் பாட்டுக்கள் பத்தின் தொகுதியாகலின் இஃது இப்பெயரினைப் பெறுவதாயிற்று. காதல் வாழ்க்கையில் தலைமகன் தலைமகளைப் பிரிந்து செல்லுங்கால், பிரிவுக்கு ஏதுவாகிய கடமை பின்னின்று அவன் நெஞ்சினைச் செலுத்தினும், காதலின் உருவாகி நிற்கும் தலை மகளின் வடிவும் பண்பும் செயலும் மொழிகளும் அவன் நெஞ் சின்கண் இடையறாது நின்று நினைவெல்லாம் அவையேயாக நிலவுவிக்கும்; ஒரோவழிக் காதல் நினைவு மீதூர்ந்து மேற் கொண்ட செலவைக் கைவிட்டு மீளுமாறு தூண்டக் கூடிய அளவு பெருகுவதும் உண்டு. ஆயினும் தலைவன் தனது தலைமைப் பண்பால் கடமைவழியே நிற்பன். சென்றவன், வினைசெய் யிடத்தை அடைந்ததும், வினையின்கண் தோய்ந்து செயற்குரிய வற்றையே நினைவிற்கொண்டு முடிப்பன். வினை முடிவில் மனைக்கு மீளவேண்டிய செவ்வி தோன்றியதும், அவன் நினைவு முற்றும் காதலிபாற் பதிந்துவிடும். சுரத்திடைச் செல்லுங்கால் ஆண்டுத் தோன்றும் இயற்கைக் காட்சிகளும் அவன் உள்ளத்தில் காதலியின் குணஞ்செயல்களை நினைவுறுத்தும். அந்நினைவுவழி நின்று நெஞ்சொடு பிணங்கிச் சிலசொற்களைத் தனக்குள்ளே சொல்லிக்கொள்வதும் உண்டு. தன்னோடு உடன்வருபவர்களுள் நெருங்கிய தோழர்பால் தன் நினைவினைச் சொல்லித் தெளிவுறுவதும் தலைமகனுக்கு இயல்பு. வாழ்வுவகை பலவற்றுள்ளும் காதல்வாழ்வு போல இளமைக்கண் கடமையொடு கடும்போர் நிகழ்த்தும் செவ்வி வேறின்மையின், தலைமகன் உள்ளம், பிரிவின் கண்ணும், பிரிந்து செல்லும் இடைச்சுரத்தின்கண்ணும் கொள்ளும் நினைவுகளை எடுத்துப் புலனெறிவழக்கம் செய்து மக்கள் மனவுணர்வைப் பண்டைச் சான்றோர் பண்படுத்தியுள்ளனர். இப்பகுதிக்கண், தலைமகளைப் பிரிந்து செல்லும் தலைமகன் உள்ளத்தில், இயற்கைக் காட்சிகள் சில, அவனை அவளை நினைக்குமாறு தூண்டுதலால், அவன் நினைக்கும் திறங்களும், அந்நினைவால் அவன் எய்தும் பயன்களும், தன்னொடு வரும் தோழர்பால் அவன் உரைப்பனவும், வினைமுற்றி மீண்டு மனையடைந்தபின் மனை யோர்பால் தான் இடைச்சுரத்துக் கொண்ட நினைவுகளைச் சொல்லி இன்புறுவனவும் பிறவும், காணப்படும். இவ்வண்ணம், தலைமகனது உள்ளம் காதலின் வன்மையை வென்று கடமைவழி நின்று வினைமுற்றுதற்கு அவனுக்குத் துணைசெய்யும் உணர்வுகள் பலவாகும். அவற்றை, ஆசிரியர் தொல்காப்பியனார். “நாளது சின்மையும் இளமையது அருமை யும், தாளாண் பக்கமும் தகுதிய தமைதியும், இன்மையது இளிவும் உடைமைய துயர்ச்சியும், அன்பினது அகலமும் அகற்சிய தருமையும், ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பகுதியும் 1” என வகுத்து எடுத்துக் கூறியிருக்கின்றார். இவற்றைத் தூக்கித் தகுவன வற்றைத் தேர்ந்து மேற்கொள்ளும் வகையால் தலைமகன் மாண்பு சிறப்புறுகின்றது. இடைச்சுரம் என்பது கடைக்கண் என்பது போலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம்வேற்றுமைத்தொகை; இது விரியுங் கால், சுரத்திடை எனவரும். 321. உலறுதலைப் பருந்தி னுளிவாய்ப் பேடை அலறுதலை யோமை யங்கவட் டேறிப் புலம்புகொள விளிக்கு நிலங்காய் கானத்து மொழிபெயர் பன்மலை யிறப்பினும் ஒழிதல் செல்லா தொண்டொடி குணனே. இது, பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலை மகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது. பழைய உரை : மொழிபெயர் பன்மலை இறப்பினும் என்றது, பின்னும் செல்லும் வழியை நோக்கி என்றவாறு. உரை : காய்ந்த தலையினையிடைய பருந்தின் உளிபோற் கூரிய தாய வாயினையுடைய பேடை, இலையின்றி உலர்ந்து விரிந்து தோன்றும் ஓமைமரத்தின் அழகிய கவைக்கிளையின் கண் இருந்து துயருற்று இசைக்கும் வறண்ட கானத்தையும், வேற்று மொழி பேசும் மக்கள் வாழும் மலைபல வுடைய நாடுகளையும் கடந்து செல்லினும், ஒள்ளிய தொடியையுடையாளின் காதல் கெழுமிய குணம் நினைவின்கண் தோன்றி வருத்துகிறது. இனிச் செய்யுமாறு என்னோ? என்றவாறு. மிக்க வெயிலால் தெறப்பட்டுக் காய்ந்தது போலத் தோன்று தலின், உலறுதலைப் பருந்து என்றும், அதன் வாயலகு மிகக் கூரிதா யிருத்தலின், உளிவாய்ப் பேடை என்றும் குறித்தார். நுனி சிறிது வளைந்திருப்பது பற்றி “வளைவாய்ப் பருந்து 1” என்பது வழக்கம். ஓமைமரத்தின் உயர்ந்து விரிந்த கிளைகள் வெயில் வெம்மையால் தழையுதிர்ந்து காணப்படுவதால் அலறுதலை ஓமை என்றார்; இளங்கோவடிகள், “அலறுதலை மராமும் உலறுதலை யோமையும் 2” என்றாராக, அலறுதலை யென்றதற்கு விரிந்த தலையென அரும்பதவுரைகாரரும், உலறுதலை என்றதற்கு உலறுதல் தலைமுளிதல் என அடியார்க்கு நல்லாரும் பொருள் உரைத்தனர். கவடு, கிளை. தனித்திருந்து இசைக்கும் பருந்தின் குரல் துன்புற்றுப் புலம்புவது போறலின், புலம்புகொள விளிக்கும் என்றார். “மொழிபெயர் தேஎம் 1” என்றாற்போல வேற்றுமொழி வழங்கும் மக்கள் வாழும் நாட்டிடத்து மலைகள் மொழி பெயர் பன்மலை எனப்பட்டன. பருந்திற்கும் பேடைக்கும் இடை நிற்பனவற்றை, “தத்தம் எச்சமொடு சிவணும் குறிப்பின், எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்2” என்னும் சூத்திரத்து இலேசினால் அமைக்க. பசுந்தழை போர்த்த காடும் பைந்தமிழ் வழங்கும் மலைகளும் இன்றி உலறுதலைப் பருந்தும் அலறுதலை ஓமையும் உள்ள காடுகளும் வேறுமொழி வழங்கும் மக்களுமே காணப்படுதலால், காதலியை மறந்திருந்த தலைமகனது உள்ளத்தில் தன் துணைப் பருந்தினைப் பிரிந்து தனித்து உறையும் பெடைப்பருந்தின் புலம்புகுரல், அப்பெற்றியளாய் வருந்தும் தலைமகளது ஆற் றாமை வடிவை மனக்கண்ணில் தோற்றுவித்தலின், ஒண்டொடி குணனே என்றும், காடும் மலையும் நாடும் பிறவும் கடந்து நெடுஞ்சேண் போந்தவழியும் காதலியின் குணமும் செயலும் நெஞ்சில் தோன்றியதுபற்றி ஒழிதல் செல்லாது என்றும் கூறினான். 322. நெடுங்கழை முளிய வேனி னீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயின முன்னே யினியே ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறும் தண்ணிய வாயின சுரத்திடை யாறே. இஃது, இடைச்சுரத்துக்கண் தலைமகன் தலைமகள் குணம் நினைத்தலின் தனக்குற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது. உரை : ஒள்ளிய நுதலினையுடைய அரிவையாவாளைப் பிரிந்து செல்லத் துணிந்த காலத்துச் சுரத்திடையே யுள்ள வழிகள், நீண்ட மூங்கில்கள் உலறுமாறு வேனில் நீடுதலால் மிக்க கதிர்களையுடைய ஞாயிறு கற்களும் பிளவெய்துமாறு காய்த லின், முன்பு வெய்யவாய்த் தோன்றின; அவளைப் பிரிந்து இச்சுரத்திடை எய்தும் இப்பொழுது அவை அவளை நினைக் குந்தோறும் குளிர்ச்சியைப் பயந்து தண்ணியவா யிராநின்றன என்றவாறு. வெயில் மிக்கவழி மூங்கில் பசுமை யிழந்து உலர்ந்து கெடு வது இயல்பாதலின், நெடுங்கழை முளிய வேனில் நீடி என்றார். நீடி என்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. ஞாயிற்றின் வெம்மை மிகுதி விளங்கக் கடுங்கதிர் ஞாயிறு என்றும், கடுங்கதிர் தெறுதலால் கற்பாறைகளும் வலியிழந்து பிளந்து விடுமாறு தோன்றக் கல் பகத்தெறுதலின் என்றும் கூறினார். வேனிற்கும் ஞாயிற்றுக்கும் ஒற்றுமையுண்மையின் வேனில் நீடி ஞாயிறு தெறுதலின் என இயைத்து, முடித்தலும் ஒன்று. முன்னே என்றது, மனையின்கண் இருந்து பிரிவு நினைந்த காலத்தைச் சுட்டி நின்றது. பிரிவுள்ளியவிடத்துத் தலைமகளின் காதலும் ஆற்றாமையும் எழுந்து ஒருபுடை வருத்த, பொருள்வயின் எழுந்த ஊக்கம் ஒருபால் ஈர்ப்ப, நடுநின்ற தலைமகன், வேனில் நீட்டமும், வெயிலவன் வெம்மையும், ஆற்றது அருமையும் உள்ளவாறு கண்டு உணர்ந்தானாகலின் வெய்ய வாயின முன்னே என்றும், பிரிந்து போந்தவன் சுரத்திடைக் காட்சிகள் அவளை நினைப் பிக்க நினைந்துழி, அந்நினைவு அவ்வெம்மை முதலாயினவற்றை மறைத்துத் தலைமகளுடைய அரும்பண்புகளைக் காட்டி இன்பத்தால் அவன் உள்ளத்தைக் குளிர்ப்பித்தமையின், ஒண்ணு தல் அரிவையை உள்ளுதொறும் என்றும் கூறினான். இவற்றுள், மெய் முதலிய கருவிகளின் உறுதல் முதலிய புலனுணர்ச்சிகள் உள்ளம் ஒன்றாவிடத்து நிகழா; சுரத்திடையே நிலவும் வேனில் வெம்மையும் ஞாயிற்றின் கடுமையும் தலைமகன் மெய்ப்பட்ட போதும், அவன் உள்ளம் தலைமகளின் காதலன்பில் தோய்ந்து இன்புற்றமையின் அவற்குப் புலனாகாதொழியவே தண்ணிய வாயின என்றான். இவற்றுள் முன்னது அகற்சியது அருமையும், பின்னது அன்பினது அகலமும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பகுதிகளாம். “கரணத்தி னமைந்து முடிந்த காலை 1” என்ற சூத்திரத்து “மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்” என்பதற்கு இதனைக் காட்டி, “இஃது இடைச்சுரத்துத் தலைவி குணம் நினைந்து இரங்கியது 2” என்பர் நச்சினார்க்கினியர்; இளம்பூரணர் இஃது இடைச்சுரத்துக் கூறியது என்று ஒழிவர். 323. வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக் கள்ளியங் கடத்திடைக் கேழல் பார்க்கும் வெஞ்சுரக் கவலை நீந்தி வந்த நெஞ்சேநீ நயந்தோள் பண்பே. இஃது, இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்த தலை மகன், “அவள் பண்பு வந்தன” என உவந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது. உரை : நெஞ்சே, நீ காதலிக்கும் தலைமகளுடைய பண்புகள், கூரிய பற்களையுடைய செந்நாய், வயவுநோய் கொண்டு வருந்தும் தன் பெண்ணாய்பொருட்டுக் கள்ளி நிறைந்த சுரத் திடையே பன்றியின் வரவினை நோக்கியிருக்கும் கொடிய காட்டின்கண் கவர்த்த வழிகள் பலவும் கடந்து வந்தனகாண் என்றவாறு. வள்ளெயிறு என்றவிடத்து வள், கூர்மை. செந்நாய், காட்டில் வாழும் நாய்வகை. இது காடுகளில் கூட்டம் கூட்டமாய் வாழும் இயல்பிற்று; நாட்டில் வாழும் நாய் போலாது தன் பெண்ணாயிடத்து மிக்க அன்புசெய்யும் பெற்றிமையுடையது. இதனை அம்சதேவர் விருகம், கோகம், ஈபாமிருகம் என மூவகைப்படுத்து இந்நாய்வகை மூன்று முதல் நான்கு திங்களில் கருமுதிரும் என்பர். வயவு, வயாநோய்; “வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்3” என்ப. கடம், கள்ளியும் முள்ளியும் பரற்கற்களும் நிறைந்த பாலைநிலம். கேழல், காட்டுப்பன்றி. செந்நாய் தன் பெண்ணாயின்பொருட்டுப் பன்றியை வேட்டுண் ணும் திறத்தைப் பிற சான்றோரும், “மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கண், செந்நா யேற்றை கேழல் தாக்க 4” என்பது காண்க. வந்த: அன் பெறாதுநின்ற அகரவீற்றுப் பலவறி முற்றுச் சொல். பண்பு, உருவும் நிறமும் குணமும் செயலும் பிறவுமாகிய மாண்புகள். செந்நாயேற்றை தன்பிணவின் பசிக்கு உணவு வேண்டிப் பன்றியின் வரவுநோக்கி இருத்தலைக் கண்டவிடத்துத் தலைமகன் நெஞ்சம் தலைமகளை நினைத்தலும், அவளுடைய குணம் செயல்கள் மனக்கண்ணில் தோன்றக் கண்டு மகிழ்வான், நெஞ் சமே, நீ நயந்தோள் பண்பு ஈண்டும் வந்தனகாண் என்றான். வெவ்விய சுரநெறியையும் கடந்து நம்பாற் கொண்ட பெருங் காதலால் இவண் வந்தன என்றது அன்பினது அகலம் சுட்டி நின்றது. “சேயர் என்னாது அன்புமிகக் கடைஇ, எய்த வந்தன வால் தாமே நெய்தல், கூம்புவிடு நிகர்மல ரன்ன, ஏந்தெழில் மழைக்கண் எங்காதலி குணனே 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. 324. எரிகவர்ந் துண்ட வென்றூழ் நீளிடைச் சிறிதுகண் படுப்பினுங் காண்குவென் மன்ற நள்ளென் கங்கு னளிமனை நெடுநகர் வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய் கூந்தன் மாஅ யோளே. இது, பிரிந்து வந்த தலைமகன் தலைமகளை நலம்பாராட்டக் கண்ட தோழி, “இவள் குணத்தினை மறந்து அமைந்தவாறு யாது?” என வினாவினாட்கு அவன் சொல்லியது. உரை: காட்டுத்தீ எழுந்து பகலே யன்றி இரவுப் போதினும் எரித்துச் செல்ல. பகற்போதில் வெயில் மிக்கு வருத்தும் நீண்ட சுரத்திடையே, யான் சிறிது கண்ணயர்வேனாயினும், அச் சிறுபொழுதின்கண், நள்ளென்னும் கங்குல் யாமத்து, பெரிய மனையகத்து நின்ற நெடிய பேரகத்தே நிறத்தால் வேங்கை மலர்போல வீறுபெற்ற சுணங்கினையும், தேன்சொரியுங் கூந்தலையும் மாமைநிறத்தினையு முடைய தலைமகளைத் தெளிவாகக் கண்டு அமைந்தேன்; ஆகலின், இவள் குணத் தினை யான் மறக்குமா றில்லை என்றவாறு. காட்டின்கண் நிற்கும் மூங்கில்கள் காற்றால் தம்மில் இழையப் பிறக்கும் தீ, அயலிடம் பரந்து எதிர்ப்பட்ட பொருள்களை எரித்துக்கொண்டு செல்லுதலின், எரிகவர்ந் துண்ட என்றார். இனி, வெயில் வெம்மையால் கரிந்து கிடக்கும் தழைகளையும் புற்களையும் விலங்கினம் மேயாமையின் கானவர் தீ யிட்டுக் கொளுத்தி விடுதலும் உண்டு; அவை வெந்து சாம்பராய்க் கழியின், கோடைமழையால் புதுப்புல்லும் புதுத்தளிரும் தோன்றி ஆனிரைகட்கு மேயல் ஆகும் என்பது கருத்து. இவ்வாறு தோன்றிய தீ, இரவும் பகலும் அவியாது எரிந்து கொண்டே செல்லுமாதலால் இரவிற் காட்டுத் தீயின் வெம்மையும் பகற் போதில் ஞாயிற்றின் வெம்மையும் சுரத்தின்கண் நிலவுதலின், மக்கட்கு நல்லுறக்கம் எய்தாமையின், சிறிது கண்படுதலையே விதந்து கூறினார். மகளிர் சுணங்கிற்கு வேங்கைமலர் உவமை யாதலை, “வேங்கை, ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள, ஆகத் தரும்பிய மாசறு சுணங்கினள் 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. நள்ளென் கங்குல், நள்ளிரவு. தேன் என்றது தேம் என நின்றது 2. காட்டுத்தீயால் வெந்தொழிந்ததன் மேலும் வெயில் மிக்குத் தெறும் நீளிடை எனினுமாம். வெப்ப மிகுதியால் தலைமக்கள் நெடிதுறங்கா ராகலின், அது தோன்றச் சிறிது கண்படுப்பினும் என்றான். அல்லதூஉம், வினைமேற் சென்றார்க்கு அது முற்றுங் காறும் நெடிய வுறக்கம் வாராதாகலின், இவ்வாறு கூறினான் எனினு மாம். உறங்கும் பொழுது அவளைக் கனவின்கட் கண்டும் கூடியும் மகிழ்ந்தேன் என்பான், காண்குவென் மன்ற என்றான். இறந்தகாலத்தாற் கூறற்பாலதனை எதிர்காலத்தாற் கூறியது தெளிவுபற்றி. வேங்கை வென்ற சுணங்கின், தேம்பாய் கூந்தல் மாஅயோளே என்றது அவள் நலம் பாராட்டியது. “இன்பத்தை வெறுத்தல் 3” என்னும் சூத்திரத்து, “நலத்தக நாடின் கலக்கமும் அதுவே” என்புழிக் கலக்கத்தை வேறு பெயர்த்து வைத்த இலேசினால் தலைமகற்கும் இம் மெய்ப் பாடுகள் எய்த வைத்தமையின், சிறிது கண்படுப்பினும் காண்கு வென் மன்ற என்றது கனவொடு மயங்கல். “நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல, இன்றுயில் எடுப்புதி கனவே, எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே 1” எனச் சான்றோர் கூறுவது காண்க. “கரணத்தி னமைந்து 2” என்ற சூத்திரத்து, “எண்ணருஞ் சிறப்பின் கிழவோன் மேன” என்புழிச் 'சிறப்பின்’ என்றதனால் இதனை அமைப்பர் நச்சினார்க்கினியர். 325. வேனி லரையத் திலையொலி வெரீஇப் போகில்புக வுண்ணாது பிறிதுபுலம் படரும் வெம்பலை யருஞ்சுரம் நலியா தெம்வெங் காதலி பண்புதுணைப் பெற்றே. இது, பிரிந்து வந்த தலைமகன் “சுரத்தின் வெம்மை எங்ஙனம் ஆற்றினீர்?” என்ற தோழிக்குச் சொல்லியது. உரை : வேனிற்காலத்து எழுந்த சூறைக்காற்றால் அலைப்புண்ட அரசமரத்தின் இலைகள் அசைதலால் உண்டாகிய ஓசையை அஞ்சிப் பறவைகள் தாம் இரை தேடி உண்டலைச் செய்யாது வேற்றுநிலங்களை உள்ளிச் செல்லும் வெப்பம் பொருந்திய அரிய சுரம், எம்மால் விரும்பப்பட்ட காதலியின் குணங்களைத் துணையாகப் பெற்று யாம் சென்றே மாகலின், எம்மை வருத்தாதாயிற்று என்றவாறு. அரையம், இக்காலத்தே இஃது அரசமரம் என மருவி வழங்கும்; முன்னாளில் அரை யென்றே நின்று பின்பு புணரியல் நிலையிடைப் பெற்ற அம்முச் சாரியையை இறுதியாகக் கொண்டு வழங்குவதாயிற்று; “பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும், நினையுங் காலை அம்மொடு சிவணும் 3” என்பது காண்க. இங்கே கூறிய ஆவிரை, ஆவிரமென நின்று ஆவாரம் என மருவிவிட்டது. இந்த அரையம் பனிக்காலத்து இலை முதிர்ந்து வேனில் தொடக்கத்தில் இலையுதிர்ந்து முதுவேனிற் காலத்துப் புதுத்தளிர் ஈன்று பொலிவுறும். இப்பாட்டு இளவேனிற் காலம் என்பது போதர, வேனில் அரையத்து இலையொலி என்றார். அரையத்தின் முதிர்ந்த இலை காற்றில் அலைப்புண்டு செய்யும் ஒலி, படை வரவு போலவும் விலங்கின் கூட்டம் வருவது போலவும் இருத்தலால் புள்ளினம் அஞ்சுவன வாயின. போகில், புள்ளினம். உயர்ந்த மரக்கிளையில் கூடமைத்து வாழ்தல் பற்றிப் புள்ளினைப் போகில் என்பது காரணப் பெயர். புகா, உணவு; ஈண்டுப்புகவு என நின்று அரையத்தின் கனிமேலதாயிற்று. வெங்காதலி என்ற விடத்து வெம்மை வேண்டற்பொருட்டு. வெம்பல், வெப்பம். ஐ, சாரியை. “வெயில் வீற்றிருந்த வெம்பலை யஞ்சுரம் 1” என்றார் பிறரும். உள்ளம் துணையாகப் பிரிந்து செல்லும் தலைமகன், தலை மகளின் உருவும் நிறனும் நலனுமாகிய பண்புகளை நினைந்து மனக்கண்ணிற் கண்டு மகிழ்ந்து சென்றான் என்பது தோன்ற, எம் வெங்காதலி பண்பு துணைபெற்று என்றும், அதனால் உளதாகிய இன்பத்தால் உளங் குளிர்ந்து சென்றமை யால் புறத்தே கிடந்த அருஞ்சுரம் எம் நெஞ்சினை வருத்தும் வெம்மையாகிய மதுகை இழந்தது என்பான் அருஞ்சுரம் நலியாது என்றும் கூறினான். வெம்பலை யென்றது சுரத்தின் அருமையைச் சிறப்பித்த தாயினும், பிரிந்து செல்லும் தலைமகன் உள்ளத்திற் புகுந்து வருத்தமாட்டாதாயிற்று என்பது முடித்தற்கு. வெம்பலை அருஞ்சுரம் என்ற இஃது அன்புதொக நிற்றல். 326. அழலவிர் நனந்தலை நிழலிடம் பெறாது மடமா னம்பிணை மறியொடு திரங்க நீர்மருங் கறுத்த நிரம்பா வியவின் இன்னா மன்ற சுரமே இனிய மன்றயா னொழிந்தோள் பண்பே. இஃது, இடைச்சுரத்து வெம்மை ஆற்றானாகிய தலைமகன் தலைமகள் குணம் நினைந்து நொந்து சொல்லியது. உரை : வெப்பம் மிக்க சுரத்தின்கண், நிழலுள்ள இடம் பெற லாகாமையினால், மடமை பொருந்திய மானின் அழகிய பிணை தன் மறியோடு கூடி வருந்த, மழைநீரால் பக்கம் அலைக்கப்பட்டு இறப்பவும் சிறிதாய வழியினையுடைய சுரம் தெளிவாகத் துன்பம் தருவனவே; ஆயினும் யான் பிரிந்து நீங்கியவள் பண்புகள் மாத்திரம் இன்பந்தருவனவாம் என்ற வாறு. சுரத்தின் வெம்மைமிகுதி தோன்ற, அழலவிர் நனந்தலை என்றார். “அழல் திகழ் நனந்தலை 1” எனப் பிறரும் கூறுவர். நனந்தலை, விரிந்த இடம்; ஈண்டுச் சுரத்தின் நடுவிடம். பசுமை யுள்ள முல்லைநிலத்துட் புகாது மடமையால் தன் மறியுடன் வெவ்விய சுரத்தில் இயங்குவது பற்றி, மடமான் அம்பிணை மறியொடு திரங்க என்றார். திரங்குதல், வெம்மையால் வாடுதல். மழைநீரால் அலைத்துச் சுருக்கப்பட்ட வழி என்றற்கு நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவு என்றார். ஒருவர் கால்வைத்து நடத்தற்குரிய அளவுதானும் அகலமில்லாத வழி நிரம்பாஇயவு எனப்பட்டது. “அரித்தெழுந்து தோன்றி வழிநீர் அறுத்தசுரம் 2” எனப் பிறரும் கூறுதல் காண்க. மடமான்பிணை மறியுடன் தனித்து நிழலிடம் பெறாது வருந்துவது, காணும் தலைமகனைத் தன் பிரிவாற்றாது தனிமை யுற்று வருந்தும் தலைமகளை நினைப்பித்து வருத்த, நீரால் அறுக்கப்பட்டுச் சிறிதாய வழி அவன் இனிது செல்லாவாறு இடையூறு செய்வது கண்டு வருந்துகின்றமையின், இன்னா மன்ற சுரமே என்றும், அந்நிலையில் தலைமகளின் பண்பு தோன்றி அவன் உள்ளத்துக்கு உவகையும் ஊக்கமும் நல்கி இன்பம் செய்தலின், இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பே என்றும் கூறினான். “திறன்மாண்டு திருந்துக மாதோ நும் செலவு 3” எனத் தலைமகள் உரைத்த சொல்லை நினைந்து ஊக்கம் கொண்டான் என அறிக. 327. பொறிவரித் தடக்கை வேத லஞ்சிச் சிறுகண் யானை நிலந்தொடல் செல்லா வெயின்முளி சோலைய வேயுயர் சுரனே அன்ன வாரிடை யானும் தண்மை செய்தவித் தகையோள் பண்பே. இது, பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தலைமகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது. உரை : பொறிகளையும் வரிகளையுமுடைய பெரிய கை வேதற் கஞ்சிச் சிறிய கண்களையுடைய யானைகள் நிலத்தைத் தொட வியலாத வெயிலால் உலர்ந்த சோலைகளை யுடையன மூங்கில் உயரமாக வளர்ந்த சுரங்கள். இப்பெற்றியவாய செல்லுதற்கரிய நெறியிடத்தும் இவ் வழகுடையாளின் பண்புகள் வெப்பம் தோன்றாவாறு தட்பம் செய்தன என்றவாறு. நீண்ட பெரிய கையாயினும் நிலத்தின் வெம்மைக்கு ஆற் றாது என்பார், பொறிவரித் தடக்கை என்றும், சிறு கண்ணை யுடையதாயினும், நிலத்திற் படாதவாறு ஓம்புதல் தோன்றச் சிறுகண் யானை என்றும் சிறப்பித்தார். ஒரு பால் யானை நிலம் தொடல் செல்லாத வெம்மை நிலமும், ஒருபால் வெயிலால் உலர்ந்த சோலையும் உடைய சுரநெறிகள் என்றுமாம். ஆரிடை, செல்லுதற்கரிய இடம். ஆன், இடப்பொருட்டு; “ஆன்வந் தியையும் வினைநிலை யானும் 1” என்றாற்போல. தொடல் செல்லா என்பது ஒரு சொல்லாய்ப் பெயரெச்சமாய் வெயிலொடு முடிந்தது. உம்மை: சுரத்தின் செலவருமை உணர நின்றமையின் சிறப்பு. தலைமகளின் அழகிய உருக் கண்ணில் தோன்றுதலின், 'இ’ எனச் சுட்டியும், தன்னாற் காதலிக்கப்பட்டார்க்கு வருத்தம் தோன்றியவிடத்து ஆர்வலர் தோன்றி ஆவன புரிதல் தகுதியின் பாற்படுதலின் இவள் என ஒழியாது இத்தகையோள் என்றும் கூறினான். 328. நுண்மழை தளித்தென நறுமலர் தாஅய்த் தண்ணிய வாயினும் வெய்ய மன்ற மடவர லின்றுணை யொழியக் கடமுதிர் சோலைய காடிறந் தேற்கே. இது, “மழை வீழ்தலாற் சுரம் தண்ணென்றது; இனி வருத்த மின்றிப் போகலாம்” என்ற உழையரை நோக்கித் தலைமகன் சொல்லியது. உரை : மடப்பம் பொருந்திய இனிய துணைவியைப் பிரிந்து சுரத்தையும் அதனைச் சூழ்ந்த மரச்செறிவுகளையுமுடைய காட்டினைக் கடந்து போந்த எனக்கு, நுண்ணிய துளிமழை பெய்தமையால் நறிய மலர்கள் உதிர்ந்து பரந்து தண்ணிய வாய்த் தோன்றினும், அவை வெய்யவாகவே இராநின்றன என்றவாறு. தளி, மழைத்துளி. தளித்தல் ஈண்டுப் பெய்தல் என நின்றது. மடவரல், மடப்பம்; அழகுமாம். கடம், பாலை நிலம். சோலைய காடு என்றவிடத்துச் சோலைய என்றது பெயரெச்சக் குறிப்பு. மழை தளித்தென நறுமலர் தாஅய்த் தண்ணிய என்றது, உழையர் கூற்றினைக் கொண்டு கூறியது. தலைமகன் உள்ளம், “ஆண்மை வாங்கக் காமம் தட்பக், கவைபடு நெஞ்சம் கட்கண் அசைய 1” “களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு, போல 2” வருந்துவது கண்ட உழையர், கடத்தின் வெம்மையால் ஆற்றானா யினன் போலும் எனக் கருதி நுண்மழை தளித்தென நறுமலர் தாஅய்த் தண்ணிய என்றாராக, இம் மழைப் பெயலைக் காணின், தலைமகள், தான் பிரியுங்கால் குறித்த பருவமெனக் கருதித் தன்னை எதிர்நோக்கி என்னாகுவளோ என நினைந்து, வருத்தம் மீதூர்ந்தமையின், தலைமகன் வெய்ய மன்ற என்றும், அவளுடைய இளமையும் இனிய துணைமையும் நோக்கத் தான் பிரிந்து போதரல் கூடாது என்பான் போல மடவரல் இன்துணை ஒழியக் கடமுதிர் சோலைய காடு இறந்தேற்கே என்றும் கூறினான். 329. ஆள்வழக் கற்ற பாழ்படு நனந்தலை வெம்முனை யருஞ்சுர நீந்தி நம்மொடு மறுதரு வதுகொ றானே செறிதொடி கழிந்துகு நிலைய வாக ஒழிந்தோள் கொண்டவென் னுரங்கெழு நெஞ்சே. இஃது, இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைமகன் உழையர்க்குச் சொல்லியது. உரை : தோளிடைச் செறிந்துநின்ற வளைகள் நெகிழ்ந்து நீங்கும் நிலைமையினை எய்த, மனையில் தவிர்ந் துறையும் தலை மகளாற் கொள்ளப்பட்ட என் திண்மை பொருந்திய நெஞ்சம், மக்கள் வழங்குத லில்லாத பாழ்பட்ட இடத்தினை யுடைய வெவ்விய ஆறலைப்போர் புலமாகிய அரிய காட்டினைக் கடந்து நம்மொடு வாராது மீளுதலைக் கருதுங்கொல்லோ? இஃது என்? என்றவாறு. ஆள், மக்கள். “ஆள் வழக்கற்ற சுரத்திடைக் கதிர்தெற 1” என்றார் பிறரும். வெம்முனை, ஆறலைப்போர் உறையும் வெவ்விய புலம்; “வெம்முனை யருஞ்சுரம் முன்னி யோர்க்கே 2” என்று பிறரும் வழங்குப. மறுதருவது, மீளலுறுவது. “சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி, மறுதரல் உள்ளத்தர் எனினும் 3” என்பதனால் அறிக. இது மறுத்தரல் என்றும் வருவதுண்டு. “பின்னிய தொடர்நீவிப் பிறர்நாட்டுப் படர்ந்துநீ, மன்னிய புணர்ச்சியான் மறுத்தல் ஒல்லுவதோ 4” என்பது காண்க. மறுதரு வதுகொல் என்றமையின் அதற்கேற்ப வாராது என்பது வரு விக்கப்பட்டது. தான் பிரிந்தவிடத்துத் தலைமகள் தன் பிரிவுள்ளி உடம்பு மெலிந்து வருந்துகின்றாள் என நினைந்து ஆற்றானாகலின், செறிதொடி கழிந்துகு நிலைய வாக என்றும், ஆள் வழங்குத லற்றுப் பாழ்பட்ட இடத்தினையுடைய வெம்முனை அருஞ் சுரம் நீந்தி மேற்சேறற்கு வேண்டிய திண்மையுடையது என் பான், என் உரங்கெழு நெஞ்சு என்றும், செய்வினை யொன்று தொடங்கின இடையில் மடங்கலாகாமையின், மடங்கி மீளலுறு தலை மறுதருவது என்றும், தலைமகளின் காதல் பற்றிய நினைவு மிகுந்து வருத்துதலால் வினைமேற் சென்ற நெஞ்சு செலவு தவிர்ந்து மீளத் துணியுமோ என்று தலைமகன் ஐயுறுவது தோன்ற மறுதருவது கொல் என்றும் உழையர்க்குக் கூறினான். “உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம், செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும் 5” என வருவது காண்க. “கரணத்தின் அமைந்து முடிந்த காலை 1” என்ற சூத்திரத்து, “மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும்” என்புழி இதனைக் காட்டி, இது மீளலுறும் நெஞ்சினை நொந்து தலைவன் உழை யர்க்குக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். 330. வெந்துக ளாகிய வெயிற்கட நீந்தி வந்தன மாயினு மொழிகினிச் செலவே அழுத கண்ண ளாய்நலஞ் சிதையக் கதிர்தெறு வெஞ்சுர நினைக்கும் அவிர்கோ லாய்தொடி யுள்ளத்துப் படரே. இது, பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தன் நெஞ் சிற்குச் சொல்லியது. உரை : விளக்கமும் திரட்சியும் பொருந்திய ஆராய்ந்து கொள்ளப் படும் தொடியினையுடையாளது மனத்துளதாகிய நினைவு, கண்களின் நீர்சோரவும், ஒப்பனை செய்யப்பட்ட மேனி நலம் கெட்டொழியவும், வெயில் தெறும் கொடிய சுரத்தின் கண் நமது செலவின் மேற்றாய் அவளை வருத்துமாகலின், வெவ்விய துகள் மிக்க வெயில் காயும் காட்டினைக் கடந்து வந்துளேம் எனினும், நெஞ்சே, மேலே செல்லுதலை இனி ஒழிவாயாக என்றவாறு. வெந்துகள், வெயில் வெம்மையால் கல்லும் மண்ணும் கட்டுடைந்து ஆகிய நுண்ணியபொடி; ஆதலால், அப்பொடி வெந்துகள் எனப்பட்டது. வெயிற்றுகள் 2 என்றதும் இதுவே. மிக நுண்ணிதாயினும் வெம்மை செய்தலில் நீர்க்காமையின் வெந்துகள் என்றார். கடம், பாலைநிலம். கடத்திடை நிலவும் காற்றும் நீரலை போல் அலையலையாய்ப் போந்து மோதும் இயல்பிற்றாதலின், அதனை எதிர்த்துச் செல்லும் செலவினை நீந்தி என உரைத்தார். கடலகமும் இவ்வாறு காற்று மோதும் சுரம் போறலின், கடற் செலவைக் குறிக்கும்போதும் சான்றோர், “திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி 3” என்பது காண்க. ஆய்நலம், ஆயத்தாரால் ஆய்ந்து செய்யப்பட்ட அழகு. நன்கு கடைதலால் ஒளியும், ஆயத்தார் நன்றென ஆராய்ந்து கொள்ளப் பட்டமையால் சிறப்புமுடைய தொடி, அவிர்கோல் ஆய் தொடி எனப்பட்டது; “இலங்குகோல் ஆய்தொடி நெகிழ 1” என்றார் பிறரும். படர், உள்ளுதல் 2. இனி, செலவு ஒழிக என முடிக்க. பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் நெஞ்சொடு கூறி இரங்குகின்றா னாகலின், வெயிற்கடம் நீந்தி வந்தனம் என்றான். உம்மை, கடத்தற் கருமை உணர்த்திற்று. கடத்தற்கரிய சுரத்தினை நீந்திப் போந்தவன் இனிச் செயற்பாலது மேற்கொண்ட செலவே யாயினும் ஒழிதல் நன்றென்பான் போல, ஒழிக இனிச் செலவே என்றான். இஃது அகற்சிய தருமை. தான் கண்ட சுரத்தின் வெம்மையைத் தலை மகள் உள்ளியவிடத்து ஆற்றாது வருத்தமுற்றுக் கலுழ்வாள் என்பான். அழுத கண்ணன் என்றான். பிரிவின்கண், தலைமகள் ஆற்றாது கண்ணீர் சொரிந்தது அவன் கருத்தில் நன்கு பதிந்து கிடத்தலின் இவ்வாறு கூறினான் என்றுமாம். அக்காலை, அவளை ஆற்றுவிப்பான் கூறியவற்றுள், “நோய்முந்து உறுத்து நொதுமல் மொழியல்நின்ஆய்நலம் மறப்பனோ மற்றே 3” என்றது நினைவின்கண் தோன்றுதலின், ஆய்நலம் சிதைய என்றும், நலம் சிதைய நினைக்குமாயின், யான் மறந்தவாறா மாகலின், செலவினைத் தவிர்வதே இனிச் செயற்பாலது என்றலின், நினைக்கும் என்றும் கூறினான். இவ்வாறு செலவின்கண் இடைச்சுரத்து வெம்மை கண்டு இதனைத் தலைமகள் நினைக்கின் ஆய்நலம் சிதைந்து வருந்துவள் என்பது பற்றிக் கதிர்தெறு வெஞ்சுரம் நினைக்குமாயின், இனிச் செலவு ஒழிக என அழுங்கினா னாயினும், அழுங்கும் நெஞ்சினைத் தேற்றிக்கொண்டு சென்று வினைமுடித்தல்லது மீளான் என அறிக. “செலவிடை யழுங்கல் செல்லாமை யன்று” என ஆசிரியர் கூறுவது காண்க. கதிர்தெறு வெஞ்சுரம் என்றது, உற்றாரை வருத்துவதே யன்றிச் சேய்மைக் கண் இருந்து நினைத்தாரையும் நெஞ்சினைச் சுட்டு வருத்தும் என வெம்மை மிகுதி யுணர்த்தி நின்றது4. 34. தலைவி இரங்குபத்து உலகில் காணப்படும் உயிர்ப்பொருள் அனைத்தும் உண வுண்டு உடல்வளர்த்தலும் இனம் பெருக்குதலும் என்ற இரண்டையுமே தொழிலாகக் கொண்டுள்ளன. உடல்வளர்ச்சி, இனம் பெருக்கும் வளம் குன்றியதும் தளர்ச்சியுற்று வீழ்ந் தொழிகிறது. எனவே, உலகில் நிலவும் உயிர்வாழ்வு முற்றும் பொதுவகையாக நோக்குமிடத்து இனம் பெருக்குதலைக் குறிக் கொண்டு நிற்பது உணரப்படும். உலகில் தோன்றும்போது, உயிர், உடம்போடு உடன்தோன்றினும், நீங்கும்போது தான் நின்ற உடம்பை விட்டுத் தனித்து நீங்கிவிடுகிறது. “குடம்பை தனித் தொழியப் புள்பறந் தற்றே, உடம்போடு உயிரிடை நட்பு 1” எனத் திருவள்ளுவரும் கூறுவர். இதனால் உடம்பொடு கூடி நிற்கும் போது உடல் வளர்ச்சிக்கும் இனம் பெருக்குதற்கும் துணை யாயிருந்து பின்னர் நீங்குவது உயிரின் பொதுத் தொழிலாதல் தெரியும். இனம் பெருக்குதலாவது, உயிரொன்று உடம்பொடு கூடி, வேறு உயிர்கள் உலகில் தோன்றுதற்கு இடமாகிய உடம்பை உதவுவது என்பது. மேலும் உண்ணுங்காலும் இனம் பெருக்குங்காலும் உயிர்கள் ஒருவகை அமைதிபெறுகின்றன. அந்த அமைதி இன்பம் என்று வழங்கும். இந்த இன்பம் அவ்விருவகைத் தொழிற்கும் கூலி யன்றாயினும், ஊதியமாக இருப்பது உணரத்தக்கது. இவ்வாற்றால், உலகில் உயிர்கள், உடலோம்பல் இனம் பெருக்கல் என்ற இரண்டாலும் இன்பம் பெறுவது பயன் என்பது விளங்கும். மக்களுயிர் ஒழிய ஏனை உயிர்வகை பலவும் இந்தக் குறிக் கோளிலேயே உலகில் வாழ்கின்றன. மக்களுயிர் மாத்திரமே இந்தக் குறிக்கோளுக்கு மேலாக, இவ்வுலகில் பெறப்படும் இன்பம், அறிவொடுகலந்து நிலைபேறு உடையதாக இருத்தல் வேண்டும் என்றும், அதற்குத் துணையாவன அறமும் பொருளும் என்றும் அறிந்து, அறிவால் அறநெறியிற் பொருள்செய்து பேரின்பம் எய்துவதே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண் டுள்ளது. அதற்கேற்பவே, மக்களுயிர்க்கு உண்மையறிவும் மொழிவன்மையும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. மக்களுயிர் தான் பெறக் கருதும். பேரின்பத்துக்கு அறமும் பொருளும் துணையாவதை அறிந்து அவற்றின்வழி ஒழுகுங்கால் முடிவிலேயன்றி இடையிலும் இன்பம் பெறுகிறது. இடையில் பெறப்படும் இன்பம் இவ்வுலகிலும், முடிவில் பெறப்படும் பேரின்பம் உடம்போடு கூடுதலற்ற வீட்டுலகிலும் உள்ளன. உடம்போடு கூடியிருக்குங்கால் எய்தும் இன்பம் உடம்பளவாய் உலக வாழ்வோடே நின்று போவது. ஆயினும், இது மக்கள் உயிரை முடிவிற் பெறலாகும் பேரின்பப் பேற்றுக்கு ஊக்குகிறது. ஏனை உயிர்கள் இந்த இன்பத்தோடே அமைந்து விடுகின்றன. இவற்றை நோக்கின், இவ்வுலகில் உடம்பொடு வாழ்தற்கண் நிகழும் இன்பநாட்டம், எல்லா உயிரிடத்தும் பொதுவாகக் காணப்படுவது உண்மையாகப் புலனாகிறது. இது பற்றியே ஆசிரியர், “எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது, தான் அமர்ந்து வரூஉம் மேவற் றாகும் 1” என்றது பொருத்தமாதல் தெளியப்படும். இனி, உடலுக்கு ஆக்கமாகும் உணவு வாயிலாக வரும் இன்பத்தினும், இன்பநாட்ட முடைய உயிர்கட்கு அவ்வுடலின் சிறந்த பணியாகிய வேறு உடம்பு படைக்கும் பணிவாயிலாக வரும் இன்பம் பெரிதாகும். ஆதலால் மக்களுயி ரொழிந்த ஏனை உயிர்கள் இந்த இன்பத்தோடே அமைந்தொழிகின்றன. மக்க ளுயிர் உடலோம்பும் பணியிலும் உடம்பு தரும் பணியில் இன்பம் பெரிதாதல் கண்டு, அந்த அளவில் அமையாது, அதன் இயல் பினை ஆராய்ந்து உடம்புதரு பணி வாயிலாக இன்பம் எய்து மிடத்து, உடம்புக்கு உணவுதரும் பணி நல்கும் இன்பம் மிகவும் சிறிதாய்ப் புறக்கணிக்கப்படுவதைக் கண்டது. உணவுக்கே வாழ்வெல்லாம் செலவிடும் உயிர், உடம்புதரு பணியில் ஈடுபாடு குன்றி, இனம் சுருங்கி முடிவில் வேரோடு மறைந்தொழிந்தமை தெரிந்தது. உணவுப் பணியை ஒழுங்கு படுத்தி உடம்புதரு பணியையும் நெறிப்படுத்திச் சென்றால் இவ்விரண்டிலும் எய்தும் இன்பத்தால் பேரின்பம் எய்துதல் கூடும் என்பது விளங்கவே, மக்களுயிர், அறமும் ஒழுக்கமும் கண்டு அந்நெறியில் உணவுப் பணியும் உடம்புதரு பணியும் மேற் கொண்டு ஒழுகிவருவ தாயிற்று. இவ்வுடம்புதருபணி உடம்பொடு கூடிய ஓர் உயிரால் தன்னந்தனியே பெரும்பாலும் நடப்பதில்லை. ஒருசில உயிர்களே 1 அது செய்கின்றன. ஏனைய யாவும் வேறோர் உடம்பொடு கூடியே அதனைச் செய்கின்றன. ஓர் உடம்பு வித்துறையும் இடமாகவும், ஓருடம்பு அவ்வித்து வளரும் விளைநிலமாகவும் உள்ளன. வித்துடை யுடம்பு ஆணுடம்பு என்றும், விளைநில மாகும் உடம்பு பெண்ணுடம்பு என்றும் வழங்கும். இவ்வுலகில் உயிர்க்கு இடமாகும் வகையில் உடம்பு, தன்னைப் போல் பிறிதோர் உயிர்க்கு இடமாகும் உடம்பு தருபணியிற் குறிக்கொண்டிருப்பதால், அதற்குரிய உடற் கூறுகள் நிறையுங்காறும், உயிரைத் தன் வரை நிறுத்தித் தன்னைப் பேணுவதிலேயே ஒன்றுவிக்கும். வித்தும் வித்து வளரும் கரு நிலமும் வளர்ச்சி நிரம்பியதும் ஆணுடம்பு பெண்ணையும் பெண்ணுடம்பு ஆணையும் அவாவத் தொடங்கும். நிறைவு என்பது கமம் என்னும் சொல்லாற் குறிக்கப்படும்; “கமஞ்சூல் 2” என்று சான்றோரும், “கமம் நிறைந்தியலும் 3” எனத் தொல்காப்பி யனாரும் கூறுவர். அவ்வியைபினால், உடம்புக்குரிய வித்து நிறைவு வழிச் சிறக்கும் அவாக் காமம் என வழங்கும். ஆணும் பெண்ணும் ஒன்றையொன்று வேட்டு உடம்புதரு பணியில் ஈடுபடும்போது அது காமக்கூட்டம் என்றும், அதற்கு முன்னணி யாகத் தோன்றும் உயிர்த்தொடர்பு காதல் என்றும் வழங்கும். உயிரொன்றிய காமக் கூட்டத்தைத் தமிழ்ச்சான்றோர் காதற் காமம் என்று குறித்தனர். “காதற் காமம் காமத்துச் சிறந்தது 4” என்பது காண்க. நிலைத்திணை உயிர்கட்கு இக்காமக்கூட்டத்தை வண்டி னமும் ஒருசில புள்ளினமும் காற்றும் விளைவிக்கின்றன. ஏனை இயங்குதிணை யுயிர்கள் வேட்கைவழி நின்று பெறுகின்றன. மக்களினமும் இவ்வகையில் ஒன்றே ஆயினும், காமக்கூட்டத் துக்குப்பின் ஏனை உயிர்கள் ஆண்பெண் பற்றின்றி நீங்கி விடு வதும், மக்களுயிர் பிரிவின்றி வாழ்க்கையியல் முடியுங்காறும் பிணிப்புண் டிருப்பதும் வேற்றுமையாகும். மக்களுயிர் ஒன்று தவிர ஏனையுயிர்கட்கு ஓரொரு காலத்தே உடம்புதரு வித்துக்கள் நிறைவுபெறும்; அக்காலத்தே தான் அவற்றிற்கு வேட்கை ஓங்கி நிற்கும். பிற காலங்களில் அவை ஆணும் பெண்ணும் உடன் உறையினும் வேட்கை வயப்படுவ தில்லை. மக்களுயிரின் வேட்கை ஏனையவற்றின் வேறுபட்டு இயலுகிறது 1. மக்கள் வாழ்க்கையின் குறிக்கோள் பேரின்பப் பேறாகலின், காமக்கூட்டத்துக்கு முன்னர் உண்டாகும் காதற்றொடர்பு, பின்னரும் கடைபோக நின்று உணவுப்பணியும் உடம்பு தரு பணியும் செய்து, அவ்வுடம்புகொண்டு பெறலாகும் பேரின்பத் துக்குத் துணையாகும். “காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே 2” என ஆசிரியர் உரைப்பது காண்க. இந்நிலையில், ஆணும் பெண்ணுமாய்க் கூடி உடம்பு தருபணியில் ஈடுபடும் உயிரினத்துள், பெண்ணுயிர் பிறிதோர் உடம்பைத் தனக்குள் தோற்றுவித்து வளர்த்து வருவதும் பின்பு அதனைக் கருவுயிர்த்துப் புறத்தே வளர்த்து வருவதுமாகிய பெரும்பணியை மேற்கொள்ளுகிறது; தம்பால் தோன்றிய உயிர் தன் உணவுக்குரிய பணியைத் தானே செய்யக்கூடிய வன்மை பெறும்வரை உணவுதந்து ஓம்புதலைக் கடனாகக் கொள்ளும். அதற்கிடையே அதன் உயிரையும் உடம்பையும் தன்னுயிரும் உடம்பும் போலக் கருதும் கருத்தும் காதலும் பெண்ணுயிர் மாட்டு அமைந்துள்ளன. தற்பேணற்குரிய வன்மை வந்தபின் ஒன்றினொன்று பற்றின்றி நீங்கி விடுவது அஃறிணையுயிர்களின் இயல்பு. அதுவரை அதனிடத்தமைந்திருந்த காதல் தாய்மை எனப்படும். படவே, பெண்ணுடம்பில் காதற்காமத்துக்கு அடிப் படை தாய்மைப் பண்பாதலும் விளங்கும். இனி, மக்களினத்துத் தாய்மைப்பண்பு, தான் ஈன்ற மக்களின் வாழ்நாள் முழுதும் நின்று நிலவும். அவர்களிடத்தில் உண்மை யறிவு ஓங்கிநிற்பதால், தாய்மையின் மாண்பு கண்டு உணவுக் குரிய புறப்பணியில் பெண்ணுயிரை விடுவதில்லை. ஆணுயிரே அப்பணியில் முன்னிற்கும். பெண்ணுயிர் உணவுப்பணியில் சிறிதும் உடம்புதருபணியில் பெரிதும் ஈடுபடும். இம் மக்களினத்தில் தலைமக்கள் என்பார், உயர்நிலை மக்கட்குரிய நன்மாண்புகள் அத்தனையும் திரண்டு உருவெடுத் தாற் போலும் ஆடவரும் பெண்டிரு மாவர், உடம்புதரு பணிக் குரிய காதற்காமத் தொடர்பும், சிறந்தது பயிற்றற் குரிய உயிர்த்தொடர்பும் ஒருங்குடையர். ஈண்டைத் தலைமகள் தலைமைப்பண்பும் கட்டிளமையும் கொண்டு உடம்புதரு பணிக்கு ஏதுவாகிய தாய்மையுணர்வு தலைசிறந்து அப்பணியை ஆற்றுதற்கண் பெருவிதுப்புற்றிருக்கின்றாள். அதற்கு இன்றியமை யாத காதலனாகிய தலைமகன் பிரிந்திருக்கின்றான். தாய்மைப் பணிக்கு முதலாகிய அவளது உடம்பு, உயிரைத் தன்னடிப் படுத்தித் தன் பணியை முற்றுவித்துக் கொள்வது குறித்து இடை யீடின்றி நரப்புக்கால்தோறும் வேட்கைத் தீயைப் பரப்பி வெதுப்பு கின்றது; தனக்கு ஆக்கமும் அரணுமாகும் ஊணுறக்கங் களையும் அவள்உடம்பு வெறுத்து ஒதுக்குகின்றது. ஆயினும், தலை மகளாதலின், அவள் அறிவு அறைபோகின்றாளில்லை.; “செறிவும் நிறையும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் 1” சிறக்க வுடையள்; தலைமகற்குரிய அறவாழ்வு பொருள்வாழ்வு இன்ப வாழ்வு ஆகிய எல்லாவற்றிற்கும் துணைவியாகலின், உடலின் இயற்கை விதுப்பினை அடக்கி அமைகின்றாள்; மற்று, உடம்பு வழிப்பட்ட அவளது உள்ளம் பற்றுக்கோடில்லாத பூங்கொடி போல் துவண்டு அடிக்கடி வந்து தாக்கும் காமக்காற்றால் அலைந்தவண்ணம் இருக்கிறது. அந்நிலையில் அவள் இரங்கிக் கூறுவன பொருளாக வந்த பாட்டுக்கள் பத்தின் தொகுதி யாக லான், இது தலைவி இரங்குபத்து என்று பெயர் பெறுவதாயிற்று. 331. அம்ம வாழி தோழி யவிழிணர்க் கருங்கான் மராஅத்து வைகுசினை வான்பூ அருஞ்சுரஞ் செல்லுந ரொழிந்தோ ருள்ள இனிய கமழும் வெற்பின் இன்னா தென்பவவர் சென்ற வாறே. இது, தலைமகன் பிரிந்துழி, “செல்லும் வழியிடத்து மலை யில் உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைந்து முடியச் செல்லார், மீள்வரோ?” எனக் கேட்ட தோழிக்கு, “அவர் முடியச் சென்றார்” என்பது அறிந்து இரங்கித் தலைவி கூறியது. பழைய உரை : சென்ற சுரம் பிரிந்தார் தத்தம் துணைவியரை நினையும் படி வெறிகமழும் மலரை யுடைத்தாகலும், செலற்கருமையால் இன்னாமை யுடைமையும் தலைவி இரங்குதற்குக் காரணமாயின என்றவாறு. உரை : தோழி, கேட்பாயாக: முறுக்குடைந்த பூங்கொத்துக்களை யுடைய கரிய அடியினையுடைய வெண்கடம்புமரத்தின்கண் உள்ள சினைகளிற் பூத்த வெண்மலர்கள் செல்லுதற்கரிய சுரத்தைக் கடந்து செல்லுவோர் கண்டு தாம் பிரிந்து போந்த துணைவியரை நினைந்து அழுங்குமாறு இனிய மணம் நாறும் மலையிடத்து, நம் தலைவர் சென்ற நெறி துன்பந்தரும் இயல்பின தென்று பலருங் கூறுவர்காண் என்றவாறு. மலர்ந்த பூக்களையுடைய கொத்து, அவிழ்இணர் எனப் பட்டது. “அரும்புமுதிர் அவிழிணர் 1” என்றது காண்க. வைகு சினை, தாழ்ந்த கிளை. வெண்கடம்பின் அடி கரிய நிறமுடைமை பற்றிக் கருங்கால் மராஅம் என்றார்; பிறரும், “கருங்கால் மராஅத்து வாஅன் மெல்லிணர் 2” என்றும், அதன் பூவின் வெண்மையை, “வாலிய, சுதை விரிந்தன்ன பல்பூ மராஅம் 3” என்றும் கூறுவர். இதன் பூவினிடத்து எழும் மணம் மகளிர் கூந்தலிடத்து எழும் மணம் போறலின், அருஞ்சுரம் செல்லுநர் உள்ள இனிய கமழும் என்றார். “அவிழிணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் 4” என்று சான்றோர் கூறுதல் காண்க. தலைமகன் பிரிவின்கண் தலைவி எய்திய வேறுபாடு கண் டோர், மராமரத்தின் இயல்பு கூறி, “ஆங்குச் செல்லும் தலைமகன் அதுகண்டு நின்னை நினைந்து மீளுவன்” என்றும், அதற்கு அப்பாலுள்ள நெறியும் இன்னா தாகலின், அவன் மேலே செல்லான் என்றும் கூறினாராக, மராத்து வான்பூ இனிய மணம் கமழ்ந்து நம் காதலரை நம்மை மறவாவாறு நினைப்பிப்பது நன்று என்பாள், மராஅத்து வைகுசினை வான்பூ அருஞ்சுரம் செல்வோர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் வெற்பு என்றும், ஆயினும் அப்பால் செல்லற்குரிய வழி இன்னா தென்ற லின், மேற் கொண்டு செல்லாது நம் நினைவும் வழி யின்னாமை யும் காரணமாக வினைமுடியாது மீள்வராயின் வினையாண்மை இலர் என்பது பட்டு இளிவாம் என்று அஞ்சுகின்றேன் என்பாள், இன்னாது என்ப அவர் சென்ற ஆறே என்றும் கூறினாள். தலைமகன் வினைமேற் சென்றவிடத்து அவன் அதனை முடித்து மீளுதலையே தலைமகள் விரும்புவள் என அறிக. பிறாண்டும், “நோய்நாம் உழக்குவ மாயினும் தாம்தம், செய்வினை முடிக்க தோழி 1” எனத் தலைவி கூறுவது காண்க. ஆறு இன்னாமையும் தலைவி இரங்குதற் கேதுவாகலின், இன்னாது என்ப அவர் சென்ற ஆறே என்றார்; “அஞ்சுவரு மரபின் வெஞ்சுர மிறந்தோர், நோயிலர் பெயர்தல் அறியின், ஆழல மன்னோ தோழிஎன் கண்ணே 2” என்பதும் உண்டு. வெஞ்சினை வான்பூ என்பது பாடமாயின் விரும்பப் படும் சினைகளிடத்து மலர்ந்த வெள்ளிய பூ என்றுரைக்க. விருப்பம், மலர்மிகுதியால் செல்வார் மணநுகர்தற்கும் கோடற்கும் விரும்புதல். 332. அம்ம வாழி தோழி யென்னதூஉம் அறனில மன்ற தாமே விறன்மிசைக் குன்றுகெழு கானத்த பண்பின் மாக்கணம் கொடிதே காதலிப் பிரிதல் செல்ல லைய வென்னா தவ்வே. இது, பிரிந்த தலைமகன் சுரத்திடைக் கழியச் சென்றான் என்பது கேட்ட தலைமகள், அங்குள்ள மாக்களை நொந்து தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி : கேட்பாயாக, சிறந்த உச்சிகளையுடைய குன்றுகள் பொருந்திய கானகத்தின்கண்ணவாகிய நற்பண் பில்லாத மாக்களின் கூட்டம் எத்துணையும் அறமில்லாதன வேயாம்; “ஐய, காதலியைப் பிரிதல் கொடிதாகலின், இனிச் செல்லற்க” என்று கூறாதொழிந்தன வாகலான் என்றவாறு. விறல், ஈண்டு உயர்ச்சிமேல் நின்றது. மிசை, உச்சி. கானத்த, கானம் என்னும் பெயரடியாக வந்த பெயரெச்சக்குறிப்பு. கானத்த மாக்கணம், பண்பின் மாக்கணம் என இயையும். அன்பு பண்பும் அறம் பயனுமாதலின், அன்பில்லாமைபற்றி அறனிலவாகிய மாக்கணத்தை அன்பில் மாக்கணம் என்றார். மாக்கணம் அறனில மன்ற என்றது மேற்கோள்; செல்லல் ஐய என்னா தவ்வே என்றது ஏது. கொடிதே காதலிப் பிரிதல் செல்லல் என்றது மான்கணம் கூறல் வேண்டுமெனக் கருதி யுரைக்கும் கூற்று. எஞ்ஞான்றும் தம் துணையைப் பிரியாதுறையும் மாக் கணம், அப்பண்பு குறித்துப் பிரிந்து போதரும் தலைமகற்கும் பிரிதல் கொடி தென்னாமையின், பண்பின் மாக்கணம் என்றும், தம்மைக் கூடினோர் வருத்த மெய்தப் பிரிந்தாரைத் தெருட்டு மாறு கூறுதல் பண்புடையார்க்கு அறமாகலின், அறனில மன்ற என்றும் கூறினாள். 333. அம்ம வாழி தோழி யாவதும் வல்லா கொல்லோ தாமே யவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோ டியாஅந் துணைபுணர்ந் துறைதும் யாங்குப்பிரிந் துறைதி யென்னா தவ்வே. இது, பிரிந்த தலைமகன் “சுரத்திடைச் சென்றான்” என்பது கேட்ட தலைமகள், அங்குள்ள புட்களை நொந்து தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக: அவ்விடத்தவாகிய மலைகளை யுடைய நல்ல நாட்டின்கண் பெருந்தொகையாகவுள்ள பறவைகள், நம் தலைவரை நோக்கி, “ஐய, யாம் எம் துணையிற் பிரியாது கூடியுறைகின்றேம்காண். மேலும், யாம் பிரிதல் வல்லுவேமுமல்லேம்; அற்றாக, நீ எவ்வாறு பிரிதலைச் செய்து போந்தனைகொல்லோ?” என்று கூறி அவர் செல வினைத் தடுக்கா தொழிந்தன வாகலான், அவை சிறிதும் வன்மையுடைய வல்ல போலும் என்றவாறு. யாவதும், யாதும்; “கல்லத ரத்தம் கடக்க யாவதும், வல்லுந கொல்லோ 1” என்றாற் போல. இது “பகுதிப் பொருள் விகுதி” என்று அடியார்க்குநல்லார் கூறுவர். நல்லியல் பிழந்து பாலை யாகிய நாட்டின் வழியாகச் சென்றமையின், அதனைக் கல்லுடை நாடு என்றும், மாவும் புள்ளும் வாழ்தலின் நன்னாடு என்றும் சிறப்பித்தார். தோடு, தொகுதி; கூட்டமுமாம். “வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு 2” என்று பிறரும் கூறுதல் காண்க. ஆற்றாமை மிக்கவிடத்துச் “சொல்லா மரபி னவற்றோடு கெழீஇச், செய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும் 3” தலைமக்கள் கூற்று நிகழ்த்துவ துண்மையின், இக்கூற்று அமையுமென அறிக. பசுந்தழை போர்த்த மரமும் செடியு மின்றி வெறுங் கற்களே நிறைந்த தாயினும், புள்ளினம் துணையிற் பிரியாது இனிது உறையும் நாடாதல் பற்றி, கல்லுடை நன்னாட்டுப் புள்ளினம் என்றும், பிரிந்தவழி எய்தும் துன்பத்தின் கொடுமை யறிந்து, யாம் துணையிற் பிரிந்துறைதல் மாட்டேமாக, நீ பிரிந்துறைதல் மிக்க வன்மையின் பாற்படு மென்றற்கு, யாங்குப் பிரிந்துறைதி என்றும், பிரிதல் என்னும் இன்னாச்சொல்லை வாயாற் கூற மாட்டா வாயினும், தாம் துணை புணர்ந்துறைதலைத் தானும் கூறாமையின் யாவதும் வல்லா கொல்லோ என்றும் கூறினாள். கல்லுடை நன்னாட்டுப் புள்ளினத்துள், “புணர்ந்தீர் புணர் மினோஎன இணர்மிசைச், செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் 4” எனவும், “பூங்குயில் கவறுபெயர்த், தன்ன நில்லா வாழ்க்கையிட்டு, அகற லோம்புமின் அறிவுடையீர்எனக், கையறத் துறப்போர்க் கழறுவ 5” எனவும், மயில்கள், “ஆர்குரல் மணந்து தணந்தோரை, நீடன்மின் வாரும் என்பவர் சொற் போன்றனவே1” எனவும் கூறுமென்றலின், புள்ளினப் பெருந் தோடு இவ்வாறு கூவித் தடுக்க வல்லுந வாகவும், “புணர்ந்தோர், பிரிதல் சூழ்தலின் அரியது முண்டோ 2” என்று மருண்டு ஒன்றும் சொல்ல மாட்டாவாயின போலும் என்பாள், யாவதும் வல்லா கொல்லோ என்றார் என்றுமாம். “அவனறி வாற்ற வறியு மாகலின் 3” என்ற சூத்திரத்துப் “பல்வேறு நிலை” என்றதனால் இது புள்ளை நொந்து கூறியது என்பர் நச்சினார்க்கினியர். இனி, வல்லார் கொல்லோ என்றும், பிரிந்துறைதி யென்னு மாறே என்றும் பாடமாயின், புள்ளினப் பெருந்தோடு, “யாம் துணைபுணர்ந் துறைதும், யாங்குப் பிரிந்துறைதி” என்று கூறிச் செல்லுவாரைத் தடுக்கும் நெறியையுங் கடந்து சென்றா ராகலின், அவர் யாதொன்றனையும் செய்தல் வல்லுநர் போலும் என்றுரைக்க; அதுபோது, இது தலைமகன் பிரிந்துழித் தலைமகள் செல்லும் வழியிடத்துப் புள்ளினம் பிரிவருமை கூறித் தகைக்கு மாகலின் அவர் முடியச் செல்லாது மீள்வரோ என்ற தலை மகட்குத் தோழி, அவர் முடியச் சென்றாராகலின், யாதனையும் செய்ய வல்லுநரே யெனத் தலைமகன் இயற்பழித் துரைத்ததாகக் கொள்க. தன்னின் இறப்ப இழிந்த புள்ளினம், துணையிற் பிரிந் துறைய மாட்டா வாதலை உரைப்பக் கேட்டு வைத்தும், மன மிரங்காது தாம் கருதிய பிரிவே பொருளாகப் போயினமையின் அவர் அன்பிலார்க் குரிய செயல் யாவும் செய்வர் என்பாள், யாவதும் வல்லார் கொல்லோ என்று கூறினாள் என்றுமாம். 334. அம்ம வாழி தோழி சிறியிலை நெல்லி நீடிய கல்காய் கடத்திடைப் பேதை நெஞ்சம் பின்செலச் சென்றோர் கல்லினும் வலியர் மன்ற பல்லித ழுண்க ணழப்பிரிந் தோரே. இது, பிரிவு நீட ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பழைய உரை : பல்லிதழ் உண்கண் அழப் பிரிந்தோர் என்றது, தாம் குறித்த எல்லைக்கண் வாராது நீட்டித்தார் என்பதாம். உரை : தோழி, கேட்பாயாக: சிறிய இலைகளையுடைய நெல்லி மரங்கள் மிக்க, மலையுருகக் காயும் வெயில் தெறும் காட்டி டையே, அறியாமையினையுடைய என் நெஞ்சம் தன்பின் தொடர்ந்துவரப் பிரிந்து சென்றவர், பலவாகிய இதழ் களையுடைய மலர் போலும் மையுண்ட கண்கள் கலுழ்ந்து நீருகுப்பப் பிரிந்தா ராகலான், அவர் கல்லினும் வன்மை யுடையா ராவர் என்றவாறு. நெல்லிமரத்தின் உயர்ச்சியும் பெருமையும் நோக்க இலை மிகச் சிறிதாய் இருத்தலின் சிறியிலை நெல்லி என்றார்; ஏனைச் சான்றோர்களும், “சிறியிலை நெல்லித் தீங்கனி 1” என்றும், “சிறியிலை நெல்லித் தீஞ்சுவைத் திரள்காய் 2” என்றும் கூறுப. வெயில் வெம்மையாற் கல்லும் நெருப்புப் போற் சுடுவது பற்றிச் சுரத்தைக் கல்காய் கடம் என்றார்; “கல்காய் கானம் 3” என்று பிறரும் கூறுவர். பல்லிதழ், பல இதழ்களையுடைய பூ. சென் றோர் வலியர் மன்ற, அழப் பிரிந்தா ராகலான் என எடுத்தோத்தும் ஏதுவுமாய் இயைக்க. பேதை நெஞ்சம் என்றாள், நாணாமையும் தலைமகனது மனப்பான்மையை நாடாமையும் உடைமையின்; “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும், பேணாமை பேதை தொழில்4” என்ப வாகலின். ஒருவர்மாட்டு ஒருவர் ஒன்று வேண்டிப் பின்சென்றவழி, அவர்மாட்டு இரங்கி அதனை அருளாராயின், அவரைக் கன்னெஞ்ச ரென்னும் வழக்குப்பற்றிக், கல்லினும் வலியர் என்றும், நினைப்பெல்லாம் தலைவன் செலவின்மேல் நிற்றலின், பின்செலச் சென்றோர் என்றும் கூறினாள். இனி, கல்லுருகக் காயும் கடத்திடைச் சென்றும், அவர் நெஞ்சம் உருகாமை என்னோ வென ஒரு நயந் தோன்றுதல் காண்க. 335. அம்ம வாழி தோழி நம்வயின் நெய்த்தோ ரன்ன செவிய வெருவை கற்புடை மருங்கிற் கடுமுடை பார்க்கும் காடுநனி கடிய வென்ப நீடியிவண் வருநர் சென்ற வாறே. இது, தலைமகன் சென்ற சுரத்தினிடத்துக் கொடுமை பிறர் கூறக் கேட்ட தலைமகள் ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக: குருதி போலச் சிவந்த செவியினையுடைய கழுகுகள் கற்களின் மருங்கே கிடக்கும் மிக்க முடைநாற்றத்தையுடைய ஊன்துண்டங்களைப் பார்க்கும் காடுகள் மிக்க அச்சம் பொருந்தினவாம் என்று நம்மிடத்துக் கூறாநிற்ப ராகலின், விரைய வாராது நீட்டித்து வருதற்பாலராய் நம் காதலர் சென்ற வழிகள் அக்காடுகளி டத்தன வாதலால், யான் வருந்துவேனாயினேன் என்றவாறு. நெய்த்தோர், குருதி, எருவை, கழுகு. அதன் கழுத்து வெளுத்து இருகவுளிலும் கோழிக்கொண்டைபோலச் சிவந்த தசைகள் வளர்ந்து தொங்குதலின், அவற்றைச் செவியென்று குறித்துச் செஞ்செவி எருவை யென்பது வழக்கு. “பொறித்த போலும் வானிற எருத்தின், அணிந்த போலும் செஞ்செவி எருவை1” என்பது காண்க. அது பற்றியே நெய்த்தோ ரன்ன செவிய எருவை என்றார். புலி முதலிய விலங்குகள் பிறவுயிர் களைக் கொன்று தின்று கழித்த பிணங்கள் கற்களின் இடையே கிடந்து மிக்க முடைநாற்றத்தைப் பரப்புதலின், அவற்றைக் கடுமுடை என்றார். “புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை 2” என்பர். இவற்றைத் தேடி யுண்டு வாழ்வது எருவையின் செய்தி யாகலின், எருவை கடுமுடை பார்க்கும் என்றார். “படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி, எருவைச் சேவல்3” எனச் சான்றோர் உரைப்பர். கடி, அச்சம். உயிர்க்கொலை வேட்டுத் திரியும் விலங்குகளும் ஆறலை கள்வரும் வாழும் இடம் என்பது தோன்ற எருவை கடுமுடை பார்க்கும் காடு என்றும், அதனால் அக்காட்டுவழி செல் வோர்க்குத் தீங்கு பயப்பது என்று பிறர் சொல்லக் கேட்டு உள்ளத்தே அச்சமுற்றுத் தலைவி வருந்துமாறு புலப்படக் காடு நனிகடிய என்ப என்றும், தலைமகன் விரைந்து மீளுதல் வேண்டு மென விழைந்து கூறுதலால் நீடி இவண் வருநர் சென்ற ஆறு என்றும் கூறினாள். 336. அம்ம வாழி தோழி நம்வயின் பிரியலர் போலப் புணர்ந்தோர் மன்ற நின்றதில் பொருட்பிணி முற்றிய என்றூழ் நீடிய சுரனிறந் தோரே. இது, பிரிவதற்கு முன்பு தங்களிடம் அவன் ஒழுகிய திறம் நினைந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக: நிலையுதலில்லாத பொருள்வயிற் பிரிந்து செய்யும் வினையை முடித்தற்கு வெயில் கடுகிச் சுடும் காட்டினைக் கடந்து சென்ற நங்காதலர், பண்டு நம்மைக் கூடிய போழ்து பிரியார் போலக் கூடி மகிழ்வித்தனர்காண்; அவர் செயல் இருந்தவாறு என்? என்றவாறு. பிரியலர், என்றும் பிரியாத இயல்பினர். புணர்ந்தார் எனற்பாலது “ஆ ஓவாகும் 1” என்றதனால் புணர்ந்தோர் என நின்றது. நின்றது: நிலையுதல் என்னும் தொழில்மேல் நின்ற வினைப்பெயர். “நின்றதில் பொருட்பிணிச் சென்றிவண் தருமார், செல்ப என்ப 2” எனப் பிற சான்றோரும் கூறதல் காண்க. பொருள் வேட்கையாற் பிணிப்புண்டு செய்யும் நினைவும் சொல்லும் செயலும் பொருட்பிணி என வழங்கும். ஏனைச் சான்றோரும், “பல்லித ழுண்கண் கலிழ, நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசி னோரே 3” என்றும், “ஓதல் காவல் பகைதணி வினையே, வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென், றாங்க வாறே யவ்வயிற் பிரிவே 4” என்றும் கூறுவனவற்றா லறிக. “இனிப் பொருட்பிணி என்பது, பொருளிலனாய்ப் பிரிவதன்று; தன் முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொரு ளெல்லாம் கிடந்ததுமன்; அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை அன்றெனத் தனது தாளாற்றலாற் படைத்த பொருள் கொண்டு வழங்கி வாழ்தற்குப் பிரியுமென்பது; அல்லதூஉம், தேவர்காரியமும் பிதிரர்காரியமும் தனது தாளாற்றலாற் படைத்த பொருளாற் செய்வன, தனக்குப் பயன்படுவன; என்னை? தாயப் பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார் ஆதலான்; அவர்களையும் இன்புறுத்தற்குப் பிரியு மென்பது1” என்பர் களவியல் உரைகாரர். முற்றிய: செய்யிய வென்னும் வாய் பாடு. என்றூழ், வெயில்; வேனிலுமாம். “என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் 2” என்றார் பிறரும். முன்னர்க் கூடியவிடத்து “மெல்லியல் அரிவைநின் நல்லகம் புலம்ப, நிற்றுறந் தமைகுவ னாயின் எற்றுறந்து, இரவலர் வாரா வைகல், பலவாகுக யான் செலவுறு தகவே3” என்று கூறினா னாகலின், பிரியலர் போலப் புணர்ந்தோர் என்று கூறினாள். இது “நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும்4” என்பதனால் அமையும். பண்டு, நிலையுதல் இல்லாத இளமையாற் பிணிப்புண்டு பிரிவென்பது ஒன்று உண்டு என்ற நினைவே தோன்றாதவாறு கூடியவர், இன்று அதுவே இயல்பாகவுடைய பொருளாற் பிணிப்புண்டு அதனை முற்றுவிப்பது கருதிச் சென்றது எனக்கு வியப்புத்தருகிறது என்பாள், நின்றதில் பொருட்பிணி முற்றிய சுரன் இறந்தோர் என்றும், நீடுதல் இல்லாத பொருள் குறித்து வெயில் வெம்மை நீடிய சுரன் இறந்து போதல் நேரிதன்று எனத் தான் கருதியது முடித்தற்கு, என்றூழ் நீடிய சுரன் என்றும் கூறினாள். 337. அம்ம வாழி தோழி நம்வயின் மெய்யுற விரும்பிய கைகவர் முயக்கினும் இனிய மன்ற தாமே பனியிருங் குன்றஞ் சென்றோர்க்குப் பொருளே. இது, தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழித் தன் முயக்கினும், அவற்குப் பிற்காலத்துப் பொருள் சிறந்ததெனத் தலைவி இரங்கித் தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக; குளிர்ந்த பெரிய குன்றத்தைக் கடந்து பொருள்வயிற் பிரிந்த நம் காதலர்க்கு அப்பொருள்கள், நம்பால் மெய்யுற விரும்பிய கையாற் சேர முயங்கும் முயக்கத் தினும் இன்பம் மிகத் தருவனவாகும்; இன்றேல், அவர் பிரிவா ரல்ல ராகலான் என்றவாறு. கைகவர்முயக்கு, கைகட் கிடையே அகப்படுத்தி மார்புறத் தழுவிக் கொளல்; கவர்தல், விருப்பமிகுதி; “கவர்வு விருப்பாகும் 1” “மெய்புகு வன்ன கைகவர் முயக்கு2” என்று பிறரும் கூறுவர். பனி முகில் தவழும் குன்றம் பனியிருங் குன்றம் எனப்பட்டது. குன்றம் சென்றார்; குன்றத்தைக் கடந்து சென்றவர். சென்றோர்க்கு முயக்கினும் பொருள் இனிய மன்ற என இயையும். இன், உறழ்ச்சி. கைகவர் முயக்கம் பற்றிக் கூறும்போது “கழிபெருங் காமத்து, இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன்று இல்லெனத் 3” தலைமகன் கூறியது கேட்டுப் பயின்றுள்ளாள் ஆகலின், இப் பொழுது தலைவனது பிரிவால் அது வாயன்மை விளங்குதலின், இனிய மன்ற தாமே பனியிருங் குன்றம் சென்றோர்க்குப் பொருள் எனத் தலைவி கூறினாள். பிரிந்து உறைதற்கு இனி தன்மை தோன்றப் பனியிருங் குன்றம் எனச் சிறப்பித்தாள். “பனிமீக் கூரும் பைதற் பானாள், பல்படை நிவந்த வறுமையிற் சேக்கைப், பருகு வன்ன காதலொடு திருகி, மெய்புகு வன்ன கைகவர் முயக்கத்து, ஓருயிர் மாக்களும் புலம்புவர் மாதோ 4” என்று பிறாண்டும் தலைவி கூறுதல் காண்க. 338. அம்ம வாழி தோழி சாரல் இலையில மலர்ந்த வோங்குநிலை யிலவம் மலையுறு தீயிற் சுரமுதற் றோன்றும் பிரிவருங் காலையும் பிரிதல் அரிதுவல் லுநர்நங் காத லோரே. இது, தலைமகன் பிரிந்துழி, “இக்காலத்தே பிரிந்தார்” எனத் தலைமகள் இரங்கிச் சொல்லியது. பழைய உரை : இலையின்றி மலர்ந்த இலவம் மலையுறு தீயின் தோன்றும் என்றது, அன்பின்றிப் பிரிந்தான் எனத் தலைவனது பிரிவைத் தான் ஆற்றாளாயினமை உரைத்தவாறு. உரை : தோழி, கேட்பாயாக: நம் காதலர், மலைச் சாரற்கண் இலை யுதிர்ந்து மலர்ந்து உயர்ந்து தோன்றும் நிலையினையுடைய இலவமரம், அம்மலைக்கண் தோன்றும் தீயைப் போல் சுரத்தின் கண் தோன்றும் பிரிதற்கரிய காலத்தினும் அரிதிற் பிரிதலில் வல்லுந ராயினர்காண் என்றவாறு. இலவமரம் மலருங்காலத்து அதன் இலைகள் உதிர்ந்து வீழ்தல் இயல்பாகலின், இலையில மலர்ந்த இலவம் என்றார். “இலையில மலர்ந்த முகையில் இலவம் 1” என்றும், “அருவி யான்ற வுயர்சிமை மருங்கில், பெருவிழா விளக்கம் போலப் பலவுடன், இலையில மலர்ந்த விலவமொடு, நிலையுயர் பிறங்கல் 2” என்றும் வருதல் காண்க. முதல், ஏழனுருபின் பொருட்டு. மரமும் செடியும் புதுத்தளிர் ஈன்று நறுமலர் பூத்து இனிய காட்சி வழங்கிச் சிறக்கும் வேனிற் பொழுது காதலர்க்கு அக்காதல் பெருகி முறுகிக் கூடி யின்புறும் காலமாதலின், அதனைப் பிரிவருங்காலை என்றும், அக்காலத்தே பிரிதல் என்பது மிகவும் அரிய செயலாதல் தோன்ற, அரிது பிரிதல் என்றும், காதல் பெருகியவழிக் கல்வியும் அறிவும் வலி யிழந்து ஒழிதல் ஒருதலையாக, தலை மகன்பால் பெருகிய காதலை அடக்கித் தன் பிரிவுக்கு உடன் படுத்தும் வன்கண்மை மிகுந்துளது என்பாள், வல்லுநர் நம் காதலோர் என்றும் கூறினாள். இலை சிறிதுமின்றி உதிர்ந்த போழ்தும் இலவம் மலர்ந்து மலையிடை விளங்கும் தீப்போல் தோன்றும் என்றது, நம்பால் அன்பு சிறிது மின்றாயினும் தலைமகன் உள்ளம் பொருள் செய்யும் வேட்கை மிக்கு விளங்குகின்றது என இரங்கியவாறு. பழையவுரைகாரர்க்கும் இதுவே கருத்தாதல் காண்க. 339. அம்ம வாழி தோழி சிறியிலைக் குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணீஇய வாவ லுகக்கு மாலையும் இன்றுகொல் காதலர் சென்ற நாட்டே. இது, தலைமகன் குறித்த பருவ வரவின்கண் மாலைப் பொழுது கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பழைய உரை : குறுஞ்சினை வேம்பின் ஒண்பழத்தை உண்டற்கு வாவல் உகக்கும் என்றது, அன்பின்றிப் பிரிந்த அவரது கூட்டத்தை யாம் விரும்பாநின்றேம் என்றவாறு. உரை : தோழி, கேட்பாயாக: சிறிய இலைகளையும் குறுகிய சினைகளையு முடைய வேம்பின் இனிய பழத்தை உண்டற்கு வாவல்கள் உயரப் படரும் மாலைக்காலம் காதலை யுடைய நம் தலைவர் சென்ற நாட்டின்கண் இல்லை போலும்; உள தாயின், இது நாம் குறித்த பருவமெனக் கொண்டு வாரா தொழியா ராகலான் என்றவாறு. வாவல், வௌவால். உகத்தல், உயர்தல். “உகப்பே உயர்வே. 1” நாடு என்புழி ஏழனுருபு தொக்கது. “ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின், மெய்யுருபு தொகா இறுதி யான 2” என்பர். காதலர், நம்காதலை யுடையவர். “வேம்பி னொண்பழம் முணைஇ யிருப்பைத், தேம்பால் செற்ற தீம்பழன் நசைஇ, வைகுபனி யுழந்த வாவல் 3” என்று பிறரும் கூறுதலால், வாவல் வேம்பின் பழம் உண்டல் கொள்க. தான் குறித்த பருவமே யன்றி, அப்பருவத்திற் குரிய சிறுபொழுதாய மாலையுமென நின்றமை யின் உம்மை எச்சவும்மை. காதற்காமக்கூட்டம் தனிமையில் சிறக்கும் இயல்பிற் றாதலின், தனிமைக் குரிய மாலைப்போது வரின் வேட்கை எழுந்து வெதுப்புவது காமத்துக்கு இயற்கை; “காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலரும் இந்நோய்1” எனச் சான்றோரும் கூறுப. மாலைப்போதில் தான் எய்தி வருந்தும் வருத்தம் பிரிந்துறையும் தலைமகற்கும் உளதாயின் நீட்டியாது மீள்வன் என்ற கருத்தால் மாலையும் இன்றுகொல் சென்ற நாட்டே என்றும், தலைமகன்பால் உளதாகிய காதல் தன் உள்ளத்தில் கிடந்து வருத்துவது போல அவன் உள்ளத்துக் கிடக்கும் காதல் மாலைப்போதில் தோன்றி அவனை வருத்து மெனவும் அதனால் அவன் விரைந்து வருவன் எனவும் கருதிக் காதலர் என்றும் கூறினாள், “புன்கண் மாலையும் புலம்பும், இன்று கொல் தோழியவர் சென்ற நாட்டே 2” என்று பிறாண்டும் கூறுதல் காண்க. வேம்பின் நறும்பழம் உண்டற்கு வாவல் உகக்கும் மாலை என்றதனால், மாலைப்போதில் தலைமகன் கூட்டத்தைத் தலைவி நினைத்தற்கு ஏதுக் கூறியவாறாயிற்று. பழைய வுரை காரர், காதலர் என்றது எதிர்மறைக் குறிப்பு மொழியாகக் கொண்டு அன்பின்றிப் பிரிந்தோர்பால் இன்பம் பெறக் கருதித் தலைவி வருந்துதற்கு உள்ளுறை கொண்டார். “எமிய மாக ஈங்குத் துறந்தோர், தமியராக இனிய கொல்லோ........ தலைவரம் பறியாது வருந்துமென் நெஞ்சே 3” என்று பிறரும் கூறுதல் காண்க. இது பாலைத் திணைக்கண் மாலை வந்த திணை மயக்கம். 340. அம்ம வாழி தோழி காதலர் உள்ளார் கொன்னா மருளற் றனங்கொல் விட்டுச் சென்றனர் நம்மே தட்டைத் தீயி னூரல ரெழவே. இது, தலைமகன் பிரிந்துழிக் கடிதின் வருவரென ஆற்றியிருந்த தலைவி, அவன் நீட்டித்துழி ஆற்றாது தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி, கேட்பாயாக: காதலர் நம்மை ஆற்றியிருத்தற் குரியன கூறிப் பிரிந்து சென்றாராக, ஊர்க்கண் மூங்கிற்காட்டிற் பிறந்த தீப்போல, அலர் எழுந்தமையின் நாம் ஆற்றே மாதலை நினையார்கொல்லோ? அன்றி, அவர் நினைத்தருளுதற் குரிய தகுதியினை நாம் இழந்தேமோ? கூறுக என்றவாறு. தட்டை, மூங்கில். தட்டையென்னும் கிளிகடி கருவியும் மூங்கிலாற் செய்யப்படுவது பற்றியே அப்பெயர் பெறுவதாயிற்று என அறிக. “அமையறுத் தியற்றிய வெவ்வாய்த் தட்டை 1” எனவும், “வெதிர்புனை தட்டையேன் 2” எனவும் சான்றோர் உரைப்பது காண்க. ஆற்றி யிருத்தற் குரியன, செய்பொருட் சிறப்புக் கூறுதலும் இன்ன பருவத்து வருவல் எனத் தெளிப்பனவும் பிறவுமாம். “அலரிற் றோன்றும் காமத்தின் சிறப்பே 3” என்றும், “களவும் கற்பும் அலர்வரை வின்றே 4” என்றும் கூறுப வாகலின், ஊரல ரெழவே என்பது அமைந்தது. அலரெழுந்தவழித் தான் ஆற்றாது வருந்துதலை அறியின், தலைமகன் தன்னை விட்டுச் செல்லுதல் இல்லையா மாகலின், உள்ளார் கொல்லோ என்றும், ஒருகால் அவர் நம்மையும் உடன்கொண்டு சேறற்குக் கருதினாராயினும், அவரால் அவ்வாறு அருளப்படுதற் குரிய தகுதி நம்பால் இல்லைபோலும் என வருந்துவாள், அருளற்றனம்கொல் என்றும், விட்டுச் சென்றனர் நம்மே என்றும் கூறினாள். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை. காதலர் நம்மை உள்ளாதொழியா ரெனவும், நாமும் அவரது அருள் நிரம்பப் பெற்றுள்ளே மெனவும் கருதி அவர் கடிதின் வருவர் என ஆற்றியிருப்பே மாகவும், ஊரவர் எழுப்பும் அலரா லன்றோ யாம் பெரிதும் ஆற்றே மாயினேம் என்பாள், தட்டைத் தீயின் ஊர் அலரெழவே என்றாள். இது புறஞ்சொல் மாணாக் கிளவி. 35. இளவேனிற் பத்து இஃது இளவேனிற் பருவவரவினையே பொருளாகக் கொண்ட பாட்டுக்களின் தொகுதி யாகலின், இப்பெயர்த் தாயிற்று. இளவேனில், பின்பனிக்குப் பின்னர்த்தாய சித்திரையும் வைகாசியும் கூடிய காலம். தலைமக்களது காதல்வாழ்வில் தலைமகன் பொருள் வினை குறித்துத் தலைவியினின்றும் பிரிந்து செல்லும் கடமையு முடையனாகலின், பிரியுங்கால் இன்ன காலத்தில் மீள்வன் எனத் தான் மீண்டுவரும் காலத்தைக் குறிப்பது இயல்பு. யாவர் எத் தொழிலைச் செய்யினும் அத்தொழிற்குக் காலமும் இடமும் இன்றியமையாத தொழிற்கூறுகளாகும். வினைக்குரிய இடத்தை யும் அதனை முடித்தற்கு வேண்டும் காலத்தையும் முதற்கண் எண்ணுவது வினையாளரின் தலையாய செயல். இவற்றை நன்கு எண்ணித் துணிந்த பின்னரே வினைசெய்ய முற்படுவர் தலை மக்கள். அப்பொழுதே தலைமகனும் தான் மேற்கொண்ட வினை பற்றிய பிரிவுக்குறிப்பைத் தலைவிக்குப் புலப்படுத்துவன். வினை நிகழ்ச்சிக்குரிய இடமும் காலமும், வினை இனிது முடிதற்கே யன்றித் அதனைத் தலைமகன் முடித்தற்கும் தலை மகள் ஆற்றியிருத்தற்கும் துணையும் பற்றுக்கோடுமாகும். தலைமகன் பிரியக் கருதுமிடத்து, அவனது அழிவில் கூட்டத்தால் இன்புற்றிருந்த தலைமகட்கு அவனது பிரிவு மிக்க துன்பத்தைச் செய்யும். அதனை ஆற்றியிருத்தல் வேண்டின் வினைமுற்றுதற் குரிய கூறுகளில் தலைமகள் பயின்றறிந்த தொன்று காணப்படுமாயின் அது நோக்கி அவள் ஆற்றியிருத்தல் இயலும். வினைசெயல் வகையில் சிறப்பாக நிற்பன காலமும் இடமுமே. இடத்தினும் காலம் தலைமகள் பயின்றறிந்த தொன்று; ஆகலின், தலைமகன் தன் பிரிவின்கண் அதனையே வற்புறுத்துவன். மேலும், காதற்காம வாழ்க்கையில் நிகழும் இன்பம் காலத்தின் மேலதாகலின், தலைமகள் தலைமகனது பிரிவுக்கு வேண்டும் காலத்தையே நோக்குவள். அதனாலும், பிரியக் கருதுவோன் தன் பிரிவுக்கு வேண்டும் காலவளவை வினைமுற்றி மீளுங் காலத்தை எடுத்துரைக்கு முகத்தால் உணர்த்துகின்றான். பெரும்பொழுது சிறுபொழுதென இருவகையின் இயலும் காலத்துள், பொருள்வினைகட்குப் பெரும்பொழுது சிறந்தமை யால் அதுவே அவனால் வற்புறுத்தப்படுகிறது. பெரும்பொழுது பருவம் எனவும் வழங்கும். கார், கூதிர், முன்பனி, பின்பனி, இள வேனில், முதுவேனில் எனப் பெரும்பொழுது அறுவகைப்படும். பாலைத்திணைக்கு இருவகை வேனிலும் பின்பனியும் உரிய வாகும். ஆயினும் ஈண்டு இளவேனிலே விதந்து கூறப்படுகிறது. ஈண்டுத் தலைமகன் இளவேனிற் பருவத்து மீள்வதாக வற்புறுத்திப் பிரிந்துள்ளான். தலைவி அப்பருவ வரவை நோக்கி வாழ்ந்து வருகின்றாள். வேனிற் பருவ வரவும் வினைமுற்றி மீளும் தலைவன் வரவும் உடனிகழ வேண்டுமெனத் தலைவியது வேட்கையுள்ளம் விழைகின்றது. கருதியவாறு முடியாது மேற் கொண்ட வினை அப்பருவத்தின் இடையே முடிகிறது. பருவ வரவுடன் தலைமகன் மீட்சி உடனிகழாமையால் தலைமகள் வருந்துகின்றாள். அவள் வருந்துவது பொருளாக வரும் பாட்டுக்கள் பத்து இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தலைவன் தான் குறித்த பருவவரவில் வரத் தாழ்க்கினும், அது கழியுமுன் வந்து கூடுவன் என அறிக. 341. அவரோ வாரார் தான்வந் தன்றே குயிற்பெடை யின்குர லகவ அயிர்க்கேழ் நுண்ணற னுடங்கும் பொழுதே. இது, தலைமகன் பிரிந்துழிக் குறித்த பருவம் வரக் கண்ட தலைமகள் சொல்லியது. உரை : குயிலின் பெட்டை தன் இனிய குரலெடுத்துப் பாட. அயிரின் நிறமுற்ற நுண்ணிய மணல் காற்றால் அசைவுற்றுக் குவியும் பெரும்பொழுதாகிய இளவேனில் வந்ததே யன்றி, அப்பருவத்தே வருவல் என்று குறித்துச் சென்ற நம் காதலர் வாராராயினார்; யான் எங்ஙனம் ஆற்றுவேன்? என்ற வாறு. அயிர், நுண்மணல். குயில் கூவுதலை அகவுதல் என்றல் மரபு. “நுகர்குயில் அகவுங் குரல்கேட் போர்க்கே 1” எனச் சான்றோர் கூறுதலான் அறிக. குயிலின் குரல் கூறவே, அதனோடு இயைபுடைய “தாதும் தளிரும் மேதகத் துவன்றிப், பல்பூஞ் சோலைப் பன்மலர் நாற்றமொடு, செவ்விதின் தென்றல்” வந்து அசைதலும் பெற்றாம். அதனால் அயிர்மணல் அசைவுற்று நுடங்குதலின், அயிர்க்கேழ் நுண்மணல் நுடங்கும் பொழுது என்றார். கேழ், நிறப்பண்பு குறிக்கும் உரிச்சொற் றிரிபு. இப்பருவத்தே வருவல் என்று குறித்த தலைமகன் வாராது, அவனாற் குறிக்கப்பெற்ற பருவம் வருதலாற் பயனின்று என்பாள், அவரோ வாரார் தான்வந்தன்றே என்றாள். “செவ்வி வேனில், வந்தன்று அம்ம தானே, வாரார் தோழிநம் காத லோரே1” என்றார் பிறரும். வேனில் வரவு கண்டதும் தலைமகன் வரவை உடன் நினைந்து நெஞ்சின்கண் அவன் திருவுருவைக் காண்டலின், அவர் என்று சுட்டிஒழிந்தாள். பருவவரவோடு அவன் வரவும் உடனிகழாமையாற் புலந்து அவரென்றாள் என்று மாம்; “காதல் அவர் இலராக நீ நோவது பேதைமை 2” என்றாற் போல. 342. அவரோ வாரார் தான்வந் தன்றே சுரும்புகளித் தாலு மிருஞ்சினைக் கருங்கா னுணவங் கமழும் பொழுதே. இதுவுமது. உரை : வண்டினம் தேன் நுகர்ந்து ஒலிசெய்யும் பெரிய கிளை களையும் கரிய அடியினையுமுடைய நுணாமரத்தின் பூக்கள் மலர்ந்து மணங்கமழும் வேனிற்பருவம் வந்ததே யன்றி, அப் பருவத்தே வருவல் என்று தெளித்துச் சென்ற அவர் வந்திலர் காண் என்றவாறு. களித்தல், கள்ளுண்டு மகிழ்தல்; “களித்தானைக் காரணங் காட்டுதல்3” என்புழிப் போல. ஆலும் பொழுது, கமழும் பொழுது எனத் தனித்தனிக் கூட்டி யுரைக்க. நுணவம், செய்யுண் முடிபெய்திச் சாரியை பெற்றது; “கருங்கான் மராஅ நுணாவோ டலர4” என்ப வாகலின், நுணா, பெயராதலறிக. “கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூ5” என்றார் பிறரும். வண்டு தேனுண்டு களித்தாடும் பொழுது வந்ததே யன்றி என் நலனுகர்ந்து மகிழ்கொள்ளும் தலைவர் வந்திலர் என்றும், சுரும்பு படிந்து தேனுண்ண நுணவம் மலர்ந்து மணம் கமழும் பொழுது வந்தெய்திற்றே யன்றி, யான் படிந்து இன்புறுமாறு மலர்ந்து விளங்கும் அவரது மார்பினைப் பெறும் பருவம் எய்திற் றன்று என இரங்கியவாறாம். தலைமகன் மார்பைக் கூடி மகிழ்தலைப் “பலர்படிந் துண் ணும்நின் பரத்தை மார்பு 1” என்றும், அவனது விரிந்த மார்பை “மலர்ந்த மார்பு 2” என்றும் உரைப்பது காண்க. “யாணர் வேனில் மன்இது, மாணலம் நுகரும் துணையுடை யோர்க்கே 3” என்று சான்றோர் குறிப்பது காண்க. 343. அவரோ வாரார் தான்வந் தன்றே திணிநிலைக் கோங்கம் பயந்த அணிமிகு கொழுமுகை யுடையும் பொழுதே. இதுவுமது. பழைய உரை : கோங்கின் அணிமிகு கொழுமுகை உடையும் பொழுது என்றது, தலைவன் குறித்த பருவவரவு கண்டு நெஞ்சு நெகிழ்ந் திருந்தவாறு உணர்த்தியது. உரை : திணிந்த நிலையினையுடைய கோங்கமரம் அரும்பிய அழகு மிக்க கொழுவிய முகை முறுக்கவிழ்ந்து மலரும் வேனிற் பருவம் வந்தெய்திற்றே யன்றி, அப்பருவம் குறித்துச் சென்ற காதலர் வந்திலர்காண் என்றவாறு. திணி, செறிவு. சூறைக் காற்றும் நீரின்மையும் வெயில் வெம்மையும் தாங்கி வளர்ந்து நிற்றலின், திணி நிலைக் கோங்கம் என்றும், தேனும் மணமும் செறிந்திருத்தலின், கொழுமுகை என்றும் கூறினார். “திணிநிலைக் கடம்பு 4” எனப் பிறரும் வழங்குப. கோங்கின் கொழுவிய முகை மலர்ந்து மணம் கமழ்ந்து கழியும் பொழுது வந்தது என்றதனால், என் மேனி கெழுமிய நலம் கெட்டுப் பசலை பாய்ந்து கழியும் நிலை எய்துவ தாயிற்று என உள்ளுறுத்துரைத்தாளாம். 344. அவரோ வாரார் தான்வந் தன்றே நறும்பூங் குரவம் பயந்த செய்யாப் பாவை கொய்யும் பொழுதே. இதுவுமது. உரை : நறிய பூக்களையுடைய குராமரம் பெற்ற பாவையைக் கொய்யும் பருவமாகிய இளவேனில் வந்ததேயன்றி, அப் பருவத்தின்கண் வருவல் எனக் குறித்துச் சென்ற அவர் வந் திலரே என்றவாறு. பாவை போறலின், குராவின்பூ, பாவை எனப்பட்டது; “ஈன்றாய் நீ பாவை இருங்குரவே 1” என்றார் பிறரும். பாவை செய்துவைத்தலும் உண்மையின் செய்யாப் பாவை வெளிப் படை. “செய்வுறு பாவை 2” என வருவது காண்க. குரவம், நுணவம் என்புழிப் போலச் செய்யுண்முடிபெய்தி அம்முச் சாரியை பெற்றதாம். தலைவிபால் தாய்மையுணர்வு தழைத்து வேட்கை யால் முறுகி நிற்றலின், குரவம் பூத்த என்னாது குரவம் பயந்த செய்யாப் பாவை என்றாள் என அறிக. 345. அவரோ வாரார் தான்வந் தன்றே புதுப்பூ வதிரல் தாஅய்க் கதுப்பற லணியுங் காமர் பொழுதே. இதுவுமது. உரை : புதிய பூக்களையுடைய புனலிக்கொடி. பரவிப் படர்ந்து மகளிர்கூந்தல் போலும் மணற்பரப்பினை அழகு செய்யும் அழகிய வேனிற்பருவம் வந்ததே யன்றி, அப்பருவத்தின்கண் வருவல் என்ற அவர் வந்திலர்காண் என்றவாறு. கதுப்பறல், முகமலர் என்புழிப் போல உவமத்தொகை. அறல், மணல். ஈண்டு அஃது அம்மணல் பரந்த இடத்தின் மேற்று. அதிரல், கருமணல்மேற் பரந்து தன் வெள்ளிய மலர்களால் கண்டார்க்குக் கூந்தன்மேற் சூடியது போல் அழகுறத் தோன்ற லின், அதிரல் தாஅய்க் கதுப்பறல் அணியும் என்றார். “புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ, நுண்கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப 1” எனப் பிறரும் கூறுவர். தாஅய் என்பதனைத் திரித்து, அதிரலின் புதிய பூக்களை மகளிர் தம் கூந்தலிற் சூடும் அழகிய பொழுதெனக் கூறுதலுமாம்; “மாக்கொடி யதிரற் பூவொடு பாதிரித், தூத்தகட் டெதிர்மலர் வேய்ந்த கூந்தல் 2” என்பது காண்க. 346. அவரோ வாரார் தான்வந் தன்றே அஞ்சினைப் பாதிரி யலர்ந்தெனச் செங்க ணிருங்குயி லறையும் பொழுதே. இதுவுமது, உரை : அழகிய கிளைகளையுடைய பாதிரிமரம் மலர்ந்ததாகச் சிவந்த கண்களையுடைய கருங்குயில் கூவும் இளவேனிற் பருவம் வந்து எய்திற்றே யன்றி, அப்பருவத்தில் வருவல் எனத் தெளித்துச் சென்ற காதலர் வந்தாரிலர், இதற்கு என் செய் வேன்? என்றவாறு. இளவேனிற் பருவத்துக் குயில், புணர்ந்தீர் பிரியன்மின் என்ப போலக் கூவிக் கேட்போர் மனத்து வேட்கை எழச் செய்தலின், இருங்குயில் அறையும் பொழுது என்றாள். “செங்கண் இருங் குயில் நயவரக் கூஉம், இன்னிள வேனிலும்3” என்றார் பிறரும். 347. அவரோ வாரார் தான்வந் தன்றே எழிற்றகை யிளமுலை பொலியப் பொரிப்பூம் புன்கின் முறிதிமிர் பொழுதே. இதுவுமது. உரை : அழகும் பெருமையும் பொருந்திய இளமையான முலை யகம் பொலிவெய்துமாறு பொரி போலும் பூக்களை யுடைய புன்கமரத்தின் தளிர்களை யணியும் வேனிற் பருவம் வந்ததே யன்றி, அப்பருவத்தின்கண் வருதும் எனத் தெளித்துச் சென்ற தலைவர் வந்திலர் என்றவாறு. முறி, இளந்தளிர். புன்கின் பூ பொரிபோல் இருத்தலால் பொரிப்பூம் புன்கு என்றார். பிறரும் “பொரியெனப் புன்கு அவிழ் அகன்துறை1” என்பர். புன்கின் இளந்தளிரை மார்பகம் குளிருமாறு அணிபவாகலின், முறிதிமிர் பொழுது என்றார்; “பொரிப்பூம் புன்கின் எழிற்றகை ஒண்முறி, சுணங்கணி வனமுலை அணங்குகொளத் திமிரி, நிழல்காண் டோறும் நெடிய வைகி 2” எனப் பிறரும் கூறுதல் காண்க. எழிற்றகை, எழிலும் தகையுமென விரியும். தகை, அழகு. 348. அவரோ வாரார் தான்வந் தன்றே வலஞ்சுரி மராஅம் வேய்ந்துநம் மணங்கமழ் தண்பொழின் மலரும் பொழுதே. இதுவுமது. உரை : வலமாகச் சுழித்த பூக்களையுடைய மராமரம் மலர்ந்து நறுமணம் கமழும் நம்முடைய தண்ணிய சோலையில் பூக்கள் மலரும் இளவேனிற் பருவம் வந்தெய்தியும், அப் பருவவரவில் வருவல் எனக் குறித்த அவர் வாராதொழிந்தனர்காண் என்ற வாறு. மராஅம், வெண்கடம்பு. இதன் பூ வலமாகச் சுழிந்திருத் தலின், வலஞ்சுரி எனப்பட்டது. “நெடுங்கான் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி, வலஞ்சுரி வாலிணர் கொய்தற்கு 3” என்றும், “வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புதுவீ 4” என்றும் வருதல் காண்க. வெண்கடம்பின் மலர்கள் சோலையிடை மலர்ந்த மரங்களிடை உயர்ந்து கிளைபரப்பிப் பூத்து விளங்குதலால் மராஅம் வேய்ந்து என்றார். சோலை மலர்ந்ததன் மேலும் மராஅம் மலர் வேய்ந்து பொலியும் பருவம் எனவே, பிரிவுற்ற மகளிர் தம் காதலர் வரவு கண்டு மகிழ்வதே யன்றி அவரது கூட்டம் பெற்று மகிழ்சிறக்கும் பருவம் என்றாளாம்; ஆகவே அப்பருவத்தே தலைமக்கள் பிழையாது போதரல் வேண்டும் என்பது தோன்ற அவரோ வாரார் என்றார். 349. அவரோ வாரார் தான்வந் தன்றே பொரிகான் மாஞ்சினை புதைய எரிகா லிளந்தளி ரீனும் பொழுதே. இதுவுமது. உரை : பொரிந்த அடியினையுடைய மாமரம் தன் கிளைகள் மறையுமாறு எரிபோலும் இளந்தளிர்களை விட்டுத் திகழும் இளவேனில் வந்ததேயன்றி, அப்பருவத்து வருதும் என உரைத்துச் சென்ற தலைவரோ வந்திலர் என்றவாறு. மாமரத்தின் அடியும் பொரிந்தாற் போல் இருப்பது பற்றியே பொரிகால் மா என்றார். இவ்வாறே இருப்பையும் இருத்தலின், “பொரிகால் பொகுட்டரை இருப்பை 1” என்று கூறுகின்றனர். மாவின் தளிர் தீக்கொழிந்து போல நிறமும் ஒளியும் கொண்டு தோன்றுதலின், எரிகால் இளந்தளிர் 2 என்றும், முதலொடு கருப்பொருட்கு முதலுஞ் சினையுமாகிய ஒற்றுமை யுண்மையின், ஈனும் பொழுது என்றும் கூறினார். மாமரம் இளந்தளிர் ஈன்று மாமைநிறம் கொண்டு விளங்கு தல் கண்டு, தான் அஃது இன்றிப் பசலை பாய்ந்து உள்ளமை கருதி இரங்கியவாறாம். மாவின் கரிய சினை தோன்றாவாறு இளந் தளிர் தோன்றி மறைக்கும் என்றதனால், தலைமகளின் மாமை தோன்றாதவாறு தலைமகன் பிரிவால் எழுந்த பசலை பாய்ந்து அழிக்கும் என்றவாறாம். 350. அவரோ வாரார் தான்வந் தன்றே வேம்பி னொண்பூ வுறைப்பத் தேம்படு கிளவியவர்த் தெளிக்கும் பொழுதே. இதுவுமது. உரை : வேம்பினுடைய ஒள்ளிய பூக்கள் உதிர்ந்து படிய, இனிமை யுற்ற சொற்களையுடைய தம் துணைவியரைத் தெளிவிக்கும் வேனிற்பருவம் வந்தெய்தியும், அப்பருவத்தே வருதும் எனத் தெளிவித்துச் சென்ற அவர் வந்திலர் என்றவாறு. வேம்பு வேனிற்காலத்து மலர்வது; “கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர், என்னை யின்றியும் கழிவது கொல்லோ 1” என்று சான்றோர் குறிப்பது காண்க. உறைத்தல், மழைத்துளி போல் உதிர்தல். இயல்பாதல் பற்றித் தெளிக்கும் என நிகழ்காலம் வந்தது.2 பிரிவு நயந்த தலைமகன், தன் பிரிவால் தலைமகள் மெலியாமைத் தேறியிருத்தற்பொருட்டு யாம் மீளலுறும் பருவம் இதுவெனத் தெளிய வற்புறுக்கும் பருவ மாகலின், தெளிக்கும் பொழுது என்றார். “அந்தளிர் மாஅத்த லங்கன் மீமிசைச், செங்க ணிருங் குயில் நயவரக் கூஉம், இன்னிள வேனிலும் வாரார், இன்னே வருதும் எனத்தெளித் தோரே 3” என்றும், “முற்றா வேனில் முன்னி வந்தோரே 4” என்றும் கூறுவர் பிறரும். தான் கருதிய பிரிவினைத் தலைமகட்கு உணர்த்துவான், தலைவன், அவளது நலம் பாராட்டியும் நறுநுதல் நீவியும் மகிழ்விப்ப மகிழ்ந்து அவளும் சொல்லாடுதலின் தேம்படு கிளவியவர் என்றும் கூறினார். “நறுநுதல் நீவி” நலம்பாராட்டல். “நன்னர் நறுநுதல் நயந்தனை நீவி, நின்னிற் பிரியலெ னஞ்சலோம் பென்னும், நன்னர் மொழியும் நீமொழிந் தனையே 5” என்பதனால் அறிக. தேம்படு கிளவியவர் தெளிக்கும் பொழுது என்பது பாடமாயின், தேம்படு கிளவிகளால் அவர் தெளிய வற்புறுத்தும் பொழுது என உரைக்க. 36. வரவுரைத்த பத்து இது, வினை பொருள் முதலியவற்றைக் கருதிப் பிரிந்து சென்ற தலைமகன் மீண்டு வந்தமை பொருளாகத் தொடுத்த பாட்டுக்களின் தொகுதியாகலின், இப்பெயர்த்தாயிற்று. பொருள்வினைக ளாகிய கடமை குறித்துப் பிரிந்த தலை மகன் மீண்டு வருவது உணர்ந்து தோழி கூறுவதும், வந்ததற்கு உரிய காரணம் கண்டு அத்தோழியே கூறுவதும், வந்த தலைமகன் தன் வரவுபற்றிக் கூறுவதும், இடைச்சுரத்து நிகழ்ந்தவற்றை அவன் கூறுவதும் - என வரவு பொருளாகப் பல சொற்கள் கூறுதற்கு இடமுண்டு. மேற்கொண்ட வினை முடிந்த பின்னன்றித் தலை மகன் மீளுதல் இல்லை யாதலின், வினை முடியு முன்பே வந்தான் என்பது போலும் கருத்துத் தோன்றத் தோழி கூறினாளாயினும், அது தலைவியை மகிழ்வித்தற்கு அவள் படைத்துக் கூறுவதாகக் கொள்ளற்பாற்றே யன்றி உண்மையாகக் கோடல் ஆகாது. “வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு 1” என்ப வாகலின், வினை குறைபட மீளுதல் தலைமகற்கு இயல்பன்றென அறிக. அவனே, “செய்வினை முடியாது எவ்வம் செய்தல், எய்யா மையோடு இளிவுதலைத் தரும்என 2” உறுதி கொள்வதும், முடித்தபின், தன் காதலியை நினைந்து, “உள்ளிய வினைமுடித் தன்ன இனியோள் 3” என மகிழ்வதும் காண்க. 351. அத்தப் பலவின் வெயிறின் சிறுகாய் அருஞ்சுரஞ் செல்வோ ரருந்தினர் கழியும் காடுபின் னொழிய வந்தனர் தீர்கினிப் பல்லித ழுண்கண் மடந்தைநின் நல்லெழி லல்கல் வாடிய நிலையே. இது, பிரிந்த தலைமகன் வரவுணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. உரை : நெறிக்கண் நின்ற பலாவின் வெயிலால் வெதுப்பப் பெற்ற சிறிய காயைச் செல்லுதற் கரிய சுரத்தின்கட் செல்வோர் அருந்தி நீங்கும் காடுகள் பிற்படுமாறு நம் காதலர் வந்தன ராகலின், பலவாகிய இதழ்களையுடைய மலர்போலும் நின்னுடைய நல்ல அழகு நாளும் வாடி வருந்தி நின்ற நிலை யினை இனி விடுவாயாக என்றவாறு. வெயில் தின்னுத லாவது, வெயிலின் வெப்பமிகுதியால் வெம்பிக் கழிதல். தின்றல், இலக்கணை. பலவின்காய் வெப்பத் தாற் சுளைப்பயன் குன்றி யழிதலின், சிறுகாய் என்றார். தீர்தல், விடுதல். “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும் 1” என்ப வாகலின், அல்கலும் என்ற உம்மை விகாரத்தால் தொக்கது. “நம் உயிர்வெங் காதலி திருமுகத் தலமரும் கண் நினைந்து அல்கலும் பெருமர வள்ளியிற் பிணிக்கும் 2” என்று பிறரும் கூறுதல் காண்க. தீர்க இனி என்றவிடத்து அகரம் விகாரத்தால் தொக்கது. மடந்தை, விளி. தலைமகன் பிரிவின்கண் அவன் செல்லுதற் குரிய சுரத்தின் கொடுமை கூறப்பட்ட தாயினும், தோழி அதனை இப்பொழுது பெயர்த்தும் கூறியது, தலைமகன் வரவு உணர்ந்து கூறும் கூற்றுக்குத் தோற்றுவா யாயிற்று. அத்தப் பலவு, உண்டற்குரிய அளவு பெருக்காத சிறுகாயாயினும் சுரஞ்செல்வோர்க்கு உண வாய் அவரது செல்வினை ஊக்கும் என்று தோழி கூறியது, பிரிந்தவிடத்து நினது நினைவு உடனுறைவின் பயன்தாரா தாயினும் வினைமுற்றி மீளுதற்கு ஊக்கினமையின், காதலர் காடு பின் ஒழிய வந்தனர் என்றாள். அச் சொல்லைக் கேட்டதும் தலைமகள் உளம் மகிழ்ந்து கண் மலர்ந்து குளிர நோக்கினமை யின், அதனை வியந்து பல்லிதழ் உண்கண் மடந்தை என்றும், தலைமகன் பிரிவின்கண் தன்னை ஒப்பனை செய்தலும் பூச் சூடலும் இன்றி அவனையே நினைந்து மேனி மெலிந்திருந் தமையின், இனி அந்நிலையின் நீங்கித் தலைமகன் கூட்டத்தால் பேரழகு திகழ இன்புறுவாய் என்பாள், நல்லெழில் அல்கல் வாடிய நிலை இனித் தீர்க என்றும் கூறினாள். கைசெய்து பிறப்பிக்கும் செயற்கையழகன்றி இயற்கையே நல்லெழில் சிறந்து விளங்குமாறு தோன்ற நல்லெழில் என்றாள். நல்லெழில் அல்குல் என்பது பாடமாயின், நல்லெழில் உயரவேண்டுமிடம் உயர்ந்தும் தாழவேண்டுமிடம் தாழ்ந்தும் இருத்தல் எனவும், அல்குல், அல்குலிடத்து அழகிய வரி எனவும் உரைக்க; “தேரக லல்குல் அவ்வரி வாட3” என்று பிறாண்டும் கூறுதல் காண்க. 352. விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுக லன்ன விழுப்பிணர்ப் பெருங்கை யானை யிருஞ்சின முறைக்கும் வெஞ்சுர மரிய வென்னார் வந்தனர் தோழிநங் காத லோரே. இதுவுமது. பழைய உரை : வெஞ்சுரம் அரிய என்னார் வந்தனர் என்றது, இன்று இடை யிலே தங்காது வந்தனர் என்றவாறு. உரை : விழுமிய அம்பு தொடுத்தலையுடைய வீரர் தம் வில் லிடைத் தொடுத்துவிட, எதிர்நின்று உயிர்கொடுத்து வீழ்ந்த வீரர்பொருட்டு நடப்பட்ட பெயரும் பீடுமெழுதிய நடுகல்லை யொக்கும் விழுமிய சருச்சரை பொருந்திய பெரிய கையினை யுடைய யானை, பெரிய சினம் மிக்குத் திரியும் வெவ்விய காடுகள் கடத்தற் கரியன எனக் கருதித் தாழ்க்காது விரைந்து வந்தனர் நம் காதலர் என்றவாறு. வில்லிடைத் தொடுக்கப்படுதலின், அம்புதொடை எனவும், குறித்தார்மேற் பிழையாது சென்று தாக்குதலால், விழுத்தொடை யெனவும் குறிக்கப்பட்டது. தொடை இப்பொருட்டாதல், “தொடைமடி களைந்த சிலையுடைய மறவர் 1” எனவும், “கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப 2” எனவும் வழங்குதல் காண்க. போரேற்று எதிர் நின்று பொருது வீழ்ந்த மறவர்க்குக் கல் நடுப வென்பது. “என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை முன்னின்று கல்நின் றவர் 3” என்பதனா லுணர்க. நடுகல்லிற் பெயரும் பீடும் எழுதுதல் முறையாகலின், எழுத்துடை நடுகல் எனப்பட்டது; “பேரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் 4” என்றும், “அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து, இனிநட் டனரே கல்லும் 5” என்றும் கூறுப. “விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர், எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும், அருஞ் சுரக் கவலை 1” என்றார் பிறரும். பிணர், சருச்சரை. “இரும்பிணர்த் துறுகல் 2” என்றது காண்க. உறைக்கும், உறு என்னும் மிகுதிப் பொருட்டாய உரிச்சொல் அடியாகப் பிறந்த பெயரெச்சவினை. “உப்புறைப்ப என்றாற் போலக் கொள்க 3” என்பர் நச்சினார்க்கினியர். நடுகல் அன்ன பெருங்கை என்றது, செயலற்று இருக்குமாறு தோன்ற நின்றது. சுரத்தின் வெம்மையும் கடத்தற் கருமையும் தோன்ற, வெம்மை மிகுதியால் செயலற்ற யானையும் சினம் சிறக்கும் என்றாள். வினைமுற்றினா ராயினும் சுரத்தின் வெம்மையும் அருமையும் நோக்கித் தாழ்த்து வருதற் குரியர் காதலர் என்பாள், வெஞ்சுரம் அரிய என்றும், அதனைப் பொருளாகக் கொள்ளாது விரைந்து வந்தனர் என்றற்கு அரிய என்னார் வந்தனர் என்றும், அதற்குக் காரணம் அவர் உள்ளத்தில் நம்பால் பெருகி நிற்கும் காதல் என்பாள், நம் காதலோர் என்றும் கூறினாள். 353. எரிக்கொடிக் கவைஇய செவ்வரை போலச் சுடர்ப்பூண் விளங்கு மேந்தொழி லகலம் நீயினிது முயங்க வந்தனர் மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. இதுவுமது. உரை : நெருப்புக்கொடி சூழ்ந்த சிவந்த மலையைப் போல ஒளிவிடும் பூணாரம் கிடந்து திகழும் உயர்ந்த அழகிய தன் மார்பினை நீ இனிது முயங்கும்வண்ணம் மிகப் பெரிய சோலைகளை யுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் காதலர் மீண்டு வந்தனர்காண் என்றவாறு. எரிக்கொடி, மலையில் கொடிபோல் தொடர்புற்று நின்றெரியும் தீயொழுங்கு. சோதிக்கொடி என்னும் ஒரு வகைக் கொடி என்றும் கூறுப. கவைஇய: கவவு என்னும் உரிச்சொல் லடியாக வந்த வினைத்திரிசொல். எரிக்கொடி சுடர்ப்பூணுக்கும் செவ்வரை அகலத்துக்கும் உவமை. எரிக்கொடி கவைஇய செவ்வரையை இரவுப்போதில் காண்பார் இவ்வுவமையின் அழகை இன்புறுவர். மலை இறந்தோர், அகலம் நீ முயங்க வந்தனர் என இயையும். காதலன் மார்பை முயங்குதலில் ஆரா வேட்கை யுடைய ளாய், “ஆர்கலி வெற்பன் மார்புநயந் துறையும், யானே. யன்றியும் உளர்கொல் 1” என வருந்தின ளாதலின், நீ இனிது முயங்க வந்தனர் என்றாள்; “யாம் முயங்கு தொறும் முயங்குதொறும் முயங்க முகந்துகொண்டு, அடக்குவ மன்னோ தோழி..... சாரல் நாடன் சாயன் மார்பே 2” எனவும், “வேட்டோர்க்கு அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பு 3” எனவும் மகளிர் தெரிவிப்பது காண்க. இனிது முயங்க வந்தனர் என்றது, இனிப் பிரிவில்லையாமாறு வினைமுற்றி மீண்டனர் என்றவாறு. 354. ஈர்ம்பிணவு புணர்ந்த செந்நா யேற்றை மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும் அரிய சுரன் வந்தனரே தெரியிழை யரிவைநின் பண்புதர வந்தே. இதுவுமது. உரை : நம் காதலர் குளிர்ந்த, பெண்ணாயைக் கூடிய செந்நாயின் ஆண், கன்றையுடைய பெண்மானைக் கொள்ளுதலின்றி நீங்கும் அரிய காட்டினைக் கடந்து, ஆராய்ந்தணிந்த இழை களை யுடைய அரிவையாகிய நின் குணங்கள் நினைவிடைத் தோன்றுதலால் விரைந்து போந்தனர் என்றவாறு. ஈரம், அன்பு. நிறைந்த அன்புடைய பிணவு என்பார், ஈர்ம்பிணவு என்றார். காதற்காமத் தொடர்புடைய ஆணுக்குப் பெண் வெம்மைக்காலத்தில் தண்மையும், தட்பக்காலத்து வெம்மையும் தந்து இன்புறுத்துவது பற்றிப் பிணவை ஈர்ம்பிணவு என்றார் என்றுமாம். “வேனி லானே தண்ணியள் பனியே, ....... அலங்கு வெயிற்பொதிந்த தாமரை, உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே 1” என்று சான்றோர் உரைப்பது காண்க. “ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற் கெல்லாம், ஏற்றைக் கிளவி உரித்தென மொழிப 2” ஆகலின், செந்நாயேற்றை என்றார். மறி, மான் கன்று. மறியுடைமை மான்பிணையைக் கொள்ளாமைக்கு ஏது என வுணர்க. நின் பண்பு தர வந்தனர் என இயையும். காதற் பிணவினைக் கூடினமையால் செந்நாயேற்றை மான்பிணையைக் கொள்ளாது கழிதலைக் கண்டு ஆற்றாராய்ப் போந்தனர் என் பாள், நின் பண்புதர விரைந்தே என்றும், கொள்ளற் பாற்றாய மான்பிணையைக் கொள்ளாது கழியும் அருள் மேவுதற்குக் காரணமா யிருந்தமையின், ஈர்ம்பிணவு புணர்ந்த செந்நாய் என்றும் கூறினாள். அவர் தாமே வருவாராயினும், நின் பண்புகள் தோன்றி அவர் உள்ளத்தை விரைந்து ஈர்த்தமையின், சுரத்தின் அருமை நோக்காது விரைந்த வந்தார் என்றற்கு, நின் பண்புதர விரைந்து என்றும், அரிய சுரன் என்றும் விதந்து கூறினாள். பிறாண்டும் தலைமகனே “ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை, உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே 3” என்பது காண்க. 355. திருந்திழை யரிவை நின்னல முள்ளி அருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு வுறுகெனச் சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச் சிறுகண் யானை திரிதரும் நெறிவிலங் கதர கானத் தானே. இது, நினைந்த வெல்லையளவும் பொருண் முற்றி நில்லாது, பெற்ற பொருள்கொண்டு தலைவியை நினைந்து மீண்ட தலை மகன் அவட்குச் சொல்லியது. பழைய உரை : பொருட்பிணி பெருந்திரு உறுக என்றது, மேல் உளதாகும் பொருட்பிணி திருவுறுவதாக எனக் குறிப்பின் வெகுண்டு உரைத் தது. சொல்லாது பெயர்தந்தேனே என்றது, உடன்சென்றோர் விலக்குவ ரெனச் சொல்லாது மீண்டேன் என்றவாறு. உரை : திருந்திய இழைகளை யணிந்த அரிவையே, பலவாகிய பொறிகளையும் சிறிய கண்களையு முடைய யானை திரியும் நெறியின்கட் குறுக்கிடும் சிறுவழிகளை யுடைய கானத்தின் கண், யான், நின்னலத்தை நினைந்து அரிய செயல் வகை யாகிய பொருட்பேறு பெருந்திரு வுறுக என விடுத்து, உடன் போந்தோர் ஒருவரிடத்தும் கூறாது பெயர்ந்து மீண்டேன் என்றவாறு. திருந்திழை, அழகிய இழைகள். அரிவை: விளி. காதல் வாழ்வில் ஒருபால் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சி யும் ஈர்ப்ப, ஒருபால் காதலியினுடைய அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாது பிணித்துத் தடுக்க, பின்னைய இரண்டின்பாற் செல்லாது பொருளே கருதிச் செல்லும் செயல் அருமை பற்றி அருஞ்செயற்பொருள் என்றும், பொருட்பேறு பயக்கும் அவா, இன்பம் விழையாது பொருளீட்டமே விழையு மாறு உள்ளத்தைப் பிணித்தலின், பொருளைப் பொருட்பிணி என்றும் கூறினார். பெருந்திருவுறுக என்றது வேண்டா என விலக்குதற் பொருளில் வந்த குறிப்புமொழி 1. சுரத்தின்கண் நெடிது செல்லும் நெறியில் சிறுசிறு வழிகள் குறுக்கிட்டுப் போதலுண்மை யின் அதனை, நெறி விலங்கு அதர் என்ப. இல்லிருந்து அறஞ்செய்து பெறும் இன்பம் வேண்டி அறிவு துணையாக மிகுபொருள் நல்கும் பொருட்பற்றை வென்று வந்தா னாகலின், தலைவியது அறிவுநலத்தை இழை நலத்தால் வியந்து திருந்திழை அரிவை என்றும், அறிவின் வெற்றிக்குத் தலைவி யின், “கற்பும் காமமும் 2” ஆகிய மாண்பு உள்ளத்தில் தோன்றித் துணைபுரிந்தமையின், நின் நலம் உள்ளி என்றும் குறித்தான். பொருள் செய்வான் பிரிந்தவிடத்து மிகுபொருள் எய்தி மேன் மேலும் உள்ளத்தைப் பிணித்துத் தன்பால் ஈர்த்தமையின் அதனைப் பொருட்பிணி என்றும், பெற்றது கொண்டு அமைந்து “அரிதுபெறு சிறப்பின் காமத் தியற்கையை1” நினைந்து பெயர் தரக் கருதியபோது, எளிதில் பெயர விடாமையின் அதனை அருஞ்செயற் பொருட்பிணி என்றும், பின்னர் வேண்டப்படுவ தாகலின், இகழ்ந்து நீங்கும் குறிப்பு இன்றாமாறு பெருந்திரு வுறுக என்றும், உடன்வந்த பாங்கர்க்குச் சொல்லியவழி, அவர் பொருட்பிணிக்குத் துணையாய்ப் பெற்றது கொண்டு அமை யும் உள்ளத்தைச் சிதைத்துப் பேதுறுவிப்பர் என்பது பற்றிச் சொல்லாது பெயர்தந்தேன் என்றும் கூறினான்.2 ஏனைப் பொருளினும் தலைமகள் நலம் சிறப்புடைத்தாதல், “உரனுடை யுள்ளத்தை செய்பொருண் முற்றிய, வளமையா னாகும் பொருளிது வென்பாய், இளமையும் காமமும் நின்பாணி நில்லா 3” என்றும், “வருவிருந் தோம்பித், தன்னகர் விழையக் கூடின், இன்னுறல் வியன்மார்ப அதுமனும் பொருளே 4” என்றும் சான்றோர் கூறுதலால் அறிக. செல்லாது பெயர்தந்தேனே என்ற பாடத்துக்கு மேற் செல்லாது பெற்ற பொருள்கொண்டு மீண்டேன் என்று உரைக்க. 356. உள்ளுதற் கினிய மன்ற செல்வர் யானை பிணித்த பொன்புனை கயிற்றின் ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே. இது, வினைமுற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவள் குணம் புகழ்ந்து கூறியது. உரை : செல்வமுடையோர் தம் யானைகளைப் பிணித்த பொன் னால் செய்யப்பட்ட கயிற்றைப் போல, ஒள்ளிய நெருப்புத் தொடர்ந்து சென்ற காட்டின்கண், வினைமேற் சென்ற நெஞ் சினை மடங்கி மீளும்வகைத் தந்த நின் குணங்கள் நினைத்தற்கு இனியவா யிராநின்றனகாண் என்றவாறு. பொன்புனை கயிறுகொண்டு பிணித்தல் பிறர்க் காகாமை யின், செல்வர் என்றார். ஒள்ளெரி என்றார், உலர்ந்த மரஞ்செடி கொடிகளையே பற்றி ஒழுங்குறத் தொடர்ந்து நின்று எரிவது பற்றி. செல்வர் மனைகளில் கந்திற் பிணிப்புண்டு நிற்கும் யானை யின் காலைச் சூழ்ந்து அது நிற்கும் இடத்துக்கும் கந்துக்கும் இடையே கிடந்து ஒளிசெய்யும் பொற்கயிறு போல ஓரிடத்தே சூழ்ந்தெரியும் காட்டுத்தீக் கொடிபோல் தொடர்ந்தோடிப் பிறிதோரிடத்தில் சூழ்ந்துநின்று எரிவது பற்றி யானை பிணித்த பொற்கயிறு உவமையாயிற்று. வாங்குதல், மீளுதல். எரிமேயும் சுரத்தின்கண், அதனால் வளைப்புண்ட பொருள் புலர்ந்து அதற்கே இரையாவது போலப் பொருள் வேட்கையாற் பிணிப்புண்ட உள்ளம், “நாளது செலவும் மூப்பினது வரவும், அரிதுபெறு சிறப்பின் காமத் தியற்கையும் 1” நினையாது அதற்கே இரையாகிக் கழியும் என அஞ்சிப் பொருள்முற்றியபின் அவ் வுள்ளத்தை மீட்க வேண்டுதலின், ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை உள்ளம் வாங்க என்றும், அவ்வாறு வாங்கிய உள்ளத்தைப் பொருள்வேட்கை விடாது செயலறுவித்தலின், அக்காலை நெஞ்சின்கண் தோன்றிச் சுரத்தின் வெம்மையும் பொருளின் அருமையும் காட்டாது தலைமகளின் உருநலனும் செயல் மாண்பும் காட்டி இன்பம் செய்து மனைவயிற் கொணர்ந் தமையின், தந்த நின்குணன் என்றும், “கெடுங் காலைக் கைவிடுவார் கேண்மை உள்ளினும் உள்ளம் சுடுவது 2” போலாது, கெடுங்காலைக் கைகொடுத்து இன்பத்தில் இனிதுறையச் செய் தலின், உள்ளுதொறும் இன்பம் செய்கின்றன என்பான் உள்ளுதற் கினிய மன்ற என்றும் கூறினான். “மகிழணி முறுவல் மாண்ட சேக்கை, நம்மொடு நன்மொழி நவிலும், பொம்ம லோதிப் புனையிழை குணனே 3” என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, எஞ்ஞான்றும் தன் நெஞ்சிடைக் கிடந்து உள்ளு தொறும் தோன்றி இனிமை செய்தலே யன்றி, ஒள்ளெரி மேய்ந்த சுரமாயினும், அதன் வெம்மையை அவள்குணங்கள் தம் இனிமைப் பண்பினால் தோன்றாவாறு மறைத்து வினைமுற்றுதற்கேது வாயின்மையின் உள்ளுதற் கினிய மன்ற என்றான் என்றுமாம். 357. குரவ மலர மரவம் பூப்பச் சுரனணி கொண்ட கானங் காணூஉ அழுங்குக செய்பொருட் செலவென விரும்பிநின் அங்கலிழ் மாமை கவின வந்தனர் தோழிநங் காத லோரே. இது, பொருள்வயிற் பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன் குறித்த பருவவரவு கண்டு கடிதின் மீண்டு வந்தமை, தோழி தலை மகட்குச் சொல்லியது. பழைய உரை : அழுங்குக செய்பொருட் செலவு என்றது, மேல் உளதாகும் பொருட்பிணிச் செலவும் இனிக் கெடுவதாக என்றவாறு. உரை : தோழி, குரவமும் கடம்பும் பூத்து விளங்குதலால் அழகு திகழும் சுரமாகிய கானத்தைக் கண்டு, அது, தான் வருவ லெனக் குறித்துப் போந்த பருவ மாதல் அறிந்து மேல் உள தாகும் பொருள்வயிற் செலவும் இனி ஒழிக என உட்கொண்டு, நம் காதலர் நின்னை விரும்பி நின் அழகொழுகும் மாமைநிறம் வனப்பு மிக வந்தெய்தினர்காண் என்றவாறு. குரவம், மரவம் என்பன நுணவம் போலச் செய்யுண் முடிபெய்தி அம்முச்சாரியை பெற்றன. இவற்றின் சொன்னிலை குரா மரா என்பன. சுரம் குரவமும் மரவமும் பூத்து அழகுற்றுக் கானம்போல் இனிய காட்சி வழங்குதலின் சுரன் அணி கொண்ட கானம் என்றார். குரவம் முதலியன வேனிற் பருவ வரவில் மலருவன என அறிக. “மராஅத்து வேனில் அஞ் சினை கமழும் 1” என்றும், “குரவு மலர்ந்து, அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில் 2” என்றும் சான்றோர் கூறுவது காண்க. காதலர், கானம் காணூஉ விரும்பி, மாமை கவின வந்தனர் என இயையும். பிரியுங்கால், குரவமும் மரவமும் மலரும் வேனிற்பருவ வரவில் மீண்டு வருவதாகத் தலைமகன் வற்புறுத்தினமையின், சுரன் அணிகொண்ட கானம் காணூஉ என்றும், பொருள்வயிற் பிரிந்தவன் மேலும் பொருளே விரும்பி ஆண்டு உறைந்தமை யின் அதனைத் தவிர்த்து மீளுவது தோன்ற, அழுங்குக செய் பொருட் செலவு என என்றும், நின்பால் உளதாகிய காதல் மீளுதலையே ஊக்கினமையின், விரும்பி என்றும் தோழி கூறி னாள். பிறாண்டும், “காமர் வேனில், வெயிலவிர் புரையும் வீததை மராஅத்துக், குயிலிடு பூசல் எம்மொடு கேட்ப, வருவேம் என்ற பருவம் 1” என்பதனால் வேனிலில் வரவு கூறுமாறு காண்க. 358. கோடுயர் பன்மலை யிறந்தன ராயினும் நீட விடுமோ மற்றே நீடுநினைந்து துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி உடைத்தெழு வெள்ள மாகிய கண்ணே. இது, தலைமகள் ஆற்றாமை கண்டு பிரிந்த தலைமகன் வந்தனனாகத் தோழி சொல்லியது. உரை : காதலர், சிகரங்களால் உயர்ந்த பலவாகிய மலைகளைக் கடந்து சென்றாராயினும், நீ நீள நினைந்து வருந்துதலால் துடைக்குந்தொறும் நில்லாது, அணையை உடைத்தெழும் நீர்ப்பெருக்குப்போல் சொரியும் நின் கண்ணீர், அவரை விரைய மீள்வித்தலன்றி நீட்டித்தலைச் செய்யவிடாதுகாண் என்றவாறு. கோடு, சிகரம். மற்று: வினைமாற்று. ஓகாரம்: எதிர்மறை. நீடு நினைதல், காதலர் விரைந்து வருவர் கொல்லோ, வாராது தாழ்ப்பர் கொல்லோ என ஐயுற்றுக் கலங்குதல். வினையெச்சம் காரணப்பொருட்டு. அடுக்குக் கண்ணீர் மிகுதி யுணர்த்தித் தலைவியது ஆற்றாமையைப் புலப்படுத்திற்று. நீரைத் துடைத்த வழி அது நில்லாது பெருகுமாயினும், மேன்மேலும் துடைப் பதை யன்றி ஒழுக விடுவது இல்லையாதலால் துடைத்தொறும் துடைத்தொறும் என்றார்; “செறுத்தோறு உடைப்பினும் தீம்புனலோடு ஊடார், மறுத்தும் சிறைசெய்வர் 1” என்பது காண்க. தலைமகன்பால் உளதாகிய பெருங்காதலால் அவனையே நினைந்து நெஞ்சு கலங்கித் தலைவி நெடிது வருந்தினமையின் நீடுநினைந்து என்றும், அதனால் அவள் அழுது சொரிந்த கண்ணீர்ப் பெருக்கை, உடைத்தெழு வெள்ளம் ஆகிய கண் என்றும், அதனைக் காதலர் எண்ணாது பொருளிடத்தே உறைந்தா ராயினும், “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் 2” செல் வத்தைத் தேய்ப்பது போலப் பொருள்மேற் சென்ற அவரது உள்ளத்தை மாற்றுவதாயிற்று என்பாள், நீட விடுமோ என்றும் கூறினாள். கோடுயர் பன்மலை இறந்தன ராயினும் என்று தலைவன் சென்ற வழியினது அருமை கூறினாள், அவ்வருமை கருதாது பொருளாற் பிணிப்புண்டு சென்ற தலைமகனது திண்மை உணர்த்தற்கு. இறந்தன ராயினும் என்றது, உள்ளம் கொண்ட பொருட்பிணி நின் காதற்கண்ணீர் முன் நிற்றல் ஆற்றாது என்ற வாறு. பொருள்வினை பற்றிப் பிரிந்து சென்றவன் அவை முற்றிய வழியல்லது மீளுதல் இல்லை யாகலின், இது தோழியின் புனைந் துரையின் பாற்படும்; பொருள் செய்வினை முற்றி மீண்டான் என்பதே கருத்தாகக் கொள்க. தன் காதலியின் நினைவு வினை முடிவில் தோன்றுவதுதான் தலைமகன் தலைமைக்கு இயல்பு; முற்றாது இடையில் மடங்குவது தலைமையன் றாகலின் அதனைச் சான்றோர் புலனெறி வழக்கம் செய்யார் என அறிக. இது, தலைவன் மீண்டான் என்றது என்பர் நச்சினார்க் கினியர் 3. 359. அரும்பொருள் வேட்கைய மாகி நிற்றுறந்து பெருங்க லதரிடைப் பிரிந்த காலைத் தவநனி நெடிய வாயின் வினியே அணியிழை யுள்ளியாம் வருதலின் நணிய வாயின சுரத்திடை யாறே. இது, மீண்டு வந்த தலைமகன் அவளைப் பிரிகின்ற காலத்துச் சுரத்துச் சேய்மையும் வருகின்ற காலத்து அதன் அணிமையும் கூறியது. உரை : முன்னர் யாம் பெறுதற் கரிய பொருள்மேல் வேட்கை யுடையேமாய் நின்னைப் பிரிந்து சென்றபோழ்து சுரத்திடை யுள்ள நெறிகள் மிகமிக நெடியவாய்த் தோன்றின; இப் போழ்து அழகிய இழைகளையுடைய நின்னை நினைந்து வருதலின், அவை மிக்க அணிமையுடையவாய்த் தோன்றா நின்றன என்றவாறு. மனையின் நீங்கி நெடிது சென்று பெறும் இயல்பிற்றாதலின், அரும்பொருள் எனப்பட்டது. வேட்கையம்: தனித் தன்மைப் பன்மை. பெருங்கல் அதர், பெரிய பெரிய கற்களின் இடையே செல்லும் வழி. தவநனி: மீமிசை போல ஒருபொருட் பன் மொழி; “ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே 1” என்றா ராகலின், நெடியவாயின நணியவாயின என்றார். ஆறு, பிரிந்தகாலை நெடியவாயின, உள்ளி வருதலின் நணியவாயின என்க. பொருளது அருமையும் இன்றியமையாமையும் பற்றி எழுந்த வேட்கை உள்ளத்தைக் கவர்ந்து கொண்டமையின், ஆண்டு நின்ற நின்காதல் துறக்கப்பட்டது என்பான், அரும்பொருள் வேட்கைய மாகி நின்துறந்து என்றான். உள்ளத்தில் நிலவாவாறு நீக்கினமையின் துறத்தலாயிற்று. ஆகி என்னும் செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. மெய்யாற் பிரிந்தமையின், பிரிந்தகாலை என்றான். அப்பொழுது தோன்றாத கல்லதர்ப்பெருமை மனை யின்கண் இருந்து நினைத்தவழி விளங்கித் தோன்றுதலால், பெருங்கல் அதரிடை என்றும், முன்னர்ப் பொருள்வேட்கை ஒருபுடை நிற்ப, அகற்சியது அருமையும் சுரத்தின் வெம்மையும், நெறியின் கொடுமையும் பிறவும் நின்று நெஞ்சினை அலைத் தமையின், தவநனி நெடிய வாயின என்றும், இப்போழ்து அவளையன்றிப் பிறிதொன்றனையும் நினையாது வருதலின், நணிய ஆயின என்றும் கூறினான். தவநனி நெடிய வாயின என்புழி ஒருபொருட்பன்மொழி தலைமகனது பிரிவருமை உணர்த்திற்று. 360. எரிகவர்ந் துண்ட வென்றூழ் நீளிடை அரிய வாயினு மெளிய வன்றே அவவுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக் கடுமான் றிண்டேர் கடைஇ நெடுமா னோக்கிநின் னுள்ளியாம் வரவே. இது, வினைமுற்றி மீண்டு வந்த தலைமகன், “சுரத்தருமை நோக்காது வந்தவாறு என்னை?” என வினவிய தலைமகட்குச் சொல்லியது. உரை : தன்மாட் டெழுந்த வெப்பத்தால் எதிர்ப்பட்ட பொருள் களைப் பற்றி அழித்த தீயும் வெயிலும் மிக்குறும் நெடிய இடைச்சுரம் கடத்தற்கு அரிய வாயினும், மான் போலும் நீண்ட கண்களை யுடையாய், அவா மிக்க என் நெஞ்சம் நின் முயக்கத்தை மிக விரும்புதலால், விரைந்த செலவினையுடைய குதிரைகள் பூட்டப்பட்ட திண்ணிய தேரைச் செலுத்தி யான் நின்னையே நினைந்து போதருதலின், எளியவாயின என்ற வாறு. என்றூழ், வெயில். “எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை 1” என்றது காண்க. என்றூழ் நீளிடை அரிய என்றது தலைவி கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தது. அன்றே: குறிப்புச் சொல்2. அவவு: அவாவென்பதன் செய்யுண்முடிபு; வேட்கைப் பெருக்கம் என்பது பொருள். கவவு, அகத்திடுதல், ஈண்டு முயங்கு தல் மேற்று. “கவவு அகத்திடுமே 3” என்பது விதி. “நம்முணாங், கவவுக்கை விடப்பெறும் பொருட்டிறத்து, அவவுக்கை விடுதல் அதுமனும் பொருளே 4” என்றார் பிறரும். விரும்பி என்னும் செய்தெனெச்சம் காரணப்பொருட்டு. நெடுமான் நோக்கி என்றவிடத்து, நெடுமை நோக்கத்தைச் சிறப்பித்து நின்றது. மேற்கொண்ட வினையால் ஒடுங்கியிருந்த காதல், வினை முற்றியதும் உள்ளத்தில் எழுந்து, தலைமகளைக் காண்டல் வேட்கையை ஊக்குதலால் அவாமிகுதலின், அவவுறு நெஞ்சம் என்றும், அவாவின் வெம்மை காதலியின் முயக்கத்தாலன்றித் தணியாமையின் கவவு நனி விரும்பி என்றும் கூறினான். “நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும், தீயாண்டுப் பெற்றாள் இவள் 1” என்பது காண்க. நீளிடை யாதலின், அதனை விரைந்து கடத்தல் வேண்டிக் கடுமான் என்றும், நெறியின் அருமைக்கு சலியாத தேர் என்றற்குத் திண்டேர் என்றும், தன்னை நோக்கி வழிமேல் விழிவைத்து நிற்பதுபற்றி நெடுமான் நோக்கி என்றும், தன்னுள்ளம் முழுதும் தலைவியின் உருநலமும் குணநலமும் நிறைந்து கொண்டமையின் வழியருமை புலப்படா தாயிற்று என்பான், அரிய வாயினும் எளிய வன்றே என்றும் கூறினான். பிறாண்டும், “இறப்பருங் குன்றம் இறந்த யாமே, குறுநடை பலவுள் ளலமே 2” என்பது காண்க. “கரணத்தின் அமைந்து முடிந்த காலை 3” என்ற சூத்திரத்துக் “காமக் கிழத்தி மனையோள் என்றிவர், ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்” என்புழி, “அஃதாவது வழி வந்தவாறு என்னை எனவும் வருத்தமுற்றீர் எனவும் இந்நிகரன பல கூறுதல்” என்று கூறி, இதனை எடுத்துக்காட்டுவர் இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும். 37. முன்னிலைப்பத்து இது தலைமக்கள் ஒருவரையொருவர் முன்னிலைப் படுத் தும், தோழி அவர்களை முன்னிலைப்படுத்தும் கூறும் பொரு ளுடைப் பாட்டுக்களின் தொகுதியாகலின் இப் பெயர்த்தாயிற்று. முன்னிலை யென்பது அறத்தொடுநிலைப் பகுதிக்கு இன மானது. களவின்கண் தோழி கூற்று நிகழ்த்தும் இடம் குறித்த ஆசிரியர், “அவள்விலங் குறினும் களம்பெறக் காட்டினும், பிறன் வரை வாயினும் அவன்வரைவு மறுப்பினும், முன்னிலை அறன் எனப் படுதல் என்று இருவகைப், புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் 4” என்று குறித்தாராக, அதற்கு உரைகண்ட இளம் பூரணர், “முன்னிலை வகையானாதல் அறத்தொடுநிலை வகையா னாதல் இவ்விருவகையானும் தலைவற்கும் தலைவிக் கும் தனக்கும் குலத்திற்கும் குற்றம் தீர்ந்த கிளவியைத் தாய் மாட்டுப் புகுத விடுத்தல்” என்று உரைத்து, “புகுதவிடுத்தலாவது, நிரம்பச் சொல்லாது தோற்றுவாய் செய்தல்” என விளக்கம் செய்தனர். இதற்கு அவர் காட்டிய முன்னிலைக்கிளவிக்கண் கழங்கு, தலைவி, வேலன், முருகு முதலிய பொருள்களைக் காணலாம். இவரது உரையையும் எடுத்துக்காட்டுக்களையும் நோக்குமிடத்து, முன்னிலை யென்பது அன்பின் ஐந்திணைக்கண் ஒருவரை யொருவர் முன்னிலைப்படுத்துக் குற்றமில்லாத கருத்துக் களை நிரம்பச் சொல்லாது குறிப்பாய் உரைக்கும் உரைவகை யாதல் உணரப்படும். இவ்வியல்புடைய கூற்றுக்களைத் தம்பாற் கொண்ட பாட்டுக்களை இம்முன்னிலைப்பத்தின்கண் தொகுத் துள்ளனர் என்பது இதனால் உணர்தல் வேண்டும். 361. உயர்கரைக் கான்யாற் றவிர்மண லகன்றுறை வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத் தொடலை தைஇய மடவரன் மகளே கண்ணினுங் கதவநின் முலையே முலையினுங் கதவநின் றடமென் றோளே. இது, புணர்ந்துடன் போகிய தலைமகன் இடைச்சுரத்துக் கண் விளையாட்டுவகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணிக் கண்புதைத்தவழிச் சொல்லியது. உரை : உயர்ந்த கரைகளையுடைய கான்யாற்றின் விளங்குகின்ற மணல் பரந்த அகன்ற துறைக்கண் வேனிற்பருவத்து மலரும் பாதிரியின் விரிந்த மலர்களைக் குவித்து மாலை தொடுக்கும் மடப்பம் பொருந்திய பெண்ணே, நின் கண்ணினும் முலைகள் சினமுடையவாயும், அவற்றினும் நின் பெரிய மெல்லிய தோள்கள் சினமுடையவாயும் இராநின்றனகாண் என்றவாறு. கடுவரவும் நீர்மிகுதியும் உடைமையான் கான்யாறு ஆழ்ந்து கிடத்தலின், உயர்கரைக் கான்யாறு என்றும், “மாவும் மாக் களும் வழங்கும் துறையாதல்பற்றி அகன்றுறை யென்றும், வேனிற் பருவத்தில் மலர்வதாகலின் வேனிற் பாதிரி யென்றும் கூறினார். பாதிரி, வேனிலில் மலர்வது என்பதை, “வேனிற் பாதிரிக் கூனி மாமலர் 1” என்று சான்றோர் குறிப்பது காண்க. பாதிரி அதிரல் மரவம் ஆகியவற்றின் பூக்களை மாலை தொடுத்து மகளிர் அணிந்து கொள்வது இயல்பாதலின் ஈண்டு அதனை எடுத் தோதினார். குவைஇ என்றதனால், கான்யாற்று அவிர்மணலில் பாதிரிப்பூ உதிர்ந்து கிடந்தமை பெற்றாம். “புன்காற் பாதிரி அரிநிறத் திரள்வீ, நுண்கொடி யதிரலொடு நுணங்கறல் வரிப்ப 1” என வருதல் காண்க. பாதிரிப்பூவால் மாலைதொடுத்து அணி வதைக் “கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ, வேனில் அதிர லொடு விரைஇக் காண்வரச், சில்லைங் கூந்தல் அழுத்தி 2” என்று சான்றோர் குறிக்குமாற்றாலும் அறியலாம். மடவரல் இளமை, அழகு. தொடலை, மாலை. கதம், சினம்; கதமுடைய வற்றைக் கதவ என்ப; “ஒல்லார் கதவ முயறலும் முயல்ப 3” எனவரும். விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்றாளைப் புனைந் துரை வகையால் புகழ்கின்றா னாகலின், தொடலை தைஇய மடவரல் மகளே யென்றும், அது கேட்டவள் நாணிக் கண் புதைத்தவழித் தான் கூர்ந்து நோக்கின் வேல்போன்ற தன் கட்பார்வை தலைமகன் மார்பிற்பட்டு நோய் செய்யும் என அஞ்சித் தன் கைகளால் தலைவி தன் கண்களைப் புதைத்துக் கொண்டாள் என மேற்கொண்டு, நின் கண் செய்யும் இடை யூற்றினும் புதையாது ஒழிந்த முலைகள் பேரிடையூறு செய்வன என்பான் கண்ணினும் கதவ நின் முலையே என்றும், அவற் றோடு இயைபுடையவாய்ப் புணர்ச்சிக்கண் தனது நெஞ்சினைச் செலுத்தி வெதுப்புதலின் முலையினும் கதவநின் தடமென் தோளே யென்றும் கூறினான். “கடைமணி சிவந்த நின், கண்ணே கதவ வல்ல ..... நின். கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே 4” என்று பிறரும் கூறுதல் காண்க. “ஒன்றாத் தமரினும் 5” என்ற சூத்திரத்து, “அப்பாற் பட்ட ஒருதிறத் தானும்” என்றதனானே, தலைவியிடத்துத் தலைவன் கூறுவன பலவும் கொள்க என்று உரைத்து, இப்பாட்டைக் காட்டி, இஃது “உடன் போயவழித் தலைவன் புகழ்ச்சிக்கு நாணித் தலைவி கண்புதைத்துழி அவன் கூறியது” என்பர் நச்சினார்க் கினியர். இது புணர்தற்பொருளாயினும் கருப்பொருளாற் பாலையாயிற்று என்பர் இளம்பூரணர்.1” உடன்போக்கின்கண் உயிரினும் சிறந்த நாணும் கற்பும் தலைமகன் காதலும் துணையாக வருதலின், நாண் நீங்குதல் பொருளாகத் தலைமகன் தலைவியை இதனால் முன்னிலை யாக்கிக் கூறினான் என அறிக. இனிவரும் பாட்டுக்களும் இவ்வாறு முன்னிலைக் கிளவியாதலைக் கண்டு கொள்க. 362. பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலைச் சிறுகண் யானை யுறுபகை நினையாது யாங்குவந் தனையோ பூந்தார் மார்ப அருள்புரி நெஞ்ச முய்த்தர இருள்பொர நின்ற விரவி னானே. இது, சேணிடைப் பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது இரவின்கண் வந்துழித் தோழி சொல்லியது. உரை : பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை யணிந்த மார்பனே, பதுக்கைகளையுடையதான செல்லுதற்கரிய கவர்த்த வழியின் கண் திரியும் சிறிய கண்களையுடைய யானையாகிய மிக்க பகைக்கு அஞ்சாது, எமக்கு அருள்செய்யும் வண்ணம், நின் நெஞ்சு நின்னைச் செலுத்த, இருள் அடர்ந்து வழிச்செல் வாரைத் தடுக்கின்ற இரவின்கண் எவ்வாறு வந்தாய் கொல்லோ? என் உள்ளம் வருந்துகிறது என்றவாறு. பதுக்கை, கற்குவியல்; ஆறலைப்போரால் கொல்லப் பட்டார் மேற் குவிக்கப்படும் கற்குவியல் என்பர். “வடிநவில் அம்பின் ஏவ லாடவர், ஆளழித் துயர்த்த அஞ்சுவரு பதுக்கை 2” என்றும், “கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர், படுகளத்து உயர்த்த மயிர்த்தலைப் பதுக்கை 3” என்றும் சான்றோர் கூறுதலால் அறிக. ஒதுங்கல், செல்லுதல்; “அடியறிந்து ஒதுங்கா ஆரிருள் 4” என்றும் “ஒதுக்கரும் வெஞ்சுரம் 5” என்றும் வருவன காண்க. உய்த்தல், செலுத்தல். இருள்மிக்க இரவு என்றற்கு இருள் பொர நின்ற இரவு என்றார். கற்பின்கண்ணே பொருள்வினை குறித்துச் சேணிடைப் பிரிந்து மீண்டு போதரும் தலைமகனை விலக்கும் உரிமை தோழிக்கு இல்லையாயினும், இருள்கூர் இரவுப்போதின் கண் இடைநிலத்துத் தங்காது வந்தமை பற்றி ஏதம் ஆய்ந்து அவற்கு முன்னிலைக் கிளவியாற் கூறுகின்றா ளாகலின், தலைமகன் வரும் வழியின் ஏதங்களைக் குறிப்பாளாய், கொலைவினையராகிய ஆறலைப்போர் மிக்க வழி என்பாள், பதுக்கைத் தாய ஒதுக் கருங் கவலை என்றும், இரவில் காட்டில் திரியும் யானை மக்கட்குப் பெரும்பகை யாகலான், யானை உறுபகை நினை யாது என்றும் கூறினாள்; “இரவின் வரல்வேண்டா, யானை யுடைய சுரம் 1” என்றார் பிறரும். நினைந்தவழி எத்திறத் தோரும் ஊக்கம் குன்றுவர் என்பாள் நினையாது என்றும், நின்னைப் பிரிந்துறையும் தலைமகள் எய்திய மெலிவுணர்ந்து நிறைந்த காதல் செலுத்தக் கடுகி வருகின்றாய் என்பாள், அருள் புரி நெஞ்சம் துரப்ப என்றும், நெறியறியாவகை மறைத்தலின் இரவுக் காலத்தை இருள்பொர நின்ற இரவு என்றும், நெறியின் கொடுமை யும் இடையில் உளவாகும் ஏதமும் கருதி, நின் பேரருளுக்கு அஞ்சுகின்றேம் என்பாள், யாங்கு வந்தனையோ என்றும் கூறினாள். கற்பின்கண் இவ்வாறு ஒரோவழித் தலைமகன்பால் மிக்க காமத்து மிடலுடைச் செயல் தோன்றின், அது, கழிகாமமாய்த் தீங்கு விளையாமைக் குறிக்கொண்டு கூறலின், தோழிக்கு இம் முன்னிலைக் கிளவி அமைவதாயிற்று. “உறுகண் ஓம்பல் தன் னியல் பாகலின், உரிய தாகும் தோழிகண் உரனே 2” என ஆசிரியர் உரைப்பது காண்க. கழிகாமம் தீங்கு பயத்தலை, “காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன், நாமம் கெடக்கெடும் நோய் 3” என்றும், “சினமே காமம் கழிகண் ணோட்டம், அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை, தெறல்கடு மையொடு பிறவும் இவ்வுலகத்து, அறந்தெரி திகிரிக்கு வழியடை யாகும் 4” என்றும் சான்றோர் தெருட்டுமாறு காண்க. “பெறற்கரும் பெரும்பொருள் 1” என்ற சூத்திரத்துப் “பிரியுங் காலை எதிர்நின்று சாற்றிய, மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்” என்புழிப் பிறவும் என்றதனால் இதனை அமைத்து, இது சேணிடைப் பிரிந்து இரவின் வந்துழிக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். 363. சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவி லெயினர் தங்கைநின் முலைய சுணங்கென நினைதி நீயே அணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே. இது, புணர்ந்துடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நலம் பாராட்டியது. உரை : சிலைமரத்தாற் செய்யப்பட்ட வில்லிடைத் தொடுக்கும் அம்பினையும், சிவந்த ஆடையினையும், கொலைத் தொழிற் குரிய வில்லினையு முடைய வேட்டுவர்க்குத் தங்கையே, நின் முலைக்கண்ணவாகிய தேமலை நீ சுணங்கென நினைக் கின்றனை; மற்று, நோய் மிக்க என் நெஞ்சம் அதனை வருத்தம் தரும் அணங்கு என நினையாநின்றதுகாண் என்றவாறு. சிலைவில் சிலையென்னும் மரத்தாற் செய்யப்பட்ட வில்; “அரிமான் இடித்தன்ன அஞ்சிலை வல்வில்2” என்றும், “சிலை மாண் வல்வில்3” என்றும் சான்றோர் உரைப்பது காண்க. சிலைத்தல், ஒலித்தலுமாம். கொலைவில் என்றவிடத்து உடையவன் தொழில் வின்மேல் ஏற்றப்பட்டது. செந்துவராடை யென்றது, செம்மையாகிய நிறப்பண்பின் மிகுதி யுணர நின்றது. “துவர்செய் ஆடைச் செந்தொடை மறவர் 4” என்று பிறரும் கூறினர். சுணங்கு நினக்கு அழகு தருவதாயினும் எனக்கு வருத்தம் தருவதாயிற்று என்பதாம். அணங்கு தருவதனை அணங்கென் றான். “அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்து, ஈர்க்கிடை போகா வேரிள வனமுலை 5” என்றார் பிறரும். முலைக்கு நலம் சுணங்கொடு திகழ்த லாகலின், அணங்கென நினையும் என்றது நலம் பாராட்டியவாறு. இஃது, உடன்போகின்றான், பெருநாணத்தால் வருந்தும் தலைமகளது மெலிவு நீக்கும் கருத்தால் முன்னிலைப்படுத்தித் தன் பெருநயப்பால் தெளிவித்தவாறு எனக் கொள்க. இஃது உடன்போகின்றான் நலம் பாராட்டிய கூற்றாம் என்பர் நச்சினார்க்கினியர் 1. “செந்துவராடை” என்னும் பாட்டினுள், கொலைவில் எயினர் தங்கை யெனப் புணர்தற் பொருண்மை வந்ததாயினும் பாலைக்குரிய மக்கட்பெயர் கூறுதலின் பாலையாயிற்று என்பர் இளம்பூரணர் 2. 364. முளமா வல்சி யெயினர் தங்கை இளமா வெயிற்றிக்கு நின்னிலை யறியச் சொல்லினெ னிரக்கு மளவை வெள்வேல் விடலை விரையா தீமே. இஃது உடன்போக்கு நயந்த தலைமகன் அதனைத் தோழிக்கு உணர்த்த, அவள் முடிப்பாளாய்ச் சொல்லியது. உரை : வெள்ளிய வேலையுடைய தலைவ, முள்ளையுடைய மாவாகிய பன்றியினை உணவாக வுடைய வேட்டுவர்க்குத் தங்கையாகிய இளமையும் அழகு முடைய எயிற்றிக்கு, நின் உடன்போக்குக் குறிப்பை விளங்க உரைத்து, உடன்படுமாறு இரந்துகொண்டு யான் வரும் அளவும், விரையாது நிற்பாயாக என்றவாறு. முளமா, முள்ளையுடைய மாவாகிய பன்றி; இது முளவுமா எனவும் வழங்கும். “கானவ னெய்த முளவுமான் கொழுங்குறை3” என்று பிறரும் கூறுப. ஈண்டு நின் நிலை என்பது, உடன்போக்கு நயந்துள்ள நின் மனநிலையை என்றவாறு: சொல்லினென். முற்றெச்சம். இரத்தல், இணங்கப்பெறுதல். விரையாதீமே என்றது, விரைந்து செய்தற்கரியது என்பது பட நின்றது. வெளிப்படை குறிப்பு என்ற இருவகையாலும் பன்முறை வரைவு கடாயவழியும் களவே விரும்பி யொழுகியவன், தோழி யின் குறிப்பின்றியே உடன்போக்கு நயந்து அவள்பால் உணர்த் தினானாகலின், அவள் தலைமகளது குறிப்பறிந்து போக்குடன் படுத்த விரைகின்றமைபற்றி, இளமா எயிற்றிக்கு நின்னிலை அறியச் சொல்லினென் இரக்கு மளவை என்றாள். இளையளா தலின், அவட்கு அறியச் சொல்ல வேண்டும் என்பாள், அறியச் சொல்லினென் என்றாள். இதுகாறும் களவே விரும்பி யொழுகிய நீ, இது துணிந்தது அவட்கு மருட்கை விளைவிக்குமாகலின், நின்னிலை அறியச் சொல்ல வேண்டுவது கடன் என்றுமாம். “தந்தை தன்னையர் உடனிருப்பச் சான்றோர் சூழ நிகழும் வதுவை நன்மணம் 1” கருதியிருந்தாள், இவ்வுடன்போக்குக்கு இசைதல் எளிதின் இயலுவதன்று என்பது தோன்ற இரக்கும் அளவை என்றும், நின்பாற் காணப்படும் விரைவு அவள்பால் இல்லையாகலின், யான் இரக்குமளவை அமைதல்வேண்டும் என்பாள், விரையாதீமே என்றும் கூறினாள். இனி உடன்போக்கின்கண் நெறியிடை உளவாகும் ஏதமும், உடன்போகியவழி யுண்டாகும் அலரும் கூறித் தலைமகள் நாணியவழித் தகுவன கூறி உடன்படுவிக்க வேண்டுதலின், இரக்குமளவும் என்றும், குறிவழியும் ஒருவழித் தணந்தும் ஒழுகுகின்றா னாகலின் விரையாதீமே என்றும் தோழி இரந்து நின்றாள் என்றுமாம். இது, தோழிபால் தோன்றவேண்டிய உடன்போக்கினைத் தலைமகன் தானே நயந்து முற்படக்கூறுதலின், தோழி முன் னிலைக்கிளவியால் போக்குடன்படுதல் கூறுவதாயிற்று. இது கொண்டு போங்காலத்துக் கொண்டுடன் போக்கு ஒருப்படுத்துவல் என்றது என்பர் நச்சினார்க்கினியர். 2” இளம் பூரணர், இந்நிலையறிய என்று பாடங்கொண்டு, பிரியுங் காலத்துத் தலைமகட்கு உணர்த்துகின்றேன் எனத் தோழி தலை மகற்குரைத்தற்கு இதனைக் காட்டி, இது விலக்கிற்று என்பர். 3” 365. கணமா தொலைச்சித் தன்னையர் தந்த நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பும் நலமா ணெயிற்றி போலப் பலமிக நன்னலம் நயவர வுடையை என்னோற் றனையோ மாவின் றளிரே. இது, வரைவிடைவைத்துப் பிரிந்து மீள்கின்றான், இடைச் சுரத்துக் குழைத்த மாவின் தளிர் கண்டு சொல்லியது. உரை : கூட்டமாகிய மாக்களைத் தொலைத்துத் தன்னையர் கொணர்ந்த நிணமாகிய தசையுணவைக் கவர்தற்குப் போத ரும் பறவைகளைக் கடியும் பெண்மை நலம் சிறந்த எயிற்றியைப் போல, மாவின் தளிரே, பலவாய் மிக்க நலம் யாவரும் விரும்புமாறு உடையை; ஆதலின் அதற்கு எத்தவம் செய் தனையோ? கூறுக என்றவாறு. கூட்டம் கூட்டமாக வாழும் மானினம் கணமா எனப் பட்டது. தன்னையர், தனக்கு முற்றோன்றியோர்; தலைமை யுடை யோருமாம். ஐ, தலைமை. வல்சி, உணவு. நிணத்தொடு கூடிய ஊனே உணவாதற்கு ஏற்றதாகலின், நிணவூன்வல்சி என விதந்து கூறினார். எயிற்றிக்கு நலமாவது மாமைக்கவினும் கண்டாரால் விரும்பப்படும் நற்குணமுடைமையுமாம். நன் னலம் என்றது, நிறப் பொலிவும் மென்மையும் நோக்கி. நய வரவு, விருப்பம். எயிற்றிபோல நலம்பலவும் நயவரப் பெறுதல் அரிதென் பான், நன்னலம் நயவர வுடையை என்றும், உலகத்துப் பெறற் கரிய பொருள் ஒன்றனைக் கருதியவாறே பெறுதல் தவமுடை யார்க்குஅல்லது இன்மையின் என் நோற்றனையோ என்றும் கூறினான். “வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம், ஈண்டு முயலப் படும் 1” என்பது காண்க. மகளிர்மேனி மாந்தளிர் போறலின், இவ்வாறு கூறினான்; “நறுவடிப், பைங்கண் மாஅத்து அந்தளி ரன்ன, நன்மா மேனி 2” என்பதனாலும் அறிக. இது, “பொருளே உவமம் செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃ துவம மாகும் 1” என்றதனால் அமையும். இது வரைவிடை வைத்துப் போகின்றான் மாவினை நோக்கிக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர்.2 இது முன்னிலை யாதற் கில்லாத மாவினை முன்னிலைப்படுத்திற்று. 366. அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி யாயி னென்னதூஉம் அறிய வாகுமோ மற்றே முறியிணர்க் கோங்கம் பயந்த மாறே. இது, தலைமகளை நோக்கி, இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. பழைய உரை : இது முன்னாள் அவன் தந்த கோங்கம்பூவால் விளைந்தது எனப் பூத்தருபுணர்ச்சி கூறியவா றாயிற்று. இது கருப்பொருளாற் பாலை. உரை : அன்னாய், வாழ்வாயாக. யான் கூறுவதனை விரும்பிக் கேள். என் தோழி மிகவும் பசப்பெய்தி வேறுபடுகின்றா ளாகலின், இதற்குக் காரணம் என்னை யென நீ சினத்தால் கண்சிவந்து அச்சுறுத்தி வினவுகின்றாய். ஆராயுமிடத்து, அது தளிரும் பூங்கொத்துக்களு முடைய கோங்கின்பூவைக் கொடுத் தமையால் ஆயினமையின், பிறரால் எத்துணையும் அறியப் படாதுகாண் என்றவாறு. தோழி என்றது தலைமகளை. கண்ணை: முற்றெச்சம். கொன்னைச்சொல் அச்சப்பொருட்டு. ஏகாரம்: எதிர்மறை. மாறு: ஏதுப்பொருள் படுவதோர் இடைச்சொல்; இதனை “அதனினியறல் 3” என்னும் சூத்திரத்து “அன்ன பிறவும்” என்ற தனாற் கொள்வர் தெய்வச்சிலையார். முறி, தளிர். கோங்கம், பாலைக்குரிய கருப்பொருள். முதல், கரு, உரி என்ற பொருள் வகை மூன்றனுள், திணையுணர்தற்கண் முதலிற் கருவும் கருவின் உரியும் சிறந்தன வாகலின் ஈண்டுக் கருப்பொருள் பற்றி இது பாலையிற் கோக்கப்பட்டுள்ளது. “முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே, நுவலுங் காலை முறைசிறந் தனவே 1” என்பதனுள், நுவலுங்காலை என்றதனால் இஃது அமையும் என அறிக. இதன்கண், பசந்தனள் பெரிது என்றது, செவிலி கூறிய முன்னிலைக்கிளவி. அதற்கு அறத்தொடு நிலைவகையால் விடை கூறுகின்றாளாகலின் அன்னாய் வாழி வேண்டு அன்னை என முகம்புகுந்தாள். இளமை வளர்ச்சிக்கண் பிறக்கும் வளமை வேறுபாட்டினும், தலைவியது பசப்பு மிக்குத் தோன்றுதல் பற்றி, என்தோழி பசந்தனள் பெரிது என்ற செவிலி கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தாள். பிறாண்டும், “அன்னாய் வாழி வேண் டன்னை நின்மகள், பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு, நனிபசந் தனளென வினவுதி 2” என்பது காண்க. தலைமகள் எய்திய வேறுபாட்டுக் குரிய காரணம் விளங்காமை யான் சினங்கொள் கின்றனை என்பாள், சிவந்த கண்ணை என்றும், என்னை அச்சுறுத்திக் கேட்பதிற் பயனின்று, “அதன்திறம் யானும் தெற்றென உணரேன்” என்பாள் கொன்னே கடவுதி என்றும் கூறினாள். அஃது ஆராய்ந்தல்லது கூறலாகாது என்றற்கு ஆயின் என்றும், அறியாப் பருவத்தே நிகழ்ந்தவதனை அறியும் பருவமாய இப்பொழுது நினைந்து வேறுபடுகின்றாளாகலின், அது சிறிதும் எளிதில் அறியலாகாது என்பாள் என்னதூஉம் அறிய வாகுமோ என்றும், அந்நிகழ்ச்சி இஃது எனத் தான் அறிந்தவாற்றால் கூறுவான் தொடங்கி முறியிணர்க் கோங்கம் பயந்த மாறே என்றும் கூறினாள். இதுபற்றியே பழையவுரைகாரரும், முன்னாள் அவன் தந்த கோங்கம்பூவால் விளைந்த பூத்தரு புணர்ச்சி3 என்றார். 367. பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி விரவுமல ரணிந்த வேனிற் கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரோடு புணர்ந்தன் றன்னையிவ ளுயிரே. இது, நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத் தொடு நின்றது. பழைய உரை : கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் என்றது, கான்யாற்று யாங்கள் அழுந்துழிக் குறுக வந்தோன் என்றவாறு. எனவே, புனல்தரு புணர்ச்சி கூறியவாறாயிற்று. பேரொடு புணர்ந்தன்று இவளுயிர் என்றது, அன்று தோன்றிய இன்னான் தந்த உயிர் என அவன்பேரொடு பட்டது இவள்உயிர் என்றவாறு. இது காலத்தாற் பாலை. உரை : அன்னாய், பொரித்த அடியினையுடைய கோங்கின் பொன்போலும் பூக்கள், விரிந்த கொத்துக்களையுடைய வேங்கைப் பூவோடு வேறுபட அணிந்து, பலவாய் விரவிய மலர்களாற் பொலிந்த வேனிற்பருவத்தில், கான்யாற்றின் மருங்கே தேர்ஏறிக் குறுக வந்தோனுடைய பெயரோடு இவளுடைய உயிர் ஒன்றுபடுவதாயிற்று என்றவாறு. என்றது, “அன்றுதொட்டு அன்னான் தந்த உயிர்என அவன் பேரோடுபட்டது இவள்உயிர் என்பதாம்.” ஆல், ஓமை, கொன்றை, யா, வேங்கை, வேம்பு முதலிய மரங்களின் இனத்தைச் சேர்ந்த தாகலின், கோங்கினையும் பொரியரைக் கோங்கு என்றார்; “பொரியரை ஆலம் 1” “யா அத்துப் பொரியரை முழுமுதல் 2” “பொரியரை வேம்பு 3” “பொரியரை யோமை 4” “பொரியரை வேங்கை 5” “பொரியரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை 6” என்று சான்றோர் குறிப்பது காண்க. கோங்கின்பூ பொன்போல் இருப்பது. “புரிநிற நீள்பொன் அணிந்த கோங்கம் 1” என்றார் பிறரும். அதனால் “பொன்செய் கன்னம் பொலிய வெள்ளி, நுண்கோல் அறைகுறைந்து உதிர்வன போல, அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து, ஓங்குசினை நறுவீ கோங்கலர் உறைப்ப 2 ” என்பாராயினர். வேங்கைப்பூவும் பொன்னிறத்த தாகலின், வேறுபட மிலைச்சி என்றார். விரவு மலர், வேறு வேறு நிறமுடைய மலர்; அவை மரவம், பாதிரி முதலியன. கான்யாறு வேனிற்காலத்துத் தெளிந்திருப்பது பற்றி வேனிற் கான்யாறு என விதந்து கூறினார். மக்கட்கு இடப்படும் பெயரெல்லாம் உயிர்மேலதாகலின், உயிரொடு உண்டாகிய கலப்பைப் பேரொடு புணர்ந்தன்று என்றார். புணர்ந்தன்று: இறந்தகால முற்றுவினை. கோங்கு, வேங்கை முதலியவற்றின் பூக்களைக் கொய்து மாலை தொடுத்து விளையாடுகையில் கான்யாற்று நீர் கொணர்ந்த வேறு பூக்களை எடுத்தற்கு முயன்றபோது தலைமகள் நீரிடை வீழ்ந்து அழுந்தினாளாக, அக்காலைத் தலைமகன் வந்து உயிர் தந்து உதவினான் என்பாள், விரவுமலர் அணிந்த வேனிற் கான்யாற்றுக் குறுக வந்தோன் என்றாள். தேரொடு வந்தான் என்றாள், முன்பு அறியாத ஒரு செல்வத்தோன்றல் என்றற்கு. நீரின்கண் வீழ்ந்தாளைத் தானும் நீருட் குளித்துத் தன் மார்பிடைப் புல்லிக் கொண்டு எழுந்தான் என்பது தோன்ற, குறுக என்று குறித்தாள். இவ்வாறு உயிர் தந்து உதவினாற்குத் தன்னுயிரைத் தந்தாள் என்பாள், வந்தோன் பேரொடு புணர்ந்தன்று இவள் உயிர் என்றாள் என்க. பிறாண்டும், “காமர் கடும் புனல் கலந் தெம்மோடு ஆடுவாள், தாமரைக்கண்புதைத்தஞ்சித் தளர்ந்து அதனோடு ஒழுகலான், நீணாக நறுந்தண்டார் தயங்கப் பாய்ந்து அருளினால், பூணாகம் உறத்தழீஇப் போந்தான் அகனகலம், வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி, அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே 3” என்று உரைப்பது காண்க. இக்கருத்துப் பற்றியே, பழையவுரை காரரும் இது “புனல் தரு புணர்ச்சி கூறியவாறாயிற்று” என்றார். அவன் தந்தது இவளுயிர்; அவனுடையது இவள்உயிர் என உடையானும் உடைமையுமாய் இயைந்தொழிந்தது என்றற்குப் பேரொடு புணர்ந்தன்று இவள் உயிர் என்றும், எனவே, பிறர்க்கு இவளது உயிர் உரித்தாதற்கு இடமில்லை என்றும் உரைத்தா ளாயிற்று. 368. எரிப்பூ விலவத் தூழ்கழி பன்மலர் பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும் தண்பத வேனி லின்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ பெருமநின் அம்மெல் லோதி யழிவில ளெனினே. இது, வேனிற்காலத்து தும்மொடு விளையாட்டு நுகர வருவல் என்று பருவங்குறித்துப் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி கூறியது. பழைய உரை : அம்மெல் ஓதி அழிவிலள் எனின் இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ என்றது, நீ வருந்துணையும் இவள் ஆற்றியுளளாயின் எம்மொடு நுகர்ச்சி கொள்வீராமின் என மறுத்தவாறு. உரை : பெரும, எரிபோலும் நிறத்தினைக் கொண்ட பூவினை யுடைய இலவமரத்தினின்றும் உதிர்ந்த பலவாகிய மலர்கள் பொரிபோலும் பூக்களையுடைய புன்கமரத்தின் புள்ளி பொருந்திய நிழற்கண் கிடந்து அழகுறுத்தும் குளிர்ந்த செவ்வியையுடைய வேனிற்காலத்து விளையாட்டின்கட் பெறும் இன்பநுகர்ச்சி, அழகும் மென்மையுமுற்ற கூந்தலை யுடைய இவள் நின் பிரிவாற்றி மேனிநலன் அழிவின்றி யிருப்பளாயின், எம்மொடு கொள்க என்றவாறு. இலவமரத்தின் செம்பூ நெருப்புப்போலத் தோன்றுவதுபற்றி எரிப்பூ இலவம் என்றார்; பிறரும் “இலவத்து, அழல் அகைந் தன்ன அலங்குசினை யொண்பூ 1” என்பர். புன்கமரத்தின் பூ வெள்ளிய பொரிபோறலின் “பொரிப்பூம் புன்கு” என்பர்; “பொரியெனப் புன்கவிழ் அகன்றுறை 2” “பொரிப்பூம் புன்கின் எழிற்றகை யொண்முறி 3” எனச் சான்றோர் குறிப்பர். இலை நெருக்கம் இன்மையின், புகர் நிழல் எனப்பட்டது. புன்கின் புள்ளி பொருந்திய நீழல் கருமையும் வெண்மையும் பொருந்தி யிருத்தலால் இடையிடையே இலவம்பூ உதிர்ந்து கிடப்பது பன்னிறங் களால் நீழலிடம் ஒப்பனை செய்யப்பட்டது போற லின், வரிக்கும் என்றார். வேனிற்காலத்து இன்ப நுகர்ச்சிக்குத் தண்பதம் இன்றியமையாமையின், தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி என்றல் வேண்டிற்று. வேனில் இன்பம், வேனிற் காலத்துத் தண்ணிய பொழிலிடத்தே சுற்றம் சூழ இருந்துண்டு மகிழும் வேனில்விழா. ஆறாட்டும் வேனில்விழாவும் சேர நாட்டில் மிக்க சிறப்புடன் நிகழ்வன; அவற்றை நேரிற் கண்ட பரணர், செங்குட்டுவனைப் பாடுமிடத்து, “நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும், மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவு” என்று ஆறாட்டையும், “பொழில்வதி வேனிற் பேரெழில் வாழ்க்கை 1” என்று வேனில்விழாவையும் குறிக்கின்றார். இவ்வேனில் இன் பத்தைப் பேரூர்க்கு அணிமையில் காஞ்சியாற்றின் கரையில் சுற்றமொடு கூடி நுகர்ந்த சிறப்பைப் பதிற்றுப்பத்துச் சிறப்பிக் கின்றது. சேரநாட்டின ராதலின் ஆந்தையார் அதனை ஈண்டுக் குறிக்கின்றார். பிரியக் கருதும் தலைமகன் வேனிற்பருவத்து இன்ப நுகர்ச் சிக்கு வருவல் எனத் தான் மீண்டுவரும் பருவத்தைக் குறித்தா னாகலின், அதனைத் தோழி இலவத்தின் பன்மலர் புன்கின் புகர்நிழல் வரிக்கும் தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி என்று சிறப்பித்தாள். இன்பக்காலத்திற் காதலர் பிரியா துறைதலை மகளிர் பெரிதும் விரும்புப. கார்த்திகை விழாவிற் காதலர் வருதல் வேண்டும் எனத் தலைமகள் விரும்புதலை, “மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப், பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழ வுடன் அயர வருகதில் அம்ம 2” என நக்கீரர் பாடுவது காண்க. இவ்வண்ணம் வேனில் இன்பத்தைச் சிறப்பித்தவள், அதனை வற்புறுத்திப் பிரிவையாயின், தலைமகள் நின் பிரிவாற்றாது மேனிநலம் இழந்து அழிவன் என்பாள், அம்மெல் ஓதி அழி விலள் எனின் என்றும், எனவே, அழிதல் ஒருதலை யென்றும், பின்பு நீ மீண்டு போந்து பெறக்கருதும் இன்ப நுகர்ச்சிக்கு இடமில்லை யாம் என்றும் கூறுவாள், வேறுவாய்ப் பட்டால் அழிவிலள் எனின் எம்மொடு கொண்மோ என்றும் கூறினாள். எனவே, வேனிற்காலத்து இன்பநுகர்ச்சியினைப் பெறுதற்கு நீ மீண்டு வருந்துணையும் இவள் உயிர்வாழாளாகலின், நீ அது பெறுதல் ஆகாது எனச் செலவு மறுத்தவாறாம். 369. வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழில் முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநல் குறிநீ செய்தனை யென்ப வலரே குரவ நீள்சினை யுறையும் பருவ மாக்குயிற் கவ்வையிற் பெரிதே. இது, பரத்தை யொருத்தியுடன் பொழிலகத்துத் தங்கி வந்த தலைமகன், தலைமகள் வினாவியவழி, “யாரையும் அறியேன்” என்றானாக, அவள் கூறியது. பழைய உரை : இது பாலைக்கு உரித்தாகிய வேனிற்கண் நிகழும் குரவும் குயிலும் கூறுதலாற் பாலையாயிற்று. உரை : வளவிய மலர்கள் நிறைந்திருத்தலின் வண்டுகள் படி யும் நறிய பொழிலின்கண், முளைபோலும் நிரைபட நின்ற பற்களையுடைய ஒருத்தியோடு நீ குறிசெய் தொழுகினை யென்று கூறுப. அதன்வழி எழுந்த அலர், குரவ மரத்தின் நீண்ட கிளையின்கண் வதியும் வேனிற்பருவத்துக் கூவும் இயல்பிற்றாய குயில் செய்யும் ஓசையினும் பெரிதாயிரா நின்றது என்றவாறு. வளமலர் ததைதல் கூறவே வண்டு மொய்த்தல் பெறப் படுதலின், வண்டுபடு பொழில் என்றார். ததைதல், நெருங் குதல். படுதல், ஈண்டு மொய்த்தல். முளைநிரை முறுவல் என்றது, முளைபோலும் முறுவல், நிரைமுறுவல் என இயையும். “முளைநிரை முறுவலார் 1” என்று பிறரும் கூறுப. முறுவல், பல். குறி, ஈண்டுப் பரத்தை மார்பில் தலைவனுடைய சாந்தும் பூணும் செய்யும் குறி. “நின் சாந்தினாற் குறிகொண்டாள், நின் மார்பின் பூணினாற் குறிகொண்டாள் 1” என்பது காண்க. வேனிற் பருவத் தில் குரவமரத்தின் பூஞ்சினையி லிருந்து குயில் கூவுவது இயல்பு. “கொழுந்து முந்துறீஇக் குரவரும் பினவே, புணர்ந்தீர் புணர் மினோவென இணர்மிசைச், செங்கண் இருங்குயில் எதிர்குரல் பயிற்றும் 2” என்று சான்றோர் உரைப்பது காண்க. “யாறுங் குளனும் காவு மாடிப், பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப 3” என்பவாகலின், வண்டுபடு நறும்பொழில் கூறினாள். தலைமகன் அறியேன் என்புழி, குறிசெய்த இடம் முத லாயின யாவும் விளங்க அறிந்து அலர் கூறுவோர் பலர் என்பாள், குறிநீ செய்தனை யென்ப என்றும், நீ கூறா தொழியினும் யான் அவளை அறிவேன் என்பாள், முளைநிரை முறுவல் ஒருத்தி என்றும் கூறினாள். “கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே 4” என்பதனால், தலைமகன் பொழில் விளையாட்டு அலர்க்கு ஏது வாதலின், அலர்..... மாக்குயிற் கவ்வையிற் பெரிதே என்றாள். இஃது ஊடற் பொருண்மைத்தேனும்: வேனிற்காலத்து நிகழும் குயிற் குரலை உவமித்தலின் பாலைத் திணையாயிற்று என்று இளம்பூரணரும். இது பாலைக்கண் மருதம் நிகழ்ந்தது என நச்சினார்க்கினியரும் 5 கூறுவர். 370. வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீநயந் துறையப் பட்டோள் யாவ ளோவெம் மறையா தீமே. இது, பரத்தை யொருத்திக்குப் பூவணிந்தான் என்பது கேட்ட தலை மகள், அஃது இல்லை என்று மறைக்கும்6 தலைமகற்குக் கூறியது. பழைய உரை : இது பாலைக்குரிய கருப்பொருளாகிய கோங்கு கூறினமையால் பாலையாயிற்று. உரை : வளவிய கிளைகளையுடைய கோங்கின் தண்ணிதாய் மணங்கமழும் மாலையினைக் கரிய சிறகுகளை யுடைய வண்டுகளின் பெரிய தொகுதிகள் மொய்த்துநிற்ப, நின்னால் அணிந்து விரும்பப்பட்டவள் யாவள் என்பதனை மறையாது எனக்கு உரைப்பாயாக என்றவாறு. படலை, மாலை. புதுப்பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை என்றற்குத் தண்கமழ் மாலை என்றார். பெருந்திரளான வண்டு களைக் குறித்தற்குப் பெருங்கிளை என்ப. “தேன்செய் பெருங் கிளை 1” என்று பிறரும் கூறுவது காண்க. உறையப் பட்டோள், உறைதற்கு ஏதுவாய்க் காதலிக்கப்பட்டவள். மறையாதீமே, முன்னிலை முற்று வினைத்திரிசொல். பலர் காணப் பரத்தையொருத்திக்கு மாலை அணிந்து மகிழ்வித்தனை யாகலின், நீ என்னை மறைத்த லாகாது என்பதை உள்ளுறுத்து, இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப என்றும், அவள் பெருநல முடைய ளாதலின், அவளை யான் காண்டற்கு விரும்புகின்றேன் என்பாள், யாவளோ எம் மறை யாதீமே என்றும் கூறினாள். தன்வயின் உரிமை தோன்றக் கூறுதலின் தனித்தன்மைப் பன்மையால் யாம் என்றாள். 38. மகட்போக்கியவழித் தாய் இரங்கு பத்து உடன்போக்கின்கண் தலைமகள் தலைமகனோடு புணர்ந்து உடனேகியவழித் தாய், மகள் பிரிவாற்றாது இரங்கிக் கூறும் பகுதியாகலின், இஃது இப்பெயர்த்தாயிற்று. இப்பத்தின்கண் முதல் இரண்டு பாட்டுக்கள் சில ஏடுகளில் இல்லை என்பர். அகனைந்திணைக் காதற்காம வாழ்க்கையில் தலைமைப் பண்புடைய ஒருவனும் ஒருத்தியும் சிறந்து நிற்பராயினும், தலைமகட்குத் தோழி போலச் செவிலியும் ஓரளவு சிறப்புடைய ளாவள். தாய் எனப் பொதுப்படக் கூறினமையின் செவிலி நற்றாய் என்ற இருவரும் உரியரே; ஆயினும், களவுக்குச் செவிலியே சிறந்து விளங்குகின்றாள். அவள் தலைவியை ஈன்ற நற்றாய்க்குத் தோழியாய்த் தலைவியைப் பிறந்த நாள்முதல் வளர்த்த பெருமை யுடையவள். தலைமகள்பால் காணப்படும் கற்பும் காமமும் நற்பாலொழுக்கமும் பிறவுமாகிய மாண்புகட்குச் செவிலியும் உரியளாவள். அதனால் அவட்குத் தலைவிபாலும் தலைவிக்கு அவள்பாலும் நெருங்கிய அன்புண்டு. காமம் சிறத்தலால் தலைவி தலைமகனொடு உடன்போகியவழி அவளது பிரிவு செவிலிக்கு மிக்க வருத்தத்தை விளைத்துவிடுகிறது. தலைமகளைத் தேடி ஊரெங்கும் நாடெங்கும் திரியும் செவிலியரும் உளர். இனி, தலைமகளது காதல்வாழ்வைக் குறித்துரைக்கும் அகப்பொருணூல் அவளது கற்புமாண்பை எடுத்துரைக்கிறது; அவளுடைய அறிவு செறிவு அருமை முதலியவற்றை அறி விக்கிறது. அவற்றின் விளக்கத்துக்கு அடிகோலிய இளமைச் செவ்வியையும் எடுத்தோதும் கடமை ஆசிரியர்கட்கு வருகிறது. அவர்கள் அதனைக் காட்டற்குச் செவிலியையும் தாயையும் வாயிலாகக் கொள்வர். ஆதலால் அகப்பொருணூலில் தாயர்க்குச் சிறந்த இடம் உண்மை பெறப்படும். உடன்போகியவழித் தலைவியின் செவிலிக்குப் பெருந் துயரம் உண்டாகிறது. அவளது உள்ளத்தில் தலைமகளுடைய குணஞ்செயல்கள் புலனாகின்றன; நெஞ்சக் கிழியில் தலைவியது குழவிப்பருவம் முதல் தவழ்ந்து மொழிபயின்று தளர்நடை கொண்டு வளர்ந்ததும் பிறவும் தோன்றுகின்றன; தலைவியின் உணவும் உடையும் உரையும் விளையாட்டும் உருக்கொண்டு நிற்கின்றன. மனக்கண்ணிற் காணும் செவிலியின் சிறந்த அறிவு அவற்றைச் செவ்வையாக உருப்படுத்தி வெளியிடுகிறது. தலைமகட்குச் சிறுபருவத்தே பாலுணவு தரப்படுகிறது. பாலில் தேன் கலந்து பொன்வள்ளத்திற் பெய்து தாயர் உண்பிக் கின்றனர். சிறிது உண்டதும் அஃது அவட்குத் தெவிட்டவும், அவள் உண்ண மறுத்து இங்குமங்கும் ஓடுகின்றாள்; அவள் பின்னே சென்று, “கூந்தல் உளரி மொழிமை 1” கூறித் தாயர் ஊட்டுகின்றனர். தலைவி சிறிது வளர்ந்தபின் பாலில் பொரியை ஊறவைத்துத் தேன்கலந்து கொடுக்கின்றனர். 2 பாலுணவை, ஒன்று தாய்க்குரியது, ஒன்று தந்தைக் குரியது, ஒன்று எனக்குரியது எனக் கூறுபாடு செய்து, “என்பாடு உண்டனை; தந்தைபாடு உண்க எனச் சொல்லி உண்பித்தல் 1 ஒருவகை. உண்டலை மறுத்து ஓடுங்கால் அச்சுறுத்தலும் ஒரோவழி உண்டு. இளமகளிர்க்குப் பொதுவாக உடுக்கும் உடையின்மேல் சிறப்பாக வயலைப்பிணையலும் அல்குலும் (மேகலை) புனை வர். முன்கையில் வளையும் காலில் அரிபெய்த சிலம்பும் அணியப் படுகின்றன. தலைமயிரை நெய்பெய்து வாரிப் பூவைத்துப் பின்னிவிடுவர். மனைமுன்றிலில் இட்ட மணற்பந்தரிலும், படப்பையி லுள்ள நொச்சிவேலியின் நீழலிலும் விளையாடும் தலைமகட்கு மனைப்புறத்திலுள்ள தெற்றியும் மனைநடுவண் படர்ந்துள்ள வயலைப் பந்தரும் விளையாட்டிடமாம். பந்து கழங்கு பாவை முதலியன தலைவியின் விளையாட்டுப் பொருள்கள். தன்னொத்த ஆயமகளிர் புடைசூழ இருந்து விளையாடுவது தலைவியது பேரியல்பு. 2 ஆண்டு சில கழிந்தும் இவ்விளையாட்டுக்களோடு தாழியில் வயலை குவளை முதலியன வைத்து வளர்ப்பதும், கிள்ளை வளர்த் தலும், பாவைக்குப் பலியூட்டலும் விளையாட்டாகின்றன.3 பொழில்களில் பூக்கொய்தலும் நீர் நிலைகளிற் படிந்தாடலும் கடற்கரையில் புணரியாடல் அலவனாட்டல் முதலியனவும் பின்னர் உண்டாகின்றன. தலைவி தன் காதலனோடு உடன்போகியவழி இவையாவும் செவிலியின் உள்ளத்தில் எழுகின்றன. அவள் செய்த தவறுகள் மறைந்து கெட, அவளது மென்மைப்பண்பு மேலோங்கி நிற்கிறது. அவள் சென்ற வெவ்விய சுரம் நினைவில் தோன்றுகிறது. வெஞ்சுரத்து வெயில் வெம்மையால் நீர்நிலைகள் வற்றிவிடுவ தால், ஆண்டுக் கிடக்கும் கலங்கல்நீர் சுவையில் உவர்ப்பா யிருப்பதும், அதனை வழிச்செல்வோர் வேட்கை மிகுதியால் உண்பதும் நினைக்கின்றாள். தலைமகள் அதனை உண்ணற்கு எத்துணை வருத்தம் கொண்டாளோ என எண்ணி ஏங்குகிறாள்; அப்போது அவள் தன் இளமையில் பாலுண்ணாது மறுத்த சொல்லும் வெறுத்த உள்ளமும் கொண்டு ஒழுகியது 1 நெஞ்சில் தோன்றித் துயர் செய்கிறது 2. அவள் சென்றவழி மாமலை விலங்கிய சுரம் என்பது அறிந்து, “பந்துவழி யோடினும் நனி நொந்து வெம்புபவள், வெவ்விய சுரநெறியை எவ்வாறு நடந்து சென்றாளோ?” என எண்ணிக் கண்ணீர் சொரிவள். “முன் பெல்லாம் பாலுண்ணாமலும் பந்தாடாமலும் விளையாடாய மோடு மேவித் திரிந்தவள், இப்போது நடத்தற்கரிய வெங்கானம் அவனோடு செல்வது எளிது என உணர்ந்தாள் போலும் 3” என வருந்துகின்றாள். தலைமகளது களவொழுக்கம் பற்றி ஊரில் எழுந்த அலரை நினைக்கின்றாள். “இவள் களவை, அவள்தாய் உவப்பதோ வெறுத்துத் தகுவன செய்வதோ செய்க என விடாமல், அம்பற் பெண்டிர் எனக்கு வந்து உரைத்தனர், அதனைக் கேட்கின் இவள் நாணுவள் என யானும் ஒன்றும் உரையே னாயினேன். அவளும் அதனைக் கரந்தே உறைந்தா ளாயினும், அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை எளிதாகல் இல்லை எனக் கருதி இளையோனாகிய அவனுடன் சென்றொழித்தாள்4 என அல ரெழுந்த காலை அவள் ஒழுகியதிறம் நினைந்து வருந்துகின்றாள். பின்னர் ஒருவாறு தேறி, “மடந்தைக்கும் காளைக்கும் உண்டாகிய நட்பு இவ்வுடன்போக்கால் உண்மையாயிற்று; 5 இது போதும்,” என எண்ணி அமைபவள், அவனும் அவளும் செல்லும் நெறியில் உள்ள சீறூர்க்கண் அவர்களை வரவேற்றுச் செல்விருந்தாற்றித் துச்சில் இருத்தும் மனைகெழு பெண்டாகுக யான் 6 என விழை வது அவளது மனமாண்பை வெளிப்படுத்துகின்றது. அதுவே சார்பாக, அவளது திருமணம் செவிலியின் நினை வுக்கு வருகிறது. மனைக்குப் பூவலூட்டிப் புதுமணல் பரப்பி எங்கணும் மாலை சூட்டித் 7 தமர் திருமணம் செய்ய முற் படுவதும், ஆயத்தாரும் தாயரும் ஒருபால் நின்று காணச் சான்றோர் முன்னே நிற்ப 1, அவளுடைய கையைத் தலைமகன் பற்றும் மணவினையை நினைக்கின்றாள்; நெஞ்சு கலங்குகிறது; கண்ணீர் ஆறாய்ப் பெருகுகிறது. இனி, தலைவியை ஈன்ற நற்றாயும் இவ்வாறு வருந்து கின்றாள். தலைமகளுடைய ஆயமகளிரையும் ஏனை விளை யாட்டுப் பொருள்களையும் காணுந்தோறும், அவட்கு அவை ஆறாத் துயரத்தைச் செய்யும். 2 அவள் பெரும்பாலும் மனையின் நீங்காத மாண்புடைச் செல்வியாதலின், மனையின் அகத்தும் புறத்தும் மகள் விளையாடிய நினைவு தோன்றி வருத்த வருந்திப் பிறர்க்கும் காட்டி, “ஒருமகளுடையேன்; அவளும் காளை யொருவனுடன் அருஞ்சுரம் நெருநல் சென்றாள்; அவள் ஆடிய தெற்றியும் நொச்சியும் கண்டு உள்ளினும் உள்ளம் வேகும் 3 ”என்று வருந்துகிறாள். தலைமகள் சென்ற சுரத்தின் கொடுமையைப் பிறர் கூறக் கேட்பின், “என்மகள் எனது அன்பு இயைவதாயின், அவள் செல்லும் வழி வம்பலரைத் தாங்கும் நன்மக்கள் வாழும் ஊர்களை உடையதாகுக 4” என்றும், “ஞாயிறு காயாது மரநிழல் பொருந்தி மணல் பரந்து மழை பெய்து குளிர்ந்திருப்பதாக 5” என்றும் விழைகின்றாள். தன்மனைக்கண் உள்ள செல்வத்தை நோக்கும் நற்றாய், அதனைப் பொருளென எண்ணாது தலைமகள் கழிந்தது அவட்கு மிக்க வருத்தத்தைச் செய்கிறது. சீரும் சிறப்பும் இன்றி வறுமையில் அவள் கிடந்து வருந்துவளோ என்ற வாட்டம் ஒருபால் அவள் உள்ளத்தை உருக்குகிறது. 6 அவள் வளர்த்த வயலைக்கொடியைக் கண்டு, “ஆரநீ ரூட்டிப் புரப்பவர், யார்மற்றுப் பெறுகுவை, அளியை நீயே 7” என ஒருபால் அவலமுறுவாள். ஒருகால் அவள் தவறு செய்தாளாக, அதற்காக அவளை ஒறுத்த தன் கையை நோக்கி, “அவளை அலைத்த என்கை கடுநவைப் படுக 8” என நொந்துகொள்வாள். மகள் நீங்கியதும் தன் உயிர் நீங்கவில்லை யென வருந்தி, உயிர் கொள்ளாதொழிந்த கூற்றை வெகுண்டு, “மாயிருந், தாழி கவிப்பத் தாவின்று கழிக எற் கொள்ளாக் கூற்றே 1” என்றும் கூறுவள். அவள்பிரிவை நினைக்கும்போது தலைமகன் நினைவும் உடன்தோன்றுகிறது. மகள்பாற் செல்லும் அன்பு அவன்பால் சினமாகிறது. தணிந்த பருவத்திற் செல்லாது வெதிர்நெல் விளை யும் வேனில் வெங்கானத்தில் கொண்டு தலைக் கழிந் தானே 2 எனக் கொதிக்கின்றாள். மகட்குத் தாயாகிய என்னைப் போலவே என்மகளைக் “கொண்டுடன் போக வலித்த, வன்கட் காளையை ஈன்ற தாய் பெருவிதுப்புறுக 3” என வெதும்புகின்றாள். உடன்போகிய தலைமகட்குத் தலைவன்மனையில் திரு மணம் நடக்கும் செய்தி வரக் கேட்டதும் அவள்வடிவு முற்றும் ஆர்வமாய் விடுகிறது. அம்மடநல்லாளை ஈன்றமைபற்றி என்பால் அருளானாயினும், அவளைப் பன்னாள் கூந்தல் வாரி நுசுப்பிற் சுமந்து ஓம்பிய உதவியுடையேன் எனச் சொல்லி, வேலனை வருவித்து, “வேலனே, உன் கழங்கு நோக்கிச் சொல்: எனக்கு மகளைக் காணாமையால் கண்ணுறக்கம் இல்லை; யான் இனிது உறங்க அவன் அவளை இங்கே கொணர்வானாயின், அவளை என்மனை முந்துறக் கொணர்வானோ? தன்மனைக்கு உய்ப்பானா, அவன் குறிப்பு யாது? 4” என்று கேட்கின்றாள். திருமணம் நினைவிலெழுதலும், திருமணத்தில் தாயாகிய தான் தலைவியின் மடமை பாராட்ட, அவன் தாய் அவனது செம்மல் கண்டு அதற்குரிய சிறப்புச் செய்ய நிகழும் மனைவினை தோன்றி வருத்துகிறது5. திருமணத்துக்கு முன்னணியாக நடை பெறும் சிலம்புகழி நன்மணம். தன் மனைக்கண் நிகழாமையைப் பன்முறையும் எண்ணிச் 6 “சிலம்பு கழீஇய செல்வம், பிறருணக் கழிந்தது 7” எனக் கையற்று வருந்துவாள். இனி வரும் பாட்டுக் களிலும் இன்னோரன்ன கருத்துக்களைக் காணலாம். 371. மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி யினிய வாகுக தில்ல அறநெறி யிதுவெனத் தெளிந்தவென் பிறைநுதற் குறுமகள் போகிய கானே. இது, தலைமகள் புணர்ந்துடன் போகியவழி, நற்றாய் “உடன் போக்கு அறநெறி” என்று மகிழ்ந்து கூறி, அங்ஙனம் கூட்டிய நல்வினையைத் தன்னெஞ்சிற்கு விளக்கிப் புலம்பியது. உரை : மள்ளர்கள் செய்யும் முழக்கத்துக்குத் தக மயில் ஆலும் நெடிதா யுயர்ந்த குன்றத்தில் ஒலிக்கின்ற முகில் மழை பெய்த லால், அதனைச் சார்ந்த சுரம் வெம்மையே யின்றி இனிமை யுடைத்தாகுக, தலைமகனோடு உடன்போகுதலாகிய இஃது அறநெறியே எனத் தெளிந்து சென்ற என்னுடைய பிறை போலும் நெற்றியினையுடைய இளைய மகள் போகிய கான மாதலான் என்றவாறு. மள்ளர், சுரத்தின்கண் வாழும் மறவர். அவரது பறை முழக்கிற் கேற்ப மயில் தோகையை விரித்தாடும் என்றாராயினும், மயில் ஆடுதற் கேற்ப மள்ளர் பறைகொட்டுவரென்பது கருத்தாகக் கொள்க. ஆலுதல், ஆடுதல். ஆலுதல் அகவுத லாயின், மள்ளர் கொட்டில் என்றதற்கு மள்ளரது படைக்கொட்டிலின் மேலிருந்து மயில் அகவும் என்று உரைக்க. பெயல் கருதி முழங்கும் கரு முகிலைப் படுமழை என்ப; “படுமழை உருமின் முழங்கும் 1” என்பது காண்க. சுரம் மழைதலைஇ இனிய வாகுக என்று இயையும். தில், விழைவுப்பொருட்டு. இது, தலைமகனுடன் கொண்டுதலைக்கழியும் இவ்வொழுக்கம். கான், கானம். “சுரன் அணி கொண்ட கானம் 2” என்றது காண்க. தேற்றேகாரம் விகாரத்தால் தொக்கது. காதலன் கருத்தின்வழி யொழுகும் கற்பு மேம்பட்டாள் என மகளது செயல்மாண்பினை உள்ளுறுத்து உரைத்தலின், கற் புடைய பெண்டிர் இருந்த நாட்டில் மழை வறங்கூராது என்பது பற்றிச் சுரம் நனி இனியவாகுக தில்ல என்றாள். மள்ளர் கொட்டுக்குத் தக மயில் ஆலும் என்றது, தலைமகன் வேட்ட தனையே தலைமகளும் வேட்டொழுகுகின்றாள் என்றவாறு; இந்நெறிமை அவள்பால் இல்லையாயின் உடன்போக்கு நிகழாது என அறிக. தலைமகள் உடன்போதற்குக் காரணம் பல்லாற்றானும் ஆராய்ந்தாட்கு, முன்னை நல்வினை கூட்டத் தலைமகனோடு உடன்சென்று கற்புப் பூண்டு அவனோடு நிகழ்த்தும் ஒழுக்கமே இருமையும் பயத்தற் சிறப்புடைய நல்லறம் என உணர்ந்தாள் என்பது விளங்கினமையின், அறநெறி இதுவெனத் தெளிந்த என்றும், அங்ஙனம் உணரும் முதுக்குறைவுடைய ளாயினும் சுரத்தின் கொடுமையை ஆற்றும் மதுகையிலள் என்பாள், பிறை நுதற் குறுமகள் என்றும், அறநெறி யுணர்ந்து அதனைக் கடைப் பிடித்துச் செல்வார்க்கு நோய்தருவன இல்லை யெனினும், தாய்மையால் சுரத்தின் கொடுமை நோக்கி இரங்குகின்றாளா கலின், சுரம் நனி இனிய வாகுக என்றும் கூறினாள். “இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின், சிறந்தானை வழிபடீஇச் சென்றனள், அறந்தலை பிரியா ஆறுமற் றதுவே 1” என்றும், “புணர்ந்துடன் போதல் பொருளென, உணர்ந்தேன் மன்றஅவர் உணரா வூங்கே 2” என்றும் கூறினார் பிறரும். தேற்றேகாரம் விகாரத்தால் தொக்கது. வேனிலால் வெவ்விதாய சுரம் இனிதாதற் பொருட்டுக் குன்றம் படுமழை தலைஇச், சுரநனி இனிய வாகுக என்றது வாழ்த்துமாம்; “ஞாயிறு காயாது மரநிழற் பட்டு, மலைமுதற் சிறுநெறி மணல்மிகத் தாஅய்த், தண்மழை தலையின் றாக நந்நீத்துச், சுடர்வாய் நெடுவேற் காளையொடு, மடமா வரிவை போகிய சுரனே 3” என்று பிறரும் கூறுவது காண்க. இதனுள் “அறநெறி இதுவெனத் தெளிந்த என்மகள்” என்று தாய் கூறவே, உடன்போக்குத் தருமமென்று மகிழ்ந்துகூறி அங்ஙனம் கூட்டிய நல்வினையைத் தன் நெஞ்சிற்கு விளக்கிப் புலம்பியவாறு காண்க என்பர் நச்சினார்க்கினியர். 4 372. என்னு முள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையொ டழுங்கன் மூதூ ரலரெழச் செழும்பல குன்ற மிறந்தவென் மகளே. இது, தலைமகள் உடன்போகியவழி, நற்றாய் தன் ஒழுக்கத் தால் ஊர் அலரெடுத்து உரைத்தலை நினையாது, சென்றவள் என்னையும் உள்ளினள்கொல்லோ வெனக் கவன்றுரைத்தது. உரை : தன்னை நெஞ்சு கொள்ளுமாறு தகுவன கூறித் தெளி வித்துக் கொண்டுதலைக்கழிந்த வஞ்சினத்தை யுடைய காளை போல்வானுடன், யான் அழுங்குதற் கிடனாகிய இப்பழைய வூரார் அலர் கூற, அதனை நினைத்தலும் செய்யாது, செழித்த பலவாகிய குன்றங்களைக் கடந்து சென்ற என்மகள் தான் போகியவழியில் என்னையும் நினைந்தாள் கொல்லோ? அறியேன் என்றவாறு. நெஞ்சுண்டல், மனத்துட் கோடல். வஞ்சினம், கடுஞ்சூள். “எஞ்சா வஞ்சினம் நெஞ்சுணக் கூறி 1” என்றார் பிறரும். காளை போல்வானைக் காளை யென்றார்; இது திணைநிலைப்பெயர். உள்ளாமை யுணரநின்றமையின், உம்மை, எதிர்மறை. அழுங்கன் மூதூர் பேரொலியினையுடைய மூதூர் எனினுமாம்; “உறைவினி தம்மவிவ் வழுங்க லூரே 2” என்றார் பிறரும். மிக்க இளமையும் மடப்பமு முடையவளாய்த் தோழியர் தாயர் ஆகிய இவரைப் பிரியாதிருந்தாள், பிரிவச்ச மின்றிப் போக்குடன்பட வேண்டுதலின், தன்னை நெஞ்சுணத் தேற்றிய என்றும், அங்ஙனம் தேற்றத் தேறியவள் ஊரார் கூறும் அலர்க்குச் சிறிதும் உட்காது சென்றதனை நினைந்து வியப்பாளாய், அழுங்கல் மூதூர் அலரெழ என்றும், அவ்வலருரைக்கு நாணி யாம் ஈண்டு இருந்து வருந்தாநிற்ப, அழுங்கல் இயல்பாக வுடைய மூதூர் எடுத்த அலரைப் பொருளாகக் கொள்ளாமையின், அவ்வூரொடு அதன்கண் உறையும் எம்மையும் துறந்தொழிந்தாள் போலும் என்பாள், செழும்பல் குன்றம் இறந்த என்மகள் என்றும், எதனை நினையாளாயினும் ஈன்று புறந்தந்த தன்னை மறத்தற்கு ஏது ஒன்றும் காணாளாய், என்னை நினைந்தாள் கொல்லோ வென்று தன் ஆராக் காதலால் அலமருகின்றாளா கலின், என்னும் உள்ளினள் கொல்லோ என்றும் கூறினாள். அன்னை அறியின் தனக்கு இம்மனையில் உறைதல் துன்ப மாம் எனக் கருதி நீங்கினா ளாகலின், ஈண்டு உறையும் அன்னை யாகிய தன்னை அவள் துறந்தாலன்றி, உடன்போக்குக்கு உள்ளம் செல்லா தென்பது பற்றி இவ்வாறு நினைந்தாள் என்றுமாம். “அன்னை யறியின் இவணுறை வாழ்க்கை, எனக்கெளி தாகல் இல்லெனக் கழற்கால், மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப், பன்மலை யருஞ்சுரம் போகிய தனக்கு 1” என்று பிறரும் கூறுதல் காண்க. உம்மை காதற்சிறப்புணர நின்றமையின் சிறப்புமாம். ஆகவே, நற்றாய்மாட்டு நினைதல் என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. “இஃது என்னை நினைப்பாளோ என்றது” என்பர் நச்சினார்க்கினியர். 2 இது தலைமகள் கொடுமை நினைந்து கூறிய தென்பர் இளம்பூரணர் 3. 373. நினைத்தொறுங் கலிழு மிடும்பை யெய்துக புலிக்கோட் பிழைத்த கவைக்கோட்டு முதுகலை மான்பிணை யணைதர வாண்குரல் விளிக்கும் வெஞ்சுர மென்மக ளுய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே. இது, தலைமகளைத் தலைமகன் கொண்டுகழிந்த கொடுமை நினைந்து நற்றாய் சொல்லியது. பழைய உரை : இவட்காக யான் பட்ட துயரம் அவன் தாயும் படவேண்டும் என்றவாறு. உரை : புலியாற் கொள்ளப்படுதலிற் பிழைத்த கவைத்த கொம்பு களையுடைய முதிய கலைமான் தன் பிணைமான் தன்னை யடையுமாறு ஆண்குரலை யெடுத்தழைக்கும் வெவ்விய சுரத்தின்கண், என்மகள் செல்லுமாறு செய்த புதிய மூங்கி லாற் செய்யப்பட்ட வலிய வில்லினையுடைய விடலைக்குத் தாயாகியவள் நினைக்குந்தோறும் என்போல் கண்ணீர் வாரும் துன்பத்தினை எய்துவாளாக என்றவாறு. நினைக்குந்தோறும் நெஞ்சு கலங்கிக் கண்ணீர் சொரியப் பெருகும் துன்பம் நினைத்தொறும் கலிழும் இடும்பை எனப் பட்டது. கவைக்கோடு, கிளைத்த கொம்புகள். புலி முழக்கம் கேட்டு அஞ்சிச் சிதறி யோடிய பிணைக்குத் தான் உய்ந்தமை தெரிவித்து அழைக்குமாறு தோன்ற, மான்பிணை அணைதர ஆண்குரல் விளிக்கும் என்றார். ஆண்மை தோற்றுவிக்கும் குரல் ஆண்குரல் எனப்பட்டது. அது கேட்டு மானினம் ஒருங்கு திரளும் என அறிக. “கெடுமான் இனநிரை தரீஇய கலையே, கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்கும் 1” எனப் பிறரும் கூறுப. அம்புக்குக் கடுமையும் சிறப்பும் அதனைச் செலுத்தும் வில்லின் வன்மைமேல் நிற்றலின், வம்பமை வல்வில் என்றார். வம்பு, புதுமை. தன் மகளது போக்கினை நினையுந்தோறும், சுரத்திடை விலங்கு புள் வெயில் வெம்மை முதலியவற்றாலும், தேடிப் பின்சென்ற தந்தை தன்னையர் என்று இவராலும் அவள் தீங் கெய்துகின்றனளோ என்னும் ஐயமும் கலக்கமும் தோன்றி மனத்தை அலைத்தலின், நினைத்தொறும் கலிழும் இடும்பை யென்றாள். தலைமகளின் தந்தை தன்னையர் பெருஞ்சினங் கொண்டு சேறலின் அவரால் தீங்கு விளையு மென அஞ்சினாள்; “அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து, ஒருபக லெல்லாம் உருத்தெழுந்து ஆறி, இருவர்கட் குற்றமும் இல்லை யால் என்று, தெருமந்து சாய்த்தார் தலை 2” என்பது காண்க. இது “நன்மை தீமை அச்சம் சார்தலென் றன்னவை பிறவும்” என்புழிக் கூறிய அச்சம். இதன்கண் நற்றாய்மாட்டுப் பொறாமை யென்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. “விழவுத் தலைக் கொண்ட பழவிறன் மூதூர்ப், பூங்க ணாயம் காண்டொறும் எம்போற், பெருவிதுப் புறுக மாதோ எம்மிற், பொம்ம லோதியைத் தன் மொழிக் கொளீஇக், கொண்டுடன் போக வலித்த, வன்கட் காளையை யீன்ற தாயே1” எனப் பிறரும் கூறுதல் காண்க. 374. பல்லூழ் நினைப்பினு நல்லென் னூழ மீளி முன்பிற் காளை காப்ப முடியகம் புகாஅக் கூந்தலள் கடுவனு மறியாக் காடிறந் தோளே. இது, தலைமகள் உடன்போகியவழி அவள்இளமை நினைந்து இரங்கித் தாய் கூறியது. உரை : பலமுறை ஆராயினும் இவ்வுடன்போக்கு நன்முறையே யென்று கருதி, மீளிபோலும் வலியினையுடைய காளைபோல் வான் காவல் செய்ய, முடியிடுதற்குரிய நீட்சி பெறாத கூந்தலை யுடையவளாகிய என்மகள், குரங்குகளாலும் புகுந்தறியப் படாத காட்டினைக் கடந்து சென்றனள்; அவளது அறிவிருந்த வாறு என்? என்றவாறு. பல்லூழ், பன்முறை; “பல்லூழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரல். 2” நல்லென் ஊழ, நல்ல எனப்படும் ஊழ்; நல்லூழ் என்றவாறு; என்றென்பது எஞ்சி நின்றது. இவ்வூழ் இருவருக்கும் ஒத்தலின் பொதுப்படக் கூறினார். மீளி முன்பின் காளை, கூற்றை யொத்த வலியினையுடைய காளை. மீளி, கூற்று. பெண்மைச் செவ்வி எய்துங் காலத்து மகளிர்க்குக் கூந்தல் நன்கு முடித்தற்குரிய வளர்ச்சி பெறும் என்பது பற்றி முடியகம் புகாஅக் கூந்தல் என்றார்; “தலைமுடி சான்ற தண்டழை யுடையை. அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் 3” என இற்செறிக்கு மாற்றாலும் இஃது அறியப்படும். கடுவனும் அறியாக் காடு என்றது, “மந்தியு மறியா மரம்பயி லடுக்கம் 4” என்றாற் போல. உம்மை, சிறப்பு. எம்முறையான் ஆராயினும், மகளிர் உற்றார்க்கே உரிய ரென்னும் நன்முறையே பெறப்படுதலின், பல்லூழ் நினைப் பினும் நல்லென் னூழ என்றும், கூந்தலும் நன்கு வளராத இளமை யுடையவ ளென்றற்கு, முடியகம் புகாஅக் கூந்தலள் என்றும் கூறினாள். இது தன்மை யென்னும் மெய்ப்பாடாம். இனி, காடிறந்தோள் செயல் என ஒரு சொல் வருவித்து நல்ல வென்ற முறையினவாம் என்று முடித்தலுமாம். ஆயினும், அவள் முடியகம் புகாக் கூந்தலளென ஆக்கம் வருவித்து உரைப்பினும் அமையும். பன்மை வாய்பாட்டாற் கூறியது, அறிவறிதலும் அஞ்சாது சேறலும் நோக்கி என்க. தன் மகள் காடு இறந்தமைக் குரிய காரணத்தைப் பன்முறை நோக்கி அவளது அறிவு விளங்கக் கண்டு அமைந்தா ளாயினும், முடியகம் புகாக் கூந்தலள் என அவளது இளமைச் செவ்வி நினைவின்கண் நிலவுதல் பற்றி, “இளமை நினைந்து கூறியது” எனத் துறை கூறிற்று. பிறாண்டும், மகள் கூந்தல் முடியகம் புகாமை நினைந்து, “சந்துவளர் வணர் குரல் வாரி வகைவகுத்து, யான்போது துணைப்பத் தகரம் மண்ணாள், தன்னோ ரன்ன தகைவெங் காதலன், வெறிகமழ் பன்மலர் புனையப் பின்னுவிடச், சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல் 1” எனத் தாய் வருந்திக் கூறுமாறு காண்க. 375. இதுவென் பாவை பாவை யிதுவென அலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதற் பைங்கிளி யெடுத்த பைங்கிளி யென்றிவை காண்டொறுங் காண்டொறுங் கலங்க நீங்கின ளோவென் பூங்க ணோளே. இது, சேரியும் அயலும் தேடிக் காணாது வந்தாரைக் கண்டு தலைமகள்தாய் சொல்லியது. உரை : இப்பாவை என் பாவைபோல்வாள் வைத்தாடும் பாவை யாகும் என்றும், இக்கிளி சுழன்ற நோக்கத்தையுடைய அழகு மிக்க ஒளி பொருந்திய நெற்றியினையுடைய பசிய கிள்ளை போல்வாள் வளர்த்த பசிய கிளி என்றும் கூறி, யான் இவற்றைக் காணுந்தோறும் கலங்கி வருந்த, என் அழகிய கண்களை யுடைய மகள் பிரிந்து சென்றனள் போலும். என்றவாறு. முதற்கண் நின்ற பாவையும் பைங்கிளியும் தலைமகளைக் குறிப்பன. அலமரல், சுழலுதல். நலம், அழகு. என்றிவை, என்ற இவை; அகரம் விகாரத்தால் தொக்கது. காணும் கண் கலங்கி நீர்சொரிவது பற்றி, கலங்க எனப் பொதுப்படக் கூறினார். பூங்கண், பூப்போலும் கண்; “பூ வென் ஒருபெயர் ஆயியல் பின்றே, ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே 1” என்றமை யின், மெல்லெழுத்துப் பெற்று முடிந்தது; “பூங்கண் ஆயம் 2” எனப் பிறரும் கூறுதல் காண்க. தலைமகனோடு களவுநெறிக்கண் ஒழுகுங்கால் தன் செயல் மனையவர்க்குப் புலனாகுமோ எனக் கணந்தோறும் அஞ்சி அலமந்து ஒழுகினாளாகலின், அவளது பார்வையை, அலமரு நோக்கு என்றும், தலைமகன் கூட்டத்தால் தலைவியின் சுடர் நுதல் அழகுமிக்குத் திகழ்ந்தமை தோன்ற, நலம் வரு சுடர் நுதல் என்றும் கூறுகின்றாள். தன் அன்புடைய மகளைப் பிரிந்தவள், அவள் விரும்பிப் போற்றிய பாவையும் கிள்ளையும் காணுந்தோறும் அவள் நினைவெழுந்து வருத்துதலின், காண்டொறும் காண்டொறும் கலங்க என்றும், தேடிச் சென்றார் அவள்நிலையறிந்து வருவ ரென்று எண்ணியிருந்தவள், அங்ஙனம் வாராமையால் நீங்கினளோ என்றும் கூறினாள். பயிலிடமும், பயில் பொருளும் தனித்தனி நோக்குந்தோறும் வருத்துதலின், காண்டொறுங் காண்டொறும் என அடுக்கிக் கூறினாள். இதனால் தாய்பால் அரற்று என்னும் மெய்ப்பாடு தோன்றுதல் காண்க. தலைவி பலியிட்டுப் பரவியது பாவை; பாலூட்டி வளர்த் தது கிள்ளை. பாவை பலிபெறாமையும் கிள்ளை பாலுண்ணா மையும் கண்டு வருந்தியவாறு; “செந்தார்க் கிள்ளையும் தீம்பால் உண்ணா, கேழ்கொளக் காழ்புணர்ந்தியற்றிய வனப்பமை நோன்சுவர்ப், பாவையும் பலியெனப் பெறாஅ நோய்பொர, இவைகண் டினைவதன் றலையும் நினைவிலேன் 1” எனத் தான் கலங்கி மொழிவது காண்க. இது தேடிக்காணாது வந்தாரைக் கண்டு புலம்பியது என்பர் நச்சினார்க்கினியர் 2. இது சேரியோரை வினாயது என்பர் இளம்பூரணர் 3. இனி, “இதுவென் பாவைக் கினியநன் பாவை, யிதுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி, யிதுவென் பூவைக் கினியசொற் பூவையென், றலம்வரு நோக்கி னலம்வருஞ் சுடர்நுதல், காண் டொறுங் காண்டொறுங் கலங்கி, நீங்கின ளோவென் பூங்க ணோளே” என்பது பாடமாயின, 4 நன்பாவை யென்றும், பைங்கிளி யென்றும், சொற்பூவை யென்றும், காண்டொறுங் காண்டொறுங் கலங்க, சுடர் நுதலையுடையளாகிய பூங்க ணோள் நீங்கினளோ வென்று செய்தெனெச்சத்தைத் திரித்து முடித்துரைக்க. 376. நாடொறுங் கலிழு மென்னினு மிடைநின்று காடுபடு தீயிற் கனலியர் மாதோ நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை யுண்கண் மடவரற் போக்கிய புணர்த்த வறனில் பாலே. இது, தலைமகள் போயவழி நற்றாய் விதியை வெகுண்டு சொல்லியது. உரை : நல்ல செய்வினை அமைந்த நெடிய மனைக்கண் உறையும் நமர் கல்லென்று கலங்கி வருந்தப் பூப்போலும் மையுண்ட கண்களையுடைய மடப்பம் பொருந்திய மகள் போதற்கு ஊக்கிய அறப்பண்பில்லாத தீவினைப்பால், நாடோறும் யான் கலுழ்ந்து வருந்துமாறு போல, காட்டிடையே நின்று அதன் கண் தோன்றிய தீயிடைப்பட்டு எரிந்தொழியுமாக என்றவாறு. இடை, சுரத்தின் இடைநிலம். கனலுதல், ஈண்டு வெந்து கெடுதல். நல்வினை, நல்லவேலைப்பாடு. இனி, நல்வினைப் பயனாக விளையும் செல்வமும் இன்பமும் பொருந்திய நுகர்ச்சிக் கமைந்த பெருமனை என்றற்கு நல்வினை நெடுநகர் என்றுமாம். நகர், வீடு, ஈண்டு ஆகுபெயரால் நகர்க்கண் உறையும் தமர்மேல் நின்றது. புணர்த்தல், நினைக்கப்பண்ணிச் செயலிடை ஒன்று வித்தல். அறன், ஈண்டு அருளறம் குறித்து நின்றது. தலைமகளை விடாது தொடர்ந்து சேறற்கண் தன்னெஞ்சும் பாலும் ஒத்தமையின், என்னினும் என்றும், சிறிதும் எஞ்சாமல் வெந்து நீறுபட்டழிதல் குறிப்பாதலின் காடு படு தீ என்றும் கூறினாள். செல்வ நெடுமனைக்கண் இனிதிருந்த தன்மகள் அதனின் நீங்கி வெஞ்சுரத்துச் சேறற்குக் காரணம் ஊழ் என ஓர்ந்து உரைப்பாள், போக்கிய புணர்த்த என்றும், அறமல்லவை ஒன்றும் செய்தறியார்க்கு அவற்றைச் செய்தார்க்கு எய்தற் பாலதாய துன்பத்தை எய்துவித்தல், பால் வரை தெய்வத்திற்குப் பாங்கன்று என்பாள், அறனில் பாலே என்றும், அதனால் அதனை ஆற்ற ஒறுத்தல் ஆவதே யென்னும் கருத்தால், காடுபடு தீயிற் கனலியர் மாதோ என்றும் கூறினாள். கூறவே, தாய்மாட்டு உயிர்ப் பென்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. நல்வினைப் பயனாகப் பெற்ற நெடுமனை வாழ்க்கையில் இராது தீவினைப் பயனாக வெஞ்சுரம் நடந்து வருந்தச் செய்தல் பற்றி ஊழ்வினைப் பாலை, அறனில் பால் என்னும் நயம் காண்க. “இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க. பால், பழவினை” என்பர் நச்சினார்க்கினியர் 1. 377. நீர்நசைக் கூக்கிய வுயவல் யானை இயம்புணர் தூம்பி னுயிர்க்கு மத்தம் சென்றனண் மன்றவென் மகளே பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே. இது, தலைமகள் உடன்போயவழி அவள் பந்து முதலாகிய கண்ட நற்றாய் கலங்கிச் சொல்லியது. உரை : நீர்வேட்கை மீதூர்ந்து வருந்தும் யானை வங்கியம் என்னும் இசைக்கருவியின் தூம்புபோலத் துதிக்கையினை யுயர்த்திப் பிளிறும் வழியின்கண், என்மகள், பந்தும் பாவையும் கழங்கும் முதலாகப் பல விளையாட்டுப் பொருள்களையும் யான் கண்டு வருந்துமாறு விட்டுவைத்துச் சென்றனள் என்றவாறு. உயவல், வருத்தம். ஊக்கிய யானை யென்க. “நீர்நசைக் கூக்கிய உயவல் யானை 1” எனப் பிறரும் கூறுப. நீர்நசைக்கு ஊக்கிய யானை என்பதற்கு நீர்வேட்கையான் அது பெறுதலை மேற்கொண்ட யானை எனினுமாம். “உடலுநர் உட்க வீங்கிக் கடலென, வான்நீர்க்கு ஊக்கும் தானை 2” என்பதனால் அறிக. நீர்வேட்கை மிக்கு அதனைப் பெறுதலைக் கருதி உள்ளம் எழுந்ததாயினும், உடல் தளர்ந்து செல்லமாட்டாமையின் வருந்துமாறு தோன்ற உயவல் யானை என்றார். பல்வகை இயங்களின் இடையே இசைக்கப்படுவது பற்றி நெடுவங்கியம் ஈண்டு, இயம்புணர் தூம்பு எனப்பட்டது. “பாடின் தெண்கிணை கறங்கக்...... குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந் திசைப்பத்..... தேரை யொலியின் மாணச் சீரமைத்துச், சில்லரி கறங்கும் சிறுபல்லியம் 3” என்பது காண்க. தூம்பு யானையின் கைபோலும் என்பதை “ஓய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை, தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும், அத்தம் 4” என்று பிறரும் கூறுவர். விளையாட்டுப் பொருள்களை விரும்பிப் போற்றும் இளமை கழிந்து அறிவறியும் செவ்வி யெய்தித் தன் கடன் அறிந்து உடன் போக்குத் துணிந்தனளாகலின், சென்றனள் மன்ற என் மகளே என்றும், தன்மகள் பேணிய பொருள்களைத் தான் காண்டொறும் வருத்தம் மிகுதலின், பந்தும் பாவையுங் கழங்கும் எமக்கு ஒழித்தே என்றும் கூறினாள். பிறரும், “உள்ளின் உள்ளம் வேமே உண்கண், மணிவாழ் பாவை நடைகற் றன்ன என், அணி மயிற் குறுமகள் ஆடிய, மணியேர் நொச்சியும் தெற்றியும் கண்டே 5” எனவும் கூறுதல் காண்க. “பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும், ஆயமும் ஒன்றும் இவைநினையாள் பால்போலும், ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின், காய்ந்து கதிர்தெறூஉங் காடு 1” எனவும் கூறுதல் காண்க. 378. செல்லிய முயலிப் பாஅய சிறகர் வாவ லுகக்கு மாலையாம் புலம்பப் போகிய வவட்கோ நோவேன் றேமொழித் துணையிலள் கலிழு நெஞ்சின் இணையே ருண்க ணிவட்குநோ வதுவே. இது, தலைமகள் உடன்போயவழி, அவள்தோழி ஆற்றாமை கண்ட நற்றாய் சொல்லியது. உரை : செல்லுதற்கு முயன்று பரப்பிய சிறகுகளையுடைய வாவல் விரும்பிச் செல்லும் மாலைக்காலத்து, யாம் புலம்பெய்துமாறு எம்மைப் பிரிந்து சென்ற மகளை நினைந்து அழுவேனல்லேன்; இனிய மொழியினையுடைய துணைவியை யின்றி வருந்தி இனையும் நெஞ்சினோடு இணையொத்த மையுண்ட கண் களையுடைய தோழியாகிய இவள் பொருட்டே புலம்புவே னாயினேன் என்றவாறு. பகற்காலத்துச் சேறலாகாமையின், செல்லிய முயலிப் பாய சிறகர் என்றும், மாலைப்பொழுதே வாவற்கு இரை தேர்தற்குரிய காலமாகலின், வாவல் உகக்கும் மாலை என்றும் கூறினார். “பையுள் மாலைப் பழுமரம் படரிய, நொவ்வுப்பறை வாவல் 2” என்ப. அவள், இவள் என நின்ற சுட்டுக்கள் முறையே தலை மகளையும் தோழியையும் குறித்தன; செய்யுளாதலின் சுட்டு முற்பட வந்தது. ஓகாரம் சிறப்பு. நோவேன்: குறிப்பால், நோதலின் மிகுதி யுணர்த்திற்று, “என்மகள் கழிந்ததற்கு அழிந் தன்றோ விலன் 3” என்றாற் போல. தேமொழித்துணை, தீவிய மொழி வழங்கும் துணைவி. பகற்போதில் பரந்த உலகின்கண் காணப்படும் நிகழ்ச்சிகளில் விரிந்து நிற்கும் மனமும் கண்ணும் மாலைப்போதில் சுருங்கி மனையகத்தே ஒடுங்கி நிற்றலான், அக்காலத்தே பிரிந்தோரது பிரிவு பெரிதும் வருத்துமாதலின், மாலை யாம் புலம்பப் போகிய அவள் என்றாள். “நின்தோழி, திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு, பெருமலை யிறந்தது நோவேன் 1” எனத் தாய் பிறாண்டும் கூறுவது காண்க. உடனிருந்து உடன்வளர்ந்து உடன்விளையாடி இன்மொழி வழங்கி இன்புறுத்திய தோழியாகிய தலைவியைப் பிரிந்து யாரொடும் சொல்லாடாது தனித்திருந்து வருந்துதலின், தேமொழித் துணையிலள் கலிழும் என்றும், தன்னினும் தோழி எய்தும் வருத்தம் பெரிதாதல் காண்டலின், இணையேர் உண்கண் இவட்கு நோவதுவே என்றும் கூறினாள். தானுறு துயரத்தினும் பிறர் துயரம் துடைத்தல் தகவுடைத் தென்னும் முறைமையால் இவட்கு நோவதுவே என்றாள் எனினுமாம். இஃது அருள் என்னும் மெய்ப்பாடு. இது தோழி தேஎத்துப் புலம்பல் என்பர் நச்சினார்க்கினியர். 2 379. தன்னம ராயமொடு நன்மண நுகர்ச்சியின் இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை இனக்களிறு வழங்குஞ் சோலை வயக்குறு வெள்வே லவற்புணர்ந்து செலவே. இது, புணர்ந்துடன்போகியவழித் தோழி அறத்தொடு நிற்பக் கேட்ட நற்றாய், “அதனை முன்னே அறிவித்து நாம் மணம் புணர்த்த ஒழுகாது போயினள்” என நொந்து சொல்லியது. உரை : குளிர்ந்த மலைக்கண்ணே கூட்டமாகிய யானைகள் இயங்கும் சோலைகளின் வழியே, விளக்கம் மிக்க வென்றி தரும் வேலையுடையவனோடு புணர்ந்துடன்சேறல், தன்னால் விரும்பப்பட்ட ஆயமகளிர் சூழ நாம் புணர்க்கும் நன்மணத் திடைப் பெறலாகும் இன்பநுகர்ச்சியினும் இனிதாகுங் கொல்லோ? என்றவாறு. செலவு, நுகர்ச்சியின் இனிதாங் கொல்லோ எனக் கூட்டுக. அமர்தல், விரும்புதல். இன்: ஒப்புப்பொருட்டு; உறழ்ச்சியு மாம். தனக்கென்றது, தலைமகட்கு. புணர்ந்தென்னும் செய் தெனெச்சம் செலவென்னும் வினைப்பெயரிடத்து வினை காண் டது. கொல்: ஐயம். ஓகாரம்: அசைநிலை. வடித்துக் கூரிதாக்கி நெய் தடவப்பெற்றுண்மையின், வெள்வேல் எனப்பட்டது. தலைமகட்குத் தலைமகனோடு உளதாகிய நட்பினை முன்னே தனக்கு அறிவித்துத் தான் மணம் புணர்த்த ஒழுகாது போயினா ளென்னுங் கருத்தால், பெற்றோரும் உடன்பயின்ற ஆயத்தோரும் ஒருங்கு கூடி நுகர்விக்கும் இன்பத்தினும், அவ ரல்லாத புதுவோர் புணர்க்கும் இன்பம் சிறப்புடைத்தன்று என்பாள், இனிதாங் கொல்லோ என்றாள். “தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல், என்னோ ரன்ன தாயரும் காண....... பொன்னுடை நெடுநகர்ப் புரையோர் அயர, நன்மாண் விழவின் தகரம் மண்ணி, யாம் பல புணர்ப்பச் சொல்லாள் 1” என்று பிறரும் கூறுதல் காண்க. மணத்திடைப் பெறும் நுகர்ச்சியே இனிதென்னும் கருத்தின ளாதலின், நன் மணம் என்றாள். நன்மண நுகர்ச்சி போலப் புணர்ந்துடன் போகிய செலவும் இனிதாயின் போதல் வேண்டா; போதலால் ஈண்டைய மணநுகர்ச்சியினும் ஆண்டைய இனிமை பெரிதாம் போலும் என்பது எய்துதல் கண்டு, இனிதாம் கொல் என்றாள் என்க. 380. அத்த நீளிடை யவனொடு போகிய முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவரல் தாய ரென்னும் பெயரே வல்லா றெடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே. இது, தலைமகள் உடன்போகியவழித் தெருட்டுவார்க்குச் செவிலித்தாய் கூறியது. உரை : நீண்ட வழியினையுடைய சுரத்தின்கண் அவனொடு புணர்ந்துடன் போகிய முத்துப் போன்ற வெள்ளிய பற்களை யும், முகிழ்த்த நகையினையுமுடைய மடவரலாகிய தலைமகட்குத் தாயர் என்னும் பெயரை யான் என்னால் வல்ல வகையாற் பெற்றேன்; எனினும், அவளை அவற்கு உரியளாகக் கொடுக்கும் பேறு பெற்றவர் அவள்ஆயத்தோரே யாகலின், யான் அப்பெயர் பெற்றும் பெறேனேயாயினேன் என்றவாறு. அத்தம் வழி. பிறநிலங்களிற் போலாது பாலை நிலத்து வழி பொழில்களாலும் பிறவற்றாலும் மறைப்புண்ணாது வெறிதே நெடித்துத் தோன்றுவது பற்றி, அத்த நீளிடை எனப்பட்டது. வல்லாறு, ஈண்டு இன்பப்பயன் தாராமை சுட்டி நின்றது. மன்ற: தேற்றப்பொருட்டு. ஆயத்தோர் என்றது தோழியை; இது முன்னிலைப்புறமொழி. “அதுவென் உருபுகெடக் குகரம் வருமே 1” என்றதனால் நான்கனுருபு விரிந்தது. “தாயெனப் படுவோள் செவிலி யாகும் 2” என்றதனால், தாயர் என்னும் பெயரே என்றும், தாயாவாள் தலைமகளின் அருமறை அறிந்து அறத்தொடுநிலை வகையால் மணம் புணர்த்தும் மாண்பினளாகத் தான் அது பெறாமையால் வருந்து கின்றமையின், வல்லாறு எடுத்தேன் என்றும், உண்மைத் தாயர்போல் அவள் மறையுறவு அறிந்து அவனிடைப் படுத்து மேம்பாடு எய்தினோர் ஆயத்தோ ராகலின், அவரே தாயர் எனப்படற்கு உரியோரென்பாள், கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோர் என்றும் கூறினாள். இது பொறாமை யென்னும் மெய்ப்பாடு. இது செவிலி தெருட்டுவார்க்குக் கூறியது என்பர் நச்சினார்க் கினியர் 3. 39. உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து இது கொண்டுதலைக் கழிந்தவழி இடைச்சுரத்துக் கண்டோரும், தேடிச் செல்லும் தாயரும், கொண்டுதலைக் கழியும் தலைமக்களுமாகிய பலரும் நிகழ்த்தும் கூற்றுக்களின் தொகுதி யாகலின், இப்பெயர்த்தாயிற்று. 381. பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கான் மராஅத்த வரிநிழ லிருந்தோர் யார்கொ லளியர் தாமே வார்சிறைக் குறுங்கான் மகன்றி லன்ன உடன்புணர் கொள்கைக் காத லோரே. இஃது உடன்போக்கின்கண் இடைசுரத்துக் கண்டார் சொல்லியது. உரை : நெல்லியின் பசிய காய்களைப் பலவின் கனியோடு உண்டு. சிவந்த அடிமரத்தையுடைய செங்கடம்பு மரத்தின் இடை யிட்ட நிழலின்கண் மேவியிருந்தோர், நீண்ட சிறகுகளையும் குறுகிய கால்களையுமுடைய மகன்றிற் பறவை போலப் பிரிவரிதாகிய கொள்கை மிக்க காதலையுடைய ராகலின், இவர்கள் யாவர்கொலோ, அளிக்கத்தக்கோராய் இரா நின்றார் என்றவாறு. பசிய காய்களையுடைய நெல்லியின் கனிகள் பலவற்றை உண்டு எனினுமாம். சுரத்திடைச் செல்வோர் நெல்லிக் கனியை உண்டல் மரபு. “சேய்நாட்டுச், சுவைக்காய் நெல்லிப் போக்கரும் பொங்கர், வீழ்கடைத் திரள்காய் ஒருங்குடன் தின்று 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. வரிநிழல், இலைச்செறிவின்றி இடை யிட்டு விளங்கும் நிழல். மகன்றில், ஒன்றை யொன்று பிரிந்துழி உயிர்வாழாத பேரன்புடைய நீரில் வாழும் பறவை வகை. “நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப், பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு 2” என்றார் பிறரும். ஒருவரை யொருவர் இன்றியமையாச் சிறப்பினராய்ப் புணர்ந்துடன் போகிய கொள்கையினையு முடையராய்த் தோன்றுதலின், மகன்றில் அன்ன, உடன்புணர் கொள்கைக் காதலோரே என்றும், இவர் செல்லும் நெறி வெவ்விய சுரமும் கொடிய விலங்கு வழங்குவது மாகலின், அந்நலனின்மை கருதி, யார்கொல் அளியர் என்றும் கூறினார்; “பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி, வழுவி னாகிய குற்றங் காட்டலும் 3” கண் டோர்க் கியல்பாகலின். “யார் கொல் அளியர் தாமே....... வெய்பயில் அழுவம் முன்னியோரே 1” என்று பிறரும் கூறுப. 382. புள்ளொலிக் கமர்த்த கண்ணள் வெள்வேல் திருந்துகழற் காளையொ டருஞ்சுரங் கழிவோள் எல்லிடை யசைந்த கல்லென் சீறூர்ப் புனையிழை மகளிர்ப் பயந்த மனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே. இது, தலைமகள் இடைச்சுரத்தினது ஊரின்கண் எல்லிடைத் தங்கியவழி அவ்வூர்ப் பெண்டிர் பார்த்து இரங்குதல் கண்டோர் சொல்லியது. உரை : புள்ளினம் செய்த ஒலியான் அஞ்சி மருண்ட கண்களை யுடையளாய், வெள்ளிய வேலையும் அழகிய கழலையு முடைய காளைபோல்வானோடு புணர்ந்து, செல்லுதற் கரிய சுரத்தின்கண் செல்லும் இவள், இரவின்கண் தங்குதலால் கல்லென்னும் ஓசை மிக்க இச் சிறிய ஊர்க்கண்ணுள்ள திருந்திய இழை யணிந்த மகளிரைப் பயந்த பெருமனைக் கிழத்தியர்க்கு இவளைக் காணப் பெரிதும் வருத்த முண்டாவ தாயிற்று என்றவாறு. மூன்றாவதன் பொருட்கண் நான்காவது வந்து மயங்கிற்று. அமர்த்தல், மருளுதல்; “சிவந்தொளி மழுங்கி அமர்த்தன கொல்லோ 2” என்பதனால் உணர்க. அசைதல், தங்குதல். புனையிழை மகளிர், பிறர் துணையின்றித் தாமே இழையணிந்து கொள்ளும் வளர்ச்சி பெறாத இளம்பெண்கள். மனைகெழு பெண்டிர், இல்லுறையும் நல்லியல் மகளிர். “நுனைகுழைத் தலமரும் நொச்சி, மனைகெழு பெண்டியான் ஆகுக மன்னே 3” என்றார் பிறரும். “அசைநிலைக் கிளவி யாகுவழி அறிதல் 4” என்றதனால் ஆர் அசைநிலை. தாம் பயிலாதவிடத்துச் சென்ற காலை, ஆண்டுப் புள்ளினம் ஒலித்தாலும் இளமகளிர்க்கு வியப்பும் அச்சமும் தோன்றி மருட்சி யுண்டாக்கு மாகலின், புள்ளொலிக்கு அமர்த்த கண்ணள் என்றனர்; “வரிப்புறப் புறவின் புலம்புகொள் தெள் விளி, உருப்பவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி 1” என்று பிறரும் கூறுதல் காண்க. தலைமக்களின் உருவும் திருவும் ஒப்பும் உயர்வும் கண்ட ஊரவர்க்கு வியப்பும் மகிழ்ச்சியும் மிகுதலின் ஆரவாரம் எழுந்தமைபற்றிக் கல்லென் சீறூர் என்றனர். இவர் ஒழுக்கங் கண்ட பெற்றோர், தாம் பயந்த மகளிர் ஒருகால் அதனை மேற்கொள்வ ரென்னும் அச்சமும், பெறற்கரிய தாய்தந்தையரையும், தன் ஐயர் ஆயத்தோர் முதலிய பிறரையும் பிரிந்து போக்குத் துணிந்தாளைக் கண்டு அவர் ஆற்றாராதலின், அவரைத் தேற்றுதற்கண்ணுளதாகிய முயற்சித்துன்பமும் மிக்கு வருந்துகின்றனர் என்பார், நோவுமார் பெரிதே என்றார். 383. கோட்சுரும் பரற்றும் நாட்சுரத் தமன்ற நெடுங்கான் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற மள்ள னுள்ளம் மகிழ்கூர்ந் தன்றே பஞ்சாய்ப் பாவைக்குந் தனக்கும் அஞ்சாய்க் கூந்த லாய்வது கண்டே. இஃது உடன்போகிய தலைமகள் தலைமகன் வளைத்த கொம்பிற் பூக் கொண்டு தனக்கும் பாவைக்கும் வகுக்கக் கண்டார் கூறியது. உரை : சுரத்தின்கண், நெருங்க வுள்ள நெடிய அடிப்பகுதியை யுடைய மராமரத்தின், தேன் கொள்ளும் இயல்பினையுடைய சுரும்புகள் ஒலிக்கின்ற குறுகிய கிளையைத் தாழ்த்தி, அழகிய மெல்லிய கூந்தலையுடைய தன் காதலி, அதன்கண் நாட் காலையில் வலமாகச் சுழித்து மலர்ந்த வெள்ளிய பூக்களைக் கொய்தற்பொருட்டு, செலவு சிறிது தவிர்ந்து நின்ற காளை, அவள் அப்பூக்களைத் தனக்கும் தன் பஞ்சாய்ப்பாவைக்கும் என வகுப்பது கண்டு மகிழ்ச்சி மிகுகின்றது, காண்மின் என்ற வாறு. கோள், கொள்ளுதல். அமலுதல், நெருங்குதல். மராஅம், ஈண்டு வெண்கடம்பு. இதன் பூவிதழ் வலமாகச் சுழித்திருப்பது பற்றி வலஞ்சுரி வாலிணர் என்றார். வெண்ணிறப்பூ என்றற்கு வாலிணர் எனப்பட்டது. “வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புதுவீ 1” என்றும், “வாலிய சுதை விரிந்தன்ன பல்பூ மராஅம் 2” என்றும் சான்றோர் குறிப்பது காண்க. குறுஞ்சினை பற்றிக் கொய் தற்குச் சினையைத் தாழ்த்தி நின்ற மள்ளன் என இயைப்பினும் அமையும். பஞ்சாய்ப்பாவை, கோரையாற் செய்யப்பட்ட பாவை. சாயல், மென்மை. அஞ்சாய்க் கூந்தல் எனக் கொண்டு, ஐம்பாலாகிய அழகிய கூந்தல் என்றுமாம். மஞ்சாய் கூந்தல் எனக் கொண்டு, மஞ்சு போல் அழகிய கூந்தல் என்றலு மொன்று. கூந்தலையுடைய காதலி சினைபற்றிக் கொய்தற்கு நின்ற மள்ளன் உள்ளம் கண்டு மகிழ் கூர்ந்தன்று என முடிக்க. கடம்பின் நறுமணம் கமழும் பூவைக் கண்டாட்கு அதனை அணிந்துகோடற்கு விருப்பம் சேறலின் தாழ நின்ற குறுஞ் சினையைப் பற்றினாளாக, அவள்வேட்கை கண்ட மள்ளன் தன் செலவுதவிர்ந்தான் என்பார், குறுஞ்சினை பற்றிக் கொய்தற்கு நின்ற என்றார். பிறாண்டும், “நின் பொம்ம லோதி பொதுள வாரி, அரும்பற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச், சுரும்புசூழ் அலரி வேய்ந்தநின், தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும் வண்டு கடிந் தோம்பல் தேற்றாய்..... பணைத்தோள் விளங்க வீசி வல்லுவை மன்னால் நடையே 3” எனத் தலைவன் உரைப்பது காண்க. தம்மாற் காதலிக்கப் பட்டார் செயல் காணுந்தோறும் காதலர்க்கு உள்ளம் மகிழ்சிறத்தல் இயல்பாகலின் ஆய்வது கண்டு, மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந் தன்றே என்றார். 384. சேட்புல முன்னிய வசைநடை யந்தணிர் நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர் தாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின ஆரிடை யிறந்தன ளென்மின் நேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே. இஃது உடன்போகிய தலைமகள் ஆண்டு எதிர்வரும் அந்த ணர்க்குச் சொல்லியது. உரை : சேய்த்தாய நிலத்தை எண்ணி அசைந்த நடையினையுடை யிராய்ச் செல்லுகின்ற அந்தணர்களே, உங்களையொன்று இரந்து கூறுகிறேன்; எம்மூர்க்குச் செல்லின், நேரிய இறை பொருந்திய முன்கையினையுடைய என்தோழியர்க்கு “நுங்கள் தோழியாவாள் தன் தாய் பேணி வளர்த்த அழகிய நலம் வனப்புமிக, செல்லுதற் கரிய சுரங்களைக் கடந்து சென்றனள்” எனக் கூறுவீர்களாக என்றவாறு. எஞ்ஞான்றும் புகழும் பூசையும் பெறுதற் குரிய நாடு நோக்கிச் செல்லும் இயல்பினராயும், ஊர்தி யின்றி நடந்து செல்லும் படிவத்தராயும் இருத்தலின், சேட்புலம் முன்னிய வசைநடை யந்தணிர் என்றார். அந்தணர் பிறபுலம் சேறும் இயல்பினராதல், “வெவ்விடைச் செலன் மாலை யொழுக்கத்தீர் 1” என்றும், நடந்து செல்லும் படிவத்தராதல், ஆசிரியர் மரபியலில் ஏனை யரசர்க்கு “நடை நவில் புரவியும் களிறும் தேரும் 2” கூறியது போல, ஊர்தி கூறாமையாலும், “குடையார்நிழல் உறிசேர் கரகத்தொடு குன்றிடத்து, நடையான் மெலிந்து வருகின்ற அந்தணிர் 3” என்று கூறுதலாலும் அறிக. மகளது நலம் பேணுதலிலேயே தாயின் கண்ணும் கருத்தும் ஒன்றி நிற்றலின், தன் நலத்தைத் தாய் நயந்தெடுத்த ஆய்நலம் என்றாள். “ஆயமும் அயலும் மருளத் தாயோம், பாய்நலம்4” எனப் பிறரும் கூறுதல் காண்க. இஃது, “எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இலவே5” என்றதனால், தலைவி கூற்றாயிற்று. அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் முதலாயினாரைப் பணிந்து கூறல் வேண்டும் என்பது கற்புநெறி யாதலின், இரந்தனென் மொழிவல் என்றும், எஞ்ஞான்றும் தன்நலமே குறிக்கொண்டு பேணிய சிறப்புடைமை கருதியும், தலைமகனொடு கூடாதவழி நலங்குன்றும் என அஞ்சிப் போக் குடன் பட்டுத் துணைசெய்தனர் ஆகலினாலும், தாய் நயந் தெடுத்த வாய்நலம் என்றும், நேரிறை முன்கை என் ஆயத் தோர்க்கு என்றும் கூறினாள். தலைமகன் தலைமகட்கு ஒழுக்கங் கற்பித்தல், “அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும், அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும், ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் 1” என்பதனால் உணர்க. தாய் நயந்தெடுத்த நல மென்புழி உடைமையும், ஆயத்தோர்க்கு என்புழி அருளலும், இரந்தனென் என்புழித் தன்மையுமாகிய மெய்ப்பாடுகள் தோன்றின. இஃது யான் போகின்றது ஆயத்திற்கு உரைமின் என்றது என்பர் நச்சினார்க்கினியர். 2 இஃது இடைச் சுரத்துச் செல்கின் றாள் தன் பதி செல்வாரைக் கண்டு கூறியது என்பர் இளம்பூரணர். 3 385. கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக் கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ வாறுசென் மாக்கள் நற்றோ ணயந்துபா ராட்டி எற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே. இது, வரைவு மறுத்துழி உடன்போய தலைமகள் இடைச் சுரத்துக் கண்டாரை, “யான் போகின்றபடியை யாய்க்கு நீர் கூறவேண்டும்” எனச் சொல்லியது. உரை : நெறியிற் செல்லும் மாந்தர்களே, என்னுடைய நல்ல தோள்களை விரும்பிப் பாராட்டி வளர்த்து, யான் தலை மகனோடு கூடி என் நலத்தைக் கவினுறுவித்துக் கொள்ளா வகை இற்செறித்து வைத்த அறவியல்பில்லாத என் தாயைக் காணின், அவட்குத் தறுகண்மையுடைய காளையாகிய தன் காதலனோடு நெடிய தேர்மீதேறிக், கொலை வல்ல வேங்கை கள் மிக்க மலைகள் பிற்பட, முன்னாக உள்ள பலவாய் வேறுபட்ட செல்லுதற் கரிய சுரங்களைக் கடந்து நின்மகள் சென்றனள் என உரைப்பீர்களாக என்றவாறு. கடுங்கண், தறுகண். பகைமை கருதித் தீமைசெய்வாரைக் கண்ணோடாது ஒறுத்தற் குரிய தறுகண் கடுங்கண் எனவும், அருள் கருதி அடிபணிவார்க்கு உதவும் தறுகண் மென்கண் எனவுமாம். இதனைச் சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் 1” என்பர் நல்வேட்டனார்; ஊராண்மை என்பர் திருவள்ளுவர். 2 நெடுந்தொலைவு செல்லுதற் குரிய வன்மை யுடையது என்றற்கு நெடுந்தேர் என்றார். கால் வலிய தேர் என் பது கருத்து 3. கோள், கொலை. மாக்கள், அண்மைவிளி. கெடுத் திருந்த யாய், காணாமையால் வருந்தும் தாய் என்று கூறினு மாம்; “கெடுத்துத் தொடு நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு 4” என்றாற் போல. போக்குடன்பட்டுத் தலைவனோடு செல்லும் தலைவி, செல்லும் நெறியிடைத் தனக்கு ஏதம் உளவாம் என எண்ணி வருந்தும் தாய்க்குத் தன்னோடு போதரும் காதலன் திறலை, கடுங்கண் காளை என்றும், நடந்து சேறலின்றி வலிய தேரூர்ந்து செல்லுமாறு விளங்க, நெடுந்தேர் ஏறி என்றும், தீங்கு செய்யும் விலங்குகள் உறையும் மலைநிலத்தையும் பிற நிலங்களையும் இனிது கடந்து சென்று சேர்ந்த திறம் தோன்ற, கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய என்றும், அருஞ்சுரம் இறந் தனள் என்றும் கூறினாள். குழவிப்பருவம் தொடங்கி அவள் நலமே பேணி வளர்த்தன ளாகலின், நற்றோள் நயந்து பாராட்டி என்றும், தலைமக னோடு களவின்கண் ஒழுகியவிடத்து அவள்மேனி வேறுபாடும் அலரெழுந்தமையும் கண்டு இற்செறித்தனள் எனினும், அச்செயல் தான் தலைவனோடு தலைப்பெயற்குத் தடையாயினமையின் எற்கெடுத்து இருந்த என்றும், பிறர்க்கு நோய் சூழ்வார் தாயராயினும் தீயரே யாகலின், அறனில் யாய் என்றும், தான் தலைமகனிடம் தலையளி பெறுதலினின்று தகைந்தன ளாயினும், தன் நற்றோளை நயந்து பாராட்டிய நன்றி கருதித் தன்னைக் குறித்து அவள் தேடி வருந்தாவகைக் கூறுமின் என்றும் கூறினான். தான் வேண்டுவ தொன்றனை வேண்டியவாறு செய்தல் பற்றி வாழியோ என்றாள். நற்றோள் நயந்து பாராட்டிய தாய் தன்னை இற்செறித்து ஓம்பியது ஊரவர் கூறும் அலர் அஞ்சியும் தன் நலங்கருதியுமே என்பது நினைந்து, அது தாய்மையின் அறம் என்று உணர்ந்தன ளாயினும், தலைமகற்கு வரைவு மறுத்த கொடுமையை நோக்க வேறாதலால், வெறுத்த உள்ளத்த ளாதலின், தன் தாயை அறனில் யாய் என்றாள் எனவுமாம். “வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்தொடா, கொல்லை குரல்வாங்கி ஈனா மலைவாழ்நர், அல்ல புரிந்தொழுக லான் 1” எனத் தலைவி தமர் வரைவு மறுத்தமைக்கு வருந்திக் கூறுமாறு காண்க. இன்று யான் தேரேறி வருத்தமின்றிப் போகின்றமை யாய்க்கு உரைமின் என்றது என்பர் நச்சினார்க்கினியர். 2 இஃது இடைச் சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டது என்பர் இளம் பூரணர். 3 உடன்போக்கில் தேரேறிப்போதல் உண்டென்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 4 சுரத்திடையவளே என்றும் பாடம். 386. புன்கண் யானையொடு புலிவழங் கத்தம் நயந்த காதலற் புணர்ந்துசென் றனளே நெடுஞ்சுவர் நல்லின் மருண்ட இடும்பை யுறுவிநின் கடுஞ்சூன் மகளே. இது, புணர்ந்துடன்போகிய தலைமகளை இடைச்சுரத்துக் கண்டார் அவள் தாய்க்குச் சென்று கூறியது. உரை : நெடிய சுவர் சூழ்ந்த நல்ல இல்லின்கண் மயங்கி ஒடுங்குதற் கேதுவாகிய துன்பம் உறுபவளே, நின் முதற்சூலில் தோன் றிய மகளாகிய தலைமகள், தன்னை விரும்பிய காதல னுடன் கூடிச் சிறிய கண்களையுடைய யானைகளும் புலிகளும் இயங்குகின்ற வழிகளைக் கடந்து சென்றனள்; ஆகலின், நீ வருந்துதல் ஒழிக என்றவாறு. புன்கண் என்ற விடத்துப் புன்மை, சிறுமை மேற்று; புன் கண் என்றே கொண்டு வேனில் வெம்மையால் நீரும் நிழலிடமும் பெறாது எய்தும் மிடிமை யென்று உரைப்பினும் அமையும்; “பொருள்வேண்டும் புன்கண்மை ஈண்டில்லை 1” என்றாற்போல. ஓடு: எண்ணுப்பொருட்டு. பகற்போதில் யானையும் இரவில் புலியும் வழங்குதலின் இரண்டையும் சேரக் கூறினார், எப் போதும் சேறல் அருமை புலப்படுத்தற்கு. நெடுஞ்சுவர் நல்லில் என்றவிடத்து நெடுஞ்சுவர் காவலருமையும் நன்மை செல்வ முடைமையும் குறித்து நின்றன. மருளுதல், ஈண்டுக் கையற்று வருந்தல். இடும்பை மகட் பிரிவை ஆற்றாமையாற் பிறந்த துன்பம். இடும்பையுறுவி, இடும்பை யெய்தி வருந்தும் தாய். கடுஞ்சூல் தலைச்சூல்; “கடுஞ்சூற் சிறுவன் 2” என்றமை காண்க. நின் மனைப்பெருமையும் செல்வநன்மையும் நினக்கு இன்பம் தருவது போல, நின் மகட்கும் தரும் எனக் கருதி மருளுகின்றனை; தானும் நின்னைப் போல் மனைவாழ்வு செய்யும் மாண்புடை நெஞ்சத்தால் இவற்றை உள்ளாது கழிந்தாள் என்பதைத் தெரு ளாது வருந்துதல் வேண்டா என்பார், நெடுஞ்சுவர் நல்லில் மருண்டனை என்றும், மருட்சி காரணமாக நீ துன்புறுகின்றனை என்றற்கு மருண்ட இடும்பை உறுவி என்றும், கற்புடைப் பெருமடந்தையாயினும், தலைப்படு காதற் காமப்பயனாகப் பெற்ற தலைச்சூல் மகளாதல் பற்றி நினக்கு இம்மருட்சி கைம் மிக்கு வருத்துகிறது என்பார் நின் கடுஞ்சூல் மகள் என்றும் கூறினர். இனி, அவள் சென்ற நெறியின் கொடுமையினை எண்ணிக் கலங்குகின்றாயாயின், யாம் அவ்வழியினின்று வரு கின்றேம்; அவள் சென்றவழி எப்போதும் மக்கள் வழங்குதற் காகாத கொடுமையுடைத்தாயினும், அதனையும் அவள் கடந்து சென்றொழிந்தாள் என்றற்கு, புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் சென்றனள் என்றும். அவளும் அவள் காதல னும் ஒருவரை யொருவர் இன்றி அமையாக் காதலாற் பிணிப் புண்டிருக்கின்றனர் என்பார் நயந்த காதலற் புணர்ந்து சென்ற னள் என்றும் விளக்கினர். காதலனது காதலின்பத்தில் மகள் களித்துச் செல்ல, மகட்குத் தாய் மருண்ட மனத்தொடு மனையின் கண் இடும்பையுற்று இனைதல் இன்னாது எனத் தெருட்டியவாறு. இது, “தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் 1” என்றதனால், தடுத்தலும், நெறியின் கொடுமை கூறிப் புணர்ந் தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்தெதிர் கூறி விடுத்தலுமாம். 387. அறம்புரி யருமறை நவின்ற நாவின் திறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவலென் றொண்டொடி வினவும் பேதையம் பெண்டே கண்டென மம்ம சுரத்திடை யவளே இன்றுணை யினிது பாராட்டக் குன்றுயர் பிறங்கன் மலையிறந் தோளே. இது, பின்சென்ற செவிலியால் வினாவப்பட்ட அந்தணர் அவட்குச் சொல்லியது. உரை : அறத்தைச் சொல்லுகின்ற அரிய மறைகளை ஓதிப் பயின்ற நாவினையும் அது விதிக்கும் செயல்வகை தெறிந் தாற்றும் ஒழுக்கத்தையு முடைய அந்தணர்களே, தொழு கின்றேன் என்று சொல்லி, ஒள்ளிய தொடி யணிந்த என் மகள் சென்றாளைக் கண்டீரோ என வினவும் பேதைமை யுடைய மனைகெழு பெண்டே, யாம் அவளைச் சுரத்திடையே கண்டேம். இன்னும் கேட்பாயாக: இனிய துணைவனான காதலன் மகிழ்ந்து நலம் பாராட்டி வரக் குன்றுகள் செறிந்த உயர்ந்த மலைகளைக் கடந்து சென்றாள்; ஆகலான், நீ அவளைப் பின்சென்று வருந்த வேண்டா, மீள்க என்றவாறு. அறமாவது, வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து உயர்ந்த அறிவுடை நன்மக்கள், வாழ்க்கைக்கு உறுதியும் நன்மையும் பயப்பன இவையென அறிந்து, விதித்தும் விலக்கியும் உரைக்கும் நன்மொழி. அந்நெறியில், மக்கட்கு உறுதி என அவர்கள் கண்டவை அறம் பொருள் இன்பம் வீடு என்பன. அவற்றுள் வீடு, இவ்வுலகிற் பெறப்படுவ தன்று; இவ்வுலக வாழ்க்கைக்கு மன்னியவை ஏனை மூன்றுமே. அம் மூன்றனுள் அரிதாகிய அறத்தை விரும்பி உரைப்பது பற்றி மறை அறம்புரி அருமறை எனப்பட்டது. உலகில் வாழும் உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றிற்கும் தோற்றமும் முடிவும் இவ் வுலகமே அன்றி இதன் மேல் வேறொன்று மில்லை என எல்லா ராலும் எளிதில் உரைக்கப்படும் கருத்தை மறுத்து, உயிர் பொரு ளின் வேறாய் உயர்ந்த பேருயிராகிய இறைவன் உண்டென்றும், இவ்வுலக உயிர்ப் பொருட்கெல்லாம் வேறாய்த் துன்பமே இல்லாத இன்ப அருளுலகு ஒன்று உண்டென்றும் வற்புறுத்துவது பற்றி அந்த அறநூல் மறை என்று வழங்கப் பட்டது. ஏனைப் பொருள்இன்ப நுகர்ச்சிகட்கு நெறிகாட்டி வீடு பேறாகிய இறையருள் இன்பவுலகவாழ்வுக்கு உரிமை செய்யும் அருமை பற்றி அறநூலாகிய மறையைத் தமிழ்ச் சான்றோர் அறம்புரி அருமறை என்று குறிக்கின்றனர். “நான்மறைக் குறித்தன்று அருளா காமையின், அறங்குறித் தன்று பொருளா குதலின் 1” என்றும், “எழுதாக் கற்பின் நின்சொல் லுள்ளும், பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின், மருந்தும் உண்டோ 2” என்றும் சான்றோர் கூறுதலின், அருமறைக்கண் பொருளும் இன்பமும் கூறப்படாமை தெளியப்படும். இஃது எழுதப்படாமல் ஒருவர் பின் ஒருவராக நாவால் நவிலப்பட்டு வந்தமையின், மறவாமைப் பொருட்டு எப்போதும் நவில்வது மறையோர் மரபு. அது பற்றியே, அருமறை நவின்ற நாவின் அந்தணர் என்றார். திறம், அறத்தின்கூறு. மனையின்கண் வாழ்வாங்கு வாழ்ந்து அறம் காட்டும் வீடுபேறு குறித்துத் துறந்தோரும், இளமையிலேயே அறப்பயன் விழைந்து துறந்தோரும் என அறவோர் இருவகைய ராதலின், இரு திறத்தோர்க்கும் ஓரன்ன ஒழுக்கம் பொருந்தாமை யான், அறத்துறையில் திறம்பல தோன்றினமையின், அவற்றைத் திறம் என்றும், அவற்றுள் தம் தகுதிக்கும் சால்புக்கும் ஏற்றது மேற்கொண்டு ஒழுகும் கொள்கை திறம்புரி கொள்கையாம் என்றும் அறிக. கொள்கை, ஒழுக்கம். “குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் 3” எனத் திருவள்ளுவர் கூறுவது காண்க. அறவோர் என்னாது அந்தணர் என்றார், “எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுதலான்.4” அந்தணர் என்பது அந்தணிர் என விளியேற்றது; “அருவும் ஆரும் ஈரொடு சிவணும் 5” என்பது விளி மரபு. ஒண்டொடி ஈண்டுத் தலைவியைக் குறித்தது. அம்ம: கேட்பாயாக என வரும் இடைச்சொல். சொல்லி என்பது சொல்லெச்சம். பெண்டு, பெண்ணென்னும் பொருள்பட வழங்கும் பொதுச்சொல். இனிது, நலம். பிறங்கல், ஈண்டுச் செறிதல். ஒண்டொடி வினவும் பெண்டே, சுரத்திடைக் கண்டனெம்; அவள், இன்றுணை பாராட்ட மலை இறந்தாள் என இயையும். ஆகலான் என்பது முதலாயின குறிப் பெச்சம். மகள் நிலையை உள்ளவாறு அறியும் விருப்பினளாதலின், தலைமகளைத் தேடிப் பின்சென்ற செவிலி, நினைவிலும் நாவிலும் அறம் நிலவும் கொள்கையினரான அந்தணர்களை, அறம்புரி அருமறை நவின்ற நாவின், திறம்புரி கொள்கை அந்தணிர் என்றாள். தன் துன்பநிலை கண்டு இரங்கி வேறு அறங்களைச் சொல்லிக் கழியாது கண்டது கண்டாங்குக் கூறல் வேண்டும் என்றற்கு அவரது நாவினைச் சிறப்பித்தாள் என அறிக. விருப்பு வெறுப்பின்றி எல்லாரையும் ஒப்பக் கருதி உறுதி கூறும் ஒழுக்கத் தவ ராதலால், தன்மகளைக் கண்டிருப்பர் என்று எண்ணினா ளாதலின், திறம்புரி கொள்கை அந்தணிர் என்று விளம்பினாள். அந்தணரை ஓம்பல் இல்வாழ்வோர்க்குக் கடனாதல் பற்றித் தொழுதல் கொண்டுகூறப்பட்டது. தொழுவல் என்றது முகமன். ஒண்டொடியாகிய தலைமகள் தன் காதலனுடன் கொண்டு தலைக்கழிந்தது கூறி அவளைக் கண்டீரோ என வினவினாட்கு விடையிறுக்கின்றா ராகலின், அவள் கூற்றினையே கொண் டெடுத்து, ஒண்டொடி வினவும் பெண்டே என்றும், கொண்டு தலைக்கழிதல் கற்புக் காக்கும் பொற்புடைய அறமாதலை அறியாது ஏதம் கொண்டு வருந்துமாறு தோன்றப் பேதையம் பெண்டே என்றும், அஃது அவள் வினாவுக்குச் செவ்வனிறை யாகாமையின், கண்டனெம் சுரத்திடை என்றும், அது கேட்ட தும் உளம் மகிழ்ந்து அவளது நலமறிய எழுந்த வேட்கையை முகக்குறிப்பால் உணர்ந்து மேலும் கூறலுறுதலின் அம்ம என்றும், அவள், தனக்குரிய உயிர்த்துணைவனோடே செல்கின்றா ளென் பார், இன்றுணை என்றும், வழியினது அருமை தோன்றாவாறு காதலன் அவளது நலம் பாராட்டிச் செல்வதால் மகிழ்ச்சி மிக்குச் செல்கின்றாள் என்றற்கு இனிது பாராட்ட என்றும், அதனால் நெறியிடை நின்ற குன்றும் மலையும் அவட்கு அயர்ச்சி விளைவியா வாக, அவள் சுரத்தை இனிது கடந்துபோனாள் என்பது விளங்கக் குன்றுயர் பிறங்கல் மலையிறந்தோளே என்றும் கூறினர். “சிறந்தானை வழிபடீஇச் சென்றனள், அறந்தலை பிரியா ஆறுமற்று அதுவே 1” எனச் சான்றோர் கொண்டுதலைக் கழிதலை அறம் என்பதும், “வான்தளி பொழிந்த காண்பின் காலை, அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும், மணிபுரை யெருத்தின் மஞ்ஞை போலநின், வீபெய் கூந்தல் வீசுவளி யுளர, ஏகுதி மடந்தை 2” என இன்றுணை இனிது பாராட்டுவதும், “கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை, அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பின், பிடிமிடை களிற்றின் தோன்றும், குறு நெடுந் துணைய குன்றமும் உடைத்தே 3” எனக் குன்றுயர் பிறங்கல் மலை காட்டித் தலைவன் அயர்ச்சி போக்குவதும் காண்க. இது செவிலி வினாயவழிக் கூறியது என்பர் இளம்பூரணர் 4 ; வரவின்கட் கூறியது என்பர் நச்சினார்க்கினியர் 5. 388. நெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக் கருங்கால் யாஅத்து வரிநிழ லசைஇச் சிறுவரை யிறப்பிற் காண்குவை செறிதொடிப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வேல் விடலை முன்னிய சுரனே. இது, தேடிச் சென்ற செவிலிக்கு இடைச்சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது. உரை : நெருங்கிய தொடியினையும் பொன்போலும் அழகிய மேனியினையுமுடைய மடந்தையுடன் வென்றி தரும் வேலேந் திய விடலையாவான் முன்னிச் சென்ற சுரத்தை, நெருப்பு விளங்கும் ஞாயிற்றின் வெப்பம் தணியுமளவும் கரிய அடி யினையுடைய யாமரத்தின் செறியாத நிழலின்கண் தங்கி, சிறுமலைகளைக் கடந்து செல்லின் காண்பாய் என்றவாறு. ஞாயிற்றின் மிக்க ஒளி நெருப்பாய்த் தாக்குதலின் நெருப் பவிர் கனலி என்றார். கனலி, ஞாயிறு. உருப்பு, வெம்மை. “நெருப்பெனச் சிவந்த உருப்பவிர் மண்டிலம் 1” என்பர் பிறரும். வெம்மையைச் சினமென்றது இலக்கணை. யா மரத்தின் அடி கருமைநிற முடைத்தாதலின், கருங்கால் யா என்றார்; “கவை யொண் தளிர கருங்கால் யாஅத்து, வேனில் வெற்பு 2” என்பது காண்க. அசைதல், தங்குதல், “ஒல்குநிலைக் கடுக்கை யல்குநிழல் அசைஇ 3” என்றாற் போல. ஒடு: ஒருவினையொடு. தலைமகளைப் பின்தொடர்ந்து சுரத்திடை நடந்து மெலிந்து வரும் செவிலியின் துயர்நிலை கண்டு கழிவிரக்க முற்று எதிரே கிடந்த சுரத்தின் வெம்மையை ஆற்றாளென்பது பற்றி, ஆண்டுத் தோன்றிய யாமரத்தைக் காட்டி, அதன் நீழலில் வெயில்வெப்பம் தணியுமளவும் தங்குமாறு பணிக்கின்றமையின், நெருப்பவிர் கனலி உருப்புச் சினம் தணியக் கருங்கால் யாத்து வரிநிழல் அசைஇ என்றும், நெடிதுயர்ந்து கிளைபரப்பி நிழல்செய்து நிற்கும் நீர்மை நோக்கி, கருங்கால் யாத்து வரிநிழல் என்றும் கூறினர். இதனால் புணர்ந்துடன் போகிய நின் மகளும் வெயில் வெம்மை நோக்கி யாநிழல் தங்கிச் சென்றனர் எனக் குறித்த வாறாயிற்று. சிறுவரை என்றார், மலைவு தோன்றாமைப் பொருட்டு. அசைஇ இறப்பின் காண்குவை என்றது, தங்காது செல்குவை யாயின், ஆற்றாது வரையை இறத்தலும் காண்டலும் இல்லையாம் என்றவாறு. தொடியின் செறிவும் மேனியின் பொலிவும் எடுத்தோதினர், காதலன் புணர்ந்துடன் வருதலால் வழிநடைத் தளர்ச்சியின்மையும்உள்ளக்கிளர்ச்சியுடைமையும் தலைவிபால் விளங்கித் தோன்றினமையின். மடந்தையை முன் னுய்த்துத் தலைமகன் அவள்பின் சேறலின், மடந்தை யொடு என்றார். “நின் அணிமாண் சிறுபுறம் காண்கம் சிறுநனி, ஏகென ஏகல் நாணி நின்று, தலையிறைஞ்சி யோளே அதுகண்டு, யாம்முந் துறுதல் செல்லேம் 4” எனத் தலைமகன் உரைப்பதனால், உடன்போக்கில் தலைவியை முன்னுய்த்துச் சேறல் இயல்பாதல் காண்க. சுரன் காண்குவை என்றது, சுரத்திடை அவர்களைக் காணலாம் என்றற்கு, இது செவிலிக்கு இடைச்சுரத்துக் கண்டோர் நுமக்கு எய்தச் சேறலாம் என்று விடுத்தது என்பர் நச்சினார்க் கினியர் 1. 389. செய்வினைப் பொலிந்த செறிகழ னோன்றாள் மையணற் காளையொடு பைய வியலிப் பாவை யன்னவென் னாய்தொடி மடந்தை சென்றன ளென்றி ரைய ஒன்றின வோவவ ளஞ்சிலம் படியே. இது, பின்சென்ற செவிலித்தாய் வினவப்பட்டோர் 'கண்டோம்’ என்புழிச் சொல்லியது. உரை : ஐய, என் கண்ணிற் பாவைபோலும் ஆய்ந்து கொண்ட தொடியினை யணிந்த என்மகள், தொழில்வகையாற் பொலி வுறச் செய்யப்பட்ட செறிந்த கழலினையும் வலிய தாளினையும் கரிய தாடியினையுமுடைய காளைபோல்வானோடு மெல்ல நடந்து சென்றனள் என்று கூறுகின்றீர்; அதுபோது அவ ளுடைய அழகிய சிலம்பணிந்த அடிகள் நிலத்திற் பொருந்தின கொல்லோ? என்றவாறு. மகளிர்க்குச் சிலம்புபோல ஆடவர்க்குக் காலில் கழல் அணிதல் பண்டையோர் இயல்பு. பூத்தொழிலும் அரும்பு போலும் வேலைப்பாடும் உடைமைபற்றிக் கழலைச் செய்வினைப் பொலிந்த செறிகழல் என்றார். ஆண்மக்கட்கு இளமையிற் கிண்கிணியும், காளைப்பருவத்தில் கழலும் அணிதல் வழக்கு; “கிண்கிணி களைந்த கால் ஒண்கழல் தொட்டு 2” என்பது காண்க. மிக்க வேலைப்பாடுடைமை பற்றிப் புனைகழல் 3 என்ப; “கழல் பறைந்தன 4” என்றற்கு “வீரக்கழல் அருப்புத்தொழில் பறைந்தன” என உரைக்கப்படுவது இதற்குச் சான்றுபகரும். இக்கழல் பொன்னாற் செய்யப்படுதலின் “பொலங்கழல் 5” எனப்படும். பகைவரை வென்று அவர் முடிப்பொன்னால் கழல் செய்து போர்மன்னர் அணிந்து கொள்ப. “முடிபுனைந்த பசும்பொன்னின், அடி பொலியக் கழல் தைஇய, வல்லாளனை 1” என்பதனாலறிக. கழல், வீரமும் வெற்றியும் புகழும் குறித்தது; “சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து 2” என்பர் திருவள்ளுவர். மையணல், கரிய தாடிமயிர். ஆண்மைக்குரிய செவ்வி எய்தினமை விளங்க மையணலைக் கூறினார். பாவை, கண்ணிற்பாவை. ஓகாரம்: வினாப்பொருட்டு. தலைமகளைக் கொண்டுதலைக்கழிந்த தலைவனுடைய கட்டாண்மையை வியந்து கண்டோர் செவிலிபாற் கூறின ராகலின், அவர் கூற்றைக் கொண்டெடுத்து மொழிவாள், செய்வினைப் பொலிந்த செறிகழல் நோன்றாள் மையணற் காளை என்றும், பரல் நிறைந்த நெறியில் நடந்து சேறல் தலை மகட்கு இயலாதென நினைந்து வருந்துகின்றா ளாகலின், பைய இயலி என்றும், தனது ஆராக்காதல் புலப்படக் கண்ணின் பாவை யன்ன என் ஆய்தொடி மடந்தை என்றும் கூறினாள். “உண்கண், மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன், அணியியற் குறுமகள் 3” எனச் செவிலி கூறுதல் காண்க. கண்டோர், தலை மகன் கழலையும் தாளையும் சிறப்பித்ததுபோலத் தலைவியின் தொடியைக் கூறிச் சிலம்பணிந்த அடியைச் சிறப்பித்துக் கூறாமை யின், அவள் அடி நடையால் மெலிந்து தேய்ந்தனவோ என அஞ்சி அலமருகின்றா ளாகலின், ஒன்றினவோ அவள் அஞ்சிலம் படியே என்றாள். இது செவிலி சுரத்திடை வினாயது என்பர் இளம்பூரணர் 4. 390. நல்லோ ராங்கட் பரந்துகை தொழுது பல்லூழ் மறுகி வினவு வோயே திண்டோள் வல்விற் காளையொடு கண்டனெ மன்ற சுரத்திடை யாமே. இது, பின்சென்ற செவிலித்தாய் பலரையும் வினாவக் கண்டோர் தாம் கண்டவாறு அவட்குக் கூறியது. உரை : அறிவரைத் தேடித் திரிந்து அவர்பாற் கை தொழுது பல முறையும் மருண்டு வினவுதலையுடையோய், திண்ணிய தோள் களையும் வலிய வில்லினையு முடைய காளை போல்வானோடு நின்மகள் செல்ல யாம் இடைச்சுரத்திற் கண்டோம் என்றவாறு. நற்பண்பு நற்செய்கைகளால் உயர்ந்த அறிவர்களை நல்லோர் என்றார்; நல்லதன் நலம் காட்டி அதனால் உலகு இன்புறக் கண்டு அதனையே காதலித் தொழுகுவது அறிவர் தொழில்; அன்னோர் உலகில் அருகி யிருத்தலின், அவரைத் தேடித் திரிந்தல்லது காண்பது அருமையாகலின் நல்லோர் ஆங்கண் பரந்து என்றார். பரத்தல், தேடித் திரிதல் மேற்று, “பரந்து கெடுக உலகியற்றியான் 1” என்றாற்போல. மறுகுதல், துயர்மிகுதியால் அறிவு கலங்குதல். மன்ற: தேற்றப் பொருட்டாய இடைச்சொல். யாம் என்றது, நேரிற் கண்ணாற் கண்டமை வற்புறுத்தி நின்றது. நல்லோர்பாற் செல்வார் தொழுதுகாண்டல் முறையாகலின் பரந்து கைதொழுது என்றும், அருமணி யிழந்த நாகம் போன்று பெறலரும் மகளைப் பிரிந்து அலமருகின் றாளாகலின், மறுகி என்றும், ஒருவர் இருவரோடு அமையாது பலரைக் கண்டு பன்முறையும் கேட்பதுபற்றி, பல்லூழ் வினவுவோய் என்றும் அப்பெற்றியாளை மேலும் மறுகாவண்ணம் தெளித்தல் தெள்ளி யோர் கடனாகலின், கண்டனெம் மன்ற என்றும், கண்ட இடம் இது என்பார் சுரத்திடை என்றும் கூறினார். 40. மறுதரவுப் பத்து. இது புணர்ந்துடன்போகிய தலைமக்கள் மீண்டு வருதல் பொருளாகத் தொடுக்கப்பட்ட பாட்டுக்களின் தொகை யாகலின், இப்பெயர்த்தாயிற்று. மறுதரவு, மீளுவது. 391. மறுவி றூவிச் சிறுகருங் காக்கை அன்புடை மரபினின் கிளையோ டாரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ வெஞ்சினன் விறல்வேல் விடலையொடு அஞ்சி லோதியை வரக்கரைந் தீமே. இஃது உடன்போகிய தலைமகள் மீடற்பொருட்டுத் தாய் காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது. உரை : குற்றமில்லாத சிறகுகளையுடைய சிறிய கருங்காக்கையே, வெவ்விய சினமும் வெற்றியு முடைய வேலையேந்தும் காளை போல்வானொடு சென்ற அழகிய சிலவாகிய கூந்தலை யுடைய என் மகளை வருமாறு கரைவாயாக. கரையின், அன்புடைய நின் முறைமைக் கேற்ப நின் கிளைக்காக்கை களோடு இருந்து நீ உண்ணும் வகையில் பசிய ஊன்கலந்து ஆக்கிய பசுமையான பலியுணவினைப் பொன்னாற் செய்யப் பட்ட கலத்திலிட்டுத் தருகுவேன்காண். என்றவாறு. சிறுகருங்காக்கை, சிறுமை வடிவும் கருமை நிறமும் குறித்தன. இஃது, இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர். அன்புடை மரபு, அன்பு காரணமாக நிலவும் முறைமை. கிளையோ டுண்டல் காக்கைக்கு மரபு; இனத்தின்பால் உள்ள அன்பால் உளதாய மரபாதலின், அன்புடை மரபு என்றார். “காக்கை கரவா கரைந்துண்ணும் 1” என்பது காண்க. பசியவூன் பச்சூன் எனப்பட்டது. வல்சி, உணவு. விடலையொடு: ஒடு உயர் பின் வழித்தாய ஒருவினை ஒடு. கரைந்தீமே என்பது, “முயங் கினை சென்றீமே 2” என்றாற் போல முன்னிலை முற்று வினைத் திரிசொல். ஏனைப் புட்களைப்போலச் சிறகரின் புறத்தே பல்வகை நிறங்கள் விரவப் பெறாமையின், மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை என்றும், பெற்றது இறப்பவும் சிறிதாய காலத்தும் தன் சுற்றம் சூழ உண்டல் மரபாகலின், அன்புடை மரபின் நின் கிளை யென்றும், பலியிட்டுப் பரவுக்கடன் புரிவார் பொற்கலத்தி லிட்டுப் படைத்தல் வழக்காதல் பற்றி, பொலம்புனை கலத்தின் என்றும், காக்கை கரையின் சென்றார் மீளுவ ரென்பது வழக்கா தலின், வரக் கரைந்தீமே என்றும் கூறினாள். “வெண்ணெல் வெஞ்சோறு, எழுகலத் தேந்தினும் சிறிதுஎன் தோழி,...... விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே 3” என்று சான்றோர் கூறுவது காண்க. இது நற்றாய் உடன்போய தலைமகள்பொருட்டுக் காகத்திற்குப் பராய்க்கடன் உரைத்தது என்பர் இளம்பூரணர் 1. இது நிமித்தத்தொடு படுத்துப் புலம்பியது என்பர் நச்சினார்க் கினியர். 2 காளையொடு என்றும் பாடம். 392. வேய்வனப் பிழந்த தோளும் வெயிறெற ஆய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப் பரியல் வாழி தோழி பரியின் எல்லையி லிடும்பை தரூஉம் நல்வரை நாடனொடு வந்த மாறே. இஃது உடன்போய் மீண்டு வந்த தலைமகள் வழிவரல் வருத்தம் கண்டு ஆற்றாளாகிய தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி, நல்ல மலை சூழ்ந்த நாடனொடு புணர்ந்து உடன்போய் மீண்டு வந்தமையால், மூங்கிலினது வனப்பை இழந்த தோளும், சுரத்தின்கண் வெப்பம் வருத்துதலால் நுண்ணிய மென்மை அமைந்த அழகு கழிந்த நுதலும் நோக்கி வருந்துதல் ஒழிவாயாக; வருந்துவையேல், அது முடிவில்ல தோர் துன்பத்தினைத் தருமாகலான் என்றவாறு. தோளும் நுதலும் கவின் இழத்தற்கு ஏது வெயில்தெற என்பதனாற் பெற்றாம். வேய்வனப்பு, வேயொடு நிகர்த்தற்குரிய வனப்பு. “வேயொழுக் கன்ன சாயிறைப் பணைத்தோள் பெருங் கவின் 3” என்பது காண்க. ஆய்கவின், மிக்க அழகு; ஆயமகளிர் பலராலும் சிறப்பிக்கப்பெறும் அழகு என்றுமாம்; “பாவை யன்ன பலராய் மாண்கவின் 4” என்று சான்றோர் உரைப்பது காண்க. பரிதல், வருந்துதல்; “இருந்துள்ளி என் பரிதல் நெஞ்சே 5” என்றாற் போல. பரியல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள். அஃது எனச் சுட்டுவருவிக்க. வந்தமாறு என்புழி மாறு, ஏதுப்பொருள் பட வருவதோர் இடைச்சொல்லாதலின் எழுவாய் ஆகாமை அறிந்துகொள்க. தனக்குச் சிறந்தாளாய் உடன்பயின்று ஒழுகினாட்குத் தன் னிடை யுளதாகும் சிறுவேறுபாடும் விரைந்து அறியத் தோன்று மாகலின், தோளும் நுதலும், நோக்கிப் பரியல் என்றும், பரிந்தவழி இவ்வேறுபாட்டிற்குத் தான் காரணம் எனத் தலை மகன் நினைந்து பெரியதோர் வருத்தம் உறுவன் என்றும், அது தன்போலும் மகளிரால் நீக்கப்படுவது அன்று என்றும் கூறுவாள், எல்லையில் இடும்பை தரூஉம் என்றும் கூறினாள். எல்லையில் இடும்பை தரூஉம் என்றதற்குத் தாயர் தந்தை தன்னையர் முதல் பலர்க்கும் வருத்தம் மிக விளைவிக்கும் என்றும், பின்னர் அதன் விளைவு வேறாம் என்றும் கருதி இவ்வாறு கூறினாள் என்றுமாம். வாழி என்றது, தோழியின் அன்புடைமைக்கு மகிழ்ந்தவாறு. இது மீண்டுவந்த தலைவி வழிவரல் வருத்தம்கண்டு வருந் திய தோழிக்குக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். 1 393. துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய் அறம்புலந்து பழிக்கும் அண்க ணாட்டி எவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளோநின் மடமகள் வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே. இது, தலைமகள் உடன்போய் மீண்டு வந்துழி அயலோர் அவள்தாய்க்குச் சொல்லியது. உரை : நின்னைப் பிரிந்து சென்றது ஏதுவாகக் கொண்டு துயரம் வருத்துதலால் உண்மெலிந்து அறநூல்களை வெகுண்டு பழிக்கும் அண்கணாட்டியே, வருத்தத்தால் வருந்தும் நின் நெஞ்சிற்கு இன்பமுண்டாக, வெவ்விய வலியும் வெள்ளிதாய வேலு முடைய விடலையாவான் முன்வர அவன் பின்னே நடந்து நின்மகள் வந்தனள்காண் என்றவாறு. துறந்தது, ஈன்று புறந்தந்த தாயாகிய தன்னைத் துறந்து காதலனுடன் கொண்டுதலைக்கழிந்தது. சாய்தல், உடம்பு மெலிதல். துயரம் உண்ணின்று வெதுப்புதலால் உடல் மெலிந் தமையின், துயரடச் சாய் என்றார். அறம், அறநூல்; அறங் கூறுவோரையுமாம். அண்கணாட்டி, கண்காண இருப்பவள்; “அண்க ணாளனை நகுகம் யாமே1” என்று பிறரும் கூறுதல் காண்க. துயரங்கொண்டு வருந்தும் நெஞ்சு எவ்வ நெஞ்சு எனப்பட்டது. ஏமம், இன்பம்; காப்புமாம். ஓ, வியப்பு. களவின்கண் ஒழுகுதலும் கொண்டுதலைக்கழிதலும் அற நூலார்க்கு உடன்பாடாதலின், தாய் அறத்தை வெகுண்டு தூற்றியதைக் கண்டிருந்தா ராதலின், அறம் புலந்து பழிக்கும் அண்கணாட்டி என்றார். அறத்தைப் பழித்தமைக்கு ஏது அவளுடைய மகள் அவளைத் துறந்த தாகலின், துறந்ததற் கொண்டு என்றும், அதனால் ஆறாத் துயர் கொண்டு அவலித் தமை தோன்றத் துயரடச் சாஅய் என்றும் அயலோர் உரைப் பாராயினர். எவ்வம் எனப் பெயர்த்தும் கூறினர், இனி இல்லையா மாறு கெடுதல்பற்றி. மகள்வரவு கேட்டு மகிழ்சிறந்து துயர்நீங்குவ ளாகலின், எவ்வ நெஞ்சிற்கு ஏமமாக வந்தனள் என்றும், தலைமகன் மனைக்கண் வதுவை முடித்துக் கொண்டு வருகின் றாள் என்பார், விடலை முந்துற என்றும் கூறினர். “கொடுப்போர் இன்றியுங் கரணம் உண்டே, புணர்ந்துடன் போகிய காலை யான 2” என்பதனால் தலைமகன் தன் மனைக்கண்ணே கொடுப் போரின்றியே வதுவையயர்தல் இலக்கணமாதல் அறிக. “மாறாது வருபனி கலுழும் கங்குலின், ஆனாது துயரும்எம் கண்ணினிது படீஇயர், எம்மனை முந்துறத் தருமோ, தன்மனை யுய்க்குமோ யாது அவன் குறிப்பே 3” எனச் சான்றோர் கூறியவாற்றானும் அறிக. அளைகணாட்டி என்றும் பாடமுண்டு. 394. மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த அன்பி லறனு மருளின்று மன்ற வெஞ்சுர மிறந்த வஞ்சி லோதிப் பெருமட மான்பிணை யலைத்த சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே. இஃது, உடன்போய் தலைமகள் வந்துழித் தாய் சுற்றத் தார்க்குச் சொல்லியது. உரை : சுற்றத்தீரே, மாண்பில்லாத கொள்கையால் மயங்கு தற்கு ஏதுவாகிய துயரத்தினைச் செய்த, அன்பொடு கூடாத அறனும், அவ்வன்பின்வழித் தோன்றிய அருளை யுடைய தாயிற்று. வெவ்விய சுரத்தினைக் கடந்து சென்ற அழகிய சிலவாகிய கூந்தலையும் சிறிய நுதலையுமுடைய பெரிய மடப்பம் பொருந்திய மான்பிணையை ஒக்கும் இளையவள் மீண்டு வந்தாளைக் காட்டுவேன், வம்மின் என்றவாறு. மாண்பாவது, “கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே 1” என்பது. ஒடு, ஆனுருபின் பொருட்டு. உடன்போக்கினை “அறந்தலைப் பிரியா ஆறு 2” என அறவோர் கூறுதலின் அறன் எனப்பட்டது. அருளின்று, அருள் செய்தது. அஞ்சிலோதி, சிறுநுதற் குறுமகள், மான்பிணை அலைத்த குறுமகள் என இயையும். காட்டிய வம்மே என்றமையின், சுற்றத்தீர் என்பது வருவிக்கப்பட்டது. அலைத்த என்றது உவம வாய்ப்பாடு. அலைத்தல், மருண்ட நோக்கத்தால் மான்பிணையைப் பொருவுதலின், மானினம் தன் இனம் என மருளுவித்தல். வம்மே, வருக என்னும் பொருண்மைக் கண் வந்த முன்னிலை வினைத்திரிசொல். களவின்கண் உடன்போக்கு அறமாயினும், அன்புசெய்து பேணிப் புறந்தந்தாரை மறந்து செய்யப்படுதலின், அன்பில் அறனும் என்றும், ஈன்றாரையும் உடன்பயின் றொழுகிய ஆயத்தாரையும் கையிகந்து மறையிற்புணர்ந்து சேறல் மாண் புடைமை அன்று எனக் கருதுகின்றாளாகலின், மாண்பில் கொள்கை யென்றும், அக்கொள்கையால் பெற்றோர்க்குப் பிரிவாற்றாமை மேலும் அயலவர் கூறும் பழிப்புரை தோன்றி நீங்கரிய துயர்செய்தலின், மயங்குதுயர் என்றும் உரைத்தாள். இப்பெற்றித்தாயினும், பெற்றோர் எய்திய பெருகிய துயரத்தை மாற்றுவான் தலைமகளை மீளச் செய்தமையான், அன்பில் அறனும் அருளின்று மன்ற என்று இசைத்தாள். இது தலைவி மீண்டுவந்துழித் தாய் சுற்றத்தார்க்குக் காட்டி யது என்பர் நச்சினார்க்கினியர்.1 395. முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரிச் சுடர்விடு நெடுங்கொடி விடர்முகை முழங்கும் இன்னா வருஞ்சுரந் தீர்ந்தனம் மென்மெல ஏகுமதி வாழியோ குறுமகள் போதுகலந்து கறங்கிசை யருவி வீழும் பிறங்கிருஞ் சோலைநம் பெருமலை நாட்டே இஃது உடன்போய் மீள்கின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது. உரை : இளையவளே, உலர்ந்த மூங்கிலின்கட் பிறந்து காற்றால் மிக்குப் பெருகிய தீயின் ஒளிவிடும் நெடிய ஒழுங்கு, கற்பிளவு களினும் மலைமுழைஞ்சுகளினுள்ளும் முழங்கும் கொடுமை யினையுடைய செல்லுதற்கரிய காட்டினை நீங்கினோ மாகலின், இனி பூக்களோடு கூடி ஒலிக்கின்ற இசையினை யுடைய அருவிகள் வீழும் உயரிய சோலைகளை யுடைய பெரிய மலைகள் பொருந்திய நம் நாட்டில் மெல்ல நடந்து செல்லு வாயாக என்றவாறு. முளிவயிர், உலர்ந்த மூங்கில்; “அயிரியாற் றடைகரை வயிரின் நரலும் காடு 2” எனப் பிறரும் கூறுதல் காண்க. மூங்கில் களை அலைத்துத் தீயைப் பிறப்பித்த தனக்கு அதனை வளர்த் தலும் கடன் எனக் கருதியது போல மோதி மிகுவித்தலின், வளிவளர் கூரெரி என்றார். கொடிபோற் படர்ந்து செல்வது பற்றி நெடுங்கொடி என்றார்; “முளியரிற் பிறந்த வளிவளர் கூரெரிச், சுடர்நிமிர் நெடுங் கொடி விடர்முகை முழங்கும் 3” எனப் பிறரும் உரைப்பது காண்க. விடர்முகை, உம்மைத்தொகை. இருபெயரொட்டாக்குதலு மொன்று. தீர்தல், விடுதல். “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும் 4” மதி: முன்னிலையசை. பிறங்குதல், உயர்தல். இருஞ்சோலை, இருண்டு கரிதாய்த் தோன்றும் சோலை என்றுமாம். உலர்ந்த மூங்கில்கள் ஒன்றோடொன்று காற்றால் அலைப் புண்டு உராய்ந்துழிப் பிறந்து அக்காற்றால் மிகுதியுற்றுப் பெருகு தலின் முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரி என்றும், ஏனை மரம், செடி, கொடிகளையும் நெடிது தொடர்ந்து சேறலின் சுடர்விடு நெடுங்கொடி யென்றும் கூறினாள். இதனை ஆண்டுக் காட்டி விளக்குதற்கு இடம் இன்மையின் ஈண்டுக் கூறினான். வேனிலால் விளைந்த வெம்மையுடன், தீ வேறு எழுந்து துன்பம் செய்தலின் இன்னா அருஞ்சுரம் என்றான். இதுகாறும் சிறிது விரைந்து வந்தமை தோன்ற, மென்மெல ஏகுமதி என்றான், மெல்லச் செல்லின் பெருமலை நாட்டின் மாண்பு கண்டு இன்புற லாம் என்பது கருத்து. தண்ணென்ற அருவியும் பெரிய சோலையு முடைய நாடாகலின் இன்னாமை யின்மையானும், இளைய ளாயினாள் முற்றவும் விரைந்து செல்லின், தளர்வுற்று மெலிவா ளாகலானும், மென்மெல ஏகுமதி என்றான் என்றுமாம். “நிழல்காண் டோறும் நெடிய வைகி, மணல்காண் டோறும் வண்டல் தைஇ, வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே, மாநனை கொழுதி மாங்குயி லாலும், நறுந்தண் பொழில கானம், குறும்பல் லூரயாம் செல்லு மாறே 1” என்று பிறாண்டும் தலைவன் கூறுதல் காண்க. நம் பெருமலை நாடு எனத் தலைமகளை உளப்படுத் துரைக்கின்றான், தனது உரிமை அவட்கு இவ்வுடன் போக்கால் எய்திவிட்டமையின். “உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின், பெருமையில் திரியா அன்பின் கண்ணும் 2” என ஆசிரியர் குறிப்பது காண்க. 396. புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநின் கதுப்பய லணியு மளவைப் பைபயச் சுரத்திடை யயர்ச்சி யாறுக மடந்தை கல்கெழு சிறப்பி னம்மூர் எல்விருந் தாகிப் புகுகம் நாமே. இதுவுமது. உரை : மடந்தையே, புலிப்பொறி போலும் வேங்கை மரத்தின் பொன்னிறப் பூங்கொத்துக்களைக் கொய்து நின் கூந்தலயல் யான் அணியுமளவும் மெல்லச் சென்று சுரத்தின்கண் நடந் தமையால் எய்திய அயர்ச்சியைப் போக்கிக் கொள்வாயாக; மேலும், மலைகள் பொருந்திய சிறப்பினை யுடைய நம்மூர்க்கு நாம் பகலிற் போதரும் விருந்தினராய்ச் செல்வோம் என்ற வாறு. வேங்கையின்பூ புலிப்பொறி போல்வதனை “ஓங்கல் மிசைய வேங்கை யொள்வீ, புலிப்பொறி கடுப்பத் தோன்றலின் 1” என்று பிறரும் கூறுவர்; இப்பூவை ஆடவரும் மகளிரும் ஒப்ப அணிவர்; “பூங்கண் வேங்கைப் பொன்னிணர் மிலைந்து, வாங்கமை நோன்சிலை எருத்தத் திரீஇ 2” என ஆடவரும், “வேங்கைத் தண்கமழ் புதுமலர் நாறும், அஞ்சிலோதி 3” என மகளிரும் அணிவது காண்க. பைபய, பையப்பைய என்பதன் மரூஉ; “பைபயத் தணந்தனை யாகி யுய்ம்மோ 4” என்றமை காண்க. எல்விருந்து, பகலே பலரும் காணச் செல்லும் விருந்து. புகுகம், புகுவேம். பகலிற் பலர்காணத் தலைமகள் விருந்தினளாய் வருதலின், அயர்ச்சி போக்குதலும் ஒப்பனை செய்து கோடலும் இன்றி யமையாமை பற்றி, வேங்கைப் பொன்னிணர் கொய்து அணியும் அளவை என்றும் பைபய அயர்ச்சி ஆறுக என்றும் கூறினான். நம்மூர் என்பதற்கு “நம் பெருமலை நாடு 5” என்றதற்கு உரைத்ததனை உரைத்துக்கொள்க. எல்விருந் தாகிப் புகுகம் என்றது, அயர்ச்சி ஆறுக என்றதற்குக் காரணம் காட்டிய வாறு. தலைமகன் சுரத்தைக் கடந்து போந்துழிப் பூங்கொய்து அணியுங்கால் அவன் மெய்தீண்டுந்தோறும் உடல் குளிர்ப் பெய்துதலாலும், பூவணியுமளவும் செல்லாது நிற்றலாலும் தளர்ச்சி நீங்குதலின், அயர்ச்சி யாறுக என்றான். மலைகெழு நாடு என்றும் பாடம். 397. கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரனணி வாரா நின்றன ளென்பது முன்னுற விரைந்தநீ ருரைமின் இன்னகை முறுவலென் னாயத் தோர்க்கே. இஃது உடன்போய் மீள்கின்ற தலைமகள் தன்னூர்க்குச் செல் கின்றாரைக் கண்டு கூறியது. உரை : கீழ்க்கவிழ்ந்துள்ள மயிர் பொருந்திய கழுத்தினையுடைய செந்நாயினது ஆண், குட்டியையுடைய பன்றியைக் கொள் ளாது நீங்கும் சுரத்தைக் கடந்து அணித்தே வாராநின்றனள் என, இனிய நகைவிளங்கும் முறுவலை யுடைய என் ஆயத் தோர்க்கு, முன்னாக விரைந்து செல்கின்ற நீவிர் உரைப் பீர்களாக என்றவாறு. எருத்தின்கண் வளர்ந்து கீழே தாழ்ந்த மயிரைக் கவிழ்மயிர் என்றும், அடல் மிக்கது என்றற்குச் செந்நாயேற்றை என்றும் கூறினார், குருளைப்பன்றி, குருளையொடு செல்லும் பன்றி. சுரத்திற்குப் புறத்தே ஊர்க்கு அணித்தாயுள்ள நிலப்பகுதி சுரன் நணி எனப்பட்டது; “ஊர்நணித் தந்தனை 1” என்றாற் போல. ஆயத்தோர், ஆய மகளிர். “இன்னகை ஆயத்தாரோடு இன்னும் அற்றோ 2” என்பர் பிறரும். தலைவி புணர்ந்துடன்போகியகாலை அவளுடைய தமர் போந்து வளைத்தனராக, தலைமகன் தன் காதலியின் தந்தை தன்னையர் எனக்கருதி அருளுள்ளத்தால் வாளாது தம்மொடு கொண்டு செல்ல விடுத்த திறத்தை உள்ளுறையால் உரைத்தலின், சுரனணி வாராநின்றனள் என்பது என்றாள். தமர் போதரக் கண்ட தலைமகன், தலைவியை நோக்கி, “நீ விளையாடுக சிறிதே யானே, மழகளி றுரிஞிய பராரை வேங்கை, மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி, அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென், நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே 3” என்பதும், தலைவி, “வாள்வனப் புற்ற அருவிக் கோள்வல், என்னையை மறைத்த குன்றே அறஞ்சாலியரோ 1” என்பதும் காண்க. தலைவி மீளலுறும் செய்தியைத் தன்னையர் முன்னுறச் சென்று அறிவிக்குமாறு விடுத்த அவர் துணைவர்பால் இதனை மொழிகின்றா ளாகலின், முன்னுற விரைந்த நீர் உரைமின் என்றும், தன் வரவு கேட்டு உவகை மிகுந்து தன்னை எதிர்நோக்குவர் என்பது பற்றி இன் னகை முறுவல் என் ஆயத்தோர் என்றும் கூறினாள். சுரன்நணி வாரா நின்றனள் என்பது, தமர் துணைவர்பால் சொல்லி விடுத்த கூற்று. “கூற்றவண் இன்மையின் 2” தலைவி அதனைக் கொண் டெடுத்து மொழிந்தாள். செந்நாயின் ஏற்றை குருளை யீன்ற பன்றி யெனக் கருதிக் கொள்ளாது கழியும் என்றது, தன் காதலியை ஈன்ற தந்தையும் தன்னையரும் என்று கருதி இவரொடு என்னைச் செல்ல விடுத் தான் என்றவாறு. இது மீண்டு வருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டது என்பர் இளம்பூரணர். 3 இது மீள்கின்றாளென்று என்வரவு ஆயத் தார்க்குக் கூறுமின் என்றது என்பர் நச்சினார்க்கினியர். 4 398. புள்ளு மறியாப் பல்பழம் பழுனி மடமா னறியாத் தடநீர் நிலைஇச் சுரநனி யினிய வாகுக வென்று நினைத்தொறுங் கலிழு மென்னினும் மிகப்பெரியது புலம்பின்று தோழி நம் மூரே. இது, தலைமகள் மீண்டுவந்துழி அவட்குத் தோழி கூறியது. உரை : தோழி, நின்னை நினைக்குந்தோறும், நீ செல்லும் சுரம், புள்ளினமும் தேர்ந்தறியாத பலவாகிய பழங்கள் நிரம்பி, மடப்பம் பொருந்திய மான்கூட்டமும் கண்டறியாத பெரிய நீர்நிலைகள் நிலைபெறப்பெற்றுச் சேறற்கு இனியவாய் விளங்குமாக என்று வாழ்த்திக் கண்ணீர்விட்டுக் கலங்கும் என்னினும், நம் மூரிலுள்ளார் கழிவிரக்கங் கொண்டு புலம்பி நின்றனர்காண் என்றவாறு. பழுமரந்தோறும் சென்று பழமுண்டு வாழ்தல் புள்ளினங் கட்கு இயல்பாதலின், புள்ளும் என்றவிடத்து உம்மை சிறப்பு. “பழந்தேர் வாழ்க்கைப் பறவை போல 1” என்று பிறரும் கூறுப. பழுனி, நிறைந்து; “பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி 2” என்பது காண்க. பழுத்து என்றுமாம். மானினம் நீர்நிலை இல்வழி அஃது உள்வழி நாடிச் சென்று அதன் அருகே வாழுமாதலின், மடமான் அறியாத் தடநீர் என்றார். தடநீர், பெரிய நீர் நிலை. செல்வார்க்கு வழியிடை வேண்டுவன உணவும் நீரும் நிழலும் அன்றிப் பிறவன்மையின், பல் பழம் பழுனி, தட நீர் நிலைஇ என்று கூறினாள். வெந்திறல் வெள்வேல் விடலை யொடு, சென்றாட்கு ஊறுசெய்வன வின்மையின், அவற்றை நினையாளாயினள் என்க. தலைமகளின் நினை வெழுதற்குரிய செயலும் பொருளும் தோன்றியவிடத்து நினைத்துக் கண்கலுழும் தோழியினும், ஊரவர், அவளுடைய தாயாரையும் ஆயத்தாரை யும் காண்டொறும் இரங்கிக் கலுழ்ந்தன ராகலின் என்னினும் மிகப் பெரிது புலம்பின்று நம்மூர் என்றார். தலைமகள் உடன்போகிய நிலையில், ஊரவர் பலரும் போந்து அவளுடைய மாண்புகளையும் பிற நலங்களையும் பாராட்டிக் கூறி வருந்தினமையின், அது கண்டு “மனை மருண் டிருந்த என்னினும் நனைமகிழ், நன்ன ராளர் கூடுகொள் இன்னியம், தேரூர் தெருவில் ததும்பும், ஊரிழந் தன்ற தன் வீழ்வுறு பொருளே3” என்று தாயும் கூறுமாறு காண்க. இது தலைவி மீண்டு வந்துழித் தோழி ஊரதுநிலைமை கூறியது என்பர் நச்சினார்க்கினியர். 4 399. நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும் எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே. இஃது உடன்கொண்டுபோன தலைமகன் தலைவியைத் தன் இல்லத்துக்குக் கொண்டுபுக்குழி, அவன்றாய் அவட்குச் சிலம்பு கழீஇக் கடன் செய்கின்றாள் எனக் கேட்ட நற்றாய், ஆண்டு நின்றும் வந்தார்க்குச் சொற்றது. உரை : வெற்றிமிகும் வேலையும் குற்றமற விளங்கிய கழலணிந்த காலையுமுடைய பொய்ம்மொழிதலில் வல்ல காளையாகிய தலைமகனை ஈன்ற தாய்க்கு, “நும்முடைய மனையின்கண் சிலம்பு, கழீஇத் திருமணமாகிய கடனை ஆற்றுவையாயினும், எம்மனைக்கண் வதுவையாகிய நன்மணத்தைச் செய்வாயாக” என நீவிர் அவட்கு உரைத்தால் வரக்கடவ இழுக்கென்னை? கூறுக என்றவாறு. சிலம்புகழி என்பது சிலம்பு கழீஇ என நீண்டது; செவி யறிவுறூஉ என்றாற்போல. கழி, முதனிலைத் தொழிற் பெயர்; இஃது ஆகுபெயராற் கழித்தலாகிய திருமணத்தின் மேல் நின்றது. “சிலம்பு கழீஇய செல்வம் 1” என்றார் பிறரும். மகளிர்க்கு மணமாகாமுன் பெற்றோர் அணிந்த சிலம்பு கன்னிமைச்சிலம்பு என்றும், மணநிகழ்ச்சிக்கண் கொழுநன் அணியும் சிலம்பு கற்புச்சிலம்பென்றும் கணவன் தரும் சிலம்பையணியும் திரு மணம் சிலம்புகழீஇய மணம் என்றும் அறிக. திருமணமும் பெற்றோர் மகட்குச் செய்து கழித்தற்குரிய கடனாதலின், நன்மணம் கழிக என்று கழித்தல் வாய்ப்பாட்டாற் கூறினார். சிலம்புகழீஇய திருமணம் நிகழினும், வதுவை நிகழ்ந்த பின் னல்லது சிறப்புடைய உடனுறைவாழ்வு தலைமகட்கு எய் தாமையின், அதனைப் பயப்பிக்கும் வதுவைமணத்தை வதுவை நன்மணம் என்றார். திருமணத்துக்குச் சென்றிருந்து வந்தாரொடு உரையாடுதலின், இழுக்கு என ஒருசொல் வருவிக்கப்பட்டது. மை, குற்றம். பொய்வல்காளை, பொய் உரைத்துக் கேட்போரை மருட்ட வல்ல காளை. சங்ககாலத் தமிழ்வாழ்வில் சிலம்புகழீஇயும் வதுவையும் எனத் திருமணம் இருகூறாகி முன்னது முதற்கண்ணும் பின்னது அதன் பின்னரும் நிகழ்ந்துள்ளன. வதுவை நன் மணத்துக்குச் சிலம்புகழீஇ இன்றியமையா முன்னணிக் கூறாதலின் அதனை மகட்பெற்றோர் தம்மனைக்கண் நிகழ்த்துவதையே பெரிதும் விரும்புவர்; அவருள்ளும் நற்றாய் அதனைத் தன் மனைக்கண் நிகழ்த்துதற்கே சிறப்பாக வேட்கையுறுவள். “தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல், என்னோ ரன்ன தாயரும் காண..... பொன் னுடை நெடுநகர்ப் புரையோர் அயர, நன்மாண் விழவில் தகரம் மண்ணி, யாம்பல புணர்ப்பச் செல்லாள், ..... தான்அமர் துணைவன் ஊக்க வூங்கி, உள்ளாது கழிந்த சிறுவன்கண்ணி சிலம்பு கழீஇ, அறியாத் தேஎத்த தாகுதல் கொடிதே 1” என்றும், “சீரும் சிறப்பு மின்றிச் சீறூர், ஏதில் வறுமனைச் சிலம்பு கழீஇ, மேயினள் கொல்லென நோவல் யானே 2” என்றும் “சிலம்பு கழீஇய செல்வம், பிறருணக் கழிந்தஎன் னாயிழை 3” என்றும் சான்றோர் உரைப்பது காண்க. இச் சிலம்புகழீஇச் சிறப்பைத் தொல்காப்பியர் கரணம் என்றார். இதனைச் செய்தற்கு மகட் கொடைக் குரிய தலைமகள்பெற்றோர் உரியராதலின் புணர்ந் துடன் போகிய காலையில் அவர் இருத்தற்கு இன்மை பற்றி, இதற்கு இடமுண்டோ என நிகழும் ஐயம் அறுத்தற்குக் “கொடுப்போ ரின்றியும் கரண முண்டே, புணர்ந்துடன் போகிய காலை யான 4” எனத் தெளிவித்தார். இதனால், சிலம்புகழீஇச் சிறப்புத் தலைமகன் மனைக்கண் நிகழ்ந்தமையின், நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் என்றாள். இச்சிலம்பு கழீஇக் கரணத்தை இக் காலத்தும் கன்னி கழித்தல் என வழங்குவர். இத்திருமணம் புணர்ந்துடன்போகிய மணமாதல் பற்றிக் கொடுப்போரின்றியே அயர்தல் வேண்டும் என்பாளாயின் என்றற்கு அயரினும் என்றும், பிற்கூறாகிய வதுவை வினையை யாதல் என மனைக்கண் அயர்க என்று கேட்டல் வேண்டும் என்பாள், எம்மனை வதுவை நன்மணம் கழிக என என்றும், அவ்வாறு கேட்டல் இழுக்கன்று என்பாள் சொல்லின் எவனோ என்றும் கூறினாள். அயரினும் என்றாள் ஆயினும், கழித்தற் பொருளே கூறுக; “சிலம்பு கழீஇய செல்வம், பிறருணக் கழிந்த என் ஆயிழை” என்றவிடத்தும் கழித்தற்பொருளே வருதல் காண்க. புணர்ந்துடன் போகியபோது தன்னை வளைத்து அமர் விளைத்த தமரை வெருட்டி மேம்பட்டது குறித்து வென்வேல் என்றும், அமரகத்தே தன் மறத்துக்கு மாசு தோன்றாமலும் தமர்க்கும் பிறர்க்கும் ஊறுவிளையா வகையிலும் பொருது விளங்கினமை அறிந்துளாளாகலின், மையற விளங்கிய கழலடி என்றும், தன் சொல்வன்மையால் பொய்யும் மெய்போலத் தோன்றக் கூறித் தலைவியைக் கொண்டுதலைக்கழிந்தான் என்னும் கருத்தால் பொய்வல் காளை என்றும் கூறினாள். “அருங்கடி வியனகர்ச் சிலம்பும் கழியாள்..... கூர்வேல் விடலை பொய்ப்பப் போகி 1” என்று பிறரும் கூறுதல் காண்க. இது தலைவன் மீண்டு தலைவியைத் தன் மனைக்கட் கொண்டு வந்துழி அவன்தாய் சிலம்புகழி செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குக் கூறிய தென்பர் நச்சினார்க்கினியர்.2 தலைமகன் தன்னகத்தே வதுவைக் கலியாணம் எடுத்துக்கொண்டான் என்பது கேட்ட நற்றாய், ஒழிந்த கலியாணம் செய்யினும் நம்மகத்தே வதுவைக் கலியாணம் செய்ய நேருங்கொல்லோ காளையைப் பயந்தாள் என்னும் 3” என்பர் களவியல் உரைகாரர். 400. மள்ள ரன்ன மரவந் தழீஇ மகளி ரன்ன வாடுகொடி நுடங்கும் அரும்பதங் கொண்ட பெரும்பத வேனில் காதல் புணர்ந்தன ளாகி யாய்கழல் வெஞ்சின விறல்வேற் காளையொ டின்றுபுகு தருமென வந்தன்று தூதே. இஃது உடன்போய் வதுவை அயரப்பட்ட தலைவி, தலைவ னோடு இன்று வரும் எனக் கேட்ட செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது. உரை : தாயே, வீரரை யொத்த மரவமரங்களை மகளிர் போலும் அசைகின்ற கொடிகள் தழுவி நுடங்கும் அரிய உண்பொருள் களைக் கொண்ட பெருஞ் செவ்வித்தாகிய வேனிற்பருவத்தின் கண் வதுவை புணர்ந்தனளாய், நம் மகள், ஆய்ந்தணியப்பட்ட கழலும், வெவ்விய சினமும், விறல்மிக்க வேலு முடைய காளைபோல்வானுடன் இன்று வருவாள் எனத் தூதர் புகலா நின்றனர்காண் என்றவாறு. மள்ளரைத் தழீஇய மகளிர்போலக் கொடி மரவம் தழீஇ நுடங்கும் என இயைக்க. மரவம், வெண்கடம்பு. அது தொழிலுவமம். அரும்பதம், பெறுதற்கரிய உண்பொருள். அவை வேனிலிற் பழுக்கும் மா பலா முதலிய இனிய கனி வகைகள். அழகிய தளிரும் நறிய மலரும் இனிய கனிகளும் பெறப்படும் இன்பக்கால மாகலின், அரும்பதம் கொண்ட பெரும்பத வேனில் என்றார். காதல், ஈண்டு அதன் பயனாகிய வதுவைமேற்று. வெற்றி குறித்தும் வீரம் குறித்தும் கழல் வேறு படுதலின் ஆய்கழல் என்றார். தூது: உயர்திணைப் பொருண்மைக் கண் வந்த அஃறிணைச் சொல். உள்ளுறையால் நற்றாய் எய்தவிருக்கும் இன்பத்தைக் கூறு தலின், தலைவனை மணம் புரிந்துகொண்டு வரும் தலைமகளைக் காதல் புணர்ந்தன ளாகி என்றும், அது கேட்டு அவளைக் காண்டல் விருப்பால் ஆர்வத்தோடு நற்றாய் தன்னை நோக்கு தலின், காளையொடு இன்று புகுதரும் என்றும், அதனைத் தான் அறிந்த திறம் கூறுவாள் வந்தன்று தூது என்றும் கூறினாள். மரவம் தழீஇ ஆடும் கொடி நுடங்கும் வேனில் அரும்பதம் கொண்டாற் போல, மனையிடத்திருந்து மகட்பிரிவால் அசைந்து வருந்தும் நீ இன்பமுற்று மகிழப்போகின்றாய் என உள்ளுறை கொள்க. ஆசிரியர் ஓதல்ஆந்தையார் பாடிய பாலை முற்றும் ஐங்குறுநூறு மூலமும் விளக்கவுரையும் ஐந்தாவது ஆசிரியர் : பேயனார் பாடிய முல்லை அகனைந்திணைக்கண் ஒன்றாகிய முல்லை முல்லைத் திணை எனவும் வழங்கும். ஆசிரியர் தொல்காப்பியனார் இதனை “மாயோன் மேய காடுறை யுலகம்” என்பர். எனவே, பல்வகை மரங்களும் செடிகொடிகளும் புல்வகைகளும் புதர்களும் செறிந்து இருள்படப் பொதுளியுள்ள காடும் காடு சேர்ந்த நிலப்பகுதியும் முல்லை என்பதாம். இம் முல்லைத் திணைக் குரிய சான்றோர் செய்யுட்களில் பெரும்பொழுதாகிய காரும் சிறுபொழுதாகிய மாலைப்போதும் இத்திணைநிலைக்குரிய காலமாகக் குறிக்கப் படும். இந் நிலத்தில் வாழும் மக்களை, ஆயர், கோவலர் என்று கூறுவர். அகனைந்திணைக்கென நிலத்தைக் குறிஞ்சி முதலாக வகுத்துக்கொண்டனராயினும், பாலையை நிலமாகக் கொள் ளாமை முன்னர்க் கண்டோம்; ஆகவே, சிறப்புடைய நிலம் நான்காதல் பெற்றாம். அவற்றுள்ளும் நிலவளம் சிறந்தவை குறிஞ்சியும் முல்லையும் மருதமுமேயாகும். நெய்தல் நீர்வளத்தாற் சிறந்தது. இம் மூன்றனுள் முல்லை ஏனையிரண்டற்கும் இடை நிற்றலின் முல்லை நிலத்து ஆயரை இடையர் என்றும், முல்லை நிலத்து வாழும் ஆனிரைகளின் பாற்பயன் ஏனை எல்லா நிலத் தவர்க்கும் பொதுவாய்ப் பயன்படும் சிறப்புப் பற்றி அதனை நல்கும் ஆயரைப் பொதுவர் என்றும் குறிப்பதுண்டு. “மாசுண் உடுக்கை மடிவாய் இடையன், சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப், புலிதுஞ்சு வியன்புலம் 1” என்றும், “பல்லான் பொதுவர் கதழ்விடை கோட்காண்மார் 2” என்றும் சான்றோர் உரைப்பது காண்க. இவர்கள் வாழும் ஊர்கள், ஆய்ப்பாடி, மாறன்பாடி எனவும், தெளிச்சேரி நடுவாச்சேரி எனவும், குராப்பள்ளி சிக்கற் பள்ளி எனவும், பாடி, சேரி, பள்ளி என்று முடியும் பெயர்களைப் பெற்றிருக்கும். ஆயர்கள், வரகு கொள் முதிரை முதலியவற்றையும் கவலைக் கிழங்கு முதலிய கிழங்கு வகைகளையும் உண்பர். முல்லைக் காடுகளில் மானும் புல்வாயும் முயலும் பெரிதும் வாழ்கின்றன. ஊரகத்தும் புறத்தும் காடுகளிலும் கொன்றை குருந்து முதலிய மரங்களும் முல்லை முதலிய கொடி வகைகளும் காயா முதலிய செடி வகைகளும் களவுப்புதல் முதலிய புதர் வகைகளும் பல்கியிருக்கும். அவற்றிடையே கானக்கோழிகள் மேயும். ஆனிரை மேய்த்தலும் பாற்பயன் கோடலும் பொதுவாக நிகழும் தொழிலாயினும், முல்லைக் கொல்லைகளை உழுது, வரகு துவரை முதலியவற்றை விளைவித்தலும் முல்லை நிலத்து முது மக்களின் தொழில்வகையாம். காட்டாறுகளும் பொய்கைகளும் முல்லைக்கண் நீர்நிலைகள். முல்லை பிடவு தளவு காயா முதலிய பூக்கள் ஆயர் விரும்பிக் கண்ணியும் மாலையும் தொடுத்து அணியும் பூவகை. இந்நில முற்றும் பெரும்பாலும் செம்மண் நிலமாதலின், அந்நிலத்துக் கேற்ப அவர்கள் துவராடை அணிவது இயல்பு; “அந்துவராடைப் பொதுவன் 3” எனச் சான்றோர் உரைப்பது காண்க. முல்லையாழும் முல்லைப் பண்ணாகிய சாதாரியும் ஏறுகோட் பறையும் இசைத்துறைக் குரியவாய்க் கொள்வர்; வேய், ஆம்பல், கொன்றை முதலிய வற்றால் ஆகிய குழலை இசைத்து இனிய இசையின்பம் துய்ப்பர். இந்நூற்கண் முல்லைத் திணைக்குரிய பாட்டுக்கள் நூறும் பாடிய ஆசிரியர் பேயனார் என்பவராவர். அவர் பாடியனவாக இந்நூறுமே யன்றி அகத்திலும் குறுந்தொகையிலும் பாட்டுக்கள் சில வுள்ளன. பேயனாரது ஊர் இன்னது எனத்தெரிந்திலது. இடைக் காலக் கல்வெட்டுக்களில் காணப்படும் மக்களுள் உழான் என்னும் பெயருடையார் தொண்டை நாட்டிலும், மன்றாடி யென்னும் பெயருடையார் கொங்கு நாட்டிலும் பெருகியிருப்பது போலப் பேயன் என்ற பெயருடையார் சேரநாட்டில் காணப் படுகின்றனர். திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோயில் கல்வெட்டுக்களில் சேந்தப்பிரான் பேயனான யாதவராயன் 1 என்பான் காணப்படுகின்றான்; அவன் தாழைக் குடி என்னும் ஊரினன். இதனை “மலைமண்டலத்துத் தாழைக்குடி” என்று கல்வெட்டுக் கூறுகிறது. குறும்பர்நாடு வட்டத்திலுள்ள முட்டுங் கல் கல்வெட்டில் பேயனான கண்டன் நீலன் என்றும், ஏர்நாடு வட்டத்து வண்டூர்க் கற்குகைக் கல்வெட்டில் பேயனான தாமத்தன் என்றும் வருவன மேலே கொண்ட கருத்துக்குச் சான்று பகர்கின்றன. இவற்றால் இம்முல்லைப் பாட்டுக்களைப் பாடிய ஆசிரியர் பேயனார் சேர நாட்டினர் எனக் கோடற்கு இட முண்டாகிறது. சேர நாட்டில் சிறைக்கல் வட்டத்துப் பையனூரை அப் பகுதியினர் முன்னாளில் பேயனூர் என வழங்கினரென்று அங்குள்ளோர் கூறுதல் ஈண்டுக் கருதத்தக்கது. சேரமான் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய கண்ணனார் பெயரால் கண்ணனூர் என்றும், கண்ணன் பாட்டோலை என்றும் ஊர்கள் தோன்றியிருப்பதும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய காக்கைபாடினியார் நச்செள்ளையார் பெயரால் காக்கை யூர் என்று ஊர் தோன்றியிருப்பதும் காணுமிடத்து இப்பையனூ ரான பண்டைப் பேயனூர் இப்பேயனாரைச் சிறப்பித்தற்குத் தோன்றியிருக்கலாம் எனக் கருதுவது மிகையாகாது. ஆசிரியர் பேயனார் முல்லைத்திணையைப் பாடுவதில் மிக்க சிறப்புடையவர். இவர் பாடியனவாக ஏனைத்தொகை நூல்களுட் காணப்படும் பாட்டுக்களும் முல்லையையே சிறப்பிக்கின்றன. இவர் பிறந்து வளர்ந்து புலமை சிறந்த நிலம் முல்லையாதலின் முல்லைப்பாட்டுக்கள் இவர்க்கு மிக இனிய வகையில் அமைந் துள்ளன. முல்லைத்திணைக்குக் கார்காலமும் மாலைப்போதும் சிறந்த முதற்பொருள்கள் என்பது முன்பே கூறப்பட்டது. இக்காலத்தே கானம் வழங்கும் காட்சியைத் தெரிவித்து அவற்றிடையே தலைமக்களது கற்புவாழ்வை நிறுத்தி, அதன்கண் அவர்பால் நிகழும் நினைவையும் சொல்லையும் எடுத்துக்காட்டி இன்புறுத் தற்கண் இவரது புலமை நலம் இப்பகுதியில் ஈடுபடுகின்றது. கார்காலத்தில் வானமெங்கும் கார்முகில் பரந்து இருள்படச் செறிந்து பெருமழை பெய்கிறது. மலைமுகட்டிலும் பக்கத்திலும் பெய்தநீர் அருவியாய் வீழ்ந்து புதுநீராய்ப்பெருகிக் கானமெங்கும் பாய்ந்து நிலத்தைக் குளிர்விப்ப, வேனில்வெம்மையால் வெதும்பி வாடிய மரஞ்செடிகள் கார்மழையால் வளம் பெறுகின்றன. பள்ளங்களில் நீர் நிற்கிறது. புல்வகைகள் பசுமையுடன் இனிய காட்சி வழங்குகின்றன. மாலைப்போதில் புதர்தொறும் முல்லை, தளவு, பிடவம், தோன்றி முதலியன பூத்துக் கானத்தை அழகு செய்கின்றன. “காயா கொன்றை நெய்தல் முல்லை, போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப், பூவணி கொண்டன்றால் புறவே 1” என்று இக்காட்சியைச் சொல் லோவியம் செய்கின்றார். இப்புலவர் “அப்பூக்களின் தேனையுண்டு வண்டினம் பாடு கின்றது. 2” “இருள் மாலைப்போதில் பள்ளங்களி லிருந்து நுணலும் தேரையும் ஒலிக்கின்றன. 3” “புற்றின்கண் வாழும் ஈயல்கள் நாள்வெயிற்காலையில் வெளிப்போந்து பறந்து மடி கின்றன. 4” “வானம்படி மழைத்துளி யுண்டு மகிழ்வதும் களிறுகள் பிடிதழீஇ உலவுவதும் 5” “மயில்கள் தோகையை விரித்து ஆடுவதும் 6” “மானினம் கன்றொடுகூடி உலாவி இன்புறுவதும்7” பிறவும், காண்பார் கண்ணுக்குச் சிறந்த காட்சி நல்குகின்றன. கொன்றை குருந்து முதலிய மரங்கள் பொன்னெனப் பூத்துப் பொலிந்து நிற்பதால், “கானவர் அவற்றின் பூக்களால் கண்ணி தொடுத்துத் தலையிற் சூடிக்கொள்கின்றனர். 8” காதலருடைய காதல்வாழ்வில் புணர்விடைப் பிறக்கும் புத்தின்பமும், பிரிவின்கண் உண்டாகும் பிரிவுத் துன்பமும் ஆசிரியர் பேயனார் பாட்டில் அழகு பெறுகின்றன. மனைவி யொடு கூடி மகிழ்ந்துறையும் காதலன், கார்கவின் கொண்ட கானக் காட்சியைப் “புள்ளும் மாவும் புணர்ந்தினிது உகளக், கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி, மெல்லியல் அரிவை கண்டிகும், மல்ல லாகிய மணங் கமழ் புறவே 1” என்றும், கானத்தையே முன்னிலைப்படுத்தி, “பொன்னென மலர்ந்த கொன்றை மணியென, தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு, நன்னலம் எய்தினை புறவே 2” என்றும் தலைமகட்குக் காட்டி மகிழ்விக்கின்றான். காதல் வாழ்வில் கணவனும் மனைவியும் கருத்து ஒருமித்து இன்புற்று உறையும் நலத்தைக் கண்டோர்கூற்றில் வைத்து, “இனிது மன்றஅவர் கிடக்கை முனிவின்றி, நீனிற வியலகம் கவைஇய, ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே” என்று பாராட்டுவதும், வினைகுறித்துப் பிரிந்துறையும் காதலன், வினைமுடிந்ததும், காதலுணர்வு உண்ணின்று உந்துதலால், பாகனை நோக்கி, “கார்மழை தலைஇக், காடு கவின்கொண் டன்று பொழுது பாடுசிறந்து, கடியக் கடவுமதி பாக 3” என்று உரைப்பதும், கார்ப்பருவத்தில் கானம் தழைத்து அழகு திகழக் கண்ட தலைமகள் காதலன் தன்னை நினைந்து வருந்துவனோ என எண்ணி அதனால் மேற்கொண்ட வினை தாழ்க்குமோ என்று அஞ்சி உரைப்பதும் இன்பந் தருவனவாம். இவற்றின் நலங்களும் ஏனைய காட்சிகளும் இனிவரும் பாட்டுக்களிற் காணலாம். 41. செவிலி கூற்றுப்பத்து இது மணஞ்செய்த பின்னர் மணமனை காணச் சென்ற செவிலி அம்மணமக்களின் வாழ்க்கைநலமும், காதலும், பிறவு மாகிய சிறப்புக்கண்டு மகிழ்ந்த உள்ளத்தளாய்ப் போந்து நற்றாய்க்குக் கூறுதலே பொருளாக வந்த பாட்டுக்களின் தொகுதி யாகலின் இப்பெயர்த்தாயிற்று. தலைமகளை ஈன்று புறந்தரும் நெறியில் நற்றாய் சிறந்தவள் எனினும், அவளை வளர்த்து நினைவு சொல் செயல் ஆகிய மூன்றன் பயிற்சியால் தலைமைப் பண்புடையளாய்ச் செய்வதில் செவிலி தலைசிறந்தவளாவள். இளமைப்போதில் நடையும் மொழியும் கற்பித்துத் தலைமகளின் மென்னடையும் இன் மொழியும் கண்டு இன்புற்ற செவிலி, விளையாடும் செவ்வியில் தன் மகளை அவட்கு உயிரொத்த தோழியாக்கி அவளுடையது தலைமைப்பண்புகள் மாண்புறுவிப்பள். தலைமகள் பேதைப் பருவம் கடந்து, காமச் செவ்வி நிகழும் பருவமெய்துங்கால், தோழி அவட்கு உடன்விளையாடும் ஆயமகளாதலேயன்றி அறிவும் அறமும் அறிந்துரைக்கும் உயிர்த்துணைவியுமாகலின், அப்போது இருவர் செயல்வகையும் கண்காணித்து வேண்டும் துணையைச் செய்வது செவிலியது கடனாகும். இனி, தலைமகள் களவொழுக்கம் மேற்கொண்டு தோழி துணைசெய்யக் கற்பறம் வழுவாது ஒழுகுமிடத்து, தாய் தந்தை தன்னையர் முதலியோர், தலைவியது காதல்நெறி அறியாது, அவள்கருத்துக்கு ஒவ்வாத மணவினையைக் கருதுவராயின், தோழிவாயிலாகத் தலைமகளின் காதலொழுக்கத்தை உணர்ந்து கொள்வதில் முன்னிற்பவள் இச்செவிலியே யாவள். பெரு நாணத்தால் தலைவி தன் காதற் களவொழுக்கத்தை உரைத்தற்கு நாணுவளாகலின், அதனைத் தோழியால் அறியும் செவிலி, தலைவியது கற்பறம் கெடாமை நினைந்து, பெற்ற தாய்க்கு மெல்லவுணர்த்திச் சிறப்பிப்பதுபற்றிச் செவிலியே தலைவியது கற்பைக் காக்கும் சீரிய தாயாய் விளங்குகிறாள். இது குறித்தே ஆசிரியர் தொல்காப்பியனார், “தாயெனப் படுவோள் செவிலி யாகும்” என்று எடுத்து மொழிகின்றார். இவ்வண்ணம் தலைவிபால் தோன்றிய கற்பறம், அவ ளுடைய பெற்றோரது அறியாமையால் கெடாதவாறு பேணிப் பிறங்குவிக்கும் செவிலி, தலைவி கற்புநெறி வழுவாது, தான் காதலித்த தலைமகனைக் கரணமொடு நிகழும் வதுவையிற் கூடி மனையறம் புரிவதைக் காண்பதில் வேட்கை மிகுவள். தலைவி யுள்ளத்தில் தான் வித்திய கற்பறம், களவின்கண் முளைத்து வளர்ந்து, கற்பின்கண் மனையறமாய் மாண்புற்று, அறவோர்க் களித்தல், அந்தணரோம்பல், துறவோர்க்கு எதிர்தல், விருந்து புறந்தருதல் முதலிய செயல்வகைகளால் தழைத்து, அன்பு அரும்பி, அருள் மலர்ந்து, மக்கட்பேறாகிய இனிய தீங்கனி பயந்து சிறப்பது செவிலிக்குப் பேராவியற்கைப் பேருவகை யாகிறது. தலைவி மனையறம் தொடங்கியதுமுதல் மக்கட்பேற்றால் அவளது வாழ்வு மாண்புறுவது ஈறாக, அவ்வப்போது சென்று அவள் மேற்கொண்ட வாழ்வின் பயனும் பண்புமாகிய அன்பு அறம் ஆகியவற்றை நேரிற்கண்டு போந்து தலைவியின் நற் றாய்க்கும் தமர்க்கும் எடுத்துரைத்து அவளது ஒழுகலாற்றின் தலைமையைப் பாராட்டுபவள் இச்செவிலியே. தலைமக்களது கற்பறத்துக்கு உரிய இடம் முல்லையாதலின், இம்முல்லைப் பாட்டின் தொடக்கத்தே செவிலி நற்றாய்க் குரைக்கும் இப்பகுதியினை ஆசிரியர் பேயனார் உரைக்கின்றார். 401. மறியிடைப் படுத்த மான்பிணை போலப் புதல்வ னடுவண னாக நன்றும் இனிது மன்றவவர் கிடக்கை முனிவின்று நீனிற வியலகங் கவைஇய ஈனு மும்பரும் பெறலருங் குரைத்தே. இது, கடிமனைச் சென்று வந்த செவிலி உவந்த வுள்ளத் தளாய் நற்றாய்க்குச் சொல்லியது. உரை : அன்னாய், தன் மறிக்கன்று இடையிலே கிடப்ப, இரு மருங்கும் மானும் பிணையும் கிடந்ததுபோலப் புதல்வன் நடுவிலே விளங்க, அவ்விருவரும் கிடந்த கிடக்கை தெளிவாகப் பெரிதும் இன்பந்தருவதாகும்; இடையறவின்றி நீலநிறமுடைய அகன்ற வானத்தாற் சூழப்பட்ட இவ்வுலகும் இதன் மேலுள்ள தாகிய வானுலகும் ஆகிய இரண்டுலகின்கண்ணும் அவ் வின்பம் பெறுதலரிதாகலான் என்றவாறு. மறி, மான்கன்று. மான்பிணை: உம்மைத்தொகை. மான் என்றது, கலையாகிய ஆணின் மேற்று. “சிறுமறி தழீஇய தெறி நடை மடப்பிணை, வலந்திரி மருப்பி னன்ன இரலையொடு, அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதிய 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. முனிவின்று கவைஇய என இயையும். முனிதல், வெறுத்தல்; ஈண்டு இடையறவுபடுதல். இன்றி என்பது செய்யு ளாகலின் இன்று என நின்றது. வியலகம், வானம். நீலம்: கடை குறைந்து நீனிறமென வந்தது. கவைஇய: கவவு என்னும் சொல்லடியாகப் பிறந்த பெயரெச்சவினை. “கழுஉவிளங் காரம் கவைஇய மார்பே 1” என்றார் பிறரும். குரை: அசைநிலை. கிடக்கை நன்றும் மன்ற இனிது, ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்து ஆகலான் என முடிக்க. ஈன், இவ்விடம். ஆன், ஈன் என்பவை அவ்விடம் இவ்விடம் என்ற சுட்டுப்பொருளில் வருவன. மக்கட் பேற்றினைப்போல் தமக்கு உறுதி பயக்கும் பேறுகள் பிற இன்மையின், சிறப்புடைய புதல்வற் பேற்றாற் சிறந்து, பிரியாக் காதலாற் பிணிப்புண்டு நீக்கமின்றிக் கிடத்தலைக் காணுந்தோறும் செவிலிக்கு இன்பம் மிகுதலின், நன்றும் இனிது மன்ற அவர் கிடக்கை என்றும், பிரிவு புணர்வுகளால் முறையே துன்பமும் இன்பமும் நல்குவது பற்றி இவ்வுலகில் பெறலரிது என்றற்கு நீனிற வியலகம் கவைஇய ஈனும் என்றும், மேலுலகில் மெய்யுற்றுக் கூடி நுகரும் இன்பம் இல்லாமையின் உம்பரும் பெறலருங் குரைத்து என்றும் கூறினாள். “தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு 2” என்றார் பிறரும். “விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும், அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும், இரண்டும் தூக்கின் சீர்சா லாவே 3” எனத் தலைமகன் கூறுவதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது. “மக்களை யில்லோர்க்குப், பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே 4” என்பதனால் புதல்வர்ப்பேறு சிறப்புடைத் தாதல் உணர்க. நீனிற வியலகம் கவைஇய ஈனும் என்றாள், அப்பெற்றித் தாயினும், அவ்வானத்தாற் பயனின்று என்பதற்கு; “விரிநீர் வியனுலகம் 5” என்புழிப்போல. “நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும், செவிலிக்கு உரிய வாகும் என்ப 1” என்பதனுள் உவந்து கூறற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். 402. புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை பாணர் நரம்புளர் முரற்கை போல இனிதா லம்ம பண்புமா ருடைத்தே. இதுவுமது. உரை : தன் புதல்வனை அணைத்துக் கிடந்த தாயின் புறத்தைத் தழுவி, அவள்கணவன் விருப்பமுடையனாய் வதிந்து கிடந்த கிடக்கை, பாணர்களின் யாழின் நரம்பிடை எழும் இசை போல இனிமைத்தாதலேயன்றி நற்பண்பினையும் உடைத்து என்றவாறு. வதிதல், இருத்தல். படுக்கைக்கண், கால்களை நீட்டி அணைமேற் சாய்ந்து கிடந்தநிலை, வதிந்த கிடக்கை எனப்படு கிறது. முரற்கை, ஈண்டு முரலுதற் பொருட்டாய இசையின் மேற்று; தாளவறுதியுமாம், “இன்புறு முரற்கைநும் பாட்டு விருப் பாக 2” என்றாற் போல. துள்ளலோசை யினையும் முரற்கை என்ப. பண்புமார் உடைத்தே என்புழி ஆர்: அசைநிலை. “அசை நிலைக் கிளவி யாகுவழி அறிதல் 3” என்பர் ஆசிரியர். முயக்கத்தை யின்றியமையாத பெருங்காதலனாய் ஒழுகு கின்றான் என்பாள், தாய்புற முயங்கிய நசையினன் என்றும், நரம்புளர் முரற்கை கேட்டார்க்கெல்லாம் இன்பம் பயத்தல் போலக் கண்டார்க்கு இன்பம் பயப்பது பற்றி முரற்கைபோல என்றும், கேட்டபின்னரும் உள்ளியவிடத்தும் அது தன் இனிமைப் பண்பின் நீங்காமை போல, அவர்தம் கிடக்கை நினைக்குந் தொறும் இன்பம் பயக்கும் பண்பினை உடைத் தென்பாள், பண்புமா ருடைத்தே என்றும் கூறினாள். இசை தோன்றும் பொழுதே உடன்தோன்றி, அது நிகழுமிட மெல்லாம் நீங்காது நிலவுதலின் பண்பென்றார். “பாணர், நயம்படு முரற்கை யின் யாத்த பயன்தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும்1” எனப் பிறாண்டுக் கூறுதல் காண்க. 403. புணர்ந்த காதலியிற் புதல்வன் றலையும் அமர்ந்த வுள்ளம் பெரிதா கின்றே அகன்பெருஞ் சிறப்பிற் றந்தை பெயரன் முறுவ லின்னகை பயிற்றிச் சிறுதே ருருட்டுந் தளர்நடை கண்டே. இதுவுமது. உரை : பரந்த பெருஞ்சிறப்பினையுடைய தந்தையின் பெயரை யுடைய தன்மகன், முறுவல் விளங்கும் இனிய புன்னகையைச் செய்து சிறுதே ருருட்டித் தளர்ந்த நடையினனாய்ச் செல்லு தல் கண்டு, தலைமகற்குத் தான் காதலித்துப் புணர்ந்த மனைவி மாட்டுளதாகிய அன்புபோல் அம்மகனிடை மேவிய அன்பும் பெரிதாய் இராநின்றது என்றவாறு. இன், உவமப்பொருட்டு. உள்ளம், ஆகுபெயர். தந்தையின் பெயரைத் தன் மகற்கிட்டு வழங்குதல் மரபாகலின், தந்தை பெயரன் என்றார்; “முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற, புதல்வற் புல்லிப் பொய்த்துயில் துஞ்சும் 2” எனவும், “மேதக்க எந்தை பெயரனை யாங்கொள்வேம் 3” எனவும் வருதல் காண்க. புகழ்பரவி நிலைபெறும் இடம் விரிந்த உலகமாதல் பற்றி, அகன் பெருஞ் சிறப்பின் தந்தை என்றும் கூறினார். களவின்கண் தலைமகள்பால் உண்டாகிய காதல் முறுகிப் பெருகி, இடையே தோன்றிய இடையீடுகளாலும் பலவகை முட்டுக்களாலும் தளராது அவளை இன்றியமையானாய் ஒழுகியது நினைந்தாட்கு, தலைமகனது உள்ளம் தலைவியின் மகன் பால் சென்றது வியப்புத் தந்தமையின், புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும் அமர்ந்த உள்ளம் பெரிதாகின்று என்றும், தலைவன் குடிக்கு முன்னோனாகிய அவன் தந்தையின் பெயரைத் தாங்கித் தன்குடியை விளக்கம் செய்வதுபற்றிப் புதல்வனை, அகன்பெருஞ் சிறப்பின் தந்தைபெயரன் என்றும் கூறினாள். “குடிக்கு விளக்காகிய புதல்வன் 1” என்று பிறரும் கூறுவது காண்க. கிளர்மணி யார்ப்பார்ப்பச் சாஅய்ச்சாஅய்ச் செல்லும், தளர்நடை காண்டல் இனிது 2” என்பவாகலின், தளர்நடை கண்டே என்றாள். குடிக்கு விளக்காகிய மகன் பிறந்துழியும், மனைக்கு விளக்காகிய அவள்மாண்பு மறவாமையின், புணர்ந்த காதலியின் என்றாள் என்றுமாம். 404. வாணுத லரிவை மகன்முலை யூட்டத் தானவள் சிறுபுறங் கவையின னன்றும் நறும்பூந் தண்புற வணிந்த குறும்பல் பொறைய நாடுகிழ வோனே. இதுவுமது. உரை : நறிய பூக்களால் தண்ணிதாய முல்லைநிலத்தால் அழகு பெற்ற குறுகிய பலவாகிய குன்றுகளையுடைய நாட்டுக்குரிய தலைமகன், ஒளிபொருந்திய நுதலினையுடைய அரிவை யாகிய தன் மனைவி மகனுக்கு முலையிற் பாலூட்டத் தான் அவளது முதுகின்புறத்தே நன்கு தழுவிக் கிடந்தனன் என்ற வாறு. முலை, ஆகுபெயர். சிறுபுறம், முதுகு. பொறை, குன்று. “குறும்பொறை யயலது நெடுந்தாள் வேங்கை 3” என்று சான்றோர் கூறுதல் காண்க. கிழவோன் என்பதனை “ஆவோ வாகும் பெயருமா ருளவே 4” என்புழி, “உம்மை யெச்சவும்மை யாக லான், அகரம் ஓகாரமாய்த் திரியும் பெயருமுள” என அமைப்பர் தெய்வச்சிலையார். இது மருவுதல் உரைத்தல். தலைமகள் தன் உள்ளத்திற் பெருகிய அன்பால் தான் பெற்ற மகனுக்குப் பாலூட்டுங்கால், மகனது முகப்பொலிவும் முறுவல் இன்னகையும் கண்டு கிளர்ச்சி மிக்கு விளங்குதலின் வாணுதல் அரிவை என்றும், தன் மனைக்கு விளக்காகியதே யன்றித் தன் மகற்குத் தாயாகி மாண்புறுவது கண்ட தலைமகன் பெருகிய காதலால், அவள் சிறுபுறம் தழுவி இன்பம் சிறக்குமாறு தோன்ற, தான் அவள் சிறுபுறம் கவை யினன் நன்றும் என்றும் செவிலி கூறினாள். “மெல்லஎன் மகன்வயிற் பெயர்தந் தேனே, அதுகண்டு, யாமும் காதலம் அவற்கெனச் சாஅய்ச், சிறுபுறம் கவையின னாக 1” எனத் தலைமகள் தலைமகன் தன் சிறுபுறம் தழுவியதைச் சிறப்பித்து உரைத்தல் காண்க. தண்புற வணிந்த குறும்பல் பொறை என்றது, தலைவியது கற்புச்சிறப்பும் தலைவனது சலியாக் காதல் மாண்பும் சுட்டி நின்றன. “நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும், செவிலிக் குரியவை யாகும் 2” என்பதனுள் இதனை உவந்து கூறிய செவிலி கூற்றுக்கு எடுத்துக்காட்டுவர் நச்சினார்க்கினியர். 405. ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல மனைக்குவிளக் காயினண் மன்ற கனைப்பெயற் பூப்பல வணிந்த வைப்பின் புறவணி நாடன் புதல்வன் றாயே. இதுவுமது. உரை : ஒலிக்கின்ற மழை பெய்தலால், பூக்கள் பலவும் மலர்ந்து அழகுற்ற ஊர்கள் பொருந்திய முல்லைநில நாடனுடைய புதல்வற்குத் தாயாகிய தலைவி, ஒள்ளிய சுடர்விட்டெரியும் பாண்டிலில் ஏற்றப்பட்ட செவ்விய விளக்குப் போல அவன் இல்வாழ்க்கைக்கு உரிய விளக்கமாயினள் என்றவாறு. ஒண்சுடர், இருளறக் கெடுக்கும் மிக்க ஒளி. பாண்டிற் சுடர், கால் நிறுத்திய விளக்கு. பருத்த திரி எரியும் சுடராதலின், செஞ்சுடர் என்றார். “பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல 3” என்று பிறரும் கூறுதல் காண்க. கனைபெயல் எனற்பாலது எதுகைநோக்கிக் கனைப்பெயல் என வந்தது. வைப்பு, இடம் ; ஈண்டு, நறிய பூக்களையுடைய மரமும் செடியும் கொடியுமுடைய முல்லைநிலத்து ஊர்கள் மேற்று. புறவணிந்த நாடுகிழவோனை, புறவணி நாடன் என்றார். இல்லின்கட்படும் இருளை யகற்றும் பாண்டில்போல, மனைக்கட்படும் பழி முதலிய மாசு போக்குதலின் மனைக்கு விளக்காயினள் என்றாள். “மனைக்குவிளக் காகிய வாணுதல் கணவன் 1” என்றும், “மனைக்கு விளக்கம் மடவார் 2” என்றும் சான்றோர் கூறுதல் காண்க. பரூஉச்சுடர் கொண்டு காற்றின் அலைப்புக்கு அவியாது நின்று திகழ்வது பற்றி, ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் எனச் சிறப்பித்தாள். சுடரெனப் பெயர்த்தும் கூறியது, மகப்பேற்றால் தலைமகள்பால் மேனிநலம் குன்றாமை வற்புறுத்தற்கு. புதல்வன்தாய் என்றது மேலே மனைக்கு விளக்கா யினள் என்றதன் ஏதுவை உட்கொண்டு நின்றது. 406. மாத ருண்கண் மகன்விளை யாடக் காதலித் தழீஇ யினிதிருந் தனனே தாதார் பிரச மூதும் போதார் புறவி னாடுகிழ வோனே. இதுவுமது. உரை : தேன் நுகரும் வண்டினம் ஒலிக்கும்போதுகள் நிறைந்த முல்லைக்காட்டினையுடைய நாட்டுக் குரியோன், காதல் நிறைந்த மையுண்ட கண்களையுடைய மகன் தன் முன் விளை யாட்டயர, தான் தன் காதலியைத் தழுவியவண்ணம் அவனை இனிது நோக்கியிருந்தனன் என்றவாறு. மாதர், காதல். குழவிப்பருவத்தில் பால்வேறுபாடின்றி எல்லாக் குழவிகட்கும் கண்ணில் மையெழுதுதல் மரபாதலின், மாதர் உண்கண் மகன் என்றார். பிரசம், வண்டு. தாது, தேன். பூக்களின் தாது தேர்ந்துண்பது இயல்பாதலின், தாதார் பிரசம் என்றார். ஊதுதல் தேனுண்டு ஆரவாரித்தல். மகனது விளையாட்டு எதிர்வின்கண் ஆக்கமாதலின், அதனை எண்ணி நோக்கி இன்புறும் திறத்தை மகன் விளையாட என்றும், அவ்வின்பத்தினைத் தன் மனைவியோடு கூடி நுகர் கின்றான் என அவன் காதலைக் கட்டுரைக்கப் புகுந்தாள், காதலித் தழீஇ இனிது இருந்தனனே என்றும் கூறினாள். வண்டினம் தமக்குரிய தேன்பெற்றுக் களி சிறந்து இசைக்கும் நாடு கிழவோன் என்றது, அவன் எல்லாச் செல்வமும் பெற்று இசைபட வாழ்தல் கூறியவாறு. இது வாழ்க்கை நலம் கூறியது. காதலின் தழீஇ என்றும், பிரசம் முரலும் என்றும் பாட முண்டு. “பின் முறையாக்கிய பெரும்பொருள் வதுவை 1” என்பதன் உரையில் இதனைக்காட்டி, “பரத்தமையிற் பிரி வொழிந்து மனைக்கண் இருந்த தென்பர் நச்சினார்க்கினியர். 407. நயந்த காதலித் தழீஇப் பாணர் நயம்படு முரற்கையின் யாத்த பயன்தெரிந் தின்புறு புணர்ச்சி நுகரும் மென்புல வைப்பி னாடுகிழ வோனே. இதுவுமது. உரை : தான் விரும்பிய காதலியைத் தழுவி, உயிர்களை இசை யின்பத்திற் படிவிக்கும் யாழின்கண் பாணர் யாத்திசைத்த இசைப்பயனைத் தேர்ந்து நுகரும் இன்பம் போலும் புணர்ச்சி யினை நுகருவானாயினன், மென்புலமாகிய முல்லை நிலத் தினையுடைய நாட்டுக்குரியோன் என்றவாறு. நயந்த காதலி என்றார், “எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் 1” என விதித்தலின். “தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட், டன்னாய் என்னுங் குழவி போல, இன்னா செயினு மினிதுதலை யளிப்பினும்” தன்னை யின்றியமையாக் காதலுடைமையின் நயந்த காதலி யென்றார் எனினுமாம். முரற்கை, ஈண்டு யாழின் மேற்று. யாழ் நரம்பிடை யெழுப்பும் இசைப்பயனாகிய இன்பத்தை யாத்த பயன் என்றும், அது நுண்ணிதின் உணர்ந்து நுகரப்படுமாறு தோன்றத் தெரிந்து என்றும், இசையின்ப நுகர்ச்சிபோலப் புணர்ச்சியின்பம் நுகர்தலின் இன்புறு புணர்ச்சி நுகரும் என்றும் கூறினார். தீத்தொழிலிலே கன்றி இருள்மேவிய உள்ளத்தரும் அது நீங்கி அருள் மேவிய உள்ளத்தராகும் நயமுடைமையின், நயம் படு முரற்கை என்றார். “ஆறலை கள்வர் படைவிட அருளின், மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை 1” என்றார் பிறரும். மென்புலம், புன்புலமாயினும் கார்மழையினால் மென்மையுற்ற முல்லை நிலம். “மென்புல முல்லை மலரும் மாலை 2” என்புழியும் இதுவே கொள்க. கிழவோன், காதலித் தழீஇப் புணர்ச்சி நுகரும் என இயையும். தெரிந்தென்னும் வினையெச்சம் இன்புறு என்புழி உறுதலொடு முடிந்தது. ஒருவரினொருவர் இன்றியமையாக் காதலாற் பிணிப் புண்டிருக்குமாற்றை அறிந்து கூறுதல் தோன்ற நயந்த காதலி என்றும், காதற்காமப் பைங்கூழை வளமுற வளர்க்கும் நீர்மை யுடைமை பற்றி, பாணர் நல்கும் இசையின்பத்தை விதந்து, பாணர் நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து இன்புறு புணர்ச்சி என்றும், இன்பநுகர்ச்சிக்கண், நுகரப்படும் இன்பமும் நுகர்வோரும் என வேறுபட நில்லாது ஒன்றாய் இயைந்து நிற்பதுபோலப் புணர்ச்சிக்கண் ஒருவர் ஒருவரின் ஒன்றியிருந்து நுகரும் இன்பத் திறத்தை இன்புறு புணர்ச்சி நுகரும் என்றும் கூறினாள். இனி, காதலித் தழீஇப் பயன் தெரிந்து புணர்ச்சி நுகரும் என இயைத்து, காதலியொடு கூடி இசைப்பயன் தெரிந்து பின் புணர்ச்சியின்பம் நுகரும் என மாலைப்போதில் பாணரது இசையின்பமும், இரவில் இன்புறு புணர்ச்சியின்பமும் நுகர்கின்றான் என்றலு மொன்று. ஊடப்பிறக்கும் காம இன்பத் தினும் கூடப்பிறக்கும் இன்பம் பெரிதாதல்பற்றி இன்புறு புணர்ச்சி என்றாள் எனக் கொள்க. திருவள்ளுவனாரும், “ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்குஇன்பம் கூடி, முயங்கப் பெறின் 3” என்பது காண்க. 408. பாணர் முல்லை பாடச் சுடரிழை வாணுத லரிவை முல்லை மலைய இனிதிருந் தனனே நெடுந்தகை துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே. இதுவுமது. உரை : பாணர் முல்லைப் பண்ணைப் பாடவும், ஒளிவிடும் இழையினையும் ஒளி பொருந்திய நுதலினையுமுடைய அரிவையாவாள் முல்லைப்பூச் சூடவும், நெடுந்தகையாகிய தலைமகன் வெறுப்பில்லாத கொள்கையினையுடைய தன் புதல்வனொடு சிறந்து இனிதிருந்தனன் என்றவாறு. முல்லைப்பண், சாதாரிப்பண். கற்புக்குரித்தாகலின், முல்லை மலைய என்றார். “அவிரிழை சுடர முல்லை யலங்கலங் கூந்தல் சோர 1” என்பத னுரையிலும் ஆசிரியர் நச்சினார்க் கினியர், “முல்லை கற்பிற்குச் சூடினார்” என்றார். பாணர் பாட்டினால் இசையும், மனைவி முல்லை யணிதலால் மனை மாட்சியும் சிறத்தலின், நெடுந்தகை என்றார். ஒருவினைஒடு காதற் சிறப்புடைமை யுணரநின்றது. துனி, வெறுப்பு. “துனிதீர் கொள்கை நம்காதலி இனிதுற 2” என்றார் பிறரும். புறத்தொழுக்கம் இன்றி மனைக்கண் இருந்து அறஞ்செய்து புகழ்வளர்க்கும் திறம்பற்றிப் பாணர் முல்லை பாட என்றும், தலைவிபால் அயரா அன்பும் அழிவில் கூட்டமும் சிறந்து விளங்குமாறு தோன்ற, சுடரிழை வாணுதல் அரிவை முல்லை மலைய என்றும், இருத்தல் முல்லையொழுக்கமாதலின், இனி திருந்தனன் என்றும், இம்மைக்குரிய இசையும் மறுமைக்குரிய மகப்பேறும் ஒருங்குபெற்று விளங்குதலின், தலைமகனை நெடுந் தகை என்றும், ஆராக் காதலுடைமையின் எத்துணைப் போழ்து தன்னோடு இருப்பினும் வெறுப்பின்றி இன்பமே மிகுதலின், துனிதீர் கொள்கைத் தன் புதல்வனொடு என்றாள். அல்லதூ உம், புலவிக்கண் எழும் துனியினை நீக்கும் வாயிலாகலின் துனிதீர் கொள்கைப் புதல்வன் என்றாள் என்றுமாம். பிறாண்டும் தலைமகனைச் செவிலி, “விறல்மிகு நெடுந்தகை 1” என்பது காண்க. தம் புதல்வனொடு என்பது பாடமாயின், தான் அவள் என்னும் வேற்றுமையின்றி அவர் தம்உயிர் கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மையைப் புலப்படுத்தியவாறெனக் கொள்க. “கற்பும் காமமும் 2” என்பதனுள் இதனைக் காட்டி, இது வாயில்கள் தம்முட் கூறியது என்பர் இளம்பூரணர். 409. புதல்வற் கவைஇயினன் தந்தை மென்மொழிப் புதல்வன் றாயோ விருவருங் கவையினள் இனிது மன்றவவர் கிடக்கை நனியிரும் பரப்பினிவ் வுலகுட னுறுமே. இதுவுமது. உரை : தந்தை தன் புதல்வனைப் புல்லிக்கொண்டானாக, மெல்லிய மொழியினையுடைய அப்புதல்வற்குத் தாயாகி யாள் அவ் விருவரையும் தழுவிக் கிடந்தனள். ஆகவே, அவர் கிடந்த கிடக்கை மிக இனிதாயிருந்தது; மேலும், அவ்வின் பத்துக்கு மிக்க பரப்பினையுடைய இவ்வுலகு முற்றும் ஒப்ப தாகும் என்றவாறு. மென்மொழி, மென்மை ஈண்டு நிரம்பாத மழலைச் சொல்லின் மேற்று. காமக் குறிப்பின்றிக் காதலும் சான்றாண்மை யும் விளங்க இருத்தலின், தலைமகன் என்னாது தந்தை என்றும், தாய்மையின் வாய்மை தோன்ற புதல்வன் தாய் என்றும் கூறினார். ஐயுருபு விகாரத்தால் தொக்கது. உடன், முழுதும் என் னும் பொருட்டு; “பழியெனின், உலகுடன் பெறினும் கொள்ள லர் 3” என்று பிறரும் கூறுதல் காண்க. ஏகாரம் எதிர்மறை யெனக் கொண்டு, உலகு முழுதும் ஒவ்வாது என்றலும் ஒன்று. கணவன், மனைவி, புதல்வன் என்ற மூவரானாயது உலக மாகலின், அவர் மூவரும் கிடந்த கிடக்கைக்கு இவ்வுலகு முற்றும் உறுவதாகும் என்றாள். இவ்வெனச் சுட்டியது, வாழ்க்கைக்கு நிலைக்களனாம் சிறப்பினை யாப்புறுத்தற்கு. ஈண்டுச் செவிலி கண்ட காட்சியினையே பிறாண்டும், “கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம, மாலை விரிந்த பசுவெண் ணிலவிற், குறுங்காற் கட்டில் நறும்பூஞ் சேக்கைப், பள்ளி யானையி னுயிரா அசைஇப், புதல்வற் கவைஇயினன் விறலவன், புதல்வன் றாயவன் புறங்கவைஇ யினளே 1” என்று கூறுதல் காண்க. 410. மாலை முன்றிற் குறுங்காற் கட்டில் மனையோள் துணைவி யாகப் புதல்வன் மார்பி னூரு மகிழ்நகை யின்பப் பொழுதிற் கொத்தன்று மன்னே மென்பிணித் தம்ம பாணன தியாழே. இது, கடிமனைச் சென்ற செவிலி, தலைமகனும் தலைமகளும் புதல்வனொடு பாடல் கேட்டிருந்தமை கண்டு, தன்னுள்ளே உவந்து சொல்லியது. உரை : மாலைப்போதில் இல்லின் முன்னர்த்தாகிய முற்றத்தின் கண், குறுகிய கால்களையுடைய கட்டிலில், தலைமகன் தன் மனைவி துணையாகத் தன் புதல்வன் மார்பின் மேல் இவர்ந்து ஊர்தலால், எழும் மகிழ்ச்சியோடு கூடிய நகை கொள்ளற் கியைந்த இன்பக்காலத்திற்குப் பாணனது யாழ்செய்த பண் ணிசை ஒத்திருந்தது; ஆயினும் அதன் பிணிப்பு அத்துணை வன்மை யிலதாயிற்றுக் காண் என்றவாறு. மகிழ்நகை, புதல்வன்கண் தோன்றிய இளமை பொருளாகப் பிறந்தது. இளஞ்சிறாருடன் இனிதிருந்து மகிழ்தற்கு அமைத்த கட்டிலாதலின், குறுங்காற் கட்டிலாயிற்று. பெயரெச்சம் ஏதுப்பொருட்டு. மென்பிணித்து என்றவிடத்து மென்மை இன்மை யுணர்த்தி நின்றது. இன்பப் பொழுதிற்கு ஒத்ததாயினும், ஒவ்வாதது போலக் கேட்போர் உள்ளத்தை ஈர்த்துப் பிணிக்கும் வன்மையின்றி யொழிந்தது என்பதுபட நிற்றலின், மன் ஒழியிசை. பிணித்தலாவது, “சிந்தை தோயும் ஐம்பொறிகளும் செவிகளாப் புலன்கள் ஐந்தும் ஒசையாய்” ஒன்றி நிற்றல். மகிழ்ச்சி காரண மாகத் தோன்றும் நகை, மகிழ் நகை; “மகிழணி முறுவல் 1” என்றாற் போல. புதல்வனுடைய விளையாட்டுப் பொருளாகப் பிறந்த உவகையால் மகிழ்ச்சி யெய்துவார்க்குப் பாணனது யாழிசை அவன் விளையாட்டிடைக் கூறும் மழலைச் சொற் போல மகிழ்ச்சிப்பயனே விளைத்தலின், ஒத்தன்று என்றும், அவன் மழலைச் சொற்களைக் கேட்குங்கால் யாழிசை நுகரப் படாமை யின், மென்பிணித்து என்றும், கொல்களிறு வணக்கும் வன் பிணித்தாகிய யாழ், காலமும் இடமும் வாய்த்தும் தன் இசையால் தலைமக்களின் மனத்தைப் பிணிக்காதொழிந்தது என்பாள், மென்பிணித் தம்ம என்றும் கூறினாள். யாழிசைக்கு யானை வணங்கும் என்பது “காழ்வரை நில்லாக் கடுங்களிற் றொருத்தல், யாழ்வரைத் தங்கி யாங்கு 2” என்று சான்றோர் கூறுதல் காண்க. “குழல்இனிது யாழ் இனிது என்பதம் மக்கள், மழலைச் சொற் கேளா தவர் 3” எனத் திருவள்ளுவனாரும் கூறினர். “குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணிப், பாலார் துவர்வாய்ப் பைம்பூண் புதல்வன், மாலைக் கட்டின் மார்பூர்பிழிய, அவ்வயி றொழுகிய வெவ்வாய் மாணகைச், செயிர்தீர் கொள்கைநம் உயிர்வெங் காதலி 4” எனப் பிறாண்டுத் தலைவன் தன் புதல்வனது விளையாட் டின்பத்தை விதந்து கூறுதல் காண்க. 42. கிழவன் பருவம்பாராட்டுப் பத்து இது, தலைமகன் தலைமகட்குத் தான் குறித்துச் சென்ற கார்ப்பருவவரவு காட்டித் தான் அஃது எய்துவதற்கு முன்னரே வந்தமை தோன்ற அவளைப் பாராட்டிக் கூறும் பாடல் தொகுதி யாகலின், இப்பெயர்த்தாயிற்று. 411. ஆர்குர லெழிலி யழிதுளி சிதறிக் கார்தொடங் கின்றாற் காமர் புறவே வீழ்தரு புதுப்புன லாடுகநம் தாழிருங் கூந்தல் வம்மதி விரைந்தே. இது, பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் அப்பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழிப் பருவம் வந்ததாகத் தான் அப்பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்றக் கூறுவான் தலைவிக்கு உரைத்தது. உரை : தாழ்ந்த கரிய கூந்தலையுடையாய், நிறைந்த இடியொலி யினையுடைய மேகம் மிக்க பெயலைப் பெய்தலால், அழகிய முல்லைக்காடு கார்காலம் தொடங்கப் பெறுகின்றது. நாம் விருப்பந்தரும் புதுப்புனலின்கண் விளையாட்டயரலாம்; ஆகலின், விரைந்து வருவாயாக என்றவாறு. மிக்க பெயலைச் செய்யும் மேகம் இடியொலியுடன் வருதல் இயற்கையாகலின், ஆர்குரல் எழிலி யெனப்பட்டது; “ஆர்கலி யெழிலி 1” என்றும், “ஆர்குரல் எழிலி 2” என்றும் வருமிடங்களி லெல்லாம் இங்ஙனமே யுரைத்துக்கொள்க. அழிதுளி, பெரு மழை, “அழிபெயல் காலை 3” என்றாற்போல. செய்த னெச்சம் காரணப்பொருட்டு. முதியர், இளையர், ஆடவர், பெண்டிர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் ஆகிய பலரும் விரும்புவது பற்றி, வீழ்தரு புதுப்புனல் என்றார்; “யாம்வேண்டும் வையைப் புனல்4” என்று பிறரும் கூறுவது காண்க. தான் குறித்த கார்ப்பருவம் வருமுன்பே வினைமுற்றி வந்துள்ளா னாகலின், பருவம் கண்ட தலைமகன் கார்தொடங் கின்றால் புறவே என்றும், கார்ப்பெயலால் பெருகிவரும் புதுநீர் யாவரும் படிந்து ஆடுதற்கு விரும்புமாறு நுரையும் பல்வகை மலரும் சுமந்து வருதலின், வீழ்தரு புதுப்புனல் ஆடுகம் என்றும், தலைமகள் உள்ளத்தெழுந்த புனலாட்டு வேட்கை மீதூர்ந் தமையின் அவள் உடன்பட்டு நாணித் தலைகவிழ்ந்தாளாக முன்னிலைப்படுத்தற்குத் தாழிருங்கூந்தல் என்றும், புதுப் புனலாடற்கு விரைந்து புறப்படுக என்பான், வம்மதி விரைந்தே என்றும் கூறினான். “குறுநுரை சுமந்து நறுமல ருந்திப், பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம் 5” என்று தலைவி புதுப்புனலாட்டினை நயந்து உரைக்குமாறு அறிக. கார்ப்பெயல் பொழிந்தவுடன் புதுப்புனல் வரக்கண்டார் அதன்கண் ஆடுதல் பண்டைக்கால மரபாகலின், ஈண்டு அது விதந்து கூறப்பட்டது. 412. காயா கொன்றை நெய்தன் முல்லை போதவிழ் தளவமொடு பிடவலர்ந்து கவினிப் பூவணி கொண்டன்றால் புறவே பேரமர்க் கண்ணி யாடுகம் விரைந்தே. இதுவுமது. பழைய உரை : ஆடுகம் விரைந்தே என்றது, விளையாட்டு. உரை : பெரிய அமர்த்த கண்களையுடையாய், காயாவும், கொன்றையும், நெய்தலும், முல்லையும், அரும்பி மலர்ந்த செம் முல்லையும், பிடவமுமாகிய மலர்கள் விரிந்து புறவு பூவணி கொள்வதாயிற் றாகலின், விளையாட்டயர்தற்கு விரைந்து வருக என்றவாறு. எண்ஒடு யாண்டும் கூட்டப்பட்டது; “என்றும் எனவும் ஓடுவும் தோன்றி, ஒன்றுவழி யுடைய எண்ணினுட் பிரிந்தே 1” என்பவாகலின். பூவணி, பூவால் உளதாகும் அணியென விரியும். தளவம், முல்லைவகை. நெய்தல், நெய்தனிலப் பூவாயினும், “எந்நில மருங்கிற் பூவும் புள்ளும், அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும், வந்த நிலத்தின் பயத்த வாகும் 2” என்பதனால் அமைந்தது. அமர்த்தல், அமர்செய்தல்; “பெண்டகையாற் பேரமர்க் கட்டு 3” என்புழிப்போல. இது பெயரடியாய வினை; “பேரமர் மலர்க்கண் 4” என்புழியும், “பேரமர்க் கண்ணி நிற்பிரிந் துறைநர் 5” என்புழியும் இவ்வாறே யுரைத்துக்கொள்க. கோடும் கொடியும் நிலமும் நீருமாகிய நால்வகை இடத்துப் பூக்களே உடைமை பற்றி, காயா கொன்றை முதலியவாக எடுத்துரைத்தான். காயாவும் கொன்றையும் மரமாதலின் முன்வைத்தும், தளவும் பிடவும் நிலத்தவாகலின் இறுதிக்கண் வைத்தும் உரைக்கப்பட்டன. பூத்த பரத்தையர் பூவணி கோடல் போல் இன்புறவமும் பூவணி கொண்டது என்பான், பூவணி கொண்டன்றால் புறவே என்றும், எனவே, அதன் புதுநலத்தை விரைந்து சென்று நுகர்தல் வேண்டுமென்பான், ஆடுகம் விரைந்தே என்றும் கூறினான். பரத்தையர் பூவணி வதுவை கோடலை, “பூவணிப் பொலிந்த நின் வதுவையங் கமழ் நாற்றம்1” என்பதனால் அறிக. தன்பால் பரத்தைமை இன்மையின், பூவணி கொண்டன்று புறவு என்றான்; இக்குறிப்பை ஆராய் வாள் போல அவன்முகத்தைத் தன் கண்ணைப் பரப்பி அவள் நோக்குவது பற்றிப் பேரமர்க் கண்ணி என்று சிறப்பித்தான். பிடவுமலர்ந்து கவினி என்றும் பாடமுண்டு. 413. நின்னுத னாறு நறுந்தண் புறவின் நின்னே போல மஞ்ஞை யாலக் கார்தொடங் கின்றாற் பொழுதே பேரிய லரிவை நாநயத் தகவே. இதுவுமது. உரை : பெரிய இயல்பினையுடைய அரிவையே, நாம் விரும்பு மாறு, நின்னுடைய நுதல்போல் மணங்கமழும் தண்ணிய முல்லைக்காட்டின்கண் நின்னைப் போலவே மயில்கள் தமது மென்குரலை எடுத்து அகவ, இப்பொழுது கார்ப்பருவத்தைத் தொடங்காநின்றது என்றவாறு. மகளிர் நுதல் நறுமணமுடைய தென்பதனால் நுதல் நாறும் தண்புறவு என்றார். “மணநாறும் நறுநுதல் மாரிவீழ் இருங் கூந்தல் 2” எனச் சான்றோர் கூறுவர். மகளிர் நுதல் முல்லையின் நறுமணம் நாறும் என்பர். “கொய்யகை முல்லை காலொடு மயங்கி, மையிருங் கானம் நாறும் நறுநுதல் 3” என்பது காண்க. ஆலுதல், அகவுதல்; ஆடுதலுமாம். பொழுது கார் தொடங் கின்று என்பது நாடு இடம் குறுகியது என்றாற் போல முடிந்தது. பேரியலாவது, மனைத்தக்கா ளாதற்குரிய மாண்பு. புறவம் நின் நுதல்போல் நாறலினாலும், மயில்கள் நின்னைப்போல் ஆலுதலாலும், இப்பருவம் நினக்கு இயைந்து தோன்றுதலின், நாம் கூடியாடி மகிழ்வெய்தலாம் என்பதாம். “நின்னே போல மஞ்ஞையால நின், நன்னுதல் நாறு முல்லை மலர 1” எனப் பிறாண்டும் தலைவன் கூறதல் காண்க. (3) 414. புள்ளு மாவும் புணர்ந்தினி துகளக் கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனி மெல்லிய லரிவை கண்டிகும் மல்ல லாகிய மணங்கமழ் புறவே. இதுவுமது. உரை : மெல்லிய இயலையுடைய அரிவையே, புள்ளினமும் மாவினமும் தத்தம் துணையொடு கூடி இன்புற்று மகிழ, கோட்டிடத்தும் கொடியிடத்தும் பூக்கும் பூக்கள் நிறைந்து வளமிக்க மணம் கமழும் புறவினைக் காண்பாயாக என்றவாறு. புள்ளினத்துக்கு உரிய பழவகையும், மாவகைக்குரிய மேய லும் இனிது பெறப்படுதலின், இனிது உறைகின்றன என்பார், இனிது உகள என்றார். தாய்மைக்குரிய சால்புடைமை பற்றி மெல்லியல் அரிவை எனச் சிறப்பித்தார். பூவும் தழையும் சிறந்து புள்ளும் மாவும் இனிதுறைவதனால் மல்ல லாகிய புறவு எனப்பட்டது. புறவம் பூ நிறைந்து பொலிதலும், புள்ளும் மாவும் துணை யொடு புணர்ந்து மகிழ்வெய்தலும் காண்டற்கு இன்பமாம் என்பான், கண்டிகும் என்றான். (4) 415. இதுவே மடந்தைநா மேவிய பொழுதே உதுவே மடந்தைநா முள்ளிய புறவே இனிதுடன் கழிக்கி லிளமை இனிதா லம்ம இனியவர்ப் புணர்வே. இதுவுமது. உரை : மடந்தையே, நாம் விரும்பிய பொழுதும், கருதிய புறவும் இதுவும் உதுவுமாம்; இப்பொழுதை இப்புறவில் இனிது கழிப்பதாயின் இனிய துணைவரைப் புணர்ந்து கழிப்பின் இளமை மிக இனிதாம் என்றவாறு. இனிது கழித்தலாவது பூக்கொய்தும் புனலாடியும் கழித் தல். விரும்பிய பொழுதும் இடமும் பெற்றவழி, இனியரோடு கூடி அப்பொழுதைக் கழிப்பேமாயின் இனிதாம் என்பதும், கழியும் மாலைத்தாகிய இளமை இனியவரோடு கூடுதலாற் கழியின், அஃது இளமையானாகும் பெறற்கரிய சீரியபயன் என்பதும் கூறியவாறு. சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. இனி, இனிது என்பதனைப் புணர்வே யென்புழியுங் கூட்டியுரைத்தலு மொன்று; அதுபோது, இருவழியும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கதென்க. மடந்தையென மீட்டுங் கூறியது, காதற் சிறப்புணர்த்திற்று; “எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது, தான் அமர்ந்து வரூஉ மேவற் றாகும் 1” என்பவாகலின். பிரிவின்கண் தலைமகன் மீண்டுவருவதாக வற்புறுத்த பொழுது கார்காலமாதலின், அது வருமுன் அவன் வந்தமையான் மகிழ்ச்சி மிகும் தலைமகட்கு, அதனைக்காட்டி, இதுவே மடந்தை நாம் மேவிய பொழுது என்றும், பூத்துக் கவினிய புறவின்கண் பூக்குற்றும் புனலாடியும் விளையாடிப் பெறும் இன்பத்தைத் தலைமகள் மிகவும் விரும்புபவள் ஆதலின், அதனை நினைந்தே கார்காலத்து மீள்வதை முன்பு கருதினானாகலின், உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே என்றும், எவ்வகை யானும் இடையீடின்றி விரைந்து கழியும் இயல்பிற்றாய் இளமையை வறிதே கழியவிடாது இனிது கழித்தல் அறிவுடை மையும் அறமுமாமாதலின், இளமை இனிதுடன் கழிக்கில் என்றும், இனிது கழித்தற்கு நெறி இனியவர்ப் புணர்வு ஆதலின், இனியவர்ப் புணர்வு என்றும் கூறினான்; “வைகல் தோறும் இன்பமும் இளமையும், எய்கணை நிழலிற் கழியும் 2” என்றும், “அரிவை தோளிணைத் துஞ்சிக் கழிந்தநாள், இவண்வாழும் நாள்,” வறிது கழியும் நாள் “பதடி வைகல் 1” என்றும் சான்றோர் கூறுதல் காண்க. திருவள்ளுவர், “இன்னாது இனனில்லூர் வாழ்தல் அதனினும், இன்னாது இனியார்ப் பிரிவு 2” என்பர். இதனால் தலைவன்மாட்டுப் புணர்ந்துழி யுண்மை என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. தோன்றவே, இளமைய தருமை கூறிப் புணர்ச்சிவலித்தல் பெற்றாம். (5) 416. போதார் நறுந்துகள் கவினிப் புறவில், தாதார்ந்து களிச்சுரும் பரற்றுங் காமர் புதலின் மடப்பிடி தழீஇய மாவே சுடர்த்தொடி மடவரற் புணர்ந்தனம் யாமே. இது, பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி, அதற்கு இனியனாய்த் தன்னுள்ளே சொல்லுவான் போன்று தலைவி அறியுமாற்றாற் கூறியது. பழைய உரை : புறவில் தாதார்ந்து சுரும்பு அரற்றும் புதல் என்றது, தலைவியது மனைமாட்சி வியந்து கூறியவாறு. உரை : பூம்போதுகளில் நிறைந்த நறுவிய துகள் படிதலால் அழகுற்றுக் காட்டின்கட் பூத்த மலர்களின் தேனுண்டு களித்த வண்டுகள் ஒலிக்கும் அழகிய புதரிடையே களிறுகள் தமக்கு இனிய மடப்பம் பொருந்திய பிடியானைகளைத் தழுவின; அவ்வாறே, யாமும் ஒளி பொருந்திய தொடியினை யணிந்த மடவரலைக் கூடி மகிழ்வேமாயினேம் என்றவாறு. துகள். மகரந்தத்தூள், பைம்புல் பரந்த நிலத்தில் போதுகளின் பொன்னிறத் துகள் பரந்து பசுங்கம்பலத்தில் பொற்கோலம் இட்டதுபோல் அழகு செய்தலின், போதார் நறுந்துகள் கவினி என்றார். போதின்கண் ஊறும் தேனைப் படிந்துண்ட கருவண்டு பொன்னிறத் துகள் படிந்து அழகுறத் தோன்றுவது பற்றி, நறுந் துகள் கவினி என்றார் என்றுமாம். “நறவின், நறுந்தா தாடிய தும்பி பசுங்கேழ், பொன்னுரை கல்லின் நன்னிறம் பெறூஉம் 3” என்று சான்றோர் உரைப்பது காண்க. களி, கள்ளுண்ட மயக்கம். “மடப்பிடி” என்றதனால், “மா வென்னும் பல பொருளொரு சொல் களிறுக்காயிற்று. 1” மா மடப்பிடி தழீஇய; யாம் மடவரற் புணர்ந்தனம் என இயையும். மாவே என்றதனை விளியாக்கி யுரைத்தலும் ஒன்று. வண்டுகள் தேனுண்டு ஒலிக்க, களிறுகள் தமக்கினிய பிடியைத் தழுவி மகிழ்தலைக் கண்டவிடத்துத் தனக்குரிய துணைவிமாட்டு உள்ளம் சேறலின், புணர்ந்தனம் யாமே என்றான். இனி, “உவமப் பொருளின் உற்ற துணரும், தெளிமருங் குளவே திறத்திய லான 2” என்றதனால், யானை மடப்பிடியைத் தழுவிய புதல், சுரும்புகள் தமக்கு வேண்டும் தாதுண்டு களித்தற்கு இடமாதல் போலத் தன் காதலி இருந்த மனை, விருந்தினரும் இரவலரும் பிறரும் தமக்கு வேண்டுவன பெற்று மகிழ்ந்து போற்றும் சிறப்பினையுடைத்தெனத் தலைமகள் மனை மாட்சியைத் தலைமகன் உவந்து கூறியவாறு பெற்றாம். (6) 417. கார்கலந் தன்றாற் புறவே பலவுடன் ஏர்பரந் தனவாற் புனமே யேர்கலந்து தாதார் பிரச மொய்ப்பப் போதார் கூந்தன் முயங்கின ளெம்மே. இதுவுமது. உரை : காடு கார்ப்பருவத்தை எதிரேற்றமையாலும், புனங்கள் பலவாய் அழகு பெற்றமையாலும், தேனுண்ணும் வண்டுகள் மொய்க்கும் பூக்களை யணிந்த கூந்தலையுடையவள், புலத் தகை புரிந்து எம்மைக் கூடி மகிழ்ந்தாள் என்றவாறு. புறவு, முல்லைக்காடு. கார்மழையால் நிலங்குளிர்ந்து பூக்கள் மலர்ந்து மாவும் புள்ளும் மகிழ்சிறந்து இன்புறுதலின், கார் கலந்தன்றால் புறவே என்றும், வரகு துவரை முதலிய பயிர்கள் தோன்றி முல்லைக் கொல்லைகளில் வளவிய காட்சி வழங்குதலின், பலவுடன் ஏர் பரந்தனவால் புறவே என்றும் கூறினார். புனம், முல்லை நிலத்துப் புன்செய்க் கொல்லைகள். ஏர், ஊழுவாரது கலப்பையுமாம்; “தேர்பரந்த புலம் ஏர்பரவா 1” என்றாற்போல. ஏர்கலந்தென்புழி ஏர், புலத்தகை. “நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை 2” என்ப. ஏர் கலந்து முயங்கினள் என இயையும். தான் தன் காதலனொடு புணர்ச்சிபெற்று மகிழ்தற்குரிய கார்ப்பருவமும், புனத்தழகும் எய்த நோக்கிய தலைமகட்குக் கூட்டத்தின்மேல் உள்ளம் சேறலின், முயங்கினள் எம்மே என்றும், காதலன்பால் புலத்தற்குரிய தவறு இல்லையாயினும் வேட்கை மிகுதியால் புலத்தல் மகளிர்க்கு இயல்பாகலின், ஏர்கலந்து முயங்கினள் என்றும் கூறினான். தாதார் பிரசம் மொய்க்கும் போது என்றது, தான் நுகர்ந்த இன்பத்தைத் தலைவன் சுட்டியவாறு. (7) 418. வானம் பாடி வறங்களைந் தானா தழிதுளி தலைஇய புறவிற் காண்வர வானர மகளோ நீயே மாண்முலை யடைய முயங்கி யோயே. இது, குறித்த பருவத்திற்கு உதவ வாராநின்ற வழிக்கண் உருவுவெளிப்பாடு கண்ட தலைமகன், இல்லத்துப் புகுந்துழித் தலைமகட்குச் சொல்லியது. உரை : மாண்புற்ற மார்பகம் முற்றவும் பொருந்தப் புல்லியவளே, மழைநீரை உணவாகவுடைய வானம்பாடிப் புள் அஃது இன்மையாற் கொண்ட வறுமை நீக்கி, அதனோடமையாது மிக்க பெயலைச் செய்த மழையை ஏற்றுக்கொண்ட காட்டிடையே காட்சியுறத் தோன்றுதலின், நீ வானரமகளோ, கூறுக என்றவாறு. வானம்பாடி மழைநீரை உணவாகவுடைய தென்பது, “எந்நாளும், துளிநசைப் புள்ளின் 3” என்றும், “தற்பாடிய தளி யுணவின், புள் 4” என்றும் வருவனவற்றாலும், அவற்றின் உரை யாலும் உணர்க. மழையில்லாத போதெல்லாம் வானம்பாடிக்கு வறுமைக் காலமாதலின், வறம் களைந்து என்றார். அழிதுளி, மிக்க மழை. காண்வர என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டு. அடைய முயங்கல், பொருந்தப் புல்லுதல். “வெம்முலை யடைய முயங்கி 1” என்றாற் போல. முயங்கியோய் என்றது விளி. வானரமகள், மலையுச்சிகளிலும் காடுகளிலும் காணப்படும் வனப்புமிக்க மகளிர். “பொன்படு நெடுங்கோட்டு இமையத் துச்சி, வானர மகளிர் 2” எனவும், “தென்னன் தொடாஅ நீரிழி மருங்கிற், கல்லளைக் கரந்தஅவ் வரையர மகளிர் 3” எனவும் சான்றோர் இம்மகளிரைக் குறித்தல் காண்க. மனைக்கண் தன்சொல்லைத் தேறியிருப்பவள், கானத்தின் கண் உருவெளிப் பாட்டால் காட்சி தருதலின், வானர மகளோ என்றான். தன்னை நினைந்து வருந்திய வானம்பாடியின் வறுமையைக் களைந்து அமையாது காட்டின்கண்ணும் பெய்து அதனைச் சிறப்பித்த மழைபோல, நின்னை உள்ளி வருந்திப் போதருவேனுக்கு நெறியிடைத் தோன்றி என் வருத்தம் களைந்து, அதனோடமையாது மனைக்கட் போந்து சுற்றம் தழுவியும் விருந்தோம்பியும் மனையறம் சிறப்பித்தாய் என மனைமாண்பு பாராட்டியவாறு. (8) 419. உயிர்கலந் தொன்றிய செயிர்தீர் கேண்மைப் பிரிந்துற லறியா விருந்து கவவி நம்போ னயவரப் புணர்ந்தன கண்டிகு மடவரல் புறவின் மாவே. இஃது, இன்பநுகர்ச்சிக் கேற்ற பருவம் வந்துழித் தலைமகளோடு புறவிற் சென்ற தலைமகன், அவ்விடத்து மாக்களை அவட்குக் காட்டிச் சொல்லியது. உரை : மடவரலே, இக்காட்டில் வாழும் விலங்குகள் உயிரோடு கலந்து ஒற்றுமைப்பட்ட குற்றமில்லாத நட்பினால், பிரிந்து இருத்தலை அறியாத துணைவிலங்கு போந்த விடத்து அவற் றிற்கு விருந்தயர்ந்து, நம்மைப் போல் விருப்பம் வரப் புணர்ந்தனகாண் என்றவாறு. புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி யொத்தல் என்னும் நட்புக் காரணம் மூன்றனுள் உடனுயிர் நீங்கும் நட்புப் பயத்தற் சிறப் பினையுடைய உணர்ச்சியொத்தல் உயிர்கலந்தொன்றிய கேண்மை என்றும், உயிரொன்றிய கேண்மையின் பயன், ஒருவர் ஒருவர்பால் நிகழும் குற்றம் கடிந்து குறை தவிர்த்து நன்னெறிக் கண் உய்ப்ப தாகலான், அதனைச் செயிர்தீர் கேண்மை என்றும் கூறினார். பிரிந்துறல், பிரிந்திருத்தல். விலங்கினம் ஆணும் பெண்ணுமாய்ப் பிரிவின்றி எங்கும் இணைந்தே செல்லும் இயல்பின வாதலால், பிரிந்துறல் அறியா எனல் வேண்டிற்று. அறியா விருந்து என்றதனை அறியா இருந்து என்று கொள்ளினு மாம். கவவுதல், ஈண்டு ஓம்புதற் பொருட்டு. பிரிந்துறல் அறியா என்றான், மக்களைப் போல் பெண் ணொடு போகாமையாகிய வரையறை யின்மையின். பிரிந்து சென்றோர் மீண்டு போந்துழி, அவர் பிரிவாற்றியிருந்த துணை வியர் அவர்க்கு விருந்தயர்தல் முறையாகலின், விருந்து கவவி என்றான். “நேரிறைப் பணைத்தோட் கார்விருந் தாக 1” என்றும், “தேர்தரு விருந்து 2” என்றும் வருமிடமெல்லாம் இதனை உரைத்துக்கொள்க. விருந்தயர்தல் விதியாதல், “தேரோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக, வாரான் விடுவானோ வாட்கண்ணாய் - காரார், குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும், விருந்தோடு நிற்றல் விதி 3” என்பதனால் அறிக. புணருந் தொறும் புத்தின்பம் சுரந்து விருப்பம் செய்தலின், நயவரப் புணர்ந்தன என்றான். (9) 420. பொன்னென மலர்ந்த கொன்றை மணியெனத் தேம்படு காயா மலர்ந்த தோன்றியொடு நன்னல மெய்தினை புறவே நின்னைக் காணிய வருதும் யாமே வாணுத லரிவையொ டாய்நலம் படர்ந்தே. இது, குறித்த பருவத்து எய்துவான் அணித்தாக வந்த தலை மகன், பருவத்தால் அணிகொண்ட புறவை நோக்கிச் சொல்லியது. உரை : கானமே, பொன்போல மலர்ந்த கொன்றையும், நீலமணி போலும் தேன்மிக்க காயாவும், மலர்கள் நிறைந்த தோன்றியு மாகிய இவற்றான் மிக்க அழகெய்தி விளங்குகின்றனை யாகலின், ஒளிபொருந்திய நெற்றியினையுடைய அரிவை யாகிய காதலியையும் அவளது அழகிய நலத்தினையும், உள்ளி, நின்னைக்காண்டற்கு, யாம் வருகின்றேம் என்றவாறு. கொன்றை பொன்னென மலர்தலைப் பிறாண்டும் “குறுங்காற் கொன்றை, அடர்பொன் னென்னச் சுடரிதழ் பகரும் 1” என்றாற்போலப் பன்முறையும் கூறுப. “சிறுகுழி, கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர், பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன, காரெதிர் புறவு 2” எனப் பிறரும் கூறுவர். காயா நீலமணிபோல மலர்தலை, “பொன்னெனக் கொன்றை மலர மணியெனப், பன்மலர்க் காயாங் குறுஞ்சினை கஞலக், கார்தொடங் கின்றே காலை 3” என்றும், “மணிமருள் பூவை யணிமலர் 4” என்றும் பயின்று வரும் சான்றோர் கூற்றுக்களால் அறிக. தோன்றி, வெண்ணிற முடைய பூ வகை. பொன்னும் மணியும் வெள்ளியு முடையாரை நன்னல மெய்தினோர் என்னும் வழக்குப்பற்றிக் கொன்றையும் காயாவும், தோன்றியும் பூத்த புறவினை நன்னலம் எய்தினை புறவே என்றது ஒருநயம். கொன்றையும் காயாவும் தோன்றியும் மலர்ந்து கானம் இனிய காட்சி வழங்குதலின், நன்னலம் எய்தினை புறவே என்றும், நலமெய்தியதனைச் சென்று கண்டு நலம் பாராட்டுவது அறிவுடையோர்க்கு இயல்பாதலின், நின்னைக் காணிய வருதும் யாமே என்றும் கூறினான். இன்பநுகர்ச்சிக் குரிய பருவமாகலின், காணிய வருதும் யாமே என்றும், தனியவரை முனிவு செய்யும் தன்மைத் தாகலின், வாணுதல் அரிவையொடு என்றும், புறவினை நோக்கி, நன்னலமெய்திய நின்னை வாணுதல் அரிவையொடு காணிய வருதும் என்றவழி, தலைமகள் உள்ளத்தில் புலவியும் துனியும் பிறக்கு மென்றஞ்சி, அரிவையொடு ஆய்நலம் படர்ந்து என்றும் உரைத்தான். 43. விரவுப்பத்து இதன்கண், முல்லைத்திணைக்குரிய ஒழுக்கங்களில், தலை மகன் பிரியாமைக் கேதுவாகிய காதலை உணர்ந்தோர் கூற்றும், பருவவரவு குறித்தும், பிரியுங்கொல் என்று தலைமகள் ஐயுற்ற வழித் தலைமகளைத் தேற்றுதல் குறித்தும் தலைமகன் நிகழ்த்தும் கூற்றும், தோழி கூற்றுமாகப் பலருடைய கூற்றுக்களும் விரவி வருதலின், இப்பெயர்த்தாயிற்று. 421. மாலை வெண்காழ் காவலர் வீச நறும்பூம் புறவி னொடுங்குமுய லிரியும் புன்புல நாடன் மடமகள் நலங்கிளர் பணைத்தோள் விலங்கின செலவே. இது, வினை பலவற்றிற்கும் பிரிந்தொழுகும் தலைமகன் பின்பு மனைவயின் நீங்காது ஒழுகுகின்ற காதல் உணர்ந்தோர் சொல்லியது. பழைய உரை: வெண்காழ் என்றது, மாலைக்காலத்து முயலெறியும் தடியை. உரை : புனங்காவலர் தம் கையிலுள்ள குறுந்தடியை மாலைக் காலத்தே நிலத்தே எறிதலால் நறிய பூக்கள் நிறைந்த காட்டின் கண் ஒடுங்கியிருக்கும் முயல்கள் ஓசைகேட்டு அஞ்சி நீங்கி யோடும் புன்புலங்களையுடைய நாடனுடைய மடப்பம் பொருந்திய மகளின் அழகுமிக்க மூங்கில்போலும் தோள் களே தலைமகன் செலவினை மறுத்தொழித்தன என்றவாறு. காழ்ப்பேறிய குறுந்தடியைக் காழ் என்றது ஆகுபெயர். நன்கு காழ்த்தது கறுத்திருக்குமாகலின், வெண்காழ் என சிறப்பித்தார். புன்புலம், புன்செய். “புன்புல மயக்கத்து விளைந்தன தினையே 1” என இந்நூலின்கண்ணும், “கான வைப்பிற் புன்புலத் தானே 2” எனக் குறுந்தொகையின்கண்ணும் சான்றோர் வழங்குதல் காண்க. பணைத்தோள், பருத்ததோள் என்றுமாம். அவன் செலவு விலக்குதற்கு அவள் மாட்டுக் கொண்ட காதல் ஏதுவாயினும், முயக்கின்பந் தரும் நலம் குறித்து நலங்கிளர் பணைத்தோள் என்றார். காவலர் வெண்காழை வெறிதே வீசிய வழியும் புதலின்கண் ஒடுங்கியிருந்த முயல் அஞ்சி நீங்கும் எனவே, தலைமகன் பிரிவு கருதியவழி மனைக்கண் உறையும் தலைமகள் பிரிவஞ்சித் தோள் மெலிந்து மேனிநலம் குன்றுவள் என்றவாறாம். “ஏனோர்க் காயின் இடம்வரைவின்றே 1” என்றதனால் முல்லைக் குரிய முயலைக் கூறினர். (1) 422. கடும்பரிப் புரவிக் கால்வ னெடுந்தேர் நெடுங்கொடி முல்லையொடு தளவுமல ருதிர விரையுபு கடைஇநாம் செல்லின் நிரைவளை முன்கை வருந்தலோ விலளே. இது, மீள்கின்ற தலைமகன் தன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. உரை : பாக, கால் வலிமை பெற்ற நெடிய தேரின்கட் பூட்டிய மிக்க செலவினையுடைய குதிரைகளை, நீண்ட முல்லைக் கொடியும் செம்முல்லையும் தம்மலர்கள் உதிருமாறு விரையக் கடவிச் செல்வேமாயின், நிரையே தொடுத்த வளை அணிந்த முன் கையினையுடையாள் வருந்துதல் இலளாவள் என்றவாறு. கால்வல் நேடுந்தேர்க் கடும்பரிப் புரவி யென்று இயையும். “கடலோடா கால்வல் நேடுந்தேர் 2” என்றார் பிறரும். கால், உருளையுமாம். கடும்பரி, விரைந்த செலவு. கால்வல் நெடுந் தேர் என்றது, எத்துணைக் கடுகிச்செல்லினும் நெறி மிக்க ஏற்றிழிவுகளையுடையதாயினும் ஊறுபடாத திண்மையும் வன்மையும் உடைமை தோன்ற நின்றது. நிரைவளை முன்கை, நிரையாக வளையணிந்த முன்கையினை யுடையவள் என விரிதலின், அன்மொழித்தொகை. “நிரைவளை முன்கை: நேரிழை மகளிர் 3” என்று பிறரும் குறிப்பர். தான் செல்லும் பெருவழி, கார்மழையால் தழைத்து முல்லை முதலியன மலர்ந்து விளங்கும் கானத்தின் இடையே கிடத்தலின், முல்லையொடு தளவுமலர் உதிர என்றான். “தளவம் முல்லை யொடு தலைஇத் தண்ணென, வெறிகமழ் கொண்ட வீததை புறவின், நெட்டிடை 1” என்று பிறரும் கூறுவது காண்க. வினை முற்றியவழித் தோன்றிய இன்பம் காதலியின் பிரிவு வருத்தத்தை நெஞ்சின்கண் தோற்றுவித்தமையின், விரைந்து சென்று அதனைக் களைதல் வேண்டுமென்ற விழைவுமிகுதியால், விரையுபு கடைஇ நாம் செல்லின் என்றான். செல்லின் என்றது செல்லுதல் வேண்டுமென்பது வற்புறுத்தி நின்றது. காதல் நினைவால் உள்ளம் குழைந்து பாகனொடு உரையாடுதலின், நாம் செல்லின் நிரைவளை முன்கை வருந்த லோவிலள் என்றான். பிறாண்டும், “வீங்குபரி முடுகச் செலவு நாம் அயர்ந்தன மாயின்,....... கலங்கின ளுறைவோள் கையறு நிலை......... களையு மிடனால் பாக 2” என்று தலைமகன் உரைத்தல் காண்க. முல்லையும் தளவமும் மலர்ந்து யாம். குறித்த பருவ வர வினை யுணர்த்தலின் அவள் ஆற்றாது வருந்துவாளாகலின், அவ்வருத்தம் இன்றாமாறு தேரினை விரைந்து கடாவுக என்ப தாம். இதனால் வினைமுற்றி மீள்வோன் உள்ளத்துக் காதல்மிகுதி நன்கு புலப்படுமாறு காண்க. (2) 423. மாமழை யிடியூஉத் தளிசொரிந் தன்றே வாணுதல் பசப்பச் செலவயர்ந் தனையே யாமே நிற்றுறந் தமையலம் ஆய்மல ருண்கணு நீர்நிறைந் தனவே. இது, கார்பருவத்தே பிரியக் கருதிய தலைமகற்குத் தோழி தலைமகளின் ஆற்றாமை கூறிச் செலவழுங்குவித்தது. பழைய உரை : இது கார்ப்பருவத்தே கூறுதலான், முல்லையாயிற்று. உரை : கரிய மேகம் இடித்து மழைபெய்தலைச் செய்யா நின்றது; இந்நிலையில் ஒளிபொருந்திய நுதல் பசலை பாயும் வண்ணம் நீ செலவு மேற்கொள்வாயாயினை; இனி, அழகிய மலர் போலும் மையுண்ட கண்கள் நீர் சுரந்து நிறைந்தனவாகலின், யாம் நின்னைப் பிரிந்து உறைதலை ஆற்றேம் என்றவாறு. மின்னி யிடித்து மிகுபெயல் பொழிவதாயிற் றென்றற்கு, இடியூஉத் தளிசொரிந்தன்று என்றார். செலவயர்தல், செல வினை மேற்கொள்ளல். “நீயே, செய்வினை மருங்கிற் செல வயர்ந்து யாழ நின் கைபுனை வல்வில் ஞாண்உளர் தீயே 1” என்பது காண்க. தலைமகள்பால் தோழிக்குள்ள உரிமைபற்றி யாம் எனப் பன்மை வந்தது. “ஒன்றித் தோன்றும் தோழி மேன 2” என்பர் ஆசிரியர். அமையலம் என்றது வாழேம் என்பதுபட நின்றது. உண்கண் நீர் நிறைந்தன என்றது, இடத்துநிகழ் பொரு ளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வினை செய்தற்குக் கார்ப்பருவம் சிறப்புடைத் தன்மையின், மாமழை இடியூத் தளி சொரிந்தன்று என்றும், நின்னொடுகூடி இனிது இருத்தற்குரிய இப்பருவத்தே நீ பிரிந்தவழித் தலைமகள் பசலைபாய்ந்து நலம்கெடுதல் ஒரு தலையாகலின், வாணுதல் பசப்ப என்றும், நீ பிரியக் கருதினை யென்பது உணர்ந்த மாத்திரையே ஆற்றாளாயினாள், பிரிந்தவழி உயிர்வாழாள் என்பாள், யாமே நிற்றுறந்து அமையலம் என்றும் கூறினாள். பசப்பினால் “பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண்டமை வாளோ,....... தாமரைப் பொய்கையுள் நீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ 3” எனப் பிறாண்டும் தோழி செலவழுங்கு வித்தல் காண்க. “திணை மயக்குறுதலும் கடிநிலை யிலவே, நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப, புலனன் குணர்ந்த புலமை யோரே 4” என்றதனால், முல்லைக்கண் பாலை வந்து மயங்கிற்று. (3) 424. புறவணி நாடன் காதன் மடமகள் ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப் போதவிழ் தாமரை யன்னநின் காதலம் புதல்வ னழுமினி முலைக்கே. இதுவுமது. உரை : காடுகளால் அழகுற்ற நாடனுடைய மடமகள் ஒள்ளிய நுதல் பசப்பெய்தும் வண்ணம் நீ பிரிந்து செல்வாயாயின், தெளிந்த நீர்க்கண் மலர்ந்த தாமரை போலும் நின் அன் புடைய புதல்வன் முலைப்பாலின் பொருட்டு அழுவன் என்ற வாறு. மடமகள் ஒண்ணுதல் பசப்ப நீ செலின், புதல்வன் முலைக்கு அழுவன் என இயையும். முலை: ஆகுபெயர். அம்: அல்வழிச் சாரியை. புதல்வரைத் தாமரைப்பூவோடு உவமித்தல், சான்றோர் மரபு. “திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை, யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித், தாதணி தாமரைப் போது பிடித் தாங்குத், தாமு மவரும் ஓராங்கு விளங்க 1” என்பது காண்க. மகளிர் இளமைக்கண் தந்தை தன்னையரையும் பின்னர்க் கொழுநனையும் சார்ந்துறையும் மரபினரேயன்றித் தனித்துறை தகுதிய ரல்லராதலின், கொழுநனாகிய நீ நெஞ்சால் துறந்து பிரிந்து செல்லக் கருதுதலால், நின் மனையோள் என யாம் கூறற்கு இயைபின்று என்பாளாய்ப், புறவணி நாடன் காதல் மடமகள் என்றும், நீ செல்லக் கருதிய துணையே இவள்நுதல் பசப்பதாயிற்று என்றற்கு ஒண்ணுதல் பசப்ப என்றும், பிரிந்தவழி உறுவது கூறிச் செவழுங்குவிக்கும் குறிப்பால் நீ செலின்..... நின் காதலம் புதல்வன் அழும் இனி முலைக்கே என்றும் கூறினாள். தலை மக்களது தலைமை வாழ்வின் பயன் மகப்பேறாதலின், புதல் வனைக் காதலம் புதல்வன் என்றும், நின் பிரிவால் நின் மனையாள் உயிர்வாழா தொழிதலால் பெரும்பொருட் பேறாய் வந்த நின் புதல்வன் வாழ்வும் இடையூறுபடும் என்பாள், முலைக்கு அழும் என்றும் கூறினாள். “மக்களை இல்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே 2” எனச் சான்றோர் உரைப்பது காண்க. தெண்ணீர்ப் போதவிழ் தாமரையை மகற்கு உவமம் கூறினாள், தலைவியைத் தெண்ணீராகவும், மகனைத் தாமரைப் போதாகவும் காட்டி, தாமரைப்போதின் வாழ்வு நீர்மேல் நிற்றல் போல, நின் புதல்வன் வாழ்வு நின் மனையவள் மேல் நிற்கிறதேயன்றி நின் காதல்மேல் இல்லையென்பது குறித்தற்கு. “பெறற்கரும் பெரும்பொருள்1” என்ற சூத்திரத்துப் “பிரியுங் காலை எதிர் நின்று சாற்றிய, மரபுடை எதிரும் உளப் படப் பிறவும்” என்றவிடத்துப் பிறவும் என்பதனால் இப்பாட்டு “எதிரது நோக்கிற்று” என்பர் நச்சினார்க்கினியர். (4) 425. புன்புறப் பேடை சேவ லின்புற மன்ன ரியவரி னிரங்குங் கானம் வல்லை நெடுந்தேர் கடவின் அல்ல லருநோ யொழித்தலெமக் கெளிதே. இது, வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. உரை : புல்லிய புறச்சிறகினையுடைய பெடைப்புள் தன் சேவல் மகிழ்வு மிகுமாறு, மன்னர் பாங்கிருக்கும் வாச்சியக்காரர் போல இசைக்கும் காட்டினை, நெடிய தேரினை விரையச் செலுத்திக் கடந்து நீங்கின், நம் பிரிவால் காதலிபால் உள தாகிய பொறுத்தற்கரிய துன்பத்தைத் தீர்த்தல் எமக்கு எளி தாகும் என்றவாறு. எனவே, விரையச் செலுத்துவாயாக என்றானாம். இது குறிப்பெச்சம். புன்புறப்பேடை யென்றது தவிட்டுப் புறா என்னும் ஒருவகைப் புள். “புன்புறப் புறவின் கணநிரை 2” என்பது காண்க. மாற்றார் படைத்தோற்றத்தினைத் தம் சினமிகுதியால் எடுத்தும் படுத்தும் கோட்டியும் பலபடப் பிறழ நோக்கி யிசைக்கும் இயல்பினராகலின், மன்னர் இயவர் என்றார். இதனை, “பேஎ மன்ற பிறழநோக்கு இயவர் 3” என்றதனாலும் அதனுரையாலும் உணர்க. இவ்வுவமையால், இப்புள்ளும் எடுத்தும் படுத்தும் கோட்டியும் பலபடப் பிறழ யிசைத்தல் கொள்க. மேற்கொண்ட வினைமுற்றி மீண்டுவரும் தலைமகற்குப் புறாவின் பெடை தன்சேவலை மகிழ்விப்பான் முரலும் இசை, தன் மனத்தின்கண் தலைமகள் வருந்தும் வருத்தத்தை நினைப் பித்து நோய் செய்தலின், புன்புறப்பேடை சேவல் இன்புற இரங்கும் கானம் என்றும், தேரூர்ந்துவரும் தனக்கு அதன் இசை செவி வழியாக உள்ளத்தை அலைத்தலின், கானத்தை விரைந்து கடத்தற்கண் எழுச்சியையும் காதலியைக் காண்டற்கண் பெரு விதுப்பையும் மிகுவித்தலின், வல்லே நெடுந்தேர் கடவின் என்றும், சென்று இன்புறலாம் என்றலினும், சென்று தலைவியது துன்பத்தை விரைவிற் களையலாம் என்றல் தன் தலைமைக்கு ஒத்திருத்தல் பற்றி, அல்லல் அருநோய் ஒழித்தல் எமக்கு எளிதே என்றும், விரைந்த செலவல்லது மருந்து பிறிதில்லை என்றற்கு அல்லல் அருநோய் என்றும் கூறினான். வினைமுற்றி மீள்கின்றானாதலால், தன் பிரிவாற்றாது தலைமகள் வருந்துதலையும், தான் துயருழத்தலையும் உட் கொண்டு கூறுகின்றா னாகலின், அல்லலருநோய் என்றான்.(5) 426. வென்வேல் வேந்த னருந்தொழி றுறந்தினி நன்னுதல் யானே செலவொழிந் தனெனே முரசுபா டதிர வேவி அரசுபடக் கடக்கு மருஞ்சமத் தானே. இது, வேந்தற்குத் தானைத் தலைவனாய் ஒழுகும் தலைமகன் பிரிந்து வினைமுடித்து வந்து தலைவியோடு உறைகின்றுழி, “இன்னும் பிரியுங்கொல்” என்று கருதிய தலைமகட்குக் கவற்சி தீரச் சொல்லியது. உரை : நல்ல நெற்றியினையுடையாய், முரசொலி மிக்கெழத் தானையைச் செலுத்திப் பகையரசரை வஞ்சியாது எதிர் சென்று வெல்லும் தடுத்தற்கரிய போர்க்களத்தின்கண் வென்றிதரும் வேலேந்திய அரசன் விலக்குதற்கரிய போர் வினையைத் தவிர்ந்தானாகலின், இப்பொழுதின்கண் யான் வினைமேற் சேறலைத் தவிர்ந்தேன்காண் என்றவாறு. வென்வேல் வேந்தன் என்றும், அருந்தொழில் என்றும் கூறியது, போர் மேற்கொண்ட வழி வென்றி எய்துவது ஒருதலை யென்றவாறு. அருமை, மாறெதிர்தற் கருமை. தப்பாது வென்றி தரும் வேலையுடையனாகலின், அவனது தொழில் அருந் தொழில் எனப்பட்டது. துறந்து என்றது, காரணப்பொருட்டு. போர் மறவர்க்குப் போர் செய்தற்கண் மனவெழுச்சி மிகுதற்கு அறையும் முரசு முழக்கம் முரசு பாடு எனப்பட்டது. வினைமுடியுமுன் தொழில் துறந்திருத்தல் ஆண்கடன் அன்மையின், போர்வினை தொடங்குதற்கு முன்பே தவிர்ந்தமை தோன்றத் தொழில் துறந்து என்றும், தவிர்ந்துழி மேற்சேற லின்மையின், யான் மீட்டும் பிரிந்து செல்வேன் எனக் கவலற்க என்பான். யான் செலவொழிந்தனெனே என்றும், துறந்தினிச் செல்வான் கொல்லோவென மருண்ட குறிப்பினளாகலின், நன்னுதல் என்றும் கூறினான். கேட்ட பகைவர் உள்ளத்திலும் போர்நிகழும் இடத்திலும் அதிர்ச்சி தோன்றுதலின், அதிர ஏவி என்றும், யானை முதலிய விலங்குகளையும், தானை மறவரையும் பொருதழித்தலினும் மன்னரொடு பொருதுவேறல் தலையாய மறமாண்பாதலின் அதனையே விதந்து அரசுபடக் கடக்கும் அருஞ்சமம் என்றும் கூறினான். (6) 427. பேரமர் மலர்க்கண் மடந்தை நீயே காரெதிர் பொழுதென விடலொல் லாயே போருடை வேந்தன் பாசறை வாரா னவனெனச் செலவழுங் கினனே. இது, பிரியுங்கொல் என்று ஐயுற்று உடன்படாமை மேற் கொண்டு ஒழுகுகின்ற தலைமகட்குத் தான் பிரிவு ஒழிந்ததற்குக் காரணம் கூறித் தேற்றியது. உரை : பெரியவாய் அமர்த்த மலர்போலும் கண்களையுடைய மடந்தையே, இப்பொழுது கார்ப்பருவம் தொடங்கிய அணிமைக்காலமாதலைக் கண்டு நீ பிரிவுக்கு இசையா யாயினை; போரேற்றுநின்ற அரசனும் பாசறை இருப்புக்கு அவன் தன் காதலியைப் பிரிந்துவாரானெனக் கருதிச் செல வழுங்குவானாயினன்காண் என்றவாறு. தலைமகன் பிரிந்து செல்வன்போலும் என நினைந்து மருண்டு நோக்கிய தலைவிகுறிப்பினைப் பேரமர் மலர்க்கண் என்றதனாற் பெறவைத்தார். மடந்தை, ஈண்டுப் பருவப் பெயர். காரெதிர் பொழுது, கார்காலம் தொடங்கிய அணிமைப் போழ்து; “புலன் அணி கொண்ட காரெதிர் காலை 1” என்று பிறரும் கூறுதல் காண்க. “மன்னுயிர் புரைஇய வலனேர் பிரங்கும், கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை, காரெதிர் பருவம்2” என்றதனால் இதன் இயல்புணர்ந்துகொள்க. செலவழுங்கல், ஈண்டுச் செல்லுதலைத் தவிர்த்தல். வேந்தனும் என்றவிடத்து எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. அவன் என்றது தன்னை. மேற்கொண்ட வினைமேல் கருத்தைச் செலுத்திய கொழுநற்குக் கார்ப்பருவ வரவுகாட்டிப் பிரிவச்சத்தால் மருண்டு நோக்கினமை தோன்ற, காரெதிர் பொழுதென விடல் ஒல்லாய் என்றும், தான் தன் காதலிமாட்டுக் கொண்டுள்ள அன்பினைத் துணைவேந்தர் நன்கறிவாரென்பான், வாரான் அவனெனச் செலவழுங்கினனே என்றும், செலவிடை அழுங்குதல் வன்புறை குறித்தமையின், வற்புறுத்துப் பின் பிரிவன்போலும் என ஐயுறாமைப் பொருட்டுத் தன் நண்பனான வேந்தன் வாரான் அவன் எனக் கருதினா னென்றும் கூறினான். அவன் என்றது பகை அரசனை என்பாரு முளர். (7) 428. தேர்செல வழுங்கத் திருவிற் கோலி ஆர்கலி யெழிலி சோர்தொடங் கின்றே வேந்துவிடு விழுத்தொழி லொழிய யான்றொடங் கினனா னிற்புறந் தரலே. இது, பிரியுங்கொல் என்று ஐயுற்ற தலைமகள் ஐயந்தீரத் தலைமகன் சொல்லியது. உரை : நிறைந்த முழக்கத்தையுடைய மழைமுகில் இந்திர வில்லை யிட்டுத் தேர் செல்லாவகை மிக்க பெயலைத் தொடங்கிற், றாகலின் வேந்தன் தான் ஏவிய விழுமிய வினையைத் தவிர்த்த லால் நின்னைப் புறந்தருதலாகிய இனிய தொழிலை யான் தொடங்கினேன் என்றவாறு. ஒழிக்கப்பட்ட தொழிலது விழுப்பத்துக் கேற்பத் தொடங்கப் பட்டதன் இனிமை வருவிக்கப்பட்டது. திருவில், வானவில்; “மலைமிசைக் குலைஇய வுருகெழு திருவிற், பணைமுழங் கெழிலி 1” என்றும், “திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ 2” என்றும் வருவனவற்றாலுணர்க. கோலுதல், வளைத்தல்; ஒண்கதிர் தெறாமைச் சிறகரிற் கோலி 3” என்றாற்போல. சோர்: முத னிலைத் தொழிற்பெயர். ஆர்கலி யெழிலி யென்றற்குக் கடல் நீரை முகந்தெழுந்த எழிலி யெனினுமாம். “வேந்துவிடு தொழி லொடு செலினும் 4” என்றாற் போலாது விழுத்தொழில் என்றது, தூதினை. மறம் மிக்குப் பொருதற்கமைந்த அரசரைச் சந்து செய்வித்தலின் விழுமியது பிறிதின்மையின், விழுத்தொழில் எனப்பட்டது. “வேந்து விடு விழுத்தொழிலெய்தி 5” என்புழியும் இதனையே கூறிக்கொள்க. ஒழிய என்றது காரணப் பொருட்டாய செயவெனெச்சம். மிகுமழை பெய்தலால் செலவிற்குரிய தேர்கள் இனிது செல்லாவாறு நெறிகள் சீர்கெட்டிருக்கின்றன என்றற்கு, தேர் செலவழுங்க என்றும், நிறைந்த ஆரவாரத்துடன் மழை இடை யறாது பெய்வது தோன்றச் சோர் தொடங்கின்று என்றும், இக்காரணத்தால், வேந்தன் தானும் விடுப்பது கருதிய விழுத் தொழிலைக் கைவிட்டான் என்றற்கு வேந்துவிடு விழுத் தொழில் ஒழிய என்றும், புறத்தே வேந்தர்க்கும் அகத்தே நினக்கும் விழுத்தொழில் புரிதற்குரிய யான், வேந்துவிடு விழுத் தொழிலை விட்டவழி நின்னைப் புறந்தருதலாகிய இனிய தொழிலை யான் மேற்கொண்டேன் என்பான், யான் தொடங் கினனால் நிற் புறந்தரலே என்று கூறினான். இது “கரணத்தி னமைந்து முடிந்த காலை 6” என்ற சூத்திரத்து, “வேற்றுநாட் டகல்வயின் விழுமத்தானும்” என்றவிடத்து விழும வகையுள் “இஃது ஐயந் தீர்த்தது” என்பர் நச்சினார்க்கினியர். (8) 429. பல்லிருங் கூந்தற் பசப்பு நீவிடின் செல்வேந் தில்ல யாமே செற்றார் வெல்கொடி யரண முருக்கிய கல்லா யானை வேந்துபகை வெலற்கே. இது, குறிப்பினாற் பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைமகள் உடம் படுவாளாக, வேந்தற்கு உற்றுழிப் பிரியும் தலைமகன் சொல்லியது. உரை : பலவாகிய கரிய கூந்தலையுடையாய், நீ பசத்தலைக் கைவிடுவாயாயின், பகைவர் வெல்லுதற்கெடுத்த கொடிகளை யுடைய அரணங்களை அழித்த, போர்ப் பயிற்சியில்லாத யானைகளையுடைய வேந்தனது பகையினை வெல்லுதற் பொருட்டு, யாம் வினைவயிற் செல்வேம் என்றவாறு. கல்வி, போர்ப்பயிற்சி; அஃதாவது போரில் பகைவரைக் கொலை பயிறல்; “சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர், கடுங்களி றோட்டலின் காணுந ரிட்ட, நெடுங் கரைக் காழகம் நிலம்பர லுறுப்ப 1” என்பதன் உரையாலுணர்க. “அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா 2” என்றார் பிறரும். நான்கனுருபு, இன்றியமையாமைப் பொருட்டு. விடின் என்பது விடுதல் வேண்டு மென்பதுபட நின்றது. விடாமையின் யாம் செல வழுங்குகின்றே மென்பது எஞ்சி நிற்றலின், தில் ஒழியிசை. தலைமகள் உடன்படாது மேனிவேறுபடத் தொடங்கின மையின், பசப்பு நீ விடின் என்றும், “நாளும் நாளும் ஆள்வினை யழுங்க, இல்லிருந்து மகிழ்வோர்க்கு இல்லையால் புகழ் 3” என்பது குறித்துக் கவன்று உரைத்தலின், செல்வேம் தில்ல யாமே என்றும், தான் துணைபுரிதற்குச் செல்லும் வேந்தனது வலியை, செற்றார் வெல்கொடி அரணம் முருக்கிய வேந்து என்றும், அத்துணை வலியுடையனாயினும், யானைப்படை போதிய கல்வியில்லாத தாகலின், தனது துணை இன்றியமையா தென்றற்குக் கல்லா யானை வேந்து என்றும் கூறினான். 430. நெடும்பொறை மிசைய குறுங்காற் கொன்றை அடர்பொன் னென்னச் சுடரிதழ் பகரும் கான்கெழு நாடன் மகளே அழுத லான்றிசின் அழுங்குவல் செலவே. இது, பிரியுங்கொல் என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைமகன் பருவ வரவு கூறி, 'இது காரணத்தாலும் பிரியேன்’ எனச் சொல்லியது. பழைய உரை : கொன்றை தான் பொன்னென மலர்ந்த பூக்களைச் சொரியும் என்றது, பருவங்காட்டித் தான் செல்லாமை வற்புறீஇயது. உரை: நெடிய மலைமேல் நின்ற குறுகிய அடியினையுடைய கொன்றைமரம் பொற்றகடுபோல ஒளிவிடும் இதழ்கள் பொருந்திய மலரைப் பரப்பும் கானம் பொருந்திய நாடன் மகளே, நீ அழுதலினின்றும் அமைவாயாக; யானும் செல வினைத் தவிர்வேன்காண் என்றவாறு. பொறை, மலை. பொன்னடர் என்பது அடர்பொன் என வந்தது; “அடர்பொன் சிரகத்தால் வாக்கி 1” என்புழிப்போல. பகர்தல், ஈண்டு உதிர்ந்து பரத்தல். அழுத லான்றிசின், அழுதலினின்றும் அமைவாயாக என்பது. சின்; முன்னிலையவை. “இனைதல் ஆனாளாக 2” என்றாற் போல. அழுதல் ஆனாமை, தொடர்ந்து அழுதல் மேற்றாம்; “முயங்க லான்றிசின் யானே 3” என்பது முயங்கற்கண் அமைந்தேன் என்னும் பொருளதாதல் போல. கொன்றை, தொடுத்த மாலைபோற் பூப்பதாகலின், உதிர்வன இதழ்களையாதல்பற்றிச் சுடர் இதழ் பகரும் என்றார். “செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே 4” என்பதனால் செல்லாமைப் பொருளு முண்டாகலின், தவிர்வேன் என்று பொருள் உரைக்கப்பட்டது. கொன்றை சுடரிதழ் பகரும் என்றதனாற் கார்ப்பருவ வரவு கூறி, அப்பருவத்தே பிரிதல் பெரியதோ ராற்றாமை பயக்கு மாகலின், அழுங்குவல் செலவே யென்றும், இனி அது நினைந்து அழாதேகொள் என்பான், அழுதலான்றிசின் என்றும் கூறினான். கொன்றை பொன்போல இதழ்களைச் சொரியும் கான்கெழு நாடன்மகளே என்றது, அப்பெற்றியளாகிய நீ அழுதலை மேற் கொண்டு எனக்கு அவலம் நல்குதல் கூடாது என்பதாம்.(10) 44. புறவணிப் பத்து காடு பலவகை மலர்கள் பூத்து அழகு திகழ நின்றமை பொருளாகத் தொக்க பாடற் பகுதியாகலின், இப்பெயர்த் தாயிற்று. முல்லைக்காடாகிய புறவு கார்ப்பருவத்து மழை வரவால் தளிர்த்துப் பூத்து அழகிய காட்சி வழங்குதலின், அக்காட்சியை வியந்து புறவணி என்றும், அவ்வணியைப் பொருளாகக்கொண்ட பாட்டுக்கள் பத்தும் சேர்ந்த இப் பகுதியைப் புறவணிப் பத்து என்றும் பெயர் குறித்துள்ளனர். 431. நன்றே காதலர் சென்ற வாறே அணிநிற விரும்பொறை மீமிசை மணிநிற வுருவின தோகையு முடைத்தே. இது, “பிரிவுடன்பட்டு ஆற்றாயாகின்றது என்னை?” என்று வினவியவழி, “அவன் போன சுரம் போகற்கரிது என்று ஆற்றே னாகின்றேன்” என்ற தலைமகட்கு, “வேனிற் காலம் கழிந்தது; கார்ப்பருவத் தோற்றத்திலே பிரிந்தா ராகலான், அச்சுரம் நன்று,” எனத் தோழி சொல்லி ஆற்றுவித்தது. உரை : அழகிய நிறம் பொருந்திய பெரிய மலையின் மேலிடம் நீலமணிபோலும் நிறத்தினையும், அழகிய தோகையினையு முடைய மயில்களை யுடைத்தாகலின், காதலர் சென்ற நெறி போகற்கு அரிதன்று, நலமுடையது என்று தெளிக என்றவாறு. போகற்கு அரிதன்று என்பது முதலாயின குறிப்பெச்சம். நன்றே என்றவிடத்து ஏகாரம் தேற்றம். ஏனையிடத்தும் இதுவே உரைத்துக்கொள்க. மீமிசை என்றது, மலையின் மேலிடம் உணர்த்திற்று. மணி, நீலமணி. “மணிநிற மஞ்ஞை 1” எனப்பிறரும் கூறுவர். தோகை, மயில். தோகையும் என்ற எச்ச உம்மையால், தண்ணிய நிழலும் இனிய நீரும் உடைமை கொள்க. தலைமகன் சென்ற சுரநெறி வெம்மை மிகவுடைமையின், போகற்கு அரிதென்று எண்ணி ஆற்றாளாகிய தலைவி, தோழியை நோக்கி, காதலர் சென்ற நெறி நன்றுகொல் என வினவினமையின், அவள் வினாவையே கொண்டெடுத்து நன்றே காதலர் சென்ற ஆறு எனத் தோழி கூறினாள். வழியிடைத் தோன்றும் மலைகள், பசிய கானம் போர்த்துக் கார்வரலால் அழகிய காட்சி வழங்கு கின்றன என்பாள், அணிநிற இரும் பொறை என்றும், மலையின் மேலிடம் மழைமுகில் தழுவிநிற்றல் கண்டு மயில்கள் தோகையை விரித்து மகிழ்ந்தாடும் காட்சி வழிநடை வருத்தத்தைக் காதலர்க்குத் தோற்றுவியாது இன்புறுத்தும் என்றற்கு மீமிசை மணிநிற உருவின தோகையும் உடைத்து என்றும், எனவே, அவர் சென்ற ஆறு போகற்கு அரிதென்று கவலற்க, நன்றே எனத்தெளிக என்றும் உரைத்தாள். (1) 432. நன்றே காதலர் சென்ற வாறே சுடுபொன் னன்ன கொன்றை சூடிக் கடிபுகு வனர்போன் மள்ளரு முடைத்தே. இதுவுமது. உரை : நம் தலைவர் சென்ற காட்டுநெறி, ஒளிவிடும் பொன் போலும் கொன்றைமலரை யணிந்து கடிமனைபுகும் காவலர் போல மள்ளர் பலர் நிறையப்பெற்ற தாகலின், போகற்கரி தன்று, எளிதென்று தெளிக என்றவாறு. கொன்றையின் புதுப்பூ, பொன்னின் நிறமும் ஒளியும் ஒருங் குடைமையின், சுடுபொன்னன்ன கொன்றை என்றார்; “சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் 1” என்பதனால், சுடுபொன் ஒளியும் நிறமும் சிறக்கவுடைமை அறிக. கடி, மணமனை; காவலகமுமாம். மள்ளர், இள வீரர். இவர் விழாக்காணும் விருப்பு மிகவுடையராதலின், இவர்கட்குக் கடிபுகுவனர் உவம மாயினர். “வேறு நாட்டு விழவுப்படர் மள்ளர் 2” என்பது காண்க. அணியும் தூசும் உயர்ந்தன அணிந்து செல்லுபவாகலின், கொன்றை சூடிய மள்ளரைக் கடிபுகுவனர் போல் என்றாள். மள்ளர் சுரத்திடையே வழங்கும் இயல்பின ராதலின், காதலர் சென்ற ஆறு மள்ளரும் உடைத்து என்றாள். “மணவாய்த் தென்றல், சுரஞ்செல் மள்ளர் சுரியல் தூற்றும் 3” என்றார் பிறரும். மள்ளரும் என்ற உம்மையால், மள்ளர் புறவின்கண் மகளிரொடு உறைதலின், வழிச்செலவு காதலர்க்கு இன்பக்காட்சியே நல்கும் என்றாளாதலும் கொள்ளப்படும். “புறவே, ஒள்ளிழை மகளி ரொடு மள்ளர் மேன 1” என்பது காண்க. (2) 433. நன்றே காதலர் சென்ற வாறே நீர்ப்பட வெழிலி வீசும் கார்ப்பெயற் கெதிரிய கானமு முடைத்தே. இதுவுமது. உரை : நம் காதலர் சென்ற காட்டுநெறி, எங்கும் நீருண்டாக மேகங்கள் வீசும் கார்காலத்து மழையினை யேற்று வளமுற்ற கானத்தை யுடைத்தாகலின், போகற் கரிதென்று கவலற்க, இனிதாம் என்றவாறு. நீர்ப்படுதல், நீர் உண்டாதல். எழிலி, மழைமுகில். கார் வரவை எதிர்நோக்கியிருந்து அது வந்ததும் நீர்நலம் சிறக்கப் பெற்ற காரணத்தைக் கார்ப்பெயற்கு எதிரிய கானம் என்றார். கார்ப்பெயற் கெதிரிய கானமுடைமையின், நீரும் நிழலும் மிக்குச் செல்வார்க்கு வருத்தம் தோற்றுவியாது என்பாள், நன்றே காதலர் சென்ற ஆறே என்றாள். (3) 434. நன்றே காதலர் சென்ற வாறே மறியுடை மான்பிணை யுகளத் தண்பெயல் பொழிந்த வின்பமு முடைத்தே. இதுவுமது. உரை : நம் காதலர் சென்றவழி, கன்றோடு கூடிய மான்பிணை உலாவக் குளிர்ந்த மழை பெய்தமையான் உளதாகிய இன்பத் தினை உடையதாகலின், போகற் கரிதன்று, நன்றே என்றவாறு. மறி, மான்கன்று. பொழிந்த இன்பம், வழிநடந்த வருத்தம் என்றாற் போலக் காரியப்பெயர் கொண்டது. மான்பிணை உகள வென்றதனால் ஆற்றிடை ஏதமின்மை கூறியவாறு. (4) 435. நன்றே காதலர் சென்ற வாறே நிலனணி நெய்தன் மலரப் பொலனணி கொன்றையும் பிடவமு முடைத்தே. இதுவுமது. உரை : நம் காதலர் சென்றவழி, நிலத்துக்கு அணி செய்யும் நெய்தல்கள் மலரப் பொன்போல் மலரும் கொன்றையும் பிடவமு முடைத்தாகலின், போகற்கரிதன்று, இனிதென்று தெளிக என்றவாறு. நிலத்துக்கு அணியாய நெல்லும் கரும்பும் நின்ற வய லிடத்தே வளர்ந்து, இனிய காட்சி வழங்கும் ஏற்ற முடைமைபற்றி நெய்தல் நிலனணி நெய்தல் எனப்பட்டது. பொலனணி என்ற விடத்து அணி, உவமப் பொருட்டு. பொலன்: பொன்னென்னும் கிளவியின் செய்யுண்முடிபு 1 நெய்தலால் நிலமும், கொன்றை பிடவங்களால் கானமும் இனிய காட்சி நல்குதலின்,நன்றேகாதலர்சென்றவாறேஎன்றாள். (5) 436. நன்றே காதலர் சென்ற வாறே நன்பொ னன்ன சுடரிணர்க் கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே இதுவுமது. உரை : நம் காதலர் சென்ற நெறி, நல்ல பொன் போல் ஒளிவிடும் பூங்கொத்துக்களையுடைய கொன்றை மரங்களையும் குருந்த மரங்களையு முடைத்தாகலின், போகற்கரிதென்று கவலாது நன்றென்று தெளிவாயாக என்றவாறு. நன்பொன் என்றவிடத்து நன்மை, ஓட்டறுதல். போகற்கு முதலாயின அவாய்நிலையான் வந்தன. என்று தெளிக என்பன குறிப்பெச்சம். கொன்றை போலக் குருந்தும் கார்காலத்து மலர்வதாகலின், குருந்துமா ருடைத்தே என்றாள்; “காசி னன்ன போதீன் கொன்றை, குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலை 1” என்று பிறரும் கூறுதல் காண்க. 437. நன்றே காதலர் சென்றவாறே ஆலித் தண்மழை தலைஇய வாலிய மலர்ந்த முல்லையு முடைத்தே. இதுவுமது. உரை : ஆலிகளையுடைய தண்ணிய மழை பெய்தலால் வெள்ளி யவாய் மலர்ந்த முல்லை மலர்களையுடைத்தாகலின், காதலர் சென்றநெறி, போகற்கரிதன்மையின் நன்றென்று ஆற்றி யிருப்பாயாக என்றவாறு. ஆலி, ஆலங்கட்டி. “புதுநீர் ஆலி, பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப 2” என்றார் பிறரும். ஆவிவடிவாய மேகம் விண்ணிடத்து மிகக் குளிர்ப்பெய்தியவழி, நீருருவாய்ப் பின்னர் உறைந்து சிறுகற்போல மாறியவிடத்து ஆலங்கட்டியா மென்ப. வால், வெண்மை. இல்லிலிருந்து நல்லறம் புரியும் கற்புடை மகளிர்க்குரிய தூய முல்லையும் அவர் சென்ற நெறியின்கண் மலர்ந்து தோன்றி அவர்க்கு இன்பம் செய்தலின், நன்றே காதலர் சென்ற ஆறே என்றாள். (7) 438. நன்றே காதலர் சென்ற வாறே பைம்புதற் பல்பூ மலர இன்புறத் தகுந பண்புமா ருடைத்தே. இதுவுமது. உரை : பசிய புதல்களின்கட் பலவாய பூக்கள் மலர்வதால் யாவரும் இன்புறுதற்குத் தக்கவாகிய பண்புகளையுடைமை யான், நம் காதலர் சென்ற நெறி நன்றென்றுணர்க என்றவாறு. பண்புகள், மாவும், புள்ளும், மலரும் மிக்குச் செல்வார்க் கினிய செயல்களையுடையவாதல். பைம்புதல், பசுமையான புதர்கள், பொருளின் பண்பு இடத்தின் மேனின்றது. கண்டார் உள்ளத்தில் இன்பம் மிகுதற்கான அழகிய காட்சிகளைத் தனக்கே உரியவாகக் கொண்ட கானம் என்றும், எனவே அவ்வழியே செல்வார்க்குச் செலவருமையும் வருத்தமும் தோன்றா என்றும் கூறினாளாயிற்று. (8) 439. நன்றே காதர் சென்ற வாறே குருந்தங் கண்ணிக் கோவலர் பெருந்தண் ணிலைய பாக்கமு முடைத்தே. இதுவுமது. உரை : நம் காதலர் சென்ற நெறி, குருந்தமலரால் தொடுத்த கண்ணி யணிந்த கோவலர் வதியும் பெருமையுற்ற தண்ணிய நிலையினையுடைய ஊர்களையுடைமையான், சேறற்கு நன் றென் றுணர்க என்றவாறு. அம், தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண் வந்த சாரியை. கோவலர் குருந்தின்பூவால் தொடுக்கப்பட்ட கண்ணி சூடும் இயல்பினராதலின், குருந்தங் கண்ணிக் கோவலர் என்றார்; “அவ்வழி வந்த, குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன் 1” என்று பிறரும் கூறுவது காண்க. பாக்கம் என்பது நெய்தனிலத்துக் குரிய தாயினும் சிறுபான்மை முல்லைநிலத்து ஊர்கட்கும் உரியதாம். “சிறுகுடிப் பாக்கத்தெம் பெருநக ரானே 2” என்பதனாலறிக. காதலர் சென்ற நெறி முற்றவும் காடும் மலையுமே யாகாது இடையிடையே மக்கள் இருந்து இனிது வாழும் ஊர்களும் உடையதாகலின் நன்றே என்றாள். (9) 440. நன்றே காதலர் சென்ற வாறே தண்பெய லளித்த பொழுதின் ஒண்சுடர்த் தோன்றியுந் தளவமு முடைத்தே. உரை : நம்காதலர் சென்றவழி, குளிர்ந்த மழைபெய்த கார்ப் பருவத்தே மலரும் ஒள்ளிய சுடர்போலும் பூக்களையுடைய தோன்றியும் தளவமு முடைமையான், போகற் கரிதன்று, எளிதென்றறிக என்றவாறு. தண்பெயல், கார்காலத்து மழை. பொழுது, கார் காலம், தோன்றியும் தளவும் கார்காலத்து மலர்வன. பொழுதின் தோன்றி யும் தளவமும் உடைத்து என இயையும். தோன்றிப்பூ ஒள்ளிய சுடர்போறலின், சுடர்த் தோன்றி எனப்பட்டது. தளவம், செம்முல்லை. (10) 45. பாசறைப்பத்து தலைமக்களது வாழ்வில், தலைமகன், பொருள் வேண்டியும் போர்வினை குறித்தும் மனைவியின் நீங்கிப் பிரிந்துறையும் கடமையுடையன். காதலின்பம் ஒன்றே விழைந்து மனைக்கண் மடிந்திருப்போர்க்கு இம்மையிற் புகழும் மறுமைக்கண் இன்ப மும் இல்லையாம் என்பது தமிழ் நூல்களின் பொதுமுடிபு; அதனால், தமிழ்த் தலைமகனுக்குப் பொருள்வயிற் பிரிவும் வினைவயிற் பிரிவும் கடமையாயின. பொருட் பிரிவினும் போர்வினைப் பிரிவே பொன்றாப் புகழ் பயப்ப தென்பதும், ஒருவன் வாழ்வாங்கு வாழ்ந்து மூத்து முடிவெய்துங்கால் நோய் வாய்ப்பட்டு இறத்தலினும், போரின்கண் பகைவர் படையால் புண்ணுற்று மாய்வது பெரிய தவப்பயன் என்பதும் தமிழகத்து மூத்தோர் கண்ட முதுநெறிகளாகும். “நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர் 1” என்று சான்றோர் குறிப்பது காண்க. தமிழர் வாழ்வில் இக்கொள்கை நிலவியிருந்த நாள்காறும், பிற பகுதிகள் வேற்று நாட்டவர் கொடுமைக்கு அடிமையுற்று மடிந்தபோதும், தமிழகம் வேற்றவ ரால் வென்று கொள்ளப்பட்டதென்ற வரலாறே இல்லாது விளங்கிற்று. இடைக்காலத்தே புகுந்த நச்சுக்கருத்துக்கள் தமிழர் ஒருமை நிலையைச் சாதிசமயங்களின் பெயரால் சிதறிப் பிரிந்து கெடச் செய்தன ; தமிழகம், தன் தமிழையே மறந்து துறந்து பிறர்க்கும் பிறமொழிவழக்குகட்கும் முதலிடம் தந்து தமிழ் உணர்விழந்து சழக்கர் தலைமையில் வழுக்கி வீழ்வதாயிற்று; வறுமையே தமிழ்க்குப் பெருமையாய்ப் போயிற்று. பண்டைத் தமிழர் வாழ்வில், போர் நிகழ்தற்குரிய காலம் கார்காலம் ஒழிந்த பிற எல்லாக்காலங்களுமாகும். அவற்றுள்ளும் மிக்க குளிரும் மிக்க வெம்மையும் பொருந்திய கூதிர் முதுவேனில் என்ற இரண்டினும், போர் நிகழ்தற்கு இடமுண்டெனினும், முன்பனி, பின்பனி, இளவேனில் என்ற இவையே சிறந்தனவாகக் கருதப்பட்டன. அதனால், போர் மேற்கொண்ட வேந்தர், கூதிர் வேனில் என்ற இருபோதினும், போர்க்களத்தில் பாசறை அமைத்துப் போர்க்குரிய செவ்வி நோக்கி அமைந்திருப்பதை முறையாகக் கொண்டனர். தலைமகன் பாசறைக்கண் தலைவியது பிரிவை ஆற்றியிருத்தலும், தலைமகள் தலைவன் பிரிவை ஆற்றி மனைக்கண் இருத்தலும் உரிய பொருளாய் முல்லைத் திணைக் குரிய வாயின. பாசறையும், கூதிர்ப்பாசறை வேனிற் பாசறை என இருவகைப்பட்டு வழங்கிற்று. “கூதிர் வேனில் என்றிரு பாசறைக், காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் 1” என்று ஆசிரியர் குறிப்பது காண்க. ஈண்டுக் கார்ப்பருவ வரவு கண்டு பாசறைக் கண் இருந்து தலைமகன் நிகழ்த்தும் கூற்றுக்களே பெரிதும் தொகுக்கப்பட் டிருத்தலின், இது வேனிற்பாசறை யென உணர்தல் வேண்டும். பாசறை என்னும் சொல், பசுங்காடு படர்ந்த பெரிய பாறைகள் பொருந்திய இடத்தைக் குறிப்பது; “வேங்கை தந்த வெற்பணி நன்னாள், பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇக், கமழ்தா தாடிய கவின்பெறு தோகை, பாசறை மீமிசைக் கணங்கொள்பு ஞாயிற்று, உறுகதிர் இளவெயில் உண்ணும் நாடன் 2” எனச் சான்றோர் கூறுவதனால் அறியலாம். இதனால், முதன்முதலாகப் போர்வினைக்கண் தானையொடு காலம் நோக்கி யிருக்கும் இருக்கையை மேற்கொண்ட தமிழ் முன்னோன், மேலே காட்டிய பாசறைக்கண் இருந்தது பற்றிப் போர்வினைத் தானை இருக்கும் இருக்கைகள், பிற்காலத்தே பாசறை என வழங்கத் தலைப்பட்டன என்று கோடல் பொருத்த மாகிறது. போர் மேற்கொண்ட வேந்தர் படையொடு சென்று போரைச் செய்தற்குரிய செவ்வி நோக்கித் தானை இனிது இருத்தற் கேற்ற நிலப்பரப்பிலும் பாசறைகள் பின்னர் அமைக்கப் பட்டன. போர்க்களத்துக்கென நூலோர் இடம் வரையறை செய்யாமையால் பரந்த வயலிடத்தும் போரும் போர்ப்பாசறை யும் அமைந்தன. “காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல், வந்திறை கொண்டன்று தானை 1” என்பது காண்க. பாசறை என்பது பொதுவாக ஓர் இடம் போலக் குறிக்கப் படினும், அது, பாசறை, பாடி, கட்டூர் என முக் கூறுபட்டுத் தோன்றுகிறது. அரசர்களும் அவருடைய அரசியற் சுற்றமும் இருக்கும் இடம் பாசறை; பல்வகைப் படைத்தலைவரும், படை வயவரும், இயவரும் ஆகிய பலரும் இருக்கும் பகுதி பாடி; இப்பாடியைப் பாடிக் கொட்டில், பாடியிருக்கை என்றும் பண்டையோர் வழங்கினர். “பன்னூ றாயிரம் பாடிக், கொட்டில்2” எனவும், “எண்பதின் இரட்டி எறிபடைப் பாடி 3” எனவும் வழங்குதல் காண்க. கட்டூர் என்பது, போர்நிகழ்ச்சியின் பெருமை காலம் முதலிய நிலைமை நோக்கி வேண்டிடத்துப் பெருக்கி அமைக்கும் பாடியிருக்கை; “விரவு மொழிக் கட்டூர் வேண்டு வழிக் கொளீஇ 4” என்பதனால் இஃது அறியப்படும். இருக்கை, அமைப்பு முதலிய கூறுபாட்டால் இவை வேறுவேறு காணப் படினும் பொதுவகையிற் பாசறை என்றவிடத்து இவையாவும் அடங்கிவிடும். பாசறை நடுவாக, பாடியும் கட்டூரும் இடை யிடை அமையப் படைத்திரள் இனிது இயங்குமாறு தெருக்களும், பாசறைக்கு அரணாக இடுமுள்ளும் தோற்கிடுகும் வில்லும் வேலும் வேலியாக நிறுவப்பட்டிருக்கும். பாடியிருக்கையும் கட்டூரும், போர் முடிந்தபின் மறையும் இயல்பினவாயினும் சில இடங்களில் அவை நிலைபெற்று ஊர்களாக மாறிவிட்டன. வாணகப்பாடி, பெருங்கட்டூர் என்ற ஊர்கள் இன்றும் நின்று பழைய வரலாற்றை வற்புறுத்துகின்றன. இரவினும் பகலினும் எப்போதும், காலை மாலை முதலிய சிறுபோதுகளை உணர்த்தும் முரசவகைகள் பாசறைக்கண் முழங்கும்; காடு கெடுத்துத் தானைக்கு வழி அமைக்கும் கூலிப் படையினர் ஒருபால் அது செய்தொழுக, இயவர் இயம் இயம்ப, வயவர் வாளும் வேலும் வாய்வடித்து நெய்வழங்குவர்; விற் படையினர் அம்புகளைத் தெரிந்து செம்மை செய்வர்; வீரர் இருக்கை, “வெறிக் குரவை பெயர்புபொங்க, வாய்காவாது பரந்துபட்ட, வியன் பாசறை 1” கல்லென்ற ஓசை மிக்கு விளங்கும். வேந்தன் இரவில் கண்படை பெறாது செய்வினை ஆராய்ந்த சிந்தையுடன் பாடி முற்றும் பார்வை இடுவன். “எண்ணரும் பாசறைப் பெண்ணொடு புணரார்” தலைவர். ஆயினும், புண்ணுற்று வீழ்ந்த வீரர்க்கு மருந்து நல்கிப் பணி செய்யும் புறத்துறை மகளிர் பாசறை மருத்துவ விடுதியில் இருப்பர். புறத்தோராகிய மகளிர் ஆங்கண் இருந்து மருத்துவப் பணிபுரிவது “புரைவது என்ப” எனத் தொல்காப்பியனார் தமக்கு முன்னோர் காலத்திருந்தே வழங்கிவருவ தென்பது தோன்றக் கூறுகின்றார். அப்புறத்தோராகிய மகளிரைப் பாடி மகளிர் எனக் கொங்கு வேளிர் குறிப்பிடுகின்றார். அம்மகளிர் அன்பும் அறமும் பொங்கிய உள்ளத்தராய், “தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ, வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்க, கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி, ஐயவி சிதறி ஆம்பல் ஊதி, இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇ, காக்கம் வம்மோ காதலம் தோழி 2” என்று மருத்துவம் செய்வதைச் சான்றோர் பாராட்டிப் பாடியுள்ளார்கள். வேந்தர் உறையும் பாசறையில் சட்டை யிட்ட கஞ்சுகிகள், இரவு முழுதும் உறக்கமின்றிக் காவல் புரிய, தலைவருடன் கூடி வினைவகை ஆராயும் இடத்தில் தமிழறியாத ஆரியரும் யவ னரும் காவல்புரிவார்கள்; சிலர் பரூஉச் சுடர் எரியும் பாண்டில் விளக்குகட்கு நெய் பெய்து இரவு முற்றும் எரியவிட்டிருப்பர். இத்தகைய பாசறைக்கண் இருக்கும் தலைமகன் உள்ளத்தில் மேற்கொண்ட வினை முடியுங்காறும், உழுவல் அன்பின் உரு வாக விளங்கும் அவன் காதலியின் காதல் நினைவு கனவிடத்தும் தோன்றுவதில்லை. அவன் எண்ணமெல்லாம் வெற்றிக்குரிய வினைவகைகளிலேயே ஈடுபட்டு அழுந்திக் கிடக்கும்; வினை வெற்றிபெற முடிந்ததும் தலைமகன் நினைவு தலைமகளது காதலின்பத்தில் கனைந்து ஒடா நிற்கும். இது கண்ட சான்றோர், “மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடை, மாதர்பால் பெற்ற வலியுளவோ - கூதிரின், வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலான், ஐங்கணை தோற்ற அழிவு 1” என்று பாராட்டினர். இதனால் இப்பாசறை இருப்பைப் பாசறைமுல்லை என்றும் பகர்ந்தனர். ஆசிரியர் தொல்காப்பியனார், “கிழவி நிலையே வினையிடத்து உரையார், வென்றிக் காலத்து விளங்கித் தோன் றும் 2” என்று இலக்கணம் கண்டார். “ஒன்றாத் தமரினும் 3” என்ற சூத்திரத்துப் “பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப், பாக னொடு விரும்பிய வினைத்திற் வகையினும்” என்ற பாசறைப் புலம்பல் இப் பாசறைப் பத்தின்கண் குறிக்கப்படுகிறது. வினைமுடிவு குறித்துப் பாசறைக்கண் தனித்திருந்தோன், அது முடியவும், தான் குறித்த கார்ப்பருவம் தோன்றவும் கண்டு, தன் காதலியை நினைந்து கூறும் கூற்றுப் பொருளாக எழுந்த பாட்டுக் களின் தொகுதி யாகலின், இப்பத்துப் பாசறைப்பத்து எனப் பெயர்பெறுவ தாயிற்று. 441. ஐய வாயின செய்யோள் கிளவி கார்நா ளுருமொடு கையறப் பிரிந்தென நோய்நன்கு செய்தன வெமக்கே யாமுறு துயரமவ ளறியினோ நன்றே. இது, சென்ற வினை முடியாமையின் கார்காலம் வந்த விடத்து மீளப்பெறாத தலைமகன், தலைமகளுழைநின்றும் வந்த தூதர் மாற்றம் கேட்டு இரங்கியது. பழைய உரை : கார்நாள் உருமொடு நோய் நன்குசெய்தன, செய்யோள் கிளவி எனக் கூட்டுக. உரை : அவள் செயலின்றி இனையும் வகைப் பிரிந்தேனாக, செம்மையுடைய அவள் விடுத்த மென்மையும் அழகு முடைய வாகிய மாற்றம், கார்ப்பருவத்து இடியோடு கலந்த மழை யொடு கூடித் தனித்த எமக்குத் துன்பம் மிகத் தருவனவாயின; அதனால் யாம் எய்தும் துயரத்தை அவள் அறியின் நன்றாகும் என்றவாறு. செய்யோள் ஐயவாயின கிளவி, உருமொடு நோய் நன்கு செய்தன; துயரம் அவள் அறியின் நன்று எனக் கூட்டி முடிக்க. ஐ, மென்மை; அழகுமாம். செய்யோள், தலைமகள். கிளவி, தூதர்பால் சொல்லிவிட்ட மாற்றம். உரும், இடி. துன்பம் செய்தற்கண் கார்நாள் உரும் சிறத்தலின், ஒடு: ஒருவினை ஒடு. செய்தென வென்னும் வினையெச்சம், ஈண்டுக் காரணப் பொருட்டு. தான் மேற்கொண்ட வினை குறித்துப் பிரிவுணர்த்திய ஞான்று, பிரிவுத்துன்பம் வருத்தினும் அதனிடையே தன் உள்ளம் தெளிந்து, செய்வினை முடித்த செம்மலொடு போதருக என உடம்பட்டு ஊக்கிய அவள் சிறப்பை நினைந்து கூறலின், செய்யோள் என்றும், குறித்த பருவத்தை வற்புறுத்தி விரைவில் வினைமுற்றி மீளுதல் வேண்டுமென அவள் விடுத்த தூதர் கூறலின், ஐய வாயின கிளவி என்றும், குறித்த காலத்தில் வினைமுடியாமை மேலும், தான் குறித்த கார்ப்பருவம் மழை யொடு போந்து வருத்தாநிற்க, தான் பிரிந்தது நினைந்து கையறப் பிரிந்தென என்றும், தலைவியினின்றும் போந்த தூதுரை அவளது ஆற்றாமையை உணர்த்தி வருத்தம் மிகுவித்தமையின், நோய் நன்கு செய்தன எமக்கே என்றும், கார் வந்து இடையீடு செய்தலால் வினைமுடியாமையும், அதனால் தான் எய்தும் வருத்தமும் தலைமகள் அறியின், எம்மொடு பின்னர் அவள் புலத்தற்கு இடனின்றாம் என்பான், யாம் உறுதுயரம் அவள் அறியினோ நன்று என்றும் கூறினான். இனி, கார்ப்பருவம் வந்தமையான், வினைமுடியாமை பற்றிப் பாசறைக்கண் இருந்து வருந்தும் தலைமகன் தலைமகள் விட்ட தூதுரை கேட்டு ஆற்றா னாயிமையின், நோய் நன்கு செய்தன எமக்கே என்றும், கார்மழை போந்து செய்த துன்பத்தின் இடையே தோன்றி அமைதி தருதலின், தலைமகளது தூதுரை ஐயவாயின என்றும் உரைத்தான் என்றலு மொன்று. “வருத்த மிகுதி சுட்டுங் காலை, உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம் 1” என்பவாகலின், தலைமகன் பாசறைக்கண் இருந்து வருந்தல் அமையும் என்க. “ஒன்றாத் தமரினும் 2” என்பதன் உரையில் “இது வினை முடியாமையிற் பருவங் கண்டு மீளப் பெறாத தலைவன் தூதர் வார்த்தை கேட்டு வருந்தியது” என்பர் நச்சினார்க்கினியர். 442. பெருஞ்சின வேந்த னருந்தொழி றணியின் விருந்துநனி பெறுதலு முரியள் மாதோ இருண்டுதோன்று விசும்பி னுயர்நிலை யுலகத் தருந்ததி யனைய கற்பின் குரும்பை மணிப்பூண் புதல்வன் றாயே. இது, வேந்தற் குற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடி யாமையிற் பாசறைக்கண் இருந்து பருவவரவின்கண் சொல்லியது. உரை : இருண்டு தோன்றும் விசும்பின்கண் உயர்ந்த நிலையை யுடைய தேவருலகில் விளங்கும் அருந்ததி போலும் கற்பினை யுடையளாய்க் குரும்பைபோற் செய்யப்பட்ட மணிகள் கோத்த கிண்கிணி யணிந்த புதல்வனுக்குத் தாயாகியவள், வேந்தன் தான் மேற்கொண்ட அரிய வினையை முடித்துப் பகையிடத்துத் தனது மிக்க சினமும் தணிவானாயின், விருந் தினை மிகப் பெற்று இன்புறுதற் குரியளாவள் என்றவாறு. வேந்தன் அருந்தொழில் பெருஞ்சினம் தணியின் என மாறுக. பகைவரால் விலக்குதற்கரிய பெரும்போரை மேற்கொண்டமை தோன்ற அருந்தொழில் என்றும், அதற்கு ஏது, அப்பகைவர்மேல் எழுந்த மிக்க சினம் என்றற்குப் பெருஞ்சினம் என்றும் கூறினார். போர் முடிந்தாலன்றிச் சினம் தணியாமை பற்றித் தணியின் எனல் வேண்டிற்று. பகற்போதில் நீல நிறம் கொண்டு காட்சி யளிக்கும் விசும்பு அருந்ததிமீன் விளங்கித் தோன்றும் இரவுப்போதில் இருண்டு தோன்றுதலின், இருண்டு தோன்று விசும்பு என்றும், விசும்பிடத்து உயர்ந்த உலகம் என்பது தோன்ற உயர்நிலை யுலகம் என்றும் கூறுப. வேந்தன் தொழில் முடித்துப் பெருஞ் சினம் தணியின் அருந்ததி அனைய கற்பின் புதல்வன்தாய் விருந்து நனி பெறுதலு முரியள் எனக் கூட்டி வினை முடிவு செய்க. எல்லா உலகினும் உயர்ந்ததாய் வற்றாத இன்பத்ததாயும் இருத்தலின், உயர்நிலையுலகம் என்றான். “துயர் நிலையுலகம் காத்த லின்றிநீ, உயர்நிலை யுலகம் வேட்டனை 1” என்றார் பிறரும். இருண்டுதோன்று விசும்பு என்றான், கார்ப்பருவ வரவு கண்டு கூறுதலின். இறைவன் அளித்த கருவினை முனிமகளிர் எழுவருள், ஏனை அறுவர் உண்டு சூல்கொண்டு மகப்பெற்றா ராக, அருந்ததி தன் கொழுநனையல்லது பிறரை இறையெனக் கருதாப் பெருங்கொள்கையால் தெய்வக் கருவாயினும் ஏற்று உண்ண மறுத்த தலையாய கற்பு மாண்பு உடையள்; இதனை “எழுமகளிருள், கடவுள் ஒருமீன் சாலினி ஒழிய, அறுவர் மற்றை யோரு மந்நிலை அயின்றனர் 2” என்று பரிபாடல் கூறுதல் காண்க. இம்மாண்பு பற்றித் தமிழ்ச்சான்றோரிடையே கற்புப் பெருமை மிக்க மகளிர்க்கு அருந்ததியைக் காட்டல் மரபாயிற்று. “வடமீன் புரையுங் கற்பின் மடமொழி 3” என்றும், “வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் 4” என்றும், “பெருநல் வானத்து வடவயின் விளங்கும், சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல் 5” என்றும் சான்றோர் கூறிப்போந்தமை யறிக. தன்னை யன்றித் தெய்வ முள்ளிட்ட பிறர் எவரையும் பொருளென மனங்கொள்ளாத கற்புச்சிறப்புத் தோன்ற அருந்ததி யனைய கற்பின் என்றும், அக் கற்பு நெறியின் விளைபயனாய்த் தன் குடிக்கு விளக்காய மகனைப் பெற்றுத் தந்த பெருஞ்சிறப்பை எண்ணிக் குரும்பை மணிப்பூண் புதல்வன் தாயே என்றும் வினைமுடியாமையினை அருந்தொழில் தணியின் என்றும் கூறினான். தான் கூடிப் பெறும் இன்பத்தையும் தழுவி நிற்றலின், உம்மை எச்சப் பொருட்டு. மனைக்கு விளக்காகும் கற்புடை மகளிர்க்கு மக்கட்பேறு பெருவிளக்கமாதலின், மகனை ஒப்பனை செய்து அவனுடைய மழலைமொழி கேட்டும் தளர்நடை கண்டும் கொழுநன்பிரிவாற்றியிருக்கும் பெற்றிமையை நினைந்து குரும்பை மணிப்பூண் புதல்வன்தாய் என்றான். “தந்தையர் ஒப்பர் மக்கள் 1” என்றும், “செம்மால், வனப்பெல்லாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை, நிலைப்பாலுள் ஒத்தகுறி என்வாய்க் கேட்டு ஒத்தி 2” என்றும் வரும் சான்றோர் உரை காண்க. பிறாண்டும், மகளிர் ஆற்றியிருத்தற்குப் புதல்வன் ஏதுவாதல், “குரும்பை மணிப்பூட் பெருஞ்செங் கிண்கிணிப், பாலார் துவர்வாய்ப் பைம்பூட் புதல்வன், மாலைக் கட்டின் மார்பூர் பிழிய, அவ்வெயி றொழுகிய வெவ்வாய் மாணகைச், செயிர்தீர் கொள்கைநம் உயிர் வெங் காதலி 3” என்பதனா லுணர்க. (2) 443. நனிசேய்த் தென்னாது நற்றே ரேறிச்சென் றிலங்கு நிலவி னிளம்பிறை போலக் காண்குவெந் தில்லவவள் கவின்பெறு சுடர்நுதல் விண்ணுய ரரண்பல வௌவிய மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே. இதுவுமது. உரை : வானளாவி உயர்ந்த அரண்கள் பலவற்றையும் வென்று கொண்ட மார்ச்சனை யமைந்த முரசினையுடைய வேந்தன் தான் மேற்கொண்ட வினையை முடித்து அமைவானாயின், மிக்க சேய்மைக்கண்ணது எனக் கருதாது, நல்ல தேரேறிச் சென்று, அவளுடைய அழகு பெற்ற ஒளி பொருந்திய நெற்றி விளங்குகின்ற திங்களின் இளம்பிறை போலத் திகழக் காண்பேம் என்றவாறு. மணிநீரும் மண்ணும் மலையும் காடும் நகரியும் புரிசையு மென்று பலவகைப் படுதலில், அரண்பல என்றும், அவற்றுள்ளும் புரிசையும் மலையும் சிறந்தன வாகலின் விண்ணுயர் அரண் எனச் சிறப்பித்தும் கூறப்பட்டன. மனத்துக் கினிய காதலருடன் கூடி இனிதுறையும் மகளிர் நுதல் இன்பக்கிளர்ச்சியால் ஒளிவிட்டுத் திகழ்தல் பற்றிச் சுடர் நுதல் என்றார். “பிறைத்தகை, கொண்டன்று பேதை நுதல் 1” என்றார் பிறரும். மிக்க சேய்மையில் சென்றுள்ளா னாகலின், நனி சேய்த் தென்னாது என்றும், கால்வல் நெடுந்தே ரென்பான், நற்றேர் என்றும், தான் காணுங்கால் பசப்பின்றி ஒளியுற்றுத் திகழ்தலின் தலைவியின் நெற்றியைக் கவின்பெறு சுடர்நுதல் என்றும், வினை முடியாமையின் விடின் என்றும் கூறினான். “ஒன்றாத் தமரினும் 2” என்ற சூத்திரத்து உரையில் இதனைக் காட்டி, இது வேந்தற்கு உற்றுழிப் பிரிந்தோன் தான் குறித்த பருவத்து வினை முடியாமையின் புலம்பியது என்பர் நச்சினார்க் கினியர். (3) 444. பெருந்தோண் மடவரற் காண்குவெந் தில்ல நீண்மதி லரணம் பாய்ந்தெனத் தொடிபிளந்து வைந்நுதி மழுகிய தடங்கோட் டியானை வென்வேல் வேந்தன் பகைதணிந் தின்னுந் தன்னாட்டு முன்னுதல் பெறினே. இதுவுமது. உரை : நீண்ட மதிலாகிய அரணினைத் தாக்கியதனால், தொடி யுடைந்து கூரிய நுனி மழுங்கிய பெரிய கொம்புகளையுடைய யானையையும் வென்றி தரும் வேலையு முடைய வேந்தன், பகையிடத்துச் செய்யும் வினை முடிந்த இப்பொழுதேனும் தன் நாட்டிற்குச் சேறலை நினைப்பானாயின், பெரிய தோள்களை யுடைய மடவரலைக் காண்போம் என்றவாறு. தோள் பெருத்திருத்தல் மகளிர்க்கு இலக்கண மாதலின் பெருந்தோள் மடவரல் என்றார். தொடி, யானை மருப்பிற் கிட்ட பூண். செய்தென என்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. அரணைத் தாக்கிக் கதவிற் பாய்ந்து கோடுமுறிதலும் நுதி மழுகுதலும், யானைகளின் மறமிகுதி உணர்த்தின. “கடிமதிற் கதவம் பாய்தலின் தொடிபிளந்து, நுதிமுக மழுகிய மண்ணை வெண்கோட்டுச், சிறுகண் யானை 1” என்றார் பிறரும். பகை: பகையிடத்துச் செய்யும் போர்வினைமேல் நிற்றலின் ஆகுபெயர். உம்மை, இறந்தது தழீஇயது. தணிந்த என்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது. வேந்தன் முன்னுதல் பெறின், காண்குவெம் என இயையும். தில், விழைவின்கண் வந்தது. மேற்கொண்ட வினையது முடிவின்கண், தான் குறித்த பருவவரவும் காதலியின் காதல்நினைவும் எழுந்து உள்ளத்தில் வேட்கை மிகுவித்தலின், பெருந்தோள் மடவரல் காண்கு வெம் தில்ல என்றும், வினைமுற்றிய திறத்தை நீண்மதி லரணம் என்றும், வேந்தன் என்றும், பகையும் தணிந்த தென்பான் பகை தணிந்த இன்னும் என்றும், இனியும் தன் நாட்டுக்கு மீளுதலை நினையாது போர்வேட்கை வேந்தன் உள்ளத்தில் மிக்கிருப்பது தோன்ற முன்னுதல் பெறின் என்றும், பெற்றாலன்றித் தான் அவனின் நீங்கிச் சேறல் துணைமையறம் அன்றாதலின், பெறின் என்றும் கூறினான். (4) 445. புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத் துறந்துவந் தனையே யருந்தொழிற் கட்டூர் நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை உள்ளுதொறுங் கலிழு நெஞ்சம் வல்லே யெம்மையும் வரவிழைத் தனையே. இது, பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவவரவின்கண் தலைமகளை நினைந்து நெஞ்சொடு புலந்து சொல்லியது. உரை : புறத்தோராகிய பகைவர் உட்புகுந்து வினை செய்தற்கரிய தொழில் அமைந்த பாசறைக்கண் ஆமானினம் தமக்குரிய நல்ல ஏற்றினைத் தழுவிச் செல்லும் மாலைப்போதினை நினைக்குந்தோறும் நெக்குருகும் நெஞ்சமே, புகழமைந்த சிறப்பினையுடைய காதலியாவாள் தனிமையுற்று வருந்தப் பிரிந்து போந்தனை; அதுவேயன்றி என்னையும் விரைந்து இவண் போதரச் செய்தனை யாகலின், இப்பொழுது வருந்துவது என்னை? என்றவாறு. புகழ்சால் சிறப்பாவது, வாழுமூர் கற்பால் தன்னைப் புகழ்வது. கட்டூர், பாசறை. பாசறையிடத்தும் பகைவர் புகுந்து வினைசெய்ப வாகலின், அவர் அது செய்தற்காகாவாறு அமைத்த பாசறையை அருந்தொழிற் கட்டூர் என்றார்; “அருந்திறல் அளப் பருங் கட்டூர் 1” “வேறுபுலத் திறுத்த கட்டூர் 2” என்று பிறரும் கூறினர். உம்மை: காதல்மிகுதி யுணர்த்தினமையின், சிறப்பு. நாகு: பெண்மைப் பெயர். வாளாது கூறினமையின், சிறப்புடைய ஆனினம் கொள்ளப்பட்டன; “நல்லேறு நாகுடன் நின்றன, பல்லா னினநிரை 3” என்ப வாகலின், நல்லேறு நாகு தழீஇப் பெயரும் காலம் கார்கால மென அறிக. அம்சதேவரும் இதுவே கூறுவர். மனையறத்துக் குரிய மாண்பெல்லாம் கொண்டு கற்பால் யாவரும் பரவும் பொற்புடைப் புகழ் நிறைந்தமை பற்றிப் புகழ்சால் சிறப்பு என்றும், அதற்குக் காரணம் அவளது உழுவலன்பின் வழிவந்த பெருங்காத லாதலின், காதலி என்றும், மனையின்கண் தனித்திருந்து வருந்த அவளது காதன்மையை நினையாது வினை மேற்கொண்ட உள்ளத்தால் பிரிந்து வந்தமை விளங்கத் துறந்து வந்தனையே என்றும், நல்லேறு நாகு தழீஇப் பெயரும் காட்சி வினைமுடித்துப் பாசறைக்கண் இருக்கும் தலைமகன் உள்ளத்தில் அவன்காதலியை நினைப்பித்துத் துயர் செய்தலின், நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை என்றும், அதனை உள்ளுதொறும் நெஞ்சம் கலிழும் என்றும் கூறினான். மனையாளது ஆற்றாமைக்கு அஞ்சி ஒழுகுவோன் “வினை யாண்மை வீறு எய்தல் இன்று 4” என்பது காட்டி, வினைவயிற் பிரிவை வற்புறுத்திப் பாசறை யிருப்புக்குத் தான் வருதற்குத் தூண்டிய நெஞ்சினை, வல்லே எம்மையும் வர விழைத் தனையே என்று கூறினான். இது பகைவயிற் பிரிந்தோன் பருவங்கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பியது என்பர் நச்சினார்க்கினியர். 5 446. முல்லை நாறுங் கூந்தல் கமழ்கொள நல்ல காண்குவ மாஅ யோயே பாசறை யருந்தொழி லுதவிநங் காத னன்னாட்டுப் போதரும் பொழுதே. இது, பாசறைக்கண் இருந்த தலைமகன் பருவவரவின்கண் உருவுவெளிப்பாடு கண்டு சொல்லியது. உரை : மாமைநிறத்தை யுடையோய், பாசறை யிடத்தே யிருந்து வேந்தற்குச் செய்தற்குரிய அரிய வினைகளைச் செய்து முற்றி, நம் அன்புடைய நல்ல நாட்டுக்குப் பெயர்ந்து செல்லும் காலமாகிய மழை மிக்க கார்ப்பருவம், முல்லையின் மணங் கமழும் கூந்தல் விரைகொள்ளுமாறு நல்லவாய்த் தோன்று கின்றனகாண் என்றவாறு. உதவிப் போதரும்பொழுது கமழ்கொள நல்ல காண்குவ என முடிக்க. கற்புக்குச் சிறந்தமை பற்றி முல்லைப்பூ எடுத்தோதப் பட்டது. கற்புடை மகளிரின் கூந்தல் முல்லையின் நறுமணம் கமழும் என்பது பற்றி இவ்வாறு முதற்கண் கூறினார் என்றலு மொன்று. மாயோய், மாமை நிறத்தை யுடைவளே. பாசறை யிடத்தே இருந்த வேந்தர் தாம் மேற்கொண்ட வினைக்கூறுகளை ஆராய்பவாதலின், வினைசெய்தற்கு உரிய சூழ்ச்சியும் பகை வரால் விலக்க லாகாத செயல்வகைகளும் ஈண்டு அருந்தொழில் எனப்பட்டன. இப்பாட்டுடைத் தலைமகன் வேந்தர்க்கு உறு துணையாக வந்தவன் என்பது அறிக. தான் குறித்த பருவம் வரக் கண்ட தலைவன் உள்ளத்தில் தலைவியது நினைவு பெருகி யெழுதலும், அவளது உருவெளிப் பட்டுத் தோன்றக்கண்டு தன்னை மறந்து அதனொடு உரை யாடுவானாய், மாஅயோயே என்றும், தன் காதலியுடன் கலந்து உரையாடிக் களித்து மகிழும் அன்பு சிறக்கும் நாடாகலின், காதல் நன்னாடு என்றும் கூறினான். மழை பெய்யின், பாசறை யிடத்துச் செய்யப்படும் வினை முடியாமையின், பாசறை யருந்தொழில் உதவி என்றதற்குப் பாசறைக்கண் பெய்தவழிச் செய்தற்கு அரிதாகும் வினையினைப் பெய்யாமையால் முடித்தற் குதவி என்று கூறினுமாம். கற்புக்குரிய முல்லையின் மணம் இயல்பாகவே பெற்றவ ளாகலின், முல்லை நாறுங் கூந்தல் என்றும், இனியும் கார்ப்பருவத்தே மலரும் பான்மைத்தாய முல்லைமலர்களை யணிந்து அம் மணம் மிகுவாள் என்பான், கமழ் கொள என்றும் கூறினான். “ஒன்றாத் தமரினும் 1” என்ற சூத்திரவுரையில், வேந்தற் குற்றுழிப் பிரிந்தோன் பருவவரவின்கண் உருவு வெளிப்பட்டுழிப் புலம்பியது; உதவி யென்றலின் வேந்தற்கு உற்றுழி யாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். (6) 447. பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை ஆடு சிறைவண் டவிழ்ப்பப் பாடல் சான்ற காண்கம் வாணுதலே. இது, வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் அவண் வினை முற்றி மீளும் வேட்கையனாய்ப் பருவவரவின்கண் தலைமகளை நினைத்துச் சொல்லியது. உரை : பனியால் வளரும் செம்முல்லையின், சிச்சிலிப் பறவையது வாய்போற் சிவந்த அரும்புகள், அசைகின்ற சிறகுகளை யுடைய வண்டினம் மலர்த்த மலர்ந்து, அவை தேனுண்டு பாடுதற்கு அமைந்தன; அது கார்ப்பருவ நிகழ்ச்சி யாதல் குறித்து நாம் நம் காதலியின் ஒளி பொருந்திய நுதலைக் காண்டற்கு விரும்புவே மாயினேம் ஆகலான், வினையாற் பிணிப்புண்டு நிற்கும் வேந்தன், உள்ளம் வினைமுற்றி விரைய மீளுதலைச் செய்வானாக என்றவாறு. பிணி என்றதற் கேற்ப வீடு பெறுக எனப்பட்டது. தொழில் பிணி வீடுபெறுதல், வினைமேற் சென்ற உள்ளம் அதனை முடித்து விரைய மீளுதல் என்றவாறு. பிணியென்பதற்கு முன்னர்க் கூறி னாம். தளவின் முகை சிரலின் வாய் போறல், “சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப, ஈர்ந்தண் தளவம் தகைந்தன 2” என்பதனாலும் அறிக. தளவின் மலர்ச்சி கார்ப்பருவ வரவுணர்த்தக் கண்டான், இது தான் வருவல் எனத் தலைமகட்குக் குறித்துப் போந்த பருவ மாகலானும், தன் சொல் தேறி யிருப்பவள் வரவு தாழ்த்தவிடத்து ஆற்றாது நுதல் பசந்து வேறுபடுவள் என அஞ்சுகின்றா னாகலானும், காண்கம் வாணுதலே என்றும், எனினும், வினை முற்றாதவழி மீளுதல் வினைவலோர்க்கு உடன்பாடு அன்மையின், பிணிவீடு பெறுக மன்னவன் தொழிலே என்றும் கூறினான். இவ்வாற்றால் இத் தலைமகன் வினைவலபாங்கன் என்பது உணர்க. (7) 448. தழங்குகுரன் முரசங் காலை யியம்பக் கடுஞ்சின வேந்தன் றொழிலெதிர்ந் தனனே மெல்லவன் மருங்கின் முல்லை பூப்பப் பொங்குபெயற் கனைதுளி காரெதிர்ந் தன்றே அஞ்சி லோதியை யுள்ளுதொறும் துஞ்சா தலமர னாமெதிர்ந் தனமே. இது, வேந்தற் குற்றுழிப் பிரிந்த தலைமகன் பருவம் வந்த விடத்தினும் மீளப்பெறாது அரசன் செய்தியும் தன் செய்தியும் கூறி ஆற்றானாயது. உரை : முழங்குகின்ற ஓசையினையுடைய முரசங்கள் காலையில் ஒலித்து அப் பொழுதினை யுணர்த்த, மிக்க சினம் பொருந்திய வேந்தன் வினைமுடித்தலைத் தொடங்கினான்; மெல்லிய பள்ளங்களின் அருகே படர்ந்த முல்லைக்கொடிகள் மலர, மிக்கெழுந்த மழை ஒலிக்கின்ற பெயலைச் செய்து கார்ப் பருவம் தொடங்காநின்றது; அவ்வாற்றால், விரைவில் வினை முடித்துக் கார்வரவில் காதலியொடு கூடி இனிதிருத்தல் கூடு மெனும் மகிழ்ச்சியால் அழகிய சிலவாகிய கூந்தலை யுடை யாளை நினைக்குந்தோறும், நாம் கண்படை கொள்ளாது வினைமேலும் காதலியின் காதல்மேலும் கருத்தைப் போக்கி அலமருதலைக் கொள்வேமாயினேம் என்றவாறு. அரசர் இருக்குமிடங்களில், அவர் பள்ளி யெழுங்காலை முரசு இயம்பப்படுதல் அக்கால வழக்காதலின், தழங்குகுரன் முரசம் காலை இயம்ப என்றார். பாசறைக்கண் தங்கிய வழியும் அஃது உண்டென்பது, “பருந்துபறக் கல்லாப் பார்வற் பாசறைப், படுகண் முரசம் காலை இயம்ப 1” என்பதனால் அறிக. ஆழ மின்மையின், மெல்லவல் எனப்பட்டன. பகைவரோடு வினைசெய்கின்றபொழுது, அவர்மாட்டுக் கண்ணோடாது செய்ய வேண்டுதலின், கடுஞ்சின வேந்தன் என்றும், கார்காலம் வினைசெய்தற்கு வாய்ப்புடைய தன்மையின் தொழில் எதிர்ந்தனனே யென்றும், தான் குறித்த பருவவரவு நோக்கித் தலைமகள் ஆற்றாளெனக் கருதி இனைந்தவன் வேந்தன் செய்தி கண்டு உவகை மிகுதலின், துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே யென்றும் கூறினான். இதனால் தலைமகன்பால் கண்டுயின் மறுத்தல் என்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. “ஒன்றாத் தமரினும்” என்ற சூத்திரவுரையில் “இது வேந்தற் குற்றுழிப் பிரிந்தோன் பருவம் வந்துழி மீளப்பெறாது அரசன் செய்தியும் பருவத்தின் செய்தியும் தன் செய்தியும் கூறிப் புலம் பியது” என்பர் நச்சினார்க்கினியர். (8) 449. முரம்புகண் ணுடையத் திரியுந் திகிரியொடு பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே ஒண்ணுதற் காண்குவம் வேந்துவினை விடினே. இது, பாசறைக்கண் வேந்தனோடு வினைப்பொருட்டாற் போந்திருந்த தலைமகன், அவ்வேந்தன் மாற்றுவேந்தர் தருதிறை கொண்டு மீள்வானாகப் பொருந்துழி, தானும் மீட்சிக்குத் தேர் சமைத்த எல்லைக்கண்ணே, அவ்வரசன் பொருத்தம் தவிர்ந்து மீண்டும் வினைமேற்கொண்டானாகச் சொல்லியது. உரை : முரம்புகள் நிறைந்த மேட்டு நிலங்கள் இடம் கெடும்வகை உருண்டு செல்லும் உருளையுடன், பந்திக்கண் நிற்றலை வெறுத்த வலியினையுடைய குதிரைகள் பூட்டித் திண்ணி தாய்த் தேரும் சமைக்கப்பெற்றுளது ! வேந்தன்தானும் வினை தவிர்வானாயின், ஒள்ளிய நுதலினையுடையாளை நாம் சென்றய்திக் காணலாம் என்றவாறு. எச்சவும்மை வருவிக்கப்பட்டது. சென்று எய்தி யென்பன அவாய்நிலையான் வந்தன. திண்ணிதின் மாண்டன்று தேர் என்றதனால், வேந்தன் மீளக் கருதினமையும், அதற்குக் காரண மாகிய மாற்றரசர் தரும் திறைகோடற்குப் பொருந் தினமையும், வினைவிடினே என்றதனால் அவ்வேந்தன் பொருத்தம் தவிர்ந் தமையும் பெறப்பட்டன. முரம்பு, பரல் நிறைந்த கரம்புநிலம்; “முரம்புதலை மணந்த நிரம்பா வியவின் 1” என்றும், “முரம்புகண் ணுடைய ஏகி 2” என்றும் வருதலால் உணர்க. பணை, குதிரைப் பந்தி. வலிமிகுதியாற் செலவே விரும்புகின்றமையின் குதிரைகள் பணைநிலையை வெறுப்ப வாயின; “பணைநிலை முனைஇய வினைநவில் புரவி 3” என்றும், “பணைநிலை முனைஇய பல் லுளைப் புரவி 4” என்றும் சான்றோர் கூறுவர். ஒண்ணுதல்: அன்மொழித்தொகை. வினைமுடித்து மீளுதற்கு வேந்தன் சமைந் தமையின், தேர்கள் செவ்வையாகப் பண்ணப்பட்டமையான், மாண்டன்று தேரே என்றும், மீளுதற்கண் குதிரைகள் மிக விரைந்த செலவினவாம் ஆதலின், அதனால், நிலை தளராமை நோக்கித் தேர்கள் பழுது பார்த்துச் செவ்விதின் அமைக்கப் பெற்றமை தோன்றத் திண்ணிதின் மாண்டன்று என்றும், அந்நிலையில் தன் காதலியின் மகிழ்ந்த முகத்தை விரைவிற் காண்டல் கூடும் என்று எழுந்த உள்ளக் கிளர்ச்சி, வேந்தன், மீளவும் வினைமேற்கொள்ளக் கருதினமை யறிந்து வாடுதலின், வேந்து வினைவிடின் ஒண்ணுதல் காண்குவம் என்றும் கூறினான். இது வேந்தன் திறைகொண்டு மீள்வுழித் தானும் சமைந்த தேரை அமைத்துக்கொண்டு திண்ணிதின் மாண்டன்று தேர் எனப் பாகனொடு கூறியவழி, அவ்வேந்தன் திறை வாங்காது வினை மேற் சென்றானாகப் பாகனை நோக்கிக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். (9) 450. முரசுமா றிரட்டு மருந்தொழில் பகைதணிந்து நாடுமுன் னியரோ பீடுகெழு வேந்தன் வெய்ய வுயிர்க்குநோய் தணியச் செய்யோ ளிளமுலைப் படீஇயரெங் கண்ணே. இது, வேந்தற் குற்றுழிப் பிரிந்த தலைமகன் வினைமுற்றா மையின் பாசறைக்கண் இருந்து தன் மனக்கருத்து உரைத்தது. பழைய உரை : மாறு இரட்டும் என்றது, மாற்றார் முரசொலிக்கு மாறுபட்டெழும் என்றவாறு. உரை : பெருமை பொருந்திய வேந்தன், முரசங்கள் மாறுபட் டொலிக்கும் விலக்குதற் கரிய போர்த்தொழிலைச் செய்தற்கு ஏதுவாகிய பகை முடித்துத் தன் நாடு நோக்கி மீளக் கருதுவா னாக; அதனால், என் கண்கள், குறித்த பருவவரவு நோக்கி ஆற்றாவாய் வெய்துயிர்த்து வருந்தும் என் நோய் தீர்வான், செய்யாளாகிய அவள் இளமை பொருந்திய மார்பிடைக் கூடி உறக்கம் எய்துக என்றவாறு. மாறுபட்டொலித்தலாவது, மாற்று வேந்தர் தானையிடை யெழும் முரசொலிக்கு எதிராக, அடல் குறித்த வேந்தன் தானை யிடை முரசம் எடுத்தும் படுத்தும் கோட்டியும் ஒலித்தல். அருந்தொழில், பகைவரால் விலக்க முடியாத போர்த்தொழில். பகை, பகைமை காரணமாக எழும் சினத் தீ. உயிர்க்கும் என்னும் பெயரெச்சம் காரணப்பெயர் கொண்டது. உயிர்த்தற் கேதுவாய காமநோய் என விரியும். வெய்துயிர்த்தல் கூறவே, வாய்வெரு வுதல் முதலாயின அடங்கின. கற்புடை மகளிர்க்குப் பொதுவாக வுள்ள செம்மை, இப்பொழுதிற் சிறப்பாக விளங்குமாறு தோன்றச் செய்யோள் என்றார். “செறிவும் நிறையும் செம்மையும் செப்பும், அறிவும் அருமையும் பெண்பா லான 1” என ஆசிரியர் கூறுவது காண்க. பாசறைக்கண் இருந்து பருவவரவு கண்டு தலைவியை நினைக்கும் உள்ளத்தில் வினை முடியாமை தோன்றி நோய் விளைத்த தாயினும், வினையே ஆடவர்க்கு உயிராதலின் வினை முற்றியல்லது மீளாத வேந்தனது வினையாண்மையை வியந்து கூறலின், பீடுகெழு வேந்தன் என்றும், போர்வினையிற் கலந்து அதனை ஆற்றும், வேந்தர் தத்தமக்குரிய முரசினை மாற்றார் முரசுக்கு எதிராக முழக்குப வாதலின், முரசு மாறு இரட்டும் அருந்தொழில் என்றும், பகை தணிந்தாலல்லது போர் அறுதல் இல்லாமை பற்றிப் பகைதணிந்து என்றும், எதிர்த்த வேந்தனது பகை தணியக் கண்டு பிறரும் பணிந்து திறை பகராது மாறு படுவரேல், போர்வினை நீளுமாதலின், அவரும் அது செய்க எனவும், அது கொண்டு வேந்தன் தன் நாட்டிற்கு மீள்வானாக எனவும் விழையுமாறு தோன்ற, நாடு முன்னியரோ என்றும், குறித்த பருவம் வந்தும், காதலன் வந்திலாமை எண்ணியும் அதுவே பற்றுக்கோடாகத் தன்கண் ணெழுந்த வேட்கை மிக்கும் வருந்தும் தலைவியது வருத்தத்தை வெய்ய வுயிர்க்கும் நோய் என்றும், தன் சொல்வழி இருக்கும் அவளது கற்புநலத்தை வியந்து செய்யோள் என்றும், தனது ஆராக்காதல் மிகுதி தோன்ற, இளமுலைப் படீஇயர் என் கண் என்றும் கூறினான். (10) 46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து இது தலைமகள் ஆற்றியிருக்குமாறு தலைமகன் தெளி விப்பான் குறித்துச் சென்ற பருவம் எய்தினமை கண்டு, தலைமகள் தன்னோடும் தோழியரோடும் நிகழ்த்தும் கூற்றுப் பொருளாக வந்த பாட்டின் தொகுதி யாகலின், இப்பத்து இப்பெயர்த்தா யிற்று. 451. கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்திற் றவிர்குதல் யாவது மாற்றருங் தானை நோக்கி ஆற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே. இது, வேந்தர்க்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் குறித்த பருவம் நினைந்து ஆற்றியிருந்த தலைமகள் அப் பருவவரவின் கண் பாசறை யினின்றும் வந்தார், அரசன் செய்தி கூறக் கேட்டு ஆற்றாளாய்ச் சொல்லியது. உரை : நாம் ஈண்டுச் செயலற்று வருந்தப் பிரிந்த நம் தலைவர், தாம் குறித்த கார்ப்பருவம் எய்தினமையால், தேரேறி நம் மனைக்கண் விருந்தாய்ப் போந்து தங்குதல் யாங்ஙனம் கூடும்? பகைவரால் தொலைத்தற்கரிய தானையின் இருப்பு நோக்கிப் பாசறையிடத்தே பெரிதும் இருத்தல் வேந்தனது செயல் ஆயினமையின் என்றவாறு. எனவே, யான் எங்ஙனம் ஆற்று வேன்? என்பதாம். கார்கால நிகழ்ச்சிகட்கு உரிய காலம், கார்செய் காலை எனப்பட்டது; “ஆர்பெயல் உதவிய கார்செய் காலை 1” என்றாற் போல. ஒடுவுருபு ஆனுருபின் பொருட்டு; இஃது உருபுமயக்கம். உடம்புதரு பணியில் விதுப்புற் றிருக்கும் உடம்புக்குக் கார்காலம் மிக்க வாய்ப்பாதலின் உயிருணர்வைத் தன்னடிப்படுத்தித் தன்வழியே நினைவு மிகுவித்து மயக்குதலால், அறிவொடு பட்ட செயல் அறுதலின், காதலர் பிரிவை, கையறப் பிரிந்தோர் என்றார். தவிர்தல், தங்குதல், சின்னாள் தங்கிச் செல்லும் இயல்பு தோன்றத் தேர்தரு விருந்து என்றார். மாற்றுதல், தொலைத்தல்; மாற்றருந் தானை யென்றது, பகைவரால் அறைபோகப்படாத தானை யென்றுமாம். பெரிதும் இருத்த லாவது, கார்ப்பருவம் வந்தும் பாசறை யிருப்பை மேலும் சின்னாள் மேற்கொண் டிருத்தல். மாற்றருந் தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே என்றது, பாசறையி னின்றும் வந்தார் கூற்றைக் கொண்டெடுத்து மொழிந்தது. இருத்தல், வினைமேற் செல்லும் அரசர்க்குரிய அறுவகைத் தொழில்களுள் ஒன்று. அவை, நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல், இருத்தல், பிரித்தல், கூட்டல் என்பன. யாம் என்பது முதலாயின குறிப் பெச்சம். பிரிந்த காதலன் வற்புறுத்திய பொழுது எய்தக் கண்டு அவன் வாராமையால் ஆற்றாமை மிகுதலின், கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் என்றும், கார்ப்பருவம் போர்வினைக்கு ஆகாமையின், அக்காலையில் பிரிந்த தலைமகன் மீண்டு போந்து மனைக்கண் தங்கிப் போர்வினைக்குரிய பருவவரவில் பிரிதல் அமையும் என உழையர் கூறினார்க்கு, அஃது ஆகாது என்பதுபட, தேர்தரு விருந்தின் தவிர்குதல் யாவது என்றும் கூறினாள். கார் வரவால் செய்வினை இடையீடுபடக் கண்டு வேந்தன் மீள்வா னாயின், பாசறை யிருக்கும் தானை முரணவிந்து மாறுதலும் கூடுமாகலின், அது நோக்கி வேந்தன் மீளக் கருதிற்றிலன் என் பாள், மாற்றருந் தானை நோக்கி என்றும், வினை முடியுங் காறும் இருத்தலை வேந்தன் துணிந்துளான் என்பாள், ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழில் என்றும், எனவே, இக் கார்ப் பருவத்தின்கண் யான் எங்ஙனம் ஆற்றுவேன் என்றும் கூறி னாள். யான் எங்ஙனம் ஆற்றுவேன் என்பது குறிப்பெச்சம். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமை. (1) 452. வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக் கறங்குர லெழிலி கார்செய் தன்றே பகைவெங் காதலர் திறைதரு முயற்சி மென்றோ ளாய்கவின் மறையப் பொன்புனை பீரத் தலர்செய் தன்றே. இது, குறித்த பருவத்து வாராது தலைமகன் பகைமேல் முயல் கின்ற முயற்சி கேட்ட தலைமகள் கூறியது. உரை : கோடையால் நீரின்றி யுலர்ந்த நிலம் அது பெற்றுச் செழுமை யெய்துமாறு முழங்குகின்ற ஓசையினையுடைய மேகம், மழையைப் பெய்து கார்காலத்தைச் செய்வதாயிற்று; அது தாம் குறித்த பருவமென்று கருதாது பகைதணி வினையை விரும்பிய காதலர், பகை யொழிந்து பணிந்து அவர் தரும் திறை பெறுதற்கு முயலும் முயற்சி, என் மென்றோளின் அழகிய நலம் ஒழியுமாறு பொன்னிறம் கொண்ட பீர்க்கம் பூப்போற் பசலை யெய்துவித்தது என்றவாறு. குறித்த பருவம் வந்தெய்தியவழியும் தலைமகன் வாராமை யானும், வாராமைக் கேதுவாய முயற்சி கேட்டமையானும் ஆற்றே னாயினேன் என்பதாம். வறந்த: வறம் என்னும் சொல்லடி யாகப் பிறந்த பெயரெச்சம்; “நீரற வறந்த நிரம்பா நீளிடை 1” எனப் பிறரும் வழங்குதல் காண்க. கோடையால் நீரின்றி வாடிய உயிரினம் தளிர்த்துச் செழுமை யுறுமாறு கார்மழை நீரைப் பெய்தலின், வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி என்றார்; “உயிர் தளிர்ப்பத் தீண்டலால் 2” என்றாற் போல. கறங்குகுரல் என்பது கறங்குரல் என விகாரமாறிற்று; “தழங்குரல் மயிர்க்கண் முரசு 3” என்றாற் போல. கார்செய்தலாவது, கார்காலத்து மழையைப் பெய்தல். செற்றார்பால் வெம்மையும், நட்டார்பால் தண்மையும் உடைமை தலைமக்கள் இயல்பாதலின், பகைவெங் காதலர் எனத் தலைமகனைக் குறித்தார். திறைதரு முயற்சியாவது, “ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று உரைஇ, இடுக திறையே புர வெதிர்ந் தோற்கென, அம்புடை வலத்தர் உயர்ந்தோர் 1” பரவுவது. பீர்க்கம்பூ பொன்னிறத்த தாதலின், பசலைக்கு உவமை யாயிற்று; “பெருநல் ஆய்கவின் ஒரீஇச் சிறுபீர், வீயேர் வண்ணங் கொண்டன்று கொல்லோ..... பானாட் கங்குலும் பகலும், ஆனாது அழுவோள் ஆய்சிறு நுதலே 2” எனச் சான்றோர் கூறுவது காண்க. கார்ப்பருவ வரவில் காதலர் வருவரென ஆற்றியிருந்தாள், அரசன் திறைதரு முயற்சி கேட்டலும், ஆற்றாது பசந்தா ளாகலின், முயற்சி மென்றோள் ஆய்கவின் மறைய, பீரத் தலர்செய் தன்று என்றாள். இது பசலைபாய்தல். நீரின்மையான் வருந்திய ஞாலத்துக்கு எழிலி கார்செய்து தளிர்க்கச் செய்ததாக, காதலரது திறைதரு முயற்சி, அவரது கூட்ட மின்மையான் வருந்திக் கையற் றிருக்கும் நமக்கு அக் கையறவின் மேலும் ஆய்நலம் கெட்டுப் பசந்தொழியச் செய்வதாயிற்று என்பாள், எழிலி கார்செய் தன்று என எடுத்தோதினாள். (2) 453. அவறொறுந் தேரை தெவிட்ட மிசைதொறும் வெங்குரற் புள்ளின மொலிப்ப வுதுக்காண் கார்தொடங் கின்றாற் காலை யதனால் நீர்தொடங் கினவா ணெடுங்கணவர் தேர்தொடங் கின்றா னம்வயி னானே. இது, பருவங் கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. பழைய உரை : தேர் தொடங்கின்றால் என்பது, தேர் வரத் தொடங்குதல் இல்லையாயிற்று என்றவாறு. உரை : நீர் நின்ற பள்ளங்கள்தோறும் தேரைகள் ஓசையிடக் குன்றிடந்தோறும் வெவ்விய குரலையுடைய பறவைகள் ஒலியினைச் செய்ய, காலம் கார்ப்பருவமாதல் தொடங்கிற்று; அதனைக் காண்பாயாக. அதனால், இப் பருவவரவில் வருவல் எனக் குறித்துச் சென்றவர் வாராமை நோக்கி என் நெடிய கண்கள் நீர்சொரிதலைத் தொடங்கின; மற்று, அவருடைய தேர் நம்மிடம் வருதலைத் தொடங்கிற் றன்றாகலான் என்ற வாறு. இப் பருவவரவில் என்பது முதலாயின வருவிக்கப்பட்டன. வினைமாற்றுப் பொருட்டாய இடைச்சொல் விகாரத்தால் தொக்கது. மழை பெய்தலால் பெருகிய தண்ணீர் பள்ளங்களில் நின்றவழி, ஆண்டு வதியும் தவளைகள் ஒலித்தலின், அவல் தொறுந் தேரை தெவிட்ட என்றார். “பழமழை பொழிந்த புதுநீ ரவல, நாநவில் பல்கிளை கறங்க 1” என்றும், “படுமழை பொழிந்த பயமிகு புறவின், நெடுநீ ரவல பகுவாய்த் தேரை, சிறுபல் லியத்தின் நெடுநெறிக் கறங்க 2” என்றும் பிறரும் கூறுப. தேர் தொடங்கு இன்று என்புழித் தொடங்கு: முதனிலைத் தொழிற்பெயர். “குற்றிய லுகரமும் அற்றென மொழிப 3” என்றதனால் உயிரேறி முடிந்தது. புள்ளினம், மரம், குன்று முதலியவற்றின் மேலிடத்தே கூடு கட்டி வாழும் இயல்பின வாதலின், மிசைதொறும் என்றார். நிலவரைப்பில் காற்றின் அழுத்தம் மிக்கிருத்தலின், புள்ளினம் மிசையிடத்தே கூடமைக் கும் இயல்புடையவாயின என அறிக. அழுத்தம் மிக்க நீர்க்குள் ளிருந்து மேல் வருவோர் கைகால்களை உதைத்துக் கொண் டெழுதல் போலப் புள்ளினமும் நிலவரைப்பினின்று மேனிலை எய்துதற்குச் சிறைகளை அசைத்தெழுந்து ஏகுவது இதற்குப் போதிய சான்று. மேலிடத்தே இருப்பின் காற்றின் அழுத்தத்தை எதிர்த்து நீந்திச் செல்லும் செலவு எளிதாமென்க. தாம் தம் துணையொடு புணர்ந்து, தம்போற் புணராது தனித்தோர்மாட்டு இரங்காது தம் ஓசையால் துன்புறுத்தலே யன்றி, அவர்கட்கு அவர் தம் துணைவர் ஏறிவரும் தேரிற் கட்டிய மணியோசை போல இசைத்துப் பொய்த்தலின், வெங்குரற் புள்ளினம் ஒலிப்ப என்றும், நெடிய வாயினும் பொறுக்கும் ஆற்றல் இல என்பாள், நெடுங்கண் என்றும், குறித்த பருவம் எய்திற்றாகவும் வாராமை அவர்க்கு நன்றன்று என்பாள், அவர் என்றும் கூறினாள். துணையொடு புணர்ந்த புட்கள் பிரிந்தோர் மாட்டு இரங்காது ஒலிக்கு மென்பது, “இருந்தோட்டுப் புள்ளினம், தாம்புணர்ந் தமையின் பிரிந்தோர் உள்ளா, தீங்குர லகவ 1” என்பதனாலும், புள்ளினம் தேரின் மணியோசை போல் ஒலித்தல், “புள்ளொலி கேட்டொறும், தேர்மணித் தெள்ளிசை கொல்லென, ஊர்மடி கங்குலும் துயில்மடிந் ததுவே 2” என்பத னாலும் அறிக. (3) 454. தளவின் பைங்கொடி தழீஇப் பையென நிலவி னன்ன நேரரும்பு பேணிக் கார்நயந் தெய்து முல்லையவர் தேர்நயந் துறையுமென் மாமைக் கவினே. இது, பருவவரவின்கண் தலைமகள் ஆற்றாளாய்த் தோழிக்குச் சொல்லியது. உரை : வெண்முல்லைகள் செம்முல்லையின் பசிய கொடி யினைச் சூழ்ந்து நிலவு போலும் நேரிய அரும்புகளைத் தாங்கிக் கார்ப்பருவம் வந்ததும் நயந்து மெல்ல மலர்தலை எய்தும்; அவ்வாறே என் மாமைக்கவினும் காதலர் ஏறி வரும் தேரை விரும்பியிருந்து, அவர் வரக்கண்டதும் விளங்கும் காண் என்றவாறு. தளவு, செம்முல்லை. முல்லை பைங்கொடி தழீஇ அரும்பு பேணி, கார் நயந்து பையென எய்தும்; மாமைக் கவின் தேர் நயந்து உறையும் என இயையும். மலர்தலை எய்தும் காரெதிர் பொழுதின் கண் என்க. அரும்பு கட்டிக் கார்ப்பருவம் வந்ததும் மலர்தலைச் செய்தலின், அரும்பு பேணிக் கார் நயந்து எய்தும் என்றார். அரும்பும் வெண்ணிறத்த தாதல் பற்றி நிலவின் அன்ன எனப் பட்டது. முல்லை, கார் வரவு நோக்கி அரும்பு பேணி, வந்தவழி மலர்தலை எய்துவது போலக் காதலன் தேர்வரவு நோக்கி யிருக்கும் தன் மாமைக்கவின் வந்ததும் விளங்கித் தோன்றும் என்பாள், அவர் தேர் நயந்து உறையும் என் மாமைக் கவின் என்றாள். தாம் குறித்த பருவம் போந்தமையின், அவரும் தாழாது வருவரெனக் கருதி ஆற்றியிருக்கின்றே னென்பாள், தன் மாமைக் கவின்மேல் வைத்துக் கூறினாள். ஆகவே, அவன் வாராது தாழ்த்தவழித் தான் தன் கவின் வாடி மெலியுமாறு கூறினாளாம்.(4) 455. அரசுபகை தணிய முரசுபடச் சினைஇ ஆர்குர லெழிலி கார்தொடங் கின்றே அளியவோ வளிய தாமே யொளிபசந்து மின்னிழை நெகிழச் சாஅய்த் தொன்னல மிழந்தவென் றடமென் றோளே. இஃது ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. பழைய உரை : அரசு பகை தணிந்து எல்லாரும் மீளும் வண்ணம் கார் வந்தது; இத் தோளுக்குரியவரோ போதரார் என்றவாறு. உரை : அரசர் பகைப்பொருட்டு மேற்கொண்ட போர்வினை தணியவும், முரசங்கள் ஒலி யடங்கவும், மிக்க முழக்கத்தை யுடைய மேகம் மின்னி யிடித்துக் கார்ப்பருவத்தைச் செய்யத் தொடங்கிற்று. அது, தாம் குறித்த பருவமெனக் கருதி அவர் வாராமையின், மேனியொளி குன்றப் பசலை பாய்ந்து, மின்னு கின்ற இழைகள் நெகிழ்ந்து நீங்கும் வண்ணம் மெலிந்து தம் பண்டை அழகினை இழந்த என் பெரிய மெல்லிய தோள்கள் மிகவும் அளிக்கத்தக்கவாயின என்றவாறு. எனவே, அரசர் பகை தணியுமாறு கார்வந்ததே யன்றி என் மென்றோள் மெலிவு கெடுமாறு அவர் வந்திலரென இரங்கிய வாறாம். பகை: ஆகுபெயர். முரசுபட என்பதை உவம மாக்குதலு மொன்று. கார்காலம் போர்வினைக்கு ஏற்றதன்மையின், அரசு பகை தணிய என்றும், போர் முரசும் ஒடுங்குதலால் முரசுபட என்றும் கூறினார். சினைஇ என்பது இடிக்கு இலக்கணை. அடுக்கு, தோளின் மெலிவு மிகுதி யுணர்த்திற்று. கார்ப்பருவ வரவில் மீண்டு வருவதாக வற்புறுத்திச் சென்ற தலைமகன் வருமுன்பே கார்ப்பருவம் வரக் கண்ட தலைமகள் ஆற்றாளாய், வினைவயிற் பிரிந்த வேந்தர் மீளுதற்குரிய கார் காலம் வந்துவிட்ட தென்பாள், அரசு பகை தணிய முரசுபட எழிலி கார்தொடங்கின்று என்றும், இந் நிலையில் வருதற்குரிய தலைமகன் வாராமையின், அவனுக்குரிய என் தோள்கள் வருந்தத் தக்க மெலிவை எய்துவ வாயின என்பாள், அளியவோ அளிய தாமே என்றும், நிறம் கெட்டுப் பசலை எய்திய திறத்தை ஒளி பசந்து எனவும், மெலிந்தொழிந்தமையை மின்னிழை நெகிழச் சாஅய் எனவும், இளமை யழகு கெடுதலைத் தொன் னலம் இழந்த என் தடமென்றோள் எனவும் கூறினாள். தலைமகள் தோள் தலைவற் குரிய தென்பதை, “சாயிறைப் பணைத்தோட் கிழமை தனக்கே மாசின் றாதலும் அறியான் 1” எனச் சான்றோர் கூறுதல் காண்க. ஒளி பசந்து என்றது பசலை பாய்தலும், மின்னிழை நெகிழ என்றது உடம்பு நனி சுருங்குதலு மாம். பெருமையுடையவாயினும் தலைமகன் வினைமுற்றி மீளுங் காறும் ஆற்றகில்லாமையின், மென்றோள் என்றாள். (5) 456. உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப் பகன்மதி யுருவிற் பகன்றை மாமலர் வெண்கொடி யீங்கைப் பைம்புத லணியும் அரும்பனி யளைஇய கூதிர் ஒருங்கிவ ணுறைதல் தெளித்தகன் றோரே. இது, குறித்த பருவம் வரவும் தலைமகன் வந்திலனாக, ஆற்றா ளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. உரை : தோழி, வெண்மையான இதழ்களையும் பகற் போதில் தோன்றும் திங்களைப் போலும் உருவினையுமுடைய பகன்றை யின் பெரிய மலர், வெள்ளிய கொடியாகிய ஈங்கையின் பசிய புதல் அழகுற மலரும், பொறுத்தற்கரிய பனிப்போடு கலந்த கூதிர்ப்பருவத்தின்கண், நம்மோடு கூடி ஒருங்கு வதிதற் கேற்பக் கார்ப்பருவத்தே வருவல் என நம்மைத் தெளிவித்துப் பிரிந்த காதலர் அப்பருவவரவினை நினையார் கொல்லோ, நினை வரேல், வாராதிரார் ஆகலான் என்றவாறு. நினைவரேல் முதலாயின அவாய்நிலையான் வந்தன. பகன்றை, சிவதைக்கொடி “பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி 1” என்பத னுரையில் நச்சினார்க்கினியர், “இது சிவதை; 'பகன்றைப்பூ உற நீண்ட பாசிலைத் தாமரை என்புழி வெள்ளி வட்டில் உவமை கோடலின், இது கிலுகிலுப்பை யன்று” என்று கூறுதலா லறிக. இது பனிக்காலத்து மலர்தலை, “பாண்டி லொப்பின் பகன்றை மலரும், கடும்பனி யற்சிரம் 2” என்று சான்றோர் கூறுதல் காண்க. பகன்றைக்கொடி ஈங்கைப் புதலிற் படர்ந்து மலர்ந்து விளங்குவது பற்றி, வெண்கொடி ஈங்கைப் பைம்புதல் அணியும் என்றார். பைம்புதல் அணியும் கூதிர், அரும்பனி அளைஇய கூதிர் என இயையும். கூதிரைத் தொடர்வது பனிப் பருவ மாயினும் கூதிர்தானும் குளிரைச் செய்யும் பருவ மாகலின், அரும்பனி அளைஇய கூதிர் என்றார். கார்ப்பருவத்தே வந்தாலன்றிக் கூதிர்க்கண் ஒருங்கு வதிதல் கூடாமையின், கூதிர் ஒருங்கிவண் உறைதல் தெளித்த கன்றோரே என்றும், ஈங்கை மலர்தலால் கார்ப்பருவம் வரக் கண்டவள் அவன் வாராமை யறிந்து, உள்ளார் கொல்லோ என்றும் கூறினாள். கூதிர்க்காலத்தே மலர்தற் குரிய பகன்றை கார்ப்பருவத்தே மலர்ந்து ஈங்கைப்புதலை அணிசெய்ய, நம் காதலர் வருதற்குரிய கார்ப்பருவம் வந்தும், தாம் வந்து நலன் தாராராயின், இது தாம் குறித்த பருவ மென்பதை அறவே மறந்தாரேயாவர் என்றவாறு. ஆகவே, யான் ஆற்றுமாறு என்னை என்பதாம். “கார்தொடங் கின்றே காலை காதலர், வெஞ்சின வேந்தன் வியன்பெரும் பாசறை, வென்றி வேட்கையொடு நம்மு முள்ளார், யாதுசெய் வாங்கொல் தோழி 1” எனப் பிறாண்டும் தலைவி வருந்துமாறு காண்க. (6) 457. பெய்பனி நலிய வுய்தல் செல்லாது குருகினம் நரலும் பிரிவருங் காலைத் துறந்தமை கல்லார் காதலர் மறந்தமை கல்லாதென் மடங்கெழு நெஞ்சே. இது, பருவவரவின்கண் ஆற்றுவிக்கும் தோழிக்குத் தலை மகள் சொல்லியது. உரை : பெய்கின்ற பனி வருத்துதலால் உய்யுமா றின்றிப் புள்ளினம் ஒருங்கு கூடி யொலிக்கும் பிரிதற்கரிய கார்ப் பருவத்தே, நம்மைப் பிரிந்துறைதல் ஆற்றாராயினும், என் மடம் பொருந்திய நெஞ்சம், அவரை மறந்து சிறிதுபோதும் அமையாதாகலின் யான் செய்யுமாறு என்னை என்றவாறு. பெய்பனி: வினைத்தொகை. தொகைச் சொல்லாற் கூறியது, தனக்குரிய கால மெய்தியவழித் தவறாது பெய்யும் தொழிற் பண்பை உணர்த்தற்கு. உய்தல் செல்லாது ஒருசொல்லாய் உய்யாது என்பதுபட வந்தது, “கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது 2” என்றாற் போல. குருகினம், நாரை, கொக்கு முதலிய நீர்வாழ் பறவைகள். நீரின்கண் வாழும் இயல்பினவாகிய குருகுகளும் பெய்பனிக்கு ஆற்றாது வருந்துகின்றன என்றற்குக் குருகினம் நரலும் என்றார். துறந்து அமைகல்லார் காதலர் என்றது, தோழி கூற்றைக் கொண்டு கூறியது. பெய்பனிக்கு ஆற்றாது குருகினம் நரலும் பிரிவருங் காலை யென்பதைக் காதலர் நன்கு அறிவராகலின், அவர் விரைவில் வந்தெய்துவர்; இப்பனிப்பருவத்தில் நின்னைப் பிரிந்து சிறிது போதும் இருத்தல் வல்லுநரல்லர் என்றற்கு, பிரிவரு காலைத் துறந்து அமைகல்லார் காதலர் எனத் தோழி கூறினாளாக, நின் சொல்வழி யான் தேறியிருந்தே னாயினும், என் நெஞ்சம் இருத்தற் குரிய திண்மை யிழந்து அவரை நினைந்த வண்ணம் உளது என்பாள், மறந்து அமைகல்லாது என் மடங்கெழு நெஞ்சு என்றும், தாம் குறித்த பருவம் வந்துழியும் காதலர் வாராமையின் நம்மை மறந்தனர் என்று கொண்டு அதனைத் தோழி வற்புறுத்த வழியும், விடாமையின் மடங்கெழு நெஞ்சு என்றும் கூறினாள் எனக் கொள்க. (7) 458. துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழ மூழ்த்தன அதிர்பெயற் கெதிரிய சிதர்கொள் தண்மலர் பாணர் பெருமகன் பிரிந்தென மாணல மிழந்தவென் கண்போன் றனவே. இது, பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் வரவு பார்த்திருந்த தலைமகள் பருவமுதிர்ச்சி கூறி ஆற்றாளா யுரைத்தது. பழைய உரை : சிதர்கொள் தண்மலர் என்றது, சிந்துதல் கொண்ட தண்ணிய கொன்றைப்பூ என்றவாறு. சிதர் - சிந்துதல். உரை : குலைபொருந்திய காய்களையுடைய கொன்றையின், மகளிர் குழல் போலும் பழங்கள் முற்றின; முழங்கிப் பெய்கின்ற மழைக்கு உதிர்ந்த அதன் தண்ணிய மலர்கள், பாணர்கட்கு அவர் வேண்டும் பொருள்களை வழங்கும் பெரு மகனாகிய நம் காதலன் பிரிந்தானாக, அவன்பொருட்டு மாட்சிமையுற்ற அழகிழந்து பசந்த என் கண்களைப் போல் பொன்னிறம் கொண்டு தோன்றின என்றவாறு. கொன்றையின் பழம் ஊழ்த்தலும் அதன் மலர்கள் உதிர் தலும் கூறியது கார்ப்பருவ முதிர்ச்சி யுணர்த்தற்கு. கொன்றைப் பழம் குழல்போறலை, “வீயும் வியப்புறவின் வீழ்துளியான் மாக்கடுக்கை, நீயும் பிறரொடுங்காண் நீடாதே - ஆயுங், கழ லாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க், குழலாகிக் கோல்சுரியாய்க் கூர்ந்து, 1” என்று பிறரும் கூறினர். “வென்றி மழ விடை யூர்ந்தார்க் குரியள் இக் கொன்றையம் பூங்குழலாள் 2” என்றார் பிறரும். இதற்கு உரை கண்ட அடியார்க்கு நல்லார், “கொன்றைப் பழக் குழற் கோதையர் என்றார் வளையா பதி யினும்” என்பர். பூத்த மரம் காய்த்துப் பழுக்குமிடத்துப் பூக்கள் உதிர்தல் இயல்பாயினும், கார்காலத்து மிகுபெயலால் விரைய உதிர்ந்தமை தோன்ற, அதிர்பெயற் கெதிரிய சிதர்கொள் தண்மலர் என்றார். சிதர், வண்டுமாம். உதிர்ந்த பூப் பொன்னிறம் விளர்த்துத் தோன்றலின், பசலையுற்ற கண்ணுக்கு உவம மாயிற்று. “கொன்றைப் பூவின் பசந்த வுண்கண் 1” என்ப. பாணர் பெருமகன், பாணர்களைப் புரக்கும் தலைவன்; “அகவுநர் பெருமகன் 2” “சான்றோர் பெருமகன் 3” என்பன காண்க. காதலன் குறித்த கார்ப்பருவம் வந்தும் அவன் வாரானாக, ஆற்றாமை மிக்க தலைமகள், வருவலென்ற கார்ப்பருவம் வந்து கழியும் செவ்வி எய்துவது கண்டு வருந்துகின்றா ளாகலின், துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன என்றும், கார்காலத்திற் பெய்யும் கனவிய மழைக்கு ஆற்றாது கொன்றைப்பூ உதிர்தலின், அதிர்பெயற் கெதிரிய சிதர்கொள் தண்மலர் என்றும், மழையால் நனைந்து நிறம் விளர்த்துத் தோன்றும் பூ, பண்டைய அழகிழந்து பசந்து விளங்கும் கண்களை ஒத்தல் பற்றி, மாணலம் இழந்த என் கண்போன்றனவே என்றும் கூறினாள். வண்டு பாடக் கொன்றை பூவைச் சொரிதல், பாடி வரும் பாணர்க்குப் பொன் வழங்கும் தலைமகனை நினைப்பித்தலின், அவனைப் பாணர் பெருமகன் என்றாள். இஃது அழிவில் கூட்டத்து அவன் பிரிவாற்றாமையும் பசலை பாய்தலுமாம். (8) 459. மெல்லிறைப் பணைத்தோள் பசலை தீரப் புல்லவு மியைவது கொல்லோ புல்லார் ஆரரண் கடந்த சீர்கெழு தானை வெல்போர் வேந்தனொடு சென்ற நல்வய லூரன் நறுந்தண் மார்பே. இது, “வேந்தன் வினைமுற்றினான்; நின் காதலர் கடுக வருவர்” எனக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. உரை : பகைவருடைய கடத்தற் கரிய அரண்களைக் கடந்த மறமாண்பு அமைந்த தானையினையுடைய வெல்லுகின்ற போரைச் செய்யும் வேந்தனுடன் வினைவல பாங்கனாய்ச் சென்ற, நல்ல நன்செய் நிலங்களையுடைய ஊரனது நறுவிய தண்ணிய மார்பு, மெல்லிய தொடி யணிந்த பெரிய தோள் களால் பசலை தீருமாறு யாம் தழுவுதற்கு அமையுமோ, அன்றி அமையாது விரிந்து விளங்குமோ? என்றவாறு. இறை, ஆகுபெயர். பணை, மூங்கிலுமாம். சீர், அடற்ற கையும், ஆற்றலும், படைத்தகையும் உடைமையால் எய்தும் மறப் புகழ். தலைமகனாதலின் வேந்தனுக்கு வினைவல பாங்கனாய்ச் சென்றான் என்பது அவாய்நிலையான் வந்தது. வினைமேற் சென்ற வேந்தன் அதனை முடித்தனன் என்றும், அதனால் தலைமகன் வரற்கு அமைந்தான் என்றும் அறிந்துளா ளாகலின், வேந்தனொடு சென்ற நல்வயலூரன் என்றும், தலைமகன் வரவு கேட்டு எய்திய உவகை மிகுதியால் புல்லுதல் நினைந்து ஐயுற்று மெலிதலின், புல்லவும் இயைவது கொல்லோ என்றும் கூறினாள். இஃது ஐயம் செய்தல். 460. பெருஞ்சின வேந்தனும் பாசறை முனியான் இருங்கல் வெற்பன் றூதுந் தோன்றா ததையிலை வாழை முழுமுத லசைய இன்னா வாடையு மலைக்கும் என்னா குவென்கொ லளியென் யானே. இது, வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகனைப் பருவ முதிர்ச்சியினும் வரக் காணாது தலைமகள் சொல்லியது. உரை : மிக்க சினத்தையுடைய வேந்தன்தானும் பாசறைக்கண் தங்குதலை வெறானாயினன்; அதனாற் பெரிய கற்கள் பொருந் திய மலைநிலத் தலைவனாகிய நம் காதலனிடத் திருந்து தூதுகளும் வாராவாயின; இவற்றிற் கிடையே நெருங்கிய இலைகளையுடைய வாழைமரத்தின் அடிமுதல் உச்சிவரை அசையும்வண்ணம் துன்பத்தைச் செய்யும் வாடைக்காற்றுப் போந்து வருத்தாநிற்கும்: ஆகலின், அளிக்கத் தக்க யான் என்னாகுவேன் கொல்லோ? அறியேன் என்றவாறு. பாசறை இருப்புக்கு மிக்க சினம் காரணமாகலின், பெருஞ் சின வேந்தன் என்றார். பெருமை, மிகுதிப் பொருட்டு; “பெரும்பொருளாற் பெட்டக்க தாகி 1” என்றாற் போல. கார்காலத்தில் பாசறை இருக்கை இன்பம் பயவாதாகலின், முனிதல் கூறப்பட்டது. வினைமுற்றும் செவ்வியை நெருங்கு தலின், தூது வாராதாயிற் றென்க. வேந்தனும் முனியான்; தூதும் தோன்றா; வாடையும் அலைக்கும்; ஆகவே என்னாகுவென் கொல், அளியேன் என இயையும். தாவரநூல் முறைப்படி வாழை, மரமெனற் காகாதாயினும், அடிப்பட்டு வந்த வழக்குப்பற்றி மரமென்றாம். வினை முடியாமையின் பாசறைக்கண் தங்கி அதனை முடித்தலே பொருளாகக் கருதினா னாகலின், வேந்தன் பாசறை முனியான் என்றும், போரிடைப் பகைவர்மாட்டுக் கண்ணோடாது வினைசெய்தல் வேண்டுதலின், பெருஞ்சின வேந்தன் என்றும், அவ் வேந்தனது தானை நோக்கி யிருத்தலின், வெற்பன் தூதும் தோன்றா என்றும், கார்ப்பருவம் முதிர்ந்து பனிப்பினைச் செய்து வருத்துதலின், இன்னா வாடையும் அலைக்கும் என்றும் கூறினாள். “நிலைமக்கள் சால வுடைத்தெனினும் தானை, தலைமக்கள் இல்வழி யில் 2” என்ப வாகலின், தானை நோக்கி யிருத்தல் இன்றியமையாதாயிற்று. இன்னா வாடை யென்றாள், காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல் கலந்து வருதலின். தூது தோன்றாமையானும், வாடை அலைத்தலானும் ஆற்றாளா யினமை தோன்ற அளியென் யானே யென்றாள். உம்மை ஆற்றும் வாயிலாம் சிறப்புணர நின்றது. (10) 47. தோழி வற்புறுத்த பத்து இது, தலைமகன் பிரிந்தவழியும், பிரிந்து நீட்டியவழியும், அவன் குறித்த பருவவரவின்கண்ணும் ஆற்றாளாய் வேறுபட்ட தலைமகளைப் பருவம் அன்மையும், தலைமகன் அன்புடைமை யும், பிற தகுவனவும் கூறித் தோழி வன்புறை வகையால் ஆற்று விக்கும் பாட்டுக்களின் தொகுதியாகலின் இப்பெயர்த்தாயிற்று. 461. வான்பிசிர்க் கருவியிற் பிடவுமுகை தகைய கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே இனையல் வாழி தோழி யெனைய தூஉம் நிற்றுறந் தமைகுவ ரல்லர் வெற்றி வேந்தன் பாசறை யோரே. இது, பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வரவு கூறி, “உரைத்த பருவம் வந்த தாகலான் அவர் வருவர்” என வற்புறீஇயது. பழைய உரை : கான் பிசிர் கற்ப என்றது, மழை பெய்திட்டால் மரம் பெய்யும் என்னும் முறைமைபற்றிக் கூறியவாறு. உரை : தோழி, மேகம் மழையைப் பெய்தலால் தொகுதியினை யுடைய பிடவங்கள் அரும்பரும்ப, கானம் அம் மழையினை யேற்றுத் துளியைச் சிந்தாநிற்பக் கார்ப்பருவம் தொடங்குவ தாயிற்று. வென்றியினையுடைய வேந்தனது பாசறைக்கண் தங்கும் காதலர் அது தாம் வருவல் எனக் குறித்த பருவ மாகலின், சிறிதும் நின்னைப் பிரிந்திருத்தலை அமையாது கடுக வருவ ராகலின், நீ வருந்தற்க என்றவாறு. பிசிர்கற்ப என்பது ஒரு சொல்லாய்ச் சிந்தாநிற்ப என்னும் பொருள் தந்து நின்றது. பிசிர், மழையினது நுண்ணிய துளி. கருவி, தொகுதி. பிடவு, முல்லை வகையுள் ஒன்று; மரமுமாம். இது கொத்துக்கொத்தாக மலர்வது பற்றிக் கருவியின் பிடவு முகை தகைய என்றார். “தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவு 1” என வருதல் காண்க. பிடவு, பிடா எனவும் வழங்கும்; “யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும் 2” என ஆசிரியர் கூறுவது காண்க. தகை, அழகு. மலர்ந்து அழகு செய்ய என்னும் பொரு ளில் ஈண்டுத் தகைய என்றதனால், இது தகை யென்னும் பெயரடியாகப் பிறந்த வினையெச்சம் எனக் கொள்க. பிசிர் கற்றலாவது, மழை பெய்த பின்னர், மரங்கள் தாங்கி நிற்கும் மழைநீரைத் துளித்தல். “பெயல் உலந் தெழுந்த பொங்கல் வெண்மழை, அகலிரு விசும்பில் துவலை கற்ப 1” என்று பிறரும் கூறுவது காண்க. கார் தொடங்கின்று; ஆகலின், பாசறையோர் அமைகுவரல்லர், இனையல் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க. கடுக வருவ ராகலின் என்பன முதலாயின குறிப்பெச்சம். கான் பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே என எடுத்து மொழிந்தாள், அது தலைமகன் பிரிவின்கண் வற்புறுத்திய பொழுதாகலின். பிறரும், “துனைதரு தண்கார் வருதும் யாம் எனத் தேற்றிய பருவம் காண்அது பாயின்றால் மழையே 2” என்பது காண்க. பிரிந்த காதலர் நின்னொடு பொருந்துதலை எஞ்ஞான்றும் நினைந்தொழுகும் நீர்மையர் என்றற்கு, எனையதூஉம் நிற்றுறந்து அமைகுவரல்லர் என்றாள்; பிறாண்டும், “ஆண்டுஅமைந்து உறையுந ரல்லர்நின் பூண்தாங் காகம் பொருந்துதல் மறந்தே 3” எனத் தோழி வற்புறுத்துமாறு அறிக. வெற்றி வேந்தன் எனவே, வினைமுற்றுதல் ஒருதலை என்பது பெற்றாம். வேந்தன் வினைமுடித்தமையும், கார்ப்பருவம் தொடங்கினமையும், தலைமகன் கடுக வருதற் கேதுவாயினமை பெற்றாம். (1) 462. ஏதில பெய்ம்மழை காரென மயங்கிய பேதையங் கொன்றைக் கோதைநிலை நோக்கி எவனினி மடந்தைநின் கலிழ்வே நின்வயின் தகையெழில் வாட்டுந ரல்லர் முகையவிழ் புறவி னாடிறந் தோரே. இது, பருவம் கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி பருவம் அன்றென வற்புறீ இயது. உரை : மடந்தாய், அரும்புகள் மலரும் முல்லைக்காட்டினை யுடைய நாட்டினைக் கடந்து சென்ற காதலர், நின்னிடத்து உளதாய மேம்பட்ட அழகினைக் கெடச் செய்யும் பான்மைய ரல்ல ராகலின், இயைபில்லனவாய மழையைப் பெய்யும் மேகத்தைக் கார்ப்பருவத் தெழும் மேகமெனப் பிறழக் கொண்ட அறியாமையால் மலர்ந்த கொன்றையின் கோதை போலும் பூக்கள் நின்ற நிலையை நோக்கி, இப்பொழுது வருந்தும் நின் துயரம் என்ன பயனைச் செய்யுமோ? கூறுக என்றவாறு. பெய்தற்குரிய கார்காலமாகிய ஏது இல்லையாகவும் பெய் கிறது இம்மழை என்பது தோன்ற ஏதில பெய்ம் மழை என்றார்; “மின்னுவர, வானேர்பு இரங்கு மொன்றோ அதன்எதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும், ஏதில கலந்த இரண்டற்குஎன் பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே 1” என்றார் பிறரும். பேதையங் கொன்றை என்றது, விரிக்கும்வழி விரித்தல். தகையெழில், “தகை வனப்பு 2” என்றாற் போல மிக்க அழகு என்பதுபட நின்றது. நாடு இறந்தோர் தகையெழில் வாட்டுந ரல்லர்; ஆகலின், இனி நின் கலிழ்வு எவன் என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க. கொன்றை கோதைபோல் மலர்தலைப் பிறாண்டும், “குறும்பல் கோதை கொன்றை மலர 3” என்று கூறினார். கோதை, பூமாலை. பெய்தற் கேதுவாகிய கார்ப்பருவ மழையன்று என்று உரைக்கின்றாளாகலின், ஏதில பெய்ம்மழை யென்றும், அதனை ஏதுவாகக் கொண்டு, காரெனக் கருதிக் கொன்றை மலர்ந்தது அறிவுடைமையன்றெனப் பழித்தலின், காரென மயங்கிய பேதையங் கொன்றை என்றும், பேதையின் செயல் நோக்கிக் கலுழ்தல் பயனில் செயல் என்பாள். எவன் இனி மடந்தை நின் கலிழ்வே என்றும், இனி என்றதனால் இதுகாறும் அறிவு அறைபோகாது அவர் தெளித்த சொல் தேறி யிருந்த நீ இப்போழ்து கலிழ்தல் நன்றன்று என்றும், நாடு கடந்து சென்றா ராயினும், நின் மாட்டுப் பெருங்காதலர் என்பாள், தகையெழில் வாட்டுநர் அல்லர் என்றும் கூறினாள். நாடு இறந்தா ராயினும் நின்பாற் பேரன்பின ராகலின், நின் நலம்கெட ஆண்டே தங்குவா ரல்லர். நீ வருந்தற்க என்பாள், தகையெழில் வாட்டுநர் அல்லர் என்றாள் என்றுமாம். “அகன்றன ராயினும் பெரும்பே ரன்பினர் தோழி 1” எனத் தோழி கூறுவது காண்க. வற்புறுத்தும் தோழி மலர்ந்து தோன்றும் கொன்றை முதலியவற்றிற்குப் பேதைமை ஊட்டிக் கூறுதலை ஏனைச் சான்றோரும், “மடந்தை மதியின்று, மறந்து கடன்முகந்த கமஞ்சூன் மாமழை, பொறுத்தல் செல்லா திறுத்த வண்பெயல், காரென் றயர்ந்த வுள்ளமொடு தேர்வில், பிடவுங் கொன்றையுங் கோடலும், மடவ வாகலின் மலர்ந்தன பலவே 2” “மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை, கல்பிறங் கத்தம் சென்றோர் கூறிய, பருவம் வாரா வளவை நெரிதரக், கொம்புசேர் கொடியிண ரூழ்த்த, வம்ப மாரியைக் காரென மதித்தே 3” என்றும் கூறுப. முகையவிழ் புறவின் நாடு என்றது, கார்ப்பருவ வரவை அவர்க்கு அப்புறவே மலர்ந்து காட்டித் தாழாது விரைந்து மீளச் செய்யு மாகலின் நீ வருந்துதல் ஒழிக என வற்புறுத்தியவாறு. (2) 463. புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின் நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய வாரா தமையலோ விலரே நேரார் நாடுபடு நன்கலந் தரீஇயர் நீடினர் தோழிநங் காத லோரே. இது, குறித்த பருவம் வரவும் தலைமகன் தாழ்த்துழித் தோழி காரணம் கூறி வற்புறீஇயது. உரை : தோழி, புதர்களின்மேலே மலர்ந்து தோன்றும் நறிய மலர்களை அழகுறத் தொடுத்து நின் வனப்பு மிக்க கூந்தல் அழகு கொள்ளப் புனைந்து மகிழ்வான், நம் காதலர் வாரா தமைதலை ஒருகாலும் செய்யார்; ஆயினும், பகைவர் நாட்டின் கட் பெறப்படும் சீரிய பொருள்களைக் கொணர்தற் பொருட்டுத் தாழ்த்தனர்காண் என்றவாறு. தொடர்புபடத் தொடுத்தலைத் தொடரி என்றார்; “மனை விளக் குறுத்து மாலை தொடரி 4” என்றாற்போல. காதலர் என்றதற் கேற்பக் கவின்பெறத் தொடரி என்றும், “தகை கொளப் புனைய” என்றும் கூறினாள். தலைமகன் பிரிந்தவழித் தலைமகள் தன் கூந்தலிற் பூச்சூடி ஒப்பனை செய்துகோடல் கற்புநெறி யன்மையின், தகைகொளப் புனைய என்றார். பிறாண்டும், நின் காதலர் விரைந்து வந்தன ராகலின், “தொடிதோள் இவர்க எவ்வமும் தீர்க, நெறியிருங் கதுப்பின் கோதையும் புனைக 1” எனத் தோழி கூறுதல் காண்க. நன்கல மெனவே, நினக்கு நலம்செய்யும் பொருள்கள் என்றாளுமாம். நன்கலமாவன; பகைவர் தரும் திறைப்பொருளும், அவர்தம் நாட்டினை நலமுறுவித்தலால் எய்தும் பொருளுமாம். பகைவர்நாடுகளை வென்று, அவர் தரும் திறைப்பொருள் பெறுதலே யன்றி, அந்நாடுகளைத் தமவாக்கி, அவற்றின்கண் ஆக்கம் மிகுமாறு தங்கி ஆவன புரிந்து பொருள் வரும் வாரி பெருக்குதல் அரசநீதி யாகலின், நேரார் நாடுபடு நன்கலம் தரீஇயர் நீடினர் என்றாள். “மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய, முல்லை முதலாச் சொல்லிய முறையால், பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும், இழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவே 2” என்று விதித்தும், “நனிபுகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்து, பனிவார் சிமையக் கானம் போகி, அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி, யாண்டுபல கழிய வேண்டு புலத் திறுத்து, மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில் 3” என்று கூறியும் சான்றோர் காட்டுதல் உணர்க. நன்கலம் தருதற்பொருட்டுச் சிறிது நீடின ராயினும், நின் நன்னலம் மறவாத நெஞ்சின ராகலின் விரைந்து வருவர் என்பாள், வாராது அமையலோ விலர் என்றாள். “காடிறந் தகன்றோர் நீடின ராயினும், வல்லே வருவர் போலும்...... மாவின், தளிரே ராகம் தகைபெற முகைந்த, அணங்குடை வனமுலைத் தாயநின், சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே 4” என்று பிறரும் கூறுவது காண்க (3) 464. கண்ணெக் கருவிளை மலரப் பொன்னென இவர்கொடிப் பீர மிரும்புதன் மலரும் அற்சிர மறக்குந ரல்லர்நின் நற்றோண் மருவரற் குலமரு வோரே. இது, வரைந்த அணுமைக்கண்ணே பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வந்துழி, இதனை மறந்தார் என்ற தலைமகட்குத் தோழி, “வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாகலான் மறத்தல் கூடா” தெனச் சொல்லி வற்புறீஇயது. உரை : தோழி, வரைதற்கு முன்பு, நின்னுடைய நல்ல தோள் களைக் கூடுதல் கருதிப் பல்லாற்றானும் துயருழந்து வருந் தினா ராகலின், கருவிளைகள் கண்போல் மலரவும், அருகுள்ள வற்றைப் பற்றிப் படரும் பீர்க்குத் தான் படர்ந்த பெரிய புதலின்கண் பொன்போல் மலரவும் எய்தும் பனிக் காலத்தே நின்னை மறந்துறைவா ரல்லர் என்றவாறு. கருவிளை, கருங்காக்கணம்பூ. இது மகளிர் கண்போன் மலர்தலை, “காதலர்ப் பிரிந்த கையறு மகளிர், நீர்வார் கண்ணிற் கருவிளை மலர 1” என்பதனாலும், பீர்க்குப் பொன்போல் மலர்தல், “புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப், பொன்போற் பீரமொடு புதற்புதல் மலர 2” என்பதனாலும் அறிக. பீர்க்கம்பூ மகளிர் பசலை போறல், “புதலிவர் பீரி னெதிர்மலர் கடுப்பப், பசலை பாய்ந்த நுதலே னாகி 3” என்று சான்றோர் கூறுதலால் அறியப்படும். உலமரல், அலமரல் போல்வதோர் உரிச்சொல்; “ஊறில் வழிகளும் பயில வழங்குநர், நீடின் றாக இழுக்குவர் அதனால், உலமரல் வருத்தம் உறுதும் 4” “உலமரல் உயவுநோய்க்கு உய்யுமா றுரைத்துச்செல் 5” என்று சான்றோர் வழங்குதல் அறிக. மருவரல், கூடுதல். தலைமகள் தலைமகனைப் பிரிந்து கையற்று வருந்துவத னாலும், மேனி பசலை பாய்ந்திருத்தலாலும் இவையிரண் டனையும் உடன் கூறினாள். பல்லாறாவன, களவின்கண் இரவினும் பகலினும் குறிவழி யொழுகலும், இடையீடுபடு தலும், சேட்படுக்கப்படுதலும் முதலாயின. மறப்பவராயின் இத்துணை இடையீடுகளையும் தாங்கி நின்னை மணப்பா ரல்லர்; ஆகவே, அவர் நின்பாற் பிரிவருங் காதல ரென்பாள், நற்றோள் மருவரற்கு உலமருவோரே என்றும், அப்பெற்றியார் இது தாம் குறித்த பருவமென்று மறவாதே விரைய வருவரென்றற்கு, அற்சிரம் மறக்குந ரல்லர் என்றும் கூறினாள். 465. நீரிகு வன்ன நிமிர்பரி நெடுந்தேர் கார்செய் கானம் பிற்படக் கடைஇ மயங்குமல ரகல நீயினிது முயங்க வருவர் வாழி தோழி செருவெங் குரிசில் தணிந்தனன் பகையே. இது, பருவம் கண்டு வேறுபட்ட தலைமகளை, வேந்தன் வினைமுடித்தா னெனக் கேட்ட தோழி, வருவரென வற்புறீஇயது. பழைய உரை : நீரிகுவன்ன நிமிர்பரி என்றது, நீரோட்டம் போல உயர்ந்தசைந்து செல்லும் செலவினையுடைய மா என்றவாறு. உரை : தோழி, நீர் விழுதலை யொத்த மிக்க செலவினை யுடைய நெடிய தேரைக் கார்ப்பருவம் தொடங்கிய காடுகள் பிற்படு மாறு முற்படச் செலுத்திக் கூடுதற்குரிய அகன்ற மார்பினை நீ நன்கு முயங்குமாறு நம் காதலர் வருவர், போரை விரும்பும் அரசனும் பகை தணித்தற்குக் கொண்ட வினை முற்றின னாகலான் என்றவாறு. தொழிலுவமம் தேரினது செலவின் விரைவுச்சிறப்பு உணர நின்றது; “குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக 1” என்றார் பிறரும். கார்ப்பருவத்தே மலரும் மலர்களாலும், மழைத்துளியை யேற்றுச் சிந்துதலாலும் கார்ப்பருவ வரவினை இனிது காட்டு தலின், கார்செய் கானம் எனப்பட்டது. மயங்கு: முதனிலைத் தொழிற்பெயர். அஃது இப் பொருட்டாதல், “நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும், கலந்த மயக்க முலக மாகலின் 2” என்பத னாலும் அறிக. மயங்குமலர் அகலம் என்பதற்கு மாலை யணிந்து விளங்கும் மார்பு என்றும் கூறுவர். செருவெங் குருசில் என்றது வேந்தனை; “பகைவெங் காதலர் 3” என்றாற்போல. வீரராயினார் போரே விரும்பும் பான்மைய ராகலின், செருவெங் குரிசில் என்றார். “போரெனிற் புகலும் புனைகழல் மறவர் 1” என்றும், “மண்டமர் நசையொடு கண்படை பெறாது2” என்றும் கூறினர் பிறரும். குரிசில் பகை தணிந்தமையாலும், தாம் குறித்த பருவம் வந்தெய்தினமையாலும், காதலர் விரைய வருவரென்பாள், வருவர் வாழி தோழி என்றும், தலைமகற்கு எய்தும் இன்பத்தை நீ இனிது முயங்க என்றும் கூறினாள். (5) 466. வேந்துவிடு விழுத்தொழி லெய்தி யேந்துகோட் டண்ணல் யானை யரசுவிடுத் தினியே எண்ணிய நாளகம் வருதல் பெண்ணியல் காமரு சுடர்நுதல் விளங்கும் தேமொழி யரிவை தெளிந்திசின் யானே. இது, பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளை, அவர் போன காரியம் இடையூறின்றி முடித்து வருதல் பல்லாற்றானும் தெளிந்தேன் எனத் தோழி சொல்லி ஆற்றுவித்தது. உரை : பெண்மைக்குரிய இயல்பு, அழகிய ஒளி பொருந்திய நெற்றியிடத்தே விளங்கும் இனிய மொழிகளை யுடைய அரிவையே, பெருவேந்தர் பொருட்டுச் செல்வதாகிய விழுமிய தூதினை மேற்கொண்டு சென்று முடித்து, உயர்ந்த கொம்புகளை யுடைய பெரிய யானை மிக்க அவ்வரசர்பால் விடைபெற்றுக் கொண்டு நமக்குக் குறித்த பருவத்தே தாழாது (அவர்) வருதலை இப் பொழுது பல்லாற்றானும் அறிந்தேன்; ஆகலின், நீ ஆற்றியிருப் பாயாக என்றவாறு. “வேந்துவிடு தொழிலொடு சென்றனன் 3” என்றாற் போலாது, வேந்துவிடு விழுத்தொழில் என்றது, உயர் தொழிலாகிய தூதின்மேல் நின்றது; “வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப 4” என்று பிறரும் குறிப்பது காண்க. வேந்து என்றது, அரசர் இனத்துக்குரிய பண்புகொள் பெயராய் விழுத்தொழி லாகிய தூதினைச் சிறப்பித்து நின்றது. அரசு என்றது, தூது வினையால் சந்து செய்விக்கப்பட்ட வேந்தர் மேலதாயிற்று. விடுத்தலாவது, ஈண்டு வேந்தர்க்கு விடை கொடுக்குமாற்றால் தான் அவர்பால் விடை பெற்று மீளுதல்; “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன 1” என்பதனால், தலைமகன் தூதுபோதல் அமையும் என அறிக. பெண்ணியல் நுதலிடத்தே விளங்கும் அரிவை, தேமொழி அரிவை என இயையும். பெண்ணியல், கண்ணிடனாடல், தோள் இடம் துடித்தல், நுதலொளி சிறத்தல் முதலிய பெண்பாற்குரிய குறிகள். பல்லாறாவன, தலைமக னோடு உடன்சென்று மீண்டோர் கூறுவனவும், நன்னிமித்தமும்: பிறவுமாம். சின், முன்னிலை யசைச்சொல்; “இகுமும் சின்னும்” “ஏனை யிடத்தொடும், தகுநிலை யுடைய என்மனார் புலவர் 2” என்றதனால் தன்மைக்கண் வந்தது. தற்பயன் கருதாது நாட்டின் நல்லரசு கண்ணிய செலவாத லின் தலைவனது தூதிற் பிரிவை வேந்துவிடு விழுத்தொழில் என்றும், அதனை மேற்கொண்டு சென்றவன் இடையூறின்றி இனிது முடித்தமை தெளிந்து கூறலின், எய்தி என்றும், அதனால் அவன் பொன்றாப் புகழும் குன்றாப் பொருளும் பெற்று மீளு தலை, ஏந்து கோட்டு அண்ணல் யானை அரசு விடுத்து என்றும், பிரிவின்கண் தான் குறித்த நாளை மறவாது நினைவிற் கொண்டு அக் காலவெல்லைக்குள் மீள்வன் என்பாள், எண்ணிய நாளகம் வருதல் என்றும், அதனை நின்பால் தோன்றும் சில பெண்மைக்குறிகளால் தெளிந்தேன் என்பாள், பெண்ணியல் காமர் சுடர்நுதல் விளங்கும் என்றும், தெளிந்திசின் யானே என்றும் கூறினாள். காதற் கொழுநற் குளவாகும் நன்மை தீமைகள் மகளிர் மேனிக்கண் தோன்றும் சில குறிகளால் உணரப்படும் என்பது பற்றி, பெண்ணியல் காமர் சுடர்நுதல் விளங்கும் என்றாள். “சென்றோர் புனைநலம் வாட்டுந ரல்லர், மனைவயின் பல்லியும் பாங்கொத் திசைத்தன, நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே 3” என்றும், “இடூஉ வூங்கண் இனிய படூஉம், ......... பொய்யலர் வருவர் வாழி தோழி 4” என்றும் தோழி வற்புறுத்துவது காண்க. (6) 467. புனையிழை நெகிழச் சாஅய் நொந்துநொந் தினையல் வாழியோ இகுளை வினைவயின் சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காது நம்மினும் விரையு மென்ப வெம்முரண் யானை விறற்போர் வேந்தே. இது, தலைமகன் வினைவயிற் பிரிய ஆற்றாளாகிய தலை மகளைத் தோழி வற்புறீஇயது. பழைய உரை : சென்றோர் நீடினர் பெரிது என்றது பெயர்த்துரை. உரை : தோழி, வெவ்விய மாறுபாட்டினை யுடைய யானைப்படை கொண்டு சிறந்த போரைச் செய்யும் வேந்தன் தான் சென்ற விடத்தே நெடிது தங்கினன் என்றேனாக, அவ்விடத்தே தங்காமல் போந்து கூடுதலை நம்மினும் மிக விரைகுவா னாயினன் என உடன்சென்று மீண்டோர் கூறாநிற்ப ராகலின், வினைவயிற் பிரிந்த நம் காதலர் விரைய வாராது மிகவும் தாழ்த்தனர் எனச் சொல்லி அழகுற அணிந்த இழைகள் நெகிழ்ந்து நீங்குமாறு உடம்புநனி சுருங்கி உளம் மிக வருந்தி அழுதலைச் செய்யற்க என்றவாறு. புனையிழை: வினைத்தொகை. அடுக்கு மிகுதிப் பொருட்டு; “சில்செவித் தாகிய கேள்வி நொந்துநொந்து 1” என்றாற் போல. இகுளை, தோழி; “இகுளை கேட்டிசின் காதலந் தோழி 2” என வருதல் காண்க. வேந்து என்றது, தோழியால் வினாவப்பட்டோர் தலைமகனைக் குறித்துரைத்தது; தோழி கூற்றாக்கினும் அமையும். சென்றோர் நீடினர் பெரிதென என்றதை இரண்டிடத்தும் கூட்டி, நீடினர் பெரிதென இனையல் எனவும், நீடினர் பெரிது எனத் தங்காது..... விரியும் என்ப எனவும் உரைக்க. உண்டியிற் சுருங்கி உடம்பு மிக மெலிந்து உறக்கமுமின்றி வருந்தும் தலைமகளது ஆற்றாமையை விதந்து, புனையிழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து, என்றும், பிரிந்தோர் நின் மாண்நலம் விழைந்து மீளுங்கால் அது நின்பால் குன்றியிருக்கு மாயின் பெரிதும் வருந்துவ ராகலின் நீ மெலிதல் கூடா தென் பாள், இனையல் வாழியோ இகுளை என்றும், அவர்க்குத் தாம் மேற்கொண்ட வினையினும் நின் கூட்டமே பொருளாதலின், அதனை விரைந்து முடித்துத் துனைபரி நெடுந்தேர் கடவிக் கடுக வருவாராயினர் என்பாள், நம்மினும் விரையும் என்றும், அதனை உடன்சென்று மீண்டோர் பலரும் கூறுவர் எனப் பிறர்மேல் வைத்தும் கூறினாள். “வினை பொருளாகத் தவிர்விலர் கடை சிவந்து, ஐய அமர்த்த உண்கண்நின், வையேர் வாலெயிறு ஊறிய நீரே 1” எனப் பிறரும் கூறுதல் காண்க. உடன்சென்று மீண்டோர்பால், சென்றோர் நீடினர் பெரிது என்றேனாக, உடனே அவர் என்னை மறுத்துத் தங்காது நம்மினும் விரையும் என்ப என்று தோழி கூறினாள். புனையிழை நெகிழ என்றது உடம்புநனி சுருங்கல், நொந்து நொந்து என்றது அழிவில் கூட்டத்து அவன் பிரி வாற்றாமை. (7) 468. வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக் கார்தொடங் கின்றே காலை யினிநின் நேரிறைப் பணைத்தோட் கார்விருந் தாக வடிமணி நெடுந்தேர் கடைஇ வருவ ரின்றுநங் காத லோரே. இது, பிரிவுநீட ஆற்றாளாய தலைமகட்குத் தோழி பருவம் காட்டி இன்றே வருவரென வற்புறீஇயது. உரை : வரிகளையுடைய தவளைகளும் தேரைகளும் ஒலிசெய்ய, இக்காலைக் கார்ப்பருவம் தொடங்குவதாயிற்று; இது தாம் வருவர் எனக் குறித்த பருவமாகலின், இனி, நம் காதலர், நின்னுடைய நேரிய தொடி யணிந்த பருத்த தோள்கட்குப் பொருந்திய விருந்தாகலை வேண்டி, வடித்த ஓசையினை யுடைய மணி கட்டிய நெடிய தேரைச் செலுத்தி இன்றே வருவர்காண் என்றவாறு. கார்ப்பருவத்தே தேரையும் தவளையும் ஒலித்தல் இயல் பாதல், “அவல்தொறும் தேரை தெவிட்ட 1” எனப் பிறாண்டும் கூறியவாற்றா லறிக. கறங்கல், தெவிட்டல் என்பன ஒருபொருட் கிளவி. நுணல், தவளை. “மணலுள் முழுகி மறைந்து கிடக்கும், நுணலும்தன் வாயால் கெடும் 2” என்பர் முன்றுறையரையனார். காலை, ஈண்டுப் பருவத்தின் மேற்று. ஆர் விருந்து, பெறுதற்கரிய உயர்ந்தோர் விருந்து. வடிமணி, வடித்த ஓசையை யுடைய மணி. ஓசையின் இயல்பு அதனை வெளியிடும் மணிமேல் ஏற்றப்பட்டது. பிரிந்து சென்ற தலைவர் மீண்டு வந்தவழி விருந்து செய்து கோடல் மகளிர்க்கு விதியாகலின் பணைத்தோட் கார விருந் தாக என்றும், அவன் வரவுணர்த்தி மகிழ்வித்தலின், வடிமணி நெடுந்தேர் என்றும், நம்காதலோரே எனப் பின்னர்க் கூறு தலின், இன்று என்றும் கூறினாள். (8) 469. பைந்தினை யுணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடற் றரீஇய வலனேர்பு அங்க ணிருவிசும் பதிர வேறொடு பெயல்தொடங் கின்றே வானம் காண்குவம் வம்மோ பூங்க ணோயே. இது, பிரிவு நீட ஆற்றாளாய தலைமகட்குத் தோழி, “அவரை நமக்குத் தருதற்கு வந்ததுகாண் இப்பருவம்” எனக் காட்டி வற்புறீஇயது. பழைய உரை : அங்கண் இருவிசும்பு அதிர ஏறொடு பெயல் தொடங்கின்றே வானம் என்றது, அவர் தப்பாது வருவரென்பது கூறிற்று. உரை : பூப்போலும் கண்களை யுடையாய், பசிய தினையினின்று உதிர்ந்து உலர்ந்தவற்றைச் செம்பூழ்ப் பறவைகள் கவர்ந்து உண்ணும் புன்செய்நில நாடனைக் கொணர்வான், மழை வலமாக எழுந்து அகன்ற இடத்தையுடைய விசும்பின்கண் இடியேற்றோடு முழங்கிப் பெயலைத் தொடங்கிற் றாகலின், அவர் தப்பாது வருதலைக் காணலாம், வருக என்றவாறு. “பூவென் ஒருபெயர் ஆயியல் பின்றே, ஆவயின் வல் லெழுத்து மிகுதலும் உரித்தே 1” என்புழி உம்மையை எச்சவும்மை யாகக் கோடலால் மெல்லெழுத்து மிகுதலும் உரித்து எனக் கொண்டு அடக்குக. “பூங்க ணாய மூக்க வூங்காள் 2” என்றார் பிறரும். செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. செம்பூழ், காடை யினத்தைச் சேர்ந்ததொரு புள். வன்புலம், முல்லையைச் சார்ந்த புன்செய்நிலப் பகுதி; “வன்புலக் காட்டுநாட் டதுவே 3” என்பதனாலு மறிக. ஞாயிறே யன்றி மழையும் மேருமலையை வலமாக எழுந்து வருதலின், வலன் ஏர்பு என்றார், “பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு, கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலல் எழிலி 4” என்றும், “தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ, மாதிரம் புதைப்ப 5” என்றும் சான்றோர் கூறுதல் காண்க. வானம் பெயல் தொடங்கும் கார்ப்பருவம் அவர் தாம் வருவது குறித்த பருவமாகலின், தரீஇய என்றும், அப்பருவ வரவில் தப்பாது வருவ ரென்பாள், காண்குவம் வம்மோ என்றும் கூறினாள். நடுக்கப் பொருட்டாய உரிச்சொல் முழங்குதல் மேற்று, பூங்கணோயே என்றது, தலைமகள் மழையெழுதல் நோக்கித் தலைமகன் வாராமையால் ஆற்றாளாயினமை யுணர்த்திற்று. வன்புலம் தனக்குரிய கார்ப்பருவ வரவில் தினையை விளைத்துச் செம்பூழ் முதலியவற்றை ஊட்டுதல் போலத் தாமும் அப்பருவவரவில் தாழாது போந்து நமக்கு நலஞ்செய்வாரென உள்ளுறுத்துரைத்தலின், காண்குவம் வம்மோ என்று வாளாது உரைத்தாள். “துனைதரு தண்கார், வருதும் யாம்எனத் தேற்றிய, பருவம் காண்அது பாயின்றால் மழையே 6” எனப் பிறாண்டும் தோழி கூறுதல் காண்க. (9) 470. இருநிலங் குளிர்ப்ப வீசி யல்கலும் அரும்பனி யளைஇய வற்சிரக் காலை உள்ளார் காதல ராயி னொள்ளிழை சிறப்பொடு விளங்கிய காட்சி மறக்க விடுமோநின் மாமைக் கவினே. இது, பருவம் வந்தது கண்டு தாம் குறித்த இதனை மறந்தா ரென வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. உரை : ஒள்ளிய இழையினையுடையாய், மழையின்றி வெம்மை மிக்கிருந்த பெரிய நிலம் குளிருமாறு மழையைப் பெய்து பொறுத்தற்கரிய குளிரை நாளும் கலப்பித்த அற்சிரப் போழ் தின்கண், காதலர் நம்மை நினையாராயின், பெருமையுடன் விளங்குதற் கேதுவாகிய அவர் அறிவுதானும் நின் மாமைக் கவினை மறத்தற்கு விடுமோ விடாதுகாண்? என்றவாறு. குளிர்ப்ப எனவே மழையின்மையால் வெம்மை மிக்கு இருந்தமையும், கார்மழையால் அது தணிந்து குளிர் எழுந் தமையும் பெற்றாம். மிக்க வெம்மையைப் பொறுத்திருந்த நிலம் பனி கலந்த அற்சிரக் காலைக்கு ஆற்றாது என்றற்கு இருநிலம் என்றும், கார்கால இறுதியில் பெய்யும் மழை பனி கலந்து குளிர் செய்யும் இயல்பிற் றாதலின், அரும்பனி அளைஇய அற்சிரம் என்றும் கூறினார். ஆயின் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. காதலர் உள்ளாராயினும், மாமைக்கவின் அவரது காட்சியை மறக்கவிடுமோ என இயையும். ஓகாரம் எதிர்மறை. அரும்பனி யளைஇய அற்சிரக் காலையைக் கூறினாள், அது தலைவன் குறித்த பருவமாகலின். இது தலைமகள் கூற்றினைக் கொண்டுகூறியது. உள்ளாராயின் என்றது மறவாமை யுணர நின்றது. சிறப்பெய்துதற்கு ஏதுவாகிய ஆற்றல் மூன்றனுள், அறிவு சிறந்தமையின், சிறப்பொடு விளங்கிய காட்சி யென்றும், அதுதானும் உள்ளத்தைச் சென்றவிடத்தாற் செல விடாது நன்றின்பால் உய்ப்ப தாகலின், காட்சி மறக்க விடுமோ என்றும், சிறப்பொடு விளங்கும் அவரது அறிவை நின்வயிற் பிணிக்கும் வன்மை நின் அழகிற்கு உண்டென்பாள் நின் மாமைக் கவின் என்றும் கூறினாள். அன்பிலர் கொடியர் என்ற தலை மகட்குத் தோழி, அவர் அன்பும் அறிவும் ஒருங்குடைய ராகலின் தப்பாது, வருவரென வற்புறுத்தியவாறு. (10) 48. பாணன்பத்து பாணர் என்பவர், தமிழகத்தில் தமிழ்மொழியோடு நெருங் கிய தொடர்பு கொண்டு அது வளர உடன் வளர்ந்து அது வீழ உடன்வீழ்ந்து மறைந்து போன பழந்தமிழ்க் குடிகள். இவர்கள் வளம்பெற்று வாழ்ந்த காலம் இத்தொகைநூல் பாட்டுக்கள் தோன்றிய சங்ககாலமாகும். அக்காலத்தே, தமிழ், இயல் இசை கூத்து என மூன்றாய் இயன்ற மூவேந்தர் போல் முழுப்புகழ் எய்தி நின்றது. மூவேந்தரும் குறுநிலத் தலைவரும் ஏனைச் செல்வரும் முத்தமிழையும் தம் நினைவு சொல் செயல் என்ற மூன்றையும் போலப் பேணி வளர்த்தனர். அதனால் இயல்வகை புலவரிடத் தும் இசைவகை பாணரிடத்தும், கூத்துக் கூத்தரிடத்தும் வளர்ந்து வந்தன. புலவர் ஓம்பிய இயற்றமிழை வேந்தரும் பிற செல்வரும் பெரிதும் விரும்பி, புலவர்கட்கு ஊரும் பொருளும் மிகைபட நல்கி மேன்மை செய்தனர். அப்புலவர்களால் தொல்காப்பியம் முதலிய இலக்கண வழக்குநூல்களும், திருக்குறள் முதலிய வாழ்க்கை நூல்களும் தோன்றி வழிவழியாக வழங்கிவருவன வாயின. பாணர்க்கும் கூத்தர்க்கும் வேண்டுவன நல்கிச் சிறப்பித் ததனால் பெருநாரை பெருங்குருகு முதலிய இசைநூல்களும், பரதம் அகத்தியம் முதலிய கூத்துநூல்களும் தோன்றிச் சுமார் 1000 ஆண்டுகட்கு முன்வரை இருந்து பின்னர்ப் பாணர் முதலியோர் பேணுவாரற்று வீழ்ந்தபோதுஉடன்வீழ்ந்து மறைந்தன. தமிழகத்துத் தமிழினத்தவர்க்குள்ள பிறவிப்பண்புகளுள் புதுமை காமுறல் என்பது சிறந்த ஒன்றாகும். தமிழ்த் தலைமகன் இயல்பு கூறுமிடத்து, அவன் “நாளும் புதுவோர் மேவலன் 1” என்று சான்றோர் குறிப்பர். யாவரேனும் புதியவர் வரக் காணி னும் புதுக்கருத்தும் புதுமொழியும் எய்தப் பெறினும் அவர்தம் குணம் செயல்களையோ, அவற்றின் நலந்தீங்கு களையோ முன்னுற நோக்காது வரவேற்று மேற்கொண்டு தழீஇச் செல்வது அப்புதுமைக் காமத்தின் செயற் சிறப்பாகும். பெருநிலப் பகுதியாகிய ஆசிய நாட்டின் கிழக்கில் வாழும் மக்களுள், சீனர், சப்பானியர், சாவகர், அருமணர் (பர்மியர்) என்ற மக்களினத்தைத் போன்றவரே தமிழர்; பண்டை நாளில் மேலை நாட்டவரோடு நெருங்கிய தொடர்பு பெறாது, கீழ்ப்பகுதியில் வாழ்ந்த சீனர் முதலாயினாருடன் தொடர்பு கொண்டு வாழ்ந் திருக்கின்றனர். தமிழ்நாட்டு வழக்காறுகள் பல சீனம் சாவகம் அருமணம் முதலிய நாடுகளில் காணப்படுவதற்குக் காரணம் இதுவேயாகும். என்றாலும், புதுமையால் பெருங்காமம் கொண்டு அதற்குத் தலைதாழ்ந்து மேற்கொண்டொழுகும் மனப்பான்மை தமிழினம் ஒன்றினிடத்தில்தான் சிறந்து காணப்படுகிறது. அதன் விளைவே, இன்று தமிழினம் தாழ்ந்து பிறர்க்குப் பணியாளாம் சிறுமை எய்தி நிற்பதும் சீனரும் சப்பானியரும் வல்லரசுகளாய் வாழ்வதுமாகும். சங்ககாலத்துக்குப் பின்புதான் தமிழினத்தை இந்தப் புதுமைக் காமவெறி பற்றி அலைக்கத் தொடங்கிற்று. புதுமைக்கு முதன்மை யும் தலைமையும் தந்து பேணியதனால், தனக்குரிய தமிழ்க் கருத்துக்களையும் தமிழ்மொழியையும் தமிழினம் புறக்கணிக்கத் தலைப்பட்டது. புதுமைவெறி பற்றி ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகள் கழியினும், இன்னும், “தமிழ்தானே” எனப் புறம் பழிக்கும் புல்லறிவு கற்று வல்ல பெரியோர் முதல் கல்லா இளைஞர் ஈறாக எல்லாருடைய பேச்சிலும் இருந்து வருவது நாடறிந்த உண்மை. “ஆங்கிலம் தானே” என எந்த ஆங்கிலேயனும், “சருமனி தானே” என எந்தச் சருமானியனும், “வங்காளம் தானே” என எந்த வங்காளியும் கூறுதற்கு நாணும் கீழ்மையுரை, கற்ற தமிழன் நாவில் தங்குதடை யின்றித் தவழ்ந்து விளையாடுகிற தென்றால், தமிழினம் கீழ்மக்களினத்திலும் கடைப்பட்ட கீழின மாகி யிருப்பது, இந்தப் புதுமையிற் காமுறும் புன்மைப்பண்பு தந்த பொதுப்பரிசு என்னலாம். சங்ககாலத்துக்கும் பல்லவர் காலத்துக்கும் இடையே வட மொழியும் வடவர் கருத்துக்களும் தமிழகத்தே பெருவாரியாகப் புகத் தலைப்பட்டன. புதுமைக் காமுகரான தமிழர் அவற்றை ஆர்வத்தோடு வரவேற்றனர்; வடவர் கருத்துக்கள் பல தமிழ் வாழ்க்கையில் தகுநிலை பெற்றன. தமிழர் வடமொழியில் பெரும்புலமை எய்தினர். வேத வேதாந்த நூல்வகைகளிலும் வடமொழி வல்ல தமிழ்ச்சான்றோர் செய்தன பல உண்டு. அருத்த சாத்திரம் எழுதிய கௌடிலியரும், நாலந்தா பல்கலைக் கழகத் தில் தலைமை பெற்று விளங்கிய தருமபாலரும், பௌத்த தருக்க ஞானியான திக்கநாகரும், பட்டாசாரியன் மதத்தை நிறுவிய குமரில பட்டரும் பிறரும் தமிழ்நாட்டுத் தமிழினத்துச் சான்றோர் என்பர். பல்லவர் காலத்தும் தமிழகத்தார் வடமொழிக்கும் அதன் பயிற்சிக்குமே முதன்மையும் தலைமையும் தந்து புதுமைவெறிய ராய்ப் பொலிவுற்றனர். பல்லவர்க்குப் பின் வந்த பாண்டியர் சோழர் என்ற தமிழ் வேந்தர் காலத்தும் தமிழ்மக்கள் புதுமைக் காமத்திற் புந்தி சலியாமல், புதுமொழி கட்கும் புதுமொழிக் கருத்துக்கட்கும் அடிமையாகி, “தமிழ் நமது மொழி; அது வழங்கும் நாடு தமது தமிழ்நாடு; அதனைப் பல்லாயிரம் ஆண்டு களாகப் பேசி வரும் பழங்குடிமக்கள் நாம்” என்பதை அறவே மறந்து வாழ்ந்தனர். அதனால், தமிழகத்தின் வடபகுதியில் தெலுங்கும், வடமேற்கு கன்னடமும், மேலைப் பகுதியில் மலையாளமும் துளுவுமாகிய மொழிகளின் தோற்றமும், அவற்றை வழங்கும் மக்களினமும் தமிழினத்தின் புதுமைக்காமம் விளைவித்த பயன் என்பதை நினைவு கொள்ள வேண்டும். தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகிய இம்மொழிகளும் இவற்றைப் பேசும் மக்களும் தமிழும் தமிழினமும் என்பதை நினைந்து ஒழுகி வாழ்வதற்கும் நெஞ்சு இடம் தாராத வகையில் இப்புதுமைக்காமம் தன் தீமைப்பயனை விளைவித்துவிட்டது. வடநாட்டில் முகமதியர் காலத்து வந்த அரபு பாரசிகம் முதலிய புதுமொழியின் வரவும் மக்களிடையே கிளைமொழி பல கிளைத் தற்கு இடம் தந்ததாயினும், அவை தத்தம் முதல்நிலையை மறப்பிக்கும் தீமையை அத்துணை மிகுதியாகச் செய்யவில்லை என்பர். புதுமையிற் காமுறல் என்னும் இத்தீயபண்பு, தெலுங்கரும் கன்னடரும் மலையாளரு மெனத் தமிழினத்தைச் சிதறிப் பிரிந் தேகச் செய்ததோடு நில்லாது, தமிழகத்தின் உள்ளே இருந்து செய்த தீமை மிகவும் பெரிது. இயற்கையோடு ஒன்றி உயர்ந்த இயற் றமிழை ஈடழித்தது; செயற்கை நடையும் அணியும் தோற்று வித்து, இயலை வளர்த்த புலவரினத்தை வறுமைச்சேற்றில் தள்ளி வலியிழக்கச் செய்தது. இசையும் கூத்தும், புதுமை இசையும் புதுமைக்கூத்தும் தழுவ முயன்று, அன்னநடை கற்கப் போய் உள்ளநடையும் இழந்தாற்போலத் தமிழ்க்குரிய பண்ணிசையும் தமிழ்க்கூத்தும் இருந்த இடம் தெரியாமல் கெடச் செய்து கொண்டன. தமிழ்க்கூத்தர் ஆரியக்கூத்து ஆடிப் பார்த்தனர். முடிவில் இசையும் கூத்தும் இறந்தொழிந்தன. அவற்றை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்த கலைவாணரான பாணரும் கூத்தரும் மறைந்தொழிந்தனர். இடைக்காலப் பல்லவ பாண்டிய சோழர் கல்வெட்டுக்களில், பாணரும் கூத்தரும் ஆங்காங்கே மிகச் சிலராய் வாழ்ந்துவந்த குறிப்புக்கள் காணப் படுகின்றன. 1 இசை மறைந்த பின்பு, தமிழ்க்கூத்து மாத்திரம், தமிழ்க்கூத்து ஆரியக்கூத்து எனப் பிரிந்து நின்று வாழ முயன்ற திறத்தைத் திருவொற்றியூர் முதலிய இடங்களிலுள்ள கல் வெட்டுக்கள் காட்டுகின்றன. ஆயினும், தமிழினத்தின் புதுமை மோக வெறி அதனை மீளத் தலைதூக்காத பேரிருட் படுகுழியில் நன்றாகப் புதைத்துவிட்டது. இப்போது முத்தமிழைப் பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு அதனை அறிந்து பயில ஊக்குநரும் இல்லை. புதுமைக்காமத்துக்கு அடிமையாகாது அதனைத் தனக்கு அடிபணிந்து பயன்பட வாழச் செய்த காலம் பண்டைச் சங்க காலம் என்பது முன்பே குறிக்கப்பட்டது. அப்போது புலவரும் பாணரும் கூத்தரும் முத்தமிழையும் முறையே வளர்த்து வந்தனர். இயற்றமிழ் புலவரிடத்தே வளர, இசையும் கூத்தும் பாண ரிடத்தே வழிவழியாக வழங்கி வந்தன. பொதுவாக, மக்கள், உழவு, கைத்தொழில், வாணிகம் ஆகிய தொழில் வகைகளைச் செய்தாராயினும், ஒருசிலர் அரசியற்பணியிலும், ஒருசிலர் சமயப்பணியிலும், ஒருசிலர் கல்விப்பணியிலும், ஒருசிலர் ஓவியம் சிற்பம் முதலிய கலைப்பணியிலும் ஈடுபட்டிருந்தனர். போர்த்துறை யொன்றே எல்லார்க்கும் பொது. போர்க்காலத்தில் படைமறவனாய்ப் பணிபுரிபவன் ஏனைக் காலத்திற் குடிமக னாய்த் தனக்குரிய தொழில் செய்து வாழ்வன். “சீறூர்க், குடியு மன்னும் தானே கொடி எடுத்து, நிறையழிந்து எழுதரு தானைக்குச், சிறையு தானே 2” என்பது காண்க. உலகம் பொன்றினும் பொன்றாது நிற்பது புகழ் என்றும், அது பெறுவதே உலகில் ஒருவன் உடலோடு கூடி வாழ்வதனால், எய்தும் ஊதியம் என்றும் தமிழ்மக்கள் கருதினர். “புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழிஎனின், உலகுடன் பெறினும் கொள்ள லர் 1” என்பர் சான்றோர். இப்புகழைப் பாட்டிடைத் தொடுத்து நிலைபெறுவிப்பது முத்தமிழின் முழுநோக்க மாகும். இயல் வல்ல புலவரும் இசை வல்ல பாணரும் கூத்து வல்ல கூத்தரும் உழவு, தொழில், வாணிகம், போர் முதலியவற்றால் சிறந்தோர் புகழைப் பாடியும் ஆடியும் நிலைபெறுவிப்பர். அதனால் புலவர் முத லாயினார் வாழ்வு, அவராற் புகழப்படும் செல்வர் தரும் கொடை யையே சார்ந்திருந்தது. முத்தமிழ் வாழ்நர் யாவராயினும் அவர் வாழ்வு பிறர்க்குத் தீங்கு செய்வதன்று என்பது பற்றி அவர்க்கு எத்தகைய தடையும் எவரும் எக்காலத்தும் செய்வதில்லை. வேந்தர் தம்மிற் பகைத்துப் படைகொண்டு போர்செய்யு மிடத்தும் இப் பாணரும் புலவரும் தங்குதடை யாதும் இன்றி எங்கும் செல்வர். இது பழந்தமிழ் வாழ்வு; இயல் முதலிய முத்தமிழ்க்கு அளித்திருந்த தனிப்பெருந் தலைமைப் பரிசாகும். ஆனது பற்றியே புலவரும் பாணரும் நாடு முழுதும் சிறப்பெய்தி யிருந்தனர். இயல் முதலிய மூன்றும் சேர்ந்ததே தமிழ். அதனால், புலவரும் பாணரும் கூத்தரும் ஒருவர் ஒருவரின் சுற்றமாய்க் கூடி நாடுகளில் உள்ள செல்வரைச் சென்று கண்டு பரிசில் பெற்று வாழ்ந்தனர். இசைத்துறையில் யாழ், துடி, பறை, முழவு எனப் பலவகைக் கருவிகள் உண்டு. அதனால் அவற்றை இயம்பும் பாணர், பாணர் துடியர் பறையர் முழவர் எனப் பலதிறப்படுவர். கூத்தாடுவோர் கூத்தர் எனப்படுவர். இவர்கட்கு வேறு தொழில் இன்மையின், இவர்கட்கு வேண்டுவன கொடுத்து வாழ்வித்தல் தமிழ்மக்களுள் உடையோர் கடனாகும். அதனைப் பாண் கடன் என்றலும் வழக்கு. “துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று, இந்நான்கு அல்லது குடியு மில்லை 2” என்பதும் இதுபற்றியே சான்றோரால் குறிக்கப்படுகிறது. இதுகொண்டே பாணர்குடி பலதிற மக்களைக் கொண்ட பெருங்குடி என்பதும் இனிது பெறப்படும். உடலோடு கூடிய உயிர்க்கு அன்பும் அருளும் போல, பொருளொடு கூடிய பாட்டுக்கு இசையும் கூத்தும் சிறந்தன வாகும். கண்ணுக்குக் கண்ணோட்டம் போலப் பாட்டுக்குப் பண் இன்றியமையாது என்பர் திருவள்ளுவர். பாட்டிடை எழும் பண், மக்கள் உள்ளத்தில் அன்பும் அருளும் வளர்தற்குப் பெருந் துணையாய் இருத்தலின், பண்ணிசைத்து வாழும் மக்களைப் பாணர் என்று பெயரிட்டுச் சிறப்புறப் பேணி வளர்த்தது பண்டைத் தமிழ்வாழ்வு. பாண்குடி மகளிருள் பாடலும் ஆடலும் வல்லவர் பாடினி, விறலி எனப் பெயர் கூறப்படுவர். இயல்இசைகூத்துக்களில் சிறந்த புலமை பெற்ற பாணர், மன்னர் மதிக்கும் மாண்பும் செல்வமும் பெற்று மேன்மை எய்தினர். ஒரு பாண்டியன், “பொன்னிவளநாடு பாணன் பெறப் புரிந்தான் 1” என்றும், மாறைநாட்டுத் தலைவனான வாணன், மதுரையைக் கைப்பற்றிப் பாணர்க்குத் தந்த குறிப்பை, “பாணன் மதுரைப்பதி யாளவைத்த பிரான் 2” என்றும் பிற்காலக் கல் வெட்டுக்கள் கூறுவது இதற்குப் போதிய சான்றாகும். போர்க் களத்தில் மன்னர்கள் மறவுணர்ச்சி மீதூர்ந்து பகைவர் நாட்டினை அடர்ந்து அழித்தொழுகுவராயின், அவர் செயலால் நாடு எய்தும் கேட்டினைப் பாணர் அவர்க்குத் தம் இசை வாயிலாக உணர்த்தி அவர் உள்ளத்தில் அருளறம் தோன்றச் செய்வர்; மறவெறி கொண்டு மனையறத்தில் மனங்கொள்ளாது பாசறைக்கண் நெடிதுறையும் வேந்தர்பால் சென்று மனை மகளிரின் காதல் மாண்பும் மனைவாழ்வின் இன்பச்சிறப்பும் இசையில் தொடுத்துப் பாடி, அவர்உள்ளத்து மறப்பண்பை மாற்றி மனைநலத்தை நினைப்பிப்பர். பகைவேந்தர்க்குத் தகுவனகூறி இருபெரு வேந்தரையும் ஒன்று படுத்தும் உயர்பணியிலும் பாண்பெரியோர் பாடுபடுவர். இன்றைய அரசியல் செல்வ வாழ்வுகளில் நாளிதழ் வாணருக்குள்ள நன்மதிப்பு முற்றும், பண்டு புலவர் பாணர் முதலிய முத்தமிழ்வாணருக்கு இருந்ததென்னின், அது மிகை யாகாது. காக்கையூர்ப் பாடினியான நச்செள்ளையாரும் ஒளவையாரும் பாண்மகளிருள் நல்லிசைப்புலமை பெற்ற மெல்லி யற் சான்றோராவர். அவர்கள், முறையே ஆடுகோட் பாட்டுச் சேரலாதனாலும், அதியமான் நெடுமான் அஞ்சியாலும் சிறப்பிக்கப் பெற்ற திறத்தைப் பதிற்றுப்பத்தும் புறநானூறும் தெரி விக்கின்றன. இப்பாணர்கட்கு வேந்தர் ஊர்களும் மிக்க பொரு ளும் தந்து பாராட்டியுள்ளனர். குதிரை பூட்டிய தேர்களில் பாணர்களை ஏற்றிக் காலால் ஏழடிப் பின்சென்று வழிவிடுவது முடிவேந்தர் அந்நாளின் மேற்கொண்டிருந்த சிறப்பு முறை. யானைகளையும் அவற்றைப் பேணுதற் குரிய பொருளையும் பெருஞ்செல்வர் பாணர்கட்கு அளித்தனர். பாணர்களுள் ஆட வர்க்குப் பொன்னாற் செய்த தாமரைப்பூவும், மகளிர்க்கு மாலை யும் பிற அணிகலங்களும் வேந்தரும் செல்வரும் பரிசு நல்குவர். இசையும் கூத்தும் பயிலாது போர்த்துறையில் ஈடுபட்டு மற்போரிலும் நாடுகாத்தலிலும் சிறந்த பாணர்களும் உண்டு. அவருள் பாணன் என்பான் பாலியாற்றின் வடகரையில் உள்ள நாட்டில் அரசு புரிந்தான். “வடாஅது, வல்வேற் பாணன் நன்னாடு 1” என்று சான்றோர் பாராட்டிக் கூறுவர். அந்நாட்டில் பாலியாற்றின் கரையில் உள்ள பெரும்பாணப்பாடியும் பாண் மலையும் அப்பகுதியிலுள்ள கல்வெட்டுக்களால் குறிக்கப்படு கின்றன. அவன் வழிவந்தோர் வாணர் எனவும் வாணாதிராயர் எனவும் வாணதரையர் எனவும் நிலவினர்; வடார்க்காடு வட்டத்துத் திருவல்லம் கோயிலில் அவர்களுடைய கல்வெட்டுக் கள் மிகுதியாக உள்ளன. பிற்காலத்தே அவர்கள் தமிழக முழுதும் பரவியிருந்தனர். வாணகோவரையர் என்பாரும் பண்டைய பாணன் வழிவந்தோரே யாவர். வேறொரு பாணன் மற்போரில் சிறந்த சோழர் பேரவையில் புகழ்பெற்று விளங்கினான். உறை யூரில் வாழ்ந்த வெளியன்தித்தன் போரவையில் இருந்த பாண னொடு மற்போர் செய்ய, கங்கநாட்டுப் பகுதியிலிருந்து கட்டி என்பவன் வந்து, “பேரவையில் ஒலிக்கும் கிணைப் பறையின் ஒலி கேட்டமாத்திரையே அஞ்சி யோடினன்” என அகப் பாட்டொன்று 2 கூறுகிறது. குடநாட்டுக்கு வடக்கிலுள்ள ஆரிய நாட்டிலிருந்து பொருநன் என்பவன், குட்டநாட்டுக் கணையன் என்பவனொடு கூடிப் பாணனொடு மற்போர் செய்ய வந்து முடிவில் பாணன் வலிக்கு ஆற்றாது, கணையன் நேரிற் கண்டு நாணுமாறு தோற்றான். 1 பாண்மக்களுள் இசையும் கூத்தும் பிறவும் பயிலாது தாழ் நிலையில் வாழ்ந்தோர் தூண்டில் கொண்டு சென்று மீன்பிடித்து விற்று வயிறுவளர்த்தனர். சிலர் உழுதும் உழுவித்தும் வாழ்ந்தனர்; வேறுசிலர் பனைநாரும் பனம்போழும் கொண்டு கயிறும், மீன்வலையும் கூடை சுளகு முதலியனவும் முடைந்து வாழ்ந்தனர். சிலர் விலங்குகளை வேட்டையாடி யாழ்க்கு நரம்பும் தோற்கருவி கட்குத் தோலும் அமைத்துத் தந்தனர். ஒரு சிலர் செல்வர் மனைக்கும் பரத்தையர் மனைக்கும் தூதுசென்று அவரது புறத் தொழுக்கத்துக்கு வாயில்களாகப் பணிபுரிந்து வாழ்ந்தனர். வாயில்களாவாரை, “தோழி தாயே பார்ப்பான் பாங்கன், பாணன் பாடினி இளையர் விருந்தினர், கூத்தர் விறலியர் அறிவர் கண் டோர், யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப 2” என்று தொல்காப்பி யம் கூறுகிறது. கீழ்நிலைப் பாண்மகளிர் ஆடவர் கொணர்ந்த மீன்களை நெல்லுக்கும் பிற பொருளுக்கும் விற்று வாழ்க்கை நடத்துவர். சிலமகளிர் செல்வர்மனைகளில் பணிப்பெண்களாய்த் தொண்டு செய்வர். ஆடலில் சிறந்தோர் விறலியராகி வேந்தர் நல்கும் தலைக்கோல் பெற்று விளக்கமுற்றுத் திகழ்ந்தனர். பாடல் வல்லோர் பாடினிகளாய்ப் புகழ் பரப்பி வாழ்ந்தனர். பாணர் பலரும் மீன் பிடிக்கும் தூண்டிற்கோலும், இசைக்கும் கூத்துக்கு முரிய கருவிகளைப் பெய்த பைகளைச் சுமக்கும் காவடிக் கோலும், ஏனையோர் கழைக்கோலும் தாங்கிச் செல்ல, மகளிருள் பாடினியும் விறலியும் தலைக்கோலும் மீன்விற்போர் கழைக் கோலும் கொண்டு செல்வர். இதனால், வடநாட்டுச் சீக்கியர் எப்போதும் கையில் வாளேந்தி இயலுவது போலப் பண்டைத் தமிழகத்துப் பாண்மக்கள் கையில் கோலேந்தித் திரிவது மர பாயிற்று. ஆதலாற்றான், பாணரைக் குறிக்கும் போது, அவர்தம் கோலை விதந்து, “தேமுதிர் சிமையக் குன்றம் பாடும், நுண்கோல் அகவுநர் 1” என்றும், “மாக்கோல் யாழ்ப்பாண் மகனே 2” என்றும் சான்றோர் கூறுவாராயினர். பாணர்கள் தம் செயல்வகை பற்றி, அகவுநர், கூத்தர், கோடியர், இயவர், பொருநர் எனப் பலபெயர்களால் நூல்களில் குறிக்கப்படுவர். அவை அனைத்தும் அவரவர் செய்தொழில் காரணமாகப் பிறந்தவையே யன்றிச் சாதிப்பெயர்கள் அல்ல என்பதைத் தெளிய உணர்தல் வேண்டும். பாணர் வரலாறு தமிழ்மொழியின் ஒருசார் வரலாறாகப் பிணைந்திருத்தலின் இத்துணையும் கூறல் வேண்டிற்று. இனி, இப்பாணர்கள் தமிழ்ச் செல்வர் மனைவாழ்வில் கலந்து பணிசெய்யும் திறத்தை ஈண்டுத் தொகுக்கப்பட்டுள்ள பாட்டுக்களிற் காணலாம். 471. எல்வளை நெகிழ மேனி வாடப் பல்லித ழுண்கண் பனியலைக் கலங்கத் துறந்தோன் மன்ற மறங்கெழு குரிசில் அதுமற் றுணர்ந்தனை போலாய் இன்னும் வருதி யென்னவர் தகவே. இது, பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறியவழித் தோழி சொல்லியது. உரை : பாணனே, இலங்குகின்ற வளைகள் நெகிழ்ந்தோடவும், மேனி வாட்ட மெய்தவும், பலவாகிய இதழ்களை யுடைய மலர்போலும் மையுண்ட கண்கள் பனியலைத்தலாற் கலங்கி நீர் சொரியவும், வீரம் பொருந்திய குரிசிலாகிய தலைவர் பிரிந்தே சென்றார். அதனையும் நீ யுணர்ந்திலை போல் கின்றாய். அற்றாக, நீ இப்போழ்தும் தூது வருகின்றனை யாகலின், நின்னைத் தூது விடுத்த அவரது தகவு என்ன பயனுடையதாம்? என்றவாறு. நெகிழாது செறிந்து நின்று ஒளிதிகழ்தற்குரிய வளை நெகிழ்ந் தோடுமாறு தோன்ற, எல்வளை எனச் சிறப்பித்தார். வாடுதல், பசந்து மெலிதல். பல்லிதழ் உண்கண், பூப்போலும் கண் என்றவாறு; “பல்லிதழ் உண்கண் பசத்தல்மற்று எவனோ 1” என்புழிக் கூறியன காண்க. பனி அலைக் கலங்க என்றவழி, அலை: முதனிலைத் தொழிற் பெயர். மறவினை பொருளாகத் தலைமகன் பிரிந்தமை தோன்ற, மறங்கெழு குரிசில் என்றார். தன்மாட்டு அன்புடையார் வளை நெகிழ்ந்து மேனி வாடிக் கண் கலங்கி வருந்தப் பிரிதல் தன் தலைமைக்கு ஆகா தென்பாள், துறந்தோன் மன்ற என்றும், மகளிர்மாட்டுக் கண்ணோடாது அவரை வருத்தல் மறத்துறை யன்மையின் அவற்கு அது தகவன் றென்பாள், மறங்கெழு குரிசில் என்றும், தூதுபோய் மீளுங் காறும் அவள் ஆற்றாளெனக் கூறி மீள்விக்க வாராது பிரி வுணர்த்துதற்கு வந்ததனை மறந்தொழிந்தாய் என்றற்கு, உணர்ந் தனை போலாய் என்றும், பிரிவு கருதிய துணையே ஆற்றாளா யினாட்குப் பிரிந்த பின்னரும் தூது விடுத்து வரவு தாழ்த்தல் அருளுடையார் செயலன்று என்பாள், இன்னும் வருதி என்றும், என் அவர் தகவே என்றும் கூறினாள். எல்வளை நெகிழ என்றது, உடம்புநனி சுருங்கல். மேனி வாட என்றது, பசலைபாய்தல். உண்கண் பனியலைக் கலங்க என்றது, பிரிவாற்றாமை. சிறப்பும்மை, தலைமகளின் ஆற்றாமை மிகுதி யுணரநின்றது. இதனைத் தழுவி நிற்கும் எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. இவற்றால், தலைமகன் பொதுவகையால், தன் பிரிவுணர்த்தியவழித் தலைமகள் உடன்படாமை கண்டு, உணர்த்தாது பிரிந்தானாக, பாணன் போந்து அவன் பிரி வுணர்த்தினமை பெற்றாம். பன்மை, பழித்தற்கண் வந்தது. மறமுடையார் மகளிர்மாட்டுக் கண்ணோடல் வேண்டு மென்பது, “ஆவு மானியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித், தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும், பொன் போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடி விடுதும் நும்அரண் சேர்மின்என, அறத்தாறு நுவலும் பூட்கை 2” என முன்னோரும், “பெண்ணுயிர் அவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்வில் சாதல், எண்ணினன் 3” எனப் பின்னோரும் கூறுதல் காண்க. இவ்வாறு தலைமகனைத் தோழி, பாணர் முதலி யோர்முன் பழித்துக் கூறல் வழுவாயினும், “வாயிற் கிளவி வெளிப்படக் கிடத்தல், தாவின் றுரிய தத்தங் கூற்றே 1” என்பத னால் அமையும். 472. கைவல் சீறியாழ்ப் பாண நுமரே செய்த பருவம் வந்துநின் றதுவே எம்மி னுணரா ராயினுந் தம்வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யா ராகுத னோகோ யானே. இது, குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவழித் தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. உரை : இசைத்தல் தொழிலில் வல்ல சிறிய யாழை ஏந்திய பாணனே, நும்முடைய தலைவர் தாம் வருவது குறித்துச் சென்ற பருவம் வந்தெய்தியது; அதனை எம்மைப் போல் அறியாதொழிந்தாராயினும், அவர் உரைத்தவை பொய் பொருந்திய சொற்களாயின கண்டு யாம் நாணி வருந்துவ தனையும் அறியாராயினமைக்கன்றே யான் வருந்துவே னாயி னேன்? என்றவாறு. யாழ்வகையுள் பேரியாழ் உண்மையின் சீறியாழ் கூறப் பட்டது. ஆயிரம் நரம்பினையுடைய பேரியாழ் கையிற் கொண்டு செல்லும் எளிமைத் தன்மையின், கையிலேந்தி இசைத்துவரும் பாணன் சீறியாழ்ப் பாணன் எனப்பட்டான். யாழ் இசைத்தலில் புலமை மிக்குடைமை பற்றி, கைவல் சீறியாழ் என்றார். தலைமக்கள் புகழைப் பாடிப் பரப்பும் பாணர் கூத்தர் முதலாயினார்க்கு அவர் வேண்டுவன கொடுத்துப் பேணுதல் மரபாகலின், தலைவர்களைப் “பாணர் பெருமகன்” என்றும், “பாண ரொக்கல்” என்றும், சான்றோர் சிறப்பிப்பர். அம் முறைமை பற்றி, கைவல் சீறியாழ்ப் பாண நுமரே என்றாள். பிறாண்டும் “நினக்குயாம் பாணரு மல்லேம் எமக்கு, நீயுங் குரிசிலை யல்லை மாதோ 2” எனப் பாணன் கூறுதல் காண்க. செய்த பருவம், பிரிந்த காலையில் தலைமகன் தான் மீண்டு வருதற்குக் குறித்த பருவம். பருவ வரவினை முன்பே யுணர்ந்து தலைமகற்குத் தூது விடுத்துத் தெரிவியாத குறை தலைமகட்கு அமையும் என்பார், எம்மின் உணரா ராயினும் என்றார். கிளவி என்றவிடத்துப் பொருட்டுப் பொருளதாகிய குவ்வுருபு தொக்கது. எய்யாராகுதல் என்பதை எய்யாமையும் உடையராகுதல் எனப் பிரித்துரைக்க. நாணலும் எய்யாராகுதல் என்று கொள்ளின், தாம் உரைத்தவை பொய்ச்சொற்களாகுதற்கு நாணுதல் உயர்ந்தோர் இயல்பாயிருக்க, அதனையும் அறியாதொழுகுதல் எனப் பொருள் தந்து வழுவாம் என உணர்க. வருவல் எனக் குறித்த பருவம் வந்தெய்தியவழியும் தலை மகன் வாராது தாழ்த்தமையான், நுமரே செய்த பருவம் வந்து நின்றதுவே என்றும், பருவம் வந்து நின்றவழியும், தெளிவித்துச் சென்ற தலைவர் வாராமையான், இது பருவ மன்றெனக் கொண் டுள்ளேம் என்பாள், எம்மின்என்றும், இது தாம் குறித்த பருவ மென்பதனை அவர் உணராரல்லர் என்பது பட, உணரா ராயினும் என்றும், பருவவரவில் வருகுவேன் என வற்புறுத்த சொல் பொய்த்தற்கு நாணி அஞ்சாது, யாம் அது கண்டு நாணி வருந்துவதையும் நினையாது தூது போக்குதல் நன்றன்று என்பாள், பொய்படு கிளவி நாணலும் என்றும், மெய்ம்மையே ஒழுகுத லுடையரா யிருந்தார் அவ்வொழுக்கத்திற் பிழைத்தா ராயின், வரும் ஏதம் பலவா மாகலின், எய்யா ராகுதல் நோகோ யானே என்றும் கூறினாள். உம்மை பின்னும் கூட்டப்பட்டது. நம்மின் உணரா ராயினும் என்றற்கு, பருவவரவினை யாம் முன்பே உணராதொழிந்தவாறு போல அவரும் உணராது ஒழிந்தா ராயினும், பொய் படு கிளவிக்கு யாம் நாணலும், அதனை அவர் எய்யாராய் ஒழுகுதலும் தப்பாது உணர்ந்தாரில்லை; அதனால் யான் வருந்துவே னாயினேன் என்றா ளெனினுமாம். ஈண்டுப் பொய்படு கிளவி நாணுத லாவது, தாம் தெளிவித்துச் சொல்லிய வாறே மீளலாகாமையின், அது பொய்த்தற்கு அஞ்சிப் பாணனால் வினை முடியாமை தெரிவித்தல். எய்யாராய் ஒழுகுதலாவது, தூதுரையாலும், ஒழுகலாற்றாலும் பண்டை அன்புடைமை தோன்ற ஒழுகுதல். இங்ஙனம் தோழி இரங்கிக் கூறியது, “வருத்த மிகுதி சுட்டுங் காலை, உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம் 1” என்பதனால் அமையும். இது குறித்த பருவத்துத் தலைவன் வாராவழித் தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறிய தென்பர் நச்சினார்க்கினியர். 2 (2) 473. பலர்புகழ் சிறப்பினுங் குரிசி லுள்ளிச் செலவுநீ நயந்தனை யாயின் மன்ற இன்னா வரும்பட ரெம்வயிற் செய்த பொய்வ லாளர் போலக் கைவல் பாணவெம் மறவா தீமே. இது, தலைமகன் பிரிந்த நாட்டிற்குச் செல்வேம் என்ற அவன் பாணற்குத் தலைமகள் சொல்லியது. உரை : இசைத்தொழிலில் வல்ல பாணனே, உயர்ந்தோர் பலரும் புகழ்தற்குரிய சிறப்பினையுடைய நும் தலைவனை நினைந்து செல்லுதலை நீ விரும்பினையாயின், இன்னாமையால் பொறுத்தற் கரிய துயரத்தினை எம்பாற் செய்த பொய்த்தல் வல்ல அவர்போல எம்மை மறவாது, அவர்க்கு எம் ஆற்றா மையைக் கூறுவாயாக என்றவாறு. பலர் புகழும் சிறப்பே மெய்யாய சிறப்பாதல் பற்றிப் பலர்புகழ் சிறப்பு என்றார். பலர், உயர்ந்தோர். பாணர் பாடும் பாட்டிற் கெல்லாம் தலைவன் தலைமகனாகலின், அவனை நினைந்து செல்வது பாணர்க்கு இயற்கை யென உணர்க. செலவு நயந்தனை யாயின் என்றது, தலைமகன் சென்றுறையும் நாட்டின் சேய்மை யுணர நின்றது, படர்தல், நினைத்தல். படர்தல் காரணமாகத் துயரும் இன்னாமையும் உண்டாதலின், இன்னா அரும்படர் என்றார். ஒரு பொய்யை உரைத்தவிடத்து அதனை மறைத்தற்கு வேறுபல பொய்களைப் படைத்து மொழிதற்கு அறிவும் மனமும் வன்மை மிக வேண்டுதலின், பொய் கூறு வோரைப் பொய்வலாளர் என்ப. “பொய்வ லாளன் மெய்யுற மரீஇ 3” என்று பிறரும் கூறுதல் காண்க. பாணன் சுற்றமொடு கூடிச் செல்லும் பான்மைய னாகலின், நும் குரிசில் என்று பன்மையிற் கூறி, முன்னிற்போன் பாண்தலைவனாதல் தோன்றப் பாண என ஒருமையிற் கூறினார். “ஒருமை சுட்டிய பெயர்நிலைக்கிளவி, பன்மைக் காகும் இடனுமார் உண்டே 1” என்பதனால் அமையும். தான் கொண்ட துன்பம் மெய்ப்பட்டுப் பாணற்குப் புலனாத லின், எம்வயிற் செய்த என்றும், கார்ப்பருவ வரவில் வருகுவல் என்றவன், அது வந்தெய்தியும் வாராமையினாலும், சான்றோர் அஞ்சும் பொய்ம்மையைச் செய்தொழுகினமை யாலும், பொய்வலாளர் என்றும், அவர் மறந்தா ராயினும், யாம் மறவேம் என்பாள், மறவாதீமே என்றும் கூறினாள்; இஃது அன்புதொக நிற்றல். “அவனறி வாற்ற அறியு மாகலின் 2” என்ற சூத்திரத்துப் “பல்வேறு நிலை” என்றதனால், இது தூதுவிடக் கருதிக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். (3) 474. மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு கதழ்பரி நெடுந்தேர் அதர்படக் கடைஇச் சென்றவர்த் தருகுவ லென்னும் நன்றா லம்ம பாணன தறிவே. இது, பிரிவின்கண் ஆற்றாமை கண்டு தூதாகிச் சென்று அவனைக் கொணர்வல் என்ற பாணன் கேட்பத் தலைமகள் சொல்லியது. உரை : வெகுண்டு போந்த பகைவர் தம்மைக் காத்துக் கோடற்குச் செய்த அரண்கள் பலவற்றையும் அழித்த போர்த்தொழிலில் மிக்க தானையோடு விரையச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி வழிகள் பல கடந்து சேண்சென்ற நம் காதலரைக் குற்றமில்லாத ஒளி பொருந்திய நுதல் விளக்க முறும் வண்ணம் கொணர்வல் என்று பாணன் கூறுகின்றா னாகலின், தோழி, அவனுடைய அறிவு நன்றாயிருந்ததுகாண் என்றவாறு. தம்மிடத்தே அமையாது வெகுண்டெழுந்த வழியே ஒருவர் பகைவ ராதலின், கறுத்தோர் என்றார். தன்னியல்பில் சிறு குற்றமும் இன்றித் தலைவன் பிரிவால் பசந்து ஒளி மழுங்கி யிருப்பது பற்றி, மையறு சுடர்நுதல் என்று சிறப்பித்தார். விளங்க என்றது பசந்தமை சுட்டி நின்றது. பண்டு இருந்த அரண் போதிய வன்மை யிலதாதலும் தலைமகனது படைவலியின் பெருமையும் முன்னுணர்ந்து பகைவர் வலிசெய்து கொண்ட அரண் என்றற்குச் செய்யரண் என்றும், எனவே புதுமையும் வன்மை மிகுதியு முடைய அந்த அரணையும் தலைவனுடைய தானை எறிந்து சிறந்த தென்பார், செய்யரண் சிதைத்த செருமிகு தானை என்றும் கூறினார். அதர்பல கடைஇச் சென்றவராகிய காதலரை நுதல் விளங்கத் தருகுவல் என்றும் என இயைக்க, ஒருவினை யொடு பன்மை பற்றி வந்த உயர்பின் வழித்து. மிக்க சேய்மைக்கட் சென்றன ரென்பாள், அதர்படக் கடை இச் சென்றவர் என்றும், நாம் அவரை யின்றியமையேமாய்க் கொண்டநோயினை வாய்விட்டுக் கூறா முன்பே குறிப்பின் உணர்ந்து கூறினமையாலும், மிகப் பயின்றார்க் கன்றிப் புல னாகாத நம் நுதற்பசப்பினை நுனித்து உணர்ந்து சுடர்நுதல் விளங்க என்றதனாலும், அவன் அறிவை வியந்து, நன்றா லம்ம பாணனது அறிவே என்றும் கூறினாள். “அவனறிவு 1” என்ற சூத்திரத்துப் “பல்வேறு நிலை” என்றது கொண்டு, இது பாணனைத் தூதுவிட்டுக் கூறிய தென்பர் நச்சினார்க்கினியர். (4) 475. தொடிநிலை கலங்க வாடிய தோளும் வடிநல னிழந்தவென் கண்ணும் நோக்கிப் பெரிதுபுலம் பினனே சீறியாழ்ப் பாணன் எம்வெங் காதலொடு பிரிந்தோர் தம்மோன் போலான் பேரன் பினனே. இது, பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தலைமகனுழை நின்று வந்தோர் கேட்பத் தன் மெலிவு கண்டு இரங்கிய பாணனைத் தோழிக்கு மகிழ்ந்து சொல்லியது. உரை : தோழி, தொடிகள் நின்ற நிலையினின்றும் நெகிழ்ந்து நீங்குமாறு வாட்ட மெய்திய என் தோளையும் மாவடுப் போலும் அழகினை இழந்த என் கண்களையும் நோக்கி, சிறிய யாழைக் கையிலேயுடைய பாணன் மிகப் புலம்பினா னாகலின், அவன் எம்முடைய காதலொடு பிரிந்து சென்ற நம் காதலரைத் தமக்குத் தலைவனாக வுடையனாயினும் அவர் போலின்றி நம்பால் மிக்க அன்புடையனாயிராநின்றான் என்றவாறு. கலங்க என்னும் செயவெனெச்சம் காரியப்பொருட்டு. வடி, மாவடு. “நறுவடி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 1” என்ப சான்றோர். பிரிந்துழித் தலைமகள் தோளும் கண்ணும் நலனிழந்து தோன்றிக் கூடியவிடத்து அந்நலனைப் பெற்றுத் திகழ்தல் தோன்ற, “தோள் கவின் எய்தின தொடிநிலை நின்றன; நீள்வரி நெடுங்கண் வாள்வனப் புற்றன 2” என அழகுறப் பிறாண்டுங் கூறுதல் நோக்கி இன்புறுக. வடிநலன், வடியைப் போற லாகிய நலமென விரியும். அவர் பிரிந்தா ராயினும், அவர் மாட்டுச் சென்ற தன் காதல் நீங்காமையின் காதலொடு பிரிந்தோர் என்றும், அவர்க்கு உரியவ னாயினும், அவர் நம்மை மறந்தது போல அன்றி இவன் நம்மை நோக்கிப் பெரிதும் இரங்கிப் புலம்புகின்றான் என்பாள், தம்மோன் போலான் என்றும், பேரன் பினனே என்றும் கூறினாள். “தொடிநிலை கலங்க வாடிய தோள்” என்றது, உடம்பு நனிசுருங்கல். “வடிநல னிழந்த கண்ணும்” என்றது அவன் பிரி வாற்றாமை. (5) 476. கருவி வானங் கார்சிறந் தார்ப்பப் பருவஞ் செய்தன பைங்கொடி முல்லை பல்லான் கோவலர் படலைக் கூட்டும் அன்பின் மாலையு முடைத்தோ வன்புறைப் பாணவவர் சென்ற நாடே. இது, பிரிவாற்றாமை அவற்கும் உளதன்றே? நீ வேறுபடு கின்றது என்னை? என்ற பாணற்குத் தலைமகள் கூறியது. உரை : எம்மை வற்புறுத்தலையுடைய பாணனே, தொகுதியை யுடைய வானம் மழை மிக்கு முழங்க, பருவம் நோக்கி மலர்ந் துள்ள பசிய கொடிகளாகிய முல்லையின் பூக்களைப் பல வாகிய ஆக்களையுடைய ஆயர் மாலையிடத்தே தொடுத்து அணியும் அன்பில்லாத மாலைக் காலத்தையேனும் அவர் சென்ற நாடு உடையதுகொல்லோ? என்றவாறு. கருவி, தொகுதி. கார்காலத்து மழைமுகில் மிக்கெழும் காட்சியைக் கார் சிறந்தார்ப்ப என்றார். கார்ப் பெயலால் வளம் பெற்றுப் பூத்து விளங்குதல் தோன்றப் பைங்கொடி முல்லை எனச் சிறப்பிக்கப்பட்டது. பருவம் செய்தலாவது, மாலைப் போதில் மலர்ந்து கார்காலம் எய்தி நிற்றலைத் தெரிவித்தல்; “பூங்கொடி முல்லை தொகுமுகை இலங்கெயிறாக, நகுமே தோழி நறுந்தண் காரே 1” என்று பிறரும் கூறுவது காண்க. படலை, மாலை; “பல்லான் கோவலர் படலை சூட்ட 2” என்றாற் போல. கோவலர் முல்லை சூடுதலை, “தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப், பல்லான் கோவலர்க் கண்ணிச், சொல்லுவ வன்ன முல்லை வெண்முகையே 3” என்று சான்றோர் கூறுவது காண்க. மாலைப் போது, காதலரைப் பிரிந்து தனித்திருக்கும் மகளிர்க்குத் “துனியரும்பித், துன்பம் வளர வரும் 4” ஆகலின், அன்பில் மாலை என்றும், ஆற்றியிருக்குமாறு வற்புறுத்தலைச் செய்யும் பாணனை, வன்புறைப் பாணன் என்றும் கூறினார். வன்புறைப் பாண என்றாள், இவட் குளதாய பிரி வாற்றாமை அவற்கும் உண்டென அவன் கழறுகின்றமையின். பைங்கொடி முல்லை பருவம் செய்தல் அவர் சென்ற நாட்டின் கண் இல்லா தொழியினும், காதலன்புடையார் செயலை விளக் கும் மாலைக்காலமும் உண்டன்றோ என்றது, மாலையம் பொழுது கண்டு தான் ஆற்றா ளாயினமை உணர்த்திவாறு; “காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து, ஏதிலர் போல வரும் 1” என்ப. பருவமல்லாக் காலத்தும் மழை சிறந்து ஆர்த்த லுண்மையின், பருவம் செய்தன பைங்கொடி முல்லை யென்றாள். அவர் சென்ற நாட்டின்கண் மாலைப் பொழுது உளதாயின், அவரும் “மாலை நோய் செய்தல் 2” அறிந்து விரைய வந்து சேர்ந்திருப்ப ரென்பது கருத்தாகலின், மாலையும் உடைத்தோ என்றாள்; “போனார் நாட்டு உளதாங்கொல், மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்த இம் மருண்மாலை 3” என அடிகளும் பாடுதல் காண்க. (6) 477. பனிமலர் நெடுங்கண் பசலை பாயத் துனிமலி துயரமொ டரும்பட ருழப்போள் கையறு நெஞ்சிற் குயவுத்துணை யாகச் சிறுவரைத் தங்குவை யாயின் காண்குவை மன்னாற் பாணவெந் தேரே. இது, தலைமகள்மாட்டுப் பாணனைத் தூது விடுத்த தலைமகன் கூறியது. உரை : பாண, குளிர்ந்த மலர்போலும் நீண்ட கண் பசப்பெய்தத் துனி மிகுதற்குக் காரணமாகிய துயரத்தோடு பொறுத்தற் கரிய துன்பத்தினை உறுகின்ற தலைமகளுடைய செயலற்ற நெஞ்சிற்கு உசாத்துணையாகச் சிறிது போது தங்குவை யாயின், எம்முடைய தேரினை ஆண்டு எய்தக் காண்பாய் என்றவாறு. துனி, அன்பு காரணமாகத் தோன்றும் வெறுப்பு. மன்னும் ஆலும் அசை. துணையாதல், நெஞ்சின்கண் தோன்றிய துன்பத்தை நீங்குதற்குத் துணையா யுதவுதல்; “துன்பத்திற் கியாரே துணையாவார் 4” என்புழிப் போல. பனிமலர் நெடுங்கண், பனித்துளி தாங்கி நிற்கும் மலர் போல வருத்தத்தால் கண்ணீர்த் துளி தாங்கி நிற்கும் நீண்ட கண். துனி மிக்கவழித் துயரம் தோன்றி வருத்த வருந்தும் தலைமகளைத் துனிமலி அரும்படர் உழப் போள் என்றார். துனியால் உள்ளம் தளர்ந்து துயர் உறுவோர்க்குத் தனிமை தளர்ச்சியும் துயரமும் மிகுவித்துத் தீது துணியுமாறும் செய்துவிடு மாகலின், அக்காலை உசாத்துணை இன்றியமை யாமை பற்றி, உயவுத்துணையாக என ஆசிரியர் எடுத்துரைக் கின்றார். “கங்குல் உயவுத்துணை யாகிய துஞ்சா துறைவி 1” என்பர். சிறுவரை, சிறிது போது; “இன்று செலினும் தருமே சிறுவரை, நின்று செலினும் தருமே 2” என்றாற் போல்வது. பெரும்பொழுதாகிய காரும், சிறுபொழுதாகிய மாலையும் ஒருங்கே தோன்றி நிலவுதலின், அவட்குத் துனி தோன்றுதலும், அதன் பயனாகத் துன்பம் ஒருகாலைக் கொருகால் மிகுதலும் நினைந்து கூறுகின்றா னாதலால், துனிமலி துயரமொடு அருந்துய ருழப்போள் என்றும், துயர் மிக்கவழி அவள் நெஞ்சு செயலற்று இனைதல் ஒருதலை என்பான், கையறு நெஞ்சம் என்றும், அந் நெஞ்சத்து மிக்கதனை வாய்விட்டுக் கூறிய வழி, ஆற்றாமை சிறிது நீங்குமாகலின், உயவுத் துணையாகி யென்றும், தான் விரையப் போதருதல் கூறுவான், சிறுவரைத் தங்குவை யாயின் என்றும் கூறினான். இது, “தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடும் தலைவன் கூறியது 3” என்பர் நச்சினார்க்கினியர். இது, தூது விடும் தலைமகன் கூறிய தென்பர் இளம்பூரணர். 4 (7) 478. நீடின மென்று கொடுமை தூற்றி வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந் தியாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச் சொல்லிய துரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே. இது, பிரிந்துறையும் தலைமகன், தலைமகள் விட்ட தூதாய்ச் சென்ற பாணனை, “அவள் சொல்லிய திறம் கூறுக” எனக் கேட்டது. உரை : முல்லைத்திணைக்குரிய நல்ல யாழையுடைய பாணனே, யாம் விரும்பும் எம் காதலி, வரத் தாழ்த்தன மென்று எம்பால் அன்பின்மை கூறி வாட்ட முற்ற நெற்றியினை யுடையளாய்த் துன்பம் மிகுதலான், வாழ்க்கையில் வெறுப்புற்று நின் னிடத்துச் சொல்லிய சொல்லை நீ எமக்குக் கூறுக என்றவாறு. கொடுமை, ஈண்டுச் சொல் கோடுதல்; சொல்லியவாறு நடவாமை; “கொடியார் கொடுமை யுரைக்கும் 1” என்பது காண்க. தூற்றுதல், பலர்க்கும் தெரியவுரைத்தல்; “துறைவன் துறந்தமை தூற்றாகொல் 2” என்பது காண்க. பிறிதுநினைதல், உயிர் வாழ்க்கையில் விரும்பிய உள்ளமின்றி வெறுத்த உள்ளம் கொளல். இது வருத்தம் மிக்க விடத்து உளதாவது; “வருத்த மிகுதி சுட்டுங் காலை, உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம் 3” என்பர் ஆசிரியர். நோய் மிகச் சாஅய்ப் பிறிது நினைந்து சொல்லியது என இயையும். ஏனை மருதயாழ் பாலை யாழ் குறிஞ்சியாழ் போல, முல்லையாழ் முல்லைக்குரியது; இதற்குரிய பண் செவ்வழி; இது மாலைப்போதில் இசைத்தற் குரியது. மதி, முன்னிலை யசை. பருவவரவில் வருவேன் எனச் சொல்லிப் போந்த தான் அது வந்தெய்தியவழியும் வினைமுற்றாமையால் தாழ்த்தமையின், அச்சொல் கோடியது எனச் சொல்லித் தலைமகள் வருந்துவ ளாகலின், கொடுமை தூற்றி என்றான். தோழியரோடும் பிற வாயில்களோடும் கூறிப் புலம்புதலின், தூற்றி யென்றும், நுதல் வாடி நலன் அழிதலின், அவள் துனியுற்று உயிர் வாழ்தற்கண் வெறுப்புக்கொள்வாளென நினைக்கின்றா னாகலின், பிறிது நினைந்து என்றும், தாழ்த்த காலமெல்லாம் ஆற்றாமை மிகு தலின், நோய்மிகச் சாஅய் என்றும் கூறினான். தம்மாட்டுக் காதலன்புடையார் இன்னாத சொல்லினும், கேட்போர்க்கு அச்சொல் இன்பமே நல்குதல் இயல்பாகலின், சொல்லியது உரை மதி என்று சொன்மேல் வைத்து மொழிந்தான்; “சொல்லு மதி பாண சொல்லுதோ றினிய 4” எனப் பிறாண்டும் வருதல் காண்க. இதனால் தலைமகள்மாட்டு அருள் மிகவுடைமை யென்னும் மெய்ப்பாடு தோன்றிற்று. இது, பாசறைக்கண் தூது கண்டு கூறிய தென்பர் இளம் பூரணர். 5 தூதுகண்டு அவள் கூறிய திறம் கூறுக எனக் கேட்டது என்பர் நச்சினார்க்கினியர். 6 (8) 479. சொல்லுமதி பாண சொல்லுதோ றினிய நாடிடை விலங்கிய வெம்வயி னாடொறும் அரும்பனி கலந்த வருளில் வாடை தனிமை யெள்ளும் பொழுதின் பனிமலர்க் கண்ணி கூறிய தெமக்கே. இது, தலைவி விடத் தூதாய்ச் சென்ற பாணன் மாற்றம் கூறக் கேட்ட தலைமகன், இவ் வாடை வருத்தத்திற்கு மருந்தாக இன்னும் கூற வேண்டும் எனக் கூறியது. உரை : பாண, நாடிடைக் கிடந்த வேற்றுநாட்டின்கண் வந்துள்ள எம்மிடத்து, நாடோறும் பொறுத்தற் கரிய குளிரோடு கூடிய அருளில்லாத வாடைக்காற்றுப் போந்து எம் தனிமை குறித்து வருத்தும் இக்காலத்தில், குளிர்ந்த மலர் போன்ற கண்களை யுடையாள் விடுத்த மாற்றம் எமக்கு நீ சொல்லுந்தோறும் இவ்வாடை வருத்தத்திற்கு மருந்தாய் இனிமை பயத்தலான், இன்னும் கூறுக என்றவாறு. இடைவிலங்குதல், இடையே குறுக்கிட்டுக் கிடத்தல்; தலைவன் வந்திருக்கும் நாட்டுக்கும் அவனுடைய நாட்டுக்கும் இடையே பல நாடுகளைக் கடந்து வந்தமை கூறியது, நெடிய சேய்மைக்கண் பிரிந்திருப்பது உரைத்தற்கு. வாடை, குளிர் செய்யும் காற்றாதலின், அரும்பனி கலந்த என்றும், தென்றல் போல உயிர்கட்கு இன்பம் செய்யாமை பற்றி, அருளில் வாடை என்றும் கூறினார். தனிமை எள்ளும் பொழுது, தனித்தோர்க்குத் துன்பநினைவு விளைவிக்கும் மாலைப்போது; “தனியோர் இரங்கும் பனிகூர் மாலை 1” எனச் சான்றோர் குறிப்பது காண்க. எள்ளுதல்: ஈண்டு இலக்கணை. சொல்லுமதி என்றது கூற்றின் மேலும், இனிய என்றது கூற்றிடை நிற்கும் சொற்களின் மேலும் நின்றன. நாடிடை விலங்கிய எம்வயின் என்றதனால் மிக்க சேய்மைக்கண்ணுள்ள வேற்றுநாட்டு அகவயின் வந்தெய்தியது பெற்றாம். வாடை கூறவே, வினைமுடியாமையின் தூது போக்கினமை பெறப்பட்டது. குளிரான் மிக்க நடுக்கத்தைச் செய்து வருத்துதலின், அரும் பனி கலந்த அருளில் வாடை என்றும், அது காதலர்ப் பிரிந்தார் கையற்று நலியும் பான்மைத் தாகலின், தனிமை எள்ளும் என்றும், ஆர்வலர் உரைக்கும் எல்லாச் சொல்லும் இனிய வாதலின், சொல்லுதோறு இனிய என்றும், மீட்டும் கேட்டற்கு நெஞ்சம் அவாய்நிற்றலே யன்றி அவ்வாடை செய்யும் வருத் தத்தைச் சொற்களின் இனிமை மறப்பித்தலின், சொல்லுமதி என்றும் கூறினான். (9) 480. நினக்கியாம் பாணரு மல்லே மெமக்கு நீயுங் குருசிலை யல்லை மாதோ நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி ஈரித ழுண்க ணுகுத்த பூசல் கேட்டு மருளா தோயே. இது, தலைமகட்குத் தூதாய்ப் பாசறைக்கட் சென்ற பாணன் தலைமகனை நெருங்கிச் சொல்லியது. உரை : பெரும, நின்னையே விரும்பி யுறையும் காதலியாவாள் தன் மனைக்கண்ணே நின் பிரிவாற்றாது புலம்புற்றுக் குளிர்ந்த மலர்போலும் கண்கள் கலுழ்ந்து சொரிந்த கண்ணீரை யாமும் பிறரும் கூறக் கேட்டுவைத்தும், நீ விரைந்து மீளுதலைக் கருதாது இருந்தனை யாகலின், நினக்கு யாம் பாணரும் மாகோம்; எமக்கு நீதானும் தலைவனு மாகாய் என்றவாறு. ஆர்வலர் சொரியும் கண்ணீர் பூசல் தரும் என்ப வாகலின், உகுத்த பூசல் என்றார். உம்மை, பூசல்கேளா முன்பே மீளற் குரியை என்பது தோன்ற நின்றது. நினக்கு யாம் பாணரும் அல்லேம் என்றதே அமையு மாயினும், எமக்கு நீயும் குருசிலை யல்லை என்றது, வினை முற்றிய தலைமகன் மீளுதலைக் கருதாது பிறிது கருதி யிருந்தமை கண்டு பாணன் விரைய மீளுதற் பொருட்டுப் புலந்து கூறியது. இது “பொருட்பயம் பட வந்த அறக்கழிவு. 1” பொருள், தலைவி பக்கல் நின்று மனைவாழ்க்கை இன்பம் பெருக உறுவது. வினைமுற்றினான் மீளக் கருதாமைக்கு ஏது வினைத்திறமே யன்றிப் பிறிதின்மை தோன்ற, நின்வெங் காதலி என்று ஆசிரியர் குறித்தார். அருளுதல், ஈண்டு விரைந்து மீளுதற் பொருட்டு. தன் காதலிமாட்டு அருளிலாத நீ பிறர்மாட்டும் அப் பெற்றியனே யாவாய் எனக் கற்பித்துக்கொண்டு நினக்கு யாம் பாணரும் அல்லேம், எமக்கு நீயும் குருசிலை யல்லை என்றான். இதன்கண், பாணன், தலைவியின் ஆற்றாமை தோன்ற, அவளுடைய தனிமையும், ஆற்றாமையும் விளக்கிக் கூறியது அவற்குரிய இலக்கணம்; என்னை, “நிலம்பெயர்ந் துறைதல் வரைநிலை யுரைத்தல், கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய 1” என்றா ராகலின். அன்றியும், இவன் எண்வகைக் குறிப்பும் நன்னயப் படுத்துத் தலைமகற்குக் காட்டல் வேண்டுமாகலின், நினக்கு யாம் பாணரு மல்லேம் என்றதனாற் பெருமிதமும், எமக்கு நீயும் குருசிலை யல்லை என்றதனால் வெகுளியும், நின் வெங்காதலி என்றதனால் உவகையும், தன்மனைப் புலம்பி என்றதனால் மருட்கையும், ஈரித ழுண்கண் உகுத்த பூசல் என்றதனால் அழுகையும், அருளாதோயே என்றதனால் இளிவரலும் படக் கூறினமை அறிக. “எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே 2” என்ற விடத்து இது பாணர் கூறியது என்பர் இளம்பூரணர். (10) 49. தேர் வியங்கொண்ட பத்து இது தேர்ப்பாகனைத் தேரை விரைந்து செலுத்துமாறு தலைமகன் ஏவுதலைக் கொண்ட பொருளவாய பாட்டுக்களின் தொகுதியாகலின், இப்பெயர்த்தாயிற்று. வியம், ஏவல்; வியங் கோள் என்புழிப் போல. 481. சாயிறைப் பணைத்தோ ளவ்வரி யல்குல் சேயிழை மாதரை யுள்ளி நோய்விட முள்ளிட் டூர்மதி வலவநின் புள்ளியற் கலிமாப் பூண்ட தேரே. இது, வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறியது. உரை : தேர்ப்பாகனே, நுண்ணிய சந்து பொருந்திய தொடி யணிந்த பருத்த தோள்களையும், அழகிய வரி பொருந்திய அல்குலையும், செவ்விய இழைகளையு முடைய காதலியை நினைத்தலால் எய்தும் வருத்தம் தீர, நின்னுடைய புட்போல நிலம் தீண்டாத செலவினையுடைய கலித்த குதிரை பூட்டிய தேரை, அக்குதிரைகள் விரைந்து செல்லுமாறு முட்கோலாற் குத்திச் செலுத்துக என்றவாறு. இறை, ஆகுபெயரால் தொடியை உணர்த்திற்று. திரட்சி யினை யுடைய மூங்கில் போலும் தோளெனினுமாம். “வேயொழுக் கன்ன சாயிறைப் பணைத்தோள் 1” என்று பிறரும் வழங்குதல் காண்க. மாதர், காதல். “தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும் 2” என்ப வாகலின், விடுதல், தீர்தற் பொருட்டு. முள், ஈண்டு ஆகுபெயராய்த் தாற்றுமுட்கோலை யுணர்த்திற்று. “தீண்டா வைம்முள் தீண்டி நாஞ்செலற், கேமதி வலவ தேரே 3” என்றார் பிறரும். செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. வேண்டியவிடத்து இறப்பவும் மிக்க செலவினை யுடைத்தாய் நிலம் தீண்டாது பறப்பது போறலின், புள்ளியற் கலிமா என்றார்; “உள்ளம் போல உற்றுழி யுதவும், புள்ளியற் கலிமா உடைமை யான 4” என்றும், “உலகுகடப் பன்ன புள்ளியற் கலிமா 5” என்றும் பிறரெல்லாம் கூறுதல் காண்க. வேறுபடுதற் குரிய தோளும், அல்குலும், இழையும் கூற லின், தன் பிரிவால் அவை அங்ஙனமாயினகொல்லோ என நினைக்குந்தோறும், துயர் எழுந்து வருத்துதலின், நோய்விட என்றும், அவை அவ்வா றாகாமை வேண்டி, சாயிறைப் பணைத்தோள் அவ்வரி யல்குல், சேயிழை மாதர் என்றும் கூறினான். அவை பிரிவிடை வேறுபடு மென்பது, “தொடிநிலை கலங்க வாடிய தோளும் 6” என்றும், “தேரகல் அல்குல் அவ்வரி வாட 7” என்றும், பிறாண்டும் வருவன வற்றா லுணர்க. (1) 482. தெரியிழை யரிவைக்குப் பெருவிருந் தாக வல்விரைந்து கடவுமதி பாக வெள்வேல் வென்றடு தானை வேந்தனொடு நாளிடைச் சேப்பி னூழியி னெடிதே. இதுவுமது. உரை : பாகனே, வெள்ளிய வேலேந்தி எதிர்த்தோரை வஞ்சி யாது வெல்லுகின்ற தானையினையுடைய அரசனோடு இடைச்சுரத்து ஒருபொழுது தங்கினும், அஃது ஊழியினும் நெடிதாய்த் தோன்றுதலின், ஆராய்ந் தணிந்த இழையினை யுடைய அரிவையாவாட்கு மிக்க விருந்தாகிச் சென்று எய்து மாறு மிக விரையத் தேரைச் செலுத்துவாயாக என்றவாறு. காதலன் விரும்பும் இழையினையே தேர்ந்தெடுத் தணியும் கற்புவழிப் பொற்பும் அறிவும் விளங்கத் தெரியிழை அரிவை என்றார். பெருமை நல்கும் விருந்து, பெருவிருந்து எனப்பட்டது; “விருந்தின் துணைத்துணை வேள்விப்பயன் 1” எனத் திருவள்ளு வர் கூறுவர். இடைச்சுரத்தே ஒருநாள் சேப்பின் என மாறுக. காதல் வயப்பட்ட இருபாலார்க்கும் பொதுவாதலால், ஊழியின் நெடிதே எனப் பொதுப்பட மொழிந்தார். விருந்தெனில் விரும்பும் திருந்திய மனையறத்தினள் என் பான், அரிவைக்குப் பெருவிருந்தாக என்றும், வேட்கை வயத்த ராயி னார்க்கு அது தணியாத சிறுபொழுதும் பேரூழியின் நெடிதாகத் தோன்றுதல் இயல்பாதலின், நாளிடைச் சேப்பின் ஊழியின் நெடிதே என்றும் கூறினான். “அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும், முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள் 2” என்றும், “விருந்தயர் விருப்பினள் வருந்தும் 3” என்றும் தலைவியது விருந்தயர் மாண்பு விதந்து கூறப்படுவது காண்க. “ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார், வருநாள் வைத்து ஏங்கு பவர்க்கு 4” என்று திருவள்ளுவர் குறிப்பது ஒப்பு நோக்கத் தகுவது. இடையே யாண்டும் நில்லாது போதலே செயற்பாற் றென்பதாம். “வேந்துவிடு தொழிலொடு செல்லினும், சேந்துவர லறியாது செம்மல் தேரே 1” என்றார் பிறரும். “வினை வயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை, இடைச்சுர மருங்கில் தவிர்குதல் இல்லை, உள்ளம் போல உற்றுழி யுதவும், புள்ளியல் கலிமா உடைமை யான 2” என்பது தொல்காப்பியம். (2) 483. ஆறுவனப் பெய்த வலர்தா யினவே வேந்துவிட் டனனே மாவிரைந் தனவே முன்னுறக் கடவுமதி பாக நன்னுத லரிவை தன்னலம் பெறவே. இதுவுமது. உரை : பாக, யாம் செல்லும் நெறி அழகுறுமாறு மலர்கள் மலர்ந்து பரவின : வேந்தனும் வினைமுற்றி மீண்டனன்: தேரிற் பூட்டிய மாவும் விரைந்து செல்லுவவாயின. ஆகலின், நல்ல நெற்றியினை யுடைய அரிவை தனது நலமுற்றும் பெறு தற்பொருட்டுத் தேரை முற்படச் செலுத்துவாயாக என்றவாறு. தேர் விரைந்து இனிது செல்லுதற்கு வழியருமை இடையீடு செய்யும் என்பது பற்றி, ஆறு வனப்பு எய்தவும் தேர் இனிது செல்லவும், அலர்தாயின என்றார்; எனவே, தலைமகட்குக் குறித்த காலவரவும் காட்டியவா றாயிற்று; “நன்கலம் களிற்றொடு நண்ணா ரேந்தி, வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழி மொழிந்து, சென்றீ கென்ப வாயின் வேந்தனும், நிலம்வகுத் துறாஅ ஈண்டிய தானையொடு, இன்றே புகுதல் வாய்வது நன்றே 3” என்று பிறாண்டும் கூறுதல் காண்க. வினைமேற் சென்ற விலங்குகள் மனைக்குரிய மீளும் நெறியில் நிறுத்தியவழிப் பாகர் செலுத்த வேண்டாதே விரைந்து செல்லுமாகலின், மா விரைந் தனவே என எடுத்தோதுவா ராயினர். நெறியும் பிரிந்துழிப் போலன்றி மலர் பரந்து வனப்பிற் றாகலினாலும், விரைய வாராது தாழ்த்தமைக்கு ஏதுவாகிய வேந்தன் வினைமுற்றினமையாலும், இனித் தகைப்பன இல்லை யென்பான், முன்னுறக் கடவுமதி என்றான். “வேந்தனும் வெம்பகை தணிந்தனன் தீம்பெயற், காரும் ஆர்கலி தலைஇயின்று தேரும், ஓவத் தன்ன கோபச் செந்நிலம், வள்வா யாழி யுள்ளுறு புருளக், கடவுக காண்குவம் பாக 1” என்றார் பிறரும். நலனிழந்து மெலிந்தனள் எனப் பாணர் போந்து தூது கூறக் கேட்டுளா னாகலின், நன்னுதல் அரிவை தன்னலம் பெற என்றான். “தண்பதக் காலை, வரினும் வாரா ராயினும் ஆண்டுஅவர்க்கு, இனிதுகொல் வாழி தோழி எனத்தன், பல்லிதழ் மழைக்கண் நல்லகம் சிவப்ப, அருந்துய ருடையள் இவளென விரும்பிப், பாணன் வந்தனன் தூதே 2” எனத் தலைவன் கூறுதல் காண்க. (3) 484. வேனி னீங்கக் கார்மழை தலைஇக் காடுகவின் கொண்டன்று பொழுதே பாடுசிறந்து கடியக் கடவுமதி பாக நெடிய நீடினம் நேரிழை மறந்தே. இதுவுமது. உரை : பாகனே, வேனிற் பருவத்து வெம்மை நீங்கக் கார்ப்பருவம் போந்து காலமழையினைப் பெய்தலால் காடு அழகுகொள்வ தாயிற்று; ஆதலால், நேரிய இழையினையுடைய காதலியை மறந்து நெடிது தாழ்த்தன மாகலின், தேரின் பெருமை சிறக்க விரையச் செலுத்துக என்றவாறு. முதலொடு கருவுக்கும் ஒற்றுமை யுண்மையின், வினைமுதல் வினையே யாயிற்று. செய்தெனெச்சம் காரணப் பொருட்டு. சிறக்க என்பது திரிந்து நின்றது. பாடு, பெருமை; “பாடு ஊன்றும் களிறு 3” என்றாற் போல; போரிடை யுழந்தும், விரைந்த செலவால் கட்டு நெகிழ்ந்து வலிகெடாமை தேர்க்குப் பாடு என அறிக. பாடு, ஒலியுமாம். கடிய, விரைவுப் பொருட்டாய கடியென்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம். வினைக்குரிய சூழ்ச்சி நிலவிய தலைவன் உள்ளத்தில், வினை முடிந்தமையால் வீற்றிருத்தற் குரிய தலைவியது நேரிய இழை யணிந்த திருவுருவம் நின்று காட்சி வழங்குதலின், நேரிழை என்று ஒழிந்தார். வேனில் நீங்கும் கார்ப்பருவ வரவில், வருவல் எனக் குறித்துச் சென்ற தான், அது வந்தெய்தியவழியும், வினை முடியாமையான் தாழ்த்துச் செல்வதுபற்றிக் காடு கவின் கொண்டன்று பொழுது என்றும், கார்ப்பருவத் தொடக்கத்தே வரற்பாலோன், அது கொண்டபின் வருதலின், நெடிய நீடினம் நேரிழை மறந்தே என்றும், வரவு தாழ்த்தமையான் ஆற்றாது வருந்துவாட்குத் தேரினது ஒலி கேட்பின் அஃது அவ் வாற்றாமை தீரும் வாயிலாம் என்பான், பாடு சிறந்து என்றும் கூறினான். (4) 485. அரும்பட ரவல மவளுந் தீரப் பெருந்தோ ணலம்வர யாமு முயங்க ஏமதி வலவ தேரே மாமருண் டுகளு மலரணிப் புறவே. இதுவுமது. உரை : பாக, பொறுத்தற் கரிய வருத்தத்தால் எய்தும் அவலத் தினை அவளும் நீங்க, அவளுடைய பெரிய தோள்கள் இழந்த நலம் மீண்டும் எய்தும் வகை யாமும் முயங்க, விலங்கினம் மருட்சி யுற்றுத் திரியும் மலர்களால் அழகு பெற்ற முல்லைக் காட்டில் தேரைச் செலுத்துக என்றவாறு. அரும்படர், பொறுத்தற் கரிய பிரிவுத்துன்பம்; அவலம் அது காரணமாகப் பிறக்கும் மென்மை; “அரும்படர் அவல நோய் ஆற்றுவ ளென்னாது 1” என்றவிடத்து, “அரிய நினைவை யுடைய அவலத்தைச் செய்யும் காமநோய்” என்பர் நச்சினார்க் கினியர். தோளுக்குப் பெருத்திருத்தல் நலமாதல் பற்றி, பெருந் தோள் நலம்வர என்றார். புல்லும் இலையும் நீருமாகிய உணவு மிகப் பெற்றுப் பசிதீர உண்டு மகிழ்ச்சியால் மைந்துற்றுத் துள்ளித் திரியும் விலங்கின் செய்தியை மா மருண்டு உகளும் எனச் சிறப்பித்துரைத்தார். செலுத்தியவழித் தான் அவளுடைய கூட்டம் எய்துதலின், அவள் அவலம் தீருமாறும், தோள்கள் நலம் பெறுமாறும் ஒருதலையாதல் நோக்கி, ஏமதி வலவ தேரே என்றான். கார்ப்பெயலால், உணவும் நீரும் தேடித் திரியும் வருத்தமின்றி மாவினம் தாம் விரும்பிய புலம் சென்று விரும்பிய பிணையொடு கூடி மயங்குதலின், மா மருண்டு உகளும் என்றான். அவலம், கண்டார்க்கு இரக்க முண்டாம்வகை மேனி மெலிந்து காட்டும் நிலையாதலால் அது தன்கண் தோன்றிய இளிவரல் பற்றிப் பிறந்தமையின், அரும்படர் அவலம் என்றானாம். (5) 486. பெரும்புன் மாலை யானாது நினைஇ அரும்பட ருழத்தல் யாவ தென்றும் புல்லி யாற்றாப் புரையோட் காண வள்புதெரிந் தூர்மதி வலவநின் புள்ளியற் கலிமாப் பூண்ட தேரே. இதுவுமது, உரை : நெடிய கழியும் புல்லிய மாலைக்கண் இடையறாது நினைந்து பொறுத்தற்கரிய துயருழத்தல் வேண்டா; நாடோ றும் முயங்கியவழியும் பிரிவு ஆற்றாமைக் கேதுவாகிய பேரின் பத்தை நல்கும் காதலியைக் காண்டற்கு, பாகனே, நின் பறவை போலும் நிலம் தீண்டாத செலவினை யுடைய கலித்த குதிரை பூட்டிய தேரை வார்களின் வகையினைத் தேர்ந்து செலுத்துக என்றவாறு. மாலைப்போது எய்துந்தோறும் காதலரைப் பிரிந்து உறை வோர்க்கு நெடிதாய்த் துன்புறுத்தும் இயல்புடைமைபற்றிப் பெரும்புன்மாலை எனப்பட்டது. “அருஞ்சுரம் நீந்திய வருத்த மொடு கையற்றுப், பெரும்புன் மாலை புலம்புவந் துறுதர 1” எனப் பிரிந்தேகும் தலைமகனும், “எல்லை பைபயக் கழிப்பி முல்லை, அரும்புவாய் அவிழும் பெரும்புன் மாலை 2” எனப் பிரிந் துறையும் தலைமகளும் குறித்தல் காண்க. பெருமை, ஈண்டு நெடுமை மேற்று. அயரா நினைவு என்பது தோன்ற ஆனாது நினைஇ என்றார். யாவது, ஈண்டுப் பயனின்மை குறித்து நின்றது. புல்லி, என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. ஆற்றாப் புரையோள், ஆற்றாமைக் கேதுவாகிய புரையோள். புரை, உயர்வு; ஈண்டு. “புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய்ப்” பெருகுதல். வள்பு, குதிரையைச் செலுத்தும் விசை வார். பெரிதும் இன்பம் தருதற்குரியபொழுதாயினும், காதலரை இன்மையின், புல்லென்று தோன்றுதலின், பெரும்புன் மாலை என்றும், செறியுந்தோறும் பேரின்பம் பிறத்தலால் ஆராமையும், அதனால் ஆற்றாமையும் நிகழ்தல் பற்றிப் புல்லி ஆற்றா என்றும், நவில்தொறும் நூல்நயம் போலப் பயில்தொறும் இன்பம் தரும் பண்புடைமையின், புரையோள் என்றும் கூறினான். வினை முற்றி மீள்கின்றான், தலைமகளைக் காண்டற்கு எழுந்த பெரு விதுப்பினால் காண என்றவன், விரைந்து செல்வதே பொருளாகப் பாகனை முடுகுதலால், வள்பு தெரிந்து ஊர்மதி என்றும், தெரிந்து இயக்கியவழிக் குதிரை விரைந்து செல்லும் இயல்பின என்பதைப் புள்ளியற் கலிமா என்றும் கூறினான். “வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்புஆய்ந்து, இயக்குமதி வாழியோ கையுடை வலவ 1” எனப் பிறரும் கூறுதல் காண்க.(6) 487. இதுமற் பிரிந்தோ ருள்ளும் பொழுதே செறிதொடி யுள்ள முவப்ப மதியுடை வலவ வேமதி தேரே. இதுவுமது. உரை : காதலரைப் பிரிந்தோர் அவரை நினைந்து வருந்தும் பொழுது இதுவாகலின், அறிவுடைய பாகனே, செறிந்த தொடியினையுடையாள் தன் நெஞ்சம் உவக்குமாறு தேரைச் செலுத்துவாயாக என்றவாறு. இப்பொழுதின்கண் பிரியப்பட்டாரிடம் சென்று எய்தா விடின், அவர் பிரிவாற்றாது இறந்துபடுவ ரென்பது ஒழிய நின்றமையின், மன்: ஒழியிசை. “காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்கனைந்து, கூதிர்நின் றன்றால் பொழுதே 1” என்றார் பிறரும். செறிதொடி: அன்மொழித்தொகை. உள்ளிய ஒன்று உள்ளிய அப்பொழுதிலே எய்தப்பெறின் உள்ளியார் உள்ளம் கழிபேர் உவகை எய்துவது ஒருதலை யாதலின், உள்ளம் உவப்ப என்றார். உள்ளிய பொருள் எய்துதலின், உவப்ப என்றான். மதியுடை வலவ என்றான், அவன் குதிரைகளின் ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியையும், கந்தும், மறமும் முதலிய இயல்பு களையும், வண்ணம், தோற்றம், சுழிநிலை, உறுப்பியல் முதலிய இலக்கணங்களையும் முற்றவும் கற்றுத் துறைபோகியோ னாதலின். “நப்புலந் துறையும் எவ்வம் நீங்க, நூலறி வலவ கடவுமதி 2” என்றும், “நூல்நவின்ற பாக நீ நொவ்விதாச் சென்றீக 3” என்றும் பிறரும் கூறுப. (7) 488. கருவி வானம் பெயல்தொடங் கின்றே பெருவிறற் காதலி கருதும் பொழுதே விரியுளை நன்மாப் பூட்டிப் பருவரல் தீரக் கடவுமதி தேரே. இதுவுமது. உரை : தொகுதியையுடைய மேகம் மழை பெய்தலைத் தொடங் கிற்று; பெருமை சிறந்த காதலியாவாள் நம்மை நினைந்து வருந்தும் பொழுதும் இதுவாகலின், அவள் அவ்வருத்தம் நீங்குமாறு விரிந்த தலையாட்டம் அணிந்த நல்ல குதிரை களைப் பூட்டித் தேரைச் செலுத்துவாயாக என்றவாறு. கருவி, தொகுதி. பெருவிறல், பெரிய திண்மையமைந்த கற்பின் மேற்று. கருதியவழி எய்தும் துன்பத்தைப் பருவரல் எனப் பின்னர்க் குறித்தலின், கருதும் எனக் குறித்தொழிந்தார். கடவு வதன் பயன் காதலி தன் பருவரல் தீர்தல் என்பது தோன்ற, பருவரல் தீர என்றார். மதி: முன்னிலையசை. சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. சுட்டு வருவிக்கப்பட்டது. தான் வற்புறுத்துச் சென்ற பருவம் எய்திற் றாகலானும், அது நோக்கி அவள் ஆற்றியிருந்து வருந்துதலானும், கருதும் பொழுது என்றும், பருவரல் தீர என்றும் தன் சொல் தேறி ஆற்றியிருந்த வன்மை தோன்ற, பெருவிறல் என்றும் கூறினான். உளை, பிடரிமயிர் என்றும் உரைப்ப. “விரியுளை நன்மா கடைஇப், பரியாது வருவர் 1” என்றும், “விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா 2” என்றும் பிறரும் கூறினர். (8) 489. அஞ்சிறை வண்டி னரியின மொய்ப்ப மென்புல முல்லை மலரு மாலைப் பையு ணெஞ்சிற் றைய லுவப்ப நுண்புரி வண்கயி றியக்கிநின் வண்பரி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே இதுவுமது. உரை : பாகனே, அழகிய சிறகுகளை யுடைய வண்டின் அழகிய கூட்டம் சூழ்ந்து ஒலிக்க, மென்புலங்களில் வளரும் முல்லைகள் மலரும் மாலைப்பொழுதின்கண், வருத்தமுற்ற நெஞ்சினை யுடைய தையலாவாள் நம்வரவு கண்டு மகிழும் வண்ணம், நுண்ணிய புரிகளையுடைய வளவிய கயிற்றினை இயக்கி, நின்னுடைய வளவிய குதிரைகள் பூட்டிய நெடிய தேரினை விரையச் செலுத்துக என்றவாறு. அரியினம், வண்டின் கூட்டம். “அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் 3” என்றார் பிறரும். வளன், விரைந்த செலவால் குளம்பு இடையூறு எய்தாவகைக் கால் காப்புடைமை; “கட்டளைப் புரவி சூழ்ந்து கால்புடை காப்ப ஏவி 4” என்பத னாலும் அறிக. கதி, சாரி, பொரு முரணாற்றல் முதலியவற்றை வளன் என்றார் என்றுமாம். மாலையம்பொழுது கண்டு ஆற்றாது வருந்துகின்றாள் என்பான், பையுள் நெஞ்சின் என்றும், விரைந்து சென்றவழி எய்தும் கூட்டத்தை இன்றியமையாள் என்பான் அதற்கு அவள் செய்து கொள்ளும் ஒப்பனையை விதந்து, தையல் என்றும் கூறினான். வண்கயிறு இயக்கிக் கடவுமதி என்றான், வண்பரி நெடுந்தே ராகலின். “வலவன் வள்புவலித்து ஊரி னல்லது முள்ளுறின், முந்நீர் மண்டிலம் ஆதி யாற்றா, நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர் 1” என்றார் பிறரும். (9) 490. அந்தீங் கிளவி தான்றர வெம்வயின் வந்தன்று மாதோ காரே யாவயின் ஆய்தொடி யரும்படர் தீர ஆய்மணி நெடுந்தேர் கடவுமதி விரைந்தே2. இதுவுமது. உரை : அழகிய இனிய சொற்களையுடைய காதலியை நாம் எய்துதற்பொருட்டுக் கார்ப்பருவம் இப்போது இங்கே வந்தது; அவ்விடத்தே ஆய்ந்தணிந்த தொடியையுடைய அவள் எய்தி வருந்தும் அரிய நோய் நீங்குமாறு தெளிந்த மணி கட்டிய நெடிய தேரை விரையச் செலுத்துவாயாக என்றவாறு. அந்தீங்கிளவி, ஆய்தொடி என்பன தலைமகளைக் குறித்து நின்றன. தருதல், ஈண்டு எய்துவித்தல்; அஃதாவது, இதுகாறும் மேற்கொண்டிருந்த வினையையே நினைந்திருந்த உள்ளம் அது முடியவும், மறந்திருந்த தலைமகளை நினைப்பித்தல். கார், அந்தீங்கிளவியை எம்வயின் தர வந்தன்று என இயைக்க. மாதும் ஓவும் அசை. ஆய் தொடி: சுட்டுப்பெயர் மாத்திரையாய் வந்தது. படர், பிரிவின்கண் பெருகி நிற்கும் காமநோய். கார் வந்தன்று, இனி ஈண்டு நீடுதல் நன்றன் றாகலின், தேரைக் கடவுமதி என முடிக்க. கார்ப்பருவ வரவில் வருகுவல் எனக் கூறிப் போந்த தன் சொல்லைத் தேறி யிருக்கும் தலைமகள், கார் தோன்றக் கண்ட தும், “வருங்கொல் தோழிநம் இன்னுயிர்த் துணையென 3” இனிய சொற்களால் தன் வரவு நோக்கி நிற்பள் என்பது நினைந்து பாகற்குக் கூறுகின்றா னாகலின், அந்தீங் கிளவி என அவள் சொற்களைச் சிறப்பித்தும், அவனால் நோக்கப்படும் கார்முகில், அவளை நினைப்பித்து விரைந்து சென்று அவளை எய்துமாறு அவன்உள்ளத்தைத் துரத்துதலின், வந்தன்று மாதோ காரே என்றும், இனி விரைந்து சென்று அவளை எய்துதலன்றிச் செய்வது பிறிதில்லை என்பான், நெடுந்தேர் கடவுமதி விரைந்து என்றும் கூறினான். கார்வரவு காணின் அவட்கு உளதாகிய வருத்தம் பொறுத்தற் கரிதாம் என்றற்கு அரும்படர் என்றும், தேர் சென்று சேருமுன் நம் வரவைத் தேரின் மணியோசை சென்று இசைக்க வேண்டும் என்றற்கு ஆய்மணி நெடுந்தேர் என்றும் சிறப்பித் தான். “வல்லே, கழலொலி நாவின் தெண்மணி கறங்க, நிழ லொளிப் பன்ன நிமிர்பரிப் புரவி, வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பாய்ந்து, இயக்குமதி வாழியோ கையுடை வலவ 1” என்று பிறரும் கூறுதல் காண்க. 50. வரவுச்சிறப்புரைத்த பத்து இது வினைவயிற் பிரிந்த தலைமகன் மீண்டு போந்த விடத்து, அவன் தலைவிக்காதல், அவன்வரவு கண்ட தோழி தலைமகட் காதல், தோழி அவனுக்காதல் நிகழ்த்தும் கூற்றுக்களால், அவன்வரவான் உளதாய சிறப்புத் தோன்றப் பாடிய பாட்டுக் களின் தொகுதி யாகலின், இப் பெயர்த்தாயிற்று. 491. காரதிர் காலையா மோவின்று நலிய நொந்துநொந் துயவு முள்ளமொடு வந்தனெம் மடந்தைநின் னேர்தர விரைந்தே. இது, வினைமுற்றிப் புகுந்த தலைமகன் தலைவிக்குச் சொல்லியது. உரை : மடந்தையே, கார்முகில் திரண்டு முழங்கும் கார்ப்பருவம் போந்து இடையீடின்றி வருத்துதலால் நோய் மிக்கு உழலும் நெஞ்சமொடு, நின்னுடைய அழகு துணைசெய்ய, யாம் விரைந்து போந்தேம்காண் என்றவாறு. கார்அதிர் காலை, கார்முகில் திரண்டு எழுந்து முழங்கி மழைபெய்யும் கார்ப்பருவம், ஓவுதல், இடைவிடுதல். “இன்றி யென்னும் வினையெச்சம், செய்யுளாகலின், இன்று 1” என வந்தது. அடுக்கு, மிகுதிப்பொருட்டு. உயவுதல், வருந்துதல். மடந்தை, ஈண்டுப் பருவமுணர்த்தாது பெண்பாற் பெயராய் நின்றது. அது தான் குறித்த பருவமாதலாலும் அது தொடங்கிய பொழுதின்கண் வினை முற்றாமையாலும் பெரிதும் வருந்தினேன் என்பான், ஓவின்று நலிய என்றும், பருவ வரவிற்கும், வினை முற்றாமைக்கும் இடையிற் கிடந்து அலமருதலின், நொந்து நொந்து உயவும் உள்ளமொடு என்றும், இவ்வாற்றால் ஆற்றாது வருவேனை, மாவும் புள்ளும் மலரும் நின் அழகு தோற்றுவித்து ஆற்றுவித்தன என்றற்கு, நின் ஏர்தர என்றும், நெஞ்சினை யுளப்படுத்துக் கூறலின் வந்தனெம் என்றும் கூறினான். (1) 492. நின்னே போலு மஞ்ஞை யாலநின் நன்னுத னாறு முல்லை மலர நின்னே போல மாமருண்டு நோக்க நின்னே யுள்ளி வந்தனென் நன்னுத லரிவை காரினும் விரைந்தே. இதுவுமது. உரை : நல்ல நெற்றியினையுடைய அரிவையே, நின்னை ஒக்கும் மயில்கள் ஆலுதலாலும், நின் நல்ல நெற்றியின் மணம் கமழும் முல்லைகள் மலர்தலாலும், நின்னைப் போலும் மான்கள் மருண்டு நோக்குதலாலும் வானில் எழுந்த மேகத்தினும் விரைய யான் நின்னை நினைந்து போந்தேன் என்றவாறு. ஆலுதல், ஈண்டு உவமம் அன்று. மான்களின் விழிச் சுழற்சி மருண்டு நோக்குதல் போறலின், மருண்டு நோக்க என்றார்; மருண்ட நோக்கம் எனச் சிறப்பித்தலின், மா வென்னும் பல பொருள் ஒரு சொல் மானினத்துக்காயிற்று. மஞ்ஞை சாயலுக்கும், முல்லை நுதல் மணத்துக்கும், மான், மருண்ட நோக்கத்துக்கும் உவமம். ஏகாரங்கள் தேற்றம் எனினுமாம். இன், உறழ்ச்சி. முல்லைப் பூவின் மணம் மகளிர் நுதற்கண் கமழ்தல், “பூத்த முல்லைப் பசுமுகைத் தாது, நாறும் நறுநுதல் அரிவை 1” என்றார் பிறரும். ஒருபால் மயிலும் ஒருபால் முல்லையும் ஒருபால் மானின மும் தலைமகளின் சாயல் முதலியவற்றைக் காட்டி அவளை நினைப்பித்தலின், காண்டல் வேட்கை மீதூர நின்னே உள்ளி வந்தனென் என்றும், அவன் வரவு கண்ட உவகையால் நுதல் ஒளி சிறந்து விளங்குதல் பற்றித் தலைவியை நன்னுதல் அரிவை என்றும், கார்ப்பருவத் தொடக்கத்தே வருகின்றா னாகலின், காரினும் விரைந்து என்றும் கூறினான். (2) 493. ஏறுமுரண் சிறப்ப வேறெதி ரிரங்க மாதர் மான்பிணை மறியொடு மறுகக் கார்தொடங் கின்றே காலை நேரிறை முன்கைநின் னுள்ளியாம் வரவே. இதுவுமது. உரை : நேரிய தொடியணிந்த முன்கையினை யுடையாய், யாம் நின்னை நினைந்து வருமிடத்து ஆமாவின் நல்லேறுகள் மாறுபாடு மிக்குச் சிலைக்க, அவற்றிற் கெதிராக விசும்பில் இடியேறு முழங்க, காதலையுடைய பெண்மான்கள் தம் கன்றோடு மயங்கித் திரியக் கார்ப்பருவம் தொடங்குவ தாயிற்று என்றவாறு. ஏறு, முன்னது ஆனேறும் பின்னது இடியேறுமாம். ஆனேறு என்றது ஈண்டைக்குச் சிறப்புடைய காடுறையும் ஆமாவின் ஏறெனக் கொள்க, “ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று, இழுமென இழிதரும் அருவி 2” என்றும், “விசும்பின், ஏறெழுந்து முழங்கினும் மாறெழுந்து சிலைக்கும், கடாஅ யானை 3” என்றும், பிறரும் கூறுவது காண்க. இரங்குதல், முழங்குதல். இடியொலி கேட்டு அச்சுற்ற ஏற்றினம் குளிர் மிகுதியால் முரண் மிக்குச் சிலைத்தலின், ஏறு முரண் சிறப்ப என்றார். “வானேறு வானத் துரற வயமுரண், ஆனேற் றொருத்தல் அத னோடு எதிர்செறுப்ப 1” என்றார் பிறரும். மறியாகிய கன்றுகளைப் பிரியாது உகளுதலின், மாதர் மான்பிணை என்றார். பண்டு பிரிந்த காலத்துக் கார்ப்பருவ வரவில் வருகுவல் என வற்புறுத்திச் சென்றா னாகலான், தன் வரவும் கார்வரவும் ஒப்ப நிகழும் நிகழ்ச்சியால் தான் சொல்லிய சொல் தவறாது வந்தமை யுணர்த்தித் தலைமகளை மகிழ்வித்தல் தலைவன் கருத்தாகலின், கார் தொடங்கின்றே காலை என்றான். கார்தோன்று முன்பே தான் வினை முடித்துத் தலைமகளை நினைந்து போந்தமை வற்புறுத்தற்கு நின் உள்ளி யாம் வரவே காலை கார் தொடங்குவதாயிற்று என்றானாம். யாம் வரக் கார்தொடங் கின்று என்றது, தான் கார்ப்பருவம் தொடங்குவதன் முன்பே மீண்டு போந்தமை கூறியவாறு. (3) 494. வண்டுதா தூதத் தேரை தெவிட்டத் தண்கமழ் புறவின் முல்லை மலர இன்புறுத் தன்று பொழுதே நின்குறி வாய்த்தனந் தீர்கினிப் படரே. இதுவுமது. உரை : வண்டுகள் தேனுண்டு பாடவும், தேரைகள் ஒலித்தலைச் செய்யவும், தண்ணிதாய் மணம் கமழும் காட்டில் முல்லைகள் மலரவும், இக் கார்காலத்து மாலைப்போது இன்பம் செய்வ தாயிற் றாகலானும், நீ குறித்தவாறே யாம் தப்பாமல் வந் தெய்தினமையானும் இனி வருந்துதலை ஒழிக என்றவாறு. வண்டு பாடுதலும், தேரை தெவிட்டுதலும், முல்லை மலர் தலும் கூடினாரை இன்புறுத்துவ வாயினும், பொழுதின் மேல் வைத்துக் கூறியது, நிகழ்ச்சிக் களனாம் இயைபுண்மை பற்றி யென்க. காலமும் இடமாம் குறிப்பினையுடைத் தாகலின்; “வினைசெய் யிடத்தின் நிலத்தின் காலத்தின், அனைவகைக் குறிப்பின் தோன்று மதுவே 1” என்று ஆசிரியர் விதித்தமை உணர்க. வினைமுற்றி மீண்ட தலைமகன் தலைவியொடு கூடி இருக்கையில் மாலைப்போது, வண்டின் இசையும், தேரை ஒலியும், மலர்ந்த முல்லையின் நறுமணமும் கொண்டு விளங்கு வது கண்டு உள்ளம் காதல் சிறப்பது உணர்ந்து உரையாடுகின்றா னாகலின், இன்புறுத்தன்று பொழுதே என்றான். தலைவன் பிரிவின்கண் மாலைப்போது தன் உள்ளத்தில் காமம் மிக்க கழிபடர் விளைத்துத் துன்புறுத்தினமை நினைந்து தலைமகள் நுதலொளி வேறுபட்டாளாக, தான் அவள் குறித்த கார்ப்பருவ வரவில் வாராது சொல் வேறுபட்டதாக நினைந்து வருந்து கின்றாள் போலும் எனக்கருதி அவ் வேறுபாடு நீக்குகின்றா னாகலின், நின் குறி வாய்த்தனம் என்றும், தீர்க இனிப் படரே என்றும் கூறினான். (4) 495. சென்னில மருங்கிற் பன்மலர் தாஅய்ப் புலம்புதீர்ந் தினிய வாயின புறவே பின்னிருங் கூந்த னன்னலம் புனைய உள்ளுதொறுங் கலிழு நெஞ்சமொடு முள்ளெயிற் றரிவையாம் வந்த மாறே. இதுவுமது. உரை : முள்போற் கூரிய பற்களையுடையாய், யாம் பிரிந்து சென்ற நிலத்திடத்தே காடுகள் பலவாய மலர்கள் பரந்து விளங்கினமையால், அவற்றைப் பின்ன லிடுதற்குரிய கரிய நின் கூந்தல் நல்ல அழகுறப் புனைதற்கு, நினைக்குந்தோறும் தனிமை வருத்த வருந்திய மனத்தோடு யாம் வந்தமையால், அவை அத் தனிமை நீக்கி இனிமை செய்வன வாயின என்ற வாறு. புலம்பு தீர்ந்து இனிய வாயின புறவே என்றதனால், பிரிந்தவழி அவை புலம்புதந்து வருத்தினமை பெற்றாம். புறவு, தாஅய் வருத்தக் கலிழும் நெஞ்சமொடு வந்தமாறு தீர்ந்து இனிய என்று இயைக்க. இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. தீர்தல், தீர்த்தற் பொருட்டு. மாறு, மூன்றாவதன் பொருட்டாயதோர் இடைச்சொல். நின் கூந்தல் நலம் புனைய நினைக்குந்தோறும், நின் பிரிவால் உளதாகிய தனிமை வருத்த வருந்தி வந்தமையால், புறவு அத் தனிமை நீக்கி இன்புறுத்துவ வாயின என்பதாம். எனவே, சென்றுழி வருத்திய புறவு வரும்பொழுது இனிமை செய்வதாயிற் றென வரவுச் சிறப்பு உணர்த்தியவாறு. தலைமகளைப் பிரிந்து சென்ற போழ்து எதிரே கிடந்த நிலம் பல்வகைப் பூக்கள் மலர்ந்து விளங்கினமையின், தன் நெஞ்சம் அவளையே நினைந்தமை தோன்ற, பன்மலர் தாஅய் என்றும், நினைத்தற் குளதாய இயைபு இஃது என்பான், பின்னிருங் கூந்தல் நன்னலம் புனைய என்றும், நினைவு பன்முறை எழுந்தமை புணர்த்தற்கு, உள்ளுதொறும் என்றும், பிரிவால் உளதாய புலம்புறு தனிமை அந்நினைவு கைகூடற்கு இடனின்மை பற்றி வருத்தினமையால் நெஞ்சு கலுழ்ந்தது என்பான், கலிழும் நெஞ்சமொடு என்றும், இக் கூற்றைக் கேட்டு முறுவலித்து மகிழும் தலைவி நலம் வியந்து முள்ளெயிற் றரிவை என்றும், இப்போது அவ்வொப்பனையைச் செய்து உவகை மிகுவது தோன்ற, புலம்பு தீர்ந்து இனியவாயின புறவே என்றும் கூறினான். எனவே, சென்னில மருங்கில் பன்மலர் பரந்து விளங்கிய புறவு புலம்புதந்து இன்னாமை விளைவித்தமையும் இதனால் புலப்படுத்தா னாயிற்று என அறிக. (5) 496. மாபுதல் சேர வரகிணர் சிறப்ப மாமலை புலம்பக் கார்கலித் தலைப்பப் பேரமர்க் கண்ணி நிற்பிரிந் துறைநர் தோடுணை யாக வந்தனர் போதவிழ் கூந்தலும் பூவிரும் புகவே. இது, குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. உரை : பெரிய அமர்த்த கண்களையுடையாய், நின்னைப் பிரிந்து சென்று தங்கிய காதலர் நின் தோளுக்குரிய துணையாய், விலங்கினம் புதர்க்குட் புக்கு வதியவும், வரகுகள் பூங்கொத்து எடுத்துத் திகழவும், பெரிய மலைகள் இயங்குநரும் இயங்கு வனவும் இன்றித் தனிப்பவும், மழை முழக்கிட்டுப் பெயலால் நீர் பெருக்கெடுத்து அலைக்கவும் வந்தன ராகலின், பூக்களை விரும்பாது அவிழ்ந்துகிடந்த நின் கூந்தலில் அவற்றை விரும்பி யணிந்து புனைவாயாக என்றவாறு. மா வென்றது, ஈண்டு மானினங்களை; கார்காலத்தே புதர்களிடை வதிவன வாகலின், “மானேறு மடப்பிணை தழீஇ மருள்கூர்ந்து, கானம் நண்ணிய புதன்மறைந் தொடுங்கவும் 1” என்றார் பிறரும். வரகு கார்காலத்து மலர்ந்து விளைவதாகலின், வரகிணர் சிறப்ப என்றார். “செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த, கௌவை நாற்றின் காரிரு ளோரிலை, நவ்வி நாண்மறி கவ்விக்கடன் கழிக்கும், காரெதிர் தண்புனம் 2” எனச் சான் றோரும் கூறுப. முல்லை நிலத்தவர்க்கு வரகு உணவுப் பொருளு மாம். “கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே, சிறுகொடிக் கொள்ளே பொறிகிள ரவரையொடு, இந்நான் கல்லது உணவு மில்லை 3” என்பது காண்க. கற்புடை மகளிர் தம் கணவர் பிரிந்துழிப் பூவும் புனைவன வாய பிறவும் கொள்ளாராகலின், போதவிழ் கூந்தல் பூவிரும் புகவே என்றாள். “முல்லை, வைவாய் வான்முகை யவிழ்ந்த கோதை, பெய்வனப் பிழந்த கதுப்பு முள்ளார் 4” என்றும், “மெல்லென, மண்ணாக் கூந்தன் மாசறக் கழீஇச், சில்போது கொண்டு பல்குர லழுத்திய, அந்நிலை 5” என்றும் சான்றோர் கூறுதல் காண்க. பிரிந்தகாலைத் தலைமகன் குறித்த பொழுதும், தான் வற்புத்தி வந்ததும் கார்கால மாகலின், குறித்தாங்குத் தவறாது தலைவன் வரக் கண்ட தோழி, மகிழ்ந்து கார்வரவை விதந்து, மா புதல் சேர வரகு இணர் சிறப்ப, மாமலை புலம்பக் கார் கலித்து அலைப்ப என மொழிந்தாள். அது கேட்கும் தலைவி தன் கண்ணைப் பரக்க விழித்துக் கார்வரவை நோக்குவாள் போன்று காதலன் தேர் வருகையை நோக்குவது குறித்துப் பேரமர்க் கண்ணி என்றும், அக்காலை, இளையர் முற்படப் போந்து தலைவன் வரவு கூறவும், நிற்பிரிந்துறைநர் தோள் துணையாக வந்தனர் என்றும், அவரை வரவேற்றற்கு நீ நின்னை ஒப்பனை செய்து கோடல் வேண்டும் என்பாள், போதவிழ் கூந்தலும் பூ விரும்புக என்றும் கூறினாள். (6) 497. குறும்பல் கோதை கொன்றை மலர நெடுஞ்செம் புற்ற மீயல் பகர மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே பேரிய லரிவைநின் னுள்ளிப் போர்வெங் குரிசில் வந்த மாறே. இதுவுமது. உரை : பெரிய இற்கிழமை யுடைய அரிவையே, போரை விரும்பிப் பிரிந்து சென்ற தலைவன் நின்னை நினைந்து வந்தமையால், குறுகியவும் பலவு மாகிய கோதை போலும் பூக்களைக் கொன்றைகள் மலரவும், நெடிய செந்நிறத்தவாய் புற்றுக்கள் ஈயல்களை வெளியிடவும், குளிர்மிகுதியால் மாவினம் உணவினை வெறுக்கவும் ஆகிய கார்ப்பருவம் தொடங்குவதாயிற்று என்றவாறு. கொன்றை மாலைபோல மலர்வதாகலின், கொன்றை குறும்பல் கோதை மலர என்றார். “பேதையங் கொன்றைக் கோதைநிலை நோக்கி 1” எனப் பிறாண்டும் கூறுதல் காண்க. செம்மண்ணா லாய நெடிய புற்றாதல் பற்றி, நெடுஞ் செம்புற்றம் என்றும், கார்மழையால் அது நனைந்து நீர்நிறைதலின், உள்ளுறை யும் ஈயல் வெளிப்படுதலால், ஈயல் பகர என்றும் கூறினார்; “சிறுபுன் சிதலை சேண்முயன் றெடுத்த, நெடுஞ்செம் புற்றத் தொடுங்கிரை முனையின் 2” எனப் பிறரும் கூறினர். மழை மிகப் பெய்யுங்கால் மாவினம் மேயலை விரும்பாமையின், மா பசிமறுப்ப என்றார், “பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந் தென ....... மாமேயல் மறப்ப மந்தி கூர 3” என வருதல் காண்க. பெருமை, இல்லின்கண் இருந்து நல்லறம் புரிதலால் வரும் புகழ். “பேரிற் கிழத்தி யாகென 1” என்பது காண்க. கோதை, ஆகுபெயர். “மா பசி மறுப்ப” என்றதனால் ஏது வருவிக்கப் பட்டது; “மா மேயல் மறப்ப 2” என்றார் பிறரும். போரெனில் புகலும் மறவ னாகலின், போர்வெங் குரிசில் என்றும், கார்ப் பருவ வரவில் வருவல் என்று வற்புறுத்துச் சென்றவன் தப்பாது வந்தமையின், வந்தமாறே என்றும் கூறினாள். (7) 498. தோள்கவி னெய்தின தொடிநிலை நின்றன நீள்வரி நெடுங்கண் வாள்வனப் புற்றன ஏந்துகோட் டியானை வேந்துதொழில் விட்டென விரைசெல னெடுந்தேர் கடைஇ வரையக நாடன் வந்த மாறே. இதுவுமது. உரை : உயர்ந்த மருப்புக்களை ஏந்திய யானைகளையுடைய வேந்தன் வினைமுடித்து விடைதந்து விடுத்தானாக, விரைந்த செலவினை யுடைய நெடிய தேரைச் செலுத்திக்கொண்டு மலைநாடன் வந்தமையால், நின்னுடைய கவின் இழந்த தோள்கள் அக்கவின் பெற்று விளங்கின; நெகிழ்ந்து ஓடிய தொடிகள் அந்நிலையே யாப்புற நின்றன; பசந்திருந்த நீண்ட வரி பொருந்திய கண்கள் பசலை நீங்கி ஒளிமிக்கு அழகு திகழ்வவாயினகாண் என்றவாறு. ஏந்துகோட்டு யானை வேந்து என்றது, வேந்தனது மறமிகுதியும் வினையாண்மையும் தோன்ற நின்றது. தொழில் விடுதலாவது, வினை முடிந்தமையின், மேலே செயற்குரிய தொழில் வேறின்மையின் வினையாளர்க்கு விடை கொடுத்து அமைதல். வந்தமாறே என்றதனால் வாராவழி இருந்த நிலை வருவிக்கப்பட்டது. வினை முடித்தல்லது மீளுதல் இன்மையின், வேந்தன் தொழில் விட்டென என்றும், கூட்டம் எய்துவான் போந்தமை யின், வரையக நாடன் என்றும் கூறினாள். பிரிவின் கண் தலைமகட்குத் தோள் நெகிழ்ந்து தொடி கழன்றோட மெலிந் திருந்தமையும், நெடிய கண்கள் பசலையுற்று ஒளி மழுங்கி யிருந்தமையும் கண்டு வற்புறுத்து ஆற்றி வந்தாளாதலால், தலைவன்வரவு கண்டு பிறந்த தலைவியின் மெய்ந்நலத்தைத் தோள் கவின் எய்தின என்பது முதலியவற்றால் எடுத்து மொழிந்து தோழி இன்புறுத்துகின்றாள். (7) 499. பிடவம் மலரத் தளவம் நனையக் கார்கவின் கொண்ட கானங் காணின் வருந்துவள் பெரிதென வருந்தொழிற் ககலாது வந்தன ரானங் காதலர் அந்தீங் கிளவிநின் னாய்நலங் கொளவே. இதுவுமது. உரை : அழகிய இனிய சொற்களையுடையாய், நம் காதலர், நீ நின் அழகிய நலம் பெறுவதை உளத்தே கொண்டு, பிடவங்கள் மலர்தலைச் செய்ய, முல்லைகள் அரும்புகளை ஈன, கார்ப் பருவத்தால் அழகுபெற்ற காட்டினை நம் காதலியாவாள் காண்பளேல், அது தான் குறித்தபருவமாதல் கண்டு பெரிதும் வருந்துவளெனக் கருதி, மேல் செய்தற்கு வரும் தொழி லினையும் மேற்கொள்ளாது விடுத்துப் போந்தார்காண் என்றவாறு. நனைய, நனையென்னும் பெயரடியாகப் பிறந்த வினை. தளவம், செம்முல்லை. வருந்தொழில், மேல் செய்தல்வேண்டித் தோன்றும் பிறிது வினை; தொடர்ந்த வினையன்மை அகலாது என்றதனாற் பெறப்படும். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. வினையே ஆடவர்க்கு உயிர் எனினும் மனையுறை மகளிர்க்கு அவரே உயிராகையாலும், நின்மாட்டுள்ள காதல் மிகுதியாலும் அதனைவிட்டுப் போந்தார் என்பாள், வருந்தொழிற்கு அகலாது வந்தனரால் நம் காதலர் என்றாள். இதனை, அருந்தொழிற்கு அகலாது எனக் கொள்ளின், அஃது அவன் ஆண்மைக்கு மாசு தருவதாமென வுணர்க. வருந்தொழிற்கு அகன்றவிடத்து நின் ஆய்நலம் கெடும் என்பதை உள்ளத்திற் கொண்டமையால் வந்தனர் என்றது, “நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும், உண்ணா வுயக்கமொடு உயிர்செலச் சாஅய், இன்ன மாகவும் இங்கு நத்துறந்தோர், அறவ ரல்லர் எனப்பல புலந்து 1” தலைவி வருந்தினமை நினைப்பித்து, அவர் “பெரும்பேரன்பினர் 2” எனத் தோழி தன்கூற்றை வற்புறுத்தி மகிழ்வித்தவாறு. (9) 500. கொன்றைப் பூவிற் பசந்த வுண்கண் குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத் தொல்கவின் பெற்றன விவட்கே வெல்போர் வியனெடும் பாசறை நீடிய வயமான் றோன்றல்நீ வந்த மாறே. இது, வினைமுற்றி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. உரை : வெல்லுகின்ற போரினைச் செய்யும் அகன்ற நெடிய பாசறைக்கண்ணே தங்கிய, புலி போலும் ஆற்றலையுடைய தலைவ, நீ போந்தமையால், இவளுக்குக் கொன்றைப்பூப் போல் பசப்புற்றிருந்த மையுண்ட கண்கள், குன்றிடத்தே யுள்ள நெடிய சுனைக்கண் பூத்த குவளைமலர் போல் பழைய அழகைப் பெற்றனகாண் என்றவாறு. பசந்த கண்ணிற்குக் கொன்றைப்பூ உவமமாதலைக் “கொன்றை யம் பசுவீ, நம்போற் பசக்குங் காலை 3” எனப் பிறரும் கூறுவர். பண்டு பிரிவதற்கு முன்னே விளங்கியிருந்த நலம் என்றற்குத் தொல்கவின் என்றார். குறித்த பருவத்து முடியாது மேற் கொண்ட வினை சிறிது தாழ்த்தமையும் அதனால் தலைமகள் பெரிதும் ஆற்றாது மேனி வேறுபட்டமையும் குறிப்பால் தோன்ற, நீடிய என்று சுட்டினார். வயமான், புலி. “வரிகிளர் வயமான் உரிவை தைஇய, யாழ்கெழு மணிமிடற்று அந்தணன் 4” என்பத னாலும் அறிக. அவன் பிரிந்தவிடத்து நிகழ்ந்ததனைக் காட்டுவாள், வந்துழி மலர்ந்து தோன்றும் கொன்றைப்பூவினை உவமித்தாள். தொல் கவின் பெறுதற்குக் குன்றக நெடுஞ்சுனைக் குவளையைக் கூறினாள், உடம்பொடு புணர்த்தலால், பண்டு சுனை விளை யாடியும் சுனைப்பூக் குற்றும் நுகர்ந்த வின்பத்தினை நினை வுறுத்தற்கு. கூறவே, தலைமகள் நின் பிரிவால் மேனி வேறு படினும் தனக்குரிய மாண்புகளான “கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும்” முதலாயின வற்றைப் பண்டே போல் உடையளாய் விளங்குகின்றாள் என அவள் மாணலம் கூறி மகிழ்வித்தவாறாம். இத்தொகை தொகுத்தார், புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்; இத்தொகை தொகுப்பித்தார், யானைக்கட் சேய்மாந்தரஞ் சேரல் இரும்பொறையார். இந்நூலைத் தொகுக்குமிடத்துத் தொடக்கத்தே அகனைந் திணைக் குரிய இன்பவாழ்வில், புறத்தொழுக்கத்திற் பிரிந் தொழுகிய தலைமகன், தன் மனையகம் போந்து தலைமகளைக் கூடி நிகழ்த்தும் இன்பவுரையை மங்கல மரபினால் தோழி கூற்றாக முதற்கண் கோத்தது போல, இறுதிக்கண், பொருளும் அறமும் கருதிப் பிரிந்து பாசறையிடத்தும் பிறாண்டும் இருத்தலைச் செய்த தலைமகன் மீண்டுபோந்து தன் சொல் வழியே கற்புநெறி நின்று தான் குறித்த காலவரவு நோக்கித் தன் மனைக்கண்ணே ஆற்றியிருந்த தலைமகளைக் கூடி இன்புறும் மங்கலமரபே நிலைபெறத் தோழிகூற்றே வரக் கோத்திருப்பது குறிக்கொள்ளத் தக்க தொன்று. இதனால் இதுவும் இது போல் வனவு மாகிய தொகைநூல்களைச் சிறந்த குறிக்கோளும் முறையும் அடிப்படையாகக் கொண்டே சான்றோர் தொகுத்துள்ளனர் என அறிக. (10) பேராசிரியர், ஒளவை. சு. துரைசாமிப் பிள்ளை எழுதிய ஐங்குறுநூறு மூலமும் உரையும் முடிந்தன. ஐங்குறுநூறு பத்துக்களின் அகராதி அம்ம வாழிப் பத்து 23 அன்னாய்ப் பத்து 22 அன்னாய் வாழிப் பத்து 21 இடைச்சுரப் பத்து 33 இளவேனிற் பத்து 35 உடன்போக்கின்கண் இடைச் சுரத்து உரைத்த பத்து 39 எருமைப் பத்து 10 களவன் பத்து 3 கிழத்தி கூற்றுப் பத்து 7 கிழவற்கு உரைத்த பத்து 13 கிழவன் பருவம் பாராட்டுப் பத்து 42 கிள்ளைப் பத்து 29 குரக்குப் பத்து 28 குன்றக்குறவன் பத்து 26 கேழற் பத்து 27 சிறு வெண் காக்கைப் பத்து 17 செலவு அழுங்குவித்த பத்து 31 செலவுப் பத்து 32 செவிலி கூற்றுப் பத்து 41 ஞாழற் பத்து 15 தலைவி இரங்கு பத்து 34 தாய்க்கு உரைத்த பத்து 11 தெய்யோப் பத்து 24 தேர் வியங்கொண்ட பத்து 49 தொண்டிப் பத்து 18 தோழிக்கு உரைத்த பத்து 4, 12 தோழி கூற்றுப் பத்து 6 தோழி வற்புறுத்த பத்து 47 நெய்தற் பத்து 19 பருவம் கண்டு கிழத்தி உரைத்த பத்து 46 பாசறைப் பத்து 45 பாணற்கு உரைத்த பத்து 14 பாணன் பத்து 48 புலவிப் பத்து 5 புலவி விராய பத்து 9 புறவு அணிப் பத்து 44 புனலாட்டுப் பத்து 8 மகட் போக்கியவழித் தாய் இரங்கு பத்து 38 மஞ்ஞைப் பத்து 30 மறுதரவுப் பத்து 40 முன்னிலைப் பத்து 37 வரவு உரைத்த பத்து 36 வரவுச் சிறப்பு உரைத்த பத்து 50 வளைப் பத்து 20 விரவுப் பத்து 43 வெள்ளாங்குருகுப் பத்து 16 வெறிப் பத்து 25 வேட்கைப் பத்து 1 வேழப் பத்து 2 பாடல் முதற்குறிப்பு அகராதி அ அஞ்சிறை வண்டின் 489 அணங்குடைப் பனித் துறைத் 174 அணி நடை எருமை 96 அத்தச் செயலைத் 273 அத்த நீள் இடை 380 அத்தப் பலவின் 351 அம் சில் ஓதி 49 அம் தீம் கிளவி 490 அம்பணத்து அன்ன 43 அம்மவாழி கொண்க 139 அம்மவாழி தோழி - ,, அவிழ் இணர்க் 331 ,, ஊரன் நம் மறந்து 36 ,, ஊரன் வெம் முலை 39 ,, என்னதூஉம் 332 ,, காதலர் உள்ளார் 340 ,, காதலர் பாவை அன்ன 221 ,, கொண்கன் 114 ,, சாரல் இலை இல 338 ,, சிறியிலைக் குறுஞ் சினை 339 ,, சிறியிலை நெல்லி 334 ,, நம் ஊர் நளிந்து 222 ,, நம் ஊர் நிரந்து 228 ,, நம் ஊர்ப் பொய்கை ஆம்பல் 35 ,, நம் ஊர்ப் பொய்கைப் பூத்த 34 ,, நம் மலை நறுந் தண் 226 ,, நம் மலை மணி நிறம் 224 ,, நம் மலை வரை ஆம் 223 ,, நம்மொடு சிறுதினைக் 230 ,, நம்வயின் நெய்த்தோர் 335 ,, நம்வயின்பிரியலர் 336 ,, நம்வயின் மெய் உற 337 ,, நலம் மிக நல்ல ஆயின 120 ,, நலனே இன்னது ஆகுதல் 117 ,, நன்றும் எய்யாமையின் 119 ,, நாம் அழ நீல 116 ,, நாம் அழப் பல் நாள் 229 ,, நாளும் நல் நுதல் 227 ,, நென்னல் ஓங்கு திரை 113 ,, பல் மலர் நறுந் தண் 244 ,, பல் மாண் 115 ,, பாசிலைச்செருந்தி 112 ,, பாணன் சூழ் கழி 111 ,, பைஞ் சுனை 225 ,, மகிழ்நன் ஒண் தொடி 40 ,, மகிழ்நன் ஒரு நாள் 32 ,, மகிழ்நன் கடனன்று 31 ,, மகிழ்நன் தன் சொல் 38 ,, மகிழ்நன் நயந்தோர் 37 ,, மகிழ்நன் மருது உயர்ந்து 33 ,, யாவதும் 333 ,, யான் இன்று 118 அம்ம வாழி பாண எவ்வைக்கு 89 அம்ம வாழி பாண புன்னை 132 அம்ம வாழி வாழியோ மகிழ்ந 77 அரசு பகை தணிய 455 அரும் படர் அவலம் 485 அரும் பொருட் செய்வினை 302 அரும் பொருள் வேட்கையம் 359 அலங்கு இதழ் நெய்தல் 185 அலங்கு மலை பொழிந்த 220 அலமரல் ஆயமோடு 64 அவரை அருந்த மந்தி 271 அவரோ வாரார் தான் வந்தன்றே- ,, அம் சினைப் பாதரி 346 ,, எழில் தகை 347 ,, குயிற் பெடை 341 ,, சுரும்பு களித்து 342 ,, திணி நிலைக் 343 ,, நறும் பூங்குரவம் 344 ,, புதுப்பூ அதிரல் 345 ,, பொரிகால் மாஞ்சினை 349 ,, வலம் சுரி மராஅம் 348 ,, வேம்பின் ஒண் பூ 350 அவல்தொறும் தேரை 453 அவிர் தொடி கொட்ப 314 அழல் அவிர் நனந்தலை 326 அள்ளல் ஆடிய புள்ளிக் 22 அளியதாமே செவ்வாய் 284 அறம் சாலியரோ 312 அறம் புரி அரு மறை 387 அறம் புரி செங்கோல் 290 அறியாமையின் வெளி என 242 அறியேம் அல்லேம் அறிந்தனம் 240 அறு சில் கால அஞ்சிறைத் 20 அன்னாய் வாழி வேண்டு அன்னை- ,, அஃது எவன்கொல் 204 ,, உவக்காண் 206 ,, என் தோழி நனி நாண் 205 ,, என் தோழி பசந்தனள் 366 ,, என்னை 201 ,, கானவர் 208 ,, நம் ஊர்ப் 202 ,, நம் படப்பைப் தேன்மயங்கு 203 ,, நம் படப்பைப் புலவுச் சேர் 210 ,, நன்றும் 207 ,, நீ மற்று 209 அன்னை தந்தது ஆகுவது 247 அன்னையும் அறிந்தனள் 239 அன்னை வாழி வேண்டு அன்னை- ,, அவர் நாட்டு 106 ,, உதுக் காண் 101 ,, என் தோழி 107 ,, கழிய முண்டகம் 108 ,, நம் ஊர் நீல் நிறப் 102 ,, நம் ஊர்ப் பலர் 104 ,, நெல்தல் நீர்ப்படர் 109 ,, புன்னை பொன் நிறம் 110 ,, புன்னையொடு 103 ,, முழங்கு கடல் 105 ஆ ஆய் நலம் பசபப 318 ஆர்குரல் எழிலி 411 ஆள் வழக்கு அற்ற 329 ஆறு வனப்பு எய்த 483 இ இது என் பாவைக்கு இனிய 375 இதுமன் பிரிந்தோர் 487 இதுவே மடந்தை நாம் 415 இந்திர விழவில் பூவின் அன்ன 62 இரவினானும் இன் துயில் 173 இருங் கழிச் சேயிறா 188 இருஞ் சாய் அன்ன 18 இரு நிலம் குளிர்ப்ப 470 இலங்கு வளை தெளிர்ப்ப 197 இலங்கு வீங்கு எல்வளை 200 இளம் பிறை அன்ன 264 ஈ ஈர்ம் பிணவு புணர்ந்த 354 உ உடலினேன் அல்லேன் 66 உண்துறை அணங்கு 28 உயர்கரைக் கான்யாற்று 361 உயிர் கலந்து ஒன்றிய 419 உலறு தலைப் பருந்தின் 321 உள்ளார்கொல்லோ தோழி 456 உள்ளுதற்கு இனிய மன்ற 356 எ எக்கர் ஞாழல்- எக்கர் ஞாழல் அரும்பு முதிர் 146 எக்கர் ஞாழல் இகந்து படு 148 எக்கர் ஞாழல் இணர்படு 144 எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் 142 எக்கர் ஞாழல் சிறியிலைப் 145 எக்கர் ஞாழல் செருந்தியொடு 141 எக்கர் ஞாழல் நறுமலர்ப் 150 எக்கர் ஞாழல் புள் இமிழ் 143 எக்கர் ஞாழல் பூவின் அன்ன 149 எக்கர் ஞாழல் மலர் இல் 147 எக்கர் மாஅத்துப் புதுப் பூம் 19 எமக்கு நயந்து அருளினை 175 எரிக் கொடிக் கவைஇய 353 எரிகவர்ந்து உண்ட...அரிய 360 எரிகவர்ந்து உண்ட...சிறிது 324 எரிப்பூ இலவத்து 368 எரிமருள் வேங்கை 294 எருமை நல் ஏற்றினம் 93 எல்வளை நெகிழ 471 என்னும் உள்ளினள் கொல்லோ 372 ஏ ஏதில பெய்ம் மழை கார் 462 ஏறு முரண் சிறப்ப 493 ஐ ஐய ஆயின செய்யோள் 441 ஒ ஒண் சுடர்ப் பாண்டில் 405 ஒண்தொடி அரிவை 172 ஓ ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் 16 க கட்டளை அன்ன மணி நிறத் 215 கடற்கோடு அறுத்த 194 கடற்கோடு செறிந்த 191 கடுங்கண் காளையொடு 385 கடும்பரி நெடுந் தேர்க் 422 கண் எனக் கருவிளை 464 கண்டனெம் அல்லமோ 69 கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே- ,, உண்கண் 126 ,, உறாஅ வறுமுலை 128 ,, ஒண் நுதல் ஆயம் 123 ,, ஒள் இழை உயர்மணல் 122 ,, தும்பை மாலை 127 ,, தெண் திரை 125 ,, முண்டகக் கோதை 121 ,, வண்டற்பாவை 124 கண்பொர விளங்கிய 319 கண மா தொலைச்சித் தன்னையர் 365 கதிர் இலை நெடு வேல் 78 கரந்தைஅம் செறுவில் 26 கருங் கால் வேங்கை 219 கருங் கோட்டு எருமை கயிறு பரிந்து 95 கருங் கோட்டு எருமைச் 92 கரும்பின் எந்திரம் களிற்று எதிர் 55 கரும்பு நடு பாத்தியில் 65 கரு விரல் மந்திக்... வன் பறழ் 272 கரு விரல் மந்திக்... வன் பார்ப்பு 280 கருவி வானம் கார் சிறந்து 476 கருவி வானம் பெயல் 488 கரை சேர் வேழம் 12 கல் இவர் இற்றி 279 கல்லாக் கோவலர் கோலின் 304 கவிழ் மயிர் எருத்தின் 397 களிறு பிடி தழீஇப் 305 கறி வளர் சிலம்பிற் 243 கன்னி விடியல் கணைக் கால் 68 கா காண்மதி பாண இருங் கழிப் 134 காண்மதி பாண நீ 140 காமம் கடவ உள்ளம் 237 காயா கொன்றை நெய்தல் 412 கார் அதிர் காலை யாம் 491 கார் கலந்தன்றால் புறவே 417 கார் செய் காலையொடு 451 கானல் அம் பெருந் துறை 199 கி கிழங்கு அகழ் கேழல் 270 கு குரங்கின் தலைவன் 275 குரவம் மலர மரவம் பூப்பச் 357 குருகு உடைத்து உண்ட 81 குறவர் முன்றில் மா தீண்டு 277 குறுங்கை இரும் புலிக் 216 குறும் பல் கோதை கொன்றை 497 குன்றக் குறவன் ஆரம் அறுத்தென 254 குன்றக் குறவன் ஆர்ப்பின் 251 குன்றக் குறவன் கடவுட் பேணி 257 குன்றக் குறவன் காதல் மடமகள்- ,, அணி மயில் அன்ன 258 ,, மன்ற வேங்கை 259 ,, மென் தோட் 260 ,, வண்டு படு கூந்தல் 256 ,, வரையரமகளிர்ப் 255 குன்றக் குறவன் சாந்த நறும்புகை 253 குன்றக் குறவன் புல் வேய் 252 குன்ற நாடன் குன்றத்துக் 299 கூ கூதிர் ஆயின் தண் கலிழ் 45 கே கேட்டிசின் வாழியோ 59 கேழல் உழுதெனக் கிளர்ந்த 269 கை கையற வீழ்ந்த 235 கைவல் சீறியாழ்ப் 472 கொ கொடிச்சி இன்குரல் 289 கொடிச்சி காக்கும் 296 கொடிச்சி கூந்தல் போலத் 300 கொடிப் பூ வேழம் 14 கொன்றைப் பூவின் பசந்த 500 கோ கோட் சுரும்பு அரற்றும் 383 கோடு ஈர் எல் வளைத் 196 கோடு உயர் பல் மலை 358 கோடு புலம் கொட்ப 192 சா சாத்த மரத்த பூழில் 212 சாய் இறைப் பணைத் தோள் 481 சாரல் புறத்த பெருங் குரல் 282 சாரற் பலவின் கொழுந் துணர் 214 சி சிலம்பின் வெதிரத்துக் 278 சிலம்பு கமழ் காந்தள் 293 சிலை வில் பகழிச் செந்துவர் 363 சிறுக்கட் பன்றிப் 266 சிறுகட் பன்றிப் 267 சிறுதினை கொய்த 286 சிறு தினை மேய்ந்த 262 சிறு நணி வரைந்தனை 180 சு சுரும்பு உணக்களித்த 239 சூ சூது ஆர் குறுந்தொடி 71 சூழ்கம் வம்மோ தோழி 317 செ செந் நில மருங்கில் 495 செந்நெல்அம் செறுவில் 27 செய்வினைப் பொலிந்த 389 செல்லிய முயலிப் பாஅய 378 செவியின் கேட்பினும் 84 சே சேட் புலம் முன்னிய 384 சொ சொல்லுமதி பாண 479 ஞெ ஞெலிகழை முழங்கு அழல் 307 த தண் கடற் சேர்ப்பன் 183 தண் நறு நெய்தல் 190 தண் புனல் ஆடும் தடங் கோட்டு 98 தவறு இலர் ஆயினும் 177 தழங்குரல் முரசம் காலை 448 தளவின் பைங்கொடி தழீஇ 454 தன் அமர் ஆயமொடு 379 தன் பார்ப்புத் தின்னும் 41 தா தாஅய் இழந்த தழுவரிக் 268 தாய் சாப்பிறக்கும் புள்ளிக் 24 திண் தேர்த் தென்னவன் 54 திருந்து இழை அரிவை 355 திரை இமிழ் இன்இசை 171 தீ தீம் பெரும் பொய்கை 44 து துணர்க் காய்க் கொன்றை 458 துணையோர் செல்வமும் யாமும் 50 துறந்ததற்கொண்டு 393 துறை எவன் அணங்கும் 53 தெ தெரி இழை அரிவைக்கு 482 தெறுவது அம்ம நும் மகள் 313 தே தேர் செலவு அழுங்க 428 தொ தொடி நிலை கலங்க 475 தோ தோள் கவின் எய்தின 498 தோளும் கூந்தலும் பல பாராட்டி 178 ந நம் உறு துயரம் நோக்கி 241 நயந்த காதலித் தழீஇ 407 நல்குமதி வாழியோ 179 நல்லோர் ஆங்கண் 390 நறு வடி மாஅத்து மூக்கு இறுபு 213 நறு வடி மாஅத்து விளைந்து உகு 61 நன்றே காதலர் சென்ற ஆறே- ,, அணி நிற 431 ,, ஆலித் தண் மழை 437 ,, குருந்தங் கண்ணிக் 439 ,, சுடு பொன் அன்ன 432 ,, தண் பெயல் அளித்த 440 ,, நன் பொன் அன்ன 436 ,, நிலன் அணி 435 ,, நீர்ப்பட எழிலி 433 ,, பைம்புதல் பல் பூ 438 ,, மறியுடை மான்பிணை 434 நன்றே செய்த உதவி 288 நன்றே பாண கொண்கனது 131 நன் பொன் அன்ன 263 நனி சேய்த்து என்னாது 443 நா நாண் இலை மன்ற 136 நாரை நல் இனம் கடுப்ப 186 நாள் தொறும் கலிழும் 376 நி நின் ஒன்று வின்வுவல் 137 நின் நுதல் நாறும் நறுந்தண் 413 நின்னே போலும் மஞ்ஞை 492 நினக்கு யாம் பாணரேம் 480 நினக்கே அன்று அஃது 46 நினைத்தொறும் கலிழும் 373 நீ நீடினம் என்று கொடுமை 478 நீர் இகு வன்ன நிமிர் 465 நீர் உறை கோழி 51 நீர் நசைக்கு ஊக்கிய 377 நீல மேனி வாலிழை (கடவுள் வாழ்த்து) நு நுண் ஏர் புருவத்த 218 நுண் மழை தளித்தென 328 நும் மனைச் சிலம்பு கழீஇ 399 நெ நெடுங் கழை முளிய 322 நெடும் பொறை மிசைய 430 நெடுவரை மிசையது 287 நெய்தல் இருங் கழி 184 நெய்தல் உண்கண் 181 நெய்தல் நறுமலர் 182 நெய்யொடு மயக்கிய 211 நெருப்பு அவிர் கனலி 388 நெறி மருப்பு எருமை 91 நொ நொதுமலாளர் கொள்ளார் 187 ப பகல் கொள் விளக்கோடு 56 பகலில் தோன்றும் பல் கதிர் 57 பகன்றைக் கண்ணிப் பல் ஆன் 87 பகன்றை வால் மலர் 97 பண்பு இலை மன்ற பாண 138 பண்பும் பாயலும் கொண்டனள் 176 பதுக்கைத்து ஆய ஒதுக்கு 362 பரியுடைநன் மான் 13 பல் இருங் கூந்தல்... பசப்பு நீ 429 பல் இருங் கூந்தல்... மெல்லியலோள் 308 பல் ஊழ் நினைப்பினும் 374 பலர் இவண் ஒவ்வாய் 75 பலர் புகழ் சிறப்பின் 473 பழனக் கம்புள் பயிர்ப் பெடை 60 பழனப் பல் மீன் 70 பழனப் பாகல் முயிறு 99 பனி மலர் நெடுங் கண் 477 பா பாணர் முல்லை பாட 408 பாயல் கொண்ட பனி மலர் 315 பி பிடவம் மலர, தளவம் நனைய 499 பிணி வீடு பெறுக 447 பின் இருங் கூந்தல் 285 பு புகழ் சால் சிறப்பின் 445 புணர்ந்த காதலியின் 403 புதல்மிசை நறு மலர் 463 புதல்மிசை நுடங்கும் 17 புதல்வற் கவைஇய தாய் 402 புதல்வற் கவைஇயினன் தந்தை 409 புதுக் கலத்து அன்ன 303 புதுப் புனல் ஆடி அமர்த்த 79 புயல் புறந்தந்த 25 புலக்குவெம் அல்லேம் 80 புலி கொல் பெண்பால் 265 புலிப் பொறி வேங்கைப் 396 புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் 382 புள்ளும் அறியாப் பல் பழம் 398 புள்ளும் மாவும் புணர்ந்து 414 புறவு அணிநாடன் 424 புன்கண் யானையொடு 386 புன்புறப் பேடை சேவல் 425 புன்னை நுண் தாது 189 புனலாடு மகளிர் இட்ட 100 புனை இழை நெகிழச் 467 பெ பெய் பனி நலிய 457 பெய்ம் மணல் முற்றம் 248 பெய்ம் மணல் வரைப்பில் 249 பெருங்கடற் கரையது சிறு வெண் காக்கை- பெருங்கடற் கரையது அறுசுழிச் சிறு மீன் 165 பெருங்கடற் கரையது இருங் கழி இனக்கெடிறு 167 பெருங்கடற் கரையது இருங் கழித் துவலை 163 பெருங்கடற் கரையது இருங் கழி நெய்தல் 170 பெருங்கடற் கரையது இருங் கழி மருங்கின் 164 பெருங்கடற் கரையது ஒள் இணர் ஞாழல் 169 பெருங்கடற் கரையது கருங் கோட்டுப் புன்னைத் 161 பெருங்கடற் கரையது துறை படி அம்பி 168 பெருங்கடற் கரையது நீத்து நீர் இருங்கழி 162 பெருங்கடற் கரையது வரி வெண் தாலி 166 பெருஞ் சின வேந்தன் 442 பெருஞ் சின வேந்தனும் 460 பெருந் தோள் மடவரற் காண்கு 444 பெரும் புன் மாலை ஆனாது 486 பெருவரை வேங்கை 217 பே பேர் அமர் மலர்க்கண் 427 பை பைங் காய் நெல்லி பல 381 பைஞ்சாய்க் கூந்தல் 76 பைதலம் அல்லேம் பாண 135 பைந் தினை உணங்கல் 469 பொ பொய்கைப் பள்ளிப் புலவு 63 பொய் படுபு அறியாக் 250 பொய்யா மரபின் ஊர் 245 பொரி அரைக் கோங்கின் 367 பொலம் பசும் பாண்டில் 310 பொறி வரித் தடக்கை 327 பொன் என மலர்ந்த 420 பொன் செய் பாண்டில் 316 போ போது ஆர் கூந்தல் 232 போது ஆர் நறுந்துகள் 416 ம மகிழ்நன் மாண்குணம் 90 மகிழ் மிகச் சிறப்ப 42 மடவள் அம்ம நீ 67 மணந்தனை அருளாய் ஆயினும் 83 மணல் ஆடு மலிர் நிறை 15 மந்திக் கணவன் கல்லாக் 274 மந்திக் காதலன் முறி மேய் 276 மயில்கள் ஆலக் குடிஞை 291 மயில்கள் ஆலப் பெருந் தேன் 292 மழை வரவு அறியா 298 மள்ளர் அன்ன தடங் கோட்டு 94 மள்ளர் அன்ன மரவம் 400 மள்ளர் கொட்டின் மஞ்ஞை 371 மறி இடைப்படுத்த மான் பிணை 401 மறு இல் தூவிச் சிறு 391 மனை நடு வயலை 11 மா மாண்பு இல் கொள்கையொடு 394 மாதர் உண்கண் மகன் 406 மா புதழ் சேர வரகு 496 மா மழை இடியூஉத் தளி 423 மாரி கடி கொளக் 29 மால் வெள்ளோத்திரத்து 301 மாலை முன்றில் குறுங் காற் 410 மாலை வெண் காழ் 421 மி மின் அவிர் வயங்கு இழை 234 மு முரசு மாறு இரட்டும் 450 முரம்பு கண் உடையத் 449 முல்லை நாறும் கூந்தல் 446 முள் அரை இலவத்து 320 முள் எயிற்றுப் பாண் மகள் 47 முள்ளி நீடிய முதுநீர் 21 முள்ளி வேர் அளைக் களவன் 23 முளவு மா வல்சி எயினர் 364 முளி வயிர்ப் பிறந்த 395 மெ மெல் இறைப் பணைத் தோள் 459 மென் திணை மேய்ந்த 261 மை மை அறு சுடர் நுதல் 474 யா யாங்கு வல்லுநையோ 231 யான் எவன் செய்கோ 133 வ வண் சினைக் கோங்கின் 370 வண்டு தாது ஊத 494 வண்ண ஒண் தழை நுடங்க 73 வண்துறை நயவரும் 88 வயல் மலர் ஆம்பல் 72 வயலைச் செங் கொடிப் 52 வரி நுணல் கறங்க 468 வருவது கொல்லோ தானே 295 வருவை அல்லை வாடை 233 வலம்புரி உழுத வார் 193 வலை வல் பாண் மகன் 48 வள் எயிற்றுச் செந்நாய் 323 வள் மலர் ததைந்த வண்டு 369 வளை அணி முன்கை 198 வளை படு முத்தம் 195 வறந்த ஞாலம் தெளிர்ப்ப 452 வன்கட் கானவன் மென் சொல் 283 வா வார் கோட்டு வயத் தகர் 238 வாழி ஆதன் வாழி அவினி- ,, அரசு முறை செய்க 8 ,, அறம் நனி சிறக்க 7 ,, நன்று பெரிது சிறக்க 9 ,, நெல்பல பொலிக 1 ,, பகைவர் புல் ஆர்க 4 ,, பசி இல்லாகுக 5 ,, பால் பல ஊறுக 3 ,, மாரி வாய்க்க 10 ,, விளைக வயலே 2 ,, வேந்து பகை தணிக 6 வாள் நுதல் அரிவை 404 வான் பிசிர்க் கருவியின் 461 வானம்பாடி வறம் களைந்து 418 வி விசும்பு இழி தோகைச் 74 விண்டு அன்ன வெண்ணெல் 58 விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் 297 விழுத் தொடை மறவர் 352 வெ வெகுண்டனள் என்ப 82 வெண் தலைக் குருகின் 86 வெண் நுதற் கம்புள் 85 வெந்துகள் ஆகிய வெயில் 330 வெல் போர்க் குருசில் 306 வெள்ள வரம்பின் ஊழி 281 வெள்ளாங்குருகின் பிள்ளை செத் தெனக் காணிய சென்ற மட நடை நாரை- ,, உளர ஒழிந்த 153 ,, காலை இருந்து 157 ,, கானல் அம் பெருந்துறை 158 ,, கானற் சேக்கும் 154 ,, கையறுபு இரற்று 152 ,, நொந்ததன் தலையும் 160 ,, பசி தின அல்கும் 159 ,, பதைப்ப ஒழிந்த 156 ,, பதைப்பத் ததைந்த 155 ,, மிதிப்ப நக்சு 151 வெறி செறித்தனனே வேலன் 246 வென் வேல் வேந்தன் அருந் தொழில் 426 வே வேங்கை கொய்யுநர் 311 வேந்து விடு விழுத் தொழில் 466 வேப்பு நனை அன்ன 30 வேய் வனப்பு இழந்த 392 வேனில் அரையத்து இலை 325 வேனில் திங்கள் வெஞ்சுரம் 309 வேனில் நீங்கக் கார் மழை 484 உரையாக்கத்துக்குத் துணைபுரிந்த நூல்களின் நிரல் அகநானூறு ... (அகம்) அகப்பொருள் விளக்கம் ... (அ.பொ.வி.) ஆசாரக்கோவை ... (ஆசா) இறையனார் அகப்பொருள் உரை ... (இ.அ.பொ) ஐங்குறுநூறு ... (ஐங்) ஐந்திணையைம்பது ... (ஐந்) கம்பராமாயணம் ... (கம்ப) கலித்தொகை ... (கலி) கார் நாற்பது ... (கார்) குறிஞ்சிப்பாட்டு ... (குறிஞ்சி) குறுந்தொகை ... (குறுந்) சிலப்பதிகாரம் ... (சிலப்) சிவஞானமாபாடியம் ... (சிவ.பா) சிற்றட்டகம் ... (சிற்றட்ட) சிறுபஞ்சமூலம் ... (சிறுபஞ்ச) சிறுபாணாற்றுப்படை ... (சிறுபாண்) சீவக சிந்தாமணி ... (சீவக) சுந்தரர் தேவாரம் ... (சுந்.தே) சூளாமணி ... (சூளா) தக்கயாகப்பரணி ... (தக்க) தணிகைப் புராணம் ... (தணிக்கை) தமிழ் நாவலர் சரிதை ... (த.நா.ச.) திணைமாலை நூற்றைம்பது ... (திணைமா. 150) திணைமொழி ஐம்பது ... (திணை.50) திருக்குறள் ... (குறள்) திருக்கோவையார் ... (கோவை) திருஞானசம்பந்தர் தேவாரம் ... (ஞானசம்.) திருநாவுக்கரசர் தேவாரம் ... (நாவர.) திருமந்திரம் ... (திருமந்) தொல்காப்பியம் எழுத்து ... இளம்பூரணம் தொல்காப்பியம் எழுத்து ... நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் சொல் ... இளம்பூரணர் தொல்காப்பியம் சொல் ... சேனாவரையர் தொல்காப்பியம் சொல் ... தெய்வச்சிலையார் தொல்காப்பியம் சொல் ... நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் பொருள் ... இளம்பூரணர் தொல்காப்பியம் பொருள் ... நாவலர் சோமசுந்தர பாரதியார் தொல்காப்பியம் பொருள் ... நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் பொருள் ... பேராசிரியர் நற்றிணை ... (நற்) நாலடியார் ... (நாலடி) நான்மணிக்கடிகை ... (நான்மணி) நெடுநல்வாடை ... (நெடுநல்) பட்டினப்பாலை ... (பட்டினம்) பண்டை நாளைச் சேரமன்னர் ... (பண்.சே.ம) பதிற்றுப்பத்து ... (பதிற்) பரிபாடல் ... (பரி) பழமொழி நானூறு ... (பழ) புறநானூறு ... (புறம்) புறப்பொருள் வெண்பா மாலை ... (பு.வே.மா) பெரிய திருமொழி ... (பெரி.திரு) பெருங்கதை ... (பெருங்) பெருந்தொகை ... (பெருந்) பெரும் பாணாற்றுப்படை ... (பெரும்) பொருநராற்றுப்படை ... (பொருந) மணிமேகலை ... (மணி) மதுரைக்காஞ்சி ... (மதுரை) மலைபடுகடாம் ... (மலைபடு) முருகாற்றுப் படை ... (முருகு) முல்லைப்பாட்டு ... (முல்லை) யாப்பருங்கல விருத்தி ... (யா.வி) Author of the Periplus of the Erythrean sea - (Translation by M.Crindle) Annual Reports on Madras Epigraphy (A.R) Comparative Grammar of the Dravidian Languages - Rev. Caldwell Don Juan - Lord Byron Early History of India - V.Smith Epigraphica Indica - Vol. XVII Eugenics and Sex Relation for men and women - Dr.M.H.Frank Foreign Notices of South India - K.A.Nilakanta Sastri History of the Tamils - P.T.S.Ayyangar Mruga Pakshi Sastra - Hamsa Deva Pandya Kingdom - K.A.Nilakanta Sastri Pudukkottah State Inscriptions South Indian Inscriptions Vol.II, V, VII (S.I.I.) Travancore Archeologicol Series. (T.A.S.) 1. சிலப். 11 : 64 - 7. 2. அகம். 11. 1. கலி. 2. 2. தொல். பொ. 5. 3. தொல். பொ. 10. 1. அகம். 1. 1. குறுந். 21. * Ideal man and woman. 1. தொல். பொ. 185. 1. சூளா இரத. 16. 2. சீவக. 622. 3. சீவக. 2685. 1. நற். 229. 1. குறள். 375 2. குறுந். 79. 3. ஆலம்பழம் புதுமட்கலம் போலும் என்ற இதனைத் திருத்தக்க தேவர். “புதுக்கலம் போலும் பூங்கனியாலம்” (சீவக. 2103) என்று தமது நூலில் அமைத்துப் பாடியிருத்தல் காண்க. 1. அகம். 129. 2. ஐங். 325. 3. குறுந். 124. 1. அகம். 155. 2. நற். 92. 3. நற். 240. 4. குறுந். 27. 1. முருகு. 258. 2. பழந்தமிழ் நூல்கள் கிடைப்பது அருமையாயின்மையின, இடைக்காலத்தார் இதற்குப் பிழைபொருள் கற்பித்துப் பேதுற்றனர். இது பெரும்பாலும் மகளிர்க் குரைக்கப் படுமாயினும் சிறுபான்மை ஆடவர்க்கும் வழங்கும். “கொள்வீர் அல்குல் ஓர் கோவணம்” (ஞானசம். 54 : 3.) என்பது காண்க. 3. முருகு. 16. 4. குறுந். 180. 5. அகம். 183. 1. புறம். 143. 2. நற். 113. 3. அகம். 378. 4. மலைபடு. 30. 5. அகம். 107. 6. தொல். பொ. 39. 1. கலி. 150. 2. நற். 201. 1. கலி. 2. 2.கலி. 8. 3. ஐங். 429. 4. அகம். 345. 5. நற். 232. 6. குறிஞ். 66. 1. தொல்.சொல். நச்சி. 457. 2. நற். 300. 1. நற். 312. 2. தொல்.சொல். 343. 3. மதுரை. 609. 4. மலைபடு. 367. 5. பரி. 7:40. 1. குறள். 63. 2. அகம். 66. 3. ஐங். 316. 1. பெருங். 2. 19 : 142-3. 2. கலி. 108. 3. கலி. 53. 1. கலி. 9. 1. மதுரை. 296 - 7. 2. அகம். 52. 3. பெருங். 3. 1 : 190-2. 1. கலி. 42 2. நற். 362. 3. அகம். 33. 1. நற். 48. 2. தொல்.பொ. 42. 3. குறுந். 45. 1. தொல். பொ. 253. 2. தொல். சொல். நச். 75. 3. தொல்.பொ. 124. 4. தொல். பொ. 36. 5. தொல். பொ. 115. 1. புறம். 369. 2. முருகு. 51 -4. 1. பதிற். 13. 2. Canibals. 3. தொல். எழுத்து. 234. 4. தொல். பொ. 107. 5. நற். 90. 6. அகம். 325. 7. நாலடி. 213. 1. குறுந். 39. 1. குறள். 1237. 2. அகம். 351. 1. தொல். சொல். 2. அகம். 3 3. அகம். 397. 1. தொல். பொ. 196. 2. குறள். 1299. 3. தொல். பொ. 147. 4. ஐங். 392. 1. கலி. 108. 2. ஐங். 320. 3. அகம். 105. 1. புறம். 35. 2. புறம். 160. 1. சிலப். 7 : 32. 2. நற். 105. 1. அகம். 17. 1. தொல். பொ. 41. 1. அகம். 79. 12. சிலப். 11 : 75. 1. அகம். 67. 2. தொல். சொல். 237. 1. தொல். பொ. 146. 2. தொல். பொ. 48. 3. தொல். சொல். 371. 4. அகம். 21. 1. அகம். 83. 1. அகம். 174. 2. தொல். எழுத்து. 341. 3. தொல். பொ. 270. 1. குறுந். 147. 2. தொல். பொ. 146. 3. தொல். எழுத்து. இளம். 284. 1. நற். 84. 1. அகம். 169. 2. திணை. ஐம். 11. 3. அகம். 299. 1. தொல். சொல். 234. 1. அகம். 339. 2. நற். 284. 1. அகம். 51. 2. நற். 424. 3. அகம். 333. 4. கலி. 15. 5. நற். 284. 1. தொல். பொ. 146. 2. பதிற். 20. 3. நற். 111. 1. அகம். 171. 2. தொல். பொ. 340. 3. அகம். 39. 4. இக்கருத்தையே வாங்கி “எரிசுடர்க் கடவுளும், கருதின் வேம் உள்ளமும் காணில்வேம் கண்களும்” (பால. தாடகை 6.) எனக் கம்பரும் கூறுவது காண்க. 1. குறள். 338. 1. தொல். பொ. 223. 1. Asexual. 2. முருகு. 7. 3. தொல். சொல். 365. 4. பரி. 9 : 14. 1. Eugenics and Sex Relations by Dr. M.H. Frank M.D. Ph. D- p. 44-6. 2. தொல். பொ. 192. 1. தொல். பொ. 209. 1. ஐங். 146. 2. அகம். 127. 3. அகம். 211. 4. நற். 20. 1. அகம். 155. 2. அகம். 375. 1. சிலப். 16 : 57. 2. அகம். 18. 3. தொல். பொ. 196. 4. நற். 224. 5. நற். 243. 1. பரி. 14 : 8 - 9. 2. நற். 79. 3. தொல். பொ. 147. 1. புறம். 91. 2. அகம். 291. 3. அகம். 105. 4. குறள். 833. 1. அகம். 193. 2. அகம். 97. 3. அகம். 161. 1. தொல். சொல். 2. அகம். 27. 3. நற். 241. 4. இறை.அ. பொ. 35. 1. இறை. அ. பொ. 35 உரை. 2. நற். 43. 3. குறுந். 137. 4. தொல். பொ. 43. 1. தொல். சொல். 357. 2. அகம். 379. 3. அகம். 361. 4. அகம். 305. 1. அகம். 11. 2. அகம். 185. 1. தொல். சொல். 2. தொல். சொல். 3. நற். 279. 1. குறள். 1227 2. குறுந். 330. 3. குறுந். 172. 1. அகம். 388. 2. நற். 147. 3. தொல். பொ. 163. 4. தொல். பொ. 165. 1. அகம். 97. 1. அகம். 277. 2. குறள். 1242. 3. குறள். 629. 4. திணை. ஐம்பது. 16. 5. அகம். 345. 1. ஐங். 84. 2. ஐங். 51. 3. அகம். 341. 4. குறிஞ்சி. 176. 1. திணைமா. 150 : 65. 2. குறுந். 195. 1. அகம். 237. 2. நற். 52. 3. அகம். 229. 1. அகம். 116. 2. நற். 9. 3. ஐங். 383. 4. அகம். 83. 1. அகம். 95. 2. மாவின்தளிர் எரிபோல் அவிர்தல் கண்ட நம்பியாரூரர், “சீதப்புனலுண் டெரியைக் காலும் சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே” என்றது காண்க. 1. தொல். பொ. 247. 2. அகம். 229 3. நற். 86. 4. கலி. 21. 1. குறள். 612. 2. நற். 284. 3. நற். 3. 1. தொல். சொல். 318. 2. நற். 269. 3. ஐங். 316. 1.. பதிற். 60. 2. பதிற். 28. 3. குறள். 771. 4. அகம். 131. 5. புறம். 264. 1. அகம். 53. 2. ஐங். 239. 3. பெரும்பாண். 379. உரை. 1. நற். 104. 2. அகம். 328. 3. அகம். 332. 1. குறுந். 376. 2. தொல். பொ.604. 3. ஐங். 356. 1. இச்சொற்றொடரின் நலங்கண்டு வியந்த திருத்தக்கதேவர், “எரிமாலை வேனுதியின் இறக்கிக் காமன் அடுகணையால், திருமாலை வெம்முலைமேல் திளைக்கும் தேவர் திருவுறுக. வருமாலை எண்வினையும் அகற்றி இன்பக் கடலாக்கித், தரும் மாலை யல்லதுயான் தலையிற் றாழ்ந்து பணிவேனோ” (சீவக. 961) என்று பாடுவது ஈண்டு நோக்கத்தக்கது. 2. தொல். பொ. 152. 1. அகம். 353. 2. தொல். பொ. நச்சி. 45. 3. கலி. 12. 4. கலி. 8. 1. அகம். 353. 2. குறள். 799. 3. அகம். 353. 1. குறுந். 22. 2. அகம். 97. 1. அகம். 317. 1. நாலடி. 222. 2. குறள். 555. 3. தொல். பொ. 45 உரை. 1. தொல். சொல். 432. 1. ஐங். 324. 2. தொல். சொல். 284. 3. தொல். சொல். 357. 4. கலி. 14. 1. குறள். 1104. 2. குறுந். 209. 3. தொல். பொ. 144. 4. தொல். பொ. 112. 1. அகம். 257. 1. அகம். 237. 2. அகம். 261. 3. அகம். 356. 4. நற். 39. 5. தொல். பொ. 41. 1. தொல். பொ. 24. 2. அகம். 215. 3. அகம். 231. 4. நற். 156. 5. அகம். 177. 1. திணைமொழி. குறிஞ்சி. 11. 2. தொல். பொ. 239. 3. குறள். 360. 4. பதிற். 22. 1. தொல். பொ. 150. 2. கலி. 15. 3. அகம். 69. 4. நற். 33. 5. பொருந. 35-6. 1. தொல். பொ. 22. 2. தொல். பொ. 24. 3. நற். 85. 1. கலி. 39. 2. தொல். பொ. 22. 3. தொல். பொ. 42. 1. குறள். 265. 2. குறுந். 331. 1. தொல். பொ. 284. 2. தொல். பொ. 22. 3. தொல். சொல். 71. 1. தொல். பொ. 3. 2. அகம். 48 3. பூத்தருபுணர்ச்சியாவது இன்னது எனத் தோழிகூற்றில் வைத்துக் களவியலுரை (சூ. 14. உரை) கூறுமாறு; “எம்மைக் கூழைக்கற்றைக் குழவிப்பிராயத்து மாழை கலந்த ஏழை நீர்மையாரோடு நாட்கோலம் செய்து விளையாடி வம்மின் என்று போக்கினாய்; போக்கினவழி, யாம் போய் ஒரு வெண்மணல் பரந்த தண்மலர்ப் பொழிலிடை விளையாடிநின்றேமாக, ஒரு தோன்றல் ஒரு சுனைக்குவளைப் பூக்கொண்டு அவ்வழியே போதந்தான்; போதர, நின்மகள் அவனை நோக்கி அப்பூவினை என் பாவைக்கு அணியத் தம்மின் என்றாள். அவனும் பிறிது நினையாது கொடுத்து நீங்கினான். இஃது அறிவது அறியாக் காலத்து நிகழ்ந்தது” என்பது. 1. அகம். 287. 2. குறுந். 255. 3. நற். 3 4. அகம். 397. 5. அகம். 365. 6. நற். 141. 1. திணைமா. 150 : 63. 2. அகம். 317. 3. கலி. 39. 1. அறம். 245. 2. அறம். 116. 3. நற். 9. 1. பதிற். 48. 2. அகம். 141. 1. கலி. 15. 1. கலி. 79. 2. நற். 224. 3. தொல்.பொ. 191. 4. தொல். பொ. 164. 5. தொல். பொ. நச்சி. 6. இளம். 52. மேற்கோள். 1. மறுக்கும் என்றும் பாடம். 1. அகம். 207. 2. குறுந். 356. 1. அகம். 219. 2. குறுந். 396. 3. அகம். 369. 1. அகம். 107. 2. குறுந். 356. 3. குறுந். 396. 4. அகம். 203. 5. குறுந். 157. 6. அகம். 203. 7. அகம். 195 1. அகம். 385. 2. நற். 305. 3. நற். 179. 4. அகம். 15. 5. குறுந். 378. 6. அகம். 369. 7. அகம். 383. 8. குறுந். 145. 1. நற். 271. 2. அகம். 397. 3. நற். 293. 4. அகம். 195. 5. அகம். 397. 6. அகம். 315, 321, 396. 7. நற். 279. 1. அகம். 389. 2. ஐங். 357. 1. கலி. 9. 2. குறுந். 297. 3. குறுந். 378. 4. தொல்.பொ. 36. 1. நற். 214. 2. ஐங். 181. 1. அகம். 203. 2. தொல். பொ. 36. 3. தொல். பொ. 39. 1. அகம். 199. 2. கலி. 39. 1. நற். 293. 2. அகம். 176. 3. அகம். 7. 4. முருகு. 42. 1. அகம். 117. 1. தொல். எழுத்து. 268. 2. நற். 90. 1. அகம். 369. 2. தொல். பொ. 36. 3. தொல். பொ. 40. 4. சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் பிரதியில் இதுவே காணப்படுகிறது. 1. தொல். பொ. 35. 1. நற். 171. 2. புறம். 17. 3. அகம். 301. 4. அகம். 111. 5. நற். 184. 1. ஐந்திணை. 33. 2. தொல். சொல். 114. நச்சி. 3. அகம். 55. 1. அகம். 63. 2. தொல். பொ. 36. 1. அகம். 385. 1. தொல். சொல். 94. 2. தொல். சொல். 124. 3. தொல். சொல். 42. 1. நற். 271. 2. குறுந். 57. 3. தொல். பொ. 40. 1. குறுந். 7. 2. நற். 66. 3. அகம். 203. 4. தொல்.சொல். 271. 1. நற். 305. 1. அகம். 83. 2. அகம். 12. 3. அகம். 257. 1. கலி. 9. 2. தொல். பொ. 626. 3. இறை. சூ. 23. மேற்கோள். 4. அகம். 146. 5. தொல். பொ. 42. 1. தொல். பொ. 146. 2. தொல். பொ. 42. 3. தொல். சொ. 46. 1. நற். 210. 2. குறள். 773. 3. குறள். 496. 4. நற். 1. கலி. 39. 2. தொல். பொ. 42. 3. தொல். பொ. 45. 4. தொல். பொ. 212. 1. கலி. 61. 2. ஐங். 309. 1. தொல். பொ. 40. 1. புறம். 362. 2. குறுந். 156. 3. குறள். 1019. 4. குறள். 30. 5. தொல். சொல். 1. கலி. 9. 2. நற். 264. 3. அகம். 99. 4. தொல். பொ. 43. 5. தொல். பொ. 40. 1. அகம். 31. 2. அகம். 187. 3. அகம். 399. 4. அகம். 261. 1. தொல். பொ. 40. 2. புறம். 77. 3. புறம். 100. 4. புறம். 4. 5. புறம். 3. 1. குறள். 40. 2. குறள். 777. 3. நற். 184. 4. தொல். பொ. 40. 1. குறள். 1065. 1. குறள். 257. 2. கலி. 64. 3. குறுந். 210. 1. தொல். பொ. 39. 2. தொல். பொ. 36. 3. அகம். 213. 4. அகம். 98. 5. குறள். 1243. 1. தொல். பொ. நச். 42. 1. அகம். 32. 2. தொல். பொ. 143. 3. அகம். 194. 1. தொல். பொ. 142. 2. கலி. 9. 1. தொல். பொ. 36. 2. அகம். 117. 3. அகம். 143. 4. தொல். சொல். 1. நற். 9 2. தொல். பொ. 147. 1. அகம். 228. 2. அகம். 182. 3. அகம். 365. 4. ஐங். 93. 5. ஐங். 395. 1. அகம். 254. 2. குறுந். 351. 3. நற். 362. 1. ஐங். 312. 2. தொல். பொ. 501. 3. தொல். பொ. 45. 4. தொல். பொ. 42. 1. மதுரை. 576. 2. புறம். 113. 3. அகம். 189. 4. தொல். பொ. 39. 1. நற். 279. 1. அகம். 385. 2. அகம். 369. 3. நற். 279. 4. தொல். பொ. 143. 1. அகம். 365. 2. தொல். பொ. 36. 3. இ.அ.பொ. 23. 1. புறம். 54. 2. கலி. 103. 3. கலி. 102. 1. S.I.I. Vol. V. No. 416 ; A.R. No. 127 of 1894. 1. ஐங். 412. 2. ஐங். 416. 3. ஐங். 453. 4. ஐங். 497. 5. ஐங். 416. 6. ஐங். 431. 7. ஐங். 434. 8. ஐங்.439. 1. ஐங். 414. 2. ஐங். 420. 3. ஐங். 484. 1. அகம். 304. 1. புறம். 19. 2. குறள். 1103. 3. குறுந். 101. 4. புறம். 188. 5. குறள். 13. 1. தொல். பொ. 153. 2. மலைபடு. 390. 3. தொல். சொல். 273. 1. ஐங். 407. 2. கலி. 75. 3. கலி. 81. 1. அகம். 184. 2. கலி. 80. 3. அகம். 368. 4. தொல். பொ. 188. 1. அகம். 26. 2. தொல். பொ. 153. 3. நெடுநல். 175. 1. புறம். 314. 2. நான்மணிக். 104. 1. தொல். பொ. 172. 2. தொல். பொ. 223. 1. பொருந. 21 - 2. 2. ஐங். 489. 3. குறள். 1330. 1. சீவக. 2542. 2. அகம். 124. 1. அகம். 49. 2. தொல். பொ. 150. 3. புறம். 182. 1. குறுந். 359. 1. அகம். 353. 2. கலி. 2. 3. குறள். 66. 4. நற். 269. 1. ஐங். 428. 2. ஐங். 455. 3. பரி. 10 : 1. 4. பரி. 10 : 40. 5. நற். 68. 1. தொல். சொல். 294. 2. தொல். சொல். 19. 3. குறள். 1083. 4. ஐங். 427. 5. ஐங். 496. 1. கலி. 66. 2. கலி. 14. 3. அகம். 43. 1. ஐங். 492. 1. தொல். பொ. 223. 2. நற். 46. 1. குறுந். 323. 2. குறள். 1158. 3. நற். 25. 1. தொல். சொல். 53. 2. தொல். பொ. 295. 1. பதிற். 26. 2. குறள். 1305. 3. புறம். 198. 4. பட்டி. 3-4. 1. ஐங். 39. 2. நற். 356. 3. அகம். 342. 1. ஐங். 468. 2. ஐங். 451. 3. திணை. 150 - 112. 1. ஐங். 430. 2. குறுந். 233. 3. நற். 242. 4. அகம். 134. 1. ஐங். 260. 2. குறு. 188. 1. தொல். பொ. 302. 2. குறள். 496. 3. குறுந். 335. 1. அகம். 254. 2. அகம். 64. 1. கலி. 7. 2. தொல். பொ. 39. 3. கலி. 5. 4. தொல். பொ. 12. 1. மதுரை. 461-4. 2. புறம். 1. தொல். பொ. 150. 2. பதிற். 39. 3. பதிற். 78. 1. அகம். 304. 2. பதிற். 24. 1. அகம். 84. 2. கார். 1. 3. அகம். 208. 4. குறுந். 242. 5. ஐங். 466. 6. தொல். பொ. 146. 1. மதுரை. 596-8. 2. குறள். 814. 3. சிற்றட்ட. பாலை. 1. கலி. 51. 2. புறம். 144. 3. புறம். 151. 4. தொல். பொ. 185. 1. அகம். 272. 1. குறள். 267. 2. அகம். 180. 3. அகம். 21. 1. பதிற். 13. 1. தொல். எழுத்து 356. 1. குறுந். 148. 2. அகம். 108. 1. கலி. 111. 2. நற். 169. 1. அகம். 61. 1. தொல். பொ. 76. 2. நற். 396. 1. பதிற். 40. 2. பெருங். 1, 46, 199. 3. பெருங். 3, 4, 9. 4. அகம். 212. 1. புறம். 22. 2. புறம். 281. 1. புறத். 1271. 2. தொல். பொ. 186. 3. தொல். பொ. 41. 1. தொல். பொ. 226. 2. தொல். பொ. 41. 1. மணி. 25 : 112 - 3. 2. பரி. 5 : 43 - 5. 3. புறம். 122. 4. கலி. 2. 5. பெரும்பாண். 302 - 3. 1. தொல். பொ. கற்பு. 6. 2. கலி. 62. 3. நற். 269. 1. கார். 17. 2. தொல். பொ. 41. 1. அகம். 24. 1. அகம். 44. 2. பதிற். 68. 3. கலி. 113. 4. குறள். 904. 5. தொல். பொ. 41. 1. தொல். பொ. 41. 2. கார். 36. 1. மதுரைக். 232. 1. நற். 374. 2. குறுந். 400. 3. அகம். 254. 4. நெடு. 93. 1. தொல். பொ. 209. 1. அகம். 314. 1. அகம். 53. 2. குறள். 1106. 3. நற். 93. 1. பதிற். 80. 2. அகம். 57. 1. நற். 42. 2. அகம். 154. 3. தொல். எழுத்து. 106. 1. குறுந். 191. 2. நற். 287. 1. அகம். 32. 1. குறிஞ். 88. 2. நற். 56. 1. அகம். 364. 2. அகம். 2. 1. திணை. 150-98. 2. சிலப். 16. கொளு. 6. 1. ஐங். 500. 2. அகம். 113. 3. பதிற். 67. 1. குறள். 732. 2. குறள். 770. 1. அகம். 344. 2. தொல். எழுத்து. 229. 1. நெடுநல். 19-20. 2. அகம். 85. 3. அகம். 159. 1. குறுந். 194. 2. அகம். 69. 3. ஐங். 497. 1. அகம். 91. 2. நற். 99. 3. குறுந். 66. 4. அகம். 86. 1. அகம். 269. 2. தொல். பொ. 28. 3. மதுரை. 148-51. 4. அகம். 177. 1. அகம். 294. 2. நெடுநல். 13 - 4. 3. அகம். 135. 4. அகம். 18. 5. கலி. 113. 1. குறுந். 189. 2. தொல். பொ. 644. 3. ஐங். 452. 1. புறம். 31. 2. முல்லை. 67. 3. புறம். 319. 4. புறம். 284. 1. தொல். பொ. 26. 2. தொல். சொல். 275. 3. கலி. 11. 4. நற். 246. 1. புறம். 68. 2. அகம். 138. 1. அகம். 237. 1. ஐங். 435. 2. பழ. 184. 1. தொல். எழுத்து. 268. 2. நற். 90. 3. அகம். 94. 4. முல்லை. 4-5. 5. அகம். 84. 6. அகம். 85. 1. ஐங். 17. 1. A.R. No. 90 of 1931-2. 2. புறம். 314. 1. புறம். 182. 2. புறம். 335. 1. P.S.In. No. 652. 2. பெருந்தொகை. 1191. 1. அகம். 325. 2. அகம். 226. 1. அகம். 386. 2. தொல். பொ. 193. 1. அகம். 208. 2. திணைமா. 150 : 125. 1. ஐங். 170. 2. புறம். 9. 3. சீவக. 978. 1. தொல். பொ. 241. 2. ஐங். 480. 1. தொல். பொ. 226. 2. தொல். பொ. 150. 3. குறுந். 30. 1. தொல். சொல். நச்சி. 461. 2. தொல். பொ. 147. 1. தொல். பொ. 147. 1. ஐங். 61. 2. ஐங். 498. 1. குறுந். 126. 2. புறம். 265. 3. குறுந். 358. 4. குறள். 1223. 1. குறள். 1224. 2. குறள். 1229. 3. சிலப். கானல். 41. 4. குறள். 1299. 1. அகம். 298. 2. புறம். 171. 3. தொல். பொ. 41. 4. தொல். பொ. 48. 1. குறள். 1235. 2. குறள். 1157. 3. தொல். பொ. 226. 4. ஐங். 479. 5. தொல். பொ. 48. 6. தொல். பொ. 41. 1. குறுந். 358. 1. தொல். பொ. 218. 1. தொல். பொ. 169. 2. தொல். பொ. 45. 1. அகம். 213. 2. தொல். சொல். 318. 3. நற். 21. 4. தொல். பொ. 194. 5. அகம். 64. 6. ஐங். 475. 7. ஐங். 315. 1. குறள். 87. 2. நற். 142. 3. நற். 374. 4. குறள். 1269. 1. குறுந். 242. 2. தொல். பொ. 194. 3. அகம். 124. 1. அகம். 54. 2. அகம். 244. 3. குறள். 597. 1. கலி. 28. 1. அகம். 373. 2. நற். 369. 1. அகம். 344. 1. நெடு. 71-2. 2. அகம். 144. 3. ஐந்திணையைம். 10. 1. நற். 367. 2. நற். 121. 3. முருகு. 76. 4. சீவக. 767. 1. அகம். 104. 2. அச்சுப் பிரதியில் இப்பாட்டு இடையில் சிதைந்துள்ளது; சீர்காழி கோவிந்தசாமி ரெட்டியார் கைப்பிரதியில் கண்டவாறே இங்கு மேற்கொள்ளப்பட்டது. 3. அகம். 224. 1. அகம். 344. 1. தொல். எழுத்து. 237. 1. குறுந். 323. 2. முருகு. 315-6. 3. அகம். 144. 1. கார். 10. 1. தொல். சொல். 81. 1. குறுந். 319. 2. குறுந். 282. 3. புறம். 335. 4. அகம். 144. 5. நற். 42. 1.. ஐங். 462. 2. அகம். 149. 3. நெடுநல். 2-9. 1. அகம். 86. 2. நெடு. 9. 1. அகம். 85. 2. அகம். 91. 3. குறுந். 183. 4. அகம். கட