உரைவேந்தர் தமிழ்த்தொகை 10 சைவ இலக்கிய வரலாறு ஆசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 10 ஆசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 24 + 472 = 496 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 310/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராக வும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடைய வராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறையிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங்களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல் களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர் களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங்கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவு கள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவு பயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக் கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவுபடுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவுபடுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித்துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையிலேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப்படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப்படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனைகளை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களை நாட்டுடைமையாக்குதலில் பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உரைவேந்தர் தமிழ்த்தொகை தொகுதி - 1 ஞானாமிர்த மூலமும் பழையவுரையும் தொகுதி - 2 சிவஞானபோத மூலமும்சிற்றுரை தொகுதி - 3 சிலப்பதிகாரம் சுருக்கம் மணிமேகலைச் சுருக்கம் தொகுதி - 4 சீவக சிந்தாமணி - சுருக்கம் தொகுதி - 5 சூளாமணி சுருக்கம் தொகுதி - 6 பெருங்கதைச் சுருக்கம் தொகுதி - 7 சிலப்பதிகார ஆராய்ச்சி மணிமேகலை ஆராய்ச்சி சீவகசிந்தாமணி ஆராய்ச்சி தொகுதி - 8 யசோதர காவியம் தொகுதி - 9 தமிழ் நாவலர் சரிதை தொகுதி - 10 சைவ இலக்கிய வரலாறு தொகுதி - 11 மாவை யமக அந்தாதி தொகுதி - 12 பரணர் தெய்வப்புலவர் The study of thiruvalluvar தொகுதி - 13 சேரமன்னர் வரலாறு தொகுதி - 14 நற்றிணை -1 தொகுதி - 15 நற்றிணை -2 தொகுதி - 16 நற்றிணை -3 தொகுதி - 17 நற்றிணை -4 தொகுதி - 18 ஐங்குறுநூறு -1 தொகுதி - 19 ஐங்குறுநூறு -2 தொகுதி - 20 பதிற்றுப்பத்து தொகுதி - 21 புறநானூறு -1 தொகுதி - 22 புறநானூறு -2 தொகுதி - 23 திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள் தொகுதி - 24 செந்தமிழ் வளம் - 1 தொகுதி - 25 செந்தமிழ் வளம் - 2 தொகுதி - 26 வரலாற்று வாயில் தொகுதி - 27 சிவநெறிச் சிந்தனை -1 தொகுதி - 28 சிவநெறிச் சிந்தனை -2 கிடைக்கப்பெறாத நூல்கள் 1. திருமாற்பேற்றுத் திருப்பதிகவுரை 2. தமிழகம் ஊர்ப் பெயர் வரலாறு 3. புதுநெறித் தமிழ் இலக்கணம் 4. மருள்நீக்கியார் (நாடகம்) 5. மத்தவிலாசம் (மொழியாக்கம்) உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலாக்கத்திற்குத் துணை நின்றோர் xxiii நூலடக்கம் முன்னுரை 3 1. தமிழ் நாட்டு வரலாறு 7 2. திருஞானசம்பந்தர் 39 3. திருநாவுக்கரசர் 111 4. ஐயடிகள் காடவர்கோன் 172 5 நம்பியாரூரர் 182 6. சேரமான் பெருமாள் 240 7. ஏனாதி சாத்தஞ் சாத்தனார் 273 8. மாணிக்கவாசகர் 281 9. பட்டினத்துப் பிள்ளையார் 354 10 சேந்தனார் 370 11. நந்திக் கலம்பகம் 379 12. ஒளவையார் 390 13. முதற் கண்ட ராதித்தர் 406 14. நம்பியாண்டார் நம்பி 412 15. வேம்பையர்கோன் நாராயணன் 427 இந்நூல் எழுதுவதற்கு உதவியாயிருந்த ஆங்கில நூல்கள் 448 இவ்வரலாற்றுக்குத் துணை செய்த தமிழ் நூல்கள் 450 அரும்பொருள் அகரநிரல் 455  சைவ இலக்கிய வரலாறு முன்னுரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகையில், தமிழ் இலக்கிய வரலாறு எழுத வேண்டிய ஏற்பாடொன்று உருவாயிற்று. தமிழிலக்கியங்களைப் பல பகுதி களாகப் பிரித்துக் கொண்டு இவ்வரலாற்றைக் காண்பது முறை யாகத் தோன்றினமையின் அம்முறையில் சைவ இலக்கியப் பகுதி என்பால் எய்திற்று. இலக்கியங்கள் பலவும் தாம் தோன்றிய காலத்து மக்கட் சமுதாயத்தின் சூழ்நிலையை எடுத்துக் காட்டும் இயல்பின என்பது அறிஞர் உலகம் நன்கு அறிந்த செய்தி. அந்நெறியில் சைவ இலக்கியங்கள் தாம் பிறந்த காலத்து வாழ்ந்த சைவ மக்களின் சமய உணர்வு ஒழுக்கங்களைத் தம்மைப் பயில்வோர்க்கு உணர்த்தும் அறிவுக் கருவூலங்களாகும், ஆயினும் இவ் விலக்கியங்களின் தோற்றம், பேணற்பாடு முதலிய கூறுகளை உணர்தற்கு அவை தோன்றிய காலத்து நாட்டு வரலாற்று அறிவு பெருந்துணையாகும்; அக்காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல், பொருளியல், வாணிகம், தொழில் முதலியவற்றை உரைக்கும் நாட்டுப் பொதுவரலாறு தெரிந்திருப்பது பெரிதும் நன்று. நம் தமிழ் நாட்டில் தவக் குறைவாலும், தமிழ் மக்களின் ஊக்கமின்மையாலும் அத்தகைய பொது வரலாறு ஒன்று இதுகாறும் எழுதப்படவே இல்லை. தமிழகத்தின் பொது வரலாறு, தொல்காப்பியர் காலம், தமிழ் மூவேந்தர் காலம், பல்லவர் காலம், இடைக்காலச் சோழ பாண்டியர் காலம், விசய நகர வேந்தர் காலம், முகமதியர் காலம், மேனாட்டவர் காலம் எனப் பல பாகுபாட்டில் அறியக் கிடக்கின்ற தெனினும், அத்துறையில் உறைத்து நின்று விரிவாக ஆராய்ந்து எழுதும் ஆர்வம் அறிஞர்களின் உள்ளத்தில் இன்றுகாறும் தோன்றிச் செயற்பட வில்லை. காலஞ்சென்ற சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் முதலியோர் பாரத நாட்டின் பொது வரலாறே தென் தமிழ் நாட்டிலிருந்துதான் தொடங்கவேண்டும் எனக் கூறி வந்தனர். நாட்டு மக்களிடையிலும் பல்வேறு புராண இதிகாசக் கதைகள் பரவியிருக்கும் அளவு இல்லையாயினும் அதிற் பாதியளவு தானும் நம் நாட்டைப் பல்வேறு காலங்களில் இருந்து ஆண்டு வந்த மன்னர்களையும் அவர்களின் ஆட்சி நலன்களையும் பற்றிய அறிவு அறவே காணப்படுகிறதில்லை. நாட்டின் பொது வரலாற்றை அடிப்படையாகவும் பின்னணியாகவும் கொண்டு எழுதற்குரிய இலக்கிய வரலாறு, மேலே காட்டிய குறைபாட்டால் "குன்று முட்டிய குரீ இப் போலவும், குறிச்சி புக்க மான் போலவும்" இடர்படுகின்றது. இந்நிலையில், கிடைக்கும் துணைகளைக் கொண்டு கற்றோர் முன் தோன்றுதற்கும் முயலும் இலக்கிய வரலாற்றுக்குச் சென்ற பல ஆண்டுகளில் மேனாட்டவரும் நம் நாட்டவருமாகப் பல அறிஞர்கள் இத்துறையில் இறங்கிப் பல நற்பணிகளைச் செய்துள்ளனர். அரசிய லாரும் நாட்டில் ஆங்காங்கு நின்று சிறக்கும் கோயில்களிலும், பிற இடங்களிலும் காணப்படும் கல்வெட்டுக்களைப் படியெடுத்து வெளியிட்டுள்ளனர். மோஹஞ்சோ - தாரோ, ஹாரப்பா முதலிய இடங்களிற் போலப் புதைபொருள் ஆராய்ச்சியில் தமிழ்நாட்டு அரசியல் கருத்தூன்றாது ஒழியினும் ஆங்காங்கு மக்கள் நிலத்திற் கண்டெடுத்த புதைபொருள்களைப் பெற்றும், இவ்வகையில் கிடைத்த செப்பேடுகளைக் கொண்டும் அறிக்கைகள் பல வெளி யிட்டுள்ளனர். நாடு உரிமை பெற்றபின், இச் செயல்வகைகளின் அரசியல் அறிக்கைகள் ஆண்டு தோறும் வெளிவருவது நின்று போயிற்று; என்றாலும், முன்பு வெளியிட்டனவற்றுள் ஒரு சில இறந்து போயினும் பல குறிப்புக்கள் மிகவும் பழமையான நூல் நிலையங்களில் முயல்வார்க்குக் காட்சி நல்குகின்றன. அவற்றைத் துணையாகக் கொண்டு இந்தச் சைவ இலக்கிய வரலாறு தோன்றி வெளிவருகின்றது. சைவ இலக்கியங்களுள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு ஈறாகத் தோன்றியவற்றின் வரலாற்றினை எழுதுவதென முதற்கண் வரையறுத்துக் கொண்டு இவ்வரலாறு தொடங்குவதாயிற்று. இவ் வரையறைக்குள் அகப்பட்ட இலக்கிய ஆசிரியன்மார்களின் பெயர்நிரலை இந்நூல் 37-ஆம்பக்கத்தில் காணலாம். ஆயினும், கி.பி. 7-ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிப் பத்தாம் நூற்றாண்டு முடிய நின்ற காலத்தவருள் திருஞான சம்பந்தர் முதல் வேம்பையர்கோன் நாராயணன் ஈறாக உள்ள ஆசிரியர் வரலாறுகள் எழுதி முடித்ததும், யான் மதுரை தியாகராசர் கல்லூரிக்கு வந்து சேர வேண்டிய நிலைமை ஏற்பட்டதனால், இந்த அளவோடு இவ்விலக்கிய வரலாறு வெளி வர வேண்டுவதாயிற்று. இக்கால வெல்லைக்குள் நிற்கும் பெருமானடிகள் வரலாறு இன்னும் காணப்படவில்லை. அண்ணாமலைப் பல்கலைக் கழக நூல் நிலையம் போலும் வரலாற்று ஆராய்ச்சிக்குத் துணை செய்யும் நூல்களும், பிற வெளியீடுகளும் மதுரையில் கிடைத்தல் அரிதாயின மையின், இவ்வரலாற்றினை மேலும் தொடர்ந்து எழுதுற்கு இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். இந்த அளவிலேனும் இவ்வரலாறு வெளிவருவது நன்றெனத் தேர்ந்து அழகிய முறையில் செவ்வையாக அச்சிட்டுத் தமிழ் உலகிற்கு அளிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் உயரிய தமிழ்ப் பணியைப் பாராட்டி, அதற்கு நம் இனிய தமிழகத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றினைத் தெரிவித்துத் கொள்கின்றேன். இனிய, அழகிய அணிந்துரை தந்து இந்நூலைச் சிறப்பித்த அண்ணா மலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் உயர்திரு. டி.எம். நாராயணசாமிப்பிள்ளை, பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி., அவர்கட்கு என் மனமார்ந்த நன்றியைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள் கின்றேன். இதனை நன்கு அச்சிட்டு அளிக்கும் சென்னை ஸ்ரீ ராமபிரசாத் அச்சகத்தாரின் தொழிற்றிறம் யாவரும் பாராட்டற் குரியதொன்று. தில்லைப் பொன்னம்பலத்தும், மதுரை வெள்ளியம்பலத்தும் திருக்கூத்து இயற்றும் பெருமான், என்னையும் இத்துறையில் இயக்கிப் பணிகொண்ட பேரருளை நினைந்து, அவன் திருவடி களைப் பரவுகின்றேன். "ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே" "அவ்வை" காந்தி நகர். மதுரை. 7-4-58 ஒளவை.சு. துரைசாமி  உ திருச்சிற்றம்பலம் சைவ இலக்கிய வரலாறு 1. தமிழ் நாட்டு வரலாறு (கி.பி. 700-1000) சைவ இலக்கியங்கள் என்னும் போதே தமிழறிஞர்களுக்குச் சைவத் திருமுறைகளே முதற்கண் நினைவில் எழும். இச்சைவத் திருமுறைகளின் வரலாற்றைக் காண்பதற்கு முன், அவை தோன்றிய கால நிலையும் மக்கள் நிலையும் அரசியல் பொருளாதார நிலையும் முன்னணியாக அறிவது இன்றியமையாததாகும். தமிழ்நாட்டு வரலாற்றில் சைவத் திருமுறை தோன்றிய காலம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னதென்பது யாவரும் பொதுவாக அறிந்த உண்மை. அப்போது இருந்த அரசியல் வரலாற்று நிலையினை முதற்கண் காண்பதற்குத் தமிழகத்தின் பொதுநிலையறிவு வேண்டப் படும். தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும், தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும். 1 வேங்கடமலை சித்தூர் மாவட்டத் தின் வடவெல்லையாய் நின்று பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற் கெல்லையாகி2 வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத் தொடராகும். வடபெண்ணைக்கும் தென் பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டை நாடு என்றும் தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி நடு நாடு என்றும். வடவெள்ளாற்றுக்கும் புதுக் கோட்டைக்கருகிலோடும் தென்வெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி சோழ நாடு என்றும் இதன் தென்பகுதி பாண்டி நாடு என்றும் வழங்கும்.1 இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும் சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்கு நாடாகும். மேலைக் கடற்கரைப்பகுதி சேரநாடு. தொண்டை நாட்டில் வடபெண்ணை, பொன்முகலி, பாலாறு, தென்பெண்ணை, வெள்ளாறு என்பனவும், சோழ நாட்டில் காவிரி வெள்ளாறு என்பனவும், பாண்டி நாட்டில் வையை தாமிரபரணி என்பனவும் சிறப்புடைய ஆறுகளாகும். சைவ இலக்கியங்களின் தோற்றக் காலத்தில் இந்த நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.2 நடுநாடுமட்டில் திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில்3 வழங்கிற்று. வேறு சில காலங்களில் வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழ நாட்டோடும் சேர்ந்து4 வழங்கியதுண்டு. இந்த நாடுகளில் பாண்டி நாட்டில் பாண்டியரும், சோழ நாட்டில் சோழரும், தொண்டை நாட்டில் தொண்டையரும் அரசு புரிந்தனர். ஆயினும் அக்காலத்தே இவரோடு களப்பிரரும், மாள வரும், சிங்களரும், பல்லவரும் எனப் பல வேந்தர்கள் காணப் பட்டனர். சைவ இலக்கியங்கள் தோன்றிய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பல்லவ வேந்தர் சிறப்பு நிலையில் இருந்து ஆட்சி செய்தனர். அவர்களுடைய ஆட்சி, நம் சைவத் திருமுறைக் காலத்தில், பெரும்பாலும் தொண்டை நாட்டிலும், சிறுபான்மை, சோழ பாண்டிய நாடுகளிலும் பரந்திருந்தது5 ஆகவே திருமுறைகள் தோன்றுதற் கிடமான இக்கால நிலையினை வரலாற்று முறையில் காண்பது நேரிது. அதனால் கி.பி. ஆறாம்1 நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு ஈறாகவுள்ள காலத்து அரசியல் வரலாற்றினைச் சுருங்கக் காணலாம். பல்லவரென்பவர் தொண்டைநாட்டின் வடபகுதியில் வாழ்ந்தவர். அவர் தமிழரல்லர்.2 காஞ்சிபுரத்து வைகுந்தப் பெருமாள் கோயிற் படிமங்கள் ஒன்றன் கீழ் "இதுகளிறின் தலையன்று; நுன் மகனுடைய மகுடங்கள் இவையென்று தரண்டி கொண்ட போசர் இரணியவன்ம மகாராஜர்க்குச் சொல்ல" என்றொரு குறிப்புக்3 காணப்படுகிறது. இதனால் பல்லவர் மகுடம் களிற்றின் மத்தகம் போன்றிருக்கும் என்பது விளங்கும். இவ்வாறே பாக்டிரிய நாட்டு மன்னனான தெமீட்டிரியஸ் என்பவன் நாணயங்களில் அவன் கோடு தாங்கிய யானைத்தலை போலும் வடிவுடைய முடியணிந் திருக்கக்4 காண்கின்றோம். இது தமிழ்நாட்டு வேத்தியல்பன்று. ஆதலால் பல்லவர் இந்நாட்டினர் அல்லர் என்பது வலியுறுகிறது. அவர்களைத் தொண்டை நாட்டவரெனச் சிலர் கருதுவர். அதனை வற்புறுத்தத் தக்க நல்ல சான்று கிடையாது. இவர்களுட் பலர் ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரையில் தொண்டைநாடு போந்து அரசு நிலைபெறுவித்தலில் ஈடுபட வில்லை. அங்கே அவர்கட்கும் சளுக்கிய மன்னர்களுக்கும் போரே நிலவி வந்தது. பல்லவர் தொண்டைநாடு புகக் கருதினபோது சளுக்கிவேந்தர் போந்து தமிழ் வேந்தர்கட்குத் துணையாய் நின்று அவரைவென்று வெருட்டி விடுவர்.5 பல்லவ வேந்தருள் பலர் சைவராகவும்,6 புத்தராகவும்,7 வைணவராகவும்,8 சைனராகவும்9 இருந்திருக்கின்றனர். அவருள் தமிழகத்து வரலாற்றோடு முதன் முதலாக இயைபு பெறுபவன் சிம்மவிஷ்ணு என்பனாவான். இவன் முன்னோருள் புத்தவன்மனென்பவன் தமிழகத்துட் புகுந்து சோழர் களை வென்றானென்று செப்பேடுகள் சில1 கூறுகின்றன. ஆயினும், அவன் தமிழகத்தில் அவர்களை வென்றதன் குறியாக அரசு நிலை கண்டதாகத் தெரியவில்லை. அவனோடு பொருத சோழ பாண்டிய மன்னர்களின் பெயர்களும் தெரியவில்லை. ஆதலால் முதன் முதலாகத் தமிழகத்துட் புகுந்த தொண்டைநாடு முழுதும் கவர்ந்து பல்லவரசினைக் கண்டவன் சிம்மவிஷ்ணு என்பது வரலாற்றாராய்ச்சி முடிபு. சிம்மவிஷ்ணு : இவன் கி.பி. 575 முதல் 600 வரை அரசு புரிந்தான் என்பர். இவன் தந்தை சிம்மவன்மன் எனப்படுவன். மகேந்திரவன்மன் I : இவன், சிம்மவிஷ்ணுவுக்குப்பின் பல்லவ வேந்தனாக விளங்கியவன்; கி.பி. 600 முதல் 630 வரை ஆட்சி புரிந்தான். நரசிங்கவன்மன் I : இவன் முதல் மகேந்திரவன்மனுடைய மகன் : இவனை வாதாபிகொண்ட நரசிங்கவன்மன் என்றும் பல்லவ மல்லனென்றும் கூறுவர். இவன் கி.பி. 630 முதல் 660 வரை அரசு செலுத்தினான் என்பர். மகேந்திரவன்மன் II : இவன் முதல் நரசிங்கவன்மனுக்கு மகன்: இவனது ஆட்சிக் காலத்தில் மக்கள் தத்தமக்குரிய வருணாசிரம முறை தவறாது ஒழுகினர்2 என்று செப்பேடுகள் கூறுகின்றன. பரமேசுரவன்மன் : இவன் இரண்டாம் மகேந்திரனுக்குப் பின்பு அரசுகட்டிலேறியவன் : இவனை இரண்டாம் மகேந்திரவன் மனுக்குத் தம்பி என்பர். நரசிங்கவன்மன் II : (680 - 700) : இவனுக்கு இராசசிங்கன் என்றும் வேறு பெயருண்டு. இவன் பரமேசுரவன்மனுக்கு மகன். கச்சியில் கயிலாயநாதர் கோயிலைக் கட்டியவன் இவ்வேந்தர் பெருமான். பரமேசுரன் II (700 -710) : இவன் இராசசிங்கனான இரண்டாம் நரசிங்கனுக்குப்பின் அரசுகட்டில் ஏறியவன். இவன் கலியின் சேட்டைகளைக் கடிந்து வியாழ பகவான் உரைத்த நீதிப்படி ஆட்சி செய்தான் என்று செப்பேடுகள்1 கூறுகின்றன. நந்திவன்ம பல்லவ மல்லன் (710-755) : இவன், சிம்ம விஷ்ணுவின் மக்களில் ஒருவனான வீமவன்மன் வழி வந்தோருள், இரணிய வன்மன் என்பவனுடைய மக்கள் நால்வருள் எல்லோருக்கும் இளையவன். பரமேசுவரன் மகப்பேறின்றி இறந்ததனாலும், இவன் உடன் பிறந்தோர் மூவரும் அரசேற்க இசையாமையாலும் இந்நந்தி வன்மன் பல்லவ அரசு கட்டிலேறினான். இவன் நெடுங்காலம் ஆட்சி புரிந்தான் என்பர். தந்திவன்மன் (775-826) : இரண்டான் நந்திவன்மனுக்குப் பின் அவன் மனைவி இரேவா என்பாட்குப் பிறந்தவன் இத்தந்தி வன்மன். இவன் ஐம்பது ஆண்டுகட்குக் குறையாமல் அரசு புரிந்துள்ளான். இவன் காலத்தில் பாண்டி வேந்தர்கள் மேன்மை யுறத் தலைப்பட்டனர். நந்திவன்மன் III (கி.பி. 826 -849) : இவன் தந்திவன்மனுக்கு மகனாவன். இவனே தெள்ளாறெறிந்த நந்திவன்மன் எனப்படுவன். இவனுக்கும் பாண்டியர்கட்கும் கடும்போர் நடந்துளது. நிருபதுங்கவன்மன் (கி.பி. 849-875) : இவன் தெள்ளா றெறிந்த நந்திவன்மனுடைய மகன் : இவனோடு சோழநாட்டு அரிசிலாற்றங் கரையில் போர் உடற்றிய பாண்டியன், வரகுணன் மகனான ஸ்ரீ மாற பரசக்ர கோலாகலன் என்பானாவன். நிருபதுங்கனுக்குப் பின்னர் அபராஜிதன், கம்பவன்மன், வயிர மேகவன்மன், சந்திராதித்தன், கந்தசிஷ்யன், விசயநரசிங்க வன்மன் எனப் பலர் ஆங்காங்கே இருந்திருக்கின்றனர். இவருள் அபராஜிதன் கங்க வேந்தனான முதல் பிருதிவிபதியைத் துணையாகக் கொண்டு வரகுண பாண்டியனைத் திருப்புறம்பயத்துப் போரில் வெற்றி கொண்டான். பின்னர்ச் சிதைந்தொழிந்த பல்லவருட் சிலர் புலி நாட்டிலும் சிலர் நுளம்பபாடி நாட்டிலும் சில காலம் நாட்டுத் தலைவர்களாக நிலவியிருந்து மறைந்து போயினர். புலி நாடென்பது சித்தூர் மாவட்டத்துப் புங்கனூர்ப்பகுதி; நுளம்பபாடி பெல்லாரி மாவட்டத்து ஒரு பகுதியும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியும் கொண்டது. தொண்டைநாட்டிற் பல்லவர்கள் அரசு நிறுவி ஆட்சி புரிந்து வருங்காலத்தில், தென்பாண்டி நாட்டில் பாண்டி வேந்தர்கள் ஆட்சிபுரிந்து வந்தனர். அவர்கள் வரலாறு வேள்விக்குடிச் செப்பேட்டைக் கொண்டும் பிறவற்றைக் கொண்டும் அறிஞர் களால் ஆராயப்பெற்றுளது. பாண்டியன் கடுங்கோன் : இடைக்காலப் பாண்டியருள் இவனே முதல்வனாகத் கருதப்படுகின்றான். களப்பிரராட்சியி லிருந்து தென்பாண்டி நாட்டை விடுவித்த பெருந்தகை இவனே யாவன். இவன் கி.பி. 575 முதல் 600 வரை ஆட்சி செய்தான். மாறவன்மன்அவனி சூளாமணி (600-625) இவன் பாண்டியன் கடுங்கோனுடைய மகன்: மாறவன்மன் என்ற சிறப்பினைப் பெறும்மன்னருள் இவனே முதல்வன். சடையவன்மன் செழியன் சேந்தன் (625 - 640) : இவன் அவனி சூளாமணியின் புதல்வன்; சீனநாட்டு யுவான் சுவாங் காஞ்சி நகர்க்கு வந்திருக்கையில் இவன் இறந்தான் : இச்செய்தியை அச் சீன அறிஞர் குறித்துள்ளார். மாறவன்மன் அரிகேசரி (கி.பி. 640-670) : இவன் செழியன் சேந்தனுக்கு மகன்; சிவன் பால் பேரன்புடையவன். இவனைக் கூன்பாண்டியன் என்றும், சுந்தர பாண்டியன் என்றும் திருவிளை யாடற் புராணம் கூறும்; நம்பியாரூரரால் நெடுமாறன் எனக் குறிக்கப் பெறும் பேறு பெற்றவன் இவனே. கோச்சடையன் இரணதீரன் (கி.பி. 670-710) இவ்வேந்தன் மாறவன்மன் அரிகேசரிக்கு மைந்தன்; நம்பியாரூரர் சேரமான் பெருமாளுடன் மதுரை திருப்பரங்குன்றம் சென்று இறைவனை வழிபட்டபோது உடனிருந்து வேண்டும் சிறப்புக்களைச் செய்தவன்; இரணரசிகன் என்ற சளுக்கி வேந்தனான விக்கிரமாதித்தனை வென்ற தனால் இரணதீரன் என்ற சிறப்பினை இவ்வேந்தன் பெற்றான். அரிகேசரி பராங்குச மாறவன்மன் (கி.பி. 710 - 765) : இவன் கோச்சடையன் இரணதீரனுக்கு மகன் : இவனைத் தேர் மாறன் என்றும் முதல் இராசசிம்மன் என்றும் வழங்குவதுண்டு. கொங்கு நாட்டுத் திருப்பாண்டிக் கொடுமுடிக்குச் சென்று சிவனைச் சிறப்புற வழிபட்டான். நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790) : இவன் அரி கேசரி பராங்குசனுக்குக் கங்கவரசன் மகள் பூசுந்தரிபாற் பிறந்தவன். வேள்விக்குடிச் செப்பேடுகளும் சீவரமங்கலத்துச் செப்பேடுகளும் இவன் காலத்தனவாகும். திருமாலிடத்து இவன் பேரன்புடையவன்; “பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு மணி நீண்முடி நிலமன்ன வன்” என்று சீவரமங்கலத்துச் செப்பேடுகள் கூறுகின்றன.1 இராசசிம்ம பாண்டியன் II (கி.பி. 790-792) : இப்பாண்டியன் நெடுஞ்சடையன் பராந்தகனுடைய புதல்வன். வரகுணமகாராசன் (கி.பி. 792 - 835) : இவன் இரண்டாம் இராசசிம்மனுடைய மகன் ; இவனைக் “கொற்றவர்கள் தொழு கழற்கால் கோ வரகுண மகாராசன்” எனச் சின்னமனூர்ச் செப் பேடுகள் சிறப்பிக்கின்றன; சிவன் திருவடிக்கண் பதிந்த சிந்தை யுடையவன்; இவனது ஆட்சி சோழநாடு முழுதையும் தன்பாற் கொண்டிருந்தது. சீமாறன் சீவல்லபன் (835-86) : இவன் முதல் வரகுணனுடைய புதல்வன். இவனுக்கு ஏகவீரன், பரசக்ர கோலாகலன், அவனிப சேகரன் என்ற சிறப்புக்கள் பலவுண்டு. தெள்ளாறு, குடமூக்கு, அரிசிற்கரை என்ற இடங்களில் பல்லவரொடு பொருது இவன் பெரு வெற்றி எய்தினான். வரகுணவன்மன் II (கி.பி. 862-880): இவன். சீவல்லபனுக்குப் புதல்வன்; திருப்புறம்பயப்போரில் தோல்வி யெய்திச் சோழ நாட்டில் தான் வென்ற பகுதியைக் கைவிட்டு நீங்கினான்.2 சடையவன்மன் பராந்தக பாண்டியன் (கி.பி. 880 -900) : இவன் இரண்டாம் வரகுணனுக்குத் தம்பி; சீவல்லபனுக்கு இரண்டாம் புதல்வன். வரகுணன் மகப்பேறின்றி இறந்தமையின் இவன் அரசு கட்டிலேறினான். இவர்கள் காலத்தில் பாண்டியர் அரசு எல்லையிற் சுருங்கி விளக்கங்குன்று வதாயிற்று. இவர்கட்குப் பின்வந்த மூன்றாம் இராசசிம்மன் முதலியோர் காலங்களில் இடைக்காலச் சோழ வேந்தரது ஆட்சி ஓங்கத் தலைப் பட்டது. மதுரைகொண்ட பரகேசரி யெனப்படும் முதற் பராந்தக சோழன் முதலியோர் விளக்கம் மிகுவாராயினர். பல்லவ பாண்டியர் காலத்துப் புத்த சமய நிலை பல்லவர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் புத்த சமயமும் சைன சமயமும் பரவியிருந்தன. இவ்விரண்டினுள், புத்த சமயம், சமண் சமயமெனப்படும் சைனத்திற்கு முன்பே தென்னாட்டிற் பரவிய தென்பது வரலாற்றுக் கொள்கை. கி.பி. நான்காம் நூற்றாண்டில் (கி.பி. 399-414) பாகியான் என்னும் சீனரொருவர் தென்னாட்டுக்கு வந்திருந்தார். அவர் ஆங்காங்கே தான் கண்டனவும் கேட்டனவு மாகிய வரலாற்றுச் செய்திகள் பல குறித்துள்ளார். அவர் குறிப்பின் படி, அக்காலத்தே தென்னாட்டில் வீறுகொண்டிருந்த அரசு பல்லவரசெனக் கருதப்படுகிறது. அது கிருஷ்ணை, குண்டூர், நெல்லூர் மாவட்டங்களில் பரவியிருந்தது. அவர் வந்தபோது, குண்டூர் மாவட்டத்திலுள்ள நாகார்ச்சுனி குண்டாவில் ஒரு புத்த விகாரம் இருந்ததென்பது அவருடைய குறிப்புக்களால் விளக்கமுறு கின்றது. அந்நாளை அரசர்களான பல்லவர்கள் வைதீக சமயத்தவ ராகக் காணப்பட்னர். ஆயினும் அவர்கள் வேற்றுச் சமயங்களான புத்த சமண சமயங்கள்பால் காய்ப்புக் கொண்டவர்களல்லர்; தம்மால் இயன்ற அரசியற் பாதுகாப்பும் உதவியும் புரிந்துள்ளனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹியூன்சாங் என்ற சீனர் ஒருவர் தென்னாட்டுக்கு வந்தார். அவரும் பாகியானைப் போலவே குறிப்புக்கள் பல எழுதி வைத்துள்ளார். அவர் ஆந்திர நாட்டுக்கு வந்தபோது அந்நாட்டில் இருபதுக்குக் குறையாத சங்காராமங்கள் இருந்தன; அவற்றில் மூவாயிரத்துக்குக் குறையாத புத்த துறவிகள் இருந்தனர். வெங்கி நாட்டில் வெங்கி நகர்க்கு அண்மையில் ஒரு புத்த சங்காராமம் இருந்து மிக்க சிறப்புக் கொண்டு திகழ்ந்தது. அமராவதிக் கருகிலுள்ள தரணிக் கோட்டையில் புத்த சங்கங்கள் பல இருந்தன. பின்பு அவற்றுள் பல பாழ்பட்டமையின் அவர் காலத்தே இருபது சங்கங்கள் சிறப்புடன் இருந்தன. அங்கே புத்த துறவிகள் ஆயிர வர்க்குக் குறையாமல் இருந்தனர். அவர்கள் பெரும்பாலார் புத்த சமயமகா சங்கிகமுறையை மேற்கொண்டவர்கள். விசய வாடைக் கருகிலுள்ள குன்றுகளில் பூருவசீலம் அபரசீலம் என்ற இருவகைப் புத்த சங்கங்கள் இருந்தன. தமிழகத்துச் சோழநாட்டில் புத்த சங்கங்கள் பல இருந்தன வெனினும் அவை பாழ்பட்டுக் கிடந்தன. மிகச் சிலவற்றில்தான் புத்தர்கள் இருந்து வந்தனர். இந்நாட்டின்1 தலைநகர்க்கருகில் அசோக மரத்தோப்பும், புத்தர் இருந்து அறவுரை வழங்கும் பீடிகைகளும் இருந்தன. இனித் தமிழ் கூறும் நல்லுலகம் எனப்படும் தமிழ் நாட்டுள் நுழையின், வடக்கில் காஞ்சிமாநகர் இனிய காட்சி வழங்கும். இக்காஞ்சிநகர் கி.பி. ஆறு ஏழாம் நூற்றாண்டிலேயே கல்வி சிறந்த புகழெய்தி யிருந்தது. புத்த சமய நூலாகிய நியாயபாடியம் எழுதிய2 வாற்சாயனர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட திராவிட நாட்ட வர் எனப்படுகின்றார். திக்கநாகர், தருமபாலர், போதிதருமர் முதலி யோர் காஞ்சியைச் சூழ்ந்த தமிழ்நாட்டிற் பிறந்த தமிழ்ப் பெரு மக்களாவர். வடநாட்டில் புத்தபெருமான் தோன்றிப் புத்த சமயங் கண்டு மக்கட்குரைத்த அந்நாளில், காஞ்சியிலும் அப்புத்த சமயக் கருத்துப் பரப்பப் பெற்றதெனக் கேள்விவழிச் செய்தி கூறுகின்றது. புத்த பெருமானே காஞ்சிமாநகர்க்கு வந்திருந்து தமது புத்த தருமத்தை இந்நாட்டு மக்கட்கு அறிவுறுத்தினரெனவும் உரைப்ப துண்டு. சிங்களநாட்டு மகாவசமிசமும் பாகியான் எழுதிய குறிப்புக் களும், பல்லவராட்சி தோன்றுமுன்பே, பாண்டிநாட்டில் புத்த சமயம் பரவியிருந்ததெனக் குறிக்கின்றன. மணிமேகலை யென்னும் தமிழ்நூல், சேரநாட்டு வஞ்சிமாநகரிலும், சோழநாட்டுக் காஞ்சி மாநகரிலும், காவிரிப் பூம்பட்டினத்திலும், புத்த சமய சங்காராமம் இருந்ததைக் குறிக்கின்றது. அந்நாளில் சோழ வேந்தன் ஒருவனால் காஞ்சிமா நகரில் புத்த சயித்தியம் ஒன்று நிறுவப்பெற்றதென்றும் மணிமேகலை கூறுகிறது. அந்நூலில் அறவண அடிகள் என்பார் மணிமேகலைக்கு உணர்த்திய தருக்கமுறை பின்பு திக்கநாக ரென்பவரால் வடநாட்டவர்க்கு அறிவுறுத்தப்பட்டுளது. இத்துணையும் கூறியவற்றைத் தொகுத்து நோக்கு வோமாயின், பல்லவராட்சி தமிழ்நாட்டில் தோன்றுதற்குமுன்பே, தமிழகத்துச் சோழநாடு, பாண்டிநாடு, சேரநாடு என்ற மூன்று முடிவேந்தர் நாடு முழுதும் புத்த சமயம் பரவி யிருந்ததென்பது தெள்ளிதாம். பல்லவர் காலத்தில் தமிழகத்து வந்த ஹியூன்சாங் என்பவர் எழுதியுள்ள குறிப்புக்களுள் சில காஞ்சி மாநகரைப் பற்றியுள்ளன: “காஞ்சியைச் சுற்றியுள்ள நாடு திராவிடநாடு எனப்படும்; நிலம் மிக்க வளஞ்சிறந்து பெரும் பொருளை விளைவிக்கின்றது; நாடு மிக்க வெப்பமாயிருப்பினும், நாட்டில் வாழ்பவர் மனவலியுடைய ராவர்; உண்மையொழுக்கங்களில் கடைப்பிடியும் கல்வி கேள்வி களாற் சிறக்கம் புகழும் உடையவர்; இந்நாட்டில் நூற்றுக்கு மேற்பட்ட சங்காராமங்கள் உள்ளன; பத்தாயிரவருக்கு மேற்பட்ட குருமார்கள் தேரவாத நூல்களைப் பயில்கின்றனர். சைனருள்ளிட்ட ஏனையோர் கோயில்கள் எண்பதுக்குக் குறையாமல் உள்ளன. சில பகுதிகளில் திகம்பர சைனத்தைப் பின்பற்றுவோர் பலர் இருக்கின்றனர். ததாகதர் (புத்தர்) தாம் வாழ்ந்த அந்நாளில் இப்பகுதிக்கு அடிக்கடி வந்து போவரென்றும், அவர் உரைத்த அறவுரையால் பலர் புத்தர் களாயினரென்றும் கூறுகின்றனர். புத்த மன்னனான அசோகனும் இக் காஞ்சிமா நகரைச் சூழ்ந்த பகுதியில் தன்னுடைய அறங்கூறும் தூண்களை நிறுவினன் என்றும் சொல்லுகின்றார்கள். அவற்றுள் பல இப்போதும் உள்ளன. நாலந்தா பல்கலைக்கழகத்தில் தலைமைப் புலமை நடாத்திய சீலபத்திரருக்கு முன்னோனாகிய தருமபாலன் பிறந்தவூர் இக்காஞ்சியம் பதியே. பாண்டிநாட்டில் சிலர் புத்தனோதிய அறங்களை மேற்கொண்டொழுகுகின்றனர். ஆயினும், பலர், வாணி கத்துறையில் பேரார்வத்தோடும் விருவிருப்போடும் உழைத்துப் பொருளீட்டுவதில் கண்ணுங் கருத்துமாயுள்ளனர். பாண்டிநாடு முழுதும் புத்த சயித்தியங்கள் உள்ளன வெனினும், புத்ததருமம் அருகி வருகிறது”1 என்று கூறுகின்றன. ஸியூன்சாங் குறிப்புக்களே, “காஞ்சிக் கருகில் நூறடிக்கு மேற்பட்ட உயர முடைய அசோக மரங்கள் நிறைந்த (சங்க) ஆராமம் ஒன்று உளது; இங்கே தான் புத்தர் தீர்த்தங்கரர்களைச் சொற்போரில் வென்று” அவருட் பலரைத் தமது சங்கத்திற் சேர்த்துக் கொண்டனர்; அவர்க்கு முன்னைய நான்கு புத்தர்களும் இருந்த இடங்களும் நடந்த சங்கங்களும் சீரழிந்து கிடக்கின்றன”2 என்றும் கூறுகின்றன. மத்த விலாசம் என்பது மகேந்திரவன்மன் எழுதிய பிரகசன நாடகமென்பது அறிஞர் தெரிந்த செய்தி. அதன்கண் புத்தவிகார மொன்று குறிக்கப்படுகிறதன்றோ! அந்த விகாரம், இங்கே ஹியூன் சாங் குறித்துள்ள குறிப்புக்களிற் காணப்படும் புத்த விகாரமாக இருக்கலாம் என்பர். மத்த விலாச பிரகசனத்தில் வரும் தேவ சோமன் என்னும் புத்தனால் இந்த விகாரம்3 இராஜ விகாரம் எனப்படுகிறது. எனவே, இது பழைய வேந்தருள் ஒருவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது தேற்றம். பழையோருள் சோழ வேந்தருள் ஒருவனான இளங்கிள்ளி யென்பான் இப்புத்த சைத்தியத்தைச் செய்து வைத்தான்4 என்று மணிமேகலை கூறுகிறது. இனி, இந்த இராஜ விகாரம் சுற்றுப்புறங்களிலுள்ள சங்கங்கள் பலவற்றிற்கும் தலைமைச் சங்கமென்றும், அவற்றின் வருவாய் இதற்குரியதென்றும், ஒருகால் தனதாசனென்னும் வணிகன் மனைவி புத்த சங்கத்தைச் சேர்ந்து பெரும்பொருளை வழங்கினாள் என்றும் தேவசோமன் கூற்றில் வைத்து மத்த விலாசம் கூறுகிறது. மணி மேகலை காலத்தேயே இதற்குப் பெரும்பொருள் வழங்கப் பெற்றதை அந்நூலே கூறுகிறது. இதனால் மகேந்திரவன்மன் காலத்தில் காஞ்சிமாநகர்க்கண் இருந்த புத்த சைத்தியம் மிக்க செல்வத்தால் பெருமை பெற்றிருந்த தென்பது தெளிவாகிறது. தென்னாட்டிற் பரவிய புத்த சமயம் மகாயானமென்றும், அதனைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நாகார்ச்சுனர் கொணர்ந்தன ரென்றும், அக்காலத்தே தென்னாட்டு வேந்தனொருவனும் பிராமணர் பத்தாயிரவரும் மேற்கொண்டு பவுத்திராயினரென்றும் நாகார்ச்சுனர் வரலாற்றால் அறிகின்றோம். புத்த யோகவாதம் மணிமேகலை காலத்தில் விளக்கப்பெற்று நிலவ, அதனைத் திக்கநாதர் பின்பு வடநாட்டிற் பரப்பினரென்றலும் உண்டு. ஹியூன்சாங் வந்திருந்த போது ஈழநாட்டிலிருந்து புத்த துறவிகள் முந்நூற்றுவர் வந்தார் களெனவும், ஹியூன்சாங் அவர்களோடு கலந்து அளவளாவினர் எனவும்1 கூறுவர். ஹியூன்சாங் காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய பவுத்தம் தேரவாத மாகும். தேரர்கட்கு நூறு சங்காராமங்கள் உண்டு. தேரர் பத்தாயிரவருக்குக் குறையார். தியானவாதம் என்றொரு பிரிவும் தென்னாட்டுப் பவுத்தத்தில் உண்டு. இதனை, கி.பி. 527-இல் முதன்முதலாகச் சீனநாட்டுக்குக் கொண்டு சென்றவன் போதி தருமன் என்னும் காஞ்சி நகர வேந்த னொருவனுடைய மூன்றாம் மகன். இவ்வாறு தென்னாட்டினின்றும் வடநாட்டுக்குச் சென்று சிறப்பு மிக்க திராவிடப் புத்தருள், திக்கநாதனார் சிறந்தவராவர். பல்லவ வேந்தன் ஒருவனுடைய ஆட்சியில் உயர் நிலைப்பதவியில் இருந்த ஒரு தலைவனுடைய முதல் மகன் திக்கநாகன். இவர் வட மொழியில் வல்லுநராகி நாலந்தா பல்கலைக்கழகம் சென்று அங்கே தமது சொல்வன்மையால் பெருஞ் சிறப்புற்றார். அவர்க்குப்பின் அவருடைய மாணவரான தருமபாலர் என்பார் அப்பல்கலைக் கழகத்தே மாணவராயிருந்து பின்னர் அதற்குத் தலைவராகவும் விளங்கினார். தருமபாலருடைய மாணவர் சீலபத்திரர் என்பவர். அவர் சிறப்புற்ற நாளில், தென்னாட்டிலிருந்து சென்ற பார்ப்பன னொருவனுடன் பல நாட்கள் அரிய சொற்போர்கள் நடத்தின ரென்றும், முடிவில் சீலபத்திரர் வெற்றி பெற்றாரென்றும் ஹியூன்சாங் கூறியுள்ளார். இத்துணைச் சிறப்புற்று விளங்கிய புத்த சமயத்தைப் பற்றிக் கூறும் பாகியானோ ஹியூன் சாங்கோ பிறரோ அக்காலத்தே இச்சமயம் எவ்வகையில் வேந்தர்களுடைய ஆதரவு பெற்றிருந்தது எனக் கூறுகின்றாலர். முதல் மகேந்திரன் காலத்துக்கு மிகமிகத் தொல்லோரான பல்லவ வேந்தர்களுட் சிலரும் களப்பிரரும் தமிழ் வேந்தரும் ஆகிய பண்டை வேந்தர்களின் அரசியலாதரவு இருந்திருக்க வேண்டும். புத்தவன்மன் என்பது முதலாக வரும் வேந்தர் பெயர்கள் இவ்வாறு நினைத்தற்கு இடந்தருகின்றன. அரசியலாதரவு இல்வழி, புதுச் சமயமொன்று நிலைபேறு கொள்வதென்பது எளிதன்று என்பது அக்காலநிலையினைக் காண்பார் இனிதறிவர். ஒரு காலத்தில் அரசியலாதரவு பெற்ற நிலைபேறு கொண்ட புத்த சமயம், கி.பி. ஆறு ஏழாம் நூற்றாண்டு களை எய்துதற்குள் தன் செல்வாக்கினை இழப்பதாயிற்று. அருடைய சங்கங்கள் புத்த சமயக் கருத்துக்களை மாணவர்க்கு உரைப்பதும், அவர்கள் துணையாக நாட்டிற் புகுந்து நாட்டவர்க்குப் புத்த தருமத்தை விரித்துரைத்துப் பரப்புவதும் ஏனைச் சமயத்து அறிஞர்களோடு சொற்போர் செய்வதுமே அவர்கள் பெரும்பாலும் மேற்கொண்டிருந்த கொள்கைகளாகக் காணப்படுகின்றன. முடிவாக நோக்குமிடத்து நால்வர் காலத்தின் தொடக்கத்தில் பௌத்த சங்கங்கள் மிகச் சிலவாக வும் புத்தர்களின் தொகை போதிய அளவு குறைவாகவும் இருந்தன என்றொழிவது ஈண்டைக்கு அமைவதாம். இனி, அதனையடுத்துப் பேசப்படும் சமண் சமய நிலை யினைக் காண்பாம். சமண் சமய நிலை பௌத்த சமயம் போலச் சமண் சமயமும் தென்னாட்டிற் புதிது புகுந்த வேற்றுச் சமயமாகும். இதன் வரலாறு கண்டவர், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகார மணிமேகலை களிற் காணப்படும் சமண் சமயம், தன்னை யடுத்துவந்த மூன்று நான்காம் நூற்றாண்டுகளில் தன் வரலாறு தோன்றாதபடி, யிருக்கிற தெனக்1 கூறுகின்றனர். இதற்குக் காரணம் அக்காலத்தே வேதியருக்கும் சமணருக்கும் இருந்த பகைமையே யெனவும், அதனால் சமணர் தென்னாட்டில் செல்வாக்குப் பெறுவது அரிதாயிற் றெனவும் வரலாற் றறிஞர் கருதுகின்றனர். விக்கிரமன் என்னும் வேந்தன் இறந்தானாக, கி.பி.525 அளவில், பூஜ்யபாதர் என்பவருடைய மாணவரான வச்சிரநந்தி யென்பவர் ஒரு சமண் சங்கத்தை நிறுவினர்.2 தேவசேனரென்பார் எழுதிய “திகம்பர தரிசன சாரம்” என்னும் நூல், அச்சங்கம் தென்மதுரையில் நிறுவப் பட்டதெனக் கூறுகிறது. இச்சங்கத்தின் வாயிலாகச் சமண் சமயம் தென்னாட்டிற் பரவிற்றென்பர். “உலோக விபாகம்” என்றொரு சமண நூல் மைசூர் கல்வெட்டுத் துறையினரால்3 கண்டுபிடிக்கப்பட்டுளது. அதனைப் படி யெழுதியவர், தான் பாண நாட்டுப் பாடலிகையில் இருந்து எழுதியதாக அதன்கட் குறித்துள்ளார். அதனைக் கண்ட திரு. நரசிம்மாச்சாரியார், “பாட லிகா” என்பது இப்போதுள்ள திருப்பாதிரிப்புலியூர் என்று குறிக் கின்றார். திருப்பாதிரிப்புலியூர்4 வடகரைச் சோழ நாட்டைச் சேர்ந்த தாகலின், உலோக விபாகத்துட் கண்ட பாடலிகா வேறு போலும் என நினைக்க இடமுண்டாகிறது. இந்நிலையில் திருமதி மீனாக்ஷி யம்மை யார் பண்ணுருட்டி யென்பது பாணுருட்டி யென்பதன் மரூஉவாக இருக்கலாமென நினைத்து அதற்கு அண்மையிலுள்ள பாதிரிப்புலியூர் ஒரு காலத்தே பாண நாட்டிலிருந்திருக்கலாம் எனக் கருதுகின்றார். அது பொருத்தமாகவும் உளது. சங்ககாலத்தில் சித்தூர் மாவட்டத்தின் கீழ்ப்பகுதி பாணனா டாக இருந்தது. இதனை “வடாஅது, நல்வேற்பாணன் நன்னாடு”1 என மாமூலனாரென்னும் சங்கச் சான்றோர் குறித்துள்ளதனால் அறியலாம். இடைக்காலக் கல்வெட்டுக்களும் அப்பகுதியைப் பெரும் பாணப் பாடியென்றும், அப்பகுதியை யாண்டவர் வாணாதி ராயரென்றும் கூறுகின்றன. அக்கல்வெட்டுக்களால், பாலாற்றின் வடகரையிலிருந்த பாணரசு பின்பு தென்பெண்ணைக் கரையிலும் இருந்ததென்றறிகின்றோம். பிற்காலத்தே பாணர்கள் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் வாணாதிராயரென்றும், வாண கோவரைய ரென்றும் நிலவியிருந்தனர். அதனால் சோழநாட்டுத் திருப்பாதிரிப்புலியுர் ஒரு காலத்தே பாணரசின் கீழ் இருந்திருக் கலாம்; ஆகவே, பாடலி பாணனாட்டதென உலோகவிபாகத்தைப் படியெடுத்தவர் கூறும் கூற்று ஏற்றுக் கோடற்குரியதேயாம். இந்த “உலோகவிபாகம்” என்ற நூல் படி யெழுதி முடிந்த காலம் சகம் 380 (கி.பி. 458) என்று குறிக்கப்பட்டுளது. அந்நூல் தோன்றிய காலம் அதற்கு முன்னதாம் என்றும், எனவே பாடலிச் சமண் சங்கம் மதுரைச் சமண் சங்கத்தினும் காலத்தால் முற்பட்டதா மென்றும் அறிகின்றோம். இப்பாடலிச் சங்கம் தோன்றிய பின்பு சமண் சமயம் தென்னாட்டில் வலிய கால் கொண்டது. இந்த உலோக விபாகமென்ற நூல் தோன்றிய தொருபுறமிருக்க, மகேந்திர வன்ம பல்லவனையும் பாண்டியன் நெடுமாறனையும் திருநாவுக் கரசரையும் தொடக்கத்தில் தண் கண் தழீஇக்கொள்ளும் சால்பும் இச்சமயத்துக்கு அக்காலத்தே உண்டாயிற்றெனில் வேறு கூறுவது மிகை. தென்நாட்டில் அக்காலத்தே பரப்பப்பெற்ற சமண் சமயம் திகம்பர சமண மாகும். இந்நாட்டில், ஐந்தாம் நூற்றாண்டில் சிம்மசூரி யென்பாரும் சருவநந்தி யென்பாரும் சமக்கிருதத்திலும் பிராகிரு தத்திலும் பெரும் புலமை பெற்று விளங்கினர். ஏழாம் நூற்றாண்டில், பாடலிச் சமண் சங்கத்தில் மருணீக்கியார் தலைமை தாங்கினார். உலோக விபாகத்தின் இறுதி மூன்றாம் பாட்டு, இந்த நூல் சகம் 380-இல் முடிவுற்றதாகக் கூறுகிறது. இதனைத் திட்வட்டமாக முடிவு காண்பதில் அறிஞர்களிடையே ஒத்த முடிவு எய்திற்றிலதாயினும், இஃது ஐந்தாம் நூற்றாண்டினது என்பதில் வேறுபடுவார் இலர். இக்காலத்துப் பல்லவ வேந்தன் இரண்டாம் நரசிங்கவன்மனாவான். இதனை, உலோக விபாகம், “சகம் 380-ல் காஞ்சி வேந்தனான சிம்மவன்மன் காலத்தில்”1 என்று குறிப்பதனால் தெளியலாம். பல்லவ வேந்தருள் முதல் மகேந்திரவன்மன் இச்சங்கத்தவரது வடமொழிப் புலமையில் பெருமதிப்புக்கொண்டிருந்தான். அவனும் சிறந்த வடமொழிப் புலவனாதலால், சங்கத்தின்பால் அவனுக்குப் பேரன்புண்டாயிற்றெனின் அது புனைவுரையாகாது. சங்கத்துச் சமண் சான்றோர்க்கும் அவன்பால் பேரன்புண்டாயிற்று. அவர்கள் மகிழ்வுற அவன் மத்த விலாச பிரகசனத்தை யெழுதியிருத்தல் கூடும். அக் காலத்தே மருணீக்கியார் தருமசேன ரெனப்படுவதின் நீங்கிச் சைவ ரானதும், அவரைத் தொடர்ந்தே மகேந்திரவன்மன் சைவ னானதும் இச்சங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயின. அப்போதைய சமணர்கள் பால் காணப்பட்ட குறைகளை நாவரசர் நாடெங்கும் சொல்லிப் பரப்புவராயினர்; அவரோடு ஞானசம்பந்தரும் சேர்ந்து நாட்டில் சமண் சமயத்தை எதிர்த்துப் பாட்டாலும் உரையாலும் சமயப் பணி புரியலாயினர். சைவனாகிய முதன் மகேந்திரன் பாடலியிலிருந்த சமண் பாழிகளையழித்து, அதனாற் கிடைத்த பொருளைக் கொண்டு திருவதிகையில் குணதரேச்சுரம் எனத் தன் பெயரால் சிவன் கோயிலொன்று கட்டினான். இவ்வகையால், பாடலியிலிருந்த சமண் சங்கம் ஒழிந்து போவதாயிற்று, சமண் சமயம் மக்களிடையே செல்வாக் கிழந்து. சமண் சான்றோரும் குன்று வராயினர். மைசூர் நாட்டில் வாழ்ந்த திகம்பர சமணர், “சமண்சங்கம் நான்கனுள் ஜினகாஞ்சியொன்று” என்று2 குறித்துள்ளனர். ஜினகாஞ்சி யென்பது காஞ்சிபுரத்துக்கு அண்மையில் இரண்டுகல் தொலையில் வேகவதியாற்றங்கரையிலுள்ள திருப்பருத்திக்குன்றம் எனப்படும் ஊராக இருக்கலாமென அறிஞர் கருதுகின்றனர். இத்திருப்பருதிக்குன்றத்தையும் இங்குள்ள கோயில்களையும் பற்றியெழுதிய திரு. T.N. இராமச்சந்திரன் என்பார், “இங்குள்ள கோயில் இரண்டனுள் ஒன்றாகிய சந்திரபிரபா கோயில் பல்லவர் காலத்து வேலைப்பாடமைந்துளது; அதனால் அதனை நந்திவன்ம பல்லவன் கட்டியிருக்கலாம்” என்று கூறுகின்றார். அப்பல்லவன் சமய வேறுபாடு கருதாத வேந்தனாதலால் அவன் காலத்தில் சமணர்கட்குத் தீங்கில்லையாக வேண்டும்; மேலும் அவன் காலத்தே வடார்க்காடு மாவட்டத்து ஆர்க்காட்டுக்கு அண்மையிலுள்ள பகுதிகளில் சமணர்கள் வாழ்ந்தனர். கற்குகைகள் பல அங்கே1 உள்ளன. அம் மாவட்டத்துவெடால் என்னும் ஊரிலுள்ள2 கற்குகை சமண் பாரியாக இருந்திருக்கிறது. இஃது இடைக்காலச் சோழருள் முதலாதித்தன்3 காலத்தும் இருந்திருக்கிறது. இதனால்திரு. இராமச்சந்திரன் கூறியது பொருத்தமாகவேயுளது. புதுக்கோட்டை நாட்டில் சித்தன்னவாசல், தேனிமலை, நார்த்தா மலை முதலிய இடங்களில் குகைகள் அமைத்து அங்கே சமண் சான்றோர்கள் வாழ்ந்திருக்கின்றனர். மகேந்திரவன்மனுடைய கல் வெட்டுக்களும் அந்நாட்டுக் குடுமியான்மலை முதலிய இடங்களில் உள்ளன. இவற்றைக் கொண்டு நோக்குமிடத்து, முதல் மகேந்திரன் சைவனாகிச் சமண் சமயத்தின் வேறுபட்ட கருத்துடையனாகவே, அவன் சலுகை குன்றுவது கண்ட சமண் சான்றோர் மக்கள் வழங்கு வதில்லாத இடங்களில் குகை யமைத்து வாழலுற்றனர் போலும் என நினைத்தற்கு இடமுண்டாகிறது. பல்லவ பாண்டியர் காலத்துச் சைவ சமய நிலை தமிழ் இலக்கிய வரலாற்றுக்கு உருவான தொடக்கம் தோற்று வித்து நிற்கும் சங்க இலக்கிய காலத்தே சிவனை வழிபடும் சமயமாகிய சைவம் நிலவியிருக்கிறதென்பதைச் சங்க இலக்கிய வரலாறு காட்டுகின்றது. எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய கடவுளைத் தென்னாட்டவர் சிவன் என்று சொல்லி வழிபடுவர். இதனைத் திருவாதவூரடிகள். “தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று குறிப்பது தமிழறிஞர் பலரும் சால அறிந்ததொன்று. மேனாட்டாராய்ச்சியாளருள் கிரையர்சன், சர் ஜான் மார்ஷல், அறிஞர் எர்னஸ்டு மாக்கே. H.M. பிரெயில்ஸ் போர்டு முதலியோர் சிவனை வழிபடும் சமய நெறி திராவிட ருடையதென்று தணிந்துரைத் துள்ளனர். தென்னாட்டைத் திராவிட நாடு என்று அந்நாட்டவரைத் திராவிடர் என்றும் உலக அறிஞர் பலரும் ஒருமுகமாகக் கூறுவது உண்மை. ஆகவே சிவநெறி யாகிய சிவ வழிபாட்டுச் சமயம் தென்னாட்டுக்குச் சிறப்பாக உரியதாதல் தெளியப்படும். முழுமுதற் கடவுளாகிய சிவத்தைச் சைவனென்றும் வழங்குவதுண்டு. அதனால் சிவ நெறி சைவமென்று வழங்குவ தாயிற்று. கி.பி. இரண்டாம் நூற்றாண்டினதெனப்படும் சிலப்பதி காரத்தை அடுத்து நிற்கும் மணிமேகலை சைவ சமயத்தைக் குறித்துரைக்கின்றது. இது கொண்டு சைவ சமயம் தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலத் தொடக்கத்தே தென்னாட்டில் நிலவியிருந்த தொன்மைச் சமயமென்றும், அடுத்து வந்த புத்த சமண சமய காலங்களிலும் இது நாட்டு மக்களால் மேற்கொள்ளப் பட்டிருந்த தென்றும் நாட்டு வரலாறு நன்கு கூறுகின்றது. பல்லவ பாண்டியர் காலத்தில் தென்னாட்டில் நிலவிய சைவ சமயம் மக்களுடைய வாழ்க்கையோடு பிரிப்பற ஒன்றுபட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்துக்கும் அரசியல் நீதி முதலிய துறைகட்கும் சைவக்கோயில்களே பெருநிலையங்களாய் விளங்கின. கோயில் களில் கல்வியும் ஏனைக்கலைகளும் ஒருசேர வளர்க்கப்பட்டன. கோயில்களை நடுவிடமாகக்கொண்டே மக்களின் நாட்டுவாழ்வும் அரசியல் வாழ்வும் இயங்கின. சுருங்கச் சொல்லுமிடத்து மக்களுடைய இம்மை மறுமையென்ற இருவகை வாழ்வுக்கும் சைவக் கோயில்களே தலைமை நிலையங்களாய் நலம் புரிந்து வந்தன என்பது மிகையாகாது. பல்லவர் காலத்துக்கு முன்பே தமிழ்நாடு, தொண்டைநாடு, சோழநாடு, பாண்டியநாடு, மலைநாடு, கொங்குநாடு என ஐந்து பெருநாடுகளாகப் பிரிந்திருந்த தென்பது முன்பே காணப்பட்டது. இவற்றுள் மலைநாடும் கொங்கு நாடு மொழிய ஏனை மூன்று நாடுகளும் பொதுவாக நல்ல வளமுடையனவாகும். அம்மூன்றிலும் நீர்நில வளத்தாற் சிறப்புற்றது காவிரி பாயும் சோழநாடு. நாட்டு மக்களுடைய வாழ்வை நன்னெறிப்படுத்தற்கண் முற்பட்டு நின்ற கோயில்களும் அம்முறையே சோழநாட்டில் மிக்கும் ஏனைய வற்றில் அந்த அளவிற் குறைந்தும் நிற்பனவாயின. இப்போது கிடைத்துள்ள சான்றுகளைக் கொண்டு நோக்கின் சோழநாட்டில் சிறப்பு மிக்க கோயில்கள் 190-க்குக் குறையாமலும், தொண்டை நாட்டில் 32-ம் தொண்டை நாட்டுக்கும் சோழநாட்டிற்கும் இடைப் பகுதியாகிய நடுநாட்டில் இருபத்திரண்டும், பாண்டி நாட்டில் பதினான்கும், கொங்குநாட்டில் ஏழும், மலைநாட்டில் ஒன்றுமாகக் காணப்படுகின்றன. இவற்றின் வேறாக, வடநாட்டில் ஐந்தும் துளுநாட்டில் ஒன்றும் அந்நாளில் சிறப்புற்ற கோயில்களாக இன்று நாம் காணக்கிடக்கின்றன. இக்கணக்கினையெடுத்தற்கு இடமாகிய திருமறைகளில் 250 வைப்புக் கோயில்கள் உள்ளன. நடுநாடு என்றது பல்லவர்க்குப் பின் தோன்றி வல்லரசாய் மேம்பட்ட சோழர் காலத்தில் உண்டாகியது. இது பல்லவர் காலத்தில் திருமுனைப்பாடி நாடு என நிலவிற்று. இது. திருக்கோவலூரை மேற்கெல்லையாகக் கொண்டு தென்பெண்ணை யாறு கடலொடு கலக்கும் துறைவரையில் அதன் இரு மருங்கும் நின்ற நாட்டுப் பகுதியைத் தன்கட்கொண்ட வளமிக்கதொரு சிறுநாடாகும். இக்காலத்தே நிலவிய திருமறையாசிரியர்களான ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்ற மூவர் பாட்டுக்களால் தமிழகத்தில் அந்நாளில் நிலவிய கோயில்கள் 530-க்குக் குறையாமல் உள்ளமை தெரிகிறது. அரசியற் கல்வெட்டுத் துறையினரால் இதுவரைப் படியெடுத்துள்ள கல்வெட்டுக்களை நோக்கின், தமிழ்நாட்டிற் பேரூர்கள் எத்துணையுண்டோ அவற்றைவிட அத்துணை இரட்டிப்பான கோயில்கள் உளவாதல் தெளிவாகிறது. இவ்வண்ணம் சைவக் கோயில்கள் நாடுமுழுதும் பேரூர் தோறும் நின்று மக்கள் வாழ்வைத் தம்மோடு பிணித்து நின்ற காலம், பல்லவர்களும் பாண்டியர்களும் இடைக்காலச் சோழர்களும் தங்கள் ஆட்சியை நடத்திய காலமாகும். நாட்டினது ஆட்சி முறையும் கோயில்களின் வாயிலாக நாட்டில் இனிது இயங்கியது அக்காலமே. சங்க காலவேந்தர்கள், புலவர்களைப் பேணுமாற்றால் இயற்றமிழையும், பாணர்களால் இசைத் தமிழையும், கூத்தர்களால் நாடகத் தமிழையும் வளர்த்தாராக, இடைக்காலத்துப் பல்லவரும் பாண்டியரும் சோழரும், இவர்களை அடியொற்றிப் பிற்காலப் பாண்டியரும் விசய நகர வேந்தரும் இக்கோயில்களின் வாயிலாக இயலிசை நாடகங்களை இறவாது பாதுகாப்பாராயினர். சைவ இலக்கியங்களும் பேணற்பாடு பெற்றன. இனி, இக்காலத்தே சைவ இலக்கியங்கள் வளர்ந்த வரலாற்றைக் காண்டற்கு முன், இவற்றுள் முன்னணியில் திகழும் திருஞான சம்பந்தர் முதலிய அருட் சான்றோர்கள் காலத்து வேந்தர்களான பல்லவர்கள் ஆட்சியில் கல்வி நிலை இருந்த திறத்தை முதற்கட் காண்பது இன்றியமையாததாகும். பல்லவர்கள் தமிழ் நாட்ட வரல்லரென்பதும், காலஞ் செல்லச் செல்லப் படிப்படியாக வடநாட்டிலிருந்து தென்னாடு புகுந்து தொண்டைநாட்டிலும் சோழநாட்டிலும் பரவியவரென்பதும் அவர்கள் வரலாற்றால் அறியப்படுகின்றன; எனேவ, அவர்கட்குத் தமிழ் வேற்றுமொழி யென்பதும் வடமொழி உரிமைமொழி யென்பதும் வெளிப்படை. ஆகவே அவர்கள் ஆட்சியில் வடமொழியே பெரிதும் பேணி வளர்க்கப்படும் என்பது சொல்லாமலே விளங்கும். பல்லவர்கள் காலத்தில், பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் மேன்மை யுற்றுத் திகழ்ந்தனர். அவர்கள் வழங்கிய செப்பேடுகள் பலவற்றிலும் மெய்க்கீர்த்திக்களெல்லாம் வடமொழியிலேயே பொறிக்கப் பெற்றன. பல்லவ வேந்தருள் முதல் மகேந்திரவன்மன் ஒரு சிறந்த வடமொழிப் புலவனாவான். அவன் மத்தவிலாச பிரகசனமென்ற நாடகத்தையெழுதியவன். பகவத் அஜ்ஜுகம் என்றொரு வடமொழி நாடகமுண்டு; அதனையும் அவனே எழுதினானென்று சில அறிஞர் கருதுகின்றனர். திருவனந்தபுரத்தில் அண்மையில் வெளியிட்டிருக்கும் நாடகங்கள் பல பாசகவி யெழுதியன எனப்படுகின்றன. சொப்பனவாசவதத்தை முதலியன, பாசகவி யெழுதிய நாடகங்களின் சுருக்கமென்றும், அவை பல்லவ வேந்தரவையில் நடித்துக் காட்டற்கென்றே சுருங்கத் தொகுக் கப்பட்டனவென்றும் அறிஞர்கள்1 கருதுகின்றனர். வடமொழியில் வல்ல வேதியர்கட்குப் பல்லவ வேந்தர்களால் மிக்க சிறப்புக்கள் செய்யப்பட்டன. இவ்வேதியருள் நான்கு வேதம் வல்லவர்களும் ஆறங்கம் வல்லவர்களும் கிரம வித்தர்களும் பட்டர் களும் திரிவேதிகளும் எனப் பலர் இருந்திருக்கின்றனர். ஜேஷ்டபாத சோமயாஜி என்பாருக்கு இரண்டாம் நந்திவன்மன் வழங்கிய காசாக்குடிச் செப்பேட்டின் ஒரு பகுதியைத் தமிழ்ப் படுத்திக் காட்டுதும்: “இராஜதிராஜ பரமேஸ்வர நந்திவன்ம மகாராஜர் பரமேஸ் வரப் போத்த ராஜ்யத்தை ஆட்சிபுரிகையில் இந்திரனுக்குப் பிரஹஸ்பதி போலப் பல்லவ வேந்தனான நந்திவன்மனுக்குப் பிரதம மந்திரியாகிய பிரம்மஸ்ரீ ராஜர் வேண்டிக்கொண்டபடிக் கடல் போன்ற வேதங்களில் வல்லவனும் சாம வேதத்தைக் கேட்டார் மகிழும்படி ஓத வல்லவனும் ஆறங்கங்களையும் கற்று வல்லவனும் சுருதி மிருதிகளின் அமிர்தத்தைப் பருகினவனும் கருமகாண்ட ஞானகாண்டங்களில் வல்லவனும், நாடக அலங்கார சாகித்திய புராண இதிகாசங்களில் வல்லவனும், எல்லாம் வல்லவனும், எல்லாக் கிரியைகளிலும் சிறந்தவனும், நற்குண முடையவனும், அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைப் பிரகாசிக்கச் செய்யும் பானு போன்றவனும், துவிஜர்களுக்குத் தந்தை தந்தையும், வேதமறிந்து வேதநெறிப்படி நடந்து சந்தோக சூத்திரம் கூறியவாறே நடப்பவனும், வாஜபேய முதலிய யாகங்களைச் செய்தவனும், பாரத்துவாசியும், தண்டக நாட்டுப் பிராமண கிராமமான புண்ணி யத்தில் வாழ்பவனும்... ஆகிய ஜேஷ்டபாதசோமயாஜிக்குக் கொடு கொல்லியான ஏகதீர மங்கலம் பிரமதேயமாகக் கொடுக்கப்படுகிறது. ”2 வடமொழிப் புலமையும் வடமொழிவாணர்பாற் பெருமதிப்பும் கொண்டிருந்ததனால், பல்லவ வேந்தர் கரணி சுதன் என்றும் வான்மீகியென்றும் செப்பேடுகளிலும் பிறவற்றிலும் பாராட்டப் பட்டனர். பல்லவ வேந்தரவையில் வடமொழிப் புலவர்கள் எஞ்ஞான்றும் சூழ்ந்து கொண்டிருப்பரெனத் தண்டந்தோட்டச் செப்பேடுகள் குறிக்கின்றன. உதயேந்திரச் செப்பேட்டை யெழுதிய பரமேஸ்வரனும், தண்டந்தோட்டச் செப்பேட்டை யெழுதிய உத்தரகரணிகனும், காசாக்குடிச் செப்பேட்டை யெழுதிய திருவிக்கிரமனும் அக்காலத்தே சிறந்த வடமொழியறிஞராவர். இவ்வாறு வடமொழிப்புலவர்கட்குப் பொன்னும் பொருளும் நிலமும் ஊரும் தந்து சிறப்பித்த பல்லவ வேந்தர்கள், கல்லூரிகள் நிறுவி அவற்றின் வாயிலாக வடமொழியறிவு நாட்டில் பரவச் செய்தனர். இக்கல்லூரிகள் கடிகைகள் எனவும் வழங்கும். இக் கடிகைகளுள் காஞ்சிமா நகரிலிருந்த கடிகை மிக்க சிறப்பு வாய்ந்தது. காஞ்சிக் கடிகையின் பழமையினை யாராய்ந்தவர், அது கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறதென்பர். கடம்ப வேந்தனான மயூரசன்மன் என்பான் காஞ்சிக் கடிகையிற் சேர்ந்து கல்வி பயின்றவன்1 என்பர். காசாக்குடிச் செப்பேடுகளும் வேளூர்ப் பாளையம் செப்பேடு களும் இக்கடிகையைக்2 குறிக்கின்றன. இக்கடிகையில் பெரும்பாலும் வேதியர்களே கல்வி பயின்றனர். அவர்கட்கு வேண்டும் வேதங்களும் இங்கே கற்பிக்கப்3 பெற்றன. கற்பித்தோரும் கற்றோருமாகிய இருதிறத்தாரும் வேதியர்களேயாவர். கடம்ப வேந்தனான மயூரசன்மனும் அவனுடைய ஆசிரியரான வீரசன்மரும் வேதவேதாங்கங்களைக் கற்று ஓரளவு வல்லமை பெற்ற பின்னரே காஞ்சிக் கடிகைக்கு வந்து கல்வி பயின்றன ரென்பர். இதனால் இக்கடிகையில் கற்பிக்கப்பட்ட வடகலையின் பொதுநிலை, மிகவுயர்ந்த நிலையினையுடைய தென்பது நன்கு விளங்கும். பல்லவ வேந்தர்கள் இக்கடிகையைச் சிறப்பாகப் பேணிவந்தனர். ஒருகால் சத்தியசேனன் என்பவன் இக்கடிகையைக் கைப் பற்றிக் கொண்டானாக, கந்த சிஷ்யன் என்ற பல்லவ வேந்தன் அவனைப் பொருது வென்று கடிகையைப் பண்டுபோற் சீர்பெறச் செய்தான். முதன் மகேந்திரவன்மனும்1 இதனைப் பெரிதும் விரும்பி வேண்டுவன செய்து உதவினான். இராசசிம்ம பல்லவன், “நான்கு வேதங்களையும் கற்பிக்கும் இக்கடிகையை நன்கு பரிபாலித்தான்” என்று காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது. இவ்வகையில் இக்கடிகையாருக்கும் பல்லவ வேந்தருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாகியிருந்தது. அதனால், வேதம் கற்பான் வந்த மயூரசன்மனுக்கும் பல்ல வருக்கும் பகைமையுண் டாயிற்று. ஒருகால் பகைவர் பொருது பல்லவரசைக் கவிழ்க்க முயன்றபோது இக்கடிகையும் பகைவரால் சீரழிவதாயிற்று. அக்காலத்தில் வேந்தரிடையே நிகழ்ந்த போர்கள் கோயில்கட்குக் கேடு செய்ததில்லை. பிற்காலத்தே கோயில்கள் பெருஞ்செல்வ நிலையங்களாய் மாறியது காரணமாகப் பகைவர் கைப்பட்டுச் சீர்குலைந்தன. இது நிற்க, பல்லவர் காலத்தே இக்கல்விக் கடிகை பகைவரது தீச் செயல்கட்கு இரை யானதற்கு, அரசியலில் தொடர்பு வைத்துக் கொண்டதே காரணமாகும். நந்திவன்ம பல்லவ மல்லனைப் பல்லவ வேந்தனாகக் கொண்டு வந்த காலத்தில் இக்கடிகையாரும் பெரும் பங்குகொண்டிருந்தனர். பல்லவமல்லனுக்கு முன்பு காலற்றுப் போக இருந்த பல்லவரசுக்கு இக்கடிகையைச் சேர்ந்த தரணி கொண்ட போசர் இரணியவன்மனையடைந்து பல்லவமல்லனை வேந்தனாகத் தருமாறு வேண்டிக்கொண்டதும், அதற்கிசைந்த இரணியன் பல்லவமல்லனைக் காஞ்சிக்குப் பல்லவவரசனாகச் செல்ல விடுத்ததும் முன்பே கூறப்பட்டன. பகைவரால் இக்கடிகைக் குண்டான கேடு இரண்டாம் நரசிங்கவன்மன் காலத்தில்தான் நீக்கப்பெற்றது; சிறப்பும் மிகப் பெற்றது. திருவல்லம் கல்வெட்டொன்றையும், பிரமதேசத்துக் கல் வெட்டுக்களையும் கருவியாகக்கொண்டு, வடவார்க்காட்டுச் சோளிங்க புரத்துக்குக் கடிகாசலம் என்றொரு பெயரிருப்பது காட்டி, அங்கே ஒரு கடிகை இருந்திருக்கலாமென்று காண, டாக்டர் மீனாட்சியார் பெரிதும் முயன்று, அங்கே வைணவ பிராமணர் கடிகையொன்று பல்லவமல்லன் காலத்தில் இருந்திருக்கக் கூடுமென்று நினைக்கின்றார். கடிகையென்பது பிராமணரிருக்குமிடமெனவும். இங்கே கல்வி கேள்வி யாராய்ச்சி நடைபெறுமெனவும் கூறுவர். வேதியர்கள் ஒருங்குக் கூடி நூலாராய்ச்சி செய்தலும் முறை வழங்குதலும் செய்யு மிடம் “கடிகை ஸ்தானம்” என்று குறிக்கப்படுகிறது. இக்குறிப்புக் களையே கருவியாகக்கொண்டு நோக்குவோமாயின், இக்கடிகைகள் பாண்டி நாட்டுக் கடிகைப்பட்டின முதலிய இடங்களிலும் இருந் திருக்கலாமெனக் கருதுதற் கிடமுண்டாகிறது. பதினொன்று பன்னி ரண்டாம் நூற்றாண்டுகளில் கன்னட நாட்டில் இத்தகைய கடிகைகள் இருந்திருக்கின்றன. இவற்றை அவை கடிகையென்னாது பிரமபுரிகள் என்று குறிக்கின்றன. கடிகைகள் வாயிலாகவன்றித் தனித்த நிலையில், வடமொழிப் புலமை மிக்குப் பிறர்க்கும் அதனைக் கற்பித்தொழுகிய வேதியர் களுக்குப் பிரமதாயம் வழங்கி, வடமொழியின் வளர்ச்சியினைப் பல்லவர்கள் பெரிதும் ஊக்கியுள்ளனர். கௌடிலியன் எழுதிய பொருணூா லும், வேதம் வல்ல வேதியர்கட்கு நன்கு விளைந்து பெரும் பயன் தரக்கூடிய நிலங்களைத் தேர்ந்து இறையிலி பிரமதாய மாக வேந்தர்கள் வழங்க வேண்டுமெனக் கூறுகிறது. இப்பல்லவர்கள் மேற்கொண்ட இந்த நெறியையே இடைக் காலச் சோழவல்லரசர்களும் பின்பற்றி வடமொழிவாணர்கட்குப்1 பட்டவிருத்தியென்ற பெயரால் நிலங்களும் ஊர்களும் இறையிலியாக வழங்கினர். பல்லவருள் இரண்டாம் விஜயகந்தவன்மன் என்பான் காசிப கோத்திரத்துக் கோலசருமன் என்பவன் இரண்டு வேதமும் ஆறங்கமும் கற்றவன் என்பதுபற்றிச் சாத்துவிகவிருத்தி என்னும் பெயரால்1 ஓங்கோடு என்றவூரைக் கொடுத்திருக்கின்றான்; நான்கு வேதமும் ஆறங்கமும் வல்ல ஜேஷ்டபாத சோமயாஜிக்குக் கொடு கொல்லியென்ற வூரைக் கொடுத்த செய்தியைக்2 காசாக்குடிச் செப்பேடு கூறுகிறது; பல்லவவேந்தர்கள், வடமொழி வல்ல பிராமணர்களைக் கொணர்ந்து குடியேற்றி, நிலமும் வீடும் இறையிலியாகக் கொடுத்து அக்கிரகாரங்கள்3 ஏற்படுத்தி வடமொழியைப் பரவச் செய்துள்ளனர்; தலகுண்டாவென வழங்கும் ஸ்தாணு குண்டூரில் முப்பத்திரண்டு வேதியர் குடும்பங்களைக் குடியேற்றி மக்களுக்குக் கல்வி கற்பிக்கச் செய்தனர். இரண்டாம் நந்திவன்மன், கும்பகோணத் துக்கருகிலும் நாகைப் பட்டினப் பகுதியிலும், இரண்டு வடமொழி வல்ல அக்கிரகாரங்களை ஏற்படுத்தினன். தண்டந்தோட்டச் செப்பேடுகள், அதற்கு மேற்கிலுள்ள ஊரைத் தயாமுக மங்கலமெனப் பெயரிட்டுத் தயாமுகனென்னும் வேதியனொருவன் வேண்டுகோட்படி மூன்று வேதமும் மிருதிகளும் வல்ல வேதியர் முந்நூற்றியெண் மருக்கு வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றன. கோயில்களை, வேதமும் வைதிக புராண வரலாறுகளும் விளங்கும் இடங்களாக்கிய முதன்மைப் பணி, பல்லவர் காலத்தில்தான் சிறந்த இடம்பெறுவதாயிற்று. வேதம் ஓதுதற்கென்றே கோயில்களில் கட்டளைகள் (நிவந்தங்கள்) ஏற்படுத்தப்பட்டன. கூரத்துச் செப்பேடுகள்4 அவ்வூரிலுள்ள வித்தியாவினீத பல்லவேச்சுரத்தில் மகா பாரதத்தை மண்டபத்தில் வைத்துச் சொல்லுமாறு ஏற்பாடு செய்த தாகக் கூறுகின்றன.5 தண்டந்தோட்டச் செப்பேடுகளிலும் இச்செய்தி காணப்படுகிறது. பாரதத்தைச் சொல்லும் மண்டபத்துக்குத் தண்ணீராட்டுவோரும் (அம்பலந் தண்ணீராட்டுவார்) தீவட்டி நிறுவித் தீயெரிப்பாரும் ஏற்படுத்தியிருந்தனர். பாகூரில் நிருபதுங்க வன்மனால் ஒரு வடமொழிக் கல்லூரி ஆதரவு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரி கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே தோன்றியிருக்க வேண்டுமென அறிஞர் கருகின்றனர். இப்பாகூர்க் கல்லூரிக்கு ஊர்கள் பிரமதாயகமாக விடப்பட்டிருப்பது நோக்கின்,1 இது பிராமணர்கட்கென்றே ஏற்பட்டிருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது. பல்லவர்கள் காலத்தில், வடமொழிக் கல்வி, மேலே கூறிய கோயில்களாலும் கடிகைகளாலும் ஆக்கமும் ஊக்கமும் பெற்றுச் சிறந்தாற்போல, மடங்கள் வாயிலாகவும் வளம்பெற்றுத் திகழ்ந்தது. மடம் என்பது கற்றவர்களும் பிறரும் இருக்குமிடம் என வடமொழி அமரகோசம் கூறுகிறது. கி.பி. எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே இம்மடங்கள் தென்னாட்டில் தோன்றியுள்ளன. தென்னாட்டு மடங்கள் மட்டில் தொடக்கத்தில் காணார் கேளார் முதலியோர்க்கும் துறவிகட்கும் உணவுதரும் அறச்சாலைகளாக இருந்தன. கற்றுவல்ல புலவர்கள் தங்குதற்கும் அக்காலத்தே மடங்கள் இடமாக இருந்துள்ளன. முதல் தந்திவன்மன் காலத்தில், காஞ்சித் திருமேற்றளியில் முத்தரையனொருவன் திருமேற்றளிப் பெருமானுக்கும், அத்தளியைச் சார்ந்திருந்த மடத்துக்கும் நிவந்தம் விட்டுள்ளான். மடங்கள் கற்றோர் இருத்தற்கும் இடமாதலின், திருநாவுக்கரசர் திருமேற்றளித் திருப்பதியத்தில், “கல்வியைக் கரையிலாத காஞ்சிமா நகர்” என்றது, இத் திருமடத்திலிருந்த கற்றோரைக் குறித்த குறிப்பாகலா மென அறிஞர் கருதுகின்றனர். இது புதிது தோன்றியதாக இல்லா மையால், முதன் மகேந்திரவன்மன் காலத்தேயே இத்தகைய மடங்கள் தென்னாட்டில் தோன்றியிருக்கக் கூடுமெனவும் ஆராய்ச்சியாளர் கூறுவர். நிருபதுங்கவன்மனுடைய இருபத்தைந்தாமாண்டுக் கல்வெட் டொன்றில் காவிரிப்பாக்கத்து வரதராசப் பெருமாள் கோயிலுக்கு ஏற்படுத்தப்பட்டதொரு நிவந்தம், அவ்வூர், “மடத்துச் சத்தப் பெரு மக்கள்” கண்காணிப்பிலிருக்க வேண்டுமெனக் கூறுகிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழர்கள் காலத்திலும் இந்த மடம் கோயிற் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பேற்றிருந்ததெனப் பிற்காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சத்தம் என்ற சொல்லுக்கு வடநூன் முறைப்படி நூலென்பது பொருள்; ஆகவே சத்தப் பெருமக்களாவார் வடமொழி வல்ல பெருமக்களென்பது தெளிவாம். ஆகவே, வட மொழி வல்லார் தலைமையில் நிலவிய மடங்கள் பல பல்லவர் காலத்தே இருந்தமையும், அவற்றின் வாயிலாக வடமொழி வளம் பெற்றமையும் இனிது உணரலாம். விசயகம்பவன்மன் காலத்தில் நிரஞ்சனகுரவரென்பவர்க்குத் திருவொற்றியூரில் ஒரு மடம் இருந்தது. அக்குரவர் நிரஞ்சனேஸ்வரம் என்றொரு கோயிலைக் கட்டியதாகவும், அதற்கு அவரே நிலங்கள் விட்டதாகவும் திருவொற்றியூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது. இரட்ட வேந்தனான மூன்றாம் கிருஷ்ணனுடைய இருபதாமாண்டுக் கல்வெட்டொன்று.1 நிரஞ்சன குருவின் மாணவரான சதுரானன பண்டிதரென்பார், சில நிவந்தங்களை நிரஞ்சனேச்சுரத்துக்கு விட்டன ரெனவும், அச்சதுரானன பண்டிதர் கேரளநாட்டின ரெனவும், அவர் நிரஞ்சன குரவர்பால் துறவு நெறி மேற்கொண்டு அவர்க்கு மாணவராயின ரெனவும், நிரஞ்சன குரவருக்குப் பின் சதுரானன பண்டிதரே மடத்துக்குத் தலைவராயினரெனவும் கூறுகிறது. இம்மடங்களும் கோயில்களும், வடமொழி வியாகாரணம், வேதாந்தம், பிரபாகரம், மீமாஞ்சை முதலியவற்றையே கற்பார்க்குக் கற்பித்து வந்தன. திருவொற்றியூரில்2 வியாகரண மண்டபம் என்றொரு மண்டபமிருந்தது. கும்பகோணத்து நாகேஸ்வர சுவாமி கோயிலில்3 பிரபாகர மீமாஞ்சை கற்பிக்கப் பட்டது. சைவ இலக்கியங்கள் பல்லவ பாண்டியர் காலத்தில் தமிழ்நாடிருந்த நிலையும் சமயத் துறையில் பௌத்தம், சமணம் இருந்த நிலையும் சைவக் கோயில்களும் மடங்களும் இருந்த நிலையும், அவற்றாலும் வேந்தர்களாலும் வடமொழி பேணப்பெற்று வந்த நிலையும் இதுகாறும் கண்டு வந்தோம். இக்காட்சியில் தமிழகத்துக்கேயுரிய தமிழ்மொழி எந்நிலையில் பேணப்பெற்றது என்பது காணப்பெற வில்லை. தமிழ்நாட்டில் இப் பல்லவ பாண்டியர் காலத்துக்கு முன்பே தமிழ்க்கு ஆக்கமாகும் பணிகள் வீழ்ந்துவிட்டன. பல்லவர் களின் கல்வெட்டுக்களோ பாண்டியர்களின் ஏடுகளோ எவையும் தமிழ் இலக்கியத் துறையையோ தமிழ்க் கல்வியின் வளர்ச்சி யினையோ சிறிதும் கூறுகின்றில. கோயிற் சுவர்களிலும் ஒருசில செப்பேடுகளிலும் தொடர்புடைய ஊர்களையும் அவற்றின் எல்லைகளையும், விலையாவணங்கள், உடன்படிக்கை முதலிய செயல் வகைக்குரிய வக்கணைகளையும் தமிழில் பொறித்த தொன்று தவிர, வேறு தமிழிலக்கியத் துறையில் ஒரு நிகழ்ச்சியும் காணப்படவில்லை. தென் தமிழ்நாட்டுக் கூடல் நகர்க்கண் இருந்த தாகக் கூறப்படும் சங்கத்தையாதல், சங்கத்தின் கண் வளர்ந்த தமிழ் இலக்கியங்களையாதல், தமிழ் பயிலும் கல்லூரிகளையாதல் இக்கால நிலையறிதற்குப் பயன்படும் சான்றுகளில் காணப்பட வில்லை. கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் சிறந்து விளங்கிய பல்லவ பாண்டியர்களின் காலம், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளித்த காலமெனக் கூறுதற்கு இயைபொன்றும் இல்லையென்பேமாயின், அது மிகையாகாது. இக்காலத்தே வாழ்ந்த வேந்தர்களும், வேதியர்களும், மடத்தலைவர்களும், சமயப் பணியாளரும், பிற செல்வர்களும், வடமொழி நமது நாட்டில் வளம்பெறப் பரவுதற்கு முயன்றுள்ளனரேயன்றி நாட்டுமொழி வளம்பெறுதற்கு முயற்சி யொன்றும் செய்தாரல்லர். பெருஞ்செல்வ நிலையங்களாய்ச் சிறந்து வந்த கோயில்களிலும் தமிழ் பயிலுதற்கு இடம் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்மொழி செல்வாக்கிழந்து சிறப்புக் குன்றிய காலம் இந்தக் காலமாகும். இந்தக் காலத்தில் வீழ்ந்த செந்தமிழ், இருபதாம் நூற்றாண்டின் செம்பாதி கழிந்தும் தலையெடுத்து, நாட்டவருடைய அரசியல், வாணிகம், சமயம் என்பன முதலிய துறைகளில் சிறந்த இடம் பெற்று, இலக்கிய வளம் பெறும் நிலைமையினைப் பெறாதாயிற்று. கல்லிலும் செம்பிலும் எழுதும் எழுத்துமுறை பல்லவர் காலத்துக்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்தது; எனினும், அதனை இன்றியமையாது சிறந்த முறையாக நிறுவிய முதன்மை பல்லவர்களது காலம் என்னலாம். தொடக்கத்தில், கல்லிலும் செம்பிலும் எழுதப்பட்டவை, நாட்டு நடப்பிலிருந்த தமிழ் மொழியிலே இருந்திருக்க வேண்டும். பல்லவர்களுடைய பழமையான தமிழ்க் கல்வெட்டுக்கள் மூன்று உண்டு என்றும், அவை முறையே திருக்கழுக்குன்றம்,1 செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள வல்லம், புதுக்கோட்டை நாட்டில் உள்ள திருமயம் என்ற மூன்றிடங் களிலும் உள்ளன என்றும் கல்வெட் டாராய்ச்சியாளர்2 கூறுகின்றனர். அவற்றுள், திருக்கழுக்குன்றத்துத் தமிழ்க் கல்வெட்டு, “திருக்கழுக்(கு)ன்(ற)த்துப் பெ(ரு)மா னடிகளு(க்)குக் கள(த்)தூர்(க்)கோட்டத் (து)...திருக்கழுக்குன்ற த்து ஸ்ரீமலைமேல் (மூ)லத்தானத்து பெருமா னடிகளுக்கு வழிபாட்டுப் (பு)றமா க வாதாபிகொண்ட நரசிங்கப் போத்த(ர)சர் வை (த்)தது” என வருகிறது. தமிழ்க் கல்வெட்டின் தொன்மையாராய்ந்த அறிஞர், “நந்திவன்ம பல்லவமன்னன் காலமுதற்கொண்டுதான் கல்வெட்டுக் கள் பெரும்பாலும் தமிழில் எழுதப்படுவனவாயின; சிலவே வடமொழியில் உண்டாயின. கல்வெட்டுக்களில் தமிழை வழங்கும் முறையைத் தோற்றுவித்தவன் முதன் மகேந்திரவன்மன்; இவன் முன்னோர் பலரும் வடமொழியில் எழுதினர்” என்று உரைக்கின்றனர். பல்லவர்களுடைய பழமையான தமிழ்க் கல்வெட்டில் வட வெழுத்துக்கள் இல்லாமல் இருப்பதை யாவரும் காணலாம். அக் காலத்தே தமிழில் வடசொற்களைப் பெய்து எழுதுவதாயின், வட சொற்களைத் தமிழெழுத்தால் எழுதவேண்டுமேயன்றி வடவெழுத் தையும் சேர்த்துப் பெய்து எழுதாலாகாது என்பது தமிழ் வழக்கி லிருந்து வந்தகொள்கை. “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ, எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்று தொல்காப்பியரும் வரையறை செய்துள்ளனர். அதனால், பழைய கல்வெட்டுக்களில் வடவெழுத்துக் காணப்படாதாயிற்று, பிற்காலக்கல்வெட்டுக்கள் அந்த வரையறையை உடைத்தெறிந்து விட்டன. வடவெழுத்துக்களும் கல்வெட்டுக்களில் விரவலாயின. இந்த முறையும் முதற் பரமேஸ்வரன் காலமுதல் நடைபெறுவ தாயிற்று என்பர். வடமொழிக் கல்வெட்டுக் களின் இடையே தமிழ் எழுத்துக்கள், விரவாமல் இருப்பதும், தமிழ்க் கல்வெட்டுக்களில் வடவெழுத்துக்கள் விரவி யிருப்பதும் காண்பார், பல்லவர் காலத்தே தமிழ் வழக்கு இலக்கண வரம்பின் வலியிழந்து ஒழிந்த திறத்தை நன்கு அறிவர். அன்று தோன்றிய வலியழிவு, பின்னர்த் தோன்றிய மணிப்பிரவாள மென்னும் நடையைப் பயந்தது. பின்னும் அதுவே, வடமொழியும் மேனாட்டு மொழியும் பிறவும் கலந்து இன்றைய எழுத்தாளரிடையே நிலவும் சவலை நடையைப் பயந்தது என்னலாம். சங்க காலத்தில் வேந்தர்களாலும் செல்வர்களாலும் பெரிதும் பேணப் பெற்று வந்த தமிழ், இடையே வந்த களப்பிரர், சளுக்கர், இரட்டர், பல்லவர் முதலியோரால் பேணற்பாடு இழந்துபோகவே, அவர்வழி நின்ற தமிழ்ச் செல்வரும் பிறரும், தம்முடைய உரிமைத் தமிழை வளம் படச் செய்யும் துறையில் கருத்தூன்றாராயினர். அரசியல் தமிழிலே நடைபெற்றதெனினும், எழுத்து முறையில் தமிழ் வலியிழந்து நிற்பதாயிற்று. சமயத் துறையில் வடமொழியிற் காணப்படும் வேதங்களும் ஆறங்கங்களும், சுருதிமிருதிகளும், புராண இதிகாசங்களும், வடமொழியிலே நிலவின. புறச் சமயத்த வராய் வந்த பௌத்த சமணச் சான்றோர்களும், செல்வாக்குடைய வடமொழியிலும் பிற மொழிகளிலுமே தம்முடைய அறிவுப் பணி புரிந்தனர். செல்வ நிலையங்களாகிய கோயில்களிலும் மடங்களிலும் தமிழ் இலக்கியங்கள் நிலவுதற்கு இடமில்லையாயிற்று. தமிழ் நாட்டில், தமிழ் மக்கட்கு, அரசியல் நீதி முறைகளையும், சமய நூல் வகைகளையும் இனி தெடுத்துரைக்கும் தமிழ் நூல்கள் அருகின; இயற்றமிழ் என்ற தமிழ்த் துறை பல்லவர் காலத்தே போதிய ஆதரவு குன்றியது என்பது தெளிய வுணர வேண்டியதொன்றாகும். இதுதான் சைவ இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் இருந்த செந்தமிழ் நிலை; திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலியோர் தோன்றிய காலத்துச் சைவ இலக்கிய நிலையுமாம். சைவ இலக்கியங்களைத் தனித் தனியே காண்பது இனி நாம் மேற்கொள்ள வேண்டிய செயன்முறையாகும். இந்த இலக்கியங்களை ஆக்கித் தந்த ஆசிரியர்களைக் கீழ்க்காணும் காலமுறையில் மேற்கொள்வது முறை. கி.பி. 7-ஆம் நூற்றாண்டு 1. திருஞானசம்பந்தர் 2.திருநாவுக்கரசர் 3. ஐயடிகள் காடவர்கோன் கி.பி. 8- ஆம் நூற்றாண்டு 1. சுந்தரர் 2. சேரமான் பெருமாள் 3. ஏனாதிசாத்தஞ் சாத்தனார் கி.பி. 9- ஆம் நூற்றாண்டு 1. மாணிக்கவாசகர் 3. பட்டினத்தடிகள் 2. சேந்தனார் 4. பெருமானடிகள் கி.பி. 10- ஆம் நூற்றாண்டு 1. நம்பியாண்டார் நம்பி 3. வேம்பையர்கோன் நாராயணன் 2. ஒளவையார் 4. கண்டராதித்தர் கி.பி. 11- ஆம் நூற்றாண்டு 1. நம்பிகாடநம்பி 3. பூங்கோயில் நம்பி 2. கருவூர்த்தேவர் 4. திருச்சிற்றம்பல முடையான் கி.பி. 12- ஆம் நூற்றாண்டு 1. சேக்கிழார் 7. ஒட்டக்கூத்தர் 2. வேணாட்டடிகள் 8. தமிழ்த்தண்டியாசிரியர் 3. புருடோத்தம நம்பி 9. கவிகுமுத சந்திர பண்டிதன் 4. வாகீச முனிவர் 10. பரசமயகோளரி மாமுனி 5. உய்யவந்ததேவ நாயனார் 11.நெற்குன்றங்கிழார் களப்பாளராசர் 6. சயங்கொண்டார் கி.பி. 13- ஆம் நூற்றாண்டு 1. சேதிராயர் 2. கல்லாடதேவர் 3. நக்கீரதேவர் 4.பரணதேவர் 5. மெய்கண்டதேவர் 6. அருணந்திசிவனார் 7. இளம் பூரணர் 8. பேராசிரியர் 9. அடியார்க்குநல்லார் 10. சேனாவரையர் 11. தக்கயாகப்பரணி உரைகாரர் 12. பதிற்றுப்பத்து உரைகாரர் 13. பாரதம் தமிழ் செய்த அருணிலை விசாகன் 14.பெரும்பற்றிப் புலியூர்நம்பி 15. மறச்சக்கரவர்த்திபிள்ளை 16. பெரியான் ஆதிச்சதேவன் 17. காரணை விழுப்பரையன் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு 1. மறைஞானசம்பந்தர் 6. அருணகிரியார் 2. உமாபதி சிவனார் 7. இரட்டையர் 3. நச்சினார்க்கினியர் 8. தாயில் நல்ல பெருமாள் முனையதரையன் 4. கச்சியப்ப சிவாசாரியார் 5. பொய்யாமொழிப்புலவர்.  2. திருஞானசம்பந்தர் பிறப்பு வரலாறு திருஞானசம்பந்தர் சீகாழியில் அந்தணர் குலத்திற் பிறந்தவர். இவருடைய தந்தையார் சிவபாத விருதயரென்றும், தாயார் பகவதியா ரென்றும் பெயர் கூறப்படுவர். இவர் கவுணிய கோத்திரத்தைச் சேர்ந்தவர். திருஞானசம்பந்தருடைய பெற்றோர் சிவன்பால் மிக்க அன்புடையவர். புத்த சமண சமயவுணர்வு பெரிதும் பரவியிருந்தமையின், அக்காலத்தே சைவமாகிய சிவநெறி ஒளி மழுங்கியிருந்தமை சிவபாத விருதயருக்குப் பெருவருத்தம் விளைத்தது. அவர் நாடோறும் சீகாழியிலுள்ள சிவபெருமான்பால் சிவநெறியின் வீழ்ச்சியினையும் செந்தமிழன் தளர்ச்சியினையும் எடுத்தோதி, இவற்றை முன்போல் சீரிய நிலையில் நிறுத்தவல்ல நன்மகனை உலகில் தோற்றுவிக்க வேண்டுமென இறைஞ்சி வந்தார். சிவபாத இருதயருடைய சிறந்த வழிபாடு விரைவில் அவர் கருத்து நிறைவுறச் செய்தது. அவர் மனைவியார் சின்னாட்களில் கருவுற்றுத் திருஞானசம்பந்தரைப் பயந்தார். ஞானசம்பந்தர் பிறந்து வளரும்போதே சிவன்பால் பேரன்புண்டாகத்தக்க சூழ்நிலையை அவர் தாயார் உண்டு பண்ணினார். அவர் ஞானசம்பந்தக் குழந்தைக்குத் தன்பாலைத் தரும்போதெல்லாம் சிவன்பால் மிக்க அன்பு செலுத்துவார். அந்த அன்பு, அவர் பாலில் ஊறி ஞானசம்பந்தர் உடலும் உயிரும் சிவன்பாலுண்டான அன்பு வடிவாய் வளரச் செய்தது. இவ்வண்ணம் ஆண்டுகள் மூன்று கழிந்தன. ஞானசம்பந்தர் தந்தைபால் பிரியாத அன்புகொண்டார். தந்தையாரும் அவர் அழுகை காணத் தரியாதவரானார். ஒருநாள் சிவபாத விருதயர் சீகாழிக் கோயிலில் உள்ள திருக்குளத்துக்கு நீராடச் சென்றார். திருஞானச் சம்பந்தர் அது கண்டு தாமும் உடன்வர விரும்பும் விருப்பத்தைத் தெரிவித்தார். தந்தையார் அவர் அழுகை காண மாட்டாத பேரன்புடையவராதலால், அவர் விரும்பிய வண்ணமே தம்மோடு அழைத்துச் சென்றார். திருக்குளக்கரையில் ஞானசம்பந்தப் பிள்ளையாரை இருக்கவைத்து, அவர் மட்டில் நீர்க்குள் இறங்கி நீராடலானார். சிறிது போது கழிந்ததும் ஞானசம்பந்தர் தந்தையார் வரக்காணாமையால் அழத் தொடங்கினார். ஞானசம்பந்தப்பிள்ளையார் அழத் தொடங்கியது கண்ட சிவபெருமான் உமையம்மையாகிய தம்முடைய தேவியாரை நோக்கி "நின்மார்பிற் பாலைப் பொன்வள்ளத்திற் கறந்து குளக் கரையில் அழுது நிற்கும் சிறு பிள்ளைக்கு ஊட்டுக" எனப்பணித் தருளினார். தேவி யாரும் அவ்வண்ணமே செய்துவிட்டு வந்தார். சிறிது போதில் நீராடி முடித்துக்கொண்ட சிவபாத விருதயர் பிள்ளையாரிடம் வந்தார். அவர் திருவாயில் பால் வடிந்திருந்தது. அது கண்டதும், அவர் "உனக்கு இப்பால் தந்தவர் யார்?" என வினவினர். பிள்ளையார் வாளா இருக்க, தந்தையார் சினங்கொண்டு சிறுகோலொன்றைக் கையில் எடுத்து ஒங்கி, 'எச்சில் மயங்கிட உனக்கு' இதனை அளித்தார் யார்? அவரைக் "காட்டு" என்று அச்சுறுத்தினர். உடனே ஞானசம்பந்தர் தமது வலக்கையைக் கோயிற்புறமாக நீட்டிச் சுட்டு விரலாற் காட்டித் "தோடுடைய செவியன்" எனத் தொடங்கும் பாட்டைப் பாடலானார். இதைக் கேட்ட சிவபாத விருதயர் அச்சமும் வியப்பும் கொண்டவராய் மருண்டு நின்றார். திருஞானசம்பந்தர் திருப்பதியம் முற்றும் பாடி முடித்தார். இச்செய்தி ஊர் முழுதும் பரவிற்று. ஊராரும் பின்பு நாட்டவரும் கண்டு ஞானசம்பந்தப்பிள்ளையாரைச் சிவமெனவே கருதிப் பாராட்டி வழிபட்டனர். ஞானசம்பந்தரும் நாடோறும் திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை இன்னிசைத் தமிழ் பாடி இறைஞ்சி ஏத்தி வருவாராயினர். ஒரு நாள் சீகாழிக்கு அண்மையிலுள்ள திருக் கோலக்கா என்னும் ஊர்க்குச் சென்று அங்குள்ள இறைவனைப் பாடினர். அப்போது ஆண்டவன் அருளால் அவர்க்குப் பொற்றாளம் வந்தது. அவர் காலால் நடந்து செல்வது காணப்பெறாத தந்தை யாராகிய சிவபாத இருதயர் அவரைத் தம் தோள்மேற் சுமந்து செல்லலுற்றார். ஞானசம்பந்தருடைய தாய்ப்பாட்டனார் ஊர் திருநனி பள்ளி யென்பதாகும். சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை அவ்வூர்க்கு எடுத்துச் சென்றார். அங்கேயுள்ள இறைவனை ஞானசம்பந்தர் இனிமையாகப் பாடினார். அது கண்ட உறவினரும் பிறரும் கொண்ட இன்பத்துக்கு அளவில்லை. ஆங்கிருந்து பல மக்கள் வந்து அவரைக் கண்டு வணங்கித் தத்தம் ஊருக்கு வரவேண்டுமென வேண்டினர். அவர்கள் வேண்டுகோட்கிணங்கிய ஞானசம்பந்தர், அருகிலுள்ள பலவூர்கட்கும் சென்று இறைவனைத் திருப்பதியம் பாடிப் பரவி வந்தார். திருஞான சம்பந்தர் சீகாழிக்கு வந்து சேர்ந்ததும், அவரைக் காண்பதற்குத் திருநீலகண்ட யாழ்ப்பாணரென்பாரும் அவர் மனைவி யான மதங்கசூளாமணியென்பாரும்1 வந்தனர். அவர்களை ஞானசம்பந்தர் அன்புடன் வரவேற்று, சீகாழி இறைவன் திருமுன் திருப்பதியம் பாடினர். அதனை யாழ்ப்பாணர் தமது யாழிலிட்டு இசைத்தார். பாட்டும் இசையும், பருந்தும் நிழலும்போல் இயைந்து, கேட்போர் செவியகம் புகுந்து, நெஞ்சு முழுதும் சிவபோகம் நிரம்பச் செய்தன. பின்பு, பாணனார், தாம் எப்போதும் உடனிருந்து பிள்ளையார் பாடும் திருப்பதியங்களை யாழிலிட்டு இசைக்கும் பேற்றினைப் பெற விரும்புவதாகத் தெரிவித்தார். ஞானசம்பந்தரும் அதற்கு இசைந்தார். அது முதல் பாணனாரும் பிள்ளையாருடன் செல்லுமிடந்தோறும் உடன்செல்வாராயினர். இவ்வாறிருக்கையில் ஞானசம்பந்தர் தில்லைக்குச் சென்று கூத்தாடும் பெருமானைத் திருவேட்களத்தில் தங்கி வழிபட்டார். பின்பு திருவெருக்கத்தம்புலியூர் முதலிய ஊர்களின் வழியாகத் திருவரத் துறைக்குச் சென்றார். அங்கே அவர்க்கு இறைவன் அருளால் முத்துச் சிவிகை வழங்கப்பட்டது. அது பெற்று இறைவன் பேரருளில் திளைத்தாடியின்புற்ற பிள்ளையார், திருச்சேய்ஞலூர் முதலியவூர்களில் இறைவனை இன்னிசையால் வழிபட்டுக் கொண்டு சீகாழி வந்து சேர்ந்து, சில நாள் தங்கியிருப்பாராயினர். அக்காலை, அவர்க்கு உபநயனம் செய்யக் கருதி வந்த வேதியர்களுக்கு இறைவன் திருவைந் தெழுத்தை யுணர்த்தி, "வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே" என அறிவுறுத்தி நன்னெறிப்படுத்தி யிருந்தார். அந்நாளில் திருநாவுக்கரசர் ஞானசம்பந்தர் பெருமையைக் கேள்வியுற்று அவரைக் காண்பதற்குச் சீகாழிக்கு வந்தார். இருவரும் சீகாழியிலுள்ள இறைவனைச் செந்தமிழ் பாடி வழிபட்டனர். திருநாவுக்கரசர் அங்கே சிலநாள் இருந்துவிட்டு வேறுபிறவூர்கட்குச் சென்றார். சிறிது காலத்துக்குப்பின், ஞானசம்பந்தருக்குத் தமிழகத்தில் ஆங்காங்குள்ள திருப்பதிகட்குச் சென்று சிவபெருமானi செந்தமிழால் வழிபட வேண்டமென்ற வேட்கையுண்டாயிற்று. முத்துச் சிவிகை யூர்ந்து காவிரியின் வடகரையிலுள்ள பதிகள் பலவும் வணங்கிக் கொண்டு திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் திருப்பதியைச் சென்று சேர்ந்தார். அங்கே கொல்லிமழவன் என்னும் வேந்தன் மகட்கு உண்டாகியிருந்த முயலகன் என்னும் நோய் நீங்குமாறு இறைவனைத் திருப்பதியம் பாடிப் பரவினார். பின்பு அங்கேயிருந்து திருச்செங்குன்றூரை நோக்கிச் செல்வாராயினர். திருச்செங்குன்றூரில் ஞானசம்பந்தர் தங்கியிருக்கையில், அவ ரோடு உடன்சென்றோருட் சிலர்க்குச் சுரநோய் உண்டாயிற்று. பிள்ளையார், இறைவனை வழிபட்டு அச்சுரநோய் நீங்கச் செய்தார். பின்பு, திருப்பாண்டிக்கொடுமுடி, திருவெஞ்சமாக்கூடல் முதலிய பதிகளின் வழியாகக் காவிரியின் தென்கரைவழியே திருப்பராய்த் துறை, திருவாலந்துறை முதலிய பதிகளை வணங்கிக் கொண்டு பட்டீச்சுரம் வந்தார். பட்டீச்சுரத்தில் ஞானசம்பந்தர் வெயிலால் வருந்த ஒருபூதம் முத்துப் பந்தரைப் பிடித்து இது பட்டீசர் திருவருள் என்றது. பிள்ளையார் சிவபெருமான் திருவருளை வியந்து வணங்கிப் பல பதியங்கள் பாடிப் பரவிவிட்டுத் திருவாவடுதுறை வந்து சேர்ந்தார். அங்கே, சிவபாத இருதயர் வந்து, தாம் வேள்வி செய்யக் கருது வதாகவும் அதற்குப் பொருள் வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். ஞான சம்பந்தர் இறைவனைப் பாடிப் பரவினாராக, ஆயிரம் பொன் கொண்ட பொற்கிழி யொன்று திருக்கோயில் திரு முன் வைக்கப் பெற்றது. அதனைப் பெற்றுக்கொண்டு சிவபாத விருதயர் சீகாழிக்குச் சென்றார். பிள்ளையார், பின்பு பல பதிகளையும் கண்டு வணங்கிக் கொண்டு திருத்தருமபுரம் போய்ச்சேர்ந்தார். அங்கே திருநீலகண்டப் பாணனாருடைய உறவினர் அவரது இசையைப் பாராட்டினர். ஞானசம்பந்தர் அப்போது யாழ் மூரிப் பதியத்தைப் பாடினார். அப்பாட்டிசை பாணனாரது யாழில் அடங்காதாயிற்று. பாணனார்க்குச் சிறிது வருத்த முண்டாகவே, ஞானசம்பந்தப்பிள்ளையார் இறைவன் திருப்புகழ் கருவிக் கடங்காதெனத் தேற்றித் திருநள்ளாறு சென்று இறைவனைப் பரவி, அங்கே இருந்த திருநீலநக்க நாயனார் திருமனையில் தங்கினார். அந்நாளில், சிறுத்தொண்ட நாயனார் திருச்செங்காட்டங் குடியில் இருந்து வந்தார். அவர் ஞானசம்பந்தர் திருநள்ளாற்றிற்கு வந்திருப்பதறிந்து தமது திருச்செங்காட்டங்குடிக்கு வருமாறு வேண்டினார். ஞானசம்பந்தரும், நாகைக்காரோணம் கீழ்வேளூர் முதலிய பதிகட்குச் சென்று இறைவனைப் பாடிப் பரவியவாறே, திருச்செங்காட்டங்குடி வந்து சிறுத்தொண்டர்க்கு விருந்தினரா யிருந்து, செங்காட்டங்குடிச் சிவபெருமானைத் தீவிய பாட்டுக்களாற் பாடிப்பரவினார். அப்பதியத்தில் சிறுத் தொண்டரது சிவப் பணியையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். திருமருகற்குப் பிள்ளையார் சென்றிருந்த போதுதான், விடந் தீண்டியிறந்த வணிகன் ஒருவனை உயிர்ப்பித்து அவனுக்குத் திருமணம் செய்வித்ததுமாகும். செங் காட்டங்குடியில் கணபதீச்சரத்துக்குச் சென்று ஞானசம்பந்தர் வணங்கும்போது, அவர்க்குத் திருமருகல் காட்சி இறைவனால் அருளப்பட்டது. இவ்வாறு சின்னாள் செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் விருந்தினராக இருந்து திருப்புகலூர்க்குச் சென்றார். திருப்புகலூரில் முருக நாயனார் என்னும் சான்றோர், ஞான சம்பந்தரை வரவேற்றுத் தமது திருமடத்திலே இருக்குமாறு வேண்டினார். பிள்ளையார், அங்கேயிருந்து புகலூர்ப் பெருமானைப் பணிந்து பாடி வழிபட்டிருக்கம் நாளில், திருநாவுக்கரசர் அங்கே வந்து சேர்ந்தார். இருவரும் அளவளாவி இறைவனைப்பாடிப் பரவினர். அப்போது திருநாவுக்கரசர், ஞானசம்பந்தருக்குத் திருவாரூர்த் திருவாதிரை விழாச் சிறப்பை யெடுத்துக் கூறினர். அது கேட்ட ஞானசம்பந்தப்பிள்ளையார் தாமும் திருவாரூர்க்குச் சென்று வழிபட்டுவிட்டு மீண்டும் திருப்புகலூருக்கே வந்து சேர்ந்தார். புகலூரில் சில நாட்கள் கழிந்தன. பின்பு இருவரும் சேர்ந்து, திருவம்பர் திருக்கடவூர் முதலிய பல திருப்பதிகளை வழிபட்டுக் கொண்டு திருவீழிமிழலைக்கு வந்த சேர்ந்தார்கள். அங்கே இருவரும் தனித்தனியே தங்குதற்கு இருவேறு மடங்கள் இருந்தன. அவற்றை இடமாகக் கொண்டு இருவரும் அண்மையிலுள்ள திருப்பேணு பெருந்துறை முதலிய பதிகளை வணங்கி வழிபட்டனர். மேலும் இருவரும் திருவீழிமிழலையில் இருக்கும்போது, நாட்டில் மழை யின்மையால் வறுமைமிகுந்து மக்கட்கு வருத்தத்தை விளைவிப்ப தாயிற்று. ஞானசம்பந்தருக்கும் நாவரசருக்கும் ஆண்டவன் நாடொறும் படிக்காசு நல்கி அவர்கள் திருப்பணி முட்டுப்படாதவாறு திருவருள் செய்தான். விரைவில் மழைவளம் உண்டாயிற்று; விளைவு பெருகிற்று; மக்கட்கு நல்வாழ்வு எய்தியது. இருவரும் திருவீழி மிழலையின் நீங்கித் திருமறைக்காடு நோக்கிச் செல்வாராயினர். திருமறைக்காட்டில், ஞானசம்பந்தரும் நாவரசரும் திருக்கோயில் மறைக்கதவங்கள் திறக்கவும் மூடவும் பாடிச்சிறப்பித்து, மக்கள் சிவநெறியின் செம்மையுணர்ந்து இன்புறச் செய்தனர். அங்கிருந்தே திருவாய்மூருக்கச் சென்று, இருவரும் இறைவனை வழிபட்டுச் சின்னாள் தங்கினர். பின்னர் இருவரும் திருமறைக்காட்டுக்குத் திரும்பிப் போந்து செந்தமிழ் இசைப்பணியால் சிறப்புமிக்கிருந்தனர். இந்நாளில் மதுரையில் இருந்து ஆட்சிபுரிந்த பாண்டியன் நெடுமாறன் என்பவனாவான். அவனைக் கூன்பாண்டியன் என்றும் சுந்தரபாண்டியன் என்றும் கூறுவது வழக்கம். அவன் மனைவி பெயர் மானியார் என்பது. அவரை மங்கையர்க்கரசி யென்பது பெருவழக்கு. அக்காலத்தே அவன் சமண் சமயத்தை மேற்கொண்டி ருந்தான். பாண்டி நாட்டில் சமண் சமயமே சிறந்து விளங்கிற்று. வேந்தன் மனைவியாராகிய மங்கையர்க்கரசியார், திருஞான சம்பந்தரைப் பாண்டி நாட்டுக்கு வருதல் வேண்டுமெனத் திருமறைக் காட்டிற்குத் தூதரை விடுத்தனர். அது கண்டு ஞானசம்பந்தர், மதுரை நோக்கிச் செல்வார், நாவரசர்பால் விடைபெற்றுச் சென்றார். நாவரசர் சோழ நாட்டிலே தங்கினர். மதுரைக்குச் சென்ற ஞானசம் பந்தர் சமணர் இட்டதீயினின்றும் உய்ந்து வேந்தனுக்கு உண்டான வெப்பு நோயைப் போக்கி, அனல்வாதம், புனல்வாத முதலியவற்றால் சமணரை வென்று பாண்டி வேந்தனைச் சைவனாக்கிச் சிறப் பெய்தினார். ஞானசம்பந்தர் மதுரையிற் சிலநாள் தங்கி ஆலவாய் இறை வனைப் பாடிப் பணிந்துவந்தார். அவர் சமணரை வென்ற செய்தி தமிழகம் எங்கும் பரவிற்று. சீகாழியிலிருந்த சிவபாத இருதயரும், மதுரைக்கு வந்து பிள்ளையாரைப் பார்த்து மிக்க இன்பமுற்றார். பின்பு அங்கிருந்து பாண்டியனும் மங்கையர்க்கரசியாரும் குலச் சிறையாரும் உடன்வரத் திருப்பரங்குன்றம் திருவாப்பனூர் முதலாகப் பாண்டி நாட்டுப்பதிகள் பலவற்றிற்கும் சென்று, இறைவனைப் பாடிப் பரவிக் கொண்டு இராமேச்சுரமடைந்து இராமநாதரைப் பாராட்டிப் பாடி, அங்கிருந்து கொண்டே ஈழநாட்டுத் திரிகோண மலையையும் திருக் கேதீச்சுரத்தையும் பாடிப் பரவினார். அங்கிருந்து பல பதிகளை வழிபட்டுக் கொண்டே குலச்சிறையார் பிறந்த பதியான மணமேற்குடியடைந்து சிலநாள் தங்கியிருந்தார். முடிவில் மதுரையை யடைந்து வேந்தன்பால் பிரியாவிடை பெற்றுக்கொண்டு சோழநாடு அடைந்த ஞானசம்பந்தர், முள்ளிவாய்க்கரையை யடைந்தார். அங்கே ஆறு பெருக்கெடுத்துச் செல்லவே, எதிரே தோன்றிய திருக்கொள்ளம் பூதூருக்கு, அங்குக் கட்டப்பெற்றிருந்த ஓடமொன்றை அவிழ்த்து அதில் அடியாருடனே ஏறி ஆற்றைக் கடந்து சென்றார். அங்கே இறைவனைப் பதிகம் பாடிச் சிலநாள் தங்கினார். காரைக்கால் அருகிலுள்ள திருத்தெளிசேரிக்குச் சென்று ஆண்டவனைப் பாடிப் பரவிவந்த பிள்ளையார் போதிமங்கை யென்ற வூரை நெருங்கினர். அங்கே புத்தர்கள் வாழ்ந்தனர். சமணர்களை வென்று வாகை சூடிவரும் ஞானசம்பந்தர் வரவு அப்புத்தர்கட்குப் பெருஞ்சினத்தை உண்டுபண்ணிற்று. அவர்கட்குத் தலைவனான புத்தநந்தி பிள்ளையாரை வாதத்துக்கழைத்தான். அவரும் அதற்கு உடன்பட்டிருக்கையில் புத்தநந்தியின் தலையில் இடிவிழவே அவன் இறந்துபோனான். பின்பு சாரிபுத்தன் என்பான் வந்து வாதிட்டுத் தோல்வியுற்றான். இருந்த புத்தர்கள் பலரும் சைவராய்த் திருநீறணிந்து கொண்டனர். ஞானசம்பந்தர், பின்பு, திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்தியில் இருப்பது கேள்வியுற்று அவ்வூர்க்குச் சென்றார். அவர் வருகை யறிந்த நாவரசர், எதிர்கொள்ளவந்த கூட்டத்தோடு தாமும் ஒருவராய்ச் சென்று, சிவிகை தாங்குவாரோடு தாமும் ஒருவராய்க் கூடிக்கொண்டு திருப்பூந்துருத்திக்குள் வந்தார். ஞானசம்பந்தர் "அப்பர் எங்குள்ளார்?" என வினவ சிவிகைக்கீழ் இருந்த நாவரசர் "இங்குள்ளேன்" என விடையிறுக்க, பிள்ளையார் சிவிகையின்று கீழே இறங்கி நாவரசின் நற்றாளை வணங்கி அன்பு மிகுந்து அவருடன் திருப்பூந்துருத்திக் கோயிற்குச் சென்று, ஆண்டவனை இனிய தமிழ்ப் பாட்டால் வழி பட்டு வாழ்த்தினார். பின்பு இருவரும் தத்தம் இறைவழிபாட்டு நலன்களையும் இடையே நிகழ்ந்தவற்றையும் தம்முள் அளவளாவிக் கொண்டனர். முடிவில் நாவரசர் பிள்ளையாரிடம் விடை பெற்றுக் கொண்டு பாண்டி நாட்டுக்குச் செல்லலுற்றார். ஞானசம்பந்தர், தமது தந்தையாருடன் திருநெய்த்தானம் முதலிய பதிகளை வணங்கிக்கொண்டு சீகாழிக்கு வந்து சேர்ந்து சில காலம் தங்கியிருந்தார். தங்கியிருக்கையில் அவருக்குத் தொண்டை நாட்டிலுள்ள திருக்கோயில்கட்குச் சென்று வழிபட வேண்டுமெனும் வேட்கையெழுவதாயிற்று. முடிவில் தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்படுகையில் அவரும் உடன்வரவிழைந்தார்; ஆயினும் அவரைச் சீகாழியில் இருக்கச்செய்து, தில்லை, திருத்தினை நகர், திருமாணிகுழி முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டே திருவண்ணாமலை வழியாகத் திருவோத்தூருக்குச்சென்று சேர்ந்தார். திருவோத்தூரில், ஓரன்பர், திருக்கோயில் ஆற்றங்கரையில் இருத்தலின் அதற்கு அடைகரையாகப் பனைமரங்களை வைத்து வளர்த்து வந்தார். அவையாவும் ஆண்பனைகளாய்க் காயாதொழியவே, அவ்வூர்க்கருகில் வாழ்ந்த சமணர்களுட் சிலர் அவரை எள்ளி நகையாடினர். அக்காலை ஞானசம்பந்தர் அங்கே எழுந்தருளவும் அவ்வன்பர் உண்மையைப் பிள்ளையாரிடம் அறிவித்துக் கொண்டார். பிள்ளையார் திருவோத்தூர் இறைவனைப் பாடிப் பரவிய திருப்பதி யத்தில் இக்குறிப்பினை வைத்துப் பாடியருளினர். அதன் பின் பனைகள் பூத்துக் காய்க்கத் தொடங்கின. திருவோத்தூரிற் சில நாள் தங்கி யிருந்த பிள்ளையார், பின்பு திருமாகறல் திருக்குரங்கணில்முட்டம் முதலிய திருப்பதிகளை வணங்கி வழிபட்டுக்கொண்டே, திருவாலங்காடு சென்று, காரைக்- காலம்மை பரவிய ஆலங்காட்டிறைவனைப் பதியம் பல பாடிப் பரவினர். அதன் பின் திருவெண்பாக்கம்திருக்காரிகரை முதலிய திருப்பதிகளைப் பரவிக் கொண்டு சென்று திருக்காளத்தியைக் குறுகினார். அவர் வரவு கேள்வியுற்ற திருக்காளத்தி யன்பர்கள் பிள்ளையாரை எதிர்கொண்டு சென்று காளத்திமலையைக் காட்டிப் பிள்ளையாரைச் சிறப்பித்தார்கள். பிள்ளையார் காளத்திமலையைக் கண்டு வழிபட்டு அங்கே அன்புருவாய் நிற்கும் கண்ணப்பரைச் சிறப்பித்துத் திருப் பதிகம் பாடிக்காளத்தியிலேயே சில நாட்கள் தங்கினார். அக்காளத்தி யிலிருந்தே வடகயிலாயம், திருக்கேதாரம் முதலிய பதிகளை நினைந்து பல பதியங்கள் பாடிச் சிவபெருமானை வழிபட்டு மகிழ்ந்தார். பின்னர், ஞானசம்பந்தப்பிள்ளையார் தெற்கு நோக்கிப் புறப் பட்டுத் திருவேற்காடு, திருவலிதாயம் முதலிய திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டுக் கொண்டு திருவொற்றி யூரை வந்தடைந்தார். ஞானசம்பந்தர் தென்னாட்டில் இருக்கையில், திருமயிலாப் பூரில் வாழ்ந்த சிவநேசர் என்பார், தம்முடைய ஒரு மகளை மணந்து கொள்பவனுக்குத் தமது செல்வ முற்றும் உரிமை செய்யக் கருதி மகளைப் பேரன்புடன் வளர்த்து வந்தார். வருகையில், ஞானசம்பந்தப் பிள்ளையாரின் பெருமை அவர் செவிக்கு எட்டிற்று. அது முதல் தம்முடைய மகளை ஞானசம்பந்தருக்கு உரிமை செய்துவிட உறுதி கொண்டுவிட்டார். இவ்வாறிருக்கும்போது, அப்பெண், ஒரு நாள் பூப்பறிக்கச் சென்ற விடத்துப் பாம்பொன்று தீண்டவே உயிர் துறந்தாள். அவள் பெயர் பூம்பாவையென்பது. பூம்பாவை இறந்த பின் அவள் உடலை எரித்து என்புகளை யெடுத்து ஒரு குடத்தில் வைத்து, இவளை ஞானசம்பந்தருக்கு உரிமை செய்துவிட்டேனாதலால் அவர் வருங்கால் இதனை அவர்பாற் சேர்க்க வேண்டுமென வைத்திருந்தார் அந்தச் சிவநேசர். ஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு வந்து ஒற்றியூர் ஆண்டவனை இனிய பாட்டுக்கள் பாடி வழிபட்டுக் கொண்டிருப்பதைச் சிவநேசர் கேள்வியுற்று, அவரை யடைந்து வணங்கி மயிலாப்பூருக்கு அழைத்து வந்தார். மயிலாப்பூர் இறைவன் கோயிற்குச் சென்று பதியம் பாடிப் பரவி நின்ற பிள்ளையார் சிவநேசரை நோக்கி, எற்புடைக்குடத்தைக் கொணருமாறு பணித்தனர். குடமும் அவர் திருமுன்னர் வைக்கப் பட்டது. ஞானசம்பந்தர் ஆண்டவன் திருவருளை நினைந்து "மட்டிட்ட புன்னை" யெனத் தொடங்கும் திருப்பதியத்தைப்பாடி இறைவனை இறைஞ்சினார். எற்புக் குடத்திலிருந்த எலும்புகள் தம்மிற் கூடிப் பெண்ணுருவாகப் பூம்பாவை உயிரோடிருந்தால் எவ்வளவு வளர்ச்சியுற்றிருப்பாளோ அவ்வளவு வளர்ச்சியுடன் நின்று ஞானசம்பந்தரையும் பெற்றோரையும் ஆண்டவனையும் வணங்கினாள். அது கண்டிருந்த மக்கட் கூட்டம் பெருமருட்கை கொண்டு பிள்ளையாரைப் பரவிப் பாராட்டினர். பிள்ளையார் சிவநேசருக்கு வேண்டுவன கூறித் தேற்றிவிட்டு மயிலாப்பூரின் நீங்கித் திருவான்மியூர் முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டே வந்து தில்லையைச் சேர்ந்தார். சிவபாதவிருதயர் தில்லைக்கு வந்த பிள்ளையாரைக் கண்டு பேரின்பத்தால் ஆண்டவனைப் பரவினர். பிள்ளையார் பல திருப்பதி கட்கும் சென்று வழிபட்டுக் கொண்டு சீகாழிப் பதியை யடைந்து தோணியப்பரைப் பல பதிகங்களாற் சிறப்பித்தார். பிள்ளையார் வருகையறிந்த திருநீலநக்கர் முருகநாயனார் முதலிய பெரியோர் சீகாழிக்கு வந்து பிள்ளையாரைக் கண்டு பேரின்பமுற்றனர். முடிவில் பெரியோர்கள் ஒன்று கூடித் திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்வதென முடிபு செய்து அவரை வேண்டினர். அவரும் அவர்கள் வேண்டுகோட்கிசைந்தார். திருநல்லூரில் வாழ்ந்த நம்பாண்டார் என்பாருடைய மகளை1 மணம் பேசினர். திருநல்லூரிலேயே திருமணம் செய்ய ஏற்படாயிற்று. கணிகள் குறித்த நன்னாளில் திருமணம் இனிது நடந்தது. திருமண முடிவில் மணமக்களும் மணத்திற்கு வந்திருந்த உறவினர் சான்றோர் முதல் அனைவரும் திருக்கோயிலுக்குச் சென்று இறைவன் திருமுன் நின்றனர். ஞானசம்பந்தப் பிள்ளையார் இனிய அழகிய திருப்பதியத்தால் இறைவனைப் பாடிப் பரவினார். உடனே ஒரு பேரொளி தோன்றி ஒரு வாயிலும் காட்டி நின்றது. யாவரும் அதனுட் சென்றனர். எல்லாரும் சென்ற பின் ஞானசம்பந்தப் பிள்ளையார் மணமகளின் கையைப் பற்றிக்கொண்டு அதனுட் "புக்கு ஒன்றி உடனானார்." வரலாறு பற்றிய வேறு நூற் குறிப்புக்கள் இதுகாறும் கூறிய இவ்வரலாறு பெரியபுராணம் எனப்படும். திருத்தொண்டர்புராணத்துட் கண்டதாகும். இத் தொண்டர் புராணத்துக்கு முற்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி, "வையமகிழ யாம்வாழ அமணர் வலிதொலைய ஐயன்பிரம புரத்தாற் கம்மென் குதலைச்செவ்வாய் பையமிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின் தையல்அருள் பெற்றன னென்பர் ஞானசம்பந்தனையே" "பந்தார்விரலியர் வேள்செங்கட் சோழன் முருகனல்ல சந்தாரகலத்து நீலநக்கன் பெயர் தான்மொழிந்து கொந்தார்சடையர் பதிகத்தில் இட்டடியேன் தொடுத்த அந்தாதிகொண்ட பிரானருட்காழியார் கொற்றவனே" என்று குறிக்கின்றது. இத்திருவந்தாதிக்கு முற்பட்டதான திருத் தொண்டத்தொகை, "வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்" என்று கூறுகிறது. இனி, சேக்கிழார்க்குக் காலத்தால் முற் பட்டவரும், நம்பியாண்டார் நம்பிக்குப் பிற்பட்டவருமான ஒட்டக்கூத்தர் தாம் பாடிய தக்கயாகப்பரணியில், திருஞான சம்பந்தர் வரலாற்றைச்1 சிறிது கூறியுள்ளார். அதன்கண் திருஞான சம்பந்தர் மதுரைக்குச் சென்றதும், அவர் தங்கியிருந்த மடத்தில் அமணர் தீ வைத்ததும், பாண்டி வேந்தன் வெப்புற்றதும், அவ்வெப்பு நீங்க அமணர் மந்திர தந்திரங்களால் முயன்றும் மாட்டாராயினதும், பாண்டியன் ஆற்றானாய் மூர்ச்சித்ததும், அது கண்டு குலச்சிறையார் ஞானசம்பந்தரை யடைந்து வேண்டுவதும், மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரை வேண்டிக் கொள்வதும், ஞானசம்பந்தர் வந்து அரசனருகே வீற்றிருப்பதும், அமணர் கண்டு வெகுளுவதும், குலச்சிறையார் அமணர்களை யடக்கி ஞானசம்பந்தரை வேண்டுவதும், ஞானசம்பந்தர் திருநீறிடுவதும், இட்டவளவே, வேந்தன் வெப்பு நீங்கி யெழுந்து அவரைப் பணிவதும், அமணர் வேந்தனைப் தடுப்பதும், வேந்தன் அவர்களை நோக்கி, "கெடுவீர் கெடுவீர் இவை சொல்லுவதே, கெட்டேனடிகள் இவர் கேவலரோ, விடுவீர் விடுவீர் இனி என் எதிர் நீர், வெங்கோபமும் உங்கள் விவாதமுமே"1 என்று தெழிப்பதும், பின்னர் அந்த அமணர்கள் அனல்வாதமும் புனல் வாதமும் புரிவோ மென மேற்கொள்வதும், சமயப் போர் செய்தல் வேண்டாவென மங்கையர்க்கரசியார் ஞானசம்பந்தரைப் பணிந்து தடுப்பதும், ஞான சம்பந்தர் அவரைத் தேற்றி அனல் வாத புனல் வாதங்கட்கு உடன் பட்டுச் செல்வதும், வாதங்கள் நிகழ அமணர் தோற்பதும், ஞானசம்பந்தர் பாண்டியனை நோக்கி, "வாராய் இவர் ஆகம துல்லபமும், வருமெங்கள் சிவாகம வல்லபமும், பாராய் வழுதீயிது பாருருவத், திருவிக்ரமமின்று படும் படியே "2 எனச் சொல்லிக் காட்டுவதும், முடிவில் அமணர் கழுவேறியதும், அது கண்டு ஞானசம்பந்தர் விலக்கியதும், அவருக்கு மாகேசுரக் கணபதித் தொண்டர்கள், "மண்ணாவுடம்பு தங்குருதி, மண்ணக் கழுவின் மிசை வைத்தார், எண்ணாயிரவர்க் கெளியரோ, நாற்பத்தெண்ணாயிரவரே"3 என்று அமைதி கூறுவதும் இவ் வரலாற்றில் அடங்கியுள்ளன. வரலாற்றாராய்ச்சி ஞானசம்பந்தர் வரலாற்றில் அவர் ஞானப்பால் உண்டதும், பொற்றாளம் பெற்றதும், முத்துச் சிவிகை முதலியன பெற்றதும், முயலகன் என்னும் நோய் நீக்கியதும், திருச்செங்குன்றத்தில் அடியார்க் குண்டான குளிர் நோய் போக்கியதும், பட்டீச்சுரத்தில் முத்துப் பந்தர் பெற்றதும், திருவாவடுதுறையில் பொற்கிழி பெற்றதும், திருத்தரும புரத்தில் திருப்பதியம் யாழிலடங்காமை காட்டியதும், திருமருகலில் விடம் நீக்கியதும், திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும், திருமறைக் காட்டில் திருக்கதவம் அடைத்ததும், மதுரையில் தென்னவனுக்கு வெப்பு நோய் அகற்றியதும், அமணரொடு அனல்வாத புனல்வாதங்கள் புரிந்து வென்றதும், திருக்கொள்ளம் பூதூரருகே ஆற்றில் ஓடம் செலுத்தியதும், போதி மங்கையில் புத்தன் தலையில் இடி வீழ்ந்ததும், திருவோத்தூரில் ஆண்பனை பெண்பனையானதும், திருமயிலையில் என்பு பெண்ணுருவாக் கண்டதும், திருமணக் காலத்தில் பேரொளியிற் கலந்து மறைந்ததும் பேரற்புதங்களாகக் கருதப்படுகின்றன. இவற்றை வற்புறுத்தும் சான்றுகளும் வழக்காறுகளும், நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் உள்ளன; அவை பின்னர்க் காணப்படும். உடனிருந்த சான்றோர்கள் ஞானசம்பந்தர் வரலாற்றில் மேலே குறித்த அற்புதங்கள் ஒழிய, அவர் திருநாவுக்கரசர் சீகாழிக்கு வர, அவரோடு அளவளாவி மகிழ்வதும், பின்பு திருப்புகலூர், திருமறைக்காடு, திருப்பூந்துருத்தி, திருவீழிமிழலை முதலிய இடங்களில் திருநாவுக்கரசருடன் கூடியிருந்து அருட்பாடல் வழங்குவதும் குறிக்கத் தகுவன. திருநீலநக்கர், முருக நாயனார், திருநீலகண்டயாழ்ப்பாணர், சிறுத்தொண்டர், பாண்டி வேந்தனான நெடுமாறனார், மங்கையர்க் கரசியார், குலச்சிறை நாயனார் முதலியோர் ஞானசம்பந்தர் காலத்தே இருந்தவராவர். திருஞானசம்பந்தருடைய திருப்பதியங்களில் அவராற் குறிக்கப் பெற்றிருக்கும் சண்டேசுரனார். கண்ணப்பர், நமிநந்தியடி கள், கோச்செங்கட்சோழன், முருகநாயனார், சிறுத்தொண்டர், திருநீல நக்கர், பாண்டிமாதேவியாரான மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், திருநீலகண்டயாழ்ப்பாணர், தண்டியடிகள், புகழ்த்துணையார் என்ற பன்னிருவருள், மேலே கூறிய திருநீலநக்கர் முதலிய எழுவர் நீங்கலாக எஞ்சும் ஐந்து பேர்களும் திருஞானசம் பந்தர்க்குக் காலத்தால் முற்பட் டோராவர். அவருள் சண்டீசைரை. "வந்தமணலால் இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ் சிந்தைசெய்வோன் தன்கருமம்தேர்ந்துசிதைப்பான் வருமத் தந்தைதனைச் சாடுதலும் சண்டீசன் என்றருளிக் கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே"1 என்றும், கோச்செங்கணானை, "செம்பியன் கோச்செங் கணான் செய்கோயில்"2 என்றும், கண்ணப்பரை, "வாய்கலசமாக வழிபாடு செயும் வேடன் மலராம் நயனம், காய்கணையினால் இடந்து ஈசனடிகூடு காளத்திமலையே"1 என்றும், "கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள் அண்ணல் ஆரூராதியானைக்காவே"2 என்றும், நமிநந்தியடிகளை, "ஆவிதனில் அஞ்சொடுக்கி அங்கண னென்று ஆதரிக்கும், நாவியல்சீர் நமிநந்தியடிகளுக்கு நல்குமவன்"3 என்றும், புகழ்த்துணையாரை, "அலந்த அடியான் அற்றைக் கன்று ஓர் கா செய்திப், புலர்ந்த காலைமாலை போற்றும் புத்தூரே"4 என்றும், தண்டியடிகளை, "அண்டர் தொழுதண்டி பணிகண்டு அடிமை கொண்ட இறை"5 என்றும் குறித்துள்ளார். தமது காலத்தில் வாழ்ந்தவர்களுள், திருநீலநக்கரை, "நிறையினார் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர்" அறையுமூர் சாத்தமங்கை யயவந்தி மேல்ஆய்ந்த"6 என்றும், முருகநாயனாரை "தொண்டர் தண்கயமூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும், கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன் செய்கோலம்"7 என்றும், சிறுத்தொண்டரை," செங்காட்டங்குடி மேயசிறுத் தொண்டன் பணிசெய்ய"8 என்றும், மங்கையர்க்கரசியாரை, "மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கைம் மடமானி, பங்கயச்செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவ"9 என்றும், குலச்சிறையாரை, "கொற்றவன் தனக்கு மந்திரியாய குலச்சிறை குலாவிநின்றேத்த"10 என்றும் பாராட்டிப் பாடியுள்ளார். திருஞானசம்பந்தர் காலம் இனி, திருஞானசம்பந்தர் காலத்தைச் காண்டல் வேண்டும். இவரது காலத்தைப்பற்றி இதுகாறும் பல அறிஞர்கள் பலவேறு வகையான கருத்துக்களை வழங்கியுள்ளனர். திரு. சைமன் காசி செட்டியாரவர்கள், "சோழ பூருவபட்டயத்" திற் கண்டவாறு ஞானசம்பந்தர் நாவரசர், நம்பியாரூரராகிய மூவரது காலமும் ஒன்றே யென்றும், அஃது ஐந்தாம் நூற்றாண்டாகும் என்றும் கூறுவர். திரு.சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள், கூன்பாண்டியன் காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன்1 என்பர்; எனவே அவர் கருத்துப்படி, ஞானசம்பந்தர் காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தாம். கொழும்பு திரு. ஆனரபிள் P. குமாரசாமியவர்கள், விடந் தீண்டியிறந்த வணிகனை ஞானசம்பந்தர் எழுப்பிய வரலாறு கூறும் திருவிளையாடற் கூற்றுச் சிலப்பதிகாரத்திற் காணப்படுவது கொண்டும், சிலப்பதிகாரம் கி.பி.113-135 வரையிருந்த கயவாகுவின் காலமாதல் கொண்டும் ஞானசம்பந்தர் அதற்குச் சில ஆண்டுகள் முன்பு கிறித்து பிறந்த காலத்தவராக இருக்கவேண்டும்2 என்பர். அறிஞர் ஹுல்ஷ் என்பார்3 தமிழ்ப்பாட்டுக்கள் பலவும் கரிகாலன் காலத்தும் கோச்செங்கணான் காலத்தும் இயற்றப்பட்டன வென்பது தெளிவாக விளங்குதலால், தேவார ஆசிரியர்களை அவ்விரு பெருவேந்தர்களின் காலத்தவராகக் கொள்வதில் தடையில்லை என்றனர். இற்றைக்கு நாற்பது ஆண்டு கட்கு முன் மனோன்மணீய ஆசிரியரான பேராசிரியர். P.சுந்தரம் பிள்ளையவர்கள் ஞான சம்பந்தர் காலத்தை முதன் முதலாக, அக்காலத்தே தமக்குக் கிடைத்த கருவிகளைக் கொண்டு நேரிய முறையில் ஆராய்ந்து, சங்கரர்,4 தாம் எழுதிய சௌந்தரியலகரி யென்ற நூலில் ஞானசம்பந்தரைக் குறித்துப் பாடியிருப்பதால், ஞானசம்பந்தர் சங்கரர்க்கு முற்றபட்டவ ரென்று நிறுவி, முடிவில் ஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவரெனத்5 துணிந் துரைத்தார். பின்பு, கல்வெட்டுக்கள் சில குறிப்புக்களை அவர்க்கு உதவின. அவற்றைக் கொண்டு, தாம் ஆராய்ந்து கண்ட காலத்தை முடிந்த முடிபாகப் பின்வருமாறு வற்புறுத்தியுள்ளார். அதன் தமிழ்ப் படி வருமாறு. “தேவாரத்தில் காஞ்சியில் திருமேற்றளி என்றொருகோயில் திருநாவுக்கரசால் பாடப்பெற்றுள்ளது. அத்திருமேற்றளி இருக்கு மிடம் தெரியவில்லை. ஒருகால் அதுவே திருக்கற்றளி யெனப்படும். கயிலாச நாதர் கோயிலாயின், ஒரு சிறந்த முடிபு பெறப்படும். கயிலாச” நாதர் கோயிலுக்கு இராசசிம்மேச்சுரம் என்றொரு பெயருண்டு. இராசசிம்ம பல்லவன் இரணரசிகனை வென்ற உக்கிரதந்தனுக்கு மகனாவான். அறிஞர் ஹுல்ஷ், (Dr. Hultszh) இரணரசிகனை மேலைச்சளுக்க வேந்தனான இரணராகன் என்பர். எனவே, இராசசிம்மன் இரணராகனுக்குப் பின்வந்த முதற் புலிகேசியின் காலத்தவன் என்பது பெறப்படும். புலிகேசி கி.பி. 567-இல் இருந்த கீர்த்திவன்மனுக்கு முன்னோனாவான். இராசசிம்மேச்சரமான திருக்கற்றளி கி.பி. 550-இல் கட்டப்பட்டிருக்க வேண்டுமென்பது அறிஞர் ஹுல்ஷ் (Dr. Hultszh) அவர்கள் கருத்து; அதனை அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள். அப்பர் பாடிய திருமேற்றளி இது வாகுமாயின், அப்பர் காலத்தின் மேலெல்லை ஆறாம் நூற்றாண்டாகும். “போக்சு (Foulks) என்பார் வெளியிட்டுள்ள பல்லவ மல்லன் செப்பேடும் கூரத்துச் செப்பேடும் இராசசிம்மனுக்குப் பின்வந்தவன் நரசிம்மவன்மனென்றும், அவன் சளுக்க வேந்தனான புலிகேசியை வென்று வாதாபி நகரை அழித்தானென்றும் கூறுகின்றன. மற்று, பல்லவரிடத்தினின்று மீட்டு வாதாபி நகரைச் சீர் செய்வதன் முதல் புலிகேசி யென்றும், அவன் இராசசிம்மன் காலத்தவன் என்றும் தெரிவதால், வாதாபி நகரை யழித்த முதல் நரசிம்மன் காலத்தவன் இரண்டாம் புலிகேசியாதல் பெறப்படும் . அவன் சகம் 532-இல் இருந்தவனாதலால் அவன் ஏழாம் நூற்றாண்டினன் என்பது தேற்றமாம். இதற்குமுன் செய்த ஆராய்ச்சியால் திருஞானசம்பந்தரை ஏழம் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டுமெனக் கண்டோம். வாதாபி கொண்ட வரலாறு பெரியபுராணத்திற் கூறப்பட்டிருத்தலை முதன் முதலில் கண்டுரைத்தவர் திரு. V. வெங்கையரவர்களாவர்.1 இப் புராணப்படியே, சிறுத்தொண்டர் செய்த செயல்வகைகளுள் வட புலத்துத் தண்டுபோய்வாதாபிதுகள் படுத்தது ஒன்று. சிறுத்தொண்டர் வடபுலஞ் சென்றேபோது இருந்த வேந்தன் வாதாபி கொண்ட நரசிங்கவன்மனைத் தவிர வேறே யாவனாதல் கூடும்? ஆகவே, திருஞானசம்பந்தர் காலத்திருந்த சிறுத்தொண்டர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த நரசிங்கவன்மனோடு உடனிருந்தவராவர். சிறுத்தொண்டர் வேண்டவே, தாம் பாடுவதாக ஞானசம்பந்தர் செங்காட்டங்குடித் திருப்பதிகத்திற்1 கூறுகின்றார். ஆகவே, திருஞான சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூன் பாண்டியனை சைவனாக்கித் தென்பாண்டியில் சிவநெறி நிறுவிய பெருந்தகையாவர் என்பது துணிபு. ”2 இனி, பேராசிரியர் சுந்தரம் பிள்ளைக்குப் பின்னர், தஞ்சை ராவ்சாகிபு. திரு. K.S. சீனிவாச பிள்ளையவர்கள் ஞானசம்பந்தர் காலத்தைப்பற்றித் தாம் எழுதிய தமிழ் வரலாலாற்றிற் பிற்காணு மாறு கூறுகின்றார்:3 “சீகாழியில் கௌணிய கோத்திரத்தினராய்ச் சிவபாத விருதயர் என்பார்க்குத் தவப்பயனாய் அவர் மனைவி பகவதியார் வயிற்றில் சம்பந்தமூர்த்தியடிகள் அவதரித்தனர், அவர்க்கு மூன்றாம் ஆண்டில் பொன்வள்ளத்துப் பாலூாட்டிய கதையை யாவருமறிவர்.” “மூன்றாம் ஆண்டு என்பது எது? நிறைவுற்ற ஆண்டைக் குறிப்பிடுவதே நம்மனோர் வழக்கம்; நடைபெறும் ஆண்டைக் குறிப்பிடுவதில்லை; ஆதலால் பிள்ளை யார்க்கு இச்சம்பவம் நிகழ்ந்த காலத்து நடைபெற்றது நான்காம் ஆண்டாம். உடனே பிள்ளையார் தல யாத்திரை செய்யத் துவக்கினர்: தில்லை, முதுகுன்றம், பழுவை முதலிய பல தலங்களுக்குச் சென்று பதிகம் பாடிச் சீகாழி வந்து சேர்ந்து சில யாண்டுகள் அங்கு வதிந்தனர். உபநயனச் சடங்கு நடந்தது. வயது ஏழாயிற்று. அப்பர் சுவாமி, பிள்ளையாரை இறைஞ்சுதற்குக் காழி வந்தனர். பின்கண்ட செய்யுள் அக்காலத்து அவர் தேகத்தில் வயது முதிர்ச்சியால் நடுக்கம் இருந்ததைக் காட்டும். அது, “சிந்தை யிடையறா அன்பும் திருமேனி தனில் அசைவும் கந்தை மிகையாம் கருத்தும் கையுழவாரப் படையும் வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற் பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசும் எதிர் வந்தனைய” என்பது. பிள்ளையாரும் அப்பரும் சில காலம் காழியில் உடன் உறைந்தனர். பிறகு அப்பர் சுவாமிகள் தலயாத்திரை புறப்பட்டனர். பிள்ளையார் காழியில் இருந்து சிவபெருமான் மீது பலவகைச் சித்திர கவிகளும் பாடினர். “பிறகு தல யாத்திரை செய்யப் புறப்பட்டுச் சோழநாடு, மழநாடு, வடகொங்கு, கீழ்கொங்கு, தென்கொங்கு ஆகிய இந்நாடுகளில் நூற்றுக்கணக்கான தலங்களில் சிவபெருமானை வணங்கிப் பதிகம் பாடினர். அந்த யாத்திரையில் திருச்செங் காட்டங்குடி வந்து சேர்ந்தனர். அத்தலம் வருவதற்கு முன் அவர் சென்ற தலங்களில் பெரிய புராணத்தில் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளன நூற்றுக்கு மேலும் உள. பெயர் குறிப்பிடாதன பல நூறென அறியலாம். அநேக தலங்களில் நீண்ட நாள் தங்கியிருந்தன ரென்று தெரிகிறது.” “பல அடியார்கள் தலயாத்திரை செய்வது, தமிழ்நாடு அக் காலத்திலிருந்த நிலைமையில் காலஹரணம் ஆகக்கூடியதே; ஒருவாறு கணக்கிடுவதால் திருச்செங்காட்டங்குடி வந்த காலத்துப் பிள்ளையாருக்கு 11 அல்லது 12 வயதாவது நிறைந்திருக்க வேண்டும். பிள்ளையார் வருவதைத் தெரிந்து கொண்டு சிறுத்தொண்ட அடிகள் எதிர்சென்று வணங்கிப் பிள்ளையாரைத் தம்மூர்க்கு அழைத்துச் சென்றனர். பிள்ளையார் சிறுத்தொண்டர் மனையில் அவர் உபசரிக்கத் தங்கியிருந்தனர். திருச்செங்காட்டங்குடிப் பதிகத்தில் சிறுத்தொண்டர் பெயரை வைத்துப் பாடினர். அவை, “பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணி செய்ய வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே”1 “செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய வெந்த நீறணி மார்பன் சிறுத் தொண்டனவன் வேண்ட அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும் சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே”2 என்பன. “ஈண்டுச் சிறுத்தொண்ட அடிகள் வரலாற்றைச் சற்று ஆராய் வோம். சிறுத்தொண்டரென்பது காரணப்பெயர். அவரது இயற் பெயர் பரஞ்சோதியார். இவர் காஞ்சியில் பல்லவ அரசன் நரசிம்மவர் மனிடத்திற் சேனாதிபதியாயிருந்தனர். பல்லவர் களுக்கும் துங்கபத் திரை நதிக்கு வடபாலுள்ள குந்தள நாட்டரசர்களாகிய சளுக்கியர் களுக்கும் ஓவாது போர் நடப்பது வழக்கம். நரசிம்மவர்மன் காலத் திருந்த சளுக்கிய அரசன் இரண்டாவது புலிகேசி யென்பான். அவன் மிக்க பராக்கிரமசாலி. அநேக அரசர்களைப் போரில் வென்று அவர்கள் நாடுகளைக் கீழ்ப்படுத்தினான். அக்காலத்தில் ஹர்ஷ வர்த்தனன் என்னும் கன்னோசி நாட்டரசன் ஒருவன் இருந்தனன். அவன் நருமதையாறு தொடங்கி ஹிமயமலை வரை யிலுள்ள நாடுகளையும் அவற்றிற்குக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நாடுகளையும் போர்புரிந்து தனக்குக் கீழாக்கினன்; பெருங்கீர்த்தி பெற்ற பராக்கிரமசாலி. அவன் குந்தள நாட்டின் மீது படையெடுத்து வந்தபோது புலிகேசி II என்னும் குந்தளநாட்டரசன் அவனை முறியடித்தான். பாரத வருஷத்திலிருந்த அரசர்களில் ஹர்ஷவர்த் தனனை வென்றவன் புலிகேசி II ஒருவனே யென்றால் அவன் பாராக்கிராமத்தின் அளவு எத்துணையதாம்! இவனது தலைநகர் வாதாபி. யுவான் சுவாங் என்னும் பிரசித்தி பெற்ற சீன தேச யாத்திரிகர் கி.பி. 641-ஆம் ஆண்டில் வாதாபி சென்று சில காலம் தங்கினர். அந்நகரத்தினதும் நகரத்தரசனதும் ஆகிய பெருமையை அவர் எழுதிய புத்தகத்தில் மிகப்பாராட்டியிருக் கின்றனர். அடுத்த கி.பி. 642-ஆம் ஆண்டில் பரஞ்சோதியார் பல்லவனது திரண்ட படையோடு குந்தள நாட்டரசனுடன் போர் செய்யச் சென்று மிக்க பராக்கிரமசாலியாகிய புலிகேசி II என்பானது தலைநகராகிய வாதாபியைத் துகளாக்கி அங்குப் பல்லவனது ஜயஸ்தம்பத்தை நாட்டினர். குந்தளராட்சி நிலை குலைந்துபோய் விட்டது. பதின்மூன்று வருஷகாலம் சளுக்கியராட்சி மங்கித் தத்தளித்துக் கொண்டிருந்தது. கி.பி. 655-ஆம் ஆண்டில் புலிகேசி II என்பானது மகன் விக்கிரமாதித்தன் I என்பான் கிருஷ்ணாநதிக்கு வடக்கேயுள்ள கல்யாணபுரம் என்னும் நகரத்தைக் தனது தலைநகராக்கினன். பரஞ் சோதியார் வாதாபி நகரத்தைப் பாழ்படுத்தியதை அடியில் கண்ட பெரிய புராணச் செய்யுள் விளக்கும். அது. “மன்னவர்க்குத் தண்டுபோய் வட புலத்து வாதாவித் தொன்னகரம் துகளாகத்துளைநெடுங்கைவரை யுகைத்துப் பன்பணியு நிதிக் குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணில கவர்ந்தே யிகலரசன் முன் கொணர்ந்தார்” என்பது. “நரசிம்மவன்மன் அவர் மூலமாக வெற்றி பெற்றதற்குப் பெரு மகிழ்ச்சி கொண்டானேனும், அவர் தனது வழிபடு கடவுளாகிய சிவபெருமானது அணுக்கத் தொண்டரென அறிந்து அவரைத் தன்கீழ் வைத்து வேலை வாங்குவதனால் பெரிய சிவாபராதம் வருமென அஞ்சி அவருக்குத் திரண்ட நிதியும் மானியங்களும் கொடுத்துத் திருத்தொண்டு செய்து கொண்டு இஷ்டப்படி யிருக்க வேண்டினன். அவன் வேண்டுகோளுக்கிணங்கிப் பரஞ்சோதியார் தம்மூராகிய திருச்செங்காட்டங்குடி வந்த வதிந்தனர்.” பின்வரும் பெரிய புராணச் செய்யுட்கள் இதனை விளங்கும். அவை. “கதிர் முடி மன்னனும் இவர்தங் களிற்றுரிமை யாண்மையினை அதிசயித்துப் புகழ்ந்தரைப்ப அறிந்த அமைச்சர்க ளுரைப்பார் மதியணிந்தார் திருத் தொண்டு வாய்த்த வலியுடைமை யினால் எதிரிவருக் கிவ்வுலகி லில்லை யென எடுத் துரைத்தார்” “தம்பெருமான் றிருத் தொண்ட ரெனக் கேட்ட தார் வேந்தன் உம்பர் பிரா னடியாரை யுணராதே கெட் டொழிந் தேன் வெம்பு கொடும்போர் முனையில் விட்டிருந்தே னென வெருவுற்று எம்பெருமான் இது பொறுக்க வேண்டுமென இறைஞ்சினான்.” “இறைஞ்சுதலு முன்னிறைஞ்சி என்னுரிமைத் தொழிற் கடுத்த திறம் புரிவே னதற் கென்னோ தீங்கென்ன ஆங் கவர்க்கு நிறைந்த நிதிக் குவைகளுட னீடு விருத்திகளளித்தே அறம் புரியுஞ் செங்கோலான் அஞ்சலி செய் துரைக்கின்றான்.” “உம்முடைய நிலைமையினை யறியாமை கொண்டுய்த்தீர் எம்முடைய மனக் கருத்துக் கினிதாக விசைந்துமது மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச் செம்மை நெறித் திருத் தொண்டு செய்யுமென விடை கொடுத்தான்” “மன்னவனை விடை கொண்டு தம்பதியின் வந்தடைந்து பன்னு புகழ்ப் பரஞ்சோதி யார் தாமும் பனிமதி வாழ் சென்னியரைக் கணபதீச்சரத் திறைஞ்சித் திருத்தொண்டு முன்னை நிலைமையில் வழுவா முறையன்பிற் செய்கின்றார்.” என்பன. “திருச்செங்காட்டங்குடி வந்து சிறிது காலத்தில் அவர் சீராளர் என்னும் மகவைப் பெற்றார். கி.பி. 642-லோ 643-ன் துவக்கத்திலோ அவர் திருச்செங்காட்டாங்குடிக்கு வந்திருத்தல் வேண்டும். வந்து எவ்வளவு காலத்துக்குப் பின்னர்ச் சீராளர் பிறந்தார் என்பது தெரிய வில்லை. இரண்டொரு ஆண்டுகள் இருக்கலாம். சம்பந்தமூர்த்திகள் வந்த காலத்துச் சீராளருக்கு நிறைந்த வயது மூன்றென்பது பின் கண்டவற்றால் விளங்கும்.” அவை “வந்துவளர் மூவாண்டின் மயிர்வினை மங்கலஞ்செய்து தந்தையாரும் பயந்த தாயாருந் தனிச்சிறுவர் சிந்தைமலர் சொற்றெளிவின் செழுங்கலைகள் பயிலத்தம் பந்தமற வந்தவரைப் பள்ளியினி லிருத்தினார்” “அந்நாளிற் சண்பைநக ராண்டகையா ரெழுந்தருள முன்னாக வெதிர்கொண்டு கொடுபுகுந்து முந்நூல்சேர் பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகாவ லனார்தம் நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார்” என்பன. “பிள்ளையார் வந்தது கி.பி. 646-7-ஆம் ஆண்டிலோ அதற்கு இரண்டோராண்டு பின்னரோ இருத்தல் வேண்டும். ஏனென்றால் சீராளருக்கு நான்காம் வயது நடைபெற்ற காலம் அது. அவர் கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்திருப்பர். சிறுத்தொண்டர் தம்மூர் வந்த ஆண்டோடு இக்காலத்தைக் கூட்ட 646-7 ஆகும். அவர் ஊர் வந்த காலத்துக்கும் சீராளர் கர்ப்பத்தில் உற்பவித்ததற்கும் இடையில் இரண்டோராண்டு நிகழ்ந்ததென்றால் நான் மேற்சொல்லிய கணக்குச் சரியாய்விடும். கி.பி. 646-7 -க்கும், 648-9க்கும் இடையில் பிள்ளையார் திருச்செங்காட்டங்குடி வந்தனர் என்று வைத்துக் கொள்ளலாம். பிள்ளையார் பிறகு பல தலங்கள் சென்று திருப்புகலி வந்தனர். அங்கு, நாவுக்கரசர் வர, இருவரும் இன்னும் பல தொண்டர்களுடன் சில நாள் வசித்துத் திருநாவுக்கரசருடன் தலயாத்திரை செய்ய ஆரம்பித்தனர். பல தலங்களுக்குச் சென்று திருமறைக்காடு வந்தனர். அங்கு நின்று திருநாவுக்கரசரை விட்டுப் பிரிந்து மதுரை சென்றதும் சமணரை வாதில் வென்றதும், பாண்டியனைச் சைவனாக்கியதும் யாவரும் அறிந்தனவே; மதுரையைவிட்டு நீங்கிப் பல தலங்கள் சென்று திருப்பூந் துருத்தி வந்து, திருநாவுக்கரசரைச் சந்தித்தனர். அவரை விட்டுப் பிரிந்து காழி சென்று உடனே வடபக்கம் யாத்திரை செய்தனர். காஞ்சிபுரம், திருவொற்றியூர், திருமயிலை முதலிய தலங்கள் சென்று பதிகம் பாடிச் சிவபிரானை வணங்கிச் சீகாழி வந்தனர். இவருக்கு மணம் புரியும் வயது வந்ததால் பெற்றோர் முதலாயினார் முயற்சியால் மணம் அமர்ந்ததும் சோதியிற் கலந்த காலத்து இவருக்கு ஆண்டு பதினாறு எனக் கீழ்க்கண்ட வெண்பா கூறும். அஃது, “அப்பருக் கெண்பத்தொன் றருள் வாத வூரருக்குச் செப்பிய நாலெட்டில் தெய்வீகம் - இப்புவியிற் சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்கு அந்தம் பதினாறு அறி” என்பது. “சம்பந்தமூர்த்திகளைத் தவிர்த்து ஏனையோர்க்குப் பெரிய புராணம் வயது கூறவில்லை. ‘திருவளர் ஞானத் தலைவர் திருமணம் செய்தருளுதற்குப், பருவம் இது என்றெண்ணி அறிவிக்கும் பாங் கணைந்தார்’ என்று அப்புராணம் சொல்வதால் அவர்க்கு மணஞ் செய்யும் பருவம் வந்ததெனத் கொள்ளலாம். அக்காலத்தில் மணஞ் செய்யும் பருவத்தை ஆணுக்குப் பதினாறும் பெண்ணுக்குப் பன்னி ரண்டுமெனக் கொண்டிருந்தனர் என்று சொல்வதற்கு ஆதாரங்கள் பல உள. மணம் முடிந்த காலமும் சோதியிற் கலந்த காலமும் ஒன்றேயாதலால் இவருக்கு ‘அந்தம் பதினாறு’ என்று வெண்பாவில் கூறியிருப்பது பொருத்தமுடையதேயாம். திருநாவுக் கரசரைச் சீகாழியில் முதலில் சந்தித்தபோது இவருக்கு உபநயன மாகி விட்டது. எட்டாம் வயது நடைபெறுங் காலம். அதற்குப் பிறகு சில காலம் சீகாழியில் தங்கியிருந்து பின்னரே தல யாத்திரை செய்யப் புறப்பட்டனர். இப்போது இவருக்கு எட்டு வயதெனக் கொண்டால் அது முதல் திருமணம் நடக்கும் வரையுள்ள காலம் எட்டு ஆண்டு களாகும். திருப்புகலூர், திருவீழிமிழலை, மதுரை முதலிய சில தலங்களில் நீண்டகாலம் தங்கியிருந்தனர். இவர் திருச்செங்காட்டங் குடி வருவதற்கு முன் செய்த யாத்திரை மூன்று நான்கு ஆண்டுகள் சென்றிருக்கலாம். இவர் சோதியிற் கலந்தது சிறுத்தொண்டரை முதலில் சந்தித்தற்கு நாலைந்தாண்டுகளுக்குப் பின்னர்த்தாம். சோதியிற்கலந்த காலம் கி.பி. 655-க்குச் சிறிது காலம் முன்னேயிருக் கலாம். இவர் சமணரையும் பௌத்தரையும் வாதில் வென்று சைவத்தைப் பரவச் செய்தனர். முடிவாக, பேராசிரியர், திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை யவர்கள், திருஞானசம்பந்தர் காலத்தைப்பற்றிப் பலரும் கூறிய முடிபுகளைத் திரட்டி, “திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் காலத்தைப் பற்றிப் பலர் பலவாறு கூறியதை மறுத்துக் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளர்கள். திருஞான சம்பந்தர் காலத்தில் சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியில் வாழ்ந்தனர். அவர் வாதாவியென்னும் வடநாட்டு நகரத்தைத் தம் அரசனுக்காகச் சென்று வென்றழித்தனரென்று பெரியபுராணம் கூறுகின்றது. வாதாவிநகரம் பம்பாய் மாகாணத்திலுள்ளது. இஃது அழிக்கப்பட்ட காலத்திலே அங்கே அரசாண்டவன் சாளுக்கிய வேந்தனான இரண்டாவது புலிகேசியென்பான் என்பது டாக்டர் ஹீல்ஷி என்பவர் வெளியிட்ட கல்வெட்டுப் பட்டயங்களாலே தெரிகின்றது. அவ்வரசன் காலம் கி.பி. 609-642. அதே காலத்தில் காஞ்சி நகரத்தில் முதல் நரசிம்மவன்மன் என்பான் அரசாண்டனன். சிறுத்தொண்டர் முதல் நரசிம்மவன்மன் படைத்தலைவனாக இருந்திருக்கவேண்டும். இதனால் திருஞான சம்பந்தர் காலமும் ஏழாவது நூற்றாண்டின் முற் பகுதியென்றே தெரிகின்றது. முதல் நரசிம்மவன்மனது தந்தையாகிய குணபரன் என்பவன் காலத்தே அப்பர் சுவாமிகள் சைவ சமயம் புகுந்தனரென்று யூகிக்க இடமுண்டு. குணதரவீச்சுரம் என்னும் கோயிலை அவன் கட்டினதாகத் தோன்று கிறது. அப்பர் சுவாமிகள் கி.பி. 509-650 வரையுள்ள காலத்தில் 80 ஆண்டுகள் இவ்வுலகில் திகழ்ந்தனர் என்று யூகிக்க இடமுண்டு. திருஞானசம்பந்தர் கி.பி. 609-642 வரையுள்ள காலத்தில் 16 ஆண்டு நிலவுலகில் வாழ்ந்து சைவத்தை நிலைநாட்டினர் என்க ”1 என்று கூறுகின்றார். திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதியங்கள் திருஞானசம்பந்தர் பாடியருளிய திருப்பதியங்கள் பதினாறாயிரம் என்று நம்பியாண்டார் நம்பி உரைத்துள்ளார். இதனை, அவர், “துன்னிய, பன்னுதமிழ்ப் பதினாறாயிரம் நற்பனுவல், மன்னு புவிய வர்க்கு வாய்ப்பவும், முன்னிய, சிந்தனையால் சீரார் கவுணியர்க் கோர் சேயென்ன, வந்தங்கவதரித்த வள்ளலை”2 என்றும், “-மொய்த் தொளிசேர், கொச்சைச் சதுரன்தன் கோமானைத் தான்செய்த, பச்சைப் பதிகத்துடன் பதினாறாயிரம்பா, வித்துப்பொருளை விளைக்கவல பெருமான்”3 என்றும் குறித்துள்ளார். இவர்கூறியதையே, “தோடுடைய செவியன் முதல் கல்லூரென்னும் தொடை முடிவாப் பரசமயத் தொகைகள் மாளப், பாடினார் பதிகங்கள் பாவிலொன்றாம் பதினா றாயிரமுளதாப் பகருமன்றே’4 என்று கூறுவாராயினர். இவற்றுள் திருமுறைகண்ட காலத்தில் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதியங்களுள் முந்நூற்று எண்பத்து நான்கு திருப்பதி யங்களே கண்டு தொகுக்கப்பட்டன. அதனைத் திருமுறைகண்ட புராணம், “பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிக முந்நூற்றெண்பத்து நான்கில் இலங்கு திருமுறை மூன்று”5 என்று கூறுவது காண்க. திருமுறைகண்ட காலத்துத் திருஞானசம்பந்தர் பாடியன வெனக் காணப்பட்ட முந்நூற்றெண்பத்து நான்கு திருப்பதியங்களுள் ஒரு திருப்பதிகம் அவை முதன்முதல் அச்சேறிய காலத்தில் கிடைக்காது போயிற்று; எஞ்சிய முந்நூற்றெண்பத்துமூன்று திருப்பதியங்களே அச்சாகி வெளிவந்தன. இப்பதியங்கள் தொடக்கத்தில் பண்முறையில் அறிஞர்களால் அச்சேற்றி வெளிப்படுத்தப்பட்டன. இவை திருமறை திருமுறை களாக வகுக்கப்பட்டதும் பண்முறை பற்றியேயென்பது திருமுறை கண்ட புராணத்தால் தெரிகிறது. திருஞானசம்பந்தர் திருப்பதியங்கள் முதன் மூன்று திருமுறைகளாக வகுக்கப்பெற்றுள்ளன. முதல் திருமுறையில், நட்டபாடை முதல் மேகராகக் குறிஞ்சியீறாகப் பண் ஏழும் பண்ணமைதி பெறாத யாழ்மூரியுமாகப் பண் எட்டிற்குத் திருப்பதியம் நூற்றுமுப்பத்தாறும், இரண்டாந்திருமுறையில் இந்தளம் முதல் செவ்வழியீறாகப் பண்ஆறுக்குத் திருப்பதியம் நூற்றிருபத் திரண்டு, மூன்றாந் திருமுறையில் காந்தார பஞ்சமம் முதல் அந்தாளிக்குறிஞ்சியீறாகப் பண் ஒன்பதுக்குத் திருப்பதியம் நூற்றி யிருபத்தைந்தும் ஆக முந்நூற்றெண்பத்து மூன்று பதிகங்களா கின்றன. கல்வெட்டாராய்ச்சியாளரால் திருவிடைவாய் என்னுமூர்க் கல்வெட்டொன்றில்1 திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகம் காணப் பட்டது. அப்பதிகம் ஏனைப் பதியங்களோடு சேர்த்து இப்போது அச்சாகும் திருஞானசம்பந்தர் தேவாரத்தில் வெளியிடப் பட்டுளது, அது பண் வகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. திருவிடைவாய்த் திருப்பதிகம் கல்லில் வெட்டப்பட்டபோது. அதற்கென்று வகுக்கப்பட்டிருந்த பண்ணின் பெயர் விடுபட்டதாகக் கொள்ளின், திருமுறை கண்டபுராணமுடையார் கூறும் முந்நூற் றெண்பத்துநான்கென்னும் தொகை நிறைந்து விடுகிறது. இனி, யாழ்மூரிப்பதிகம் பண்ணமைதி பெறாததென்றும் கொல்லிப் பண்ணில் ஒன்று2 வெள்ளிப்பதிகமென்றும் கயப்பாக்கம் திரு. சதாசிவ செட்டியார் கூறுகின்றார். திருமறைகண்ட காலத்துக் காணப்பட்ட திருப்பதியங்கள் முறையே பண்ணும் கட்டளையும் கண்டு தொகுக்கப்பட்டனவென்பது திருமுறைகண்ட புராணம் கூறுவது, அவ்வாறு பண்ணடைவு பெற்ற திருப்பதிகங்கள் முந்நூற்றெண்பத்து நான்காயின், பண்ணமைதி பெறாத யாழ்மூரியும் கொல்லி வெள்ளிப் பதிகமும் சேர, திருஞானசம்பந்தர் பாடியனவென இன்று நமக்குக் கிடைக்க வேண்டிய திருப்பதியங்கள் முந்நூற் றெண்பத்தாறாகும். ஆனால் பொதுவகையில் முந்நூற்றெண்பத்து நான்கு பதியங்களே கிடைத்துள்ளமையின், திருமுறை வகுக்கப் பெற்ற பின்பும் இரண்டு திருப்பதிகங்கள் மறைந்தனவெனக் கருதவேண்டியிருக்கிறது. திருப்பதிகம் ஒவ்வொன்றிற்கும் பதினொரு பாட்டுக்கள் திரு ஞானசம்பந்தரால் பாடப்பெற்றுள்ளன. அவற்றுள் திருவெழுகூற் றிருக்கை ஒன்றுமே தனிப்பாட்டாய் அமைந்தது. ஏனை யாவும் பதினொரு பாட்டுக்கள் கொண்ட திருப்பதிகங்களேயாகும். ஆகவே அவற்றின் கண் அடங்கிய பாட்டுக்களின் தொகை நாலாயிரத்து இருநூற்றுப் பதின்மூன்றாதல் வேண்டும். அவற்றோடு திருவெழு கூற்றிருக்கை சேர திருப்பாட்டுக்களின் தொகை நாலாயிரத்து இரு நூற்றுப் பதினான்காதல் வேண்டும். ஆனால் இப்போது கிடைப்பன. நாலாயிரத்து நூற்றிரயெண்பத்தொரு திருப்பாட்டுக்களே, இவற்றுள், சிலபதிகங்களில் பன்னிரு திருப்பாட்டுக்களும் சிலவற்றில் ஏழு பாட்டுக்களும் சிலவற்றில் எட்டும் சிலவற்றில் ஒன்பதும் சிலவற்றில் பத்தும் உள்ளன. கிடைத்துள்ளனகொண்டு1 பொதுவாகவுள்ள ஏழு திருப்பதி கங்களையும் கழித்து நோக்குமிடத்துத் திருஞானசம்பந்தர், திருப்பதி கங்களால் வழிபட்ட திருப்பதிகள் இருநூற்று இருபதாகின்றன. இவற்றில் சீர்காழிக்குமட்டில் அறுபத்தேழு பதிகங்கள் உண்டு. திருவீழிமிழலைக்குப் பதினான்கு பதிகங்களும், மதுரைக்கு ஒன்பது பதிங்களும், திருமுது குன்றத்துக்கு ஏழு பதிகங்களும், திருவிடை மருதூர்க்கு ஆறு பதிகங்களும் உள்ளன. திருவாரூர், திருவையாறு, திருக்கச்சி, திருமறைக்காடு என்ற ஊர்கட்கு ஐந்து திருப்பதி கங்களும், திருநள்ளாற்றுக்கு நான்கு திருப்பதிகங்களும், திருஅம்பர் மாகாளம், திருவானைக்கா, திருச்சிவபுரம், திருநல்லூர், திருநறையூர்ச் சித்தீச்சுரம், திருநாரையூர் திருமழபாடி, திருவலஞ்சுழி என்ற இவற்றிற்கு மூன்று திருப்பதிகங்களும், திருவான்மியூர், திருவாழ் கொளிபுத்தூர், திருவலி வலம், திருமாற்பேறு, திருமருகல், திருமயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருவாமாத்தூர், திருவிரா மேச்சுரம், திருக்கயிலாயம், திருக்கழிப்பாலை, காவிரிப்பூம்பட்டினம், திருக்காளத்தி, திருக்கானப்பேர், திருக்குடந்தை, திருக்குடவாயில், திருக்குற்றாலம், திருக்கோட்டாறு, திருக்கோயில் (சிதம்பரம்), திருச்செங்காட்டங்குடி, திருத்தேவூர், திருநாகேச்சுரம், திருநாகைக் காரோணம், திருப்புகலூர், திருப்பூவணம் என்ற ஊர்கட்குத் தனித்தனி இரண்டு பதிகங்களும், ஏனைய ஊர்கட் கெல்லாம் ஒவ்வொரு திருப்பதிகமும் காணப்படுகின்றன. திருஞானசம்பந்தர் செய்த தல யாத்திரை திருஞானசம்பந்தர் வரலாற்றில் அவர் சீர்காழியின் நீங்கி ஆறு முறை திருக்கோயில் வழிபாடு குறித்து “யாத்திரை” செய்துள்ளார். அக்காலை அவர் வழிபட்ட கோயில்கள் வருமாறு: முதல் யாத்திரை, திருப்பிரமபுரம் முதல் மூன்று; இரண்டாவது யாத்திரை, திருநனிபள்ளி முதல் ஏழு; மூன்றாவது யாத்திரை, திரு மயேந்திரப்பள்ளி முதல் நான்கு; நான்காவது யாத்திரை, சிதம்பரம் முதல் இருபத்திரெண்டு; ஐந்தாவது யாத்திரை, திருக் கண்ணார் கோயில் முதல் நூற்று எழுபத்தெட்டு; ஆறாவது யாத்திரை, சிதம்பரம் முதல் நாற்பத்தேழு; இறுதியாகிய ஏழாவது யாத்திரை, திருநல்லூர்ப் பெருமணத்தோடு முற்றுப்பெற்றது. சேக்கிழார் கூறிய திருஞானசம்பந்தர் வரலாற்றிற் கண்ட திருக்கோயில்கள் மேலே கூறியனவாகும். இவற்றுள் ஒரு முறைக்கு மேல் இருமுறை மும்முறையாக வழிப்படப்பட்ட கோயில்களைக் கழித்து நோக்கின், திருஞானசம்பந்தரால் திருப்பதிகம்படி வழிபடப் பட்ட கோயில்கள் திருவிடையாய் உளப்பட இருநூற்று நாற்பத்தொரு கோயில்களாகும். எஞ்சி நிற்கும் முப்பத்துமூன்று கோயில்கட்குத் திருப்பதிகம் காணப்படவில்லை. அவை மாறன் பாடி திருநீடூர், திருமண்ணிப் படிக்கரை, திருக்குறுக்கை வீரட்டம், திருவெதிர்கொள் பாடி, திருக்கஞ்சனூர், திருவெஞ்சமாக்கூடல், திருவாட்போக்கி (இரத்தினகிரி) திருவாலந்துறை, திருச்செந்துறை, திருத்தவத்துறை, திருவெறும்பியூர், திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி, திருப் பாலைத்துறை, திருப்பூவனூர், திருவாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம், திருவாறை வடதளி, திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருமூவலூர், திருவாரூர் அரநெறி, திருத்தலை யாலங்காடு, திருச்சாத்தங்குடி, திருக்கோடிக்குழகர் கோயில், திருச்சுழியல், திருமணமேற்குடி, திருப்போதிமங்கை, திருத்தினை நகர், திருக்கச்சி அநேகதங்காவதம், திருக்கச்சிமேற்றளி, திருவெண் பாக்கம், திருக்காரிகரை என்பனவாகும். திருப்பதிகத்தால் வழிபடப் பெற்ற கோயில்களுள் இராமன தீச்சுரம், திருவேடகம், திருக்கடைமுடி, திருக்கற்குடி, திருக்கலிக் காமூர், திருக்கள்ளில், திருக்கோட்டாறு, திருச்சிறுகுடி, திருச்சிற்றேமம், திருச்சோபுரம், திருத்தென்குடித்திட்டை, திருநெல் வாயில் என்ற திருக்கோயில்கட்குத் திருஞானசம்பந்தர் சென்றதாகச் சேக்கிழார் கூறிற்றிலர். திருப்பதிக ஆராய்ச்சி - வரலாற்றுக் குறிப்பு இனி, திருஞானசம்பந்தர் பாடியுள்ள திருப்பதிகங்களைக் காண்பது முறையாகும். இத்திருப்பதிகங்களின் இறுதியிலுள்ள திருப் பாட்டில் அப்பதிகத்தைப் பாடிய தமது ஊரும் பெயரும் தவறாமல் குறித்துள்ளார் திருஞானசம் பந்தர், அதன்கண், அப்பதிகத்தை ஓதுபவர் எய்தும் பயனையும் அவர் குறிப்பதனால் அதனைப் பயனுதலிய திருப்பாட்டென்பதும் உண்டு. அது திருப்பதிகத்தை முடித்து நிற்பது பற்றித் திருக்கடைக்காப்பு என்று பெரிதும் பலராலும் கூறப்படும். இத்திருக்கடைக்காப்பில் திருஞானசம்பந்தர் தம்மைச் சீகாழிப் பதிக்கு உரியவரென்றும், தாம் மறையவர் மரபில் கவுணியர் குடியிற் பிறந்தவரென்றும் குறிக்கின்றார். இவர் காலத்தே சீகாழியில் வாழ்ந்த வேதியர்கட்கு இக்கவுணியர்குடி தலைமை பெற்றுச் சிறந்து விளங்கிற்று என்று இவர் திருப்பதிகத் திருக்கடைக்காப்புச் செய்யுட் களால்1 அறிகின்றோம்; “புகலிந்நகர்பேணும், தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்”2 என்றும், “நற்றமிழ் ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன்”3 என்றும், “கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம்பந்தன்”4 என்றும், “கவுணியர் குலபதி காழியர் கோன்”5 என்றும் வருவன காண்க. ஞானசம்பந்தர் உமையம்மையளித்த ஞானப்பால் உண்டு சிவஞானம் கைவரப் பெற்றவரென்பது வரலாறு. பொற்கிண்ணத்தில் ஞானப்பாலைப் பெய்து தம்மை உண்பித்து இறைவன் ஆட்கொண்ட நிகழ்ச்சியை, அவரே, “போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத், தாதையார் முனிவுறத் தாதன் எனை ஆண்டவன்”6 என்று குறித்திருப்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. இதனால் திரு ஞானசம்பந்தர் சிவஞான சம்பந்தரென்பது ஒருதலை. “கொய்ம்மா மலர்ச்சோலைக் கொச்சைக்கு இறைவன் சிவஞானசம்பந்தன்”7 என்று இக்குறிப்பையும் அவர் காட்டியருளுவது காணத்தக்கது. இத்தகைய சிவ ஞானப்பேறு பிறரெவரும் பெறற்கு அரிதென்பது உலகம் அறிந்த செய்தி. இவ்வண்ணம் பெறலரும் பேறாகிய சிவஞானப்பேற்றால் பெருமைமிக்க ஞானசம்பந்தர், அக்காலத்து நிலவிய கலைஞானம் பலவும் நிரம்பப்பெற்றிருந்தனர். கற்றுவல்ல பெரியோர் பலருடைய கேள்வியும் சூழ்நிலையும் அவர்க்குக் கிடைத்திருக்கின்றன. ஞானசம் பந்தர் “தன்னொளி மிக்குயர்ந்த தமிழ் ஞானசம்பந்தன்”8 என்பன போன்ற தொடர்களால் தம்மைத் தமிழ்க்கே உரியரெனக் கூறுகின்றாராயினும், வடமொழி நான் மறையிலும் தாம் மிக்க வன்மையுடையரென்றும், அம்மறையினும் தமக்கு நீங்காக் கிழமை யுண்டென்றும் நாம் அறிய, “நார்மலிந் தோங்கும் நான்மறை ஞானசம்பந்தன்” எனவும், “அங்கம் நீண்ட மறைகள் வல்ல அணிகொள் ஞானசம்பந்தன் ”1 எனவும் பல திருப்பதிகங்களிற் குறித்துரைக்கின்றார். இறைவன் திருவருளாற் பெற்ற சிவஞானத்தால், செயற்கையாற் பெறப்படும் தமிழ் வடமொழிகளின் கலைஞானமும் ஒருங்கு கைவரப் பெற்ற திருஞானசம்பந்தர், தம்முடைய ஞானத்தின் சிறப்பை, “ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்”2 “பிரமாபுரத்து மறைஞான ஞானமுனிவன்”3 என்றும் பல திருப்பதிகங்களிற் குறிக்கின்றார். இவ்வண்ணம் கலைஞானமும் உண்மை ஞானமாகிய இயல் ஞானமும் சிறக்கப்பெற்றிருப்பதை நுணுக்கிக் கண்டதிருத் தொண்டர் புராண முடையார், “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனையற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம், உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம், தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார்”4 என்று கூறுவதும், ஞானசம் பந்தர் தாமே தம்மைச் “சிவஞானசம்பந்தன்”5 என்றும், “மறை சேர்வருங் கலைஞான சம்பந்தன்”6 என்றும் கூறுவதும் ஒப்பு நோக்குவார்க்குச் சேக்கிழார் கூறியது மிக்க பொருத்தமாக இருப்பது இன்பந்தருவதொன்று. பதிகம் பாடிய காரணம் இவ்வண்ணம் பல்வகை ஞானங்களால் உயர்ந்த திருஞான சம்பந்தர் தாம் தமிழில் திருப்பதிகங்கள் பாடுதற்குரிய காரணத்தையும் ஓரளவு விளங்கக் கூறியுள்ளார். “ஞாலம் மிக்க தண்டமிழால் ஞான சம்பந்தன் சொன்ன கோலம் மிக்க மாலை”7 என்றும், “கழுமலநகர்ப், பழுதில் இறை யெழுதுமொழி தமிழ்விரகன்”8 என்றும் கூறுவன, தமிழ் எழுதாமொழியாகாது எழுதுமொழியென்பதும், எளிதில் மக்கள் உள்ளத்தைக் கசிவிக்கும் இயல்புடைய தென்பதும், இயல் பாகவே தன்பால் இன்பம் ஊற விளங்குவதென்பதும், இம்மொழியே நாட்டில் மேன்மை மிக்கு விளங்கிற் றென்பதும், அதன்கண் தமக்கு வன்மை மிக உண்டென்பதும் வற்புறுத்தி, ஞானசம்பந்தர், தமிழால் தம்முடைய திருப்பதிகங்களைப் பாடுதற் குற்ற காரணத்தைப் புலப்படுத்தியுள்ளனர். பொருளாராய்ச்சி இங்ஙனம் இனிய தமிழால் திருப்பதிகங்கள் பாடலுற்ற திருஞான சம்பந்தர், அத்திருப்பதிகங்களைப் பொதுவாகச் “செந்தமிழ்”1 “ஒண்டமிழ்”2 “விலையுடைய அருந்தமிழ்”3 “இன்தமிழ்”4 “பூந்தமிழ்”5 என்று கூறுவாராயினும், அவற்றின் சிறப்பும் விளங்க, “திருநெறிய தமிழ்”6 “அருள்மாலைத் தமிழ்”7 “மறையிலங்கு தமிழ்”8 “தவம் மல்குதமிழ்”9 “மறை வளரும் தமிழ் ”10 “பொய்யிலிமாலை”11 “அளிதருபாடல்”12 என எடுத்தோதுகின்றார். சில திருப்பதிகங் கட்குத் தாமே பெயர் கொடுத்து “பல்பெயர்ப்பத்து”13 “இன்னிசை”14 “ஏழிசை மாலை”15 “பூம்பாவைப் பாட்டு”16 “பாசுரம்”17 என்று இயம்பு கின்றார். இப்பதிகங்களை ஒதும் முறையையும் ஓதியவழி எய்தக்கூடிய பயன்களையும் பதிகந்தோறும் திருக்கடைக்காப்புச் செய்யுளில்- தவறாமல் கூறியுள்ளார். “காழிநாதன் வேதியன் ஞானசம்பந்தன் வாய்நவிற்றிய தமிழ்மாலை, ஆதரித்திசை கற்றுவல்லார்சொலக் கேட்டு உகந்தவர்தம்மை வாதியாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே”18 எனவும் கூறுகின்றார். இனி, அந்தணர் முதலிய நால்வகை மரபினருக்கும் தனித்தனி மாலை கூறுவது தமிழ் நூல்களின் இயல்பு. அவ்வகையில் அந்த ணருக்குத் தாமரைப்பூவை மாலையாகக் கூறுவர். திருஞான சம்பந்தர் அந்தணராதற்கேற்பத்தாம் தாமரைப்பூ மாலை அணிவது இயல் பென்பதை, “கமலத் தார்மிகுந்த வரை மார்பன் சம்பந்தன்”19 என்று குறித்துள்ளார். உட்கோள் திருஞானசம்பந்தர் சிவபெருமான் திருவடிக்கே ஒன்றிய அன்புடையராய் அவர் திருவடியல்லது பிறிது நினையாத கடைப்பிடி யுடையவராய் இருத்தலால், “கைச்சிறுமறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை ஞானசம்பந்தன்”1 என எடுத்துக் கூறுவதோடு, “நின்றியூரில் உறையும் இறையல்லது எனது உள்ளம் உணராது”2 “ஏகம் பத்து உறைவானையல்லாது உள்காது என் உள்ளமே”3 “உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின், ஒண்மலர் அடியலால் உரையாது என் நா”4 எனப் பல திருப்பதிகங் களில் அக் கருத்தை வற்புறுத்துகின்றார். இறைவன் இயல்பு கூறல் இனி, ஞானசம்பந்தர் இறைவனைப்பற்றிக் கூறுவன அவர் காலத்துக் கடவுட் கொள்கையைக் காட்டுவனவாம். மணிமேகலை யாசிரியர் காலத்தில் தமிழ் நாட்டில் நிலவிய சமயங்களுள் சைவமும் ஒன்று. மணிமேகலையோடு பேசிய சைவ வாதி, தன் கடவுட் கொள்கையைக் கூறுமிடத்து. “இருசுட ரோடுஇய மானன்ஐம் பூதம் என்று எட்டுவகை யுயிரும் யாக்கையு மாய்க் கட்டி நிற்போனும் கலையுருவி னோனும் படைத்து விளையாடும் பண்பி னோனும் துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும் தன்னில் வேறுதான் ஒன்றி லோனும் அன்னோன் இறைவ னாகும்என்று உரைத்தனன்;”5 எனவே. இக்கொள்கை திருஞானசம்பந்தர்க்கு முன்பே தமிழ் நாட்டில் நிலவிய சைவக்கொள்கையாதலை நன்கறியலாம். அதனை ஞானசம்பந்தர் பல திருப்பாட்டுக்களில் வற்புறுத்துகின்றார். சுடர் இரண்டு, இயமானன் ஒன்று, பூதம் ஐந்து ஆக எட்டு வடிவாக இறைவன் உளன் என்ற கொள்கையை, “மண்ணொடு நீர் அனல் கனலோடு ஆகாயம் மதியிரவி, எண்ணில் வரும் இயமானன் இகபர மும் எண்டிசையும், பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்”1 என்று எடுத்தோதுகின்றார். “இயமானன்” எனச் சைவவாதி கூறியது. உயிரையே; வேள்வித் தலைவனையன்று என்றற்கு ஈண்டுக் காட்டியனவே சான்றாதல் காண்க. “உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போன்” எனச் சைவவாதி கூறியது, செய்த வினைக்கு ஏற்ப இறைவன் உயிர்கட்கு உடல் கருவிகளைப் படைத்துக் கூட்டி நிறுத்து வன் என்னும் சைவக் கருத்தாகும். இதனை ஞானசம்பந்தர், “உடல் வரை இன்னுயிர் வாழ்க்கையாய ஒருவன்’2 எனக் குறிக்கின்றார். “கலையுருவினோன்” என்பது, “கலையவன் மறையவன் காற்றொடு தீ மலையவன், விண்ணொடு மண்ணுமவன்”3 என்பதனால் வற்புறுத்தப்படுகிறது. “பேணுமூன்று உருவாகிப் பேருலகம் படைத்தளிக்கும் பெருமான்”4 என்பது “படைத்து விளையாடும் பண்பினேன்” என்றதையும், “இருநிலனது புனலிடை மடிதர எரிபுக எரியது மிகுபெருவளி யினில் அவிதரவளிகெட வியனிடை முழுவதுகெட, இருவர்கள் உடல் பொறையொடுதிரி எழில்உரு உடையவன்”5 என்பது “துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும்” என்றதையும். “விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும் மூவராய முதல் ஒருவன்”6 எனவும், “மூவரும் இவரென்னவும் முதல்வரும்- இவரென்னவும், மேவரும் பொருளா யினார்”7 எனவும், வருவன “தன்னின் வேறு தான் ஒன்றில்லோ னும்”என்றதையும் நிறுவுகின்றன. இத்தகைய முதல்வன் உயிர்களிடத்தில் உயிர்க்குயிராய் உடனாய் நின்று, காண்பன கண்டும் காட்டியும் உதவுகின்றான் என்பாராய், “உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரை சேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்காங்கே நின்றான்”8 என்றும், “புவி முதல் ஐம்பூதமாய்ப் புலனைந்தாய் நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய், அவையவைசேர் பயனுருவாய் அல்லவுருவாய் நின்றான்”1 என்றும் கூறுகின்றார். பயனுருவாயும் அல்லவுருவாயும் நிற்கின்றான் ஆயினும் இறைவன் இவற்றின் வேறாயும் உடனாயும் இருப்பன் எப்தைப் “பல்கதிரோன் மதிபார் எற்றும்நீர் தீக்காலும், மேலைவிண் இயமானனோடு மற்றுமாதோ பல்லுயிராய் மாலயனும் மறைகள் முற்றுமாகி வேறுமானான்”2 எனவும், “ஈறாய் முதலொன்றாய் இருபெண்ணான் குணமூன்றாய்.. வேறாய் உடனானான்”3 எனவும் பல பாட்டுக்களில் விதந்தோதிக் காட்டுகின்றார். இங்கே கூறிய உடனாதலாகிய உடனிலையையே பின்னர்ப் போந்த சித்தாந்த சைவநூல் உரைகள் சுத்தாத்துவித நிலை எனக் கூறுவன வாயின. இவ்வாறு தாம் கூறிப்போந்த இறைவனை, உண்டா இல்லையா என ஆராயும் ஆராய்ச்சி இனி வேண்டா; அவன் என்றுமுள செம் பொருள்; அவனை வழிபடுவதே செயற்பாலது என மக்களுக்கு ஞானசம்பந்தர் வற்புறுத்திக் கூறியுள்ளார். அவனது உண்மையினை ஆராய்ந்து காண்பதென்பது மக்கள் அறிவெல்லைக்கு இயலாதது என்று கருத்துப்பட, “உம்பராலும் உலகின்னவராலும், தம்பெருமை அளத்தற் கரியான்”4 என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறு, இறைவன், அரிய காட்சியனாயினும், ஆளப்படு வாரை அவன் ஆட்கொள்ளும் முறையும், அவர்கட்கு அருளும் வண்ணமும், பிறவும் அளவிறந்தனவாகும். அதனால் அவரவரும் தாம்தாம் அவன் திருவடிகளை வணங்கி வினைநீக்கமும் வீடுபேறுமே வேண்டற் பாலராவர் என்பது ஞானசம்பந்தர் நல்கும் நல்லுரை. “ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதிமாண்பும், கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா, கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை, தாட்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்க தக்கார்”5 என அவர் கூறுவது ஈண்டு நோக்கத் தகுவதாம். சுருங்கச்சொன்னால், ஒவ்வொரு வரும் தாந்தாம் செய்த பிழைக்கு வருந்தி மனம் திருந்தி வழிபடல் வேண்டும்; வழிபடுவோர்க்கு அவர் அருள் செய்வார் என்பாராய், “தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே, ஆவா என்று அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்”1 என்றும் அறிவுறுத்துகின்றார். இறைவனுடைய திருப்பெயர்களும் பல; அவன் உயிர்களை ஆட்கொள்ளற்குக் கொள்ளும் திருவுருவும் பல. “நானாவித வுருவால் நமை ஆள்வான்”2 என அவர் கூறுவது காண்க. அதனால், அவனுடைய பெயரும் உருவும் இதுவென வரையறுத்தோதுதல் அருமையாம்; ஆயினும் அவனது உரு “நீதி” யெனல் அமையும் என்பாராய், “இன்னவுரு இன்னநிறம் என்று அறிவதேல் அரிது, நீதி பலவும். தன்னவுருவாம் என மிகுத்த தவன்”3 என்று விளக்குகின்றார். உயிர்களின் இயல்பு இவ்வாறு, கடவுட் கொள்கை நலன்களை ஆங்காங்குக் குறித்துச் செல்லும் திருஞானசம்பந்தர், தாம் மேற்கொண்டுள்ள சில அரிய கொள்கைகளையும் நாம் அறியக் குறித்துள்ளார். உலகில் வாழும் மக்களுடைய நெஞ்சம் பலவகையான நினைப்புக்கட்கு உறைவிடம். நெஞ்சம் புண்ணாமாறு நெடிது நினைந்து வருந்தித் துஞ்சுவது மாந்தர் தொழிலாகும். ஆகவே, நெஞ்சத்தை நினைப்புக் கட்கு இரையாக்காது, ஒரு நெறியில் நிறுத்தி வாழ்வது இன்றியமை யாது என்பார், “நினைப் பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின்று அயராதே, மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம் வந்து அடையாமை’4 என்று குறிக்கின்றார். மேலும் பிறப்புத்துன்ப வடிவினது; பிறந்தவர் துன்ப நீக்கமே வேண்டற் பாலர். அது துறவு மேற்கொண்டவர்க்கே எளிதில் கை கூடப்பெறுவது என்ற கொள்கை நாட்டில் அந்நாளில் நன்கு பரவி யிருந்தது. அதுகண்ட ஞானசம்பந்தர், “துறவும் ஒரு நன்னெறியே ; ஆயினும், அதனினும் எளியதும் நலந்தருவதுமாகிய திருநெறியொன்று உண்டு; அஃது, இறைவனை நாளும் இடையறாது வழிபட்டு வாழ்வது என்று ஞான சம்பந்தர் தெருட்டுவாராய், “பிறவியால் வருவன கேடுள, ஆதலால் பெரிய இன்பத், துறவியார்க் கல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே, மறவல்நீ மார்க்கமே நண்ணினாய், தீர்த்தநீர் மல்குசென்னி, அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே”1 என்று கூறுகின்றார். “காமஞ்சான்ற கடைக் கோட்காலை, ஏமாஞ்சான்ற மக்களொடு துவன்றி”2 அறம் புரிந்த நல்லோர்க்கே துறவு நன்கு கைகூடப் பெறுவதெனத் தொல்காப்பியரும், “ஓடி உய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே”3 எனச் சங்கச் சான்றோ ரொருவரும் கூற, வழிவழியாக வந்த அப்பழந்தமிழ்க் கொள்கையை உடன்பட்டு, “பெண்டிர் மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை, விண்டு பண்டே வாழமாட்டேன்”4 என்று உரைக்கின்றார். இவ்வாறு துறவுபற்றிக் கூறினாராயினும், துறவு பூண்டுவாழும் பெரியோர்களைப்பாராட்டி, “ஐம்புலன்கள் செற்று மோனிகளாய் முனிச் செல்வர் தனித்திருந்து தவம் புரியும் முதுகுன்றமே”5 எனவும், “அகன மர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர் கோயில்”6 எனவும் கூறுவது குறிக்கத்தக்கது. அறவுரை வழங்கல் இனி, தாம் வற்புறுத்தும் வழிபாட்டையும் ஒருமையுணர்வோடு உலகியற் சிற்றின்பத்தை உள்ளங்கொள்ளாது செய்தல் வேண்டு மென்பாராய், “செப்ப நெஞ்சே நெறிகொள்; சிற்றின்பம், துய்ப்பன் என்னாது அருளே துணையாக”7 என்றும், “பத்திப்பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள்வாய்ப்பாலே போகாமே காவாப் பகையறுவகை நினையா”8 என்றும் கூறுவர். வாழ்க்கையின் பயன் இறைவன் திரு வடியை வழிபட்டு வாழ்வதே எனவும், அதனைக் காலையும் மாலையும் சேய்வது மக்கட்குக் கடன் எனவும் வற்புறுத்துகின்றார். வையத்தில் நன்னெறிக்கண் வாழ்வார்க்கும், வாழ்க்கையின் இயல்பாகிய துன்பப்பயன் இல்லாதுபோதல் இல்லை. இப்பிறவித் துன்பமும், தம்மாலும் பிறவுயிர்களாலும் வருமாயின் அதனை ஓரளவு முன்னறிந்து காத்தல் மக்கட்கு இயலுவதொன்று; நாள் கோள் முதலிய தெய்வத்தால் வருவன அவ்வாறு காக்கப்படுவன அல்ல; ஆயினும், ஒருமை வழிபாடுடையார்க்கு அவையும் இல்லாதொழியும் எனத் திருஞானசம்பந்தர் தெருட்டலுற்று, “ஆதிப்பிரான் அடிகள் அடைந் தேத்தவே, கோளும் நாளவை போயறும்”1 எனவும், “நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார், கோளும் நாளுந் தீயவேனும் நான்காம் குறிக்கொண்மினே”2 எனவும் ஊக்குகின்றார். ஒரு நெறிய மனம் வைத்து ஆண்டவனை வழிபடுவதை மேற் கொண்டு ஒழுகுபவர்க்கு இம்மைப் பயன்களேயன்றி வீடுபேற்றுக்கு இன்றியமையாத திருவருள் ஞானமும் அவனால் நல்கப்படும்3 என்றும், அவன் ஞானமே வடிவாக உடையவன் 4 என்றும் அறிவுறுத்தியுள்ளார். வழிபடுவோர்க்கு அவன் இம்மைப் பயன்களை நல்குவனென்பதை, “சங்கரனார் தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவர்”5 எனவும், “மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும், எண்ணின் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை”6 எனவும் கூறுதல் காண்க. இன்ப நாட்டமும் அதனைப்பெறும் முயற்சியுமேயுடைய உயிர்கட்குத் தடைசெய்வன அவ்வுயிர்கள் செய்யும் வினைகளே என்பது சமய தத்துவ நூல்கள் கூறும் கொள்கை. இவ்வினைகளை, உயிர்கள் நுகர்ந்து கழித்தாலன்றி அவை நீங்கா; வினையாகிய பகையை வெல்லும் பொருள் யாதும் இல்லை யென்பது சமணம், பௌத்தம் மீமாஞ்சை முதலிய சமயங்களின் முடிபு. ஞானசம்பந்தர், அம்முடிபை மறுத்து, இறைவழிபாட்டால் இவ்வினைப்பகையும் கெடும்; இறைவன் திருவருள் ஒளியின்முன் வினையாகிய இருள் நிலையின்றிக் கெட் டொழியும் என்று தெருட்டுகின்றார். இவ்வினைகள் உளவாதற்குக் காரணம் உயிர்களை அனாதியே பற்றி நிற்கும் மலம் என்பது சைவ சமய அறிவு நூன்முடிபு. மலத்தின் தொடர்பு அறுவதே வினைக்கட்டினின்றும் வீடுபெறுவதற்கு வழியாகும், இம்மலத்தின் மறைப்பு, இறைவன் வழிபாட்டால் நீங்குமெனத் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துகின்றார். இம்மலகன் மங்களைப் பாசம் என்பது சைவ நூல் வழக்கு. அதனையும் ஞானசம்பந்தர் மேற்கொண்டு. “ஈசன் முதுகுன்றை நேகமாகி நீர், வாசமலர் தூவப் பாசவினை போமே”1 எனவும், “பாசமறுப்பீர்காள், ஈசன் அணியாரூர், வாசமலர் தூவ, நேசமாகுமே”2 எனவும் கூறுகின்றார். வரலாற்றுக் குறிப்புக்கள் இனி, ஞானசம்பந்தர் காலத்தில் நாட்டில் இறைவன் அருட் செயலை விளக்கும் புராண வரலாறுகள் பல நிலவிய குறிப்பை ஆங்காங்குக் குறித்துள்ளார். கணபதியையும்3 முருகனையும்4 பற்றிய வரலாறுகளும், உபமன்னியுவுக்குப் பாற்கடல் ஈந்ததும்,5 குபேரனுக்குத் தோழமை தந்ததும்6 சலந்தரன் தலையரிந்ததும்,7 தேவர்பொருட்டு நஞ்சுண்டதும்,8 தக்கனது வேள்வியை அழித்ததும், 9தாருகவனத்து முனிவர்விட்ட யானையைத் தோலுரித்ததும்,10 அவர் மகளிர் பால் பலி ஏற்றதும், திருமாலுக்குச் சக்கரம் அளித்ததும்,11 திரிபுரம் எரித்ததும்,12 திருமாலும் பிரமனும் இறைவன் அடிமுடி தேடியதும்,13 பிரமன் தலையைக் கொய்ததும்,14 மார்க்கண்டர் பொருட்டுக் கூற்றுவனை அழித்ததும்,15 காமனை யெரித்ததும் 16 ஆகிய வரலாறு களும் குறிக்கப்படுகின்றன. இராமாயண வரலாற்றிற் காணப்படும், இராமன்,1 இராவணன்,2 வாலி,3 சாம்புவன்,4 சம்பாதி, சடாயு5 முதிலியோர் இறைவனை வழிபட்ட செய்திகளும், பாரதத்தில் வரும் அருச்சுனன் வழிப்பட்டுப் பாசுபதம் பெற்ற செய்தியும்,6 ஞானசம்பந்தரால் குறிக்கப்படுகின்றன. இவற்றிடையே இராணவனுடன் சடாயுவும் சம்பாதியும் போர் செய்ததும்,7 இராணவன் வாலியாற் கட்டுண்டதும்,8 ஞானசம் பந்தரால் எடுத்தோதப்படுகின்றன. ஆங்காங்குச் சென்றபோது அவ்வவ்விடங்களில் அக்காலத்து வழங்கிய தல வரலாறுகளையும் ஞானசம்பந்தர் குறித்துள்ளார். திருவானைக்காவில். ஆனை வழிபட்டதும்9 திருவெண்காட்டில் வெள்ளை யானை வழிபட்டதும்,10 மயேந்திரப் பள்ளியில் ஞாயிறும் திங்களும் வழிபட்டதும்,11 பிறவும் அவரால் குறிக்கப்படு வனவாகும். விலங்குகளேயன்றி வேந்தருட் பலரும் தேவர்களும் இறைவனை வழிபட்டுப் பேறுபெற்ற செய்திகள் பல ஞானசம்பந்தரால் கூறப்படு கின்றன. சீகாழியிலும் பிற விடங்களிலும் பிரமன் வழிபட்ட செய்தியும்,12 திருக்கண்ணார் கோயிலில் இந்திரன் வழிபட்டதும்,13 சீகாழி வெள்ளத்தில் மிதந்தோங்கிய செய்தியும்,14 கண்ணன் மலையைக் குடையாகத் தாங்கிய செய்தியும்,15 பகீரதன் கங்கையைக் கொணர்ந்த செய்தியும்,16 நளன் திருநள்ளாற்றில்வழிபட்ட செய்தியும்,17 நந்தன் என்பான் சீகாழியில் இருந்து அரசாண்ட செய்தியும்,18 திருப்பாதிரிப் புலியூரில் முடக்கான் முயலகன் அருள் பெற்றதும்,1 கோச்செங்கட் சோழனது முன்னைப் பிறப்பு வரலாறும்,2 அவன் திருவானைக்கா, 3திருவம்பர்,4 திருவைகா,5 திருத்தண்டலை நீணெறி,6 திருமூக்கீச் சுரம்7 என்ற இடங்களில் திருப்பணி செய்ததும், இவ்வாறே தமிழ் வேந்தர் மூவரும், திருப்பூவணம்,8 திருமூக்கீச்சுரம்9 முதலிய இடங் களில் பணி செய்து வழிபட்ட செய்தியும், திருவாலங்காட்டுப் பழையனூர் நீலி கதையும்,10 இறைவன் ஆலின் கீழிருந்து அறமுரைத்த வரலாறும்,11 இறைவன் கூடலில் தமிழ் ஆய்ந்ததும்,12 விருத்தகுமார பாலனான திருவிளையாடல் புரிந்ததும்13 பிறவும் குறிக்கப்படுகின்றன. அடியார் வரலாறுகள் இனி, சிவனடியார்களுட் சிலருடைய வரலாற்றுக் குறிப்புக்கள் பல திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களில் காணப்படுகின்றன என முன்பே கூறினோம். அவருள் கண்ணப்பர் கண்ணிடந் தப்பியதும்,14 தந்தையைத் தாளற வீசிச் சண்டேசுரர் சண்டீசபதம் பெற்றதும்,15 குலச்சிறையார் அடியவர்களைப் பேணியதும்,16 சிறுத்தொண்டர் செங்காட்டங்குடியிலிருந்து சிவ வழிபாடு செய்ததும்,17 திருநீலகண்ட யாழ்ப்பணர் இசைபாடியதும்,18 நமிநந்தியடிகளும்,19 திரு நீலநக்கர்,20 மங்கையர்க்கரசியார்,21 முருகநாயனார்22 முதலியோர் வழிபட்டதும் பிறவும் ஆங்காங்குக் குறிக்கப்படுகின்றன. இவ்வண்ணம், தம் காலத்தே தாம் கேட்டனவும் கண்டனவு மாகிய நிகழ்ச்சிகளைக் குறித்துச் செல்லும் திருஞானசம்பந்தர், தம்முடைய வரலாற்றுக் குறிப்புக்களையும் இடையிடையே ஆங்காங்குக் குறித்துள்ளார். தாம் இளமையில் ஞானப்பால் உண்ட குறிப்பைத் திருக்கழுமலத் திருப்பதிகத்திலும்,1 தம்முடைய தந்தை தம்மைத் தனது தோண்மேல் எடுத்துச் செல்லத் தாம் அவர் தோள்மேல் இருந்தபடியே இறைவனைப்பாடிப் பரவிய குறிப்பைத் திருநனிபள்ளித் திருப்பதிகத்திலும்,2 தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டுத் தாம் இறைவனை வேண்டிப் பொன் பெற்றுத் தந்த குறிப்பைத் திருவாவடுதுறைத் திருப்பதிகத்திலும்3 படிக்காசு பெற்ற குறிப்பைத் திருவீழிமிழலைத் திருப்பதிகத்திலும்,4 மறைக்காட்டில் கதவடைக்கப்பாடிய குறிப்பைத் திருமறைக்காட்டுத் திருப்பதிகத் திலும்,5 சமணர் தம் திருமடத்துக்கிட்ட தீயை பாண்டியனைப் பற்றச் செய்த குறிப்பைத் திருவாலவாய்த் திருப்பதிகத்திலும்,6 திருநீற்றால் பாண்டியன் சுரந்தீர்த்த குறிப்பு திருநீற்றுப் பதிகத்திலும்,7 கோளறு பதிகத்திலும்,8 சமணரொடுவாது செய்த குறிப்பைத் திருவாலவாய்த் திருப்பதிகங்களிலும்,9 ஆற்றில் ஏடு செலுத்திய குறிப்பு, திருப்பாசுரப்பதிகத்திலும்,10 திருக்கழுமலப் பதிகத்திலும்,11 ஓடம்விட்ட செய்தியைத் திருக்கொள்ளம்பூதூர்த் திருப்பதிகத்திலும்,12 ஆண்பனை பெண்பனையான நிகழ்ச்சியைத் திருவோத்தூர்த் திருப்பதிகத்திலும்,13 முத்திவேண்டியதைத் திருநல்லூர்ப் பெருமணத் திருப்பதிகத்திலும்,14 காட்டியுள்ளனர். பிற சமயக் குறிப்புக்கள் திருஞானசம்பந்தர் காலத்தில் வேத வழக்கொடுபட்ட வைதிக நெறியை மேற்கொள்ளாத புத்தர், சாக்கியர், தேரர், சமணர் முதலிய சமயத்தவர்கள் தமிழகத்தில் இருந்து வந்தனர். ஞானசம்பந்தர் அவர்களுடைய நடைஉடை ஒழுக்கம் முதலியவற்றில் அருவருப் புற்றுத் தாம் படிய திருப்பதிகங்களில் அவற்றை மறுத்தும், வெறுத்தும், வெகுண்டும், கடிந்தும், எள்ளியும், இகழ்ந்தும் பாடியுள்ளார்.1 இதைக் கண்ட ஆராய்ச்சியாளர், “ஞானசம்பந்தர் வரலாறு, மதுரையில் சமணர்களைக் காண்பதற்கு முன் அவர் வேறு எவ்விடத்தும் அவர்களைக் கண்டதாகக் கூறுகின்றிலது. ஆயினும், அவருடைய திருப்பதிகங்கள் ஒவ்வொன்றிலும் சமண புத்தர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுவதால், மதுரை நிகழ்ச்சிக்கு முன்பே அவர் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. மதுரைக்கு வருமாறு அழைப்பு வந்ததும், அவர் தடையின்றிச் செல்ல உடன்பட்டதற்குக் காரணம், அவ்வேற்றுச் சமயத்தவர்களை வேரோடு தொலைப்பதற்குக் காலமும் இடமும் கருதியிருந் தமையேயாகும்”2 என்று கூறுகின்றனர். இனி, ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவருடைய உடை, நடை, உரை, ஒழுகலாறு முதலியன குறித்துப் பாடியவற்றை நோக்குமிடத்து, அவர் வேற்றுச் சமயத்தவர்பால் தீராத வெம்மையுற்றுப் பாடுகின்றா ரென்பது தெளிவாகிறது. சமணர் புத்தர் முதலிய வேற்றுச் சமயத்தவர் நூல்கள் அருளையே பெரும் பொருளாகக் கொண்டு நிற்கின்றன. அங்ஙனம், அந்த அருளையும் சிறந்த பொருளாகக் கொண்ட நெறியினரான ஞானசம்பந்தர் அவர்களைப் பெரிதும் வெகுண்டு பேசு வானேன் என்பது உடனடியாக நம் உள்ளத்தில் எழும் கேள்வியாகும். இதற்கு விடை காணலுற்ற பேராசிரியர் திரு. P. சுந்தரம் பிள்ளை அவர்கள்; “ஞானசம்பந்தர் முதலிய அருளாளர் உள்ளத்தில் சமண புத்தர்களாகிய பிற சமயத்தவர்பால் மாற்றருஞ்சீற்ற முண்டானதற்குக் காரணம் ஒன்று இருத்தல் வேண்டும். எனினும், இத்துணை நெடுங் காலம் கழிந்த பின்பு நாம் அதனைக் காண்பதென்பது அரியதொரு செயலாகும். புத்த சமயம், அசோக மன்னனது ஆதரவால் வட நாட்டிலும், அவர்க்குப் பின்வந்த வல்லாளர் சிலருடைய முயற்சியால், தென்னாட்டிலும் பரவி நிலைபேறு பெற்றுப் பின்னர் நாளடைவில் சீர்குலைந்து போயிருக்கலாம். அரசியற் கட்சிகள் போலச் சமயங்களும் அரசியல் வலிபெறும் வரையில் மக்கட்கு நல்லனவாகத் தோன்றும்; அவ்வலி பெற்றதும், அவை தம்முடைய நலம் குன்றிச் சிரழிவது உலகியலில் இயல்பு. கௌதமருடைய சமயமும் இவ்வாற் றால் சீரழிந்து போயிற்று எனலாம். ஆயினும், அவரது புத்த சமயமும் பிறவுமாகிய வேறுச் சமயங்களிடத்து ஞானசம்பந்தருக்குத் தீராத செற்றமுண்டானதற்கு அஃது ஒன்று மட்டில் காரணமாக முடியாது. அக்கால நிலையினை நாம் தெளிய அறிந்து கோடற்கு வேண்டிய சான்றுகள் நிரம்பக் கிடைக்காத இக்காலத்தில், அதுபற்றி நாம் பல்வேறு காரணங்களைக் கற்பித்துக் கொள்வது நேரிதன்று. தெளிவும் மெய்ம்மையும் நிறைந்த சான்றுகளால், அக்கால நிலை விளங்கப் புலப்படுமாயின், அது கொண்டு உண்மை தெளிந்து நாம் பெருமகிழ்ச்சி கொள்ளலாம்”1 என்று கூறுகின்றார். ஞானசம்பந்தர் வேற்றுச் சமயத்தவரைக் குறித்து உரைக்கு மிடத்து, அவர்களுடைய தலைவர் பெயர்களைக் குறிக்கின்றார். “சந்து சேனனும் இந்து சேனனும் தருமசேனனும் கருமை சேர், கந்து சேனனும் கனகசேனனும் முதலதாகிய பெயர் கொளா”2 எனவும், “கன நந்தியும் புட்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா, சுனக நந்தியும் குனக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா, அனக நந்தியர்”3 எனவும் கூறுகின்றார். அவர்கள் மதுரைக்கு அண்மை யிலுள்ள ஆனைமலை முதலிய இடங்களில் வாழ்த்தனர்4 எனவும், நீறணிந்த சைவர் முதலியோர்வரின், அவர் மேனிபட்ட காற்றுத் தீண்டினாலும் அவர்கள் அது பொறாது சினந்து கொண்டு ஓடுவர்1 எனவும், வேதவேள்விகளை நிந்திப்பர்2 எனவும், செந்தமிழ் ஆரியம் என்ற இவை அவர்கட்குத் தெரியாது3 எனவும், பாகதமே அவர் மொழி4 யெனவும், கடுநோன் புடையர்5 எனவும் பரம்பொருள் உண்மை பற்றி உரை நிகழுங்கால், “அத்தகுபொருள் உண்டும் இல்லையும் என்று” சொல்லுவர்6 எனவும் கூறுகின்றார். புத்தர் களுடைய பிடகாகமத்தையும் ஞானசம்பந்தர் குறிக்கின்றார்.7 சந்துசேனன் இந்துசேனன் என ஞானசம்பந்தரால் குறிக்கப் படுபவர் சைனர் என்றும், கனகநந்தி, புட்பநந்தி முதலியோர் புத்த ரென்றும் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கை யுடையார்8 கூறுகின்றனர். அவர்கள், “ஆனைமலை நாகமலை என்ற மலைகளில் கற்குகைள் உள்ளன. இவற்றிற்கு அருகிலுள்ள பசுமலையில் கற்குகைகள் காணப்படவில்லை: நாகமலைக் குகையில் மூன்று கல்வெட்டுக்கள்9 உள்ளன; அவை ஆந்தை மகன் வேள்வேண்குவிரான், பொதிகைக் குவிரான் என வருகின்றன; இவற்றின் எழுத்தமைதி காணின், இக் கல்வெட்டின் காலம் கி.மு, இரண்டல்லது மூன்றாவது நூற்றாண் டாகும்” என்றும் அவர்கள் புத்தர்கள்” என்றும் உரைக்கின்றனர். ஞானசம் பந்தர், புத்தர்களைப் போதியார்10 என்றும் வழங்குவர். ஞானசம் பந்தரால் சாக்கியர்11 எனக் கூறப்படுவோர், புத்தருள் ஒருவகையின ராவர். புத்த சமயத்தைக் கண்ட சித்தார்த்தரும் சாக்கியர் மரபைச் சேர்ந்தவர் என அவர் வரலாறு கூறுகிறது. தேரர்12 எனப்படுவோரை வட நூல்கள் ஸ்தவிர வாதிகள் என்று கூறும். இவ்வாறே, சைனர்களை ஞானசம்பந்தர், அங்கதர்1 அமணர், அருகர்,2 ஆகதர்3 ஆரம்பர்4 கவணர்5 குண்டர் 6 சமணர், பிராந்தர்7 எனப் பல பெயர்களால் குறிக்கின்றார். சைனர் தங்கள் முதல்வனை அருகன் என்றலின், அவர்கள் அருகர், ஆருகதர், ஆகதர், ஆதர் எனக் குறிக்கப்படுகின்றனர். எல்லாப் பொருட்களும் அணுவை முதற் காரணமாகக் கோடல்பற்றிச் சமணர் ஆரம்பவாதிகள் எனப்படுதற்கு இயைபுண்மையால், அவர்களை ஞானசம் பந்தர் “ஆரம்பர்” என்று குறிக்கின்றார். ஆருகதர் அநேகாந்த வாதிகளாதலால், அவர்களைப் பிராந்தர் என்று கூறுகின்றார். ஆருகத சமயமுதனூல்கள், பூருவம், அங்கம், பகுசுருதியென மூவகையாய் ஆகமம் என்ற பெயர் கொண்டு நிற்கின்றன; அவற்றுள் பூருவாகமங்கள் மறைந்து போயின; அங்காகமங்களும் பகுசுருதி ஆகமங்களும் கிடைக்கப் பெறுகின்றன. அங்காகமங்களை மேற்கொண்டு நிற்பது பற்றி ஆருகதர் அங்கதர் எனவும் அழைக்கப்பட்டனர்.8 மேலும் அவர் ஆருகதரைக் கவணர் எனக் கூறுவதன் கருத்து விளங்கவில்லை. இனிக் குண்டர் என்பது பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து ஆராய்ச்சித் துறையில் தோன்றிய கட்டுரையொன்று, “அமணராவார் மனை வாழ்க்கையைத் துறந்தவர் என்பதும், குண்டராவார் மனை மாண் புரைக்கும் உள்ளமுடையவராய் இல்லறத்தில் நின்று ஒழுகுவோர் என்பதும் துணிந்து கூறப்படும்” என்றும், “தம் சமயத்தலைவராகிய மகாவீரர் குண்டக் கிராமத்திலிருந்து நிகழ்த்திய மனை வாழ்க்கையில் ஈடுபட்ட சமண் மக்கள் தாம் குண்டக் கிராமத்து அமர்ந்து, தம் சமயத் தலைவர் மேற்கொண்டொழுகிய இல்லறத்தில் நின்றமை பற்றித் தம்மைக் குண்டரெனக் கூறிக் கொண்டிருத்தலும் கூடும்; அல்லது, குண்டக் கிராமத்திற் பிறந்தருளிய பெரியார் வழியைப் பின்பற்றியவர் என்ற கருத்தால் அங்ஙனம் கூறப்பட்டார் என்றலும் கூடும்”1 என்றும் கூறுகின்றது. புத்தம் ஆருகதம் என்ற இரு சமயத்த வருள்ளும் துறவு பூண்டு உயர்ந்த சான்றோரைச் சமணர் என வழங்குப. இச்சமணர் அசோக மன்னனுடைய கல்வெட்டுக் களிலும் 2 குறிக்கப்படும் பழமை யுடையராவர். இவ்வண்ணம் புறச் சமயத்தவர்களேயன்றி அகச் சமயத்தவர் களான பாசுபதரும்3 கபாலிகளும் மாவிரதிகளும் ஞானசம்பந்தர் காலத்தில் இருந்திருக்கின்றனர். திருஞானசம்பந்தர், “காதலாற் சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பைநகர்”4 என்று கூறுகின்றார். அவர் காலத்து வேந்தனான முதல் மகேந்திரவன்மன், தான் எழுதிய மத்த விலாசமென்னும் நாடகத்தில் பாசுபதரோடு காபாலியையும் குறித் துள்ளான்.5 ஞானசம்பந்தரோடு உடன் பயின்ற திருநாவுக்கரசர் மாவிரதிகளையும் குறிக்கின்றார். பிற்காலக் கல்வெட்டுக்களிற் காணப்படும்6 காளாமுக சைவம் ஞானசம்பந்தர் திருப்பதிகங்களிற் குறிக்கப்படவில்லை. காபால சமயம் மத்தவிலாசத்திலும், பிற்காலக்கல் வெட்டுக்களிலும்7 காணப்படுமாயினும், ஞானசம்பந்தரால் தனியே குறிக்கப்படவில்லை. திருமயிலாப்பூரிலுள்ள திருக்கோயிலுக்குக் கபாலீச்சுரம் எனப்படுவது கொண்டும், “கற்றார்கள் ஏத்தும் கபாலீச் சுரம்”8 என்று ஞானசம்பந்தர் சிறப்பித்துப் பாடியிருப்பது நோக்கியும், காபாலிகள் அவர் காலத்தே இருந்தமை நன்கு தெளிவாகிறது. அங்ஙனம் இருக்கவும், அங்கே “உருத்திர பல்கணத் தார்க்கு”1 உணவிடும் நல்விழாவை உயர்த்திப்பாடியவர், காபாலி களைக் குறியாது ஒழிந்ததற்குக் காரணம் தெரிந்திலது. மாவிரதம் என்பது அகச்சமயம் ஆறனுள்2 ஒன்றாகும். இதனை மேற்கொண்டு ஒழுகிய மாவிரதிகளைத் திருநாவுக்கரசர் குறிப்பிடு கின்றார். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் மாவிரதிமடம் ஒன்று தென்னாட்டில் அருப்புக்கோட்டைப் பகுதியில் திருச்சுழியலைச் சேர்ந்த பள்ளிமடம் என்ற இடத்தில் இருந்ததாக அங்குள்ள சிவன் கோயில் கல்வெட் டொன்று3 கூறுகிறது. டாக்டர் பந்தர்க்கார் மாவிரதிகளைக் காளாமுகர் என்பர்;4 மோனியர் வில்லியம்ஸ் என்பார் அவர்களைச் சைனர் என்று5 கூறுகின்றனர். மாவிரதிகளுக்குக் காளாமுகர் போலத் தீக்கையும் என்பு மாலை யணிதல் முதலிய சரியைமுறையும் உண்டாதலால், டாக்டர் பந்தர்க்கார் மாவிரதிகளைக் காளாமுகர் என்றும், ஆருகதர்களிடையே, மாவிரதிகள்பால் காணப்படுவது போல, விரதங்கள் காணப்படுவது கண்டு மோனியர் வில்லியம்ஸ் என்பார் அவர்களைச் சைனர் என்றும் பிறழக் கூறிவிட்டனர். இனி, சிவனை வழிபடும் திருநெறியாகிய சைவம், இத் தென்னாட்டில் சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே நிலவிவருவ தொரு தொன்மைச் சமயமாகும். இதற்குச் சைவம் என்பதே பெயரென்பதை, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விளங்கிய மணிமேகலை நூலாசிரியர் குறிப்பால்6 இனிது விளங்குகிறது. அந்நெறியினரான தமிழர் அனை வரும் சைவரேயாவர். வேத வழக்கினை மேற்கொண்டொழுகிய வேதியரும் சிவனை வழிபடு தலால் சைவர் எனப்படுவர். அங்ஙன மிருக்க, திருஞான சம்பந்தர், “காதலாற் சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகர்” 7 என்று குறித்து, அகச்சமயத்தவர் அறுவருள் ஒருதிறத்தினரான பாசுபதரோடு அவர்களைச் சேரவைத்துக் கூறுகின்றார். இதனால், சைவர் என்ற சொல்லால் ஒரு சிலரைச் சுட்டிக் காட்டுகின்றார் ஞானசம்பந்தர் என்பது தெற்றெனத் தெரிகிறது. அவர்கள் யாவர்? முதன் மகேந்திர வன்மன் எழுதிய மத்தவிலாச நாடகத்தாலும் திருநாவுக் கரசர் வழங்கியுள்ள திருப்பதிகங்களாலும் ஞானசம்பந்தர் காலத்தே காபாலிகளும் மாவிரதிகளும் இப்பாசுபதரோடு உடன் இருந்திருக் கின்றனர் என முன்பே கூறினோம். சிவபெருமானுக்குச் சைவன் என்பதும் ஒரு பெயர். “சீருறு தொண்டர் கொண்டடிபோற்றச் செழுமலர் புனலொடு தூபம், தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார்”1 என்பது காண்க. சைவக் கோலம் பூண்டு தலையோட்டில் பலியேற்றுண்டு கோயில்களை இடமாகக்கொண்டு ஒழுகுவர் காபாலிகள். மத்தவிலாசத்திற் காணப்படும் காபாலி திருவேகம் பத்திருக் கோயிலை இடமாகக் கொண்டுள்ளான். மாவிரதிகளும் “தீக்கை பெற்று எலும்புமாலையணிதல் முதலிய சரியைகளை” மேற்கொண்டவ ரெனச் சிவஞானபாடியம் கூறுகிறது. இவ் விருத்திறத்தார்பாலும் சைவக்கோலம் சிறந்து தோன்றுவது கொண்டு இவ்விரு திறத்தோரும் ஞானசம்பந்தரால் சைவர் எனக் குறிக்கப்பட்டனர் எனக் கோடல் நேரிது. ஏனைக் காளாமுகம், வாமம், பைரவம், ஐக்கியவாதம் முதலிய சைவக் கிளைகள் ஞானசம்பந்தர் காலத்துக்குப் பின்பே தமிழகத்திற் புகுந்தனவாதல் வேண்டும். பைரவம் மட்டில், ஞானசம்பந்தர் காலத்தில்தான், பையத் தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கிற்று என்பது சிறுத்தொண்டர் வரலாற்றால் தெரிகிறது. இந்த ஆறும் பொதுவாகச் சிவனை வழிபடும் வைதிக சைவத்துக்கு மாறுபட்டன அல்லவாதலாற் போலும், ஞானசம்பந்தர் முதலியோர் அவர்களை ஒதுக்கினாரிலர். அவர்களைத் தாம் தழீஇக் கொண் டொழுகிய குறிப்புத் தோன்றவே, “ஆறு சமயங்கட்கு ஒருதலைவன்”2 எனவும், அத்தலைமையை விளக்கி, “முன்னம் இரு மூன்று சமயங்களவையாகி, பின்னையருள் செய்த பிறையாளன்”3 எனவும் கூறியுள்ளார். திருப்பதிகங்களிற் காணப்படும் இயற்கை நலம் இனி, ஞானசம்பந்தர் மருதவளம் சிறந்த பொன்னி நாட்டில் பூமரு சோலைப் “பொன்னியல் மாடம்”1 பொலிந்து விளங்கும் சீகாழிப்பதியில் பிறந்து மேம்பட்டவர். நாற்புறமும் நன்செய் வளம் சான்று பூவார் சோலையும் புயல்படுபொழிலும் புள் இடையறாத பூம்பொய்கையும் இன்றும் காண்பார் கண்ணுக்கு இன்பக் காட்சி நல்கும் நலமுடையது சீகாழி; ஆதலால், ஞானசம்பந்தர் தோன்றி விளங்கிய அன்றும் அஃது அக்காட்சியை வழங்கியிருக்கும் என்பது ஒருதலை. அன்றியும் அவர் தமிழ்நாடு முற்றும் சிறப்புடைய ஊர்கட்குச் சென்று அவற்றின் இயற்கை நலங்களை நேரிற்கண்ட சீர்த்தியுடையர். ஆங்காங்கு நம் தமிழகம் வழங்கிய இயற்கைக் காட்சிகள் அவருடைய ஞானக்கண்ணுக்கு நல்விருந்து செய்துள்ளன. அவர், இறைவன் புகழைத் தமது “உளங்குளிர்ந்தபோதெலாம் உகந்து உரைப்ப”2 வராயினும், அவனை உள்ளுறை யாகக் கொண்டு நிலவும் இயற்கையின் இன்பநலமுழுதும் சிறக்க நுகர்ந்து தேக்கெறி பவராவர். அவர் பிறந்த சீகாழி அக்காலத்தே கடற்கரையை அடுத்திருந்தது. “கடல் வாழ் பரதர் மனைக்கே நுனைமூக்கின் சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகர்”3 எனக் கடற்காட்சியை எடுத்தோதுவார். மருதப்பகுதியில் நெல் விளையும் வயல்களைக் காண்பார், வயலிடையே நீர் நிலையும் அதன் கண் மலர்ந்துவிளங்கும் தாமரை முதலிய நீர்ப்பூக்களும் அவர் உள்ளத்தை மலர்விக்கும். மலர்ந்த தாமரை மேல் அன்னப்புள் வீற்றிருப்ப, காற்றால் அசையும் தாமரையிலை எழுந்து குடைபோல் அப்புள்ளிற்கு நீழல் செய்ய, கரையருகே விளைந்து தலைசாய்ந்து நிற்கும் நெற்கதிர் சாமரை போல் அசைந்து இரட்டுவது, அவர் உள்ளத்தைக் குளிர்விக்கிறது. அவர் பேருவகைகொண்டு, “செறி யிதழ்த்தாமரைத் தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல், வெறிகதிர்ச் சாமரை இரட்ட இளவன்னம் வீற்றிருக்கும் மிழலையாமே”1 என்று பாடுகின்றார். இத்திருவீழிமிழலை இம்மருத நிலத்து நல்லூர் களுள் ஒன்று. திருவண்ணாமலைக்குச் செல்லும் திருஞானசம்பந்தர் அந்த அண்ணாமலையின் சாரலான முல்லைப்பகுதியில் எருமைகளும் ஆயரால் மேய்க்கப்படுவது காண்கின்றார். மேதியொன்று தன் கன்றை நினைந்து வழிதப்பிச் சென்று கத்துகிறது. ஆயன் அதனைக் காணாது தன் குழலை ஊதுகின்றான். பொதுவாக எளிதில் இசைவயப் படாத எருமை, அவனது குழலோசை கேட்டதும் சென்று, தன் இனத்தோடே கூடுகிறது. அதனை ஞானசம்பந்தர், “கனைத்தமேதி காணாது ஆயன் கைம்மேற் குழலூத, அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணா மலை”2 என்று மகிழ்ந்து பாடுகின்றார். திருக்காளத்தி குறிஞ்சி நிலப்பகுதி, அங்கே ஞானசம்பந்தர் சென்றபோது அதன் இயற்கை நலம் அவர்க்கு இன்பம் நல்குகிறது. ஒரு பிடியானை தன் கன்றுடனே சென்று சந்தனமரத்தின் குளிர் தழையைத் தின்று இனிது உலாவிச் செல்ல, அதன் கன்று மகிழ்வுடன் விளை யாடுகிறது. அதனோடு உடன் செல்லும் பிடியானை தானும் விளையாடி அக்கன்றை இன்புறுத்துகின்றது. இதனைக் காணும் ஞானசம் பந்தர், “குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர் சந்தின்முறி தின்று குலவிக், கன்றினொடு சென்றுபிடி நின்று விளையாடு காளத்தி மலையே”3 என்று பாடி மகிழ்கின்றார். இந்நிலப்பகுதியில் வாழ்பவருள், குறமகளிர் குறிஞ்சிப் பண்பாடி முருகனது பெருமையைப் பகர்கின்றனர்;4 ஒருபால் அவர்கள் பரண் மேல் இருந்து புனத்திற் படியும் கிளிகளை ஓப்பு கின்றனர்.5 வயல்களில் கடைசியர்கள் பாடலும் விளையாட்டும் காணப்படுகின்றன.6 மறை யவர் மனைகளில், மகளிர், கழங்கும் பந்தும் அம்மனையும் ஆடும் போதும் இறைவன் புகழையே பாடுகின்றனர்.1 நிதியால் மிக்க செல்வர்கள் நித்தநியமங்கள் வழுவாது விதிமுறையே செய்து ஒழுகு கின்றார்கள்.2 செல்வ முடையவர்கள் ஈத்துவக்கும் இன்பத்தில் பேரீடு பாடு உடையராய், இன்மையால் போந்து தம்மை இரப்போர்க்கு வேண்டுவன ஈத்துமகிழும் செயலில் மிக்குவிளங்கு கின்றனர்.3 கலை வல்ல புலவர்க்கும்4 கவிதைப்புலவர்க்கும்5 பெருங்கொடைபுரிவோர் பெருகியுள்ளனர். வேளாளர்கள் தாளாளர்களாய் வள்ளன்மை சிறந்து உள்ளனர்.6 சமய ஒழுகலாற்றுக் குறிப்புக்கள் செல்வமனைகளில் கொடிகள் வானளாவ நின்று அழகு செய்கின்றன.7 தெருக்களில் அடியார் கூட்டம் இறைவன் புகழைப் பாடுகிறது.8 அரங்குகளில், மாதரும் மைந்தரும் பாலென மொழிந்து விளையாட்டயர்கின்றனர்.9 திருக்கோயில்களில் முழவும் சங்கும் யாழும் முழங்குகின்றன.10 அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும், அவற்றின் வேறாகக் செந்தமிழ்க் கீதமும் சிறந்து விளங்குகின்றன11 செந்தமிழரும் தெய்வமறை நாவரும் ஏனைச் செழுங்கலை வாணரும் வேறுபாடின்றிச் சென்று இறைவனை வழிபடுகின்றனர். இறைவழிபாடு கோயில்தோறும் இனிது இயலுகின்றது. மகளிரும் ஆடவரும் மாமலர் கொணர்ந்து வழிபடுகின்றனர். மணமாகாத கன்னிப்பெண்கள், நறுமலரும் தெண்புனலும் தூபமும் சாந்தமும் கொணர்ந்து வழிபாடாற்றுகின்றனர். அந்திப் போதில், அடியவர்கள் தூப தீபங்களுடன், “சந்திபல அர்ச்சனைகள்” செய்கின்றனர். இவ்வாறே முற்றத்துறந்த முனிச்செல்வர்கள் வழிபாடு செய்து வாழ்கின்றனர். திருக்குற்றால மலைப்பகுதியில், பிடியானைகளும் களிறுகளும் வேங்கைக் கொத்துக்களைத் தலையிற்கொண்டு இறைவனை வழிபடுகின்றன. சிவனடியார்கூட்டத்தைச் சிவமே என விரும்பிப் பேணுவது செந்தமிழ் நாட்டுச் சைவ நூல் வகுக்கும் அறங்களுள் ஒன்று. இதனால், இவர்கட்குச் சிவன்பாலுள்ள பேரன்பு தெற்றென விளங்குகிறது. சினடியார் என்பவர், பண்டைத் தவத்தாலும் அடியாரொடு பயிலும் பயிற்சியாலும் சிவன்பால்பேரன்புற்றுத் தொண்டுசெய்பவ ராவர்1 என்று ஞானசம்பந்தர் அவர்களைச் சிறப்பித்திருக்கின்றார். இத்தொண்டர் கூட்டுறவால், வினைத் தொடர்பும் அதுவாயிலாக அறியாமையும் நீங்கும்.2 அதனால் அவர் தொடர்பே சைவர்கள் விரும்பற்பாலது.3 இவர்கள் இறைவன் புகழையல்லது வேறு புகழ்களைச் செவியிற் கொள்ளார்.4 இத் தொண்டர்களை உளத்திற்கொண்டு போற்றுபவர் வினையின் நீங்கி உண்மை அறிவு விளக்கம் பெறுவர்.5 அவர்கட்குத் தூநெறியாகிய சிவநெறி எளிதில் கைகூடுமென6 ஞான சம்பந்தர் வற்புறுத்துகின்றார். தொல்லிலக்கியக் குறிப்புக்கள் ஞானசம்பந்தர் வழங்கியுள்ள திருப்பதிகங்களில், சங்க நூற் கருத்துக்களும் திருக்குறட் கருத்துக்களும் ஆங்காங்கு நின்று ஒளிர் கின்றன. “கெண்டை பாய்தர அவிழ்ந்த வண்டுபிணி ஆம்பல் நாடுகிழ வோனே”7 என்பது ஐங்குறு நூற்றிற் காணப்படும் பகுதி; இது திருக் கேதாரப் பதிகத்தில், “வண்டுபாட மயிலால மான்கன்று துள்ள வரிக்கெண்டை பாயச் சுனைநீலம் மொட்டு அலரும் கேதாரம்மே’8 என அமைந்து விளங்குகிறது. “சலத்தாற் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று”9 என்பது திருக்குறள். இது, திருவோமாம் புலியூர்ப் பதிகத்தில், “சலத்தினாற்பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க, உலப்பில் பல்புகழார்”1 என்பதன்கண் கிடந்து ஒளி செய்கிறது. திருக்கோயில்கள் ஞானசம்பந்தர் காலத்தே தமிழ்நாட்டுச் சிவன் கோயில்கள் சிலவற்றில் மலையாள நாட்டிலிருந்தும் வேறு பிற நாடுகளி லிருந்தும் அந்தணர்களும் பிறரும் வந்து வழிபாடு செய்திருக் கின்றனர். திருப்பழுவூரில் பத்தரும் சித்தரும் மறையவரும் மகளிரும் வழிபடும் திறத்தைக் கூறும் ஞானசம்பந்தர், “அந்தணர்களான மலையாளவர்”2 ஏத்தும் இயல்பையும் எடுத்துக் கூறுகின்றார். சைவத்தின் உட்கூறு களான அறுவகைச் சமயத்தவரது வழிபாடும்3 அவரால் குறிக்கப் பெறுகிறது. ஞானசம்பந்தர் காலத்தே தமிழ் நாட்டின் வடபகுதியைப் பல்லவ வேந்தர் ஆட்சி புரிந்து வந்தனரென முன்பே கூறினோம். அக்காலத்தே, வடநாட்வரும், பிறநாட்டினரும் தமிழகத்திற்குப் போந்து இசை பயின்றனர். அந்நாளில் தமிழகத்தில் இசைத்தமிழ் மிக்க விளக்க முற்றிருந்தது. திருக்கோயில்களில் “அருமறைத் துழனியும் செந்தமிழ்க் கீதமும்”4 சிறப்புற்று விளங்கின. செல்வமனை களிலும் மகளிர் விளையாட்டயரும் பூங்காக்களிலும் தமிழின் இனிய இசை மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. ஞானசம்பந்தர், “வாசமலி மென்குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகார், ஊசல் மிசையேறி இனிதாக இசைபாடு உதவி மாணிகுழியே”5 எனவும், “ஊறுபொருள் இன் தமிழ் இயற்கிளவி தேறும் மடமாதருடனா, வேறுதிசை ஆடவர்கள் கூர இசைதேரும் எழில் வேதவனமே”6 எனவும் குறிக்கின்றார். அந்நாளில், எண்ணும் எழுத்தும் போல இசையும் தமிழ் மக்களால் கண்ணெனக் கருதிப் பயிலப் பெற்ற குறிப்பு, “எண்ணும் ஓர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார், கண்ணும் முதலாய கடவுட்கு இடம்”1 என்பதனால் தெளிவாக வலியுறுகிறது. புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள குடு மியான்மலையில் இசைக் கல்வெட்டொன்று2 உளது. அது பல்லவ காலத்துக் கிரந்த எழுத்தில் உள்ளதனால் அதன் காலம் ஞானசம் பந்தர் வாழ்ந்த காலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தே உருத்திராச்சாரியார் என்னும் வடவர் ஒருவர் தமிழ்நாடு போந்து அப்போது நிலவிய இசையைப் பயின்று தன்பால் வந்த பலருக்கு இசையறிவு கொளுத்தி மேம்பட்டார். அவரிடத்தே பயின்ற பல்லவ அரச குமரனொருவன் இந்த இசைக் கல்வெட்டை இங்கே ஏற்படுத்தியுள்ளான். அவன் பெயர் தெரிந்திலது; ஆயினும், அவன் பல்லவ வேந்தனான முதன் மகேந்திர வன்மனாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இக் கல்வெட்டிற் கண்ட இசையும் தமிழ் இசையே எனப் பண்டைத் தமிழரது “யாழ் நூல்” கண்ட சுவாமி விபுலாநந்தர்3 ஆராய்ந்து கண்டுள்ளார். திருப்பதிகப் பாட்டியலாராய்ச்சி ஞானசம்பந்தர் பாடியுள்ள பாட்டுக்கள் யாவும் இசைத் தமிழ் வகையிலும் இயற்றமிழ் வகையிலும் அடங்குவனவாகும். இதுபற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய ஆராய்ச்சியாளர். “இசைத் தமிழ் பாடல் களாகிய இத் தேவாரப்பதிகங்கள், இசைவகையில் செந்துறைப் பாவின்கண் அடங்குமாயினும், இசையோடு இயற்றமிழ்த் திறனும் நன்கு அமையப் பாடப் பெற்றன வாதலின், இப்பாக்கள் இயற் பாக்களுள் எதன்பாற் படும் என நோக்குதலும் இன்றியமையாததே; இவற்றை விருத்தப்பா என்பர் சிலர்; அது பொருந்தாது. செந்தமிழ்ப் பாக்களெல்லாம் வெண்பா, அசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் பெரும் பகுதியுள்ளும் மருட்பா, பரிபாடல் ஆகிய வகையினுள்ளும் அடங்கு மென்பதே யன்றி அக்காலத்து விருத்தப்பா என ஒருபா வழங்கிய தென்றல் பண்டைய தமிழ் நூல் இலக்கணமாகிய தொல்காப்பியச் செய்யுளியலில் சொல்லப்படாது ஒழிதலானும், விருத்தம் என்னும் வடமொழிச் செய்யுளின்வகை அம்மொழியோடு பல்லாற்றானும் வேறுபட்ட நம் செந்தமிழ்ப் பாக்களுக்கு உரியதன்று ஆகலானும், இப்பொழுது விருத்தவகையுள் அடக்கப்படும் அருந்தமிழ்ப் பாக்களெல்லாம் எவ்வாற்றானும் அதனோடு இயையாது. பல்வகைச் சந்த வேறுபாடுடைய கலி முதலிய பாக்களுட்பட்டு அடங்கலானும், சந்த வேறுபாடு உடைய இத் தேவாரச் செந்தமிழ்ப் பாக்களெல்லாம் நம் தமிழ்க் கலியின் பாற்பட்டு அடங்குமாறு காண்க.... திருமுறைகளாகிய தேவாரப் பதிகங்களைப் பல்வேறு சந்தங்கள் அமைய நயம்பெறப்பாடி யருளிய ஞானசம்பந்தப்பிள்ளையார், தாம் சந்தக் கலிப்பா வினாலேயே மேற்படி திருப்பதிகங்களைப் பாடினார் என்பது. “கந்தண் பூங்காழி யூரன் கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன்”1 என்ற திருக்கடைக் காப்புப் பாடலொன்றால் தெள்ளிதிற் பெறப்படும்”2 என்று கூறுகின்றனர். இக் கூற்றால் இத் திருப்பாட்டுக்கள் இயற்றமிழ் நெறியில் கொச்சக ஒருபோகு வகையில் அடங்கும் என்பது பெறப்படும். இனி, இவை இசைத்தமிழ் வகையில் எவ்வகையின் பாற்படும் எனத் தெளியவுணர்தற்கு வேண்டும் இசைத்தமிழ் நூல்கள் முழுவடிவில் ஒன்றும் இன்று நாம் கிடைக்கப்பெற்றிலோம். ஆயினும், சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களின் உரையில் அடியார்க்கு நல்லார் முதலியோர்களால் காட்டப்படும் இசைத் தமிழ் நூல் மேற்கோள்களைத் துணையாகக் கொண்டு நோக்குமிடத்து, முதனடை, வாரம், கூடை, திரள் எனக் காணப்படும் இசையியக்கம் நான்கனுள் ஒன்றாகிய வாரத்தின்பால் இப்பாட்டுக்களை அடக்கலாம். தெய்வஞ் சுட்டிவரும் வாரப்பாட்டுத் தேவாரமாகும். திருஞான சம்பந்தர் முதலியோர் பாடியருளிய பாட்டுக்களையும் தேவாரமென வழங்கும் வழக்கம் நம்நாட்டில் பயில வழங்குவ தொன்று. இவ்வாற்றால், ஞானசம் பந்தர் பாடிய பாட்டுக்கள் இசை வகையில் தெய்வஞ் சுட்டிய வாரப்பாட்டு என்பது தெளிவாம், “வாரமென்பது வகுக்குங்காலை, நடையினும் ஒலியினும் எழுத்தினும் நோக்கித், தொடையமைந்து ஒழுகும் தொன்மைத்து என்ப” எனச் சிலப்பதிகார அரும்பத வுரைகாரர் காட்டும் இசைத்தமிழ்ப் பழஞ் சூத்திரமொன்று வாரத்தின் இயல்பை விளக்கி நிற்பது ஈண்டு நோக்கத்தக்கது. இவ்வாறு இயலும் இசையுமாகிய இருவகைக்கும் ஒத்த நெறியில் பல ஆயிரக்கணக்கில் ஞானசம்பந்தர் முதலியோர் பாடிக் காட்டிய பாட்டுக்கள் பிற்காலத் தமிழ்ப் பாவலர்கட்குச் சீரிய வழிகாட்டியாய் அமைந்தன. பின் வந்த சீவக சீந்தாமணி முதலிய சமண் சமயப் பெருநூல்களும், பெரிய புராணம் முதலிய சைவ சமயப் பெருநூல்களும் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் கம்ப ராமாயணம் முதலிய வைணவ சமயப் பெருநூல்களும் இக்காட்டிய பாட்டுக்களையே நெறியாகக் கொண்டு இயலுவனவாயின. இடைக்காலத்தே பண்டைய சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தொடர்நிலைச் செய்யுட்கெனக் கொண்ட ஆசிரியப்பா வீழ்ந்து போயிற்று. பிரபந்தங்கள் எனப்படும் சிறு நூல்களிலும் இலக்கண நூல்களிலும் ஆசிரியப்பா ஒதுக்குண்டு கிடப்பதாயிற்று. ஆயினும் இடைக்காலத்துப் புலவர்களுள் ஒருவரான கொங்குவேளிர் மாத் திரம் தாம் எழுதிய பெருங்கதை யென்னும் தொடர்நிலைச் செய்யுளை ஆசிரியப்பாவால் ஆக்கியுள்ளார்; ஆயினும் அதன் முதலும் இறுதியும் கிடைத்தில. இந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய காந்தி புராணம் என்னும் தொடர் நிலைச் செய்யுளில் இடையிடையே ஆசிரியப்பாக்கள் சில காணப்படுகின்றன. எங்ஙனமாயினும், இன்று தமிழ் இலக்கிய உலகில் பெருகி நிற்கும் பெரு நூல்கள் பலவும் இயன்றிருக்கும் பாட்டுக்களின் பெருகிய தோற்றத்துக்கு அடிகோலிய முதன்மை திருஞான சம்பந்தர்க்கு உரிய தென்பது தெளியக் கோடற்பால தொன்று. அரிய சொல்லாட்சிகள் இனி, இசைத் தமிழ்ப் பாட்டுக்கள் பலவும், இயல்நெறியினும் இசை நெறியினையே பெரிதும் மேற்கொண்டு இயலுவனவாகும். ஆதலால், இசைக்கேற்பச் சொற்கள் உருவேறுபடுவது இயற்கை. அவ்வகையில் ஞானசம்பந்தர் பாடியுள்ள பாட்டுக்களில் இயற்றமிழ் நெறியில் காணப்படாத சில சொல்லுருவங்கள் காட்சி தருகின்றன. உண்ணென்னும் வினையடியாக உண்டி, உணவு, உணா, ஊண் என்பன முதலிய செயப்படு பொருண்மேனின்ற வினைப்பெயர்கள் பெருக வழங்குதல் உண்டு; உண்பான், உண்டான் என்பன போல வினைமுதன்மேல் நிற்பனவும் உள. இவ்வாறே உண்ணென்பதன் அடியாக உண்ட, உண்கின்ற, என்ற வாய்பாட்டிற் பெயரெச்சங்கள் தோன்றி வழங்குவது பெருவழக்கு. திருஞானசம்பந்தர் உண்ணென்னும் வினையடியாக உண்ணி யென்றொரு வினைப் பெயரை வினைமுதன்மேல்வரப் படைத்து, “இடுபலி உண்ணி”1 என்றும், உண்டவெனும் பொருள்படுமாறு உண்ணியவெனப் பெயரெச்ச மொன்றைப் படைத்து, “இருங்களம் ஆரவிடத்தை இன்னமுது உண்ணிய ஈசர்”’2 என்றும் வழங்குகின்றார். “உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவார்”3 என்றவிடத்து உண்பு என்பதும் ஞானசம்பந்தர் புதிது படைக்கும் சொற்களுள் ஒன்று. ஒன்றுதல் என்பதன் மறுதலையாக அன்றுதல் எனத் தெரிநிலை வினையொன்றைப் பிறப்பித்து “அன்றி நின்ற அவுணர்”4 “அன்றிய அமணர்கள்”5 “அன்றினர் அரியென வருபவர்”6 என வேறு வேறு வகையாக வழங்குவர். கணையென்னும் பொருட் பெயரைக் கணையைத் தொடுத்தான் என்னும் பொருள்பட வினைப்படுத்து “எயில் மூன்றும் எரியுண்ணக் கணையல் செய்தான்”7 எனவும், நீளுதல் என்னும் பொருளில் “நீணுதல்”8 எனவும், வந்தனையை “வந்தனம்”9 எனவும், நல்லுலகு என்பதை “நன்னுலகு”10 எனவும், நடுநடுங்கியெனவரும் அடுக்கினை “நடுநடுத்து”1 எனவும் கைதை வேலியைக் “கைதல் வேலி”2 எனவும், வேள்வியை “வேழ்வி”3 எனவும், துறவைத் “துறவி”4 எனவும், பிறவி, இறப்பு என்பவற்றைப் “பிறவினோடு இறவுமானான்” 5 எனவும் வழங்குகின்றார். பழமொழிக் குறிப்பு இவ்வண்ணம் புது முறையிற் சொற்களை இனிய வகையில் இசைக்கேற்பச் சமைத்துக் கொள்ளும் சதுரப்பாடு சிறந்து விளங்கும் ஞானசம்பந்தர், தம் காலத்தும் தமக்கு முன்னோர் காலத்தும் வழங்கிய பழமொழிகளையும் கருத்துக்களையும் பொன்னே போல் போற்றித் தம்முடைய ஞானப் பாட்டுக்களின் இடையே தொடுத்துச் சிறப்பித் திருக்கின்றார். கருப்பு வெளுப்பாகாது, கசப்பு இனிப்பாகாது என இன்று நாட்டில் நிலவும் பழமொழி பண்டை நாளில் நீலமுண்டது பிறிது ஆகாது என வழங்கிற்று; இப் பழமொழிகள் சிலவற்றைத் தொகுத்துப் பழமொழி என்னும் பெயரால் நீதி நூல் செய்த முன்றுறை யரையர் என்பார், மூர்க்கன்தான் கொண்டதே கொண்டு விடான் என்பதை விளக்குதற்கு, “ஆகாதே உண்டது நீலம் பிறிது”6 என்று குறித்தார். இப் பழமொழியை நம் ஞான சம்பந்தர், “சிராப் பள்ளித் தலைவரை நாளும் தலைவரல்லாமை உரைப்பீர்காள், நிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே”7 என்று பாடுகின்றார். இவ்வாறே நினைவுசொல் செயல்களை வேறு செயல்களில் ஈடுபடுத்தாமல் மடிந்து இருப்பவர், “நான் சிவா எனச் சும்மா இருந்தேன்” என்பதை உலகி யலில் இன்றும் காணலாம். இது ஞான சம்பந்தர் காலத்தும் நிலவியிருந்தது என்பதை, “நண்பால் சிவாய எனா நாலூர் மயானத்தே, இன்பாயிருந்தானை ஏத்துவார்க்கு இன்பமே”8 என்று ஞானசம்பந்தர் கூறுவது கொண்டு உணரலாம். மேலும், எழுத்துக்கெல்லாம் அகரம் முதலாதல் போல இறைவன் எல்லாவற்றிற்கும் முதலாக உள்ளான் என்ற கருத்தை “அகர முதலானை”1 என்று குறிக்கின்றார். இது போலும் குறிப்புக்கள் பல இவருடைய திருப்பாட்டுக்களிற் காணப்படுதலின் விரிவஞ்சி விடுகின்றாம். திருப்பதிகங்களால் நாட்டில் விளைந்த திருத்தம் ஞானசம்பந்தருடைய பாட்டுக்கள் நாட்டில் பரவப் பரவ, அவரது ஞானவாய்மை உயர்ந்து விளங்குவதாயிற்று, அவர்க்குப் பின் ஒரு நூற்றாண்டிலேயே அவரது சைவப் பணி சான்றோர் பரவும் சான்றாண்மையைப் பெற்றது. அப்போது நிலவிய நம்பியாரூரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில், “வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலால் பேணா, எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்”2 என்று பாராட்டிய தோடு அமையாது, “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்”3 என்பன முதலிய சொற்றொடர்களால் தமது அன்பும் பெருமதிப்பும் தோன்றக் கூறி பாராட்டினர். அவர்க்குப் பின்வந்த பட்டினத்தடிகளும் நம்பியாண்டார் நம்பிகளும் ஞானசம்பந்தரை வியந்து பாடியுள்ளனர். பட்டினத்தடிகள் ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட வரலாற்றை வியந்து தாம் பாடிய திருக்கழுமல மும்மணிக்கோவை முதற் செய்யுளிலேயே குறித்துப் பாராட்டு கின்றார். நம்பியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தர் பொருளாகப் பல சிறு நூல்களை இயற்றினார். இவர்கட்குப் பின்வந்த சேக்கிழார் பெருமான் ஞானசம்பந்தர் வரலாற்றை ஆராய்ச்சித் திறனும் அன்பும் சிறக்க இனிய பாட்டுக்களாற் பாடியுள்ளார். பின்வந்த தமிழ்ப் புலவர் அனைவரும் தாம் பாடிய நூல்களில் ஞான சம்பந்தர் முதலிய பெருமக்களை வாழ்த்தி வணங்கி வழி பட்டிருக்கின்றனர். ஞானசம்பந்தரைப் பாராட்டி உரைக்கும் தமிழ் நூல்கள், வெளிவந்தனவும் வெளிவாரா தனவுமாக இருநூற்றுப் பதின்மன்று நூல்கள் என ஆராய்ந்து கணக்கிட்டுச் சீகாழியில் நடந்த சைவ சித்தாந்த மாநாட்டில் இந் நூலாசிரியரால் காட்டப்பட்டிருக்கிறது. இடைக்காலச் சைவர்கள், ஞானசம்பந்தர் முதலிய நான்கு பெருமக்களையும் சமய குரவர்கள் எனவும், அவர்கள் வழங்கிய திருப்பதிகங்களைத் தமிழ் மறை எனவும், அவருள் ஞான சம்பந்தரைத் திருஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளை என்பதுபற்றி அவர் திருப்பதிகங்களை மாத்திரம் திருஞானம் எனவும் போற்றிப் பரவினர், வடமொழியில் காணப்படும் நான்மறைகள் போல, ஞானசம் பந்தர் முதலியோர் வழங்கிய திருப்பதிகங்கள் சைவக் கோயில்களில் வைத்து ஓதப்பட்டன.1 வடமொழி வேதங்களை ஓதுவதற்குக் கோயில்களில் நிவந்தங்கள் விடப்பட்டது போல, இத் திருப்பதி கங்களை ஓதுவதற்குப் பல்லவ வேந்தர் காலத்தேயே ஏற்பாடுகள் செய்யப் பட்டன.2 திருஞானசம்பந்தரும் கல்வெட்டுக்களும் திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களிலும், அவரைப் பாராட்டிக் கூறும் ஏனைத் தமிழ் நூல்களிலும் போலத் தமிழ் நாட்டுக் கல்வெட்டுக் களில் அவர் பெயர்கள் பல வேறுவகையில் வியந்து குறிக்கப்படுகின்றன. கல்வெட்டுக்களெல்லாம் பெரும்பாலும் இடைக்கால மக்களுடைய உலகியல் வழக்கு நிகழ்ச்சியாதலால், இவற்றால் குறிக்கப்படும் ஞானசம்பந்தர் பெயர்வழக்கு உலகவழக் கெனக் கருதவேண்டும். ஆளுடைய பிள்ளையார்,3 திருஞானம் பெற்ற பிள்ளை4 காழிநாடுடைய பிள்ளை5 சம்பந்தப் பெருமான்6 பரசமய கோளரி7 திருஞானசம் பந்தடிகள்8 காழிச்சம்பந்தப் பெருமாள் நாயனார்9 திருஞானசம்பந்தப் பெருமாள்10 சிவஞான சம்பந்தடிகள் 11 திருஞானசம்பந்தநம்பி12 ஞானம் பெற்ற ஆளுடைய பிள்ளை1 ஆணை நமதென்றபெருமாள்2 என்பன சில பெயர்களாகும். இவ்வண்ணம், உலகியல் வழக்கியல் திருஞான சம்பந்தர் பெயர் பயில வழங்கிற்றெனவே, அதனை வழங்கும் மக்கட்கும் அவர் பெயர் வழங்கியிருக்குமென்பது சொல்லவேண்டா. அரசியல் தலைவர் பலர், திருஞான சம்பந்தப் பல்லவரையன்3 எனவும், திருஞான சம்பந்தமாராயன்4 எனவும் காணப்படுகின்றனர். ஏனை மக்களுள், ஆண்மக்கள், சொக்க ஞானசம்பந்தன்5 நம்பி சம்பந்தப் பெருமாள்6 நல்ல ஞானசம்பந்தன்7 செல்வ ஞானசம்பந்தன்8 எம்பிரான் சம்பந்தன்9 நக்கன் திருஞானசம்பந்தன்10 எனவும், ஞானசம்பந்தன்,11 திருஞானசம்பந்த பண்டாரம்,12 திருஞானசம்பந்தன் இராமநாதன்,13 கை காட்டுவான் கரும்பன் திருஞானசம்பந்தன்,14 சம்பந்தாண்டான்,15 ஆண்டார் சம்பந்தப்பெருமாள்16 திருஞானசம்பந்த வேளான்17 ஞானசம்பந்தக் கோன்18 எனவும், பெண்மக்கள் சிவஞான சம்பந்தத் தலைக்கோலி,19 ஞானசம்பந்த நங்கை20 எனவும் பெயர் தாங்கி இருந்திருக்கின்றனர். அரசியல் தலைவருள் சிலர், மக்களிடையே பெருஞ் செல்வாக்குப் பெற்றமைக்கு அறிகுறியாக இந் நாளில் ஊர்கள், நந்த வனங்கள், சிறப்புடைய கட்டிடங்கள் முதலியன அவர்களுடைய பெயரிடப் பெற்றிருப்பது கண்கூடு. இந்தச் செயல் நம் நாட்டு மக்களின் பொதுப்பண்பு. இப்பண்பு இன்று நேற்றுத் தோன்றிய தாகாது பண்டிருந்தே தொன்று தொட்டு வந்ததாகும். ஆதலால், ஞானசம்பந்தர் தோன்றி, “இன்னிசையால் தமிழ் பரப்பும்” பெருந் தொண்டு செய்தது குறித்து, அவர்பால் மக்கட்குண்டான பேரன்பால், திருஞான சம்பந்தனல்லூர்1 திருஞான சம்பந்த சதுர்வேதி மங்கலம்2 என ஊர்களும், திருஞானசம்பந்த வளாகம்3 திருஞானசம்பந்தன் தளம்4 என இடங்களும், திருஞானசம்பந்தர் கோயில்5 திருஞான சம்பந்தீஸ்வரம்6 எனக் கோயில்களும், திருஞானசம்பந்தன் மடம்7 திருஞானசம்பந்த நம்பி மடம்8 செல்வஞானசம்பந்தர் மடம்9 சீகாழி நாடுடைய பிள்ளை திருமடம்10 பரசமயகோளரிமடம்11 திருஞான சம்பந்தர் திருக்குகை12 என மடங்களும், திருஞானசம்பந்தர் நந்தவனம்13 திருஞானசம்பந்தர் மடப்புறம்14 என நந்தவன முதலியனவும் பல காலங்களில் பல மக்களால் நிறுவப்பெற்றுள்ளன. இவ்வாறே, திருஞானசம்பந்தன் மடை15 திருஞான சம்பந்தன் நாழி16 என வேறு பலவற்றிற்கும் ஞானசம்பந்தர் பெயர் வழங்கப் பெற்றுளது. திருஞான சம்பந்தர் பாண்டிநாட்டில் சமணரொடு வாது புரிந்து வெற்றியெய்திய செயல், தமிழ் நாட்டுச் சைவ சமய உலகில் ஒரு புதிய கிளர்ச்சியை யுண்டுபண்ணிற்று. அவர் சென்ற இடந்தோறும், அச் சிறப்பு, மக்கள் உள்ளத்தே அவர்பால் பெருமதிப்பும் வழிபடற்கு அமைந்த பேரன்பும் தோற்றுவித்து விளங்கிற்று. அந்நாளில் பாண்டி நாட்டு மதுரை நகரில் பாண்டியன் மாதேவியாய் விளங்கிய மங்கையர்க்கரசியாரின் பெருமாண்பு மிக்க புகழெய்திற்று. ஞானசம்பந்தரை நினைக்கும்போதெல்லாம் அவர்பால் தாய்மை யன்பு கொண்டு ஒழுகிய மங்கையர்க்கரசியின் திருப்பெயர் நினைவுக்கு வருவது இயல்பு. இவ்வியல்புபற்றி இடைக்காலத்துப் பெருமக்கள் திருஞான சம்பந்தருக்குக் கோயில் எடுத்தபோது அக்கோயிலில் மங்கையர்க்கரசியாரை படிமத்தை எழுந்தருள்வித்து வழிபாடு செய்துள்ளனர். சீகாழியிலுள்ள திருஞானசம்பந்தர் கோயிலில் மங்கையர்க்கரசியாரை எழுந்தருள்வித்து ஞானசம் பந்தருடைய பெற்றோருக்கில்லாத பெருஞ்சிறப்பினைச் செய்துள்ளனர்.1 மேலும் மங்கையர்க்கரசியாரது மாண்பு கண்ட முன்னாளைச் செல்வர்கள், தங்கள் பெண்மக்கட்கும் மங்கையர்க் கரசியென்று பெயரிட்டு வழங்கியிருக்கின்றனர். இத்தகைய மங்கையர்க்கரசியர் பலர் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றனர். திருக்கோட்டியூரில் மங்கையர்க்கரசி யென்னும் பெயரையுடைய கண்ட நாச்சி யென்பவர், அவ்வூரிலுள்ள சிவன் கோயிலில் திருஞானசம்பந்தர் திருவுருவமொன்றை எழுந்தருள்வித்து வழிபாட்டுக்கென நிலம் விட்டிருக்கின்ற செய்தியை அக்கோயிற் கல்வெட் டொன்று2 கூறுகிறது. இவ்வாறே, ஒரு மங்கையர்கரசி, திருவண்ணா மலைக்கோயிலில் மங்கையர்க்கரசி மண்டபம் என ஒரு கல்மண்டபம் எடுத்திருக் கின்றாள்3 திருஞானசம்பந்தரைத் தமிழ்நாடெங்கும் ஊர்தோறும் உள்ள சிவன் கோயில்களில் எழுந்தருள்வித்து வழிபாடு செய்யும் வழக்கம் இடைக்காலத்திலே தோன்றி நிலவுவதாயிற்று. பலவூர்களில் திருஞான சம்பந்தருக்குத் தனியே கோயில் அமைத்து நாள்வழிபாடும் விழாவும் நடத்தி வந்துள்ளனர். பாண்டி நாட்டுத் தென்காசியிலுள்ள சிவன் கோயிலில் திருஞானசம்பந்தர்க்குக் கோயில்கண்டு அதன் கண் ஆண்டுதோறும் ஞானசம்பந்தர் ஞானப்பால்பெற்ற திருவிழாவைக் கொண்டாடியிருக்கின்றனர் என அவ்வூர்க் கல்வெட்டொன்று4 கூறுகிறது. இவ்விழா சீர்காழியில் இப்போதும் நடந்து வருவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. தில்லைக்கோயிலில் திருஞானசம்பந்தர்க்குத் தனியே ஓர் கோயில் இருந்ததெனவும், அது காளிங்கராயன் என்பவனால் பொன் வேயப் பெற்றதெனவும் தில்லையிலுள்ள கல்வெட்டொன்று5 கூறுகிறது. சீர்காழியிலுள்ள திருஞான சம்பந்தர் கோயிலுக்குத் தலைச்சங்காடு, குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலம், திரு முல்லைவாயில், திருவாக்கூர் முதலிய ஊர்களிலுள்ள மகாசபையினர் கோயில் வழிபாட்டுக்கும் கோயில் பழுது பார்த்தற்குமாக, மிக்க நிலங்களை விட்டிருக்கின்றனர். இக்கோயிலில் ஞான சம்பந்தர் பாடிய பதியங்களை இசைநெறி வழுவாமற் பாடுதற்காக இசைக் கல்லூரியை ஏற்படுத்தி, அதன்கண் தங்கி இசை கற்பிக்கும் ஆசிரியர்கட்கு நிலம் விட்டிருக் கின்றனர்.1 இடைக்காலத்தே தமிழகத்தை ஆண்ட வேந்தர்கள் நாட்டாட்சிக்குச் சிறந்த உறுப்பாகத் திருக்கோயில்களை எழுப்பி அவற்றிற்கு ஊரும் நிலங்களும் பொன்னும் மிகைப்படக் கொடுத்து, இன்றைய அரசியலறிஞர் அனைவரும் எண்ணி யெண்ணி வியக்கத் தக்க வகையில் தங்கள் அரசியலாட்சி முறையை நடத்தினர் என்ற செய்தி நாடு அறிந்ததொன்று. இக்கோயில்கள் பலவும் தனித்தனிச் சபைகளால் ஆளப்பெற்று வந்தன. கோயில் காரியம் பார்க்கும் சபைகள் இல்லாத கோயில்களை அவ்வவ்வூர்களை ஆளும் மகா சபைகள் ஆட்சி செய்தன. இக்கோயில்கட்கெனத் தனித்தனிப் பண்டாரங்கள் (Treasury) இருந்தன; அவற்றின் வரவு செலவு குறிக்கும் கணக்குகளும் தணிக்கை செய்யும் தனிக் குழுக்களும் இருந்தன. இக் கோயில்கள் ஒருபால் நாடாளும் வேந்தர்களுக்கும் ஒருபால் நாட்டு மக்கட்கும் இடை நின்று இரு திறத்தாரிடையும் அன்பும் ஒத்துழைப்பும் ஒப்ப நிலவுமாறு செய்தன.2 இத்தகைய அரிய பணிகளைச் செய்தற்குரிய கோயில்களின் நெறியறிந்து செயல் புரியும் கோயிற் பெருமக்கள் சமயப்பற்றும் சமய ஒழுக்கமும் உடையராதல் வேண்டும். அவர்களில் பலர் துறவிகளும் மாகேசுரர் களும் சிவயோகியர்களுமாக இருந்தனர். கோயில்களில் செய்யப் படும் செயல் பலவும் கோயிற் பணிக்குரிய மாகேசுரர்களால் காக்கப்படும்; ஆதலால் தான், கோயில் களில் விடப்படும் நிவந்தங் களின் இறுதியில் “பன்மாகேசுர ரக்ஷை” என்றொரு தொடர் குறிக்கப்படுகிறது. இந்த மாகேசுரர் முதலியோர் சமய உணர்வும் ஒழுக்கமும் பெறுதல் வேண்டி, அவர்கட்கென நாடெங்கும் மடங்கள் பல தோன்றி உணவும் உடையும் உறையுளும் மருந்தும் உதவிவந்தன. அவ்வாறு தோன்றிய மடங்களுள் மிகப் பழமை வாய்ந்தவை திருஞான சம்பந்தர் பெயரால் தோன்றியன. திருவானைக் காவிலுள்ள சங்கராசாரியார் மடம் முன்னாளில் திருஞான சம்பந்தர் மடமாக இருந்ததென அங்குள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்த அரசியற் கல்வெட்டா ராய்ச்சியாளர்1 கூறுகின்றனர். இவ்வாறே திருஞான சம்பந்தர் பெயரால் மடங்கள் பல தமிழ் நாடெங்கும் இருந்தன என்பதை எண்ணிறந்த கல்வெட்டுக்கள் எடுத்தோது கின்றன. ஆயினும் அவற்றுள் பல மூன்றாங் குலோதுங்கனுடைய இருபத்திரண்டாம் ஆண்டில் உண்டான குகையிடி கலகத்தால்2 அழிக்கப்பட்டன; மிகச் சிலவே எஞ்சின. பின்னர்ச் சில உண்டாயின என்றாலும் அவை வேறு வேறு பெயரால் தோன்றி நிற்பனவாயின. இப்போது மதுரையிலுள்ள திருஞான சம்பந்தர் திருமடம் ஒன்றுதான், தன் தொன்மைச் சிறப்பை உணர்த்திக் கொண்டு நிற்கிறது. தஞ்சை மாவட்டத்து மாயூரத்துக்கு அண்மையிலுள்ள தருமபுர ஆதீனமடம் திருஞான சம்பந்தர் பெயர்கொண்டு நிலவுவது ஈண்டுக் குறிக்கத் தக்க தொன்று. திருக்கோயில்கள் தோறும் திருக்கை கோட்டி யென ஒரு மக்கட்குழுவினை நிறுவி, அவர்கட்குத் திருஞான சம்பந்தர் முதலி யோர் வழங்கிய திருப்பதிகங்களை இசையோடு கற்பித்து நாளும் வழிபாட்டுக் காலத்தில் ஓதுவதாகிய ஒருநெறி பல்லவ வேந்தர் காலமுதலே ஏற்படுத்தி இருந்தனர். உழைக்கும் திறனில்லாத குருடர்களும் மகளிரும் ஆடவரும் இத் திருப்பதிகங்களைக் கற்று இசை நலங்கிளர எங்கும் இசைத்து வந்தனர். இவ்வகையால் மக்கள் மனத்தில் திருஞான சம்பந்தர் முதலியோருடைய திருப்பதிகங்கள் நன்கு பதிந்திருந்தன. அதனால், அவர் திருப்பதிகங்களிற் காணப்படும் பல இனிய சொற்றொடர்களை வியந்தெடுத்துக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் கோயிலுக்கும் தெருக்களுக்கும் நிலங்களுக்கும் பெயராக அமைத்துப் பாராட்டும் வழக்கம் இடைக்கால நன்மக்களிடையே நிலவிற்று. திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்களைக் கோயிற் சுவர்க்கல்லில் வெட்டி வைப்பதும்,1 சில கல்வெட்டுக்களின் தொடக்கத்தில் திருஞான சம்பந்தர் திருப்பதி கங்களுள் ஒன்றான “வாழ்க் அந்தணர்” எனத் தொடங்கும் திருப்பாட்டைக் கல்லிற் பொறிப்பதும்2 செய்திருக் கின்றனர். தென்குடித் திட்டைத் திருப்பதிகத்தில் திருஞான சம்பந்தர், “ஐயுணர் வெய்தி மெய்தேறினார் வழிபடும் தென்குடித் திட்டை”3 என்று பாடினாராக, பின் வந்தவர், மெய் தேறினார் தம் வழிபட்டால் சிவமாந்தன்மை யெய்தும் சிறப்புக் கருதி அங்குள்ள இறைவனை, “தேறினார்” என்றே பெயரிட்டு வழங்கினர்; இதனை அவ்வூர்க் கோயில் கல்வெட் டொன்று4 “தென்குடித் திட்டையுடைய நாயனார் தேறினார்” என்று கூறுகிறது. திருப்புகலூர்ப்பதிக மொன்றில், “போற்றிசைத்து என்றும் பணிவாரை மெய்ய நின்ற பெருமான்”5 என்று ஞானசம்பந்தர் பரவினர்; பட்டுக்கோட்டைப் பகுதியிலுள்ள கீரமங்கலத்தில் எழுந் தருளிய இறைவனை, “மெய்ய நின்ற நாயனார்” எனப் பெயரிட்டுப் போற்றினரென அவ்வூர்க் கல்வெட்டுக்6 கூறுகிறது. திருப்புத்தூரி லுள்ள இறைவனை ஞானசம் பந்தர் “ஓங்கு கோயில்லுறைவார்”7 என்றும், அக்கோயிலை ஓங்கு கோயில்”8 என்றும் குறித்தாராக, மெய்கண்டார் சந்தானத்துத் திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தரென்பார் ஓங்கு கோயில் என்றே கொண்டு ஒரு புராணம் பாடினாரென்று9 அக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது. தஞ்சை நாட்டிலுள்ள குற்றாலத்துக்குத் திருஞான சம்பந்தர் திருப்பதிகத்தில் திருத்துருத்தி என்று பெயர் குறிக்கப்படுகிறது. இதனை ஞான சம்பந்தர் பாடுமிடத்து, ஒரு பாட்டில், “பைம்பொழில் சூழ் வீங்குநீர்த் துருத் தியார்”1 எனக் குறித்தனர். பின் வந்தோர் இத் தொடரினையே, அவ்வூர்ப் பெயராகக் கொண்டு கல்வெட்டுக்களிற் குறிக்கும் போதெல்லாம் “திருவழுந்தூர் நாட்டு வீங்கநீர்த் துருத்தியுடையார்” சொன்ன வாறறியும் மகாதேவர்”2 எனவும், “வீங்கு நீர்த்துருத்தி யுடைய திருக்கற்றளி மகாதேவர்”3 எனவும் வழங்கினர். திரு அவளிவணல்லூர்த் திருப்பதிகத்தில் ஞான சம்பந்தர், இறைவனை, “புரிநூலொடு குலாவித், தம்பரிசினோடு சுடுநீறு தடவந்து.... செம்பொன் நெடுமாடமதில் கல்வரை விலாக, அம்பெரிய எய்த பெருமான் உறைவது அவளிவணல்லூரே”4 என்று சிறப்பித்தார். அவ்வூர்க் கல்வெட்டுக்கள், அத் திருப்பாட்டிற் காணப்படும் “தம்பரிசு” அம்பெரிய என்ற தொடர்களால் இறைவனைத் “தம்பரிசு உடைய நாயனார்” என்றும் “அம் பெரிந்த பெருமான்” என்றும் பெயர் குறித்து, “அவளிவணல்லூர் உடையார் தம் பரிசுடைய நாயனார் கோயிலில் எழுந்தளுகிற.... அம்பெரிந்த பெருமானையும் நாச்சியாரையும்.... எழுந்தருளிவித் தான்..... சாத்தான் உடையான் தம்பரிசு உடையான் ஆதிச்ச தேவனான அமரகோன்”5 என்று கூறுகின்றன. அச்சிறுபாக்கத்துத் திருப்பதி கத்தில் ஞானசம்பந்தர் இறைவனை “அச்சிறுபாக்கமது ஆட்சி கொண்டாரே”6 என்றதனால், கல்வெட்டுக்கள், “அச்சிறுபாக்கத்து உடையார் ஆட்சி கொண்ட நாயனார்”7 என்று குறிக்கலுற்றன. இவ்வண்ணமே, குரங்கணின் முட்டத்து இறைவனைக் “கொய்யா மலர் சூடுவார்”8 எனவும், திருப்புறம் பயத்து இறைவன் கோயிலிலுள்ள தென்முகக்கடவுளை அறமுரைத்த நாயனார்9 எனவும் பிறவும் கல்வெட்டுக்கள் கூறுவது, ஆங்காங்கு ஞான சம்பந்தர்பாடிய திருப்பதிகங்களைக் கண்டு மேற் கொண்டனவாகும். திருஞானசம்பந்தர், ஆங்காங்கே தாம் பாடிய திருப்பதிகங்களில், இறைவியைக் குறித்துரைத்துப் பாடிய சொற்றொடர்களையே பெரும்பாலும் அவ்வவ்வூர்க் கல்வெட்டுக்கள் எடுத்தோதியுள்ளன. திருவெண்காட்டுத் திருப்பதிகத்தில் இறைவியை “வேயன தோளுமை”1 என்றாராகக் கல்வெட்டு, “வேயன தோளி நாச்சியார்”2 எனவும், திருவோத்தூர்த் திருப்பதிகம் “இடையீர் போகா இளமுலையாள்”3 என்றதாகக் கல்வெட்டு “இளமுலை நாச்சி”4 யெனவும், அச்சிறு பாக்கத்துப் பதிகம், “இளங்கிளையரிவை”5 என்றதாகக் கல்வெட்டு மாகதேவருடைய இளங் (கிளைப்) பாவை” எனவும், திருப்பாம் புரப்பதிகம் “மாமலையாட்டி”7 என்றலும், கல்வெட்டு “மாமலை யாட்டியார்”8 எனவும், திருவலஞ் சுழிப்பதிகத்தில் ஞானசம்பந்தர் “வண்டுவாழ் குழல்மங்கை”9 என்றாராகக் கல்வெட்டு “வண்டுவாழ் குழலி”10 எனவும் வண்டுவாழ் குழலிச் சதுர்வேதிமங்கலம்”11 எனவும் கூறுவனவாயின. தமிழகத்தில் நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர்களை அவர்களாற் பாடப்பெற்ற பொருள்பற்றியும், அவர்தம் பாட்டுக்களிற் காணப்படும் அரிய சொல்லாட்சி பற்றியும் சிறப்புப் பெயர்தந்து வழங்குவது சங்க காலத்திருந்தே தொன்றுதொட்டு வரும் வழக்க மாகும். மருதம் பொருளாகவும் பாலை பொருளாகவும் பாடிய சான்றோரை மருதம் பாடிய இளங்கடுங்கோ எனவும், பாலை பாடிய பெருங்கடுங்கோ எனவும் சங்கத்தொகை நூல்கள் குறிப்பது நாடறிந்தது. இவ்வாறே மீனெறி தூண்டிலார்,12 தொடித்தலை விழுத்தண்டினார்13 என்பன முதலாக வரும் சான்றோர் பெயர்கள் அவர்கள் வழங்கிய சொற்றொடர் அடியாக வந்தனவாகும். இவ்வண்ணமே ஞான சம்பந்தர் முதலிய பெருமக்கள் பாடிய பாட்டுக்களுள் கிடக்கும் இனிய சொற்றொடர்களை மக்கட்குப் பெயராக வழங்குவது இடைக் காலத்தே தோன்றிய சீரிய வழக்கானாகும். திருஞானசம்பந்தர் திருநனிபள்ளி1 திருக்கழுமலநகர்த்2 திருபதிகங்களிலும் கோளறு திருப்பதிகத்திலும்3 “ஆணை நமதே” என்று எடுத்தோதினார்; அதுகண்டு, அவர்க்குப் பிற்போந்த நம்பியாண்டார் நம்பி யென்பார், “முத்திப் பகவன் முதல்வன் திருவடியை அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமது என்னவலான்”4 என்று வியந்து கூறிப் பாராட்டினர். அவர்க்குப் பின்வந்தோர், ஞானசம்பந்தரை ஆணை நமதென்ற பெருமாள் எனப் போற்றிப் புகழ்வாராயினர். அந்நாளில், பிரான்மலை நிற்கும் நாட்டைச் சேர்ந்த நகரத்தாருள் பலர், திருஞானசம்பந்தர் பால் மிக்க ஈடுபாடுடையராய் இருந்தனர். கலசப்பாடியுடையார் திருஞான சம்பந்தர், நாவலூருடையார் திருஞான சம்பந்தர்” எனப் பலர் அவரிடையே காணப்படுவதும், அவருள் ஒருவர் “பட்டமுடையார் ஆணை நமதென்ற பெருமாள்”5 என்ற பெயர்கொண்டிருப்பதும் குறிக்கத்தகுவனவாகும். திருவண்ணாமலைப் பதிகத்தில் ஞானசம்பந்தர் வழங்கும் “பெண்ணாகிய பெருமான்”6 என்ற தொடர், திருக்கோயிலூர் வட்டத்திலுள்ள மாறங்கியூர்க் கல்வெட்டொன்றில், “இருங்கோளப் பாடி நாட்டுச் சிற்றாமூருடையான் தியாகப் பெருமாள் பெண்ணாகிய பெருமான்”7 என்ற ஒரு தலைவனுக்குப் பெயராக விளங்கியிருக்கிறது. “மறையணி நாவினான் மாமழபாடியே”8 யென்பது திருஞானசம் பந்தர் வழங்குவது; திருமழபாடிப் பகுதியில் வாழ்ந்த பட்டனொருவன் “மறையணிநாவினான் பட்டன்”9 என்று பெயர் கூறப்படுகின்றான். திருநெல்வேலிப்பதிகத்தில் “மந்திகள் பாய்தர மதுத்திவலை சிந்து பூந்துறைகமழ் திருநெல்வேலி”1 என்று ஞானசம்பந்தர் பாடினாராக, அவ்வூரின் ஒரு பகுதிக்கே “சிந்து பூந்துறை”2 என்ற பெயர் வழங்குவ தாயிற்று. அப்பதிகத்தே “திருந்துமா மறையவர் திருநெல்வேலி” எனவரும்தொடரில் திருந்துமாமறை யென்ற தொடரை வழிவகை யொன்றுக்குப் பெயராக அமைத்து “திருந்து மாமறைப்பிலாறு என்னும் பேரால் விட்டவழி”3 என்று வழங்கியுள்ளனர். இறுதியாக ஒன்றுகூறி இப்பகுதியை முடிக்கின்றோம். திருஞான சம்பந்தர் காலத்தே தமிழகத்தில் மிறைக்கவிபாடும் வழக்காறு வந்து விட்டது. அதனால் அவர், ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலைமாற்று, கோமுத்திரிகை, சக்கரமாற்று முதலியன பாடியுள்ளனர். பழமையாக வரும் இசைத் தமிழ் நெறியில் பல வேறுபாட்டுக்களைப் பாடிய திருஞானசம்பந்தர், புதுவதாகப் புகுந்த மிறைக்கவி (சித்திர கவி) நெறியையும் மேற்கொண்டமை, அக்காலத்தே வாழ்ந்த புதுமைப் பித்தர்களைத் தம்மொடு தழுவிக்கொண்டு சென்ற அவரது தகைமையை நாம் தெளியக் காட்டுகின்றது. நாளும் வளர்ந்து வரும் மக்கள் உள்ளம் எவ்வெப்புதுமை நெறிகளை விரும்பி மேற்கொள்கிறதோ அவ்வந் நெறிகளைத் தேர்ந்து மேற்கொள்ளாது ஒழியுமாயின். அவ்வுள்ளத்தைச் சமய நல்லொழுக்கத்தை மேற்கொள்ளுமாறு செய்யும் சமயப்பணி வெற்றி பெறாது என்பது உலகில் தோன்றி நின்று மறைந்த பழம் பெருஞ் சமயங்களில் வரலாறு காட்டும் உண்மை. இவ்வுண்மை நெறிதிருஞான சம்பந்தர் நாளும் இன்னிசையால் வளர்த்த தமிழ்த் தொகையுள் ஒளிவிட்டுத் திகழ்வதை அறிஞர் கண்டு இன்புறு வார்களாக.  3. திருநாவுக்கரசர் வரலாறு திருஞான சம்பந்தர் காலத்தில் அவரோடு உடனிருந்த சான் றோருள் திருநாவுக்கரசர் ஒருவர் என்பது முன்பே கூறப்பட்டுள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றில் சீர்த்த இடம் பெறுவோருள் இவரும் ஞான சம்பந்தர் போலச் சிறந்தவராவர். திருநாவுக்கரசரது பிள்ளைப் பெர் மருணீக்கியார் என்பது. இவரது ஊர் நடுநாட்டிலுள்ள திருவாரூர்; இஃது இப்போது தென்னார்க்காடு மாவட்டத்தில் பண்ணுருட்டிக்கு மேற்கில் மூன்று நான்கு கல் தூரத்தில் இருக்கிறது. அவ்வூரில் வேளாளர் குடியில் செல்வச் சிறப்பும் போர்ப்புகழும் சிறக்கப்பெற்ற புகழனார்1 என்பார்க்கும் அவர் மனைவி மாதினியார் என்பார்க்கும் மகனாகப் பிறந்தவர் மருணீக்கியார். இவர்க்கு முன்னே பிறந்தவர் திலகவதி என்னும் சிவம்பெருக்கும் திருவுடையராவர். மருணீக்கியார் இளமையில் சிறந்த கல்வி பெற்று வருகையில் திலகவதியார்க்குத் திருமண ஏற்பாடு செய்யப்பெற்றது. மணநாள் குறிக்கப்பெற்ற பின், மணமகனாகக் குறிக்கப்பெற்றவர் போர்க்குச் செல்ல வேண்டியவரானார். போர் முடிவு பெறுதற்குள், புகழனார் இயற்கை யெய்தினார். அவர் மனைவியாரும் உடன்கட்டை யேறினார். திலகவதி யாரும் மருணீக்கியாரும் உறவினரிடையே தனித் திருப்பாராயினர். இந்நிலையில் போர்க்குச் சென்ற மண மகனார், அப்"பொருவாரும் போர்க்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்." இச்செய்தியை அறிந்ததும், திலகவாதியார், தான் மணஞ் செய்யப் பெறாராயினும், தன்னை மணம் பேசப் பெற்றவர்க்கு உரிமை செய்து விட்டாராதலால், தன் தாயைப் போலத் தானும் உடனுயிர் துறக்க கருதினார். பற்றுக் கோடாகிய தாய் தந்தையாரைப் பிரிந்து மனம் சோர்ந்திருந்த மருணீக்கி யார்க்குத் தந்தையும் தாயும் போல வேண்டு வன புரிந்து அன்புறப் பேணிவரும் அருமைத் தமக்கையார் கருத்து, அவரது உள்ளத்தே பெருந்துயரை விளைவித்தது. உடனே, அவர் தமக்கையார் திருவடியில் வீழ்ந்து வணங்கித் தம்பொருட்டு உயிர் தாங்கியருளல் வேண்டுமென இறைஞ்சினார். "தம்பியார் உளராக வேண்டும்"1 என்ற சீரருள் திலகவதியார் உள்ளத்தே பிறந்தது. அவ்வாறே, அவர், மருணீக்கியாகிய தன் தம்பியன் பொருட்டு உயிர் வாழ்வாராயினர். திருநாவுக்கரசரான பின், தன் பொருட்டு உயிர் வாழ்தற்கு ஒருப்பட்ட தன் தமக்கையின் அருள்நலத்தைப் பின் பொருகால் நினைவுகூர்ந்து, தான் பாடிய திருப்பதிகமொன்றில், "அம்மை யார் எனக்கு என்று என்று அரற்றினேற்கு, அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே"2 எனக் குறித்துரைத் துள்ளார். மருணீக்கியார், பெற்றோரையும் உற்றோரையும் இழந்த துன்பத்தினின்றும், ஒருவாறு தேறி, நிலையாமை யுணர்வு மீதூரப் பெற்றுச், சமய நூல்களைப் பயிலத் தொடங்கினார். நிலையாமையைப் பலபடியாலும் எடுத்தோதிச் சிறப்பிக்கும் வகையில், சமண் சமயம், அவருள்ளத்தைப் பெரிதும் மகிழ்வித்தது. சமண் நூல்கள் பலவற்றைப் பயின்றார். தமக்கையாரைப் பிரிந்து சென்று சமண் பள்ளிகளை அடைந்து தாமும் சமணரானார். அச்சமயத்தவர் உறைந்த பல இடங்கட்கும் சென்று பகுத்த சமணநூற் புலவராகித் தருமசேனர் என்னும் சிறப்புப்பெற்றுத் திகழ்வாராயினர். தம்பியார் தன்னைக் கைவிட்டுத் தமக்குரிய சிவநெறியையும் துறந்து சமணரானது, திலகவதியார் உள்ளத்தில் பெருங் கலக்கத்தை விளைவித்தது. அண்மையிலுள்ள திருவதிகையை அடைந்து திருமட மொன்றை அமைத்துக் கொண்டு, திருவதிகைக் கோயிலில் நாளும் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல் முதலிய திருப்பணிகளைச் செய்து வரலானார். நாட்கள் திங்களாயின; திங்கள் யாண்டுகளாயின; பல ஆண்டுகள் கழிந்தன. நடுநாட்டை ஆண்ட வேந்தனான முதல் மகேந்திரவன்மன் சமண் சமயத்தை மேற்கொண்டு அதனைப் பெரிதும் ஆதரித்து வந்ததனால், அவன் காலத்தே திருப்பாதிரிப் புலியூர் சமண் சமயத் தவர்க்குச் சிறந்த இடமாய் விளங்கிற்று என்பது முன்பே கூறப்பட்டது. அங்கிருந்தே சமண் துறவிகள் தங்கள் சமயத்தை நாட்டில் பரப்பி வந்தனர். வேந்தனும் சமணனாய் இருந்தமையின் அரசியற் சலுகை பெற்ற சமண் சமயம் சிறப்புறுவதாயிற்று. இக் காலத்தே தான், தென்பாண்டி நாட்டிலும் சமண் சமயம் அரசு கட்டிலேறி ஆட்சி புரிந்து வந்தது. திருப்பாதிரிப்புலியூரில் தருமசேனராய் விளங்கிய மருணீக்கி யார்க்குச் சூலை நோயுண்டாயிற்று. அது நீங்குதற்குரிய முயற்சிகள் பலவும் பயன்தாரா தொழிந்தன. முடிவில் ஒருநாள், அவர் திருவதிகை அடைந்து தன் தமக்கையாரைக் கண்டு அவர் திருவடியில் வீழ்ந்து வணங்கி நோய் தீரும் வகை அறியாது திகைக்கும் தம் திகைப்பைத் தெரிவித்துக் கொண்டார். திலகவதியார், உடனே திருவதிகைப் பெருமானை வணங்கி அவர் திருப்பெயரைச் சொல்லித் திருநீறணி வித்து அப் பெருமானை வணங்கித் தனது குறையைச் சொல்லிப் பாடிப்பரவச் செய்தார். மருணீக்கியார், "கூற்றாயினவாறு விலக்க கிலீர்"1 எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். இதன்கண், "சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்"2 "வலிக்கின்றது சூலை தவிர்த் தருளீர்"3 என்று குறித்திருப்பது இவ்வரலாற்றை வற்புறுத்துகிறது. இத் திருப்பதிகத்தைப் பாடிப் பரவியதன் பயனாக மருணீக்கி யாருக்குச் சூலை நோய் நீங்கிற்று. அது நீங்கிய மகிழ்ச்சியால் அவர் பல திருப்பதிகங்களைப் பாடினார். அது முதல் அவர் திருநாவுக் கரசராய்ச் சிவபெருமானது திருவருளைப்பாடும் திருத் தொண்ட ரானர். தக்குற்ற சூலை நோய் இறைவன் திருவருளால் வந்தது என்றும், அதனைத் தீர்க்கு முகத்தால் இறைவன் தம்மை ஆட்கொண்டான் என்றும்1 உணர்ந்தார்; இறைவன்பால் பேரன்பு பெருகிற்று. மூத்து முதிர்ந்த முதுமை நிலையினும் அவர் தமக்கையுடன் திருக்கோயிலில் திருத்தொண்டு புரிந்து கொண்டும் திருப்பதிகம் பாடிக் கொண்டும் இருந்து வரலானார். இச் செய்தியறிந்த சமணருட் பலர், பல்லவ வேந்தனை அடைந்து திருநாவுக்கரசரின் செயலை மிகைப்படுத்தோதி அவன் உள்ளத்தே அவர்பால் சினமுண்டாகச் செய்தனர். வேந்தன் திருநாவுக்கரசரைத் தன்மூன் வருமாறு பணித்தான். அவர், "நாமார்க்கும் குடியல்லோம்"2 எனத் தொடங்கம் திருப்பதிகத்தைப் பாடி, "நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன வாசகமெல்லாம் மறந்தோம்; வந்தீர் யார்? மன்னனாவான் யார்?"3 என்று எடுத்தோதி மறுத்தார். பின்னர், அவர் வேந்தன் முன் கொண்டுபோகப் பெற்று நீற்றறையில் சிறையிடப் பெற்றார்;4 அங்கே அவர்கள் அவர்க்கு நஞ்சுகலந்த உணவு தந்தனர்;5 வயக்களிறு கொண்டு அவர் தலையை இடறச் செய்தனர், இவற்றால் சிறிதும் அவர் ஊறுபடாதது கண்டும் அமையாது, முடிவில், அவரை ஒரு கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளி விட்டனர். ஆனால், நாவரசர், இறைவன் திருப்பெயரையே ஓதி6 அக் கல்லோடே மிதந்து போந்து கரையேறித் திருப்பாதிரிப் புலியூர் இறைவனைப் பரவி விட்டுத் திருவதிகை வந்து சேர்ந்தார். சமணர் செய்த இடுக்கண்களிலிருந்து இனிது உய்ந்து உயர்ந்த திருநாவுக் கரசர்க்கு இறைவன் திருவருள் புரிந்த நலத்தை அறிந்தான் பல்லவமன்னன்; தானும் சைவன் ஆனான். திருப்பாதிரிப்புலியூரி லிருந்த சமண்பாழிகளை இடித்துத் தகர்த்து நாவரசர் இருந்த திருவதிகையில் குணபரன் என்ற தன் பெயரால் குணபரேச்சரம் என்னும் கோயில் ஒன்றைப் புதிதாகக் கட்டினான்.1 அது குணத ரேச்சுரம் எனவும் வழங்கும். குணபரன் என்பது முதன் மகேந்திரவன் மனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று. அவனே தான் சைவனான திறத்தை அவன் காலத்தே திருச்சிராப்பள்ளியில் ஏற்பட்ட கல்வெட்டொன்றில்2 குறித்திருக்கின்றான். பின்பு, நாவரசர், சிவபெருமான் எழுந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அப்பெருமானைப் பாடிப் பரவும் வேட்கை யுற்றுத் திருவெண்ணெய் நல்லூர் திருக்கோவலூர் முதலிய திருப்பதி கட்குச் சென்று, திருத்தூங்கானைமாடம் என்னும் திருக்கோயில் உள்ள பெண்ணாகடம் அடைந்தார். அங்கே இறைவனை வணங்கித் தனக்கு மூவிலைச் சூலக்குறியும் இடபக்குறியும் பொறித்துத் தனது உடம்பைத் தூய்மை செய்யவேண்டுமென3 வேண்டிக்கொண்டார். இறைவன் அருளால் அவர்க்கு அவர் விழைந்தவாறே சூலக்குறியும் இடபக் குறியும் பொறிக்கப்பட்டன. பெண்ணாகடத்தில் சின்னாள் தங்கியிருந்து அரிதிற்பிரிந்து போந்த நாவுக்கரசர், தில்லைப்பேரம்பலம் அடைந்து பன்னாள் தங்கி, "தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை"4 வணங்கியும் வாழ்த்தியும் திருப்பதிகங்கள் பல பாடியும் வழிபட்டுக் கொண்டிருந்தார். அந்நாளில் சீர்காழிப்பதியில் திருஞானசம்பந்தர் தோன்றி ஞானப்பாலுண்டு சிவஞானச் செல்வராய்த் திகழ்வது கேள்வியுற்றார். உடனே, சீர்காழிக்குச் சென்று அவரையும் அங்குள்ள சிவபெருமானையும் கண்டு இன்புற வேண்டும் என்னும் விழைவு மீதூரப் பெற்றுச் சீர்காழியடைந்து, தன் வரவு கேட்டு வரவேற்ற திருஞானசம்பந்தப் பிள்ளை யாரைக்கண்டு பேரின்புற்றார். பின்னர், சீர்காழிப் பரமனை வணங்கி வழிபட்டுத் திருப்பதிகங்கள் பல இசை த்து இன்பம் கொண்டார். சில நாட்கள் கழிந்ததும், திருநாவுக்கரசர், இடையிலுள்ள திருப்பதிகளைப் பதிகம்பாடிப் பரவிக்கொண்டே பழையாறை நகரத்து ஒரு கூற்றிலுள்ள திருச்சத்திமுற்றம் அடைந்து இறைவனை வணங்கித் தன் முடிமேல் அவர் திருவடியைச் சூட்டுமாறு வேண்டினார். அப்போது, இறைவன் அவர் கனவில் தோன்றி "நல்லூர்க்கு வா" என்று பணிப்ப, நாவரசர் நல்லூரையடைந்து தான் நயந்த திருவடிப்பேறு பெற்று, அதனால் எய்திய இன்பமிகுதியால் இனிய திருப்பதிகங்கள் பாடினார். அங்கே சிலகாலம் தங்கியிருந்த திருநாவரையர், மேலும் பல திருப்பதி களைக்கண்டுவழிபட விரும்பித் திருப்பழனம் முதலிய திருப்பதிகளைப் பராவிக் கொண்டு திங்களூர்க்குச் சென்றார். அவ்வூரில் அப்பூதியென்னும் வேதியர் தம்பால் பேரன்பு கொண்டு தம்பெயரையே தன்மக்கட்கும் தான் நிறுவிய தண்ணீர்ப் பந்தர் முதலியவற்றிற்கும் இட்டுப்பெருஞ் சிறப்புடன் ஒழுகி வருவதை நாவரசர் கண்டார். அவர்மகன் மூத்த திருநாவுக்கரசர் என்பான் அரவு தீண்டப்பட்டு இறந்தானைத் திருப்பதிகம் பாடி உயிர்ப்பித்து. அப்பூதியாரையும் தாம்பாடிய திருப்பதிகமொன்றில் சிறப்பித்து அவர்பால் பிரியாவிடை பெற்றுக்கொண்டு திருவாரூர் சென்று சேர்ந்தார். திருவாரூர் அந்நாட்கு முன்பிருந்தே சோழர் தலைநகராய்ச் சிறந்து விளங்கியது. அங்குள்ள சிவபெருமானுக்குத் திருவாதிரை விழா மிக்க சிறப்புடன் நடைபெறுவது வழக்கம். திருநாவுக்கரசர் அங்கே பலநாட்கள் தங்கித் திருப்பதிகத்தொண்டும் உழவாரத் திருத்தொண்டும் புரிந்தார். பின்பு, அவர் திருப்புகலூரையடைந் தாராக, அங்கே வந்திருந்த திருஞானசம்பந்தரைக் கண்டு திருவாரூரில் தாம்கண்ட திருவாதிரை விழாவின் சிறப்பை எடுத்தோதினார். ஞானசம்பந்தர் தாழும் சென்று அவ் விழாவைக்காண விழைந்து திருவாரூருக்குச் சென்றார். நாவரசர் திருப்புகலூர் முருகநாயனார் திருமடத்தில் சிலநாள் தங்கி இருந்து, திருஞானசம்பந்தர் திரும்பி வந்ததும், அவருடன் திருப்பதிகள் பலவற்றை வணங்கிக்கொண்டு திருவீழிமிழலை யடைந்தார். அந்நாளில், நாட்டில் மழை இல்லாமையால் காவிரியும் வறண்டது. உணவு நெருக்கடியான பெருவறம் உண்டாயிற்று. திருவீழிமிழலையீயல் கூடியிருந்த திருநாவுக்கரசர்க்கும் திருஞான சம்பந்தப் பிள்ளையார்க்கும் வீழியிறைவன் நாடொறும் படிக்காசு நல்கினார். அதனால் இருவரும் வறுமை அறியாது இனிதிருந்தனர். பின்னர் மழைபெய்தது; நாடும் நலமுற்றது. அதன் பின், இருவரும் திருமறைக்காட்டுக்குச் சென்றனர். அங்கே மறைக்கதவுகளைத்திறத்தலும் மூடுதலுமாகிய நிகழ்ச்சிகள் நடந்தன.1 அவ்வூரில் தங்கியிருக்கும் நாளில் ஒருநாள் இறைவன் நாவரசர் கனவில் தோன்றித் திருவாய் மூருக்கு வருமாறு பணித்தார். நாவரசர் திருவாய் மூருக்குச் சென்றார். வழியில் இறைவன் பொற் கோயில் ஒன்றைக் காட்டி அதனுட் புக்கு மறைந்தார். அதனால் அவர் இறைவனைக் காணாது அயருங்கால், அவர்திருவாய் மூருக்குச் செல்வது அறிந்து திருஞானசம்பந்தரும் வந்து சேர்ந்தார். நாவரசர் இறைவனை நோக்கித் திருஞானசம்பந்தர் உடனிருப்பதை எடுத் தோதித் தனக்கு இறைவன் திருவுருவைக் காட்டவேண்டுமென வேண்டி ஒரு பதிகம் பாடினர். இறைவன் தன் திருவுருவைக்காட்டி யருளவே, நாவுக்கரசர் திருவாய் மூர் இறைவனைப்பாடும் அடியா ரொடு கண்டு இன்புற்றுத் திருவாய் மூருக்குச் சென்று இறைவனை வணங்கி வழிபட்டுக்கொண்டு திருமறைக் காட்டுக்கே மீளவும் வந்து சேர்ந்தார். சின்னாட்களில் திரு ஞானசம்பந்ததர் தென்பாண்டி நாட்டுக்குச் சென்றார். திருநாவுக்கரசரும் திருமறைக் காட்டினின்றும் புறப்பட்டுத் திருவீழிமிழலை திருவாவடுதுறை முதலிய திருப்பதிகளை வணங்கி வழிபட்டுக்கொண்டு பழையாறைக்கு வந்துசேர்ந்தார். அங்கே, வடதளியென்னும் திருக்கோயிலில் இருந்த இறைவன் திருவுருவத்தைச் சமணர்கள் மறைத்து விட்டனர். அதனை அறிந்த திருநாவுக்கரசர், சமணர்கள் செய்ததீச்செயலைமறுத்து அவ்விடத்தே ஒருபுறத்தில் தங்கி உண்ணா நோன்பு1 மேற்கொண்டார். உடனே பழையாறையிலிருந்த வேந்தர் பெருமானான சோழன் அதனை அறிந்த போந்து, சமணர்களை விலக்கி, வடதறி இறைவனது திருவுருவம் வெளிப் பட்டுவிளங்கச் செய்தான். நாவரசரும் அவ்விறைவனைப் பதிகம் பாடிப் பராவிக் கொண்டு மேலும் பல திருப்பதிகளை வணங்குதற்குச் சென்றார். திருநாவுக்கரசர், திருவானைக்கா முதலிய பதிகள் பலவற்றை வணங்கிக் கொண்டு திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும்போது, வழியில் இறைவன் ஒரு வேதியனாய்ப் பொதிசோறும் நீரும் கொணர்ந்து தந்து அவரது இளைப்பைப் போக்கிப் பைஞ்ஞீலிக்குச் செல்லும வழியைக்காட்டி மறைந்தார். பைஞ்ஞீலி இறைவனைப் பரவிச் சென்ற நாவரசர், மலைநாட்டுப் பதிகள் பலவற்றிற்குச் சென்று, பின்னர்த் திருவண்ணாமலை யடைந்து இறைவனை வணங்கிப் பதிகம் பல பாடிப் பரவினார். அங்கிருந்து திருவோத்தூர், திருவேகம்பம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்துக் கொண்டு திருக்காளத்திக்குச் சென்றார். அங்கே கண்ணப்பர் செய்த திருத்தொண்டை வியந்து கொண்டே பன்னாட்கள் தங்கினார்; அப்போது அவர் பாடிய திருப்பதிகங்கள்2 பலவாகும். திருக்காளத்தியில் தங்கியிருந்த திருநாவுக்கரசர்க்குத் திருக் கயிலையைக் கண்டு வழிபட வேண்டுமென்னும் ஒரு வேட்கை உள்ளத்தில் உண்டாயிற்று. உடனே கயிலை நோக்கி புறப்பட்டுச் செல்லலுற்றார். மிக்க முதுமையுடையவராயினும், உலையாவுள்ள முடைமையால், வழியருமை கருதாது செல்வாராயினார். அரிய வழிகள் பலவற்றை நடந்து கடக்க வேண்டியிருந்தமையின் நாவரசர்க்கு உடல்வலி குறைந்தது; நடக்கும் நடை தளர்ந்தது; கைகால்கள் தேய்ந்தன; உடலால் தவழ்வதும் செய்தார். உடலுறுப்புக்கள் ஓய்ந்து தேய்ந்தொழியினும், உள்ளம் மட்டில் சிறிதும் தேயாது ஓங்கிநின்றது. அவரது உண்மையன்பின் உறைப்பினைக்கண்ட திருக்கயிலை முதல் வானகிய சிவபெருமான், வழியிடையே தோன்றி, ஒரு பொய்கையைக் காட்டி அதன் கண் மூழ்கித் திருவையாற்றில் திருக்கயிலைக் காட்சியைக் கண்டு மகிழ்க எனப் பணித்தருளினார். அவ்வாறே நாவரசரும் அப்பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் கரையேறித் திருக்கயிலைக் காட்சி கண்டு இன்புற்றார்; இறைவன் கயிலையிற் போல ஆணும் பெண்ணும் எவ்வுயிரும் கலந்து நிற்கும் காட்சி நல்கினான். அப்பேற்றை நம் நாவரசர் இனிய திருப்பதிகங்களாற் பாடி மகிழ்ந்தார். பின்பு திருநாவுக்கரசர் திருப்பூந்துருத்திக்குச் சென்று திருமட மொன்றைச் சமைத்துக் கொண்டு அங்கே தங்கித் தொண்டுகள் பல செய்து வந்தார். அந்நாளில் தென்னாடு சென்று தென்னவனைச் சைவனாக்கி நாடு முழுதும் சிவம்பெருக்கிப் போந்த திருஞான சம்பந்தர் திருப்பூந்துருத்திக்கு வந்தனர். அவரை அன்புடன் வரவேற்ற நாவரசர் அவருடனே திருப்பூந்துருத்தியிற் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கினர். திருஞான சம்பந்தர் நீங்கிய பின் நாவரசர், தென்னாடுசைவ நாடானது கேட்ட மகிழ்ச்சியால் தாமும் அங்குச் சென்று அந்நாட்டுப் பதிபலவும் கண்டு பரவ விரும்பிப் புறப்பட்டுச் சென்றார். மதுரையில் நெடுமாறனும் மங்கையர்க்கரசியாரும் குலச் சிறையாரும் செய்த சிறப்புக் கண்டு பேருவகையுற்றுத் தென்னாட்டுப் பதி பலவும் கண்டு கொண்டு திரும்பப் பொன்னி நாடு வந்து சேர்ந்தார். முடிவில் அவர் திருப்புகலூரை யடைந்து உழவாரப் பணியும் திருப் பதிகப் பணியும் புரிந்து வந்தார். அங்கே சோதனைகள் பல நிகழ்ந்தன. அவற்றை யெல்லாம் வென்று சிறந்த திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள் சதயத் திருநாளில் "சிவானந்த ஞானவடிவேயாகி"1 இறைவன் திரு வடிக் கீழ்ச் சென்று சேர்ந்தார். பிற நூற் குறிப்பு திருநாவுக்கரசரது வரலாற்றை அறிதற்குச் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் சிறந்து நிற்கிறது. அவர்க்கு முன்தோன்றி விளங்கிய நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி, திருநாவுக்கரசு தேவர் திருவேகாதசமாலை என்பனவும் இவர் வரலாற்றுக் குறிப்புக்களுட் சிலவற்றைத் தம்மகத்தே கொண்டுள்ளன. இவற்றுள் திருத்தொண்டத் தொகை, "திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன்"1 என்று குறிப்பதனோடு அமைக்கின்றது. திருத்தொண்டர் திருவந்தாதி, "திருநாவுக்கரசர் திருவாமூரையுடையவர்; திருவதிகை வீரட்டரால் ஆட்கொள்ளப்பட்டவர்; பகைவர் விடங்கலந் தளித்த அமுதை யுண்டவர்; திருநல்லூரில் சிவபெருமானால் சென்னியில் திருவடி சூட்டப்பெற்றவர்"2 என்றும், "அவருடைய திருப்பதிகங்கள் திருமறைக்காட்டில் மறைக் கதவுகளைத் திறந்தன; அவர் கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளப்பட்ட போது, அக்கல்லைப் புணையாகக் கடலில் மிதப்பித்தன"3 என்றும், திருநாவுக்கரசர் தம் தமக்கையார் அறிவுரையை மேற்கொண்டு திருநீறணிந்து சூலைநோய் நீங்கினார்4 என்றும், வானுலக மகளிர் இனிய நடம்புரிந்து அவர் கருத்தைக் கலைக்க முயன்றாராக, அவர், அவர் களைத் துகளாக வெறுத்து ஒதுக்கினர்5 என்றும் அவர் 4900 திருப் பதிகங்கள் பாடினார்6 என்றும் அந்நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர் வரலாறு குறித்துப் பிற்காலத்தில் எழுந்த பாடல்கள் மிகப் பல; அவை திருத்தொண்டர் புராணத்தை மேற்கொண்டன. திருநாவுக்கரசரது காலம் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் ஒரு காலத்தவர் என்பது முன்பே கூறப்பட்டது. இருவரும் பன்முறையும் தம்மில் கூடி இறைவனை வழிபட்டுள்ளனர்; அதனால் திருஞான சம்பந்தர் வாழ்ந்த கி.பி. ஏழாம் நூற்றாண்டாகிய காலமே திருநாவுக்கரசர் வாழ்ந்த காலமாம் என்பது பொதுவாக விளங்கும் உண்மையாகும். திருநாவுக்கரசர் தமது எண்பத்தோராம் ஆண்டில் இறைவன் திருவடி நீழலெய்தினார் எனப் பழைய பாட்டு ஒன்று1 கூறுகிறது. அக்கூற்று அறிஞர் பலராலும் ஏற்கப்பெற்று நிலவுகிறது. மேலும், திருஞான சம்பந்தர் தோன்றுதற்கு முன்தோன்றி, அவர் இவ்வுலகில் நிலவிய காலமுற்றும் உடனிருந்து, அவர் இறைவனது அருளொளியிற் கலந்த பின்னும் இருந்து சிறந்தவர் திருநாவுக்கரசர் என்பது சைவவுலகு நன்கு அறிந்த செய்திகளுள் ஒன்று. காஞ்சி நகரைத் தலைமை நகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த முதன் மகேந்திரவன்மன் தொடக்கத்தில் சமண் சமயத்திலிருந்து பின்னர்த் திருநாவுக்கரசரால் சைவ சமயம் சேர்ந்தவன் என அவனது வரலாறு கண்டோர்2 கூறுகின்றனர். நாவரசரால் சைவனாகிய அவன், பாடலிபுத்திரம் என அந்நாளில் சமணரால் பெயர் வழங்கப் பெற்ற திருப்பாதிரிப்புலியூரிலிருந்த சமண் பாழிகளை இடித்துத் திருவதிகையில் தன் பெயரால் குணபரேச்சரம் என்னும் கோயிலைக் கட்டினான் என்று3 திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. குணபர னென்பது முதன் மகேந்திரவன்மனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று என்பதைத் திருச்சிராப்பள்ளியிலுள்ள அவனது4 கல்வெட்டே எடுத்தோதுகிறது. ஆகவே, குணபரனான முதன் மகேந்திரவன்மன் திருவதிகையில் ஓர் இடங்கண்டு அங்கே குணபரேச்சரத்தை எடுத்ததும், அந்நாளில் அத் திருவதிகையில் திருநாவுக்கரசர் தம்முடைய தமக்கை திலகவதியாரது திருமடத்தில் இருந்து கொண்டு நாளும் இறைவனைத் திருப்பதிகம் பாடி வழிபட்டு வந்தனரென1 அவர் வரலாறு கூறுவதும் ஒப்பவைத்து நோக்குவோர், முதன் மகேந்திரவன்மன் திருநாவுக்கரசரால் சைவனானான் என்பதைத் தெளிவாகக் காண்பர். இனி, இம் முதன் மகேந்திரவன்மன் கி.பி. 600 முதல் 630 வரையில் ஆட்சி புரிந்த பல்லவ வேந்தனாவான். அவன் சமண் வேந்தனாக இருந்தபோது திருநாவுக்கரசரும் தருமசேனர் என்ற பெயருடன் சமண் சமயத்திலிருந்து, அவன் சைவனாவதற்குச் சிறிது முன்பே சைவரானார். அவ்வேந்தன் சமணனாக இருந்தபோது அச்சமண் சமயத்தின்பால் அவனுக்கு இருந்த பற்றின் மிகுதியை அவன் ஏனைச் சமயங்களை எள்ளியிகழ்ந்து எழுதியிருக்கும் மத்த விலாச நாடகமே நல்ல சான்று பகருகிறது. அப்பற்று மிகுதி முற்றும், அவன் சைவனான பின், சமண் சமயத்தின் பால் காழ்ப்பாய் மாறினமையே அவன் சமண் பாழிகளை இடித்துத் தகர்த்துக் கொண்டு சென்று குணபரேச்சரத்தைக் கட்டியதற்குக் காரணமாகும். இனி திருநாவுக்கரசர் சைவராகிய போது மிக்க முதுமை யுற்றிருந்தார் எனத் திருத்தொண்டர் வரலாற்றுக் குறிப்பு2 ஒன்றால் தெளிவாகத் தெரிகிறது. அவர் சமணரான காலத்தில் வேற்றுச்சமய உண்மைகளை அறிதற்கண் வேட்கை எழுதற்குரிய அத்துணைப் பரந்த கல்வி கேள்விகளையுடையராயிருந்தமையின், அப்போது அவர்க்குக் குறைந்தது இருபத்தைந்து வயதேனும் இருத்தல் வேண்டும். அவர் சைவரானபோது, முதுமையும் அது காரணமாக உடலிற்பிறக்கும் அசைவும் அவர்பால் காணப்பட்டமையின் அவர்க்கு அப்போது வயது ஐம்பதுக்குக் குறையாமலும் அறுபதுக்கு மிகாலும் இருக்கும். ஆகவே, அவர் சமண் சமயத்தில் குறைந்த அளவு இருபத்தைந் தாண்டேனும் இருந்திருப்பர் எனக் கருதலாம். இவ்வகையால், திருநாவுக்கரசர் திருவாமூரில் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தார் என்பது தெளிவு. முதன் மகேந்திரவன்மன் சைவனானபின், சிவன்கோயில்கள் பல கட்டியிருப்பது1 காண்கின்றோம். இவற்றைக் கட்டுதற்குப் பத்தாண்டுகள் வைப்போமாயின், அவன் கி.பி.620 அளவில் சிவநெறி சேர்ந்தான் எனல் அமையும். அப்போது நாவரசரது வயதைக் குறைந்தது ஐம்பதாகக் கொண்டாலும் அவர், கி.பி. 570 அளவில் பிறந்தார் என்பது பெறப்படும். ஆகவே, திருநாவுக்கரசர், கி. பி. 570 அளவில் திருவாமூரில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் மகனாகத்தோன்றி, எண்பத் தோரியாண்டு மண்ணுலகில் வாழ்ந்திருந்து, கி.பி. 650-1 அளவில் சித்திரைத் திங்கள் சதய நாளில் திருப்புகலூரில் இறைவன் திருவடி நீழல் எய்தினார் என அறிகின்றோம். இனி, தமிழ் வரலாறு எழுதிய தஞ்சை ராவ்சாகிபு K. சீனிவாசப் பிள்ளை அவர்கள், முதல் மகேந்திரவன்மன் தனது ஆட்சியின் முற்பாதியில் சைவனாகி யிருக்கவேண்டும் என்றும், அஃதாவது கி.பி. 610-ஆம் ஆண்டை ஒட்டியிருக்கலாம் என்றும், திருநாவுக்கரசர் சயினரான காலத்தில் அவர்க்கு “இருபத்தைந்து வயது இருந் திருக்கலாம்” என்றும், அச்சமயத்திலேயே “பதினைந்து ஆண்டுகளாவது சென்றிருத்தல் வேண்டும் என்றும்,” “மீண்டும் சைவத்தைத் தழுவியகாலத்து இவருக்கு வயது நாற்பதை ஒட்டி யிருந்ததென்று கொள்ளலாம் என்றும், அவர் திருஞானசம்பந்தரை முதன் முதலாகச் சீர்காழியில் சந்தித்த போது “அப்பர் சுவாமிகளுக்கு எழுபது ஆண்டுக்கு மேலிருக்க வேண்டும்”என்றும், “இதனால், சுவாமிகள் திருவதிகையில் சற்றேறக்குறைய முப்பதாண்டுகள் வதிந்தன ரென்று கொள்ளலாம் என்றும் பின்பு ஞானசம்பந்தரைத் திருப்புகலூரில் முருக நாயனார் திருமடத்தில் “சந்தித்த போது கி.பி. 650-ஆம் ஆண்டுக்குச் சிறிது கால முன்னராய் இருக்கலாம்” என்றும், அவர் இறைவன் திருவடி அடைந்தது கி.பி. அறுநூற்றைம் பத்தைந்தை ஒட்டியிருக்கலாமென்றும்1 கூறுவர். இனி, பெரியபுராண ஆராய்ச்சி யுடையார், திருநாவுக்கரசர், “சைவராக மாறின பொழுது குறைந்தது 35-40 வயதினராதல் வேண்டும்; அவர் 81 ஆண்டளவும் வாழ்ந்தவரென்ற கர்ணபரம்பரைக் கூற்றை நம்பினால், அவரது காலம் உத்தேசமாகக் கி.பி. 580-660 எனக் கோடல் பொருத்தமாகும்”2 என்று கூறுவர். திருஞானசம்பந்தர் முதன்முதலாகத் திருநாவுக்கரசரைச் சீர் காழிப்பதியிற் கண்டபோது, அவருடைய திருமேனியில் அசைவு தோன்றியிருப்பதைக் கண்டார் எனச் சேக்கிழார் குறிக்கின்றார்.3 இதனால் அக்காலத்தே திருநாவுக்கரசர் மிக்க முதுமை யெய்தி யிருந்தனர் என்பது தெளிவாகிறது. இது கண்டு இவர்க்கு வயது 70 இருக்கலாம் என்பது தமிழ் வரலாறுடையார் கருத்து. சைவசமயம் புகுதற்கும் சீர்காழியில் திருஞானசம்பந்தரைச் சந்திப்பதற்கும் இடையே நிற்கும் முப்பது ஆண்டுகளையும் திருநாவுக்கரசர் திருவதிகையிலேயே கழித்தாரென்பது பொருந்துவதாக இல்லை; ஏனெனில், இறைவன் திருவருளால் சூலைநோயின் நீங்கி இன்புற்றவர், அங்கேயே இருந்தொழியாது வேறு பல திருப்பதிகட்குச் சென்று வணங்கினர் என்றே அவர் வரலாற்றின் போக்கு உணர்த்துகிறது. இனி, ஆராய்ச்சியாளர் சிலர் திருநாவுக்கரசர் சயினசமயம் புகுந்த போது நாற்பது வயதிருக்கலா மென்பது பொருந்தவில்லை; நூலறிவே பற்றி அதற்கு அடிமையாகி ஒருவர், வேற்றுச் சமயம் புகுதல் முதலிய செயல்களைச் செய்தற்குரிய காலம் முப்பதாண்டுக்குக் குறைந்த பருவமாகும். இவற்றை யெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தால், தொடக்கத்தில் யாம் கூறியவாறு கொள்வதே பொருத்தமாதல் தெளியப்படும். இலக்கிய வரலாறெழுதிய பேராசிரியர், திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்களும், கி.பி. 550 முதல் 650 வரையுள்ள காலமே தேவார முதல்வராகிய அப்பர் சம்பந்தர் காலமென்று எளிதில் கொள்ளலாம்”4 என்று கூறுகின்றார். வரலாற்றாராய்ச்சி திருநாவுக்கரசர் வரலாற்றில், அவர் சமண் சமயத்தை மேற் கொண்டு அச்சமண் சமயச் சான்றோரிடையே பலகாலம் தங்கியிருந்தவர் என்பது சிறந்ததொரு நிகழ்ச்சியாகும். பின்னர், அவர், சூலை நோயுற்றுத் திருவதிகை வீரட்டானேச்சுரரைப் பாடி அந்நோயின் நீங்கிச் சிறந்த சிவத்தொண்டராய்த் திருப்பதிகம் பல பாடலுற்றதும்,1 சமணர் அவரை நீற்றறையில் சிறையிட்டதும்,2 நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்பித்ததும்3 களிறொன்றை அவர் மேல் ஏவிக் கொலை செய்ய முயன்றதும், திருநாவுக்கரசர் கல்புணையாகக் கடலில் மிதந்து போந்து கரையேறியதும்4 பெண்ணாகடத்தில் சூலக்குறியும் இடபக் குறியும் பெற்றதும்,5 திருநல்லூரில் சென்னியில் சிவபெருமானால் திருவடி சூட்டப்பெற்றதும்,6 திங்களூர் அப்பூதி மகன் அரவு கடித்து இறந் தானை உயிர்ப்பித்து அப்பூதியைத் திருப்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்ததும்,7 திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும்,8 திருமறைக்காட்டில் கதவம் திறந்ததும், திருவாய்மூரில் சிவதரிசனம் பெற்றதும், பழை யாறையில் உண்ணா நோன்பிருந்து மறைக்கப்பட்டிருந்த சிவபெருமானை வெளிப் பட விளங்கச்செய்ததும், திருப்பைஞ்ஞீலியருகில் பொதிசோறு பெற்றதும், திருவையாற்றில் கயிலைக் காட்சி பெற்றதும் பிறவும் சிவம் பெருக்கும் சிறப்புடைச் செயல்களாகக் குறிக்கப்படுகின்றன. இவற்றைத் திருநாவுக்கரசர் தாமே வெளிப்படையாகவும் குறிப்பாகவும் ஆங்காங்கே தாம் பாடிய திருப்பதிகங்களில் குறித்திருக் கின்றார். இஃது இவரது வரலாற்றின் வாய்மையை1 நன்கு வற்புறுத்து கிறது. திருநாவுக்கரசர் தம்முடைய வாழ்நாளிற் பெரும்பகுதியைச் சமண்சமயத்தில் கழித்திருக்கின்றார்; அதனால் அவரது சமண்சமய வாழ்வு சேக்கிழாரால் திருத்தொண்டர் புராணத்துட் கூறப்பட வில்லை. வரலாறு கண்டு செல்லும் நமக்கு அதனை அறிவதும் உரிமையாகிறது. அதனை அறிதற்க வேண்டும் குறிப்புக்கள் வேறெங்கும் காணப்படவில்லை. அதனால், அவருடைய திருப்பதி கங்களே அவரது சமண்சமயவாழ்வை அறிதற்கு இடமாகின்றன. அவற்றைத் துணையாகக் கொண்டு நோக்குங்கால் அடியிற்கண்ட வகையில் அவ்வரலாறு காணப்படுகிறது. திருநாவுக்கரசர் சமண் சமயம் புகுந்ததன் நோக்கம் கூற வந்த சேக்கிழார், “நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத்துணிந்து, சமயங்களானவற்றின் நல்லாறு தெரிந்து உணர்ந்தும் நம்பர் அருளாமையினால்”2 சமண் சமயம் குறுகினார் என்றார். திருநாவுக்கரசரும் “உய்யலாம் எண்றெண்ணி”3 அச்சமயம் புகுந்ததாகக் கூறுகின்றார். அந்நாளில் சமண் துறவிகள் தமக்கெனச் சிறந்த கொள்கையும் கோலமும் உடையும் உடைய ராயிருந்தனர், தங்கள் தலைமயிரைத் தாமே பறித்துக்கொள்வதும், மகளிர் சிலர் முறையாக வந்து “எம் தெய்வம்”4 என்று மயிர்பறிக்கப் பறிப்புண்பதும், ஆடையின்றியும், பாயுடுத்தும், பீலி கையிலேந்தியும் திரிவதும் இயல்பு. மேனியிற் கடுப்பொடியைப் பூசிக்கொள்வதும் உண்ணுங்கால் நின்றுண்பதும், உரையாடாது நிறைய உண்பதும், பிறவும் அவர்களுடைய கொள்கைகள். திருநாவுக்கரசர் சமணராயிருந்தபோது, மகளிர் கண்டு நாணத் தக்க கோலம் கொண்டார். பேரூர் தெருக்களில் இவர் வரக்கண்டால், மகளிர் விரைந்து தம் மனைக்குட்சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டனர். தனது தலைமயிரைத் தானே தன்கையால் “கண்ணழலப்”1 பறித்தெறிந்தனர். சமண் சமயத்துத் துறவுக் கோலத்திலும் கொள்கையிலும் பேரீடுபாடு கொண்டு இனிதொழுகிய இவருக்கு அவர்கள் பால் உண்டாகிய அன்பு பெரிதாகும்; அதனால், அவர்களிடம் பெருநூல்கள் பல பயின்று கல்விச் செருக்கு மிகுவதாயிற்று. “ஓர்த்து உளவாறு நோக்கி உண்மையையுணராத”2 சமண் சான்றோர் கூற்றுக்கள் நாவரசருக்கு உண்மையாகவே தோன்றின. சமண்வாழ்வில் அவருடைய குலத்துக்கும் வளத்துக்கும் குறைவுண்டாகவில்லை. அந்நாளில் நிலவிய சமண் சான்றோரிடையே தமிழறிவு மிகுதியும் பரவவில்லை அவர்களது கூட்டத்திடையே இருந்ததனால், தமிழ்நெறியாகிய சிவநெறி அவர்க்கு விளங்கா தாயிற்று. ஒருகால் அந்நெறியைக் கண்டாலும், சமணரது சூழ்நிலையாற் பிறந்தகல்விச் செருக்கும் மயக்கமும் அவரை உண்மை யுணரவிடா வாயின, உண்ட கையெல்லாம் நெய்யொழுகு மாறு பேருணவு கொள்வதும், மூக்கினான் முரலும் மெல்லோசையே எழும் சமண் மந்திரங்களை ஓதித் திரிவதுமே நாவரசர் சமணராய் இருந்து செய்த பெருஞ்செயல். இச் சமண் வாழ்வின் நீங்கிச் சைவ வாழ்வு பெற்ற பின்பும், அவ்வாழ்வில் தாம் இருந்த இருப்பை எண்ணிப் பல திருப்பாட்டுக் களில் நாவரசர் வருந்திக் கூறியுள்ளார். “எண்ணில் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான்”3 “சமணரொடு அயர்த்து நாளும் மறந்து அரன்திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன், வாழ்வெலாம் வாளா மண்மேல்”4 கழித்தேன்; சமணர் கூட்டத்துட் புக்க “அழுந்தி வீழாமே போத வாங்கிப் பத்திக்கே வழிகாட்டிப் பாவம் தீர்த்துப், பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித் தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேன்”5 என்பன முதலியன இதற்குப் போதிய சான்றுகளாகும். இனி, சமண் சமயத்தில் தான் இருந்தது நெடுங்காலமென்பதை, “பல்லுரைச் சமணரோடே பலபல காலமெல்லாம் சொல்லிய செலவு செய்தேன், சோர்வன் நான் நினைந்தபோது”1 என்று குறிப்பதும், சைவ வாழ்வில் தலைப்பட்டபோது மிக்க முதுமை யெய்திய செய்தியை, “தளையவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பமெய்த, இளையனு மல்லேன், எந்தாய், என்செய்வான் தோன்றினேனே”2 என்று குறிப்பதும் நோக்கற்பாலன. நோக்குமிடத்து, திருநாவுக்கரசர்க்குச் “சமண்சமயத்தில் தன் வாழ்வில் பெரும்பகுதி கழிந்ததே” என்ற உணர்வுதோன்றி மிக்க வருத்தத்தை விளைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால், அவர், தமது சமண்சமய வாழ்வை நினைந்து வருந்திமிகப்பல பாட்டுக்களைப் பாடியிருப்பதைக் காண்கின்றோம். “ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே”3 “போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே”4 “நீதனேன் என்னே நான் நினையாவாறே”5 என்பன முதலாக முடியும் திருப்பதிகங்கள் பல திருநாவுக்கரசரது வருத்த மிகுதியைச் சுட்டி நிற்கின்றன. திருப்பதிகங்கள் திருநாவுக்கரசர் 4900 திருப்பதிகம் பாடினர் என்பர். நம்பி யாரூரர், தாம்பாடிய திருப்பதிகம் ஒன்றில், திருநாவுக்கரசரை, “இணைகொள் ஏழெழு நூறு இரும்பனுவல் ஈந்தவன் திருநாவினுக் கரையன்”6 என்று குறித்துள்ளார்; அவர்க்குப் பிற்போந்த நம்பியாண்டர் நம்பிகளும், “பதிகம் ஏழேழு நூறு பகரும் மாகவியோகி”7 எனவும் “கசிந்து இதயம் ஏழெழுநூறு அரும்பதிக நிதியே, பொழிந்தருளும் திருநாவின் எங்கள் அரசினையே”8 எனவும் கூறியுள்ளார். சேக் கிழாரும், “உடைய அரசு என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழெழு நூறும்” என்று, நம்பியாரூரர் குறித்த குறிப்பையே எடுத்தோதக் காண்கின்றோம். இவ்வகையால் திருநாவுக்கரசர் 4900 திருப்பதி கங்களைப் பாடியருளினாரென்று அறியலாம். திருமுறை கண்ட புராணமுடையாரும், “கொடுங்கூற்றாயின என்ன எடுத்துக் கோதில், ஒருமானைத் தரிக்கு மொரு வரையுங்காறும் ஒரு நாற்பத்தொன் பதினாயிரமாதக”1 என்று கூறியிருக்கின்றார். இப்போது பண்முறையில் நூற்றுப்பதினான்கும், திருகுறுந்தொகை நூறும், தாண்டகம் தொண்ணூா ற்றொன்பதும் ஆக இந்நாளில் முந்நூற்றுப்பதின் மூன்று திருப்பதிகங்களே கிடைக்கின்றன. இவற்றுட் சில திருப்பதிகங்கள் இடையிற் சில திருப்பாட்டுக்களும் இறுதியிற் சில குறைந்தும் காணப்படுகின்றன. அதனால் திருப்பதிகங்கள் அனைத்தும் சேரக் கூடுதலாகும். திருப்பாட்டுக்கள் 3130 என்று ஒரு தொகுதியாகக் கூறுவது இயலாதாகின்றது. இனி, திருமுறைகண்ட காலத்தில், முந்நூற்றெழுபத்து மூன்று திருப்பதிகங்களே கிடைக்கப்பெற்றுப் பண் வகுக்கப்பட்டன; இதனைத் திருமுறைகண்ட புராணம், “பண்புற்ற திருஞானசம்பந்தர் பதிகமுந்நூற், றெண்பத்தினான்கினால் இலங்குதிருமுறை மூன்று, நண்புற்ற நாவரசர் முந்நூற்றேழ் மூன்றினால், வண்பெற்ற முறை யொன்று நூற்றினால் வன்றொண்டர்”2 என்று கூறியிருப்பது காண்க. மிகுதியாகக் கிடைக்கப் பெற்ற வரலாறு இது என்றும் அறிதற்குரிய வாய்ப்புக்கள் இல்லை. இனி, கொல்லிப்பண் முதல் குறிஞ்சிப்பண் ஈறாக உள்ள திருப்பதிகங்கள் இருப்பத்தொன்றும், கொல்லி எனப் பண்வகுக்கப் பெற்ற திருநேரிசைத் திருப்பதிகம் இரண்டும், பண்வகுக்கப் பெறாத திருநேரிசைத் திருப்பதிகம் ஐம்பத்தாறும், கொல்லியெனப் பண் வகுக்கப்பெற்ற திருவிருத்தத் திருப்பதிகம் இரண்டும், பண் வகுக்கப் பெறாத திருவிருத்தம் முப்பத்து மூன்றுமாகத் திருப்பதிகங்கள் நூற்றுப் பதினான்கும் ஒரு திருமுறையாகவும், திருக்குறுந்தொகைப் பதிகம் நூறும் ஒரு திருமுறையாகவும், திருத்தாண்டகம் தொண்Qற் றொன்பதும் ஒரு திருமுறையாகவும் வகுக்கப் பெற்றுள்ளன. திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் மூன்று திருமுறைகளாக வகுக்கப் பட்டமையின், அவற்றின் தொடர்ச்சியாக இவற்றையும் மேற்கொண்டு இம் மூன்றையும் முறையே நான் காந்திருமுறை ஐந்தாந்திருமுறை ஆறாந்திருமுறை என்று சான்றோர் வழங்கலாயினர். இவற்றுள் ஆறாந்திருமுறையைத் தாண்டகத் திருமுறை யென்றும், இத்தாண்டகங்களைப் பாடிய சிறப்பால் திருநாவுக்கரசரைத் தாண்டக வேந்தர் என்றும் அறிஞர் அன்பால் பாராட்டுவது வழக்கம். இத் திருப்பதிகங்களால் திருநாவுக்கரசர் பாடிய சிறப்பினை யுடைய ஊர்கள் 125; இவற்றில் ஒரு திருப்பதிகமே பெற்றவை76; இரண்டு திருப்பதிகங்கள் பெற்றவை 23; மூன்று திருப்பதிகங்கள் பெற்றவை7; நான்கும் நான்குக்கு மேற்பட்டவையுமாகிய திருப்பதி கங்கள் பெற்றவை 19. அவை, திருவதிகை, திருவாரூர், திருவாவடு துறை, திருவிடைமருதூர், திருவின்னம்பர், திருவையாறு, திருவொற்றியூர், திருக்கச்சியேகம்பம், திருக்கயிலாயம், திருக்கழிப் பாலை, தில்லைச் சிற்றம்பலம், திருச்சோற்றுத் துறை, திருநாகைக் காரோணம், திருநெய்த்தானம் திருப்பழனம், திருப்புகலூர், திருமறைக்காடு, திருமாற்பேறு, திருவீழிமிழலை என்பனவாகும். இவற்றுள் மிகுதியான திருப்பதிகங்கள் உள்ளவை திருவாரூரும் அதனையடுத்துத் திருவதிகையுமாகும். இது போது கிடைத்துள்ள திருப்பதிகங்களைக் கொண்டு உணரும் கருத்து இது. திருநாவுக்கரசர் பாடிய 4900 திருப்பதிகமும் கிடைக்கப்பெற்று, அவற்றுட் சிறப்பிக்கப்படும் திருப்பதிகளையும் அவற்றிற்கு அமைந்த திருப்பதி கங்களையும் கொண்டு காணவேண்டிய தொன்று; அக்காட்சி திருநாவுக்கரசர் அவ்வத் திருப்பதிகளிலும் தங்கிய காலத்தை உணர்வதற்குச் சிறந்த வாயிலாகும். இப்போது இவர் பாடிய திருப்பதிகங்களில் சிறிது ஏறக்குறையப் பதினாறில் ஒரு பகுதியே கிடைப்பதால், இதுகொண்டு திருநாவுக்கரசர் திருவதிகையிலோ திருவாரூரிலோ பன்னெடுநாள் தங்கினர் எனக் கருதுவது முறையாகாது. திருப்பதிகங்களின் ஆராய்ச்சி திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள், இறைவன் இயல்பு, உயிர்களின் இயல்பு, இறைவன் உயிர்க்கு அருள் செய்யும் திறம், கற்றவர்களும் ஞானிகளும் பிறரும் இறைவனுக்கு அடியார்களாய் அன்புசெய்யும் முறை, இறைவன் அவர்களுடைய மனத்தின்கண் எழுந்தருளி இன்புறுத்துவது முதலிய பல பொருள்களை விரித்துக் கூறுகின்றன. “பொறிப்புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை, நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள், அறிப்புறும் அமுதாயவன்’1 என்பதனுள், “பொறிப்புலன்களைப்போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்து நினைந்தவர்’ என்பது ஞானிகளும் பிறரும் அடிமையுற்று அன்புசெய்து வழிபடும் முறையினையும், “சிந்தையுள் அறிப்புறும் அமுதாயவன்” என்பது, அன்பர் மனத்தின்கண் தோன்றி இன்புறுத்தும் திறத்தினையும் புலப்படுத்துவது காணலாம். வேறொருபாட்டில், “சிந்தையுட் சிவமாய் நின்ற தன்மையோடு, அந்தியாய் அனலாய்ப் புனல் வானாமாய்ப் புந்தியாய்ப் புகுந்து உள்ளம் நிறைந்த எம் எந்தை”2 என்று கூறுவதும் மேலே இரண்டாவதாகக் காட்டிய இறையில்பை வற்புறுத்தாநிற்கும். இனி திருநாவுக்கரசர் தொடக்கத்தில் சமணராயிருந்து, பின்பு சைவரானவராதலால், அதுகுறித்து, அவர் பண்டுதாம் சமண் சமயத்திலிருந்து கொண்டு சிவபெருமானை இகழ்ந்தது நினைந்து வருந்திக் கூறுவனவும், சமணர் நட்பை அருவருத்துக் கூறுவனவும் ஈண்டு எடுத்துக் குறிக்கலாகாத அளவு விரிந்து கிடக்கின்றன. இவர் காலத்தே யோகநெறியும் ஞானநெறியும் இறைவழி பாட்டில் சீர்த்த இடம் பெற்றிருந்தன. யோகநெறி நின்றோர். பொறி புலன்களை ஒடுக்கி அகக் கண்ணால் உள்ளத்தே உணர்வு வடிவாய் எழுந்தருளும் இறைவனைக் கண்டு வழிபடுவர். இறைவனும் அவர்க்கு அங்கே வெளிப்பட்டுத் தேனாய் இன்னமுதாய்த் தெரிவரிய சிவானந்தத்தை நல்குவன். இவ்வழிபாட்டு முறையை நம் திருநாவுக் கரசர், “உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ளக்கிழியின் உருவெழுதி, உயிர் ஆவணம் செய்திட்டு உன்கைத்தந்தால், உணரப் படுவாரோடு ஒட்டீ வாழ்தி”1 என்பது முதலிய பல திருப்பாட்டுக்களில் எடுத்துரைக்கின்றார். “ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள், ஞானத்தால் தொழுவேன் உனை நானல்லேன், ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு, ஞானத்தாய் உனைநானும் தொழுவனே”2 என்பது முதலிய திருப்பாட்டுக்களால் ஞானநெறியின் நலத்தை மிக்க நயம்படக் கூறுகின்றார் நம் நாவரசர். யோகஞான நெறிகளால், இறைவன், “அண்டமாய் ஆதியாய் அருமறையோடு ஐம்பூதப், பிண்டமாய், உலகுக்கு ஓர் பெய்பொரு”3 ளாக இருத்தலை யுணர்பவர், எங்கும் யாவையுமாய் இருத்தலைக் கண்டு எல்லாம் சிவமாயிருப்பது எனத் தேறி இனிது உறைவர் என அறிவு நூல்கள் கூறுகின்றன. அவர் சிந்தைக்கண் சிவமாய் நின்று இன்புறுத்தும் சிவபெருமான், எங்கும் தன் இருப்பை இனிது விளக்குகின்றார் என்பதை நம் நாவரசர், “அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே”4 என்று ஓதி அறிவுறுத்துகின்றார். இறைவனது உண்மையை உணர்ந்து அவனது அருணலம் பெறுவது குறித்தே உலகில் சமயம் பலவும் உண்டாயின; ஆதலால், அச்சமயங்கள் பலவும் அவனுக்கு ஏற்பனவேயாகும். சமயங்கள், பலவாய்த் தம்மில்வேறுபாடு சில உடையவாய் இருப்பது கொண்டு, பிணங்கிப் பூசலிட்டுப் பேதுறுவது முறையன்று என்பது திருநாவுக் கரசர் திருவுள்ளமாகும். அவர் காலத்தே சமயங்கள் அறுவகைப் பட்டுத் தம்மில் வேறுபட்டு இகலி நின்றமையால் அதனை விலக்கற்கு, “சமயமவை ஆறினுக்கும் தலைவன் தான் காண்”5 என்றும், “விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயம் செய்தே, எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்”6 என்றும் கூறியுள்ளார். இக்கருத்தே கொண்டு பிறாண்டு அவர், “மிக்க சமயங்கள் ஆறின் உருவாகிநின்ற தழலோன்”7 எனவும், “ஆறொன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அப்பொருள்கள், வேறொன்றிலாதன”1 எனவும், “ஆறு சமயத்து அவரவரைத் தேற்றும் தகையன”2 எனவும் பல படக் கூறி வற்புறுத்தியுள்ளார். மக்களினத்தில், அந்நாளில், குலம் கோத்திரம் முதலியவற்றின் பெயராலும், புலாலுண்டல் முதலிய செயல் வகையாலும் வேற்றுமைகளும் வேறுபாடுகளும் தோன்றி நிலவின. இறைவன் திருவருட் பேற்றில் நாட்டமுடையார்க்கு இவ்வேற்றுமை கூடாது என்றும், இவ்வேற்றுமையுளதாயின் திருவருட் பேற்றுக்குச் சாதனமாக அடியார் வழிபாடு நன்கு வாயாது என்றும் பிறவும் கருதி இவ் வேறுபாட்டைக்களைதற்குத் திருநாவுக்கரசர் பெரிதும் முயன்றுள்ளார்; “சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர், பாத்திரம் சிவம் என்று பணிதிரேல், மாத்திரைக்குள் அருளும் மாற் பேறரே”3 என்று மக்களை நோக்கி அறிவுறுத்துவதும், “ஏதும் ஒன்றும் அறிவிலராயினும், ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்குப், பேதமின்றி அவரவர் உள்ளத்தே, மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே”4 என வேற்றுமை பாராட்டாத ஒருமை நிலையினை இறைவன்மேல் வைத்துரைப்பதும் பிறவும் இதனை வற்புறுத்தும் சான்றுகளாகத் திகழ்கின்றன. இனி, இறைவன் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகள் தோறும் சென்று வழிபடுவதும், புண்ணிய நீர் நிலைகட்குச் சென்று அவற்றில் படிந்து நீராடுவதும் சமயநெறி நிற்பார்க்கு உரிய சமய வொழுக் கங்களாக அந்நாளிலும் மேற் கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறே இறைவன் திருவுருவமைத்து வழிபடுவது, சமய ஞான நூல்களை இடைவிடாது பயிலுவது, வேதமோதுவது, வேள்வி செய்வது, காடு சென்று தவஞ் செய்வது, அடியார் வேடம்பூண்டு கூட்டமாய்த் தனித்திருந்து ஒழுகுவது, பட்டினி கிடப்பது முதலியனவும் பலரிடத்தில் காணப்பட்டன. ஆயினும் அவருள் பெரும் பாலரிடத்தில் இறைவன் பால் உண்மையன்பும், ஏனை உயிர்கள் பால் சிறந்த அருளும் காணப்படவில்லை; உண்மையன்பும் அருளறமும் இல்லாதார் இன்னோ ரன்னவற்றைச் செய்வதால் எள்ளளவும் பயனில்லை என்பது நாவரசரின் ஞானக் கருத்தாகும். இதனைப்பாவநாசக் குறுந்தொகையில்1 எத்தவத்தைச் செய்யினும் எவ்வொழுக்கத்தில் நிற்பினும், அவரவரும் எங்கும் சிவமாய்த் திகழும் இறைவனது இறைமைத் தன்மையைப் பற்றிய திண்ணிய உணர்வு உடையராதல் வேண்டுமென அவர் பெரிதும் விதந்து கூறியுள்ளார். நம் திருநாவுக்கரசர், இனிய இசைவல்ல செந்தமிழ்ப் பெரு நாவலராதலால், அதற்கேற்ப, எண்ணும் எழுத்துமாகிய இரண்டனுடன் இசையையும் கூட்டி, “எண்ணவன் காண் எழுத்தவன்காண் இன்பக் கேள்வி இசையவன் காண்”2 என்று பாராட்டி மகிழ்கின்றார். இவ்வாறே திருஞான சம்பந்தர், “எண்ணும் ஓர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார், கண்ணும் முதலாய கடவுள்”3 என்பது ஈண்டு நினைவு கூரற்பாலது. இறைவனது திருவடியைச் சிறப்பித்து இவர் பாடியது போல இவர்க்கு முன்னும் பின்னும் தோன்றி நிலவிய சான்றோருள் எவரும் பாடியதே இலர். கட்டளையுடைய பாட்டுக்களான திருவிருத்தமும் திருத்தாண்டகமும் இவர்க்கென்றே அமைந்த இனிய பாவினங் களாகவுள்ளன. திருவிருத்தத்தினும் திருத்தாண்டகம் அரிய கட்டளை அமைந்தது. ஆயினும், இவர், இத்திருத்தாண்டகங்களை மிக்க எளியவாகப் பாடியிருப்பது இவரது திருப்பெயர்க்குப் பொருத்தமாக இலங்குகிறது. திருமுறை கண்ட காலத்திருந்த சான்றோர். இத் திருத் தாண்டகங்களையெல்லாம் ஒரு சேரத் தொகுத்து ஒரு திருமுறையாக வகுத்திருப்பது ஒன்றே இவரது திருத்தாண்டக மாண்பை வற்புறுத்து வதாகும். இது பற்றியே பின்வந்த சான்றோர் பலரும் திருநாவுக் கரசரைத் தாண்டக வேந்தர் என்றும் தாண்டகச் சதுரர் என்றும் சிறப்பித்துப் பாராட்டினர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் விளங்கின மூன்றாங் குலோத்துங்கனது இருபத் தொன்பதாம் ஆட்சியாண்டில் திருக்குறுக்கையில் உண்டாகிய கல்வெட்டொன்று,1 அவ்வூர்த் திருக்கோயிலில் திருநாவுக்கரசரது திருத்தாண்டகத்தை ஓதுதற் கென்றே நிவந்தம் விட்ட செய்தியைக் குறிக்கின்றது. இறைவன் திருவடிக்கு அன்பு பூண்டு தொண்டராகிய பெரு மக்களது உட்கோள் இன்னது எனக் கூறுவாராய், தமது மனக்கோளும் அதுவே யென்பதுபடப் பல திருப்பாட்டுக்களைப் பாடியிருக் கின்றார். இறைவனாகிய சிவபெருமான், “தீதாய் வந்த நஞ்சு அமுது செய்து, அமுதம் உண்ட அமரர் உலந்தாலும் உலவாது”2 நின்று அருள் செய்பவனாதலால், அவனுக்குத் தொண்டுபட்ட அடியார் அஞ்ச வேண்டியதில்லை; அவர்கள் வானம் துளங்கினும் மண் கம்பமாயினும், மலைகள் தானம் துளங்கித் தலைதடுமாறினும், தண்கடற்கண் மீனம்படினும் ஒரு சிறிதும் அஞ்சார்.3 “அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே”4 என்பது அவரது உட்கோள். அடியவர் சிந்தைக்கண், இறைவன் சிவமாய்5 நீங்காது உறைதலால், அவர்கட்குக் கூற்றமும் தீங்கு செய்யாது;6 வினைகளும் தொடர்ந்து துன்பம் செய்யா;7 அவர்பால் பரிவும் இடுக்கணும்8 உளவாகா; எங்கெழில் என் ஞாயிறு எமக்கு9 என இறுமாந்திருப்பது10 அவரது இயல்பு. சுருங்கச் சொல்லின், முடிசூடிய மன்னர் வாழ்வும் அவர்க்குத் தம் அடி சூடிய துகளினும் புல்லிதாகும்; ஒருவரைத் தஞ்சம் என்று எண்ணாது இறைவன் திருவடியையே தஞ்சம்11 என்று எண்ணுவர். சிவனடியார் ஆவுரித்துத் தின்றுழலும் புலையராயினும்12 அவர்களைத் தாம் வணங்கும் கடவுளாகக் கருதிப் போற்றுவர். இறைவன் திருப்பெயரை ஓதாதவரும் அவனது திருநீற்றை அணியாதவரும் “அளியற்றவர்; பெயர்த்தும் செத்துப் பிறப்பதற்கே தொழிலாகி”13 இறக்கின்றவர்; இறைவன் திருக்கோயில் இல்லாத ஊர்களும், திருநீறணியாதவரும், இறைவனைப் பத்திமையாற் பாடாதவரும் வாழும் ஊர்களும் “ஊரல்ல; அடவி காடே”1 என்பது இந்தச் சினடியார்களது உட்கோளாகும். இறைவன், அரன் என்று திருப்பெயர் கொண்டதே தொண்டர்க்கு உளதாகும் துன்பத்தை அறுத்தற்கேயாகும்; “தொடருந்தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து, அடரும்போது அரனாய் அருள் செய்வர்”2 என்று திருநாவுக்கரசர் தெளிய உரைப்பது காண்க. சிவாய வென்னும் இறைவன் திருப்பெயரை ஓதி வழிபடுவார்க்கே வானகம் படைத் தருளப்பட்டது என்பதும்,3 அவ்வாறு உலகில் வாழும் வாழ்வு பெற்ற சிவனடியார்கள், இம்மை யுலகவர் போல “நெல்லினார் சோறுண்ணும்”4 நீர்மையுடையராகார். இவ்வுலகிலும், அவர்களது கருத்தறிந்து முடிக்கும் திருக்கருத்தால் அவரது குற்றேவலை எதிர்நோக்கி யிருப்பது இறைவன் பேரருள் இயல்பாகும். “கூம்பித் தொழுவார் தம் குற்றே வலைக் குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி”5 எனத் திருநாவுக்கரசர் இவ்வியல்பை விதந்தோதிப் பாராட்டுவது காணத்தக்கது. இனி, சமண் சமயத்திலிருந்த போது இறைவனை அறியாது இகழ்ந்திருந்த திறத்தை மிக விரித்துக் கூறும் திருநாவுக்கரசர், “சமண் தீர்த்து என்றன்னை ஆட்கொண்டார்”6 என்றும், “சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண்டார்”7 என்றும் சுருங்க உரைக்கின்றார். தம்மியல்பும் இறையியல்பும் விரியக்கூறும் இவர், தம்மை இறைவன் ஆட்கொண்டு இன்புறுத்திய திறத்தை மிகவும் அழகுறக் கூறுகின்றார். இறைவன் இருநிலம் தீ நீர் முதலிய எல்லாமாகவும் அல்லவாகவும் இருப்பினும், தாம் விரும்பும் எண்ணும் இசையும் முதலாகிய பல கலைவடிவாகவும் இருக்கின்றான்; அவனையும் அவன் திறங்களையும் அறியும் பொறியின்றிப் பன்னாள் வேற்று நெறியில் கிடந்து உழந்த போது, இறைவன் உணர்வின்கண் ஒன்றி நின்று “நெறிதான் இது வென்று”8 காட்டி அருள்புரிந்து, “சிவலோக நெறி அறியச் சிந்தை தந்து”9 சிறப்பித்தான் என்பர். இதனை நாவரசர் தாமே, “எண்ணோடு பண்ணிறைந்த கலைகளாய தன்னையும் தன் திறத்து அறியாப் பொறியிலேனைத் தன் திறமும் அறிவித்து நெறியுங் காட்டி, அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந் தேனைத் தொடர்ந்து என்னை ஆளாக் கொண்டான்”1 என்று குறித்தருளுகின்றார். இவ்வாறு தாம் ஆட்கொள்ளப்பட்டதை உணர்ந்தே அவர் தம்மை இறைவற்கு அடிமை என்பதைத் தெரிந்ததாகக் கூறுவார், “என்னைத் தன் அடியான் என்று அறிதலும், தன்னை நானும் பிரானென்று அறிந்தேன்”2 என்று இயம்புகின்றார். இறைவனைத் தனக்குப் பிரான் என்று தேறியொழுகும் திருநாவுக்கரசர், “அளக்கலாகாத் தற்பரமாய்ச் சதாசிவமாய்”3 இருக்கும் இறைவனைப் பொது நிலையின் நீக்கி4 த் தனிநிலையில் தம் உள்ளத்தே வைத்துக் காண்கின்றார். உள்ளத்தில் விளங்கும் புந்தி வட்டத்5தில் இறைவன் சிவமாய்க் காட்சி அளிக்கின்றான். அக்காட்சி தேனும் இன்னமுதுமாய் அவர்க்கு இன்பம் செய்கின்றது. அவ்வின் பத்தில் மூழ்கித் திளைக்கும் திருநாவுக்கரசர், அங்கே காட்சி நல்கும் சிவத்துக்கு6த் தன் உள்ளம் கோயிலாவதையும், உடல் இடங் கொண்டதாம் அங்கு ஊறுகின்ற இன்பத்தை நுகர்வதையும், அதனை நுகராதவாறு தடை செய்து நின்ற வினைத்தொடர்பு நீங்கி மறைவதையும், சிவன்பால் பேரன்பு பெருகி மிகுவதையும் உணர்கின்றார்; இத்தனைக்கும் ஏதுவாவது இறைவன் தம்மைக் கூழாட்கொண்ட பேரருளே என்று தெளிகின்றார். அத்தெளிவால் இறைவனை நோக்கி, “என்பு இருத்தி நரம்பு தோல் புகப் பெய்திட்டு என்னையோர் உருவமாக்கி, இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த் திட்டு என் உள்ளம் கோயிலாக்கி, அன்பு இருத்தி அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த ஆரூரர்”7 என்று பாராட்டி உரைக்கின்றார். இவ்வாறு அகவழிபாடு சிவபோக நுகர்ச்சிக்கு வாயிலாவது கொண்டு, “காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக, வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக, நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டிப், பூசனை ஈசனார்க்குப் போற்றுவிக் காட்டினோமே”1 என்றும், இதனைச் செய்வாரது பாவம் நாசமாம்2 என்றும் எடுத்துரைத்துள்ளார். அகப்பூசை கைவரப் பெற்றோர்க்குப் புறப்பூசை இன்றியமை யாததன்று என்பவரும் உண்டு. புறப்பூசை மிக்க தூய்மையும் காண்பார் நெஞ்சு உருகித் தெருளும் வகைமையும் உடையதாகும். இப் புறப்பூசையால் மக்கள் இருமையும் இன்ப வாழ்வில் நிலை பெறுவார்கள் என்று திருநாவுக்கரசர் கூறுவது கருதத்தக்கது. இனி, திருநாவுக்கரசர் அன்பொழுக்கமாகிய அகப்பொருள் துறைகளில் இனிய பாட்டுக்கள் பலப்பல பாடியுள்ளார். தலைமக ளொருத்தி இறைவன்பால் பெருங்காதல் கொண்டு உளஞ்சிறந்த திறத்தை. “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைக் தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”3 என்ற திருப்பாட்டால் இனிதுரைத்திருப்பது அறிஞர் பலரும் நன்கறிந்த தொன்று. இப் பெற்றியளாய நங்கை, குயிலினங்களையும் ஏனைக் குருகினங்களையும் வண்டுகளையும் நோக்கிக் காதல் கைம்மிகுதலால் கையற்றுப் புலம்புகின்றாள். “மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த பனைக்கைம்மா உரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான் நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொல்தூதாய்ச் சோர்வாளோ”1 என்று கூறி அழுங்குவதும், “அகலிடத்தார் ஆசாரத்தை” அகன்றொழுகும் இந்நங்கையின் செயல் கண்ட தாயரும் பிறமகளிரும், “கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன் பருகுபால் அமுதே எனும் பண்பினன் அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை ஒருவன் என்னை உடைய கோ என்னுமே”2 என்று தம்மிற் பேசிக் கொள்வதும், பெற்றோரும் பிறரும் போந்து அந்நங்கையை நோக்கி நீ மனையிடத்தே இருத்தல் முறையே யன்றி வெளியே இறைவனை நாடிச் சேறல் கூடாது என்றாராக, அவள், அவர்களை மறுத்துரைப்ப, அவர்கள் மனம் வருந்தி, “மாது இயன்று மனைக்கு இரு என்றக்கால் நீதிதான் சொலநீ எனக்கு ஆர் எனும்; சோதிஆர்தரு தோணிபுரவர்க்குத் தாதியாவன் நான் என்னும் என்தையலே”3 என்பதும், இவள் செயலைக் கண்டோருட் சிலர், இவட்கு இம்மால் உண்டாதற்குக் காரணமான இறைவனைக் குறை கூறுவாராய், “பண்ணி னேர்மொழியாள் பலியிட்டஇப் பெண்ணை மால் கொடு பெய்வளைகொள்வது சுண்ண மாடிய தோணி புரத்துறை அண்ணலாருக்குச் சால அழகிதே”1 என்று இயம்புவதும், முதுபெண்டிர் சிலர் போந்து, “நங்காய், நின்னாற் காதலிக்கப்படுபவன் நின்மலனாகிய இறைவன்; அவனைக் கூடுவது என்பது இயலாத தொன்று ” என்பாராய். “முல்லை வெண்ணகை மொய்குழலாய் உனக்கு அல்லனாவது அறிந்திலை நீ; கனித் தொல்லையார் பொழில் தோணிபுரவர்க்கே நல்லை யாயிடுகின்றனை நங்கையே”2 என்று தெருட்ட முயல்வதும், அவ்வழியும் தெருண்டு தன் முயற்சி கைவிடாத அவட்கு அவர்கள் அவளது காதலனைப் பழித்து. “உறவு பேய்க்கணம், உண்பது வெண்டலை உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்கொடி துறைகளார் கடல் தோணிபுரத்துறை இறைவனார்க்கு அவள் என்கண்டு அன்பாவதே”3 என்பதும் பிறவும் மிக்க இன்பம் பயப்பனவாகும். இறைவன்பால் தமக்கிருந்த பேரன்பால் அகத்துறையில் மகளிர் கூறும் கூற்றில் வைத்துப் பழிப்புரை வழங்கிய திருநாவுக்கரசர், தாமே பழிப்பு வாய்ப்பாட்டால் இறைவனைப் பரவிப் புகழ்ந்து பாடும் அருட் பாட்டுக்களும் பலவுள்ளன. இறைவன் திருமேனி மேல் வெண்ணீறு கிடந்து ஒளி விளங்கு தலைக் கண்டு, சந்தனம் முதலிய விரைப்பொருள்கள் விலைமிக் குடைய எனக் கருதியும் விலையின்றி எங்கும் யாவர்பாலும் கிடைக்கக் கூடியது திருநீறு எனக்கொண்டு அதனை மேனியில் பூசிக்கொண்டு விளையாடுகின்றான் இறைவன் என்பாராய், “விலையிலி சாந்தம் என்று வெறிநீறு பூசி விளையாடும் வேதவிகிர்தர்”1 என்றும் இறைவன் இடையில் நால்விரற் கோவணம் உடுப்பவன் என்பது பற்றிக் கோவணம் உடுத்து மகளிர் இல்லங்களில் பலியேற்கச் சென்று திரியும் நீவிர், மலைவாணர் பாவையாகிய உமை நங்கையை மணந்த ஞான்றும் இக்கோவணத்தைத்தான் உடுத்திருந்தீரோ என வினவுவாராய், “இடும் பலிக்கு இல்லந்தோறும் உழிதரும் இறைவன் நீரே, நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென் கூந்தல், கொடுங்குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ?”2 என்றும், இறைவன் திருமுடியில் கங்கையும் பிறைத்திங்களும் பாம்பும் உண்டு என்பது உலகறிந்த செய்தியாதலின், “கங்கையாகிய நங்கையை நீர் நும் சடையில் மறைத்துள்ளீர்; இச்செய்தியை உமையம்மையறியின் பெருந்தொல்லை விளையுமே” என்பாராய், “எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டருளீர், கங்கை சடையுட் கரந்தாய் அக்கள்ளத்தை மெள்ள உமை நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே”3 என்றும், பிறைக்கும் பாம்புக்கும் பகையென்பது பற்றி, “பைதற் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசு அறியோம், எய்தப் பெறின் இரங்காது கண்டாய் எம் இறையவனே”4 என்றும், மேனியில் கிடக்கும் பாம்பைக் கண்டு அம்மேனியிற் பங்குடைய தேவியாகிய அரிவை அஞ்ச, அவரைக் கண்டு அப்பாம்பு மயில் என்று ஐயுற்று அஞ்சி வருந்த, அப்பாம்பைக் கண்டு பிறைத்திங்கள் அஞ்சி நடுங்க, இவற்றைக் காணும் தலைமாலையிலுள்ள தலைகள் நகுகின்றன என்பார், “கிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுறக் கிடந்த பாம்பு அவளை ஓர் மயிலென்று ஐயுறக் கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே கிடந்ததுதான் நகுதலைக் கெடிலவாணரே”5 என்று, இவ்வாறு பலவும் வருவன அறிஞர் கண்டு இன்புறக் கடவர். இவ்வகையில் நம் நாவுக்கரசர் இறைவனை முன்னிலைப் படுத்தி இங்கிதமாகப் பாடிய பாட்டுக்கள் பல. “இறைவா, சாகும் நாளில், பொறிபுலன்கள் நிலைகலங்கி அலமருதலால், யான் வேறு பற்றுக்கோடின்றி உன்னை எங்குற்றாய் என அழைப்பேன்; அப்போது நீ போந்து இங்குற்றேன் என்று சொல்லியருள வேண்டும்” என்பார், “சங்கொத்த மேனிச் செல்வா, சாதல் நாள் நாயேன் உன்னை எங்குற்றாய் என்ற போதால் இங்குற்றேன் என் கண்டாயே”1 என்றும், இறைவன் தம் உள்ளத்தே புகுந்து காட்சி வழங்கினாராக, அக்காட்சியின் பத்தில் மகிழ்வுற்றுத் தெளிந்த நாவரசர், “கள்ளரோ, புகுந்தீர்” என்றலும், இறைவன் அருளொழுக நோக்கி “வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையினாரே”2 என்றும் பாடிப் பரவுகின்றார். ஒருகால் இறைவன் திருநாவுக்கரசர் சென்னிமேல் தன் திருவடியைச் சிறப்பித்தானாக, அது நினைந்து அன்புபெருக உளங்குழைந்து, தம் சென்னியின் வன்மையால் இறை வனுடைய மெல்லிய திருவடிகள் வருந்துமென நினைந்து, “மூர்த்தி யென் உச்சிதன் மேல் வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே”3 என்றும், இத்திருவடிகளைக் காண்டற்குத் தேவ தேவர்கள் முயன்றும் முயற்சி முற்றாது அமைந்தாராக, மார்க்கண்டன் உயிர் கொள்வான் சென்று வீழ்ந்த காலன் அத்திருவடிகளைக் கண்டு கொண்டான் என்பாராய், “வழிபாடு செய்யும் பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக் காலன் அறிந்தான் அறிதற் கரியான் கழலடியே”4 என்றும், இறைவன் மாத்திரம் என்பால் அருள் கொண்டு ஆட்கொள்வானாயின், அவனைப் பின் என் முன்னே தானே வந்து எதிர்ப்படுமாறு செய்து கொள்வேன்; எங்ஙனமெனில், அவன் திருப்பெயர்களுள் ஒன்றாகிய பவன் என்னும் திருப்பெயரைப் பற்றிப் பவபவ, பவபவ எனப்பன்னாளும் இடைவிடாது அழைப்பேன்; இறைவனும், இவன் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்வருவான் என்பார், “அவன் எனை ஆட்கொண்டு அளித்திடு மாகில் அவன்றனை யான், பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால், இவன் எனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே”1 என்றும், இறக்குங்காலத்து நமன் தூர் போந்து என்னை நலிந்து என் உயிரைக் கொண்டு போங்காலத்து எனக்கு அருள் செய்யலாம் என்பது, இறைவனே, நின் திருவுள்ளமாக இருக்கலாம்; அதற்கு முன்பே நீ போந்து என் நெஞ்சில் நின்திருவடியை எழுதி வைப்பாயாக; செம்மை திறம்பாத சிவக்கொழுந்தே என்றும், அப் போது நி அருளுவதையாவர் அறிவார்? என்பார், “வெம்மை நமன் தமர்மிக்கு விரவி இழுப்பதன்முன் இம்மையுன்தாள் என்றன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில், அம்மை அடியேற்கு அருளுதிர் என்பது இங்கு ஆர் அறிவார்? செம்மை தரும் சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே”2 என்றும் பாடுவன பலவாகும். இவ்வண்ணம் இறைவன்பால் இன்பவுரையாடி மகிழும் நாவரசர், மக்களுக்கு யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வநிலையாமை முதலிய பல நிலையாமைகளையும் பரக்க எடுத்தோதி அறிவு கொளுத்துவதோடு, இறைவன் திருவருளாகிய செல்வமும் அது பெற்றுவாழும் வாழ்வுமே இன்றியமையாதன என்பதை ஆங்காங்கு எடுத்தோதுகின்றார். பொருளிலாதபோது ஒருவர்க்கு உறவாய் நின்று உதவும் மக்கள் இலராவது இயற்கை; பொருளிலாரும் இறைவன் அருட்பேறு குறித்துப் பாடுவாராயின் இம்மையே யன்றி அம்மையிலும் அவர் இன்ப வாழ்வில் இருத்தப் பெறுவர்3 என்பாராய். “மாடுதானது இல்லெனின் மானுடர் பாடுதான் செல்வாரில்லை, பன்மாலையால் கூடநீர் சென்று கொண்டீச்சரவனைப் பாடுமின் பரலோகத் திருத்துமே”1 என்றும், சுற்றமும் துணையும் பெற்ற மக்களுமாகிய தொடர் பற்றாரை உலகியல் விரும்புவதில்லை. “அற்றாரைத் தேறுதல் ஓம்புக”2 என்பது திருமறை. இறைவன் திருவருளோ, அங்ஙனம் தொடர் பற்றார்க்குப் பற்றுக்கோடாய் நின்று பேரின்ப வாழ்வை நல்கும் என்பாராய், “தந்தை தாயொடு தாரம் எனும்தளைப் பந்தம் அங்கு அறுத்துப் பயில்வு எய்திய கொந்தவிழ் பொழில் கொண்டீச்சரவனைப் பாடுமின் பரலோகத் திருத்துமே”3 என்றும், “அற்றுப் பற்றின்றி யாரையும் இல்லவர்க்கு உற்ற நற்றுணையாவன்”4 என்றும் அறிவுறுத்துகின்றார். இளையவர்க்கு இனிய கனியும் கட்டிபட்ட கரும்பும் இன்பந்தருவன; காளைப்பருவத் தார்க்கு இளமங்கையர் கூட்டமும் ஆண்மைச் செவ்விபெற்றார்க்கு அரசியற் போகமும் இன்பந்தருவன; இறைவன் இப்பெற்றியார் அனைவர்க்கும் அவரவர் விழையும் இன்பங்களெல்லாவற்றினும் மேலான இனிமை நல்கும் இனியன் என்பார். “கனியினும் கட்டிபட்ட கரும்பினும் பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும் தனிமுடிகவித் தாளும் அரசினும் இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே”5 என்றும், இவ்விறைவன், “உறவானாய் நிறைந்து உள்ளம் குளிர்ப் பித்தலும், இறைவனாகி நின்று எண்ணிறைந்து இருத்தலும்”6 உடையனாதலின், அவனுக்கு “அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்”1 மக்கள் நெஞ்சில் நினைந்து வாழ்தல் வேண்டும் என்றும், “அனுசயப் பட்டு அது இது என்னாது, கனிமனத்தோடு கண்கள் நீர்மல்க இறை வனை வழிபடும் புனித வாழ்வு வாழ்வோர் “மனிதரில் தலையான மனிதர்”2 என்றும் நம் திருநாவுக்கரசர் வழங்கும் தெருளுரை மிகப்பலவாகும். திருநாவுக்கரசர் பாட்டில் சிறப்புப் பெற்றவர்கள் மக்கட்கு நல்லறிவு கொளுத்தி மேம்படும் திருநாவுக்கரசர், தாம்பேணிய நன்னெறிக்கண் நின்று சிறப்புற்ற சான்றோர் பலரைத் தம்முடைய திருப்பாட்டுக்களில் ஆங்காங்குக் குறித்துப் பாடி யுள்ளார். அவருட் பலர், அவர் காலத்துக்கு முன்னிருந்தோராவர். சோழன் செங்கணான், சண்டேசுரர், சாக்கிய நாயனார், கண்ணப்பர், கணம் புல்லர், அமர் நீதி, நமிநந்தி முதலியோர் அவருள் முன்னணியில் நிற்கும் சான்றோராவர். 1. சோழன் செங்கணான். இச் சோழ வேந்தனைக் கோச்செங்கணான் என்றும், கோச் சோழன்3 என்றும் வழங்குவதுண்டு, இவ் வேந்தர் பெருமானைத் திருஞானசம்பந்தரும் பாடிப் பாராட்டியிருப்பதை முன்பே கூறி னோம். இவ்வேந்தன், முற்பிறவியில் சிலந்தியாயிருந்து திருவானைக்கா விலுள்ள இறைவனுக்குத் திருநிழற்பந்தர் செய்து, மறுபிறப்பில் கோச் செங்கணானாகப் பிறந்து சிறப்புற்றான் என்பர்; இதனைத் திருநாவுக்கரசர், “சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழற்பந்தர்செய்து, உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானுமாகக், கலந்தநீர் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள், குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கை வீரட்டனாரே”4 என்று குறிக்கின்றார். சிலந்தியா யிருந்து சோழனான இவ்வரலாற்றுக் குறிப்பு இடைக்காலக் கல்வெட்டுக்களில் நிலைத்த இடம் பெற்றுள்ளது. இதனைச் சிலந்தியைச் சோழனாக்கினான் திருத்தோப்பு எனவரும் கல்வெட்டு1 இனிது குறிக்கின்றது. 2. சண்டேசுரர் திருஞானசம்பந்தரும் இச்சான்றோரைத் தம்முடைய பாட்டுக்களில் நன்கு பாராட்டியுள்ளார். இவரைத் தண்டியென்றும் வழங்கு வதுண்டு. இவர் வரலாறு திருத்தொண்டர் புராணத்துள் சேக்கிழாரால் விரித்துரைக்கப்படுகிறது. அதன் சுருக்கமாக, இங்கே திருநாவுக்கரசர், “அண்டமார் அமரர் கோமான் ஆதி எம் அண்ணல்பாதம், கொண்டு அவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தைக், கண்டு அவன் தாதை ஆய்வான் காலற ஏறியக்கண்டு, தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே”2 என்றும், “அங்கு அரவத்திருவடிக்கு ஆட்பிழைப்பத் தந்தை அந்தணனை அற எரிந்தார்க்கு அருள் அப் போதே, கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார்”3 என்றும் குறித்தருளுகின்றார். இவ்வாறு கொன்றை முதலியன பெறும் நிலை, சண்டேசுரபதம் என்பர்; இது பற்றியே இவர் சண்டேசுரர் எனப்படு வாராயினர். 3. சாக்கிய நாயனார் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே பௌத்த சமயம் தென்னாட்டிற் படர்ந்திருந்ததென்றும் பௌத்தர்கட்குச் செல்வச் சிறப்புடைய மடங்கள் பல இருந்தன வென்றும் வரலாறு கூறுகிறதன்றோ? இச்சாக்கிய நாயனார். அவர்களை அடைந்து அவர்கூறிய பௌத்தசமயத்தை மேற்கொண்டு அவரது வேடம்பூண்டு அவரிடையசின்னாள் ஒழுகியிருந்து பின்னர்ச் சைவராயினவர். பௌத்த சமயத்தைக்கண்ட கோதமபுத்தர் சாக்கியர் மரபிற் பிறந்தவரானதால், அவர் கண்டுரைத்த அறத்தை மேற்கொண்டார் சாக்கிய ரெனப்பட்டனர். சாக்கியர்க்குரிய கோலத்தோடு இருந்தே சிவத்தொண்டு புரிந்தமையின் இவர் சாக்கிய ரெனவே வழங்கப்படு வாராயினர்; அதனால், இவரது இயற்பெயர் மறைந்து போயிற்று. இவர் எறிந்த கற்களை இறைவன் புது மலர்களாகக் கருதி மேற்கொண்டு வந்தனர் என்பாராய், நம் திருநாவுக்கரசர், “புத்தன் மறவாது ஓடிஎறி சல்லி புதுமலர்களாக்கினான்”1 என்றும், சாக்கியராய்க் கஞ்சியுண்டு வாழ்ந்த இவர்க்கு இறைவன் நீள்விசும் பாளும் பேரருள் நல்கினான் என்பார், “கல்லினால் எறிந்து கஞ்சிதாம் உணும் சாக்கியனார், நெல்லினால் சோறுணாமே நீள்விசும்பு ஆள வைத்தார்”2 என்றும் பாராட்டிக் கூறுகின்றார். 4. கண்ணப்பர் கண்ணப்பர் வரலாறு நாடறிந்ததொன்று. திருநாவுக்கரசர், இவரது வரலாற்றைத் திருக்குறுக்கை, திருச்சாய்க்காடு முதலிய திருப்பதிகங்களில் சிறிது விரியக்கூறி, திருமழபாடித் திருப்பதிகத்தில், “கண்ணப்பர்க்கு அருள் செய்த காளைகண்டாய்”3 என்றும், திருக்கழிப் பாலைத் திருத்தாண்டகத்தில் “கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு உகந்தார்”4 என்றும் குறித்துரைக்கின்றார். சம்புவராய மன்னர் ஆட்சிக்காலத்தில் வேட்டுவர் சிலர், தாம் திருக்கண்ணப்பர் வழி வந்தவரெனக் கூறிக்கொண்டு சம்புவராய மன்னர்க்கு நன்றாக வேண்டி இறைவனுக்கு நிவந்தம்விட்டதாக வன்பார்த்தான் பனங்காட்டூர்க் கல்வொட்டோன்று5 கூறுகிறது. கண்ணப்பர் வரலாற்றை வியந்து நக்கீர தேவர் பாடியனவும் உண்டு; அவை பதினோராந்திருமுறையிற் சேர்க்கப்பெற்றுள்ளன. 5. கணம்புல்லர் இவரது இயற்பெயர் புல்லன் என்பது. கணம் புல்லை விற்று அதனால் வரும் பொருள் கொண்டு இறைவன் திருக்கோயிலில் விளக்கெரிக்கும் திருப்பணியைச் செய்ததுபற்றி, இவர் கணம் புல்லர் ஆயினர் என்பர். திருநாவுக்கரசர், இவருடைய குணநலங்களைப் பாராட்டி, “எண்ணிறந்த குணத்தினாலே கணம் புல்லன் கருத்து கந்தார்”1 என்றும், “நல் அருந்தவத்த கணம் புல்லர்”2 என்றும் கூறுகின்றார். 6. அமர்நீதியார். இவரது வரலாறு திருத்தொண்டர் புராணத்துள் விரிவாய்க் காணப்படுகிறது. “நாட்கொண்ட தாமரைப்பூத்தடம் சூழ்ந்த நல் லூரகத்தே, கீட்கொண்ட கோவணம் கா என்று சொல்லிக் கிறிபடத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கோர் வாணிகனை, ஆட்கொண்டவார்த்தை உரைக்கு மன்றோ இவ்வகலிடமே”3 என்று திருநாவுக்கரசர் சிறப்பித்தருளுகின்றார். பிற்காலத்திலும் அமர்நீதியார் என்ற பெயருடன் பல தலைவர்கள் தமிழகத்தில் இருந்திருப்பதைக் கல்வெட்டுக்கள்4 கூறுகின்றன. இதனால், அமர்நீதியாரது வரலாறு தமிழ்மக்களிடையே மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தமை விளங்கும். “வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்குமன்றோ இவ்வகலிடமே” எனக் கூறுவது நோக்கின் அமர்நீதியாரை இரண்டொரு நூற்றாண்டு நம் நாவரசர்க்கு முற்பட்டவராகக் கருதலாம். 7. நமிநந்தி. இவர் பெயரைத் திருத்தொண்டத் தொகையும் பிறவும் நமிநந்தியென்றே வழங்குகின்றன; அதுகொண்டு பிற்காலத்து மக்கள் பலர் தமக்கு நமிநந்தி யென்றே இயற்பெயர் கொண்டிருப் பாராயினர்.5 இந்த, நமி என்னும் சொல் நம்பி என்பதன் மரூஉ வாகும்; திருத்தொண்டத் தொகையும், “அருநம்பி நமிநந்தி” என்று குறிப்பது ஈண்டு நோக்கத் தக்கது. திருநாவுக்கரசர், இந் நந்தியாரை “நம்பி நந்தி” என்றே குறித்துரைக்கின்றார். இவர் திருவாரூரில் இறைவனுக்கு நீரால் திருவிளக்கேற்றினாரென்பது வரலாறு; இதனைத் திருத்தொண்டர் திருவந்தாதி, “வேத மறிக்கரத்து ஆரூரற்கு விளக்கு நெய்யைத், தீது செறி அமண் கையர் அட்டா விடத்து எண்புனலால், ஏதம் உறுக அருகர் என்று அன்று விளக்கெரித்தான், நாதன் எழில் ஏமப்பேரூர் அதிபன் நமி நந்தியே”1 என்று கூறுகிறது. நமிநந்தியார் திருநாவுக்கரசர்க்குக் காலத்தால் மிக முற்பட்டவராய்ச் சான்றோர் வியந்து பாராட்டும் சால்பு உடையராய் விளக்கமுற்றிருந்தமையின், திருநாவுக்கரசர், “தொண்டன் நம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீணாடு அறியு மன்றே”2 எனவும், “அடித்தொண்டன் நந்தியென்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே”3 எனவும், திருவாரூர் அறநெறித் திருத்தாண்டகத்தில் இறைவனை, “நந்திபணி கொண்டு அருளும் நம்பன்”4 எனவும் பாராட்டியுள்ளார். இந்நமிநந்தியார், திருவாரூரில் வாழ்ந்தநாளில் இறைவன் திருத்தொண்டர்க்கு அவர் பெருவிளக்கமாய்த் திகழ்ந்தார் என்பது தோன்ற, “கொடி கொள்வி தானம் கவரிபறை சங்கம் கைவிளக்கோடு இடிவில் பெருஞ்செல்வமெய்துவர் எய்தியும் ஊன மில்லா, அடிகளும் ஆரூரகத் தினராயினும் அந்தவளப்பொடி கொண்டு அணிவார்க்கு இருளொக் கும் நந்திபுறப்படினே”5 என்று விதந்தோதிப் பரவுகின்றார். திருவாரூர்த் திருவிருத்தத்துள், நமிநந்தி யடிகளை “ஆராய்ந்த அடித்தொண்டர் ஆணிப்பொன்”6 என்று திருநாவுக்கரசர் பாராட்டினராக, இதனைக்கண்டு வியப்புற்ற சேக்கிழார் சுவாமிகள், நமிநந்தியடிகள் வரலாறு கூறுமிடத்து,” தொண்டர்க்கு ஆணியெனும் பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்”7 என எடுத்தோதி இன்புறுகின்றார். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருக்கழுக்குன்றத்தில் நமிநந்தியடிகள் பெயரால் திருமடமொன்று இருந்ததென அவ்வூர்க் கல்வெட்டொன்று8 கூறுகிற து. இனி, தம் காலத்திலிருந்த திருஞான சம்பந்தர், அப்பூதியடிகள், திலகவதியார் முதலியோர்களைத் திருநாவுக்கரசர் சிற்சில தொடர் களால் குறிப்பிடுவது கருத்தத்தக்கது. திருநாவுக்கரசரது வாழ்வில் இவர்கட்குத் தொடர்புண்டு; திருநாவுக்கரசரோ தம் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சிலவற்றைக் குறித்துரைக்கும் இயல்புடையவர்; இவ்வாற்றால், இவர்களைப் பற்றி நம் நாவரசர் நமிநந்தியடிகளைக் குறித்தது போல விரிந்த குறிப்புக்கள் பலவற்றை உரைத்திருப்பரென நினைத்தற்கு இடமுண்டு. ஆனால், அவர் பாடிய திருப்பதிகங்களில் பதினாறில் ஒரு பகுதியே கிடைத்துள்ளமையின், அக்குறிப்புக்கள் பலவும் மறைந்து போயின எனக் கொண்டொழிவது நம்மனோர்க்குச் சால்பாகும். திருஞான சம்பந்தர்க்குத் திருவாவடுதுறையில் இறைவன் செம்பொன் வழங்கியதையும், திருமறைக் காட்டில் அவர் மறைக்கதவு மூடப் பாடியதையும், “கழுமலவூரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே”1 என்றும் “திறக்கப் பாடிய எனினும் செந்தமிழ், உறைப்புப் பாடி அடைப்பித் தாரும் உந்நின்றார்”2 என்றும் குறித்திருக்கின்றார். தம்பால் பேரன்பு கொண்டொழுகிய திங்களூர் அப்பூதி யடிகளை, “அஞ்சிப் போய்க் கலிமெலிய அழல் ஓம்பும் அப்பூதி, குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்”3 என்று குறித்துப் பாடுகின்றார். “அம்மை யார் எனக்கு என்று என்று அரற்றினேற்கு அம்மை யாரைத் தந்தார் ஆரூர் ஐயரே”4 என்பதனால் திலகவதி யம்மையாரைத் திருநாவுக்கரசர் சுட்டிக் காட்டுகின்றார்.5 இறைவன் அருட் செயல்களாகப் புராணங்களிற் கூறப்படும் செய்திகள் பல திருநாவுக்கரசர் காலத்தே தமிழகத்தில் நிலவியிருந்தன. அவற்றையும் திருநாவுக்கரசர் தாம் பாடிய திருப்பாட்டுக்களில் தொகுத்துப் பாடியிருக்கின்றார். மார்க்கண்டன் பொருட்டு இறைவன் காலனை வீழ்த்தியதும்,6 கண்ணன் தன் கண்ணையிடந்து அருச்சித்து ஆழிப்படை பெற்றதும்,1 அருச்சுனன் பொருட்டு இறைவன் வேடுவனாய்ச் சென்றதும்,2 பகீரதன் பொருட்டுக் கங்கையைத் தாங்கியதும்,3 திரியும் புரம் மூன்றையும் எரித்ததும்,4 வியாக்கிரபாதன் மகன் உபமன்னியுவுக்குப் பாற்கடலை அளித்ததும்,5 அயன்தலை ஐந்தனுள் ஒன்றை அறுத்ததும்,6 தருமிக்குப் பொற்கிழி அளித்ததும்,7 அகத்தியன் பொருட்டு இறைவன் பொதியிற்கு எழுந்தருளியதும்,8 ஆலின் கீழிருந்து நால்வர்க்கு ஆகமப் பொருளை அருளியதும்,9 திருமறைக் காட்டில் விளக்கெரியத் தூண்டிய எலியை மறுபிறப்பில் மாவலி மன்னனாகப் பிறப்பித்ததும்,10 இராவணனைக் கயிலைமலையின் கீழ்ப்பட அடர்த்ததும் பிறவும் திருநாவுக்கரசரால் இனிது குறிக்கப்படு கின்றன. இவற்றுள் இராவணனை அடர்த்த செய்தி மாத்திரம் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் திருக்கடைக்காப்பாகக் குறிக்கப் படுகிறது. தொடக்கத்தில் பிணக்கம் செய்து, பின்பு அருட்பேறு கருதி இறைவற்கு வணக்கஞ் செய்து வாழ்வு பெற்ற இராவணன் போலத் தாம் தொடக்கத்திற் புறச்சமயம் புக்கு நின்று பிணங்கிப் பின்பு சூலையால் ஆட்கொள்ளப் பட்டமையின், திருநாவுக்கரசர் இராவணன் வரலாறு குறிப்பதையே திருக்கடைக்காப்பாகக் கொண்டு ஓதுவாராயினர்; இதனைச் சேக்கிழாரும் “அத்தன்மையனான இராவணனுக்கு அருளும் கருணைத் திறமான அதன் மெய்த் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல்கொண்டு”11 வணங்கிச் சென்றனர் எனக் கூறுகின்றார். திருநாவுக்கரசரும் திருப்பதிகளும் திருநாவுக்கரசர் தமிழ் நாட்டில் இறைவன் எழுந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று அங்குள்ள இறைவனை இசைநலம் பெருகப் பாடிப் பரவியுள்ளாரென்று அவர் வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசருடைய திருப்பதிகங்களுள் இப்போது நூற்றியிரு பத்தைந்து திருப்பதிகட்குரிய திருப்பதிகங்கள் சிலவே கிடைத்துள்ளன. அவற்றால், அவ்வத் திருப்பதிகளில் திருநாவுக் கரசர் அக்காலத்தில் தாம் கண்டனவும் கேட்டனவுமாகிய செய்திகள் பல அறியப்படுகின்றன. அவை வரலாற்றுண்மை கொண்டு விளங்குகின்றன. அவ்வத் திருப்பதிகளின் இயற்கைக் காட்சிகளும் திருநாவுக்கர சருடைய திருப்பாட்டுக்களில் சிறப்பெய்துகின்றன. 1. தில்லைப்பெருங் கோயில் இங்கே விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் இறைவன் திருக்கூத்து நிகழ்த்துகின்றான். அதனைக் காணும் நாவரசர் “சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால், பீளையுடைக்கண்களால் பின்னைப் பேய்த் தொண்டர் காண்பதென்னே”1 என்று பாடிப் பரவுகின்றார். அவனுடைய குமிண் சிரிப்பு திருநாவுக்கரசர்க்குப் பேரின்பம் தந்து “என்று வந்தாய்” என்னும் திருக்குறிப்பைப் புலப்படுத்துகிறது. அவனது “சிரித்த முகம்” நாவரசர் உள்ளத்தே நன்கு பதிந்து விடுகிறது. அதனையே நினைந்து நினைந்து பல திருப்பாட்டுக்களில் எடுத்தோதி இன்புறுகின்றார். அக்காலத்தே திருவம்பலம் பொன்வேயப் பெற்றுச் செம்பொன் அம்பலமாய்த் திகழ்ந்தது; அதனைத், “தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பலம்”2 என்று குறிக்கின்றார். தில்லைநகரும் அந்நாளில், நீலம் மலர்ந்து வாளைபாயும் வயல் சூழ்ந்து வண்டு பண்பாடும் சோலையுடன் பாளையுடைக் கமுகு ஓங்க நிற்கும் பல மாடமாளிகை கொண்டு இனியக் காட்சி வழங்கிற்று. தினைத்தனையும் வேதம் குன்றாச் செந்தீயந்தணர்களும் சிட்டர்களும் தில்லையில் வாழ்ந்து வந்தனர். அந்நாளில் தில்லைக்குச் சிதம்பரம் என்ற பெயர் கிடையாது; பிற்காலத்தில் தான், அங்குள்ள சிற்றம்பலம் சிறம்பலம் எனச் சிதைந்து பின் சிதம்பரம் எனத் திரிந்தது. அதன் வரலாறு அறியாத வடமொழியாளர் சித்+அம்பரம் எனப் பிரித்துச் சிதாகாசம் என்பது முதலிய பல கருத்துக்களைப் புகுத்தி உரைப்பாராயினர். இவ்வாறே பிற்காலத்தில் தமிழ்ப் பேரூரும் சிற்றூருமாகிய பலவும், தமிழர் தமது வரலாறு மறந்த அற்றம் நோக்கி, வடமொழிப் பெயர் பெற்று வழுமலிந்த கற்பனைக் கதைகட்கு இடமாகிக் கல்வி கற்கும் இளைஞர் உள்ளத்தில் சமய உணர்வும் பற்றும் தோன்றாத செயன் முறைகளை மேற்கொண்டு நிற்பனவாயின. 2. திருவதிகை இது, திருநாவுக்கரசர் பிறந்த திருவாமூர்க்குக் கிழக்கில் கெடிலம் என்னும் ஆற்றின் வடகரையில் உள்ளதொரு திருப்பதி. திருநாவுக்கரசர், இதனை, “கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே”1 என்று குறிக்கின்றார். இறைவன் முப்புரத்தை எரித்ததாகிய வீரட்டம் புரிந்த இடம் இத் திருவதிகையே என்பர்; அதற்கேற்ப, “செற்றார் வாழும் திரிபுரம் தீயெழ, வில்தான் கொண்டு எயில் எய்தவன் வீரட்டம்,” “வில்லால் மூவெயில் எய்தவன் வீரட்டம்” “விண்டார் மூவெயில் எய்தவன் வீரட்டம்”2 எனப் பன்முறையும் கூறுகின்றார். இத் திருவதிகைக்கு அதியரைய மங்கை என்று வேறு பெயர் ஒன்று உண்டெனப் பல்லவர் காலத்துக் கல்வெட்டோன்று3 கூறுகிறது. திருநாவுக்கரசரும் அக்காலத் தவராதலின், அதனை “அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை”4 எனத் தாம் பாடிய திருத்தாண்ட கத்துள் எடுத்தோதுகின்றார். இவ்வூரருகே யோடும் கெடிலத்தை அந்நாளையவர் தென்றிசைக் கங்கையென வழங்கினர்; ஆகவே, அவ்வழக்காறும் தோன்ற நம்நாவரசர், “தென்றிசைக் கங்கை அது எனப்படும் கெடிலம்”5 என்று பாராட்டியுள்ளார். இக்கெடிலம் கொணரும் நீர் நலத்தால் இவ்வூர் மிக்கவளம் பொருந்தியிருக்கும் திறம், திருநாவுக்கரசர் திருப்பாட்டுக்களில் பலவிடங்களில் அழகுற எடுத்துக் கூறப்படுகிறது. நிர் நிலைகளில் நீலம் முதலிய மலர்கள் மலர்ந்திருப்பதும், வண்டுகள் தேனுண்டு பாடுவதும், நீர்த் திரைகள் அலைப்பதால் மலரில் வீற்றிருக்கும் அன்னங்கள் ஊசலாடி மகிழ்ந்து உறங்குவதும், மகளிர் நீராடி இன்புறுவதும் பிறவும் இனிய செஞ்சொற்களால் சொல்லோவியம் செய்யப் பெற்றுள்ளன. 3.திருவொற்றியூர் தொண்டை நாட்டில் நாவரசர் காலத்தில் சிறந்து விளங்கிய திருப்பதிகளுள் இதுவும் ஒன்றாகும். கடற்கரையில் உள்ளதாகிய இவ்வூர், கடலிற் செல்லும் கலங்கள் கடல் திரையின் இடைநின்று நல்ல காட்சி நல்குவதும், கடற் சங்குகள் கரையில் வந்து மேய்வதும் திருவொற்றியூரில் இன்றும் காணப்படும் நிகழ்ச்சிகளாகும். இவற்றைத் திருநாவுக்கரசர், “விடுகலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும், திரைமோதக் கரையேறிச் சங்கம் ஊரும் திருவொற்றியூர்”1 என்று குறிக்கின்றார். இவ்வூர், பண்டை நாளில் சிறந்த கல்வி நிலையமாக விளங்கிற்றென்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் விளக்க முறுகின்றது. திருவொற்றியூர்க் கோயிலிலுள்ள மண்டபம் ஒன்று வியாகரணதான மண்டபம் எனப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படுவதே போதிய சான்று பகரும். அம்மண்டபம் அக்காலத்துக்கு முன்பே தோன்றிய தொன்மையுடைய தென்பது கருதத்தக்கது. திருநாவுக்கரசர் காலத்தில் இவ்வூர் கல்விநலம் சிறந்திருந்தமை தோன்ற. “ஓதல் ஓவா ஒளிதிகழும் ஒற்றியூர்”2 என்று இயம்புகின்றார். அந்நாளிற் பல்லவர்க்குத் தலைநகராக விளங்கிய காஞ்சிமா நகரம் கல்விக் கடிகை யொன்றால் கலைவளம் பெருக்கிய திறத்தை வரலாற்று நூல்கள் காட்டுகின்றன.3 அக் காஞ்சிமா நகரைப் பாடு மிடத்துத் திருநாவுக்கரசர் “கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர்”4 என்பது பொருத்தமாக இருக்கிறது. திருக்காளத்திக்குச் சென்றபோது அங்கே இறைவனைத் “தேனார்ந்து உக்க ஞானப் பூங்கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத் தொளியானான்காண்”1 என்று பாடியருளினாராக, அங்குள்ள இறைவிக்கு ஞானப் பூங்கோதை யென்பதே திருப்பெயராகக் கல்வெட்டுக்களிலும் நூல்களிலும் வழங்கி வருகின்றது. 4. திருப்புகலூர். திருநாவுக்கரசர் இறுதிக் காலத்தில் தங்கிய திருப்பதி இதுவேயாகும். இது நெய்தல் திணையில் புன்னை மரங்கள் செறிந்து இனிய காட்சி வழங்கும் அழகிய ஊராகும். பூம்புகார், பூந்தராய் என்றாற் போல இவ்வூரும் பூம்புகலூர் எனப்படுவதே இதன் இயற்கை நலத்தைப் புலப்படுத்தா நிற்கும். இதனைத் திருஞான சம்பந்தர் “புள்தன் பெடையோடு ஆடும் பூம்புகலூர்” 2 என்பர்; திருநாவுக்கரசர் “பூம் புகலூர் மேவிய புண்ணியனே”3 என்பர். திருநாவுக்கரசரால் “புன்னைப் பொழில் புகலூர்” “புன்னைக் கானற் பொழிற் புகலூர்”4 என இப் புகலூரது புன்னைப் பொழில்வளம் புகழப்படுவது காணலாம். இங்குள்ள இறைவனை நம் நாவரசர், கோணப்பிரான் எனக் குறித்து, “தொல்லை நீர்க்கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே”5 எனப் பரவுகின்றார். இப்பெயரே, பிற்காலத்துக் கல்வெட்டுக்களிலும்6 இறைவன் திருப்பெயராகக் காணப்படுகிறது. முதல் இராசராச சோழன் காலத்தேயே திருப்பு கலூரில் திருநாவுக்கரசர்க்குத் திருக்கோயில் இருந்ததென்றும், அக்கோயிலில் நாள் வழிபாட்டின் பொரு ட்டு வேந்தனால் நிவந்தம் விடப்பட்ட தென்றும் கல்வெட்டால்7 அறிகின்றாம். இவரைப் பிற்காலத்தார் பேணிப் பரவிய திறத்தைத் திருநாவுக்கரசரும் கல்வெட்டுக்களும் என்ற தலைப்பின் கீழ்க் கூறுதும். இதுகாறும் கூறியவாறு திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் பலவும் எடுத்து அவற்றிற்குரிய திருப்பதிகளையும் அவை பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களையும் எழுதப்புகின் இவ்வுரை வரம் பின்றிப் பெருகு மாதலின் இம்மட்டில் அமைவாம். திருப்பதிகங்களின் சொன்னலங் காண்டல் திருநாவுக்கரசருடைய திருப்பதிகங்களிற் காணப்படும் உவமைகளும் அரிய சொல்லாட்சிகளும் இலக்கிய ஆராய்ச்சி யாளர்க்குப் பேரின்பம் தருவனவாகும். திருநல்லூரிடத்தே இறைவன் எழுந்தருளியிருப்பவும், அவனை உலகெல்லாம் தேடித் திரிகின்றவர் களைப் பார்த்து, அவர்கள் ஆற்றில் கெடுத்தொழிந்த பொருளொன்றைக் குளத்தில் தேடிப்பார்ப்பவர்களையொப்பர் என்பாராய், “தேற்றப் படத் திருநல்லூரகத்தே சிவன் இருந்தால், தோற்றப்படச் சென்று கண்டு கொள்ளார் தொண்டர், துன்மதியால், ஆற்றில் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆதிரைப் போல், காற்றின் கடுத்து உலகெல்லாம் திரிதர்வர் காண்பதற்கே”1 என்றும், இறைவனது உண்மை யுணராதவர் சிலர், உணர்ந்து வழிபடுவாரைக்கண்டு, உங்கள் இறைவன் இப்படியிருப்பானோ எனத் தம் சிற்றறிவிற் கண்டவற்றைக் காட்டிப் பிணங்கி நின்றாராக, அவர்களைக் கண்ட திருநாவுக்கரசர், அவர் செய்கை, கடலாமையைப்பார்த்த குளத்துயாமை “நீ பரவும் கடல் எம் குளத்துக்கு நிகராமோ?” என்பது போல்கின்ற தென்பாராய், “கூவலாமை குரைகடல் ஆமையைக் கூவலோடு ஒக்கமோ கடல் என்றல்போல் பாவகாரிகள் பார்ப்பரிது என்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே”2 என்றும் கூறுவர். தாம் சமணரொடு கூடிநின்று உண்மை நெறியுணராது உழன்ற திறத்தை, “அமணோடு இசைவித்து எனைக், கொத்தைக்கு மூங்கை வழிகாட்டுவித்து என்னைக் கோகு செய்தாய்”3 எனவும், சிவநெறி தேராது புறச்சமயத்தே ஒதுங்கியிருந்த தம் நிலை மையை விளக்கற்கு, “ஆரூரர் தம் முன்பிருக்கும் விதியின்றி முயல் விட்டுக் காக்கையின் போனவாறே”1 எனவும், ஆரூரில் வார்தேனை வாய்மடுத்துப் பருகியுய்யும் விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித் தீக் காய்ந்தவாறே”2 எனவும் கூறிச் சைவ வாழ்வில் தாம் கவலையின்றி இனிது இருக்கும் இயல்பு தோன்ற, “எங்கு எழில் என் ஞாயிறு”3 எனவும் இவை போல்வன பலவும் கூறுமாற்றால் பழமொழிகள் மிகப்பல இவர் திருப்பாட்டுக்களில் காணப்படுகின்றன. இனி, இத்திருப்பதிகங்களால் அந்நாளில் இறைவனுக்குத் திருக்குறுக்கையில் அட்டமி விழாவும், திருவாரூரில் திருவாதிரை விழாவும், திருவொற்றியூரில் உத்திர விழாவும் நடந்த செய்திகள் விளக்கமுறுகின்றன. திருக்குடந்தையில் உள்ள தீர்த்தம் புண்ணிய நதியேழும் கொண்டது என்பதை, “தாவிமுதற்காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க், கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டம்”4 என்று குறிக்கின்றார். குமரிதீர்த்தத்தைக் குறிக்கும் போதெல்லாம், நம் திருநாவுக்கரசர், “கொங்கு தண்குமரித்துறை”5 எனவும், குருகாவூர் வெள்ளடை குமரிகொங்கு”6 எனவும் குறிக்கின்றார். குமரியை முன்னும் பின்னுமாய்ச் சிறப்பித்து நிற்கும் கொங்கு என்னும் சொல் குறிக்கும் பொருள் தெளிவாகவில்லை. தென்குமரிக்கரையில் இருக்கும் ஊர்க்கு அதுபெயராகலாம் என அறிஞர் கருதுகின்றனர். கன்னியா குமரியிலுள்ள கல்வெட்டுக்களுள் இப்போது கிடைப்பன எவையும் அவ்வாறு குறிக்கவில்லை. மற்று, குமரிக்கோயில் இக்காலத்தே திருப்பணி செய்யப் பெற்றபோது பழைய வாயிருந்த கல்வெட்டுக்கள் பல அழிந்துபோயின என்பது தெளிய விளங்கு வதனால்,7 இப்போது கிடைக்கும் கல்வெட்டுக்களில் இது பற்றிய குறிப்பொன்றும் காணப்படாமை கொண்டு ஒரு முடிபிற்கு வருதற்கில்லை. குமரிப்பகுதியைச் சேர்ந்த நாகர்கோயிலில் உள்ள திருக்கோயிலில் கொங்கன் விளக்கு என்றொருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அதனைப்பற்றி ஆராய்கையில் ஒருகாலத்தே குமரிப்பகுதியில் கொங்கரென்ற தலைவர் வாழ்ந்தன ரென்பது தெரிகிறது. அவரது தலைமையில் இருந்தமை பற்றிக் குமரி, கொங்கு தண்குமரி எனப்படுகிறது என்றற்கு இட முண்டாகிறது. வேறு சிலர் கொங்கு நாட்டில் குமரியெனப் பெயரிய தொரு தீர்த்தமிருக்கலாம்; அதனையும் உடன்கூட்டி,1 கொங்கு தண்குமரி” என்று திருநாவுக்கரசர் வழங்கியிருக்கலாம் எனக் கருதுவர்; கொங்குநாட்டுப் பேரூர்த் திருவான்பட்டியுடைய இறைவனையும் குறிக்கின்றாராதலின், கொங்கிற் குமரியும் அவர் அறிந்திருக்கலாம் என்பர். இவ்வாறு குறிக்கத்தக்க சிறப்புடைய குமரிதீர்த்தம் என ஒன்று கொங்குநாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை; தென் குமரியே கருத்தாயின் “கொங்குதார்க் குமரி” யென்பது “கொங்கு தென்குமரி” என்று பாடமாயிற்றாதல் வேண்டும் என்பவரும் உண்டு; அங்ஙனம் ஒரு பாட வேறுபாடு காணப்படாமை ஈண்டுக் கருதத்தக்கது. சமயநெறி பற்றிய வழக்கங்கள் சில இவருடைய திருப்பதிகங் களில் தெரிகின்றன. சிவனடியார்களை ஆட்கொள்ளுமிடத்து அவர்கள் தலையில் பால் தெளித்து2 தீர்த்தநீராட்டுவதும், சென்னியைத் திருவடியால் தீண்டுவதும் வழக்கமாக இருந்திருக்கின்றன. சென்னியைத் திருவடியால் தீண்டுவது பிற்காலத்தே திருவடி தீக்கையெனப்படுவதாயிற்று. சிவனடியார்கட்குச் சூலக்குறி இடபக்குறி பொறித்தலும் அக்காலத்தே இருந்திருக்கிறது; இதனைத் திருத்தூங் கானைமாடத்தில் திருநாவுக்கரசர் தன்மேற்சூலக் குறிபொறித்தல் வேண்டுமென இறைவன் பால் விண்ணப்பம்3 செய்து கோடலால் தெளியக்காண்கின்றோம். இவ்வழக்கம் பின்பு பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டளவில், திருக்கோயிலிற் பணிபுரிந்த அடியார்கள் இடையேயும் இருந்திருக்கிறது. தீக்காலிவல்லத்துத் திருக்கோயிலிற் பணிபுரிந்த தேவரடியார்கட்குச் சூலக்குறி இடப்பட்டதென அக்கோயிற் கல்வெட்டொன்று4 கூறுகிறது. இவ்வாறே திருமால் அடியார்களுட் சிலர் இக்காலத்தும் சங்கும் சக்கரமும் இரு தோளிலும் பொறித்துக் கொள்வது ஈண்டு நினைவு கூரத்தக்கதாம். அரிய சொல்லாட்சிகள் பல்லாயிரக் கணக்கில் படிக்குந்தோறும் பேரின்பம் சுரக்கும் பண்சுமந்த பாடல்களைப்பாடியருளிய திருநாவுக்கரசருடைய திருப்பாட்டுக்களில் அரிய இனிய சொல்லாட்சிகள் தோன்றி இன்பம் செய்கின்றன. இறைவனை வழிபடுமிடத்துத் தொண்டர், “சோத்தம் எம்பெருமான்” என்று வழங்குவது தொன்று தொட்டு வரும்மரபு. சோத்தமாவது இழிந்தார் செய்யும் அஞ்சலியெனப் பேராசிரியர்1 கூறுவர். இறைவனை நோக்கத் தாம் இறப்ப இழிந்தமை எண்ணி, திருநாவுக்கரசர் முதலிய சான்றோர் அச்சொல்லைத் தம்முடைய திருப்பாட்டுக்களில் எடுத்தாளுகின்றனர். இறைவனை நோக்க, அயனும் மாலும் முதலான தேவர் பலரும் இழிந்தவர் என்பது தோன்ற, “ஆத்தமாம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர், சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல”2 என்று திருநாவுக்கரசர் கூறுகின்றார். கும்மலித்தல் என்னும் சொல் உடம்பு பூரித்தல் என்னும் பொருள்பட வருவ தாகும்; நீரில் நனைந்த குருகினம், தம் இறகின் ஈரம் புலரவேண்டி இறகு நிமிர்த்துக் கும்மலிப்பது இயல்பு; இதனை நம்நாவரசர், படப்பை யெல்லாம் குருகினங்கள் கூடியாங்கே கும்மலித்து இற குலர்த்தி, மருவலாம் இடங்கள் காட்டும்”3 என்பர். ஒப்புமை யாவ தொன்றனை ஒப்பாரி யெனவழங்குவதுண்டு; “மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரியாம் கண்டது இல்”4 எனத் திருவள்ளுவர் வழங்குவது காண்க. திருநாவுக்கரசர் அதனைத் தாமும் நயந்து, “ஒப்பாரி இலாத எம்மடலுளானை”5 என்று ஓதுகின்றார். இவ்வாறே, “நிவஞ்சகத் தகன்ற செம்மையீசன்”6 எனவும் “நள்ளையிற் பட்டு நக்கரைப் பிக்க”1 எனவும், “கண்ணிட்டுப் போயிற்று”2 எனவும், “சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனப் பந்து வாக்கி யுயக் கொளும்”3 எனவும், “தீவினை நரிச்சிராது நடக்கம் நடக்குமே”4 எனவும். அருமந்தன்ன அதிர்கழல் சேர்மினோ”5 எனவும் “அரி யோடு பிராமனும் துத்தியம் செய நின்ற நற்சோதியே”6எனவும் பிறவுமாக வருவன பலவும் அறிஞர்கண்டு இன்புறும் பான்மையவாகும். முந்துநூல் வழக்கு “முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்”7 என்பது ஒரு பழமையான கொள்கையாகும். அது தமிழகத்துச் சான்றோர் எல்லாரிடத்தும் இயல்பாகக் காணக் கூடிய தொன்று. இலக்கணநூல் எழுதுவோரும் இலக்கிய மெழுது வோரும் இப்பண்புடையராதலை எளிதிற் காணலாம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய சான்றோர்கள் இறைவன் திருவருள் வழிநின்று தம் உளம் குளிர்ந்தபோதெல்லாம் அதன்கண் உவட்டெடுத்துப் பெருகிய உணர்ச்சி மொழியாக இத் திருப்பதிங்களை யோதியுள்ளனர்; ஆயினும், அவ்வுணர்வுப் பெருக்கிடையே அவர் கற்றனவும் கேட்டனவுமாகிய முந்துநூற் கருத்துக்களும் சொற்களும் பொன்னும் மணியும் போல வெளிப்படு கின்றன. “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு”8 என்பது திருக்குறள்; இதனைத் திருநாவுக்கரசர், “ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்”9 என்பர். இதன்கண் அகரமுதல்னகர இறுவாயாகிய எழுத்து அனைத்தையும் ஆனம் எனவழங்கியது திருநாவுக்கரசரது செஞ்சொற்றிறமாகும். “இனிய வுளவாக இன்னாத கூறல், கனியிருப்பக் காய்கவர்ந்தற்று”10 என்பது திருக்குறள். இதன் ஈற்றடியை வாங்கி,” ஆரூரரைக், கையினால் தொழா தொழிந்து கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே1 என்பர். “புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்”2 எனவரும் திருக்குறளை உளத்திற்கொண்டு, “வாய்மையே தூய்மையாக மனமணியிலிங்கமாக”3 என்பர். “இழுக்கலுடையுழி யூற்றுக் கோலற்றே, ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்”4 என்பது திருக் குறள். திருநாவுக்கரசர், “நினைவார்க்கெலாம் ஊற்றுத்தண்டொப்பர் போல் ஒற்றி யூரரே”5 என்றார். இவைபோலும் பலதிருக்குறட் கருத்துக் களையும் கருத்துடைய சொற்றொடர்களையும் இடை யிடையே தொடுத்துப்பாடும் நம் திருநாவுக்கரசர் அத்திருக்குறட் காலத்தை அடுத்துவந்த சங்க இலக்கியக் கருத்துக்களையும் கவினுடைய சொற் றொடர்களையும் கையாளுதலில் பின்னிடுகின்றார் இல்லை. பிறப்பு மாறி மறுபிறப்பெய்துங்கால், ஒருவர்க்கு மறதியுண்டாகும் எனச் சங்கச்சான்றோர் கூறுவர்; “சாதல் அஞ்சேன் அஞ்சுவல், சாவின் பிறப்புப் பிறிது ஆகுவதாயின், மறக்குவென் கொல் என்காதலன் எனவே”6 என வருவது காண்க. இக்கருத்தைத் திருநாவுக்கரசர், “துறக்கப்படாத இவ்வுடலைத் துறந்து வெந்தூதுவரோடு இறப்பன் இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து பிறப்பன் பிறந்தால் பிறையணி வார் சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பென் கொலோ என்றுஎன் உள்ளம் கிடந்து மறுகிடுமே”7 என்று கூறுகின்றார். இறந்தார் எய்தும் மேலுலகைச் சங்கச் சான்றோர் வாராவுலகம் என்பது வழக்கம்; “நீளிலை எஃகம் அறுத்த உடம்பொடு, வாராவுலகம் புகுதல் ஒன்றெனப் படை தொட்டனனே குருசில்”1 எனப் பரணர் கூறுவது காண்க. இதனை நம் திருநாவுக்கரசர், நயந்தெடுத்து, “வாராவுலகு அருள வல்லான்றன்னை”2 என்று மொழிந்து இன்புறுகின்றார். அதியமான் தந்த நெல்லிக் கனியை, யுண்ட ஒளவையார், “சாதல் நீங்க எமக்கு ஈத்தமையின், நீலமணி மிடற்ற னாகிய இறைவன் சாதற்குக் காரணமாகிய நஞ்சுண்டும் நிலைபெற்று இருந்தாற் போல நீயும் சாவாதிருத்தல் வேண்டும்” என்பாராய், “போரடுதிருவின் பொலந்தார் அஞ்சி, பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி, நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே”3 என்றாராக, இதன்கண், இறைவன் நஞ்சுண்டும் இறவாது நிலைபேறு உடையனாதலும், நஞ்சுண்ணாது அமுதுண்ட விண்ணோர் சாதல் நீங்காமையும் குறிப்பால் விளங்குதல் கண்ட இளங்கோவடிகள், “விண்ணோர் அமுதுண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்”4 என்று எடுத்தோதினார். அதன் நயங்கண்ட நம் நாவரசர், “தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதமுண்ட மற்று அமரர் உலந்தாலும் உலவாதனை”5 எனப் பரிந்த பாடிப் பரவுகின்றார். இனி, தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வழங்கிய பனம் பாரனார், தொல்காப்பியரை “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று குறிக்கின்றார். இப்பகுதிக்கு உரைகண்ட இடைக்காலச் சான்றோர் பலரும், ஐந்திரமாவது இந்திரனாற் செய்யப்பட்டதோர் இலக்கணம் என்று கூறுகின்றனர். இவ்வாறே சிலப்பதிகாரத்துக்கு அரும்பத உரை கண்ட சான்றோர், “புண்ணிய சரவணம் பொருந்து விராயின், விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்”6 என வருமிடத்து விழு நூலாவது ஐந்திர வியாகரணம் என்று கூறுகின்றார். இவ்வாற்றால் பண்டை நாளில் ஐந்திரம் என்ற பெயரால் இலக்கணமொன்று இருந்தமை தெரிகிறது. இவ்வைந்திரம் இந்திர மெனவும் வரும். இவ்விலக்கணத்தையும், இந்திரனுக்கு இறைவன் அருளினான் என்பது போதர, நம் திருநாவுக்கரசர், “இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்”1 என்று தெரிந்தருளுகின்றார். இவ்வாறே ஆகமகங்களின் வரலாற்றையும் அகத்தியன் வரலாற்றையும், திருநாவுக் கரசர், “அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை, அகத்தியனை உகப்பனை”2 என்று குறித்தருளுகின்றார். இவ்வாறு இறைவன் கலையும் கல்வியும் நல்கிய வள்ளன்மையைச் சான்றோர் எடுத்தோதக் கண்டே காமிகம் காரணம் முதலிய சிவாக மங்களைக் கற்பிக்கும் கல்வி நிலையங்கட்குக் கோயிலிலேயே இடம் வகுக்கலாயினர்; பின்வந்த தமிழ் நாட்டு வேந்தர்கள் இறைவன் திருக்கோயிலே பல்வகைக் கலைகட்கும் கல்விக்கும் சீர்த்த இடமாகச் செய்து வளர்த்தனர். இதனை அறியாத தன்னலவாதிகள் இந்நாளில் திருக்கோயில்கள் கல்வி நிலையமாதல் கூடாது எனப் பிணங்கிப் பேதைமை மொழிகின்றனர். திருநாவுக்கரசரும் கல்வெட்டுக்களும் திருநாவுக்கரசருடைய திருப்பெயர், திருநாவுக்கரசு தேவர், திருநாவுக்கரசு நாயனார், திருநாவுக்கரசு முதலியார், திருநாவுக் கரையர், திருநாவுடைய பிள்ளை, நாவுடைப் பெருமான் எனப் பலவகையாகக் கல்வெட்டுக்களில் வழங்கப் பெற்றுளது. அவற்றுள், திருநாவுக்கரசு தேவர் என்பது பெருவழக்கு. ஏனைய சிறுபான்மையாக வழங்கின. கோவிலூரென வழங்கும் திருவுசாத்தானத்திலுள்ள கல்வொட்டொன்று3 திருநாவுக்கரசரை திருநாவுக்கரசு நாயனாரெனக் குறிக்கின்றது. திருச்செந்தூர்க்கு அண்மையிலுள்ள ஆற்றூரில் காணப்படும் கல்வெட்டொன்று4 அவரைத் திருநாவுக்கரசு முதலியார் என வழங்குகிறது. திருநாவுக்கரைய தேவர் என்னும் பெயரைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டும்5 திருமழபாடிக் கல்வெட்டும்6 பிறவும்1 கூறுகின்றன. தஞ்சை மாவட்டத்துச் சூலமங்கலத்தில் கோச்சடைய வன்மரான பராக்கிரம பாண்டியன் காலத்துப் பத்தாமாண்டுக் கல்வெட்டொன்றும்2 பன்னிரண்டாம் ஆண்டுக் கல்வெட்டொன் றும்3 நாவரசரைத் திருநாவுடைய பிள்ளையாரென வழங்குகின்றன. திருவெண்காட்டிலுள்ள கல்வொட்டொன்று4 தேவகன்மி நாவுடைப் பெருமான் திருவெண்காடு பட்டன் என ஒருவன் பெயரைக் குறித்தலால், திருநாவுக்கரசர்க்குத் திருநாவுடைப் பெருமான் என்றொரு பெயரும் வழங்கி வந்ததென்று தெரிகின்றோம். இந்நாளில் பிராமணரிடையிலும் சிவப்பிராமணரிடையிலும் தம்மைத் தமிழ் மொழியினர் என்று கருதும் கருத்து இறந்து போயிற்று; அதனால், திருநாவுக்கரசருடைய பெயரைப் பிராமண மக்கட்கு இடும் மரபு மறைந்ததொழிந்தது. இந்த மரபு இடைக் காலத்தில் நிலவினமையால் அது பெருக வழங்கியிருந்தது; அதனைத் தஞ்சாவூர்ப் பெரிய கோயில் கல்வெட்டு5 எடுத்துக் காட்டி வற்புறுத்துகிறது. சிவப்பிராமணர் பலர், பொற் சுவரன் திருநாவுக் கரையனான தர்ம சிவன்,6 கம்பன் திருநாவுக்கரையனான சதாசிவன் அப்பி, திருநாவுக்கரையனான நேத்திர சிவன்,7 ஆரூரன் திருநாவுக் கரையனான ஞானசிவன்,8 மாதேவன் திருநாவுக்கரையனான விஞ்ஞான சிவன்,9 சத்தி திருநாவுக்கரையனான ஈசான சிவன்,10 ஆச்சன் திருநாவுக்கரையனான நேத்திர சிவன்11 எனத் திருநாவுக் கரைசர் திருப்பெயரைத் தாங்கிச் சிறப்பெய்தியிருந்தமை தெளிவாகிறது. இவ்வாறே அரசியல் தலைவர் பலர் திருநாவுக்கரசர் திருப்பெயர் தாங்கியிருந்தனர். சயங்கொண்ட சோழமண்டலத்து ஊற்றுக்காட்டுக் கோட்டத்துக் குன்றங்கிழான் திருநாவுக்கரைசு தேவன்12 என்றும், “அம்பல வாணன் திருவிசலூரானான திருநாவுக் கரையன்”1 என்றும், கேரளாந் தக வளநாட்டு உறையூர்க் கூற்றத்துத் திருவடகுடி மகாதேவர் தான மடம் தேவாரத்துக்குத் திருப்பதியம் விண்ணப்பம் செய்யும் அம் பலத்தாடி திருநாவுக்கரையன்2 என்றும் வருவன போதிய சான்று பகர்வனவாம். இனி, திருநாவுக்கரசர்க்குப் இளமைப் போதில் அவருடைய பெற்றோர் இட்ட பெயர் மருணீக்கி எனத் திருத்தொண்டர் புராணம்3 கூறுகிறது. மருணீக்கி, இருணீக்கி யென்பன போன்ற பெயர்களை மக்கட்கு இடும் வழக்கு முன்னாளில் இருந்த தென்றற்குத் திருவதிகைக் கோயில் வாகீசன் மடத்துக்கு நிலம் விடும் கல்வெட் டொன்றில்4 கையெழுத்திட்ட சான்றோர்களுள், இருணீக்கி கோன் என்றோருவர் கையெழுத்திட்டிருப்பது சீர்த்த சான்றாக விளங்குகிறது. திருநாவுக்கரசர் என்னும் தூய தமிழ்ப் பெயரை வட மொழிப் படுத்தி வாகீசர் என வழங்குவதும் உண்டு. நாவரசர் முன்னைப் பிறவியில் வாகீசரென்ற முனிவராய் விளங்கின ரென்றும், எனவே, வாகீச ரெனவும் அவர்க்குப் பெயருண்டென்றும் திருத்தொண்டர் புராணத் தால் அறிகின்றோம். அதனால் திருநாவுக்கரசரைச் சில கல்வெட்டுக்கள் வாகீசரென்று குறிக்கின்றன. திருக்காளத்திப் பகுதியிலுள்ள தொண்டைமானாற்றூரில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் விளங்கிய பராந்தக சோழ வேந்தனுடைய கல்வெட்டொன்று5 பள்ளிப்படை வாகீசுரப் படாரர் என்று ஒருவர் உண்டெனக் கூறுகிறது. அதனை வற்புறுத்துவது போலத் திருவதிகை யிலுள்ள கல்வெட்டொன்று, திருநாவுக்கரசர் திருமடத்தை வாகீசன் மடம்6 என வழங்குகிறது. இனி, திருநாவுக்கரசர், திருக்கயிலை செல்லும் முயற்சியில் ஈடுபட்டு உடல் தேய்ந்து ஓய்ந்து போன காலத்தில், தமக்குக் காட்டி யருளப் பெற்ற நீர் நிலையில் மூழ்கித் திருவையாற்றில் குளித்தெழுந்த கோலத்தோடே சென்று இறைவன் திருக்கயிலைக் காட்சி நல்கப்பெற்ற வரலாறு பண்டை நாளை நன் மக்கட்குப் பெரும் வியப்பினை விளைத்தது. அதனால், அவர்கள் அவரைக் குளித்தெழுந்த நாயனார் என்றும் வழங்கினர். அவர் திருப்புகலூர் வந்து அடைந்த போதும் அக்கோலத்தோடேயிருந்த மையின், அவ்வூரவர் அவரைக் குளித் தெழுந்த நாயனார் என்றே வழங்கி வந்தனர். திருப்புகலூரில் அவர் இறைவன் திருவடியடைந்த பின் அவர்க்குக் கோயிலெடுத்து அதனைக் குளித்தெழுந்த நாயனார் கோயில் என்று குலவிய அன்புடன் கூறலுற்றனர். மேலும், நம் சோழ மன்னனான இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் திருப்புகலூரிலுள்ள “குளிச் செழுந்த நாயனார்” கோயிலுக்கு உரிய நிலங்கள் சிலவற்றைத் தோட்டக் குடியான இராசேந்திர சோழநல்லூர் ஊரவையினர் இறையிலியாக்கிய செய்தியைத் திருப்புகலூர்க் கல்வெட்டுக்1 கூறுவது கொண்டு இவ் வுண்மை துணியப்படுகிறது. இனி, தெள்ளாறெறிந்த நந்திவன்மன் முதலிய பல்லவ மன்னர் காலத்தேயே திருநாவுக்கரசர் முதலியோர் அருளிய திருப்பதி கங்களைக் கோயில்களில் ஓதும் மரபு இருந்து வந்ததாயினும், முதல் இராசராச சோழதேவர் கால முதலே திருநாவுக்கரசர் திருவுருவத்தைக் கோயில்களில் எழுந்தருள்வித்து நாடோறும் பூசனையும் ஆண்டு தோறும் பெருவிழாவும் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. முதல் இராசராசன் காலத்திலும் அவன் மகன் இராசேந்திரன் காலத்திலும், தஞ்சாவூர்ப் பெரிய கோயிலிலும்2 திருமழபாடியிலும்3 முறையே பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளானும், திருமால் அரங்கனான திருப்பள்ளித் தாமப் பிச்சன் என்பவனும் அவன் மனைவியும், வீர ராசேந்திரன் காலத்தில் அகத்திய கொண்டாவில் உத்தம சோழகங்கனான செல்வகங்கன் மனைவியும்,4 திருவாரூர்க் கோயிலில் இரண்டாங் குலோத்துங்கனும்,5 திருவலஞ் சுழியில் இரண்டாம் இராசராசன் காலத்தில் தேவரடியார் ஆட்கொண்டான் தேசும் திருவும் உடையாளும், கிழக்கடைய நின்றாளும் ஆகிய இவ்விருவரும்,1 திருக்கச்சூரில் மூன்றாங் குலோத்துங்க சோழனும்,2 சூலமங்கலத்துக் கரியுரித்த நாயனார் கோயிலில் சடைய வன்மன் பராக்கிராம பாண்டியன் காலத்தில் திருநாவுடையார் என்பவரும்,3 இராமநாதபுர மாவட்டத்துத் திருப்புத்தூர் உருத்திர கோட்டீச்சுரத்தில் அருவியூர் வாணிகன் புற்றிடங் கொண்டான் திருச்சிற்றம்பல முடையானான ஞானசம் பந்தன் என்பவனும்,4 திருநாவுக்கரசர் திருவுருவத்தை எழுந்தருள் வித்து நாட்பூசனை முதலியவற்றுக்கு வேண்டும் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். திருநாவுக்கரசர் பிறந்த ஊராகிய திருவாமூரிலும்,5 அவர் இறுதிக் காலத்தே இருந்து வழிபாடு செய்த திருப்புகலூரிலும்6 எழுந்தருளப் பெற்றிருந்த திருநாவுக்கரசர் திருவுருவ வழிபாட்டுக் கென, முதல் இராசராசன் காலத்திலும் முதற்குலோத்துங்கன் காலத்திலும் நிலங்கள் நிவந்தமாக விடப்பட்டுள்ளன. இவ்வாறே, திருப்புத்தூர்7 கோவிலூர் எனப்படும் திருவுசாத்தானம்8 சூலமங் கலம்9 கோயில் தேவராயன் பேட்டை யென வழங்கும் திருச்சேலூர்10 முதலிய இடங்கள் பலவற்றி லும் கோயில் கொண்டிருந்த திருநாவுக் கரசர்க்கு வழிபாடு நடத்தற்கு நிவந்தங்கள் பல ஏற்படுத்தப் பட்டுள்ளன. பல திருக்கோயில்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்களுள் தொடக்க விழா திருநாவுக்கரசர் திருவிழாவாக இருந்ததிருக்கிற தென்று தீர்த்தநகரியென வழங்கும் திருத்தினை நகர்க்கோயில் கல்வெட்டால்11 அறிகின்றோம். திருநெல்வேலி மாவட்டத்து ஆற்றூர்க் கோயில் கல்வெட்டொன்று12 திருநாவுக் கரசுக்குத் திருவிழாச் செய்தற்கு வேண்டும் ஏற்பாட்டைச் செய்கின்றது. இவ்வண்ணம் நன்மக்களால் சிறப்பும் பூசனையும் செய்து வழிபடப் பெற்ற திருநாவுக்கரசரை அவர் வாழ்ந்த காலத்தே வழிபடு கடவுளாகப் பேணி வழிபட்டுய்ந்த அந்தணர் பெருமானாகிய அப்பூதியடிகளைப் போலவே, முதல் இராசராசன் காலத்தில் திருப்புகலூரில் அங்கி குமர கிரமவித்தனான பொற்கோயில் சண்டேசுர யோகியென்னும் அந்தணர், “திருநாவுக்கரைய தேவர்க்கு உச்சியிலும் இரவிலும் போனகம் படைத்தற்கு நெல்லும் காசும்” தந்த வழிபட்டிருக்கின்றார்.1 இனி, திருநாவுக்கரசர் பெயரால் திருமடங்கள் நம் தமிழகத்தில் பல இடங்களில் இருந்திருக்கின்றன. திருவீழிமிழலையில் திருநாவுக் கரசர் மடமெனவும்,2 திருப்பாற்றுறையில் திருநாவுக்கரசு தேவன் மடமெனவும்,3 திருவிளச்சேரியில் திருநாவுக்கரசு மடமெனவும்,4 சேரமாதேவியில் திருநாவுக்கரசர் மடமெனவும்,5 திரிபுவனையில் திருநாவுக்கரசு மடமெனவும்,6 திருவதிகையில் திருநாவுக்கரைச தேவர் மடமெனவும்,7 பெரிச்சி கோயிலில் திருநாவுக்கரசன் மடமெனவும்,8 பட்டீச்சரத்தில் திருநாவுக்கரசு மடமெனவும்,9 திருப்பாசூரில் திருநாவுக்கரசன் மடமெனவும்,10 கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவ்வாறே தில்லையிலும் திருப்பூந்துருத்தியிலும் திருநாவுக்கரசு பெயரால் திருமடங்கள் இருந்திருக்கின்றன வெனினும், தில்லையிலிருந்தது இருந்தவிடம் தெரியாமல் மறைந்த போக, திருப்பூந்துருத்தியிலிருந்தது செவ்வாய்க்கிழமை மடமாக மாறியிருக் கிறது. திருக்குறுக்கை வீரட்டேசுரர் கோயிலில் திருநாவுக்கரசு திருக்குகையென ஒரு மடம் இருந்ததென அவ்வூர்க் கல்வெட் டொன்று11 கூறுகிறது. பூதக்குடிச் செப்பேடு ஒன்று அங்கே திருநாவுக் கரசர் மடமொன்றிருந்ததெனத் தெரிவிக்கிறது. திங்களூர், புகலூர் திருநல்லூர் முதலிய இடங்களிலும் திருநாவுக்கரசர் திருமடங்கள் இருந்தன எனத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. பிரான்மலையிலுள்ள மங்கைபாகர் திருக்கோயிலில் திருநாவுக் கரசர்பெயரால் திருநாவுக்கரச திருமண்டபம் என ஒரு மண்டபம் இருந்திருக்கிறது. திருவதிகையில் பிடாரி கோயிலின் வடக்கி லிருந்த காட்டையழித்துச் சாலியர், எண்ணெய் வாணிகர் முதலியோரைக் குடியேற்றி அத்தெருவுக்குத் திருநாவுக்கரசன் திருவீதி யெனப்பெயரிட்டு வழங்கினர். திருநாவுக்கரசன் பால் தமக்கிருந்த அன்பு மிகுதியால் தம்மக்கட்கு மூத்த திருநாவுக்கரசு இளைய திருநாவுக்கரசு என்றும், தாம் நிறுவிய தண்ணீர்ப்பந்தல், தம் மனைக்கண் இருந்த அளவைகள் முதலியவற்றுக்குத் திருநாவுக்கரசு என்றும் பெயரிட்டு அன்புசெய்தனர் அப்பூதியடிகள் என்று திருத்தொண்டர் புராணம் கூறுகின்றமை முன்பே காட்டப்பட்டது. இவ்வாறே, திருவாவடுதுறையில் ஓர் அன்பர் தன்மக்கட்கு மூத்த திருநாவுக்கரசு இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட்டிருந்தனர். அவருள் இளைய திருநாவுக்கரையர் என்பார் திருவாவடுதுறைக் கற்றளிப்பிரானாருக்கு அரிய திருப்பணி செய்தனர். அங்கே அவருடைய திருவுருவத்தைச் செய்தமைத்து அதன்கீழ் “இவ்வூர்க் கற்றளிப்பிரானார்க்குத் தொண்டர் இளைய திருநாவுக் கரையர்1 என்பது எழுதப்பட்டுள்ளது. பிரான்மலைப்பகுதியில் திரு நாவுக்கரசு நாழி என்று ஓர் அளவை வழங்கிவந்ததாகக் குலசேகர பாண்டியன் காலத்துக் கல்வெட்டொன்று2 கூறுகிறது. திருநாவுக்கரசரை வாகீசரென வழங்குவதுண்டென்று முன்பே கூறினோம். திருவதிகையில் இருந்த திருநாவுக்கரசர்மடம் வாகீசன் மடமென்று வழங்கிற்றென அவ்வூர்க்கல்வெட்டொன்று3 கூறுகிறது. அப்பெயரும் தமிழ் மக்களால் நன்கு போற்றப்பட்டு வந்துளது. பலர் அப்பெயரைத் தமது இயற்பெயராகக் கொண்டுள்ளனர். திருவாலங் காட்டில் மணலூருடையான் வாகீசன் என்று ஒரு வரும், திருவாரூர் வடக்கில் மடத்து முதலியார் பிள்ளை வாகீசப்பெருமாள் என்று ஒருவரும், நொடியூரில் நொடியூருடையான் சொக்கன் அரையங்குள வனான வாகீசப்பெருமாள் என்று ஒருவரும் இருந்திருப்பதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. தஞ்சைமாவட்டத்துப் பெருஞ் சேரியில், மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் அவ்வூரிலுள்ள சிவன் கோயிலைக் கற்றளியாக்கிய செய்தி கூறும் கல்வெட்டு அக்கோயிலைத் திருவாகீசுரம் என்று குறிக்கிறது. இது வாகீசனென்ற செல்வரொரு வரால் கட்டப்பெற்றதாகவும் இருக்கலாம். திருவொற்றியூரிலிருந்த மடமொன்றிலிருந்து கொண்டு “சோம சித்தாந்தம் வக்காணித்த” வாகீச பண்டிதரென ஒருவர் இருந்து ஞானாமிர்தம் என்னும் தமிழ் நூலைச் செய்துள்ளார். முதற் பராந்தகன் காலத்தில் தொண்டை மானாற்றூரில் வாகீசுர பண்டிதன் தூம்பு1 என ஒரு தூம்பும் இருந்திருக்கிறது. மதுரைத் திருஞானசம்பந்தர் மடத்துத் தலைவர் திருஞானசம் பந்த பண்டாரம் என வழங்கியது போலப் பதினாறாம் நூற்றாண்டில் பிரான்மலையிலிருந்த மடமொன்றில்2 திருநாவுக்கரச பண்டாரமென ஒருவர் சிறந்திருந்தார். இவ்வண்ணம் திருநாவுக்கரசர்க்குத் திருக்கோயில் எடுப்பித்தும் சிறப்பும் பூசனையும் செவவனம் செய்தும் திருமண்டபம், திருமடம், திருவீதி முதலியன அமைத்தும் திருநாவுக்கரசரை வழிபட்ட இடைக்கால நன்மக்கள், அவர் வழங்கிய திருத்தாண்டகங்களை ஓதுதற் கென்றே நிவந்தங்கள் விட்டனர். திருக்குறுக்கை வீரட்டத்தில் மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் திருநாவுக்கரசு அருளிய திருத்தாண்டகம் ஓதுதற்கு3 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்ஙனமே திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்களுட் காணப்படும் அரிய சொற்றொடர்கள் பல இறைவனுக்கும் இறைவிக்கும் மக்கட்கும் பெயராக வைத்துச் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. திருப்பாதிரிப் புலியூரில் இறைவனை, “தோன்றாத் துணையாயிருந்தனன் தன் னடியோங்களுக்கே”4 என்று பாடினராக, அவ்வூர்க்கல்வெட்டு, இறைவனைத் “தோன்றாத் துணையாளுடையார்”5 என்றும், திருச்செம்பொன் பள்ளியில் இறைவனைப் பாடுங்கால், “தெருவெலாம் உழல்வார் செம்பொன் பள்ளியார், ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே ”6 என்று குறித்தாராக, அவ்வூர்க் கல்வெட்டு அவரைத் தெருவெலாம் உழல்வார் நாயனார்1 என்றும் குறிக்கின்றன. நாவரசர் திருநாகைக் காரோணம் சென்று இறைவனைப் பாடுங்கால் “கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணு தலே, வில்தாங்கிய கரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமே”2 என்று பாடினர்; இடைக் காலத்தார் மகளிரை வேனெடுங்கண்ணி யென்று பெயரிட்டு வழங்குவாராயினர்; இதனை “இவன் தங்கை வேல் நெடுங்கண்ணி”3 என வரும் கல்வெட்டால் அறியலாம். திருச்சாய்க் காட்டில் இறைவனைப் பாடலுற்ற திருநாவுக்கரசர் கண்ணப்பர்க்கு இறைவன் அருள்புரிந்த வரலாற்றை ஒரு திருப்பாட்டில் ஓதலுற்று, “ஒருகணை யிடந்து அங்கு அப்பத் தவப்பெருந் தேவுசெய்தார் சாய்க்காடு மேவினாரே”4 என்றார்; தவப்பெருந்தேவு செய்தார் என்ற இத்தொடரையே பெயராகக் கொண்ட சான்றோரும் திருக்காளத்தியில் இருந்திருக்கின்றார்; இதனை, “திருக்காளத்தி யாண்டார் தவப் பெருந்தேவு செய்தார் எழுத்து”5 என வருதலால் அறியலாம். திருமழடி பாடியில் இறைவனை அடிகள் “மழபாடிவயிரத்தூணே”6 என்றாராக, அதனையே தமக்குப் பெயராகக் கொண்டார் ஒருவர், “ஆனை மங்கலமுடையான் பஞ்சநதி வயிரத்தூண்”7 என்று திருமழ பாடிக் கல்வெல்டொன்றில் குறிக்கப்படுகின்றார். தில்லையிற் கூத்தப் பெருமானைக்கண்டு பரவிய திருநாவுக்கரசடிகள் “இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால், மனிதப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே”8 என்றாராக, எடுத்த பொற்பாதம் என்ற தொடரை நயந்த சான்றோர் ஒருவர், தில்லையில் ஊர்க்கணக்க ராயிருந்திருக் கிறார்; இதனை, “இவை அருளால் ஊர்க்கணக்கு எடுத்த பொற் பாதப்பிரியன் எழுத்து”9 எனத் தில்லைக்கோயிற் கல்வெட்டுக் கூறுவது காணலாம். இவ்வாறு திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகத் தொடர்கள் பல ஆடவர்க்கும் மகளிர்க்கும் இனிய பெயர்களாய் அழகு செய்திருக்கும் காட்சி கல்வெட்டுக்களில் மணிபோல் ஆங்காங்குக் கிடந்து இன்பஞ் செய்கின்றன என்று எடுத்தோதியமைகின்றாம். 4. ஐயடிகள் காடவர்கோன் வரலாறு ஐயடிகள் காடவர்கோன், பதினோராம் திருமுறையிற் காணப் படும் நாயன்மார்களுள் ஒருவர். காடவர்கோன் எனக் குறிக்கப்படுவது ஒன்றே இவர் பல்லவர் குலத்து வேந்தருள் ஒருவர் என்பதை நன்கு புலப்படுத்துகிறது. காஞ்சிமா நகர்க்கண் இருந்து அரசு மேம்பட்ட பல்லவருள் சிம்மவிஷ்ணு வன்மன் வழிவந்த மன்னர் நம் ஐயடிகள் காடவர் கோன். இவருக்கு முன்னே காஞ்சியிலிருந்து அரசு புரிந்தவன் இரண்டாம் மகேந்திரவன்மன். ஐயடிகளது பெயர் செப்பேடுகளில் பரமேச்சுர வன்மன் என்றே காணப்படும். இவர் ஆட்சிக்கு வந்த சின்னாட்களுக் கெல்லாம் சளுக்கி வேந்தனான முதல் விக்கிரமாதித்தனோடு பெருவளநல்லூர் என்னும் இடத்தே கடும்போர் உடற்றி வெற்றி பெற்றார். அதன் பயனாகச் சளுக்கிவேந்தன் கைப்பற்றியிருந்த பகுதியையும் இவர் அடிப்படுத்தினார். சிவபெருமான்பால் பேரன்பு கொண்ட இவர் நாட்டில் பலவிடங்களில் திருக்கோயில் திருப்பணி செய்தார். கூரம் என்னுமிடத்தில் சிவன்கோயில் ஒன்றைக் கட்டி அதற்குத் தன் சிறப்புப் பெயர் களுள் ஒன்றாகிய “வித்தியா வினீதன்” என்பதனால் வித்தியா வினீத பரமேச்சுர பல்லவனீச்சுரம் என்று பெயரிட்டார். அவ்வூருக்கும் பரமேச்சுர மங்கலம் என்று பெயர் தரப்பட்டது. பின்பு, அவ்வூரை இருபத் தைந்து கூறாக்கி, அவற்றுள் மூன்று கூறுகளைக் கோயிற் பணிபுரியும் அனந்த சிவம். புல்ல சருமன் என்ற இருவர்க்கும், ஒரு கூற்றைப் பாரதம் படிப்போருக்கும். ஒரு கூற்றைப் பாரதம் படிக்கும் மண்டலத்தில் நீர் தெளித்து விளக்கேற்றி வைப்பதற்கும் ஏனைய வற்றை இருபது சதுர்வேதிகட்கும் அளித்தார். இவ்வகையில் இவர்க்கு ஆண்டு முதிரவே அரசியலில் உவர்ப்பு உண்டாயிற்று. அதனால், இவர் தன் மகன் நரசிங்க வன்மனுக்கு அரசியலைத் தந்து விட்டுச் சிவப்பணி புரியத் தொடங்கினார். சிவபெருமான் கோயில் கொண்டிருக்கும் இடம் பலவற்றுக்கும் சென்று இறைவனை வழிபட்டு ஒவ்வோர் அழகிய வெண்பாவைப் பாடிப் பரவி வந்தார். இவ்வாறு வருபவர், தில்லைக்கு வந்து அங்கே திருக்கூத்தியற்றும் இறைவனை வணங்கி வெண்பாவொன்று பாடி இன்புற்றார்; இவர் தில்லைக்கு வந்தபோது அங்கே சில நாள் தங்கினார். பின்னர், ஏனைத் திருக்கோயில்கட்கும் சென்று இறைவனைப் பணிந்து திருப்பணி செய்த காடவனார், நெடுநாள் உயிர் வாழ்ந்திருந்து இறைவன் திருவடி நீழலெய்தினார். இவ்வரலாறு, திருத்தொண்டர் புராணமும் பல்ல வருடைய செப்பேடுகளும் துணையாகக் கொண்டு காணப்பட்டதாகும். வரலாற்றாராய்ச்சி பரமேச்சுரன் என்பது இவரது இயற் பெயரெனக் காணப்படு கின்றது; எனினும், இவர் சிவத்தொண்டு செய்யும் “மாதவம்”1 பூண்டபின், அடிகள் எனப்பட்டனராதல் வேண்டும். அடிகளாகிய காலத்தில் அரசு புரிந்த வேந்தன் இவருடைய மகனான இரண்டாம் நரசிங்கவன்மன்; ஆதலால், அவனும் அவன் நாட்டு நன்மக்களும் இவரை ஐயரடிகள் என வழங்கினர். இடைக்கால வேந்தர்கள் தம் தந்தையை ஐயரென வழங்கியதனால் இவ்வுண்மை வலியுறுகிறது. சோழ வேந்தனான வீரராசேந்திரன் தன் தந்தையான இரா சேந்திரனைப் “பூருவ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்டருளின ஐயர்க்கு யாண்டு இருபத்து மூன்றாவது”2 என்றும், அழகிய பல்லவனான கோப்பெருஞ் சிங்கன் புதல்வன் அழகிய பல்லவன் வீரராயனான கச்சியராயன், கல்வெட்டொன்றில்1 தன் தந்தை கோப்பெருஞ் சிங்கனை, “ஐயதேவர்” என்றும் குறிப்பன ஈண்டு நோக்கத் தக்கனவாம். ஆகவே, நரசிங்க வன்மனாலும் அவனாட்டு நன் மக்களாலும் பரமேச்சர வன்மனார் ஐயரடிகள் என வழங்கப்பெற்றார் என்பதும், அதுவே பின்பு ஐயடிகள் என வழங்கலாயிற்று என்பதும் தெளிவாம். இனி, இவரைக் காடவர்கோன் என நம்பியாரூரர் கூறினாராக, நம்பியாண்டார் நம்பி காடவர்கோன் என்னாது பல்லவன் என்றே கூறுதலால், பல்லவர்க்குக் காடவர் என்பதும் ஒரு பெயராதல் விளங்குகிறது. நம்பியாரூரர்க்கு முன்னே இருந்த தமிழ்ச் சான்றோர் எவரும் இலக்கியங்களில் பல்லவர்களைக் காடவர் என வழங்கியது கிடையாது. காஞ்சிமா நகரைத் தலைநகராகக் கொண்டு அட்சி புரிந்த பல்லவ வேந்தருள், சிறப்புடைய முதன் மகேந்திரவன்மன், முதல் நரசிங்க வன்மன், இராச சிங்கன் முதலியோர் பல சிறப்புப் பெயர் கொண்டுள்ளனர், அவற்றுள், காடவர் என்ற பெயரோ அதன் வடமொழிப் பெயர்ப்போ காணப்படவில்லை. பல்லவர்கள் தென்னாடு போதருமுன் காடு சூழ்ந்த நாடுகளில் வாழ்ந்திருந்தனர் என்னும் வரலாறு கொண்டு அவர்களைத் தமிழ்ச் சான்றோர் காடவர் எனவும், காடவர்கோன் எனவும் வழங்கினராதல் வேண்டும். ஆயினும், காடவரென முதன் முதலாகத் தமிழ் இலக்கியங்களில் வைத்துப் பாடிச் சிறப்பித்தவர் நம்பியாரூரராதலின், அந்நல முணர்ந்த பிற்காலப் பல்லவர்கள் தம்மைக் காடவர் என்றும், காடவர் குலத்தார் என்றும் கூறிக்கொண்டனர். காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டுக்கள், நந்திவன்ம பல்லவ மல்லன் தந்தையான இரணிய வன்மனைக் “காடவேசகுல ஹிரண்ய வன்ம மகாராஜர்”2 என்றும், அவையே நந்திவன்மனைக் குறிக்குங்கால் “காடவகுலம் சிறக்கத் தோன்றிய சத்தியந்த சுபுத்திரன்” என்றும் குறிக்கின்றன. நிருபதுங்கனுடைய கல்வெட்டொன்று3 அவன் மனைவியைக் காடவன் மாதேவியார் என்று கூறுகிறது. இனி, வடமொழிச் செப்பேடுகள் பலவும் பல்லவர்களைக் காடு வெட்டிகள் என்றே குறிக்கின்றன. கங்க வேந்தர்களான சீபுருஷன், சிவமாறன் முதலியோர் செப்பேடுகள்1 காஞ்சியைக் காடு வெட்டிகள் ஆண்டனரெனக் குறிகின்றன. சத்திய வேடு கல்வெட்டுக்கள்2 பல்லவர் கீழிருந்த தலைவர்களுள் இருவரைக் காடு வெட்டிப் பேரரையன் என்றும் காடு வெட்டித் தமிழ்ப் பேர ரையன் என்றும் கூறுகின்றன. நிருபதுங்கனுடைய பாகூர்ச் செப்பேடுகள், ஒரு தலைவனை, “விடேல் விடுகு காடுபட்டி தமிழ்ப் பேரரையன்”3 என்று செப்புகின்றன. காடு வெட்டி யெனவரும் குறிப்புக்களுள் மிகப் பழமையானது சிரகுண்டா கல்வெட்டிற் காணப்படுவது4 எனவும், “சிம்ம விஷ்ணுவின் சகோதரனான பீம வன்மன் வழி வந்தோரே காடவர் எனக் குறிக்கப்படுகின்றனர்5 எனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஐயடிகள் காடவர்கோன், “வெய்ய கலியும் பகையும் மிகை யொழியும் வகை அடக்கி.... அரசளிப்பார்”6 “பிறபுலங்கள் அடிப் படுத்து.... அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில்”7 வடநூல் தென்றமிழ் முதலாம் பன்னுகலைப் பணிசெய்யப் பாரளிப் பார் 8 என்று திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. இதன்கட் குறித்த “பகையொழியும் வகை யடக்கிய திறம்” சளுக்கி வேந்தனான விக்கிரமாதித்தனோடு போர் செய்து பெற்ற வெற்றியால் விளக்க மாகிறது. இதனை இக்காடவர் கோனுடைய கூரத்துச் செப்பேடுகள்9 விரியக் கூறுகின்றன. இவர் கலியொழியும் வகை யடக்கிய திறத்தைக் காசாக்குடிச் செப்பேடுகள்10 இவர் பெயரனான இரண்டாம் பரமேச்சுரன் மேல் ஏற்றிக் கூறுகின்றன; ஆயினும், அவை இவர் ஏனைமன்னர் எல்லாரையும் வென்று “பிறபுலங்கள் அடிப்படுத்து’ மேன்மையுற்றதை வற்புறுத்துகின்றன. வேளூர்ப்பாளையம் செப் பேடுகள்,1 இவர் பகைவர் செய்த சூழ்ச்சிகளைக் கடிந்து சளுக்கர் சேனையாகிய இருட்கு ஞாயிறு போல் திகழ்ந்தார் என்று தெரிவிக் கின்றன. கூரமென்னும் ஊர்க்குப் பரமேச்சர மங்கலம் எனப் பெயரிட்டுச் சதுர்வேதிகட்குக் கூறு செய்தளித்த செயல்,2 ஐயடிகள் “அரு மறையின் துறைவிளங்க” அரசளித்தாரென்பதை வற்புறுத்துகிறது. “கலை பலவும் பணி செய்யப்பாரளித்தார்” எனச் சேக்கிழார் கூறுவதற்கேற்பத் “தன் கலைகளாற் சிறக்கும் திங்களைப் போல இவரும் கலைத்துறைகளால் நிறைந்தவர்”3 என்று கூரத்துச் செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வாற்றால், செப்பேடுகளால் சிறப்பிக்கப்பெறும் முதற் பரமேச்சரவன்மனும், திருத்தொண்டர் புராணம் கூறும் ஐயடிகள் காடவர்கோனும் ஒருவரேயாதல் தெளிவாம். இனி, கலியொழியும் வகை யடக்கிய இவர் செயலை இவர் பெயரனான இரண்டாம் பரமேஸ்வரன் மேல் ஏற்றிக் கூறுவதும், இவர், நெற்றிக் கண்ணால் மேம்படும் சிவன் போலத் தன் காட்சி நலத்தால் மேம்பட்டவரெனக் கூறும் கூரத்துச் செப்பேடுகட்கு வேறாக, உதயேந்திரம் செப்பேடுகள் அச்சிறப்பை இரண்டாம் பரமேச் சுரனுக்கு ஏற்றி உரைப்பதும் உண்டு,4 இவ்வாறு ஒருவர்க்குரிய சில சிறப்புக்கள் வேறொருவர்க் குரியனவாகக் கூறுவது இச்செப்பேடு கட்கு இயல்பாதலின், இச்சிறு வேறுபாடு பற்றி மயங்குதல் கூடாது. இனி, செப்பேடுகள் பலவும் கலிகடிந்தவன் என்றும், “பத்திமான்’ என்றும், மனுமுறை வழாது ஆட்சி புரிந்தவன்5 என்றும் இரண்டாம் பரமேச்சுரனைக் கூறுதலின், அவனே ஐயடிகளா கலாமே எனின், அவன் நம்பியாரூரர்க்குக் காலத்தாற் பிற்பட்ட வனாதலின், அவ்வாறு கோடல் பொருந்தாது என அறிக. இனி, இவரது காலம் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையில் இவரைப் பாராட்டிக் கூறுதலால், அவர் காலத்துப் பல்லவ வேந்தனான இரண்டாம் நரசிங்க வன்மனுக்குக் காலத்தால் முற்பட்டவர் ஐயடிகள் என்பது துணிவாம். மகேந்திர வன்மனால் கட்டப்பெற்ற சிராமலைக் கோயிலை இவர் பாடுதலால், அவன் காலத்துக்குப் பிற்பட்டவ ரென்பது தேற்றம். மகேந்திர வன்மனுக்கும் நரசிங்கவன்மனுக்கும் இடையே முதல் நரசிங்க வன்மன், இரண்டாம் மகேந்திர வன்மன், முதற் பரமேச்சுர வன்மன் என்ற வேந்தர் மூவர் இருந்திருந்தனர். இவருள் முதல் நரசிங்க வன்மன் ஏழாம் நூற்றாண்டின் இடையில் இருந்தவனாதலின், முதற் பரமேச்சுரனான ஐயடிகள் காடவர் கோனது காலம் ஏழாம் நூற்றாண்டின் இறுதியா மென்பது துணியப்படுகிறது. பதினோராந் திருமுறையில், நம்பியாரூரர் காலத்தவரான சேரமான் பெருமாள் நாயனார் நூல்களுக்கு முன்னே ஐயடிகள் காடவர்கோனது க்ஷேத்திரத் திரு வெண்பா வென்னும் நூல் வைக்கப்பெற்றிருக்கும் முறையும் இக்கால வரையறைக்கு ஓராற்றால் சான்றாவது ஈண்டுக் கருதத்தக்கது. நூலராய்ச்சி ஐயடிகள் காடவர்கோன் செய்ததாக க்ஷேத்திரத் திருவெண்பா ஒன்று தான் கிடைத்துள்ளது. இதன்கண் இருபத்து நான்கு திருவெண் பாக்களும், அவற்றுள்ளே இருபத்து இரண்டு திருப்பதிகளும் காணப் படுகின்றன. அத்திருப்பதிகள், இருபத்து இரண்டுமாவன; திருச்சிற்றம் பலம், திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவையாறு, திருவாரூர், திருத்துருத்தி, திருக்கோடிகா, திருவிடைவாய், திருநெடுங்களம், குழித்தண்டலை, திருவானைக்கா, திருமயிலை, உஞ்சேனை மாகாளம், வளைகுளம், திருச்சாய்க்காடு, திரும்பாச் சிலாச்சிராமம், திருச்சிரா மலை, திருமழபாடி, திருவாப்பாடி திருவேகம்பம், திருப்பனந்தாள், திருவொற்றியூர், திருமயானம் என்பன. இவற்றுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவெண்பாவாற் குறிக்கப் பெறுகின்றது; அவ்வெண்பாக்களில் பத்தாம் திருவெண் பாவும் இருபத்து மூன்றாம் திருவெண்பாவும் பொது. இவற்றுள் பத்தாம் திருவெண்பா. “படிமுழுதும் வெண்குடைக் கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மை - கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குக் தொண்டுபட்டு ஓடு ஏந்தி உண்பது உறும்”1 என வருவது. பாரெல்லாம் ஆளும் முடியரசர் செல்வத்தினும் பரமசிவனுக்குத் தொண்டுபட்டு ஓடேந்தி இரந்துண்பது மும்மை நலம் தருவதாம் என்ற இக்கருத்தையே, திருவொற்றியூரைப் பாடிய திரு வெண்பாவில், ஒற்றியூர் இறைவனை வணங்கி, “இரந்துண்டு இருக்கப் பெறின்,” “தஞ்சாக மூவுலகும் ஆண்டு தலையளித்திட்டு, எஞ்சாமை பெற்றிடினும் யான்வேண்டேன்”2 என வேறு வகையில் வைத்து வற்புறுத்துகின்றார். இதனை வியந்து கண்ட நம்பியாண்டார் நம்பி, “முடியரசாம் அத்திற்கு மும்மை நன்று ஆள் அரற்காய் ஐயமேற்றல் என்னும் பத்திக்கடல் ஐயடிகளாகின்ற நம் பல்லவனே”3 என்று கூறுவாராயினர். ஏனை இருபத்து மூன்றாம் திருவெண்பா, இறைவன் திருப்புகழ் பாடும் பாட்டரவம் கேட்ட பகல் செய்யும் இன்பத்தை, வெண்குடைக் கீழ் வீற்றிருந்த செல்வந்தானும் விளைவியாது என்ற கருத்தமைய நிற்பது.4 இவ்வாறு இறைவன் திருப்புகழ் பாடக்கேட்கும் செயலைச் சிறப்பித்ததனால், இவர்க்குப் பின், தமிழ்நாட்டுக் கோயில்களில் மூவர் முதலிகள் அருளிய திருமுறைகளை ஓதும் மரபு உளதாயிற்று. மேலும், இவர்க்கு முன்னிருந்த பல்லவ வேந்தர் பலரும் வேதம் ஓதுதற்குக் கோயில்களில் நிவந்தங்களும், வேதம் ஓதுபவர்கட்கு இறையிலியாக நிலங்களும் ஊர்களும் வழங்கினரேயன்றித் திருமுறைகளை ஓதுதற்கு ஏற்பாடு ஒன்றும் செய்யாமையே இதற்குப் போதிய சான்றுபகருகிறது. சேக்கிழாரும் “வடநூல் தென் தமிழ் முதலாம் பன்னுகலை பணி செய்யப் பாரளிப்பார்”1 என்பது இதனை வலியுறுத்துகிறது. இவர் பாடிய திருப்பதிகளுள் குடந்தை யென்பது கும்பகோணம். இது பழைய நூல்களிலும் கல்வெட்டுகளிலும் குடமூக்கில் எனவும் குடமூக்கு எனவும் வழங்கும். இது திருநாவுக்கரசராலும்2 பாடப் பெறும் சிறப்புப் பெற்றது; இப்போது நாகேச்சுரம் என வழங்கு கிறது. திருமறைகள் இதனைக் குடந்தைக் கீழ்க்கோட்டமென்று வழங்குகின்றன. திருத்துருத்தி இப்போது குற்றாலம் என வழங்குகிறது. இது, திருமுறைகளில் திருத்துருத்தி3 யெனவும், கல்வெட்டுக்களில் வீங்குநீர்த் துருத்தி4 யெனவும் கூறப்படுகிறது. திருவிடைவாயென்பது இப்போது திருவிடைவயல் என வழங்கும் ஊராகும். இதனைக் கல்வெட்டுக்கள் திருவிடைவாயில் என்று5 குறிக்கின்றன. திருஞான சம்பந்தர் இதனை விடைவாய் என6 வழங்குவர். பாண்டவாய் என்னும் ஆற்றின் கரையில் இருப்பது பற்றி ஐயடிகள், இதனைப் “பாண்டவாய்த் தென்னிடை வாய்”7 என்று சிறப்பிக்கின்றார். ஐயடிகள் கூறும் குழித்தண்டலை இப்போது குளித்தலை யென வழங்குகிறது. இதற்கருகே காவிரியின் தென்கரையிலுள்ள கோயில் கடம்பந்துறை யென்பது. இக்கடம்பந் துறையைத் திருநாவுக்கரசரும் பாடியுள்ளார்.8 இக்கடம்பந்துறையை யுடையவூர் குழித்தண்ட லையாதலின், ஐயடிகள், கடம்பந்துறை யென்னாது குழித்தண்டலை யெனக் கூறினாராதல் வேண்டும். “மயிலைத் திருப்புன்னையங் கானல்” என்பது திருமயிலையில் புன்னையங் கானலிடத்துக் காபாலீச்சுரமாகும். திருஞானசம்பந்தரும் இம்மயிலையை “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை”1 என்று பாராட்டிப் பாடியுள்ளார். வளைகுளம் என்பது இப்போது வளர்புர மென வழங்குகிறது; திருத்தணிகைக்குக் கிழக்கில் மூன்று கல் அளவில் உளது. இதனைக் கல்வெட்டுக்கள், “சயங்கொண்ட சோழமண்ட லத்துமேலூர்க் கோட்டத்து மேலூர்நாட்டு வளைகுளமான பட்டர்சுர வல்லி சங்கிராம ராமசதுர்வேதி மங்கலம்” என்றும், இங்குள்ள சிவன் கோயிலை நாகீச்சுரமென்றும்2 கூறுகின்றன. திருவாப்பாடி திருவாய்ப் பாடி யெனவழங்குகிறது. இவ்வூர் மண்ணியாற்றின் தென்கரையில் இருப்பதாகத் திருநாவுக்கரசர்3 கூறுவர். அது கொள்ளிடத்தின் கிளையாதல் பற்றி, “கொள்ளிடத்தின் தென் திருவாப்பாடி”4 என்று ஐயடிகள் ஓதுகின்றார். திருப்பனந்தாள் திருக்கோயிலை, அடிகள் “திருப்பனந்தாள் தாடகையவீச்சரம்”5 என்பர்; இவ்வாறே திரு ஞானசம்பந்தரும் “தண்பொழில் சூழ்பனந்தாள் திருத்தாடகையீச் சரமே”6 என்று சிறப்பித்துள்ளார். கச்சிமயானமென்றும், நாலூர் மயானமென்றும், திருக்கடவூர் மயானமென்றும் மூன்று மயானங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள், ஐயடிகள் குறிக்கும் திருமயானம் இன்னது என வரைந்து கூறற்கு இல்லை; ஆயினும், திருக்கடவூர் மயானமொன்றே திருமயானப் பெருமான் எனவும் தனிப்படக்7 கூறப்படுதலின், அடிகள் திருமயானம் எனக் குறிப்பது திருக்கடவூர் திருமயானமாகக் கருதுதற்கு இடந்தருகிறது. ஐயடிகள் பாடியருளிய திருவெண்பா இருபத்து நான்கனுள் திருப்பதிகளைக் குறிக்காமல் பொதுப்பட நிற்கும் வெண்பா இரண்டும் அரசியற் செல்வத்தின் சிறுமையினையே எடுத்தோதுவது காணு மிடத்து, அவை, அரசியலைத் தம் மகற்கு அளித்த காலத்து அவர் பாடியன எனவும், ஏனைய, அவர் பற்பல திருப்பதிகட்கும் சென்று இறைவனை வழிபட்டு ஏற்ற திருப்பணிகைளைச் செய்தபோது பாடியன எனவும் தெரிகின்றன. இவ்விருவகைக் கருத்துக்களையுடைய பாட்டுக்களையும் ஒரு சேரத்தொகுத்து க்ஷேத்திரத்திருவெண்பா எனப் பெயரிட்டுப் பதினோரந்திருமுறையுள் ஒன்றாகப் பிற்காலச் சான்றோர் தொகுத்துள்ளனர் என்பது புலனாகிறது. மேலும், திருப்பதிகளைப் பாடும் ஒவ்வொரு வெண்பாவும் சாதற் காலத்துத் துன்பத்தையே பன்னிப்பன்னி பேசுதலின், அடிகள், அரசியலில் உவர்ப்பும் முதுமை வரவுகண்டு அச்சமும் மிகக்கொண்டு அரசியலைத் துறந்து திருப்பதி தோறும் செல்லும் நிலையில் இவற்றைப் பாடினார் என்பது தேற்றமாம். இவ்வாறு திருக்கோயிற் பணியாலும் க்ஷேத்திரத் திருவெண்பாப் பாடிய செந்தமிழ் திருத்தொண்டத் தொகையில் திருத்தொண்டருள் ஒருவராக வைத்துச் சிறப்பித்துப் பாடும் பேறுபெற்றது கண்ட பிற்காலத்து நன்மக்கள், ஐயடிகள் என்ற பெயரை மக்கட்கு இட்டு வழங்கினர். முதல் இராசராசன் மகனான முதல் இராசேந்திரனுடைய கல்வெட்டுக்களுள், திருக்கண்டியூர்க் கல்வெட்டொன்று திருக்கண்டியூர்1 லகுளீஸ்வர பண்டிதர் மடத்திற் பயிலும் மாணாக்கன் ஒருவனை, “சிவப்பிராமணன் பாரத்து வாசி ஐயடிகள் ஐயாறன்” என்று குறிக்கின்ற து.  5 நம்பியாரூரர் வரலாறு தென்னார்க்காடு மாவட்டத்தில், திருக்கோவலூர் வழியாகச் சென்று, திருப்பாதிரிப்புலியூருக்கு வடக்கில் கடலொடு கலக்கும் தென் பெண்ணையாறு, திருக்கோவலூர்க்குக் கிழக்கிலிருந்து கடலொடு கலக்குங் காறும் பரந்தவெளியில் பாய்கிறது. அதன் வளவிய நீரைப் பெற்று நலஞ் சிறக்கும் நாடு பண்டைநாளில் திருமுனைப்பாடி நாடு என வழங்கிற்று. இது தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையிலுள்ளமைபற்றி நடுநாடெனவும் கூறப்படும். இந்நாட்டில் பெண்ணையாற்றின் தென் பகுதியில் திருநாவலூரில் சடையனாரென்னும் சிவப் பிராமணருக்கும், இசை ஞானியாரென்னும் அவர் மனைவியாருக்கும் பிறந்தவர் நம்பி ஆரூரர். அந்நாளில் அப்பகுதியை நரசிங்க முனையரையர் என்னும் தலைவர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் நம்பி யாரூரருடைய வனப்பைக் கண்டு ஆர்வமிகுதியால் தனது பெரு மனையில் வளர்த்துவந்தார். ஆரூரர், நிரம்பிய கல்விகற்றுத் திருமணம் செய்து கொள்ளற்கு உரிய செவ்வியெய்தியபோது, அந் நாட்டைச் சேர்ந்த புத்தூர் என்னும் ஊரில்வாழ்ந்த சடங்கவி என்னும் சிவப்பிரா மணருடைய மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். திருமணம் புத்தூரில் நடைபெற்றது. திருமணச்சடங்குகள் நடந்து கொண்டிருக்கையில் முதிய வேதியரொருவர் தோன்றி மணமகன் தனக்கு அடிமை என்றும், தனக்குப் பணிசெய்வது அவரது கடமை என்றும் திருமணத்திற் கூடியிருந்த சான்றோர் முன் வழக்கிட்டார்; திருமணமும் சிதைவுற்றது. அங்கிருந்த சான்றோர் நடுநின்று உரைத்தற் கேற்ப, மணமகனும் வழக்கிட்டவேதியரும் பிறரும் வழக்குத் தொடுத்த அந்த முதுவேதியர் இருக்கும் திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்றனர். அங்கே கூடிய பேரவையில், அவ்வேதியர், நம்பியாரூரரும் அவருடைய முன்னோருக்கு தமக்கு வழிவழியாக அடிமைப்பணி செய்யும் கடமையுடையார் என்பதை ஆவணம் காட்டி நிறுவவினார். அவையினர், வேதியர் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு கேட்க, அனைவரும் பின்தொடரச் சென்று திருக் கோயிலுள் அவர் புகுந்து மறைந்தார். திகைத்துநின்ற அக்கூட்டத் திடையே நம்பியாரூரர் காண இறைவன் காட்சி தந்து சிறப்பித் தருளினார். நம்பியாரூரர் உடனே இறைவனை இனிய பாட்டுக்களாற் பாடத் தொடங்கினார். யாவரும் மருண்டு கையற்று அகன்றனர்." "பித்தா பிறைசூடி" எனத் தொடங்கிப் பாடிய அத்திருப்பதிக்கத் தின்கண், நம்பியாரூரர் தான் இறைவனுக்கு வழிவழியாக அடிமையே என்பதை எடுத்தோதி இன்புற்றார். வழக்கு நிகழும்போது அவர் வன்மொழிகள் பல வழங்கியது பற்றி வன்றொண்டர் என்ற பெயரும் அவர்க்கு எய்துவதாயிற்று. நம்பியாரூரர் அன்று முதலே பிறந்த மனைத்தொடர்பு நீங்கி இறைவன் எழுந்தருளும் திருக்கோயில்கட்குச் சென்று திருப்பதிகம் பாடுவதையே திருப்பணியாகக் கொண்டார். அதனால், அவர் அங்கிருந்து திருநாவலூர், திருத்துறையூர் முதலிய திருப்பதிகளை வணங்கிப் பரவிக் கொண்டு, திருநாவுக்கரசர் சூலை நோயின் நீங்கி உய்தி பெற்றுயர்ந்த திருவதிகை நோக்கி வந்தார்; வருகையில் வழியில் சித்தவட மடத்தில்தங்கினர். அன்றிரவு இறைவன் முது வேதியர் ஒருவர் உருவில் வந்து அவர்க்குத் திருவடிதீக்கை செய்து மறைந்தார். அதனைத் தெளிந்த நம்பியாரூரர் "கறைகொண்ட கண்டத்து எம்மான் தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்... இறை போதும் இகழ்வன் போல் யானே"1 என்பது முதலிய பலவற்றை இனிய திருப்பாட்டுக்களால் எடுத்திசைத்து இறைவனைப் பரவினார். இவ்வாறு திருப்பதிகம்பாடும் பணிசெய்துவரும் நம்பியாரூரர், திருமாணிகுழி, திருத்தினைநகர் முதலிய திருப்பதிகளை வணங்கிக்கொண்டு தில்லையை யடைந்து அம்பலவாணனைப் பன்னாளும் பணிந்து வந்தார். வருகையில் ஒருநாள் "திருவாரூர்க்கு வருக" என்று ஒரு திருவருட் குறிப்பு அவருக்குத் தோன்ற, உடனே திருவாரூர் நோக்கி செல்வார் கொள்ளிடம் கடந்து சீர்காழிப் பதிதோன்றக் கண்டார். திருஞான சம்பந்தர் தோன்றித் திருவருள் ஞானம் பெற்றுச் சிறப்பெய்திய சீர்த்தியுடையதென்பது பற்றிச் சீர்காழிப் பதியை மிதித்தற்கு அவரது உள்ளம் அஞ்சிற்று. அதனால், ஆரூரர், அதன் எல்லைப் புறத்தை வணங்கி வலம் வருகையில் எதிரே இறைவன் அவர்க்குத் திருத்தினை நகரிற் காட்டிய திருக்கோலக் காட்சியை நல்கியருளினார். அதுகண்டு பேரின்பம் உற்றவர் சீர்காழிக்குட் சென்று திருக்கோயிலில் இறைவனைத் திருப்பதிகம்பாடிச் சிறப்பித்தார். பின்பு திருக்கோலக்கா, திருப்புன்கூர், மயிலாடுதுறை, அம்பர்மாகாளம், திருப்புகலூர் முதலிய திருப்பதிகளை வணங்கிச் சென்ற நம்பியாரூரர் திருவாரூரரை நெருங்குதலும், அவ்வூரவர் அவரை எதிர் கொண்டு அழைத்துச் சிறப்புப் பல செய்து வரவேற்றனர். நேரே இறைவன் திருக்கோயிற்குச் செல்பவர் தெருவிலேயே "எந்தை யிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளிர்"1 என முடியும் பாட்டுக்களைக் கொண்ட திருபதிகத்தைப் பாடினார். அங்கே அவர் திருக்கோயிலுக் கட் சென்று இறைவனைப் பரவி நிற்கையில் "யாம் உமக்குத் தோழரானோம்; இனி நீர் மணக் கோலத்தோடே இருக்க" என்று ஒரு திருவாக்குப் பிறந்தது. கேட்டார் அனைவரும் பெரு வியப்புற்று நம்பியாரூரரைத் தம்பிரான் தோழர் என்ற பெயர் சூட்டிச் சிறப்பித்தார்கள். நம்பியாரூரர் திருவாரூரிலே தங்கி இறைவனைத் திருப்பதிகம் பாடி வழிபட்டு வருவாராயினர். இவ்வாறு வரும் நாளில், அவ்வூரில் வாழ்ந்த பரவையார் என்ற நங்கையொருவரைக் கண்டார்; அந்நங்கையாரும் இவரைக் கண்டார். இருவர் கருத்தும் காதலால் ஒன்றின. நம்பியாரூரர் இறைவனை வேண்டி அவரது அருட்டுணையால் பரவையாரைப் பலரும் அறியத் திருமணம் செய்து கொண்டு இனிதிருந்தார். ஒருநாள் அவர் இறைவனை வழிபடச் சென்றபோது தேவாசிரியன் என்னும் மண்டபத்தில் சிவனடியார் சிலர் இருக்கக் கண்டு இவர்கட்கு அடியனாதல் வேண்டும் எனவிழைந்து இறைவனை வேண்டினர்; இறைவன் அடியவர்களின் வரலாறுகளை அவருள்ளத்தே தோற்றுவித்துத் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியெடுத்துத் தந்தருளினர்; அதுவே முதலாகக் கொண்டு ஆரூரர் திருத்தொண்டத்தொகை1 யென்னும் திருப்பதிகத்தைப் பாடித் தம் வேட்கையை நிறைவு செய்துகொண்டார். திருவாரூர்க்கு அருகில் குண்டையூரில் வாழ்ந்த செல்வரொருவர், நம்பியாரூரர்க்கு நெல்லும் பிறபொருள்களும் உதவி வந்தார். ஒருகால் மழையில்லாமையால், ஆரூரர்க்கு உதவுதற்கென நெல் முட்டுப்படுவது கண்டு அச்செல்வர் வருந்தினார். அன்றிரவே, அவர் இருந்த ஊரில் நெல் மலை போல் குவிந்து விட்டது. அதனை அவர் நம்பியாரூரர்க்குத் தெரிவிப்ப அவர், "நீளநினைந்து அடியேன்"2 என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிச் சிவபெருமானை இறைஞ்சினார். இரவில், அந்நெல் முற்றும் திருவாரூர்த் தெருவில் அவரவர் வீட்டெதிரே குவிக்கப்பெற்றது. அதனை அறிந்ததும், ஆரூரர் அவரவர் வீட்டருகேயிருந்த நெற்குவையை அவரவரே பெறுக எனத் தெரிவித்தருளினார். பின்பு ஒருகால் திருநாட்டியத்தான்குடியில் வாழ்ந்த கோட்புலி யார் என்னும் தலைவர், நம்பியாரூரரைத் தமது ஊர்க்கு அழைத்துச் சென்று தம்முடைய மக்களாகிய சிங்கடி, வனப்பகை என்ற மகளிர் இருவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஆரூரரை வேண்டினார். நம்பியாரூரர் அவ்விரு பெண்களையும் தம்முடைய மக்களாகவும் தம்மை அவர்கட்குத் தந்தையாகவும் கூறிச் சிறப்பித்தார். திருவாரூரில் பரவையாருடன் நம்பியாரூரர் வாழ்ந்து வருகையில், திருவாரூர்ப் பங்குனி விழாச் செலவிற்குப் பொன் வேண்டும் எனப் பரவையார் அவர்பால் முறையிட்டனர். ஆரூரர் இறைவனைப் பரவி வழிபட நினைந்து திருப்புகலூர்க்குச் சென்று அன்றிரவு அங்கே தங்கினார். உறங்கும் போது தலையணைக்காக அங்கே திருக்கோயிலுக்குள் கிடந்த செங்கற்களுள் இரண்டை வைத்துக் கொண்டு உறங்கினார். விடிந்தபோது அக்கற்கள் பொற் கட்டிகளாக மாறியிருந்தன. அது கண்டவர், இறைவனது வள்ளன் மையை வியந்து, "தம்மையே புகழ்ந்து இச்சைபேசினும்"1 எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி இன்புற்றனர். பின்னர், நம்பியாரூரர் காவிரிக் கரையிலுள்ள நன்னிலம், திருவீழிமிழலை, திருவலஞ்சுழி, திருக்குடந்தை, முதலிய திருப்பதி களைப் பரவிக் கொண்டே திருவாலம் பொழிலை அடைந்து தங்கி யிருக்கையில் "மழபாடி காண மறைத்தனையோ" என்று ஒரு குறிப்பு அவர் கனவில் உளதாயிற்று. உடனே அவர், கண் விழித்து எழுந்து காவிரியைக் கடந்து வடகரை வழியாகத் திருமழபாடி யடைந்து "பொன்னார் மேனியனே"2 எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடி, மழபாடி இறைவனை வணங்கினார். அங்கிருந்து திருவானைக்கா முதலிய திருப்பதிகளை வழிபட்டுக் கொண்டே திருப்பாச் சிலாச்சிராமம் சென்று சேர்ந்தார். அங்கேயும் அவர்க்குப் பொன் வேண்டியிருந் தமையின், இறைவன்பால் அக்கருத்தைத் தெரிவித்துக் கொண்டார். பொருள் வரச் சிறிது காலம் தாழ்த்தது. அப்போது "வைத்தனன் தலைக்கே"3 எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி முடித்தார்; பொருளும் வந்து சேர்ந்தது. இறைவன் பேரருளை நினைந்து நெஞ்சு உருகிப் பரவிய ஆரூரர், திருமுதுகுன்றத்துக்குச் செல்லும் கருத்துக் கொண்டு, இடையிலுள்ள திருப்பதிகளை வணங்கினவராய்த் திருக்கூடலையாற்றூர் வந்த சேர்ந்தார். ஊரருகே வருகையில் வேதியரொருவர் கண்பட, அவரை முதுகுன்றுக்கு வழிகாட்டுமாறு நம்பியாரூரர் கேட்டார்; அவர் கூடலைாயற்றூர் செல்லும் வழியைக் காட்டி மறைந்தார். அதுவும் இறைவன் திருவருட் செயலே எனத் தெளிந்த ஆரூரர், "வடிவுடை மழுவேந்தி"1 என்ற திருப்பதிகத்தால், "அந்தணன் வழிப்போந்த அதிசயம் அறியேனே" என்று பாடிப் பணிந்து கூடலை யாற்றூர்ப் பெருமானைக் கும்பிட்டு மகிழ்ச்சி கூர்ந்தார். திருமுதுகுன்றம் சென்று சேர்ந்த நம்பியாரூரர், அங்கே சின்னாள் தங்கியிருந்தாராக, அப்போது அவர்க்குப் பொன் வேண்டுவதாயிற்று. அதனால் அவர் இறைவனை வழிபடவும் பன்னீராயிரம் பொன் கிடைத்தது. அது பெற்றுப் பெருமகிழ்வு கொண்டு இன்புறும் ஆரூரர், இறைவன் பேரருளைப் பேணி நினைந்து, திருவருட் குறிப்பின்படி அதனை அங்கே ஓடும் மணி முத்தாற்றில் எறிந்து விட்டுத் தில்லைச் சிற்றம்பலம் முதலிய திருப்பதிகளைப் பரவிக் கொண்டே திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கே பரவையார் மனையில் இருந்து வரும் நாளில் ஆரூரர்க்குத் தாம் மணிமுத்தாற்றில் இறைவன் அருளிய பொன்னை இட்டதும், அதனைத் திருவாரூர்த் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ளுமாறு இறைவன் அருளிய குறிப்பும் நினைவு கூர்ந்து பரவையார்க்குத் தெரிவித்தார். ஆற்றிற் கெடுத்துக் குளத்தில் தேடுவார் யாரும் இல்லை என்ற குறிப்புத் தோன்றப் பரவையார் முறுவலித்தார். அது பொறாத நம்பியாரூரர் முதுகுன்றவாணரை நினைந்து திருப்பதிகம் பாடிக் கொண்டே பொன்னைத் தேடலுற்றார். எட்டுத் திருப்பாட்டுக்கள் முடிந்தது பொன்னும் அகப்படுவதாயிற்று. பாட்டும் முடிந்தது; முத்தாற்றில் எறிந்த பொன் முற்றும் கை வந்தது. நம்பியாரூரர், ஒருகால் திருக்கடவூர் திருநள்ளாறு முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, சீர்காழி திருக்கோலக்கா முதலிய திருப்பதிகளின் வழியாகத் திருக்குருகாவூர்க்குச் செல்லும் கருத்தின ரானார். வழிச்செலவால் அவர்க்கும் உடன்போந்த அடியார்க்கும் பசியும் நீர் வேட்கையும் தோன்றிப் பெருகி வருத்தின. குருகாகூர்க் கருகில் இறைவன் ஒரு குளிந்த பந்தரிட்டு அதன் அயலில் பொதிசோறும் தண்ணீரும் அமைத்திருந்தார். ஆரூரர் அது கண்டதும் பந்தரின் கீழேயிருந்து அங்கிருந்த வேதியர் தந்த பொதிசோற்றையுண்டு. தண்ணீர் அருந்தி அயர்ச்சி போக்கிக் கொள்ளச் சிறிதுக் கண்ணயந்தார். விழித்தெழுந்து பார்க்கையில் அங்கே பந்தரும் இல்லை. சோறு நல்கிய வேதியரும் இல்லை. ஆகவே நம்பியாரூரர் தமுக்கு வழியில் தோன்றிய பொதிசோறு தந்தவர் இறைவன் எனவே தெளிந்து குருகாவூர்ப் பெருமானை" இத்தனையமாற்றை"1 எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் பரவிக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார். சின்னாட்குப்பின் நம்பியாரூரர் தொண்டை நாட்டுத் திருப்பதிகளைக் கண்டு வணங்கும் விருப்பமற்றுத் திருக்கழுக்குன்றம் சென்று பரவிக் கொண்டு திருக்கச்சூர் சென்று அடைந்தார். அங்கே அவர்க்கு இறைவன் அருளால் வேதியர் ஒருவர் சோறு இரந்து வந்து கொடுத்துப் பசி தீர்த்தார். திருவருட் பாங்கை உய்த்துணர்ந்து "முதுவாயோரி"2 எனத் தொடங்கம் திருப்பதிகத்தை மனமுருகிப் பாடி வணங்கினார். அதன்பின் திருவேகம்பத்தைப் பணிந்து கொண்டு திருக்காளத்திக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே இருந்த படியே சீபருப்பதம் திருக்கேதாரம் முதலிய திருப்பதிகளைப் பண் கனியும் பாடல்களாற் பாடிப் பரவி விட்டுத் திருவொற்றியூரைச் சென்றடைந்தார். திருவொற்றியூரில் இருந்து கொண்டு இறைவனுக்கத் திரு மாலைத் திருப்பணி செய்து கொண்டிருந்த சங்கிலியார் என்னும் நங்கையாரைச் கண்டு திருமணம் செய்து கொள்ள விருப்பமுற்று ஒற்றியூர் இறைவன் பால் வேண்டிக் கொண்டார். இறைவன் சங்கிலி யார் கனவில் தோன்றி நம்பியாரூரர் வேட்கையைத் தெரிவித்து அவரை மணந்து கொள்ளுமாறு பணித்தருள, அவர் தம் உடன்பாடு தெரிவித்து, "ஆரூரர்க்குத் திருவாரூரில் விருப்பம் மிகவுண்டே" என முறையிட்டார். இறைவன் நம்பியாரூரர் கனவில் தோன்றி, "சங்கிலியை மணத்தல் வேண்டின் பிரியேன் என்று ஒரு சூள் செய்து தரல் வேண்டும்" என இசைப்ப, அவர், "அங்ஙனமே செய்வேன்; அப்போது தேவரீர் திருக்கோயிலினீங்கி மகிழ மரத்தடியில் இருத்தல் வேண்டும்" என்றார். மறுநாள் சங்கிலியார், தோழியார் சூழத் திருவொற்றியூர் இறைவனை வணங்க வந்தபோது, நம்பியாரூரர் தம் கருத்தைத் தெரிவித்து அவரது உடன்பாட்டையும் பெற்று, இறைவன் திருமுன்னர் நின்று பிரியாச்சூள் செய்து தருவதாக அவரை அழைத்தலும், அருகில் நின்ற தோழியர், "இறைவன் திருமுன்னர்ச் செய்தல் கூடாது; புறத்தே நிற்கும் மகிழின்கீழ்ச் செய்வதே முறையாகும்" என்றனர்; வேறு ஒன்றும் செய்தற்கில்லாமையால் ஆரூரர் அவ்வண்ணமேசெய்தார். திருமணம் சிறப்புறநடைபெற்றது. ஆரூரர் திருவொற்றியூரில் சங்கிலியார் மனையில் பன்னாள் தங்கியிருந்தார். இருந்து வருகையில், வேனிற்காலம் வந்தது. வேனில் விழாவில் திருவாரூர் இறைவனது திருவோலக்கச் சிறப்பும் நங்கை பரவை யாருடைய ஆடல்பாடல்களின் சிறப்பும் ஆரூரர் நினைவில் தோன்றி அவரைத் திருவாரூர்க்குச் செல்லுமாறு தூண்டின; சங்கிலியார்க்குச் செய்து தந்த சூளுறவை மறந்தார். "பத்திமையும் அடிமையையும்"1 எனத் தொடங்கும் திருப்பதிகத்தை இறைவன் திருமுன்னர் நின்று பாடிப் பரவித் திருவொற்றியூர் எல்லையை நீங்கினார். உடனே அவருடைய கண்கள் இரண்டு மறைந்தன. பெரு வருத்தம் எய்திய ஆரூரர், "இது சங்கிலியார் காரணமாக உண்டாயது" என உணர்ந்தார்; ஆயினும் "அழுக்கு மெய்கொடு"2 என்ற திருப்பதிகம் பாடிப் பரவிக்கொண்டே திருவாரூர் நோக்கி வருவாராயினர். வருபவர், திருவெண்பாக்கம் என்னும் ஊரை அடைந்து அங்கே எழுந்தருளியிருக்கும் இறைவன் திருமுன் "பிழையுளன பொறுத் திடுவீர்"3 என்ற திருப்பதிகம்பாடி ஊன்று கோல் ஒன்று அருளப் பெற்றார். பின்பு, அவர் அடியார்சிலர் உடன்வரத் திருவாலங்காடு, திருவூறல் முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு காஞ்சி மாநகரம் வந்து சேர்ந்தார். அங்கே, திருப்பதிகம் பாடி வழிபட்டார்க்கு, ஒருகண், பார்க்கும் தகுதிபெற்றது. அதனால் மகிழ்ச்சிகொண்ட ஆரூரர், "ஆலந்தான் உகந்து அழுது செய்தானை"1 என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி, அதன் கண் தாம் கண் பெற்ற செய்தியைக் "கம்பன் எம்மானைக் காணக் கண்அடியேன் பெற்றவாறே" என்று எடுத்தோதி இன்புற்றார். காஞ்சிமா நகரின் நீங்கிவரும் நம்பியாரூரர் திருவாமாத்தூர், திருவரத்துறை முதலிய திருப்பதிகளைத் திருப்பதிகம் பாடிப் பரவிக் கொண்டு திருவாவடுதுறை அடைந்து இறைவனைப் பதிகம்பாடிப் பரவித் திருத்துருத்தி சென்று சேர்ந்தார். அங்கே அப்போது அவர்க்கு உடம்பில் உண்டாகியிருந்த ஒருவகை நோய் அங்குள்ள திருக்குளத்தில் மூழ்கியதனால் நீங்கிற்று. அதனால், அவர், இறைவனை, "மின்னுமா மேகங்கள்"2 எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் புகழ்ந்தார். சிலநாள் அங்கே தங்கியிருந்து பின் திருவாரூர் சென்று சேர்ந்தார். திருவாரூரில், இறைவன் திருக்கோயிலை வலம் வந்து பணிந்து, அன்பு மேலீட்டால், பல பதிகங்களைப் பாடிப் பரவிய நம்பியாரூரர், "மீளா அடிமை உமக்கேயாளாய்"3 என்ற திருப்பதிகத்தில் தாம் இறைவற்கு ஆளாகிய தன்மையையும் மற்றைக் கண்ணின்றி வருந்தும் திறத்தையும் சொல்லி முறையிட்டார்; மற்றைக்கண்ணும் நலம் பெற்றது. நம்பி ஆரூரர் இரு கண்ணாலும் இறைவன் திருக்கோலத்தைப் பருகுவது போலும் ஆர்வமுடன் பார்த்துப் பேரின்புற்றார். இச்செய்தியறிந்த பரவையார், நம்பியாரூரை வரவேற்றற்குப் பிணங்குவாராயினர். ஆரூரருடைய முயற்சிகள் பயன்தாரா வாயின. அவர் இறைவன்பால் முறையிடவும் பரவையார் இறைவனருளால் சினந்தணிந்து அவரை வரவேற்றார். ஆரூரர் அவர்மனையில் பண்டு போல் இருந்து வந்தார். இஃது இவ்வண்ணமாக, பெருமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்த ஏயர்கோன் கலிக்காமர் என்பார். நம்பியாரூரர், இறைவனைப் பரவையார்பால் தூது செல்ல விடுத்தார் என்பது கேட்டு, ஆறாச் சினமும் அருவருப்பும் கொண்டார். அவர்க்குச் சூலைநோய் உண்டாயிற்று. வருந்திக்கொண்டிருக்கும் அவரது கனவில், இறைவன் தோன்றி, "இந்நோய் நம்பியாரூரர் வந்தால் நீங்கும்; அவரும் வருவார்" என்றார். விழித்து எழுந்த ஏயர்கோன், நம்பியாரூரர் வந்து காண்பதன்முன் உயிர் விடுதல் தக்கது என நினைத்துத் தம் உடைவாளால் வயிற்றைக் கீறிக்கொண்டு உயிரொடுங்கினார். அவர் மனைவியார், தாமும் உடன் கட்டை யேறற்கு வேண்டும் ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அப்போது நம்பியாரூரரும் அவ்வூர்வந்து சேர்ந்தார். அவருடைய மனைவியார் நிகழ்ந்தது ஒன்றும் வெளியே தெரியாதவாறு மறைத்து, ஆரூரரை நன்கு வரவேற்குமாறு ஏவலரைப்பணித்து விட்டுத் தாம் கணவன் உடற்குப் பக்கத்தேயிருந்தார். மனைக்குள் வந்த நம்பியாரூரர் செய்தி முற்றும் அருகிருந்தாரை உசாவியறிந்து, தாமும் உயிர்துறக்க முற்பட்டார். அப்போது கலிக்காமர் உயிர்பெற்றெழுந்து நம்பியாரூரர் கைவாளைப் பற்றிக் கொண்டார். இருவரும் அன்பால் ஒருவர் ஒருவரைத் தழுவிக்கொண்டு இறைவன் திருவருளை வியந்து பாராட்டினர். பின்பு, ஆரூரர், கலிக்காமருடன் திருப்புன்கூருக்குச் சென்று இறைவனைப் பதிகம்பாடிப் பரவிக்கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார். அங்கே, இறைவனைப் பணிந்த பின்னர்க், கலிக்காமர் ஆரூரர் பால்விடைபெற்றுக் கொண்டு பெருமங்கலம் சென்றார். சிலநாட்கள் சென்றன. நம்பியாரூரர் திருநாகைக் காரோணம் சென்று இறைவனைப்பாடிப் பொன், மணி, ஆடை, சாந்தம் முதலிய சிறப்புக்களைப் பெற்று வந்தார்.இவ்வாறு இருக்கையில், சேரநாட்டு வேந்தரான சேரமான் பெருமாள் என்பார், இறைவன் அருளால் நம்பியாரூரர் வாழ்ந்து வரும் திறம் அறிந்து அவரைக் காண்பதற்குத் திருவாரூர்வந்தார். நம்பியாரூரர் அவரை ஆர்வமுடன் வரவேற்று அன்பு செய்தார். அதனால் அவர்க்குச் சேரமான் தோழர் என்ற சிறப்புப் பெயர் உண்டாயிற்று. சின்னாட்குப்பின், ஆரூரரும் சேரமானும் பாண்டிநாடு சென்று, அந்நாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றைவணங்கி வழிபட்டுக் கொண்டு மதுரை நகரை அடைந்தனர். அங்கே பாண்டிவேந்தனும் அவன் மகளை மணந்து அங்கே இருந்த சோழவேந்தனும் இருவரையும் வரவேற்றுப் பேரன்பு செலுத்தினர். மூவேந்தருடன் நம்பியாரூரர் திருவாலவாய் இறைவனைப் பணிந்து பரவித் திருப்பதிகம்பாடிச் சிறப்பித்துச் சிலநாட்கள் தங்கினர். பின்பு அவர் திருப்பூவணம் தொழப் புறப்படலும், மூவேந்தரும் உடன் வந்தனர். பூவேந்தர் சூழ்வரச் சென்று பூவணத் திறைவனைப்பாடிப் பரவிய நம்பியாரூரர், மதுரைக்கு மீளவந்து, திருவாப்பனூர், திருவேடகம் முதலிய திருப்பதிகட்கு அவர்களுடனே சென்று பரவினர். அதன்மேல், திருப்பரங்குன்றம் சென்று மூவேந்தர் முன்னே இறைவனுக்குத் தொண்டு படுந்திறத்தை இனிய பதிகமொன்றாற் பாடிக்காட்டினர். பின்பு, பாண்டிவேந்தர் சோழர் பெருமான் என்ற இருவேந்தர் பாலும் விடைபெற்றுக்கொண்டு, சேரமான் உடன் வர, ஆரூரர், திருக்குற்றலம் திருநெல்வேலி முதலிய தென்பாண்டித் திருப்பதிகளைத் தொழுது கொண்டு திருவிராமேச்சுரம் சென்றார். அங்கிருந்தவாறே, ஈழநாட்டு மாதோட்டத் திருக்கேதீச்சரத்தை அரிய திருப்பதிகம் பாடிப்பரவி விட்டுத் திருச்சுழியல் வந்தடைந்தார். சுழியற் பெருமான் திருமுன் வணங்கி வழிபட்ட நம்பிகட்குத் திருக்கானப் பேர்க்குச் செல்ல வேண்டுமென்ற ஒரு திருவருட் குறிப்புண்டாயிற்று. ஆகவே, அவர் திருக்கானப் பேர் சென்று அங்கே எழுந்தருளி யிருக்கும் இறைவனை வழிபட்டார். அதன் பின் பாண்டி நாடு கடந்து சோழ நாட்டுப் பாதாளீச்சரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்துக் கொண்டு திரு வாரூர் வந்து சேர்ந்தார். சில நாட்கள் கழிந்தபின், சேரமான், நம்பியாரூரைத் தமது சேரநாட்டுக்கு வருமாறு வேண்டினார். ஆரூரரும் அதற்கிசைந்து உடன் புறப்பட்டார். இருவரும் காவிரியின் தென்கரை வழியாகச் சென்று திருக்கண்டியூரை அடைந்தனர். எதிரே வடகரையில் திருவையாறு காட்சியளித்தது. அப்போது, காவிரி பெருக்கிட்டுச் சென்றமையின் மனங்கலங்கிய ஆரூரர், "எதிர்த்து நீந்த மாட்டேனான் எம்மான் தம்மான் தம்மானே"1 என்றொரு பதிகம் பாடினார்; வெள்ளம் பிளவுப்பட்டு வழிவிட்டது. இருவரும் ஐயாற்று இறைவன் அடி பணிந்துகொண்டு மேற்கே கொங்கு நாடு கடந்து மலைநாட்டுத் திருவஞ்சைக்களம் சென்று சேர்ந்தனர். அங்கே, அஞ்சைக்களத்து அப்பனை "முடிப்பது கங்கை"2 என்றொரு பதிகம்பாடிப் பரவினார். சேரமான் பெருமனையில் உயர்விருந்தாய்ப் பன்னாட்கள் தங்கிய நம்பியாரூரர்க்குத் திருவாரூர் நினைவு உண்டாயிற்று. சேரமான் பால் பிரியாவிடை பெறுவார்க்கு அவர்பெரும் பொருள் நல்கினார். நம்பியாரூரர் அதனைப் பெற்றுக்கொண்டு கொங்குநாடு புகுந்து திருமுருகன் பூண்டிக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், கள்வர் சிலர் போந்து அப்பொருளை ஆறலைத்துச் சென்றனர். அவர் முருகன்பூண்டியை அடைந்து அங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவனை வணங்கி, இனிய பதிகம்பாடி முறையிட்டார். அன்றிரவே அவர் இழந்த பொருள்கள் அத்தனையும் வந்து சேர்ந்தன. ஆரூரர் அவற்றைப் பெற்றுக் கொண்டு திருவாரூர் வந்து சேர்ந்தார். பின்பொருகால் நம்பியாரூரர் சேரமானைக்காண வேண்டுமென நினைத்துச் சேரநாட்டுக்குச் சென்றார். செல்லுங்கால், திருப்புக் கொளியூர் சென்று அங்கே முதலையுண்ட சிறுவன் ஒருவன் உயிர்த் தெழுமாறு அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் அவிநாசியப்பரைத் திருப்பதிகம் பாடிச் சிறப்பித்தார். அதன்பின் மலைநாடு புகுந்து மகோதை நகரைக் குறுகினர். அவரது நல்வரவு கேட்ட சேரமான் பெருமகிழ்ச்சியுடன் சிறந்த முறையில் எதிர்கொண்டு அழைத்துச் சென்று பெருஞ் சிறப்புச்செய்தார். நம்பியாரூரர் மகோதைக்கு அண்மையிலுள்ள திரு வஞ்சைக் களத்தில் தங்கித் "தலைக்குத் தலைமாலை"3 என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வழிபட்டுக் கொண்டிருந்தார். இருக்கையில், இறைவன் திருவருளால் வெள்ளையானை வர அதன்மேல் ஏறித் திருக்கயிலாயம் செல்லலுற்றார். இஃதுணர்ந்த சேரமான் தன் குதிரை மீதேறி யானைக்கு முன்னே துணிபுரிந்து சென்றார். இருவரும் திருக்கயிலை சென்று சேர்ந்தனர். வரலாற்றாராய்ச்சி மேலே கூறிய வரலாறு சேக்கிழாரடிகள் உரைத்த திருத் தொண்டர் புராணத்திற் கண்டது. இவ்வாரலாற்றை நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்களைக் கொண்டு காணுங்கால், இத் திருப்பதி கங்கள் பலவும் வரலாற்றிற் கண்டநிகழ்ச்சிகளை வற்புறுத்தும் வகையில் அமைந்திருப்பது விளங்குகிறது. நம்பியாரூரர் பிறந்தவூர் திருநாவலூர் என வரலாறு கூறிற்று. அதனை நம்பியாரூரர், "நாவலூர் நமக்குக் நாதனுக்கும் நரசிங்க முனை யரையனுக்கும் ஊர்"1 என்று கூறுகின்றார். அவருடைய பெயரை, ஆரூரன், வன்றொண்டன், நம்பி, நாவலூராளி முதலியவாக வரலாறு உரைத்தது, "நாவலர்கோன் நம்பியூரன்"2 என்றும், "நாவல் ஆரூரன் நம்பி"3 என்றும், நாடெலாம் புகழ் நாவலூராளி நம்பி வன்றொண்டன் ஊரன்"4 என்றும் வரும் அவருடைய திருப்பதிகங் களால் வலியுறுகின்றது. நம்பி ஆரூரருடைய தந்தை பெயர் சடையனார் எனவும், தாய் பெயர் இசை ஞானியார் எனவும் வரலாறு கொண்டு அறிகின்றோம்; அவற்றை அவருடைய திருப்பதிகம், "சடையன் இசை ஞானி காதலன் திருநாவலூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன்"5 என்று கூறுகிறது. இந்நிலையில் திருவாரூர்க் கல்வெட்டொன்று, இசைஞானியார் திருவாரூர்க்கு அண்மையிலுள்ள கமலாபுரத்தில் ஆதிசைவருள் கௌதம கோத்திரத்தவரான ஞானசிவாசாரியார் என்பாருடைய மகள் என்று6 குறிக்கின்றது. இதனால், இசைஞானியார் நம்பியாரூரைக் கருவுயிர்க்குங்கால் தன் தாய்வீடாகிய கமலாபுரத்தில் இருந்திருக்கலாம் என்றும், திருவாரூர் இறைவன் அவர்கட்கு வழிபடு தெய்வமாதலின், குழந்தைக்கு ஆரூரன் என்று பெயரிட்டி ருக்கலாம் என்றும் கருதலாம். திருவாரூர் இறைவன்பெயரையே பெற்றோர் தனக்கு இட்டிருக்கின்றனர். என்ற கருத்தை விளக்குவது போல, திருவாரூர், "அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன் ஆரூரன்"1 என்றும் "சீராரும் திருவாரூர்ச் சிவன்பேர் சென்னியில் வைத்த ஆரூரன்"2 என்றும் வரும் திருப்பாட்டுக்கள் இசைக்கின்றன. நம்பியாரூரர் புத்தூரில் திருமணம் தடுக்கப் பெற்றுத் திருவெண் ணெய்நல்லூரில் ஆட்கொள்ளப்பட்டார் என்பது வரலாறு. இதனை ஆளுடையநம்பிகள் தம்முடைய திருப்பதிகங்கள் பலவற்றில் தாமே எடுத்தோதுகின்றார். "அன்று வந்து எனை அகலிடத்தவர்முன் ஆளதாக என்று ஆவணம் காட்டி நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்திலத்திரள் தொத்தினை"3 என்பது முதலாக உள்ள திருப்பாட்டுக்கள் சான்று பகருகின்றன. திருமணத்தின் போது இறைவன் வேதியர் உருக்கொண்டு வந்து தடுத்தாட் கொண்ட செயலை, "வாயாடி மாமறையோதி ஓர் வேதியனாகி வந்து... வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட நாயாடியார்"4 எனக் குறித்தருகின்றார். ஆட்கொள்ளப்பட்ட காலத்திலே தமக்கு வன்றொண்டன் என்ற சிறப்புண்டாயிற்று என்பதை, "தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள் சவைமுன் வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்."5 என நம்பியாரூரர் நவிலுகின்றார். வன்றொண்டரான நம்பியாரூரர் திருவதிகைக்கு அருகில் சித்தவட மடத்தில் தங்கியிருக்கையில் இறைவன் திருவடி தீக்கை பெற்ற செயலைக், "கறைக் கொண்ட கண்டத்து எம்மான் தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்"6 என்றும், அப்போது, தாம், இறைவனை இகழ்ந்தது குறித்து வருந்தி, "எறிகெடில வடவீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே" என்றும் குறித்துள்ளார். திருவாரூரை அடைந்து வழிபட்டிருக்கையில் இறைவன் தன்னை நம்பியாரூரர்க்குத் தோழனாகத் தந்தைமையின், தம்பிரானாகிய இறைவற்குத் தாம் தோழனாகிய குறிப்பை, "அடியேற்கு எளிவந்த தூதனைத் தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை"1 என்று காட்டுவர்; இக் குறிப்புக்குள்ளே பரவையார்பால் தனக்காக இறைவன் தூது சென்ற குறிப்பும் உளது. பரவையாரைத் தான் மணந்து கொண்ட குறிப்பு, "மாழை யொணகண் பரவையைத் தந்தாண்டானை"2 என்பதிலும், சங்கிலியாரை மணந்து கொண்ட குறிப்பு, "சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை"3 என்பதிலும் இனிது விளங்கப் பாடியுள்ளது. இவ்வாறே குண்டையூரில் நெல் பெற்ற நிகழ்ச்சியும், திரு நாட்டியத்தான்குடிக் கோட் புலியாருடைய மக்களான வனப்பகை, சிங்கடி என்ற இரு பெண்களையும் நம்பியாரூரர் தம்முடைய மக் களாகக் கருதிய கருத்தும், திருமுதுகுன்றில் இறைவன் தமக்குப் பொன் உதவிய குறிப்பும் பிறவும் அவருடைய திருப்பதிகங்களில் ஆங்காங்குக் காட்டப்பட்டுள்ளன. சங்கிலியாரைத் திருவொற்றியூரில் திருமணம் செய்து கொண்ட செயலை, "திருவொற்றியூர் புக்குச், சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள்"4 என்றும், சங்கிலி யார்க்குச் செய்த சூளுறவை மறந்து திருவாரூர்க்குச் செல்வாராய்த் திருவொற்றியூர் எல்லை. கடந்ததும் கண்ணொளி மறைந்ததை, "தண்பொழில் ஒற்றி மாநகருடையாய் சங்கிலிக்காக என்கண் கொண்ட பன்பனே"5 என்றும், ஊன்றுகோல் பெற்றதை, "ஊன்றுவதோர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே"6 என்றும், கச்சி மாநகர்க்கண் கண் ஒன்று பெற்ற திறத்தை, "கால காலனைக் கம்பன் எம்மானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே"1 என்றும், திருவாரூரில் மற்றைக் கண்ணை வேண்டிப் பெற்ற குறிப்பை, "பாரூர் அறிய என்கண் கொண்டீர் நீரே பழிப் பட்டீர்"2 என்றும், அவிநாசியில் முதலையுண்ட பாலனை உயிர்த் தெழச் செய்த நிகழ்ச்சிக் குறிப்பை, "காரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்வது காலனையே"3 என்றும் கயிலை செல்வதற்கு வெள்ளானையே இறைவன் அருளின அருட்செயலை, "விண்ணுலகத் தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல், என்னடல் காட்டுவித் தான் நொடித்தான் மலையுத்தமனே" என்றும் குறித்துள்ளார். இவ் வகையே நோக்கின், இவருடைய திருப்பதிகங்கள் பலவும் இவருடைய வரலாற்றுக் குறிப்புக்கள் செறிந்தவை என்பது இழுக்காது. நம்பியாரூரது காலம் நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்களுள், "மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் "4 எனவரும் திருப்பாட்டில் குறிக்கப் படும் பல்லவ மன்னன் தந்தி வன்மன்; அவனே திறை கொடா மன்ன வரை உடையனாயிருந்தான் என்றும், அவன் காலம் கி.பி. 780-க்கும் 830-க்கும் இடைப்பட்ட காலம் என்றும், எனவே அவன் காலத்தவரான நம்பியாரூரர் காலம் எட்டாம் நூற்றாண்டாக வேண்டும் என்றும் திரு. M.S. பூரணலிங்கம் பிள்ளையவர்கள்5 கூறுவர். அவர்க் குப்பின் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள், நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகையில், “கடல் சூழ்ந்த உலகெல்லாம் காக்கின்ற கோமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”6 என்றவிடத்துக் காடவர்கோன் கழற் சிங்கன் என்றது இரண்டாம் நரசிம்ம வன்மனையே குறிக்கும் என்றும், தம்பால் பேரன்புடை யராகிய கழற்சிங்கர் பொருட்டு இறைவன் திறைகொடா மன்னவரைத் திறைகொடுக்குமாறு செய்திருப்பர் என்றும், “சிங்கம் என்பது நரசிங்கம் என்னும் சொல்லின் முதற் குறையாகும்” என்றும், நரசிங்க முனையரையர் திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட சிற்றரசராய் இருக்கலாம் என்றும், எனவே நம்பியாரூரர் எட்டாம் நூாற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்றும்1 கூறுகின்றார். இனி, திரு. சதாசிவப் பண்டாரத் தாரவர்கள், இரண்டாம் நரசிங்க வன்மன் காலமே நம்பியாரூரர் காலமென்றும், நம்பியாரூரரை இளமையில் வளர்த்த நரசிங்க முனை யரையர் இரண்டாம் நரசிங்க வன்மன் கீழிருந்த குறுநிலத் தலைவர் என்றும், கழற்சிங்கன் என நம்பியாரூரர் குறிப்பது இரண்டாம் நரசிங்க வன்மனையே என்றும், எனவே அவனது “ஆட்சிக் காலம் கி.பி. 690-க்கும் 710-க்கும் இடைப்பட்டதாகலின் சுந்தரமூர்த்திகளும் அக்காலத் தில் வாழ்ந்த வராதல் வேண்டும்; எனவே நம் சுந்தரமூர்த்திகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நம் தமிழகத்தில் வாழ்ந்தருளிய பெரியார் என்பது வெளியாதல் காண்க”2 என்பர். இனி. திரு. T. A. கோபிநாதராயர் அவர்களும் தஞ்சை ராவ்ப கதூர் திரு. K.S. சீனிவாச பிள்ளையவர்களும் நம்பியாரூரர் ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் என்று கூறினர். இதற்கு அவர்கள் இரண்டு கருத்துக்களை அடிப்படையாகக் காட்டினர். முதலாவது: பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்படி, நம்பியாரூரர் காலத்தவரான சேரமான் பெருமாள்பால் திருமுகப் பாசுரம் கொணர்ந்த பாணபத்திரன் காலத்தில் பாண்டி நாட்டு வேந்தன் வரகுணன் என்பானாவன்; அவன் ஒன்பதாம் நூற்றாண்டினன் என்பது. இதனை மறுத்துக் காட்ட வந்த திரு. பண்டாரத்தாரவர்கள், இப்பரஞ்சோதியார் கூற்று வரலாற்றாராய்ச்சிக்குக் கொள்ளப்படுவ தாயின், அப்பரஞ் சோதியார், திருஞான சம்பந்தர் காலத்துக் கூன் பாண்டியனான சுந்தரபாண்டியனுக்குப் பத்துத் தலைமுறை முந்தியவன் மாணிக்கவாசகர் காலத்து அரிமர்த்தன பாண்டியன் என்றும், அவனுக்கு நாற்பத்து மூன்று தலைமுறை முந்தியவன் வரகுணன் என்றும் கூறு கின்றார்; அதனால், திருஞான சம்பந்தர்க்கு ஆயிரத்தைஞ்ஞூற்றுத் தொண்Qறு ஆண்டு முந்தியவர் நம்பியாரூரர் என்று முடிவதால் அவர் கூற்றுப் பொருந்துவதன்று என்பர். இரண்டாவது “மண்ணுலகம் காவல்பூண்ட உரிமையார் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெரு மையார்” என்னும் “திருப்பாட்டால், அடிகள் காலத்தில் பல்லவரது ஆட்சி தளர்ச்சியுறத் தொடங்கிற்று; அதனால் அன்னோர்க்குக் குறுநில மன்னர்கள் திறை செலுத்த மறுத்தனர்; பல்லவர்களுள் தந்திவர்மன் (780-830) ஆட்சிக் காலத்தில்தான் இத்தகைய நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருத்தல் வேண்டும்; ஆகவே அடிகள் தந்திவர்மனது ஆட்சியின் இறுதிக் காலமாகிய கி.பி. 825-ல் வாழ்ந்தவராதல் வேண்டம்” என்பது. இதுபற்றி ஆராய்ச்சி செய்த திரு. பண்டாரத்தாரவர்கள், “அடிகள் தம் காலத்துப் பல்லவமன்னன் போர் வலிமையற்றவன் என்றாதல், அவனுக்குக் குறுநில மன்னர்கள் திறைகொடுக்க மறுத்தனர் என்றாதல் அப்பாடலில் கூறினாரில்லை; ஆனால் தம் காலத்துப் பல்லவ அரசனைச் சார்ந்தோர்க்குத் திருச்சிற்றம்பலத் தெம்பெருமான் அருள் புரிபவராகவும் அவனோடு முரணிப் பகைஞராயினோர்க்கு அருள் புரியாது தண்டனை விதிப்பவராகவும் இருந்துள்ளமையை நன்கு விளக்கி அம்மன்னனது ஒப்புயர்வற்ற சிவபத்தியின் மாட்சியைத் தெரிவித்துள்ளார்; ஆகவே அடிகளது திருப்பாடலுக்கு அன்னோர் கொண்ட பொருள் சிறிதும் பொருந் தாமையின், அப்பெரியார் தந்திவர்மப் பல்லவன் காலத்தினரல்லர் என்பது தெளிவாதல் காண்க.”1 என்று கூறியுள்ளார். இனி, டாக்டர் மீனாட்சி யென்பார், சுந்தரரைக் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர் எனப் பொதுவாகக் கூறுவர். அதற்கு அவர்பாடிய திருத்தொண்டத் தொகையில் “கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”2 என்பது சான்றாகக் காட்டப்படுகிறது; காடவர்கோன் என்பது பல்லவர்கட்குப் பெயராதலால் கழற்சிங்கன் சுந்தரர் காலத்துப் பல்லவ வேந்தன்; இதனை வற்புறுத்தும் வகையில் பின்கண்ட முடிபுகள் வற்புறுத்தப் பட வேண்டியனவாகும். முதலாவது இக் கழற்சிங்கன் ஒரு சிறந்த வேந்தனாகவும் அவனுடைய ஆட்சி நலம் கடல் கடந்து சென்றிருந்த தாகவும் துணியவேண்டும்; இரண்டாவது, கழற்சிங்கன் எனப்படு வதால் இப்பல்லவவேந்தன் போர்வென்ற வெற்றியுடையனாக வேண்டும்; மூன்றாவது சுந்தரரால் பாராட்டுப் பெறத்தக்க அத்துணைச் சிவபத்தியுடையனாக இக்காடவர்கோன் இருத்தல் வேண்டம்; இம்மூன்று கூறுபாடுகளும் பொருந்தியிருப்பவன் மூன்றாம் நந்திவன் மனாவான்; அவன், கி.பி. 840 -865- வரை வேந்தனாக இருந்தான் எனச் சொல்லப்படுகின்றான்”1 என்று எடுத்தோதி அவற்றை முறையே விரித்துரைக்கின்றார். அவ்விரிவுரை முற்றும், நம்பியாரூர ரோடு சிறிதும் இயைபில்லாத மூன்றாம் நந்திவன் மனது வரலாறு கூறுவதாயும், நம்பியாரூரர் வழங்கிய திருப்பாட்டுக் கட்கு உண்மைப் பொருளறியும் திறமையில்லாததாயும் இருக்கிறது. ஆதலால் அதனை யெடுத்தோதி மறுப்பது வேண்டாச் செயலென்று விடுக்கின்றோம். இனி, திரு. மீனாட்சி கூறுவனவற்றுள், காடவர்கோன் என்பது பல்லவர்கட்குப் பெயராதலால் கழற்சிங்கன் சுந்தரர் காலத்துப் பல்லவவேந்தன் என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததோர் உண்மை. “கடல் சூழ்ந்த வுலகெல்லாம் காக்கின்ற பெருமான்” என நிகழ்காலத்தாற் கூறப்படுவதே, அக்கழற்சிங்கன் நம்பியாரூரர் காலத்தவன் என்பதை நன்கு வற்புறுத்துகிறது; ஏனை நாயன்மார் எவரையும் அவர் நிகழ்கால வினையாற் கூறாமை மேற்கூறிய கருத்தை வலிமிக்க தாக்குகின்றது. அதனால், கழற்சிங்கன் என்ற பல்லவவேந்தனை இன்னான் எனத் துணிவதே ஆராய்ச்சியாளர் செய்ய வேண்டுவது. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவனான நந்திவன்மன் பெயரே, நம்பியாரூரர் பரவும் கோக்கழற் சிங்கன் வேறு என்பதை வெளிப்படுத்துகிறது. இனி, திரு. மீனாட்சியவர்கள் விரும்பி விரித்துரைக்கும் தெள்ளாறு எறிந்த நந்திவன்மனுக்கோ சிங்கன் என்ற பெயர் கிடையாது; இதனால் நம்பியாரூரர் தெள்ளாறெறிந்த நந்திவன்மன் காலத்தவர் அல்லரென்பது விளங்கத் தெரிகிறது. இனி, கச்சியாண்ட பல்லவவேந்தர் குடிவழியில் சிம்மவிஷ்ணு வழி, வீமவன்மன் வழியென இரண்டு வழிகள் இதுகாறும் நிகழ்ந்துள்ள பல்லவர் வரலாற்று ஆராய்ச்சியால் வெளியாகியிருக் கின்றன. அவற்றுள், வீமவன்மன் குடிவழியில் சிங்கன் என்ற பெயரோடு இயையுடையார் எவரும் இல்லை; சிம்ம விஷ்ணுவின் குடிவழியில் அச்சிம்ம விஷ்ணு உட்பட மூவர் உள்ளனர். அவர்கள் சிம்மவிஷ்ணுவும், முதன் மகேந்திரவன்மனான முதல் நரசிங்கவன் மனும் பரமேசுரவன்மன் மகனான இரண்டாம் நரசிங்கவன் மனுமாவர். சிம்ம விஷ்ணு, திருநாவுக்கரசர் காலத்தவனான முதல் மகேந்திரவன்மனுக்குத் தந்தையாதலால், நம்பியாரூரர் காலத்துக் கழற்சிங்கனாதற்கு ஒவ்வான். மகேந்திரன் மகனான முதல் நரசிங்கவன்மன் கி.பி. 630-க்கும் 660-க்கும் இடையில் வாழ்ந்தவனாவன்; இரண்டாம் நரசிங்கவன்மன் கி.பி. 680-க்கும் 710-க்கும் இடையில் வாழ்ந்தவன்; இவ்விருவருள் ஒருவனையே “கழற்சிங்கன்” என்னும் தொடர் குறித்தல் வேண்டும். முதல் நரசிங்க வன்மன் வாதாபி கொண்ட பல்லவமல்லன் எனப்படுவன்; திருஞான சம்பந்தர் காலத்தில் இருந்த சிறுத்தொண்ட நாயனாரான பரஞ்சோதி யாருடன் வாதாபியை எறிந்து வெற்றித்தூண் நாட்டியவன்;அவன் காலத்தே தான் மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் சிறப்புற்றது. ஆதலால், திருஞான சம்பந்தர்க்குக் காலத்தாற் பிற்பட்ட நம்பியாரூரர் தன்காலத்து வேந்தனாகக் குறிக்கும் கழற் சிங்கன் முதல் நரசிங்க வன்மனாதல் கூடாது. ஆகவே கழற்சிங்கன் என்பது, கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்தவனான இரண்டாம் நரசிங்கவன்மனையே குறித்து நிற்பது இனிது தெளியப்படுகிறது. இவனை, ஸ்ரீ சங்கரபக்தன், ஸ்ரீ ஆகமப் பிரியன், சிவ சூடாமணி என்று செப்பேடுகள்1 புகழ்ந்தோதுவதும், இவனை அவை இராஜசிங்கன் க்ஷத்திரிய சிங்கன் என வழங்குவதும்2 மேலே எய்திய துணிபை வற்புறுத்துகின்றன. இத்துணையும் கூறியவாற்றால் நம்பியாரூரர், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டிலும் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்தார் என்பது முடிபாம். இவர் காலத்தே திருநாவலூரில் இருந்த சிற்றரசர் நரசிங்க முனையரையன் என்று முன்பே கண்டோம். அந்நாளில் முடிவேந்தர் கள், தம்கீழ் நின்று ஆட்சி புரியும் குறுநிலத்தலைவர்கட்குத் தங்கள் பெயரையே சிறப்பாக வழங்குவது மரபாதலின், அதுவே பற்றி, இரண்டாம் நரசிங்க வன்மன், தன்பெயராலேயே நரசிங்க முனையரையன் என்ற சிறப்பைத் தந்தானாக வேண்டும். இவ்வழக்குப் பிற்காலத்தே சோழவேந்தர்பாலும் இருந்திருக்கிறது. இரண்டாம் இராசராசன் காலத்தில் சிறப்புற்றிருந்த மோகன் ஆளப்பிறந்தான் என்னும் தலைவனுக்கு நாலுதிக்கும் வென்ற இராசராசக் காடவராயன்1 என்று சிறப்பளித்திருப்பது கொண்டு இவ்வுண்மை துணியப்படும். இத் தலைவர்பெற்ற சிறப்பே முடியரசன் பெயரைக் காட்டுவது போல, நரசிங்கமுனையரையர் பெயரைக் கொண்டே முடியரசனான பல்லவ வேந்தன் நரசிங்கவன்மன் என்று தெளிவாய்க் காணலாம். நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்கள் நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்கள் சைவத் திருமுறைகளுள் ஏழாந்திருமுறையாக வகுக்கப் பெற்றுள்ளன. இவ்வேழாந் திரு முறையில் இவர் பாடியனவாக நூறு திருப்பதிகங்கள் உள்ளன. திருமுறைகண்ட புராணம். இவர் பாடிய திருப்பதிகங்கள் முப்பத் தெண்ணாயிரம்2 என்றும், பண்முறையால் தொகுத்தபோது நூறு திருப்பதிகங்களே கிடைத்தன என்று குறிக்கின்றது.3 பத்துப்பாட்டுக்கள் கொண்டதனைப் பதிகம் என வழங்கும் முறைமை கொண்டு நோக்கின், நம்பியாரூரர் பாடியன மூன்று லக்ஷத்து எண்பத் தெண்ணாயிரம் என்றும், பண்வகுக்கப் பெற்ற காலத்தில் ஆயிரம் திருப்பாட்டுக்களே கிடைத்தன என்றும் காண்கின்றோம். ஆனால் சில திருப்பதிகங்களில் பதினொரு திருப்பாட்டுக்களும், சிலவற்றில் பன்னிரண்டு திருப்பாட்டுக்களும் காணப்படுகின்றன. இவ்வகையால், நம்பியாரூரர் பாடியன என (நூறு திருப்பதிகங்களும்) 1026 செய்யுட்களும் கிடைக்கப் பெறுகின்றன. இப்பாட்டுக்களை இடைக் காலத்தார், இந்தளம் முதல் பஞ்சமம் ஈறாகப் பதினேழு பண்களாக வகுத்துள்ளனர். இவற்றுள், தக்கேசிப் பண்ணில் 17 திருப்பதிகங்களும், நட்டராகப் பண்ணில் 14 திருப்பதிகங்களும், இந்தளத்தில் 12 திருப்பதிகங்களும், ஏனையவற்றுள் ஒன்றும், மூன்றும், நான்கும், ஐந்தும், ஏழும் ஒன்பதுமாக உள்ளன. திருமுறை கண்ட புராணம், இந்தளம், தக்கராகம், நட்டராகம், கொல்லி, பழம் பஞ்சுரம் தக்கேசி, காந்தாரம், காந்தாரபஞ்சமம், நட்டபாடை, புறநீர்மை, காமரம், குறிஞ்சி, செந்துருத்தி, கௌசிகம், பஞ்சமம் எனப் பதினைந்து பண்களைக் கூறுகின்றது. மிக்குக் காணப்படும் கொல்லிக் கௌவாணமும் பியந்தைக் காந்தாரமும் முறையே கொல்லிப் பண்ணிலும் காந்தாரப் பண்ணிலும் அடக்கப்பட்டன போலும். இனி, நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்கள் நூறனுள், பொதுவாக உள்ள ஐந்து திருப்பதிகங்கள் ஒழிய எஞ்சிய தொண் ணூாற்றைந்தும் திருவெண்ணெய் நல்லூர் முதல் திருநொடித்தான் மலை ஈறாக எண்பத்து நான்கு திருப்பதிகளைக் குறித்துப் பாடியுள்ளன. திருப்பதிகப் பொருள் இத்திருப்பதிகங்களால் இறைவன் இயல்பும், உயிர்களின் இயல்பும், உயிர் வாழ்க்கையின் இயல்பும், உயிர்கள் இறைவன் திருவருளைப் பெறுதலின் இயல்பும் இனிய தமிழ் நடையில் கூறப்படுகின்றன. இறைவன் எழுத்துக்கள் எல்லாவற்றிற்கும் முதலாகிய அகர வெழுத்தைப் போல், உலகிற்கு முதல்வனாக1 உள்ளான். உல கென்பது பாரும் விண்ணும் இடை நின்ற நீரும் தீயும் காற்றும் கலந்த மயக்கமாகும்;2 இறைவன் உலகத்தோடு ஒன்றாய் அதன் கூறுகளாகிய நிலமும் நீரும் நெருப்பு முதலிய எல்லாமாய் இருக்கின்றான் என்பதைப் படர்க்கையிலும்3 முன்னிலையிலும்4 வைத்து விரித்துக் கூறுகின்றார். உலகிடை வாழும் உயிர்களின் உடம்பின் கூறாகவும் இறைவன் ஒன்று பட்டிருக்கின்றான் என்பதை, “ஊனாய் உயிரானாய் உடலானாய்”1 என்பது முதலியவற்றால் குறிக்கின்றார். இவ்வுல குயிர்கட்கு இடமாகிய அண்டமும் அதற்கு அப்பாலும் எல்லாம் இறைவனில் அடக்கம், அவன் “அண்டம தாயவன்”2 இவ்வண்டங்களில் காலமும் ஞாயிறுமாகி3 உயிர்கட்கு வேண்டும் பெண் ஆண் என நிலவும் உடம்புமாகி4 இறைவன் விளங்குகின்றான். அண்டமும் பிண்டமுமாகிய எல்லாவற்றிலும் கலந்து ஒன்றாய் நிற்பதோடு அண்டம் கடந்து அப்பாலும் வேறுபட்டுத் தனித்து விளங்குவதும் இறைவற்கு இயல்பு,5 அந்நிலையில் இறைவன் காண்டற்கரியன்;6 “முதல் காண்பரியான்”7 “ஒன்னா அறிவொண்ணா மூர்த்தி.”8 இவ்வண்ணம், உலகுயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் நின்று விளங்கும் இறைவன், பண்ணிடைத் தமிழும் பழத்தினிற் சுவையும் கண்ணிடைமணியும்9 போல் இயக்கமும், பயிர்க்குப் புயல்போல் ஆக்கமும்10 நல்குகின்றான். இனி, இவ்வுலகினையும், உலகில் நிலவும் உயிர்கட்குரிய உடம்பினையும், உடம்பிடை நின்று உலகில் உயிர்கள் செய்வன செய்து, பெறுவனபெற்று, நுகர்வன நுகர்ந்து உய்திபெறற்கு வேண்டு வனவற்றையும் படைத்து அளிப்பதும் இறைவன் செயல்;11 அதனால் அவனுக்கும் இவற்றுக்கும் உள்ள தொடர்பு படைப் பவனுக்கும் படைக்கப்படும் பொருட்குமுள்ள தொடர்பாதலால், அத்தொடர்பு விளங்க, “தாயும் தந்தை பல்லுயிர்க்கும் தாமேயாய தலைவனார்”12 என்றும், “தந்தை தாய் உலகுக்கு”13 என்றும் கூறுகின்றார். உலகிடை உடம்பொடு கூடிநின்று வாழ்வாங்கு வாழும் உயிர்களோடு உடனாய் நின்று பெறற்குரியவற்றைப் பெறுவித்து அவற்றின் பயனை நுகரப் பண்ணுவதும் இறைவனது அருட் செயலாகும். அது குறித்து, “நாக்கும் செவியும் கண்ணும் நீ”1 “பீடைதீர அடியார்க் கருளும் பெருமான்”2 “பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி”3 உலகத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன்4 என்று பலபடியாக உரைக்கின்றார். உலக வாழ்க்கையால் உய்திபெறச் சமைந்த உயிர்களின் அறிவு நெறிக்கு வேண்டும் கல்விக்கு வாயிலாகிய எழுத்தும், சொல்லும், பாட்டும், நூலும் கற்பித்து அறிவின்பம் நல்குபவனும் இறைவனே; அதனால் அவன், ஞானாசிரியனாகவும் ஞானப் பொருளாகவும் விளங்குகின்றான் என்பர். இதனை “எழுத்தொடு சொற்பொருள் எல்லாம் முன்கண்டான்”5 “சொலும் பொருளுமாய் நின்ற நம்பி”6 “கற்றகல்வியிலும் இனியான்”7 என்று கூறுவதனால் அறியலாம். இவ்வாறு இறைவனால் இயம்பப் பெற்ற அருணூால் ஆகமம் எனப் படும். அவ்வுண்மையும் விளங்க, “அண்டர் தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதி”8 “ஆகமசீலர்க்கு அருள்நல்கும் பெம்மான்”9 என்பதனால் இனிது விளங்குகிறது. இவ்வண்ணம் ஆகமநூலின் தோற்றமும் பயனும் நம்பியாரூரர் எடுத்தோதுதற்கு எற்ப அவர் காலத்து வேந்தனான கழற்சிங்கன் தன்னை “ஸ்ரீ ஆகமப்பிரியன்”10 என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. இனி, “மேவிய வெந்நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறி காட்டும் வேதமுதலாக”11 விளங்குதலால் அம் மெய்ந்நெறி, யோக நெறி, ஞானநெறி என இரண்டாய் இயலுவதைக் காட்டி, யோகநெறி நிற்கும் உயிர்கட்கு அருளும் திறத்தைப் பல பாட்டுக்களால் எடுத்துரைக் கின்றார். இறைவன் உள்ளத்துள்ளே நிற்கும் ஒண்பொருள்; அவனை உள்ளத்துள்ளே ஓர்ந்து உணர்வது யோகம்;1 அவ்வாறு உணர்வாக்கு அவன் “நாபிக்கு மேலே ஓர் நால்விரல் நடு”2 விற் காட்சியளிப்பன்; அவ்விடத்தேயவன் சிந்தித்து என்றும் நினைந் தெழும் அன்பர் சிந்தையில் திகழ்கின்றான்;3 அவ்வாறு திகழ்வதால் சிந்திக்கும் அன்பரது சிந்தை திருத்தம் எய்துகின்றது.4 ஞானநெறி யென்பது, இறைவன்பால் உண்மையன்பு கொண்டு தொழுதல் வணங்குதல் பாடுதல் முதலியவற்றால் வழிபடுவதாகும். யோக நெறியினும் இந்த ஞானநெறி பெரும்பான்மையான மக்கட்கு எளிதில் இயலும் செயலாதலால் இதனையே தாம் அருளிய திருப்பாட்டுக்கள் பலவற்றிலும் பெரிதும் எடுத்து மொழிந்துள்ளார். நறிய பூவும் நீரும் கொண்டு இறைவனை நாடொறும் அன்புடன் பூசனை புரிபவர்க்குத் தூய அறிவுண்டாகும்; உண்மை ஞானம் கைவரும் என்பாராய், “நறுமலர்ப் பூவும் நீரும் நாடொறும் வணங்குவார்க்கு’ அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பன்”5 என்றனர். இறைவன்பால் அன்பில்லாத வழி அவனது திருவடி ஞானம் எய்தாது என்பதை, “அன்பரல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடிசேரார்”6 என்பர். அன்பர் நெஞ்சைத் தனக்கு இடமாகக் கொண்டு7 அங்கே ஞானவொளி திகழ்ந்து8 அவர்கட்கு உண்டாகும் துயர்களை9 நீக்கியருள்கின்றான். அவ்வகையால் அவனது அருணலத்தைப் புகழ்ந்துபாடும் அன்பர்கள் பிரியாப் பேரன்பால் பிணிப்புற்று அப்பணியினையே செய்தொழுகுவார்கள்.10 இறைவன் திருப்பெயர் களுள் சிறந்த நிறைமொழியாகவுள்ள “நமச்சிவாய” என்பதை இடையறாது சிந்தையிற் சிந்தித்தலும் நாவால் மொழிதலும் அவருடைய சீர்த்த செயல்காளகும். இறைவன்பால் அன்பு செய்யும் ஏனைப் பெருமக்களையும் இறைவனைப் போலவே கருதி அவர்களை வழிபடுவதும் இந்த மெய்யன்பர்களின் அன்புடைத் தொழில். இறைவன் அருளிய ஞானயோக நெறிகளை மேற்கொள்ளாத மக்களும் பலர். அவர்கள், உயிர்கட்கென இறைவன் உடம்பு முதல் உலகப் பொருள் ஈறாகவுள்ள பலவற்றையும் படைத்து உதவிய நன்றியை நினையாது, உடம்பு முதலியவற்றால் செய்வன செய்து பெறுவனபெற்று நுகருங்கால் எய்தும் இன்பத்துக்கே அடிமையாகி, அவ்வின்பத்தை நிலைபெற்ற ஒன்றாகக் கருதி யொழுகுவர்.1 அவர் களும் உடம்பு முதலியவற்றின் நிலையாமை உணர்ந்து நிலைத்த இன்ப நிலையமாக இருக்கும் இறைவன் திருவடியை அடைதல் வேண்டும் என்ற அருள் உள்ளத்தால், பிறவித்துன்பம், உடல் நிலையாமை, செல்வ நிலையாமை முதலியவற்றைப் பலவகையாலும் எடுத்துப் பாடி நல்லறிவு கொளுத்துகின்றார். “தோற்றமுண்டேல் மரண முண்டு”2 “இன்பமுண்டேல் துன்பம் உண்டு”3 “வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்”4 “பொய்த்தன்மைத்தாய மாயப்போர்வையை மெய் என்று எண்ணும் வித்தகத் தாய” வாழ்வு வேண்டி நான் விரும்புகில்லேன்”5 என்றும், தன் நெஞ்சினைத் தெருட்டும் வாய்பாட்டில் வைத்து, “பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையாரலர் பெண்டிரும், நிதியும் இம்மனைவாழும் வாழ்க்கையும் நினைப் பொழி, மடநெஞ்சமே”6 என்றும் அருளிச் செய்கின்றார். புராண வரலாறுகள் இனி, சைவபுராணங்கள் காட்டும் பௌராணிக நெறிக்கண் நின்று அவற்றுள் இறைவனைப் பற்றிக் கூறப்படும் உருவம். செயல் முதலிய திறங்களையும் நம்பியாரூரர் ஆங்காங்கு எடுத்து நிரம்ப மொழிகின்றார். திருமுடியிற் சடையும் பிறையும் கங்கையும், நெற்றியிற் கண்ணும், கழுத்திற் கறையும், கைகளில் மழுவும், மானும், எரியும் பிறவும் விளங்க, உமையொரு கூறனாய், மேனியல் வெண்ணீறும், பாம்பணியும் இடையிற் புலித்தோலும் தோற் போர்வையும் உடையனாய் நிலவும் திருவுருவைப் பல பாட்டுக்களில் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார். இவ்வாறு “ஆணொடு பெண்ணாம் உருவாகி”1 நிற்கும் இறைவன், பிரமன், திருமால், என்ற தேவர்கட்குத் தலைவன்2; அவர்களது உருவத்தையும் தனது உருவில் ஒடுக்குவன்3; மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாகும்.4 மேனியெங்கும் திருநீறணிந்து திகழ்வன்.5 இனி, இப்புராணங்கள் கூறும் வரலாறுகளுள், இறைவன் உமையை மணந்தது,6 அவன் உமைதழுவக் குழைந்தது,7 உமையம்மை இறைவன் கண்ணைப் புதைத்ததது;8 முருகனைப் பெற்றது,9 காமனை எரித்தது,10 திரிபுரம் செற்றது,11 தேவர்கள் பொருட்டுக் கடல் நஞ்சு உண்டது.12 திருமால் கண்மலர் இட்டு இறைவனை வழிபட்டது,13 இறைவன் தக்கன் வேள்வியைச் சாடியது,14 இரா வணனை மலையின் கீழ் அடர்த்தருளியது,15 அருச்சுனற்கு வேடனாய்ச் சென்று பாசுபதம் அருளியது,16 இந்திரன் வழி பட்டது,17 அயிராவதம் வழிபட்டது,18 அகத்தியர் வழிபட்டது,19 காமதேனு வழிபட்டது,20 காளியொடு இறைவன் திருநடனம் செய்தது,21 தாருக வனத்து முனிவர் வரலாறு,22 இறைவன் ஆலின்கீழ் இருந்து அறம் சொன்னது,1 கலையநல்லூரில் பிரமன் இறைவனைப் பரவியது,2 மார்க்கண்டேயர் பொருட்டு காலனைக் காய்ந்தது,3 திருப்புன்கூரில் மழை குறித்துப் பன்னிரு வேலி நிலம் பெற்றது4 இறைவன்தில்லை மூவாயிர வர்க்கு மூர்த்தி யெனப் படுவது5 முதலிய பல செய்திகள் நம்பியாரூரரால்நன்கு குறிக்கப் படுகின்றன. இவற்றின் வேறாக, திருத்தொண்டத் தொகையில் தனியடியார் அறுபத்து மூவர் வரலாற்றுக் குறிப்பும், தொகையடியார் ஒன்பதின்மர் குறிப்பும் குறிக்கப்படுகின்றன. அவருள் புகழ்த்துணையார்,6 கோட்புலியார்,7 சண்டேசுரர்,8 ஏயர்கோன் கலிக்காமர்9 திருநீல கண்டர்10 கோச்செங்கணான்,11 கண்ணப்பர்12 முதலியோரைப் பற்றிய குறிப்புக்களும், திருஞான சம்பந்தர் ஞானம் பெற்றதும்,13 அவர் திருத்தாளம் பெற்றதும்14 திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடியதும்15 திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருவீழி மிழலையிற் காசு பெற்றதும்16 அடிகளால் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. மேலும், கோச்செங்கணான் முற்பிறவியிற் சிலந்தியாயிருந்து சோழனானதும்,17 பரசுராமன் முந்நூறு வேதியர்க்கு நிலம் பகிர்ந்தளித்ததும்,18 தொண்டைமான் களிற்றை முல்லைக் கொடியால் கட்டியதும்19 சுருங்கக் கூறப்படுகின்றன. பதிகம் பாடப்பெற்றதிருப்பதிகங்கள் நம்பியாரூரர் திருப்பதிகம் பாடிச் சிறப்பித்த திருப்பதிகள் திருவெண்ணெய்நல்லூர் முதல் திருநொடித்தான் மலை யீறாக எண்பத்து நான்கு என முன்பே கூறினோம். அவையேயன்றி அவற்றின் வேறாக மிகப்பல திருப்பதிகளை நம்பியாரூரர் ஆங்காங்கு குறித்துள்ளார். அவை, அண்ணாமலை, ஆழியூர், திருவாறைமேற்றளி, இன்னம்பர், இராமேச்சுரம், ஈழநாட்டு மாதோட்டம், என்னூர், வடகஞ்சனூர், கடம்பூர், கடம்பந்துறை, கடைமுடி, கண்டியூர், கருப்பூர், கச்சிக் காமக்கோட்டம், கிழையம், கிள்ளிகுடி, கீழைவழி, கீழையில், கீழ்வேளூர், குடப்பாச்சில், குடமூக்கில், குண்டையூர், குரங்கணில், முட்டம் குற்றாலம், குறுக்கை நாட்டுக் குறுக்கை, கைம்மை, கொங்கு நாட்டுப் பேரூர், கொண்டல் நாட்டுக் கொண்டல், கோத்திடை கோவல், கோளிலி, சிராப்பள்ளி, தக்களூர், தகட்டூர், தஞ்சை, தண்டங்கூறை, தண்டலையாலங்காடு, தண்டந் தோட்டம், தருமபுரம், தாழையூர், திருமலை, தெள்ளாறு, தென்னூர், தென்பனையூர், தேங்கூர், தேவனூர் நாங்கூர் நாட்டு நாங்கூர், நாலனூர், நெடுங்களம், நெய்த்தானம், நெல்லிக்கா, பழனம், பழையாறு, பாசூர், பாம்பணி, பாம்பரம், பிடவூர், புகலி, புரிசை நாட்டுப் புரிசை, பூங்கூர், பொன்னூர் நாட்டுப் பொன்னூர், மகோதை,1 மருகல் நாட்டு மருகல், மிழலை நாட்டு மிழலை, மூலனூர், வலஞ்சுழி, விளத்தூர் நாட்டு விளத்தூர், வெண்ணிக் கூற்றத்து வெண்ணி, வெண்ணி நாட்டு மிழலை, வெற்றியூர், வேலனூர், வேளா நாட்டு வேளூர் என்பனவாகும். இவற்றுட் பலவும் திருஞான சம்பந்தராலும் திருநாவுக்கரசராலும் பாடப்பெற்றுள்ளனவாதலால், நம்பியாரூரரும் இவற்றின் மேற் பதிகம் பாடியிருக்கலாம்; அயினும், அவை திருமுறை கண்ட காலத்தேயே மறைந்த போயினபோலும். இனி, நம்பியாரூரர் திருப்பதிகங்களில் அவர்காலத்தில் நிலவிய நாடுகள் சிலவற்றைக் குறிக்கின்றார். அவை, ஈழநாடு, குறுக்கைநாடு, கொண்டல் நாடு, தென்னாடு, நறையூர்நாடு, நாங்கூர் நாடு, புரிசை நாடு, பொன்னூர் நாடு, மருகல் நாடு, மிழலை நாடு, விளத்தூர் நாடு, வெண்ணிக்கூற்றம், வெண்ணிநாடு, வேளாநாடு என்பனவாகும். இவற்றுள், கொண்டல்நாடு ஒன்றொழிய ஏனையாவும் கல்வெட்டுக்களாலும் ஆங்காங்கு குறிக்கப்பட்டுள்ளன. கொண்டல் நாடு இருக்குமிடம் தெரிந்திலது; ஏனையவை தொண்டை நாட்டிலும் சோழநாட்டிலும் காணப்படும் உண்ணாடுகள். இதனால் நம்பியாரூரர் வாழ்வு பெரிதும் தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலுமே நிலவிற்றென அவரது வரலாறு கூறுவது முற்றிலும் உண்மையாதல் இனிதுவிளங்குகிறது. மாதோட்டம், இராமேச்சுரம் ஆகிய திருப்பதி களைக் கூறு மிடத்து “ஈழ நாட்டு மாதோட்டம் தென்னாட்டு இராமேச்சுரம் என்ற திருப்பாட்டில், மேற்கொண்டு சோழநாட்டுத் துருத்தி முதலிய ஊர்களைக் குறிப்பார், “சோழ நாட்டுத் துருத்தி”1 யென விதந்துகூறி வேறுபடுத்துக் காட்டுவது நாடுகளின் அமைப்பைச் செவ்வே அறிந்துரைக்கும் அவரது சொற்றிறத்தின் திட்பத்தை உணர்த்துகிறது. இனி, நாடுகளைக் குறித்ததுபோல அக்காலத்து வழங்கிய மலை ஆறு முதலியவற்றின் பெயர்களையும் நம்பியாரூரர் குறித் துள்ளார். அண்ணாமலை2 குமணமலை3 விச்சிமலை4 சீபருப்பதம்5 முதலியன சிறப்புடையன. இவற்றுள் குமணமலை யென்பது சங்க நூல்களில் முதிரமெனக்6 கூறப்படுகிறது. விச்சிமலையும் சங்க நூல்களில்7 காணப்படும் மலைகளுள் ஒன்று. இம்மலைக்குரிய விச்சிக்கோன். பக்கல் கபிலர் பாரிமகளிரை மணந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். நம்பியாரூரர், “பருவி விச்சிமலைச் சாரல் பட்டை கொண்டு பகடாடிக் குருவியோப்பிக் கிளிகடிவார் குழன் மேன் மாலைகொண்டு ஓட்டந்து, அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு”1 என்பதனால் விச்சிமலை காவிரிநாட்டு எல்லையில் நிற்கும் மலைகளுள் ஒன்றென அறியலாம். இஃது இப்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பச்சைமலை என்ற பெயர்தாங்கி நிற்கிறது. சீபருப்பதம் இப்போது கர்நூல் மாவட்டத்தில் மல்லிகார்ச்சுனம் என்று கூறப் படுகிறது; அங்குள்ள கல்வெட்டுக்களும் அதனைச் “சீபருவதம்”2 என்று குறிக்கின்றன. இவ்வண்ணம் சில மலைகளை விதந்தோதி யதோடு நில்லாமல், மலைகள் பலவற்றின் முடியிலும் சிவபெருமான் கோயில் கொள்கின்றான். என்பாராய், “மலையின் தலையல்லது கோயில் கொளீர்”3 என்றும் குறிக்கின்றார். இனி ஆறுகளுள், அரிசிலாறு, காஞ்சி, காவிரி (பொன்னி), கெடிலம், கொள்ளிடம், கோதாவிரி, சிற்றாறு, நிவவு, பாலி, பெண்ணை, மண்ணியாறு, முத்தாறு, வெள் ளாறு என்ற இவற்றை எடுத்தோதுகின்றார். இவற்றுள் காஞ்சியாறு நொய்யலென வழங்குகிறது.4 சிற்றாறென்பது வெஞ்சமாக் கூடலருகே வருவது; இதனைக் குடவனாறு என்றும் வழங்குகின்றனர்; இஃது இப்போது அமராவதி (ஆன்பொருநை) யாற்றொடு கலந்து கொள்கிறது. பதிற்றுப்பத்து உரைகாரர் குறிக்கும் குடவனாவறு இதுவாயின், ஒரு காலத்தில் இது காவிரியோடு கலந்திருக்க வேண்டும். நீர் நிலைகளுள் குமரியும் ஈழநாட்டு மாதோட்ட நகர்க்கு அண்மையில் உள்ள பாலாவியும் சிறப்புடைய நீர்நிலைகளாக நம்பியாரூரரால் குறிக்கப் படுகின்றன. இயற்கை நலம் காட்டல் இங்ஙனம், தமிழகத்துப் பலவகை நாடுகளையும் சிறப்புடைய ஊர்கள், மலைகள், ஆறுகள் முதலியவற்றையும் காட்டி இன்புறுத்தும் நம்பியாரூரர், தாம் பாடியருளிய பாட்டுக்களில் அவ்வவ்விடங்கள் வழங்கும் இயற்கைக் காட்சிகளையும் எடுத்துக் காட்டுகின்றார். இக்காட்சிகள் தமிழ் நூல்களில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என ஐந்து வகையாக வகுத்துக் கூறப்படும். இவ்வகையே நோக்கின், சீபருப்பதம், திருக்கழுக்குன்றம் முதலிய திருப்பதிகள் குறிஞ்சி நிலத்தில் உள்ளன. அவற்றை நோக்குவோர்க்கு அங்கே குறிஞ்சி நிலத்தின் இயற்கை நலம் இனிது தோன்றாநிற்கும். நம்பி யாரூரர் இத் திருப்பதிகளைப் பாடிய பாட்டுக்களில் இக் குறிஞ்சிக் காட்சியை எடுத்தோதுகின்றார். சீபருப்பதம் என்பது கர்நூல் மாவட்டத்தில் மல்லிகார்ச்சுனம் என இப்போது வழங்கும் இடம் என முன்பே கூறினோம்; இங்குள்ள பழங் கல்வெட்டுக்கள் இதனைச் சீபருவதம் என வற்புறுத்துகின்றன. இது மலைகள் செறிந்த நிலப்பகுதி. நம்பியாரூரர் அருளிய திருப்பதி கத்தைக்கொண்டு நோக்குமிடத்து, இங்கே மானும் மரையுமாகிய விலங்கினங்களும் மயிலினங்களும் கலந்து வாழ்கின்றன; ஒருபால் களிற்றி யானைகள் பிடிகளோடு கூடியுறைகின்றன; ஏனல் விளையும் புனங்களின் அயலே கரடிகள் காணப்படுகின்றன; ஏனங்கள் நிலத்தைக் கிளறுவதால் புதைந்து கிடக்கும் மணிகள் வெளிப்படு கின்றன; ஒருபால் குறவர் தினைப்புனம் அமைத்துள்ளனர்; குறமகளிர் கவணை ஏந்தி விளையும் புனங்களைக் காவல் புரிகின்றனர்; வேடர்கள் மலைத் தேனை இலைத்தொன்னைகளிற் பிழிந்து உண்கின்றனர்.1 திருக்கழுக்குன்றமும் குறிஞ்சிப்பகுதியே யாதலின், அங்கே பிடியானைகள் கன்றொடு சூழ்வருவதும், களிறுகளும் பிடிகளும் கலந்துறைவதும், வெள்ளிய அருவிகளில் மணியும் முத்தும் வந்து வீழ்வதும், பாலுண்ணும் குட்டிகளைத் தழுவிக்கொண்டு முசுக் கலைகள் பாறைமீது பாய்வதும், தேனினமும் வண்டினமும் இன்னிசை பாட, கானமயில் களித்திருப்பதும், சந்தன மரங்கள் இனிய மணம் கமழ்வதும், மிக்க மழையால், விளைந்து முதிர்ந்த மூங்கில்கள் முத்துக்களைச் சொரிவதும் பிறவும் இனிய காட்சி யளிக்கின்றன.2 வெஞ்சமாக் கூடல் என்பது கருவூர்க்கு அண்மையில் முல்லை நிலப்பகுதியிலுள்ளதோர் ஊர். இதன் அருகே சிற்றாறு ஒன்று தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடுகிறது. இதன் கீழ்க்கரையில் வெஞ்ச மாக்கூடல் இருக்கின்றது. இதனைச் சூழ்ந்த பகுதிமுற்றும் முல்லை நிலமேயாகும். இதனைக் காணும் நம்பியாரூரர் இது வழங்கும் இயற்கைக் காட்சியில் ஈடுபடுகின்றார். சிற்றாற்றின் நீர்ப்பெருக்கில் காட்டில் வளரும் மூங்கில் இடைப் பிறந்த முத்துக்களும், ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி முதலி யனவும் வருகின்றன; சந்தனமும் அகிலும் மணிகளும் கரையில் ஒதுக்கப்படுகின்றன. வெஞ்சமாக்கூடல் நகர்கண் புன்னையும் ஞாழ லும் செறிந்த பொழில்களில் குருக்கத்தி படர்ந்துவிளங்க, அவற் றிடையே குயில்கள் இருந்து கூவுகின்றன. வேறொருபால் கமுகும் தென்னையும் பலாவும் விரவிக் குளிர்ச்சி மிகுந்துள்ள பொழில்கள் உள்ளன. இங்கே செல்வ மக்களும் வன வேட்டுவரும் விரும்பி வாழ்கின்றனர்.1 பாண்டி நாட்டுத் திருப்பதிகளுள் திருப்புனவாயில் என்பது ஒன்று; இது திருவாடானை வட்டத்தில் கடற்கரையைச் சார்ந்த பாலை நிலப்பகுதியில் இருப்பது. இதன் பாலை வடிவம் நம்பியாரூரர் கண்களுக்குத் தெரிகின்றது. அதனை அவர் அத் திருப்புனவாயிற் பதிகத்தில் விளங்கக் காட்டுகின்றார். பாலை நிலத்தில் வேட்டுவர் வாழ்வர். அவர்கள் அப்பகுதியிற் செல்லும் வழிப்போக்கர்கர்களையும் வணிகர்களையும் சூறையாடுவது இயல்பு. இதனை, “மறவேடுவர் பொருது சாத்தொடு பூசல் அறாப் புனவாயிலே” 2என்பர். இப்பகுதியில் சிறு சிறு கற்குன்றுகளும் தூறுகளும் கடுவெளியும் புற்கென்ற காட்சி தருகின்றன. கடுவெளியில் மானினங்கள் வாழ் கின்றன. அவற்றையும் அங்கு வாழும் வேட்டுவர் அலைப்பதனால் அவை அவர்கட்கு அஞ்சி ஒளிந்து வாழ்கின்றன. ஆங்காங்கு நிற்கும் கள்ளி மரங்களின் கவடுகளிலிருந்து புறாக்கள் பெடைகளைப் பயிரும்; நிலம் செந்நிறமுடைமையின், “பொன்புனம்” என்றும் “செந்தாரை” யென்றும் குறிக்கப்படுகிறது. இங்கே வெயில் வெம்மை மிக்கிருத்தலால் கள்ளிகளும் வற்றி விடுகின்றன; புல் தீய்ந்து கரிந்தொழிகிறது; அவ்வெம்மையைக் கழித்தல் வேண்டிப் புள்ளி மான்கள் தூறுகளில் மறைந்து உறைகின்றன. கல்லும் தூறும் நிரம்பிக் கரிந்து தோன்றும் அக்கருங்காட்டில் மேயும் கோழிகள் புற்றுக்களின் மேலேறிக் கூகூ வெனக் கூவுகின்றன.1 இனி, சோழநாட்டுத் திருப்பதிகள் பலவும் மருதநலம் சிறந்தன வாகும். அவற்றுட் கலயநல்லூர் என்பது ஒன்று. இப்போது அது சாக்கோட்டை என வழங்குகிறது. இடைக் காலத்தே ஷாஜி யென்பான் ஒருவன் இங்கே இருந்து கோட்டையமைத்து இப்பகுதியை ஆண்டான் என்றும், அது முதல் இவ்வூர் ஷாஜிக் கோட்டை என்று பெயர் பெற்று முடிவில் சாக்கோட்டையென மருவி வழங்குவதாயிற்று என்றும் கூறுகின்றனர்.2 இஃது அரிசில் ஆற்றின் தென்கரையில் மருத வயல்கட்கு இடையே மிக்கவனப் புடன் விளங்குகிறது. இதனைக் குறிக்கும் நம்பியாரூரர், “பரமன் உறையுமூர் நிறைநீர் ஒழுகுபுனல் அரிசிலின் தென் கலயநல்லூர்”3 என்று இயம்புகின்றார். இவ்வூர் அருகே ஓடும் அரிசிலாறு கும்பகோணத்துக் கண்மையில் அரிசிலூர் என்னுமிடத்தே காவிரியிற்பிரிந்து வருகிறது. அரிசிலூர், சங்க காலத்தே அரிசில்கிழார் முதலிய சான்றோர் தோன்றுதற்கு நிலைக்களனாம் சிறப்புற்று இடைக் காலத்தும் தனது இருப்பு மறையாதே இருந்து4 இந்நாளில் மறைந்து போயிற்று. காவிரியின் பிரிவாதலால், அது கொணரும் வளமெல்லாம் அரிசிலாறும் பகிர்ந்து கொணர்ந்து. அதன் வெள்ளத்தில் வெண் கவரியும் கரும்பீலியும் வேங்கை கோங்கு முதலியவற்றின் மலரும் மிதந்து வந்தன. மலைநாட்டு ஏலம் இலவங்கம் முதலியனவும், பலவகைப் பழங்களும், அகில் சந்தனம் முதலிய விரைப் பொருள்களும் முல்லை மல்லிகை செண்பகம் முதலியனவும் அரிசிலாற்றின் வருவாயாயின. யானை மருப்பும் பொன்னும் மணியும் கரைமருங்கில் ஒதுக்கப்பட்டன. இவ்வாற்றின் பெருக்கால் வயல்கள் நீர்வளம் மிகுதலின், இனிய பொழில்களும் அழகிய பொய்கைகளும் செல்வ மாடங்கள் மலிந்த திருவீதிகளும் கொண்டு ஊர்கள் பொலிவுறுகின்றன. வயல்களில் நெல்லும் கரும்பும் நிரைநிரையாய் நின்று காட்சியளிக் கின்றன. கன்றினம் கரும்பின் முளைகளை மேய, உடன் மேயும் கறவைகள் கழுநீர்க்கொடிகளை மேய்கின்றன. நீர் இடையாறாமை யால் கயல் மீன்கள் வளம் பெறுகின்றன. பொய்கைகள் தாமரை மலர்ந்து காண்பார் கண் கவரும் கவின்கொண்டு விளங்க, மகளிர் நீராடி இன்புறும் மகிழ்ச்சி மிகவும் சிறந்து மாண்புறுகின்றது. பொழிகளில் பல்வகைப் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பி நிற்க, வண்டினம் தேனுண்டு பண்பாடுகின்றன; மயில்கள் நடமாடி மகிழ்கின்றன; ஆங்கு நிற்கும் புன்னை மரங்கள் முத்துப்போல் அரும்பிப் பொன்போல் மலர்ந்து பவளம் போற் காய்த்து இனிய காட்சி வழங்குகின்றன. கமுகு மரங்கள் பாளை விரிதலால் தேமணங்கமழும் அப் பொழில்களினூடே தென்றல் புகுந்து மன்றல் செய்கிறது. நீர்வளஞ் சிறந்த ஊர்தொறும் மறையவர் உறைவர் என்பது ஒருதலை. அதனால் அங்கே அவர்களது இருப்புச் சொல்லாமலே விளங்கும். அவர்கள் காலம் அறிந்து மறையோதுவர்; அதனால் அவர் உறையும் ஊர்ப்பகுதி மறையோசை மிக்குளது. ஒருபால் கலைபயிலும் அந்தணர் உறைகின்றனர். அவர்கள் சொல்லிலக்கணமும் பொருளிலக் கணமும் நான்மறையு மாகியவற்றைக் கற்பாரும் கேட்பாருமாய் உள்ளனர்; அதனோடு அவர்கள் இறைவனைத் தோத்திரம் பல சொல்லித் துதிக்கின்றனர். ஒருபால் அந்தணர்கள் வேள்வி செய்ய, அவருடைய ஓமப்புகை விண்படர்ந்து மழைமுகில் போல் தோன்றுகிறது. ஒருபால் மண்டபங்களும் கோபுரங்களும் மாளிகைகளும் மல்கிய வீதிகள் உள்ளன. அவற்றின்கண் விழவொலியும் முழவொலியும் சிறுவர்களின் விளையாட்டொலியும் மிக்கிருக் கின்றன. இவ்வண்ணம் அழகு திகழும் கலய நல்லூரில் சோலைகளில் குயில்கள் கூவ, மயில்கள் ஆட, வண்டினம் பாட, கிளிகள் இறைவன் திருப்பெயரைக் கற்றுச்சொல்ல, காலை மாலை என்ற இருபோதும் இறைவன்பால் உண்மையன்பு கொண்டு உளமுருகி வழிபடும் அடியவர் கூட்டம் இடையறாது காட்சி தருகின்றது.1 இப்போது வேதாரணியமென வழங்கும் திருப்பதி நம்பியாரூரர் முதலியோர் காலத்தில் மறைக்காடு என்ற திருப்பெயரால் விளங்கிற்று. இது நெய்தல் வளம் படைத்த சோணாட்டுக் கடற்கரையூர்களுள் ஒன்று. இங்கே தாழைப் பொழில்களும் புன்னைப் பொழில்களும் மல்கியிருக்கின்றன. தென்னைச் சோலையும் பெண்ணைக் காடும் இப்பகுதியில் மிக்கிருக்கின்றன. கடற்கரையில் தூயவெண்மணல் பரந்துளது; மலைபோலக் கடலலைகள் போந்து கரையை மோதி யலைக்கின்றன. அதனால் கடற்கரையில் சங்கும் இப்பியும் வலம்புரியும் மிகுதியாக ஒதுக்குண்டு வாழ்கின்றன. மணல் பரந்த கரையில் தாழையும் ஞாழலும் செறிந்த படப்பையை அடுத்து வாழைகள் நிற்கும் வயல்கள் உள்ளன. தாழைத் திரளின் இடையில் வாழும் குரங்குகள் வாழைக்கனியை உண்கின்றன. தகர மரங்களுடனே நிற்கும் தாழை ஞாழல் முதலிய வற்றின் நீழலில் கடற்கண் வாழும் சுறா மீண்களும் மகர மீன்களும் முத்தையும் பவளத்தையும் கொணர்ந்து கரையில் ஒதுக்குகின்றன. தெங்கும் பனையும் நிற்கும் மணற்பரப்பில் அவற்றின் பழங்கள் உதிர்ந்து கிடக்கின்றன. சங்கு, இப்பி, வலம்புரி முதலியவற்றை இடறிவரும் மரக்கலங்கள் கடற்கரையில் தங்குகின்றன. முகில்கள் தங்கும் சோலைகளின் முடியளவும் உயர்ந்து மலையெனத் திரண்டு வரும் கடலலைகள் மோதுகின்றன. கடலகத்தேயுள்ள அருமணிகளை வங்கங்களும் சுறா மீன்களும் கொணர்ந்து கரையில் எறிகின்றன. நீனிறக் கடலருகே இடையிடையே உள்ள கழிகளைச் சார்ந்து தாழைகள் மலிந்துள்ளன. அவற்றின் மடலிடையே கொக்கும் நாரையும் பிறவுமாகிய நீர்க் குருகுகள் வாழ்கின்றன. சில காலங்களில் கடலலைகள் வலம்புரி களையும் சலஞ்சலங்களையும் கரையில் ஏற்றி அலைக்கின்றன. நெல் விளையும் வயல்களில் கயல் மீன்கள் விளையாடக் கடலில் வாழும் வளைகள் ஏனைவளைகளையும் சலஞ்சலங்களையும் கரையிற் சேர்க்கின்றன. பூம்பொழில்களில் வண்டிருந்து பண்பாடி இன்புறுகின்றது.1 இயற்கை நலங்களை எடுத்துக் காட்டும் நம்பியாரூரருடைய திருப்பாட்டுக்கள், அவ்வியற்கையில் காணப்படும் நிகழ்ச்சிகள் சிலவற்றை மிக்க அழகுறக் கூறுகின்றன. இவ்வியற்கைக் காட்சிகளில் சிலவற்றை யெடுத்தோதும் வகையால் பண்டைத் தமிழாசிரியன்மார் மக்களது பண்பாட்டினையும் உள்ளுறுத்துரைக்கும் இயல்புடையவர். இடைக்காலத்தே உள்ளுறுத்துரைக்கும் இம்முறையை நெகிழ்த்து இயற்கைக் காட்சிகளை மாத்திரம் எடுத்தோதிப் பிறரை இன்புறுத்தித் தாமும் இன்புறும் செயல் உளதாயிற்று. இவ்விரு கூறுகட்கும் இடைப் பட்ட காலம் நம்பியாரூரர் வாழ்ந்த காலம். அக்கால நிலைக்கு இயைய நம்பியாரூரர் இயற்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை எடுத்துரைக்கின்றார். குறமகளொருத்தி தினைப்புனம் காத்து வருகையில், கிளிகள் கூட்டமாய் வந்து தினைக்கதிர்களிற் படிந்து தினையைக் கவர்கின்றன; அவள் ஆலோலம் செய்து வெருட்டுகின்றாள்; அவ்வோலத்தையும் தன்னினமான கிளியின் குரல் என்றே கருதி அவை நீங்காதே இருக்கின்றன; அதனால் அவள், “என்னை இக்கிளி மதியா திருக்கின்றது” எனச் சிவந்து கையில் கவணேந்தி ஒலி செய்கின்றாள்; அதன் பின்பே, அக்கிளிகள் அஞ்சி நீங்கிச் சீபருப்பத மலைமேல் திரிந்து ஏறுகின்றன; இதனை “மன்னிப்புனங் காவல்மட மொழியாள் புனங் காக்கக் கன்னிக்கிளி வந்தே கவைக் கோலிக் கதிர் கொய்ய என்னைக் கிளி மதியாது என்று எடுத்துக் கவண் ஒலிப்பத் தென்னற்கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பத மலையே”1 என்று பாடுகின்றார். வேழமொன்று மதங்கொண்டு அறிவு திரிந்து தன் பிடியானையை நோக்கி “நீ மாற்றுக் களிறொன்றை அடைந்தாய் “எனத் தன் கையை மேலெடுத்துப் பிளிறிப் பூசலிட்டு மதம் ஒழுக்கி நின்றது. அதுகண்ட பிடியானை, “இது கேட்கத் திரியேன்” என்று சொல்லி அயல் அறியத்தூற்றி நிற்கிறது; களிறு, உண்மையுணர்ந்து தன் செயலுக்கு வருந்திப் பிடியைத் தேற்றித் தான் இனி அவ்வாறு செய்வதில்லை யெனச் சூளுறவு செய்து கூடுகிறது. இந் நிகழ்ச்சியை. “மாற்றுக் களிறடைந்தாய் என்று மதவேழம் கையெடுத்து மூற்றிக் கனல் உமிழ்ந்து மதம் பொழிந்து முகஞ் சுழியத் தூற்றத் தரிக்கில்லேன் என்று சொல்லி அயலறியத் தேற்றிச் சென்றுபிடி சூளறும் சீபர்ப்பத மலையே”2 என்று இனிமை மிகப் பாடியிருப்பது காணலாம். மக்கட்கு அறிவு வழங்கல். மக்களுயிர் உலகத்தோடும் இறைவனோடும் தொடர்புறும் இயைபுடையது. உலகத்தோடு இயைந்து வாழ்வாங்கு வாழும் வகையால் இறைவன் திருவருள் உண்மையுணர்ந்து. அதனோடு இயைந்து, ஞானம் பெற்று வீடு பேறு எய்தும் என்பது சிவநெறியின் முடிபு. வாழ்வாங்கு வாழ்தற்குத் துணை, உடம்பு உலகு நுகர் பொருள் என்பனவாம். அவற்றைத் துணையாகக் கொண்டு அவை நல்கும்.பயனைக்கொண்டு ஒழியாமல் அவற்றின் இயைபால் உளதாம் சிற்றின்பத்துக்கு அடிமையாகி அவற்றையே உறுதியாகக் கருதும் மயக்கம் உயிர்கட்கு உண்டாவது இயல்பு. அவ்வாறு மயங்குவாரே பெரும்பாலோர். அவரைத் தெருட்டுவதும் திருவருள் ஞானம் பெற்றோர் கடனாதலின், அருண்ஞானச் செல்வராகிய நம்பியாரூரர் அறிவுரை பல வழங்குகின்றார். உலக வாழ்வுக்கு முதலாகும் உடம்புக்குத் தோற்றம் உண்டேல் மரணமுண்டு; இன்பமுண்டேல் துன்பமுண்டு; இதன் தோற்றத் துக்கும் ஆக்கத்துக்கும் காரணராகும் தந்தை தாயர் எள்ளளவும் சார்வாகார்; நாட் செல்லச் செல்ல இவ்வுடம்பு தேய்ந்து வீழ்ந் தொழியும்; மன்னர் சூழ வரும் பெருவாழ்வு வாழ்வோரும் சாவர்; செத்த போதில் யாரும் துணையாவதில்லை. இவ் வுடம்பகத்தே ஐம்புலன்கள் என்னும் வேட்டுவர் ஐவர் உளர்; அவர் நம்மை வஞ்சிப்பர்; அவர்கள் செய்யும் வஞ்சனையால் நாம் பிறரால் இகழப்பட்டு அல்லலுறுவோம்; ஆதலால், “கூசம் நீக்கிக் குற்ற நீக்கிச் செற்றம் மனம்நீக்கி வாசமல்கு குழலினார்கள் வஞ்சமனை வாழ்க்கை ஆசைநீக்கி அன்பு சேர்த்தி, என்பணிந்து ஏறேறும் ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே”1 என்று அறிவுறுத்துகின்றார். இறைவன் திருவருளோடு இயைந்து வாழும் வாழ்வே “இன்பத் தோடு இசைந்த வாழ்வு;”2 ஏனை உடம்பை நச்சி வாழும் உலக வாழ்வு, “பொய்த் தன்மைத்தாய மாயப் போர்வையை மெய் என்று எண்ணும் வித்தகத்தாய வாழ்வு;”3 உடம்பென்பது, “ஊன்மிசை யுதிரக்குப்பை, ஒரு பொருளிலாத மாயம்;”4 இதனை மகளிரே பெரிதும் மதிப்பர். இவ்வுடம்பின்கண் காணப்படும் தத்துவ தாத்து விகக் கூறுகளைச் சமயவாதிகள் வேறு வேறு கூறுவர். இவற்றோடு இயையும் வாழ்வு, “சுவையிலாப் பேதை வாழ்வு.”1 முன்னே மணமென்று சொல்லி மகிழ்வுறும் தாய் தந்தையரும் பிறரும், பின்னே பிணம் எனச் சுட்டெரிப்பர். இதனை யுணராதார். “தாழ்வெனும் தன்மை விட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து வாழ்வதே கருதித் தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்”2 என்று தெருட்டுகின்றார். இச் சுவையிலாப் பேதை வாழ்வைச் சுவையுடைத்து எனக் கருதுவோர் பலரும், “பாவமே புரிந்து பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு ஆவ என்று உழந்து அயர்ந்து3 வீழ்வர்.” அவர்க்கு உயிர் வாழ்க்கை யொன்றே கருத்து; அதனால் அவர்கள் அதையே நினைந்து உடல் தளர்ந்து மாநிதி இயற்றி “என்றும் வாழலாம்”4 எனப் பேசுவர். வேந்தராய் உலகாண்டு அறம்புரிந்து வீற்றிருந்த இவ்வுடம்பு தேய்ந்து இறந்து வெந்துயர் உழக்கும்;5 வேறு சிலர் சடை முடித்துத் தவம் முயன்று அவமாயின பேசுவர்; அதனால் பிறவித்துயர் நீங்குவது அரிது;6 எத்திறத்தோர்க்கும் சுற்றமும் துணையும் பிறரும் கண்டு கண்ணீர் சொரிந்து அழ, உயிர் உடம்பின் நீங்கிப் போவது நிச்சயம்.7 வேறு சிலர், தேரர் சமணர் முதலி யோருடைய வேற்றுச் சமயம் கூறும் தவம் மேற்கொண்டு அவஞ் செய்வர்; அவர், தமது தவத்தின் அவத் தன்மை யுணர்ந்து நீங்கல் வேண்டும்; தளிகளையும் சாலைகளையும் நிறுவுவது தவமென முயல்வர்; அவர்கட்கு அவை தவமாவது, தம்மை உணர்ந்து தம்மை அடிமையாகவுடைய இறைவனை உணர்ந்து செய்யுங் காலையேயாம்.8 சுருங்கச் சொல்லுமிடத்து, உறுதி நாடு வோர், இறைவன் திருக்கோயில்களையும் அடியார்களையும் வழிபாடு செய்தல் வேண்டும்;1 இவ்வழிபாட்டால், வெளிறு தீரும்; நின்ற பாவம் நீங்கும்;2 மலமெலாம் அறும்; வினைகள் வந்து சாரா.3 இங்ஙனம், மக்கட்கு நல்ல அறிவு வாழ்வு வழங்கும் நம்பி யாரூரர், புலவர் பெருமக்களை நோக்கிச் சிறப்பாகச் சில நல்லுரை களைச் செப்புகின்றார். உலகியல் நிகழ்ச்சிகளைப் புலன்களால் வாங்கித் தம் புலமை கருவியாக இனிய சொற்களால் தொடுத்து யாப்பமைதியும் இன்னிசையும் பொருந்திய பாட்டுக்களில் உருப்படுத்திப் படிப்போரும் படிக்கக் கேட்போருமாகிய அறிஞர் மனக்கண்ணில் உயிரோவியம் செய்து காட்டும் உரமுடையோர் புலவர் என உரைக்கப்படுவர். ஆயினும், அவர்கள் உலகில் வாழ்வது வேண்டிச் செல்வர்களை அடைந்து இல்லது புனைந்து பாடி அவர்களை மகிழ்வித்து, அதனால் அவர் நல்கும் பொருளைப் பெறும் செயல் இடைக்காலத்தே பெருகிற்று. புகழ்விருப்பால், செல்வர்கள் புலவர்களின் பின்னின்றது போக, பொருள் விருப்பால் புலவர்கள் செல்வர்களைப் பின்னின்று வாழும் நிலைமை நம்பியா ரூரர்க்குப் பெருவருத்தம் விளைத்தது. செல்வரது செல்வமும் புலவரது புலமையும் இறைவன் உடைமையாதலின், புலவராயினார், இறைவனையே பாடுதல் வேண்டும்; அதனால் அவர்கட்கு உலகியல் வாழ்வும் பேரின்ப வீடும் எய்துவது எளிது என வற்புறுத் தினார்.புலவர்களை அருளொடு நோக்கி, “புலவீர்காள், பொய்ம்மையாளர், கொடுக்கிலார், நலமிலாதார், குலமிலாதார், நோயர், நொய்யர், கல்லாதவர், வஞ்சர், சழக்கர், துட்டர் முதலிய பலரையும் பாடுதல் ஒழிமின். இவர்களை எத்துணை நல்லர் என்று இல்லது புனைந்து இறப்பப் புகழ்ந்து பாடினும் கொடார்; ஆகவே, இச்செயலை விட்டு, இறைவனைப் பாடுமின்; இம்மையில் இன்ப வாழ்வும் அம்மையில் சிவலோக வாழ்வும் உண்டாம்; இதற்கு “யாதும் ஐயுறவு இல்லை”4 என வற்புறுத்துகின்றார். பழைய நூலாட்சியும் பழமொழியும் முன்னோர் மொழி பொருளேயன்றி அவருடைய மொழி களையும் மேற்கொண்டாளுவது சான்றோர் இயல்பன்றோ. சங்க நூல்கள், கொடை வள்ளல்களுட் சிறந்தோனாக வேள்பாரியைக் கூறுகின்றன. அச்செய்தியை நம்பியாரூரர் மேற்கொண்டு, “கொடுக் கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலர்”1 என்று எடுத்தோதுகின்றார். புலவரைப் பேணும் தக்கோரைப், “புலவர் புக்கில்”2 என்று பண்டை நாளைச் சங்கச் சான்றோர் பாராட்டினர். அக்கருத்தையும் நம்பியாரூரர், “நொய்யமாந்தரை விழுமிய தாயன் றோ புலவோர்க்கெலாம் என்று சாற்றினும் கொடுப்பாரில்லை”3 எனக் கூறுகின்றார். நீர்ப்பறவையினத்துள் ஒன்றான நாரையைச் சங்க நூல்கள் “தினைத்தாளன்ன சிறுபசுங்கால்”4 என்றனவாக, நம்பியாரூரர் அச்சொற்றொடரையே மேற்கொண்டு “தினைத்தாளன்ன செங்கால் நாரை சேரும் திருவாரூர்”5 எனத் தம்முடைய திருப்பாட்டில் அமைத்துப்பாடுகின்றார். இனி, அசிரியர் தொல்காப்பியனார், “விருந்தே தானே புதுவது கிளந்த யாப்பின் மேற்றே”6 என்றாராக, நம்பியாரூரர், தாம் பாடுவன அவ்விருந்து என்னும் யாப்பின் பாற்படும் என்பது தோன்ற, “விருந்தாய சொன் மாலை கொண்டேத்தி”7 என உரைத் தருளுகின்றார். திருவேரகத்தில், அந்தணர்கள் நீராடி “விரையுறு நறுமலரேந்தி”8 வழிபாடு செய்வரென நக்கீரனார் திருமுருகாற்றுப் படையில் எடுத்தோதினார்; அக்கருத்தே விளங்க, நம்பியாரூரர், திருக்கருப்பறிலூர்த் திருப்பதி கத்தில், “முட்டாமே நாடோறும் நீர் மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதும், கட்டார்ந்த இண்டை கொண்டு அடிசேர்த்தும் அந்தணர் தம் கருப்பறியலூர்”9 என்று பாடியுள்ளார். இனி, திருவள்ளுவனார் வழங்கிய திருக்குறளை யெடுத்தாளாத செந்தமிழ்ச் சான்றோர் இலர் என்பது உலகறிந்த உண்மை. அதற்கேற்ப நம்பியாரூரர் திருக்குறள்கள் பலவற்றைத் தம்முடைய திருப்பாட்டுக்களில் வைத்து அமைத்து அழகு செய்துள்ளார். திருவள்ளுவனார் இறைவனைப் “பொறிவாயில் ஐந்தவித்தான்”1 என்று குறித்தாராக, நம்பியாரூரர் “பொறிவாயிலிவ் வைந்தனையும் அவியப் பொருது உன் அடியேற்கும் சூழல் சொல்லே”2 என்றார். “அகரமுதல வெழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு”3 என்ற திருக்குறள், “அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் அடியேன் உய்யப் போவதோர் சூழல் சொல்லே”4 என்றும், “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”5 என்ற திருக்குறள், “ஓடுபுனற்கரையாம் இளமை உறங்கி விழித்தா லொக்கும் இப்பிறவி”6 என்றும் வரும் திருப்பாட்டுக்களில் அமைந்துள்ளன. இனி, அக்காலத்து வழங்கிய பழமொழிகள் பல நம்பியா ரூரருடைய பாட்டுக்களில் காணப்படுகின்றன. பேயோடாயினும் கூடிய வழி அதனிற் பிரிவதென்பது துன்பந்தருவதாம் என்று பழை யோர் கண்டனர். அவரது பழமொழி, முன்றுறையரையனார் செய்த பழமொழி நானூறென்னும் நூலில், “இலங்கருவி, தாஅய் இழியும் மலைநாட, இன்னாதே, பேஎயோடானும் பிரிவு”7 என்று காட்டப் படுகிறது. இதனை நம்பியாரூரர், “பேயோடேனும் பிரிவொன்று இன்னாது என்பர் பிறரெல்லாம்”8 என்று கூறுகின்றனர். எய்ப்பினில் வைப்பென்று ஒரு பழமொழி உண்டென முன்றுறை யரையனார் “தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ, எய்ப்பினில் வைப்பென்பது”9 என்று கூறினார். நம்பியாரூரர் அப்பழ மொழியை, “நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறுகுறையறிந்து அருள்புரிவானை”1 எனத் தாம் மேற்கொண்டு கூறுகின்றார். இவ்வாறே, “பஞ்சியிடப்புட்டில் கீறுமோ”2 வெட்டெனப்பேசன்மின்”3 “பொற்குன்றம் சேர்ந்த காக்கையும் பொன்னாம்,”4 “இரும்புண்ட நீர் போல்”5 கணக்கு வழக்கு 6 என்பன முதலாகப் பல பழமொழிகள் இவருடைய திருப்பாட்டுக்களில் காணப்படுகின்றன. சொல் நயம் இங்ஙனம் பண்டைச் சான்றோர் வழங்கிய சொற்கள், சொற் றொடர்கள், கருத்துக்கள், பழமொழிகள் முதலியவற்றைத் தாம் பாடியருளும் திருப்பாட்டுக்களின் இடையிடையே தொடுத்து இனிமை அமையப்பாடும் நலமிக்க நம்பியாரூரர், பாடும் பாட்டுக்கு ஏற்பச் சில அரிய சொற்கைளையும் சொற்றொடர்களையும் புதியன வாக அமைத்துக் கொள்கின்றார். மனத் திட்பமில்லாத மக்களை ஓட்டை நெஞ்சினர் எனப் பிறரெல்லாம் கூறுவர். நம்பியாரூரர், “முன்பு சொன்ன மோழைமையான் முட்டைமனத்தீரே”7 என வழங்குகின்றார். சிறு மட்கலத்தைச் சிட்டி யென்றும், சிட்டென்றும், அதனால் அக்கலம் போலும் மண்டையோட்டைச் சிட்டு என்றும் அதன் மேலுள்ள குடுமியைச் சிட்டுக்குடுமி யென்றும் மக்கள் வழங்குவர். இறைவன் உணவிரந்து உண்ட மண்டைக்கலத்தையும் சிட்டெனக் குறித்து நம்பியாரூரர், பலியிரந்தூண் சிட்டு உகந்தார்க்கு இடமாவது நம் திருநின்றியூரே”8 என்றனர். திவ்விய என்னும் வடசொல்லைத் திப்பியமெனத் தமிழ்ப்படுத்து வழங்குவது பண்டைச் சான்றோர்மரபு. அதனையே தாமும் பின்பற்றி “தேசுடைய இலங்கையர்கோன் வரையொக்க அடர்த்துத் திப்பிய கீதம்பாடத் தேரொடு வாள் கொடுத்தீர்”9 என்று பாடுகின்றார். சொற்களைக் குறைக்கும்வழிக் குறைத்துச் செய்யுள் செய்யும் செந்தமிழ் நடை சிறக்க, பாசம் என்னும் சொல்லிலுள்ள அம்முக் குறைத்துப் பாசமற்றவர் என வரற்கரிய சொற்றொடரொன்றைப் பாசற்றவர்1 எனவும், சொல்லுதல் என்னும் பொருளதாகிய பனுவல் என்னும் பெயர்ச்சொல்லை வினைப்படுத்துப் “பனுவுமா பனுவி”2 எனவும் வழங்குகின்றார். இவ்வாறே, “சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன்”3 “அருண்டு என்மேல் வினைக்கு அஞ்சி வந்தடைந் தேன்”4 “நொண்டிக் கொண்டேயும் கிலாயப்பன்”5 “திதையும் தாதும் தேனும் ஞிமிறும், துதையும்”6 என்பன முதலாக வருவன ஆராய்ச்சியாளர் காணத் தகுவனவாம். இங்ஙனம் சொற்களைப் புதுப்புது வகையால் ஆக்கும் நாவலர் பெருமானான நம்பியாரூரர், கண்ணபிரானை “யானையின் கொம் பினைப் பீழ்ந்த கள்ளப்பிள்ளை”7 என்றும், நஞ்சுண்ட இறைவனை, “நஞ்சினை யுண்டிட்ட பேதைப் பெருமான்”8 என்றும் கூறுவர். இங்கே இறைவன் நஞ்சுண்டது அறிவுடையார் செயலன்று; பேதையார் செயல் என்றும், ஆயினும் அதனை அவர் பிறர் வாழச் செய்ததனால் பெருந்தகைமையாயிற்று என்றும் புலப்பட “பேதைப் பெருமான்” என்னும் சொல்வித்தகம் அவர் கூற்றில் அமைந்திருப்பது காணத்தக்கது. தொடக்கத்தில் நம்பியாரூரர் திருவாரூர்க்கு வருகையில், அத் திருவாரூர் தமது ஊரென்றும், அதனை இறைவன் தமக்கு இட மாக்கிக்கொண்டமையின், அங்குவரும் எம்மையும் ஏற்றுக் கொள் வாரோ என்பாராய், “எந்தை யிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்”9 என்று கூறுகின்றார். பரவையார் பொருட்டுக் குண்டையூரில் பெற்ற நெல்லை அட்டித்தரல் வேண்டும் என்ற குறிப்புடன் திருக்கோளிலிப் பெரு மானை வேண்டுகின்றவர், மகளிரொடு கூடி வாழ்பவர்க்குப் பொரு ளின் இன்றியமையாமை நன்கு புலப்படும் என்பது பட, “பாதியோர் பெண்ணை வைத்தாய் படரும் சடைக்கங்கை வைத்தாய், மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதியன்றே ”1 என்றும், “குரவமருங் குழலாள் உமைநங்கை யோர் பங்குடையாய், பரவை பசிவருத்தம் அது நீயும் அறிதியன்றே”2 என்றும் குறித்துரைக்கின்றார். திருக்கோடிக் குழகர், கடற்கரையில் கடிதாய்க் குளிர்காற்று வீச, ஆந்தையும் கூகையும் குழற, கொடியரான வேடர்கள் வாழுமிடத்தே கோயில் கொண்டிருப்பது கண்டு, இங்கே தனியே யிருப்பது கூடாது என்றும். “ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அதுதானோ அற்றப்பட்ட ஆரூர் அது என்று அகன்றாயோ முற்றாமதி சூடிய கோடிக் குழகா எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே”3 என்றும் பரிந்து பாடுகின்றார். திருநாகைக் காரோணத்தில் இறைவன் திருமுன்னர் நின்று முத்தாரம், மணிவயிரக் கோவை முதலிய நலங்களெல்லாம் வேண்டுமெனக் கேட்பவர், ஒருகால் இறைவன் இவை என்பால் இல்லை யென்று சொல்லி விட்டால் என் செய்வது என நினைத்தவர்போல், மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழியடியேன் உமக்கு ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீரல்லீர் அணியாரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில் தோற்றமிக முக்கூறில் ஒருகூறு வேண்டும் தாழீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க லொட்டேன்”4 என்றும், “மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே யாட்சி மலையரையன் பொற்பாவை சிறுவனையும் தேறேன் எண்ணிலியுண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர் திண்ணென என்உடல் விருத்தி தாரீரேயாகின் திருமேனிவருந்தவே வளைக்கின்றேன் நாளைக் கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே”1 என்றும் இயம்புகின்றார். சேரமான் பெருமாள் தந்த பொருளைப் பெற்றுவரும் நம்பி யாரூரரைத் திருமுருகன் பூண்டிக்கு அண்மையில் வேடுவர் ஆறலைத்து அப்பொருளைக் கவர்ந்தேகினாராக, ஆரூரனார், திருமுருகன் பூண்டி இறைவன் திருமுன் வணங்கி நின்று, “கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்கு மிடம்” இவ்விடம்; முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய், எல்லைக் காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்க இருந்தீர் எம்பிரானிரே”2 என்று கூறுவர். திருவோணகாந்தன் தளியில் இறைவனை வணங்கி, “உமக்கு யான் ஆட்பட்டும் பயன் பெரிது பெற்றிலேன்; இனி யாங்கள் உமக்கு ஆட்படோம்” என்பாராய். “திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரளவீசும் கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி. அங்கை வேலான் குமரன்பிள்ளை தேவியார் கொற்றட்டியாளார் உங்களுக்கு ஆட்செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளியுளீரே”3 என்றும், “வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவது என்னே, ஆரம்பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உம்மதன்று தாரமாகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள் உந்தம் ஊரும்காடு உடையும் தோலே ஓணகாந்தன் தளியுளீரே”1 என்றும், பிறிதோரிடத்திலும் இவ்வாறே, “பேருமோராயிரம் பேருடையார் பெண்ணோடு ஆணுமல்லர் ஊரும தொற்றியூர் மற்றையூர் பெற்றவா நாமறியோம் காருங்கருங்கடல் நஞ்சமுதுண்டு கண்டங் கறுத்தார்க்கு ஆரம் பாம்பாவது அறிந்தோமேல் நாம் இவர்க் காட்படோமே”2 என்றும் இசைக்கின்றார். இனி, நம்பியாரூரர் கண்ணிழந்து வருந்திய காலத்தில் இறை வனைப் பழிப்பதுபோலப் பாடியன மிக்க சொன்னயம் அமைந்தன வாகும். “ஈன்று கொண்டதோர் சுற்றமொன்று அன்றால் யாவராகில் என் அன்புடையார்கள், தோன்ற நின்று அருள் செய்தளித்திட்டால் சொல்லுவாரையல்லாதன சொல்லாய், மூன்று கண்ணுடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்கு வழக்காகில், ஊன்றுகோல் எனக்கு ஆவதொன்று அருளாய் ஒற்றியூரெனும் ஊருறைவானே”3 “மகத்திற் புக்கதோர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா, அகத்திற் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா எனத்தரியேன், முகத்தில் கண்ணிழந்து எங்ஙனம் வாழ்வேண் முக்கணா முறையோ மறையோதீ, உகைக்கும் தண்கடல் ஓதம் வந்த உலவும் ஒற்றியூரெனும் ஊருறைவானே”1 என்று பாடுகின்றார். பின்பு காஞ்சிமாநகரில் ஒருகண்பெற்றுத் திருவாரூர்க்கு வந்து இறைவனை வணங்குபவர், மற்றைக் கண்ணையும் தரல்வேண்டுமெனப் பரவுகின்றார். அக்காலையில் சினந்து இறைவனைப் பழிப்பார்போல, “விற்றுக்கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பியாட்பட்டேன், குற்ற மொன்றும் செய்ததில்லை கொத்தை யாக்கினீர், எற்றுக்கடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிபட்டீர், மற்றைக் கண் தான் தாராதொழிந் தால் வாழ்ந்து போதீரே”2 என்று பல பாட்டுக்களால் பாடுகின்றார். இங்ஙனம் இறைவன்பால் எழுந்து நிலவிய பேரன்பால் பழிப்பது போலவும் பரவுவது போலவும் பாட்டுக்கள் பாடி ஒழுகிய நம்பியாரூரர், இறைவன் மகளிர் வாழும் மனைதோறும் சென்று பலியிரந்த வரலாற்றை நயந்தெடுத்துப் பலியிடும் மங்கையர் கூற்றில் தம்மை வைத்துத் தமது பேரன்பைப் புலப்படுத்துகின்றார். பலியிடுவா ளொருத்தி, பலியிரக்கும் இறைவன்பால் கருத்திழந்து, “எம்பால் பலிபெற வேண்டின் நீர் தனித்து வரவேண்டும் யன்றிப் பெண் ணொருத்தியொடு வருதலால் யாம் பலியிடமாட்டோம், சென்மின்” என்பாளாய், “நீறு நுந்திருமேனிநித்திலம் நீனெடுங் கண்ணினாளொடும், கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நடமினோ”3 என்று கூறுகின்றாள். இவ்வாறு பலியிடப் போந்த நங்கை யொருத்தி இறைவன்பால் கருத்திழந்து கூறும் கூற்றில் வைத்து, “என்னது எழிலும் நிறையும் கவர்வான், புன்னைமலரும் பிறவில் திகழும், தன்னை முன்னம் நினைக்கத் தருவான், உன்னப்படுவான் ஒற்றியூரே”4 என்று பரிகின்றார்; இவ்வாறே வேறொருத்தி, கிள்ளை பூவை முதலிய வற்றை இறைவன் பால் தூதுவிடும் கருத்தை மேற் கொண்டு, “பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம்பூவைகாள், அறக்கண் என்னத்தகும் அடிகள் ஆரூரரை, மறக்க கில்லாமையும் வளைகள் நில்லாமையும், உறக்கமில்லாமையும் உணர்த்தவல்லீர்களே”5 என்று வருந்துகின்றாள். நம்பியாரூரரும் கல்வெட்டுகளும் நம்பியாரூரருக்குரிய பெயர்களுள் ஆலால சுந்தரர், நாவலூரு டையார், ஆருரர், ஆளுடைய நம்பி வன்றொண்டர், தம்பிரான் தோழர், திருத்தொண்டத்தொகையார், சுந்தரப் பெருமாள், சேரமான் தோழர் என்பன முதலியபெயர்கள் கல்வெட்டுக்களில் வழங்குகின்றன. நம்பியாரூரர் மண்ணுலகில் வந்து தோன்றுதற்கு முன் திருக்கயிலாயத்தில் ஆலால சுந்தரராக விளங்கினார் என்ற வரலாறுபற்றி, ஆலால சுந்தரர் எனச் சிறப்பித்து உரைக்கப்படுவ துண்டு. திருத் தொண்டர் வரலாறுரைத்த சேக்கிழார் “ஆலால சுந்தரர்”1 என்று சிறப்பித்து உரைக்கின்றார். திருநெல்வேலி மாவட்டத்துத் திருவாலீஸ் வரமென்னும் கோயிலில் ஆட்கொண்ட நாயக மாணிக்கம் என்னும் தேவரடியாள் ஒருத்தி நம்பியாரூரரை ஆலால சுந்தர நாயனார் என்ற பெயரால் எழுந்தருள வைத்துப் பரவைநாச்சியார் திருஉருவத்தையும் உடன் எழுந்தருள்வித்தாள் என்று அங்குள்ள கல்வெட்டொன்று2 கூறுகிறது. திருவரசிலியிலுள்ள இறைவனுக்கும் “உடையார் ஆலால சுந்தர நாயனார்”3 என்றே பெயர் என அவ்வூர்க் கல்வெட்டால் அறிகின்றோம். ஆலால சுந்தரர் என்ற பெயரால் நந்தவனங்கள் திருக்காளத்தி,4 திருப்பாலை வனம்,5 முதலிய இடங்களிலும், மடங்கள் பல, சோழவந்தானுக்கு அண்மையிலுள்ள தென்கரை,6 தஞ்சை மன்னார் குடிக்கு அண்மை யிலுள்ள பாமணி,7 அறையணி நல்லூர்8 திருநெல்வேலி9 முதலிய இடங்களிலும், ஆலால சுந்தரன் திருக்குகை யெனத் திருமணஞ்சேரி10 யிலும் இருந்திருக்கின்றன. இப்பெயரையே சிறப்புடைய மக்கள் பலர், இராசேந்திர சோழ கேரள நிஷத ராஜனான ஆலால சுந்தரப் பெருமாளான தப்பிலா வாசகன்11 என்றும், குன்றத்தூர் திருமடவளாகத்திலிருக்கும் உடையாரான ஆலால சுந்தரர்1 என்றும், உடையான் ஆடுவானான ஆலால சுந்தரப் பெருமாள்2 என்றும் கொண்டிருந்தனர். மகளிருள்ளும் “மாணிக்கத் தின் மகள் மடப் பிள்ளையான ஆலால சுந்தரமாணிக்கம்”3 என்று பெயர் தாங்கியுள்ளனர். இனி, நம்பியாரூரர் திருநாவலூரினர் என்பது பற்றி, தன்னை “நாவலூரன்”4 என்று அவரே கூறுவதுண்டு. இதனால் இவரைச் சான்றோர் நாவலூருடையார் என்று பாராட்டினர்.5 திருச்சிராப் பள்ளி வட்டத்தைச் சேர்ந்த சிவாலயத்திற் காணப்படும் கல்வெட்டுக்கள், நாவலூருடையான் காளிதாசன் திருச்சிற்றம்பல முடையான் குலோத்துங்க சோழ உறந்தையரையன்6 என்றும் நாவலூருடையான் திருச்சிற்றம்பலமுடையான் கங்கைகொண்ட பிள்ளை7 என்றும் வணிகர் இருவரைக் கூறுகின்றன; வாட்போக்கி எனப்படும் இரத்தின கிரியிலுள்ள கல்வெட்டு, சிவபாத சேகரபுரத்து நாவலூருடையான்8 என்ற பெயரினன் ஒருவனைக் குறிக்கின்றது. இவற்றால் நாவலூருடையான் என்றும் மக்கள் தமக்குப் பெயர்பூண்டு விளங்கினர் என்பது தெளியப்படுகிறது. நம் நாவலூருடையாரைப் பெற்றோர் நம்பியாரூரர் என்ற திருப்பெயரிட்டுச் சிறப்பித்தனர் என அவர் வரலாறு கூறுகிறது; “தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பியாரூரர் என்றே நாமமும் சாத்தி”9 எனச் சேக்கிழார் கூறுவதும், அவரே ஒரு திருப்பதிகத்தில் தன்னை “நாவல் ஆரூரன் நம்பி”10 என்று குறிப்பதும் ஈண்டு நினையத் தக்கன. இத் திருப்பெயரையே எடுத்தாளும் கல்வெட்டுக்கள் மிகப் பல11 ஆரூரன் என்பது திருவாரூரில் உள்ள இறைவனுக்குத் திருப் பெயராகும். அதுவே தனக்கும் பெயரயிற்றென அவர், “அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன் ஆரூரன்”1 என்று எடுத்துக் கூறுதலால், அதனையும் கல்வெட்டாளர்2 மேற்கொண்டனர். மக்களில் சிலர் நம்பியாரூரன் என்ற பெயர் தாங்கியிருக்கின்றனர். திருவெண்ணெய் நல்லூரிலே கிணையன் நல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்குப் பாலாடியருளுமாறு கிளியூர்மலைய மான் ஒருவன் விட்ட பசுக்களைத் தான் ஓம்புவதாக உடன்பட்ட கல்வெட்டொன்று3 உளது. இத்திரு வெண்ணெய்நல்லூரில் நம்பியா ரூரர்க்குத் திருக்கோயிலும் நாள் வழிபாடும் இருந்தன என்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்கள்4 எடுத்தோதுகின்றன. நம்பியாரூரரை இறைவன் தடுத்து ஆட்கொண்ட போது அவர் வன்மைகள் பேசினர் என்றும், அதனால் அவருக்கு வன்றொண்டர் என்று ஒரு சிறப்புப்பெயர் உண்டாயிற்று என்றும் அவர் வரலாறு கூறுகிறது; அவரும் அதனை வற்புறுத்துவதுபோல, “தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்டநாள் சவைமுன், வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்”5 என்று உரைத்தருளுகின்றார். இவ்வரலாற்றில் மிக்க ஈடுபாடு கொண்ட பிற்காலச் சான்றோர் மக்கட்கும் இவ் வன்றொண்டன் என்ற பெயரையிட்டுச் சிறப்பித்தனர். திருத்துறைப்பூண்டி6யிலுள்ள இறைவனுக்கு மூன்றாம் இராசராசன் காலத்தில் அவ்வூரில் வாழ்ந்த வன்றொண்ட முதலியார் என்ற சான்றோர் நிலம் விட்ட செய்தியை அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுவதுகாண்க. பிறிதோரிடத்தில் நம்பியாரூரர் தம்மை வன்றொண்டன் என்று குறிப்பதோடு7 நில்லாமல் “அணுக்க வன்றொண்டன்”8 என்றும் எடுத்துரைத்தார். அதனைக் கண்டோரும், மக்களை அப்பெயரிட்டு வழங்கினர். வீரனாமூர் என்னுமிடத்தில் கோயில் கொண் டிருக்கும் இறைவனுக்கு அணுக்க வன்றொண்டன் என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் நிலம் விட்டனர் என்று கல்வெட்டுக்9 கூறுகிறது. இனி, இவ்வாறு இறைவனுக்கு ஆளாகப் பெறும் சிறப்பினால் இவரைச் சான்றோர் ஆளுடையநம்பியென வழங்கிப் பரவியதுண்டு. அரசியற் குறிப்புக்களாகிய கல்வெட்டுக்களும் இப்பெயரை மகிழ்ந்தேற்று ஆளுடைய நம்பியென்று1 வழங்குகின்றன. மேலும், அக்காலத்தே நம்பியாரூரது வரலாறு கூறும் புராணம், “ஆளுடைய நம்பி ஸ்ரீ புராணம்” எனவும் வழங்கியிருக்கிறது. திருவொற்றியூரில் பங்குனி உத்திர விழாவில் இறைவனை மகிழ மரத்தின் கீழ் எழுந்தருள்வித்து நாடாளும் வேந்தரும், கற்று வல்ல சான்றோர்களும் கூடியிருந்து அந்த ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணத்தை ஓதி விழாக் கொண்டாடுவர் என்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்கள்2 உரைக்கின்றன. திருவாரூர்,3 திருவிடை மருதூர்4 முதலிய பல இடங்களிலுள்ள கல்வெட்டுக்கள் நம்பி யாரூரரை ஆளுடையநம்பி யெனவே சிறப்பித்துரைக்கின்றன. திருவெண்ணெய் நல்லூரில் உள்ள இறைவன் நம்பியாரூரரைத் தடுத்தாட்கொண்ட சிறப்பு, நாட்டில் நன்கு பரவியதும் இறைவனைத் தடுத்தாட்கொண்ட நாயனார் என்று சான்றோர் வழங்கலுற்றனர். முதல் இராசராசன், அவன் மகனான முதல் இராசேந்திரன் முதலியோர் காலம் வரை வெண்ணெய் நல்லூர் இறைவனுக்குத் திருவருட் டுறையுடைய மகாதேவர்5 என்ற பெயரே வழங்கிவந்தது. அவர்கட்குப் பின்வந்த வேந்தர்காலத்தில் தடுத்தாட்கொண்ட தேவர் என்றும் ஆட்கொண்ட தேவர்6 என்றும் பெயர்கள் வழங்கலாயின. இவ்விறைவன் பால் அன்பு பூண்டோர் தம் மக்கட்கும் இப் பெயரையிட்டுப் பேணினர். நெற்குன்றம் என்னும் ஊரில் வணிக னொருவனுக்குத் தடுத்தாட்கொண்டான்7 என்ற பெயரும், மாறங்கியூரில் தேவேந்திர வல்லப பிரமாதிராயன் மடத்தைக் கண்காணித்து வந்த ஒருவற்குத் தழுவக் குழைந்தான் தடுத்தாட் கொண்டான்8 என்ற பெயரும் வழங்கின. நம்பியாரூரர், தாம் ஆளென உணர்ந்து அன்புமிக்கு இறைவனைப் பாடத்தொடங்கிய போது இறைவன் அவரைப் பித்தன் என்று பாடுமாறு பணித்தருளின வரலாற்றை நினைவுகூரு முகத்தால் பிற்காலச் சான்றோர் இறைவனைப் “பிச்சனென்று பாடச்சொன்னான்”1 என்ற ஒரு சிறப்புப் பெயரையும் கூறிப்பரவினர் எனக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. நம்பியாரூரர் திருவாரூர்க்குச் செல்லுங்கால் திருத்துறையூரை அடைந்து இறைவனை வழிபட்டுத் தமக்குத் தவநெறியருளுமாறு வேண்டினார் என்பது வரலாறு; “துறையூர் அத்தா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே”2 என நம்பியாரூரரே தமது திருப்பதிகத்தில் குறித்தருளுகின்றார். அது குறித்து அவரைப் பிற்காலச் சான்றோர் “தவநெறிச் சுந்தரர்”3 எனச் சிறப்பித்துப் பேணினர். நம்பியாரூரர் திருவாரூர் இறைவனைத் தமக்குத் தோழனாகக் கொண்டு திருப்பதிகம் பாடிப் பரவிவரும் நாளில் அவருக்குத் தம்பிரான் தோழர் என்ற சிறப்பு எய்திற்றென அவரது வரலாறு கூறுகிறது; சேக்கிழாரும், அச்சிறப்பை, “அன்று முதல் அடியார் களெல்லாம் தம்பிரான் தேழர் என்றே அறைந்தார்”4 என்றும், “இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேடும் ஒருவர் தாம் எதிர் நின்று ஆண்ட சைவ முதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார் நம்பி என்றார்”5 என்று விதந்தோதுகின்றார். நம்பியாரூரரும் இத்தொடர்க் கருத்தை ஒரு திருப்பதிகத்தில், “தன்னைத் தோழமையருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை”6 என்று குறித்தருளுகின்றார். இவ்வாறு வரலாற்றாலும் திருப்பதிகத்தாலும் வற்புறுத்தப் பெறுதலால் இப்பெயர் நலத்தைப் பிற்காலத்து அறிஞர்கள் நன்குணர்ந்து வியந்து மக்கட்கிட்டு மாண்புற்றனர். ஏழிசை மோகன் மூவேந்தரை யனான தம்பிரான் தோழன்7 என்றும், கலியன் சேந்தனான தம்பிரான் தோழன்1 என்றும் செல்வர் பலர் இப்பெயர் தாங்கியிருந்தமை கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது. திருமுட்டத்தில் திருப்பதிகம் பாடும் திருப்பணியை மேற்கொண்டு, தம்பிரான் தோழனான மானக்கஞ்சாறன் என்ற ஒருவர் வாழ்ந்திருந்தாரென அவ்வூர்க் கல்வெட்டொன்று2 கூறுகிறது. பின்பு கழறிற்றறி வாரான சேரமான் பெருமாளுடன் நம்பியாரூரர் நட்புக்கொண்டு விளங்கிய சிறப்புக்குறித்து, சேரமான் தோழர் என்று அறிஞர்களால் பாராட்டப் பெற்றார். இதனைச் சேக்கிழார், “சேரர் பெருமானார் தாமும் வன்றொண்டரும் கலந்த, பான்மை நண்பால் சேரமான் தோழர் என்று பார்பரவும், மேன்மை நாமம் முனைப்பாடி வேந்தர்க்காகி விளங்கியது’3 என்று குறிக்கின்றார். இப்பெயர் நலத்தைப் பாராட்டி மக்கட்கிட்டு மேன்மை எய்துவது பிற்கால மக்களிடையே பெருவழக்காய் நிலவிற்று என்பதைக் கல்வெட்டுக்கள்4 எடுத்துரைக்கின்றன. நம்பியாரூரர்க்கு இங்கே கூறிய சிறப்புப் பெயர்களோடு சுந்தரர் என்ற பெயரும் உண்டு; இஃது இடைக்காலத்தே சுந்தர நாயனார்5 என்றும், சுந்தர நாயகனார் என்றும் வழங்கிற்று; பின்பு சுந்தரமூர்த்தி நாயனார் என்ற பெயர் தோன்றிற்று; அஃது இன்றுகாறும் வழங்கி வருகிறது. நம்பியாரூரருடைய தந்தையார் சடையனார் என்றும், தாயார் இசை ஞானியார் என்றும் அவர் வரலாறு கூறுகிறது; நம்பியாரூரர் தாமே தம் தாய் தந்தையரை, “நண்புடைய நன்சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர் கோன் ஆரூரன்”6 என்று குறித்தருளுவர். பண்டை நாளில் சடையன் என்னும் பெயர் மக்களிடையே பயில வழங்கிற்று. இசைஞானியார் திருவாரூர்க்கு அண்மையிலுள்ள கமலாபுரத்தில் வாழ்ந்த ஞான சிவாசாரியர்க்கு மகள் என்றும், அவர் கௌதம கோத்திரத்தவ ரென்றும் திருவாரூர்க் கல்வெட்டொன்று1 கூறுகிறது. நம்பியாரூரர் திருவாரூரில் மணந்து கொண்ட பரவை யாரைக் கல்வெட்டுகள் நங்கை பரவையார்2 என்றும், பரவை நாச்சியார் என்றும் குறிக்கின்றன. இனி, நம்பியாரூரர் பாடிய திருப்பதிகங்களுள் திருத்தொண்டத் தொகை யென்பது மிகச் சிறந்ததொன்று; அஃது இல்லையாயின், சிவநெறிக்கண் நின்று சைவ சமயத்தின் மாண்பைத் தம் வாழ்வால் விளக்கஞ் செய்து காட்டிய நாயன்மார் பலருடைய வரலாறுகள் மறைந்தே போயிருக்கும்; சைவ சமயம் இன்றிருக்கும் நிலையையும் இழந்து மடிந்து போயிருக்கும். இதனை நன்கறிந்தே திருத்தொண்டர் வரலாற்றை விரித்துரைத்தசேக்கிழார், “ஈசன் அடியார் பெருமையினை எல்லாவுயிரும் தொழ எடுத்துத், தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன்”3 என்றும், “மாதவம் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப், போதுவான்”4 என்றும் நம்பியாரூரை மிகவும் நயந்து பாராட்டிக் கூறுகின்றார். இச்சிறப்பை இடைக்காலச் சான்றோர் தெளிய உணர்ந்து நம்பியாரூரரைத் திருத்தொண்டத்தொகையான் என்றும் திருத்தொண்டத் தொகையார் என்றும் சிறப்பித்துப் பாராட்டிப் பரவினர். அதனால் நம்பியாரூரர் பிறந்த திருநாவலூரில் உள்ள சிவன் கோயிலுக்கே திருத்தொண்டீச்சுரம்5 என்று பெயரிட்டனர்; தில்லைப்பதியில் சிவகங்கையின் வடகரையில் நம்பியாரூரர் திருப்பெயரால் நிறுவப் பெற்ற கோயிலைத் திருத்தொண்டத் தொகையீச்சுரம்6 என வழங்கினர். திருவொற்றியூர்க் கோயிலில் திருத்தொண்டத் தொகையை ஓதுதற்கென்றே நிவந்தங்கள்7 விடப்பட்டன. இத்திருத்தொண்டத் தொகையின் பெயரால் ஏற்பட்ட ஊர்களும் உண்டு; அவை திருத்தொண்டத் தொகை மங்கலம்8 எனப்பட்டன. திருப்புத்தூரில் திருத்தொண்டத் தொகையான் திருமடம்1 என்றொரு மடமும், திருவிடைவாயிலில் திருத்தொண்டத் தொகையான் திருக்குகை2 எனக் குகையும் பிறவும் நாட்டில் பலவிடங்களிலும் ஏற்படுத்தினர். இனி, நம்பியாரூரர் பாடியருளிய திருப்பதிகங்களில் காணப்படும் இனிய சொற்றொடர்களை இடைக்கால நன்மக்கள் எடுத்து உயரிய நெறியில் போற்றியிருக்கின்றனர். வெஞ்சாமக் கூடலில் இருக்கும் இறைவனை நம்பியாரூரர், “விகிர்தா அடியேனையும் வேண்டுதியே’3 என்றும், தேவியாரை, “பண்ணேர் மொழியாளையோர் பங்கு டையாய்4” என்றும் பாடினர்; அவ்வூர்க் கல்வெட்டுக்கள் இறைவனை விகிர்தேச்சுரர்5 என்றும், அம்மையைப் பண்ணேர் மொழியா6 ளென்றும் குறிக்கின்றன. திருத்துருத்தி யிலுள்ள இறைவனை, “கரிவிரி யகன்கரை யுறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவாறறிவார் துருத்தியார்”7 என்று நம்பியாரூரர் பாடினாராகக் கல்வெட்டுக்களும் திருத்துருத்தியுடைய இறைவனை, சொன்னவாறறிவார்8 என்று கூறுகின்றன. திருமழ பாடியில் ஒரு பகுதிக்குப் பொன்னார்மேனி வளாகம் என்று அவ்வூர்க் கல்வெட்டொன்று9 கூறுகிறது; இது நம்பியாரூரர் திருமழபாடி இறைவனைப் பாடிய திருப்பதிகத்தின் தலைப்பாட்டிற் காணப்படும் தொடர். திருவன்பார்த்தான் பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை, “விடையின் மேல் வருவானை”10 என எடுத்து நம்பியாரூரர் பாடினர்; அத் தொடரையே செல்வ ரொருவர் தனக்குப் பெயராகக் கொண்டிருந்தார் என்பதைத் திருவோத் தூரிலுள்ள கல்வெட்டொன்று, “வைப்பூருடையான் தேவன் விடையின் மேல் வருவான்”11 என்று கூறுவதால் விளங்குகிறது. திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயில் தெற்குச்சுவரில் உள்ள நம்பியாரூரர் திருவுருவத்தின் கீழ் இளங்கிளையாரூரன் என்று பெயர் எழுதப்பட்டுளது; இதற்கேற்ப அவர் அவ்வூர்த் திருப்பதிக்கக் காப்புச் செய்யுளில் தன்னை “இளங்கிளை யாரூரன்’1 என்று கூறுகின்றார். இதுகாறும் கூறியவற்றால், சைவ இலக்கியவவுலகில் தலை சிறந்து நிற்கும் திருஞான சம்பந்தர் முதலிய மூவர் பாடியருளிய திருப்பதிகங்களும், அவற்றைப் பாடியுதவிய பெருமக்களும் மக்களின் பொது வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகச் சிறந்த செல்வாக்குப் பெற்றிருந்தமை நன்கு தெளியப்படும். சைவத் திருக்கோயில்களிலும் நிலையங்களிலும் தலைமையிடத்து வீற்றிருந்த இந்த இலக்கியங்கள், சைவர்களின் அறியாமை வறுமை கீழ்மைப் பண்புகளால்இன்று அவ்விடத்திலிருந்து நீக்கப்பட்டும் பேணற்பாடு இன்றியும் புறக்கணிக்கப்பட்டுள்ளன; இறைவன் திருப்பெயர்கள் யாவும் வடமொழியில் மாற்றி மறைக்கப்பட்டுவிட்டன.  6. சேரமான் பெருமாள் தமிழகத்தின் மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு; அது தெற்கே கொல்லத்தையும் வடக்கிற் கோகரணத்தையும் கிழக்கில் மேலை மலைத் தொடரையும் எல்லையாகக் கொண்டது. பிற்காலத்தே அதன் தென்னெல்லை விரிந்து தென்பாண்டி நாட்டுக் கன்னியா குமரியையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் தன்கண் அடக்கிக் கொண்டது; வடவெல்லை குறுகித் தென்கன்னடத்துக்கும் தெற்கில் வருவதாயிற்று. சங்க காலத்தில் சேரநாட்டுக்கு வஞ்சியென்பது தலைநகர். இடைக் காலத்தே அவ்வஞ்சி நகர் கொடுங்கோளூர் எனப் பெயர்மாறிற்று; அங்கே இறைவன் கோயில் இருந்த பகுதி திருவஞ்சிக்களமாய் விளங்கிப் பின் திருவஞ்சைக்களமென மருவி வழங்குவதாயிற்று. இப்போது அதனைத் திருவஞ்சிக் குளமெனவும் வழங்குகின்றனர். அவ்வூரிலுள்ள கல்வெட்டுக்கள் சில அதனைத் திருவஞ்சக்களம் எனக் கூறுகின்றன. சேரநாட்டை யாண்ட வேந்தருள் செங்கோற் பொறையன் என்பான் முதுமை யெய்தவும் தவமேற் கொண்டு காட்டுக்குச் சென்றான்; அவனுக்குப் பின் சேரவரசுக்குரியார் யாவரென ஆராய்ந்த அரசியற் சுற்றத்தார் திருவஞ்சைக் களத்தில் அரசர் குடியில் தோன்றிச் சிவநெறி மேற்கொண்டு சிவத் தொண்டாற்றி வந்த பெருமாக்கோதையார் என்பாரைத் தேர்ந்து, அவரை யடைந்து சேரவரசினை ஏற்குமாறு வேண்டினர். தொடக்கத்தே, அவர், அது தான் மேற்கொண்டொழுகும் சிவப்பணிக்குத் தடை செய்யுமென அஞ்சி இறைவனை வேண்டி, அவர் அருள் பெற்று இசைந்தார்; அக்காலத்தே யாவும் யாரும் கூறுவதை விளங்கிக் கொள்ளும் கூர்த்த மதிநுட்பம் அருளவும் பெற்றார்; அதனால் அவர்க்குக் கழறிற்றறி வார் என்னும் சிறப்பும் உண்டாயிற்று. பெருமாக் கோதையார் சேரவரசை மேற்கொண்டு சேரமான் பெருமாளாய்ச் சிறப்புற்றார். முடிசூட்டு விழா நடைபெறுங்கால் தெருவில் தான் சுமந்து வந்த உவர்மண்ணூாறி உடல் வெளுத்துத் தோன்றிய வண்ணானொரு வனைக்கண்டு அவனை வெண்ணீறணியும் உண்மை யடியாரெனக் கருதி அவன் அடியில் வீழ்ந்து வணங்கிச் சிவனடியார்பால் தனக் கிருந்த அயரா அன்பைப் புலப்படுத்தினார். என்றும் போல் அவர் செய்த சிவவழிபாடு சிறப்புற நடந்து வந்தது; அவ்வழிபாட்டிறு தியில் தில்லையம் பலத்தில் திருக்கூத்தாடும் இறைவனது திருவடிச் சிலம்போசை கேட்கப் பெற்று உள்ளங்குளிர்ந்து உவகை மிகுந்தார். ஒருகால் மதுரையிலிருந்து பாணபத்திரன் என்னும் இசைப் புலவன் பொருள் வேண்டி இறைவன் தந்த திருமுகப் பாசுரத்தை எடுத்துக் கொண்டு பெருமாக் கோதையாராகிய சேரமான் பெருமாளிடம் வந்து காட்டினன்; அதுகண்ட சேரமான் பேரன்பால் தன் அரசியற் செல்வமனைத்தையும் அப்பாணனுக்கு நல்கினர்; ஆயினும்; பாணபத்திரன் தான் வேண்டுமளவே பெற்றுச் சென்றான். பின்பொருநாள், சேரமான் சிவ வழிபாட்டிறுதியில் இறைவனது திருச்சிலம்போசை கேட்கத் தாழ்த்தது. சேரமான் பெரு வருத்த மெய்திக் கலங்குகையில் திருச்சிலம்போசை யுண்டாயிற்று. ஓசை தாழ்த்தமைக்குக் காரணம் கூறுவாராய்த் தில்லையில் நம்பியாரூரர் வந்து திருப்பதிகம் பாடிப் பரவும் திறம் அறிவித்துச் சேரமானைச் சோழ நாடு சென்று நம்பியாரூரரைக் காணுமாறு குறித்தருளினார். அதன் பின் சேரமான் தில்லைக்கு வந்தார்; இறைவனை வணங்கிப் பொன் வண்ணத் தந்தாதி என்னும் நூலைப்பாடிப் பரவினார். சேரமான் பெருமாள், நம்பியாரூரர் திருவாரூரில் இருப்பதறிந்து திருவாரூர்க்குச் சென்றார்; வரவுணர்ந்ததும் நம்பியாரூரர் ஆர்வம் மிகுந்து அரசரை வரவேற்று இறைவன் அருட் குறிப்பை வியந்து பாராட்டினார். இருவரும் ஒருவரொருவரிற் கலந்த ஒருமை நண்பின் உருவாயினர். சேரமான் திருவாரூரில் தங்கி இறைவனை மும்மணிகோவை பாடி வாழிபட்டார். சில நாட்களுக்குப் பின் சேரமானும் நம்பியாரூரரும் பாண்டி நாடு சென்று இறைவன் திருப்பதிகளைக் கண்டு பரவும் கருத்துடன் திருமறைக்காடு அடைந்து இறைவனை வழிபட்டனர்; அப்போது சேரமான் தான் முன்பு பாடிய பொன் வண்ணத் தந்தாதியையே திரும்பவும் பாடிச் சிறப்பித்தார்.1 மதுரையில் பாண்டி வேந்தனும் அவன் மகளை மணந்து ஆங்கிருந்த சோழ வேந்தனும் இருவரையும் வரவேற்றுச் சிறப்புப் பல செய்தனர். சோழ பாண்டிய வேந்தரும் நம்பியாரூரரும் வரச் சேரமான் திருப்பரங்குன்றம் முதலிய திருப்பதி களைக் கண்டு வழிபட்டார். பின்பு அவ்வேந்தர்பால் விடைபெற்றுக் கொண்டு நம்பியாரூரருடன் திருவாரூர் வந்து சில நாள் தங்கினார். பின்னர் நம்பியாரூரரை உடன் அழைத்துக் கொண்டு சேரநாடு சென்று சேர்ந்தார். நம்பியாரூரர் சேரநாட்டிற் சில நாள் தங்கித் திருவஞ்சைக் களத்து இறைவனை வழிபட்டு இன்புற்றார். அதன்பின் ஆரூரர், சேரமான் தந்த மிக்க பொன்னையும் பொருளையும் பெற்றுப் பிரியா விடைகொண்டு திருவாரூர் வந்து வாழ்ந்திருந்தார். சில காலம் கழிந்த பின் நம்பியாரூரர் தானே கொடுங் கோளூர்க்கு வந்து சேரமானைக் கண்டு திருவஞ்சைக்களத்து இறைவனை வழிபட்டு இன்புற்றார். சேரமான் விரும்பியவாறு அங்கிருந்து கொண்டு நம்பியாரூரர் இறைவனைப் பாடிப் பரவி வந்தார். இவ்வா றிருந்து வருகையில் நம்பியாரூரர்க்கு இறைவன் வெள்ளையானை யொன்றை விடுத்துத் தனது கயிலைக்கு வருமாறு பணித்தார். நம்பியாரூரர் கயிலை செல்லும் செலவைச் சேரமான் உணர்ந்து தனது குதிரையேறி அவ்வெள்ளை யானையுடன் கயிலை சென்றார். அங்கே, இறைவன், சேரமானை நோக்கி, "யாம் அழையாமே நீவிர் வரக் காரணம் யாது?" என்று வினாவா நிற்ப, "அடியேன் நம்பியாரூரர் வந்த யானையின் முன் சேவித்து வந்தேன்; வந்தவிடத்து நின் அருள்வெள்ளம் என்னை யீர்த்துக் கொணர்ந்து திருமுன் நிறுத்தியது" என்று செந்தமிழ் நாவளம் சிறந்து விளங்கச் செப்பினார். அது கேட்டு மகிழ்ந்த இறைவன் திருமுன், சேரமான் தான் பாடிய ஆதியுலா என்னும் நூலை அரங்கேற்றி அப்பெருமான ருளால் சிவகணங்கட்குத் தலைவராம் சிறப்புப் பெற்றார். வரலாற்றாராய்ச்சி பண்டை நாளில் சேரநாடு, குட்டநாடு, இரும்பொறை நாடு, குடநாடு என மூன்று பிரிவாக நிலவிற்று, குட்டநாட்டு வஞ்சிநகரே சேரநாடு முழுதுக்கும் தலைநகர். ஒவ்வொரு நாட்டுக்கும் அரசர் உண்டெனினும், ஒருவர் சேர நாட்டு முடிவேந்தராகிய போது ஏனை இருநாடுகளின் அரசர் இருவரும் அம் முடிவேந்தர் கீழ் அரசு புரிவர். அதனால் சேரவேந்தருள் குட்டுவரும் பொறையரும் குடவரும் காணப்படுகின்றனர். முடிசூடும் வேந்தனே சேரமான் என விளங்கினன். சேரமான் பெருமாள் என்பது மிகவும் பிற்கால வழக்கு. தமிழ்நூல் வழக்குகளில் சேரமான் பெருமாள் என்ற வழக்கு கிடையாது. மேலே கூறிய வழக்கும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டோடு நின்று போயிற்று.1 பெருமாக் கோதையார் இளையராய்த் திருவஞ்சைக் களத்தில் இருக்கையில் சேரமான் செங்கோற் பொறையன் ஆட்சி செய்தான்; அவன் பெயரே அவன் இரும்பொறை நாட்டு அரசர் குடியில் தோன்றினவன் என்பதை உணர்த்துகிறது. அவன் துறவு புண்டு அரசு துறந்து சென்றபோது சேரவரசுக்கு உரிமை பெற்ற நெருங்கிய தொடர்புடையார் அவன் குடியில் ஒருவரும் இலராயினர்; ஆதலால் தான், சேரவரசுக்கு உரியாரைத் தேர்ந்து கோடல் அரசியலமைச்சர் கடனாயிற்று. இவ்வாறு அரசரைத் தேர்ந்து கொள்ளும் முறை பிற்காலத்தும் சேரநாட்டில் பெருவழக்காக இருந்திருக்கிறது.2 சேரவேந்தர் தம் இறுதி நாளில் துறவு மேற்கொள்ளும் மரபு பிற்காலத் தும் இருந்துளது. 3 செங்கோற் பொறையனுக்கு முன்னர் ஆட்சி புரிந்த சேரவேந்தர் பெயர் தெரிந்திலது சங்க காலச் சேர மன்னர்களில் மாக்கோதை யென்று பெயர் கொண்டோன் ஒருவன் உளன். அவன் கோட்டம் பலமென்னுமிடத்தே உயிர் துறந்தது பற்றி அவனைச் சான்றோர் கோட் டம் பலத்துத் துஞ்சிய மாக்கோதை யென்று வழங்கினர். நம் கழறிற்றறிவார்க்குப் பெருமாக்கோதையென இயற்பெயர் கூறப்படு தலின், இவர் சங்க காலத்து மாக்கோதையின் வழி வந்தவர் என்பது இனிது விளங்குகிறது. அம்மாக்கோதையின் வேறுபடுத்தவே கழறிற்றறிவார் பெயர் பெருமாக்கோதையார் எனப்பட்டது. கேரளோற்பத்தி கேரள மான்மியம் என்ற நூல்கள் வரலாற்றாராய்ச் சிக்குப் பயன்படாத பொய்யும் புனைசுருட்டும் நிரம்பியவை;1 ஆதலால், அவற்றின்கண் இக்குறிப்புக்கள் காணப்படவில்லை. திருவஞ்சைக் களம் என்னும் கோயிலிருக்கும் நகரப் பகுதி மகோதை யெனப்படும்;2 இதன் பெயர்க் காரணம் கூறும் சேக்கிழார், "வளநகர்தான் கோதையரசர் மகோதை யெனக் குலவுபெயரும் உடைத்துலகில்"3 என்று கூறுகின்றார். இது சங்ககாலத்து மாக்கோதை வேந்தன் பெயரைத் தொடக்கத்தே தாங்கியிருந்து நாளடைவில் மகோதையென மருவிற்றெனக் கொள்ளப்படுகிறது. இதுவே பின்னர் மகோதையார் பட்டினமென்ற பெயரால், "மலைமண்டலத்து மகோதையார் பட்டினத்து ஈராயிரவன் சிறியன்"4 என நின்று, மகாதேவர் பட்டின5 மெனவும் மகோதையார்புரம்6 எனவும் வேறுவேறு வகையில் வழங்கி வந்தது. இக்குறிப்பறியாத சிலர், இது வடநாட்டு மகோதயம் என்னும் ஊரின் நினைவுக் குறியாகவழங்கியது7 எனக் கருதலாயினர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் கொங்கரை வென்று கொங்கு நாடு கடந்து குடபுலமான மேலைக் கடற்கரையை அடைந்து கருவூரை யெறிந்து வஞ்சிநகர் முற்றத்திற் பெரும் போர் உடற்றித்தான் பெற்ற வெற்றிக்குக் களனாதலால் அதனை வஞ்சிக்களம் என மாற்றினான்.1 அக்காலத்தே காவிரிக்கரையில் இப்போது உள்ள கருவூர் வஞ்சிநகர் என்ற பெயர் கொண்டு நின்றது,2 அதன் அருகே ஓடும் ஆறு ஆன்பொருநை எனப்பட்டது. சேரர் வஞ்சி வஞ்சிக்களமென மாறியதனால் காவிரிக்கரைக் கருவூரை, வஞ்சியான கருவூர் எனப் பெயரிட்டு வழங்கலாயினர்; அன்று முதற் கல்வெட்டுக்கள் அதனைக் கருவூரான வஞ்சிமாநகர்3 என்று குறிக்கலுற்றன. அக்காலத்துத் தோன்றிய வஞ்சிக்களம் பின்பு அஞ்சைக்கள மென மருவிற்று;4 அவ்வூர்க் கல்வெட்டுக்கள் அதனைத் திருவஞ்சக்களம்5 என்று கூறுகின் றன. பெருமாக் கோதையார் சேரவேந்தனாய்த் திருமுடி சூடிக் கொண்டு திருவுலா வந்தபோது வண்ணானொருவன் தன்மேனி முழுதும் தான் சுமந்து வந்த உவர்மண் தோய்ந்து வெளுத்துத் தோன்றக் கண்டு அவனை முழு நீறுபூசிய முனிவர் எனக் கருதி அவன் அடியில் வீழ்ந்து வணங்கினர் என்பது வரலாறு. இதனால் சேரமானைப் பிற்காலத்தார் வண்ணானைக் கும்பிட்டார் என்று சிறப்பித்துப் பேசினர். இவருடைய வரலாறு உணர்ந்தோர் மக்கட்கு வண்ணானைக் கும்பிட்டார் என்று பெயரிட்டுப் பேணினர். சேலம் மாவட்டத்துத் தருமபுரி முன்னாளில் தகடூரென்றும், அதனைச் சூழவுள்ள நாடு தகடூர் நாடென்றும் வழங்கின. தகடூரில் சாணாயிர முழமாயிர முடையார் கோயில், திருவேளாவியீச்சுரமுடையார் கோயில், ஓராயீரேச்சுர முடையார் கோயில் என மூன்று கோயில்கள் இருந்தன. அவை ஒரு கால் பூசையின்றிப் பொலிவுகுன்றி இருக்க, அங்கே வந்த ஆண்டார் வண்ணானைக் கும்பிட்டார் என்னும் ஒரு சான்றோர், தகடூர் வேந்தனான அதியமானுக்குக் காட்டிச் சிவப்பிராமணரைக்கொண்டு நாட்பூசனை நடக்கச்செய்தல் வேண்டும் என உரைப்ப, அதியமான் அவரையே தக்க சிவப் பிராமணரைத் தேர்ந்து "கொடுவர" வேண்டு மென்றான்; அவரும் அவ்வண்ணமே சிவப்பிராமணனைக் "கொடு வந்து" வேந்தன் முன் நிறுத்தினார். வேந்தன் அச்சிவப் பிராமணனுக்குச் சிவ வழிபாடு செய்யும் வாய்ப்பும், காணியுரிமையும் தந்தான்.1 இரண்டாண்டிற்குப் பின் அதியமானுக்கு நலம் விளைதல் வேண்டி, அதியமான் அடியான் பம்மராகுத்தனான புலியூர் கிழவன் தம்பிரான் தோழன் என்னும் குதிரைப்படைத் தலைவன் மேலே கூறிய கோயில் களைச் செம்மைசெய்து "திருப்பிரதிட்டையும் திருப்புதுக்குச் சாந்தும்" செய்வித்தான் என்று அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவற்றால் தம்பிரான் தோழரான நம்பியாரூரர் வரலாறும் வண்ணானைக் கும்பிட்டார் என்ற கழறிற்றறிவார் வரலாறும் இடைக்காலத்தே கொங்கு நாட்டில் சிறப்புறப் பரவியிருந்த திறம் வெளியாகிறது. சேரமான் நாடொறும் தன் வழிபாட்டின் இறுதியில் இறை வனுடைய திருவடிச் சிலம்போசையைக் கேட்பது வழக்கம் என வரலாறு கூறுகிறது. சேக்கிழாரும், "நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறைவதமும், தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைத் திருச்சிற்றம்பலத்துள் ஆடுங்கழலே"2 என்று வழிபடுவதும், அதன் சிலம்போசை கேட்பதுமே யல்லாது "ஆசையுடம்பால் மற்று இனி வேறு அடையும் இன்பம்"3 இல்லை யென்பதும் மேற்கொண்டி ருந்தார் என்று குறிக்கின்றார். இதனைக் கல்லாடம் என்னும் நூல், "பரிவுரக் கம்பலை இருசெவியுண்ணும் குடக்கோச் சேரன்" என்று சிறப்பித்துரைக்கின்றது. திருவாரூருலாவென்னும் நூல், "நம்பற்குக், காற்சிலம்பின் சந்தணிந்து கண்ணியணிந்து தினம், காற்சிலம்பு கேட்ட திருக்காதோனும்" என்று பாராட்டுகிறது. பாணபத்திரன் கொணர்ந்த திருமுகம் கண்டு சேரமான் பொன் மிகத் தந்த செய்தியைப் பல நூல்கள் எடுத்தோதிப் பாராட்டு கின்றன. அவற்றுள் கல்லாடம், "குடக்கோச்சேரன் கிடைத்திது காண்க என மதி மலி புரிசைத் திருமுகம் கூறி, அன்புருத் தரித்த இன்பிசைப் பாணன், பெற நிதி கொடுக்கென உறவிடுத்தருளிய, மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன்"1 என்று விளக்கிக் கூறுகிறது. சேரமானும் நம்பியாரூரரும் திருவாரூரினின்றும் புறப்பட்டுச் சேரநாடு நோக்கி வருகையில் திருக்கண்டியூர் வந்ததும் திருவையாறு தோன்றக்கண்டு ஐயாறப்பனைக்கண்டு பரவ வேண்டும் எனச் சேரமானுக்கு விருப்பமுண்டாகவே, காவிரி பெருகி இருகரையும் புரண்டு செல்வது தடையாயிற்று; நம்பியாரூரர் "பரவும் பரிசொன்றறியேனான்"2 எனத் தொடங்கும் திருப்பதிகம்பாடவும் ஆறு வழி விட்டது. இருவரும் சென்று ஐயாற்று அண்ணலைக் கண்டு அன்புடன் பரவிச் சென்றார்கள் என்பது வரலாறு. திருக்கண்டியூரில் இருந்தே நம்பியாரூரர் திருப்பதிகம் பாடவும் காவிரிப்பெருக்கு வழிவிட்ட நிகழ்ச்சி சேரமான் நெஞ்சில் நிலைபெற நின்றதனால், அதன் நினைவுக் குறியாக, சேரநாட்டில் திருக்கண்டியூர் எனப் பெயரியதோர் ஊரையுண்டாக்கி அங்கே அழகிய கோயிலையும் எடுத்துச் சிறப்பித்தார் என ஆராய்ச்சியாளர்3 கூறுகின்றனர். நம்பியாரூரர் பாடிய திருநொடித்தான் மலைத் திருப்பதிகத்தில் "வரமலி வாணன்வந்து வழிதந்து எனக்கு ஏறுவதோர், சிரமலியானை தந்தான் நொடித்தான்மலை யுத்தமனே"4 என்பதில் வாணன் என்றது. கேரளோற்பத்தி என்னும் நூலிற் காணப்படும் சேரமான் பெருமாள்கள் வரிசையில் ஐந்தாமவராகக் குறிக்கப்படும் பாணப் பெருமாளாகலாம் எனச் சிலர் கருதுகின்றனர். காலவகையாலும் திருப்பதிகப் பொருள் நிலையாலும் அவர் கருதுவது தவறு எனக் கூறுகின்றார். திரு. இராமநாதையர்.5 கழறிற்றறிவாரும் நம்பியாரூரரும் ஒருகாலத்தவர் என்பதை அவர்களுடைய வரலாறு தெளிவாகக் கூறுகிறது. இவர்கள் காலத்தை ஆராய்ந்த அறிஞர்கள் பலர்; தமிழ் வரலாறு எழுதிய தஞ்சைத் திரு.K.S. சீனிவாசப்பிள்ளையவர்களும்1 திரு. A.S.இராமநாதை யரவர்களும்2 திரு. C.V. நாராயண அய்யரவர்களும்3 பின்வந்த டாக்டர் திரு.மீனாட்சியவர்களும்4 பிறரும் நம்பியாரூரர் கழறிற்றறிவார் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டாகும் என்றனர்; பல்லவர் வரலாறும் நம்பியாரூரர் அருளிய திருப்பதிகப் பொருணிலையும் ஒன்பதாம் நூற்றாண்டென்பார் கூற்றுக்கு ஆதரவு செய்யாமை கண்டு இவ்விரு வருடைய காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டேயாகும் எனத் திரு T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களும்.5 திரு. S.K. கோவிந்தசாமிப் பிள்ளை அவர்களும்6 திரு.மு. இராகவ அய்யங்கார் அவர்களும்7 பிறரும் வற்புறுத்து கின்றனர். சேரமான் அருளிய நூல்களின் ஆராய்ச்சி சேரமான் அருளிய நூல்கள் மூன்றாகும்; அவை பொன் வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருகயிலாய ஞானவுலா என்பன. 1. பொன் வண்ணத்தந்தாதி சேரமான், திருவஞ்சைக் களத்தில் இருந்து சிவபரம் பொருட்குத் தொண்டுபுரியும் செயலில் ஈடுபட்டிருக்கின்றார்; உலகியல்பும் அரசியல்பும் ஆகிய இரண்டினும் இறைவற்குச் செய்யும் திருத்தொண்டின் இயல்பை நன்குணர்ந்து அதனையே பெரிதும் காதலிக்கின்றார். நாடொறும் “புலரியெழுந்துபுனல் மூழ்கிப் புனிதவெண்ணீற்றினும் மூழ்கித்”1 திருப்பாட்டு ஒருமை நெறியின் உணர்வு வர ஓதிப்பணிந்து”2 ஒழுகுகின்றார். அரசியலை ஏற்றல்வேண்டுமென அரசியற்சுற்றத்தார் வேண்டிக் கொள்ளுங்கால், அரசியற் பணி இறைபணிக்கு இடையூறாகும் என்று கருதுகின்றார்; இறைவனைப் பரவி அவன் நல்கிய அருளறிவான் கழறிற்றறிவாராகி அரசுமுறை யேற்கும் சேரமானுடைய மனப்பண்பு, சிவநெறிக்கண் வேரூன்றி ஆழ்ந்திருக்கும் அவரது மெய்யுணர்வுத் திட்பத்தை இனிது காட்டுகின்றது. தாம் பாடிய பொன் வண்ணத்தந்தாதியில் சேரமானும் தனது இக்கருத்தைத் “தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப் பெற்றால், மனக்கு என்றும் நெஞ்சிற் கடையா நினைவன்”3 “நானிலம் ஆளினும், நான்மறை சேர் மையார் மிடற்றான் அடிமறவா வரம் வேண்டுவனே”4 என்று தம் மனக்கோளை விளங்க உரைக்கின்றார். இனி, வண்ணானைக் கும்பிட்ட வரலாற்றில், சேரமான் தன் அடியில் வீழ்ந்து வணங்கக்கண்டு பேரச்சத்தால் நடுக்குற்று நின்று உண்மை கூறிய வண்ணானை நோக்கி, “திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர்”5 எனச் சேரமான் கூறுவதும் பிறவும் சிவ வேடத்தின் பால் அவர்க்கு இருந்த திண்ணிய அன்பு புலனாகிறது; அதனை அத்திருவந்தாதி, “வருகின்ற மூப்பொடு தீப்பணிக் கூற்றம் வைகற்கு வைகல் பொருகின்ற போர்க்கு ஒன்றும் ஆற்றகில்லேன் பொடிபூசி வந்தஉன் அருகு ஒன்றி நிற்க அருளுகண்டாய்”6 என்பதனால் வற்புறுத்துகின்றது. சேரமான் அரசுகட்டிலேறி ஆட்சி புரிந்து வருகையில் நாடோறும் வழிபாட்டிறுதியில் இறைவனது சிலம்போசை கேட்கு மாற்றால் அதன்பால் பேரார்வம் உற்றிருந்த செய்தி வரலாற்றால் அறிவது; அதனை அவரது திருவந்தாதி, “நெஞ்சமே, எரியாடி எம்மான், கடல் தாயின் நஞ்சம் உண்டபிரான் கழல் சேர்தல் கண்டாய், உடல்தான் உள பயனாவ சொன்னேன் இவ்வுலகினுள்ளே”1 என்றும், “முருகலர் கொன்றையினாய் என்னை மூப்பொழித்த கனியே, கழலடியல்லால் களைகண்மற்று ஒன்றுமில்லேன்”2 என்றும் எடுத்துக் காட்டுகின்றது. சிவவழிபாடு புரிந்துவரும் தமக்கு இறைவன், செங்கோல் அரசுதந்து நாளும் திருவடிச் சிலம்போசைகாட்டி அருள் செய்வது, தாம் தம் திருத்தொண்டில் வழுவாதிருத்தற்கே என்பது சேரமான் திருவுள்ளத்தில் வீற்றிருந்த சீரியகருத்து. மதுரையிலிருந்து போந்த பாணபத்திரன் காட்டிய திருமுகத்தைக்கண்டதும், தாம் மேற்கொண்டு அரசு செய்யும் அரசியற் செல்வம் இறைவன் தந்தது என்று எண்ணியிருந்தமையின், அச்செல்வமுழுதையும் பாணற்கு அளிக்கின்றார்; பாணபத்திரர் அமைதியோடு அடிபணிந்து, “அரசே, அரசுகோடற்கு ஆணையில்லை”3 என்று இசைக்கின்றார்; சேரமானும், உடனே, தான் அரசேற்றது இறைவன் திருவருட் குறிப்புக்கொண்டே யாதலின், அதனைப் பிறர்க்கு நல்குவதும் அத்திருவருட் குறிப்பின்றிக் கூடாது; நல்குவது நன்றன்று என நினைந்து அஞ்சுகின்றார்; அதனை நன்கு தெளிய, “இறைவர் ஆணைமறுப்பதனுக்கு அஞ்சி இசைந்தார் இகல்வேந்தர்”4 என்று சேக்கிழார், சேரமான் மனநிலையை நாம் அறியக் காட்டுகின்றார். இவ்வகையில் சேரமான் உள்ளத்தே ஒரு வகைத் தெளிவு பிறக்கின்றது. தன்னை நினைந்து வழிபடுவார்க்கு இறைவன் வேண்டுவன தந்தும் உணருவன உணர்த்தியும் வழுவாவாறு திருத்திப் பணி கொள்கின்றான் என அவர் தெளிகின்றார். பிஞ்ஞகனார் ஆணையென்ற பாணபத்திரன் விடை, “அரசு நல்கிய இறைவன் அதனைப் பிறர்க்குக் கொடுத்து விட ஆணையிடவில்லை” என்று சேரமானைத் தெருட்டுகிறது; அவரும் தெளிந்து அமைகின்றார்; இதனைக் குறிப்பாகத் தாம் பாடிய திருவந்தாதியில், “தாமே அருள் செய்து கொள்வர்தம் பல்பணியே”1 என்றும், “புண்ணிய சூலத்து எம்மான் திருந்தியபோது அவன் தானேகளையும் நம் தீவினையே”2 என்றும் தெரிவிக்கின்றார்.” நம்பியாரூரரைக் காணும் பொருட்டுச் சோழநாடு போந்த சேரமான், நம்பியாரூரர் தில்லையில் இறைவன் திருமுன்நின்று அவன் திருவருளில் இரண்டறத் தோய்ந்து பாடியதும், திருக்கூத்தி யற்றும் இறைவன் அவர் பாட்டில் கலந்த நின்று சிலம்போசை செய்யா தொழிந்ததும் பலபட நினைந்து தில்லைக்கூத்தன் திருமுன்னர் நின்று திருவருளில்தோய்ந்து விடுகின்றார்; அத்தோய்வினை, தான்பாடிய திருவந்தாதியின் தொடக்கத்தேயே புலப்படுத்தி, “தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசனுக்குப் பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்து இலங்கும்”3 என்று பாடுகின்றார். இவ்வண்ணம் தம்மை மறந்து தில்லைக் கூத்தன் திருவருளில் தோய்ந்து அதன்வண்ணமாய் இயைந்து நிற்கும் சேரமான் திருவுள் ளத்தில் அத்திருவருளால் நம்பியாரூரரைக் காண்பது குறித்துப் போந்த நினைவு எழுகிறது. இறைவனைத் தன் பாட்டிசையில் ஈர்த்து நிறுத்தும் நாவன்மை படைத்த நாவலூராளிக்குச் சிவபோகப் பெருவாழ்வு எய்துவது மிக எளிது; அவரைக் காணும் காட்சியால் அவரைச் சேர்ந்தொழுகும் சிறப்புடை நட்பின் பயனால் சிவபோகப் பெருவாழ்வு தமக்கு எய்து மென்பது ஒருதலை எனத்துணிகின்றார்; அத் துணிவை. “மாயநன் மாமணிகண்டன் வளர் சடையார்க்கு அடிமை ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே; காய்சின யானை வளரும் கனகமலை யருகே போயின காக்கையும் அன்றே படைத்தது அப்பொன் வண்ணமே”4 என்று வெளிப்படுக்கின்றார். இத் திருவந்தாதியில் அதனைப் பாடிய காரணம், தன்னுடைய கருவிகரணங்களைக் திருத்தொண்டில் ஈடுபடுத்தல், உடல் வாழ்வின் உயர்வின்மை, தொண்டு செய்யும் முறை, தொண்டினை யேற்கும் இறைவனது அருமைநிலை, அம்மையப்பானாய் ஆண்டவன் எழுந் தருளும் திறம், அவன் அட்டமூர்த்தியாய் அமைதல், அகப்பொருள் துறைகள், இங்கிதப் பாட்டுக்கள், இனிய சொல்லாடல், இனிய காட்சி வழங்கல் முதலிய பல பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றில் நலம் காணுமாற்றால், விரிவஞ்சி, வகைக்கு ஒன்றாக ஈண்டுக் காட்டு கின்றோம். நூல் பாடிய காரணம் சேரமான், தான் பொன் வண்ணத் தந்தாதியைப் பாடுதற்குற்ற காரணத்தை ஏனை நூலாசிரியர்களைப் போல நூலின் தொடக்கத்திலோ முடிவிலோ கூறாமல், நூலைத் தொடங்கி இருபது பாட்டுக்கள் பாடின பின்பு கூறுகின்றார். முதற்கண் தமக்குக் கவிபாடும் வன்மை யில்லை என்றும், பிறர் உரைத்தவற்றையே எடுத்துரைப்பின் அறிஞர் ஏலார் என்றும், தாம் செல்லுவன புன்சொற்கள் என்றும் அவற்றை ஏற்க வேண்டும் என்றும் எடுத்துரைப்பாராய், “தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்; தீங்கவி பாடலுற்றேன்; ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்; உரைத்தார் உரைத்த கள்ளிய புக்கால் கவிகள் ஒட்டார்; கடல் நஞ்சு அயின்றாய்! கொள்ளிய வல்ல கண்டாய், புன்சொல் ஆயினும் கொண்டருளே” 1 என்று இயம்புகின்றார். இத்துணைக் குறைபாடு கூறிக்கொள் வோர் பாடாதொழியலாமே என எழும் தடைக்குச் சேரமான் விடையும் கூறுகின்றார். “அமரர் குழாம் நின்னைப் பொருண் மொழிகளால் போற்றிப் பரவக் கண்டேன்; அக்காட்சி என்னையும் பாடுமாறு ஊக்க அடியேன் பாடலுற்றேன் என்பாராய், “இருள் ஆசற எழில் மாமதி தோன்றவும் என்றது என்ன, வெருளாது, எதிர் சென்று மின்மினிதானும் விரிகின்றதே”1 என்று கூறுகின்றார். இதன்பின் எண்பது பாட்டுக்கள் பாடுகின்றார்; பின்பு சேர மானுக்குச் சிறிது சோர்வு தோன்றுகிறது. அப்போது அவர், “ஈசனவன் பெருமை, தேன் அலர்த்தாமரையோன் திருமாலவர் தேர்ந்து உணரார், பாநலத்தால் கவி யாம் எங்ஙனே இனிப்பாடுவதே”2 என்று பரிகின்றார். திருத்தொண்டு ஈடுபாடு கருவி கரணங்களை இறைவன் திருத்தொண்டில் ஈடுபடுத்திப் பிறவிக்கு ஏதுவாகிய மலகன்மங்களினின்றும் நீங்குதல் வேண்டும் என்பது சிவநெறி அணைந்தோரது சீர்த்த கொள்கை. உலக நுகர்ச்சி கட்கு எளிய வாயில்களாகத் திகழும் மனம் முதலிய கரணங்களையும் கண் காது முதலிய கருவிகளையும் அடக்கி ஒரு நெறிப்படுத்திச் சிவ வழிபாட்டில் செலுத்தியவழி வினை பெருகாது; ஞானம் பெருகும்; மலம் தேயும் என்று அறிவு நூல்கள் அறையாநிற்கும். அதனால் இறைவழிபாட்டைப் பெரிதும் விரும்பி அதன்கண் ஒன்றியிருக்கும் தனது செயலைச், “சிந்தனை செய்ய மனம் அமைத்தேன், செப்ப நாஅமைத்தேன்; வந்தனை செய்யத் தலையமைத்தேன்; தொழக் கையமைத்தேன்” பந்தனை செய்வதற்கு அன்பமைத்தேன்; மெய் அரும்பவைத் தேன் வெந்த வெண்ணீறு அணி ஈசற்கு இவை யான் விதித்தனவே”3 என்று கூறி நம்மையும் அது செய்யுமாறு பணிப்பாராய், “கூறுமின் ஈசனை; செய்ம்மின் குற்றேவல்; குளிர்மின் கண்கள்; தேறுமின் சித்தம், தெளிமின் சிவனை; செறுமின் செற்றம்; ஆறுமின் வேட்கை; அறுமின் அவலம்; இவை நெறியா ஏறுமின்” வானம், இமையவர்க்கு விருந்தாய் இருமின்”1 என்று அறிவுறுத்தி வற்புறுத்து கின்றார். உடல் வாழ்வு உடலோடு கூடி இவ்வுலகில் வாமும் வாழ்வு நிலையில்லாதது; இவ்வாழ்வில் இன்பம் குறித்து ஈட்டப்படும் பொருளும், நுகரப்படும் இன்பமும் நிலையின்றிக் கெடுவன என்பது முதலிய கருத்துக்கள் இப் பகுதிக்கண் குறிக்கப்படுகின்றன. இவ்வகையில் நம் சேரமான் ஏனைச் சமய ஆசிரியர்களைப் போலவே நிலையாமைகளைக் கூறியமை கின்றார்; ஆயினும் உடலோடு கூடிவாழும் வாழ்வு நீடித்தலின்றி நாடோறும் பலவகையால் தேய்ந்து இறுவது என்பார். “வேண்டிய நாட்களில் பாதியும் கங்குல் மிக அவற்றுள் ஈண்டிய வெந்நோய், முதலது பிள்ளைமை, மேலது மூப்பு ஆண்டின அச்சம் வெகுளி அவா அழுக்காறு இங்ஙனே மாண்டன; சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே”2 என்று கூறுகின்றார். ஏனையோர் “வேதநூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேனும்”3 என வயதெல்லையை நூறாகக் கூற, இவர் அதனைக் குறியாது “வேண்டிய நாட்கள்” என்பது இவரது உலகிய லுணர்வு மிகுதியை விளக்குகின்றது. தொண்டின் இயல்புகூறல் உடல் வாழ்வின் உயர்வின்மை உணர்ந்த வழி ஒருவர்க்கு இறைவன் திருவருளில் ஒன்றி நிற்கும் பெரு வாழ்வின் கண் ஆர்வ முண்டாகும். அதற்கு இறைவனை வழிபடுவதையன்றிச் செயல் பிறிது இல்லை; தொண்டுபட்டு இறைவனை வழிபடுவதே செய்யத் தக்கது என்ற இவ்வுண்மையைச் சேரமான் தன் நெஞ்சை நோக்கி, “பணிபதம் , பாடு இசை, ஆடு இசையாக, பனிமலரால் இறைவனை அணி, அத்தவற்கே அடிமை துணி, பதம் காமுறு, தோலொடு நீறு உடல் தூர்த்து”1 எனப் பணித்து வற்புறுத்துகின்றார். “நெஞ்சம் தளிர் விடக் கண்ணீர் ததும்ப முகமலர, அம் செங்கரதலம் கூம்ப அட்டாங்கம் அடிபணிந்து, தம் சொன்மலரால் அணியவல்லோர்”2 எல்லா நலன் களும் எய்துவர். வழிபாடு என்பது தொழுதல், பணிதல், நினைதல், அருச்சித்தல் முதலிய கூறுகளைச் சிறப்பாகவுடையது. இக்கூறுகளைத் தனித்தனியாக எடுத்து மக்கட்கு அறிவுறுத்து வாராய், “உலகு ஆளுறு வீர் தொழுமின்; விண்ணாள்வீர் பணிமின்; நித்தம் பல காமுறுவீர் நினைமின்; பரமனொடு ஒன்றலுற்றீர் நல காமலரால் அருச்சிமின்”3 என்று வினையும் பயனுமாக விரித்து விளம்புகின்றார். உலகாளுதல் விண்ணாளுதல் பரமனோடு ஒன்றுதல் முதலிய பயன்களை நினையாது வாழ்வோர் நரகத் துன்பத்தை விரும்புபவர் என்பது தானே பெறப்படுதலால் அவர்களை நோக்கி, “நாள் நரகத்து நிற்கும் அலகா முறுவீர் அரன் அடியாரை அலைமின்கள்” என்று அறைகின்றார். பரமனது அருமை கூறல் இவ்வண்ணம் தொண்டு புரிந்த வழி அதனை ஏற்றருளுதலில் முன்னிற்பவன் பரமன்; அன்பர் பரவி ஏத்தும் ஏத்துக்களையே இறைவன் மிகவும் விரும்புகின்றான்;4 அவர் தம் கண்ணிலும் கருத் திலும் எப்போதும் நிலவுகின்றான்5 என்பர். இவ்வாறு கூறவே இறைவன் மிக்க எளியனாய்க் காணப்பெறுவன் போலும் என்று எழும் நினைவை மாற்றுவாராய், “திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளும் திரிதரினும், அரிது அவர் தன்மை அறிவிப்பது”6 என அறிவிப்பர். அவ்வருமை கருதி நாம் மலையாமைப் பொருட்டு, நிலம் நீர் முதலியயாவும் அவன் வடிவம்; அவற்றின் நலங்கண்டு பரவு மாற்றால் அவனை அறியலாம். என்ற கருத்தமைய, “அலையார் புனல் அனல் ஞாயிறு அவனி மதியம் விண்கால், தொலையா உயிர் உடம்பாகிய சேதி”7 என்று தெரிவிக்கின்றார். இதனால் இறைவன் அட்டமூர்த்தியாயிருக்கும் திறமும் கூறப்பட்டமை உணரப் படுகிறது. இனி, இறைவன் இவ்வண்டமே தனக்குத் திருமேனியாகக் கொண்டவன் என்ற ஓர் அழகிய கருத்தைப் “பாதம் புவனி, சுடர் நயனம், பவனம் உயிர்ப்பு, ஓங்கு ஓதம் உடுக்கை, உயர்வான் முடி, விசும்பே உடம்பு, வேதம்முகம், திசைதோள், மிகுபன்மொழி கீதம்”1 என்று எடுத்துரைக்கின்றார்; இவரது இந்நிலையை உணர்ந்து பரவுபவர் சிவலோகம் பெறுவர் என்று கூறலுற்று, “தவனே யுலகுக்குத் தானே முதல் தான் படைத்த எல்லாம் சிவனே முழுதும் என்பார் சிவலோகம் பெறுவர்”2 என்று இயம்புகின்றார். இறைவன் அம்மையப்பன், மும்மூர்த்தி இறைவன் நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் என்பதும், அயன் அரிஅரன் என்ற மூன்று மூர்த்தமும் அவனே என்பதும் தொன்று தொட்டு நிலவிவரும் கருத்துக்கள், இவ்வாறு வரும் கருத்தை மேற் கொண்டு பரவும் சேரமான் அம்மையப்பானாம் திருமூர்த்தத்தை, “வலந்தான் கழல் இடம் பாடகம், பாம்புவலம் இடமே கலந்தான், வலம்நீறு இடம் சாந்து, எரிவலம் பந்து இடம், என்பு அலந்தார் வலம் இடம் ஆடகம், வேல்வலம் ஆழியிடம், சலம் தாழ் சடைவலம் தண்ணங் குழல் இடம் சங்கரற்கே” 3 என்றும், மும்மூர்த்தியாம் இயல்பை, “வீரன் அயன் அரிவெற்பு அலர் நீர்எரி பொன்னெழிலார் கார் ஒண் கடுக்கை கமலம் துழாய் விடை தொல் பறவை பேர் ஒண்பதி நிறம்தார் இவர் ஊர்தி வெவ்வேறு என்பரால் பாரும் அறியாவகை எங்கள் ஈசர் பரிசுகளே”1 என்றும் இனிமையுறப் பாடிக் காட்டுகின்றார். இனி, இறைவன் அடியார்க்கு அருளும் திறத்தை, “உற்ற அடியார் உலகாள ஓர் ஊணும் உறக்கும் இன்றிப் பெற்றமதாவது ஒன்று ஏறும் பிரான்”2 என்றும், “கள்ளவளாகம் கடிந்து அடிமைப்படக் கற்றவர் தம் உள்ளவளாகத்து ஊறுகின்ற உத்தமன்”3 என்றும் கூறி, அடியார் பொருட்டுத் தான் ஊணும் உறக்கமும் துறந்தொழிவதும், கள்ளம் கடிந்து தூய்மையுறும் அவர்கள் உள்ளம் மீளவும் கள்ளத்தால் களங்க மெய்தாமல் காக்கும் திருக்குறிப்பால் ஆங்கே உறைகின்றான் என்று அறிவுறுத்துகின்றார். இவ்வாறே திருஞான சம்பந்தர், “கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு, உள்ளமொன்றி உள்குவார் உளத்துளான்”4 எனக் கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது. இங்ஙனம் அடியவர் உள்ளத்தை மாசுபடுத்தும் அகப்பகை களைக் களைந்து துணைபுரியும் இறைவன், புறத்தே கூற்று, பிணி முதலியவற்றுக்கும் தான் கூற்றும் மருந்து மாய்த் துணை செய்கின்றான் என்பார், “சந்தித்த கூற்றுக்குக்கூற்றாம் பிணிக்குத் தனி மருந்தாம்”5 என்றும். அகத்தே நிற்குங்கால் சிந்திக்கும் சிந்தைக்குத் தேனும் அமுதமுமாய்த் தித்திப்பன் என்பார், “சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித்து அமுதமுமாம்” என்றும் இசைக்கின்றார். இவ்வண்ணம் உயிர்கள் நுகர்தற்குரிய இன்பத்துக்கு அகத்தும் புறத்தும் தடை விளக்கும் பகைப்பொருள்களைக் கடிந்தருளும் இறைவன், யாவும் பகைமையின்றி நட்பால் ஒன்றியிருக்கும் செய லொன்றையே பெரிதும் விழைவன், அவன் திருமேனியிற் காணப்படும் பொருள்களே இவ்வுண்மையை வற்புறுத்துகின்றன; இதனை, “ஆர்க்கின்ற நீரும் அனலும், மதியும் ஐவாயரவும் ஓர்க்கின்றயோகும் உமையும், உருவும் அருவும் வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவும் எல்லாம் கார்க்கொன்றை மாலையினார்க்கு உடனாகிக் கலந்தனவே”1 என்று பாடுகின்றார். இவ்வண்ணம் தம்மிற் பகைத்து மாறுபட்டு நிற்பனவும் தன்பால் மாறுபாடின்றி ஒன்றி நிற்கப் பண்ணும் அருட் செயலால், விழைவு விடுத்த விழுமியோர் உள்ளத்தும் இறைவன் பால் தீராவேட்கை எழுந்து அவனை இன்றியமையாத நிலையைப் பயந்து விடுகிறது. 2. திருவாரூர் மும்மணிக் கோவை சேரமான் நம்பியாரூரருடன் உயர்காதல் நண்பராகி அவ ரோடே சென்று திருவாரூர் இறைவனைக் கண்டு பணிந்து வழிபட்டு, அவ்விறைவன் பேரில் தாம் பாடிய திருமும்மணிக் கோவையை நம்பியாரூரர் கேட்க அரங்கேற்றம் செய்தார் என்பது வரலாறு. சேக்கிழாரும் “திருமும்மணிக் கோவை நாலலூரர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்”2 என்று எடுத்துரைக்கின்றார். இம் மும்மணிக் கோவை முப்பது பாட்டுக்களையுடையது. இவையாவும் அகபொருள் நெறியிலேயே அமைந்திருக்கின்றன. திருவந்தாதியினும் ஐம்பது பாட்டுக்கள் இந்நெறியிலே இயன்றுள்ளன. இவர் மேற்கொள்ளும் அகத்துறையில் அகனைந் திணைக் குரியன சிலவும் கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்தன பலவுமாகும். திருவந்தாதியில் வருவன பலவும் அகனைந்திணை யல்லாதன. ஒருத்தி சிவபெருமானைக் கண்டு அவன்பால் கருத்திழந்து உடல்மெலிந்து வளைசோர்ந்து வருந்தி நிற்ப, அவளுடைய தோழி போந்து, “நீ இவ்வாறு வளையும் கலையும் இழந்து நிற்பது அறி வுடைமையன்று; இஃது என்ன போதம்? இவற்கோ மணிநிறம் தோற்பது?”3 என்று கழறுகின்றாள்; அவள், தன்னால் பழியாவதும் பெண்மை நலம் போவதும் ஊழ்வினையால் வந்தன என்பாளாய், “ஆவனயாரே அழிக்க வல்லார் அமையாவுலகில், போவன யாரே கைதொழுது தீவினையேன் இழந்தேன் கலையோடு செறிவளையே”1 என விடையிறுக்கின்றாள். இப்பகல் நிகழ்ச்சி அவளது நெஞ்சை யலைப்ப, இரவில் சிறிது கண்ணயர்ந்து கனாக் காணலுற்றாள். கனவில் இறைவன் பலிவேண்டிவரத் தான் பலியிட்டு மேனி வேறுபடு வதாகவும் தாயர் தடுப்பதாகவும் தன்னை அப்போது இறைவன் வருக என அழைப்பதாகவும் உடனே தான் விழித்துக் கொண்டதாகவும் கண்டு வருந்தலுற்றாள். அவள் செயலை நம் சேரமான். “ஈசனைக் காணப்பலி கொடு செல்ல எற்றே இவள் ஓர் பேயனைக் காமுறு பிச்சிகொலாம் என்று பேதையர் முன் தாய்எனை ஈர்ப்பத் தமியேன் தளரஅத் தாழ்சடையோன் வாஎனைப் புல்லஎன்றான் இமைவிண்டன வாட்கண்களே”2 என்று பாடிக் காட்டுகிறார். கனாக்கண்டு வருந்தும் மகள் நிலை கண்டு தாய் வருந்துவதும், இறைவன்பால் தோழியைத் தூது விடுவதும் பிறவுமாகிய கருத்துக்கள் நிறைந்த பாட்டுக்கள் பொன்வண்ணத் திருவந்தாதியில் பல உள்ளன. இங்ஙனமே, மகளிர் மூவரிடையே நிகழ்ந்த சொல்லாடல் ஒன்றைச் சேரமான் புனைந்து உரைக்கின்றார்; ஒருத்தி, இறைவன் முதற்கண் காமனையே செற்றான் என்றாள்; மற்றொருத்தி முதற்கண் செற்றது காலனையே என்றாள்; இருவர்க்கும் இடையே பூசலுண் டாயிற்று; அதனைத் தவிர்க்கக்கருதிய வேறொருத்தி இறைவனையே நோக்கி, முன்னம் செற்றது யாரை என்று கேட்டாள்; அவர் ஒரு விடையும் கூறாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்து நின்றார். இந்நிகழ்ச்சியை அவள் கூற்றிலே வைத்து, “காமனை முன்செற்ற தென்றாள் அவள், இவள், காலன் என்னும் தாமநன் மார்பனை முன்செற்றது என்று தன் கையெறிந்தாள், நான் முனம் செற்றது அன்று யாரை யென்றெற்கு இருவர்க்கும் அஞ்சி ஆமெனக்கிற்றிலர் அன்று எனக்கிற்றிலர் அந்தணரே”1 என இன்பமாகப் பாடியுள்ளார். இங்கிதப் பாட்டுக்கள் பாடுவதிலும் சேரமான் மிக்க நயம் சிறந்து விளங்குகின்றார். பலி வேண்டி வந்த இறைவனுக்கு அதனையிடச் சென்ற பெண்ணொருத்தி கூறுவது போல, “அந்தணராம் இவர் ஆரூரர் உறைவது என்றேன் அதுவே சந்தணை தோளி என்றார், தலையாய சலவர் என்றேன்; பந்தணை கையாய், அதுவும் உண்டென்றார் உமையறியக் கொந்தணை தாரீர் உரைமின் என்றேன் துடிகொட்டினரே”2 என்று கூறுகின்றார். இனி, திருவாரூர் மும்மணிக்கோவைக்கண் வரும் முப்பது பாட்டுக்களும் அகனைந்திணைக் குரியவாகவே உள்ளன. களவு வழி யொழுகிக் கற்புக் கடம்பூண்டு நிற்கும் தலை மக்கள் வாழ்வில், தலைவன் பால் பிரிவு நிகழ்கிறது. வினையே ஆடவர்க்கு உயிரெனப்படுதலின் அவன் பிரிவதும் அறமாகின்றது. பிரிந்து செல்பவன், கார்ப்பருவ வரவில் மீண்டும் வருவதாகக் கூறித் தலைமகளைத் தேற்றிச் செல்லுகின்றான். அவளும் அவன் தெளித்த சொல்லைத் தேறியிருக்கின்றாள். ஆயினும், பிரிவுத் துன்பம் அவளை வருத்தா தொழியவில்லை; அவள் வருந்துவதும் தோழி தேற்றத் தேறுவதுமாக இருந்து வருகின்றாள். தலைவன் குறித்த கார்ப்பருவம் வருகிறது; அவன் வருகின்றானில்லை; மேற்கொண்ட வினை முடியாமையால் அவன் வரவு தாழ்க்கின்றது. இந்நிலையில், கார்வரவு கண்ட தோழி தலைமகன் ஆற்றாளாவள் என எண்ணி. “கண்ணார் நுதல் எந்தை காமருகண்டம் என இருண்ட விண்ணால் உருமொடு மேலது கீழது கொண்டல், விண்ட மண்ணார் மலைமேல் இளமயிலால் மடமான் அனைய பெண்ணாம் இவள் இனி என்னாய்க்கழியும் பிரிந்துறைவே”3 என்று சொல்லி வருந்துகின்றாள். பின்பு சின்னாட்களில் தலை மகன் போந்து கூடி இன்புறுத்துகின்றான். அவன் மறுபடியும் பரத்தையிற் பிரிந்தொழுகுகின்றான். அத்தகையோன் ஒருநாள் தன் மனைக்கு வந்தபோது அவனது பரத்தைமை காரணமாகத் தோழி முதலியோர் வாயில் மறுக்கின்றனர். அவன் தன் ஆற்றாமையே வாயிலாக வந்த அடைகின்றான். அடைந்தவன் தலைவியைத் தீண்டினானாக, அவள் புலந்து, “பொய்யார் தொழலும் அருளும் இறை கண்டம் போல் இருண்ட மையார் தடங்கண் மடந்தையர் கேட்கின் பொல்லாது; வந்து உன்கையால் அடிதொடல், செல்க ஏற்புல்லல், கலை அலையல், ஐயா, இவை நன்கு கற்றாய் பெரிதும் அழகியவே”1 என்று உரைக்கின்றாள். பரத்தையரை உயர்த்துக் கூறும் கூற்றால் அவர்களைப், “பொய்யார் தொழலும் அருளும் இறைகண்டம் போல் இருண்ட மையார் தடங்கண் மடந்தையார்” என்று கூறுகின்றாள். “பொய்யன்பே கொண்டு பரவினும் இறைவன் அருள் மண்ணுவது போல, நீ பொய்யே ஒழுகினும் அப்பெண்டிர் நின்னை ஏற்பர்; யாம் ஏலோம்; அவர் பாலே”செல்க” என்பது கருத்து. “கற்பு வழிப்பட்டவள் பரத்தை ஏத்தினும், உள்ளத்தூடல் உண்டு”2 என்பது தொல்காப்பியம். இவ்வாறு தலைவனைத் தலைவி புலந்து கூறியது பரத்தைக்கு எட்டுகிறது. அவள் தலைவியைப் புறனுரைக்கின்றாள். அச்செய்தி தலைவிக்குத் தெரிகிறது. தலைவி வெகுண்டு, “பரத்தையர் ஒரு வரல்லர், பலர் உளராயினும், தலைவன் தனக்கே உரியன் எனப்படுவன் என்பதைப் பரத்தை உணர்தல் வேண்டும்; எங்ஙனமெனின், ஒரு குளத்தில் பல்லாயிரம் ஆம்பல்கள் நெருங்க மலர்ந்திருப்பினும் தாமரையொன்று உளதாகிய வழி அக்குளம் தாமரைக் குளம் என்றே உரைக்கப்படும்” என்ற கருத்துத் தொன்ற அப் பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப, “திறமலி இன்மொழிச் செந்துவர் வாயினை, எங்கையர்க்கே மற மலிவேலோன் அருளுக, வார்சடையான் கடவூர்த், துறைமலி ஆம்பல் பல்லாயிரத்துத் தமியே எழினும், நறைமலி தாமரை தன்னது அன்றோ சொல்லும் நற்கயமே”3 என்று நவிலுகின்றாள். இனி, இத்திரு முன்மணிக் கோவைக்கண் வரும் பாட்டுக்கள் யாவும் சங்கத் தொகை நூல்களிற் காணப்படும் கருத்துக்கள் பலவற்றை உட்கொண்டு நிற்கின்றன. “மனையுறை குருவி வளைவாய்ச் சேவல் சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி ஈனில் இழைக்க வேண்டி யானா அன்பு பொறைகூர மேன்மேன் முயங்கிக் கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்” 1 என்ற இப்பாட்டுக் குறுந்தொகையில் வரும் “உள்ளூர்க்கு குரீஇத் துள்ளுநடைச் சேவல் சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும்”2 என்ற பாட்டை நினைப்பிக்கின்றது. இவ்வாறே, “பட்டோர் பெயரும் ஆற்றலுமெழுதி, நட்ட கல்லும் மூதூர் நத்தமும், பரல்முரம் பதரும் அல்லது படுமறை, வரன்முறையறியாவல் வெயிற் கானத்து ”3 என்ற மும்மணிக்கோவை, “ஆடவர், பெயரும் பீடும் எழுதி அதர் தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை வேற்று முனை கடுக்கும் வெருவருதகுந கானம்”4 என்ற அகநானூற்றுப் பாடலையும், “புனமயிற் சாயல் பூங்குழன் மடந்தை, மனைமலி செல்வம் மகிழாளாகி, ஏதில் ஒருவன் காதலனாக”5 என்ற சேரமான் பாட்டு, “கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்”6 என்ற நற்றிணைப் பாட்டையும் நினைப்பிக்கின்றன. 3. திருக்கயிலாய ஞானவுலா இஃது ஆதியுலா என்றும் திருவுலாப் புறமென்றும் சான்றோர் களால் பாராட்டப்படுகின்றது. இதனை ஆதியுலா என்று கூறுவதை நோக்கின், தமிழ் இலக்கிய வகைகளுள் காணப்படும் உலா நூல்களுள் இதுவே மிகத்தொண்மையும் முதன்மையும் வாய்ந்தது என்பது துணியப்படும். இவ்வுலா எழுவதற்கு முன் தமிழில் தனி முறையில் உலா நூல் ஒன்று இருந்தது எனத் துணிதற்குச் சான்று கிடைத்திலது. இப்போது காணப்படும் உலா நூல்களும் அவற்றின் நடை முறைகளும் இதனைப் பின்பற்றி நிற்பதோடு காலத்தால் பிற்பட்டுமே இருக்கின்றன. இறைவன் செவ்விய கோலம் பூண்டு, தேவர் பலரும் சிறப் புடைய பல பணிகளைச் செய்துவர, அவர் வேண்டு கோட்கு இசைந்து உலா வருங்கால், அவனைப் பேதை முதலாகப் பேரிளம் பெண்ணீறாக மகளிர் பலரும் கண்டு நயக்கின்றனர். அவர்கள் அனைவர்க்கும் அருள்நோக்கம் செய்து திருவுலா வந்து அமைகின்றான் சிவபெருமான் என்பது இதன் பிண்டித்த பொருளாகும். “திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதன்றங்கு அருமா லுறவழலாய் நின்ற - பெருமான் பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் ஆழாதே யாழ்ந்தான் அகலா தகலியான் ஊழா லுயராதே யோங்கினான் - சூழொளிநூல் ஓதா துணர்ந்தான் நுணுகாதே நுண்ணியான் யாது மணுகா தணுகியான் - ஆதி அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனா யழிப்பவனும் தானே - பரனாய தேவ ரறியாத தோற்றத்தான் தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான் - ஓவாதே எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான் - எவ்வுருவும் தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான்”1 சிவலோகச் சிவபுரத்துத் திருக்கோயிலுள் வீற்றிருக்கின்றான். தேவர் பலரும் வந்து அவனை வணங்கி, “எங்கட்குக் காட்சியருள்க” என்று இரந்து கேட்கின்றனர். அவ்வேண்டுகோட்கு இறைவன் இசைந்தருளுதலும், அவனையும் இறைவியையும் தேவர்களும் தேவமங்கயைரும் முறையே ஒப்பனை செய்கின்றனர். இந்திரன் முதலிய தேவர்கள் தத்தம் தகுதிக்கேற்பச் சூழ்ந்து வருகின்றனர். முன் செல்வோர் முன் செல்ல, அருகு செல்வோர் அருகு செல்லத் திருவுலாத் தொடங்குகிறது. சல்லரி, தாளம், தகுணிச்சம் முதல் முருடு ஈறாக வுள்ளபல்வகை வாச்சியங்கள் முழங்குகின்றன. இருது, யோகம், தவம் முதலாகவுள்ள குணங்கட்குரிய அதிதேவதைகள் பலவும் வந்து, “இமையோர் பெருமானே போற்றி எழில்சேர் உமையாள் மணவாளா போற்றி - எமையாளும் தீயாடி போற்றி சிவனே யடிபோற்றி ஈசனே யெந்தாய் இறைபோற்றி - தூயசீர்ச் சங்கரனே போற்றி சடாமகுடத்தாய் போற்றி பொங்கரவா பொன்னங்கழல் போற்றி - அங்கொருநாள்” ஆயவிழுப் போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் தந்த பதம் போற்றி - தூய மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றி தாள் போற்றி நிலைபோற்றி”1 எனப் போற்றிப் பூமாரி பொழிகின்றனர். பெருமான் உலாவரு கின்றான். தெருவில் பேதைமுதல் பேரிளம் பெண் ஈறாகப் பல்வகை மகளிரும் தம்மைச் செவ்வே புனைந்து கொண்டு இறைவனைத் தம் கண்ணாரக்கண்டு காமக்குறிப்பால் கருத்தழிகின்றனர். அவருள், பேதைப் பருவம் பிழையாதாள், நன்றாகத், “தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி, நீல அறுவை விரித்துடுத்துப்” புனையப் பெற்ற பந்தரில் பாவையொன்றை வைத்து விளையாடுகின்றாள்; அவளை நோக்கி, “இப் பாவைக்குத் தந்தையார்” என்று ஒருத்தி வினவ, “இதற்குத் தந்தை ஈசன், எரியாடி”2 என்று இசைக்கின்றாள். இப் பெற்றியாள் இறைவன் உலா வரக்கண்டதும் தன் பருவத்துக் கேலாத காமக்குறிப்பை எய்துகின்றாள். பெதும்பைப் பருவத்தாள் ஒருத்தி தோழியருடன் கூடி மணவில் காமனுடைய உருவம் எழுதி விளையாடிக் கொண்டிருக்கிறாள்; அவ் வுருவில் காமன் வடிவத்தை முடித்துக் கரும்பு வில்லும் மலரம்பும் தேரும் எழுதுங்கால் திருவுலா வரும் இறைவன் அவள் மனையருகே வந்த விடுகின்றான்; அவனை அவள் காண்கின்றாள். - “தாமரை, நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று நின்றறிவு தோற்று நிறை தோற்று - நான்றாக கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட நெய்விண்ட பூங்குழலாள் நின்று”1 அயர்ந்தொழிகின்றாள். ஒருபால், மங்கைப்பருவமுடையா ளொருத்தி தான் பொற்கூட்டில் வைத்துவளர்க்கும் பூவைப் புள்ளொடும் பேசி அது சொல்லும் சொல்கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கையில் தெருவில் திருவுலாவரும் இறைவனுடைய சடைமுடி அவட்குக் காட்சியளித்தது. அக்காட்சியில் உள்ளம் கசிந்து கருத்திழந்து அவ்விறைவனது. “தார்நோக்கும் தன்தாரும் நோக்கும் அவனுடைய ஏர்நோக்கும் தன்ன தெழில் நோக்கும் - பேரருளான் தோள் நோக்கும் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின் நிணோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாணோக்காது உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடை அழுந்தி வெய்துயிர்த்தாள்”2 பிறிதொருபால் மடந்தை யொருத்தி இறைவன் அழகில் ஈடுபடுகின்றாள்; அவளைத், “தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்திய சீர் வாய்ந்த மடந்தைப்பிராயத்தாள்” என்று நம் பெருமாக் கோதையார் சிறப்பித்துப் பேசுகின்றார். இறைவன் வரும்போது இவள் தன் தோழியருடன் யாழிசைத்து இறைவன் மடல்வண்ணம் பாடி மகிழ் கின்றாள். இறைவனைக் கண்டதும் அவளது எண்ணம் அவன் பால் சென்று இயைகிறது; அதனால், “தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான் கொன்றைப் பொன்னுருவங் கொண்டு புலம் புற்றாள்.”1 மற்றோரிடத்தே அரிவை யொருத்தி வீணை பண்ணிப் பரமன்பால் தமிழ் பாடத் தொடங்குகின்றாள்; அப்போது இறைவன் விடைமேல் தோன்றி காட்சி நல்குகின்றான்; அவளது கருத்து அழிகின்றது. தன் தோழியரை நோக்கி, “பொன்னனையீர், இன்றன்றே காண்பது எழில்நலம், கொள்ளேனேல், நன்றன்றே பெண்மை நமக்கு”2 என மொழிந்து கொண்டு பெருவேட்கை எய்துகின்றாள்; மேனி மெலிகின்றது; வளைநெகிழ்ந்து ஓடுகிறது; உடையும் சோர்கிறது; அதனால், “அங்கைவளை தொழுது காத்தாள் கலைகாவாள், நங்கை யிவளும் நலம் தோற்றாள்.”3 வேறோர் அரிவை தன் ஆயமகளிருடன் கவறாடிக் கொண்டிருந்தவள், திருஉலாவரும் சிவபெருமான் சடை முடி தோன்றக்கண்டு காதல் வேட்கை பெருகலுற்றாள். அவள், “தேவாதி தேவன் சிவனாயின் தேன் கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது போவானேல் கண்டால் அறிவன் எனச் சொல்லிக் கைசோர்ந்து வண்டார் பூங்கோதை வளந்தோற்றாள்.”4 இறுதியாகப் பேரிளம் பெண்ணொருத்தி உலாவரும் இறை வனைக் காண்கின்றாள். அவளைப்பற்றிக் கூறும் சேரமான். “பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள் - மண்ணின்மேல் கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள என்ற பண்டையோர் கட்டுரையை மேம்படுத்தாள் ”5 என்று பாராட்டுகின்றார். தோழியரும் பணிப்பெண்களும் தன்னைச் சூழ இருந்து செய்வனசெய்து சிறப்பிக்க. “கண்ணைவனை யல்லாது காணா செவியவனது எண்ணருஞ்சீர் அல்லது இசைகேளா - அண்ணல் கழலடி யல்லது கைதொழா அஃதான்று அழலங்கைக் கொண்டான் மாட் டன்பு”1 என்றோர் வெண்பாவை விரித்துரைக்கின்றாள். அப்போது இறைவன் தேவர்குழாம் தற்சூழ மாடமறுகில் திருவுலா வருகின்றான். அவனைக் காணும் இவளும் வேட்கை மீதுர மனம் கரைந்த மெய் வெளுத்துப் பெருமயக்கம் உறுகின்றாள். இவ்வாறு இறைவன் திருவுலாப் போந்த தெருக்களில் பெண்களின் ஆரவாரம் பெரிதாயிற்று என்பார், “பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந் தோள் செந்துவர் வாய்ப் பெண்ணாரவாரம் பெரிதன்றே- விண்ணோங்கி மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த செஞ்சடையாள் போந்த தெரு”2 என்று சேரமான் வியந்தோதுகின்றார். இனி, இவ்வுலாவிற் கூறப்படும் கருத்துக்கள் சில அந்ததியிலும் மும்மணிக்கோவையிலும் விரித்துக் கூறப்படுகின்றன. பேரிளம் பெண்பாடிய வெண்பாவே, பொன்வண்ணத் திருவந்தாதியில், “சொல்லாதன கொழுநாவல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவி மரம் தேறித் தொழாதகைமண் திணிந்த கல்லாம் நினையாமனம் வணங்காத் தலையும் பொறையாம் அல்லா அவயவந்தானும் மனிதர்க்கு அசேதனமே”3 என்பது இதற்குப் போதிய சான்று பகருகின்றது. ஒப்பு நோக்கு வோர் இவ்வாறு பல இருப்பது காண்பர். இங்கிதமாகப் பாடுவதில் சேரமான், தன் தோழரான நம்பியாரூரர் போல் சிறந்தவர். இறைவன் கங்கையைச் சடையில் கொண்டிருத்தல் கண்டும் உமை நங்கையார் அக்கங்கையின் கீழ் உறைவிடம் பெற்றிருப்பது தகவோ என்று கருத்துப்பட, “இமையோர் கொணர்ந்து இங்குஇழித்திட நீர்மை கெட்டு ஏந்தல் பின்போய் அமையா நெறிச்சென்று ஓர் ஆழ்ந்த சலமகளாய் அணைந்தே எமையாளுடையான் தலைமகளாய் 1 அங்கிருப்ப என்னே உமையாள் அவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே”2 என்று பாடுகின்றார். மேலும், இறைவன் சடை தீப்போல இருப் பதும் அதன்கண் கங்கையும் பிறையும் பாம்பும் உறைவது கண்டு, “எரிகின்ற தீயொத்துள சடை யீசற்கு அத்தீக்கு இமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலில் சரிகின்ற திங்கள் ஓர் தோணி யொக்கின்றது அத்தோணியுய்ப்பான், தெரிகின்ற திண்கழை போன்றுளதால் அத்திறல் அரவே”3 என்று பாடுகின்றார். அதன்பின், அப்பாம்பையும் பிறையையும் பார்த்து இன்பவுரையாடி நம்மை மகிழ்வுறுத்துவார், பாம்பு நெருப் புயிர்க்குமென்றும், அதனால் அப்பிறை மேனி வெதும்பிக் கங்கையில் மூழ்கிக் குளிருமென்றும், உமாதேவியார் ஊடக்கண்டு உருகும் என்றும், இறைவன் தீண்டலால் கலைநிறைந்த மண்ணையும் விண்ணையும் விளக்கும் என்றும், இவ்வாறு இறைவன் முடிமேலிருந்தும் பிறைமதி இன்பமும் துன்பமும் எய்துகின்றது என்றும் கூறுகின்றார். இதனை, “அரவம் உயிர்ப்பவழலும் அம் கங்கை வளாய்க்குளிரும் குரவங்குழலுமை யூடற்கு நைந்துருகும் அடைந்தோர் பரவும் புகழண்ணல் தீண்டலும் பாகவான் அவைவிளக்கும் விரவும் இடர் இன்பம் எம்மிறை சூடிய வெண்பிறையே”1 என விளம்புகின்றார். முடிவில் இறைவனும் இறைவியும் கூடியிருக்கும் தோற்றம் கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தை யொத்திருப்பதைக் காட்டுவது மிக்க இறும்பூது பயக்கின்றது. “பாடிய வண்டுறை கொன்றையினான் படப்பாம்புயிர்ப்ப ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறலொத்தது ஆடியநீறு, அது கங்கையும் தெண்ணீர்யமுனையுமே கூடிய கோப்பொத்ததால் உமைபாகம் கொற்றவற்கே”2 என்பது அப்பாட்டு. இவ்வாறு பலபட வரும் இங்கிதப் பாட்டுக்கள் பலவும் இன்பச்சுவையேயன்றிச் சேரமானுடைய பேரன்பையும் புலப்படுத்தி நிற்கின்றன. ஒருவர் திறமுடைய புலவராயின், அவர் வழங்கும் கருத்துக் களைப் பிறர் மேற்கொண்டு தம் புலமைச் செயலிடையே தொடுத்து இசைத்துப் பெருமை பிறங்கச் செய்வர் என்பது இலக்கிய ஆராய்ச் சியாளர் அறிந்ததொன்று. சேரமான் வழங்கிய கருத்துக்களை அவர்க்குப் பின் வந்த சான்றோர் பலர் மேற்கொண்டிருக்கின்றனர். சங்கத்தொகை நூல்கள் பலவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடிச் சேர்த்தவர் தெள்ளாறெறிந்த நந்திவன்மன் காலத்தவரான பெருந்தேவனார்; அவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனவும் கூறப்படுவர். அப்பெருந்தேவனார், நற்றிணைக்குப் பாடிய, “மாநிலம் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவம் உடுக்கையாக விசும்பு மெய்யாகத் திசை கையாகப் படர்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக இயன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரியோனே” என்ற பாட்டு நம் சேரமான்பாடிய, “பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு ஓங்கு ஓதம் உடுக்கை உயர்வான முடிவிசும்பே உடம்பு, வேதம் முகம் திசை தோள் மிகு பன்மொழி கீதம்”1 என்ற பாட்டின் கருத்தை மேற்கொண்டிருப்பதைத் தெளியக் காணலாம். இவ்வாறே, சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்க தேவர், சேரமான் அருளிய நூல்களிலிருந்து சில கருத்துக்களை வாங்கித் தம் காவியத்தின் கண் மேற்கொண்டுள்ளார். மகளுற்ற வேறுபாடு கண்டு ஆற்றாத நற்றாய் தலைவனைக் கழறல் என்ற கருத்தில், “அடிக்கண்ணி கைதொழுவார்க்கு அகன்ஞாலம் கொடுத்தடி நாய் வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண் கொன்றைக் கடிக்கண்ணியாய் எமக்கு ஓர்ஊர் இரண்டகம் காட்டினயைால் கொடிக்கண்ணிமேல் நல்ல கொல்லேறு உயர்த்த குணக்குன் றமே”2 என்று சேரமான் பாடியுள்ளார். இப்பாட்டின்கட் காணப்படும் “ஓரூர் இரண்டகம் காட்டினை” என்ற கருத்தைச் சீவக சிந்தாமணியில் திருத்தக்கதேவர், சுரமஞ்சரி சீவகனைப் புலந்து கூறும் கூற்றில் வைத்து, “கிழவனாய்ப்பாடிவந்து என் கீழ்ச் சிறையிருப்பக் கண்டேன் எழுதியபாவை நோக்கி யிமையவித் திருப்பக் கண்டேன் ஒழிக விக்காமம் ஓரூர் இரண்டஃகமாயிற்று என்று ஆங்கு அழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவி போழ்ந்திட்டவன்றே”1 என்று அமைத்துக் கொண்டுள்ளார். இம்மட்டோ, “இல்லாரை யெல்லாரும் எள்ளுவர் செல்வரை, எல்லாரும் செய்வர் சிறப்பு”2 என்ற திருக்குறளை மகளிர் ஒப்பனைக் கண்வைத்து நயப்படுத்தும் செயல் முதற்கண் நம் சேரமான்.பால் தான் காணப்படுகிறது. திருவுலாவின் கண் அரிவைப் பருவத்தாளது ஒப்பனையைக் கூறுமிடத்து, “இல்லாரை யெல்லாரும் எள்குவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பென்னும் - சொல்லாலே அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர் இடையிடையே யுள்ளுருகக் கண்டாள்”3 என்று கூறினாராக, இதனைக் கண்ட திருத்தக்கதேவர், தாம் செய்த சீவக சிந்தாமணியில் இக்கருத்தையே வைத்து அமைத்துக் கொள் கின்றார். சீவகன் நகரவீதியில் உலாவந்த போது மகளிர் பலர் தம்மை ஒப்பனை செய்து கொண்டு தெருவில் வந்து நின்று அவனை நோக்குகின்றனர். அவ்வாறு வந்த மகளிரின் ஒப்பனையைக் கூறவந்த திருத்தக்கதேவர், “செல்வர்க்கே சிறப்புச்செய்யும் திருந்துநீர் மாந்தர்போல அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகலமாய வெல்லாம் நல்கூர்ந்தார்க்கில்லை சுற்றம் என்று நுண்ணுசுப்பு நைய ஒல்கிப் போய் மாடஞ்சேர்ந்த ஒருதடங் குடங்கைக்கண்ணார்”1 என்று பாடுகின்றார். இச் சேரமான், “வருகின்ற மூப்பொடு தீப்பிணிக்கூற்றம்”2 என்றலின், பொன்வண்ணத் தந்தாதி பாடி அரங்கேற்றியகாலத்தில் மூப்புப்பருவம் எய்துகின்ற நிலையில் அவர் இருத்தலைக் காண்கிறோம்.  7. ஏனாதி சாத்தஞ் சாத்தனார் ஏனாதி சாத்தஞ் சாத்தனார் பாண்டி நாட்டுப் புலவர்களுள் ஒருவர். இவருடைய தந்தைபெயரும் சாத்தன் என்பது; அதனால் தான், இவர் சாத்தஞ் சாத்தனார் என வழங்கப்படுகின்றார். சாத்தனார் நல்ல தமிழ்ப் புலமை பெற்றிருந்ததோடு போராற்று வதிலும் தலைசிறந்து விளங்கினார். அக்காலத்துப் பாண்டிவேந்தன் அவர்க்கு ஏனாதி யென்ற பட்டம் தந்து சிறப்பித்தான். அது கொண்டே இவர் ஏனாதி சாத்தஞ் சாத்தனார் என்று பாராட்டப் படுவாராயினர். சாத்தனார் சிறந்த புலவராகவும் ஏனாதி மோதிரம் பெற்று தானைத் தலைவராகவும் விளங்கிய காலத்தில், பாண்டிநாட்டை ஆண்ட வேந்தன் பாண்டியன் நெடுஞ்சடையன் என்பானாவன். அந்நாளில் பாண்டி நாட்டுப் பாகனூர்க் கூற்றத்து வேள்விக்குடி யென்னும் ஊர்க்கு உரியனாகிய கொற்கை கிழான் காமக்காணி நற்சிங்கன் என்பவன் கூடல் நகர்க்கு வந்து அரசன் திருமுன் நின்று, தங்கள் முன்னோருள் ஒருவனான காமக்காணி நற்கொற்றனுக்குப் பண்டைப் பாண்டிவேந்தருள், முன்னோனான பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி தான் செய்த வேள்விக்கொடையாக வேள்விக் குடியை நல்கினான் என்றும், அஃது இடைக்காலத்தில் பாண்டி நாட்டிற் புகுந்து இடர்விளைத்த களப்பிரர்களால் அரசியலிற் சேர்க்கப்பட்டது என்றும், தனக்குமீள அவ்வேள்விக் குடியைப் பிரமதாயமாக நல்கவேண்டும் என்றும் விண்ணப்பம் செய்து கொண்டான். அது கேட்ட பாண்டியன். வேள்விக்குடிக்கும் அவனுக்குமுள்ள உரிமையை வேறு சான்று காட்டி நிறுவுமாறு பணித்தான்; அவனும் அவ்வாறு செய்து தன் உரிமையை நிறுவிக் காட்டினான். நாடவர் கூடிய பேரவை யில் இதனை நடுவு இருந்து கேட்ட பாண்டியன் நெடுஞ்சடையன் மறுபடியும் வேள்விக்குடி யென்னும் ஊரை நற்சிங்கனுக்குப் பிரம தாயமாக நல்கிச் செப்பேட்டிற் பொறித்துத் தந்தான். இந்நிகழ்ச்சி கூறும் செப்பேடு1 வேள்விக்குடிச் செப்பேடு என்று இன்றும் வழங்குகிறது. நெடுஞ்சடையன் அரசவையில் நிகழ்ந்த இவ்வழக்கினை நேரிற் கண்டும் வேள்விக்குடியின் தொன்மை நலத்தைக் கேட்டும் வியப்புற்ற நம் ஏனாதி சாத்தஞ் சாத்தனார் இச் செப்பேட்டில் வரும் தமிழ்ப் பகுதியாகிய பாண்டிவேந்தன் நெடுஞ்சடையனுடைய குடிவரவும், வேள்விக்குடி நிகழ்ச்சியும் பிறவும் கூறும் இனிய பாட்டினைப் பாடியுள்ளார். இதன் நலங்கண்ட சான்றோர் இதற்குப் பரிசாக இச்சாத்தனார்க்கு வேள்விக்குடி வருவாயில் ஒரு கூற்றினை வழங்கி அச் செப்பேட்டிலும் உடன் பொறித்தனர். இதனையே வேள்விக்குடிச் செப்பேடு, "இப்பிரசஸ்தி பாடின சேனாபதி ஏனாதியாயின சாத்தஞ் சாத்தற்கு மூன்று கூற்றாருமாய்த் தங்களோடு ஒத்த நான்கு படாகாரம் கொடுத்தார்"2 என்று கூறுகிறது. இச் செப்பேட்டின் தொடக்கத்தில் வடமொழியில் பிரசஸ்தியொன்று வரோதயபட்டர் என்பவரால் பாடப்பெற்றுளது; எனினும், அவர்க்குப் பரிசொன்றும் குறிக்கப் பெறாமையே, இச் சாத்தனாரது புலமை அந்நாளைச் சான்றோர்களால் பெரிதும் மதித்துப் போற்றப் பெற்றது என்றற்குச் சான்று பகருகின்றது. இவரது பிறந்தவூர் இன்ன தெனத் தெரிந்திலது. இவர் பாடியனவாக வேறு நூல்கள் கிடைத்தில. ஏனாதி சாத்தஞ் சாத்தனார் பாண்டியன் பராந்தகன் நெடுஞ் சடையன் காலத்தில் இருந்தவர்; அவ்வேந்தன் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவனென ஆராய்ச்சியாளர் துணிந்துள்ளனர்.3 எனவே, இவர் காலமும் கி.பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி யாதல் தெளிவாம். புலமை நலம் சாத்தனார் பாடிய பாட்டு, தொடக்கத்தில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி கொற்கைகிழான் நற்கொற்றனைக் கொண்டு வேள்வி செய்ததும், வேள்வி நிகழ்ந்த இடத்தை வேள்விக்குடியெனப் பெயரிட்டு நற்கொற்றனுக்கு நல்கியதும், பிறகு அது களப்பிரர்களால் திறைப்பாகியதும் கூறுகிறது. அதன்பின் பாண்டியர் வரலாறு கூறத் தலைப்பட்டுக் கடுங்கோன், மாறவன்மன், சேந்தன், அரிகேசரி, கோச்சடையன் ஆகியோரைக் கூறி நெடுஞ்சடையன் அரசியற் சிறப்புக்களை விரியக் கூறுகிறது; முடிவில் நெடுஞ்சடையன் ஆட்சி மூன்றாமாண்டில் கொற்கைகிழான் காமக்காணி நற்சிங்கன் வேள்விக் குடி பற்றி முறையிடுவதும், வேந்தன் ஆராய்ந்து வேள்விக்குடியை அவற்கு நல்குவதும் எடுத்துரைத்து அதற்குரிய எல்லைகளையும் பிறவற்றையும் உரைக்கின்றது. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வேள்விக் குடியைத் தோற்றுவித்து நல்கிய திறத்தை. "நாகமா மலர்ச் சோலைநளிர் சினைமிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமெனும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கணாளர் சொலப்பட்ட சுருதிமார்க்கம் பிழையாது கொற்கைகிழான் நற்கொற்றான் கொண்டவேள்வி முற்று விக்க கேள்வியந்தணாளர் முன்பு கேட்க என்று எடுத்துரைத்து வேள்விச்சாலை முன்புநின்று வேள்விக்குடி யென்று அப்பதியைச் சீரோடு திருவளரச் செய்தார் வேந்தன் அப்பொழுதே நீரோடு அட்டிக் கொடுத்தமையால்"1 எனச் சுருங்கக் கூறுவர். இதன் கண் சொற்கணாளர் என்பார். சொல்லும் பொருளுமாகிய இலக்கணம் வல்லுநர். கேள்வி யந்தண ராவார், வேதமோதும் வேதியர். வேதத்தைக் கேள்வியென்பது பண்டையோர் மரபு.2 அட்டிக் கொடுத்தல் என்பதை அக்காலத் தவரான நம்பியாரூரர், "ஆளிலை யெம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே"1 என்பதனோடு ஒப்பு நோக்கத் தக்கது. இனி, காமக்காணி நற்சிங்கன் பாண்டியன் நெடுஞ்சடையன் பால் முறையிட்டுக் கொண்டதும், நெடுஞ்சடையன் ஆராய்ந்து வேள்விக் குடியை நல்கியதும் ஆசிரியமும் வஞ்சியும் விரவிய நெடும்பாட்டு நடையில் கூறும் சாத்தனார் சொன்னடை பண்டையா சிரியன்மார் பாடிய நெடும்பாட்டுக்களை நினைப்பிக் கின்றன. "மாடமாமதிற் கூடற்பாடு நீத்தவர் ஆக்குரோதிக்கக் கொற்றவனே மற்றவரைத் தெற்றென நன்கு கூவி என்னேநும் குறையென்று முன்னாகப் பணித்தருள மேனாள் நின் குரவரால் பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச்சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது ஆள்வதானை யடல்வேந்தே வேள்விக்குடி யெனும் பெயருடையது. ஒல்காத வேற்றானையோடு ஓதவேலி யுடன்காத்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பரமேசுரனால் வேள்விக்குடி யென்னப்பட்டது கேள்வியில் தரப்பட்டதனைத் துளக்கமிலாக் கடற்றானையாய் களப்பிரனால் இறக்கப்பட்டது2 என்றுநின்று அவன் விஞ்ஞாப்பியஞ் செய்ய நன்று நன்றென்று முறுவலித்து நாட்டால்நின் பழமையாதல் காட்டிநீ கேள்என்ன நாட்டில்தன் பழமையாதலைக் காட்டினன் அங்கு ; அப்பொழுதே, காட்ட, மேனாளை நம்குரவராற் பான் முறையில் தரப்பட்டதை எம்மாலும் தரப்பட்டது என்று செம்மாந்து அவன் எடுத்தருளி விற்கைத் தடக்கை விறல் வேந்தன் கொற்கை கிழான் காமக்காணி நற்சிங்கற்குத் தேரோடுங் கடற்றானையான் நீரோடு அட்டிக் கொடுத்தான்"1 எனவரும் இப்பகுதி சங்க கால நெடும்பாட்டை நன்கு நினைப்பித் தலைக் காணலாம். ஏனாதி சாத்தஞ் சாத்தனார் கொழுவிய மொழிவளமும் தவாடியிட்டுச் செல்லும் பெருமித நடையும் உடையவர் என, அவர் தன் காலத்து வேந்தனான நெடுஞ் சடையன் சிறப்பை மொழியும், "மற்றவற்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு மூன்றுகொற்ற முரசுடனியம்பக் குளிர்வெண்குடை மண்காப்பப் பூமகளும் புலமகளும் நாமகளும் நலன்ஏத்தக் கலியரசன் வலிதளரப் பொலிவினோடு வீற்றிருந்து கருங்கடல் உடுத்த பெருங்கண் ஞாலத்து நாற்பெரும் படையும் பாற்படப் பரப்பிக் கருதாதுவந்து எதிர்மலைந்த காடவனைக் காடு அடையப் பூவிரியும் புனற்கழனிக் காவிரியின் தென்கரைமேல் தண்ணாக மலர்ச் சோலைப் பெண்ணாகடத்து அமர்வென்றும் தீவாய அயிலேந்தித் திளைத்தெதிரே வந்திறுத்த ஆய்வேளையும் குறும்பரையும் அடலமருள் அழித்தோட்டிக் காட்டுக்குறும்பு சென்றடைய நாட்டுக்குறும்பிற் செரு வென்றும், அறைகடல் வளாகம் ஒருமொழிக் கொளீஇய சிலைமலி தடக்கைத் தென்னவன் வானவன் "2 என்ற பகுதி நன்கு காட்டுகிறது. மேலும், இச் சாத்தனார் வடமொழியிலும் சிறந்த பயிற்சி யுடையரென்பதை. "சிரீவரன் சிரீமனோகரன் சினச் சொழியன் புனப்பூழியன் வீதகன்மஷன் விநய வச்ருதன் விக்ரம பாரகன் வீரபுரோகன் மருத்பலன் மான்யசாசனன் மனூபமன் மர்த்திதவீரன் கிரிஸ்திரன் கீதிகின்னரன் கிருபாலயன் கிருதாபதானன் கலிப்பகை கண்டக நிஷ்டுரன் கார்யதக்ஷிணன் கார்முக (பார்த்தன் பராந்தகன் பண்டித வத்சலன் பரிபூரணன் பாப பீரு குரையுறுகடற் படைத்தானைக் குணக் கிராகியன் கூட (நிர்ணயன் நிறையுறு மலர் நீண்முடி நேரியர்கோன் நெடுஞ்சடையன்"1 என வரும் தொடர்கள் காட்டுகின்றன. இறுதியாக, இவர் சிவபெருமான்பால் சிறந்த அன்பு உடையவர் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. இதனை அவர் வெளிப்படுத் தற்கு வாய்ப்பு அவர்க்கு இல்லையாயினும், அவரது சொன்னடை அதனை ஓரளவு தெரியப்படுத்துகிறது. நெடுஞ்சடையன் தந்தையாகிய தேர் மாறன் கொங்கு நாட்டைவென்று பாண்டிக்கொடுமுடி யிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று பரவிய திறம் கூறுமிடத்து. "பூவிரியும் பொழிற் சோலைக் காவிரியைக் கடந்திட்டு, அழகமைந்த வார்சிலையின் மழகொங்கம் அடிப்படுத்தும் ஈண்டொளிய மணியிமைக்கும் எழிலமைந்த நெடும்புரிசை பாண்டிக் கொடுமுடி சென்றெய்திப் பசுபதியது பதுமபாதம் (பணிந்தேத் திக் கனகராசியும் கதிர்மணியும் மனமகிழக் கொடுத்திட்டும்"2 என்பது இவர்க்குச் சிவன்பாலுள்ள அன்பைப் புலப்படுத்து கிறது. இனி, இவரைப் பற்றிக் கூறவந்த திரு.மு. இராகவையங் காரவர்கள், "இவ்வேனாதி யென்னும் அடைமொழி தந்தையும் மகனுமாகிய சாத்தர் இருவர்க்கும் சேரக்கூடியது ஆதலால், அவருள் ஒருவர் பாண்டியன் சேனாதிபதியாயிருந்தவர் என்று கொள்ளப்படும்" என்றும், "இத்தமிழ்ப் பாடலில் வட பதங்களையும் தொடர்களையும் மிகுதியாகவே இச்சாத்தஞ் சாத்தன் வழங்குகின்றார்; இவரைப் போலவே சின்னமனூர்ச் செப்பேடுகளிற் கண்ட தமிழ்ப் பகுதியைப் பாடிய புலவரும் வழங்குவர்; இதனால் அக்காலத்தே மணிப்பிரவாள நடை வழக்கு மிகுதிபெற்று அரசாங்கத்தும் பயின்று வரலாயிற் றென்பது பெறப்படுகிறது"1 என்றும் கூறுகின்றார். இவ்வாறு கூறி வருபவர், இடையே, "ஏனாதி என்பது ஸேனாதி என்பதன் திரிபாய்ப் படைத்தலைவன் என்னும் பொருளது"2 என்ற ஒரு கருத்தைப் பைய நுழைக்கின்றார். ஏனாதியென்பது சேனாதி யென்பதன் திரிபாயின், ஏனாதியினும் அச்சேனாதி என்ற சொல் வழக்கின் கண் தொன்மையுடையதாகல் வேண்டும்; சேனாபதி என்ற வடசொல் தமிழ் நாட்டில் தோன்றுதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஏனாதி என்ற சொல் தொன்று தொட்டு வந்த தொன்மை யுடையது. அதனால், ஏனாதி யென்பது ஸேனாதி யென்பதன் திரிபெனக் கூறுவதை உண்மை யறிவுடையார் ஒருகாலும் உரையார். மேலும், சேனாதிபதி, சேனைத் தலைவர், என்ற சொல் வழக்கு உண்டேயன்றிக் சேனாதி என்றொரு சொல் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்தோன்றி நிலவிய தமிழ் நூல்களில் தோன்றியதே கிடையாது; என்றும் தோன்றியிராத சொல்லோன்றை நாட்டி அதன் திரிபு இத்தமிழ்ச் சொல்லெனச் சொல்லுவது ஆராய்ச்சி யாளர்பால் மறந்தும் தோன்றக்கூடாத குற்றமாகும். அன்றியும், சேனாபதியென்ற பொருளில் இச்சேனாதி யென்ற சொல் வேறு எந்த நாட்டிலேனும் வழங்கிற்றாயின், அது தானும் ஒருவரது பதவியைக் குறித்து நிற்குமேயன்றி நன்மதிப்புக் குறியாக விளங்கும் பட்ட மாகாது; ஏனாதி யென்பது காவிதி, எட்டி முதலியன போன்ற சிறப்புப் பெயராகும். வடமொழியின் வாடை நம் தமிழகத்துள் புகுதற்குப் பன்னூறாண்டு கட்குமுன்பிருந்தே இச்சொற்கள் தமிழரிடை நிலவி வருகின்றன. அன்றியும், சேனாதி யென்பது தொழில் பற்றி நிற்பது; ஏனாதி யென்பது அரசன் தானைவீரன் ஒருவன்பால் கொண்ட நன்மதிப்பை உணர்த்தி நிற்பது, ஏனாதிப் பட்டம் பெறுவார்க்கு அரசன் தன் பெயர் பொறித்த கணையாழி நல்குவன். சேனாபதிகள் அச்சிறப்புடைய வரல்லர். "போர்க்கெல்லாம் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ் சேர், ஏனாதிப் பட்டத் திவன்"1 எனவரும் பழம்பாட்டு ஏனாதியின் இயல்பைக் காட்டும். இவ்வாற்றால் ஏனாதி யென்னும் தமிழ்ச் சிறப்புப்பெயரை ஸேனாதி என்ற வழக்கில்லாத வட சொற்றிரிபு என்பதை அறிவுடையோர் கொள்ளார். இவ்வாறே, சிலர், தூய தமிழ்ச் சொற்களை வடசொல் திரிபு எனச் சிறிதும் நாகூசாது பொய் கூறியும் எழுதியும் மகிழ்கின்றனர். அவர்களுடைய இத் தீச்செயல் தமிழிலிருந்து பிரித்துத் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்ற மொழிகளைத் தோற்றுவித்து இன்று அவற்றைத் தனியுரிமையில்லாத அடிமை மொழிகளாக்கி விட்டதை மொழி நூலறிஞர் காட்டுகின்றனர் அவை, வடமொழியறிவின்றி வளம்பெறும் தனியுரிமை இழந்து நிற்கின்றன. தமிழர், இனி, இத்தகைய வன்னெறிக்கு இடந்தரமாட்டார்கள். உரிமை வாழ்வின் சுவைகண்டவர் கழித் தொழித்த அடிமை வாழ்வை ஒருகாலும் விரும்பார் அன்றோ? ஒரு மொழியைப் பிறி தொரு மொழிக்கு அடிமைப்படுத்துவது, அம் மொழியைப் பேசும் மக்கள் உள்ளத்தை அடிமைப் படுத்தும் சூழ்ச்சி யென்பதை உலக வரலாற்றறிவு வெளிப்படுத்தி விட்டது.  8. மாணிக்கவாசகர் வரலாறு மாணிக்கவாசகரை மணிவாசகர் என்றும், திருவாதவூரடிகள் என்றும் பெருந்துறைப் பிள்ளை என்றும் சான்றோர் வழங்குவர், இவர் பாண்டிநாட்டில் திருவாதவூர் என்னும் ஊரில் சைவ அந்தணர் மரபில் தோன்றியவர். இளமையிலேயே இவர் நல்ல கல்விகேள்விகளில் சிறந்து சான்றோர் பாராட்டும் உயர்ந்த தகுதிபெற்று விளங்கினார். அக் காலத்தே ஆட்சிபுரிந்த பாண்டி வேந்தன் இவரது சிறப்பைக் கேள்வியுற்றுத் தன்பால் வருவித்து இவருடைய புலமை நலமும் சொன்னலமும் வினைத்திட்பமும் தேர்ந்தறிந்து தென்னவன் பிரமராயன் என்ற சிறப்பளித்துத் தனக்குரிய அமைச்சராக்கிக் கொண்டான். இவர்க்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவாதவூரர் என்பது. திருவாதவூரர்க்கு இளமை முதலே சிவபெருமான்பால் பேரன்பு உண்டு. பாண்டிநாட்டு அரசியலில் அமைச்சுக்கடன் பூண்டு ஒழுகிய போதும், அந்த அன்பு நாளும் பெருகிய வண்ணமே இருந்து வந்தது. இவ்வாறிக்கையில், ஆரிய நாட்டுக் குதிரை வாணிகர் சிலர் கலங்களில் பல குதிரைகளை ஏற்றிக்கொண்டு வந்து கீழ்க்கடல் துறை ஒன்றில் இறக்கியிருந்தனர். அச்செய்தி அறிந்த வேந்தன், வேண்டு மளவும் பொன் கொண்டு சென்று ஆரியநாட்டுக் குதிரைகளுள் அரியவை பலவற்றையும் வாங்கிவருமாறு வாதவூரரைப் பணித்தான். அவரும் அவ்வண்ணமே பொன்னும் பரிசனமும் உடன்வர அக்கடற் கரை நகர் நோக்கிச் செல்வாராயினர். வழியில் திருப் பெருந்துறை என்னும் ஊரை அடைந்த வாதவூரர், அங்கே ஒரு பொழிலில் நின்ற குருந்தமரத்தின்கீழே அடியார் சிலர் சூழ்ந்திருப்ப ஞானாசிரியர் ஒருவர் கையில் ஒருஞான நூலை ஏந்திக் கொண்டு வீற்றிருப்பது கண்டார். வியப்பு மிகுதியால், ஆசிரியரை அணுகிக் கையிலுள்ள நூல் யாது எனவாதவூரர் வினவவும், அவர், "இது சிவஞானபோதம்" என்று விடையிறுத்தார். பின்னர், வாதவூரடிகள் அந்நூற் பொருளைக்கேட் டுணர்ந்து "சிவபரம்பொருளே இவ்வாறு ஞானகுருவாக எழுந்தருளியுள்ளார்" என்று கருதி, அவர் திருவடிகளில் வீழ்ந்து தம்மையும் ஆட்கொண்டருளுமாறு இறைஞ்சி நின்றார். ஞான குரவரும், அன்றே அவர்பால் அருணோக்கம் வைத்து, அவர்முடிமேல் தம் திருவடி சூட்டி, ஆட்கொண்டு உண்மை ஞானத்தை உரைத்தருளினார். அது கேட்டுப் பெருமகிழ்ச்சி கொண்ட திருவாதவூரர், தாம் குதிரை வாங்குதற்குக் கொணர்ந்த பொன் அத்தனையும் ஞானாசிரியர்க்குக் காணிக்கையாக வைத்தார். ஆசிரியரும், அதனை யேற்று, "இதனைச் சிவன் கோயில் திருப்பணியிற் செலவிடுக" என ஆணையிட்டனர். வாதவூரரும் அவ்வண்ணமே அதனைத் திருப்பெருந்துறைத் திருக்கோயில் திருப்பணியிற் செலவிடலானார்; அக்காலை அவர் தம்மை மறந்தார்; தாம் குதிரை வாங்க வந்திருக்கும் கருத்தையும் கைவிட் டொழிந்தார். இச் செய்தியறிந்த பாண்டிவேந்தன், திகைப்புற்று ஓலை யொன்றை எழுதித் திருவாதவூரர்க்கு விடுத்தான். அது கண்டதும் திருவாதவூரர்க்குப் பண்டைய நினைவு தோன்றிற்று; இறைவன்பால் உண்மையைச் சொல்லி முறையிட்டு நின்றார். அப்போது, ஐந்தாறு நாட்களில் குதிரைவரும் எனப் பாண்டி வேந்தனுக்குத் தெரிவிக்குமாறு ஒரு வானொலி பிறந்தது. உடனே, பாண்டி மன்னர்க்குத் திருவாதவூரர் ஓர் ஓலை யெழுதி முன்னர்ச் செல்ல விடுத்துத் தாம் பின்னர் மதுரை சென்று பாண்டியனைக் கண்டு "குதிரை வரும்" என்று அறிவித்தார். குறித்த நாள் வருமுன்னே சிலர் பாண்டியனைக் கண்டு திருப்பெருந் துறையில் நிகழ்ந்தது முற்றும் நிரல் படக்கூறினார்; அதனை ஒற்றரால் உண்மையென உணர்ந்த வேந்தன், பெருஞ்சினம் கொண்டு திருவாத வூரரைச் சிறையிலிட்டு வருத்தினான். குதிரை வருமெனக் குறித்தநாளன்று குதிரைகள் தவறாமே வந்தன. சிவபெருமான் குதிரை வாணிகன் உருவில் வந்து வேந்தனுக்கு அக்குதிரைகளைக் கயிறு மாற்றித்தந்தார், வேந்தன் அக்குதிரை வாணிகனுக்குச் செய்ய வேண்டிய சிறப்புக்களைச் செய்து, தான் ஆராயாது செய்த தண்டத்துக்கு வருந்தித் தன்னைப் பொறுத் தருளுமாறு திருவாதவூரரை வேண்டிக்கொண்டு தன் அரண்மனை அடைந்தான், அன்றிரவு, புதியவாய் வந்த பரிகள் நரிகளாக மாறின; இருந்த குதிரைகள் அந்நரிகளாற்கடியுண்டு இறந்தொழிந்தன. வேந்தன் பெருஞ் சினம்கொண்டு வாதவூரரை மீட்டும் சிறையிலிட்டுத் துன்புறுத்தினான். அன்றிரவே வையையாறு பெருக்கு மேலிட்டு நகர்க்குட் புகுந்து இன்னல் விளைத்தது; வேந்தன் வாதவூரரை வருவித்துத் தான் அவர்க்குச் செய்த துன்பத்துக்காக வருந்தி வழிபட்டான். திருவாதவூரர் அவன் பொருட்டுச் சிவ பரம்பொருளை வணங்கிப் பரவினார். ஆற்றுப் பெருக்கின் கடுமை சிறிதுதணிந்தது. அரசியல் தலைவர்கள் ஆற்றுக்கு அணையிடுமாறு ஊரவர்க்குக் கட்டளை யிட்டனர். ஊர் மக்கள் தத்தமக்கெனப் பங்கிட்டுக் கொண்டு அணையிடத்தலைப்பட்டனர். இயன்றவர்கள் தாமே மண்ணெடுத்து வேலைசெய்தனர். இயலாதவர்கள் தமக்காகக் கூலியாட்களைக் கொண்டு செய்தனர். அக்காலையில், அந்நகரில் பிட்டு வாணிகம் செய்யும் முதியவள் ஒருத்தி தனக்கு உரிய பங்குக்கு ஆள் கிடைக்காமல் வருந்தி இறைவனை வேண்டினாள். இறைவனே கூலியாளாக உருத்தாங்கி வந்தது, அவள் தந்த பிட்டையே கூலியாகப்பெற்று, அணையில் வேலைசெய்யலுற்றார். பிட்டு வாணிச்சி சிறிது அகன்றதும், அவர் ஒரு கொன்றை மர நீழலில் உறங்குவார் போலக்கிடந்தார். முதியவள் பங்கு அடையாமை கண்டவர் வேந்தன்பால் முறையிட, அவன் மிக்க சினம்கொண்டு கையில் ஒரு கோலையேந்திக் கொண்டு அவ்விடத்துக்கு வந்து கூலியாகிய சிவபெருமானை ஓங்கிப்புடைத்தான்; அப்பெருமான் எல்லாப் பொருளிலும் உள்ளும் புறமும் ஒன்றி யிருப்பவராதலால், அந்த அடி வேந்தனுட்பட எல்லார்மேலும் பட்டது; எல்லாரும் அடி பொறுக்கமாட்டாது துடித்து வருந்தித் திடுக்கிட்டு வியந்து "இஃது, இறைவன், திருவாதவூரர் பொருட்டுச் செய்த திருவிளையாட்டு" என எண்ணிப்பரவினர். வேந்தனும் தெளிந்து திருவாதவூரர் திருவடியில் வீழ்ந்து வணங்கினான். திருவாதவூரர் திருவருள் நலம் நிறையப் பெற்ற திருத்தொண்டர் எனத் தேர்ந்து மனம் ஒடுங்கினான். பின்னர்த் திருவாதவூரர் பாண்டியனுக்குரிய அமைச்சர் என்னும் கடமையின் நீங்கி, அவன்பால் விடைபெற்றுக்கொண்டு, திருப்பெருந்துறையை அடைந்து, தமக்கு ஞானம் அருளிய ஞானாசிரியனை வழிபட்டுச் சின்னாள் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், திருவிடை மருதூர், திருவாரூர், சீர்காழி முதலிய பதிகளுக்குச் சென்று திருப்பதிகம்பாடி ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் திருக்கோயிலை வழிபட்டார். பின்பு, அவர் திருமுதுகுன்றம் திருவெண்ணெய் நல்லூர், திருவண்ணாமலை, கச்சித் திருவேகம்பம், கழுக்குன்றம் முதலிய திருப்பதிகளில் இறைவனைப் பாடிப் பரவிக் கொண்டு, தில்லைக்கு வந்து சேர்ந்து அங்கே தங்கினார். அப்போது தான், புத்தரை வாதில் வெல்லும் முகத்தால், ஈழவேந்தன் மகள், பிறவிமுதல் ஊமையாயிருந்த பெண்ணொருத்தியைப் பேசுமாறு திருச்சாழல் என்னும் திருப்பதிகத்தைப் பாடினர். ஒருகால் அந்தணர் ஒருவர் வந்து திருவாதவூரரைப் பணிந்து, அவர் பாடிய திருவாசகத்தைத் தான் எழுதிக் கொள்ளும் விருப்புடை யராதலைத் தெரிவித்தார். திருவாதவூரரும் அதற்கு இசைந்து முறையே சொல்லிவர, அந்தணரும் எழுதிக்கொண்டார். முடிவில் அவர், "பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக" என வேண்டினார். அவரும் அதை விரும்பித் திருக்கோவையாரைப் பாடியருளினர். அதனை எழுதி முடித்த அந்தணர் அதன் இறுதியில், "திருவாதவூரன் சொல்ல எழுதி னேன் திருச்சிற்றம்பலமுடையானேன்; இவை என் கையெழுத்து" என்று கையெழுத்திட்டு எடுத்துச் சென்று தில்லையம்பலத்துப் படியின் மீது வைத்துவிட்டு மறைந்தார். மறுநாள், படிமீது கையெழுத்துச் சுவடியிருக்கக் கண்டனர் தில்லை அந்தணர்; அதனை ஊரவர்க்குச்சொல்ல, அவர்கள் திருவாதவூரரைப் பணிந்து "அதனை ஓதி உரை விரித்தல் வேண்டும்" எனக் குறையிரந்து நின்றனர். திருவாதவூரர், அவர்களை அழைத்துக் கொண்டு தில்லையம்பலத்துக்குச்சென்று அங்கே திருக்கூத்தாடி யருளும் அம்பலவாணர் முன்னே நின்று, "இந்நூலுக்குப் பொருள் இவரே" எனச் சுட்டிக் காட்டினர்; அப்போது அங்கே ஒரு திப்பிய சிவப்பேரொளி எழுந்தது; அத்திருவருள் ஒளியில் மணிவாசகனார் கலந்து மறைந்தார். அவர் அருளிய திருவாசகமும் திருக்கோவை யாருமே எஞ்சின. வரலாற்றாராய்ச்சி திருவாதவூரரது வரலாறு காண்பதற்குத் திருவாலவாய் உடையார் திருவிளையாடல், பரஞ்சோதிமுனிவர் திருவிளை யாடற் புராணம், திருவுத்தர கோசமங்கைப் புராணம், திருப்பெருந் துறைப் பழைய புராணம், திருவாதவூர் புராணம், திருப்பெருந்துறைப் புதிய புராணம் என்பன துணையாகின்றன. இவற்றின் வேறாகக் கடம்பவன புராணம், சுந்தரபாண்டியம், கல்லாடம் முதலிய நூல்களும் உள்ளன. இவற்றுள் காலத்தால் முற்பட்டது திருவால வாயுடையார் திருவிளையாடற் புராணம்; அதுதோன்றியது பதின்மூன்றாம் நூற்றாண்டாகும். காலத்தாற் பிற்பட்டது திருப்பெருந்துறைப் புதிய புராணம்: அதன் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி; இதனை இயற்றியவர் திருவாவடுவதுறை ஆதீன மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள். பிற்கூறிய நூல்களுள் கடம்பவன புராணத்து இலீலாசங்கிரக அத்தியாயத்திலும், திருவுத்தர கோசமங்கைப் புராணத்துப் பார்ப்பதி தவம்புரிந்த அத்தியாயத்திலும், மாணிக்கவாசகர் வரலாறு காணப்படுகிறது. சுந்தரபாண்டியம் என்ற நூலின் இறுதிப்பகுதி கிடைக்காமையால் மாணிக்கவாசகர் வரலாறு அதன்கண் காணப்படுகின்றிலது. கல்லாடத்துச் சில அகவல்களில் திருவாதவூரருடைய வரலாற்றுக் குறிப்புக் காணப்படுகிறது. இக்கல்லாடம் காலத்தால் பழைமையான தென்பது வழக்கம். பிறப்பு திருவாதவூரர் பாண்டிநாட்டுத் திருவாதவூரிற் பிறந்தவ ரென்பது எல்லா நூலார்க்குப் ஒப்ப முடிந்த உண்மை. இவர் முற்பிறப்பில் சிவகணநாதருள் ஒருவராயிருந்தார் என்றும் பின்னர்த், திருவாதவூரில் அமாத்தியர் குடியில் தோன்றினார் என்றும் திருவால வாயுடையார் திருவிளையாடல்1 கூறும்; அதனைக் கடம்பவன புராணமும்2 எடுத்து வற்புறுத்துகிறது. திருவுத்தர கோசமங்கைப் புராணம் இம்முற்பிறப்பு வரலாற்றை விரியக்கூறுகின்றது. இவர் பிறந்த ஊரைப் பொறுத்தவரை அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை இல்லை; ஆயினும் இவருடைய தந்தை பெயர் சம்புபாதாசிருதர் என்றும் தாய் பெயர் சிவஞானவதியென்றும் திருப்பெருந்துறைப் புராணம் கூறுகிறது; ஏனை எந்நூலும் அதனைக் கூறவில்லை. அவர் காலத்தே மதுரையில் இருந்து ஆட்சிபுரிந்த பாண்டியன் இன்னானென வேறு நூல்கள் கூறதிருப்பவும், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் மாத்திரம் திருவாதவூரர் காலத்துப் பாண்டியன் அரிமர்த்தனன் எனப்படுவன் என்று இயம்புகின்றது. இனி, குதிரை வாங்குவது பற்றிய நிகழ்ச்சியில், உள்ள குதிரைகளுட் பல நோயுற்று இறந்தன; சிலவே இருந்தன என்றும் வேறுபல நோயுற்றிருந்தன. என்றும், எனவே புதியவாய்க் குதிரைகள் வாங்க வேண்டும் என்று ஓரிலட்சம் குதிரைகளாகவது நிலவேந்தர் பால் இருத்தல் இன்றியமையாது என்றும் குதிரைக் காவலர் கூற, வேந்தன் உரிய அளவு பொன் தந்து திருவாதவூரரைக் குதிரை வாங்கிவர விடுத்தானென்றும் தெரிவிக்கும் முகத்தால் திருவாலவாய் உடையார் திருவிளையாடல் வேறுபட்டுரைக்கின்றது. குதிரை வாங்குதற்குச் சென்ற திருவாதவூரர், திருப்பெருந் துறைக்குச் சென்று சேருமுன், திருக்கானப்பேர் சென்று சிவ பெருமானை வணங்கிக்கொண்டு சென்றார் எனவும், திருப்பெருந் துறையைச் சேர்ந்தபோது, அங்கே கோயிலுக்குள் குருந்தரமரத்தின் நீழலில் இருந்த ஞானகுருவைக் கண்டார் எனவும் திருவால வாயுடையார் திருவிளையாடல் கூறுகிறது. குருந்த மரத்தின்கீழ் அந்த ஞானாசிரியர் தொள்ளாயிரத்துத் தொண்ணூற் றொன்பது மாணாக்கருடன் இருந்தார் எனத் திருவுத்தரகோ சமங்கைப் புராணம் தெரிவிக்கின்றது. ஞானாசிரியர் கையிலிருந்த நூல் சிவஞான போதம் என்று திருவாதவூரர் புராணம் கூறத் திருவாலவாயுடையார் திருவிளையாடல் அதனை இன்னதெனக் கூறவேயில்லை. இந்நிகழ்ச்சியை ஆராய்ந்த திரு. மறைமலையடிகள், "இனி அருணந்திசிவனார்க்கும் அவர்தம் ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயானர்க்கும் முற்பட்ட காலத்தே, (திருவாலவாய் உடையார்)" திருவிளையாடலியற்றிய பெரும்பற்றுப் புலியூர் நம்பி இருந்தார் என்பது அதன் பதிப்பாசிரியர்1 அவரது காலம் ஆராய்ந்துரைத்த பகுதியால்2 நன்கு விளங்கா நிற்கின்றது. சிவஞான போத நூல் அருளிச் செய்த மெய்கண்ட தேவநாயனார் காலத்திற்குப் பின் வந்தவரான கடவுண் மாமுனிவர் அச்சிவஞான போதம் குருந்தமர நீழலில் எழுந்தருளிய ஆசிரியன் திருக்கையில் இருந்தது எனக் கூறுதலும், மெய்கண்டதேவர் காலத்துக்கு 3முற்பட்ட பெரும்பற்றப்புலியூர் நம்பி சிவஞானபோத நூலையாதல், அந்நூலிற் போந்த பொருளையாதல் அம்மெய்க் குரவன் அடிகட்கு (திருவாத வூரருக்கு) அறிவுறுத்தருளினார் என்று சிறிதாயினும் கூறாமையும் என்னென்று புடைபடவைத்து ஆராய்ந்து உணர்வார்க்குக் கடவுண்மா முனிவர் ஈண்டுக் கூறிய இவ்வரலாறு உன்மையன்று என்பதூஉம், அஃது அவரே கட்டிச்சொன்னதா மென்பதூஉம் நன்கு விளங்காநிற்கும்" என்று கூறுவர். திருவாலவாயுடையார் திருவிளையாடல், தாம் குதிரை வாங்கக் கொணர்ந்த பொன்னைத் தாம் விரும்பியவாறே பலர்க்கும் கொடுத்தாரென்றும், உடன் வந்த குதிரைத் தலைவர் முதலியோரை நோக்கி, "ஆடி மாதத்தில் குதிரைகள் வாரா; ஆவணியில் தான் அவை வரும்; அப்போது நல்ல குதிரைகளை நாமே வாங்கி வருவோம்; இதனைப் பாண்டி வேந்தனுக்கு உரைமின்" என்று சொல்லி விடுத்தாரென்றும் கூறுகிறது. திருவாதவூரடிகள் அரசன் ஓலையைக்கண்டு ஞானகுரவரிடம் விண்ணப்பிக்க அவர் ஒரு மாணிக்க மணியை அவரிடம் தந்து இதைக் கையுறையாகக் கொண்டு சென்று பாண்டியனுக்குத் தந்து குதிரைகள் ஆவணி மூலநாளில் வருமெனத் தெரிவிக்க என்றார் என்று திருவாதவூரர் புராணம் கூறுகிறது. மாணிக்கம் தந்த இச்செய்தி திருவாலவாயு டையார் திருவிளையாடலில் இல்லை. பிட்டுவாணிச்சியாகிய முதியவள் பெயரைச் செம்மனச் செல்வி யெனத் திருவாதவூரர் புராணம் கூறப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம், வந்தி என்று கூறுகிறது; திருவாலவாயு டையார் திருவிளையாடல் ஒரு பெயரையும் குறிக்கவில்லை. இறைவன் கூலியாளாய் வந்து உறங்குவார் போலக் கிடக்கையில் அரிமர்த்தன பாண்டியனே சென்று கோலால் அடித்தான் என்று பரஞ்சோதியார் கூறுவர். ஏனைய யாவும் அவ்வாறு கூறவில்லை. இக்கூற்றை ஆராய்ந்த உயர்திரு. மறைமலை யடிகள், "திருவாத வூரடிகளே, கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்"1 எனவும், "மண்பான் மதுரையிற் பிட்டமுது செய்தருளித், தண்டாலே பாண்டியன் தன்னைப் பணி கொண்ட, புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ" எனவும் நேரிருந்து கண்டு பாண்டியனே சிவபிரானைத் தண்டால் அடித்தனன் என்று கூறுகின்றமையின், ஏனை இரண்டு புராணங்களின் கூற்றும் இதன்கட் பிழைபடுகின்றன எனவும் பரஞ்சோதியார் திருவிளையாடற் கூற்றொன்றுமே ஈண்டுப் பொருத்த முடையதாய் நிற்கின்றதெனவும் தேர்ந்துணர்ந்து கொள்க" என்று துணிந்து கூறுகின்றார். திருவாதவூரடிகள் மதுரையினின்றும் முடிவாக நீங்கித் திருப் பெருந்துறைக்குச் சென்று சேருமளவும் கூறிய திருவாலவாயுடை யார் திருவிளையாடல், மேல் நிகழ்ந்த வரலாற்றைச் சுருங்கக் காட்டி முடித்து நிற்க, பரஞ்சோதி முனிவர், மதுரையின் நீங்கிய அடிகள் திருப்பதிகள் பலவும் வணங்கிக் கொண்டு தில்லைக்குச் சென்று அங்கே புத்தரை வழக்கில் வென்று இறைவன் திருவடி நீழலை யடைந்த திறத்தைக் கூறிமுடித்தார். இந்நிலையில், திருவாதவூரர் புராணம் ஒன்றே, அடிகள் வரலாற்றின் இறுதிப் பகுதியைச் செம்மையாய்த் கோவைப்படுத்துக் கூறுகின்றது. திருவாதவூரர் காலம் தமிழிலக்கியத் துறையில் வரும் நூலாசிரியன்மார்களுடைய காலத்தை ஆராய்வதில் மாத்திரம் அறிஞர் பலர் இதுகாறும் முயன்றுள்ளனர். அவருள்ளும் திருவாதவூரருடைய காலத்தை ஆராயும் வகையில் இந்நாட்டு அறிஞரும் மேனாட்டறிஞருமாக ஆராய்ந்தோர் மிகப் பலராவர். இந்நாட்டவருள் திருமலைக் கொழுந்து பிள்ளை, வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், T.பொன்னம்பலம் பிள்ளை முதலியோர் திருவாதவூரடிகள் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டினராவர் என்றனர். சுவாமி வேதாசலம் என்னும் உயர்திரு மறைமலையடிகள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினர் என்றனர்; கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முந்திய காலம் என்றாராக, K.G.சேஷையரவர்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றார். K.S.இராமசாமி சாஸ்திரியார் கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகலாம் என்பர். திருச்சிற்றம்பலம் பிள்ளையும் C.K.சுப்பிரமணிய முதலியாரும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கும் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கும் இடைப் பட்ட காலம் திருவாதவூரடிகள் காலமாம் என்றனர். K.A. நீலகண்ட சாத்திரியார் அடிகள் தேவாரஆசிரியர் மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர் என்றார். மேனாட்டறிஞர்களான வில்சன் (wilson) என்பாரும் G.U.போப் (G.U. Pope) பாதிரியரும் அடிகள் காலம் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டாகலாம் என்று கூற, இன்னஸ் (Innes) என்பார், மாணிக்கவாசகர் சங்கரர் காலத்துக்குப் பின் அவரை அடுத்திருந் திருப்பாராதலால், அவர் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டாகலாம் என்று கூறுகின்றார். கூடி (Guidie) என்பவர், அடிகள் காலம், கி.பி. எட்டாம் நூற்றாண்டின் நடுவிற்கும் பத்தாம் நூற் றாண்டின் நடுவிற்கும் இடையேயுள்ள காலமாகலாம் என்றார். நெல்சன் (Nelson) என்பார் புத்தர் காலத்துக்கு 1360 ஆண்டுகட்குப் பின் சைவமுனிவர் ஒருவர் கி.பி. 819-ல் ஈழநாட்டுக்கு வந்து சிவநெறியைக் கற்பித்துப் பலரைச் சைவராக்கினர் என்றும், அவர் மாணிக்கவாசகராக இருக்கலாம் என்றும், எனவே அவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமாம் என்றும்1 கூறுகின்றார். T.A.கோபிநாதராவ் அவர்கள், அடிகள் காலம் பத்தாம் நூற்றாண் டாகும் என்றும், டாக்டர் ரோஸ்டு (DR. Rost) என்பார்2 பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற் றாண்டில் இருந்தவர் என்பர். ஆயினும். M.சீனிவாச அய்யங்காரும்3 S.அனவரத விநாயகம் பிள்ளையவர்களும்4 அடிகள் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தார் என்று கூறுகின்றனர். இவ்வண்ணம் கூறப்படும் காலங்களுள் ஒன்பதாம் நூற்றாண் டென்று கூறுவோர் முடிபே பின்னர் நிகழ்ந்த ஆராய்ச்சிகளால் நன்கு வலியுறுகின்றது. அதனை ஈண்டு ஆராய்ந்து காண்பது சிறப்பாதலின் அதுபற்றிக் காட்டப்படும் கருத்துக்களை முறையே ஆராய்வாம். அடிகள் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டென்போர் நெல்சன், இன்னஸ் என்போரும், M.சீனிவாசய்யங்கார், S.அனவரத விநாயகம் பிள்ளை, K.S.சீனிவாசப் பிள்ளை, T.P.பழனியப்ப பிள்ளை முதலியோருமாவர். இவருள், இன்னஸ் (Innes) மணிவாசகர், சங்கரரை ஒட்டி அவரையடுத்துத் தோன்றியவர்; சங்கரர் காலம் கி.பி. 788- முதல் 820 வரையில் என்பர்; ஆகவே மணிவாசகர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் இருந்தவாராதல் வேண்டும் என்று கூறுகின்றார். K.S. இராம சாஸ்திரி முதலியோர் சங்கரர் கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தவரென வற்புறுத்துகின்றனர்.அவர்களது கூற்று உமையென வலியுறுமாயின், இன்னஸ் என்பார் முடிபு வேறு சான்று வேண்டி நிற்கும் குறையினை எய்தி வன்மை இழந்து விடுகிறது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அஃதாவது கி.பி. 819-ல் ஈழநாட்டுக்குச் சென்று சிவநெறியை மக்களிடையே பரப்பிப் பலரைச் சைவராக்கிய சைவ முனிவர் மாணிக்கவாசக அடிகள் என்பது நெல்சன் என்பார் கூற்று.அக்கூற்றுக்கு ஆதரவாக மணிவாசகப் பெருமான் ஈழநாட்டு வேந்தன் மகள் ஊமையா யிருந்தாளாக, அவளைப் பேசச் செய்தார் என்று கூறப்படும் வரலாற்றுக் குறிப்பை அறிஞர் நினைக்கின்றனர். மணிவாசகனார், கடல் கடந்து ஈழநாட்டுக்குச் சென்றார் என்பதை அவர்வரலாறு எவ்விடத்தும் கூறவேயில்லை. அதனால் அவர் கூற்றும் செவ்விய சான்றுகளை அடிப் படையாகக் கொள்ளாத குறையுடையதாகின்றது. இனி, அடிகள் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்ற கருத்தை வலியுறுத்தப் போந்த சான்றோர்களுள் தஞ்சை K.S. சீனிவாசப் பிள்ளையவர்கள் பல ஏதுக்களைக் கூறுகின்றார்கள்; திருவாதவூரர் அருளிய நூல்கள் திருஞான சம்பந்தர் முதலிய மூவரும் அருளிச் செயத் திருமுறைகட்குப் பின்னே வைத்து முறை செய்யப் பெற்றுள்ளன; திருஞான சம்பந்தர் முதலிய திருமுறை ஆசிரியன்மார்களைக் குறிக்கும்போது திருவாதவூரர் பெயர் நான்காவதாகவே குறிக்கப் பெறுகிறது. சமயகுரவர் நிரலில் திருவாதவூரர் நான்காமவராகக் கூறப்படுதற்கேது திருமுறை தொகுக்கப்பெற்ற முறையே யெனினும், பட்டினத்தடிகள் “வித்தகப் பாடல் முத்திறத் தடியர்” என அம்மூவரையும் முன்னர்க் கூறித் “திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளை” யெனப் பின்னர்க் கூறியிருப்பதும் ஒன்றாகும். இனி, ஒன்பதாந் திருமுறையில் கோயிற் பதிகத்தில் பூந்துருத்தி நம்பிகாட நம்பி, நாவரசரை முதலிலும், இடையில் திருஞான சம்பந்தர் சேரமான் பெருமாள் என்ற இருவரையும் இறுதியில் நம்பியாரூரரையும் பாடித் திருவாதவூரடி களைக் குறியா தொழிகின்றார். மெய்கண்டார்க் காலத்துக்கு முன்னே தோன்றிய திருக்களிற்றுப்படியா ரென்னும் நூலை யெழுதிய சான்றோர், நம்பிகாட நம்பி கூறியது போலவே திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், நம்பியாரூரர் என்ற இந்த முறையிலேயே கூறுகின்றார். திருஞான சம்பந்தரை முதலாக வைத்தும் கூறும் முறை நம்பியாண்டார் நம்பியால் அமைக்கப் பெற்றுப் பின்வந்த அறிஞர் பலராலும் மேற்கொள்ளப்பட்ட தொன்றாகும். ஆகவே, இம்முறை வைப்பைப் கொண்டு திருவாதவூரரைத் திருஞான சம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் பிற்பட்டவரென்பது நிரம்பிய வலியுடைத்தாக இல்லை. திரு. T.P. பழனியப்பபிள்ளையவர்கள் இந்நால்வரது வைப்பு முறை அவர் பாடியுள்ள திருப்பதிகங்களின் தொகை பற்றி அமைந்திருக்கலாம்1 என்பது ஈண்டுக் கருத்தக்கது. “அத்வைதம் என்று வழங்குகிற ஏகாத்ம வாதம் அல்லது மாயா வாதம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் நாட்டில் ஜனங்களால் கைக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை, அக்காலத்துக்கு முற்பட்ட தமிழ்ப் புத்தகங்களில் இதன் பெயரைக் காணோம். தேவாரங்களில் இதன் பெயர் காணப்படவில்லை. அக்காலத்தில் தமிழ் நாட்டில் பிரசாரத்தில் இருந்த மதங்களின் பெயர்கள் காணப்படுகின்றன. சங்கராசாரியார் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தவ ரென்று சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகின்றனர். அவர் காலத்தில் தான் இவர் மதம் தலையோங்கியது..... தமிழிலுள்ள நிகண்டுகளில் சூடாமணி நிகண்டு கி.பி. பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இயற்றப்பட்டது. அதற்கு முந்தியது பிங்கலம்; அதற்கு முந்தியது திவாகரம்...திவாகரத்தில் அறுவகைச் சமயங்களே சொல்லப் பட்டிருக்கின்றன; அவை, ‘வைசேடிகம், நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பௌத்தம், லோகாயதம்’” என்பன. பிங்கலத்தில் மூன்றாவது ஐயர் வகையில் புறச்சமயமாக ‘உலகாயதம், புத்தம், சமணம், மீமாஞ்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம்’ என்னும் ஆறும், உட்சமயமாக, ‘வைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம், சைவம்’ என்னும் ஆறும் கூறப்பட்டுள்ளன; சூடாமணி நிகண்டில் உட்சமயமும், புறச்சமயமும் பின் கண்டவாறு சொல்லப் பட்டிருக்கின்றன. உட்சமயமாறாவன சைவம், பாசுபதம், மாவிரதம், காளா முகம், வைரவம் என்பன; புறச்சமய மாறாவன, உலகாயதம், பௌத்தம், ஆருகதம், மீமாஞ்சை, மாயாவாதம், பாஞ்சராத்திரம் என்பன. “புறச் சமயங்களில் ஒன்றாகிய மாயாவாதம் நிகண்டுகளில் பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்தினதாகிய சூடாமணி நிகண்டில் முதலில் சொல்லப்படுகிறது. இதற்குப் பிற்காலத்தில் வைணவ சமயாசிரியர்கள் சைவ சந்தானா சாரியர்கள் இவர்களிற் பலர் மாயாவாத கண்டம் எழுதியிருக்கிறார்கள். வாதவூரடிகள் போற்றித் திருவகலில் “மிண்டிய மாயா வாதமென்னும் சண்டமாருதம் சுழித்தடித் தார்த்து” என்று சொல்லியிருப்பது இவர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்தா ரென்பதை வற்புறுத்தும்.”1 இனி, சங்கரர் காலத்தைப் பற்றி ஆராய்ந்த அறிஞருள் தெலாங் (Telong) என்பவர், அவர். கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தாரென்றும், R.G.பந்தர்க்கார் முதலியோர் சங்கரர் காலம் கி.பி. ஆறாம் நூாற்றாண்டின் முற்பகுதி யென்றும் மாக்ஸ் முல்லர் (Max Muller) முதலியோர். கி.பி. 788- க்கும் 820-க்கும் இடைப் பட்ட தென்றும், பேராசிரியர் கீத் (Prof. Keith) முதலியோர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி யென்றும் கூறுவர். K.S.இராமசாமி சாஸ்திரி முதலியோர் வேறுபட்டுக் கூறினா ராயினும், காம்போஜ நாட்டிற் காணப்படும் கல்வெட்டொன்றைக் கொண்டு K.A.நீலகண்ட சாஸ்திரி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு சங்கரர் வாழ்ந்த காலம் என்று குறிப்பது பொருத்தமாக இருக்கிறது. சங்கரர் உரைத்த அத்வைத வேதாந்தத்தை மாயா வாதமென வழங்கியதுண்டு என்பதை இராமாநுசரும் மாத்துவரும் பிறரும் குறிக்கின்றனர். ஆதலால், இங்கே பிள்ளையவர்கள் எடுத்தோதும் ஏது பொருத்தமாகவேயுளது. தமிழ் நாட்டில் சைவாகமங்கள் தேவார காலத்திற்குப் பின்பே பரவின; தேவாரங்களில் அவை ஏனை வேத வேதாங்கங்களைப் போல மிகுதியாகப் குறிக்கப்படாமையே இதற்குச் சான்று என்றும், திருவாசகத்தில் சிவாகமங்களைப் பற்றிய குறிப்பு மிகுதியாகவுளது என்றும், அடிகள் வாழ்வில் நிகழ்ந்த ஞானோபதேச நிகழ்ச்சி முதலியன ஆகமம் கூறும்முறையிற் சிறிது வேறுபட்டிருப்பதால், சைவாகம நெறி நாட்டில் சிறிது பரவியும் பரவாமலும் இருந்த காலம் அடிகள் காலம் என்றும், எனவே அடிகள் ஞானசம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் பிற்பட்டவராவர் என்றும் கூறுகின்றார். இச் சைவாகமங்களுட் சில தேவார ஆசிரியர்கட்கு முன்பும் பின்பும் மணிவாசகருக்குப் பின்பும் தோன்றியனவாதலால், அவற்றைக் கொண்டு அடிகள் காலம் தேவார ஆசிரியர்கட்குப் பின்னதாம் என்பது பொருந்தாதென்பர் உயர்திரு மறைமலையடிகள்.1 மலங்கள் மூன்றெனத் தேவார ஆசிரியர்கள் குறியாதிருப்ப மாணிக்கவாசகர் குறித்தருளுவதை எடுத்துக் காட்டி இவற்றால் அடிகள் தேவார ஆசிரியர்கட்குக் காலத்தாற் பிற்பட்டவரெனத் திரு.பிள்ளையவர்கள் கூறுகின்றார்கள். இது பொருத்தமாகவும் உண்மையாகவும் உளது. இனித் தமிழ் வரலாறுடையார், “தாழிசை, துறை, விருத்தம் என்னும் இன இலக்கியங்களைச் சங்கச் சான்றோர் கொள்ளவில்லை... தேவாரங்களில் விருத்தங்கள் காணப்படுகின்றன; திருவாசகம் திருக் கோவையார் இவற்றில் விருத்தம் துறை இரண்டு காணப்படு கின்றன” என்று கூறுகின்றார். திருவாதவூரடிகள் பாடும் பாவினங் களுள் பெரும் பலான தேவாரங்களிலும் உள்ளனவாதலால் இவ்வேது வலியுடையதாக இல்லை. அடிகள் பாண்டியன் வரகுணனைப் பாடியுள்ளார் என்றும், அவன் கி.பி. 862-8-ல் பட்டம் பெற்றெனனச் சரித்திர ஆராய்ச்சி யாளர்கள் கண்டிருக்கிறார்கள் என்றும் அவ்வரகுணனைப் பட்டினத் தடிகளும் பாடியுள்ளார் என்றும், அப்பட்டினத் தடிகளே அடிகளையும், பாடியிருக்கின்றார் என்றும் அவர் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் இருந்தவர் என்றும், எனவே, திருவாதவூரடிகள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்தவர் எனக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றார். இங்கே “சிலர் வாதவூரடிகள் சொல்லிய வரகுணன், வம்சாவளியிற் கண்ட இரண்டு வரகுணனுக்கும் முந்திய காலத்த வனாயிருக்கக் கூடாதா என்கின்றனர்”1 என்று தடையொன்று நிகழ்த்தும், திரு.பிள்ளையவர்கள் தக்க சான்று கொண்டு மறுத்து மேற்கண்ட வரகுணன் இன்னான் என்பதை வற்புறுத்தா தொழி கின்றார். இனி, M.சீனிவாச அய்யங்கார் அவர்கள் மாணிக்க வாசகரது காலம் பற்றித் திரு. K.S.சீனிவாசப் பிள்ளையவர்கள் கூறிய காரணங் களுட் பலவற்றைக் காட்டி வேறு ஏதுக்களையும் தொடுத் துரைக் கின்றார். மாணிக்கவாசகரது திருக்கோவையார் இறையனார் அகப் பொருளைப் பின்பற்றி நிற்பது. அந்த அகப்பொருளின் காலம் கி.பி. 650-க்கு முன் இருக்க முடியாது. அதற்குள்ள நக்கீரனாரது உரையின் காலம் கி.பி. 740 ஆகலாம்; ஆகவே மாணிக்கவாசகர் காலம் கி.பி. 740-க்குப் பின்பேயாகிறது. மதுரைத் தலபுராணப்படியே நோக்கினும் மாணிக்கவாசகர் கி.பி. 770-க்குப் பின்பு தான் நிலவியிருக்க வேண்டும்.2 என்பர். இக்கருத்துக்கள் வலியுடைய ஏதுக்களைக் கொண்டு சாதிக்கப் படாமையே குறை; இவற்றை அய்யங் காரவர்கள் தாமே நாட்டிக் கொண்டு செல்வது உண்மையாராய்ச் சிக்குத் துணையாகா தொழிகிற து. வாதவூரடிகள் ஈழநாட்டிற்குச் சென்று சிவநெறியை யுணர்த்தி அங்கிருந்த புத்தருட் பலரைச் சைவராக்கினர் என வாதவூர்த் தலபுராணம் கூறுகிறது என்றும், அச்செய்தி ஈழநாட்டிலுள்ள இராஜ ரத்நாகரி என்னும் நூலால் வலியுறுகிற தென்றும், அது கி.பி. 869 அளவில் நிகழ்ந்தது என்றும் அறிஞர் கூறுகின்றனர். இத் தலபுராணச் செய்தியை அடிப்படையாகக் கொண்டே திரு. நெல்சன் (Nelson) என்பார் எழுதியுள்ளார். இதுவும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட தன்று என்பது முன்பே கூறப்பட்டது. மாணிக்கவாசகர் கையாண்டுள்ள செய்யுள் நடையும் சொல் வழக்குகளும், வைணவ ஆழ்வார்களாகிய பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் முதலியோர் நடையும் வழக்கமும் முறையுமாகிய கூறுகளில் ஒத்திருத்தலால் அவர்களது காலமே இவர் காலமுமாகலாம். அவர்கள் கி.பி. 850-925-ல் இருந்தவர்கள் என்பர். இவ்வேதுவும் அத்துணைவலியுடைய தன்று என்பதை உயர்திரு மறைமலையடிகள், விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்கள்,1 ஆழ்வார்களின் கால நிலையை வரையறுத்துரைப்பதையும் திரு. அய்யங்காரவர்கள் மேற்கொள்ளவில்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் மாணிக்கவாசகர் தோன்ற வில்லை என்றும், அதனால் அவர் திருத்தொண்டத் தொகையில் மணிவாசகரைக் கூறவில்லை என்றும் கூறி, முடிவில், திருவாத வூரடிகள், வைணவ ஆழ்வார்களான பெரியாழ்வார், ஆண்டாளாகிய இருவரும் வாழ்ந்த காலத்தில் முதுமையுற்ற சிவனடியாராய் இருந் திருப்பார் என்றும், அக்காலமே இரண்டாம் வரகுணன் (கி.பி. 870) காலம் என்றும், எனவே, வாதவூரடிகள் அப்பர் திருஞான சம்பந்தர் என்ற இருவர்க்கும் இரண்டு நூற்றாண்டு பிற்பட்டவர் எனவும், சுந்தரமூர்த்தி சுவரிமிகளுக்கு 50 ஆண்டுகள் இளையர் என்றும், நம்மாழ்வார்க்கு ஒரு தலைமுறை மூத்தவரென்றும் கூறுகின்றார்.2 இனி, திரு. அய்யங்காரவர்கள், திருக்கோவையாரில் வாதவூரடிகளால் குறிக்கப்பெற்ற வரகுணன் அம்பாசமுத்திரத்துக் கல்வெட்டிற் காணப்படும் வரகுணனே என்றும், அவன் சிவன்பால் சிறந்த அன்புடையவன் என்றும் கூறி, அடிகள் அவன் காலத்தவரே என்று முடிக்கின்றார். பாண்டியர்களைப் பற்றி நிகழ்ந்துள்ள ஆராய்ச்சிகளில் இடைக்காலப்பாண்டியருள் வரகுணன் என்னும் பெயருடையார் இருவரே காணப்பட்டுள்ளனர். இவருள் முதல் வரகுணன் அம்பாசமுத்திரம் கல்வெட்டுக் குரியவன்; பின்னவனான இரண்டாம் வரகுணன் முதல்வனுக்குப் பெயரன்; திருச்செந்தூரிலுள்ள அவனது கல்வெட்டு ஒன்று தவிர வேறு ஒன்றும் இப்போது இவனைப்பற்றி அறிந்து கொள்ளற்குத் துணை செய்யவில்லை என்று பாண்டியர் வரலாறு என்னும் நூல்1 கூறுகிறது. வாதவூரடிகளாலும் பட்டினத்தடிகளாலும் நம்பியாண்டார் நம்பியாலும் குறிக்கப்படும் வரகுணன் முதல் வர குணனே என்பது, அவனுடைய திருவியலூர்,2 திருநெய்த்தானம்,3 ஆடுதுறை,4 கும்பகோணம்,5 செந்தலை,6 திருச்சிராப்பள்ளி,7 திருக்கோடிகா,8 அம்பாசமுத்திரம்,9 தளபதி சமுத்திரம்,10 கழுகுமலை,11 ஏர்வாடி12 என்ற இடங்களிலுள்ள கல்வெட்டுக்களால் வலியுறுகின்றது. இனி, இத்துறையில் முயன்ற திரு. T.P. பழனியப்ப பிள்ளை, திருவாதவூரடிகள் அருளிய போற்றித் திருவகலில் கூறியருளும் “கலையார் அரிகேசரியாய் போற்றி”13 என்பதுபற்றித் திரு. மு.இராகவையங்காரவர்கள் “அரிகேசரி யெனப் பாண்டியர் கொண்டுள்ள சிறப்புப் பெயர் சிவபிரானுக்கே ஏற்றது என்ற குறிப்புத் தோன்ற வாதவூரடிகள் பாடுதலும் இங்கு ஒப்பிட்டறியத்தகும்”14 என்று கூறினாராக, அதனைமறுத்து, அரிகேசரி என்றது ஓரிடத்தையும், அரி கேசரியாய் என்றது அங்கே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானையும் குறிக்கும்15 என்று கூறுகின்றார்; மேலும், இதனையே விளக்கலுற்று, மதுரைமாவட்டத்துச் சின்னமனூரை அரிகேசரி நல்லூர் என்றும், அங்குள்ள சிவன் கோயில் இராஜசிம் மேச்சுரம் என்றும் அவ்வூர்க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன என்றும், எனவே சின்ன மனூரென இப்போது வழங்கும் அரிகேசரி நல்லூ ரையும் அங்குள்ள இராஜசிம்மேச்சரமுடைய சிவபெருமானையுமே வாதவூரடிகள் “அரிகேசரியாய்” என்ற சொல்லால் குறிக்கின்றார் என்றும் கூறுகின்றார்.16 திருவாதவூரடிகள் அருளிய “அரிகேசரியாய்” என்னும் சொல் அரிகேசரி நல்லூர் என்னும் ஊரைக்குறிக்கும் என்பது ஒக்குமாயினும், சின்னமனூரானஅரிகேசரி நல்லூரே ஈண்டு வாதவூரடிகளால் குறிக்கப்படுகிற தென்பது பொருந்தாது. பாண்டி நாட்டில் திருநெல்வேலிமாவட்டத்தைச் சேர்ந்த கிரியம்பாபுரமும், தென்காசிப் பகுதியைச்சேர்ந்த காடுவெட்டி யென்னும் ஊரிலுள்ள கல்வெட்டுக் குறிக்கும் களக்குடி நாட்டுக் களக்குடியும், அந்நாளில் அரிகேசரி நல்லூரென வழங்கின.1 அங்கேயுள்ள சிவன் கோயில் களுக்கு அரிகேசரீச்சுரம்2 என்றும் பெயர் கூறப்படுகிறது. இவற்றை நோக்கின், அரிகேசரியாய் என்பது அரிகேசழீச்சுரமுடையாய் என்று பொருள்படுமே தவிர அரிகேசரி நல்லூரிலுள்ள இராசசிம் மேச்சுர முடையாய் என்று பொருள்படுமெனக் கொள்வது நேரிதன்று. இவற்றின் வேறாக அரிகேசரி நல்லூர் என்றே ஓர் ஊர் திருநெல் வேலிவட்டத்தில் உளது; ஆனால் அஃது இப்போது அரிகேசவ நல்லூரென வழங்குகிறது. இனி, இடைக்காலப் பாண்டிவேந்தருள் அரிகேசரி என்ற சிறப்புடையார் இருவர் காணப்படுகின்றனர்; அவருள் நெல்வேலிச் செருவென்ற நெடுமாறன் ஒருவன்; அவன் பெயரனான பராங்குசன் முதல் இராசசிம்மன் ஒருவன்; இவருள் முன்னவன் மாறவன்மன் அரிகேசரி என்றும் பின்னவன் மாறவன்மன் அரிகேசரி பராங்குசன் என்றும் கூறப்படுவர். சின்னமனூரான அரிககேசரி நல்லூரிலுள்ள இராசசிம்மேசுரத்தை எடுத்துத் தன் சிறப்புப்பெயரான அரிகேசரி யென்பதை ஊர்க்கும், இராசசிம்மன் என்ற பெயரைத் தான் எடுத்த கோயிற்கும் வழங்கியிருக்கலாம். இனி, திருநெல்வேலி வட்டத்துக் கிரியம்பாபுரத்திலும் கரவந்த புரம் எனப்படும் களக்குடியிலும் உள்ள சிவன் கோயில்களுக்கு அரிகேசரீச்சுரம் என்ற பெயர் காணப்படுகிறது. அரிகேசரியான முதல் இராசசிம்மன் எடுத்தவை அரிகேசரீச்சுர மெனப்படாது இராசசிம்மேச்சுரமென்றே வழங்குவதைச் சின்னமனூர்க் கல்வெட்டுக்களும் கோட்டைக்கருங்குளத்துக் கல்வெட்டுக்களும் குறித்தலால், அரிகேச ரீச்சுரம் எனப்படுபவை, இராசசிம்மனுக்குப் பாட்டனும் நெல்வேலிச் செருவென்ற நின்ற சீர்நெடுமாறனுமாகிய மாறவன்மன் அரிகேசரியால் எடுக்கப்பட்டனவாதல் வேண்டும்; அல்லது, அவன் மகன் நெடுஞ்சடையனான இரண தீரனால் தந்தைபெயரால் எடுக்கப்பட்டன வாதல் வேண்டும். மேலும், இடைக்காலப் பாண்டியர்களால் சீர்த்த காப்பமைந்த கடிநகரமாய்ச் சிறப்பாய்ப் போற்றப்பெற்றது களக்குடியான கரவந்தபுரமாகும். நெடுஞ் சடையனான பராந்தகன் வேள்மன்னனை வென்று பெற்ற பொன்னும் பொருளும் கொணர்ந்து, “பொன்மாட நெடுவீதிக் கரவந்தபுரம் பொலிவெய்தக் கண்ணகன்ற தோர் கல்லகழோடு விசும்பு தோய்ந்து முகில் துஞ்சலின் அசும்பறாத அகன் சென்னி நெடுமதிலை வடிவமைத்தும் ” சிறப்பித்தான் என அவனுடைய செப்பேடுகள் கூறுகின்றன. இவ்வாற்றால் கலைவளம் செறிந்த பெருநகராய் விளக்க முற்ற கரவந்த புரத்து அரிகேசரீச் சரத்தையே ஈண்டுத் திருவா தவூரடிகள் திருவுள்ளத்திற் கொண்டு, அரிகேசரீச்சுரமுடைய சிவபெருமானைக் “கலையார் அரிகேசரியாய் போற்றி” எனறார் என்று கோடல் சீரிதாம். இனி இடைக்காலப் பாண்டிவேந்தருள் வரகுணன் என்ற பெயருடையார் இருவர் உள்ளனர்; ஒருவன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியனுக்கு மகனாவன்; அவனைச் சின்ன மனூர்ச் செப்பேடுகள் “கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்” என்று புகழ்ந்து கூறுகின்றன; இவனை முதல் வரகுணன் என்றும் இவன்காலம் கி.பி. 792 முதல் 835 என்றும் திரு.சதாசிவபண்டாரத்தார் முதலியோர் கூறுகின்றனர். மற்றவனை இரண்டாம் வரகுணன் என்றும் அவன்காலம் கி.பி. 862 முதல் 880 என்றும் கூறுகின்றனர். அவன் முதல் வரகுணனுக் குப் பெயரனும் சீமாறன் சீவல்லபனுக்கு மகனுமாவான். அவனைச் சின்னமனூர்ச் செப்பேடுகள்,”குரைகழற் கால் அரசு இறைஞ்சக் குவலயதலம் தனதாக்கின, வரைபுரையும் மணிநெடுந்தோள் மன்னர் கோன் வரகுணவர்மன்” என்று கூறுகின்றன. இச்செப்பேட்டுத் தொடர்களே இரண்டாம் வரகுணனைவிட முதல் வரகுணனை உயர்த்தி “மகாராசன்’ என்று கூறுவது குறிக்கத் தக்கது. முதல் வரகுணன் ஆட்சியில் தோல்வியே இல்லாதிருக்க, இரண்டாம் வரகுணன் சோழநாட்டுத் திருப்புறம்பயப் போரில் தோல்வி எய்தித்தன் பாண்டி நாட்டுக்குத் திரும்பி ஓடிய செய்தி சிறந்த நிகழ்ச்சியாகவுளது. இந்நிலையில் நம்பியாண்டார் நம்பிகள் தாம் கேள்வியுற்ற செய்தி யொன்றை விளங்கக்கூறுகின்றார். வரகுணபாண்டியன் போர்க்களம் புக்கபோது பகைவர் எறிந்த கணைகள் அவன் மேல் படாது வளைந்து திருவடியில் வீழ்ந்தன; அது கண்டிருந்த கோயில் அடியார்கள், வரகுணமகாராசர் சிவன்பாற் பெரிய அன்புடையர்; பகைவர்விட்ட கணைகள் அவர் திருவடிகயில் வீழ்வது தக்கதே என்று பரிந்து பேசிப்பாராட்டினர். இதனை, “பொடியேர் தருமேனியனாகிப் பூசல்புக அடிக்கே, கடிசேர்கணை குனிப்பக்கண்டு கோயிற் கருவியில்லார், அடியே பட அமையும் கணை என்ற வரகுணன்” என்று பாடிக்காட்டு கின்றார். இப்பாட்டுக்குரியவன் முதல் வரகுணனேயா தல் தெளியப் படும். படவே, திருவாதவூரடிகள், “வரகுணனாம் தென்ன வனேத்து சிற்றம்பலத்தான்” என்றும், “சிற்றம் பலம் புகழும் மயலோங்கு இருங்களியானை வரகுணன்” என்றும் குறிக்கும் வரகுணன் முதல் வரகுணன் என்பதும் தெளிவாம். இவ்வாற்றால் திருவாத வூரடிகள் முதல் வரகுணன் காலத்தவரென்று கோடலே சிறப்பு. திரு.T.P.பழனியப்ப பிள்ளையவர்கள், அடிகளாற் குறிக்கப் படும் வரகுணன் இரண்டாம் வரகுண பாண்டியனே என்பாராய், முதல் வரகுணனுடைய போர்ச் செயல்கள் பலவும் வேணாட்டரச ரோடும், மேலைக் கொங்கு நாட்டு அதிகர்களோடும் அமைகின்றன என்றும், பின்னவனான இரண்டாம் வரகுணன் செயல்கள் இடவை, வேம்பில் திருப்புறம்பயம் என்ற சோழநாட்டு ஊர்களில் நிகழ்ந்திருக்கின்றன என்றும், திருவாதவூரடிகள் சிற்றம்பலம் பரவிய வரகுணன் எனத் திருக்கோவையாரில் சிறப்பிக்கும் வேந்தன் இரண்டாம் வரகுண னேயாவன் என்றும் கூறுகின்றார். ஆனால், முதல்வரகுணவேந்தனது வரலாற்றை ஆராய்ந்த திரு. T.V. சதாசிவப் பண்டாரத்தாரவர்கள், “வரகுண மகாராசனது ஆட்சியின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் சோழநாட்டிலுள்ள திருவியலூர் திருநெய்த்தானம் என்னும் ஊர்களிலும், எட்டு பத்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள் திருச்சிராப்பள்ளி திருக்கோடிகா என்ற ஊர்களிலும், ஆண்டு அழிந்துபோன கல்வெட்டொன்று திருச்சோற்றுத் துறையிலும் இருத்தலால் சோழ மண்டலம் முழுவதும் இவனது ஆட்சிக்குட் பட்டிருந்தமை நன்கு புலனாகின்றது. அன்றியும் கி.பி. 775 முதல் 826 வரையில் அரசாண்ட பல்லவ வேந்தனாகிய தந்திவர்மன் கல்வெட்டுக்கள் சோழ மண்டலத்தில் காணப்படவில்லை; எனவே, அப்பல்லவனது ஆட்சியில்தான் வரகுண மகாராசன் சோழ நாட்டின் மேல் படையெடுத்து அதனைத் தன் ஆளுகைக்கு உள்ளாக்கியிருத்தல் வேண்டுமென்பது தெள்ளிது” என்று கூறுகின்றார். இரண்டாம் வரகுணன் சோழநாட்டுக்குப் படை கொடுவந்ததற்குக் காரணம், அவன் தந்தையான சீவல்லபன் காலத்தில் முதல் வரகுணன் வென்ற சோழநாட்டுப்பகுதி கையிழக்கப் பெற்றது என்றும் இடவை நகர்க்கண் முதல் வரகுணன் அமைத்திருந்த அரண் மனையும்பிறவும் மீள வென்று கொள்வதற்கு ஏற்ற வாய்ப்பு உண்டாகியிருந்தது என்றும் திரு.பண்டாரத்தவர்கள் கூறுகின்றார்கள். இடவை, வேம்பில் என்ற இடங்களில் வெற்றி பெற்றும் திருப்புறம்பயப் போரில் இரண்டாம் வரகுணன் பெருந் தோல்வி எய்தித் தன் பாண்டி நாட்டிற்குத் திரும்பியோடிய செய்தியை வரலாறு கூறுகிறது. திருவாதவூரடிகள் அருளிய திருவாசகம் திருக்கோவை என்ற நூல்களும் பட்டினத்தடிகள் வழங்கும் பொருளுரைகளும் திருவிடை மருதூர்த் தலபுராணமும் பிறவும் கூறுவனவற்றைக் காண்போர், திருவிடைமருதூர் தில்லை ஆகிய இடங்களில் வரகுணவேந்தன் நெடிது தங்கிச் சிவப்பணி புரிந்து சிறந்தான் என்பதை நன்கறிவர்; திருப்புறம் பயப்போரில் தோற்றோடிய வரகுணவேந்தன் சோழ நாட்டில் தங்கிச் சிவத்தொண்டு புரிந்து “சிவலோகம்” பெற்றான் என்பது வரலாற்றுக்கும் உண்மைக்கும் மாறுபடுகிறது; மற்று, முதல் வரகுணமகாராசர் அவ்வாறு தங்கி மேம்படுதற் கேற்ப வரலாறு அமைந்திருப்பது காணுங்கால், அடிகளார் சிறப்பிக்கும் வரகுண பாண்டியன் முதல்வனே என்பது தேற்றமாம். இனி, திருவிடைமருதூர்க் கோயிலிலுள்ள, கல்வெட்டு ஒன்றை1 க்காட்டி, அதன்கண், “உடையார் திருவிடை மருதூருடை யார் திருக்கற்றளியில் மாணிக்கக் கூத்தற்கு அமாவாசி தோறும்” என்ற தொடரில் காணப்படும் “மாணிக்கக் கூத்தன்” என்ற பெயரருமை அடிகள் உள்ளத்தில் நன்கு பதிந்திருந்தது என்றும், அதனால் அவர் தாம் பாடிய திருவாசகம் திருக்கோவைகளில் பன்முறையும் மாணிக்கக் கூத்தன் என்ற பெயைரப் பரிந்தோதி இன்புறுகின்றார் என்றும் கூறி, இவ்வாற்றால் எல்லாம் அடிகள் இரண்டாம் வரகுணன் காலத்த வராவர் என்றுவற்புறுத்துகின்றார் திரு.T.P.பழனியப்பப் பிள்ளை. அவர் காட்டும் கல்வெட்டு, கி.பி. பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த முதல் இராசராசனது ஆட்சியாண்டு பதி னெட்டுக்குப் பின்தோன்றியதாகும்; அக்கல்வெட்டுத் திருவிடை மருதூரை, “உய்யக்கொண்டார் வளநாட்டுத் திரை மூர் நாட்டுத் திருவிடைமருது” என்று குறிப்பதனால் இது விளங்குகிறது. உய்யக் கொண்டான் என்பது, முதல்இராசராசனுடைய சிறப்புப் பெயர்களுள் ஒன்று; அவன் சோழநாட்டைத் தன் ஆட்சியிற் பதினெட்டாமாண்டில் வளநாடாகப் பிரித்த காலத்தில் காவிரிக்கும் அரிசிலாற்றுக்கும் இடைப்பகுதியை உய்யக் கொண்டார் வளநாடு எனப்பிரித்துப் பெயரிட்டான். அதற்கு முன்னெல்லாம் இத்திரை மூர்நாடு தென்கரைத் திரைமூர்நாடு என்றே வழங்கி வந்திருக்கிறது. “ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பரகேசரி பன்மற்கு ஆண்டு 16-வது தென்கரைத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதில்”2 எனவரும் திருவிடைமருதூர்க் கல்வெட்டே இதற்குச் சான்று பகர்கிறது. இதனால் இக் கல்வெட்டு மணிவாசகப்பெருமான் காலத்துக்குப் பிற்பட்ட தென்பது தெளிவாம். இதன்கண் வரும் மாணிக்கக் கூத்தன் என்ற திருப்பெயர், அடிகள் வழங்கியது என்றும், இதனை நயந்து கண்ட அக்காலத்துச் சான்றோர் இறைவனை இப் பெயரிட்டுப் போற்றிக் கல்லில் பொறித்துக் கொண்டனர் என்றும், இவ்வாறே திருஞான சம்பந்தர் முதலி பெருமக்கள் வழங்கியருளிய சொற்றா டர்களால் இறைவனைப் போற்றிப் பாராட்டிக் கல்லில் பொறிப்பது வழக்கம் என்றும் தெளிய உளங்கொள்ள வேண்டிய உண்மையாகும். இதுகாறும் செய்து போந்த ஆராய்ச்சிகளால் திருவாத வூரடிகள் திருஞான சம்பந்தர் முதலிய மூவர்க்கும் காலத்தால் முற்பட்டவரல்லர் பிற்பட்டவரே என்பதும், அவராற் சிறப்பிக்கப் பெற்ற வரகுண மகாராசன், இரண்டாம் வரகுணனல்லன் முதல் வரகுணனே என்பதும், எனவே அவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்து சிறந்தவர் என்பதும் தெளிவாய் விளங்கு கின்றன. இனி, திரு. T.P.பிள்ளையவர்கள், தில்லையம்பலத்தில் திருமால் கிடந்த கோலமாய் விளங்குவதை, “புரங்கடந்தான் அடிகாண் பான் புவி விண்டு புக்கு அறியாது இரங்கிடு எந்தாய் என்று இரப்பத் தன் ஈரடிக்கு என் இரண்டு கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கு அதுங் காட்டிடு என்று வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில் அம்மாயவனே”1 என்று திருக்கோவையாரில் குறித்தருளியிருப்பவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், சேரமான் பெருமாள் முதலியோரும் திருமழிசை ஆழ்வாரும் தில்லையில் திருமால் இருக்கும் இருப்பைக் குறிக்க வில்லை என்றும், தில்லைக் கோயிலிலுள்ள திருமால் கோயிற் பகுதியாகிய திருச்சித்திரகூடம் அவர்கள் காலத்துக்குப் பின்னே தோன்றியது என்றும், திருமங்யைாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருச்சித்திரகூடத்தைப் பாடியிருக்கும் திறத்தை யெடுத்துக்காட்டி, அவர் பாட்டுக்களால் அச்சித்திரகூடம் அவர்கள் காலத்தே புதுவதாக எடுக்கப்பட்ட தெனத்தெரிகிற தென்றும், திருமங்கையாழ்வார் காலத்தவனான நந்திவன்ம பல்லவ மல்லனே இச் சித்திரகூடத்தைக் கட்டியிருக்க வேண்டும் என்றும், அவன் காலம் கி.பி. 710-775 என்றும், எனவே அடிகள் காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்பேயாம் என்றும் கூறுகின்றார். எல்லாச் சிவன் கோயில்களிலும் சிவனை நடுவில் வைத்துச் சுற்றிலும் ஐந்து நிலங்கட்கு முரிய முருகன், திருமால், துர்க்கை, இந்திரன், வருணன் என்ற தெய்வங்களைப் பரிவாரமாக நிறுவுவது பண்டையோர்மரபு. பின்னர், இந்திரன் வருணன் என்ற இருவரையும் விமானங்களில் இடம் பெறுவித்து, திருக்காமக் கோட்டமுடைய தேவியையும் விநாயகரையும் திருமகளையும் பரிவாரமாக நிறுவின ரென்பது, காமிகம், காரணம் என்ற ஆகமங்களால் உணரப் பெறுவதொன்று. இவ்வகையில் திருமால் கோயில் பண்டு தொட்டே சிவன் கோயில்களில் இருந்து வருதலின் தில்லைக் கோயிலில் இருந்த திருமாலுக்கு நந்திவன்ம பல்லவமல்லன் காலத்தில் திருச்சித்திரகூடம் என்ற பெயரால் கோயிலெடுக்கப் பெற்றது. இதனைத் திரு. பிள்ளையவர்கள் தக்க சான்று காட்டி நிறுவுவது போற்றத்தக்கது. இதனை, திரு. மு. இராகவையங்கார் அவர்களும் தாம் எழுதிய “ஆழ்வார்கள் காலநிலை” என்ற நூலில் முன்னமே ஆராய்ந்து காட்டியுள்ளார்கள். திருவாதவூரடிகளுடைய நூல்கள் இதுகாறும் கூறிப் போந்தவாற்றால் திருவாதவூரடிகள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சி புரிந்த முதல் வரகுணன் காலத்தில் வாழ்ந்து இரண்டு அரிய நூல்களைச் செய்தருளியுள்ளார்கள் என்பது இனிது விளங்கிற்று. அவை திருவாசகமும் திருக்கோவை யாருமாகும். அவற்றுள், திருவாசகம் என்பது, அடிகள் ஆங்காங்குப் பாடிய திருப்பதிகங்களின் தொகுதி யாகும். திருக்கோவையார் என்னும் நூல்மாத்திரம் நானூறு கட்டளைக் கலித்துறைகளால் நானூறு அகப் பொருள் துறைகளைப் பொருளாகக் கொண்டு எழுந்த கோவை நூலாகும். இத் திருக்கோவையாரைத் திருவாதவூரடிகள் பாடவில்லை என்றும், நம்பியாண்டார்நம்பி, தாம் பாடிய கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தில் “திருவாதவூர்ச் சிவபாத்தியன் செய் திருச்சிற்றம்பலப் பொருளார் தரு திருக்கோவை” என்றவிடத்தில் திருவாதவூர்ச் சிவ பாத்தியன் என்றது திருவாதவூரடிகளையன்று, அது வேறே ஒருவரைக் குறிக்குமென்றும் சிலர் கூறுகின்றனர். இக்கூற்றைத் திரு.பிள்ளையவர்கள் தக்க காரணங்க காட்டி மறுக்கின்றார். ஈழநாட்டுக் கொழும்பிலுள்ள பொருட்காட்சிச் சாலையில் திருவாதவூரடிகளின் திருவுருவம் ஒன்று இடக்கையில் ஓலைச்சுவடி யொன்றைப் பற்றிக் கொண்டிருக்கும் வகையில் அமைந்துளது; அச்சுவடியின்மேல் “நமச்சிவாய” என்பது பொறிக்கப்பட்டுளது; தஞ்சை மாவட்டத்து மதுக்கூரில் காணப்பட்டுச் சென்னைப் பொருட்காட்சிச்சாலைக்குக் கொணரப்பட்ட திருவாதவூரடிகள் திருவுருவம் ஒன்று இடக்கையில் ஓலைச்சுவடி யொன்றை ஏந்திக் கொண்டிருக்கும் வகையில் அமைந் துளது; அச் சுவடியின் மேல் “ஓம் திருவளர் தாமரைசீ” என்ற குறிப்புப்பொறிக்கப் பட்டுளது என்று கூறி இவையிரண்டும் கி.பி. பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டினவாகலாமென்றும் கூறு கின்றார். நமச்சிவாய என்று பொறிக்கப்பெற்ற சுவடி திருவாசகத்தையும் மற்றையது திருக்கோவையாரையும் குறித்து நிற்பது யாவரும் இனிதறியக் கூடியதொரு செய்தியாகும்; ஆகவே, ஓவிய நெறியாலும் வழக்காற்றாலும் திருக்கோவையாரைப் பாடிய ஆசிரியர் திருவாத வூரடிகளே என்பது தெற்றென விளங்கவும் இல்லையென மறுப்போரது மறுப்புரை “உலகத்தோர் உண்டென்பது இல்” என்பார் கூற்றாய்ப் புறக்கணிக்கப்பட வேண்டிய தொன்றேயாகிறது. இனி, திருவாசகத்தில், சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் ஈறாக ஐம்பத்தொரு பகுதிகள் உள்ளன. இவற்றுள் சிவபுராணம், அற்புதப்பத்து, அதிசயப்பத்து குழைத்தபத்து, சென்னிப்பத்து, ஆசைப் பத்து, வாழாப்பத்து, அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, புணர்ச்சிப் பத்து, அருட்பத்து என்ற இவற்றைத் திருவாதவூரடிகள் பாண்டியன் பால் முடிவாக விடைபெற்றுக் கொண்டு திருப்பெருந் துறையை அடைந்து ஞானகுரவனைக் கண்டு வழிபட்டு, அந்த ஞானகுரவர் மறைந்தபின் அங்கேயே அடியார் கூட்டத்தோடு தங்கியிருந்து பாடினர் என்றும், திருவார்த்தை, எண்ணப்பதிகம், திருவெண்பா, பண்டாய நான்மறை,1 திருப்பள்ளி யெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப்பத்து, பிரார்ர்தனைப் பத்து திருப்பாண்டி விருத்தம் என்ற பதிகங்களைப் பின்னர்ப் பாடின ரென்றும், பின்னர் ஒரு நாள் பொய்கையில் தீப்பிழம்பு தோன்றக் கண்ட ஏனை அடியார்கள் திருவைந்தெழுத்தை யோதிப் பொய்கையில் மூழ்கி ஆங்குக் காட்சியளித்த சிவ பரம்பொருளின் திருவருள் ஒளியில் கலந்து கொள்ளவும், கொன்றை மரம் ஒன்றின் நீழலில் தனித்திருந்து சிவயோகம் புரிந்து கொண்டிருந்த அடிகள் தாம் மாத்திரம் தனித்து நின்றொழிந்தமைக்கு வருந்தி யழுத காலையில் திருச்சதகத்தைப் பாடினர் என்றும், பிறகு ஞானகுரவர் ஆணைப் படியே திருவுத்தர கோசமங்கைக்குச் சென்று குரவரது காட்சி யெய்தப் பெறாது வருந்திய காலத்தில் நீத்தல் விண்ணப்பத்தைப் பாடினர் என்றும், திருவாரூர்க்குச் சென்ற போது திருப்புலம் பலையும், சீர்காழியில் பிடித்தபத்து என்னும் திருப்பதிகத்தையும், திருவண்ணாமலைக்குச் சென்று தங்கியிருக்கையில் மார்கழித்திங்கள் வரக் கண்ட மகளிர் மார்கழி நீராடும் திறத்தைக் கண்டு அந்நீராட்டு முறையிலே திருவெம்பாவையையும், அந்நகரி டத்தே மகளிர் அம்மனையாடுவது கண்டு திருவம்மானை யென்னும் திருப்பதிகத் தையும், திருக்கழுக்குன்றம் சென்று தங்கியிருக்கையில், திருக்கழுக் குன்றப் பதிகத்தையும், தில்லைக்குச் சென்று கண்டபத்து, குலாப் பத்து, கோயிற்றிருப்பதிகம், கோயின்மூத்த திருப்பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்பன வற்றையும், நகரில் மகளிர் பொற் சுண்ணம் இடிப்பது கண்டு அம்முறையில் திருப்பொற் சுண்ணம் என்னும் பதிகத்தையும், பின்னர், திருத்தெள்ளேணம், திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல், அன்னைப்பத்து, திருக்கோத்தும்பி, குயிற்பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து என்பவற்றையும் பாடினர் என்றும், ஈழவேந்தன் மகளைப் பேசுவித்த காலையில் திருச்சாழல் பாடினரென்றும், பின்னர், திருப்படையாட்சி, திருப்படை யெழுச்சி, அச்சோப்பத்து, யாத்திரைப்பத்து ஆகியவற்றைப் பாடினரென்றும் திருவாதவூரர் புராணம் கூறுகிறது. இனி, திருவாலவாயுடையார் புராணம், அடிகள் திருப்பெருந் துறையில் ஞானகுரவரைக் கண்டு அவரது ஞானவுரை கேட்டு வணங்குகையில், அவர் பாடுமாறு ஆணையிடவும், அடிகள், அற்புதப் பத்து, சென்னிப்பத்து அச்சோப்பத்து என்ற மூன்றையும் பாடின ரெனவும், ஞானகுரவர் அடிகட்கு ஏனையடியார்களை சுட்டிக் காட்டிய காலத்தில், அதிசயப் பத்தைப் பாடினரெனவும், ஞானகுரவர் அடியார்களோடு மறைந்த காலத்தில், கோயிற்பத்து, புணர்ச்சிப் பத்து, செத்திலாப்பத்து பிரார்த்தனைப்பத்து ஆசைப்பத்து உயிருண்ணிப்பத்து திருப்புலம்பல் வாழாப்பத்து எண்ணப்பத்து என்ற பதிகங்களைப் பாடினரெனவும், திருப்பெருந்துறை நகர்க்கண் நிகழ்ந்த காட்சிகளைக் கண்ட அடிகள், திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருவெம்பாவை, திருச்சதகம் என்ற இவற்றைப் பாடின ரெனவும், பாண்டியன் விடுத்த ஓலை கண்ட அடிகள் திடுக்கிட்டுப் பெருந்துறைக் கோயிலுக்குட்சென்று இறைவன் திருமுன் நின்று திருப்பள்ளி யெழுச்சி பாடின ரெனவும், மதுரையில் பாண்டியானால் சிறையிடப் பெற்ற போது சிறைக் கோட்டத்துக்கு உள்ளிருந்தே குழைத்தபத்து, அருட்பத்து என்ற இரண்டையும் பாடினரெனவும், குறித்த காலத்தில் குதிரை வாராமை கண்டு பாண்டியன் அடிகளைத் துன்புறுத்திய போது, அடைக்கலப்பத்தையும், அங்கே ஒரு மரத்தில் தங்கியிருந்த குயிலொன்றைப் பார்த்துக் குயிற்பத்தையும் பாடின ரெனவும், இறைவன் குதிரைச் சேவகனாய் வந்தது கண்டு அன்னைப் பத்து என்ற பதிகத்தையும், பாண்டியன் பரிசு நல்கியது கண்டு பிடித்தபத்து என்ற பதிகத்தையும், பின்பு பரிகளெல்லாம் நரிகளாய் ஓடிப்போன போது அடிகளை வேந்தன் சிறையிட்ட காலத்தில் திருவேசறவு என்ற பதிகத்தையும், முடிவில் பாண்டியன்பால் விடை பெற்றுப் போந்த அடிகள் சொக்கேசர் திருக்கோயிற்குச் சென்ற போது சிவபுராணத்தையும் பாடினாரெனவும் கூறுகிறது. இனி, இப்போது நிலவும் திருவாசக நூலைக் காணுங்கால், அதன்கண், அடிகள் திருப்பெருந்துறையில் பாடியன அற்புதப்பத்து முதல் திருப்பள்ளி யெழுச்சி யீறாகவுள்ள இருபத்து மூன்றும் என்றும், மதுரையில் பாடியன குழைத்த பத்து முதல் சிவபுராணம் ஈறாக எட்டும் என்றும், திருவுத்தர கோசமங்கiல் பாடியது நீத்தல் விண்ணப்பம் என்றும், திருக்கழுக்குன்றத்திற் பாடியது திருக்கழுக் குன்றப்பதிகம் என்றும், தில்லையில் பாடியன ஏனைப் பதினெட்டும் என்றும் காணலாம். இவற்றைக் காணுமிடத்து, திருவாதவூரடிகள், மதுரையிற் பாடியதாக ஒரு திருப்பதிகத்தையும் குறிக்காமல், அடிகள், திருவுத்தர கோசமங்கைக்குச் சென்று பின் திருக்கழுக் குன்றம் அடைந்து முடிவில் தில்லை சென்று சேர்ந்தாரெனத் திருவாலவாயுடையார் புராணம் கூறுவதும், மேற்கூறிய திருப்பதி கட்கேயன்றி, திருவாரூர், திருத்தோணி புரம், திருவண்ணாமலை, திருவேகம்பம் ஆகிய திருப்பதிகட்குச் சென்றாரென்றும், திருவாரூர், திருத்தோணிபுரம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு திருப்பதிகமும் திருவண்ணாமலையில் இரண்டு பதிகங்களும் அடிகள் பாடியருளினர் என்று திருவாதவூரர் புராணம் கூறுவதும் பிறவும் ஆராய்தற்குரியவாகின்றன. இதனால், திருவாதவூரடிகள் வரலாற்றைத் தெய்வப் புலவரான சேக்கிழார் பெருமான் போன்ற உண்மையாராய்ச்சி கனிந்த சான்றோர் முன்னின்று பாடாது போனது சைவ இலக்கிய உலகிற்குப் பெருந்தவக் குறையாயிற்று என எண்ண வேண்டியவர்களாகின்றோம். அடிகள் வரலாறும் அவர் வழங்கிய நூல்களும் இனி, திருவாதவூரடிகள் வரலாற்றிற் காணப்படும் நிகழ்ச்சி களோடு இயைபுற அவர் வழங்கியுள்ள திருப்பாட்டுக்களைக் காணலாம். அடிகள், திருப்பெருந்துறையில் முதன் முதலாக ஞான குரவனைக் கண்டபோது அவர் கையில் சிவஞான போதம் என்னும் நூலை ஏந்தியிருந்தனர் எனத் திருவாதவூரர் புராணம் கூறாநிற்க, திருவாலாவாயுடையார் புராணம், தம்மைக் கண்டதும் அன்புரு வாய்ப் பணிந்து நின்ற திருவாதவூரர்க்கு, ஞானகுரவன், “சின்மய அஞ்செழுத்தைச் செவிப்புலத்து உபதேசித்தான்”1 என்று கூறுகிறது. இதனை ஆராய்ந்த மறைமலையடிகள், “அவர் காலத்துச் சிவஞான போதம் இருந்ததில்லை” யென்றும், “அந்நூல் அறிவுறுக்கப்பட்ட தென்னும் வரலாறு பொருந்தாது” என்றும், “அந்நூற் பொருள் அறிவு நூலாராய்ச்சிக் கட்படுவதாகலின், அவை யெல்லாம் முன்னரே முற்றும் உணர்ந்து போந்த அடிகட்கு மறித்தும் அவற்றையே மெய்க் குரவன் அறிவுறுத்தினான் என்றால் அருளுரை மரபோடு மாறாம்” என்றும் கூறி, அகச்சான்றாக, “என்னையோர் வார்த்தை யுட்படுத்துப் பற்றினாய்”1 என்றும், சிவபுராணத் தொடக்கத்தில் “நமச்சிவாய” என்றும் கூறியருளுவதை எடுத்துக் காட்டித் திருவாலவாயுடையார் புராணம் கூறுவதே பொருத்தமென வற்புறுத்துகின்றார்கள். ஞானகுரவனாகி வந்து அருளுரை வழங்கியோன் சிவபெரு மானே என்பது சைவ நூன்மரபு. அம்மரபே பற்றி. ஞானகுரவனை அடிகள் சிவனெனவே தேறி வணங்கின திறத்தை, “பத்தர்சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப்பானெனச், சித்தர் சூழச் சிவபிரான் தில்லை மூதூர் நடம் செய்வான், எத்தனாகி வந்து இல்புகுந்த எமை ஆளுங்கொண்டு எம்பணி கொள்வான், வைத்த மாமலர்ச்சேடி வடிக் கணம் சென்னி மன்னி மலருமே” என்றும், திருபெருந்துறையில் ஆட்கொள்ளப்பட்ட திறத்தைத் “திருந்துவார் பொழில்சூழ் திருப் பெருந்துறையிற் செழுமலர்க் குருந்த மேவிய சீர், இருந்தவாறெண்ணி ஏசறா நினைந்திட்டு என்னுடைய எம்பிரான் என்றென்று அருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றருளாயே”2 என்றும் வரும் திருவாசகங்கள் வற்புறுத்துகின்றன. ஞானகுரவனது அருளுரை பெற்றபின், அடிகள் அவனால் ஆங்கு மறையோதிக் கொண்டிருந்த அடியவர் கூட்டம் காட்டப் பெற்றது என்றும், அடிகள் அவ்வடியர் கூட்டத்துட் சேர்க்கப்பெற்றார் என்றும் வரலாறு கூறுகிறது. இதனை, “அத்தன் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே”3 என்று திருவாசகம் உணர்த்துகிறது. “நாயி னேனை நலமலி தில்லையுள் கோல மார்தரு பொதுவினில் வருக என ஏல என்னை ஈங்கொழித் தருளி அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும்”1 என்று குறித்தருளுகின்றார். குதிரை வாங்கக் கொணர்ந்த பொன்னைத், திருப்பெருந் துறையில் ஞானகுரவனது அருளுரையால் சித்தம் திரிந்து சிவமாகி நின்று அடிகள் சிவப்பணியில் செலவிட்டது பற்றி அரசனும் பிறரும் அவரை இகழ்ந்து வைதனர் என வரலாறு கூறுகிறது. இனி, திருவாசகம், “நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து, சிவமானவா பாடித் தெள்ளேணங் கொட்டாமோ”2 என்றும், “சித்தமல மறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்”3 என்றும் அடிகள் சித்தம் திரிந்து சிவமான திறத்தையும், “ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறரெல்லாம், பேசா நிற்பார்”4 என்றும், “அடியே நினைந்துருகி மத்தமனத் தொடுமால் இவன் என்ன மன நினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்த எவரும் தத்தம் மனத்தன பேச”5 நின்றார் என்றும் கூறுகிறது. மதுரையில் திருவா தவூரடிகள் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கித் தானும் ஒரு குதிரை வணிகர் தலைவனாய் வந்தான் என்பது வரலாறு. இதனை, “குதிரையைக் கொண்டு குடநாட தன்மிசைச், சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்”6 என்றும் “பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான், கொற்றக் குதிரையின் மேல் வந்தருளி”7 என்றும், “வண்சாத்தினோடும் சதுரன் பெருந்துறையாளி அன்று, மங்கையர் மல்கு மதுரை சேர்ந்த வகையறிவார்”8 என்றும் பல படியாக அடிகள் ஓதுகின்றார். “அரியோடு பிரமற்கு அளவறியொண்ணான், நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்”1 எனவும், “ஒருங்கு திரை உலவு சடை உடையானே, நரிகளெல்லாம் பெருங் குதிரை ஆக்கியவாறு அன்றே உன் பேரருளே”2 எனவும் வருவன நரிகள் பரிகளாக்கப் பெற்றன என்னும் செய்தியை ஆதரிக்கின்றன. இனி, மணிவாசகர் பொருட்டுக் கரை பெருகி வந்த வையைக்கு வரம்பிடுதல் குறித்துப் பிட்டுவாணிச்சி ஒருத்தியின் பொருட்டு இறைவன் மண் சுமந்து வேந்தனால் அடிக்கப்பட்டான் என்று வரலாறு கூறிநிற்கும். இதற்கேற்பவே, அடிகள், “ஆங்கது தன்னில் அடிய வட்காகப் பாங்காய் மண்சுமந்தருளிய பரிசும்”3 என்றும், “மண்பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிக்கொண்ட, புண்பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ”4 என்றும், “பிட்டு நேர்படமண்சுமந்த பெருந்துறைப் பெரும்பித்தனே”5 என்றும் பன்முறையும் எடுத்தோது வது ஈண்டு நோக்கத்தக்கதாம். இனி, அடிகள், “நரகொடு சுவர்க்கம் நானிலம் புகாமல், பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி”6 என்று கூறுவது, திருவிளையாடற் புராணங்களால் குறிக்கப்படும் வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய செய்தி என்று தமிழ் வரலாறு எழுதிய தஞ்சை, திரு. K.S. சீனிவாசப் பிள்ளையவர்களும்,7 திரு. T.P. பழனியப்ப பிள்ளையும் கருதுவர்.8 அருள் திரு. மறைமலையடிகள் பெரும்பற்றப் புலியூர் நம்பி கூறிய மலயத்துவச பாண்டியனையே இவ்வடிகள் குறிக்கின்றன9 என்று உரைக்கின்றார். இவ்வாறே “நலம் திகழும் கோலமணியணிமாட நீடுகுலாவும் இடவைமட நல்லாட்குச், சீலமிகக் கருணை அளிக்கும் திறம் அறிவர் எம்பிரானாவரே” என்று அடிகள் கூறுவதனுள், இடவை மடநல்லாள் என்றது வரகுணன் மனைவியாரை என்றும், ஈண்டு வரகுணன் இடை மரு தீசர்க்குத் தன் மனைவியை நல்கிய வரலாறு குறிக்கப்படுகிறது என்றும் திரு. T.P.பழனியப்ப பிள்ளை கூறுகின்றார்1 இதற்கு உரை கண்ட திரு. கா. சுப்பிரமணியப் பிள்ளை முதலியோர்2 இடை வையைத் திருவிடை மருதூர் என்றே கொண்டனர். இடவை யென்பது காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள நாட்டில் இருந்து மறைந்து போயிற்று. கல்வெட்டுக்கள் அதனை “இராசேந்திர சிம்ம வளநாட்டு மண்ணி நாட்டு இடவை”3 என்று கூறுகின்றன. இரண்டாம் வரகுணன் இந்த இடவை நகரைக் கைப்பற்றற்கு என்றே பாண்டி நாட்டினின்று படைதிரட்டி வந்தான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன; 4 இதனை நோக்கும்போது இடைக்காலப் பாண்டியர் காலத்தே இடவை ஒரு பெருநகரமாய் விளங்கினமை5 தெரிகிறது. முதல் வரகுணன், சோழநாட்டின் மீது படைகொண்டு வந்து வென்று மேம்பட்ட காலத்தில், மண்ணிநாட்டு இடவையில் வாழ்ந்த சோழ வேந்தன் ஒருவனுடைய மகளை மணந்து கொண்டு தன் இறுதிக் காலத்தே இடைமருதூர் இறைவன் பால் பேரன்பு பூண்டு தொண்டு செய்தானாகல் வேண்டும். குறுநில மன்னனாய் ஒளிமழுங்கியிருந்த சோழர் குடித்தோன்றல் ஒருவன் மகளே இடவை நல்லாளாவள்; அவளையே வரகுணன் மணந்திருக்க வேண்டும். அங்கே வரகுணனுக்குச் சீர்த்த அரண்மனையும் இருந்திருக்கும். பிற்காலத்தே பல்லவரும் கங்கரும் கூடிச் செய்த போரில் மண்ணி நாட்டுப் பகுதியிலிருந்த சோழன், முதலாதித்த சோழனுக்குத் துணைவனானது பற்றியே இரண்டாம் வரகுணன் பாண்டிப் படை கொண்டு இடவை நகர் நோக்கி வந்தானாகல் வேண்டும். இவ்வாற்றால், இடவைமடநல்லாள் என வாதவூரடி களால் குறிக்கப்படுபவர், இடவைப் பகுதியில் குறுநில மன்னனாய் இருந்த சோழ வேந்தன் மகளாய் முதல் வரகுணனுக்கு மனைவியாய் இருந்து சிவப்பேறுப் பெற்றவர் என்பது தெளிவாகிறது. இனி, திரு. T.P.பழனியப்ப பிள்ளையவர்கள், இறைவன் குதிரைச் சேவகனாகி வந்த செய்தியும், மண்சுமந்து மொத்துண்டு பொன்மேனி புண்சுமந்த செய்தியும் அடிகள் காலத்துக்கு முன்பே வேறு வேறு காலத்தில் நிகழ்ந்தவை என்றும், குதிரை மேல் ஊர்ந்து வந்தது தடாதகையாரை மணத்தற்கு வந்த காலத்துச் செய்தி என்றும் கூறுகின்றார்.1 இது திருவிளையாடற் புராணங்கள் கூறிவரும் செய்திகட்கு மாறாய்ப் புதுவதாய் இருத்தலின், அறிஞர்கள் நன்கு ஆராயத்தக்கது. கல்லாடம் என்னும் பழைய தமிழ் நூல் முப்பத்திரண்டு திரு விளையாடல்களை வரைந்து மேற்கொண்டு, அவை இன்னார் பொருட்டுச் செய்யப்பட்டன என்று கூறுகிறது; அத்தகைய நூல், நரியைப் பரியாக்கிய திருவிளையாடல், இன்னார் பொருட்டு நிகழ்ந்தது எனக் கூறுகின்றிலது; முதியோள் பொருட்டு இறைவன் கூலியாளாக வந்து அடிபட்டதைக் கூறும் இக்கல்லாடம்2 அது திருவாதவூரடிகள் பொருட்டு நிகழ்ந்ததெனக் கூறவில்லை; இவ் வகையால் நோக்குமிடத்து இந்நிகழ்ச்சிகளெல்லாம் திருவாத வூரடிகள் காலத்துக்கு நெடுங்காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாம் என்று தெரிகிறது என திரு. T.P. பிள்ளையவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு தாம் கருதுவது போலவே, திரு. S.வையாபுரிப்பிள்ளையும் கருதுவதாக அவரது கட்டுரையொன்று 3கூறுகிறது. திருவாதவூரடிகள் தம்பொருட்டு இறைவனால் நரிகள் பரியாக்கப் பெற்றன எனவும், மண் சுமந்து அடிபட்டார் எனவும் திருவாசகத்துள் கூறவில்லை யென்பதே இந்த அறிஞர்கள் கண்டுரைக்கும் அடிப்படை முடிபு. ஆனால், திருவாதவூரடிகள் தமது வரலாறு கூறும் நோக்கத்துடன் திருவாசகம் பாடவில்லை என்பதை மேலே கூறிய இரு பேரறிஞர்களும் உணர்ந்ததாக அவர்களுடைய கட்டுரைகள் காட்டா தொழிகின்றன. திருவாதவூரடிகட்கு மாணிக்கவாசகன் என்று ஒரு பெயர் நாட்டில் நன்கு பயில வழங்குகிறது. இப்பெயரைத் திருவாலவா யுடையார் திருவிளையாடல், ஞானகுரவனாய் வந்த சிவபெருமான் எடுத்து வழங்கியதாக, “மங்கை நாயகன் மாணிக்கவாசக, இங்கு நில் என்று இயம்பி மறைந்தனன்”1 என்று கூறுகின்றது. திருவாதவூரடிகள் “வாக்கு உன் மணி வார்த்தைக் காக்கி”2 என்றும், “பேச்சிறந்த மாசின் மணியின் மணி வார்த்தை”3 என்றும் ஞானகுரவனது அருளுரையைப் பாராட்டிக் கூறுவது காணுங்கால், இறைவனை மணி என்றும், அவனது அருளுரையை மணிவார்த்தை யென்றும் பாராட்டிய சிறப்புப் பற்றி மணிவாசகன் என்பது தோன்ற மாணிக்கவாசகர் என்று பெரும்பற்றிப் புலியூர் நம்பி முதலிய சான்றோர்களால் பெயர் கூறிப் பரவப் பெறுவராயினர் எனக் காணலாம். சான்றோர் வழங்கும் இனிய சில சொற்றொடர்களைக் கண்டு, அவற்றை வியந்து பாராட்டு முகத்தால் அச் சான்றோர்க்கு அத்தொடரையே பெயராக அமைத்து வழங்கும் முறை தமிழ் நாட்டில் சங்க காலந் தொட்டே இருந்துவரும் வழக்காறாகும். ஆயினும் இடைக்காலக் கல்வெட்டுக்கள் பலவும் அடிகளைத் திருவாதவூரர் என்றும் திருவாதவூராளி என்று வழங்கு கின்றனவே யன்றி மாணிக்க வாசகர் என்ற பெயரை வழங்கக் காணோம். வரலாறுகள் திருவாதவூரடிகள் அருளிய திருவாசகம் திருக்கோவை யார்களில் ஏனைத் திரு ஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதலி யோர்களைப் போலச் சிவபெருமான் திரிபுரம் எரித்ததும், தக்கன் வேள்வியைத் தகர்த்ததும், திருமாலும் பிரமனும் அடிமுடி தேடியது மாகிய வரலாறுகள் பொதுவாகக் கூறப்படுவதோடு சிறப்புடைய வரலாறுகள் பல காணப்படுகின்றன. அவற்றுள், இறைவன் மகேந்திர மலையிலிருந்து ஆகமம் சொன்னது, கல்லாடத்துக் கலந்து இனிதி ருந்தது, பஞ்சப் பள்ளியில் பான்மொழி யோடு அருள் செய்தது, அருச்சுனன் பொருட்டுக் கிராத வேடம் பூண்டது, நந்தம்பாடியில் ஆசிரியனாய் வந்தது, வேலம் புத்தூரில் விட்டேறு (வேற்படை) அருளியது. சாந்தம் புத்தூர் வேடனொரு வனுக்குத் தருப்பணத்திற் காட்சி தந்து அருளியது. அந்தணனாய்த் தோன்றி இந்திர சாலம் காட்டியது, திருப்பூவணத்தில் சித்தராய்த் தோன்றியது, திருவாதவூரில் சிலம்பொலி காட்டியது. பூவலம் என்னுமிடத்தில் பாவநாசம் செய்தது, பாண்டியனுக்குத் தண்ணீர்ப் பந்தர் வைத்தது. திருவெண் காட்டில் குருந்தின் கீழ்த் தோன்றியது. பட்டமங்கையில், அட்டமா சித்தி யருளியது, வேட்டுவனாய்க் காட்டில் கரந்தது. ஓரியூரில் பாலகனானது, தேவூர்த் தீவில் உருக்கொண்டு நின்றது, திருவாரூரில் ஞானம் பெற்றது. இடைமரு தூரில் பாதம் வைத்தது, ஏகம்பத்தில் அம்மைக்கு இடப்பாகம் தந்தது, சந்திர தீபத்துச் சாத்திரனாகியது, பாலையூரில் சுந்தரனானது, இடவை நல்லாட்கும் இலங்கை வண்டோதரிக்கும் இறைவன் அருள் செய்தது, பாண்டூர், திருவாஞ்சியம், கடம்பூர், ஈங்கோய் மலை, ஐயாறு, துருத்தி, திருப்பனையூர், கழுமலம், கழுக்குன்று, புறம்பயம், குற்றாலம் முதலிய திருப்பதிகளின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைத் திருவாதவூரடிகள் குறித் தருளுகின்றார். கதிரைச் சேவனாகியது முதலிய நிகழ்ச்சிகளை அடிகள் குறிக்கும் திறத்தை முன்னர்க் கூறினாம். திருத்தொண்டத் தொகையிற் காணப்படும் சான்றோர்களுள் கண்ணப்பர், சண்டேசுரர் என்போரே அடிகளால் பாராட்டப்பெறுகின்றனர். திருவாசகம் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம், அவருடைய பாண்டியன் உடல் வாழ்வு இம்மை யுடல் வாழ்வு என்ற இருவகை வாழ்வுகளையும் நாம் அறியக் காட்டுகின்றது. பண்டைப் பிறவியை சிவபுராணத்தில்1 புல் பூடு புழுமரங்களாகவும், பலவகை விலங்கும் பறவைகளுமாகவும், பேய், பூதம், மனிதர், முனிவர், தேவர், அசுரர் களாகவும் பன்முறையும் பிறந்து பிறந்து இறந்து இறந்து இளைத் தாகவும், “திருவம்மானையில்”2 “ஆனையாய்க் கீடமாய் மானுட ராய்த் தேவராய், ஏனைப்பிறவாய்ப் பிறந்திறந்து எய்த்ததாகவும்,” குறித் தருளுகின்றார். இம்மை வாழ்வைத் தன் தாய்வயிற்றிற் கருக்கொண்டது முதலே தொடங்கிக் கூறுகின்றார். போற்றித் திருவகவலில்1 தாய் வயிற்றிற் கருவிடைத் தோன்றித் திங்கள் தோறும் வளருங்கால் உற்ற துன்பங்களை எடுத்தோதிப் பத்தாந் திங்களில் கருவுயிர்க்குங் காலத்தில் தாய்பட்ட துன்பத்தோடு தானும் பெருந் துன்பமுற்றுப் பிறந்ததும், பிறந்து பெறும் உடல் வாழ்வில், “காலை மலமொடு கடும் பகற் பசி நிசி, வேலை நித்திரை” முதலியவற்றைச் செய்து காளைப் பருவம் எய்தியதும், அப்போது மகளிர் கூட்டதில் மயங்கிக் கிடந்ததும், அந்நாளில், கல்வி, செல்வம், நல்குரவு முதலிய நிலைகளில் பயின்று தெய்வமென்பது ஒன்று உண்டு என்னும் சிந்தையுண்டானதும், சிலர் நாத்திகம் பேசியதும், வேதியர் சாத்திரம் கூறியதும், சமயவாதிகள் அமைவுரை வழங்கியதும், மாயாவாதமென்னும் சமயம் போந்து தாக்கியதும், இவற்றால் அலைப்புண்டாலும் தெய்வவுணர்வில் தான் விடாப்பிடி கொண்டிருந்து, சகம், பேயன் என்று சிரிப்ப, நாண் ஒழிந்து நாடவரது பழித்துரையைப் பூணாகக் கொண்டு மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது ஒழுகியதும், பின்பு இறைவன் அருட்குர வனாய்வந்து ஞானமருளியதும், இறைவன்பால் அயரா அன்பு கொண்டு அவனையன்றி வேறு களைகண் இல்லாமை தேர்ந்து அவனையே நினைந்து வழிபட்டு நின்றதுமாகிய இவை குறிக்கப் படுகின்றன. தெய்வம் ஒன்று உண்டெனத் தேர்ந்து அத்தெய்வமும் சிவபரம் பொருளே எனக் கொண்ட திறத்தைத் “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”2 என்பதனாலும், வேறு தெய்வங்களைப் பொருளாகக் கருதாத திறத்தை “உள்ளேன் பிறதெய்வம் உன்னை யல்லாது எங்கள் உத்தமனே”3 “நின்னலால், தேசனே ஓர் தேவருண்மை சிந்தியாது சிந்தையே”4 என்று கூறுவதனாலும் அறியலாம். இனி, காளைப்பருவத்தே, கல்வி, செல்வம் முதலிய நலம் சிறந்து விளங்குகையில் மகளிர்கூட்டத்தில் அடிகள் பேரீடுபாடு கொண்டிருந்ததாக நீத்தல் விண்ணப்பம், அடைக்கலப்பத்து முதலிய பகுதிகளில் குறிக்கின்றார். “முழுதயில் வேல் கண்ணியர் என்னும் மூரித்தழல் முழுகும், விழுதனையேனை விடுதி கண்டாய்”1 “உழை தருநோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய், விழைதருவேனைவிடுதி கண்டாய்”2 “மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திட உடைந்து, தாழியைப் பாவுதயிர்போல் தளர்ந்தேன்”3 “மின்கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டுப் புன்கணனாய்ப் புரள்வேன்”4 என்று வருவன போலும் பல குறிப்புக்கள் இதனை வற்புறுத்துகின்றன. இவ்வாறே, உலகியலில் உயிரை யோம்பி உண்டு உடுத்து5 இனிது வாழும் இன்ப வாழ்வில் செய்வது அறியாது,6 இருளிற் கிடந்து,7 கல்வியும் ஞானமும் இன்றி மனம் அழுக்குற்று,8 உயர்ந்தோர் வெறுப்பனவே செய்து9 சிறுமையுற்று வருந்திய வருத்தமும், இறைவனது அருட்பேறு நினைந்து தவம் செய்தல், மலரிட்டு வழிபடுதல், அகங்குழைந்து அன்புசெய்தல், பாடுதல் ஆடுதல் முதலிய செயல்களை மேற்கொள்ளாமல்10 செருக்கி, இருகையானை யொத்து11 இருந்த இருப்பும் அடிகளால் விரித் துரைக்கப்படுகின்றன. அவ்வகை வாழ்வில், தான் இறைவனை நெடுங்காலம் குறுகாதே12 முத்திப் பேற்றுக்குரிய நெறியறியாத மூர்க்கரொடு கூடி13 நன்னெறிக் கண் நின்று அவன் திருவருளைத் தொடர்ந்து ஒழுகும் அடியாராகிய சான்றோர்களைத் தொடராமலும்14 கழித்ததாக அடிகள் வருந்திக் கூறுகின்றார். பின்னர் நன்னெறிக்கண் நின்ற சான்றோர் திருவருள் பெற்று இன்பநிலை எய்துவது கண்டு இறைவனது அருள் ஞானம் பெற அவாவுகின்றார். அதனை, “பிறவறியா அன்பர்நின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ் மறிவறியாச் செல்வம் வந்து பெற்றார்; உன்னை வந்திப்பதோர் நெறியறியேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே”1 என ஓதி அடைக்கலம் புகுதலால் அறிகின்றோம். இந்நிலையில், இறைவன் ஞானகுரவனாய் அடியாருடன் போந்து ஆட்கொள்ளுகின்றான். அதனை, அடிகள் அழகுறக் கூறு கின்றார். இந்திரன் மால் முதலிய தேவர்கள் அந்தரத்தே நிற்கச் சிவபெருமான் நிலவுலகின்கண் திருநீறு மார்பிலும் தோளிலும் விளங்கப்2 போந்து “காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம்காட்டித், தாளாகிய தாமரைகாட்டித் தன் கருணைத்தேன் காட்டி”3 ஆட் கொண்டான் என்பதையும் அதனால், “மெய்ப்பொருட்கண் தோற்ற மாய் மெய்யே நிலைபேறாய், எப்பொருட்கும் தானேயாய் யாவைக்கும் வீடாகும் அப்பொருள் நம் சிவனேயாம்”4 என்று தெளிந்ததையும் எடுத்தோதுகின்றார். இத்தெளிவினால், சிவபெருமான் தன்னை “ஆண்டுகொண்ட நய”மும், தமது பண்டைய நிலையின் நயமின்மையும் கண்டு, “வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே, கன்னெஞ்சு உருக்கிக் கருணையினால் ஆண்டு கொண்”5 டான் என்றும், “கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே”6 “இறுமாக்க”7 ஆட்கொண்டான் என்றும் தம் நன்றியினைப் புலப் படுத்துகின்றார். ஆண்டு கொண்ட நயத்தால் “நாயேனைத் தன்னடிகள் பாடுவித்”8 தான் என்றும், “வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வியென்னும், பித்தவுலகில் பிறப்பொடு இறப்பென்னும் சித்தவிகாரத் கலக்கம்”1 தெளிந்தது என்றும், “நோயுற்று மூத்து நுந்து கன்றாய் இங்கிருந்து”2 “பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக்கருதிக்”3 கிடக்கும் கீழ்மை நீங்கியதும் வியந்து பாடுகின்றார். இதனை அடிகள் பாடுதற்குக் கொண்டநெறி மிக்க புதுமை யானது. அக்காலத்தே மகளிர் விளையாடும் விளையாட்டுக்கள் பலவற்றையும் கண்டிருந்ததனால், அம்மனை ஆடல் பொற்சுண்ணம் இடித்தல், தும்பியூதுதல், தெள்ளேணம் கொட்டுதல், சாழலாடுதல், பூவல்லி கொய்தல், தோணோக்கமாடல், பொன்னூசலாடல் முதலிய விளையாட்டுப் பாட்டுக்களாகச் சிறுமகளிர் கூற்றில் வைத்துத் தேன் சொட்டப் பாடியுள்ளார். பொய்யாய செல்வ வாழ்வே மெய்யாய வாழ்வு என மயங்கி அதன்கண் அழுந்திக் கிடந்த அடிகட்குச் சிவபெருமான் அருட் குரவனாய் வந்து அருள் ஞான நாட்டம் நல்கினானாக, அவனருளாலே அவனது அருளுருவைக் கண்டு அருளார் இன்பத்தில் மூழ்கினார் நம் மணிவாசகனார். பின்னர், அருட்குரவனது பிரிவு அவர்க்கு ஆற்றொணாத் துயரம் தந்தது. பிறவிக் குருடன் இனிய காட்சிக் கமைந்த கண்பெற்றுப்பின் அதனை இழந்தால் எவ்வாறு வருந்து வானோ அவ்வாறே அடிகளும் வருந்திப் புலம்பினார். அவ்வருத்த மிகுதியைத் திருச்சதகம், கோயின் மூத்த திருப்பதிகம், கோயிற்றி ருப்பதிகம் செத்திலாப்பத்து, திருவேசறவு முதலிய பதிகங்கள் பலவற்றிலம் காணலாம். இப்போதும் அப் பாட்டுக்களை இனிய இசையில் தொடுத்துப் பாடலுறின், பாடுவோரும் பாடக் கேட்பாரும் கண்ணீர் உகுத்து மனங்கரைந்து உருகுவது கண்கூடு. இவ்வண்ணம் இறைவன் அருட்குரவனாய் வந்து அருளிய ஞானத்தின் நலத்தை எண்ணினார்; எண்ணுந்தோறும் அடிகட்குப் பண்டு தாம் இந்திரிய வயமயங்கி4 அளவிரலாப் பாவகத்தால் அமுக்குண்டு அறிவின்றி5 நடித்து மண்ணிடைப் பல பொய்யினைச் செய்துயான் எனது என்னும் மாயப்பாம்பு கடித்தவாயிலே நின்று வினைமிகக் கழறியே1 திரிந்ததாகவும், அருண்ஞானம் பெற்ற தன் பயனால், பேதைகுணம் பிறருருவம் யான் எனது இறைவன் என்னும் உரை2 மாய்ந்ததாகவும், உணர்வு தந்து ஒளியாக்கிப் பாசமானவை பற்றறுத்து3 உயர்வித்தாகவும் பிறவும் நினைந்து மணிவாசகர் வியந்து கூறுகின்றார். இந்த அருள் ஞானவுணர்வு மிகமிக, அடிகட்கு வீடு பேற்றின் கண் பேரார்வம் பெருகிவிடுகிறது. அவ்வீடு பேற்றை நல்குமாறு இறைவனை வேண்டலுற்று, “எம்பெருமானே, உடைந்து நைந்து உருகி உன் திருமலர்ப்பாதம் அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன்”4 “எம்பராமா, என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப் பூம்போது அணைவது என்று கொல்லோ”5 என்றும் பிறவுமாக ஏங்கிக்கதறு வாராயினர். வீடு பேற்றின் கண் ஆர்வம் மிக்கோர் தம்முடைய கருவிகரணங்களை எல்லாம் இறைவனுக்கு உரிமைசெய்து அவற்றின் செயல்முற்றும் இறைவன் செயலாகக் கையடைப்படுத்துவர். அதனைச் சமய நூல்கள் இறைபணி நிற்றல் என்று கூறும். குழைத்த பத்து என்னும் பகுதியில், அடிகள் தம் கருவி கரணங்களைச் சிவனுக்கு உரிமைசெய்து சிவத்தோடு ஏகனாகி இறைபணி நிற்கும் திறத்தை “கூறும் நாவே முதலாகக் கூறுங்காரணம் எல்லாம் நீ, தேறும்வகை நீ, திகைப்பு நீ, தீமை நன்மை முழுதும் நீ, வேறோர் பரிசு இங்கு ஒன்று இல்லை;6 “வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ;”7 அன்றே என்றன் ஆவியும் உடலும் உடமை யெல்லாமும், குன்றே யானையாய் எனை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ;”8 “மாயப் பிறவி உன்வசமேவைத்திட்டிருக்கும்; அதுவன்றி, ஆயக்கடவேன் நானோ தான்? என்னதோ இங்கு அதிகாரம் ? காயத்திடுவாய் உன்னுடைய கழற் கீழ் வைப்பாய் கண்ணுதலே”9 என்று விளங்கக் கூறுகின்றார். கருவிகரணங்கள் சிவகரணங்களாக உரிமை செய்து வாழ்வதே வீடு பேற்றுக்கு வாயில் என்பதைப் பிறிதோரிடத்தும், “காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப் பேணும் அடியார் பிறப்பகலக் காணும் பெரியன்”1 என்றும், சிவகரணமாக உரிமை செய்து வாழ்வோர், எண்ணம், உடல், வாய், மூக்கு, செவி, கண் ஆகிய எல்லாக் கருவி கரணங்களையும் சிவபரம்பொருளிடத்தே ஒன்றுவித்து வாழ்வர்2 என்றும் விளக்கி யருளுகின்றார். இவ்வாறு, “பசுகரணங்களெல்லாம் பதிகரணமாக வசிபெறும்”3 சான்றோர் பிறவித்துயர்க்கு அஞ்சுவதிலர். “மனித்தப் பிறவியும் வேண்டுவதே”4 என அதனை வரவேற்பர் என்பது சான்றோர் வரலாற்றாலும் அறிவு நூல்களாலும் அறியப்படுவதொன்று. மணி வாசகப் பெருமானும் அருள் ஞானப் பேற்றால் தம் கரணங்கள் சிவ கரணமாகப் பேணலுற்றுச் “செடியேறு தீமைகள் எத்தனையும் செய்திடினும் முடியேன் பிறிவேன்”5 எனத் தான் பிறவிக்கு அஞ்சா மையைத் தோற்றுவித்து, “கதிக்கும் பசுபாசம் ஒன்றும் இலோம்”6 “யாவர்கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான்; யாமார்க்கும் குடியல்லோம், யாதும் அஞ்சோம்”7 எனப் பெருமிதம் தோன்றப் பேசுவன மிக்க இன்பம் தருகின்றன. திருவருள் ஞானப்பேறும் கருவிகரணங்களைச் சிவகரணமாகப் பேணும் திறமும் உடைய சான்றோர், தம் கொள்கை கெடாது சிறப்பது குறித்துத் தம்மையொத்த அடியார் கூட்டத்தை விரும்புவர்; அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவராகலின், அடியார் தொடர்பு பெரிதும் விரும்பப்பட்டது. அது பற்றியே அடிகள் மேதக்க அடியார் தொடர்பையே வேண்டி, வணங்கற் பொருட்டுத் தலையையும் வாழ்த்து தற்பொருட்டு வாயையும் அருளிய இறைவன், இணங்கி மனந்தூய்மைமிகும் பொருட்டுச் “சீரடியார் கூட்டமும் வைத்து”8 ச்சிறப்பித்தருளினான் என்றும், அந்த அடியார்கள் பெற்ற நலத்தை, “அடியார்சிலர் உன் அருள் பெற்றார்”1 “அருளாரமுதப் பெருங்கடல்வாய் அடியாரெல்லாம் புக்கழுந்த”2 என்றும், “தாரா அருள் ஒன்றின்றியே தந்தாய் என்று உன் தமரெல்லாம் ஆராநின்றார்”3 என்றும் வியந்தோதி மகிழ்கின்றார். பின்பு தமக்கு அடியாரோடு கூடியுறையும் பேறு எய்திய போது, அக் கூட்டத்தால் தமக்குற்ற இன்பத்தை நயந்து பெரு வியப்புற்று, “ஊசலாட்டும் இவ்வுடலுயிராயின, இருவினையறுத்து என்னை ஓசையால் உணர்வார்க்கு உணர்வரியவன் உணர்வு தந்து ஒளியாக்கிப் பாசமானவைபற்றறுத்து உயர்ந்த தன் பரம்பெருங்கருணையால் ஆசை தீர்த்து அடியார் அடிக்கூட்டிய அற்புதம் அறியேனே”4 என்று பாடிப் பரவுகின்றார். இறுதியாக, திருவாதவூரடிகள் உலகவராகிய நமக்குச் சில அறிவுரை பகர்கின்றார்;”மக்களாகிய பத்தர்களே, நீங்கள் இறைவன் திருநாமத்தைப் பாடித் திரிகின்றீர்கள்; இங்கே வாருங்கள்; நம் இறைவனை உங்கள் பாசம் தீரப்பணிமின்; பணிந்தால் அவன் சேவடிகள் நம் சென்னிக் கண் மன்னித்திகழும்.5 மக்களே, நீவிர் ஐம்புலன்களில் புகவேண்டா; இறைவன் பூங்கழல்களையே நினைமின்; பிறவெல்லாம் வேண்டா; இதனால் தளர்ச்சியின்றி யிருக்கலாம்.6 இனி, நீவிர் வெகுளியைவிடுமின்.7 இறைவனைப் புகழ்மின், தொழுமின்; பூப்புனைமின்; அவன் திருவடிகளை மனத்துட்கொண்டு எல்லா அல்லல்களையும் இகழ்மின்8 இன்றே வந்து ஈசனுக்கு ஆளாகுமின், ஆளாகாது ஒழியின், பின்னர் மருள்வீர்; உம்மை ஒருவரும் மதியார்; அதனால் மயங்குவீர்கள். இவற்றைத் தெளிய எண்ணித் தெருளு வீராயின், இது செய்ம்மின்”9 என்பது. திருக்கோவையார் திருவாதவூரடிகள் பாடியருளிய திருக்கோவையாரே, தமிழிற் காணப்படும் கோவைநூல்களுள் தலைசிறந்ததாக அறிஞர்களாற் பாராட்டப்பெறுவது. இஃது ஆர் என்னும் சிறப்புணர்த்தும் இடைச் சொல் புணர்ந்து திருக்கோவையார் என்று பெயர் கூறப்படுவதே போதியசான்று. இத் திருக்கோவையார்க்கு முன்னும் தமிழில் கோவை நூல்கள் இருந்தனவாயினும் அவை தமிழிலக்கிய வகையில் நிலைத்த இடம் பெறவில்லை; இறையனார் களவியலுரையில் காட்டப்படும் பாண்டிக்கோவை, இத்திருக்கோவையார்க்கு முற்பட்டதொன்றே; ஆயினும் அஃது இப்போது முழுவடிவில் காணப்படவில்லை. பாண்டியன் நெல்வேலி வென்ற நெடுமாறன் முதலிய பாண்டி வேந்தர் சிலரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட கோவை நூல்களின் தொகையே பாண்டிக்கோவை எனவும், பாண்டியன் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட ஒரு தனிநூல் இப்பாண்டிக் கோவையெனவும்1 அறிஞர்கள் கருதுகின்றனர். தனி நூலாகவோ தொகைநூலாக வோயாதாயினுமாகு; அது, திருக்கோவையாரைப் போல அன்றித் தன் முழுவடிவும் இல்லாமல் இருப்பது குறிக்கத்தக்கது. இன்றும், தமிழிலக்கிய வகைகளுள் ஒன்றான கோவைநூல் வகையில் உள்ள வற்றுள், வடிவு குன்றிச் சிதைவுறாமல் இருக்கும் திருக்கோவை யாரே தொன்மை வாய்ந்து இலங்குகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்துட் கூறப்படும் களவு, கற்பு என்னும் இருவகை ஒழுக்கத்தினும் நிகழும் நிகழ்ச்சிகளைப் பற்பல துறைகளாக வகுத்து, ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கட்டளைக் கலித்துறையில் வைத்துக் கோவைப்படப் பாடுவது கோவை நூல். இந்நூல் வகையின் தோற்றம் இறையனார் களவியல் தோன்றிய பினனர்த் தான் காணப்படுகிறது. இக் கோவைப் பாட்டுக்கள், பாட்டுடைத்தலைவன், கிளவித்தலைவர்கள் என்ற இருதிறத்துத் தலைவர்களைச் சிறப்பிப்பன. கிளவித்தலைவராவார், களவு கற்பென்னும் இருவகைக் கைகோள்களையும் மேற்கொண்டு ஒழுகும் தலைவனும் தலைவியுமாவர். இம்முறையேபற்றி, இத் திருக்கோவையாரில், தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமான், பாட்டுடைத்தலை வனாகத் திருவாதவூரடிகளாற் பரவப்படுகின்றான். அதனால் அப்பெருமானுடைய திருவருட் சிறப்பும் தில்லையம் பலத்துப் பெருமாண்பும் ஒவ்வொருபாட்டிலும் சிறப்பிக்கப் பெறுவதைக் காண்கின்றோம். இதுபற்றியே இத் திருக்கோவையார் திருச்சிற்றம்பலக்கோவையார் என்று வழங்குகின்றது. இத் திருக்கோவையார் பாட்டு ஒவ்வொன்றிற்கும் நூற்பா யாப்பில் கருத்துரை வகுக்கப்பட்டுள்ளது. இந்நூற்கு உரைகண்ட1 பேராசிரியர் இக்கருத்துரைக்கும் உரை கூறுவதால், இஃது அவர் காலத்துக்கு முன்னரே தோன்றியது என்பத தெளிவு. சிலர், இக்கருத் துரை திருவாதவூரடிகளாலே ஆக்கப்பெற்றிருக்கலாம் என்று கூறுவர்; சிலர், திருவாசகப்பகுதி ஒவ்வொன்றிற்கும் கருத்துரை கண்டார் ஒரு சான்றோர்; இக் கோவைக் கருத்துரையையும் அவரே வழங்கியிருக்கலாம் என்பர்; ஆயினும், திருவாசகக் கருத்துரையின் நடையும் பொருளும் அக்கொள்கைக்கு ஆதரவு தருவனவாக இல்லை; மேலும், அது கோவைக் கருத்துரையினும் காலத்தால் பிற்பட்டது எனக் கருதுதற்கும் இடந்தருகிறது. கோவைநூற் சிறப்பு நூல் நயம் காணும் சான்றோர் அந்தணர், யோகியர், தார்க்கிகர், இயற்புலவர் எனப் பல திறத்தராவர். அவரவரும் தத்தமக்கு ஏற்புடைய நூல்களின் நயம் கண்டு இன்புறுவர்; ஆயினும், திருக் கோவையாரை அந்தணர் முதல் அனைவரும் தாந்தாம் விரும்பும் நூலாக மேற் கொள்வர் என்ற கருத்துப்படப் பிற்காலத்து ஆன்றோர் ஒருவர், “ஆரணம் காண் என்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் காரணம் காண் என்பர்; காமுகர் காமநன்னூல தென்பர்; ஏரணம் காண் என்பர் எண்ணர்; எழுத்தென்பர் இன்புலவோர் சீர் அணங்காய சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே” என்று கூறியுள்ளார். உரைகாரரான பேராசிரியர், “நடம் புரிகின்ற பரமகாரணன் திருவருளதனால் திருவாதவூர் மகிழ் செழு மறை முனிவர், ஐம்பொறி கையிகந்து அறிவாய் அறியாச் செம்புலச் செல்வராயினர்; ஆதலின், அறிவனூற் பொருளும் உலக நூல் வழக்கும் என இரு பொருளும் நுதலி யெடுத்துக் கொண்டனர்; ஆங்கு, அவ்விரண்டனுள், ஆகமநூல் வழியில் நுதலிய ஞானயோக நுண் பொருளினை உணர்த்துதற் கரிது; உலகநூல் வழியின் நுதலிய பொருள்” இத்திருக்கோவையார் என்று கூறுகின்றார். இனி, இதன் கண் வாதவூரடிகள் தில்லையம்பலப் பெருமா னுடைய அருணலங்களைத் திருவாசகத்திற்கு குறித்தவாறே தேன் கலந்ததென இனிக்கும் செஞ்சொற்களால் பாடியுள்ளார். தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவன் திருநடம்புரிந்தருள, அவனை அங்கே அந்தணர் மூவாயிரவர் வணங்குகின்ற திறத்தை அடிகள், “இருவர் அறியா அடி, தில்லையம்பலத்து மூவாயிரவர் வணங்க நின்றோன்”1 என்பர்; அவ் வம்பலத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலை, “வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில் அம்மாயவனே’2 என்று குறிக்கின்றார். இனி, தில்லையம்பலத்தில் இறைவன் திருநடம்புரிவதன் கார ணம் கூறுவாராய், “பிழைகொண்டு ஒருவிக்கெடாது அன்பு செய்யின் பிறவி என்னும் முழை கொண்டு ஒருவன் செல்லாமைப் பொருட்டு அம்பலத்து”3 ஆடுகின்றான்; அவ்வாடலும், மறந்தும் பிறதெய் வங்களைத் தொழாது தன் திருவடிகளையே தொழுது அடியார்கள் உய்திபெறும் பொருட்டே4யாம் என்று தெரிவிக் கின்றார். இவ்வாறே திருவாசகத்துள்ளும் உரைத்துள்ளார். திருவாசகத்திற் குறித்த கருத்துக்கள் பலவற்றை இக் கோவைநூலின் கண்ணும் வற்புறுத்துவதை வேறிடங்களிலும் காணலாம். “வாக்கிறந்து ஊறு அமுதே ஒத்து அகஞ் சேர்ந்து என்னை உய்ய நின்றேன்”1 என்ற இக்கருத்து, திருவாசகத்தில், “மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து அமுதே ஊறி நின்று என்னுள் எழுபரஞ்சோதி”2 என்றும், “விண்ணை மடங்க விரிநீர் பரந்த வெற்புக் கரப்ப, மண்ணை மடங்கவரும் ஒரு காலத்தும் மன்னி நிற்கும் அண்ணல்”3 என்ற கருத்தைத் திருவாசகத்தில் “வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல்நீர் மண்கெடினும், தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன்”4 என்றும், “ஆனந்த வெள்ளத் தழுந்தும் ஓர் ஆரூயிர் ஈருருக்கொண்டு ஆனந்த வெள்ளத் திடைத் திளைத்தாலோக்கும் அம்பலம்சேர், ஆனந்தவெள்ளத்து அறைகழலோன் அருள் பெற்றவரின், ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இவ்ணிநலமே”5 என்ற கருத்தைத் திருவாசகத்தில் “ஆனந்தக் கூத்தன் அருள் பெறின் நாம் அவ்வண்ணமே, ஆனந்தமாகி நின்று ஆடாமோ தோணாக்கம்”6 என்றும், “அழிவின்றி நின்றதோர் ஆனந்வெள்ளத்திடை அழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினை யகற்றிப், பழமலம் பற்றறுத்து ஆண்டவன்”7 என்றும் கூறுகின்றார். இவ்வாறே திருவாசகத்தில் கூறிய வரலாற்றுக் குறிப்புக்களுட் சிவற்றைத் திருக்கோவையாரிலும் கூறுகின்றார்; அவற்றுள் பகலவன் பல்லுகுத்தது,8 திருமால் ஆயிரம் மலர்கொண்டு அருச்சித்தது9 முதலியன சிறந்தனவாம். இறைவன் கூடலில் தமிழாராய்ந்ததும் வரகுணன் வழிபாடு செய்ததும் திருக்கோவையாரில் சிறப்பாகக் கூறப்படும் வரலாற்றுக் குறிப்புக்கள். திருவாசகம் திருக்கோவையார் என்ற இரு நூல்களாலும், அடிகள், அண்ணாமலை, அம்பர், ஆரூர், இடைமருது, இடவை, ஈங்கோய்மலை, உத்தர கோசமங்கை, ஏகம்பம், ஐயாறு, ஓரியூர், கடம்பூர் (கடம்பை),கல்லாடம், கழுக்குன்று, கழுமலம், காழி, குற்றாலம், கூடல், கொடுங்குன்றம், கோகழி, சந்திரதீபம், சாந்தம்புத்தூர், திருப்பூவணம், திருவாஞ்சியம், தில்லை, துருத்தி, தேவூர், நந்தம்பாடி, பஞ்சப்பள்ளி, பட்டமங்கை, பரங்குன்றம், பனையூர், பாண்டூர், பாலையூர், புறம்பயம், பூவலம், பெருந்துறை, பொதியில், மகேந்திரம், மூவல், வாதவூர், வெண்காடு, வேலம்புத்தூர் முதலிய திருப்பதிகளைக் குறிக்கின்றார். இவற்றுள் மகேந்திரம்,1 கோகழி2 என்பவை தெலுங்கு நாட்டில் உள்ளன. பஞ்சப்பள்ளி மத்திய மாகாணத் தில் (வச்சநாட்டில்) உள்ளது.3 பண்டை நூற் கருத்துக்கள் திருவாதவூரடிகள் பாண்டி வேந்தன்பால் அமைச்சராயிருந்தார் என்ற வரலாற்றுக் குறிப்பே, அவர் அந்நாளில் பரந்த கல்வி கேள்வி யுடையராய் விளங்கினார் என்பதை வற்புறுத்துகிறது. அடிகள் பாடிய நூல்கள் இரண்டினும் வட நூற் கருத்துக்களும் பழைய தமிழ்நூற் கருத்துக்களும் மிடைந்திருப்பதால் அவர் இரு மொழியிலும் வல்லுநர் எனத் தெரிகின்றோம்; ஆகமப் பொருளைப் பன்முறையும் எடுத்துக் கூறுதலால், அடிகள் சமய நூல் ஆராய்ச்சியில் தலைசிறந்து விளங் கினவரென்று நன்கு அறியலாம். அடிகள் காலத்திலும் அதற்கு முன்னும் நம் நாட்டில் நான்கு சமயங்கள் மடங்களை நிறுவிச் சிவநெறியைப் பரப்பின. அவை, சைவம், பாசுபதம், காபாலம், காருகம் என்பனவாகும். அவற்றுள் சைவமென்பது வடநாட்டு மத்தமயூர சந்தானத்துச் சைவாசிரியர் களாலும், தென்னாட்டில் கோளகி சந்தானத்துச் சைவாசிரியர் களாலும் வளர்க்கப்பெற்றது. இக்கோளகி சந்தானம் மத்தமயூர சந்தானத்தின் கிளையென்று கூறுவோருமுண்டு.4 இச்சைவ சந்தானங்களைப் பற்றிய விளக்கமான குறிப்புக்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதலே காணப்படுகின்றன; எனினும், இவை பல நூற்றாண்டுகட்க்கு முன்பே தோன்றியவை யென்பது உண்மை. கி.பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் தென்னாட்டில் திருப்புகலூர், மதுரை முதலிய இடங்களில் மடங்கள் இருந்து சமயப்பணி புரிந்த திறத்தைத் திருத்தொண்டர் புராணம் கூறுகிறது. திருமூலர் திருமந்திரத்தால் சைவ மடங்கள் பல தமிழ் நாட்டில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே1 இருந்து சைவப்பணி செய்தமை குறிக்கப் படுகிறது. சமய நூல் வல்ல “திராவிடப் பிராமணர்கள்” வடநாடு சென்று சைவ மடங்களின் ஆதரவில் குடியேறிச் சமயப் பணி செய்த குறிப்பைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.2 இக்குறிப்புக்களால் சைவமெனப்படும் சிவநெறி மிகப் பல நூற்றாண்டுகட்கு முன்பிருந்தே மடங்களின் வாயிலாக அறிவுடைப் பெருமக்களால் வளர்க்கப் பெற்று வந்துள்ளது என அறிகின்றோம். அக்காலத்தே வடநாட்டறிஞரும் தென்னாட்டறிஞரும் மேற்கொண்டொழுகிய சமய நூல்கள் சிவாகமங்கள் எனப்படும். வேதம், உபநிடத மென்பன வைதிக சமய நூல்கள், அவை சைவமேயன்றி ஏனைச் சமயங்கட்கும் பிரம வாதிகளான பிராமணர்களுக்கும் உலகியல் ஒழுக்கங்கட்கே அடிப் படையாய் பொதுவாய் நிலவின; அதனால் வைதிக நெறியைப் பொதுவென்றும், சைவ நெறியைச் யைச்சிறப் பென்றும் பண்டை யோர் கருதினர். சைவநெறிக்குச் சிவாகமங்கள் சிறந்து நின்றமையின், திருவாதவூரடிகள் சிவாகமக் கருத்துக்களைப் பெரிதும் பயின்று ஓதுகின்றார். உயிருள்ளவை உயிரில்லாதவை, மண்ணுலகு விண்ணுலகு நரகம் ஆகிய எல்லாம் பிரமத்தில் தோன்றி யொடுங்குபவை என்று வேத வேதாந்தங்கள் கூறும்; அவற்றின் மாறுபட்டு, உலகு உயிர்கட்கு வேறாகச் சிவம் என்ற பரம்பொருள் ஒன்று உண்டு என்ற உண்மையை அளவைகளால் ஆராய்ந்து துணிந்து கூறுவது பற்றிச் சிவாகமங் கட்குச் சைவ சித்தாந்தம்3 என்பதும் பெயராயிற்று. இவ்வழி வந்த சைவர்கள் தம்மைச் சைவ சித்தாந்திகள் என்பர். எனவே, திருவாத வூரடிகள், சிவாகமநெறி நிற்கும் சைவ சித்தாந்தி யென்பது தேற்றம். இச் சைவ சித்தாந்தங்கள் “மகேஸ்வரனால் அருளிச் செய்யப் பட்டவை; இவர்கள் மேற்கொள்ளும் பொருள் மூன்று; அவை பதி (இறைவன்) பசு (உயிர்கள்) பாசம் என்பன. இவற்றை யுணர்தும் ஆகமம் நான்கு பாதங்களையுடையது; அவை, வித்தை (ஞானம்) கிரியை, யோகம், சரியை எனவரும்; ஞானம் போலவே சரியையும் யோகமும் சிறந்தனவாம். இவற்றுள் யோகத்தின் பயன் சித்தி; சித்திபெற்றோர் சித்தர் எனப்படுவர். பதிப்பொருள் ஒன்று; உயிர்கள் பல; பாசம் மூன்று. அவை, ஆணவம், கன்மம், மாயை யென்பன. ஆணவம் உயிர்களோடு அனாதி தொடர்புடையது; ஆணவம் முதலிய மூன்றும் மலமெனவும் வழங்கும்.” உயிர்களை அனாதியே பிணித்து நிற்கும் ஆணவத்தைப் பசுத்துவம் என்றும், அது காரணமாக வரும் மாயைகன்மங்களைப் பாசம் என்றும் இவற்றையே மும்மலம் என்றும் கூறுவது இச்சைவ நூல் வழக்கு. இவற்றைத் திருஞான சம்பந்தர் முதலியோர், “பசுபாச வேதனை ஒண் தளையாயின”1 என்பார்; திருவாதவூரடிகளும் அவ்வாறே “பல்லோரும் காண என்றன் பசுபாசம் அறுத்தானை”2 என்றும், மல மூன்றையும் மும்மலமென வழங்கும் திறத்தை “உள்ள மலம் மூன்றும் மாய”3எனவும், “மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன்”4 எனவும் கூறுவர். மாயையின் காரியமாக ஆகமங்களிற் கூறப்படும் கருவிகள் முப்பத்தாறனுள் அந்தக் காரணம் நான்காகும். அவற்றை நெறிப் படுத்திச் சிவத்தின்கண் ஒன்று வித்து ஒழுகும் சிவஞானிகளின் மல மறுத்து அவர் கரணங்களைச் சிவகரணங்களாக்கி இறைவன் ஆட்கொள்வன் என்பது சித்தாந்தம்; இதனைத் திருஞான சம்பந்தர், “நாலந்தக் கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப் பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயும் அவன்”1 என்று குறித்தாராக, அடிகள், “கூறுநாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ”2 என்றும், “சித்த மலமறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்”3 என்று எடுத்தோதி விளக்குகின்றார். இனி, ஆன்மாக்களுக்கு இருவினை யொப்பும் மலபாகமும் உண்டாகுங்கால் சத்திநிபாதம் ஞானப்பேறும் நிகழும் என்பது சிவாகமம். இக்கருத்தையே, திருவாதவூரடிகள், “என் வினை யொத்த பின் கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே” என்று கூறுகின்றார். இங்ஙனமே, யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் இரண்டு என்றும் துவந்துவம் என்றும் இச்சமய நூல்கள் வழங்கும்; இவ்வழக்கினை, அடிகளும் மேற்கொண்டு, “இரண்டுமில் இத்தனியனேற்கே” என்றும், “தவந்துவங்கள் தூய்மை செய்து” என்று உரைத்தருளுகின்றார். மேலுலகத்தையும் வீட்டுலகத்தையும் பொதுவாக வாராவுலகம் என வழங்குவது சங்கத் தொகை நூல் வழக்கு. அதனைத் திருநாவுக் கரசர் முதலிய சான்றோர்கள் எடுத்தாண்டுள்ளனர். அதனையே அடிகளும் மேற்கொண்டு “வாராவுலகம் தந்து வந்தாட் கொள் வோனே”4 என்றும், “வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி”5 என்றும் ஓதுகின்றார். மேலும், தான் பாடிய திருக்கோவையாரில் அடிகள் சங்க நூற் கருத்துக்கள் பலவற்றை எடுத்தாண்டிருப்பது குறிக்கத் தக்கது. “திருவளர் தாமரை”6 யெனத் தொடங்கும் திருப்பாட்டில் அடிகள் தலைமகளை, தாமரை முதலிய பூக்கள் கொண்ட “மருவளர் மாலை” யென்று கூறுவது, சிறைக்குடியாந் தையார் என்னும் சான்றோர் தலைவியைக் காந்தள் முதலிய பூக்களை “இடைப்படவிரைஇ ஐது தொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள்”7 என்பதை நினைப்பிக்கின்றது. “நீ கண்டனை யெனின்”8 என்ற பாட்டில் வரும் “சேய் கண்டனையன் சென்று ஆங்கோர் அலவன் தன் சீர்ப்பெடையின் வாய் வண்டு அனையதோர் நாவற்கனி நனிநல்கக் கண்டு போய் கண்டனைய தொன்றாகி நின்றான்” என்பது, “துறைவன் நெருநை, அகலிலை நாவல் உண்டுறை உதிர்த்த, கனிகவின் சிதைய வாங்கிக் கொண்டு தன், தாழை வேரளை வீழ்துணைக்கிடூஉம், அலவற் காட்டி நற்பாற்று இதுவென, நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந் தோனே”1 என்பதையும், “நறமனை வேங்கையின் பூப்பாயில் பாறையை நாகம் நண்ணி, மறமனை வேங்கை என நனியஞ்சும்”2 என்பது, “அடுக்கத்து அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை, மாத்தகட் டொள்வீ தாய துறுகல், இரும்புலி வரிப்புறம் கடுக்கும்”3 என்பதையும் “மாற்றேன் என வந்த” 4 எனத் தொடங்கும் பாட்டில், “கொடுங்குன்றின் நீள்குடுமி மேல் தேன் விரும்பும் முடவனைப் போல” என வருவது, “நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன், உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து, சுட்டுபு நக்கியாங்கு” 5 என்பதையும், “சூன்முதிர் துள்ளு நடைப்பேடைக்கு இல்துணைச் சேவல் செய்வான், தேன்முதிர் வேழத்தின் மென்பூக் குதர் செம்மலூரன்”6 என்று வாதவூர் அடிகள் கூறுவது, “கரும்பின் வேல் போல் வெண்முகை பிரியத்தீண்டி, முதுக்குறைகுரீஇ முயன்று செய்குடம்பை, மூங்கிலங்கழை தூங்க ஒற்றும்”7 என்பதையும் ஒத்து நின்று திருவாதவூரடிகளின் சங்கத் தமிழ் நூற் புலமையை விரித் துரைக்கின்றன. இனி, “பேயோடானும் பிரிவு இன்னாது”8 என்பது பழமொழி; இதனைப் “பிரிவு செய்தால் அரிதே கொள்க பேயொடும் என்னும் பெற்றி, இருவி செய்தாளின் இருந்தின்று காட்டும் இளங்கிளியே”9 என்றும், இவ்வாறே, “கொற்சேரித் துன்னூசி விற்பவர் இல்”10 என்னும் பழமொழியைத் திருக்கோவையாரில் “வைகொண்டவூசி கொற்சேரியின் விற்று எம்மில் வண்ண வண்ணப் பொய் கொண்டு நிற்கலுற்றே புலை ஆத்தின்னி போந்ததுவே”1 என்றும் அடிகள் கூறுகின்றார். இனி, தான் கூறக் கருதும் கருத்துக்கள் பலவற்றையும் மக்கள் நாடோறும் தம் வாழ்க்கையிற் பயிலும் சொல் வழக்குகள் கருத்துக் களோடு இடையிடையே பெய்துரைக்கு மாற்றால் நம் உள்ளத்திற் பதிவிக்கும் பொற்பு அடிகளது திருவருட் புலமையின் பெருநலனாகத் திகழ்கிறது. இதனை விளக்கும் எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு கூறுதும். ஒருவர் தாம் பெறுதற்குரியவற்றைக் குறைவறப் பெற்று இறும்பூது எய்துங்கால், “இனி ஒரு குறையில்லை; எங்கு எழிலென் ஞாயிறு எமக்கு” எனப் பேசிப் பெருமித முறுவது இயல்பு. இக்கருத்தைத் திருநாவுக்கரசர், “வெம்ப வருகிற்பதன்று கூற்றம் நம்மேல்; வெய்ய வினைப்பகையும் பையநையும், எம்பிரிவு தீர்ந்தோம், இடுக்கணில்லோம், எங்கெழில் என் ஞாயிறு எளியோமல்லோம்”2 என்பதனால் அறிகின்றோம். இதன் நயம் கண்டு மகிழ்ந்த நம் அடிகள், “இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல் எங்கெழில் என் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய்”3 என்றுரைத்து இன்புறுகின்றார். அடிகட்குப் பின் வந்த திருத்தக்க தேவர் முதலியோர், “எங்கெழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தோம்”4 என்று மேற்கொள்வராயினர். பாணன் என்பான் செல்வத் தலைவர்கள் உவக்குமாறு தன்னை மிகத் தாழ்த்திப் பேசி அவர்கள் உள்ளத்தைத் தன்பால் வளைத்துக் கொள்ளும் விரகினன் என்பது சங்கத்தொகை நூல்களால் நன்கு அறியப்படுவதொன்று; அதனால் தாழ்ச்சி புலப்படுக்கும் உரை பாண்மொழி யென்றும் பாண் என்றும் வழங்குவதாயிற்று. அதனை நம்பியாரூரர், “எல்லோருங் காணப் பாண்பேசிப் படுதலையில் பலி கொள்கை தவிரீர்”5 என்று வழங்கினர்; அதுகண்ட திருவாத வூரடிகள், “காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும், பாணேபேசி என்றன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி”1 என்று தாமும் எடுத்தாண்டு இன்புற்றாராக, பின்வந்த திருத்தக்க தேவர், “பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை யென்னும் மாண்பிலாதாரை வைத்தார் என்னுறார்”2 என்று தாம் பாடிய நூலிடைப் பெய்து பாடினர். படுத்தல் என்றதற்கு நச்சினார்க்கினியர் அகப்படுத்தல் என்று பொருள் கூறுவர். இருமருங்கும் நின்று துன்பஞ்சுட இடை நின்று வருந்தித் திகைப்பவர் தம் துயர் நிலையை “இருதலைக் கொள்ளி”3 நிலை யென்பது வழக்கம். இதனைத் திருநாவுக்கரசர், “எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என்னுள்ளம் எங்ஙனம் கூடுமாறே”4 என்றாராக, திருவாதவூரடிகள், இக்கருத்தையே சிறிது விளக்கி, “இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து நினைப்பிரிந்த விரிதலையேனை விடுதி கண்டாய்”5 என்று உரைக் கின்றார். “இருதலைக் கொள்ளி மேல்” என்னாமல், “உள்ளெறும்பு” என்றது, முத்தொள்ளாயிர முடையார், “இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத், திரிதரும் பேரும் என் நெஞ்சு”6 என்று கூறியது கொண்டு என அறிக. மூத்துவிளியும் இயல்புடையது நம் யாக்கை; அதனால் அதற்குக் கிளர்ச்சியும் தளர்ச்சியும் மாறி மாறி உண்டாதல் இயல்பு. கிளர்ச்சிக் காலத்தில் செய்வன செய்து வைப்பது எய்ப்பில் வைப்பெனப்பட்டுப் பண்டு தொட்டே வழங்கி வருகிறது.7 இதனைக் கண்ட வாதவூரடிகள், இறைவனை, “தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே”8 என்றும், “எனக்கு எய்ப்பினில் வைப்பே”9என்றும் கூறுகின்றார். இவ்வாறே நம்பியாரூரரும், இறைவனை “நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை”10 என்றும், திருமங்கை மன்னன், “எந்தையை எனக்கு எய்ப்பினில் வைப்பினை”1 என்றும் கூறுவது ஈண்டுக் குறிக்கத் தக்கது. இனி, மிக்க நீரிடை நின்றார்க்கு நீர் வேட்கை யுண்டாகாது. அதுபோலவே, நுகரதக்க நுகர் பொருள்களின் நடுவிருக்கும் ஒருவனுக்கு நுகர்ச்சி வேட்கை யுண்டாயின், அவனது நிலையை விளக்கற்கு “வெள்ளத்துள் நாவற்றியது போல” எனக் கூறுவது உலகியல், தலைமகளோடு இனிதிருக்கும் தலைமகன் ஒருகால் கூட்டம் பற்றிப் பெருவிதுப்புற்றானாகத் தோழி அவனைத் தெருட்டும் கருத்தினால், “அந்தண் பழனத்து.... ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு(இவள் அருகிருந்தும்) நடுங்கலானீர் ”2 என்றாள் எனச் சங்கச் சான்றோர் இக்கருத்தை விளக்கினார். அடிகளார் அக்கருத் தையே தாமும் வாங்கி, “வெள்ளத்துள் நாவற்றியாங்கு உன் அருள் பெற்றும் துன்பத்தினின்றும் விள்ளக்கிலேன்”3 என இயம்புகின்றார். இனி, “கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம்”4 என்றும், “மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு இயைந்து கண்ணோடா தவர்”5 என்றும் திருவள்ளுவர் முதலியோர் கூறுவர். முத்தொள்ளாயிர முடையாரும், “வாரக்கண்டு நாணாதே வல்லையால் நெஞ்சே, மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக் கண்டாய்”6 என்பர். கண்பெற்ற பயன் கண்ணோட்ட மாத்திரமன்று; காண்டற் கரிய இறைவன் திருவுருவைக் கண்டு அன்பால் உருகிக் கண்ணீர் சொரிவது பெரும்பயன்; அது செய்யாத கண்ணும் மரக்கண்ணே என்பாராய், அடிகள், “என்னை ஆண்டாய்க்கு நெஞ்சங்கல்லாம் கண்ணிணையும் மரமாம்”7 என்றும், “வன்பராய் முருடொக்கும் என் சிந்தை மரக்கண் என்செவி இரும்பினும் வலிது”8 என்றும், “மரக்கணே னையும் வந்திடப் பணியாய்”9 என்று பலபடியாகக் கூறுகின்றார். இனி, ஐம்புலனையும் யானைகளாக ஒப்புமைசெய்து கூறுவது திருவள்ளுவர் திருஞான சம்பந்தர் முதலிய சான்றோர் மரபு. அப்புலன்களின் ஆசைப்போரில் அகப்பட்டு வருந்தும் தன்னை வாதவூர் அடிகள், யானைப்போரில் அகப்பட்ட குறுந்தூறு எனக் கூறலுற்று, “ஆனைவெம்போரில் குறுந்தூறு எனப் புலனால் அலைப்புண்டேனை எந்தாய் விடுதி கண்டாய்”1 என்று விளம்பு கின்றார். இஃது “எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல்” என்னும் பழமொழியை நினைப் பிக்கின்றது. எருக்கு, எருக்கின் தூறு, யானை வெகுண்டுவரின் எருக்கின் குறுந்தூறு அரணாகாது என்பதையே இப்பழமொழியும் விளக்கு கின்றது. இனி, இறைவன் உலகுயிர்களிற் கலந்திருதுக்கும் இருப்பைத் திருஞானசம்பந்தர், “பூவினில் வாசம் புனலிற் பொற்புப் புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு நாவினிற் பாடல் நாள்ளாறுடைய நம் பெருமான்”2 என்று கூறினாராக, “பூவினில் வாசம்” என்ற கருத்தை திருவாதவூரடிகள், “உற்ற யாக்கையின் உறுபொருள், நறுமலர் எழுதரு நாற்றம் போல், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்”3 என்று விளக்குகின்றார். கஷ்டம் என்னும் வடசொல் இக்காலத்தில் மக்கள் பேச்சு வழக்கில் பெரிதும் பயிலுகின்றது. தமிழிலக்கியச் செய்யுள் நெறியில் இதனை முதற்கண் எடுத்தாண்டவர் திருநாவுக்கரசர்; “கருமை யிட்டாயவூனைக் கட்டமே கழிக்கின்றேன் நான்”4 என்பது திருநாவுக்கரசர் கூறுவது. பின்னர் இதனை நம் வாதவூரடிகள் மேற்கொண்டு, “கல்வகை மனத்தேன் பட்ட கட்டமே”5 என்று இசைக்கின்றார். சமண் சமய நூல்களிலும் பிறவற்றிலும் ஞான நிலையையுணர்த்தற்குக் கேவலம் என்றொரு சொல்லை வழங்கியதும் தமிழறிஞர் நன்கறிந்தது. இச்சொல், கேவலம் நாய், கேவலம் துரும்பு என இழிவுச் சிறப்புணர்த்தும் முறை பழந்தமிழ் நூல்களுட் காணப்படாததொன்று; இம்முறையில் இச்சொல்லைத் திருவாத வூரடிகள், “எந்தை பெருந்துறை ஆதி யன்று, கேவலம் கேழலாய்ப் பால் கொடுத்த கிடப்பறிவார் எம்பிரானாவரே”1 என்று வழங்கு கின்றார். தோன்றி மறைவதொன்றை மாயம் என்பது “மாயப் பொய்ம்மொழி”2 என அகநானூறு முதலிய சங்கத் தொகை நூல்களிற் காணப்படுவது. கண்ணுக்குத் தோன்றி உடன் மறைவ தொன்றைக் கண்மாயம் என உலகியலிற் கூறுவதுண்டு. இதனை அடிகள் இலக்கிய நெறியில் முதன்முதலாக, “கண்டுங் கண்டிலேன் என்ன கண்மாயமே”3 என்று வழங்குகின்றார். இனி, திருநாவுக்கரசர், “வழக்கிலா அமணர்தந்த நஞ்சு அமு தாக்குவித்தார் நனிபள்ளி யடிகளாரே”4 என்று பாடினாராக, திருவாதவூரடிகள், “நஞ்சமே அமுதமாக்கும் நம்பிரான்” 5 என்று அச்சொற் றொடரின் சொல்லையும் பொருளையும் மேற்கொண்டு ரைக்கின்றார். இவ்வாறே, “பற்றுக் பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு”6 என்ற திருக்குறளை, “பற்றாங்கு அவையற்றீர் பற்றும் பற்று ஆங்கு அது; பற்றி நற்றாம் கதி7 அடைவோமெனில் கெடுவீர் ஓடி வம்மின்”8 என்றும், “யான் எனது என்னும் செருக்கு”9 என்ற திருக் குறளடியை, “நான் எனதென்னும் மாயம்”10 என்றும் கூறுவன அடிகளின் பரந்த கல்வி நலத்தைப் புலப்படுப்பனவாம். இனி, திருவாதவூரடிகள் இளங்குழந்தைகளின் இனிய கூட்டுறவில் தோய்ந்து பேரின்பம் நுகர்ந்தவராகக் காணப்படு கின்றார். பச்சிளங் குழவிகள் உறக்கம் வரினும் பசியெடுக்கினும் அழும்; அவற்றின் அழுகைக் குறிப்பறிந்து பாலூட்டிச் செய்வன செய்வது தாயரின் தாய்மைச்செயல். அதனை எடுத்தோது முகத்தால் இறைவன் உயிர்கள்பால் தாயன்புசெய்து தலையளிக்கின்றான் என்பாராய், “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே”1 என்பர்; தாய்ப்பால் குறைந்த குழவி சவலையாய் மெலிவது கண்கூடு; அதனை இறைவனது அருள் பெறாதொழியின் தான் கெடுவதொருதலை என்பது விளக்குதற்குத் “தாயாய் முலையைத் தருவானே தாராதொழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ”2 என்றும். இளங்குழவிகள் பொன் னாலும் மணியாலும் இயன்ற பொருள்களின் அருமை அறியாது எறிந்தொழியும் செயல் கண்டு, அதனை, இறைவன் அருட்குரவனாய்ப் போந்து ஞானமருள முற்பட்ட காலத்தில் தான் அவனது அருமை உணராமல் புறக்கணித்த திறத்தை நினைந்து வருந்துவார், “மையிலங்கு நற்கண்ணி பங்கனே வந்து எனைப் பணிகொண்டபின், மழக்கை யிலங்குபொற் கிண்ணம் என்றால் அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்”3 என்றும். வானத்து முழுமதிதோன்றின் அதனைப் பற்றி விளையாட நினைந்து இளங்குழவிகள் அழும் செயல் கண்ட அடிகள், திருக்கோவையாரில், தலைவியது பதிநோக்கி அதன் புகலருமை நினைந்து வருந்தும் தலைவன் செயலில் வைத்து, “வானுந்து மாமதி வேண்டி அழும் மழப்போலும் அன்னோ, நானும் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே”4 என்றும், அவளது அருமை கேட்டு அழிந்த உள்ளத்தனாய், “விசும்புற்ற திங்கட்கு அழும் மழப்போன்று இனி விம்மி விம்மி, அசும்புற்ற கண்ணோடல் அறாய் கிடந்து”5 என்றும் பாடுவன மேலேகூறிய கருத்தை வற்புறுத்துகின்றன. திருவாதவூரடிகள் பரந்த உலகியலறிவில் சிறந்து விளங்கு கின்றார்; மேலும் அவர் மக்கள் வழக்கில் காணப்பட்டவற்றையும் ஏனைப் பொருள்களின் குணஞ் செயல்களையும் நுணுகி நோக்கிப் பயின்ற பயிற்சி மிக்கும் விளங்குகிறார். அவருடைய பாட்டுக்கள் உலகியலைவென்று திருவருணிலையில் நின்று உளமுருகிப் பாடியன வாதலால், அவரை அறியாமே அப்பயிற்சி உணர்வுகள் தாமே வெளிப்படுகின்றன. பள்ளம் நோக்கி ஒடுவது நீர்க்கியல்பு; பள்ளத்தில் விழுங்கால் கீழுள்ள பொருள்களை மேலேகிளப்பிக் கலக்கி அகழ்வதும் அதன் செயல்; இதனைப் “பள்ளந்தாழ் உறுபுனலின் கீழ்மேலாகப் பதைத் துருகும் அவர்”1 என்பர். உணர்வாகிய உள்ளீடில்லாத ஒருவனைப் பெரியோர் பிணமேயென இழித்து உரைப்பது இன்றும் உலகியல்பு. உணர்வுடையார் தமக்குப் பிறர்செய்த நன்றி சிறிதாயினும் அதனை என்றும் மறவாராக, இறைவன்பால் “பிறிவிலாத இன்னருள்கள் பெற்றிருந்தும்”2 நெஞ்சம் அப்பேற்றை உணராது மறந்து மாறுபடுவது கண்டு “மாறாடுதி பிண நெஞ்சே” என்று கடிந்துரைப்பர். எல்லாப் பொருள்களினும் இறைவன் கலந்து நிற்கும் திறத்தை எள்ளும் எண் ணையும் போல் கலந்திருக்கின்றான் என்பது உலகியல்; இதனையே அடிகளும் மேற்கொண்டு, “எள்ளும் எண்ணெயும்போல் நின்ற எந்தையே”3 என்று கூறுவர்; உள்ளீடாகிய நல்லறிவின்றி மூத்த ஒருவனை மூங்கில்போல வளர்ந்துள்ளான் என இழிக்கும் உலகவர் உரையை நயந்து கொண்டு, திருவடிப்பேறு பெற்ற அடியார் போலத் தான் இறைவனுடைய “தணியார் பாதம்” பெறுதற் கேற்ற உள்ளீடு இன்றித் திண்ணிய உடலுடன் நெடிதுவளர்ந்தேன் எனத் தம்மை இகழ்ந்து “திணியார் மூங்கில் அனையேன்”4 என்று இசைப்பர். நம் நாட்டு உயர் குடும்பங்களில் வாழ்வோர், பெற்றோர் பெரியோர்க் கடங்காது மனம் விரும்பின செய்தொழுகும் இளைஞனை “ஊர்க்காளைபோல் திரிகின்றான்” என இகழ்ந் துரைப்பர். இறைவன் எழுந்தருளக்கண்ட அடியார்கூட்டம் சென்று சேரவும் தனக்கு அவ்வாறு சேர்தற்கு வேண்டும் திருவருள் வாய்ப்பு உண்டாகாமையால் அடிகள் தம்முள் நொந்து வருந்தி, இறைவனை நோக்கி, “அருள் பெற்ற சீரேறடியார் நின்பாதம் சேரக்கண்டும் கண்கெட்ட ஊர் ஏறாய் இங்கு உழல் வேனோ, கொடியேன் உயிர்தான் உலவாதே”5 என்றும். “ஆள்வாரிலி மாடாவேனோ”6 என்றும் கூறுவர். ஒரு சிவனைப் பிறரொருவர்க்குக் கையடைப் படுத்துவோர், “இவன் உம் கையிற் பிள்ளை; உமக்கே அடைக்கலம்; இயைந்தது செய்க” என்பது உலகியலில் தொன்று தொட்டு வரும் உரை.1 அடிகள் இதனை, மகளிர் தம்மை இறைவற்குக் கையடைப் படுத்தும் கூற்றில் வைத்து “உங்கையிற் பிள்ளையுமக்கே யடைக்கலாம் என்று, அங்கப்பழஞ் சொற்புதுக்கு மெம்மச்சத்தால், எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போம், கேள்2 என்று பாடுகின்றார். இனி, இறுதியாக, திருவாதவூரடிகள் மிக்க எளிய இனிய பொருள்களின் குணஞ்செயல்களை உவமமாகக் கொண்டு அரிய கருத்துக்களை விளக்குவதில் தலைசிறந்து விளங்குவது நன்கு காணத் தக்கதொன்று. ஊராமிலைக்கக் குருட்டாமிலைக்கும் என்பது ஒரு பழமொழி. நம்மாழ்வார் தாம் பாடிய திருவிருத்தத்திலும், “எப்படி யூராமிலைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும், அப்படியானும் சொன்னேன்”3 என இப்பழமொழியை எடுத்தாண்டனர். மிலைத்தல் என்பதற்கு அதன் உரைகாரர்கள் கனைத்தல் எனப் பொருள் கூறினர். அப்பொருளே விளங்க அடிகள் “ஊராமிலைக்கக் குருட்டாமிலைத்து இங்கு உன் தாளிணை யன்புக்கு ஆராய் அடியேன் அயலேமயல் கொண்டு எழுகேனே”4 என்று கூறுகின்றார். நச்சுமர மாயினும் பச்சை மரத்தை வெட்டலாகாது என்பது இன்றும் வழங்கும் உலகுரை; இதனைக் கருத்திற் கொண்டு தன்னைக் கைவிடலாகாது என இறைவனை வேண்டலுற்ற அடிகள், “தாம் வளர்த்தது ஓர் நச்சுமாமர மாயினும் கொலார், நானும் அங்ஙனே உடைய நாதனே”5 என்கின்றனர். விட்டிற் பறவை விளக்குத் தீயில் தானே வீழ்ந்து இறப்பது பலரும் அறிந்த தொன்று; மகளிர் கூட்டத்தில் வீழ்ந்து கெடும் திறத்துக்கு இவ்விட்டிலை உவவமாக்கிச் “செழிகின்ற விட்டிலில் சின்மொழியாரிற் பன்னாள், விழுகின்ற என்னை விடுதி கண்டாய்”6 என்று கூறுகின்றார். அடிகட் குப்பின் வந்த சான்றோர் ஒருவர், “ஆனையூற்றின் மீன் சுவையின் அசுணமிசையின் அளிநாற்றத், தேனைப்பதங்கம் உருவங்கண்டு இடுக்கண் எய்தும் இவ்வனைத்தும், கானமயிலஞ் சாயலார் காட்டிக் கௌவை விளைத்தாலும் மான மாந்தர் எவன்கொலோ வரையாது அவரை வைப்பதே1 எனப்பாடுகின்றார். இவ்வண்ணமே நக்கிக்குடிக்கும் நாயின்2 செயலை, “கடலினுள் நாய் நக்கியாங்குன் கருணைக்கடலின் உள்ளம் விடலரியேனை விடுதிகண்டாய்”3 என்றும், நாங்கூழ்ப் புழுவை அரிந்துண்ணும் எறும்பின் செயலை விதந்து எறும்பிடை நாங்கூழ் எனப் புலனால் அரிப்புண்டு அலந்த வெறுந்தமியேன்4 என்றும், “பள்ள முதுநீர் பழகினும் மீனினம், வெள்ளம் புதியது காணின் விருப்புறூஉம்”எனவும் நீர் பெருக மகிழ்வதும் குறைய வருந்துவதும் மீனுக்கியல்பு எனவும் வரும் வழக்குப்பற்றி, “பெருநீரறச் சிறுமீன் துவண்டாங்கு நினைப் பிரிந்த, வெருநீர்மை யேனை விடுதி கண்டாய்”5 என்றும், மிகக் கனிந்த வாழைப் பழத்தைக் கொண்டு, “என்னை வாழைப்பழத்தின் மனங் கனிவித்து எதிர்வது எப்போது பயில்வி கயிலைப் பரம்பரனே6 என்றும் உடம்பிற்குப் புளியம்பழத்தை உவமையாக நிறுத்தி, “அளியுண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடையாக்கை புளியம் பழமொத்திருந்தேன்”7 என்றும் நீரோட்டத்தில் எளிதில் கரைந்துருகி யோடும் நொய்ம் மணலைத் தனது உள்ளத்துக்கு உவமமாக்கி “சிவன் எம்பெருமான் என்று ஏத்தி, ஊற்று மணல்போல் நெக்கு நெக்கு உள்ளே யுருகி ஓலமிட்டுப் போற்றி நிற்பது என்று கொல்லோ”8 என்றும் கூறுகின்றார். நாயைச் சிவிகை யேற்றுவித்தாற் போல என்றும், நாயின்மேல் தவிசிட்டாற் போல என்றும் நாய்பொருளாக இருபழமொழிகள் வழங்குவதுண்டு. உயர்ந்தோரை ஏற்றுதற்குரிய சிவிகையில் நாயை ஏற்றினும் அது தனக்குரிய கீழ் நிலையையே விழைந்தோடும் என்பதும், குதிரை யானை முதலியவற்றின் மேல் பண்ணப்படும் தவிசினை நாயினது முதுகின்மேல் வைப்பது பொருந்தாது என்பதும்1 இவற்றின் கருத்து. இவ்விருகருத்தும் தோன்ற, “நன்றாக வைத்து என்னை நாய் சிவிகை யேற்று வித்த. பெருமான்”2 என்றும், “அடியேன் இறுமாக்க நாய் மேல் தவிசிட்டு நன்றாய் பொருட் படுத்த தீமேனியான்”3 என்றும் பன்முறையிற் கூறுகின்றார். இதனைக் கண்டே திருத்தக்கதேவர், “அடுகளிற்று எருத்தினிட்ட வண்ணப் பூந்தவிசுதன்னை ஞமலிமேல் இட்டதொக்கும்”4 என்று தாமும் எடுத்தாளுகின்றார். கன்றீன்ற பசு தன் கன்றின்பால் பேராக்காதல் கொண்டு பேணும் இயல்புடையது; அக்கன் சிறிது முதிர்ந்த வழித் தாய்ப்பசு அதனை உதைத்துத் தள்ளும்; அப்போது அக்கன்று பால் வேட்கை பெரிதுற்று உள்ளம் வெதும்பி வாடும்; அவ்வாறு தானும் மூத்து நோயுற்று அருள்வேட்கை மிகுந்து வருந்தும் இயல்பை, “நோயுற்று மூத்து நுந்துகன்றாய் இங்கிருந்து”5 என்று பாடுகின்றார். இந்திரியங்களைப் பறவையாக உவமம் செய்வது சமய நூல்களின் இயல்பு; அடிகள் சமய நூல்களில் வல்லுநராதலின், “இரைமாண்ட இந்திரியப்பறவை இரிந்தோடத், துரை மாண்டவா பாடித் தோணோக்க மாடாமோ”6 என்கின்றார். இதனைக்கண்ட ஞானாமிர்த்த ஆசிரியரான வாகீசபண்டிதர் “இந்தியப் போகில்”7 என்று இசைக்கின்றார். பிறிதோரிடத்தில் அடிகள், புலன்களைச் சேறு8 என்று கூறுகின்றார். உடை நெய்வோர், நெசவுக்கேற்ப நூலைப் பக்குவப்படுத்திப் பாய்போற் பரப்பி, அந்நூல்களினூடே குழல் என்னும் கருவி வாயிலாகக் குறுக்கே நூலைச் செலுத்தி நெய்வர். பாய்போற் பரப்பிய பாவிடையே குழல் புறத்தே தோன்றாதபடி முன்னும் பின்னுமாக ஓடும். இதனை அடிகள் இறைவன் திருக்குறிப்பின் பாலும் உலகின் பாலும் ஓடியலையும் தன் உள்ளத்துக்கு உவமமாக நிறுத்தி “பாவிடையாடு குழல் போல் கரந்து பரந்த உள்ளம், ஆ கெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே” என்று பாடுகின்றார். உணவு கொள்ளுங்கால் விக்குவதும் அது போக்கற்கு நீருண்பதும் நம்மனோர்க்கு இயல்பு. இச்செயலை, “வழங்குகின்றாய்க்கு உன் அருளா ரமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின்றேன், விக்கினேன், வினையேன் என்விதியின்மையால், தழங்கு அருந்தேன் என்ன தண்ணீர் பருகத் தந்து உய்யக் கொள்ளாய்”1 என்று அடிகள் குறித்தருளுகின்றார். நெறி பிறழ்ந்து செருக்கித் திரியும் ஒருவனைத் தலையால் நடக்கின்றான் என இகழ்ந்துரைப்பது உலகியல். தன்னையே இகழ்ந்து கூறற்கண் அடிகள், இத்தொடரை மேற்கொண்டு “யான் தருக்கித் தலையால் நடந்த வினைத் துணையேன்”2 என்றும், “புலைய னேனையும் பொருளென நினைந்து உன் அருள் புரிந்தனை புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன்”3 என்றும் கூறுவர். திருநீறணியும் திறம் தூளம் முண்டம் என இருவகைப்படும்; தூளம் வெறிதே பூசுவது. முண்டம் நீர் பெய்து குழைத்திடுவது. இவற்றுள் தூளம் உத்தூளனம் எனவும் முண்டம் திரிபுண்டரம் எனவும் வடமொழிப்படுத்து வழங்கும். இவ்விரு திறத்தையும், “திருமுண்டம் தீண்ட மாட்டாது அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே”4 என்றும் “திருநீற்றை உத்தூளித்து ஒளிமிளிரும் வெண்மையனே”5 என்றும் அடிகள் பாடுகின்றார். இனி, “படுநுகம் பூணாய் பகடே மன்னர், அடித்தளை நீக்கும் வெள்ளணியா மெனும், தொடுப்பே ருழவர் ஓதைப் பாணியும்” என்ற சிலப்பதிகாரத் தொடர்க்கு அரும்பதவுரைகாரர், “தொடுப் பேருழவர் - விளாக் கொண்டு உழும் உழவர்” என்று பொருள் காட்டுவர். இதனால் விளா என்பது உழவெல்லையைக் குறிக்கும் ஒரு சொல்லென்பது விளங்கும். இதனை அடிகள், “நுண்ணிய நொடியென சொற் செய்து நுகமின்றி விளாக்கைத்துத் தூக்கி, முன் செய்த பொய்யறத் துகளறுத்து எழுதரு சுடர்ச்சோதி”1 என்று கூறுகின்றார். சொற் செய்து அது கொண்டு சொல்லேருழவு செய்யுமாறு செலுத்திய அருட்டிறத்தை “நுகமின்றி விளாக் கைத்து” என்றும், பின்பு அந்நிலையினின்றும் எடுத்துத் துகளறுத்தார் என்றற்குத் “தூக்கி.... துகளறுத்து எழுதரு சுடர்ச்சோதி”என்றும் கூறுகின்றார். இவ்வாறு கைத்துத் தூக்கும் சொற்றொடர் நயத்தைத் திருத்தக்க தேவர், “அடிச் சிலம்பிரங்கும் இன்குரல், கைத்தெடுத்தலின் காமம் தாழ்த்தது”2 என்று பாடுகின்றார். ஆடிப்பாவை, மண்புனை பாவை, மரப்பாவை யென்பன வற்றைப் பண்டைச் சங்கத் தொகை நூல்களிலும் திருக்குறளிலும் காண்கின்றோம். இப்பாவை தோலாற் செய்து ஆட்டப்படுவதும் உண்டென்றும், சாந்தி, விநோதம் எனப்படும் கூத்துவகையுள் விநோதம் அறுவகைப்படும் என்றும், அந்த ஆறனுள் தோற்பாவைக் கூத்து ஒன்று என்றும் அடியார்க்கு நல்லார் குறிக்கின்றார். இத்தோற்பாவைக் கூத்தை இலக்கிய நெறியில் முதற்கண் எடுத்து மொழியும் வாதவூர் அடிகள், சீலம் நோன்பு செறிவு அறிவு என்பன இன்றித்தாம் வீழ்ந்து கிடப்பதாகக் கூறலுற்று, “சீலமின்றி நோன்பின்றிச் செறிவேயின்றி நோன்பின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை”3 என்று கூறுகின்றார். இனி, அறத்தையும் அறங்கிடந்த நெஞ்சுடையாரையும் அறவை என்பது பண்டைய புறநானூறு4 சிலப்பதிகாரம்5 முதலிய நூல்கலிள் காணப்படுவது. அறவு (அறுதல்) எனப்படும் தொழிற் பெயராகக் கொண்டு “அறவையேன் மனமே கோயிலாகக் கொண்டு”1 என்றும், “அறவை என்று அடியார்கள் தங்கள் அருட்குழாம் புக விட்டு நல்லுறவு செய்தெனை உய்யக் கொண்ட பிரான்”2 என்றும் வழங்கியருளுகின்றார். போதருதல் என்பது வருதல் எனப் பொருள்படுவதொரு சொல். இது போதரல் எனவும் வரும். இதனைப் போரல் என மரூஉ வாக்கி வழங்கும் முறையொன்று இடைக்காலத்தே தோன்றியுளது. அதனை அடிகளும் மேற்கொண்டு, “ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர் போரப் புரிமின் சிவன் கழற்கே”3 என்றும், “சென்றார் போரும் பரிசு புகன்றனரோ”4 என்றும் வழங்குகின்றார். இவ்வாறே சிக்கென, அதெந்துவே, அறையோ, சோத்து என்பன முதலாகிய சொற்கள் அடிகள் அருளிய நூல்களில் காணப்படுகின்றன. திருவாதவூரடிகள் பாடியருளிய திருவாசகத்தில் பாவையாடல், அம்மானை யாடுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், சாழல் இயம்பல், பூவல்லி கொய்தல், உந்தீ பறத்தல், தோணோக்கமாடல், பொன்னூசலாடல் முதலிய பல விளையாட்டுக்கள் பொருளாகப் பதிகங்கள் பாடப் பெற்றுள்ளன என்று முன்பே கூறினாம். இவற்றுள், பாவையாடல் சங்க காலத்தில் இருந்ததொரு நிகழ்ச்சி. மகளிர் நீராடுங்கால் பைஞ்சாய்க் கோரையைக் கொண்டு பாவையொன்று செய்து பூச்சூடி ஒப்பனை செய்து நீர்த்துறை மணலில் வைத்து நீரில் இறங்கி விளையாடுவர். இது பொதுவாக நிகழ்வது. மார்கழித் திங்கள் முன்பனிக் காலமாதலின், அக்காலத்தே மணமாகாத இளமகளிர் விடியலுக்கு முன்னரே எழுந்து தம் தாயரொடு நீர்த்துறைக்குச் சென்று பாவை நிறுவி “வெம்பாதக வியனில வரைப்பு”5 எனத் தாயர் காட்டிய நெறி வழியே நின்று பரவி நீராடுவர். அந்நீராட்டு அம்பா ஆடல்6 என்றும், “தைநீராடல்”7 என்றும் பெயர் பெற்று நிலவிற்று. அப்போது அவர்கள் பாவையை முன்னிறுத்துப் பாடிய பாட்டு பாவைப் பாட்டு எனப்பட்டது. இடைக் காலத்தே சீவில்லிபுத்தூரில் இருந்த சூடிக் கொடுத்த நாச்சியார் எனப்படும் ஆண்டாள் பாடிய திருப்பாவை, “வையத்து வாழ்வீர்கள் நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ”1 என்றும், இவ்வாறு செய்தால், நாட்டில் திங்கள் மும்மாரி பெய்யும், 2செந்நெல் பெருகி விளையும், கயல் முதலிய மீனினம் வயலில் வளம்பெறும், குவளை முதலியன பூத்துச் சிறப்புச் செய்யும், ஆனிரைகள் பாற்பயன் பெருகும், இவ்வாற்றால் நீங்காத செல்வம் நிறையும் என்றும் கூறுவது பண்டை நாளை அம்பாவாடற் கருத்தை விளக்கி வற்புறுத்துகிறது. சங்க காலத்து அம்பாவாடல் நீராடுங்கால் பொது விளையாட் டாகவும், மார்கழித் திங்களில் திருவாதிரை நாளில் தைத்திங்கள் காறும் நீராடும் தவத் தைந் நீராடல் எனச் சிறப்பு நீராட்டாகவும் இருந்தது; பின்னர், மார்கழித் திங்களில் மணமாகாத மகளிர் பாவையை நிறுத்தி அதனை முன்னிலையாக்கித் தாம் கருதிய கருத்து நிறை வேறுதல் வேண்டித் தம்முடைய வழிபடு கடவுளை வாழ்த்தும் நெறியில் இயங்குவதாயிற்று. இதனை ஆண்டாள் அருளிய திருப்பாவை நன்கு காட்டுகிறது. இத்திருப்பாவைக்கு உரைகண்ட பண்டைய ஆசிரியர். “ஆழ்வார்களிற் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரம பக்தியுடையாளான் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்குக் கருத்து; மார்கழி நீராட என்று ஒரு வ்யாஜத்தைக் கொண்டு, நோன்பு என்று ஒரு வ்யாஜத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று உனக்கு சேஷமாயிருக்கிற இந்த ஆத்மா அனர்த்தப் படாதபடி எண்ணி, இதுக்கு ஸ்வரூபானு ரூபமான கைங்கர்யங்களையும் கொடுத்து, அது தானும் யாவதாத்ம பாவியாம்படி பண்ணியருள வேணும் என்று அபேக்ஷிக்கிறது. இந்நோன்புக்கு மூலம் என்னெனில், மீமாம்ஸையிலே ஹோளாதிகரணந்யா யத்தாலே ஸிஷ்டாசாரஸித்தம்; மேலையார் செய்வனகள்’ என்று ஆண்டாள் தானும் அருளிச் செய்தாள். பொய்யே நோற்கி றோமென்று சொல்லாமோ எனில் விவாஹங்களிலும் மரண பர்யந்த மான தசைகளிலும் வந்தால் பொய் சொல்லலாம்”3 என்று கூறுகின்றனர். திருவாதவூரர் பாடிய திருவெம்பாவையில் முதல் எட்டுப் பாட்டுக்களில் இளமகளிர் விடியற்கு முன்னர் எழுந்து ஒரு வரை யொருவர் எழுப்பி நீராடற்கு அழைக்கும் கருத்தும். ஐந்து பாட்டுக்களில் மகளிர் நீராட்டயரும் கருத்தும், ஒரு பாட்டில் மழையைப் பொழியு மாறு வேண்டும் கருத்தும், இறுதிப் பாட்டில் இந்நீராட்டு மார்கழி நீராட்டு என்னும் கருத்தும் எஞ்சியவற்றில் இறைவன் புகழ் எடுத்துப் பாடும் கருத்தும் உள்ளன. இத்திருவெம்பாவையின் கருத்து வகுத்த பண்டை நாளைச் சான்றோர் ஒருவர், இது “சத்தியை வியந்தது” என்று குறித்துள்ளார். இப்பாவைப் பாட்டின் நலத்தில் ஈடுபட்டு இன்பம் துய்த்த பண்டைத் தமிழ்ச் சான்றோர்களும் வேந்தர்களும் தமிழ் நாட்டிலுள்ள சிவன் கோயில்கள்தோறும் மார்கழித் திங்களில் திருவாதிரைநாளில் திருவாத வூரடிகட்குத் திருவிழா எடுத்து, அப்போது அவர் திருமுன்னர் இத்திரு வெம்பாவையை ஓதுதல் வேண்டும் என நிவந்தங்கள் ஏற்படுத்தினர். இடைக்காலச் சோழ வேந்தருள் முதல் வீரராசேந்திரன் காலத்திலேயே திருக்கோயில்களில் திருவெம்பாவையை ஓதும் முறை தோன்றியிருந்தது எனக் கல்வெட்டிலாகா ஆண்டறிக்கை1 கூறுகிறது. கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் தஞ்சை மாநாட்டு வழுவூர் வீரட்டேசுரர் கோயிலில் மார்கழித் திருவாதிரை விழாவில் மணிவாசகர் திருமுன் திருவெம்பாவை ஓதுதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.2 கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டில் மாறவன்மனான முதற் சுந்தர பாண்டியன் காலத்தில் பாண்டி நாட்டுநாங்குனேரியிலுள்ள திருநாகேஸ்வரம் என்னும் சிவன் கோயிலில், மார்கழித் திருவிழாவில் திருவெம்பாவை யோதப்பட வேண்டுமென அவனி நாராயணப் பல்லவராயர் என்னும் விற்படைத் தலைவன் ஒருவன் நிவந்தம் விட்டிருக்கின்றான்.3 கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் இரண்டாம் அரிஹர தேவமகாராயர் கலத்தில் திருவொற்றியூரில் இஷபத் தளியிலார், தேவரடியார், சொக்கத் தளியிலார் முதலியோர் இடையே இருந்து வந்த பிணக்கொன்று தீர்க்கப் பெற்றிருக்கிறது. அத் தீர்ப்பின்கண், பதியிலார்களே திருப்பதிகமும் திருவெம் பாவையும் ஓதுதல் வேண்டுமென்பது குறிக்கப்படுகிறது.1 இவ்வாறு வடக்கே திருவொற்றியூரிலும், தெற்கே நாங்கு னேரியிலும், இடையில் சோழநாட்டு வழுவூரிலும் திருக்கோயிலில் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளில் நடைபெறும் திருவிழாவில் திருவாதவூரர் திருமுன் ஓதப் பெறுவது காணப்படுவதால் இத் திருவெம்பாவை, தமிழ் நாடு முற்றும் மேற்கொண்டு பராவப் பெற்ற சீர்த்தியுடைய தென்பது நன்கு விளங்குகிறது. இடைக் காலத்தில் தென் தமிழ் நாட்டிற்கும் கடாரம், சாவகம், சயாம் முதலிய கீழ்க்கடல் நாடுகட்கும் மக்கள் போக்கு வரவும், அவர் வழியாகத் தமிழ் நாட்டு வழக்க வொழுக்கங்களுட் சிலபடர்ந்தமையும் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வகையில் இத் திருவெம்பாவை தமிழ் மந்திரம் என்ற பெயரால் சயாம் நாட்டிற்குச் சென்றிருக்கிறது. அரசனுக்கு முடிசூட்டுங் காலத்தும் லோ - ஜின் - ஜா என்ற திருவிழாக் காலத்தும் இத்திருவெம்பாவையைச் சயாம் நாட்டவர் ஓதுகின்றனர். இது “ஏலோர் எம்பாவாய்” என்று பாட்டுத்தோறும் முடிவது கண்ட சாயாம் நாட்டவர் இதற்கு “லோரிபாவாய்”2 என்று பெயரிட்டும், திருக்கயிலாய்க் கடை திறப்பு என்று பொருளுரைத்தும் தம்மிடையே மேற்கொண் டுள்ளனர். வேந்தன் முடிசூடிக் கொள்ளுங் கால் எழுகுடை நிழற்றும் பத்திரபீடம் எனப்படும் எண் கோணபீடத்தில் அவன் வீற்றிருப்பப் பிராமணர் தலைவன் முற்போந்து வேந்தனை வணங்கி நின்று திருவெம் பாவையை ஓதுவன்.3 அச்சயாம் நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களுள் திருவூசல் திருவிழா என்பது ஒன்று. இதனைத் திருவெம்பாவைத் திருப்பாவை விழா என்றும், சயாம் மொழியில் லோ - ஜின் - ஜா என்றும் கூறுகின்றனர். இத்திருவிழா நாளில் வளர்பிறைப் பக்கத்து ஏழாம் நாள் சிவபெருமான் நிலவுலகத் துக்கு வந்து தேய்பிறைப்பக்கத்து ஐந்து நாள்காறும் இருந்து விட்டு அன்றே கயிலாயத்துக்குச் செல்வன் என்றும், அவர் சென்றவுடன் அன்றே திருமால் போந்து ஐந்து நாள் தங்குவன் என்றும் சயாமியர் உரைக்கின்றனர். மேலும் சிவபெருமான் விளையாட்டு விருப்பினன் எனவும், அவன் தங்கியிருக்கும் கால முற்றும் அவன் திருமுன் திருவூசல் முதலிய இன்ப விளையாட்டுக்களை மக்கள் செய்தல் வேண்டும் என்றும், திருமால் அமைதி விருப்பன் என்று கொண்டு அவன் தங்கி யிருக்கும் நாட்கள் ஐந்தினும் இரவில் அவனது திருக்கோயிலில் மந்திரச் சடங்குகளால் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இயம்புகின்றார்கள். சிவபெருமான் எழுந்தருளும் நாளாகிய ஏழாம் நாளில் பிராமணர் தலைவன் விடியற் காலத்தே எழுந்து ஓதுவன்; பின்பு சிவன் தங்குதற்கென அமைக்கப்பட்ட சாலைக்குச் சென்று அவனை வரவேற்பன். அன்றிரவு சிவன் கோயிலில் பிராமணர்கள் கூடியிருப்பர்; அவர்களில் தலைவனாவான் சென்று “கிரகசுத்தி ஆத்ம சுத்தி” என்ற இரு சடங்குகளைச் செய்வன். அதன் பின் பிராமணர் நால்வருக்குப் பூத நீர் தெளித்துச் “சுத்தி” செய்வன்; அவர்கள் நால்வரும் தானியமணிகளும் பலவகைப் பழங்களும் பரப்பிய விசிப் பலகை (மேஜை) ஒன்றின் அருகே சென்று ஒருவர் பின் ஒருவராக நின்று தலைக்கொன்றாக நால்வரும் நான்கு மந்திரங்களை ஓதுவர்.1 பின்னர், நால்வரும் சேர்ந்து “லோரி பாவாய்” எனப்படும் திருவெம்பவையை ஓதுவர். ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் மற்றைப் பிராமணர்கள் சங்குகளை முழக்குவர். தேய் பிறைப் பக்கத்து முதல் நாளன்று, வளர்பிறைப் பக்கத்து செய்தது போலவே பற்பல சடங்குகளைச் செய்து அன்றிரவு திருமால் கோயிலுக்குச் சென்று திருவெம்பாவையை ஓதுவர். இனி, தெள்ளேணம் என்பது மகளிர் விளையாடும் விளையாட்டு வகை, மகளிர் சிலர் கைகோத்து வட்டமாக நின்று இடமும் வலமும் சாய்ந்து குதித்துக் கைகொட்டியாடும் விளையாட்டென்றும், அக்காலத்தே அவர்கள் பாடும் பாட்டுத் தெள்ளேணப் பாட்டு என்றும், கூறுகின்றனர். இதன் செயல் முறை இனிது விளங்கவில்லை. ஆயினும், இப் பாட்டுக்கள் தென்னா தென்னா என்ற சந்தக் குழிப்புடையவை யென்பது “மின்னேர் நுடங்கிடைச் செந்துவர், வாய் வெண்ணகையீர் தென்னா தென்னாவென்று தெள்ளேணம் கொட்டாமோ”2 என்றும், “ கண்ணார வந்து நின்றான் கருணைக் கழல் பாடித், தென்னா தென்னாவென்று தெள்ளேணங் கொட்டாமோ”1 என்றும் வாதவூர் அடிகள் கூறுவதால் அறிகின்றோம். தோணோக்கம் என்பது ஐவரும் எழுவரும் ஒன்பதின்மருமாக மகளிர் நின்று இடமும் வலமும் திரும்பித் துள்ளித் கைகொட்டிச் சுழன்றாடும் கூத்துவகை யென்பர். “குன்றாத சீர்த்தில்லை யம்பலவன் குணம் பரவித், துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ”2 என அடிகள் கூறுகின்றார். உந்தீ பறத்தல் என்பது இந்நாளில் மகளிர் தும்பி பறத்தல் என்று வழங்குகின்றனர். இஃது இப்போது மகளிரால் விளையாடப் பெறுகிறது. திருச்சாழல் என்பது மகளிர் விளையாட்டு வகையுள் ஒன்றாகும். அறுவருக்குக் குறையாமலும் பன்னிருவர்க்கு மேற்படாமலும் மகளிர் கூடி, இருபிரிவாகப் பிரிந்து ஒரு பரிவினர் வினா வொன்றை யெழுப்ப, மறு பிரிவினர் அதற்கு விடையிறுத்து விளையாடுவர். அவர்கள் தம்மிற் கைகோத்து நிற்குங்கால் வினாவுவோரும் விடை கூறுவோரும் தம்மையடுத்தடுத்து நேர் நின்று கைகொட்டி விளையாடுப என்பர். பண்டை நாளை வரிக்கூத்து வகையுள் பல்வரிக் கூத்து என்னும் பகுதியிற் காணப்படும் கூத்துக்களுள் இச்சாழலும் ஒன்று; “நல்லார் தம் தோள் வீச்சு நற்சாழல் - அல்லாத, உந்தி அவலிடி, ஊராளி யோகினிச்சி” என்பன முதலியன “கோத்தவரிக் கூத்தின்குலம்”3 என அடியார்க்கு நல்லார் காட்டும் மேற்கொள் நூற்பா கூறுகிறது. இதன்கண், சாழல் என்பது நற்சாழல் எனக் குறிக்கப்படுவதே இதன் ஏற்றத்துக்குச் சான்று பகர்கின்றது. இந் நூற்பாவில் தோள் வீச்சு என்றது தோணோக்க மாடுவதையும், உந்தியென்றது உந்தீ பறத்தலையும் குறிக்கும். இந்“நற்சாழலின்” நன்மையை யுணர்ந்த நம்முன்னோர் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் விக்கிரம சோழன் காலத்தில் தென்னார்க் காடு வட்டத்து எலவானசூர் என்னும் ஊரிலுள்ள சிவன் கோயிலில் இத் திருச்சாழலை ஓதுதற்கு ஏற்பாடு4 செய்துள்ளனர். இவ்வாறே, பூவல்லி கொய்தல், அம்மானை முதலியனவும், மகளிர் பூக்கொய்தும் கழற்காய் கொண்டும் விளையாடும் விளையாட்டுக்களைக் குறித் தனவாகும். “அத்தியுரித்து அது போர்த் தருளும் பெருந்துறையான், பித்த வடிவு கொண்டு இவ்வுலகிற் பிள்ளையுமாம், முத்தி முழு முதல் உத்தரகோச மங்கை வள்ளல், புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ”1 என்பது திருப்பூவல்லியிற் காணப்படும் பாட்டுக் களுள் ஒன்று. இதன் கண் வரும் பெருந்துறையான், பிள்ளை யெனவரும் சொற்களைக் கொண்டு, திருவாதவூரடிகட்குப் பெருந்துறைப் பிள்ளையென்ற பெயரும் உண்டாகியிருந்தது. பட்டினத் தடிகள் “திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளை”2 என்பது ஈண்டுக் கருதத்தக்கது. இனி, கோத்தும்பி, குயிற்பத்து, அன்னைப்பத்து என்பன அகப்பொருள் நெறியிற் பாடப்படும் பாட்டு வகை. பூத் தொறும் சென்று தேனுண்டு பாடும் தும்பியைக் காணும் நங்கை யொருத்தி பிரிந்திருக்கும் தன் காதலன்பால் சென்று தன்பொருட்டு ஊதுமாறு வேண்டிப் பாடுவது இப்பாட்டு. இதன்கண் “தினைத்தனை யுள்ளதோர் பூவினில் தேனுண்ணாதே, நினைத்தொறும் காண்டொறும் பேசுந் தொறும் எப்போதும், அனைத்தெலும்பு உள் நெக ஆனந்தத் தேன் சொரியும், குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பி”3 என்பது இக்கருத்தே எய்தவருமாறு காணலாம். தலைவன்பால் ஒருதலைக்காமம் கொண்டு உள்ளம் மெலிந்து வருந்தும் ஒரு நங்கை, செவலித்தாய்பால் தன் காதலன் சிறப்பைச் சொல்லி வாய்வெருவினாளாக, அதனை அவள் நற்றாய்க்கு உரைக்கும் வகையில் அமைந்தது அன்னைப்பத்து என்னும் பாட்டு. “தையலோர் பங்கினர் தாபதவேடத்தர், ஐயம்புகுவரால் அன்னே என்னும், ஐயம் புகுந்து அவர் போதலும் என்னுள்ளம், நையும் இது வென்னே அன்னே யென்னும்”4 என்பது அக்கருத்தை வலியுறுத்தும், காமம் மிக்க கழிபடர் நிலையில் மகளிர் வண்டுகளையும் பறவை களையும், கடல், திங்கள் முதலியவற்றையும் எதிர் நிறுத்திச் சொல்லாடும் செயலமைந்த பாட்டுக்கள் அகப்பொருள் நெறியில் வருவதுண்டு. அவ்வாறே அடிகள், காமம் கைம்மிக்குக் கையற்று இனையும் நங்கை யொருத்தியின் நிலையில் தம்மை வைத்து, “உன்னை உகப்பன் குயிலே உன் துணைத்தோழியுமாவன், பொன்னை யழித்த நன்மேனிப் புகழின் திகழும் அழகன், மன்னன் பரிமிசைவந்த வள்ளல் பெருந்துறை மேய, தென்னவன் சேரலன் சோழன் சீர்ப்பு யங்கன் வரக் கூவாய்”1 என்பது போலும் பாட்டுக்கள் பத்தும் குயிற்பத்தென்ற பெயராற் பாடியுள்ளார். திருவாதவூரடிகள் அருளிய திருவாசகப் பகுதிகள் ஆங்காங்கே சிறப்பான நிலையில் மக்களால் போற்றப் பெற்றதுடன், அவருடைய திருவுருவமும் கோயில்களில் எழுந்தருள்வித்து வழிபாடு செய்யப் பெற்றுள்ளது. இந்நாளில் திருஞான சம்பந்தர் முதலிய மூவருடன் திருவா தவூரரையும் சேர்த்து நால்வரையும் சமய குரவர் என்று போற்றித் திருக்கோயில்களில் எழுந்தருள் விப்பது வழக்கமாக இருக்கிறது. திருவாதவூர் திருவுருவைத் திருக்கோயில்களில் எழுந் தருள்விக்கும் வழக்கம் ஞானசம்பந்தர் முதலியோரது திருவுருவங் களை எழுந்தருள்விக்கும் மரபுக்குக் காலத்தாற் பிற்பட்டதென்பது தெளிய உணர வேண்டிய தொன்று, இதுகாறும் வெளியாகி யிருக்கும் கல்வெட்டுக்களால், திருவொற்றியூரில் எழுந்தருள்வித் திருப்பது தான் மிக்க பழமையாகவுளது.2 பின்னர் , கி.பி. 1135-ல் எலவானா சூரிலும்3 1158-ல் திருவலஞ்சுழியிலும்4 1170-ல் வழுவூரிலும்5 1181-ல் திருக்கழுக்குன்றத்திலும்6 1220-ல் மருதா நல்லூரிலும்7 1229-ல் திருவீழி மிழலையிலும்8 1231-ல் திருவாத வூரிலும்9 1306-ல் சன்னவனத்திலும்10 தோன்றிய கல்வெட்டுக்களால் திருவாதவூரர் திருவுருவங்கள் ஆங்காங்கு எழுந்தருள்வித்தமை தெரிகிறது. இவையன்றி, சிவகங்கை வட்டத்திலுள்ள திருமலை11 தென்னார்க் காடு வட்டத்துத் திருவரத்துறை1 புதுக்கோட்டைச் சீமையிலுள்ள பூவாலைக்குடி2 கோவிலூர்3 விராலிமலை4 முதலிய இடங்களிலும் தஞ்சைமா நாட்டுத் திருக்கோடிகா5 எட்டியத்தளி6 முதலிய இடங்களிலும், இராமநாதபுர நாட்டுத் திருப்புத்தூரிலும்7 திருநெல்வேலி மாவட்டத்து நாங்குனேரியிலும்8 திருவாதவூரரது திருவுரு வங்கள் எழுந்தருள்விக்கப் பெற்றுள்ளன. இவர் திருவுருவங்கள் கொழும்புப் பொருட்காட்சிச் சாலையிலும் சென்னைப் பொருட் காட்சிச் சாலையிலும்9 உள்ளன. இக் கல்வெட்டுக்கள் திருவாதவூராளி என்றும், திருவாதவூர்த் தேவர் என்றும், திருவாதவூர் நாயனார் என்றும் திருவாதவூர்ப் பெருமாள் என்றும் திருப்பெருந்துறை யாளுடையார் என்றும் திருவாதவூர்த் தம்பிரானார் என்றும் திருவாதவூரடிகளைக் குறிக்கின்றன. பின் வந்த பட்டினத் தடிகள், பெருந்துறைப் பிள்ளையெனவும், நம்பியாண்டார் நம்பிகள், திருவாதவூர்ச் சிவபாத்தியன்10 என்றும் குறித் துள்ளனர். இனி, இறுதியாக ஒன்றுகூறி இப்பகுதியை முடிப்பாம். திருத்தொண்டத் தொகைபாடிய சிறப்பால் நம்பியாரூரர் திருத் தொண்டத் தொகையான் என்ற பெயரெய்தியது போலத் திருவாசகம் பாடிய நலத்தால் திருவாதவூரர்க்கு திருவாசகன் என்ற பெயரும் உண்டாகியிருக்கிறது. நம்பி யாரூரர் பெயரால் உண்டாகிய மடங்கள் திருத்தொண்டத் தொகையான் மடம் என வழங்கியது போலவே, திருவாதவூரர் பெயரால் உண்டாகிய மடங்கள் திருவாசகன்மடம்1 என வழங்கின. அன்றியும், திருவாச கத்தில் “வாக்குன் மணி வார்த்தைக் காக்கி”2 என்றும், “பேச்சிறந்த மாசின் மணியின் மணிவார்த்தை”3 என்றும் அடிகள் கூறியது பற்றி அடிகள் மாணிக்கவாசக ரென்றும் வழங்கப் பெற்றமை தோன்றக் கும்பகோணத்து நாகேஸ்வரசுவாமி கோயில் கல்வெட் டொன்று “கூத்தாடும் திருஞான சம்பந்தன் மாணிக்க வாசகன்”4 என்ற ஒருவனையும், திருவொற்றியூர்க் கல்வெட்டொன்று “பெரியன் மாணிக்க வாசகன்”5 என்று ஒருவனையும் குறிக்கின்றன. எவ்வகையால் நோக்கினும் திருவாதவூர் அடிகட்கு மாணிக்கவாசகர் என வழங்கும் பெயர் மிகவும் பிற்காலத்தது என்பது நன்கு விளங்குகிறது. அன்றியும், இன்று காறும் கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் திருவா தவூரடி களைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் பாண்டி நாட்டில்தான் பெரும் பான்மையாய் உள்ளன.  9. பட்டினத்துப் பிள்ளையார் வரலாறு திருவாதவூரடிகட்குப் பின்னர் காலத்தால் அடுத்து வருபவர் பட்டினத்தடிகள் எனப்படும் பட்டினத்துப் பிள்ளை யாராவர். காவிரிப்பூம்பட்டினத்தில் சைவ வணிகர் குடியில் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவர் நம் பட்டினத்தடிகள். இவருடைய தந்தைபெயர் சிவநேசர் என்றம், தாய் பெயர் ஞானகலாம்பை என்றும் அடிகளின் இயற்பெயர் திருவெண்காடர் என்றும் அவரது வரலாறுரைக்கும் நூல்கள் கூறுகின்றன. அடிகள், தக்க பருவமெய்தியபோது தம் இனத்துச் செல்வர் ஒருவருடைய மகளை மணந்து இல்வாழ்க்கை நடத்திவந்தார். அவர்க்கு மருதவாணன் என்று ஒருமகன் பிறந்து பதினாறு ஆண்டு இருந்த பின் இறைவன் திருவடி அடைந்தான். மருதவாணனுக்குப் பின் அடிகட்கு மகப்பேறே உண்டாகவில்லை. ஆயினும், அந்நாளில் வறுமையுற்று வருந்திய ஆதிசைவவர் ஒருவருடைய ஆண்மகவு ஒன்றை அவர் விலைக்கு வாங்கித் தன்மகனாக வளர்த்து வந்தார். அச்சிறுவனுக்கும் மருதவாணன் எனவே பெயர் இட்டிருந்தார். இந்த மருதவாணன் நாளடைவில் வளர்ந்து கற்பன கற்று வணிகத் துறையில் வல்லுநனாய் விளங்கினான். அந்நாளிலும் காவிரிப்பூம்பட்டினம் கடல் வாணிகத் துக்குச் சிறந்த இடமாகவே விளங்கிற்று. காவிரிப்பூம்பட்டினத்து வணிகர் பலரும் கடல் வாணிகம்செய்து வந்தனர். அதனால் மருதவாணனும் கடல் வாணிகத்தில் ஈடுபட்டுப் பெருஞ்செல்வத்தை ஈட்டினான். அதனால் அடிகட்கு அவன் பால் அளவுகடந்த அன்புண்டா கியிருந்தது. ஒருநாள் அவன் அவர் மனையில் இல்லாத காலம் பார்த்து, காதற்ற ஊசி யொன்றும் ஓலை நறுக்கு ஒன்றும் அடங்கிய கைப்பெட்டி ஒன்றை அன்னையிடம் கொடுத்து வெளியே சென்றான். பின்னர் அவன் திரும்ப வரவேயில்லை. அவனைக் காணாமல் வருந்திய அடிகட்கு, அந்த அம்மையார் மருதவாணன் தந்து சென்ற கைப்பெட்டியைக் கொடுத்தார். அதனை ஆர்வத் தோடு திறந்த அடிகட்குத் காதற்ற ஊசியும் ஓலை நறுக்கும் காட்சியளித்தன. ஓலை நறுக்கில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள், "காதற்ற வூசியும் வாராது காணும் கடைவழிக்கே" என்று உரைத்தன; பட்டினத்தடிகளின் உள்ளம் பேராமாற்றம் எய்திற்று. உடனே அடிகட்குத் துறவுணர்வு பிறந்தது, ஒட்டுப் பற்றில்லாத உண்மைத்துறவியானார். அப்போது அடிகளை ஈன்ற தாயார் உயிரோடே மிக்க முதுமை யெய்திருந்தார். அவர் தம்மையே பற்றுக் கோடாகக் கொண்டிருந்தமையின் அவர் இனிதிருப்பதற்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்தார். மனைவியாரை நோக்கிச் சிவப்பணிசெய்து இறைவன் திருவருட்கு இலக்காகுக எனப்பணித்தார். அவர்பால் தலைமைக் கணக்கராயிருந்த சேந்தனார் என்பவரை அழைத்துத் தம்முடைய செல்வத்தை நாட்டு மக்களுக்கு வழங்குமாறு பணித்தார். இறைவன் எழுந்தருளியிருக்கும் இடங்கட்குச் சென்று அவனது. பொருள்சேர் புகழ்புரியும் புலமைத் தொண்டு ஆற்றலுற்றார். மகனாரது மனவேறுபாடு கண்டு மனமுடைந்த அவருடைய தாயார் இறந்தாராக, அவர்க்கு வேண்டும் கடன்களை அடிகள் நேரே தாமேயிருந்து செய்துமுடித்தார். பெருங்குடிவணிகர் செம்மலாய் திகழ்ந்த அடிகள் கடுந்துறவு பூண்டு ஊர்தோறும் வீடுதோறும் கையில் உணவு இரந்துண்டு திரிந்தது, அவருடைய உறவினர்க்குப் பெருவருத்தத்தை உண்டு பண்ணிற்று. அவர்களுள் முதியரும் நண்பருமாகிய பலர் நயமான உரைகள் பல சொல்லி அவர் உள்ளத்தை மாற்ற முயன்றனர். அம் முயற்சி வெற்றி பெறாமை கண்டவர்களில் சிலர் அவர்க்கு நஞ்சு கலந்த உணவுதந்து கொல்ல முயன்றனர். அச்செயல், செய்தவர்கட்கே தீங்கு விளைவித்தது. பின்னர், அவருட்சிலர் வேந்தன் பால் சென்று ஆவன கூறி அடிகளைத் திருத்துமாறு வேண்டினர். வேந்தன், அடிகள் மனமாற்றத்தாற் கூறியதை வாய்மையாகக் கொண்டு, சேந்தனார் அவரது செல்வத்தை மக்களுக்கு வழங்கியது குற்றமெனக் கருதிச் சேந்தனாரைச் சிறையிலிட்டான். ஒருநாள் அரசனே பட்டினத்து அடிகளிடம் நேராக வந்தான். அடிகள் ஓரிடத்தில் நிட்டை கூடியிருந்தார். வேந்தன், அவர் நிட்டை கலைந்தவுடன் துறவு பூண்டதற்குக் காரணம் வினவினானன். அடிகள், நிலை பெயராமல் இருந்தபடியே, "நீர் நிற்க யாம் இருக்க" என்று முறுவலித்து உரைத்தார். அவரது துறவுச் சிறப்புணர்ந்து வேந்தன் அவரை வணங்கிவிட்டுச் சேந்தனாரையும் சிறை வீடுசெய்யப் பணித்தான். பின்பு சேந்தனார் அடிகள் ஆணையிட்ட வண்ணம் தில்லை நகர் அடைந்து சிவத்தொண்டு புரிந்து வருவாராயினர். பின்னர், அடிகள் திருவிடை மருதூரடைந்து பன்னாள் தங்கி இறைவனை வணங்கி வந்தார். அவ்வாறு வரும் நாளிற் தான் அவர் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை என்ற நூலைச் செய்தருளினார். அதன்பின். அவர் திருவாரூர் முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு சீர்காழி வந்து சேர்ந்தார். அது திருஞான சம்பந்தர் தந்தையொடு போந்து ஞானம்பெற்ற பதியாதல் கண்ட சில நாட்கள் தங்கினார். அப்போது, அடிகள், திருக்கழுமல மும்மணிக் கோவை பாடினார். அவ்விடத்தின் நீங்கித் தில்லைக்குச் சென்று கூத்தப் பெருமானை வணங்கி வழிபட்டிருக்கையில் கோயில் நான் மணி மாலை யென்ற அரிய நூலைச் செய்து அருளினார். தென்னாட்டிலுள்ள திருக்கோயில்கட்குச் சென்று மேற்கூறிய வாறு இறைவனைப் பணிந்து வந்த அடிகள் வடநாடு நோக்கிச் செல்லலுற்றக் காஞ்சிமா நகரை அடைந்து அங்கே சின்னாள் தங்கினார். அப்போது அடிகள் திரு வேகம்பமுடையார் திருவந்தாதி பாடினார். பின்னர், வடநாடு சென்று அருகே இருந்த மாகாளம் என்னும் ஊரை அடைந்தார். அது கோதரிவரி பாயும் நாட்டில் பத்திராசலத் திற்கு அண்மையில் உளது. மாகாளத்தை நெருங்குகையில் பொழுது மறைந்தமையால், அடிகள் அங்கிருந்ததொரு பாழ்ங் கோயிலில் தங்கினார். அந்நாட்டு அரசன் அரண்மனையில் அன்றிரவு பொன்னும் மணியும் களவுசெய்த கள்வர் சிலர் அங்கே வந்து, தாம கவர்ந்த அணிகளுள் மதாணி யொன்றை யெடுத்து, அக்கோயிலில் நிட்டை யிலிருந்த அடிகளை அக்கோயிலில் இருந்த தெய்வமாகப் பிறழக் கொண்டு அவர் கழுத்தில் இட்டுச் சென்றனர். கள்வரைத் தேடிவந்த காவலர், காலையில் அடிகளைக் கண்டு கைப்பிடியாகக் கொண்டு அரசன் முன் நிறுத்தினர். வேந்தன் பெருஞ்சினம்கொண்டு அவரைக் கழுவேற்றுமாறு கட்டளையிட்டான். அடிகள் கழுமரத்தைக் கண்ணார நோக்கி, "இதுவும் திருவருட்செயல் போலும்" என நினைத்தனர்; நினைத்தலும் அக்கழுமரம் எரிந்து போயிற்று. அதுகண்ட காவலர் அஞ்சியோடி வேந்தனுக்குணர்த்த அவன் ஓடிவந்து அடிகளைக் கண்டான்; அவன் பெயர் பத்திரகிரியார் என்பது. அவரது துறவின் பெருமை அவற்குத் தெரிந்தது. அவன் உடனே தானும் துறவு பூண்டு அடிகட்கு மாணவனாய் அவர் பின்னே தொடரலானான். அடிகளும் அவனை மாணவனாய் ஏற்று அருளுரை வழங்கினர். பின்பு, பத்திரகிரி உடன்வர அடிகள் தென்னாடு அடைந்து திருவிடைமருதூரில் தங்கினார். அக்கோயிலில் கீழைவாயிலில் அடிகளும் மேலைவாயிலில் பத்திரகிரியாரும் தங்கினர். ஒருநாள் அடியார் ஒருவர் அடிகளை வணங்கித் தமதுபசித்தீத் தணிய உணவிடுமாறு வேண்டினர். அப்போது மேலை வாயிலில் இருந்த பத்திரகிரியாரிடம் ஓடொன்றும் நாய் ஒன்றும் இருந்தன. அதனால், அடிகள், அந்த அடியாரை நோக்கி, "மேலைவாயிலில் இருக்கும் குடும்பியிடம் சென்று கேள்" என்று கூறிவிடுத்தார். அவ்வாறே, அடியார் பத்திரகிரியாரைக் கண்டு அடிகள் கூறியதை எடுத்துரைத்து உணவுதருமாறு வேண்டினார். அது கேட்டுத் திடுக்கிட்ட பத்திரகிரியார், "இவ்வோடும் நாயிமல்லவோ என்னை ஒரு குடும்பியாக்கின" என மனம் நொந்து ஓட்டை யெரிந்தாராக, அது நாயின்மேற் படவே, நாயும் இறந்து போயிற்று. சின்னாட்களில் பத்திரகிரி யாரும் இறைவன் திருவடி நீழல் எய்தினார். இறுதியில், அடிகள் திருவொற்றியூர்க்குச் சென்றார். அங்கே கடற்கரையில் ஆடையொலிக்கும் வண்ணாருடைய சிறுவர்கள் மணல்மேடுகளில் விளையாடக்கண்டு தாமும் அங்கே தங்கி அவர்கட்கு விளையாட்டுக்காட்டிவந்தார். அவ்வூர் இறைவன் பேரில் திருவொற்றியூர் ஒருபா வொரு பஃது என்னும் நூலைப்பாடி வழிபட்டு வருவது அவர்க்கு வழக்கம். சின்னாள் கழிந்தபின், அச் சிறுவர்களோடு இனிய சொல்லாடித் தம்மை ஒரு மணற் குழியில் புதைக்கச் செய்து வேறோரிடத்தில் காட்சிதந்து இன்புறுத்தினார். இவ்வாறே, அவர்கள் தம்மை ஆழப்புதைக்கு மளவும் விளையாட்டுக் காட்டியிருந்து கடைசியில் அவர்கட்குக் காட்சி தாராராயினர். அச் சிறுவர் நெடுநேரம் நோக்கியிருந்து, பின்பு அவரைப் புதைத்த விடத்தை அகழ்ந்து நோக்கினர். அங்கே ஒரு சிவலிங்கம் காணப் பட்டது. அதுவே அவரது சமாதியாகக் கொண்டு மக்கள் என்றும் வழிபடும் நிலைமை உளதாயிற்று. வரலாற்று ஆராய்ச்சி பட்டினத்தடிகள் வரலாற்றைப் பட்டினத்துப் பிள்ளையார் புராணம், புலவர் புராணம் என்ற இரண்டும் செய்யுள் வடிவில் கூறுகின்றன. திருவெண்காட்டடிகள் சரித்திரம் என்ற உரை நூல் ஒன்று தொழுவூர் வேலாயுத முதலியாரால் எழுதப்பட்டுள்ளது; அது வடநூல் பவிஷ்யோத்தர புராணத்துத் திருவிடைமருதூர் மான்மியம் உரைத்த பகுதியில் உள்ள தென்று அவ்வுரைநூல் கூறுகிறது. இம்மூன்றனுள் பட்டினத்துப் பிள்ளையார் புராணத் தைப்பாடியவர் இன்னாரெனத் தெரியவில்லை. புலவர் புராணம் ஏனையிரண்டிற்கும் காலத்தாற் பிற்பட்டது. திருப்புகழ் பாடிய அருணகிரி நாதர் பட்டினத்தடிகட்கு மகனாவர் என்று கூறுவது தான் புலவர் புராணத்துட் காணப்படும் சிறப்பான கருத்து. அடிகட்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்துப் போந்த அருணகிரிநாதரை ஒரு கலாத்து மகனாகக் கூறுவது உண்மைக்கு மாறுபட்டதாகலின், அஃது இவ்வரலாற்றில் குறிக்கப்பட வில்லை. பவிஷ் யோத்தர புராணக் கூற்றைப்பற்றி, திரு.கா.சுப்பிரமணியப் பிள்ளையவர்கள், பட்டினத் தடிகளின் நூல்களும் என்ற ஆராய்ச்சி நூலில் பட்டினத்தடிகள் வரலாறும் புராணமே பழமையானது என்றும், அதன் பின் தோன்றிய நூல்கள் வடமொழிப் புராணத்தைக் குறிக்கின்றன என்றும், "பிற்காலத்துத் தமிழ்ப்புலவர்களே தமிழிலே தாம் புதுவதாகச் செய்யும் புராணங்களையும் பிற நூல்களையும் வடமொழியிலே மொழிபெயர்ப்பித்து அம்மொழி பெயர்ப்புக்கள் தமக்கு மூலநூலென்று உபசாரம் இயம்புவாராயினர்" என்று குறிக்கின்றார். பட்டினத்தடிகள் வரலாற்றிற் காணப்படும் பத்திரகிரியார் வரலாறு பழைய பட்டினத்தடிகள் புராணத்திற் காணப்படவில்லை. ஆயினும் அச்செய்தி வழி வழியாக வந்து கொண்டிருப்பது கருதத்தக்கது. பிற்காலத்து வரலாற்று நூல்கள் அடிகள் வரலாற்றில் மிகுதியாக எடுத்துக் கூறுவன வருமாறு: சிவபெருமானுக்குத் தோழரெனப்படும் குபேரனே பட்டினத் தாராகப் பிறந்தார். அவர் வளர்ந்து கல்வி பயின்றதும் சிவபூசை செய்வதில் பெருவிருப்பம் கொண்டு அதனை உபதேசிக்கும் ஆசிரியரைப் பெறாது வருந்தியிருக்கையில், சிவபொருமான் எழுந்தருளி, "நீ திருவெண்காடு அடைந்து சிவனடியாரை வழிபட்டு வருக; நல்லாசிரியன் போந்து நீ விரும்பும் சிவபூசையை நல்குவன்" என உரைத்தருளினார். பட்டினத்தார் தமது செல்வ மெல்லாவற்றையும் அடியார் பூசையிற் செலவிட்டு வறியராய் விடத் திருவருளாற் பெருஞ் செல்வம் கிடைத்தது. அது கொண்டு அடியார் பூசையை முட்டின்றி நடத்தினார். அந்நாளில் தான் அவர் தாயார் விருப்பதிற் கிணங்கிச் சிதம்பர செட்டியார் மகள் சிவகலை யென்பவளை மணந்தார். திருவிடைமருதூரில் வாழ்ந்த சிவசருமர் என்ற வேதியர் தாம் கண்டெடுத்து வளர்த்த மருதவாணன் என்ற ஆண் மகவைத் தரவே பட்டினத்தடிகள் அதனை வாங்கித் தன் மகனாகக் கருதி வளர்த்தார். திருவெண்காடர் ஏனைச் சிறுவருடன் தோணியேறிக் கடற்குட் சென்று விளையாடுகையில் ஒரு சிறுவனைச் சுறா மீன் ஒன்று விழுங்கவும், உடனே திருவெண்கடார் அதன் தலையில் உதைக்கவே, அஃது இறந்தது; வேறுருவில் அது மணிக்கிரீவன் என்ற கந்தருவனாய் மாறச் சென்றது; சிறுவனும் உயிருய்ந்தான். மருதவாணன் கடாரத்திலிருந்து வந்த முத்தைக் கண்டு அதில் நீர் இருப்பதாகக் குற்றம் கூறிப் பின் பட்டினத்தார் வியக்க, அதனையுடைத்து உண்மையை நிலை நாட்டினான். மருதவாணன் கடல் வாணிகம் செய்து மரக்கலம் நிறைய எரு முட்டை கொணர்ந்தான். அவற்றைச் சோதிக்கையில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மாணிக்க மணியிருந்தது. திருவெண்காடரான அடிகள் துறவு பூண்டு வீடு தோறும் இரந்துண்டு திரியக்கண்டு மனம் பொறாத அவர் தமக்கையார் நஞ்சு கலந்த அப்ப உணவுதர, அடிகள் அதனையேற்றுத் "தன்வினை தன்னைச் சுடும், ஊட்டப்பம் வீட்டைச்சுடும்" என்று சொல்லி ஒரு துண்டை வீட்டின் கூரையிற் செருகவும், வீடு தீப்பற்றிக் கொண்டது, திரு வெண்காடர் திருவாரூரில் இருக்கையில், அவர்க்குத் தொண்டு செய்து வந்த சிறுவன், அடிகள் ஆணைப்படியே தன் அத்தை மகளை மணந்து சிலகாலம் வாழ்ந்து இறந்து போகவும், அடிகள் அவனை யெழுப்பினார். காலம் பட்டினத்தடிகள், திருஞான சம்பந்தர் முதலிய மூவரையும், "வித்தகப் பாடல் முத்திறத்தடியர்" என்றும், திரு வாதவூரடி களைத் "திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளை" என்றும், அவர் காலத்தில் வாழ்ந்த முதல் வரகுண பாண்டியனை, "பெரிய அன்பின் வரகுண தேவர்"1 என்றும் பாடுவதனால், திருவாதவூரடிகள் காலமாகிய கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பு வாழ்ந்தவரல்லர் நமது பட்டினத்தடிகள் என்பது விளங்கும். பதினோராந் திருமுறையைத் தொகுத்தவராகக் கருதப்படும் நம்பியாண்டார் நம்பி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவர்.2 அப்பதினோராந் திருமுறையில் பட்டினத்தடிகள் பாடிய நூல்களையும் தொகுத்திருத்தலால், அடிகள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்தவ ரென்பது தெளிவாம் நூல்கள் பட்டினத்தடிகள் இயற்றியன எனக் கோயில் நான்மணி மாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடை மருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, திருவெற்றியூர் ஒருபாவொருபஃது என்ற ஐந்து நூல்களே மேலே கூறிய பதினோராந் திருமுறையிற் காணப்படுகின்றன. இனிப் பட்டினத்தார் பிரபந்தத்திரட்டு என்ற நூலில் இவற்றின் வேறாகப் பல தனிப்பாட்டுக்களும், கோயிற்றிருவகவல், கச்சித் திருவகவல், திருவேகம்பமாலை, பொது வெண்பா, பின் முடுகுவெண்பா, விருத்தம் முதல்வன் முறையீடு, அருட்புலம்பல், இறந்த காலத்திரங்கல், நெஞ்சொடு புலம்பல், பூரணமாலை, நெஞ்சொடு மகிழ்தல், உடற் கூற்று வண்ணம் ஆகிய பல நூல்கள் காணப்படு கின்றன. இவை முன்னோர்களால் பட்டினத்தார் அருளியன அல்ல என ஒதுக்கப் பட்டன வாதலால் ஈண்டு மேற்கொள்ளப் படவில்லை. மேலும் இவற்றின் மொழி நடையும் கருத்தும் திருமுறையிற் கோக்கப் பட்டுள்ள நூல்களைப் போல விழுமிய முறையில் இல்லை. இவை, பிற்காலத்தார் ஒருவராலோ பலராலோ பாடிச் சேர்க்கப்பட்டன என்பது தமிழறிஞர் இடையே நிலவும் கருத்து. நூலாராய்ச்சி கோயில் நான்மணி மாலை முதலாகவுள்ள ஐந்து நூல்களையும் ஆராயுங்கால், அடிகள் காலத்தில் பல புராணவராலறுகள் நாட்டில் நிலவியிருந்தமை தெரிகிறது. திருமாலுக்கு இறைவன் ஆழி கொடுத்தது, குபேரனுக்கு நிதியளித்தது, கூற்றுவனைக் குமைத்தது, இறைவன் நஞ்சுண்டது, திரிபுரம் செற்றது, காமனைக் காய்ந்தது, தாருகவனத்து முனிவர் விடுத்த கரியை யுரித்தது, பார்த்தன பொருட்டு வேடனானது, இராவணனை அடர்த்தது, சலந்தரனைத் தடிந்தது, சண்டேசுரர்க்கு அருள் செய்தது, சிறுத் தொண்டர் வரலாறு, கோச்செங்கணான் வரலாற்றுக் குறிப்பு, சாக்கிய நாயனார் வரலாற்றுக் குறிப்பு, திருஞான சம்பந்தர் பாலுண்டது, வரகுண தேவருடைய அன்புப் பணி முதலியன அவற்றுட் சிறப்புடையனவாகும். ஊர்கள் அடிகள் துறவு பூண்டதும் முதற்கண் திருவிடைமருதூரில் தங்கிச் செந்தமிழ்ப் பாட்டுக்களால் சிவபெருமானைப் பாடிப் பரவத் தொடங்கினார். அப்போது அவர் பாடியது திருவிடை மருதூர் மும்மணிக் கோவை. அதன் கண் திருவிடைமருதூரின் சிறப்பினைப் பல குறிப்புக்களால் எடுத்துரைக்கின்றார். பூவியல் வீதிகளும் கொடி நுடங்கும் மாளிகைகளும் திருவிடைமருதூரின் செல்வ நிலையை மிகுத்துக் காட்கின்றன.1 நீலோற்பலம் பூத்த வாவிகள் காவிரியின் புடையே விளங்க, மருதவளம் மாண்புறுகிறது.2 நந்தன வனங்களில் சந்தனம், சரளம்3 சண்பகம், வகுளம் முதலியன நன்கு தழைத்து, வெயிலின் கதிர் நுழையாவாறு செழித்துள்ளன. அவற்றினிடையே அடியார்கள் பலர் காணப்படுகின்றனர்.4 சீர்காழியில் கோபுரங்களும் மணிமேடைகளும் எந்திரவாவி களும் நிறைந்துள்ளன. தண்ணீர்ப் பந்தர், அன்னசத்திரம், ஆடரங்கு, கலைபயில் கழகம், மலர் மன்றங்கள் தெருக்களில் ஆங்காங் குள்ளன.5 அரமியங்கள் புன்னைப் பொழிலாகவும் செய்குன்றுகள் கொன்றமரக் காவாகவும் கருதி, மொய்க்கும் வண்டினங்களின் கருமை நிறத்தால் இரவு வந்ததெனச் சில மக்கள் மயங்குகின்றனர்.6 தில்லைநகர்க்கண் வயல்களில் கரும்புகள் தழைத்திருக்கின்றன7. திண்ணிய மாடங்களும் மதில்களும் உயர்ந்து விளங்குகின்றன.8 திருச்சிற்றம்பலத்தைச் சூழ மதிலும் மாடங்களும் பொழில்களும் நிறைந்துள்ளன.9 இத்தில்லையில் வேதியர் பலர் வாழ்கின்றனர்; அவர்கள் வேள்வி செய்து முகிலை மழை பெய்யச் செய்கின்றனர். இறைவன் அந்த நான் மறையோர் நடுவில் தானும் ஒரு வேதியனாய் இருந்து அம்பலத்தில் ஆடல் புரிகின்றான். வண்டுகள் தென்னா வெனப் பொழிலில் முரலுகின்றன. தில்லை வேதியர் அவ்விறைவனைத் தங்கள் வாழ்வாகவும் வைப்பாகவும் கொண்டு ஒழுகு கின்றனர். கச்சி யேகம்பம் தடம்பொழில் சூழ்ந்து தேன் முரல விளங்குகிறது. வயல்கள், எப்போதும் நெல் பெருகிச் சிறக்கும் நீர்மை பெற்றுள்ளன. வயற் புறங்களில் நெற்கரிசைகள் பொன் மலைபோல் காட்சி நல்குகின்றன. அங்கேயுள்ள பொழில் பொய்கை முதலியன காண்போர். காஞ்சிமாநகர் அமராவதிக்கு நேராம்1 என்று கூறினர். இறுதியாகத் திருவொற்றியூர் நிலமடந்தைக்கு முகம் போலக் காட்சியளிக்கிறது;2 நெடுங்காலமாகப் புகழ் பெற்று3 நாடெங்கும் பெயர் பரவித் திகழ்கிறது.4 இங்கே வேதியர் இருந்து வியாகரணம் முதலிய நூல்களே ஓதும் கலைச்சிறப்பு மிக்குத் தோன்றுகிறது.5 இதனருகே கடலிருந்து இனிய காட்சியளிக்கிறது.6 நூற்பொருள் ஆராய்ச்சி அடிகள் காலத்தில், சிவாகம வழியொழுகும் சித்தாந்த சைவம் தமிழகத்தில் சிறந்த இடம் பெற்றிருந்தது. இச்சமயம், வேதங்களையும் சிவாகமங்களையும் தனக்குச் சிறந்த முதனூல்கள் என்றும், அவற்றை இறைவனே அருளினான் என்றும் கூறும்; மேலும், வேதங்கள் பல தலைப்பட்ட தெய்வங்களை வழங்குதலால், சிவாகமங்களைக் கண்டு ஞானம், யோகம் கிரியை சரியை என்ற நான்கு பாதங்களாக வகுத்துச் சமய வொழுக்கங்களையும் பத்தி நெறியையும் வடித்துச் சிவபெருமானே அருளினான் என்றும் கூறுகிறது. இக்கருத்துக்களைப் பிரமாண முகத்தாலும் இலக்கண முகத்தாலும் தெள்ளித் தெளித்துக் கூறுவது பற்றி இச் சிவாக மங்கள் சித்தாந்தமென்றும் வழங்கும். இவற்றை இனிது கண்ட அடிகள், காழி நகர்க் கண் உள்ள கோபுரங்களையும் மணிமேடைகளையும் எடுத்தோதுமிடத்து, "வேதமே யொப்பெனவோது கோபுரமும்" "சிவாகமம் என வொளிர் தவாமணி மேடையும்"7 என்று உவமையில் வைத்து உரைக்கின்றார். சிவாகமங்களைச் சித்தாந்தம் என்று ஆகமங்களே பெயர் குறிக்கின்றன.8 அக்கருத்தையே வாங்கி, அடிகள், "கைவல நெல்லியங் கனியது போலச், சைவ சித்தாந்த தெய்வ ஆகமத்தை, வரன்முறை பகர்ந்த திருமலர் வாய"1 என்று கூறுகின்றார். இச்சித்தாந்த நூல்கள், ஆணவம், கன்மம், மாயை எனக் கூறும் மலம் மூன்றையும் "பேரிகல் ஆணவக் காரிருள்" "மின் தொடர் வல்வினை வன்றொடர்" "மாயை மாமாயையாய பேய்"2 என்று குறிக்கின்றார். சித்தாந்த சைவர்கட்கு இன்றியமையாதன எனப்படும் திருவைந்தெழுத்து, திரு நீறு, கண்டிகை ஆகிய மூன்றையும் அடிகளும் வற்புறுத்துகின்றார்.3 "மேவிய புன்மயிர்த் தொகையோ"4 என்றும் பாட்டில், பாசதரிசனம், பசுதரிசனம், சிவதரிசனம் என்ற முக்கூற்றுச் சித்தாந்த ஞான நெறியை விளக்கியுள்ளார். இவ்வாறே இறைவன், உயிர்,உலகு என்ற முப்பொருள்களின் இயல்பு களையும்,5 சிவனடியாரைப் பேணிவாழும் சைவத் தொண்டர் இயல்புகளையும்6 அடிகள் ஆங்காங்குக் குறிப்பிடுகின்றார். பட்டினத்தடிகள் காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் வணிகர் குடியில் தோன்றிய செல்வத்தோன்றல் என அவர் வரலாறு கூறுதற்கேற்ப, அவருள்ளம் கடலில் கலம் அமைத்துச் செல்லும் துறையில் நல்ல பயிற்சி பெற்றுள்ளது. அவர் உலக வாழ்வைத் துறந்த காலத்தில், உடம்பைக், கலமாகவும், தீயொழுக்கம், பொய், பிணி, இடும்பை முதலியவற்றைச் சரக்காகவும், வினையை மீகாமனாகவும், கருநிலையைக் கடற்றுறையாகவும், புலன்களைச் சுறா மீனாகவும், பிறவியைக் கடலாகவும், துயரத்தை அலையாகவும், குடும்பத்தை நங்குரக் கல்லாகவும், நிறையைக் கலத்தின் கூம்பாகவும், உணர்வைப் பாயகாவும் உருவகம் செய்து, இக்கலம் கவிழ்வதன் முன் இறைவன் திருவடியாகிய நெடுங்கரையைச் சேரவேண்டும்7 என உரைப்பதும், பிறிதோரிடத்தில், இவ்வுலகு, உடம்பு, தோல், எலும்பு, நரம்பு, முதுகெலும்பு, ஐம்பொறி, இருவினை, அறுவகைக் குற்றம், நெடுநீர் என்னும் குற்றம், மடிமை, மனம், ஆசை, நற்குண நற்செய்கைகள், காலம் ஆகியவற்றை முறையே, கடல், கலம், பலகை, ஆணி, கயிறு, கூம்பு, துடுப்பு வாயில் சரக்கு, நிறை, நங்குரநாண், நங்குரக்கல், பாய், காற்று, தீவுகள், கடலிற் காணப்படும் பாரை முதலியனவாக உருவகம் செய்து இக்கலம் உடைந்து கெடுவது கடுநரகு புகுவதாம் என விளக்குவதும், வேறொரிடத்தில் வளியும் பித்தும் சிலேத்து மமுமாகியவற்றைக் காற்றாகவும், நரையை நுரையாகவும், தோலைத் திரையாகவும், இருமலைக் கடல் முழக்காகவும், பசி வெகுளி முதலியவற்றைச் சுறா மீனாகவும், குடரைப் பாம்பாகவும், தசை எலும்பு முதலியவற்றைக் கடலிற் காணப்படும் திடர்களாகவும், உடம்பைக் கடலாகவும் துப்புரவுகளைச் சுழியாகவும், இறைவன் திருவருளை நாவாயாகவும் சிந்தையைக் கூம்பாகவும் ஆர்வத்தைப் பாயாகவும், நிறையைக் கயிறாகவும் ஒருமையுணர்வைக் கலத்தை இயகும் பொறியாகவும் காமத்தைப் பாராகவும் சுருங்கா உணர்ச்சியைத் துடுப்பாகவும் உருவகம் செய்வதும்1 மேலே கூறிய கருத்தை வற்புறுத்துகின்றன. கழுமல நகரில் மாமரம் ஒன்று தளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து நிற்பது கண்டு கூறலுற்ற அடிகள், அதனை நவமணி கிடைத்த வணிகரொடு உவமித்து, "வித்துரு மத்தினை யொத்தசெந் தளிரும் ஒளிர்வயி டூரியக் குளிர்மது மலரும் மேலிடு வண்டெனும் நீலமா மணியும் மரகத மென்ன விரவுகாய்த் திரளும் மறுவின் மாமணியெனும் நறியசெங் கனியும் கிடைத்தசீர் வணிகரின் படைத்த மாந்தரு"2 என்று உரைப்பது ஈண்டு நோக்கத் தக்கது. இனி, தமது காலத்தில் செல்வம் மிக ஈட்டிச் சிறப்புடைய வாழ்க்கை நடத்திய செல்வர்களின் வாழ்க்கை இயல்பை அடிகள் நன்கு விளக்குகின்றார். கார் வருமென்று எதிர்நோக்கி நிலத்தையுழுது விதை வித்திப் பயிர்செய்வதும், ஈட்டிய பொருளை வாணிகம் செய்வதும், அருளின்றிப் பொரும் போர்வீரருடன் போர் செய்வதும், கடலிற் கலங்களை விடுத்து எந்திரம் கடாவிக் குன்று பார்த்துச் செலுத்துவதும், தாளாற்றலால் பொருள் செய்வதும், வாளாற்றலால் ஊண் பெறுவதும், வேந்தர் பொருட்டுப் போரில் செஞ்சோற்றுக் கடன் செலுத்துவதும், அறிவிலார்க்குக் கல்வி வழங்குவதும் சொற்பல புனைவதும் கற்றன கொண்டு சொற்போர் செய்வதும் ஆகிய தொழில்கள் பல1 செல்வரிடையே நிகழ்ந்தன. அடிகள் காலத்தே மக்கட்குத் திருமணம் செய்யும் துறையில் பண்டைத் தமிழ் முறையாகிய களவு வழி வந்த கற்பு நெறி நீங்கி விட்டது. பெற்றோர் மகட்குத்தக்க மணமகனைத் தேர்ந்து புணர்க்கும் மணமுறை உண்டாகி விட்டது., "தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன்மனைக்கிழத்தி"2 என்பதனால் இது விளங்கும். செல்வத்திற் களித்துத் தீ நெறிச் செல்வோரது நலமின்மையும்,3 "ஐந்து புலன்களும் ஆரநுகர்ந்து மைந்தரும் ஒக்கலும் மகிழ மனம் மகிழ்ந்து"4 இல்லிருந்து வாழும் வாழ்வின் நன்மையும் அடிகளால் விரித்துரைக்கப்படுகின்றன. பழமொழிகளும் பிறநூற் கருத்துக்களும் பட்டினத்தடிகளுடைய நூல்களில் பழமொழிகள் பல எடுத்தாளப்படுகின்றன. "பொற்குன்றம் சேர்ந்த காக்கையும் பொன்னாம்," "குளிகையால் செம்பு பொன்னாகும்" "கருடோ பாசனை செய்வோர் கண் பார்வையில் விடம் நீங்கும்" "ஞாயிற் றொளியின் முன் இருள் கெட்டழியும்" என்பன போலும் பழமொழிகள் அடிகள் பாடலில் குறிக்கப்படுகின்றன.5 தாமெதளர்வார் மேல்பாரம் வைத்தது போல என்பது உலகியலில் வழங்கும் பழமொழி; இதனை, "அன்னம் அன்னவரைப் பூமேலணிந்து பிழைக்கச் செய்தார் ஒரு பொட்டுமிட்டார், தாமே தளர்பவரைப் பார மேற்றுதல் தக்கதன்றே"6 என அடிகள் கூறுகின்றார். இனி, அடிகள் திருக்குறட் கருத்துகளைப் பல இடங்களில் வைத்தாளுதலில்7 ஏனைச் சான்றோர்களை ஒக்கின்றராதலால் அவற்றை விடுத்து ஏனை நூல்களைக் காண்பாம். "யாழொடுங் கொள்ளா பொழுதொடும்புணரா, பொருள் அறிவறிவாரா வாயினும் தந்தையர்க்கு, அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை"1 என்பது புறநானூற்றில் உள்ள தொரு பாட்டு. இதனை, "எழுத்தின் உறழாது வழுத்து பொருள் இன்றிக், குறிப்பொடு படாது வெறித்த புன் சொல்லே, ஆயினும் பயந்த தம் சேயவர் சொலும்மொழி, குழலினும் யாழினும் அழகிதாம்"2 என்று அடிகள் கூறுகின்றார். "பாதாள மேழினும் கீழ்ச் சொற்கழிவு பாதமலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருண் முடிவே"3 என்பது திருவாசகம்; இதனை அடிகள்; "அடியொன்று பாதல மேழிற்கும் அப்புறம் பட்டது இப்பால், முடியொன்று இவ்வண்டங்களெல்லாம் கடந்தது"4 என்றும்; "விரதமே பரமாக வேதியரும், சரதமாகவே சாத்திரங் காட்டினர், சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்"5 என்ற திருவாசகத் கருத்தை, "சமயப் படுகுழி சமைத் தாங்கு அமைவயின், மானுடமாக்களை வலியப்புகுத்தும், ஆனா விரதத்து அகப்படுத் தாழ்த்தும் அனையுணர் வெனக்கு வருமோ"6 என்றும் கூறுகின்றார். இவ்வாறே, "மீண்டார் என உவந்தேன் கண்டு நும்மை யிம்மேதகவே, பூண்டார் இருவர் முன் போயினரே புலியூர் எனை நின்ற ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேன் அயலே, தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே"7 என்ற கருத்தை, அடிகள், "துணை யொத்த கோவையும் போல் எழில் பேதையும் தோன்றலும் முன், இணை யொத்த கொங்கை யொடே ஒத்த காதலொடு ஏகினரே, அணையத்தர் ஏறு ஒத்த காளையைக் கண்டனம் மற்றவரேல், பிணையொத்த நோக்குடைப் பெண்ணிவள் தன்னோடும் பேசுமினே"8 என்று பாடுகின்றார். இறுதியாக ஒன்று; அடிகள் வழங்கிய சொற்றொடர்களுட் சில கல்வெட்டுக்களில் எடுத்தாளப் பெறுகின்றன. கோயில் நான்மணி மாலையில் "உரையின் வரையும்" எனத் தொடங்கும் திருப்பாட்டில்1 இறைவனது தசாங்கத்தைப் பாடலுற்ற அடிகள், அவனது ஆணையை "விரையாக் கலியெனும் ஆணை" என்று குறிக்கின்றார். இதனைக் கி.பி.பத்து முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த உத்தம சோழன், முதல் இராசேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன் முதலிய சோழ மன்னர் காலங்களில் திருமாணிகுழி, திருவதிகை, திருப்புறம்பயம் முதலிய இடங்களில் தோன்றிய கல்வெட்டுக்கள், விரையாக் கலியென்னும் இவ்வாணையை எடுத்தோதுகின்றன. இப்பெயரால் விரையாக்கலி நிறைக்கோல், விரை யாக்கலிப் பெருந்தெருவு எனப் பொருள்களும் இடங்களும் இருந்திருக்கின்றன. திருவிரையாக்கலி திருக்கண்ணப்பதேவர் ஸ்ரீபாதம்"2 என இது சிறப்புப் பெயராகவும் வழங்கியிருக்கிறது. இனி, அடிகள் திருஞான சம்பந்தர் முதலிய தேவார ஆசிரியர் மூவரையும் "முத்திறத்து அடியார்"3 என்று வழங்கினராக, சிதம்பரம் கல்வெட்டுக்களும் திருப்புறம் பயத்துக் கல்வெட்டுக்களும் அத்தொடரை எடுத்தாளுகின்றன. தில்லையிலுள்ள கூத்தப் பெருமானை, "உய்யக்கொண்ட செல்வர்"4 என்றும். "நடன் நம்பிரான் உகந்து உய்யக் கொண்டான்"5 என்றும் அடிகள் சிறப்பித் துரைக்க, அத்தொடரை வியந்து, சோழ வேந்தனான முதல் இராசராசன் தன் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகக் கொண்டான். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருக்கற்குடி என்னும் கோயிற்குத் திருப்பணி செய்து, அக்கோயில் இறைவனை "உய்யக் கொண்ட நாயனார்" என்று பெயர் பொறித்துக் கல்லில்6 எழுதினான்; பின்னர் அஃது "உய்யக் கொண்டான் திருமலை" என வழங்குவதாயிற்று. விசய நகர வேந்தரான மல்லிகார்சுன மகாராயர் காலத்துக் கல்வெட்டொன்று,7 "இராச கம்பீர வளநாட்டுத் தென்கரைப் பிரமதேயமான உய்யக் கொண்டான் திருமலை" என்று கூறுகிறது. முதல் இராசராசனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் சோழநாடு பல வளநாடுகளாகப் பிரிக்கப் பெற்றபோது அரிசிலாற்றுக்கும் காவிரிக்கும் இடையில் உள்ள பகுதி1 "உய்யக் கொண்டார் வளநாடு" எனப் பெயரிடப் பெற்றது. இனி, அடிகளைப் பட்டினத்துச் சுவாமிகள் என்று வழங்கும் வழக்குப் பற்றி வணிகருட் சிலர், பட்டின சுவாமி யென்ற பெயரை மேற்கொண்டு, "பாலையூருடையான் பட்டின சுவாமி" "காளையார் கோயிற் பெருந்தெருப் பட்டின சுவாமிகள்"2 என அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றனர்.  10 சேந்தனார் வரலாறு சேந்தனார் செப்புறை என்னும் ஊரிற்பிறந்து வாழ்ந்தவர். பட்டினத்தடிகள் துறவு மேற்கொள்ளுமுன் திருவெண்காடர் என்ற பெயருடன் கடல் வாணிகம் செய்த போது, அவர்பால் தலைமைக் கணக்கராய் இருந்தவர். திருவெண்காடர் துறவு பூண்டு. தம்முடைய செல்வத்தை ஏழை எளியவர்க்கு வழங்குக என்ற ஆணை கேட்டு அவ்வாறே செய்தமை கண்டு, அடிகளின் உறவினர் வேண்டுகோட் படியே அப்பகுதியை ஆண்ட வேந்தன் அவரைச் சிறையிட்டான். பின்பு, அடிகளது உண்மை நிலை விளங்கியதும் சேந்தனார் சிறைவீடு பெற்றுத் தில்லைப் பகுதியில் இருந்து வந்தார். தில்லையில் இருந்து வருகையில் மார்கழித் திருவாதிரை விழாக் காலத்தில் தேர்த் திருநாளன்று தேர் எளிதில் பெயராதாயிற்று. அப்போது அங்கிருந்த சேந்தனார் திருப்பல்லாண்டு பாடினர். தேர்இனிது பெயர்ந்து சென்றது. பின்பு, சேந்தனார் திருவாவடுதுறை, திருவீழிமிழலை, திருவிடைக்கழி முதலிய திருப்பதிகட்குச் சென்று இறைவனை வணங்கித் திருவிசைப்பாப் பாடிப் பரவிக் கொண்டு தில்லைக்கு வந்து சேர்ந்தார். தில்லையில் கூத்தப்பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்து அவன் திருவடி நீழல் எய்தினார். வரலாற்றாராய்ச்சி சேந்தனார் பிறந்து வளர்ந்து சிறந்தவூர் திருவீழிமிழலையாக இருக்கலாம் எனத் திரு.கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் கூறுகின்றார்கள்.1 செப்புறை யென்பது சேந்தனாரது ஊரென்பதை அவர் தாமே, "செப்புறைச்சேந்தன்"2 என்பதனாற் பெறுதும். சேந்தனார் சிறைப்பட்டவுடன், அவருடைய மனைவியும் மக்களும் மிக்க வறுமையுற்றுத் திருவெண்காட்டுக்கு அணிமை யிலுள்ள ஊர்களில் இருந்து வந்தனர் என்றும், ஒருகால் பட்டினத் தடிகளை வெண்காட்டிற் கண்டு நிகழ்ந்தது கூறி வருந்தினர் என்றும், அடிகள் மனம் வருந்தி இறைவனைப் பாட, அவர்மூத்த பிள்ளையாரை விடுத்துச் சேந்தனாரைச் சிறை வீடு செய்யுமாறு பணித்தார் என்றும், பிள்ளையார் அவ்வண்ணமே செய்து திரும்பினர் என்றும், அதனால் திருவெண்காட்டில் அவருக்கு விலங்கு முரித்த விநாயகர் என்று பெயர் உண்டாயிற்றென்றும், பின்பு சேந்தனார் மனைவி மக்களுடன் தில்லையை அடைந்தார் என்றும் திருவெண்காட்டடிகள் சரித்திரம் கூறுகிறது.3 தில்லையில் வாழ்ந்தபோது சேந்தனார் நாடோறும் விறகு வெட்டி வந்து விற்று அதனால் வரும் பொருளைக் கொண்டு வாழ்க்கை நடத்தினார். அந்நிலையில் அவர் நாளும் சிவனடி யார் ஒருவர்க்கேனும் உணவு தாரா தொழிவதில்லை. ஒருநாள் சேந்தனார் மாவு கொணர்ந்து மனைவியிடம் தந்தார் என்றும், அவர் அதனைக் களியாகச் சமைத்தார் என்றும், பின்பு அச்சேந்தனார் அதனைச் சிவனடியார் ஒருவர்க்கு அளித்துப் பின் தம் மக்களுடன் தான் உண்டார் என்றும் அவருடைய வரலாறு கூறுகிறது.4 "சிவபெருமானே நள்ளிரவில் அவர் வீட்டுக்குச் சென்று கூழுணவு பெற்று அதன் மிகுதியைத் தமது திருமேனியிற் காட்டிச் சேந்தனார் பேரன்பை உலகவர்க்கு அறிவித்தனர் என்ப" என்ற கா.சுப்பிரமணியப் பிள்ளையர்கள் கூறுவர். ஒருகால் தில்லையில் பறையர் குடியில் தோன்றிய சேந்தன் என்பான் இறைவனுக்குப் பழஞ்சோறு அளித்தா னென்றும், அதனை இறைவன் அன்போடு உண்டான் என்றும் ஒரு வரலாற்றினை நம்பியாண்டர் நம்பி1 குறிக்கின்றார். தில்லைப் பறைச் சேந்தனையும். காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தனாரையும் பெயரொப்புமை பற்றி ஒருவராகக் கொண்டது தான் மேலே குறித்த வரலாற்றுக்கு உள்ளீடாக நிற்பது. நூல்கள் சேந்தனார் பாடியன எனத் திருவிசைப்பாவில் மூன்று திருப் பதிகங்களும் திருப்பல்லாண்டும் இப்போது உள்ளன. இவை பண்டைய சான்றோரால் சைவத் திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையிற் கோக்கப்பெற்றுள்ளன. திருவீழிமிழலைத் திருப்பதிகம் முதலியவற்றைப் பஞ்சமப் பண் எனப் பண்ணும் வகுத்துள்ளனர். இம்மூன்றும் இசைப்பாட்டுக்களாகவே இருத்தலால் இவை பண்டைச் சான்றோர்களால் பண் வகுக்கப் பெற்றுத் திருமுறைகளில் கோக்கப்பெற்றன என்று அறிதல் வேண்டும். ஒரு காலத்தில் திருஞான சம்பந்தர் முதலிய மூவரும் பாடிய திருப்பதிகங்களையும் இசைப்பா என்று முன்னையோர் வழங்கியதுண்டென்று கல் வெட்டுக்கள்2 கூறுகின்றன. "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்"3 என நம்பியாரூரர் கூறுவதனுள் இன்னிசை என்றது, "இனிய இசைப் பாவால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என்ற பொருளில் நிற்பது இதற்குத் தக்க சான்று. நூலாராய்ச்சி சேந்தனார் பாடிய திருவிசைப்பா மூன்றனுள் திருவீழிமிழலைத் திருவிசைப்பா, திருவீழிமிழலைக் கோயிலை "விண்ணிழி செழுங் கோயில்" என்று கூறுகிறது. ஒருகால் திருமால் ஆயிரம் பூக்களைக் கொண்டு இறைவனை அருச்சித்து வழிபடுங்கால், அவற்றுள் ஒன்று குறைபட்ட போது அவர் தமது தாமரை மலர் போன்ற கண்ணை இடந்து குறை நிரப்பி வழிபட்டார் என்றும், அவர்க்குச் சக்கரப் படையை அளிப்பதற்காக இறைவன் எழுந்தருளினார் என்றும், அப்போது அவர் பொருட்டுத் திருமால் விண்ணினின்றும் விமானம் ஒன்றைக் கொணர்ந்திட்டாரென்றும், அவ்விண்ணினின் றிழிந்த விமானமே வீழிமிழலைக் கோயில் என்றும் திருஞான சம்பந்தர், திரு நாவுக்கரையர், நம்பியாரூரர் ஆகிய மூவரும் கூறியுள்ளனர். இக்கருத்தையே எடுத்துச் சேந்தனார், "புயல்வணற் கருளிப் பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த மேக நாயகனை மிகு திருவீழிமிழலை விண்ணிழி செழுங்கோயில்"1 என்று கூறியிருக்கின்றார். திருவீழிமிழலை இறைவனைத் "திருவீழித் தங்கு சீர்த்செல்வத் தெய்வத் தான்தோன்றி நம்பி"2 என்று சேந்தனார் கூறுகின்றார்; திருவீழிமிழலையுடைய இறைவனுக்குத் "தான்றோன்றி பட்டாரர்"3 என்றும், "தான்றோன்றி மகாதேவர்"4 என்றும் பிற்காலத்து ஆன்றோர் பெயர் சூட்டிவழிபட்டனரென அவ்வூர்க்கல் வெட்டுக்கள் உணர்த்து கின்றன. இத்"தான்றோன்றி" என்னும் பெயரைத் திருஞான சம்பந்தர் முதலியோர் கூறாமையால், சேந்தனாரே திருவீழிமிழலை இறைவனை முதற்கண் இவ்வாறு வழங்கியுள்ளாரென்று அறியலாம். மேலும், மூவர் பாடிய தேவாரங்களையும் திருவாதவூரர் பாடிய திருவாசகம் திருக்கோவையார்களையும் போல இவருடைய இசைப்பாக்களும் நாட்டில் நல்ல செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதற்கு இக் கல்வெட்டுக்களே சான்றாகின்றன. திருஞான சம்பந்தரும் நாவரசரும் திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றவரலாற்றைத் "திருவீழிமிழலையிலிருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்"1 என்று நம்பியாரூரர் கூறுவது போல, சேந்தனார், "பாடலங்காரப் பரிசில் காசருளிப் பழுத்த செந்தமிழ் மலர் சூடி, நீடலங்காரத்து எம்பெரு மக்கள் நெஞ்சினுள் நிறைந்து நின்றானை"2 என்று கூறி மகிழ்கின்றார் தில்லையில் அந்தணர் மூவாயிரவர் இருந்து இறைவனை வழிபடுவது போலத் திருவீழிமிழலையில் அந்தணர் ஐஞ்ஞூற்றுவர் கூட்டமாய் இருந்து இறைவனை ஏத்துகின்றனர்3 என்பர். விசயநகர வேந்தர் காலத்தே இவர்களுட் சிலர் திருவாரூர்க் கோயிலிற் பணி செய்தனர் என்றும், அக்காலத்தே அவர்கள் அங்கே செய்த குற்றங்கள் கண்டு மனம் பொறாமல் தத்துவப் பிரகாசர் என்பார் "வீழித்துலுக்கு"4 என்று இவர்களை வைது பாடினரென்றும் தமிழ் நாவலர் சரிதை கூறுவதால் அறிகின்றோம். திருவாவடுதுறை இறைவனைப் பாடிய திருப்பதிகத்தில் நம்பியாரூரர் "இந்து சேகரனே"5 என்றாராக, நம் சேந்தனார், அதனைத் தருணம் என்று ஓர் அடைமொழி கொடுத்து, இளம்பிறை சூடியென்ற பொருள்படுமாறு சிறப்பித்து, "ஆவடு தண்டுறைத் தருணேந்து சேகரனே என்னுமே"6 என்று பாடினார். இச்சிறப்பை உணர்ந்த பண்டையோருட்சிலர் தம் மக்களுக்குத் தருணேந்து சேகரன் என்று பெயரிட்டு வழங்கினர். திருவாவடுதுறையில் வாழ்ந்த சான்றோர் ஒருவர் "தருணேந்து சேகர பண்டிதர்" என்றும்7 செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள தென்னேரியில் "இராச் சந்தூர்த் தருணேந்து சேகரபட்டன்"8 என்றும் இருந்திருக்கின்றனர் இவ்வாறே, "மானேர் கலை"9 எனத் தொடங்கும் திருப்பாட்டில் சேந்தனார், திருவாவடுதுறை இறைவனை, "சிவலோக நாயகச் செல்வமே" என்று புகழ்ந்து பாடினார்; அதன் நலங்கண்ட இளங் காரிக்குடி கங்கை கொண்ட சோழ அனந்த பாலன் என்பான், திருவாவடு துறையில் "சிவலோக நாயகன் மடம்"1 என ஒரு மடம் நிறுவி அடியார்கட்குச் சோறு போட நிவந்தமளித்துள்ளான். திருவாவடுதுறைக் கோயிலுக்கு ஆவடு துறையென்றும் ஊர்க்குச் சாத்தனூர் என்றும் பண்டை நாளிற் பெயர் வழங்கினமை கல்வெட்டுக்களால்2 அறியப்படுகிறது. சேந்தனார், சாத்தனூரைச் சாந்தை3 என்றும் சாந்தையூர்4 என்றும் உரைக்கின்றார். திருவிடைக்கழித் திருவிசைப்பாவில், திருக்குராவுடைய திருக்கோயிலில் இருக்கும் முருகப் பெருமானையே சேந்தனார் பாடியுள்ளார். இப்போதும் அங்கு முருகன் கோயில் உளது; கல்வெட்டுக்களும் முருகன் கோயிலில் தான் உள்ளன. அவைகளும் "பிள்ளையார் திருவிடைக்கழித் திருக்குராவுடையார்"5 என்றே கூறுகின்றன. திருவிடைக்கழியில் சோளேச்சுரம் என்றொரு பழைய சிவன் கோயில் உண்டென்றும் அது சங்களில் சான்றோராற் பாராட்டப் பெற்றிருக்கும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனுடைய பள்ளிப்படையாகலாம் என்றும் காலஞ்சென்ற தமிழாசிரியர் திரு. முத்துத்தாண்டவராய பிள்ளை கூறுவர். இனி, திருவிடைக்கழியில் சேந்தனார் காலத்தில் வேதியர் பலர் வைதிக நூல்களில் வல்லுநராய் இருந்திருக்கின்றனர். அவர்களைத் "தெரிந்த வைதிகர்"6 "தெருண்ட வைதிகர்"7 என்று சேந்தனார் குறிக்கின்றார். சோழ வேந்தனான மூன்றாம் இராசராசன் காலத்தில் மலையாள நாட்டினின்று வந்து வேதாந்த நூல்களைப் பயிலும் பிராமண மாணவர் பொருட்டுத் திருக்குடந்தைச் சீபாக்கியத்துறை யென்னும் மடத்துக்குக் குன்றத்து நாராயணன் என்பான் திருவிடைக் கழிப்பிடாகையான போதிமங்கலத்தில் நிலங்கள் ஐந்து வேலி வாங்கி விட்டதாக இவ்வூர்க் கல்வெட்டு ஒன்று1 கூறுவது சேந்தனார் காலத்து வைதிகக் கல்வி நிலையை வெளிப்படுத்துகிறது. இனி, சேந்தனார் பாடிய இசைப்பாக்களுள் திருப்பல்லாண்டு என்பதும் ஒன்று: அது பஞ்சமப் பண்ணென்றே திருமுறை கண்ட சான்றோர்களால் பண் வகுக்கப் பெற்று உள்ளது. ஆயினும், ஒன்பதாந் திருமுறையைத் தொகுத்தோர், சேந்தனார்க்குப் பின்வந்த சான்றோர் பாடிய இசைப் பாக்களைத் தொகுத்து எல்லாவற்றிக்கும் இறுதியில் இத்திருப் பல்லாண்டைத் தொகுத்துள்ளனர்; ஆயினும் இதற்கு ஒரு காரணமும் திருமுறை கண்ட வரலாற்றில் காணப்பட வில்லை. வானவரும் பிறரும் இறைவனைப் பல்லாண்டு பாடி வாழ்த்து வது தாம் இன்பமாக வாழ்வது குறித்திருப்பது போல், உலகவராகிய நாம் பிறவித்துயர் நீங்கி இன்ப வாழ்வு பெறுதற் பொருட்டு இறைவனை வாழ்த்துகின்றோம்; இதன்கண், "அடியோமுக்கு அருள் புரிந்து பின்னைப்பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே"2 என்றும், "ஆருயிர் மேற் பந்தம் பிரியப் பரிந்தவனே யென்று பல்லாண்டு கூறுதுமே"3 என்றும் சேந்தனார் கூறுவன மேற்கூறிய கருத்தைத் தெரிவிக்கின்றன. இனி, திருமாலடியாருள் ஒருவராகிய பெரியாழ்வார் பாடியுள்ள திருப்பல்லாண்டுக்குப் பொருள் கூறிய உரைகாரார்கள், "திருமால் திருவுலாப் போதரக் கண்ட ஆழ்வார், திருமாலின் திருமேனி, பலரால் காணப்படுதலால் கண்ணேறு முதலிய தீங் கெய்துமென அஞ்சிப் பல்லாண்டு பாடினர்" என்று கூறுகின்றனர். ஈண்டு, மார்கழித் திருவாதிரை விழாவில் தில்லைக் கூத்தப் பெருமான் தேர் மேல் உலா வந்தபோது தேர் முட்டுற்றுப் பெயராது நிற்கவும், அதுகண்டு சேந்தனார் இத் திருப்பல்லாண்டை ஓதவே தேர் இனிது சென்றது எனவரும் சேந்தனார் வரலாறு அக்கருத்தையே வற்புறுத்து கிறது. இதனால் திருப்பல்லாண்டு என்பது மங்கலக் காப்பாக நிற்கும் மாண்புடையது என்பது தெளிவாம். சைவத் திருமுறைகளை ஓதுமிடத்து முடிவில் இத்திருப் பல்லாண்டை மங்கலக் காப்பாகக் கூறி முடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. திருமாலடியார்கள் நாலாயிரப்பிரபந்தந்தை "அத்யாபாகம்" செய்யுமிடத்துப் பெரியாழ்வார் பாடிய திருப் பல்லாண்டை ஓதித் திருக்கடைக்காப்புச் செய்வர். மிக்க பிற்பட்ட காலத்தில் சைவ வோதுவார்கள், திருப்பல்லாண்டுக்குப் பின் திருத்தொண்டர் புராணமும் அதன் பின் திருப்புகழும் ஓதித் திருக்கடைக் காப்புச் செய்வாராயினர். இம்முறையில்தான் இன்றும் சைவத் திருமுறை பாராயணம் நடந்து வருகிறது. இறுதியாக ஒன்று கூறி இப்பகுதியை முடிக்கின்றாம்; ஒன்பதாந் திருமுறையில் காணப்படும் சான்றோர்களுள் ஒருவரான திருமாளிகைத் தேவரும் சேந்தனாரும் ஒருவரே; இருவராகக் கொள்வதற்கு இடமில்லை என்ற கருத்துப் படக் காலஞ் சென்ற திரு.அ.கோபிநாத் ராயர் அவர்கள் கூறுவர்;1 அதற்கு ஆதரவாக, அவர், முதல் இராசராசன் காலத்துத் திருவீழிமிழலையில் தோன்றிய கல்வெட்டு ஒன்றை2 மேற்கொள்கின்றனர். அவர் கருத்தை ஆராய்ந்த திரு. K.A.நீலகண்ட சாத்திரியவர்கள், உமாபதி சிவனார் காலத்துக்கு முன்பே நிலவிவந்த ஒன்பதாந் திருமுறை ஆசிரியருள் திருமாளிகைத் தேவரும் சேந்தனாரும் வேறு வேறாகவே கருதப்பட்டு வந்துள்ளனர்; இத்திருவீழிமிழலைக் கல்வெட்டும் இருவரையும் ஒருவராகக் கோடற் கேற்ற வலியுடைய தாக இல்லை; இதைக் கொண்டு திருமாளிகைத் தேவரும் சேந்தனாரும் ஒருவரே என்னாது இருவேறு சான்றோர்களாகக் கொண்டு நிலவும் கேள்விவழிச் செய்தி தவறுடைய தென்பது பொருத்தமாக இல்லை என்று3 கூறுகின்றது. இனி, இந்தோனேசியாவில் தொல்குடிச் செல்வர் வீடுகளில் திருமணக் காலத்தில் இத் திருப்பல்லாண்டு ஓதப் பெறுகிறதென்றும், இதற்கு அவர்கள் “லாண்டு பாடு” என்று பெயர் கூறுவரென்றும், இது “மான்கடில்” எனத் தொடங்கும் என்றும் மேனாட்டறிஞர்1 உரைக்கின்றனர். மான்கடில் என்பது திருப்பல்லாண்டின் முதற் பாட்டின் முதற் சீராகிய “மன்னுக தில்லை” என்றதன் சிதைவு.  11. நந்திக் கலம்பகம் இவ்வொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய இந்நூல், இப்பகுதியில் முதற்கண் கூறப்படவேண்டிய தாயினும், இதனை ஆக்கிய ஆசிரியர் பெயர் தெரியப்படாமையின், இறுதிக்கண் கூறப்படுகிறது. இது, தெள்ளாறு எறிந்த நந்திவன்மன்மேல் பாடப் பட்ட கலம்பக வகை. நந்திவன்மன் கி.பி. 826 -849 வரைக் காஞ்சிமா நகர்க்கண் இருந்து ஆட்சிசெய்தவன். இவன் தந்தை தந்திவன்ம பல்லவவேந்தன் தந்திவன்மன் காலத்தே பல்லவராட்சி தென்னாட்டில் தேயத் தொடங்கிற்று. தொண்டை நாட்டில் தெற்கில் பெண்ணையாற்றங்கரை வரையில் பாண்டியர் முன்னேறி அங்குள்ள அரசூரில் தங்கியிருந்தனர். நந்திவன்மன் அரசு காட்டில் ஏறியதும் அவர்கள் காஞ்சிமாநகர் நோக்கி வந்தனர். நந்திவன்மன் அவர்களைத் தெள்ளாறு என்னு மிடத்தே எதிர்த்து வென்றான். தெள்ளாற்றில் அவர்கள் தங்கினமையின், நந்திவன்மன் தெள்ளாற்றுக் கோட்டையைத் தகர்த்தெறிந்து வென்றான். அது முதல் அவற்குத் தெள்ளாறு எறிந்த நந்திவன்மன் என்ற சிறப்பு உண்டாயிற்ற.1 நந்திவன்மன் பின்னரும் பாண்டியருடைய குறும்புகளை அடக்கக் கருதி மேலும் போர்தொடுத்து அவர்களைப் பாண்டி நாட்டு வையைக்கரை வரையில் துரத்திக்கொண்டு சென்றான் என்று அவனது வரலாறு கூறுகிறது. நந்திவன்மனது ஆட்சி தொண்டை நாடு முழுதும் பரந்து காவிரியின் வடகரைப்பகுதி முற்றும் தன்கண் கொண்டிருந்தது. அவனது புகழோ தமிழகம் முழுதும் பரந்திருந்தது. அவன்காலத்தில் வாழ்ந்த சோழரும் பாண்டியரும் பின்பு நட்புற்றிருந்தனர். அந்நாளில் முதல் வரகுண பாண்டியன் காவிரிக்கரைப் பகுதியில் தனது ஆட்சி நிலவ வாழ்ந்தானாக, அவன் நாட்டுத் திருத்தவத்துறையில்1 நந்திவன்மன் நிவந்தம் பல விட்டிருப்பது அவ்வூர்க் கல்வெட்டால் தெரிகிறது. தெள்ளாறு எறிந்த நந்திவன்மன் சிறிது விளங்கிய காலத்து, வடபுல வேந்தனான இரட்ட வேந்தன் தன் மகள் சங்காதேவியை அவனுக்கு மணஞ்செய்துதந்தான்.2 இச் சங்காதேவி, நாட்டு மக்கட்கு அன்பினால் அன்னைபோலவும் உருவில் திருமகள் போலவும் விளங்கினாள்.3 நந்தியினது ஆட்சி நலம்பற்றிக் கூறும் செப்பேடுகள், "மழைக் கண்ட சோலைபோலவும், சூரியனைக்கண்டதாமரைக் குளம் போலவும், மாரியிறுதியில் வானத்தில் தோன்றும் முழுமதியம் கண்ட கடல் போலவும் நாட்டவர் இன்பம் பொங்கி வாழ்ந்தனர்"4 என்று கூறுகின்றன. நந்திவன்மன் காலத்தில் மாமல்லபுரம், மயிலாப்பூர், காஞ்சிநகர் என்ற பேரூர்கள் சிறப்புற்று விளங்கின. இவனுடைய கல்வெட்டுக்கள் சித்தூர் மாவட்டத்திலுள்ள குடிமல்லத்தும், செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த களத்தூரிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்துத் திருவெள்ளறையிலும், புதுகோட்டைப் பகுதியிலுள்ள குன்னாண்டார் கோயிலிலும் பிறவிடங்களிலும் உள்ளன. வடார்க் காடு மாவட்டத்திலுள்ள பள்ளிகொண்டாவிலிருக்கும் சிவன் கோயிலுக்கு முகமண்டபத்iம், தென்னார்க் காட்டைச் சேர்ந்த கிளியனூர்ப் பெருமாள் கோயிலையும் தெள்ளாறு எறிந்த நந்திவன்மன் கட்டியிருக்கிறான். இவனைக் கல்வெட்டுக்கள், கோநந்தி விக்கிர மவன்மன், நந்திபோத் தரசர், அவனி நாராயணன், குமார மார்த் தாண்டன்5 என்பன முதலிய சிறப்புப் பெயர்களாற் குறிக்கின்றன. கலம்பக வரலாறு நந்திக் கலம்பகம் பாடப்பெற்றுது பற்றித் தொண்டை மண்டல சதகம்1 ஒரு வரலாற்றைக் குறிக்கிறது. நந்திவன்மனுக்குத் தம்பியர் சிலர் இருந்தனர். எவ்வகையாலோ அவர்கள் தமையன் பால் பகைமைகொண்டு அவனைக் கொல்ல முயன்றனர். வேறு வகையால் அவனைக் கொல்ல இயலாமைகண்டு, ஒரு புலவனைக் கொண்டு நந்திவன்மனுக்கு இறுதிவிளைக்கக்கூடிய எழுத்துக்களை இடையிடையே தொடுத்து இனிய செய்யுளால் அமைந்த இக்கலம் பகத்தைப்பாடுவித்தனர். நந்தியின் அந்தப்புரத்துச் சுவரில் துளை யொன்று செய்து அப் புலவனை விட்டு அக்கலம்பகப் பாட்டை நந்தி கேட்கப் பாடச்செய்தனர். அவனும் அவ்வாறே, கேட்போன் மனம் கரைந்து உருகுமாறு இனிமையாகப் பாடிவிட்டு ஓடினான். அப்பாட்டிசையில் ஈடுபட்ட நந்திவன்மன் அது கலம்பகப் பாட்டு என்று அறிந்து அதனை முழுதும் கேட்க வேட்கை கொண்டான். ஒருநாள் இரவில், நந்திவன்மன் தன் நகரத்துத் தெருவொன்றில் நங்கையொருத்தி தான் கேட்ட பாட்டையே பாடுவது கேட்டு மறுநாள் அவளை வருவித்துப் பாடச்சொன்னான். அவள், "அஃதொரு நூறுபாட்டமைந்த கலம்பகம்; அதனைக் கேட்பதாயின் சுடுகாடு வரையில் நூறு பந்தரிட வேண்டும்; பந்தருக்கு ஒன்றாகப் பாட்டுக்களைப் பாட வேண்டும்; இறுதிப்பாட்டைப பாடும் போது, பாட்டுடைத் தலைவனாகிய நீ சுடுகாட்டில் அடுக்கப் பட்டிருக்கும் சிதை மேலிருந்து கேட்டல் வேண்டும் என்று தெரிவித்தாள். அருகிலிருந்த அமைச்சர் அறவோர் முதலிய சான்றோர் வேந்தனைத் தடுத்தனர். தமிழ்ப்பாட்டின்பால் உண்டான வேட்கை மிகுதியால் அவ்வாறே வேந்தன் ஏற்பாடுசெய்து கேட்க லுற்றான்." "மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய், ஒண்சுடராய் ஒளியென்னும் ஓருருவம் மூன்றுருவம், மைவடிவோ வளைவடிவோ மரகத்தின் திகழ் வடிவோ, செவ்வடிவோ பொன் வடிவோ சிவனே நின் திருமேனி" எனத் தொடங்கி, "ஒரு பெருங் கடவுள் நிற்பரவுதும் எங்கோன், மல்லைவேந்தன் மயிலை காவலன், பல்லவர் தோன்றல் பைந்தார் நந்தி, வடவரையளவும் தென் பொதியளவும், விடையுடன் மங்கல விசயமுன் நடப்ப, ஒரு பெருந்தனிக்குடை நீழல், அரசு வீற்றிருக்க அருளுகவெனவே" என்று முடியும் முதற்பாட்டைப் பாடி முடித்ததும் முதற் பந்தர் எரிந்து சாம்பலாயிற்று, இறுதியாகச் சிதைமேல் இருந்து கொண்டு நன்தி வன்மன் கேட்கக் கலம்பகத்தின் இறுதியிலுள்ள, "வானுறு மதியை யடைந்ததுன் வதனம்1 மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி2 கானுறு புலியை அடைந்ததுன் வீரம்3 கற்பக மடைந்தவுன் கரங்கள்4 தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்5 செந்தழல் புக்கதுன் மேனி6 யானுமென் கலியும் எவ்விடம் புகுவேம் எந்தையே நந்திநாயகனே"7 என்பது பாடப்பட்டதும் சிதை தீப்பற்றிக் கொண்டு எரிந்தது; நந்திவன்மனும் வெந்து சாம்பரானான். இனி வேறொரு கதையும் இக் கலம்பகம் பற்றி வழங்குகிறது. நந்திவன்மன், அவன் தந்தையான தந்திவன்மற்கு உரிமை மகன் அல்லன் என்றும், நந்திவன்மனுக்கு அரசுரிமை வழங்கியது பற்றிக் குடிகள் நந்திவன்மன்பால் வெறுப்புக்கொண்டு கொல்ல முயன்றனர் என்றும், தந்திவன்மன் இறந்தபின் அவனுடைய உரிமைமகனான குலமகன் கொல்லாபுரிச் சந்திரன் என்பவன் என்றும், அவன் நந்தியைக் கொல்லுதற்குத் தானே இக் கலம்பகத்தைப் பாடினன் என்றும், அதனை அறிந்த நந்திவன்மனுடைய அமைச்சர் அதனை எவரும் படிக்கக் கூடாது என விலக்கினரென்றும், அவன் ஒருநாள் தன் பரத்தை வீட்டில் அவள் மகிழச் "செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச் சந்தனமென்று ஆரோ தடவினார் - பைந்தமிழை, ஆய்கின்ற கோநந்தி ஆகம் தழுவாமல், வேகின்ற நெஞ்சே விரைந்து" எனவரும் பாட்டை நந்திக்கலம்பகத்திலிருந்து பாடினன் என்றும், அவ் வழியே வந்த ஊர்க்காவலன் அவனைக் கொண்டு சென்று நந்திமுன் நிறுத்த, நந்திவன்மனும் அப் பாட்டைக் கேட்டுப் பெருமகிழ்வு கொண்டு முழுதும் கேட்க விரும்பி முன் கதையிற் கூறியவாறே பந்தரிட்டுக் குலமகன் கொல்லாபுரிச் சந்திரன்பாடக் கேட்டு இறந்தான்; நந்திக்குப் பின் அவன் தம்பியைக் கொல்லாபுரிச் சந்திரன் என்பான் முடிசூட்டி அரசனாக்கினான் என்றும் அக்கதை கூறுகிறது. இதற்கு, "வெல்லாமல் வென்று நற் சந்தனக் காட்டத்தின் மேலிருந்து, நல்லாறை நந்திக்கலம்பகம்கேட்டபின் நற்றுணைக்குக் கொல்லாபுரிச் சந்திரன் மாமுடிசூட்டக் குடை கவித்து, மல்லார் புரித் தொண்டைமானானதும் தொண்டைமண்டலமே"1 என வரும் சதகப்பாட்டுச் சான்றாகக் காட்டப்படுகிறது. கலம்பக வரலாற்றாராய்ச்சி தெள்ளாறெறிந்த நந்திவன்மன் இக் கலம்பகத்தால் இறந்தான் என்ற இவ்வரலாறு, கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவரால் தொண்டை மண்டல சதகத்திலும், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளங்கிய மாதவச் சிவஞான யோகிகளால் சோமேசர் முதுமொழி வெண்பாவிலும்1 கூறப்படுகிறது. ஆகவே, முந்நூறு ஆண்டுகட்கு முன்பே இவ்வரலாறு நாடறிய நிலவிய தொன்மையுடையதென்பது தெளிவு. நந்திவன்மனுடைய வரலாற்றுக் குறிப்புக்களை நல்கும் செப்பேடுகளோ கல்வெட்டுக்களோ இச் செய்தியைக் குறிக்க வில்லை. நந்திவன்மன் தெள்ளாறு எறிந்த வரலாற்றை இக் கல்வெட் டுக்கள் குறிப்பதுபோலவே, பெருந்தேவனார் பாரதவெண்பா, "வண்மையாற் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால், உண்மையால் பாராளுரிமையால் - திண்மையால், தேர்வேந்தர் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோடு, யார் வேந்தர் ஏற்பார் எதிர்"2 என்றும், நந்திக் கலம்பகம், "கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த கோமுற்றப் படைநந்தி குவலய மார்த்தாண்டன்"3 "செம் பொன் செய்மணிமாடத் தெள்ளாற்றில் நந்திபதம் சேரார் ஆனைக் கொம்பன்றோ நங்குடிலிற் குறுங்காலும் நெடுவளையும் குனிந்துபாரே"4 என்றும் கூறுகின்றன. தெள்ளாறெறிந்த நந்திவன்மன் தமிழ்ப்பாட்டின் சுவையறிந்து மகிழும் தமிழ் மாண் புலமையும் அதனால் தமிழ்ப் பாவலர்க்குப் பெருங் கொடைபுரியும் வள்ளன்மையும் உடையன் என்பது, இக்கலம்பகத்தின் தோற்றத்தால் விளங்குகிறது. பல்லவ வேந்தருள் இம் மூன்றாம் நந்திவன்மனுக்கு முன்னும் பின்னும் தோன்றியவருள் எவரும் இவனைப் போலத் தனி நூல்வடிவில் புலவர் பாடும் புகழ் பெற்றவர் இருந்ததாக இதுகாறும் தெரிந்திலர். இவன் காலத்தில் தான் பெருந்தேவனார் பாரதம் பாடியது மாகும்; அவர் இவ்வேந் தனைப் "பல்லவர் கோமான் பண்டிதராலயனைப் பரவினேம்"1 என்று கூறுவது இதற்கு ஏற்றசான்று. இக் கலம்பகம் பாடிய புலவர், தெள்ளாறெறிந்த நந்திவன்மன், "விடையுடன் மங்கல விசயமும் நடப்ப, ஒரு பெருந் தனிக்குடைநீழல், அரசுவீற்றிருக்க அருளுக என"2 சிவபெருமானைப் பரவுவதும், "வாழி நந்தி தண்ணீழல் வெண்குடை ஊழிநிற்கவே"3 என வாழ்த்து வதும், நோக்கின், இக்கலம்பகம் நந்திவன்மனைக் கொல்லும் குறிப்பொடு பாடப்பெற்ற தென்பது பொருத்தமாகத் தோன்ற வில்லை. மேலும், இக் கலம்பகமுடையார், "பகையின்றிப் பார் காக்கும் பல்லவர்கோன்" என்பதும், பாடும் பாணாற்றுப்படையும் "மண்ணெலா முய்ய மழைபோல் வழங்குகரத், தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி" என்றும், "பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி" என்றும் கூறுவதும் நந்திவன்மன்பால் பகைமை யுடையரல்ல ரென்றே காட்டு கின்றன. நந்திவன்மன் தந்திவன்மனுக்கு நேரிய மகன் என்பதே செப் பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் பெறப்படுவது; கலம்பகம் பற்றிய வரலாறுகள் கூறும் கூற்றுக்கு ஒருவகை ஆதரவும் இல்லை. நந்திவன்மனுக்குத் தம்பியர் உண்டென்றும், அவர்கள் அவனுக்கு மாறுபட்டு ஒழுகினரென்றும் இக்கதைகள் கூறுவது போலவே, இக் கலம்பக முடையாரும், "குலவீரர் ஆக மழியத், தம்பியரெண்ணமெல்லாம் பழுதாக வென்ற தலைமான வீரதுவசன்"4 என்று கூறுகின்றார். இக்கலம்பகம் பாடி அரங்கேற்றம் செய்த காலத்துக் கவியரங் கத்துக்கு இடப்பெற்ற பந்தர் தீப்பற்றிக் கொண்டிருக்க வேண்டும். சின்னாட்குப் பின் நந்திவன்மன் இறந்திருக்க வேண்டும். இவ்விரு செய்திகளையும் ஒன்றுபடுத்திப் பிற்காலத்தே நந்திவன் மனுடைய தம்பியர் பக்கலிருந்து பரிசழிந்தவரோ அவர் வழி வந்தவரோ எவரோ இப் பொய்க் கதையைக் கட்டியிருக்க வேண்டும். இந்நந்திக் கலம்பக்ததைப் பாடிய ஆசிரியர், சிறந்த சைவராவர். இக்கலம்பகத்தில், பாயிரத்துள் விநாயகனைப் பாடலுற்ற இந்த ஆசிரியர், உமாதேவியை "மும்மைப் புவனம் முழு தீன்ற முதல்வி"1 என்றும், இறைவனை "விடைப்பாகன்" என்றும் "பொருப்பரையன் மடப்பாவை புணர்முலையின் முகடுதைத்த, நெருப்புருவம் வெளியாக நீறு அணிந்த வரைமார்ப"2 என்றும் பல படியாகப் பாராட்டிக் கூறுகின்றார். நூலின் தொடக்கத்தில், "மண்டலமாய் அம்பரமாய் மாருதமாய் வார்புனலாய் ஒண்சுடராய் ஒளி யென்னும் ஓருருவ மூன்றுருவம் மைவடிவோ வளைவடிவோ மரகதத்தின் திகழ்வடிவோ செவ்வடிவோ பொன்வடிவோ சிவனே நின் திருமேனி"3 எனவும் பிறவும் கூறுவன அவரது சிவப்பற்றைக் காட்டுகின்றன. தெள்ளாறெறிந்த நந்திவன்மனுக்கு இந்நூல் பல சிறப்புப் பெயர்களை வழங்குகிறது. நந்தி4 அவனி நாராயணன்,5 பல்லவர் கோன்,6 மல்லைப் புரவலன்,7 மல்லையங்கானல்முதல்வன்,8 மயிலை காவலன்,9 தொண்டை வேந்தன்,10 சோணாடன்,11 உறந்தையர் கோன்,12 சந்திரகுலப் பிரகாசன்,13 உக்கிரமகோபன்,14 குவலய மார்த்தாண்டன்,15 தேசபண்டாரி,16 மானோதயன்,17 விடேல் விடுகு18 என்பன அவற்றுட் சிறப்புடையனவாகும். இவ்வாறே, சோணாடு,1 வடவேங்கட நாடு,2 கச்சிநாடு,3 அங்கநாடு4 முதலிய நாடுகளும், மல்லை,5 மயிலை,6 கச்சி,7 கடம்பூர்,8 குருக்கோட்டை,9 தெள்ளாறு,10 தொண்டி,11 பழையாறு,12 வெள்ளாறு,13 வெறியலூர்14 முதலிய ஊர்களும் குறிக்கப்படுகின்றன. "அவர் நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன் நெஞ்சே நீ எமக்காகாதது"15 என்ற திருக்குறளை, இக்கலம்பக முடையார், "நம்மாவி நங்கொழுநர் பாலதாம் நங்கொழுநர், தம்மாவி தம்பால தாகும் தகைமையினால், செம்மாலை நந்தி சிறுகுடி நாட்டன்னமே, தம்மாவி தாமுடைய ரல்லரே சாகாமே"16 என்ற பாட்டின்கண் வைத்துப் புதுவதொரு நயந்தோன்றக் கூறுவதும், "ஈட்டி புகழ்நந்தி பாணநீ எங்கையர்தம், வீட்டிருந்து பாட விடிவளவும் - காட்டிலழும், பேயேன்றாள் அன்னை பிறர்நரி என்றார் தோழி, நாய் என்றாள் நீ யென்றேன் நான்"17 என நகைச்சுவை தோன்றக் கூறுவதும் பிறவும் கற்றோர் சுவைத்து இன்புறும் கவினுடையவாகும். தெள்ளாறெறிந்த நந்திவன்மன் காலத்தே பெருந்தேவனார் என்பார் பாரதவெண்பா என்னும் நூலை உரையிடையிட்ட செய்யுள் முறையில் செய்திருக்கின்றார். இந் நந்திக் கலம்பகத்தைப் பாடிய ஆசிரியரும் அப்பெருந்தேவனாரேயாகலாம் எனத் திரு.மு.இராகவையங்கார் அவர்கள்18 கருதுகின்றார்கள். கேள்வி வழிச்செய்தி அதற்கு ஆதரவு ஒன்றும் நல்குகின்றதில்லை; பாரதம் பாடிய பெருந்தேவனார் பாயிரத்துள் விநாயகரைக் காப்பாகப் பாடுவதொன்று கொண்டு சைவராகக் கோடற்கில்லை; சருக்கந்தோறும் அவர் திருமாலையே பாடியிருக்கின்றார். அதனால் அவர் திருமாலடியாராவர் என்றற்கு மிக்க இடமுண்டாகிறது. ஆகவே, இருவரையும் ஒருவராகக் கூறுவது நிரம்புமாறில்லை. இனி, இவ்வொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அரசு புரிந்த பல்லவவேந்தனான அபராஜிதன் காலத்தே நம்பி அப்பி என்பவர் திருத்தணிகையில் உள்ள வீரட்டேசுரர் கோயிலுக்குத் திருப்பணி பல செய்துள்ளார்.அதனைப் பாராட்டிப் பல்லவ வேந்தனே1 ஒருபாட்டை, "திருந்து திருத்தணியற் செஞ்சடை யீசற்குக், கருங்கல்லாற் கற்றளியா நிற்க - விரும்பியே, நற்கலை களெல்லாம் நவின்றசீர் நம்பியப்பி, பொற்பமையச் செய்தான் புரிந்து"2 என்று பாடியுள்ளான். இதனைத் திருத்தணிகை வீரட்டேசுரர் கோயிலில் அந்நாளிற் பொறித்து, இதன்கீழ், "இது பெருமானடிகள் தாம் பாடி அருளித்து" என்றொரு குறிப்பும் தரப்பட்டுளது. பெருமானடிகள் என்பது அரசுபுரியும் வேந்தர்களைக் குறிக்கும் பொது நிலைச் சொற்றொடராத3லால் ஈண்டு அதனால் குறிக்கப்படு பவன் அபராஜித வன்மனாகின்றான். இவனுக்கு இராசமார்த்தாண்டன் என்ற சிறப்பும் உண்டு.4 இவன் மனைவி பெயர் மாதேவடிகள் என்பது. திருப்புறம்பயப் போரில் கங்கை வேந்தனான முதற் பிருதிவி பதியைத் துணையாகக் கொண்டு பாண்டியன் வரகுணனை வென்றவனும் இவனேயாவன். விசயாலயன் மகனான முதலாதித்தன் இவனைவென்று இவனுடைய ஆட்சியிலிருந்த தொண்டைநாட்டைத் தனக்குரிய தாக்கிக் கொண்டான். இவ்வாறு பாண்டியன்பால் வெற்றியும் சோழன்பால் தோல்வியும் எய்தி அரசியல் வாழ்வின் சுவைகண்டு உளம்பழுத்த இப் பல்லவ வேந்தன். சிவபெருமான் பாலும் அவற்குத் திருப்பணி செய்து உயர்ந்த சான்றோர்பாலும் பேரன்புபூண்டு தமிழ்த தொண்டாற்றினான். ஆயினும்,இவன் பாடியனவாக இத் திருத்தணிகை வீரட்டேசுரர் கோயில் வெண்பா வொன்று தவிர வேறே எவையும் இதுகாறும் கிடைத்தில. இக்காலத்தே, மதுரை மாவட்டத்தில் மேலூர்ப்பகுதியில் பள்ளி தரையன் என ஒரு சான்றோரும், மதுரைக்கண்மையில் நாகமலைப் பகுதியில் தென்னவன் தமிழவேள் என ஒரு சான்றோரும் இருந்திருக்கின்றனர். இவருள் பள்ளி தரையன் என்பார், "பாண்டியன் கீழ் அதிகாரிகளுள் ஒருவராய் அவன் பொருட்டுப் பல அரிய பெரிய செயல்களைப் புரிந்தவர் என்றும், அழகிய விமானமொன்று கட்டி முடித்தவர் என்றும், தமிழ்க் கடலைப் பருகிய அகத்தியனார் விளங்கும் திருபொதியிலில் யாகங்கள் பலவும் செய்வித்தவர் என்றும், புலமையாளர் என்றும், பெருந்துறவால் முனிவராக வாழ்ந்தவர் என்றும் அப்பாடலால் தெரியவருகின்றன என்பர்."1 தென்னவன் தமிழவேள் என்பார், "மெய்ம்மை யுணர்ந்தவன் என்றும், தரிசனங்கள் ஆறும் தமிழ்கள் மூன்றும், வடநூல் வகையும் நீதி நூலும் மேதகு புராணமும் பாதஞ்சல் முதற் பனுவற் பயன்களும் உணர்ந்தவர் என்றும்"2 கூறுகின்றனர். இக்காலத்தே புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிற்றண்ணல் வாயில் சயினக் கோயில் முன்மண்டபத்தைக் கட்டிய மதுரையாசிரியர் இளங்கோதமனார் என்ற சான்றோர் ஒருவர் இருந்திருக்கின்றனர்.3  12. ஒளவையார் தமிழகத்தில் நிலவிய புலவர்களுள் ஒளவையாரைப் போலக் கற்றவரும் மற்றவரும் ஒப்பப் போற்றும் பெருமை பெற்ற புலவர்கள் எவரும் இலர் என்று திட்டமாகக் கூறலாம். மக்கள் பேச்சிடையே அடிக்கடி ஒளவையார் அருளிய பொருளுரைகள் வந்து விழுந்த வண்ணம் இருக்கும். தமிழகத்தில் எப்பகுதிக்குச் சென்றாலும் அப்பகுதியில் வாழ்வோர் ஒளவையாருக்கும் தங்கள் பகுதிக்கும் ஒரு தொடர்பிருப்பதாக ஒருவரலாற்றினைக் கூறுவர்; அவர் பாடியதாக ஒரு பாட்டும் பாடுவர். இவ்வாறு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தன் புகழே நிலவப்பெற்ற சிறப்புத் தமிழ் முனிவன் எனப்படும் அகத்தியனுக்கும் அவன் பின்வந்த தொல்காப்பியர் திருவள்ளுவர் முதலிய எவருக்கும் உண்டானதில்லை. புலவரது வரலாறு காணும் ஆராய்ச்சியாளர்க்கும் ஒளவையாரது வரலாறு போல மிக்க சிக்கலான வரலாறு வேறு கிடையது. சங்ககாலத்துத் தொகை நூல்களுள் ஒளவையார் பாடிய பாட்டுக்கள் உண்டு. இடைக்காலத்தில் தோன்றிய புலவர்களான கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்களது வரலாற்றோடு இயைத்துக் காட்டும் ஒளவையார் பாட்டுக்களும் உண்டு. அந்தாதி கோவை முதலிய நூல் பாடும் புலவர் நிரலில் பந்தனந்தாதி அசதிக் கோவை என்ற பிரபந்தம் பாடிய வகையில் ஒளவையார்க்கும் உரிய இடமுண்டு. பள்ளியிற் பயிலும் இளஞ்சிறார்கள். முதன் முதலாக அறியும் புலவரும் ஒளவையாரேயாவர். இவ்வாறே சமயத்துறையில் பயில்வோரிடையிலும் ஒளவைக்குறள் என்றொரு நூல் காணப்படுகிறது. இதனால், இலக்கியம், சமயம், நீதி என்ற எல்லாத் துறையிலும் ஒளவையார் பெயர் நிலவுவதை நாம் காணலாம். சங்ககாலத்துக்கும் கம்பர் ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் பெருமக்கள் வாழ்ந்த காலத்ததுக்கும் இடையே ஓராயிரம் ஆண்டு கட்குமேல் கழிந்திருப்பதால், இடைக்காலத்தில் இருந்தவராகிய ஒளவையாரே, சங்ககாலத்தில் தகடூர் அதியமான்பால் நெல்லிக்கனி பெற்றுண்டு அவன் திருவோலக்கத்தைச் சிறப்பித்துக் கொண்டிருந் தவர் எனக் கூறுவது பொருந்தாது. இப்பொருந்தாமையை நன்கு உணர்ந்தே, சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த முருகதாச சுவாமிகள் தாம்பாடிய புலவர் புராணத்தில் ஒளவையாரை இருவராக்கி, "முன் ஒளவை கலிவருட மூன்றாவதாயிரத்தாள், பின் ஒளவை நாலாவதாயிரத்திற் பிறந்திட்டாள்"1 என்று பாடி அருளினார். இவ்வாறு ஒளவையாரை இருவராக்கும் இது புலவர் வரலாறு ஆராயும் ஆராய்ச்சியாளர் அனைவருக்கும் ஒத்த கருத்து, "பின் ஒளவை" என்ற இரண்டாம் ஒளவையாரே இங்கே ஆராயப் பெறுபவர். ஒளவையார், தாம் பாடிய நல்வழி என்னும் நூலில் "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும், மூவர் தமிழும் முனி மொழியும் - கோவைத், திருவாசகமும் திருமூலர் சொல்லும்"2 எடுத்தோதுவதால், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னேயிருந்தவர் என்றற்கு இடமில்லை என்பது தெளிவாகின்றது கி.பி. பதினொன்றாம் நூற்றாண் டளவில் இருந்தவர் எனப்படும் உரையாசிரியராகிய இளம்பூரணர், "வெண்பாட்டு ஈற்றடி முச்சீர்த்தாகும்"3 என்ற தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர உரையில் "அட்டாலும் பால் சுவையிற் குன்றாது"4 எனத் தொடங்கும் இவரது பாட்டை எடுத்துக் காட்டுகின்றார். இதனால், இரண்டாம் ஒளவையார் கி.பி. பத்தாம் நூற்றாண்டின ரெனக் கொள்வது நேரிதாதல் பற்றி இங்கே எடுத்து ஆராய்கின்றாம். வரலாறு ஒளவையார் சோழ நாட்டில் பாணர் குடியில் பிறந்தவர். பாணர்களில் பெண்களைப் பாடினி என்றும், பாட்டியர் என்றும் பண்டையோர் கூறுவது மரபு.5 அம்முறையில் ஒளவையார், ஒளவைப் பாட்டியென வழங்கப்பெற்றனர். பின்னர், "தந்தை தாயே பாட்டன் பாட்டி"1 என்ற முறைமை தோன்றவே, ஒளவைப் பாட்டி யென்பது ஒளவை மூதாட்டி யெனப் பொருள் படுவதாயிற்று; இன்றும் ஒளவையாரை ஒளவை மூதாட்டி என்பதே பெருவழக்காக வுளது. பண்டை நாளில் பாணர்கள் கொடைக்கடன் பூண்ட வேந்தர் களையும் செல்வர்களையும் நாடிச்சென்று அவரது புகழைப் பாடி அவர் தரும் பரிசில் பெற்று வாழ்ந்தனர். அப் பாணர்களைப் பரிசில் தந்து ஆதரிக்கும் முகத்தால் நாட்டில் இசையும் கூத்தும் வளர்க்கப் பெற்றன. இவ்வாறே புலவர் பெருமக்களால் இயற்றமிழ்வளஞ் சிறந்தது. தமிழ்ச் செல்வர்கள் தங்களுடைய தமிழ் மூன்றையும் -புலவர்களால் இயலும், பாணரால் இசையும், கூத்தரால் நாடகமும் - வளர்ப்பது கடன் என்றும், எனவே இப்புலவர் முதலாயினார்க்குப் பரிசில் வடிவில் கொடை வழங்குவது கடன் என்றும் கருதினர். அதுபற்றியே அவரது தமிழ்க் கொடையைக் கொடைக்கடன் என்று சான்றோர் வற்புறுத்தினர். இடைக்காலத்தும் இம் மரபு குன்றாமல் இருந்தது என்பதை நந்திக் கலம்பகத்துப் பாணாற்றுப் படையும், "பெரும் புலவரும் அருங்கவிஞரும், நரம்புறு நல்லிசைப் பாணரும், கோடியரும் குயிலுவரும், நாடு நாடு சென்று இரவலராய் இடும்பை நீங்கிப் புரவலராய்ப் புகழ் படைப்ப"2 என்று சோழவேந்தர் மெய்க்கீர்த்தியும் கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது. அதனால் ஒளவையார் பாடுதற்குரிய நற்பண்புடையாரைப் பாடும் தமிழ்ப் பணியையும் ஆற்றுவாராயினர். தமிழ்ச் செல்வர் மனைகளில் வளரும் இளஞ்சிறார்களுக்குத் தமிழும் நல்லொழுக்கமும் கற்பிக்கும் துறையில் ஒளவைாயர் நல்ல பணி புரிந்திருக்கிறார். இளஞ்சிறார்களின் மனப் பண்பையும் மொழிவளத்தையும் எண்ணி அவற்றுக்கேற்ப, உயரிய அறிவு நூல், பொருள் நூல், ஒழுக்கநூல் முதலிய பல நூல்களிற் காணப்படும் நற்கருத்துக்களை அச்சிறார்களின் தூய உள்ளத்திற் பதியுமாறு கற்பிக்கும் வகையில் ஒளவையார் பெருமை யெய்தினார். சிறார்கட்கென ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களை எளிய தமிழில் தாமே செய்து கற்பித்தார். இளஞ்சிறார் பலர் நல்லறிவும் நல்லொழுக்கமும் நன்மொழிப் பயிற்சியும் பெற்றுச் சிறந்தனர். அதனால் அவரது புகழ் தமிழகமெங்கும் பரவிற்று. இளஞ்சிறார் முதல் முதியவர் ஈறாகப் பலரும் ஒளவையார் நூல்களை நன்கு பயின்றனர். நாட் செல்லச் செல்ல ஒளவையார்க்கு முதுமையுண்டாயிற்று. அவர் நாடெங்கும் சுற்றி ஆங்காங்கு வாழும் செல்வர்களைக் காணவிரும்பினார். நாட்டில் வாழ்ந்த செல்வர் பலரும் ஒளவை யாரை வரவேற்பதில் பேரன்பும் அவர் பாடும் பாட்டில் பெருமதிப்பும் கொண்டனர். ஒளவையாராற் பாடப்பெறுவதைச் செல்வர்கள், தாம் பெற்ற செல்வத்தின் பயனாகவே கருதினர். அந்நாளில் தொண்டை நாட்டில் போதியார் புலியூர் என்றோர் ஊர் இருந்தது. இப்போது அது தென்னார்க்காடு மாவட்டத்துத் திண்டிவனம் வட்டத்தில் பாதிராப்புலியூர்1 என்ற பெயருடன் மருவி வழங்குகிறது. அதனைத்தலைமை இடமாகக் கொண்டு மாநாகன் பந்தன் என்ற வணிகனொருவன் செல்வச் சிறப்போடு வாழ்ந்தான். அவன் காவிரிப்பூம் பட்டினத்து வணிகர் குடியில் பெரு வாணிகம் செய்து இப்பகுதியில் தங்கியிருந்தான். அப்பகுதியில் பல ஊர்கள் அவனுக்கு உரியவாய் இருந்தன. அவற்றுள் அவன் பெயராலேயே ஒரு சதுர்வேதி மங்கலமும் உண்டு. அஃது இப்போது பந்த மங்கலம்2 என வழங்குகிறது. அவனுடைய கொடைநலமும் தமிழ்ப் பண்பும் கேள்வியுற்ற ஒளவையார் அவன்பாற் சென்றார். அவன் அவரைச் சிறப்புடன் வரவேற்று மகிழ்வித்தான். அவனது கொடை நலத்தையும் குடிநலத் தையும் வியந்த ஒளவையார் அவன் மேல் ஓர் அந்தாதி நூலைப் பாடினார். அது, "சீர்மடந்தை கேள்வன் திருமடந்தை தன் கொழுநன் போர்மடந்தை நாதன் அருள் போதையர் கோன் - பார்மடந்தை மைந்தன் கடற்புகார் மாநாகன் நாகந்தை எந்தையுளான் எங்கட்கிடம்" என்று தொடங்கி, "ஏமார்ந்திருந்தும் இயல்வேந்தர் செப்பியிடும் காமார்ந்த காவிரிப்பூம் பட்டினத்தில் - பாமாந்தர் கூடும் பசும்பொன் கொடுத்துக் கொடுத்து நலம் தேடும் புகழ்ப் பந்தன்சீர்" என்று முடிகிறது. இதன் கண் போதியார் புலியூர் என்பது போதையெனத் திரிந்து மரூஉவாக வழங்குகிறது. இதுகேட்டு மகிழ்ந்த பந்தன், பொற்படாம் ஒன்று நல்கித் தன்பெயரால் அமைந்த பந்தமங்லத்தை அடுத்திருக்கும் குப்பத்தை ஒளவையார்க்கு அவரது பெயரையே இட்டு வழங்கினான். இந்நூலிடையே ஒளவையார் தமது பெயரையும் வைத்து, "நான் அவ்வை என்று இரங்கி வாழ்த்தினேன் மற்றவனும், ஏன் அவ்வையே என்று இறைஞ்சினான்" என்று பாடி இருக்கின்றார். பந்தனுடைய தமிழ் நலத்தை, "கூடல் தமிழ்ச் சங்கம் கொண்டாடும் கோவணிகன், மாடப் புகார்நீடு மாநாகன்" என்று சிறப்பித்து அவன் தனக்குப் பொற்படாம் ஈந்தசெய்தியையும் குறிக்கின்றார். இவ் வரலாற்றை வைசிய புராணம் என்னும் நூல் ஒளவைக்குப் பொற் படாம் ஈந்த அத்தியாத்தில் விரிவாகக் கூறுகிறது.1 இனி, தன்பால் அன்புகொண்டு ஒளவையார் பாடிய அந்தா திக்காக அவன் பொற்படாம் ஈந்ததோடு பந்த மங்கலத்துக்கு மேற்கில் அதனை அடுத்துள்ள குப்பம் என்னும் ஊரை ஒளவையார் குப்பம் எனப் பெயரிட்டு அவர்க்கு வழங்கினான்; இப்போது அஃது அவ்யைார் குப்பம் என வழங்கிவருகிறது.2 அக்காலத்தே வட கொங்கு நாட்டில் திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த ஐவேலி என்ற ஊரில் ஆயர் பலர் வாழ்ந்து வந்தனர்.3 அவர்கட்கு அசதி என்பான் தலைவனாக இருந்தான். அவன் பிறந்த குடியினரான ஆயர், ஆய்ப்பாடி ஆயர் எனப்படுபவர். அசதி தமிழறிஞர் பால் மிக்க அன்புடையன். அவர்பாடும் பாட்டுக் களைக் கேட்டுப் பரிசுநல்குவது அவனுடைய பண்புகளுள் ஒன்று. ஒரு கால் ஒளவையார் அவனுடைய ஐவேலிக்குச் சென்று அவனைக் கண்டார். அவன் அவரை மிக்க அன்புடன் வரவேற்றுச் சிறப்பித்தான். அவர் பெரிதும் மகிழ்ந்து அவன்மேல் ஒரு கோவை நூல் பாடினர். அந்நூல் முழுதும் இப்பொழுது கிடைத்திலது; சிற்சில பாட்டுக்களே தனிச் செய்யுட் சிந்தாமணி, தனிப்பாடற்றிரட்டு முதலிய நூல்களில் காணப்படுகின்றன. இக் கோவைப்பாட்டுக்களில் அசதியின் முறை செய்யும் சிறப்பு, "அறங்காட்டிய கரத்து ஐவேல் அசதி"1 என்றும் "ஆடுங் கடைமணி ஐவேல் அசதி"2 என்றும் குறிக்கப் படுகிறது. அசதியின் மறமாண்பினை, "அலைகொண்ட வேற்கரத்து ஐவேல் அசதி"3 எனவும், "அழற்கட்டுக்கட்டிய ஐவேல் அசதி"4 எனவும், கொடை நலத்தை, "ஆற்றாரைத்தாங்கயி ஐவேல் அசதி"5 எனவும் இந்நூல் கூறுகின்றது. இக் கோவைநூலில், அசதியின் குடியினர் ஆய்ப்பாடி ஆயர் என்பதை "ஆய்ப்பாடி ஆயர்தம் ஐவேல் அசதி"6 என்று ஒளவையார் குறிக்கின்றார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அரியலூர் சமீன்றாரான அரங்கப்ப மழவராயர் என்பார் சகம் 1652 (கி.பி. 1730)-ல் அரியலூர் திருமால் கோயிலுக்கு வழங்கிய செப்பேடு ஒன்றில்7 தம்மை "ஆய்ப்பாடி கோபால வமிசத்தார்" என்று குறிக்கின்றார். கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிருஷ்ணய்ய மழவராயரைப் பாடிய அந்தகக்கவி வீரராகவ முதலியார், "சேய செங்குன்றை வரும் ஒப்பிலாதி"8 என்று கூறுவதால், அரியலூர் ஒப்பிலாத மழவராயர்களுக்கும் திருச்செங்கோட்டுக்கும் தொடர் புண்டு என்பது தெளிவாகிறது. செங்கோட்டைத் திருக்கொடிமாடச் செங்குன்றூர் எனச் சைவத் திருமுறைகள் கூறும். திருச்செங்கோட்டு முருகப் பெருமான் புலவர் பாடும் புகழ்மிகவுடையனாதல் பற்றி வீரராகவ முதலியார், "சேய செங்குன்று" என்றார். இத்திருச் செங்கோட்டைச் சேர்ந்த ஐவேலி ஆயர்களை ஆய்ப்பாடியாயர் என்றே அசதிக்கோவை கூறுகிறது. அரியலூர் சமீன்றார்களான மழவராயர் தம்மை ஆய்ப்பாடி கோபால வமிசத்தாரென்பதையும், அவர்கள் திருச்செங்கோட்டோடு தொடர்புடையர் எனக் கவி வீரராகவனார் கூறுவதையும் நோக்குமிடத்து, அரியலூர் சமீன்றார்கள் திருச்செங்கோட்டு ஐவேலியைச் சேர்ந்த அசதி என்னும் தலைவன் வழித்தொடர்புடையர் என்பது தெற்றென விளங்குகிறது. அன்று ஒளவையார் புகழும் அமைதிபெற்ற அசதியின் வழி வந்தோ ராதலின், கொடையும் பிறவிக்குணம் என்பதற்கே அரியலூர் கிருஷ்ணைய மழவராயரும் அவர் மகன் குமார ஒப்பிலாத மழவராயனும்1 கவி வீரராகவனாராற் பாடப்பெறும் பண்பு மேம்பட்டனர் எனக் கோடல் மிகையாகாது. வரலாற்றாராய்ச்சி சங்கத்தொகை நூல் காலத்தில் வாழ்ந்த அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய ஒளவையார் ஒருவர் உண்டு. அவ்வதியமான் ஒருகால் அரிதிற் பெற்ற நெல்லிக்கனியைத் தந்தானாக, அதனை யுண்ட ஒளவையார், "சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது, ஆதல் நின்னகத் தடக்கிச், சாதல் நீங்க எமக்கீத்தனையே"2 என்று பாடினர். இது கொண்டு அவர் பன்னாள் நெடிது வாழ்ந்தார் எனக்கருதிக் கொண்டு, அவர் பாடியனவாகப் பல பாட்டுக்களும் கதைகளும் நாட்டவர் வழங்கி வருகின்றனர்; அறிஞர் சிலரும் அவற்றை மேற்கொண்டு எழுதியிருக்கின்றனர். அவை பலவும் வேறுவகையால் ஆதரிக்கப்படாமையின், இங்கே குறிக்கப்படாதொழிகின்றன. ஆதரவு பெறும் வரலாறுகள் வருமாறு: தொண்டை நாட்டில் பழையனூர் என்னுமிடத்தே காரி என்று ஒரு வேளாண் தலைமகன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒளவையார்பால் பெருமதிப்புண்டு. ஒருகால் ஒளவையார் அவன் மனைக்குச் சென்றார். அவன். அப்போது தன் மனைக் கொல்லையில் கையில்களைக் கட்டையேந்திப் பயிர்களிடையே வளர்ந்திருந்த களை களைக்களைந்துகொண்டிருந்தான். அவன் ஒளவையார் வரக் கண்டதும் பெருமகிழ்வுற்று அவரோடுபேசியிருந்து விட்டு அவர்க்கு உணவமைக்கவேண்டித் தன்மனைக்குட் சென்றான். சென்றவன் தன் கையிலிருந்த களைக்கட்டை (களைக் கோல்) ஒளவையார் கையில் கொடுத்துவிட்டுச் சென்றான். அவன் வருந்துணையும் ஒளவையார் களைகளைந்தார். சிறிது போதிற் கெல்லாம் அவன் திரும்பவந்து அவரை அழைத்துச் சென்று தனக்கென அமைந்திருந்த உணவை நல்கி அவரை மகிழ்வித்தான். ஒளவையார் பின்பு ஒருகால் பிறிதோரிடத்தே பாட நேர்ந்தபோது "பழையனூர்க்காரி அன்று ஈத்த களைக்கோலும்" என்ற இச் செய்தியைப் பாடினார். இதனைத் தொண்டை மண்டல சதகம், "ஏரின் இயற்றும் களைக் கோலையீந்து அன்னம் இட்டு நல்ல, பாரி பறித்து என்னும் பாடல் கொண்டோன் பண்புசேர் பழையனூரில் இருப்பவன் ஒளவை தன்பாடற்கு உவந்த பிரான், மாரி எனத் தருகைக் காரியும் தொண்டை மண்டலமே"1 என்று கூறுகிறது. பாரி பறித்த பறிக்கதையும் சேரமானான அதியமான் வாராயோ என அழைத்த வரலாறும் தெரியவில்லை. ஒருகால் பழையனூர்க்காரிக்கு ஆடு வேண்டியிருந்தது. ஒளவையார் அப்பகுதியில் வாழ்ந்த வாதவன் வத்தவன் யாதவன் என்ற இடையர் தலைவர் மூவரைக் கண்டு காரிக்காக ஆடு தருமாறு கேட்டார்; அவர்கள் முறையே பின்னைவா, நாளைவா, ஒன்று மில்லை - போ எனக் கூறினர். பின்பு ஒளவையார் சேரமானிடம் சென்று கேட்க, அவன் பொன்னால் ஆடொன்ற செய்து தந்தான். அது பெற்றுத் கொண்டு பழையனூரை அடைந்து காரிக்கு நடந்தது கூறலுற்று, "வாதவர்கோன் பின்னை யென்றான் வத்தவர்கோன் நாளை யென்றான், யாதவர்கோன் யாதொன்றும் இல்லை என்றான் - ஆதலால், வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோன் நாளையினும் யாதவர்கோன் இல்லை இனிது"1 என்றும் "சிறப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச் சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன்று ஈந்தான்; இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர் தாமறிவர் தங்கொடையின் சீர்"2 என்றும் பாடினார். தொண்டை நாட்டில் பெண்ணையாற்றை அடுத்த பகுதியில் புல்வேளூர் என்பது ஓர் ஊர். அவ்வூரில் பூதன் என்று பெயர் கொண்ட வேளாளர் தலைவனொருவன் வாழ்ந்து வந்தான். ஒருகால் அவன் தன் வாழைத் தோட்டத்துக்குக் கிணற்று நீரை இறைத்துப் பாய்ச்சுவதை மேற்பார்வை செய்து கொண்டிருக் கையில், அவ்வழியே வந்த ஒளவையார் அவனைக் கண்டு, தமது பசி வருத்தம் கூறினார். அப்போது அவன் அவருக்குத் தனக்குஎன வந்திருந்த வரகரிசிச் சோற்றையும் கத்தரிக்காய் வறுவலையும் புளித்த மோரையும் தந்து மகிழ்வித்தான். அம் மகிழ்ச்சியால், "வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும், முரமுர என்றே புளித்த மோரும் - பரிவுடனே, புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்திட்ட சோறுகாண் எல்லா உலகும் பெறும்"3 என்று பாடினர். இச்செய்தியைத் தொண்டை மண்டல சதகம், "சொல்லாயும் ஒளவை பரிவாய் தனக்கிட்ட சோறு உலகம் எல்லாம் பெறும் என்று பாட்டோதப் பெற்றவன் இன்னருளால் கல்லாரல் சுற்றிக் கிணறேறிப் பாயும் கழனி பெற்றான் வல்லாளன் பூத மகி பாலனும் தொண்டை மண்டலமே"1 என்று கூறுகிறது. பின்பு ஒருகால் அவர் அதியமான் வழி வந்தோர் ஒருவர் மனையில் விருந்துண்டபோது அவ்வதியமான் நெல்லிக் காய் ஊறுகாய் ஒன்று தர அதன் சுவை கண்டு பேருவகை கொண்ட ஒளவையார், "பூங்கமல வாவிசூழ் புல்வேளுர்ப் பூதனையும், ஆங்கு வருபாற் பெண்ணையாற்றினையும் - ஈங்கு, மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றின் நாவை, அறுப்பித்தாய் ஆமலகம் தந்து"2 என்று பாடினர். சோழ நாட்டுத் திருக்குடந்தையில் மருதன் என்றும் திருத்தங்கி என்றும் வேளாளர் இருவர் வேறு வேறு வாழ்ந்து வந்தனர். இருவரும் பெரிய செல்வராவர்; இருவர் மனையிலும் வாழை மரங்கள் இருந்தன; எனினும் மருதன் பிறர்க்கு ஈத்துவக்கும் இயல்புடையவன்; திருத்தங்கி, ஈயாது பொருளை ஈட்டித் தொகுப் பதில் இன்புறுபவன். மருதன் மனைக்கு வருவாரும் போவாரும் பலராதலின், அவர்களை உண்பிக்கும் செயலால் மருதன் மனையில் உள்ள வாழை குருத்திலேயே அறுக்கப்படும். அதனால் அவனுடைய மரங்களில் குருத்தோ, இலையோ, பூவோ, காயோ, கனியோ காணப்படவில்லை. இருவர் மனை மரங்களையும் கண்ட ஒளவை யார், "திருத்தங்கி தன் வாழை தேம்பழுத்து நிற்கும், மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்தும், இலையுமிலைப் பூவுமிலைக் காயுமிலை என்றும், உலகில் வருவிருந்தோடுண்டு"3 என்று பாடினர். இச்செய்தியை, "தாழப் புதைக்கும் திருத்தங்கி தடங்கா வாழை தனிபழுப்பப் பாழிப் புயமாலாம் மருத்தன் பலர்க்கும் உதவும் பான்மையினால் காழிற் பொலியும் இலை அரிதாய்க் காயு மரிதாய்க் கனியுமின்றி வாழைக் குருத்தும் கிடையாத வளஞ் சேர் சோழ மண்டலமே" என்று சோழமண்டல சதகம்1 குறித்துரைக்கின்றது. திருக்கோவலூரில் இருந்து ஆட்சி புரிந்த வேந்தர் மலயமான், மலையன்,மலாடர் என்று வழங்கப் பெறுவர். இடைக் காலத்தே இம் மலையமான்கள் மிக்க சிறப்புடன் வாழ்ந்த செய்தியைத் திருக் கோவலூர்ப் பகுதியிற் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. இம் மலையமான்களுள் தெய்வீகன் என்பானுக்குத் திருமணம் நடந்த போது திருமணத்துக்கு நெய்யும் பாலும் வேண்டு மென, ஒளவையார் பெண்ணையாற்றை நோக்கி, "முத்ததெறியும் பெண்ணை! முதுநீர் அது தவிர்ந்து தத்திவரு நெய்பால் தலைப்பெய்து - குத்திச் செருமலை தெய்வீகன் திருக்கோவலூர்க்கு வருமளவில் கொண்டோடி வா"-2\u2992?யீ0 என்றாராக, அவ்வாறே நிகழ்ந்தது என்பர். இதனைப் பாரதம் பாடிய வில்லிபுத்தூரர் மகனான வரந்தருவார் என்பார், "ஒளவை பாடலுக்கு நறுநெய் பால் பெருகி அருந்தமிழறிவினால் சிறந்து, தெய்வமா நதிநீர் பரக்குநாடு அந்தத் திருமுனைப்பாடி நன்னாடு"3 என்று பாடியுள்ளார். இவ்வாறு, பல்வேறிடங்களிற் பலவேறு பாட்டுக்களைப் பாடினார் என்ற வரலாறு பலதோன்ற வாழ்ந்த ஒளவையார் முடிவில் என்னாயினர் என்பது விளங்கவில்லை. ஒளவையார் பாடிய நூல்கள் ஒளவையார் அருளியன என ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை என்னும் வாக்குண்டாம், நல்வழி, ஞானக்குறள், விநாய கரகவல், பந்தனந்தாதி, அசதிக் கோவை, நான்மணிக்கோவை, நான்மணிமாலை, அருந்தமிழ்மாலை, தரிசனப்பத்து என்ற நூல்கள் கூறப்படுகின்றன. இவற்றுள் முதற்கண் கூறிய ஏழும் ஒழிய எஞ்சியவை கிடைத்தில. கல்வி ஒழுக்கம் என்ற நூலைப்பற்றிக் கூறவந்த செந்தமிழ் ஆசிரியர், "கல்வி ஒழுக்கம் என்பது ஒரு நூல்: இது மொழிக்கு முதலாம் எழுத்துக்களின் அடைவே நாற்சீரடியான் வருவது" என்று உரைத்து, "ஈட்டிய பொருளின் எழுத்தே உடைமை, சிறுமையிற் கல்வி சிலையிலெழுத்தே" என்ற அடிகளைக் காட்டி உள்ளார். அக் கல்வி ஒழுக்கம் என்ற நூல்தானும் இப்போது கிடைப்பதில்லை. அசதிக் கோவையைப் பற்றிய செய்திகளுள், ஒளவையார் ஐவேலியில் வாழ்ந்த அசதியை ஒருநாள் இரவிற் சென்று கண்டார் என்றும், அக்காலத்தே அவன் அவரை அன்புடன் வரவேற்று உணவளித்துச் சிறப்பித்தான் என்றும், அதனைப் பாராட்டி அவர் அசதிக் கோவையைப் பாடினார் என்றும் கூறுவதுண்டு. ஐவேலியைச் சூழ்ந்த நாட்டை நந்தனாடு என்று அப்பகுதியினர் கூறுவர். அந்த நாட்டுக்கு நந்தமண்டல சதகம் என்று ஒரு சதகம் உளது; அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. அச்சதகம் இச் செய்தியை, "ஐவேல் அசதி இரவினில் அவ்வைக் கமுதளித்து மெய்வேதம் போல்நிற்கும் கோவை கொண்டோன் புவிமீது தவம் செய்வோன் தனினும் பசுக்காவல் மிக்கெனச் செய்யும் அன்பன் மைவேலை வண்ணன் சதியுடன் வாழ் நந்த மண்டலமே" என்று குறிக்கிறது; கொங்குமண்டல சதகம். "தெய்விகமான தமிழ்ப் புலவோர்கள் தினம் உளங்கொள் பொய்தீர் உரை எம்பிராட்டியார் அவ்வை புனைந்துபுகழ் செய் கோவை ஏற்ற திறலோன் அசதி செழித்துவளர் மைதாழ் பொழில் திகர் ஐவேலியும் கொங்குமண்டலமே" என்று கொங்குமண்டல சதகம் கூறுகிறது. 1. ஆத்திசூடி, கொன்றை வேந்தன் இவற்றைச் செவ்விய முறையில் ஆராய்ந்து வெளியிட்ட நாவலர். திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள், "பல பெரிய நூல்களின் சாரமாகவுள்ள நீதிகளும் கருத்துக்களும் ஆத்திசூடியிலும் கொன்றை வேந்தனிலும் சிறு சிறு சொற்றொடர்களில் தெளிவுற அமைக்கப்பெற்று விளங்குகின்றன; இளம் பருவத்தினர் சுலபமாய்ப் பாடம் செய்து நினைவில் வைத்துக் கொள்ளும்படி அகரம் முதலிய எழுத்துக்களை முறையே முதலில் உடையனவாக அவற்றின் சூத்திரம் போலும் சொற்றொடர்கள் அமைந்துள்ளன; ஆத்திசூடி மிகச் சிறிய சொற்றொடர்களாலும் ஆக்கப்பெற்றிருப்பது பிள்ளை களின் பருவத்திற்கேற்பக் கற்பிக்க வேண்டும் என்னும் கருத்துப் பற்றியாகும்; மிக்க இளம் பருவத்தினராயிருக்கும் பொழுதே பிள்ளைகளின் மனதில் உயர்ந்த நீதிகளைப் பதியவைக்கப் பெருங் கருணையுடனும் பேரறிவுடனும் "அறஞ் செய விரும்பு" "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று தொடங்கி ஆக்கப்பெற்றுள்ள ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்னும் இவற்றின் மாண்பு அளவிடற் பாலதன்று"1 என்று கூறுகின்றார். இனிச் செந்தமிழாசிரியர்2 இவை யிரண்டன் பெயரையும் கூறாமல், "அறஞ் செய விரும்பு, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பன முதலாக வரும் அறவுரைகள்" என்று சொல்லி, "இஃது இக்காலத்து ஆத்திசூடி என வழங்குவது; இச் சங்கத்திற்குக் கிடைத்த உரையோடு கூடிய இந்நூல் பழைய ஏடு ஒன்றில் இதுவே கொன்றைவேய்ந்தோன் என்னும் பெயரான் வழங்கப்பட்டுளது; இந்நூன் முகத்தே தான் கொன்றை வேய்ந்த செல்வன் அடியிணை, என்றும் ஏத்தித் தொழுவோம்யாமே என்று எழுதப்பட்டுள்ளது" என்பர். தொல்காப்பியச் செய்யுளியல் உரையில்3 ஆசிரியர் நச்சினாக்கினியரும், பேராசிரியரும் இக்"கொன்றை வேய்ந்த செல்வன்" என்ற காப்புச் செய்யுளை மேற்கோளாகக் காட்டியிருத்தல் ஈண்டு நினைவு கூரத்தக்கது. இனி, கி.பி. 11-ம் நூற்றாண்டில் இருந்தவர் எனப்படும் யாப்பருங் கலவிருத்தியுரைகாரர்1 வெண் செந்துறைக்கு எடுத்துக் காட்டாகக் காட்டுகின்றார். இவ்வாற்றால் இந்நூல்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தோன்றினமை தெளியப் படும். இந்நூல்கட்குப் பழையவுரை யொன்று உளது. 2. மூதுரை மூதுரை என்பது முப்பது வெண்பாக்களாலாகிய நீதி நூல்; "வாக்குண்டாம்" எனத் தொடங்கும் காப்புச் செய்யுளையுடைய தாதலால், இது வாக்குண்டாம் என்றும் இந்நாளில் வழங்குவதுண்டு. உயர்ந்த நீதி நூல் கருத்துக்களை மிக்க எளிய நடையில் இளஞ்சிறார் களின் அறிவெல்லைக்குட்பட்ட சொற்களால் உணர்த்துவதில் இம் மூதுரை சிறந்து விளங்குகிறது. "வெண்பாட்டு ஈற்றடி முச்சீர்த்தாகும்" எனவரும் செய்யுளியற் சூத்திரவுரையில்,2 இந்நூற்கண் உள்ள, "அட்டாலும் பால்சுவையிற் குன்றாது அளவளாய், நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்"3 என்ற பாட்டைப் பேராசிரியரும் நச்சினார்கினியரும் எடுத்துக் காட்டுகின்றனர். 3. நல்வழி இது, நாற்பது வெண்பாக்களால் ஆகியதொரு நீதி நூல். இதன்கண் மெய்ந்நூற் கருத்துக்கள் பல எளிய முறையில் கூறப்படு கின்றன. "இந் நூலின்கண் திருவைந் தெழுத்தும் திருநீறும் சிறப்பாக எடுத்தோதப் படுவதும் இறுதிச் செய்யுளில் திருக்குறள் திருநான் மறை முடிபு, தேவாரம் முதலிய சைவத் திருமுறைகள் என்னும் இவையெல்லாம் ஒத்த கருத்துடையன எனக் கூறப்படுவதும் பிறவும் ஆக்கியோரின் சமயத்தையும் உண்மை நூல் உணர்வையும் புலப்படுத்துவனவாகும்; மூவர் தமிழை எடுத்தோதியதிலிருந்து இந்நூல் தோன்றிய காலம் ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தாகும் என்பதும் விளக்கமாம்" எனத் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் கூறகின்றார்கள். மூதுரையால் உலகியலுக்குரிய அற வொழுக்கங்களும் நல்வழியால் சமய வொழுக்கங்களும் கூறியிருப்பது இந்நூல்கள் மக்கள் வாழ்க்கை முழுதுக்கும் நலம்புரியும் பணியாகச் செய்ய வேண்டும் என்ற கருத்தோடு ஒளவையார் இவற்றைச் செய்துள்ளார் என்பது தெரிகிறது. 4. விநாயகர் அகவல் இதன்கண் முதலில் விநாயகருடைய திருவுருவத்தை விளக்கி "இப்பொழுது என்னையாட்கொள்ள வேண்டித், தாயாய் எனக்குத் தான் எழுந்தருளி"த் திருவடி தீக்கை முதலியன செய்து யோக ஞானங்களை விநாயகப் பெருமான் நல்கினான் என்றும் முடிவில் "தத்துவ நிலையைத் தந்து எனையாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே" என்றும் ஒளவையார் கூறி முடிக்கின்றார். சேரமான் பெருமாளும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கயிலாயம் செல்வது கண்டு தாமும் உடன் செல்ல வேண்டி ஒளவையார் தமது விநாயக வழிபாட்டை விரைவாகச் செய்தார் எனவும், விநாயகர் தோன்றி அவரை அவ்விருவரும் சென்று சேருமுன் சேர்ப்பதாகத் தெரிவித்தார் எனவும், அப்பொழுது ஒளவையார் இந்த அகவலைப் பாடினார் எனவும் கூறுவர். இது பற்றிக் கருத்தைச் செலுத்திய அனவரத விநாயகம் பிள்ளை, "நூலை ஆராய்வோமாயின் இக் கதையின் பொருத்த மின்மை நன்கு வெளிப்படும்; அவ்விருவரும் கைலாசஞ் செல்லுதலைக் கண்டு மனங் கலங்கிய ஒளவையார்க்கு விநாயகர் வெளிப்பட்டுக் "கைலாசம் எங்கே உள்ளது; தத்துவம் அறிந்தாயில்லை. சொல்லக் கேள்" என்று மெய்ஞ் ஞானோபதேசம் செய்தார் எனக் கதையை மாற்றின் பொருத்தம் மிகுதியுமுண்டாம்; ஒளவையார் நூலிற் கூறும் விஷயம் அதுவே"1 என்று கூறியிருப்பது நோக்கத் தக்கது. 5. ஒளவையார் ஞானக்குறள் இது முந்நூற்றுப் பத்துக் குறள் வெண்பாக்களால் ஆகிய நூல். திருவள்ளுவர் தமது நூலில் அற முதலிய முப்பாலும் கூறி வீடு கூறாமையால் அதனை இந்த ஞான நூலால் ஒளவையார் பாடினர் என்பர். "முத்திக் கவ்வையார் சொல் முந்நூற்றுப் பத்து முன்றன், சித்தத்தில் வைத்துத் தெளி" எனவரும் அதன் சிறப்புப் பாயிரம் இக்குறிப்புக்கு ஆதரவு தருகிறது. இந்நூல் முழுதும் யோக ஞானங்களே கூறப்படுகின்றன. பல குறட்பாக்களுக்குப் பொருள் யோக நூல் வல்லார்க்கே விளங்குவன. யாக்கை முதலியன நிலைபெறும் வழியாகச் சில குறட்பாக்கள் உரைக்கின்றன. இதுகாறும் கூறியவாற்றால், ஒளவையார் என்ற பெயர் பூண்ட சான்றோர் பண்டை நாளில் இருவர் இருந்தனர் என்றும், அவருள் சங்கத் தொகை நூல்களுள் காணப்படுபவர் முன்னவர் என்றும், பின்னவர் ஈண்டுக் காட்டப்பட்டவர் என்றும் அறியலாம். பின்ன வராகிய இவர் பாடியன எனப் பல பாட்டுக்களும் அவற்றோடு இயைந்த வரலாறுகளும் உண்டு. அவற்றையும் சங்கத் தொகை நூற்பாட்டுக்களையும் கண்ட அறிஞருள்,திரு.வி.கனகசபைப் பிள்ளையவர்களும் செந்தமிழ் ஆசிரியரும் இவர்கட்கு முன்பு தமிழ் நாவலர் சரிதை தொகுத்த ஆசிரியரும் ஒளவையார் ஒருவரென்றே கருதியிருக்கின்றனர்.1 ஏனை அறிஞர் பலரும் இருவரையும் வேறு வேறாகவே கொள்கின்றனர். தனிப் பாடல்களாகக் காணப்படுவன வற்றுள் மிகப் பல ஒளவையாரது நல்லிசைப் புலமைக்கு ஊறு செய்யும் இயல்பினவாய் உண்மையறிவுக்குப் பொருந்தாது மாறுபடு வனவாம். அதனால் அவை ஈண்டுக் காட்டப் படவில்லை. வேண்டுவோர் ஒளவையார் சரித்திரம், பன்னிரு புலவர் சரித்திரம் பாவலர் தீபகம் முதலிய நூல்களிற் கண்டு கொள்க.  13. முதற் கண்ட ராதித்தர் வரலாறு இடைக்காலத்தே விசயாலயன் வழிவந்த சோழ வேந்தருள் முதற்பராந்தகன் மகனாராகிய கண்டராதித்தர் என்பவர் ஒருவர். இவர் இராச கேசரி வன்மரான கண்டராதித்த சோழர் என்றும் வழங்கப் பெறுவர். இவர் காலத்துச் சோழ நாடு சிதம்பரத்துக்கு வடக்கில் ஓடும் வட வெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்குத் தெற்கிலோடும் தென் வெள்ளாற்றுக்கும் இடையில் கிடந்தது. இவ்வேந்தருக்கு வீரநாராயணி, செம்பியன் மாதேவி யென மனைவியர் இருவர் இருந்தனர். இவர்க்கு நெடுநாள் காறும் மகப்பேறு இல்லாதிருந்தது; பின்பு ஒரு மகன் பிறந்தான்; அவனை உத்தம சோழன் என்பர்; மதுராந்தகன் என்றும் அவர்க்குப் பெயர் கூறுவதுண்டு. கண்டராதித்தருக்கும் மேற்கெழுந்தருளின தேவர் என்றும் சிவஞான கண்டராதித்தர் என்றும் சிறப்புப் பெயர்கள் உள்ளன. கண்டராதித்தர் சிவபெருமான்பால் பேரன்பு பூண்டவர்; திருஞான சம்பந்தர் முதலிய திருமுறையாசிரியர்கள் பாடியருளிய திருப்பாட்டுக்களை இவர் நாடோறும் இடையறாது ஓதும் இயல் பினர்; தாமும் சிவபெருமான் மேல் பல இனியபாக்களைப் பாடிப் பரவினார். இதனால் இவருடைய மனைவியாரான செம்பியன் மாதேவி யென்பார் மிகச்சிறந்த சிவ பத்தியுடையரானார். அத் தேவியார் எண்ணிறந்த சிவப்பணிசெய்து "மாதேவடிகள்" என்று பிற்காலத்தே அரசர்கள் பரவும் சிறப்புப் பெற்றார். சைவத் திருமுறைகளை ஓதி ஓதிப் பயின்ற நாநலத்தால் கண்ட ராதித்தர் தில்லையம்பலக் கூத்தப் பெருமான் மேல் பஞ்சமப் பண்ணில் இனிய திருப்பதிகம் ஒன்றைப் பாடியுள்ளார்; அது சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் பிற்காலச் சான்றோர்களால் தொகுக்கப் பெற்றுளது. கண்டராதித்தர் கி.பி. 957-ல் இறைவன் திருவடிநீழல் வாழ்வுபெற்றார் எனச் சோழர் வரலாறு1 கூறுகிறது. பதிக வரலாறு கண்டராதித்தர் சோழநாட்டை ஆட்சிசெய்து வருகையில் அவருடைய உள்ளம் திருமுறை யாசிரியர்களான திருஞான சம்பந்தர் முதலியோருடைய வரலாறுகளை ஆராய்ந்து, திருஞான சம்பந்தர் தென்னாட்டிலுள்ள சிவன் கோயில்களையும், திருநாவுக் கரசர் வட நாட்டுக் கோயில்களையும், நம்பியாரூரர் மேற்கில் சேர நாட்டுச் சிவன் கோயில்களையும் பாடிப்பரவி இருப்பது உணர்ந்து, தான் வடமேற்கில் கங்கநாட்டுக்கு அப்பாலுள்ள ஆரிய நாட்டுச் சிவன் கோயில்களைக் கண்டு வழிபடவேண்டும் என்று வேட்கை கொண்டார். அவர் கொங்கு நாடு கடந்து கங்க நாட்டுக்குச் சென்றார் என்றும், படை கொண்டு போர் குறித்து அப்பகுதிக்குச் சென்றதில்லை என்றும் அவரது வரலாறு கூறுவது மேலே நாம் கொண்ட கருத்தை வலியுறுத்துகிறது. திருஞான சம்பந்தர் முதலிய பெருமக்களுடைய திருப்பதிகங்களைச் சிவஞானம் என்றும், அவற்றை யோதுவதைச் சிவஞானம் ஓதுவது என்றும் இடைக்காலக் கல்வெட்டுக்கள் கூறுவதை முன்னர்க் கண்டு உள்ளோம். கண்டராதித்தர் கங்கநாட்டில் சிவஞானத்தை ஓதிவழிபட்டார் என்பதைப் பெங்களூர் வட்டத்திலுள்ள சென்னபட்டினத்துக் கல்வொட்டொன்று2 இவரைச் "சிவஞான கண்டராதித்தர்" என்று குறிக்கின்றது; அதே பகுதியிலுள்ள மழவூர் என்னும் ஊரிலுள்ள சிவன்கோயிலில், "கண்டராதித்த விடங்கர்" என்ற பெயரால் இறைவன் திருவுருவம் ஒன்று எழுந்தருளப் பெற்றிருக்கிறது.3 இவ்வாற்றால் கண்டராதித்தர் சிவஞானம் ஓதி வழிபடுங் கருத்தால் மேற்கு நாட்டிற் குச் சென்றிருக்கின்றார் என்பது தெளிவாக விளங்குகிறது. இக் கருத்தப்பற்றியே இக் கண்டராதித்தர், "மேற்கெழுந்தருளிய தேவர்"1 என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பெறுகின்றார். கண்டராதித்தர், "மேற்கெழுந்தருளிய" கங்க நாட்டில் இருந்த காலத்தில் தில்லைச் சிற்றம்பலத்துப் பெருமானைக்காண வேண்டிய விருப்பம் மிகுந்தார். அப்போது, நம்பியாரூரர் திருக்கச்சியேகம்பம் வந்திருக்கையில் திருவாரூர் இறைவனைக் காண்டற்கு விருப்பம் மிகுந்து பாடிய திருப்பதிகம் அவர் நினைவுக்கு வந்தது. அதனை ஓதிய பயிற்சி நலத்தால், "மின்னா ருருவ மேல் விளங்க வெண்கொடி மாளிகை சூழப் பொன்னார் குன்றமொன்று வந்து நின்றதுபோலும் என்னாத் தென்னா என்று வண்டுபாடும் தென்றில்லை யம்பலத்துள் என்னா ரமுதை எங்கள் கோவை2 என்று கொல் எய்துவதே." என்று தொடங்கும் திருவிசைப்பாவைப் பாடிக் கொண்டு தில்லைக்கு வந்து சேர்ந்தார். பதிக ஆராய்ச்சி சைவத் திருமுறைகளை முறைசெய்து. தொகுத்த பண்டைச் சான்றோர் இசையை அடிப்படையாகக் கொண்டே தொகை செய்தன ரெனத் திருமுறைகண்ட வரலாற்றால் அறிகின்றோம். கண்டராதித்தர் பாடிய இத் திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் தொகுக்கப் பெற்றுப் பஞ்சமம் என்று பண்ணடைவும் குறிக்கப் பெற்றுளது. மேலும், அவ்வரலாறு, "தூங்கிசை நேர் பஞ்சமத்திற் கொல்லையினி லொன்றாக்கி"1 என்றும், "தூய இசை பஞ்சமத்துக்கு அற்ற இசை ஒன்றாக்கி" 2 என்றும் கூறுவதால் இப் பஞ்சமப் பண்ணுக்கு கட்டளை ஒன்று என்பது பெறப்படுகிறது. தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர் என்ற தொகையினர் என்பது திருஞானசம்பந்தர் முதலிய மூவர் திருமுறைகளிற் காணப் படுவதில்லை; மாணிக்க வாசகர், "தில்லையம்பலத்து மூவாயிரவர் வணங்க நின்றோன்"3 என்று சிவபெருமானைக் கூறுமிடத்து, தில்லையந்தணரை மூவாயிரவர் எனக் குறிக்கக் காணுகின்றோம். இத் தொகையை விதந்து, இத் திருவிசைப் பாவில் கண்ட ராதித்தர், "அந்தணாளர் ஆகுதிவேட்டு உயர்வார் மூவாயிரவர் தங்களோடு முன் அரங்கேறி நின்றகோவே" 4 என்றும், "முத்தீயாளர் நான்மறையர் மூவாயிரவர் நின்னோடு, ஒத்தே வாழும் தன்மையாளர்"5 என்றும் எடுத்தோதுகின்றார். இதன்கண், "நான் மறையோர், ஆவே படுப்பார் அந்தணாளர்"6 என்று கண்டராதித்தர் கூறுவது, "பறப்பைப்படுத் தெங்கும் பசுவேட்டு எரியோம்பு, சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம்"7 என்று திருஞான சம்பந்தர் காட்டிய குறிப்பை நினைப்பிக்கின்றது. "தெத்தே யென்று வண்டுபாடும் தென் தில்லையம்பலத்துள் அத்தாவுன்றன் ஆடல்காண அணைவதும் என்று கொலோ"8 எனச் சோழவேந்தர் சொல்வது, "முத்தனே முதல்வா தில்லையம்பலத்து ஆடுகின்ற அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே"9 என்ற திருநாவுக்கரசர் திருமொழியை மேற்கொண்டு இயலுகின்றது; இவ்வாறே "இலையார் கதிர்வேல் இலங்கை வேந்தன் இருபது தோளுமிற, மலைதான் எடுத்த மற்றவர்க்கு வாளொடு நாள் கொடுத் தான்" என்று வரும் திருவிசைப்பா, "தோளாண்மை கருதி வரை யெடுத்த தூர்த்தன் தோள்வலியும் வாள் வலியும் தொலைவித்து ஆங்கே, நாளொடு வாள் கொடுத்த நம்பன்" என வரும் திருநாவுக் கரசர் திருமொழியை நினைப்பிக்கின்றது. "களிவானுலகிற் கங்கை நங்கை காதலனே அருள் என்று. ஒளிமால் முன்னே வரங்கிடக்க உன்னடியார்க்கு அருளும் தெளி வாரமுதே"1 என்று கண்டராதித்தர் கூறுவதில், "புரங்கடந்தான் அடிகாண்பான் புவிவிண்டு புக்கறியாது, இரங்கிடு எந்தாய் என்று இரப்பத் தன் ஈரடிக்கு என் இரண்டு, கரங்கள் தந்தான் ஒன்று காட்ட மற்று ஆங்கதும் காட்டிடு என்று, வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றில் அம்மாயவனே"2 என்ற திருக்கோவையார் கருத்து விளங்கு கிறது.இவ்வாறே, "அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ் சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்"3 என்ற திருவாசகக் கருத்து, இத்திருவிசைப்பாவில், "நெடியானோடு நான்முகனும் வானவரும் நெருங்கி, முடியால் முடிகண்மோதி யுக்க முழு மணியின் திரளை, அடியார் அலகினால் திரட்டும் அணி தில்லை"4 என்பதில் காணப்படுகிறது. கண்டராதித்தர்க்குத் தந்தை முதற் பராந்தக சோழ தேவர் என்பது முன்பே கூறப்பட்டது. அவரை "மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்"5 என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன; நம்பியாண்டார் நம்பிகள், முதற் பராந்தகன் கொங்க நாட்டினின்றும் பொன் கொணர்ந்து தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான் என்று கூறுகின்றார். இச்செய்தியை நம் கண்டராதித்தர், "வெங்கோல் வேந்தன் தென்னனாடும் ஈழமும் கொண்ட திறற், செங்கோற் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன் அணிந்த, அங்கோல் வளையால் பாடியாடும் அணிதில்லை"6 என்று எடுத்தோதுகின்றார்; இந்நிலையில் தமது குடிப்பிறப்பையும் அரசியலுரிமையையும், "அம்பலத்தாடி தன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன் கலந்த, ஆராவின் சொல் கண்டராதித்தன்"7 என்று நாம் அறியக் குறிக்கின்றார். இத் திருவிசைப்பாவைப் பயிலுங்கால் கண்டராதித்தர் இது போலும் திருப்பதிகங்கள்பல இயற்றியிருப்பார் என்ற கருத்து உள்ளத்தே தோன்றுகிறது. இவர் பாடியனவாக வேறு நூல்களோ திருப்பதிகங்களோ இதுகாறும் கிடைத்தில.  14. நம்பியாண்டார் நம்பி வரலாறு சைவ சமய ஆசிரியர்களான திருஞான சம்பந்தர் முதலிய சான்றோர்கள் பாடிய திருப்பதிகங்களைத் தொகுத்து இசைவகைக் கேற்பத் திருமுறைகளாக முதன் முதலாக வகுத்த ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி எனப்படும் பெரியோராவர். நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் மரபில் தோன்றியவர். அவருடைய தந்தை அவ்வூரிலுள்ள பொல்லாப் பிள்ளையார் திருக்கோயிலிற் பணிசெய்யும் தொழில் பூண்டிருந்தார். நம்பிகள் மிக்க இளையராய்ப் பள்ளியில் கலைபயின்று கொண்டி ருந்தார். இருக்கையில், ஒருநாள் அவருடைய தந்தை வெளியூர்க்குச் சென்றார்; மறுநாள் பிள்ளையாருக்குத் திருப்பணி செய்ய வேண்டிய கடமை நம்பிகட்கு வந்தது. அவர் உரிய காலத்தில் திருக்கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை நீராட்டித்தான் கொண்டு சென்ற நிவேதனப் பொருளை அவர் திருமுன்வைத்து, "எம்பெருமான் அமுதுசெய்ய வேண்டும்"1 என்று வேண்டினார். பிள்ளையார் அதனை உண்ண வில்லை. அதுகண்டு, "வேழ முகனே, என்பால் ஏதேனும் தவறுண்டோ? அடியேன் நிவேதித்த அமுதத்தை நீ உண்ணாத தென்னையோ?"2 என்று சொல்லி வருந்தினார். முடிவில் இது தன்பெற்றோர்க்குத் தெரியின் தன்னை அவர்கள் ஒறுப்பரென நம்பிகள் அஞ்சித் தன் தலையை ஒரு கல்லில் மோதிக்கொண்டார். அப்போது பிள்ளை யார் "நம்பி, பொறு"3 என்று உரைத்தருளி அமுதத்தையும் உண்டருளினார். மனக்கவலை நீங்கி நம்பிகள், பிள்ளையாரை வணங்கி "எந்தாய், இப்போது நாழிகையாய் விட்டது ; இனி, யான் பள்ளிக் கேகின் எங்கள் ஆசிரியன் அடிப்பான்; ஆதலால் யான் சென்று கற்றற்குரியவற்றை நீயே கற்பித்தல் வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்; பொல்லாப் பிள்ளையாரும் அவ்வாறே அறிவித்தருளினார். ஊர் திரும்பிவந்த தந்தைக்கு நம்பியின் செயலும் பொல்லாப் பிள்ளையாரின் அருணலமும் தெரிந்தன. அச்செய்தி நாளடைவில் நாடெங்கும் பரவிவிட்டது. அப்போது சோழ நாட்டை யாண்ட வேந்தர் பெருமான் செவிக்கு இச்செய்தி எட்டியது. அவன் திருஞான சம்பந்தர் முதலியோர் அருளிய திருப்பதிகங்களில் பேரீடுபாடு உடையன். ஒருகால், அச் சோழவேந்தன் திருப்பதிகம் ஓதவல்ல ஒருவரைக் கண்டு அவரிடத்தில், ஞானசம்பந்தர் நாவுக்கரசர் நம்பியாரூரர் அகிய மூவரும் பாடிய திருப்பதிகங்களுள் ஒவ்வொன்று பாடக் கேட்டான். மேலும் பல கேட்பான் அவன் விரும்பிய போது அவை கிடைக்க வில்லை யென அவர் கூறினார். அதனால் ஏமாற்ற முற்ற வேந்தன் மூவர் திருப்பதிகங்களையும் தேடித் தொகுக்க முயன்றான். அவனுக்குத் திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பி தோன்றிப் பொல்லாப் பிள்ளையாரது திருவருள் பெற்றுச் சிறந்து விளங்கியது தெரிந்ததும் அவர்பால் வந்த வாழைக்கனி முதலிய பலவகைக் கனிகளைத் தந்து பிள்ளையாருக்கு நிவேதிக்கச்செய்து உண்மை யுணர்ந்து மூவர் தமிழும் திருத்தொண்டர் வரலாறும் உலகில் விளங்கச் செய்யவேண்டுமென விழைந்தான். அவ்வண்ணமே அவர் பிள்ளையாரை வேண்டிக் கொள்ளவே, பொல்லாப் பிள்ளையார், "தில்லையில் பரமன் திருக்கூத் தியற்றும் அம்பலத்தின் புறக்கடையில் வைத்துக் கையடையாளமிடப் பெற்றுள்ளன." என்று சொல்லித் திருத்தொண்டர் வரலாற்றையும் அறிவுறுத்தருளினார். இதுகேட்டு மகிழ்ச்சி மிகுந்த வேந்தன், நம்பியாண்டார் நம்பியுடன் தில்லைக் குப்போந்து தில்லைவாழந்தணர்க்குத் தெரிவித்தான். அவர்கள், "தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்"என்றனர். வேந்தன் மதிநுட்பமுடையனாதலால் அம்பல வாணர்க்குத் திருவிழாச் செய்து மூவர் முதலிகளைத் திருவீதி யுலாப் போதுவித்துத் திருநெறித் தமிழ் இருந்த இடத்திற்கு எழுந்தருள்வித்து "மூவரும் வந்தார்" என்றான்; அந்த அறை திறக்கப்பட்டது. அங்கிருந்த ஏடுகளின் மேல் புற்று மூடிக்கொண்டிருந்தது. கண்ட வேந்தன் திடுக்கிட்டுக் கையற்றுக் கலங்கி வருந்தினான். பின்பு அதனை நீக்கிப் பார்த்தபோது பல ஏடுகள் செல்லரிக்கப் பெற்று மண்ணாய்விட்டன. நல்ல காலமாக, அப்போது வானத்தில் வானொலி தோன்றி, "வேதச்சைவ நெறித் தலைவரெனும் மூவர் பாடல், வேய்ந்தனபோல் மண்மூடச்செய்தே ஈண்டு வேண்டுவன வைத்தோம்"1 என்று சொல்லிற்று, வேந்தன் உள்ளம் தெளிந்து உவகைகொண்டான்; எல்லோரும் இன்புற்றனர். பின்னர், அவன் நம்பியாண்டாரைநோக்கி, அவ்வேடுகளை எடுத்து முறைசெய்யுமாறு கேட்டுக்கொண்டான். அவரும் அவ்வாறே பேரூக்கத்துடன் செய்யத் தலைப்பட்டார். திருஞான சம்பந்தர் பாடியவற்றுள் முந்நூற்றெண்பத்து நான்கு பதிகங்கள் கிடைத்தன; அவற்றை மூன்று திருமுறையாக வகுத்தார். திருநாவுக்கரசர் பாடியவாகக் கிடைத்த முந்நூற்றெழு பத்து மூன்று பதிகங்களையும் அடுத்து மூன்று திருமுறையாக வகுத்தார். நம்பி யாரூரர் பாடியன எனக் கிடைத்த நூறினையும் ஒரு திமுறையாகக் கொண்டார். இவ்வகையில் மூவர் முதலிகள் பாடிய திருப்பதிகங்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பெற்றன. பின்னர்த் திருவாதவூரர் அருளிய கோவைத் திருவாசகத்தை எட்டாந் திருமுறையாகவும் திருமூலர் அருளிய திரு மந்திரத்தைப் பத்தாந் திருமுறையாகவும் வகுத்தார்கள். பின்பு வேந்தன், நம்பியாண்டார் நம்பியை வேண்டி எஞ்சி நின்ற திருமுகப்பாசுர முதலாகவுள்ளவற்றையும் தொகுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டான். அவரும் அதற்கிசைந்து மகாமந்திரம் எழு கோடியாதற் கேற்பத் திருமுறை ஏழேனவும், சீருத்திரம் பதினொன்றாதல் பற்றித் திருமுகப்பாசுர முதலாகியவற்றைப் பதினோரந் திரு முறையாகவும் வகுத்தருளினார். திருமுறைவகுப்பு முடிந்தபின் நம்பியாண்டார் நம்பி, தமக்குப் பொல்லாப் பிள்ளையார் அருளியது கொண்டு திருத்தொண்டர் இயல்புகளை அந்தாதியாகத் தொடுத்துத் திருத்தொண்டர் திருவந்தாதி யென்ற பெயரால் ஒரு நூலைச் செய்து உதவினார். இறுதியில் திருமுறைகட்குப் பண்ணடைவு வகுக்க வேண்டிய நிலைவந்தது. நம்பியாண்டார் நம்பிகள் திருவெருக்கத்தம் புலியூர்க்குச் சென்று இறைவனைப் பணிந்து வேண்டினார். அப்போது இறைவன் "இவ்வூரில் திருநீலக்கண்ட யாழ்ப்பாணர் வழியில் தோன்றியிருக்கும் பெண்ணொருத்திக்குப் பண்ணிசை யளித்துள்ளோம், கேட்க"1 என வானொலி தோன்றியருளிற்று. தில்லையம்பலத்தின் திருமுன் அவளைக் கொணர்ந்து நிறுத்திப் பண்ணடைவு செய்க என வேந்தன் முதலாயினார் கேட்க வானத்தில் சொன்னிகழ்ச்சி யுண்டாகவே, அனைவரும் அவளைக்கண்டு தில்லைக்கு அழைத்துவந்து அவளால் பண்ணும் கட்டளையும் வகுத்தனர். திருமுறை வகுப்பின் முடிவில், சோழ வேந்தன் நம்பியாண்டார் நம்பிக்குப் பெரும்பொருள் நல்கிச் சிறப்பித்தான். அந்தப் பெண்ணுக்கும் வேந்தன் தக்க பரிசில் நல்கி மகிழ் வித்தான். நம்பியாண்டார் நம்பி வேந்தன் பால் விடைபெற்றுக் கொண்டு திருநாரையூர் அடைந்து திருத்தொண்டர் வரலாறும் திருநெறித் தமிழின் இருப்பும் உணர்த்தியருளிய பொல்லாப் பிள்ளையார்பால் தமக் குண்டான பேரன்பால் திருவிரட்டைமணிமாலை பாடிப் பரவினார். இறைவன் அருளால் ஞானப் பாலுண்டு திருப்பதிகம் பல வழங்கி உதவிய திருஞானசம்பந்தர் திருவடியில் அழுத்தமான அன்புற்று அவர்மேல் பல நூல்களைப் பாடினார். தில்லைப் பெருமான் திரு வருளை வியந்து கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் என்றொரு நூலைப்பாடிப் பரவினார். திருவெருக்கத்தம் புலியூர் இறைவனைப் பரவி நம்பியாண்டார் நம்பி பாடியன கிடைக்க வில்லை. திருநாவுக்கரசு சுவாமிகளைத் திருவேகாதசமாலைப் பாடிப் பரவியிருக்கின்றார். வரலாற்றாராய்ச்சி நம்பியாண்டார் நம்பிகளின் பெற்றோர் பெயர் திருமுறை கண்ட புராணத்திற் காணப்படவில்லை. ஆனால், அவர் பிறந்த திருநாரையூரைக் குறித்தெழுந்த தலபுராணம், நம்பியாண்டார் நம்பி, சந்திர சேகரன் என்னும் ஒரு நம்பி எனப்படும் ஆதி சைவர் வழிவந்த அனந்தேசன் என்பவர்க்கு அவர் மனைவி கலியாணி என்பாள் வயிற்றிற் பிறந்த புதல்வர் என்று இசைக்கின்றது. நம்பியாண்டார் நம்பி பொல்லாப் பிள்ளையாரது திருவருட்கு உரியரான செய்தி பற்றிக் கூறவந்த தலபுராணம், நம்பிகள் மிக்க இளையராய் இருக்கும் போதே விநாயகர் பூசை செய்து பயின்று வந்தனரெனவும், அப்போதே விநாயகர் அப்பூசனையை விரும்பி யேற்று அருள் புரிந்தனர் எனவும், ஒருகால் அவர் தனது தாயுடன் தன் பாட்டனார் ஊர்க்குச் சென்றிருந்த காலையில் பொல்லாப் பிள்ளையார் நம்பிகளின் வேண்டுகோட்குஅருள் புரிந்தா ரெனவும், இவ்வகையால் நம்பியாண்டார்க்குப் பொல்லாப் பிள்ளையார் பால் பேரன்பு உண்டானதற்குக் காரணம், ஒரு நம்பி என்னும் அவரது முன்னோர் விநாயகர் வழிபாட்டில் பேரீடுபாடு கொண்டிருந்தமை எனவும் கூறுகிறது. நம்பியாண்டார் நம்பிகளின் பெருமையைக் கேள்வியுற்று அவரைக் காணப்போந்த சோழ வேந்தன் பெயர் "இராசராச மன் னவன்"1 என்று திருமுறை கண்டபுராணம் குறிக்கிறது; அதுவே, அவ் வேந்தனைப் பிறிதோரிடத்தில் "குலசேகரனாம் கோன்"2 என்று கூறுகிறது. திருநாரையூர்த் தலபுராணமும் சோழ வேந்தனை, "அபய குலசேகர சோழராசன்"3 என உரைக்கின்றன. திருமுறை கண்ட புராணம், சோழ வேந்தனை இராசராசன் என்றும், அபயகுலசேகரன் என்றும் கூறுவது கண்டோர் பலரும், அவன் முதல் இராசராச சோழனாவான் என்று கருதி விட்டனர். இதுபற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய திரு. T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள் கூறுவது ஈண்டுக் காணத்தக்கதாகும். “திருமுறை கண்ட புராணம் பிற்காலத்தில் எழுதப் பெற்ற ஒரு நூலாகும். அதனை உமாபதி சிவாசாரியார் பாடினார் என்று கூறு கின்றார்; அதற்குத் தக்க சான்றுகள் இல்லை. அப்புராணத்தில் கூறப்பட்டுள்ள அரசன் பெயரே ஐயத்திற்கு இடந்தருகின்றது. இராசராசன் என்று கூறிய அதன் ஆசிரியர் அதனோடு அமையாமல் அபயகுலசேகரன் என்று பிறிதொரு பெயரும் குறித்துள்ளனர். “சோழ மன்னர்களுள் முதற் குலோத்துங்க சோழனுக்கு அபயன் என்ற பெயர் வழங்கியுள்ளது என்பது கலிங்கத்துப் பரணியாலும்1 அவன் கல்வெட்டுக்களாலும்2 புலப்படுகின்றது. அவனுக்குப் பிறகு அவன் பெயரன் இரண்டாங் குலோத்துங் கனுக்கும் அப் பெயர் வழங்கி வந்தமை குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழாலும் 3 உலாவினாலும்4 நன்கு அறியக் கிடக்கின்றது. எனவே, அப்பெயர் முதல் இராசராச சோழனைக் குறிக்கும் என்று கொள்வது எங்ஙனம் பொருந்தும்? முதல் இராசராசனுக்கோ அபயன் என்ற பெயர் வழங்கவில்லை என்பது கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றது. “அன்றியும், குலசேகரன் என்னும் பெயர் இதுகாறும் ஆராய்ந்து கண்ட அளவில் சோழ மன்னருள் யாருக்கும் இருந்தாகத் தெரிய வில்லை....ஆகவே அபயகுல சேகரன் என்பது படைத்து மொழிந்த பெயராகக் காணப்படுகிறதேயன்றி உண்மையில் வாழ்ந்த ஒரு சோழ மன்னன் பெயராகப் புலப்படவில்லை. “இராசராசன் என்னும் பெயருடைய சோழ மன்னர் மூவர் உள்ளனர்; எனினும், வீர ராசேந்திரன்5 விக்கிரமன் 6 முதலான சோழ மன்னர்களும் சிலபாண்டி வேந்தர்களும்7 தம்மை இராசராசன் என்று கூறிக் கொள்வதைக் கல்வெட்டுக்களில் காணலாம். ஆகவே இராசராசன் என்பது அக்காலங்களில் அரசர்கட்குப் பொதுப் பெயராகவும் இருந்தது எனலாம். இந் நிலையில் தெளிவின்றி அமைந்துள்ள இராச ராச அபயகுல சேகரன் என்ற தொடர் முதல் இராசராச சோழனைக் குறிக்குமென்று கருதுவது எவ்வாற்றானும் பொருந்தாது என்க.” நம்பியாண்டார் நம்பிகள் திருமுறைகளை வகுத்தபோது, திருமுறைகள் தில்லையில் “இருந்த இடம் மன்றுளாடும் கூர்ந்த இருட்கண்டர் புறக்கடையின் பாங்கர்க் கோலமலர்க் கைகள் அடையாளமாகச் சார்ந்தன ”1 என்று திருமுறை கண்ட புராணம் கூற, திருநாரையூர்த் தலபுராணம் “சிதம்பரத்தில் சிற்சபைக்கு பக்கத்திலுள்ள அறையில் தேவாரத் திருமுறைகள் முழுவதும்”2 இருந்தன எனக் குறித்துரைக்கின்றது. சோழ வேந்தனும் நம்பியாண்டார் நம்பிகளும் தேவாரத் திருமுறைகளைக் காணவந்த போது தில்லை வாழந்தணர்கள், “தமிழ் வைத்த மூவர் வந்தால் அறை திறக்கும்3 என்று தடை நிகழ்த்த, நம்பிகளின் அறிவுத் துணையால் வேந்தன் மூவர்க்கும் திருவிழா நிகழ்த்தி அம்மூவர் திருமேனிகளையும் எழுந்தருளச் செய்த அருஞ் செயலைத் திருமுறை கண்ட புராணம் கூறுகிறது; திருநாரையூர்த் தலபுராணம் இச்செய்தியை விரித்துக் கூறாமல் நம்பிகள், “சிதம்பரத்தை அடைந்து நடேசப் பெருமானை வணங்கி கோயிற் றிருப் பண்ணியர் விருத்தமென்னும் தமிழ்த் தோத்திரத்தால் பேரன்போடு துதித்தார்; பின்பு மகிழ்ச்சி மிக்க மனமுடைய அரசனால் தேவார ஏடுகளை வெளிப்படுத்தி அவ்வரசன் வேண்டிக் கொண்டபடி தமிழ் வேதங்களைத் திருமுறையாக வகுத்தார்”4 என்று மிக்க சுருக்கமாகக் குறிக்கின்றது. நம்பியாண்டார் நம்பி செய்த நூல்கள் நம்பியாண்டார் நம்பிகள், திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை, கோயில் திருப்பண்ணியர்விருத்தம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம், ஆளுடைய பிள்ளையார் திரு மும்மணிக்கோவை, ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை, ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை, திருநாவுக்கரசர் ஏகாதசமாலை என்ற பத்து நூல்களைப் பாடியிருக்கின்றார். இவற்றுள், ஆறு நூல்கள் ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞான சம்பந்தர் பொருளாக எழுந்துள்ளமையின், நம்பியாண்டார் நம்பிகட்குத் திருஞான சம்பந்தர்பால் தனித்த முறையில் பேரன்புண்டென்பது தெளியத் தோன்றுகிறது. நம்பியாண்டார் நம்பி காலம் நம்பியாண்டார் நம்பி தாம் பாடிய திருத்தொண்டர் திருவந் தாதியில் சோழ மன்னனான முதல் ஆதித்தனைப் பன்முறையும் பாராட்டிக் கூறுவர்.1 அதனால், அவர் காலம், அவ்வேந்தன் வாழ்ந்த கி.பி. 870- க்கும் 907-க்கும் உள்ள காலமாதல் இனிது விளங்குகிறது. இதுபற்றி நிகழ்த்திய ஆராய்ச்சியின் முடிபாகத் திரு. T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்2 கூறுவது வருமாறு:- சைவப் பெரியாராகிய நம்பியாண்டார் நம்பியும் தம்மை அன்புடன் ஆதரித்து வந்த ஆதித்தன் என்ற சோழ மன்னன் ஒருவனைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் மூன்று பாடல்களில் பாராட்டியுள்ள செய்தியை அந்நூலை ஒரு முறை படிப்பொரும் உணர்ந்து கொள்ளலாம். அவற்றில் அச்சோழன் (ஆதித்தன்) கொங்கு நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம் பலத்தைப் பொன் வேய்ந்தவன் என்றும், ஈழநாட்டை வென்றவன் என்றும், புகழ்ச் சோழர் கோச் செங்கட் சோழர் ஆகிய அடியார் களைத் தன் முன்னோனாகக் கொண்டவன் என்றும் இவ்வாசிரியர் கூறியது உணரபாலதாகும். ஆகவே, இப்புலவர் பெருமான் அவ்வரசன் காலத்தில் இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். இனி, அவ்வேந்தன் (ஆதித்தன்) யாவன் என்பது ஆராயற் பாலதாம். சோழ மன்னருள் ஆதித்தன் என்னும் பெயருடையார் இருவர் உள்ளனர். அவர்களுள் முதல்வன், பரகேசரி விசயாலய சோழன் புதல்வனாகிய முதல் ஆதித்த சோழன் என்பான். மற்றையோன் சுந்தர சோழன் மூத்த மகனும் முதல் இராசராச சோழன் தமையனு மாகிய இரண்டாம் ஆதித்த சோழன் ஆவன்; அவனை ஆதித்த கரிகாலன் என்றும் அந்நாளில் வழங்கியுள்ளனர். அவன் தன் தந்தையினாட்சியில் இளவரசனாக இருந்த நாட்களிற் சில அரசாங்க அலுவலாளர்களாற் கொல்லப்பட்டுப் போனான் என்பது தென்னார்க்காடு மாவட்டத்துச் சிதம்பரம் தாலுகாவில் உள்ள உடையார் குடியிற் காணப்படும் ஒரு கல்வெட்டால் அறியப்படு கின்றது.1 எனவே அவ்வரசிளங்கோ, தன் இளமைப் பருவத்திற் கொலையுண்டிறந்தமை தெள்ளியது. ஆகவே, அவன் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்து சிவலோக மெய்தினான் என்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை. இந்நிலையில் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்ததாக நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிப்பிட்டுள்ள ஆதித்தன் என்பான், விசயாலய சோழன் புதல் வனும் முதற் பராந்தக சோழன் தந்தையும் கி.பி. 870- முதல் 907 வரையில் சோழ மண்டலத்தை ஆட்சி புரிந்த பெருவேந்தனுமாகிய முதல் ஆதித்த சோழனே யாவன். இவன் பல்லவ அரசனாகிய அபராசித வர்மனைப் போரில் வென்று ‘தொண்டைமண்டலத்தைக் கைப்பற்றிய காரணம் பற்றித் ‘தொண்டை நாடு பரவின சோழன் பல்யானைக் கோக்கண்டராயின ராசகேசரிவர்மன்’2 என்று வழங்கப் பெற்றுள்ளனன். இவன் ஆட்சியிலே தான் சோழராச்சியம் உயர் நிலையை எய்தியது. இவன் கொங்கு நாட்டைக் கைப்பற்றித் தலைக்காடு என்ற நகரையும் பிடித்துக் கொண்டான் என்று ‘கொங்கு தேசராஜாக்கள்’ என்னும் வரலாற்று நூல் கூறுகின்றது.3 ஆகவே, கொங்கு நாட்டைக் கைப்பற்றிய இம்மன்னர் பிரான் அந்நாட்டிலிருந்து பொன் கொணர்ந்து தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு துணியப்படும். இவன் காவிரியாற்றின் இருமருங்கும் பல சிவாலயங்களைக் கற்றளிகளாக அமைத்த சிவபக்தன் என்று அன்பிற் செப்பேடுகள்1 கூறுவது ஈண்டு அறியத் தக்கது. இனி, இவ்வாதித்தன் புதல்வன் முதற் பராந்தக சோழன் என்பான் தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகளும்2 திருவாலங்காட்டுச் செப்பேடுகளும்3 உணர்த்துகின்றன. கொங்கு தேச ராஜாக்கள் சரிதமும் இச் செய்தியை உறுதிப் படுத்துகின்றது. எனவே, முதற் பராந்தக சோழனது ஆட்சிக் காலத்திலும் தில்லைச் சிற்றம்பலம் மீண்டும் பொன் வேயப்பட்டது என்று கொள்வதே பொருத்தமுடைய தாகும். அங்ஙனமே, முதற் குலோத்துங்க சோழனது ஆட்சியின் 44-ஆம் ஆண்டாகிய கி.பி. 1114-ல் அவன் தங்கை குந்தவை யென்பாள் தில்லைக் கோயிலைப் பொன் வேய்ந்தனள் என்று அக்கோயிற் கல்வெட்டொன்று4 அறிவிக்கின்றது. அவன் மகன் விக்கிரம சோழன் என்பான் கி.பி. 1128-ல் சிற்றம்பலத்தைச் சூழ்ந்த திருச்சுற்று மாளிகையையும் திருக்கோபுரத்தையும் பொன் வேய்ந்தான் என்று அவன் மெய்க்கீர்த்தி கூறுகின்றது.5 அவன் படைத் தலைவனாகிய மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவன் தில்லையிற் பொன்னம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று அங்குள்ள கல்வெட்டுக்களுள் ஒன்று தெரிவிக் கின்றது.6 விக்கிரம சோழன் மகனாகிய இரண்டாங் குலோத்துங்க சோழன் தில்லைச் சிற்றம்பலத்தையும் பிறவற்றையும் பொன் வேய்ந்தான் என்று இராசராச சோழனுலா7 உணர்த்துகின்றது. இவற்றை யெல்லாம் கூர்ந்து நோக்குமிடத்து, சோழமன்னர் ஆட்சிக் காலங்களில் தில்லைச் சிற்றம்பலம் பன்முறை பொன்வேயப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது நன்கு புலனாகும். ஆனால், அதனை முதலில் பொன் வேய்ந்த சோழ மன்னன் விசயாலயன் புதல்வனாகிய முதல் ஆதித்தனேயாவன் என்பது நம்பியாண்டார் நம்பியின் திருவாக்கினால் வெளியாகின்றது. இப் பெரியார், தம் காலத்தில் இவ்வேந்தன் அவ்வரும் பணியாற்றிய காரணம்பற்றி அச் செயலைத் தம் திருத்தொண்டர் திருவந்தாதியிற் பாராட்டியுள்ளனர் என்பது தெள்ளிது. இவர் சிதம்பரத்திற்கு அண்மையிலுள்ள திருநாரையூரிலிருந்தவ ராதலின் இவ்வரசன் தில்லையிற் புரிந்த அத் திருத்தொண்டில் தாம் நேரிற் கலந்து கொண்டு அதனை அறிந்திருத் தலும் இயல்பேயாம். ஆகவே, நம்பியாண்டார் நம்பி இவன் ஆட்சிக் காலமாகிய கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலுள்ள வாழ்ந்தவராதல் வேண்டும். இக்கவிஞர் பெருமான் அந்நூலிலும் 82-ம் பாடலில் இவன் சிவபெருமான் திருவடி நீழலெய்திய செய்தியையும் குறிப்பிடுதலால் இவனுக்குப் பிறகு கி.பி. 907-ல் பட்டம்பெற்ற இவன் புதல்வன் முதற் பராந்தக சோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் சில ஆண்டுகள் வரையில் இருந்திருத்தல் கூடும். நூலாராய்ச்சி திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை, திருநாரையூரில் உள்ள விநாயகப் பிள்ளையார் பேரில் வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாக அந்தாதி முறையில் பாடப் பெற்றதொரு நூல். இதன்கண் இருபது பாட்டுக்கள் உள்ள. தமிழிலக்கியங்களுள் தொண்Qற்றாறுவகைச் “சிறு பிரந்தங்களில்” இரட்டை மணிமாலை யென்பது மிகவும் பழமை வாய்ந்தது. இதனை முதன் முதலாகப் பாடியவர் காரைக்கால் அம்மையாராவர். இனி, இத் திருவிரட்டை மணிமாலையில் விநாயகப் பெரு மானுடைய திருவுருவம், செயல் நலம், அருள்வளம் முதலிய நலம் பலவும் இனிய சொற்களால் பாடப் பெறுகின்றன. சிவபெருமான் கையிலிருந்த மாங்கனியைப் பெறுதற்கு முருகன் அண்ட முழுதும் சுற்றி வந்ததும், விநாயகர் சிவபெருமானையே சூழ்வந்து பெற்றது மாகிய வரலாற்றை இந்நூல் பன்முறையும் எடுத்தோதுகின்றது. தாம் பாடிய இவ்வெண்பா அந்தாதியை விநாயகர் ஏற்றுக்கொண்டு தம்மையும் அடிமை கொண்டதோடு அவ்வெண்பாவைச் சனார்த் தனற்கு நல்கினார்1 என்றும், வீரணக்குடியில் தோன்றிய நங்கை ஒருத்திக்குத் தமது பேரருளை விநாயகப் பெருமான் நல்கினார்2 என்றும் நம்பிகள் குறிக்கின்றார். கரியன் என்னும் சொல் கரிய நிறமுடையன் என்றும், கரி போலும் முகமுடையன் என்றும் பொருள் தோன்ற நிற்கும் நய முடைமை கண்டு, “முகத்தாற் கரியனென்றாலும் தனையே முயன்றவர்க்கு, மிகத்தான் வெளியன் என்றே மெய்ம்மை யுன்னும் விரும்பு அடியார் அகத்தான்”3 என்று பாடுவதும், விநாயகரது யானை முகத்தை “முகத்தது கை, அந்தக் கையது மூக்கு, அந்த மூக்கதனின் அகத்தது வாய், அந்த வாயது போலும் அடும்மருப்பே”4 என்று இசைப்பதும் மிக்க இன்பம் தருவனவாம். மாறான ஒன்றை விரும்பினவன் கெடுவன் என்பதற்கு “நெருப்பை விரும்பும் எறும்பு போலக் கெடுவன்” என் றொரு பழமொழி வழங்குகிறது; இதனை, “மருப்பை யொருகைக் கொண்டு நாரையூர் மன்னும், பொருப்பை அடி போற்றத் துணிந்தால் - நெருப்பை, அருந்த எண்ணுகின்ற எறும்பன்றே அவரை, வருந்த எண்ணுகின்ற மலம்”5 எனத் தொடுத் துரைக்கின்றார். இவ்வுலகில் உயிர்கள் உடம்பெடுத்து வினை செய்து உழலுதற்குக் காரணம் அவற்றைப் பிணித்திருக்கும் மலம் என்று திருமந்திர முதலிய ஞான நூல்கள் கூறுகின்றன. இதனை நம்பியாண்டார் நம்பிகள் “மலம் செய்த வல்வினை நோக்கி.... மதக்களிறே, உன்னை வாழ்த்துவனே”6 என்று குறித்துரைக்கின்றார். இவ்வாற்றால், நம்பிகள், சொல்லாராய்ச்சி, அணி பெறத் தொடுத்தல், பழமொழி வழக்கம், ஞானநூற் புலமை என்ற பல துறையிலும் சிறந்திருந்தமை தெளியப்படும். கோயில் திருப்பண்ணியர் விருத்தம் என்பது தில்லை அம்பலப் பெருமான் பேரில் நம்பிகள் எழுபது கட்டளைக் கலித்துறைப் பாட்டுக்களால் அந்தாதித் தொடையமையப் பாடியது. திருப் பண்ணியர் விருத்தம் என்ற தொடர்க்குச் சிவபெருமான் திருவருளாகிய செல்வத்தை விளைவிக்கும் பொருளமைந்த பாட்டுக்களாலாகிய நூல் என்று பொருள் கூறுவர் சீர்காழி, திரு. ப.அ. முத்துத் தாண்டவ ராயப் பிள்ளை. இதன் கண், சேந்தனார் பழைய அவிழ் கொடுத்தது,1 வீரணக்குடி நங்கைக்கு அருள் செய்தது,2 சுந்தரரும் சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் சென்றது,3 கண்ணப்பர், அதிபத்தர்,4 சாக்கியர்5 முதலியோர் வரலாற்றுக் குறிப்பு, திருப்புன்கூரில் இறைவன் பன்னிருவேலி நிலம் பெற்றது6 ஆகிய செய்திகள் காணப்படுகின்றன. மணிவாசகர் திருக்கோவையார் பாடியதும்,7 அவர் காலத்தவனான வரகுணபாண்டியன் சிறப்பும்8 நம்பிகளால் சிறப்பிக்கப் பெறுகின்றன. தில்லையம்பலப் பெருமான் மன்றில் நடனம் புரிவது உயிர்கள் பிறப்புத்தோறும் செய்யும் பாவம் அறுத்து ஆள்வதற்கே9 என்பதும், திருமாலுக்குச் சக்கரமீந்தது அவர் கண்ணிடந் தளித்தமையும் அவரது அன்புடைமையும் அவுணர் செய்யும் துயர் கெடுப்பதும் காரணமாக10 நிகழ்ந்தது என்பதும் பிறவும் நம்பிகள் கூறுவன. தம்மைப் பற்றிக் கூறுங்கால், “அவநெறியில் வீழ இருந்த என்னை வாங்கித் தவநெறியிற் புகுவித்தான்”11 என்றும், தில்லை அம்பலவன் திருவடி நீழலே தனக்குத் தலைமறைவு என்றும்,12 விதி வசத்தால் தான் கடைப்படு சாதியிற் பிறக்கினும் தனக்கு இறைவன் உள்ளத்தே திருவடியை வைத்தாளுதல் வேண்டும்13 என்றும், பிழை பொறுக்காவிடின் பழி இறைவற்கே14 என்றும் நம்பியாண்டார் கூறுகின்றார். கீழ்மக்களது நட்பினும் நன்மக்களது பகை நன்று என்பது முதுமொழி; இதனை நம்பிகள், “நல்வழி நின்றார் பகை நன்று நொய்யர் உறவில் என்னும் சொல்வழி கண்டனம் யாம்”1 எனத் தான்பாடும் பாட்டில் இயைத்து உரைப்பர். “ஒன்றார் இரண்டில் விழுவர்”2 என்பதும் அது போல்வதே. நம்பிகள் காலத்தில் சிதைவு வழக்குகள் சில இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. “சிற்றம்பலம் மன்னிநின்ற விண்ணாளனைக் கண்ட நாள் விருப்பாய் என் உடல் முழுதும் கண்ணாங்கிலோ தொழக்கையாங்கிலோ திருநாமங்கள் கற்று எண்ணாம் பரிசு எங்கும் வாயாங்கிலோ எனக்கு இப் பிறப்பே”3 என்பதும், “ஆகமிகர்க்கு அன்றிப் புத்தகப் பேய்கட்கு அரனடி எங்கித்தது”4 என்பதும் இதற்குச் சான்றுகள். இனி, திருஞான சம்பந்தர் பேரில் பாடிய நூல்கள் பலவற்றிலும் அவருடைய வரலாற்றுக் குறிப்புக்களைப் பல படியாகத் தொகுத்துப் பாராட்டிப் பாடியிருக்கின்றார். திருநனிபள்ளியில் பாலையை நெய்தலாகத் திருஞானசம்பந்தர் பாடிய வரலாறொன்று நம்பிகளால் குறிக்கப்படுகின்றது. திருஞான சம்பந்தர் திருநனிபள்ளி சென்ற போதும், கோளாறு பதிகம் பாடியபோதும் இறுதிப் பாட்டிற் பாட்டின் பயன் கூறுமிடத்து, “நனிபள்ளி யுள்க வினைகெடுதல் ஆணை நமதே”5 என்றும், “சொன்மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே”6 என்றும் உரைத்தருளினாராக, நம்பிகள், “முத்திப் பகவன் முதல்வன் திருவடியை, அத்திக்கும் பத்தரெதிர் ஆணைநம தென்னவலான்”7 என்று வியந்து பாடியுள்ளார். பிற்காலத்து மக்கள் இத் தொடரையே தாமும் நயந்து, “பட்டமுடை யார் ஆணை நமதென்ற பெருமாள்”8 என்று தம் மக்கட்குப் பெயரிட்டு வழங்கியிருக்கின்றார். திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலையில் திருநாவுக்கரசரது வரலாற்றுக் குறிப்பும், அவர் திருப்பதிகம் ஏழெழு நூறு பாடிய செய்தியும் சிறப்பிக்கப் பெற்றுள்ளன. நாவரசரைக் கவியோகி என்றும் கற்றுணையில் வரும் ஆதி என்றும் நம்பிகள் பலபடப் பாராட்டித் தமது பேரன்பைப் புலப்படுத்து கின்றார். திருத்தொண்டர் திருவந்தாதி சைவ நெறிக்குரிய வரலாறு காணும் வகையில் மிக்க சிறப்புற்று நிலவுகிறது. இது, நம்பியாரூரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதலாகக் கொண்டு இயன்றது. திருத்தொண்டத் தொகையில் மிக மிகச் சுருக்கமாகக் குறிக்கப் பெற்ற திருத் தொண்டர் வரலாறுகள் இத் திருவந்தாதிக்கண் சிறிது விரியக் கூறப்பெற்றுள்ளன. திருத்தொண்டர் வரலாற்று வைப்பு முறையும் திருத்தொண்டத்தொகையுள் இருந்தபடியே இத் திருவந்தாதியிலும் மேற்கொள்ளப் பெற்றிருக்கிறது. மேலும், அத் திருத்தொண்டத் தொகையின் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும், “ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே” என்று நம்பியாரூரர் பாடியிருப்பது கொண்டு, ஒவ்வொரு பாட்டிலும் குறிக்கப்பெற்ற தொண்டர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாட்டாகப் பாடிய நம்பிகள் அப் பாட்டில் அடங்கிய தொண்டர்களின் வரலாறு பாடி முடித்ததும் நம்பியாரூரர் வரலாற்றைச் சிறு சிறு பகுதியாக வகுத்து ஒவ்வொன்றையும் தனித் தனியே பாடியிருக்கின்றார். திருத்தொண்டத் தொகையில் “தில்லை வாழ் அந்தணர்கள் அடியார்க்கும் அடியேன்” எனத் தொடங்கும் திருப்பாட்டில் தில்லை வாழ் அந்தணர் முதல் அமர்நீதி நாயனார் ஈறாகத் தொண்டர்கள் எழுவர் குறிக்கப் பெறுகின்றனர். நம்பியாண்டார் நம்பிகளும் ஏழு பாட்டுக்களில் பாட்டுக்கு ஒருவராக எழுவரையும் பாடிய பின், எட்டாவது பாட்டில் நம்பியாரூரரை இறைவன் திருமணத்தில் தடுத்தாட் கொண்ட வரலாற்றுப் பகுதியைப் பாடியிருக்கின்றார். இவ்வாறே நம்பியாரூரர் வரலாறு பல பாட்டுக்களால் பாடி முடிக்கப் பெறுகின்றது.  15. வேம்பையர்கோன் நாராயணன் வரலாறு சைவப் புலவரான நாராயணனார்க்கு ஊர் வேம்பூர்; மாமல்ல புரம் மல்லை எனவும், தஞ்சாக்கூர் தஞ்சை யெனவும் மருவினாற் போல வேம்பூர் வேம்பை என மருவிற்று. இது பாண்டி நாட்டு ஊர்களில் ஒன்று. இங்கே வாழ்ந்த வணிகர் பெருங்குடியில் தோன்றிப் பொருட் செல்லமும் தமிழ்ப் புலமைச் செல்லவமும் ஒருங்க பெற்று உயர்ந் தமையின் நாராயணனார் வேம்பையர்கோன் எனப் படுவாராயினர். அவருடைய தந்தை பெயர் மணியன் என்பது. இப் பெயர் பூண்டோர் பலர் இடைக்காலத்தே இருந்துள்ளனர். முதல் இராசராசன் காலத்தில் சேர நாட்டிலிருந்து மரகததேவர் படிமத்தைக் கொணர்ந்து திருப்பழனச் சிவன் கோயிலில் எழுந்தருள்வித்த விக்கிரமசிங்க மூவேந்த வேளான் இயற்பெயர் மணியன் என்பது வரலாற்றிஞர் நன்கு அறிந்த தொன்று, "மற்பந்த மார்பன் மணியன் மகன் மதில்வேம்பையர் கோன், நற்பந்த மார்தமிழ் நாராயணன்"1 எனப்படுதலால், இம் மணியனும் போர்ப்புகழ் பெற்றவன் என்பது தெரிகிறது. நாடாளும் வேந்தர்க்கு அடுத்த நிலையில் வணிகரைவைத்துச் சிறப்பிப்பது தமிழ்மரபு. அரசர் வணிகர் வேளாளர் என நிறுத்தி, இம்மூவருள்ளும் துறவுபூண்டோர் அந்தணர் நிலையில் அடங்கு வதுபற்றி, அந்தணர்களை இறுதியில் வைப்பர். பார்ப்பாருள் துறவு மேற்கொண்டோர் "வருணம்" "ஆசிரமம்" என்ற வரம்பிறந்து அந்தணருள் அடங்குதலால், ஏனையோர் பார்ப்பனர் என வழங்கப் பட்டனர். பிற்காலத்தே இவ்வேறுபாடு மறைந்தமையின் இல்லுறையும் பார்ப்பனரும் அந்தணராகக் கருதப்பட்டனர்; "அந்தணர் என்போர் அறவோர்" என்ற தமிழ் மறையைப் புறக்கணித்து, வேத நூலின் அந்தத்தை அணவுவோர் அந்தணர் எனத் தாந்தாம் வேண்டிய வாறு பொருள் கூறிக் கொள்வாராயினர். இவ்வாறே எத்துணையோ தமிழ்ச்சொற்கள் உண்மைக்கு மாறான நிலையில் சிதைத்துப் பொருள் கூறப்பட்டுள்ளன. சொற்களுக்கு வரலாறு காணும் ஆராய்ச்சி தலையெடுக்கு மாயின் மேலே காட்டப்பட்டது போலும் உண்மைகள் பல வெளிப் படும். பொருள் நெறியில் தமிழர் வறுமை மிகுந்து பிறர் ஏவல்வழி நிற்கும் ஏழைகளாய் இருப்பது தான் இன்ன பல ஆராய்ச்சிகள் நடைபெறாமைக்குக் காரணம் என்பதை ஈண்டுக் குறிக்கத்தான் வேண்டி இருக்கிறது. இந்தி மொழி பேசம் மக்களுக் கிருக்கும் மொழிப்பற்றில் நூற்றில் ஒரு கூறு தானும் தமிழர்க்கு அமையுமாயின் எத்துணையோ நலங்கள் தமிழ்த்துறையில் தோன்றிவிடும்; இன்னும் அது தோன்றவில்லை. அரசர் வணிகர் என்ற பிரிவுகள் "சாதிப் பிரிவுகள்" அல்ல; அவரவர் மேற் கொண்ட தொழில்களுள் தலைமை பற்றியும் பன்மை பற்றியும் வந்தனவாகும். வணிகர் வாணிகமே பெரிதும் செய்தனர்; ஆயினும், போர்ப் பயிற்சியும் பெற்று அதனையும் வேண்டுமிடத்து ஆற்றிவந்தனர். வேந்தர் பொருட்டுப்போருடற்றிச் செஞ்சோற்றுக் கடன் செலுத்துவது வணிகர் தொழில்களுள் ஒன்றாகும் எனப் பட்டினத்தடிகள் உரைப்பது இதற்குத் தக்க சான்றாகும்.1 அந்நெறியில். புலவர் நாராயணனார் பொருள் துறையிலேயன்றிப் போர்த்துறையிலும் நல்ல புகழ்பெற்று வேம்பை யர்கோன் எனப்படும் மேன்மை எய்தினார். பார்ப்பார்க்குத் தாமரையையும் பாண்டியர்க்கு வேம்பையும் அடையாளப் பூமாலையாகக் கூறுவது போல வணிகர்க்குக் குவளைப்பூ மாலையைக் கூறுவது தொன்று தொட்டு வரும் முறையாகும். அதனால், நம் நாராயணனார் தம்மை, "தேறு சொல்லாந் தமிழ்த் தென்வேம் பையர் அண்ணல் செங்குவளை நாறும் மல்லாகத்து நாராயணன்"1 என்று குறிக்கின்றார். பாண்டி நாட்டு வேம்பூர் போலத் தொண்டை நாட்டு வேம்பில் என்னும் ஊரும் வேம்பை எனப்படுவது பற்றி, தமது ஊரைத் தென்வேம்பை என்பது பெரிதும் இன்பந் தருவதொன்றாம். வேம்பையார் கோனான நாராயணனார் பொருட் பெருக்காலும் வாணிகச் சிறப்பாலும் தமிழ்நாடு முற்றும் நல்ல புகழ் பெற்று விளங் கினார். அவர்க்குப் பாண்டிநாட்டு மதுரையிலும், சோழநாட்டுச் சேய்ஞலூரிலும் நடுநாட்டுப் பெண்ணைக்கரை மணலூரிலும் திரு விதாங்கூர் நாட்டுக் குண்டூரிலும் வாணிகம் நடைபெற்றது. அது பற்றியே, அவர், "மாடமதுரை மணலூர் மதில் வேம்பை, யோடமர் செய்ஞலூர் குண்டூர் இந் நீடிய, நற்பதிக்கோன் நாராயணன்"2 என்று குறிக்கப்படுகின்றார். இவற்றுள் குண்டூர் மாத்திரம் இப்போது கொண்டூர் எனத் திரிந்து வழங்குகிறது. இவ்வண்ணம் தமிழ்நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் பல விடங்களில் வேம்பையர் கோனது வாணிகம் நடந்த தாயினும், அவரது தலைமை நிலையம், சோழநாட்டின் பண்டைத் தலைநகரா யிருந்த தொண்மைச் சிறப்புடைய உறையூரின்கண் அமைந்திருந்தது. பெரு வாணிகத்தால் பெருமை பிறங்கிய அவர்க்கு மகற்பேறு இல்லாத குறைமிக்க மனவருத்தம் பயந்தது. உறையூர்க்கு அண்மையில் நிற்கும் சிராமலைமேல் இருக்கும் சிவபெருமானை அது குறித்து நாளும் பரவிவந்தார். சில நாட்கள் கழிந்ததும் நாராயணனார்க்கு நன்மக்கள் பிறந்து சிறந்தனர். அவர்க்குச் சிராமலைப் பெருமான் பால் அன்பு பெருகி முதிரவே, அவர் உறையூரையே தமக்கு உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்து வருவாராயினர். அவ்வூர்பால் அவர்க்குள்ள அன்பைத் தமது நூலின் முதற்பாட்டில், "உலக மடந்தை நுதல் உறந்தைப்பதி, அந்நுதற்குத் திலதம் பரமன் அமரும் சிராமலை"என்று பாடிப் புலப்படுத்தியுள்ளார். அவருடைய மக்கள் வளர்ந்து அவர் பேணிச்செய்த வாணிகத்தை மேற்கொண்டனர்; அவர் சிவப்பற்று முதிர்ந்து துறவுள்ளம் கொண்டு சிராமலை இறைவனைப் பண்டைத் திருஞானசம்பந்தர் திருநாவுக் கரசர் முதலியோரைப் போலப் பாடும் பணியில் நிற்பாராயினர். அக்காலத்தில்தான் அவர் இச்சிராமலையந்தாதியைப் பாடி அரங்கேற்றினார். கேட்டிருந்த அறிஞருட் பலர் அதன் சொல்நலமும் பொருள்வளமும் கண்டு வியந்து சிராமலைக் கல்லில் அதனைப் பொறிப்பது நன்று எனப் புகன்றுரைத்தனர். அவ்வாறே அது கல்லில் வெட்டப்பட்டது. அதன் இறுதியில், "மாட மதுரை மணலூர் மதில் வேம்பை யோடமர் சேய்ஞலூர் குண்டூர் இந் - நீடிய நற்பதிக்கோன் நாரா யணன்நம் சிராமலைமேல் கற்பதித்தான் சொன்ன கவி" என்ற வெண்பாவைப் பாடிப் பொறித்தனர். கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,இந்த அந்தாதியைக்கண்டு கி.பி. 1888-ல் படியெடுத்து, முப்பத்தைந்து ஆண்டு கழித்து 1923- ல் அச்சிட்டு வெளியிட்டனர். வரலாறு காண்டற்குதவும் கல்வெட்டுக்களையும் பிறவற்றையும் கண்டறிந்து வெளியிட்டுப் பொதுமக்கட்கு உணர்த்துவது, அவர் தமது தொல்வரவு தேர்ந்து எதிர்கால வாழ்வைச் செம்மையுற அமைத்துக் கோடற்கு உதவும் என்ற ஒரு கொள்கை மேனாடுகளில் சிறந்து நற்பயன் விளைத்திருக்கிறது. நாட்டில் வாழ்வோரை வரலாற்றறிவில்லாத இருணிலை மாக்களாக நிறுத்துவது, அவர்களை ஆள்வோர் தாம் வேட்டவாறு ஆட்டிப் படைக்கலாம் எனத் தீது கருதிய செயலாகும்; அது சில நாட்டு அரசியல் வாழ்வில் நிலவியதுண்டு. அதன் பொல்லாத வாடை நம் நாட்டிலும் பரந்திருந்தது. அதனால் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் கண்டு வெளியிடும் செயல் ஊக்கமின்றிக் கிடந்தது; வெளிவந்தனவும் பெருவிலை கொண்டு யாவரும் வாங்கிப் படிக்கும் நிலையில் இல்லா தொழிந்தன. அரசியல் உரிமை பெற்ற இந்நாளில் அவையாவும் யாரும் எளிதிற் பயின்று பண்டை வரலாற்றறிவு பெற்றுச் சமுதாயம் பொருளியல் தொழிலியல் சமயம் முதலியதுறைகளை எதிர்கால இன்ப வாழ்வுக்குத் துணையாமாறு சீர்செய்து கொள்ளலாம் என அறிஞர் பலர் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர்; அஃது இன்றுவரை நிறைவேற வில்லை. அரசு கட்டிலில் வீற்றிருக்கும் நன்மக்கள் உள்ளத்திலும் இந்த நல்வினையறிவு இன்னும் தோன்றவில்லை போலும். காலம் இனி, வேம்பையர்கோன் நாராயணனார் வாழ்ந்த காலத்தைக் காண்பது கடனாகும். கற்சுவரில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக் களின் உருவ அமைதி கண்ட அறிஞர் வேம்பையர்கோன் கி.பி. ஒன்பது பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகலாம் எனக் கருதி யுரைத்தனர். அது கண்ட திரு. மு. இராகவையங்கார் அவர்கள், இச் சிராமலை யந்தாதி, சேரமான்பெருமாள் பாடிய பொன்வண்ணத் தந்தாதிபோலத் "துதியும் அகத்துறைப் பொருளும்" கொண்டு இருப்பதால், "தேவார திருவாசகங்கள் நாட்டில் நன்கு பரவுமுன் அதாவது 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் இருக்கலாம்" என்று கூறினார்;1 ஆயினும், இந் நூற்குள் நுழைந்து பாட்டுக்களின் உள்ளீடாய் நின்று உந்திய தொன்னூற் கருத்துக்களை நோக்கு மிடத்துப் பட்டினத்தடிகளின் கருத்துக்களிற் சில காணப்படுவது பற்றி, இது வந்தாதி கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தோன்றியிருக்கலாம் என்று கோடற்கு இடம் உண்டாகிறது. வரலாற்றாராய்ச்சி வேம்பையர்கோன் தமிழ்நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் திரிந்து வாணிகம் செய்து பொருளீட்டினார் என்பது, "நிற்கும் துயர்கொண்டு இருக்கும் பொழுதின்றி நெஞ்சு அணுங்கித், தெற்கும் வடக்கும் திரிந்தே வருந்திச்சிராமலை மேல், பொற்குன்றனைக் கண்டுகொண்டேன்"2 என்றும், "பொய்யினைப் பேசிப் பொருளினைத் தேடிப் புழுப்பொதிந்த, மெய்யினைக் காத்து வெறுத் தொழிந்தேன்"3 என்றும் கூறுவதனால் விளக்கமாகிறது. நெடுநாள் காறும் புதல்வர்ப் பேறின்றி வருந்தியதும், பின்பு அது பெற்றுச் சிறந்ததும் நன்கு விளங்க, "அருள்செய்வதும் படையேன் மெய்ம்மையே அடியேனுக்கு இம்மைப் பொருள் செய்துதவும் புதல்வரைத் தந்து என் பொல்லாத சொல்லால் மருள்செய்த மாலைகொண்டானை வண் டாரும் சிராமலைவாய் இருள்செய்த கண்டனையே தொண்டர்காள் வந்து இறைஞ்சுமினே"1 என்றும், சுற்றம் சூழ வேம்பையில் வாழ்ந்த தாம் சிராப் பள்ளியை இடமாகக் கொள்ளற் குற்ற காரணத்தை, "தொடரிடை யாத்த ஞமலியைப் போல் இருந்தேன்; இச் சுற்றத்திடரிடை யாப்ப விழ்த்து என்னைப் பணிகொள்"2 என்றும் உணர்த்தகின்றார். நூலின் பொது அமைதி வேம்பையர்கோன் பாடிய இச்சிராமலையந்தாதி நூற்று மூன்று கட்டளைக் கலித்துறை கொண்டது. தேவாரத் திருப்பதி கங்களின் ஈற்றில் நிற்கும் திருக்கடைக் காப்புப் போல, இதுவும், பாடினோர் பெயரையும் பாட்டுக்களை ஓதுவார் பெறும் பயனையும் சேரத் தொகுத்து, "மற்பந்த மார்பன் மணியன் மகன்மதில் வேம்பையர்கோன் நற்பந்த மார்தமிழ் நாராயணன்நம் சிராமலைமேல் கற்பந்தல் நீழலின் வைத்த கலித்துறை நூறும்கற்பார் பொற்பந்த னீழல் அரன் திருப் பாதம் பொருந்துவரே"3 எனக் கூறுகிறது. எஞ்சிநிற்கும் பாட்டு நூற்றிரண்டும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. அவற்றுள் முதற்பாட்டு "உலக மடைந்தை நுதல் உறந்தைப்பதி" என்று தொடங்க, இதன் ஆதியில் நிற்கும் உலக மென்ற சொல்லை, இறுதியிலுள்ள, "அரியனசால" என்ற பாட்டு, ஈற்றடி இறுதிச் சீராக வைத்து, "ஓதவல்லார்க் கிவ் வுலகத் துள்ளே" என முடிக்கிறது. கல்வெட்டிற் காணப்படும் இவ் வந்தாதியில் இருபது இருபைத்தைந்து பாட்டுக்கள் சிதைந்துள்ளன. பாட்டெழுதுவோரே தம் பாட்டுக்களைக் கல்லில் வெட்டுவதில்லை. கல்லில் வெட்டுவோர், ஏடு எழுதுவோரினும் எழுத்தறிவு குறைந்திருப்பது பெரும்பான்மை யாதலால், கல்வெட்டுக்கள் பிழைமலிந்து பொருள் எளிதில் விளங்காவாறு தடையுறுவது இயல்பு. இதற்குமேல் இடையிடையே வட மொழிக்குரிய கிரந்த எழுத்துக்கள் நின்று சீரழிப்பது பெரும் பான்மை. தமிழில் தமது பெயரை எழுதத் தெரியாதவராயினும் வேறு மொழி கற்றவராயின் அவர்களைத் தமிழ் மேதைகளாகவும், தமிழைப் பிழையும் வழுவும் மலிய எழுதுவது எளிய இனிய நடையாகவும் கருதும் இந்நாளைய தமிழகத்துக்குக் கல்வெட்டிற் காட்சியளிக்கும் இந்த அந்தாதி எவ்வளவோ செம்மையாக அமைந்திருக்கிறது என்போமாயின் அது மிகையாகாது. சிராமலையின் சிறப்பு சிராமலை நிலமகள் நுதலில் விளங்கும் திலதம் போல்வது; அதனைச் சூழ்ந்தோடும் காவிரியாறு நிலமகள் கழுத்தில் அணிந்த வெள்வடம் போல்வது எனத் தொடங்கி, இந்நூல், அதனைத் திருமலை யென்னும் பொன்மலை யென்றும் பலபடியாகப் பாராட்டுகின்றது. இதன்கண், நாராயணனாரது பாப்புனைவு மிக்க வீறுகொண்டு விளங்குகிறது. தேக்கு முதலிய பெருமரங்கள் செறிந்த காடு போர்த்து, யானை அரிமா முதலிய விலங்குகட்கு உறை விடமாகவுளது சிராமலை; அம் மலையுச்சியில் கரிய மழை முகில் படியக் கண்ட அரிமா ஒன்று. அதனைக் களிறு எனப் பிறழக் கொண்டு அதன்மீது பாய்ந்து தன் கூரிய உகிரால் கீறுகிறது; இதனை, "முகிலை, வல்லியம் மால் களிறு என்று தன் வாள் உகிரால் கதுவச், செல்லிழி சாரல் சிராமலை"1 என்று பாடுகின்றார். பிறிதோரிடத்தில் சிராமலையில் உள்ள தேக்குமரச் சோலையில் வாழும் வானரங்கள் தவம் புரிந்தறையும் யோகியர் உரைக்கும் மந்திரங்களைக் கற்றுத் தம் மந்திகட்குச் சொல்லி மகிழ்வதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு, "ஓக்கிய கையோ டொருக்கிய வுள்ளத்து யோகியர்தம் வாக்குயர் மந்திரம் வானரம் கற்று மந்திக் குரைக்கும் தேக்குயர் சாரற் சிராமலைக் கூத்தன் செம்பொற் கழன்மேல் ஆக்கிய சிந்தை யடியர்க் கென்றோ இன்று அரியனவே"1 என்று பாடுவது மிக்க இன்பம் தருகிறது. பழஞ் செய்திகள் இந்த அந்தாதியில் காணப்படும் பழஞ்செய்திகளுள் சிவனைப் பற்றிக் கூறப்படும் புராணச் செய்திகள் முதலிடம் பெறுகின்றன. அவற்றுள்ளும், சிவன் பிரமன் தலையைக் கொய்தது, காமனை எரித்தது, இரதி சிவன் முன்னின்று புலம்பியது, திருமாலும் அயனும் அடிமுடி தேடிக் காண முயன்றது, மார்க்கண்டன் பொருட்டுக் காலனைக் காய்ந்தது, கண்ணப்பர்க்கு அருள்புரிந்தது முதலியன சிறப்புடையனவாகும். இவ்வாறே, சிவன் கோயில்கொண்டிருக்கும் இடங்களுள் திருகற்குடி, தில்லை, திருவொற்றியூர், மருதாடு என்பன சிறப்பாகக் காட்டப்படுகின்றன. இவற்றில் திருக்கற்குடி சிராப்பள்ளிக் கண்மையில் இருப்பது; இவ்வந்தாதி, "குருந்தேய் நறும்பொழிற் கற்குடி"2 என்று இயம்புகின்றது. இதனைப் பற்றிய குறிப்புக்களைப் பிறிதோரிடத்தில் குறித்தாம்.3 மருதாடு என்பது அச்சிறுபாக்கத்துக்கும் வந்தவாசிக்கும் இடையில் உள்ள ஓர் அழகியவூர். தில்லைப்பதியில் உள்ள அந்தணர்களை நம்பியாரூரர் முதலிய சான்றோர், "தில்லைவாழ் அந்தணர்கள்" எனப் பொதுபடக் குறித்தனர்; அவர்க்குப் பின்வந்த சான்றோர்களில் திருவாதவூரரே முதற்கண் அவர்களது தொகையைச் சுட்டித் "தில்லை மூவாயிரவர் வணங்க நின்றோன்"1 என்று கூறினார். அவர்க்குப்பின் பட்டினத் தடிகள், "நான்மறையோருடன் வந்து மூவாயிரவர் இறைஞ்சி நிறைந்த உண்மைக் கடனன்றி மற்றறியாத் தில்லையம்பலம்"2 என்று அதனை எடுத்துரைத்தாராக, அவர்க்குப் பின்னோரான இந்த நாராயணனார். "கொடிகட்டியமணி மாளிகைத் தில்லையுள் கொற்றமன்னர் முடிகட் டியமுகை சேர்கழல் மூவாயிரவர் முன்னின்று அடிகட் டியகழல் ஆர்க்கநின் றம்பலத் தாடும் ஐயர் வடிகட் டியபொழில் வான்றோய் சிராமலை மாணிக்கமே"3 என்றுஉரைப்பது ஈண்டு நினைவுகொளற் குரியதாம். தில்லை மூவாயிரவர்க்குச் சோழவேந்தர் காலத்தில் மன்னர்க்கு முடிசூட்டும் உரிமையிருந்தது. இதனைச் சேக்கிழார்பெருமான் கூற்றுவநாயனார் வரலாற்றில்4 எடுத்துரைப்பதால் அறிகின்றோம். அப்பழஞ் செய்தியை இச் சிராமலையந்தாதி, "தில்லையுள் கொற்ற மன்னர் முடிகட்டிய முகைசேர் கழல் மூவாயிரவர்"5 என்று உரைப்பது ஆராய்ச்சியாளர்க்கு மிக்க இன்பம் தருவதொன்று. இறையனார் அகப்பொருள் உரைபற்றிய வரலாற்றில் பாண்டி வேந்தன் அதன் பொருள் குறித்துக் கூடற்பெருமானை வேண்டிக் கொண்டதாகக் காணப்படும் செய்தி, இந்த அந்தாதியில் "மெல்லிய (செந்) த(மிழ்) மாலைக்கு மெய்ப்பொருள் வேண்டுமெனச், சொல்லிய கோவிற்கு அருள்செய்தவன்"6 என்று குறிக்கப்படுகிறது. இந்நிலையில் "நுரை வெண் கடலுட் போய் இலங்காபுரம் செற்ற பொற்றேரவன்" போந் திருந்து, வாயிலங்கு ஆர்தருமந்திரத்தால் வணங்கிப் பணிந்த சேயிலங்கு ஆர்கழல் தீர்த்தன் சிராமலை"1 என்பதில் அடங்கிக் கிடக்கும் வரலாறு நன்கு தெரிந்திலது. "இலங்காபுரம் செற்ற பொற்றேரவன்" என்றது, அயோத்தியர் இறையாகிய இராமனைக் குறிக்கலாம் எனச் சில அறிஞர் உரைப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. இறைவன் அருள்நலம் நிலம் நீர் தீ வளி விசும்பு உயிர் ஞாயிறு திங்கள் என்ற எட்டும் வடிவமாகக் கொண்டவன் சிராமலை இறைவன்;2 ஆக்கலும் அழித்தலும் செய்பவன் அவனே;3 பற்றறுத்து உடம்பினைக் கழித்து ஞானக்கண் கொண்டு காண்பார் காணத்தக்கவன்;4 அவ்வாறு கண்டு வழிபடும் அடியரை இவ் வுலகாளும் முடிவேந்தராகச் செய்வன்;5 அவன் தன்பால் அன்புகொண்டு ஒழுகுவார்க்கு இறுதிநாளில் கூற்று வன் வரும்போது அஞ்சல் வேண்டா என அருள்புரிவன்.6 இப்பெற்றியனாகிய இறைவன சிறப்புணரும் அடியார்கள் செய்யத் தகுவன இவையென அறிவுறுத்துவாராய், "பணிமின்கள் பாதம் பகர்மின்கள் நாமங்கள் பாரகத்தீர் தணிமின்கள் சீற்றம் தவிர்மின்கள் பொய்ம்மை தவம்புகுநாள், கணிமின்கள்"7 எனவும் "மொழிந்திடும் மெய்ம்மை முனிந்திடும் பொய்ம்மை முயன்றிடுமின், கழிந்திடும் யாக்கையைக் கைப்பிணி கோடல் .... சிராமலை புகுந்திடுமின் இழிந்திடுமின் நும்வினை ஈசன் அங்கே வந்து எதிர்ப்படுமே"8 எனவும் உரைக்கின்றார். கற்றறிந்த புலவர்களை நோக்கி, நீவிர் மேன்மக்களோடு இனிது வீற்றிருக்க விரும்புவீர்களாயின், சிராமலைச் சிவனைக் "காலால் வலம் செய்து கையால் தொழுது கண்ணாரக் கண்டு பாடிப் பணிமின்கள்"9 என வற்புறுத்துகின்றார். உயிரும் உடம்புமாகிய இரண்டையும் வேறுபடுத்தி நோக்கி, அவற்றுள் உடம்பின் நிலையாமை யுணர்ந்து, முடிவில் உயிர்கள் எய்த இருக்கும் நரகத்துக்கும் துறக்கத்துக்கும் காரணம் பழியும் புகழும் என்பதைக் கண்டவிடத்து, இருவகைப் பற்றும் அறும்;1 மனைவி மக்கள் சுற்றம் முதலாயினாருடன் உளதாகிய தொடர்பும் நீங்கும். இவ்வாற்றால் வேம்பையர்கோன் துறவுள்ளம் கொண்ட போது, முன்னையடியார்களாகிய பெரியோர்கள் சென்ற அன்பு நெறியாகிய "பழநெறி"யைச் சிராமலைப் பரன் காட்டியருளத் தாம், "அவனைப் பரவக் கற்றேன்; முழுநெறியாகிலும் செல்லேன் இனிச் செல்வர் முன் கடைக்கே"2 என்று தாம் அடியராகிய வரலாற்றையும் உரைக்கின்றார். இத்தகைய அறங்களைக் கேட்டுச் சிவன் பால் அன்பு செய்து பற்றற் றொழுகுபவரை உலகறிய அடிமை கொண்டு துறக்க இன்பமும் வீடுபேறும் எய்துவிப்பன் சிராமலைச் சிவன் என்பாராய், "கள்ளும் முருகும் தருமலரால் மீக் கசிந்திறைஞ்சி உள்ளும் புறமும் ஒருக்கவல் லார்கட் குலகறியக் கொள்ளும் அடிமை; கொடுக்கும் துறக்கம்; பிறப்பறுக்கும்; தெள்ளும் அருவிச் சிராமலை மேய சிவக்கொழுந்தே"3 என உரைக்கின்றார். இச் சிவனைப் பேணாது கழியும் சிலரைக் கண்டு மனம் வருந்தி, "நெஞ்சம் துணையுண்டு நீர்நிலத் துண்டு நிழலுமுண்டு தஞ்சப் பெருக்குள தால்நம் சிராமலைச் சாரல் உண்டு துஞ்சும் துணையும் சிவனைத் தொழுது துறக்கம் எய்தார் பஞ்சம் நலியப் பலிதிரி வார்சில பாவியரே"4 என வெம்மையாகப் பேசுகின்றார். சிவனைத் தொழராயினும் இனிதே வாழ்ந்து இறப்பவரும் உண்டே எனின், அவர்கள் இயல்பு இது என விளக்க முற்பட்டு, "வான்தோய் சிராமலை வந்து இறைஞ் சாதவர் மையல்வைகும் தேன்தோய் மொழியவர் செவ்வாய் நினைந்து வெள் வாய்புலர்ந்து மீன்தோய் கடலன்ன வேட்கைய ராகித்தம் மெய்ம்மை குன்றி ஊன்தோய் உடல்இங்கு ஒழித்து உயிர் போக்கும் உறைப்பினரே"1 என்று சொல்லி ஏசுதலும் செய்கின்றார். வேம்பையர்கோன் நாராயணனார் தாம் சிராமலைப் பெருமான் பால் அன்புகொண்டு நினைந்து வழிபடுங்கால், சிவஞான இன்பத்தேன் தம் உள்ளத்தில் ஊறிப் பெருகி உடல் பூரிக்கும் அனுபவம் கண்டு வியந்து, "இனிச் செல்வர் முன் கடைக்கு என்செயச் சேறும்? இனையல் நெஞ்சே, கனிச்செல்வ மாம்பொழில் காவிரித் தென்கரைப் பூவிரிக்கும் முனிச்செல்வர் சேரும் சிராப்பள்ளி மேய முக்கட்சுடரைத் தனிச்செல்வனைப் பணிந்து உள்ளமிர் தூறித் தடித்தனமே"2 எனவும், இந்த இன்பநிலைக்குக் காரணம் சிவனை மறவாது உள்ளத்தே உள்ளும் உறவு எனவும், அது தமக்குக் கிடைத்தது முன் னைப் பிறவிகளில் நோற்ற தவம் எனவும் கூறுவராய், "வள்ளலுக்கு மலைமாதர்தம் கோனுக்கு வார்சடைமேல் வெள்ளெருக்கும் மதியும் பொலிந்தானுக்கு வெண்பளிங்கு தெள்ளலைக்கும் அருவிச் சிராப்பள்ளிச் சிவனுக்கு அன்பாய் உள்ளலுக்கு நன்று நோற்ற தன்றோ என்று உணர்நெஞ்சமே"1 என்று எடுத்துரைக்கின்றார். ஒருகால், அவர், தாம்பாடிப் பரவும் பாட்டுக்களைத் தாமே நோக்குகின்றார்; அவரது புலமைக்கண்ணுக்கு அவை சுவையுடை யவாகத் தோன்றவில்லை; ஆயினும் அவரை அறியாமல் அவற்றால் அவர்க்குச் சிவன் பால் அயராத அன்பு தோன்றி அமைதி நல்குகிறது; அதற்குக் காரணம் ஆராய்ந்து, இறைவன் அருட்குணங்களைப் பாரித்துரைக்கும் செய்கை யென்பது உணர்ந்து மகிழ்கின்றார். அதனை, "சொல்லும் பொருளும் சுவையும் பயனும் இலவெனினும் அல்லும் பகலும் மிகுமால் எனக்குப் புரமெரிப்பான் வில்லும் கணையும் தெரிந்த பிரான்தன் சிராமலைமேல் எல்லும் கனைகழ லின்குணம் பாரித்த என்கவியே"2 என்ற இப்பாட்டு வெளிப்படுத்துகின்றது. முன்னை ஆசிரியர்களான சேரமானும் பட்டினத்தடிகளும் போல இவரும் தாம் பாடிய அந்தாதியில் துறைப்பாட்டுக்கள் பல தொடுத்துப் பாடியிருக்கின்றார். மறுமையும் வீடு பேறும் வேட்டுப் பா வியற்றிப் பாடி மகிழும் புலமையுள்ளத்தில், இம்மைவாழ்வில், இல்லிருந்து அறம்புரிந்து பொருளும் புகழும் பெறற்கென அமைந்த ஆடவர் மகளிர் இருபாலாரும், அறநெறியில் மனங்கலந்து ஒருமை எய்தி ஒருவர்க்கொருவர் துணைவராய் அமைவது நோக்கமாக வகுக்கப்பட்டது அகப்பொருணெறி; அஃது இப்பாட்டுக்களில் எங்ஙனம் இடம் பெற்றது என்பது தெரிந்திலது. மேனோக்கி எழுதற் கமைந்த பொருளொன்றை மேற்செல்லாவாறு கீழே இருத்தும் கனவிய பொருளை அதனோடு கட்டிவிடுவதுபோல, வீடுபேறு நோக்கி இறைவன் அருள் வெளி காணும் மக்களுள்ளத்தை அகத் துறைக் கருத்துக்கள் போந்து கீழ்நிலையில் படரச் செய்கின்றன; சில கருத்துக்கள் "இவையிற்றை முற்றத் துறந்த முனிவரரோ பாடினர்?" என அயிர்க்கும் அளவில் அமைந்துள்ளன. ஞானசம்பந்தர் முதலிய சான்றோர்கள் பாடிய திருப்பதிகங் களில் அகத்துறைப் பாட்டுக்கள் உள்ளன; அவை பெண்ணுள்ளம் இறைவனது அருட்கூட்டம் விழைந்து நினைந்தும் சொல்லியும் செய்வன செய்தும் ஒழுகும் இயல்பில் அமைந்தனவே யன்றி ஆண்மை பெண்மையை வேட்டொழுகும் நெறியின அல்ல. சங்ககாலத்துக்குப் பின்னுண்டான மாறுதல்களால் உலகியல் நல்வாழ்வுக்கமைந்த அகவொழுக்கம் வெறுங்கற்பனையாக மாறிற்று; பிற்காலத்தே தோன்றிய அகப்பொருள் இலக்கணங்களும் அம் மாற்றத்துக்குத் துணைபுரிந்தன. இன்று அவை வாழ்வில் நிகழக் கூடாத கற்பனை கலந்த நாடகவழக்காகக் கருதப்படும் நிலையை எய்திவிட்டன; சாதி வேற்றுமைகளைப் புகுத்தி மக்கட் சமுதாயத்தின் ஒருமைப்பாட்டைச் சீரழிக்கக் கருதியோரது பொல்லாச் சூழ்ச்சி இம் மாறுதலால் அசைக்க முடியாத வெற்றிபெற்று விட்டது. சமயவுணர்வு ஒழுக்கங்கட்கு அடிப்படையான "ஒன்றேகுலம்; கடவுள் ஒருவரே" என்ற கொள்கையை உடைத்தெறியும் வகையில் சிறு தெய்வங்களைப் புகுத்தி மண்ணுலக மக்களைப்போல் ஒக்கல் வாழ்க்கை அவைகட்கும் ஏற்றியுரைக்கும் கற்பனைக்கதைகள் வகுக்கப்பட்டன. கடவுள் ஒருவரே என்ற கருத்து எங்கும் நிலைபெறுமாறு சிவன் கோயில்கள் எல்லாவற்றிலும் "இன் னவுரு" என்று அறியலாகாத சிவவடிவம் ஒன்றே அமைத்த பெரு மக்கள் திருக்குறிப்பை முளையிலே கிள்ளி யெறிவது போல மிகப் பல வடிவங்களும் அவற்றிற் கிடையே அகப்பொருள் ஒழுக்க வரலாறு களும் படைக்கப்பட்டன. சிவன் கோயில்களில் திருமுறை ஆசிரியர் களான நால்வர் காலத்தில் அம்பிகைக்குக்கூடக் கோயில்கள் இல்லை யென்பதும். அவை பிற்காலத்தில் எழுப்பப்பட்டன என்பதும் வரலாறு காட்டும் உண்மைகள். ஆணும் பெண்ணுமாகத் தெய்வங்கள் தோன்றியதும் அவற்றிடையே பாட்டுக்களும் தோன்றற்கு இடமுண்டாயிற்று. இத்தகைய கருத்துக்கள் மக்களிடையே ஊறஊற, முழுமுதற் பொருளாய் ஒன்றாய் உயிர் உலகுகளின் வேறாய் உடனாய் நின்று இலங்கும் பரம்பொருளாகிய சிவத்தைப் பாடுமிடத்தும் மக்கட்கமைந்த அகப் பொருட் கருத்துக்கள் இடம்பெறத் தலைப்பட்டன. பிற்காலத்தே கோவை நூல்கள் தோன்றியதும் இதனாலேயாகும். அந்தாதி முதலிய சின்னூல்கள் அவற்றைத் தொடர்ந்தும் சார்ந்தும் தோன்றினமையின் அவற்றுள் அகப்பொருட்பாட்டுக்கள் பெருக இடம்பெற்றன. "தொடரிடை யாத்த ஞமலியைப் போல் இருந்தேன் இச்சுற்றத்திடரிடை யாப்பவிழ்த்து என்னைப் பணிகொள்" 1என்ற கருத்துடன் எழுந்த இச் சிராமலையந்தாதி, அகப்பொருள் துறைகளைத் தொடுத்துப் பாடும் சூழ்நிலையில் தோன்றியதாகலின், படிப்போர் உள்ளத்தைச் சிற்றின்பச் சேற்றில் அழுத்தும் கருத்துக் கொண்ட பாட்டுக்களை விலக்க முடியாதன்றோ? இளங்காளை யொருவன் இளநலம் கனிந்திலங்கும் நங்கை யொருத்தியைக்காண்கிறான்; அவள் பந்தாடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஆட்டத்தில் அவளுடைய அழகிய இடைமின்னற்கொடி போல் வளைந்து நெகிழ்ந்து துவண்டு அசைந்த நலம் அவன் உள்ளத்தைக் கவவிற்று; அவன் கருத்தழிந்து காதல் வெள்ளத்தில் மூழ்கி, அவள்பால் தன் நெஞ்சினைத் தூது விடுக்கின்றான். அப்போது அவன், "வந்து இறைஞ்சித் தளர்ந்து என் சொல்லுமோ சிந்தை; மாதவர்மேல் சந்து இறைஞ்சிப் படர்சாரல் சிராமலைத் தாழ்பொழில்வாய்க் கொந்துஇறைஞ்சிக் கமழ் கோதை குலாவிக் குழல்அவிழப் பந்து இறைஞ்சிப் பிடிப்பாள் இடைக்கே சென்று பற்றுண்டதே"1 என்று சொல்லி அவலிக்கின்றான். அவனே பின் இடந்தலைப் பாட்டின்கண் அவளைத்தனித்துக் காண்கின்றான். அவள் நலம் பாராட்டக்கருதிய அவன், "அவள் இடையோமிகவும் மெல்லியது; அதனை எண்ணாமல் அவள் பெற்றோர், இடையைவருத்தி மெலி வித்துப் பெருத்திருக்கும் மார்பின் மேல் மணிமாலைசூட்டி, அல்கு லிடத்தே ஆடையணிந்துவிட்டனர்; இவற்றின் சுமை தாங்காது இடை மிகவும் மெலிந்து துவண்டோழிந்தது; இனி, பூவின் இதழ் தங்கினும் அது தாங்காமல் ஓடிந்து விழும் என்பது கருதாது பூக்களைக் கூந்தலில் அணிந்துள்ளனர் நின் பெற்றோர்; நின் இடைக்கும் இளையவர்க்கும் அவர்கள் பகை கொண்டவரோ? கூறுக" என்பான், அவள் பெற்றோரைப் பழிப்பது போலப் புகழும் கருத்தை உட்கொண்டு, "அடைக்கும் கதிர்மணி ஆரம் முலைக்கணிந்து அல்குல்மெல்லம் புடைக்கும் கலைபுனைந் தோதியிற் போது பொதிந்துவிட்டார் விடைக்கும் உமைக்கும் நற்பாகன் சிராமலை மெல்லியலீர் இடைக்கும் இளையவர்க்கும் பகையோ நும்மை ஈன்றவரே"2 என்று இயம்புகின்றான். பின்னர் இருவரும் மணம் செய்துகொண்டு மனை வாழ்க்கை நடத்தி வருகையில், அவ் விளையோன் வினைமேற்கொண்டு பனிக் காலத்தே வருவன் எனக் கூறிப்பிரிந்தான். பனிப்பருவம் வருதலும் அவள் வருத்தமுற்று வருந்தும் திறத்தை நம் வேம்பையர்கோன், அவள் கூற்றில் வைத்து, "பனிப்படம் போர்த்தனள் பார்மகள் யானும் பசலையென்னும் துனிப்படம் போர்த்து இங்குத்தேன் அங்குத்தார் அன்பர் துங்கக் கைம்மா முனிப்படம் போர்த்த பிரான் சிராப்பள்ளி மூடிக்கொண்மூத் தனிப்படம் போர்க்கும் பருவமன்றோ வந்து சந்தித்ததே"1 என்று கூறுவது மிக்க இன்பம் தருகிறது. இனிப் புறத்துறையில் மகள்மறுத்துரைத்தல் என்பது ஒன்று. உலகில் பெண் பெற்றோர்பால் மகட்கொடை வேண்டுவதும், பெற்றோர் இசைந்து கொடை புரிவதும், இசையாது மறுத்தலும் இயல்பு. மகள் மறுத்தவழி, மகட்கொடை வேண்டினோர் வலியராயின் போர்தொடுத்தாலும், மெலியராய் இகழ்ந்த வழி மறுத்தோர் போர்மேற்சேறலும் உண்டு. அதனால் இது புறத்துறையில் அடங்கிற்று. ஒருகால் ஒருவர் மகட்கொடை வேண்டித் தூது விட்டாராக, மறுக்கும் பெற்றோர் கூற்றில் வைத்து, நம் நாராயணனார், "மடக்கோல் வளையிடத்தான் சிராமலை வாழ்த்தலர்போல் படக் கோனிலமன்னர் பாவையைப் பேசிப் பரிசமிட்டார் விடக்கோ கிடந்தன"2 என்று கூறுவது அவரது மறமாண்பை நாம் அறியக் காட்டுகிறது. இன்சொல் விளையாட்டு இனிய சொல்லும் பொருளும் அமைத்துப் படிப்போர் கேட் போர் உள்ளத்தில் நகையும் உவகையும் தோன்றப் பாடுவது இம்முறையில் அடங்கும். சிவன் திரிபுரத்தை எரித்த காலையில் அம்பாய்ப் பயன்பட்டது நெருப்பு; மன்மதன் அவர்மேல் மலரம்பு தொடுத்துக் காமப்போர் தொடுத்த போது அவருடைய கண்ணிடத்துப் பிறந்த தீயே அம்பாய் அவனைத் தாக்கிச் சுட்டெரித்தது. சிவனேயாயினும் வேறு யாவனே யாயினும் போர் மேற்கொண்ட விடத்து மகளிரைக் கொல்வது நன்றன்று. திரிபுரத்து அசுரர் பாவிகளாய்ப் பிறர்க்குத் தீங்கு செய்தொழுகினமை கண்டு சிவன், தமது எரியம்பு செலுத்தி அவர்கள் புரத்தையழித்துக் கொன்றது ஒக்கும்; ஆயினும் அவர்களுடைய தேவியர் பெண்களானதால் அவர்களை அந்த அம்பு எரித்தமையின் யாம் அச் சிவபெருமானை நல்லன் என்று சொல்லுதற் கில்லை" என்பாராய், "பாவிய ராகப் புரத்திற் பட்டார்பசும் சந்தனத்தின் நாவிய ராவும் சிராமலை யானையும் நல்லன் என்னாம் ஓவிய ராலும் எழுதப் படாவுரு வத்தசுரர் தேவிய ராவியும் கொண்டதன் றோவவர் செஞ்சரமே" 1 என்று பாடுகின்றார். சிவன் கண் திறந்து நோக்கி மன்மதனை எரித்த காலத்தில், அவன் மனைவியான இரதி போந்து கைகுவித்து நின்று ஓலமிட்டழுதாள்; அப்போது சிவன் அவளைப் பார்த்திருந்தான். ஆனால், கண்ணில் தீப்பிறந்து அவளைச் சுட்டெரிக்கவில்லை; அதற்குக் காரணம் காதலால் உளங் கலந்தவரைப் புணர்க்க யாம் அவர் மீது அம்பு எய்யாம் என்பாயாயின் கணவனை யிழந்த மகளிர் எரிமூட்டி அதன்கண் வீழ்ந்து மாள்கின்றது ஏன் என வினவுவார் போல், "சரம்கலந் தோரைப் புணர்விக்க எய்யாம் என்றாற் கணவன் நிறம்கலந்து ஓடெரி சேர்கின்ற வாறுஎன்? சிராமலையாய், இரங்கல் அந்தோ இலையால் வினையேற்கு என்று இரதி மண்மேல் கரம்கலந்து ஓலிடக் கண்ட தன்றோநின் கண்மலரே" என்று வேம்பையர்கோன் கேட்கின்றார். மன்மதனைக் கண்ட கண் அவனை எரித்தழிக்க, இரதியைக் கண்டபோது அது செய்ய வில்லையே; ஒருகால் நீ அவள் துயரத்தைக் காணாது போயினையோ என்றொரு நயம் தோன்றுமாறு "இரதி மண்மேல் கரம் கலந்து ஓலிடக் கண்டதன்றோ நின் கண்மலர்" என்பது அமைந்துளது. பிறிதோரிடத்தில் வேம்பையர்கோன் சிவனுடைய செல்வச் சிறப்பைக் கூறுகின்றார். "நெஞ்சே, சிவபெருமானுக்கு மனைவி கங்கை; இல்லம் தில்லையம்பலம்; அவன் பிறர்பால் சென்று ஏற்பது ஐயம்; அவனது ஊர்தி ஆனேறு" என்று கூறுபவர் பழிப்பதுபோல, "வேறுகண்டாய் நெஞ்சமே தளரேல் விளைமாங்கனியின் சேறுகண் டார்உண் சிராமலை யாதிதன் செல்வம் சொன்னால் ஆறுகண் டாய்அவன் தேவி, இல் அம்பலம், ஏற்பது ஐயம், ஏறுகண்டாய் அவன்ஏறிப் பல்காலம் இயங்குவதே"1 என்று இசைக்கின்றார். யான் கூறுவது சிவபெருமானைப் பழிப்பது போலத் தோன்றினும் பொருள் அவனைப் புகழ்வது என்பார் "நெஞ்சமே, வேறு கண்டாய் தளரேல்" என்ற சொற்கள் குறிக்கின்றன. முந்து நூற் கருத்துக்கள் வேம்பையர்கோன் நாராயணனா ருடைய பாட்டுக்களைப் படிக்கும்போது முன்னைய நூலோர் கருத்துக்கள் பல நம் நெஞ்சில் எழுகின்றன. "இயங்கிய காலும் நிலனும் எரியும் இருவிசும்பும், மயங்கிய நீரும்"2 என்பது தொல்காப்பியத்தில் வரும் "நீலந் தீநீர் வளி விசும் போடைந்தும் கலந்த மயக்கம் உலகம்"3 என்ற நூற்பாiம், "தொடரிடையாத்த ஞமலியைப் போலிருந்தேன் இச் சுற்றத்திடரிடை யாப்பவிழ்த்து என்னைப் பணிகொள்"4 என்பது "தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளீர்"5 என்ற புறப்பாட்டடி களையும், "அடியேனுக்கு இம்மைப்பொருள் செய்து உதவும் புதல்வரைத் தந்து"1 என்பது,"தம்பொருள் என்ப தம் மக்கள்"2 என்ற குறப்பாவையும்,"திருமலைத் தத்துவன்தாள் முயங்கிய சிந்தை யினார்கள் எந்நாளும் முடிவிலரே"3 என்பது, "பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார் நீடுவாழ்வார்"4 என்ற குறட்பாவையும் நினைப்பிக்கின்றன. "சிராப்பள்ளிச் சிவனுக்கு அன்பாய் உள்ளலுக்கு நன்று நோற்றதன்றோ என்று உணர்நெஞ்சமே"5 என்பது, திருஞான சம்பந்தர் பாடிய திருவலஞ்சுழித் திருப்பதிகத்தில், வலஞ்சுழி வாணனைப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனால் "என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே"6 என்ற திருப்பாட்டையும், "முக்கட்சுடரைத் தனிச்செல்வனைப் பணிந்து உள்ளமிர்து ஊறித் தடித்தனமே"7 என்றது, "சிந்திப்பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன"8 என்ற திருநாவுக் கரசரின் அனுபவவுரையையும், "உறைவாய் சிராமலை யுள்ளும் என் சிந்தையினுள்ளும் என்றும், பிறைவாய் மழுவாட் பெரியவனே"9 என்பது, "சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான்"10 என்ற திருப்பாட்டையும் உட்கொண்டு இலங்குகின்றன. அரிய சொல்லாட்சிகள் மீளப் பிரியாவாறு கலந்த தொன்றைக் கூறுதற்கு இரும்புண்ட நீர் என்றும் சொற்றொடரை எடுத்தோதுவது புறப்பாட்டுக் காலத் திருந்தே வரும் மரபு. "இரும்புண் நீரினும் மீட்டற் கரிது"11 என வருவது காண்க. அதனைப் பின்பற்றித் தலைவனைக் கூடிய தலைவியை, "இரும்பிடைச் சேர்ந்த தெண்ணீரவள்"12 என்று கூறுகின்றார். அகம் சிவந்த புறம் வெண்டுகள் பரந்த பொருளை நீறு பூத்த நெருப் பென்பது வழக்கு; அகவிதழ் சிவந்து புறவிதழ் வெளுத்திருக்கும் குரவமலர்க்கு இதனை உவமமாக்கி "அழலின் புறத்து வெண்ணீறு ஒத்தன நம் அணிவளையார் குழலும் அளகமும் பெய்யக் கொய்யாத குராமலரே"13 என்றும் குறிக்கின்றார். எல்லென்னும் இடைச்சொல் இலங்குதல் என்னும் பொருள் தருவது; "எல்லே இலக்கம்"1 என்பது தொல்காப் பியம்; இது பெரும்பாலும் "எல்வளை" எனப் பெயர்களைச் சிறப்பித்து நிற்குமேயன்றி வினையாதல் இல்லை; "எல்லின்று" என வினையாங் கால் விளக்கம் குன்றிற்று என்ற பொருள்பட வரும்; "ஏகுதி மடத்தை எல்லின்று பொழுதே"2 எனச் சான்றோர் வழங்குவது காண்க. நம் நாராயணனார், அதனை எல்லும் என வினைப்படுத்து விளங்கும் என்ற பொருள்பட "எல்லும் கனைகழலின் குணம் பாரித்த என்கவியே"3 என வழங்குகின்றார். அங்க இங்கு என்ற சொற்கள் அங்குத்தை இங்குத்தை என மருவிநிற்கும் வழக்கொன்று பிற்காலத்தே தோன்றிற்று. "குயிலே இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்"4 என்பது காண்க. அதனைப் படர்க்கைக்கண் அங்குத்தார் என்றும் தன்மைக் கண் இங்குத்தேன் என்றும் நிறுத்தி, "யானும் பசலை யென்னும் துனிப்படம் போர்த்து இங்குத்தேன் அங்குத்தார் அன்பர்"5 என நம் வேம்பையர்கோன் உரைக்கின்றார். மகளிர் மூக்குக்குக் குமிழ்மலரை யுவமம் கூறுவது பண்டை நூல் வழக்கு; எட்பூவைக் கூறுவது மிகமிக அருகி வருவதொன்று. அதனை எடுத்து. "கண்மலர் நீளம் கனிவாய் பவழம் கருங்குழல்கார் எண்மலர் மூக்கு இளங் கொங்கைகள் கோங்கு இடையென்வடிவு என் உண்மலர் ஆசையின் ஒப்புடைத்து அல்குல்ஒண் பொன்மலையான் தண்மலர் சேர்தனிச் சங்கிடுவாள் ஒரு பெண் கொடிக்கே"6 என்ற பாட்டின்கண் எண்மலர் மூக்கு என்று குறிக்கின்றார். எள்ளை எண் ணென்றல் இயல்பு. இந்நூல் எழுதுவதற்கு உதவியாயிருந்த ஆங்கில நூல்கள் Administration and Social life under the Pallavas: Dr.C. Meenakshi An Epitome of Jainism Annual Reports of the Madras Epigraphy 1908-1938 Archelogical Report of Mysore 1909-1910 Beal Records : Vol. ii: Watters Bulletin of the Rama Varma Research Institute : Vol. Vii Bulletin of the School of Oriental Studies, London Cholas : K. A. NILAKANTA SASTRI District manual: MADURA Edicts of Asoka Encyclopedia Brittanica Tamils Epigraphica Carnatica Epigraphica Indica Indian Antiquary xxxii Indian Culture through Ages Indian Historical quarterly: Vol. xxvi Inscriptions of the Madras Presidency: RANGACHARYA Inscriptions of the South Districts: MACKENzIE COLLECTIONS Journal of the Annamalai University Journal of Bombay Branch of Royal Asiatic Society Journal of Sri Venkateswara oriental Research Institute Tirupati Lif of Hieun Tsang: BEAL List of Villages in the Madras Presidency Madras Christian College magazine 1893 Malabar : W. LOGAN Origin and early history of Saivism in S. India Pallavas of Kanchi: A. GOPALAN Pudukkotta State Inscriptions South Indian Inscriptions: Vol. i to xii Studies in S. Indian Jainism Tamilian Antiquary III Tamil Literature: M.S. POORNALINGAM Tamil Studies : M. SRINIVASA IYENGAR Tamils Thousand Eight Hundred Years Ago Tanjore gazetteer: Vol. I The Pallavas : PROF.J. DUBREIL The Peoples in the East Indies : VANBOROUGH Thesis on மூவர் தேவாரம் : K. VELLAI VARANAM Thesis on தேவாரமும் பெரிய புராணமும்: K. VELLAI VARANAM Travancore Archeological series: Vol. iii Travancore State manual Triennial Catalogue of manuscripts collected during 1910- 11, 1912-13. Vaishnavism :DR. BHANDARKAR  இவ்வரலாற்றுக்குத் துணை செய்த தமிழ் நூல்கள் அகநானூறு அவ்வையார் - அனவரத விநாயகம் பிள்ளை ஆழ்வார்கள் காலநிலை - மு. இராகவையங்கார் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை - நம்பியாண்டார் நம்பி ஆளுடைய பிள்ளையார் திருவுலாமலை - மேற்படி இரத்தினத் திரையம் இலக்கி வரலாறு - கா. சுப்பிரமணியப் பிள்ளை ஐங்குறு நூறு ஒளவையார் சரித்திரம் கடம்பவன புராணம் கண்டராதித்தர் திருவிசைப்பா கல்லாடம் கலிங்கத்துப் பரணி கலைமகள் (தொகுதி) குலோத்துங்க சோழன் உலா மேற்படி பிள்ளைத்தமிழ் குறுந்தொகை கொங்குமண்டல சதகம் கோயில் திருப்பண்ணியார் திருவிருத்தம் கோயில் நான்மணி மாலை சாசனத் தமிழ்க் கவி சரிதம் - மு. இராகவையங்கார் சிராமலை யந்தாதி - வேம்பையர்கோன் நாராயணன் சிலப்பதிகாரம் சிவஞானமா பாடியம் சீவக சிந்தாமணி சுந்தரபாண்டியம் சுந்தரர் தேவாரம் செந்தமிழ் (தொகுதி) செந்தமிழ்ச் செல்வி (தொகுதி) சேந்தனார் திருப்பல்லாண்டு சேந்தனார் திருவிசைப்பா சோமேசர் முதுமொழி வெண்பா - சிவஞான முனிவர் சௌந்தரியலகரி - சங்கரர் ஞானக்குறள் ஞானவுலா - சேரமான் பெருமாள் ஞானாமிர்தம் - வாகீச பண்டிதர் தக்கயாகப் பரணி - ஒட்டக்கூத்தர் தணிகைப் புராணம் - கச்சியப்பர் தமிழ் நாவலர் சரிதை - ஒளவை. சு. துரைசாமி (பதிப்பு) தமிழ்ப் பெருமக்கள் வரலாறு - அனவரத விநாயகம் பிள்ளை தமிழ்ப் பொழில் (தொகுதி) தமிழ் வரலாறு - K. சீனிவாசப் பிள்ளை தனிச் செய்யுட் சிந்தாமணி திருக்கழுமல மும்மணிக்கோவை திருக்குறள் திருக்கோவையார் - மாணிக்க வாசகர் திருஞான சம்பந்தர் தேவாரம் திருஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம் திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) - சேக்கிழார் திருநாரையூர்த் தல புராணம் மேற்படி விநாயகர் இரட்டை மணிமாலை திருநாவுக்கரசர் தேவாரம் திருப்பாவை - ஆண்டாள் திருப்பாவை வியாக்கியானம் திருப்பெருந்துறைப் புராணம் (பழையது & புதியது) திருமுறைகண்ட புராணம் திருவாசகம் :அச்சப்பத்து திருவாசகம் அடைக்கலப் பத்து திருவாசகம் அதிசயப் பத்து திருவாசகம் அருட் பத்து திருவாசகம் அற்புதப் பத்து திருவாசகம் அன்னைப் பத்து திருவாசகம் ஆசைப் பத்து திருவாசகம் ஆனந்த மாலை திருவாசகம் உயிருண்ணிப் பத்து திருவாசகம் கண்ட பத்து திருவாசகம் கீர்த்தித் திருவகவல் திருவாசகம் குயிற் பத்து திருவாசகம் குலாப் பத்து திருவாசகம் குழைத்த பத்து திருவாசகம் கோயின் மூத்த திருப்பதிகம் திருவாசகம்: சிவபுராணம் திருவாசகம் செத்திலாப் பத்து திருவாசகம் சென்னிப் பத்து திருவாசகம் திருக்கழுக்குன்றப் பதிகம் திருவாசகம் திருக்கோத்தும்பி திருவாசகம் திருச்சதகம் திருவாசகம் திருத்தெள்ளேணம் திருவாசகம் திருத்தோணோக்கம் திருவாசகம் திருப்பாண்டிப் பதிகம் திருவாசகம் திருப்பூவல்லி திருவாசகம் திருவம்மானை திருவாசகம் திருவார்த்தை திருவாசகம் திருவெம்பாவை திருவாசகம் திருவேசறவு திருவாசகம் நீத்தல் விண்ணப்பம் திருவாசகம் பண்டாய நான்மறை திருவாசகம் பிடித்த பத்து திருவாசகம் பிராத்தனைப் பத்து திருவாசகம் போற்றித் திருவகவல் திருவாசகம் யாத்திரைப் பத்து திருவாசகம் வாழாப் பத்து திரவாசக விரிவுரை - மறைமலையடிகள் திருவாதவூரர் புராணம் திருவாரூர் மும்மணிக்கோவை திருவாலவாய்த் திருவிளையாடல் திருவிசைப்பா திருவிடைமருதூர் மும்மணிக் கோவை திருவிருத்தம் - நம்மாழ்வார் திருவிளையாடற் புராணம் - பரஞ்சோதியார் திருவுத்தர கோசமங்கைத்தல புராணம் திருவெண்காட்டடிகள் சரித்திரம் - தொழுவூர் வேலாயுத முதலியார். திருவெண்காடர் சரித்திரம் திருவேகம்ப முடையார் திருவந்தாதி திருவொற்றியூர் ஒருபாவொருபஃது தொண்டைமண்டல சதகம் தொல்காப்பியம் - பாயிரம் மேற்படி பொருளதிகாரம் நந்தமண்டல சதகம் நந்திக் கலம்பகம் நம்பியாண்டார் நம்பி - திருத்தொகை நல்வழி நற்றிணை நன்னூல் நாலாயிரப் பிரபந்தம் பட்டினத்தடிகள் வரலாறும் நூல்களும் - கா. சுப்பிரமணியப் பிள்ளை பட்டினத்துப் பிள்ளையார் புராணம் மேற்படி பிரபந்தத் திரட்டு பதிற்றுப் பத்து பரிபாடல் பழமொழி நானூறு பன்னிருபாட்டியல் பன்னிரு புலவர் சரித்திரம் பாண்டியர் வரலாறு - T.V. சதாசிவப் பண்டாரத்தார் பாரத வெண்பா - பெருந்தேவனார் பாவலர் சரித்திர தீபகம் பிற்காலச் சோழர் சரித்திரம் - T.V. சதாசிவப் பண்டாரத்தார் புலவர் புராணம் புறநானூறு பெரிய புராண ஆராய்ச்சி - Dr. M. இராசமாணிக்கனார் பொன் வண்ணத் தந்தாதி - சேரமான் பெருமாள் மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார் மத்த விலாச பிரகசனம் - முதன் மகேந்திரவன்மன் மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார் மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - மறைமலையடிகள் முத்தொள்ளாயிரம் முருகாற்றுப் படை - நக்கீரனார் மூதுரை யாப்பருங்கல விருத்தி யாழ்நூல் - சுவாமி விபுலானந்தர் விநாயகரகவல் வீரசோழியம் வெண்பாப் பாட்டியல் வைசிய புராணம் வைத்திய நிகண்டு க்ஷேத்திரத் திருவெண்பா - ஐயடிகள் காடவர்கோன்  அரும்பொருள் அகரநிரல் (எண் - பக்கங்கள்) அ அகச்சமயக்குறிப்பு 86 அகத்தியனார் 389 அகப்பூசை புறப்பூசைகள் 138 அகப்பொருட் பாட்டுக்கள் 138 அகபொருனெறி 439 அகர முதல் 99 அங்கதர் இயல்பு 85 அங்குத்தார் 447 அசதி 390,401 அசோக மன்னர் கல்வெட்டுக்கள் 86 அசோகன் 86 அட்டமி விழா 157 அடியார் சுரநோய் நீங்கியது 42 அந்தகக் கவி வீரராகவனார் 395 அந்தணர் என்போர் 428 அந்தாதி பாடிய காரணம் 252 அபயகுலசேகர சோழராசன் 416 அபயன் என்ற பெயர்ஆராய்ச்சி 417 அபராஜிதன் 11,388 அம்பலத்தாடி 410 அம்பாவாடல் 345 அம்பெரிந்த பெருமான் 107 அம்மையப்பன்- மும்மூர்த்தி 256 அமண இயல்பு அமர்நீதியார் 148 அயோத்தியர் இறை 436 அரிகேசரி 11,597 அரிகேசரி நல்லூர் 297,298 அரிகேசரீச்சுரம் 298 அரியலூர்ச் சமீன்றார்கள் 396 அருணகிரிநாதரை 358 அவனி சூளாமணி 12 அவையார் குப்பம் 394 அறிஞர் ஹூல்ஷ் 55 அறிவுரை வழங்கல் 219 அறுசமயக்குறிப்பு 133 அனவரத விநாயகம் பிள்ளை 290 ஆ ஆகமசீலர் 205 ஆகமப் பிரியன் 201,205107 ஆட்சி கொண்ட நாயனார் ஆண்பனை பெண் பனையானது 47 ஆணைநமதென்ற பெருமாள் 101,425,420 ஆத்திசூடி 402 ஆதித்தன் என்பார் இருவர் 420 ஆதித்தன் கரிகாலன் 420 ஆதிரை விழா 44,157 ஆந்திர நாட்டுச் சங்கா ராமங்கள் 14 ஆய்ப்பாடி ஆயர் 395 ஆய்ப்பாடி கோபால வமிசத்தார் 395 ஆரம்பர் இயல்பு 85 ஆரியநாடு 407 ஆருகதம் 293 ஆரூரர் ஆரூரில் கண் பெற்றது 189 ஆரூரர் ஊன்றுகோல் பெற்றது 189 ஆரூரர் கயிலாயம் சேறல் 194 ஆரூரர் காட்டும் நாடுகள் 211 ஆரூரர் குறிக்கும் புராணச் செய்திகள் 207 ஆரூரர் சேரமான் தோழரானது 191 ஆரூரர் தடுத்தாட் கொள்ளப் பெறுதல் 183 ஆரூரர் தில்லைக்குச் செல்லுதல் 184 ஆரூரர் பாடிய திருப்பதிகள் 210 ஆனரபிள் குமாரசாமி 54 இ இங்கிதப் பாட்டுக்கள் 142 இங்குத்தேன் 447 இசை, எண்ணெழுத்துக் களோடு சேரநிற்றல் 134 இடபக்குறியிடல் 158 இடவை நல்லாள் 311 இடுபலியுண்ணி 91 இரண்டாம் இராச சிம்மன் 299 இரண்டாம் வரகுணன் 299,296 இரணதீரன் 299 இரணரசிகன் 12 இரணிய வன்ம மகாராசர் 9 இராகவையங்கார். மு. 278,248,297 இராச சிம்ம பாண்டியன் 13 இராச சிம்மன் - iii. 14 இராசராச அபயகுலசேகரன் 418 இராசராச சோழன் உலா 421 இராசராச மன்னவன் 416 இராச மார்த்தாண்டன் 384 இராமசாமி சாஸ்திரி 293,289,291 இராமநாதையர் குறிப்பு 248 இராமாயணக் குறிப்பு 79 இராமேச்சுரம் 210 இராஜ ரத்நாகரி 295 இராஜ விகாரம் 17 இரும்புண்ட நீர் 446 இருவினை யொப்பு 330 இளங் கிள்ளி 17 இளங்கிளைப்பாவை 108 இளங் குழந்தைகளின் கூட்டுறவு 336 இளம்பூரணர் 391 இளமுலை நாச்சி 108 இறைபணி நிற்கும் திறம் 320 இறையனார் அகப்பொருள் 295,435 இறைவன் அருணலம் கூறல் 436 இறைவன் ஆகமம் மொழிதல் 205 இறைவன் உடனாய் நிற்றல் 204 இறைவனது திருச்சிலம் போசை 241 இறைவன் நடம்புரியும் கருத்து 325 இறைவனை யாரூரர் தூதுவிடல் 196 இன்சொல் விளையாட்டு 443 இன்னஸ் 289 உ உடல் வாழ்வு 254 உடையார்குடிக் கல்வெட்டு 420 உண்ணா நோன்பு 118 உண்ணிய ஈசர் 97 உத்தம சோழன் 406 உத்திர விழா 157 உமாபதி சிவாசாரியார் 417 உய்யக் கொண்டார் 302 உலோக விபாகம் 20,21 உலகாயதம் 292 உள்ளுறுத்துரைக்கும் 218 உறந்தைப்பதி 429 உறையூர் 429 ஊ ஊன்றுகோல் பெற்றது 196 எ எங்கித்தது 425 எண் மலர் 447 ஏ ஏகாத்மவாதம் 292 ஏயர்கோன் கலிக்காமர் 191 ஏனாதி - சொற்குறிப்பு 279 ஏனாதி மோதிரம் 273 ஐ ஐக்கிய வாதம் 88 ஐந்திரம் 162 ஐயடிகள் நூலாராய்ச்சி 177 ஐயாற்றில் கயிலைகர்டசி 119 ஐயடிகள் காடவர் கோன் 172 ஐவேல் அசதி 395 ஐவேலி 394 ஒ ஒட்டக்கூத்தர் 390 ஒப்பிலாத மழவ ராயர் 396 ஒன்பதாந் திருமுறை 407 ஓ ஓங்கு கோயில் 106 ஓள ஓளவை அந்தாதி பாடியது 393 ஒளவைக்குறள் 405,390 ஒளவைப் பாட்டி 392 ஒளவைப் பாடிய நூல்கள் 400 ஒளவையார் இருவர் 391 ஒளவையார் நல்லப்பணி 392 ஒளவையார் பந்தனந்தாதி பாடியது 393 ஒளவையார் பொற்படாம் பெற்றது 394 ஒளவையார் வரலாற்றாராய்ச்சி 396 ஒளவையார் வரலாறு 390 க கங்க நாடு 407 கச்சூரில் சுந்தரர் சோறளிக்கப் படுதல் 188 கடம்பந்துறை 179 கடிகையின் பாதுகாப்பு 29 கடிகையின் வீழ்ச்சி 29 கடிகை ஸ்தானம் 30 கண்டராதித்தர் 406,407,410 கண்டராதித்த விடங்கர் 407 கண்ணப்பர் 147 கண்ணாங்கிலோ 425 கணம்புல்லர் 147 கணையல் 97 கந்த சிஷ்யன் 11 கம்பர் 190 கம்பவன்மன் 11 கயவாகு 11 கயிலாசநாதர் கோயில் 55 கரவந்தபுரம் 298 கல்லாடம் என்னும் நூல் 313 கல்வி ஒழுக்கம் 401 கல்வெட்டு வெளியீடு 430 கலியாணி 416 கலம்பக வரலாற்றராய்ச்சி 383 கவியோகி 426 கவி வீரராகவன் 396 களப்பிரர் 8 கன்மிதப்பில் கடல் கடத்தல் 114 கனகசபைப் பிள்ளை வி. 405 கா காசாக்குடிச் செப்பேடுகள் 28 காஞ்சிக் கடிகை 28 காஞ்சிமாநகர் 15 காஞ்சியாறு 212 காஞ்சியில் ஆரூரர் கண் பெற்றது 196 காடவர் - சொற்குறிப்பு 174 காடுவெட்டிகள் 175 காதற்றவூசி கதை 355 காந்தி புராணம் 96 காந்தியடிகள் 119 காபாலி 86 காவிரிப்பூம்பட்டினம் 393 காவிரிப் பெருக்கு வழிவிட்டது 192-3 காளாமுகம் 86 கி கிருஷ்ணைய மழவராயர் 396 கீ கீத் 293 கு குகையிடி கலகம் 105 குடந்தை 179 குடவனாறு 212 குடுமியான் மலைக் கல்வெட்டு 94 குண்டர் இயல்பு 85 குண்டூர் 429 குண்டையூர் நெல் வரலாறு 185 குணபரேச்சுரம் 115,121 குந்தவை 421 குப்பம் 394 குமணமலை 211 குமரி தீர்த்தம் 157 குயிலுவர் 392 குலசேகரனாம் கோன் 416 குலோத்துங்க சோழன் 417 குழித்தண்டலை 179 குளித்தெழுந்த நாயனார் 166 குறிஞ்சிக் காட்சி 213 கூ கூடலையாற்றூர் நிகழ்ச்சி 187 கூடி (Guide) 290 கை கைதல் வேலி 98 கையாங்கிலோ 425 கொ கொங்கன் விளக்கு 157 கொங்கு தண் குமரி 157 கொங்கு நாடு 8,407,410 கொங்குவேளிர் 96 கொண்டூர் 429 கொற்கை கிழான் காமக் காணி நற்சிங்கன் 275 கோ கோச்சடையன் ரணதீரன் 12 கோட்புலியார் 185,196 கோதையரசர் 244 கோபிநாதராயர் 198,290 கோயில்களில் வடமொழி யாதரவு 28 கோயிற் றிருப்பண்ணியர் விருத்தம் 423 கோவணிகன் 394 கோவிந்தசாமிப்பிள்ளை 248 கோவைக்கும்வாசகத்துக்கு முள்ள ஒப்புமை நலம் 326 கோவை நூற் சிறப்பு 324 கோவையார் 284,295,323,326 கோழி வேந்தன் 410 ச சங்ககால வேந்தர் தமிழ் பேணிய திறம் 25 சங்கரர் 54,293 சங்காதேவி 380 சங்கிலியார் திருமணம் 189 சடையவன்மன் பராந்தக பாண்டியன் 14 சண்டேசுரர் 146 சதாசிவப் பண்டாரத்தார் 198,248,297,323,419 சதுர்வேதி மங்கலம் 393 சதுரானன பண்டிதர் 33 சந்திரசேகர நம்பி 416 சந்திரபிரபா கோயில் 23 சந்திராதித்தன் 11 சம்பந்தர் அடியார் வரலாறு கூறல் 80 சம்பந்தர் அறவுரை பகர்தல் 76 சம்பந்தர் உட்கோள் 72 சம்பந்தர் உயிரியல் புகூறல் 72 சம்பந்தர் காட்டும் பழைய நூற்குறிப்பு 92 சம்பந்தர் காலச் சான்றோர்கள் 80 சம்பந்தர் காலத்து வேற்றுச் சமயக்குறிப்பு 82 சம்பந்தர் ஞானப் பாலுண்டது 40 சம்பந்தர் பதிகம் பாடிய காரணம் 70 சம்பந்தர் வரலாற்றாராய்ச்சி 76 சம்பந்தர் வழங்கும் அருஞ்சொல்லாட்சிகள் 97 சமண் சங்கத்தின் வீழ்ச்சி 22 சமணம் 292 சமய வழக்கங்கள் 158 சயாம் நாட்டில் திருவெம்பாவை 347 சருவநந்தி 21 சளுக்கி வேந்தர் 9 சா சாக்கிய நாயனார் 146 சாக்கியர் 84 சாத்திஞ் சாத்தன் வடமொழியறிவு 277 சாதிப்பிரிவுகள் 428 சிங்களநாட்டு மகாவமிசம் 16 சிங்களவர் 8 சித்தவடமடத்து நிகழ்ச்சி 195 சித்திரகவி 111 சிந்துபூந்துறை 110 சிம்மசூரி 21 சிம்மவன்மன் 11.22 சிம்ம விஷ்ணு 11,201 சிராப்பள்ளி 432 சிராமலை 431 சிராமலை யந்தாதி 432 சிலப்பதிகாரம் 96 சிவசூடாமணி 201 சிவஞான கண்டராதித்தர் 407 சிவஞான சம்பந்தத் தலைக்கோலி 101 சிவஞானம் 407 சிவத்தொண்டர் இயல்பு 135 சிவநெறி தென்னாட்டுக் குரியது 24 சிவபாத விருதயர் தவம் 39 சிவபெருமான் திருவாசகம் எழுதியது 284 சிவமாக்குதல் 330 சிவவொளியில் மணிவாசகர் கலத்தல் 285 சிவன் பிரம்படி பட்டது 283 சிவனடியார் சிறப்பு 92 சிற்றண்ணல் வாயில் 389 சிறுத்தொண்டர் விருந்து 43 சிறுதெய்வக் கொள்கை 440 சீ சீபருப்பதம் 211 சீமாறன் சீவல்லபன் 13 சீர்காழி நெய்தற்காட்சி 89 சீராள தேவரைப் பற்றிய குறிப்பு 61 சீருத்திரம் 414 சீலபத்திரர் 17 சீனிவாசப் பிள்ளை 56,123,248,298,311 சீனிவாசய்யங்கார் 295 சு சுத்தாத்துவித நிலை 74 சுந்தரம் பிள்ளை 54 சுந்தரர் என்னும் பெயர்க் குறிப்பு 236 சுந்தரர் காட்டும் இயற்கைக் காட்சி 212 சுந்தரர் சொல்நலம் 225 சுந்தரரும் சேரமானும் பாண்டி நாடு சேறல் 192 சுப்பிரமணியப் பிள்ளை கா. 124,197,289,358 C.K சுப்பிரமணிய முதலியார். 289 சுவாமி விபுலாநந்தர் 94 சுறாமீன் கதை 359 சூ சூடாமணி நிகண்டு 292 சூரிய நாராயண சாஸ்திரி 289 சூலக் குறியிடல் 158 சூலைநோய் நீங்குதல் 113 செ செந்தமிழ்க் கீதம் 91 செம்பியன்மா தேவி 406 செழியன் சேந்தன் 11 சென்ன பட்டினம் 407 சேந்தனார் சிறை யிடப்படல் 356 சேந்தனார் தந்த பழைய அவிழ் 424 சேந்தனார் திருப்பல்லாண்டின் சிறப்பு 378 சேந்தனார் நூல்களின் ஆராய்ச்சி 373 சேந்தனார் பாடிய நூல்கள் 372 சேந்தனார் வரலாற்றாராச்சி 370 சேந்தனார் வரலாறு 370 சேய்ஞலூர் 429 சேரநாடு 240 சேரமான் இங்கிதப்பாட்டு 268 சேரமான் கயிலை சென்றது 242 சேரமான் நூல்களின் ஆராய்ச்சி 248 சேரமான் பாண்டியநாடு சென்றது 241 சேரமான் பொன்னைக் கள்வர் கவர்தல் 193 சேரமான் மும்மணிக் கோவை 242 சேரமான் வரலாற்றாராய்ச்சி 243 சேஷையர் 289 சை சைவ இலக்கிய ஆசிரியர் நிரல் 37 சைவக் கோயில்கள் 25 சைவ சந்தானாசிரியர் 293 சைவ சித்தாந்தம் 329 சைவத் திருமுறை 3 சைவம் 329 சொ சொல் வரலாறு 428 சொன்னலம் காண்டல் 156 சோ சோழ நாட்டின் தலைநகர் 15 சோழ நாடு 8 சோழன் செங்கணான் 145 சோளிங்கபுரக் கடிகை 30 சௌ சௌந்தரியலகரி 54 ஞா ஞானசம்பந்தர் 446 ஞானசம்பந்தர் இறையியல்பு கூறல் 72 ஞானசம்பந்தர் ஓடம் செலுத்தியது 46 ஞானசம்பந்தர் திருமணம் 49 ஞானசம்பந்தர் நாவரசரைக் கண்டது 44 ஞானசம்பந்தர் பதிகப்பொருள் ஆராய்ச்சி 71 ஞானசம்பந்தர் வரலாற்றராய்ச்சி 51 ஞானசம்பந்தர் வரலாற்றுக்குறிப்பு 78 ஞானசம்பந்தரது வளர்ப்பு 39 ஞானசம்பந்தரைக் குறிக்கும் பெயர்கள் 101 ஞானசம்பந்தர் கல்வெட்டுக்கள் 100 ஞானநெறி 205 ஞானப்பொருள் சிவன் 205 ஞானாசிரியன் இறைவன் 205 த தக்கயாகப்பரணி 50 தகடூர் அதியமான் 391 தஞ்சையர் கோன் 410 ததாகதர் 16 தந்திவன்மன் 11 தம்பரிசுடைய நாயனார் 107 தம்பிரான் தோழர் 196 தமிழ்நாட்டுச் சைவக்கோயில் 25 தமிழ் பேணப்படாமை 34 தமிழ் வளஞ் சுருங்கினமை 36 தமிழ் வளர்த்த முறை 392 தமிழ் மூவர் 413 தரணிக்கோட்டை 15 தரிசனங்கள் ஆறு 389 தருமபாலர் 15,19 தனதரசன் 17 தா தாண்டகச் சதுரர் 134 தாண்டகச் சிறப்பு 134 தாண்டக வேந்தர் 130,134 தாமோதரம் பிள்ளை. சி 54 தி திக்க நாகர் 15,18 திகம்பர சமணம் 21 திகம்பர சயினம் 16 திகம்பர தரிசனசாரம் 20 திங்களூர் அப்பூதியடிகள் 116 திண்டிவனம் 393 தியான வாதம் 18 திராவிட நாடு 1 திராவிடப் பிராமணர்கள் 328 திராவிட வேதம் 100 திருக்கச்சி யேகம்பம் 408 திருக்கடைக் காப்பு 432 திருக்கண்டியூர் தோற்றம் 247 திருக்கயிலாய ஞானவுலா 262 திருக்கழுக்குன்றத்துக் கல்வெட்டு 35 திருக்கற்குடி 434 திருக்குடந்தை மருத்தன் 399 திருக்கை கோட்டி 105 திருக்கோவலூர் 400 திருச்சாழல் 349 திருச்சித்திரகூடம் 303 திருச்செங்கோடு 396 திருஞானசம்பந்தர் தல யாத்திரை 67 திருத்தங்கி 399 திருத்தணிகை 388 திருத்துருத்தியில் நோய் நீங்கல் 190 திருத்தொண்டத் தொகை பாடுதல் 185 திருத்தொண்டர் திருவந்தாதி அமைப்பு 426 திருத்தொண்டர் வரலாறு 415 திருத்தொண்டு 252 திருநாரையூர் 412 திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை 422 திருநாவுக்கரசர் காலம் 121 திருநாவுக்கரசர் மடங்கள் 168 திருநீலகண்டப் பாணனார் 41 திருப்பதிக ஆராய்ச்சி 68 திருப்பதிகச் செல்வாக்கு 171 திருப்பதிகப் பாட்டியல் ஆராய்ச்சி 94 திருப்பருதிக் குன்றம் 23 திருப்பழனம் 427 திருப்பனந்தாள் தாடகையீச்சுரம் 180 திருப்புகலூர் நிகழ்ச்சி 155 திருப்புறம்பயப் போர் 300 திருமயானம் 180 திருமலைக் கொழுந்து பிள்ளை 289 திருமாளிகைத் தேவர் 377 திருமுகப்பாசுரம் 241 திருமுறைகண்ட புராணக் குறிப்பு 416 திருமுறை கண்ட வரலாறு 413-14 திருமுறை யோதும் மரபு 178 திருமுறை வகுப்பு 129,415 திருமுனைப் பாடி நாடு 8,182 திருவஞ்சைக்களம் 240 திருவதிகை 153 திருவாசகம் பாடிய நெறி 319 திருவாசகம் வரலாறு 304-307 திருவாசகன் மடம் 353 திருவாதவூரடிகள் 281,446 திருவாதவூரடிகள் அறிவுரை 322 திருவாதவூரடிகள் காலம் 289 திருவாதவூரடிகள் குதிரை வாங்கப் போதல் 286 திருவாதவூரடிகள் குறிக்கும் முதுநூற்கருத்து 327 திருவாதவூரடிகள் குறிக்கும் ஊர்கள் 327 திருவாதவூரடிகள் சிறையிடப் படுதல் 283 திருவாதவூரடிகள் திருவாசகம் பாடிச் சென்றது 284 திருவாதவூரடிகள் திருவுருவம் 305 திருவாதவூரடிகள் பெயர்ச் சிறப்பு 352 திருவாதவூரடிகள் வரலாற்றாராய்ச்சி 285 திருவாதவூரரை நாடு போற்றிய திறம் 351 திருவாதிரை விழா 44,116 திருவாய்மூர் நிகழ்ச்சி 117 திருவாரூர்க் குளத்தில் பொன் எடுத்தது 187 திருவாரூர் மும்மணிக் கோவை 258 திருவிசைப்பா 411 திருவிடைவாய்க் கல்வெட்டு 65 திருவிதாங்கூர் நாடு 429 திருவெம்பாவை திருப்பாவை 345,346 திருவெருக்கத்தம் புலியூர் 415 திருவொற்றியூர் 154,434 தில்லைப் பெருங்கோயில் 152 தில்லை மூவாயிரவர் 409,435 தில்லையம்பலம் பொன் வேய்ந்தது 410,420 தில்லையம்பலம் வாழ் அந்தணர் திலகதிவதியாரின் அன்பு நெறி 113 திவாகரம் 292 தீ தீர்த்தங்கரர் 17 தெ தெமீட்டிரியஸ் 9 தெய்வஞ் சுட்டிய வாரப் பாட்டு 90 தெய்வீகன் 400 தெலாங் 293 தெள்ளாற்றுப் போர் 379 தெள்ளேணம் 348 தென்வேம்பை 429 தென்னவன் தமிழவேள் 389 தென்னவன் பிரமராயன் 281 தென்னாட்டு மடங்கள் 32 தே தேரர் 84 தேரவாதம் 18 தேவசேனர் 20 தை தைந் நீராடல் 345 தொ தொடித்தலை விழுத்தண்டினார் 108 தொண்டை நாடு 7 தொண்டை நாட்டு வேம்பில் 429 தொன்னூற் கருத்து 43 ந நக்கீரனார் 295 நச்சினார்க்கினியர் 403 நடு நாடு 7,429 நந்த நாடு 401 நந்தமண்டல சதகம் 401 நந்திக் கலம்பக ஆசிரியர் 383 நந்திக் வரலாறு 379 நந்திவன்மன் 11 நந்தி ஆட்சிச் சிறப்பு 380 நந்தி காலத்துப் பேரூர்கள் 380 நந்தி செய்த திருப்பணிகள் 380 நம்பிகாட நம்பி 292 நம்பியாண்டார்நம்பி 412 நம்பி கல்விகற்றது 413 நம்பியாண்டார் நம்பிகாலம் 419 நம்பி பாடிய நூல்கள் 418 நம்பியாரூரர் கண்ணிழந்தது 189 நம்பியாரூரர் கல்வெட்டுக்கள் 231 நம்பியாரூரர் காலம் 197 நம்பியாரூரர் தம்பிரான் தோழராதல் 196 நம்பியாரூரர் திருப்பதிகப் பொருள் 202 திருப்பதிகம் பாடிய திருப்பதிகங்கள் 202 நம்பியாரூரர் பிறந்தவூர் 194 நம்பியாண்டவர் பொதி சோறு பெற்றது 188 நம்பியாண்டவர் மணம் சிதைந்தது 182 நம்பியாண்டவர் வரலாற்றாராய்ச்சி 194 நம்பியாண்டவர் வளர்ப்பு வரலாறு 182 நம்பியாண்டவர் வன்றொண்டரானது 195 நமிநந்தி 148 நரசிங்கவன்மன் 11 நரசிங்க முனையரையர் 202 நல்வழி 403 நன்னுலகு 97 நா நாகமலைக் குகைகள் 84 நாகார்ச்சுனர் 18 நாகார்ச்சுனி குண்டாபுத்த விகாரம் 14 நாராயண அய்யர் 248 நாராயணனார் 427 நாலந்தா பல்கலைக் கழகம் 17 நாலு திக்கும் இராசராசக் காடவராயன் 202 நாவுக்கரசர் ஆண்ட அரிய சொல்லாட்சிகள் 159 நாவுக்கரசர் காட்டும் சமயவொழுக்கம் 136 நாவுக்கரசர் காட்டும் முந்நூல் வழக்கு 160 நாவுக்கரசர் குறிக்கும் புராணச் செய்திகள் 150 நாவுக்கரசர் சம்பந்தரைக் கண்டல் 116 நாவுக்கரசர் சமகாலத்தவர் 150 நாவுக்கரசர் சமண் சமயவாழ்வு 127 நாவுக்கரசர் சமணரான காரணம் 126 நாவுக்கரசர் தமது பிழை நினைந்து வருந்தல் 136 நாவுக்கரசர் தருமசேனராதல் 113 நாவுக்கரசர் திருப்பதிக ஆராய்ச்சி 131 நாவுக்கரசர் திருப்பதிகங்கள் 128 நாவுக்கரசர் திருவிழா எடுத்தல் 170 நாவுக்கரசர் திருவுருவம் 167 நாவுக்கரசர் தென்னாடு செல்லுதல் 119 நாவுக்கரசர் பிறநூற் பற்றிய குறிப்பு 121 நாவுக்கரசர் பெயர் வகைகள் 163,164 நாவுக்கரசர் யோகக் காட்சி 137 நாவுக்கரசர் வரலாற்றாராய்ச்சி 126 நாவுக்கரசர் வரலாறு 111 நாவுக்கரசர் வற்புறுத்தும் சீர் திருத்தம் 113 நி நிருபதுங்கவன்மன் 11 நியாயபாடியம் 15 நீ நீணுதல் 97 நீலகண்ட சாஸ்திரி 293 நீறுபூத்த நெருப்பு 446 நு நுளம்பபாடி 12 நெ நெடுஞ்சடையன் பராந்தகன் 13 நெடும்பாட்டுநடை 276 நெடுமாறன் 298 நெய்தற்காட்சி 217 நெல்சன் 290,291 நெல்லிக்கனி வரலாறு 396 நெல்லிக்காய் ஊறுகாய் 399 நை நையாயிகம் 292 நொ நொய்யல் 212 ப பசுபாசம் 329 பசுபாதவேதனை 329 பஞ்சமப்பண் 407 பட்டாசிரியம் 292 பட்டினத்தடிகள் 291,428,439 பட்டினத்தடிகள் இறந்தவனை யெழுப்பியது 361 பட்டினத்தடிகள் காட்டும் கடல் வாணிகக் குறிப்பு 364 பட்டினத்தடிகள் காலத்து மணமுறை 359 பட்டினத்தடிகள் காலம் 361 பட்டினத்தடிகள் குறிக்கும் புராணச் செய்தி 358 பட்டினத்தடிகள் குறிக்கும் பேரூர்களின் சிறப்பு 362 பட்டினத்தடிகள் சார்பான கல்வெட்டுக்கள் 368 பட்டினத்தடிகள் தம் தாய்க்குரிய இறுதிக்கடனை ஆற்றல் 355 பட்டினத்தடிகள் தமக்கை வீடு தீப்பிடித்தது 360 பட்டினத்தடிகளின் தலைமைக் கணக்கர் சேந்தனார் 355 பட்டினத்தடிகளின் திருக்கழு மலமும் மணிக்கோவை 361 பட்டினத்தடிகளின் திருவீடை மருதூர் கோவை 361 பட்டினத்தடிகளின் திருவேகம்ப முடையார் திருவந்தாதி 361 பட்டினத்தடிகள் திருவொற்றியூரில் ஒருபா ஒரு பஃது 361 பட்டினத்தடிகள் திருவொற்றியூரில் சிவமாதல் 358 பட்டினத்தடிகள் துறவு பூண்டது 355 பட்டினத்தடிகள் நூலாராய்ச்சி 361 பட்டினத்தடிகள் மனை வாழ்க்கை 354 பட்டினத்தடிகள் மாகாளம் சென்றது 356 பட்டினத்தடிகள் முற்பிறப்பு வரலாறு 359 பட்டினத்தடிகளின் வரலாற்றாராய்ச்சி 358 பட்டினத்தடிகள் வழங்கும் பழமொழிகள் 366 பட்டினத்தடிகளைக் கழுவேற்றியகதை 355 பட்டினத்தடிகளைக்கொல்லற்குச் செய்த முயற்சி 355 பட்டினத்தடிகளை வேந்தன் சென்று காண்டல் 356 பண்ணுக்குக் கட்டளை 409 பண்வகுத்த வரலாறு 415 பத்திரகிரியார் வரலாற்றுக் குறிப்பு 357 பந்தமங்கலம் 393 பந்தர்க்கார் 293 பந்தனந்தாதி 390 பரமனது அருமை கூறல் 255 பரமேசுரவன்மன் 11 பரவையார் ஊடல் 190 பரவையார் திருமணம் 185 பராங்குசன் மாறவன்மன் 13 பரி நரியாகிய நிகழ்ச்சி 283 பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 275 பல்லவர் 8 பல்லவர் ஆட்சியில் வட மொழி நிலை 26 பல்லவர் காலத்துக் கல்வி நிலை 25 பல்லவர் தமிழரல்லர் 9 பழஞ் செய்திகள் 434 பழமொழி நானூறு 98 பழமொழி வழங்குதல் 224 T.P.பழனியப்பப் பிள்ளை 290,292,297,300,303 பழிப்பது போலப் புகழ்தல் 140 பழுவூரில் மலையாளர் வழிபாடு 93 பழைய நூலாட்சி 223 பழையனூர்க்காரி 397 பள்ளிதரையன் 389 பா பாகியான் 14 பாசுபதம் 293 பாசுபதர் 86 பாஞ்சராத்திரம் 293 பாட்டியர் 391 பாடலிச் சமண்சங்கம் 21 பாடினி 391 பாண்டிநாடு 8 பாண்டியன் கடுங்கோன் 12 பாண்டியன்நெடுஞ்செழியன் 12 பாண்டியன் பராந்தகன் 13 பாண்டிவேந்தன் சைவனாகுதல் 45 பாணர்குடி 392 பாணநாடு 21 பாணரசு 21 பாணனன்னாடு 15 பாணாற்றுப்படை 302 பாதஞ்சலம் 389 பாதிராப்புலியூர் 393 பாதிரிப்புலியூர் 21 பாரதம்படித்தல் 31 பாரதம் பாடிய பெருந்தேவனார் 384 பாரிபறித்த பறிக்கதை 397 பாலைக்காட்சி 214 பாலைபாடிய பெருங்கடுங்கோ 108 பாவைப்பாட்டின் செல்வாக்கு 346 பி பிங்கலந்தை 292 பிடகாகமம் 84 பிரபாகரம் 33 பிரமபுரிகள் 30 பிருதிவிபதி 11 பிள்ளையார் அழுதுண்டது 412 பு புகலூரில் செங்கல் பொன்னானது 186 புத்த சமண் சமயங்கள் 14 புத்தநந்தி இடி யேறுண்டிறுத்தல் 46 புத்த பெருமான் 15 புத்தவன்மன் 10,19 புல்வேளூர்ப்பூதன் 398 புலமை நலம் 275 புலவர் கட்கறிவுரை 222 புலிநாடு 12 புறத்துறை 443 புன்னையங்கானல் - மயிலை 179 பூ பூசுந்தரி 13 பூந்துருத்தியில் நாவரசர் சம்பந்தர் சந்திப்பு 46 பூம்பாவை நிகழ்ச்சி 48 M.s பூரணலிங்கம் பிள்ளை 197 பூஜ்யபாதர் 20 பெ பெங்களூர் வட்டம் 407 பெண்ணாகடத்துச் சூலக்குறி நிகழ்ச்சி 115 பெண்ணாகிய பெருமான் 109 பெண்ணைக்கரை மணலூர் 429 பெண்ணையாறு 398 பெருந்துறை நிகழ்ச்சி 291,292 பெருந்துறைப் பிள்ளை 291 பெரும்பாணப்பாடி 21 பெருமாக் கோதையார் 241 பெருமிதப் பேச்சு 321 பே பேராசிரியர் 403 பை பைரவம் 88 பொ பொதியில் 389 பொல்லாப் பிள்ளையார் 413 பொற்றாளச் செய்தி 41 பொன்வண்ணத் தந்தாதி 248 பொன்னம்பலம் பிள்ளை 289 பொன்னாடு தந்த கதை 398 போ போக்சு (Foulks) 55 போதிதருமர் 15 போதியார் 84 போதியார் புலியூர் 393 போதை 394 போப் - ஜி.யூ 289 ம மகண் மறுத்தல் 443 மகாமந்திரம் 414 மகேந்திரவன்மன் 11 மகோதை 210,244 மடத்துச் சத்தப் பெருமக்கள் 32 மணலூர் 429 மணிப்பிரவாள நடை 36 மணிமேகலை 96,87 மணியன் 427 மணிவாசகர் 281 மணிவாசகர் உலகியலறிவு 337 மணிவாசகர் உவமநலம் 339 மணிவாசகர் காட்டும் புராணச் செய்தி 314 மணிவாசகர் திருக்கோவையார் 424 மத்தவிலாச பிரகசனம் 17,122 மதுராந்தகன் 406 மதுரை 429 மதுரைச் சமண்சங்கம் 21 மதுரையாசிரியர் இளங்கோதமனார் 389 மரகத தேவர் படிமம் 427 மருணீக்கியார் 21 மருதக்காட்சி 89,215 மருதவாணன் கடல் வாணிகம் 354 மருதவாணன் தோற்றம் 354,359 மருதவாணன் மாணிக்கமணி கொணர்ந்தது 360 மருதாடு 443 மல்லை 427 மலபரிபாகம் 330 மலயமான்கள் 400 மறைமலையடிகள் 289,294 மறையணி நாவினான் பட்டன் 109 மன்னர்க்கு முடிசூட்டும் உரிமை 435 மா மாக்ஸ் முல்லர் 293 மாங்குடி மருதனார் 391 மாசீர்த்தி 111 மாணிக்கக்கூத்தன் 302 மாணிக்கவாசகன் 353 மாதேவடிகள் 406 மாதோட்டம் 210 மாநாகன் பந்தன் 393 மாமல்லபுரம் 427 மாமூலனார் 21 மாயாவாதம் 293 மாவிரதம் 292 மாவிரதி 86 மாளவர் 8 மீ மீமாஞ்சை 292 மீனாட்சி சி. டாக்டர் 199,200,248 மு முத்துச்சிவிகை வரலாறு 42 முத்துத்தாண்டவராயப் பிள்ளை சீர்காழி 424 முதல் ஆதித்தன் 388,420 முதல் இராச சிம்மன் 298 முதல் இராசராசன் 427 முதல் வரகுணன் 300,380 முதற்பராந்தகன் 406 முதலையுண்டபாலன் 193 முந்து நூற் கருத்து 445 முயலகம் என்னும் நோய் 42 முருகதாச சுவாமிகள் 391 முல்லைக் காட்சி 90,214 முன்னுறையரையர் 98 முன்னை நூற்கருத்து 266 மூ மூதாட்டி 392 மூதுரை 403 மூவர்க்கும் திருவிழா 418 மெ மெய்க்கீர்த்தி 392 மெய்ந்நெறி 205 மெய்மையுணர்ந்தவன் 389 மெய்யநின்ற நாயனார் 106 மெய்யன்பர் தொழில் 207 மே மேற்கெழுந்தருளின தேவர் 406,408 மோ மோனியர் வில்லியம்ஸ் 87 யா யாதவன் 397 யாப்பருங்கல விருத்தியுரை 403 யாழ்மூரிப்பதிகம் 43 யானைத்தலைபோலும் முடி 9 யு யுவான் சாங் 58 யோ யோகஞான நெறிகள் 132,206 வ வச்சிரநந்தி 20 வடகொங்குநாடு 394 வடநாட்டவர் போந்து இசை பயிலுதல் 94 வடமொழியறிஞர் 28 வணிகர் தொழில் 428 வத்தவன் 398 வண்ணானை வணங்கிய செய்தி 241,245 வயிரமேகன் 11 வரகுணபாண்டியன் 11 வரகுணமகாராசன் 13 வரகுணன் 13 வரகுணனது சிவப்பற்று 300 வரந்தருவார் 400 வரலாற்றறிவு 430 வளைகுளம் 180 வா வாசீகபண்டிதர் 169 வாகீசன்மடம் 169 வாணகோவரையர் 21 வாணன் பெற்ற சிறப்பு 30 வாணாதிராயர் 21 வாதவன் 397 வாமம் 88 வாயாங்கிலோ 425 வாற்சாயனர் 15 வி விசயநரசிங்கவன்மன் 11 விச்சி மலை 211 குறிப்புகள் 1. தொல். பாயிரம். 2. செந். செல்வி. Vol. XXII. பக். 274. 1. செந். செல்வி. vol. XXII. பக். 275 2. S. I. I. Ins. Vol. XII. 3. A.R.No. 376 of 1908 & 308 of 1921. 4. A.R. 393, 513 of 1921. 414, 423 & 533 of 1921. 5. P.S. Ins. 1. கி.பி. ஆறாம் நூற்றாண்டெனக் கருதுகின்றோமாயினும், கி. பி. 575 முதலே பல்லவராட்சி கால்கொள்ளத் தொடங்கிற்று. 2. Velurplayam C. Plates. 3. S.I.I. Vol. IV. பக். 11. 4. S.I.I. Vol. XII.முன் பக். ii. 5. Ep. Indi. Vol. No. I. பக். 11 6. பரமேஸ்வரவன்மன் 7. புத்தவன்மன் 8. சிம்மவிஷ்ணுவன்மன் 9. மகேந்திரன்வன்மன் I 1. Pallavas of Kanchi . P. 845-5. 2. S.I.I. Vol. I.p. 148. “ஸுப்ரணீத வர்ணாச்ரம தர்.ம:” 1. S.I. I. Vol. No. 75. Verse. 26. 1. T.V.S. பாண்டியர் வரலாறு. 2-ஆம் பதிப்பு. பக். 53. 2. T.V.S. பாண். வர. பக். 58. 1. இத்தலைநகர் நெல்லூராக இருக்கலாமெனப் பெர்க்கூசன் (Fergusson) கருதுகின்றார். அஃதுண்மையாயின், சோழநாட்டின் பரப்பு நெல்லூர் மாவட்டத்தையும் தன்கண் கொண் டிருந்தமை தெளிவாம். 2.ஏனை அருத்த சாத்திரம், காம சூத்திரம் முதலிய வட நூல்களை வழங்கிய வாற்சாயனர் இவரின் வேறாவர் என்பர். 1. Beal Records. Vol. II. page. 28-30. 2. Watters. Vol. II. . 236. 3. மத்த. பிரக. பக். 12. “Yavadidanim Raja Vihara mevagaechami”. 4. “தொடுகழற்கிள்ளிதுணையிளங்கிள்ளி ... பைம்பூம்போதிப் பகவற்கியற்றியசேதியம்” (மணி. 8 : 172 - 175) என்று வரும். 1. Life of Hiuen Tsang by Beal. p.139. 1. Studies in South Indian Jainism. p. 51. 2. J.B.B.R.A.S. Vol. XVII.P.i. p.74. 3. My. A.R. 1909-10. p.45. 4 “வடகரை ராஜேந்திர சோழவளநாட்டு மேற்காநாட்டுப் பிரமதேயம் திருப்பாதிரிப் புலியூர் ” (S.I.I. Vol. VII. No. 743). 1. அகநானூறு. 325. 1. Archeo. Rep. of Mysore. 1909-10. p.45. 2. Ind. Ant. Vol. XXXII. p.460. 1. Ep. Ind. IV. p. 137. 2. A.R. No. 81 of 1908. 3. A.R. No. 82 & 84 of 1908. 1. Pallavas of Kanchi p.111. 2. S.I. Ins. Vol. II. Part. ii p. 358. ff. 1. Indian Culture through the ages. p. 243. Note 1. 2. S.I. Ins. Vol. II P. iii. p. 349; Ibid. P.V. p. 508. 3. Ep. Car. Vol. V. No. 178 p. 462. S.I.I. Vol. II. P. iii. p. 349. 1. S.I.I. Vol. II. P. iii. 349 & 356. 1. S.I. Ins. Vol. III No. 200 & 223 1. Ep. Ind. Vol.XV. p. 251. 2. S.I. I. Vol. II p. iii. p. 358-9. 3. Ep. Ind. Vol. III. p. 130-4; Ibid. Vol. IV. p. 170. 4. S.I. Ins. Vol. I. p. 151. 5. S.I. Ins. Vol. II p.v. 1. Ep. Indi. Vol. XVIII. p. ii. S.I.I. Vol. II. p.v. p. 516. 1. A.R. No. 181 of 1912. 2. A.M. Ep. Report for 1913. p. 86. 3. M. Ep. Report for 1912. p. 65. 1. A.R. No. 65 of 1909. 2. S.I. Ins. Vol. XII. No. 16. 1. திருக்கொள்ளம்பூதூர்க் கோயிற் கல்வெட்டொன்றால் இந் நீல கண்டப்பாணனார் திருவுருவத்தையும் இவர் மனைவியார் திருவுரு வத்தையும் கோயிலில் எழுந்தருளு வித்து நாளும் வழிபாடு செய்யப் பெற்றமை (A.R. No. 254 of 1917), தெரிகிறது. இவர் மனைவியார் “(சிவ) சூடாமணி”யென இக்கல்வெட்டிற்கு குறிக்கப் படுகின்றார். 1. மணமகளின் பெயர் இன்னதெனச் சேக்கிழாரால் குறிக்கப்பட வில்லை. ஆயினும், திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சபுரம்) கோயிற் கல்வெட்டொன்றால் (A.A. No. 527 of 1918) அவர் பெயர் சொக்கியாரெனத் தெரிகிறதெனக் கல்வெட்டி லாகா ஆண்டறிக்கை கூறுகிறது. (A.R. for 1919 para 3) 1. தக்கயாகப்பரணி 6. தாழிசை 171-220. 1. தக்கயாகப்பரணி. தா. 199. 2. தக்கயாகப்பரணி. தா. 215. 3. தக்கயாகப்பரணி. தா. 219. 1. ஞானசம். 62 : 4. 2. ஞானசம். 276. 1. ஞானசம் 327 : 4 2. மேற்படி 367 : 7 3. மேற்படி 62 : 6 4. மேற்படி 199 : 7 5. மேற்படி 326 : 10 6. மேற்படி 316 : 11. 7. மேற்படி 228 : 3. 8. மேற்படி 321 : 1 9. மேற்படி 378 : 1 10. மேற்படி 378 : 2 1. வீரசோழி, முன் பக். 17. 2. His Letter to Prof. P. Sundaran Pillai, dated 1-3-1895. 3. S.I. Ins.Vol. II. p.153. 4. “தவஸ்தன்யம் மன்யே தரணிதர கன்யே ஹ்ருத யத: பய: பாராவாரம் பரிவஹதி ஸாரஸ்வதமிதி. தயாவத்யா தத்தம் த்ரவிட சிசுராஸ்வாத்ய தவயத் கவீனாம் ப்ரௌடா நாமஜநி கமநீய: கவயிதா” - சௌந்தரியலகரி.சு.76.” 5. Tam.Ant. No. III. p. 59. 1. E. Indi. Vol. IV. p. 227. f. and Madras Christian College Magazine for Nov. 1893. 1. “செங்காட்டங் குடிமேய வெந்த நீறணி மார்பன் சிறுத்தொண்டனவன் வேண்ட அந்தண் பூங்கலிக்காழி யடிகளையேயடி பரவும் சந்தங்கொள் சம்பந்தன் தமிழுரைப்போர் தக்கோரே” - ஞான. 321 : 11. 2. Tam. Ant. No. III. p. 63-5. 3. தமிழ் வரலாறு. பக். 58-64. 1. ஞானசம். 321 : 1. 2. ஞானசம். 321 : 11. 1. திருஞானசம்பந்த சுவாமிகள் சரித்திரம் பக். 273-4. 2. ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை. 3. ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை 22. 4. திருமுறைகண்டபுராணம் செய். 14. 5. செய்யுள் : 25. 1. Annual Report, Madras Epigraphy No. 8 of 1918 2. திருமறைக்காட்டுத் திருப்பதியங்களில் “விடைத்தகர்” எனத் தொடங்குவது. இவ்வாறு திரு. செட்டியார் அவர்கள் கூறுதற்குச் சான்று ஒன்றும் தெரிந்திலது. 1. பொதுவாகவுள்ளவை : அவ்வினைக்கிவ்வினை. காதலாகி. ஆரூர் தில்லை. கல்லானீழல். வேயுறு தோளி. வாழ்க. துஞ்சலுந். 1. சோழநாட்டு வேதியர் மரபுக்கே ஞான சம்பந்தர் பிறந்த குடி தலைமை பெற்று நிலவிற்றென்பதை, “பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன்” (50) என அவர் கூறுவது கொண்டே அறியலாம். 2. ஞானசம். 107. 3. ஞானசம். 280. 4. மேற்படி 381. 5. மேற்படி 112. 6. மேற்படி 282. 7. மேற்படி. 175. 8. மேற்படி 41. 1. ஞானசம் 47. 2. மேற்படி 195. 3. ஞானசம். 221. 4. பெரியபு. திருஞான. 139. 5. மேற்படி 175. 6. ஞானசம். .... .... 77. 7. மேற்படி 51 : 11. 8. மேற்படி .... 325 : 12. 1. ஞானசம். 293. 2. ஞானசம். 291. 3. ஞானசம். 263. 4. மேற்படி 114. 5.மேற்படி 194. 6. மேற்படி 1.. 7. மேற்படி 3. 8. மேற்படி 61. 9. மேற்படி 112. 10. மேற்படி 203. 11. மேற்படி 362. 12. மேற்படி 380. 13. மேற்படி 63. 14. மேற்படி 108. 15. மேற்படி 173. 16. மேற்படி 183. 17. மேற்படி 312. 18. மேற்படி 242. 19. மேற்படி 60. 1. ஞானசம். 77. 2. ஞானசம். 18. 3. மேற்படி 148. 4. மேற்படி 262. 5. மணி. 27 : 89-95. 1. ஞானசம். 184 : 3. 2. ஞானசம். 363 : 1. 3. மேற்படி 109 : 6. 4. மேற்படி 132 : 5. 5. மேற்படி 22 : 7. 6. மேற்படி 53 : 1. 7. மேற்படி 214 : 6 8. மேற்படி 182 : 4. 1. ஞானசம். 129 : 7. 2. மேற்படி 53 : 2. 3. மேற்படி 11 : 2. 4. மேற்படி 29 : 5. 5. மேற்படி 312 : 4. 1. ஞானசம். 200 : 1. 2. மேற்படி 9 : 5. 3. மேற்படி 329 : 4. 4. மேற்படி 118 : 8. 1. ஞானசம். 215 : 5. 2. தொல். பொ. கற்பு. 51. 3. புறம் : 193. 4. ஞானசம். 50 : 3. 5. மேற்படி 131 : 10. 6. மேற்படி 132 : 6. 7. ஞானசம். 28 : 1. 8. ஞானசம். 126 : 7. 1. ஞானசம் 146 : 7. 2. மேற்படி 255 : 6. 3. மேற்படி 21 : 6; 17 : 6. 4. மேற்படி 69 : 3. 5. மேற்படி 238 : 2. 6. மேற்படி. 282 : 1. 1. ஞானசம். 93 : 4. 2. மேற்படி 91 : 6. 3. மேற்படி 123 : 5. 4. மேற்படி 198 : 1, 199 : 6, 209 : 1. 5. ஞானசம். 201 : 9. 6. ஞானசம். 219 : 5. 7. மேற்படி 380 : 2. 8. மேற்படி 22 : 1. 9. மேற்படி 131 : 3. 10. மேற்படி 75 : 7. 11. மேற்படி 377 : 7. 12. மேற்படி 11 : 6. 13. மேற்படி 48 : 9. 14. மேற்படி 131 : 7. 15. மேற்படி 20 : 7. 16. மேற்படி 361 : 2. 1. மேற்படி 268 : 2. 2. மேற்படி 337 : 10. பதிகந்தோறும் இராவணன் கயிலையைப் பெயர்த்த செய்தியும், திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய செய்தியும் கூறப்படுகின்றன. 3. ஞானசம். 349 : 6. 4. ஞானசம். 291 : 1. 5. மேற்படி 179 : 1. 6. மேற்படி 62 : 5. 7. மேற்படி 179 : 4. 8. மேற்படி 349 : 8. 9. ஞானசம். 159 : 4. 10. ஞானசம். 284 : 7. 11. மேற்படி 289 : 6. 12. மேற்படி 1 : 11. 13. மேற்படி 101 : 7. 14. மேற்படி 75 : 2. 15. மேற்படி 79 : 9. 16. மேற்படி 327 : 6. 17. மேற்படி 169 : 3. 18. மேற்படி 63 : 11. 1. மேற்படி 257 : 1. 2. மேற்படி 199 : 7. 3. மேற்படி 159 : 5. 4. மேற்படி 277 : 5. 5. மேற்படி 276 : 4. 6. மேற்படி 308 : 9. 7. மேற்படி 378 : 6. 8. மேற்படி 64 : 1. 9. மேற்படி 256 : 9. 10. மேற்படி 45 : 1. 11. மேற்படி 337 : 3. 12. மேற்படி 312 : 11. 13. ஞானசம்.52: 6. 14. ஞானசம். 327.4. 15. மேற்படி 62 : 4. 16. மேற்படி 378: 4,8. 17. மேற்படி 321 : 7,8. 18. மேற்படி 62:9. 19. மேற்படி 62 : 6. 20. மேற்படி 316 : 11. 21. மேற்படி 378 : 1,3. 22. மேற்படி 228:3. 1. ஞானசம். 282 : 2. 2. மேற்படி 220 : 11. 3. மேற்படி 262 : 1,10. 4. ஞானசம்.92: 1,2. 5. ஞானசம். 173 : 1. 6. மேற்படி 309 : 1,6,11. 7. மேற்படி 272 : 11. 8. மேற்படி 221 : 10. 9. மேற்படி 94 : 10,353 : 10. 10. மேற்படி 312 : 11. 11. மேற்படி 371 : 12. 12. மேற்படி 264 : 6. 13. மேற்படி 54 : 11. 14. மேற்படி 383 : 10. 11. சில திருப்பதிகங்களில் இக்குறிப்புக்கள் காணப்படவில்லை. அவை, ஞானசம். 57, 73, 78, 138, 156, 179, 180, 203, 214, 215, 247-8; 253,316,321,330,352,370,371- ஆகப் பத்தொன்பதுமாம். இவற்றுட் சில சமண்புத்தர்களைக் காண்பதற்கு முன் பாடியன வாகவும் இருக்கலாம்; சிலவற்றில் சிதைந்து போயுமிருக்கலாம் என்பர். 2. Tam. Ant. V. III p.7. 1. Tam. Ant. III .p. 9. 2. ஞானசம். 297. 3. மேற்படி 297: 4,6. 4. மேற்படி 297 : 1. 1. மேற்படி 366 : 8. 2. மேற்படி 366 : 1 3. மேற்படி 297 : 4. 4. மேற்படி 297 : 2. 5. மேற்படி 361 : 10. 6. ஞானசம். 297 :3. 7. ஞானசம். 13 :10. 8. A.R. on S. Ep. for 1926-7. para 8. நன்நூலரிசிரியர் பவணந்தி யெனவும், வெண்பாப் பாட்டியலுடையார் ஆசிரியர் வச்சணந்தி யெனவும் வருவது காணுங்கால், கனக நந்தி முதலிய பெயருடையாரைப் புத்தரெனவே கோடல் பொருந்துவதாக இல்லை. 9. A.R. No. 621-3. of 1926. 10. ஞானசம்.148 : 10. 11. ஞானசம். 68 : 10. 12. மேற்படி 6: 10. 1. மேற்படி 297 : 10. 2. மேற்படி 366 : 10 3. மேற்படி 297 : 2 4. ஞானசம்.10 : 10. 5. ஞானசம். 271 : 10 6. மேற்படி 5: 10. 7. மேற்படி 27 : 10. 8. பூருவாகமம் மகா வீரரால் முதற்கண் வழங்கப்பட்டன வென்றும், பின்பு அவர் மாணவரும் பிறரும் அங்காகமங்களை வழங்கினரென்றும், அங்கங்கட்குத் திருஷ்டிபாத மெனப் பெயருண்டென்றும், அவற்றின் தோற்றக்காலம் கி.மு. மூன்று நான்காம் நூற்றாண்டென்றும் கூறுவர் - (An Epitomic of Jainism. p. 690). 1. A Research on தேவாரமும் பெரிய புராணமும் conducted by Vidvan K. Vellai Varanan in the year 1934 - 36 in the Annamalai University. 2. Edicts of Asoka. 3. பாசுபத சைவமடம் ஒன்று திருவானைக்காவில் இருந்து அக்கோயில் காரியத்தையும் மேற்பார்வை செய்து வந்திருக்கிறது - (A.R. 135 of 1936-7) 4. “ஞானசம். 86 : 4. 5. Bulleting of the school of Oriental Studies. London. Vol. V. P. 696 - 717. 6. A.R. for 1915. para. 6, 11; A.R. for 1908 para. 89 ; A.R. for 1924. para. 17. திருநணாப்பதிகத்தில் “நானாவிதத்தால் விரதிகள் நன்னாமமேயேத்திவாழ்த்த” (208 : 7) என்ற விடத்து விரதிகளை மாவிரதிகளாகக் கருதுதற்கும் இடனுண்டு. 7. A.R. 1912. para 29. 8. ஞானசம்.183 : 9. 1. ஞானசம். 183 : 1. 2. சிவஞானபாடியம் - அவையடக்கம். 3. A.R. No. 423 of 1914. 4. Dr. Bhandarkars Vaishnavism. p. 118 5. A.R. for 1915. para 31. 6. மணிமே. 27 : 89-95. 7. ஞானசம். 66 : 4. 1. ஞானசம். 376 : 3. 2. ஞானசம். 131 : 1. 3. ஞானசம். 165 : 5. 1. ஞானசம். 97 : 1. 2. ஞானசம். 234 : 9. 3. ஞானசம். 66 : 1. 1. ஞானசம். 132 : 2. 2. மேற்படி 69: 6. 3. ஞானசம்.327 : 10 4. ஞானசம். 12 : 10. 5. மேற்படி 69: 2. 6. மேற்படி 330 : 1. 1. ஞானசம். 129 : 2. 2. மேற்படி 82 : 7 3. மேற்படி 178 : 9. 4. மேற்படி 20 : 3. 5. மேற்படி 102 : 1. 6. மேற்படி 178 : 3. 7. மேற்படி 237 : 1. 8. மேற்படி 138 : 6. 9. மேற்படி 8 : 9. 10. ஞானசம்.330 : 8 11. ஞானசம். 286 : 3. 1. மேற்படி 305: 7. 2. மேற்படி 242 : 2. 3. மேற்படி 364 : 6. 4. மேற்படி 251 : 4 5. மேற்படி 369 : 2. 6. ஞானசம். 240 : 10 7. ஐங்குறு. 40. 8. மேற்படி 250: 1. 9. குறள். 660. 1. ஞானசம். 380 : 5. 2. ஞானசம். 170 : 11. 3. மேற்படி 837 : 6. 4. ஞானசம். 286 : 3 5. ஞானசம். 335 : 5. 6. மேற்படி 334: 4. 1. மேற்படி 17: 4. 2. A.R. for 1905. para. 4 3. யாழ் நூல் : பக். ஙளஙஅ. 1. ஞானசம். 148 : 11. 2. A thesis on மூவர் தேவாரம் by Vidvan K. Vella Varanar under the auspices of the Annamalai University in the year 1935 - 37. 1. ஞானசம். 40 : 9. 2. ஞானசம். 43 : 4 3. மேற்படி 49: 11. 4. மேற்படி 29: 7. 5. மேற்படி 113: 10. 6. மேற்படி 124: 6. 7. மேற்படி 103: 4. 8.மேற்படி 1: 9. 9. மேற்படி 126: 8. 10. மேற்படி 136: 11. 1. ஞானசம் 224: 8. 2. மேற்படி 252: 7. 3. மேற்படி 230: 8. 4. மேற்படி 91: 2. 5. மேற்படி 110: 1. 6. பழமொழி. 94. 7. ஞானசம். 98 : 5 8. ஞானசம். 182 :10. 1. ஞானசம் 88: 5. 2. சுந். 39 : 5 3. சுந். 62 : 8 1. பதினாறாம் நூற்றாண்டிலேயே இத் திருப்பதிகங்களைத் திராவிட வேதம் என வழங்கும் வழக்கம் இருந்ததென நாகலாபுரத்து வேதாரணியேச்சுரர் கோயில் கல்வெட்டொன்று (A.R. No. 627 of 1904) கூறுகிறது. 2. K.A. N. Sastry’ Cholas. Vol. II. p. i. g¡. 476-7. 3. A. R. No. 114 of 1908. 4. A.R. No. 216 of 1908. 5. S.I.I.Vol. VII. No. 785. 6. A.R. No. 52 of 1916. 7. A.R. No. 534 of 1918. 8. A.R. No. 37 of 1920. 9. A.R. No. 48 of 1922. 10. A.R. No. 145 of 1927. 11. S.I. Ins. Vol. VIII. No. 613. 12. A.R. No. 606 of 1922. 1. A.R. No. 448 of 1912. 2. S.I.I. Vol. VIII. No. 442. 3. S.I.I.Vol. V. No. 984. 4. S.I.I.Vol. V. No. 483. 5. P.S. Ins. No.310. 6. P.S. Ins. No.317. 7. P.S. Ins. No.481. 8. A.R. No. 465 of 1916; 358 of 1922. 9. A.R. No. 92 of 1920. 10. S.I. Ins. Vol. VIII. No. 50. 11. A.R. No. 292 of 1927-8. 12. 285 of 1916. 13. 102 of 1932-3 14. 172 of 1934-5. 15. 92 of 1920; 384 of 1937-8. 16. S.I.I. Vol. VIII. No. 278. 17. Ibid. No. 83. 18. S.I.I. Vol.VII. No. 86. 19. 231 of 32-3. 20. 34 of 1924. 1. S.I. I. Vol. VIII. No. 166; 94 of 1918 ; 310 of 1923 ; 180 of 1925. 2. S.I. I. Vol. VI. No. 48. 3. Ibid. Vol. VII. No. 1025. 4. S.I. I. Vol. VIII. No. 403. 5. S.I. I. Vol. V. No. 988. 6. 437 of 1912. 7. 199 of 1932-3 8. 606 of 1922. 9. 358 of 1922. 10. S.I. I. Vol. VII. No. 785. 11. 534 of 1938. 12. S.I. I. Vol. VIII. No. 206. 13. 54 of 1932-3 14. S.I. I. Vol. VIII. No. 714 ; S.I. I. Vol. VI. No. 35. 15. S.I. I. Vol. VIII. No. 213. 16. 214 of 1910. 1. A.R. No. 375of 1918. 2. A.R. No. 310 of 1923. 3. S.I. I. Vol. VIII. No. 151. 4. A.R. No. 601 of 1917. 5. S.I. I. Vol. IV. No. 225. 1. A.R. No. 374-388 of 1918. 2. A.R. for. 1921-2. para. 68-71. 1. A.R. for. 1909. para. 63. 2. “குகையிடி கலகம் which happened in the 22nd year of பெரிய தேவர் (குலோத்துங்கன் III) must have been instigated by the Brahamanas against the non-Brahmanical Saiva Mathas” - A.R. for 1913. para. 42. Vide also A.R. for 1926-7. p.84. 1. A.R. No. 8 of 1918. 2. A.R. No. 192 of 1928 - 9. 3. ஞானசம். 293 : 6. 4. A.R. No.150 of 1933-4. 5. ஞானசம். 2 : 5. 6.A.R. No. 125 of 1935-6. 7.ஞானசம். 26 : 3. 8. A.R. No.186 of 1935-6. 9. A.R. No. 180 of 1935 - 6. 1. ஞானசம். 348 : 1. 2. A.R. No. 101 of 1926. 3. A.R. No. 104 of 1926. 4. S.I. I. Vol. VIII. No. 201. 5. ஞானசம். 77 : 1-10 6. S.I. I. Vol. VII. No. 447. 7. A.R. No.94 of 1912. 8. A.R. No.335 of 1927. 1. ஞானசம். 184 : 2. 2. S.I. I. Vol. V. No. 987. 3. மேற்படி 54 : 2. 4. S.I. I. Vol. VII. No. 107. 5. மேற்படி 77 : 7 6. S.I. I. Vol. VII. No. 452 7. ஞானசம். 41-3 8. A.R. No.90 of 1911. 9. மேற்படி 242-2 10. A.R. No.206 of 1927-8 11. A.R. No.60 of 1911. 12. குறுந். 54 13. புறம். 243. 1. ஞானசம். 220 : 11. 2 . ஞானசம். 376 : 11. 3. நம்பி. திருத்தொகை : 23. 4. ஞானசம். 221 : 11. 5. S.I.I. Vol. VIII. No. 442 6. ஞானசம். 10 : 1 7. A.R.No. 102 of 1935-6 8. மேற்படி 286 : 2 9. S.I.I. Vol. V. No. 634. 6. ஞானசம். 350 : 8 7. S.I.I. Vol. V. No. 410. 8. S.I.I.Vol. V. No. 411. 1. இப்பெயர் வடமொழியில் கீர்த்தியென வரக்கண்டார், மக்கட்குக் கீர்த்தியெனவும் மா கீர்த்தியெனவும் பெயரிடலாயினர் போலும், பாண்டியன் மா கீர்த்தியென்பான் பெயர் தொன்னாளில் மாசீர்த்தி என இருந்தது, அதன் பொருள் அறியாமல் ஏடு எழுதி னோரால் மாகீர்த்தி எனப் பிழையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இதற்கு இந்நாளைய வரலாற்று ஆராய்ச்சியேடுகளிலே போதிய சான்றுகள் உண்டு. 1. திருநா. 121 : 6 2. பெரியபு. திருநா. 34. 1. திருநா. 1 : 1 2. மேற்படி 1 : 4 3. மேற்படி 1 : 7 1. “ஆமயந் தீர்த்து அடியேனை ஆளாக்கொண்டார், அதிகை வீரட்டானம் ஆட்சி கொண்டார்;” “சூலைதீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே” (திருநா. 301 : 1,3.) 2. திருநா. 312: 1 3. மேற்படி 312 : 8. 4. மேற்படி 265 : 8. 5. மேற்படி 70:5. 6. மேற்படி 186 : 7. 1. பெரியபு திருநா. 46 2. S.I.I. Vol. I. No. 33. 3. திருநா. 110 : 1,10. 4. திருநா. 116 : 8. 1. திருநா. 124 : 1,6. 1. இவ்வாறு உண்ணா நோன்பால் குற்றம் செய்தாரைத் திருத்தும் முறைமையினை இருபதாம் நூற்றாண்டில் காந்தியடிகள் மேற்கொண்டு நாட்டின் அரசியல் துறையிலும், அரசியல் இயக்கத் துறையிலும் உண்டாகிய குற்றங்கள் பலவற்றைக் கடிந்தமை ஈண்டு நினைவு கூரத்தக்கது. 2. இப்போது ஒரு திருப்பதிகம் (திருநா. 222) தான் கிடைத்துள்ளது. ஆனால் நாவரசர் கண்ணப்பரைப் பல பதிகங்களிற் குறித்துள்ளார். 1. பெரியபு. திருநாவுக். 427. 1. சுந்த. தே. 39 : 4 2. திருத்தொண். திருவந். 24. 3. திருத்தொண். திருவந். 25 4. திருநா. திருவேகா. 1. 5. மேற்படி 2. 6. மேற்படி 3,7. 1. “அப்பருக்கு எண்பத்தொன்று அருள்வாத வூரர்க்குச், செப்பிய நாலெட்டில் தெய்வீகம் - இப்புயில், சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்கு அந்தம் பதினாறு அறி” என்பது பழைய வெண்பா. 2. The Pallavas by Prof. J. Dubreil and The Pallavas of Kanchi by A. Gopalan. p.90. 3. சேக்கிழார் : திருநா. புரா. 146. 4. S.I.I. Vol. I. No. 33. p. 29. 1. திருநா. புரா. 143 :7. 2. திருத்தொண் : திருஞான புரா. 270. 1. வல்லம் (செங். ஜில்லா), மகேந்திரவாடி (வ.ஆ.), தளவானூர் (தெ.ஆ.), சீயமங்கலம், பல்லாவரம் முதலிய இடங்களிலுள்ள கோயில்கள் முதல் மகேந்திரவன்மனால் கட்டப்பட்டவை. 1. தமிழ் வரலாறு. பக். 64-73. 2. பெரிய புராண ஆராய்ச்சி. by Dr. M. Rajamnaickam p.82. 3. பெரிய பு. ஞானசம். 270. 4. இலக்கிய வரலாறு. பக். 335. 1. திருநா : 91 : 3 ; 100 : 1; 250 : 1; 310 : 3. 2. “வெஞ்சொற் சமண் சிறையில் என்னை மீட்டார்”- திருநா. 265 : 8. 3. “வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர்தந்த, நஞ்சமுதாக்குவித்தார்”- 70 : 5. 4. “கல்லினோடெனைப் பூட்டி யமண்கையர், ஒல்லைநீர்புக நூக்க என் வாக்கினால், நெல்லுநீள்வயல் நீலக் குடியான், நல்ல நாமம் நவிற்றியுய்ந்தேனரோ”-186:7. 5. 110:1,10. 6. 228:1. 7. 12:10. 8. 164 : 7. இவ்வாறே ஒவ்வொருசெய்திக்கும் அகச் சான்றுகள் இவர் பாடிய திருப்பதிகங் களில் காணக் கிடக்கின்றன. 1. “வாய்மை திகழ் பெருநாமச் சீர் பரவலுறுகின்றேன்” - சேக்கிழார். பெரியபு. திருநா.1 2. திருநாவுக். புரா. 37. 3. திருநாவுக் தேவாரம். 5:1. 4. மேற்படி 217 : 11. 1. திருநா. 5 : 7 2. மேற்படி 73 : 2. 3. மேற்படி 266 : 3 4. மேற்படி 305 : 8. 5. மேற்படி 298 : 7. 1. திருநா 39 : 7. 2. திருநா 78 : 9 3. மேற்படி. 217. 4. மேற்படி 268. 5. மேற்படி 225. 6. சுந். தேவா. 65:2. 7. திருநா. ஏகாதச. 7. 8. மேற்படி 3. 1. திருமுறைகண்.பு. 15. 2. திருமுறை. க. புரா. 25. 1. திருநா. 162 : 4. 2. திருநா. 162 : 5 1. திருநா. 239 : 1. 2. திருநா. 205 : 3 3. மேற்படி 7 : 4 4. மேற்படி 250 : 9. 5. மேற்படி 279 : 7. 6. மேற்படி 60 : 9. 7. மேற்படி 14 : 3. 1. திருநா. 101 : 4. 2. மேற்படி 101 : 7 3. மேற்படி 174 : 3. 4. மேற்படி 174 : 1. 1. திருநா. 213 : 1-10. 2. திருநா. 262 : 7. 3. திருஞான. 170 : 4. 1. A.R. No. 219 of 1917. 2. திருநா. 264 : 5. 3. திருநா. 113 : 8 4. மேற்படி 191 : 6. 5. மேற்படி 162:5 6. மேற்படி 309 : 2. 7. மேற்படி 115 : 4 8. மேற்படி 309 : 2 9. மேற்படி 309 : 2 10. மேற்படி 9 : 11 11. மேற்படி 111 : 4. 12. மேற்படி 309 : 10 13. மேற்படி 309 : 6. 4. திருநா 309 : 5 5. மேற்படி 165 : 8 6. மேற்படி 165 : 8, 307:10 7. மேற்படி 49 : 6. 8. மேற்படி 219 : 4. 1. திருநா. 310 : 5. 2. திருநா. 310 : 3. 3. மேற்படி 257 : 4. 4. மேற்படி 268 : 4. 1. திருநா 305 : 1. 2. மேற்படி 205 : 8. 3. மேற்படி 312 : 7. 4. “பொதுநீக்கித் தனை நினைய வல்லார்க் கென்றும் பெருந்துணை” 215:5. 5. புந்திவட்டத்திடைப் புக்கு நின்றாளையும் பொய்யென்பனோ - 98 :1; 113 :5. புந்தியாய்ப் புண்டரிகத்துள்ளாய் போற்றி - 219 :9. 6. சிந்திப்பார் சிந்தைக்கண் இறைவன் நல்கும் காட்சியைச் சிவமெனவே நாவரசர் வழங்குகின்றார். “சிந்தையுட் சிவமதானார்” 29:4; 35: 2; 48: 5 162: 5. எனப் பலவிடத்தும் கூறுவது காண்க. 7. திருநா. 5: 2. 1. திருநா. 76: 4. 2. மேற்படி 245: 3. 3. திருநா. 239: 7. 1. திருநா. 12 :3. 2. திருநா. 143 : 5. 3. திருநா. 159: 1 1. மேற்படி 159: 5 2. மேற்படி 159: 6 3. திருநா. 159: 8 1. திருநா. 8 : 9. 2. மேற்படி 77: 1 3. திருநா. 104 : 8. 4. மேற்படி 107 : 1. 5. மேற்படி 10 : 8 1. திருநா 75 : 8 2. திருநா. 75 : 9 3. திருநா. 77 : 10 4. மேற்படி 114 : 11 1. திருநா 113 : 9. 2. திருநா. 97 : 6. 3. மேற்படி 153 : 5. குறைவிலோம் கொடு மானுட வாழ்க்கையால், கறைநிலாவிய கண்டன் எண் தோளினன்.... இறைவன் நீள்கழல் ஏத்தியிருக்கிலே.” 1. திருநா 184:3. 2. திருக்குறள். 506. 3. திருநா. 184 : 4. 4. மேற்படி 181 : 6. 5. மேற்படி 128 : 10. 6. மேற்படி 182 :5. 1. மேற்படி 137 : 9. 2. மேற்படி 179 : 6. 3. A.R. No. 205 of 1904.. இவர் சிவபெருமானுக்கு ஏழுபதுக்கு மேற்பட்ட கோயில்கள் கட்டினாரென்று திருமங்கை மன்னன் பெரியதிருமொழி (vi: 6. அ.) யிற் கூறுகின்றார். இவை செங்கற்களாலாகியவை யென்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. 4. திருநா. 49: 4 289: 8 297: 6 3. S.I.I. Vol. IV. No. 426. 2. திருநா. 48:4 3. திருநா. 289: 9 1. திருநா. 266 : 8 2. திருநா. 49 : 6 3. மேற்படி 263 : 9. 4. மேற்படி 226 : 6. 5. A.R. No. 247 of 1906. 1. திருநா. 226 : 7 2. திருநா. 50 : 9. 3. மேற்படி 98 : 7. 4. சோழ நாட்டு இந்தளூர் நாட்டுக் கஞ்சனூருடையான் கஞ்சாறன் அமர்நீதியான பல்லவதியரையன் திருவொற்றியூருடையார்க்குத் திருநுந்தா விளக்கக்குப் பொன் னளித்தது - (A.R. 188 of 1912). 5. நம் நந்தியடிகள் மகன் பெரியன் - (A. R. No. 149 of 1932 -33.) 1. திருத்தொண். அந். 31. 2. திருநா. 103 : 2. 2. திருநா. 103 : 4. 4. மேற்படி 248:4. 5. மேற்படி 103 : 6. 6. மேற்படி 103 : 2. 7. திருத்தொண். புராணம் நமி நந்தி. 31. 8.S.I.I.Vol. III.No. 75. 1. திருநா. 56:1 2. திருநா. 164 : 8. 3. மேற்படி 12 : 10. 4. மேற்படி 121 : 6. 5. A thesis on தேவாரம் & பெரியபுராணம் by Vidvan K. Vellaivaranan on behalf of the Annamalai University, in 1935-6. 6. திருநா. 49 : 2. 65. 108. 1. திருநா. 56:6; 64:8. 2. மேற்படி 65 :4. 3. மேற்படி 65 :7. 4. மேற்படி 114: 3. 5. மேற்படி 170: 6. 6. மேற்படி 264: 10. 7. மேற்படி 290: 3. 8. மேற்படி 264: 3. 9. மேற்படி 177: 10. 10. மேற்படி 49 :8. 11. திருநா. புரா. 75. 1. திருநா. 80 : 1. 2. திருநா. 116 : 8. 1. திருநா. 105 : 1 2. திருநா. 167 : 4,5,6. 3. A.R.No. 360 of 1921. 18th regnal year of Nirupatunga. 4. திருநா. 217 : 1,4. 5. திருநா. 10 : 6. 1. மேற்படி 259 :4. 2. திருநா. 259 : 3. 3. Dr. C. Minakshi’s Administration and Social life under the Pallavas. pp. 186-197. 4. திருநா. 43 :8. 1. மேற்படி 222:9 2. திருஞான. 228 : 1. 3. திருநா. 313 : 1. 4. திருநா. 106 : 1,4. 5. திருநா. 106 : 10. 6. A.R. 65 of 1927-8. 22nd regnal year of Rajaraja the Great. 7. A.R. No. 68 of 1927-8. 1. திருநா. 97 :6 2. திருநா. 214 : 5. 3. திருநா. 99 :2. 1. திருநா. 5 : 2 . 2. மேற்படி 5 : 7. 3. மேற்படி 309 : 2. 4. மேற்படி 289 : 10. 5. மேற்படி 213 : 2. 6. மேற்படி 284 : 9. 7.Travancore Archeological Series Vol. III (191) p.90. 1. திருநா. 221 :10. 2. திருநா. 5:4 3. திருநா. 110 : 1. 4. A.R. No. 230 of 1921. 49th regnal year of Kulottunga the first. 1. திருக்கோவை. 173. உரை. 2. திருநா. 50 : 2. 3. திருநா. 55 : 8. 4. குறள். 1071. 5. மேற்படி 117 : 1 6. திருநா. 78 :7. 1. திருநா. 96 : 9. 2. மேற்படி 98 : 2. 3. மேற்படி 185 : 9. 4. மேற்படி 199 : 3. 5. மேற்படி 211 :21. 6. மேற்படி 214 : 2. 7. நன்நூற் பாயிரப் பகுதியில் இஃது எடுத்துக் காட்டப்படுகிறது. 8. குறள் 1. 9. திருநா. 242 :5. 10. குறள் 100. 1. திருநா. 5 :1. 2. குறள் 298. 3. மேற்படி 76 :4 4. குறள். 415. 5. திருநா. 138 :3. 6. நற். 397. 7. திருநா. 114 :8. இக் கருத்தையே பிறிதோரிடத்தில். “மருவாகி நின்னடியே மறவேன் அம்மான் மறித்தொருகால் பிறப்புண்டேல் மறவாவண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே-” (236:6) என்று கூறுவர். 1. புறம். 341. 2. திருநா. 217 : 2. 3. புறம். 91. 4. சிலப் 12: “வம்பலர்.” 5. திருநா. 264 : 5 6. சிலப். 11:9, 89. 1. திருநா. 242 :8. 2. திருநா. 264 : 3. 3. A.R. No. 186 of 1908. 4. A.R.No. 456 of 1930. 5. S.I.I.Vol. II. part ii. No. 41. 6. A.R. No. 37 of 1920. 1.திருப்புகலூர் A.R. 68 of 1928. திருவாரூர் A.R.No. 137 of 1934. 2. A.R. No. 564 of 1921. 3. A.R. No. 294 of 1911. 4. S.I.I.Vol. V. No. 985. 5. S.I.I. Vol. II. part iii. No. 65. 6. S.I.I. Vol. II. part iii. No. 65 para. 6. 7. Ibid. para. 7. 8. Ibid. para. 8. 9. Ibid. para.10 10. Ibid. para. 13. 11. Ibid. para 13. 12. A.R. 95 of 1914. 1. A.R. 133 of 1925. 2. S.I.I. Vol. VIII. No. 675. 3.பெரியபுரா. திருநா. 18. 4. S.I.I. Vol. VIII. No. 324. 5. S.I.I. Vol. VIII. No. 529. 6. Ibid. No. 324. 1. A.R. No. 86 of 1928. 2.S.I.I. Vol. II. Part ii. No. 38 & 41. 3.A.R. No. 37 of 1920. 4.A.R. No. 559 of 1906. 5.S.I.I. Vol. VII. No. 485 1. S.I.I. Vol. VIII. No. 228 2. A.R. No. 316 of 1909. 3. A.R.294 of 1911 4. A.R.No. 300 of 1928 5. A.R. No. 137 of 1934. 6. A.R. No. 68 of 1928. 7. A.R. No. 117 of 1908. 8. A.R. No.186 of 1908. 9. A.R. No.564 of 1921. 10. A.R. No.278 of 1923. 11. A.R. No.121 of 1904. 12. A.R. No.456 of 1930. 1. A.R. 68 of 1928. 2. A.R. No. 402 of 1908. 3. 583 of 1908. 4. 303 of 1911. 5. 658 of 1916. 6. 203 of 1919. 7. A.R. 382 of 1921. 8. A.R. 80 of 1924. 9. A.R. 261 of 1927. 10. A.R. 127 of 1930. 11. A.R. 219 of 1917. 1. A.R.131 of 1925. 3. S.I.I. Vol. VIII. No. 324 2. S.I.I. Vol. VIII. No. 440 1. S.I.I. Vol. VIII. No. 529 2. A.R. 199 of 1924. 3. A.R.19 of 1917. 4. திருநா. 94 : 1. 5. S.I.I. Vol. VII. No. 741. 6. மேற்படி 149 : 4. 1. A.R. 171 of 1925. 2. மேற்படி 104 : 2. 3. S.I.I. Vol. VIII. No. 497. 4. திருநா. 65 : 8. 5. S.I.I. Vol. VIII. No. 497. 6. திருநா. 254 : 1. 7. S.I.I. Vol. V. No. 632. 8. திருநா. 81 : 4. 9. S.I.I. Vol. VIII. No. 43. 1. பெரியபு. சத்தி ; 7. 2. S.I.I. Vol. IV. No. 529. 1. S.I.I. Vol. XII. No. 134. 2. S.I.I. Vol.IV. No. 135. A.R. No. 37 of 1888. 3. S.I.I. Vol. XII. No. 65. 1. My. Arch. Reports. 1923. 52:3. 1907. p.3. Kondaji-I Agrahara Plates. 2. A.R. No. 31 & 32 of 1912. 3. Ep. Indi. Vol. XVIII. p. 11. 4. Ep. Car. Vol. VI. C. M.50. 5. Introduction to S.I.I. Vol. XII. p. viii. 6. ஐயடிகள். புரா :1. 7. Ibid. 2. 8. Ibid. 3. 9. S.I.I. Vol. I. No. 151. வரி : 19-49. 10. S.I.I. Vol. II. part iii. No. 78. சுலோ. 24 &26. 1. S.I.I. Vol. II. part v. No. 98. 2. S.I.I. Vol. I. No. 151. 3. S.I.I. Vol. I. No. 151. 4. S.I.I. Vol. II. part iii. No. 74. 5. S.I.I. Vol. II. part v. No. 98. சுலோ. 14 1. க்ஷேத்திரத் திருவெண்பா. 10 2. மேற்படி 22. 3. திருத்தொண்டர் திருவந்தாதி. 56 4. க்ஷேத்திரத் திருவெண்பா. 23. 1. ஐயடிகள் . புரா. 3. 2. திருநா. 289. 3. திருஞான. 234 ; திருநா. 42; சுந். 74. 4. A.R. No. 99 -107 of 1926. 5. A.R. No. 12 of 1918. 6. திருஞான. 384. 7. க்ஷேத்தி. 7. 8. திருநா. 132. 1. திருஞானசம். 383. 2. A.R. No. 26 of 1911. 3. “மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரை மேல் மன்னி அந்தமோ டளவிலாத அடிகள் ஆப்படியாரே”- 48:5 4. க்ஷேத்தி. 19. 5. மேற்படி. 21. 7. திருஞான. 320. 7. A.R. No. 259 of 1925. 1. S.I.I. Vol. V. No. 578. 1. சுந்த. 38:1. 1. சுந். தே. 73. 1. சுந். தே. 39. 2. மேற்படி 20. 1. சுந் தே. 34. 2. மேற்படி 24. 3. மேறபடி 14. 1. சுந். தே. 85, 1. சுந். தே. 29. 2. சுந். தே. 41. 1. சுந். தே. 51. 2. சுந். தே. 54. 3. சுந். தே. 89. 1. சுந். தே. 61. 2. மேற்படி 74. 3. மேற்படி 95. 1. சுந். தே. 77:9 2. சுந். தே.44. 3. சுந். தே. 4. 1. சுந். தே. 17 : 11. 2. மேற்படி . 4 : 10. 3. மேற்படி 53 : 10. 4. மேற்படி 64 : 10 5. சுந். தே. 39:11. 6. S.I.I. Vol. II. part ii. No. 38. 1. சுந். தே. 59:11. 2. சுந். தே. 89:11 3. மேற்படி 62:5; 68:6; 69:8. 4. சுந். தே. 17:8. 5. சுந். தே. 17:2. 6. மேற்படி 38 : 1 1. மேற்படி 68:8. 2. மேற்படி 51:10. 3. மேற்படி 51:11. 3. சுந். தே. 45 : 4 5. சுந். தே. 69 : 3 6. மேற்படி 89 : 10. 1. மேற்படி 61 : 1. 2. மேற்படி 65 : 11. 3. மேற்படி 92 : 4. 4. சுந். தே. 90 : 4. 5. Tamil Literature. p. 177 : 8. 6. சுந். தே. 39 :9. 1. இலக்கிய வரலாறு. பக். 337 -40. 2. தமிழ்ப் பொழில். Vol. III. g¡. 201-9. 1. தமிழ்ப்பொழில். Vol. III. g¡. 205. 2.சுந். தே. 39:9. 1. Dr. C. Minakshi’s Administration and Social life under the Pallava. p. 299-305. 1. S.I.I. Vol. I. No. 25 & 26. p. 14-8. 2. A.R.No. 566 of 1912. 1. A.R. No. 166 of 1906. 2. திருமுறை கண்ட புராணம். 16. 3. மேற்படி 25. 1. சுந். தே. 5 : 7 2. தொல். பொரு. மரபு. 89. 3. சுந் - தே 2: 10; 56: 8; 62: 6; 83: 6. 4. மேற்படி 9 :3. 1. சுந். தே. 1: 7. 2. மேற்படி 20 :9. 3. மேற்படி 19: 9. 4. மேற்படி 28 :6. 5. மேற்படி 12: 2. 6. மேற்படி 18 :2. 7. மேற்படி 57: 7. 8. மேற்படி 57: 6. 9. மேற்படி 29: 6. 10. மேற்படி 4 :4. 11. மேற்படி 38 : 7 12. மேற்படி 53 : 3. 13. மேற்படி 75 :4. 1. சுந்-தே 4 :7. 2. மேற்படி 53: 10. 3. மேற்படி 97 :1. 4. மேற்படி 97: 1. 5. மேற்படி 96 :7. 6. மேற்படி 63: 8. 7. மேற்படி 56: 5. 8.மேற்படி 84: 8. 9. மேற்படி 96 : 6 10. S.I.I. Vol. I. No. 25 & 26 11. சுந். தே. 40 : 10. 1. சுந். தே. 45 : 4. 2. மேற்படி 45: 9. 3. மேற்படி 61 :8. 4. மேற்படி 47: 8. 5. மேற்படி 8: 3. 6. மேற்படி. 7 : 8. 7. மேற்படி 12 : 7. 8. மேற்படி 23: 9. 9. மேற்படி 1 :9. 10. மேற்படி 2: 7. 1. மேற்படி 64: 5. 2. மேற்படி 7: 2. 3. மேற்படி 7: 3. 4. மேற்படி 7: 1. 5. சுந். தே. 8 : 9. 6. சுந். தே. 35 : 2. 1. சுந்.தே 3: 9. 2. மேற்படி 4 :9. 3. மேற்படி 84: 7. 4. மேற்படி 7: 4. 5. மேற்படி 82: 7. 6. மேற்படி 16: 1. 7. மேற்படி 61: 10. 8. மேற்படி 16 :4. 9. மேற்படி 16: 9. 10. மேற்படி 9: 4; 16 : 9. 11. மேற்படி 9: 4; 16: 5; 55: 8; 66: 5. 12. மேற்படி 9: 10. 13. மேற்படி 66 : 3. 14. மேற்படி 16 : 6. 15. மேற்படி 16: 7; 55:9. 16. மேற்படி 53: 8 55:7; 66:3. 17. மேற்படி 65:5. 18. மேற்படி 65: 7. 19. மேற்படி 65: 5. 20. மேற்படி 65: 4. 21. மேற்படி 70: 4. 22. மேற்படி 65 :6. 1. சுந் - தே 55: 7. 2. மேற்படி 16 : 10. 3. மேற்படி 62: 6; 63:4. 4. மேற்படி 55: 2. 5. மேற்படி 90: 7. 6. மேற்படி 9: 6. 7. மேற்படி 15: 10. 8. மேற்படி 16: 3. 9. மேற்படி 55: 3. 10. மேற்படி 58 :9. 11. மேற்படி 65: 1. 12. மேற்படி 65: 2; 88 : 6. 13. மேற்படி 97 :9. 14. மேற்படி 62: 8. 15. சுந். தே. 65 : 2. 16. மேற்படி 46 : 7 ; 88 : 8. 17. மேற்படி 66 : 2. 18. மேற்படி 65 : 3. இவ்வரலாற்றுக் குறிப்புக் கேரளநாட்டுத் தோற்ற வரலாறாகப் பொய்புணர்ந்து காணப்படுகிறது. 19. மேற்படி 69 : 10. 1. சங்க காலத்துச் சேரவேந்தருள் மாக்கோதை யென்பான் பெயரால் தோன்றி, நம்பியாரூரர் காலத்தே மகோதை யென மருவி விட்ட இது வஞ்சிமா நகரின் ஒரு பகுதியென அறிக. இம்மகோதை, பிற்காலத்தே மகோதையார் பட்டினம் எனமாறிப் பின்பு மகாதேவர் பட்டின மென வழங்கலாயிற்று - Logan’s Malabar. p. 207. 1. சுந். தே. 12 : 7. 2. சுந். தே. 2 : 6. 3. மேற்படி 33:9. 4. மேற்படி 77: 3 5. மேற்படி 78:6. 6. புறம் 158. 7. புறம் 200. 1. சுந். தே. 77:3. 2. A.R. No. 35. of 1915. 3. மேற்படி 2 :9. 4. இது சங்க நூல்களிற் காணப்படும் ஆறுகளுள் ஒன்று. (பதிற். 48:18) 1. சுந். தே. 79 : 1-10. 2. மேற்படி 81:1-10. 1. சுந். தே. 42 : 1-10. 2. மேற்படி 50:2. 1. சுந்.தே 50:1-10. 2. Tanjore Gazetteer. Vol. I. p. 43. 3. சுந். தே. 16:11. 4. A.R. No.255 of 1911. 1. சுந். தே. 16 : 11. 1. சுந். தே. 71 : 1-10. 1. சுந். தே. 79 : 3. 2. மேற்படி 79 : 6. 1. சுந். தே. 7:7. 2. சுந். தே. 8 :1. 3. மேற்படி 8:9. 4. மேற்படி 8:3. 1. சுந். தே. 8 : 4. 2. சுந். தே. 8 : 7. 3. மேற்படி 64:4. 4. மேற்படி 64:5. 5. மேற்படி 64:6. 6. மேற்படி 64: 7. 7. மேற்படி 64: 8. 8. மேற்படி 78: 6. 1. சுந். தே. 78 : 10. 2. சுந். தே. 81 : 3. 3. மேற்படி 35:8. 4. மேற்படி 34:1. 1. சுந். தே. 34 : 1. 2. புறம். 375. 3. மேற்படி 34:7. 4. குறுந். 25. 5. மேற்படி 95 :6. 6. தொல். செய்யு. 239. 7. மேற்படி 30:4. 8. முருகு. 288. 9. சுந்.தே 30:3. 1. குறள் 6. 2. சுந். தே. 3:2. 3. குறள் 1. 4.சுந்.தே 3:7. 5. குறள் 339. 6. சுந்.தே 3:4. 7. பழமொழி. 126. 8. சுந்.தே 95:9. 9. பழமொழி 358. 1. சுந். தே. 67 : 2. 2. சுந். தே. 43 : 1. 3. மேற்படி 44:3. 4. மேற்படி 50:4. 5. மேற்படி 58:1. 6. மேற்படி 54:1. 7. மேற்படி 7:8. 8. மேற்படி 19:8. 9. மேற்படி 46 : 7. 1. சுந். தே. 50 : 7. 2. மேற்படி 67:6. 3. மேற்படி 73:3. 4. மேற்படி 66:2. 5. மேற்படி 73:8. 6. மேற்படி 94:5. 7. மேற்படி 57:8. 8. மேற்படி 94 : 6. 9. சுந். தே. 73 : 7. 1. சுந். தே. 20 : 3. 2. மேற்படி 20:6. 3. மேற்படி 32:8. 4. சுந். தே. 46 : 8. 1. சுந்.தே 46:9. 2. மேற்படி 49:2. 3. மேற்படி 5 : 2. 1. சுந்.தே. 5:9. 2. மேற்படி 18:3. 3. மேற்படி 54:4. 1. சுந். தே. 54:9. 2. மேற்படி 95: 2. 3. மேற்படி 36:5. 4. சுந். தே. 91 : 4. 5. சுந். தே. 37:2. 1. பெரியபு. திருநாவு. 11. 2. A.R. No. 345 of 1916. 3. S.I.I. Vol. VII. No. 819. 4. A.R. No. 22 of 1912. 5. A.R. No. 309 of 1928-9. 6. A.R. No. 124 of 1910. 7. A.R. No.169 of 1926. 8. A.R. No. 175 of 34-5. 9. S.I.I. Vol. V. No. 422. 10. A.R. No. 28 of 1914. 11. A.R. No. 42 of 1928-9.A. 1. A.R. No. 212 of 1930. 2. Travan. Arch. Vol. VI. No. 14. 3. S.I.I. Vol. XII. No. 196. 4. சுந். தே. 34:10. 5. S.I.I. Vol. VIII. No. 442. 6. A.R. No. 47 of 1913. 7. A.R. No. 45 of 1913. 8. A.R. No. 145 of 1914. 9. பெரியபு. தடுத்தாட்.4. 10. சுந். தே. 53:10 11. S.I.I. Vol. II. p. ii. No. 38, 41; S.I.I. Vol. V.No. 418. S.I.I. Vol. VII. No. 939 ; A.R.No. 275 of 1917 ; 299 of 1917, 37 of 1920. 1. சுந். தே. 59:11. 2. S.I.I. Vol. II. iii. No.65. 3. S.I.I.Vol. VII. No. 939. 4. Ibid. No. 945. 5. சுந். தே. 17:2. 6. A.R.No. 478 of 1912. 7. மேற்படி 17:11. 8. சுந். தே. 70:10. 9. A.R.No. 524 of 1937-8. 1. A.R.No. 309 of 1907 ; S.I.I. Vol. VII. No. 485. 2. S.I.I. Vol. V. No. 135-8; A.R. No. 371 of 1911. 3. S.I.I. Vol. VIII. No. 485. 4. A.R. No. 302 of 1907. 5. S.I.I. Vol. VII. No. 938. 6. Ibid. No. 939. 7. A.R. No. 211 of 1934-5. A.R. No. 96 of 1935-6. 8. A.R. No. 95 of 1936-6. 1. S.I.I. Vol. XII. No. 231. 2. சுந். தே. 13:1-11. 3. S.I.I. Vol.VIII. No.69. 4. பெரியபு. தடுத்தாட்.129. 5. பெரியபு. தடுத்தாட்.171. 6. சுந். தே. 68:8. 7. A.R. No. 61 of 1922. 1. A.R. No. 273 of 1927-8. 2. A.R. No.255 of 1916. 3. பெரியபு. கழறிற்.66. 4. S.I.I. Vol.V. No.295; S.I.I. Vol. VIII. No. 213; A.R. No. 87 of 1927-8; A.R. No.306 of 1927-8. 5. A.R. No. 236 of 1922. 6. சுந். தே. 16:11. 1. S.I.I. Vol.VII. No.485. 2. S.I.I. Vol. II. part. ii. No. 38, Ibid. p. 66. S.I.I. Vol.V. No.533; A.R. No. 345 of 1916. 3. பெரியபு. சண்டே.60. 4. மேற்படி திருமலை. 25. 5. A.R. No. 325 of 1902. 6. A.R. No.262 of 1913. 7. A.R. No. 137 of 1912. 8. A.R. No.54 of 1906. 1. A.R. No.104 of 1908; 180, 190, 192 of 1929. 2. A.R. No.10 of 1918. 3. சுந். தே. 42:1-11. 4. சுந். தே. 42:4. 5. A.R. No.147 of 1905. 6. A.R. No.150 of 1905. 7. சுந். தே. 74:1. 8. A.R. No.482 of 1907. 9. S.I.I. Vol.V. No.632. 10. சுந். தே. 86:1. 11. S.I.I. Vol.VIII. No.97. 1. சுந். தே. 29:10 1. பெரியபு. கழறிற். “அருட்சேரர் சிறந்த அந்தாதியிற் சிறப்பித் தனவே யோதித் திளைத்தொழுந்தார்” (87) என்று சேக்கிழார் கூறுவது காண்க. 1. சேரமான் பெருமாள்களுள் இறுதியில் இருந்த சேரமான் பெருமாள் காலம் கி.பி. 428 என்று கூறுகின்றனர். T.St. Manual Vol. II. g¡. 44 2. Logans Malabar. p. 167. 3. T.A.S. Vol. II. page 11. 1. W. Logan’s Malabar. p.246. and Tra. S.M. Vol. II. p. 44. 2. “கடலங்கரைமேல் மகோதை யணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே”- சுந். தே. 4:1. 3. பெரியபு. கழறிற். 4. 4. Epi. Indi. Vol. VII. p. 198. 5. W. Logan’s Malabar. p. 207. 6. சுக சந்தேசம் published in the Travancore Archeological Series. 7. T.A.S. Vol. II.p. 11. 1. புறம். 373. 2. வஞ்சிமா நகர்க்கு வடக்கில் மேலைக் கடற்கரையில் கருவூர்ப்பட்டினம் என்றோர் ஊர் சங்ககால முதலே இருந்து வருகிறது. அந்தக் கருவூரின் நினைவுக் குறியாகச் சேரமன்னர் கொங்கு நாட்டைத் தமது ஆட்சியில் அடக்கியபோது காவிரிக்கரையில் இந்நகரை வஞ்சியெனப் பெயரிட்டனர்; அதுவே பின்பு கருவூர் எனப் பெயர் மாறியது. 3. A.R.Bo. 335 of 1928. 4. சுந். தே. 4.1-10. 5. S.I.I. Vol. V. No. 789. 1. S.I.I Vol. VI. No. 533. 2. பெரிய பு.கழறிற். 23. 3. பெரிய பு. கழற்றி. 42. 1. கல்லாடம் அகவல். 11. 2. சுந். தே. 77. 3. T.A.S. Vol. V. p. 99. 4. சுந். தே. 100 :8. 5. T.A.S. Vol. V.p. 103. 1. தமிழ் வரலாறு. Vol. II. பக். 64. 2. T.A.S. Vol. V.p. 100. 3. Origin and Early History of Saivism in South India. p. 445. 4. இந்நூல் பக்.206. 5. தமிழ்ப் பொழில். Vol. III.p. 209. 6. Bulletin of the Rama Varma Research Institute Vol. VII. p. 37-44. 7. சாசனத் தமிழ்க்கவி சரிதம். பக். 13. 1. பெரிய பு. கழறிற் 8. 2. மேற்படி 9. 3. பொன் வண்ணத். 43. 4. பொன் வண்ணத். 98. 5. பெரிய பு. கழறிற். 19. 6. மேற்படி 21. 1. பொன் வண்ணத். 13. 2. மேற்படி 40. 3. பெரிய பு. கழறிற். 36. 4. மேற்படி 37. 1. பொன் வண். 9. 2. மேற்படி 17. 3. மேற்படி 1. 4. மேற்படி 100. 1. பொன். வண். 24. 1. மேற்படி 25. 2. பொன் வண். 89. 3. பொன். அந். 92. 1. பொன். அந் 70. 2. பொன் வண். 99. 3. திவ்யபிரபந்தம். திருமாலை.7. 1. பொன் வண். 10. 2. பொன் வண். 11. 3. மேற்படி. 14 4. மேற்படி 7. 5. மேற்படி 9. 6. மேற்படி 9. 7. பொன் வண் 15. 1. பொன் வண். 19. 2. மேற்படி 5. 3. மேற்படி 65. 1. பொன் வண். 95. 2. பொன் வண். 34. 3. மேற்படி. 78. 4. திருஞான. 237:6 5. மேற்படி 83. 1. பொன் வண். 50. 2. பெரியபு. கழறிற். 69. 3. பொன். வண். 19 1. பொன்.வண் 84. 2. மேற்படி 2. 1. பொன் வண். 45. 2. மேற்படி 46. 3. திரு. மும்ம. 3. 1. மேற்படி 21. 2. தொல். பொருள். பொருள்:39. 3. திரு. மும்ம. 24. 1. திரு.மும்ம 19. 2. குறுந். 85. 3. திரு. மும்ம. 16. 4. அகம். 131. 5. திரு.மும்ம 16. 6. நற்றிணை. 110. 1. ஞானவுலா 1:8. 1. ஞானவுலா 51:5. 2. மேற்படி 83. 1. மேற்படி 98:9. 2. ஞானவுலா. 109:11. 1. ஞானவுலா 132. 2. மேற்படி 144. 3. மேற்படி 148. 4. ஞானவுலா. 170:1. 5. ஞானவுலா 172:4. 1. மேற்படி 188:9. 2. ஞானவுலா. 196:7. 3. பொன். அ;ந. 42. 1. தலைமேல் உறையும் பெண். 2. பொன். அந்.71. 3. பொன். அந். 67. 1. மேற்படி 68. 2. பொன். அந்.90. 1. பொன். அந். 19. 2. பொன். அந். 73. 1. சீவக. 2087. 2. குறள். 752. 3. ஞானவுலா. 136:8. 1. சீவக. 2535. 2. ஞானவுலா. 21. 1. Ep. Indi. Vol. XVII. No. 16. 2. Ep. Indi. Vol. XVII. No. 16.p. 303 வரி. 139-41. 3. Ep. Indi. Vol. XVII.p. 295. The date of the Velvikudi Grant must be about A.D. 769-70 which is the date of the Anaimalai inscription. 1. Ep. Indi. Vol. XVII. No. 16. வரி. 33-9. 2. பதிற். 21. 1. சுந். தே. 20:1. 2. “இறக்கப்பட்டது” எனக் காணப்படும் இது “திறைக்கப்பட்டது” என இருத்தல் வேண்டும். 1. Ep. Indi. Vol. XVII. No.வரி. 16.104-118. 2. Ep. Indi. Vol. XVII. No. வரி. 16.88-97 1. Ibid. வரி. 98-103. 2. Ep. Indi. Vol. XVII. No. 16 வரி. 79-83. 1. சாசனத் தமிழ்க்கல்வி சரிதம். பக்.24. 2. மேற்படி பக். 23. 1. தொல்இ. பொ. புறத். 8 நச். மேற்கோள். 1. திருவால. திருவிளை. 27:6. 2. கடம்ப. இலீலா. 27. 1. Dr. உ.வே. சாமிநாதையர். 2. “இற்றைக்கு 700-வருடங்களுக்கு முந்தியிருந்தாரென்று மட்டும் தெரிகின்றது” - “பதிப்புரை. பக். 19. (2nd Edition in 1927.)” 3. The date of Meikandar has been fixed to be about A.D. 1232. - A.R. for 1935-36. para.86. செந்தமிழ். Vol. III. p. 89-90. 1. திருவம்மானை.8. 1. Madura Dt. Manual. p. 147. 2. Encyclopaedica - Brittanica - Tamils. 3. Tamil Studies. p. 54. 4. தமிழ் பெருமக்கள் வரலாறு பக்.68. 1. J.S.V.O. I. Vol. IV. p.175. 1. தமிழ் வரலாறு. I. பக். 104-5. (முதற் பதிப்பு) 1. மாணிக்கவாசகர் வரலாறும் கால ஆராய்ச்சியும். பக். 180-2. 1. தமிழ் வரலாறு. பிற்பாகம். பக். 103. (முதற் பதிப்பு) 1. Tamil Studies. p. 405. 1. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும். பக். 245-300. 2. 1. Tamil Studies. p. 409. 1. T.V.S. பாண்டியர் வரலாறு. பதிப்பு. II. பக். 76. 2. M.E.A.R.No. 17 of 1907. 3. S.I.I. Vol. V. No. 608. 4. A.R.No. 364 of 1907. 5. A.R.No. 13 of 1908. 6. S.I.I. Vol. VI. No. 446. 7. Annual Report on Archeological Survey of India for 1903-4 p. 275. 8. A.R.No. 37 of 1931. 9. A.R.No. 104 of 1905. 10. A.R.No. 12 of 1928-9. 11. A.R.No. 863 of 1917. 12. A.R.No. 605 of 1915. 13. திருவாச. போற்றி. 190. 14. ஆழ்வார்கள் கால. நிலை. பக். 176. 15. J.S.V.O.R. Institute. Vol. IV. p. 156. 16. Journal of Sri Venkateswara Oriental Institute Vol. IV. p.156-7. 1. A.R.No. 323 of 1918; A.R.No. 456 of 1916. 2. A.R.No. 455-473 of 1916. A.R.No. 323 of 1918;200 and 201 of 1935-6. 1. Ins. No. 694. S.I.I. Vol. V. p. 290; A.R. No. 130 of 1895. 2. S.I.I. Vol.V. No. 710. (A.R.No. 146 of 1895.) 1. திருக்கோவை.86. 1. இது திருவாதவூரர் புராணத்திற் காணப்படவில்லை. 1. திருவாலவா. 27:47. 1. திருவாச. செத்தி. 2. 2. திருவா. அருட். 1. 3. அதிசயப். 4. 1. கீர்த்தி. 127-131. 2. தெள்ளேண.4. 3. அச்சோ. 1. 4. கோயில்மூத்த. 6. 5. திருச்சதக. 3. 6. கீர்த்தி. 27-8. 7. திருவம்மா. 20. 8. திருவார்த்தை. 10. 1. கீர்த்தி. 35-6. 2. திருவேசறவு.1. 3. கீர்த்தி. 46-7 . 4. திருப்பூ. 16. 5. திருக்கழுக்.2. 6. போற்றி. 213-4 7. தமிழ் வரலாறு . Part II. பக். 103. 8. J.S.V.O.I. Tirupati. Vol. IV.p. 167. 9. திருவாசக விரி. 2nd Edn. பக். 326. 1. J.S.V.O.I. Tirupati. Vol. IV. 2. திருவா. 43-2. உரை. 3. S.I.I. Vol.II. p. 53. 4. A.R.No. 690 of 1905. Ep. Indi. Vol. IX.p. 87. 5. இடவையான பாண்டியனை வெந்கண்ட சோழச் சதுர்வேதி மங்கலம் என்று இதற்கு ஒரு பெயருண்டெனத் திருப்பனந்தாளிலுள்ள கல்வெட்டொன்று (A.R. No. 42 of 1914) கூறுவது நோக்கத்தக்கது. 1. Journal of the Sri Venkateshwara Oriental Research Institute. Vol. IV. p. 177-9. 2. கல்லாடம், “கருங்குடிற் செவ்வாய்”(48) 3. கலைமகள். பொங்கல் மலர். 1942. 1. திருவால. திருவினை. 2. திருச்சதகம். 26. 3. பண்டாய நான்மறை. 7. 1. சிவபு. 25-30. 2. திருவம்மானை. 14. 1. போற்றித்திரு. 13-25. 2. போற்றித் திரு. 164:5. 3. திருச் சதக. 2. 4. திருச் சதக.78 1. நீத்த வண்ணப். 44. 2. நீத்த வண்ணப். 46. 3. அடைக். 6 4. அடைக்.7. 5. திருச் சத. 40. 6. திருச் சத. 52. 7. அடைக். 5. 8. அடைக். 1 9. மேற்படி 2. 10. திருச்சத. 5:14. 11. திருச் சத. 41. 12. மேற்படி 38. 13. அச்சோ. 1. 14. மேற்படி 88. 1. அடைக். 9. 2. திருவம்.3. 3. திருவம்.6. 4. திருவம்.12. 5. திருக்கோத்தும்பி.11. 6. திருக்கோத்தும்பி 19. 7. மேற்படி 20. 8. மேற்படி 12. 1. மேற்படி 6. 2.மேற்படி 10 3. மேற்படி 17. 4. கண்டபத்து. 5. கண்டபத்து.8. 1. அற்புதப்பத்து.3. 2. மேற்படி 5. 3. மேற்படி 8. 4. ஆசைப்பத்து4. 5. புணர்ச்சி.10. 6. குழைத்தபத்து.4 7. குழைத்தபத்து.6. 8. மேற்படி 7. 9. மேற்படி 8. 1. பண்டாய. 6. 2. வாழாப்5. 3. தணிகைப்பு. 4. திருநா. 5. குலாப் .2. 6. மேற்படி 7. 7. திருச்சதகம். 30. 8. திருப்பூவல்லி.7. 1. பிரார்த்தனை. 2. 2. மேற்படி 4. 3. மேற்படி 9. 4. அற்புதப்பத்து. 8. 5. சென்னிப்பத்து. 10. 6. யாத்திரைப்பத்து.2. 7. யாத்திரைப்பத்து.5. 8. மேற்படி 6. 9. மேற்படி 10. 1. திரு. மு. இராகவையங்கார், திரு. சதாசிவப் பண்டாரத்தார் முதலியோர். 1. பன்னாட்கு முன்னெனல்லாம் திருக்கோவையார்க்கு உரை கண்டவர் நச்சினார்க் கினியரென அறிஞர் கூறி வந்தனர்; பின்னர் நிகழ்ந்த ஆராய்ச்சிகளால் இவ்வுரை பேராசிரியரது என்பது தெளிவாயிற்று. 1. திருக்கோவையார்.72. 2. திருக்கோவையார்.86. 3. மேற்படி 65. 4. மேற்படி 67. 1. திருக்கோவை.106. 2. திருவாச. கோயிற். 3. மேற்படி 75. 4. திருவா. தெள்ளே. 18. 5. மேற்படி 307. 6. திருத்தோணோக்கம்.8. 7. திருப்பாண்டி.8. 8. திருக்கோவை.5. 9. திருக்கோவை.180. 1. S.I.I. Vol. V. No. 1351. 2. இது கோகழியைஞ்ஞூறு எனக் கல்வெட்டுக்களில் வழங்குகிறது; இது தெரி யாமையால் சைவ பௌராணிகர்கள் திருவாவடுதுறை எனக் கூறி யொழிந்தனர். திருக் கோயில்களின் தூய தமிழ்ப் பெயர்களை வடமொழியில் மாற்றிய காலத்தில் இன்னோ ரன்னவை கற்பிக்கப்பட்டன. 3. பிற்காலச் சோழர் சரித்திரம் . பக். 156. 4. Indian Historical Quartely. Vol. XXVI. No. 1 பக். 1-16. 1. திருமூலர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதன்று என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. 2. A.R. for 1917. para 35-8. 3. சிவாகமங்களுக்குச் சித்தாந்தம் என்பது பொதுப் பெயர் என மகுடாகமம் கூறுகிறது; இம் மகுடாகமத்தைப் பின்பற்றியது தில்லைப் பெருங்கோயில். 1. ஞானசம். 12:3. 2. கண்ட.4. 3. பண்டாய. 2. 4. அச்சோப். 9. 1. திருஞான. 126:7. 2. குழைத்த. 5. 3. அச்சோ. 1. 4. ஆசைப்.7. 5. ஆனந்த.3. 6. திருக்கோவை.1. 7. குறுந் 62. 8. மேற்படி 84. 1. அகம்.380. 2. மேற்படி 96. 3. புறம். 202. 4. மேற்படி 150. 5. குறுந். 60. 6. திருக்கோவை. 369. 7. நற்றிணை. 366. 8. பழமொழி. 126. 9. திருக்கோவை 144. 10. மேற்படி 73. 1. மேற்படி 386. 2. திருநாவுக். 309:2. 3. திருவெம்பா.19. 4. சீவக. 1793. 5. சுந். 46:3. 1. திருச்சத.84. 2. சீவக. 2515. 3. பழமொழி. 141. 4. திருநாவுக். 75:6 5. நீத்தல். 9 . 6. முத்தொள் .100. 7. பழமொழி. 358. 8. சதக. 98. 9. நீத்தல். 39. 10. சுந் 67:2. 1. பெரிய திரு. 7:10:4. 2. குறுந். 178. 3. நீத்தல். 14 . 4. திருக்குறள். 575. 5. திருக்குறள். 576. 6. முத்தொள் .101. 7. சதக. 21. 8. செத்தி. 4. 9. செத்தி.9. 1. பழமொழி. 62. 2. திருஞான. 7:4. 3. அதிசயப். 9. 4. திருநா. 57:4. 5. திருச்சதக. 48. 1. திருவார்த்தை. 6. 2. அகம். 6 3. திருச்சதக. 42. 4. திருநா. 70:5. 5. அச்சப். 9. 6. குறள். 350. 7. நற்று - நல்லது. 8. உயிருண்ணி. 5. 9. குறள். 346. 10. அற்புதப் 3. 1. பிடித்த. 9. 2. ஆனந்த. 5. 3. திருச்சத. 92. 4. திருக்கோவை. 147. 5. திருக்கோவை. 198. 1. சதக. 21. 2. மேற்படி 32 3. மேற்படி 46. 4. திருச்சதக. 89. 5. திருச்சதக. 53. 6. கோயின் மூத்த. 7. 1. திருமணக் காலத்தில் மணமகளை மணமகற்குக் கையடை செய்யுங்காலும், “இவள் உம்கையிற் பிள்ளை, உமக்கே அடைக்கலம்” என்பதும் வழக்கு. இதனை ஓம்படை எனப் பழந்தமிழ் நூல்கள் குறிக்கின்றன. 2. திருவெம்பா.19. 3. திரு விருத்தம். 94. 4. சதகம்.87. 5. சதக. 96. 6. நீத்தல்.5. 1. யாப் விரு. 95 மேற். 2. “ஆற்றின் கரைபுரண்டு நீர் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்கும்” என்பதோர் பழமொழியும் உண்டு. 3. நீத்தல். 13. 4. மேற்படி 25. 5. மேற்படி 26. 6. நீத்தல்.34. 7. ஆசைப் 5. 8. புணர்ச்சிப்.2. 1. பழமொழி. 105. 2. கோத்தும். 8. 3. கோத்தும்.20. 4. சீவக. 202. 5. கோத்தும்பி.10. 6. தேணோக்கம். 14. 7. ஞானாமிர்:அகவ. 23:2-4. 8. புணர்ச்சி.2. 1. அடைக். 8. 2. நீத்தல்.39. 3. செத்தி3. 4. அச்சப். 9. 5. நீத்தல் 22. 1. அதிய. 8. 2. சீவக. 2683. 3. ஆனந்த .3. 4. புறம்.390. 5. சிலப். 22:116. 1. பிடித்த.6. 2. சென்னி.7. 3. யாத்திரை.9. 4. கோவை.182. 5. பரிபா. 11:80. 6. பரிபா. 11:81. 7. மேற்படி 11:91. 1. திருப்பாவை.2. 2. திருப்பாவை.3. 3. திருப்பாவை வ்யாக்யானம். பக்.14-5. 1. A.R. for 1926 -7, Para 26. 2.A.R. No. 421 of 1912 3. A.R. for 1927 -8. Para 19. 1. A.R. for 1913 para 51. 2. Dr. H.G. Quaritch Wales of the Lord Chamberlain’s Department of the Court of Siam. p. 249 3. Ibid. p. 83. 1. Ibid. p.238 - 51 2. திருத்தெள்ளே.9. 1. மேற்படி19. 2. தோணோக்கம். 2. 3. சிலப். 3 : 13 அடியாற். மேற். 4. A.R. for 1907. para 40; A.R. No. 165 of 1906 1. திருப்பூவல்லி. 19. 2. பட்டினத்தார்: திருவிடை. மும்மணிக் 28:31. 3. திருக்கோத்தும்பி. 3. 4. அன்னை. 9. 1. குயிற். 7. 2. A.R. for 1926 -7 para 26. 3.A.R.No. 165 of 1906. 4. A.R. No. 628 of 1902. 5. A.R.No. 421 of 1912. 6. A.R.No. 186 of 1932-3. 7. A.R.No.285 of 1927. 8. A.R. No 409 of 1908. 9. S.I.I.Vol. 8. No. 423 10. A.R.No. 30 of 1916. 11. A.R.No.39 of 1923 - 4 1. A.R.No. 228 of 1928 -9. 2. P.S.No.803 3.P.S.No. 806. 4. P.S.No.899. 5. A.R.No. 54 of 1930 -31 6. A.R.No. 130 of 1916 7. A.R.No. 175 of 1935 -6. 8. A.R.for 1927 -8. para 19. 9.இது 1933-ஆம் ஆண்டில் தஞ்சை ஜில்லா மதுக்கூரில் கண்டெடுக்கப் பெற்றுச் சென்னைப் பொருட்காட்சிச் சாலைக்குக் கொணரப்பெற்றது; இது விக்கிரம் கிராமத்துக் தியாகராக சுவாமி கோயிலுக்கு உரியது என்றும் கூறுவர். 10. நம்பியாண்டார்: கோயில் திருப்பண்ணியர்.58. 1.A.R.No. 282 of 1915 2. திருச்சதக. 26 3. பண்டாய. 7. 4.A.R.No. 258 of 1911. 5. A.R.No. 107. of 1902 1. திருவிடை. மும். 28 : 30 - 55. 2. Journal of the Annamalai University : Vol. XIV. p.60. 1.திருவிடை. மும். 4. 2.மேற்படி 7. 3. சரளம், விரிந்த நிழலைத்தரும் ஆலமரமும் அரசமரமுமாம். 4. திருவிடை. மும். 13. 5. திருக்கழும. மும்.25 6. மேற்படி 28. 7. கோயில் நான். 6. 8. மேற்படி 7. 9. மேற்படி 15. 1. திருவேகம். அந். 86. 2. திருவொற். ஒரு. 1. 3. மேற்படி 3. 4. மேற்படி 4. 5.திருவொற். ஒரு. 6 6. திருவொற். ஒரு.7. 7.திருக்கழு. மும். 22 8. இரத்தினத். திரையம். 16 1. மேற்படி 13 2.திருக்கழு. மும். 13 3. திருக்கழு. மும்.21. 4.திருவிடை. மும். 13 5.திருவொற்றி. 4. 6. மேற்படி 7. 7. கோயில் நான். 16 2. திருவொற்றி. 8. 1. திருக்கழுமல. 16. 1.கோயில் நான் மணி. 20. 2. திருவிடை. மும். 7. 3. திருவிடை. மும். 7 4.மேற்படி 19. 5. திருக்கழுமல 19 6.மேற்படி 15. 7. மேற்படி 16 1. புறம். 92 2. திருக்கழு. 28. 3. திருவேம்பா. 10. 4. கோயில். 6. 5. திருவாச. போற்றி. 50-3 6. மேற்படி 24. 7. திருக்கோவை. 51. 8. திருவேகம். அந். 73 1. கோயில். 4. 2. S.I.I.Vol. VII. No. 319 3.திருவிடை. மும். 28 4. கோயில். 7. 5. திருவேகம். அந். 47. 6. A.R.No. 457 of 1998 7. A.R.No. 474 of 1908. 1. S.I.I.Vol. XII. p. 178. 2. S.I.I. Vol. No. 442 at Piranmalai. 1.இலக்கிய வரலாறு. Part II. பக் 327 2. திருவிடைக்கழித் திருவிசைப்பா. 11. திருப்பல்லாண்டு. 13. 3. திருவெண். சரித்திரம் of ஈக்காடு. இரத்ததினவேலு முதலியார்.பக்.29. 4. பட்டி. பிள். பிரபந். திரட்டு. முன்னுரை. பக். 28. (ஆ.சிங் காரவேலு முதலியார் பதிப்பு) 1. கோயிற்றிருப் பண்ணியர்:26 “பூந்தண் பொழில் சூழ்புலியூர்ப் பொலி செம்பொன் அம்பலத்து, வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல், ஆந்தண் பழைய அவிழை யன்பாகிய பண்டைப் பறைச் சேந்தன் கொடுக்க அதுவுந் திருவமுதாகியதே.” 2. A.R.No. 452 of 1917. 3. சுந். தேவா. 62:8 1. சேந். திருவிசை. 1:1. 2. சேந். திருவிசை. 1:7 3.A.R.No. 435 of 1908. 4.A.R.No. 436 of 1908 1.சுந். தேவ. 88:8. 2. சேந். திருவிசை. 1.12. 3. சேந். திருவிசைப். 1:9. 4. த.நா.சரிதை. 228. 5. சுந். தேவா. 70 :5 6. சேந்.திருவிசை. 2:3 7.A.R.No. 130 of 1925 8. S.I.I.Vol. VII. No.403. 9.சேந். திருவிசை. 2:9. 1.A.R.No. 148 of 1925. 2. A.R.No. 101 of 1925. 3.சேந். திருவிசை. 2:2. 4. சேந்.திருவிசை. 2:3. 5.A.R.No. 269 of 1925. 6. மேற்படி 3:7. 7. சேந். திருவிசை. 3:9 1.A.R.No. 276 of 1925 2. திருப்பல். 1. 3. மேற்படி 13. 1. செந்தமிழ் பக். 358 -62. 2.A.R.No. 449 of 1908. 3. The Cholas. Vol. II. part. p.537 4. G.K. Vanborough “The peoples in the East Indies”- p.349 -50. 1. S.I.I. XII. No. 56; A.R.No. 144 of 1928 -9. 1. Ep. Indica. Vol. XX. p.52. 2. S.I.I.Vol. II. part v. No. 14 3. Ep. Indi. Vol. XVIII. p. 13. 4. S.I.I.Vol. II. part v.No. 98. 5. S.I. I. Vol. XII. No. 59. 1. தொண். சத. 31. “பொள்ளா நுழைவழிப் போய் தலை நீட்டும் புலவன் முன்னாள், கள்ளாறு செஞ் சொற் கலம்பகமே கொண்டு காயம் விட்ட தெள்ளாறை நந்தியெனுந் தொண்டைமான் கலி தீர்ப்பதற்கு வள்வார் முரசம் அதிர்த்தாண்டதும் தொண்டை மண்டலமே.” 1. வானுறை மதியிற்புக்க துன்றட்பம் - பா.வே. 2. வையகமடைந்ததுன் கீர்த்தி மறிகடல் புக்கதுன் பெருமை - பா.வே. 3. கானுறை புலியிற் புக்க துன்சீற்றம். 4. கற்பகம் புக்கதுன் கொடைகள் - பா. வே. 5. தேனுறை மலராளரியிடம் புகுந்தாள் - பா. வே. 6. செந்தழல் புகுந்ததுன் மேனி; செந்தழலடைந்ததுன்றேகம் - பா.வே. 7. நந்தியே எந்தைபிரானே: நந்தியே நந்தயாபரனே - பா.வே. 1. தொண். மண்ட . சதகம். 86. 1. சோ. முது. வெண்பா. 88. “நந்திக்கலம்பகத்தால் மாண்டகதை நாடறியும், சுந்தரஞ்சேர் தென்குளத்தூர் சோமேசர்” எனவரும். 2. பார. வெண்பா. 4. 3. நந்திக். 29. 4. மேற்படி 77. 1. பார. வெண். 4. உரைநடை. 2. நந்திக். 1. 3. நந்திக். 21. 4. நந்திக். 81. 1.நந்திக் கலம்பகம். பாயி.1. 2. மேற்படி 2. 3. மேற்படி நூல்.1. 4.நந்திக். 1 5. நந்திக். 14. 6. மேற்படி 40. 7. மேற்படி 83. 8.மேற்படி 3. 9.மேற்படி 51. 10.மேற்படி 5. 11. மேற்படி 5. 12. மேற்படி 44. 13. மேற்படி 39. 14. மேற்படி 20. 15. மேற்படி 29. 16. மேற்படி 87. 17. மேற்படி 48. 18. மேற்படி 13 1. மேற்படி 74. 2. மேற்படி 55. 3. மேற்படி 10,32 4. மேற்படி39. 5. மேற்படி 54. 6. மேற்படி 55. 7. மேற்படி 8. 8. மேற்படி 25. 9. மேற்படி 2. 10. மேற்படி 53. 11. மேற்படி 38. 12. மேற்படி 31. 13. மேற்படி 19. 14. மேற்படி 27. 15. திருக்குறள். 1291. 16. அ. கோபாலையர் நந்திக். பக்24. செய். 10 17. மேற்படி பக். 25. 13 18. மு. இராகவையங்கார், சாசனத் தமிழ்க்கவி சரிதம். பக். 25. 1. இப் பெருந்தேவனாரை ஒட்டியே வில்லிபுத்தூரரும் தாம் பாடிய பாரதத்தில், பெருந்தேவனார் எங்கெங்கே திருமாலைப் பாடிப் பரவினாரோ அங்கங்கே தாமும் திருமாலை வழிபட்டிருப்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. 2.A.R.No. 114 of 1925; S.I.I. Vol. XLL. No.94. 3.சாசனத் தமிழ்க்கவி சரிதம். பக். 26. 4.S.I.I. Vol. XLL. No. 96. 1. A.R.No. 563 of 1911. சாச.தமி. சரி. பக். 27 2. A.R.No. 626 of 1926. சாச.தமி. சரி. பக். 28 3. A.R.No. 368 of 1904 1. புலவர் புராணம். ஒளவையார். 126. 2. நல்வழி. 40. 3. தொல். செய்யு. 72. 4. மூதுரை. 4. 5. “பாணர் வருக பாடியர் வருக” என்று மாங்குடி மருதனார் கூறுவது காண்க. (மதுரைக். 749.) 1. பன்னிரு பாட்டியல். 179. 2. S.I.I. Vol. V. No.645 1. List of Villages in the Madras Presidency. p.53. 2. மேற்படி 53 1.Triennial Catalogue of Manuscripts collected during 1910 -11 to 1912 -13, R.N. 44 (a) page 105 of Part 2. Tamil. 2. List of Villages in the Madras Presidency. (1903) under Tindivanam Tq. Arcot Dt. 3. இப்போது இவ்வூர் சங்க கிரிமிட்டாவைச் சேர்ந்தது; எனினும் இப்போது இது மறைந்து போய்விட்டது; ஊர்ப் பெயர் மாத்திரம் அரசியல் கணக்கு ஏடுகளில் நிலவுகிறது. 1. தனிச் செய்யுட் சிந்தாமணி. 98. 2. மேற்படி 102. 3. மேற்படி 96. 4.தனிச் செய்யுட் சிந்தாமணி. 97. 5. மேற்படி 94. 6. மேற்படி 101. 7. V. Rangacharya’s Inscriptions of the Madras Presidency Trichinopoly Dt. No. 802 Vide. Mack. Collection : Ins. S. Dts. No. 41. p.216. 8. தமிழ் நாவலர் சரிதை. 249 1. த.நா. சரிதை. 250. 2. புறம். 91 1. தொண்டை மண். சதகம்.18. 1. தமிழ் நாவலர் சரிதை. 27. 2. தமிழ் நாவலர் சரிதை. 28. 3. மேற்படி 26. `1.தொண். மண். சத. 54. 2. தமிழ். நா. சரி. 25. 3. மேற்படி 58. 1. சோழ. மண். சத. 65. 2.த.நா. சரி. மேற். 55. 3. வில்லி பாரதம். சிறப்புப். 8. 1. திரு. நா.மு. வே. ஆத்திசூடி & கொன்றை வேந்தன் முன்னுரை. 2.செந்தமிழ். Vol. II. 7. 3. தொல். பொ. செய்யு.சூ. 72 உரை 1. யாப். விருத்தி. சூ. 63. உரை. 2.தொல். செய். சூ. 72. 3. மூதுரை. 4 1.அவ்வையார். பக். 135-6. 1. Tamils Thousand Eight Hundred Years Ago. p.206; செந்தமிழ். Vol. II. 6,7. 1. பிற்காலச் சோழர் சரித்திரம். Vol. I. பக். 64. 2. Ep. Car. Vol. IX. No. 9. 3. History of the Later Cholas by T.V.S. Pandarathar. p.63. 1. A.R. No. 540 of 1920. 2. சோழர் குலத்துக்குத் தில்லையம்பலத்துக் கூத்தப் பெருமான் குலமுதற் கடவுளாதலால், இவ் வேந்தர் பெருமான் “எங்கள் கோவை” என்று குறிக்கின்றார் என அறிக. 1. திருமுறைகண். பு. 38. 2. திருமுறைகண். பு.43. 3. திருக்கோவையார். 72. 4. திருவிசைப். 2. 5. திருவிசைப். 3. 6. மேற்படி 2. 7. திருஞான. 80:2. 8. கண்ட. திருவிசைப் 3. 9. திருநாவுக். 23:1. 1. கண்ட. திருவிசைப். 5. 2. திருக்கோவை. 86. 3. திருவாசக. திருவெம். 18. 4. கண்ட. திருவிசைப். 9. 5. A.R. No. 533 of 1920. 6. மேற்படி 8. 7. கண்ட. திருவிசைப்பா.10. 1. திருமுறைகண். புரா. 4. 2. மேற்படி 4. 3. மேற்படி 4. 1. திருமுறைகண். புரா. 22. 1. திருமுறைகண். புரா. 32. 1. திருமுறை. 6. 2. மேற்படி13. 3. திருநாரை. தலபுரா. 29:15. 1. கலிங். பரணி: தா. 2,4,12,16,42,82,88. 2. S.I.I.Vol. VI. No. 1338; T.A.S.Vol. IV.p. 130-9. 3. குலோத். பிள்ளை. 3,4,6,8,10,11,45. 4. குலோத். உலா. 298, 317. 5. Epi. Indi. Vol. XXI. No. 38. 6. Epi. Car. Vol. X (8b). 7. S.I.I. Vol. VIII . No. 247. 1. திருமுறைகண். பு.12. 2. திருநாரை. தல. 29:15. 3. திருமுறை கண். பு. 19. 4. திருநாரை. தலபுரா. 29:15. 1. திருத்தொண். அந். 50,65,82. 2. பிற்காலச் சோழர் சரித்திரம், பக். 76-8. 1. Epigraphica Indica, Vol. XXI. No. 27. 2. South Indian Inscription, Vol. III. No. 89. 3. செந்தமிழ். தொகுதி 16. பக். 394. 1. Ep. Ind. Vol. XV. No.5. Verse, 18. 2. Ibid. Vol. XXIII. No. 34. Verse. 17. 3. S.I.I Vol. III. No. 205. Verse. 53. 4. Ep. Ind. Vol. No. 13- (c). 5. S.I.I. Vol. V. 458. 6. S.I.I. Vol. IV. No. 225. 7. வரிகள். 59-66. 1. திருநாரையூர் விநா. இரட். 13. 2. மேற்படி 14. 3. திருவிரட்டை.2. 4. திருவிரட்டை. 6. 5. மேற்படி 7. 6. மேற்படி 8. 1. கோயில் திருப். 26. 2. கோயில் திருப். 29. 3. மேற்படி 31. 4. மேற்படி 40. 5. மேற்படி 68. 6. மேற்படி 54. 7. மேற்படி 58. 8. மேற்படி 62. 9. மேற்படி 3. 10. மேற்படி 16. 11. மேற்படி 3,44. 12. மேற்படி 9. 13. மேற்படி 17. 14. மேற்படி 33-4. 1. கோயில் திருப்பண். 32. 2. கோயில் திருப்பண். 42. 3. மேற்படி 12. 4. மேற்படி 53. 5. திருஞான. 220:11. 6. திருஞான. 221:11. 7. ஆ.பிள். திருத்தொ. 23. 8. S.I.I. Vol. VIII. No. 425. Ins. at. Piranmalai in the Dt. of Ramnad. (vide. A.R.No. 154 of 1903) 1. சிராமலை யந்தாதி. 103. 1. இந்நூல் பக்கம். 364. 1. சிராமலைய. 90. 2. S.I.I. Vol. IV. No. 167:104. 1. சா.த. க. சரிதம். பக்.35. 2. சிராமலை யந். 5. 3. சிராமலை யந். 97. 1. சிராமலை யந். 88. 2. மேற்படி 94. 3. மேற்படி 103. 1. சிராமலை யந். 15. 1. மேற்படி. 101. 2. மேற்படி 75. 3. இந்நூல் பக். 368. 1. திருக்கோவை. 72. 2. திருவேகம்ப. 47. 3. சிராமலை யந்தாதி. 67. 4. பெரிய. பு. கூற்று. 4. 5. மேற்படி 67. 6. சிரா. ய. 15. 1. சிரா. ய. 91. 2. சிரா.ய. 58. 3. மேற்படி 53. 4. மேற்படி 49. 5. மேற்படி 59. 6. மேற்படி 4. 7. மேற்படி 40. 8. மேற்படி 3. 9. சிரா.ய. 39. 1. சிரா.ய. 49. 2. மேற்படி 34. 3. மேற்படி 47. 4. மேற்படி. 42. 1. சிரா.ய. 68. 2. மேற்படி 35. 1. சிராமலை யந். 41. 2. மேற்படி 81. 1. சிராமலை யந். 94. 1. சிராமலை யந். 89. 2. மேற்படி 92. 1. சிராமலை யந். 31. 2. மேற்படி 7. 1. சிராமலை யந். 43. 1. சி.ய. 38. 2. சி.ய. 58. 3. தொல் மரபு.89. 4.மேற்படி 94. 5. புறம். 74. 1. சி.ய.88. 2. குறள்.63. 3. சி.ய. 58. 4. குறள் 6. 5. சி.ய. 41 6. ஞான. சம். 242:1. 7. சி.ய. 35. 8. திருநா. 9:1 9. சி.ய. 29. 10. திருக்கோவை.21. 11. புறம். 21. 12. சி.ய. 84. 13. சி.ய.98. 1. தொல். இடை.21. 2. நற். 264. 3. சி.ய.81. 4. நாச்சி. திருமொழி. 5:10. 5. சி.ய. 31. 6. சி.ய.45.