உரைவேந்தர் தமிழ்த்தொகை 2 சிவஞான போத மூலமும் சிற்றுரையும் ஆசிரியர் ஒளவை துரைசாமி பதிப்பாசிரியர்கள் முனைவர் ஒளவை நடராசன் முனைவர் இரா. குமரவேலன் இனியமுது பதிப்பகம் சென்னை - 600 017. Contents பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv உள்ளடக்கம் xix நூற்பெயர் : உரைவேந்தர் தமிழ்த்தொகை - 2 ஆசிரியர் : ஒளவை துரைசாமி பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20 + 492 = 512 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 295/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு இனியமுது பதிப்பகம் பி.11 குல்மொகர் குடியிருப்பு, 35 செவாலிய சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 பதிப்புரை ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை தமது ஓய்வறியா உழைப்பால் தமிழ் ஆய்வுக் களத்தில் உயர்ந்து நின்றவர். 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டிய தமிழ்ச் சான்றோர்களுள் முன் வரிசையில் நிற்பவர். நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூற் செல்வங்களுக்கு உரைவளம் கண்டவர். சைவ பெருங்கடலில் மூழ்கித் திளைத்தவர். உரைவேந்தர் என்று தமிழுலகம் போற்றிப் புகழப்பட்ட ஒளவை சு.துரைசாமிப் பிள்ளை 1903இல் பிறந்து 1981இல் மறைந்தார். வாழ்ந்த ஆண்டுகள் 78. எழுதிய நூல்கள் 38. இதனை பொருள் வழிப் பிரித்து “உரைவேந்தர் தமிழ்த்தொகை” எனும் தலைப்பில் 28 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம். இல்லற ஏந்தலாகவும், உரைநயம் கண்ட உரவோராகவும் , நற்றமிழ் நாவலராகவும், சைவ சித்தாந்தச் செம்மலாகவும் , நிறைபுகழ் எய்திய உரைவேந்தராகவும், புலமையிலும் பெரும் புலமைபெற்றவராகவும் திகழ்ந்து விளங்கிய இப்பெருந்தமிழாசானின் நூல்கள் அனைத்தையும் ஒரு சேர வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இவருடைய நூல்களில் எம் கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்கள் 5. மற்றும் இவர் எழுதிய திருவருட்பா நூல்களும் இத் தொகுதிகளில் இடம் பெறவில்லை. “ பல்வேறு காலத் தமிழ் இலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைப் பலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஒளவை சு .துரைசாமி அவர்கள்” என்று மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் அவர்களாலும், “இரவுபகல் தானறியான் இன்தமிழை வைத்து வரவு செலவறியான் வாழ்வில் - உரமுடையான் தன்கடன் தாய்நாட்டு மக்கட் குழைப்பதிலே முன்கடன் என்றுரைக்கும் ஏறு” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களாலும் போற்றிப் புகழப் பட்ட இப்பெருந்தகையின் நூல்களை அணிகலன்களாகக் கோர்த்து, முத்துமாலையாகக் கொடுத்துள்ளோம். அவர் காலத்தில் வாழ்ந்த சமகால அறிஞர்களால் போற்றிப் புகழப் பட்டவர். சைவ உலகில் தனக்கெனத் தனியிடத்தைப் பெற்றவர். இவர் எழுதிய அனைத்து நூல்கள் மற்றும் மலர்கள், இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளையெல்லாம் தேடித் தேடி எடுத்து ஒரே வீச்சில் வெளியிடுகிறோம். இத்தொகுதிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக வெளிவருவதற்கு முழுஒத்துழைப்பும் உதவியும் நல்கியவர்கள் அவருடைய திருமகன் ஒளவை து.நடராசன், மருகர் இரா.குமரவேலன், மகள் வயிற்றுப் பெயர்த்தி திருமதி வேனிலா ஸ்டாலின் ஆகியோர் ஆவர். இவர்கள் இத் தமிழ்த்தொகைக்கு தக்க மதிப்புரையும் அளித்து எங்களுக்குப் பெருமைச் சேர்த்து உள்ளனர். இவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி தன் மதிப்பு இயக்கத்தில் பேரீடுபாடு கொண்டு உழைத்த இவ்வருந்தமிழறிஞர் தமிழ்ப் பகைவரைத் தம் பகைவராகக் கொண்ட உயர் மனத்தினராக வாழ்ந்தவர் என்பதை நினைவில் கொண்டு இத் தொகை நூல்களை இப்பெருந்தமிழ் அறிஞரின் 107 ஆம் ஆண்டு நினைவாக உலகத் தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் வெளியிடுவதில் பெருமகிழ்வு கொள்கிறோம். தமிழ் நூல் பதிப்பில் எங்களின் இந்த அரிய முயற்சிக்குத் தோள் தந்து உதவுங்கள். நன்றி - பதிப்பாளர் பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! பொற்புதையல் - மணிக்குவியல் “ நூலுக்கு நூலருமை காட்டுவதில் நுண்ணறிஞன் மேலுக்குச் சொல்லவில்லை வேர்ப்பலாத் - தோலுக்குள் உள்ள சுளைகொடுக்கும் உண்மை உழைப்பாளன் அள்ளக் குறையாத ஆறு” என்று பாவேந்தரும், “பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே பரணர்தான், பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில் கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல் காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும் தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே தாங்கள்அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!” என்று புகழ்ந்ததோடு, “அதியன்தான் இன்றில்லை இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை! இங்கே புதியதாய்ஓர் ஆண்ஒளவை எனவி யப்பான்” எனக் கண்ணீர் மல்கக் கல்லறை முன் கவியரசர் மீரா உருகியதையும் நாடு நன்கறியும். பல்வேறு காலத் தமிழிலக்கியங்கள், உரைகள், வரலாறு, கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறை பலவற்றில் நிறைபுலமையும் செறிந்த சிந்தனை வளமும் பெற்றவர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித் தமிழ்ப்பண்பு ஒளவையின் அறிவாண்மைக்குக் கட்டியங் கூறும். எட்டுத் தொகையுள் ஐங்குறுநூறு, நற்றிணை, புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரைவிளக்கம் செய்தார். இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக் குறிப்பும் கல்வெட்டுக் குறிப்பும் மண்டிக் கிடக்கின்றன. ஐங்குறு நூற்றுச் செய்யுட்களை இந்நூற்றாண்டின் மரவியல் விலங்கியல் அறிவு தழுவி நுட்பமாக விளக்கிய உரைத்திறன் பக்கந்தோறும் பளிச்சிடக் காணலாம். உரை எழுதுவதற்கு முன், ஏடுகள் தேடி மூலபாடம் தேர்ந்து தெரிந்து வரம்பு செய்துகோடல் இவர்தம் உரையொழுங்காகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நான்கு சங்கத் தொகை நூல்கட்கு உரைகண்டவர் என்ற தனிப்பெருமையர் மூதறிஞர் ஒளவை துரைசாமி ஆவார். இதனால் உரைவேந்தர் என்னும் சிறப்புப் பெயரை மதுரை திருவள்ளுவர் கழகம் வழங்கிற்று. பரந்த சமயவறிவும் நுண்ணிய சைவ சித்தாந்தத் தெளிவும் உடையவராதலின் சிவஞானபோதத்துக்கும் ஞானாமிர்தத்துக்கும் மணிமேகலையின் சமய காதைகட்கும் அரிய உரைப்பணி செய்தார். சித்தாந்த சைவத்தை உரையாலும் கட்டுரையாலும் கட்டமைந்த பொழிவுகளாலும் பரப்பிய அருமை நோக்கி ‘சித்தாந்த கலாநிதி’ என்ற சமயப்பட்டத்தை அறிஞர் வழங்கினர். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் என்னும் ஐந்து காப்பியங்களின் இலக்கிய முத்துக்களை ஒளிவீசச் செய்தவர். மதுரைக் குமரனார், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக்காட்சிகள், நந்தாவிளக்கு, ஒளவைத் தமிழ் என்றின்ன உரைநடை நூல்களும் தொகுத்தற்குரிய தனிக்கட்டுரைகளும் இவர்தம் பல்புலமையைப் பறைசாற்றுவன. உரைவேந்தர் உரை வரையும் முறை ஓரு தனிச்சிறப்பு வாய்ந்தது. பொருள் கூறும்போது ஆசிரியர் வரலாற்றையும், அவர் பாடுதற்கு அமைந்த சூழ்நிலையையும், அப்பாட்டின் வாயிலாக அவர் உரைக்கக் கருதும் உட்கோளையும் ஒவ்வொரு பாட்டின் உரையிலும் முன்கூட்டி எடுத்துரைக்கின்றார். பாண்டியன் அறிவுடைநம்பியின் பாட்டுக்கு உரை கூறுங்கால், அவன் வரலாற்றையும், அவனது பாட்டின் சூழ்நிலையையும் விரியக் கூறி, முடிவில், “இக்கூற்று அறக்கழிவுடையதாயினும் பொருட்பயன்பட வரும் சிறப்புடைத்தாதலைக் கண்ட பாண்டியன் அறிவுடை நம்பி, தன் இயல்புக்கு ஒத்தியல்வது தேர்ந்து, அதனை இப்பாட்டிடைப் பெய்து கூறுகின்றான் என்று முன்மொழிந்து, பின்பு பாட்டைத் தருகின்றார். பிறிதோரிடத்தே கபிலர் பாட்டுக்குப் பொருளான நிகழ்ச்சியை விளக்கிக் காட்டி, “நெஞ்சுக்குத் தான் அடிமையாகாது தனக்கு அஃது அடிமையாய்த் தன் ஆணைக்கு அடங்கி நடக்குமாறு செய்யும் தலைவனிடத்தே விளங்கும் பெருமையும் உரனும் கண்ட கபிலர் இப்பாட்டின்கண் உள்ளுறுத்துப் பாடுகின்றார்” என்று இயம்புகின்றார். இவ்வாறு பாட்டின் முன்னுரை அமைவதால், படிப்போர் உள்ளத்தில் அப்பாட்டைப் படித்து மகிழ வேண்டும் என்ற அவா எழுந்து தூண்டுகிறது. பாட்டுக்களம் இனிது படிப்பதற்கேற்ற உரிய இடத்தில் சொற்களைப் பிரித்து அச்சிட்டிருப்பது இக்காலத்து ஒத்த முறையாகும். அதனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய நற்றிணையின் அருமைப்பாடு ஓரளவு எளிமை எய்துகிறது. கரும்பைக் கணுக்கணுவாகத் தறித்துச் சுவைகாண்பது போலப் பாட்டைத் தொடர்தொடராகப் பிரித்துப் பொருள் உரைப்பது பழைய உரைகாரர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியோர் கைக்கொண்ட முறையாகும். அம்முறை யிலேயே இவ்வுரைகள் அமைந்திருப்பதால், படிக்கும்போது பல இடங்கள், உரைவேந்தர் உரையோ பரிமேலழகர் முதலியோர் உரையோ எனப் பன்முறையும் நம்மை மருட்டுகின்றன. “இலக்கணநூற் பெரும்பரப்பும் இலக்கியநூற் பெருங்கடலும் எல்லாம் ஆய்ந்து, கலக்கமறத் துறைபோகக் கற்றுணர்ந்த பெரும்புலமைக் கல்வி யாளர்! விலக்ககலாத் தருக்கநூல், மெய்ப்பொருள்நூல், வடமொழிநூல், மேற்பால் நூல்கள் நலக்கமிகத் தெளிந்துணர்ந்து நாடுய்ய நற்றமிழ் தழைக்க வந்தார்!” என்று பாராட்டப் பெறும் பெரும் புலமையாளராகிய அரும்பெறல் ஒளவையின் நூலடங்கலை அங்கிங்கெல்லாம் தேடியலைந்து திட்பமும் நுட்பமும் விளங்கப் பதித்த பாடு நனிபெரிதாகும். கலைப்பொலிவும், கருத்துத்தெளிவும், பொதுநோக்கும் பொலிந்த நம் உரைவேந்தர், வள்ளலாரின் திருவருட்பா முழுமைக்கும் பேருரைகண்ட பெருஞ்செல்வம். இஃது தமிழ்ப் பேழைக்குத் தாங்கொணா அருட்செல்வமாகும். நூலுரை, திறனுரை, பொழிவுரை என்ற முவ்வரம்பாலும் தமிழ்க் கரையைத் திண்ணிதாக்கிய உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் புகழுரையை நினைந்து அவர் நூல்களை நம்முதல்வர் கலைஞர் நாட்டுடைமை ஆக்கியதன் பயனாகத் இப்புதையலைத் இனியமுது பதிப்பகம் வெளியிடுகின்றது. இனியமுது பதிப்பக உரிமையாளர், தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளர் கோ.இளவழகனாரின் அருந்தவப்புதல்வி இ.தமிழமுது ஆவார். ஈடரிய தமிழார்வப் பிழம்பாகவும், வீறுடைய தமிழ்ப்பதிப்பு வேந்தராகவும் விளங்கும் நண்பர் இளவழகன் தாம் பெற்ற பெருஞ்செல்வம் முழுவதையும் தமிழினத் தணல் தணியலாகாதென நறுநெய்யூட்டி வளர்ப்பவர். தமிழ்மண் பதிப்பகம் அவர்தம் நெஞ்சக் கனலுக்கு வழிகோலுவதாகும். அவரின் செல்வமகளார் அவர் வழியில் நடந்து இனியமுது பதிப்பகம் வழி, முதல் வெளியீடாக என்தந்தையாரின் அனைத்து ஆக்கங் களையும் (திருவருட்பா தவிர) பயன்பெறும் வகையில் வெளியிடுகிறார். இப்பதிப்புப் புதையலை - பொற்குவியலை தமிழுலகம் இரு கையேந்தி வரவேற்கும் என்றே கருதுகிறோம். ஒளவை நடராசன் நுழைவாயில் செம்மொழித் தமிழின் செவ்வியல் இலக்கியப் பனுவல்களுக்கு உரைவழங்கிய சான்றோர்களுள் தலைமகனாய் நிற்கும் செம்மல் ‘உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை அவர்களாவார். பத்துப்பாட்டிற்கும், கலித்தொகைக்கும் சீவகசிந்தாமணிக்கும் நல்லுரை தந்த நச்சினார்க்கினியருக்குப் பின், ஆறு நூற்றாண்டுகள் கழித்து, ஐங்குறுநூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, யசோதர காவியம் ஆகிய நூல்களுக்கு உரையெழுதிய பெருமை ஒளவை அவர்களையே சாரும். சங்க நூல்களுக்குச் செம்மையான உரை தீட்டிய முதல் ‘தமிழர்’ இவர் என்று பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க ஒளவை 1903 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் தோன்றி, 1981ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் புகழுடம்பு எய்தியவர். தமிழும் சைவமும் தம் இருகண்களாகக் கொண்டு இறுதிவரை செயற்பட்டவர். சிந்தை சிவபெருமானைச் சிந்திக்க, செந்நா ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்ப, திருநீறு நெற்றியில் திகழ, உருத்திராக்கம் மார்பினில் உருளத் தன் முன்னர் இருக்கும் சிறு சாய்மேசையில் தாள்களைக் கொண்டு, உருண்டு திரண்ட எழுதுகோலைத் திறந்து எழுதத் தொடங் கினாரானால் மணிக்கணக்கில் உண்டி முதலானவை மறந்து கட்டுரைகளையும், கனிந்த உரைகளையும் எழுதிக்கொண்டே இருப்பார். செந்தமிழ் அவர் எழுதட்டும் என்று காத்திருப்பதுபோல் அருவியெனக் கொட்டும். நினைவாற்றலில் வல்லவராதலால் எழுந்து சென்று வேறு நூல்களைப் பக்கம் புரட்டி பார்க்க வேண்டும் என்னும் நிலை அவருக்கிருந்ததில்லை. எந்தெந்த நூல்களுக்குச் செம்மையான உரையில்லையோ அவற்றிற்கே உரையெழுதுவது என்னும் கொள்கை உடையவர் அவர். அதனால் அதுவரை சீரிய உரை காணப்பெறாத ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றிற்கும், முழுமையான உரையைப் பெற்றிராத புறநானூற்றுக்கும் ஒளவை உரை வரைந்தார். பின்னர் நற்றிணைக்குப் புத்துரை தேவைப்படுவதை அறிந்து, முன்னைய பதிப்புகளில் இருந்த பிழைகளை நீக்கிப் புதிய பாடங்களைத் தேர்ந்து விரிவான உரையினை எழுதி இரு தொகுதிகளாக வெளியிட்டார். சித்தாந்த கலாநிதி என்னும் பெருமை பெற்ற ஒளவை, சிவஞானபோதச் சிற்றுரை விளக்கத்தை எழுதியதோடு, ‘இரும்புக்கடலை’ எனக் கருதப்பெற்ற ஞானாமிர்த நூலுக்கும் உரை தீட்டினார். சைவ மாநாடுகளுக்குத் தலைமை தாங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தம் உரைகள் பலவற்றைக் கட்டுரைகள் ஆக்கினார். செந்தமிழ்ச் செல்வி, செந்தமிழ், குமரகுருபரன், சித்தாந்தம் முதலான பல இதழ்களுக்குக் கட்டுரைகளை வழங்கினார். பெருந்தகைப் பெண்டிர், மதுரைக் குமரனார், ஒளவைத் தமிழ், பரணர் முதலான கட்டுரை நூல்களை எழுதினார். அவர் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாக விளங்கும் நூல் ‘பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு’ என்னும் ஆய்வு நூலாகும். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒளவை பணியாற்றியபோது ஆராய்ந்தெழுதிய ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ அத்துறையில் இணையற்றதாக இன்றும் விளங்குகிறது. சங்க நூல்களுக்கு ஒளவை வரைந்த உரை கற்றோர் அனைவருடைய நெஞ்சையும் கவர்ந்ததாகும். ஒவ்வொரு பாட்டையும் அலசி ஆராயும் பண்புடையவர் அவர். முன்னைய உரையாசிரியர்கள் பிழைபட்டிருப்பின் தயங்காது மறுப்புரை தருவர். தக்க பாட வேறுபாடுகளைத் தேர்ந்தெடுத்து மூலத்தைச் செம்மைப்படுத்துவதில் அவருக்கு இணையானவர் எவருமிலர். ‘உழுதசால் வழியே உழும் இழுதை நெஞ்சினர்’ அல்லர். பெரும்பாலும் பழமைக்கு அமைதி காண்பார். அதே நேரத்தில் புதுமைக்கும் வழி செய்வார். தமிழோடு ஆங்கிலம், வடமொழி, பாலி முதலானவற்றைக் கற்றுத் தேர்ந்தவர் அவர். மணிமேகலையின் இறுதிப் பகுதிக்கு உரையெழுதிய நிலை வந்தபோது அவர் முனைந்து பாலிமொழியைக் கற்றுணர்ந்து அதன் பின்னரே அந்த உரையினைச் செய்தார் என்றால் அவரது ஈடுபாட்டுணர்வை நன்கு உணரலாம். எப்போதும் ஏதேனும் ஆங்கில நூலைப் படிக்கும் இயல்புடையவர் ஒளவை அவர்கள். திருக்குறள் பற்றிய ஒளவையின் ஆங்கிலச் சொற்பொழிவு நூலாக அச்சில் வந்தபோது பலரால் பாராட்டப் பெற்றமை அவர்தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்று பகர்வதாகும். சமய நூல்களுக்கு உரையெழுதுங்கால் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுவதும், கருத்துகளை விளக்குவதும் அவர் இயல்பு. அதுமட்டுமன்றி, ஒளவை அவர்கள் சட்டநூல் நுணுக்கங்களையும் கற்றறிந்த புலமைச் செல்வர். ஒளவை அவர்கள் கட்டுரை புனையும் வன்மை பெற்றவர். கலைபயில் தெளிவு அவர்பாலுண்டு. நுண்மாண் நுழைபுலத்தோடு அவர் தீட்டிய கட்டுரைகள் எண்ணில. அவை சங்க இலக்கியப் பொருள் பற்றியன ஆயினும், சமயச் சான்றோர் பற்றியன ஆயினும் புதிய செய்திகள் அவற்றில் அலைபோல் புரண்டு வரும். ஒளவை நடை தனிநடை. அறிவு நுட்பத்தையும் கருத்தாழத்தையும் அந்தச் செம்மாந்த நடையில் அவர் கொண்டுவந்து தரும்போது கற்பார் உள்ளம் எவ்வாறு இருப்பாரோ, அதைப்போன்றே அவர் தமிழ்நடையும் சிந்தனைப் போக்கும் அமைந்திருந்தது வியப்புக்குரிய ஒன்று. ஒளவை ஆற்றிய அருந்தமிழ்ப் பணிகளுள் தலையாயது பழந்தமிழ் நூல்களுக்கு அறிவார்ந்த உரைகளை வகுத்துத் தந்தமையே ஆகும். எதனையும் காய்தல் உவத்தலின்றி சீர்தூக்கிப் பார்க்கும் நடுநிலைப் போக்கு அவரிடம் ஊன்றியிருந்த ஒரு பண்பு. அவர் உரை சிறந்தமைந்ததற்கான காரணம் இரண்டு. முதலாவது, வைணவ உரைகளில் காணப்பெற்ற ‘பதசாரம்’ கூறும் முறை. தாம் உரையெழுதிய அனைத்துப் பனுவல்களிலும் காணப்பெற்ற சொற்றொடர்களை இந்தப் பதசார முறையிலே அணுகி அரிய செய்திகளை அளித்துள்ளார். இரண்டாவது, சட்ட நுணுக்கங்களைத் தெரிவிக்கும் நூல்களிலமைந்த ஆய்வுரைகளும் தீர்ப்புரைகளும் அவர்தம் தமிழ் ஆய்வுக்குத் துணை நின்ற திறம். ‘ஜூரிஸ்புரூடன்ஸ்’ ‘லா ஆஃப் டார்ட்ஸ்’ முதலானவை பற்றிய ஆங்கில நூல்களைத் தாம் படித்ததோடு என்னைப் போன்றவர்களையும் படிக்க வைத்தார். வடமொழித் தருக்கமும் வேறுபிற அளவை நூல்களும் பல்வகைச் சமய அறிவும் அவர் உரையின் செம்மைக்குத் துணை நின்றன. அனைத்திற்கும் மேலாக வரலாற்றுணர்வு இல்லாத இலக்கிய அறிவுபயனற்றது, இலக்கியப் பயிற்சி இல்லாத வரலாற்றாய்வு வீணானது என்னும் கருத்துடையவர் அவர். ஆதலால் எண்ணற்ற வரலாற்று நூல்களையும், ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளையும் ஆழ்ந்து படித்து, மனத்திலிருத்தித் தாம் இலக்கியத்திற்கு உரைவரைந்தபோது நன்கு பயன்படுத்திக் கொண்டார். ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவோத்தூர்த் தேவாரத் திருப்பதிகத்திற்கு முதன்முதலாக உரையெழுதத் தொடங்கிய காலந்தொட்டு இறுதியாக வடலூர் வள்ளலின் திருவருட்பாவிற்குப் பேருரை எழுதி முடிக்கும் வரையிலும், வரலாறு, கல்வெட்டு, தருக்கம், இலக்கணம் முதலானவற்றின் அடிப்படையிலேயே உரைகளை எழுதினார். தேவைப்படும்பொழுது உயிரியல், பயிரியல், உளவியல் துறை நூல்களிலிருந்தும் விளக்கங்களை அளிக்கத் தவறவில்லை. இவற்றை அவர்தம் ஐங்குறுநூற்று விரிவுரை தெளிவுபடுத்தும். ஒளவை அவர்களின் நுட்ப உரைக்கு ஒரு சான்று காட்டலாம். அவருடைய நற்றிணைப் பதிப்பு வெளிவரும்வரை அதில் கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்த ‘மாநிலஞ் சேவடி யாக’ என்னும் பாடலைத் திருமாற்கு உரியதாகவே அனைவரும் கருதினர். பின்னத்தூரார் தம் உரையில் அவ்வாறே எழுதி இருந்தார். இந்தப் பாடலை இயற்றியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இவரே வேறு சில சங்கத்தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து இயற்றியவர். அவற்றிலெல்லாம் சிவனைப் பாடியவர் நற்றிணையில் மட்டும் வேறு இறைவனைப் பாடுவரோ என்று சிந்தித்த ஒளவை, முழுப்பாடலுக்கும் சிவநெறியிலேயே உரையை எழுதினார். ஒளவை உரை அமைக்கும் பாங்கே தனித்தன்மையானது. முதலில் பாடலைப் பாடிய ஆசிரியர் பெயர் பற்றியும் அவர்தம் ஊர்பற்றியும் விளக்கம் தருவர். தேவைப்பட்டால் கல்வெட்டு முதலானவற்றின் துணைகொண்டு பெயர்களைச் செம்மைப் படுத்துவர். தும்பி சொகினனார் இவர் ஆய்வால் ‘தும்பைச் சொகினனார்’ ஆனார். நெடுங்கழுத்துப் பரணர் ஒளவையால் ‘நெடுங்களத்துப் பரணர்’ என்றானார். பழைய மாற்பித்தியார் ஒளவை உரையில் ‘மாரிப் பித்தியார்’ ஆக மாறினார். வெறிபாடிய காமக்கண்ணியார் ஒளவையின் கரம்பட்டுத் தூய்மையாகி ‘வெறிபாடிய காமக்காணியார்’ ஆனார். இவ்வாறு எத்தனையோ சங்கப் பெயர்கள் இவரால் செம்மை அடைந்துள்ளன. அடுத்த நிலையில், பாடற் பின்னணிச் சூழலை நயம்பட உரையாடற் போக்கில் எழுதுவர். அதன் பின் பாடல் முழுதும் சீர்பிரித்துத் தரப்படும். அடுத்து, பாடல் தொடர்களுக்குப் பதவுரைப் போக்கில் விளக்கம் அமையும். பின்னர் ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுகளாலும் சொற்றொடர்ப் பொருள்களை விளக்கி எழுதுவர். தேவைப்படும் இடங்களில் தக்க இலக்கணக் குறிப்புகளையும் மேற்கோள்களையும் தவறாது வழங்குவர். உள்ளுறைப் பொருள் ஏதேனும் பாடலில் இருக்குமானால் அவற்றைத் தெளிவு படுத்துவர். முன்பின் வரும் பாடல் தொடர்களை நன்காய்ந்து ‘வினைமுடிபு’ தருவது அவர் வழக்கம். இறுதியாகப் பாடலின்கண் அமைந்த மெய்ப்பாடு ஈதென்றும், பயன் ஈதென்றும் தெளிவு படுத்துவர். ஒளவையின் உரைநுட்பத்திற்கு ஒரு சான்று. ‘பகைவர் புல் ஆர்க’ என்பது ஐங்குறுநூற்று நான்காம் பாடலில் வரும் ஒரு தொடர். மனிதர் புல் ஆர்தல் உண்டோ என்னும் வினா எழுகிறது. எனவே, உரையில் ‘பகைவர் தம் பெருமிதம் இழந்து புல்லரிசிச் சோறுண்க’ என விளக்கம் தருவர். இக்கருத்தே கொண்டு, சேனாவரையரும் ‘புற்றின்றல் உயர்திணைக்கு இயைபின்று எனப்படாது’ என்றார் என மேற்கோள் காட்டுவர். மற்றொரு பாட்டில் ‘முதலைப் போத்து முழுமீன் ஆரும்’ என வருகிறது. இதில் முழுமீன் என்பதற்கு ‘முழு மீனையும்’ என்று பொருள் எழுதாது, ‘இனி வளர்ச்சி யில்லையாமாறு முற்ற முதிர்ந்த மீன்” என்று உரையெழுதிய திறம் அறியத்தக்கது. ஒளவை இளம்பூரணர், நச்சினார்க்கினியர் முதலான பழைய உரையாசிரியர் களையும் மறுக்கும் ஆற்றல் உடையவர். சான்றாக, ‘மனைநடு வயலை’ (ஐங்.11) என்னும் பாடலை இளம்பூரணர் ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமருள் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு எடுத்துக்காட்டுவர். ஆனால், ஒளவை அதை மறுத்து, “மற்று, இப்பாட்டு, அலமருள் பெருகிய காமத்து மிகுதிக்கண் நிகழும் கூற்றாகாது தலைமகன் கொடுமைக்கு அமைதி யுணர்ந்து ஒருமருங்கு அமைதலும், அவன் பிரிவாற்றாமையைத் தோள்மேல் ஏற்றி அமையாமைக்கு ஏது காட்டுதலும் சுட்டி நிற்றலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக” என்று இனிமையாக எடுத்துரைப்பர். “தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை” என்னும் பாடல் தலைவனையும் வாயில்களையும் இகழ்ந்து தலைவி கூறுவதாகும். ஆனால், இதனைப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் தத்தம் தொல்காப்பிய உரைகளில் தோழி கூற்று என்று தெரிவித் துள்ளனர். ஒளவை இவற்றை நயம்பட மறுத்து விளக்கம் கூறித் ‘தோழி கூற்றென்றல் நிரம்பாமை அறிக’ என்று தெளிவுறுத்துவர். இவ்வாறு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் உள்ளிட்ட அனைவரையும் தக்க சான்றுகளோடு மறுத்துரைக்கும் திறம் கருதியும் உரைவிளக்கச் செம்மை கருதியும் இக்காலச் சான்றோர் அனைவரும் ஒளவையை ‘உரைவேந்தர்’ எனப் போற்றினர். ஒளவை ஒவ்வொரு நூலுக்கும் எழுதிய உரைகளின் மாண்புகளை எடுத்துரைப்பின் பெருநூலாக விரியும். தொகுத்துக் கூற விரும்பினாலோ எஞ்சி நிற்கும். கற்போர் தாமே விரும்பி நுகர்ந்து துய்ப்பின் உரைத் திறன்களைக் கண்டுணர்ந்து வியந்து நிற்பர் என்பது திண்ணம். ஒளவையின் அனைத்து உரைநூல்களையும், கட்டுரை நூல்களையும், இலக்கிய வரலாற்று நூல்களையும், பேருரைகளையும், கவின்மிகு தனிக் கட்டுரைகளையும், பிறவற்றையும் பகுத்தும் தொகுத்தும் கொண்டுவருதல் என்பது மேருமலையைக் கைக்குள் அடக்கும் பெரும்பணி. தமிழீழம் தொடங்கி அயல்நாடுகள் பலவற்றிலும், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் ஆக, எங்கெங்கோ சிதறிக்கிடந்த அரிய கட்டுரைகளையெல்லாம் தேடித்திரட்டித் தக்க வகையில் பதிப்பிக்கும் பணியில் இனியமுது பதிப்பகம் முயன்று வெற்றி பெற்றுள்ளது. ஒளவை நூல்களைத் தொகுப்பதோடு நில்லாமல் முற்றிலும் படித்துணர்ந்து துய்த்து மகிழ்ந்து தொகுதி தொகுதிகளாகப் பகுத்து வெளியிடும் இனியமுது பதிப்பகம் நம் அனைவருடைய மதிப்பிற்கும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியது. இப்பதிப்பகத்தின் உரிமையாளர் செல்வி இ.தமிழமுது தமிழ்மண் பதிப்பகத்தின் உரிமையாளரின் மகள் ஆவார். வாழ்க அவர்தம் தமிழ்ப்பணி. வளர்க அவர்தம் தமிழ்த் தொண்டு. உலகெங்கும் மலர்க தமிழாட்சி. வளம்பெறுக. இத்தொகுப்புகள் உரைவேந்தர் தமிழ்த்தொகை எனும் தலைப்பில் ‘இனியமுது’ பதிப்பகத்தின் வழியாக வெளிவருவதை வரவேற்று தமிழுலகம் தாங்கிப் பிடிக்கட்டும். தூக்கி நிறுத்தட்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன். முனைவர் இரா.குமரவேலன் தண்டமிழாசான் உரைவேந்தர் உரைவேந்தர் ஒளவை. துரைசாமி அவர்கள், பொன்றாப் புகழுடைய பைந்தமிழ்ச் சான்றோர் ஆவார். ‘உரைவேந்தர்’ எனவும், சைவ சித்தாந்த கலாநிதி எனவும் செந்தமிழ்ப் புலம் இவரைச் செம்மாந்து அழைக்கிறது. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருள்விளக்கம் காட்டி நூலுக்கு நூலருமை செய்து எஞ்ஞான்றும் நிலைத்த புகழ் ஈட்டிய உரைவேந்தரின் நற்றிறம் வாய்ந்த சொற்றமிழ் நூல்களை வகை தொகைப்படுத்தி வெளியிடும் தமிழ்மண் பதிப்பகத்தாரின் அருந்தொண்டு அளப்பரியதாகும். ஒளவைக்கீந்த அருநெல்லிக் கனியை அரிதின் முயன்று பெற்றவன் அதியமான். அதுபோல் இனியமுது பதிப்பகம் ஒளவை துரைசாமி அவர்களின் கனியமுது கட்டுரைகளையும், இலக்கிய நூலுரைகளையும், திறனாய்வு உரைகளையும் பெரிதும் முயன்று கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவர்தம் அரும்பெரும்பணி, தமிழுலகம் தலைமேற் கொளற்குரியதாகும். நனிபுலமைசால் சான்றோர் உடையது தொண்டை நாடு; அப்பகுதியில் அமைந்த திண்டிவனத்திற்கு அருகில் உள்ள ஒளவையார்குப்பத்தில் 1903-ஆம் ஆண்டு தெள்ளு தமிழ்நடைக்கு ஒரு துள்ளல் பிறந்தது. அருள்திரு சுந்தரம்பிள்ளை, சந்திரமதி அம்மையார் ஆகிய இணையருக்கு ஐந்தாம் மகனாக (இரட்டைக் குழந்தை - உடன் பிறந்தது பெண்மகவு)ப் பிறந்தார். ஞானப் பாலுண்ட சம்பந்தப் பெருமான்போன்று இளமையி லேயே ஒளவை அவர்கள் ஆற்றல் நிறைந்து விளங்கினார். திண்டிவனத்தில் தமது பள்ளிப் படிப்பை முடித்து வேலூரில் பல்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். ஆயின் இடைநிலைப் பல்கலை படிக்கும் நிலையில் படிப்பைத் தொடர இயலாமற் போயிற்று. எனவே, உரைவேந்தர் தூய்மைப் பணியாளராகப் பணியேற்றார்; சில மாதங்களே அப்பொறுப்பில் இருந்தவர் மீண்டும் தம் கல்வியைத் தொடர்ந்தார். தமிழ் மீதூர்ந்த அளப்பரும் பற்றால் கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலான தமிழ்ப் பேராசான்களிடம் பயின்றார்; வித்துவான் பட்டமும் பெற்றார். உரைவேந்தர், செந்தமிழ்க் கல்வியைப் போன்றே ஆங்கிலப் புலமையும் பெற்றிருந்தார். “ குலனருள் தெய்வம் கொள்கைமேன்மை கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் அமைபவன் நூலுரை ஆசிரியன்” எனும் இலக்கணம் முழுமையும் அமையப் பெற்றவர் உரைவேந்தர். உயர்நிலைப் பள்ளிகள், திருப்பதி திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், மதுரை தியாகராயர் கல்லூரி என இவர்தம் ஆசிரியப் பணிக்காலம் அமைந்தது. ஆசிரியர் பணியில், தன் ஆற்றலைத் திறம்பட வெளிப் படுத்தினார். எனவே, புலவர். கா. கோவிந்தன், வித்துவான் மா.இராகவன் முதலான தலைமாணாக்கர்களை உருவாக்கினார். இதனோடமையாது, எழுத்துப் பணியிலும் மிகுந்த ஆர்வத்தோடும் , தமிழாழத்தோடும் உரைவேந்தர் ஈடுபட்டார். அவர் சங்க இலக்கிய உரைகள், காப்பியச் சுருக்கங்கள், வரலாற்று நூல்கள், சைவசித்தாந்த நூல்கள் எனப் பல்திறப்பட்ட நூல்கள் எழுதினார். தம் எழுத்துப் பணியால், தமிழ் கூறு நல்லுலகம் போற்றிப் பாராட்டும் பெருமை பெற்றார் உரைவேந்தர். ஒளவையவர்கள் தம் நூல்கள் வாயிலாக புதுமைச் சிந்தனை களை உலகிற்கு நெறிகாட்டி உய்வித்தார். பொன்னேபோல் போற்றற்குரிய முன்னோர் மொழிப் பொருளில் பொதிந்துள்ள மானிடவியல், அறிவியல், பொருளியல், விலங்கியல், வரலாறு, அரசியல் எனப் பன்னருஞ் செய்திகளை உரை கூறுமுகத்தான் எளியோரும் உணரும்படிச் செய்தவர் உரைவேந்தர். எடுத்துக்காட்டாக, சமணசமயச் சான்றோர்கள் சொற்போரில் வல்லவர்கள் என்றும் கூறுமிடத்து உரைவேந்தர் பல சான்றுகள் காட்டி வலியுறுத்துகிறார். “இனி, சமண சமயச் சான்றோர்களைப் பாராட்டும் கல்வெட்டுக்கள் பலவும், அவர்தம் சொற்போர் வன்மையினையே பெரிதும் எடுத்தோதுகின்றன. சிரவணபெலகோலாவில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் இவர்கள் பிற சமயத்தவரோடு சொற்போர் செய்து பெற்ற வெற்றிச் சிறப்பையே விதந்தோதுவதைக் காண்கின்றோம். பிற சமயத்தவர் பலரும் சைவரும், பாசுபதரும், புத்தரும், காபாலிகருமாகவே காணப்படுகின்றனர். இராட்டிரகூட அரசருள் ஒருவனென்று கருதப்படும் கிருஷ்ணராயரென்னும் அரசன் இந்திரநந்தி என்னும் சான்றோரை நோக்கி உமது பெயர் யாது? என்று கேட்க, அவர் தன் பெயர் பரவாதிமல்லன் என்பது என்று கூறியிருப்பது ஒரு நல்ல சான்றாகும். திருஞான சம்பந்தரும் அவர்களைச் ‘சாவாயும் வாதுசெய் சாவார்” (147:9) என்பது காண்க. இவற்றால் சமணச் சான்றோர் சொற்போரில் பேரார்வமுடையவர் என்பது பெறப்படும். படவே, தோலா மொழித் தேவரும் சமண் சான்றோராதலால் சொற்போரில் மிக்க ஆர்வம் கொண்டிருப்பார் என்றெண்ணுதற்கு இடமும், தோலாமொழித் தேவர் என்னும் பெயரால் அவ்வெண்ணத்திற்குப் பற்றுக்கோடும் பெறுகின்றோம். இந்நூற்கண், ‘தோலா நாவின் சுச்சுதன்’ (41) ‘கற்றவன் கற்றவன் கருதும் கட்டுரைக்கு உற்றன உற்ற உய்த்துரைக்கும் ஆற்றலான் (150) என்பன முதலாக வருவன அக்கருத்துக்கு ஆதரவு தருகின்றன. நகைச்சுவை பற்றியுரை நிகழ்ந்தபோதும் இவ்வாசிரியர் சொற்போரே பொருளாகக் கொண்டு, “ வாதம் வெல்லும் வகையாதது வென்னில் ஓதி வெல்ல லுறுவார்களை என்கை கோதுகொண்ட வடிவின் தடியாலே மோதி வெல்வன் உரை முற்றுற என்றான்’ என்பதும் பிறவும் இவர்க்குச் சொற்போர்க் கண் இருந்த வேட்கை இத்தன்மைத் தென்பதை வற்புறுத்துகின்றன. சூளாமணிச் சுருக்கத்தின் முன்னுரையில் காணப்படும் இப்பகுதி சமய வரலாற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இங்ஙனம் பல்லாற்றானும் பல்வேறு செய்திகளை விளக்கியுரைக்கும் உரைப்பாங்கு ஆய்வாளருக்கு அருமருந்தாய் அமைகிறது. கல்வெட்டு ஆய்வும், ஓலைச்சுவடிகள் சரிபார்த்தலும், இவரது அறிவாய்ந்த ஆராய்ச்சிப் புலமைக்குச் சான்று பகர்வன. நீரினும் ஆரளவினதாய்ப் புலமையும், மலையினும் மானப் பெரிதாய் நற்பண்பும் வாய்க்கப் பெற்றவர் உரைவேந்தர். இவர்தம் நன்றி மறவாப் பண்பிற்கு ஓர் எடுத்துக் காட்டாக ஒரு செய்தியைக் கூறலாம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தன்னைப் போற்றிப் புரந்த தமிழவேள் உமா மகேசுவரம் பிள்ளையின் நினைவு நாளில் உண்ணாநோன்பும், மௌன நோன்பும் இருத்தலை வழக்கமாகக் கொண்டிருந்தார். “ தாயாகி உண்பித்தான்; தந்தையாய் அறிவளித்தான்; சான்றோ னாகி ஆயாத நூல்பலவும் ஆய்வித்தான் அவ்வப் போ தயர்ந்த காலை ஓயாமல் நலமுரைத்து ஊக்குவித்தான்; இனியாரை யுறுவேம்; அந்தோ தேயாத புகழான்தன் செயல் நினைந்து உளம் தேய்ந்து சிதைகின்றேமால்” எனும் வருத்தம் தோய்ந்த கையறு பாடல் பாடித் தன்னுளம் உருகினார். இவர்தம் அருந்தமிழ்ப் பெருமகனார் ஒளவை.நடராசனார் உரைவேந்தரின் நூல்களைநாட்டுடைமையாக்குதலில்பெரும் பங்காற்றியவர். அவர்தம் பெருமுயற்சியும், இனியமுது பதிப்பகத்தாரின் அருமுயற்சியும் இன்று தமிழுலகிற்குக் கிடைத்த பரிசில்களாம். உரைவேந்தரின் நூல்களைச் ‘சமய இலக்கிய உரைகள், நூற் சுருக்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி, காவிய நூல்கள்- உரைகள், இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூல்கள், வரலாறு, சங்க இலக்கியம், கட்டுரை ஆய்வுகளின் தொகுப்பு’ எனப்பகுத்தும் தொகுத்தும் வெளியிடும் இனியமுது பதிப்பக உரிமையாளர் செல்வி இ.தமிழமுது, தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ.இளவழகனார் அவர்களின் அருந்தவப் புதல்வி ஆவார். அவருக்குத் தமிழுலகம் என்றும் தலைமேற்கொள்ளும் கடப்பாடு உடையதாகும். “ பள்ளிமுதல் பல்கலைச் சாலைவரை பாங்கெண்ணிக் கொள்முதல் செய்யும் கொடைமழை வெள்ளத் தேன் பாயாத ஊருண்டோ? உண்டா உரைவேந்தை வாயார வாழ்த்தாத வாய்” எனப் பாவேந்தர் கொஞ்சு தமிழ்ப் பனுவலால் நெஞ்சு மகிழப் பாடுகிறார். உரைவேந்தர் தம் எழுத்துலகச் சாதனைகளைக் காலச் சுவட்டில் அழுத்தமுற வெளியிடும் இனியமுது பதிப்பகத்தாரை மனமார வாழ்த்துவோமாக! வாழிய தமிழ் நலம்! முனைவர் வேனிலா ஸ்டாலின் உள்ளடக்கம் பதிப்புரை iii பேருரை வரைந்த பெருந்தமிழ்க் கடல்! v நுழைவாயில் ix தண்டமிழாசான் உரைவேந்தர் xv நூலடக்கம் மங்கல வாழ்த்து 3 அவையடக்கம் 5 பதிப்புரை 62 மெய்கண்டதேவர் வரலாறு 67 சிவஞான சுவாமிகள் வரலாறு 111 சிவஞான போதச் செம்பொருள் 117 சிறப்புப்பாயிரம் 159 சிவஞானபோத மூலமும் சிற்றுரையும் 165 1. பொதுவதிகாரம் 170 2. உண்மையதிகாரம் 329 3. பயனியல் 415 மெய்கண்ட தேவ நாயனார் அருளிச் செய்த சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும் மங்கல வாழ்த்து திருவெண்ணெய் நல்லூரில் கோயில்கொண்ட பிள்ளையார் பேரருள் பெற்றவர் மெய்கண்டார். ஆதலால் தாம் கண்டடைந்த சிவஞான போதச் செம்பொருளை ஓதத் தொடங்குங்கால், அப் பிள்ளையாரை வணங்கி வாழ்த்தினார். பிள்ளையார் உளியால் பொளியப்படாத தன்னிலையுருவர். (சுயம்புமூர்த்தி), ஆதலால், பொல்லப்படாத(பொளியப்படாத-செதுக்கப்படாத) அவர் பொல்லாப் பிள்ளையார் எனப்பட்டார். (பொல்லுதல் = பொள்ளுதல்) பிள்ளையார், ‘கல் ஆல் நிழல் மலவு இல்லார் அருளிய பிள்ளையார்’ எனச் சொல்லப் பட்டார். தந்தை தகவு மைந்தர் தகவென உலகம் ஓதுதல் உண்மையால். ‘கல் ஆல்’ என்பது ஆலமரத்தின் வகையுள் ஒன்று. கல் என்பது அதன் வலிமை சுட்டியது. கல்அத்தி, கல்வாழை, கல்தாழை போல ஒருவகை என்க. கல்லால மரத்தின் நீழலில் இருந்து அறமுரைக்கும் ‘மலைவு இல்லார்’ என்று செம்பொருட் சிவத்தைக் குறித்தார். மலையை வில்லாக உடையவர் என்று பொருள் கொள்ளவும் இத்தொடர் கிடக்குமாயினும், மலைவு இல்லார் என்று பிரித்து ‘மயங்குதல் எள்ளளவும் சேர்தல் இல்லாத முழுமுதல்’ என்பதே தகுமாம். மயக்கம் நீக்குதல் நோக்கிலே அருளப் பட்ட நூல் இந்நூல் ஆகலின் அதற்கு ஏற்ப உரைத்தார் எனல் தகும். பற்றறுதல் வேண்டுவார் பற்றற்றானைப் பற்றுதல் நெறியாதல்போல, மயக்கம் நீங்க வேண்டுவார் மயங்குதல் சேராத இறைவனை நினைந்தொழுகுதல் நெறியாம். இனித் தன்னை யுணர்ந்த தகவாளர் மயக்கத்தை இல்லையாகச் செய்பவர் என்பதுமாம். அவர் தகவு கூறவே, பிள்ளையார் தகவு அறியவருமாகலின் அவர்க்கு உரைத்தார். பொல்லார் இணைமலர் நல்லார் புனைவர் பொல்லார்-பொல்லாப் பிள்ளையார்; பெயர்; அவர்தம் இணைமலர், இரண்டாகிய திருவடி மலர்கள். புனைதற்குரியவை மலர்கள். ஆதலால், ‘நல்லார் புனைவர்’ என்றார். அடிமலரைப் புனைதல் எவ்விடத்தோ என்பது புனைதலால் விளக்கினார். சூடுதல், வேய்தல், புனைதல் என்பவை தலைக்கணிதலைச் சுட்டுவன ஆகலின், ஆத்திசூடி கொன்றைவேந்தன் போலப் புனைதல் நின்றதாம். புனைவார் எவர் என்பதை விளக்குமுகத்தான் ‘நல்லார்’ என்றார், திருவருளால் நற்பேறு வாய்த்தார்க்கே அது கூடும் என்பது உள்ளிடையாகலின் அவனகுளாலே அவன் தான் வணங்கி மெய்யுணர்வாளர் உரையாகலின். “கல்லால் நிழல்மலை வில்லார் அருளிய பொல்லார் இணைமலர் நல்லார் புனைவரே” என்பது கடவுள் வாழ்த்து. சுருக்கமும் செறிவும் அமைய இயற்றப்போகும் நூற்கு, அதன் யாப்புரவையும் கோப்புரவை யும் குறிப்பாய்ச் சுட்டுமுகத்தான் அமைந்த கடவுள் வாழ்த்து இது. அவையடக்கம் மங்கலவாழ்த்துக்கூறிய ஆசிரியர் அடுத்து அவையடக்கம் கூறினார். அவையடக்கம் கூறுவது பழைமையான வழிமுறையே. ஆசிரியர் தொல்காப்பியர் அதனை ‘அவையடக்கியல்’ என்பார். “திறனற்றவற்றைக் கூறினாலும் அதனை ஆய்ந்து திறமானதாக அமைத்துக்கொண்டு உதவுக என்று நூலாசிரியன் எல்லார்க்கும் பொதுவாக வேண்டிக்கொள்வது அவையடக்கியல்” என்பார் தொல்காப்பியர் (1370). அவையடக்கின் அருமை பெருமையை அறிந்து, குறைவற்ற நூல், தாம் யாப்பது மெய்யேயாயினும், பழமரபு போற்றி வழிகாட்டுதல் நூலோர் நெறி என்பதால், அதனைத் தாமும் செய்வாராய்க் கூறினார். கூறும் கூற்றிலேயே, தாம் யாக்கப் புகுந்த செம்பொருள் சிறப்பின் ஊடகத்தைப் பற்றிக்கொண்டு உரைத்தருளினார். “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்உணர்வார் எம்மை யுடைமை எமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன்” என்பது அது “தம்மை உணர்ந்துகொண்டு தம்மை ஆளுடைய தலைவனை உணர்ந்தவர்கள் எம்மை உடைமையாக உடையவராம். ஆகலின், அவர்கள் எம்மை இகழார். ஆனால், தம்மை உணராதவரோ தம்மை ஆளுடைய தலைவனையும் உணராதவரே! அவர்கள் தமக்குள் ஒன்றுபட்டு ஒன்றைக் கூறமாட்டார். அத்தகையர் புறம்பான சொல்லையாம் ஒரு பொருளாகக் கொள்ள மாட்டோம்” என்பது இதன் பொருளாம். தம்மை உணர்ந்தவரே தலைவனை உணர்வர் என்றும், அவரைத் தலைவராகத் தாம் கொண்டிருத்தலால், தம்மை உடைமையாகக் கொண்ட அவர்கள் அன்பாற் பாராட்டுவரேயன்றி இகழமாட்டார் என்றும் அவரைப் போற்றி அவையடக்கம் உரைத்தார். இனித், தம்மையுணரார் உளர்; அவரோ தம்மை யுணராமையால் தலைவனையும் உணராதவர்; அவர் தம்முள் ஒன்றுபட்டு உறவாடலும் ஒரு கருத்துக்கொள்ளலும் இலராய்த் தம்முள் முரண்பட்டு நிற்பர். அத்தகையர் சொல்லும் உண்மைக்குப் புறம்பான சொல்லை யாம் பொருட்டாகக் கொள்ளமாட்டோம் என்று அவர்க்கு அவையடக்கம் கூறாது வீறுமொழிந்தார். ‘எல்லா மாந்தர்க்கும் வழிமொழிதல்’ என்று கூறிய தொல்லாசிரியர் நெறியை, மெய்கண்டார் புதுக்கிக்கொண்டு உரைத்த அவையடக்கம் இதுவாம். தக்காரை வழிபடுதலும் தகவிலரை ஒதுக்குதலும் தகவெனக் கொண்ட பெருமிதம் ஈது என்க. முதற் நூற்பா உலகம் பெரியது; உலகத்திற்கு அண்டம் என்பது ஒரு பெயர்; அண்டம் ஒன்றா? இரண்டா? “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்பது மணிமொழி! “பன்னூறு கோடி அளவின அண்டம்” என்பது அறிவியல் ஆய்வு! இவ்வண்டங்களை யெல்லாம் சேர்த்து எப்படிக் குறிப்பது? ‘பேரண்டம்’ என்பது பெருமக்கள் குறிப்பு! அண்டத்தில் உள்ள பொருள்களை எல்லாம் அறிந்து முடித்தாகிவிட்டதா? அவற்றுக்கெல்லாம் பெயர் வைத்தாகிவிட்டதா? இத்தனை என்று எண்ணிக்கை யிட்டாகி விட்டதா? இல்லை! இன்று மட்டுமில்லை, என்றுமே முழுதுற அறிந்ததாக மனித ஆற்றலுக்கு இடமில்லை! “அறிதோறும் அறியாமை கண்டற்று” என்பது வள்ளுவம் ! “எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா” என்று வியப்பது இயற்கை இறைமை! இத்தனை கோடி என்று இன்பச் சுரப்பையே எண்ண முடியவில்லையானால், இன்பச் சுரப்பின் மூலமாம் அண்டப் பொருள்களை எவரே எண்ணிக் கணக்கிடவல்லார்? உலகப் பொருள்கள்தாம் எத்தனை எத்தனை வகைய! பருப்பொருள் நுண்பொருள்; காட்சிப் பொருள் கருத்துப் பொருள்; நீர்ப் பொருள் ஆவிப் பொருள்; இயங்கு பொருள் நிலை பொருள்; கூட்டுப் பொருள் கலப்புப் பொருள்; அகப் பொருள் புறப் பொருள்; மூலப் பொருள் ஆக்கப் பொருள் - இப்படி இப்படிப் பொருள்களைப் பகுத்துப் பகுத்து எண்ணினாலும் அவ்வத் துறை வல்லாராலும் எண்ணிமுடிக்க முடிவதோ? ‘யாவரே முழுதுறக் கண்டார்?’ என்று கைவிரிக்கவே நேரும். ஆனால் ஒருவர், “உலகத்துப் பொருள்களை யெல்லாம் சுருக்கமாக எண்ணிவிட வேண்டும்” அதுவும் சுருக்க மென்றால் சுருக்கம். மூன்றே சொற்களில் எண்ணிவிட வேண்டும்” என்று ஒரு புதிர் போட்டால், ஆழ அழுந்திய புலமையில்லார் ‘நடக்கும் ஒன்றா’ என்று திகைப்புறுவர். ஆனால், அறிவறிந்த பெருமக்களோ வழிவழி வந்த அறிவு மாட்சியால் செவ்விய மறுமொழி சொல்லிவிடுகின்றனர். அவர்கள், பொய்யறியாப் புலமையாளராய்-மெய்கண்டாராய்-விளங்குதலால் சொல்ல முடிகின்றது. அவர்கள் சொல்லும் மூன்று சொற்கள் தாம் எவை? “அவன் அவள் அது” முழுதுலகையும் குறிப்பதற்கு அவர்கள் சொல்லும் சொற்கள் “அவன், அவள், அது” என்பனவேயாம். இம்முச் சொற்களால் சுட்ட முடியாத ஒரு பொருள் உண்டோ? உண்டோ? உலகில் எந்த மொழியில் இந்த முச்சுட்டுகள் இல்லை! எந்த இடத்தில் எந்தக் காலத்தில் இந்த முச்சுட்டுகள் இல்லை! மெய்ப்பொருள். காலம் இடம் மொழி இனம் எல்லாம் எல்லாம் கடந்த பொதுப்பொருள்! இறைமையும் இயற்கையும் எப்படிப் பொதுப் பொருள்களோ அப்படியே, மெய்ப்பொருள் மெய்யுணர்வு என்பவும் பொதுப் பொருள்களே! உலகம், ‘அவன், அவள், அது’ என்னும் முப்பொருள்களையுடையது எனின், ‘அவர்’ என்றும் ‘அவை’ என்றும் இணைந்து ஐந்தாக்கிச் சொல்வாரே தொல்லாசிரியர்? மெய்கண்டார் மூன்றாக்கிக் கொண்டதென்ன? ‘அவன்’ பலர், ‘அவள்’ பலர் - ‘அவர்’ அல்லரோ? ‘அது’ பல ‘அவை’ யல்லவோ? ஐந்தை மூன்றாக்கிக்கொண்ட அருமை விளங்குகின்றதே அன்றி, குன்றக் கூறிய குறைபாடு இல்லையாம்! ‘அவன் அவள் அது’ என்பவை படர்க்கைகள்! தன்மை முன்னிலைப் பெயர்களைச்சுட்டினால் என்னை? சுட்டினால் குற்றமாம்! படர்க்கையாகிய அவனை, அவளை, அதை - அடைய விரும்புபவன், தன்மை முன்னிலையை விடாமல் முடியுமா? ஒருகிளையை விடாமல் மறுகிளையைப் பற்றுவது எப்படி? “யான் எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” என்பது மறைமொழி. “முகத்திற்கு முகம் புகழ்தல், நட்பிற்கும் கூடாது” என்பதும் மறைமொழி! அகப்பொருளைக் கூட, தன்மை முன்னிலை விலக்கிப் படர்க்கையால் சுட்டல் பழந்தமிழ் வழக்கு எனின், அகப்பொருளில் அகப்பொருளாம் மெய்ப் பொருளைச் சுட்டுவார் தன்மை முன்னிலை கருதுவரோ? ‘அவனன் அணுவும் அசையாது!’ என்பதை அறியார் எவர்? ‘அவன் துணை’ ‘அவன் அருள்’ ‘ஒருவன் துணை’, ‘ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்’ என்பவற்றில் வரும் அவனும் ஒருவனும் படர்க்கையே அல்லவோ? இன்னும் ஒன்று: நான், நீ என்பன போலும் தன்மை முன்னிலைச் சொற்களில் பால்வேறுபாடு காணக்கூடுவது இல்லையே! அவனுக்காக அவள்; அவளுக்காக அவன்; ஆதலால் ‘அவன் அவள்’ எனப் பெற்றனர். அவர்களுக்காக எது எனின் ‘அது’ ஆதலால், ‘அவன் அவள் அது’ என்று கூறல் முறையாயிற்றாம்! அவனை முற்படக் கூறுவானேன்? அவளை முற்படக் கூறக்கூடாதா? கூறலாம்; இடப்பக்கம் இருந்து வந்தால் என்ன? வலப்பக்கம் இருந்து வந்தால் என்ன? ஒன்றே! ஆனால், வலம் சுற்றலும், ஊர்வலம் நகர்வலம் வருதலும் வழக்காயிற்றே! அத்தகைய ஒரு வழக்கே, அவனை முற்படக் கூறிற்று! ஏற்றத் தாழ்வு காட்டுவது இல்லது தமிழ் வழக்கு! தலைவன் தலைவி, கிழவன் கிழத்தி, நம்பி நங்கை என்பவற்றைக் கருதுக. அம்மை அப்பன், தந்தை தாய் என்பவற்றையும், ‘அன்னையும் பிதா’வும் ‘மாதா பிதா’ என்பவற்றையும் எண்ணினால் முன்பின் கூறல் பெருமை சிறுமை இல்லை எனத் தெளிவாக்கும். ‘சிறந்ததை முற்படக் கூறல்’ என்பது ஓர் இலக்கண நெறியென்றால், சிறந்ததைப் பிற்படக் கூறல்’ என்பதும் ஓர் இலக்கண நெறியேயாம். மனையறம் பேணற்கு முன்னது மணம்; மணத்தை ஊரறியக் காட்டுதற்கு, மணச் சடங்கு; மணச் சடங்கிற்கு முதற்கண் வருபவன் ‘அவன்’; பின்னே வருபவள் அவள்; பின்னே ‘அது’ நிகழும். உலகெல்லாம் ஆய்ந்தாலும் இந்நாள் வரை இதற்கு மாறாக நடைபெறும் காட்சி இல்லையே! ஏன்? அவன், ஆடவன்; அவள் பெண்ணின் நல்லாள்; அவன் வன்மை மிக்கோன்; அவள் மென்மைப் பெட்டகம்; இயற்கை அவனுக்கு அருளிய ‘வலம்’ அது; இயற்கை அவளுக்கு அருளிய ‘நலம்’ அது! அவ்வலமும் நலமும் உலகை உய்ப்பன! இதில் ஏற்றமென்ன? இறக்கமென்ன ஒரு தாய் வயிற்றிலே பிறந்த ஒருவன் தாய்மையை அணுவளவேனும் தாழ்த்த நினைப்பனாயின், அவன் தாய் பெற்ற மைந்தன் அல்லன்! அவன், அவள், அது எனல் பண்டு தொட்டுவந்த வழக்காதலின் அம்முறையே முறையாய்ச் சொல்லப் பெற்றதாம். எனும் அவை : ‘அவன்’ என்றும் ‘அவள்’ என்றும் ‘அது’ என்றும் சொல்லப்படுகின்றவை எவை? அவை, ‘அவை’யாகின்றன! அது பலவாகிய அவையா இவ்வவை! இல்லை! உயர்திணையை அஃறிணைக்குரிய அவையாக்கிக் கூறுவரோ, அறிவறிந்தோர்? இவ்வவை, ‘கூட்டம்’ என்றும் பொருள்தரும் அவையாம். அவையும் அவைத் தலைவரும் இந்நாளில் பெருக வழங்குகின்றனர். ஆனால் மெய்கண்டார் காலத்தும் அவை உண்டோ? மெய்கண்டார் காலத்தில் என்ன? மெய்கண்டார்க்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தொல்காப்பியனார் அருளிய தொல்காப்பியநூல், ‘நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்துத் தானே’ அரங்கேறிற்று. அதங்கோட்டாசான் அல்லரோ அவைத் தலைவராகத் திகழ்ந்தார்! நிலந்தரு திருவிற் பாண்டியன் அல்லனோ அவையத்தைக் கூட்டுவித்தான்! கழக நூல்களெல்லாம் சான்றோர் அவைக்கண் அல்லவோ ஆராயப்பெற்றன! மூவர் முதலிகளும் ஆழ்வாராதிகளும் திருக்கூட்டத்தார் தொடரவன்றோ பாமழை பொழிந்து பண்ணோடு இசைத்துப் பைந்தமிழ் வளர்த்தனர்! இவற்றை அறிவார் ‘அவை’ புதியது என்றோ புதிய பொருளது என்றோ கொள்வரோ? அவை, தானே கூடுமோ? கூடாது! கூட்டக்கூடும்; கூட்டுவார் ஒருவர் இருந்து கூட்டுவார்; அவர் கூட்டக்கூடும்! ஒருமுறை மட்டும் கூடுமா? பலமுறை கூடுமா? எடுத்த பொருளாய்வு முடிவுறும் அளவும் கூடும். அதற்கு ஒரு முறையும் போதும்! ஒன்பது முறையும் வேண்டும்! எடுத்துக்கொண்ட பொருளையும், எடுத்துக்கொண்டு ஆய்வார் நிலையையும் பொறுத்தது அது. இந்த உலகமும் ஓரவையே! அதுவும் இறையால் கூட்டக் கூடுகின்றது; கூடி ஆய்கின்றது; ஆய்வு முடிந்ததும் அடையும் இடத்தை அடைகின்றது. அவையைக் கூட்டி ஆய்ந்து நிறைவிப்பார் அவைத் தலைவர்; உலகைக் கூட்டி நிகழ்த்தி நிறைவிப்பார் இறைவர். ‘அவை’ என்னும் உவமையால் மெய்கண்டார் சுட்டும் பொருள் இதுவாம். மூவினை : ‘மூவினை’ எனினும் ‘முத்தொழில்’ எனினும் ‘முச்செயல்’ எனினும் ஒன்றே. மூவினை எதற்கு உண்டு? மேலே சுட்டிய அவைக்கு உண்டு! உலகுக்கு உண்டு! உலகியற் பொருள்கள் அனைத்துக்கும் உண்டு. மூவினை எவை? கூட்டக் கூடியது ஒன்று. நிகழ்த்த நிகழ்ந்தது இரண்டு; நிறைவிக்க நிறைந்தது மூன்று! அவைக்குரிய இம்மூன்றும் உலகுக்கும், பொருள்களுக்கும் உண்டென்பதெப்படி? “உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும்” என்னும் கம்பர் வாக்கு மூவினை விளக்கமும், மூவினை முதலாம் முதல்வன் விளக்கமும்தாமே! படைத்தல் காத்தல் அழித்தல் என்பவைதாமே மூவினை! ஆற்றின் செயலை அல்லது நீரின் செயலை மூவினைப்படுத்துதல் தமிழர் மரபு. நீர், படைப்பு, காப்பு, அழிப்பு வினைகளைச் செய்தலால் இறைவணக்கத்தை அடுத்து வான்சிறப்பு வைத்தல் தமிழர் மரபாயிற்று. கடலுக்குப் ‘புணரி’ என்பதொரு பெயர். ஆறுகள் கூடிக் கலத்தலால் கடல் புணரியாயிற்று! நீர்க்கலப்பு, புணரியாவதுபோல், சொற்கலப்பு ‘புணர்ச்சி’ எனப்பெறுவதாயிற்று. புணர்ச்சியின் வகையை இரண்டாகப் பகுப்பர். ஒன்று இயல்புப்புணர்ச்சி; மற்றொன்று ‘விகாரப் புணர்ச்சி; விகாரப் புணர்ச்சி முக்கூறுபட்டது. அவை தோன்றல், திரிதல், கெடுதல் என்பன. உலகும், இயல் நிலையில் இருந்து, விகார நிலைக்கு வருங்கால் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகிய மூவினைக்கு உட்படும்! தமிழர் தம் மெய்யுணர்வுக் கோட்பாடுகளே, அவர்தம் இலக்கணத்தில் பொதிந்து கிடத்தல் இத்தகைய ஆட்சிகளால் புலப்படும். ஆக, உலகாம் அவை மூவினைகளையுடையது என்பது கொள்க. தோற்றிய திதியே ஒடுங்கி : மூவினையை உளவாக்கல், நிலைபெறுத்தல், நீக்கல் என்றும், படைத்தல் காத்தல் அழித்தல் என்றும் பிறவாறும் பிறர்பிறர் கூறினாராக மெய்கண்டார், ‘தோற்றிய திதியே ஒடுங்கி’ என்றார். தோற்றம், திதி, ஒடுக்கம் என்பது அவர் ஆட்சி. திதியாவது உளதாதல்; காத்தல் என்பதும் அது. ஒடுக்கம் ஆவது அழித்தல். மிகக் கருத்தோடும் கவனத்தோடும் சொற்களை ஆள்கிறார் மெய்கண்டார். சின்னஞ் சிறிய சொற்களையே தேர்ந்தெடுத்துக் கொண்டு பென்னம் பெரிய பொருளைப் புகுத்துகிறார். திருவள்ளுவர் ஆட்சியில் திளைத்துத் திளைத்து, திருமூலர் முதலியோர் ஆட்சியில் அழுந்தி அழுந்தி, தமிழ் இலக்கண மூலவேரில் தோய்ந்து தோய்ந்து, ‘தாமே போதமாக’ நின்று அருள்கின்றார். ஆகலின், அவர்தம் சொல்லின் மாட்சிக்கு எல்லையொன்று இல்லையாம்! தோன்றிய என்னாமல் ‘தோற்றிய’ என்று பிறவினை வாய்பாட்டால் அருளியது ஏன்? கூட்டம், தானே கூடாமை போலவும், பிறரொருவர் கூட்டக் கூடியது போலவும், இவ்வுலகமும் தானே தோன்றியதாகாமல் பிறர் ஒருவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பதை உணர்த்தவே ‘தோற்றிய’ என்றார். தோன்றுதல் தோற்றுதல் என்பவற்றில் ஒரோ ஓரெழுத்து மாற்றமே நேர்ந்துளது. எனினும் அதன் வினைப்பாட்டில் எத்தகைய வேறுபாடு? ‘கழுவேறியது’ என்பது பழைய திருவிளையாடல். ‘கழுவேற்றியது’ என்பது பரஞ்சோதியார் திருவிளையாடல். எழுத்து மாற்றத் திருவிளையாடல், எத்தகைய கொடுமாற்றத்திற்கு இடனாகிவிட்டது? இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட உலகம், அவனால் காக்கப்படுதல் ‘திதி’ எனப் பெற்றது. தன்னால் தோற்றுவிக்கப் பெற்றுக் காக்கப்பெற்ற உலகத்தை, ஒடுக்குகிறான். அவன் வினை உலகத்தை ஒடுக்கிக் கொள்ளல் எனினும், அதனைத் தன்னுள் ஒடுக்கிக் கொண்டதால், அவ்வுலகம் ஒடுங்குவதற்குக் காரணமாக இருப்பவன் அவன் ஆகலின், ஒடுங்கி எனப் பெயர் பெற்றான். துறவோர் ஒடுங்கிய இடங்கள் ஒடுக்கம் எனப் பெறுகின்றன. அந்த ஒடுக்கங்கள் வேறு! அவை, ஒடுக்கம் செய்யப்பெற்ற இடங்கள். அவையே, உடலைத் தன்னுள் ஒடுங்க வைத்துக் கொண்டவை அல்ல! ஆனால், இறைவனோ உலகம் ஒடுங்குவதற்கு இடனாக இருத்தலால் ஒடுங்கியா கின்றான். ஒடுக்கத்திற்கு இடமாக இருப்பவன் ஒடுங்கியானான் என்க. இறைவனின் மெய்யியல் அறிந்து சூட்டப் பெற்ற பெயர் ‘ஒடுங்கி’ என்க. மலத் துளதாம் : அவை கூடிற்று; கூடிய அவ்வவை மீண்டும் கூடுவானேன்? அவையில் எடுத்துக்கொண்ட பொருள் நிறைவுறவில்லை. நிறைவுற்றால் மீண்டும் கூடவேண்டுவது இல்லை. கூடிய ஒன்றே அவையின் ஆய்வுக் கருத்து முற்றுப் பெறவில்லை என்பதைக் காட்டும். முற்றுப் பெறாமையைத் ‘தடை’ எனலாம். அதுபோல் உலகம் மீண்டும் மீண்டும் தோன்றுதற்கும் காரணம் தடையேயாம். அத்தடையை ‘மலம்’ என்பது வழக்கு. ஒடுங்கிய அவை அல்லது உலகு, மலத்தினால் உளதாகும் அல்லது தோன்றும்! மலத்தினால்ம அவை உண்டாக வேண்டுவதென்ன! மல நீக்கத்திற்காகவே தோற்றம் உளதாகின்றதாம். கறையைப் போக்கப் பலமுறை வெளுப்பதில்லையா துணியை? களிம்பு போக்கப் பலமுறை விளக்குவது இல்லையா செம்பை? அழுக்குப் போக்கப் பலமுறை துடைப்பது இல்லையா கண்ணாடியை? அவைபோல் என்க. அந்தம் ஆதி : அண்டம் என்பது உலகம் எனக் கண்டோம். அண்டம் என்பதற்கு முட்டை, விதை முதலியன பொருள்கள். அதன் வடிவம், வட்டம் என்பதே. உலகின் வடிவமைப்பை உள்ளடக்கிய பெயர்கள் அண்டம், உலகம், பார் முதலியன. வட்டத்தில் முதல் எது? முடிவு எது? முதலும் முடிவும் ஒன்றே. தோன்றும் இடமே முடிவிடம்; முடிவிடமே தோன்றுமிடம். பிணையல் வரிசையில் எவ்வரிசை முதல் வரிசை? எவ்வரிசை இறுதி வரிசை? எதுவும் முதல்; எதுவும் இறுதி! இவ்வட்டச் சுற்றே படைப்பியல் சுற்று! கடலில் இருந்த நீர் ஆவியாகவில்லை? ஆவி மேலே மேலே சென்று குளிரவில்லையா? குளிர்ந்து மழையாய்-அருவியாய்-ஆறாய்-காலாய் நடந்து கடலைச் சேரவில்லையா? புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேர்ந்த நீரின் சுழல் நடை, முதலும் முடிவும் காட்டும் நடை! அந்தமும் ஆதியுமாம் கடல்போல், உலகின் அந்தமும் ஆதியும் ஆகின்றவன் இறைவன். நீர்க்கு அந்தத்தைச் செய்யும் இடமும், ஆதியைச் செய்யும் இடமும் வெவ்வேறல்ல! ஓரிடமே! அதுபோல் உலகுக்கு ஆதியும் அந்தமுமாக அல்லது அந்தமும் ஆதியுமாக இருப்பவன் ஓர் இறைவனே! அந்தமும் ஆதியும் இல்லா அருளாளன். உலகின் அந்தமும் ஆதியுமாம் அமைவு இது! பாவகையிலே அந்தாதி கண்ட திறவோர், ‘ஆதிபகவனை’க் கண்டு தெளிந்த வகை இது! என்மனார் புலவர் : இறைவன் உயிர் மலம் என்னும் முப்பொருள் கூறுகளையும் செந்தமிழ்ச் சிவஞான போதச் செல்வர் மெய்கண்டார்தாம் கண்டாரோ? அவர்க்கு முந்தையோர் கண்டிலரோ? கண்டவர் உளராயின் அவர்தாம் யாவர்? என வினவுவார்க்கு விடையாக ‘என்மனார் புலவர்’ என இயம்பினார் மெய்கண்டார். “என்று சொல்லுவர் மெய்ப்பொருள் வல்ல புலமையாளர்” என்பது என்மனார் புலவர் என்பதன் பொருளாம். செழுஞ்செந்தமிழில் செம்பொருள் துணிவு நூல்கள் பல இருந்தன என்றும், அவற்றை ஆக்கிய அந்தண்மை மிக்க செந்தண்மையாளர் பலர் என்றும், அவர் கூறிய வழியே வழியாகக் கூறினேன் யான் என்றும் ‘என்மனார் புலவர்’ என்பதால் விளக்கினார் ஆசிரியர். இம்முழுப் பொருளையும் சுட்டும் முதல் நூற்பா : “அவன்அவள் அதுவெனும் அவைமூ வினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்” கடவுள், உயிர், மலம் என்பவை சமய நூலாரால் முப்பொருள்கள் எனப்படும். இவை ‘பதி, பசு, பாசம்’ என வட நூலாரால் சுட்டப்பெறும். கடவுள் என்று உண்டோ அன்றே உயிரும் உண்டு; அவ்வுயிருக்கு மலமும் உண்டு, மலமாவது என்ன? செம்பில் களிம்பு இருப்பதுபோல், உயிரிடத்தே மலம் இருக்கிறது! செம்பில் களிம்பு எப்பொழுது தோன்றியது? செம்பு தோன்றியபோதே களிம்பும் தோன்றியது. அதுபோல் உயிர் தோன்றியபோதே அதனுடன் மலமும் தோன்றியது. செம்பில் களிம்பு நீங்கினால் சுடர்விடும். உயிரில் மலம் நீங்கினால் ஒளியெய்தும்! உயிருக்கும் மலத்துக்கும் உள்ள தொடர்பு, செம்புக்கும் களிம்புக்கும் உள்ள தொடர்பே! இதனைத் தொல்பழந் தொடர்பு என்பர். ‘அனாதி சம்பந்தம்’ என்பர் வடநூலார். “அவன் என்றும் அவள் என்றும் அது என்றும் குறிக்கப்பெறும் அண்டத் தொகுதி படைப்பு, காப்பு, அழிப்பு என்னும் முத்தொழில்களை உடைமையால், ஒருவனால் படைக்கப்பட்ட உள்பொருளேயாம். அது மல நீக்கத்தின் பொருட்டு, தான் ஒடுங்குதற்கு இடனாக இருந்த கடவுளினின்றும் மீண்டும் தோன்றுவதாம். ஆதலால், அந்தமாக இருக்கும் அவனே, முதலும் ஆகிறான் என மெய்ப்பொருள் ஆய்வாளர் கூறுவர்” என்பது இந்நூற்பாவின் பொருளாம். இரண்டாம் நூற்பா அவன், அவள், அது என்றும் சுட்டப்பெறும் உலகுக்கு அந்தமும் ஆதியுமாக இருப்பவன் இறைவன் எனக் கண்டோம். அவன் எவ்வாறு இருப்பன்? எங்கு இருப்பன்? ‘இறைவன்’ என்னும் பெயராலேயே இறைவன் இருப்பை முன்னோர் தெளிவித்தனர். இறைவன் என்பதற்கு, ‘எங்கும் தங்கி இருப்பவன்’ என்பதே பொருளாம். ‘இறைவன் எங்கே இருக்கிறான்?’ என வினாவுவார்க்கு, ‘அவன் எங்கே இல்லை?’ என்று எதிர்வினா வினாவுவர்! ‘இறைவன் எங்கும் இருக்கிறான்’ என்று உடன்பாட்டு விடையும் கூறுவர். இவை இறைவன் எங்கும் உளன் என்பதைத் தெளிவிப்பனவாம். “பாலில் நெய் எங்கே யுள்ளது? பழத்தில் சுவை எங்கே யுள்ளது? தேனில் இன்பம் எங்கே உள்ளது? எங்கும் எங்கும் உள்ளதேயன்றோ! இவற்றைப்போல், இறைவன் எங்கும் உள்ளவனே” என உவமையால் விளக்குவர் மெய்யுணர்வாளர். இறைவன் இருப்பை மிக நுண்ணிதாக விளக்குகிறார் மெய்கண்டார். அவையே தானே ஆய் இறைவன் அவையே ஆயும், தானே ஆயும், அவையே தானே ஆயும் இருக்கிறான் என்று கூறுகின்றார். ‘அவையே தானே’ என இரண்டு நிலையாய்க் கூறினும், அவ்விரண்டனையும் இணைத்துக் காணும் முந்நிலைப்படத் தொடரை அமைத்துள்ளார். அவையேயாய் நிற்றல் உலகமாகிய அவை வேறு, தான் வேறு என்று இல்லாமல் ஒன்றாகக் கலந்து நிற்கும் நிலையே அவையேயாய் நிற்றலாம். உடலுக்குள் உயிர் வேறாய் இல்லாமல், அவ்வுடல் எங்கும் கலந்து இருப்பதுபோல உயிர்கள்வேறு தான்வேறு என்று இல்லாமல் உயிர்களில் எல்லாம் கலந்து நிற்றல் அவையேயாய் நிற்றலாம். “உயிர் தொறும் ஒளித்துநின்ற வஞ்சக்கள்வன்” என்பார் திருவிளையாடலார். வளர வளரும் வளர்ந்தநிலை, ‘அவையேயாய் நிற்றல்’ என்பது, முருகி உருகி நிற்கும் நிறைவாளர்க்கு உரிமையாதலை உணர்வார், இறைநிலை அஃதென எளிதில் அறிவர். “சுடும் உணவை உண்ணேன்; உண்ணின் என் உள்ளத்துறையும் என்னவரைச் சுடும்” என்பாள் ஒரு காதலி என்னின், அவள் அவனாய் நிற்றல் அன்றோ! “என் உள்ளத்தைப் பிளந்து கண்டால் அங்கே என்ன காண்பாய்? நின்னைக் காண்பாய்” என்று ஒரு நண்பன் கூறினான் எனின், அவன், அந்நண்பனாய் நிற்றல் அன்றோ! ‘என் உயிர் கொண்டும் இறைவா! இவனுயிர்தா’ என ஒரு தந்தையோ தாயோ வேண்டிக் கிடப்பரேல், அவர் அவனாய் நிற்றல் அன்றோ! “எங்கே புயல்; எங்கே நிலநடுக்கம்; எங்கே தொற்றுநோய்; எங்கே வன்முறைக்கேடு; எங்கே அச்சுறுத்தல்; எங்கே அரற்றுதல் அங்கே யாம்” என்று அருளாளர் நிற்பரேல், அவர் அனைத்துயிராய் நிற்றல் அன்றோ! ‘ஆட்டைப் பலியிடவா ஆகாது ஆகாது’ என்று சொல்லி நொண்டியாட்டைத் தோளில்மேல் போட்டுக்கொண்டு கால்கடுக்க நடந்த அருளாளர் வரலாறு சொல்வது என்ன? அதுவாய் நிற்றலே அன்றோ! “இந்த ஆட்டை வரைந்த ஓவியன் ஆடாகவே மாறித்தான் வரைந்திருக்க வேண்டும்” என்றும், “இவன் வரைந்த சிறுமணிப் புறாவைப் பார்க்கும் போது கல்லைப் பொறுக்கித் தின்ன வேண்டும் என்று ஆர்வம் எனக்கு எழுகின்றது” என்றும் ஒரு கலைஞனை ஒரு கலைஞன் கூறினான் எனின், அவ்விருவரும் அவையாய் நிற்றலே அன்றோ! பலப்பல குறைகளையுடைய மாந்தனே அவையாய் நிற்க இயலுமெனின், குறைவிலா நிறைவாம் இறைமை அவையாய் நிற்றற்கு ஐயுறவும் உண்டோ? தானாய் நிற்றல் : இறைவன் தானே ஆய் நிற்றல் என்பது உலகொடும் உயிர்களொடும் கலவாமல் வேறாகத் தனித்து நிற்கும் நிலையாம். கதிரோன் ஒளியால் கண் பார்க்கிறது; பார்த்தாலும், கதிரோனும் கண்ணும் ஒன்றோ? இல்லை! கதிர் வேறாகவும் கண்வேறாகவும் இருப்பது போல, இறைவனால் உயிர்கள் அறிந்தாலும், உயிரும் இறையும் ஒன்றல்ல. உயிர் வேறாம்; இறை வேறாம். உயிரையும் உலகையும் விடுத்து இறை தனித்து நிற்கும் நிலையே தானாய் நிற்றலாம். ‘கூத்தாட்டு’ என்பது பழைமையானது. கூத்தாட்டு அவை வள்ளுவரால் பேசப்படுகிறது. ‘கூத்தச் சாக்கையன்’ இளங்கோவடிகளாரால் இயம்பப்படுகிறான். இறைவனே ‘கூத்தப் பெருமான்’ எனக் கொஞ்சப்படுகிறான். “அவரவரைக் கூத்தாட்டுவானாகி” என்கிறார் மணி மொழியார். கூத்தாட்டுபவனும் கூத்தாடுபவனும் வேறு வேறானவர் என்பதை எவரே அறியார்? இதனை ஒருமுறை கூறினால் போதாது என்று தானே நாவுக்கரசர், ஏழு முறை கூறினார் : ‘வலியுறுத்தல் நிலைபெறுத்தும்’ என்பது இந்த விளம்பர உலகம் அறியாத ஒன்றன்றே: “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே; அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே; ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே; உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே; பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே; பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே; காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே; காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” ஏழு காட்சிகளை விளக்கி, ஏழின் நிறைவாய்க் “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” என்று கூறிக், காண்பானும் காட்டுவானும் தனிமைப் பட்டிருத்தலை விளக்கினார். கொடும் போரின் இடையேயும் நெப்போலியன் ஒரு கணக்கிலே மூழ்கியிருக்க முடியுமானால், குண்டு வெடிக்கும் போதும் அதிர்வின்றி உரையாற்றிக்கொண்டிருக்க விவேகானந்தரால் முடியுமானால், தவ நிலையில், கட்டையென அறியாரால் சுட்டெரிக்கப்படும் போது தம்மை உணரும் நிலைவந்து முற்றுமெரித்துவிடச் சொல்ல ஒரு தாயுமானவரால் முடியுமானால், பெண்ணையாற்றின் இடைப்படு கல்லில் எரியூட்டிப் பாரியைப் பிரிந்திருக்க ஒண்ணாத கபிலரால் தாமே கனல் புகமுடியுமானால்-இறைவனால் தானாய் நிற்க முடியாதோ? அவன், அருளிப் பேற்றாளன்; அவன் அருட்கானோர் இவர்; அருட்கானோர் திறமே ஈதென்றால், அருளியோன் திறத்தை அளந்து காணவும் காட்டவும் வேண்டுமோ? படைப்பான், படைப்புப் பொருளுக்கு அப்பால் இருப்பவன் என்பதை எவரே அறியார்? அவையே ஆயும் தானே ஆயும் நிற்றல் : உயிரும் உடலுமாய்க் கலந்து நிற்கும் நம்மிடம், உயிர் வேறு உடம்பு வேறு எனப் பிரித்துக் காண முடிவதில்லையே! அவ்வாறு காணாதபடி, உயிர் உடலோடு கலந்து ஒன்றாய் நிற்கின்றது. அதுபோல், இறைவனும் உலகில் கலந்து ஒன்றாய் நிற்கின்றான் என்பதே, ‘அவையே ஆயும் தானே ஆயும்’ நிற்றலாம். கண் ஒரு பொருளைப் பார்க்கிறது. கண் மட்டுமோ பொருளைப் பார்க்கிறது? கண்ணொடும் உயிரின் அறிவும், அக் கண்ணொளியோடும் உடனாக இருந்தன்றோ காண்கிறது? உயிரறிவும் கண்ணொளியோடு இணையாக்கால் காட்சியென்பதும் ஒன்று உண்டோ? உயிராகியும் ஒளியாகியும் இருத்தல் அவையேயாயும் தானே ஆயும் நிற்றல் அன்றோ! ஒளிக்கு மட்டுமோ உயிரறிவு உடனாகின்றது? கேள்விக்கு, முகர்வுக்கு, சுவைக்கு, ஊற்றுக்கு, நினைவுக்கு எல்லாம் உடனாகி நின்று அவையே யாகியும் தானே யாகியும் உயிர் நிற்குமென்றால், உயிர்க்கு உயிராம் இறைவன் அவையேயாய், தானேயாய் நிற்றல் எளிதுற விளக்கமாகும் அன்றோ! தொண்டராய் இருக்குங்கால் தொண்டராய், தலைவராய் இருக்குங்கால் தலைவராய் இருப்பார் இலரோ? அலுவலராய் இருக்குங்கால் அலுவலராய், மற்றை இடங்களில் அன்பராய், நண்பராய், தாயாய், தந்தையாய், மக்களாய், ஊழியராய், உறவாய் இருப்பார் இலரோ? மாணவரிடம் ஆசிரியராய் இருப்பார், மற்றை இடத்து மாணவராய் இருப்பார் இலரோ? இவ்வாறு இருத்தல், ‘எந்நிலையில் இருந்தாலும் தம்நிலை மறவாது போற்றவல்லார்க்கு உடைமையாதல்’ கண் கூடே! இத்தகு திறம் வல்லார்க்கு இவை கூடுமெனின், கூடாதனவெல்லாம் கூட்டவல்ல, இறைவனுக்குக் கூடியிருப்பது அரிதாமோ? இவை, ‘அவையே தானே ஆய்’ இறை நிற்கும் முந்நிலையாம். இருவினையின் : இருமைக்குப் பல பொருள் உண்டு. கருமை, பெருமை என்பனவும் இரண்டு என்பதும் குறிக்கத்தக்கன. இருவினை கருவினையாம். கருவினையாவது வல்வினை; கருங்கை என்பது வலியகை என்பது போல! இருவினையை ‘வல்வினை’ என்றும் மேலே ஆளுவார் (நூற். 10). இனி, இருவினை என்பது கடத்தற்கு அரிய பெரிய வினையாம்; இருள் வினையுமாம். இவையன்றி நல்வினை தீவினை எனப்பெறும் இரண்டு வினையுமாம். “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு” என்பார் திருவள்ளுவர். “இறையருள் பெற்றார் வினைநீக்கமுற்றார்” என்பது இதன் குறிப்பு. “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்” என்பார் தொல்காப்பியர். இவற்றால், வினைநீக்கமே விடுதலை அல்லது வீடுபேறு என்றாம். வினைநீக்கம் என்பது செயலற்றுக் கிடத்தல் அன்று; பயன் கருதிச் செய்யாதிருத்தலே வினைநீக்கமாம். வினை நீக்கம் வேண்டுமோ என்றும், அதிலும் இருவினையுள் ஒன்றாகிய நல்வினை நீக்கமும் வேண்டுமோ என்றும் வினவுவார் உளர். இருவினையால் பிறப்பும் இறப்பும் உண்டாதலால், பிறப்பறுக்க விரும்புவார் இருவினை நீக்கம் கொள்ளல் வேண்டுவதேயாம். தீவினையைக் கட்டாயம் நீக்கவேண்டும். நல்வினையையும் நீக்கவேண்டுமோ? ஆம்; நல்வினையை அதன் பயனீடு கருதியன்றோ மாந்தர் செய்கின்றனர்! மறுமை நோக்கிக் கொடுப்பார் எடுப்பார் உள்ள உலகில் “மறுமை நோக்கியதன்று அவன் கொடைவண்மை; சான்றோர் செல்லும் நெறி என்பதை நோக்கியே கொடுப்பதை அன்றிப் பயனொன்று கருதிக் கொடான்” என்னும் புறப்பாட்டு நல்வினை செய்யும் பான்மையை நன்கு வலியுறுத்தும். புகழுக்கு விரும்பிக் கொடுக்கும் கொடையைப் “புறஞ்சுவர்க்கோலம் செய்தல்” என்று கூறும் வில்லிபாரதம்! ஆதலால் நல்வினையைப் பயன்கருதா உள்ளத்தோடு செய்யவேண்டும் என்பதே மெய்ப்பொருளாளர் கருத்து. இரும்புவிலங்கானால் என்ன? பொன் விலங்கானால் என்ன? விலங்கு விலங்குதானே! “ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே” என்பது திருமூலர் வாக்கு. ஈசனை எய்தும் எண்ணத்தோடுகூட, வழிபடல் ஆகாது எனின் பிறவினைகளைக் கூறவேண்டுமோ? இருவினை நீக்கத்திற்கு வழியென்ன? முதற்கண் இருவினையொப்புக் காணவேண்டும். இருவினை யொப்பாவது நல்வினை தீவினை நுகர்ச்சிகளை ஒப்பாகக் கருதும் ஒருநிலை. இன்பத்தை விரும்பும் நாம் துன்பத்தைக் கண்டு வெறுத்தல் ஆகாது! இன்ப விரும்பும், துன்ப வெறுப்பும் நீங்கி இரண்டையும் ஒன்றாகக் கருதி, “இன்பம் வரினும் வருக; துன்பம் வரினும் வருக; ஏற்றுத் துய்க்கத் தக்கனவே” என்னும் மனநிலை வந்துவிடின் அவனை வினை என் செய்யும்? விதி என் செய்யும்? விதிக்கு விதி அவனே ஆகலின், அவனிடம் விதி தோல்விகண்டு ஒதுங்கிப்போம்! வினையின் ஆட்சிக்கு இடமில்லா இடத்தில், வினைக்கு என்ன வேலை? இருவினை உயிர்களைத் தொடர்வானேன்? அவனை மாசு நீங்கிய மணியாக்குதற்கு, கறைநீங்கிய கண்ணாடியாக்குதற்கு இருவினைகள் தொடர்கின்றன. இருவினை என்ன செய்கின்றன? எப்படித் தொடர்கின்றன? இவற்றுக்கு விளக்கம் சொல்கிறார் மெய்கண்டார்: போக்குவரவு புரிய : இருவினையால் போக்குவரவு நிகழ்கின்றன. ‘போக்குவரவு’ என்பது ‘போதல் வருதல்’ என்னும் பொருள்தரும் சொல்லாக இந்நாள் ஆளப்படுகின்றது. ‘போக்குவரவுத்துறை’ என்னும் அரசுத்துறையொன்று உண்மை இதற்குச் சான்று. ஆனால், மெய்கண்டார் போக்குவரவு என்பதனை ‘இறப்பு பிறப்பு’ என்னும் பொருளில் ஆட்சி செய்துள்ளார். போக்கு இறப்பு; வரவு பிறப்பு! பிறப்பு ஒழிதலும், பிறப்பு வருதலும் ஒரு போக்குவரவுதானே! போக்குவரவு புரிவதற்காகவே இருவினைகள் தொடர்கின்றன என்று விளக்குகிறார். ஆகலின் வினையுள்ளவரை பிறப்பறுப்பு இல்லை என்றும், வினை நீக்கமே பிறப்பறுப்பு என்றும், அதுவே விடுதலை அல்லது வீடுபேறு என்றும் கொள்ள வைத்தார். “பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்” என்றார் திருவள்ளுவர்! “அற்றது பற்றெனில் உற்றது வீடு” என்றார் ஒளவையார். உயிர் போக்குவரவு புரிய, இறைவன் தானே செயல் செய்கின்றனனா? பிறரைக்கொண்டு செயலாற்று கின்றனனா? இதற்கு விளக்கம் தருவார் போலவே, ‘ஆணையின்’ என்றார் மெய்கண்டார். ஆணையின் : இறைவன் ஆணையால் செயலாற்றும் திருவருளுக்கு ‘ஆணை’ என்பது பெயர். கட்டளையை நிறைவேற்றும் துறவிக்குக் ‘கட்டளைத் தம்பிரான்’ என்று பெயர் இருப்பதுபோல! உயிர்கள் நினைக்கின்றன; சொல்கின்றன; செயலாற்றுகின்றன. இவையெல்லாம் வினையே. நினைவு, சொல், செயல் ஆகிய இவ்வினைகள் அறிவுள்ளனவோ எனின் இல்லை; இவ் வினைகளின் பயனும் அறிவுள்ளனவோ எனின் இல்லை. வினைகளும் வினைப்பயன்களும் அறிவில்லாதவை ஆதலால், வினையுடையானை இவை தாமே தேடிச் சென்றடையமாட்டா! சென்றடையுமாறு கூட்டுதற்கே இறைவன் திருவருளாணையைச் செலுத்துகின்றான். அவ்வாணையால் உயிர்கள் உடல்கருவிகளைக் கொள்கின்றன. உடல்கருவிகளைக் கொள்வதே பிறப்பாகவும், அவற்றில் நீங்குவதே இறப்பாகவும் அமைகின்றன. இவற்றைத் திருவருள் ஆணையால் இறைவன் செய்விக்கின்றான் ஆகலின், ‘ஆணையின் போக்குவரவு புரிய’ என்றார் ஆசிரியர். பல்லாயிரம் ஆக்கள் ஓரிடத்து இருப்பினும் ஒரு கன்று தன் தாயைக் கண்டுகொள்வது போல, வினையும் வினையுடையானைச் சேரும் என்பர்! ஆனால், “வினை, தானே வினையுடையானைச் சேரும் தன்மைத்தன்று, இறையருள் கூட்டலால் சேரும்” என விளக்கினார் ஆசிரியர். செலுத்தும் ஒன்று இல்லையேல், செலவென்பது ஒன்று இல்லையே! இயக்குவது அல்லது இயக்குவோன் இல்லையேல் இயக்கம் என்பது ஒன்று இல்லையே! ஆகலின் வினையை இயக்கும் திருவருளாணையைத் தெரிவித்தார் ஆசிரியர். ஆயின், இறை வேறு திருவருளாணை வேறு என்று ஆகின்றதே! இறை நிற்கும் நிலையென்ன? திருவருளாணை நிலை என்ன? என்று வினவுவர் உளராயின் அவர்க்கு விடைவேண்டுமே என்னுங்கருத்தால் மேலே சுட்டுகிறார் மெய்கண்டார். நீக்கம் இன்றி நிற்கும் : இறையும் ஆணையும், நீக்கம் இன்றி-பிரிதல் இன்றி-நிற்குமாம். நீக்கம் இன்றி நிற்பது ஆணையா இறையா என்பார்க்கு, ‘இறை’ என்று குறித்தற்காக ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் என்றார். இறைவனே ஆணையை நீங்காமல் நிற்பான் என்பதாம். நீக்கம் இன்றி நிற்றல் என்பது எப்படி? தேன் வேறு இனிமை வேறு எனப் பிரிக்க முடியாதவாறு நிற்றல் நீக்கம் இன்றி நிற்றலாம். செந்தாமரைப் பூவின் செம்மை நிறம் வேறுபடுத்த முடியாதவாறு ஒன்றியிருத்தல், நீக்கம் இன்றி நிற்றலாம். பண்பும் பண்புடையதும் ஒன்றாகி இருப்பதுபோல் இறையும் திருவருளாணையும் என்றும் ஒன்றியுடனாகி இருத்தல் நீக்கம் இன்றி நிற்பதாம். அன்றே : அன்றே என்பதற்கு ‘ஆமே’ என்பது பொருளாம். அல்லையாம் என்னும் பொருள் அதற்கு இங்கு இல்லையாம். ‘அசைநிலை’ என்று சொல்லி அமையும் பொருளும் அதற்கு இங்கு இல்லையாம். ஆமே என்னும் பொருளே அதற்கு இங்குக் கொள்ளல் சால்பு! “வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும் சென்றிகன்முனை ஆதந் தன்று” என்பது முதலாகப் புறப்பொருள் வெண்பாமாலையில் வரும் கொளுக்கள் எல்லாவற்றிலும் ஆளப்பெறும் ‘அன்று’ என்பதற்கு ‘ஆம்’ எனும் பொருளுளதாதல் அறிந்துகொள்க. ஆக, இக்கருத்துகள் எல்லாமும் அடங்க, “அவையே தானே ஆயிரு வினையின் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே” என நூற்பா இயற்றினார் மெய்கண்டார். இறைவன் உயிர்களேயாயும், உயிர்களுக்கு வேறாகியும், உயிர்களுக்கு உயிராம் தன்மையால் உடனாகியும், உயிர்கள் தம் இருவினையின் காரணமாக இறத்தலும் பிறத்தலும் செய்யத் தன் ஆணையினின்றும் பிரிவின்றி என்றும் நிற்பன் என்பது இதன் பொழிப்புப் பொருளாம். இந்நூற்பாவின் பொருளருமையில் தோய்ந்து தோய்ந்து இன்புற்ற பேராசிரியர் ஒளவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் ஓர் எடுத்துக்காட்டால் விளக்கும் அருமை தனிப் பேரின்பம் பயப்பதாகும். “அந்தமும் ஆதியுமாகும் போது வேறாய் நிற்பதும், உயிரியல் பொருளாகிய உலகியற் பொருள்களோடு ஒன்றாய் நிற்பதும் உயிர்களோடு உடனாய் நிற்பதும் உணர்த்த வந்த திருஞான சம்பந்தப் பெருமான், ‘ஈறாய் முதல் ஒன்றாய்இரு பெண்ணாண்குண மூன்றாய் மாறாமறை நான்காய் வரு பூதம்மவை யைந்தாய் ஆறார்சுவை ஏழோசையோ டெட்டுத்திசை தானாய் வேறாய்உட னானான்இடம் வீழிம்மிழ லையே’ என்று அருளிச் செய்துள்ளார். வேறாய் நின்று அந்தமும் ஆதியுமாம் திறத்தை, ‘வேறாய் ஈறாய் முதலாய்’ என்றும் ஒன்றாய் நின்று உலகியற் பொருள்களை இயக்கும் திறத்தை ஒன்றாய் இரு பெண்ணாணாய் குணமூன்றாய் மறைநான்காய் பூதமவை யைந்தாய் ஆறார் சுவையாய் ஏழோசையாய் எட்டுத் திசைதானாய்’ என்றும், உயிர்களோடு ஒன்றாகாமலும் வேறாகாமலும் உடனிருந்து கண்டும் காட்டியும் உதவியருளும் முதல்வன் திறத்தை ‘உடனானான்’ என்றும் இத்திருப்பாட்டில் திருஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செல்கின்றார். இவ்வாறு இறைவனது மூவகை நிலையினையும் திருவருளால் உணர்ந்து ஒருங்கே எடுத்து ஓதிய நூல் வடமொழியிலோ வேறு மொழிகளிலோ இதுகாறும காணப்படவில்லை!” தமிழர் சமயப் பிழிவு சிவஞானபோதம் என்பதற்கு இத்தகைய இறையருள் பாடல்களைக் காட்டிலும் வேறு சான்றும் வேண்டுமோ? மூன்றாம் நூற்பா உயிரைப் பற்றிய ஆய்விலே தொல்பழந்தமிழர் ஊன்றி ஈடுபட்டிருந்தனர் என்பது தொல்காப்பியத்தால் நன்கு தெளிவாகின்றது. செடி கொடி மரங்களுக்கு உயிர் உண்டு, உணர்வுண்டு என அறிவியல் அறிஞர் சகதீச சந்திரபோசு கருவிகள் கொண்டு மெய்ப்பித்துக் காட்டினார். ஆனால், அவர் கண்டுபிடித்ததற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டு நாடறிந்த செய்தியாக விளங்கியது. ‘உயிர்’என்னும் பெயர், ‘உய்ப்பது உயிர்’ என்னும் விளக்கம் தருவதாம். உய்த்தல் என்பது செலுத்துதல், இயக்குதல் என்னும் பொருட்டது. உயிரிலா உடல் இயக்கமற்றது என்பதை எவரே அறியார்? “செத்தாரைச் சாவார் சுமப்பார்” என்பதை எவரே உணரார்? இயக்கும் உயிர், உய்வுக்கும்-கடைத்தேற்றத்திற்கும்-வழிகாட்டும் என்றும் முந்தையோர் கண்டிருந்தனர். அவர்கள் உயிரை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் இறுதியாகப் பகுத்துக் காட்டினர். இவை இவை ஓரறிவுயிர், இவை இவை ஈரறிவுயிர் என்றும் நிலைப்படுத்தியிருந்தனர். மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளும், ஐயறிவுகளுக்கும் இடமானவை என்றும் மனம் ஆறாம் அறிவுக்கு இடமானது என்றும் தெளிந்திருந்தனர். அதனால் “மாவும் மாக்களும் ஐயறி வினவே” என்றும், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் சுட்டினர். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பவற்றின் வகையறிந்தார் வழியாகவே உலகம் இயல்கின்றது என்று தெளிந்தனர். ஓர் உயிர்மேல், மற்றோர் உயிர் செலுத்தும் அன்பாலும், அரவணைப் பாலும், உற்ற போது உதவும் உதவியாலும் உயிர் தளிர்ப்புறும் என்றும் உணர்த்தினர்! இவற்றையும் தமக்கு முன்னே இருந்த மூதறிஞர்கள் கண்டு தெளிந்து உரைத்ததாக ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’என்றும் குறித்தனர். உயிரை ஆய்ந்த பெருமக்கள் உடலையும் நன்கு ஆய்ந்தனர். உடல் என்னும் பெயரால் உழலுதலுக்கு-துன்புக்கு-இடமானது என்றும் தேர்ந்திருந்தனர். இருபதில் எழுச்சியும், முப்பதில் முறுக்கும், நாற்பதில் நழுவலும், ஐம்பதில் அசதியும், அறுபதில் ஆட்டமும், எழுபதில் ஏக்கமும், எண்பதில் தூக்கமும் எய்தும் எனப் பொது நிலையில் கணித்தும், ‘நூறுவயது அல்லது இல்லை’ என்று பொது நிலையில் குறித்தும் வைத்தனர். அழியும் உடலைக் கொண்டே அழியா நிலையைப் பெறக் கூடுமே யன்றி, உடலை விடுத்து அடையக் கூடாமையின் உடலுக்கு ‘மெய்’ என்று பெயரிட்டனர். நிலையாமைக்கு இடமாம் வாழ்வை நிலைக்கச் செய்வது பிறப்பின் பேறு ஆகலின் ‘மெய்’ என்று பெயரிட்டது தகவேயாம்! இதனை, மங்கல வழக்கெனக் கொள்வார் கொள்ளினும், உடலின் மெய்ந்நிலை கண்டு வைக்கப்பெற்ற பெயரே ஈதெனக் கொள்ளல் முறையாம். “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே” என்னும் புறப்பாட்டு இதனைத் தெளிவிக்கும். நிலையாமை சுட்டும் இலக்கண இலக்கியச் செய்திகள் எல்லாம் பிற்காலப் போலித் துறவோர் கூறுவது போல, ஒப்பாரிப் பாட்டும் அன்று! புலம்பலும் அன்று! அழுகுணிச் செய்தியும் அன்று! அழியும் வாழ்வைக் கொண்டு அழியாப் பேற்றை அடைதற்கு வலியுறுத்திக் கூறிய வாய்மொழிகளேயாம். “சாவா உடம்பினவர்” என்றும், “உளதாகும் சாக்காடு” என்றும் மேலோர் ஆட்சிகள் உண்மை இதனை வலியுறுத்தும். இனி அந் நாளில் பிறர் பிறர் அறிவு ஐந்தின் மேல் இல்லை என்றாராக, ஆசிரியர் தொல்காப்பியனார். ‘ஆறாம் அறிவு உண்டு’ என ஆய்ந்து கூறியமை அருமைப்பாடு உடையதாம். மூலநூல் அவ்வாறு கூறியும், வழிநூல் செய்த நன்னூலார் ஐயறிவு அளவுடன் அமைந்தது அவர்தம் சமயக் கொள்கையில் நின்று உரைத்ததேயாம்! உயிரியல் ஆய்வு இவ்வாறாக மெய்கண்டார் உயிர் உண்மையை வலியுறுத்த மேற்கொண்ட மேற்கோளைக் காணலாம். உயிர் உண்மையை வலியுறுத்துவதற்கு அவர், ஆழ்ந்து அகன்று நுணுகிச் செல்கிறார். உடலின் தோற்றரவை உரைத்து அதன்கண் உயிர் உறைதலை ஏழு வகையாகப் பகுத்துக் காட்டித் தெளிவிக்கிறார். அவர் கூறும் மூன்றாம் நூற்பா : “உளதுஇல தென்றலின்; எனதுடல் என்றலின்; ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்; கண்படில் உண்டிவினை இன்மையின்; உணர்த்த உணர்தலின்; மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா”. ‘ஆன்மாவின் இருப்பிடம் இது’ என்றும், ‘ஆன்மா இருப்பை அறியும் வகை இவை’ என்றும் இந் நூற்பாவில் உரைக்கிறார். மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா : ஆன்மா என்பது உயிர். அதனை ஆதன் என்றும் கூறுவர்; ஆதன் எங்கே உள்ளது? “மாயா இயந்திர தனுவினுள் உள்ளது”. அதாவது, பொறிகளின் கூட்டத்தால் அமைந்த இவ்வுடலுக்கு முதற் காரணமாக இருப்பது மாயையாம். மாயையின் செயலால், பொறிகளையுடைய உடல் வாய்த்தது. அவ்வுடற்கண் ஆதன் உள்ளது என்பது இத் தொடரின் பொருள்ாம். இயந்திரம் = பொறிகள்; தனு = உடல். ‘இவ்வுடலே ஆன்மாவோ’ என ஐயுறுவார்க்கு அல்லது கொள்கையாக உடையார்க்கு-இவ்வுடல் ஆன்மா அன்று; உடலினுள் வேறாக ஆன்மா உண்டு என்றார். உடற் பொறியே ஆன்மா எனின் பிணத்தினிடத்தும் கூட உடற்பொறி உண்டன்றோ! உயிரின் அறிவு விருப்பு செயல் அப் பிணத்தில் இல்லையே! ஆதலால் பொறிகளின் வேறானதே ஆன்மாவாம் என்றார். ஆன்மா உளது : இந்நூற்பாவின் இறுதியில் நிற்கும் சொல் ‘ஆன்மா; முதற் கண் நிற்கும் சொல் ‘உளது’; இரண்டும் இணைய, ‘ஆன்மா உளது’ என்னும் முடிநிலை வரும். வில்லை வளைத்து அதன் முடியையும் அடியையும் நாணாற் பூட்டி வைத்தாற் போன்ற அமைப்புடையது இது! அந்தம் ஆதியாம் இறைமையைச் சுட்டியுரைத்த ஆசிரியர், உயிருக்கும் முடிவின்மை யறிந்து அல்லது அழிவிலா வட்டச் சுழற்சியறிந்து அமைத்துக்கொண்ட அமைப்பு எனக் கொள்ளினும் கொள்ளத் தக்கதாம். இனி, இவ்விறுதி முதல் இணைப்பை, ஒவ்வொரு கருத்துத் தொடரொடும் இணைத்துக் கொண்டு சொற்சுருக்கிப் பொருள் பெருக்கி கொண்டமை மெய்கண்டார் யாப்பறி மேதகைமையை வெளிப்படக் காட்டுவதாம். இணைப்பு அழகை இனிது காண்க. இலது என்றலின் ஆன்மா உளது : ‘இல்லதற்கு இல்லை பெயர்’ என்பது பழமொழி. இல்லாத ஒன்றற்குப் பெயர் எப்படி இருக்கமுடியும்? ‘பாழ்’ என வான்வெளியைக் குறிக்கின்றனர்! வெளியாக இருத்தல் உண்மையால் தானே அதற்கொரு பெயர் வைத்தனர்? அவ்வாறே ‘உயிர்’ என ஒருபெயர் உண்மையாக இருக்கும்போது, அதனை ‘இல்லை’ என்று எப்படிச் சொல்லலாம்? ‘இல்லை’ என்று ஒன்று சொல்லுமானால், அதனைச் சொன்னது எதுவோ, அதுவே உயிர்தானே! இல்லை என்று சொன்னதே உயிர் உள்ளது என்பதனை விளக்குகின்றது அல்லவா! இவ்வாறு ‘இல்லை’ என்பாரைக் கொண்டே, உயிர் உண்டு என்பதை எடுத்த எடுப்பிலே நிலைப்படுத்தினார் ஆசிரியர். இல்லை என்று கூறுவார் உளரா? உடல், உயிர் இல்லை; பொறிகள், உயிர் இல்லை; மனம், உயிர் இல்லை-இப்படி ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் ‘உயிர் இல்லையே’ என்று சொல்வார் இருந்தனர்! அதனால் அவர்க்கு மறுமொழியாக ‘இலது என்றலின் ஆன்மா உளது’ என்றார். எனதுடல் என்றலின் ஆன்மா உளது : உடலைப் பிரித்துப் பிரித்துப் பார்த்து ஆன்மா இல்லை என்பார் சிலராக, சிலரோ உடலையே ஆன்மா எனக் கொண்டனர். ஆனால், உடல் ஆன்மா ஆகுமோ எனின் இல்லையாம். உடலே ஆன்மாவாக இருந்தால், ‘எனது உடல்’ என்று சொல்லவேண்டுவது என்ன? ‘எனது’ என்று உரிமை கொண்டது எதுவோ, அதுவே யல்லவோ ஆன்மா? ஆதலால், எனதுடல் என்று சொல்லுமுகத்தானே உடல், ஆன்மா இல்லை என்றும், அதனை உரிமை கொண்டாடும் ஒன்றே ஆன்மா என்றும், தெளிவாகின்றதே என்பாராய் ‘எனதுடல் என்றலின் ஆன்மா உளது’ என்றார். ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது : ஐம்பொறிகள் என்பவை மெய் வாய் கண் மூக்கு செவி என்பன. ஐம்புலன்கள் என்பவை ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்பன. மெய்யில் ஓரிடத்தில் தேனை வைத்தால் அதன் இனிமை புலப்படுமோ? அதனை நாவில் வைத்தால் அல்லவோ சுவை தெரிகின்றது? கண்ணில் ஒளி தோன்றுகின்றது. அதே கண்ணில் சுவையோ நாற்றமோ கேள்வியோ தெரிவதில்லையே? செவியில் ஓசை கேட்கின்றது. ஒளியோ சுவையோ நாற்றமோ புலப்படுவது இல்லையே! ஒவ்வொரு புலனும் ஒவ்வொன்றைத் தானே உணரவல்லனவாய் உள்ளன? ஆனால் ஐம்புல உணர்வையும் ஒருங்கே அறிந்துகொள்ளும் ஒன்று இருக்கிறதே! அதுவே ஆன்மாவாம்; என்பாராய் ‘ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது’ என்றார். ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது : ஆசிரியர், ‘ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது’ என்றாராயினும், அதன் பொருட்பாடு கருதி, ‘ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது’ என்றும், ‘ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது’ என்றும், பிரித்து இணைத்துக் கொள்ள வேண்டியதாயிற்றாம்! செறிவாகவும் செம்மையாகவும் கூறுதல் ஆசிரியர் கடைப்பிடி யாகலின், அவர்தம் செந்நெறியுணர்ந்த உரையாசிரியர்கள் இவ்வாறு பிரித்து இணைத்துக் குறைவிலா நிறைவுரை கண்டனராகலின் அவர் முறையே முறையாய் உரை வகுக்கப்பெற்றதென்க. ஒடுக்கம் என்பது நுண்ணுடல். அதனை வடமொழியாளர் ‘சூக்கும உடம்பு’ என்பர். கனவின்கண் பருவுடல் எங்கோ ஓரிடத்திருக்க, நுண்ணுடல் எங்கோ ஒரு காட்சியைக் கண்டு உணர்ந்து கொள்கின்றதன்றோ! அந்நுண்ணுடல் காட்சியை விழித் தெழுந்த காலை, பருவுடல் கண்டதாகக் கூறுவது வழக்கம் அல்லவோ? அவ்வாறாயின் நுண்ணுடல் காட்சியைப் பருவுடற் காட்சியாக்கிக் காட்டத் தக்க ஒன்று உள்ளது அன்றோ! அவ்வொன்றே ஆன்மாவாம், என்பாராய் ‘ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது’ என்றார். கண்படில் உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது : கண்படில் என்பது உறங்குதல்; உண்டிவினை என்பது இன்ப துன்ப நுகர்வுகள். உறங்காமல் விழித்திருக்கும் போதில், இன்ப துன்ப நுகர்வுகள் உண்டாகின்றன. உறங்கும்போது இன்ப துன்ப நுகர்வுகள் உண்டாவது இல்லை. ஆனால், விழித்திருக்கும்போது எந்த மூச்சுக் காற்றை உள்ளிழுத்து வெளிவிட்டோமோ, அதே மூச்சுக் காற்றையே உறக்கத்தின் போதும் உள்ளிழ்த்து வெளி விடுகிறோம் அம் மூச்சுக் காற்றே உயிர் என்றால் விழிப்பின்னோது உண்டாகிய இன்ப துன்ப நுகர்ச்சிகள் உறக்கத்தின் போதும் தோன்ற வேண்டும் அல்லவோ? அவ்வாறு தோன்றாமையால் மூச்சுக் காற்றின் வேறாக உயிர் இருக்கவேண்டும் என்பது தெளிவாம். இதனைக் கருதியே உண்டிவினை இன்மையின் ஆன்மா உளது என்று ஆசிரியர் தெளிவித்தார். ஒடுங்கிய இடத்திலும் ஒடுங்காத இடத்திலும் இன்ப துன்பங்களை அறிவதே உயிர் என்பதால் மூச்சுக்காற்றே உயிர் என்பது பொருந்தாது என மறுத்தார். உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது : “இறைவனுக்கு எண்ணிறந்த தன்னியல்புக் குணங்கள் உள. அவற்றுள் இரண்டு குணங்கள், தானே அறிகிற குணமும், ஆன்மாவிற்கு அறிவிக்கிற குணமுமாம்.” “ஆன்மாக்களுக்கு எண்ணிறந்த தன்னியல்புக் குணங்கள் உள. அவற்றுள் இரண்டு குணங்கள், அறிவித்தால் அறிகிற குணமும், தானாகப் பிறருக்கு அறிவிக்க மாட்டாத குணமுமாம்” என முப்பொருள் ஆய்வு நூல் (திரி பதார்த்த சிந்தனை) மொழியும். ஆதலால், உணர்த்தாமலே உணரவல்ல இறையறிவே (சைதன்யமே) உயிர் எனின், ஆன்மாவிற்கு எதையும் தானே அறியும் திறம் இல்லையே; அறிந்தோர் அறிவிக்கவே அறியும் குறையும் உடையதாமே? இவ்வாறாக இறையறிவே உயிர் என்பது பொருந்தாதாம். ஏனெனில் ஆன்மாவின் அறிவு, உணர்த்த உணரும் சிறுமையுடையது என்பாராய் ‘உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது’ என்றார். இவ்வாறு பகுத்தும் பிரித்தும் ஆசிரியர் உயிருண்மையை விளக்கவேண்டுவது என்ன? சிலர், ஆன்மா என்பதொன்றே இல்லை என்றனர்; சிலர், உடலே ஆன்மா என்றனர்; சிலர், பொறிகளே ஆன்மா என்றனர்; சிலர், நுண்ணுடலே ஆன்மா என்றனர்; சிலர் மூச்சுக் காற்றே ஆன்மா என்றனர்; சிலர், இறையறிவே ஆன்மா என்றனர்; சிலர், உடல் முழுமையும் கூடிய ஒன்றே ஆன்மா என்றனர். இவ்வெழுவர் தம் கொள்கைகளை முறை முறையே மறுத்து அவற்றின் வேறாம் ஆன்மாவின் உண்மை காட்டுவாராய் இந் நூற்பாவை மெய்கண்டார் அருளினார் என்க. இதுவரை கண்ட மூன்று நூற்பாக்களிலும் இறைவன் ஒருவன் உளன் என்றும், அவன் உலகுக்கு அந்தமும் ஆதியுமாக இருக்கிறான் என்றும், இறைவன் உயிர்களேயாகியும், உயிர்களுக்கு வேறாகியும், உயிர்களுக்கு உடனாகியும் இருந்து திருவருள் ஆணையால் பிறப்பு இறப்புகளைச் செய்விக்கின்றார் என்றும், உயிரென்பது உளது என்றும், அவ்வுயிர் இல்லதோ, உடலோ, பொறியோ, நுண்ணுடலோ, மூச்சோ, இறையறிவோ, உறுப்புத் தொகுதிகளோ அன்று; அவற்றின் வேறானது என்றும் உரைத்தார். மேலும் உயிரைத் தொடர்ந்து ஆய்கின்றார். நான்காம் நூற்பா உயிர்களுக்கு அமைந்துள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை அறிவு பெறுவதற்காக அமைந்த கருவிகள். ஆகலின் இவ்வைந்தையும் ‘அறிகருவி’ என்பர். இவற்றின் வேறாகச் சில கருவிகளும் உள. அவை வாய், கால், கை, மலவாய், நீர்வாய் என்பன. அவை பேசுதல், நடத்தல், புரிதல் முதலிய செயல்களுக்கு உரியவை. ஆதலால் அவற்றைச் ‘செயற்கருவிகள்’ என்பர். உயிர்கள் அறிவுறுதற்கும் செயலாற்றுதற்கும் இவ் வறிகருவிகளும், செயற் கருவிகளும் இன்றியமையாதவை. இவ்விருவகைக் கருவிகளும் உருவுடன் வெளிப்படத் தெரிபவை. இவ்வாறு உருவுடன் வெளிப்படத் தெரியாமல், அருவமாய்த் தோன்றும் உட்கருவிகளும் உள. அவற்றையும், நுண்ணிய மெய்ப் பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்து இவையெனக் கூறியுள்ளனர். அவை, ‘மனம், நினைவு, முனைப்பு, அறிவு’ (மனம், சித்தம், அகங்காரம், புத்தி) என்பன. மெய் முதலிய அறிகருவிகளின் வாயிலாகக் காணப்படு பவற்றைப் பற்றுவது, மனம்; அவற்றை இவை எனச் சிந்திப்பது, நினைவு; சிந்தித்தவற்றை இவையெனத் துணிவது, முனைப்பு; துணிந்தவற்றைத் தன்னிடத்து அமைத்துக்கொள்வது, அறிவு. இவை ஒன்றின் ஒன்று வளர்நிலையில் அமைந்தவை. அறிகருவி செயற்கருவிகளையுடைய உடற்பகுதி, ‘உருமண்டலம்’ என்றும், மனம், நினைவு, முனைப்பு, அறிவு ஆகிய உட்கருவிப் பகுதி, ‘அறிவு மண்டலம்’ என்றும் கூறப்படும். இவ்விரண்டையும் சேர்த்து ‘ஆன்மவியல்’ (ஆன்மதத்துவம்) எனப்படும். இவற்றின் வேறாகக் கலையியல் (வித்தியாதத்துவம்) இறையியல் (சிவதத்துவம்) என்பனவும் உண்டு. கலையியல் நுண்ணுடலுக்கு உள்ளாய் உயிரைச் சூழ்ந்து நிற்பது என்றும், இறையியல் உயிர்க்கு மேலாய்த் திருவருள் தோய்தற்கு வாயிலாக இருப்பது என்றும் மெய்ப்பொருள் கண்டார் கூறுவர். இனி, அவை தொழிற்படுமாற்றையுந் தெளிவிப்பர். “இறைவன் திருவருளாற்றல், இறையியல் வழியாக உயிரின் அறிவு விருப்பு செயல் என்னும் மூவகை ஆற்றல்களையும் விளங்கச் செய்யும்; இறையியல் வழியாக வரும் அவ்வருளாற்றலே உயிரியலையும் கலையியலையும் தொழிற்படுத்தும்”என்பது அது. இவ்விடத்தே சில குறியீடுகளை அறிந்துகொளல் நலம். பொறிகளுக்குப் புறக்கருவிகள் என்பதும், மனம் முதலியவற்றுக்கு அகக் கருவிகள் அல்லது உட்கருவிகள் (அந்தக்கரணம்) என்பதும், அவற்றிற்கும் உள்ளால் இருக்கும் கலையியலே ‘உள்ளகக் கருவி’ என்றும், அதற்கும் உள்ளால் இருக்கும் உயிரை ‘உள்ளம்’ (உள்ளகம் என்பதன் தொகுத்தல்) என்றும் கூறுவர். திருவருள் கூட்டலால் கலையியல் தொழிற்பட்டு உயிரியல் இயக்கமுறுதல், ஒன்றன் ஒன்று தொடர்புடைய சக்கரங்களைக் கொண்டு இயங்கும் கடிகார அமைப்புப் போன்றதாம். ஓரிடத்து ஏற்படுத்தும் முடுக்கம் அடுத்ததை இயக்கி, அது பிறிதொன்றை இயக்கித் தொழிற்படச் செய்வதுபோலாம். இவ்விடத்தே, உயிர்க்கலன் (Cell) நுண்மையும் அதன்படிப்படி விரிவாக்கமும் அதனுள் அடங்கிக்கிடக்கும் உறுப்புகளின் அமைதியும் எண்ணத்தக்கவையாம். ஆலம்விதையுள் அதன் அத்தனை பகுதிகளும் அடங்கிக் கிடக்கின்றன அல்லவோ! அதனால் அன்றே ‘ஆலமர்வித்தின் அருங்குறள்’ என்பதன் வழியாகக் கம்பர் திருக்குறளையும், திருமால் குறளையும் இணைத்து இரட்டுறலாக்கிக் கூறினார். இனி, நான்காம் நூற்பாவையும் அதன் பொருள் இயைவையும் காணலாம். அந்தக் கரண மவற்றினொன் றன்று; அவை சந்தித்த தான்மா; சகசமலத் துணராது; அமைச்சர சேய்ப்பநின் றஞ்சவைத் தைத்தே. என்பது நூற்பா. மூன்றாம் நூற்பாவிற் கூறிய ஆன்மா பற்றியதே இந்நூற்பாவுமாம். அந்நூற்பாவிற் கையாண்ட உத்தியையே இந்நூற்பாவிலும் கையாண்டு உரைக்கின்றார் ஆசிரியர். ஈற்றில் நின்ற ‘ஆன்மா’ என்பதை, ‘இலது என்றலின் ஆன்மா உளது’ என்பன போல் இயைத்தவாறே. இந்நூற்பாவின் இடையில் நின்ற ஆன்மாவை முன்னும் பின்னும் இணைத்துக் கொள்கிறார். இடைநிலை விளக்கு என்னும் அணியின் வகையைச் சேர்ந்தது இவ்வமைப்பாம். ஆன்மா அந்தக்கரணமவற்றுள் ஒன்று அன்று : ‘இதுவே ஆன்மா’ ‘இதுவே ஆன்மா’ என்று பலவகையாய் உரைத்த மெய்ப்பொருளாய்வாளர்க்கு, ‘அது அன்று’; ‘அது அன்று’; ‘அவற்றின் வேறானது ஆன்மா’ என்று மறுமொழி தந்த ஆசிரியர், அகக் கருவிகளாம் அந்தக் கரணமே ஆன்மா என்று கூறுவாரை மறுத்தற்கு, “அந்தக் கரணமவற்றின் ஒன்று அன்று” என்றார். மனம் நினைவு முனைப்பு அறிவு என்னும் அகக் கருவிகளை ஆன்மா தன் செயலுக்குக் கருவியாகக் கொண்டுள்ளதேயன்றி, அவற்றில் ஒன்றாகவோ, அவையெல்லாமுமாகவோ அது அமைந்து விடவில்லை என்றார். ஆன்மாவின் அறிகருவியாய் இயக்கமாவதே அகக் கருவிகள் ஆகலான் அவற்றை ஆன்மாவெனல் ஆகாதாம் என்றார். அவை சந்தித்தது ஆன்மா : அகக் கருவிகளைக் கூடிநின்றதே ஆன்மாவாம். கூடுவதும் கூடிநின்ற இடமும் வேறாவது போலவும், கருவியும் கருவியுடையானும் வேறாவது போலவும் அகக் கருவிகளும் ஆன்மாவும் வேறாம். ஆயினும் அவை கூடிநிற்கும் குறியால் மயங்கி அகக் கருவிகளே ஆன்மா என்பார் உளர் எனத் தெளிவித்தார். ஆன்மா அகக் கருவிகளைச் சந்தித்தலை ‘அஞ்சவைத்தைத்தே’ என்பார்; அதன் விளக்கம் மேலே காண்பாம். ஆன்மா சகசமலத்து உணராது : ஆன்மா, என்று உளதோ அன்றே மலமும் உளது. அதனை ‘மலத்துளதாம்’ என்று முதல் நூற்பாவிலேயே ஓதினார் ஆசிரியர். அம்மலத்தின் அல்லது மறைப்பின் இயல்பை உணர்த்து வாராய்ச் ‘சகச மலம்’ என்றார். சகசமலமாவது தொல்பழந் தொடர்பான அல்லது இயற்கையான மலமாம். இதனைக் களிம்பு, மறைப்பு, மாசு, அழுக்கு, மாயை, இருள் எனப் பல சொல்லால் சுட்டுவர். ஆன்மாவுக்கு இயல்பான மலத்தால், தானே அறிதல் இல்லாமல் அறிகருவிகளைத் துணையாகக் கொண்டு அறியும் என்று கூறினாராம். அறிகருவிகளோடு ஆன்மா சந்தித்துக் கடமை புரிதலால் ஒன்றனைப் பற்றி, சிந்தித்து, துணிந்து, அறிந்துகொள்கின்றதாம். இம்மலம் தொல்பழந் தொடர்பினது எனினும், மாந்தர்தம் நிலைக்கு ஏற்ப மூன்று நிலைகளையுடையதாம். மயக்கம், எழுச்சி, அமைதி (தாமசம், இராசதம், சத்துவம்) என்னும் முக்குண நிலைப்பட்டார்க்குத் தக மலமும் மூன்று நிலைகளில் அமைகின்றது. மயக்க நிலையுடையவர்க்கு மறைப்பு மிகத் தடிப்பானது. விறகில் உள்ள தீயைப்போல இவர்களுக்கு உண்மைப் பொருள் மிக மிக வெளிப்படாததாக இருக்கும். எழுச்சி நிலையுடையவர்க்கு மறைப்பு தடிப்பானது. கண்ணாடியின் ஒளியை மறைத்துள்ள அழுக்குப்போல்வது அது. முயற்சியால் அம் மறைப்பை நீக்கி உண்மைப் பொருளைக் காணக்கூடும். அமைதி நிலையுடைவர்க்குரிய மறைப்பு மென்மையானது. புகையின் நடுவே தீ இருப்பதுபோல இருப்பது. எளிய முயற்சியால் மறைப்பை நீக்கி மெய்ப்பொருள் காணலாம். பசையூட்டிய இரட்டு, இயல்பான இரட்டு, துகில் என்னும் மூவகைத் துணிகளையும் முறையே ஊடுருவிப் பார்க்கும் பார்வை போன்றது. மயக்கம், எழுச்சி, அமைதி என்னும் முக்குண நிலைப் பட்டாருக்கும் உள்ள மறைப்பு எனலாம். அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சவைத்தைந்து : அகக்கருவிகளும் ஆன்மாவும் அமைச்சர்களும் அரசனும்போல நின்று ஐந்து படிநிலைகளையுடையதாம். அமைச்சு-அமைச்சர்; அமைச்சு என ஒருமையாற் சுட்டினும் அகக் கருவிகள் பலவாயினாற் போல அமைச்சர் பலராதல் கொள்ளல் முறையாம். அவ்வவ்வமைச்சரைத் தழுவியும் நெருங்கியும் சூழ்ந்தும் அறிபொருளை அறிந்துகொள்ளும் அரசனைப்போல அறிகருவிகளை அடுத்து நெருங்கி ஆன்மாவும் அறிவினைக் கொள்ளும் என்பதாம். அவத்தை என்பது ‘நிலை’ என்பதாம். அஞ்சு = ஐந்து. உயிர் நிற்கும் நிலைகள் ஐந்து; புருவநடு, கழுத்து, மார்பு, உந்தி, மூலம் என்பன. இவ்விடங்களில் உயிர் நிற்கும் நிலை முறையே, நனவு (சாக்கிரம்), கனவு (சொப்பனம்), துயில் (சுழுத்தி), உறக்கம் (துரியம்), பேருறக்கம் (துரியாதீதம்) என்பனவாம். புருவநடு முதல் மூலம்வரை உயிர் கீழே இயங்கும் இயக்கமும், மூலம்முதல் புருவநடுவரை மேலே இயங்கும் இயக்கமும் என உயிர் இயக்கம் இருவகையாம். இவை முறையே கீழால் நிலை, மேலால் நிலை எனப்படும். ஐந்துநிலை மாடத்தில் ஏறும் ஒருவன் மாடந்தொறும் நின்று நின்று ஏறியும், நின்று நின்று இறங்கியும் காணும் காட்சிபோல மேலால் நிலை, கீழால் நிலைகளைத் தெளிக. இந் நாளில், மாடிதோறும் நின்று நின்று இயங்கும் தூக்கி (Lift)யுண்மை தக்க எடுத்துக்காட்டாம். அரசன், படைத்தலைவர் முதலானவர்களோடு கூடி, உலாப்போந்து மாளிகை புகும்போது வாயில்கள்தோறும் அவரவர்களை நிறுத்தி, காவலும் வைத்து அந்தப்புரத்தினில் தனியே செல்வதைப் போல ஆன்மா உடலின் அகக் கருவிகளில் இருந்து நீங்கி உயிர்க் காற்றைக் காவலாக நிறுத்தி ஐந்துநிலை கொள்ளும் என்று முன்னை உரையாளர்கள் விளக்குவர். உயிர் அகக்கருவிகளில் படிந்து படிந்து செல்லுதலைத் தென்றல் காற்றொடும் இணைத்துக் காண்டலும் இன்பம் பயப்பதாம். தென்றல் சோலையில் நுழைந்து, குளத்துள்புகுந்து, தாமரை மலரைத்தழுவி, இருள்வாசி மல்லிகை முல்லை மலர்ப்பந்தர்களில் தாவி, தேனும் மணமும் நுகர்ந்து, தண்மை மென்மை நறுமையுடையதாய் அறிவன்போல் (ஆன்மாபோல்) இயங்கும் என்பதாம். ஆதன், ஓர்ப்பன், அறிவன் என்னும் பெயர்கள் ஆன்மாவுக்குரியன என்பதை உணர்வார், ‘அறிவனபோல் இயங்கும் தென்றலை’ மேலால்நிலை, கீழால்நிலை உயிர் இயக்கங்களொடு ஒப்பிட்டு மகிழ்வர். தேனீ, வண்டு, தும்பி முதலியவை மலர்தொறும் அமர்ந்து தேன் நுகர்தல் போன்றது, உயிரின் கீழால்நிலை, மேலால்நிலை என்பவை என எண்ணி இன்புறலாம். இந்நூற்பாவினால் ஆன்மா மனம் முதலிய அகக் கருவிகளுள் ஒன்றன்று என்றும், அவ்வகக் கருவிகளொடு கூடிநின்று கடனாற்றும் தன்மையது என்றும், அதுதன் தொல்பழ மலத்தொடர்பால் தானே அறிதல் இன்றி, அகக்கருவிகளின் துணைகொண்டு அறியும் என்றும், அது மேலால்நிலை கீழால்நிலை என்னும் நிலைகளில் ஏறி இறங்கி நிற்றல் அமைச்சர்களோடு அளாவி நிற்கும் அரசன்நிலை போல்வது என்றும் அறியப்பட்டதாம். ஐம்பூதம், ஐம்பொறி, ஐம்புலன், ஐந்துநிலை என்பவற்றின் ஒழுங்கு நிலையும் எண்ணத்தக்க தேயாம். ஐம்பேரவைக்கும் ஐம்பேரமைச்சிருந்த பண்டை ஆட்சிநிலையும் அறியத்தக்கதே. ஐந்தாம் நூற்பா அறிந்த ஒன்றனைக் காட்டி அறியாத ஒன்றனை விளக்குவது, தெளிவுறுத்த விரும்புவார் எவருக்கும் வழக்கம். காட்டு எருமை காணா ஒருவனை, வீட்டு எருமை காட்டி ‘இதுபோல்வது’ என்று விளக்குவது போன்றதாம். இந்நெறியில் மெய்கண்டார் நான்காம் நூற்பாவில் சுட்டிக்காட்டிய பொருளை நினைவூட்டி அதன் வழியாகவே புதிய கருத்தை வலியுறுத்துவாராயினார். ‘விளம்புவது உள்ளத்து’ என நூற்பாவைத் தொடங்கினார். ‘சொல்லிய உள்ளத்தை’என்பது இதன் பொருளாம். உள்ளத்தையோ நான்காம் நூற்பாவில் கூறினார்? உயிரைப்பற்றியல்லவோ கூறினார் எனத் திகைப்பு உண்டாகின்றது. இத்திகைப்பு கற்பார்க்கு ஏற்படல் ஆகாது என்றே ‘தனுவினுள் ஆன்மா’ என்று மூன்றாம் நூற்பாவில் குறித்தார். உள்ளின் உள்ளாக இருக்கும் உயிர்க்கு ‘உள்ளகம்’ என்று பெயர்; அது உள்ளம் எனவும் சொல்லப்படும். இதனை நான்காம் நூற்பா முகப்பிலும் உண்டோம். வையகம், வானகம், கானகம் என்பவை வையம், வானம், கானம் என வழங்குவனபோல், உள்ளகம் என்பது உள்ளம் என வழங்குகின்றதாம். ‘ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்’ என்னுமிடத்தே பொய்யாமொழியாரும் உயிரை ‘உள்ளம்’ என ஆட்சி செய்துள்ள உண்மையை அறியலாம். ஆகலின், விளம்பிய உள்ளத்து என்பது முன்னே சொல்லிய உயிரை என்னும்பொருள்தருதல் விளங்கும். “மெய் வாய் கண் மூக்கு அளந்து அறிந்து அறியா” வெற்றிலைபாக்கு என்ற அளவானே அதனொடு சுண்ணாம்பும் சேர்தல்போல், மெய் வாய் கண் மூக்கு என்ற அளவானே செவியையும் இணைத்துக்கொள்க. கற்பார் எளிமையாகக் கண்டுகொள்ளத் தக்கவற்றைச் சுட்டிய அளவானே போதுமென்பதும், கற்பார் படிநிலை உயர்வைப் பளிச்சிடச் செய்தற்கும் இத்தகு உத்திகளை நல்லாசிரியர் கருதுவர் என்பதும் ஆய்வாளர் அறிந்ததே. அறிகருவிகளாக இருக்கும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை அளந்து அறிந்து அறியா என்றது என்ன? அறிந்தும் அறியாமை அதற்கு உண்டோ? அறிவுறுதற்குக் கருவியாம் அவற்றுக்கே அறியாமை உண்டாயின், அறிந்துகொள்ள வகைதான் என்ன? என வினாவுதல் நிகழும். ஆயின் உண்மை ஈதேயாம். யானை, பெரியதே! வலியதே! விலைமானமும் மிக்கதே! ஏழைந்துக்குமல் இரண்டு உயர்ந்த யானை-37 பெயர்களுடைய யானை-எனப் பாராட்டப்படுவதே! எனினும் என்ன? அதற்கு ‘யானை’ என்பது தன் பெயர் எனத் தெரியுமோ? அவ்வாறே மெய் முதலியவையும் அளந்து அறிந்தும் அறியாவாம். இனி எதை அறியா? என்னும் வினாவுதல் எழும். மெய் வாய் முதலியவை உயிரின் துணையால் அல்லவோ ஒன்றை அறிகின்றன! உயிர்த் துணை இன்றி அறியக் கூடுமானால், உயிர் பிரிந்துபோன பின்னரும் மெய் வாய் முதலியவை ஊறு சுவை முதலியவற்றை அறிய வேண்டுமே! அவ்வாறு அறியக் காணாமையால் உயிர்த் தொடர்புடைய அளவானே தாம். அவை அறி கருவிகளாக உள்ளன என்பது விளங்கும். ஆனால், அதனை மெய் முதலியவை அறிகின்றனவோ எனின் இல்லையாம். அன்றியும், தம்மையேனும் அறிகின்றனவோ எனின், அதுவும் இல்லையாம்! தம்மையும் அறியாமல் தம்மை இயக்கித் தொழிற்படுத்தும் ஆன்மாவும் அறியாமல் இருக்கும் குறைபாடு அவற்றுக்கு உண்மையால், ஆசிரியர் ‘அளந்து அறிந்து அறியா’ என்றார். விளம்பிய உள்ளத்து என்று உயிரைப்பற்றி உரைக்கத் தொடங்கிய ஆசிரியர் பொறிகளைப்பற்றி உரைப்பானேன் எனின், இப்பொறிகள் எப்படிக் குறையுடையனவோ அப்படிக் குறையுடையதே உயிரும் என்பதை நிறுவுவதற்காக உவமையாக எடுத்துக்காட்டப் புகுகின்றாராம். அதனை அடுத்துச் சுட்டுகின்றார். ஆங்கவை போலத் தாம், தம் உணர்வின் தமி அருள் (அறியா) : மெய் வாய் முதலிய கருவிகள்போல உயிர்களாகிய தாம், தம் அறிவால் இறைவன் திருவருளை அறியமாட்டா என்பது பொருளாம். ‘அறியா’ என்பதை உயிருக்கும் கூட்டப் பெற்றதாம். ஊசல் இருபாலும் அசைவது போலவும், கடிகாரத் தொங்கல் இருபாலும் அசைவது போலவும், ஓரிடத்து நின்ற ‘அறியா’ என்னும் சொல், ஈரிடத்தும் சென்று இயைந்து பொருள் தந்ததாம். இதனை யாப்பியலார் ‘தாப்பிசைப் பொருள் கோள்’ என்பர். மெய் முதலிய பொறிகள் தம்மையும் அறியா, தம்மை இயக்கும் உயிரையும் அறியா என இருவகை அறியாமை உடைத்தெனக் கண்டோமே; உயிருக்கும் அத்தகைய இருவகை அறியாமையும் உண்டோ எனின் உண்டு என்பதை உறுதி செய்வதற்காகவன்றோ ஆசிரியர் ‘ஆங்கவை போல....அறியா’ என்றார். உயிரும் தன்னையும் அறியாது, தன்னையுடைய தலைவனையும் அறியாது என்பதாம். ஆயின் எந்நிலையிலும் உயிர் தன்னையும் தன்னையுடையானையும் அறியாதோ எனின் மெய்ப் பொருளாய்வால் எத்தகு பயனும் இல்லையாம்; பிறவிப் பயனென ஒன்றும் இல்லையாம்; உயிர் அவற்றை அறியுமாற்றை மேல்வரு நூற்பாக்களில் உரைப்பார். இவண் உயிர்க்குள்ள இரண்டு தன்மைகளை அறிந்துகொள்ளல் சாலும். அவை : அறிவித்தால் அறிகிற தன்மை, தானாகப் பிறருக்கு அறிவிக்க மாட்டாத தன்மை என்பவை. அறிவித்தால் அறிகிற தன்மை உயிருக்கு இருத்தலால், ‘அறிவிப்பார் எவர்’ என வினா வெழும். அதற்கு விடையாவார் இறைவனும், இறையருள் கூடினாருமாம் என்க. “தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை தன்னை யறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே” “அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி” “என்னை யறிந்திலேன் இத்தனை காலமும் என்னை யறிந்தபின் ஏதும் அறிந்திலேன்” என்னும் மறைமொழிகள் அறிய, அறிவிப்பாரும் அறிவுப்பேறும் அறியவரும், “சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்” “தானேவந் தெனதுள்ளம் புகுந் தடியேற் கருள் செய்தான்” என்னும் மணிமொழிகளும் அம்மறை மொழிகளை மெய்ப்பிக்கும். காந்தம் கண்ட பசாசத் தவையே : காந்தத்தால் கவரப்பட்ட இரும்பு போல ஆன்மாக்கள் இறையருளால் தம்மையும் தம்மையுடையானையும் உணரும் என்பதாம். காந்தம் இறையருளும், இரும்பு ஆன்மாவுமாம். கவர்வது காந்தம் என்பதும் கவரப்படுவது இரும்பு என்பதும் தெளிவே. கவரப்படுங்கால் காந்தம் அசைவுறுமோ இரும்பு அசைவுறுமோ என்பதை எண்ணின் காந்தம் அசையாதிருத்தலும், இரும்பு அசைதலும் விளங்கும். இறைவனின் அசைவின்மையையும், ஆன்மாவின் அசைவையும் உவமையால் ஆசிரியர் விளங்கச் செய்தார். காந்தத்தால் கவரப்பட்ட இரும்பை எண்ணும் நாம் கண்ணப்பரை எண்ணுதல் தகும். இறைவர் உறையும் மலைமேல் அவர் ஆர்வம் உந்த ஏறிச் செல்லும் செலவைச் சேக்கிழார், “பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபனம் ஏறி, ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல” என்றார். இறைவனைக் காணா முன்னே, “அருட்டிரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்பு: விட்டகல நீங்கி”னார் என்று மேலும் தெரிவிக்கிறார். இறைவனைக் கண்ட பின்னர் “வங்கினைப் பற்றிப் போகா வல்லுடுப்பு போல” நீங்கா ராயினார் என உவமைப் படுத்துகிறார். இறை வழிபாட்டுப் பொருள் தேடுதற்குப் பிரிய நேருங்கால் “இனத்திடைப் பிரிந்த செங்கண் ஏறு” போலச் செல்வதையும், “மனத்தினும் கடிது மீள்வ”தையும் குறிக்கிறார். கண்ணப்பர் அருளில் தோய்ந்தமை, காந்தம் கண்ட பசாசம் போன்றதாம். தடுத்தாட் கொள்ளவந்த இறைவனைத் தொடர்ந்து சுந்தரர் செல்வதை, “திருமுகக் காந்தஞ் சேர்ந்த வல்லிரும் பணையு மாபோல்” எனச் சேக்கிழார் கூறுவதும் இவண் கருதத் தக்கதாம். ‘காந்தம் கண்ட பசாசம்’ என்பதற்கு காந்தத்தைக் கண்ட பசாசம் என்று பொருள் கொள்வதோ, காந்தத்தால் கண்டு கொள்ளப்பட்ட பசாசம் என்று பொருள் கொள்வதோ எனின், காந்தத்தால் கண்டுகொள்ளப்பட்ட பசாசம் என்பதேயாம். இறையருள் இல்லாக்கால் ஆன்மாவுக்குத் தன்னையறிதலும் தன்னையுடையானை அறிதலும் இல்லையென்பதைக் கண்டோமே? “காண்பாரார், கண்ணுதலாய் காட்டாக் காலே” என நாவரசர் நவின்றதை அறிந்தோமே! “நானேயோ தவம்செய்தேன் சிவயநம எனப்பெற்றேன் தேனாய்இன் னமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந்து எனதுள்ளம் புகுந்துஅடியேற் கருள்செய்தான்” என மணிமொழியார் கூறுவதும், அவரே, “இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து” என்று உரைப்பதும் இவண் எண்ணத் தக்கனவாம். மரத்தில் இருந்து விழும் பழம், பக்கங்களிலோ மேலேயோ போகாமல் நிலத்தில் வீழ்தற்குப் பழமோ காரணம்? புவி ஈர்ப்பாற்றல் அன்றோ காரணம்! புவி ஈர்ப்பாற்றலே பழம் முதலியவற்றைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளுதல் போல் இறைவன் திருவருளே காந்தமாய், ஆன்மாவாம் இரும்பை ஈர்த்துக் கொண்டதாம். <ப்பாற்றல் ஒன்று இல்லை என்பதை எண்ணுவோம். அப்பொழுது செயற்பாடுகளும் இயக்கங்களும் எப்படி இருக்கும்? பொருள்கள் எல்லாம் எங்கே எப்படி இருக்கும்? ஈர்ப்பாற்றல் இல்லையேல் அண்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் இயலுமோ? உலகத் தோற்ற ஒடுக்கங்கள் தாமும் ஈர்ப்பாற்றல் இல்லையேல் நிகழ்வதுண்டோ? ஈர்ப்பாற்றல்தானே கோடி கோடிப்பேரை ஒருவர்பால் சேர்த்து அவர்வழி நிற்க வைத்து ஆளாக்குகின்றது? இனி, இந்நூற்பா வருமாறு “விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு அளந்தறித் தறியா; ஆங்கவை போலத் தாம்தம் உணர்வின் தமியருள் காந்தம் கண்ட பசாசத் தவையே” இதன் தொகு பொருள்; “மெய்வாய் முதலிய அறிகருவிகள் ஆன்மாவின் துணையால் பொருள்களை அறிகின்றன. அவ்வாறு அறியுமாயினும் அவை தம்மையும், தம்மை அறியச் செய்விக்கும் ஆன்மாவையும் அறியமாட்டா. அவற்றைப் போலவே ஆன்மாவும் திருவருள் துணையால் வினையாற்றி வினைப்பயனை நுகர்கின்றது. எனினும் அது, தன்னையோ, தனக்குத் துணையாய் உதவும் திருவருளையோ அறிதல் இல்லை, அருளால் செயற்படும் ஆன்மாவின் இயக்கம், காந்தத்தின் முன் இயங்கும் இரும்பின் இயக்கம் போல்வதாம். ஆறாம் நூற்பா இறைவன் இலக்கணம் இன்னதென இந்நூற்பாவில் கூறுகிறார் ஆசிரியர் : உணர்உரு அசத்தெனின் உணரா தின்மையின் இருதிறன் அல்லது சிவசத் தாமென இரண்டு வகையின் இசைக்குமன் உலகே. “உணர்உரு எனின் அசத்து; உணராது எனின் இன்மை (ஆதலின்) இருதிறன் அல்லது சிவசத்தாம்; என, இரண்டு வகையின் மன் உலகு இசைக்கும்” என இயைத்துப் பொருள் கொள்ளு மாறு அமைந்து கிடக்கின்றது இந்நூற்பா. ‘எனின்’ என ஓரிடத்து நின்ற சொல்லை ‘உணர் உரு எனின்’என்றும்,‘உணராதுஎனின்’என்றும்ஈரிடத்தும்இயைக்கப்பெற்றதாம்.இவர்இத்தகு உத்திகளால் நூற்பா யாத்தல் முன்னும் சுட்டப் பெற்றனவாம்; பின்னும் வருவனவாம். உணர் உரு எனின் அசத்து : அசத்து என்பது சத்தற்றது; அதாவது நிலையற்றது. நிலையானது போல் தோன்றி நிலையற்று ஒழிவது அசத்தாம். அதனை ‘அல்நிலை’ எனலாம்; சத்து ‘நிலை’ யாகலின், சத்தாகிய ‘நிலை’ மெய்ப்பொருள் எனப்படும். ஆகலின், அசத்தாகிய ‘அல்நிலை’ பொய்ப் பொருள் என்பது தானே விளங்கும். ஒரு பொருளைக் கையால் தொட்டுணரவோ, வாயால் சுவைத்துணரவோ, கண்ணால் கண்டுணரவோ, மூக்கால் முகர்ந்துணரவோ, காதால் கேட்டுணரவோ கூடுமெனின் அப்பொருள் நிலையாத் தன்மையுடையதாய் அழிவதேயாம் என்பதைத் தெளிவிப்பதற்கு ‘உணர் உரு எனின் அசத்து’ என்றார் ஆசிரியர். புல்லின்மேல் படிந்த பனிநீர் தொட்டறியவும் கண்டறியவும் கூடுவது. அப்பனிநீர், கதிரொளி பட்ட அவ்வளவில் இல்லையாய் ஒழிதல் கண்கூடு. “மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே; கதிரோன் உதயத்தால் வாங்கும் பனிநீரே” என்பது ஏற்றப்பாட்டு. “புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை” என்பது நாலடிப் பாட்டு. காலை அரும்பிப் பகலில் போதாகி மாலையில் மலர்ந்து மறுநாளில் மடிந்துபோகும் மலர் உணர் உரு உடையது. அது நாண்மலர் (ஒருநாள் வாழ்வுடைய மலர்; அன்று மலர்ந்த மலர்) ஆகி அழிவது கண்கூடு. ‘காக்கைக்கே வந்தேன்’ என ஆட்சியேற்றுக் கொண்டு இருக்கிறான் காவலன். ஆனால், அவன் தன் உடலைக் காத்துக்கொள்ளவும் இயலாமல் காக்கைக்கே இரையாகிப் போகின்ற காட்சி கண்டறியாததோ? ஊர்நோயெல்லாம் தீர்ப்பேன் என உறுதி கொண்ட மருத்துவனும், தன் நோயைத் தீர்க்கமாட்டாமல் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிடக் காணல் நாம் அறியாததோ? நிலைபேறமைந்த உயிர் குடியிருந்த குடியிருப்பாம் உடல் நிலையே இவ்வாறாயின், ஏனையவற்றைச் சொல்ல வேண்டுமோ? இறைவன் இவ்வாறு உணர் உருவாக இருந்தால் அவன் நிலை பொருள் (சத்துப் பொருள்) ஆவானோ? ஆதலால் உணர் உரு எனின் அசத்து என்று தெளிவித்தார் ஆசிரியர். உணராது எனின் இன்மை : இன்மை யாவது இல்லாமை; அஃதாவது பாழ்; ‘சூனியம்’ என்பதும் அது. எவரானும் எவ்வகையானும் இறைவன் உணரப்பெறாதவன் என்றால், அவன் இருப்பவன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அவன் இல்லாதவன் என்றே கொள்ள நேர்ந்துவிடும் அல்லவோ! “வானப் பூ நாறிற்று என்றுழி அது சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்று இலக்கண உரையாசிரியர்கள் சுட்டுவர். எவரும் கண்டறியாத பூவை இருப்பதென எவரே கொள்ளுவார்? அதனைப் பறித்துச் சூடுதற்கோ சூட்டுதற்கோ எவரே முயல்வார்? முயற் கொம்பு உண்டு என்றாலோ, ஆமை மயிர்க் கம்பலம் உண்டு என்றாலோ ஏற்றுக்கொள்வார் எவர்? நாம் காணும் முயற்குக் கொம்பு இல்லை; ஆமைக்கும் மயிர் இல்லை; ஆதலால், எவர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத் துணிவது இல்லை. இறைவன் உண்மையை எவருமே அறிந்திலர் எனின், அவன் இல்லாதவன் ஆய்விடுவான். ஆதலால், “உணராது எனின் இன்மை” என்றார். அவன் உணரப் படாதவன் அல்லன்; அவன் உணரவும் படுவான் என்பது கருத்தாம். ‘இன்’ என்பது ஆகலின் என்பதன் தொகுத்தலாய் நின்றது. இருதிறன் அல்லது சிவசத்தாம் : இறை, முற்படக் கூறிய உணர் உருவும் அன்று; பிற்படக் கூறிய உணரா உருவும் அன்று; ஒருவகையால் அறியப்படுவதும் ஒருவகையால் அறியப்படாததும் ஆகியது. ஆதலால் சுட்டப்பெற்ற இரு வகுப்பிலும் சேர்ந்த ஒன்றன்று இறை என்பாராய் “இருதிறன் அல்லது” என்றார். பொய்ப்பொருளாயும் இல்பொருளாயும் இல்லாத மெய்ப்பொருளாம் இறையை, எப்பொருள் எனச் சொல்வது என்பார்க்குப் பெயரீடாகச் ‘சிவ சத்தாம்’ எனக் கூறினார். ‘இறை நிலை’ என்பது சிவசத்து என்பதன் பொருளாம். என மன் உலகு இரண்டு வகையின் இசைக்கும் : “என்று நிலைபெற்ற மெய்ப்பொருள் ஆய்வுடைய பெருமக்கள், ஓராற்றான் அறியப்படுவதும் ஓராற்றான் அறியப்படாததும் ஆகிய இருவகையுடையது இறை என்று கூறுவர்” என்பது இதன் பொருளாம். மன்னுதல், நிலைபெறுதல்; உலகு என்பது முதல் நூற்பாவிற் சுட்டிய புலவரைக் கருதியது. “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே/ நிகழ்ச்சி அவர்கட் டாகலானே” என்பது தொல்லாசிரியர் குறியீடு ஆகலின். இவ்விடத்துச் சில கருத்துகளைத் தெளிவாக்கிக் கொள்ளல் வேண்டும். உயிர் அழிவற்றது ஆதலால் அது நிலை (சத்து) என்று கூறப்படும். தோற்ற ஒடுக்கம் இல்லாதவனாகவும் உலகுக்குத் தோற்ற ஒடுக்கம் செய்பவனாகவும் இருக்கும் இறைவனும் ‘நிலை’ என்பது தெளிவு. உயிரையும் உயிர்க்கு உயிராம் இறையையும் ஒத்த பெயரால் நிலை (சத்து) என்று சுட்டுவது தெளிவுடையதன்று என்பாராய் இறைநிலை (சிவசத்து) என்று சொல்லாட்சி கொண்டார். உயிரில்லா உருவப்பொருள் அருவப் பொருள்களை மெய்ப் பொருளாய்வாளர்கள் அல்நிலை (அசத்து) என்று வழங்குவர். அல்நிலையும் ஆகாமல், இறைநிலையும் ஆகாமல் இருக்கும் உயிரைத் தனிக்குறியீட்டால் வழங்கித் தெளிவுறுத்த விரும்பிய மெய்ப் பொருளாய்வாளர்கள் அதனை ‘நிலையல்நிலை’ (சதசத்து) என்று வழங்கினார். உயிர் தானே அறியாதது ஆதலாலும், அறிவிக்க அறியும் அறிவுடையது ஆதலாலும், அறிவிக்க அறியாத அல்நிலையும், அறிவிக்காமலே அறியும் இறைநிலையும் ஆகாமல் நிலையல் நிலையாக (சதசத்தாக)ச் சொல்லப்படும். நிலையின் இயல்வும், அல்நிலையின் இயல்வும் உடையதனை ‘நிலையல்நிலை’ என்று சொல்வது தக்கது தானே! சத்து அசத்து சதசத்து என்பவை அந்நாளில் பெருக வழங்கியமையால் சான்றோர் அச்சொல்லாட்சிகளைப் பெருக வழங்கினர். திருமூலர், “சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு” என்றும், “சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டி” என்றும், “சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடி” என்றும் கூறுவர். (திருமந்திரம் 1420, 2058, 2328) இவ்விளக்கங்கள் மேல்வரும் நூற்பாவின் பொருள் விளக்கத்திற்கு வேண்டுவன ஆகலின் விரித்துரைக்கப் பெற்றனவாம். உலகம், உயிர், இறை எனப் பொருள் மூவகைப்படுதல் மெய்ப்பொருள் ஆய்வாளர் கண்டது. இம் மூன்றன் அறிவும் உலக அறிவு, உயிர் அறிவு, இறையறிவு (பாசஞானம், பசுஞானம், பதிஞானம்) என்பன. கல்வி கேள்விகளால் உலக அறிவும், உண்மை அறிவாம். இயற்கை அறிவால் உயிர் அறிவும், இறையருள் கூட்டலால் இறையறிவும் ஆன்மா அடையக்கூடும். ஆதலால் உலக அறிவும், உயிர் அறிவும் கடந்து, இறையறிவு பெற்றார்க்கே இறை வெளிப்பாடுறும்! அவராலேயே இறைமை உணரப்படும் என்பதாம். இந்நூற்பாவால், “இறைவன் உயிர்களால் உணரப்படும் உருவினன் அல்லன்; எவராலும் உணரப்படாது இருப்பானும் அல்லன்; ஆதலால், அவன் அல்நிலை (அசத்து)ப் பொருளும் அல்லன்; இல்லானும் அல்லன்; உயிர்களால் அறியப்பட்டும் அறியப்படாதும் இருக்கும் இறைநிலை (சிவசத்து)ப் பொருளாளனாம்” என்னும் கருத்தை ஆசிரியர் வலியுறுத்தினார் என்க. ஏழாம் நூற்பா உயிர்க்கு ஓர் இயல்வு. ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது. உயிர் எப்பொருளில் அல்லது எச் சூழலில் தோய்ந்தும் படித்தும் நிற்கிறதோ அதற்குத் தகத் தன்னை அமைத்துக் கொண்டிருத்தல் பொது விதியாம். அருவிச் சூழலை அடுத்துச் செல்வார் அகங்குளிர்ந்து அக் காட்சியில் தோய்தலும், அனற் கொதிப்பினை அடுத்து இருப்பார் அவ் வெப்புக்கு ஆட்பட்டு வெதும்புதலும் அறியாதவை அல்லவே! மலர்க்காவில் இருப்பார் மகிழ்வும் மழலையர் மையத்தில் எய்தும் திளைப்பும் மற்றை மற்றை இடங்களில் எய்துவது உண்டோ? சார்ந்ததன் வண்ணமாதல் என்பதன்றோ இதன் அடிப்படை? அறிவு நிலையில் வளர்ச்சியில்லாச் சிற்றறிவுயிரிகளும் தங்கள் உயிர்ப் பாதுகாவல் பொருட்டுச் சார்ந்த இடத்தின் வண்ணத்தைத் தமக்கெனக் கொண்டிருத்தல் கண்கூடாகக் காண்பார், அதன் உண்மை அறிவர். பளிங்குபோல விளக்குவது எது, சார்ந்ததன்வண்ணமாதலை? சார்ந்ததன் வண்ணமாதல் உயிர்க்கு உண்மையை அறிவார். உயிர் உலகறிவிலே தோய்ந்து கிடக்கும்போது அதே அறிவும் பொருளாகவும், இறையறிவிலே தோய்ந்து கிடக்கும்போது அதே இறையறிவுப் பொருளாகவும் ஆகின்றது என்பதைத் தெளிவர். இத் தெளிவு இந்நூற்பாவின் விளக்கத்திற்குத் துணையாய் அமையும். யாவையும் சூனியம் சத்தெதிர் (சத்து எதிர் யாவையும் சூனியம்) : சத்தாகிய இறையின் முன்னே எல்லாப் பொருள்களும் இல்லாப் பொருள்களேயாம் என்பது இத்தொடரின் பொருள். படைப்பாளி ஒருவனுக்குத் தான் படைத்த படைப்புப் பொருளின் உண்மைநிலை தெரியாமல் போகாதே! அவன்முன் பொய்ப்பொருள் மெய் பொருளாகவோ, போலிப்பொருள் உண்மைப் பொருளாகவோ தோன்ற முடியாதே! தேர்ந்த வழக்காடிமுன் பொய்மைத் திரை கிழிபடல் காண்பார், இறைமுன் பொய்மை நிலைபெறும் என்பாரோ? சிற்பி ஒருவன் ஒரு கல்லில் நாயுருவை வடிக்கின்றான். வடித்த அவனுக்குத் தான் வடித்த நாயுரு ‘கல்’ என்பது தெரியாதோ? மற்றையோர்க்கு நாயாகத் தோன்றக்கூடும். வடித்த சிற்பிக்கோ கல்லென்பது திட்டமாகத் தெரிந்த பொருளேயாம். மற்றையோர் அதனை நாயாகக் கருதினாலும், அவன் கல்லாகவே காணுகின்றான். இதனையே, “நாயைக்கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்னும் பழமொழி சுட்டுகின்றது. இதனை அறியாராய் ‘நாய்க்கடிக்கும் கல்லடிக்கும்’ இப்பழமொழியை வழங்கி வருகின்றனர். இனிர் திருமூலர், மரத்தில் செதுக்கப்பட்ட யானையைச் சுட்டி இதே கருத்தை வலியுறுத்துகின்றார், மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே. என்பது அது (திருமந். 2290). யானையாகக் காணும்போது மரம் என்பது தெரியவில்லை. மரமாகக் காணும்போது யானை என்பது தெரியவில்லை. பூதங்களாகக் காணும்போது இறைமை தெரியவில்லை; இறைமையாகக் காணும்போது பூதங்கள் தெரியவில்லை என்பது இதன் பொருளாம். இக்காட்சி உயிர்களின் காட்சியாம். ஆனால், இறையின் முன் சார்ந்ததன் வண்ணமாதல் இல்லையே! மெய்ப்பொருளின் முன் பொய்ப்பொருள் மெய்ப்பொருளாகத் தோற்றங் காட்டமுடியுமோ? ஆகலின், சத்தெதிர் யாவையும் சூனியம் என்றார். சூனியும் இவண் இன்மையைக் குறிக்காமல் நிலை பேறின்மையைக் குறித்ததாம். ஆகலின், சத்தே அறியாது : ஆதலால் இறை பொய்ப்பொருளை மெய்ப்பொருளாக மயங்கக் கொள்ளாது என்பது பொருள். சொல்லிய இதனால் ஆன்மா மயங்கக் கொள்ளும் என்பதையும் வெளிப்படுத்தினார். இனி, உலகியற் பொருள்கள் தாம் இறையை அறியுமோ என்று வினவுவார் உளராயின், அவர்க்கு விடையாக ‘அசத்து இலது அறியாது’ என்றார். அசத்து இலது; (ஆகலின்) அறியாது : அசத்து எனப்படும் உலகியற் பொருள்கள் நிலையில்லாதவை மட்டுமன்றி, உயிரில்லாதவையுமாம். உயிருடையவைக்கன்றோ அறிவு நலப்பேறுண்டு. அறிவு நலப்பேறுக்கு இடமாகிய உயிர் தாமும் இல்லாத பொருள்கள், இறையை அறியுமோ என்று வினவ வேண்டுவதே இல்லை. அவை அறியமாட்டா என்பது தெளிவு. இரண்டலா ஆன்மா : உலகியற் பொருள்கள் என்றும், இறையென்றும் சுட்டப்பெற்ற இரண்டும் அல்லாதது ஆன்மாவாம். உலகியற் பொருள்களுள் ஆன்மா ஒன்று என்றால், அதற்கு உயிரில்லை. உயிரில்லை ஆகவே அறிவும் இல்லையாம். ஆன்மா இறையாம் என்னின், அறிவிக்க அறியும் சிறுமையுடையதில்லையாம். அது தானே அறியும் பெருமையுடையதாம். ஆதலால் இவ்விரண்டும் அல்லாதது ஆன்மா என்றார். இருதிறன் அறிவுளது : ஆன்மாவின் அறிவுநிலை இன்னதென விளக்குவாராய் ‘இரு திறன் அறிவுளது’ என்றார் ஆசிரியர். இருதிறன் அறிவு என்பன உலகியல் அறிவும், இறையறிவுமாம். உலகியலில் அழுந்தி நிற்குங்கால் உலகியல் அறிவும், திருவருள் கூட்டுங்கால் இறையறிவும் ஆன்மா எய்துதல் உண்மையால், ‘இருதிறன் அறிவுளது’ என்றார். உயிர், உலகையும் அறியும்; இறையையும் அறியும் என்றும், உயிர் உலகாலும் அறிவுறும், இறையாலும் அறிவுறும் என்றும் கொள்ளக் கிடக்கின்றது. ‘இருதிறன் அறிவுளது’ என்னும் இத்தொடரமைதி. இன்பத்தை இரண்டாக வகுத்தனர். அவை, இம்மை இன்பம் மறுமை இன்பம் என்றும், சிற்றின்பம் பேரின்பம் என்றும் குறிக்கப்படுவன. இவ்விருவகை இன்பமும் துய்த்தற்கு ஆன்மாவினநிலை இடனாக உள்ளது. உலகியலில் தோய்ந்து நின்று இம்மையின்பம் எய்துதற்கும், இறையருளில் தலைப்பட்டுத் துறக்க இன்பம் அல்லது மறுமை இன்பம் எய்துதற்கும் ஆன்மாவால் கூடும் என்றும் முதல்நிலை குடும்ப இன்ப அளவே அளவாய் அமைதலும் நிறைநிலை உயிரெலாம் தளிர்ப்புற இன்ப அன்புறும் அளவுக்குப் படியேறுதலும் கூடும் என்றும் அறிய வலியுறுத்தினார் ஆசிரியர் தொல்காப்பியர். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என அவர் கூறுவார் (தொல். கற்பு. 51) இதில், தூயவாழ்வு நெறியின் முற்பகுதி, இம்மையின்பத் துய்ப்பும், பிற்பகுதி மறுமையின்பங்கருதிய கடைப்பிடியுமாதல் உணர்வார் ஆன்மாவின் இருதிறன் அறிவு நலங்களையும் அறிந்து மகிழ்வார். அசத்தை அறிவதும் சத்தால் அறிவிக்கப்பெறுவதும் ஆகிய ஆன்மா, ‘சதசத்து’ என்று சொல்லப்படும். சத்தும் அசத்தும் இணைதலால் பெற்றது அப்பெயர். அது தமிழில் ‘நிலை அல் நிலை’ என ஆறாம் நூற்பாவில் ஆளப்பெற்றது அறிக. நிலையாகிய சத்தும், அல்நிலையாகிய அசத்தும் இணைதலால் ‘நிலை அல் நிலை’ எனல் முறையாம். நூற்பா : யாவையும் சூனியம் சத்தெதிர் ஆகலின் சத்தே அறியா(து) அசத்தில் தறியா(து) இருதிறன் அறிவுள(து) இண்டலா ஆன்மா இறைவன் முன் உலகப் பொருள்கள் எல்லாமும் பொய்ப் பொருள்களேயாம். ஆதலால் இறை, அவற்றை மெய்யெனக் கொள்ளாது. அப்பொருள்களோ அறிவில்லாதவை; ஆதலால் அவை இறையையும் அறியமாட்டா. உலகியலில் தோய்ந்து உலகையும், இறையருளில் தோய்ந்து இறைமையையும் அறியும் தகவு ஆன்மாவுக்கே உண்டு என்பது இதன் பொருளாம். ஆன்மா அழிபொருள் அன்று; ஆயினும் அழிபொருளொடு கூடி அதனை அறியும். ஆன்மா இறையும் அன்று; ஆயினும் இறையருள் கூட்ட இறையறிவும் எய்தும். இத்தகும் அரிய ஆன்மநிலை வரப்பெற்றும் அதன் பயன் கொள்ளார் நிலை என்னே என்னும் ஆசிரியர் பேரிரக்கமே இப்‘போத’மாய் முகிழ்த்ததாம் என்க. எட்டாம் நூற்பா ஆன்மா உலகியல் அறிவு பெறுதலையும் இறையறிவு எய்துதலையும் முன் நூற்பாவிலே ஆசிரியர் சுட்டினார். இறையறிவை எவ்வாறு எய்தும் என்பார்க்கு விளக்கு முகத்தான் இந்நூற்பாவை அருளினாராம். அனுமன் தன் வலிமை இன்னதென அறியாதிருந்தான்; “நீ நினைத்தால் விண்ணில் தாவவும் திங்களைப் பற்றவும் வலிமை யுடையை” என்று கூறக் கேட்ட அளவில், மேலே தாவினான் என்பது ஒரு கதை. அருச்சுனன் போர்க்களத்தில் அயர்ந்தான்; வில்லைக் கீழே போட்டுப் போரொழிந்தான். மெய்ப்பொருள் உரைத்து மேற்கொள்ள வேண்டிய கடமையைக் கண்ணன் ஓதினான்; அருச்சுனன் வீறுபெற்றுக் கடனாற்றினான் என்பது கீதைச் செய்தி. “அரசன் அமைச்சன் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான்; அரசி மயிற்பொறியேறித் தப்பி இடுகாட்டில் ஒரு மகனைப் பெற்றாள்; அம்மகனை ஒருவன் எடுத்து வளர்த்துவருவான் ஆயினான்” என்று ஆசிரியர் அச்சணந்தி கூற “அவன் யாவன்?” என்று சீவகன் வினாவ, “”நீயே அவன்” என்று ஆசிரியர் உரைக்கச் சீவகன் வீறுகொண்டு வெற்றிகொண்ட செய்தி சிந்தாமணிக்கண்ணது. இத்தகு செய்தி ஒன்றைச் சுட்டிக்காட்டித் ‘திருவருள் குருவரு’ளாக வருதலைச் சுட்டுகிறார் ஆசிரியர். குருந்தமர நீழலில் இறைவன் அருளாற்றலால் குருவினைக்கண்டு, கோயிற்பணியிலேயே ஊன்றி என்பெலாம் உருக்கவல்ல இன்ப அன்புத் திருப்பாடல் பொழிந்த மாணிக்கவாசகர் வரலாற்றுச் செய்தி இந்நூற்பாவின் பொருளாக அமைந்துள்ளதாம். ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்(டு) அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே. இதனைத் “தம்முதல் குருவுமாய், தவத்தினில் உணர்த்த, ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனவிட்டு, அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே” என இணைத்துப் பொருள்காணல் வேண்டுவதாம். தம்முதல் குருவுமாய் : உயிர்கள், தமக்கு முதல்வனாகத் திகழும் இறைவனே, குருவுமாய் வந்தருளவும் பெறும் என்பது இதன் பொருள். ஆசிரியன் தன்னிடம் பயிலவரும் மாணவன் நிலைக்கு ஏற்ப இறங்கிவந்து கற்பிப்பது போலவும், தாய் தன் குழந்தையின் தளர்நடைக்கு ஏற்பத் தானும் தளர்நடையிட்டு அணைத்துச் செல்லுதல் போலவும், இறைவன் உயிர்களின் பக்குவநிலைக்கு ஏற்பக் குருவனாக வந்தும் திருவருள் நோக்காலும் திருவருள் வாக்காலும் பாலிப்பான் என்பதாம். தவத்தினில் உணர்த்த : எல்லா உயிர்களுக்கும் குருவனாக வந்து இறைவன் உணர்த்துவனோ என வினாவுவார்க்கு மறுமொழியாகத் ‘தவத்தினில் உணர்த்த’ என்றார். பக்குவநிலையுற்ற ஆன்மாவுக்கே உணர்த்துதற்குக் குருவாக வருவன் இறைவன் என்றாராம். உலகியல் அறிவுச் செய்தியையே பக்குவம் அறியார்க்குச் சொல்லுதல் இல்லையாகக் காண்கிறோம் அல்லவோ! எல்லாச் செய்திகளையும் எல்லாரிடத்தும் சொல்லுகின்றோமோ? பொதுமக்கள் செய்தியும் புலமக்கள் செய்தியும் ஒன்றாக இருப்பது இல்லையே! கீழ்நிலை அரிவரிக் கல்விக்கும் மேலைநிலை ஆய்வுக் கல்விக்கும் எத்துணை இடைவெளி? அவையறிதல் என்பது கேட்பார் நிலையறிந்து பேசுதல் அன்றோ! அவ்வாறாக இறைவன் குருவனாக வந்து அருளுதல் தவமுடையார்க்கு வாய்க்கும் என்றார். ‘தவமும் தவமுடையார்க்கே ஆம்’ என்றார் திருவள்ளுவர். தவத்தோர்க்கே இறைவன் குருவனாக வரப்பெறும் பேறு வாய்க்கும் என்றார் மெய்கண்டார். தவப்பேறு உடைமையாலேதான் உணர்த்தவருவான் இறைவன் என்பதாம்! இனித் தவப்பேறுதான் என்ன என்பார்க்கு, “உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்குரு” என்பது தமிழநெறி. தன்துயர் பொறுத்தலும் பிறவுயிர்க்குத் துயர் செய்யாமையுமே உருவாக உடையது தவம் எனின், அத்தவம் உடையானே செந்தண்மை அந்தணன் அல்லனோ! அவனே தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’ அல்லனோ! அவனுக்கு இறைவன். ‘புறம்புறம் திரியும் செல்வனாக’ இருக்கும்போது குருவனாக அருள் பாலித்தல் அரிதன்றே! கரட்டு நிலத்தே எவரே விதைப்பார்? காதுகொடுத்துக் கேளானுக்கு எவரே உரைப்பார்? இறைவன் குருவனாய் என்ன உணர்த்துவன்? ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென (உணர்த்த) : வேந்தன் மகன் ஒருவன் வேடரிடையே வளர்ந்து, தன்னை வேந்தன் மகன் என்பதைச் சிறிதும் உணரானாய் அவ்வேடன் உண்பன உண்டு, உடுப்பன உடுத்து, செய்வன செய்து, வளருமாறு வளர்வது போல, நீயும் ஐம்புலங்களாகிய வேடர்களிடேயே உன்னை மறந்து வளர்கின்றாய்; வேந்தன் மகன் தன்னை வேந்தன் மகன் என்பதை உணராது மயங்கிக் கிடப்பது போல, நீயும் ஐம்புல வேட்டைக் காட்டில் வேட்யைாடி அதிலேயே தோய்ந்து உன் அரிதில் அரிதாம் மானிடப் பிறப்பை மறந்தாய்; நீ செயற்கருஞ் செயல் செய்தற்கு உரிமையாளன்; உன்னை அறி; உடனை உடையானை அறி; உண்மை அறி என்று அறிவுறுத்திய காலை அவன் அறிவறிந்து மெய்யுணர்வு பெறுவன் என்பதாம். ஆதன், தன்னை அறியா நிலையில் புலங்களின் குறும்புகட்கு ஆட்பட்டு, “புலக்குறும்புகளுக்கு ஆட்பட்டுளேன்” என்னும் எண்ணம் தானும் இல்லாமல் மயங்கிக் கிடத்தலை அறிந்தே ‘அயர்ந்தனை’ என்றும், அந் நிலையிலேயே தடிப்பேறி மேலும் மேலும் தோய்ந்து நிற்றலால் ‘வளர்ந்து’ என்றும் ஆசிரியர் உரைத்தார். “அடிமையுள் அடிமை, தான் அடிமை என்பதும் உணராத அடிமை” அல்லவோ! அவ்வடிமையே பெருமை என நினைவது அதனினும் வடிகட்டிய அடிமைநிலை அல்லவோ! ‘உணர்ச்சி வாயில் உணர்வோர் வலிததே’ என்னும் தொல்லாசிரியர் நல்லுரை போற்றத்தக்கதாம். ஆதன், பக்குவ நிலையறிந்து நற்குருவன் அவனை நண்ணி அவனுக்கு அருளுரைக்கப் பெறுவன் என்பதாம். அருளுரை பெற்ற பக்குவன் என செய்வன் என்பார்க்கு மேலே விளக்குவார். விட்டு, அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே : விட்டு என்பது நீங்கி, விலகி என்னும் பொருள் தருவது ஆயினும், ‘உணர்த்தவிட்டு’ என்று முற்சொல்லோடு இணைந்தும், ‘விட்டு அன்னியம் இன்மையின்’ என வருஞ்சொற்களோடும் இணைந்தும் பொருள் தருகின்றதாம். விட்டு அன்னியம் இன்மையாவது விடுத்து அயலாய் நில்லாமை. உயிரின் தன்மை அயலாய் நில்லமை அல்லது தனித்து நில்லாமையாம். உயிர் உலகைச் சார்ந்து நிற்கும்; அச்சார்பு விட்டால் இறையைச் சார்ந்து நிற்கும். இரண்டுள் ஒன்றைச் சாராமல் இருத்தல் அதற்கு இயல்வு இல்லையாம். இலையோ காயோ கனியோ மரஞ்செடி கொடிகளோடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் பற்றுவிட்டால் ஆங்கிருந்து வீழ்ந்து நிலத்தைச் சேர்கின்றன. கயிற்றிலோ தொடரிலோ (சங்கிலியிலோ) பிணைப்புற்று ஆடிக்கொண்டிருக்கும் ஊசல், கயிறோ தொடரோ அறுந்தால் நிலத்தையே சேர்கின்றது. இவற்றைப்போல் உயிரும் உலகச் சார்பை விடுத்தால் இறைச்சார்பை எய்திநிற்கும். இதனை, ஒன்றி உடனாதல் என்பர். ஆளுடைய பிள்ளையார் இறைபடி எய்தியமை சுட்டும் சேக்கிழார். “போதநிலை முடிந்தவழிப் புக்கு ஒன்றி உடனானார்” என்று கூறினார். ஒன்றி உடனாதல் என்பதே. வடமொழியும் தமிழும் கூடிய இரு பிறப்பியாய். ‘விட்டு அன்னியமின்மை’ எனப்பட்டது. இதனை ‘அநந்நியமாதல்’ என வடமொழியால் குறிப்பர். முந்தை ஏழு நூற்பாக்களிலும் இறையை ஒடுங்கி, சிவசத்து, சத்து என்று கூறிய அளவின் அமைந்த ஆசிரியர், இந் நூற்பாவில் ‘முதல்’ என்றும், ‘அரன்’ என்றும் சுட்டுகிறார். ஒன்றி உடனாந்தன்மையால் உயிர். அரன் கழலில் ஒன்றும் என்றார். ‘அரன்’ என்பதும் ‘சிவன்’ என்பதும் ‘சேய்’ சேயோன் என்பனவும் ஒரு பொருள் தரும் சொற்களே. இச்சொற்கள் சிவப்பு என்னும் அடியில் பிறந்தனவே. சிவன், சேய், சேயோன் என்பவை சிவப்பின் அடியில் பிறந்தவை எனலாம்; ஆனால், அரன் என்பதுவும் சிவப்பின் அடியாகப் பிறந்ததுவோ எனின் ‘ஆம்’ என்பதே மறுமொழியாம். ‘அர்’ என்பது சிவப்புப் பொருள்தரும் ஒரு வேர். அர்+அன் = அரன் என்பதும் சிவப்பன். சிவன் என்னும் பொருள் தருவதே. அரக்கு, அரத்தம், அரணம், அருணன், அரி முதலிய சொற்களெல்லாம் செம்மைப் பொருள் தரும் ‘அர்’ என்னும் வேர் வழிச் சொற்களே. அரக்காம்பல், அரத்தப்பட்டு, அரத்தம் முதலிய சொற்பொருளை அறிவார் அரன் என்பது சிவன் என்பதன் மற்றொரு வடிவச் சொல் என்பதை அறிவர். சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாய், செங்கதிர் வழிபாடாய் நிற்பதுவும் அறிவர். வேர்ச்சொல் பொருள் ஆயத் தலைப்பட்டார் ‘ஹரன்’ என்பதே அரனாயிற்று என ஏமாற்றமுறார். முழுமுதல் இறைவனை ஒரு தொழிற்படுத்த ஒவ்வார். ‘அர்’ என்னும் வேர்வழிச் சொற்கள் மிகப் பலவாதலின் இந்நூற் பொருளமைதிக் கேற்ப இவ்வளவில் அமைவாம். இந் நூற்பாவில், “உயிரோடு உயிராய் இருக்கும் இறைவன் உயிர் செய்த தவப்பேற்றின் முருகுதலால் குருவுமாகி வந்து, “ஐம்புலன்களாகிய வேடருக்குள் நின்னை மறந்து வளர்ந்தாய்; நின் பெருமையை அறிக” என்று அறிவிக்க, அவ்வேடர்களை விடுத்துப் பண்டே ஒன்றியுடனாந் தன்மையால் முதல்வன் திருவடியை உயிர் அடையும் என்னும் கருத்துகளை ஆசிரியர் அறிய வைத்தார். ஒன்பதாம் நூற்பா உயிரை உய்ப்பதற்காக இறைவன் குருவாக வந்து அருள் தலையும், உயிர் இறைவன் திருவடி நிழலை அடைதலையும் சுட்டிய ஆசிரியர் இவ்வொன்பதாம் நூற்பாவில் உயிர் இறைவன் திருவடியை அடைதற்குரிய வழிமுறைகளைச் சொல்கின்றார். அறிவு மூவகைப்பட்டு நிற்றலை முன்னரே கண்டோம். அவை உலக அறிவு, உயிர் அறிவு, இறை அறிவு (பாசஞானம், பசுஞானம் சிவஞானம்) என்பன. இவற்றுள் உலக அறிவு, செயற்கை அறிவென்றும், உயிர் அறிவு, இயற்கை அறிவென்றும் குறிக்கவும் பெறும். உலக அறிவாம் செயற்கை அறிவு, கல்வி கேள்விகளால் உண்டாவது. உயிரறிவாம் இயற்கை அறிவு, உடற்கூறு, வழிமுறை, சூழ்நிலை ஆயவற்றால் அமைவது. இவ்விரு வகை அறிவுக்கும் மேம்பட்டது இறையறிவு. முன்னை இருவகை அறிவாலும் இறைவனை உணரமுடியாது. இறையறிவாலேயே இறைவனை உணரமுடியும். திருவருள் கூட்ட இறையறிவு வாய்க்கப்பெற்றார்க்கே அகநோக்கு நோக்குதலும், மல நீக்கம் ஆகுதலும் வாய்க்கும். இறையறிவு வாய்க்கப்பெற்றாரும் அவ்வறிவை நிலைபெறுத்திக் கொள்வதற்காக இறைவனின் திருவைந்தெழுத்தை இடையறாது ஓதுதல் வேண்டும் என்றும் ஆசிரியர் அருள்கின்றார். ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினில் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழ லாம்பதிவிதி எண்ணுமஞ் செழுத்தே. என்பது நூற்பா. இதனை, “ஊனக்கண் உணரா பதியை; பாசம் உணரா பதியை; ஞானக் கண்ணினில் சிந்தை நாடுக; உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி; எண்ணும் அஞ்செழுத்தே விதி” எனப் பகுத்துப் பொருள் காண்டல் வேண்டுமாம். ஊனக் கண் உணரா பதியை : (பதியை ஊனக் கண் உணரா) ஊனம் = உடல்; குறையுடையது; கண் = அறிவு; குறையுடைய உடலொடு பொருந்திய கண்ணால் அறியும் அறிவு இறையை அறியமாட்டா கண் என்பது கண்ணாற் பெறும் அறிவைக் குறித்த தாயினும், ஏனைப் பொறிகள் வழியாகவும் பெறும் அறிவுகளுக்கும் பொதுவாக நின்றதாம். பதியை அல்லது இறையை உயிரறிவாம் இயற்கை அறிவால் பெற இயலாது என விலக்கினார். மூவகை அறிவுகளுள் உயிரறிவு இறையை அறிவிக்கமாட்டாது எனத் தீர்த்தார். முகத்துக் கண்ணால் காணாவொண்ணாததை அகத்துக் கண்ணால் கண்டு களிக்க என்பார் திருமூலர் : “முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே” என்றார் அவர் (2944). இனி, உலக அறிவால் பதியைக் காணமுடியுமோ என்பார்க்கு அதனாலும் இயலாது என்றார். பாசம் உணரா பதியை : பாசமாவது உலகு. உலக அறிவாலும் இறைவனை உணர முடியாது. பாச அறிவாவது உலகு பற்றிய கல்வி. கேள்வி ஆய்வுகளாம். உயிரறிவால் காணப்பட்ட நூல்களும், பின்னே பாச அறிவாய் அமையும். உயிரறிவாலேயே காணவொண்ணாப்பதி உலக அறிவால் காணக் கூடுவன் என்பது அறவே இயலாததாம். ஆகலின் ‘பதியைப் பாசம் உணரா’ என்றார். உலக அறிவு, உயிரறிவுக் கூறுகள் பலவாகலின் ‘உணரா’ எனப் பன்மையிற் கூறினார். ‘கற்பனவும் இனி அமையும்’ என்றார் தாயுமானவர். “நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்” என்பது திருக்குறள். நூலறிவை, உண்மை அறிவே விஞ்சும் என்றால், உண்மை அறிவாலேயே உணரமாட்டாப் பதியை நூலறிவு உணர்த்தாது அன்றே! இனி, இவ்விரு வகை அறிவாலும் அடைய முடியா இறையை அடையும் வழிதான் யாதோ என்பார்க்கு மேலே வழி கூறுகிறார். ஞானக் கண்ணினில் சிந்தை நாடி : நாடி என்பது நாடுக என்னும் பொருட்டது. ஞானக் கண்ணாவது அகக்கண்; அருட்கண்; “அருளின் வழிவந்த அகக்கண்ணால் அகத்துள்ளே ஆய்க” என்றார். உயிரறிவாலும் உலக அறிவாலும் காண முடியாத இறையை, அகக்கண் கொண்டு காண்க என்று ஆசிரியர் அறிவுறுத்தினார். ஞானக் கண்ணாம் அகக்கண் ஆய்வு தலைப்பட்டபின் கண்ட காட்சியைப் பட்டினத்தார் பகர்வார் : “தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின் மாயப் படலம் கீறித் தூய ஞான நாட்டம் பெற்றபின் யானும் நின்பெருந் தன்மையும் கண்டேன்; காண்டலும் என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன்; நின்னிலை யனைத்தையும் கண்டேன்; என்னே! நின்னைக் காணா மாந்தர் தம்மையுங் காணாத் தன்னை யோரே” என்று விளக்கினார். அகக்கண் கொண்டு ஆய்ந்த காலை நேர்வது என்ன என்பதை அடுத்துச் சுட்டுகிறார் ஆசிரியர். உராத் துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவ : அகத்தைக் கண்கொண்டு ஆயும்போது பாசம் நீங்கும் என்பதை உவமையால் விளக்குகிறார் ஆசிரியர். ‘உரா’ என்பது ஊரா என்பதன் முதற் குறுக்கம். ‘துனை’ என்பது விரைவு என்னும் பொருள்தரும் உரிச்சொல். ‘தேர்’ என்றது பேய்த்தேர் அல்லது கானல் நீர்; ஊர்தற்கு உதவாது விரைந்து செல்லும் கானல் தேர். ‘உராத்துனைத் தேர்’ எனப் பெற்றது. என்றது கானல் நீரை; கானல் நீர் எப்படி நெருங்கிய விடத்து இல்லையாய் அகல்கின்றதோ அவ்வாறு அகக் கண்கொண்டு நோக்குவார்க்கு மலநீக்கம் தானே நிகழுமாம் என்க. ஒருவுதல்-நீங்குதல். பாயா வேங்கை என்பது வேங்கை மரத்தையும், ஓடாக்குதிரை என்பது குதிரை மலையையும் குறித்தாற்போல ‘ஊராத் தேர்’ என்பது பேய்த் தேரைக் குறித்ததது இதனை வெளிப்படை என இலக்கண நூலார் சுட்டுவர். கானல் நீரை இவ்வாறு சுட்டுதல் பண்டு தொட்டே பயிலும் வழக்கு என்பதை “உருவில் பேஎய் ஊராத் தேர்” எனவரும் அகப்பாடலால் (67) அறியலாம். பாசம் ஒருவிய பின்னை நிகழ்வு என்ன என்பார்க்குத் ‘தண்ணிழலாம் பதி’ என்றார். தண்ணிழலாம் பதி : மலம் ஒருவிய பின்னே பதி தண்ணிய நிழலை அருளும் என்றார். இறைவன் திருவடி, ‘நிழல்’ எனப்பட்டதேன் எனின், பிறவியாம் வெம்மை நீக்கி, ஒன்றி உடனாகும் தன்மை அருளுதலால் தண்ணிழல் என்றார். வேந்தன் முடிமேல் அமைந்த குடைசெய்யாத நிழலை, இறைவன் அடிசெய்யும் என்பாராய்த் தண்ணிழலாம் பதி என்றார். முன்னை நூற்பாவில் ‘அரன் கழல்’ என்றமையால் நிழல் செய்வது அடி என்பதைப் பெறவைத்தார். அடியே தண்ணிழல் அருளும் எனின், திருவருள் நோக்கு முதலியவை தண்ணிழல் அருளலைச் சொல்ல வேண்டுவதில்லையாய்ப் பெறப்படும். கொதிப்புறும் கொடுமைகளைப் பல்கால் பல்வகையில் வேந்தனால் செய்யப்பெற்றும், இறைவன் இணையடி தமக்குத் தண்ணிழல் அருள்தலைத் துய்த்த நாவுக்கரசர் “மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், மூசு வண்டு அறை பொய்கையும் போலிருத்தலை” அருளிச்செய்தார். அகக்கண் நாடுமேனும், பாசம் ஒருவுமேனும், தண்ணிழ லாம் பதி அருளுமேனும் ஆன்மாவின் கடப்பாடு என்ன என்பதைக் கூறுவாராய் ‘விதி எண்ணுமஞ் செழுத்தே’ என்றார். விதி எண்ணும் அஞ்சு எழுத்தே : வாராது வந்து வாய்த்த திருவருளை, வாளா ஒழித்துவிடல் கூடாது என்பாராய் அதனைச் சிக்கெனப் பற்றிக்கொள்ள வழியுரைக்கும் ஆசிரியர் ‘எண்ணும் அஞ்செழுத்தே விதி’ என்றார். பிடித்தால் போதாது; சிக்கெனப் பிடித்தல் வேண்டும்; ‘வல்லுடும்பெனப் பிடித்தல்’ வேண்டும் என்பர் அல்லவோ; அவற்றைப்போல் அஞ்செழுத்தை எண்ணினால் போதாது; ஆணையாகக் கொண்டு ஓதி ஓதித் திளைக்க வேண்டும். “நான் மறக்கினும் சொல்லுநா நமசிவாயவே” “வழுக்கி வீழினும் சொல்லுநா நமசிவாயவே” என்பனபோல் சொல்லவேண்டும் என்றார். அழுத்தமில்லாத பற்று அடிக்கடி சறுக்கும்; சறுக்கல் முதிர்ந்து மறந்தும் துறந்தும் போம். பாசிபடிந்த நீரில் கைவைத்த அளவில் பாசி விலகுமாப்போல் பற்றும் விலகும். கையை எடுத்த அளவில் பாசி முன்னைப்போல் கூடிவிடும். அழுத்தமில்லாத பற்றுமையால் மலமும் அப்படியே விலகும்; மீண்டும் சேரும். மலநீக்கம் முற்றாக வேண்டு மானால், ‘விதி எண்ணும் அஞ்சு எழுத்தே’ என்றார். நமசிவாய என்பது ஐந்தெழுத்தோ? ‘சிவயாநம’ என்பது ஐந்தெழுத்தோ? ‘நமசிவாய’ என்பது பெயர். ‘நந்திநாமம் நமசிவாயவே’ என்றார் ஆளுடையபிள்ளையார். ‘நமச்சிவாய வாழ்க’ என்றார் ஆளுடைய அடிகள். பெயர் மந்திரமாவதில்லை. எழுத்தே மந்திரமாம் என்பாராய் எண்ணுமஞ் செழுத்தே என்றார். ‘சிவயாநம’ என்பதே ஐந்தெழுத்து மந்திரமாம். “அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம் அஞ்செழுத் தாகிய அக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே” என்பது திருமந்திரம் (934). பத்தாம் நூற்பா மலத்தாலும் மாயையாலும் கட்டுண்ட உயிர்க்குத் தன்முனைப்பு மிக எழும். அத் தன்முனைப்பு ‘நான் எனது’ என்னும் செருக்காகக் கிளரும். நான் என்னும் செருக்குள்ள இடத்திலே பிறரொருவர் ஒட்டுதற்குக் கூடுமோ? பிறரொடு ஒட்டி ஒழுகுதற்கு அச்செருக்குத் தானும் இடந்தருமோ? நான் என்னும் செருக்கை, இருக்கையாக்கி அமர்ந்தான் ஒருவன். தானே அவ்விடத்தன்றி பிறரொருவர்க்கு இருக்க இடந் தாரான். ஆனால் தன் முனைப்பாம் நான் ஒழித்தவனோ, தன் உள்ளமாம் இருக்கையில் உலகெல்லாம் இருக்க இடந்தருவான். உலகத்தை ஆங்கு இருத்தி உழுவலன்புடைய ஊழியனாகப் பணிபுரிந்தும் உவப்புறுவான். இனி ‘எனது’ என்பதோ பற்றுமை, இவறன்மை, கருமித்தனம் என்பவற்றின் கூட்டுறவால் அமைவதாம். எல்லாம் தனக்கே தனக்கே என்னும் தன்னலப் பேய்வெறியால் அரவணைக்கப்பெற்றுப் பிறவிப்பயனும் எய்தானாய்ப் பிறர்நலமும் பேணானாய் வறிதே ஒழிகின்றான். இவ்வாறு நான் என்றும் எனது என்றும் கொள்ளும் செருக்கை ஒழிக்காத நிலையில் நற்பேறு எய்தல் அரிது என்றும், அவற்றை ஒழித்தார் தெய்வநிலையுறுவர் என்றும் திருவள்ளுவர் தெளிவிப்பார். “யான்என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்” என்பது அவர் வாக்கு. யான் என்னும் செருக்குறையும் இடத்து இறைமை இறைப்பொழுதேனும் (நொடிப்பொழுதேனும்) இருத்தற்கு இடமுண்டோ? ஊனைத் திருக்கோயிலாக்கி, உணர்வை வழிபாடாக்கி, தொண்டை வணக்கமாக்கிக் கொண்டார்க்கே இறையருள் ஒன்றி உடனாகி நிற்கும் பேறு வாய்க்கும்? அந்நிலையை உயிர் எய்துதலை இயம்பி வழிகாட்ட எண்ணும் மெய்கண்டார், இப்பத்தாம் நூற்பாவில் அந்நெறிமுறைகளை முறைபெற ஓதுகின்றார் : “அவனே தானே ஆகிய அந்நெறி ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை இன்றே” என்பது நூற்பா. அவனே தானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி நிற்பார்க்கு, மலமாயைகளொடு வல்வினையும் இல்லையாம் என்பது. இதன் சுருக்கக் குறிப்பாம். அவனேதானே ஆகிய அந்நெறி அவனாவான் இறைவன்; தானாவான் ஆன்மா. திருவருளால் மெய்ப்பொருள் அறிவு தலைப்பட்டு, உள்ளகம் நோக்கி ஆய்ந்து படிநிலையேனும் உயிர் தன் செயற்கும் பணிநலப் பேற்றுக்கும் மூலமும் முதலுமாகி, தம்முதல் குருவுமாகி, தவந்தலைக்கூட்டித் தன்னொடும் ஒன்றுவிக்கும் இறைவனே முழுமுதற் காரணன் என்பதை அறிந்து கொள்வன. அதனால் அவ்விறைவன் திருவருளே, தன்னை இயக்கும் தகவினை உருகி உருகி நினைந்து தன்னை மறந்து எல்லாம் அவனே, அவன் அருளே; அவன் செயலே; அவனன்றித் தான் என்றோ தனது என்றோ ஒன்றும் இல்லை என்னும் மேலீட்டைப் பற்றிக் கொள்வான். அந்நிலையில் அவனே தானே ஆகிய இறைநெறியில் ஒன்றிப் போவான். ஒன்றிய அவன், மேல் என் செய்வனோ எனில், ஏகனாகி இறைபணி நிற்பனாம். அவன் என்றும் தான் என்றும் எண்ணப்பட்ட இருமைநீங்கி அவனே தான் என்னும் ஒருமைநிலை உறுவன். அதுகால் தன் சிந்தை. தன் சொல், தன் செயல் எல்லாமும் இறைபணி என்றே கடைப்பிடிப்பான். இவ்வினை யான் செய்தேன்; இதன்பயனீடு இன்னது என்று எண்ணும் ஆன்ம முனைப்பு அகன்று, இறையருளால் இதனைச் செய்தேன்; இதன் பயனீடு நன்றாயின் என்ன; அன்றாயின் என்ன; அவனே பொறுப்பாளி; வில்லை, வளைத்து ஏவுகின்றான் வில்லாளி; அம்பாய்ச் செல்கின்றேன் யான்; வில்லாளியின் குறியும் வினையுமே அம்பை இயக்குவது போல இறைவன் இயக்க இயங்கும். எனக்கென வினையொன்று இல்லை என்று அவன் மேல் சுமையைப் போட்டு விட்டுச் செல்கின்றான். அவ்வாறு செல்வானுக்கு மலம் என்ன செய்யும்? மாயை என்ன செய்யும்? இருவினைதான் என்ன செய்யும்? எல்லாமும் சென்று, நெருங்கவும் மாட்டாத இடத்தில் நிற்பானை என்ன செய்துவிட முடியும்? தோல்விகண்டு தொலைகின்றன. ஆகலின், ஆசிரியர், “மலமாயை தன்னொடு வல்வினை இன்றே” என்றார். சோரி உள்ள இடத்தே நீர் உள்வாங்கும்; அளறு உள்ள இடத்தே கால் உள்வாங்கும்; தொய்யும் நைவும் உள்ள இடத்தே காற்றுருளை (Tyre) வெடிக்கும். வலிய இடத்தே இவற்றின் வாலாட்டத்திற்கும் இடமில்லை அல்லவோ? இறைவன் ஆட்கொள்ளப் பெறுதலால், “அவனே தானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி இறைபணி” நின்ற மாணிக்கவாசகர். “அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்று பாடும் பாட்டிலே இந்நூற்பாவின் இலக்கியமாக அவர் வாழ்வு அமைந் திருத்தலைச் சுட்டியுள்ள அருமை எண்ணி எண்ணி இன்புறத்தக்கதாம். பசிப்பிணி தீர்க்கும் மருத்துவியாகத் திகழ்ந்த மணிமேகலையார் “காணார் கேளார் கால்முட மாயோர், பேணா மாந்தர் பிணிநோய் உற்றார் யாவரும் வருக” என்று அழைத்து உணவூட்டுங்காலை, ‘ஆபுத்திரன்கை அமுதசுரபி இஃது’ என்று கூறி அறப்பேற்றுப் பயனைத் தாம் கொள்ளாது ஆபுத்திரனுக்கு அருளிய திறமும், தம் கைப்பொருள் கொண்டு செய்தாராயினும் நாவுக்கரசர் நற்பெயராலேயே சாலை, சோலை, நீர்ச்சாலை எல்லாமும் அமைத்துப் புகழும் விரும்பாப் புகழ்மையில் இலங்கிய அப்பூதியடிகளார் திறமும் ‘இறைபணி’ நின்ற சீர்மைகட்கு எடுத்துக்காட்டுகளாம். ஓர் உயிர் துடிக்கும் துடிப்பைக் காண பொறுக்காமல் ஓர் உயிர் ஓடிச் செய்யும் உதவியே மருத்துவம் என்பதை மெய்ப்பித்துக் காட்டிய ஆல்பிரட்டு சுவைட்சரும், இடருக்கும் இன்னலுக்கும் ஆட்படுவோர் எங்கிருப்பினும் அங்கிருப்பேன் யானென ஓடிப்போய் உதவும் தெரசா அன்னையாரும் இறைபணி செய்வார் நிறைநிலைக்கு என்றும் எடுத்துக்காட்டாய் இலங்கத்தக்கவர்களாம். அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாதற்கு, “சீவனெனச் சிவ னென்னவே றில்லை சீவ னார்சிவ னாரை அறிகிலர் சீவ னார்சிவ னாரை அறிந்தபின் சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே” என்னும் திருமந்திரப் பாடலை ஒப்பிட்டுக் காண்க. என்கடன் பணிசெய்து கிடப்பதே எனக் குறிக்கொண்டு உழவாரப் படை ஏந்தி உறுபணி செய்த நாவுக்கரசர் இறைபணி செய்யும் படிமான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டும் அருமை திருப்பாட்டு இவண் அறியத்தக்கதாம். “விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினாற் பதிற்றி யாகும் துளக்கில்நன் மலர்தொ டுத்தால் தூயவிண் ணேற லாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும் அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளு மாறே” என்பது அது. இப்பத்தாம் நூற்பாவில், ஆன்மா இறைவனும் தானும் இரண்டலா நிலையை உணர்ந்து, எல்லாம் அவனே என்றும் எச்செயலும் அவன் செயலே என்றும் கொண்டு இறைபணியில் தலைப்பட அதற்கு மலம் மாயை என்பவை வினை என்பவை இல்லையாய் ஒழியும் என்று கற்பித்தார் ஆசிரியர். பதினொன்றாம் நூற்பா திருவருளால் தன்னையுணர்ந்து, பின் தலைவனையுணர்ந்து, ‘அவனே தானே’ என ஆகிய ஆன்மா, தலைவன் திருவருளை நினைந்து நினைந்து அன்பில் முருகி முருகி அவனடி அடைதலையே குறியாகக் கொள்ளும் என்பதை இந்நூற்பாவில் ஆசிரியர் குறிக்கின்றார். ஒரு சிறிய உதவி ஒருவர் செய்தாலும் அதனைப் பெறுவார் ‘நன்றி’ எனக் கூறுவது ‘நாகரிகம்’ என்பது நானிலப் பொதுச் செய்தி. தாய் தந்தையர் செய்த நன்றிக்கு எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்துத் தொண்டு செய்தாலும் ஈடாகமாட்டாது என்பது நயனறிந்தோர் உரை. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; ஆனால் செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை என்பது பொய்யாமொழி. ஒழுக்கத்தில் தலையாயது ‘நன்றியறிதல்’ என்பதை ஒழுக்க நூல்கள் சுட்டுகின்றன. இவ்வாறாக, இறைவன் செய்தருளும் நன்றிகள் இவ்வளவு அவ்வளவு என்று வரையறுத்தற் குரியவோ? எண்ணெய் விளக்கோ ஆவி விளக்கோ மின் விளக்கோ ஆகட்டும், திரி விளக்கோ பொறி விளக்கோ ஆகட்டும், எவ்விளக்காயினும் கைக்காசு செலவிடாமல் கைக்கு வந்துவிடுமோ? அவை ஒளி செய்வதற்கென உரிய செலவு இல்லாமல் முடியுமோ? மாந்தன் படைத்த ஒளி விளக்குகளின் நிலைமை இவ்வாறு இருக்க, இயற்கை தந்த ஒளிவிளக்குகளின் நிலைமை என்ன? கோடி கோடி விளக்குகளை ஒருங்கே கொளுத்தி வைத்தாலும் ஒரு சிறு கோடிக்குக்கூட வாராத பேரொளிப் பிழம்பாம் திங்கள், ஞாயிறு, விண்மீன் ஆகியவை ஒளி வெள்ளப் பாய்ச்சுதலை அறிவோம் அல்லவோ? ஒரு சல்லிக் காசேனும் நாம் செலுத்துவது உண்டோ? ‘கெடு(தவணை)’ கடந்து விட்டது என்பதற்காகத் தொடர்பைத் துண்டித்தல் உண்டோ? பொறிக் கோளாறு என்று செயலற்றுப் போய்விட்டதுண்டோ? இவ்வியற்கைக் கொடையை எவ்வாறு நெஞ்சார நினைந்து போற்ற வேண்டும்? ஒருகுட நீர் வேண்டுமானாலும் என்ன பாடு? ஆனால், கொட்டும் அருவிக்கும் கொழிக்கும் ஆற்றுக்கும் நாம் கொடுக்கும் காசென்ன? பொழியும் மழைக்கு நாம் தரும் கூலியென்ன? இயற்கைதரும் குடநீருக்கு ஒரு காசு என்று கணக்கிட்டாலும் எத்தனை எத்தனை கோடியாகக் கட்டணம் செலுத்தவேண்டும்? இப்படியே இயற்கை வழங்கும் கொடைகளை எண்ணிப்பார்க்கும் நெஞ்சம் இயற்கையின் மேலும், இயற்கையை ஆக்கிய இறைவன் மேலும் எத்தகு பற்றுவைக்க நேரும்? இது போலிப் பற்றுமையோ? பொய்மைப் பற்றுமையோ? இல்லையே! நிலம் வழங்கிவரும் வளங்கள் எவை எவை? அதன் கொடைக்கும் விளைவுக்கும் எல்லை யுண்டோ? தன்னுள் பொதிந்து வைத்துக்கொண்டு காலமெல்லாம் கனிந்து உதவக்கிடக்கும் கருவூலமாம் நிலக்கொடையை முற்றாகக் கண்டுவிட்டோமோ? “இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்” என்னும் பொய்யாமொழி பொய்யாம் நாளொன்றும் உண்டோ? நெடுங்கடல் வாரி வழங்கும் நிறை வளங்களுக்கு எல்லையும் கண்டதுண்டோ? அள்ளி அள்ளியும், அள்ளவும் தொலையா அமுதக் கலனன்றோ கடல்! அக் கடலுக்கும் அந்நிலத்திற்கும் வரியாக அரசுக்குச் செலுத்துவதை அன்றி இயற்கைக்குச் செலுத்தும் கட்டணம் என்ன? நல்லதன் நலனைக் கண்டு நயக்கும் வேளையில், நன்றியுணர்வேனும் வேண்டாவோ? எத்தனை எத்தனை எழில்! எத்தனை எத்தனை மலர்! எத்தனை எத்தனை சுவை! எத்தனை எத்தனை இசை! எத்தனை எத்தனை இன்பக் கொள்கலம் இவ்வுலகம்! இவற்றைப் படைத்த முதல்வனை நன்றியோடு நினைவு கூர்தல் கடனே யன்றோ? பேரருள் பெருக்காகத் திகழும் இறைவன்மேல் பேரன்பு கொள்ளவுமோ கூடாது? இவற்றையெல்லாம் நினைகூரச் செய்கிறார் மெய்கண்டார். அவ்வளவோ? குழந்தை, நிலவைக் காணவேண்டும்; காக்கையைக் காணவேண்டும்- காட்டுகிறாள் தாய். விரலை நீட்டி-கையைக் காட்டிக் காட்டுகிறாள். முகத்தைத் திருப்பித் தொலைக்காட்சித் தேர்ச்சியாளன் தொலைக் காட்சிப் பொறியில் கண்டு காட்டுவது போல் காட்டுகிறாள்! விழியைத் துலக்கி விளக்கிக் காட்டுகிறாள்! இப்படிக் காட்டுகிறானே இறைவன், ஆன்மாவுக்கு! அவ்வான்மா அறிவறியா நிலையில் அறியா தொழியினும், அறிவறிந்த போதேனும் அவன் காட்டிய திறத்தை அறிந்து ‘காதலாகிக் கசிந்துருக வேண்டும்’ அல்லவோ! “மூடமா-மடமா-ஆயின் என்ன? என்னால் இயன்ற மட்டில் அறிவுறுத்துவேன். வேண்டா வேண்டா என்று விட்டு விலகிப் போனாலும் விட்டுவிடாமல் விடாப்பிடியாய் அறிவுறுத்தியே தீர்வேன்” என்னும் அருளாசிரியன்போல, இறைவன் அறியாதனவெல்லாம் அறிவுறுத்திக் காட்டிய அருமையை நினைந்து நினைந்து ‘காதலாகிக் கசிந்துருகுதல்’ கட்டாயம் வேண்டும் அல்லவோ! காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் : கண்பார்த்தது என்கிறோம்; கண்ணோ பார்த்தது? ஆம்! கண்ணே பார்த்தது; அடுத்தும் வினா? கண்மட்டுமா பார்த்தது? இல்லை! கண்மட்டுமே பார்க்குமானால், உயிரிலா ஒருவனுக்கும் கண் உண்டுதானே? அவன் அக்கண்ணால் காணவேண்டும் அல்லவோ? காண முடிய வில்லையே! அதனால் என்ன புரிகின்றது? கண்ணொடு சேர்ந்து உயிரும் காண்கிறது. உயிர் காட்டவே கண் காண்கிறது என்பது விளக்கமாம். இவ்விளக்கம் ஏற்பட்டால் மேலும் ஒரு விளக்கம் ஏற்படும் கண்டதைக் கொண்டுதானே காணாததை விளக்கவேண்டும்! காண உள்ளத்தைக் கண்டு காட்டல் : காணும் கண்ணுக்குக் காட்டும் உயிர் என்றால், அவ் வுயிரைக், கண்ணுக்குக் காட்டுமாறு செய்தது எது? அவ்வுயிரைக் காட்டுமாறு ஏவியதும், உடனிருந்து நடாத்தியதும் இறையே அன்றோ? இன்னும் சொன்னால் கண்ணுக்குக் காட்டுவதும் உடனிருந்து காண்பதும் உயிரறிவு என்பது மெய்யாவதுபோல், அவ்வுயிரறிவுக்குக் காட்டுவதும் உடனிருந்து காண்பதும் இறையறிவே அன்றோ! இறையறிவு உயிரறிவுக்கு உணர்த்த, உயிரறிவு கண்ணுக்குக் காட்டுகிறது என்றால் அவ்விறைமேல் எத்தகு பற்றுமை கொள்ளவேண்டும்? அயரா அன்பு : இறைவன்மேல் வைக்கவேண்டிய பற்றுமையை ‘அன்பு’ என்றார் மெய்கண்டார். எல்லாம் வல்ல அருளாளனுக்கு, உயிர்கள் அன்பேனும்-தொடர்புடையாரிடத்துக் காட்டும் அன்பேனும்-காட்டவேண்டாவோ என்றார். அவ்வன்பும் மாறும் அன்பாய்-மறக்கும் அன்பாய்-பட்டும் படாதும் தொட்டும் தொடாதும் அமைந்த அன்பாய் இருத்தல் கூடாதென, ‘அயரா அன்பு’ கொள்ளவேண்டும் என்றார். அன்பு செலுத்துதல் உயிரின் கடப்பாடு என்பதை வலியுறுத்துதற்கு மட்டுமன்றி, தன்னலத்தாலுங்கூட அன்பு செலுத்துதல் கட்டாயம் வேண்டும் என்பாராய்க் “காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பு செலுத்துக” என்றார். வேள்வித்தீயில் உயிரிகளின் உடலை அறுத்து ஊனையும் குருதியையும் சொரிந்து நோற்பார் உண்டே! அந்நோன்பைக் காட்டிலும், தன் என்பையே விறகாக்கித், தன் இறைச்சியையே அறுத்து, கனலில் இட்டுப் பொன்போல் பொரியுமாறு ஒருவன் வறுத்தான் ஆயினும், என்ன? இறைவனைக் காண்பனோ? காணான்! அவன் ‘அன்போடுருகி அகங் குழைவானே’ யானால் இறைவனைக் கண்டடைவான் என்பார் திருமூலர். மூலர் வழிவரு மூலனாராம் மெய்கண்டார். அந்நுட்பம் அறிந்தே, ‘அயரா அன்பின் அரன்கழல் செலுமே’ என்றார். அசைவு காணும் அன்பால் நட்பையும் காதலையுமே நிலைப்படுத்த முடியாது என்றால், இறையடியையோ அசையும் அன்பால் அடைந்துவிட முடியும்? நூற்பா வருமாறு : காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே. “காட்சியையுடைய கண்ணுக்கு ஒன்றைக் காட்டித், தானும் காண்கின்ற உயிரைப்போல, ஒன்றைக் காணுமாறு அவ்வுயிர்க்கு இறைவன் காட்டியும் கண்டும் நிற்றலால், உயிர், மறவாது போற்றும் அன்பால் இறைவன் திருவடியை அடையும்” என்பது இதன் பொருளாம். உயிர் அயரா அன்பால் இறையடி அடையும் என்று வழிகாட்டிய ஆசிரியர், அயரா அன்பு கைவரப்பெறும் வழியை அடுத்த நூற்பாவில் அருள்கிறார். பன்னிரண்டாம் நூற்பா இறைவன் திருவடி எத்தகையதெனச் சுட்டி, மலத்தின் தன்மை இன்னதெனக் காட்டி, பக்குவமுற்ற ஆதன் செயற்பாடு இன்னதென வரையறுத்து இந்நூற்பாவொடு நூலை நிறைவிக்கிறார் ஆசிரியர். மலநீக்கமுற்ற உயிர் இலங்கறிவு, வாலறிவு, விளங்கறிவு எனப்படும். மெய்யறிவுக்கு இடமான இறைவனை ஒன்றுங்கால் அவ்வறிவின் சாயலாய் அன்றோ ஒன்றும்; ‘பனிமலை சார்ந்த பொல்லாக் கருநிறக் காக்கையும் பொன்னிறமாம்’ என்று புகல்வரே! இறையடித் தண்ணிழல் எய்திய ஆதன் எத்தகு தூய பளிங்கு வண்ணமுறுவன் என்பதை நூற்பாச் சொல்லமைதி, நடையமைதியாகிவற்றாலே ஆசிரியர் காணவைக்கும் திறன் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்பஞ் சுரப்பதாம். செம்மலர் நோன்தாள் : இறைவன் திருவடியைச் சுட்டும் ஆசிரியர் ‘செம்மலர் நோன்தாள்’ என்றார். செந்தாமரை மலர் போன்றது செம்பொருட் பெருமான் திருவடி. அவனே சிவன்; சீவப்பன்; சேய்; சேயோன்; அரன்; அவன் முழுதுருவும் சிவப்பெனின் அடிமட்டும் வேறு நிறமாமோ? ‘தாமரை புரையும் காமர் சேவடி’ என்றாரே பெருந்தேவனார் (குறுந். கட). இவண் நிறத்தன்மை கருதியது மட்டுமன்று; குணத்தன்மையும் கொண்டது செம்மை! பூ என்பதும் மலர் என்பதும் ‘மென்மை’ என்னும் பொருள் தரும் சொற்கள். ‘பூவாக இருக்கிறது’ என்றும் ‘மலரினும் மெல்லியது’ என்றும் கூறுதல் அறிக. செம்மலர் ஆகிய இறைவன் திருவடி மென்மையானது என்றவர், அதற்கு வன்மையே இல்லையோ என்பார்க்கு அதன் வன்மையைச் சுட்டுதற்கு ‘நோன்தாள்’ என்றார். நோன்மை - வலிமை; தான் - அடி; மென்மைக்கு மென்மை வன்மைக்கு வன்மை! வன்மை மென்மை என்பவை முரண்பாடுகள். வன்மையில் மென்மையும், மென்மையும் வன்மையும் இருத்தல் அருமை. ஆனால் இல்லை என்று சொல்லிவிட முடியுமோ? பட்டவுடன் துகள் துகளாக நொறுங்கிப்போகும் வயிரம், கண்ணாடியில் பட்டவுடன் அது நொறுங்கிப் போகின்றதே! மெலிதினும் மெலிய துகிலாடை வலிதினும் வலிதாக உழைக்கின்றதே! அஞ்சி நடுங்கும் மயில் படையையும் நடுங்கவைக்கும் பாம்பைக்கண்டு அஞ்சாது தாக்கி அதனை அஞ்சச் செய்கின்றதே! வேலை செய்தற்கு மென்மையாம் தேக்கு எத்தகு வன்மையானது! மென்மையில் அமைந்த வன்மை இவையல்லவோ? இனி இறைவன் படைப்பு எல்லாம் ‘அவன் அவள் அது’ என்னும் முச்சுட்டால் உரைத்து முடிவன அல்லவோ? ‘அவன்’ வன்மையும், ‘அவள்’ மென்மையும் இணைந்து விளங்கும் ஈரடிகள், ஒன்று வன்மையாய் ஒன்று மென்மையாய்ச் சுட்டல் தகவே அன்றோ! ‘பெண்ணுரு ஒருதிறன்’ ஆகிய பெம்மான் திருவடி யல்லவோ அவை? ஆதலால் மென்மையும் வன்மையும் அருளி உய்ப்பன எனலாமே! இரண்டு ஆற்றலும் இல்லாமல் உலகம் இல்லையே! இனி, அவன் என நூலைத் தொடங்கிய ஆசிரியர், நூலின் இறுதியில் அவளைச் சுட்டுமுகத் தான் செம்மலர் மெல்லடியைச் சுட்டி, அடுத்து நோன்தாளைக் குறித்தாரோ? அவ்வாறாயின் மிகத் தகவேயன்றோ! சேரல் ஒட்டா அம்மலம் கழீஇ : இறைவன் ‘செம்மலர்’ நோன்தாளை ஆதன் சேரல் ஒட்டாது செய்வது எது? மலம்! மலம் என்பதற்கு ‘அம்’ என்னும் அடைமொழி தருவானேன்? அழகிய மலம் என்பதற்கோ? இல்லை-அம் என்னும் சுட்டு, அதன் தொல்பழந் தொடர்பு குறித்து வந்தது. ஒரு கலத்தில் ஒரு பொருள் இருக்கிறது. அப்பொருள் கலத்தோடு ஒட்டிக் கலத்தோடு கலமாக இருந்த பொருள். அதனை முற்றாக எடுத்தபின்னும் கலத்தில் சிறிது சிறிது துகள் ஒட்டிக் கொண்டிருக்கும் அல்லவோ! ஒட்டிக்கொண்டிருப்பதைத் துடைத்து எடுத்தாலும் நுண்துகளும், மணமும் இல்லாமல் ஒழியாவே? பின்னும் கலத்தை நீர்விட்டு நன்றாகக் கழுவுதல் வேண்டும்! கழுவுதலும் ஒருமுறை கழுவுதல் போதாது; பல்கால் கழுவிக் கழுவித் தூய்மைபடுத்துதல் வேண்டும். அவ்வாறு கழுவாக்கால் கலத்தூய்மை கெடும். அவ்வாறே, உயிர்க்கு மலம் அகன்ற காலையும் அதன் எச்சமும் இல்லாமல் பல்கால் பன்முக முயற்சியால் மலம் இருந்த இடமும் தடமும் இல்லாவண்ணம் அகற்றல் வேண்டும். இவற்றைத் தெளிவிக்க விரும்பும் ஆசிரியர் ‘கழீஇ’ என்னும் அளபெடைச் சொல்லாட்சியைப் படைத்துக் காட்டுகிறார். எடுத்தல், பொறுக்கல், துடைத்தல், கழுவல் என்பவை ஒன்றின் ஒன்று தூய்மையுறுத்தலில் விஞ்சிச் செல்லல் அறிக. பல்கால் கழுவல் என்பது சுட்டும் ‘கழீஇ’ என்பதோ மேலும் விஞ்சல் கொள்க. அன்பரொடு மரீஇ : முன்னை நூற்பாவிலேயே ‘அயரா அன்பைச்’ சுட்டினார் ஆசிரியர். ‘அன்பலால் துணையும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே’ என்றார் நாவரசர்! அன்பே துணையாய் அமர்ந்த அரனடி அடைய, அன்பரொடு மருவுதல் வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். அயரா அன்பு ஆதனுக்கு வேண்டும் என்றவர், அன்பரொடு மருவுதலும் வேண்டும் என்றார் இந் நூற்பாவில். மருவுதல் கலத்தல்; நினைவிலும். சொல்லிலும், செயலிலும், கூட்டுறவிலும், வழிபாட்டிலும் எல்லாம் எல்லாம் அன்பரொடு மருவுதல் வேண்டும் என்றார். அக்கலப்பின் அருமை தோன்றுமாறே ‘மருவுதல்’ என்று கூறினார். இரண்டற்ற நிலையில் இயைவதே மருவுதலாம். ‘மருவு இனிய காதல் மனையாள்’ என்பதில் மருவுதல் பொருளருமை புலப்படும். ‘மரு’, மணம் என்னும் பொருளது. மருதோன்றி, மருக்கொழுந்து மருந்து என்பவற்றில் மணமுண்டு. மருமகன், மருமகள், மருவீடு என்பவற்றில் மணம் உண்டு. இங்கே சொல்லிய கலப்பு ‘மணக்கலப்பு;’ அடியார் அன்பர் இடத்து மருவுதலோ ‘மனக்கலப்பு.’ அன்பின் திறமும், அன்பரொடு மருவுதல் திறமும் ஒருங்கறிந்த வள்ளலார், அன்புருவாம் இறைவனை அன்பாலேயே அகப்படுத்த இயலும் என்பதைத் தெள்ளமுதம் அள்ளுறிச் சுரப்பது போலத் தீந்தமிழில் பாடினார்: “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே! அன்பெனும் குடில்புகும் அரசே! அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே! அன்பெனும் கரத்தமர் அமுதே! அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே! அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே! அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே! அன்புரு வாம்பர சிவமே! என்பது அது. கழுவுதலும் பல்கால் வேண்டும் என்ற ஆசிரியர், அன்பரொடு மருவுதலும் இடையீடின்றி வேண்டும் என்பாராய் ‘மரீஇ’ என அளபெடுத்தோதினார். கழுவுதல் ‘கழீஇ’ ஆயது; மருவுதல் ‘மரீஇ’ ஆயது! அன்பர், அன்பரொடு மருவுதல் ஏன்? இனம் இனத்தோடு சேர்ந்திருத்தல் இயல்பே அல்லவோ? “சிற்றினம் அஞ்சும் பெருமை” என்ற வள்ளுவர்தாமே, “பெரியாரைத் துணைக்கோடல்” அருளினார். உணர்வால் ஒன்றுபடுதலுடன், உடையாலும் நடையாலும் ஒருமை காட்டுதல் உலகியல்! படைத்துறைத்கெனத் தனியுடை, தனிநடை! காவல்துறைக்கெனத் தனியுடை, தனிநடை! இவற்றைக் காணும் நாம், மெய்கண்டார் ‘அன்பரொடு மரீஇ’ என்பதன் பொருளை அறிவதுடன், மேலே சொல்லப்புகும் பொருளருமையையும் அறிந்துகொள்ளக்கூடும். மாலற நேயம் மலிந்தவர் வேடமும் : மால் = மயக்கம்; அற = நீங்க; நேயம் மலிந்தவர் = இறைபணியில் தோய்ந்த துறவோர்; வேடம் = திருக்கோலம். அசைவு என்பது சிறிதேனும் இல்லாமல் இறைபணியில் தோய்ந்த அடியார் திருவேடமும் என்பது இதன் பொருள். வேடத்திலே ‘தவ’வேடமும் உண்டு; ‘அவ’வேடமும் உண்டு. ஆயினும் அடியார் திறம் வேடத்தை மதித்து, அவ்வேடத்திற்கு உரியவன் உள்ளீட்டைப்பற்றிக் கருதாமல், இறைமை அவனிடத்துத் தங்கியுளதாகக் கொண்டு வழிபடுவதேயாம் என்றார். ‘மெய்ப்பொருள் வேந்தன்’ வரலாற்றுச் செய்தி இது: பொய்த் தவ வேடத்தான் புக்கபோதும், பொருந்தாச் செயல் செய்தபோதும், தவவேடமெனத் தாம் எண்ணிய எண்ணம் திறம்பாமல் வெற்றி கொண்டவர் அவர்! ஆட்சித் திறத்திலே வெற்றி கண்ட அவர், இறைவன் அடிமைத் திறத்திலும் வெற்றி கண்டவர். ‘கூடா ஒழுக்கம்’ என்னும் அதிகாரத்திலே துறவோர் போலி வேடங்காட்டிச் செய்யும் புன்மைகளைக் கண்டித்தார் வள்ளுவர். அவர், ஆய்ந்து அறங்கூறி நெறிப்படுத்தவந்த திறவோர். இவரோ, இறையடிப் பேறு எய்தும் வழி கூறவந்தவர். இவருக்கு, அவ்வாய்வு கருத்தன்று; ஆகலின் ‘மாலற நேயம் மலிந்தவர் வேடம்’ என்றார். எனினும், எவரையும் நம்பி ஏமாறுதல் கூடாதே என்று அருளுள்ளம் கொண்டோராய். மிகக் கருத்தாகப் பொய்வேடத்தாரை விலக்குமுகத்தான் “மாலற நேயம் மலிந்தவர் வேடம்” என்றார். அவரிடை ‘வஞ்ச மனத்தான்’ செய்கை வந்தொளியாதன்றே! இறைவன் அடியாரை, இறைவனாகக் கொள்ளவேண்டும் என்பது சிவநெறிக்கு மட்டுமோ உண்மைச் செய்தி! உலகச் சமயங்கள் எல்லாவற்றுக்கும் பொதுச் செய்தி அல்லவோ! மெய்கண்டார். சிவநெறிச் சார்பாளர் என்னும் ஒன்றைக் கருதாமல், அவர்தம் கருத்தை மொழிபெயர்த்தால் எச்சமயத்தார்க்கும் பொருந்தும் பொதுமைநலம் உடையதேயன்றோ! ஆகலின் சமயச் சால்பையே அருளினார் என்பது சாலும். இனி, அடியார் கூட்டுறவும், அடியார் வேடமும் குறித்த ஆசிரியர், தெய்வத்திருக் கோயில்களையும் சுட்டி நூலை நிறைவு செய்வாராயினார். ஆலயம் தானும் அரனெனத் தொழுமே : ஆலயம் = திருக்கோயில். திருக்கோயிலும் திருமதிலும் திருக்கோபுரமும் கல்லும் மண்ணும் மணலும் மரமும் செங்கலும் சுண்ணமும் வண்ணமும் என்று கருதுவார் கருதுக. ஆயின், ஆக்கப்பட்ட பொருளால் அவை அத்தகையவாயினும் அவற்றை ஆக்கியோர், ஆக்கத் தூண்டினோர், ஆக்கியதன் பயன்கொள்வோர் கல்லும் மண்ணும் பிறவும் என்றோ கருதுகின்றனர்? இறைவன் என்றே கருதி ‘இறைபணி’ தலைப்பட்டு நின்றனர். ஆதலால் ஆலயத்தையும் அரனென்றே வழிபடுக என்றார். திருக்கோபுரம் கண்ட அளவானே, தொழுதெழுந்த தொண்டர்பெற்றியைப் பெரிய புராணத்து அறிக. பிறந்த மண்ணைப் பிரிந்து வேற்றூர் சென்ற மங்கை ஒருத்தி, பிறந்த மண்ணில் காலடி வைக்கின்றாள். வைத்தவுடன் வீழ்ந்து வணங்குகிறாள்! இது நேரில் கண்ட காட்சி; அவள் மண்ணை மண்ணாக மட்டுமோ நினைத்தாள்? அவள் அதில் தெய்வத் திருக்கோலம் கண்டல்லவோ வணங்கினாள்! “சீரடியார் பிறந்து வளர்ந்த இம் மண்ணிலே காலடியும் படுதல் ஆகாது” என்று புறம்போய்நின்று வழிபட்ட அடியார் வரலாறு பெரியபுராணத்தில் காணப்படுவதேயன்றோ! அவர் மண்ணை மதித்த மதிப்பு அத்தகையது. “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும், நற்றவ வானினும் நனிசிறந் தனவே” என்னும் எண்ணம், தெய்வநிலை எண்ணமேயாம். வாழ்வாங்கு வாழ்ந்தவராக மதிக்கப்பெறும், பெருமக்கள் வாழ்ந்த திருமனையை, அவர்தம் நினைவுக்குறியாக்கி, அவர்தம் புகழ் உடலாக அதனைப் போற்றிவருவதில் பெருமுனைப்புக் காட்டும் இந்நாள் நடைமுறையை எண்ணுவார், இறைவன் கோயில் கொண்ட இடத்தை இறைவனாகக்கருதி வழிபடுதல் புதுப் பொருளாகவோ புதுமைப் பொருளாகவோ கொள்ளார். அன்பராதல் அன்பரொடு மருவுதல் (அடியார் குழாத்து உறைதல்) அடியாரையும் ஆலயத்தையும் இறையாகவே கொண்டு வழிபடுதல் என்பவை ஒன்றின் ஒன்று உயர்ந்து சென்று ஒருபேரிறையோடு ஒன்றி உடனாந் திருவை அருளும் என்பதை உய்வார் உய்யும் வண்ணம் மெய்கண்டார் உரைத்தருளி நூலை நிறைவித்தார். “யாம்பெற்ற இன்பம் உலகும் பெறுக” என்று வழிகாட்டுவது பேரருளாளர் நிறைபெரும் இறைபணி யாம் ஆதலால் என்க! எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. திருச்சிற்றம்பலம் பதிப்புரை “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் ” என்று சிறப்பித்துக் கூறப்படுவது நமது தமிழகம். இங்கே வாழும் தமிழ் மக்களிடையே வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே வழிவழியாக வழங்கி வருவது சிவ நெறி என்பது ஆராய்ச்சியாளர் களின் பொதுவான கருத்து. உலக முதற்பொருளாகிய கடவுளை ஏனை எந்நாட்டவரும் இறைவன் என்பாராகத் தென்னாடுடைய தமிழர் சிவன் என்பர்; “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என மணிவாசகப் பெருமான் உரைத்தருளுவ தொன்றே இதற்குப் போதிய சான்று. சிவனை வழிபடும் செந்நெறி சிவநெறி. சிவன் என்னும் செஞ்சொல்லை வைதிக சமய வடநூல்கள் ஏற்றுக்கொண்ட பின், வடநூன் முறைகளுக்கேற்ப, இச்செந்நெறி சைவம் என்று வழங்கத் தொடங்கிற்று. மணிமேகலை முதலிய தமிழ்ப் பௌத்த நூல்கள் இதனைச் சைவமென்றே குறித்துள்ளன. சைவத்தின் அடிப்படைக் கருத்துக்கள் பலவும் பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களிலும், சைவத் திருமுறைகளிலும், வடமொழி வைதிக நூல்களிலும் இலைமறை காய்போல ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அவற்றை யெல்லாம் வடித்தெடுத்துத் தொகுத்துச் சுருங்கிய வடிவில் எளிய இனிய செஞ்சொற்களால், திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டதேவ நாயனாரால் பால் மணம் மாறாத இளமைப் பருவத்தே சிவபரம்பொருளின் திருவருள் உண்ணின் றுணர்த்த வுணர்ந்து உரைக்கப் பெற்றது இச்சிவஞான போதம். இதுபற்றியே, “வேதம் பசு, அதன்பால் மெய்யாகமம், நால்வர் ஓதும் தமிழ் அதன் உள்ளுறும் நெய்” என்றும், “சிவஞான போதம் அந்நெய்யின் உறுசுவை” என்றும் சான்றோர் ஆராய்ந்து உருவக அணி திகழ உரைத்துள்ளனர். இனி, வேத வேதாந்த நூல்களின் தெளி பொருளாக இருப்பது பற்றிச் சிவஞானம் சித்தாந்தம் என்றும் வழங்கும். “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்” என உமாபதி சிவனாரும் “ஓரும் வேதாந்தமென் றுச்சியிற் பழுத்த, சாரங் கொண்ட சைவ சித்தாந்தத் தேனமுது” எனக் குமரகுருபர அடிகளாரும் உரைப்பது காணலாம். சிவமே பரம்பொருள் என மேற்கொண்டொழுகும் இச்சிவநெறியைச் சென்ற நூற்றாண்டி லிருந்து சைவசித்தாந்தம் என்று பலரும் வழங்கி வருகின்றனர். சித்தாந்த சைவத்தின் முடிமணியாய்த் திகழ்வது சிவஞான போதம்; இதற்குப் பாட்டும் உரையுமாகிய வடிவில் சான்றோர் உரை கண்டிருக்கின்றனர். பாட்டு வடிவில் முதலுரை கண்டவர், திருத்துறையூர் அருணந்தி சிவனார்; அதற்குச் சிவஞான சித்தியார் என்பது பெயர். அவர்க்குப் பின் கொற்றவன்குடி உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்ற பெயரால் எளிய நெறியில் பாட்டு வடிவில் உரை கண்டுரைத்தார். இவ்வாறே வடமொழி வல்ல சான்றோர் ஒருவர், இச்சிவஞான போதத்தை வடமொழியில் மிகவும் எளிய நடையில் பன்னிரு சுலோகங்களாக மொழி பெயர்த்துத் தமிழறியாத வடபுலவாழ்நர்க்கு அறிவுறுத் தினார். அவர்க்குப் பின் சிவாக்கிர யோகிகள் என்பார் அவ்வடமொழிச் சிவஞான போதத்துக்கு வடமொழியிலே சிற்றுரையும் பேருரையுமாக உரையொன்று கண்டார். நம் நாட்டில் ஆங்கில மொழி முதலிடம் பெற்ற காலத்தில் சைவத்திரு.ஜே.எம். நல்லசாமிப் பிள்ளையவர்கள் சிவஞான போதப் பொருளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பின்பு, டாக்டர் பென்னெத் (Dr. Bennet) முதலிய ஆங்கில நாட்டார் ஆங்கிலத்திலும், ஷாம்ரஸ் (Schomorus) என்ற ஜர்மானியர் ஜெர்மனியிலும் எழுதினர். புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் பிரெஞ்சு மொழியில் சிவஞான போதப் பொருளை எழுதினாரென்று கேள்விப்படுகிறோம்; அதன் உண்மை தெரியவில்லை. இனி, சிவஞான போதத்துக்கு உரைவடிவில் பொருளுரைத்த சான்றோர் பலர். சிவஞான போதத்திற் காணப்படும் வார்த்திகமாகிய பொழிப்பும், மேற்கோள் ஏது எடுத்துக்காட்டுக்களும் மெய்கண்ட தேவராலே எழுதப்பட்டன என்பது பெருவழக்கு. அவை மெய்கண்ட தேவரால் அறிவுறுத்தப் பெற்று அவருடைய மாணவர்களுள் ஒருவரால் எழுதப்பட்டனவாகலாம் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவ்வார்த்திகத்துக்குப் பின், பாண்டிப்பெருமாள் என்பார் ஒரு விருத்தியுரை கண்டார். இப்பாண்டிப் பெருமாள் விருத்தி கிடைப்பது அரிதாயினும், அரிதின் முயன்று தருமையாதீனப் புலவர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் வித்துவான் திரு.ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் ஒரு பிரதியும், திருவாவடு துறை யாதீனப் புலவர் திரு. மீனாட்சிசுந்தரனார் ஒரு பிரதியும் தந்துதவினர்; அவர்களது நல்லுதவியை யான் என்றும் மறவேன். பாண்டிப் பெருமாளுடைய விருத்தியுரையில், வார்த்திகப் பொழிப்பும் பிறவும் காணப்படவில்லை; ஆயினும் உதாரண வெண்பாக்களைப் பிரமாண வெண்பாக்கள் எனக்கொண்டு அவற்றிற்கு உரை கூறப்பெற்றுள்ளது. அவர்க்குப் பின் திருவாவடு துறை ஆதீனத்தைச் சேர்ந்த முனிவர் பெருமக்களுள் ஒருவராய் விளங்கிய சிவஞான சுவாமிகள் சிவஞான போதத்துக்குச் சிவஞான மாபாடியம் என்ற பெயரால் பேருரை யொன்றும், சிற்றுரை யொன்றும் எழுதியருளினார். அவரது சிற்றுரையே இந்நூற்கண் வெளியிடப் பெறுகின்றது. அவரது வரலாற்றைப் பிறிதோரிடத்தில் காணலாம். திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர், அருள் திரு. சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்பால் பெரும் பொருளை ஒப்படைத்து அதன் வருவாயைக்கொண்டு சிவஞான போதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் என்ற நூல்களில் போட்டித் தேர்வு ஒன்று நிறுவி முதலவராக வெற்றி பெறுவோர்க்குத் தக்க பரிசு தரவேண்டு மென ஒரு சீரிய ஏற்பாட்டினைச் செய்தருளினர். போட்டித் தேர்வில் ஈடுபடுவோர்க்கெனச் சிவஞான போதச் சிற்றுரையினைத் தக்க விளக்கக் குறிப்புடன் வெளியிட வேண்டுமென்று எனக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தாரால் ஆணை தரப்பட்டது. இந்நூலின்கண் மாணவர்கட்கும் ஆராய்ச்சியாளர்கட்கும் பயன்படும் முறையில் உரையில் காணப்படும் இலக்கணக் குறிப்புக்களும் அரும்பொருள்களும் அடிக் குறிப்பிட்டு விளக்கப் பட்டுள்ளன. ஆராய்ச்சி நெறியின் பொருட்டு அருஞ்சொற் பொருள் அகரநிரலும், துணை செய்த நூல்நிரலும் சேர்க்கப் பட்டிருக் கின்றன. ஒப்பு நோக்கும் கருத்தால் ஒருசில இடங்களில் சிவஞான மாபாடியக் கருத்துக்களும் பாண்டிப் பெருமாள் உரையும் காட்டப்பட்டுள்ளன. நூன்முகத்துக்கு இன்றியமை யாமைபற்றி நூலாசிரியர் உரையாசிரியர் வரலாறுகளும், நூற்பொருளைப் பயில விரும்புவோர் பொருட்டுச் சிவஞான போதச் செம்பொருளும் பிறவும் முன்னர்த் தரப்பட்டிருக் கின்றன. சிவஞான போதத்தின் சிறப்பையும் சிற்றுரையின் மாண்பையும் நோக்குமிடத்து எனது அறிவின் சிறுமை கண்டு என் உள்ளம் பேரச்சம் கொண்டது; எனினும், எந்தை மெய்கண்ட சிவத்தின் திருவடியை நினைவிற்கொண்டு, அவரது அருள் ஞானத்தை நன்கு பெற்ற பெருமக்கள் வழங்கியிருக்கும் அருளுரைகளைக் கருவியாகவும், திருஞான சம்பந்தர் முதலிய சிவஞானப் பெருஞ் செல்வர்களின் செம்மொழிகளை முதலாகவும் கொண்டு இப்பணியினை ஆற்றுதற்கு என் உள்ளம் ஒருப்படவே ஒருவாறு யான் இயன்ற அளவில் செய்துள்ளேன். இந்நிலையில், திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் அருள் திரு. சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகட்கும், அவர் வழி வந்து அப்பணியினைத் தமக்கு இயல்பாகவுள்ள அருளுள்ளத் தோடு நிறைவு செய்தருளுவதுடன் மேன்மேலும் பெரும் பொருள் வழங்கிச் சைவத் தமிழ் தழைக்கும் திருப்பணிகளைத் தன்னிகரற்ற தனிப்பெரு நிலையில் செய்தருளிவரும் திருப்பனந்தாள் காசி மடத்துத் தலைவர், அருள் திரு.அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கட்கும், அவர் தம் அருட் குறிப்பின்படியே இதனை இவ்வடிவில் அழகுற அச்சிட்டுதவும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தார்க்கும் தமிழுலகு சைவவுலகுகளின் சார்பாக என் உள்ளம் கலந்த வணக்கத்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். பல்கலைக்கழகச் சார்பில் மேற்கொண்ட இப்பணியினை யான் தொடர்ந்து ஆற்றுதற்கேற்ற வாய்ப்பும் ஊக்கமும் நல்கிச் சிறப்பிக்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரி நிறுவிய தமிழ்ச் செல்வர் உயர்திரு. கரு முத்து தியாகராசன் செட்டியார் அவர்களது நன்றி என்னால் என்றும் மறக்கற் பாலதன்று. இந்நூலைச் செவ்விய முறையில் தொழில் வனப்புத் தோன்ற அச்சிட்ட திருச்சினாப்பள்ளி யுனைடெட் பிரிண்டர்ஸ் அவர்கட்கு நமது நன்றி உரியதாகின்றது. தமிழ்ப்பணியும் சமயப்பணியும் கல்வித்துறையில் சீர்த்த இடம் பெறவேண்டும் என்ற முயற்சி ஆக்கமும் அரணும் பெற்றுவரும் இந்நாளில், இந்நூலின் வெளியீட்டைத் தமிழ்மக்கள் நன்கு வரவேற்பரென்னும் துணிபுடையேன். அறிவு செயல் வகைகளில் ஒரு பொருளாகாத எளியனாகிய என்னை இப்பெரும் பணியில் ஈடுபடுத்தி இயலும் தொண்டினைப் புரிதற்கு வாய்ப்பளித்து எனது எண்ணத்தில் என்றும் அகலாது நிலவும் அங்கயற்கண்ணி தன்னோடும் அமர்ந்த ஆலவாய் அண்ணலின் திருவடிகளை மனமொழிமெய்களால் பரவுகின்றேன். “ஞாலம் நின்புக ழேமிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே” மதுரை, 3- 9- 1953. ஒளவை சு. துரைசாமி மெய்கண்ட தேவர் வரலாறு “பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம் பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக் கண்டவிரு தயகமல முகைக ளெல்லாம் கண்திறப்பக் காசினிமேல் வந்த அருட்கதிரோன் விண்டமலர்ப் பொழில் புடைசூழ் வெண்ணை மேவும் மெய்கண்ட தேவன் மிகு சைவநாதன் புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும் பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்.” --அருணந்திசிவனார். நம் நாட்டு இந்து சமய நூல்கள், வேதம், வேதாந்தம், ஆகமம், ஆகமாந்தம் என நான்கு வகையாகும். வேதம் இருக்கு முதல் நான்காக விரியுமாயினும், அதர்வண மொழிந்த மூன்றுமே சிறப்பாகப் பேசப்பெறும். இவற்றில் காணப்படும் மந்திரங்களிலும் பிரமாணங்களிலும் பல தெய்வக் கோட்பாடுகளும், வழிபாடுகளும் உலகியல் வாழ்வின் செம்மை நோக்கமே கருத்துக்களுமாக ஆன்றோர்களால் குறித்து ஓதப்பெறுகின்றன. ஒரு தெய்வவுணர்வும் இம்மையேயன்றி மறுமைப் பயனும் வீடுபேறும் கருதிச் சான்றோர்கள் ஆராய்ந்து கண்டுரைத்த நூல்கள் வேதாந்தம் எனப்படும். இவற்றை உபநிடதங்கள் என்பது பெருவழக்கு. பிற்காலத்தார் இந்த உபநிட தங்களை உரைத்தருளிய சான்றோர்களின் பெயரும் கட்டுரையுட் சிலவும் வேதங்களிலும் காணப்பட்டமையால் உபநிடதங்களை வேதமென்றே கூறலாயினர். வேதாந்தமாகிய உபநிடதங்கள் மிகப்பல. இவை சான்றோர் பலரால் பல காலங்களில் செய்யப்பட்டனவாதலால் இவற்றினிடையே ஒன்றற்கொன்று வேறுபட்டும் மாறுபட்டும் புதியவாய்க் காணப்பட்டுமுள்ள கருத்துக்கள் உளவாயின. வேதாந்த நூல்களில் “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற திருமந்திரம் கருப்பொருளாக இருப்பினும், உலகியல் நடைமுறையில் அக்கருத்து வேறுபாடுகள் நுழைந்து மக்களிடையே தெளிவை யுண்டுபண்ணவில்லை. கற்று வல்லவர்கள் தம் புலமை வன்மையாலும் சொல்வன்மையாலும் தாம் தாம் கொண்ட கருத்துக்களை வேத வேதாந்தச் சொற்றொடர்கட்குப் பொருளாக நுழைத்துரைத்தனர். இதனால் தெளிவின்மையே பயனாக விளைந்தது. பௌத்தம், ஆருகதம் முதலிய புதுச் சமயங்களின் தோற்றம் இத்தெளிவின்மையின் முடிபயனாயிற்று. வேத வேதாந்தங்களின் ஆட்சி நிகழும்போதே அவற்றோடு ஒப்ப ஆகமங்கள் இவற்றிற்குத் தெளிவு கூறி நின்றன. உலகம் உண்டு, உயிர்கள் உண்டு, இறைவன் உண்டு எனத் தெளியக் காட்டி, ஒன்றொன்றிற்கும் உள்ள தொடர்பையும் எடுத்தோதி உய்யும் நெறி காட்டுவதில் இவ்வாகமங்கள் சிறந்து நின்றன. இவற்றின் செயலால் “உலகியல் வேத நூல் ஒழுக்கம் என்பதும், இலகு மெய்ந்நெறி” இச்சிவாகம நெறியென்பதும் மக்கட்குத் தெளியப் புலப்பட்டன. சிவாகம நெறிபற்றித் தெளிவுபெற்றோர் மேற்கொண்ட ஆகமநெறி, சைவநெறி யென்றும், வேத வேதாந்தங்களுக்குத் தம் கலைப் புலமையே துணையாகக்கொண்டு காட்டினோர் காட்டியவற்றை மேற்கொண்டோரது நெறி வைதிகநெறி யென்றும் இருவகை நெறிகள் இயலுவவாயின. இவற்றுள் வைதிக நெறி வேதமோதும் உரிமையுடையோர்பாலும், சைவ நெறி ஆகம நெறி நின்றோர்பாலும் இருந்து வந்தன. சிலகாலத்துக்குப் பின்னர், சிற்றறிவினர் சிலர் தமது கலைப் புலமையைப் பெருங்கருவியாகக் கொண்டு வைதிக நெறியே உயர்ந்ததென்றும், ஆகமநெறி தாழ்ந்ததென்றும், உண்மையுணர்வுக்குச் சிவாகமங்கள் ஆகாவென்றும் குழறுபடை செய்தனர். சமயத் துறையில் இவ்வுயர்வுதாழ்வு கற்பித்து ஒழுகுவது புறச் சமயங்கட்கு ஆக்கமாவதையும் அவர்கள் உணராதுபோயினர். புறச்சமயத்தால், கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கையும் ஐயப்படுவதாயிற்று. வைதிக ஒழுக்கம் இறந்துபோவதற்கேற்ற இடம் உண்டாயிற்று. இடைக்காலத்தில் அதாவது கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டு களில் வாழ்ந்த சான்றோர் இச்சீர்கேட்டை நன்கு உணர்ந்து, வைதிகருக்கும் சைவருக்கும் இடையே உண்டாக்கப்பெற்ற இப்பிளவு விரிந்து தீமை விளைவியா திருப்பது குறித்து உண்மைகளை எடுத்தோதி வற்புறுத்தத் தொடங்கினர். சிவஞானப் பாலுண்டு சைவநெறியை நிலைபெறச் செய்த திருஞானசம்பந்தர் முதலிய சான்றோர்கள் தோன்றி வைதிக நூல்களும் சிவாகமங்களும் இறைவன் அருளிய மெய்ந் நூல்களே என்றும், இரண்டும் வேறல்ல என்றும் அறிவுறுத்தினர். “ஆகமஞ்சொன்ன இறைவனே வேதமோதினன்” என்றும் “வேதப் பயனே சைவம்” என்றும் வற்புறுத்தினர். வேதாந்தத் தெளிவே சைவ சித்தாந்தம் என்று விளம்பினர். வேத நெறி தழைத்தோங்குக, மிகு சைவத்துறை விளங்குக என்று சான்றோர் விழைந்தனர். சீகண்டர் முதலியோர் வைதிக நூல்கட்கும் சிவாகமங்கட்கும் வேறுபாடு கண்டிலேம்; வேறு படுத்துக் காண்போர் உண்மை யறியாதவர் என்று எழுதிக் காட்டினர். வைதிக நூல்களும் சைவ நூல்களும் செய்துகொண்ட பூசலால் சிவவழிபாடு சீரழிந்தது. புறச்சமயங்கள் தோன்றி, தொண்டை நாட்டிலும் தென் பாண்டி நாட்டிலும் அரசியலைக் கைப்பற்றிக் கொண்டன. சமயவாதிகள் மேற்கொண்டிருந்த வடமொழியே அவரது சமயம் போல அரசியலைக் கைப் பற்றியது. ஆரியமெனப்படும் வடமொழி, சமய நிலையங் களிலும் அரசர் உள்ளத்திலும் இடம் பெற்றது. தொண்டை நாட்டிற் பல்லவர்களின் அரசியல் மேலோங்கி யிருந்தமையின், காஞ்சி மதுரை முதலிய பல இடங்களில் வடமொழி பயிற்றும் கடிகைகள் (கல்லூரிகள்) உளவாயின. இதனால் மக்கள் பேசும் தமிழ் மொழி கடவுள் வழி பாட்டிலும், அரசர் செல்வாக்கிலும் போதிய இடம் பெறா தொழிந்தது. இதன் விளைவாகத் தமிழ் நாட்டுத் தமிழ் மக்களினிடையே சமயவுணர்வும் சமய வொழுக்கமும் குன்றின. வடமொழியையும் அதன் சிதைவு மொழியையும் மேற்கொண்டு, மக்கள் வழங்கும் தமிழ் மொழியைப் பேணாதொழிந்தமையால் வைதிக நெறியும் பௌத்த சமண நெறியும் வேரூன்றாது வெறிதே நின்றன. அந்நாளில் தமிழ்நாடு செய்த தவப்பயனாகத் திருஞான சம்பந்தர் முதலிய சான்றோர் தோன்றிச் சிவநெறிக்குத் தமிழ் வாயிலாகத் தொண்டு செய்தனர். திருமால் நெறியும் ஆகமத்தின் வழிவந்த சிறப்புடை நெறியாதலின் ஆழ்வார்கள் தோன்றி இனிய தமிழால் ஆகம நெறியைப் பேணலுற்றனர். ஒருபால் வைதிகர்கள் வேள்வி முதலிய செயல்களிலும் ஆகம நெறியை எதிர்த்துப் புத்துரைகண்டு வாதம் செய்வதிலும் ஈடுபட்டிருக்க, மற்றொருபால் புத்த சமணர்கள் வேள்வி முதலிய செயல்களை விலக்குதற் பொருட்டு வாது புரிவதிலும் வேள்விப் பயனாகிய உலகிய லின்பங்களில் உவர்ப்பு விளைவித்தலிலும் ஈடுபட்டிருந்தனர்; அதனால் இசைத் தமிழும் நாடகத் தமிழும் கைவிடப்பட்டன. அதனை நன்கு கண்ட தமிழ்ச்சான்றோர் இசைத் தமிழ் வாயிலாகவும் இசை நாடகத் தமிழ் வாயிலாகவும் தமிழ்த் தொண்டும் சமயத் தொண்டும் புரியலுற்றனர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்” என்றும், ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கட்கு இராமாநுசர் முதலியோர் அவிநயம் காட்டிப் பொருள் விரித்தனர் என்றும் சான்றோர்கள் கூறுவது இவ்வுண்மையை வற்புறுத்துகிறது. இவ்வாறு முத்தமிழ் வாயிலாக ஆகமத்தின் வழிவந்த சிவநெறி தமிழ் மக்களிடையே நன்கு வேரூன்றி நிலை பெறுவதாயிற்று. தமிழைப் புறக்கணித்த சமயங்கள் வேரூன்றாது வலி கெட்டு ஒழிந்தன. மக்கள் உள்ளத்திலும் அரசர் உள்ளத்திலும் சிவநெறி சீரிய இடம்பெற்றது. சிவநெறி பரவிற்று; சிவன் கோயில்கள் சிறப்பும் செல்வாக்கும் பெற்றன. ஆகம நெறி நிற்கும் வடமொழி வாணர் ஆதிமுதலே அந்நெறி வழுவாது நின்று ஆதி சைவர்களாய் இருந்து வந்தனர். அவர்கள் ஆகம வழிவந்த சிறப்பும் செல்வமும் பெற்ற சிவன் கோயில்களில் திருப்பணி புரிவதும், செயல் முறைகளைக் கண்காணிக்கும் செயல் மேற்கொள்வதும் செய்துவந்தனர். இவ்வண்ணம் சிவாகமங்களாலும் செந்தமிழ் இசைப் பாட்டுக்களாலும் செவ்விய கிரியை முறையும் சிவபெருமானை வழிபடும் முறையும் நாட்டில் பரவவே, பல்லவ வேந்தரும், அவரைக் காலத்தால் அடுத்து உயர்வுபெற்ற பாண்டி வேந்தர்களும் சோழ வேந்தர்களும் சிவநெறி வளம்பெறுதற்குரிய திருப்பணி களையே பெரிதும் மேற்கொண்டனர். முதல் மகேந்திரனை முதலாகக் கொண்டு வழி வழி வந்த பல்லவ மன்னர்கள் ஆங்காங்குக் கற்கோயில்களும் மலைக்கோயில்களும் கட்டினர். சோழ வேந்தருள் முதல் இராசராசன் முதலிய பெருவேந்தர்கள் கோயில் கட்டும் பணியில் மேன்மை யெய்தினர். சுருங்கச் சொல்லு மிடத்து, இவ்வேந்தர்கள் தாங்கள் உறையும் அரண்மனைகளிலும் சிவபெருமானுக்கெடுக்கும் திருக்கோயில்களே செல்வ நெடுமாடங்களும், நாட்டவர்க்குரிய செல்வ நிலையங்களும், நாட்டவர்களின் கலைக்குரிய ஓவிய சிற்பக்கலை நிலையங்களு மாதல் வேண்டுமெனக் கருதினர்; அவ்வாறே விளங்குமாறும் செய்தனர். அதனாற்றான், அவ்வேந்தர்கள் உறைந்த பேரரண் மனைகள் இறந்து மறைந்து ஒழியவும் அவர்கள் எடுத்து நிறுவிய திருக்கோயில்கள் இன்றும் நின்று காட்சியளித்துக் கொண்டு நிற்கின்றன. இத்தகைய திருப்பணியால் சிவநெறி நிற்போர், நெஞ்சில் ஆகமப்பொருளும், வாயில் திருஞானசம்பந்தர் முதலியோர் அருளிய செந்தமிழ்த் திறங்களும், மெய்யில் சிவ வேடமும் கொள்வாராயினர். சிவாகமங்கள், சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு நெறியில் சிவஞானத்தை உரைக்கலுற்றன. காமிகம், காரணம் முதலியன திருக்கோயில்களை அமைக்கும் முறையும், அங்கு நடைபெறும் நாட்பூசனை, விழாக்கள் முதலியவற்றிற்குரிய நடைமுறையும், சிவபரம் பொருளை வழிபடும் முறையும் பிறவும் கூறத்தொடங்கின. சில ஆகமங்கள் சரியை கிரியை யோக நெறிகளையும், சில கிரியைகளையும் தனித்தும் தொகுத்தும் கூறின. சில ஞானத்தையே தொகுத்தும் வகுத்தும் விரித்தும் உரைத்தன. இச்சிவாகம ஞானம் பெற்றோர் சிவநெறியின் சிறப்பைத் தெளிய உணர்ந்து திருவருள் வாழ்வு பெற்றுச் செம்மை யெய்தக் கண்டோர், சிவாகமங்களையே பெரிதும் பயிலத் தொடங்கினர். வேந்தர்களிற் பலர் சிவாகம சீலராயினர்; மலையமான் வழி வந்தவருள் ஒருவரான மெய்ப்பொருள் வேந்தன் போலச் சிவாகமங்கட்கென உயிர்கொடுத்தோரும் உண்டு. இங்ஙனமே, திருஞான சம்பந்தர் முதலிய சான்றோர் வழங்கிய திருப்பதிகங்களை ஓதுவதில் பெருவிருப்பங்கொண்டு, அவற்றுள் ஓதிய சில தொடர்களையே சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் பெயராக வழங்கி இன்புற்றனர். வேறு பலர் தம்மக்கட்கும் அத்தொடர்களையே பெயராக இட்டனர். வேயனதோளி என மகளிரும், மறையணி நாவினான். என ஆடவரும் பெயரிடப் பெற்றனர். சிந்து பூந்துறை, திருந்துமாமறை எனத் தெருக்களும், வயிரத்தூண் என வயல் வாய்க்கால்களும் பெயர் பெற்றன. இந்நிகழ்ச்சிகளைக் கண்ட அநபாய சோழன் முதலியோரும் நம்பியாண்டார் நம்பி முதலிய சான்றோரும் ஆங்காங்குள்ள திருப்பதிகங்களையும் தில்லைப்பெருங் கோயிலி லிருந்த திருப்பதிகங்களையும் தொகுத்து முறைசெய்தனர். திருமுறை கண்டு தொகுத்து முறைசெய்த வரலாறு நாடெங்கும் பரவி மக்கள் உள்ளத்தில் பேரூக்கத்தை எழுப்பிற்று. நம்பியாரூரர் வழங்கியருளிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி யருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும், சிவநெறித் திருத்தொண்டர் வரலாறுகளை அறிந்து ஒழுகுதல் வேண்டுமென்ற வேட்கையை மக்கள் உள்ளத்தில் எழுப்பின. அவற்றை விரிவாய் அறியவேண்டுமென்ற விருப்பம் சோழவேந்தர் உள்ளத்தை அலைத்தது. அதற்கேற்றவாறு, சோழ வேந்தர் பேரவையில் அமைச்சுரிமை தாங்கிய சான்றோர் வழியில் சேக்கிழார் பெருமான் தோன்றித் தெய்வ மணங்கமழும் செந்தமிழ்ப் பாக்களால் திருத்தொண்டர் புராணத்தை எழுதித் தில்லைப் பெருங்கோயிலிலே வேந்தர் சூழ இருந்து அரங்கேற்றம் செய்தார். அவ்வரங்கேற்றம் ஓராண்டு நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடியிருந்து கேட்டுச் சிவஞானப் பேரின்பம் துய்த்து மகிழ்ந்தனர். சிவஞானப் பேற்றில் பேரார்வமும், சிவத்தொண்டில் பேரூக்கமும் திருத்தொண்டர் வரலாற்றில் பேரன்பும் மக்களிடையே பெருகின. நாட்டில் எவ்விடத்தும் சிவன்கோயில்; எவர் நெஞ்சிலும் சிவஞானம்; எவர் மொழியிலும் சிவ நாமம்; எவர் மேனியிலும் சிவவேடம்; எவர்பணியும் சிவப்பணி, எங்கும் எல்லாம் சிவமேயாய்ச் சிறந்து நின்றமையின், தென் தமிழ்நாடு சிவலோகமாய்க் காட்சியளித்தது. சிவாகம அறிவிற்குப் பயன் சிவபெருமானுடைய நற்றாளைத் தொழுவது என்பதற்கேற்பச் சிவாகமம் பயின்றோர் சிவனை மறவாது தொழுது வந்தனர். ஆயினும் சொல்லிலும் செயலிலும் சிவவழிபாடும் சிவப்பணியும் புரிவோர் பலரும், நெஞ்சில் சிவாகம அறிவுடையோர் சிலருமாகவே நாட்டில் மக்கள் உளராயினர். சிவாகமங்கள் வடமொழியில் இருந்தமையால் அவற்றைப் பயில்வோர் சிலரும், சிவவழிபாட்டுக்குரிய திருமுறைகள் செந்தமிழில் இருந்தமையால் அவற்றைப் பயின்று ஓதுவோர் பலருமாயினர். மணிவாசகப் பெருமான் முதலியோர் “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவோர், பல்லோரும் ஏத்தப் பணிந்து சிவனடிக்கீழ்ச் செல்வர்” என்று அறிவுறுத்தியது கண்டு, அத்திருமுறைகட்குப் பொருளறிந்து கொள்ளும் வேட்கை யுடையவராயினர். சிவஞானம் கைவரப் பெற்றோர்க்கல்லது அத்திருமுறைப் பாடல்கள் இனிது பொருள் விளங்கா. இதனைக் கண்ட அறிஞர் அவற்றின் பொருளுணர்வுக்கு அடிப்படையாக வேண்டும் சிவஞானக் கருத்துக்களை இனிய எளிய செந்தமிழில் உணர்த்தவேண்டிய கடமையை மேற் கொண்டனர். அக்காலத்தே நம் தென்னாட்டில் ஞானவுரை நல்கும் திருமடங்கள் பல ஆங்காங்குத் தோன்றியிருந்தன. அவற்றுள் கோளகிமடம் என்பது சிறந்து விளங்கிற்று. அதன் கிளைகள் பல தமிழகமெங்கும் பரவியிருந்தன. சிவாகமக் கருத்துக்களாகிய சிவஞானத்தைச் செந்தமிழில் நல்கும் திருப்பணியை அந்தத் திருமடத்தாரே முதற்கண் மேற்கொண்டனர். அவர்கள் திருப்பணிகளுள் ஒன்றாகச் சிவாகமங்களின் கருத்துக்களைத் தொகுத்து ஞானாமிர்தம் என்ற பெயரால் எழுதப்பெற்ற தமிழ் நூல் ஒன்று கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றி நிலவுவதாயிற்று. ஞானாமிர்தம் தோன்றியதும் அத்தமிழ் ஆகமத்தைக் கற்பதிலும் அறிந்தோர் சொல்லக் கேட்பதிலும் தமிழ் நாடெங்கும் மக்கட்கு வேட்கை யெழுந்தது. கோளகிமடத்தின் பிரிவுகள் எங்கெங்கு இருந்தனவோ அங்கங்கே இந்த ஆகமங்களைக் கற்பிக்கும் செயல்கள் நடந்தன. கோயிற் கிரியைகளும் இறைவனை வழிபடுதற்குரிய அறங்களும் கோயில்களிலிருந்து மக்களுக்கு அறிவுறுத்தப் பெற்றன. அவற்றைச் சிவதருமம் என்று அந்நாளில் வாழ்ந்தவர் வழங்கினர். இச்சிவதன்மங்களை உரைக்கும் சிவாசாரியர் பலர் உண்டாயினர். திருநெல்வேலிப் பகுதியில் கோட்டைக் கருங்குளத்திலுள்ள இராசசிம்மேச்சுரத்தில் சிவதன்மம் ஓதி வந்த வரலாற்றை அவ்வூர்க் கல்வெட்டொன்று1 கூறுகிறது. இதனைக் கோளகி மடத்தாரே சிறப்பாக மேற்கொண்டிருந்தமையின் இதனைக் கோளகி தன்மம் என இராமநாதபுர வட்டத்துத் திருப்புத்தூர்ப் பகுதியினர் வழங்கி வந்தனர். 2 இனி, இச்சிவதன்மம் சிவபெருமானால் முனிவர்கட் கருளப் பெற்றதென்ற உண்மையைத் திருஞானசம்பந்தப் பெருமானே அறிவுறுத்தருளுதலால், சிவதன்மத்தையும் திருஞான சம்பந்தர் முதலியோர் அருளிய திருஞானத் திருப்பதிகங்களையும் ஒருங்கோதும் முறை உண்டாயிற்று. சீருத்திரத்தின் நடுவே திருவைந்தெழுத்து உளது; அதுவே சிவஞானமும் சிவதன்மமு மாகலின், அதனை யோதுவதே சிவதன்மம் ஓதுவதாம் என்ற முறை உண்டாயிற்று. அதனால் திருக்கோயில்களில் சீருத்திரம் ஓதுவோரும் திருப்பதிகம் ஓதுவோரும் இருந்து வந்தனர். இரண்டன்கருத்தையும் நன்கறிந்த சான்றோர் சீருத்திரம் ஓதுவதைச் சிவதன்மம் ஓதுவதென்றும், திருப்பதிகம் ஓதுவதைத் திருஞானம் ஓதுவதென்றும் வழங்கினர். இது கற்றறிந்த சான்றோர் சிறந்துள்ள இடங்களில் மட்டில் வழங்கப் பெற்றமையின், கல்வெட்டுக்களிலும் அருகிக் காணப்படுகின்றது.3 சிவதன்மத்தையும் சிவஞானத்தையும் தன்னகத்தே கொண்டு, செவ்விய இனிய தமிழில் பண்சுமந்த பாடல் வடிவில் திருமுறைகளில் அமைந்த திருப்பதிகங்களுக்கு மக்களிடையே செல்வாக்கு மிக்கு நின்றது. இவற்றைப் பயில்வோர் கூட்டம் பெருகியிருந்தது. ஆடவரும் பெண்டிருமாகிய இருபாலாரும் இத்திருப்பதிகங்களை விரும்பிப் பயின்றனர். திருமுறை தொகுத்துப் பண் வகுக்கப்பெற்ற பின் இவற்றை இசைப் பொருட்டாகப் பயில்வோர் தொகை பெருகிற்று; ஆயினும், நாம் முன்னே சொன்னபடி, “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து” சொல்லுவோர் குறைந்தனர்; வடமொழி பயின்றோர்க்குத் தமிழறிவும், தமிழ்மொழி பயின்றோர்க்கு வடமொழி அறிவும் மிகமிகக் குறைந்தமையின், இரு மொழியும் பயின்றோர் சிவஞானத்தைத் தமிழில் எடுத்து ஓதவேண்டிய நிலையுண்டா யிற்று. வாகீச பண்டிதர் முதலியோர் தமிழ்ப் படுத்துரைத்த ஞானாமிர்தம் ஒன்றே இருந்து வந்தது. எனினும், அதுவும் சிவாகமங்கள் பலவற்றின் கருத்துக்களையும் திரட்டித் தரவேண்டிய நிலையில் விரிந்திருந்தது. மேலும் சிவாகமங்களுள் ஞானபாதம் முற்றும் பிரமாணமும் இலக்கணமும் கூறும் வகையிலே நின்றன. கிரியை கூறும் ஆகமப் பகுதிகளும் ஞானபாதத்துள் ஓதப்படும் தத்துவ நெறிகளையே நினைப்பிக்கும் வகையில் இருந்தன. இந்நிலையில் பிரமாண வகையாலும் இலக்கண வகையாலும் உணர்த்தப் பெற்ற சிவஞானத்தைச் சாதித்துக் கொள்ளும் சாதனமும், அச்சாதனத்தால் விளைவித்துக் கொள்ளும் பயனும் அறிந்து திருமுறைகளை ஓதி உணர வேண்டியிருக்கின்ற உண்மையைச் சான்றோர் உணர்ந்தனர். உலகிற் பிறந்த மக்கள் பெறக்கூடிய பேறுகளுள் சிவஞானத் தினும் உயர்ந்த பேறுபிறிதில்லை. அதனை அளவைகளாலும் இலக்கண வகையாலும் கற்றலும் கேட்டலும் உடையராய் விட்டால் மட்டில் பயன் விளையாது; சிவஞானப் பயனைச் சாதித்துக் கொள்ளுதற்கு வேண்டிய நெறிகளை யறிவது இன்றியமையா தென்பது தெரிந்தது. மக்கட்கு இனிது எளிது விளங்கக் கூடிய வகையில் அவற்றைத் தமிழில் அறிவுறுத்தக் கூடிய ஞானாசிரியர் தோன்றவேண்டிய நிலை உண்டாயிற்று. இந்நிலையில் பன்னிரண்டு திருமுறைகளும் சைவவுலகில் தமிழ் நன்மக்கள் செய்த தவச்செல்வங்களாய் நிரம்பின. அவற்றுட் பொதிந்து நிறைந்து நிற்கும் சிவஞானம் மக்களுடைய உள்ளத்திற் பரவவேண்டிய செவ்வியை நோக்கி நின்றது. அச்சிவஞானச் செல்வத்தை மக்கட்கு எடுத்தோதும் பெருந்தவத்தைத் தமிழ்நாடு செய்வதாயிற்று. தொண்டை நாடும், நடு நாடும், சோழ நாடும், பாண்டி நாடும், கொங்குநாடுமெனத் தமிழ் நாடு அன்று பிரிந்திருந்தது. இந்நாடுகள் பலவும் ஒருங்கே தவஞ்செய்தன வெனினும் நடுநாடு அத்தவத்தில் மேம்படுவதாயிற்று. அதற்கு முன் (அறுநூறு ஆண்டுகட்கு முன்) திருஞானம் பெற்ற பிள்ளை யெனப்படும் ஞானசம்பந்தப் பெருமான் தமிழ்நாடு முழுதும் சென்று சிவஞானத்தைப் பரப்பும் திருத்தொண்டை மேற்கொண்டு வந்த காலத்தில் அத்திருப்பணி இனிது நடத்தற்பொருட்டு இன்றியமையாத (முத்துச்) சிவிகை தந்த முன்னைத் தவமுடையது இந்த நடுநாடேயாகும். திருஞானசம்பந்தர் தோன்றுதற்குச் சில ஆண்டுகட்கு முன்னே அறந்தரு திருநாவுக்கரசரைப் பெறுதற்கும், பின்னே ஆலால சுந்தரரைப் பெறுதற்கும் இன்றியமையாத பெருந்தவத்தைச் செய்ததும் இந்த நடுநாடே. தவமும் தவமுடை யார்க்குத் தானே ஆகும்! இத்தவத்தின் விளைவாகத்தான் சிவஞானபோதம் இங்கே தோன்றுவதாயிற்று. இதன் வரன் முறையாலும் பொருளுயர்வாலும் அறிஞர்களால் ஆகமாந்தம் என்று இது சிறப்பித்து உரைக்கப்படுகின்றது. ஆகமாந்தமாய்த் திருவருள் ஞானத்தை அள்ளி வழங்கும் இச்சிவஞான போதத்தால் சிவாகம வறிவும் சைவத் திருமுறை ஞானமும் ஒன்றை யொன்று இன்றிய மையாத தொடர்புற்றன. இனி, இதனைத் தந்தருளிய ஆசிரியரது வரலாற்றினைக் காண்போம். தென்பெண்ணையாற்றுக்கும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது நடுநாடு. இந்நாட்டின் தென்னெல்லையாகிய வெள்ளாற்றின் வடகரையில் பெண்ணாகடம் என்பது நல்ல வளம் படைத்த பேரூராகும். இங்கே தூங்கானைமாடம் என்ற திருக்கோயில் உளது. இவ்விடத்தே தான், திருநாவுக்கரசர் தாம் புறச்சமயத்திலிருந்த மாசு நீங்கவேண்டிச் சிவபெருமானைத் தமக்குச் சூலக்குறியும் இடபக்குறியும் பொறித்தருள வேண்டிப் பெற்றார். இங்கே கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிவநெறியொழுகும் வேளாண் பெருமக்கள் வாழ்ந்து வந்தனர். அவருள், குறுக்கையர், களப்பாளர் முதலிய குடிவகை உண்டு. அவருள் களப்பாளரது குடியொன்று இப்பெண்ணாகடத்தில் இருந்து நல்லறங்களைச் செய்து வந்தது. அவருள் அச்சுத களப்பாளர் என்பார் சிறந்து விளங்கினார். பெண்ணாகடத்தவரான இக்களப்பாளர் நடு நாட்டின் வடக்கிலோடும் தென்பெண்ணை யாற்றின் தென்கரையில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த வேளாண் செல்வரொருவர் மகளை மணந்துகொண்டு இல்லிருந்து நல்லறம் புரிந்துவந்தார். அவருடைய பெருமனை இப்போது பண்டைய உருவிழந்து மேடாய்க்கிடக்கிறது. அம்மேட்டில் கிடைக்கப்பெறும் பன்னிற அருங்கற்களும் செங்கற்களும் அங்கே ஒரு பெருமனை இருந்ததென்பதைக் காட்டுகின்றன. இப்பெருமனையின்கண் செல்வஞ் சிறக்க வாழ்ந்த களப்பாளருக்கு மகப்பேறு இல்லாத குறை அவருக்குப் பெரு வருத்தத்தை விளைவித்து வந்தது. அந்நாளில் திருவதிகைக்கு வடக்கில் பெண்ணையின் தென்கரையில் உள்ள திருத் துறையூரில் சைவாசிரியர் ஒருவர் இருந்து அந்நாட்டவர்க்குச் சிவ தீக்கை செய்து சிவநெறியை யுணர்த்தி வந்தார். அவர் சிவாகமங்கள் பலவற்றையும் கற்றுச் சகலாகம பண்டிதர் என்ற சிறப்புப்பெற்று விளங்கினார். வைதிக நூல்கள் பொதுவாகவும் சிவாகமங்கள் சிறப்பு நூல் களாகவும், இருந்து மக்கட்கு இம்மை மறுமைகட்குரிய நல்வாழ்வு நடத்தும் நல்லறங்களை உணர்த்துவன என்பதை நன்குணர்ந்து தம் பால் தீக்கைபெறுவார்க்கு அவற்றை இனிதுணர்த்தித் தானும் நெறி வழுவாது ஒழுகும் நற்பண்பு அவர்பால் அமைந்திருந்தது. அதனால், அவர்பால் மாணவரான செல்வர் பலரும், தங்கட் குண்டாகும் குறைகளைத் தெரிவித்து அறிவுபெறுவது வழக்கம். அவர்கள் பொருட்டு நல்லறிவு கொளுத்தும் வகையிலும் அச்சிவாசாரியார் மேன்மையுற்று விளங்கினார். அதனால் அவர்பால் அச்செல்வர்கட்குப் பெருமதிப்பு உண்டாகியிருந்தது. சகலாகம பண்டிதரும் அச்சுத களப்பாளர்க்கு ஞானாசிரியராக இருந்து சமயவுணர்வும் சமயவொழுக்கமும் கற்பித்து வந்தார். சிவாசாரியார்பால் களப்பாளர் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டு வாழ்ந்தார். அதனால், அச்சுத களப்பாளர் தமக்கு மகப்பேறில்லாத குறையைக் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் அவர்க்குத் தெரிவித்து வந்தார். ஞானாசிரியரும், அவரைச் சைவத் திருமுறை களை நாடோறும் ஓதி வருமாறு பணித்து வந்தார். நாள் தவறினும் சைவத் திருமுறைகளை ஓதும் கடப் பாட்டில் தவறாது ஒழுகிய களப்பாளர், ஒரு நாள் மகப்பேற்றின் கண் தமக்கு இருக்கும் அளவிலா வேட்கையை ஆர்வத்தோடு தெரிவித்தார். உடனே, அருணந்தி சிவாச்சாரியார் என்ற அவர் திருமுறையேட்டைக் கொணர்ந்து எதிரில் வைத்து அதனைச் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலும் திருமேனியுமாக எண்ணி வலம் வந்து வழிபாடியற்றி அதன்கட் கயிறு சாத்துமாறு களப்பாளருக்கு உரைத்தார். அவரும் அவ்வண்ணமே வணங்கி வழிபட்டுக் கயிறு சாத்தினார். சாத்திய விடத்து, திருஞான சம்பந்தப் பெருமான் பாடியருளிய “கண்காட்டும் நுதலானும்” என்னும் தொடக்கத்தையுடைய திருவெண்காட்டுத் திருப்பதிகத்து இரண்டாம் திருப்பாட்டுக் காட்சியளித்தது. “பேயடையா பிரிவெய்தும், பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர், ஐயுறவேண்டா வொன்றும், வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாம் தீவினையே” என்பது அத்திருப்பாட்டு. அதனை ஒருமுறைக்குப் பன்முறை படித்தனர்; படிக்குந்தோறும் பேரின்பம் பெருகிற்று. அருகிருந்த ஞானாசிரியரும் ஏனைய உறவினரும் நண்பர்களும் பேருவகையால் பெருமகிழ்வுகொண்டனர். “பிள்ளையினோடு உள்ளம் நினைவா யினவே வரம் பெறுவர், ஒன்றும் ஐயுறவேண்டா” என்ற தொடர்களைச் சொல்லிச் சொல்லி எல்லையில்லாத இன்பமுற்றனர். சைவத் திருமுறைகளைத் திருவருள் முறை யென்பது இது பற்றியே என இறும்பூது கொண்டனர். சிவாசாரியரும் திருவெண்காட்டுச் சிறப்பும் முக்குள நீராட்டின் முழு நலமும் மிக்க அழகாக எடுத்துக் கூறி விரைவில் திருவெண்காடு செல்லுமாறு அச்சுதகளப்பாளருக்கு ஆணையிட்டருளினார். களப்பாளரும் அவர் மனைவியாரும் நல்ல நாளொன்றில் பெண்ணாகடத்தினின்றும் புறப்பட்டுத் திருவெண்காடு நோக்கிச் சென்றனர். அவருடைய நெருங்கிய உறவினருட் சிலர் உடன் வந்தனர். அனைவரும் திருக்கூடலையாற்றூர், தில்லை முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொள்ளிடத்தின் தென்கரையடைந்து திருநல்லூர்ப் பெருமணம், சீர்காழி முதலிய திருப்பதிகட்குச் சென்று சிவபரம்பொருளைப் பரவி வழிபட்டுக்கொண்டு திருவெண்காடு சென்று சேர்ந்தனர். அங்கே தக்கதோரிடம் அமைத்து நாடோறும் முக்குளத்தில் நீராடித் திருவெண் காட்டில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அங்கு எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் திருவெண்காடுடைய மகாதேவர் என்பது பெயர். ஊருக்கு நாங்கூர் என்றும் கோயிலுக்குத் திருவெண்காடு என்றும் நெடுங்காலம் வரையில் பெயர்கள் வழங்கிவந்தன. மூன்றாம் இராசராச சோழ தேவர் காலத்தில் தான் அவ்வூர்க்குத் திருவெண்காடு என்ற பெயர் வழங்கியதென்பது அவ்வூர்க் கல்வெட்டுக்களால் தெரிகிறது. திருவெண்காட்டில் திருவெண்காடுடைய மகாதேவரை வழிபட்டு வருங்காலையில், ஒருநாள் இரவு, அச்சு தகளப்பாளர் நல்லதொரு கனவு கண்டார். திருவெண்காடுடைய பெருமான் முதியவர் ஒருவர் உருவில் தோன்றி, “உனக்கு இப்பிறப்பில் மகற் பேறு உண்டாதல் அரிது, ஆயினும் நீ மெய்யன்பர் மொழிந்த திருமுறைத் திருப்பாட்டுக்களை உண்மையன்போடு நம்பி எம்மை வழிபடுகின்றாய்; ஆதலால், அத்திருப் பாட்டுக்களை நல்கிய திருஞான சம்பந்தர் போலவே திருவருள் ஞானத்தை மக்கட்கு இனிதெடுத்து உணர்த்தவல்ல நன்மகனைத் தருகின்றோம்; இனி, மனக்கவலை யொழிக” என்று சொல்லித் திருநீறளித்து மறைந் தருளினார். விழித்தெழுந்த களப்பாளர் தாம் கண்ட கனவை மனைவியாருக்குத் தெரிவித்து முன்னையினும் அன்பு பெருகத் திருக்கோயிலுக்குச் சென்று முக்குளத்தில் நீராடித் திருவெண் காடுடைய பெருமானை வணங்கி அவ்விறைவன் பேரருளை வியந்து பாராட்டிப் பரவினார். சின்னாட்கள் கழிந்ததும், களப்பாளருடைய மனைவியார் கருவுற்றார். அது தெரிந்த ஞானாசிரியரும் உறவினரும் நண்பரும் மிக்க மகிழ்ச்சி கொண்டார்கள். பின்னர் அவர் மனைவியார் கருவுயிர்க்கும் வரையில் திருவெண்காட்டிலேயே தங்கி இறைவனை வழிபட்டு வருவாராயினர். நண்பரும் உறவினரும் நல்வாழ்த் தியம்ப, ஞானாசிரியர் முதலிய சான்றோர் திருவெண்காடுடைய சிவபெருமான் திருவருளை நினைந்து பரவி வாழ்த்த, நல்லோரையில், களப்பாளர் மனைவியார் ஓர் ஆண் மகவைக் கருவுயிர்த்தனர். உலகு விளங்கத் தோன்றும் இளஞாயிறுபோல சிவஞானப் பேரொளி விளங்கத் தோன்றிய அச்செல்வக் குழவியைக் கண்டு மகிழ்ந்த அனைவரும் கண்பெற்ற பயன்பெற்றுக் கழிபேருவகையிற் களித்தனர். நாட்கள் சில சென்றன. மகப்பேறு நிகழ்ந்த வழி நிகழ்த்துதற்குரிய சடங்குகளை நிகழ்த்தினர். அப்போது அக்குழவிக்குத் திருவெண்காடுடைய பெருமானுடைய திருப்பெயரை வடமொழியில் மொழிபெயர்த்து அங்கே கூடியிருந்த சிவாசாரியரை உள்ளிட்ட சான்றோர், சுவேத வனப் பெருமாள் என்று பெயரிட்டனர். பின்பு, அச்சுதகளப்பாளர் தம் மனைவியாரோடும் திருமகனாரோடும் உற்றார் உறவினர் உடன்வரத் திருப்பெண்ணா கடம் வந்து சேர்ந்து இனிதிருக்கலானார். அக்காலத்தே அவர் திருவெண்காட்டிலிருந்த முக்குளம் போலப் பெண்ணாகடத்திலும் முக்குளம் அமைத்தனரெனச் செவி வழிச் செய்தி கூறுகிறது. அந்த முக்குளம் இன்றும் பெண்ணாகடத்தில் இருக்கிறது. அவர் திருவெண்காடுடைய பெருமானைத் திருத்தூங்கானை மாடத்தில் எழுந்தருள்வித்து நிவந்தங்களுக்காக நிலங்கள் விட்டாரென்றும், அவை பின்னர் மறைந்து போயின வென்றும் பெண்ணாகடத் திலுள்ள அறிஞர் கூறுகின்றனர். நாடோறும் முக்குளத்தில் மூழ்கித் தாம் எழுந்தருளி வைத்த திருவெண்காடுடைய பெருமானைக் களப்பாளர் அன்போடு வழி பட்டுக் கொண்டிருக்கையில் அப்பகுதியில் நிகழ்ந்த போரில் அவர் உயிர் கொடுத்துப் புகழ்பெற்றார். திருவெண்ணெய் நல்லூரில் இருந்த அவருடைய மைத்துனர் சுவேதவனப் பெருமாளை அவர் தாயாருடன் திருவெண்ணெய்நல்லூருக்கு அழைத்துச் சென்றார். சுவேதவனப் பெருமாள் திருவெண்ணெய்நல்லூரில் தம்முடைய நல்லம்மான் மனையில் வளர்ந்து வந்தார். வருகையில் சுவேதவனப் பெருமாளுக்கு இரண்டாண்டுகள் நிறைந்தன; மூன்றாம் ஆண்டு நடைபெற்று வருகையில் திப்பிய நிகழ்ச்சியொன்று நடந்தது. திருக்கயிலையில் பெருங்காவல் பூண்டொழுகும் நந்தி யெம்பெருமானுடைய திருவருண் மரபில் வந்த சமய குரவர் நால்வருள் நான்காமவராகிய பரஞ்சோதி முனிவர் திருவெண்ணெய்நல்லூர் வழியாக எழுந்தருளினார். அங்கே முன்னைத் தவத்தால் முழுதுணர்வுடையவராய் இளமைத் திருமேனிகொண்டு வளர்ந்து வந்த சுவேதவனப் பெருமாள் என்னும் முனிவரைக் கண்டார். கண்டதும், அவரையடைந்து அவர்க்குத் திருவருள் ஞானமென்னும் சிவஞானச் செம்பொருளை யுணர்த்தி, சத்திய ஞான தரிசினி யென்னும் தமது ஞானாசிரியர் பெயரையே மெய்கண்டான் எனத் தமிழில் மொழி பெயர்த் திட்டு, “இப்போது நல்கிய சிவஞானத்தை இனிய தமிழில் அமைத்து எல்லா மக்கட்கும் வழங்குக” என இயம்பிச் சென்றார். திருவருள் ஞானம் பெற்ற மெய்கண்டதேவர், திருவெண்ணெய் நல்லூரிலிருக்கும் திருவருட்டுறை யென்னும் திருக்கோயிலில் உள்ள பொல்லாப் பிள்ளையாரை வணங்கி, வேறுபட விரிந்திருந்த கலைஞானங்களைக் கேட்டுத் தெளிவுபெற்றார். பின்பு, தாம் கேட்டு இன்புற்ற சிவஞானத்தைச் சிவஞானபோதம் என்று பெயரிய செந்தமிழ் நூலாக எழுதித் தம்பால் அன்போடு வந்தார் பலருக்கும் அறிவுறுத்துவாராயினர். அவருரைக்கும் சிவஞானப் பேருரை பண்டு, திருமூலர் திருஞான சம்பந்தர் முதலிய திருவருள் ஞானச்செல்வர் உரைத்தருளிய செந்தமிழ்ப் பெருநூல்களின் நுண்பொருள்களை இனிதிற் காட்டி மக்களை மெய்ந்நெறிக்கண் செலுத்தும் மேதகவு உடையதாயிருப்பதைத் தெளிந்தோர் பலரும் பெரிதெடுத்துப் பேசிப் பாராட்டினர். மெய்கண்டாரது ஞானப்புகழ் தமிழகமெங்கும் பரவுவதாயிற்று. ஆங்காங்கு வாழ்ந்த அறிஞர் பலர். மெய்கண்டார்பால் உண்மை மாணவராய் நின்று ஞானவுரை கேட்டனர். அவர் தொகை நாற்பத்தொன்பது என அறிஞர் நவிலுவர். அவருள் முதல் மாணவராகத் திகழ்ந்தவர் அவர் குலகுருவாகிய அருணந்தி சிவனாராவர். உண்மை விளக்கம் என்னும் நூலையுரைத்த மனவாசகங் கடந்தாரும், துகளறு போதம் செய்த சிற்றம்பல நாடிகளும் மெய்கண்டார் பால் மெய்யுணர்வு பெற்ற மாணவர்கள் என்பர். மெய்கண்டார் வரலாற்றாராய்ச்சி 1. மெய்கண்ட தேவருக்குரிய ஊராகிய பெண்ணாகடம், கடந்தை யென்றும் வழங்கும்; முடம், முடந்தையென்றும், குடம் குடந்தை யென்றும் வழங்குவதுபோலக் கடம், கடந்தையென வந்தது எனக் கோடல் வேண்டும். திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் முதலிய சான்றோரெல்லாம் இவ்வூரைக் கடந்தை யென்றுகுறித்தருளுகின்றார் களெனினும், பெண்ணாகடம் என்ற பெயரும் உண்டென்பது தெளிய “தண்பெண்ணாகடம்” எனத் திருநாவுக்கரசரும் “நல்ல பெண்ணாகடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சும் தூங்கானை மாடம்” என்று திருஞான சம்பந்தரும் தெரிவித்தருளுவது ஈண்டு நோக்கத்தக்கது. இது “நல்ல பெண்ணாகடம்” என்று சிறப்பிக்கப்பெற்றது கண்ட பிற்காலத்துச் சான்றோரும், இதனை நல்ல பெண்ணாகடம் என்று வழங்கினர்; “நல்ல பெண்ணாகடத்துத் திருத் தூங்கானை மாடமுடைய நாயனார்”1 என்று கல்வெட்டுக்கள் கூறுவது காண்க. இதனை இடைக்காலத்தார், “வடகரை இராஜாதி ராஜ வளநாட்டு மேற்கானாட்டுப் பிரமதேயமான முடிகொண்ட சோழச் சதிர்வேதிமங்கலம்”2 என்று வழங்கியதுமுண்டு. 2. இப்பெண்ணாகடத்துத் தலபுராணம், பெண், ஆ, கடம் எனப் பிரித்து, பெண்ணென்றது தேவகன்னியரையும், ஆ என்றது தெய்வப் பசுவாகிய காமதேனுவையும், கடம் என்றது தேவவுலக யானையாகிய அயிராவதத்தையும் குறிக்குமென்றும், எனவே, தேவகன்னியரும் காமதேனுவும் வெள்ளையானையும் வழி பட்டதுபற்றி, இவ்வூர்ப் பெண்ணாகடம் எனப் பெயர் பெறுவதா யிற்று என்றும் கூறுகிறது. 3. இவ்வூரிலுள்ள திருக்கோயில் யானை யொன்று நிற்பது போலும் வடிவத்தில் கட்டப்பெற்றிருத்தலால், தூங்கானை மாடம் என்று சிறப்பிக்கப் பெறுகிறது. இவ்வமைப்பு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்பே அமைந்தது என்று அந்நாளில் வாழ்ந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் இதனை முறையே, “செந் தாமரையின் பூவார்கடந்தையுள் தூங்கானை மாடம்” என்றும், “நல்ல பெண்ணாகடத்துப் பெருங்கோயில் சேர் பிறை யுரிஞ்சும் தூங்கானை மாடம்” என்றும் விதந்து கூறுவதால் அறிகின்றோம். இங்குள்ள கல்வெட்டொன்று3 “கோச் செங்கணீச் சுர முடைய மகாதேவர்” என இவ்வூர் இறைவனைக் குறிப்பதால், இத்தூங்கானை மாடம் கோச் செங்கட் சோழ வேந்தர் கட்டியது என்பது உணரப்படும். 4. இவ்வூர் இன்று போலவே பண்டும் பெருவளம் படைத்த பேரூராக விளங்கிற்று. வானளாவ உயர்ந்த மாடங்களும் மதில் சூழ்ந்த பெருமனைகளும், மிகவுயர்ந்த சோலைகளுமிருந்து இவ்வூரின் நலத்தை விளக்கி நின்றன. இதனை முடிகொண்ட சோழச் சதுர் வேதிமங்கலமெனக் கல்வெட்டுக்கள்1 கூறுதற்கேற்ப, திருஞான சம்பந்தர், “கிடங்கும் மதிலும் சுலாவி யெங்கும் கெழுமனைகள் தோறும் மறையின் ஒலி தொடங்கும் கடந்தை” என்பது ஈண்டு நினைவுகூரத் தகுவது. இவ்வூர்க்கண் நிற்கும் சோலைகள், “இருஞ் சோலை திங்கள் தடவும் கடந்தை” யெனத் திருஞானசம்பந்தர் புகழ்ந்தோதும் சிறப்புப் பெற்றுள்ளன. 5. இனி, சேக்கிழார் பெருமான், இவ்வூரில் தோன்றிச் சிறப்புற்ற கலிக்கம்பர் வரலாறு கூறுமிடத்து, இவ்வூரை, “உரிமை யொழுக்கம் தலைநின்ற உயர்தொன்மரபில் நீடுமனைத், தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய், வரு மஞ்சுறையும் மலர்ச் சோலை மருங்கு சூழ்ந்த வளம்புறவில், பெருமை யுலகுபெற விளங்கும் மேல்பாற் பெண்ணாகட மூதூர்” என்று சிறப்பித்துள்ளார். இவ்வூர் வாழ்நர் ஒழுக்கங் குன்றாத மரபினரென்றும் இல்லறமாகிய நல்லறத்தில் திரியாதவ ரென்றும் சேக்கிழார் பாராட்டுவது குறிக்கொண்டு நோக்கத்தக்கது. இவ்வுலகு பெருமை பெறுமாறு இவ்வூர் விளங்குகிறது என்று சேக்கிழார் பெருமான் உரைத்ததற் கேற்ப அவர்க்குச் சிறிது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப்பின் மெய்கண்ட தேவர் தோன்றிச் சைவமும் தமிழும் உலகெலாம் புகழும் பெருமை மிகச் செய்தமை அவர் மொழியை நிறைமொழியாக்கி நிற்கிறது. 6. இப்பெண்ணாகடம் என்னும் மூதூரின்கண் களப்பாளர் வாழ்ந்து வந்தனர் என்பதற்கு இவ்வூர்க் கல்வெட்டு ஒன்றும் குறிக்கவில்லை; ஆயினும், இதற்கு அண்மையிலுள்ள திரு வரத் துறையில் அவர்கள் வாழ்ந்த திறத்தை அவ்வூர்க் கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. மெய்கண்ட தேவரைத் தமக்குப் புதல்வராகப் பெறும் தவஞ் செய்த அச்சுதகளப்பாளர் காராளர் குலத்திற் பிறந்து செல்வஞ் சிறந்து விளங்கினா ரென்பதை, “கடந்தைமா நகரமர்ந்த காராளர் தங்குலத்தில், படர்ந்த நாம அச்சுதகளப்பாளர்” தம் பக்கல், இடம் பெறும் பல செல்வமும் எய்தி, மேம்பட்டிருந்தாரென மெய்கண்ட சிவாசாரியார் புராணம் கூறுகிறது. களப்பாளர் என்ற சிறப்பு காராளர்க்கு உண்டென்பதைக் கார்மண்டல சதகம் குறிக்கிறது. பெண்ணாகடம், விருத்தாசலம் என்ற இடங்களில் வாழும் கார்காத்த வேளாளரிடையே களப்பாளப் பிள்ளை என்ற பட்டமுடையார் இன்றும் இருந்து வருகிறார்கள். பெண்ணா கடத்திலுள்ள களப்பாளர்மேடு இதற்கு வலிய சான்றாவது முன்பே கூறப்பட்டது. இக்களப்பாளர்களைச் சிலர் களப்பிரர் எனக் கூறுவர்; அது பற்றிய ஆராய்ச்சியைப் பிறிதோரிடத்தில் காண்க. 7. மெய்கண்டாருடைய தந்தையான அச்சுத களப்பாளரை நினைக்கும் போது, தமிழ் நாவலர் சரிதையில் அச்சுத களப்பாளர் ஒருவர் பேசப்படுவது நினைவுக்குவரும். தமிழ் நாவலர் சரிதை கூறும் அச்சுதகளப்பாளர் தில்லையில் வாழ்ந்தவர். இவர் பெண்ணாகடத்தில் வாழ்ந்தவர். தில்லை அச்சுதகளப்பாளர் காலத்தில் மூவேந்தரும் அவரால் தளையிடப்பெற்றனர் என்று அச்சரிதை கூறுகிறது; அதனைக் காண்போர்க்கு அம்மூவரும் வலிகுன்றியிருந்த காலம் அவர் காலம் என்பது இனிது விளங்கும். பெண்ணாகடமாகிய கடந்தையில் வாழ்ந்த அச்சுதகளப்பாளர் காலத்தில் தொண்டை நாடு, சோழநாடு, பாண்டிநாடு, கொங்கு நாடு என்ற எல்லா நாடுகளும் சீர்த்த வேந்தராட்சியில் இருந்தன. தொண்டை நாடும் சோழ நாடும் முதல் இராசராசன் வழிவந்த சோழ வேந்தராட்சியிலும், பாண்டி நாடு பாண்டி மன்னராட்சியிலும், கொங்கு நாடு கொங்குச் சோழராட்சியிலும் இனிது இருந்தன. இவர்கள் பலரும் அறிவு, ஆண்மை, பொருள், படை என்ற கூறுகளில் குறைவின்றியிருந்தனர். இதற்கு அக்காலத்துக் கல்வெட்டுக்களே மிக்க சான்று பகருகின்றன. சேர நாடு மட்டில் சேரலர் நாடாகிப் பின் கேரள நாடெனத் திரிந்து, தமிழ்நலம் குறைந்து மொழியிலும் வாழ்க்கை முறையிலும் வேறுபட்டுப் போயிற்று. சேரநாட்டவர் மிளகு வாணிகராகவும் குதிரை வாணிகராகவும் பன்னிரண்டு பதின் மூன்றாம் நூற்றாண்டுகளில் சோழ பாண்டிய நாடுகளில் திரிந்தனரெனக் கல்வெட்டுக்கள் கட்டுரைக்கின்றன. ஆதலால் தமிழ் மூவேந்தர் தில்லை அச்சுத களப்பாளரால் தளையிடப் பெற்ற செய்தி பட்டாங்கு மேற் கொள்ளத்தக்கதொன்றன்று. ஒருகால், இவர்கள் சோழரெனவும் பாண்டியரெனவும் பட்டப்பெயர் பெற்று நிலவிய தலைவர்களாக இருக்கலாம். ஆகவே, கடந்தை அச்சுத களப்பாளர் வேறு, தில்லை அச்சுத களப்பாளர் வேறெனக் கொள்வது சிறப்பு. 8. கடந்தை அச்சுத களப்பாளர் திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த செல்வர் ஒருவருடைய மகளை மணந்து கொண்ட செய்தியைச் சைவ சந்தானாசாரியர் புராணம் குறிக்கவில்லை. சைவத் திரு. மறைமலை அடிகளார், திரு வெண்ணெய்நல்லூரில் அந்நாளில் சடையப்ப வள்ளல் என்பார் வாழ்ந்தாராகலின், சிறப்புடைய அவருடைய மகளையே நம் அச்சுதகளப்பாளர் மணந்துகொண்டார் என்று குறிக்கின்றார். மற்று, திருவெண்ணெய் நல்லூரில் சடையப்பர் வாழ்ந்த காலம், மெய்கண்டார் காலத்துக்குப் பெரிதும் முற்பட்டதாகலின், அடிகள் கூற்றுப் பொருந்துவதாக இல்லை; சடையப்பர் குடியில் தோன்றிய மகளொருத்தியை அச்சுத களப்பாளர் மணந்துகொண்டார் என்பரேல் அது பொருத்தமாக இருக்கும். 9. அச்சுதகளப்பாளர் தமது அருமை மனைவியாருடன் திரு வெண்காடு சென்று நாடோறும் முக்குள நீரிற் படிந்து திருவெண் காடுடைய பெருமானை மகப்பேறு வேண்டி வழிபட்டு வருகையில், இறைவன், அவர் கனவில் தோன்றி, “எம்பால் பதியும் அன்ப கேள்: இம்மையிற் பாலனைப் பயக்கும் விதி நினக்கு இலை” என்று கூறினன் என்றும், அது கேட்டு, “பொன்னங் கொன்றையம் மதியொடு மௌலியிற் புனைந்தோய், மன்னு பூம்புகலிப் பெருமான் மன மகிழ்ந்து சொன் னலங்களும் பொருள்களும் சுரந்தருள் பொழிய, “உம்மை யேத்து நற்றமிழ் மறைப் பாடலை யுன்னி மெய்மை யாகவே நம்பினேன்; விதியிது கண்டாய், அம்மை காணநல் அருள்நடம் புரியுமா ரமுதே இம்மையிற் கதியருளும் நற்புதல்வனை ஈவாய்” என்று சொல்லிக் களப்பாளர் கைகுவித்து வணங்கினர். இறைவன், அவர்பால் அருள் கூர்ந்து, “நன்றுனது துதிகேட்டு மகிழ்ந்தோம் முன்னம் ஞான போனகன் நம்மைத் துதித்த பாடல் ஒன்றுறுதி கொளும் நின்பால் உலகம் ஏத்த உயர்காழிக் கவுணியன்போல் ஒருவன் வந்து நன்றருளும் மகவுருவாய் நண்ணும்” என்று நவின்றருளினான் என்று சைவ சந்தானாசாரியர் புராணம் கூறுகிறது. மேலும், மெய்கண்ட தேவர் பிறந்தருளிய நிகழ்ச்சியைக் கூறலுற்ற இப்புராண ஆசிரியரான திருவாரூர்ச் சுவாமிநாத தேசிகரவர்கள், அதனைத் தாம் பாட நேர்ந்த திருவருள் வாய்ப்பை எண்ணி மனத்தே மிக்க மகிழ்ச்சி பொங்குதலால், “சந்தமறை யாகமங்கள் வழியொழுகு தாபதர்கள் சலிப்பற் றோங்க, மந்தபரி பாகருநல் லத்துவித மெய்யுணர்ந்து மகிழ்ச்சி யெய்த எந்தை யருள் சிவஞான போதமறை இயற்றமிழில் இனிது மேவ” “நல்வியாத முனியுரைசெய் சூத்திரத்தின் பாடிய மோர்நான்குங் கொண்ட சொல்வாய்மை பொருள்வாய்மை தெளிதலுறத் தேராது சோக முற்றோர் எல்லாரும் அத்துவித சுத்தநிலை இனி தெய்திச்1 “சோகமேவப் பொல்லாத சமயிகளும் அதிசயிப்பப் புவனிமிசைப் போத மேற” “நலமலியும் சிவனடியார் எஞ்ஞான்றும் ஆனந்தம் நண்ணி யோங்க தலமலியு மெந்நாட்டும் தென்னாடு தலையெனவே சகம் கொண்டாடக் கலைமலியும் பிள்ளையார் ஒருவர் தாம் தந்தை மனக் கவலைதீர நிலவலயத் தவதரித்தார் நிறையன்பர் சுற்றத்தார் மகிழ்ச்சி நீட” என்று பல பாட்டுக்களால் தெரிவித்துப் பாராட்டுகின்றார். இந்நிகழ்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்த திரு.கா.சுப்பிரமணியப் பிள்ளையவர்கள் கூறுவது நோக்கத்தக்கது: “கனவிற் கண்ட தெல்லாம் பொய்யென்று ஒதுக்கிவிடுதல் தவறு. கனவென்பது நுண்ணுடம்பின் நுகர்ச்சியாகவுளது. நமது கண்ணிற்குப் புலனாக நின்ற உடம்பே தூலவுடம்பென்று கூறப்படும். அவ்வுடம்பு கொண்டு, நனவிலே, உயிர், போதல் வருதல் முதலியன செய்யும். தூங்கும் போது, கட்புலனாகாத நுண்ணுடம்பு பலவித நுகர்ச்சி களையடைதல் கூடும். அருந்தவத்தினரது கட்புலனுக்கு அருள் செய்யும் கடவுள், அவரது நுண்ணுடம்பிற்கு மாத்திரையே புலனாகும் வண்ணம் தோன்றுதலும் இயல்பே. தமது நுண்ணுடம்பைப் பருவுடம்பினின்றும் வேறுபிரிக்கும் ஆற்றலுடைய யோகிகள் கூட ஏனையோரது நுண்ணுடம்பிற்குப் புலனாகும் வன்மையுடையா ரென்பது இவ்வாராய்ச்சியில் (Psychic Research) வல்ல மேலைநாட்டுப் பண்டிதர் சிலரும் ஒப்புக்கொள்ளக் கூடியதே. நனவிற் கண்டது கனவில் உருவெளித் தோற்றம்போல் புலனாவது இதனின் வேறாகும். கடவுளும் யோகிகளும் கனவில் தோன்றும் முறைவேறு. பின்னது பிற்பயன் விளைப்பது; முன்னது கைகண்டபயன் ஒன்றும் விளைப்பதில்லை. கனவில் தோன்றிய பெருமக்கள் தாம் அங்ஙனம் தோன்றியதை நனவில் உரைத்தல் கூடுமாதலின் அன்னவர் தோற்றத்தைக் கனவின் பொய்த்தோற்றத்தோடு பிறழக் கொள்ளுதல் தவறாகும். இதன் நுட்பங்கள் இவண் விரிக்கிற் பெருகும்.” 10. இனி, அச்சுத களப்பாளருடைய மனைவியார் மெய் கண்டதேவரைக் கருக்கொண்டபோது திருவெண்காட்டில் இருந்தாரென்பது உண்மை; கரு முதிரத் தொடங்கியதும் அவர் பெண்ணாகடம் சென்று சேர்ந்தாரென்பதே பொருத்தம்; கருவுயிர்க்குங்காறும் திருவெண்காட்டிலிருந்தா ரென்பதும், தாம் பெற்ற புதல்வருக்குத் திருப்பெயர் சூட்டுங்காறும் திருவெண் காட்டில் இருந்தாரென்பதும் ஆராய்தற்குரியன என்று சில அறிஞர் கூறுகின்றனர். சைவசந்தானாசிரியர் புராணம், மெய்கண்டார் திருவெண்காட்டிலே பிறந்தார் என்பதை மேலே காட்டிய பாட்டுக்களாற் பெறவைத்து, அதனையே பின்பு “வெள்ளைமாவனத் தடிகள்பால் விடைபெற்று மீண்டு, பிள்ளையோடு நன்மனைவியும் சுற்றமும் பிறரும் உள்ளமாருநன் மகிழ்ச்சியி னொருவுதண் கடந்தை எள்ளருங்கதிர் மாளிகை இடத்து மேவினரால்” என்று வற்புறுத்தி, மெய்கண்டார்க்குத் திருப்பெயரிட்ட இடம் பெண்ணாகடமே என்பது விளங்க, “ஒரு சுவேதவனப் பெருமாளென வொண்பேர், உரிமையாலிடக் கடந்தையார் உவப்புற” என்று விளம்புகின்றது. வேறு சில அறிஞர், மெய்கண்டதேவர் பிறந்ததும், சுவேதவனப்பெருமாள் என்று பிள்ளைத் திருப்பெயர் சூட்டப் பெற்றதும் திருவெண் காட்டிலேயே என்று தாம் எழுதிய “மெய்கண்ட தேவர் சரித்திரச் சுருக்க”த்தில் குறித்துள்ளனர் 1. மெய்கண்டார் பிறந்த காலையில், மகப்பேற்றுக்குரிய சடங்குகளை எல்லாம் பெற்றோர் திருவெண்காட்டிலேயே செய்திருக்கிறபோது, அவற்றுள் ஒன்றாகிய பெயர் சூட்டு நிகழ்ச்சி மட்டில் பெண்ணாகடத்தில் செய்யப்பெற்றதென்பது சிறவாது; அதுபற்றியே சிவஞான மாபாடிய வெளியீட்டின்கண் மெய்கண்ட தேவரது சரித்திரச் சுருக்கம் எழுதிச் சேர்த்த சான்றோர், மகப்பேற்றுச் சடங்குகளும் பெயரீடும் திருவெண்காட்டிலே நிகழ்ந்தன என்றனர். இனி, கி. பி. பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலும் அதற்கு முன்னும் திருவெண்காட்டில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் பெயர், திருவெண்காடுடைய மகாதேவர் என்று குறிக்கப்பெற்றதே யன்றி, சுவேதவனப் பெருமாள் என்று வடமொழியில் மொழிபெயர்க்கப் பெறவேயில்லை. பதினைந்து பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய கல்வெட்டுக்கள், “சுவேதாரண்ய நாதர் 2” என்று வட மொழியில் மொழிபெயர்த்த பெயர்களைக் கூறுகின்றன. மற்று, மெய் கண்டதேவர் காலத்தில், அவர் பெற்றோர்க்கு ஞானாசிரியராகவும், அவர்க்கு முதன் மாணவராகவும் விளங்கிய அருணந்தி சிவாசாரியார், தாம் பாடிய இருபா விருபது என்னும் நூலில், தமது ஞானாசிரியரான மெய்கண்டதேவரை, சுவேதவனத்தான் 1 என்று குறிக்கின்றார். இவ்வாறு மொழிபெயர்த்துக் கூறும் வழக்காறு வடமொழிப் பயிற்சியுடையாரிடத்தே அக்காலத்தில் இருந்திருக்கும்போலும் என எண்ண வேண்டியுளது. கல்வெட்டுக் காலங்களில் விசயநகர வேந்தர்கள் தோற்றுவித்த கல்வெட்டுக்கள் ஒழித்து ஒழிந்த அவர்க்குக் காலத்தால் முற்பட்டுத் தோன்றியன வெல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே எடுத்து வழங்குகின்றன. இறைவன் திருப் பெயர் பலவும் திருமுறை யாசிரியன்மார் வழங்கிய சொற்றொடர் களாகவே இருப்பது ஆராய்ச்சி அறிஞர்கள் கண்டறிந்ததாகும். பெண்ணாகடத்திலுள்ள இறைவனைத் திருநாவுக்கரசு சுவாமிகள், “கடந்தைத் தூங்கானைமாடச் சுடர்க் கொழுந்தே” என்றாராக, சுடர்க்கொழுந்து என்ற தொடரையே எடுத்து இறைவனுக்குத் திருப்பெயராக வழங்குவது இன்றும் காணக் கூடிய நிகழ்ச்சி. 11. அச்சுதகளப்பாளர் பெண்ணாகடத்தில் திருவெண் காடுடைய பெருமானை எழுந்தருள்வித்ததற்கும் முக்குளம் ஏற்படுத்தியதற்கும் செவிவழிச் செய்தி யொன்று தவிர நூலாதரவு ஒன்றுமில்லை. மெய்கண்டாருடைய வரலாறு எழுதிய சான்றோருள் எவரும் கூறவில்லை. ஆங்காங்குள்ள கோயில்களில் பண்டை நாளில் வாழ்ந்த தலைவர்கள் எழுந்தருள்வித்த மூர்த்தங்களின் பெயர்கள் இந்நாளில் மறைந்துவிட்டன போலப் பெண்ணா கடத்தில் களப்பாளர் எழுந்தருள்வித்த திருமூர்த்தம் மறைந்து போயிருக்கலாம். ஆனால், அவ்வாறு எழுந்தருள்வித்ததற்குக் கல்வெட்டு ஒன்றும் அக்கோயிலிற் காணப் படவில்லை. இங்கே செய்தது போல, திருவெண்காட்டில் தானும் அச்சுதகளப்பாளர் ஏற்படுத்தியதாக நிவந்தமொன்றும் காணப்படவில்லை. 12. பெண்ணாகடத்தில் இருந்து வளரவேண்டிய மெய்கண்ட தேவர் திருவெண்ணெய்நல்லூருக்கு அவருடைய அம்மானால் அழைத்துச் செல்லப்பெற்றார் என்ற செய்தியைச் சந்தானாசாரியர் புராணம், “இருமைசேர் திருவெண்ணெய் நல்லூரினிலுறையும், அருநன் மாமனார் தம்மனை யெடுத்துவந் தணைந்தார்” என்று கூறுகின்றது. மெய்கண்ட தேவர் திருவெண்ணெய் நல்லூரை யடைந்த செய்திக்குப் பின், அவர் தந்தையான அச்சுதகளப்பாளர் வரலாறும், தாயாரது வரலாறும் ஒரு குறிப்புமின்றி நின்று போகின்றன. அவர்களுடைய பிற்கால வாழ்வைப்பற்றி மெய்கண்டார் வரலாறு கூறிய சந்தானாசாரியர் புராண முடையாரோ, வேறு ஆசிரியர்களோ ஒன்றும் கூறிற்றிலர். மெய்கண்டார் இரண்டாண்டு நிரம்பு முன்னரே திருவெண்ணெய் நல்லூருக்கு அவர் மாமனால் கொண்டு போகப் பெற்றார் என்பதை நோக்க, பெண்ணாகடத்தில் அவரது பெருமனையில் மெய்கண்டார் நெடிது தங்குதற்கேற்ற ஆதரவு இல்லாது போயிற்றென்பது உணரப்படும். அச்சுதகளப்பாளர் போர்த் துறையிலோ வேறு நெறியிலோ சென்று முடிவுபெற்றிருத்தல் வேண்டும்; ஆதரவின்றி யிருந்த மெய்கண்டாரையும் அவர் தாயாரையும் அவருடைய நன்மாமன் தமது திருவெண்ணெய் நல்லூருக்குக் கொண்டு சென்றிருக்கவேண்டும். 13. இனி, அச்சுதகளப்பாளர் திருவெண்காட்டில் இறைவனை வழிபட்டுக்கொண்டிருக்கையில் முக்குளத்தின் கரையில் ஒரு நாள் ஆண் குழந்தை ஒன்று கிடக்கக் கண்டு எடுத்துத் தம் மனைவியார்பால் அளித்து, “இதோ, சுவேதவனப் பெருமாள்” என்று போற்றி அன்பு செய்துவர, இருவரும் அக்குழந்தையைத் தாம் பெற்ற குழந்தை போலவே வளர்த்து வந்தார்கள்; இதனை யறிந்த அவருடைய உறவினர், “வேறோரினத்துப் பிள்ளையை யெடுத்த வளர்க்கின்றார்கள்” என இழித்துப் பேச, அது கேட்கப் பொறாத களப்பாளர் திருவெண்ணெய்நல்லூரில் வாழ்ந்த தம்முடைய மைத்துனரான காங்கேய பூபதி யென்பாரிடம் தந்து திருவெண்ணெய் நல்லூருக்குக் கொண்டுபோகச் செய்தார். அக்குழந்தை பின் திருவெண்ணெய்நல்லூரில் வளர்ந்து நாம் பரவும் மெய்கண்ட தேவராகும் சிறப்பெய்தினான் என்று திரு. J. M. நல்லசாமிப் பிள்ளை கூறுகின்றார். இவ்வாறு கூறுதற்கு அவர் மேற்கண்ட சான்று இதுவெனத் தெரிந்திலது. இது நிற்க, புதுவை, சுத்தானந்த பாரதியாரவர்கள் அச்சுதகளப்பாளர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவரென்று கூறுகின்றார். இன்னோரன்ன கூற்றுக்கட்கு ஆதரவு தேடிச் செல்வது பயனில் உழப்பே தவிர வேறாகாது. 14. மெய்கண்டதேவர் திருவெண்ணெய்நல்லூரில் வளர்ந்து வருங்கால் இரண்டாண்டு நிரம்பி மூன்றாமாண்டெய்தி யிருக்கையில் அவ்வழியே வந்த பரஞ்சோதி முனிவர் சிவஞானச் செம்பொருளை உணர்த்தி மெய்கண்டார் என்று திருப்பெயர் சூட்டிய செய்தி பற்றிக் கூறலுற்ற சான்றோர், “சுவேதவனப் பெருமாள் திருவெண்ணெய் நல்லூரில் இருந்த காலையில் திருக்கயிலாயத்தில் சனற்குமார முனிவருடைய ஞானப் புதல் வராகிய சத்தியஞானதரிசினிபால் ஞானோபதேசம் பெற்ற பரஞ்சோதி மாமுனிவர் அகத்திய முனிவரைக் காண்பதற்கு அவர் வீற்றிருக்கும் பொதியமலைக்குத் தம்முடைய ஒளி விமானமேறி வந்துகொண்டிருந்தார். திருவெண்ணெய்நல்லூர்க்கு அருகே வந்ததும் அவ்விமானம் மேலே செல்லாது நின்றது; உடனே பரஞ்சோதியார் தமது ஞான நாட்டத்தால் உண்மை யுணர்ந்து சுவேதவனப் பெருமாளை யடைந்து அவர்க்குச் சிவஞானத்தை உரைத்துத் தமது ஞானத் தந்தையின் பெயரைத் தமிழ்ப்படுத்தி மெய் கண்டார் என்று திருப்பெயரிட்டுச் சென்றார்” என்பர். இந்நிகழ்ச்சியைச் சைவ சந்தானாசாரியார் புராணம், “வெள்ளி வெற்பமர் விமலனா ரருள்பெறு நந்தி வள்ள லாரடி மலர்புனை சனற்கும ரன்பால் தெள்ளு சத்திய ஞானநற் றரிசினி திருத்தாள் உள்ளு முள்ளமார் ஒருபரஞ் சோதிமா முனிவர் அன்ன குன்றொரீஇத் தென்மல யாசல மணுக மின்னு பேரொளி விமானமீ தேகுறும் வேலைப் பொன்னி னோடுமுத் தெறிதிரைப் பெண்ணைநீர் புடைசூழ் சென்னி மாமதிச் சிவனுறை வெண்ணெய்நற் பதிக்கு நேர தாகவவ் விமான நின்றிடுதலும் நிறைந்த தீர வாலறி வுடைப்பரஞ் சோதியார் தேர்ந்து வாரமோ டிழீஇச் சுவேதவனப் பெருமாட்குச் சேர மெய்யுணர் வெய்திய திறந்திரு வருளால் தேர்ந்து தீக்கையும் மெய்கண்ட நாமமும் செறித்துச் சார்ந்த மந்தணமாஞ் சிவஞான போதத்தை ஈந்து தங்குரு அறிவுறுத்திய பொழிப் பிசைத்தே ஆர்ந்த செந்தமி ழாக்கெனாப் பொதிகையை யடைந்தார்” (24-7) என்று கூறுகிறது. இதுபற்றி ஆராய்ச்சி நிகழ்த்திய திரு.கா.சுப்பிரமணியப் பிள்ளையவர்கள், “சிவபெருமான் தக்க பக்குவமுடையார்க்கு குருவாய் வந்துணர்த்துவது பெரும்பான்மையும் தமது பேரன்பரை நிலைக்களமாகக்கொண்டேயாம். பரஞ்சோதி மாமுனிவர் மெய்கண்டதேவர்க்கு மெய்யுணர்வை அளித்தகாலை, அவர் கடவுளோடு இரண்டறக் கலந்து நிற்கும் நிலையினின்று அருள் செய்தாராகலின், சிவபெருமானே நமது நாயனாருக்கு உண்மைப் பொருள் உணர்த்தியதாகக் கொள்ளவேண்டுமே யொழியப் பரஞ்சோதி முனிவர் தாமே அவ்வாறு உணர்த்தினரென்று கோடல் பொருந்துவதன்றாம். இவ்வாறே உபமன்னியர் கண்ணனுக்கு உபதேசம் செய்ததாகவும், கண்ணன் பார்த்தற்கு அறிவுறுத்தியதாகவும் கூறுப” என்று உரைக்கின்றார். அன்றியும், மிக்க இளமை யிலேயே மெய்கண்டார் ஒப்புயர்வற்ற சிவஞானப் பேற்றுக்கு இலக்காய திறம் பற்றி அவர் கூறுவது ஈண்டு வேண்டற் பால தொன்று: “சுவேதவனப் பெருமாள் முற்பிறவியிலேயே சரியை, கிரியை, யோகம் முதலியன முடித்துச் சிவஞானமடைதற்குரிய பெருந்தவத் தினராதலின் இரண்டு வயதளவிலே அடிசேர் ஞானம் அடைதற்குரிய சாமுசித்தநிலை எய்தினர். முற்பிறவியில் உறுதியாகப் பயின்ற கல்வி இப்பிறவியில் இளமையில் எளிதாகத் தழைத் தோங்கி வளர்வதை இயற்கையிலேயே கணிதநூல் வன்மை பெரிதாகப் படைத்திலங்கும் சில பிள்ளைகளிடம் கண்கூடாக இன்றும் காண்கின்றோம். இலக்கியங்களை மூன்றல்லது நான்கு வயதிற் படித்துப் பொருள் கூறும் குழந்தை யொன்று சமீப காலத்தில் பர்மாவில் தோன்றியதாகக் கேள்விப்படுகிறோம். ‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க் கெழுமையு மேமாப் புடைத்து’ என்றார் திருவள்ளுவர். ஒரு பிறவியிற் கற்ற கல்வியின் பயனாகிய நல்லறிவு பல பிறவிகளிலும் உயிரோடு கலந்து வளர்ந்து நிலைபெறுதல் போலப் பல பிறவியிற் கற்ற பெரும் பயன் ஒரு பிறவியிலே இளம்பருவத்திலேயே அளவிலடங்காது பொங்கி மிளிர்தல் கூடும். அத்தகைய கல்விபோலப் பல பிறவிகளிற் கடவுண்மாட் டன்பு செலுத்தி இயற்றப்படும் அருந்தவமானது ஒரு பிறவியிலே அத்தவத்தின் எல்லையற்ற பயனாகிய கடவுளது அருட் காட்சியை அளிக்கவல்லது. சைவ சித்தாந்த சமயத்துக்கு முதற்றலைவராகிய ஞானசம்பந்தப் பெருமானும் சித்தாந்த ஞான பரம்பரைக்கு முதற்றலைவராகிய மெய்கண்டதேவ நாயனாரும் உலகமுய்யவே தோன்றியருளினாரென்பது அவர்கள் குழவிப் பருவத்திலேயே உலகநெறி செல்லாது கடவுளது அருண்ஞான நெறியிலேயே நிற்கும் உயர்நிலை எய்தினமையால் விளங்கும்.” 15. திருவெண்ணெய்நல்லூரில் கோயில் கொண்டிருக்கும் பொல்லாப் பிள்ளையார்பால் மெய்கண்டார் கலைஞானங்களைக் கேட்டுத் தெளிந்தாரென்பது, “அருட்டுரைக் கணேயமர் பொல்லாப் பிள்ளையாரருளால், மருட்டிலாமலே சிந்தித்துத் தெளிந்து” என்று சந்தானாசாரியர் புராணம் கூறுவதனாலும் அறியப்படும். சிவஞானத்தோடு கலைஞானமும் வேண்டுமென்பது, திருஞான சம்பந்தர் பெற்ற சிவஞான வரலாற்றாலும் தெளியப்படுகிறது. ஞானசம்பந்தப் பெருமான் பெற்ற ஞானத்தைக் கூறவந்த சேக்கிழார் பெருமான், “உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்” என்பதனாலும் இஃது அறியப்படும். இச்சிறப்புப் பற்றியே மெய்கண்ட தேவர், தாம் அருளிய சிவஞானபோதத்துக் காப்பில், “பொல்லார் இணைமலர், நல்லார் புனைவரே” என்று திருவெண்ணெய் நல்லூர்ப் பொல்லாப்பிள்ளையாரை முதற்கண் வணங்கு வதைக் காண்கின்றோம். பரஞ்சோதி முனிவர்பால் சிவஞானமும் பொல்லாப் பிள்ளையார்பால் கலை ஞானமும் பெற்று நிரம்பிய மெய் கண்டதேவர் தீவிய இனிய செந்தமிழ்ச் சொற்களால் சிவஞான போதத்தை உரைத்தருளினார். அதனை யறிவு மிக்க மாணவர் பலர் அமைந்திருந்து கேட்டு மெய்யுணர் வெய்தினர். 16. இனி, இச்சிவஞான போதத்தை நல்கியருளிய மெய் கண்ட தேவரே வார்த்திகப் பொழிப்பும் உரைத்தார் என்று கூறுவர். சந்தானாசாரியார் புராணமுடையாரும், “மாட்சிப் பொருட்டதாம் சிவஞான போதத்தைத் தென் மொழியில் அருள் திறத்தினால் பெயர்த்து வார்த்திகப் பொழிப் பறைந்தார்” என்றே கூறுவர். இச்சந்தானாசாரியர் புராணமுடையார், சிவஞான போதத்துக்கு உரைகண்ட சிவஞான முனிவர்க்குக் காலத்தாற் பிற்பட்டவராதலின், இக்கருத்தை முதற்கண் வெளியிட்டவர் வேறாவர். சிவஞான முனிவர் காலத்துக்கு முன்பே, மெய்கண்ட தேவரே சிவஞான போதத்தையும் அதற்கு வேண்டும் வார்த்திகப் பொழிப்பையும் வழங்கியருளினார் என்ற கொள்கை நிலவியிருந்தது. சைவத் திரு. மறைமலையடிகள் முதல் மதுரைப் பேராசிரியர் S.சோமசுந்தர பாரதியார் ஈறாகப் பலரும் வார்த்திகப் பொழிப்பும் உதாரண மேற்கொள் வெண்பாக்களும் மெய்கண்ட தேவர் ஆக்கினவை அல்ல என்ற கொள்கையுடையர். இது குறித்து அவர்கள் எழுதியன விரிவஞ்சி ஈண்டுக் காட்டப் படவில்லை. இனி, அவர்பால் அருணந்தி சிவாசாரியர், மனவாசகங் கடந்தார், சிற்றம்பல நாடிகள் முதலாக நாற்பத் தொன் பதின்மர் மாணவர்களாக இருந்து சிவஞான போதத்தைக் கேட்டனர் என்பர். அது. “மெய்யுணர்ந்தார் புகழும் அருணந்தி யோடு மேவதிகை மனவாசகங் கடந்தார் பொய்யகல் சிற்றம்பல நாடிகள் முன்னாகப் புகழுறு மாணாக்கர் நாற்பத்தொன் பதின்மர் மையகலும் பரிபாக நன் குணர்ந்து மன்னுசிவ தீக்கைமுறை மருவிச் செய்து தெய்வவருண் மேவிடமுப் பொருளு ணர்த்திச் சின்மயராந் தன்மையினைச் செய்து பின்னர்” என்று சைவ சந்தானாசாரியர் புராணத்திலும் குறிக்கப்பெறுகின்றது. 17. இனி, சகலாகம பண்டிதரென்னும் அருணந்தி சிவாசாரியர், அச்சுதகளப் பாளருக்கே ஞானகுரவராய் ஞானம் உணர்த்தியதோடு, அவர் மெய்கண்ட தேவரை மகனாகப் பெறுதற்கு வேண்டும் தவநெறியைக் காட்டியவருமாவர். அத்தகைய சான்றோர், மெய்கண்ட தேவர்க்கு மாணவராய் அவரைத் தமக்கு ஞானாசிரியராய் மேற்கொண்ட செய்தி சைவ சந்தானாசாரியர் புராணத்தில் கூறப்பெறுகிறது. அருணந்தி சிவாசாரியர் திருவெண்ணெய்நல்லூரில் வாழும் செல்வர்களாகிய தம்முடைய மாணவர்களைக் காண்பது குறித்துத் தாமிருக்கும் துறையூரி லிருந்து முதற்கண் திருமுகம் விடுத்தார். அதுபெற்ற வெண்ணெய் நல்லூரார் ஊரை ஒப்பனை செய்து மிக்க சிறப்புடன் அவரை, அவர் எழுந்தருளிய காலத்தில் இனிது வரவேற்றனர். அவருடைய மாணவராயுள்ளார் பலரும் வந்து அவரைக் கண்டு வணங்கி அவரது வாழ்த்துரையைப் பெற்றனர். அக்காலை அவர் பெண்ணாகடத்து அச்சுத களப்பாளருடைய புதல்வரான மெய்கண்ட தேவர் தம்மை வந்து காணாமைக்குக் காரணம் அறியலுற்றார்; அவர் மாணவர் பலருக்கு ஆகமாந்தமாகிய சிவ ஞானத்தை உணர்த்திவரும் செய்தி ஊரவர் சொல்லக்கேட்டு வியப்புற்றார்; பெருங்கல்வி வல்லுநராதலால் சகலாகம பண்டிதர் உள்ளத்தே ஆணவ முனைப்புத் தோன்றி அழுக்காற்றை எழுப்பிற்று. உடனே அவர், மெய்கண்டார் சிவஞான முணர்த்தும் இடத்துக்குச் சென்றார்; அப்போது அவர் மாணவரோடு ஆணவமலத்தைப் பற்றி உரையாடிக்கொண்டிருந்தார். சென்ற பண்டிதர், மெய்கண்டார் முன்னின்றார்; மெய்கண்டார் அவரை ஏனென்றுகூடக் கேட்க வில்லை. அழுக்காற்றால் உளம்புகைந்து, புறக்கணிப்பால் முகம் கறுத்து “ஆணவத்தின் சொரூபம் யாது?” என்று அவர் மெய்கண்டாரை வினவினார். அவர் உடனே ஒரு சிறு தடையு மின்றி முகம் மலர்ந்து நோக்கிப் புன்முறுவலுடன் தம் வலக்கைச் சுட்டுவிரலை நீட்டிச் சகலாகம பண்டிதர் திருவுருவத்தையே சுட்டிக் காட்டினார் என்று புராணம் கூறுகிறது. அருணந்தி சிவனாருடைய அழகிய ஞானவுரைகளை நாம் இன்று படிக்கின்றோம்; பயன் துய்க்கின்றோம். அவற்றை நினைக்கும் போது இவ்வரலாற்றுக் குறிப்பு மெய்ம்மையொடு படாத பொய்க் குறிப்பு என்று நமது உள்ளத்தில் நன்கு தோன்றுகிறது. 18. இனி, மெய்கண்டார் அவரை நோக்கி, “ஆதி சைவ அருணந்தி” எனவுரைத்து அவர்க்குச் சிவஞானத்தை உணர்த்தித் தமக்கு மாணவராக ஏற்றுக்கொண்டா ராதலால் அன்று முதல், அருணந்தி என்று மெய்கண்டதேவர் வழங்கிய அத்தொடரையே தமக்குப் பெயராகக் கொண்டு மெய்கண்டாருடைய மாணவராய் அவர் திகழ்ந்தார். மெய்கண்டதேவர் சகலாகம பண்டிதரை நோக்கி, “அருள் நந்தி” என்ற குறிப்பு, “எமக்கு இந்தச் சிவஞானம் அருட் கடலாகிய நந்தி யெம்பெருமான் அருள அவர் வழி வந்தது” என்ற பொருளை நல்கி நின்றமையின், அருணந்தி சிவனார் தம்முடைய ஞானாசிரியர் அருளிய சிவஞான போதத்துக்குச் செய்யுள் வடிவில் கண்ட உரையாகிய சிவஞான சித்தியார் பரபக்கத்தில், “போத மிகுத்தோர் தொகுத்த பேதைமைக்கே பொருந்தினோ ரிவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல ஏதுநெறி யெனுமவர்கட் கறிய முன்னாள் இறைவன் அருள் நந்திதனக் கியம்ப நந்தி கோதிலருள் சனற்குமா ரற்குக் கூறக் குவலயத்தில் அவ்வழியெம் குருநாதன் கொண்டு தீதகல எமக்களித்த ஞான நூலைத் தேர்ந்துரைப்பன் சிவஞான சித்தி யென்றே” என்ற திருவிருத்தத்தில் விளங்க வுரைத்தருளுகின்றார். 19. மெய்கண்டதேவர் தோன்றிச் சிவஞான போதத்தைத் தமிழில் வழங்கிச் சிவஞான வேட்கை மிக்கிருந்த பலர்க்கு அதனைத் திருவெண்ணெய்நல்லூரிலிருந்து உதவி வருகையில், அவருடைய சிவஞானப் புகழ் செந்தமிழ் நாடெங்கும் பரவிற்று. சிவாகம நெறியாகிய சைவசித்தாந்தம் நாட்டவரிடையே செல்வாக்குப் பெற்றது. திருமுறைகளின் பொருளை அறிந்து ஓதி வழிபடுதற்கேற்ற வாய்ப்பும் விளக்கமும் சிவஞான போதத்தால் தெளிய விளங்குவது கண்ட சைவ உலகம், தான் செய்த தவம் தக்க பயனை நல்கிற்றெனப் பேருவகை கொண்டது. அந்நாளில் திருவண்ணாமலையில் இருந்த கோளகி மடம் மெய்கண்ட தேவரது தலைமையை நாடி நின்றது. மெய்கண்ட தேவர் திருவண்ணாமலை மடத்தில் தலைமை தாங்கிச் சிவஞானச் செல்வத்தை வழங்கி வந்தார். அவர்பால் செல்வர் பலர் சிவஞானம் பெற்றுச் சிறப்புற்றனர். அவருள் ஊருடைய பெருமாள் என்பார் ஒருவர். அவர் எடுத்தது வலிய வேளார் என்றும் வழங்கப் பெறுவர். திருவண்ணாமலைக்கு அண்மையில் மாத்தூர் என்றோர் ஊருண்டு. அது திருவண்ணாமலை இறைவற்குத் தேவதானம். சிவஞானச் செல்வரான எடுத்தது வலிய வேளார், தேவதான மாத்தூரில் கோயிலார் ஆணை பெற்றுப் புதிதாக ஏரியொன்று வெட்டி அதற்குத் தமது ஞானகுரவர் பெயரால் மெய்கண்ட தேவப் புத்தேரி யென்று பெயரிட்டார். அதனால் பல வேலி யளவான நிலங்கள் நெற்பயிர் செய்தற்கு ஏற்றனவாயின. இன்றும் அவ்வூர் நெல்வளமுடையதாகவே விளங்குகிறது. இந்த ஏரிக்கீழ் மேடான ஓரிடத்தில் சிவன்கோயில் ஒன்றை அவ்வேளாரே கட்டி அதற்கு மெய்கண்டீச்சுரம் என்று தனது ஞானகுரவர் பெயரிட்டுச் சிறப்புற்றார். மெய்கண்ட தேவரது சிவஞானப் பணியும், அவருடைய மாணவரது சிவத்தொண்டும் கண்ட கோயிலார் அவ்வேரியையும் அதன் கீழுள்ள நிலங்களையும் மெய்கண்டீச்சுரமுடைய பெருமானுக்குத் தேவதானமாக விடுவதெனத் துணிந்து அந்நாளில் அரசுபுரிந்த சோழ வேந்தன் திரிபுவன சக்கரவர்த்திகள் இரண்டாம் இராசராச தேவர் எனப்படும் மன்னனுடைய ஆணையை வேண்டினர். வேந்தனும் மனம் மகிழ்ந்து, மாத்தூர்க்கு இராசராசநல்லுரெனத் தன் பெயரிட்டு ஆணைதந்தான். பின்னர், “ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு 19-வது ரிஷப ஞாயிற்று இருபத்தெட்டாந் தேதியும் சனிக்கிழமையும் பெற்ற மிருகசீரிஷத்து நாள் உடையார் திருவண்ணாமலையுடைய நாயனார் கோயில் ஸ்ரீமாகேசுவரக் கண்காணி செய்வார்களும் தேவர்கன்மி கோயிற் கணக்கனும், திருவெண்ணெய் நல்லூரு டையான் மெய்கண்ட தேவன் ஊருடைய பெருமாளான எடுத்தது வலிய வேளார்க்குக் கல் வெட்டிக் கொடுத்த பரிசாவது”1 எனத் தொடங்கி, “செங்குன்ற நாட்டு மாத்தூரான இராசராசநல்லூரில் இவர் வெட்டுவித்த மெய்கண்ட தேவப் புத்தேரியை”யும், “இவ்விராசராசநல்லூரில் எழுந்தருளுவிக்கிற உடையார் மெய் கண்டீச்சுரமுடைய நாயனா”ரையும் குறித்துரைக்கும் கல்வெட்டொன்று திருவண்ணாமலைக் கோயிலில் வெட்டப்பட்டது. இக்கல்வெட்டில் காணப்படும் இம் மெய்கண்டீச்சுரம் மெய் கண்ட தேவரது திருமேனி ஒடுங்கிய பெருநிலைய மாகலாம் எனவும், எடுத்தது வலிய வேளாரையே மெய்கண்ட தேவரெனவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால், பெரு வேந்தர்களும் செல்வர்களும் தமக்கு ஞானமருளும் குரவர்களைத் தந்தையாகவும், தம்மை அவர்கட்குப் புதல்வராகவும் கூறுவது மரபு.1 அம்மரபு பற்றி ஊருடைய பெருமாளான எடுத்தது வலிய வேளார் தமது ஞானத் தந்தையாரது பெயரைத் தமது பெயருடன் இணைத்து, “திருவெண்ணெய்நல்லூருடையான் மெய்கண்ட தேவன் ஊருடைய பெருமாளான எடுத்தது வலிய வேளார்” என்று வழங்கு கின்றார். மேலும் மெய்கண்ட தேவர்க்கு வெண்காடர், சுவேதனப் பெருமாள் என்ற பெயருண்டேயன்றி ஊருடைய பெருமாள் எனவும் எடுத்தது வலிய வேளாரெனவும் பெயர் வழங்கியது காணோம்; ஆதலால், எடுத்தது வலிய வேளாரே மெய்கண்ட தேவர் என்பாரது கூற்று எம்மனோரால் கொள்ளப்படவில்லை. மெய்கண்ட தேவர்பால் சிவஞானம் பெற்ற அவர் மாணவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சென்று மடங்கள் நிறுவிச் சிவஞானப்பணி புரிந்தனர். அம்மடங்கள் பலவும் மெய்கண்ட சந்தானம் என்று வழங்கின. காஞ்சிபுரம்2, திருவண்ணாமலை3, செங்கற்பட்டு வட்டத்திலுள்ள இராமகிரி4, தென்னார்க்காடு வட்டத்து எலவானாசூர்5, திருவக்கரை6, வில்லியனூர்7, மதுரை8, திருப்புத்தூர்9, திருநெல்வேலி10, பிரமதேசம்11, அம்பாசமுத்திரம்12 முதலிய இடங்களில் மெய்கண்ட சந்தானத்துத் திருமடங்கள் முன்னாட்களில் சிறந்து விளங்கின. இந்த மெய்கண்ட சந்தானத்து ஒருவர் மெய் கண்டார்க்குச் சிவஞானம் அருளிய முதல்வருள் சத்தியஞான தரிசினிகள் என்பார். அதனால், அவர்களுட் சிலர் சத்தியஞான தரிசினிகள் என்ற பெயர் பூண்டு உள்ளனர். இராமகிரிக் கல்வெட்டு, மெய்கண்ட சந்தான மடத்துத் தலைவரைச் சத்தியஞான தரிசினி என்றும், எலவானாசூர்க் கல்வெட்டு மெய்கண்ட சந்தானத்துத் திருவண்ணாமலைச் சத்தியஞான தரிசினிகள் என்றும், மதுரைச் சொக்கநாதர் கோயில் கல்வெட்டு, மெய்கண்ட சந்தான மடத்துத் தலைவரை ஞானக்கூத்தரான சத்திய ஞான தரிசினிகள் என்றும் கூறுகின்றன. இந்த மடங்களில் வாழ்ந்த சிவஞானச் செல்வர்கள் புராணம் பாடுவதும் திருமுறை யோதுவதுமாகிய திருப்பணிகள் பல செய்துள்ளனர். மெய்கண்ட சந்தானத்துத் திருவம்பல முடையார் என்ற மறை ஞானசம்பந்தர் திருப்புத்தூர் இறைவன் மேல் ஓங்கு கோயில் புராணம் பாடினாராக, அவர்க்குத் திருப்புத்தூர்க் கோயிலார், மண்ணிமங்கலத்தில் கோயிற்குரிய நிலங்களுள் ஐந்துமா நிலத்தை நல்கினர். திருவண்ணாமலைச் சத்தியஞான தரிசினிகளுடைய மாணவரான திருமலைநாயனார் சந்திரசேகர ரென்பார் இரசைப் புராணம் பாடி எலவானாசூர் ஆனந்த தாண்டவன் திருவீதியில் ஒரு வீடும் அவ்வூரில் நிலங்களும் அளிக்கப்பெற்றாரென அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. சடையவன்மன் குலசேகர தேவர் காலத்தில், திருக்குற்றாலத்தில் திருமுறை யோதுதற்காக மெய்கண்ட தேவன் சிந்தாமணி யென்பானுக்கு நிலங்கள் விடப்பட்டுள்ளன.1 இந்நாளில் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதத்தை மேற்கொண்டு சித்தாந்த சைவ நெறியை வளர்க்கும் மடங்கள் பல நம் நாட்டிற் பலவிடங்களிலும் உள்ளன; ஆயினும், அவற்றுள் மிக்க செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவன திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் என்னும் இடங்களிலுள்ள சைவ மடங்களாகும். இவற்றுள், இந்த நூற்றாண்டின் முற்பகுதி காறும் திருவாடுதுறை மடம் சைவப் பணியாலும் தமிழ்ப் பணியாலும் தலைசிறந்து விளங்கிற்று. இருபதாம் நூற்றாண்டின் செம்பாதியாகிய இப்போது, சைவமும் தமிழும் சிறப்புறத் தக்க வகையில் பெருங் கொடை நல்கிப் பெரும் புகழ் கொண்டு நிலவுவது திருப்பனந் தாளிலுள்ள காசி மடம். தருமபுரத்திலுள்ள திருமடம், தஞ்சை நாட்டில் இருபத்தேழு பெருங்கோயில்களின் தலைமையை மேற்கொண்டு ஈடும் எடுப்புமில்லாத வகையில் ஆட்சிசெய்து வருவதுடன் மாநாடு பல கூட்டிச் சமயப் பணியும், பல நூல் வெளியீடுகளால் நல்ல கல்விப் பணியும் செய்து வருகின்றது. திருவாவடுதுறையிலுள்ள திருமடம் தளர்ச்சியுற்ற தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கக் கல்லூரிகளைத் தான் மேற்கொண்டு இனிய பணியாற்றச் சமைந்திருக்கிறது. 20. இனி, மெய்கண்டார் பிறந்தருளிய களப்பாளர் குடி வகையைக் கண்ட அறிஞர் சிலர், களப்பாளரென்பவர், கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தமிழகத்தில் புகுந்து குறும்பு செய்து நாட்டைச் சீரழித்த களப்பிரர் வழியில் வந்தவர் என்பர்; அதனால் களப்பாளர் குடி வரவையும் சிறிது இங்கே காண்பது கடனாகிறது. இடைக்காலத்தே நம் தமிழகத்தை ஆண்ட வேந்தர்பால் அரசியற் பணி புரிவோர், களப்பாளராயர், பல்லவராயர், வாணாதிராயர், மழவராயர், சேதிராயர் என்பன முதலிய சிறப்புப் பெயர்களை வேந்தரால் தரப்பெற்றனர். இடைக்காலத்தே இந்த நாட்டில் களப்பிரர், பல்லவர், வாணர், மழவர் முதலியோர் ஆட்சி செய்தனர். பல்லவராட்சி வீழ்ந்ததும் பாண்டியரும் சோழரும் நாட்டாட்சி பெற்றனர். அக்காலையில் அவர்கள், அரசியல் வகையிலும், தானைகொண்டு செய்யும் வினை வகையிலும், பிற வகையிலும் சிறந்த பணிசெய்த சான்றோர்க்கு மேலே சொன்ன சிறப்புப் பெயர்களைத் தந்து சிறப்பித்தனர். களப்பிரரை வென்று உயர்ந்தோர்க்குக் களப்பாளராயர் என்றும், வாணர்களை வென்று சிறந்தோர்க்கு வாணாதிராய ரென்றும், மழவர் பால் வெற்றிபெற்றோர் மழவராயரென்றும் இவ்வாறே பிறரும் சிறப்புற்றனர். இப்பெயர் கொண்டவர் பலரும் தமிழ் வேளாண் மக்களே யாவர். தொடக்கத்தில் இச்சிறப்புப் பெயர்கள் இவற்றைப் பெற்றவர்களுக்கே உரியவாய் இருந்தன. தந்தை பெற்ற சிறப்பு மகனுக்கு வருவது கிடையாது. தந்தை சேதிராயரென்ற சிறப்புப் பெற்றிருந்தால் மகனுக்கு அச்சிறப்பு எய்துவது கிடையாது. அவனொருகால் அச்சிறப்பு எய்தக்கூடிய பணி செய்து பெற்றால் பெறலாம். அல்லது மழவரையோ பிறரையோ வென்று மழவராய ரென்றோ வேறு சிறப்போ பெறலாம். நாள் செல்லச்செல்லத் தந்தை பெற்ற சிறப்பு மகனுக்கும் அவன் வழிவந்தோர்க்கும் உரியதாயிற்று. முடிவில் இச்சிறப்புக்கள் குடிப் பெயராகவே அமைந்துவிட்டன. இப்போதும் தமிழ் வேளாண் மக்கள் குடிகளெல்லாம் இத்தகைய குடிப்பெயரொன்றைக் கொண்டிருப்பது யாவரும் தெரிந்த செய்தியாகும். பின் வந்த விசயநகர வேந்தர் காலத்தில் வடநூல் வைதிக வொழுக்கங்களும் வடநூல் ஆட்சிகளும் செல்வாக்குப் பெற்றபோது சில குடும்பங்கள் முனிவர்களைத் தங்கள் குடி முதல்வராக மேற்கொண்டன. விசயநகர வேந்தரது ஆட்சி தமிழ்நாட்டில் விளங்குதற்கு முன்னெல்லாம் வேளாண் பெருமக்களிடையே களப்பாளராயரைக் குடி முதல்வராகக் கொண்ட களப்பாளர் குடியும் ஒன்றாகச் சிறந்து நின்றது. இக்குடியிற் பிறந்தோர் பண்டை நாளில் குறுநில மன்னராகவும் இருந்தனர். இவர்கள் தமிழ்நாடெங்கும் பரவியும் இருந்தனர். இவர்களது குடி நெருங்கிய வூர்கள் பல ஆங்காங்குத் தோன்றின. அவற்றுள் சோழநாட்டுக் களப்பாளும்1 களப்பாள் குடி2யும் தொண்டை நாட்டுக் களப்பாளன் பட்டும் 3 பிறவும் சிறப்புற்றிருக்கின்றன. கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டில் கூற்றுவன் என்னும் களப்பாளர் ஒருவர் களந்தை யென்னும் ஊரில் இருந்து குறுநில மன்னராக விளங்கினார். அரசியற் செல்வ முற்றும் நன்கு பெற்றி ருந்தும் முடிசூடிக்கொள்ளும் உரிமை முடிவேந்தர்க்கு இருப்பது போலத் தமக்கு இல்லாமையால் அவர் மனக் குறையுடையரானார். தில்லைப் பதியை யடைந்து தில்லைமூவாயிரவரைக் கண்டு தமக்கு முடிசூட்ட வேண்டுமென இரந்தார்; அவர்கள், “செம்பியர் தம் தொல்லைநீடும் குலமுதலோர்க்கன்றிச் சூட்டோம் முடி1” என்று சொல்லி மறுத்தார்கள். மறுத்தவர்களுள் பலர், அவ்வேந்தர்க்கு அஞ்சிச் சேரநாடு சென்று சேர்ந்தனர்; ஒரு குடியினர் மட்டும் தில்லையிலே தங்கித் திருமுடியைப் பாதுகாத்து வந்தனர். அந்தணருடைய மறுப்பும் அவர்களுள் ஒரு குடியினரொழிய ஏனையோர் சேரநாடு சென்றதும் கண்ட களப்பாளர் மனம் வருந்தித் தில்லை மன்றில் திருக்கூத்தாடும் இறைவனைப் பணிந்து, “அடியேன் தனக்கு முடியாகப் பெற்ற பேறு மலர்ப்பாதம் பெறவே வேண்டும்2” என்று வேண்டினார். நாளும் இறைவன் திருப்பெயரை மறவாது ஓதும் செந்நாப் பண்பும், சிவனடியார்பால் பேரன்பும் சிவப்பணியில் பேரூக்கமும் கொண்டவராதலால் இறைவன் அவர் வேண்டியவாறே அன்றிரவு அவர் உறங்குகையில் தன் திருவடியைச் சூட்டிச் சிறப்பித்தருளினார். இவரை நம்பியாரூர் “ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன்” என்றும், நம்பியாண்டார் நம்பிகள், “ஓதம் தழுவிய ஞாலமெல்லாம் ஒரு கோலின் வைத்தான், கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே3”என்றும் பாராட்டிப் பாடியுள்ளனர். கி.பி. பதினோராம் நூற்றாண்டின் இறுதியிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் விளங்கிய முதற்குலோத்துங்கன் காலத்தில் தொண்டை நாட்டில் நெற்குன்றம் என்னும் ஊரில் அரையன் நெற்குன்றங்கிழார் கருவுள் நாயகரான களப்பாளராயர் என்றொரு செல்வர் சிறந்திருந்தார். அவர் சிறந்த கவிபாடும் பாவன்மையும் படைத்தவர். அவர் சோழநாட்டுத் திருப்புகலூர் இறைவன் மேல் திருப்புகலூரந்தாதி பாடியுள்ளார். தொண்டைமண்டல சதகம் என்னும் நூல், “கிளப்பார் கிளப்ப அடிமடக் கரகக் கெழுமியசொல் வளப்பா மதுரத் துடன்பூக் கமலமென் றாய்ந் தெடுத்த களப்பாளன் நெற்குன்ற வாணன் அந்தாதிக் கலித்துறையே வளப்பார் புகழை வளர்ப்பிக்குமால் தொண்டை மண்டலமே4” என்று அவர் அந்தாதி பாடிய நலத்தைப் பாராட்டியுளது. இவ்வாறு பாவலர் பரவும் பாவன்மை படைத்திருந்த அக்களப்பாளர், புலவரது வரிசை யறிந்து வேண்டுவன வழங்கும் வள்ளன்மையும் கொண்டவர். அக்காலத்தில் விளங்கிய நம்பிகாளி யென்ற புலவர் அவரைப் புகழ்ந்து பாடினர். அவரது பாநலம் கண்ட களப்பாளரான கருவுணாயகர் உள்ளம் பூரித்து அந்நம்பி காளியார்க்குத் தாமுடைய எல்லாவற்றையும் நல்கி, “கற்கும் கவிவல்லை யாதவர்கோன் நம்பி காளிக்கியாம் விற்கும் பரிசன மாகிவிட்டோம் வடவேங் கடமும் பொற் குன்றமும் புகழ் கங்கா நதியும் பொதியமும் போல் நெற் குன்றமும் நம்மரபும் எந்நாளும் நிலைநிற்கவே1” என்ற இனிய பாட்டைப் பாடித் தந்துவிட்டுத் திருப் புகலூர் வந்தடைந்தார் எனத் தமிழ் நாவலர் சரிiத கூறுகிறது. இனி, கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் இடையில் விளங்கிய இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் தொண்டை நாட்டு அச்சிறுபாக்கப் பகுதியில் கங்கைகொண்ட சோழக் களப்பாளராயர் என்றொரு தலைவர் வாழ்ந்தார். அவர் சிவப்பற்றும் அரசியலில் சிறந்த தலைமையும் உடையவர். அந்நாளில் அச்சிறுபாக்கத்திற் கோயில் கொண்டிருக்கும் ஆட்சிகொண்ட நாதர்க்குத் தேவதானமொன்றும் இல்லாதிருந்தது. அப்போது இரண்டாங் குலோத்துங்கன் அரசு கட்டிலேறி மூன்றாண்டுகளே யாயிருந்தன. தொண்டை நாட்டு அரசியற் செய்திகளைக் குலோத்துங்க சோழப் பிரமராயன் என்பார் கண்காணித்து வந்தார். அந்நாளில் கங்கைகொண்ட சோழக் களப்பாளராயர், விசயராசன் என்பாரைத் துணையாகக் கொண்டு பிரமராயருக்குச் சொல்லி வேந்தனால் தேவதான மொன்று ஆட்சி கொண்ட நாதர்க்கு ஏற்படுத்தப்படவேண்டு மெனக் கேட்டுக்கொண்டார். பிரமராயர் தெரிவித்தவண்ணம் சோழ வேந்தனும் ஆண் டொன்றுக்கு ஆயிரக்கல நெல் வருவாய் தரக்கூடிய வகையில் கலிகடிந்த சாத்தனூர் என்னும் பெயரால் ஊரொன்றமைத்துத் தேவதானமாக நல்கினான். இரண்டாண்டுக்குப் பின் விக்கிரம சோழப் பிரமராயனென்பார் அரசியற்றலைவராக வந்தார். அப்போது நம் கங்கை கொண்ட சோழக் களப்பாளராயர் அச்சிறு பாக்கத்துக் கோயிலுக்கு வேண்டும் நிவந்தங்களுக்காக மேலும் பல நிலம் தருமாறு ஏற்பாடு செய்துகொண்டார். பின்னர் அச்சிறுபாக்கமுடைய ஆட்சிகொண்டநாதர் திருக்கோயில் தேவதான முதலியவற்றால் குறைவின்றி இனிது நடைபெற்று வருவதாயிற்று1. இனி, பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த மூன்றாம் இராசராசன் காலத்தில் பெண்ணாகடத்துக்கு மேற்கில் திருவரத்துறை யென்னுமூரில் சேக்கிழான் பாலறா வாயனான களப்பாளராயர் ஒருவர் இருந்தார். அவரைத் திருத்தொண்டர் புராணம் பாடியருளிய சேக்கிழார் பெருமானுடைய தம்பியாகவும் கூறுவர். இதனால் சேக்கிழார் பெருமானுக்கும் களப்பாளர் என்ற சிறப்புடையாருக்கும் தொடர்புண்டென்பதும் தெளிவாகிறது. இத் திருவரத்துறையே திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகை பெற்ற திருநெல்வாயிலரத்துறையாகும். இவ்வூர்க் கோயிலுக்கு அரத்துறை யென்றும், ஊர்க்கு நெல்வாயில் என்றும் பெயராகும். பின்னர், நெல்வாயில் வேறாகவும் அரத்துறை வேறாகவும் பிரிந்தன. அரத்துறை இப்போது திருவடத்துறை யென்றும், நெல்வாயில் நெய்வாசல் என்றும் வழங்குகின்றன. இவ்வூரில் அந்நாளில் திருஞானசம்பந்தர் முத்துச் சிவிகை பெற்ற வரலாறு திருவிழாவாக நடைபெற்று வந்தது. இவ்விழா மாசித் திங்களிலும் வைகாசித் திங்களிலும் நடக்கும். அக்காலையில், திருவரத்துறைக்குக் கிழக்கில் அண்மையில் இருக்கும் மாறன்பாடி என்ற ஊருக்குத் திருஞானசம்பந்தரைக் கொண்டு செல்வர். அவ்விழாச் செலவிற்காக இச்சேக்கிழான் பாலறாவாயரான களப்பாளராயர் முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலமான பெண்ணாகடத்து வேதியனொருவனிட மிருந்து சில நிலங்களை வாங்கி இறையிலியாக விட்டு அவ்விழா முட்டின்று நடைபெறுமாறு செய்தார்.2 இனி, சோழநாட்டுத் தில்லைப்பதியில் களப்பாளராயர் ஒருவர் இருந்து சிவத்தொண்டு செய்துள்ளார். அந்நாளில் சடையவன்மனான முதல் சுந்தரபாண்டியனது ஆட்சி நடைபெற்றது. தில்லையம்பலத்துக் கூத்தப்பிரான் கடலாட்டுக்குச் செல்லும் திருவீதியில் கோயில் கொண்டிருக்கும் திருச்சிற்றம்பல மாகாளிக்குத் திருவமுதுக்கும் திருவிழாவுக்குமாக அவர் சில நிலங்களை நல்கினார். இவை வேந்தன் நலங்குறித்து விடப் பட்டமையின் இவற்றைத் திருநாமத்துக் காணியென்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.1 பட்டுக் கோட்டையில் வாழ்ந்த மக்கள் வரிச்சுமை தாங்காது கைவிட்டமையால் அங்குள்ள கோயிலும் பாழ்பட்டு வழிபாடுமின்றிக் கெட்டழியவே, இக்களப்பாளரே வரிகளை நீக்கிக் கோயிலைப் புதுக்கிச் செம்மை செய்தார்.2 சடையவன்மன் வீரபாண்டியன் ஆட்சி புரிந்த நாளில் தென்பாண்டி நாட்டுக் கோயில்பட்டி வட்டத்துச் சோழபுர மென்னும் ஊரில் களப்பாளரொருவர் சிறப்புற்று விளங்கினார். அவ்வூர்க்கு அக்காலத்தில் உத்தம சோழச் சதுர்வேதிமங்கலம் எனப் பெயர் வழங்கிற்று. அங்கே உத்தம சோழ விண்ணகரம் என்ற பெயருடன் திருமால் கோயில் ஒன்று இருந்தது. அதனுடைய முகப்பு மண்டபம் ஓரளவு கட்டப்பெற்றுக் குறையுற்றிருந்தது. களப்பாளராயர் அரசியற் செல்வாக்குப் பெற்றதும் அம் மண்டபத் திருப்பணியைக் குறைவற முடித்து வைத்தார். அதனால் அஃது உடையார் களப்பாளராயர் மண்டபம் என்று சிறப்பிக்கப் பெறுவதாயிற்று.3 இனி, கொங்கு நாட்டில் கொங்குச் சோழர் ஆட்சி புரிந்த காலத்தில் வீரராசேந்திர தேவர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் தாராபுர வட்டத்திலுள்ள கண்ணபுரத்திலுள்ள திருக்கோயில்கள் இரண்டன் செலவுக்குப் பொருட் குறைபாடு உண்டாயிற்று. அதனை அந்நகரத்தார் தம்மில் ஒன்று கூடி அரசியலார்பால் விண்ணப்பம் செய்துகொண்டனர். அரசியற் குழுவில் எல்லாம் வல்ல சோழ மூவேந்த வேளான் என்பார் தலைமை தாங்கினார். அவரிடம் காடுவெட்டி கண்ணன் களப்பாளராயன் என்பவர், விலாட சிங்கதேவன், சேதிராய தேவன் முதலியோர் உடன்வரச் சென்று கோயிற் செய்திகளை எடுத்தியம்பினார். வாணராய தேவன், தியாக வினோத தேவன், முனையதரையன் முதலியோர் அரசியல் ஆணை பெற்றுக் கோயில்களின் நிலையை ஆராய்ந்து தெளிந்து அரசியற் குழுவிற் கறிவித்தனர். பின்னர், வேந்தன் களப்பாளராயரை முற்பட வைத்து, அபிமான சோழபுரம், விக்கிரம சோழபுரம் என்ற இரண்டு ஊர்களின் நிலவரியை இரு கோயில்கட்கும் செலவு செய்துகொள்ளுமாறு ஆணை பிறப்பித்தான். பிற்காலத்தே இவ்வூர்கள் இரண்டும் ஒன்றாகிக் களப்பாளராயர் பெயரால் கண்ணபுரமென்று பெயர் பெற்றன.1 பின் வந்த விசயநகர வேந்தர் காலத்திலும் இக்களப்பாளர்கள் சிறப்புக் குன்றாமலே இருந்தனர். அச்சுத தேவ மகாராயர் காலத்தில் சந்திரகிரி ராஜ்யத்துச் சோளிங்கபுர வட்டத்தில் தாமர்க்கோட்டம் இருந்தது. அந்நாளில் காஞ்சிபுரத்து அருளாளப் பெருமாள் கோயிலில் ஏகாதசி விழாவுக்காக நாராயண ஜீயர் மாணவரான பராங்குச ஜீயரென்பார் தாமர்க்கோட்டத்து மூன்று ஊர்களைத் தேவதானமாக விட்டார். அவற்றுள் களப்பாளன் பட்டு என்பது ஒன்று.2 இனி, தொண்டை நாட்டில் செங்கற்பட்டு வட்டத்தில் தையூர் என்றோர் ஊர் மகாபலிபுரத்துக் கண்மையில் உளது. இது கல்வெட்டுக்களில் தொண்டை நாட்டு ஆமூர்க் கோட்டத்துக் குமிழி நாட்டுத் தையூரான இராசகேசரிநல்லூர் என்று கூறப்படு கின்றது. இவ்வூர்க்குத் தலசயனபுரம் என்றும் கல்வெட்டொன்று3 பெயர் கூறுகிறது. இவ்வூரில் உத்தண்டன் என்னும் களப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவரென்பர். அவரைப் புலவரொருவர் பாராட்டி உத்தண்டன் கோவை யென்றொரு கோவை நூல் பாடியுள்ளார். இஃது அரசாங்கக் கையெழுத்து நூல் நிலையத்தில் உளது. இவ்வுத்தண்டன் வேளாண் மரபிற் களப்பாளன் என்பதை அக் கோவை, “உழு மேழியாளன் களப்பாளன் உத்தண்டன்” என்றும், “சுரப்பாடு கேட்க முன் பொன்னாடு நீட்டிய தோன்ற லென்னத் தரப்பாரில் வந்த களப்பாளன் உத்தண்டன்.1” என்றும் குறிக்கின்றது. தையூரில் வாழ்ந்த இவ்வுத்தண்டன் தந்தை குன்றன் எனப்படுவான். அவனுடைய் முன்னோருள் ஒருவன் தொண்டை நாட்டுச் சாலை யென்னும் ஊரில் வாழ்ந்த விண்ணன் என்னும் வள்ளல். அவ்விண்ணன் ஒருகால் வறுமையுற்றிருந்தபோது ஒரு புலவன் அவனைப் பாடிச் சென்றானாக, அவன், இலன் என்னும் எவ்வம் உரைப்பதற் கஞ்சி உயிர்விடக் கருதி ஒரு பாம்புப்புற்றில் கையை நீட்டினன்; அங்கிருந்த பாம்பு அவன் கையில் ஒரு மணியைக் கான்றது. அதனை விண்ணன் புலவர்க்களித்துப் புகழ் பெற்றான்; அச்செய்தியை, “கூர்ந்த வறுமையிடைக் கோளரவ மீன்றமணி சார்ந்த புலவன் தனக்களித்தான்- வார்ந்ததரு மேலைவிண்ணில் மண்ணில் விளங்கும் புகழ்படைத்த சாலைவிண்ணனுக் கிணையார் தாம்” என்று அப்புலவன் பாடினனெனத் தமிழ் நாவலர் சரிதை2 கூறுகிறது. இவ்விண்ணன் வழி வந்தவன் குன்றன் மகனான உத்தண்டன் என்பதை அக்கோவை, “உத்தண்ட பூபதி தன் மரபின் விண்ணன் பதிக்கு இரவோர் வந்தகாலத்து மேவுகவே”3 என்று இசைக்கின்றது. இத்தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டத்து இரண்டாயிர வேலிப்பற்று முற்றும் உத்தண்டன் தந்தையான குன்றனுக்கு உரியதென்றும், அதற்கண்மையிலுள்ள குன்றனல்லூர்4 அவன் பெயரால் நிறுவப்பெற்றதென்றும் கூறுவர். எனவே, தொண்டைநாட்டுச் சாலை யென்னும் ஊரினனான விண்ணனும், அவன் வழி வந்த செல்வனான குன்றனும், அவன் மகனான உத்தண்ட பூபதியும் களப்பாளர் குடியில் புகழுடம்பு படைத்த பொற்பினராவது இனிது விளங்குகிறது. இனி, கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ்நாட்டை யாண்ட விசயநகர வேந்தருள் சிறந்து விளங்கிய கிருஷ்ண தேவராயர் காலத்தில், தொண்டை நாட்டில் நாகலாபுரத்தில் களப்பாளர் குடியொன்று சிறந்திருந்தது. இந்த நாகலாபுரம், நாகலாதேவிபுரம், நாகலாதேவியம்மன்புரம் என்றும் கல்வெட்டுக்களில் வழங்கும். கிருஷ்ணதேவராயருடைய தாயான நாகலாதேவியின் பெயரால் அமைந்தது பற்றி இது நாகலாபுரமென வழங்குகிறது. இங்குள்ள திருமால் கோயில் கிருஷ்ணதேவராயர் கட்டியது.1 இவ்வூரில் ஆவினி களப்பாளர் திருவேங்கடமுடையார் என்றொருவர் வாழ்ந்தார். இவர் பெருமாள் முதலிச்சியார் என்பவரை மணந்து வடமலையண்ணகள், தெய்வங்கள் பெருமாள், திருமலையப்பன், கிருஷ்ணையன் என்ற நால்வர் மக்களைப் பெற்றார். இவருள் மூத்தவரான வடமலையண்ணகள் கிருஷ்ணதேவராயர்க்கு “மந்திரி சிரேஷ்ட”ராக இருந்தார். கிருஷ்ணையனான இளவல் அரிதாசன் என்ற பெயர் பூண்டு திருமால் வழிபாட்டில் சிறந்து விளங்கினார். இவர் நாகலாபுரத்தில் திருமால் கோயில் கண்டு அதற்கு வேந்தனால், பெருமாளுக்குத் திருவமுதுக்கும் நிருத்த கீத மகா வாத்யாதிகட்கும் நாகலாபுரம் என்ற பிரதி நாமம் கொண்ட அரிகண்டபுரம் சருவமானியமாகக்”2 கொடுக்கப்பெற்றார். இவர் “சைவ வைணவ சமயக் கொள்கைகளை ஆகமவல்லி ஆரணவல்லி யென்ற பெண்கள் இருவர் கூற்றில் வைத்து விளக்கி முடிவில் திருமாலே பரம்பொருள் என்பதை நிலைநாட்ட எழுந்த இருசமய விளக்கம் என்ற நூலின் ஆசிரியர்” இதன்கண் இவர் தம்மை, “அரிதாத னென்றோது நாமக்களப்பாளன்”3 என்று கூறுகின்றார். இவருடைய தமையன் வடமலையண்ணன் கிருஷ்ண தேவராயருக்கு அமைச்சரா யிருந்த போதுதான் திருவாரூர்க் கோயில் பட்டர்கள் செய்தற்குரிய செயல்களைச் செவ்வே செய்யாமை கண்டு வருத்தமுற்ற தத்துவப் பிரகாசர் என்பார், விழாவுக்கேற்றிய கொடியை இறக்கக் கூடாதென மறுத்து வேந்தனுக்கு எழுதிய விண்ணப்ப வெண்பாவில், “மருவுபுகழ்க் கிட்ண மகாராயராணை, அரிய வடமலையான் ஆணை”4 என்று குறித்துப் பாடினார். இவ்விசயநகர வேந்தர் ஆட்சிக்குப்பின் நாட்டில் உண்டான அரசியல் வேறுபாட்டாலும் சமுதாயநிலை மாற்றத்தாலும் இக்களப்பாளர்கள் ஏனை மழவராயர், சேதிராயர், பிரமராயர் போலப் பெயர் மறைந்து நிலை கரந்து ஒடுங்கினர். பிராமண சமுதாயம் ஒன்று தவிர ஏனைய யாவும் பல வேறு இனங்களாகப் பிரிந்தன. வேளாண் மக்களிடையே தாம் தாம் பெற்ற சிறப்புக்கட் கேற்ப, அச்சிறப்புக்களின் பெயராலேயே பற்பல சாதிகளாகப் பிரிந்து தம்மிற் கலந்துகொள்ள இயலாத மனநிலையும் ஒழுகலாறும் மேற்கொண்டனர். அவரவர் பெற்றிருந்த பொருணிலைக் கேற்ப மக்கட் சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் ஏற்பட்டன. கொல்லர் தச்சர் ஆயர் வேட்டுவர் பரதவர் முதலிய தொழில் செய்வோர் ஒழிய, ஏனை யாவரும் வேளாண் மக்களாகவே இருந்தது மறைய, வேறு வேறு சாதிகள் தோன்றி வேளாண் மக்களின் ஒருமை வன்மையைச் சிதைத்தொழிந்தன. அவ்வச் சாதியின் தொன்மை நிலை யுணராதவாறு ஒவ்வொன்றுக்கும் புராணங்கள் படைத் தெழுதப்பட்டன; அப்புராணங்களும் சாதிகளை வானுறையும் தேவரோடே தொடர்புபடுத்தி விட்டன. இவ்வாற்றால் பண்டைய வேளாண் மக்களின் தொன்மை நிலை காண்பதில் அறிஞரிடையே தவறுகள் உண்டாகத் தலைப் பட்டன. மேலே காட்டிய கல்வெட்டு வரலாறுகளைக் காண்போ மாயின், களப்பாளர் அனைவரும் வேளாண் பெருமக்களாதல் இனிது விளங்கும். இவ்வரலாறுகளை நன்கு ஆராய்ந்து நோக்கும் நெறி பிறழ்ந்து, களப்பாளர்களைப் பண்டைய களப்பிரர்கள் என்று சிலர் கூறிவிட்டனர். அறிஞர் பலருடைய உள்ளத்தில் இக்கருத்தே இருந்துவிட்டது. களப்பாளர் குடியில் தோன்றிய வேளாண் பெருமக்களுட் சிலர் தம்மைக் களப்பிரர் என்றே கருதத் தொடங்கினர். களப்பிரர் எனப்படுவோர் இன்ன நாட்டினரென்று அறிய முடியவில்லை. வராகமிகிரர் என்பார் எழுதிய பிருகற் சங்கிதையில் பண்டை நாளைய மக்களைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவை “சேர சோழ கச்ச கருநட கேரள கொங்கண தக்கண நாடுகள்” என்பன; அவற்றுள் சேரநாடென்று குறிக்கப்படுவது கொங்கநாடு; களப்பிரரைப்பற்றிய குறிப்பே கிடையாது1. சளுக்க வேந்தனான முதல் விக்கிரமாதித்தன் குறிப்புக்களிலும் வினயாதித்தன் குறிப்புக்களிலும் இரண்டாம் விக்கிரமாதித்தன் குறிப்புகளிலும் களப்பிரரைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படு கின்றன. தமிழில்உள்ள வேள்விக் குடிச் செப்பேட்டில் களப்பிரர் பாண்டி நாட்டிலிருந்தமை தெரிகிறது. பல்லவர்களில் சிம்ம விஷ்ணு, முதல் நரசிங்கன் என்போருடைய குறிப்புக்களிலும் களப்பிரர் காணப்படுகின்றனர். இக்களப்பிரர்கள் தமிழரல்லர்; தமிழ்நாட்டவருமல்லர். பல்லவர்கள் புகுதற்கு முன்பே தமிழகத்திற் புகுந்து சங்ககாலத் தமிழ் வாழ்வைச் சீரழித்தவர். அவர்கள் புகுதற்கு முன் தமிழகம் நாடு புகழும் நலஞ்சிறந்து விளங்கிற்று. அத்தகைய தமிழகம், கல்வி வாணிகம் பொருள் அரசியல் சமயம் என்ற துறைகளில் களப்பிரர் வரவால் பெருவீழ்ச்சியுற்றது. அவ்வத்துறைகளை விளக்கும் தமிழ் நூல்கள் அழிந்தது அக்காலத்தேயாகும். சுருங்கச் சொல்லுமிடத்து, தமிழர்களின் கல்வியைச் செல்வாக் கிழப்பித்துக் கடல் வாணிகத்தை உடலறக் கெடுத்துப் பொருள் விளக்கத்தை இருள்படுத்தி அரசியலை அலைத்தழித்துச் சமயத்தைக் குமைத்து நின்றது களப்பிரரது கடுங்கோலாட்சி யென்பது அமையும். தமிழகத்தின் வடபகுதியில் பல்லவர்களால் தாக்குற்றபோது இக்களப்பிரர், தொடக்கத்தில் கங்கநாடு புகுந்து பின் கொங்குநாடடைந்து பின்னர் அக்கொங்கு நாட்டினின்றும் பாண்டிநாடு சேர்ந்து அங்கே இடம் பெற்றிருந்தனர். பாண்டி நாட்டில் இடைக்காலத்தே தோன்றிய கடுங்கோன் முதலிய பாண்டியர்களால் அவர்கள் வேரோடு தொலைக்கப் பெற்றனர். இக்களப்பிரர் பண்டைய வரலாற்றில் காணப்பட்ட போதிலும் அவர்கள் நிலைபெறத் தங்கி ஆட்சி நடத்தியதாக ஒருநாடும் காணப்படவில்லை. இதனைப் பிருகத் சங்கிதையே நன்கு காட்டுகிறது. எனவே, அவர்கள் ஓரிடத்தும் நிலையாகத் தங்காமல் மக்களைச் சூறையாடுவதே தொழிலாக மேற் கொண்டிருந்த நாடோடிகள் எனத் தெரிகிறது. இப்பெற்றியராகிய களப்பிரரே பிற்காலத்தில் களப்பாளராகிய மன்னுயிர் பேணும் தமிழ் வேளாண் பெருமக்களாகத் திகழ்ந்தன ரென்பதும், இப்பெருமக்கள் வழி வந்த சிவஞானப் பெருவள்ளலாகிய மெய்கண்ட தேவரைக் களப்பிரர் என உய்த்துணர வுரைப்பதும் உண்மையறிவுக்குப் பொருந்துமா என்பதை அறிஞர்கள் கண்டு கொள்வார்களாக. சிவ மாதவச் சிவஞான சுவாமிகள் வரலாறு செந்தமிழ் நாட்டில் காவிரி பாயும் கவின்பெறு நாடும் அதன் வடபகுதியிலுள்ள நாடுகளும் சிவஞானப் பேரருட் செல்வர்களாகிய திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதலிய பெருமக்களையும் அவரது வரலாறு கண்டுரைத்த சேக்கிழார் முதலிய அருட்சான்றோர்களையும் பெற்று உலகிற்கு அளித்த பெருமையும் தவமும் உடையன என்பர். எனினும், அன்று தொட்டு இன்றுகாறும் சைவ வொழுக்கத்தில் சிறப்புக் குன்றாது நிலவும் சிறப்பு தென்பாண்டி நாட்டுக் குரியது என்பதை எவரும் மறுத்தற்கியலாது. சைவத்தின் பெருமாண்பினை நின்று நிலை பெறுமாறு அரும்பணி புரிந்த சான்றோர்களுள் குமர குருபர அடிகளும் சிவஞான முனிவரும் தலையாயவராவர். குமர குருபரர் தண்ணான் பொருநை என்னும் தாம்பிரபரணி கடலொடு கலக்கும் பகுதிக்கண் உள்ள சீவைகுண்டம் என்னும் பேரூரில் தோன்றிச் சிவஞானக் கருத்துக்கள் நிறைந்த செந்தமிழ்த் தீவிய பாட்டுக்களால் சிவப்பணி புரிந்து கங்கையாறு பாயும் கழனி நாடுகாறும் சென்று ஆங்கும் நம் சைவத்தின் தனிச்சிறப்பினை நிலைநாட்டிய சான்றோராவர். அவரது புகழ் விளக்கமாக இன்று திருப்பனந்தாள் காசிமடம் ஞானவொளி வீசிக்கொண்டுளது. அவ்வடிகட்குப் பின் ஒரு நூற்றாண்டு கழிந்ததும் மற்றொரு ஞான முனிவர் தண்ணான் பொருநை, பொருப்பினின்று நிலத்திடைக் கால்வைக்கும் இடத்தே தோன்றியருளினார். அப்பகுதியில் பாபநாசம் என்னும் பேரூர்க் கண்மையில் விக்கிரமசிங்கபுரம் என்ற இனிய ஊர் இன்றும் உளது. அவ்வூர்தான் இந்த ஞான முனிவரை, சிவஞான முனிபுங்கவரைப் பெற்ற பெருமையால் பிறங்குகின்றது. இப்பெருமுனிவர்தான் சிவஞான போதத்துக்குப் பேருரையும் சிற்றுரையும் வழங்கியருளிய பெருமானாவர். அவ்வூர்க்கண் இவரை மகனாகப் பெறுதற்குரிய பெருந்தவத்தைச் செய்த பெற்றோர் ஆனந்தக்கூத்தர் என்பாரும் மயிலம்மை என்ற அருட்செல்வியாருமாவர். பெற்றோர் தம் மகனார்க்கு இளமையில் இட்டு மகிழ்ந்த பெயர் முக்களாலிங்கர் என்பது. முக்களாலிங்கர் மிக்க இளம் பருவத்தேயே சிறந்த கல்வியும் திருந்திய ஒழுக்கமும் கொண்டு விளங்கினார். பள்ளியிற் பயிலும் போதே அழகிய கருத்தமைந்த பாட்டுக்களைப் பாடும் ஆற்றல் பெற்றிருந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த முனிவர் சிலர் ஒருகால் அவ்வூர்க்குச் சென்றிருந்தனர். பள்ளிச் சிறுவராகிய முக்களாலிங்கர் அம்முனிவர்களைக் கண்டதும், அவர்களைத் தமது இல்லத்துக்கு அழைத்துச் சென்று திருவமுது பண்ணுவிக்கும் சிந்தை கொண்டார்; தமது மனைக்கும் அழைத்துச் சென்றார். அப்போழ்து அவரது தந்தையார் வெளியூர் சென்றிருந்தார். ஆயினும் தமது அருமை மகனாரின் விழைவு கண்ட மயிலம்மையார் உயரிய முறையில் முனிவர்களை வரவேற்று உண்மையன்போடு திருவமுது செய்வித்தார். மகனாரது மனமாண்பையும் அவரைப் பெற்ற தாயாரது சைவப் பேரொழுக்கத்தையும் கண்டு வியந்த முனிவர்கள் அவர்களை வாழ்த்திவிட்டுத் தாம் தங்கியிருந்த திருமடத்துக்குச் சென்றிருந்தனர். வெளியூர் சென்றிருந்த ஆனந்தக் கூத்தர் வீடு திரும்பியதும் தமது மனையில் நடந்த சைவ நிகழ்ச்சியை அறிந்து பேரின்ப முற்றதோடு தம்முடைய மகனது சைவப் பற்றினைப் பாராட்டி உவகையுற்றார். அக்காலை, முக்களாலிங்கர் தாய்தந்தையரை வணங்கித் தாம் முனிவர்களுடன் திருவாவடு துறைக்குச் சென்று சிவஞானம் பெற்றுச் சிவப்பணி புரியும் கருத்தினராதலைத் தெரிவித்தார். ஆனந்தக்கூத்தர் அதுகேட்டு மிக்க மகிழ்ச்சிகொண்டு முனிவர்களை யடைந்து மகனது மன விருப்பத்தை வணக்கத்தோடு தெரிவித்தார். அவர்களும் அவர் வேண்டுகோளை ஏற்று முக்களாலிங்கரைத் திருவாவடுதுறைக்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அக்காலத்தே திருவாவடுதுறையில் பின் வேலப்ப தேசிக சுவாமிகள் சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்தார். முக்களா லிங்கர் அவர்பால் இருந்து சிவதீக்கையும் சைவத் துறவும் மேற்கொண்டு சிவஞான யோகி என்னும் தீக்கைச் சிறப்புப் பெயர் பெற்றுச் சைவ ஒழுக்கத்தில் திகழ்ந்து வருவாராயினர். அக்காலத்தே அவர் செந்தமிழ் வடமொழி யென்ற இருமொழியிலும், இலக்கணம் இலக்கியம் தருக்கம் முதலிய துறைகளிற் சீர்த்த புலமை பெற்றுச் சிவாகமங்களிலும் திருமுறைகளிலும் சிவஞான போத முதலிய சித்தாந்த நூல்களிலும் மிகச் சிறந்த பயிற்சியும் புலமையும் பெற்றார். ஒருகால் முக்களாலிங்கராகிய சிவஞான யோகிகள் திருப்பாதிரிப்புலியூர்க்குச் சென்றார். முன்னாளில் திருநாவுக்கரசர் கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலில் மிதந்து கரையேறிய பேரூராதலின், அங்கே சின்னாள் தங்கியிருந்தார். அப்போது கற்றோர் கூடிய பேரவை யொன்றில், “கரையேற விட்ட முதல்வா உன்னையன்றியும் ஓர் கதியுண்டாமோ”என்ற ஈற்றடி தந்து இதனை ஒரு பாட்டாய் முடித்துத் தருவோர்க்கு ஒரு நூறு பொன் பரிசு தருவதாகச் செல்வர் ஒருவர் தெரிவித்தார். அதனை யறிந்த ஏழை ஒருவன் நம் சிவஞான முனிவர்பால் வந்து அதனைத் தெரிவிக்க, அவர் உடனே ஒரு சிறு தடையுமின்றி, “வரையேற விட்டமுதம் சேந்தனிட வுண்டனை; வல்லினம் என்றாலும் உரையேற விட்டமுதலாகுமோ எனைச் சித்தென் றுரைக்கின் என்னாம்; நரையேற விட்டமுத னாளவனாக் கொண்டுந றும் புலிசைமேவும் கரையேற விட்டமுதல்வா வுன்னை யன்றியுமோர் கதியுண்டாமோ” என்று பாடிக் கொடுத்துப் பரிசு பெற்றுச் செல்லுமாறு அருளினார். பின்பு அங்கிருந்து தொண்டைநாட்டுக் காஞ்சிமாநகரம் சென்று பிள்ளையார்பாளையம் எனப்படும் திருஞான சம்பந்தப் பிள்ளையார் பாளையத்தில் நம் முனிவர் பெருமான் பன்னாட்கள் தங்கியிருந்தார். அங்கே மணிகண்ட முதலியார் என்னும் பெருஞ் செல்வர் ஒருவர், முனிவர் பெருமானை வழிபட்டு ஆதரவு செய்து வந்தார் என்பர். அக்காலத்தே தான் வைணவருட் சிலர் செருக்கிக் கூறிய கம்பராமாயணத்து “நாடிய பொருள் கைகூடும்” எனத் தொடங்கும் பாட்டிற்குப் பல்வேறு வகை வழுக்களை முனிவர் பெருமான் எடுத்துக் காட்டியதும், பின்பு அவர் தம் வேண்டுகோட் கிரங்கி, அக்குற்றங்கட்கு அமைதி கூறியதும் நடந்தன. முனிவர் பெருமான் காஞ்சிமா நகர்க்கண் இருக்கையில் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், திருத்தணிகைக் கந்தப்பையர், கச்சியப்ப முனிவர் முதலிய சான்றோர் பன்னிருவர்க்கு ஆசிரியராய் இருந்து அறிவுநூல்களை அறிவுறுத்தருளினார். அவர் அங்கே காஞ்சிப் புராணம் பாடியருளியபோது, சில அறிஞர்கள், தலபுராணத்துக்குரிய ஏகம்பர் துதிக்கு முன்னாக தில்லைச் சிற்றம்பலவாணரைத் துதித்துப் பாடியதன் கருத்தை அறிய ஆவல்கொண்டனர்; அதனால் முனிவர் பெருமான் அவ்வாறு பாடியது குற்றம் என்றும் சிலர் குறை கூறினர் என்பர். அதற்கு முனிவர் மாணவர்களில் ஒருவரான கச்சியப்ப முனிவர் முன் வந்து, அவருட் சிலரை ஒருங்கு கூட்டி, அவர் முன் திருவேகம்பத் திருப்பதிகத்தை ஓதுமாறு பணித்தார். ஓதுவோர் “திருச்சிற்றம்பலம் ” என்று தொடங்கி, அப்பதிகத்தை ஓதினர். உடனே கச்சியப்பர், குறைகூறிய அறிஞர்களை நோக்கித் திருவேகம்பத் திருப்பதிகத்தை ஓதத் தொடங்குமுன், திருச்சிற்றம் பலம் என்பது முறையாகுமா? திருவேகம்பம் பிருதிவியம்பல மாதலின், “பிருதிவியம்பலம்” என்பதன்றோ முறை யென்றாராக, அவர்கள் அனைவரும் உண்மை யுணர்ந்து மனக்குறை நீங்கி இன்புற்றனர். காஞ்சிமா நகர்க்கண் சிவஞான முனிவர் சிவஞானப் பெருங் கடலுருவாய்த் தம்பால் வந்த பலர்க்கும் சிவஞானம் வழங்கி வருகையில் வடமொழியில் அருமையாய்க் காணப்படும் சைவ நூல்களும் அவர்க்கு மிக்க எளிமையாய்க் கிடைத்தன. வடமொழிப் புலவரும் செந்தமிழ்ப் புலவரும் முனிவர்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டு போற்றினர். அந்தச் சூழ்நிலையில் முனிவர் பெருமானுடைய நினைவும் சொல்லும் எல்லாம் சிவஞான மயமாய்த் திகழ்ந்தன. அவற்றின் விளைவாய் முனிவர் பெருமான், மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதத்துக்குச் சிவஞான மாபாடியம் என்ற பேருரையை எழுதியருளினார். பிரமசூத்திரத்துக்குச் சங்கரர், இராமநுசர், மாத்துவர், சீகண்டர் முதலியோர் எழுதிய பேருரைகளின் நுட்பங்களும், அவர் உரைகளில் காணப்படாது திருவருள் ஞான நெறியாற் காணத் தக்க நுண்பொருள்கள் பலவும் இப்பேருரையில் நிறைந்திருந்ததை அந்நாளில் வாழ்ந்த பேரறிஞர் பலரும் கண்டு இறும்பூதெய்தினர். அதனால், அவர்கள், ஞானத்தின் திருவுருவாகிய முனிவர் பெருமானை வணங்கி, வடமொழிச் சிவஞான போதத்துக்குப் பேருரை கண்ட சிவாக்கிர யோகிகள் சிற்றுரையும் உடனெழுதியது போல இச்சிவஞானமாபாடியப் பேருரையுடன் சிற்றுரையும் எழுதியுதவ வேண்டுமென இறைஞ்சினர். அவ்வாறே இச்சிற்றுரை சிவஞான முனிவரால் எழுதப்பட்டது என்பர். சிவஞானபோதப் பேருரை சிற்றுரைகளுடன், சிவஞான சித்தியார்க்குப் பொழிப்புரையும், சிவசமவாத வுரைக்கு மறுப்பும், அரதத்தாசாரியார் சுலோக பஞ்சகத்துக்கு மொழி பெயர்ப்பும் வேறு பல நூல்களும் அருளியுள்ளனர். இவ்வாறு சிவஞானமுணர்த்தும் பேருரை நிகழ்த்தித் தமிழகத்துப் பல பகுதிகட்கும் சென்று சிவத்தொண்டு புரிந்தருளிய முனிவர் பெருமான் திருவாவடுதுறையில் சகாத்தம் 1708-க்குச் சரியான விசுவாவசு ஆண்டு சித்திரைத் திங்கள் எட்டாம் நாள் (கி. பி. 17-4-1785) ஞாயிற்றுக்கிழமை 1-40-மணிக்கு “நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீழ்” அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார். முனிவர் பெருமான் வழங்கியருளிய நூல்கள்: தொல்காப்பியச் சூத்திரவிருத்தி நன்னூல் விருத்தியுரை இலக்கண விளக்கச் சூறாவளி காஞ்சிப்புராண முதற்காண்டம் சோமேசர் முதுமொழி வெண்பா குளத்தூர்ப் பதிற்றுப்பத் தந்தாதி இளசைப் பதிற்றுப்பத் தந்தாதி கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ் குளத்தூர் அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ் செப்பறை- இராசை அகிலாண்டேசுவரி பதிகம் திருவேகம்ப ரந்தாதி திருமுல்லை வாயிலந்தாதி திருத் தொண்டர் திருநாமக் கோவை பஞ்சாக்கர தேசிகர்மாலை கம்பராமாயண முதற் செய்யுட் சங்கோத்தர விருத்தி தருக்க சங்கிரகம் அன்னம்பட்டீயம் சிவஞான பாடியம் சிவஞான சித்தியார் (சுபக்கம்) பொழிப்புரை சித்தாந்தப் பிரகாசிகை சிவசமவாதவுரை மறுப்பு அரதத் தாசாரியர் சுலோகபஞ்சக மொழிபெயர்ப்பு சிவதத்துவ விவேகம் சித்தாந்த மரபு கண்டன கண்டனம் முதலியன. சிவஞான போதச் செம்பொருள் 1. நம் கண்ணுக்குப் புலனாகும் இவ்வுலகம், உயிருடைப் பொருள் உயிரில் பொருள் எனவும், இயற்கைப் பொருள் செயற்கைப் பொருள் எனவும், பருப்பொருள் நீரியற் பொருள் காலியற் பொருள் எனவும் செய்யப்படும் ஆராய்ச்சிக்கேற்ப வகுத்து ஆராயப்படும். சமயத்துறையில் நின்று ஆராய்ச்சி செய்வோர் தங்கள் தங்கள் சமயக் கொள்கைகட் கேற்பப் பொருள்களைப் பகுத்து ஆராய்வர். தமிழிலக்கண நூலோர் பொருள்களை மக்கட் பொருள் என்றும் பிற பொருள் என்றும் பகுத்து நோக்குவர். இவ்வுலகிடை நின்று அறிவாராய்ச்சி செய்யும் அறிஞர் அனைவரும் தமக்கேற்ற வகையில் இவ்வுலகம் பகுத்து நோக்கப்படும் பான்மை யுடையதாயிருப்பதைக் காண்கின்றனர். தமிழ் நூன் முறைப்படி இவ்வுலகம், உயர்திணை அஃறிணை என இருவகையாக வைத்துப் பொருளாராய்ச்சி செய்யுமாறு அமைந்துளது. உயர்திணைப் பொருள் ஆண் என்றும் பெண் என்றும் பகுக்கப்படுகிறது; ஏனை அஃறிணைப் பொருளின்கண் உயிருடையன சில ஆண் பெண்ணெனப் பகுத்துணரப்படினும் உயிருடைப் பொருளுட் சிலவும், உயிரில் பொருள் அனைத்தும் ஆண் பெண் பாகுபாட்டிற்கு அகப்படுவ தில்லை; அதனால் அப்பொருள் அது என்ற சொல்லாலும், உயர்திணை ஆண் அவன் என்ற சொல்லாலும், உயர்திணைப் பெண் அவள் என்ற சொல்லாலும் குறிக்கப்படுவது தமிழ் படிப்பவர் அனைவரும் அறிந்தது. இதனால் இவ்வுலகு முற்றும் அவன், அவள், அது என்று குறிக்கப்படும் பொருள்களின் தொகுதியே யென்பது தெளிவாம். ஆனதுபற்றியே மெய்கண்ட தேவர் இவ்வுலகத்தை, “அவன் அவள் அது எனும் அவை” என்று குறித்தருளினார். ஆணும் பெண்ணுமாய்ப் பலர் கூடியிருக்கும் இடம் அவை யெனப்படும். அவ்வாறே, அவன், அவள், அது என்னும் மூவகைப் பொருளும் கூடி இயன்றுள்ள உலகும் அவை யென்று குறிக்கப்பட்டது. நாம் காணும் ஒவ்வோர் அவையும் மக்கள் வந்து கூடுங்கால் தோற்றமும், இருக்குங்கால் நிலை பேறும், பிரிந்து போகுங்கால் கேடும் எய்துகிறது. இதுபோலவே இவ்வுலகமாகிய அவையும் தோற்றம், நிலை, இறுதி யென்ற மூன்று செயல்களையும் உடைய தென்பது இனிது விளங்குகிறது. நாம் காணும் அவைகள் தாமே கூடுவதின்றி, ஒருவர் முன்னின்று கூட்டக் கூடலும், இருத்த இருத்தலும், பிரிக்கப் பிரிதலும் உடையது; இதுபோலவே, இவ்வுலகமும் தானே தோன்றாது முதல்வன் ஒருவன் தோற்றுவிக்கத் தோன்றலும், நிற்பிக்க நிலைபெறுதலும், ஒடுக்க ஒடுங்குதலும் உடையதென்பது தானே விளங்கும். நம்மாற் காணப்படும் உலகம், ஒருவர் கூட்டக் கூடியிருக்கும் அவை போல்வதாகையால், ஒருவர் தோற்றுவிக்கத் தோன்றி நிலைபெறுகிறது என்பது தெளிவாம். ஆதலால், ஆசிரியர், அவனும் அவளும் அதுவுமாகிய பொருள்கள் கூடியிருக்கும் இவ்வுலகமாகிய அவைக்குத் தோன்றுதல் முதலிய மூவினைகள்1 இருக்கிற படியால், ஒருவர் கூட்டக் கூடியிருக்கும் அவைபோல, உலகம் தோற்றுவிக்கத் தோன்றி நிலைபெறுகிறது என்று கூறுகின்றார். இதனை முதற் சூத்திரம், அவை மூவினை உடைமையின் தோற்றிய திதியே என்று கூறுகிறது. இது, தானே தோன்றியதன்று என்பதற்காகத் தோன்றிய திதி என்று சொல்லாமல் தோற்றிய திதி என்றார். அதற்கு, தானே தோன்றாமல் தோற்று விக்கப்பட்டு உளதாயது என்று பொருள் கூறப்படும். உலகில் நாம் கூட்டக் கூடும் அவை முடிந்தவழி, அவ்வவையிற் கூடியிருந்தோர் தத்தம் மனைக்குச் சென்று ஒடுங்குவர்; மீள நாம் கூட்டும்போது அவர்கள் தாம் ஒடுங்கியிருந்த மனையிலிருந்து வந்து கூடுவர். இவ்வண்ணமே இவ்வுலகமாகிய அவையும் ஒடுங்கும் போது இறைவனிடத்திலே சென்றொடுங்கி, மீளத் தோற்றுவிக்கும்போது அவனிடத்திருந்தே வந்து உலகமாகிய அவையாய்க் காட்சியளிக்கிறது. உலகத்தை ஒடுக்கும்போது, அஃது ஒடுங்கியிருப்பதற்குத் தானே இடமாதலால், இறைவனை “ஒடுங்கி” என்று ஆசிரியர் கூறுகின்றார். ஒடுங்கிய உலகம் தான் ஒடுங்கியிருப்பதற்கு இடமான ஒடுங்கியிலிருந்தே தோன்றுவது கொண்டு “ஒடுங்கி உளதாம்” என்றார். எனவே, அவன் அவள் அது என்பவற்றின் தொகுதியாகிய அவை தோற்றிய திதியாய்க் காட்சியளித்து ஒடுங்கும் என்றும், தான் ஒடுங்கியிருந்த ஒடுங்கி யினின்றே மீள உளதாம் என்றும் தெரிவித்தவாறாயிற்று. ஒரு நாள் கூடிய ஒரு பேரவை மறுநாளும் மீளக்கூடுமாயின், நாம் என்ன நினைப்போம்? முன்னாள் கூடியதன் நோக்கம் கைகூடாமையால் மறுநாளும் கூடியிருக்கிறதென்றும், கைகூடா மைக்குக் காரணமாயிருந்த தடை முன்னாளே நீங்காது மறுநாள் கூடுவதற்குக் காரணமாயிற்றென்றும் தானே நினைப்போம். அதுபோலவே, ஒரு கால் தோற்றுவிக்கப்பட்ட உலகம், தோன்றியது கொண்டு பெற்றுக் கொள்ளவேண்டிய பயனைப் பெற்றுக் கொள்ளாமையால் ஒடுங்கி மீளத் தோற்றுவிக்கப்படுவதாயிற் றென்றும், பெற்றுக் கொள்ளாவாறு தடுத்திருந்த தடையினால் மீளத் தோற்றுவிக்கப்படுகிறதென்றும் எண்ணவேண்டும். அத்தடை யாது என ஆராய்ந்து அஃதாவது மலம் என்று கண்டதனால், உலகமாகிய அவை ஒடுங்கி மலத்தால் மீள அவ்வொடுங்கி யினின்றே உளதாம் என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். இவ்வாறு ஒடுக்குவதும் ஒடுங்கியதற்கு இடமும் ஆதலால் இறைவன் உலகுக்கு அந்தமும், மீளத் தோற்றுவித்தற்கும் அவனே காரணமாதலால் ஆதியுமாகின்றான். தனக்கு ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன், உலகிற்கு அந்தமும் ஆதியுமாவது பற்றி “அந்தம் ஆதி என்மனார் புலவர்” என்று ஆசிரியர் கூறுகின்றார். என்மனார் புலவர் என்பதற்கு, என்று சொல்லுவர் ஆராய்ச்சி யுணர்வு படைத்த அறிஞர் என்று பொருள் கொள்ளவேண்டும். இச்சூத்திரத்தால் சில கருத்துக்கள் தெளிவுபட வேண்டும். ஓர் அவை கூட்டப் பெறுதற்கு ஒரு நோக்கம் இருப்பதுபோல, உலகப் படைப்புக்கும் ஒரு நோக்கம் இருத்தல் வேண்டும். அந்நோக்கம் யாது? அந்நோக்கம் கைகூடாது தடுக்கும் மலம் யாது? உலகப் படைப்பு அந்நோக்கத்தை எவ்வாறு கைகூட்டுவிக்கும்? இவ்வுலகம் உயிரும் உயிரில் பொருளுமாகக் காட்சி அளிக்கிறது. இவ்வாறு காட்சியளிக்கச் செய்வதுதான் உலகப் படைப்பு என்பது. உயிர்கள் ஆக்கப்படுவதுமில்லை; அழிவது மில்லை. இறைவன் என்று உண்டோ அன்றே உயிர்கள் உண்டு. இறைவன் ஒருவன்; உயிர்கள் எண்ணிறந்தன. செம்பின்கண் களிம்பு உடனிருப்பதுபோல உயிர்களிடத்தே மலம் உடன் இருக்கிறது. களிம்பு நீங்கின செம்பு ஒளி விட்டுத் திகழ்வது போல, மலம் நீங்கின உயிர் ஞானவொளி சிறந்து பேரின்பம் எய்தும். செம்பின்கண் களிம்பு எப்பொழுது ஏன் உண்டாயிற் றென்ற கேள்விக்கு விடை கிடையாது; அதுபோல உயிர்கட்கு மலம் எப்பொழுது ஏன் உண்டாயிற்றென்று காண்பது ஆகாத ஒன்று. இதனை அனாதி சம்பந்தம் என்று அறிவுநூலோர் கூறுவர். உயிரின் வேறாகக் காட்சியளிக்கும் உடலும் கருவிகளும் நுகர் பொருளுமாகிய உலகம் இவ்வாறு காணப்படுமாறு செய்வதுதான் படைப்பு என்பது. இவ்வுலகத்துக்கு முதற்காரணம் ஒன்று உண்டு. உயிரில் பொருளாகிய இவ்வுலகம் ஒடுங்குங்கால் முதலில் நுண் பொருளாய் ஒடுங்கும்; அதுவே பின்னர் ஆற்றலாய் (Energy) ஒடுங்கும்; அந்த ஆற்றல் (சக்தி) மாயை யென்று நூல்களிற் கூறப்படும். இறைவன் ஒளியும் ஒளிப்பொருளும் போல்வன். ஒளிப்பொருளினின்றும் நீங்காமல் இருக்கும் ஒளிபோல அவனி டத்தினின்றும் நீங்காமல் இருப்பது அவனது அருள். அஃது அருட்சத்தி யென்றும் வழங்கும். ஆற்றலாய் ஒடுங்கிய மாயை அவனது அருட்சத்தியில் தங்கும். அந்த அருட்சத்தி இறைவனாகிய சிவத்தில் ஒடுங்கியிருக்கும். ஒடுங்கியாகிய சிவன், மாயையை மீளத் தோற்றுவிக்கக் கருதுவானாயின், அருட்சத்தியை நோக்குவன், அது மாயையாகிய சத்தியை வெளிப்படுத்தி, உடம்பும் கருவியும் பொருளும் உலகுமாக விரிந்து காட்சிப்படச் செய்யும். முதற்காரணமாகக் கொண்டு உயிர்கட்குரிய உடம்பொடு கூடி வாழும் உயிர் மலமறைப்பு நீங்கி அறிவு விளங்கப் பெறுகிறது. உயிர்க்கு அந்த நன்னிலை எய்த வேண்டுமென்ற பேரருளால் இவ்வுலகம் மீளப் படைக்கப்படுகிறது. அறிவுருவாக இருக்கும் உயிரோடு கொண்ட அனாதி சம்பந்தத்தால், மலம் அதன் அறிவை மறைத்து, உலகிடைத் தோன்றிப் பெறுதற்குரிய அறிவு விளக்கத்தை நிரம்பப் பெறாதவாறு தடை செய்கின்றது. அறிவு விளக்கம் பெற்று அதன் வழியாக எய்தும் பேரின்பத்தை நுகர்வது தான் உயிரின் நோக்கம்; அதற்குத் துணைபுரிவது, உடல் கருவி முதலியவற்றிற்கு முதற் காரணமாகிய மாயை. இக்கருத்துக்கள் விளங்கவே, ஆசிரியர் மெய்கண்டார், “அவன் அவள் அது எனும் அவை மூவினை மையின் தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்” என்று அறிவுறுத் தருளுகின்றார். 2. அவன் அவள் அது என்னும் மூவகைப் பொருளும் கூடிக் காட்சியளிக்கும் உலகமாகிய அவற்றை தோற்றுவித்து நிலை பெறுவித்தற்கு இறைவன் தனது அருட்சத்தியை நோக்குவன் என்று முன்னே கண்டோம். அந்த அருட்சத்தி இறைவனாகிய முதல்வனுக்கு ஆணையென்று சொல்லப்படும். அவன் நினைப்பையே தனக்கு ஆணையாகக் கொண்டு அவ்வருட்சத்தி இயங்குவதால் அஃது ஆணை என்று கூறப்படுகிறது. அந்த ஆணையும் இறைவனும், குணமும் குணியும் போலப் பிரிந்து நில்லாத தற்கிழமைத் தொடர்பு உடையவை; செந்தாமரைப் பூவின் செம்மை பிரிக்கமுடியாது ஒன்றியிருப்பதுபோல இறைவனது ஆணையாகிய அருட்சத்தி அவனிற் பிரியாது ஒன்றி நிற்கும். இதுபற்றியே ஆசிரியர், அந்தம் ஆதியென முதற் சூத்திரத்திற் கூறப்பட்ட இறைவனாகிய முதல்வன் “ஆணையின் நீக்கமின்றி நிற்கும்” என்று அறிவுறுத்துகின்றார். நீங்கி நிற்பதற்கும் நீக்கமின்றி நிற்பதற்கும் உரிமையுடையவன் முதல்வனாதலால், ஆணை நீக்கமின்றி நிற்கும் என்று சொல்லாமல், முதல்வன் “ஆணையி னின்றும் நீக்கம் இன்றி நிற்கும்” என்று சொல்லி யருளுகின்றார். இனி, இவ்வுலகத்துக்கு அந்தமும் ஆதியுமாய் நிற்கும் இறைவன் இருக்கும் இயல்பு கூறலுற்ற ஆசிரியர், உலகமாகிய அவையேயாய், தானேயாய், அவையே தானேயாய் நிற்கின்றான் என்று கூறுகின்றார். முதல்வன் தானேயாய் நிற்கும், அவையேயாய் நிற்கும், அவையாயும் தானாயும் உடன் நிற்கும் என்பது கருத்து. முதல்வன் தானேயாய் நிற்பதென்பது, முதல்வன் உலகுயிர்களோடு கலக்காமல் வேறாய்த் தனித்து நிற்கும் நிலை; அவையேயாத லென்பது, உலகமாகிய அவை வேறு தான் வேறு என்னாதவாறு ஒன்றாய்க் கலந்து நிற்கும் நிலை; உயிரும் உடம்புமாய்க் கலந்து நிலவும் நம்பால், உயிர் வேறு உடம்பு வேறு எனப் பிரித்துக் காணாதபடி நம்முயிர் உடம்போடு கலந்து ஒன்றாய் நிற்பது போல, முதல்வன் உலகில் ஒன்றாய்க் கலந்து நிற்கின்றான் என்பது. உலகில் ஒன்றாய்க் கலந்து நிற்குங்கால் உலகம் முதல்வனாதலும், முதல்வன் உலகமாதலும் இல்லை. எவ்வா றென்றால், உடம்போடு ஒன்றாய்க் கலந்து நிற்கும் உயிர் உடம்பாவதும், உடம்பு உயிராவதும் இல்லையன்றோ, அதுபோல என அறிதல் வேண்டும். உலகில் நிலவும் உயிர்கட்கு, அறிவு விழைவு செயல் என்ற மூன்று இயல்புகள் உண்டு. அறிவு முதலிய இயல்புகள் வெளிப்படுதற்குரிய கருவியொடு கூடுமாயின், உயிர், அறிவதோ விழைவதோ செய்வதோ மேற்கொள்ளும். உயிரின் வேறாய உலகியற் பொருள் கட்கு அத்தகைய செயல் கிடையாது. அப்பொருள்கள் உயிர்ப் பொருட்டுச் செயற்படவேண்டி யிருப்பதால் முதல்வன் அவற்றோடு ஒன்றாய்க் கலந்து நிற்கின்றான். அவ்வாறு நில்லானாயின், உலகியற் பொருள் ஒரு நெறிப்பட ஒழுகுதற்கு ஏது இல்லை யாகும்; இக்கால விஞ்ஞான வளர்ச்சிக்கும் இடமில்லையாம். உலகியற் பொருளால் ஆகிய உடம்பின்கண் நிற்கும் உயிர் மலத் தடையிலிருந்து நீங்க வேண்டுமென்று, உலக வாழ்க்கையைத் தொடங்கும்; வாழ்க்கையில், அறிவனவற்றை அறியவும் விழையவும் செய்யவும் இறைவன் உடனிருந்து துணை செய்கின்றான். உடம்போடு ஒன்றாயும், உயிரின் வேறாயும், இரண்டினையும் விட்டு நீங்காமலும் இருப்பதால், அவ்வாறு இருக்கும் முதல்வனது இருப்பு உடனாதல் எனப்படுகிறது; இரண்டாம் சூத்திரம், அவையே தானேயாய் என்று உணர்த்துகிறது. உலகிற்கு அந்தம் செய்யும் ஆதியாகிய முதல்வன் அந்தமும் ஆதியுமாகும்போது வேறாய் நிற்பதும், உயிரில் பொருளாகிய உலகியற் பொருள்களோடு ஒன்றாய் நிற்பதும், உயிர்களோடு உடனாய் நிற்பதும் உணர்த்த வந்த திருஞான சம்பந்தப் பெருமான், “ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண்ணாண் குண மூன்றாய் மாறா மறை நான்காய் வருபூதம்மவை யைந்தாய் ஆறார் சுவை ஏழோசையோ டெட்டுத் திசை தானாய் வேறாய் உடனானான் இடம் வீழிம் மிழலை யே” என்று அருளிச் செய்துள்ளார். வேறாய் நின்று அந்தமும் ஆதியுமாம் திறத்தை, “வேறாய் ஈறாய் முதலாய்” என்றும், ஒன்றாய் நின்று உலகியற் பொருள்களை இயக்கும் திறத்தை, “ஒன்றாய் இரு பெண்ணாணாய், குணமூன்றாய், மறைநான்காய், பூதமவை யைந் தாய், ஆறார் சுவையாய், ஏழோசையாய், எட்டுத்திசை தானாய்” என்றும், உயிர்களோடு ஒன்றா காமலும் வேறாகாமலும் உடனிருந்து கண்டும் காட்டியும் உதவியருளும் முதல்வன் திறத்தை “உடனானான்” என்றும் இத்திருப்பாட்டில் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்கின்றார். இவ்வாறு இறைவனது மூவகை நிலை யினையும் திருவருளால் உணர்ந்து ஒருங்கே எடுத்து ஓதிய நூல் வடமொழியிலோ வேறு மொழிகளிலோ இதுகாறும் காணப்படவில்லை. இக்கருத்துக்களை வற்புறுத்துவதற்காகத்தான், ஆசிரியர், புலவர் பெருமக்களால் “அந்தம் ஆதி” எனப் புகழ்ந் தோதப்பெற்ற முதல்வன், “அவையே தானேயாய் நிற்கும்” என்று இச்சூத்திரத்தின் எடுத்த எடுப்பிலேயே இயம்பி யருளுகின்றார். உலகில் நிலவும் உயிர்கள் ஒவ்வொன்றும் மனத்தால் நினைத்தலும் வாயாற் சொல்லுதலும் உடம்பால் செயல் செய்தலும் செய்கின்றன. இவையாவும் வினையென்றே கூறப்படும். இவ்வினைகள், இன்பம் விளையுமாயின் நல்வினையும், துன்பம் விளையுமாயின் தீவினையும் என இருவகைப் பெயர் பெறும். இவ்வினையும் வினைப்பயனும் உயிர்போல அறிவில்லாதன வாதலால், அவை தம்மைச் செய்த உயிரைத் தாமே சென்று சேரா; வினையையும் வினைப்பயன்களையும் கூட்டுவிப்பது முதல்வன் செயல். வினைக்குரிய பயனையும், பயனை உயிர்கள் நுகர்தற்குரிய உடல் கருவிகளையும் முதல்வன் தன் ஆணையாகிய சிற்சத்தியால் தோற்றுவிப்பன். அவ்வாணை, உயிர்களின் வினை நுகர்ச்சிக் கேற்ப உடல் கருவி முதலியவற்றைக் கூட்டுவதும் நீக்குவதும் செய்யும். கூட்டுங்கால் பிறப்பும், நீக்குங்கால் இறப்பும் உண்டா கின்றன. ஆனதுபற்றியே, உயிர்கள் ஆணையின் இருவினையின் போக்குவரவு புரிய என்று ஆசிரியர் உரைத்தருளுகின்றார். போக்கு, இறப்பு; வரவு, பிறப்பு. இவ்விரண்டு சூத்திரங்களாலும், உலகிற்கு முதல்வன் இறைவன் என்றும், முதற்காரணம் மாயை யென்றும், துணைக் காரணம் ஆணையாகிய அருட்சத்தி யென்றும், உலகப் படைப்புக்குக் காரணம் உயிர்களிடத்திலுள்ள மலம் என்றும், உலக வாழ்வின்கண் உயிர்கள் வினை செய்கின்றன என்றும் கண்டோம். இவ்வகையால், இறைவன், உயிர், உலகு என்ற மூன்றும், மலம், மாயை, வினை என்ற மூன்றும் உண்டென அறிகின்றோம். மலம் முதலிய மூன்றையும் பாசம் என்றும், இவற்றோடு தொடக்குறும் உயிரைப் பசு என்றும், இறைவனைப் பதி என்றும் கூறுவது வழக்கம். இவற்றை உணர்த்தவே, “அவையே தானே யாய் இருவினையின் போக்கு வரவு புரிய ஆணையின் நீக்க மின்றி நிற்கு மன்றே” என அறிவுறுத்துகின்றார். 3. உயிரென்பது ஒன்று உண்டென்பதை மூன்றாம் சூத்திரத்தால் வற்புறுத்துகின்றார். உயிர்க்கு ஆன்மா என்ற பெயரை வேதாந்த நூல்களாகிய உபநிடதங்கள் கூறுகின்றன. நம் நாட்டில் சமய நெறியில் நின்ற அறிஞருள் சிலர் ஆன்மா என ஒன்று கிடையாது என்றனர்; சிலர் உடம்பே ஆன்மா என்றனர்; சிலர் இந்திரியங்களையே ஆன்மா என்றனர்; கனவின்கண் காணப்படும் சூக்கும உடம்பையே சிலர் ஆன்மா என்றனர்; பிராணவாயுவையே ஆன்மா என்றனர் சிலர். இவ்வாறு சுத்த பிரமமே ஆன்மா என்றும், எல்லாக் கருவிகளும் கூடிய கூட்டமே ஆன்மா என்றும் சிலர் கூறிவந்தனர். அவர்களை முறையாக எடுத்து மறுத்து அவர் கூறுவனவற்றின் வேறாக ஆன்மா என்று ஒன்று உளது என ஆசிரியர் நிலைநாட்டுவாராயினர். உடம்பை நோக்கி, உடல், பொறி,மனம் முதலிய கூறுகளாகப் பகுத்து ஒவ்வொன்றையும் உயிரல்லவெனக் கழித்து ஒன்றும் ஆன்மா அன்று என்று கண்டு ஆன்மா என ஒன்று இல்லை யென்பாரைப் பார்த்து, இவ்வாறு கூறிட்டு நோக்கி ஆன்மா இல்லையென எண்ணிக் கூறுவது யாதோ அதுவே ஆன்மா என்று சொல்லலுற்று, இலது என்றலின் ஆன்மா உளது என்றார். உடலே ஆன்மா என்பாரை நோக்கி, “நீங்கள் இது எனது உடல் என்கிறீர்களல்லவா? எனது என்ற சொல்லுக்குப் பொருளாய் உள்ளது யாது?” என்று கேட்டு, உடலின் வேறாக எனது என்னும் சொற்குப் பொருளாய் இருப்பதுவே ஆன்மா; அதற்கு உடைமை யாகிய உடம்பு ஆன்மா அன்று என்று தெருட்டுதற்கு, எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றார். கண் முதலிய இந்திரியங்கள் பொருள்களைப் பார்த்தல் முதலிய அறிவுச் செயலைச் செய்வதால் அவ்விந்திரியமே ஆன்மா என்பவர்களைக் கண்டு, கண் முதலிய பொறிகள் தத்தமக்குரிய ஒளி முதலியவற்றைக் கண்டறியுமே யன்றி, கண் ஓசையையும் காது ஒளியையும் இவ்வாறே பிற பிறவற்றையும் அறியா: இவையே ஆன்மாவாயின், ஒன்றே எல்லாவற்றையும் அறியவேண்டும். அவ்வாறு அறியா மையால் இந்திரியம் ஆன்மா ஆகாது என்பாராய், ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது என்றார். இனி, சூக்கும வுடம்பே ஆன்மா என்பாரை நோக்கிக் கனவின் கண் சூக்கும வுடம்பு காணும் காட்சியை நனவின்கண் தூலவுடம்பு கண்டதாகக் கூறுவதால், அதற்கு வேறாக ஒன்று நின்று காண்கிறதென்பது பெறப்படும். அவ்வொன்றே ஆன்மா என அறிக என்பாராய், ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றார். பிராணவாயுவே ஆன்மாவாயின், அஃது நனவுக் காலத்தில் நுகரும் இன்ப துன்பங்களை உறங்குங் காலத்திலும் பிராணவாயுவின் இயக்கம் இருப்பதால் நுகர்தல் வேண்டும்; அவ்வாறு நுகர்ச்சி இல்லாமையால் பிராணவாயு ஆன்மா அன்றாம். ஆகவே அதனின் வேறாக ஆன்மா உளது என்பார், “கண்படில் உண்டி வினைஇன்மையின் ஆன்மா உளது” என்றார். உண்டி யென்றது இன்ப துன்பங்களை நுகர்வது. இனி, சுத்த பிரமமே ஆன்மா என்பவர்களைப் பார்த்து, பிரமம் என்பது, எல்லாவற்றையும் ஒருவர் அறிவிக்க அறியாமல் ஒருங்கே ஒரு குறையுமில்லாமல் தானே அறியும் சைதன்னியம் என்று சொல்லுகிறீர்கள். ஆன்மாவோ, தானே எதையும் அறிய மாட்டாது, அறிந்தோர் அறிவிக்க அறியும் சிறுமை யுடையது; ஆகவே; பிரமமே ஆன்மா என்பது பொருந்தா தென்பாராய், “உணர்த்த வுணர்தலின் ஆன்மா உளது” என்றார். இனி, பொறி முதலிய எல்லாவற்றின் கூட்டமே ஆன்மா வென்பார்க்கு, பொறி முதலிய எல்லாம் ஒரு பாவையிடத்தும் கூடியுள்ளன; ஒரு பிணத்தினிடத்தும் உடம்புக்குரிய கூறுகள் எல்லாம் கூடி யிருக்கின்றன. எனினும் ஆன்மாவுக்குரிய அறிவு விழைவு செயல்கள் இல்லை. ஆகவே அக்கூட்டத்தின் வேறாக ஆன்மா ஒன்று இவ்வுடம்பினுள் உளது என்று கூறுகின்றார். பொறி முதலிய கருவிகளின் கூட்டமாகிய உடம்புக்கு முதற் காரணம் மாயை; அம்மாயை ஆன்மா அன்று; அந்த ஆன்மாவுக்கு இந்த மாயா காரியமான உடம்பு இடமாகும்; அவ்வுடம்பின் செயல் கொண்டு, அதனுள் ஆன்மா இருப்பது உணரப்படுகிறது என்பதை விளக்குதற்கு “மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா வுளது” என்றார். மாயா இயந்திரதனு - மாயையிலிருந்து தோற்று விக்கப்பட்ட இயந்திரம் போன்ற உடம்பு. இக்கருத்துக்களையே, “உளது இலதென்றலின் எனதுடல் என்றலின் ஐம்புல னொடுக்கம் அறிதலின் கண்படில் உண்டிவினை யின்மையின் உணர்த்த வுணர்தலின், மாயா வியந்திர தனுவினுள் ஆன்மா” என்று கூறுகின்றார். 4. மூன்றாம் சூத்திரத்தில் ஆசிரியர், காணப்படாத உயிரை உண்டு என்பதற்காகக் காணப்படும் நமது உடம்பையே ஆராய்ந்து காட்டினார். நம் உடம்பில் அறி கருவி, செயற் கருவி என இருவகைக் கருவிகள் உள்ளன. அறி கருவியை ஞானேந்திரியம் என்றும், செயற் கருவியைக் கன்மேந்திரியம் என்றும் வடமொழியிற் கூறுவர். அவற்றுள் ஞானேந்திரியம், மெய் வாய் கண் மூக்கு செவி என ஐந்தாகும்; கன்மேந்திரியம், வாய் கால் கை பாயு உபத்தம் என ஐந்தாம். மெய் முதலிய அறிகருவிகளால் உலகியலை அறிவதாகிய செயலைச் செய்கின்றோம்; வாய் முதலிய செயற் கருவிகளால் பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்கின்றோம். இக்கருவிகட்கு வேறாக, மனம் சித்தம் அகங்காரம் புத்தி யென நான்கு உட்கருவிகள் நம் உடம்பில் உண்டு. மனம் சித்தம் முதலியவற்றை அந்தக்கரணம் என அறிவு நூல்கள் கூறும். உடம்பு பருப்பொருளாய்க் கண்ணுக்குத் தெரியக்கூடியது; உயிர் கண்ணுக்குத் தெரியாத அருவப் பொருள். உடம்பின் எல்லையை நீங்காமல் அதனுள்ளே அறிவாய் உடம்பின் பல வேறு கூறுகளையும் இயக்கும் இயக்கப் பொருளாய் உயிர் இருக்கிறது. உடம்பின் எல்லையை உருமண்டலம் என்றும், அறிவுருவாய் நிலவும் உயிரெல்லையை அறிவு மண்டலம் என்றும் அறிஞர் கூறுவர். அறிகருவிகளும் செயற் கருவிகளும் உருமண்டலத்தில் இருப்பவை. உட்கருவிகளான அந்தக்கரணங்கள் அறிவு மண்டலத்தில் இருக்கின்றன. உருமண்டலத்தை உருவுடம்பு என்றும், அதற்குள் இருப்பது அந்தக்கரணங்களைத் தன்னிடத்தே கொண்ட அருவுடம்பு என்றும் நம்முடைய நூல்கள் குறிக்கும். ஆங்கிலம் ஜெர்மனி முதலிய மொழிகளைப் பேசும் மேனாட்டார் லத்தீன் மொழியால் தம்முடைய ஆராய்ச்சியிற் கண்ட பொருள்களுக்குப் பெயரிட்டு வழங்குவது போல நம் நாட்டார் வடமொழியால் ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம் எனப் பெயரிட்டு வழங்குவர். ஆகவே, இவை வடசொல்லால் குறிக்கப்படுவது பற்றி வடநூலாருக்குத் தான் இந்த ஞானேந்திரிய முதலியன வுண்டு; தமிழர்கட்கு இல்லை யென்று கூறிப் பிணங்குவது பெருந்தன்மை யாகாது. இவ்வாறே இந்நூலில் ஆங்காங்குக் காணப்படும் வட சொற்கள் ஆட்சி காரணமாக மேற்கொண்டவையெனக் கொள்ளல் வேண்டும். இனி, மூன்றாம் சூத்திரத்தில் இந்திரியங்கள் ஆன்மா ஆகா என்பது கண்ட சமயவாதிகளிற் சிலர், அந்தக்கரணமே ஆன்மா என்று கூறினர். அந்தக்கரணம் ஆன்மாவின் செயலுக்குக் கருவி யாகுமே தவிர ஆன்மாவாகாது என்பாராய், “அந்தக்கரணம் அவற்றின் ஒன்றன்று ஆன்மா” என்று ஆசிரியர் நான்காம் சூத்திரத்தில் கூறுகின்றார். கண் முதலிய கருவிகளின் வாயிலாகக் காணப்படுவதைப் பற்றுவது மனம்; அதனை இன்னதெனச் சிந்திப்பது சித்தம்; சிந்தனையின்கண் இதுதானெனத் துணிவேனென எழுவது அகங்காரம்; துணிந்து தன்கண் கொள்வது புத்தி. இவற்றைக் கருவியாகக் கொண்டு ஆன்மா அறிவுப்பொருளை அறிந்துகொள்ளும். இவ்வகையில் மனம் முதலிய நான்கும் ஆன்மாவாகிய அரசனுக்கு அமைச்சர் போல நின்று அறிவுத் துணை செய்கின்றன. இக்கருவிகள் ஆன்மாவோடு கூடி அதற்கு அமைச்சுத் தொழில் செய்யும் என்பது விளங்கவே, ஆசிரியர், “அவை சந்தித்து நின்று அமைச்சரசு ஏய்ப்ப” என்று கூறி யருளுகின்றார். முன்பு கண்ட உரு மண்டலமும் அறிவு மண்டலமுமாகிய இரண்டையும் ஒன்றாயடக்கி ஆன்மதத்துவம் என்று நம் சமய நூல்கள் கூறுகின்றன. இதனின் வேறாக இருவகைத் தத்துவங்கள் உண்டு; அவை வித்தியா தத்துவம் சிவதத்துவம் எனப்படும். வித்தியா தத்துவம் (Spiritual Sphere) நுண்ணுடம்புக்கு உள்ளாய் உயிரைச் சூழ்ந்து நிற்பது. சிவதத்துவம் உயிர்க்கு மேலாய்த் திருவருள் தோய்தற்கு வாயிலாய் (Medium) இருப்பது. இறைவனுடைய அருட்சத்தி சிவதத்துவத்தின் வாயிலாக ஆன்மாவின் அறிவு, விழைவு, செயல் என்ற மூவகையான ஆற்றல்களையும் கிளரச் செய்யும்; சிவ தத்துவத்தின் வாயிலாக வரும் அவ்வருட்சத்தியே ஆன்ம தத்துவத்தையும் வித்தியா தத்துவத்தையும் தொழிற் படுத்துகிறது. வித்தியா தத்துவத்தால் உயிரினுடைய அறிவு முதலிய ஆற்றல்கள் எழுந்து அறிதற்கும் விழைதற்கும் செய்தற்கும் முற்படுகின்றன. அப்போது ஆன்ம தத்துவம் அறிதல் முதலிய செயல்களை நிகழ்விக்கின்றது. ஆன்மாவாகிய உயிரைச் சூழ்ந்து ஆன்ம தத்துவமும் அதற்குள் வித்தியா தத்துவமும் அதற்குள்ளாக ஆன்மாவும் இருக்கின்றன. இதுபற்றியே ஆன்ம தத்துவத்து இந்திரியங்களைப் புறக்கரணம் என்றும், மன முதலியன அவற்றிற்குள்ளாக இருப்பதுபற்றி அகக்கரணமாகிய அந்தக்கரணம் என்றும், அவற்றிற்கும் உள்ளேயிருக்கிற வித்தியா தத்துவத்தை உள்ளந்தக்கரணம் என்றும் அவற்றிற்கும் உள்ளால் இருக்கிற ஆன்மாவை உள்ளம் என்றும் சான்றோர் வழங்குகின்றனர். “ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப், பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு” என்ற திருக்குறளில் திருவள்ளுவனார் ஆன்மாவை உள்ளம் என வழங்குவதை இங்கே நினைவு கூர்தல் வேண்டும். இவ்வான்ம வித்தியா தத்துவங்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மாவுக்கு அறிவு முதலிய மூவகை ஆற்றலும் இயல்பாகவே உண்டென்றாலும், முதற் சூத்திரத்தில் காட்டப்பட்ட மலத்தால் மறைப்புண்டு கிடக்கின்றன. அம்மலம் செம்பில் களிம்பு போல இயல்பாய் ஆன்மாவில் அனாதி தொடர்பு கொண்டிருப்பதால் அது சகசமலம் என்று கூறப்படும். இச்சகசமலத்தால் மறைப்புண்டு இருப்பது விளங்க, ஆசிரியர், “ஆன்மா சகசமலத்து உணராது” என்றார். சகசம், இயற்கை. மலத்தால் மறைப்புண்டு ஆற்றல் சுருங்கியிருக்கும் ஆன்மா, அவ்வாற்றலைச் செலுத்தி நினைவன நினைந்து செய்வன செய்து ஒழுகுதற்கு இத்தத்துவங்கள் கருவியாய் இன்றியமையாது வேண்டப்படுகின்றன. இவை ஓர் அரசனுக்கு அமைச்சரும் பிற அரசியல் வினையாளரும் போல ஆன்மாவுக்கு அமைந்துள்ளன என்பது பற்றியே “அமைச்சரசு ஏய்ப்ப” என்றார். இனி, நம்முடம்பு உருவுடம்பு (தூலவுடம்பு), அருவுடம்பு (சூக்கும வுடம்பு), கருவுடம்பு (புரியட்டக வுடம்பு), நுண்ணுடம்பு (கஞ்சுக வுடம்பு), காரண வுடம்பு என ஐந்து வகையாக இத்தத்து வங்களைக்கொண்டு பகுத்துக் காணப்படுகிறது. இவை நம்முடம் பினுள் ஒன்றிற்கொன்று நுட்பமாய் அமைந்துள்ளன. உருவுடம்பு தொழிற்படுங்கால் உயிர் புருவ நடுவில் நிற்கும் என்றும், சூக்கும வுடம்புக்குச் செல்லுங்கால் கழுத்திலும், புரியட்டக வுடம்புக்குட் செல்லுங்கால் இதயத்திலும், கஞ்சுக வுடம்பில் உந்தியிலும், காரணவுடம்போடு நிற்கையில் உந்தியின் கீழ் மூலாதாரத்திலும் நிற்கும்; புருவ நடு முதலிய இடங்கள் உயிருக்கு உணர்வெல்லை யாகும். புருவ நடுவில் நிற்கும் நிலை சாக்கிரம் (நனவு) என்றும், கழுத்தில் நிற்கும் நிலை சொப்பனம் (கனவு) என்றும், இதயத்தில் நிற்கும் நிலை சுழுத்தி (துயில்) என்றும், உந்தியில் நிற்கும் நிலை துரியம் (உறக்கம்) என்றும், மூலாதாரத்தில் நிற்கும் நிலை அதீதம் (பேருறக்கம்) என்றும் நூல்களிற் கூறப்படுகின்றன. புருவ நடுவிலிருந்து மூலாதாரம் வரையில் இத்தத்துவக் கருவிகளை விட்டு படிப்படியாக நீங்கிக் கீழே செல்லுவதும், பின்பு படிப்படியாக மேலேறிப் புருவ நடுவுக்கு வருவதும், வரும்போது ஆங்காங்கு விட்ட கருவிகளோடு கூடுவதும் உயிருக்கு உடம்பில் உண்டாகும் இயக்கமாகும். மேலே கூறிய ஐவகை நிலைகளும் அவத்தை யெனப்படும். இதுபற்றியே “ஆன்மா அஞ்சவத்தைத்து” என்று கூறி யருளினார். இதனை நான்காம் சூத்திரம், “அந்தக் கரணம் அவற்றின் ஒன்றன்று அவை சந்தித்தது ஆன்மா சகசமலத் துணராது அமைச்சர சேய்ப்ப நின்று அஞ்சவைத் தத்தே” என்று இயம்புகிறது. இவ்வவத்தையில், கீழ்நோக்கிச் செல்லும் அவத்தை (இயக்க நிலை) கீழாலவத்தை யெனவும், மூலாதாரத் திலிருந்து மேல்நோக்கி வரும் அவத்தை மேலாலவத்தை யெனவும் வழங்கும். இச்சூத்திரத்தால் ஆன்மாவுக்கு ஐந்தவத்தைப் படுவது இலக்கணம் என்பது பெறப்படுவது கொண்டு அமைந்துவிடலாகாது. அந்தக் கரணங்களே அறிதல் என்ற தொழிலைச் செய்வதால் அவற்றையே உயிரென்றல் அமையும் என்பவர் எவ்வாறு மறுக்கப் படுகின்றார்கள் என்பதை மறவாது கடைப்பிடித்தல் வேண்டும். இந்தக் காலத்தில் நிலவும் மேனாட்டு உளநூல்களைக் காணுமிடத்து அந்தக்கரணமே ஆன்மாவாம் என்ற கூற்று வலியுறுவதுபோலத் தோன்றும். உயிர் அவத்தைப்படுவ தென்பது அறிகருவிகளோடு கூடுவதும் கூடாது நீங்குவதுமாகிய நிலையை எய்துவதென்று கண்டோம். உயிர் அந்தக் கரணங்களோடு கூடிய வழி அறிவு விளக்கமுண்டாகிறது; கூடாவழி அறிவினது விளக்கம் குறைகிறது. அந்தக்கரணங்களே அறிதல் என்னும் செயலை யுடையவாயின், ஆன்மா அடையும் அவத்தை வேறுபாட்டுக்கேற்ப அறிவு விளக்கத்தில் மிகுவதும் குறைவதும் உண்டாதற்குக் காரணமில்லை. ஆன்மா கீழும் மேலுமாக அவத்தை யெய்துங்கால், நின்றாங்கு நிற்கும் கருவிகள், உயிர் வந்து தோயும்போது விளங்குவதும் நீங்கும்போது விளக்கம் குன்றுவதும் நிகழ்கின்றன. இதனால் அறிவாகிய ஒளியும் செயலும் ஆன்மாவுக்கே உரியவாய் இருப்பது தெளிவாகிறது. ஆதலால்தான் ஆன்மா அந்தக் கரணங்களாகிய அவற்றின் ஒன்றன்று என்பது வற்புறுத்தப்படுகிறது. 5. அந்தக்கரணங்களின் வேறாய்ச் சகசமலத்தால் உணர்வு மறைக்கப்பட்டு உடல் கருவிகளோடு கூடி நிற்கும் எனப்பட்ட ஆன்மா கீழும் மேலுமாக ஐவகை யவத்தை எய்துவானேன்? அவத்தை எய்துங்கால், கருவிகளோடு கூடி அறிவு விளக்கம் பெறுவதும் அவற்றோடு கூடாத வழி அறிவு ஒடுங்குதலும் எற்றுக்கு? என்று சில ஐயங்கள் நம் நினைவில் எழுகின்றன. இந்த ஐயங்களை எண்ணி ஆராய்ந்தோர், ஓர் உண்மையைக் கண்டனர்; உலகிடைத் தோன்றும் பொருள்கள் அனைத்தும் இயங்கிய வண்ணம் இருக்கின்றன. பருப்பொருளின் இயக்கம் நமக்குத் தெரிகிறது; நுண் பொருளின் இயக்கம் புலனாவதில்லை. புலனாகாமை கொண்டு அவற்றின்கண் இயக்கம் இல்லையென்று கூறமுடியாது; அதனைச் சில விஞ்ஞானிகள் நுண்ணிய கருவிகளால் காட்டியுமிருக்கின்றனர். இதனால் எல்லாப் பொருளிடத்தும் இயக்கம் உண்டு என்பது தெளிவாகி யிருக்கிறது. உயிர்ப்பொருளிலும் இவ்வியக்கம் காணப்படுகிறது. எந்த இயக்கமும் தானே உண்டாகாது என்பது பொது உண்மை. இயக்கமெல்லாம் காரியமாதலால், அதற்குக் காரணமாய் இயக்குவது ஒன்று உண்டு. அவ்வாறே உயிரை இயக்குவதும் ஒன்று உண்டு. அஃது இறைவனது திருவருள் என்று அறிஞர் கண்டுள்ளனர். இத்திருவருள், கருவிகளோடு கூடி அவை வேறு தான் வேறு என நினையாது அவையே தான் என மயங்கும் ஆன்மாவை, மேலும் கீழும் இயக்கியும், கருவிகளிற் பிரித்தும் கூட்டியும் உண்மையறிவு பெற உதவுகிறது. இவ்வாறு தனக்குத் தோன்றாத் துணையாய் உடனிருந்து உதவி புரியும் முதல்வனது அருளை ஆன்மா உணர்வதில்லை; அவனது அருளையின்றித் தான் ஒன்றும் செய்து கொள்ள முடியாத ஏழை என்பதையும் அஃது எண்ணுவதில்லை. சுருங்கச் சொல்லுவோமாயின், உயிர் தன்னையும் அறிவதில்லை; தனக்குத் தோன்றாத் துணையாய் உடனின்றுதவும் திருவருள் முதல்வனையும் அறிவதில்லை. ஆன்மாவுக்கு மெய் வாய் முதலிய அறிகருவிகள் உள்ளன. அவை தத்தமக்கு உரிய பொருள்களைக் கண்டு அறுதியிட்டு உயிர்க்கு உணர்த்துகின்றன; ஆனால் அவை தம்மையே அறிவதில்லை; பொருளைக் காணுமாறும் ஓசையைக் கேட்குமாறும் செலுத்தும் உயிரையேனும் அக்கண் முதலிய கருவிகள் அறிகின்றனவோ எனின் அதுவும் கிடையாது. அது போலவே உயிர்கள் தம்மையோ தமக்குத் தோன்றாத் துணையாய் நின்று உதவும் திருவருளையோ அறியாவாகின்றன. இதனை ஆசிரியர், “விளம்பிய வுள்ளத்து மெய் வாய் கண்மூக்கு அளந்தறிந்து அறியா; ஆங்கு அவை போலத் தாம் தம் உணர்வின் தமி அருள்” என்று உரைக்கின்றார். உள்ளம் என்றது, ஆன்ம வித்தியா தத்துவங்கட்கு உள்ளே அருவாய் ஆற்றல் வடிவாய் இருக்கும் ஆன்மாவை என அறிக. தம்மால் அறியப்படாத முதல்வனது திருவருளால் உயிர்கள் அறிவு விழைவு செயல்வகைகளில் எவ்வாறு தொழிற்படுகின்றன எனின், காந்தத்தின் முன்னே நிற்கும் இரும்பு எங்ஙனம் அசைகிறதோ அங்ஙனமே முதல்வன் திருவருளின்முன் உயிர்கள் அறிவது விழைவது முதலிய செயல்களைச் செய்கின்றன. இரும்பு அசைவதும் காந்தம் அசையாது இருப்பதும் போல, திருவருளின் முன் உயிர்கள் அறிவது முதலியன செய்ய முதல்வன் ஒரு விகாரமும் இல்லாமல் இருப்பான். இக்கருத்து விளங்க, ஆசிரியர் காந்தம் கண்ட பசாசத்தவையே என்றார். பசாசம்-இரும்பு. இதனை, “விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக்கு அளந்தறிந் தறியா ஆங்கவை போலத் தாந்தம் உணர்வின் தமியருள், காந்தம் கண்ட பசாசத் தவையே” என்று ஐந்தாம் சூத்திரம் கூறுகிறது. மெய் வாய் கண் மூக்கு செவி என்ற கருவிகள் ஆன்மாவின் துணையால் பொருள்களை அறிகின்றன; அவ்வாறு அறிந்தும், அறிகின்ற தம்மையும் தம்மை அறியச் செய்யும் ஆன்மாவையும் அறிவதில்லை; அவற்றைப் போலவே ஆன்மாக்களும் திருவருள் துணையால் செய்வன செய்து, செய்வினையின் பயனை நுகர்கின்றன. அவ்வாறு நுகர்ந்தும், நுகர்கின்ற தம்மையும், தமக்குத் தோன்றாத் துணையாய் உடனின்று இயக்கும் முதல்வன் திருவருளையும் அறிவதில்லை! திருவருள் இயக்க இயங்கும் ஆன்மாவின் இயக்கம் காந்தத்தின் முன்பு நின்ற இரும்பு இயங்குவது போலும் இயக்கமாம். அப்படி இயங்கினும் சலியாத காந்தம்போல, முதல்வன் சலிப்பின்றி நிருவிகாரியாய் இருப்பன் என்பது இதனால் உணர்த்தப்படும் பொருள். 6. கண் காது முதலியவற்றால் காணக்கூடிய பருப் பொருள் களையும் ஓசை முதலிய நுண் பொருள்களையும் காண்கின்றோம். இக்கருவிகளால் அறியப்படுவன அனைத்தும் உலகியற் பொருள்களே யாகும். இவற்றை மனத்தின்கண் வைத்துச் சிந்திப்பதால் பெறப்படும் உணர்வுப் பொருளும் உலகியற் பொருள்களை அடிப்படையாகக் கொண்டன வாதலால் உலகியல் உணர்வுப் பொருள்களே. முதற் சூத்திரத்திற் கண்டவாறு இவ்வுலகமே நிலை பேறில்லாததாகும். நிலையில்லாத பொருளை அசத்து என்றும், நிலையுடைய பொருளைச் சத்து என்றும் கூறுவர். மெய்யைச் சத்தென்றும், பொய்யை அசத்தென்றும் கூறுவதுண்டு. இதுபற்றியே “காண்பதெல்லாம் பொய்” என்ற பழமொழியும் மக்களிடையே நிலவுகிறது. காண்பதென்பது, கண்ணாற் காண்பது, காதாற் கேட்பது, வாயாற் சுவைக்கப்படுவது முதலியவற்றைப் பொதுவாகக் குறிக்கும். இவ்வாறு கண் முதலிய அறிகருவிகளால் அறியப்படுவன வெல்லாம் உருவும் அருவுமாகிய உலகியற் பொருள்களேயாய் அசத்தாய் இருக்கின்றன. எவ்வகையாலும் அறியப்படாத பொருளே கிடையாது. ஒரு பொருள் எவ்வாற்றாலும் அறியப்படா தென்றால், அப்படி ஒரு பொருளே இல்லை யென்பதே கருத்து. அவன், அவள், அது எனப் பகுத்துக் காணப்படும் உலகியற் பொருள்கள் உருவுடையனவாயினும் உருவில்லனவாயினும் எப்படியும் அவை. அசத்தாகவே உள்ளன. முதல்வனாகிய பரம்பொருள் நம்முடைய அறிவால் அறியப்படுவானாயின், அறியப்படும் ஏனை உலகியற் பொருள் போல அசத்தாவான். எவ்வாற்றாலும் அறியப்படா தொழியுமாயின், பரம்பொருள் ஒன்று இல்லையென்றே முடியும். ஆசிரியர் இக்கருத்தையே முதல்வனாகிய பரம்பொருள் “உணர் உருவெனின் அசத்து; உணராது எனின் இன்மை” என்று அருளினார். அஃதாவது இறைவன் நம் கருவிகளால் உணரப்படும் பொருள் எனின், அசத்தாவான்; உணரப்படான் எனின் அவன் என்றும் எவ்விடத்தும் இல்லாத பொருளாம்; அஃதாவது சூனியம் என்பதாம். பரம்பொருள் ஒன்று உண்டென்பது முதற் சூத்திரத்தால் துணியப்பட்டது. ஆகவே அஃது உள்பொருளாகிய சத்து என்று கூறப்படும். காணப்படும் நம் உடம்பைக் கொண்டு காணப்படாத உயிராகிய நாம் உண்டென்பதை மூன்றாம் சூத்திரத்தால் துணிந் துள்ளோம். உயிரும் பரம்பொருள் போல அனாதியே நின்று நிலவுவது; அறிவு விழைவு செயல் என்ற ஆற்றல்களையுடையது; அதனால் உயிரும் சத்து என்று கூறப்படும். பரம்பொருளாகிய சத்து, உயிராகிய சத்துப் பொருளால் ஒருவகையில் உணரப்படுவதும் ஒருவகையில் உணரப்படாமையும் உள்ள சத்தாகிறது; ஒருவாற்றால் உணரப்படுவதால் அசத்தாவதும், உணரப்படாமையால் சூனியமாவதும் இல்லை. இதனை ஆசிரியர், “இருதிறனல்லது சிவ சத்தாம் என இரண்டு வகையின் உலகு இசைக்கும்” என்று அருளுகின்றார். இருதிறன், அசத்தாவதும் சூனியமாவது மாகிய இரண்டுதிறன்; இரண்டு வகை, ஒருவாற்றால் உணரப்படுவதும் ஒருவாற்றால் உணரப்படாமையுமாகிய இருவகை. உலகியலறிவும் உயிரறிவும் கொண்டு உணருமிடத்து முதல்வனாகிய பரம்பொருள் உணரப்படுவதில்லை யென்றும், அப்பரம்பொருளின் திருவருள் அறிவுகொண்டு நோக்கின் அப்பரம் பொருள் உணரப்படும் என்றும் மெய்யுணர்வால் பரம்பொருளைக் கண்டு இன்புற்ற சான்றோர் கூறுகின்றனர். “சொல் தெரியாப் பொருள் சோதிக்கப் பால் நின்ற சோதியான்” என்று திருஞானசம்பந்தரும், “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே” என்று திருநாவுக்கரசரும் கூறியருளுவதால் முதல்வனாகிய சிவபரம்பொருள் ஒரு வாற்றால் உணரப்படுவதும் உணரப்படாமையும், “அருளாலே மெய்ப் பொருளைக்காணும் விதியுடையேன்” என்று காரைக்காலம் மையாரும், “அவனருளே கண்ணாகக் காணினல்லால்” என்று திருநாவுக்கரசரும் கூறியருளு வதால், திருவருள் அறிவு ஒன்றே சிவபரம் பொருளைக் காண்டற்குத் துணையாம் என்பதும் சைவத் திருமுறைகளில் வற்புறுத்தப் படுகின்றன. இது பற்றியே “இரண்டு வகையின் இசைக்குமன் உலகு” என்றார். உலகு என்பது திருவருளே கண்ணாகக் கொண்டு இறைவனைக் கண்டு இன்புற்ற உயர்ந்தோரைக் குறிக்கும். மேலே கூறிய சான்றோர்களை ஆசிரியர் உலகு என உயர்த்திக் கூறியுள்ளார். “உணர்உரு அசத்து எனின், உணராது இன்மையின், இருதிற னல்லது சிவசத் தாமென இரண்டு வகையின் இசைக்குமன் உலகே” என்பது இக்கருத்தை யுணர்த்தும் சூத்திரம். இங்கே கூறிய உலகியலறிவு பாசஞான மென்றும் உயிரறிவு பசுஞான மென்றும், திருவருள் அறிவு சிவஞானம் (பதிஞானம்) என்றும் வழங்கும். உலகியலறிவு கல்வி கேள்விகளால் உண்டாகும் செயற்கையறிவு; இது பாசஞானம். உயிரறிவு உண்மை யறி வெனப்படும் இயற்கையறிவு; இது பசுஞானம். பரம்பொருள் பசுபாச ஞானங்களால் அறியப்படாது, சிவஞானத்தால் அறியப் படுவது பற்றிச் சிவசத்து என்று ஆசிரியரால் குறிக்கப்படுகிறது. இச்சூத்திரத்தால், சிவபரம்பொருள் இயற்கையும் செயற் கையுமாகிய நம் அறிவெல்லையைக் கடந்து நிற்பினும், அதனால் அருளப்படும் சிவஞானத்தால் ஆன்மாக்களாகிய நாம் அதனை அறிதல் கூடும் என்பது வற்புறுத்தப்பெறுவது காண்க. 7. இறைவன் உயிர் உலகு என்ற மூன்றனுள், இறைவனைச் சிவசத்து என்றும் உலகை அசத்தென்றும் முன்னைச் சூத்திரத்தால் அறிந்தோம். சத்தாகிய சிவம் அசத்தை நோக்குமாயின், அது நிலையின்றிப் போகும். மரத்தால் செய்யப்பட்ட யானை யொன்றை அது செய்யவல்ல ஒரு மரத்தச்சன் காண்பானாயின், அவனுக்குச் சத்தாகிய மரம் புலனாகுமே அன்றி அசத்தாகிய யானை வடிவம் புலப்படாது. அதுபோலவே, சத்தாகிய சிவத்தின் முன் அசத்தாகிய உலகம் நில்லாது மறைந்தொழியும். அசத்தாகிய உலகம் தன்னிலையில் அறியும் அறிவு இல்லாதது; அதனால் அது சத்தாகிய சிவத்தை அறியாது. இதனையே ஆசிரியர், சத்தின் எதிர் யாவையும் சூனியம்; ஆகலான், சத்து அறியாது; அசத்து இலது ஆகலின் அறியாது என்றார். யாவையும் என்றது அசத்தாகிய உலகியற் பொருள்களையாகும். அவை தோற்றுவிக்கத் தோன்றி நின்று அழிவன வாதலால் அசத்தாகும். சத்தாகிய சிவத்தின் முன் காரியமாகிய அவை நில்லாது போவது கொண்டு சூனியம் என்று ஆசிரியர் கூறியருளுகின்றார். அசத்து இலது என்றது அசத்தாகிய உலகியற் பொருள் உயிரில்லாதது; அதனால் அறிவில்லாதது; ஆகவே, அதற்கு எதனையும் அறியும் திறம் இல்லை என்பதாம். இவ்வகையால், இறைவன் உலகு என்ற இரண்டும் சத்தும் அசத்துமாய் ஒன்றனை யொன்று அறியா என்பது காணும் நமக்கு, இவ்விரண்டின் வேறாகிய உயிர், சத்தாகிய சிவத்தையும் அசத்தாகிய உலகத்தையும் அறியும் போலும் என்ற ஐயமுண்டாகிறது. அந்த ஐயத்தை நீக்கவே ஆசிரியர், இரண்டினையும் அறியவல்லது ஆன்மா என்பாராய், “இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா” என்று ஏழாம் சூத்திரத்தால் கூறுகின்றார். இருதிறன் அறிவுளது என்பது, சத்தும் அசத்துமாகிய இரண்டினையும் அறியும் அறிவு உள்ளது என்றும், இரண்டினாலும் அறியும் அறிவுள்ளது என்றும், இரண்டினிடத்தும் நின்று அறியும் அறிவுள்ளது என்றும் பொருள் கொள்ளப்படும். சத்தாகிய சிவத்தால் அருளப்படும் சிவஞானத்தால் உயிர் அச்சிவத்தை அறியும் அறிவு பெறுகிறது; அசத்தாகிய கருவி கரணங்களைக் கொண்டே உலகியலறிவை அறியும் அறிவுடையதாகின்றது. அதனால் இருதிறனால் அறியும் அறிவுளது என்று பொருள் கொள்ளப்பட்டது. சிவத்தின்கண் தோய்ந்து சிவமாய் நின்று சிவபோகத்தை அறிந்து நுகர்வதும், அசத்தாகிய உலகியலில் தோய்ந்து உலகப் பொருளாய் இயைந்து உலகியல் இன்பத்தை அறிந்து நுகர்வதும் செய்வதால், உயிராகிய ஆன்மா இரண்டின்பாலும் அறியும் அறிவு உள்ளது என்று பொருள் கொள்ளப்பட்டது. இக்கருத் தெல்லாம் விளங்கவே, “யாவையும் சூனியம் சத்தெதிர், ஆகலின் சத்தே அறியாது அசத்து இலது அறியாது, இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா” என்று ஆசிரியர் அறிவுறுத்துகின்றார். இதன்கண் சத்தாகிய சிவத்தையும் அசத்தாகிய உலகத்தையும் வேறுபட வைத்தும், துணையாகக் கொண்டும், இடமாக நின்றும் அறியும் உயிராகிய ஆன்மா, சத்தாகிய சிவமும் அன்று; அசத்தாகிய உலகியற் பொருளும் அன்று என அறிகின்றோம். இதுபற்றியே ஆசிரியர் ஆன்மாவை இரண்டலா ஆன்மா என்று கூறியருளினார். சத்தன்றாயினும் சத்தோடியைந்து சத்தாகிய சிவத்தையும், அசத்தோடு கூடி அசத்தாய் நின்று அசத்தையும் அறியும் தன்மை யுடையதாக இருப்பதால் இந்த ஆன்மாவைச் சதசத்து என்று சான்றோர் கூறுவாராயினர்.“சத்து அசத்து அறிவது ஆன்மா, தான் சத்தும் அசத்தும் அன்று, நித்தமாய்ச் சதசத்தாகி நின்றிடும்” என்று அருணந்தி சிவனாரும், “சதசத்தாம் உயிர்” என்று உமாபதி சிவனாரும் விளக்கினர். 8. சதசத்தெனப்படும் ஆன்மாக்களாகிய நாம் அசத்தாகிய உடம்போடுகூடி அசத்தாகிய உலகியலில் அழுந்தி உலகியல் வாழ்க்கையை நடத்துகின்றோம். இவ்வாழ்க்கையில் கண் காது முதலிய கருவிகளால் அறிவன அறிவதும், கை கால் வாய் முதலிய கருவிகளால் செய்வன செய்வதும் நம்முடைய செயல் களாகின்றன. இச்செயல்களில் ஈடுபடுங்கால் நமக்கு அறிவு விளக்கமுண்டாகிறது. அப்போது இன்பமும் உண்டாகிறது. ஆன்மா அந்த இன்பத்துக்கு அடிமையாகி, அந்த அசத்தாகிய கருவிகள் காட்டும் காட்சியையே விரும்பி அவை இயங்கும் நெறியிலேயே செல்லுகிறது. உலகியல் வாழ்க்கையோடு தொடர் புண்டானதால் விளையும் பயன் கிட்டாது போகிறது. ஆன்மா, தனக்கும் அசத்தாகிய உலகுக்கும் உள்ள வேறுபாட்டியல்பை யெண்ணி, உலகு உடல் கருவிகளைக் கருவியாகக் கொண்டு பெறுதற்குரிய பயனை எய்தவேண்டும். அப்பயன் உண்மை அறிவால் உணரப்படும். அந்த அறிவையும் முதல்வன் உடனாய் நின்று உணர்த்தி வருகின்றான். இவ்வகையால், உண்மையறிவின் விளக்கத்தால், உடல் கருவி உலக வாழ்வுகளைப் பயன்கொண்டு வரும் ஆன்மாவுக்கு, மலத்தால் தடையுண்டிருக்கும் சிறுமை கெடத் தொடங்குகிறது. அந்த நிலையில், உண்ணின்று தோன்றாத் துணையாய் உண்மை அறிவைக்காட்டியருளும் முதல்வன், ஞானாசிரியன் உருவில் ஆன்மாக்களின் எதிரில் வந்து உண்மை யறிவாகிய சிவஞானத்தை நல்குவன். மாணிக்க வாசகருக்குத் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின்கீழ் எழுந்தருளியதும், மெய்கண்டதேவருக்குத் திருவெண்ணெய் நல்லூரில் பரஞ்சோதி முனிவர் எழுந்தருளியதும் போல எழுந்தருளி வந்து சிவஞானத்தை உதவுவான். “வேந்தன் ஒருவனுடைய மகன் வேடர் கூட்டத்திற்பட்டு அவர் தருவனவற்றைப் பெற்று வளர்ந்து வந்தான். வளர்ந்தவன், தன்னை ஓர் அரசன் மகன் என்பதை மறந்து, வேடர் வயமே நின்று தன்னை அவ்வேடரின் வேறல்லன் என்றே நினைக்கலுற்றான். அவன் வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டே வந்த வேந்தன், அவனுக்குச் சொன்னால் கேட்டுத் தெளிந்து அச்சொல்வழி நிற்கக்கூடிய செவ்வி வருவது கண்டான். உடனே தானும் ஒரு வேடன் உருவில் அவனெதிரில் வந்து அவனோடு சொல்லாடி, “நீ வேடன் அல்லை; வேடர்களிடையே வளர்ந்து உன்னை இன்னானென அறியாது மறந்துவிட்டாய்; நீ ஒரு வேந்தனுடைய மகன்” என்று சொல்லித் தெருட்டினான். உடனே அவன், வேந்தன் இயல்புகளைக் கேட்டறிந்து வேந்தனுடைய பண்புகளை யெண்ணி வேந்தனாய் விளக்கமுற்றான் என்பது போலும் வரலாற்றைச் சொல்லிச் சிவஞானம் உணர்த்தவரும் ஞானாசிரியன், ஆன்மாக்களாகிய நம்மைத் தெருட்டத் தொடங்குவன். “நான் மேலே சொன்ன அரசன் மகன் ஆன்மாவாகிய நீ; வேடர் கூட்டம் என்றது, உனக்குக் கருவிகளாக அமைந்த ஐம்புலன்களாகும்; அவ்வரசன் மகன் போலவே ஆன்மாவாகிய நீ உன்னை மறந்து அக்கருவிகளின் வயமே நின்று ஒழுகுகின்றாய்; நீ இவற்றின் வேறு, அறிவே உனக்கு உரு; உண்மையறி வின்பமாகிய சிவபோகத்தை நுகர்தற்கே நீ உரியை; சிவானந்த ஞான வடிவு கொண்டு சிவ பரம்பொருளின் திருவடி நீழலில் என்றும் பொன்றாத இன்பம் பெறுதல் வேண்டும்” என்று அறிவுறுத்துவன். இதனை ஆசிரியர், “ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தனை யெனத் தம் முதல் குருவுமாய் உணர்த்த” என்று அருளுகின்றார். தம் முதல் என்றது ஆன்மாக்களுக்கு முதல்வனாகிய இறைவனைக் குறிக்கும். குருவுமாய் என்றது, இதற்கு முன்னெல்லாம் உயிர்க்குயிராய் உடனிருந்து உள்ளே அறிவருளி வருவதே யன்றிக் குருவாகவும் வருகின்றான் என்பதைக் குறிக்கிறது. சொன்ன சொல்லைக் கேட்டு அச்சொல்வழி நிற்கக் கூடிய செவ்வி வரக்கண்டு வேந்தன் அறிவுறுத்தியதுபோல, ஆன்மாக்களாகிய நமக்கு ஞானவுரை கேட்டு அதன் வழியே நிற்கக்கூடிய தகுதி வரும்போதுதான் ஞானாசிரியன் வருவன். செய்யப்படும் தவத்தால்தான் ஆன்மாக் களுக்கு அத்தகுதியும் செவ்வியும் உண்டாகும். ஆதலால், “தவத்தினில் உணர்த்த” என ஆசிரியர் அறிவுறுத் தருளுகின்றார். அரச குமரனுக்கு வேடர் கூட்டத்தின் தொடர்பு, வேந்தன் சொல் கேட்டு வேந்தாகும் பண்பு பெறுதற்குக் கருவியாயிருந்து, அதனைப் பெறத் தலைப்பட்டதும் விடுபட்டது போல, ஆன்மா ஞானாசிரியனது ஞானவுரை கேட்டு ஞானநெறி யொழுகும் செவ்வி பெறுதற்கு உடல் கருவி முதலிய அசத்தின் தொடர்பு கருவியாகிறது. ஞானம் பெற்று ஞானநெறி நிற்கத் தலைப்படுங்கால் ஆன்மா அசத்தின் தொடர்பை விட்டுவிடுகிறது. “நிலையாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை யல்லேன்” என்று அறிந்து திருநாவுக்கரசர் அறத் துணிந்தது போல, ஆன்மா, உடல் கருவி உலகு முதலிய அசத்தின் வேறாதலால் அதனோடு உளமாகிய தொடர்பு அற்றொழுகுவதே அது செய்யத்தக்கது. “ஒன்றலாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அருமாநிதி இயற்றி, என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும் பொய்” என்று நம்பியாரூரர் நினைந்து அசத்தின் தொடர்பை விட்டது போலவும், “எண்ணமே யுடல்வாய் மூக்கொடு செவிகண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன்” என்று மணிவாசகர் கருதி யொழுகியது போலவும் ஒழுகுவதனால் அசத்தின் தொடர்பு விடும். ஆன்மாவுக்குச் சதசத்து என்ற பெயருண்டானது, சத்தோடும் அசத்தோடும் தொடர்புற்று நிற்கும் இயல்பினால் தான். சத்து அசத்து என்ற இரண்டிலொன்றைச் சார்ந்து நிற்பது உயிர்க்கு இயல்பேயன்றி, வேறே தனித்து நிற்கும் இயல்பு அதற்குக் கிடையாது. சதசத்தாகிய ஆன்மா அசத்தின் தொடர்பு விட்டவழி, சத்தாகிய சிவத்தையே சென்று சாரும். ஊசலாடும் ஒருவனுக்கு அதன் கயிறு அறுமாயின் அவன் தரையைச் சார்வது போல, ஆன்மா அசத்தின் தொடர்பு விட்டால் சத்தாகிய சிவத்தையே சாரும். சத்தாந்தன்மையாலும் சித்தாந்தன்மை (அறிவுடையது என்னும் தன்மை)யாலும் ஆன்மாவுக்குச் சத்தாகிய சிவம் அந்நியமன்று; அதனால் ஆன்மா சிவத்தையே சென்று சாரும் என்பது தெளிவாம். ஆன்மாவுக்கு ஏனை உடல் கருவி முதலிய அசத்து அந்நியம். அசத்தைச் சார்ந்து அதுவதுவாய் இயைந்திருந்த போதும், ஆன்மா அசத்தின் வேறாக இரண்டுபட்டு நின்றது போலின்றி, சத்தாகிய சிவத்தைச் சார்ந்து ஒன்றுகிறபோது அதன்கண் ஒன்றி உடனாய் நிற்கும். இதனை உணர்த்துவதற்கு ஆசிரியர், விட்டு அந்நியமின்மையின் அரன்கழல் செலுமே என்றார்.இதனை, ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட் டந்நிய மின்மையின் அரன்கழல் செலுமே என வருவது காண்க. அரன்கழல் சென்று சேர்ந்த திருஞான சம்பந்தரைச் சேக்கிழார் பெருமான், “போதநிலை முடிந்தவழிப் புக்கு ஒன்றியுடனானார்” என்றும், திருநாவுக்கரசரை, “நண்ணரிய சிவானந்த ஞான வடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்” என்றும் கூறுவதனால் இது நன்கு தெளியப்படும். “சிவானந்த ஞானவடிவேயாகி” என்றது ஒன்றுதல்; “அமர்ந்திருந்தார்” என்றது உடனாதல். இவ்வாறு ஒன்றியுடனாதல் என்பதையே வட சொல்லறிஞர், அநந்நியமாதல் என்றும் அத்துவிதமாய்க் கலத்தல் என்றும் கூறுகின்றனர். 9. ஆன்மாவாகிய உயிருக்கு இயற்கையும் செயற்கையுமாக இருவகையறிவு உண்டு. இயற்கையறிவு என்பது, உடல் கருவியாக உயிரிடத்துண்டாகும் அனுபவஅறிவு. செயற்கையறி வென்பது கல்வி கேள்விகளினால் உண்டாகும் அறிவு. இயற்கை யறிவில்லாத விடத்துச் செயற்கையறிவு எத்துணை வரினும் பயன்படாது. “வாய்த்துத் தனக்கு இயல்பாய் வந்த அறிவு இல்லார்க்குச் சாத்திரங்கள் என்ன செய்யும்” என்று சான்றோர்கள் கூறுவது காணலாம். இயற்கையறிவு உடற் கூற்றாலும் சூழ்நிலையாலும் குடிவரவாலும் உளதாவது; செயற்கை யறிவு கற்கப்படும் கல்வி வகையாலும் கேள்வி வகையாலும் உளதாவது. இயற்கையனுபவ வறிவைப் பசுஞான மென்றும், செயற்கை யறிவைப் பாசஞான மென்றும் சைவ நூல்கள் கூறும். ஒருவன் பசுஞானத்தாற் கண்ட காட்சிகளையே நூல் வடிவில் வைத்துவிடின், அது தன்னைப் பயிலும் பிறர்க்குப் பாசஞானமாகிவிடும். பாசஞானத்தால் பெறுவது பல அறிஞர்கள் கண்டுரைத்த பசுஞானத் தொகுதியே. வேதம் ஆகமம் முதலிய எல்லாவற்றாலும் உண்டாகும் அறிவு பாசஞானமேயாகும். உடலிலுள்ள பல கருவிகளின் வாயிலாகத் தொகுவது பசுஞானம்; பலருடைய பசுஞானக் காட்சிகளை ஒருங்கே தொகுத்து நல்குவது பாசஞானம். ஆகவே, பசுபாச ஞானங்கள் என்பவை ஆன்மாக்கள் தம்முடைய உடல் கருவி உலகம் முதலியவற்றால் பெறும் அறிவு என்பது துணியப்படும். இவ்வுடல் முதலிய கருவிகள் அசத்து; அசத்து எனவே அவற்றிற்கெனத் தனியே அறிவில்லை யென்பது விளங்கும். அசத்து அறிவில தாகலின், சத்தாகிய சிவத்தை அறியாது என்று ஆசிரியர் முன்பே அருளிச் செய்துள்ளார். அதனால், அந்த அசத்துத் துணைசெய்ய வந்த பசுபாச ஞானங்கள் சிவத்தை அறிதற்குத் துணையாகா என்பது தெளிய விளங்குகிறது. இதுபற்றியே ஆசிரியர் ஊனக்கண் பாசம் உணரா பதியை என்றார். பாசம் என்றது பாசஞானம். ஊனக் கண் என்றது, அசத்தாகிய கண் முதலிய கருவிகொண்டு அறிய வரும் பசுஞானம். கண் முதலிய உடற் கருவிகள் அசத்தாகிய ஊனம் உடைய வாதலால், அவற்றால் பெறப்படும் ஞானம், ஊனக்கண் எனப் பட்டது. ஆனதுபற்றியே, அசத்தாகிய உடம்பு என்றற்குத் திருஞானசம்பந்தர், “ஊனமாம் உடம்பு’’ என்றும், “ஊனத்திருள்” என்றும் அறிவுறுத்தியுள்ளார். கண்ணென்றது அறிவு. பசுபாச ஞானங்களால் சிவபரம்பொருளைப் பார்க்க முடியாது. பதி என்றது சத்தாகிய சிவபரம்பொருளை என அறிதல் வேண்டும். பசுபாச ஞானங்களால் காணப்படாத முதல்வன் அவனது திருவருளே கண்ணாகக் காண்பார்க்குக் காட்சியளிப்பன். அதனாலன்றோ முதல்வனுக்குச் சிவசத்து என்பதும் ஒரு பெயராயிற்று. சத்தாதலால் உணரப்படா தெனவும், சிவசத்தாதலால் சிவஞானம் ஒன்றினாலே உணரப்படுமெனவும் முன்னே கூறியிருக்கின்றார். சிவஞானம் ஞானாசிரியரால் அருளப்படுகிறது. சிவஞானமே கண்ணாகக் கொண்டு புறக்கருவிகளைக் கொள்ளாமல் அகக்கருவியாகிய சிந்தையில் விளங்கும் அறிவின் கண்ணே ஆராய்தலே வேண்டுவது என்பதை நாம் தெளிகின்றோம். இது தெளியவே, ஆசிரியர் ஊனக்கண் பாசம் உணராப் பதியை, ஞானக் கண்ணினில் சிந்தை நாடி என்று அருளிச் செய்துள்ளார். ஊனக் கண்ணும் பாசமும் உணரமுடியாத பதியை ஞானக்கண் கொண்டு சிந்தையின்கண் நாடுக என்பது இதன் பொருள்: அஃதாவது பசுஞானத்தாலும் பாசஞானத்தாலும் உணர முடியாத இறைவனை அவனது திருவருளாகிய சிவஞானத் தால் சிந்தையின் கண் ஆராய்ந்து உணரவேண்டும் என்பது. கூறுக என்பதைக் கூறி என்று சான்றோர் வழங்குவது போல, நாடுக என்பதை நாடி என்று வழங்குகின்றார். இக்கருத்தையே அருணந்தி சிவனார், “பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி” என்று கூறுகின்றார். இங்கே அவர் நாடி என்பதற்கு ஆராய்க என்று பொருள் கொள்ளாமல் ஆராய்ந்து என்றே கொள்ளுகின்றார். மற்று, சிவஞான முனிவரோ நாடுக என்றே பொருள் சொல்லுகின்றார். முனிவர் உரையே அறிஞர் அனைவராலும் ஈண்டுக் கொள்ளப்படுகிறது. ஞானாசிரியன் திருவருள் ஞானத்தை நல்கப் பெற்றால், ஆன்மாவாகிய நம் அறிவுக்கு உடல் கருவி உலகுகளாகிய அசத்தின் தொடர்பு வேறுபட்டுத் தோன்றும். அதனால் அகக் கருவியாகிய சிந்தையின்கண் வேறுபட்ட அதன் தொடர்பு வந்தவாறும், அதனை நாமாகவே மயங்கி அதனால் பிணிப்புண்டு கிடக்குமாறும், நமக்கும் அதற்கும் தொடர்பொன்றும் இல்லாத வாறும் விளங்கும். அவ்விளக்கத்தால் ஆன்மாவாகிய நம்மையே அத்தொடர்பினின்றும் நீக்கி நிறுத்திக் காணத் தொடங்குவோம். நம்மை அறிந்தாலன்றி நாம் நம்மை அத்தொடர்பினின்றும் நீக்க முடியாது. நம்மையே அறிய முயல்வோமாயின், அறிய நிற்கின்ற உடல் கருவி முதலிய அசத்தை நீக்குவது இனிது கைகூடும். இவ்வாறே நம்முடைய முன்னோர்களாகிய சான்றோர்கள் முயன்றிருக் கின்றார்கள். பட்டினத்தடிகள், “மேவிய புன்மயிர்த் தொகையோ, அம்மயிர் பாவிய தோலின் பரப்போ, தோலிடைப் புகவிட்டுப் பொதிந்த புண்ணோ, புண்ணிடை ஊறும் உதிரப் புனலோ, கூறு செய்து இடை யிடை நிற்கும் எலும்போ, எலும்பிடை முடைகெழு மூளை விழுதோ, வழு வழுத்து உள்ளிடை யொழுகும் வழும்போ, மெள்ள நின்று ஊரும் புழுவின் ஒழுங்கோ, நீரிடை வைத்த மலத்தின் குப்பையோ, வைத்துக் கட்டிய நரம்பின் கயிறோ, உடம்பிற்குள் பிரியா தொறுக்கும் பிணியோ, தெரியாது இன்னது யான்என்று அறியேன், என்னை எங்கும் தேடினன், யாதிலும் காணேன்....... திருவிடை மருத! பொருவிடைப் பாக! மங்கை பங்க! கங்கை நாயக! நின் தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின் மாயப் படலம் கீறித் தூய ஞான நாட்டம் பெற்றபின் யானும் நின்பெருந் தன்மையும் கண்டேன்; காண்டலும் என்னையும் கண்டேன், பிறரையும் கண்டேன்; நின்னிலை யனைத்தையும் கண்டேன்; என்னே! நின்னைக் காணா மாந்தர் தன்னையுங் காணாத் தன்மையோரே” (திருவிடை. மும் .13) என்றும், “நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார், வானோர்பிரான் என்னை ஆண்டிலனேல்” என்று மாணிக்க வாசகனாரும் ஞானக்கண் கொண்டு சிந்தையில் நாடியது காணலாம். இவ்வண்ணம், உடல் கருவி முதலிய அசத்தை வேறு வைத்து ஆராயும்போது, கடுவெயிலில் பேய்த்தேர் (கானல்) தண்ணீர் போல் காட்சி தருவதுபோல, நம்மின் வேறாகாது ஒன்றாய் நாமாகவே காட்சியளித்த அசத்துப் பேய்த்தேர் போல நீங்கி மறைந்தொழியும்; ஒழியவே, இறைவனது திருவருள் நிலையமாகிய அவன் திருவடிநீழல் காட்சிப்படும்; ஆன்மாவும் அந்த நீழலைச் சென்று சேர்ந்துவிடும். இதனை ஆசிரியர் உராத் துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி என்று அறிவித்தருளுகின்றார். பட்டினத்தடிகளும் “தூய ஞான நாட்டம் பெற்றபின் மாயப்படலம் கீறி நின் பெருந்தன்மையும் கண்டேன்” என்று கூறுவது காண்க. பேய்த்தேரை ஆசிரியர் உராத்துனைத் தேர் என்று இயம்புகின்றார். உரா என்பது ஊரா என்பதன் குறுக்கம். துனை, விரைவு. ஒருவராலும் ஊரப்படாது விரைந்து செல்லும் தேர் என்று பேய்த்தேர் குறிக்கப்படுகிறது. குதிரை மலையை ஓடாக் குதிரை என்றும், வேங்கை மரத்தைப் பாயா வேங்கை என்றும் சான்றோர் சொல்லழகு தோன்றக் கூறுவது வழக்கம். இதனை வெளிப்படை யென்னும் அணிவகை என்பர். இவ்வாறே பேய்த்தேரை, உராத்துனைத்தேர் என்று ஆசிரியர் அருளிச் செய்கின்றார். சங்கச் சான்றோரும், “உருவில் பேஎய் ஊராத்தேர்” (அகம்.67) என்று சொல்லியிருக்கின்றார்கள். இவ்வாறு ஞானநாட்டம் பெற்று மாயப்படலம் கீறி முதல்வன் திருவடி நீழலைக்கண்ட திருநாவுக்கரசர், “மாசில் வீணையும் மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே” என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார். இனி, உடலிடமாக நின்று ஞானக்கண் கொண்டு சிந்தையில் நாடி, முதல்வன் திருவருள் நிலையைக் கண்ட பின்பு, அதனிடமே ஒன்றி யிருப்பதற்கே உள்ளத்தில் விருப்பமுண்டாகும்; திருவருள் காட்சி தோன்றும் போதே பேரின்பம் சுரக்கும்; “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன (முதல்வன்) அடித்தலம்” என்று திருநாவுக்கரசர் அருளுவதைக் காணலாம். இன்பத்தை நாடுவதே உயிர்க்கு இயல்பாதலால், நம் உள்ளம் திருவருள் காட்சியின்பத்தைப் பெறுவதற்கே பெரிதும் விரும்பும். ஆயினும், அவ்விருப்பத்தை, உடல் கருவி உலகுகள் போந்து சிதைத்து, விருப்பமைந்த உயிரின் உள்ளத்தைத் தாம் கவர்ந்துகொள்ளும். பாசி படர்ந்த நீர்நிலையில் கல்லை விட்டெறிந்தால், கல் விழுந்தவிடத்தில் அப்பாசி சிறிது நீங்கும்; பின்னர் வந்து மூடிக் கொள்ளும்; அதுவே போல், திருவருட்காட்சியில் முயலும்போது அசத்தாகிய பாசத்தின் தொடர்பு நீங்கும்; அக்காட்சி நீங்கும் போது அப்பாசம் வந்து மூடிவிடுகிறது. இதனை, “பாசிபடு குட்டத்தில் கல்லினை விட்டெறியப் படும்பொழுது நீங்கி அது விடும்பொழுதில் பரக்கும்: மாசுபடு மல மாயை அருங்கன்மம் அனைத்தும் அரனடியை உணரும்போது அகலும், பின் நணுகும்” என்று அருணந்தி சிவனார் நம் ஆசிரியர் பால் நேர்முகமாகக் கேட்டறிந்து உணர்ந்து சொல்லுகின்றார். அரனடியை உணரும் உயிர், அந்த அடியின் கீழே இருக்க விரும்பும் என்பது உண்மையே; ஆனால், அவ்வாறு இருப்பதற்கு வழி யாது? அதற்கு ஒரு வழி உண்டு; அஃதாவது திருவைந்தெழுத்தை இடையறாமல் முறைப்படி எண்ணுவது என்பாராய், “விதி எண்ணும் அஞ்செழுத்தே” என்று ஆசிரியர் அறிவுறுத் தருளுகின்றார். எண்ணும் - எண்ணவேண்டும்; நீர் இதைச் சொல்லும் என்றால் நீர் இதைச் சொல்லவேண்டும் என்று பொருளாவதுபோல எண்ணும் என்பது எண்ணவேண்டும் என்று பொருள்படுகிறது. இனி, திருவைந் தெழுத்தென்பது, சி, வ, ய, ந, ம என்ற ஐந்தெழுத்துக்களையும் குறிக்கும். இவ்வைந்தெழுத்தையும் கூட்டவரும் சிவய நம என்பது வடமொழியில் ஒரு சொற் றொடராகும். இங்கே, “அது சொற்றொடரன்று; எழுத்து,” என்பதற்காகவே திருவைந்தெழுத்து என்று சிறப்பாக எடுத்துக் கூறப்படுகிறது. இவ்வெழுத்துக்கள் இறைவன் திருப்பெயர் களுள் ஒன்றான நமசிவய என்பதில் உள்ள எழுத்துக்கள். நமசிவாய என்பது இறைவன் திருப்பெயர். அதை மாற்றிச் சிவாயநம என்றால் பெயர்த்தன்மை நீங்கி எழுத்தாகிவிடுகிறது. திருவைந் தெழுத்தை நினைந்து ஓதவேண்டுமாயின், நமசிவாய என்ற திருப்பெயரை மாற்றி எழுத்தாக்குவது முதல் விதி; இல்லையானால் திருவைந் தெழுத்துக்களை இலக்கணப்படிப் பெற முடியாது. “நந்தி நாமம் நமச்சிவாய” என்று திருஞான சம்பந்தரும், “எந்தையார் திருநாமம் நமச்சிவாய” என்று திருநாவுக்கரசரும் அருளிச் செய்திருப்பது காண்க. “ஆலைப்படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்செழுத்தின்றாமத்தான் காண்” - திரு.நா. 266: 2 இவ்வெழுத்துக்களில் சி என்பது சிவபரம்பொருளையும், வ என்பது அவனது அருளையும், ய என்பது உயிரையும், ந என்பது உயிர் அசத்தோடு கூடும்போது சத்தை நினையாது அசத்தாய் இயைந்து அசத்து நல்கும் நுகர்ச்சிகளை நுகர்வதற்கும், அசத்தைவிட்டுச் சத்தாகிய சிவத்தோடு கூடும்போது அசத்தை நினையாது சிவத்தோடு சிவமாய் இயைந்து சிவபோகத்தை நுகர்வதற்கும் உயிரை மறைத்து நின்று இயக்கும் இறைவனுடைய மறைப்புச் சத்தியையும், ம என்பது மலத்தையும் குறிக்கும். இவ்வெழுத் தைந்தினையும் எண்ணுங்கால், சிவத்துக்கும் உயிர் களுக்கும் உள்ள தொடர்பும், சிவத்துக்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பும், உயிர்களுக்கும் உலகத்துக்குமுள்ள தொடர்பும் அத்தொடர்புண்டான காரணமும் அதனால் விளையும் பயனும் எண்ணத்துக்கு வந்து இறைவன் திருவருள் நீழலை விட்டு நீங்காது நிற்கும் நிலைமையைக் கைவரச்செய்யும். இதனை, “அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும் எண்ணில் இராப்பகலற் றின்பத்தே- நண்ணி அருளானது சிவத்தே யாக்கும் அணுவை இருளானது தீர இன்று” என்று உமாபதி சிவனார் கூறியருளுவது காணலாம். இவ்வாறு இத்திருவைந் தெழுத்தையே புணையாகப் பற்றிக்கொண்டு இடையறாது எண்ணிப் பேரின்பம் சுரக்கப்பெற்று நுகர்ந்த மணிவாசகப் பெருமான், “நானேயோ தவம்செய்தேன்! சிவயநம எனப்பெற்றேன், தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந்து எனதுள்ளம் புகுந்து அடியேற் கருள்செய்தான் ஊனாரு முயிர்வாழ்க்கை யொறுத்தன்றே வெறுத்திடவே” என்று தேன்சொட்டப் பாடும் திருவாசகத்தால் நாம் அறிய அருளிச் செய்கின்றார். 10. இவ்வாறு திருவைந்தெழுத்தை விதிப்படி யெண்ணு வதால், இறைவனுக்கும் உலகுக்கும் உலகில் வாழும் உயிர்களாகிய நமக்கும் உள்ள தொடர்பு விளங்கும் என்று முன்பு கண்டோம். நுண்ணிய மாயையாகிய உள்பொருளிலிருந்து உடல் கருவி உலகு முதலியவற்றை இறைவன் படைக்கின்றான். அதனால் அவன் செய்பவனாகின்றான்; உடல் கருவி யுலகுகள் செய்யப்படும் பொருள்களாகின்றன. செய்யப்படும் பொருள் செய்பவனது உடைமையாகும். எவ்வாறெனின், மாயை என்பது முதல்வனுடைய திருவருளாற்றலை (சத்தியை) இடமாகக் கொண்டு கிடக்கும் ஒருவகை ஆற்றல்; அந்த ஆற்றலைக் கலக்கி உடல் கருவி யுலகுகளைச் செய்தருளுவது பற்றி அவன் செய்பவனானான்; அவை செயப்படுபொருள்களாயின; தன்பால் உள்ள ஒன்றைக் கொண்டு ஒரு செய்பொருளை ஒருவன் செய்வானாயின், அச்செயப்படுபொருள் அவனது உடைமை யாகிறதன்றோ? அது போலவே, இவ்வுலகமும் உலகியற் பொருளும் அவற்றிடை நிலவும் நம் உடலும், அதற்குள் இருக்கும் கருவிகளும் ஆகிய யாவும் இறைவனுடைய உடைமையாகும். இது பற்றியே மணிவாசகர் முதலிய அருட்செல்வர் இறைவனை, “உடையவனே” என்றும், “உடையாய்” என்றும் அடிக்கடி எடுத்தோதியிருக் கின்றனர். இவ்வுடல் கருவி முதலியன இறைவனது உடைமையே யாயினும் இவற்றைப் பயன்கொள்ளுவது உயிராகிய ஆன்மாவே யன்றி அவனன்று. ஆன்மா, இவ்வுடல் கருவி முதலியவற்றைத் தன்னுடைய பொருளாகவே எண்ணி அவற்றின்பால் பற்றுக் கொள்ளுகிறது. தந்தை ஒருவன் ஒரு சட்டையைத் தைத்துக் கொண்டு வந்து தன் மகனுக்குக் கொடுத்தால், அவன் அதனைத் தனதாகக் கொண்டு அதன்பால் பற்றுக் கொள்ளுகிறான்; அது போலவே ஆன்மாவின் செய்கையும் உளது. தான் பற்று வைத்துப் பயன் கொள்ளும் சட்டையை உதவிய தந்தையை, மகன் “எந்தையே” என அன்பு செய்யும் முறைமையிலேயே, நம் சான்றோர் சிவபெருமானான முதல்வனைத் தந்தையே என்றும், எந்தையே என்றும், பலபடியாக அன்பு மொழிகளால் அழைப்பதை அவர்களின் திருமுறைகளில் பார்க்கின்றோம். இனி, இறைவன் இவற்றை உண்டுபண்ணி ஆன்மாக்களுக்குக் கொடுப்பானேன் என்றோர் எண்ணம் இந்நிலையில் நமக்கு உண்டாகிறது. ஆன்மாக்களை அனாதியே மலமானது பிணித்து மறைத்து இருளில் கிடத்தியிருக்கிறது; தன்னைப் போலவே அறிவு விழைவு செயல் முதலிய ஆற்றல் படைத்த சத்தாகிய ஆன்மா மலத்தால் கட்டுண்டிருக்கும் நிலையை நோக்கியருளும் இறைவன், ஆன்மாவின் பால் பேரருள் கொண்டு மாயையிலிருந்து இவ்வுடல் கருவி முதலியவற்றைப் படைத்துக் கொடுத்து உதவுகின்றான். ஆற்றல் வடிவாகிய மாயை என்பது ஒளி மயமாக இருக்கிறதென்று இன்றைய விஞ்ஞான அறிவு உறுதிப்படுத்து கிறது. மலவிருளில் கிடக்கும் உயிர், ஆற்றலாகிய ஒளிப்பொருளி லிருந்து உண்டாக்கப்படும் உடல் கருவி முதலியவற்றைத் துணையாகக் கொண்டு, அறிவதும் விழைவதும் செய்வதும் செய்து மலவிருளிலிருந்து விடுதலைபெற முயல்கிறது. இவ்வகையில் முதல்வன் தன்பொருட்டு உடல் கருவி முதலியவற்றைப் படைத்து மலவிருளிலிருந்து வீடுபேறு எய்துவதற்காகத் தனக்கு நல்கியிருப்பதை உயிர் நினைக்கும்; நினைந்தவழி, அதற்கு அம் முதல்வன்பால் அளவிறந்த நன்றியுணர்வு உண்டாகும். அதனால் ஒவ்வொரு கணமும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் கடமை உயிர்க்கு மிகுகின்றது. இவ்வண்ணம் உடல் கருவிகளை நல்கிய இறைவன், அம்மட்டில் நின்று போகாது, அவற்றோடு கலந்து ஒன்றாயும், உயிரொடு கூடி உடனாயும் உண்ணின்று தோன்றாத்துணை செய்வது திருவைந்தெழுத்தை விதிப்படி ஓதுவதால் உணரப் படுகிறது; உடலோடு கூடி உயிர் செய்யும் ஒவ்வொரு செயல் நிகழ்ச்சிக்கும் இறைவன் தோன்றா முதலாய் இருப்பதும் விளங்குகிறது. அவனது கலப்பில்லையாயின் உடல் கருவி முதலியவற்றில் ஒழுங்கான செயல் நிகழாது; மலத்தால் மறைப்புண் டிருத்தலால் உயிர்க்கும் அறிவு முதலியன தொழிற்படா; ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்பது உண்மையாகிறது. இவ்வாறு எல்லாச் செயற்கும் இறைவனே முழுமுதலாக இருப்பவும், அவன் உயிரை முன்னிறுத்தித் தான் அதனோடு ஒன்றியுடனாய் நிற்கின்றான். அதனால், உயிர், எதையும் தானே செய்வதாகவும் தானே முழுமுதலாகவும் நினைந்தும் சொல்லியும் செய்தும் ஒழுகுகிறது. இதனால் விளையும் நன்மை தீமைகட்கு உயிரே பொறுப்பாளி யாகின்றது. அப்பொறுப்புக்கு ஆன்மாக் களாகிய நாம் உரியராகாவிட்டால் விளையும் நன்மை தீமைகள் நம்மைச் சேரமாட்டா. இதற்கு வழி யாது? இதுவரையில் நம்மை முற்பட வைத்து நம்முள் கலந்து உடனாய் நின்ற முதல்வனை முன்னே நிறுத்தி அவனுக்குள் நம்மை ஒன்றுவிப்பதுதான் இதற்குத் தக்கவழியாம். இதை நமது ஆசிரியர், “அவனே தானே ஆகிய அந்நெறி, ஏகனாகி இறைபணி நிற்க” என்று அறிவுறுத்தருளுகின்றார். அவன் என்றது இறைவனையும், தான் என்றது ஆன்மாவையும் குறிக்கும். குறிக்கவே, இறைவன் உயிர்களின் உடல் கலந்து உளங்கலந்து உயிரேயாய் ஒன்றியிருக்கும் அந்நெறியே மேற்கொண்டு, உடல் கருவிகளின் ஆக்கம் எனதன்று, ஆதலால் அவற்றின் செயல்வகைகட்கும் இயக்கத்துக்கும் முதல்வன் யான் அல்லன், எல்லாவற்றிற்கும் முழுமுதல் இறைவனே எனக் கழித்து அவன்பால் ஒன்றிவிடவேண்டும் என்பது விளங்கும். அப்போது உடல் கருவிகளின் இயக்கத்தால் உண்டாகும் பணிகட்கு இறைவன் பொறுப்பாளியாகின்றான். எல்லாம் இறைவன் பணியாகிவிடுதலால், ஏகனாகி நிற்க நிகழும் செயல் இறைபணி யெனப்படுவதாயிற்று. இவ்வாறு வாழ்வது தான் வாழ்வெனப் படும்; வேறுபட வாழ்வது வாழ்வாகாது என்பது தோன்றவே, மணிவாசகப் பெருமான், “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு, ஆழ்கின்றாய்” என்றும், வாழ வேண்டிய வாழ்வாவது, “எண்ணமே யுடல் வாய் மூக்கொடு செவி கண் என்றிவை நின்கண்ணே வைத்து” வாழ்வது என்றும் எடுத்துரைத் துள்ளார். அன்றியும், இறைவனை முற்பட நிறுத்தி ஏகனாகி இறை பணியில் நின்ற திறத்தை, “கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ, தேறும் வகை நீ திகைப்பும் நீ தீமை நன்மை முழுதும் நீ, வேறோர் பரிசு இங்கு ஒன்றில்லேன்’’ என்றும், “வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே” என்றும், “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே” என்றும் வரும் திருவாசகங்கள் விளக்குகின்றன. இவ்வாறு நான் என்றும் எனது என்றும் எழும் எண்ணங்கட்கு இடங்கொடாது கெடுத்து ஏகனாகி நிற்பதால், அப்போது நிகழும் செயல்களை முதல்வன் தானே என்று கொள்வன்; இதனை ஆசிரியர்க்கு முன்னே வாழ்ந்த சான்றோர்களும், “நம் செயல் அற்று இந்த நாம் அற்றபின் நாதன், தன் செயல் தானே என்று உந்தீபற” என்று தெரிவித்துள்ளார்கள். மலக்கட்டால் இருளிற்கிடந்த நம் பொருட்டு உடல் கருவி யுலகுகளாகிய மாயையின் தொடர்பு நமக்கு எய்துவிக்கப்பட்ட தன்றோ! அத்தொடர்பு உண்டானதும் வினைகள் தோன்றின; அவற்றிற்கு நாமே முழுமுதல் என நினைந்து செய்தமையால், அவற்றின் பயனை நுகர்தற் பொருட்டு நாம் பிறப்பிறப்புக்கட்கு உள்ளாகி உழன்றோம். ஏகனாகி இறைபணி நிற்கலுற்றால் வினைத்தொடர்பு கெடுகிறது; அது கெடவே மாயையின் தொடர்பு கெடுகிறது; அவற்றின்கண் நிகழும் செயல்கள் இறைவன் செயல்களாகின்றன. அவன் செயல் முற்றும் ஆன்மாக்களாகிய நாம் மலத்தின் மறைப்பினின்றும் நீங்கி விடுதலை பெறுவது குறித்து நிகழ்வதனால் மலமறைப்பும் நீங்குகிறது. இது பற்றியே ஆசிரியர், ஏகனாகி இறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை யின்றே என்று அருளியுள்ளார். இக்கருத்துக்களையே, “அவனே தானே யாகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே” என்று ஆசிரியர் உரைத்தருளுகின்றார். 11. உடல் கருவி முதலியவற்றோடு கூடி அவற்றைத் தன் உடைமையென்றும், அவற்றால் நிகழும் செயல்கட்குத் தானே முதல் என்றும் கருதி யொழுகிவந்த உயிர், நான் எனது என்ற நினைவும் செயலும் அற்றிருப்பது அருமையாதலால், அதற்கு வழி யாது? என்றோர் ஐயம் நமக்குண்டாவது இயல்பு. அந்நினைவு செயல்களை முழுமுதலாக நிறுத்திய இறைவன் பால் அன்பு செலுத்துவதில் செலவிட வேண்டும்; இதுவே அதற்கு வழி என்று ஆசிரியர் அறிவுறுத்தத் தலைப்படுகின்றார். நமக்கு ஒருவர் பால் அன்புண்டாக வேண்டுமாயின், அவருக்கும் நமக்கும் எவ்வகையிலேனும் தொடர்பு உண்டாக வேண்டும். ஒரு வகையிலும் தொடர்பில்லாதவரிடத்தில் நமக்கு அன்புண்டாவதில்லை. அன்றியும், தொடர்புடையாருடைய தொடர்பை அறியாதிருந்தாலும் மறந்தாலும் நமக்கு அவரிடத்தில் அன்பு தோன்றுவதில்லை. இது நாடோறும் நிகழும் நிகழ்ச்சி. இம்முறையே நாம் இறைவன்பால் அன்பு செய்ய வேண்டுமாயின் நமக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பைக் காணவேண்டும். திருவைந்தெழுத்தை விதிப்படி எண்ணுவதால் நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு விளக்கமாகிறது. நாம் மலத்தால் கட்டுண்டு மலவிருளில் அறிவு செயலற்றுக் கிடந்ததும், இறைவன் நம்பால் அருள்கூர்ந்து மாயையிலிருந்து உடல் கருவி முதலியவற்றை ஆக்கித் தந்ததும், அறிவில்லாதவையாகிய அவ்வுடல் முதலியன தத்தமக்குரிய செயல்களில் ஒழுங்கு கெடாது செந்நெறி பிறழாது இயலுதற் பொருட்டு அவற்றோடு ஒன்றியும் அவ்வுடலிடத்தே கருவிகளோடு ஒன்றியிருக்கும் அறிவுடைப் பொருளாகிய உயிரின் அறிவு செயல்கள் எழுந்து தொழிற்படுதற் பொருட்டு உடனாகியும் இருப்பதும் நன்கு விளங்குகின்றன. இவ்வகையில் இறைவன் நமக்குச் செய்யும் உதவி தெளிவாக விளங்க விளங்க, நமக்கு அவன் பால் உள்ள தொடர்புணர்வும் அத்தொடர்பால் அன்பும் உண்டாகின்றன. அவன் செய்த உதவிகளிலும் நம்மோடு ஒன்றி உடனாய் நின்று செய்யும் உதவியை நினைக்கும்போது அந்த அன்பு எல்லையற்ற தாய் விரிகிறது. இறைவன் நம்மோடு ஒன்றியுடனாய் நின்று செய்யும் உதவி யாது? நாம் கண்ணால் ஒரு பொருளைக் காண்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது நம் அறிவு, கண்ணொளி வேறு தான் வேறு என வேற்றுமையில்லாமல் அதனோடு ஒன்றி உடனாய் நின்று அப்பொருளைக் கண்ணைக் காணச் செய்கிறது. அப்போது நாம் அப்பொருளைக் கண்டோம் என்றும், நம் கண் கண்டதென்றும் கூறுகிறோம். இவ்விடத்தே நம் உயிரறிவு கண்ணொளியொடு கலந்து உடனாய் நின்று முதலில் கண்ணைக் காணச் செய்வதும் பின்னர்த்தான் காண்பதுமாகிய இரு செயல்கள் நிகழ்வது தெரிகிறது. இவ்வாறே இறைவனும் ஆன்மாவோடு ஒன்றி உடனாய் நின்று பொருள்களை ஆன்மாவைக் காணச் செய்வதும் பின்பு தான் காண்பதும் ஆகிய இரு பேருதவிகளைச் செய்தருளுகின்றான். இதனையே நம் ஆசிரியர், காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல், காண உள்ளத்தைக் காட்டிக்காண்கின்றான் என்று உரைத் தருளுகின்றார். கண்டு காட்டுகின்றான் என்று சூத்திரம் கூறினும், காட்டிக் காண்கின்றான் என மாற்றிக் கொள்ளவேண்டும். மேலும், நாம் ஒன்றைக் காணும்போது நம்முடைய ஆன்ம அறிவும் கண்ணும் செய்யும் செயல்கள் பிரித்தறிய வாராதபடி ஒன்றி உடன் நிகழ்கின்றன; அவ்வண்ணமே இறைவன் செயலும் ஆன்ம அறிவும் பிரித்தறிய வாராதபடி ஒன்றி உடன் நிகழ்கின்றன. இவ்வாறு இறைவன் நம் பொருட்டுக் காட்டுவதும் காண்பது மாகிய இருவகைப் பேருதவிகளைச் செய்வதை நினைக்கும்போது அவன்பால் வற்றாத பேரன்பு பெருகுகிறது. அன்பின் விளைவு அருள். அன்பு பெருகுங்கால் அருளே உருவாகவுள்ள இறை வனிடத்தே அது நம்மைச் செலுத்தி விடுகிறது. ஆன்மா அவனது திருவடியாகிய அருள் நிலையத்தைச் சேர்ந்து பேரின்பத்தைப் பெறுகிறது. இதனைத் தான் நம் ஆசிரியர். “காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே” என்று உரைத்தருளுகின்றார். உள்ளத்தைக் காட்டிக் காண்டலின் அயரா அன்பும், அயரா அன்பினால் அரன்கழலைப் பெறுதலும் பயனாதலால், கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே என்று அருளியுள்ளார். 12. மேலே சொன்னபடி இறைவனோடு ஏகனாகி இறைபணி நிற்பதும், அவன் ஆன்மாவாவின் பொருட்டுக் காட்டும் உதவி காணும் உதவி என்ற இருவகை யுதவிகளைச் செய்தொழுகுவதை நினைந்து அவன்பால் அயராத அன்பு செய்வதும் என்ற இருவகை அறங்களும் சித்தாந்த சைவச் செந்நெறி என்றும் திருநெறி என்றும் சிவநெறி என்றும் வழங்கும். இவற்றை மேற்கொண்டு ஒழுகுபவன் சிவஞானி யாவன். ஆயினும் அவன் மாயையிலிருந்து உண்டாகிய இவ்வுடல் கருவிகளோடு கூடி உலகியற் பொருள்களைப் பெற்று உலகவாழ்வு வாழவேண்டியவனாக இருக்கின்றான். சிவஞானம் பெறுதற்கு முன்னே, அவனை இறுகப்பற்றி நின்ற மலம் இறைவனுடைய நற்றாளைச் சேராதபடி மறைத்துக் கொண்டிருந்தது. இப்போதும் அது நீங்கவில்லை. அம்மலத்தின் மறைப்பு நெகிழ்ந்து நீங்கும் பொருட்டு வந்து கூடிய உடல் கருவி முதலிய மாயா காரியங்கள் வந்து இயக்கியபோது அவற்றின் வழியே நின்று அவற்றையே தானென எண்ணி மயங்கிப்போனான். மாயையோடு கூடி நிற்கையில் நிகழும் இயக்கம் வினைத்தொடர் பாய் நின்றது. சிவஞானம் பெற்றபின், அவை வேறு தான் வேறு என எண்ணி, முன்னர்ச் சொன்ன இருவகைச் செந்நெறிகளையும் மேற்கொண்டு உலகியல் வாழ்வு நடத்தும்போதும், அந்த மலமாயை வினைகளின் தொடர்பில் பிணிப்புண்டு கிடந்து பழகிய பழக்கம் அவனை விடாதன்றோ? அது வந்து தாக்காதிருப் பதற்கு உலகியல் வாழ்வு அரணாகாதே; இதற்கு என் செய்வது? என்பன போலும் ஐயங்கள் இங்கே எழுகின்றன. அவற்றிற்கு விளக்கம் தரப்படுகின்றது. திருநெறி மேற்கொண்டொழுகும் சிவஞானிபால் மலம் இருந்த போதினும், மறைப்புண்டு அறிவு அறை போகா வண்ணம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளல் அவன் கடமையாகும். அதற்காகவே, ஆசிரியர், “செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மல”த்தைக் கழுவிக்கொள்க என்று அறிவுறுத்துகின்றார். இறைவன் திருவடி செந்தாமரை போன்ற சிறப்புடையதென்பது விளங்கச் “செம்மலர்த் தாள்”என்றார் .சிவஞானச் செல்வர்களின் சென்னியிலும் சிந்தையிலும் மலர்ந்து விளங்கும் செம்மையுடைய தாளாதலால் இவ்வாறு அது சிறப்பிக்கப்படுகிறது. மலர் போல மென்மையுடையதாயினும் தன்பால் வந்து உற்ற ஆன்மாக்களை மீளப்பிரிந்து ஏகாதவாறு ஆட்கொண்டருளும் வன்மையுடையது இறைவன் செம்மலர்த் திருவடி. அதனால் அதனை “நோன்றாள்” என்று சிறப்பிக்கின்றார். நோன்மை, வன்மை; “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” என்று நக்கீரனாரும் கூறுவது காண்க. சேரலொட்டா அம்மலம் என்றது, நினைய விடாது உயிரறிவை மறைத்துப் பிணித்துக்கொண்டிருந்த அந்த ஆணவ மலம் என்று பொருள்படுகிறது. இயல்பான அறிவாற்றலால் விரிந்த பண்பு கொண்டு சிவமாந்தன்மை யெய்தும் சிறப்புடைய ஆன்மாவைப் பிணித்து இறுக்கி அணுப்போல் சிறுமையடையச் செய்வது பற்றி மலத்தை ஆணவமலம் என்று சிவாக மங்கள் பெயர் கூறுகின்றன. சிவஞானிபால் நெகிழ்ந்து நீங்காது கிடக்கும் மலம், சிவஞானம் பெறுதற்குமுன், நெகிழும் நீர்மையின்றித் திண்ணிதாய்ப் பிணித் திருந்த சிறப்புத்தோன்ற “அம்மலம்”என்று குறித்தருளினார். மலம் போந்து மறைக்காதவாறு காத்தல் வேண்டும் என்பதற்கு “மலம் கழுவுக” என்றார். மலத்தை நீக்குதற்கு, ஏற்ற சொல் கழுவுதல் என்பது. மலத்தால் அறிவு அறை போகாதபடி காத்துக்கொள்ளுதற்கு வழி திருவைந்தெழுத்தை விதிப்படி எண்ணுவதே யாகும். சிவஞானிகள் எப்போதும் இத்திருவைந் தெழுத்தை எண்ணுவதும் ஓதுவதும் இயல்பு; “நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்றும், “ஐந்தெழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேன்” என்றும், “வினைப் பகைக்கு அத்திரமாவன அஞ்செழுத்துமே” என்றும் சமய குரவர்கள் கூறுவதும், மிகப் பழையோரான திருமூல நாயனார், “மரணம் கைவைத்து உயிர் மாற்றிடும் போது, அரணம் கைக் கூட்டுவது அஞ்செழுத்தாமே” எனவும் “அருள் வழி காட்டுவது அஞ்செழுத்தாமே” எனவும் ஓதுவதும் போதிய சான்றுகளாம். இவ்வாறு திருவைந்தெழுத்தை இடையறாது நினைந்தோதி மலம் கழுவும் சிவஞானி உலகியல் வாழ்வில் பலதிற மக்களோடு கூடி வாழவேண்டியவன். அவர்கள் பலரும் சிவஞானம் பெற்ற வர்களாக இருப்பர் என்பது அரிது. அவர்களோடும் சிவ ஞானி ஒத்து வாழ வேண்டும். அவ்வாறு வாழுங்கால், அவரது கூட்டத்தால் சிவஞானம் பெற்றார்க்கும் விழைவும் வெறுப்பும் தோன்றித் துன்பம் செய்யுமன்றோ? இதற்கென் செய்வது? என்றொரு வினா எழுகிறது. இஃது உண்மையே. நிலத்தியல்பால் நீர்திரிவது போல எத்திறத்தோர்க்கும் இனத்தியல்பால் அறிவு திரியும்; இது பற்றியே பெரியோர்கள் நல்லின மல்லாத சிற்றினத் தோரை அஞ்சி நீங்குகின்றனர். ஆதலால் சிவஞானச் செல்வர்கள் சிவபரம் பொருளிடத்தே அன்புடையவர்கள் எவர்களோ அவர்களோடே கூடி வாழ்வதுதான் செய்யத் தக்கது; அதுதான் இதற்கு வழி. இது பற்றியே “அன்பரொடு மருவுக” என்று ஆசிரியர் அறிவிக்கின்றார். சிவன்பால் அன்புடைய அன்பரை எவ்வாறு அறிவது? அந்த அன்பு அவரவர் சிந்தையிலேயன்றோ நிற்பது! ஆயினும், சிவத்தின்பால் உண்மை யன்புடையார் எல்லாவுயிரிடத்தும் அன்புடையராவர்; அவரால் இகழப்படுவோர் எவருமிலர்; எவ்வுயிரும் இல்லை. சாதி சமுதாய முதலிய வேற்றுமைக் கொள்கை சிவஞானிக்கும் சித்தாந்தச் செந்நெறிக்கும் புறம்பு. எல்லா உயிர்களோடும் ஒன்றியுடனாய் நிற்கும் சிவபரம்பொருள் பால் மெய்யாக உயர்ந்த அன்புடையவர், எல்லோரையும் ஒப்பக்கருதி அவர் உவப்பன செய்யும் நினைவும் சொல்லும் செயலும் உடையவராயிருப்பர்; சிலரை வேறுவைத்து இகழ்வதும், சிலரை வேறுவைத்துப் புகழ்வதும் சிவநெறி கைக்கொண்ட “அன்பர்” செயல் அல்ல. “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை எமை இகழார்” என்று உண்மைச்சைவர் இலக்கணத்தைப் பாயிரத்தில் வற்புறுத்திக் கூறி யருளினமையால், இங்கே “அன்பர்” எனப் பொதுப்படக் கூறிச் “சிவன்பால் அன்புடையாரொடு மருவுக” என்பதன் உரையில் “சிவபக்தர்களோடு இணங்குக” என்றது, அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவர் என்பது காட்டி வற்புறுத்துதற் பொருட்டு என அறிதல் வேண்டும். சிவபெருமான் “பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார்” என்று சிவஞானச் செல்வராகிய திருஞானசம்பந்தர் அறிவுறுத்தியும், தமது வாழ்வில் ஒழுகிக் காட்டியும் நிலைநாட்டிய சிவநெறியில் நிற்கும் சைவர்பால் சிறப்பாகச் சித்தாந்த சைவர்பால் சிலரை இகழ்வதும் சிலரைப் புகழ்வதும் நிகழ்வது குற்றம். அது செய்பவர் “தம்மை யுணராதவர்” என்றும், அவர் கூறுவன “புறம்” என்றும் “கேளாம்” என்றும் ஆசிரியர் இந்நூலின் தொடக்கத்தே நன்கு வற்புறுத்தியுள்ளார். இவ்வாறு வேற்றுமைக் கொள்கைகொண் டொழுகுவோர் “அன்பர்” ஆகார்; இதுவே சிவன்பால் அன்புடையாரை அறியும் கூறுபாடு. அன்பரல்லாதார் சிவஞானத்தைச் சிதைத்து அவ ஞானமும் அஞ்ஞானமும் உணர்த்துவர். ஆதலால் அன்பரொடு மருவுவதே செய்யத்தக்கது என்பதாம். இனி, உலகியலில் வாழும் சிவஞானிக்கு அவ்வவ்விடங்களும் இடத்து நிகழ் பொருள்களும் பலப்பல காட்சிகளை வழங்கும். அவற்றைக் காணுமிடத்துச் சிவஞானியின் செயலும் வேறுபடு மன்றோ? அதனால் அவர்பால் குற்றம் புகுமே? இதற்கென் செய்வது? எனின், சில இடங்களும் இடத்து நிகழ் பொருள்களும் சிவஞானத்துக்கு அரண் செய்யும். திருக்கயிலாயம் நோக்கிச் சென்ற திருநாவுக்கரசருக்குத் திருவையாற்றுக் காட்சிகள் சிவதரி சனப்பயனை நல்கினவல்லவோ? அவற்நைக் கண்ட விடத்து அவை சிவபரம்பொருளே என எண்ணி வழிபடுதல் சிவஞானச் சைவர்கட்குக் கடமை. இக்காட்சிகளில் சிறப்புடையவை மெய்யன்பர் திருவேடமும் சிவபெருமான் எழுந்தருளும் திருக்கோயில்களுமாகும். இவற்றையே குறிக் கொண்டு நோக்கிச் செல்லின், அல்லாதவை காட்சிப்படா. அதனை, “மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்று ஆசிரியர் அறிவுறுத்தி யருளுகின்றார். காண்பவர் உள்ளத்தில் இது மாயமோ என்ற எண்ணம் எழாவகையில் சிவபரம் பொருள் பால் அன்பு நிறைந்தவர் வேடத்தைக் கண்டால், அவ்வேடத்தைச் சிவமென்றே தேறி வழிபடவே செய்யும் என்பதற்கு மாலற நேயம் மலிந்தவர் வேடம் என்று கூறப்பட்டுளது. “வேடநெறி நில்லார் வேடம் பூண்டென்பயன்?” என்று திருமூலநாயனார் அருளுமாறு, வேடநெறி நில்லாதவர் வேடம், காண்பவர் கருத்தில் மால் விளைவிக்கும். திருவேடத்தின் நோக்கம் மெய்க்கு அணிசெய்வதன்று. போர்ச் சான்றோரது வேடம் பகைவரது பகைமையைக் கெடுக்கும் குறிப்பிற்றாவதுபோலச் சிவஞானச் சான்றோரது திருவேடம் பிறவிக்குரிய வினைப்பகையைக் கெடுக்கும் குறிப்பினதாகும். அது சிவபெருமானது திருவருளால் விளைவதாகையால் காண்பார் கருத்தில் தாம் வழிபடும் சிவபரம் பொருளையே அது நினைப்பிக்கும். அதனால் அவர் உள்ளம் சிவஞானத்தால் திகழ்ந்து மாலறும்; இதனைத் திருநாவுக்கரசர் வரக்கண்டபோது, அவரது திருவேடம், திருஞான சம்பந்தர் “கருத்தில் பரவும் மெய்க்காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது” எனத் தொழுது வணங்கச்செய்த நிகழ்ச்சியால் நன்கறிகின்றோம். முதியோன் வடிவில் திருவேடம் தாங்கி வந்து உரையாடிய முருகன் செயலை வெறுத்துக் கூறலுற்ற வள்ளி நாயகியார், “நேயமலி மெய்யடியர் நேர்ந்துழியும் நின்போல் மாயமென உள்ளுமொரு வான்பழியும் வைத்தாய்” என்பதனால் மாலுண்டாக்கும் வேடமும் உண்டு என்பது பெறப்படும். திருவேடம் பூண்டார், நேயம் மலிந்தவரா அல்லரா என்பதை அறிவது அரிது. அந்த நேயம் அவரவர் நெஞ்சின்கண் நிகழ்வது. ஆயினும், நேயம் மலிந்தவர் திருவேடம் காண்பார் உள்ளத்தில் மால் உண்டாக்காது என்பது உறுதி. எப்படியிருப்பினும் காண்பார்க்குத் திருவேடம் பொருளே தவிர, வேடம் பூண்டோர் நேயம் மலிந்தவரா? அல்லாதவரா?”எனக் காண்பது பொருளன்று என்பதை வற்புறுத்தவே ஆசிரியர் அன்பரையும் வேடத்தையும் வேறு வேறு நிறுத்தி வேடத்தை விதந்தருளுகின்றார். வேடம் பூண்டு வேடநெறி நில்லாதாரை ஆராய்ந்து நெறி நிறுத்துவது வேந்தன் கடன்; (திருமந். 240) அதனை அவன்பால் விடுத்து, வேடத்தை அரனெனத் தொழுக என்பது. இங்கே விதிக்கப்படுகிறது. பண்டைநாளில் ஞானமில்லாதார் வேடம் பூண்டு ஞானிகள்போல நடிப்பராயின், நாடாளும் வேந்தன் தெரிந்த ஞானிகளைக் கொண்டு ஆராய்ந்து அவர்கட்கு ஞானத்தை நல்குவன்; அவனுக்கு அது கடன்; அது நாட்டுக்கு நலமாகும் (திருமந். 242) என்று திருமூல நாயனார் அறிவுறுத்துகின்றார். இனி, ஆங்காங்குக் காணப்படும் சிவன் கோயில்களைச் சிவனெனவே தேறி வழிபடுதல் வேண்டும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் தமிழகத்தில் திருவுலாவந்த போது அவர்கட்குத் திருக்கோயில்களே காட்சியளித்தன. அத்திருக்கோயில்கள் அவர்களுக்குச் சிவபரம்பொருளாகவே விளங்கின; அவர்கள் அப்பரம்பொருளோடு உரையாடினர்; வேண்டிய வேண்டியாங்குச் சிவபரம்பொருள் நல்கியருளப் பெற்றனர். கோயில்கள் அறநிலையங்களாகவும், பொருள் நிலையங் களாகவும், ஓவியம், சிற்பம், கூத்து முதலிய கலை நிலையங் களாகவும், அறச்சாலைகளாகவும், மருத்துவச் சாலைகளாகவும் ஆசிரியர் மெய்கண்டதேவர் காலத்தில் காண்பார்க்குக் காட்சி யளித்தன. ‘அக்காட்சி முற்றும் உயிர்கட்குத் தொண்டுபுரியும் சிவப்பணியாகவே இருந்தமையின் அவ்விடங்களைச் சிவன் என்றே வழிபட வேண்டுமென்பது சிவஞானச் செல்வர்களின் திருவுள்ளம். ஆதலால் திருக்கோயில்களைச் சிவனெனவே தேறி வழிபடுக என்று ஆசிரியர் மெய்கண்டதேவர் அருளிச் செய்கின்றார். இக்கருத்தை, “செம்மலர் நோன்றாள் சேர லொட்டா அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே” என்று ஆசிரியர் இனிய சொற்களால் எடுத்தியம்புகின்றார். இதன் கண் மலம் கழுவுதல், அன்பரொடு மருவுதல், திருவேடத்தையும் திருக்கோயிலையும் சிவனெனத் தேறி வழிபடல் என்ற மூன்றும்’ வற்புறுத்தப்படுவதைக் காணலாம். சித்தாந்தச் செந்நெறியாகிய சிவநெறியில் நிற்கும் சைவநன் மக்கள் மலவாதனையறுமாறு திருவைந்தெழுத்தை யோதுவதும், பிறவுயிர்கட்கு அன்பு செய்வதும், மக்களிடையே சாதி சமுதாய வேற்றுமைச் சழக்குகளை யொழித்து நோயுற்றோர்க்கு மருத்துவப் பணியும், கூனும் குருடும் செவிடும் ஊமையுமாய் வாழ வகையற்று வாடும் மக்கட்கு வேண்டும் பணியும் திக்கற்ற இளஞ்சிறார்கட்கு உண்டி உறைவிடம் முதலியன தந்து கல்வியறிவு நல்கி ஆதரிக்கும் சிவப்பெரும் பணியும் சமயஞான நெறிகளை அறிவுறுத்தும் சமய ஞானப் பணியும், இவைபோல்வனவாகிய பிறபணிகளும் அன்பர் பலருடன் கூடிச் சிவவேடங்களையும் சிவன் கோயில்களையும் சிவனெனவே தேறி வழிபடுவோர் செய்தற்குரிய கடன்களாம் என்பதை வற்புறுத்துவதற்கே இதனை இறுதிக்கண் வைத்து ஆசிரியர் உரைத் தருளுகின்றார். மேலே கூறிய சிவப்பணிகளைப் புரிவதென்பது, பொருட்பற்று மிகுந்து திருவருளை நினையாது வாழும் மக்கட்கு இயலாத தொன்று. அவர்களது உள்ளம் பொருளீட்டத்திலும் தன்னலம் பேணுவதிலும் உறைந்து கிடப்பதால், ஏகனாகி இறைபணி நின்று அவ்விறைவன் பால் அயரா அன்பு பூண்டு வாழும் சிவஞானச் சைவ நன்மக்களுக் கென்றே இவ்விதி இங்கே வரைந்து கூறப்படுகின்றது. உண்ணும் உணவிலும், கொண்டும் கொடுத்தும் இனம் பெருக்கி வாழும் சாதி சமுதாயத்திலும் சைவம் இருப்பதாகக் கருதும் மடமையைப் போக்கிப் பொதுவாக எல்லா வுயிர்களுக்கும் சிறப்பாக மக்களுயிர்க்கும் செய்யும் மெய்ப்பணியில் தான் சைவம் நின்று திகழ்கிற தென்பதை வற்புறுத்துவதே சிவஞானபோதத்தின் சீரிய நோக்கமாகும். இந் நூலைத் திருவருள் ஞானத்தோடு உணர்ந்து தெளிந்த தாயுமானார் “அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டுவிட்டால், இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே” என்று சுட்டிக் காட்டியதும் இத்திருப்பணி நோக்கேயாம். இந்த இனிய இறைபணியை இன்றைய சைவ மக்களைப் பணிகொண்டு சித்தாந்த சைவச் செந்நெறிக்குரிய உண்மைச் சைவர்களாக விளங்கி வாழவைக்கும் சிவஞான போதம் வாழ்க; அதனை உரைத்தருளிய மெய்கண்ட தேவர் திருவடிகள் வாழ்க. உ திருச்சிற்றம்பலம் சிறப்புப்பாயிரம் உரைப்பாயிரம் கயிலாய பரம்பரையிற் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணெய்ப் பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானுவாகிக் குயிலாரும் பொழிற்றிருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாயதேவன் சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடுழி தழைக மாதோ. 1சைவாகமங்களின் உளவாகிய 2நாற்பாதங்களுள் வைத்து ஞானபாதத்தோதிய பொருள்களை ஆராயும் ஆராய்ச்சி இந் நூலின்கண் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது கேட்டலுறு வார்க்கு இதனாற் போந்த பயன் யாதோ எனவும், இது கேட்டற் குரியார் யாவரெனவும், இதனால் நுதலப்படும் பொருள் யாதெனவும், இதனைப் பயப்பிக்கும் கருவியாய் இதற்கு முன் ஒரு தலையான் உணர்தற்பாலது யாதெனவும், இதனை வழங்குதற் கிட்டபெயர் யாதெனவும், இஃது யாண்டு வழங்குவதெனவும், இதன் முதனூல் யாதெனவும், இந்நூல் செய்தார் யாவரெனவும் பலவாற்றான் ஆசங்கை நிகழுமன்றே; அவ்வாசங்கை நீங்கி மனவெழுச்சி சேறற் பொருட்டு இந்நூன்முகத் துரைக்கப்படுவதாகிய சிறப்புப்பாயிரம்:- மலர்தலை யுலகின் மாயிரு டுமியப் பலர்புகழ் ஞாயிறு படரி னல்லதைக் காண்டல் செல்லாக் கண்போ லீண்டிய பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் ணிருடீர்ந் தருந்துயர்க் குரம்பையி னான்மா நாடி மயர்வற 1 நந்தி முனிகணத் தளித்த உயர்சிவ ஞான போத முரைத்தோன் பெண்ணைப் புனல்சூழ் 2 வெண்ணைச் சுவேதவனன் 3பொய்கண் டகன்ற மெய்கண்ட தேவன் பவநனி வன்பகை கடந்த தவரடி புனைந்த தலைமை யோனே4 எனவரும். இதன்பொருள்: மலர்தலை உலகில் மா இருள் துமியப் பலர் புகழ் ஞாயிறு படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல் - விரிந்த இடத்தையுடைய ஞாலத்தின் கண்ணே துன்னிய பெரிய புறவிருள் கெடும்படி5 பலசமயத்தாரானும் புகழப்படுகின்ற பரிதியங் கடவுள் உதயகிரியினின்றும் போந்தாலன்றிக் காட்சி யெய்த மாட்டாத கண்ணொளிபோல; அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி - பொறுத்தற் கரிய துயரங்களுக்கெல்லாம் ஒரு நிலைக்களமாய்ச் 6சத்த தாதுக்களாற் பொத்திய குரம்பையாகிய காணப்பட்ட வுடம்பானே காணப்படாத ஆன்மாவையும் 7பரமான்மாவையும் அனுமான வளவையான் வைத்து ஆராய்ந்து அவற்றது தடத்தலக்கணம் எனப்படும் பொதுவியல் புணர்ந்து; 1கண் இருள் தீர்ந்து- அவ்வுணர்ச்சியானே கருதி உணரப் படும் அகவிருளாகிய ஆணவமலத்தினின்று நீங்கி; ஈண்டிய 2பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு - அது நீங்கிய வழி எல்லா நூல்களும் தன் பொருளேயாகத் திரண்டு கூடிய பெரும்பெயர் எனப்படும்; ஒரு வார்த்தையாகிய மகாவாக்கியத் தான் எடுத்தோதப்படும் முதற் கடவுளது திருவருளானே அப் பொருள்களது சொரூப லக்கணம் எனப்படும் சிறப்பியல்பை அனுபூதியிற் கண்டு உணர்ந்து; மயர்வு அற- இம்முறையானே மயக்கவாசனையற்றுச் சிவானுபவம் பெறுதற்பொருட்டு; நந்தி முனி கணத்து அளித்த -சீகண்டதேவர்பாற் கேட்டருளிய நந்திபெருமான் சனற்குமார முனிவன் முதலிய முனிவர் கணங்கட்கு முறையானே அளித்தருளப்பட்ட; 3உயர் சிவஞான போதம் - சரியை முதலிய மூன்று பாதப் பொருள்களை ஆராயும் நூல்களின் மேற்பட்ட சிவஞான போத மென்னும் வடநூலை; உரைத்தோன் - 4மொழி பெயர்த்துக் கூறி வார்த்திக மெனப்படும் பொழிப்புரை செய்தோன்; பெண்ணைப் புனல்சூழ் வெண்ணைச் சுவேதவனன் -பெண்ணையாற்று நீராலே சூழப்பட்ட திருவெண்ணெய் நல்லூரில் அவதரித்தருளிய சுவேதனப் பெருமாள் என்னும் பிள்ளைத் திருநாம முடையான்; பொய் கண்டு அகன்ற மெய்கண்ட தேவன் - பொய்ச் சமயங்களின் பொருள் இது இது என்று கண்டு கழிப்பித்த காரணத்தாற் பெற்ற மெய்கண்டதேவன் என்னும் சிறப்புத் திரு நாமம் உடையான்; பவம் நனி வன்பகை கடந்த தவர் அடி புனைந்த தலைமை யோனே - பிறவியாகிய மிக்க வலிய பகையினை வென்ற தவத்தோர் தனது திருவடியைப் புனைந்து கோடற் கேதுவாகிய தலைமைப் பாட்டினை யுடையோன் என்றவாறு. படரிற் காண்டல் செல்லும் கண் எனற்பாலதனை எதிர்மறை முகத்தாற் கூறினார், இன்றியமையாமை விளக்குதற்கு. இப்பொருள் பற்றிக் கண்மேல் வைத்துக் கூறினாரேனும், 1உவமேயப் பொருட் கேற்பக் காண்டல் சேறற்குப் படர்ந்த ஞாயிறுபோல் என்பது கருத்தாகக் கொள்க. இருட் கேட்டிற்கும், 2நிருவிகற்பம் சவிகற்பம் என்னும் இருவகைக் காட்சிக்கும், ஞாயிறு இன்றியமையாச் சிறப்பிற்றாய வாறு போல, மலத்தீர்விற்கும் ஆராய்ச்சி 3அனுபூதியென்னும் இருவகை உணர்விற்கும் இன்றியமையாச் சிறப்பிற்றாயது இந் நூல் என்பார் துமியப் படரின் அல்லதைக் காண்டல் செல்லாக் கண்போல்’ நாடித் தீர்ந்து கண்டு மயர்வற அளித்த சிவஞான போதம் என்றார். தலைமைபற்றி அருந்துயர்க் குரம்பையின் என்றாரேனும், இனம் பற்றிக் கரணம் புவனம் முதலியனவும் உடன் கொள்ளப்படும். அருந்துயர்க் குரம்பையின் நாடப்படுவதாகிய பொதுவியல்பு, முன் ஆறு சூத்திரத்தானும், பெரும் பெயர்க் கடவுளிற் காணப்படு வதாகிய சிறப்பியல்பு பின் ஆறு சூத்திரத்தானும் ஓதுப. 4நாடி யெனவே அனுமான வளவையான் என்பதூஉம், 5கண்டு எனவே அனுபூதியில் என்பதூஉம் தாமே போதரும். பொதுவியல்பு அளவைமுகத்தானும் இலக்கணமுகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல் சிந்தித்தல் என்னும் இருதிறத்தான் உணரப்படும்; சிறப்பியல்பு சாதனமுகத்தானும் பயன்முகத்தானும் கூறப்பட்டுக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டை யென்னும் நான்கு திறத்தான் உணரப்படும்.. இஃது என்சொல்லியவாறோவெனின், 1இவ்விருவகை இயல்பும் வேறுவேறு கூறும் ஆகமங்களின் பொருளொருமை உணரமாட்டாது ஒரோவொன்றே பற்றி ஐக்கியவாத முதல் பலதிறத்தான் வேறுபட்டுத் தம்முள் மாறுகொண்டு மயங்குவார்க்கு. அங்ஙனம் மயங்காது அவற்றின் பொருளொருமை உணர்த்தற்கு எழுந்தது இந்நூல் என்றவாறாயிற்று. சிவஞானபோதம் என்பதூஉம் இக்காரணத்தாற் பெற்ற பெயரென்பது 2வடமொழிச் சிவஞான போதத்து இறுதிச் சூத்திரத்து ஓதியவாறு பற்றி உணர்க. சரியைமுதலிய மூன்றுபாதப்பொருளை ஆராயும் நூல் களாவன சோம சம்பு பத்ததி முதலாயின. 3அந்நூல்களின் மேற்பட்ட சிவஞானபோத மெனவே, அந்நூல்கள் உணர்ந்த பின்னர் இந்நூல் கேட்கற்பாற்று என்பது பெறப்பட்டது; படவே, முன்னர்த் தீக்கையுற்றுச் சிவாகமங்களை ஓதி, அதன் பின்னர்ச் சரியாபாத முதலியவற்றை ஆராயும் நூல்களை முறையே கேட்டு அவ்வா றொழுகி மனந்தூயராய் நித்தியா நித்தியவுணர்வு தோன்றிப் 4பிறவிக்கஞ்சி வீடுபேற்றின் அவா மிக்குடையராய் வந்த அதிகாரி களுக்கு இந்நூலுணர்த்துக என்பது போந்தது எனக்கொள்க. “உயர்சிவஞானபோத” மெனவே யாப்பும், கேட்போரும், நுதலிய பொருளும் நூற்பெயரும், “நாடித் தீர்ந்து கண்டு மயர்வற” எனவே நுதலிய பொருளின் வகையும் பயனும், “நந்தி முனிகணத் தளித்த” எனவே வழியும், “வெண்ணைச் சுவேதவனன் மெய் கண்டதேவன்” எனவே ஆக்கியோன் பெயரும், தமிழ் வழங்கும் நிலமே இந்நூல் வழங்கும் நிலமென எல்லையும் போந்தவாறு உணர்க. வடநூலார் யாப்பை 1ஆனந்தரியமென்றும், நுதலிய பொருளை விடயமென்றும், கேட்போரை அதிகாரிகளென்றும், பயனைப் பிரயோசனமென்றும் கூறுப; யாப்புச் சம்பந்த மென்பாரு முளர். திருச்சிற்றம்பலம் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவநாயனார் அருளிச்செய்த சிவஞான போத மூலமும் சிவஞான சுவாமிகள் அருளிய சிற்றுரையும் மங்கல வாழ்த்து காமிகம் முதலிய சைவாகமங்களுள் ஞானபாதத்தின் உளதாகிய ஆசங்கை நீக்கி, அவற்றின் பொருளுண்மை பொது வியல்பு சிறப்பியல்பு என்று இரு வேறு வகைப்படுத்துக் காட்டிப் போதித்தற்கு இரௌரவாகமத்தின் எழுந்த சிவஞானபோத நூலினைத் தமிழுலகம் உய்தற் பொருட்டு மொழிபெயர்த்துச் செய்து, பொழிப்புரைப்பான் எடுத்துக் கொண்ட ஆசிரியர், 1சாக்கிரத்தே அதீதத்தைப் புரியுந் தமக்கு இடையூறு சிறிதும் அணுகாமை அறிந்தாராயினும், ஆன்றோர் ஆசாரம் பாதுகாத்தற் பொருட்டும், மாணாக்கர்க்கு அறிவுறுத்தற் பொருட்டும், முதற்கண் இடையூறு நீக்குதற்குரிய விநாயகக் கடவுளை வாழ்த்துவதாகிய மங்கல வாழ்த்துக் கூறுகின்றார். 2 கல்லா னிழன்மலை வில்லா ரருளிய பொல்லா ரிணைமலர் நல்லார் புனைவரே. (இ-ள்.) கல்லால் நிழல் - அருள் வடிவாகிய கல்லால நிழலின் கண்ணே எழுந்தருளியிருந்து; மலைவு இல்லார் -நந்திபெருமானுக்கு இந்நூலான் 1மலைவுதீர்த்தருளிய முதலாசிரியர்; அருளிய - மேன்மேற் கருணை கூர்ந் தருளுதற் பொருட்டு; பொல்லார் இணைமலர் - பொல்லாத பிள்ளையாருடைய ஞானசத்தி கிரியாசத்தி யென்னும் இரண்டு திருவடித் தாமரைகளையும்; நல்லார் - கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த மெய்யன்பர்; புனைவர் -தம்முடைய ஞானசத்தி கிரியாசத்திகட்கு வியாபகமாகக் கொண்டு 2தாடலைபோல் அடங்கிநிற்பர் எ-று. நல்லார் புனைவ ரெனவே, ஏனையோர்க்கு அது கூடா தென்றவாறாயிற்று. 3மூவகை வாழ்த்துகள், இது பொருளியல்பு உரைத்தது எனக் கொள்க. அருளிய என்பது செய்யிய வென்னும் வாய்ப்பாட்டு வினை யெச்சம்; அது புனைவரென்னும் பிற வினை முதல் வினை கொண்டது. அருளிய 1பொல்லார் எனப் பெயரெச்ச முடிபாக வைத்துரைப்பினும் அமையும். இல்லார் இல்லாகச் செய்தாரெனப் 2பண்படியிற் பிறந்த வினைப்பெயர். மலைவில்லார் அருளப் பொல்லார் தாள் புனைவர் எனவே, அவ்விருவருந் தம்முள் வேற்றுமையின்மை பெற்றாம்; உலகத்துப் புதல்வர்கள் மாட்டுச் செய்யும் வழிபாடு தந்தையர்க்குக் கழிபேரு வகை பயப்பிக்குமாகலின், அந்நயம் பற்றி அங்ஙனம் கூறிய தூஉமாம். அவையடக்கம் தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மை யுடைமை யெமையிகழார் - தம்மை உணரா ருணரா ருடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறன். இஃது அவையடக்கம் கூறுமுகத்தானே, ஈண்டு எடுத்துக் கொண்ட சித்தாந்த சைவரின் உயர்வும் ஏனைச் சமயத்தார்களது இழிவும் கூறுகின்றது. (இ-ள்.) தம்மை உணர்ந்து தமை உடைய தன் உணர்வார்- உடைப்பொருளாகிய தம் இயல்பினை உணர்ந்து தம்மை உடையானாகிய தலைவனை உணரும் சிந்தாந்த சைவர்; எம்மை உடைமை எமை இகழார் - தமக்கு உடைப் பொருளாகிய எம்மை உடையராகலின் எம்மைக் 3குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டுவதன்றி இகழ்தல் செய்யார். ஆகலான் எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக்கொள்வர்; தம்மை உணரார் உணரார் - அங்ஙனம் தம்மையுணராதார் தம்மை உடையானாகிய தலைவனையும் உணராராகலான்; உடங்கு இயைந்து தம்மிற் புணராமை - அவர் ஒருங்கே குழீஇக் கொண்டு தம்மிற்றாமே சேராது முரணுதலால்; புறன் கேளாம் - அவர் எம்மையும் எம்மாற் செய்யப்படும் நூலையும் இகழ்ந் துரைக்கும் புற மொழியை யாம் பொருளாகக் கொள்ளாம் எ-று. ஆகலான் எம்மாற் செய்யப்படும் நூலையும் அவ்வாறு கைக் கொள்வர் என்பது குறிப்பெச்சம். தன்னை யென்னும் இரண்டனுருபு விகாரத்தால் தொக்கது. உடைமை, புணராமை என்புழி இன்னுருபு விரித்துரைக்க. தம்மையுணரார் எனப் பொதுப்படக் கூறுதலானே, தாம் ஒருபொருள் உண்டென்பதே உணராத 1உலகாயதரும், தம்மைக் குணிப்பொருளென்று உணராத புத்தர் சாங்கியர் மாயாவாதிகளும், தம்மை முதல்வனுக்கு உடைப்பொருளென்று உணராத ஏனைச் சமயத்தாரும் அடங்குவர். பாஞ்சராத்திரிகளும் 2சிவாத்துவித சைவரும் தம்மை உடைப்பொருளெனக் கொள்ளினும், அவருட் பாஞ்சராத்திரிகள் உடைப்பொ ருளாகிய தமக்கு அணு பரிமாணம் கோடலானும், 3உடையானுக்குப் பரிணாமம் கூறுதலானும், உடையானல்லாதானை உடையானென மயங்கிக் 3கோடலானும், 4சிவாத்துவித சைவர் உடையானது சிற்சத்திக்குப் பரிணாமம் கூறுதலானும், பிறவாற்றானும் அவரும் தம்மை யுணராரே யென்பது. புறன், புறச்சமயம்பற்றி இகழ்ந்துரைக்கும் மொழியும் புறங் கூற்று மொழியும் என்பது இரட்டுற மொழிதல் என்னும் உத்தியாற் கொள்க. புறங்கூற்று மொழியாவது முக்கூற்றுப் புறச்சமயங்களின் வேறான பாடாணவாத சைவர் முதலியோர் முன்னன்றிப் புறத்தே இகழ்ந்து கூறும் மொழியென்க. 1.பொதுவதிகாரம் பிரமாணவியல் முதற்சூத்திரம் ஈண்டு ஆசிரியர், முதனூலிற் கூறியவாறே சிவாகமங்களின் ஓதப்படும் ஞானபாதப்பொருள் எல்லாவற்றையும், பொது உண்மை யென்று இரண்டாகத் தொகுத்துப் பிரமாணவியல் இலக்கணவியல் சாதனவியல் பயனியல் என நால்வகைப்படுத்து, பிரமாணவியல் மூன்று பாதத்தாற் கூறுவான் தொடங்கி, முதற்கண் உலகிற்கு முதற் கடவுள் சிறப்புவகையான் உண்டு என்னும் ஆகமப் பிரமாணத்தை வலியுறுத்துவதாய அனுமானப் பிரமாணம் கூறுகின்றார். அவனவ ளதுவெனு 1 மவைமூ வினைமையின் தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதாம் அந்த மாதி யென்மனார் புலவர் என்பது சூத்திரம். இச்சூத்திரம் என்நுதலிற்றோ வெனின், சங்கார காரணனாயுள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இது சூத்திரக் கருத்துரைக்கின்றது. இதன்பொருள்: 2நிவிர்த்திகலை முதலிய பஞ்ச கலைகளுக்கு உட்பட்ட ஐவகைச் சங்காரத்துள், இறுதிக்கண்ண தாகிய மாசங் காரத்தைச் செய்யும் வினைமுதலாயுள்ள முதல்வனையே தனக்கு முதற் கடவுளாக உடைத்து அவன் அவள் அது என்று இவ்வாறு சுட்டியுணரப்படுவதாகிய உலகம் என வேதாகமங்களுட் கூறப் படுவதனை அனுமான வளவையான் உணர்த்துதலைக் கருதிற்று இச்சூத்திரம் எ-று. ஏகாரம் இயைபின்மை நீக்குதற்கும் பிறிதின் இயைபு நீக்குதற்கும் பொதுவாய் நின்ற பிரிநிலை. இதன் பொழிப்பு உரைத்துக்கொள்க. இஃது இவ்வுரைமுகத்துக் கேட்போரால், 1உரைவகை பற்றிச் செய்து கோடற்பாலது ஒன்றனை அறிவுறுத்துகின்றது. (இதன் பொருள்) இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு, முன்னர்க் 2கண்ணழித்துரைக்கும் பொழிப்புரை பற்றி உரைத்துக் கொள்க எ-று. எனவே, இங்ஙனம் இருவகைப்படும் பொழிப் புரையுள் கண்ணழித்துக் கடாவிடைகளான் உரைக்கும் வார்த்திக மாகிய பொழிப்புரை மாத்திரையே யாம் ஈண்டுரைக்கின்றாம்; பிண்டமாகக் கொண்டு உரைப்பதாய பொழிப்புரை இதுபற்றி யுணர்ந்து கோடல் எளிதாகலின், அஃது யாம் உரைக்கின்றிலம் என உரைமுகத்து மாணாக்கர்க்கு அறிவுறுத்தவாறாயிற்று. இஃது, ஏனைச் சூத்திரங்களினும் உய்த்துக்கொண்டுணர்தற் பொருட்டு முதற்கண் வைக்கப்பட்டது. இவ்வாறு ஆசிரியர் ஆணை தந்தமையின், கண்ணழித் துரைபற்றிச் சூத்திரத்திற்குப் பதப்பொருள் கூறுதும். (இ - ள்.) அவன் அவள் அது எனும் அவை - அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இவ்வாறு பகுத்துப் பலவாய்ச் சுட்டி உணரப்படும் சொல்லும் பொருளுமாய இருகூற்றுப் பிரபஞ்சத் தொகுதி; மூவினைமையின் - தோற்றம் நிலை இறுதி யென்னும் முத்தொழில் உடைமையால்; தோற்றிய திதியே - ஒருவனால் தோற்றப்பட்டதாய உள் பொருளேயாம்; ஒடுங்கி - அது தோன்றுங்கால் தான் ஒடுங்குதற்கு ஏதுவாய் நின்ற கடவுளினின்றும்; மலத்து உளதாம் - சகசமலம் நீங்காமையால் அது நீங்குதற் பொருட்டு மீளத் தோன்றுவதாம்; அந்தம் ஆதி - இவ்வாறாகலின் சங்காரத் தொழிலைச் செய்யும் கடவுளே உலகிற்கு முதற்கடவுள், ஏனையோர் அன்னர் அல்லர்; என்மனார் புலவர் - எனக் கூறுவர் அளவை நூல் உணர்ந்தோர் எ-று. அவை, தொகுதி; 1சுட்டுப் பெயர் எனக் கொள்ளின், உள எனப் பிரித்துப் பயனிலையாக்கித் தாம் என்பதனை அசை நிலையாக வைத்துரைத்து, 2ஆக்கச்சொல் வருவித்துக்கொள்க. வினைமை, வினையுடைமை. தோன்றிய என்னாது 3தோற்றிய எனப் பிறவினை வாய்பாட்டான் ஓதுதலின், 4அதற்குரிய வினைமுதல் அவாய் நிலையான் வந்தது. தோற்றிய வென்னும் பெயரெச்சம் திதி யென்னும். 5செயப்படுபொருட் பெயர்கொண்டது. திதியாய் ஒருவனால் தோற்றப்பட்ட தென்பார், தோற்றிய திதி யென்றார். திதியென்றது, ஈண்டு உள்பொருள் என்னும் துணையாய் நின்றது. மூவினை உடைமையான் உள்பொருளாதலும், 1அவ்விரண்டும் உடைமையான் 2நிமித்தகாரணனை உடைத்தாதலும் துணியப் படும் என்பார், மூவினைமையின் தோற்றிய திதியே என்றார். 3ஏகாரம் தோற்றம். 4ஒடுங்கி யென்பது பெயர். 5உருபுகள் தொக்கு நின்றன. அந்தத்தைச் செய்யுங் கடவுளை அந்தம் என்றது 6 உபசாரம். பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. 7காணப்பட்ட உலகால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் தோற்றிய திதியே யெனவும், ஒடுங்கியுளதாம் எனவும் உலகின்மேல் வைத்துக் கூறினார்; 8கருத்துரையுட் கூறியதும் அது நோக்கி. இச்சூத்திரத்துள் “அவனவளதுவெனு மவை மூவினை மையின்” என்பது ஓர் அதிகரணம்; “தோற்றிய திதியே ஒடுங்கி யுளதாம்” என்பது மூன்றதிகரணத்தை யுள்ளடக்கி நிற்பதோர் அதிகரணம்; “அந்தமாதி யென்மனார் புலவர்” என்பது ஓர் அதிகரணம்; ஆக முக்கூற்றது இச்சூத்திரமென்று உணர்க. இம்மூன்றும் முறையே, ஒன்றற்கொன்று ஏதுவும் பயனுமாய் ஒரு பொருள்மேல் வருதலின், 1ஒரு சூத்திரத்தாற் கூறினார். தன்னாற் கூறப்படும் பொருளும், அதன்கண் ஐயப்பாடும், அதற்குப் பிறர் கூறும் பக்கமும், அதனை மறுத்துரைக்கும் சித்தாந்தத் துணிபும், இயைபும் என்னும் இவற்றது நிலைக்களம் ஈண்டு அதிகரணம்2 எனப்படும். முதலதிகரணம் மேற்கோள் ஈண்டு, உளதாய், ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப் பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது. என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், மூவினை உடைத்தோ அன்றோ என்னும் ஐயப்பாட்டின்கண் நித்தமாய்க் காணப்படும் பிரபஞ்சத்தை மூவினை உடைத்து என்றல் பொருந்தாது என மீமாஞ்சகரும் உலகாயதரும் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் 3முதற் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. இதன் பொருள் 1வெளிப்படை. ஒருவனென்றும் ஒருத்தியென்றும் ஒன்றென்றும் இவ்வாறு அவயவப் பகுப்புடைத் தாயும், பலவேறு வகைத்தாய்ச் சடமாயும், சுட்டியறியப்படுவதாயும் இருத்தலின், இம்மூன்றேதுவானும் பிரபஞ்சம் தோன்றி நின்று அழியும் என்பது துணியப்படும் என்பார், உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் என 2உடம்பொடு புணர்த்தோதினார். உளதாய்ச் சுட்டப்பட்ட என இயையும். உளதாகச் சுட்டப் படுதல் முயற்கோடு முதலியனபோலத் திரிபு ஐயங்களானன்றி மெய்யாகச் சுட்டப்படுதல். ஏது தோற்றமும் ஈறும் உள்ளதன்பாலே கிடத்தலின் என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், காட்சி யளவைக்கு எய்தாது உரைப்பனவெல்லாம் பிரமாணமாகா என 3உலோகாயதர் கூறும் கடாவை ஆசங்கித்துக் காட்சியளவை பற்றியும் மேற் கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ -ள்) உற்பத்தியும் நாசமும் காணப்பட்ட திதியின் பக்கத்தே காணக் கிடத்தலின் உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என மேற்கொண்டது எ-று. உதாரண வெண்பா பூதாதி யீறு முதலுந் துணையாகப் பேதாய் திதியாகும் பெற்றிமையின் - ஓதாரோ ஒன்றொன்றிற் றோன்றி யுளதா யிறக்கண்டும் அன்றென்று முண்டென்ன வாய்ந்து என்பது உதாரணம். என்னுதலிற்றோவெனின், 1உள்ளதன்பால் அவ்விரண்டும் கிடத்தல் யாங்ஙனம் என்னும் கடாவை ஆசங்கித்து ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ- ள்) பேதாய் - காட்சி யளவைகளானும் 2அறியப் படாத மடவோனே; பூதாதி - பூத முதற் காரணமாகவுடைய பிரபஞ் சத்திற்கு; திதி ஈறும் முதலும் துணையாக ஆகும் - திதி நிகழ்வுழி நாசமும் உற்பத்தியும் தனக்குத் துணைக்காரணமாகக் கொண்டே நிகழாநிற்கும்; அற்றாயினும் ஒன்று தோன்ற ஒன்றுநிற்ப ஒன்று அழிவதன்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே அழியக் கண்டிலமால் எனின், ஒன்று ஒன்றின் பெற்றிமையின் தோன்றி உளதாய் இறக்கண்டும் - ஒவ்வொரு காலவிசேடத்தில் சாதிபற்றி ஒருங்கே தோன்றி ஒருங்கே நின்று ஒருங்கே அழிவதனைக் கண்டுவைத்தும்; என்றும் அன்று உண்டு என்ன பூதாதிக்கும் ஆய்ந்து ஓதாரோ - என்றாயினும் அதற்குரிய காலம் வரு மென்று உலகத்திற்கும் அங்ஙனம் ஆதல் உண்டு என்று அக்காட்சிபற்றி ஆராய்ந்து சொல்லார்களோ உன்னைப் போலும் மடமையில்லாதோர் எ-று. பூதாதி, 1அன்மொழித்தொகை. பூதத்துக்கு மேல் உளவாய தத்துவங்கள் உலோகாயதருக்கு உடம்பாடு அன்மையின் பூதமுதலாய தத்துவங்கள் என உரைத்தல் ஈண்டைக்கு ஏலாமையறிக; பூதாதிக்கு என நான்கனுருபு விரித்துரைக்க; 2அது பின்னரும் சென்று இயையும். ஆகும் என்பது முற்றுவினை. ஈண்டுப் பெற்றிமை என்றது சாதியை. ஓகாரம், எதிர்மறை. ஒன்றொன்றின் என்பது “ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே3” என்றாற்போல அடுக்குமொழி. அது கால விசேடமாதல் என்றும் அன்று எனப் பின்வருதலாற் பெற்றாம். ஒருங்கே என்பது 4சொல்லெச்சம். ஒன்று ஒன்றில் தோன்றி உளதாய் இறுதலாவது, “பயில்வித் தெல்லாம், காரிட மதனிற் காட்டும் அங்குரம் கழியும் வேனில்” 5என்ப தனாலறிக. கண்டும், உம்மை சிறப்பு. இரண்டா மதிகரணம் மேற்கோள் இனி, இல்லதற்குத் தோற்றமின்மையின், உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின், ஒடுங்கின சங்காரத் தினல்லது உற்பத்தி இல்லை என்றது. என இங்ஙனம் 6சொற்பல்காமைப் பொருட்டுத் துணிந்ததாக வைத்து உரைத்தாராயினும், பொருள் இயைபிற்கு ஏற்ப, இதனை மூன்று அதிகரணமாக வைத்துரைப்பது ஆசிரியர் கருத்து எனக்கொள்க. 1அஃதாமாறு காட்டுதும். மேற்கோள் 1 இனி உலகம் உள்ளது என்றது என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், “உலகம் இல்பொருளாய்த் தத்தம் 2சார்பிலே தோன்றி அழிதல் இயல்பு என்றலே அமைவுடைமையின், அது மூவினை உடைத்தாயினும், தோற்றுவான் ஒருவனை உடைத்தாதல் செல்லாது, ” எனப் புத்த நூலார் சொல்லும் கடாவை ஆசங்கித்துத் திதி யென்னும் சூத்திரக் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடல் நுதலிற்று. 3இதன் பொருள் வெளிப்படை. ஏது இல்லதற்குத் தோற்றமின்மையின் என்பது ஏது. என்னுதலிற்றோவெனின், உள்ளதாதல் யாங்ஙனம் என்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. இ- ள். 1இல்பொருளாகிய முயற்கோட்டிற்கு முக்காலத்தும் உற்பத்தி இன்மையின், ஈண்டு உற்பத்தி காணப்படுதலான் உலகம் உள்ளது என மேற்கொண்டது எ-று. மேற்கோள் 2. இனி, உலகம் செய்வோனையுடைத்து என்றது என்பது மேற்கோள். என்னுதலிற்றோவெனின், “உள்பொருள் எனப்பட்ட பிரபஞ்சம், தத்தம் முதற்காரணத்தினின்றும் தானே தோன்றி யழியும், இதற்கொரு நிமித்த காரணமாய் ஒரு கருத்தா வேண்டா,” எனச் 2சாங்கியர் கூறும் கடாவை ஆசங்கித்துத் தோற்றிய என்னும் சூத்திரக் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடல் நுதலிற்று. 3இதன் பொருள் வெளிப்படை. ஏது உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின் என்பது ஏது. என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணம் என்னை என்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ - ள்.) மண் முதலியவற்றின் உள்ளதாகிய கடமுதலிய பொருட்குக் குயவன் முதலிய செய்வோரையின்றி வனைதல் முதலிய செய்தொழில் நிகழாமையின், உலகம் இவ்வியல்பிற் றாகலான், இனி இவ்வுலகம் செய்வோனையுடத்து என மேற்கொண்டது எ-று. மேற்கோள் 3. இனி, ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை என்பது மேற்கோள். என்னுதலிற்றோவெனின், “இத்துணையும் கூறியவாற்றான், உலகத்தைத் தோற்று விப்பான் உண்டு எனப்பட்ட கருத்தா, திதிகருத்தா சிருட்டி கருத்தா முதலியோரில் 1ஒருவனே யாதல் அமையும்” எனப் பாஞ்சராத்திரி முதலியோர் கூறும் கடாவை ஆசங்கித்து, ஒடுங்கி யுளதாம் என்னும் சூத்திரக் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ- ள்) உலகம் தான் ஒடுங்குதற்கு நிலைக்களமான சங்கார கருத்தாவினின் றன்றி உளதாகாது எ-று. ஒடுங்கின வென்னும் பெயரெச்சம், சங்காரம் என்னும் இடப் பெயரோடு முடிந்தது. 2சங்காரம் ஆகுபெயர். அல்லதில்லை யென்று எதிர்மறை முகத்தாற் கூறியது, ஏனைக் கடவுளரின் உளதாகாமை யாப்புறுத்தற்பொருட்டு. இதனுள் ஒடுங்கின என்பதனாற் போந்த 3குறிப்பேதுவைப் புலப்படக் காணுமாறு:- ஏது ஆண்டு ஒடுங்குதலின் என்பது ஏது. என்னுதலிற்றோவெனின், அதற்குப் பிரமாணம் என்னை என்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ - ள்) “யாது யாண்டொடுங்கும், அஃது அதனில் உற்பத்தியாம், மண்ணிற் குடம்போலும்” என்னும் 1அவினா பாவத்தாற் பிரபஞ்சம் சங்கார காரணன்மாட்டு ஒடுங்குதலின், மீளத் தோன்றுங்கால், ஆண்டு நின்றும் தோன்றுதலே பொருத்த முடைமையின், அவ்வாறு மேற்கொண்டது எ-று. இவ்வாறு மூன்று அதிகரணப் பொருளும் இதன்கட் போந்தவாறும், இவ்வாறு உரையாக்காற் பொருளியைபு படாமையும் நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. உதாரண வெண்பா இலயித்த தன்னிலில யித்ததாம லத்தால் இலயித்த வாறுளதா வேண்டும் - இலயித்த தத்திதியி லென்னி னழியா தவையழிவ தத்திதியு மாதியுமா மங்கு என்பது உதாரணம். இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால் இலயித்தவாறு உளதா வேண்டும் என்பது என்னுதலிற்றோவெனின், “உலகம் உள்ளதாயின், உள்ளதற்கு உண்டாக வேண்டுவதில்லை, ஆகலான் 2சற்காரியவாதம் அடாது,” எனப் 3புத்தர் கூறும் கடாவை ஆசங்கித்து “இல்லதற்குத் தோற்றமின்மையின்” என்ற ஏதுவை வலியுறுத்தல் நுதலிற்று. (இ -ள்) 4இலயித்தது இலயித்த தன்னில் ஆம் - உள்ள தாயினும் சங்கார காலத்தின் ஒடுங்கியதா கலான் அவ்வொடுங்கிய உலகம் தான் ஒடுங்குதற்கு நிலைக்களமான சங்கார கருத்தா வினின்றும் படைப்புக் காலத்தில் மீளவுளதாம். 1அற்றேல், ஒடுங்கியது ஒடுங்கியவாறே ஒழியாது மீளவுண்டாக வேண்டா; வேண்டுமாயின் முன்னொடுங்காது நிலைபெறவே அமையும்; அவ்வாறன்றி ஒடுங்கி மீள உளதாவது எற்றுக்கெனின்; 2மலத்தால் (ஆம்) - உள்ளதாகிய உலகம் கருமமலம் பரிபாக மாதற்பொருட்டு ஒடுங்கி, ஆணவமலம் பரிபாக மாதற் பொருட்டு மீளவும் உண்டாம்; அற்றேல், முன்னின்ற பிரபஞ்சம் நாசமாக வேறு தோன்றும் என்னாமல், அதுவே ஒடுங்கிநின்று மீளவுளதாம் என்றற்குப் பிரமாணம் என்னை யெனின், இலயித்தவாறு உளதா வேண்டும் - 3யாது எவ்வாறு நின்று ஒடுங்கிற்று, அஃது அவ்வொடுங்கியவாறே உளதாதல் எல்லாரானும் விரும்பப்படும் எ-று. எனவே, 4அந்நியம மில்லையாயின், நெல் கமுகாய் விடாது நெல்லாய் நீளுதற்கு ஏது என்னை யென்னும் தருக்கமே அதனை அறிவுறுத்தும் என்றவாறாயிற்று. சற்காரிய வாதத்தின் இயல்பு “தந்து முதல காரகம்” என்னும் 5ஞானாமிர்தத்தினுங் காண்க. இதனானே, இல்லதும் உள்ளதும் அல்லாத பொருள் தோன்றும் என்னும் 1சூனியவாதிகளும், இல்லதும் உள்ளது மாய பொருள் தோன்றும் என்னும் 2அநேகாந்த வாதிகளும் மறுக்கப் பட்டவாறு அறிக. -இலயித்த தத்திதியி லென்னி னழியா தவையழிவ தத்திதியு மாதியுமா மங்கு என்பது என்னுதலிற்றோவெனின், “இனிச் சற்காரிய வாதத்தின் அவ்வக் காரியங்கள் தத்தம் முதற்காரணத் தொடுங்கு மெனவே கோடலின், உலகிற்கு முதற்காரணமாகிய மூலப்பகுதி வாசுதேவன் உருவாகலான், உலகம் அவன்மாட் டொடுங்கும் என்றலே அமைவுடைத்தன்றி, முதற்காரணத்தின் வேறாய் நிமித்த காரணமெனக் கொண்ட சங்கார கருத்தாவின்மாட்டு ஒடுங்கும் என்றல் பொருந்தாது” எனப் பாஞ்சராத்திரிகள் 3கூறும் கடாவை ஆசங்கித்து ஒடுங்கின சங்காரத்தின் எனவும், இலயித்த தன்னில் எனவும் கூறிப் போந்த குறிப்பேதுவை வலியுறுத்தல் நுதலிற்று. (இ -ள்.) இலயித்தது அத்திதியில் என்னின் - உலகம் ஒடுங்கியது அந்த 4மூலப்பகுதி வடிவாய திதிகருத்தாவின்கண் என்பையாயின்; அவை அழியாது - நீ அங்ஙனம் கொள்ளினும் 1மூலப் பகுதிக்கு மேலுள்ள புவனங்கள் அதனால் வியாபிக்கப்படாமையின் கீழுள்ள ஏகதேச மாத்திரையே ஆண்டு ஒடுங்குவதன்றி மாயா காரியத் தொகுதி முழுவதும் ஆண்டு ஒடுங்காது; அற்றேல், மாயாகாரியத் தொகுதி முழுவதும் யாண்டொடுங்கு வதெனின்; அத்திதியும் ஆதியு 2மாம் அங்கு அழிவது - அந்தத் திதிக் கடவுளும் படைப்புக் கடவுளும் தோன்றுதற்குக் காரணமாகிய அச்சங்காரக் கடவுளிடத்தே அவ்விருவரோடுங் கூட அழிவதாம் அத்தொகுதி எ-று. இவ்வெண்பாவினை, “3 செய்யுட்க ளோசை சிதையுங்கா லீரளபும் ஐயப்பா டின்றி யமையுமாம் - மைதீரொற் றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு குன்றுமே லொற்றளபுங் கொள்” என்பதுபோல, இரண்டு அதிகரணப் பொருள்படுமாறு இரு தொடராக வைத்து உரையாக்கால் பொருள் இயைபுபடாமையறிக. இலயித்த என்னும் பெயரெச்சம் 4தன்னென்னும் இடப் பெயரோடு முடிந்தது. 5இலயித்த தென்றது, ஏதுப் பொருண்மை யுணர நின்ற பெயர். இலயித்ததெனச் சற்காரிய வாதம் கூறவே, இலயித்த வவத்தையின் அவ்வக் காரிய சத்தி சமூகமாய்ச் சூக்கும மாய் நிற்பதொன்று உண்டு; 1அதுவே முதற்காரணம் எனப் பிரபஞ்சத்திற்கு முதற்காரணமாகிய மாயை யுண்மையும் பெறப் பட்டது. 2ஆவென்பது முதனிலைத் - தொழிற் பெயர். வேண்டும் எனச் செயப்படுபொருளைச் செய்ததுபோலக் கூறினார். அவை, தொகுதி; அஃறிணைப் பன்மைப்பெயர் என்பார்க்கு அழியாது, அழிவது என்னும் ஒருமைகளோடு இயையாமையும் உத்தரமாகாமையும் உணர்க. திதியும் ஆதியும் ஆகுபெயர். ஆமங்கு, பெயரெச்ச முடிபு. இரணிய கருப்ப மதத்தையும் மறுத்தற்பொருட்டுப் படைப்புக் கடவுளையும் உடன் கூறினார். நிமித்த காரணனாகிய முதல்வன் உலகிற்கு முதற் காரணன் அல்லனாயினும், முதற்காரணமாகிய மாயைக்கு ஆதாரமாய் நிற்றலின், உலகம் ஆண்டொடுங்கி ஆண்டு நின்று தோன்றுதல் அமையும் என்பது வருகின்ற வெண்பாவிற் பெறப்படும். உதாரண வெண்பா வித்துண்டா மூல முளைத்தவா தாரகமாம் அத்தன்றா ணிற்ற லவர்வினையால் - வித்தகமாம் வேட்டுவனா மப்புழுப்போல் வேண்டுருவைத் தான்கொடுத்துக் கூட்டானே மண்போற் குளிர்ந்து என்பது உதாரணம். என்நுதலிற்றோ வெனின், “உலகம், தனக்கு முதற்காரணமாகிய மாயையின் ஒடுங்குவதன்றி நிமித்தகாரணன் ஒருவன் உண்டெனக் கொள்ளினும், அவன்மாட்டு ஒடுங்கு மென்றல் பொருந்தாமையின், யாது யாண்டொடுங்கும், அஃது அதனில் உற்பத்தியாம் என்னும் அவினாபாவத்தான், மாயையின் ஒடுங்கிய உலகத்தை மாயையே தோற்றுவிக்கும்; இதற்கோர் இறைவன் வேண்டா,” எனச் சாங்கிய நூலார் மதம்பற்றி நிகழுங் கடாவை ஆசங்கித்து, “உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினை யின்மையின்” என்னும் ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ -ள்.) (தாரகமாம்) மண்போல் குளிர்ந்து வித்து உண்டா - மாயையும் உலகமும் வித்தும் அங்குரமும் போலு மாகலின் வித்துக்கு 1ஆதாரமாகிய நிலம் குளிர்ந்தவழி அதன்கண் வித்துளதாக; மூலம் முளைத்தவா - அதனினின்றும் அங்குரம் தோன்றியவாறு போல; தாரகமாம் அத்தன் தாள் நிற்றல் -மேலே வெண்பாவின் இலயித்த தென்பதனாற் பெறப்பட்ட மாயை தனக்கு ஆதாரமாய் நின்று தோற்றுவிக்கும் இறைவனது சத்தியின்கண் உள்ளதாய் நிற்றலால்; அவர் வினையால் - 2அச்சத்தி சங்கற்பித்தவழி அவரவர் வினைக்கீடாக; 3வித்தகமாம் - அவ்வக் காரியங்களை அவ்வவ் வியல்பிற் பிறழாமற் பயக்கும் சதுரப்பாடு டைத்தாம், அல்லுழி உடைத்தன்று, நிலம் குளிர்ந்தவழி அதன்கண் கிடந்தன்றி வித்து முளையைத் தோற்றாதவாறு போலும், ஆகலான் மாயையின் ஒடுங்கித் தோன்றிய உலகம் அதற்கு ஆதாரமாய் நின்ற இறைவன் சத்தியின் ஒடுங்கித் தோன்றியதேயாம் என்க. ஆகலான் என்பது முதல் குறிப்பெச்சம். இது கிழங்கினின்றும் தோன்றிய தாமரையைப் 4பங்கயம் என்பதனானும் அறிக. வழிநூலாசிரியர், “உயிரவை யொடுங்கிப் பின்னு முதிப்பதென்ன ரன்பால்5” எனவும், “உலகவ னுருவிற் றோன்றி யொடுங்கிடும்6” எனவும் ஓதிய தூஉம், உலகவ னுருவிற் றோன்றி யொடுங்குமாறு வாதுளாகமத்தில் வகுத்தோதியதூஉம் இவ்வியல்பு நோக்கி யென்க. இஃதறியாதார் இன்னோரன்னவற்றைத் தத்தமக்கு வேண்டியவாறே உரைப்ப. உவமவினை பொருளினும் பொருளடை உவமையினும் சென்று இயையும். உண்டாகவெனச் சற்காரியத்தை வலியுறுத்துதல், வித்து இல்வழி நிலத்தினின்றும் அங்குரம் தோன்றாதவாறுபோல, மாயை இல்வழிப் பிரமத்தினின்றும் உலகம் தோன்றாதெனப் பரிணாமவாதிகளையும்1, மாயை அநிர்வசனம் என்னும் மாயாவாதிகளையும், வித்தும் நிலனும் போல் என்றதனால், மாயை முதல்வனின் வேறு பொருளன்று என்னும்2 சிவாத்துவித சைவர், பஞ்சராத்திரிகளையும் மறுத்த வாறாயிற்று. முதல்வன் பலவேறு வகைபடச் சங்கற்பித்தவாறு என்னை என்னும் கடாவை ஆசங்கித்து அவர் வினையால் என்றார். வித்தகம், விசித்திரம் என்று உரைப்பினும் அமையும். போல், அசை. மூலம், காரணம். குளிர்ந்தவழி யென்பது என்பது குளிர்ந்தெனத் திரிந்து நின்றது. நிற்றலின் என்னும் ஐந்தாவது விகாரத்தால் தொக்கது. அற்றேல், தன்வயத்தானன்றி வினைவயத்தால் தோற்று விப்பான் இறைவனாகான் எனின்,- வேட்டுவனாம் அப்புழுப்போல் - வேட்டுவனாதலை விரும்பும் புழுவிற்கு; வேண்டு உருவைத் தான்கொடுத்துக் கூட்டானே3 - வேட்டுவன் விரும்பிய வடிவினைக் கொடுக்கு மாறுபோல இறைவனும் அவரவர் வேண்டும் உருவினைக் கொடுத்து அவ்வினைக்குத் தக்க பயன்களையும் கூட்டுவன்; ஆகலான், அதுகொண்டு சுதந்திரத்திற்கு இழுக்கென்னை யென்க. ஆகலான் என்பது முதல் குறிப்பெச்சம். ஏகாரம், எதிர்மறை1. உதாரண வெண்பா நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தின் தாக்காது நின்றுளத்திற் கண்டிறைவன் -ஆக்காதே கண்ட நனவுணர்விற் கண்ட கனவுணரக் கண்டவனி லிற்றின்றாங் கட்டு என்பது உதாரணம். என்னுதலிற்றோவெனின், மேலே உதாரணத்திற் கூறியவாற்றான் உலகிற்கு முதற்கடவுள் உண்டெனக்கொள்ளினும் அவன் படைப்பு முதலிய தொழில் செய்வானாயின், விகாரமெய்தி அதனிற் பந்தமுறுவான் என்னும் அவர் மதம்பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்து 1ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று (இ - ள்.) இறைவன் - முதல்வன்; 2காலத்தின் தாக்காது நின்று - இறப்பு நிகழ்வு எதிர்வு முதலியனவாய் வேறுபட்டு எல்லாத் தொழிலும் செய்தும் தனக்கு விகாரமின்றி நிற்கும் காலம் போல விகாரப்படாது நின்று; ஆக்காதே கண்டு - பிரபஞ்சத்தைக் கரணத்தாற் படையாது சங்கற்ப மாத்திரத்தானே படைத்து; நோக்காது நோக்கி நொடித்து - அவ்வாறே காவாது காத்து அழியா தழித்தலால்; இன்றாம் கட்டு - இவ்வமலனுக்குப் பந்தம் இன்றாதல்; உளத்தில் - 3கற்றநூற் சொல்லும் பொருளும் உள்ளத்தில் தோன்றுங்கால் உள்ளம் அவற்றில் தொடக்குண்ணாத வாறு போலும்; கனவு கண்ட நனவுணர்வில் உணரக் கண்டவனில் இற்று - கனவின்கண் கண்டவற்றைப் புறத்துவிடயங்களை அறிந்துவந்த நனவுணர்வின் கண்ணே விளங்க அறிந்தவன் அப்பொழுது அவற்றில் தொடக்குண்ணாதவாறு போலும் இத்தன்மைத்து என்க. எனவே, இஃதிவ்வாறாக என்று எண்ணுதலாகிய சங்கற்ப மாத்திரையாற் செய்வதூஉம், கரணத்தாற் செய்வதூஉமென வினை முதல் இருவகைப்படுமென்பதூஉம், காரணத்தானன்றிச் செய்யமாட்டாத குயவன் முதலியோர், சங்கற்ப மாத்திரையாற் செய்யும் முதல்வனுக்கு வினைமுதலாற் பொதுமைபற்றி, ஒருபுடை யுவமையாதலன்றி, முற்றுவமையாதல் சொல்லாமையானும், சங்கற்ப மாத்திரையாற் செய்யும் செய்திக்குக் 1கட்டுண்டல் முதலிய குற்றங்கள் பகைப் பொருளாகலானும், அவை ஆண்டு உளவாதற்கு ஓர் இயைபின்று என்பதூஉம் கூறி ஏதுவை வலியுறுத்தவாறு காண்க. ஆக்குதல், படைத்தல்; காண்டலும் அது. நோக்குதல், காத்தல். நொடித்தல், அழித்தல்; அது, 2“நொடித்தான்மலை” என்பதனாலு மறிக. ஆக்காது நோக்காது என்றமையால், 3நொடியா தென்பது வருவித் துரைக்கப்பட்டது. நொடித்தலாலென்பது நொடித் தெனத் திரிந்தது. அன்றே, அசை; அநாதியே யெனினும் அமையும். இல் 4மூன்றும் உவம வுருபுகள். உளத்தி லென்பதற்குச் சங்கற்பத்தால் என்றுரைப்பினும் அமையும். 1இன்றாங்கட்டு என்பது “அருங்கேடன்2” என்பது போல நின்றது. மூன்றாமதிகரணம் மேற்கோள் இனிச் சங்காரமே முதல் என்றது என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை யெனவே, சங்கார கருத்தா உலகிற்கு முதற் கடவுள் என்பது போந்ததாயினும், தேர் முதலாயின பலர் கூடிச் செய்யக் காண்டலின், அவற்றினும் அதிவிசித்திரமான உலகத்திற்கு மற்றும் அத்தன்மையராய முதற்கடவுளர் உண்டெனக் கோடும் என்னும் 3அநேகேசுரவாதிகள் முதலியோர் மதம் பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்து “அந்தமாதி” யென்னும் சூத்திரக் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்.) சங்கார கருத்தா ஒருவனே உலகிற்கு முதற் கடவுள் என்றது என்க. சங்காரம் 4ஆகுபெயர். ஏனையோர் முதல்வராகார் எனப் பிரித்தமையின், 5ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. ஏது 6சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின் வழி யல்லது சுதந்தரமின்றி நிற்றலான் என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், அதற்குப் பிரமாண மென்னை யென்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ - ள்.) ஒன்றொன்றாய்ச் சுட்டியறிவதாகிய 1உருவும் அருவும் என்று இருவகைப்பட்ட பிரபஞ்சம், அவ்வாறு சுட்டியறித லின்றி எவ்வுலகும் ஒன்றாய் அறிந்து நின்ற சங்கரா கருத்தாவின் வழிப் பரதந்திரமாய் நிற்ப தல்லது தனக்கெனச் சுதந்தர முடைத்தாய் நிற்பதன்று, ஆகலான், சங்கார காரணன் ஒருவனே உலகிற்கு முதற் கடவுளன்றி 2ஏனையோர் முதற் கடவுளரல்லர் என மேற்கொண்டது என்க. 3பிரபஞ்சத்திற்குச் சுதந்தரம் இன்மையும், சங்கார காரணனுக்குச் சுதந்திரம் உண்மையும் ஏதுமுகத்தாற் காட்டுவார், “சுட்டுணர்வாகிய பிரபஞ்சம்” எனவும், “சுட்டுணர்வின்றி நின்ற சங்காரம்” எனவும் ஈரிடத்தும் 4உடம்பொடு புணர்த் தோதினார். சுட்டுணர் வுடையதனைச் சுட்டுணர்வு என்றது உபசாரம். ஈண்டுப் பிரபஞ்சம் என்றது சேதனப் பிரபஞ்சத்தை; பிரிநிலை யேகாரத்தான் விலக்குதற்குரியது அதுவே யாகலின். தேர்முதலாயின பலராற் செய்யப்படினும், அப்பலரும் ஒருவன் ஏவல்வழி நின்றே செய்பவாகலானும், 5வேதத்துட் காரண வாக்கியங்களில் சுட்டுணர்வினராகிய நாராயணன் இரணிய கருப்பன் இந்திரன் அங்கி சூரியன் முதலியோரைக் காரணம் என்றது குயவன் போல் அவாந்தர காரணமாதல் பற்றியே யாகலின், அவை எல்லாம் ஆகுபெயரால்1 சங்கார காரணனாகிய முதற் கடவுளையே உணர்த்தி நிற்குமாகலானும், செய்தும் செய்வித்தும் எல்லாத் தொழிற்கும் வினை முதலாய் நிற்கும் முதற் கடவுள் சங்கார கருத்தா ஒருவனே என்பது கருத்து. உதாரணம் ஒன்றலா வொன்றா லுளதாகி நின்றவா றொன்றலா வொன்றிலவை யீறாதல் - ஒன்றலா ஈறே முதலதனி னீறலா வொன்றுபல வாறே தொழும்பாகு மங்கு2 என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அங்ஙனமாயினும் சுட்டுணர் வாகிய பிரபஞ்சம் பலவாயினாற் போலச் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரமும் பலவுள எனக்கோடும்; ஒன்றே என்றற்குப் பிரமாணம் என்னை என்னும் கடாவை ஆசங்கித்து ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ - ள்) அவை - சேதனப் பிரபஞ்சத் தொகுதி; ஒன்றலா ஒன்றால் - உருவும் அருவும் என்னும் அவ்விரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றல்லாத ஒப்பற்ற பரம்பொருளாலே; உளதாகி நின்றவாறு - சிருட்டிப்பட்டுத் திதிப்பட்டவாறே; ஒன்றலா ஒன்றில் ஈறாதல்1 - அந்தப் பரம்பொருளின் கண்ணே சங்காரப்படுதலால்; ஒன்றலா ஈறே முதல் - அச்சங்காரக் கடவுள் ஒருவனே உலகிற்கு முதற்கடவுள்; அற்றேல், இவ்வாறு முத்தொழிற்படும் சேதனப் பிர பஞ்சம் வீடுபெற்றவழிச் சுட்டுணர்வின்றிச் சிவசமமாம் என வேதத்தும் ஆகமத்தும் ஓதுதலின், அவ்வழி அவையும் முதற் கடவுளாம் என்றற்கு இழுக்கென்னை? எனின், அதனின் ஈறலா ஒன்று - அப்பரம்பொருள் போல் அழிவின்றி நித்த மாய சேதனப் பிரபஞ்சம்; அங்கு - வீடுபேற்றின் கண்ணும், பலவாறே தொழும்பாகும் - பலவாற்றானும் பரம்பொருளுக்கு அடிமையாம் எ-று. இது சொற்பொருட்பின் வருநிலை.2 காரியப் பிரபஞ்சம் சடமாகலானும், சேதனப் பிரபஞ்சம் அவிச்சையால்3 கட்டுற்றுச் சுட்டுணர் விற்றாய் நிற்றலானும், இவற்றைத் தொழிற்படுத்தற்கு இவற்றின் வேறாய் ஒரு முதற் கடவுள் உண்டு என்பது பெற்றாம். பெறவே, பிரபஞ்சம் விசித்திர காரியமாய்க் காணப்படுதலின், இவ்வாறு நடாத்தும் முதற் கடவுள் முற்றுணர்வும் அளவிலாற்றலும் பேரருளும் சுதந்திரமும் முதலிய நிரதிசய குணங்களுடையன் என்பதூஉம் பெறப்பட்டது. படவே, இத்தன் மையனாகிய முதற் கடவுள் ஒருவனே அமையுமாகலின், வேறும் அத்தன்மையர் உண்டெனக் கொள்ளின் மிகை என்னும் குற்றமாம். அல்லதூஉம் இலக்கணத்துள் ஒருவாற்றானும் வேற்றுமை இல் வழி இலக்கியம் பலவாதல் செல்லாது என்னும் கருத்தால் ஒன்றலா ஒன்று1 என வரையறுத்து ஓதினார். ஈறே முதல் என்றது முடிந்தது முடித்தல். ஈறு ஆகுபெயர். இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. பலவாறாவன: இருள் நீங்கிய வழியும் கண்ணுக்குக் காட்சி ஞாயிற்றை இன்றியமையாதவாறு போல, மலம் நீங்கிய முத்தி நிலையினும், ஆன்மா அறிவுக்கு வியஞ்சகமாய் உடனின்று அறிவிக்கும் முதல்வனை இன்றியமையாதவாறும், கண், படிகம் ஆகாயம் போலச் சார்ந்ததன் வண்ணமாயன்றி, முதல்வன் போலத் தனித்து நிற்கும் இயல்பு இல்லாதவாறும், முதல்வன் போல் ஐந்தொழிற்கும் வினை முதலாம் உரிமையின்றிச் “சிவானுபவம் ஒன்றினுக்கே” உரித்தாயவாறும், சம வியாபகமாயினும் முதல்வனை நோக்கத் தூல அறிவாகலான், விளக்கொளியுள் கண்ணொளி போல முதல்வனின் வியாப்பியமாயன்றி நில்லாத வாறும் முதலாயின அற்றேல், முத்தி நிலையின்கண் ஆன்மாச் சிவசமமாம் என்னும் சுருதிக்குப் பொருள் என்னையெனின், அஃது உண்மைய திகாரத்துட் பெறப்படும்.2 இதனானே சிவசம வாதி, சங்கிராந்த வாதி, உற்பத்தி வாதி, ஆவேச வாதி மதங்களும் மறுக்கப்பட்டன. பதியுண்மைக்குப் பிரமாணம் கூறுவார் மலத்துளதாம் எனப் புனருற்பத்திக்கு ஏதுக் கூறு முகத்தான் மலத்தது உண்மைக்குப் பிரமாணமும் உடன் கூறினார். அதனை ஈண்டு வேறோர் அதிகரணமாக வைத்து உரையாராயினார், அதிகரணத்திற் குரிய ஐயப்பாடு முதலியன வெல்லாம் சகசமலத்துணராது1 என அதன் இலக்கணம் கூறும் வழிப் பெறப்படுதலால், ஈண்டு மிகைப்பட வேறு ஓதல் வேண்டாமையின். இச்சூத்திரத்து அதிகரணங்களாற் போந்த தொகைப் பொருளாவது: தோற்றக் கேடுகளது உண்மை, காட்சி முதலிய அளவை களான் அறிய வாராமையின் பிரபஞ்சம் நித்தப் பொருளேயாம்; அன்றித் தோன்றி அழியும் எனக் கொள்ளினும், இல்பொருள் தத்தம் சார்பின் தோன்றி நின்று அழிதல் இயற்கை என அமையும், செயற்கை என்றற்கு ஓர் ஏது இன்மையின்; மற்று உள் பொருளாயின், அதுவே அமையும், இறைவன் வேண்டா, இரண்டு உள் பொருள் கோடல் மிகையாகலின்; வேண்டுமாயினும், மாயோன் முதலிய கடவுளரில் ஒருவனே அமையும்; அவரை ஒழித்துச் சங்கார கருத்தா முதற் கடவுள் என்றற்குப் பிரமாணம் என்னை? பிரமாணம் உண்டாயினும், அதிவிசித்திரமாய பிரபஞ்சம் ஒருவனால் செய்தல் கூடாமையின், மற்றும் அவ்வியல்பினராய முதற் கடவுளர் உளராதல் வேண்டும் என முறையே உலகாயதர், மீமாஞ்சகர், புத்தர், சமணர், சாங்கியர், பாஞ்ச ராத்திரிகள், அநேகேசுர வாதிகள் மதம் பற்றிப் பூருவபக்கம் நிகழ்ந்த வழி அவரை மறுத்துச் சித்தாந்தம் செய்து முதற் கடவுளது உண்மை பொது வகையானும் சிறப்பு வகையானும் கருதலளவையின் வைத்து உணர்த்தியவாறு என உணர்க. இவ்வாறு சூத்திரந்தோறும் உணர்ந்து உரைத்துக் கொள்க. முதற் சூத்திரம் முடிந்தது இரண்டாஞ் சூத்திரம் அவையே தானே யாயிரு வினையின் போக்கு வரவு புரிய வாணையின் நீக்க மின்றி நிற்கு மன்றே1 என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. என்பது கருத்துரை. என்னுதலிற்றோ வெனின், சூத்திரக் கருத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ -ள்) உலகம் ஒடுங்கியினின்றும் மீள உளதாமாற்றை வகுத்து உணர்த்து முகத்தானே துணைக் காரண முதலியன இல்வழி இறைவன் உலகிற்கு நிமித்த காரணனாதல் சாலுமாறு யாங்ஙனம்? என்னும் கடாவை ஆசங்கித்து அவற்றது2 உண்மைக்குப் பிரமாணம் உணர்த்துதல் நுதலிற்று இச்சூத்திரம் எ-று. சூத்திரவியைபும் இதனானே விளங்கும். ஒடுங்கியுளதாம் என்ற வழி ஒடுங்கியினின்றும் மீளவுளதாவது எவ்வாறு என்று அவாய் நிற்றலின் அவ்வவாய் நிலைபற்றிப் புனருற் பவமே ஈண்டுக் கூறப்பட்டது. இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு மேலைச் சூத்திரத்து எடுத்துக்கொண்ட சங்கார காரணனாகிய முதல்வன், கலப்பினால் உடலின் உயிர்போல் அவ்வுயிர்களேயாய், பொருட்டன்மையால் கண்ணின் அருக்கன்போல் அவற்றின் வேறுமாய், உயிர்க்குயிராதல் தன்மையால் கண்ணொளியின் ஆன்ம போதம் போல் உடனுமாய் நின்று, ஆணை என்னும் பரியாயப் பெயருடைய தனது சிற்சத்தியான் வரும் இருவினை களான் அவை இறத்தல் பிறத்தல்களைப் புரியும் வண்ணம் அவ்வாணையிற் பிரிப்பின்றிச் சமவேதமாய் நிற்பன் எ-று. அவையே தானேயாய் என்பதனை இரட்டுற மொழிந்து கொண்டு உரைக்க. இக்கருத்தே பற்றி, “உலகெலாமாகி வேறாய் உடனுமாய்” என்றார் வழிநூலாசிரியரும்.1 மேலைச் சூத்திரத்தின் அந்தமாதி என்புழி விகாரத்தால் தொக்க பிரிநிலை யேகாரத்தான் விலக்கப்பட்டு நின்ற சேதனப் பிரபஞ்சத்தை2 ஈண்டு அவை எனச் சுட்டிக் கூறினார். ஒடுங்கியுளதாம் என்றதற்கு ஏற்ப ஈண்டும் போக்கினை3 முற்கூறினார். புரிதல், எப்பொழுதும் மேற்கோடல். ஆணையின் என்பது சிங்க நோக்காய்4 இருவினையின் என்பதனோடும் நீக்கமின்றி என்பதனோடும் இயைந்து பொருள் தந்து நின்றது. ஆண்டு இன்னுருபு, முன்னர் ஏதுப் பொருட்கண்ணும், பின்னர் நீக்கப் பொருட்கண்ணுமாய் நின்றது. இன்னென்பது சாரியை எனக்கொண்டு, ஈரிடத்தும் ஏற்கும் உருபுகள் விரித் துரைத்தலும் ஒன்று. அன்றே அசை; அனாதியே இவ்வாறு நிற்கும் எனினும் அமையும்.1 ஆய்ப் புரிய நிற்கும் எனவே, அச்செயல் களெல்லாம் முதல்வன் கரணத்தானன்றிச் சங்கற்ப மாத்திரத்தால்2 செய்வன் என்பது பெறப்பட்டது. இதனானே மேல் அந்தம் என்று உத்தேசமாய்3 எடுத்துக் கொண்ட முதல்வனுக்கு இலக்கணம் கூறியவாறுமாயிற்று. இது தடத்தலக்கணம் எனப்படும் பொது வியல்பு. ஆணையின் இருவினையின் எனவே, தனது சிற்சத்தி துணைக் காரணம்; இருவினையும் அதன் வழித்தாகிய துணைக் காரணம். இரு வினையின் எனவே, அதற்குப் பற்றுக்கோடு உண்டு என்பதூஉம் பெற்றாம்; ஆகலின், அது முதற் காரணம் என்பதூஉம், இருவினையிற் போக்குவரவு புரிய எனவே, ஒடுங்கியின் மீளவுளதாங்கால், இருவினைகட் கேற்பப் பலவேறு வகைப்பட்டு விரியும் என்பதூஉம் போந்தவாறு காண்க. இதனுள் அவையே தானேயாய் என்பது ஓரதிகரணம்; ஆணையின் இருவினையின் என்பது ஓர் அதிகரணம்; போக்கு வரவு புரிய என்பது ஓர் அதிகரணம்; ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே என்பது ஓர் அதிகரணம்; ஆக நாற்கூற்றது இச்சூத்திரம் எனக் கொள்க. முதலதிகரணம் மேற்கோள் ஈண்டு இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன்றானே யாய் நிற்கும் என்றது என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், மேற் கடவுளல்ல வென விலக்கப்பட்டு நின்ற சேதனப் பிரபஞ்சமும் முதல்வனும் 1பொன்னும் பணியும்போல் அபேதமோ, இருளும் வெளியும்போற் பேதமோ, சொல்லும் பொருளும் போற் பேதாபேதமோ என்னும் ஐயப்பாட்டின் கண், அம்மூன்றனுள் ஒரோவொன்றே பற்றி அவ்வம்மதத்தார் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. இதன்பொருள் 2வெளிப்படை. ஈண்டும் இரட்டுற மொழிந்துகொள்க. இதனானே, ஒரு விடயத்தைக் காணுங்கால், ஆன்மபோதம் கண்ணொளியெனத் தானென வேறின்றி உடனாய்நின்று காணுமாறு போல, முதல்வன் புனருற்பவஞ் செய்யுங்கால் உயிர்களோடு உடனாய் நின்று செய்வனென்பதூஉம் பெறப்பட்டது. ஏது 3 அத்துவிதமென்ற சொல்லானே ஏகமென்னில், ஏகமென்று சுட்டுவ துண்மையின், அத்துவிதமென்ற சொல்லே அந்நிய நாத்தியை யுணர்த்து மாயிட்டு என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், முதல்வன் அவ்வாறு மூவகையுமாய் நிற்பன் என்றற்குப் பிரமாண மென்னை யென்னுங் கடாவை யாசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. இதன் பொருள்: அத்துவிதமென்ற சொல்லின் நகரம், 1இன்மை, அன்மை, மறுதலை என்னும் முப்பொருளுணர்த்து மன்றே; அவற்றுள், 2இன்மைப் பொருள்பற்றி அத்துவிதம் என்ற மொழி மாத்திரையானே, ஒரு பொருள் என்றல் பொருத்தமுடைத் தெனின், தானே தன்னை ஒன்று எனக் கருதுதல் வேண்டாமையின், அவ்வாறு கருதும் பொருள் வேறுண்டு என்பது பெறப்படுதலானும், எண்ணுப் பெயர் மேல் வந்த நகரம், அன்மைப் பொருள் மாத்திரையே யுணர்த்திப் பொதுமையின் நிற்பதன்றி, ஏனைச் சொற்களின் மேல் வந்த நகரம் போல, இன்மை மறுதலைப் பொருள்களை யுணர்த்துதல் வழக்கின்கண் இன்மையின், அத்து விதமென்கின்ற மொழி தானே, பிறிது காரணம் வேண்டாது, வேறன்மையை உணர்த்தி நிற்குமாதலானும், ஈண்டு, இவ்வான் மாக்கள் பலவும் முதல்வன்றானேயாய் நிற்குமென மேற்கொண்டது. ஆகலான் என்பதற்கு ஆயிட்டென்பது அக்கால வழக்குப் போலும்; அற்றாகலினன்றே, “நீயோ செய்யாய் நின்மலனாயிட்” டென்றார் வழிநூலாசிரியரும்.3 4இனி, “மழை பெய்து குளம் நிறைந்தது” என்புழிப்போல, ஆயிடலா னென்பது ஆயிட்டெனத் திரிந்து நின்ற தென்றலுமொன்று. 1எண்ணும்மை விரித்துரைக்க. 2வேறின்றி யுடனாதல் பெறப்படவே, பொருண்மையாற் பேதமென்பதூஉம், கலப்பினால் அபேதமென்பதூஉம் தாமே போதரு மென்பது கருத்து. உதாரண வெண்பா கட்டும் உறுப்புங் கரணமும் கொண்டுள்ளம் இட்டதொரு பேரழைக்க வென்னென்றாங் - கொட்டி அவனுளம்ஆ கில்லான் உளம்அவனா மாட்டா தவனுளமா யல்லனுமாம் அங்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், ஒரு பொருள் மூவகை யியல்பையுடைத்தாதல் யாங்ஙனம் என்னும் கடாவை ஆசங்கித்து, அவற்றுள் அவையே யாதலை உவமை முகத்தான் வலியுறுத்துதல் நுதலிற்று. (இ- ள்) உள்ளம் கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு - உயிர் நரம்பு முதலியவற்றாற் பிணிக்கப்படும் உடம்பினையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் கைக்கொண்டு நின்று; இட்டது ஒரு பேர் அழைக்க என் என்றாங்கு - சாத்தா கொற்றா என உடம்பிற்கிட்ட பெயரால் பிறர் அழைத்தவழித் தான் ‘என்னை’யென வந்து நிற்றல் காண்டுமன்றே, இருவர் கைகோத்து நின்றுழியும் அவருள் அழைக்கப்பட்டானே யன்றி, ஏனோன் ‘என்னை’ யென்றல் உலகத்தின்மையின், அவ்வாறன்றி, உடம்பின் பெயரான் அழைத்தவழி, உயிர் என்னென்றற்குக் காரணம் பிறிதோராற்றாற் பெறப்படாமையின், 1அருத்தாபத்தி யளவையானே, அவ்வுயிர் உடம்பெனத் தானென வேற்றுமையின்றி அபேதமாய் நிற்றல் பெற்றாம்; அதுபோல, ஒட்டி - முதல்வன் உயிர்களின் அபேதமாய் ஒட்டி நிற்போனாம்; 2அங்கு அவன் உளம் ஆகில்லான் உளம் அவனாமாட்டாது அவன் உளமாய் அல்லனுமாம் - அவ்வாறு ஒட்டிய வழியும் உயிர் உயிரே, உடம்பு உடம்பே, உயிர் உடம்பா யொழியாது, உடம்பு உயிராகமாட்டாது; அவ்வாறாயினும், உயிர் உடம்பாயும் அதனின் வேறாயும் நிற்கும். உடம்பு அங்ஙனம் நில்லாது; அதுபோல முதல்வன் முதல்வனே, உயிர் உயிரே; முதல்வன் உயிராயொழியான், உயிர் முதல்வனாகமாட்டாது. அவ்வாறாயினும் முதல்வன் உயிராயும் அதனின் வேறாயும் நிற்பன்; உயிர் அங்ஙனம் நில்லாது. அவன் உளமாகில்லான் உளம் அவனாமாட்டாது அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு என்றது, 3ஒன்றாயும், ஒன்றன்மைக்கு அனுபவம் காட்டியவாறு. உறுப்பு, ஆகுபெயர். எவனென்பது என்னென மரீஇயிற்று. 4ஒட்டி யென்பது பெயர்; வினையெச்சமாகக் கொள்ளின், சிறப்பும்மை விரித்துரைக்க. 5ஒட்டுதல், பொருந்துதல். அங்கு, அதுபோல. உதாரண வெண்பா ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதிபசுவாம் ஒன்றென்ற நீபாசத் தோடுளை காண் - ஒன்றின்றால் அக்கரங்கள் இன்றாம் அகரவுயிர் இன்றேல் இக்கிரமத் தென்னும் இருக்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், 1வேதத்துள் அத்துவித மென்றதூஉ மன்றி, ஏகமெனவும் ஓதுதலின், அதற்கு மறுதலையாய் உயிர்களோடு ஒட்டி நிற்பன் எனப் 2பேதப்படக் கூறுவதென்னை என்னும் கடாவை ஆசங்கித்து அச்சொற்குத் 3தாற்பரியங் கூறுமுகத்தால், தானேயாதலை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) இருக்கு ஒன்று என்றது ஒன்றேகாண் - வேதம் ஒன் றென்றதற்குப் பொருள் ஒன்றென்பதேயாம்; வேறு பொருள்படாது; ஒன்றே பதி - அதற்குத் தாற்பரியம் பதிப்பொருள் ஒன்றே; இரண்டில்லை என்பதாம்; ஒன்று என்ற நீ பசுவாம் காண் - இஃதறியாது ஒன்றென்று சொல்லுகின்ற நீ அப்பதிப்பொருளின் வேறாய பசுவென்றறிவாயாக; பாசத்தோடு உளை - பதியும் சேதனமாக யானும் சேதனமாக என்னைப் பசுவென்ற தென்னையெனின், நீ மலத்தோடு கட்டுற்று நிற்கின்றாயாகலின் 4பசுவெனப்பட்டனை; அற்றேல், இவ்வாறு வேற்றுமை கூறிற் பிரமமில்லையாயின் ஒரு பொருளும் இல்லை யென்னும் வேதத்திற்குத்5 தாற்பரிய மென்னை யெனின், அகரவுயிர் இன்றேல் அக்கரங்கள் இன்றாம் இக்கிரமத்து ஒன்று இன்று என்னும் - அகரவுயிரில்லையாயின் அக்கரங்களில் லையா மென்றும் இம்முறை பற்றி வேதம் பிரமப்பொருள் இல்லை யாயின் ஒரு பொருளுமில்லை யென்றும் ஓதும் அத்தனை1 எ-று. 2ஒன்றின்றால் அக்கரங்கள் இன்றாம் அகரவுயிர் இன்றேல் இக்கிரமத்து என்னும் என்றது, வேறாகியும் வேறன்மைக்கு அநுபவம் காட்டியவாறு. இக்கிரமத்தாலென வுருபு விரித்துரைக்க. 3இன்றென்னு மொருமை அப்பண்பின்மேல் நின்றது. காண் என்பதனை மேலே கூட்டுக. ஆல், அசை. உதாரண வெண்பா பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம் - அண்ணல்தாள் அத்துவித மாதல் அருமறைகள் ஒன்றென்னா தத்துவித மென்றறையும் ஆங்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், 4வேதம் ஏகமாய பிரமத்தை ஏகமென் றொழியாது, பிரமம் அத்துவித மெனவும் ஓரோரிடங்களின் ஓதுதலின், அத்துவிதம் இரு பொருட் கண்ணது என்பார்க்கு ஏகமாய பிரமத்தை அத்துவித மென்றல் பொருந்தாதாய் முடியும் என்னும் கடாவை ஆசங்கித்து, அதனை நீக்குமுகத்தானே அவையே தானேயாதலை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் எண்ணும் சுவையும்போல் எங்கும் ஆம் அண்ணல்தாள் அத்து விதமாதல் - பண்ணும் அதனின் 1வேறன்றாய் எண்ணப் படும் இசையும்போலவும், பழமும் அதனின் வேறன்றாய் எண்ணப் படும் சுவையும்போலவும் யாங்கணும் வியாபகமாய முதல்வன் திருவருள் உயிர்களின் வேற்றுமையின்றி நிற்பதா கலான்; அருமறைகள் ஒன்றென்னாது அத்துவிதம் என்று ஆங்கு அறையும் - 2வேதங்கள் ஏகம் என்னாது பிரமம் அத்து விதம் என்று அவ்விடங்களிற் கூறும் எ-று. ஆண்டுப் பிரமம் அத்துவிதம் என்றது, பிரமம் உயிர்களின் வேற்றுமையின்றி நிற்கும் என்னும் பொருட்டாகலான், அஃது ஏக மென்பதோடு முரணுமாறில்லை யென்பதாம்.3 பண்ணை என்னும் 4ஐகாரம் பகுதிப்பொருள் விகுதி. பண், பாலைப்பண் முதலாயின. எங்குமாம் அண்ணல்தாள் என விசேடித்தது, 5குணகுணிகள் போல் உடனாயும், அவ்வாறு உடனாகாமைக்கு அனுபவம் காட்டியவாறு. 6வியாப்பிய வியாபகமாத லொப்புமை மாத்திரையே பற்றிக் குணகுணிகளை உவமை கூறினா ரென்பது. உதாரண வெண்பா அரக்கொடு சேர்த்தி யணைத்தவக் கற்போல் உருக்கி யுடங்கியைந்து நின்று - பிரிப்பின்றித் தானே யுலகாம் தமியேன் உளம்புகுதல் யானே யுலகென்பன் இன்று என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், இங்ஙனம் வெவ்வேறுவகை யெடுத்துக்காட்டின் அநேகாந்த வாதமா மென்னும் கடாவை யாசங்கித்து அஃது ஆகாமை உவமை முகத்தான் விளக்கி, மூன்றனையும் ஒருங்கே வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) உருக்கி அரக்கொடு சேர்த்தி அணைத்த அக்கற் போல் உடங்கு இயைந்து நின்று 1பிரிப்பின்றித் தானே உலகு ஆம் - அரக்கை யுருக்கி அதனோடு சேர்த்து அணைத்த கற்பொடி அவ்வரக்கினோடு ஒன்றாய் ஒருங்கியைந்து நீக்கமின்றி நின்றாற் போல, முதல்வன் உயிர்களின் ஒருங்கு கூடி நின்று நீக்கமின்றி யுடனாதலால் தானேயாம்; உலகேயாம்; தானே உலகேயாம்; அற்றேல் வாமதேவ முனிவன் முதலியோர் “யானே உலகெல்லா மாயினேன்” எனக் 2கூறுதலானும், சர்வ ஞானோத் தரத்தில் “யானே யெல்லாமாயினேன்” எனக் 3கூறுதலானும், “யானே எல்லாமாய் அல்லனுமாய் உடனுமாய் நின்றேன்” என்று உயிர்கள்மேல் வைத்து ஓதுதலானும், உயிர்களும் இவ்விலக்கணத் தனவாவான் செல்லும் போலும் எனின்,- தமியேன் உளம்புகுதல் யானே உலகென்பன் இன்று -அம் முதல்வன் பாசக்கூட்டத்தின் நீங்கித் தனியாய் நின்ற என்னகத்துச் சோகம்பாவனையாற் புகுந்து வேற்றுமை யின்றித் தோன்றலான், யானே உலகெல்லாம் ஆயினேன் இம்முத்திக் காலத்து; ஆகலின், அதுபற்றி உயிர்களும் அவ்வாறாவான் 1சேறலின்று எ-று. அதுபற்றி உயிர்களும் அவ்வாறாவான் சேறலின்று என்பது குறிப்பெச்சம். இவ்வொற்றுமை பற்றி யன்றே அருச்சுனற்குக் கீதைநூல் செவியறிவுறுத்த கண்ணன், “யானே உலகெல்லாம் ஆயினேன்2” என்றதூஉம், முதல்வனது விச்சுவரூபத்தைத் தான் காட்டியதூஉம்,3 “ஏனையவற்றைக் கைவிட்டு என்னையே வழிபடுக” என்றதூஉம், அதனை உறுதியாகக்கொண்ட அருச்சுனன் அவன் கூறிய கருத்து நோக்கிச் சாங் காறுஞ் சிவபூசை செய்ததூஉம், கண்ணன் மேலிட்ட போதுகள் முதல்வன் திருமுடிமேற் 4கண்டதூஉ மென்க. கண்ணன் உபமன்னிய முனிபால் 5சிவதீக்கையுற்றுத் தன்னையுந் தலைவனையும் உணர்ந்தோனாகலிற் சிவோகம் பாவனையைத் தலைப்பட் டோனாவன் என அறிக. கலப்பாய் நிற்றலான் உலகேயா மென்பார் “உடங் கியைந்து” எனவும், பொருட்டன்மையால் வேறு நிற்றலால் தானேயா மென்பார் “நின்று” எனவும், உயிர்க்குயிராய் நிற்றலால் தானே யுலகா மென்பார், “பிரிப்பின்றி”எனவும் கூறினார். ஈண்டும் இரட்டுற மொழிந்து கொண்டு உரைக்க. இன்றி யென்னும் செய்தெ னெச்சக் குறிப்பு “மழை பெய்து குளம் நிறைந்தது” என்புழிப்போலக் காரணகாரியப் பொருட்டாய் நின்றது. இவ்வதிகரணத்தானே 1பேதமென்றும் 2அபேதமென்றும் 3பேதாபேதமென்றும் பிணங்குஞ் சமயிகளை யெல்லாம் மறுத்து, அம்மூவகை யியல்பும் தன்கண் தோன்ற நிற்கும் அத்துவிதத் துண்மை ஏதுக்களானும், 4உவமைகளானும் உணர்த்தியவாறு. புடைநூலாசிரியரும் இவ்வதிகரணப் பொருளேபற்றிப், “புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப் புகலளவைக் களவாகிப் பொற்பணிபோ லபேதப் பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமும்சொற் பொருள்போல் பேதா பேதமுமின்றிப் பெருநூல் சொன்ன அறத்திறனால் விளைவதாய் உடலுயிர்கண் ணருக்கன் அறிவொளிபோல் பிறிவரும்அத் துவிதமாகும் சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்5” என வகுத்தோதினார். இரண்டாமதிகரணம் மேற்கோள் இனி, இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும் என்றது. என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், முதல்வன் அவ்வாறு உயிர்களோடு இயைந்து நின்று 1புனருற்பவம் செய்யுங் கால், 2உலகத்துக்குப் போல், அவனுக்குத் துணைக்காரண முதலியன வேண்டப் படுமோ? படாவோ? என்னும் ஐயப்பாட்டின் கண் முதல்வனது சுதந்திரத்துக்கும் அளவிலாற்றற்கும் இழுக்காய் முடியுமாகலின், அவனுக்கு அவை வேண்டப்படா எனப் 3பரிணாம வாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. இதன் பொருள் : வெளிப்படை.4 ஈண்டு இருவினை யென்றது. முற்பிறவிகளின் ஈட்டப் பட்டு மாயையிற் கட்டுப்பட்டுக் கிடந்த 5புண்ணிய பாவங்களை யென்க. எனவே, 1மாயையின் உண்மையும் பெறப்பட்டது. 2இவை வேண்டப்படுதல் பற்றி முதல்வன் சுதந்திரத்திற்கு இழுக்கில்லை யென்பார். “முதல்வன் ஆணையின் வரும்” என்றார். ஏது ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவலிட்டாங்கு அவை அவனது ஆக்கினை யாகலான், என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், ஆணையே யமையும், இருவினை யெற்றுக்கு என்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) ஒரு பட்டணத்தைப் புரக்கும் வேந்தன், பாடிகாவல் தொழிலைக் களைகணாவான் ஒருவன்மாட்டு வைத்தாற்போல, எல்லா அறிவு முதன்மை அனுக்கிரகங்களுமுடைய அம்முதல்வன் புனருற்பவத்தைச் செய்வதாகிய தனது ஆணையை அவ்விரு வினைகண் மாட்டு வைத்து நடாத்துதலே முறையாகலான், இனி, இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும் என மேற்கொண்ட தென்றவாறு. முதல்வன் செய்யுஞ் செய்தி யெல்லாம் உலகத்தோடு ஒப்ப நிகழ்வன வாகலின், ஈண்டைக்கு அரசன் செய்தி உவமை யாயிற்று. பாடிகாவலாவது 3களைகணாவா னொருவனைக் கொண்டு வேந்தன் செய்விப்பதாய ஒரு 4தண்டத் தொழில் விசேடம். அது, “கோடிகாவனைக் கூறாத நாளெலாம், பாடிகாவலிற் பட்டுக் கழியுமே” 5என்னுந் திருப்பாட்டானு மறிக. இஃதறியா தார் தத்தமக்கு வேண்டியவாறெல்லாம் உரைப்ப. உதாரண வெண்பா உள்ளதே தோற்ற வுயிரணையும் அவ்வுடலின் உள்ளதா முற்செய்வினை யுள்ளடைவே - வள்ளலவன் செய்பவர் செய்திப் பயன்விளைக்குஞ் செய்யேபோல் செய்வன் செயலணையா சென்று என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், வினை உண்டு என்பதற்கும், உயிர்க்குப் பயனாய் வரும் என்றற்கும், மேல்வினை ஏறு மாற்றிற்கும் அது முதல்வனை இன்றியமை யாமைக்கும் பிரமாணமென்னை என்னும் கடாவை ஆசங்கித்து ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) உள்ளதே தோற்ற - இல்லது தோன்றாதென்று 1மேற்கூறிப் போந்தமையான், முன் உள்ளதாய புண்ணிய பாவ மென்னும் இருகூற்றுச் 2சஞ்சித வினையே தன் பயனாகிய இன்ப துன்பங்களையும் அவை நுகர்தற்குரிய நிலைக்களமாகிய உடம் பினையும் தோற்றுவிப்ப; உயிர் அவ்வுடலின் அணையும் - அவ்வின்ப துன்ப நுகர்ச்சி சடத்துக்குக் கூடாமையின், 3சித்தாகிய உயிரே அவ்வுடம்பில் பொருந்தி அவற்றை யனுபவிக்கும்; முன்வினையை ஈண்டு அனுபவித் தொழிந்தால், மேலைக்கு வினையுண்டாமாறு யாங்ஙனம் எனின், முன் செய்வினை உள்ளடைவே உள்ளதாம் - முன் செய்த வினையை அனுபவித்தற் கேதுவான முறைமையிலே மேலைக்கு வினையுளதாம்; அற்றேல், அவ்வினையே பயனாக வரும் என அமையும்; முதல்வன் எற்றுக்கு? எனின், செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போல - உழவர் செய்யுந் தொழிற்குத் தக்க பயனை விளைநிலம் விளைவிப் பதன்றி அத்தொழில் தானே விளைவிக்க மாட்டாதது போல; வள்ளல் அவன் செய்வன் - உணவும் வித்துமாய்த் தொன்று தொட்டு வரும் அவ்வினைகளை வள்ளலாகிய முதல்வனே அவ்வுயிர்கட்குக் கூட்டுவன்; செயல் சென்று அணையா - அவ்வாறன்றி வினைதானே உயிர்கட்குப் பயனாய் வந்து பொருந்தமாட்டாது. எ-று. வள்ளலென்றார், 1தற்பயன் குறியாது 2“வேண்டுவார் வேண்டிய ”வாறே நல்கும் அருளுடைமைநோக்கி. உள்ளடைவு, உள்ளுதற்கேதுவாகிய அடைவு என விரியும். 3ஏகாரம் ஏழாவதன் பொருட்கண் வந்தது. உள்ளுதல், ஈண்டு, அனுபவித்தல். அதற்கேதுவாகிய முறைமையாவன அனுபவித்தற்குத் துணைக்காரணமாகிய விருப்பு வெறுப்புக்கள். 4அவற்றின்கண் உண்டாமாறு 5முன்னர்க் காட்டுதும். மேல், முதல்வனுக்கு வினைவேண்டப்படும் என்பதற்கு அரசனை யுவமை கூறினார்; ஈண்டு, வினை, முதல்வனை இன்றியமையாதென்பது உணர்த்துதற்கு உழவுத்தொழிலை யுவமை கூறினாரெனவுணர்க. உதாரண வெண்பா அவ்வினையைச் செய்வதனி லவ்வினைஞர் தாஞ்சென்றங் கவ்வினையைக் காந்த பசாசம்போல் - அவ்வினையைப் பேராம லூட்டும் பிரானின் நுகராரேல் ஆர்தா மறிந்தணைப்பா ராங்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், இருவினை சடமாகலின் சென்றணையமாட்டா வாயினும், உயிர்கள் சேதன மாகலின், அவையே அவற்றது பயனை யறிந்து எடுத்துக்கொண்டு நுகரும்; வள்ளல் எற்றுக்கு? என்னுங் கடாவை ஆசங்கித்து அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) காந்த 1பசாசம்போல் - ஒருவன் எடுத்து நேரொக்கப் பிடித்த வழி இரும்பினை வலித்துக்கொள்ளும் காந்தம்போல; அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் - அவ்வினைப் பயன் களைப் பிறழாமல் நுகர்விக்கும் முதல்வனால்; அவ்வினைஞர்தாம் - அவ்வினைகளைச் செய்யும் ஆன்மாக்கள் தாம்; அவ்வினையைச் 2செய்வதனில் சென்று அங்கு அவ் வினையை நுகராரேல் - அவற்றைச் செய்தற்குரிய நிலைக்கள மாகிய உடம்பின்கட் பொருந்தி அவற்றது பயனை அனுபவிப்பர், அவ்வாறு அனுபவியாராயின்; ஆர் தாம் அறிந்து அணைப்பார் - வேறே எவர்தாம் அவற்றை யறிந்து கூட்டுவார்; ஆங்கு - அறிவுஞ் சுதந்திரமுமின்றி மலத்தில் மறைப்புண்டு கிடக்கும் அப் 3பெத்த காலத்து, எ-று. ஒருவரும் இல்லை யென்பதாம். ஆன்மாக்களுக்குத் தமக்கென 1அறிவின்மையானும், வினை சடமாகலானும், “2மாயை தாரகமாம் அத்தன்றாள் நிற்றல்” எனப் போந்தமையானும், முதல்வனே அறிந்தணைப்பன் எனப் பாரிசேட வளவை கூறுவார், “பிரானின் நுகராரேல் ஆர்தாம் அறிந்தணைப்பார்” என்றார். இது சொற்பொருட்பின் வருநிலை. உதாரண வெண்பா நெல்லிற் குமியு நிகழ் செம்பினிற் களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்ம மன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர் சோகம் செய்கமலத் தாம். என்பது உதாரணம். என்நுதலிற்றோ வெனின், அவ்வினை ஆதியோ? அனாதியோ? ஆதியெனின், முன் பில்லது இடையே தோன்று மென்பது சற்காரிய வாதத்துக் கேலாது; அனாதி யெனின், ஒருவர் கூட்டவேண்டுவதில்லை யென்னுங் கடாவை ஆசங்கித்து அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) நெல்லிற்கு 3உமியும் நிகழ் செம்பினில் களிம்பும் சொல்லின் புதிதன்று தொன்மையே - நெல்லின்கண் உமியும் செம்பின்கண் களிம்பும் எக்காலத்துளவாயின என்று ஆராய்ந்து சொல்லுங்கால், அந்நெல்லும் செம்பும் உளவாயின வன்றே உள்ளனவன்றி இடையே வந்தனவல்ல, அதுபோல வல்லி மலகன்மம் அன்று உளவாம் - மாயை மலம் கன்மமென்னும் மும்மலங்களும் 1அனாதியே யுள்ளனவாம்; கமலத்து அலர் சோகம் பொன்வாள் செய் வள்ளலால் ஆம் - 2முன்னே உள்ளதாய தாமரைப்பூ அலர்தலும் கூம்புதலும் ஞாயிற்றினாற் செய்யப்படுமாறு போல, அவை தத்தம் காரியங்களைச் செய்தல் முதல்வனாலேயாம் என்க. இஃது எடுத்துக்காட்டுவமை. 3புதிதன்று என்பதனைத் தனித் தனிக் கூட்டுக. தொன்மையின் உள்ளவற்றைத் தொன்மை யென்று உபசரித்தார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. மாயை இறைவனுக்குப் 4பரிக்கிரக சத்தியாகலின் “வல்லி” யென்றார். 5வினைக்குத் தொன்மை கூறுவார். இனம்பற்றி மாயை மலங்களுக்கும் தொன்மை கூறினார். மூலமலத்தின் காரியம் மோகம் மத முதலாயின. இருவினையின் காரியம் இன்ப துன்ப முதலாயின. மாயையின் காரியம் தனுகரண முதலாயின. வள்ளலால் ஆம் எனவே, திரோதான சத்தியது உண்மையும் பெற்றாம். அது பாகம் வருவித்தற் பொருட்டு மலத்தின் வழி நின்று மோக முதலிய வற்றைத் தொழிற்படுத்துவதாகிய சிவ சங்கற்பத்திற் கேதுவாதல் பற்றி மலம் என்றும் உபசரித்துக் கூறப்படும்6. இவ்வாறு மலம் கன்மம் மாயை திரோதானம் மாயாகாரியம் என்னும் ஐவகைப் பாசமும் கண்டுகொள்க. இவற்றுள், மாயை, சுத்த மாயை, அசுத்த மாயை யென்று இருவகைப்படும். இவ்விரண்டினுள், 1சுத்த மாயையின் காரியமே அசுத்த மாயை யென்பாரும், சுத்த மாயை போல அசுத்த மாயையும் அனாதியேயாம் என்பாரும், ஒன்றுதானே ஊர்த்துவ மாயை அதோ மாயை யென்று இருவகைப்படும் என்பாரும் எனப் பலதிறத்தர் ஆசிரியர். இனி, முதல்வனது கிரியாசத்தியே சுத்த மாயை யெனப்படும் என்பாருமுளர்; அது முதல்வனுக்குத் தாதான்மிய சத்தியாகலின், பரிக்கிரக சத்தியாகிய சுத்த மாயையாதல் யாண்டையது என்று ஒழிக. சுத்த மாயையினின்றும் 2பஞ்சகலைகளும், நால்வகை வாக்கும், 3சிவதத்துவமைந்தும், சுத்த காலமுதற் சுத்த நிலம் ஈறாகிய முப்பத் தொன்றுந் தோன்றும்; அசுத்த மாயையினின்றும் அசுத்த கால முதல் அசுத்த நிலமீறாகிய 4முப்பத்தொரு தத்துவங்களும் தோன்றும். இந்தத் தத்துவங்களெல்லாம் 5பொதுவும் சிறப்பும் பொதுச்சிறப்பும் எனத் தனித்தனி மூவகைப்பட்டு, உயிர்கள்தோறும் வெவ்வேறுளவாம். கன்மமும் “நாசோற்பத்தி பண்ணிவரு மாதலால் அநாதி6” என்பது பற்றிப் பிரபஞ்சம்போலப் 7பிரவாகாநாதி யென்பாரும், “ஏகன் அநேகன் இருள் கருமம் மாயையிரண், டாகவிவை யாறாதியில்8” எனவும், “ஆணவ முதலன் றதுபோற் கருமமும்”9 எனவும் ஒப்ப வோதுதல்பற்றி மூவகை வினைக்கும் முதற்காரணமாய மூலகன்மம் ஒன்று அநாதி நித்தமா யுண்டென்பாரும் என்று இரு திறத்தர் ஆசிரியர் என்க. இவ்வினை ஈட்டப்படுங்கால், 1மந்திர முதலிய அத்துவாக் களிடமாக, 2மனம் வாக்குக் காயமென்னும் மூன்றான் ஈட்டப்பட்டு, தூல கன்மமாய் ஆகாமியமெனப் பெயர்பெற்று, பின்னர்ப் பக்குவ மாங்காறுஞ் சூக்கும கன்மமாய்ப் புத்தி தத்துவம் பற்றுக் கோடாக மாயையிற் கிடந்து, சாதி ஆயுள் போகமென்னும் மூன்றற்கும் ஏதுவாய் முறையே, சனகம் தாரகம் போக்கியம் என்னும் மூவகைத்தாய், அபூருவம் சஞ்சிதம் புண்ணிய பாவ மென்னும் பரியாயப் பெயர் பெற்று, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம் ஆத்தியான்மிகம் ஆதிபௌதிக மென்னும் முத்திறத்தாற் பலதிறப்பட்டுப் பிராரத்தமெனப் பெயர் பெறும். 3ஆதிபௌதிகமாவது சடவாயிலாக வருவது. ஆத்தியான்மிகமாவது சடத்தோடு கூடிய சேதனம் வாயிலாக வருவது. ஆதிதைவிக மாவது ஒரு வாயிலானன்றித் தெய்வந் தானே காரணமாக வருவது. இன்னும் இவ்வினைகள், 4உலகம் 5வைதிகம் 6அத்தியான்மிகம் 7அதிமார்க்கம் 8மாந்திரம் என்று ஐவகைப்பட்டு, ஒன்றற்கொன்று ஏற்றமுடைத்தாய், முறையே நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளில் அடங்கி, 1அசுத்தம் 2மிச்சிரம் 3சுத்த மெனப்படும் போகங்களைப் பயப்பிக்கும் என்று அறிக. மூன்றாம் அதிகரணம் மேற்கோள் இனி, இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்து வரும் என்றது, என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், புனருற்பவம் சடத்துக்கன்றிச் சித்துக்கும் உளதாயினன்றே, முற்செய்வினையே ஈண்டைக்கு வருமென மேற்கூறிய தமையும்; அஃது உண்டோ இல்லையோ என்னும் ஐயப்பாட்டின்கண், குடம் உடைந்த வழிக் 4குடாகாயம் ஆகாயத்தோடு கூடுமாறுபோல, உடம்பு நீங்கிய வழி உயிர் பிரமத்தோடு கூடும் என்னும் சுருதி பற்றி இறந்த வுயிர் மீளப் பிறப்பதில்லை யெனக் கிரீடாப் பிரமவாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் மூன்றாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. இதன் 5பொருள்: வெளிப்படை. வருதல், தொன்றுதொட்டு 6அவ்வாறு ஆதல். மாறுதல், ஈண்டு இறத்தல் என்பது, “போக்குவரவு புரிய” என்னு 1மூலத்தானும், ஏது உதாரணங்களோடு உளதாகிய இயைபானும் உணர்க. இஃது உணராது, 2அச்சு வேறுபடுதல் என்று உரைப்பாரு முளர்; அஃது ஈண்டைக்கு யாதும் இயையாமை 3யுணர்க. ஏது தோற்றமும் ஈறும் உள்ளதற் கல்லது உளதாதல் இன்மையான் என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின் 4அதற்குப் பிரமாண மென்னை யென்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) உற்பத்தியும் நாசமும், தொடர்ச்சியாய் உள்ள பொருட்கன்றி 5ஏனைப் பொருட்கு உற்பத்தி கூடாமையான், இனி இவ்வான்மாக்களே மாறிப் பிறந்து வரும் என மேற்கொண்டது என்க. தோற்றமும் ஈறும் என்னும் உம்மைகளை எதிரது தழீஇயின வாகக் கோடலின் “தொடர்ச்சியாய்” என்பது போந்தவாறறிக. 6உளதாதல், ஈண்டுத் தோன்றுதல். இனி, இவ்வாறன்றிக் குடாகாய வுவமையே பற்றி இருவினையான் வரும் புனருற்பவம் உயிரின் பொருட்டுச் சிவத்துக்கே யாமெனச் 7சிவாத்துவிதிகள் கூறும் கடாவை ஆசங்கித்தும், மூலப் பகுதியில் தோன்றும் புத்தி தத்துவத்துக்கே 1அதுவெனச் சாங்கியர் கூறும் கடாவை ஆசங்கித்தும் மேற்கோடல் நுதலிற்று இவ்வதிகரணம் எனக்கொண்டு, தோற்றமும் ஈறும் 2அவ்வுரிமை உள்ளதற்கேயன்றி ஏனையவற்றிற்கு உளதாதலின் மையான், இவ்வான்மாக்களே மாறிப் பிறந்து வரும் என மேற்கொண்டது என்று உரைப் பினுமாம். இப்பொருட்கு உரிமை யென்பது அவாய் நிலையான் வந்தது. உளதாதல் என்னும் ஒருமை, தோற்ற ஈறுகளோடு 3தனித்தனி சென்றியையும். 4ஆன்மாக்களே யென்னும் பிரிநிலை யேகாரம் விகாரத்தால் தொக்கது. இனி, மாயாவாதி முதலியோர் மதத்தை மறுத்தற் பொருட்டு மேற்கொண்டது என்பாரும் உளர்; 5அத்துவிதம் என்ற சொல்லானே அவரை மறுத்து 6ஆன்மாக்களைப் பெறுவித்தமையின், ஈண்டு, அவர் மதம் பற்றிக் கடா நிகழ்தற்கு ஓர் இயைபின்மை யுணர்க. உதாரண வெண்பா கண்ட நனவைக் கனவுணர்வின் தான்மறந்து விண்படர்ந்தத் தூடு வினையினால் - கண்செவிகெட் டுள்ளதே தோற்ற வுளம்7 அணுவாய்ச் சென்றுமனம் தள்ள விழும் கருவில் தான் என்பது உதாரணம். என்நுதலிற்றோ வெனின் புனருற்பவம் ஆங்கால்படும் இயல்புகளுணர்த்தி, அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. கண் செவி கெட்டு 1உள்ளதே தோற்ற, உளம் அத்தூடு விண் படர்ந்து, கண்ட நனவைக் கனவு உணர்வின் மறந்து மனம் தள்ள, வினையினால் அணுவாய்ச் சென்று கருவில் விழும் எனக்கொண்டு கூட்டுக. (இ-ள்) கண் செவி கெட்டு உள்ளதே தோற்ற - கண் செவி முதலிய உறுப்புக்களையுடைய இவ்வுடம்பு கெட்டவழித் தனக்குக் கேடின்றிப் படைப்புக் காலந்தொடங்கிச் சங்கார காலமளவும் நிலை பெற்றுள்ளதாகிய சூக்கும தேகம் 2பூதசாரவுடம்பு முதலியனவாய்க் காரியப்பட; உளம் 3அத்தூடு விண்படர்ந்து - உயிரானது பூதசார முதலிய உடம்பின்கட் பொருந்தித் துறக்க நிரயங்களிற் சென்று அனுபவித்து; கண்ட நனவைக் கனவு உணர்வின் மறந்து - பின்னர் நனவின்கட் கண்டவற்றைக் கனாக்காணுங் காலத்து மறந்து அறிவு வேறுபட்டாற்போல, முன்னைக் கண் செவி கெட்டவாறும், உள்ளதே தோற்ற அத்தூடு விண்படர்ந்தவாறும், ஆண்டனு பவித்தவாறு மாகிய இன்னோரன்னவற்றை மறந்து அறிவு வேறுபட்டு; 4மனம் தள்ள வினையினால் அணுவாய்ச் சென்று கருவில் விழும் - முன்னுடம்பு இறக்குங்கால் அடுத்தவினை காட்டும் கதி நிமித்தம் பற்றி உயிர் அவாவுமாறு மனம் செலுத்துதலான் அக்கதிக்கட் சேறற்கு ஏதுவாய் எஞ்சி நின்ற புண்ணிய பாவ சேடத்தால் சூக்கும தேக மாத்திரையாய்ச் சென்று அம்மனம் தள்ளிய கதிக்கு அமைந்த அக்கருவின்கண் படும் எ-று. 1இன், உவமவுருபு. தான், அசை. மறத்தற்குச் 2செயப்படு பொருள் அவாய் நிலையான் வந்தது. விண்படர்ந்தென்னும் 3உபலக் கணத்தால் நிரயம் படர்ந்து என்பதூஉம் பெறுதும். 4படர்ந்தெனக் காரியத்தைக் காரணமாக வுபசரித்தார். அத்தூ டென்புழி, அன் சாரியை விகாரத்தால் தொக்கது. பொருந்தி என்பது சொல்லெச்சம். வினை, ஆகுபெயர். உடம்பு நீங்கிப் போங்கால், முதற்கண் கெடுவன கண்ணும் செவியுமாகலின், அச்சிறப்பு நோக்கிக் கண் செவி கெட்டு என்று உபசரித்தார். கெட்ட வழி யென்பது கெட்டு எனத் திரிந்து நின்றது. ஐம்பெரும் பூதத்தின் காரியம் எனப்பட்ட தூலவுடம்பு, சூக்கும வுடம்பின் காரியம் ஆமாறு என்னை யென்னும் ஐயம் நீக்குதற்கு உள்ளதே தோற்ற என்றார். ஏகாரம் தேற்றம். ஆகாய முதலிய தூலபூதங்கள் சத்த முதலிய சூக்கும பூதங்களின் காரியமாதலின், அதுபற்றியே, தன்மாத்திரை மயமாகிய சூக்கும வுடம்பில் தோன்றுவதாய தூலவுடம்பு ஐம்பெரும் பூதமயம் எனப்பட்ட தன்றிப் பிறிதில்லை யென்பது; “பூதனா சரீரம் போனாற் புரியட்ட ரூபந்தானே, யாதனா சரீரமாகி” 5என்றும், “சூக்குமவடி வேதென்னில் தூல காரணமதாகும்” 6என்றும், “தூலமாம் உருவினுக்குச் சூக்கும முதல்” 7என்றும், “மாறியிவ்வுருவமெல்லாம் வருவதெங்கே நின்று என்னில், கூறிய சூக்குமத்தாம்” 8என்றும், “விதிப்படி சூக்குமத்தே யுருவரும்” 1என்றும், “மனாதி தரும்உடல்” 2என்றும் வழிநூலா சிரியரும் இவ்வாறே கூறியவாறு காண்க. 3இஃது அறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே உரைப்ப. அது தோன்றுங்கால், “காலமுற்றும் நீங்கிட மரம் பின் வேறோர் நீண்மரம் நிகழ்த்து” 4மாறுபோலச் சூக்கும வுடம்பு கெடாது நிற்பத் தூலவுடம்பு “வேறொரு குறியாம் ஆரம் வீரசங்கிலியுமா” 5தல் போல, வினைக்கீடாக அச்சு வேறுபட்டு, “மதிக்கெழு கலைகள் போல வருவது போவதாம்” 6என்பதூஉம் வழிநூலாசிரியர் கூறியவாற்றான் அறிக. அணு, சூக்குமவுடம்பு. தள்ள, தள்ளுதலானென்க. அக்கருவில் எனச் சுட்டு வருவிக்க. தான், அசை. உள்ளதே தோற்ற என்றதனால், 7உடற்றிரிவும், விண் படர்ந்து என்றதனால் இடத்திரிவும், கண்டநனவைக் கனவுணர்வில் தான்மறந்து என்றதனால் 8அறிவுத்திரிவும் பெறப்பட்டன. உள்ளதே தோற்ற வென்றதனால், புதிதுபுதிதாய்த் தோன்றுதற் பற்றிச் சற்காரிய வாதத்திற்கு இழுக்கின்மையும், அத்தூடு விண் படர்ந்தெனவும், அணுவாய்ச் சென்று கருவில் விழுமெனவும் கூறியதனால், போக்குவரவு பற்றி வியாபகத்துக்கு இழுக்கின்மையும், வினைச் சேடத்தா லென்றதனால், துறக்க நிரயங்களின்கண் அனுபவித் தொழிந்தமை பற்றிப் புனருற்பவ காரணத்துக்கு இழுக்கின்மையும், மனம் தள்ள வென்றதனால், 1அஃது எஞ்சுதற்கு ஏதுவும் காட்டியவாறு. வேதத்துட் கூறப்படும் 2பஞ்சாக்கினி வித்தையின் இயல் புணர்த்துவார், கண் செவி கெட்டவழி, விண்படர்ந்து மறந்து அணுவாய்ச் சென்று கருவில் விழும் என்றார். பஞ்சாக்கினி வித்தையின் இயல்பு நீலகண்டபாடியத்துட் காண்க. மறந்து விண்படர்ந்து எனக் கூட்டி யுரைப்பாருமுளர். துறக்க நிரயங்களிற் படர்ந்து அனுபவிப்புழி, அறிவு திரியாமை புராணங்களுட் காண்க. உதாரண வெண்பா அரவுதன் தோலுரிவும் அக்கனவும் வேறு பரகாயம் போய்வருமப் பண்பும் - பரவின் குடாகாய வாகாயக் கூத்தாட்டாம் என்ப தடாதுள்ளம் போமா றது என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், உயிருக்குப் புனருற்பவம் ஆகாமைக்கு வாதிகளான் எடுத்துக்காட்டப்படும் குடாகாய ஆகாய வுவமைக்குப் பொருள் கூறி மேலதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அரவுதன் தோல் உரிவும் அக்கனவும் பரகாயம் போய் வரும் அப்பண்பும் பரவில் வேறு -1கண்செவி கெட்டவழி உள்ளதே தோற்ற அத்தூடு விண்படர்தற்குப் பாம்பு தோலுரித்துப் புதிதொரு தோல் போர்த்துச் சேறலும், புருடன் நனவுடம்பின் நீங்கிக் கனவுடலிற் சேறலும், யோகிகள் தம்முடம்பு நீங்கிப் பரகாயத்திற்சென்று மீடலுமாகிய இவ்வுவமைகள் மிக்கு வழங்குதற்கண் இவற்றிற்கு மாறாக; குடாகாய ஆகாயக் கூத்தாட்டு ஆம் என்பது அடாது - குட ஆகாயம் குடமுடைந்த வழி ஆகாயத்தோடு கூடுமாறு போல்வதோர் 2கூத்தாட்டாம் என்று நீ கூறுதல் பொருந்தாது; உள்ளம் போம் ஆறு அது - சூக்கும வுடம்பு விட்டுப் போமாற்றிற்கே அவ்வுவமையாகலான் எ-று. எனவே, உடல்விட்டுப் போமாற்றிற்கு இவ்விருவகை யுவமைகளும் ஆகமங்களிற் கூறுதலின், அவை தம்முள் முரணாத வாறு, அரவுதன் தோலுரிவு முதலியன தூலவுடல் விட்டுப் போமாற்றிற்கும், குடாகாய வுவமை சூக்கும வுடம்பு விட்டுப் போமாற்றிற்கும் எனக் கோடல் பொருத்தமுடைமையின், அவ்3வேறுபாடு உணராது குடாகாய வுவமையும் தூலவுடம்பு விட்டுப் போமாற்றிற்கேபோலும் என மலையற்க என மேலதனை வலியுறுத்தவாறு காண்க. மேலைவெண்பாவில் “கண்ட நனவைக் கனவுணர்வில் தான் மறந்து” என்றது, அறிவு வேறுபடு முறைமைக்கு எடுத்துக் காட்டியது எனவும், ஈண்டு அக்கனவும் என்றது, அதனையே உடல் வேறுபடும் முறைமைக்கு எடுத்துக்காட்டியது எனவும் 1தெரிந்துகொள்க. பரவு, முதனிலைத் தொழிற்பெயர், இல்லுருபு தொழில் நிகழ்ச்சிக் கண் வந்த ஏழாவது. பரவுதல், எல்லார்க்கும் புலனாமாறு மிக்கு நிகழ்தல். ஈண்டு 2உள்ளம் என்றது சூக்கும வுடம்பை. போமாற்றிற் கென்னும் நான்காவது விகாரத்தால் தொக்கது; “ஐந்தவித்தான் ஆற்றல்3” என்புழிப்போல. குளம் ஆம்பல், குளாம்பல் என மருவினாற்போல, 4குடம் ஆகாயம், குடாகாயமென மரீஇயிற்று. ஆகாயக் கூத்தாட்டு என்பது உவமத்தொகை. இதனை உம்மைத் தொகையாகக் கொண்டு குடாகாய ஆகாயமும் கூத்தாட்டும் போல் என்று உரைப்பாருமுளர். நான்கா மதிகரணம் மேற்கோள் இனி நீக்கமின்றி நிற்குமன்றே என்றது, என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், அங்ஙனம் புனருற்பவமாதற்கு ஏதுவாய் இருவினைகளைச் செலுத்தி நிற்பது எனப் 5போந்த ஆணை யெனப்படும் சத்தியாவது முதல்வனின் வேறோ அன்றோ என்னும் ஐயப்பாட்டின்கண் பொருட்குச் சத்தி வேறு என்னும் மீமாஞ்சகர் முதலியோர் மதமும், அன்றென்னும் நையாயிகர் முதலியோர் மதமும் பற்றி நிகழும்கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இறுதிக்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) முதல்வன் தனது ஆணையாகிய சிற்சத்தியோடு சம வேதமாய் நிற்பன் எ-று. அந்நிய யோக வியவச்சேதம் அயோக வியவச்சேதம் என்றற்றொடக்கத்து வடசொற்கள், பிறிதினியைபு நீக்குதல் இயைபின்மை நீக்குதல் என்றற் றொடக்கத்தனவாக 1மொழி பெயர்த்து வழங்கப்படுமாறு போல, 2சமவாய மென்னும் வடமொழி, தமிழின்கண் நீக்கமின்றி நிற்றல் என மொழிபெயர்த்து வழங்கப்படும் என்று உணர்க. வடமொழி இரண்டாஞ் சூத்திரத்து இறுதியில் ஆணை முதல்வனோடு சம வேதமாய் நிற்கும் என 3ஆணைமேல் வைத்தோதியதனை ஈண்டு 4முதல்வன் மேல் வைத்து ஓதினார். கண்ணழிப்புழி, இருவினை முதல்வன் ஆணையின் வருமெனக் கூறிப் போந்த ஆணை, ஈண்டுக் 5கூறாமையே இனிது விளங்கு மென்னும் கருத்தால், சொற்பல்காமைப் பொருட்டு அதனை யொழித்து எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்பொருள் காண மாட்டாதார் சருவவியாபியாய் நிற்றலால் என்னும் ஏதுவின் பொருளே மேற்கோளுக்கும் 6பொருளாகக் கொண்டு உரைப்ப. அது 1கூறியது கூறலாதலுமன்றி மொழிபெயர்த்தல் யாப்பிற்கு ஏலாமையும் அறிக. ஈண்டுச் 2சமவாயமென்றது தாதான்மிய சம்பந்தத்தை; அஃதாவது பொருளான் ஒன்றேயாகியும் ஒருவாற்றான் 3பேதமாதற்கு உரிமையுடைமை. ஏது அவன் ஏகாநேகம் இரண்டும் இன்றிச் சருவ வியாபியாய் நிற்றலான், என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், அதற்குப் பிரமாண மென்னை யென்னுங் கடாவை ஆசங்கித்து மேற்கோளை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அம்முதல்வன் ஒன்றே வேறே யென்னும் இரு தன்மையுமின்றி, அவ்விரண்டிற்கும் பொதுவாய் எங்கணும்4 வியாபியாய் நிற்றலான், இனி, ஆணையின் நீக்கமின்றி நிற்கும் அன்றே யென மேற்கொண்டது. 5அவினாபாவம் உணர்த்துவார் ஏகாநேகம் இரண்டும் இன்றியென, மேற்கோளிற் போந்த பொருளை அநுவதித்துச் சருவ வியாபியாய் நிற்றலான் என ஏதுக் கூறினார். சருவ வியாபியாய் நிற்றல், 6அவையே தானேயாய் என்னும் அதிகரணத்தாற் சாதிக்கப் பட்டமையின், அதனை ஈண்டு, ஏதுவாக வைத்து ஆணையின் நீக்கமின்றி நிற்கும் என்று மேற்கோளைச் சாதித்தவாறு. உதாரண வெண்பா எங்குமுளன் என்றளவை ஒன்றன் றிரண்டென்னில் எங்கு முளன்அன் றெவற்றெவனும் - அங்கண் அவையவன் அன்றில்லைப் பொன்னொளிபோல் ஈசன் அவையுடைமை யாளாநாம் அங்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், 1ஏதுவும் மேற்கோளும் தம்முள் அவினாபாவம் ஆமாமாறு யாங்ஙனம் என்னுங் கடாவை ஆசங்கித்து அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) எங்கும் உளன் என்ற அளவை ஒன்றன்று -யாங்கணும் அவையே தானே யென மேற்கூறிய அளவையானே முதல்வன் ஒரு பொருளாதல் கூடாது எ-று. 2ஒன்றாயின் கங்கைக் கரையில் நின்ற ஒரு மானுடனே காவிரிக் கரையினும் ஒருங்கு நிற்கமாட்டான்; அது போல ஒரு பொருள் ஓரிடத்து உளதாதலன்றி யாங்கணும் வியாபித்து நிற்கமாட்டாது என்பதாம்; 3இரண்டு என்னில் எங்கும் உளன் அன்று - அற்றேல் முதல்வன் இரு பொருளாய் நிற்கும் எனக்கோடும் எனின் யாங்கணும் அவையே தானேயாய் உளனாதல் கூடாது எ-று. தன்மாட்டே வேற்றுமையுடையானுக்குப் பிற பொருளின் கண் வேற்றுமையின்றி வியாபித்து நிற்றல் சாலாது என்பதாம்; அற்றேல் இவ்விரண்டோடு முரணுதலின், எங்கும் உளன் அல்லன் எனக் கோடும் எனின், 1எவற்று எவனும் அங்கண் அவை அவன் அன்று இல்லை- எவ்விடங்களினுள்ள எத்திறப் பொருளுமாகிய அவ்விடத்து அவைகளெல்லாம்2 “அகரவுயிர் இன்றேல் அக்கரங்கள்” இல்லையா மாறுபோல, அம்முதல்வனை யின்றி அமையா; ஆகலான், எங்கும் உளன் அல்லன் என்றல் பொருந்தாது எ-று. ஆகலான் எங்கும் உளன் அல்லன் என்றல் பொருந்தாது என்பது குறிப்பெச்சம். அற்றேல், வேறு விடுக்குமாறு என்னையெனின், ஈசன் 3பொன் ஒளி போல் - எங்கும் உளனாகிய முதல்வன் ஞாயிறும் ஒளியும் போல ஒன்றாதற்கும் இரண்டாதற்கும் பொதுவாய்த் தாதான்மியத்தால் சிவமும் சத்தியும் என்று இயைந்து நிற்கும் எ-று. அற்றேல், பசுபாசங்களும் வியாபகம் எனக் கோடலின், அவையும் இம்முறைமைபற்றி ஏகாநேகம் இரண்டும் இன்றி, முதல்வன் போலத் தத்தம் சத்திகளோடு தாதான்மியமாய் நிற்கும் என்பது பெறப்படுதலான் முதல்வனோடு சமமாவான் செல்லுமே யெனின், அவை உடைமை நாம் ஆளாம் அங்கு - அவ்வாறாயினும் முதல்வனது வியாபகத்தை நோக்க வியாப்பிய மாகலின், அப்பாசங்கள் உடைமையாம்; பசுக்களாகிய நாம் அடிமையாவேம் அம்முதல்வன் மாட்டு எ-று. எங்குமுளன் அன்று எனப் பாடமோதுவாரு முளர். பாசங்கள் உடைமையாமாறும், பசுக்கள் அடிமையாமாறும், “தாரகமாம் அத்தன் தாள்நிற்றல்” எனவும், “அதனின் ஈறலா ஒன்று பலவாறே தொழும்பாகும்” 4எனவும் மேலே பெறப்பட்டமையின், அவற்றை ஈண்டு எடுத்துக்காட்டி ஆசங்கை நீக்கியவாறு. என்ற வென்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கது; “புகழ்புரிந்த”1 என்புழிப்போல. அளவையான் என ஆனுருபு விரிக்க. ஒன்றன்று உளனன்று என்புழி,2 ஒன்று உளன் என்னுந் தருமி வாசகங்கள் ஆகுபெயரால் அத் தருமங்களின்மேல் நின்றனவாகலான், உளனென்பதும் அஃறிணையொருமையோடு முடிந்தது. அன்மை, கூடாமைப்பொருட்டு, எவற்றெவனும் என்பது3 ஏழாம் வேற்றுமைத் தொகை; அஃறிணைக்கண் வரும் எவனென்னும் வினாவினைக் குறிப்புச் சொல், ஈண்டுப் பெயர்த் தன்மைப் பட்டு எவனும் என4 எஞ்சாமைப் பொருண்மை யுணர்த்தி நின்றது. அன்றியென்னும் வினையெச்சம் செய்யுளாகலின்5 அன்று எனத் திரிந்தது. இன்மை, ஈண்டு அமையாமைப் பொருட்டு. பொன், 6ஆகுபெயர். ஆம் என்பது உடைமை யோடும் இயையும். பொன்னொளிபோல் ஈசன் என்பது தொகையுவமமாகலின், பொதுவியல்பு விரித்துரைக்கப்பட்டது. இவ்வதிகரணத்தாற் போந்த தொகைப் பொருள், - முதல்வன் வியாபகனாதலின், வியாபகப்பொருட்கு ஒன்றாய் நிற்றல் கூடாது; அது கூடாமைபற்றி, இரண்டாய் நிற்பன் எனின், வியாபகனாதல் கூடாது; வியாபியல்லன் எனின், பசுபாசங்கள் அவனையின்றி அமைதல் கூடாது; ஆகலான் முதல்வன் ஒருவனே ஞாயிறும் ஒளியும் போலச் சிவமும் சத்தியும் எனத் தாதான் மியத்தால் இருதிறப்பட்டுச் சருவ வியாபியாய்ப் பொதுமையின் நிற்பன் எனச் சமவேதமாய் நிற்குமாறு தெளிவிக்கு முகத்தானே1 தாதான்மிய சத்தியுண்மைக்குப் பிரமாணங் கூறியவாறாம் என்று உணர்க. அஃதாமாறு, - தன்னை விளக்குவதூஉம் விடயங்களை விளக்குவதூஉம் தானேயாகிய ஞாயிறு ஒன்றுதானே விடயங்களை விளக்குழிக் கதிரெனவும், தன்னை விளக்குழிக் கதிரோன் எனவுந் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு இயைந்து நிற்றல் போல, புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன்னியல்பின் நிற்பதூஉம், புறப்பொருளை நோக்கி நின்று உணர்த்துவதூஉம் ஆகிய இரு தன்மையையுடைய பேரறிவாய சைதன்னியம் ஒன்றே, அங்ஙனம் புறப்பொருளை நோக்கி நிற்கும் நிலையில் சத்தியெனவும், புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய் நிற்கும் நிலையில் சிவம் எனவுந் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு இயைந்து நிற்கும் என உணர்க. இனி, தீயின் சத்தி யொன்று தானே சுடுதல் அடுதல் முதலிய தொழில் வேறுபாட்டால் சுடுஞ்சத்தி அடுஞ்சத்தி யென்றல் தொடக்கத்துப் பலவேறு வகைப்படுமாறு போல, 2சிவசத்தி யொன்றே காரிய வேறுபாட்டால், பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை யென்று ஐவகைச் சத்திகளாயும், முறையே ஐந்தும், நான்கும், எட்டும், பதின்மூன்றும் எட்டுமாகிய கூறுபாடுடைய ஈசானி முதலிய 3ஐவகைச் சத்திகளாயும், 4ஆரணி முதலிய மூவகைச் சத்திகளாயும், நிவிர்த்தி முதலிய ஐவகைச் சத்திகளாயும், 1வாமை முதலிய அட்ட சத்திகளாயும், பரவாகீசுவரி, அபரவா கீசுவரி, மனோன்மணி, மகேசை, உமை, திரு, வாணி யென எழுவகைச் 2சிவபேதங்கட்கும் முறையே யெழுவகைச் சத்திகளாயும், அத்தியான்மிக மெனப்படும் 3உன்மனை முதலிய கலைகளாயும், இன்னும் பல வேறுவகைப்பட்டும் நிற்கும். அவ்வச் சத்திகளோடு புணர்ந்த சிவமும் அவ்வாறே பலவகைப் பெயர்பெற்று நிற்கும். அவ்வச் சத்திகட்கிடமாய 4விந்துவும் அங்ஙனம் பலவேறு வகையான் விருத்திப்பட்டு அப்பெயர்பெறும். இவற் றின் இயல்பெல்லாம் ஆகமங்களுட் காண்க. இரண்டாஞ் சூத்திரம் முடிந்தது. மூன்றாம் சூத்திரம் 5உளதில தென்றலின் எனதுடல் என்றலின் ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில் உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின் மாயா வியந்திர தனுவினுள் ஆன்மா என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின் ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று என்பது கருத்துரை: என்னுதலிற்றோ வெனின் சூத்திரக் கருத் துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் “6அவையே தானே” என்றெடுத்துக் கொள்ளப் பட்ட உயிர், 7சூனிய முதலியவற்றுள் ஒன்றாகற் பாற்று என அவ்வம் மதம்பற்றி நிகழுங்கடாவை ஆசங்கித்து, உயிர் அவற்றிற்கு வேறாய் உண்டென்பது கருதலளவையான் விளக்கி, மேலைச் சூத்திரத்தின் உயிர்கள் மேல் வைத்தோதிய 1முதல்வனது இலக் கணத்தை வலியுறுத்துதல் மூன்றாஞ் சூத்திரத்தின் கருத்து எ-று. 2முதன்மையுடைமை பற்றி உலகிற்கு நிமித்த காரணமாகிய பதிப்பொருள் உண்டென்பது 3முதற் சூத்திரத்துட் கூறி, காரணமாதற் பொதுமையான் இயைபுடைமை நோக்கித் துணைக் காரண முதற் காரணங்களது உண்மையும், அவற்றான் உலகங் காரியப் படுமாறும் 4இரண்டாஞ் சூத்திரத்துட் கூறி, அவற்றான் ஆய பயன் கோடற்கு உரிய பசுக்களது உண்மைக்குப் பிரமாணம் ஈண்டுக் கூறுகின்றார் என உணர்க. இதனானே சூத்திர வியைபும் இனிது விளங்கும். இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு:- இலதென்றல் முதலிய அறுவகை யேதுக்களானும், மாயாவிந்திர தனு என்னும் பெயரடையால் பெறப்படும் 5குறிப்பேதுவானும், இவற்றின் வேறாய் இவ்வுடம்பினுள் உயிரெனப்படுவது ஒன்றுண்டு என்க. இது 6பூட்டுவிற் பொருள்கோள். உளதென்றது 7சாதி யொருமை. அறிதலின் என்றது ஐம்புலனோடுஞ் சென்றியையும். தனுவினுள் ஆன்மாவுளதென்றாரேனும், காணப்பட்ட வுடம்பாற் காணப்படாத வுயிருக்கு உண்மை கூற வேண்டுதலின், இவ்வுடம்பு சூனிய முதலியவற்றின் வேறாய ஆன்மாவை யுடைத்தென உடம்பின் மேல் வைத்தோதுதல் ஆசிரியர் கருத்து. அற்றாகலின் அன்றே, பதியுண்மை உலகின்மேல் வைத்தோதியதூ உம் என்பது. ஈண்டு மேற்கோள் ஒன்றாயினும், எழுவகை மதங்களை வேறு வேறு மறுக்கும் ஏதுக்கள் ஏழாகலான், ஆன்மாவுள தென்னும் மேற்கோள் அவற்றோடு தனித்தனியே சென்று இயைதலின், ஏழதிகரணத்த தாயிற்று இச்சூத்திரம் என்று உணர்க. இதனுட் கூறிய ஏதுவே ஏதுவும் மேற்கோளும் ஆகலான், ஏனைச் சூத்திரங்களுட்போல, வேறு ஏதுக் கூறவேண்டாமையின், இவை ஏதுவா மாறும், இவற்றான் மேற்கோளைச் சாதிக்குமாறும், இனிது விளக்கி வலியுறுத்துதல் மாத்திரையே ஈண்டு உரைக்கப் படுவது எனக் கொள்க. முதலதி கரணம். மேற்கோள். 1ஈண்டு இலது என்றலின் ஆன்மா உளது என்றது என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், சூனியான் மவாதி, தேகான்ம வாதி, இந்திரியான்ம வாதி, அந்தக்கரணான்ம வாதி, சூக்குமதேகான்ம வாதி, பிராணான்ம வாதி, விஞ்ஞானான்ம வாதி, சமூகான்ம வாதி யென்னும் எண்மருள், அந்தக்கரணான்ம வாதிகள், ஆன்மாவினது இலக்கணங்கூறும் 2வழி, அனுவாத முகத்தான் 3மறுக்கப்படுதலின், அவரையொழித்து, ஒழிந்த எழுவர் மதங்களையும் முறையே மறுத்து, உயிருண்மை சாதிப்பான் தொடங்கி, அவற்றுள், இது சூனியமே ஆன்மாவென 1மாத்தியமிகர் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. ஆன்மா இலதென்றலின் என வருவித்து உரைக்க. (பொ-ரை) எவற்றினையும் அன்று அன்று எனவிட்டு, ஆன்மா இலது என்று நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான் மாவாம் என்றது என்பது பொழிப்புரை. என்னுதலிற்றோ வெனின், ஆன்மா இலதென்றலே பற்றி, அஃது உண்டெனக் கோடல் முயற்கோடு இல்லை என்னும் ஏதுவால் அஃது உண்டெனச் சாதித்தலோ டொக்கும் என்னும் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று. (இ -ள்) ஆன்மா இலதென்னும் சூனியான்ம வாதிகளும் இல்லையென வாளா கூறுதல் அமையாமையின், உடல் பொறி விடயம் அனைத்தினையும் முறையானே இஃது ஆன்மா அன்று, இஃது ஆன்மா என்று என ஒரோவொன்றாகக் கழித்து, இவ்வாறாகலின், ஆன்மா வென்பது சூனியம் என்று அங்ஙனம் கூறுபவாகலான், அவற்றை ஒரோ வொன்றாகவிட்டு அங்ஙனம் கூறி நிற்பதோர் அறிவு உண்மையின், அவ்வறிவே மேல் “அவையே தானேயாய்” 2என்பதனுள், ஆகம வளவையாற் சாதித்துப் போந்த ஆன்மா என்றவாறாம்; ஈண்டு 3இலதென்றலின், ஆன்மா வுளதென மேற்கொண்ட தென்க. அங்ஙனம் அறியும் அறிவும் சூனியமே யெனின், அஃது என்னை ஈன்றாள் மலடியென்பதனோடு ஒக்கும் என்று ஒழிக வென்பது கருத்து. 4இன்மை, ஈண்டுச் சூனியப் பொருட்டு; சூனியமாவது உள்ளதும் அன்று, இல்லதும் அன்று, இரண்டு மாவதும் அன்று, வேறும் அன்றெனப்படும் பாழ். 1ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. உதாரணம் அன்றன் றெனநின் றனைத்தும்விட் டஞ்செழுத்தாய் நின்றொன் றுளததுவே நீயனைத்தும் - நின்றின்று தர்ப்பணம் போற் காட்டலாற் சார்மாயை நீயல்லை தற்பரமும் அல்லை தனி என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அவ்வறிவை உடல் பொறி விடய முதலியவற்றின் வேறாகப் பிரித்துக் காணுமாறும் அதுவே உயிராமாறும் தெரித்து உணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ -ள்.) அனைத்தும் நின்று அன்று அன்று எனவிட்டு - உடல் பொறி விடய முதலிய அனைத்தினும் அதுவது தானாக நின்று முறையானே இது நான் அன்று இது நான் அன்று என2 ஒரோ வொன்றாகக் கண்டு நீங்கியவழி; அஞ்செழுத்தாய் ஒன்று நின்று உளது - அவ்விடத்து அகர முதலிய 3சூக்கும பஞ்சாக்கர ரூபமாய் அறிந்து வந்ததோர் அறிவு நிலை பெற்று உளதன்றே; 4அதுவே நீ - அதுவும் நான் அன்றெனக் கழிப்பின் அங்ஙனம் கழித்த உணர்வு வேறுண்டு எனப்பட்டு மேலும் 5வரம்பின்றி யோடுமாகலின் 6சூக்கும பஞ்சாக்கர ரூபமாய் நின்று அறிந்து வந்த அவ்வறிவு தானே நீ யென்பது அறிவாயாக; அற்றேல், 1மாயேயமும் சிவமும் உளவென்பது மேலைச் சூத்திரங்களால் சாதிக்கப்பட்டமையின், அவையே அவ்வறி வினையும் அறிந்து நீக்கும் என அமையுமாகலான், வரம்பின்றி யோடுமாறு இல்லை யாலெனின், - சார்மாயை அனைத்தும் நின்று இன்று தர்ப்பணம்போல் காட்டலால் நீ அல்லை - நிலமுதலிய காரியம் அனைத்துமாய் நின்னொடு விரவி நின்று இப்பெத்த காலத்துக் 2கண்ணுக்குக் கண்ணாடிபோல் உனக்கு அறிவை விளக்கி நிற்றல் மாத்திரையே யன்றி அறிவது அன்று ஆகலான் நீ அம்மாயை யல்லை; தற்பரமும் அல்லை- 3மாயையான் விளங்கியறியும் நீ அதற்கு அதீதமாகிய சிவமும் அல்லை; தனி -4அவற்றின் வேறு என்க. விட்டவழி யென்பது விட்டெனத் திரிந்து நின்றது. அவ்வறிவாவது இது என்று உணர்த்துவார், அன்று அன்று என நின்று அனைத்தும் விட்டவழி யென ஏதுப்பொருளை அனுவதித்து அஞ்செழுத்தாய் ஒன்று நின்றுளது என 5அடையாளம் கூறினார். இதற்குப் பிறரெல்லாம் கூறியது கூறலென்னும் வழுப்பட மேலுமோர் இயைபின்றி யுரைத்தார். அனைத்தும் நின்று என்புழி, முன்னர்க் கண்ணுருபும், பின்னர் ஆக்கச் சொல்லும் 6தந்துரைக்க. ஏகாரம், தேற்றம். தற்பரம் என்றது 7குறிப்பேதுவாய் நின்ற பெயர். “அனைத்தும் நின்று இன்று தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீ யல்லை. தற்பரமும் அல்லை, தனி” என்றதனானே வருகின்ற 1அதிகரணங்களுக் கெல்லாம் தோற்றுவாய் செய்தவாறும் ஆயிற்று. இரண்டாமதிகரணம் இனி, 2எனது உடல் என்றலின் ஆன்மா உளது என்றது, என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், அவ்வறிவு உடம்பின்கண் ணன்றி நிகழக் காணாமை யானும், நான் நுணுகினேன் பருத்தேன் என உடம்பினையே நானென்று வழக்கங் காண்டலானும் உடம்பே ஆன்மா எனத் 3தேகான்மவாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. நான் பருத்தேன், சிறுத்தேன், கரியேன், மனிதன், பார்ப்பான் என உடம்பின் குண விசேடங்களை உபசாரத்தால் உயிருக்கேற்றி வழங்கினும், யான் உடம்பு, யான் கை, யான் கால் என வுடம்பை அவ்வாறு வழங்குவாரின்றி, எனது என வேற்றுமைப்படவே யாவரும் வழங்கக் காண்டலின், அதுவே உயிர் வேறு உண்டு என்பதனை அறிவுறுக்கும் என அவன் வழங்கு முறையே பற்றி அவனை மறுத்தவாறு. (பொ-ரை.) என் பதி என் மனை யென்றாற்போல என் கை என் கால் என நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது, என்பது பொழிப்புரை. என்னுதலிற்றோ வெனின், எனதுட லென்பது 1பிறிதின் கிழமைப் பொருள்படாது. தலை மாத்திரையாய் நிற்கும் இராகுவை இராகுவினது தலையென்று வழங்குமாறு போல, அபேதம் பற்றியே வழங்கப்படுமென அமையும் என்னும் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இராகுவினது தலையென்றாற் போல்வன சிறுபான்மை வழக்கமாதலின், ஆண்டு ஒற்றுமைப் பொருள் கோடல் அமையும்; ஈண்டு, அவ்வாறன்றி, என்பதி, என் மனைவி, என்பொருள் என்று வழங்குமாறுபோல, என்கை, என்கால், என்கண், என்செவி, என் பொறி, என்பிராணன், என்அறிவு எனப் பலவாற்றானும் பெரும் பாலும் உலகத்து வழங்கக் காண்டலின், இவ்வழக்க மிகுதிப்பாடு பிறிதின் கிழமைப் பொருட்கண் அன்றி, வாராமையான், அங்ஙனம் கூறிக்கொண்டு நிற்கும் பொருள் வேறொன்று உண்டென்பது பெறப்படுதலின், அதுவே மேல் உரையளவைபற்றிச் சாதித்த ஆன்மா வென்றவாறாம்; எனதுடலென்றலின் ஆன்மா வுளதென மேற் கொண்டதென்க.2 உதாரணம் எனதென்ற மாட்டின் எனதலா தென்னா துனதலா துன்கைகால் யாக்கை - எனதென்றும் என்னறிவ தென்றும் உரைத்துநீ நிற்றிகாண் 3உன்னிலவை வேறாம் உணர் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், பதி, மனைவி முதலிய பொருள்கள் தம்மின் வேறாதல் கண்டு பிறிதின் கிழமைப் பொருள்பட எனதென்றாற் போலன்றிக் கைகால் முதலியவற்றைத் தற்கிழமைப் பொருள்பட எனதென்று கூறி நிற்றலின், அவ்விரு வேறு மொழியும் தம்முள் ஒக்குமாறு என்னை என்னுங் கடாவை ஆசங்கித்து அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்.) எனது 1அலாது என்னாது எனது என்ற 2மாட்டின் - நீ உலகாயத நூல் கேட்குமுன்னெல்லாம் பதி மனைவி முதலிய புறப்பொருளையே உயிரெனக்கொண்டு மயங்கி நின்றாயன்றே, அக்காலத்து அவற்றை எனது அன்று என வேறு காணாது தனித்தனி எனது என்றே தற்கிழமைப் பொருளாகக் கூறிக்கொண்டு 3நின்றாற்போல; உனது அலாது உன் கை கால் யாக்கை எனது என்றும் என் அறிவதென்றும் உரைத்து நீ நிற்றிகாண் - உனதன்றாகிய உன் கை கால் யாக்கைகளைத் தனித்தனி எனதென்றும் அங்ஙனம் அறிந்த பாசவறிவை 4என்னறிவதென்றும் தற்கிழமைப் பொருளாகக் கூறிக் கொண்டு, நீ ஒரு பொருள் வேறு நிற்கின்றாய் காண்; உன்னில் அவை வேறாம் உணர் - உலகாயத நூல் ஆராய்ந்த பின்னர்ப் பதி மனைவி முதலிய பொருள்கள் உனக்கு வேறாதல் கண்டாற்போலக் கை கால் முதலியவற்றின் இயல்புகளை ஏதுக்கள் முதலியவற்றான் ஆராய்ந்து பார்த்தியாயின், அக்கைகால் முதலியன உனக்கு அன்னியமாம்; அதனை அறிவாயாக என்க. இன், உவமவுருபு. உனதலாது என்பதனைக் கை கால் யாக்கை களோடு தனித்தனி கூட்டுக. மூன்றாமதிகரணம் இனி, ஐம்புலன் அறிதலின் ஆன்மா வுளது என்றது, என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், ஐம்பொறிகள் ஐம்புலன்களை யறியும் என்றல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அவை உடல்போல் சடமன்மை பெறப்படுதலானும், அவற்றை எனதென்னும் வழக்கம் பெரும்பான்மையன்று ஆகலானும், அவையே உயிராதல் அமையும் என இந்திரியான்ம வாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்து மூன்றாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) 1வெளிப்படை (பொ - ரை.) 2ஐம்புலனாகிய சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்றறிந்தது ஒன்று அறியாமையின், இவ்வைந்தினானும் ஐம்பயனும் அறிவது உள தாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது, என்பது பொழிப்புரை. என்னுதலிற்றோ வெனின் ஐம்புலனறிதலின் ஆன்மா ஐம் பொறியின் வேறு எனச் சாதித்தற்கு ஏதுவாமாறு யாங்ஙனம் என்னும் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வெளிப்படை. உதாரணம் ஒன்றறிந்த தொன்றறியா தாகியுடன் மன்னி அன்றும் புலனாயவ் வஞ்செழுத்தை - யொன்றறிதல் உள்ளதே யாகி லதுநீ தனித்தனி கண் டுள்ளலவை யொன்றல்லை யோர் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், இந்திரியங்கள் ஒன்றறிந்ததை ஒன்று அறியாது என்றது ஒக்கும்; ஐந்தும் ஐந்து உயிரெனக் கோடலின், அதனான் எமக்கு ஆவதோர் இழுக்கில்லை; இனி இவ்வைந்தையுங்கொண்டு ஐம்புலனையும் ஒரு பொருளே யறியுமெனின், அதற்குப் பிரமாணங் கண்டிலம்; குடத்தைக் கண்ட யானே அதனைத் தீண்டினேன் என மறித்துணர்வு நிகழ்தல் ஐந்தும் ஓருடம்பின்கண்ணே நிலைபெறும் ஒற்றுமை பற்றி யமையும் எனக் கோடும் என்னும் கடாவை ஆசங்கித்து அதனை வலியுத்துதல் நூதலிற்று. (இ-ள்.) உடல் மன்னி ஒன்று அறிந்தது ஒன்று அறியாதாகி - 1உடம்பின்கண்ணே நிலைபெற்று ஒரு விடயத்தை யறிந்த இந்திரியம் மற்றொரு விடயத்தை யறியாதாய்; 2அன்றும் புலனாய் அவ் வைஞ் செழுத்தை - அங்ஙனம் தம் தம்முள் மாறுபடுஞ் சத்த முதலிய புலன்களைச் சூக்கும பஞ்சாக்கரத் தாற் செலுத்தப்பட்டு ஆராய்ந்து அறிகின்ற அவ்வைம் பொறிகளின் தொழிற்பாட்டை; அறிதல் ஒன்று உளதேயாகில் - கண் உருவத்தை யறிவது செவி ஓசையை யறிவதென்று இவ்வாறு உணர்தலை யுடையதோர் பொருள் இல்லதோ உள்ளதோ என வினாயினார்க்கு இல்லதெனின் அவ்வறிவு நிகழாதாதல் வேண்டுமாகலின் உள்ளதேயாம் எனின்; அது நீ - அவ்வாறு உணர்வது யாது அதுவே நீயாகிய ஆன்மா; அவ்வாறு உணர்வனவும் அவ்விந்திரியங்களே யென்றாற் படும் இழுக்கென்னை யெனின், - அவை தனித்தனி கண்டு உள்ளல் - 1அவ்விந்திரியங்கள் தத்தம் விடயங்களை வேறு வேறு கண்டறிதன் மாத்திரையே யன்றி இத்தொழிற்பாட்டையுடையேம் யாம் எனவும் அறிய மாட்டா வாகலான்; ஒன்றல்லை ஓர் - அவ்வைந்தன் தொழிற்பாட்டையும் அறிந்து அவற்றின் வரும் பயன் கொள்வதாய நீ அவற்றின் வேறாவை, அதனை ஆராய்ந்து அறிவாயாக என்க. 2ஆகி யென்னுஞ் சிறப்புவினை ஆய் என்னும் பொது வினையோடு முடிந்தது; 3“இவனும் இவளும் சிற்றிலிழைத்தும் சிறுபறை யறைந்தும் விளையாடுப” என்றாற்போல. ஆ யென்பது வினைத்தொகை. 4அவ்வஞ்செழுத் தென்க. அஞ்செழுத்தாற் செலுத்தப்பட்ட பொறியை ஆகுபெயரான் அஞ்செழுத் தென்றார். அஃது 5இருமடி யாகுபெயராய் ஐம்பொறியின் தொழிற்பாட்டை யுணர்த்தி நின்றது. உள்ளல் உள்ளலா லென்க. இம் மூன்றதிகரணங்களாலும் சாக்கிரத்தின் நிகழும் இயல்பு பற்றி ஆன்மாவின் உண்மை சாதிக்கப்பட்டது. நான்காமதிகரணம் இனி, ஒடுக்கம் அறிதலின் ஆன்மாவுள தென்றது. என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், 1“நேச விந்திரியங்கட்கு நிகழறிவு இதனாற் காண்டும்” என நீவிருங் கோடலின், அவ்விந்திரியங்களின் வேறாய் அங்ஙனம் அறிவது 2புரியட்டக வுடம்பேயாமென அமையும்; அது புறத்து நிகழாதாயினும், அகத்தே நின்று இந்திரியங்களைப் புறத்திற் செலுத்தி அறியுமெனக் கோடும் எனச் சூக்கும தேகான்ம வாதிகள் கூறுங் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் நாலாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற் கோடல் நுதலிற்று. (இ-ள்) ஐம்பொறிகளும் ஒடுங்கின சொப்பனத் தானத்தின் நிகழ்ந்தவற்றை யறிதலின், ஆன்மா வேறுண்டு எ-று, 3ஒடுக்கம், ஆகுபெயர். (பொ- ரை) 4நனவின்கட் கனவு கண்டாம் என்றும் கண்டிலம் என்றும் நிற்பது உளதாகலின் அதுவே ஆன்மாவாம் என்றது என்பது பொழிப்புரை. என்னுதலிற்றோ வெனின், சொப்பனத்தின் நிகழ்ந்தவற்றை அறிவதும் சூக்கும தேகமே யாகலின், இது 1சித்தசாதனமாமால் என்னுங் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் வெளிப்படை இஃது என் சொல்லியவாறோ எனின், ஒடுக்கமறிதலின் என்றது ஒடுக்கத்தின் நிகழ்ந்தவற்றை நனவின்கண் மயங்கி யறிதல் என்னும் 2பொருட்டாதலாற் சித்தசாதனமாதல் யாண்டையது என விடுத்தவாறு என்பது; கனவு கண்ட சூக்கும வுடம்பே நனவின்கண் அதனை யறியு மாயின் கண்டபடி யறியாது மயங்கி யறிதல் கூடாமையின், உயிர்க் காயின் அதுபோல் ஒரு தன்மைத் தாதலின்றி அகத்துச் சேறலும் புறத்துச் சேறலுமாகிய 3வேறுபாடுண்மையான், அதுபற்றி மயங்கி யறிதல் கூடுமாகலின் அங்ஙனம் அறியும் உயிர் வேறுண்டென்பது கண்டுகொள்க. உதாரணம் அவ்வுடலி னின்றுயிர்ப்ப வைம்பொறிக டாங்கிடப்பச் செவ்விதி னவ்வுடலிற் சென்றடங்கி - யவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி மீண்டதனை மாறலுட னீயல்லை மற்று என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், கனவின்கட் செல்லுமாறும் ஆண்டு நிகழுமாறும் மீளவருமாறும் உணர்த்தி4அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அவ்வுடலின் நின்றுயிர்ப்ப ஐம்பொறிகள் தாம் கிடப்ப - மேல் உயிரன்று எனக் கூறிப் போந்த தூலவுடம்பினின்று உயிர்ப்பனவாய ஐம்பொறிகள் ஆண்டே உயிர்ப்பொழிந்து கிடப்ப; அடங்கி அவ்வுடலில் செவ்விதின் சென்று - அவை அங்ஙனங் கிடந்த வழிப் புறத்து நிகழுந் தொழிற்பாடெல்லாம் அடங்கி அவ் வுடம்பினுள்ளால் 1வருத்தமின்றிச் சென்று; அவ்வுடலின் வேறொன்று கொண்டு விளையாடி - அத்தூல வுடம்பு போல அதனின் வேறாய 2தோருடம்பை யெடுத்துக் கொண்டு வேறோர் ஆற்றால் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று 3விளையாடி; மீண்டு அதனை மாறல் - மீளவதனை மாறி மேற்சேறலான்; நீ உடல் அல்லை - நீ அச்சூக்கும தேகமல்லை, அதனின் வேறாகுவை எ-று 4உயிர்ப்ப வென்றது அன் பெறாத அகரவீற்றுப் பலவறி சொல். உயிர்த்தல், தொழிற்படுதல். தாமும் மற்றும் அசை. மீண்டு, மீள, மாறல், மாறலான் என்க. 5மற்று, வினைமாற்று. இவ்வதிகரணத்தால் சொப்பனத்தின் நிகழும் இயல்புபற்றி உயிருண்மை சாதிக்கப்பட்டது. ஐந்தாமதிகரணம் இனி, கண்படில் உண்டி வினையின்மையின் ஆன்மா உளதென்றது; என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், சொப்பனத்தான மாத்திரையி னன்றித் தொழிற்படாத சூக்கும தேகம்போலன்றிச் சுழுத்தி துரியங்களினும் தொழிற்படுவதாய பிராணவாயுவே அடங்குதல் விடுதல் செய்து அறிவதாகிய ஆன்மாவாதல் அமையும் எனப் 1பிராணான்ம வாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் ஐந்தாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) 2வெளிப்படை. 3உண்டிவினை, உம்மைத்தொகை. அஃது “உண்டியும் வினையும் இன்றிக் கிடந்து” 4என வழிநூலாசிரியர் கூறிய வாற்றானும் உணர்க. (பொ -ரை) ஒடுங்கினவிடத்து இன்ப துன்பஞ் சீவனம் பிர கிருதிக்கு இன்மையின், ஒடுங்காதவிடத்து இன்ப துன்பம் சீவியாநிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது. என்பது பொழிப்புரை. என்னுதலிற்றோ வெனின், கண்படை கொண்டவழி உண்டி வினையில்லை யென்றது உடற்கோ? பிராண வாயுவுக்கோ? என வினாயினார்க்கு உடம்பு உயிரன்மையான் அதற்கு அவை இல்லாமை பற்றி ஈண்டைக்கு ஆவதோர் இழுக்கில்லை; இனிப் பிராணவாயுவுக்கு எனின், அது துயின்றெழுந்த பின்னர்ச் சுகமாகத் துயின்றேன் என்று அறிதல் பிறிதோராற்றால் பெறப்படாது என்னும் அருத்தாபத்தியான், 1ஆண்டும் இன்பநுகர்ச்சி உண்டென்பது பெற்றாம்; விழித்துழிப்போல உறங்குழியும் பிராணவாயு இயங்குதலான், வினையுண்மையும் கண்டாமாகலின், அதற்கு அவை ஆண்டு இல்லை யென்றல் மாறுகோள்போலும் என்னுங் கடாவை ஆசங்கித்து அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஈண்டு உண்டியென்றது விடயங்களின் இடமாக வரும் இன்ப துன்ப நுகர்ச்சியை; வினையென்றது உடம்பு சேட்டித்தலை யாகலின்; இவையிரண்டும் 2பிராணவாயுவை யொழித்து ஒழிந்த கருவிகளெல்லாம் ஒடுங்கிய துயிலிடத்து அஃதியங்கா நிற்பவும், உடம்பின்கண்ணே நிகழ்தலின்மையின், அவையொடுங்காத நனவினிடத்து அவையிரண்டும் அதன்கண் நிகழ்தலுண்மையின், அவ்வின்மை யுண்மைகட் கேதுவாகக் கருவிகளை யொடுக்கியும் ஒடுக்காதும் நிற்பது யாது அதுவே அவ்வான்மா என்றவாறாம். கண்படில் உண்டிவினை யின்மையின் ஆன்மாவுளதென மேற்கொண்டது எ-று. பிராணவாயுவை யொழித்து ஒழிந்த கருவிகளென்பது 3ஆற்றலான் வந்தது. இன்ப துன்ப நுகர்ச்சியை 4இன்பத் துன்பமென்று உபசரித்தார். சீவனம், சீவித்தல்; சேட்டித்த லென்றவாறாம். 5செவ்வெண்தொகை விகாரத்தால் தொக்கது. சீவியாநிற்ப தென்பது சீவியாநிற்ற லென்னுந் தொழிற்பெயர் மாத்திரையாய் நின்றது, “உறங்குவது போலும்” என்புழிப்போல. 1உளதென்றது, தனித் தனி சென்றியையும். துயின்றுழியும் விழித் துழியும் திரிபின்றி ஒரு தன்மைத்தாதல் பற்றி உடம்பு 2பிரகிருதி யெனப்பட்டது. 3பிரகிருதிக் கென்றது உருபுமயக்கம். இரண்டு காலத்தும் ஒப்ப இயங்குதல் பற்றிப் பிராண வாயுவைப் பிரகிருதியெனக் கொண்டு அதற்கு அவையின்மையின் என்றுரைப்பாரும், பிரகிருதி விகாரமாகிய சித்தத்திற்கு அவை இன்மையின் என வுரைத்துச் சுழுத்தியின்கண்ணுந் தொழிற் படுவதாய சித்தமே உயிர் என்னுஞ் சித்தான்ம வாதிகளை மறுத்தற்கு எழுந்தது இவ்வதிகரணமென் றுரைப்பாரும் உளர். உதாரணம் கண்டறியும் இவ்வுடலே காட்டொடுங்கக் காணாதே உண்டிவினை யின்றி யுயிர்த்தலால் - கண்டறியும் உள்ளம்வே றுண்டா யொடுங்கா துடனண்ணில் உள்ளதா முண்டிவினை யூன் என்பது உதாரணம். என்னுதலிற்றோவெனின், துயிலிடத்துக் கருவிகளெல்லாம் ஒடுங்குதலின் இன்பத் துன்ப நுகர்ச்சியும் சேட்டையும் பிரகிருதிக்கு இல்லையாயின வாகலான், அதுபற்றிப் பிராணவாயுவை ஆன்மா என்றற்கு இழுக்கென்னை யென்னுங்கடாவை ஆசங்கித்து அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) கண்டறியும் இவ்வுடலே - 4கண்டறிதற்கு நிலைக் களமான இவ்வுடம்பின்கண்ணே; 5காட்டுக் காணாதே ஒடுங்க -காட்டாய கருவிகள் தொழிற் படாதே ஒடுங்கவும்; உண்டி வினையின்றி - அவை ஒடுங்கிய வழி 1உண்டியும் வினையும் பிரகிருதிக் கில்லையாகவும்; உயிர்த்தலால் - பிராணவாயு நிலைபெற்று இயங்குதலான்; கண்டறியும் உள்ளம் வேறு உண்டு - 2கண்டறியும் உரிமையுடைய உயிர் பிராணவாயுவின் வேறாயுண்டு; ஒடுங்காது உடல் நண்ணில் ஊன் உண்டிவினை உள்ள தாம் - அவ்வுயிர் ஒடுங்காது அவ்வுடலின்கண் எய்திற்றாயின் அவ்வுடம்பு கருவிகளின் தொழிற் பாட்டானாய உண்டியும் வினையும் உடைத்தாம்; ஆய் - அதனை யாராய்ந்தறிவாயாக எ-று. இஃது 3அருத்தாபத்தியளவை. கண்டறிதல், ஒரு பொருட் பன்மொழி. 4இன்றி யென்பது வினைக்குறிப்புச் செயவெ னெச்சத்திரிபு. 5சிறப்பும்மைகள் தொக்கன. அவை, “அறிந்திடாது உடல் உறக்கத்து அறிவின்மை கரணமின்மை, அறிந்திடு முதலியாகின் அதுநிற்கக் கரணம் போகாது ” 6என்னும் பொருள் விளைத்து நின்றன. ஊன், ஆகுபெயர். உயிர் வேறுண்டு என்றதனை வலியுறுத்து வார் 7உடம்பாட்டு முகத்தானும் ஓதினார். இவ்வதிகரணத்தானே சுழுத்தி துரியங்களின் இயல்புபற்றி உயிருண்மை சாதிக்கப்பட்டது. இதுகாறுஞ் “சார்மாயை நீ யல்லை” 1என்றதனை வலியுறுத்தவாறு. ஆறாமதிகரணம் இனி, உணர்த்த வுணர்தலின் ஆன்மா வுளதென்றது, என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், பிரமப்பொருள் மேற்கூறிப் போந்த சடப்பொருள்கள் போலன்றிச் சித்தாகலான், அதுவே உயிராதல் அமையும் என 2விஞ்ஞா னான்மவாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் ஆறாங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ -ள்) தொழிற்படுங் கருவிகள் ஒன்றும் இன்றிக் 3கேவலமாய் அதீதாவத்தையில் நின்றுழி அறியுமாறின்றிப் பின்னர்க் 4கலை முதலிய கருவிகளால் அறிவிக்க அறிந்துவருதல் உண்மையின், எக்காலத்தும் திரிபின்றி அறிந்தாங்கு அறிந்துநிற்கும் சித்தாகிய 5பிரமத்திற்கு இது தகாமையான் அங்ஙனம் உணரும் ஆன்மா வேறுண்டு எ-று. உணர்த்த உணர்தலெனவே, முன் உணராது கிடத்தல் பெற்றாம். (பொ -ரை) அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான் மாவாம் என்றது, என்பது பொழிப்புரை. என்னுதலிற்றோ வெனின், அறிந்தாங் கறிவதாகிய பிரமப்பொருள் அவிச்சைக் காலத்துக் கருவிகளோடுங் கூடியன்றி அறியாதெனக் கோடுமாகலின், அதுபற்றி உயிர் வேறுண்டென்றல் பொருந்தாது என்னும் கடாவை ஆசங்கித்து அவ்வளவில் அவன் மகிழுக என்னும் நியாயத்தால் மேலும் அதன் தாற்பரியம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) கருவிகளோடு கூடிய வழியும் தன்னியல்பு உணரு மாறில்லாத ஆன்மாவைப் போல 1அம்முதல்வன் மறந்து மறந்தறி தலின்றி அறிந்தவாறே யறிந்து நிற்கும் பேரறியுடையனென 2வேதாகமங்களான் அறிவிக்க அறிந்து, குரவன் அறிவுறுக்கும் உபதேச மொழியைப் பெற்றுடையதாய் நிற்பதொன்றுள தாகலின், அதுவே மேல் 3உரையளவையாற் சாதித்துப் போந்த ஆன்மா வென்றவாறாம்; உணர்த்த உணர்தலின் ஆன்மா உளதென மேற்கொண்டது, எ-று. அறிந்தாங் கென்பது அப்பொருட்டாதல் “எண்ணிய வெண்ணியாங் கெய்துப” 4என்பதனானுமறிக. 5இதற்குப் பிறவாறும் உரைப்ப; அவையெல்லாம் ஈண்டைக்குப் பொருந்தாமை ஓர்ந்துணர்க. உதாரணம் அறிந்து மறிவதே யாயு மறியா தறிந்ததையும் விட்டங் கடங்கி - யறிந்த தெதுவறிவு மன்றாகு மெய்கண்டா னொன்றின் அது வதுதா னென்னு மகம் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், கருவிகளோடு கூடிய வழியும் அவிச்சை நீங்காமையின் விடயங்கண் மாத்திரையே அறியுமன்றித் தன்னியல்பு அறியுமாறில்லை; அஃது உபதேசத்தால் அறியற் பாலதேயா மாகலான், அது பற்றி யிழுக்கென்னை என்னும் கடாவை 1ஆசங்கித்து, அதனையும் மேற்கூறிய நியாயத்தான் உடம்பட்டு இன்னுமொரு தாற்பரியம் உரைக்கு முகத்தானே விடயங்களை யறிவுழியும் படும் வேறுபாடு கூறி 2அதனை வலியுறுத்துதல் நுதலிற்று; அவன் அறிந்தாங் கறியுமாறும் உயிர் மறந்து மறந்து அறியுமாறும் தெரித்துணர்த்தி வலியுறுத்துதல் நுதலிற்றெனினும் அமையும். (இ-ள்) அறிந்தும் அறிவதே ஆயும் அறியாது - கருவிக ளெல்லாவற்றோடும் கூடிச் சாக்கிரத் தானத்தினின்று விடயங் களை யறியுமிடத்தும் ஒருங்கே யறியமாட்டாது ஒன்றனையே யறிந்தும் ஒன்றனை யறியப் புகுவதாயும் முன்னறிந்த தொன்றனை அறியா தொழிந்தும்; அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி - இங்ஙனம் ஓரோ வொன்றாக அறியப்பட்ட விடயத்தையும் இடையீடின்றியறிய மாட்டாது விட்டு விட்டு ஆங்கே ஐந்தவத்தைப் பட்டு அடங்கி; அறிந்தது - மீளவறிந்து வருதல் கண்கூடாகக் காணப்படு தலான் அங்ஙனம் அறிந்துவந்த பொருள் யாது அது சடமன்று என்பது மேற் காட்டப்பட்டது, முன்னரும் காட்டப்படும்; அறிவும் அன்று - ஒன்றாக இயல்பாக உணர்தலே பேரறி வாகலின்1 அதுவும் அன்றாம்; மெய்கண்டான் ஒன்றின் - இனி மெய்யாகிய சித்தாந்த நெறியினை யுணர்ந்தோன் வேறென்னையோவென 2மனம் ஒருங்கி ஆராயுமாயின்; அது அது தான் என்னும் அகம் ஆகும் -காட்டும் ஒளிக்கு வேறாய கண்ணொளி போல அவ்வறிவிற்கு வேறாய் அதுவதுவே தானெனச் சார்ந்ததன் வண்ணமாய் நின்றறியும் இயல்பையுடைய வுயிராம் எ-று. அறிந்தும் அறிவதேயாயும் என்னும் உம்மைகள் எண்ணின் கண் வந்தன. அறியாதும் என்னும் எண்ணும்மை விகாரத்தாற் றொக்கது. அறிந்ததையும் என்னும் உம்மை இழிவு சிறப்பு. 3அறிவும் என்னும் உம்மை இறந்தது தழீஇயது. ஏகாரம் அசைநிலை. அங்கு, உணர்த்து முறைமைத் தானமாகிய இலாடத்தின் என்றவாறு. அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி யறியுமாறு வருகின்ற 4சூத்திரத் திறுதியினும், அதுவது தானெனச் சார்ந்ததன் வண்ணமாமாறு 5உண்மை யதிகாரத்தும் பெறப்படும். அறிந்தும் அறிவதே யாயும் அறியாது அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி யறிந்தது எது என்பதற்கு ஓதியதனை ஓதியபொழுதே யுணர்ந்தும், பலகால் ஓதி யுணர்வதாயும், பலகால் ஓதியும் உணர்தலின்றியும், உணர்ந்ததனையும் பின்னர் மறந்தொழிந்தும், இவ்வாறு ஓதி யுணர்ந்தது யாது என்று உரைத்தலும் ஒன்று. இப்பொருட்கு அடங்கி யென்புழியும் எண்ணும்மை விரித்துரைக்க. இங்ஙனம் 1மூவகைப் படுத்துரைப்பவே, உணர்த்த வுணர்தல் என்னும் ஏதுவான், முறையே அதீதத்தின்கண் நிகழுமியல்பு பற்றியும் சுத்தத்தின்கண் நிகழும் இயல்பு பற்றியும், உணர்த்து முறைமைக் கண் நிகழும் இயல்பு பற்றியும் உயிருண்மை சாதிக்கப் பட்டது. இது “தற்பரமுமல்லை” 2என்றதனை வலியுறுத்தவாறு காண்க. விஞ்ஞானமே ஆன்மா வென்னும் 3புத்தரின் யோகசாரன் மதத்தை மறுத்தற்கெழுந்தது இவ்வதிகரணம் எனக்கொண்டு அதற்கு இயையவுரைப்பாரு முளர். ஏழாமதிகரணம் மேற்கோள் இனி, மாயா வியந்திர தனுவினுள் ஆன்மா வுளதென்றது, என்பது மேற்கோள். என்னுதலிற்றோவெனின், உடம்பு முதலியவற்றுள் ஒரோ வொன்றே ஆன்மாவாதல் இன்று என்றது ஒக்கும்; அவற்றுள் ஒன்று குறைந்த வழியும் அறிவு நிகழாமையானும், எல்லாங் கூடிய வழி அது நிகழ்தலானும் அனைத்துங் கூடிய சமுதாயமே உயிராதல் அமையும் எனச் சமூகான்ம வாதிகளாகிய சௌத்திராந்திகர் 4வைபாடிகர் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இறுதிக் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற் கோடல் நுதலிற்று. (இ -ள்) மாயா காரியங்களான் யாக்கப்பட்டு இயன்ற சூத்திரப்பாவை போலும் உடம்பின்கண்ணே அவற்றிற்கு வேறாய் ஆன்மா வுண்டு எ-று. எனவே, 1அவை யெல்லாம் மாயையின் காரியங்களாய் நிலை பெறாதன வாகலின் நிலைபேறுடைய உயிராகா என்றவாறாயிற்று. மாயை, 2ஆகுபெயர். இகரம், விரித்தல் விகாரம். ஏது. அவை தாம் வெவ்வேறு பெயர்பெற்று நிற்றலான், என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், 3சித்தமும் சித்தப் பகுதியுமாகிய அகச்சமுதாயம் ஐந்தும் மாயா காரியம் என்பது எம்மனோர்க்கு உடம்பாடன்மையின், அதுபற்றி ஆன்மா வேறுண்டெனச் சாதித்தல் அமையுமாறு என்னை என்னும் கடாவை ஆசங்கித்து “அவ்வளவில் அவன் மகிழுக” என்னும் நியாயம் பற்றி வேறும் ஓர் ஆற்றல் சாதித்தல் நுதலிற்று. (இ -ள்) நீ 4ஐந்து கந்தமெனக் கொண்ட மாயா காரியங்கள் ஆன்மாவெனப் பெயர்பெறுமாறு இன்றி வேறு வேறு பெயர் பெற்று நிற்பனவாகலான், மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா வுளது என மேற்கொண்டது எ-று. 5வேறு வேறென்பது வெவ்வேறென மரீ இயிற்று. உதாரணம் கலையாதி மண்ணந்தங் காணிலவை மாயை நிலையாவாந் தீபமே போல - அலையாமல் ஞானத்தை முன்னுணர்ந்து நாடிலது தனுவாம் தானத்தின் வேறாகுந் தான் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அவை தனித்தனி வெவ்வேறு பெயர் பெறினும், தொக்க சமுதாயத்தின்கண் ஆன்மாவெனப் பெயர் பெறுமெனக் கோடுமாகலின், அதுபற்றி இழுக்கென்னை யென்னுங் கடாவை ஆசங்கித்து, அவை வெவ்வேறு பெயர்பெறும் வழியும் 1அவர் கூறியவாறு பெயர் பெறாது 2வேறு பெயர் பெறுமாறும், அவை மாயா காரியங்களே யாமாறும், அவை தொக்க சமுதாயத்தினும் 3ஆன்மாவெனப் பெயர் பெறாது வேறு பெயர் பெறுமாறும் உணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ- ள்) காணின் கலையாதி மண் அந்தம் - அங்ஙனம் சமுதாய மாதற்குரியவை யாவை யென்று 4அளவைகளான் அறியப்புகின் கலை முதல் நிலமீறாகிய தத்துவங்களேயாம்; அவை மாயை நிலையாவாம் - அவையனைத்தும் மாயையின் காரியங்களாகலின் நிலையுதலின்றிச் சிலகாலம் நின்று அழிவனவாம்; 5ஞானத்தை அலையாமல் முன் உணர்ந்து நாடில் - அவை தொக்க சமுதாயத்தின் விளங்கித் தோன்றுவதாய ஞானத்தின் இயல்பை அசையாமல் கருத்தை ஒருக்கி முன்னுணர்ந்து, பின் அச்சமுதாயத்தை யாதென்று ஆராயின்; அது தீபமே போலத் தனுவாம் - அச்சமுதாயம் கண்ணுக்கு விளக்குப்போல உயிர்க்குத் தூல சூக்கும பரங்களாகிய உடம்பாம்; தான் அத்தின் வேறாகும் தான் - ஆதலால், கண் விளக்கின் வேறாயினாற்போல உயிர் அவ்வுடம்பின் வேறாம் எ-று. ஆமென்பது 1மேலுஞ் சென்றியையும். மாயை, 2ஆகுபெயர். தான் என்பது முன்னையது எழுவாய், பின்னையது அசை. அதனின் என்பது அத்தினென மரீஇயிற்று; “இத்தை மெய்யெனக் கருதி3” என்புழிப்போல. இதனானே “தனி” 4யென்றதனை வலியுறுத்தவாறு. இவ்வாறு மூன்று சூத்திரத்தானும் சைவாகமங்களுட் கூறப்படும் பதி முதலிய பொருள்களது உண்மை அனுமான அளவையான் வலியுறுத்தப்பட்டது. ஆகமவளவையே அமையு மாகலின் அனுமான அளவை மிகையாம்போலும் எனின், ஆகாது; மந்தவுணர்வுடைய மாணாக்கர்க்கு வேற்றுச்சமய நூல்களை நோக்கியவழிச் சைவாகமப் பொருளில் மலைவு நிகழாமைப் பொருட்டும், கேட்டல் சிந்தித்தல் தெளிதல் நிட்டையென்னும் நான்கு வகையானன்றி, ஆகமங்களைக் கேட்ட துணையானே அனுபவம் கூடாமையின், சிந்தனை செய்து வன்மை மென்மைகளை உணர்ந்து தெளிந்து கோடற் பொருட்டும் கருதலளவையும் வேண்டப்படு மாகலான் 5என்க. மூன்றாஞ்சூத்திரம் முடிந்தது இலக்கணவியல் நான்காஞ்சூத்திரம் அந்தக் கரண மவற்றி னொன்றன் றவை சந்தித்த தான்மாச் சகசமலத் துணரா தமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே. என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின் இதுவுமது. என்பது கருத்துரை. என்னுதலிற்றோ வெனின், இச்சூத்திரக் கருத்தணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பிரமாணம் இலக்கணம் இரண்டானும் பொருளுண்மை பெறற்பாற் றென்னும்1 முறைமை பற்றி, மேற்பிரமாணத்தாற் பெறுவிக்கப்பட்ட பதிபாச பசுக்களுக்கு இலக்கணம்2 எதிர்நிரல் நிறையாக வைத்துக் கூறுவான் றொடங்கி, அவற்றுள் இது மேல் அடுக்கிநின்ற ஆன்மாவின் இலக்கணம் கூறுதல் நுதலிற்று. சொற் பல்காமைப் பொருட்டும், ஓத்து வேறாய வழியும் இயைபுடைமை யுணர்ந்து கோடற் பொருட்டும், ஈண்டு இதுவுமது என மாட்டெறிந் துரைத்த3 ஆசிரியர், இங்ஙனம் உரைத்துக் கோடற் கேற்பவன்றே, 4ஆண்டு, ஆன்மாவின் உண்மை யுணர்த்துதல் நுதலிற்றெனச் சிறந்தெடுத்து ஓதாது பொதுப்பட “ஆன்மப்பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்” றென்றதூஉ மென்க. இவ்வாறன்றி, மேலைச் சூத்திரத்தின்கண் ஆன்மாவினது உண்மை கூறுமுகத்தால்1 தொகுத்தோதிய அஞ்சவத்தை, ஈண்டு இலக்கணம் கூறுமுகத்தான் விரித்தோதப்படுதலின், இதுவுமது என்றது மேலைச் சூத்திரப் பொருளோடு மாட்டெறிந்தது என்ற உரைப்பினுமாம். 2இதனானும் சூத்திர வியைபு இனிது விளங்கும். இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு: ஆன்மா, அந்தக் கரணங்களாகியமனம் புத்தி அகங்காரம் சித்தமென்னும் நான்கனுள் ஒன்றன்று ஆயினும், நுண்ணுணர்வின்மையின் சூழ்ச்சித் துணை வராகிய அமைச்சரோடு கூடி நின்று தன் தொழில் நடாத்தும் அரசன்போல, சகச மலத்தினான் உணர்வின்றிக் கஞ்சுகம்போலும் கலாதிகளால் பொது வகையான் உணர்வு நிகழினும், சிறப்பு வகையான் நிகழுமாறு அவற்றாற் பெறப்படாமையின், சிறப்பு வகையான் உணருமாறு தனக்குச் சூழ்ச்சித் துணையாகிய அவ்வந்தக் கரணங்களோடு கூடி நின்று சாக்கிர முதலிய ஐந்தவத்தை யுடைத்தாம் எ-று. எனவே, 3அங்ஙனம் நின்று அஞ்சவத்தைப்படுதல் ஆன்மாவுக்கு 4இலக்கண மென்றவாறாயிற்று. இஃது உயிர்க்குத் தடத்த விலக்கணம் என்னும் பொதுவியல்பு. ஒன்றன்றாயினும் சகசமலத் துணராது அமைச்சரசு ஏய்ப்ப அவற்றோடு சந்தித்து நின்று அஞ்சவத்தைத்தாம் என இயையும். உணராது சந்தித்தது என்பது 1காரண காரியப் பொருட்டாய் நின்றது. 2சந்தித்தது வினையெச்ச முற்று. இவ்வாறன்றி, ஆன்மா அவற்றி னொன்று அன்றாயினும், சகச மலத்து உணராமையால் அவற்றோடு சந்தித்தது; சந்தித்த வழி அவையுந் தானும் அமைச்சு அரசேய்ப்ப நிற்றலான் ஐந்தவத்தைத் தாயிற்று என அதிகரணம் பகுத்துக் கோடற்கேற்ப 3வேறு வேறு வினை முடிபு செய்து உரைத்தலும் ஒன்று. வடமொழிச் சூத்திரத்து 4ஓதுதலின், ஈண்டும் ஆயினுமென வருவித்து ஒரு தொடராக வைத்துரைக்க. அந்தக்கரணம் அவற்றின் ஒன்று அன்றாயினும் எனவே, அவற்றின் ஒன்றன்றாதலும், அனுவாத முகத்தால் ஈண்டே பெற்றாம். இஃது உணராதார், அந்தக்கரணம் அவற்றினொன்றன்று என்றதனை வேறு தொடராக வைத்துரைப்ப. அங்ஙனம் உரைப்பின், முன் வருவன வற்றை அவாய் நின்று 5ஒரு பொருள் மேல்வாராமையின் ஒரு சூத்திரமாதற்கு ஏலாமை யறிக. அவை சந்தித்தது என்புழி 6ஒடுவுருபு விகாரத்தால் தொக்கது; இரண்டாவது விரிப்பினும் அமையும். ஆன்மா வென்பது மேலைச் சூத்திரத்தினின்றும் வருவித்து உரைக்கற் பாலதாகவும், ஈண்டு வேறு ஓதியது ஓத்து வேறாதல் பற்றி யென்றுணர்க. ஆன்மா வென்னுஞ் சொற்குப் பொருள், வியாபகம் என்பதூஉம் சித்தசித்து என்பதூஉம் ஆம். மலத்து, மலத்தாலென விரிக்க. அமைச்சரசு, அமைச்சரோடு கூடிய அரசென உருபும் பொருளும் உடன்றொக்கன. காரணப் பொருட்டாய நின்று என்னும் 1வினையெச்சம் 2அஞ்சவத் தைத்து என்னும் வினைக் குறிப்பு முற்றோடு முடிந்தது. இதனுள், அந்தக்கரணம் அவற்றின் ஒன்றன்று என்பது ஓரதி கரணம்; ஒன்றன்றாயினும் சகசமலத் துணராது அமைச்சர சேய்ப்ப அவை சந்தித்தது என்றது ஓரதிகரணம்; அமைச்சர சேய்ப்ப நின்று அஞ்சவத் தைத்தே என்றது ஓரதிகரணம்; ஆக மூன்றதிகரணத்தது இச்சூத்திரம் என்றுணர்க. முதலதிகரணம் மேற்கோள் ஈண்டு இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாயுள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில் ஒன்றன்று என்றது, என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின் 3‘ஏனையவெல்லாம் வெவ்வேறு பெயர் பெற்று நிற்பனவாகலான் உயிராகா; ஆயினும், மன முதலிய அந்தக்கரணங்கள் “சிந்தையைச் சீவனென்றும் சீவனைச் சிந்தை யென்றும்” 4இங்ஙனம் உயிரென்னும் பெயரானும் வழங்கப் படுதல் உண்மையானும், இந்திரிய முதலியவற்றை அவ்வாறு கூறாமையின் அஃது 5ஆகு பெயரென்றற்கு ஏலாமையானும், அவையே தனித்தனி ஆன்மாவாம் என்றல் அமைவுடைத்து’ என அந்தக் கரணான்மவாதிகள் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. 1இது மேலைச் சூத்திரத்துள் ஓதற்பாலதே யாயினும், ஈண்டு இலக்கணங் கூறும் வழியும் அவற்றோடு சந்தித்து அமைச் சரசேய்ப்ப நிற்பது என அவத்தைக்கு ஏதுவாக எடுத்தோத வேண்டுதலின், ஈரிடத்தும் எடுத்தோதுதல், “சில்வகை யெழுத்தின் செய்யுட்டாகிச் சொல்லுங்காலைப் பெரும் பொருள் அடக்கி, நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்தாகி” 2என்னும் இலக்கணத்ததாய சூத்திரத்துக்கு ஏலாமையான், அதுபற்றி விதிமுகத்தானன்றி 3அனுவாத முகத்தான் ஈண்டு உணர்த்தப்பட்டது. இதன் பொருள் 4வெளிப்படை. ஈண்டு அந்தக்காரணம் என்றது உள்ளந்தக் கரணமாகிய கலாதிகளினும் செல்லாமைப் பொருட்டு, மனோ புத்தி யகங்கார சித்தங்களில் எனக் கிளந்தெடுத்து உரைத்தார். கலாதிகள் உண்டெனக் கொண்டோரின், உயிர் வேறு உண்டு எனக் கொள்ளாதார் இன்மையின், ஆண்டு ஆசங்கை நிகழாமையானும், அமைச்சரோடு உவமிக்கப்பட்டு அவத்தைக் கேதுவான அம்மன மாதியே யன்றிக் கஞ்சுகத்தோடு உவமிக்கப்பட்டு அதீதத்தினும் நீங்காது உடனிற்பனவாய கலாதிகளன்மையானும், 5அவற்றை ஈண்டு எடுத்து ஓத வேண்டாமையின் மன முதலிய புறவந்தக் கரணங்களே ஈண்டுக் கூற நின்றன என்பது கருத்து. ஏது அவை தாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான், என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், “மனமும் புத்தி யகங்காரஞ் சித்த நான்கு, மருவி யான்மாவே யென்ன வரும்” 1என நீயிருங் கோடலின், உயிர் அவற்றுள் ஒன்றாதல் அமையுமென்றாற் படும் இழுக்கு என்னை 2யென்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) அவ்வந்தக்கரணங்கள் தாம் தம்மிற் 3கீழுள்ளவற்றை நோக்கிச் சித்தாய் நின்றே, தம்மை நோக்கி அசித்தாய் நிற்றலால், தன்னை நோக்கியுஞ் சித்தாய் நிற்கும் இவ்வான்மாவாவது அந்தக் கரணங்களாயுள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில் ஒன்றன்று என மேற்கொண்டது எ-று. எனவே உயிரான் 4அதிட்டிக்கப்பட்டு ஐம்பொறிகள் அறிந்த விடயங்களுள் ஒன்றனை இஃது யாதாகற் பாற்றெனச் சித்தம் சிந்தித்தறியும்; யான் சிந்தித்தேனென்று அறியமாட்டாது. 5மனம் அதனை இன்னதாகற்பாற் றெனவும், அஃதாமோ அன்றோ வெனவும் இவ்வாறு சங்கற்ப விகற்பம் செய்தறியும்; யான் சங்கற்ப விகற்பஞ் செய்தேனென்று அறியமாட்டாது. அகங்காரம் அதனை இன்னதெனத் துணிவேன் யான் என்று ஒருப்பட் டெழுந்து அறியும்; யான் ஒருப்பட்டெழுந்தேனென்று அறிய மாட்டாது. புத்தி அதனை இன்னது இதுவென நிச்சயித்தறியும்; யான் நிச்சயித்தேனென்று அறியமாட்டாது. ஆகலான், அவ்வாறின்றி அவற்றோடு கூடி, யான் சிந்தித்தேன், பற்றினேன், எழுந்திருந்தேன், நிச்சயித்தேன் என்றும், அதன்பின், அதுவதுவாய்ப் பரிணமித்துச் 1சுகதுக்க மோகரூபமாய்த் தன்மாட்டு வந்த 2புத்தி தத்துவத்தின் பரிணாமங்களைக் கலாதிகளோடு கூடிநின்று, “இது சுகம்; இது துக்கம்; இது மோகம்” என்று அறிந்தும், “யான் சுகித்தேன்; யான் துக்கித்தேன்; யான்மோகித்தேன்” என்று அறிந்தும், இங்ஙனம் பிறவற்றை நோக்கியும், தன்னை நோக்கியும், சித்தாகிய ஆன்மா தம்மை நோக்கிச் சித்தாகாத அந்தக்கரணங்களின் ஒன்றாமாறு யாண்டையதென மறுத்தவா றாயிற்று. “இவன் தானும் புத்தியும் சித்து இவனாமோ புத்தி”3என வழிநூலாசிரியர் கூறியதும் இவ்வியல்பு நோக்கி. ஈண்டுப் பிரகாசம் அப்பிரகாசம் என்பன சித்து அசித் தென்னும் பொருளவாம். ஏனையோரை நோக்க, அரசனுக்கு அணுக்கராதற் சிறப்புப் பற்றி அமைச்சர் அரசரென்று உபசரித்துக் கூறப்படுமாறு போல, 4புறக் கருவிகளை நோக்க, ஆன்மாவுக்கு அணுக்கமாய் நிற்றற் சிறப்புப் பற்றி, “மனம், புத்தி, அகங்காரம், சித்தம் நான்கும் மருவி யான்மாவே யென்ன ” 5உபசரித்துக் கூறப்படும் அத்தனை யென்று ஒழிக. சூழ்ச்சித் துணையாதல் பற்றி அந்தக்கரணங்கள் அமைச்சரை ஒக்கும் எனவே, ஏனைக்கருவிகள் ஏனைப் பரிசனங்கள் ஒக்கும் என்பது பெற்றாம். அது ஞானாமிர்தத்திற் காண்க.6 மேலைச் சூத்திரத்தின்கண் ஓதிய 1ஏதுக்களே ஈண்டைக்கும் அமையுமாயினும், 2சிறந்தமை பற்றி வேறு ஏது கூறினார். உதாரணம் மனமாதி யாலுணர்தல் மன்னு புலன்கள் மனமாதி மன்புலனின் அல்லன் - மனமேல் உதித்தொன்றை உள்ளம் உணர்தல் அதனின் உதிக்குங் கடற்றிரையை யொத்து என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அவ்வந்தக்கரணங்கள் தம்மிற் கீழுள்ளவற்றை நோக்கச் சித்தாமாறும், தம்மின் மேலுள்ளவற்றை நோக்கவும் தம்மை நோக்கவும் அசித்தாமாறும் தெரித்துணர்த்தி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) மனம் ஆதியால் உணர்தல் மன்னு புலன்கள் - மனமுதலிய அந்தக்கரணங்களால் உணரப்படுவன ஐம்பொறி களால் தரப்பட்டுப் புறத்தே நிலைபெற்ற விடயங்களாம்; உள்ளம் உணர்தல் மனம் மேல் உதித்த ஒன்றை - ஆன்மா உணர்வது மனத்துக்கு மேலெனப்படும் புத்தியில் தோன்றிய தொன்றனையாம்; கடல் திரையை ஒத்து உதிக்கும் - அவ்விருவேறு உணர்வும் 3கடலிடை யெழுந்து கரைசாரும் திரைபோலப் பரம்பரையின் ஆன்மாவின்மாட்டு வந்து தோன்றும்; அதனின் மனம் ஆதி மன்புலனின் அல்லன் - அதனானே மன முதலியன அவ்விடயங்களின் வேறாயினாற் போல ஆன்மாவும் அம்மன முதலியவற்றின் வேறாம் எ-று. உதிக்கு மென்னும் பயனிலைக்கு 1உணர்தல் இரண்டும் எழுவாய். செவ்வெண்தொகை விகாரத்தால் தொக்கது. புலனின், இன் உவம வுருபு. மன், அசை. அல்லனென ஆடூஉவறி சொல்லாற் கூறியது 2வடமொழி மதம் பற்றி.3உதித்த வென்னும் பெயரெச்ச வீறு விகாரத்தால் தொக்கது. புத்தியில் தோன்றியது ஒன்றாவது சுகதுக்க மோகரூப விடயம். பரம்பரையில் தோன்றுதலாவது முன்னர் 4வாயிற்காட்சி யுணர்வு தோன்றி, அதன்பின் மானதக் காட்சியுணர்வு தோன்றி அதன்பின்னர்த் தன் வேதனைக் காட்சி யுணர்வு உயிரின்கண் வந்து தோன்றுதல். இதனானே அந்தக்கரணம் கீழுள்ளவற்றை நோக்கச் சித்தா மாறும், மேலுள்ளவற்றை நோக்க அசித்தாமாறும் உயிர் அவ்வாறன்றி யாண்டும் சித்தாமாறுங் கண்டுகொள்க. உதாரணம் சிந்தித்தாய்ச் சித்தம் தெளியாதால் ஆங்காரம் புந்தியாய் ஆய்ந்து மனமாகிப் - பந்தித்து வெவ்வேறு தானே துணிந்துள்ளம் இவ்வேறாம் அவ்வேறாம் போதுபோல் ஆங்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், மேற் பொதுவகையாற் கூறிப் போந்த அந்தக்கரணங்களின் இயல்பு சிறப்பு வகையாற் கூறுமுகத் தான் மானதக் காட்சியுள்ளும் கடல் திரைபோலப் பரம்பரையின் வெவ்வேறாய் உணர்வு நிகழுமாறு உணர்த்தி உயிர் வேறாதலை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ - ள்) உள்ளம் - 1புருட தத்துவமென நின்ற உயிர்; ஆங்கு - 2வாயிற் காட்சியாற் கண்ட. விடயங்களின் ஒன்றனை மனமாதியான் உணரும் 3மானதக் காட்சியின்கண்ணும் ஒரு பெற்றித் தாதலின்றி; சித்தமாய்ச் சிந்தித்து - சித்தமாய் நின்று இஃது யாதாகற் பாற்று எனச் சிந்தித்தும்; மனமாகிப் பந்தித்து - அதன்பின் மனமாய் நின்று இஃது இன்னதாகற்பாற்று எனப் பற்றியும்; ஆங்காரமாய்த் தெளியாது - அதன்பின் அகங்காரமாய் நின்று இஃது ஆமோ அன்றோ, இதனை இன்னதெனத் தெளிவேன் யான் எனத் தெளிவு பிறவாது எழுந்தும்; புந்தியாய் ஆய்ந்து - அதன் பின்னர்ப் புத்தியாய் நின்று இஃது இன்னது எனத் தெளிந்தும்; வெவ்வேறு தானே 4துணிந்து இவ்வேறாம் - இங்ஙனம் வெவ்வேறாகவே யுணர்தலான் அவ்வாறு உணரும் புருடன் இவ் வந்தக்கரணங்களின் வேறாம்; போது அவ்வேறாம் போல் - ஞாயிறு முதலியவற்றோடு கூடி நின்று நாழிகை நாள் பக்கம் திங்கள் யாண்டு முதலியனவாய் பாகுபாடு செய்யப்படும் காலதத்துவம் அஞ்ஞாயிறு முதலியவற்றின் வேறாயினாற்போல் எ.று. ஆய்தல் ஈண்டு நிச்சயித்தற் பொருட்டு. துணிதலென்பது அறிதலென்னும் பொருண் மாத்திரையாய் நின்றது. தான், அசை. ஏகாரம் தேற்றம். இவ்அவ் என்பன வகரவீற்று அஃறிணைப் பன்மைச் சுட்டுப்பெயர். வேறாம் போதுபோல் எனவே, ஆண்டு நீக்கப் பொருள் ஞாயிறு முதலியன வென்பது தானே விளங்குமென்பது நோக்கி, அவ்வெனச் சுட்டி யொழிந்தார். 1சாரியையும் உருபும் உடன் தொக்கன. சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. ஆங்கும் வெவ்வேறு தானே துணிந்து எனவே மானதக் காட்சியும் இங்ஙனம் 2நால் வேறு வகைத்தாய் ஒன்றற்கொன்று முறையே ஏதுவும் பயனுமாய் கடற்றிரைபோலப் பரம்பரையில் தோன்றும் என்றவாறா யிற்று. 3செய்யுளாகலின் முறை பிறழ வைத்தார். அகார வுகார மகங்காரம் புத்தி மகார மனஞ்சித்தம் விந்துப் - பகாதிவற்றை நாத முளவடிவா நாடின் பிரணவமாம் போதம் கடற்றிரையே போன்று என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அம்மானதக் காட்சியின் நிகழும் 4சவிகற்ப உணர்வுக் கேதுவாய் அவற்றை உடனின்று செலுத்தும் அக்கரங்கள் இவை யென்பதும் அவற்றான் உணர்வு மாறிமாறித் தோன்றுமாறும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) 1வெளிப்படை. “மன்னு மகார மனஞ் செலுத்தும் புத்தியினை உன்னு முகார முபகரிக்கும் - முன்னாகு மாங்காரந் தன்னை யகாரஞ் செலுத்தியிடும் நீங்காத சித்தம் விந்து நேர்2” என்பவாகலானும், ஈண்டோதிய முறையே முறை யெனவும், “அவ்வுடனுவ்வு மவ்வு மனம் புத்தி யகங்காரங்கள்” 3என வழி நூலாசிரியர் ஓதியது எதிர் நிரனிறைப் பொருளெனவுங் கொள்க. “அவ்வுடனுவ்வுமவ்வு மனம் புத்தி யகங்காரங்கள்” என்றதே முறையெனக் கொண்டு அதற்கு இயையக் கொண்டு கூட்டி யுரைப் பாருமுளர். பகாது இவற்றை நாடின் பிரணவமாம் எனவும் போன்றாம் எனவும் கூட்டுக. அந்தக்கரணங்களைச் செலுத்தும் அக்கரங்களைக் கூறுவார், ஒப்புமைபற்றிப் 4புருடனைச் செலுத்தும் அக்கரமும் உடன் கூறினார். உடனின்று செலுத்துதல் பற்றி 5அபேதமாக வைத்தோதப்பட்டன. “நிகழ்ந்திடும் வாக்கு நான்கும் நிவிர்த்தாதி கலையைப் பற்றி”6 அகர முதலிய பஞ்சகலை வடிவாய் நின்று இவற்றை வேறுவேறு செலுத்துதல் பற்றிக் கணந்தோறும் நினைப்பும் மறப்புமாகிய சகல கேவலங்கள் அதிநுட்பமாய்க் கறங்கோலை போல மாறிமாறி நிகழும் எனவும், மாசகலத்தின் கண் கணந்தொறும் அங்ஙனம் உணர்வுதித்தும் ஒடுங்கியும் வருதல் சமுத்திரத்தின்கண் புதிது புதிதாய்த் திரை தோன்றியும் ஒடுங்கியும் வருமாறு போலும் எனவும் உணர்க. 1கடற்றிரை யுவமை மேற் பரம்பரையாய் உணர்வு வருதற்கு எடுத்துக் காட்டினார்; ஈண்டுப் புதிது புதிதாய் வருதற்கு எடுத்துக் காட்டினார்; ஆதலாற் புனருத்தி யன்மை யுணர்க. எண்ணில வோங்காரத் தீசர் சதாசிவமா நண்ணிய விந்துவொடு நாதத்துக்- கண்ணின் பகரயன் மாலோடு பரமன்அதி தெய்வம் மகரவுக ரம்அகரத் தாம் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அவ்வக்கரங்களும் சட மாகலின் அவற்றை யதிட்டிக்கும் அதிதெய்வங்கள் இவை யென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) 2எண்ணிலவு ஓங்காரத்து நண்ணிய விந்துவொடு நாதத்து அதிதெய்வம் கண்ணில் ஈசரொடு கூடிய சதாசிவமாம்; அகரவுகர மகரத்து அதிதெய்வம் கண்ணின் பகரயன் மாலோடு பரமனாம் எ-று. எண்நிலவு ஓங்காரம், எண்ணத்தின்கண் நிலவிய ஓங்காரமென வினைத்தொகை. எண்ணம் ஈண்டு மானதக்காட்சி. ஒடு, எண்ணின் கண் வந்தது. ஈண்டு அயன் மால் பரமன் என்றது சுத்த வித்தையின் வைகுவாரை. பரமன் உருத்திரன். 3மகர வுகரம் மகரத்தாம் என்புழி மகரம் இசைப்பொருட்டாய் ஒற்றில்வழி ஒற்றாய் வந்தது. இரண்டாமதிகரணம் மேற்கோள் இனி, இவ்வான்மா சகசமலத்தினால் உணர்வின்று என்பது, என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், ஆன்மா அந்தக்கரணங்களின் ஒன்றன்றாயின் அவற்றோடு சந்தித்து நிற்றற்கு ஏது என்னை யென அவர் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங் கூற்றைக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) 1வெளிப்படை. 2ஆகந்துக மலங்களின் நீக்குதற்குச் சகசமலமென விசேடிக்கப் பட்டது; படவே, உயிர் முதல்வனைப்போல் அந்தக்கரண முதலியவற்றின் வேறாய்ச் சேதனப் பொருளாயினும், செம்பிற் களிம்பு போல வேறு காரணமின்றி மூலமலம் தன்னோடு உடனாய் நிற்றலின் தன்னியல்பான் உணருமாறு இன்றிக் கருவிகளைக் கூடிநின்று உணர்வதாயிற்று என விடுத்தவா றாயிற்று. இதனானே “மலத்துளதாம்”3 என மேற் பிரமாணத்தாற் பெறுவிக்கப்பட்ட மூலமலத்திற்கு, ஈண்டு இலக்கணம் கூறினா ரென்பது பெறுதும்; அறியாமையைச் செய்தலாகிய கேவலத்தின் நிகழும் இயல்பே மலத்திற்குத் 4தன்னியல்பு; கருவிகளோடு கூடி அவத்தையுறுவதாகிய விபரீத வுணர்வைச் செய்யும் சகலத் தினிகழும் இயல்பே 5பொது வியல்பாகலான். மலத்திற்கு 6இருவகை இலக்கணமும் ஈண்டே பெறப்பட்டன. ஏது அதுதான் ஞான திரோதகமாய் மறைத்துக் கொடு நிற்றலான், என்பது ஏது. என்னுதலிற்றொ வெனின், சகசமலத்தினால் உணர்வின்றி யொழியின் பின் கருவிகளோடு கூடியவழி அறிவுண்டாமாறு யாங்ஙனம் எனச் 1சற்காரிய வாதம் பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) அச் சகசமலமாவது ஞானத்திற்குத் திரோதகமாய் அதனை யில்லை யென்னும்படி மறைத்துக்கொண்டு நிற்றலான், இனி இவ்வான்மாச் சகசமலத்தினால் உணர்வின்றென மேற்கொண்டது எ-று. மலத்தினது இலக்கணம் வடமொழி வழக்குப்பற்றிக் கூறுவார் ஞான திரோதகமா யெனவும், அதனைத் தமிழ் மொழியான் விளக்குவார் மறைத்துக் கொடு நிற்றலான் எனவும் கூறினாராகலான், 2அது கூறியது கூறலன்மை யுணர்க. திரோதக மென்னும் வடமொழி மறைத்தலைச் செய்வதென்னும் பொருட்டாய் 3வினை முதன் மேனின்ற வினைப்பெயர். இதனானே ஞானாபாவமே அஞ்ஞான மென்பார் மதமும் மறுக்கப்பட்டது, 4அபாவம் ஒரு காரியத்தைச் செய்ய மாட்டாமையின். உதாரணம் மாயா தனுவிளக்கா மற்றுள்ளம் காணாதேல் ஆயாதா மொன்றை யதுவதுவாய் - வீயாத வன்னிதனைத் தன்னுள் மறைத்தொன்றாம் காட்டம்போல் தன்னைமல மன்றணைதல் தான் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், ஆகந்துகமலமே ஞான திரோதக மாதலமையும், வேறுமோர் மலமுண்டென்றல் மிகைபோலும் என ஐக்கிய வாத சைவர் முதலியோர் மதம் பற்றி நிகழுங் கடாவை ஆசங்கித்து ஆகந்துகமலத்தானும் சகசமலத்தானும் செயப்படுங் காரியங்கட்குத் தம்முள் வேற்றுமை பெரிதாமாறு உணர்த்து முகத்தான் ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) உள்ளம் மாயா தனு விளக்காக் காணாதேல் ஒன்றை ஆயாதாம் - உயிர் 1ஆகந்துக மலமெனப்படும் மாயா காரியமாகிய வுடம்பு தனக்குக் 2காட்டாகக்கொண்டு காணாதாயின் ஒரு விடயத்தையும் அறிவதில்லையாம்;3 மற்று மலம் தன்னை அன்று அணைதல்தான் - சகசமலம் உயிரை யனாதியே பற்றி நிற்றல்; அதுவதுவாய் வீயாத வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம் போல் - காட்ட முதலியவற்றுள் அதுவது வேயாய் நின்றுந் தனக்குக் கேடில்லாத வன்னியைத் தனக்குள் மறைத்து வைத்து ஒன்றேயாய் நிற்கும் காட்டம் போலும் எ-று. எனவே காட்டாய் நின்று விடயங்களை யறியும்வண்ணம் உயிர்க்கு அறிவை விளக்குதல் மாயையின் செய்தி; அவ்வறிவைத் தடை செய்துகொண்டு நிற்றல் மலத்தின் செய்தி; இவ்விரண்டும், இங்ஙனம் 1ஒளியும் இருளும்போல இகலி நிற்பனவாகலான், அத்தன்மைத்தாய மாயை இத்தன்மைத்தாய மலமாதல் யாண்டையது என மறுத்தவா றாயிற்று. மற்றென்பது மலமன்றணைதல் என்பதனோடு இயைந்து வினைமாற்றின்கண் வந்தது. 2முற்றும்மை சிறப்பும்மைகள் தொக்கன. 3ஆமும் தானும் கட்டுரைக்கண் வந்த அசை. வன்னி அதுவதுவாதல், காட்டத்துள் மறைந்துழிக் காட்டமே யாயும், சூரிய காந்தத்துண் மறைந்துழி அதுவேயாயும், இவ்வாறே அவ்வவற்றின் மறைந்துழித் தான் என்பது ஒன்றில்லை யென்னும் படி நிற்றல். அங்ஙனமாகியும் வீயாமை, கடைதல் முதலிய தொழிற்பாடு நிகழ்ந்தவழித் தோன்றுதலாற் பெற்றாம். தன்னுள் மறைத்தல் வன்னி யென்பது ஒன்றில்லை யென்னும்படி பொதிந்து கொண்டு தானேயாதல். ஒன்றாம் காட்டம், ஒன்றே போல் அத்துவிதமாங் காட்டமென்றவாறு. இவ்வாறு உவமைக்கோதிய அடையும் தொழிலும் இயைபும் 4பொருட்கண்ணும் கூறிக்கொள்க. மாயை கன்மங்கள் போல 5ஆதியன்றெனக் காலத்தாலும் வேற்றுமை கூறுவார், அன்றணைதல் என்றார். இங்ஙனங் கூறிப்போந்த மலமாவது ஞானபாவ மென் பாரும், பிராந்தி ஞானமென்பாரும், தமோகுண மென்பாரும், 6பஞ்சக் கிலேசத்துள் ஒன்றாகிய அவிச்சை யென்பாரும், 7மாயை கன்மங்களென்பாரும், சிவசத்தி யென்பாரும், 1உயிர்க்குண மென்பாருமாய் அவ்வச்சமய நூல்பற்றி மயங்குவாருமுளர். அம்மலத்திற்குப் பற்றுக்கோடாகிய சூனிய முதலியவற்றின் வேறெனப்பட்ட ஆன்மாவும் இயற்கையாற் 2சடமென்பாரும், அறிவு மாத்திரையே யெனக் 3குணிப்பொரு ளன்றென்பாரும், 4சுதந்திர வறிவுடைத் தென்பாரும், 5அவ்வுடம்பளவிற் றென்பாரும், 6அணுவளவிற் றென்பாரும், 7உருவென்பாரும், 8அரு வென்பாரும் 9உருவரு வென்பாருமாய் இன்னும் பல திறப்படக் கூறி மயங்குவாரு முளர். அவையெல்லாம் பொருந்தாமை ஆகமங்களுட் காண்க; ஈண்டுரைப்பிற் பெருகும். இச்சகசமலம் ஞான திரோதகமாய்த் 10திரவியமாய் அறியாமைக் குணத்ததாய்ச் செம்பிற் களிம்புபோல உயிரின் குற்றமாய் அனாதிபந்தமாய்ச், - 11சடமுமாய்ப் பலவுமாயின் அழிவெய்து மாகலின், அனாதி பந்தமாதல் பெறப்படாமையின்,- ஒன்றேயாய், விஞ்ஞானாகலர், பிரளயாகலர், சகலரென்னும் உயிர்ப் பாகுபாட்டிற் கேதுவாய், உயிர்கள் தோறுந் தனித்தனி வெவ்வேறாய் மறைத்து நின்று 12தத்தங் காலவெல்லையில் நீங்குவனவாகிய சத்திகள் பலபல வுடைத் தாய் உயிர்கள் மூன் 13றவத்தைகளும் படுதற்கு மூலகாரணமாய், நித்தமாய், வியாபகமாய், வியாபகவுயிர் 1அணுத்தன்மைப் படுமாறு செய்தலின் ஆணவ மென்னும் பெயர்த்தாய்ப், பசுத்துவம், பசுநீகாரம், மிருத்தியு, மூர்ச்சை, மலம், அஞ்சனம், அவித்தை, ஆவிருதி என்றற்றொடக் கத்துக் காரணக் குறிகளுமுடைத்தாய் நிற்பதெனவும், படலம் படர்ந்தகண் ஞாயிற்றின் சந்நிதியில் நிற்பினும் படலத்தான் அவ்வொளியை யிழந்து இருளின் அழுந்துமாறு போல, முதல்வன் சந்நிதியில் நிற்பினும் 2சோபான முறையின் அறிவிக்க அறியுந் தன்மைத்தாயவுயிர் அநாதியே அறிவித்தால் அறிய மாட்டாமையின், அம்மாட்டாமையான் அவ்வறிவை யிழந்து அறியாமையாய் அழுந்துதலின் அஃது அவ்வுயிர்க்குப் பந்தமாயிற் றெனவும் உணர்க. அனாதியே மலத்தின் நீங்குதல் முதல்வன் வினையாய் அனாதி முத்தத் தன்மையென எண்குணங்களுள் வைத்து எண்ணப் படுவது என்பது சிவாகமங்களுக் கெல்லாம் ஒப்ப முடிந்தாற்போல, அனாதியே மலத்தைப் பற்றுதல் உயிரின் வினையாய் உயிர்க் குற்றங்களுள் வைத்து எண்ணப்படுவ தென்பதூஉம் அவற்றிற் கெல்லாம் ஒப்ப முடிந்தது. ஈண்டுப் படும் கடா விடைகளெல்லாம் ஈரிடத்தும் ஒக்கும். மூன்றாமதிகரணம் மேற்கோள் இனி இவ்வான்மா சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதமாயுள்ள பஞ்சாவத்திதனாய் நிற்கும் என்றது, என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், இருளினகப்பட்ட கண் விளக்கோடு கூடிய வழி, விடயங்களைக் காண்டலே யன்றி வெவ்வேறு அவத்தைப் படுமாறு இல்லை; அதுபோல மலத்திலகப்பட்ட உயிர் கருவிகளோடு சந்தித்தவழி ஒரு தன்மைத்தாய் அறிதலே அமைவுடைத்து; அவ்வாறன்றி, மேலைச் சூத்திரத்து ஓதிய முறையான் ஐம்புலன் அறிந்தும், ஒடுக்கம் அறிந்தும், உண்டி வினையின்றிக் கிடந்தும், உணர்த்த வுணர்ந்தும், இங்ஙனம் வெவ்வேறு அவத்தைப்படுமாறு யாங்ஙனம் என அவர் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இறுதிக் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) 1வெளிப்படை. அவத்தையெனப் படுவன 2பலவுளவாகலின், அவற்றுள், ஈண்டு அவத்தையெனப் பட்டவை யாவை யென்னும் ஐயம் நீங்குதற்குக் கிளந்தெடுத்துரைத்தார். அவத்திதன் என்னும் வடமொழி ஆடூஉவறி சொல்லாற் கூறியது அவர்மதம் பற்றி. அமைச்சர சேய்ப்ப நிற்றலான் என்பதூஉம் ஈண்டு வருவித் துரைத்துக்கொள்க. கொள்ளவே, “படைகொடு பவனி போதும்” வேந்தன், “கடைதொறும் விட்டுவிட்டுக் காவலுமிட்டு” 3அந்தப் புரத்திற் செல்லுமாறு போல, ஆன்மா அங்ஙனம் அஞ்சவத்தைப் படுதல் அமைவுடைத்தென விடுத்தவாறாயிற்று. ஏது அதுதான் மலசொரூபத்தின் மறைந்து அரூப சொரூபியாய் நிற்றலான், என்பது ஏது. என்னுதலிற்றோ வெனின், அரசன்போல் உயிர் அங்ஙனம் அஞ்சவத்தைப் படுமாயின், 1வியாபகத்திற்கு இழுக்காய் முடியும் போலும் என்னும் கடாவை ஆசங்கித்து மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) அவ்வுயிர்தான் மலவடிவின் மறைப்புண்ட வழி, அருவுடம்பாகிய 2தத்துவ சொரூபியாய் நிற்றலான், அத்தத்துவங்கள் தொழிற்படும் அவத்தை வேறுபாடு பற்றி, இனி இவ்வான்மா சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதமாயுள்ள பஞ்சாவத்திதனாய் நிற்கும் என மேற்கொண்டது எ-று. “3சீவனோ வியாபி அவத்தையின் இழிந்து திரும்புதல் குற்றமாம் கருவி சேருதல் பிரிதல் இல்லையாம் முறையிற் செயப்படுங் கருவியே தெரியும், தாவிலா அறிவு தங்கின இடமே தகுமுயிர்க்கு இருப்பிடம்” என்றதூஉம் இப்பொருள் பற்றி யென்க. 4தத்துவ வன்ன ரூபனாதல் வீடு பெற்றுழியும் உண்டுபோலும் என்று ஆசங்கை நிகழாமைப் பொருட்டு, மலசொரூபத்தின் மறைந்தென 5மேற்கூறிப் போந்ததனை வழிமொழிந்துகொண்டு அரூப சொரூபியாய் நிற்றலான் என்று 6ஏதுக்கூறினார். மறைத்தவழி யென்றது மறைந்தெனத் திரிந்து நின்றது; உதாரணம் ஒன்றணையா மூலத் துயிரணையு நாபியினில் சென்றணையும் சித்தம் இதயத்து - மன்றவே ஐயைந்தா நன்னுதலிற் கண்டத்தின் வாக்காதி மெய்யாதி விட்டகன்று வேறு. என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், தத்துவங்கள் தொழிற்படுதற் கண் நிகழும் அவத்தை வேறுபாடு தெரித்துணர்த்தி அஃது ஏதுவாதலை வலியுறுத்துதல் நுதலிற்று. நன்னுதலில் வாக்காதி மெய்யாதி மன்ற 1ஏய் ஐயைந்தாம்; கண்டத்தின், வாக்காதி மெய்யாதி விட்டகன்று வேறு ஐயைந்தாம்; இதயத்திற் சித்தம் சென்றணையும்; நாபியினில் உயிரணையும்; அணையா மூலத்து ஒன்று என இயையும். (இ-ள்) நன்னுதலில் வாக்காதி மெய்யாதி மன்ற ஏய் ஐயைந்தாம் - சாக்கிரத்தானம் எனப்படும் 2இலாடத்திற் புறவிந்திரியம் பத்தினையும் தேற்றமாகப் பொருந்திய இருபத்தைந்து கருவி தொழிற் படும்; கண்டத்தின் வாக்காதி மெய்யாதி விட்டு அகன்று வேறு ஐயைந்தாம்- சொப்பனத்தானம் எனப்படும் கண்டத்தின் அப் பத்தினையும் விட்டு நீங்கி வேறாய 3இருபத்தைந்து கருவி தொழிற்படும். இதயத்திற் சித்தம் சென்றணையும் - சுழுத்தித்தானம் எனப்படும் இதயத்துள் அவற்றுள் இருபத்திரண்டு கருவிகளை விட்டு நீங்கி முன்னர்க் கூறப்படும் 1இரண்டு கருவிகளோடு கூடிய சித்தம் தொழிற்படும்; நாபியினில் உயிர் அணையும் - துரியத்தானம் எனப்படும் உந்தியிற் சித்தத்தையும் விட்டு நீங்கி முன்னர்க் கூறப்படும் புருட தத்துவத்தோடு பிராணவாயுக் கூடித் தொழிற்படும்; அணையா மூலத்து ஒன்று - இக்கருவிகளொன்றும் அணையாத அதீதத்தானம் எனப்படும் மூலாதாரத்திற் புருட னொன்றே நிலைபெறும் எ-று. எனவே இலாடத்தான முதலிய ஐந்தினும் நிற்கும் கருவிகள் முறையே 2முப்பத்தைந்தும் இருபத்தைந்தும் மூன்றும் இரண்டும் ஒன்றும் என்பது போந்தவா றுணர்க. மன்ற வென்பது தேற்றப்பொருட்டாகிய இடைச்சொல். ஏய் ஐயைந்து என்புழி, ஏய்தல் பொருந்துதல், வினைத்தொகை . வாக்காதி மெய்யாதியை யென இரண்டாவது விரித்துரைக்க. அஃது ஈரிடத்தும் சென்று இயையும். வருகின்ற சூத்திரத்தில் “மெய் வாய் கண் மூக்கு”3 எனச் செய்யுட் கேற்ப, மெய்யை முற்கூறுதலின், அம்முறைபற்றி ஈண்டுச் செவியாதி யென்னாது மெய்யாதி யென்றார். அவற்றொடு கூடிய இருபத்தைந்தாவன; அவ்விந்திரியம் 4பத்துக்கும் விடயமாகிய 5வசனாதி சத்தாதி பத்தும், அவற்றிற்கு உட்கருவியாகிய அந்தக் கரணங்கள் நான்கும், அவற்றோடுகூடி அவத்தை யுறுவதாகிய புருடனொன்றும், அஃது அவத்தை யுறுதற்குரிய 6மதுகைக் கேதுவாய் அகங்காரத்தாற் செலுத்தப்படும் 7பிராணாதி வாயுக்கள் பத்துமென இவை. ஈண்டுச் 1சத்தாதி யென்றது வசனாதி போலும் விடயங்களை யெனக் கொள்க. எனவே, பூதங்களின் கூறாய் அவற்றுடனின்று தேராழிக்குத் தேருறுப்புப்போல இந்திரியங்களின் தொழிற்பாட்டுக்கு மதுகையை விளைத்து நிற்பனவாய 2புறக்கருவி அறுபதில் ஈண்டுக் கூறிப்போந்த விடயங்கள் பத்தும் வாயுக்கள் பத்தும் ஒழித்து ஒழிந்த புறக்கருவிகள் நாற்பதும், அவற்றையுடைய பூதங்களைந்தும் அவற்றிற்கு வலியாய் உடனிற்பனவாய சூக்கும பூதமெனப்படும் தன்மாத் திரைகளைந்தும் என்னும் ஐம்பது கருவிகளும் கீழ்நோக்கிய சாக்கிரத்தானத்தில் தமது சத்தி மடங்கி வினைக்கீடாகத் தொழிற்படா தொழியு மெனவும், அவை ஒழிந்தவழி அவத்தைக் கேதுவாய் நின்ற ஏனைப் பொறி முதலிய முப்பத்துநான்கும் அவற்றோடு கூடிய புருட தத்துவமும் இருவகைப் பூதங்களானும் புறக்கருவிகளானும் தரப்படும் மதுகை யின்மையின், ஆண்டுப் பொறிகளின் தொழிற்பாடு மெத்தென நிகழுமெனவும் கொள்க. 3கலாதிகளும் சுத்த தத்துவமும் அவத்தைக் கேதுவாகாமையின் உடனெண்ணாராயினார். ஏனையவும் விரிந்த நூல்களுட் கூறியவாறு பற்றி யுணர்ந்து கொள்க. உதாரணம் இலாடத்தே சாக்கிரத்தை யெய்திய வுள்ளம் இலாடத்தே யைந்தவத்தை யெய்தும் - இலாடத்தே அவ்வவ விந்திரியத் தத்துறைகள் கண்டதுவே அவ்வவற்றின் நீங்கல் அது வாங்கு. என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அங்ஙனம் அதீதத்தை யெய்திய புருடன் மீளப் 1பிரேரக அவத்தையாகிய உணர்த்து முறைமைச் சாக்கிரத்தைத் தலைப்படுமாறு அனுவாத முகத்தான் விளக்கி, அவ்விடத்தினும் முறைமையிற் செலுத்தும் 2பிரேரகக்கருவிகள் ஐந்தன் தொழிற்பாடு பற்றி ஐந்தவத்தை நிகழுமென்பதூஉம் அவை இவை யென்பதூஉம் சுத்தாவத்தையும் இவைபோல் உண்டு என்பதூஉம் கூறி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம் - இலாடத் தானத்தின் நீங்கி ஆண்டாண்டு அவத்தைப்பட்டுக் 3கீழ்ப்போந்து மூலாதாரத்தின் எய்தியபின் மறித்தும் அவ்வாறே ஆண்டாண்டு அவத்தைப்பட்டு மேற்சென்று இலாடத் தானத்தின் 4உணர்த்து முறைமைச் சாக்கிரத்தைத் தலைப்பட்ட புருடன்; இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் - ஆண்டும், சாக்கிரச் சாக்கிர முதலிய ஐந்தவத்தையுறும்; இலாடத்தே அவ்வவ இந்திரியத்து அத்துறைகள் கண்டு - அவை யாவன அவ்விலாடத் தானத்தின்கண்ணே அவ்வப் பொறிகளான் அவ்வவ் விடயங்களை யுணர்ந்து; அதுவே - அப்போதப்போதே; அவ்வவற்றின் நீங்கல் - அவ்வவ் விடயங்களின் நீங்குதலாம்; அது ஆங்கு - இனி முன்னர்க் கூறப்படும் சுத்தாவத்தையும் இவைபோல ஐவகைப்படும் எ-று. மேற்செல்வுழி ஆண்டாண்டுப் படும் அவத்தைகளும் கீழ்ச்செல்வுழிப் போலன்றி விசேடமின்மையின் வகுத்தோதாது இலாடத்தே சாக்கிரத்தை யெய்திய வுள்ளம் என அனுவாத முகத்தாற் கூறி யொழிந்தார். இழியுங்காலும் ஏறுங்காலும் கண்டத்தானத்திற் கனாக்கண்டல் உண்டு என்பது முறையே 1ஞானாமிர்தத்தினும் 2போற்றிப் பஃறொடையினும் காண்க. அவ்வவ விந்திரியம், ஆண்டாண்டு விடயத்தற்குரிய இந்திரியம். அவ்வவ்விடயம், ஆண்டாண்டு புலனாதற்குரிய விடயம். கண்டு நீங்கல் என இயையும். அது, அவ்வக்காலம். 3ஈண்டும் அடுக்கிக் கூறிக்கொள்க. கண்ணுருபு தொகுத்து ஏகாரம் விரித்தார். கண்டதென ஒருமொழியாக வைத்துரைப்பாரு முளர்; 4குற்றியலுகரத்தின் முன் உடம்படுமெய் பெறுதற்கு ஓத்திலா மையானும் பொருட்சிறப் பின்மையானும் அஃது உரையன்மை யறிக. அப்போதப்போது நீங்கலாவது, விடயங்களைக் கண்டகண்ட பொழுதே அவற்றை அயர்த்துவிடுதல். “ஒன்றன்பாலும் வருபயன் மாறிமாறி வந்திடும்” 5 என வழிநூலாசிரியர் கூறியதும் இவ்வியல்பு நோக்கி யென்க. “கரணந்தன்னில் செயல்தொறுங் கண்டுகொள் நீ”6 “உந்திடுங் கரணந்தன்னிற் செயல்தொறு முணர்ந்து கொள்ளே”7 என்பனவுமது. இந்நுட்ப முணர்ந்து கோடற்குத் தூலாருந்ததி நியாயம் பற்றிக் 1கைப்பொருளை வீழ்த்தித் தெளிதல் முதலிய தூலத்துள் வைத்துக் காட்டுப. இனி, 2அரூப சொரூபியாய் நிற்புழிப்படும் ஐந்தவத்தையின் இயல்பு கூறுதற்கெடுத்துக் கொண்ட இவ் வதிகரணத்தின்கண் அதனோடு இயைபில்லாத சுத்தத்தின்கட் படும் ஐந்தவத்தை கூறுதற்கு 3ஓர் இயைபில்லை யாயினும், அவத்தை யெனப்படுவன ஈண்டு ஓதியன மாத்திரையே போலும் என மயங்காமைப் பொருட்டு வேறும் ஐந்தவத்தையுள; அவை முன்னர்க் கூறப்படும் என்னும் துணையே கூறுவார், “அது வாங்கு” என்றொழிந்தார். இக்கருத்தே பற்றி, “பிறிவிலா ஞானத்தோரும் பிறப்பற அருளால் ஆங்கே, குறியொடும் ஐந்தவத்தை கூடுவர் வீடுகூட” 4என்றொழிந்தார் வழிநூலா சிரியரும். இவ்விரண்டு வெண்பாக்களானும் கூறிப்போந்த 5முத்திறத்து ஐந்தவத்தைகட்கு முறையே மூலமாய கேவலம், சகலம், சுத்த மென்ற மூன்றனுள் வைத்துத் 6தன்னுண்மை யெனப்படும் கேவலத்தின் இயல்பு சகசமலத் துணரா தென்பதனானே பெற்றாம். ஏனைச் சகலத்தின் இயல்பு வருகின்ற சூத்திரத்தினும் சுத்தத்தின் இயல்பு 7அப்பாலைச் சூத்திரத்தினும் பெறுதும். நான்காஞ் சூத்திரம் முடிந்தது. ஐந்தாஞ் சூத்திரம் விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக் களந்தறிந் தறியா வாங்கவை போலத் தாந்த முணர்வின் தமியருள் காந்தங் கண்ட பசாசத் தவையே என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின் இவ்வான்மாக்களிடத்துத் தமது 1முதலுபகார முணர்த்துதல் நுதலிற்று. என்பது கருத்துரை. என்னுதலிற்றோ வெனின், சூத்திரக் கருத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஐந்தவத்தைப்படும்வழிக் கருவியும் உயிரும் 2அமைச்சும் அரசுமேய்ப்ப நிற்பின், அவையே யமையுமாகலான், முதல்வனால் ஆண்டைக்காகற் பாலதொரு பயனில்லை போலும் என்னும் கடாவை ஆசங்கித்து ஆண்டும் இன்றியமையாது வேண்டப்படுவதாய முதல்வனுடைய உதவியை அறிவிக்கு முகத்தானே இரண்டாஞ் சூத்திரத்தினோதிய துணைக்காரண முதற்காரணங்களது இலக்கண முணர்த்துதல் இவ்வைந்தாஞ் சூத்திரத்தின் கருத்து எ-று. இதனானே 3சூத்திரவியையும் இனிது விளங்கும். மாயை கன்மங்கள் திரோதன சத்திக்குக் கருவியாய் 4அதனுள் அடங்குதலின், தமது முதலுபகார மெனப்படும் திரோதான சத்தியது இலக்கணம் கூறவே, 1அவற்றது இலக்கணமும் கூறியவாறாத லறிக. இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு: மேலைச் சூத்திரங்களின் அங்ஙனம் கூறிப்போந்த உயிரானே மெய் வாய் கண் மூக்குச் செவியென்பன. தத்தம் விடயங்களை இஃது இன்னது என்று அளவிட்டறிந்தும் அங்ஙனமறியும் தம்மையும் தம்மை அதிட்டித்து நின்று செலுத்தும் அவ்வுயிரையும் அறியமாட்டா; அவ்விந் திரியங்கள்போல், உயிர்களும், தமது அறிவிற்கு 2வியஞ்சகமாகிய முதல்வனது சிற்சத்தியான் மேற்கூறிப் போந்த இருவகை அஞ்சவத்தையினின்று வினைப்பயன்களை யறிந்து அனுபவிக்கும் தம்மையும், தம்மைச் செலுத்தி நிற்கும் திருவருளையும் அறிய மாட்டா; உயிர்கள் அவ்வாறுணர்தல் காந்தத்தைக் கண்ட இரும்பு அதன் சந்நிதி மாத்திரையின் வலித்துக்கொள்ளப் படுமாறுபோலக் 3கரணத்தானன்றிச் சங்கற்பத்தான் அதிட்டிக்கும் முதல்வன் சந்நிதிமாத்திரையினாம்; ஆகலான், அதுபற்றி முதல்வன் விகாரியாதல் இன்று எ-று. ஆகலான் அதுபற்றி முதல்வன் விகாரியாதல் இன்று என்பது 4குறிப்பெச்சம். செவி யென்பது 5சொல்லெச்சம். ஐம்பொறிகளைக் கூறியது 6உபலக்கணமாகலின் ஏனைக்கருவிகளும் அவ்வாறாதல் கொள்ளப் படும்; அற்றாகலினன்றே, “பொறிபுலன் கரணமெல்லாம் புருடனால் அறிந்து” 7என்றார் வழிநூலாசிரியரும். விடயங்களை யறிவுழி முதல்வன் உடனின்று செலுத்துவனாயின், அவ்விடயங்களோடு ஒப்ப முதல்வனையும் அறிதல் வேண்டும் என்பாரை நோக்கி, 1அளந்தறிந்து என்று ஒழியாது அறியா என்றார். ஆங்கவை 2ஒரு சொன்னீர்மைத்து. தம்முணர்வின் தமியென்றது தமது முதலென்னும் பொருள்பட வந்த 3ஆறாம் வேற்றுமைத் தொகை. ஈண்டு அருளென்றது 4ஏற்புழிக் கோடலால் திரோதான சக்தியின்மேல் நின்றது. 5அருளாலென விரித்து அளந்தறிந்து அறியா வென, உவமைக்கோதிய வினையைப் பொருளினும் கூட்டி உரைக்க. இதனுள் விளம்பிய வுள்ளத்து மெய் வாய் கண் மூக்கு அளந்தறிந்தறியா வென்றது ஓரதிகரணம்; ஆங்கவைபோலத் தாந்த முணர்வின் தமியருள் காந்தங்கண்ட பசாசத் தவையே யென்றது ஓரதிகரணம்; ஆக இரண்டதிகரணத்தது இச்சூத்திரமென் றுணர்க. முதலதிகரணம் 1ஈண்டு ஐயுணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், 2தாமரையிலையின் நீர்போல் புருடன் 3பற்றற்று நிற்பப் புருடன் சந்நிதியிற் புத்திதத்துவமே ஐம்பொறி வழியான் விடயங்களை அறியுமென வமையும்; அவ்வாறன்றிக் கருவிகளோடு கூடிப் புருடனே அவத்தைப் படுமென மேற்கூறியது அமையுமாறு என்னை யெனச் 4சாங்கிய நூலார் மதம் பற்றி நிகழுங்கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) வெளிப்படை. உணர்விற் கேதுவாகிய பொறிகளை உணர்வென்று 5உபசரித்தார். ஏது அவற்றினான் ஆன்மா ஒற்றித்துக் காணினல்லது அவை யொன்றையும் விடயியா வாகலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின் 1அதற்குப் பிரமாணம் என்னை என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) அவ் வைம்பொறிகளோடும் உயிர் ஒற்றுமைப் பட்டு நின்று அறிந்தாலன்றி அவை ஒரு விடயத்தையும் விடயிக்க உரைமாட்டா வாகலின் ஈண்டு ஐயுணர்வுகள் ஆன்மாவால் உணருமென மேற் கொண்டது என்க. ஆன் 2உடனிகழ்ச்சிப் பொருட்கண் வந்தது. உம்மை இழிவு சிறப்பு; முற்றுமாம். எதிர்மறை முகத்தாற் கூறினார், 3இன்றியமையாமை விளக்குதற்கு. உதாரணம் ஐம்பொறியை யாண்டங் கரசாயுள நிற்ப ஐம்பொறிக ளுள்ள மறியாவாம் - ஐம்பொறியின் காணாதேற் காணாது காணுமுளங் காணாதேல் காணாகண் கேளா செவி. என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், உயிர் அங்ஙனம் ஒற்றுமைப் பட்டு நின்று செலுத்துதலும் அவை உயிரையின்றி அமையாமையும் எற்றாற்பெறுதும் என்பாரை நோக்கி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அரசு ஆய் - அரசன் அத்தாணிமண்டபத்தின் வைகித் தன்கீழ்க் கருமஞ்செய்வோரை அவரவர்க்குரிய காரியங்களில் செலுத்தி ஆளுமாறு போல, உளம் ஐம்பொறியை ஆண்டு அங்கு நிற்ப - உயிர் ஐம்பொறிகளை அவ்வவற்றிற்குரிய விடயங்களிற் செலுத்தி ஆண்டு 1இலாடத்தானத்தின் நிற்றலான், ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம் - அரசனால் ஏவப் பட்டோர் ஏவிய கருமமாத்திரையினன்றி அதிகத்திற் செல்ல மாட்டாமை போல அவ்வைம்பொறிகள் 2உயிரை அறியமாட்டா வாயின. அற்றேல், ஐம்பொறிகள் உயிரானன்றி அறிதல் அமையா தாயினும் உயிர் 3ஐம்பொறிகளா னன்றியும் அறிதல் அமையும் போலும் எனின்; 4ஐம்பொறியில் காணாதேல் காணாது காணும் உளம் காணாதேல் காணா கண் கேளா செவி - ஒரு கருமஞ் செய்தற்கண் அரசரும் அமைச்சர் முதலாயினோரும் தம்முள் இன்றியமையாதவாறு போல ஒன்றனை விடயித்தற்கண் உயிரும் ஐம்பொறிகளும் தம்முள் இன்றியமையா என்க. அன்னவாதல் உயிர் ஐம்பொறியின் நீங்கிச் சொப்பனத் தானத்தின் எய்திய வழிக் கண்டுகொள்க. நிற்ப வென்னுஞ் செயவெனெச்சம், “மழை பெய்யக் குளம் நிறைந்தது” என்புழிப் போல, நிற்றலான் எனக் காரணப் பொருட்டாய் நின்றது. இவ்வாறு உரையாக்கால் இஃது ஏதுவின் பொருளை வலியுறுப்பதாய உதாரணமாதற்கு ஏலாமை யறிக. இரண்டாமதிகரணம் இனி 1இதுவுந் தமது முதலாலே உணரும் என்றது என்பது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின் கருவி சடமாகலின் சித்தாகிய உயிரானன்றி அமையாவாயினும், சித்தாகிய உயிர் முதல்வனது உபகாரத்தை அவாய்நிற்பதன்றி அவாவுமாயின் முதல்வனும் அவ்வாறே பிறிதொன்றன் உபகாரத்தை அவாவுமெனப்பட்டு மேலும் வரம்பின்றி யோடும் என ஈசுரவவிகாரவாதி முதலியோர் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் பிற்கூற்றைக் குறித்துக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று. தமது 2முதல் என்பது ‘யான் எம்மூர் புகுவன் நீ நும்மூர் புகுவை’ என்புழிப்போல வேறு முடிபு கோடலின் பால்வழுவன்மை யுணர்க. 3உம்மை இறந்தது தழீஇய வெச்சம். இம்முறைமை தமக்கொரு முதலுடையவற்றிற்கேயன்றி ஏனைப் பொருட்கு இன்மையின் வரம்பின்றி ஓடுமாறில்லை என்பார், தமது முதலென்று 4உடம்பொடு புணர்த்தோதினார். தம்முணர்வின் றமி யென்றதும் அது. 1தத்துவங்களும் உயிருந் தமக்கொரு முதலுடையனவாதலும் முதல்வனுக்கு அஃதின்மையும் மேற்கூறிப் போந்த சூத்திரங் களான் பெறப்பட்டன வென்பது கருத்து. ஏது 2இவ்வான்மாத் தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னையுணராது நிற்றலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், உயிர் 3ஐம்பொறியிற் சடமன் மையான் அவற்றை எடுத்துக்காட்டி மேற்கோடல் ஈண்டைக்கு அமையாது என்பாரை நோக்கி அதனைச் சாதித்தல் நுதலிற்று. சடமும் சேதனமுமாய வேறுபாடுபற்றித் தம்முள் ஒவ்வா வாயினுந் தம்மையும் தமது முதலையும் அறிய மாட்டாமைக்கண் ஐம்பொறியும் உயிருந் தம்முள் ஒக்குமாகலின், அதுபற்றி அங்ஙனம் மேற்கோடல் அமையும் என்பது கருத்து. உதாரணம் மன்னுசிவன் சந்நிதியின் மற்றுலகம் சேட்டித்த தென்னு 1மறையின் இயன்மறந்தாய் - சொன்ன சிவன் கண்ணா வுளம்வினையாற் கண்டறிந்து நிற்குங்காண் எண்ணான் சிவனசத்தை யின்று என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், தன்னால் உணரும் இந்திரியங் களை ஈண்டைக்கு உவமை கூறின் அவ்விந்திரியங்கட்கு வரும் பயன் அவற்றினால் ஒற்றித்துக் காணும் உயிர்க்காயவாறு போல, உயிர்க்கு வரும் இன்பத் துன்பப் பயனும் உயிரான் ஒற்றித்துக் காணும் முதல்வனுக்கு ஆதல் வேண்டுமென்பாரை நோக்கி அங்ஙனம் ஆகாமை கூறி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) மன்னுசிவன் சந்நிதியின் உலகம் சேட்டித்தது என்னும் மறையின் இயல் மறந்தாய் - 2ஈண்டுக் கூறிய கருதலளவையே யன்றி நிலைபெற்ற முதல்வனது சந்நிதியிற் பிரபஞ்சம் செயற்படுகின்ற தென்று ஓதும் 3வேதப் பொருளையும் அறியாது பிணங்குகின்ற பேதாய், உளம் சொன்ன சிவன் கண்4ணா வினையால் கண்டு அறிந்து நிற்குங்காண் - உயிராவது தமக்கெனவோர் காரண மின்றித் தன் பொருட்டே அறிவனவாய அவ்விந்திரியங்கள் போலன்றி அவ்வேதத்துள் எடுத்தோதப்படும் முதல்வன் தனக்குக் காட்டாகி நிற்பத் தான் செய்த வினைக்கீடாக ஒன்றனை யறிந்து நிற்கும், அவ்வேறுபாடு அறிவாயாக; 5இன்று ஆகலான் சிவன் அசத்தை எண்ணான் -அங்ஙனம் காட்டாகி நிற்பினும் தனது சந்நிதியில் அசத்தெல்லாம் சூனியமாகலான் மங்கல வடிவினனாய முதல்வன் அவ்வுயிர்போல் அவற்றை அனுபவியான் என்றவாறு. இதனுட் 1சிவனென்றது மன்னுசிவன் என்புழிப், பேரின்பத் திற்குக் காரணமென்னும் பொருட்டாய்த் தனது சந்நிதிக்கண் உலகத்தைச் சேட்டிப்பித்தற்குரிய இயைபுணர நின்றது. சொன்ன சிவன் என்புழி முற்றுணர்வினன் என்னும் பொருட்டாய்க் காட்டு ஆதற்குரிய இயைபுணர நின்றது. எண்ணான் சிவன் என்புழித் தூய தன்மையன் என்னும் பொருட்டாய் அசத்தை எண்ணாமைக் குரிய இயைபுணர நின்றது; ஆதலால் கூறியது கூறலன்மை உணர்க. அஃது அம் முப்பொருளுடைத் தென்பது சோம சம்பு பத்ததி வியாக்கியான முதலியவற்றுட் காண்க. சிவதத்துவ விவேகத்துள் 2மூவகைப் படுத்தோதிய பொருளும் இவையே யாமாறு கண்டு கொள்க. ஈண்டு உலகம் என்றது உயிர்களை. மறையின் இயலும் பொருளை மறையின் இயல் என்று உபசரித்தார். இறந்தது தழீஇய எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. 1மறந்தாய் என்பது விளியுரு பேற்ற பெயர். ஈண்டுச் சந்நிதி என்றது அவிகாரவாதிகள் கூறும் 2அபி முக மாத்திரை யன்று என்பார் சொன்ன சிவன் கண்ணா என்றார். சிவசத்தி அவ்வக் காரியங்களின் 3உன்முக மாதலாகிய சங்கற்பமே ஈண்டுச் சந்நிதி யெனப்படும் என்பதாம். காந்தம்கண்ட பசாசத்தவையே யென்றது 4ஒருபுடை யுவமை யாதல் பற்றியே, பிறிதன்று என்பது கருத்து. வினையாலென்றது ஐம்பொறிபோலன்றி 5உணர்தற்பயன் உயிர்க்கேயாதற்கு ஏதுக் காட்டியவாறு. கண்டறிதல் ஒருபொருட் பன்மொழி. எண்ணல் ஈண்டு அனுபவித்தல் மேற்று. 1இன்று என்பது சாதி யொருமை. 2அவனெதிர் என்பது அவாய் நிலையான் வந்து. ஆகலானென்பது சொல்லெச்சம். இன்றாதல், யாவையும் சூனியம் சத்தெதிர் 3என்புழிப் பெறப்படும். இக்கருத்தே பற்றி “மாயை மருவிடான் சிவனவன்கண், உறைதராது அசேதனத் தால்” என்றார் 4வழிநூலாசிரியரும். “உன்னு தரத்தே கிடந்த கீடம் உறுவதெல்லாம். உன்னுடைய தென்னாய் நீ யுற்றனையோ - மன்னுயிர்கள் அவ்வகையே காணிங் கழிவதுவும் ஆவதுவும், செவ்வகையே நின்ற சிவன் பால்” 5என்றதும் இவ்வியல்பு நோக்கி. உதாரணம் வெய்யோ னொளியி லொடுங்கி விளங்காது வெய்யோனை யாகாத மீன்போல - மெய்யவனில் 6கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனைக் கண்டுடனாய் மன்னுதலைக் காண் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், உயிர்அங்ஙனம் உணர்த்த உணருங்கால் முதல்வனின் வேறு நின்று உணருமோ? ஒன்றாய் நின்று உணருமோ? என்பாரை நோக்கி, அவ்விரண்டு இயல்புமின்றி நின்று உணருமாறு உணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) வெய்யோன் ஒளியில் ஒடுங்கி - ஞாயிற்றொளியின் அடங்கி; விளங்காது - 1அதனின் வேறாய் விளங்கித் தோன்றுதலின்றி; 2வெய்யோனை ஆகாத மீன்போல - அதுவாய் ஒழிதலும் இல்லாத நாண்மீன்கள் 3அஞ்ஞாயிற்றானே ஒளியுடையவாமாறு போல; கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனை 4மெய் அவனில் கண்டு - கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் தீண்டியும் அறியப்படும் ஐவகை விடயங் களையும் உயிர் மெய்ப் பொருளாகிய முதல்வனால் உணர்ந்து; உடனாய் மன்னுதலைக் காண் - வேறாதலும் ஒன்றாதலு மின்றி அவ்விரண்டிற்கும் பொதுவாய் அடங்கி உடனாய் நிலைபெறுதலை அறிவாயாக என்றவாறு. 5உவமையடை பொருளினும், பொருள்வினை உவமையினும் சென்று இயையும். 6ஐ - சாரியை. நாண்மீன் முதலியவற்றின் ஒளியெல்லாம் ஞாயிற்றானாய ஒளியே யென்பது 1வேதநூல் துணிபாகலின் அஃது ஈண்டைக்கு உவமையாயிற்று. உயிரென்னும் எழுவாய் 2மேலைவெண்பாவினின்றும் வருவித் துரைக்கப்பட்டது. உதாரணம் 3அருளுண்டா மீசற் கதுசத்தி யன்றே அருளு மவனன்றி யில்லை - அருளின் றவனன்றே யில்லை யரட்கண்ணார் கண்ணுக் கிரவிபோ னிற்குமர னேய்ந்து என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அங்ஙனமாயினும் உயிர்கட்குப் பலவேறுவகைப்பட உணர்வு நிகழ்தலின் அஃது உணர்த்துதல் வேறுபாட்டானாயது எனல் வேண்டும். வேண்டவே, நிருவிகாரி யென்னுஞ் சுருதியோடு முரணி முதல்வன் விகாரியாவான் 4செல்லும் என்பாரை நோக்கி விகாரியாகாமை யுணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) 1அருள் ஈசற்கு அன்றே உண்டாம் - உயிர்கட்குப் பசுத்துவத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதற்கண் உளதாகிய இரக்கம் முதல்வனுக்கு அநாதியே யுள்ளது; அது சத்தி - அவ்விரக்கம் வேறு பொருளன்று முதல்வனுக்கு உளதாகிய சத்தியேயாம்; அருளும் அவன் அன்றி யில்லை அவன் அருள் இன்று இல்லை - இரக்கமும் அவனும் குணமும் குணியுமாகலின் அவ்வருளும் முதல் வனையின்றி யமையாது முதல்வனும் அதனை யின்றியமையானாய்; அருட் கண்ணார் கண்ணுக்கு இரவிபோல் ஏய்ந்து நிற்கும் அரன்- ஞானக் கண்ணுடையார் உணர்விற்கு ஞாயிறு தன்னொளியோடு தாதான்மியமாய் இயைந்து நிற்குமாறு போல அவ்வருளோடு தாதான்மியமாய் இயைந்து நிற்பன் முதல்வன்; 2ஆகலால் தன் வயத்தனாகிய அம்முதல்வன் விகாரமின்றி நின்றே தனது சத்தி சங்கற்ப மாத்திரையான் அனைத்துஞ் செய்தல் கூடும் என்றவாறு. ஆகலால் தன் வயத்தனாகிய அம்முதல்வன் விகாரமின்றி நின்றே தனது 3சத்தி சங்கற்ப மாத்திரையான் அனைத்துஞ் செய்தல் கூடுமென்பது 4குறிப்பெச்சம். உம்மை எதிரது தழீஇயது. இன்றி யென்னும் வினையெச்சக் குறிப்பின் இகரம் 5செய்யுளாகலின் உகரமாய்த் திரிந்தது. 6அன்றே அசை. இவ்வியல்பு 1சித்தாந்த நெறியுணர்ந்தார்க்கு அன்றி விளங்காது என்பார் அருட்கண்ணார் கண்ணுக்கு என்றார். சத்தியது உண்மையும் அதனியல்பும் “நீக்கமின்றி நிற்கும் 2அன்றே” யென்பதனுள் வகுத்துரைத்தமையின் ஆண்டுக் காண்க. இரண்டாமதிகரணம் முற்றிற்று. ஐந்தாஞ் சூத்திரம் முற்றிற்று. ஆறாஞ் சூத்திரம் உணருரு வசத்தெனின் உணரா தின்மையின் இருதிற னல்லது சிவசத் தாமென இரண்டு வகையி னிசைக்குமன் னுலகே என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின், சத்தும் அசத்தும் வரை செய்து உணர்த்துதல் நுதலிற்று. என்பது கருத்துரை; என்னுதலிற்றோ வெனின், சூத்திரக் கருத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேல் ஐந்து சூத்திரத்தானுங் கூறிப்போந்த பொருள்களுள் யாது சத்து யாது அசத்து என்னும் ஐயம் நீக்குதற்குச் சத்தின் இயல்பும் அசத்தின் இயல்பும் இவையென அவ்விரண்டும் இலக்கணத் தால் தம்முள் மயங்காதவாறு வரைந்து வைத்துணர்த்தி உண்மை யதிகாரத்திற்குத் 3தோற்றுவாய் செய்யு முகத்தானே இலக்கண வோத்துட் கூறுதற்கு 4எஞ்சி நின்ற பதிப்பொருளது இலக்கணம் கூறுதல் இவ்வாறாஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு. இதனானே சூத்திர வியைபும் இனிது விளங்கும். 1இச் சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு. தம்முணர்வின் தமியாகிய முதற்பொருள் அளவைகளான் அறியப்படும் இயல்பிற்றெனின், அங்ஙனம் அறியப்படும் பிரபஞ்சம் போல் அழிபொருளாகிய அசத்தாம்; எவ்வாற்றானும் அறியப் படாத இயல்பிற்றெனின், அங்ஙனம் அறியப்படாத முயற்கோடு போலச் சூனியப்பொருளாம்; ஆகலான், இவ்விரு பகுதியுமன்றி ஒரு வாற்றான் அறியப்படாமையும் ஒரு வாற்றான் அறியப் படுதலும் ஆகிய இரண்டு வகையானும் சிவசத்தாbமனக் கூறுவர் மெய்யுணர்வின் நிலைபெற்று உயர்ந்தோர் என்றவாறு.2 உணருரு வெனின் அசத்து என மாறுக. 3எனின் என்பது முன்னரும் சென்று இயைந்தது. 4முற்றும்மைகள் தொக்கன. 5அல்லது என்பது வினையெச்சக் குறிப்பு முற்று. அன்றி யாமென இயையும். ஒரு வாற்றானறியப்படாமை பாசஞான பசுஞானங் களான் அறியப்படாமை; ஒரு வாற்றான் அறியப்படுதல் சிவஞானம் ஒன்றானே அறியப்படுதல். பாசஞான பசுஞானங்களால் அறியப் படாமையின் சிவமாதலும், பதிஞானத்தான் அறியப்படுதலின் சத்தாதலும் பெறப்படுமென்பார், “இரண்டு வகையின் சிவசத்தா மென இசைக்கும்”என்றார். 6சிவசத் தென்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை வடநூன் முடிபு. சிவசத் தென்பது சித்துச் சத்தென்னும் 1பொருட்டு. சடமாகிய சத்தின் நீக்குதற்குச் சிவசத்து என்றார். 2எழுவாய் மேலைச் சூத்திரத்தினின்றும் வருவிக்கப்பட்டது. இரு திறனுமன்றி இரண்டு வகையானும் சித்தாதலும் சத்தாதலும் உடையனாய் நிற்றல் முதல்வனுக்கு இலக்கணம் என இலக்கணமும் இதனுட் போந்தவாறு உணர்க. முதல்வனுக்குப் பொதுவியல்பு 3மேற் புனருற்பவம் உணர்த்து முகத்தாற் கூறிப் போந்தமையின் இது 4சொரூப லக்கணம் எனப்படுஞ் சிறப்பிலக்கணம் எனக் கொள்க. அற்றாகலின் அன்றே இதனை இலக்கணவோத்துள் முகற்கண் கூறாது உண்மையைச் சாரவைத்து இறுதிக்கண் கூறியதூஉ மென்க. இன்னும் முதல்வனுக்கு உளவாகிய 5சிறப்பியல்புக் குணங்களெல்லாம் இவ்விரண்டினுள் அடங்கும். அஃது அறிந்து அடக்கிக்கொள்க. “தன்னாலே தனையறிந்தால், தன்னையுந் தானே காணும்” 1எனவும், “உன்னரிய திருவருளை யொழியமலம் உளது என்று உணர்வரிதாம் அதனுண்மை தெரிவரிதாம் உனக்கே” 2எனவும், “மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை, ஆயவா ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்” 3எனவும் ஓதியவாற்றால் ஏனைப் பசு பாசங்களும் சிறப்பியல்பு பற்றி உணர்தல் சிவஞானத்தா னன்றி அமையாதாயினும், “தீபமெனத் தெரிந்தாங், கொருவி ஆன்மாவின் உண்மை யுணர்ந்தவர் தமை யுணர்ந்தோர், தருமிது பசுஞானம்” 4எனவும், “இவை கீழ் நாடலாலே, காதலின் நான்பிரம மென்னும் ஞானம் கருதுபசு ஞானம் ” 5எனவும், பொது வியல்புபற்றி 6யோதுதலானும், யான் இதனை அறிந்தேன் அறிகின்றிலேன் என்றறியும் பாச உணர்விற்கு அவற்றது பொதுவியல்பு விடயமாதல் கண்கூடாகப் பெறப்படுதலானும், 7அவை ஒருவாற்றான் உணருருவாதலும் உடைமையின் சிவசத்தாவான் 8செல்லாமை யறிக. சற்காரியவாதம் கூறும் சைவசித்தாந்தத்தில் அசத்து என்பது சத்துக்கு மறுதலை யன்மையான் அப்பசுபாசங்கள் அங்ஙனம் அறியப்படும் பொது வியல்பு பற்றி அசத்தெனப்படுமா யினும், சிறப்பியல்பு பற்றி அசத்தாதல் செல்லாமையின் சிறப்பியல்பு 9 நோக்கும் வழி அவை சத்தாதற்கு இழுக்கின்மையும் அறிக. இங்ஙனம் செவ்வனே இறுக்க அறியாதார் அபாவத்தின் இயல்பாவது பாவத்திற்கு மறுதலைப் பொருள் போலு மென 1நையாயிகர் முதலியோர் மதம் பற்றி மயங்கி எல்லாப் பொருளும் சத்தென்னும் சித்தாந்தத்தோடு முரணாமைப் பொருட்டு ஈண்டுச் சத்து அசத்தெனப்பட்டவை சித்து அசித்தென்னும் பொருளவாம் எனவும் சுத்தம் அசுத்தம் என்னும் பொருளவாம் எனவும் உரைத்து இடர்ப்படுவர். காரியப் பிரபஞ்சம் ஏனைப் பசுபாசங்கள் போலன்றி இருவகை யியல்பானுங் காட்சிப் புலனாய் இத்துணைப்பொழுது நிற்குமென நம்மனோரால் அறியவாராது நிலைபெறுவது போலத் தோன்றிவிரையக் கெட்டு மறைந்துபோதற் சிறப்புடைமை பற்றி, அதுவே ஈண்டு “உணருரு அசத்து” என்று எடுத்துக்கொள்ளப் பட்டது. அசத்து எனவே அசித்து என்பதும் தானே போதரும். இதனுள், உணருரு அசத்தெனின் உணரா தின்மையின் என்றது ஓரதிகரணம்; இருதிறனல்லது சிவசத்தாமென இரண்டு வகையின் இசைக்குமன் உலகே யென்றது ஓரதிகரணம்; ஆக இரண்டதிகரணத்தது இச்சூத்திரமென் றுணர்க. முதலதிகரணம் ஈண்டு அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத் தென்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், மேலைச் சூத்திரத்தின் “அளந்தறிந் தறியா” வென்றதனை உடம்படாது பிரபஞ்சம் போல முதல்வனும் அளவைகளான் அளந்தறி பொருளே யாம் என நையாயிகர் முதலியோர் கூறுங் 2கடாவையும், எல்லாப் பொருளும் சத்தாகலின் அளந்தறி பொருளுஞ் சத்தேயாமெனச் 3சாங்கியர் கூறும் கடாவையும் ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) சுட்டறிவினால் அறியப்பட்ட சுட்டுப் பொருளெல்லாம் அசத்து என்றவாறு. 1சுட்டு ஆகுபெயர். 2 சிவஞானத்தால் அறியப்படுதலை நீக்குதற்கு அறிவினால் என விசேடித்தார். ஈண்டு 3அறிவு என்றது ஒன்றை முந்தி அதுவதுவாகச் சுட்டிக் காணும் அளவை யறிவினை யென்பது; “அறிவினா லறிந்த யாவும் அசத்தாதலறிதி” என்ற புடைநூலாசிரியர் மீள 4அங்ஙனந் தெரித்தோதியவாறு பற்றி உணர்ந்து கொள்க. ஏது அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், உள்ளதென்னும் உணர்விற்கு விடயமாய் 5உபலத்தியைப் பயப்பிக்கும் பிரபஞ்சத்தை இல்லை யென்னும் உணர்விற்கு விடயமாய் அநுபலத்தியைப் பயப்பிக்கும் இல்பொருளோடு ஒப்ப அசத்தென்றல் அமையுமாறு யாங்ஙனம் எனவும், சத்தாகிய பிரபஞ்சத்தைச் சுட்டப்படுதல் மாத்திரையான் அசத்தென்றல் சற்காரிய வாதத்திற்கு இழுக்காம்போலும் எனவும் முறையே அவ்விருவர் மதம் பற்றிக் கூறுவாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ - ள்) அச்சுட்டுப் பொருள்கள் தாம் 1இராசதகுண மிகுதிப்பாட்டான் உள்ளதென்னும் உணர்விற்கு விடயமாய் உபலத்தியைப் பயப்பித்து நின்று, தாமே தாமதகுண மிகுதிப் பாட்டால் இல்லையென்னும் உணர்விற்கு விடயமாய் அநுபலத்தியைப் பயப்பித்து நிற்றலான் ஈண்டு அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்தென மேற்கொண்டது என்றவாறு. ஈண்டுப் பிரகாசம் அப்பிரகாசம் என்பன உபலத்தி அநுபலத்தியென்னும் பொருளவாய் அவை நிகழ்தற்கிடனாகிய பொருள்மேல் நின்றன. இது நையாயிகரை நோக்கி மேற்கோளைச் சாதித்தவாறு. இனி, இதனை 2இரட்டுற மொழிந்துகொண்டு அவைதாம் காரியவவத்தையில் தூலமாய் விளங்கி நின்றே காட்சிப் புலனாய்ச் சடுதியின் மறைந்து சூக்குமமாய்க் காரணாவத்தையின் விளங்காது நிற்கும் இவ்வேற்றுமை யுடைமையான், அங்ஙனம் 3புலனாகாத காரணப் பொருள்களை நோக்கிக் காரியப் பிரபஞ்சம் அசத்தாதல் சாலுமாகலின் ‘ஈண்டறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து’ என மேற்கொண்டது என்றவாறு எனவும் உரைத்துக்கொள்க. உதாரணம் அசத்தறியாய் கேள்நீ 1யறிவறிந்த வெல்லாம் அசத்தாகும் மெய்கண்டான் ஆயின்- என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின் 2ஒருசாரன அங்ஙனமாயினும் உபலத்திப் பட்டன வெல்லாம் அவ்வாறு அசத்தாம் என்றற்குப் பிரமாணம் என்னை என்னும் நையாயிகரை நோக்கி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அசத்து அறியாய் நீ கேள் - அசத்தின் இயல்பை அறியாத மடவோனே 3யாம் இறுக்கும் இறையை நீ மனம் பற்றிக் கேட்பாயாக; மெய்கண்டான் ஆயின் அறிவு அறிந்த எல்லாம் அசத்து ஆகும் - சத்தின் இயல்பை அறிந்தோன் ஆராய்ந்தானாயின் அறிவினால் அறியப்பட்டன வெல்லாம் அசத்தேயாம் என்றவாறு. அறியாய் என்பது 4விளியுருபேற்ற பெயர். அசத்தின் இயல்பை அறிந்தாயாயின் இவ்வாறு பிணங்குவா யல்லை யென்பார் அசத்தறியாய் என்றும், “எந்தை தாட்பால் வணங்கித் தலைநின்று கேட்க” 5என்பார் கேள் நீ என்றும், 6உபலத்திக்கு விடயமானவை எல்லாம் அநுபலத்திக்கு விடயமாதல் ஒருதலை யென்பார் அறிவறிந்த வெல்லாம் அசத்தாகும் என்றும், 7சத்தின் இயல்பு உணர்ந்தார்க் கன்றி அசத்தின் இயல்பு உணர வாராதென்பார் மெய்கண்டான் என்றும், ஆய்தற்கருமை நோக்கி ஆயின் என்றும் கூறினார். உதாரணம் -அசத்தலாய் நீரி லெழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும் ஓரினவை யின்றாமா றொப்பு என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், இரட்டுற மொழிந்து கொண்டு சாங்கியரை நோக்கி உரைத்த பொருளை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) 1அசத்து அலாய் - அசற்காரியவாதி யல்லாத அறிவுடை யோனே; 2அவை இன்று ஆம் ஆறு ஒப்பு ஓரின் - அங்ஙனம் தோன்றி மறைவனவாய பிரபஞ்சம் அசத்தா மாற்றிற்கு உவமை ஆராயின்; நிகழ் நீரில் எழுத்தும் கனவும் பேய்த்தேரும் - நிகழா நின்ற நீர்மேலெழுத்தும் கனவிற் காட்சியும் பேய்த்தேருமாம் என்றவாறு. எனவே, அப்போதுள்ளனவாய நீர்மேலெழுத்து முதலியவற்றை அங்ஙனே சடுதியின் மறைந்துபோதற் சிறப்புப்பற்றி அசத்தென்றல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அவ்வியல்புடைய பிரபஞ்சத் தையும் அவைபோல் அசத்தென்றல் அமையுமென்றவா றாயிற்று. அசற்காரிய வாதியை அசத்து என்று உபசரித்தார். 3நீரிலெழுத்து முதலியன பொய் யென்பாரை மறுத்தற்கு நிகழ் என்று அடைகொடுத்தார். 4அஃது யாண்டுஞ் சென்றியையும். 1குவ்வுருபு விகாரத்தால் தொக்கது. 2இன்றென்னும் ஒருமை அப்பண்பின்மேல் நின்றது. 3நீரிலெழுத்துத் தோன்றிய பொழுதே மறைந்து போதற்கும், கனாப்பொருள் முடிவு பெறுதலின்றி இடையே மறைந்து போதற்கும், அருஞ்சுரத்தின் முதுவேனிலின் நண்பகற் கடுமை பற்றித் தோன்றி ஞாயிற்றின் கிரணம் முகிற்படலத்தில் மறைந்த வழித் தானும் மறைந்து போவதாகிய பேய்த்தேர் ஒரு காரணங் காட்டி மறைந்து போதற்கும் உவமையாயின. இவ்வெண்பாவை ‘இலயித்த தன்னில்4’ என்பதுபோல இங்ஙனம் இருதொடராக வைத்துரைத்து மேற்கோள் ஏதுக்களையும் இரட்டுற மொழிந்து கொண்டு இரண்டதிகரணப் பொருள் கோடல்5 ஆசிரியர் கருத்தென்பது, வழிநூலாசிரியர் “அசத்தாஞ் சுட்டி உணர் பொருளான வெல்லாம்” 6என்றும், “உண்டுபோ லின்றாம் பண்பின் உலகினை யசத்து மென்பர்”7 என்றும் வேறு கூறியவாற்றானு முணர்க. இஃது அறியாது இவ்வெண்பாவை ஒரு தொடராக வைத்து உரைப்பார்க்கு அசத்தறியாய் அசத்தலாய் என்றதனால் ஒரு பயன் படாமையும், ஆயின் ஓரின் என்று இருகாற் கூறுதலும், அசத்தாகும், இன்றாம் என்று இருகாற் கூறுதலும் கூறியது கூறலென்னும் வழுவாதலும் அறிக. இனி, ஒருவாற்றானும் உணரப்படாத பொருள் சூனிய மென்பது எல்லாச் சமயத்தார்க்கும் ஒப்ப முடிந்தமையின் 1ஆண்டு அதிகரணத்திற்குரிய ஐயப்பாடு முதலியன நிகழாமையான் அதனை வேறுபடுத்துரைத்து மேற்கொள்ள வேண்டாவாயினும், மந்த வுணர்வுடையார்க்கு அதன்கண் ஐயம் நிகழாமைப் பொருட்டு வழிநூலாசிரியர் “உணராத பொருள் சத்தென்னில் ஒருபய னில்லை போலும்,” 2எனவிடுத் தொழிந்தாரென்று உணர்க. இரண்டாமதிகரணம் மேற்கோள் இனி, இவ்விரண்டு தன்மையும் இன்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ள சிவம் என்று உணரற்பாற்று என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், மேல் உணர்பொருள் இயல்பும் உணராத பொருள் இயல்பும் கூறுமுகத்தான் அசத்தின் இயல்பை வரைசெய்து உணர்த்தியவழி 3இரண்டும் இவ்வாறாகலான் இவற்றின் வேறாய முதல்வனது இயல்பாவது மாயாவாதி கூறும் அநிர்வசனம் போலும் என்னும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் பிற்கூற்றைக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று. இதன் பொருள், 1வெளிப்படை. வாக்கெனப்படும் நாத முடிவான பாசஞானத்தை வாக்கென்றும், அவற்றின் வேறாய பசுஞானத்தை மனமென்றும் உபசார வழக்காற் கூறினார். வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற என்றது அவ்விரண்டின் விருத்திகளைக் கடந்து அதீதமாயும், 2ஒற்றுமைப்பட்டு நின்றுணரும் அநுபவ ஞானமாத்திரைக்கே விளங்கிக் கோசரிப்பதாயும் நின்ற3 என்றவாறு. அவ்வாறு நின்றபொருள் இதுவென அளவைகளான் அறிய வாராமை பற்றி அதுவே என 4மகாவாக்கியத்துட் கூறியதனை அநுவதித்துச் சத்தாகிய சிவமாதலைச் செவியறி வுறுத்தார். 5வாக்கு மனாதீதம் என்றது தமிழ்நூல் முடிபு. மரம் + அடி மராடி என மரீஇயினாற் போல, மனம் அதீதம் மனாதீதமென மரீஇயிற்று. 6அதீத கோசரம் என்பது வடநூல் முடிபு. 1வாக்கு மனாதீதப் பொருளாகலின் உணருருவாம் தன்மையும், கோசரப் பொருளாகலின் உணராதாம் தன்மையும் இல்லையென்பது பெறப்படுதலின், இவ்விரண்டு தன்மையும் இன்றி என்றார். ஏது பிரகாசத்தினுக்குப் பிரகாசிக்க வேண்டுவது இன்மையானும் அப்பிரகாசத்தினுக்குப் பிரகாசம் இன்மையானும் என்பது ஏது. என்னுதலிற்றோ எனின், இவ்விரண்டு வகையும் இல்லாத பொருள் அநிர்வசனமாய் நிற்பது என்னாது 2வாக்கு மனாதீத கோசரமாய் நிற்பது என்றற்குப் பிரமாணம் என்னை என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) வாக்கு மனங்களால் ஓதி உணரப்படுவதாய 3நிருவசனப் பொருட்கு 4முன்னர் கூறப்படும் சாதனங்களினின்று அறியற்பாலதாக வேண்டாமையானும், ஒருவாற்றானும் அறியப் படாத அநிர்வசனப் பொருட்குச் சாதனத்தினின்றும் அறியப்படு மாறு இன்மையானும், இனி இவ்விரண்டு தன்மையும் இன்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ள சிவம் என்று உணரற்பாற்று என 5மேற்கொண்டது என்றவாறு. உணர்தற்பாற்று என்றார் உணர்தல் அருமை நோக்கி. 1பிரகாசம் அப்பிரகாச மென்பன உபசார வழக்கு. உதாரணம் எண்ணிய சத்தன் றசத்தன்றா மென்றாலென் கண்ணி யுளதென்றன் மெய்கண்டான் - எண்ணி அறிய விரண்டா மசத்தாதல் சத்தாம் அறிவறியா மெய்சிவன்றா ளாம் என்றது உதாரணம். என்னுதலிற்றோ எனின், பரமார்த்தமாகிய பரப்பிரமப் பொருள் அவிச்சை வயத்தான் ஞாதா எனவும் ஞேயம் எனவும் பகுக்கப்பட்டு முன்னர் கூறப்படும் சாதனங்களின் நின்று அறியவும்படும். 2அவிச்சை நீங்கியவழி அப்பகுப்பின்மையான் சத்தென்றாதல் அசத்தென்றாதல் ஒருவாற்றானும் ஞேயமாமாறு இன்றிக் 3கேவலம் ஞானமாத்திரையேயாய் நிற்பதொன்று ஆகலான் அது கோசரமாம் என்றல் 4பொருந்தாது என்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) எண்ணிய சத்து அன்று அசத்து அன்று ஆம் என்றால் உளது என்றல் என் கண்ணி - 5பரமார்த்தமாகிய பரப்பிரமப் பொருள் விவகாரத்திற் கருதப்பட்ட சத்துமன்று அசத்து மன்று என்னின், அங்ஙனம் ஒரு பொருள் உண்டென்றல் யாது பிரமாணங் கருதியோ அதனைக் கூறுவாயாக; பிரமாணம் உண்டெனின் 1அதற்கு அது பிரமேயம் எனப்பட்டு ஞேயமாவான் செல்லுமென்று அஞ்சிப் பிரமாணமில்லை என்பை யாயின், மெய்கண்டான் எண்ணி அறிய இரண்டு அசத்து ஆம் - சத்தின் இயல்பை யுணர்ந்தோன் ஆராய்ந்தறியின் காட்சி முதலிய பிரமாணங்கட்கு விடயமாவதூஉம் ஒரு வாற்றானும் பிரமாண மல்லாத சூனியமுமாகிய இரண்டும் மேற்கூறியவாற்றான் அசத்தேயாம்; ஆதல் சத்து ஆம் அறிவு அறியா மெய் சிவன் தாள் ஆம் - ஆதலால் சாந்தோக்கிய 2முதலியவற்றுள் சத்தென்று ஓதப்படும் சுட்டறிவினால் அறியப்படாத மெய்ப்பொருள் சைவ உபநிட தங்களினும் 3சைவாகமங்களினும் அந்நியமின்றி நின்றுணரும் அநுபவ மாத்திரையின் கோசரிப்பது என்று ஓதப்படும் சிவனருளா வதன்றி நீ கூறும் சூனியமன்று 4என்றவாறு. ஆம் அசை. 5அறிய வென்னும் செயவெ னெச்சம், “மழை பெய்யக் குளநிறையும்” என்புழிப் போலச் செயின் என்னும் எச்சப் பொருட்டாய் நின்றது. 6முற்றும்மை விகாரத்தால் தொக்கது. 7அசத்தாமென மாறுக. 8சத்தாகிய மெய்யென இயையும். “அடியளந்தான் தாஅயது”1 என்றாற்போல அறிவறியா மெய் என்றது வாளா பெயராய் நின்றது. 2சிவன்தாள் எனச் சிவசத்தியின் மேல் வைத்து உயர்த்துக் கூறியது உபசாரவழக்கு; “இறைவனார் கமலபாதம்”3 என்பதுமது. இதனாற் போந்த பொருள்: சத்துமன்றி அசத்துமன்றி ஒரு பொருள் உண்டெனின் அதற்குப் பிரமாண மென்னை? பிரமாணாதீத மாகிய சூனியமெனில், சூனியமும் அழிபொருளுமாகிய இரண்டும் அசத்தே யென்பது 4மேற்காட்டினமையால் பிரமப்பொருள் அசத்தெனப்பட்டுச் சத்தென்னுஞ் சுருதிகளோடு முரணும்; ஆகலின் அவற்றுள் சத்தென்று ஓதப்படும் பரப்பிரமப் பொருளாவது உண்மை ஞானத்திற் கோசரிப்பது என யாம் கூறும் சிவமேயன்றி நீ5 கூறும் சூனியம் அன்றென மாயாவதியை மறுத்துக் கோசர மென்றதனை வலியுறுத்தியவாறாம் என்க. எண்ணி யறிய விரண்டாம் அசத்து என்பதற்குப் 6பிறரெல்லாம் வருகின்ற வெண்பாவிற் கூறும் பொருள்படக் கூறியதுகூறலாதல் மேலும் ஓர் இயைபின்றி யுரைப்ப. உதாரணம் உணர்ப வசத்தாதல் ஒன்றுணரா தொன்றை உணருநீ தானுணரா யாயின் - உணருமுனின் தானிரண்டாம் மெய்கண்டான் தன்னால் உணர்தலால் தானிரண்டாய்க் காணான் தமி என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், பிரகாசித்த பொருளையும் வேறோராற்றான் அறிதுமென வேட்கை சென்றுழி அவ்வாற்றான் புதுவதாய்ப் பிரகாசிக்க வேண்டுதலின் பிரகாசத்தினுக்குப் பிரகாசிக்க வேண்டுவதில்லை யென்றல் யாண்டும் 1செல்லாமையின் வாக்கு மனாதீதம் என்றல் பொருந்தாது என்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) உணர்ப அசத்து - நின்னால் அறிவனவாய கருவி களெல்லாம் 2மேற்கூறியவாற்றான் அசத்தாம், அசத்தெனவே அசித்தாதலும் பெறப்படும்; ஆதல் ஒன்று ஒன்றை உணராது - ஆகலான் அவற்றுள் ஒரு கருவியும் ஒன்றாகிய முதற்பொருளை 3அறியமாட்டாது; உணரும் நீதான் உணராய் - 4அவற்றான் வருகின்ற நீதானும் அதனை அறியமாட்டாய்; 5ஆயின் - நீயே ஆய்ந் தறிவாயாயின்; உணரும் உனின் தான் இரண்டு ஆம் - அவ்வா றுணரப்படும் பொருள்கள் போல் 1உணருகின்ற நின்னின்வேறாம்; மெய்கண்டான் தன்னால் உணர்தலால் - 2உயிர்க்கு அறிவு விளங்கும் உண்மை அறிந்தோன் தன்னறிவு அச்சிவனருளின் அடங்கி அதுவதுவாய் நின்று அதனானே அதனை அறியுமாதலான்; தான் இரண்டாய்க் காணான் தமி - ஏனைப் பொருள்களை அறியுமாறு போல வேறாய் நின்று அறிவானல்லன் அத்தனி முதற் பொருளை 3என்றவாறு. 4உணர்ப வென்பது அகரவீற்று அஃறிணைப் பன்மைப் பெயர்ச் சொல். ஒன்றும் என்னும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது. உனின் என்னும் இன்னுருபு நீக்கப் பொருட்கண் வந்தது. 5ஒற்றிரட்டாமை புறனடையாற் கொள்க. தான் அசை. இதனாற் போந்தது: சத்தாகிய சிவம் பாசஞானத்தானாதல் பசு ஞானத்தானாதல் அறியப்படாது; அறியப்படின் குடமுதலாயின போல உயிரின் வேறாய் அவிச்சையான் வரும் சுகதுக்கங்களைப் பயப்பதன்றி அவிச்சையின் நீங்கிய நிரதிசய இன்பத்தினைப் பயவாதாகலான், 1அவ்வுண்மை உணர்ந்தோன், ஏனையபோல அசத்தாதலின்றித் தனியாய் நின்ற அம் முதற்பொருளை, அதனான் ஒற்றித்து நின்றே காண்பன் என நையாயிகர் முதலியோரை மறுத்து வாக்கு மனாதீதமாய் நின்றே கோசரமாம் என வலியுறுத் தியவாறா மென்க. உதாரணம் பாவகமேல் தானசத்தாம் பாவனா தீதமெனில் பாவகமாம் அன்றென்னிற் பாழதுவாம் - பாவகத்தைப் பாவித்தல் தானென்னின் பாவகமாம் தன்னருளால் பாவிப் பதுபரமில் பாழ்2 என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், தானே கோசர மானா லன்றித் தன்னால் அறிதல் கூடாமையின் 3தன்னாலே தனையுணரும் என்பது தன்னைப் பற்றுதல் என்னும் வழுவா மாகலின் அவ்வாறன்றி வாக்கு மனாதீதப் பொருள் யோக நூலிற்கூறும் தியான பாவனை களில் கோசரமாம் என்றலே அமைவுடைத்து 4யோக மதம் பற்றிக் கூறுவாரை நோக்கித் தன்னாலன்றிக் கோசர மாகாமையை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) பாவகமேல் தான் அசத்து ஆம் - நீ கூறும் பாவனை ஏனைப் பாவகங்கள் போல மன முதலியவற்றோடு கூடி நின்று பாவிக்கும் 1பாவகமெனின், அறிவினா லறியப்பட்ட சுட்டாகலான் அப்பொருள் அசத்தாம்; 2பாவனாதீதம் எனின் பாவகம் ஆம் - கருவிகளை நீங்கி நின்று பாவிப்பதாகலின் அப்பாவனையைக் கடந்தது எனின் கருவிகள் நீங்கிய வழி ஒன்றும் அறியுமாறின்றிக் கேவலமா மாகலான் அது பாவக மாத்திரையே யன்றிப் பயன்படுமாறில்லை; அன்று என்னின் அது பாழ் ஆம் - இவ்விரு திறனுமன்றி அநிரு வசனமாகப் பாவிக்கப்படுவது எனின் அது 3சூனியப் பொருளாம்; பாவகத்தைப் பாவித்தல் தான் என்னின் பாவகம்4 ஆம் - அவ்வாறன்றிப் பாவனைக் கெய்தாத பொருளை எய்தியதாக வைத்துப் பாவகஞ் செய்தலெனின் அது போலிப் பாவனை யாதலால் பாவனாதீதம் போலப் பாவனை மாத்திரையே யன்றிப் பயன்படுமா றில்லை; அற்றேல், ஒருவாற்றானும் பாவனைக் கெய்தாத பொருள் பாழா மெனின், தன் அருளால் பாவிப்பது 5பரம் - அப் பாவகங்களை யொழித்துத் தனது திருவருளாற் பாவிக்கப்படுவதாம் பரம்பொருள்; பாழ் இல் - ஆகலான் நீ கூறும் பாவனைக் கெய்தாமை பற்றிப் 1பாழாதல் இல்லை என்றவாறு. தான் அசை. பாவகத்தைப் பாவித்தல் என்பது “கறைமிட றணியலும் அணிந்தன்று2” என்றது போலக் கொள்க. மேலை வெண்பாவில் தன் னென்றது தனது சத்தியே யாதலால் தன்னைப் பற்றுதலென்னுங் குற்றமாதல் யாண்டையதென விடுப்பார் தன்னருளாற் பாவிப்பது என்றார். தன்னருளை யறியுமாறும் அதனால் பாவிக்குமாறும் 3உண்மையதிகாரத்திற் கூறப்படும்.4 உதாரணம் அறிய இரண்டல்லன் ஆங்கறிவு தன்னால் அறியப் படான் அறிவி னுள்ளான் - அறிவுக்குக் காட்டாகி நின்றானைக் கண்ணறியா மெய்யென்னக் காட்டா தறிவறிந்து கண்டு என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், மேற்கூறிப் போந்த பாவனைகட் கெய்தாத பொருளைத் தன்னருளால் பாவித்தல் வேண்டா; “உயிர் பசுத்துவம் நீங்கிய காலத்துச் சிவனைப்போல முற்று முணர்தல் முதலிய எண்குணங்களுமுடையது” என்று 1ஆகமங்களுட் கூறுதலின் ஆண்டு ஆன்ம ஞானம் சிவஞானத்தோடு ஒப்ப தன்றிப் பசுஞானம் எனப்படாமையான் அவ்வறிவான் அறியப்படும் கோசரப்பொருள் என்றலே அமைவுடைத்து என்னும் சிவசம வாதிகளை2 நோக்கித் தன்னருளாலன்றிக் கோசரமாகாமையை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அறிய இரண்டு அல்லன் - சிவாகமங்களில் அத்து விதம் 3கூறுதலின் உயிர் தன்னறிவான் அறிதற்குத் தன்னின் வேறல்லனாகலாலும்; அறிவின் உள்ளான் ஆங்கு அறிவு தன்னால் அறியப் படான் - சமமாதலின்றித் தூல சூக்கும முறையால் தன்னறிவுக் குள்ளுமாய் நிற்றலின் அவ்விடத்துத் தன்னறிவினால் அறியவாரா னாகலானும்; அறிவுக்குக் காட்டு ஆகி நின்றானை4 - தன்னறிவுக்கு 5வியஞ்சகமாய் நின்று அறிவிக்கும் உயிர்க்குயிராய முதல்வனை; அறிவு கண்டு அறிந்து காட்டாது - ஆன்ம ஞானமானது தான் கண்டறிந்து தன் குணியாகிய உயிர்க்குக் கோசரமாமாறு காட்ட மாட்டாது; 6மெய் அறியாக் கண் என்ன - தன்னின் வேறின்றித் தனக்குள் நிற்றலின் தன்னாற் காணப்படாது தனக்குக் காட்டாகி நின்ற உயிரை அறிய மாட்டாத கண்ணொளிபோல்7 என்றவாறு. காட்டு 1முதனிலைத் தொழிற் பெயர். அறிவுக்குக் காட்டாகி நின்றான் என்னும் 2பெயரடை யானும் ஓர் ஏதுக் கூறியவாறு. கண்டறிதல் “குழிந்தாழ்ந்த கண்” 3 என்றாற்போல 4ஒரு பொருட் பன்மொழியாய்ச் சிறப்பின்கண் வந்தது. மெய்யறியாக் கண் என்ன என இயைத்துரைக்க. கண் முதலியவற்றை நோக்க உயிர் சத்துச் சித்தாம் என்று அதனை மெய்யென்றார். கண் - ஆகு பெயர். கண்ணறியா மெய் என்பதற்குக் கண்ணை அறியாத உடம்பு போலென்று உரைப்பாரும் உளர். உடம்பிற்கு அறியுந்தன்மை இன்மையானும், உடம்பிற்குக் கண் காட்டாதலும் இன்மையானும் 5அஃது ஈண்டு உவமையாதற்கு ஏலாமையின் அது போலி உரை என்றொழிக. உதாரணம் அதுவென்னு மொன்றன் றதுவன்றி வேறே அதுவென் றறியறிவு முண்டே - யதுவென் றறிய விரண்டல்ல னாங்கறிவுள் நிற்றல் அறியுமறி வேசிவமு மாம் என்றது உதாரணம். என்னுதலிற்றோ எனின், அத்தன்மையனாகிய முதல்வனைத் தலைப்பட்ட உயிர் அம்முதல்வனோடு ஒன்றாய்ப் போவதே யாகலின் ஆண்டு அங்ஙனம் அறிவதூஉம் அறியப்படுவதூஉம் ஆதல் யாங்ஙனம் என்னும் 1சிவாத்துவித சைவரை நோக்கி ஒன்றாயவழியும் அறிவதும் அறியப் படுவதும் உண்டென்பது உணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அது என்னும் ஒன்று அன்று - சத்தாகிய சிவம் ஞேயப் பொருளாய் விசிட்டமாய் நிற்பதென்பது உமக்கும் ஒக்கும் ஆகலான் அச்சிவம் இன்னதென்று அறிய வாராது அநிருவசனமாய் நிற்பதொரு நிருவிசேடப் பொருளெனக் கொண்ட 2மாயா வாதத்தைப் போல அது என்று அநிரு வசனமாய்க் கூறப்படுவது ஒரு சூனியம் அன்று ஆகலான்; 3அது அன்றி வேறு அது என்று அறிஅறிவும் ஆங்கு உண்டே- அந்த ஞேயமாத்திரையே யன்றி அதனின் வேறாக வாக்கு மனாதீத மாய் நிற்பதொரு பொருள் என்று அறிகின்ற ஞாதாவும் ஆண்டுள்ள தேயாம்; அற்றேல், ஒன்றாதல் பெறப்படாதால் எனின்; அது என்று அறிய இரண்டு அல்லன் அறிவுள் நிற்றல் அறியும் அறிவே சிவமும் ஆம் - உலகத்துப் பொருள்போல் அது என்று சுட்டி அறியுமாறு முதல்வன் தன்னின் வேறல்லனாய் அப்பணைந்த உப்புப் போலத் தன் அறிவின்கண் விரவி வேற்றுமை தோற்றாது நிற்றலான் அறிவிறந்து அறிகின்ற அவ்வுயிர் சிவமேயாம் 4என்றவாறு. உம்iம 1சிவமாயும் சிவமாகாமை விளக்கி நின்றது. அதுவென்னும் ஒன்றன்று ஆகலான் என ஏதுப் பொருள்படக் கொண்டு உரைக்க. 2அறிவும் என்ற உம்மை இறந்தது தழீஇயது. 3அல்லனென்பது முற்றெச்சம். 4வேறு முடிபு கோடலிற் பால்வழுவாகாமை உணர்க. உண்டே என்னும் ஏகாரம் தேற்றம்; ஏனையிரண்டும் அசைநிலை. நிற்றல் நிற்றலான் என்றவாறு. இவ்வெண்பாக்கள் ஐந்தும், முறையே, வாக்கு மனாதீதம் என்றல் பொருந்தும் கோசரமாம் என்றல் பொருந்தாது என்னும் மாயாவாதிகளையும், கோசரமாம் என்றல் பொருந்தும் வாக்கு மனாதீதம் என்றல் பொருந்தாது என்னும் நையாயிகர் முதலியோ ரையும், பாவனைக்குக் கோசரமாம் என்னும் பாதஞ்சலரையும், ஆன்ம ஞானத்திற்கே கோசரமா மென்னும் சமவாத சைவரையும், முத்தியில் சிவமேயன்றி உயிரென வேறு இன்மையின் உயிர்க்குக் கோசரமா மாறு யாண்டையது என்னும் சிவாத்துவித சைவரையும் மறுத்து, வாக்கு மனாதீத கோசரமாய் நிற்கும் இயல்பு வலியுறுத்தி ஒரு பொருள் மேல் வந்தவாறு காண்க. இவ்வாறு நான்காஞ் சூத்திர முதலிய மூன்றினும், மேற் பிரமாணத்தாற் கூறிப் போந்த பசுபாச பதிகட்கு இலக்கணம் கூறு முகத்தான் முறையே கேவலஞ் சகலஞ் சுத்த மென்னும் மூன்றவத் தையும் காட்டப்பட்டன. இம்மூன்றனுட் கேவலம்: மருட் கேவலமும், சகல கேவலமும், பிரளய கேவலமும் விஞ்ஞான கேவலமும், அருட் கேவலமும் என ஐவகைப்படும். அவற்றுள், மருட் கேவலமாவது அனாதி கேவலம். சகல கேவலமாவது சங்கரித்த பின்னர் புனருற் பவத்திற்கு ஏதுவாய்ப் படுங்கேவலம். ஆண்டுச் சூக்கும ஐந்தொழில் உண்டென 1மிருகேந்திரத்துட் கூறுதலின் அனாதி கேவலத்தோடு இதனிடை வேற்றுமையாமாறு கண்டுகொள்க. 2பிரளய கேவல மாவது மாயையோடு இயைபின்றி ஆண்டுப்படுங்கேவலம். 3விஞ்ஞான கேவலமாவது மாயை கன்மங்கள் என்னும் இரண்டனோடும் இயைபின்றி ஆண்டுப் படுங் கேவலம். அருட் கேவலமாவது தத்துவ சுத்திப் பின்னர் படும் கேவலம். அது 4துகளறுபோதத்திற் காண்க. இனிச் சகலமும் சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்திற் சுத்தமென மூவகைப்பட்டு ஓரோவென்று ஐந்து வகைப்படும். அவற்றுட் சகலத்திற் கேவலம் ஐந்தும் “ஒன்றணையா மூலத்து5” என்றதனுட் காண்க. சகலத்திற் சகல மைந்தும் “இலாடத்தே சாக்கிரத்தை6” என்றதனுட் காண்க. சகலத்திற் சுத்த மைந்தும் “யோகிற் றருவதோர் சமாதி7” என வழிநூலாசிரியர் தொகுத்தோதியது சித்தாந்த சாராவலி1 யோக பாதத்தின் வகுத்துக் கூறுதலான் ஆண்டுக் காண்க. இனிச் சுத்தமும் சீவன் முத்தி, அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி, பர முத்தி என்று ஐவகைப்பட்டுச் சாக்கிர முதலிய பெயர் பெறும்; 2அவற்றை முன்னர் வகுத்தோதுப. இரண்டாமதிகரணம் முற்றிற்று. ஆறாஞ் சூத்திரம் முற்றிற்று. இலக்கணவியல் முடிந்தது. பொதுவதிகாரம் முடிந்தது. 2. உண்மையதிகாரம் சாதனவியல்1 ஏழாஞ் சூத்திரம் யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ராகலிற் சத்தே யறியா தசத்தில தறியா திருதிற னறிவுள திரண்டலா வான்மா என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின், மேலதற்கோர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று, என்றது கருத்துரை; என்னுதலிற்றோ வெனின், சூத்திரக் கருத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) தூலாருந்ததி நியாயம் பற்றி மேலை ஆறு சூத்திரங் களினும் சிவாகமங்களில் கூறப்படும் முப்பொருள்களது பொது வியல்பு பிரமாண முகத்தானும் இலக்கண முகத்தானும் ஆராய்ச்சி செய்து உணர்த்திய ஆசிரியர், அம் முப்பொருள்களது சிறப்பியல்பு எனப்படும் உண்மை, சாதன முகத்தானும் பயன் முகத்தானும் ஆராய்ச்சி செய்து உணர்த்துவான் புகுந்து, முதற்கண் 1மூன்று சூத்திரங்களான் அவற்றை அறிந்து அதனானாய பயன் பெறுதற்கு ஏதுவாகிய சாதனம் கூறிய தொடங்கினார். இவற்றுள் இச்சூத்திரம் உணருரு அசத்தெனவும், இருதிறன் அல்லது சிவசத்தெனவும் 2மேலைச் சூத்திரத்தான் வரைசெய்து உணர்த்திய வழி, அங்ஙனம் அறியும் பொருள் அவ்விரண்டனுள் ஒன்றோ வேறோ என்னும் ஐயப்பாட்டின்கண், அவ்விரண்டனுள் ஒன்றாகற் பாலது என்பார் மதம் பற்றி நிகழுங் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்திற்குப் புறனாக எடுத்து ஓர் ஒழிபாகிய சதசத்தினியல்பு வரை செய்துணர்த்து முகத்தானே, சாதித்துப் பயன் பெறுதற்கு உரிய அதிகாரியின் இயல்பாவது இதுவென்பது உணர்த்துதல் நுதலிற்று என்றவாறு. 3அதிகாரமும் ஓத்தும் வேறாய வழியும் இயைபுணர்ந்து கோடற்பொருட்டுக் கருத்துரை அவ்வாறு செய்தாரென்பது. இப்புறனடையை வடநூலார் வாக்கிய சேடமென்ப. இதனுட் கூறப்படும் மூன்றதிகரணமும் மூன்று புறனடைபோலும் என மலையாமைப் பொருட்டு ஓர் புறனடை என்றார். 4முன்னைய விரண்டும் இறுதி அதிகரணத்தைச் சாதித்தற்கு ஏதுவாய் 5ஒரு பொருண்மேல் வந்தனவேயாம் என்பது கருத்து. ஒன்றனை அறிந்தவழி அதனானாய பயன் பெறுதற்குரிய முயற்சி செய்யலுறுவார்க்கு அதனைச் சாதிக்கும் ஆற்றல் தமக்கு உண்டென்பதூஉம், சாதித்ததனால் வரும் பயன் இது வென்பதூஉம், அதனைப் பயப்பித்தற்குரிய சாதனமாவது இது வென்பதூஉம், அது வருவாயும் உணர்ந்தாலன்றி அதன்கண் மனவெழுச்சி செல்லாமையின், ஈண்டு ஓதப்படும் சாதனம் செய்து பயன் பெறுதற்கு உரிமையுடைய அதிகாரியின் இயல்பு உணர்த்துவதாய இச்சூத்திரம் 6முதற்கண் வைக்கப்பட்டது. இதன் பிண்டப்பொழிப்பு1:- மேலைச் சூத்திரத்துள் கூறிப் போந்த 2இரண்டனுள், வாக்கு மனாதீதமாகிய சிவசத்தின் சந்நிதியின், உணருருவாகிய அசத்தெல்லாம் 3பாழாகலின், 4சத்தாகிய சிவம், அசத்தாகிய பிரபஞ்சத்தை அறிதல் செய்யாது; அசத்தாகிய பிரபஞ்சம் அறிவில்லாத சடமாதலின் சத்தாகிய சிவத்தை அறிதல் செய்யாது; ஆதலால் பாரிசேட அளவையான், 5இருதிறன் அறிவுளது ஒன்று உண்டென்பது பெறப்படுதலின், அதுவே சத்தாதற் றன்மையும் அசத்தாதற் றன்மையும் ஆகிய இரண்டும் அன்றிச் சதசத்தாயுள்ள உயிராம் என்றவாறு. 6இரண்டனுள் ஒன்றனைப் பிரிக்கின்றமையிற் சத்தே என்னும் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. அசத்து இலது ஆகலின் என்றுரைக்க. அசத்துச் சத்தை யறியாமைக்குச் சத்தெதிர் சூனியமாதலே ஏதுவாதல் அமையுமாயினும், அசத்தெனப்பட்ட கருவிகள் 7முத்திநிலையில் சிவகரணமாய் ஆன்ம சந்நிதியை யொட்டி முதல்வன் சந்நிதியில் நிற்கப்பெறும் என்பாரை நோக்கி வேறுமோர் ஏதுக் கூறினார்.இக்கருத்தே பற்றி, “சத்தின்முன் நிலாமையானும் தனைக்கொடொன்று உணர்தலானும்” 1என இரண்டேதுவும் உடன் கூறினார் வழிநூலாசிரியரும். 2எற்புழிக் கோடலான் அறிதல் என்றது ஈண்டு அனுபவ அறிவின்மேற்று. 3இனைத்தென அறிந்த பொருட்கு வினைப்படு தொகுதிக்கண் வேண்டப்படும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது. இதனுள் யாவையும் சூனியம் சத்தெதிராகலின் சத்தே அறியாது என்றது ஓரதிகரணம்; அசத்து இலது அறியாது என்றது ஓரதிகரணம்; இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா வென்றது ஓரதிகரணம்; ஆக மூன்றதிகரணத்தது இச் சூத்திரமென்று உணர்க. முதலதிகரணம் ஈண்டுச் சத்தினிடத்து அசத்துப் பிரகாசியா தென்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், “தந்திடும் சிவனவன்றன் சந்நிதி தன்னில் நின்றே4” என்றும், “கூடு மொளிவளர் குடிலை மாயை மேவி5” என்றும், “தாரகமாம் அத்தன் தாள் நிற்றல்6” என்றும், “விமலனுக் கோர் சத்தியாய்7” என்றும், “உலகமே யுருவமாக8” என்றும், “அத்துவா மூர்த்தியாகி9” என்றும், “இருநிலனாய்த் தீயாகி நீருமாகி.............. நின்றவாறே10” என்றும் கூறப்படும் இயல்புடைய பிரபஞ்சத்தைச் சத்தெதிர்சூனியமென்றல் அவசித்தாந்தமாய்1 முடியும் போலு மெனவும், “மண்டிய வுணர்வு யிர்க்காய் மன்னி நின்றறியும்2” எனவுங் கூறும் சிவாத்துவித சைவர் மதம் பற்றி3 நிகழுங் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றிற் போந்த ஏதுவைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) சுட்டுணர்வின்றி நின்றறியும் சிவசத்தின் முன்னர் சுட்டி யறியப்படும் அசத்தாய பிரபஞ்சம் விளங்கித் தோன்றாது என்றவாறு.4 ஈண்டுச் சூனியம் என்றது விளங்காமைப் பொருட் டென்பார் பிரகாசியாது என்றார். இக்கருத்தே பற்றி “முனைத்திடா தசத்துச் சத்தின்முன்5 இருள்” என்றார் வழி நூலாசிரியரும். முனைத்திடாமை யாவது இது குடம் இஃது ஆடையென நம்மனோரால் சுட்டி யறியப்படுமாறு போல முதல்வனால் சுட்டி யறியப்படுவதாய் வேறு நில்லாமையாம். ஆகவே, 6ஈண்டுச் சத்தெதிர் யாவையுஞ் சூனியம் என்றது கொண்டு அவசித்தாந்தமாதல் யாண்டையதென மறுத்துச் சத்தறியா வென்றதனை வலியுறுத்தியவாறு காண்க ஏது மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், 7முற்றுணர்வுடைய சிவத்துக்கு அசத்தை விடயிப்பதாய சுட்டுணர்வும் உண்டென்றாற்படும் இழுக்கென்னை யென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) தன்னியல்பாகிய இயற்கை யுணர்வின் முன்னர் பொது வியல்பாகிய செயற்கைச் சுட்டுணர்வு பிரகாசித்து நில்லாமையான் ஈண்டுச் சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என மேற்கொண்டது என்றவாறு. பிரகாசித்து நிற்றலின்மையாவது இயற்கை யுணர்வோடு ஒப்ப ஒருங்கு நில்லாமை. எக்காலத்தும் நிலைபெறுவதாய தன்னியல்பே மெய்யெனவும் இடையே தோன்றி மறைவதாய பொது வியல்பே பொய்யெனவும் கூறப்படுவன வாகலான் அவை ஈண்டைக்கு ஏற்புடைய 1அறிவின் மேனின்றன. இஃதறியாதார் 2உரைப்பன வெல்லாம் மேற்கோளைச் சாதித்தற்குரிய ஏதுவாதல் செல்லாது கூறியது கூறலாய் முடியுமென் றொழிக. உதாரணம் அன்னிய மில்லாமை யரற்கொன் றுணர்வின்றாம் அன்னியமில் லானசத்தைக் காண்குவனேல் - அன்னியமாக் காணா னவன்முன் கதிர்முன் னிருள்போல மாணா வசத்தின்மை மற்று என்றது உதாரணம்; என்னுதலிற்றோ வெனின், சுட்டுணர் வின்மையான் முதல்வன் அசத்தை அறியான் எனின் முற்றுணர் வுடைமைக்கு இழுக்கென்பாரை நோக்கி இழுக்கின்மை கூறி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அன்னியம் இல்லாமை 3அரற்கு ஒன்று உணர்வு இன்று ஆம் - தன்னுள் வியாப்பியமான பசு பாசங்களோடு வேற்றுமையின்றி உடனாய் நிற்றலையுடைய முதல்வனுக்குச் 1சுட்டி யறியக் கிடப்பதொன்று இல்லை ஆகலான்; அன்னியம் இல்லான் அசத்தைக் காண்குவனேல் அன்னிய மாக் காணான் - அத்தன்மையனாகிய முதல்வன் அசத்தை அறியலுறுவனாயின் அறிந்தாங்கறிவதன்றி நம்மனோர் போல வேறாகச் சுட்டி அறிவானல்லன்; கதிர்முன் இருள்போல அவன்முன் 2மாணா அசத்து இன்மை - ஞாயிற்றின் முன் இருட்டுப்போல அம்முதல்வ னெதிர் நன்மையில்லாத பிரபஞ்சம் விளங்கி நில்லாது ஆகலான் 3என்றவாறு. எனவே, அசத்தை விடயியப்பதாகிய ஏகதேச உணர்வு முற்றுணர்வைத் தடுப்பதாகலான் அஃதில்லாமை முற்றுணர்விற்கு மேம்பாடாவதன்றி இழுக்காகாதென ஐயமகற்றி ஏதுவை வலியுறுத்தவாறு 4காண்க. மாணாமை வியாபக உணர்விற்கு விடயமாகாமை. 5இன்மை ஈண்டு விளங்காமை குறித்து நின்றது. மற்று அசை. மற்றுக் காண்குவனேல் என மேலேகூட்டி வினைமாற்றின்கண் வந்த தெனினும் அமையும். 1உணர்வுங்கதிரும் ஆகுபெயர். கதிர் முன்னிருள் ஈண்டு முனையாமை மாத்திரைக்கு ஒருபுடை உவமையாயிற் றென்பது வழி நூலாசிரியர் “முனைத்திடாது அசத்துச் சத்தின் முன் இருள் இரவி முன்போல்” 2என்றவாற்றான் அறிக. முதலதிகரணம் முற்றிற்று இரண்டாம் அதிகரணம் மேற்கோள் இனி அசத்தினுக்கு உணர்வின்று என்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோவெனின், சத்து அசத்தை அறியாதாயினும் அசத்து எனப்பட்ட தனுகரண புவன போகங்களுள் ஒன்றாய கரணம் விளக்குப் போல் விகாரமின்றி நிற்கும் 3ஆன்ம சந்நிதியிற் பெத்த நிலைக்கண் அசத்தாய விடயங்களை அறிந்தாற்போல 4முத்திநிலையிற் சிவகரணமாய் நின்று சிவத்தை அறியுமென்றலும், கண்ணாடியின் நிழல்போல ஆன்ம சந்நிதியில் அதன்கண் அறிவுண்டாமென்றலும் அமைவுடைத்துப் போலும் எனச் 5சிவ சங்கிராந்தவாதி மதம் பற்றி நிகழுங் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங் கூற்றிற் போந்த ஏதுவைக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) 1வெளிப்படை. சூத்திரத்தில் இலது என்றது அறிவிலதென்னும் பொருட்டு என்பார் உணர்வின்றென உரைத்தார். ஈண்டு அசத்து என்றது தத்துவப் பிரபஞ்சத்தை; 2ஏனைப் பிரபஞ்சத்திற்கு அறிவின்மை சாதிக்க வேண்டாமையின். ஏது அதுதான் நிரூபிக்கில் இன்றாகலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், பதிஞான பசுஞானங்களோடு ஒப்பப் பாசஞானம் ஒன்றென வைத்து எண்ணப்படும் உரிமை யுடையது, அதனை அறிவுடைத் தன்று என்றல் பொருந்தாது என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) 3அவ்வறிவாவது தூலமாய் நோக்கும் வழி அவ்வசத் திற்கு உள்ளதுபோலத் தோன்றினும் 4ஐயந்திரிபின்றி மாசறு காட்சியான் ஆராயும் வழி அதன்கண் இல்லதாகலான் இனி அசத்தினுக்கு உணர்வின்றென மேற்கொண்டது என்றவாறு. எனவே, பாசம் வாயிலாக உயிரின்கண் நிகழும் பசு ஞானமே பாச ஞானமென்று உபசரித்துக் கூறப்படும்; அதனைப் பாசத்திற்கு உளதாகிய ஞானமெனக் காண்டல் நிரூபியாத வழிப்படும் மடமையே, பிறிதில்லை என்றவாறாயிற்று. உதாரணம் பேய்த்தேர்நீ ரென்றுவரும் பேதைக்கு மற்றணைந்த பேய்த்தே ரசத்தாகும் பெற்றிமையின் - வாய்த்ததனைக் கண்டுணர்வா ரில்வழியிற் காணு மசத்தின்மை கண்டுணர்வா ரில்லதெனக் காண் என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அதனை உவமை முகத்தான் வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) பேய்த்தேர் நீர் என்றுவரும் 1பேதைக்கு மற்று அணைந்த 2பேய்த்தேர் அசத்து ஆகும் பெற்றிமையின் - பாலை நிலத்தின்கட் காணப்படுவதாய பேய்த்தேரை நீரென்று கருதி அதனை யுண்ண வருகின்ற நீர் வேட்கையுடைய மடவோனுக்கு அதனை யடுத்தவழித் தன்னால் அணையப்பட்ட அப்பேய்த்தேர் நீராதலின்றிப் பொய்யாந் தன்மைபோல; 3வாய்த்து - குரவன் அறிவுறுக்கும் உபதேசமொழி கிடைப்ப; அதனைக் கண்டு உணர்வார் இல்வழியின் அசத்து இன்மை காணும்- அவ்வசத்தின் இயல்பை ஆராய்ந்து அறிவாரின்றி அறியமாட்டாதார் உள்வழி அவர்க்கு அதன்கண் அறிவுள்ளதாய் மதிக்கப்படும் சத்தாந் தன்மையே காணப்படும்; கண்டு உணர்வார் இல்லது எனக் காண் - அவ்வுபதேச மொழி கிடைப்ப அதன் இயல்பை ஆராய்ந்து அறியவல்லார்க்கு அவ்வசத்து அறிவில்லதே யாம் என்று அறிவாயாக என்றவாறு. மற்று வினைமாற்று. 4மை பகுதிப்பொருள் விகுதி. இன் உவம உருபு. வாய்த்து என்பது வாய்ப்ப என்பதன் திரிபு. வாய்த்தல் நேர்படுதல். ஆண்டைக்கு ஏற்புடைய 1வினைமுதல் அவாய் நிலையான் வந்தது. அசத்தின்மையாவது சத்தாந்தன்மை. 2நான்கனுருபு விகாரத்தால் தொக்கது. 3அறிவு என்பது அதிகாரத்தான் வந்தது. மூன்றாம் அதிகரணம் மேற்கோள் இனி இருதிறன் அறிவுளது இரண்டாலா ஆன்மா வென்றது என்றது மேற்கோள். என் னுதலிற்றோ எனின்; சிவசத்தின் தன்மையே உயிர்க்குத் தன்மையாவதன்றி வேறில்லை யாகலின் சத்தே அசத்தை அறியு மென்னும் சிவாத்துவித சைவரையும், உயிர்க்குத் தன்மை என்பதுஒன்று இன்மையின் அசத்தே சத்தை அறியுமென்னும் சிவசங்கிராந்தவாத சைவரையும் மறுத்து, சத்தும் அசத்தும் தம்முள் அறியுமாறில்லையென மேற்சாதித்தவழி, இரண்டும் இவ்வாறாயின் இவற்றை அறியும் பொருள் வேறு என்னை என்பாரை நோக்கிப் பாரிசேட வளவையான் அவ்விரண்டின் வேறாய் உயிர்க்குத் 4தன்மை உண்டு என்பது விளக்கிச் 5சதசத்தின் இயல்பை வரைசெய்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) 1வெளிப்படை. ஈண்டு இரண்டலா ஆன்மா இருதிறன் அறிவுளது என்றது சத்தெதிர் நில்லாத அசத்தும் சத்தும் தம்முள் ஒன்றான் ஒன்று அறியப் படாமையான், இருதிறன் அறிவுள்ளது இரண்டலா ஆன்மாவேயாம். தம்முள் ஒன்றான் ஒன்று அனுபவிக்கப்படாத ஞாயிற்றையும் 2விடயத்தையும் அனுபவிக்கும் கண் போலுமென 3அனுமானம் கூறிக் காண்க. அவை உயிரானும் அறியப்படாதவழிப் பயப்பாடின்றிச் சூனியமாய் முடியுமாகலான் உயிர் அறிதற் றன்மைத்து என்பது தெற்றனவுணர்க. இவ்விரண்டனையும் அறிவதாய் உபதேசியாய் நின்ற அவ்வறிவு இரண்டன்பாலும் உளதாய் உள்ள அதுவே அவ்வான் மாவாம் என்றது. என்றது பொழிப்புரை; என்னுதலிற்றோ, எனின், இருதிறன் அறிவென்னும் தொகைச் சொல் விரியுங்கால் படும் பொருள் வேறுபாடு விளக்கு முகத்தான் உயிருக்குத் தன்னியல்பு வேறு வேறு கூறும் சமயங்கள் எல்லாம் மறுக்கப்படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) இவ்விரண்டனையும் அறிவதாய் - மேற்கூறிப் போந்த சத்தையும் அசத்தையும் அறியுந்தன்மைத்தாய்; உபதேசியாய் - அறிவிக்க அறியும் தன்மைத்தாய்; அவ்விரண்டன்பாலும் நின்ற அறிவுளதாய் - அவ்விரண்டின்கண்ணும் நிலைபெற்ற அனுபவ அறிவுள்ளதாய்; உள்ள அதுவே அவ்வான்மாவாம் என்றது - இவ்வாறுள்ள பொருள் யாது அதுவே சத்தும் அசத்துமல்லாத சதசத்தாகிய 1உயிராம் என்றவாறாம். 2ஆய் என்னும் வினையெச்சம் இரண்டும் நின்ற வென்னும் பெயரெச்ச வினையோடு தனித்தனி முடிந்தன; நின்றவென்னும் பெயரெச்சம் உள்ள என்பதன் முடிவாகிய அதுவென்னும் பெயர்கொண்டு முடிந்தது. இருதிறன் அறிவு என்னுந் தொகைச்சொல் ஈண்டு 3மூன்று பொருளில் மயங்கிற்று என்னுங் கருத்தான் இவ்வாறு மொழிந்தார். அவற்றுள் இருதிறனையும் அறியும் அறிவென்னும் இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருள் பற்றி இவ்விரண்டனையும் அறிவதாய் எனவும், இருதிறனால் விளங்கிய அறிவு என்னும் மூன்றாம் வேற்றுமைத் தொகைப்பொருள் பற்றி உபதேசியாய் எனவும் இருதிறனிலும் உள்ள அறிவென்னும் ஏழாம் வேற்றுமைத் தொகைப் பொருள் பற்றி நின்ற அறிவு இரண்டன்பாலும் உளதாய் எனவும் உரைக்கப்பட்டன. இவ்விரண்டனையும் அறிவதாயுள்ள அது என்பதனால் இரண்டும் இவ்வாறாயின் இவற்றை அறியும் பொருள் வேறு என்னை என்னும் கடாவுக்கு 4விடைகூறி 1அவ்விருவர் மதங்களையும் அவற்றோடு ஒரு ஒரு தன்மையவான புறச்சமயங்களையும் மறுத்தவாறு. உபதேசியாயுள்ள அது என்றதனால் உயிர் அறிவிக்க வேண்டாது தானே அறியும் இயல்பிற்று என்னும் 2சிவசமவாத சைவர், ஈசுர அவிகாரவாத சைவர், ஐக்கியவாத சைவர் மதங்களையும் அவற்றோடு ஒரு தன்மையவான புறச்சமயங் களையும் மறுத்தவாறு. இரண்டன்பாலும் உளதாயுள்ள அது என்பதனால் ஆன்மாவின் அறிவு சத்தோடு கூடுமாறில்லை என்னும் 3பாடாணவாத சைவர், பேதவாத சைவர் மதங்களையும், சத்தோடு கூடியவழி ஒன்றாய்ப் போதலே அன்றி அதன்பால் உளதாமாறு இல்லை என்னும் 4சுத்த சைவர் மதத்தையும் அவற்றோடு ஒரு தன்மையவான புறச் சமயங்களையும் மறுத்தவாறு. இவ்விரண்டனையும் அறிவதாய் எனவே அவ்வறியுந் தன்மை இவ்விரண்டின் தன்மைபோல் அன்றி “இருளொளியலாக் கண்” 5தன்மைபோல வேறாயதோர் தன்மை என்பதூஉம், உபதேசியாய் எனவே அஃது ஆகாயத்தின் குணமாய் ஓசையின் இயல்புபோலத் தன்னை விளக்குவதாயாகிய வியஞ்சகம் உள்வழி விளங்குவதோர் தன்மை என்பதூஉம், இரண்டன்பாலும் உளதாய் எனவே அத்தன்மை படிகம்போலச் சார்ந்ததன் வண்ணமாய் அழுந்துந் 1தன்மை என்பதூஉம் பெறப்பட்டன. உதாரணம் அருவுருவம் தானறிதல் ஆயிழையா யான்மா அருவுருவ மன்றாகு முண்மை - அருவுருவாய்த் தோன்றியுட னில்லாது தோன்றாது நில்லாது தோன்றல் மலர்மணம்போல் தொக்கு என்றது உதாரணம்; என்னுதலிற்றோவெனின் அம்மூன்றனுள் முன்னை யதனை வலியுறுத்தி இரண்டலாமையை விளக்குதல் நுதலிற்று. (இ-ள்) ஆய் இழை ஆய் ஆன்மா 2அருவுருவம் அறிதல் அருவுருவம் அன்று ஆகும் - 3நுணுகிய நூல்களை ஆராய்வதாகிய உயிரே சத்து அசத்து எனும் இரண்டனையும் அறிவதாகலான் அஃது அவ்விரண்டுமின்றி அவற்றின் வேறாம். அற்றேல், அவ்விரண்டனையும் அறியும் உயிர்க்குத் தன் உண்மை அறியப்படுமோ படாதோ எனக் கடாயினார்க்குப் 4படுமெனின் தன்னோடு உளப்பட 5மூன்றனையும் அறிவதென்னாது அவ்விரண்டனையும் அறிவதாய் என்றல் பொருந்தாது; படாதெனின் அறியப்படாத பொருள் சூனியமெனப்பட்டு வழுவாமால் எனின்; உண்மை அருவுருவாய்த் தோன்றி உடன் நில்லாது தோன்றாது நில்லாது மலர்மணம் போல் தொக்குத் தோன்றல் - 1அவ்வான்மாவின் உண்மைத் தன்மை 2அவ்விரண்டும்போல விளங்கித் தோன்றி அவற்றோடு ஒப்ப நிற்பதும் அன்றாய், விளங்காது சூனியமாய் நிற்பதும் அன்றாய், மலரின்கண் வாசம் அவ்விரு வகையும் அன்றி அதன்கண் அடங்கித் தோன்றுமாறு போலச் சத்திலும் அசத்திலும் சார்ந்ததன் வண்ணமாய் அடங்கித் தோன்றுவது ஓர் இயல்பாம்; ஆகலான் அஃது அவை போலத் தனித்து அறியப்படுவ தொன்றன்றி அவ்விரண்டனையும் அறியுமுகத்தான் அறியப்படுவதாம் என்றவாறு. ஆகலான் அஃது அவை போலத் தனித்து அறியப்படுவ தொன்றன்றி அவ்விரண்டனையும் அறியுமுகத்தான் அறியப் படுவதாம் என்பது 3குறிப்பெச்சம். சுட்டுணர்விற்கு விடயமாகாமை பற்றிச் சத்தை அருவென்றும், அதற்கு விடயமாதல் பற்றி அசத்தை உருவென்றும் கூறினார். உணர்உரு அசத்து 4என்புழி உருவென்றதும் அது நோக்கி செவ்வெண் தொகை விகாரத்தால் தொக்கது. தான் அசை. அறிதலான் அன்றாகும் என வியையும். இழை நூலாகலான் ஈண்டுச் சாத்திரத்தை உணர்த்திற்று. ஆய்தல் நுணுகுதல்; “ஓய்த லாய்தல் நிழத்தல் சாஅய் - ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” 5என்றார் தொல்காப்பியனாரும். ஆய் இழை எனப் பொருளின் நுணுக்கம் நூன்மேலேற்றப் பட்டது. 6இரண்டாவது விரித்துரைக்க. உயிர்க்கு அறியுந் தன்மை 1உண்டாகலானன்றே வேதாகம முதலிய நூல்கள் உளவாயின என அதனை வலியுறுத்துவார், ஆயிழை ஆய் ஆன்மா வென அதனை உடம்பொடு புணர்த் தோதினார். இக்கருத்தே பற்றி, “பலகலை யுலகில் நிலவுதலானும்2” என்றார் புடைநூலா சிரியரும். இவ்வாறன்றி ஆயிழையாய் என மகடூஉ முன்னிலை யாக்குவார்க்கு, இவ்வுதாரணம் மேலதனை வலியுறுத்துதற்கு எழுந்ததன்றாய்க் 3கூறியது கூறல் என்னும் வழுவாய் முடியுமென்று ஒழிக. தேற்றேகாரம் விகாரத்தால் தொக்கது. அருவுருவாய் என்புழி 4ஆக்கச் சொல் உவமைப் பொருள் குறித்து நின்றது, “ஆள்வாரிலி மாடாவெனோ5” என்றாற் போல. 6தொக்குத் தோன்றல் மலர் மணம் போலெனக் கூட்டுக. உதாரணம் மயக்கம துற்றும் மருந்தில் தெளிந்தும் பெயர்த்துணர்நீ சத்தாகாய் பேசில் - அசத்துமலை நீயறிந்து செய்வினைகள் நீயன்றி வேறசத்துத் தானறிந்து துய்யாமை தான் என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அங்ஙனம் அறியும் உயிர் சிவசத்தோடு ஒப்பச் சித்தாகும் என்பாரை நோக்கி உபதேசியாய் என்றதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) மயக்கமது உற்றும் மருந்தின் தெளிந்தும் - நின் அறிவை விளக்குதற்குரிய வியஞ்சகம் இல்வழி ஒரு விடயத்தை இன்னதென்று அறியமாட்டாது மயக்கத்தை யுற்றும், பசி நோய்க்கு அன்னம் போல, அம்மயக்க நோய்க்கு மருந்தாகிய வியஞ்சகம் உள்வழி அம்மயக்கம் நீங்கி அதனை இன்னதென்று 1நிச்சயித்தும்; பெயர்த்து உணர் நீ பேசில் சத்து ஆகாய் - இங்ஙனம் 2மாறி மாறி யுணர்ந்து வருகின்ற நீ சொல்லுமிடத்துச் 3சிவசத்தோ டொப்ப அறியுஞ் சத்தி உடையா யல்லை; அற்றேல் அசத்தனாவேன் போலும் எனின், நீ யறிந்து செய்வினைகள் நீ யன்றி வேறு அசத்துத்தான் அறிந்த துய்யாமை அசத்தும் அலை - வியஞ்சக முள்வழியும், நீ முன் அறிந்து செய்த வினைகளை இப்பொழுது நீயே அறிந்த அனுபவிக்க வல்லையன்றி நின்னின் வேறாய் அசத்தாகிய 1பாசம் அறிந்து அனுபவிக்க மாட்டாமையான், அதனோ டொப்ப அசத்தனாவாயும் அல்லை; வேறு - 2சத்த குணமுடைய ஆகாயம் போல வியஞ்சகம் உள்வழி அறியு மாற்றல் உடைமையும் அஃது இல்வழி அவ்வாற்றல் இன்மையுமாகிய 3இரண்டும் உடைய நீ, 4அவ்விரண்டற்கும் வேறாய்ச் சிதசித்தாந் தன்மையுடையை எ-று. மருந்தில் தெளிந்து எனவே மயங்குதல் அஃது இல்வழி என்பது பெற்றாம். வியஞ்சகம் இல்வழித் தலைப்படுவதூஉம் அஃது உள்வழிநீங்கி நிற்பதூஉமாகிய மயக்கம், உண்டி இல்வழித் தலைப்படுவதூஉம், அஃது உள்வழி நீங்கி நிற்பதூஉமாகிய இயல்புடைய பசியோடொத்தலின்5 அதனைப் பசிநோயாகவும், தீர்த்த லொப்புமை பற்றி வியஞ்சகத்தைப் பசி தீர்க்கும் மருந்தாகவும் உருவகம் செய்தார். 6இஃது ஏகதேச உருவகம். மருந்தெனப் பொதுப்பட உருவகம் செய்தாராயினும், மறித்து மறித்து வேண்டப்படுமாறு ஈண்டைக்கு ஏற்புடையது பசி நோய் தீர்க்கும் 1மருந்தே யாகலின் அவ்வாறு உரைக்கப்பட்டது. 2அது பகுதிப் பொருள்விகுதி. உம்மை எண்ணின்கண் வந்தது. அசத்தும் என்னும் உம்மை இறந்தது தழீஇயிற்று. தான் என்பது முன்னையது எழுவாயுருபுபட நின்றது; பின்னையது அசைநிலை. துவ்வாமை துய்யாமை என மரீஇயிற்று. 3சத்தியுடைய பொருள் சத்தம், அஃது இல்பொருள் அசத்தம் ஆகலின் அம்மொழிகள் ஈண்டு அம்முக் கெட்டுக் குற்றியலுகர வீறாய் நின்றன; “நாகணையான்4” “பெற்றொன் றுயர்த்த பெருமான்5” “பேது செய்து6” “வாதுசெய்யத் திருவுள்ளமே7” என்றாற் போல. அசித்துமலை என்பது பாடமாயின், மேற் சத்தாகாய் என்றதனை இசையெச்சமாகக் கொண்டு சத்தாந்தன்மையே யுடையாயல்லை; அதன் மேலும் சித்தாமாறு யாங்ஙனம் என்று உரைத்து இயைத்துக் கொள்க.8 இவ்வாறன்றி ஈண்டுச் சத்தாகாய் அசத்துமலை என்பவற்றை மேல்1 அருவருவம் அன்றாகும் என்றதன் பொருள்படக் கொண்டு உரைப்பாருமுளர். அவர் ஆண்டே அமைந்து கிடந்த பொருளை மறித்தும் கூற வேண்டாமையும் பெயர்த்துணர் நீ எனவும், அறிந்து துய்யாமை எனவும் 2அறிவுடைமை அறிவின்மை பற்றிக் கூறும் பொருள் 3அவையாதல் செல்லாமையும் நோக்கிற்றிலர். உதாரணம் 4மெய்ஞ்ஞானந் தன்னில் விளையா தசத்தாதல் அஞ்ஞான முள்ள 5மணைதல்காண் - மெய்ஞ்ஞானம் தானே யுளதன்றே தண்கடனீ ருப்புப்போல் தானே யுளமுளவாத் தான் என்றது உதாரணம்; என்னுதலிற்றோ வெனின், 6அம்மயக்கம் அவ்வுயிரோடு இயைபுடைய முதல்வனுக்கும் உண்டுபோலும் எனவும் 7அதுதான் உயிர்க்கு எக்காலத்து வந்தது எனவும் நிகழும் கடாவை விடுக்கு முகத்தான் இரண்டன்பாலும் உளதாமாறு வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அஞ்ஞானம் - 1மேற்கூறிப் போந்த மயக்கமாவது; மெய்ஞ்ஞானம் தன்னில் 2அசத்து ஆதல் விளையாது - ஒரு பெற்றித்தாய அறிவெனப்படும் 3சிவத்தின் எதிர் கதிர்முன் இருள் போல்4 நிலையுதல் 5இலதாகலின் ஆண்டு உளதாதல் இன்றி; மெய்ஞ்ஞானம் தானே உளது அன்றே - அச்சிவம் என்றுள்ளது அன்றே; தான் ஏய் உளம் உளவா - தான் பொருந்துதற்கு உரிமை யுடைய உயிர்கள் 6உள்ளனவாக; உள்ளம் அணைதல் - 7அவ்வுயிர்களைப் பற்றி நிற்றல்; தண்கடல் நீர் உப்புப் போல் காண் - தண்ணிய கடலின் கண் உளதாதலின்றி அக்கடலிடத்து உளதாகிய நீரைப் பற்றி நிற்கும் உப்புப்போல் என்று அறிவாயாக என்றவாறு.8 விளையாது என்னும் வினையெச்ச மறை 1அணைதல் என்னுந் தொழிற் பெயரொடு முடிந்தது. தானே என்பது 2கட்டுரைக்கண் வந்தது. தானே உளம் உளவாத் தான் என்புழித் தானென்பது முன்னையது எழுவாய்; பின்னையது அசைநிலை. ஏயுளம் என்னும் வினைத்தொகை “அறிவறிந்த மக்கட்பேறு”3 போல நின்றது. ஏய்தற்கு உரிமையாவது 4மேற்காட்டினாம். தண்கடல் நீர் உப்புப்போல் என்றதனால் 5முப்பொருள்களும் வியாபக வியாப்பியங்களாய் நிற்குமாறும் பெறப்பட்டது. 1இரண்டன்கண்ணும் உயிர்க்கு இயைபுடைமை கூறவே, இரண்டன்பாலும் உளதாதலை வலியுறுத்தவாறு காண்க. ஈண்டு இருதிறனையும் அறியும் அறிவுளது எனவே இரு திறனாகிய சத்து அசத்து எனப்பட்டன வெல்லாம் 2பிரமேயம்; அவற்றை அறியும் சதசத்தாகிய உயிர் பிரமாதா; அவ்வுயிரின் அறிவாகிய 3சிற்சத்தி பிரமாணம்; அவ்வறிவு நிகழ்ச்சி 4பிரமிதி என்பதூஉம், இருதிறனால் விளங்கும் அறிவுளது எனவே அவ்விரண்டனுள் அசத்தான் அறிவு விளங்கும் வழித் தனக்கு வேறாய் நின்று விளக்குவனவாய காட்சி அனுமானம் உரை எனப்படும் அசத்தாகிய பாசஞான மூன்றும், சத்தான்அறிவு விளங்கும் வழி அந்நியமின்றித் தனக்கு ஆதாரமாய் உடனின்று விளக்கும் சிவஞானமும் தனக்கு 5வியஞ்சகங்களாகலான், அதுபற்றி அவையும் பிரமாணமென்று உபசரித்துக் கூறப்படும் என்பதூஉம், இரு திறனினும் அறிவுளது எனவே ஈரிடத்தும் கேடின்றி அசத்தான் விளங்கி, அசத்தை அறிவுழி அசத்தின் பாலும், சத்தான் விளங்கிச் சத்தை அறிவுழிச் சத்தின்பாலும் அதுவதுவாய் அழுந்தும் என்பதூ உம் பெறுதும். இவ்வாறன்றி வியஞ்சகங்களையே பிரமாண மென்னும் தார்க்கிகர் முதலியோர் மதங்கள் பொருந்தாமையும், அவ்வியஞ்சகங்களால் நிகழும் பிரமிதி வேறுபாடும் அவற்றது இயல்புகளும் ஈண்டு விரிக்கிற் பெருகும்; பௌட்கரம்1 முதலிய சிவாகமங்களிற் கண்டுகொள்க.2 மூன்றாம் அதிகரணம் முற்றிற்று ஏழாம் சூத்திரம் முற்றிற்று எட்டாஞ் சூத்திரம் 1ஐம்புல வேடரி னயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட் டன்னிய மின்மையி னரன்கழல் செலுமே2 கருத்துரை ஞானத்தினை யுணரும் முறைமையினை உணர்த்துதல் நுதலிற்று3 என்றது சூத்திரம்; என்னுதலிற்றோ வெனின் என்பது கருத்துரை. சூத்திரக் கருத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) அவ்வான்மாவின் அறிவாவது 4மேல் இரு திறன் என்றதனுள் அசத்தான் விளங்கி அசத்தின்பாலுளதாய் அசத்தினை அறிந்து நின்றவாறும், சத்தான் விளங்கிச் சத்தின்பாலுளதாய்ச் சத்தினை அறிந்து நிற்குமாறும் தரிசிக்கும் முறையினை உணர்த்து முகத்தால், 1சாதித்தற்குரிய அதிகாரம் தனக்கு உண்டென மேலைச் சூத்திரத்தான் அறிந்த ஆன்மாவுக்குச் சாதித்ததனாற் பெறப்படும் பயனும், அதற்குச் சிறந்த சாதனமாவதும், 2அது வருவாயும் இவை என்பது உணர்த்துதல் இவ்வெட்டாஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு. 3இதனானே சூத்திர இயைபும் இனிது விளங்கும். இச் சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு. உயிர், தான் முன்னே செய்துகொள்ளப்பட்ட 4புண்ணிய விசேடத்தால் தனக்கு அந்தரியாமியாய் இதுகாறும் உள்நின்று உணர்த்தி வந்த பரம்பொருளே, இப்பொழுது குருவடிவமுங் கொண்டெழுந்தருளி வந்து சிவதீக்கை செய்து, “மன்னவ குமார னாகிய நீ, ஐம்பொறிகளாகிய5 வேடருட்பட்டு, வளர்ந்து, நின் பெருந்தகைமையை அறியாது மயங்கி இடர்ப்பட்டாய்; நின் பெருந்தகைமையாவது இவ்வியல்பிற்று” என்று அறிவுறுப்ப, அறிந்த மாத்திரையே அவ்வேடரை விட்டு நீங்கி, அந்நியமின்றி அநியமாம் தன்மையின் நிலைபெற்று அம்முதல்வன் திருவடிகளை அணையும் என்றவாறு. 1 2உயிர் என்பது மேலைச் சூத்திரத்தினின்றும் வருவித்து உரைக்கப்பட்டது. தவத்தினிற் குருவுமாய், வளர்ந்து அயர்ந்தனை யென உணர்த்த விட்டுச் செல்லும் என இயையும். 3புலன் ஆகுபெயர். வளர்ந்தயர்ந்தனை 4யென்பது “ஈந்து புகழ்பெற்றான்” என்புழிப் போலக் காரண காரியப் பொருட்டாய் நின்றது. தம்முதல் என்றது 5வேறு முடிபாகலின் பால்வழு வின்மை யுணர்க. குருவும் என்ற உம்மை உயிர்க்குயிராய் உண்ணின்று உணர்த்திய தூஉமன்றி யென இறந்தது தழீஇயிற்று; சிறப்புமாம். 6அந்நியமின்மை அத்துவிதம்; அஃதாவது சேறலைப் பயப்பித்ததாய் ஆண்டு உளதாகிய இயைபு. 7அரன் என்றது சுட்டுப் பெயர்ப்பட நின்றது. வெண்கொற்றக் கொடையும் நவமணி முடியுஞ் சிங்காதனமும் மன்னவர்க்கே உரிய சிறப்படையாளமாம்; அதுபோலப் பிரபஞ்சம் எல்லாவற்றிற்கும் மூலகாரணமாம் இயல்பாகிய ஒரு பெரு வெண் கொற்றக் குடையும், எவற்றையும் ஒருங்கே ஓரியல்பான் அறியும் பேரறிவாகிய ஒரு பெருஞ்சுடர் முடியும், அங்கங்கே உயிர்க்குயி ராய் நின்று எவற்றினையுஞ் செலுத்தும் இயல்பாகிய ஒரு பெருஞ் சிங்காதனமும், பிறர் ஒருவர்க்கின்றித் தனக்கே உரிமையாகச் சிறந்தமை பற்றிப் பசுக்களுக்குப் பாசங்களை அரித்தலான் 1அரன் என்னுந் திருப்பெயருடைய முதல்வனை மன்னனாகவும், அம்முதல்வனது பேரானந்தப் பெருஞ்செல்வ முழுதும் தனதேயாகக் கொண்டு அனுபவிக்குஞ் சுதந்திரமுடைமையும் 2சித்தெனப்படும் சாதி யொருமையும் பற்றி, ஆன்மாவை மன்னவ குமாரனாகவும், அவ்வான்மாவை அறிவுப் பெருஞ்செல்வ முழுதையும் ஆறலைத்துக் கொண்டு சிறுமை யுறுத்துதலும் விதி விலக்கை இழப்பித்து இழி தொழிலில் நிற்பித்தலும் ஆகிய இயல்பு பற்றி ஐம்பொறிகளை வேடராகவும் உருவகஞ் செய்தார். இஃது ஏகதேச உருவகம். 3ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென எனவே ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்தலும் அநுவாதமுகத்தாற் பெற்றாம். இதனுள், தவத்தினி லுணர்த்த வென்றது ஓரதிகரணம்; தம் முதல் குருவுமா யென்றது ஓரதிகரணம்; ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென வென்றது ஓரதிகரணம்; விட்டு அன்னிய மின்மையின் அரன் கழல் செலுமே என்றது ஓரதி கரணம்; ஆக நான்கு அதிகரணத்தது இச்சூத்திரமென்றுணர்க. முதலதிகரணம் மேற்கோள் ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முற்செய் தவத்தான் ஞானம் நிகழும் என்றது, என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், மேற்கூறிப் போந்த 1சாதகரால் செய்யப்படும் சாதனமும், அது வருவாயும், 2வேறுவேறாகக் கூறும் சமயத்தாரை நோக்கிச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) 3வெளிப்படை. 4மேற்கூறிப் போந்த இயல்புடைய ஆன்மாக்களுக் கென்பார் இவ்வான்மாக்களுக் கென்றார். 5படிமுறையானன்றி இவ்வொரு பிறவியிற் செய்த தவந்தானே அமையா தென்பது உணர்த்துதற்கு முற்செய் தவமென விசேடித்தார். ஈண்டு ஞானம் என்றது குரவனுணர்த்தியவாறு சிவஞானங் கண்ணாகக் கொண்டு அறிவதாகிய சாதனவறிவின் மேற்று. நிகழ்தல் ஐயந்திரிபின்றி விளங்குதல். ஏது மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டி யல்லது மோஷத்தைக் கொடா வாகலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், 1தவங்களே சாதனமாதல் அமையும், ஞானம் எற்றுக்கு என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) 2வெளிப்படை. ஈண்டுத் தவம் எனப்பட்டன பிறவல்ல வென்பார் சரியை கிரியா யோகங்களை யெனக் 3கிளந்துரைத்தார். கிரியா யோகங்கள் என்னும் 4உம்மைத்தொகை வடநூன் முடிபு. கிரியா யோகம் இரண்டற்கும் தீக்கை ஒன்றென்பது தோன்ற அவ்விரண் டனையுந் தொகுத்தோதிச் சரியையைத் 5தமிழுக்குரிய ஈற்றான் வேறு வைத்தார். “ஆளுடைய பிள்ளையார் முதலாயினார்க்குத் தவமின்றியும் ஞானம் நிகழ்ந்தவா றென்னை யென்னும் கடாவை விடுத்தற்கு, மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி யென ஈண்டும் வலியுறுத்தார். மேலாகிய 1உண்மைச் சரியை கிரியா யோகங்களை எனினும் அமையும். காட்டிக் கொடுக்கும் எனற் பாலதனை எதிர்மறை முகத்தாற் கூறினார், ஞானத்தை இன்றிய மையாமை உணர்த்துதற்கு. சரியை கிரியா யோகங்களைச் செய்துழி என்றது 2உபலக்கணம் ஆகலின், தீக்கை பெற்றுழி அதுவும் 3ஞானத்தைக் காட்டி அல்லது மோஷத்தைக் கொடாதெனக் கொள்க. அவை யெல்லாம் ஞானத்தைக் காட்டியல்லது மோஷத்தைக் கொடாமையை வலியுறுத்துவார் நன்னெறியாகிய என ஞானத்தை விசேடித்தார். நன்மையெனப்படுவன எல்லாவற்றினுஞ் சிறந்த நன்மை யாவது வீடுபேறு என்பது. அதனைத் தலைப்படுதற் கேதுவாய்ச் சிறந்த நெறியாகலின் ஞானம் நன்னெறி யெனப்பட்டது. வீட்டிற்கு நெறியென அவ்வச் சமயத்தாராற் கூறப்படுவன அனைத்தும் தன்கண்ணே வந்து கூட நின்ற 4பெருநெறியாகலான் அது நன்னெறி யெனப்பட்டது. நன்னெறி, சன்மார்க்கம் என்பன ஒரு பொருட்கிளவி. உதாரணம் தவஞ்செய்தா ரென்றுந் தவலோகஞ் சார்ந்து பவஞ்செய்து பற்றறுப்பா ராகத் - தவஞ்செய்த நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக் கற்றார்சூழ் சொல்லுமாங் கண்டு1 என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்தார், அவற்றான் ஞானத்தைக் காணும் முறைமை எவ்வாறு என்பாரை நோக்கி, அஃது ஆமாறுணர்த்தி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) 2தவம் செய்தார் - சரியை முதலியவற்றைச் செய்தோர்கள்; தவலோகம் என்றும் 3சார்ந்து - அவ்வத் தவப்பயன் களைப் பயப்பிக்கும் 4சாலோகாதி பதங்களை ஒரு தலையாக நண்ணி ஆண்டு உளவாகிய இன்பங்களை அநுபவித்து; பற்றுப் பவஞ்செய்து அறுப்பார் ஆக - முன்னுடம்பு இறக்கும் நாள் அடுத்த வினை காட்டும் கதி நிமித்தம் பற்றி எழுந்த அவாவினை 5மீள நிலத்தின்கண் பிறந்து அனுபவித்து நீக்கிக் கோடற் பொருட்டு; தவம்செய்த 1நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலை - மீளத் தவம் செய்தற்குரிய உயர்ந்த குலத்தின்கண் வந்து தோன்றித் தவக்குறையான் அவ்விடயப்பற்றும் முறுகா வண்ணம் அறுத்துத் 2தத்துவ ஞானத்தைத் தலைப்படுவாராதலை; 3கற்றார் சூழ் கண்டு சொல்லுமாம் - வீட்டுநூல்களைக் கற்றாரது சூழ்ச்சி அந்நூற் கருத்துணர்ந்து சொல்லும் என்றவாறு. தவந்தானாக, பிறிதொன்று தானாக இவ்வுலகத்து உடம்பொடு நின்று ஈட்டிய 4வினையெல்லாம், அவ்வுலகத்திற் செலுத்தித் தத்தம் போகங்களைப் பயந்தே விடுமாகலான், அவற்றை ஒரு ஞான்றும் பிறழமாட்டார் என்பார், என்றும் தவலோகம் சார்ந்து என்றார். ஆக வென்னும் செயவெனெச்சம் “உண்ண வந்தான்” என்புழிப்போலத் 5தற்பொருட்டாய் நின்றது. பற்றறுதற் பொருட்டு வந்துதித்து எனவே ஆண்டுப் பற்றுச் செல்லாதவழி அவ்வுலகத்து நின்றாங்கே ஞானத்தை நண்ணுவார் என்பதூஉம் பெறுதும். கற்றாரது சொல்லுதற்றொழில் சூழ்ச்சி மேலேற்றப்பட்டது. 6ஆம் அசை. 7நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதல் என்றது அருத்தாபத்தியான் 8இழி குலத்தோர் தத்துவ ஞானத்திற்கு உரியரல்லர் என்பது பெறப்பட்டது. உதாரணம் பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும் இசைத்து வருவினையி லின்பம் - இசைத்த விருவினை யொப்பி லிறப்பி றவத்தான் மருவுவனாம் ஞானத்தை வந்து என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், சரியை முதலிய தவங்களே தத்துவ ஞானத்தைக் காட்டும் என யாப்புறுத்து ஓதியது என்னை? வேதத்துட் கூறிய வேள்வி முதலாயினவும் தத்துவ ஞானத்தைக் காட்டுமென்றல் அமையும் எனப் பட்டாசாரியன்1 மதம் பற்றிக் கூறுவாரை நோக்கி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) 2இசைத்து வருவினையில் இன்பம் - ஒரு நல்வினை செய்வான் தொடங்கி அறநூலை ஆய்வாரது உணர் வின்கண் விடயமாய் வரும்பொழுதே தம்மால் பெறப்படும் காமியப் பயன்களை உடன் கூறிக்கொண்டே வருகின்றனவாய வேள்வி முதலிய அறங்களின் பயனாகிய இன்பம்3; பசித்து உண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும் - முன்னர் பசித்துண்டு பின்னும் பசிப்பானுக்கு அவ்வுண்டியான் வரும் இன்பத்தை ஒக்கும் ஆகலான்; 1இசைத்த இருவினை இறப்புஇல் தவத்தான் ஒப்பில் - ஒருவனுக்கு ஞானத்தைத் தடுத்துப் பந்தமுறுத்துதற்கண் பொன் விலங்கும் இருப்பு விலங்கும் போலத் தம்முட் சமப்படுத்து உணரப்படுவனவாகிய 2அறம் பாவம் இரண்டும் தம்மைப்போல் அநுபவ மாத்திரையால் கெடுதலின்றி மேன்மேன் முறுகி வளர் வனவாய சரியை முதலிய தவங்களானே நேராக ஒத்தால்; வந்து ஞானத்தை மருவுவன்3 - அத் தவமுதிர்ச்சி யுடைமையான் முன்னர் கூறப்படும் ஞான குருவைத் தேடி வந்து ஞானத்தைத் தலைப்படுவன் என்றவாறு. 4வேள்வி முதலாயின வெல்லாம் அழிதல் மாலையவாய காமியங்களைப் பயப்பனவன்றித் தத்துவ ஞானத்தைப் பயவா என்றற்கு அவற்றை 5விதித்த நூல்களே சான்றென்பார் இசைத்து வருவினை யென்றும், அவை 1ஞானத்தைப் பயவாமை மாத்திரையே யன்றித் தீவினைபோல அது நிகழவொட்டாது தடைசெய்து நிற்றலு முடைமையின் அவற்றது கழிவே ஈண்டைக்குக் காரணமாவது என்பார் இசைத்த இருவினை யொப்பில் என்றுங் கூறினார். 2ஒப்பிலென்னும் வினையெச்சம் மருவுவன் என்னும் பிறவினை முதல்வினை கொண்டது. 3தேற்றேகாரம் விகாரத்தால் தொக்கது. ஆம் அசை. 4வருதல் இடவழு வமைதி. 5பசிப்பானென்றது ஆகுபெயர். இசைத்து வருவினை யென 6நூலின் தொழில் வினைமேல் ஏற்றப்பட்டது. 7மிசைத்த இருவினை யொப்பி லெனப் பாடமோதி, இருவினைகளுண் மிக்க விருவினையாகிய பிரமக் கொலை பரிமேத வேள்வி போல்வன தம்முள் ஒருங்கே பயன் தருவனவாய் ஒத்த காலத்தென்று உரைப்பாருமுளர். அஃது 8ஈண்டைக்குப் பயன்படாமையும் சித்தாந்தத்திற் கேலாமையும் அறிக. இசைத்து வருவினையில் இன்பம் பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும் எனவே 1இறப்பில் தவத்தான் மருவப்படும் ஞானம், பசித்துண்டு பின்னும் பசித்தலில்லாத கடவுளர்க்கு அமிழ்தவுண்டியான் ஆய பயனை யொக்கும் என்பதூஉம் பெறப்பட்டது. படவே, அவ்வமிழ்த உண்டி, நரை திரை மூப்பின்றி நிலைபெறுதலாகிய பெரும் பயனைத் தருதல் மாத்திரையேயன்றிப் பசி தீர்த்தலாகிய அவாந்தரப் பயனையும் தருமாறு போல, இறப்பில் தவமும் தத்துவ ஞானத்தைப் பயத்தன் மாத்திரையே யன்றித் தத்தம் 2பத முத்தியாகிய அவாந்தரப் பயனைப் பயத்தலும் அமைவுடைத் தாமாறு கண்டு கொள்க. இரண்டாம் அதிகரணம் மேற்கோள் இனி இவ்வான்மாக்களுக்குத் தமது முதல் தானே குருவுமாய் உணர்த்தும் என்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், 3மேற் கூறியவாற்றான் நிகழும் ஞானத்தை உணர்த்து வோர் கலைஞானங்களை உணர்த்துவார் போல நம்மனோரில் ஒருவராதல் அமையும் எனச் 4சாங்கியர் நையாயிகர் முதலியோர் மதம் பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங் கூற்றைக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) மேற்கூறியவாற்றான் சரியை முதலிய மூன்றும் முற்றிய பின்னர், இம் முற்றுதலானே மலபரிபாகம் சத்திநிபாதம் நிகழ்ந்து 1தத்துவ ஞானத்தினை அவாவுதலை யுடைய உயிர்கட்கு இதுகாறும் 2தமக்கு முதலாய் உண்ணின்று உணர்த்தி வந்த பரம்பொருளே அப்பருவம் அறிந்து குருமூர்த்தமாய் எழுந்தருளி வந்து அதனை அறிவுறுக்கும் என்றவாறு. எனவே, ஏனையோர்க்கு அது கூடாதென்றவா றாயிற்று. இக்கருத்தே பற்றி “அகத்துறு நோய்க் குள்ளின ரன்றி யதனைச் -சகத்தவருங் காண்பரோ தான்” 3என்றார் புடைநூலாசிரியரும்; ஏகாரம். தேற்றம். ஏது அவன் அந்நியமின்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், மாயா வுருவினன் மாயா வுருவினை யேயான்: 4ஏயுமெனின் எம்மனோரில் ஒருவனாய் முடியும்; ஆகலின் தமது முதல் குருமூர்த்தி ஆதாரமாகத் தரித்து நின்று உணர்த்து மென்றலே அமைவுடைத்தெனப்பொது வகையான் 5அதிட்டான பக்கம் கூறுவாரை நோக்கிச் சிறப்பு வகையான் 6ஆவேச பக்கம் ஆமாறு உணர்த்தி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) 1அம்முதல்வன் 2பாலில் நெய் போல மறைந்து வேறாய் நிற்றலின்றிச் சுத்தான்ம சைதன்னியமே தனக்குச் சொரூபமாகக் கொண்டு தயிரின் நெய் போல ஆண்டு விளங்கி நிற்றலான் இவ்வான்மாக்களுக்குத் தமது முதல்தானே குருவுமாய் உணர்த்தும் என மேற்கொண்டது என்றவாறு. பாலில் நெய் போல வேறாய் மறைந்து நின்று செலுத்தப் படுவனவற்றினும் பொதுவாய்ச் செல்வதாகிய அதிட்டான பக்கம் கொள்வார்க்கு 3ஏனைச் சமய குரவரும் குரவராவான் சேறலின் அஃது ஈண்டைக்கு அமைவுடைத்தன்று என்பதாம். சுத்த சைதன்னியம் என்றார் மாசு தீர்ந்தது என்பது உணர்த்துதற்கு. உதாரணம் மெய்ஞ்ஞானந் தானே விளையும்விஞ் ஞானகலர்க் கஞ்ஞான வச்சகலர்க் கக்குருவாய் - மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்து மன்றிப் பிரளயா கலருக்கு முன்னுணர்த்தும் தான்குருவாய் முன் என்றது உதாரணம்; என்னுதலிற்றோ வெனின், ஓரோரிடங் களில் குருவாய் வந்துணர்த்துதல் 4இன்றியும் ஞானம் நிகழுமாறு என்னை என்பாரை நோக்கி அதனை வரைசெய்து உணர்த்தி வலியுறுத்துதல் நுதலிற்று.5 (இ-ள்) விஞ்ஞானகலர்க்குத் தானே மெய்ஞ்ஞானம் விளையும் - அம்முதல்வன் மூவகை ஆன்மாக்களுள் விஞ்ஞான கல ராயினார்க்குத் 1தன்மையின் நின்றவாறே தத்துவ ஞானத்தை விளைவிப்பன்; அன்றிப் பிரளயாகலருக்குத் தான் குருவாய் முன் உணர்த்தும் - அவ்வாறன்றிப் பிரளயாகலராயினார்க்கு நாற்றோளும் முக்கண்ணும் கறைமிடறும் முதலிய உறுப்பிற்றாய் முத்தொழில் நடாத்தி நின்ற தன் இயற்கை வடிவே குருவடிகாகக் காட்டி முன்னாகி நின்று தத்துவ ஞானத்தை 2உபதேசித்து உணர்த்துவன்; அஞ்ஞான அச்சகலருக்கு அக்குருவாய்ப் பின் மெய்ஞ்ஞானம் உணர்த்தும் - 3அவிச்சையையுடைய சகலராயினார்க்கு அவர் வடிவு போலும் வடிவுடைய குருவாகி அவ்வடிவின் பின்னாக மறைந்து நின்று தத்துவ ஞானத்தை உணர்த்துவன்; 4முன்- அவ்வேறுபாட்டை அறிவாயாக என்றவாறு. முன்னென்றதனை 5முன்னைப் பொருள் என்று உரைத்து எழுவாயாகக் கோடலு மொன்று. விளையும் என்பது “அரசனெடுத்த ஆலயம்” என்புழிப்போல விவ்விகுதி தொக்கி நின்றது. இவ்வாறன்றி எளிதின் அடப்படுதல் நோக்கி “அரிசி தானே அட்டது” என்றாற் போல எளிதின் விளைவிக்கப்படுதல் நோக்கி மெய்ஞ்ஞானந் தானே விளையும் என்றார் எனினும் அமையும். “உண்ணின்றறுத் தருளி” என்றார் 1புடைநூலாசிரியரும். ஈண்டு அஞ்ஞானம் என்றது அவிச்சையை. அஞ்ஞான அச் சகலர்க்கு என்பது சகலர்க்கே அடையாய் ஓதியவாற்றானறிக. அச் சகலர் என்றது 2தவஞ்செய்தா ரென மேல் எடுத்துக்கொள்ளப்பட்ட சகலர் என்றவாறு. அக்குரு என்றது 3மேற்கோளில் கூறிப் போந்த குரு வென்றவாறு. தானே விளையும், முன்னுணர்த்தும், பின்னுணர்த்தும் எனவே, விஞ்ஞானகலர்க்குத் தன்மையினும், பிரளயாகலர்க்கு முன்னிலை யினும், சகலர்க்குப் படர்க்கையினும் நின்று உணர்த்தும் என வரைசெய்தவாறு காண்க. இவற்றுண் 4முன்னைய விரண்டும் நிராதாரம் எனவும், பின்னையது சாதாரம் எனவும் கூறப்படும்.5 உதாரணம் 6அறிவிக்க வன்றி யறியா வுளங்கள் செறியுமா முன்பின் குறைகள்7 - நெறியிற் குறையுடைய சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடென் குறைவில்சகன் சூழ்கொள் பவர்க்கு என்றது உதாரணம்; என்னுதலிற்றோ வெனின், விஞ்ஞான கலர் முதலிய மூவர்க்கும் ஓரியல்பான் உணர்த்தாது அவ்வாறு தன்மையினும் முன்னிலையினும் பின்னிலையினுமாய் உணர்த்துதல் எற்றுக்கு என்பாரை நோக்கிக் காரணம் கூறி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.1 (இ-ள்) உளங்கள் நெறியின் அறிவிக்க அன்றி அறியா - உயிர்களெல்லாம் தமக்குரிய2 படிவழியின் வைத்து முதல்வன் அறிவிக்க அறியும் இயல்பினவன்றி ஒன்றுபோல் அறிவிக்க அறியும் இயல்பின வல்ல ஆகலான்; குறைவு இல் 3சகன் சூழ் 4கொள்பவர்க்கு - அவ்வறிவாற் குறைபாடில்லாத சகக் கடவுளது உபதேசமொழியைக்கொண்டு உணரும் இயல்பினராகிய பிரளயா கலர் சகலர்க்கு; குறைகள் முன்பின் செறியுமாம் -அவ்வறிவித் தால் அறிதலாகிய குறைகள் 5முன்னிலையினும் பின்னிலையினும் நிகழ்வனவாம்; குறை உடைய சொல் 6கொள்ளார் கொள்பவத்தின் 7வீடாம் என் - குறைவில் சகனாலாகிய குறையினை யுடைய உபதேச மொழி கொண்டு உணர வேண்டாத விஞ்ஞானா கலர்க்கு முதல்வனாற் கொள்ளப் பட்ட தன்னுண்மை மாத்திரையின் வீடு பயக்கும் உணர்வு உண்டு என்று அறிவாயாக என்றவாறு. குறை இன்றியமையாப் பொருள்; அது “வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு” 1என்பதனுட் பரிமேலழகர் உரையானும் உணர்க. பவம், சம்பவம், உண்மை என்பன ஒரு பொருட் கிளவி. வீடுபயக்கும் உணர்வு வீடென்றும், சூழ்ச்சி பயக்கும் உபதேச மொழி சூழென்றுங் 2காரண காரியமாக உபசரிக்கப்பட்டன. கொள்பவர் கொள்ளார் என்பனவும் 3அவை. கொள்ளார்க்கு என்னும் நான்கனுருபு விகாரத்தால் தொக்கது.; “ஐந்தவித்தா னாற்றல்4” என்புழிப் போல. 5ஆம் வீடெனவும் இயையும். வீடாம் எனப்பாடம் ஓதுவாருமுளர். மேலை வெண்பாவின் முன்னுணர்த்தும் பின்னுணர்த்தும் தானே விளையும் எனக் கூறியவற்றை ஈண்டு நெறியின் அறி விக்கவன்றி அறியா வாகலான், இது முன்செறியும் பின்செறியும் பவத்தின் ஆம் எனக்காரணங் காட்டி வலியுறுத்தினார். இதற்குப் பிறரெல்லாம் தத்தமக்கு வேண்டியவாறே மேலை வெண்பாவொடு இயைபற 6உரைத்தார் அல்லதூஉம் அறிவிக்கவன்றி அறியாமை உபதேசியாம் என ஆன்மாவின் தன்னியல்பு கூறும் வழிப் 1பெறப் பட்டதாகலின், அதனை ஈண்டும் 2புனருத்தியாகக் கூறல் வேண்டா மையின் மேலது வலியுறுத்துதற்கு ஏற்புடைய, அறிவிக்க அறிதற் கட்படும் விசேட மாத்திரையே ஈண்டு எடுத்தோதினார் என்று உணர்க. படிவழியின் வைத்து அறிவிக்கவன்றி அறியாமை, “பந்தமும் பிரிவும் தெரிபொருட் பனுவற் படிவழி சென்று சென்றேறி” 3என்பதனாலும் அறிக. உதாரணம் இல்லா முலைப்பாலுங் 4கண்ணீரு மேந்திழைபால் நல்லா யுளவாமா னீர்நிழல் போல் - இல்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானே லுற்று என்றது உதாரணம்; என்னுதலிற்றோ வெனின், அம் முத்திறத்துள் ஈண்டைக்கு எடுத்துக்கொண்ட அஞ்ஞான 5அச்சகலர்க்கு அக்குருவாதல் உபசாரமே யன்றி ஏனைய போல் உண்மையாதல் செல்லாது என்பாரை நோக்கி உண்மை யாதலை உவமை முகத்தான் வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) நல்லாய் - 6அறிவால் நன்மையுடைய மாணாக்கனே; ஏந்திழைபால் முலைப்பாலுங் கண்ணீரும் இல்லா உளஆம் - ஏந்திய இழைகளை யுடையாட்குக் குழவிமாட்டு உளதாகிய 1அருவாகிய அன்பினைப் பிறர் அறியுமாறு வெளிப்படுத்தும் அவ்வன்பின் உருவாகிய முலைப்பாலுங் கண்ணீரும் அவள்மாட்டுக் குழவியைக் காணும் முன் இல்லாவாய்ப் பின் உளவாம், அதுபோல2; நீர் நிழல் போல் இல்லா அருவாகி நின்றானை ஆர் அறிவார் தானே உருவாகி உற்றுத் தோன்றானேல் - 3 நீரின்கண் நிழல் போல் உயிர்கண் மாட்டுப் புலப்படுதல் இல்லாது அருவமாய் நின்ற முதல்வனை யார்தாம் அறிவார் அவனே குருவடிவாய் வந்து தோன்றி நின்று உணர்த்தானாயின்4 என்றவாறு. ஒருவரும் இல்லை யென்பதாம். 5இஃது எடுத்துக்காட் டுவமை. இன்றியமையாமை உணர்த்துவார் தோன்றானேல் ஆரறிவார் என எதிர்மறை முகத்தாற் கூறினார். பொருளுக்கு ஓதியதனை உவமையினுங் கூட்டி ஏற்குமாறு உரைக்க. முலைப்பாலும் கண்ணீரும் அன்பை விளக்கும் என்பது, “சுரந்த திருமுலைக்கே துய்ய சிவஞானம் - சுரந்துண்டார் பிள்ளையெனச் சொல்லச் - சுரந்தாள், தனமுடைய தென்பாண்டி மாதேவி தாழ்ந்த, மனமுடையாள் அன்பிருந்த வாறு” 1என்பதனாலும், “அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் ஆர்வலர் - புன்கணீர் பூசல் தரும்2” என்பதனாலும் அறிக. அவ்விரண்டும் அன்பின் வடிவே பிறவல்ல என்பது, அன்பு நிகழ்தற்குரிய காரணம் உள்வழி வெளிப்பட்டு, அஃது இல்வழி வெளிப்படாத ஒற்றுமை நோக்கிக் கண்டுகொள்க. இவ்வொற்றுமை உணர்த்துவார் இல்லாவாய் உளவாம் என்றார். இல்லா வென்பது 3முற்றெச்சக் குறிப்பு. ஆல், அசை, நீர், அகத்தியங்கும் உயிர்கட்கு இடங்கொடுத்தல் உண்மையான் நீரின் கண் வெளியுண்டு என்பதூஉம், உண்டாகவே, ஆண்டு நீருக்கு நிழல் உண்டு என்பதூஉம் பெறப்பட்டன. அந்நிழல், வேறு நில்லாது நீரோடு விரவி நிற்றலின் நீர்போல் புலப்படா தாயிற்று4; அது போலச் சிவசைதன்னியமும் யானென்னும் உணர்விற்கு விடயமாய்ப் புலப்படும்5 ஆன்ம சைதன்னியத்தோடு விரவிப் புலப்படாது நிற்பதொன்று என்பார் நீர் நிழல் போல் இல்லா அருவாகி நின்றானை என்றார். மூன்றாம் அதிகரணம் மேற்கோள் இனி இவ்வான்மாக்கள் ஐயுணர்வுகளான் 6மயங்கித் தம்மை யுணரா வென்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், விடய ஞானத்தை விளக்கும் ஐம்பொறிகளே தத்துவ ஞானத்தை விளக்குதற்கும் அமையும்; தம் முதல் குருவுமாதல் வேண்டாவெனச் 1சிவசங்கிராந்த வாத சைவர் மதம் பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் மூன்றாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. இவ்வாறு உரையாக்கால், இனி என்பதனான் உணர்த்தப்படும், மேலை யதிகரணத்தோடு உளதாகிய இயைபு பெறப்படாமை அறிக. (இ-ள்) 2வெளிப்படை. 3உணர்வு ஆகுபெயர். ஏது அவைதாம் பளிங்கில் இட்ட வன்னம்போல் காட்டிற்றைக் காட்டி நிற்றலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், அறிவை விளக்கும் கருவியான் மயக்கம் நிகழுமாறு யாங்ஙனம் என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) படிகத்தின் வைத்த பலவேறு வகைப்பட்ட நிறங்கள் அப்படிக ஒளியைக் கீழ்ப்படுத்துத் தத்தம் இயல்பினையே விளக்கி நிற்குமாறு போல, அவ்வைம்பொறிகள்தாம் ஆன்ம சொரூபத்தைக் கீழ்ப்படுத்துத் தம்மாற் காட்டப்பட்ட தத்தம் விடய மாதத்திரையே அவ்வான்மாவுக்குக் காட்டி நிற்பன வாகலான் இனி இவ்வான் மாக்கள் ஐயுணர்வுகளான் மயங்கித் தம்மை யுணரா வென மேற்கொண்டது என்றவாறு. விடயங்களுள்ளும் அவ்வவ் விடயமாத்திரையே அவ்வவ் விந்திரியம் காட்டவல்லும் என்பார் காட்டிற்றை என ஒன்றறி சொல்லாற் கூறினார்1. உதாரணம் பன்னிறங் காட்டும் படிகம்போல் இந்திரியம் தன்னிறமே காட்டும் தகைநினைந்து - பன்னிறத்துப் பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய்கண்டான் மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு என்றது உதாரணம்; என்னுதலிற்றோ வெனின் அங்ஙனம் காட்டிற்றையே காட்டி நிற்குமாயின் அவ்விந்திரியங்கள் உள்வழித் தம்முதல் குருவுமாய் உணர்த்தினும் உணர்தல் செல்லாது போலும் என்பாரை நோக்கி உணர்தற்கு உபாயம் கூறி அதனை வலியுறுத் துதல் நுதலிற்று.2 (இ-ள்) பல் நிறம் காட்டும் படிகம் போல் இந்திரியம் தன் நிறமே காட்டும் தகை நினைந்து -3தன்னாற் சாரப்பட்ட பன்னிறங்களின் இயல்பே தன் மாட்டுக் காட்டி நிற்கும் பொது வியல்பு உடைய படிகம் போலத் தன்னால் சாரப்பட்ட இந்திரியங் களின் இயல்பையே சார்ந்ததன் வண்ணமாய்த் தன்மாட்டு விளக்கி நிற்கும் தனது பொதுவியல்பை முன்னர் சிந்தித்து அறிந்து கொண்டு; பல்நிறத்துப் பொய்ப்புலனை வேறு உணர்ந்து - பின்பு அந்நிறங்கள் படிகத்துக்கு வேறு என்று அறியுமாறு போலப் பலவகை இயல்புடைய பொதுவியல்பைச் செய்யும் பொறிகளைத் தன்னின் வேறு எனத் தெளிந்து; பொய் பொய்யா மெய்கண்டான் - அவற்றான் ஆய அப்பொது வியல்பு பொய்யா யொழியுமாறு தனது சிறப்பியல்பை உணர்ந் தானாயின்; 1வேறு மெய்ப்பொருட்குத் 2தைவம் ஆம் - அவ்வசத்தாகிய பொறிகளுக்கு வேறாகிய சிவசத்தினது இயல்பு தன்மாட்டு விளங்கச் செய்யும் ஆகலின் அச்சிவசத்துக்கு அடிமையாம்3 என்றவாறு4. ஈண்டுப் பொய் மெய் யெனப்பட்டன அப்பொருள வாதல் 5மேலே காட்டினாம். தைவமென்பது தேவன துடைமை யென்னும் பொருட்டாய வடமொழிப் பகுபதம். இதனானே கருவிகள் உள்வழிக் காட்டிற்றைக் காட்டி நிற்றலின் அறிதல் செல்லாது, அவை நீங்கிய வழிக் 6கேவலமாய் முடியுமாதலின் தன்னுண்மை அறியுமாறு யாங்ஙனம் என்னுங் கடாவை ஆசங்கித்து, அவை யுள்வழியே தன்னுண்மை யறிதற்கு உபாயங்கூறி இது பற்றி அவை காட்டிற்றைக் காட்டி நிற்றற்கு இழுக்கில்லையென வலியுறுத்தவாறாம் என்க. மெய்ப் பொருட்குத் தைவமாம் என்றதனால் வருகின்ற அதிகரணத் திற்குத் தோற்றுவாய் செய்தவாறு. நான்காம் அதிகரணம் மேற்கோள் இனி, இவ்வான்மா தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், பொய்ப் புலனை வேறுணர்ந்து பொய் பொய்யா மெய்கண்டாந்கு அதுவே அமையும்; கருவிகள் நீங்கியவழிச் செய்யக் கடவதொரு முயற்சி கூடாமையின் ஆண்டு மெய்ப்பொருட்குத் தைவமாதல் பெறப்படாது எனப் 1பேதவாத சைவர் முதலியோர் கூறும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் நான்காங்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) வெளிப்படை.2 இந்திரியத்தின் வேறாயவழிக் கேவலத்தை அணைதலும் 3உண்மையின், அதனை நீக்குதற் பொருட்டு வேறாக என்று ஒழியாது வேறாவான் காண என்றார். காண்டலே அதற்கமையும் என்றலின் ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஏது ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாம் துணையான்1 என்றத ஏது; என்னுதலிற்றோ வெனின், அவ்வாறு காண்டலே சீபாதத்தை அணைதற்குச் சாலும் என்பது யாங்ஙனம் என்பாரை நோக்கி உவமையின் வைத்துக் காட்டி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) ஒருவன் ஏறியிருந்து ஆடுதற்கு ஆதாரமான ஊசல் கயிறு அற்றதாயின் அவனுக்கு உற்றுழி உதவும் தாய் போல, ஆண்டுத் தாரகமாவது நிலனே யன்றிப் பிறிதில்லை யென்னும் ஒப்புமையான் இனி இவ்வான்மா, தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என மேற்கொண்டது2 என்றவாறு. வியாபகப் பொருட்குக் காட்சி விசேடமே நீக்கமாகலின் அறுதல் அதற்கு உவமையாயிற்று. உதாரணம் சிறைசெய்ய நின்ற செழும்புனலி னுள்ளம் சிறைசெய் புலனுணர்விற் றீர்ந்து - சிறைவிட் டலைகடலிற் சென்றடங்கு மாறுபோன் மீளா துலைவிலரன் பாதத்தை யுற்று என்றது உதாரணம்: என்னுதலிற்றோ வெனின், கருவிகள் நீங்கின வழி வேறு நில்லாது சிவத்தைத் தலைப்படுமாயின், அவ்வுயிர்க்கும், கருவிகளின் நீங்கிக் கேவலத்தைத் தலைப்பட்ட உயிர்க்குப் போல, மீட்சியுண்டு1 போலும் என்பாரை நோக்கி, அஃது இன்றாமாறு கூறி மேலதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) சிறை செய்ய நின்ற செழும்புனலின் உள்ளம் - ஒருவன் அணையை உயர்த்துக் கட்டித் தடைசெய்ய ஆண்டுத் தடையுண்டு தேங்கி நின்ற ஆற்றுநீர் போலக் கருவிகளான் ஆய பாசஞானம் 2தனது வியாபகத்தைத் தடைசெய்ய அதன்கண் ஏகதேசமாய் அடங்கித் தடையுண்டு நின்ற உயிர்; சிறைவிட்டு அலைகடலின் சென்று அடங்கும் ஆறுபோல் - அவ்வணை முறிந்து தடைதீர்ந்தவழி இடையீடின்றிக் கடலின் கண் முடுகிச் சென்று அந்நீரேயாய் அதனுள் அடங்கி மறித்து வாராத ஆற்றுநீர் போல;3 சிறை செய் புலன்உணர்வில் தீர்ந்து - கருவிகளான் ஆய பாசஞானத் தடையினின்று நீங்கியவழி; உலைவு இல் அரன் பாதத்தை உற்று மீளாது - தனக்குக் கேடில்லாத சிவபிரானது திருவடியைத் தலைக்கூடி அத்திருவடி நிறைவேயாய் அதன்கண் அடங்கிப் பின்பு மீளுதல் செய்யாது4 என்றவாறு. சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம் என்றது தொகை உவமம். இன், உவம உருபு. தேக்கத்தின் மிகுதி உணர்த்துவார் செழும்புனல்1 என்றார். மலசத்திக்குக் கேடுண்மையின் அதனைத் தலைப்பட்ட உயிர்க்குக் கருவிகளின் மீட்சி கூடும்; சிவசத்திக்கு அஃது இன்மையின் அதனைத் தலைப்பட்ட உயிர் அவ்வாறு மீளுதற்கோர் இயைபில்லையென்பார் உலைவில் அரன் பாதம் என விசேடித்தார். அடங்குமென்னும் உவமவினை பொருளினும் மீளாதென்னும் பொருள் வினை உவமையினும் சென்று இயைந்தன.2 உதாரணம் எவ்வுருவுந் தானென்னி னெய்துவா ரில்லைதாள்3 இவ்வுருவின் வேறே லிறையல்லன் - எவ்வுருவும் கண்போல் அவயவங்கள் காணாவக் கண்ணில்லார் கண்பேறே காணக் கழல்4 என்றது உதாரணம்; என்னுதலிற்றோ வெனின், மீளாது என்று விடுத்தல் வேண்டா, எல்லாம் சிவமாகக் கண்டார்க்கு மீண்டாலென் மீளாக்கால் என் என்னும் சிவாத்துவித சைவரை நோக்கி அது விடையாதற்கு ஏலாமை கூறி மறித்தும் மீளாமையை வலியுறுத் துதல் நுதலிற்று.5 (இ-ள்) எவ்வுருவும் தான் என்னின் தாள் எய்துவார் இல்லை - உயிருணர்வேயன்றிப் புலனுணர்வும் சிவமேயா மாயின் விசேட மின்மையால் புலன்வழி ஒழுகும் சகல நிலையைக் கைவிட்டுத் திருவடியைத் தலைக்கூடல் வேண்டாமையின் ஒருவரும் அதனை எய்து வாரில்லையாய் முடிந்து, “பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினையடைய முத்தி” என்னும் வேதாகமங்கள் போலியாய் முடியும்;1 இவ்வுருவின் வேறேல் இறையல்லன் - அதுபற்றி முதல்வன் புலன் உணர்வோடு இயைபின்றி அதனின் வேறாய் நிற்பன் என்னின் அப்புலனுணர்விற்கு அவனால் ஆகற் பாலதொன்று இன்மையின் அவன் ஆண்டைக்கு இறைவன் அல்லன் எனப்பட்டு முதன்மைக்கு இழுக்காய் முடியும்2, மற்று என்னையோ அதன் இயல்பு என்னின்; எவ்வுருவும் - உயிருணர்வு போலப் புலனுணர்வும் கலப்பினால் சிவமேயாம் ஆயினும் இரண்டும் தம்முள் ஒப்பனவல்ல: அவயங்கள் கண் போல் காணா3 - உயிர் ஐம்பொறிகளினும் ஒப்ப நிற்பினும் அவற்றுள் மெய் வாய் மூக்கு செவி நான்கும், கண்ணிந்திரியம் ஒளியான் அவ்வான்ம போதத்தோடு விரவிச் சேய்மைக் கண்ணதாகிய விடயத்தையும் வியாபித்தறியுமாறு1 போல, வியாபித்தறிய மாட்டாவாய்த் தம்மாட்டுவந்த விடயங்களை நின்றாங்கு நின்று இயைந்து அறிதற்றன்மையவே யாம்; அக்கழல் அக்கண் இல்லார் கண்பேறே காண் - அக்கண்ணினது வெற்றிப் பாட்டைக் கண்ணொளி இழந்தாரது கண்பேற்றின்கண் கண்டறி வாயாக என்றவாறு.2 கண்ணும் அவயங்களும் ஆகுபெயர். கண் பேறே என ஏழாவது தொகுத்து ஏகாரம் விரித்தார். கழலணிவார்க்கு உளதாகிய வெற்றிப்பாட்டைக் கழல் என்று உபசரித்தார். கழல், காலணி மணிவடம். ஈண்டு வெற்றியாவது ஏனை நான்கு இந்திரியங்களையும் நோக்க மேம்படுதல். கண்போல் அவயங்கள் காணா அக்கண்ணில்லார் கண்பேறே காண் அக்கழல் என்பது முதல்வன் இரண்டினும் ஒப்ப விரவி நிற்பினும் உயிருணர்வுபோலப் புலனுணர்வு வியாபக விளக்க மாதலின்றி ஏகதேச விளக்கமாம்; உயிருணர்விற்கு உளதாகிய அம்மேம்பாடு அவ்வியாபக உணர்வை இழந்த பசுத்துவ முடையார் மாட்டு அறியப் படாதாயினும், அவரது பசுத்துவம் நீங்கிய சிவப்பேற்றின் கண் அறியப்படுமென்பது தோன்ற நின்றமையின் இஃது ஒட்டு என்னும் அலங்காரம்.1 சிவமாய வழியும் புலனுணர்வு ஏகதேச விளக்கமாவதன்றி உயிருணர்வு போல வியாபக விளக்க மாதல் இன்று எனவே, அதன்கண் மீளுதல் இழுக் கென்பது பெறப்பட்டது. இதற்குப் பிறர் எல்லாம் இயைபின்றி யுரைத்தார்.2 உதாரணம் ஐம்பொறியி னல்லையெனும் 1அந்த தரசிவனை ஐம்பொறியை விட்டங் கணைசகலன் - ஐம்பொறியின் நீங்கானீர்ப் பாசிபோல் நீங்குமல கன்மம்வரின் நீங்கானை நீங்கு நினைந்து என்றது உதாரணம்; என்னுதலிற்றோ வெனின், சிறை விட்டவழி அலைகடலிற் சென்று அடங்குதலேயன்றி, ஆற்றால் அலைகடற்கே பாய்ந்த நீர் அவ்வாற்றான் மறித்2” தலுமுண்மையின், அதுபோல, அரன்பாதத்தை உற்ற உயிர்க்கு ஒரோவழி மீட்சியும் உண்டென்பது பெறப்படுதலால், அவ்வழி மீளாமை செல்லாது என்பாரை நோக்கி அம்மீட்சிக்குக் காரணம் இது என்பதூஉம், அதனை நீக்குதற்கு உபாயமும் கூறி வலியுறுத்துதல் நுதலிற்று3. (இ-ள்) ஐம்பொறியின் அல்லை எனும் அந்ததர - ஐம்பொறிகள் போல் ஏகதேச விளக்கமுடையை அல்லை என்று அறிவுறுக்கப்படும் சித்தாந்த மகா வாக்கியத்தைப் பெற்றுடைய மாணவகனே! அங்கு ஐம்பொறியை விட்டுச் சிவனை அணை சகலன் ஐம்பொறியின் நீங்கான் - சிறைவிடவும் அலைகடலிற் சென்று அடங்கும் ஆறு போல் என மேற்கூறியவாறே ஐம்பொறி களானாய புலனுணர்வில் தீர்ந்து சிவன் திருவடியை உற்ற சகலன் அவ்வைம்பொறிகளான் மீள அதனை நீங்குவானல்லன்4; நீர்ப்பாசி போல் நீங்கு மலகன்மம் வரின் நீங்கானை நினைந்து நீங்கும் - கல்லெறியும் வழி நீங்கிய நீர்ப்பாசி அது விடும் வழிப் பரக்குமாறு போல 1அவ்வணைதலின்கண் நீங்கிய மலகன்ம மாயைகள் வாதனை வயத்தான் நிகழும் அயர்ச்சி பற்றி வந்து கூடுமாயின், அதுபற்றிப் பொறிவழி மீளாமல் அவ்வழியும் தன்னைவிட்டு நீங்காத முதல்வனை முன்னர் கூறப்படும் உபாயங் களில் நின்று சிந்தித்து அவற்றை நீக்கிக் கொள்ளும் என்றவாறு. வரின் என்றதனால் வருதல் ஒருதலையன்று; வாசனை உள்வழியே வந்துகூடும் என்பது பெற்றாம். நீங்கி என்பது பாடமாயின்2, நீங்கினவாகிய மலகன்மம் எனப் பெயராக வைத்துரைக்க. சித்தாந்தத்தை அந்தம் என்றது தலைக்குறை3. தரம், அதன் கண்ணதாய்ச் சிறந்த ஒரு வார்த்தை4. அங்கு மேற்கூறியபடி. ஐம்பொறியை விட்டு அணைதற்கு உரியான் இவன் என்பது உணர்த்துவார் சகலன் என்றார். நீங்கும் என்னும் மகரம் சந்தி நோக்கிக் கெட்டது; நீங்கெனவே பாடங் கொண்டு அணை என வேறு பிரித்து, முன்னிலை யேவலாக்கி அதற்கேற்ப நீங்காய் எனப் பாடம் திரித்து உரைப்பாருமுளர்5. மேற்கூறிய மீளாமையை வலியுறுத்துவார் ஐம்பொறியின் அல்லை யெனும் அந்ததர சிவனை ஐம்பொறியை விட்டு அங்கு அணை சகலன் ஐம்பொறியின் நீங்கான் என்றும், ஒரோவழி உளதாமாயின், அதற்குக் காரணம் இஃதென உவமை முகத்தான் உணர்த்துவார் நீர்ப்பாசி போல் என்றும், ஐம்பொறியின் மீளுமாயின் அவற்றிற்கு மூலமாகிய மலகன்ம மாயைகளும் அது பற்றாக வந்து தலைப்படும் என்பார் மலகன்மம் வரின் என்றும், அது நீக்குதற்கு உபாயங் கூறுவார் நீங்கானை நினைந்து நீங்கும் என்றும் கூறினார். மலகன்மம் எனவே, இனம் பற்றி மாயையுங் கொள்ளப்பட்டது. “மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன், நன்கலன் நன்மக்கட் பேறு”1 என்றாற்போல நீங்கானை நீங்கும் நினைந்து என்றதனால் வருகின்ற சூத்திரத்திற்குத் தோற்றுவாய் செய்ததூஉம் ஆயிற்று. இம்மூன்று உதாரணங்களும் முறையே திருவடி ஞானத்தைப் பெற்ற உயிர் புலனுணர்வின் மீளுதல் இல்லை யெனவும், மீளுதல் இழுக்காம் எனவும், ஒரோவழிப் பயிற்சி வயத்தான் மீள வருமாயின் 2 மீளாதவாறு செய்துகொள்ளற் பாற்று எனவும் கூறித் தாய் தரையேயாம் என்னும் ஏகாரப் பொருளை வலியுறுத்தி ஒரு பொருண்மேல் வந்தவாறு காண்க.3 எட்டாஞ் சூத்திரம் முடிந்தது. ஒன்பதாஞ் சூத்திரம் ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி உராத்துனைத் தேர்த்தெனப் பாச மொருவத் தண்ணிழலாம் பதிவிதி யெண்ணும் அஞ்செழுத்தே என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின், ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று.1 என்றது கருத்துரை; என்னுதலிற்றோ வெனின், சூத்திரக் கருத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) தம்முதல் குருவுமாய் உணர்த்தக் கேட்டு அதனைச் சிந்தனை செய்து உணருமாறு உணர்த்து முகத்தான் ஐம்புல வேடரின் வளர்ந்த வாலாமை நீக்கி உயிர் தன்னைத் தூய்மைப் படுத்துமாறு உணர்த்துதல் இவ்வொன்பதாம் சூத்திரத்தின் கருத்து என்றவாறு. சூத்திர இயைபும் இதனானே இனிது விளங்கும். சிவப்பிரகாசத்துத் “தான்பணியை நீத்தல்2” என்று ஓதப்படும் ஆன்மசுத்தியாவது இறைபணி நிற்க3 என வருகின்ற சூத்திரத்திற் பெறற்பால தாகலானும், அழுக்கின் நீக்கமே அறுவைக்குச் சுத்தியாமாறு போலப் பாச நீக்கமே உயிர்க்குச் சுத்தியாவதன்றி வேறன்மையானும், பாச நீக்கம் பண்ணும் முன்னர்ச் சுத்தியாதல் கூடாமையானும், வருகின்ற சூத்திரத்தின் கருத்தாய் நின்ற ஆன்மசுத்தி பண்ணுமாற்றைப் பதியை நாடி எனவும் தண்ணிழலாம் பதி1 எனவும் சிவதரிசனம் பண்ணுமாறு உணர்த்துதற்கு எழுந்ததே இச்சூத்திரத்தின் கருத்தாக வைத்து உரைத்தது என்னையோவென மலையற்க; சிவ தரிசனத்தின் நிகழ்வது ஆன்ம சுத்தி என்னும் உடனிகழ்ச்சி உணர்த்துதற்கும் தம்முள் வேறுபாடு சிறுபான்மை யுடையவாய இவ்விரு சூத்திரமும் ஒரு பொருள்மேலன என்பது உணர்த்துதற்கும் இவ்வாறு உரைத்தாராகலின், அஃது அங்ஙனமாக, ஆன்மா தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என்றலின், அக்காட்சியே அதற்கு அமையும், சுத்தியெற்றுக்கு எனின், அஃதொக்கும்; நிருவிகற்பமாய்க்2 காண்டலும் இரட்டுறக் காண்டலும் தெளியக் காண்டலும் எனக்காட்சி மூவகைப்படும். இம்மூன்றும் அதிபரிபக்குவ முடையோர்க்குக் கேட்டமாத்திரையே ஒருங்கு நிகழுமாயினும், ஏனையோர்க்குக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னும் சோபான முறையினன்றி நிகழாமையின், அவரை நோக்கிச் சிவரூபத்தின் நிகழும் ஆன்ம தரிசனத்தின் பின்னாக, சிவதரிசனத்தின் நிகழும் ஆன்மசுத்தியும் ஒரு தலையான் வேண்டப்படும் என்று உணர்ந்து கொள்க. “நேசமொடுந் திருவடிக் கீழ் நீங்காதே தூங்கும் நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவே யாகி, ஆசையொடும் அங்குமிங்குமாகி யலமருவோர் அரும்பாசம் அறுக்கும்வகை யருளின் வழியுரைப்பாம்” என வழிநூலாசிரியரும்3 இக்கருத்தே பற்றி ஒதினார். இச்சூத்திரத்தின் பிண்டப் பொழிப்பு: குறையுணர்வாகிய பசுவறிவானும் பாசவறிவானும் உணரப் படாத முதல்வனை, அவனது திருவடி ஞானத்தால் தன்னறிவின் கண்ணே ஆராய்ந்து அறிக; அத் திருவடி ஞானத்தான் நிலமுதல் நாதம் ஈறாகிய பாசக்கூட்டம் ‘நின்றுழி நில்லாது1’ பரந்து திரிதற்கண் அதிவேகமுடைய பேய்த்தேரின் இயல்பிற்றாய்க் கழிவது என்று அறிந்து நீங்கவே, அப்பதிஞானம் பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும்; அவ்வாறு பாசத்தை யொருவி ஞானத்தைப் பெற்று ஞேயத்தைக் கண்ட காட்சி சலியாமைப் பொருட்டு அப்பொருள் பயக்கும் திருவைந்தெழுந்து அவ்விதிப்படி அறிந்து கணிக்கப்படும்2 எ-று. ஊனம் என்பது3 அப்பொருட்டாதல் “ஊனமேற்கிரியை வித்தை” 4என்பதனான் அறிக. “நன்று மன்னிது நாடாய் கூறி5” என்றாற்போல நாடி என்பது இகரவீற்று முன்னிலை ஏவல்.6 சிந்தையின்கண் என்னும் ஏழனுருபு தொக்கது. உராவென்பது முதனிலைத் தொழிற் பெயர்1; இனி, “பறவாக் குளவி” “பாயா வேங்கை” என்றாற்போல, ஒருவரான் ஊரப் படாத வேகத்தை யுடைய தேர் எனச் செயப்படு பொருட்கண் வந்த பெயரெச்ச மறையாகக் கொண்டுரைத்து,2 “திருத்தார் நன்றென்றேன் றியேன்”3 என்றாற் போல உராவென்பது குறுக்கல் விகாரம் என்பாருமுளர். பின் வந்த பதி ஆகுபெயர். இதனுள், ஊனக்கண்பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி என்றது ஓரதிகரணம்; உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி என்றது ஓரதிகரணம்; விதி எண்ணும் அஞ்செழுத்தே என்றது ஓரதிகரணம்; ஆக மூன்று அதிகரணத்தது இச்சூத்திரம் என்றுணர்க. முதலதிகரணம் மேற்கோள் ஈண்டு அம்முதலை ஞானக்கண்ணாலே காண்க என்றது என்பது மேற்கோள். என்னுதலிற்றோவெனின், மேலைச் சூத்திரத்து ஓதிய வாற்றான் முதல்வன் பாசவறிவால் நாடப்படுவனல்ல னாயினும் பசுவறிவால் நாடப்படுவன் என்றற்கு இழுக்கு என்னை எனச் சிவசமவாத சைவர் மதம்பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) வெளிப்படை.1 ஏகாரம் தேற்றம். ஏது அவன் வாக்கு மனாதீத கோசரமாய் நிற்றலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், ஏனை ஞானங்களான் அறியப்படாது சிவஞானத்தான் அறியப்படும் என்றற்குப் பிரமாணம் என்னை யென்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) 2வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே என்புழி உரைத்தாம். 3ஆண்டுப் பொதுவகையால் பெறப்பட்டதனை ஈண்டு ஏதுவாக வைத்து, வாக்கு மனாதீதமாகியும், கோசரமாதல் பிறிதொன்றால் பெறப் படாமையின், அருத்தாபத்தியான் ஞானக் கண்ணாலே காணப்படும் என்பது தாமே போதரும் என மேற்கோளைச் சாதித்தார். உதாரணம் நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ தேடி எனையறியேன் தேர்ந்தவகை - நாடியரன் தன்னாலே தன்னையும் கண்டு தமைக்காணார் என்னாம் எனவறிவா ரின்று என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், கோசரமாதல் பிறிதொன்றால் பெறப்படாதென்றது என்னை? பதித்துவம் பாசத்துவம் நீங்கியவழிச் சுட்டிறந்து அறிவதாகிய உயிருணர்வு திருவடி ஞானத்தோடு ஒப்பதாகலின், அதன்கண் கோசரமாதல் அமைவுடைத்துப் போலும் என்பாரை நோக்கி அவ்வுணர்வு விளங்குமாறு உணர்த்து முகத்தான் அவரை மறுத்து ஏதுப் பொருளை வலியுறுத்துதல் நுதலிற்று.1 (இ-ள்) நாடியோ என்போ நரம்பு சீக்கோழையோ தேடி எனை அறியேன் தேர்ந்த வகை நாடி -‘ நாடி முதலியவற்றுள் யான் யார்? என்னைத் தேடியும் அறிகின்றிலேன்’ என்று இவ்வாறு தேர்கின்ற தேர்ச்சி அறிவின் கண்ணே இதனைத் தெளிவிப்பதோர் அறிவு வேறு உண்டென ஆராய்ந்து நோக்கி;2 அரன் தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார் - அவ்வாறு நாடுங்கால் விளங்கித் தோன்றுவதாய முதல்வனது திருவடி ஞானத்தால் முதல்வனையும் உணர்ந்து முதல்வனின் வியாப்பியமாய் நின்று அங்ஙனம் அறியும் பொருளாகிய தம்மையும் உணர்தலைச் செய்யாதார்; என்னாம் என அறிவார் இன்று - 3மற்று எவ்வியல்பினர் என்று தம்மை அறிய வல்லுநர் இம் முத்திக்காலத்து4 என்றவாறு. நாடி என்றது இடை பிங்கலை முதலியவற்றை. நரம்பெனவே அடங்குமேனும் தலைமை பற்றி வேறு கூறினார். சீ - புண்ணீர். கோழை - ஐ. ஓகாரம் தெரிநிலை. என்றென்பது சொல்லெச்சம். வகை ஆகுபெயர். ஒற்றுமை பற்றி அரனது ஞானத்தை அரன் என்று உபசரித்தார். உம்மை எதிரது தழீஇயிற்று. எவனென்னும் வினாவினைக் குறிப்புப்பெயர், ஈண்டு ஆகுபெயராய், என்னென மரீஇயிற்று. ஆம் அசை. நாடியோ என்போ நரம்பு சீக்கோழையோ வென்ற உபலக்கணத்தால் ஏனைத் 1தத்துவ தாத்துவிகங்களினும் அவ்வாறு தெரிதல் கொள்ளப்படும். இது தம்மை அறியுமாறு உணர்த்து முகத்தானே தலைவனை அறிந்தபின், அறியப்படு வதாகிய தம்மறிவு கொண்டு தலைவனை அறியுமாறு யாண்டையது எனச் சிவசமவாத சைவரை மறுத்துச் சிவஞானத்தானன்றி அறியப்படாமையை வலியுறுத்தவாறு காண்க. உதாரணம் காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக் காட்டாய வுள்ளத்தைக் கண்காணா - காட்டிய உள்ளந் தனைக்காணா வுள்ளத்தின் கண்ணாய கள்வன்றா னுள்ளத்திற் காண்.2 என்றது உதாரணம்; என்றுதலிற்றோவெனின், எதிர்முகத்து ஒரு பொருளைக் கண்ட கண்ணே மறித்து நோக்கியவழி வெரிந் புறத்துப் பொருளையுங் காணவல்லும்; அதுபோல அங்ஙனம் தேர்ந்தறிதலைச் செய்த உயிரே தெளிந்தறிதலையும் செய்யவல்லும் என அமையும் என்பாரை நோக்கி அதனது மாட்டாமையை விளக்கி அரன் தன்னாலே காண்டiல வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) காட்டிய கண் தனைக் காணா - உயிராற் காட்டப்பட்டு ஒரு விடயத்தைக் காண்கின்ற கண்ணானது தன்னியல்பைக் காணமாட்டாது; கண்ணுக்குக் காட்டு ஆய உள்ளத்தைக் கண் காணா - தனக்கு அவ்விடயத்தைக் காண்பித்து முதலாய் நிற்கும் உயிரையும் அது காணமாட்டாது; காட்டிய உள்ளம் தனைக் காணா - அதுபோல் முதல்வனால் மறைந்து நின்று உணர்த்தப் பட்டு ஒன்றனைத் தேர்ந்து உணர்கின்ற உயிர் அவ்வாறே தன்னியல்பையும் அறியமாட்டாது, தன்னை யுணர்த்தி நிற்கும் முதல்வனையும் அறியமாட்டாது; உள்ளத்தின் கண் ஆய கள்வன் தான் - அத்தேர்ச்சியறிவின்கண்ணும் உடனாய் நிற்கும் கள்வன் அம் முதல்வன் தான் ஆகலானே; உள்ளத்தில் காண் - அவனை அவ்வறிவின்கண் வைத்து நாடித் தெளிவாயாக என்றவாறு. இது சொற்பொருள் பின்வருநிலை.1 ஏகாரம் அசைநிலை. “முறைகாக்கு முட்டாச் செயின்2” என்றாற்போலக் காணாதென்னும் துவ்வீறு விகாரத்தால் தொக்கது. பின்வந்த உள்ளம் ஈண்டுத் தேர்ச்சியறிவின் மேற்று. உள்ளத்தின் கண்ணும் என்னுஞ் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. தோன்றாது நிற்றல் பற்றிக் கள்வன் என்றார். 3கள்வனென்றது கண்ணுக்கு உயிர் மறைந்து நின்றே காட்டுவதாகலான் அது தன்னையும் உயிரையும் அறியமாட்டா தாயிற்று; அதுபோல முதல்வன் இதுகாறும் மறைந்து நின்றே உணர்த்துதலின் உயிர் தன்னையும் முதல்வனையும் அறியமாட்டா தாயிற்று என்பதுபட நின்ற குறிப்பு மொழி1. உள்ளத்திற் காண வல்லார்க்கு அக்கள்ளம் தீர்தலின் தம்மையும் முதல்வனையுங் காண்டல் கூடுமென்பதாம். “கள்ளரோ டில்லம்உடையார் கலந்திடின், வெள்ள வெளியாமென் றுந்தீபற2” என்றதும் இக்கருத்து நோக்கி. கண்ணுக்குக் காட்டாய உள்ளத்தைக் கண் காணா என உவமைக்கு ஓதியவாறு பொருளினும் வருவித்து உரைத்துக் கொள்க. இஃது எடுத்துக்காட்டு உவமை3. இரண்டாம் அதிகரணம் மேற்கோள் இனி அசத்தாயுள்ள வன்ன பேதங்களை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞான சொரூபம் என்று உணரற்பாற்று என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், அம்முதலை ஞானக் கண்ணாலே காண்க வென்று உணர்த்தியவழி அந்த ஞானக்கண்ணைப் பெறுமாறு யாங்ஙனம் என நிகழும் அவாய் நிலையை நீக்குதற் பொருட்டு, மேலதற்கோர் புறனடையாய் எழுந்த இச்சூத்திரத்தின் இரண்டாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) வெளிப்படை1 பாச மொருவத் தண்ணிழலாம்பதி என்புழிப் பாச மென்றது காரியப் பிரபஞ்சத்தை என்பார் 2அசத்தாயுள்ள என்றும், சொல் பல்காமைப் பொருட்டு ஏதுப்பொருளை உருவக முகத்தான் உடம் பொடு புணர்த்துக் காட்டுவார் பிரபஞ்சத்தை என்னாது 3வன்ன பேதங்களை என்றும், வியாபகப் பொருளுக்கு ஒருவுதலாவது உணர்ச்சி விசேடமேயாம் என்பார் அசத்தென்றொழிய என்னாது காணவென்றும், தண்ணிழலாய் நிற்றல் புதிதன்றென்பார் உளதாய் நிற்பது என்றும், பதி என்றது ஆகுபெயரால் பதிஞானத்தின்மேல் நின்றது என்பார் ஞான சொரூபம் என்றும், இஃது அனுபவத் தினன்றிச் சொல்லளவையின் அறியவாராது என்பார் உணரற்பாற்று என்றும் உரைத்தார். இஃது ஏகதேச உருவகம். இதனுள் பெறப்படும் ஏதுப்பொருளை ஏனையவற்றுட் போல மேற்கோளின் வேறு வைத்துக் காணுமாறு:- இனி அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண, உளதாய் நிற்பது ஞான சொரூபம் என்றது, வேற்றியல்பாகிய வன்னபேதங்களை வேற்றியல்பு என்று கண்டு கழிப்பின், உளதாய் நிற்பது படிக சொரூபமாம் துணையான் எனவரும். (இ-ள்) படிக சொரூபத்தைக் காட்டாது மறைத்து நின்ற வேற்று நிறங்களை இவை நிலையுதல் இலவாகிய வேற்று நிறங்கள் எனக் கண்டு நிற்பின், அவ்வழி நிலையுதலுடைத்தாய் விளங்கி நிற்பது பளிங்கினது சொரூபமாம் என்னும் ஒப்புமையான், நிலையுதலுடைய தற் சொரூபத்தைக் காட்டாது மறைத்து நிற்கும் நிலையுதல் இலவாயுள்ள பிரபஞ்சத்தை, இவை நிலையுதல் உடையன அல்ல என்று விவேகித்தறியின் அங்ஙனம் நிராலம்ப மயமாய் விளங்கித்தோன்றுவது ஞானசொரூபம் என மேற் கொண்டது என்றவாறு. வன்னபேதமாவது சித்திரமெனக் கொண்டு1 சுவர்மேல் வைத்து உரைத்தலும் ஒன்று. அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண்டலாவது ஆசிரியன் அறிவுறுத்த உபதேசப் பொருளின் உறைத்து நின்று “அட்டகுண மெட்டுச் சித்தி கோகனதன் முதல் வாழ்வு குலவுபதம் எல்லாம் - வெறுத்து நெறியறு வகையு மேலொடு கீழ் அடங்கக்”2 காரண ரூபத்தில் இல்லாமையால் “வெறும் பொய்யென நினைந்திருத்தல்.”3 உதாரணம். நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த் தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் - அற்புதம்போல் ஆனா அறிவாய் அளவிறந்து தோன்றானோ வானே முதல்களையின் வந்து என்பது உதாரணம்; என்னுதலிற்றோவெனின் அசத்தை அசத்தென்று கண்டு ஒருவியவழித் தோன்றுவது சூனியமேயன்றிப் பிறிதில்லை போலும் என்பாரை நோக்கி ஞான சொரூபத்தின் இயல்பு கூறி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) நிர்க்குணனாய் - அசுத்தப் பிரபஞ்சம்போல4 முக்குண ரூபமாய் அளவிட்டு அறியப்படுவானும் அல்லனாய்; நின்மலனாய் - முக்குணங்களைக் கடந்த மிசிரப் பிரபஞ்சம் போல மலகன்ம காரிய ரூபமாய் அறியப்படுவானுமல்லனாய்; நித்தியானந்தனாய் - மலகன்மங்களையும் கடந்த சுத்தப் பிரபஞ்சம் போல அநித்தியானந்த ரூபனாய்ச் சுட்டி அறியப்படுவானும் அல்லனாய்; தற்பரமாய் - இம்மூன்றனோடும் கூடிப் பொது வியல்புபற்றி அவ்வாறுணரப்படும் உயிர்போலன்றி அதற்கு மேலாய்; நின்ற தனி முதல்வன் - இவ்வாறு நிற்றலான் ஒன்றன் இயல்புபற்றி அறியப்படாத தனி முதலாகிய இறைவன்; வான்முதல் களையின் - ஆகாசம் முதலிய அசத்தை1 அசத்தென்று கண்டு ஒரு வியவழி; அளவு இறந்து2 அற்புதம்போல் வந்து - பயின்றறிந்து வரும் தனது சுட்டறிவின் அளவினைக் கடத்தலான் இன்னது என்று அறியவராத சூனியப்பொருள் போலத் தோன்றி; ஆனா அறிவாய்த் தோன்றானோ - பின்னர்ச் சுட்டிறந்தறியும் தன்னறி வின்கண் நீங்காது நிலைபெறுவதாய்ச் சோதிக்குட் சோதியாய் விளங்கித்3 தோன்றான் கொல்லோ என்றவாறு.4 தற்பரம் தனக்குப் பரம் என விரியும். தன்னென்றது உயிரை. அற்புதம் ஈண்டுச் சூனியத்தின் மேற்று. முதற்கண் சூனியமாய்த் தோன்றினும் சூனியம் அன்று என்பார், அற்புதம் போல் வந்து என்றார். ஆனாமை நீங்காமை. ஓகாரம் எதிர்மறை. ஏகாரம் அசைநிலை. வானே முதலெனவே தோற்ற முறை பற்றி வான் முதலாகிய பூதங்களும், ஒடுக்க முறை பற்றி வான்முதலாகிய ஏனைத் தத்துவங்களும் அடங்கும். 1நிர்க்குணனாய், 2நின்மலனாய், 3நித்தியானந்தனாய்த் 4தற்பரமாய் என்புழி ஆக்கச்சொல் உண்மை குறித்து நின்றது வட மொழி மதம். 5அறிவாய் என்புழி ஆக்கம் 6வேறுபாடு குறித்து நின்றது. ஒற்றுமை பற்றி முதல்வனது ஞானத்தை முதல்வன் என்று உபசரித்தார்7. உதாரணம் சுட்டி யுணர்வதனைச் சுட்டி யசத்தென்னச் சட்ட வினியுளது சத்தேகாண் - சுட்டி உணர்ந்தநீ சத்தல்லை யுண்மையைத் தைவம் புணர்ந்ததனாற் பொய்விட்டுப் போம் என்றது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், வானே முதல் களைந்தவழி அங்ஙனம் தோன்றுவதும் வேறொன்று எனக் கோடும், ஞானசொரூபம் என்றற்குப் பிரமாணம் என்னை என்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) சுட்டி யுணர்வதனைச் சுட்டி அசத்து என்ன - ஏக தேச உணர்வாற் சுட்டி உணரப்படுவதாய பிரபஞ்சத்தை மேற்கூறிய வாறே ஒரோ ஒன்றாகச் சுட்டி அசத்தென்று கண்டு கழித்துக் கொண்டு சென்றவழி; இனிச் சட்ட உளது சத்தே காண்1 - முடிவின்கட் செம்மையே கோசரமாவது யாது அஃது அவ்வசத்தின் வேறாகிய சத்தேயாம் அதனை அறிவாயாக; அற்றேல், அசத்தின் வேறாய் அங்ஙனம் தோன்றும் சத்தாவது உயிரேயாமென அமையும் எனின், சுட்டி உணர்ந்த நீ சத்து அல்லை - இதுகாறும் அசத்தோடு கூடிச் சுட்டி அறிந்து வந்த நீ அசத்தின் வேறாய் அங்ஙனம் தோன்றும் சத்தாவாய் அல்லை; 2அற்றேல், அச்சுட்டுணர்வு எனக்கு நீங்குவதின்று போலும் எனின்; உண்மையைத் தைவம் புணர்ந்து3 - அசத்தின் வயப்பட்டு நின்று சுட்டி அறிந்து வந்த நீ அதனை ஒழிந்து அங்ஙனம் தோன்றிய சத்தின் வயத்தினையாய் அதனைப் புணர்ந்தால்; அதனால் பொய் விட்டுப் போம் - அப்புணர்ச்சியானே சுட்டுணர்வாகிய அப்பொது வியல்பு நின்னைவிட்டு நீங்கும் என்றவாறு4. என்ன என்றது உபசார வழக்கு சட்ட என்பது செப்பம் உணர்த்தி நிற்பதோர் அகரவீற் றிடைச்சொல்1; அது சட்டமென இழிவழக்கின் மகரவீறாய் மரீஇயிற்று. அசத்தைப் பிரித்தமையின் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. உண்மை, சத்து என்பன ஒரு பொருட் கிளவி. தைவமாய் என ஆக்கச் சொல் வருவித்துரைக்க. புணர்ந்தால் என்பது புணர்ந்தெனத்திரிந்து. உண்மைக்குத் தைவமாதல்2 புணரின் என உருபு மயக்கமாகக் கொண்டு உரைப்பினும் அமையும். பற்றறக் கழிந்தொழியும் என்பார் விடுமென்னாது விட்டுப்போம் என்றார்3. உதாரணம் கண்டதை யன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய் அண்டனை யான்மாவி லாய்ந்துணரப் - பண்டணைந்த ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனி ணொண்கருட சானத்தின் தீர்விடம் போல் தான். என்றது உதாரணம் என்னுதலிற்றோவெனின், அசத்தை அசத்தென்று கண்டொழியுமாறும், ஒழிந்தவழி உண்மையைத் தைவம் புணரு மாறும், புணர்ந்தவழி அதனாற் பொய்விட்டுப் போமாறும் யாங்ஙனம் என்பாரை நோக்கி அவற்றைத் தெரித்துணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.4 (இ-ள்) கண்டதை அன்று அன்று எனக் கண்டு அசத்து ஆய் விட்டு5- சுட்டியுணரப்பட்ட பிரபஞ்சத்தை இது சத்தன்று இது சத்தன்று என ஒரோ ஒன்றாக வைத்து நோக்கி அசத்து என்று ஒழித்து; ஆன்மாவில் அண்டனை ஆய்ந்து1 - அவ்வாறு கண்டொழிந்த தன் அறிவின் கண்ணே சுட்டுணர்வின்றி நின்ற கடவுளை2 ஆராய்ந்து; உணர - சோகமெனப் பாவிப்பனாயின்3; உத்தமனின் பண்டு அணைந்த ஊனத்தைத் தான் விடுமாறு4 - அப்பாவகத்தான் அத்துவிதமாய் விளங்கித் தோன்றும் முதல்வனால் அனாதியாய்க் கூடி நின்ற பொதுவியல்பைத் தான் விட்டு நீங்குமாறு; ஒண்கருட சானத்தின் தீர்விடம்போல் தான் - ஒள்ளிய கருட தியானத்தில் விளங்கித் தோன்றும் கருடனால் அப்பாவகன் விடத்தைத் தீர்த்துக் கொள்ளுமாறு போலாம் என்றவாறு.5 தான் என்பது முன்னையது எழுவாய், பின்னையது அசை. சானம் பாகதச் சிதைவு.6 கருடதியானமாவது யாதெனிற் கூறுதும்; ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் ஆத்தியான்மிகம் எனக் கருடன் மூவகைப்படும். பொருடோறும் இவ்வாறு கண்டுகொள்க. அவற்றுள், உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன்; அதற்கு அதிதெய்வ மாகிய மந்திரம் ஆதிதைவிக கருடன்; அம்மந்திரம் இடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும். அம்மூன்றனுள் ஈண்டுக் கருடனென்றது கருடனுக்கு அதிதெய்வமாய் மாந்திரிகன் உள்ளத்தில் அதுபோல் வைத்துத் தியானம் செய்து கணிக்கப்படும் மந்திர ரூபமாகிய ஆதிதைவிக கருடனை. அதனைப் பாவித்தலாவது நாடோறும் பயின்றுவந்த பயிற்சி விசேடத்தால் அம்மந்திர ரூபமே தானாக அநன்னிய பாவனை செய்து தன்னறிவு அதன் வயத்ததாம் படி உறைத்து நிற்றல். அவ்வாறு நின்று அம் மந்திரக் கண்கொண்டு பார்ப்பவே அஃது அவ்விட வேகத்தை மாற்றுதல் ஒரு தலையாகலின் அப்பாவனை ஈண்டைக்கு உவமையாயிற்று. புள்ளு விலங்கு மரம் முதலியவற்றிற்கெல்லாம் அதிதெய்வம் மந்திரம் உள என்பதூஉம், மந்திரங்களைக் கணிப்போன் படிகம் போல மந்திர சொரூபியாவன் என்பதூஉம் சருவஞானோத்தர முதலியவற்றுள் காண்க. இதனானே கருடபாவனை அசத்தியம் என்பார் மதமும் போலியாயவாறும் உணர்க. அல்லதூஉம், பாவனை போலியாயவழி அது பயன் தருமாறு யாண்டையது என்று ஒழிக.. மூன்றாம் அதிகரணம் மேற்கோள். இனி 1இவ்விடத்து ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க2 வென்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின் ஆன்மாவைச் சுத்தி பண்ணுதற்குப் பாசம் ஒருவியவழித் தண்ணிழலாய்ப் பிரகாசித்த ஞானசொரூபம் ஒன்றே அமையுமாகலின் இவ்விடத்தில் இனிச் செய்யக்கடவது ஒன்றில்லை என்பாரை நோக்கிச் சூத்திரத்தின் மூன்றாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) மேற் பாசம் ஒருவி ஆண்டுத் தண்ணிழலாய்ப் பிரகாசித்த ஞானக்கண்ணாற் பதியைச் சிந்தை நாடிய பின்னர் அவ்விடத்துத் திருவைந்தெழுத்தையும் விதிப்படி கணிக்க என மேற்கொண்டது என்றவாறு. இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது.1 அற்றாகலின் அன்றே “பின்னும் - ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க2” என்றார் வழிநூலாசிரியரும் என்க. ஈண்டு ஸ்ரீ பஞ்சாக்கரத்தை என்றது முத்தி பஞ்சாக்கரத்தை. திருவஞ் செழுத்தால் சாதிக்கப்படும் பொருளும் அதுவேயாகலான், வேறு வகுத்துக் கூற வேண்டாமையின், விதிப்படியென மாட்டெறிந்து ஒழிந்தார். இவ்வாறு ஆசிரியர் மாட்டெறிந்ததூஉம் உணராதார் சாதித்து நிற்குமுறை வேறே ஓதுமுறை வேறேயெனச் சித்தாந்த வழக்கொடு முரணிக் கூறுவர். நிற்குமுறைமையும் ஓதுமுறைமையும் தம்முள் இயைபில்வழி அஃது அதற்குச் சாதனமாமாறு யாண்டையது என்றொழிக. மானதம், மந்தம், உரை எனக் கணிக்குமாறு3 மூவகைப் படும். அவற்றுள்4 சுத்த மானதம் எனப்படும் அறிவாற் கணித்தலே ஈண்டு உச்சரித்தலென்பார், சூத்திரத்துள், உச்சரிக்க என்னாது எண்ணுக என்றார். வடமொழிச் சூத்திரத்துத் தியானிக்க5 என்றதும் அது. இன்னும் இதன்கட்படும் இயல்பெல்லாம், உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், கொடிப் பாட்டு, நெஞ்சுவிடு தூது, முதலியவற்றுட் காண்க. ஈண்டு விரிக்கின் பெருகும். ஏது இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுப்போல நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின் அது நீக்குதற்கு எனக்கொள்க. என்றது ஏது. என்னுதலிற்றோவெனின் அந்தரங்க வழிபாடாகலின் அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடு மாற்றைச் சார வைத்து ஓதற்பாலதாகிய இதனைச் சித்த சாதனமாய் ஈண்டு விதித்தல் ஏற்றுக்கு என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) வேம்பு தின்ற புழு அதனை ஒருவிக் கரும்பைத் தலைப்பட்டு அதன் சுவை தெரிந்துழியும், பயிற்சி வயத்தான் நோக்கிற்றை நோக்கி நிற்குமாறு போல, அசத்தாயுள்ள வன்ன பேதங்களை அசத்து என்று கண்ட உயிர்களுக்கு அதனான் ஞான சொரூபம் விளங்கி ஞேயம் காட்சிப்பட்டவிடத்தும், அவை பயிற்சி வயத்தால் பண்டைச் சிற்றுணர்வை நோக்கி நிற்குமாகலின், அவ்வாதனை நீக்குதற் பொருட்டு ஈண்டைக்கு வேண்டப்படுதலான் இனி ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி இவ்விடத்து உச்சரிக்க வென மேற்கொண்டதெனக் கொள்க என்றவாறு.1 இவ்விடத்து என்றதனால் அணைந்தோர் தன்மையைச் சாரவைத்து மேற்கோடற்குரிய ஸ்ரீ பஞ்சாக்கரத்தையென வருவித்துரைத்துக் கொள்க. எனக்கொள்க என்று, உடம்படுப் பித்ததும் அதுபற்றி. இக்கருத்து நோக்கியன்றே புடைநூலாசிரியர்1 அஞ்செழுத் தருணிலையை ஆன்மலாபத்தின் பின்னாக அணைந் தோர் தன்மையைச் சாரவைத்து ஓதியதூஉம் என்க. “வானோக்கி வாழும்............ கோனோக்கி வாழும்” என்றாற் போல ஈண்டு நோக்கென்றது மனவெழுச்சி விசேடத்தை. பிரகாசித்தவழி யென்பது பிரகாசித்தெனத் திரிந்தது. ஈண்டு ஞானம் என்றது அசத்தை அசத்தென்று கண்டவழி விளங்குவது எனப்பட்ட ஞானசொரூபத்தை; அஞ்ஞானம் என்றது அதற்கு மறுதலையாகிய சுட்டுணர்வை என உணர்க. அது நீக்குதற்கெனக் கொள்க எனவே, சித்த சாதனம் அன்றென்பதும் பெறப்பட்டது. உதாரணம் அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்தோமங் கோதண்டஞ் சானிக்கில் அண்டனாஞ் சேடனாம் அங்கு. என்றது உதாரணம்; என்னுதலிற்றோவெனின், இஃது அவ்வா சனையை நீக்குதற்குச் சாதகமாமாறு யாங்ஙனம் என்பாரை நோக்கி அஃது ஆமாறு கூறி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று.2 (இ-ள்) உள்ளம் அரனுடைமை அஞ்செழுத்தால் கண்டு3 - உயிர் சிவனுக்கு உடைமையாதலை அஞ்செழுத்தை உச்சரிக்கும் முறையில் வைத்து நோக்கி; இதயத்தில் அரனை அஞ்செழுத்தால் அர்ச்சித்து - தன்னுடம் பகத்தே இதயம் உந்தி புருவநடு என்னும் மூன்றனையும், முறையே பூசைத்தானம், ஓமத்தானம், தியானத்தானமாகக் கருதிக்கொண்டு புறம்பே ஞானபூசை செய்யுமுறைப்படி இதய பங்கயத்தில் அவ்வஞ் செழுத்தால் அமைந்த திருமேனியில் அம்முதல்வனைக் கொல்லாமை ஐம்பொறியடக்கல் பொறை அருள் அறிவு வாய்மை தவம் அன்பு என்னும் அட்டபுட்பம் கொண்டு அம்மனுவால் அர்ச்சனை செய்து;1 அஞ்செழுத்தால் குண்டலியின் ஓமம் செய்து - அத்திரு மந்திரத் தானே குண்டலித்தானமான உந்தியில் ஞானவனலை யெழுப்பி அதன் கண் விந்துத்தானத்து அமிழ்தமாகிய நெய்யைச் சுழுமுனைநாடி இடைநாடியாகிய சுருக்குச் சுருவங்களால் ஓமித்து;2 கோதண்டம் சானிக்கில் - விந்துத்தானமாகிய புருவநடுவில் சிகர யகர வகரங்கள் மூன்றும் முறையே தற்பதப்பொருளும் துவம்பதப் பொருளும் அசிபதப்பொருளுமாம் முறைமை நோக்கி அதனாற் சிவோகம் பாவனை செய்வானாயின்3; அங்கு அண்டன் ஆம் சேடன் ஆம் - அப்பொழுதே அப்பாவனைக் கண் அம்முதல்வன் விளங்கித் தோன்றுவன், அப்பாவகன் அவனுக்குச் சேட சேடிய பாவகத்தால் அடிமை யாவன்4 என்றவாறு. ஓமித்தலும் தியானித்தலும் பூசைக்கு அங்கம் என அறிக5. ஞான சொரூபம் விளங்கிய வழியும்6 பயிற்சி வயத்தான் ஏகதேசப் பட்டுப் புறத்திற் செல்ல நோக்குவதாய தன்னறிவை அங்ஙனம் ஆகாதவாறு மடக்கி அகத்தே ஒரு குறியின்கண் நிறுத்தி நிட்டை கூடும்படி அஞ் செழுத்து ஓதும் முறையில் வைத்துக் கண்டு சிந்திக்கச் சிந்திக்க அஃது அந்நோக்கத்தைப் பற்றறக் கெடுத்து ஞானசொரூபத்தை இனிது விளக்கிப் பூரண நிலையிற் கொண்டு செலுத்துமாகலின் இஃது ஈண்டைக்குச் சிறந்த சாதனமாயிற்று என்பது.1 உதாரணம் இந்துவிற் பானுவில் இராகுவைக் கண்டாங்குச் சிந்தையிற் காணிற் சிவன்கண்ணாம் - உந்தவே காட்டாக்கிற் றோன்றிக் கனல்சே ரிரும்பென்ன ஆள்தானாம் ஓதஞ் செழுத்து. என்றது உதாரணம்; என்னுதலிற்றோ வெனின், அங்ஙனம் ஒரு குறியின்கண் வைத்தன்றி முதல்வனைக் காண்டல் செல்லாத வாறும் அவ்வாறு கண்டவழி முதல்வன் தன்மாட்டு விளங்கித் தோன்று மாறும் தோன்றியவழித் தான் அம்முதல்வனுக்கு அடிமையா மாறும் உவமையில் வைத்து உணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) இராகுவை இந்துவில் பானுவில் கண்டாங்கு - அந்தரத்து இயங்கும் நவக்கோள்களுள் ஏனைய போலக் காணப்படாத இராகு கேதுக்களை உபராகத்தில் சந்திராதித்தர் மாட்டுக் கண்டாற்போல;1 சிந்தையில் காணில் - முப்பொருள்களுள் யான் இதனை அறிந்தேன் அறிகின்றிலேன் என்னும் உணர்விற்கு விடயமாகிய பசுபாசங்களோடு ஒப்ப வேறு உணரப்படாத முதல்வனைத் தன் இதய பங்கயத்தின் அஞ்செழுத்தின் முறையில் வைத்துக் காணுமாயின்;1 உந்தவே காட்டாக்கில் சிவன் தோன்றிக் கண் ஆம்2- கோலை நட்டுக் கயிற்றினாற் சுற்றிக் கடையவே காட்டத்தினின்று அங்கி தோன்றுமாறு போல அம்முதல்வன் ஆண்டுத் தோன்றி அறிவுக்கறிவாய் விளங்கி நிற்பன்; தான் கனல்சேர் இரும்புஎன்ன ஆள்- ஆம் அப்பொழுது தானும் எரி சேர்ந்த இரும்புபோலத் தனது சுதந்திரத்தைவிட்டு அம்முதல்வனுக்கு அடிமையாம்3; அஞ்செழுத்து ஓது - ஆகலான் அத் திருவைந்தெழுத்தை விதிப்படி ஓதுவாயாக என்றவாறு.4 கேது சாயாக் கிரகமாகலின், வேறு கூறாராயினர். கண் அறிவு தோன்றி யாமென இயையும். உந்துதல் ஈண்டுக் கடைதல் மேற்று. காட்டாக்கி வடமொழிச் சிதைவு. தான் எழுவாய். இகரம், விகாரத்தால் தொக்கது. இன் உவம வுருபு. ஈண்டும் ஓதஞ்செழுத்து என்றது வலியுறுத்தவாறு. உதாரணம் மண்முதல் நாளமலர் வித்தை கலாரூபம் எண்ணிய ஈசர் சதாசிவமும் - நண்ணிற் கலையுருவாம் நாதமாம் சத்தியதன் கண்ணாம் நிலையதிலாம் அச்சிவன்தாள் நேர் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், தத்துவ முப்பத்தாறுக்கும் மேற்பட்ட முதல்வனை இதய பங்கயத்தில் கண்டு அர்ச்சிக்குமாறு யாங்ஙனம் என்பாரை நோக்கி அவ்விதய பங்கயத்தின் இயல்புணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.1 (இ-ள்) நண்ணில் - அவ்விதய பங்கயத்தின் இயல்பை அறியப்புகின்; மண்முதல் நாளம் - நிலமுதலிய இருபத்து நான்கு தத்துவமும் உந்தியினின்றுந் தோன்றி எண் விரலளவைத் தாயுள்ள நாள வடிவாம்2; வித்தை மலர் - வித்தியா தத்துவங்கள் ஏழும் சுத்த வித்தையும் என்னும் எட்டுத் தத்துவமும் எட்டு இதழ் வடிவாம்3; எண்ணிய ஈசர் சதாசிவமும் கலாரூபம் - அத் தத்துவங்களுக்கு மேலாகக் கருதப்பட்ட ஈசுரஞ் சதாசிவம் என்னும் இரண்டு தத்துவமும் அறுபத்துநான் கெனப்படும் கேசர வடிவாம்; சத்தி கலை உருவாம் - சத்தி தத்துவம் அக்கேசரங் களுக்கு உள்ளாகிய பொகுட்டு வடிவாம்; நாதம் அதன் கண்ணாம் - சிவதத்துவம் அப்பொகுட்டிற் காணப்படும் ஐம்பத்தொரு வீச வடிவாம்; அதில் அச்சிவன் தாள் நிலையாம் - ஆகலான் அவ்வியல் பிற்றாகிய இதய பங்கயத்தின் முப்பத்தாறு தத்துவமும் ஆசனமாக வுடைய அச்சிவனது சத்தி நிலைபெறும்; நேர் - அதனை யறிந்து திருவஞ் செழுத்தால் அர்ச்சிப்பாயாக1 எ-று. இதனானே “அண்ட பிண்டம் அவை சமமாதலால்2” புறத்துக் காணப்படும் முப்பத்தாறு தத்துவமும் அகத்தினில் சூக்குமமாய் உண்டு என்பது காட்டி முதல்வனுக்கு இந்நிலையே அந்நிலையெனத் தெளிவித்தவாறு. வித்தை என்பது இரட்டுற மொழிதலான் அவ்வாறு உரைக்கப்பட்டது. சிவஞானசித்தியில் “மூட்டு மோகினி சுத்த வித்தைமலரெட்டாய்3” என்புழி மோகினி யென்றதூஉம் ஆகுபெயரான் அதன் காரியமாய கலாதிகளின் மேனின்றது. இவ்வாறின்றி, நில முதலிய முப்பத்தொரு தத்துவம் எனப்படும் எட்டுக்கொத்தும் எண்விரல் நாள வடிவும், அசுத்த மாயாதத்துவம் நாளத்துக்கும் மலருக்கும் நடுக்கண்டமாகிய கிரந்தி வடிவும், அதற்கு மேல் சுத்த வித்தையில் வாமை முதலிய எட்டும் எட்டிதழ் வடிவுமாம் என்றுரைப்பாரும், முப்பத் தொன்றுக்கு மேல் அசுத்தமாயை கிரந்தியின் அதச்சதனம்,4 சுத்த மாயை ஊர்த்துவச் சதனம், அதற்கு மேல் ஈசுர தத்துவத்தில் அனந்தன் முதலிய எட்டும் எட்டிதழ் வடிவும் சதாசிவ தத்துவ மொன்றுங் கேசர வடிவுமெனக் கொண்டு அதற்கியையக் கொண்டு கூட்டி உரைப்பாரும், கலாரூபம் என்றது பஞ்ச கலைகளை எனவும் அஃது யாண்டும் கூட்டி யுரைக்கப்படும் எனவும் கொண்டு, மண்முதல் நாள மலர் என்பதற்கு மண்ணாகிய நிவர்த்தி கலாரூபம் நாளமும், மண்ணை முதலாகவுடைய ஏனை யிருபத்துமூன்று தத்துவமாகிய பிரதிட்டா கலாரூபம் மலருமாம் எனவும், வித்தை எண்ணிய ஈசர் சதாசிவமும் கலையுருவமாம் என்பதற்கு வித்தியா தத்துவமாகிய வித்தியா கலாரூபம் கலை யெனப்படும் கேசரமும், சுத்த வித்தையோடு கூடி எண்ணப்பட்ட ஈசுர தத்துவம் சதாசிவ தத்துவமாகிய சாந்தி கலாரூபம் கலைக்குள் உருவெனப்படும் பொகுட்டுமாம் எனவும், நாதமாஞ் சத்தியதன் கண்ணாம் என்பதற்குச் சிவ தத்துவம் சத்தி தத்துவமாகிய சாந்தி யதீத கலாரூபம் பொகுட்டின் கண்ணாகிய வீசமாம் எனவும் உரைப்பாருமுளர். இவை யெல்லாம் அவ்வவ் வாகம பேதம் பற்றிக் கொள்ளப்படும்.1 கலை, அறுபத்து நான்காகலான், அறுபத்து நான்காகிய கேசரங்களுக்குத் தொகை பற்றிக் கூறப்படும் ஆகுபெயராயிற்று. ஈசர் ஆகுபெயர்2. கலையுரு கலைக்குள்ளுரு என உள்ளுருபு விரித்துரைக்க. அதில் என்புழி அன்சாரியை விகாரத்தால் தொக்கது3. இது நாள முதலாக மேனோக்கித் தோன்றும் உலகத்துக் கமலம் போலாது கண் முதலாகக் கீழ்நோக்கித் தோன்றியதோர் திப்பிய கமலமெனக் கொள்க. சிவன்றாள் அதின் நிலையா மெனவே சிவன் சத்திக்கு மேலாய் நிற்பன் என்பதூஉம் பெறப்படும். 3. பயனியல் பத்தாஞ் சூத்திரம் அவனே தானே யாகிய வந்நெறி ஏக னாகி யிறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின், பாசக்ஷயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று1 என்பது கருத்துரை. என்னுதலிற்றோ வெனின், சூத்திரக் கருத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) மேல் ஏழாஞ்சூத்திர முதலிய மூன்றானும் முறையே சாதிக்கும் பொருளது இயல்பும்2 சாதித்துப் பெறப்படும் பொருளது இயல்பும்3, சாதிக்குமாறும் உணர்த்தி, இனி அச்சாதனத்தானாய பயன் இயல்பு வகுத்துக் கூறுவான் எடுத்துக்கொண்டார். அப்பயனாவது பாசவீடும் சிவப்பேறும் என இருவகைப்படும். அவ்விரண்டனுள் சுட்டுணர்வினாகிய ஏகதேச நோக்கத்தைத் திருவஞ்செழுத்தினது உச்சரிப்பாற் பற்றறத் துடைத்தவழிப் பெறப்படுவதாகிய, மேலைச் சூத்திரத்தின் எடுத்துக்கொண்ட, ஆன்மசுத்திப் பயனாகிய பாசவிடுதியைச் செய்துகொள்ளுமாறு, மேல் சிந்தனை செய்த பொருளைத் தெளியுமாறு உணர்த்து முகத்தான் உணர்த்துதல் இப்பத்தாஞ் சூத்திரத்தின் கருத்து. எ-று. இதனானே சூத்திர இயைபும் இனிது விளங்கும். இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு. ஞானக்கண்ணாற் காணப்பட்ட அம்முதல்வன் தான் உடனாய் நின்று அறியவும் வேறு காணப்படுமாறின்றி யானே அறிந்தேன் என்னும்படி உயிர் தானேயாய் ஒற்றுமைப்பட்டு உயிரின்வழி நின்ற அப் பெத்த நிலைபோல், ஈண்டு உயிர் அம் முதல்வனோடு உடனாய் நின்றறியினும் தானென வேறு காணப்படுமாறின்றி அவனோடு ஒற்றுமைப்பட்டு அவ்விறை பணியின் வழுவாது நிற்பின், மலமாயை யென்னும் இரண்டனோடு வலிய கன்மமலமும் இல்லையாய் ஒழியும்1 எ-று. அவனே தானே யென்னும் ஏகாரம் இரண்டனுள் முன்னையது பிரிநிலைக் கண்ணும் பின்னையது தேற்றத்தின் கண்ணும் வந்தன. நெறிஉவமஉருபு. 2மலமாயையொடு கூடிய வினையென்றாராகலின் இன்றே என்றார். 3உவமைக்கு ஓதியது பொருளினும், பொருளுக்கு ஓதியது உவமையினும் சென்று இயைந்தன. 1ஈண்டொற்றுமைப் படுதலாவது, குடமுடைந்தவழிக் குடாகாயமும் ஆகாயமும் போல ஒருபொருளாய் ஒற்றுமைப் படுதலோ, அன்றிக் குற்றியை மகனென்பது போலத் திரிவு காட்சியான் ஒற்றுமைப்படுதலோ, அன்றி மண்ணே குடமென்பது போல ஒன்று திரிந்தொன்றாய் ஒற்றுமைப்படுதலோ, அன்றி வெள்ளையும் தாமரையும் போலக் குணகுணித் தன்மையான் ஒற்றுமைப்படுதலோ, அன்றித் தீயும் இரும்பும் போல ஒன்றினொன்று விரவுதலான் ஒற்றுமைப்படுதலோ, அன்றிப் பாலும் நீரும்போலப் பிரிக்கப்படாத சையோகத்தான் ஒற்றுமைப்படுதலோ, அன்றிக் கருடனும் மாந்திரிகனும் போலப் பாவனை மாத்திரையான் ஒற்றுமைப்படுதலோ, அன்றிக் காய்ந்த இரும்பின் நீர் போல ஒன்றினொன்று இலயமாய் ஒற்றுமைப்படுதலோ, அன்றிப் பேயும் பேய்பிடியுண்டவனும்போல ஆவேசத்தான் ஒற்றுமைப் படுதலோ, அன்றி இந்தனத்தின் எரி போல விளங்காமையான் ஒற்றுமைப்படுதலோ, அன்றி ஞாயிற்றின் ஒளியின் விளக்கொளி போலச் சத்தி கெட்டு நிற்றலான் ஒற்றுமைப்படுதலோ, அன்றித் தலைவனும் தலைவியும் போல இன்பநுகர்ச்சி மாத்திரையான் ஒற்றுமைப்படுதலோ, அன்றி நட்டாரிருவர் போல நட்புமிகுதியான் ஒற்றுமைப்படுதலோ, அன்றி ஆவும் ஆமாவும் போல ஒப்புமை மாத்திரையான் ஒற்றுமைப்படுதலோ என்று, அவ்வச் சமயவாதிகள் மதம் பற்றி நிகழும் இன்னோரன்ன ஐயப்பாடுகளை யெல்லாம் நீக்குதற் பொருட்டு, அவனே தானே யாகிய அந்நெறி யென உவமை யெடுத்துக்காட்டி யோதினார். ஈண்டுக் கூறிய ஒற்றுமைக் கண்படும் இயைபாவ தென்னையெனின் அது வருகின்ற சூத்திரத்திற் பெறப்படும். இதனுள் அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி என்றது ஓர் அதிகரணம்; இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை இன்றே என்றது ஓர் அதிகரணம்; ஆக இரண்டு அதிகரணத்தது இச்சூத்திரம் என்று உணர்க. முதலதிகரணம் மேற்கோள் ஈண்டுப் பரமேசுரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்கவென்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், ஞானம் பிரகாசித்து முதற் பொருளைக் காண்டல் மாத்திரையே வீடுபேற்றிற்கு அமையுமெனச் சிவ சமவாத சைவர்1 முதலியோர் மதம் பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் முதற்கூற்றைக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) வெளிப்படை.2 ஏது அவ்வாறு நிற்கவே யான் எனது என்னும் செருக்கற்று அவனது சீபாதத்தை அணையுமாகலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், அஃது எற்றுக்கு என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) அங்ஙனம் ஒற்றுமைப்பட்டு நின்றாலே யானும் எனதும் எனப் பகுத்து நிற்கும் மயக்கவுணர்விற்கு ஏதுவாய மலம் நீங்கி அம்முதல்வனது திருவடியாகிய சிவானந்தத்தைப் பெறுமாகலான். அச்செருக் கறுதிக்குக் காரணமாதல் பற்றி ஈண்டுப் பரமேசுரன் இவ்வான்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்கவென மேற்கொண்டது எ-று. அவ்வாறு நில்லாதவழி மலம் அறாது; அஃது அறாத வழிச் சீபாதத்தை அணைதல் பெறப்படாது என்பார் நிற்கவே யெனத் தேற்றேகாரத்தாற் கூறினார். யான் எனப்படுவது ஞாதிரு. எனது எனப்படுவன ஞான ஞேயங்கள். ஆறாவது பண்பின் கிழமையும் உணர்ச்சிக் கிழமையும்1 பற்றி வந்தது. ஒருமை தனித்தனி சென்று இயையும்.2 செருக்கு ஆகுபெயர்.3 அற்று அணையும் என்றது மழை பெய்து குளநிறையும் என்றாற் போலக் காரணகாரியப் பொருள்பற்றி வந்த செயவனெச்சத் திரிபு.4 உதாரணம் நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுள முண்டாதல் தானெனவொன் றின்றியே தானதுவாய் - நானெனவொன் றில்லென்று தானே யெனுமவரைத் தன்னடிவைத் தில்லென்று தானா மிறை. என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அங்ஙனம் பகுத்து நின்று உணரும் உணர்வை மயக்கவுணர்வு என்றது என்னை என்பாரை நோக்கி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று.1 (இ-ள்) நான் அவன் என்று எண்ணினர்க்கும் நாடும் உளம் உண்டாதல் தான் என ஒன்று இன்றியே தான் அது ஆய் - யானென்றும் அவனென்றும் ஞாதிரு ஞேயங்களைப் பகுத்துணர்ந்து நிற்பார்க்கும் யானேயென நிற்பார்க்குப் போல அவ்வாறு எண்ணுகின்ற உயிருணர்வு முனைத்துத் தோன்றுமாகலான், அவ்வழித் தான் என்று ஒரு முதல் காணப்படுமாறு இன்றித் தான் அவ்வுணர்வேயாய்;2 நான் என ஒன்று இல் என்று தானே எனுமவரைத்3 தன் அடியில் என்று வைத்து தான் ஆம் இறை - இனி யான் என்று ஒரு முதல் காணப்படுமாறில்லை என்று உணர்ந்து முழுவதும் தானேயெனக் காணும் தெளிவுடையாரை அவ்வாறே வேறு காணப்படுமாறு இல்லையென்று தனது திருவடி வியாபகத்துள் அடங்கி நிற்கச் செய்து அவ்வாறே யாவன் முதல்வன்1 எ-று. ஆய் ஆம் என வியையும். ஆயாமென்புழிச் செய்தெனச்சம் “நள்ளார்க்கு நஞ்சொத்து நட்டார்க்கு அமிழ்து ஒக்கும் இவன்” என்றாற்போலத் தன் வினையாதல்2 உணர நின்றது. நாடும் உளம் உண்டாயவழித் தான் இலனாதலும், அஃது இல்வழித்தான் உளனாதலும் யாங்ஙனம் பெறுதுமெனிற் காட்டுதும்: -தூல வொளியாகிய கண்ணொளியும் சூக்கும வொளியாகிய விளக்கொளியும் அத்துவிதமாய்க் கலந்து நிற்கும் நிலை உற்று நோக்க வல்லார்க்குப் பிரித்தறிய வாராமையின், கண்ணொளியாகக் காணுங்கால் காணும் தன்மையே முனைத்துத் தோன்றுமாகலின் அவ்வழி விளக்கொளி இருந்தும் இல்லைத்தானே? அன்றி விளக்கொளியாகக் காணுங்கால் காட்டும் தன்மையே முனைத்துத் தோன்றுமாகலின் அவ்வழிக் கண்ணொளி இருந்தும் இல்லைத் தானே? இனிக் கண்ணொளியும் விளக்கொளியும் எனப் பகுத்துக் காணப்புகினும் காணுந் தன்மையே முற்பட்டுத் தோன்றுதலின், அவ்வழி விளக்கொளி திரிவு புலனாகக் காட்சிப்படுவதல்லது தெளிவு புலனாகக் காட்சிப் படுமாறில்லை; அதுபோலத் தூல அறிவாகிய உயிரும் சூக்கும அறிவாகிய சிவமும் அத்துவிதமாய்க் கலந்து நிற்கும் நிலையும் பிரித்தறிய வாராமையின் ஆண்டும் இவ்வாறே கண்டுகொள்க.3 எண்ணினர்க்கும் என இறந்தது தழீஇய எச்சவும்மை சந்தி நோக்கி மகரங் கெட்டு நின்றது. இக்கருத்துப்பற்றி யன்றே 1“கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடுங் கருத்தொன் றன்றே” எனவும் 2“காண் பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை, காண்பார்கள் நன்முத்தி காணார்கள் காண்பானும், காட்டுவதும் காண்பதுவும் தண் கடந்தைச் சம்பந்தன், வாட்டுநெறி வாரா தவர்” எனவும் கூறினார் புடைநூலாசிரியரும். அற்றேல், இவ்விரண்டனுள் யாது திரிவுகாட்சி? யாது தெளிவு காட்சி? எனின்: கண்ணொளியோடு கூடிய வழியும், இது விளக்கொளி இது ஞாயிற்றொளி இது திங்களொளி என அவ்வப் பெற்றிய வேயாய்க் காணப்படும் விளக்கொளி முதலியவற்றின் காட்சி தெளிவு காட்சி யெனவும், அவ்வொளிகளோடு கூடிய வழி, அவ்வாறு ஒரு பெற்றித்தாய்க் காணப்படாத கண்ணொளியை வேறு காண்டல் திரிவு காட்சி யெனவும் கண்கூடாக விளங்கிக் கிடத்தலின், இவ்வாறே பொருளினும் வைத்து உணர்ந்துகொள்க. இவ்வாறன்றி, விளக்கொளி முன்னர்க் கண்ணொளி சத்தி மடங்கிப் போதலின் அது விளக்கொளியைப் போலக் காட்சிப் புலனாகா தாயிற்று என்னாமோ வெனின்: என்னாம்: என்னை? கண்ணொளி சத்தி மடங்கிற்றாயின் விளக்கொளி காட்சிப் புலனாதல் பிரிதொன்றால் பெறப்படாமையின். அற்றேல், மின்மினித் துணையாயினும் தானே விளங்கும் இயல்பில்லாத கண்ணுக்கு ஒளிக்குணம் உண்டென்பதற்குப் பிரமாணம் என்னை யெனின்: அறியாது கடாயினாய்: ஆகாயத்தின் கண்ணதாகிய சத்த குணம் வியஞ்சகத்தானன்றித் தினைத்துணையானும் தானென விளங்குமாறு இன்மையின் அதுபற்றி எதிரொலி வடிவாய அவ்வோசையை ஆகாயத்தின் குணமன்று வியஞ்சகப் பொருளின் குணம் என்பார் யாரும் இல்லை. அதுபோலக் கண்ணின் கண்ணதாகிய ஒளியும் வியஞ்சக முள்வழி விளங்கி அல்லுழி விளங்காமை மாத்திரையே, பிறிதில்லை ஆகலான், அதனைக் கண்ணின் குணமன்று என்றல் அறிவிலாதார் கூற்றேயாம் எனவும், அக் கண்ணொளியாவது தன்னை விளக்குதற்கு உரிய வியஞ்சகப் பொருள் ஏகதேசமாயின் ஏகதேசமாய் விளங்கியும் அது வியாபகமாயின் வியாபகமாய் விளங்கியும் நிற்பதோர் இயல்பிற்று எனவும் உணர்க. அஃது அங்ஙனமாக, கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடும் என்றற்குப் பிரமாணமென்னை: ஒரு விடயத்தின் வீழ்ந்த பல கண்ணொளிகட்குத் தம்முள் இயைபில்லாதவாறு போல ஒருவயிற் பட்ட கண்ணொளி விளக்கொளிகட்குத் தம்முள் இயைபில்லை என்றலே பொருத்தமுடைத்துப் போலும் எனின், - அஃது அறியாதார் கூற்றேயாம் என்றொழிக. என்னை? ஒரு விடயத்தின் வீழ்ந்த கண்ணொளிகள் தம்முள் ஒன்றனை ஒன்று காணுமாறும் இல்லை, காட்டுமாறும் இல்லை; ஆகலான் அவை தம்முள் கலத்தற்கு ஓர் இயைபின்று என்பது ஒக்கும். அவ்வாறன்றிக் கண் விளக்கினைக் காண்டலும் விளக்குக் கண்ணுக்குக் காட்டலும் ஆகிய இயைபு உண்மையானும், இவ்வியைபு தம்முள் பெறப்படாத கண்ணொளி முதலாயின ஈண்டைக்கு உவமையாதல் செல்லாமையானும், இந்திரியங்கள் தத்தம் விடயத்தோடு இயைந்தன்றிச் சந்நிதி மாத்திரையான் அவற்றை அறிதல் செல்லாதென்பது ஆகமங்களுக் கெல்லாம் துணிபு ஆகலானும், அத்தன்மைய வாய கண்ணொளி விளக்கொளிகட்குத் தம்முள் கலப்பில்லை என்றல் காண்டல் விரோதமாகலின் இவ்வாறு உவமைக்கு ஓதியன வெல்லாம் பொருட் கண்ணும் ஆமாறு உணர்ந்து உய்த்து உரைத்துக்கொள்க. அற்றேல், ஈண்டு எடுத்துக் காட்டிய கண்கள் தம்முள் ஒன்றனை ஒன்று காணுமாறு இன்மைபோல உயிர்களும் தம்முள் ஒன்றனை ஒன்று அறியுமாறில்லை போலும் எனின், அறியாது கூறினாய்: கண்கள் தம்முள் ஒன்றானொன்று காணப்படுமாறில்லை என்றது, விளக்கும் விடயமும் காணப்படுமாறு போல வேறு இயைந்து தனிப்பொருளாய்க் காணப்படுமாறு இல்லை என்ற துணையே அன்றிப் பிறிதின்மையின், விளக்கொளியைக் கண் காணுங்கால் அதுவதுவாய் நின்று காணும் பெற்றித்தாய்த் தன்னையும் அவ்விளக்கொளி வண்ணமாய்க் காண்டல் உண்டு என்பது கண்கூடாக அறியக் கிடத்தலின், ஏனைக் கண்களையும் அவ்வாறு காண்டல் அமையுமாகலான், அதுபோலத் தம்முள் தனித்து இயைதலில்லாத உயிர்களும் சிவத்தோடியைந்து நின்று தம்மையும் பிற உயிர்களையும் இவ்வாறு உணர்தல்1 அமைவுடைமை யான் என்பது “நாடியரன் - றன்னாலே தன்னையுங் கண்டு தமைக் காணார் என்னாம் என அறிவார்” என்றும், 2 “தன்னாலே தனையறிந் தாற் - றன்னையுந் தானே காணும் தான் அதுவாகி நின்றே” என்றும், 3“அதிலறிவடங்கி - மன்னிட வியாபியாய வான்பயன் றோன்றும்” என்றும், 4“என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன் நின்னிலை அனைத்தையுங் கண்டேன் என்னே - நின்னைக் காணா மாந்தர் தம்மையுங் காணாத் தன்மையோரே” என்றும் பிறாண்டும் இவ்வாறு ஓதும் அநுபவமுடைய தேசிகர் திருவாக்குகளானும் இவ்வுண்மை உணர்ந்து கொள்க. முதலதிகரணம் முடிந்தது இரண்டாமதிகரணம் இனி இறைபணி வழுவாது நிற்கவென்றது, என்றது மேற்கோள். என்நுதலிற்றோ வெனின், உடம்பு நிற்குங்காறும் அது கொண்ட வினைப்பயனும் அதனை அனுபவித்தற்குத் துணைக் காரணமாய் உடன் நிற்கும் முயற்சியும் ஒருவாற்றானும் நீக்கலா காமையின் அவை அவ்வழி ஏகனாகி நிற்றற்குத் தடையாதலைக் கடக்குமாறில்லை போலும் எனச் சுத்தசைவர் ஈறாயினார் மதம் பற்றி நிகழும் கடாவை ஆசங்கித்துச் சூத்திரத்தின் இரண்டாங் கூற்றைக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று.5 (இ-ள்) வெளிப்படை.1 நிற்றலாவது சலியாது நிலைபெறுதல் என்பார் வழுவாது நிற்க என்றார். ஈண்டு இறைபணி யென்றது யாதெனில், அஃது ஆசிரியர் தாமே முன்னர்த் தெரித்து உரைக்கின்றமையின் இனிது விளங்கும். ஏது அவன் அருளாலல்லது ஒன்றையும் செய்யானாகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா வாகலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், ஏகனாகி நிற்றலே அமையும், இறைபணி நிற்றல் எற்றுக்கு என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) தன் செய்திக்கு முதல்வன் செய்தியை இன்றியமையாத ஆன்மாச் செய்வனவெல்லாம் அவன் அருளின் வழி நின்று செய்யு மாயின்2 மாயேயமும் கன்மமும் ஏகனாகி நிற்றற்குத் தடையாய் வந்து தாக்கா; ஆகலான், அவை தாக்காமைப் பொருட்டுச் செய்யப்படும் உபாயமாதல் பற்றி இனி இறைபணி வழுவாது நிற்கவென மேற்கொண்டது என்க. அஞ்ஞான கன்மம்3 உம்மைத்தொகை. மலமின்றாதல் மேற் பெறப்பட்டமையின் 4ஈண்டு அஞ்ஞானம் என்றது மாயையின் காரியமாகிய மயக்கத்தை என்பது5 பெற்றாம். உடம்பு நசிக்கும் அளவும் அவை மாய்வன அன்மையின் அறுமென்னாது பிரவேசியா வென்றார். உதாரணம் நாமல்ல விந்திரிய நம்வழியி னல்லவழி நாமல்ல நாமு மரனுடைமை - யாமென்னில் எத்தனுவி னின்று மிறைபணியார்க்1 கில்லைவினை முற்செய்வினை யுந்தருவான் முன் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், உடம்பொடு நிற்பார் நுகர்தற்கு வேண்டப் படும் பிராரத்த வினையும் அதுபற்றி யேறும் ஆகாமிய வினையும் ஒருதலை உண்மையின், இறைபணி நிற்றல் பற்றி அவை பிரவேசியா என்றல் அமைவு உடைத்தன்று போலும் என்பாரை நோக்கி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) இந்திரியம் நாமல்ல - வினைகளை நுகர்தற்கும் ஈட்டுதற்கும் கருவியாகிய இந்திரியங்கள் மாயேயமாவன வன்றி யாமாவன வல்ல; நம் வழியின் அல்ல- அவை தொழிற் படுதலும் முதல்வன் வயத்தனவன்றி நம் வயத்தனவல்ல; வழி நாம் அல்ல நம் வழியின் அல்ல- வினை நிகழ்ச்சிக்கு வாயிலாகிய விடயாதிகளும் அவ்விந்திரியங்கள் போல மாயேயமாவனவன்றி யாமாவனவல்ல; அவை சேட்டித்தலும் முதல்வன் வயத்தனவன்றி நம் வயத்தனவல்ல; நாமும் அரன் உடைமையாம் - அவற்றோடு இயைந்து நின்று வினைகளை ஈட்டு தற்கும் நுகர்தற்கும் வினைமுதலாகியயாமும், ஞானச் செய்திகளை முதல்வன் விளக்கிய வழி விளங்கி அல்லுழி விளங்குமாறு இன்மையான், அம்முதல்வன் வயத்தராவேமல்லது சுதந்திரராவேமல்லேம்; என்னில் - என்று இங்ஙனம் பசுபாசங்களது இயல்பை உள்ளவாறு உணர்ந்து செய்வனவெல்லாம் அவனருளின் வழி நின்று செய்யும் செயலாகக் கண்டுகொண்டு இருப்பாராயின்; இறை பணியார்க்கு எத்தனுவின் நின்றும் வினை இல்லை - இவ்வடிமைத் திறமுடையார் எவ்வுடம்பினின்று எவ்வினைகளைச் செய்யினும் அவர்க்கு அவை பந்தமாதலில்லை; முன் செய் வினையும் தருவான் முன் ஆம் - அவ்வாகாமிய வினையை அவினாபாவமாய் உடன்கொண்டு வருவதாகிய பிராரத்த வினையும் தன்னைக் கூட்டுவிக்கும் முதல்வன் சந்நிதியில் உடலூழாய்க் கழியும்1 எ-று. நம் வழியின் அல்ல என்பது வழி யென்பதனோடுங் கூட்டி உரைத்துக்கொள்ளப்படும்.2 மகனன்று குற்றி என்றாற்போல அன்மைச்சொல் தழுவப்படும் பொருண்மேல் நின்றது;3 4“அன்மைக் கிளவி வேறிடத்தான” என்பது ஓத்து ஆகலின். நின்றும் என்புழி உம்மை சிறப்பு; ஏனை உம்மைகள் இறந்தது தழீஇயின. சஞ்சிதவினை தீக்கை செய்த மாத்திரையே எரிசேர்ந்த வித்துப்போலக்1 கெட்டொழிதலின் ஈண்டு முற்செய்வினை என்றது ஏற்புழிக் கோடலால் பிராரத்தவினை மேற்றாயிற்று. தருதல் இடவழுவமைதி2 கழியும் என்பது சொல்லெச்சம். உடலூழாய் என்பது அவாய் நிலையான் வந்தது. உதாரணம் சார்ந்தாரைக் காத்த றலைவர் கடனாதல் சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் - சார்ந்தடியார் தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல் ஆய்ந்தார்முன் செய்வினையு மாங்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், இறைபணியார்க்கு உளவாகிய முற்செய்வினை ஏனையோர்க்குப் போலன்றித்3 தருவான் முன்னாய் ஒழியுமாயின் அங்ஙனம் இருவேறு வகைப்படச் செய்யும் முதல்வன் நடுவு நிலைமையின்றிக் கோட்டமுடையன் எனப்பட்டு வழுவாம் போலும் என்பாரை நோக்கி வழுவன்மை கூறி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதல் - சார்ந்தாரைக் காத்தும் தம்மாட்டு அடைக்கலமெனச் சார்ந்தாரை அவர்க்கு வரும் ஏதத்தை நீக்கிக் களைகணாய் நின்று காப்பது தலைமைக் குணம் உடையராயினார்க்குக் கடமை ஆகலான் முதல்வன் ஏனையோரை ஒழித்துத் தன்னைச் சார்ந்தாரை அங்ஙனம் பாதுகாப்பானாகியும்; சலம் இலன் ஆய் - அதுபற்றிக் கோட்டமுடையன் அல்லனாய்; சார்ந்து அடியார்தாம் தானாச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் - தன்னைச் சார்ந்து தன்னடித்தொழில் செய்வார் தன்போல் ஆகாமிய வினைத் தொடக்கிலராகச் செய்து பிறர்க்கு வரும் ஆகாமிய வினையை அவர்க்குக் கொடுப்பான் ஆகலான்; ஆய்ந்து ஆர் முன் செய்வினையும் ஆங்கு - அவ்விரு திறத்தோர் மாட்டும் நுணுகி வந்து கூடுவதாய பிராரத்த வினையும் அவ்வாறே செய்வோர் செய்திக்குத் தக்க பயனாய் இரு வேறு வகைப்படச் செய்வன் எ-று.1 இறைபணியார்க்கு இல்லை வினை, முற்செய்வினையும் தருவான் முன் என்றது பற்றி ஏனையோர்க்கு நியதி செய்து ஊட்டி இறைபணியார்க்கு வினையின்றாகச் செய்தல் இறைவனுக்கு நடுவு நிலைமை யன்று என்பாரை நோக்கி, அதனை உடன்பட்டே அமைதி கூறுவாராய்ச் சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனெனப் பழமொழி2 எடுத்துக்காட்டி இஃது அவ்வாறு நடுவன்மையும் அன்றென வலியுறுத்துவார் சார்ந்தடியார் தாந்தானாச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் என வேறு உவமை எடுத்துக்காட்டினார். சார்ந்தடியார் தாந்தானாச் செய்து3 பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் உண்டென்பதூஉம், அது கோட்டம் அன்று, நடுவு நிலைமையே யாம் என்பதூஉம் ஏனைச் சமயத்தார்க்கும் ஒப்ப முடிந்தமையின், அஃது ஈண்டைக் குவமையாயிற்று. உம்மை சிறப்பின்கண் வந்தது. சலம் - வஞ்சனை; அஃது ஈண்டுக் கோட்டத்தின்மேல் நின்றது. சார்ந்தென்னும் வினையெச்சம் அடியாரென்னும் வினைக் குறிப்பு முற்றுப்பெயர் கொண்டது.1 சார்ந்த வென்னும் பெயரெச்சத் தகரம் திரிந்து முடிந்த தெனினும் அமையும். தாமும் பின்வந்த தானும் 2 அசை. ஆதல் கொடுத்தல் என்புழி ஆனுருபு விரித்துரைக்க. தானாச் செய்து என்புழி ஆக்கம் உவமஉருபின் பொருள் குறித்து நின்றது. பிராரத்தவினை அதிசூக்குமமாய் வருவதாகலின் அதனியல் பறிதல் அரிதென்பார் ஆய்ந்து ஆர் முன் செய்வினையும் என்றார். உம்மை இறந்தது தழீஇயிற்று. ஆர்வினை வினைத்தொகை. ஆய்தல் அப்பொருட்டாதல் மேற் காட்டினாம்.3 உதாரணம் இங்குளி வாங்குங் கலம்போல ஞானிபான் முன்செய்வினை மாயை மூண்டிடினும் - பின்செய்வினை மாயையுட னில்லாது மற்றவன்றான் மெய்ப்பொருளே ஆயவத னாலுணரு மச்சு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், இறைபணி நிற்பார்க்குப் பிராரத்த வினை தாக்குதல் உண்டென்பதற்குத்4 “தினைத்துணையேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே” என்றற்றொடக்கத்தான் அவர் கூறும் திருவாக்குக்களே சான்றாகலின், அஃது அவர்க்குச் செய்வோர் செய்திப் பயனாய் ஒழியுமென்றல் அமையாமையின் அஃதுண்டாகவே அதுபற்றி நிகழும் ஆகாமியமும் பிறவிக்கு வித்தாய் நிலைபெறுதல் உண்டுபோலும் என்பாரை நோக்கி ஆண்டுப் பிராரத் தவினை தாக்குதற்கு ஏதுக்கூறி அது பற்றிச் செய்வோர் செய்திப் பயனாய் ஒழிதற்கு இழுக்கில்லையென வலியுறுத்துதல் நுதலிற்று.1 (இ-ள்) இங்குளி வாங்கும் கலம் போல - தன்பால் வைத்தெடுக்கப்பட்டொழிந்த பெருங்காயத்தினின்றும் அதன் வாசத்தை வாங்கிக்கொள்ளும் பாசனத்தின்கண் அவ்வாசம் மங்கிப்போய் மெலிதாய்க் கந்திக்குமாறுபோல; ஞானிபால் முன்செய் வினை மாயை மூண்டிடினும் - இறைபணி நிற்குந் தத்துவ ஞானிக்குப் பயிற்சி வயத்தான் ஒரோவழி “நாடுமுளம் உண்டாதலும்2” உண்மையின் அதுபற்றிப் பிராரத்த வினையும் அதற்கு வாயிலாகிய உடம்பு முதலிய மாயேயமும் மங்கிப்போய் வாசனை மாத்திரையாய் மெலிதாய் வந்து மூளுமாயினும்; பின்செய் வினை மாயையுடன் நில்லாது - அம்மூட்சி பற்றி ஒருதலையாய் நிகழ்வதாகிய ஆகாமிய வினை மேலைக்கு வித்தாய் நிலைபெற்று முறுகுதலின்றித் தனக்கு வாயிலாகிய மாயேயத்தோடு கெட்டொழியும்; அவன் தான் மெய்ப்பொருளே ஆய அதனால் மற்று அச்சு உணரும் - இறைபணி நிற்கும் அவன் சத்தாயுள்ள சிவமேயாயவாற்றால் ஒரோவழி அவ்வாசனை பற்றிப் பிறழவரினும் பிறழவொட்டாத அவ்வச் சினையே நோக்கி நிற்பனாகலான்3 எ-று. ஒளி இருளைத் துரக்குமாறுபோல அவ்வுணர்வு அவ்வாகா மியத்தைத் துரக்கும் என்பதாம். 1“தொல்லையில் வருதல் போலத் தோன்றிரு வினையதுண்டேல் - அல்லொளி புரையும் ஞானத் தழலுற வழிந்துபோமே” எனப் புடைநூலாசிரியர் ஓதியதூஉம் அது. உளி ஐந்தாம் வேற்றுமை யுருபுபட நின்றது. 2“மந்திரவிதியின் மரபுளி வழாஅ - அந்தணர் வேள்வி” என்றாற்போல முற்றுகரக் கேடு இலேசாற் கொள்க.3 வாங்குதற்குச் செயப்படுபொருள் அவாய்நிலையான் வந்தது. மூண்டிடினும் எனவே, மூளுதல் ஒருதலையன்று என்பது பெற்றாம். மாயை ஆகுபெயர் மற்று வினைமாற்றின்கண் வந்தது. தானென்பது அநுவதித்தற்கண் வந்த இடைச்சொல். பிறழவிடாமை பற்றி மெய்ப்பொருளை அச்சாக உருவகஞ் செய்தார்.4 உதாரணம் நண்ணனல் வேவாத நற்றவர் தம்மினும் பண்ணமர மாச்செலுத்தும் பாகரினும் - எண்ணி அரனடி யோர்பவ ரைம்புலனிற் சென்றும் அவர்திற னீங்கா ரதற்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், முன் செய்வினை மாயை மூண்ட வழியும் அந்நிலையிற் பிறழாது அவ்வச்சினையே உணர்ந்து நிற்றல் யாங்ஙனம் என்பாரை நோக்கி உவமை முகத்தான் அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) நண் அனல் வேவாத நற்றவர் தம்மினும் பண் அமரமாச் செலுத்தும் பாகரினும் - அங்கித் தம்பனத்தால் நண்ணனல் வேவாமைக் கேதுவாகிய நற்றவமுடையார் அவ்வனலுட் கிடப்பினும் தந்திறனின் நீங்காதவாறு போலவும் பண்ணுதல் அமரப் பரிமாவூர்தற்குரிய பாகனூல் கற்றுவல்லார் அப்பரிமாவின் வேகத்துட் படினும் தந்திறனின் நீங்காதவாறு போலவும்; எண்ணி அரன் அடி ஓர்பவர் - ஐம்புலன்களில் அகப்படாமைக்கு உபாயம் யாதென்றெண்ணி1 முதல்வன் திருவடியாகிய அச்சையுணரவல்லார்; ஐம்புலனில் சென்றும் அதற்கு அவர் திறன் நீங்கார் - முன் செய்வினைமாயை மூட்சிபற்றி ஐவகைப்பட்ட விடயங்களிற் சென்றாராயினும் அதனால் அவர் தந்திறலில் தீர்ந்து பந்தத்தொடக்குறுவாரல்லர்2 எ-று. பொருள்வினை உவமையினுஞ் சென்றியைந்தது.1 நண்ணனல் கீழ்நீர் போல முன்பின்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை.2 நள்ளனல் நண்ணனலென மரீஇயிற்று, 3“நீணுலகெலாம்” என்றாற்போல; தம்மால் நண்ணப்படும் அனலென்று உரைப்பினுமமையும். 4பண்ணுதல் கதிப்பித்தல். இன்னிரண்டும் உவமவுருபுகள். உம்மை எண்ணும்மை. சென்றுமென்னும் உம்மை சிறப்பு. அதற்கென்பது உருபுமயக்கம்.5 உதாரணம் சதசத்தா மெய்கண்டான் சத்தருளிற் காணின் இதமித்தல் பாசத்தி லின்றிக் - கதமிக் கெரிகதிரின் முன்னிருள்போ லேலா வசத்தின் அருகணையார் சத்தணைவா ராங்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், சார்ந்ததன் வண்ணமாய்ச் சதசத்தெனப்படும் இயல்புடையார் அரனடியோரினும் ஐம்புலனிற் சென்றுழி அவற்றில் தொடக்குண்ணாது திறலுடையராதல் யாங்ஙனம் என்பாரை நோக்கிச் சார்ச்சிக்கட்படும் விசேடங்கூறி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று.1 (இ-ள்) சதசத்தாம் மெய்கண்டான் சத்து அருளின் காணின்2- தன்னாற் சாரப்படுவனவாகிய சத்தினும் அசத்தினும் அதுவது வாதல் பற்றிச் சதசத்தென்னும் தன் உண்மையை உணர்ந்தோன் சத்தாகிய முதல்வன் திருவருளாலல்லது ஒன்றையுங் காணானாய் அவ்வருளின் வழிநின்று காணுமாயின்; பாசத்தில் இதமித்தல் இன்றி - அவ்வழிப் பாசமாகிய அசத்தின்கண் இதஞ்செய்தல் இன்மையால்; சத்து அணைவார்3 கதம் மிக்கு எரிகதிரின் முன் இருள்போல் ஆங்கு ஏலா அசத்தின் அருகு அணையார் - சத்தாகிய முதல்வனைத் தலைப்பட்டு நிற்பார் சீற்றமிக்கு எரியாநின்ற சுடரின் முன்னர் அந்தகாரம் போலச் சத்தெதிர் தனது சத்தி ஏற்கமாட்டாத அசத்தாய் ஐம்புலனின் மாட்டெய்தி நிற்பாரல்லர் எ-று. வேறு முடிபாகலின் ஒருமைப் பன்மை மயக்கமின்மை யுணர்க.4 அருளின் என்னும் இன்னுருபு ஏதுப்பொருட்கண் வந்தது.1 இதமித்தல் பெயரடியிற் பிறந்த வினைப்பெயர்.2 இதஞ் செய்தல் பற்றுச் செய்தல். இன்றி யென்னும் செயவெனெச்சக் குறிப்புக் காரணப் பொருட்டாய் நின்றது. இன்மைக்கு ஏதுக்கூறுவார் கதமிக்கு எரிகதிரின்முன் இருள்போல் ஏலா வசத்து என்றார். கதமிக் கெரிகதிரென்றது ஒப்புமைபற்றிய உபசார வழக்கு.3 4 “எல்லை யில்லவன் எரிதுள்ளினால் என வெகுண்டான்” என்பதனாலும் ஒப்புமையாதல் உணர்க. இதனாற் போந்தது, சத்தும் அசத்தும் தம்முட் சமமல்ல வாகலான் அரனடியோர்பவர் ஐம்புலனிற் சென்றாலும் அதுபற்றி அவர் திறனீங்கார்5 என மேலது வலியுறுத்தவாறாமென்க. ஏகனாகி நிற்றலான் மலமின்றாதலும், இறைபணி நிற்றலான் மாயை வினைகள் இலவாதலும் பெறப்பட்டமையின், மலமாயை தன்னொடு வல்வினையின்றே என்பதனை வேறோர் அதிகரணமாக வைத்து ஓதாராயினார்.6 பத்தாஞ்சூத்திரம் முடிந்தது. பதினொராஞ் சூத்திரம் காணுங் கண்ணுக்குக் காட்டு முளம்போல் காணவுள் ளத்தைக் கண்டு காட்டலின் அயரா வன்பி னரன்கழல் செலுமே என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின், பரமேசுரனது சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. என்பது கருத்துரை. என்னுதலிற்றோ வெனின், சூத்திரக் கருத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) அங்ஙனம் ஏகனாகி இறைபணி நிற்பார்க்கு அறிவிச்சை செயல்கள் விடயித்தற்கு உரியதோர் இயைபு ஆண்டுப் பெறப் படாமையின்1 விடயமாவது ஒன்றில்லை போலும் என்னும் வாதிகளை நோக்கி, விடயித்தல் இல்வழி ஆண்டுப் புத்தர் கூறும் ஆலயவிஞ்ஞானம் போலச்2 சூனியமாமெனப்பட்டுக், குணம் சூனியமாகவே குணியும் சூனியமாய் முடியுமாகலான், அஃது ஏலாமையின், ஆண்டு அவை இயைபு பற்றி விடயிக்குமாறு உணர்த்து முகத்தானே, பயன் இரண்டனுள்3 முடிவாய் எஞ்சி நின்ற சிவப்பேறு கூடுதலாய நிட்டையின் இயல்பு உணர்த்துதல் இப்பதினொராஞ் சூத்திரத்தின் கருத்து1 எ-று. இதனானே, சூத்திரவியைபும் இனிது விளங்கும். அற்றேல், ஏகனாகி இறைபணி நின்றார்க்கு இனிச் செய்யக் கடவதொன்றின்மை யானும், இருணீக்கமும் ஒளிவிளக்கமும் உடனிகழ்ச்சியாயவாறு போலப் பசுத்துவ நீக்கமுஞ் சிவத்துவ விளக்கமும் இடையீடின்றி உடனிகழ்வன வாகலின் வேறு ஓத வேண்டாமையானும், முதனூலுட் சுவாநுபூதியாகிய சிவப் பேற்றைப் பத்தாஞ் சூத்திரத்துட் பாச நீக்கத்தோடு ஒருங்குவைத்தே ஓதலானும் அதனை ஈண்டு வேறு வைத்தோதல் அமையாது போலும் எனின்; அறியாது கடாயினாய்: ஏகனாகி இறைபணி நிற்பது துரியநிலைக் கண்ணதாகிய அருணிலையே யாகலின் ஆண்டு மலநீங்கிய துணையானே சுகப்பிரபை மாத்திரையே விளங்குவதன்றி, அதீத நிலைக்கண்ணதாகிய சிவத்துவ விளக்கம் எனப்படும் பரமசுகம் விளங்காமையின், அது விளங்குதல் அவனரு ளாலல்லது ஒன்றையுஞ் செய்யாமை மாத்திரையால் அமையாமையின், அதற்கு வேறும் ஆண்டுச் செய்யக்கடவது உண்டென்பது தானே போதருதலானும், இருணீக்கத்தின் ஒளிவிளக்கம் போலப் பசுத்துவ நீக்கத்தின் அருள்விளக்க மாத்திரையேயன்றி ஆனந்த விளக்கமும் உடனிகழாமையானும், அவ்விரண்டற்கும் வேறுபாடு முன்னர்க் காட்டப் படுமாகலானும், முதனூலிற்2 பாசக்ஷயம் பண்ணுமாறு உணர்த்தியவழிப் பாசநீக்க மாத்திரையே முத்தியெனக் கொண்ட வாதிகளை மறுத்தற் பொருட்டுப் பாசநீக்கம் பெற்றோன் சுவாநுபூதி உடையவனாவனெனப் பதினொராஞ் சூத்திரஞ் செய்தற்குத் தோற்றுவாயாந் துணையே பத்தாஞ் சூத்திரத்திற் செய்து வைத்து, சுவாநுபூதி நிகழ்ச்சிக்கண் ஓதற்பாலன வெல்லாம் பதினொராஞ் சூத்திரத்துட் கூறுதலின், ஒன்பதாஞ் சூத்திரத்தின் எடுத்துக் கொண்ட ஆன்மசுத்தி பண்ணுமாறு, பத்தாஞ் சூத்திரத்திற் சென்றியைந்து முற்றுப் பெற்றாற் போல, பத்தாஞ் சூத்திரத்தின் எடுத்துக் கொண்ட சுவாநுபூதிநிலை பதினோராஞ் சூத்திரத்திற் சென்றியைந்து முற்றுப்பெறுதலான், அதன்கண் மலையாமைப் பொருட்கு, ஆசிரியர், சுவாநுபூதிமானாவன் என்பதனையும் அரன்கழல் செலும் எனப் பதினோராஞ் சூத்திரத்தானே ஒருங்கு வைத்து ஓதினார்; ஆகலின், அது மாறன்மையானும், அவ்வாறின்றி மொழி பெயர்த்தல் யாப்பால் நூல் செய்துரைப்பான் புகுந்த ஆசிரியர் வேறுபடச் செய்துரையாராகலானும் என்பது. இதனானே, முதனூலில் சுவாநுபூதிமான் எனவாளா கூறியதனைப்1 பதினோராஞ் சூத்திரத்துப் பத்திசெய்த என்றதன் பின்னாகக் கொண்டு கூட்டி வைத்துரைத்தலே அதன் கருத்து என்பதூஉம் பெறப்பட்டது. அற்றாகலினன்றே, பத்தாஞ் சூத்திரம் பாசஷயம் பண்ணுமாறு உணர்த்திற்று எனவும், பதினோராஞ் சூத்திரம் பரமசிவனது சீபாதங்களை அணையு மாறு உணர்த்திற்று எனவும் கருத்துரை செய்ததூஉ மென்க. இஃதறியாதார் தத்தமக்கு வேண்டியவாறே உரைப்ப. இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு. காட்டக்காணும் தன்மையுடைய கண் உருவத்தைக் காணும்படி அதனோடு ஒருங்கு இயைந்து நின்று காட்டி அவ்வுருவத்தைக் காண்கின்ற ஆன்மாப்போல, அறிவிக்க அறியும் இயல்பையுடைய அவ்வான்மா விடயத்தை அறியும்படி முதல்வன் அதனோடு ஒருங்கு இயைந்து நின்று அறிவித்து அறிந்து வருதலான், அவ்வத்துவித நிலையை2 மறவாது கடைப்பிடித்துச் செய்யும் அன்பானே அம் முதல்வன் திருவடியாகிய சிவானந்தானுபூதியைத் தலைப்படும்3 எ-று. காணும் என்னும் உவமையடை பொருளினும், கண்டு என்னும் பொருள்வினை உவமையினும் சென்றியைந்தன.1 காண என்பதனை ஈரிடத்துங் கூட்டுக. 2“வேர்த்து வெகுளார் விழுமியோர்” என்பதுபோலக் கண்டு காட்டல் என்பது மாறிவைத்து உரைக்கப்பட்டது.3 இக்கருத்து நோக்கியன்றே, இதனை விரித்துக் கூறுவான் புகுந்த வழிநூலாசிரியர், 4“காட்டிக்கண்டிடுமா போலக் காட்டிக் கண் டிடுவன்” என்றதூஉமென்க. அயராமைக்குச் செயப்படுபொருள் அதனை என்று எடுத்துக் கொள்க.5 அயரா அன்பு என்றது அயராமையானாகிய அன்பென “ஆறுசென்ற வியர்” போல நின்றது. அது6 “இத்தையாயும் அறிவுடையனாய் அன்புசெய்ய” என வழிநூலாசிரியர் கூறிய தனானும் உணர்க. உள்ளத்தை யென்பது உருபுமயக்கம்.7 அறிவிச்சை செயல்களின் நிகழ்ச்சியாகிய அயராமையும் அன்பும் செலவும் முறையே காரணகாரியங்களாய் அவ் வொரு பொருண் மேல் ஒருங்கு நிகழும் என்பார் அயரா அன்பின் அரன்கழல் செலுமே என்றார். இஃது என்சொல்லிய வாறோவெனின்: உயிரை இன்றி யமையாத கண் உருவத்தைக் காணுங்கால் உயிரின துணர்வு, கண்ணொளியெனத் தானென வேற்றுமையின்றி உடனாய் விரவி நின்று, கண்ணுக்குக் காட்டிய வதனைக் கண் கண்டது என்றும், கண்ணை அதிட்டித்து நின்ற உயிர் கண்டது என்றும் பகுத்தறிய வாராது, இரண்டன் காட்சியும் ஒன்றனையொன்று விடாது அத்துவிதமாய் ஒருங்கே நிகழுமாறுபோல, முதல்வனை யின்றி அமையாத உயிர், ஒரு விடயத்தை அறியுங்காலும், அம்முதல்வனது சிற்சத்தி, ஆன்மசிற்சித்தியெனத் தானெனவேறின்றி உடனாய் விரவி நிற்ப, முதல்வனும் அவ்வாறு விரவி நின்று ஆன்மா விற்கு அறிவித்த தொன்றனை அவ்வான்மா அறிந்தது என்றும், அதனை அதிட்டித்து நின்ற தான் அறிந்தான் என்றும் பகுத்தறிய வாராது, இருவகையறிவும் ஒன்றனையொன்று விடாது அத்துவிதமாய் ஒருங்கே நிகழுமாறு1 செய்துவரும் இவ்வுபகாரம், பெத்தமுத்தி யிரண்டினும் ஒரு பெற்றித்தாய் உண்மையின்,2 ஏகனாகி இறைபணி நிற்கும் உயிர், முதல்வன் அங்ஙனம் அத்துவிதமாய்3 உபகரித்து நிற்கும் உரிமையை நோக்குமாயின், நோக்குந்தோறும் நோக்குந்தோறும் அப்பொருட்கண் செல்லும் இச்சை அடங்காது மீதூருமாகலின், அவ்வழி அவ்விச்சையே தானாக விளங்கித் தோன்றும் பேரானந்தத்தை அனுபவிக்கப்பெறும் என அறிவிச்சை செயல்கள் மூன்றும்4 கண்டு விடயிக்குமாறு உணர்த்தி அதீத நிலையியல்பு கூறியவாறாமென்க. அத்துவிதமாவது பேதப்பொருள் இரண்டும் தம்முள் அபேதமாதற்குரிய சம்பந்த விசேடம். இக்கருத்தே பற்றி 5 “அறிவொளிபோல் பிறிவரும் அத்துவிதம்” என்றார் புடைநூலாசிரியரும். “அங்கியும் ஒன்றில் தங்கிநின்று அல்லது தன்றொழில் நடத்தாது” 6 ஆகலின், அதுபோல முதல்வனும் உயிரை அதிட்டித்து நின்றே எத்தொழிலும் செய்வன் என்று உணர்க. உயிர் ஒன்றனையறிதல் முதல்வன் உடனின்றறிதலையின்றி, அறிவித்தன் மாத்திரையான் அமையாதென்பது, 1“தொண்டனேன் நினையுமா நினையே” “விரும்புமா விரும்பே” “தொடருமா தொடரே” “நுகருமா நுகரே” என்று இவ்வாறு முத்திநிலைபற்றி ஓதிய திருவாக்குக்களானும் அறிக. இவ்வியல்பு நோக்கியன்றே “அறிவானுந் தானே யறிவிப்பான் தானே” என்று ஓதிய அம்மை2 “அறிவாய் அறிகின்றான்றானே” என ஓதியதூஉம் என்க. முன் அறிதல் அறிவித்தற் பொருட்டு எனவும், பின் அறிவாயறிதல் விடயத்தில் அழுந்துவித்தற் பொருட்டு எனவும் கொள்க. இதனை ஈண்டு வைத்தார் அத்துவிதநிலை இனிது விளங்குதற்கு. இவ்வாறன்றிக் காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டல் என்பதற்குக் காட்டும் உபகாரம் உணர்த்தன் மாத்திரையே கருத்து என்று உரைப்பாருமுளர். இதனைக் கண்ணழித் துரைப்புழி அவனும் அவற்றது விடயத்தை உணரும் எனக் காணும் உபகார மாத்திரையே எடுத்துக்கொண்டுரைத்தல் ஆசிரியர் கருத்தன்றா கலானும், காணும் உபகாரம் காட்டும் உபகாரத்தின் பின்னர்த்தாய் நிகழுமென்பது உணர்ந்து கோடற்பொருட்டு அதுவும் உடன் கூறப்பட்டதன்றி வேறின்மை யானும், அவ்வாறன்று என்பார்க்கு, ஐந்தாஞ் சூத்திரத்துட் பெறப்பட்டதனை ஈண்டுக் கூறுதல் புனருத்தியாய் முடியுமாகலானும்,3 அவர் உரைப்பனவெல்லாம் போலியுரை என்றொழிக. அற்றேல், முதனூலில் பதினோராஞ் சூத்திரத்துட் காட்டுவன் என்பது மாத்திரையே4யன்றிக் காண்பன் என்பது கூறிற்றில்லையாலெனின், அறியாது வினாயினாய்: ஆண்டுக் காட்டுவானும் என்ற உம்மை5 காண்பானுமாம் என எதிரது தழீஇ நிற்றலின், கூறாமை யாண்டையது என்று ஒழிக. அவ்வும்மைக்குப் பொருள் காணமாட்டாதார் பாடம் வேறாக ஓதுப. இதனுள், காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போற் காண உள்ளத்தைக் காட்டிக்காண்டல் என்றது ஓரதிகரணம்; அதனை அயராவன்பின் அரன்கழல் செலுமே என்றது ஓரதிகரணம்; ஆக இரண்டதிகரணத்தது இச்சூத்திரம் என்றுணர்க. முதலதிகரணம் மேற்கோள் ஈண்டு அவனும் அவற்றது விடயத்தை உணருமென்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், முதல்வன் உயிர்க்குக் காட்டும் உபகாரம் மாத்திரையே உள்ளதென்னும் வாதிகளை நோக்கி அத்துவித நிலை உணர்த்துதற்கு எடுத்துக்கொண்ட சூத்திரத்தின் முதற் கூற்றைக் கண்ணழித்துரைத்து மேற்கோடல் நுதலிற்று.1 (இ-ள்) முதல்வனும் உயிர்களான் உணரப்படும் விடயத்தை2 உடனின்று உணருவன் எ-று. உம்மை உயிர்கள் உணர்தலேயன்றி முதல்வனும் அதனை உணரும் என இறந்தது தழீஇயிற்று.3 இஃதறியாது ஈண்டு உணரும் என்றது அறிவித்தற்கு ஏதுவாய் அறியும் என்று உரைப்பாரும் உளர். அவ்வாறு உரைப்பிற் சித்தசாதனம் ஆகலானும், ஈண்டைக்கு இயைபின்மையானும் அது போலியென்றொழிக. அவையே தானேயாய்4 எனவும், தாந்தமுணர்வின் தமியருள்5 எனவும், மேற் பொதுவகையாற் கூறிப் போந்த அத்துவிதத்தை ஈண்டுக் காணும் உபகாரத்தின் வைத்துணர்த்தி இனிது விளக்கியவாறு. ஏது இவ்வான்மாக்கள் அவனை யின்றி அமைந்து ஒன்றையும் விடயியா வாகலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், கண் சடமாகலானும், காண்டற் பயன் உயிர்க்கே யாகலானும், கண் காண்புழி உயிரும் உடனின்று காண்டல் பெறப்படும்; கண் போல் உயிர் சடமன்மையானும், உணர்தற்பயன் உயிர்க்கேயாகலானும், அதனை எடுத்துக்காட்டி அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றல் அமையாது என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) விளக்கொளி கண்ணொளியோடு கலந்து கண்ணொளி யோடுகூட உருவத்தினும் கலந்தாலன்றி அஃது அவ்வுருவத்தைக் காண்டல் இன்றாயவாறு போல, அறிவிக்கவறியும் இயல்பினவாய உயிர்களும், முதல்வனது உணர்வு தம்மோடு விரவிநின்று தம்மோடு கூடச்சென்று விடயத்தினும் விரவி நின்றால், அறிவு விளங்கி அதனை அறியும் இயல்பினவன்றித் தனித்தமையவு மாட்டா, தனித்து ஒன்றனை விடயிக்கவுமாட்டா; ஆகலான், அறிவு விளங்குதன் மாத்திரைக்கே அன்றி விடயத்தைப் பற்றுதற் கண்ணும் முதல்வன் உடனின்றறிதல் ஒருதலையான் வேண்டப் படுதலான் ஈண்டு அவனும் அவற்றது விடயத்தை உணரும் என மேற்கொண்டது எ-று. அவனை இன்றியமையாமையின் காட்டுமுபகாரம் விளங்கினாற் போல, அவனையின்றி ஒன்றையும் விடயியாமையின் காணுமுபகாரமும் இனிது விளங்குமென்பார் அவனையின்றி அமைந்து ஒன்றையும் விடயியா வாகலான் என்றார். அமைந்து விடயியா என்றதனைக் 1“கந்தித்துச் சுழலும்” என்றாற்போலக் கொள்க.2 உம்மை முற்றும்மை. விடயியா என்றது பெயரடியிற் பிறந்த எதிர்மறைவினை. 1“எவ்விடத்தும் இறையடியை யின்றியமைந் தொன்றை யறிந்தியற்றி யிடாவுயிர்கள் ஈசன்றானும் செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலா முணர்ந்து சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன் இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும் அவ்வுயிர்போல் நின்றிடுவ னாதலால் நாம் அரனடியை அகன்றுநிற்ப தெங்கே யாமே” என வழிநூலாசிரியர் இதனை விரித்து ஓதியவாறும் உணர்க. எவ்விடத்தும் என்றது பெத்த முத்திஇரண்டினும் என்பதாம். இதனுள், இறையடியை இன்றியமைந்து ஒன்றை அறிந்தியற்றி யிடாவுயிர்கள் எனவும், ஈசன்றான் எங்குமாய்ச் செறிந்து நிற்பன் எனவும் கூறியது விடயத்தின்கட்படும் நிகழ்ச்சிக்கு எனவும், இவ்வுயிர்கள் தோற்றும்போது அவனையின்றித் தோற்றா எனவும், அவ்வுயிர்போல் நின்றிடுவன் எனவும் கூறியது உயிரின் கட்படும் நிகழ்ச்சிக்கு எனவும் கொள்க. அவ்வாறு கொள்ளாக்கால் இருகாற் கூறுதல் புனருத்தியாய்2 முடியும் என்றொழிக. இனி விளக்கொளி கலத்தல் ஈரிடத்தும் வேண்டப்படும் என்பதும், “விளக்கொளி கலந்தவற்றைக் கண்ணொளி அகல நின்றே கண்டிடும்” எனவும் “வேறு காணாக் கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடும்” எனவும் புடைநூலாசிரியர்3 வகுத்தோதியவாற்றான் உணர்க. அஃதங்ஙனமாக, பரமுத்தியில் உயிர்க்கு விடயமாவது ஒன்று இன்மையின் வழிநூலாசிரியர் எவ்விடத்தும் என்றது அமையுமாறு என்னையெனின்: அறியாது கூறினாய்;4‘‘ சுத்தவநு போகத்தைத் துய்த்தலணு” எனவும் 1“ஒன்றிநின் றுணரும் உண்மைக் குவமை ஆணவத்தோ டொன்றே” எனவும் பிறாண்டும் இவ்வாறே ஓதுபவாகலின், பரமுத்தியில் உயிர் சிவானந்தானு பூதியை விடயித்தல் உண்டு எனவும், அது முதல்வனை இன்றி ஆகாமையின் அவனும் ஆண்டு அவ்வனுபூதியை உடனின்று அறிவன் எனவும் உணர்க. உதாரணம் ஐந்தையு மொக்க வுணரா தவற்றுணர்வ தைந்தும்போ னின்றுணரு மாகலான் - ஐந்தினையும் ஒன்றொன்றாப்2 பார்த்துணர்வ துள்ளமே யெவ்வுலகும் ஒன்றொன்றாப் பார்க்கு முணர்ந்து என்பது உதாரணம். என்நுதலிற்றோ வெனின், அவனும் அவற்றது விடயத்தை உடனின்றுணருமாயின் அவற்றோடு அவனிடை அறிதற்கட்படும் வேற்றுமை இல்லைபோலும் என்பாரை3 நோக்கி வேற்றுமையும் காட்டி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) உள்ளம் - ஆன்மாவானது; அவற்று ஐந்தும்போல் நின்று உணர்வது உணரும் ஆகலான் - “ சுவை யொளியூறோசை நாற்றம்” என்னும் ஐந்தினும் ஐம்பொறிபோல் அதுவதுவாய்ச் செறிந்து நின்று உணர்தற்பாலதனை உணரும் தன்மைத்தாகலான்; 4ஐந்தையும் ஒக்க உணராது - அவ்வைம் புலன்களையும் ஒருங்கே உணரமாட்டாது; ஐந்தினையும் ஒன்று ஒன்றாப் பார்த்து உணர்வது - அவ்வைந்தினையும் ஒரோ வொன்றாய் அறிந்து அனுபவிப்பதாம்; ஒன்று - அதுபோலச் சார்ந்ததன் வண்ணமாய்ப் பலதிறப்படுதலின்றி என்றும் ஒரு பெற்றித்தாகிய சிவம்;1 எவ்வுலகும் ஒன்றா உணர்ந்து பார்க்கும் - எல்லா உயிர்களுடைய எல்லா விடயங்களையும் பொதுவகையான் ஒருங்கே உணர்ந்து அவ்வுயிர் களுடன் நின்று சிறப்புவகையானும் அறியும் எ-று.2 இது சொற்பொருட் பின்வருநிலை.3 சிவத்தைப் பிரித்தமையின் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது. ஒன்றென்பது குறிப்பேதுவாய் நின்ற பெயர்.4 உதாரணம் ஏகமாய் நின்றே யிணையடிக ளொன்றுணரப் போகமாய்த் தான்விளைந்த பொற்பினான் - ஏகமாய் உள்ளத்தின் கண்ணானா னுள்குவா ருள்கிற்றை உள்ளத்தாற் காணானோ வுற்று என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், ஆன்மா ஐம்பொறியை விடயிப் புழிப் போல முதல்வனை விடயிப்புழியும் முதல்வன் அவ்வாறு உடனின்று தன்னைத் தான் விடயிப்பன் எனின் ஆன்மாச்சிரயம் என்னும் குற்றமாம்1 ஆகலின், அது பெறப்படாமையான் அவனும் அவற்றது விடயத்தை உணருமென்றல் யாண்டுஞ் செல்லாது என்பாரை நோக்கி, யாண்டும் இவ்வாறு உணர்தலுண்டு என்பது உணர்த்தி, அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) 2ஒன்று ஏகம் ஆய் நின்று இணை அடிகள் உணரவே தான்போகம் ஆய் விளைந்த பொற்பினான் - முதல்வனைச் சார்ந்தவழி அவ்வண்ணமேயாய் ஒரு பெற்றிப்பட்ட ஆன்மா அவனோடு ஒற்றுமைப் பட்டு நின்று அவனது அடியிணைகளை உணரவே தான் அவ்வான்மாவுக்குப் பரபோகமாய் மேன்மேல் விளைகின்ற பொலிவினையுடையன் ஆகலானும்; உள்ளத்தின் கண் ஏகம் ஆய் ஆனான்3 - அங்ஙனம் உணருங்கால் அவ்வான்ம ஞானத்தினிடத்து ஏகமாய் விட்டு நீங்காதவன் ஆகலானும்; உள்குவார் உள்கிற்றை உள்ளத்தான் உற்றுக் காணானோ - கருதுவார் கருதிய பொருளாகிய தன்னை அவர் அறிவோடு கூடி நின்று அறியான் கொல்லோ1 எ-று. போகமாய்த் தான் விளைந்த பொற்பினான், ஏகமாய் உள்ளத்தின் கண்ணானான் என்னும் பெயரடைகள் ஏதுப் பொருளவாய் நின்றன; யாண்டுஞ்சேறல் உணர்த்துதற்கு உள்குவார் உள்கிற்றை என்றார், 2“வேண்டுவார் வேண்டியதே யீவான்” என்றாற்போல.3 ஆனுருபு உடனிகழ்ச்சிப் பொருட்கண் வந்தது. ஓகாரம் எதிர்மறை.4 ஆன்மாக்கள் முதல்வனை விடயிக்குங்கால் அவற்றது விடயமாகிய அவன் தன்னாலும் உடனின்று உணரப்படுவன், உள்குவார் உள்கிய பொருள் ஆகலின். மேலைவெண்பாவிற் கூறிப்போந்த ஐம்புலன்போல என்று அனுமானவளவை காட்டுவார் உள்குவார் உள்கிற்றை உள்ளத்தான் உற்றுக் காணானோ என்றும், உள்குவார் உள்கிற்றாதல் ஈரிடத்தும் ஒக்கும் என்பார் ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப் போகமாய்த் தான்விளைந்த பொற்பினான் என விடயித்தற்கட்படும் இயல்பும் ஏகமாய் உள்ளத்தின் கண்ணானான் என அறிவு விளங்குதற்கட்படும் இயல்பும் எடுத்தோதினார். பரபோகமாய் என்னாது போகமாய் என்றதும் ஒப்புமை இணங்குதற் பொருட்டு. சேற்றுநில மிதித்துச் சென்றானுக்கு வன்னிலம்போலப்1 பரபோகவிளைவு செயற்கைப் பொருளாய் நிற்றலின், ஆக்கமும் காரணமும் அடுத்து வந்தன. இணையடிகள் உணருந்தோறும் போகம் மேன்மேல் விளைதல், 2“புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும்போகம் பின்னும் புதிதாய் - மணந்தாழ் புரிகுழலாள் அல்குல் போல வளர்கின்றதே” எனவும் அப்பொருண் மேல் வைத்தோதிய திருவாக்கானும் அறிக. தெளிவு பற்றி விளைந்தவென இறந்தகாலத்தாற் கூறினார். கண் கண்ணாடியினின்றும் தன்னை விடயித்தாற்போல, முதல்வன் ஆன்மாவுடனின்று தன்னை விடயித்தல் பொருத்த முடைமையின், ஆன்மாச்சிரயம் என்னும் குற்றம் இன்னோரன்ன வற்றிக்கு எய்தாதென்றுணர்க. கண்ணாடிக் குள்ளாகத் தோன்றுவது போலும் எதிர்விம்பமாவது விம்பமேயன்றி வேறன்று என்பது சிவாகம நூற்றுணிபு என்க. இதனுள் அவனும் அவற்றது விடயத்தை உணருமென உணர்வே பற்றி ஓதினாரேனும், 3“எத்திறம் ஞானமுள்ளது அத்திறம் இச்சை செய்தி” என்பவாகலின், அவற்றிற்கும் இஃதொக்கும்; ஒக்கவே, பெத்தம் முத்தி இரண்டினும் ஆன்மா விடயிக்கப்படும் விடயங்களை முதல்வன் உடனின்று விடயிப்பன் என்பதூஉம், பெத்தத்தின்கண் அவன் இவனாய் நின்று விடயித்தலின் விடயங்கள் அவனுக்கன்றி இவனுக்காயின; முத்தியின்கண் இவன் அவனாய் நின்று விடயித்தலின் அவன் ஒழிந்த விடயங்களெல்லாம் இவனுக்கன்றி அவனுக்காயின என்பதூஉம் இனிது விளங்கும். இம்முறைமை நோக்கியன்றே உலகத்துள் ஒன்றனை ஈவாரும் ஏற்பாரும் சிவார்ப்பணம் எனக் கருதாதவழிக் குற்றமென்று ஆகமங்கள் ஓதியதூஉம், 4“யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே - மாதொரு பாகனார்தாம் வருவர்” என்பதூஉம், அவ்வுண்மை அறிந்தவழி “எத்தனுவி னின்றும் இறைபணியார்க்கு இல்லை வினை - முற்செய்வினை யுந்தருவான் முன்”எனவும்1 “பெற்றசிற்றின்பமே பேரின்பமாய்” எனவும் 2“உடம்புடைய யோகிகள் தாம் உற்றசிற்றின்பம் - அடங்கத்தம் பேரின்பத் தாக்கி” எனவும் 3“காணுங் கரணங்க ளெல்லாம் பேரின்பமெனப் - பேணும் அடியார்” எனவும் “எல்லாஞ் சிவமாயிருந்ததே” எனவும் இவ்வாறு ஓதியதூஉம் என்க. முதலதிகரணம் முடிந்தது. இரண்டாமதிகரணம் மேற்கோள் இனிப் பத்தியினான் மறவாதேத்த அவனது சீபாதத்தை அணையும் என்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், ஏகனாகி நின்றார்க்கு அவ்வியைபு பற்றி அறிவிச்சை செயல்கள் மூன்றும் ஆண்டு விடயிக்குமாறு யாங்ஙனம் என்பாரை நோக்கி நிட்டையின் இயல்பு உணர்த்துதற்கு எடுத்துக்கொண்ட இரண்டாங் கூற்றைக் கண்ணழித் துரைத்து மேற்கோடல் நுதலிற்று.4 (இ-ள்) சூத்திரத்து உரைத்தவாறு பற்றி உரைத்துக்கொள்க.5 6“இத்தை ஆயும் அறிவுடையனாய் அன்புசெய்ய” என வழிநூலாசிரியரும் ஓதுதலின், ஈண்டு மறவாது பத்தியினால் ஏத்த எனச் சூத்திரப் பொருட் கேற்ப மாறிவைத்து உரைத்துக் கொள்க. ஏத்தவென்றது உபசார வழக்கு.1 அன்பு பத்தி காதல் என்றாற் போல்வன இச்சை மீதூர்தற் பொருள ஆகலான். அது பரமுத்தியினும் உண்டென்பது உணராதார் பத்தியாவது சீவன் முத்திநிலைக்கே செய்யப்படுவ தொரு சாதனம் போலும் என மயங்கித் தத்தமக்கு வேண்டியவாறே உரைப்ப.2 பர முத்தியின்கண் இச்சை நிகழாதவழிச் சிவபோகம் அனுபவமாதல் செல்லாமையானும், சீவன் முத்திநிலைக்கே கூறுவது ஒன்றாயின் செம்மலர் நோன்றாள் என்னும் சூத்திரத்து3 ஒருங்குவைத்து ஓத அமையும்; சூத்திரம் வேறுசெய்ய வேண்டா மையானும், அவ்வுரை போலியென்று ஒழிக. ஏது அவன் அன்னியமின்றிச் செய்வோர் செய்திப்பயன் விளைத்து நிற்றலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், பத்தியினான் மறவாது ஏத்தினும் ஆன்மா அவனது சீபாதத்தை அணைதல் பரமுத்தியினன்றி முடியாது என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) அம்முதல்வன் வேறு நில்லாது செய்வோர் செய்வன வற்றை அறிந்து அவ்வச் செய்திக்குத் தக்க பயனைச் செய்யலாயின்4 அவ்வப்பொழுதே விளைவித்தும், அல்லுழிக் காலாந்தரத்தின் விளைவித்தும் உடனாய் நிற்பனாகலான்5 இனிப் பத்தியினான் மறவாது ஏத்தவே அம்முதல்வனது சீபாதத்தை அணையும் என மேற்கொண்டது எ-று. உதாரணம் அருக்கனேர் நிற்பினு மல்லிருளே காணார்க் கிருட்கண்ணே பாசத்தார்க் கீசன் - அருட்கண்ணால் பாசத்தை நீக்கும் பகலலர்த்துந் தாமரைபோல் நேசத்திற் றன்னுணர்ந்தார் நேர்1 என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அரன் கழல் சேறல் உடம்பின் நீங்கிய பின்னன்றி உடம்புள்ள வழியுங் கூடுமாயின், அது ஞாயிற்றின் ஒளி போல மருங்குள்ளார்க்குப் புலனாதல் வேண்டும் என்பாரை நோக்கி அது கூடாமையுங் கூடுமாறும் உவமை முகத்தானுணர்த்தி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அருக்கன்நேர் நிற்பினும் காணார்க்கு அல் இருளே - ஞாயிறு எல்லார்க்கும்2 ஒப்ப நிற்பினும் அது காட்சி யுடையார் கண்ணுக்கன்றி அஃதில்லாதார் கண்ணுக்கு இரவின் கண்ணதாகிய இருளேயாம், அதுபோல; ஈசன் பாசத்தார்க்கு இருட்கண்ணே - முதல்வன் எங்கணும்3 ஒப்ப நிற்பினும் மலநீங்கிய முத்தர்க்கன்றி அஃதுடையார்க்கு அவன் அம்மலத்தின் கண்ணேயாவன்;4 சீவன் முத்தரும் ஏனையோர் போல உடலுடைமையின் பாசத்தா ராகலின் வேற்றுமை யின்றாலெனின், தாமரை அலர்த்தும் பகல்போல் - ஏனைத்தாமரை களோடு ஒப்ப ஒருங்கு நிற்பினும் பக்குவமுடைய தாமரையைக் கூம்புதலை நீக்கி அலர்த்தும் ஞாயிறு போல; நேசத்தில் தன் உணர்ந்தார் நேர் அருட் கண்ணால் பாசத்தை நீக்கும் - ஏனையோர் போல் உடம்போடு நிற்பினும் பக்குவமுடையராய்ப் பத்தியினால் தன்னை மறவாது உணர்வார்க்கு முதல்வன் தனது திருவருட் பார்வையால் பாசத்தை நீக்கி அறிவை யலர்த்தும், ஆகலான் உடம்புள்வழியும் அவர் பாசத்தாரல்லர்1 எ-று. ஆகலான் உடம்புள்வழியும் அவர் பாசத்தாரல்லர் என்பது குறிப்பெச்சம். ஏகாரந் தேற்றம். திணிந்த இருள் என்பார் அல்லிருள் என்றார். மலத்திற்குக் கண்ணாவது அறியாமை. 2காணாரும் பகலும் ஆகுபெயர். அருக்கன் எடுத்துக்காட்டுவமை. தன்னையென்னும் இரண்டனுருபு விகாரத்தால் தொக்கது. ஏழாம்வேற்றுமைப் பொருட்கண் வரும் நேரென்பது உருபு மயக்கமாய்1 நான்காவது உணர்த்திற்று. நீக்குதலும் அலர்த்துதலும் ஏனையிடத்தும் சென்று இயைதலின், ஈரிடத்தும் செயப்படுபொருள் ஏற்பன வருவிக்கப்பட்டன.2 உதாரணம் மன்னு மிருளை மதிதுரந்த வாறன்பின் மன்னு மரனே மலந்துரந்து - தன்னின்3 வலித்திரும்பைக் காந்தம் வசஞ்செய்வான் செய்தல் சலிப்பில் விகாரியலன் றான் என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், நேசத்தில் தன்னுணரும் சீவன் முத்தர்க்குப் பாசத்தை நீக்கி அறிவை அலர்த்துதல் பரமுத்தியினன்றி இல்லையென முரணிக் கூறும் வாதிகளை நோக்கிப் பாசத்தை நீக்கி அறிவை அலர்த்தும் முறைமை இவ்வாறென்று உணர்த்தி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) அன்பின் மன்னும் அரனே மன்னும் இருளை மதிதுரந்தவாறு மலம் துரந்து - உயிரைத் தானாக்கிக் கோடற்கண் உளதாகிய இச்சை மிகுதியான் அவ்வுயிரோடும் அநாதியே நிலைபெறும் முதல்வன்4 கண்ணின் கண் நிலைபெறும் இருளைப் பிறைமதி நாடோறும் சிறிது சிறிதாக நீக்கி ஓட்டுமாறு போல அவ்வுயிரின் கண்ணதாகிய மலசத்தியை அவ்வப் பருவந்தோறும் சிறிது சிறிதாகச் சோபான முறையில் நீக்கிப் பற்றறத் துரந்து5; காந்தம் இரும்பைத் தன்னின் வலித்து வசம் செய்வான் செய்தல் சலிப்பு இல் - காந்தக்கல் இரும்பைத் தன்கண் ஈர்த்துத் தன்வசமாகச் செய்தல்போல மலம் அங்ஙனம் துரக்கப்படுந்தோறும் அம்முறையே அச்சத்தி பதிவித்து உயிரைத் தன்கண் வலித்துக் கொண்டு தன் வசமாகச் செய்துவரும் செய்கையின் அவனுக்கு ஒரு ஞான்றும் சலிப்பில்லை; விகாரி அலன் தான் - அங்ஙனம் சலியாது செய்து வருதல் பற்றி விகாரியா வானுமல்லன், காந்தம்போலத் தனது சந்நிதி மாத்திரையிற் செய்யும் அம்முதல்வன்1 எ-று. மதியென்றது ஏற்புழிக் கோடலான் ஈண்டு வளர் பக்கத்துத் திங்களின்மேற் றாயிற்று. 2“அந்த அருளுனக்கிங்கு ஆதாரமாய் அல்லின், இந்து வெனவெறித் திட்டு” என்றதும் அது. மலம் துரத்தல் உயிரின் செயலான் ஆவதன்று என்பதுபட நின்றமையின் ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.3 வான் பான் பாக்குக்கள் தொழிற்பெயர் விகுதியுமாம் என்பது “கரப்பாக்கறிந்து” என்பதனாலுணர்க. உவமஉருபு விரித்துரைக்க. சலித்தல் வேசறுதல். செய்தற் கண்ணென ஏழனுருபு விரித்துரைக்க. மதி துரந்தவாறு மலம் துரந்து என்றவிதனானே மலநீங்குவது பின் என்பார் மதம் மறுக்கப்பட்டவாறு காண்க. சோபான முறையில் நீக்குதலானன்றே, சத்திநிபாதம் சிவ புண்ணிய முதலாயின நால்வேறு வகைப்பட்டதூஉம்,1 அவற்றுள்ளும் ஒரோவொன்று நந்நான்காய்ப் பதினாறு வகைப்பட்டதூஉம், அவற்றுள்ளும் ஒரோவொன்று பலவேறு வகைப்பட்டு விரிந்ததூஉமென்க. உதாரணம் நசித்தொன்றி னுள்ளம் நசித்தலா லொன்றா நசித்திலதே லொன்றாவ தில்லை - நசித்துமலம் அப்பணைந்த வுப்பி னுளமணைந்து சேடமாங்2 கப்பின்றா மீசன் கழல்3 என்பது உதாரணம் என்னுதலிற்றோ வெனின், உயிருக்குக் குணம் போல அநாதியாயுள்ள சகசமலம் அவ்வுயிரின் வேறாய்த் துரக்கற் பாலதன்று ஆகலின் மலந்துரந்தென்றது அமையாதென்னும்1 பாடாணவாத சைவரை நோக்கி அருத்தாபத்தியளவையான் அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா நசித்து இலதேல் ஒன்று ஆவது இல்லை - அரன்கழல் செல்லுங்கால் அதனை ஆன்மாக் கெட்டு ஒன்றுமோ கெடாது ஒன்றுமோ எனக் கடாயினார்க்குக் கெட்டு ஒன்றுமெனின், ஆன்மாக் கெட்டுப் போகலான் ஒன்றமாட்டாது, கெடாது ஒன்றுமெனிற் கெடாதவழி இரு பொருளாய் நிற்றலின் ஒன்றாமாறில்லை, ஆகலான் அருத்தா பத்தியளவையானே. அப்பு அணைந்த உப்பின்2 மலம் நசித்து உளம் ஈசன் கழல் அணைந்து சேடம் ஆம் - உப்புத் தனது கண்டிப்பு நீங்கி நீரின் ஒன்றாமாறு போலத் தனது சகசமலம் கெட்டொழிய ஆன்மா அரன் கழலை யொன்றி அவ்வரன்கழற்குச் சேடமாம்; கப்பு இன்று ஆம் -அங்ஙனம் சேடமாகிய ஆன்மாவுக்கு மீளக் கவர்ச்சியில்லை”3எ-று. ஒன்றாது என்னுந் துவ்விகுதி விகாரத்தால் தொக்கது. பின் வந்த நசித்து என்பது செயவெனெச்சத் திரிபு.1 யாதொன்று யாதொன்றன் பொருட்டேயாய்த் தனக்கெனச் சுதந்திரமின்றி நிற்கும் அஃது அதற்குச் சேடம் என்பதறிக. “2அவை யுடைமை யாளாம்நா மங்கு” என ஓதுதலின், ஏனைப் பசுபாசங்கள் முதல்வனுக்குப் பொது வகையால் சேடமாம் ஆயினும், இதுபோலச் சிறப்புவகையால் சேடமாதல் இன்மையின், இதனை வேறு எடுத்தோதினார். முத்திநிலை கூறி முடிந்தமையின் இறுதிக்கண் கப்பின்றாமென அவினாவிருத்தியும்3கூறினார். உதாரணம் பொன்வாண்முன் கொண்மூவிற்4 புக்கொடுங்கிப் போயகலத் தன்வாளே யெங்குமாந் தன்மைபோன் - முன்வாள் மலத்துண் மறைந்துள்ளம் மற்றுலகை யுண்ணும் மலத்திரித்துச் செல்லும் வரத்து என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், நான்காஞ் சூத்திரம் முதல் இது வரையில் கூறிப்போந்த கேவல சகல சுத்தமென்னும் முத்திறத் தவத்தைகளினும்5 ஆன்மாத் தன்னியல்பிற்குக் கேடின்றியே நிற்குமென்பது உவமையின் வைத்துகாட்டி மேலதனை வலியுறுத்துதல் நுதலிற்று.6 (இ-ள்) பொன் வாள் முன் கொண்மூவில் புக்கு - ஞாயிறு காலைப்போதின் முகிற்படலத்துண் மறைந்து; ஒடுங்கி - அம்முகிற் படலம் ஒருபுடை நீங்கியவழித் தன்னொளி ஏகதேசமாய்1 ஒடுங்கித் தோன்றி; போய் அகல எங்கும் தன் வாளே ஆம் தன்மைபோல் - அம்முகிற்படலம் பெருங்காற்றான் அடியுண்டு முழுவதும் விட்டொழிந்த வழி எங்கணும் தன்னொளியேயாய்த் தோன்றும் பெற்றி போல2; உள்ளம் முன் வாள் மலத்துள் மறைந்து - ஆன்மா அநாதியே தன் அறிவு மலத்துள் மறைப்புண்டு கேவலப்பட்டு; மற்று உலகை உண்ணும்- பின்பு கருவிகளோடு கூடி ஏகதேசமாய் அறிவு விளங்கி ஐம்புலன்களை விடயிக்கும்;3 மலத்து இரித்து வரத்துச் செல்லும் - பின்பு அம்மலத்தை முதல் வனருளால் பற்றறக் களைந்து வியாபகமாய் அறிவு விளங்கி அவனது சீபாதத்தை அணைந்து சுத்தப்படும்4 எ-று. தன்மையென்றார் கொண்மூவிற் புக்குழியுங் கேடின்மையின்.5 ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. பின் வந்த வாள் ஆகுபெயர். வினைமாற்றின்கண் வந்த மற்றென்னும் இடைச்சொல் மலத்திரித்து என்பதனோடு இயைந்தது; சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையாது வருதல் இலேசாற் கொள்க.6 உவமை வினைகள் பொருளினுஞ் சென்றியைந்தன. அறிவு மறைந்தும் ஒடுங்கியும் மறைப்பு நீங்கியே எங்குமாய் நிகழ்தன் மாத்திரைக்கே பொன்வாள் உவமை என்பார், உலகை உண்ணும், வரத்துச் செல்லும் என வேற்றுமையும் உடன் கூறினார்.1 மலநசித்தலாவது தனது மறைத்தற் சத்தி மடங்கிக் கீழ்ப்படுதன் மாத்திரையே, பிறிதன்று என்பதூஉம் உவமையாற் பெறுதும்.2 பதினோராஞ்சூத்திரம் முடிந்தது. பன்னிரண்டாஞ் சூத்திரம் செம்மலர் நோன்றாள் சேர லொட்டா அம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயந் தானு மரனெனத் தொழுமே என்பது சூத்திரம். என்னுதலிற்றோ வெனின், அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.1 என்பது கருத்துரை. என்னுதலிற்றோ வெனின், சூத்திரக் கருத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) அயரா அன்பின் அரன்கழல் சென்ற முத்தர்க்குச் சீவன் முத்தி நிலைக்கண் அவ்வறிவிச்சை செயல்கள் ஒரோவழிப் புறத்துச் செல்லுங்கால், அவை செல்லுமிடம் இவை என்பது உணர்த்துமுகத்தான் வாக்கு மனாதீதமாய்ப் பத்தியினான் மறவாதேத்த நின்ற முதல்வனை வாக்குமனக் கோசரமாம்படி தெளியக்கண்டு வழிபடுமாறு உணர்த்துதல் இப்பன்னிரண்டாஞ் சூத்திரத்தின் கருத்து எ-று. சூத்திர வியைபும் இனிது விளங்கும். இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு. அயரா அன்பின் அரன் கழல் அணைந்த சீவன் முத்தனாவான் செங்கமல மலர் போல விரிந்து விளங்கிய முதல்வனது நோன்றாளை1 அணைய வொட்டாது அயர்த்தலைச் செய்விக்கும், அவ்வியல்பினையுடைய மும்மல அழுக்கை ஞானநீராற் கழுவி, அங்ஙனம் அயராவன்பு செய்யும் மெய்ஞ்ஞானிகளோடு2 கலந்து கூடி, மலமயக்கம் நீங்குதலான் அன்பு மிக்குடைய அவரது திருவேடத்தையும் சிவலாயத்தையும் முதல்வனெனவே கண்டு வழிபட்டு வாழும்3 எ-று. எழுவாய் மேலைச்சூத்திரத்தினின்றும் வருவிக்கப் பட்டது. சீவன் முத்தனென்பது ஏற்புழிக் கோடலாற்4 பெறுதும். நோன்றாள்1 வினைத்தொகை. நோன்றல் பொறுத்தல். “எடுத்துச் சுமப்பானை”2 என்றார் புடைநூலாசிரியரும். கழீஇ என்றது குறிப்புருவகம்.3 மாலற நேயம் மலிந்தவர் என்றது அம்மலம் கழீஇ அன்ப ரொடு மரீஇயினார் என்னும் பொருள்தந்து சுட்டுப் பெயர்4 மாத்திரையாய் நின்றது. நேயம் மலிதல் கூறவே வழிபாடும் பெறப்படும். தான் அசை. அம்மலம் கழீஇ என்றதனால் அறிவு வியாபரிக்குமிடமும், அன்பரொடு மரீஇ என்றதனால் இச்சை வியாபரிக்குமிடமும், தொழும் என்றதனால் செயல் வியாபரிக்குமிடமும் பெறப்பட்டன. படவே சீவன்முத்தர்க்கு அறிவு இச்சை செயல்கள் ஏனைய விடயங்களிற் செல்லா வென்பதூஉம் பெறப்பட்டது. இம்மூன்றும் பிரிப்பின்றி ஓரிடத்து ஒருங்கு நிகழ்வன ஆகலின், விடயவேற்றுமை யின்மையும் உணர்க. தொழுக என்னாது தொழும் என்றமையின், இஃது அணைந் தோரது தன்மை என்பது பெற்றாம்.5 அற்றாகலின் அன்றே, இதனைச் சாதன வோத்தின்கண் வையாது ஈண்டு வைத்தாரென்பது. இனித் தொழும் என்றதனை இரட்டுற மொழிந்து கொண்டு விதிப்பொருள்பட நின்ற முன்னிலை ஏவலாக்கியும் உரைத்துக் கொள்க; என்னை? செல்வப் பெருக்கமுடையார்க்கு உணவாகிய ஆன்பால், உடம்பு நோயின்றி வளரச்செய்யும் மருந்துமாதல் போல, இவ்வழிபாடு மலவாசனை சிறிதும் தாக்குதலின்றிச் சிவானந்தம் மேன்மேல் வளரச்செய்யும் சாதனமாதலும் உடைமையின். கண்ணழித்துரை பற்றி விதியாக வைத்துரைத்தலும்1 அதுபற்றி. இதனுள், செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலம் கழீஇ என்றது ஓரதிகரணம்; அன்பரொடு மரீஇ என்றது ஓரதிகரணம்; மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே என்றது ஓரதிகரணம்; ஆக மூன்றதிகரணத்தது இச் சூத்திரமென்று உணர்க. முதலதிகரணம் மேற்கோள் ஈண்டு ஆணவம் மாயை கான்மியம் என்னும் மலங்களைக் களைக என்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், சீவன் முத்தர்க்கு ஒருதலையான் முன்னர்ச் செய்யக் கடவது இதுவெனச்2 சூத்திரத்தின் முதற் கூற்றைக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) வெளிப்படை.3 கன்ம மலமே தன் மூலத்தை நோக்கக் கான்மியம் எனவும் படும்.1 காமியம் எனப் பாடமோதி, ஆகாமியம் காமியமெனத் தலைக்குறையென்று உரைப்பாருமுளர்.2 ஏது அவைதாம் ஞானத்தை உணர்த்தாது அஞ்ஞானத்தை உணர்த்து மாகலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், மலமாயை தன்னொடு வல்வினை யின்றே எனப் பாசநீக்கம் மேலே பெறப்பட்டமையின், மெய்யுணர்ந்து நிட்டை கூடிய பின் அவை களையக்கிடத்தல் யாங்ஙனம் என்பாரை நோக்கிச் சூத்திரத்தின்கண் உடம்பொடு புணர்த்தோதிய பொருளைத் தெரித்து உணர்த்தி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) அம்மலங்கள் மூன்றும், மெய்யுணர்ந்து நிட்டை கூடினார் மாட்டும், யாதானும் ஓராற்றான் நுழைந்து அவர்தம் மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்துப் பிறவிக்கு வித்தாகிய பண்டை விபரீத உணர்வை மேற்படுத்துவனவாம்; ஆகலான், அஃது அவர்க்கு ஆகாமையின் ஈண்டு ஆணவம் மாயை கான்மியம் என்னும் மலங்களைக்களைகவென மேற்கொண்டது எ-று. உணர்த்துதல் உணர்விற்கேதுவாதல். ஈண்டு அஞ்ஞானம் என்றது விபரீதவுணர்வை. உதாரணம் புண்ணிய பாவம் பொருந்துமிக் கான்மியமும் மண்முதன் மாயைகாண் மாயையுங் - கண்ணிய அஞ்ஞானங் காட்டுமிவ்3 வாணவமு மிம்மூன்றும் மெய்ஞ்ஞானிக் காகா விடு என்பது உதாரணம். என்நுதலிற்றோ வெனின், அவை அஞ்ஞானத்திற்கு ஏதுவாய் வந்து நுழையுமாறும் அஃது அவர்க்கு ஆகாமையும் தெரித் துணர்த்தி ஏதுவை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) புண்ணிய பாவம் பொருந்தும் இக்கான்மியமும் - புண்ணிய பாவப் பயனாயும் புண்ணிய பாவ காரணமாயும் பொருந்துகின்ற இக்கன்ம மலமும்;1 மண் முதல் மாயை காண் மாயையும் - நிலமுதல் மோகினி யீறாகக்2 காணப்படுகின்ற இம் மாயா மலமும்; கண்ணிய அஞ்ஞானங் காட்டும் இவ்வாணவமும் - சுட்டியறிவதாகிய விபரீத உணர்வைப் பயக்கும் இவ்வாணவ மலமும்; இம்மூன்றும் மெய்ஞ்ஞானிக்கு ஆகா விடு - இம்மலங்கண் மூன்றும் மெய்யுணர்வுடைய உனக்கு ஆகாமையான் அவற்றை விடுத்து ஒழிவாயாக3 எ-று. எல்லா மலங்களும் பற்றறத் துடைத்து மெய்யுணர்ந்து நிட்டை கூடினார்க்கு, உடம்பு நிற்குமளவும் பிராரத்தவினை அவ்வுடம்பைப் பற்றி நிற்றலான், அஃது அவர்க்கு ஒரோவழி வாசனை வயத்தான் இங்குளி வாங்கும் கலம்போல வந்து தாக்கும்; அவ்வழி, 4“பிற் செயாது அனுபவிப்பதின்று” ஆகலின், அது சார்வாக விருப்பு வெறுப்புக்கள் உளவாம்; அவை உளவாகவே, 5“பரமே பார்த்திருப்பார்”க்கு நில முதலிய ஏகதேசப் பொருள் காட்சிப்படும்; படவே, அவற்றைச் சுட்டியறிவதாகிய விபரீத உணர்வு மேற்பட்டு மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்துப் பிறவிக்கு வித்தாம். இவ்வாறு இம்மூன்றும் அறிவற்றம் பார்த்து இம் முறையானே வந்து தலைப்படுமெனக் காட்டிக் கூறுவார் கன்மம் மாயை ஆணவம் என்று இம்முறையின் வைத்து அவ்வக்காரிய நிகழ்ச்சிகளை எடுத்தோதிச் சுட்டிக் கூறினார். இகரச் சுட்டு இடையினும் வந்தியையும்.1 புண்ணிய பாவம் என்றது உபசாரம்.2 முன் வந்த மாயை முப்பத்தோராம் எண்ணுமுறைமைக்கண் நின்ற தத்துவத்தை உணர்த்தி, விடாதவாகு பெயராய்த் 3தன்னை ஈறாக வுடைய ஏனைத் தத்துவங் களையும் தழீஇயிற்று. காண்மாயை செயப்படுபொருளோடு முடிந்த வினைத் தொகை.4 இவை, 5சிவபோகப் பெருவாழ்வை இழப்பித்தலின் மெய்ஞ் ஞானிக்கு ஆகாவாயின. மேன்மேன் முறுகுவனவாய இவற்றைத் தோன்றும்பொழுதே துடையாக்கால் 6“களைகுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து” என்னும் முறைமைத்தாய் முடியுமென்பது பற்றி, விடு என ஈண்டும் வலியுறுத்தப்பட்டது. விடுதலாவது, அவை அம்முறையான் நிகழ்ந்தவழி இவ் வஞ்ஞானம் ஏகதேசக் காட்சியான் ஆயது எனவும், அக்காட்சி விருப்பு வெறுப்புக்களது தோற்றத்தான் ஆயது எனவும், அத்தோற்றமும் பிராரத்தவினை நுகர்ச்சிக்கட் சென்ற தற்போதத்தால் ஆயதெனவும் அறிந்து, அங்ஙனம் செல்வதாகிய தற்போதம் முனையாதவாறு பரிகரித்துச் சிவஞானத்துள் அடங்கிச் சிவானுபவம் சுவானு பூதியாம்படி ஞானநிலையில் உறைத்து நிற்றல். மாயை கன்மங்கள் அஞ்ஞானங்காட்டுதல் ஆணவமலச் சார்வானாய செயற்கை என்பது உணர்த்துதற்கு, மூன்றற்கும் பொதுவாக ஏதுவுட் கூறிப் போந்த அதனை ஈண்டு ஆணவமாத் திரைக்கே சிறந்தெடுத்தோதினார்.1 முதலதிகரணம் முடிந்தது. இரண்டாமதிகரணம் மேற்கோள் இனிச் சிவபத்தர்களோடு இணங்குக வென்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், அம்மலம் கழீயினார்க்கு அதனை நிலை பெறுத்துவதாய் அதன்பின்னர்ச் செய்யக் கடவது இதுவெனச் சூத்திரத்தின் இரண்டாங்கூற்றைக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று.2 (இ-ள்) வெளிப்படை.3 ஈண்டுச் சிவபத்தர் என்றது பத்தியினான் மறவாதேத்தி முதல்வனது சீபாதத்தை அணைந்த4 சீவன்முத்தர் மேற்று. இணங்குதல் நட்புச்செய்தல். சிவபத்தர்களோடு இணங்குக எனவே, எதிர்மறை முகத்தான் ஏனையரோடு இணங்கற்க என்பதூஉம் பெறப்பட்டது.1 ஏது அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவா ராகலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், உறவும் பகையும் ஒழித்த மெய்ஞ்ஞானிகள் சிலர்மாட்டு நட்பும் சிலர்மாட்டு நட்பின்மையும் உடையராதல் சால்பன்று என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) வெளிப்படை.2 அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துமாறு- “தெய்வ மென்பதோர் சித்தமுண் டாகி முனிவி லாததோர் பொருளது கருதலும் ஆறு கோடி மாயா சத்திகள் வேறு வேறுதம் மாயைகள் தொடங்கின ஆத்த மானா ரயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும் விரத மேபர மாகவே தியருஞ் சரதமாகவே சாத்திரங் காட்டினர் சமய வாதிகள் தத்தம் மதங்களே அமைவ தாக வரற்றி மலைந்தனர்3” என்றற் றொடக்கத்துத் திருவாக்குக்களான் அறிக. மும்மலங்கள் அஞ்ஞானத்தை உணர்த்துதல் இலக்கு வாய்த்துழி ஏது வாதன் மாத்திரையே; சிவபத்தரல்லாதார் அவ்வாறின்றி இலக்கு வாயாத வழியும் வாய்க்குமாறு செய்து கொண்டு பலவகை உபாயங்களானும் தம்மோடொப்ப விபரீத உணர்வைச் செலுத்தியே விடுவர்; ஆகலான், அம்மலங்களினும் கொடியராகிய இவரை அவற்றினும் அஞ்சி விட்டொழிதலே அறிவுடைமைக்குச் சால்பென்பதாம். உதாரணம் மறப்பித்துத்1 தம்மை மலங்களின் வீழ்க்குஞ் சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - யறப்பித்துப் பத்த ரினத்தாய்ப் பரனுணர்வி னாலுணரும் மெய்த்தவரை மேவா வினை என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அஞ்ஞானத்தை உணர்த்தும் அவரோடு இணங்காமை மாத்திரையே அமையும்; சிவபத்தர் களோடு இணங்குதல் எற்றுக்கு? என்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) தம்மை மறப்பித்து மலங்களின் வீழ்க்கும் சிறப்பு இல்லார் தம் திறத்துச் சேர்வை அற - முதல்வன் காட்டியும் கண்டும் உபகரித்து நிற்கும் அத்துவித நிலையை மறவாது கடைப் பிடிக்கும் தமது ஞானக்கண்ணை இழப்பித்துத் தீயநெறிக்கண் கொண்டு சென்று மலங்களானாய பிறவிக்குழியில் வீழ்வித்துத் துயருறுத்துவாராகிய அன்பில்லார்2 கூற்றிலே தொன்றுதொட்டுப் பயின்று வந்த சேர்க்கை அறும்படி; பத்தர் இனத்துப் பித்தாய்ப் பரன் உணர்வினால் உணரும் மெய்த்தவரை - அம்மறவியை மாற்றி ஞானக் கண்ணை உதவிப் பிறவிக்குழியினின்றும் எடுத்து நன்னெறிக்கட் செலுத்தி வாழ்விக்கும் சிவபத்தரது கூற்றிலே பேரன்புடையராய் அவ்வன்பு சார்பாக விளங்கும் சிவஞானக் கண்ணால் அந்நிலையைக் கடைப்பிடித்து உணரப்பெற்ற மெய்த்தவராயினாரை; வினை மேவா - எல்லா அனர்த்தங்கட்கும் மூலமாய் வந்து சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வையைப் பயப்பிக்கும் பிராரத்த வினைகள் வாதியா1 எ-று. மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்கும் சிறப்பிலார் என மேற்சொல்லிய பொருளையே அநுவதித்து விரித்தோதினார், அதன் எதிர்மறை முகத்தாற் சிவபத்தரது பெருந்தகைமை உணர்ந்து கோடற் பயனோக்கி.2 மலம்3 ஆகுபெயர். வீழ்க்கும் என்றது உருவகங்குறித்து நிற்றலின், அவ்வாறு உரைக்கப்பட்டது. எல்லாவற்றினும் அன்பு சிறந்தமையின் அதனைச் சிறப்பு என்றார். பித்துப்போறலின், அன்பு பித்தெனப்பட்டது.4 ஏனைத் தவங்களெல்லாம் மெய்யாதலின்றி மலநடை யாய்ப் போதலின், பரனுணர்வினால் உணரும் தவம் ஒன்றே மெய்த்தவம் எனப்பட்டது. வினை பால்பகாவஃறிணைப்பெயர். சிவபத்தர்மாட்டு அன்புடையராய் மனம் சொற் செய்கைகளான் அவர்வழி நிற்பார்க்கு உலகியல் உணர்வு மாறிச் சிவானுபூதி உணர்வே மேம்பட்டு நிகழும்; அது நிகழவே பௌதிக உடம்பைப் பற்றி வரும் பிராரத்த வினைகள் அவர்க்கு நுகர்ச்சியாதல் செல்லாமையின் வாதிக்கமாட்டா; மாட்டாது ஒழியவே, அவை பற்றுக்கோடாக நிகழும் சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை 1பற்றறக் கெடுமென்பார் சேர்வையறப் பித்துப் பத்தரினத்தாய்ப் பரன் உணர்வினால் உணரும் மெய்த்தவரை மேவாவினை என்றார். எனவே, வீட்டுணர்வை நிலைபெறுத்தும் சிவபத்தர்களோடு இணங்கினா லன்றி வினை பற்றுக்கோடாகத் தொன்றுதொட்டுப் பயின்று வந்த சிறப்பில்லாரது இணக்கம் அறாமையின், அவ்விணக்கம் ஒருதலையான் வேண்டுமென வலியுறுத்தவாறாயிற்று.2 இரண்டாமதிகரணம் முடிந்தது. மூன்றாமதிகரணம் மேற்கோள் இனிப் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் எனக் கண்டு வழிபடுக என்றது என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், அன்பரொடு மரீஇயினார்க்கு அம்மருவு தலை நிலைபெறுத்துவதாய் அதன்பின்னர்ச் செய்யக்கடவது இதுவெனச் சூத்திரத்தின் மூன்றாங்கூற்றைக் கண்ணழித்து உரைத்து மேற்கோடல் நுதலிற்று.3 (இ-ள்) வெளிப்படை.1 காண்டல் ஐயுறவின்றித் தெளிதல். காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறு போல, மெய்யுணர்வுடையாரைக் காட்சி மாத்திரையின் வசீகரித்து இன்பஞ்செய்தல் பற்றித் திருவேடத்தையும் சிவாலயத்தையும் என்று உபசரித்தார். அது “சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணார் இளங்கொங்கையிற் செங்குங்குமம் - போலும் பொடியணி மார்பிலங்கும் என்று புண்ணியர் போற்றிசைப்ப2” என்னும் திருவாக்கானுமறிக. திருவேடத்தினியல்பு “துயவெண் ணீறு துதைந்தபொன் மேனியுந் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோ லன்பின் நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெவ் வாயு முடையார் புகுந்தனர் வீதியுள்ளே3” “சிந்தை யிடையறா வன்பும் திருமேனிதனில் அசைவும் கந்தை மிகையாங் கருத்தும் கையுழவாரப் படையும் வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற் பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத் தரசும் எதிர்வந் தணைய” “கண்ட கவுணியக் கன்றும் கருத்திற் பரவுமெய்க் காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியதென்று தொழுதே4” என்றற் றொடக்கத்துத் திருவாக்குக்களானும் அறிக. ஏது அவன் மற்று இவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே அல்லாத விடத்து அப்பிரகாசமாய் நிற்றலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், மெய்யுணர்வுடையார்க்குப் பகுப்பின்றி எங்கணும் பரமேசுரனெனக் காண்டலே பொருத்த முடைமையானும்,1 நின்ற திருத்தாண்டக2 முதலியவற்றுள் அவ்வாறு ஓதுதலானும், திருவுருத்திரத்துட்3 பகுப்பின்றி உயிர்ப் பொருள்கள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி எடுத்தோதி வழிபாடு கூறுதலானும், ஈண்டு இவற்றை மாத்திரையே விதந்துகொண்டு ஓதியது என்னை என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) அம்முதல்வன் யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டிடத்து மாத்திரையே தயிரில் நெய் போல விளங்கி நிலைபெற்று, அல்லுழி யெல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்றலான் இனிப் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் எனக் கண்டு வழிபடுகவென மேற்கொண்டது எ-று. மற்று உரையசை. எப்பொருட்கண்ணும் இறைவன் கலந்துளன் என்பது தெளிந்து கோடற் பொருட்டுத் திருவுருத்திரத்தின் அவ்வாறு ஓதப்பட்டது எனக்கொள்க.1 உதாரணம் தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்துத் தன்னுணரத் தன்னு ளிருத்தலால் - தன்னுணரும் நேசத்தர் தம்பா னிகழுந் ததிநெய்போல் பாசத்தார்க் கின்றாம் பதி2 என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், திருவேடத்தின்கண் இறைவன் பிரகாசமாய் நிற்குமாறு யாங்ஙனம் என்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) பதி - அசிந்திதனாய் நின்ற பரம்பொருளே; தன் உணர வேண்டி- உலகத்துள்ளார் தன்னை அறிதற்பொருட்டு; தனது உருவைத்தான் கொடுத்து - திருநீறு கண்டிகை முதலிய திருவேடமாகிய தனது திருவடிவத்தைத் தன் அன்பர்க்குக் கொடுத்தலானும்; தன் உணரச் செய்து - அவ்வன்பர் தன்னைச் சிவோகம் பாவனையால் அறியச் செய்தலானும்; தன்னுள் இருத்தலால் - அங்ஙனம் ஒரு குறியின்கண் நின்றுணரும் அவரைத் தனது வியாபகத்துள்ளாக இருத்துதலானும்; தன் உணரும் நேசத்தர் தம்பால் ததிநெய்போல் நிகழும் -குறியும் இறந்து நின்று தன்னை உள்ளவாறு உணருமவர் மாட்டுத் தயிரின் கண்ணதாகிய நெய்போல விளங்கித் தோன்றும்; பாசத்தார்க்கு இன்று ஆம் - அவ்வியல்பில்லாத பாசக்கட்டுடையார் மாட்டுப் பாலின் கண்ணதாகிய நெய்போல விளங்காது நிற்கும் எ-று. செய்து என்பது சொல்லெச்சம்.1 இருத்தல் அல்லீற்றுப் பிறவினைத் தொழிற்பெயர்.2 கொடுத்துச் செய்திருத்தலான் நிகழும் என வியையும். தன்னுணரு நேசத்தர் எனப் பெயரடையானும் ஓர் ஏதுக் கூறப்பட்டது.3 தன்னை என்னும் இரண்டனுருபு விகாரத்தால் தொக்கது. உணர்தலை மூவிடத்தோதுதலின்4 இஃது அங்ஙனம் வேறு வேறு உரைக்கப்பட்டது. பாசத்தார்க்கு என்பது உருபுமயக்கம்.5 இன்மை ஈண்டு விளங்காமை குறித்து நின்றது.6 உதாரணம் கண்டதொரு மந்திரத்தாற் காட்டத்தி லங்கிவே றுண்டல்போ னின்றங் குளதாமால் - கண்டவுருத் தானதுவா யன்றானான் றானதுவாய்த் தோன்றானோ தானதுவாய்க் காணுந் தவர்க்கு1 என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், சங்கம வடிவிற்குக் கூறிப்போந்த இயல்பு இல்லாத தாவர வடிவில் மந்திரசாந்நித்தியம் உள்வழியன்றிப் பிரகாசமாய் நிற்றல் பெறப்படாது என்பாரை நோக்கிச் சிவாலயத் தினிடத்தும் இறைவன் பிரகாசமாய் நிற்றலை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) காட்டத்தில் அங்கி வேறு உண்டல்போல் - விறகிற்றீ கடைகோலாற் கடைந்துழி வேறாய் விளங்கியும் அல்லுழி விளங்குவது அன்றானாற்போல2; கண்ட உருத் தான் அதுவாய் அன்று ஆனான் - உயிர்கட்குப் புத்தி முத்தி அளித்தற் பொருட்டுக் காணப்பட்ட தாவர வடிவின்கட் கலப்பினால் அதுவே தானாய் அதுவன்றி வேறு பொருளுமாம் இயல்புடைய முதல்வன்; கண்டது ஒரு மந்திரத்தான் நின்று அங்கு உளதாமால் - அதுவே தானாகக் காணாதார்க்குத் தம்மால் அறியப்பட்டது ஒரு மந்திர சாந்நித்தியமில்வழி அவ்வடிவின்கண் விளங்காது நின்று அஃதுள்வழி விளங்கித் தோன்றும் பொருளாம்; அது தானாய்க் காணும் தவர்க்கு அது தானாய்த் தோன்றானோ3- அவ்வாறன்றி அவ்வடிவே அவனாகக் காணப்பெறும் உண்மைத் தவமுடையார்க்கு அப் பெற்றியனேயாய் விளங்கித் தோன்றான் கொல்லோ1 எ-று. காணாதார்க்கு என்பது சொல்லெச்சம். மந்திரத்தால் என்னும் பொருளடைக்கேற்ப உவமையினும்2 வருவித்து உரைக்கப்பட்டது. உண்டல் உண்டாதல்; ஈண்டு விளங்குதன்மேற்று. ஆல் அசை. ஆனான் என்பது பெயர். ஓகாரம் எதிர்மறை. பொருண்மை பற்றி உளது எனவும் அன்று எனவும் கூறினார்.3 தானதுவாய் அன்றானான் என்னும் பெயரடையான் அவரவர் பாவனைக்கேற்ப விளங்குதற்கு ஏதுக்கூறியது. தானதுவாய் அன்றாதல் சங்கம வடிவிற்கும் ஒக்குமேனும், தாவர வடிவின்கண் நிகழும் கடாவை இதனானன்றி நீக்கலா காமையின் ஈண்டுக் கூறினார். இஃது ஈரிடத்தும் ஒக்குமென்பது முன்னர்ப்4 பெறப்படும். மூன்றாமதிகரணம் முடிந்தது. புறனடை மேற்கோள் இனி இவ்விடங்களின் வழிபடுகவென்றது. என்றது மேற்கோள். என்னுதலிற்றோ வெனின், மேற்கூறிப்போந்த மூன்றும் சீவன் முத்தர்க்குத் தாமேயுளவாம் இலக்கணம் ஆகலின் அனுவாதமாக1 வைத்து உணர்த்தற்பாலனவாகிய இவற்றைக் களைக இணங்குக வழிபடுகவென விதியாக வைத்தோதியது எற்றுக்கு என்பாரை நோக்கி அதனை அவற்றது ஒழிபாகக் கொண்டு சாதித்தற்கு மேற்கோடல் நுதலிற்று. (இ-ள்) வெளிப்படை.2 இவ்விடங்கள் என்றது மேற்கூறிய இரண்டனையும். வழிபடுக என்று எடுத்தல் ஓசையான் அனுவதித்து உணர்வதே அமையும் என்பாரை நோக்கி விதித்தலை வலியுறுத்தவாறு.3 இனம்பற்றிக் களைதல் இணங்குதல் கட்கும் இஃதொக்கும்.1 ஏது நரம்பு நாடி முதலானவற்றைத் தானதுவாய் வரும் புருடன் அவை யாகாவாறு அப்புருடனுமாகலான் என்றது ஏது. என்னுதலிற்றோ வெனின், எய்தியதனை விதித்தல் பயனு டைத்தன்று போலும் என்பாரை நோக்கி மேற்கோளைச் சாதித்தல் நுதலிற்று. (இ-ள்) நரம்பு முதலிய தாதுக்களின்கண் வேற்றுமையின்றி, அதுவது தானாய் வருகின்ற உயிர், “நாடியோ என்போ நரம்பு சீக்கோழையோ”2 என்று இங்ஙனம் பைமறியாய்ப்3 பார்ப்பார்க்கு, அந்நரம்பு நாடி முதலியவை யாகாது, அவற்றின் வேறுமாயினாற் போல, உயிர்க்குயிராகிய அம்முதல்வனும், உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றினும் கலப்பான் அதுவது தானாகியும், பொருண்மையான் அல்லனாகியும் நிற்பனாகலான்4, அதுவது தானாய்க் காணும் காட்சிபற்றி எய்திய வழிபாடு, அல்லனாய் நிற்றலைக் காணுங்கால் எய்தாதாகலின், அவ்வழியும் எய்துவிக்க வேண்டுதலான், இனி, இவ்விடங்களின் வழிபடுகவென விதித்தோதியது எ-று. அவை யாகாவாறு அப்புருடனும் எனவே அவ்விடத்து எய்துவித்தல் ஒருதலையான் வேண்டுமென்பது தாற்பரியமாயிற்று. மேற்கோளின்கண் இவ்விடங்களை என்னாது இவ்விடங்களின் என வேற்றுமைப்படுத்தோதியதூஉம்1 இஃதுணர்ந்து கோடற் பொருட்டு. இதனானே, எய்தாதது எய்துவிப்பதூஉம், எய்தியது இகந்துபடாமற் காப்பதூஉம், எய்தியதனை ஒருமருங்கு மறுப்பதூஉம் என்னும் விதி மூன்றனுள், இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது என்பது போந்தவாறு உணர்க.2 வாறு உவமவுருபுபட நின்றது. முதலானவற்றை என்பது உருபுமயக்கம்.3 உதாரணம் அதுவிது வென்ற ததுவல்லான் கண்டார்க் கதுவிது வென்றதையு மல்லான் - பொதுவதனில் அத்துவித மாத லகண்டமுந் தைவமே அத்துவிதி யன்பிற் றொழு4 என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், முதல்வனுக்கு அவ்வியல்பு எல்லாப் பொருட்கண்ணும் உண்மையின் அவற்றுள் இவ்விடயங் களின் மாத்திரையே வழிபாடு விதித்தது என்னை என்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று., (இ-ள்) கண்டார்க்கு - முதல்வன் உயிர்ப்பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றினும் நிற்கு நிலைமை அறியப் பெற்றோர்க்கு; அது இது என்றது அல்லான் - கண் அருக்கன் போல் அதுவும் இதுவுமெனப் பக்கிசைத்து ஓதப்பட்ட1 பேத நிலைமையனும் அல்லனாய்; அது என்றது அல்லான் - உடலுயிர் போல் அதுவே என்று ஓதப்பட்ட அபேத நிலைமையனும் அல்லனாய்; அது இது என்றதையும் அல்லான் - குணகுணி போல் அதுவாகிய இது என்று பக்கிசையாமல் ஓதப்பட்ட பேதாபேத நிலைமையனும் அல்லனாய்2; பொதுவதனில் அத்துவிதம் ஆதல் அகண்டமுந் தைவமே - அறிவொளிபோல் அம்மூன்றற்கும் பொதுமையான் அத்துவித நிலைமையன் ஆதலான் எல்லாப் பொருள்களும் அவன் வடிவேயா மாயினும்; அத்துவிதி அன்பின் தொழு - அவ்வத்துவித சித்தாந்தத்தைப் பெற்றுடையோய்! அவற்றுள்ளும் அன்பு விளையுமிடத்தில் வழிபடுவாயாக எ-று. அதுவிது என்றது முன்னையது உம்மைத் தொகை1; பின்னையது இருபெயரொட்டுப் பண்புத்தொகை.2 அல்லான் என்பதனை மேலும் கூட்டி, என்றது என்பதனை அதுஎன்றதோடும் கூட்டியுரைக்க. அல்லான் என்பது முற்றெச்சக் குறிப்பு.3 என்றதை ஐயீற்றுடைக் குற்றுகரம்.4 உம்மை இறந்தது தழீஇயிற்று. பொதுவது என்னும் அது பகுதிப்பொருள் விகுதி. தைவம் என்னும் சொல்லியல்பு5 மேலேயுரைத்தாம். ஏகாரந்தேற்றம். ஆயினும் என்பது சொல்லெச்சம். அன்பு ஆகுபெயர்.6 ஏழாவது விரித்துரைக்க. 7.“திருக்கோயி லுள்ளிருக்குந் திருமேனி” யினன்றி “எங்கும் உருக்காண வொண்ணாத பால் முலைப்பால் விம்மி ஒழுகுவதுபோல் வெளிப்பட்டருளுவ” தாகி அடிப்பட்டு வரும் அன்பு விளையா மையின் ஆண்டுச் செய்யும் வழிபாடே அத்துவித ஞானத்தை நிலைபெறுத்தற் பயத்தது என்பார், அத்துவிதமாதல் அகண்டமுந் தைவமே என அனுவதித்து அத்துவிதி யன்பிற் றொழு என்றார். அத்துவிதி என்னும் அண்மை விளி பயனுணர நின்ற குறிப்புப் பெயர். இதனானே விதிக்குப் பயன் கூறியதூஉமாயிற்று. இனி அது இது என்பன அருவுருவாகிய திருமேனி எனக்கொண்டு அதற்கியைய உரைப்பாருமுளர்:8 அவர் அன்பின் என்றதனை ஏதுப்பொருட்கண் வரும் ஐந்தனுருபேற்ற இயற்பெயராக வைத்துரைப்ப.1 உதாரணம் வினையா லசத்து விளைதலான் ஞானம் வினைதீரி னன்றி விளையா - வினைதீர ஞானத்தை நாடித் தொழவே யதுநிகழும் ஆனத்தா லன்பிற் றொழு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அசத்தாயுள்ள வன்ன பேதங்களை அசத்தென்று கண்டு ஒருவவே ஞான சொரூபம் உளதாய் அத்துவிதத்தைஉணர்த்துமாகலான்2 அதன்பொருட்டு வழிபாடு வேறு விதித்தல் எற்றுக்கு என்பாரை நோக்கி அதனை வலியுறுத்துதல் நுதலிற்று. (இ-ள்) வினையால் அசத்து விளைதலான் வினை தீரின் அன்றி ஞானம் விளையா - உடம்பின் கண்ணதாகிய பிராரத்த வாசனை உயிரைத் தாக்குவதாய் உள்ள துணையும் அதனான் வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றிக் காட்சிப்படும் மண்முதன் மாயைகளும் அவைபற்றி நிகழும் விபரீத உணர்வும் ஆகிய அசத்துக்கள் ஒருவிய வழியும் வந்து கூடி மேம்படுவன வாகலான், அவ்வளவிற்கு எல்லாம் மூலமாகிய பிராரத்த வாசனை பற்றறக் கழிந்தாலன்றி அவ்வசத்தைக் கீழ்ப்படுத்து மெய்யுணர்வு மேம்படுதல் கூடாதாகலின்3; வினை தீர ஞானத்தை நாடித் தொழவே அது நிகழும் - அவ்வாசனை பற்றறக் கழிதற் பொருட்டு அம்மெய்யுணர் வுடையாரை நாடி வழிபடவே அவ்வினை நீங்கி மெய்யுணர்வு மேம்பட்டு நிகழும்; ஆனத்தால் அன்பின் தொழு- ஆகலான் அன்பினால் அவரை வழிபடுவாயாக1 எ-று. அசத்தை யொருவிய வழி உளதாகிய ஞானசொரூபம் நிலைபெறுதல் அவ்வசத்தினது விளைவிற்கு வேராகிய வினைத் தீர்வின் கண்ணதாகலான், அவ்வினை வேரறுத்து மெய்யுணர்வை நிலைபெறுத்துதற் பொருட்டு அதனை அங்ஙன நிலைபெறுத்தினார் மாட்டுச் செய்யும் வழிபாடு ஒருதலையான் வேண்டப்படும் என்பதாம்2. அற்றேல், அதன்பொருட்டு ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்கவென்ற அதுவே அதற்கு அமையுமெனின், அஃதொக்கும்; அவ்வுச்சரிப்பும் இவ்வழிபாட்டை இன்றி யமையாது என்க. அற்றாகலினன்றே, ஆண்டு அஞ்செழுத்தால் எனவும், மண்முதல் நாளம் எனவும் அகத்து வழிபாட்டை உடன் கூறியதூஉ மென்பது. விளையாதென்னுந் துவ்விகுதி விகாரத்தாற் றொக்கது1. பின் வந்த ஞானம் ஆகுபெயர்2. ஆனதனால் என்பது ஆனத்தாலென மரீஇயிற்று. உதாரணம் தன்னை யறிவித்துத் தான்றானாச் செய்தானைப் பின்னை மறத்தல் பிழையலது - முன்னவனே தானேதா னாச்செய்துந் தைவமென்றுந் தைவமே மானே தொழுகை வலி என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், அங்ஙனம் பயன்பற்றி விதிக்கப் படும் வழிபாடு, வேள்வி முதலியன போலப் பயன் வேண்டாமை யானாதல், பின்னர்ச் செய்து பெறுதும் என்றாதல் ஒரோவழி ஒழியவும் படுங் கொல்லோ வென்பாரை நோக்கி, அது செய்ய வழிப் படும் குற்றமும், செய்தல் கடமையாமாறும் உணர்த்தி விதித்தலை வலியுறுத்துதல் நுதலிற்று3. (இ-ள்) தன்னை அறிவித்துத் தான் தானாச் செய்தானைப் பின்னை மறத்தல் பிழை அலது - தன் உண்மையை அறியமாட்டாது குருடாய்க் கிடந்த உயிர்க்குப் பலவாற்றானும் அதனைத் தெரித்து உணர்த்தி எத்தனையும் எளிய அவ்வுயிரை எத்தனையும் அரிய தானாம் வண்ணம் செய்தளித்த பெரியதோர் உதவியை அதன் பின்னர் மறக்குமாயின் அஃது இதற்கு முன் அறியாமையான் மறந்த குற்றம்போலத் தீர்திறன் உடையதோர் குற்றமன்றா கலானும்; முன்னவனே தானேதானாச் செய்தும் தைவம் என்றும் தைவமே மானே தொழுகை வலி - முதல்வன் அங்ஙனம் தான் தானேயாகச் செய்தாலும் இதுகாறும் தனக்குச் சுதந்திரமின்றி முதல்வனது உபகாரத்தை இன்றியமை யாதாய் அடிமையாகிய உயிர் எக்காலத்தும் அவ்வாறு அடிமை யேயாம் ஆகலானும் தான் தானாச் செய்தளித்த அப்பெரியோனை வழிபடுதலே அவ்வுயிர்க்கு வலியாவது1 எ-று. தமது முதல் தானே குருவாகலின் தான் தானாச் செய்தானை என்றும், முன்னை மறந்த குற்றம் அறியாது நிகழ்ந்த தாகலிற் கழுவப்படும், இஃது அதுபோற் கழுவப்படுவது அன்று என்பார் பின்னை மறத்தல் பிழையலது என்றும் கூறினார். பின்னை மறத்தல் என்றதனால் முன்னை மறத்தல் பெறப்பட்டது.2 “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்னும் கருத்துநோக்கிக் கூறியதூஉமாம். அலதும் எனப் பாடமோதி இது பிழையாதல் அன்றியும் என்று உரைப்பாரும் உளர்.3 ஏகாரம் முன்னையது அசைநிலை; பின்னையன தேற்றம். செய்தாலென்பது செய்தெனத் திரிந்தது4. உம்மை சிறப்பின்கண் வந்தது. தான் தானாச் செய்தல் எதனையெதனைப் பற்றினும் அதுவதுவாம் உயிரை, தன்னை அறிந்தவழி எண்குணங்களான் நிறைந்து தன் வண்ணமாகச் செய்தல். அங்ஙனம் செய்த வழியும், “உயிர் தானும் சுகானுபவம் ஒன்றினுக்கே யுரித்து1” என்பார் தைவம் என்றும் தைவமே என்றார். தைவம் என்னும் சொல்லியல்பு2 மேலே உரைத்தாம். மானை என்னும் இரண்டனுருபு விகாரத்தால் தொக்கது. மான் என்பது வடசொற்றிரிபு. சுட்டு வருவிக்க3. வலிதருவதனை வலியென்று உபசரித்தார்4. இவ்வுதாரணங்கள் மூன்றானும், வழிபாட்டிற்கும் இடத்து நிகழ்பொருள் மாத்திரையே அன்றி இடவிசேடமும் பெறல் வேண்டும் என அதனை வலியுறுத்து முகத்தானே, முறையே சிவலிங்கத்தையும் சிவபத்தர் வேடத்தையும் சிவதேசிகர்களையும் அறிந்து வழிபடுமாறு கூறப்பட்டது. உதாரணம் சிவமென்னு5 மந்ததர சிந்தைநேர் நோக்கப் பலமின்றாங் கண்வா சகத்திற் - சிவமுண்டாம் ஒன்று மிரண்டு மலத்தார்க்கிங் கொண்குருவால் இன்றிந்நூன் மும்மை மலர்க்கு என்பது உதாரணம். என்னுதலிற்றோ வெனின், இங்ஙனம் சிவாகமத்துள் ஞானபாதப் பொருள் எல்லாவற்றையும் பொது உண்மை என்று இருவகைப்படுத்துப் பிரமாணவியல் இலக்கணவியல் சாதனவியல் பயனியல் என நான்கு இயலாக வைத்துப் போதிப்பதாகிய இச்சிவஞான போத நூலைக் கோடற்குரிய அதிகாரிகளாவார் இவரென்பது உணர்த்துதல் நுதலிற்று1. (இ-ள்) சிவம் என்னும் அந்ததர - தான் தானாச் செய்தவாற்றாற் சீவன் என்னும் இயல்பின் நீங்கிச் சிவமென்று ஓதப்படும் வேதாந்தத் தெளிவாகிய சித்தாந்தத்தையுடைய மாணவகனே; ஒன்றும் இரண்டும் மலத்தார்க்கு - ஒன்றும் இரண்டுமாய மலங்களையுடைய விஞ்ஞானாகலர்க்கும் பிரளயா கலர்க்கும்; சிந்தைநேர் நோக்கக் கண் வாசகத்தின் பவம் இன்றாம் சிவம் உண்டாம் - முறையே அறிவின்கண் நின்று அருட்பார்வையான் நோக்குதலானும் தேவகுருவாய் முன்னின்று செய்யும் திருநோக்கம் பரிசம் வாக்கெனப்படும் தீக்கையானும் பிறவிக்கேதுவாய பசுத்துவம் நீங்கிச் சிவத்துவம் விளங்கு மாகலான்; மும்மைமலர்க்கு இங்கு ஒண்குருவால் இன்று இந்நூல்2- அவரின் வேறாகிய மும்மலம் உடையவர்க்கே உரித்து இவ்வுலகத்து அனுபவமுடைய தேசிகராற் போதிக்கப்படும் இச்சிவஞான போதநூல்1 எ-று. அந்தம் வேதாந்தம், அந்ததரம் சித்தாந்தமாகலின்2, அதனைப் பெற்றாரது பெருமை கூறுவார் சிவமென்னும் அந்ததர வென்றார். என்னும் என்புழிப் படு சொல் தொக்குநின்றது3. சிந்தை அறிவு, கண்ணுருபு விரித்துரைக்க. நேர் நோக்குதல் முன்னை மருட்பார்வையை மாற்றி அருட்பார்வையான் நோக்குதல். நோக்க நோக்குதலானென்க. கண் வாசகங்களைக் கூறவே இனம் பற்றிப் பரிசமும் உடன் கொள்ளப்படும். பவம் ஆகுபெயர். இந்நூல் அநுபவமுடைய தேசிகனாலன்றி விளங்காதென்பார் ஒண்குருவால் என்றார் போதிக்கப்படும் என்பது அவாய் நிலையான் வந்தது. இன்றிந்நூல் என்பது இந்நூலென்னும் பொருட்டு, இக்காலத்து உரைக்கப்படும் நூலெனினும் அமையும். அது “தானுரைத் தான்... இன்று4” என வருகின்ற வெண்பாவாற் கூறியவாற்றானும் அறிக. மும்மை என்றது ஈண்டு எண்ணின்மேல் நின்றது. “தெரிமாண் டமிழ்மும்மைத் தென்னம் பொருப்பன்1” என்புழிப் போல. பன்னிரண்டாஞ் சூத்திரம் முடிந்தது. சிவஞான போத மூலமும் சிற்றுரையும் முற்றுப்பெற்றன. சிறப்புப்பாயிரம் எந்தை சனற்குமர னேத்தித் தொழவியல்பான்2 நந்தி யருள்செய்த ஞானநூல் - சிந்தைசெய்து தானுரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாமுணர ஏதுதிருட் டாந்தத்தா லின்று3. 1. Annual Report of the South Indian Epigraphy, Madras. No. 286 of 1927-8. 2. Annual Report of the south Indian Epigraphy. Madras. No. 178/ 1935-6. 3. Ibid 63/27; 463/1929 -30. 1.Ibid A .R. No. 250 of 1928-9. 2.Ibid A. R. No. 235 of 1928-9. 3.Ibid A. R. No. 238 of 1928-9. 1.Ibid A. R. No. 53 of 1918; 235 of 1928-9. 1. சோகம் என்பது சிவோகம் என்பதன் திரிந்த முடிபு. 1. சிவப். மதுரை.பக். 27. 2. A.R.No.493 of 1918. 1. இருபா. 19. 1. Madras Epigraphy. Annual Report No. 485 of 1902. 1. Ibid A R. for 1917. para. 35-8. 2. Ibid A. R.207 of 1936-7. 3. Ibid 485 of 37- 8. 4. Ibid 642 of 1904. 5. Ibid 485 of 1937-8. 6. Ibid 206 of 1936-7. 7. Ibid 206 of 1936-7. 8. Ibid 5 of 1915. 9. Ibid 180 of 1935-6. 10. Ibid 56 of 1927. 11.Ibid 380 of 1916. 12. Ibid 202 of 35-6. 1.Ibid A.R. 475 OF 1917. 1. Ibid.334 of 1925. 2. Ibid.172 of 1931. 3. Ibid. 373 of 1919. 1, பெரிய பு. கூற்று. 4. 2. பெரிய பு. கூற்று. 6. 3. திருத்தொண். அந். 47. 4. தொண். ம. சத. 26. 1. த. நா. சரிதை. 130. 1. S.I.I. vol. vii. No. 460-1. 2. A.R. No. 221 of 1928-9. 1. Ibid. No.297 of 1913. 2. Ibid No. 339 of 1925 3. Ibid. No. 494 of 1909. 1. A.R.No. 218 of 1920. 2.Ibid. No.373 of 1913. 3. Ibid. 264 of 1911. 1.உத்தண். கோவை. 221. 2. த.நா.சரிதை. 196. 3.உத்தண். கோவை. 257. 4. A. R. No. 222 of 1916. 1. Ibid. 627-8 of 1904. 2.சாசனத் தமிழ்க் கவிகள் சரிதம் பக். 146. 3. இருசமய. நகரப். 4,6. 4.தமிழ் நாவலர் சரிதை. 227. 1.A.R. for 1908. para. 25. 1. செய்கை, தொழில் என்பவைகளை வினை யென்று வழங்குவது தமிழ் நூல் வழக்கு. 1.சைவாகமங்கள் காமிகம் முதலாக இருபத்தெட்டு வகைப்படும் அவை, காமிகம், யோகசம், சிந்தியம்,காரணம், அசிந்தம், தீபிதம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுயம்பு, ஆக்கிநேயம், வீரம், இரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோத்தமம், பாரமேச்சுவரம், கிரணம், வாதுளம் என்ற இருபத்தெட்டுமாம். 2.நாற்பாதங்கள்: சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன; “திருமிகு ஞானம், இலங்கொளி யோகம் நலங்கிளர் கிரியை, சரியை யென்ற விரிதரு பாதம்” (ஞானா. 7) என்று வாகீச முனிவரும் கூறுவர். 1. இக்கருத்து, “எந்தை சனற்குமரன் ஏத்தித் தொழவியல்பாய், நந்தியுரைத்தருளும் ஞான நூல்- சிந்தை செய்து, தானுரைத்தான் மெய் கண்டான்” எனவரும் வெண்பாவிலும் காணப்படுகிறது. இவ்வெண்பா சிவஞான போதத்தின் இறுதியில் உள்ளது. இதனைச் செய்தவர் இன்னாரெனத் தெரியவில்லை. 2. வெண்ணை, வெண்ணெய் நல்லூர் என்பதன் மரூஉ. சுவேதவனன், வெண்காடன் என்னும் தமிழ்ப்பெயரின் வடமொழி பெயர்ப்பு. 3. “பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதாநந் தப்பொருளாம். மெய் காட்டும் மெய்கண்டாய்!” (உண். விளக்.1) என்று சான்றோர் கூறுதல் காண்க. 4. இப்பாயிரத்தைப் பாடியவர் அருணந்தி தேவ தம்பிரானென்று பாண்டிப் பெருமாள் விருத்தி கூறுகின்றது. 5.முருகு. 2. நச்சி. உரை காண்க. 6.சத்த தாதுக்கள்: தோல், உதிரம், இறைச்சி,மேதை, என்பு, மச்சை, சுக்கிலம் என்ற ஏழுமாம். 7. ஆன்மாவென்றது பொதுச்சொல்லாகலின், பரமான்மாவும் கொள்ளப்பட்டது. 1.கண்ணுதல்-கருதுதல்: “கண்ணி நீ கடிகொண்டார்” (கலி. 71) என்றாற்போல. 2. பெரும்பெயர்க் கடவுள், பெரும்பெயரால் எடுத்தோதப்படும் முதற் கடவுளென்றும், பெரும்பெயரென்பது மகாவாக்கிய மென்பதன் மொழிபெயர்ப்பென்றும் உரையாசிரியர் கருதுவது காண்க. “பெரும்பெயரெனினும் மகாவாக்கியமெனினும் ஒரு வார்த்தை யெனினும் ஒக்கும்” - சிவஞான பாடியம். ஈண்டிய பெரும்பெயர் என முடிக்க. 3. “சிவஞானமெனப் பொதுப்படக் கூறினும் தலைமைபற்றி ஞானபாதமே கொள்ளப்படும்”. ஞான பாதத்திற்குத் தலைமை, “கிரியை யென மருவுமவை யாவும் ஞானம் கிடைத்தற்கு நிமித்தம்” (சிவப். 10) என்பதனாலுமறிக. 4. இவ்வாறு இவர் உரைப்பதற்கு முன்னை நூல் ஆதரவு யாதும் இதுகாறும் கிடைக்கவில்லை. 1.மயர்வறுதற் பொருட்டு அளித்த சிவஞான போதம் என்பது உவமேயம். 2. பொருளைப் பிண்டமாய்க் காண்பது நிருவிகற்பக் காட்சி. அதனைப் பெயர், சாதி, குணம், தொழில், பொருள் எனப் பகுத்துக் காண்பது சவிகற்பக் காட்சி ( சிவ. சித். அள.3.) 3.அனுபூதியெனினும் அனுபவமெனினும் ஒன்றே. 4. நாடுதல், ஆராய்தல்; ஆராய்ச்சிக்குரியது அனுமானவளவையாகும். 5.அனுபவம், கண்டறிதல்; ஆகவே, கண்டென்பது அனுபவத்துக் குரித்தாதல் பெறப்படுகிறது. 1.பொதுவியல்பு சிறப்பியல்பு என்ற இவ்விருவகை யியல்பு. 2.“ஏவம் வித்யாச் சிவஞ்ஞான போதே சைவார்த்த நிர்ணயம் ”. (சூ. 12.) (இவ்வாறே சிவஞானபோதமென்னும் (தமிழ்) நூலில் சைவாகமங்களின் பொருள் நிச்சயத்தை அறிக). ஞானபாதப் பொருண்மையை இருவகைப்படுத்துப் போதித்தற்காக இச்சிவ ஞானபோதம் இரௌரவாகமத்தின்கண் எழுந்தது என்றும், இதனை மெய்கண்டதேவ நாயனார் தமிழுலகம் உய்தற் பொருட்டு மொழிபெயர்த்தாரென்றும் உரைகாரர் காலத்தவர் கருதினர்; மெய்கண்டதேவர் செய்த இத்தமிழ்ச் சிவஞானபோதம் மொழிபெயர்ப்பன்று, முதனூலேயாம் என்றும், வடமொழிச் சிவஞானபோதம் இத்தமிழ்ச் சிவஞானபோதத்தை முதனூலாகக் கொண்டெழுந்த மொழிபெயர்ப்பு என்றும் இக்காலத்து ஆராய்ச்சி மறுக்க முடியாத சான்றுகளால் நிறுவிவிட்டது. 3.உயர்சிவஞானபோதம் என்றது. 4. “கண்ட நூலோதி வீடு காதலிப்பவர்கட் கீசன், புண்டரிகத் தாள் சேரும் பரிசினைப் புகல லுற்றாம்” என்று அருணந்தி சிவனார் (சிவ. சித்.3) கூறுவது காண்க. 1. ஆனந்தரியமாவது, இன்னது கேட்டபின்பு இன்னது கேட்க வேண்டுமென்னும் முறைமை யுணர்த்துவது. பின்னென்னும் பொருளதாகிய அநந்தரம் என்பது ஆனந்தரியமென வந்தது. 1.சாக்கிரத்தே அதீதமாவது, “பொற்புறு கருவியாவும் புணராமே யறிவி லாமைச் சொற்பெறும் அதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற சிற்பர மதனா லுள்ளச் செயலறுத் திடவு திக்கும் தற்பர மாகி நிற்றல் சாக்கிரா தீதந்தானே” (சிவப். 80) என்பது காண்க. 2. கல்லால் - கல்லாலமரம். 1.மலைவு -மயக்கம். 2.“தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக், கூடலை நீ யேகமெனக் கொள்” (திருவருட்பயன். 8:4) 3.மூவகை வாழ்த்து: வாழ்த்து, வணக்கம், பொருளியல் புரைத்தல் என மூன்றாம். இனி இம் மங்கல வாழ்த்துக்கு நூல்நுதல் பொருளெல்லாம் குறிப்பால் தன்னகத்தடக்கி நிற்றல் இலக்கணம் என்பர். இதனால் “இது கல் என்பது முதல் ஏ என்பதிறுவாய்ப் பன்னிரு சொற்களாற் கூறவே இந்நூல் பன்னிரு சூத்திரத்தாற் செய்யப்பட்ட தெனவும், அவற்றுள் மும்மூன்று சொற்கள் ஒவ்வோரடியாக வைத்து நான்கடியாகக் கூறவே, இந்நூலும் அவற்றுள் மும்மூன்று சூத்திரம் ஒவ்வோரியலாக வைத்து நான்கியலாற் செய்யப்பட்ட தெனவும், அவற்றுள் முன்னீரடியும் ஒரு வினைமுடிபும் பின்னீரடியும் பிறிதோர் வினைமுடிபுமாக இருவகைப்படுத்துச் செய்யவே, முன்னாறு சூத்திரமும் ஓரதிகாரமும், பின்னாறு சூத்திரமும் வேறொரதிகாரமுமாக இந்நூல் இரண்டதிகாரத்தாற் செய்யப்பட்ட தெனவும் குறிப்பான் உணர்த்தியவாறு காண்க. இரண்டாமோத்தின் முதற் சூத்திரம் ‘இதுவுமது’ என முதலோத்தின் இறுதிச் சூத்திரத்தோடு மாட்டெறியப்படுவது என்பது உணர்த்துதற்கு மலைவு என்பதனை ஈரடியினும் சாரவைத்தார்; கல்லால் நிழல் என முதலடியில் இடங்கூறவே முதலோத்துப் பிரமாணம் கூறுவதென்பதூஉம், இரண்டா மடியில் மலைவில்லா ரருளிய வெனச் செய்கை கூறவே இரண்டாமோத்து இலக்கணம் கூறுவதென்பதூஉம், மூன்றா மடியில் பொல்லார் இணைமலர் எனத் திருவடி கூறவே மூன்றாமோத்துச் சாதனம் கூறுவதென்பதூஉம், நான்காமடியில் நல்லார் புனைவர் எனப் பேறு கூறவே நான்காமோத்துப் பயன் கூறுவதென்பதூஉம் குறிப்பாற் பெறப்படும். பிறவும் இவ்வாறு ஓர்ந்துணர்க. இங்ஙனம் நூனுதல் பொருளெல்லாம் குறிப்பால் தன்னகத்து அடக்கி நிற்றல் மங்கலவாழ்த்துக்கு இலக்கண மென்றுணர்க” என்று சிவஞான பாடியம் கூறுகிறது. 1.பொல்லார், பொள்ளார் என்பதன் மரூஉ; “பொள்ளார் பொல்லார் என மரீஇயற்று; சுயம்புமூர்த்தி யென்பதாம்” - சிவஞான பாடியம். 2.“இன்மை பொருட்கு மறுதலையாதலின், பொருளின்கட் கிடக்கும் பண்பெனப் படாது” (தொல். சொல். 214) எனச் சேனாவரையர் கூறுவராயினும், இவ்வுரைகாரரான சிவஞான முனிவர் “அபாவமாவது (இன்மையாவது) பாவம் போலப் பாவப் பொருளின் தன்மையேயன்றி வேறன்று” எனவும், “பாவப் பொருளின் புலனாகாமையே அபாவமென்னும் சொற்குப் பொருள் என்பது சித்தாந்தம்” எனவும் கூறுவதால் இன்மையைப் பண்பெனக்கொண்டு பண்படியிற் பிறந்த பெயர் என்றார். 3. திருவாச. அம்மானை.20. 1.உலகாயதர் “உடம்பிற்கு வேறே உயிரென்பதும் பொய் வினை யென்பதும் பொய்; கடவுள் உண்டென்பதும் பொய்” என்பர். இவ்வாறே ஏனைச் சாங்கியர் புத்தர் முதலாயினார் கொள்கைகளைச் சிவஞான பாடிய அவையடக்கப் பகுதியிலும் சிவஞான சித்தி பரபக்கத்திலும் காண்க. 2.சிவாத்துவித சைவக் கொள்கைகளைத் திரு. செந்தினாதைய்யர் மொழி பெயர்த்த நீலகண்ட பாடியத்திலும், திரு. S.S. சூரிய நாராயண சாத்திரியார் எழுதிய ஸ்ரீகண்ட சிவாத்துவிதம் என்ற ஆங்கில நூலினும் காண்க. 3.சடமும் சித்துமாகிய எல்லாவுலகமும் வாசுதேவன் பரிணாமமே யென்பது இப்பஞ்சராத்திரத்தின் கொள்கை. 4.தத்துவம் இருபத்தைந்தாகக் கொண்டு, இருபத்தைந்தாந் தத்துவம் வாசுதேவன் என்றலின், அவற்றிற்கு மேல் பதினொன்றுகூட்டி முப்பத்தாறு தத்துவங்களைக் கொண்டு நிலவும் சித்தாந்த சைவத்தை நோக்கக் கீழ்ப்படும் அவ்வாசுதேவன், பரசிவத்தின் ஆணைவழி நின்று காத்தல்தொழில செய்பவனாதல் விளங்குதலின், “உடையானல்லாதானை உடையானென மயங்கிக் கோடலானும்” என்றார். 1.அவை - கூட்டம், தொகுதி. 2.நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாவன: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை என்ற ஐந்துமாம். இறுதிக்கண்ணதாகிய சாந்தியதீத கலையில் அடங்கிய புவனங்களை ஒடுக்கும் (சங்கரிக்கும்) சதாசிவரை அதிட்டித்து (இடமாகக்கொண்டு) நிற்கும் பரமசிவனை இங்கே வினைமுதலாயுள்ள முதல்வன் என்று உரைக்கின்றார் எனவறிக. இவ்வைவகைக் கலைகளிலும் புவனங்கள் உண்டு. நிவிர்த்தியில் நூற்றெட்டும், பிரதிட்டையில் ஐம்பத்தாறும், வித்தையில் இருபத்nம், சாந்தியில் பதினெட்டும், சாந்தியதீதையில் பதினைந்துமாகக் கூறுப. (சிவஞான பாடியம்: சூ.2. அதி.3). 1.உரைவகை, பிண்டப் பொழிப்பும், கண்ணழித்துரைக்கும் பொழிப்பும் என வருவன. “இங்ஙனம் பொழிப்புரை இருவகைப்படுமென்பது, “பொழிப்பெனப் படுவது பொருந்திய பொருளைப் பிண்டமாகக் கொண்டுரைப்பதுவே” எனவும், ‘பாடம் கண்ணழி வுதாரண மென்றிவை, நாடிற் றிரிபில வாகுதல் பொழிப்பே’ எனவும் ஒதியவாற்றானறிக” என்பது சிவஞான பாடியம். 2.கண்ணழித்துரைக்கும் பொழிப்புரை - பொருள் நிற்கும் சொல்லும் சொற்றொடரும் அறிந்து, பகுத்தெடுத்து உரை கூறுவது; ஈண்டுக் காட்டியிருக்கும் பொருள் வகையே அது. 1.அவைகள் என்றுபொருள்கொண்டால். 2ஆக்கச்சொல் வருவித்துரைத்தல்: அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியாய் ஒடுங்கியினின்றும் மலத்தால் உளவாம் என்று உரைத்துக் கொள்வது. 3.தோற்றிய - தோற்றுவித்த. 4.தோன்றுமாறு செய்தற்குரிய முதல்வன்; உரையில் “ஒருவனால்” என்று ஒரு சொல் வந்திருப்பது காண்க. 5.செய்த பெட்டி என்றால் செய்த என்னும் பெயரெச்சம் செய்யப்பட்ட பொருளாகிய பெட்டியென்னும் பெயர்கொள்ளும். இங்கே பெட்டியென்பது செய்த என்ற பெயரெச்சத்தை நோக்க, செயப்படுபொருட் பெயராகிறது. இவ்வாறே, தோற்றிய திதியென்பதில் திதி, தோற்றுவிக்கப்பட்ட பொருளாய், தோற்றிய என்பதை நோக்க, செயப்படு பொருட்பெயராதல் அறிக. 1.அவ்விரண்டுமாவன: வினையுடைமை, உள்பொருளாதல் என்ற இரண்டும். 2.நிமித்தகாரணன் - செய்பவன். 3.திதியே என்ற விடத்துள்ள ஏகாரம். 4.ஒடுங்கி என்பது சுமைதாங்கி முள்வாங்கி என்பவற்றைப் போலும் இகர வீற்றுப்பெயர். ஒடுங்கு+இ. இகரம் ஒடுக்கத்தைச் செய்யும் வினைமுதற் பொருண்மை யுணர்த்தும் விகுதி. இதுபோலவே “அமர்தாங்கி” “புகழ்வேண்டி” என்று மக்கட்குப் பெயருண்மை கல்வெட்டுக்களால் ( S. I. Vol.V. 585.641) தெரிகிறது. 5.ஒடுங்கியென்பதன் ஈற்றில் இன்னுருபும், மலத்து என்பதன் ஈற்றில் ஆலுருபும் தொக்கி நிற்கின்றன. 6.உபசாரமாவது: காரணகாரியங்கள், குணகுணிகள், பொருள் வினைகள், பொருளிடங்கள், சினைவினை முதல்வினைகள், பண்பு புலன்கள் ஒன்றினொன்று மாறிவரும் இலக்கண விசேடம். (பிரயோக.48) 7.இவ்வாறே, “அகரமுதல” என்ற திருக்குறளுரையில் பரிமேலழகரும் கூறுவர். இதுவே இச்சூத்திரக் கருத்தென்பதை, அருணந்தி சிவனார், “ஒருவனோ டொருத்தி யொன்றென் றுரைத்திடு முலக மெல்லாம், வருமுறை வந்து நின்றுபோவது மாதலாலே, தருபவனொருவன் வேண்டுந் தான்முத லீறுமாகி, மருவிடு மனாதி முத்த சித்திரு மன்னி நின்றே” (சிவசித்தி. சூ. I. 1) என்றும், உமாபதி சிவனார், உலகமெலாம் ஒருவனோ டொருத்தி யொன்றென் றுளதாகி நின்றளவி லொடுங்கும் பின்னும், மலமதனா லுளதாகும் உருவமாறி வருவது போவது செல்வ தாதலானும், அலைவிலசே தனமாயை யாதலானும் அணுக்களுரு வடையுமறி விலாமையானும் நிலவு தொழில் மருவியுரு நிற்றலானும் நின்றெவையு மளித்திடுவன் நிமலன்றானே” (சிவப்.16) என்றும் கூறுதலாலும் விளங்குதல் காண்க. 8.கருத்துரையுள், “சங்காரகாரணனாயுள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம்” என்று கூறியது. 1.சூத்திரமெல்லாம் ஒரு பொருளே நுதலிவரவேண்டு மென்பது இலக்கணம் - சேனாவரையம் சூ.1 2.அதிகரணம் - இடம். 3.முதற்கூறு: ‘அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்” என்பது. இதற்குப் பொருள் “ஈண்டு உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது.” மீமாஞ்சகரும் உலோகாயதரும் காணப்பட்ட பிரபஞ்சம் நித்தமென்பவ ராதலால், “உளதாய்ச் சுட்டப்பட்ட பிரபஞ்சம் ” என ஆசிரியர் மேற்கொண்டு உரைக்கின்றார். 1.இதற்கு ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர் கூறிய பதவுரையுண்டு: ஈண்டு - இம்மூன்று அதிகரணங்களின் வைத்து இம் முதலதிகரணத்துள்; ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் - ஒருவனென்றும் ஒருத்தியென்றும் ஒன்றென்றும் இவ்வாறு அவயவப் பகுப்புடைத்தாயும் பல வேறு வகைத்தாய்ச் சடமாயும் முயற்கோடு முதலியன போலத் திரிபுஜயங்களா னன்றி மெய்யாகச் சுட்டியறியப் பட்ட பிரபஞ்சம்; உற்பத்தி திதி நாசம்உடைத்து என்றது - இம் மூன்றேதுவானும் தோன்றி நின்று அழிதலையுடைத்து என்றவாறு.” 2.இப்பிரபஞ்சம் மூவினையுடையது என்பதற்கு மேலே ஏது கூறுகின்றாராயினும், “ஒருவன் ஒருத்தி ஒன்றென்று சுட்டப்பட்ட” என்ற விசேடணமே மூன்று ஏதுக்களை யுடைத்தாய், மேற்கோளைச் சாதித்து நிற்கின்றது; விசேடணமாவது விசேடித்தலோடு அமையாது ஏதுவாகவும் நிற்ப உரைத்ததுபற்றி “உடம் பொடு புணர்த்தோதினார்” என்றார். உடம்பொடு புணர்த்தலாவது, விதியல்லாதது விதிபோல மற்றொரு வழிச் செல்லத் தொடுத்துரைப்பது; இதனை ஆசிரியர் பேராசிரியர் கூறுவது (தொல்.666) கொண்டறிக. 3.மீமாஞ்சகரும் உலோகாயதரும் என்று முன்னே கூறி, ஈண்டு உலோகாயதரைக் கொண்டது. அம்மீமாஞ்சகர் கருதலளவையை மேற்கொள்பவராதலால். ஈண்டுக் கூறப்படும் கடாவிடைக் கருத்தையே, அருணந்தி சிவனார் “உதிப்பது மீறுமுண் டென்றுரைப்ப திங்கென்னை முன்னோர், மதித்துல கனாதியாக மன்னிய தென்ப ரென்னின், இதற்கியான் அனுமானாதி யெடேனிப் பூதாதி யெல்லாம், விதிப்படி தோற்றி மாயக் காணலான் மேதினிக்கே” (சிவ. சித்தி. 1:2) என்று கூறுகின்றார். 1.உள்ளது - காணப்பட்ட திதிப்பொருள், 2.அறியப்படாத என்னும் செயப்பாட்டு வினை ஈண்டு அறியாத எனச் செய்வினைப் பொருட்கண் வந்தது. இவ்வாறு வழங்கும் வழக்குச் சில உரையாசிரியர்பால் காணப்படுவதுண்டு. 1.பூதாதியென்பது பூதமுதற் காரணமாகிய பிரபஞ்சம் என விரிவதால், அன்மொழித் தொகை யெனப்பட்டது. 2. என்றும் அன்று உண்டு என்றவிடத்து, பூதாதிக்கு என விரிந்து நின்ற நான்கனுருபு, பூதாதிக்கும் உண்டென இயைதலால், “பின்னரும் சென்று இயையும்” என்றார். 3. சிவ. போ .சூ. 11. அதி. 1. “ஐந்தினையும் ஒன்றொன்றாப் பார்த்துணர்வ துள்ளமே” -உள்ளம் ஐம்புலன்களையும் ஒக்க வுணராது ஒன்றொன்றாய் அறிந்து அனுபவிக்கும் என்பது இதன் பொருள். 4. “சொல்லெ னெச்சம் முன்னும் பின்னும் சொல்லள வல்ல தெஞ்சுத லின்றே” (சொல். 441) என்பது தொல்காப்பியம்; “சொல்மாத்திரம் எஞ்சுவதல்லது தொடராய் எஞ்சுதலின்று” என்பர் சேனாவரையர். 5. சிவ. சித்தி. சூ. 1: 9. 6. சொற்பல்குதல் என்பது குற்றம். “அங்ஙனம் கூறவே, சொற் பல்குதல் என்னும் விடைவழுவாம்” (நன். 376 உரை) என்று நன்னூல் விருத்தியுரை கூறுவது காண்க. 1.அவ்விரண்டாமதிகரண மேற்கோளில், “இல்லதற்குத் தோற்ற மின்மையின்” என்ற எதுவுக்கு உலகம் உள்ளது என்று ஒரு மேற்கோளும், “உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின்” என்ற ஏதுவுக்கு உலகம் செய்வோனையுடத்து என ஒரு மேற்கோளும், “ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை” யென்ற மேற்கோளுக்கு, ஆண்டு ஒடுங்குதலின் என ஏதுவும் உரைகாரரே வகுத்துக்கொண்டு இவ்வதிகரணப் பொருளை விளக்குகின்றார். 2.இச்சார்பிற்றோற்றக் கேடுகளை மணிமேகலை, பவத்திறமறுகெனப் பாவை நோற்றகாதையிற் காண்க. “சார்பினில் தோன்றும் எல்லாம் தருபவ னில்லை யென்னில், தேரின் இல்லதற்கோ தோற்றம் உள்ளதற்கோ நீ செப்பாய், ஓரினில்லதுவுந் தோன்றா துள்ளதே லுதிக்கவேண்டா, சோர்விலா திரண்டுமின்றி நிற்பது தோன்று மன்றே” (சிவ.சித்தி. 1:45) எனப் புத்தரில் சவுத்திராந்திகர் முதலியோர் கூறுவர் என்பது காண்க. 3.ஈண்டு ஆசிரியர் சிவஞான முனிவர் உரை கூறாமையின், சுப்பிரமணிய தேசிகரவர்கள், “மேற்சாதிக்கப்பட்ட முத்தொழிலுக்குரிய பிரபஞ்சம் உள் பொருளாம் என்க” என்று உரை கூறுவர். 1.முயற்கோடு இல்பொருளாதலின் இல்வழக்கென்றும், அதற்கு உற்பத்தி யில்லை யெனல் இல்லது சார்ந்த இல்வழக்கென்றும் மணிமேகலை கூறுகிறது; “இல்லது சார்ந்த இல்வழக் காகும், முயற்கோடின்மையின் தோற்றமும் இல்லெனல்” (மணி. 30 : 215- 6). 2.சாங்கியர் நிமித்த காரணமாய் ஒரு கருத்தா வேண்டா என்பர் என்பதைச் சித்தாந்த தீபிகையுடையாரும், “அறிந்தருள் ஈசன் வேண்டா ஆன்மாவே கட்டும் வீடும் செறிந்திடுமாகில் துன்பப் பெத்தந்தான் செய்ததென்னே” என்று சாங்கியமத நிராகரணத்துட் கூறுகின்றார். 3.“மேல் உள்பொருளெனச் சாதிக்கப்பட்ட பிரபஞ்சம் தொழிற்படுத்தும் நிமித்த காரணனாகிய முதற் கடவுளை யுடைத் தென்க” என்பது ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் உரை. 1.வாசுதேவனே பரம்பொருள்: “அவனிடத்தினின்றும் கண்ணனும் அநிருத்தனும், மகரத்து வசனும், இரௌகிணேயனும் என நால்வர் உலகங்களைப் படைத்தற் பொருட்டுத் தோன்றினர்” என்பது இப்பாஞ்சராத்திரத்தின் கொள்கை. இஃது ஐந்து இரவில் செய்யப் பட்டதுபற்றி, “பாஞ்சராத்திரம்” எனப்பட்டது என்பர். “சமராகிப் பின்னருமாய் வாசுதேவர் தாமுதலாம் இறைவர் அவர் நால்வரென்றாய்” - சித்தாந்த தீபிகை. 2.சங்காரமென்பது சங்காரத்தைச் செய்யும் கருத்தாவைக் குறித்தலால், ஆகுபெயராயிற்று. உலகம் ஒடுங்குதற்கு அக்கருத்தா இடமாதலால், “இடப்பெயர்” என்றார். 3.“ஒடுங்கின சங்காரத்தினல்லது” எனவே, அவ்வொடுங்கின நிலைக்களமே, மீளத் தோன்றுதற்குமாம் என்னும் குறிப்பாயும், உற்பத்திக்கு “ஒடுங்கினது” ஏதுவாயும் நிற்றல்பற்றி, “குறிப்பேது” என்றார். 1.அவினாபாவம் - விட்டு நீங்காத்தன்மை; மட்குடத்துக்கும் மண்ணுக்கு முள்ள இயைபுபோல. 2. உள்ளதே காரியப்படும் என்பது சற்காரியவாதம். சத் - உள்ளது காரியம் -காரியப்படுதல். 3. “உலகினைப் படைத்தா னென்றா யொருவனிங் குள்ளதாயின், உலகினைப் படைக்க வேண்டா இல்லையேல் படைக்க வொண்ணா, துலகினுக் குபாதானந்தான் உள்ளதாய்க் காரியத்தாம், உலகினைப் படைக்கி லங்கு முளதில தாவதுண்டே” (சிவ. சித். பரபக். 84). 4. இலயித்தது - ஒடுங்கிய வுலகம்; இலயித்த தன்னில் - ஒடுங்குதற்கு இடமாகிய சங்கரா கருத்தாவினின்றும்; ஆம் - உளதாம் என்பது நேர்பொருள். 1. “மலத்தால்” எனவரும் ஏதுவுடன் இயைபு படுத்தற்கு, “அற்றேல்........... எற்றுக்கெனின்” என்பதை வருவித்துரைக்கின்றார். “மலத்தால்” எனப் பொதுப்படக் கூறவே, ஒடுங்குதற் கேதுவாகிய கன்மமல பரிபாகமும், மீளத் தோன்றற் கேதுவாகிய ஆணவ மல பரிபாகமும் கூறப்படுவது காண்க. 2. இலயித்தது இலயித்த தன்னில் ஆம்; மலத்தால் ஆம் என இயைக்க “மலத்து உளதாம்” என வரும் முதற் சூத்திரக் கண்ணழித்துரையிற் காண்க. “உயிரவை யொடுங்கிப் பின்னு முதிப்பதென் னரன்பா லென்னில், செயிருறு மலத்தினாகுஞ் சிதைந்ததே தென்னிற் சித்தத், தயர்வொழி காரியங்க ளழியுங் காரணங் கிடக்கும், பயில்தரு காரியம்பின் பண்டுபோற் பண்ணு மீசன்” (சிவ. சித்தி. 1:32) என அருணந்தி சிவனார் கூறுவது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. 3. எஃது எவ்வாறு என்றும் பாடம். 4. இலயித்தது இலயித்தவாறு உளதாகவேண்டும் என்பது அந்நியமம் 5. ஞானாமிர்தம் அகவ. 22. மிருகேந்திரம், பௌட்கர முதலிய சைவாகமங்களினும் சாந்தோக்கிய முதலிய உபநிடதங்களினும் காணப்படுதலின், ஞானாமிர்தத்தினும்” என்றுரைக்கின்றார். 1. இவர் புத்தரில் ஒரு சாராராகிய மாத்தியமிகர். “அவயவம் பொருளாய்த் தோன்றும் அவய மொழிந்தாற் பின்னை, இவை பொருளென்ன வேறொன் றிலாமையாற் பொருள்களின்றாம்” (சிவ. சித்தி. பரபக். 138) என்று இவர்கள் கூறுவர். 2.ஆருகதரை அநேகாந்தவாதிகள் என்பர். அவர்கள் உலகம் இல்லதும் உள்ளதுமாம் என்பர். சிவஞானபாடியத்துப் புறப்புறச் சமயத் திறுதியில் சூனியவாதி முதலிய பெயர் வேறுபாடு கூறப்படுதல் காண்க. 3. இக்கூற்றினை, மாபாடியம், “பாஞ்சராத்திரிகள் முதற்காரணத்தோடு இயைபு டைத்தாய்க் காரியந்தோன்றி அதன்கண் ஒடுங்கு மென்பதே பொருத்தமுடைத் தாகலின், உலகிற்கு முதற்காரணம் மூலப்பகுதியாகலான், மூலப்பகுதி வாசுதேவனே யாகலின், வாசுதேவன்பால் நின்றும் தோன்றி விரிந்த உலகம் ஆண்டு ஒடுங்கு மென்பதே பொருத்தமுடைத்து; பரமசிவன் நிமித்தகாரண மாத்திரையேயன்றி முதற்காரணமாமென நும்மனோர் கொள்ளாமையின் நிமித்தகாரணத்தில் ஒடுங்கு மென்றல் பொருந்தாதென்பர், ” என்று கூறுகிறது. 4. மூலப்பகுதி வாசுதேவனேயாகலின் அவனை, “மூலப்பகுதி வடிவாய திதிகருத்தா” என்றார். 1. மூலப்பகுதிக்கு மேலுள்ள புவனங்கள் வித்தியாகலையில் அடங்கிய அசுத்தமாயா புவனங்களும், ஏனைச் சிவம் சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்ற சுத்தமாயா தத்துவங்கட்குரிய, முறையே, பத்தும், ஐந்தும் , ஒன்றும், எட்டும், ஒன்பதுமாகவுள்ள புவனங்களுமாகும். 2. ஆம் அங்கு - ஆதற்கு (தோன்றுதற்கு)க் காரணமாகிய அச்சங்காரக் கடவுளிடத்து. 3. இது மாபுராண மென்னும் பண்டைத் தமிழ்நூற் சூத்திரம் என்று நச்சினார்க் கினியர் கூறுவர். (தொல். எழுத்து.6. உரை) இதன் கண், “செய்யுட்கள்............. அமையுமாம்” என்ற பகுதி உயிரளபெடையும், “மைதீரொற்று. ..... . .... . கொள்” என்ற பகுதி ஒற்றளபெடையும் குறித்து நிற்பது காண்க. 4. “ஒடுங்கின சங்காரத்தின்” என்ற விடத்தும் இவ்வாறே கூறுதல் காண்க. 5. இலயித்தது என்பதனுரையில் “ஒடுங்கியதாகலான்” என்ற ஏதுவும், “அவ்வொடுங்கிய வுலகம்” என்ற பெயர்ப் பொருளு முரைத்துக் காட்டினா ராதலின், “இலயித்த தென்றது . . . . . . . பெயர்” என்கின்றார். இலயித்ததென்ற இவ் வினைப்பெயர் ஏதுப் பொருள் பயந்து நிற்கிறதென அறிக. 1. சூக்குமமாய் நிற்குமதுவே முதற்காரணம்; அம்முதற்காரணமே மாயை யென்பது விளங்கும்; அதனால் “பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாகிய மாயையுண்மையும் பெறப்பட்டது” என்றனர். 2. ஆதல் என்னும் தொழிற்பெயரில் ஆ என்னும் முதனிலை (பகுதி) மட்டும் நின்று தொழிற் பெயரின் பொருளைத் தருதலால், “முதனிலைத் தொழிற்பெயர்” எனப்பட்டது. 1. விசேட வுரையில் “பொருளடை உவமையினும் சென்றியையும்” என்பதனால், தாரகமாம் என்னும் பொருளடை கூட்டி, தாரகமாம் மண் என்றுகொண்டு, “வித்துக் காதாரமாகிய நிலம்” என்று உரை கூறுகின்றார். 2. “உவமவினை பொருளினும் சென்றியையும்” என்றதனால், உவம வினையாகிய குளிர்ந்தவழி யென்றதற்கேற்ப, “அச்சத்தி சங்கற்பித்தவழி” என உரைக்கின்றார். 3. வித்தகர்க் கல்லா லரிது” (குறள். உஙரு) என்பதன் உரையில், வித்தகர் என்பதற்குப் பரிமேலழகர், “சதுரப்பாடுடையார்” என வுரைத்தல் காண்க. சதுரப்பாடாவது, அவ்வக்காரியங்களை அவ்வவ் வியல்பிற் பிறழாமற் பயத்தல். 4. பங்கயம், பங்கஜம் என்பதன் சிதைவு. பங்கம் - சேறு; ஜம் - பிறப்பது; பங்கஜம் - சேற்றினின்றும் பிறப்பது என்பது பொருள். 5.சிவ. சித்தி; சூ.1: 32. 6.சிவ.சித்தி; 1: 48. 1. பரிணாமவாதிகள் “பிரமமே பிரபஞ்சமாய்ப் பரிணமித்தது; பால் தயிராதல் போல” என்பர். 2. சிவாத்துவித சைவர், “பிரபஞ்சத்துக்கு முதற்காரணமும் நிமித்தகாரணமும் முதல்வன் ஒருவனே”என்பர். 3. கூட்டானே என்றவிடத்துக் கூட்டான் என்பது எதிர்மறை வினையும் எதிர்மறை யேகாரமும் கூடிக் கூட்டுவன் என உடன்பாட்டுப் பொருள் தருதல் காண்க. 1. ஏது; “உள்ளதற்குச் செய்வோரின்றிச் செய்வினையின்மையின்” என்றது. இதன்கண், செய்வினையால் செய்வோன் விகாரமெய்துதல் இல்லையெனக். கடாவிடையால் தூய்மை செய்தலால் வலியுறுத்தவாறாயிற்று. 2. இக்கால வுவமையை முதல்வன் நிராதாரமாய் நின்று காரியப்படுத்தும் முறைமைக்குக் கொண்டு, “ஞாலமேழினையுந் தந்து நிறுத்திப்பின் நாசம்பண்ணும், காலமே போலக்கொள் நீ நிலைசெயல் கடவுட் கண்ணே” (சிவ சித்தி.. 1 : 30) என்று அருணந்தி சிவாசாரியார் கூறுவர். 3. “கற்ற நூற் பொருளும் சொல்லும் கருத்தினி லடங்கித் தோன்றும் பெற்றியும்” (சிவ. சித்தி. 1 : 31) 1. கட்டுண்டல், விகாரமெய்துதல் முதலிய குற்றங்கள் காரணத்தாற் செய்யும் வினைமுதலுக்கே யுளவாதலால், சங்கற்ப மாத்திரத்தாற் செய்யும் முதல்வன்பால் அக் குற்றங்கள் உளவாதற்கு ஒரு தொடர்பும் இல்லை. சுதந்திரம் , நிருவிகாரம் முதலிய வற்றிற்குக் கட்டுண்டல் விகாரமெய்துதல் முதலியன மாறான பகையியல்புகளாகும். 2. சுந்த. தேவாரம். பதி. 100. 3. நொடியாது நொடித்து எனக்கொண்டு, “அழியா தழித்தலால்” என உரை கூறியிருத்தல் காண்க. அழியாது அழித்தல், ஒடுக்குதல். 4. மூன்றுமாவன: காலத்தில், உளத்தில், உணர்வில். 1. இன்றாம் கட்டு - இல்லையாகிய கட்டு; அருங்கேடன் என்பது கேடரியன் என விரிதல்போல, இதுவும் கட்டு இல்லையாதல் என விரியும் என்பது. 2. திருக்குறள். 210. 3.உலகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒடுக்குதல் உளதாக்குதல் முதலிய தொழில் செய்யும் முதற்கடவுளர் பலர் உளராகவேண்டும் என்று கருதுவோர், அநேக ஈசுரவாதிகள் எனப்படுவர். 4. சங்காரமென்னும் தொழில் அதனைச் செய்யும் கருத்தாவுக்காதல் பற்றி, ஆகுபெயர் எனப்பட்டது. 5. ஏகாரத்தின் இப்பிரிநிலை பிறிதின் இயைபு நீக்கிய பிரிநிலை யென்று கூறுப. 6. சுட்டுணர்வு - ஒன்றொன்றாய்ச் சுட்டியறியும் அறிவு. 1. உருவும் அருவுமாகிய பிரபஞ்சம் என்றது, தூலவுடம்பும் சூக்குமவுடம்புமுடைய உயிர்களை என்க. எனவே, உருவுயிர், அருவுயிர் என இருவகைப்படுதல் காண்க. 2. ஏனையோர் பிரமா, விட்டுணு, இந்திரன், தீ, சூரியன் முதலியோர். 3. பிரபஞ்சம் - உயிர். சுட்டுணர்வாகிய பிரபஞ்சம் எனவே, ஒன்றொன்றாய்ச் சுட்டியுணர்வதாகிய உயிரென்றாகி, முற்றறிவுடையதன்று என்றும், சுட்டுணர்வின்றி நின்ற சங்காரம் எனவே, எல்லாம் ஒருங்குணரும் முற்றறிவுடைய முதற்பொருள் என்றும் விளங்கும். முற்றறிவின்மையால் சுதந்தரமின்மையும், முற்றறிவுடைமையால் சுதந்தரமுண்மையும் குறிக்கப்படுகின்றன. 4. சுட்டுணர்வு ஏதுவாகச் சுதந்தரமின்மையும் உண்மையும் சாதிக்கப்படுமாறு விளங்க, அதனாலேயே பெயர் வழங்கியது உடம்பொடு புணர்த்தல். 5. இருக்கு. 1: 164 : 46. 1. பெயர்ச் சொற்களுள் பெயர்ப் பொருளை நேரே உணர்த்துவன இயற்கைப் பெயர் எனவும், யாதானுமொரு தொடர்பு பற்றிப் பிறிது பொருள் உணர்த்துவன ஆகுபெயர் எனவும் இரண்டாய் அடங்கும். “இயற்கைப் பெயர் ஆகுபெயர் எனப் பெயர் இரண்டாய் அடங்கும் வழி, ஒரு பெயர்ப்பட்டதென மேலும் வந்தவாறு கண்டுகொள்க” (தொல். சொல். 114) என்பர் சேனாவரையர். அந்த இயைபு பற்றி, “ஆகுபெயரால் சங்கார காரணனாகிய முதற் கடவுளையே உணர்த்தி நிற்கும்” என உரைக்கின்றார். 2. ஒன்றலா ஒன்றால் உளதாகி நின்றவாறு - இதுவென்று சுட்டிக் காணப்படானு மாய்ப் பிரபஞ்ச கிருத்தியச் செய்கையினாலே காணப்படுவானுமாகிய கத்தாவால் பிரபஞ்சம் தோன்றி நின்ற முறைமையாலே; ஒன்றலா ஒன்றில் அவை ஈறாதல் - இதுவென்று சுட்டிக் காணப்படாததுமாய்ப் பிரபஞ்ச காரியத்துக்கு உபாதானமுமாய் நிற்றலாலே காணப்படுவதாகிய மாயையிலே அவை சென்று ஒடுங்குதலையுடைய; அவை என்றது தோற்றலும் நிற்றலுமாகிய அவை; “ஆதி யோதிய மேதகு மாயை” (ஞானா. 21: 3) என்னும் ஞானாமிர்தத்தில் “அளவில் வலியிற்று” என்பதனாலறிக. ஒன்றலா ஈறே முதல் - அப்படியாகில் இதுவென்று சுட்டிக் காணப்படாததாய் எல்லாம் சென்று ஒடுங்குதற்கு இடமாகிய மாயையே முதன்மை யுடைத்து; முதன்மை - தலைமை; என்றது, கத்தா வேண்டா என்றானாம். அதன் இல் - அந்த மாயையினிடத்து நீ சொல்லுகின்ற கர்த்தத்துவம் இல்லை; ஈறலா ஒன்று - பிரபஞ்சம் அழியும் பொழுது தானும் கூட அழியாதோ? கர்த்தத்துவம் இன்றிச் சடமாய் இருக்கும் என்பையாகில் அது அழியாததொரு பொருள்; அன்று - அதுதான் எக்காலத்து உள்ளது என்பையாகில் அனாதி; பலவாறே தொழும்பாகும் - அது எல்லா முறைமையாலும் கத்தாவுக்கு ஏவற்றொழில் செய்துவரும் எ-று. பலவாற்றானும் என்றது அசித்தாகையானும் தனக்கென ஒரு சுதந்திரமில்லை யாகையானும் என்றதாம்” என்று உரையும், “இது பிரபஞ்சம் தோன்றி நின்று ஒடுங்குவது மாயையிலேயாகில் அந்த மாயை அமையாதோ கர்த்தா வேண்டுமோ என்போருக்கு மாயை சடமென்று சாதிக்கின்றது” என்று கருத்தும் கூறுவர் பாண்டிப்பெருமாள். 1. அவை ஈறாதல் : “அவை என்றது சேதனப் பிரபஞ்சத் தொகுதியை; அது நித்தமாகலின் தோன்றி யழிதல் இன்றாயினும் உடம்பொடு கூடி உளதாய் நின்று ஈறாதல் பொருந்தும் என்க; ஈறாதல், ஈறாதலால் என விரிக்க. ஈறு செய்வதனை ஈறு என்றார்” -சிவபாடியம். 2. “முன்வரும் சொல்லும் பொருளும் பலவாயின், பின்வரு மென்னில் பின்வரு நிலையே” -தண்டி. சொல். 63. 3. சேதனம் -அறிவுடைய உயிர். இது மலத்தால் கட்டுற்றுச் சுதந்தர மின்றி யிருப்பது பற்றி “அவிச்சையால் கட்டுற்று” என்றார். மலம் ஈண்டு அவிச்சை எனப்பட்டது. 1. ஒன்றலா வொன்று என்றவிடத்து, “ஒன்றலா என்பது உருவும் அருவுமாகிய இரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றல்லாத என்றவாறு; ஒன்றென்பது, இலக்கணத்தான் வேறுபாடு இல்லது என்னும் பொருட்டு” -சிவ. பாடியம். 2. பன்னிரண்டாம் சூத்திரத்துத் “தன்னை யறிவித்து” எனத் தொடங்கும் வெண்பா உரையில் “தான்றானாச் செய்தல், எதனை எதனைப் பற்றினும் அதுவதுவாம் உயிர் தன்னை யறிந்தவழி எண் குணங்களால் நிறைந்து தன் வண்ணமாகச் செய்தல்; அங்ஙனம் செய்த வழியும் உயிர் தானும் சிவானுபவம் ஒன்றினுக்கே உரித்து என்பார் தைவமென்றும் தைவமே என்றார்” என்பதனால், சிவ சமமாதல், சிவத்தை யறிந்து அச்சிவத்தின் எண் குணங்களாலும் நிறைதல் என்பது உணரப்படுமாறு காண்க. 1. சிவ. போ. சூ. 4 1. “இது கர்த்தா பிரபஞ்சம் எல்லாமாய் அவை அல்லவுமாய், அவற்றிற்கு உடனுமாய்த் தான் அவையிற்றிற் சிறிதும் தோய்வின்றி ஒழிவறக் கலந்து, ஆன்மாக்கள் முன்பு செய்த கன்மங்களுக்கு ஈடாகத் தன்னுடைய சத்தியாலே பிறந்து இறந்து வர, அனாதி சுத்தனாய் ஒழிவற நிற்பன் என்றது” எனக் கருத்துரைத்து, “அவையே தானேயாய் - கத்தா முன் கூறப்பட்ட அவன் அவள் அது எனும் பிரபஞ்சமாய்; ஆய் எனவே அல்லவாய் என்பதூஉம் விட்டு நீங்காமையும் கூறப்பட்டது; எனவே ஆயுமாய் அல்லவுமாய் உடனுமானான் என்பதாம். தான் - கர்த்தா. ஆணையின் இருவினையின் போக்கு வரவு புரிய - தன்னுடைய ஆக்கினையினாலே ஆன்மாக்கள் முன்புள்ள புண்ணிய பாவங்களினாலே இறந்து பிறந்து வர; நீக்கமின்றி நிற்கும் அன்றே - ஒழிவற நிறைந்து நிற்பன் அனாதி சுபாவமாக” என்று கண்ணழித் துரையும் கூறுகின்றார். 2. அவற்றது - துணைக்காரணம் முதற் காரணம் என்ற அவற்றினுடைய. “ஈண்டுத் துணைக்காரண முதற் காரணங்களது உண்மைக்குப் பிரமாணம் கூறிய தொடங்கினார்” என்று சிவஞான பாடியம் கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. 1. சிவ. சித்தி. சூ. 2 : 1. 2. அந்தம் ஆதி என்பது அந்தத்தைச் செய்யும் இறைவனே முதல் என்ற பொருள்பட அந்தமே ஆதி என விரியும்; அங்ஙனம் விரியுமிடத்துத் தொக்கி நிற்கும் ஏகாரம் பிரிநிலை; அதனால் பிரிக்கப்படுவன அவன் அவள் அது எனச் சடப் பொருளை யொட்டித் தோன்றும் ஆன்மாக்களாகிய சேதனப் பொருள்கள். சேதனம்- அறிவுடையது. சித்து, அறிவு; சித்துப் பொருள் சேதனம் எனப்படும். 3. முதற் சூத்திரத்தில் ஒடுங்குதலை முன்னும் உளதாதலைப் பின்னும் நிறுத்தி. ஒடுங்கியுளதாம் என்றார்; அம்முறையே இங்கும், ஒடுங்குதலாகிய போக்கிளை முற்பட நிறுத்திப் போக்கு வரவு புரிய என்று அருளியுள்ளார். 4. ஒரு சிங்கம் தான் குறித்த பொருள்மேற் பாய்தற்குள் முன்னும் பின்னும் நோக்குவது இயல்பு; அதுபோல் செய்யுளொன்றில் நிற்கும் ஒரு சொல் முன்னும் பின்னும் இயைந்து பொருள் தருமாயின், அதன் பொருணிலையைச் சிங்க நோக்கு என்பது மரபு. 1. அன்றே என்பதை அசைநிலை யாக்காது காலங்காட்டும் பெயராகக் கொண்டு அனாதிகாலமாக இவ்வாறு நிற்கும் என்று உரைப்பினும் அமையும். 2. சங்கற்ப சிருட்டி, கரண சிருட்டி எனச் சிருட்டி இரு வகைப்படும். முதற் காரண துணைக் காரணங்களையும் வேறு பிற கருவிகளையும் கொண்டு செய்வது கரண சிருட்டி. மனத்தால் நினைப்பதே கொண்டு அமையச் செய்வது சங்கற்ப சிருட்டி. இவ்வாறு சிருட்டியை இரண்டாகக் கூறுவது பௌட்கராகமத்துக் கண்டது. 3. உத்தேசம்: “முன்னர்க் கூறப்படுவதாகிய இலக்கணத்தை அவாய் நிற்பதாய் எடுத்துக் கோடலே உத்தேசம் எனப்படும்” -சிவ. பாடியம். 1. “பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள் வெளிபோற் பேதமும் சொற் பொருள்போல் பேதாபேதமும்” (சிவப். 7) என்று உமாபதிசிவனார் கூறுதல் காண்க. 2. இதற்குச் சுப்பிரமணிய தேசிகர் “இவ்வதிகரண நான்கினுள் வைத்து முதலதி கரணத்துள் கடவுள் கலப்பினால் இவ்வுயிர்களேயாய், பொருட்டன்மையால் அவற்றின் வேறுமாய், உடனாய் நிற்றலின் இவ்வுயிர்கள் பலவும் தானேயாய் நிற்பன்’ என்றுரைத்து இரட்டுற மொழியுமாற்றையும் உடன் கூறினார். 3. ந+ துவிதம்= அ+ துவிதம் = அத்துவிதம். ந+துவிதம் என்ற விடத்து நகரத்தின் மெய்கெட, நின்ற அகரம் துவிதம் என்பதனோடு கூடி, அத்துவிதம் என வந்தது வடநூன் முறை. 1. “துவிதம் என்பது இரண்டென்னும் பொருட்டு; அ என்னும் நகரம் அப்பிரகாசமென, வருமொழிப் பொருளின் இன்மையினையும், அதன்மம் என வருமொழிப் பொருளின் மறுதலையினையும், அப்பிராமணனென வருமொழிப் பொருளின் அன்மையினையும் உணர்த்தி நிற்கும்” என்பது சிவஞானமாபாடியம். 2. ஏனை மறுதலைப் பொருள்பற்றி இரண்டற்கு மறுதலையாகிய ஒன்றெனவும், அன்மைப் பொருள்பற்றி இரண்டலவெனவும் பொருள் கொள்ளின் வரும் குற்றத்தை மாபாடியம் விளக்கிக் கூறுகின்றது. இன்மைப் பொருள்கொண்டு பிரமம் ஒன்றே யென்பவர் ஏகான்மா வாதிகள்; மறுதலைப் பொருள்கொண்டு உயிரையும் கடவுளையும் வேறு வேறாகக் கொள்பவர் மாத்துவர். 3. இருபா. 4 : 26. 4. இனி, மாபாடியத்துள், “ஆகலானென்பது ஆயெனத் திரிந்து நின்றது; மழை பெய்து குளம் நிறைந்த தென்புழிப் போலவென்க” என்றும், “நெஞ்சம் பிளந்திட்டு என்புழிப்போல இட்டென்பது பகுதிப் பொருள்விகுதி” யென்றும், “வார்த்திகமாகிய பொழிப்புரையும் செய்யுளாகலின் அங்ஙனம் கூறினா” ரென்றும் கூறுவர். 1. சுட்டுவதுண்மையின் என்புழியும், ஆயிட்டென்புழியும் உம்மையை விரித்துச் சுட்டுவதுண்மையானும், ஆயிடலானும் என்று உரைக்க என்பார், “எண்ணும்மை விரித்துரைக்க” என்றார். 2. “அந்நிய நாத்தியை யுணர்த்துமாயிட்” டெனவே, வேறின்றி யுடனாதல் பெறப் படுதலால், “உடனாதல் பெறப்படவே” என்றார். இங்கே “பொருண்மையால்”, கலப்பினால்” என்பன “அரக்கொடு சேர்த்தி” என்ற வெண்பாவின் சொற்குறிப்புப் பற்றி யெடுத்துக்கொள்ளப்படுகின்றன. 1. அருத்தாபத்தி யென்பது, பகலுண்ணான் சாத்தன் பருத்திருப்பான் என்ற வழிப் பருத்திருத்தற் கேதுவாய உணவுண்டல் இரவில் நிகழ்கிறதெனத் துணிதல்; அதுபோல, உடற்கிட்ட பெயராலழைக்க, உயிர் விடையிறுத்தற் கேதுவாய அபேதக் கலப்புண்மை துணியப்படுகிறது. 2. இதன் கருத்தை, அருணந்திசிவனார் “ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன், தருமுயிர் அவனையாகா உயிரவை தானுமாகான், வருமவனிவைதானாயும் வேறுமாய் மன்னி நின்றே” (சிவ. சித்தி. சூ. 2 : 3) என்பது காண்க. 3. அவன் உளமாய் நிற்பனெனவே உயிரும் தானும் ஒன்றாகியும், அல்லனுமாம் எனவே உயிர் வேறு தான் வேறாதலுமுடைய னென்பது பெறப்பட்டதாயினும், ஒன்றாகியோன் வேறாதற்கு இயைபு காட்டுவாராய், “அவன் உளமாகில்லான், உளம் அவனாமாட்டாது” என்றது கண்கூடாதல் பற்றி, “ஒன்றன்மைக்கு அனுபவம் காட்டிய வாறு” என்றார். 4. (மாலை) கட்டுபவனை (மாலை) கட்டி என்பது போல, உயிரில் அபேதமாய் ஒட்டியிருக்கும் முதல்வனை ஒட்டி என்றதனால், “ஒட்டி யென்பது பெயர்” என்றார். ஒட்டி யென்பதை வினையெச்சமாகக் கொள்ளின், ஒட்டி நின்றானாயினும் எனவும்மை விரித்துரைத்துக் கொள்ளவேண்டும். 5. “ஒட்டி யுறுவார் உறவு” (மூதுரை) என்றாற்போல. 1.வேதத்துள் முதற்பொருள் “ஏக மேவாத்விதீயம்” என்று சாந்தோக் கியோப நிடதத்தாற் கூறப்படுவதுபற்றி இவ்வாறு கூறுகின்றார். 2. முதல்வன் உயிராயும் அதனின் வேறாயும் நிற்பன் என்றதுபற்றிப் “பேதப்படக் கூறுவதென்னை” என்றார். 3. தாற்பரியம்: “ஏகம் ஏவ” என்றதன் கருத்து. 4. பசு என்ற வடசொல்லுக்குக் கட்டப்பட்டது என்பது பொருள். -உணாதிசூத்திரம். 5. என்னும் வேதத்திற்கு - என்று கூறும் வேதவாக்கியத்துக்கு. 1. “அகரவுயிரில்லையாயின் அக்கரங்கள் (எழுத்துக்கள்) இல்லை என்பதுபோலப் பிரமப்பொருள் இல்லையாயின் ஒருபொருளும் இல்லை யென்பதேயாம்; இவ்வள வேயன்றி, இரண்டாவது பொருளில்லை யென்றல் பொருந்தாது” என்பது கருத்து. 2. அகரமும் ஏனையெழுத்துக்களும் வேறாக இருப்பினும், அகர வொலியை யின்றி அவை தனித்து இசையாதவாறுபோல இறைவனும் உயிரும் வேறாயினும் அவனையின்றி அவை அமையா என்பது விளக்கப்படுகிறது. “மெய்யி னியக்கம் அகரமொடு சிவணும்” (தொல். எழுத். 46) என்பதற்கு நச்சினார்க்கினியா ரெழுதிய வுரை காண்க. 3. நன்மை நன்றென நிற்றல்போல, இன்மை, இன்று என நின்றது; இது குறிப்பு வினைமுற்றன்று என்பதாம். 4. வேதம் “ஏக” மென்றும், “அத்விதீயம்” என்றும் கூறுவதால் அத்துவிதம் என்பதற்கு ஏகம் என்று பொருள் கோடல் பொருந்துமேயன்றி, இரு பொருளின் கலப்பென்று கோடல் பொருந்தாது என்ற கருத்து ஈண்டு ஆராயப்படுகிறது. 1.வேறன்றாய் - பிரிப்பின்றி. 2. “ஏகம்” என்று கூறிய வேதம், ஓரோரிடங்களில் “அத்துவிதம்” என்று கூறுதற்கு இதனால் அமைதி கூறுகின்றார். 3. இஃது அவ்வாறு வேதம் அத்துவிதம் என்று கூறியதன் கருத்தை விளக்குகிறது. 4. ஐகாரம், பண்ணென்னும் சொல்லிறுதிக்கண் நின்று அச்சொற் பொருளையே உணர்த்திற் றாதலால், பகுதிப்பொருள் விகுதியெனப்பட்டது. முன்னர், பின்னர், என்ற சொற்களின் ஈற்றில் நிற்கும் அர் என்பதுபோல, ஐ யென்னும் இறுதிநிலையை நோக்கப் பண்ணென்பது முதனிலையாதலின், அதனைப் பகுதியென்றும், அப்பொருளே ஐகாரத்தாலும் வற்புறுத்தப்படுதல் பற்றி, பகுதிப்பொருள் விகுதியென்றும் கூறினார். பழமதுவும் என்றவிடத்து, அது வென்பதும் பகுதிப்பொருள் விகுதி. 5. குணகுணிகள்போல் உடனாதலாவது, குணி வியாபகமாயும், குணம் அதனுள் வியாப்பியமாயும் இருத்தல்போல, இறைவன் வியாபகமாயும் உயிர் வியாப்பியமாயும் இருப்பது. 6. குணகுணிகட்கு இறைவனும் உயிரும் உவமேயமெனக் கோடல் ஆகாது என்றற்கு, “வியாப்பிய ................என்பது” கூறப்பட்டது. 1. பிரிப்பின்மைக்கு அரக்கொடு சேர்த்தி யணைத்த கல் உவமமாதலை, ஆசிரியர் மாமூலனார், “சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய, கற்போற் பிரியலம்” (அகம்.1) என்றும், ஆசிரியர் பரணர், “சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய, கற்போல் நாவினே னாகி” (அகம். 356) என்றும் கூறுமாற் றானும் அறிக. 2.இது பிருகதாரண்ணியோபநிடதம்: அத். III : பிராமண் 4: மந்திரம். 10. இது சீகண்டபாடியத்திலும் காணப்படுகிறது. பக். 326. 3. சர்வஞானோத்தராகமம்: சிவாநந்நிய சாக்ஷாத்காரப் பிரகரணம் 35. 1. ஒன்றாதலும் வேறாதலும் உடனாதலுமாகிய பதியிலக்கணம் வாமதேவன் முதலிய உயிர் மேலும் சேறலின், அதிவியாத்தி யென்னும் குற்றம் வாராதோ எனின், முத்திக் காலத்துச் சிவோகம் பாவனையால் உண்டாகும் இயல்பு, எல்லாவுயிர்க்கும் இலக்கணமாய்ச் சேறல் இல்லையாதலின், அக்குற்றமில்லையென வற்புறுத்துகின்றார். சிவோகம் பாவனை சோகம் பாவனை யென்றும் வழங்கும். 2. பக. கீதை: 10: 42. 3. பக. கீதை: 11:9. 4. பாரத: துரோண. 81: 2. 5. இச் சிவதீக்கையை மந்திர சம்ஸ்காரதீக்கை யென்று புராணங்கள் கூறுகின்றன. 1. பேதம் என்று பிணங்குபவர் மாத்துவர். 2. அபேதமென்பவர் ஏகான்ம வாதிகள். 3. பேதா பேதமென்று பிணங்குபவர் பாஞ்சராத்திரிகன். 4. பேதவாதிகள் கூறும் உவமை இருளும் வெளியும்போல் என்பது; அபேதவாதிகள் பொன்னும் பணியும்போல் என்பர்; பேதாபேதம் `கூறுவோர் சொல்லும் பொருளும் போல் என்பர்; இவற்றை விலக்கி, முறையே அகரவுயிரையும் ஏனை எழுத்துக்களையும், உயிரையும் உடலையும், பண்ணையும் ஓசையும் கூறியது, “அகரத்தையின்றி ஏனை அக்கரங்கள் தொழிற்படாதவாறுபோலச் சூரியனையின்றிக் கண் தொழிற்படா மையினாலும், ஓசையும் பண்ணும் பிரிப்பின்றி நிற்றலானும் பேதத்திற்கும் பேதாபேதத்திற்கும் சிவப்பிரகாசத்திற் கூறிய வுவமைகள் இந்நூலிற் கூறிய வுவமைகளோடு முரணாதவாறு அறிக” -பொ.முத்தைய பிள்ளையவர்கள். 5. சிவப்பிரகாசம்: 7. 1. புனருற்பவம் - மீளவும் படைத்தல். 2.உலகத் துயிர்கள் ஒன்றைச் செய்யலுறின் அதற்குத் துணைக்காரண முதலியன வேண்டியிருத்தல் போல. 3. பால் தயிராதல் போலப் பிரமமே உலகமாயிற்று என்பர் பரிணாம வாதிகள். 4. சுப்பிரமணிய தேசிகர் உரை: இவ்வான்மாக்களுக்கு - முதல்வன் இவ்வாறு மூவகையுமாய் நிற்றற் குரிமையுடைய உயிர்களுக்கு; இரு வினை - முற்பிறவிகளின் ஈட்டப்பட்டு மாயையிற் கட்டுப்பட்டுக் கிடந்த புண்ணிய பாவங்கள்; முதல்வன் ஆணையின் வரும் என்றது - இறைவனுடைய சிற்சத்தியால் வரும் எ-று. 5. புண்ணிய பாவங்க ளென்றாராயினும் அவற்றின் பயன்களாகிய இன்பமும் துன்பமுமே கொள்க. 1. “மாயையிற் கட்டுப்பட்டுக் கிடந்த” எனவே, மாயை யுண்மை பெறப்பட்டதென்றார். கட்டுப்பட்டுக் கிடக்கவேண்டிய இடம் இறை, உயிர், மாயை என்ற மூன்றுமேயாம்; அவற்றுள், இறையும் உயிரும் வினைக்கு இடமாதற் கின்மையின், மாயையே வினை கிடப்பதற்கு இடமாமென்றும், அதனால் மாயை யுண்டென்றும் கூறினார். 2. துணைக்காரண முதலியன ‘‘இவை” யென்பதனால் சுட்டப்படுகின்றன. 3. அரசு முறைக்குப் பற்றுக் கோடாயிருக்கும் அமைச்சர் முதலாயினாரை ஈண்டுக் களை கணாவார் என்றார். 4. இதனையே பாடியத்தின்கண் விரித்துரைப்பார். “பாடிகாவலென்பது நெறியின் வழீஇயினாரை வழக்குவினாய் ஒப்ப நாடிச் செய்யுந் தண்டத்தொழில் உணர்த்துவதோர் சொல்” என்பர். 5. திருநாவுக்கரசர் திருக்குறுந்தொகை. 192:6. இனி, இப்பாடி காவல் என்பது பெரியாழ்வாரால், “கேசவனோடி வளைப், பாடிகாவலிடுமின் என்று பார் தடுமாறினதே” (3: 7: 5) என்றும் வழங்கப்படுகிறது; இதற்கு உரைகாரர்கள் “அந்தப்புரத்திற் காவலிடுங்கோள்” என்று கூறுகின்றார்கள். 1. சிவ. போ. சூ. 1. அதி. 1 மேற். 2. முற்பிறவியில் ஈட்டப்பட்ட வினைகளுள் அப்போதே நுகர்ந்தன போக எஞ்சி நின்ற வினை சஞ்சிதமெனப்படும். 3. “இழத்தொறுங் காதலிக்குஞ் சூதேபோல் துன்பம் உழத்தொறும் காதற் றுயிர்” (குறள் 940) என்பது ஈண்டு நோக்கத்தக்கது. 1. தற்பயன் குறியாது - தனக்கு ஒரு பயன் கருதாமல். 2. “வேண்டுவார் வேண்டியதே யீவான்கண்டாய்” - திருநா. 237:1. 3. உள்ளடைவே யென்பதிலுள்ள ஏகாரம், ஏழாம் வேற்றுமைப் பொருளில் உள்ளடைவின்கண் எனப்பொருள்பட வந்தது; “முறையே கூறினார்” என்றாற் போல. 4. அவற்றின்கண் உண்டாமாறு - அவ்விருப்பு வெறுப்புகளிடத்தே வினையுண்டாகும் என்பது. 5. சூ. 12. அதி-1. “விருப்புவெறுப்புக்கள் உளவாகவே பரமே பார்த்திருப்பார்க்கு நிலமுதல் மாயாதத்துவ மீறாகிய ஏகதேசப்பொருள் காட்சிப்படும்; அவை காட்சிப் படவே அவற்றைச் சுட்டியறிவதாகிய விபரீதவுணர்வு மேற்பட்டு மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்துப் பிறவிக்கு வித்தாம்” என்பது காண்க. 1. பசாசம் - இரும்பு. பசாசத்தைக் காந்தத்தின் நேரே பிடித்த வழி, அக்காந்தம் அதனை வலித்துக் கோடல்போல், உயிர்களும் வினைப் பயனை முதல்வன் நுகர்விக்க நுகரும் என்பதாம். 2. செய்வது - உடம்பு. உயிர் உடம்போடு கூடி நின்றே வினைப்பயனை நுகரவேண்டி யிருத்தலின், அதற்கு இன்றியமையாத உடம்பை, “செய்வது” என்றும், “அதனில் சென்று அங்கு” நுகர்வரென்றும் உரைக்கின்றார். 3. மலகன்மங்களாற் கட்டுற்றிருக்குங்காலம் பெத்தநிலை என்றும், கட்டு நீங்கி வீடுபேறெய்த நிற்கும் நிலை முத்தநிலை யென்றும் வழங்கும். 1. தமக்கென அறிவின்மையாவது, இறைவன் அருளால் அறிவிக்க அறிவதன்றித் தாமே யறியும் அறிவில்லாமை. “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே” (திருநா. 309: 3) என்றும் “அறிவிக்கவன்றி யறியா வுளங்கள்” (சிவ. போ. சூ. 8. அதி. 2. வெண்.)என்றும் வருதல் காண்க. 2. சிவ. போ. சூ.1. ஆதி.1. உதா. 3. 3. ஈண்டுக் காட்டப்படும் உமி மாயைக்கும் களிம்பு ஆணவமலத்துக்கும் உவமை. உமாபதி சிவனார் ஆணவத்துக்குத் தவிடும் கன்மத்துக்கு முளையும் காட்டி, “நெல்லின் முளை தவிடுமிபோல் அநாதியாக நிறுத்திடுவர் இது சைவம் நிகழ்த்துமாறே” (சிவப். 25) என்பர். திருமூலநாயனாரும், “ஆணவ மாயையுங் கன்மமு மாமலம், காண முளையுந் தவிடுமி யான்மாவும், தாணுவொவ் வாமலே தண்டுல மாய்நிற்கும், பேணுவாய் மற்று நின்பாசம் பிரித்தே” (திருமந் .2192) என்றனர். 1. இவை அநாதி யென்பதை, ஞானாமிர்தமுடையார், “ஆரண மறியோன் அமல னாதற் கத்த, பொறிதீர் புற்கலன் விழுமலம் புணர்தற், கற்றே சொற்ற தனாதி மற்றவர்க், கெற்றெனி லாதி யியையிற் குற்றமில், காரணங் கழறுவ லம்ம சீருணம் (செம்பு) திகழொளிப் பளிங்கு போலப் புகழரும், இறைபுற் கலனுக் கென்றனன்” (அகவ 9) என்பர். 2.“வானின் முந்திரவி யெதிர்முளரி யலர்வுறுமொன் றலர்வான் முகையாமொன் றொன்றுலரு முறையினாமே” (சிவப். 17) எனப் பிறரும் கூறுப. 3. கூட்டியவழி, “நெல்லிற்குமி புதிதன்று; செம்பினில் களிம்பு புதிதன்று” என நிற்கும். 4. பரிக்கிரக சத்தி - வைப்புச் சத்தி. 5. வினை, ஆதியோ அனாதியோ என ஆராய்ச்சி நிகழ்த்தப்படுதலின், அதன் தொன்மை கூறப்புகுந்து, அனாதியாம் வகையில் இனமாகிய ஏனை மாயை, ஆணவம் என்ற இரண்டும் கூட அனாதியென்று கூறினாரென்றவாறு. 6. சிவப் . 20. 1. இவற்றின் இயல்பைச் சிவஞானபாடியத்து இரண்டாம் சூத்திர இண்டா மதிகரணத் தோதிய முதற்காரண முடிபு என்ற தலைப்பின் கீழ்க்காண்க. 2. கலை ஐந்து ; நிவிர்த்தி, பிரதிட்டை. வித்தை, சாந்தி, சாந்தியதீதை என்ற ஐந்து. 3. நால்வகை வாக்கு: சூக்குமை, பைசந்தி, மத்திமை; வைகரி என நான்கு. 4. தன்மாத்திரையைந்து, பூதமைந்து, ஞானேந்திரியமைந்து, கன்மேந்திரியமைந்து, அந்தக்கரணம் நான்கு, அராக முதலிய வித்தியா தத்துவம் ஏழு ஆக முப்பத்தொன்று. 5. புவனவடிவாய் நின்று போகம் பயப்பிக்கும் தத்துவம் பொதுவென்றும், புரியட்டக வடிவாய் உயிர்தோறும் வேறுவேறாய் நின்று போகம் பயப்பிக்கும் தத்துவம் சிறப்பென்றும் கூறப்படும். 6. சிவப்.28. 7. பிரவாகாநாதி - பிரவாகம்போல அநாதி. ஓடுகிற தண்ணீரில் ஓட்டம் இருப்பினும் தண்ணீர் நிலையாய்க் காணப்படுவதுபோல, வினை செயப்பட்டும் நுகரப்பட்டும் வரினும் இடையறாது உளதாதல். 8. திருவருட்பயன்: 6 : 2. 9. ஞானா. 22. 1. மந்திர முதலிய அத்துவா : வன்னம் , பதம், மந்திரம், புவனம், கலை, தத்துவம் என ஆறு. 2. “இருவினையென்ப தென்னைகொல் அருளிய, மனமே காயம் வாக்கெனு மூன்றின், இதமே யகித மெனுமிவை” (இருபா. 14) இவற்றோடு அறிவையும் கூட்டி, “மனமொழி மெய்யறி வாகிய நான்கின், அசைவே யாகியும் அவ்வசை வின்றியும்” (இலக். 81) வினை நடக்குமென்பர் இலக்கணக் கொத்துடையார். 3. ஆதிபௌதிக மூன்றனையும், “தன்னைப்பற்றி வருவனவும், பிறவுயிர்களைப்பற்றி வருவனவும் தெய்வத்தைப்பற்றி வருவனவும்” என மொழிபெயர்த்துக் கூறுவர் பரிமேலழகர் (குறள். 4. உரை). 4. உலக வினையாவது கூவல் குளம் தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவது. 5. வைதிகமாவது வேதத்துள் விதிக்கப்படும் அக்கினிட்டோம முதலிய வேள்வி முதலியவற்றான் உண்டாவது. 6. அத்தியான்மிகமாவது வேத நெறியாற் செய்யும் பூசனை துறவு முதலியவற்றான் உண்டாவது. 7. அதிமார்க்கமாவது இயமம் நியமம் முதலிய யோகப் பயிற்சியான் உண்டாவது. 8. மாந்திரமாவது சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப் பயிற்சி விசேடங்களான் உண்டாவது. 1. உலகம், வைதிகமென்ற இரண்டும் நிவர்த்தி பிரதிட்டைகளில் அடங்கி அசுத்த போகங்களைப் பயக்கும். 2. அத்தியான்மிகம் வித்தியா கலையில் அடங்கிச் சுத்தா சுத்த போகங்களைப் பயக்கும். 3. அதிமார்க்கம் மந்திரம் என்ற இரண்டும் சாந்தி சாந்தியதீதைகளி லடங்கிச் சுத்த போகங்களைப் பயக்கும். - இவை சிவஞானபாடியத்துட் கூறப்படுவன. 4. குடம் + ஆகாயம்: குடாகாயமென வருதற்கு அமைதி, “குடாகாய வாகாயக் கூத்தாட்டாம்” (சிவ. போ. சூ.2. அதி. 3. உதா.14) என்புழிக் கூறுப. 5. இதற்குச் சுப்பிரமணிய தேசிகர் கூறும் உரை: இனி இவ்வான்மாக்கள் -இருவினைப்பயன்களை நுகர்தற்குரிய உயிர்கள்; மாறிப் பிறந்து வரும் என்றது- இறந்து மீளப்பிறந்து இவ்வாறே வரும் என்றவாறு. 6. பிறந்திறந்து வருதலை “அவ்வாறாத” லென்றார். 1. போக்குவரவு புரிய என்பதற்கேற்ப மாறிப்பிறந்து என வுரைத்தலால், போக்கு மாறுதலாகி, இறத்தல் குறித்து நின்றது. ஏதுவும் உதாரணங்களும் பிறந்திருந்து வருதலை வற்புறுத்துவதே இயைபு. 2.அச்சு - உடம்பு. “அச்செல்லா மொன்றா யதிலே யிருவகையாய் வைச்ச தென்ன சோணகிரி” (அருணகிரி யந். 59) என்று வருதல் காண்க. 3. இக்கருத்தேபற்றிச் சிவஞானபாடியத்துள், “இதற்குப் பிறவாறும் உரைப்ப” என்றொழிந்தார் (சூ. 2. அதி. 3). 4. அதற்கு - ஆன்மாக்கள் மாறிப் பிறந்துவரும் என்பதற்கு. 5. ஏனைப்பொருட்கு - ஏனை இல்பொருட்கு ; “இல்லதற்குத் தோற்றமின்மையின்” (சூ. 1: அதி.2) என்பது காண்க. 6. உளதாதல் என்பதற்கு இது பொருளாதல், “ஒன்றலா வொன்றால் உளதாகி நின்றவாறு ” என்பதனாலும் அறிக. (சிவ. போ. ரூ.1: அதி.3.) 7. குடத்தில் அடங்கியிருக்கும் ஆகாயம் மகாகாயத்தின் வேறன்று; அதுபோலவே உடலிற் கட்டுற்று நிற்கும் உயிர் சிவத்தின் வேறன்று; ஆகவே உயிரின் பொருட்டு உண்டாகும் தோற்றக் கேடுகள் சிவத்துக்கேயாம் என்பது சிவாத்துவிதி கூறுவது. 1. அது - தோன்றி யழிவது. சாங்கியரும் உயிர்க்குத் தோற்றக் கேடில்லை யென்பவரே. 2. அவ்வுரிமை - தோற்றமும் கேடும எய்துதற்குரிய உரிமை. இரண்டாவது உரையில், தோற்றமும் ஈறும் என்புழி உம்மை, எண்ணும்மை யென்று அறிக. 3. தோற்றம் உளதாதல், ஈறு உளதாதல் என இயையும். 4. ஏனைப் பொருட்குத் தோற்றமும் ஈறும் இல்லையெனப் பிரித்தலின், பிரிநிலை யேகாரம் என்றார். 5. சிவ. போ. சூ. 2. அதி. 1. ஏது. 6. ஆன்மாக்களைப் பெறுவித்தது: சிவத்தின் வேறாக ஆன்மா உண்டென்பது. 7. “சென்று சென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந் தொன்றாம்” -திருவாசகம். கோயில்.7. 1. உள்ளது - “தூலவுடம்புகள் கெட்ட வழியும் தனக்குக் கேடின்றிப் படைப்புக்காலம் தொடங்கிச் சங்கார காலமளவும் நிலைபெற்றுள்ளதாகிய புரியட்டக தேகம்” -சிவஞானபாடியம். 2. பூதவுடம்பு, பூதசாரவுடம்பு, யாதனாவுடம்பு என்ற மூன்றில் பூத வுடம்பு மண்ணுலகிற்கும், பூதசாரவுடம்பு துறக்கவுலகிற்கும், யாதனாவுடம்பு நிரயவுலகிற்கும் வேண்டுவன. 3. துறக்கஞ் செல்லுங்கால் பூதசார வுடம்பின்கண்ணும், நிரயம்புகுங்கால் யாதனா வுடம்பின்கண்ணும் பொருந்தும் ஆன்மா, ஒருகாலத்தே ஒருடம்பே பொருந்துதலால், “அத்தூடு” என ஒருமையாற் கூறப்பட்டது. 4. “முன்னுடம்பு இறக்கும் ஞான்று மனம் யாண்டுச் சென்று பற்றியது, ஆண்டு வந்து மீளப் பிறக்கும் என்பார், ‘மனம் தள்ளக் கருவில் விழும்’ என்றார்” -சிவஞான பாடியம். 1. கனவுணர்வின் என்றவிடத்து, கனாக்காலத்து அறிவு வேறுபட்டாற் போல என்றலின், இன், உவமவுருபாயிற்று. 2. “மறந்து என்றதற்குச் செயப்படுபொருள் கண் செவி கெட்டவாறும், உள்ளதே தோற்ற அத்தூடு விண்படர்ந்தவாறும், ஆண்டு அனுபவித்தவாறும் முதலாயின”. 3. ஒரு பொருளைக் கூறுமிடத்து அதனோடு இயைபுடையதையும் உய்த்துக்கொள்ள வைப்பது உபலக்கணம். 4. படர்ந்து என்பது சென்று அனுபவித்து என்ற பொருள் பயந்து நிற்கிறது. அனுபவித்தல் படர்ந்தது காரணமாக விளைந்த காரியம்; காரியமாகிய அனுபவித்தலைக் கூறாது, அப்பொருளே பயக்கக் காரணமாகிய படர்தலைக் கூறினமையின், “படர்ந்தெனக் காரியத்தைக் காரணமாக வுபசரித்தார்” என்றார். 5. சிவ. சித்தி. சூ. 2 : 36. 6. சிவ. சித்தி சூ. 4 : 10. 7. சிவ. சித்தி சூ. 2 : 50. 8. சிவ. சித்தி, சூ.2 :47. 1.சிவ.சித்தி சூ. 2:49. 2. சிவ.சித்தி.சூ. 11 : 3. 3. இஃதறியாதார் கூறுவதாவது: “ஐம்பெரும் பூதத்தானாகிய தூல வுடம்பு சூக்கும தேகத்தின் காரியம் ஆமாறு என்னை என்று ஆசங்கித்துப் ‘புரியட்ட ரூபந்தானே யாதனா சரீரமாகி’ என்றற் றொடக்கத்தன பிறர் மதம் பற்றிக் கூறியனவாம்” என்பது சிவஞான பாடியம். 4. சிவ. சித்தி. சூ. 2 : 48. 5. சி வ. சித்தி. சூ. 2 : 47. 6. சிவ. சித்தி. சூ. 2 :49. 7. இறந்தவழி யெய்தும் பிறப்பு மக்கட் பிறப்பே யென்பது துணியப்படாமையின், பிறப்பில் உடற்றிரிவு உண்மையாதலைத் தேர்ந்து, “இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ஏது வருமோ அறிகிலேன்” என்றார் தாயுமானாரும் என்று அறிக. 8. இறந்தவழி மறப்பு உண்மையை, “சாதலஞ்சேன் அஞ்சுவல் சாவின், பிறப்புப்பிறி தாகுவ தாயின், மறக்குவென் கொல்லென் காதல னெனவே” (நற்.397) என்றும், “இறந்தால் இருவிசும் பேறுவன் ஏறிவந்து பிறப்பன் பிறந்தால் பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன்பேர், மறப்பன் கொலோ வென்றென் உள்ளம் கிடந்து மறுகிடுமே” (11: 8) என்று நாவரசரும் கூறுதல் காண்க: 1. அஃது - அவ்வினை; வினையுண்டாதற்கு மனம் காரணம் என அறிக. “இருவினை யென்ப தென்னைகொல் அருளிய, மனமே காயம் வாக்கெனு மூன்றின், இதமே யகிதம் எனும் இவை” (இருபா. 14 : 5-7) என்று சான்றோர் கூறுதல் காண்க. 2. பஞ்சாக்கினி வித்தையின் இயல்பு:- “பார்ப்பனச்சாதி முதலியவற்றில் பிறந்து வேள்வி முதலிய நல்வினை செய்த உயிர்கள், அவ் வினையின்பயன் நுகர்தற்பொருட்டு, இவ்வுடம்பின் நீங்கிச் சூக்கும தேகத்தோடும் துறக்கத்திற் சென்று இன்பம் அனுபவித்தற்கு உரிய பூதசார வுடம்பெடுத்து, ஆண்டு வைகும் கடவுளரோடு வாழ்ந்து, நல்வினைப் பயன்கள் அனுபவித்துத் தொலைந்தவழி, மீள நிலத்தின் வந்து, பார்ப்பனச்சாதி முதலியவற்றில் தோன்றி, வினைகளையீட்டுதற்கு ஏதுவாய் எஞ்சி நின்ற வினைச் சேடத்தால் அவ்வுடம்பின் நீங்கிச் சூக்குமதேகத்தோடு மேகமண்டலத்தினை எய்தி, ஆண்டுநின்று மழைத் தாரையினோடு கூடி நிலத்தினை அடைந்து நெல் முதலிய பைங்கூழின் விரவிநின்று, அவை உணவாய்ப் பரிணமித்தவழி அவற்றோடு கூடித் தந்தையின் வயிற்றுட் சென்று, ஆண்டுச் சுக்கிலமாய்ப் பரிணமித்து, அதனோடு கூடித் தாய் வயிற்றுட் சென்று, ஆண்டுக் கருவாய்ப் பரிணமித்துப் பார்ப்பனச்சாதி முதலியவற்றிற் குரித்தாகிய தூலதேகத்தோடு நிலத்தில் தோன்றும் என்று உணர்க. ஆன்மாத் தூலவுடம்பின் நீங்கியவழித் துறக்கமும், மேகமண்டலமும், நிலனும், தந்தையும், தாயும் என்னும் ஐந்து நிலைக்களத்தும் வைகித் தோன்றுதலின், இவ்வைந்தின் இடமும் அங்கியாகவும், இவற்றின் எய்திய ஆன்மா ஆகுதியாகவும் இங்ஙனம் தியானிப்பதொரு சாதகமாகலின், இது பஞ்சாக்கினி வித்தையெனப் பட்டது” - சிவஞான பாடியம். இவ்வியல்பு துறக்கம் புக்கு மீளத்தோன்றும் உயிர்க்கே யன்றி, நிரயம்புக்கு மீளத்தோன்றும் உயிர்க்கன்று. 1. கண் செவி யென்பதற்குக் கண் செவி முதலிய உறுப்புக்களையுடைய உடம்புஎன்று முன்னை வெண்பாவிற்குக் கூறிய பொருளைக் கடைப்பிடிக்க. 2. கூத்தாட்டு - பரந்தவிடத்தே பல்கிப் பரவிக் கிடக்கும் மக்கள் கூத்தாடும் அவையின்கண் கூடியிருந்து பின்னர் அக்கூத்து முடிந்த வழிப் பண்டேபோல் நீங்கிவிடும் இயைபுபற்றிக் குடாகாய வாகாயக் கூத்தாட்டாம் எனப்பட்டது. 3. அரவுதன் தோலுரிவு தூலவுடல்விட்டு வேறு தூலவுடல்பெற்றுப் போதற்கும், கனவு தூலவுடல்விட்டுச் சூக்கும வுடம்பொடு நிற்றற்கும், குடாகாயம் சூக்கும வுடம்பின் நீங்கிச் சிவானந்த ஞானவடிவாகிய காரணவுடம்பில் நிற்றற்கும், யோகியர் பரகாயம் சேறல் இவ்வாறு பலவுடம்பினும் சேறற்கும் உவமையாகும் வேறுபாடு. 1. மேலைவெண்பாவிற் கூறிய கனவுண்மையே இதன்கண்ணும் வந்தது கூறியது கூறல் போலும் என மயங்காமைப் பொருட்டு, இவ்வாறு “தெரிந்துகொள்க” என்கின்றார். 2.தூலவுடம்பின் காரணமாய் அதன் உள்ளே நிலவுதலால், சூக்கும வுடம்பு உள்ளம் என்று கூறப்பட்டது என்றார். 3. திருக்குறள்: பரிமேலழகருரை. 4. குடம் என்னும் நிலைமொழி தமிழ்ச்சொல்லாதலால், அதன்கண் இவ்வாறு புணர்தற்கு இலக்கணம் இல்லாமைபற்றிக் குடாகாயம் என்பது மரூஉ முடிபு என்பாராயினர். 5. “இனி இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின்வரும்” (சிவ. போ. சூ. 2: அதி.2) என்று முன்னர்க் கூறியது. 1. சேனாவரையரும் பிரயோக விவேகமுடையாரும் இவ்வாறு மொழி பெயர்த்து வழங்குகின்றனர். 2. சமவாயமென்பதும் சமவேதமென்பதும் பொருளால் ஒன்றே. சிவனுக்கும் சத்திக்கும் உள்ள தொடர்பு சமவாயம் என்றும், சமவாயமுற்று நிற்கும் செயலைச் சமவேதம் என்றும் வழங்குகின்றனர். நீக்கமின்றி நிற்கும் இயைபு சமவாயம்: நீக்கமின்றி நிற்பது சமவேதம். இரத்தினத்திரயம் என்னும் நூலுடையாரும் “பரிணாமத்தால் வாட்ட மடையாதவனாயும் நித்தியனாயும் உள்ள பரமசிவனைச் சமவாய சம்பந் தத்தால் சார்ந்திருக்கும் சிற்சத்தி” (சூ. 197) என்பது காண்க. 3. “ஆக்ஞயா ஸமவேதயா” என்பது வடமொழி இரண்டாஞ் சூத்திரத் திறுதி. 4. முதல்வன் சிற்சத்தியோடு சமவேதமாய் நிற்பன் என்று மேற்கோளிற் கூறியருளியது. 5. “இனி, ஆணையின் நீக்கமின்றி நிற்கும்” என்னாது, நீக்கமின்றி நிற்குமென மேற்கொண்டது, சொற்பல்குதல் என்னும் குற்றம் வாராமைப்பொருட்டு; ஆணையின் என்பது விடுக்கப்பட்டது என்பது கருத்து. 6. காணமாட்டாதார், நீக்கமின்றி நிற்குமென்பதில், நிற்கும் என்பதற்கு எழுவாய் முதல்வன் எனக்கொண்டு முதல்வன் சருவவியாபியாய் நிற்கும் என்று பொருள் கூறுவர். 1. மேல்வரும் ஏதுவிலும் அது கூறுதலால் கூறியது கூறலாயிற்று. 2. “பரமசிவனைச் சமவாய சம்பந்தத்தால் சார்ந்திருக்கும் சிற்சத்தியும் சிவனோடு தாதான்மியமாய் இருப்பது”. 3. குணகுணி பேதம் தருமதருமி பேதம் முதலிய பேதமாதல். இதனை, “சிவனுக்கும் சத்திக்கும் சொரூபத்தில் வேற்றுமையில்லை யாயினும், தரும தருமி ரூபமான வேற்றுமை யுண்மையேயாகும்; ஆகையால் சிவசத்தி சிவனுடைய தருமமேயாகும்” (இரத். 294) என்பதனாலறிக. 4. இவ்வாறு வியாபித்தல் சத்தியாதலால், அதனோடு நீக்கமின்றி நிற்கும் எனவே, பரமசிவன் சருவவியாபியாய் நிற்குமாறு பெற்றாம். 5. சிற்சத்தியினின்றும் விட்டு நீங்காத்தன்மையைக் கூறலுற்ற ஆசிரியர் அவ் விட்டுநீங்காமையை நீக்கமின்றி நிற்கும் என்பதனால் மேற்கோளில் உணர்த்தி அதனையே ஈண்டு “ஏகாநேகம் இரண்டும் இன்றி” என்று கூறியது அனுவாதம். சருவவியாபியாய் நிற்றலான் என்பதே ஏது. 6. இச்சூத்திரத்து முதலதிகரணம். 1. ஏதுவும் பொருளும் சிவனுக்கும் சத்திக்கும் அவினாபாவம் உண்டென்பதனை ஏகாநேக மிரண்டுமின்றி யென்றும், சருவ வியாபியாய் நிற்றலா னென்றும் சாதித்தது. 2. இது சிவமும் சத்தியும் ஒன்றன்று என்கின்றது. 3. சிவமும் சத்தியும் இரண்டல்லவென்று இதனால் கூறப்படுகிறது. 1. மேல் “அவையே தானேயாய்” (சிவ. போ. சூ.2) என்புழித் தானே யாதலை வற்புறுத்திப் போந்தமையால் எங்குமுளன் என்பது துணியப்பட்டமையின், அதனை ஈண்டு விலக்குதற்கு வழியில்லை யென்கின்றது. 2. “ஒன்றென்ற தொன்றே காண்” என்று தொடங்கும் உதாரண வெண்பா. (சிவ. போ. சூ. 2. அதி 1) 3. பொன் -சூரியன். “பொன்வாள் முன் கொண்மூவிற் புக்கு” (சிவ. போ. சூ. 11. அதி. 2உ. வெ.) என்று பிறாண்டும் கூறுதல் காண்க. 4. சூ. 1. அதி. 3 உ. வெ. 1. குறள்59. 2. ஒன்று என்பது ஒரு பொருளாதல் என்றும், உளன் என்பது உளனாதல் என்றும் தருமத்தின்மேல் நிற்கின்றன; அதனால் உளனாதல் அன்று என அஃறிணை முடிபு கொள்வதாயிற்றெனவறிக. இவ்வாறு கூறாவிடில், உளன் என்னும் உயர்திணைச் சொல் அன்று என்னும் அஃறிணை முடிபுபெற்று வழுவாம். 3. எவ்விடங்களிலுமுள்ள எத்திறப்பொருளும் என ஏழாம் வேற்றுமை விரிதலால், ஏழாம் வேற்றுமைத் தொகையென்றார். 4. எவனென்னும் சொல் இடத்திற்கேற்ப வேறு வேறு பொருளுணர்த்தும் இயல்பின தாதலின், எஞ்சாமைப் பொருட்டாயிற்று; “கற்றதனாலாய பயனென்கொல்” (குறள்.2) என்புழி இன்மைப் பொருட்டாதல் காண்க. 5. தொல் - எழுத்து. உயிர்மயங்கியல்.35 6. பொன்னென்பது அதன் நிறத்தையுடைய ஞாயிற்றுக் காயினமையின் ஆகுபெயர். 1. தாதான்மிய சம்பந்தமுடைய சத்தியைத் தாதான்மிய சத்தி யென்றார். அகோர சிவாச்சாரியாரும் பலவிடங்களிலும், “பரம சிவனைத் தாதான்மிய ரூபமான சமவாயச் சேர்க்கையாற் பற்றி யிருக்கும் சிற்சக்தி” யென்றே கூறுவர். 2. “விவர்த்தமற்றதாயும் பலத்துடன் கூடியதாயும் உள்ள சிவசத்தியும் தான் ஒன்றாயிருந்தும் காரியவேறுபாட்டால் பல வேறுபாட்டை யடைகின்றது.” (இரத். 189) “சத்திதான் பலவோ என்னில் தான் ஒன்றே யநேகமாக, வைத்திடும் காரியத்தான் மந்திரி யாதிக்கெல்லாம், உய்த்திடும் ஒருவன் சத்திபோல் அரனுடையதாகிப், புத்தி முத்திகளையெல்லாம் புரிந்தவன் நினைந்தவாறாம்.” (சிவ. சித். 1:61) 3.ஈசானி முதலிய ஐவராவார்: ஈசானி, பூரணி, ஆர்த்தி, வாமை, மூர்த்தி. ஈசானியின் கூறாகிய ஐவகைச் சத்தியர்; சசினி, அங்கதை, இட்டை, மரீசி, சுவாலினி; பூரணியின் கூறாகிய நால்வர்: சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிருத்தி; ஆர்த்தியின் கூறாகிய எண்மர்: தமை, மோகை, சயை, நிட்டை, மிருத்தியு, மாயை, பயை, சரை; வாமையின் கூறாகிய பதின்மூவர்: இரசை, இரட்சை, இரதி, பாலி, காமை, சம்மியமினி, கிரியை, புத்தி, காரி, தாத்திரி, பிராமணி, மோகினி, பவை; மூர்த்தியின் கூறாகிய எண்மர்: சித்தி, இருத்தி, தியதி, இலக்குமி, மேதை,காந்தி, சுவதை, திருதி. 4. ஆரணி முதலிய மூவர்: ஆரணி, செனனி, இரோதயித்திரி. நிவிர்த்தி முதலிய ஐவர்: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை. 1. வாமை முதலிய எண்மர்: வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சருவபூததமனி. 2. எழுவகைச் சிவபேதம்: நாதம், விந்து, சதாசிவம், மகேசுவரன், உருத்திரன், விட்டுணு, பிரமன். 3. உன்மனை முதலிய கலைகள்: உன்மனை, சமனை, வியாபினி, சத்தி, நாதாந்தம், நாதம், நிரோதி, அர்த்தசந்திரம், விந்து, மகாரம், உகாரம், அகாரம் எனப் பன்னிரண்டு. 4. விந்து - சுத்தமாயை. 5. மாயா வியந்திர தனுவினுள் ஆன்மா வுளது என்று இயைக்க. 6. சிவ. போ. சூ. 2. 7. சூனியான்ம வாதம், தேகான்ம வாதம், இந்திரியான்ம வாதம், அந்தக்கரணான்ம வாதம், சூக்குமதேகான்ம வாதம், பிராணான்ம வாதம், விஞ்ஞானான்ம வாதம், சமூகான்ம வாதம். 1. உயிர்களுடன் ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்கும் இலக்கணம். 2. பதி, பசு, பாசம் என்ற மூன்றனுள், முதன்மையுடையது பதி. 3. முதற் சூத்திரவுரையில் “மூவினையுடைமையால் உள்பொருளாதலும் அவ்விரண்டும் உடைமையால் நிமித்த காரணனை யுடைத்தாதலும் துணியப்படுமென்பார், மூவினைமையின் தோற்றிய திதியே யென்றார்” என்பதைக் காண்க. 4. இரண்டாஞ் சூத்திர வுரையில், “ஆணையின் இருவினையின் எனவே, தனது சிற்சத்தி துணைக்காரணம், இருவினையும் அதன் வழித்தாகிய துணைக்காரணம்; இருவினையின் எனவே அதற்குப் பற்றுக்கோடு (மாயை) உண்டென்பதூஉம் அது முதற்காரணம் என்பதூஉம்.......... போந்தவாறு காண்க” என்பர். 5. மாயா வியந்திரதனு என்றதின் அடை, விசேடணமாதலேயன்றி ஏதுவாகவும் நிற்றலின், “குறிப்பேது” என்றார்; இதனை ஏது கர்ப்ப விசேடணம் என்ப; “கைசெய்தூண் மாலையவர் (குறள். 1035.) என்றாற் போல. 6. நன்னூல். பாயி. 7. ஆன்மா வென்னும் ஒருமைப் பெயர் உயிர்கள் பலவற்றிற்கும் உரித்தாய் நிற்றலின், அதற்கு முடிக்குஞ் சொல்லாகிய உளதென்பது சாதியொருமை முடிபாயிற்று. 1.இதற்குச் சுப்பிரமணிய தேசிகர் கூறும் உரை: ஈண்டு -இவ் வேழதிகரணத்துள் வைத்து இம்முதலதிகரணத்துள்; இலதென் றலின்- இஃது ஆன்மாவன்று இஃது ஆன்மாவன்று என்று சொல் லும் பொருளுண்மையான்; ஆன்மா உளதென்றது - இதனின் வேறாய் உயிரெனப்படுவது ஒன்று உண்டு என்க. 2.நான்காம் சூத்திரம். 3. நான்காஞ் சூத்திரத்து முதிலதிகரணக் கருத்துரை காண்க. 1. “அவயவம் பொருளாய்த் தோன்றும் அவயவம் ஒழிந்தாற் பின்னை, இவைபொருள் என்ன வேறொன் றிலாமையால் பொருள்கள் இன்றாம், அவைபொருள் இலாமையாலே அறிவுமின் றாகும் என்று” (சிவ. சித்தி. பா. 138) மாத்தியமிகர் கூறுவர். 2.சிவ. போ. சூ.2. 3. இலது என்று அறிந்து சொல்லுதலால், அறியும் அறிவு பெறப்படுதலால், அவ்வறிவே ஆன்மா; ஆகவே ஆன்மாவுளது என்றவாறு. 4. இலது என்பதன் இன்மை. 1. அதுவே யென்றவிடத்து ஏகாரம், இலதென்றதன் இன்மையாகிய சூனியத்தின் நீக்கி ஆன்மாவைப் பிரித்து நிறுத்துதலால் பிரிநிலை யாயிற்று. 2. ஒரோவொன்றாக - ஒவ்வொன்றாக. 3. சூக்கும பஞ்சாக்கரமாய் நின்று அறியுமாறு வருஞ்சூத்திரத்தாற் பெறப்படும். 4. அதுவே நீ - அவ்வறிவையே ஆன்மாவாகிய நீ என அறிக என்பார், மேலும் ஆசங்கையின்றி விலக்குதற்கு, “அதுவும் நானன்றெனக் கழிப்பின்” என்பது தொடங்கி, “வரம்பின்றி யோடுமாகலின்” என்பது வரையில் கூறுகின்றார். 5. வரம்பின்றி யோடல், அநவத்தை (முடியாமை) யென்னும் குற்றம். 6. சூக்கும பஞ்சாக்கரம்: அகரம், உகரம், மகரம் , நாதம், விந்து. 1. மாயேயம் - மாயா காரியம். 2. காணமுடியாத கண்ணுக்குக் கண்ணாடி பொருள்களைக் காணச்செய்து தான் காணமாட்டாது இருப்பதுபோல, உயிருக்குப் பொருள்கனை அறியச்செய்து தான் அறிவின்றியிருப்பது மாயா காரியமென்றது, மாயை அசேதனமாதல் பற்றி. 3. “மாயா தனுவிளக்கா மற்று உள்ளம் காணாதேல், ஆயாதாம் ஒன்றை” (சூ. 4. அதி. 3. உ.வெ. ) என்று கூறுதலாலும் மாயை அறிதற்குக் காரணமாதல் விளங்கும். 4. அவற்றின் - அம்மாயை சிவங்களினின்றும். 5. சூக்கும பஞ்சாக்கரத்தை அறிவுக்கு அறிகுறியாகச் சொன்னார். 6. தந்துரைத்து, அனைத்தின்கண்ணும் என்றும் அனைத்துமாய் என்றும் கொண்டு உரை கூறப்பட்டிருப்பது காண்க. 7. அனைத்தும் நின்.... யல்லை யென்பது உ, ங, ச, ரு, அதிகரணங்கட்கும், தற்பரமு மல்லை யென்பது சா -ஆம் அதிகரணத்துக்கும், தனி என்பது ஏழாமதிகரணத்துக்கும் தோற்றுவாய் செய்கின்றன; இச்செய்தி அவ்வவ்விடங்களிற் கூறப்படுகின்றது. 1-2. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் உரை: எனதுடலென்றலின்- நான் பருத்தேன் சிறுத்தேன் கரியேன் மனிதன் பார்ப்பானென உடம்பின் குணவிசேடங்களை உபசாரத்தால் உயிருக்கேற்றி வழங்கினும், யான் உடம்பு, யான் கை, யான் கால் என உடம்பை அவ்வாறு வழங்குவாரின்றி எனதென வேற்றுமைப்படவே யாவரும் வழங்கக்காண்டலின்; ஆன்மா உளதென்றது - இவ்வுடம்பின் வேறாய் உயிரெனப் படுவதொன்றுண்டென்க. 3. சாருவாக மதத்தவரை ஈண்டுத் தேகான்மவாதிகள் என்கின்றார். 1. உடையானுக்கும் உடைமைக்குமுள்ள இயைபும், இடத்துக்கும் இடத்து நிகழ் பொருட்கும் உள்ள இயைபும் கிழமை யென வழங்கும். ஒன்றினொன்று பிரிந்து நிற்குமாயின் அதன் கிழமை பிறிதின் கிழமை யென்றும், பிரியாது ஒற்றுமையுற்று நிற்குமாயின் தற்கிழமை யென்றும் கூறுவர். அதனால், எனதுடல் என்பது பிறிதின் கிழமை யாகாதாயிற்று. 2. இத்தேகான்ம வாதியைப் போககாரிகை யுரையில் (சூ. 70) அகோர சிவாச்சாரியார், “பிணசரீரத்திலும் கருப்ப முதலிய வற்றிலும் தேகரூபமான பூதங்கள் இருப்பினும் சைதன்னியம் தோன்றாமையால் தேக ரூபமா யிருப்பது சைதன்னியமென்றல் பொருந்தாது” என்றும், “ஆகையால் சரீரத்தை ஆன்மாவாகக் கூறும் கூற்று, காகத்தின் கரைதலுக்கு ஒக்கும்” என்றும் கூறுகின்றார். 3. ‘உன்னுதலாவது, “உடலின்வே றுயிரேனிந்த வுடலன்றோ வுணர்வ தென்னின், உடல்சவ மானபோது முடலினுக் குணர்வுண்டோ” (சிவ. சித்.3: 2) என்றற் றொடக்கத்தான் ஆராய்தல்’ -சிவஞான பாடியம். 1. அலது - அன்று. 2. மாட்டின் - பொருள்போல. 3. நின்ற பொருள்போல என்பது இனிது விளங்க, “நின்றாற்போல” என்றார். 4. என் அறிவது - என்னறிவு; அது பகுதிப்பொருட்டு. 1. ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் உரை: ஐம்புலன் அறிதலின் - ஐம் புலன்களையும் அறிதலான்; ஆன்மாவுளது என்றது - இவ்விந்திரியங்களின் வேறாய் உயிரெனப் படுவதொன் றுண்டென்க. 2. ஸ்ரீ சு.தே.உரை: ஐம்புலனாகிய சத்தப் பரிசு ரூப ரச கந்தங்களை - ஐந்து விடயங்களாகிய ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றங்களை; இந்திரியங்கள் - சுரோத்திர முதலிய இந்திரியங்களுள்; ஒன்றறிந்தது - ஒரு விடயத்தை யறிந்த இந்திரியம்; ஒன்றறியாமையின் - மற்றொரு விடயத்தை அறியாதாதலான்; இவ்வைந்தினானும் - இவ்வைந்து இந்திரியங்களாலும்; ஐம்பயனும் அறிவது உளதாகலான் - ஐம்புலன்களையும் அறியும் பொருளுண்டாகலான்; அதுவே- அவ்வாறு அறியும் பொருளே; அவ்வான்மாவாம் என்றது - மேல் உரை யளவைபற்றிச் சாதித்த ஆன்மா வென்றவாறாம்; ஐம்புலன் அறிதலின் ஆன்மா வுளதென்று மேற்கொண்ட தென்க. இந்திரியான்ம வாதிகளைப் போக காரிகையுடையார், “போக்கியத் தன்மை கரணத்தன்மை யென்னும் இவற்றால், இந்திரியங்களுக்குச் சைதன்ய மின்மை சித்தித்தது; ஆகையால் ஞான சுபாவனான புருடன்றான் போக்தாவாவ னென்பதாம்” (சூ.72) என்று மறுப்பர். 1. “அறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா” -சிவ. சித்.3: 3. 2. அன்றுதல் - மாறுபடுதல். “அன்றினர் அரியென வருபவர்” (ஞானசம். 124:6). 1. “அறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா வைந்தையுங் கொண்டறிவதொன் றுண்ட தான்மா வைம்பொறி யறிந்திடாவே” (சிவ சித். 3:3). 2. ஆகி யென்பது ஒன்றின் வினை; ஆய என்பதிலுள்ள ஆய் என்பது ஐம்புலன்கட்கும் பொதுவாகிய வினை. 3. “ஆடுஉவறிசொல்” என்று தொடங்கும் சூத்திர வுரையில் சேனாவரையர், சிறப்புவினை பொதுவினையோடு முடியும் இயைபுபற்றிக் கூறுமிடத்து இதனை யெடுத் தோதிக் காட்டுவர். 4. அவ்வஞ்செழுத் தென்னும் வகரம் விகாரத்தால் தொக்கது - சிவ ஞானபாடியம். 5. கார் என்பது கருமை நிறத்தை யுணர்த்தும் பெயர்; கார் வந்தது என்றவிடத்து, அது கரிய நிற முடைத்தாகிய மேகத்தையும், பிறகு அம்மேக மெழும் காலத்தையும் உணர்த்துகிறது; அதனால் அஃது இருமடி யாகுபெயர் எனப்படும். படவே, இருமடியாகுபெயரென்பது, ஒரு பெயர் ஆகுபெயரால் ஒரு பொருளுணர்த்த, அவ்வாகு பெயர் மேலும் ஆகுபெயராற் பிறிதொரு பொருளை யுணர்த்தும். இருமுறை யாகுபெயராவது இருமடி யாகுபெய ரென்றும், மூன்று முறையாயின் மும்மடி யாகுபெய ரென்றும் வரும்; கார் அறுத்தான் என்றாற்போல, அஞ்செழுத்து, ஆகுபெயராற் பொறியினையும், அப்பொறி யாகுபெயராற் பொறியின் தொழிற் பாட்டையும் உணர்த்துமாறறிக. 1. சிவ. சித். சூ. 2; 64. 2. புரியட்டகம்: சத்தாதி யைந்தும் மனம் புத்தி யகங்கார மூன்றுமாக எட்டும் புரியட்டகம்; பூதம், தன்மாத்திரை, ஞானேந்திரியம், கன்மேந்திரியம், குண தத்துவம், பிரகிருதி தத்துவம், புருட தத்துவம் என்ற எட்டனையும் கூறுவதுமுண்டு; இவையும் மேலே கூறியதில் அடங்குதலால் மாறுபாடில்லை. 3. ஒடுக்கமென்பது ஒடுக்கத்தி னிகழ்ந்தவற்றை யுணர்த்துதலின் ஆகுபெயரெனப் பட்டது. 4. சு. தேசிகர் உரை: கனவுண்டா மென்றும் - சொப்பனத்தினைக் காணப்பெற்றே மென்றும்; கண்டிலமென்றும் - காணப்பெற்றிலே மென்றும்; நனவின்கண் -சாக்கிரத்தின்கண்; நிற்பது உளதாகலின் - மயங்கியறியும் பொருளுண்டாதலான்: அதுவே - அவ்வாறு மயங்கி யறியும்பொருளே; அவ்வான்மாவாம் என்றது - மேல் உரையளவை பற்றிச் சாதித்த ஆன்மா வென்றவாறாம்; ஒடுக்கமறிதலின் ஆன்மா வுளதென மேற்கொண்டது எ-று. 1. சித்தசாதனம் -மறுத்தற்கெழுந்த பொருளையே எடுத்தோதும் ஏதுவால் மறாது சாதிப்பது. ஒடுக்கமாவது சூக்கும தேகமெனக்கொண்டு அறிவது சூக்கும தேகமாயின், சூக்கும தேகான்மவாதி துணிபே, துணியப்படுவது பற்றிச் சித்த சாதனமாம் என்று கடா எழுவதாயிற்று. 2. பொருட்டாதலால் - பொருளதாதலால். 3. சூக்கும தேகத்தின் ஆன்மாவுக்கு வேறுபாடு உண்மையான். 4. மிருகேந்திரத்திலும், “கன்மங்களை யனுபவித்து நீக்குவதாயும், சேதனனான ஆன்மாவின் சேர்க்கையால் சேதன ரூபமாயும் மாயா கருப்பத்திற் சுற்றுகிறதாயு முள்ளது இந்தச் சூக்கும சரீரம்” என்று கூறப்பட்டிருப்பதால், சூக்கும தேகத்தின் வேறாய் ஆன்மா வுண்மை துணியப்படுகிறது. 1. செவ்விதின் சென்றெனவே, உயிராகிய தனக்கோ, தான் கூடியிருக்கும் தூலவுடற்கோ வருத்தமின்மை பெறப்பட்டது. 2. சாக்கிரத்தில் தூலவுடம்பொடு கூடிக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் உயிர், சொப்பனத்தில் சூக்கும வுடம்பொடு கூடி அவற்றைச் செய்தலையே ஈண்டுக் கூறுகின்றார். 3. விளையாடல் ஈண்டுப் போக நுகர்தல். “அந்தச் சூக்கும சரீரமானது அந்த அந்தப் புவனங்களில் தோன்றிய சரீரத்திற்பிரவேசித்து அந்தப் போகத்திற்குரிய பூமிகளில் பலத்தைப் பண்ணுகிறது” (இரத். 111). 4. உயிர்ப்பன என்னும் அஃறிணைப்பலவறிசொல், அன்சாரியை பெறாது உயிர்ப்ப என நின்றது. 5. வேறொன்றாகிய சூக்கும வுடம்புகொண்டு விளையாடியவுயிர் அதனிற் பிரிந்து மாறலால், வினை வேறுபடுதல் பற்றி, “வினைமாற்று” என்றார். 1. இப் பிராணான்ம வாதிகளைப் போக காரிகை யுடையார், “இந்தப் பிராணனுக்குச் சைதன்னியம் நிச்சயமாக இல்லை, வாயுவாயிருக்கிற படியால்; வெளியிலிருக்கும் வாயுப்போல” என்று கூறி மறுப்பர் (சூ. 31). 2. சு.தேசிகர்: கண்படில் - துயிலிடத்து; உண்டி - இவ்விடயங்களிடமாக வரும் இன்ப துன்ப நுகர்ச்சியும்; வினை - உடம்பு சேட்டித்தலும்;இன்மையின் - இல்லாமையால்; ஆன்மா வுளதென்றது - இப்பிராண வாயுவின் வேறாய் ஆன்மாவுண்டு என்றவாறு. 3. உண்டியும் வினையும் என வருதற்குரியது உம்மையின்றி, உண்டி வினையென வந்தமையின் உம்மைத்தொகை யாயிற்று. 4. சிவ. சித்தி. 4:30. 1. “கனவின் பயனும் நனவின் பயனும், வினையின் பயனவை பொய்யென வேண்டா” (சங்க. நிரர். மாயா. நிரா. 134-5). 2. சாக்கிரத்திற் போலச் சுழுத்தியினும் பிராணவாயு உண்மையின், “பிராணவாயுவை யொழித் தொழிந்த கருவிகளெல்லாம்” என்றார். 3. “கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை” (குறள்.15) என்றவிடத்து, எல்லாம்வல்லது மழையென ஆற்றலாற் பொருள்கோடல் போல. 4. உண்டி யென்றது இன்ப துன்ப நுகர்ச்சியை யென்றும், வினை யென்றது உடம்பு சேட்டித்தலை யென்றும் கூறுவார், “இன்பத் துன்பஞ் சீவனம்” என்றார் என்பது சிவஞானபாடியம். 5. “அவற்றின் வரூஉம்” (தொல். சொல். 290) என்ற சூத்திரத்துப் “பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும், யாவயின் வரினும் தொகையின்றியலா” என்றமையால், “செவ்வெண் தொகை விகாரத்தால் தொக்கது” என்றார்; தொகாவழி, “இன்பத் துன்பஞ் சீவனமாகிய இவை” யென விரிந்து வரும். 1. இன்ப துன்ப நுகர்ச்சியுளது, சீவியா நிற்பதுளது என்றியையும். 2. திரிபின்றி இயல்பாயிருப்பது பிரகிருதி. 3. கண்ணுருபு வரற்குரிய விடத்தே குவ்வுருபு வந்ததால் உருபுமயக்கம். 4. கண்டறிவது உடலன்மையின், இவ்வாறு பொருள் கூறினார். 5. காட்டென்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயரால் காட்டுதலையுடைய வாகிய கண் முதலிய கருவிகளைக் குறித்து நின்றது. 1. உண்டியும் வினையும் என்பதற்கு மேலே உண்டிவினை யென்றதற் குரைத்த பொருளே கொள்க. பிரகிருதி, ஈண்டு உடம்பு. 2. “காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்” (சிவ. போ. சூ. 11) என்பதனாலும் உயிர்க்குக் காண்டல் உரிமையாதல் விளங்கும். 3. “அடுத்துல கோதும் பொருளருத் தாபத்தி யாவதுதான், எடுத்த மொழியினஞ் செப்புவதாகும் இவ்வூரிலுளார், படைத்தவ ரென்னிற் படையாதவருமுண்டென்றும் இவன், கொடுப்பவனென்னிற் கொடாதாரு முண்டென்றுங் கொள்வதுவே” என்ப. சிலர் மறுதலைப் பொருள்கோளையும் அருத்தாபத்தி யென்பர். ஈண்டு இக்கருத்தே கொள்ளப்படுகிறது. உயிர் ஒடுங்கிய வழி, உடலின்கண் உண்டிவினை யின்மையின், ஒடுங்கா வழி அவையுண்மை பெறப்படும் என்ற அருத்தாபத்தி “ஒடுங்காது உடல் நண்ணின் ஊன் உண்டிவினை யுள்ளதாம்” என்பதாயிற்று. 4. இன்றி - இன்றாக; இல்லையாக என்பதன் திரிபு. 5. ஒடுங்க, இன்றி யென்புழி ஒடுங்கவும் இன்றியும் என வரற்குரிய சிறப்பும்மைகள் தொக்கன. 6. சிவ. சித்தி. 3:4. 7. உண்டி வினையின்றி என எதிர்மறை முகத்தாற் கூறியவர், உண்டி வினையுள்ளதாம் என உடம்பாட்டு முகத்தாற் கூறியது. 1. சூ. 3: அதி.1. 2. பிரமமாகிய சைதன்னியமே ஆன்மா வென்பது விஞ்ஞான வாதிகளின் கொள்கை. “விஞ்ஞான ஸந்ததி மாத்ரம் ஆத்மேதி விஞ்ஞானவாதிந:” (சிவாக் . பாடி. பக். 280). 3. கேவலாதீதத்தின் இயல்பை, “கேவலற் சொற்றிடின் நித்தன், மெய்த்தகு குணமிலி வியாபி மொய்த்து, மலநனிபுணர மறைவோன் இலனெனைச் செய்தியும் அறியோன் மையி லமூர்த்தன், வலியிலன் அசேதனன் ஒளியிலி இறையலன்” (ஞானா. 8: 6-10) என்று சான்றோர் கூறுதல் காண்க. 4. கலை முதலியன, மன முதலிய அகக்கருவிகட்கு உட்கருவியாதலின், அவை முதற்கண் தொழிற்படுவவாயின; “வாயாதி சோத்திராதி புறத்துவாழ் கருவியாகும், ஓயாத மனாதி காயத்துணரு முட்கருவி யாகும், ஆய்வார்கட் கராகமாதி யவற்றினுட் கருவி யென்பர்” (சிவ. சித். 2: 63). 5. பிரமம் எல்லாம் ஒருங்கறியும் முற்றறிவுடையது என்பது யாவரு மறிந்த வுண்மை. 1. தான் அடிமை யென்றும் இறைவன் முதல்வனென்றும் தன்னியல்பை யறியாமையே யன்றி அறிந்தவற்றையும் மறந்து மறந்து அறிவதும் ஆன்மாவுக்கு இயல்பு; முதல்வன் அவ்வாறு மறத்தலும் உணர்தலுமிலன்; யாவையும் அறிந்தவாறே அறிவது அவற்கியல்பு. 2. இதனைக் காட்சியும் கருத்துமாகிய அளவைகளாற் காண்டல் அரிதாகலின், “வேதாகமங்களான் அறிவிக்க அறிந்து” என்றார். 3. உரையளவை, ஆகமவளவை. இரண்டாஞ் சூத்திரத்தில் “அவையே தானே” என்ற “அவை”யாகிய உயிர்கள். 4.அறிந்தாங் கறிவன் என்பதில், அறிந்தாங்கு என்பதற்கு “அறிந்தவாறே” என்பது பொருளாதல், “எண்ணியாங்கு” (குறள் 666) என்பதற்குப் பரிமேலழகர், “எண்ணியவாறே” என்று பெருள் கூறுவதனாலும் அறியலாம். 5. பிறவாறு கூறப்படும் உரைவகை தெரிந்திலது. 1. பிரமப்பொருள் கருவிகளோடு கூடி நின்றவழி அவிச்சையின் நீங்காது தன்னியல்பு உணராதாயினும் அதனால் அதற்கு இழுக்கு இல்லை யென்பாரைத் தெருட்டுங் குறிப்புடையது இம்முன்னுரை. மேற்கூறிய நியாயமாவது அவ்வளவில் அவன் மகிழுக என்ற நியாயம் 2. அதனை - பிரமத்தின் வேறாய் ஆன்மாவென்ப துண்டு என்பதனை. 1. அது - அப்பேரறிவு. 2. மனமொருங்கி - மனம் ஒருமுகமாக ஊன்றி நின்று; “வரும்பிறப் பெம்மோ டொருங் காகியர்” (பெருங். 1. 53 . 44) என்புழிப்போல. 3. “அறிவும் என்னும் உம்மை மேற்கூறிப் போந்த சடமுமன்றென இறந்தது தழீஇயிற்று” -சிவபாடியம். 4. நான்காஞ் சூத்திரத்து மூன்றாமதிகரணத்து வெண்பாவில், “இலாடத்தே யவ்வவ விந்திரியத் தத்துறைகள் கண்டதுவே, யவ்வவற்றி னீங்கல்” என்று ஓதுமாற்றாலும் அதன் உரையாலு மறிக. 5.உண்மையதிகாரம். ஏழாஞ்சூத்திரம். அதி. 3. “இருதிற னறிவுள திரண்டலா வான்மா” என்பதற்கு உரைத்த பொழிப்புரையில், “இரண்டன்பாலு முளதாய் உள்ள வதுவே அவ்வான்மாவாம்” என்புழி, “இரண்டன்பாலு முளதாயெனவே அத்தன்மை படிகம் போலச் சார்ந்ததன் வண்ணமாய் அழுந்துந் தன்மை” யென்றது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. 1. மூவகையாவன: உணர்த்த உணர்தலின் என்றதற்கு, கலை முதலிய கருவிகளால் அறிவிக்க அறிதல், கருவிகளோடு கூடிய வழியும் வேதாகமங்களால் அறிவிக்க அறிதல், கருவிகளோடு கூடி யறியும் சாக்கிரத்தில் இலாடத்தே நின்று அவ்வவற்றை விட்டுவிட் டறிதல் என மூவகையாக ஓதியன. 2. சிவ. போ. சூ. 3. அதி.1. 3. யோகசாரரை யோகாசாரியரென்றும் விஞ்ஞான வாதிகளென்றும் கூறுவர். இப்பிரிவு கி.பி நான்காம் நூற்றாண்டில் தோன்றிய தென்பர் -Bothi satva Doctrine. p. 45. 4.“அரிசன நூறுகூட வருணம்வந் தெழுந்தாற் போல, விரிசகம் பொருள்கள் ஞானம் விரவிட மேவித் தோன்றும், தெரிசனம் இதுவே” என்பது வைபாடிகர் கூறுவது - சிவ. சித். பரபக். 141. 1.இத்தொடர் குறிப்பெச்சத்தாற் பெறப்பட்டது. மாயாகாரியம் நிலைபேறுடைய தன்று என்பதை, மாயை நிலையாவாம் என்பதனாலறிக. 2. மாயை யாகிய காரணம் காரியமாகிய தத்துவங்களைக் குறித்து நிற்றலின், இது காரணவாகுபெயர். மாயை என்பது மாயா என்ற தனித்தமிழ்ச் சொல்லின் மரூஉ முடிபென்றும், மாய்தலும் ஆய்தலும் என்ற இரு சொற்களின் முதனிலைகளின் கூட்டமே மாயா என்ற சொல்லென்றும், மறைதற்கும் தோன்றுதற்கும் முதற்காரண மாவது என்பது பொருளென்றும் சைவசித்தாந்த ஆராய்ச்சியாளர் கூறுவர். மா, யா எனப்பிரித்து இப்பொருளையே மிருகேந்திரம் என்னும் உபாகமம் கூறுகிறது. 3. சித்தம் - மூலப்பகுதி, சித்தப்பகுதியாகிய அகச்சமுதாயம்: குணம், அந்தக்கரணம், புலன், ஞானேந்திரியம், கன்மேந்திரியம் என்ற ஐந்துமாம். 4. “உருபு நுகர்ச்சி குறிப்பே பாவனை, யுள்ள வறிவை ஐங்கந்த மாவன” (மணி. 30: 189-90). 5. “வேற்றுருக்கொண்டு வெவ்வே றுரைக்கும்”(மணி. 29:41) என்று பிறரும் கூறுதல் காண்க. 1. அவர் - சமூகான்ம வாதிகள். அவை யென்றது அவர்க்குடன்பாடாகிய ஐவகைக் கந்தங்கள். 2. கலைமுதல் மண்ணீறாகப் பல வேறுவகைப் பெயர்களைக்கொண்டிருத்தலின், “வேறுபெயர் பெறுமாறும் ” என்றார். 3. அவை தொக்க சமுதாயம் உடம்பென்றும் தனுவென்றும் வேறு பெயர் பெறுதலால், “ஆன்மாவெனப் பெயர் பெறாது வேறு பெயர் பெறுமாறும்” என்றார். 4. “காணின்” என்றதனால், காண்டற்குரிய அளவைகளால் என்பது வருவிக்கப் பட்டது. 5. முதற்கண் ஞானத்தை யுணர்ந்து பின்னர் அதனால் அச்சமுதாயத்தை யாராய்தல் வேண்டுமாதலால் “ஞானத்தை அலையாமல் முன்னுணர்ந்து நாடில்” என்றார். 1. மேலும் சென்றியைதலாவது, கலையாதி மண்ணந்தமாம் என இயைதல். 2. காரணம் காரியத்துக்காகி வருதலால் காரண வாகுபெயர். 3. திருவாசகம். அதிசயப். 7. 4. சிவ. போ. சூ. 3. அதி. 1. 5. இதனால், கருதலளவையின் சிறப்புடைப்பயன் இது வென்பது வலியுறுத்தப் படுவது காண்க. 1. “எப்பொருட்கும் இலக்கணங்கள் பிரமாணங்கள் இல்லையேல் இசையாதென் றியம்பலாலே, முப்பொருட்கும் இலக்கணங்கள் பிரமாணங்கள் மொழிந்திடுவோம்” (சிவநெறி. 17) என்று சிவாக்கிர யோகிகளும் கூறுதல் காண்க. 2. பதி பாச பசு என்று வைத்துரைத்த நெறிக்கு எதிராக, பசு பாசபதி யென வைத்து இலக்கணம் கூறுதலின், “எதிர்நிரல் நிறையாக” என்றார். 3. மாட்டெறிந் துரைத்தல் - ணகரவிறுதிப் பெயரொன்றற்குக் கூறிய இலக்கணம், ளகரவிறுதிப் பெயர்க்கும் எய்துமாறு “ளகாரவிறுதி ணகாரவியற்றே” என்றாற்போலக் கூறுவது மாட்டெறிந் துரைத்தல் என்னும் உத்திவகையாம். 4. ஆண்டென்றது, மூன்றாஞ்சூத்திரக் கருத்துரைத்த விடத்து எனவறிக. 1. முதன் மூன்றதிகரணங்களால் சாக்கிரமும், நான்காமதிகரணத்தால் சொப்பனமும், ஐந்தாமதிகரணத்தால் சுழுத்தி துரியம் துரியாதீதம் என்ற அவத்தைகளும் ஆக அவத்தைகள் ஐந்தும் தொகுத்துக் கூறினமையின், “தொகுத்தோதிய அஞ்சவத்தை” என்றார். 2. “தொகுத்துச் சுட்டல் வகுத்துமெய்ந் நிறுத்தல்” என்ற உத்தி பற்றி மூன்றாஞ் சூத்திரத்துத் தொகுத்து ஓதியதனை நான்காஞ் சூத்திரத்தில் விரித்தோதுதலால், சூத்திர வியைபு இனிது விளங்கும் என்றதாம். 3. அங்ஙனம் நிற்றலாவது மனம் புத்தி அகங்காரம் சித்தமென்னும் நான்கனோடு கூடி நிற்றல். 4. “மாயா வியந்திர தனுவினுள் ஆன்மா” என முன் சூத்திரத்தில் உத்தேசம் செய்த மையின், அவத்தைப்படுமாறு ஈண்டு இலக்கணம் என்று இலக்கணம் கூறுகின்றார்; உத்தேசம் செய்தே இலக்கணம் கூறல் வேண்டும் என்பது தருக்க முறை. 1. உணராமையால் சந்தித்ததென்றால், உணராமை காரணமும் சந்தித்தல் காரியமு மாய் இயைதலின், “காரண காரியப் பொருட்டாய் நின்றது” என்றார். 2. சந்தித்ததென்னும் வினைமுற்று, முற்றிநில்லாது கூடிநின்று (சந்தித்து ) என எச்சவினைப் பொருள் தருதல் பற்றி, “வினையெச்ச முற்” றென்றார். 3. வேறுவேறு வினைமுடிபு செய்தல் வாக்கியபேதம் என்னும் குற்றமாயினும், அதிகரணப் பகுப்புக்கேற்ப இயைந்த ஒரு பொருண்மேல் நிற்றலில் தீராமையின், வாக்கியபேதம் எய்தாமை கண்டு, “வேறு வேறு வினை முடிபுசெய் துரைத்தலும் ஒன்று” எனப்பட்டது. 4. “அந்தக் கரணாத் அந்ய: அபி” என்று ஓதுதலால், அதற்கேற்ப “ஆயினும்” என்பது வருவிக்கப்பட்டது என்றார். இது வடநூலினின்றும் மொழிபெயர்க்கப் பட்டது என்பது இவ்வுரைகாரர் கருத்து. 5. ஒரு பொருண்மேல் வாராமை வாக்கிய பேதம் என்னும் குற்றம்; இக்குற்றம் சூத்திரங்களில் இருத்தலாகாது என்பது வடநூன் மரபு. 6. அவற்றோடு சந்தித்தது என ஒடு வுருபு விரிந்தது. இரண்டாவது விரிப்பின், அவற்றைச் சந்தித்தது என வரும். 1.“வினையெஞ்சு கிளவிக்கு வினையுங் குறிப்பும், நினையத் தோன்றிய முடிபாகும்மே, ஆவயிற் குறிப்பே யாக்கமொடு வருமே” (தொல். சொல். 432) என்பது விதி. குறிப்புவினை ஆக்கமொடு வருமென்றதனால், “அஞ்சவத்தை யுடைத்தாம்” என ஆக்கம விரித்துரைக்கப்பட்டது. 2. அவத்தைத்து என்பது “அதுச்சொல் வேற்றுமை யுடைமையானும்” (தொல். சொல். 213) என்பதனால் வந்த குறிப்புவினை. 3. ஏனைய இந்திரியம் புலன் முதலியன. 4. சிவ. சித்தி. சூ. 4. 28. 5. “யாதானுமோர் இயைபு பற்றி ஒன்றன்பெயர் ஒன்றற்காதல்” (தொல். சொல். சேனா. 114) ஆகுபெயர்க்கு இலக்கணமாதலின், யாதும் இயை பில்லாத மன முதலியன உயிர்க்கு ஆகுபெயராதல் கூடாமைபற்றி, “ஆகுபெயரென்றற்கு ஏலாமையானும்” என்றார். 1. அந்தக்கரணம் அவற்றின் ஒன்றன்று என நின்ற இம்முதலதிகரணப் பொருள் ஈண்டு இதுவெனச் சுட்டப்பட்டது. 2. தொல். பொருள். மரபு. 100. 3. இவ்வாறே, “அந்தக்கரண மவற்றி னொன்றன் றாயினும் எனவே, அவற்றி னொன்றன் றாதலும் அனுவாத முகத்தான் ஈண்டே பெற்றாம்” என முன்னர்க் கூறியதைக் காண்க. 4. சு. தேசிகர் உரை: ஈண்டு - இம் மூன்றதிகரணத்துள் வைத்து முதலதிகரணத்து; இவ்வான்மாவாவது - மேற்கூறிப் போந்த உயிராவது; அந்தக்கரணங்களாயுள்ள மனோ புத்தி ஆங்கார சித்தங்களில் - புறவந்தக் கரணங்களாகிய மனம் புத்தி அகங்காரம் சித்தங்களாகிய இவற்றின்; ஒன்றன்று என்றது - வேறாம் எ-று. 5. கலை, வித்தை, அராகம், புருடன், மாயை, காலம் , நியதி என்ற எழும் உள்ளந்தக்கரணம். இவை வித்தியா தத்துவ மென்றும் வழங்கும். 1. சிவ. சித்தி. 4. 2. 2. என்னும் - என்று அந்தக்கர ணான்மவாதிகள் எழுப்பும். 3. கீழுள்ளவை - இந்திரியங்கள். அவை இவ்வந்தக்கரணங்களைக் கொண்டே தொழிற்படுதலின், அவ்விந்திரியங்களை நோக்க, இவை சித்தாதலின், “சித்தாய் நின்றே” என்றும், தம்மைத்தாமே இவை அறியாமையால், “தம்மை நோக்கி அசித்தாய் நிற்றலால்” என்றும் கூறினார். 4. அதிட்டிக்கப்பட்டு - செலுத்தப்பட்டு. 5. “மனமது தைசதத்தின் வந்தொரு பொருளை முந்தி, நினைவதுஞ் செய்து அங்கு ஐயநிலைமையின் நிற்கும் - “சிவ. சித்தி. 2. 60. 1, ஈண்டுக் கூறிய இயல்பு, “புத்தி அவ்வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவம் சார்ந்து, வத்து நிச்சயமும் பண்ணி வரும் சுகதுக்க மோகப், பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும்” (சிவ. சித். 2. 48) என்பதனாலறிக. 2. சுக துக்க மோக ரூபமாதல்: புத்தி, சத்துவ குணத்தோடு கூடு மிடத்துச் சுகரூபமும், இராசத குணத்தோடு கூடுமிடத்துத் துக்க ரூபமும், தமோகுணத்தோடு கூடுமிடத்து மோகரூபமும் ஆம் என அறிக. 3. சிவ. சித்தி. 11. 11. 4. மனம் புத்தி முதலியன ஆன்மா எனவரும் என்று அருணந்தி சிவனார் கூறியது உபசார வழக்கேயன்றிப் பட்டாங்கு அன் றென்பதை இதனால் விளக்குகின்றார். 5. சிவ. சித். 4. 2. 6. “செவி மெய் கண் வாய் மூக்கெனப் பெயரிய, வாயின் மிலேச்சர் சாரணர் தூதர், சூத மாகதர் புரோகித ரென்ற, மேதகு புத்தீந் தியமும் தீதறு, வாக்கொடு பதங்கை பாயுவு பத்தமென், இவுளி மறவரும் யானை வீரரும், திகிரி தூண்டிய தறுகணாளரும், வன்கண் மள்ளரும் தந்திரத்தலைவரு, மென் கருமேந்தியத் திறனும் எஞ்சிய, ஓசை கூட்டம் உருவம் இரதம், கந்த முரைநடை கொடைபோக் கின்பமென், விடயப்பல் பரிசனமு மிடையாப், பிராண வபான வுதான வியான சமான நாக கூர்ம கிருகர, தேவதத்த தனஞ்சயனென்ற, வீரைந் துறுதிச்சுற்றமும் நீதி, சிந்தித்தாய்ந்து துணிந்து செயப்படும், அந்தக்கரண வமைச்சரும்” என்பது ஞானாமிர்தம் (அகவ.16). 1. உண்டி வினையின்மையின், ஒடுக்கமறிதலின் என்பன முதலிய ஏதுக்கள். 2. மாயாவியந்திர தனுவிற்குரிய இந்திரிய முதலியவற்றின் வேறாய்ச் சிறந்து நிற்பதுபற்றி, “அந்தக்கரணங்கள் சிறந்தமைபற்றி” என்றார். 3. இக்கருத்தையே அருணந்திசிவனார், “உணர்வுதித் தொடுங்குமாறும் பவ்வமும் திரையும்போலப் பார்க்கில் இப்பண்புந் தோன்றும்” (சிவ. சித். சூ. 4. 3) என்று உரைப்பது காண்க. 1. மனமாதியால் உணர்தல், உள்ளம் உணர்தல் என்ற இரண்டும் திரையை யொத்து உதிக்கும் என இயைதலின், “உணர்தலிரண்டும் எழுவாய்” என்றார். “யாவயின் வரினும் தொகையின்றியலா” (சொல். இடை. 42) என்பவாகலின், செவ்வெண்தொகை விகாரத்தால் தொக்கதென்றார். 2. வடமொழியாளர் ஆன்மாவென்னும் சொல்லை ஆண்பாற்சொல் என்பர்; அம்மொழியாளர் திணைபால்களைச் சொற்பொருள்பற்றிக் கொள்வதிலர். 3. உதித்தவொன்றை யெனற்பாலது உதித்தொன்றை என்று நின்றமையின் இதனைக் கூறினார். 4. இவை முறையே Perception, Conception and Judgement என உளநூலாராற் கொள்ளப்படும். 1. கலை முதலிய பஞ்ச கஞ்சுகத்துடன் போகநுகர்ச்சிக்கு ஒருப்பட்டு நிற்கும் உயிர் பும்ஸ்துவமலத்தோடே இயைந்திருப்பதுபற்றி, உள்ளம் என்றதற்கு, “புருடதத்துவமென நின்ற உயிர்” என்றார். உயிர் மாயா காரியங்களின் உள்ளே நடுவில் இருப்பது என்பதுபற்றி உள்ளம் எனப்பட்டது; திருவள்ளுவனாரும் உயிரை உள்ளம் என்பது காண்க. “ஓர்த்துள்ளம்” (குறள். 357) 2. வாயிற்காட்சியாவது இந்திரியக்காட்சி; இதனை, “உயிரினோ டுணர்வு வாயில் ஒளியுரு வாதிபற்றிச், செயிரொடு விகற்பமின்றித் தெரிவது இந்திரியக் காட்சி” யென்பர், 3. மானதக்காட்சியை, “அயர்வில் இந்திரிய ஞானம் ஐம்புலன் சார்ந்து உயிர்க்கண், மயர்வற வந்தஞானம் மானதக் காண்டலாமே” (சிவ. சித்தி. அளவை. 6) என்பதனாலறிக. 4. துணிந்தென்னும் செய்தே னெச்சம் காரணப்பொருளில் வந்தது. இவ்வேறாம் என்புழி இவ்வென்னும் சுட்டுப்பெயரின் ஈற்றில் நீக்கப் பொருட்டாய இன்னுருபு விரித்துரைக்கப்படுகிறது. 1. இவற்றின் வேறாம் என்பதும், அவற்றின் வேறாம் என்பதும், முறையே இவ்வேறாம் அவ்வேறாம் என நின்றன என்பார், சாரியையும் உருபும் உடன்தொக்கன என்றார். வற்று, சாரியை; இன், உருபு. ஆங்கு என்பதன் உரையில் விரிந்துநிற்கும் உம்மை சிறப்பும்மை. 2. சித்தமாய்ச் சிந்தித்தல், மனமாகிப் பந்தித்தல், ஆங்காரமாய்த் தெளியாமை, புந்தியாய் ஆய்தல் என்ற நால்வேறு வகைத்தாய் என்க. 3. சித்தம் மனம் ஆங்காரம் புத்தி யென்ற முறையிற் கூறாது, சித்தம் ஆங்காரம் புந்தி மனம் என்று கூறினமையின், “செய்யுளாகலின் முறை பிறழவைத்தார்” என்றார்; “படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசரு ளேறு” (குறள்.381) என்றாற்போல. 4.பொருளின் உண்மை மாத்திரம் காணும் நிருவிகற்பம் போலாது அதன் பெயர் சாதிகுணம் கன்மம் பொருள் என்ற ஐந்தொடும் வைத்துக் காண்பது சவிகற்பக் காட்சி. 1. சு. தேசிகர் உரை: அகாரம் அகங்காரம் - அகரம் அகங்காரத்தினையும்; உகாரம் புத்தி- உகரம் புத்தியினையும்; மகாரம் மனம் - மகரம் மனத்தினையும்; விந்து சித்தம் - விந்து சித்தத்தினையும்; நாதம் உளவடிவு - நாதம் உயிரினையும் செலுத்துதல்பற்றி; கடல்திரையே போன்று - சமுத்திரத்தின்கண் புதிதுபுதிதாய்த் திரை தோன்றியும் ஒடுங்கியும் வருமாறுபோல; போதம் - மாசகலத்தின்கண் கணந்தோறும் உணர்வு; ஆம் - உதித்தும் ஒடுங்கியும் வரும்; பகாது இவற்றை நாடில்- பகுக்காது இவ்வக் கரங்களை யாராயின்; பிரணவமாம்- பிரணவமாகும் எ-று. 2. துகளறுபோ. 14. 3. சிவ. சித்தி. 4:3. 4. அந்தக்கரணங்களின் வேறாக ஓதிவந்த ஆன்மாவை, ஈண்டு அவற்றோடு ஒப்பவைத்துக் கூறுதற்கு ஏது இதுவென்பார். “ஒப்புமை பற்றிப் புருடனைச் செலுத்தும் அகரமும் உடன் கூறினார்” என்றார். 5. அபேதமாகவைத் தோதுதலாவது “நாதம் உளவடிவாம்” என்பது. 6. சிவ.சித்தி. (1:24). 1. சிவநெறிப் பிரகாசமுடையாரும், “உயிர்கட் குணர்வாய்த் திரையுந் தண் கடலதுவும் போலுளத்தே யுதித்துச் சித்தாதியில் திகழ்தல் செய்யுமிது பந்தம்” *(81) என்பது காண்க. 2. சு. தேசிகர் உரை: எண் நிலவு - மானதக் காட்சியின் கண் நிலவிய; ஓங்காரத்து -பிரணவத்தின்கண்ணே; நண்ணிய- பொருந்திய; நாதத்து- நாதத்திற்கும்; விந்துவொடு - விந்துவிற்கும்; அதி தெய்வம் - அதி தேவதையை; கண்ணில்- கருதுமிடத்து; சதாசிவம்- சதாசிவமும்; ஈசராம் - மகேசனும்; மகர உகர அகரத்து - மகர வுகர அகரங்கட்கு; அதி தெய்வம் கண்ணில் - அதி தேவதையைக் கருதுமிடத்து; பரமன் மாலொடு பகர் அயனாம்- முறையே சுத்த வித்தையின் வைகுவோராகிய உருத்திரனும் மாலும் சொல்லப்படும் அயனுமாம் எ-று. 3. மகர வுகர அகரத்தாம் என ஒற்றன்றி வரற்பாலது, மகரவுகரம் மகரத்தாம் என மகரவொற்றுப் பெற்றுவந்ததை, “ஒற்றில்வழி ஒற்றாய் வந்தது” என்றார். 1. சு. தேசிகர் உரை: இவ்வான்மா - அந்தக்கரணங்களின் ஒன்றன்றாகச் சாதிக்கப்பட்ட ஆன்மா; சகசமலத்தினால் - முதல்வனைப்போல அந்தக்கரண முதலியவற்றின் வேறாய சேதனப் பொருளாயினும் செம்பிற் களிம்புபோல வேறு காரணமின்றி மூலமலந் தன்னோடு உடனாய் நிற்றவின்; உணர்வன்றென்றது - தன்னியல் பா னுணருமாறின்றிக் கருவிகளைக் கூடிநின்று உணர்வதாயிற்று எ-று. 2. “இயற்கை சகசம் செயற்கையா கந்துகம்” என்பது பிரயோக விவேகம். 3. சிவ. போ. சூ. 1. 4. தன்னியல்பு - சொரூப விலக்கணம். 5. பொதுவியல்பு - தடத்த விலக்கணம். 6. சொரூபம், தடத்தம் என்ற இருவகை யிலக்கணம். 1. உள்ளது காரியப்படும்; இல்லது காரியப்படாது என்பது சற்காரிய வாதம். 2. திரோதக மென்பதும் மறைத்துக் கொடுநிற்ப தென்பதும் ஒரு பொருளனவாதலின், இரண்டனையும் கூறியதற்கு இதனால் அமைதி கூறப்படுகிறது. 3. வினையும் செயப்படுபொருளும் பிறவும் உணர்த்திவரும் வினைப்பெயர் போல இது செய்வதாகிய வினைமுதற் பொருண்மை யுணர்த்தி நிற்கும் வினைப்பெயராகலின், “வினைமுதன் மேனின்ற வினைப் பெய” ரென்றார்; பிறாண்டும், “அவத்திதனென்னும் வடமொழி வினைமுதன் மேனின்ற வினைப்பெயர்” என்பர் (சிவ போ. சூ 4 அதி. 3. பாடியம்). “உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” (குறள்.339) என்றவிடத்து உறங்குவது, விழிப்பது என்ற வினைப்பெயர்கள் உறங்குதல், விழித்தல் என வினைமேல் நிற்பதும், இல்வாழ்வான் என்பான் என்ற விடத்து என்பான் என்னும் வினைப்பெயர் செயப்படு பொருண்மை மேல் நிற்பதும், வேலன் என்னும் வினைப்பெயர் கருவிமேலும் நிற்பதும் போல, வினை, வினை முதல், கருவி, செயப்படுபொருள் முதலியவற்றின் மேல் நிற்பது வினைப்பெயர்கட்கு இயல்பு. 4. அபாவம்- இல்லாதது. இல்லதொன்றுக்கு வினை கிடையாது; ஞான அபாவம் அஞ்ஞானமாயின் அதற்கு மறைத்தலாகிய வினை கூடாது; மறைத்தலைச் செய்தலின், அஞ்ஞானம் ஞானாபாவமன்று என்பதாம். அபாவம் - இன்மை. 1. இயற்கைத் தொடர்புடைய ஆணவமலத்தைச் சகசமலமென்றமையின், செயற்கையாய்த் தொடரும் மாயாமலத்தை, “ஆகந்துகமல மெனப்படும் மாயை” என்றுரைக்கின்றார். 2. விளக்கிக்காட்டுவதனை விளக்கென்றமையின், அப்பொருண்மையே விளங்க, “விளக்காக் காணாதேல்” என்றதற்குக் “காட்டாகக் கொண்டு காணாதாயின்” என்று உரை கூறப்படுகிறது. 3.ஆகவே உடம்பில்லையேல் உயிர் ஒன்றனையும் அறியாது என்றவாறாயிற்று. 1. இக்கருத்தையே ஞானாமிர்தாசிரியர், “மறைத்தற் றொழில் பூண்பதுவும் அதனைக், குறைத்தற் கெய்திக் குலவுவதும் ஓரிடை, இரண்டல வென்பதென் இருள் இருளிரி சுடர், முரண்டர நின்ற முழுமலமாயை” (ஞானா. அகவ . 18: 17-20) என்பர். 2. ஒன்றையும் என்னும் முற்றும்மையும், அதுவதுவாயும் என்கிற சிறப்பும்மையும் தொக்கன. 3. “பணியுமா மென்றும் பெருமை” (குறள். 978) என்புழிப்போல ஆம் என்பது அசையாயிற்று. 4. பொருள் - ஆணவம். அதுவதுவாய் வீயாத ஆன்மாவைத் தன்னுள் மறைத்து ஒன்றாய் (அத்துவிதமாய்) யணைதல் என ஆணவத்திற்குக் கூறிக்கொள்வது. 5. ஆதியன்றெனவே அனாதியென்றும், காலத்தானும் எனவே, இடத்தானும் தொழிலானும் வேற்றுமையுண்டென்றும் அறிக. 6. அவிச்சை யகங்காரம் அவா ஆசை கோபம் என்ற ஐந்தும் பஞ்சக் கிலேசம் எனப்படும்; அவிச்சையே ஆணவமென்பவர் சாங்கியர். 7. மாயை கன்மங்களை ஆணவமென்பவர் ஐக்கியவாதசைவர், பாசுபதர் முதலாயினார். 1. உயிர்க்குணமே ஆணவமென்பவர் பாடாணவாதிகள். 2. சடமென்பவர் வைசேடிகர். 3. குணிப்பொரு ளன்றென்பவர் சாங்கியர். 4. சுதந்தர வறிவுடைமை கூறுவது பட்டாசாரியன் மதம். 5. உடம்பளவிற் றென்பவர் சமணர். 6. அணுவளவிற் றென்பவர் பாஞ்சராத்திரிகள். 7. உருவென்பவர் பௌராணிகர். 8. அருவமென்பவர் பாதஞ்சலர். 9. அருவுருவென்பவர் கௌளர். 10. ஆணவத்தைக் குணமெனக்கூறும் பாடாணவாதிகளை மறுத்துப் பொருளென்பது சைவமாகலின், “திரவியமாய்” என்றார். 11. சடமாதலும் பலவாதலும் ஏது; அழிவுடைமைக் கேதுவாதலை முதற் சூத்திரத்துட் காண்க. 12. ஞானாமிர்தம் அகவ. 32 காண்க. 13. கேவலம், சகலம், சுத்தமென்ற மூன்றவத்தைகள். 1. எங்கணும் விரிந்து நின்றறியும் உயிரைச் சுருக்கி அறியாமை யெய்துவித்தல் தோன்ற, “அணுத்தன்மைப்படுமாறு செய்தலின்” என்றார். 2. படிப்படியாக அறியும் முறைமையால், “சோபான முறையின்” என்றார்; சோபானம் - படி. 1. சு. தேசிகர் உரை: இவ்வான்மா - அந்தக்கரணங்களோடு கூடிய ஆன்மா; சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதமாயுள்ள - சகசமலத் துணராது அமைச்சர சேய்ப்ப நிற்றலால் படை கொடு பவனிபோதும் வேந்தன் கடைதொறும் விட்டு விட்டுக் காவலும் இட்டு அந்தப்புரத்திற் செல்லுமாறுபோலச் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதமாயுள்ள; பஞ்சாவத்திதனாய் நிற்கும் என்றது - அஞ்சவத்தை யுடையவனாய் நிற்கும் எ-று. 2. கேவல சகல சுத்தமெனக் காரணாவத்தைகளும் சகலத்திற் கீழ் நோக்கியும் மேனோக்கியுஞ் செல்லும் கேவல காரியாவத்தை சுத்த காரியாவத்தை, சகலத்தில் இவ்விருவகையும் நோக்காது நிலவும் சகல காரியாவத்தைகளும் எனப் பலவகை யிருத்தலின் “பலவுள வாகலின்” என்று உரைக்கின்றார். 3. சிவ. சித்தி. 4: 32. 1. விட்ட இடங்களில் அரசன் இலனாதல்போல, ஆன்மாவும் விட்ட அவத்தை நிலையில் இலதாய், “ஆன்மா வியாபகமானது” என்ற கருத்துக்கு மாறுபடுவது கொண்டு, “வியாபகத்திற் கிழுக்காய் முடியும்” என ஆசங்கை யெழுகிறது. 2. தத்துவங்கள் சூக்கும வுடம்பாகும்; ஆதலால் அவ்வுடம்பொடு நிற்பதைத் தத்துவசொரூபி யென்றார். 3. உலகுடைநாயனார் திருவிருத்தம். 3. சாக்கிர முதலிய அவத்தை நிலைதோறும் கருவிகளோடு கூடுதலும் பிரிதலும் செய்யும் ஆன்மா, கூடிய கருவி முழுதும் வியாபித்திருந்து வியாபக விலக்கணம் சிதையா தொழுகுதலால், வியாபகத்துக்கு இழுக்கில்லை யென்பது தெளிதற்கு, “சீவனோவியாபி” யெனவரும் பாட்டுக் காட்டப்படுகிறது. 4. தத்துவவன்ன ரூபனாதல் - சூக்கும தேகமுடையனாதல். 5. இரண்டாமதிகரணத்தில் சகசமலத்தினால் மறைப்புண்டிருத்தலைக் கூறினார்; ஈண்டும் அதனையே விதந்து “மலசொரூபத்தின் மறைந்து” என்றது. 6. அரூப சொரூபியாய் நிற்றல் வீடுபெற்றுழியும் உண்டாயினும், ஆண்டு மலசம்பந்த மின்மையின் தத்துவன்ன ரூபனாதல் இல்லையென்பது விளங்க, “மலசொரூபத்தின் மறைந்து” என்று சிறப்பித்தார் என்பது ஈண்டுக் கூறுவதன் கருத்து. 1. எய்தல் - பொருந்துதல். 2. இலாடம் - இருபுருவங்கட்கும் இடையேயுள்ள நடுவிடம். புற விந்திரியமாவன ஞானேந்திரியம் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்துமாம்; “வாயாதி சோத்திராதி புறத்துவாழ் கருவியாகும், ஓயாத மனாதி காயத்து உணருமுட் கருவியாகும்” (சூ. 2:63) என்பது சிவஞான சித்தி. 3. சத்தாதிவிடம் ஐந்து, வசனாதியைந்து, கரணம் நான்கு, புருடன் ஒன்று பிராணன் முதலிய வாயு பத்து ஆக இருபத்தைந்து. 1. புருடனோடு கூடிய சித்தமும் பிராணனும் என்ற இரண்டு. 2. 2-ம் குறிப்பில் காட்டிய இருபத்தைந்துடன் வாயுக்கள் பத்தையும் கூட்ட முப்பத்தைந்தாதல் காண்க. 3. சிவ. போ. சூ. 5. 4. கன்மேந்திரிய மைந்து ஞானேந்திரிய மைந்து ஆக இந்திரியம் பத்து. 5. வசனாதியாவன: வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் என்பன. சத்தாதியாவன: சத்த ரூப ரச பரிச கந்தம் என்பன. 6. வலிமை. 7. பிராணாதி வாயுக்கள் பத்தாவன: “ஒப்பார் பிராணன் அபானன் உதானனுடன், தப்பாவியானன் சமானனே - இப்பாலும், நாகன் தனஞ்சயன் கூர்மன் கிருகரன், தீதிலாத் தேவதத்தனே” (சிலப். 3: 26. அடி. நல். மேற்.) என்பதனாலறிக. 1. சத்த முதலாகக் கூறப்படும் பூத தன்மாத்திரைகள் வேறே உண்மையின், அவற்றின் வேறுபடுத்தற்கு இவ்வாறு சிறப்பித்து விளக்குகின்றார். 2. இப்புறக்கருவி அறுபதினையும் “காரியபூதமாகிய தாத்துவிகங்கள்” என்றும் கூறுப (சிவ. சித்தி. 2. 65. உரை). 3. கலாதியாவன: கலை, வித்தை, அராகம், காலம், நியதி, மாயை என்பன. சுத்த தத்துவமாவன: சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்பன. 1. பிரேரக அவத்தை - எல்லாக் கருவிகளோடும் கூடித் தொழிற்படும் நிலை. 2. பிரேரகக் கருவிகள் ஐந்தாவன - தொழிலிற் செலுத்துவனவாகிய சிவதத்துவ மைந்துமாம். 3. கீழ்ப்போதருவது கீழாலவத்தை யென்றும், மேற்செல்வது மேலாலவத்தை யென்றும் வழங்கும். இலாடம் - புருவநடு. 4. கீழ்நோக்கிச் செல்லுங் காலத்தும், மேனோக்கி வருங்காலத்தும் இலாடத்தானத்தே சாக்கிரம் நிகழுமாயினும், மேலாலவத்தைச் சாக்கிரம் விடயங்களை யுணர்த்து மேயன்றிக் கீழாலவத்தைச் சாக்கிரம் உணர்த்தாமை பற்றி, மேலாலவத்தைச் சாக்கிரம் “உணர்த்து முறைமைச் சாக்கிரம்” எனப்பட்டது. கீழாலவத்தை உறக்கத்துக்குச் செல்லும் நிலையும், மேலாலவத்தை உறக்கத்தினின்று எழும் நிலையுமாம். 1. ஞானாமிர்தம். அக. 16. 2. போற்றி. 32 3. அவ்வவ விந்திரியம் என்றதற்கேற்ப அத்துறைகள் என்றதற்கு அவ்வவ விடயங்கள் என்றாற்போல, அது என்புழியும் அவ்வவகாலம் என அடுக்கி யுரைத்துக்கொள்க என்பதாம். 4. கண்டதுவென ஒரு மொழியாகக் கொள்ளின், ஈற்றிலுள்ள உகரம் உயிர்த்தொடர்க் குற்றுகரமாய், கண்டதே என முடியும் இலக்கண முடையதேயன்றி, கண்டதுவே என முடியாது; முடியுமென்றற்கு இலக்கணவிதியும் கிடையாது; “கொள்வதுவே” என்றாற்போல விகாரவகையாற் கொள்வதாயின், அதனால் சிறப்புடைப்பொருள் ஒன்றும் பெறப்படவில்லை; அதனால், கண்டது என்பதை ஒரு மொழியாகக் கொண்டுரைப்பது பொருந்தாது என்கின்றார். 5. சிவ. சித்தி. 2. 94. 6. சிவ. சித்தி. 4. 35. 7. சிவ. சித்தி. 4. 36. 1. “விரும்பும் அரும்பொருளை வீழ்த்து மயங்கல், இருந்த வனிலன் பெறுகை- வருந்தறிவு, தோன்றுத லையம், விழுந்தவிடம் தோன்றுதலென், றான்ற வைந்து சாக்கிரத்தி னாம்” -தத்துவ தீபிகை. 15. 2. அரூப சொரூபமாவது ஈண்டுத் தத்துவ சொரூபம் என அறிக. 3. தத்துவம் நீங்கியவிடத்து நிகழும் சுத்தாவத்தை யியல்பைத் தத்தவத்தால் நிகழும் அவத்தை கூறுமிடத்துக் கூறுதற்கு ஓர் இயைபும் இல்லை. 4. சிவ. சித்தி. 4. 35. 5. முத்திறமாவன: கீழாலவத்தை, மத்தியாலவத்தை, மேலாலவத்தை; இவை முறையே சகலத்திற் கேவலம், சகலத்திற் சகலம், சகலத்திற் சுத்தமெனவும் வழங்கும். 6. தன்னுண்மையாவது உயிர் கருவிகளோடு கூடாது தனித்துச் சகசமலமொன்றே பற்றி நிற்பது. 7. அப்பாலைச் சூத்திரம் என்றது ஆறாஞ்சூத்திரத்தை. 1. முதல் - முதல்வன். 2. “அமைச்சும் அரசும் ஏய்ப்ப நிற்பின்” என்றது, நான்காஞ் சூத்திரத்து ஓதிய, “அமைச்சர சேய்ப்ப நின்றஞ்சவத் தைத்தே” என்பதை யுட்கொண்டு நிற்கிறது. கருவிகட்கு அமைச்சரையும் உயிர்க்கு அரசினையும் முறையே உவமமாகக் கொள்க. 3. நான்காஞ் சூத்திரத்து உயிர் “அஞ்சவத் தைத்து” என்றவர், இச்சூத்திரத்தின்கண் அவ்வவத்தை யெய்துமிடத்து முதல்வன் உபகாரம் இன்றியமையாது என்றலின், அதன்பின் இது கூறுதற்குரிய இயைபு விளங்குகிறது. 4. அதனுள் அடங்குதலின் - அத்திரோதான சத்திக்குள் அடங்குகின்றமையால். இச்சூத்திரத்தில் “தமியருள்” என்றவிடத்து அருள் என்றது இச்சத்தியாகும். அச்சத்தி மறைக்குந் தொழிலை யுடையதாகையாலும், அத்தொழிற்கு இம்மாயை கன்மங்கள் கருவியாதலாலும், கருவி தொழிற்கண் அடங்கும் இயைபுபற்றி, அதனுள் “மாயை கன்மங்கள் அடங்குதலின்” என்றார். 1. அவற்றது - அம்மாயை கன்மங்களினுடைய. உடைப்பொருட்கு இலக்கணங் கூறிய வழி உடைமைப் பொருளும் அடங்குமென்னும் முறைமைபற்றி, “அவற்றது இலக்கிணமும் கூறியவாறு” என்றார். 2. வியஞ்சகம் - துணை. 3. கரணத்தானன்றி - உடல் முதலிய கரணங்களை யின்றியே. 4. கூற்றானன்றிக் குறிப்பால் உணர நிற்றலின், குறிப்பெச்சம் என்றார். 5. சொல்லெச்சமாவது ஒரு சொல் எஞ்சி நிற்பது; “சொல்லெனெச்சம் முன்னும் பின்னும், சொல்லள வல்லது எஞ்சுத லின்றே” (சொல். எச்ச. 45) என்பது தொல்காப்பியம். 6. உபலக்கணமாவது ஓரினமாயவற்றுள் ஒன்றைக்கூறி, ஏனையவற்றைப் பெய்து கொள்ள வைத்தல்; “எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” என்றவிடத்து, வாழ்த்தாத வாயும், தொழாத கையும் பயனில எனப் பெய்து கோடல் போல. ஈண்டும் அறிதற்குரிய கருவிகளா யுள்ளவற்றில் பொறிகளைக் கூறினமையின் அறிதற்குரிய ஏனை மனமுதலிய அந்தக் கரணமும் பெய்து கோடல் வேண்டு மென்பது கருத்து. 7. சிவ.சித்தி. சூ. 5.1. 1. அளந்தறிந்தறியா வென்னாது அளந்தறிந்து என்றே கூறி யமைந்திருப்பின், முதல்வனை அறியுமென்பது பெறப்படும்; அறியாமை துணிவாதலின், அறிதல் வேண்டும் என்பாரை மறுத்தற்கே, “அறியா” என்று மேலும் கூறினார் என்பது கருத்து. 2. ஆங்கவை யென்பது அவை யென்ற பொருண்மையே கொண்டு நிற்றலின், ஒரு சொன்னீர்மைத்து என்றார். 3. தம் உணர்வின் தமி - தம் முணர்வினது தமி என ஆறாவது விரிய நிற்றலின், ஆறாம் வேற்றுமைத் தொகையென்றார். தமி - தம்மை யுடையதாகிய முதல். எனவே, தம்முணர்வின் தமி - தமது முதல் எனப் பொருள்படுவதாயிற்று. 4. ஏற்புழிக் கோடல் - ஒருவகை உத்தி. இதனைத் தொல்காப்பியர் “பல்பொருட்கு ஏற்பின் நல்லது கோடல்” என்பர். அருள் என்றது முதல்வன் சத்தியாகும். “அருளுண்டாம் ஈசற்கு அது சத்தியன்றே” என்று ஆசிரியர் கூறுவர். “அருளே யுலகெல்லாம் ஆள் விப்பது ஈசன், அருளே பிறப்பறுப்பதானால் - அருளாலே, மெய்ப் பொருளை நோக்கும் விதியுடையேன்” (காரைக். அற்பு. 9) என்று பண்டைச் சான்றோரும் கூறுதல் காண்க. இச்சத்தி, பராசத்தி, திரோதானசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி எனப் பலவகையாகக் கூறப்படுதலின், இவ்வகையுள் திரோதான சத்தியை மேற்கோடற்கு ஆதரவு கூறுவார் ஏற்புழிக் கோடல் என்ற உத்தியைக் காட்டினார். “பரந்த பராபரை ஆதி பரனது இச்சை பரஞானம் கிரியை” (சிவப்.2) என ஆசிரியர் உமாபதிசிவனார் கூறுமாற்றால் சத்தி வகை யுணரப்படும். இச் சத்தியால் நிகழும் நிகழ்ச்சிகளை, “ஒன்றதாய் இச்சா ஞானக் கிரியை யென்றொரு மூன்றாகி, நின்றிடும் சத்தி இச்சையுயிர்க் கருணேசமாகும், நன்றெலாம் ஞானசத்தியான் நயந்தறிவன் நாதன், அன்றருட்கிரியை தன்னா லாக்குவ னகில மெல்லாம்” (சிவ. சித்தி. 1. 63) என்று ஆசிரியர் கூறுமாற்றாலறிக. திரோதான சத்தியாவது, “மலம் பக்குவமாதற் பொருட்டுப் பஞ்சகிருத்தியம் செய்யவேண்டுமென நிற்பது. இந்நிலை கன்மத்திற் கேற்றவாறு உயிர்களைச் செலுத்தவும் போகங்களைத் தோற்றுவிக்கவும் எண்ணிய தென்றாகி அவற்றிற்கு வேண்டுவனவற்றைச் சிறப்பாக அறியாமலும் அறிவிக்காமலும் நிற்றலால் திரோதான மென்ற வாறாயிற்”றென்பர். 5. மெய்வாய் முதலியன அளந்தறிந்தறியா; அவைபோல் உயிர்கள் அருளால் அளந்தறிந்தறியா என இயைந்து நிற்கும். இதன்கண் மெய் வாய் முதலிய உவமைக் கோதிய அளந்தறிந்தறியா என்ற வினையை, உயிர்கள் என்ற பொருட்கும் அளந்தறிந் தறியா உயிர்கள் எனக் கூட்டி யுரைக்கின்றமையின் இவ்வாறு கூறினார். மெய்வாய் முதலியன உவமை; உயிர்கள், உவமேயமாகிய பொருள். 1. சு. தேசிகர் உரை: ஈண்டு - இவ்விரண்டு அதிகரணங்களுள் வைத்து இம் முதலதிகரணத்து; ஐயுணர்வுகள் - உணர்விற் கேதுவாகிய ஐம்பொறிகள்; ஆன்மாவால் உணரும் என்றது - உயிரால் விடயங்களை யறியும் எ-று. 2. “கமல நீர்போற் பிரிந்திருப்பார் பேசார் பிறர்க்கு” - ஒளவையார். 3. பற்றற்று நிற்ப என்றது, உயிரானது இந்திரியங்களோடு கூடியிருப்பினும் அவற்றிற் பற்றின்றி நிற்க என்பது. 4. சாங்கிய காரிகை 35 முதலாகவரும் காரிகைகட்கு வாசஸ்பதி முதலாயினார் கூறும் உரைகளால் இக்கருத்துண்மை துணியப்படும். 5. வினைமுதலும் கருவியும் எனவும், கருவியும் பயனும் எனவும், ஏதுவும் பயனு மெனவும், காரணமும் காரியமும் எனவும் இயைபுடையவற்றைக் கூறுமிடத்து, ஒன்றிற்காக இயைபுடைய பிறிதொன்றை யெடுத்து மொழியும் உபசார வழக்கு வகையில், பொறியும் உணர்வும் ஏதுவும் பயனுமாய் இயைந்து நிற்றல் பற்றி, ஏதுவாகிய பொறியைக் கூறவேண்டிய விடத்து அதன் பயனாய் இயைபுடைய உணர்வை யெடுத்தோதினமையின் (ஐயுணர்வுகள் என), “உணர்வென்று உபசரித்தார்” என்றார். 1. அதற்கு - ஐம்பொறிகளும் ஆன்மாவால் உணரும் என்பதற்கு. 2. உடனிகழ்ச்சிப் பொருள்: அவற்றொடு என ஒடுவுருபின் பொருள். அவற்றொடு ஒற்றித்து நின்று தானும் உடன் காண்பது உடனிகழ்ச்சி. 3. அவற்றோடு ஆன்மாவின் இன்றியமையாமை விளக்குதற் கென்பது கருத்து. 1.சாக்கிரத் தானமாகிய புருவநடு “இலாடத்தான” மென்பது. 2. தமக்குப் புலப்படும் விடயங்களை அறிகின்றனவேயன்றி, உடனிருந்து செலுத்தும் உயிரை அறியமாட்டா வாயின. 3. ஐம்பொறிகளோடு கூடிநின்று அறிதலையின்றித் தானேயும் அறியும் போலு மெனின் என்பது கருத்து. 4. ஐம்பொறியில் காணாதேல் - ஐம்பொறிகளோடு ஒற்றித்து நீன்று காணாதொழியுமாயின்; காணும் உளம்- பொருள்களை அறியும் இயல்பினதாகிய உயிர்; காணாது- அறிதலைச் செய்யாது; கண் காணா- கண்களும் காண்டலைச் செய்யா; செவி கேளா- செவிகளும் கேட்டலைச் செய்யாவாம் எ-று. ஈண்டு உயிரைக் “காணுமுளம் ” என்ற தற்கேற்ப அருணந்திசிவனார், “அறிந்திடும் ஆன்மா” (சிவ. சித். 5. 3.) என்பது காண்க. 1. சு. தே. உரை; இதுவும் - இவ்வான்மாவும்; தமது முதலாலே- இறைவனாலே; உணரும் என்றது - அறிவிக்க வறியும் எ-று. “ஒருவனே உயிர்கட் கெல்லாம் ஒருவனாய் உணர்த்தி நிற்பன்” (சிவ. சித். 5.5.) என்றும், ‘காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே” (திருநா. 309. 3.) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. 2. தமது என்பதில் தம் என்பது உயிர்களின் பன்மை மேலும் அதுவென்னும் ஆறனுருபு முதலைச் சுட்டியும் நிற்றலின் “எம்மூர்” என்பதுபோல வேறு முடிபு என்றார். தம் என்றது பன்மைப் பாலும் அதுவென்னுருபு ஒருமை குறித்தலும் பற்றித் தமது என்பது பால்வழுப் போலுமென மயங்காமைப் பொருட்டு இது கூறப்பட்டது. 3. “இதுவும்” என்றவிடத்து உம்மை, முதலதிகரணத்துக் கூறிய கருத்தைத் தழுவிக் கொண்டு நிற்றல் பற்றி, “இறந்தது தழீஇய எச்ச வும்மை” யென்றார். 4. உடம்பொடு புணர்த்தல் என்பது ஒருவகை யுத்தி, தமது என்பதன் முதலாகிய தம் மென்றது உயிர்ப் பன்மைகளை யுளப்படுத்தி நிற்பதே யன்றி, தமக்கொரு முதலையுடைய எல்லாவற்றினையும் அகப்படுத்தி நிற்கும் இயைபினால், அவ்வியைபும் உடன்தோன்றக் கூறுதல். இதனால், தனக்கொரு முதலை வேண்டாது தானே முழு முதலாய் நிற்கும் முதற்பொருள் விலக்கப்படுதலால் “வரம்பின்றி யோடுதல்” என்னும் குற்றத்துக்கு இடமில்லை. தமக்கொரு முதல், அந்த முதலுக்கு முதல், முதலுக்கு முதல் எனச் செல்வது வரம்பின்றி யோடுதல் என்னும் குற்றம். 1. தத்துவங்கள் உயிரைத் தமக்கு முதலாகவுடையனவென்பது, ஆன்மாவின் உண்மையை வற்புறுத்த மூன்றாஞ் சூத்திரத்தாலும், உயிர்கள் இறைவனைத் தமக்கு முதலாகவுடையன வென்பது, “ஆணையிற் போக்கு வரவு புரிய” என இரண்டாஞ் சூத்திரத்தாலும், இறைவன் தனக்கு வேறொரு முதலுடைய னல்லன் என்பது எய்த “அந்தம் ஆதி” என முதற் சூத்திரத்தாலும் உணர்த்தினமை தோன்ற “மேற்கூறிய சூத்திரங்களாற் பெறப்பட்டன” என்றார். 2. சு.தேசிகர். உரை: இவ்வான்மா - இவ்வுயிர்கள்; தன்னாலே உணரும் - தம்மாலே விடயிக்கும்; இந்திரியங்களைப் போல - செவி முதலிய பொறிகளைப் போல; தானும் - சடமும் சேதனமுமாய வேறுபாடுபற்றித் தம்முள் ஒவ்வாவாயினும் இவ்வுயிர்களும்; தன்னை உணராது நிற்றலான் - தம்மையும் தம்முடைய முதல்வனையும் அறியாது நிற்குமாகலான் இதுவும் தமது முதலாலே யுணரும் என மேற்கொண்டது எ-று. 3. ஐம்பொறியின் - மெய் வாய் முதலிய ஐம்பொறிகளைப்போல. இனமாயவற்றையே எடுத்துக்காட்டல் வேண்டும் என்னும் இலக்கண முறைமை நோக்கி, சேதனமாகிய உயிர்க்குச் சமமாக ஐம்பொறிகளை எடுத்துக் காட்டல் பொருந்தாது என்பாரை மறுத்து அங்ஙனம் காட்டுதற்குள்ள இயைபு உண்டு என இதனால் குறிக்கின்றார். “உவமையும் பொருளும் ஒத்தல்வேண்டும்” (தொல். பொ. உவ. 8) என்பதற்கேற்ப, “ஐம்பொறியும் சடமும் தம்முள் ஒக்குமாகலின்” என்பது காண்க. 1. “தஸ்ய பாஸா ஸர்வம் இதம் விபாதி ” -கடவல்லி யுபநிஷத். 2. ஆன்மா இறைவனாலே யுணரும்; என்னை, இவ்வான்மாத் தன்னை யுணராது நிற்றலான்; தன்னாலே யுணரும் இந்திரியங்களைப் போல என்பது கருதலளவை. 3.வேதப்பொருளை எடுத்தோதுவது உரையளவை. 4. கண்ணின் தொழில், காண்டலும் காட்டலு மாதலின், கண்ணா என்றதற்குக் காட்டாகி நிற்ப வென உரை கூறினார். 5. இன்று என்பது அசத்தின் வினையாதலின், அசத்தை எண்ணான் என்ற வாக்கியத் தோடு இயைபுண்மையைக் காட்டும் “ஆகலான்” என்ற சொல் எஞ்சி நிற்கிறது. இதுபற்றியே “ஆகலானென்பது சொல்லெச்சம்’’ என்பர். 1. இவ் வெண்பாவின்கண் சிவனென்பது “மன்னு சிவன் ” என்றும், “சொன்ன சிவன்” என்றும் “எண்ணான் சிவன்” என்றும் மும்முறை கூறப்பட்டிருத்தலின், அம்மூன்றற்கும் தனித்தனிப் பொருள்நலம் இங்கே கூறப்படுகிறது. 2. மூவகையாவன:- “உலகெலாந் தனதொரு சிறு கூற்றினுள் அமைய அலகில் ஆற்றலான் நிறைந்தவன் என அருணூா லோர் குலவியேத்துவோன் எவன் அவன் உமையொரு கூற்றின் அலக்கரைக் களச்சிவ பிரானடியிணை போற்றி” “செவியுற வாங்கி மோகத் திண்படை சிலையிற் பூட்டும் கவிகைவேள் மடியச்சற்றே கறுத்தியோ குறையும் பெம்மான் குவிதழை நிறையப் பூத்த கோழிணர்ப் பதுமச் செங்கேழ் அவிர்தரு விழித்தீக் கென்றன் வினையிலக் காகு மாலோ” “திருமா லிந்திரன் பிரமன் உபமனியன் தபனனந்தி செவ்வே ளாதி தருமமுது குரவருக்குந் தனதருளால் ஆசிரியத் தலைமை நல்கி வருமெவர்க்கு முதற்குருவாய் மெய்ஞ்ஞான முத்திரைக்கைம் மலரும் வாய்ந்த உருவழகுங் குறுநகையுங் காட்டியருள் தருஞ்சிவனை யுளத்தில் வைப்பாம்.” -சிவதத்துவ விவேகம். பாயிரம் 1. மறந்தாய் - மறந்தவனே. இக்கருத்தால்தான், உரையின்கண் மறதியால் அறியாது பிணங்குகின்ற பேதாய் என்று கூறினார். மறந்தான் என்னும் வினையாலணையும் பெயர் விளியுருபேற்று மறந்தாய் என வந்தது; “தொழிலிற் கூறும் ஆனென்னிறுதி, ஆயாகும்மே விளிவயினான” (விளி. 16) என்பது தொல்காப்பியம். 2. அபிமுகம் -நேர்முகம். 3. உன்முகம்- மேல்நோக்குதல்; சிவசத்தியானது உயிர்களின் பொருட்டு நிகழவேண்டிய அவ்வக் காரியங்களின் நேர்பட நோக்குதலாகிய சங்கற்பமே ஈண்டுச் சந்நிதி யென்று விளக்கப்படுகிறது. 4. காந்தம்கண்ட பசாசத்தவையே யென்பது காந்தத்தின் சந்நிதியில் பசாசம் (இரும்பு) அசைதலாகிய தொழிற்படுதலொன்றே ஈண்டு உவமையாவது: காந்தத்திற்குச் சங்கற்பம் உண்டோ இல்லையா; இல்லையாதலின் இதனைக் காட்டுதல் ஆமோ, ஆகாதோ என்றெல்லாம் கூறுதற்கு இடமில்லை யென்பார், “ஒருபுடையுவமை யாதல் பற்றியே, பிறிதன்று” என்றார். இக்கருத்தே நன்கு விளங்க, “காந்தங்கண்ட பசாசத்தவையே யென்று சந்நிதியை யெடுத்துக் கூறியது ஒருபுடையொத்தல் பற்றியே பிறிதன்றென்பது கருத்து” எனச் சிவஞான பாடியத்தும் கூறினார். 5. ஐம்பொறிகள் சடமாதலால் தாமே வினைசெய்வன வல்ல; உயிர் சேதனமாதலால் தன் வினைக்கேற்பவே உணர்தலாகிய பயனை எய்துதல் பற்றி, வினையால் என்றது உயிர் கண்டறிதற்கு ஏதுவாமெனக் காட்டியவாறு என்றார். 1. அசத்தெல்லாம் இல வெனப் பன்மையாற் கூறாது இன்றென ஒருமையாற் கூறியதற்கு அமைதி காட்டுவாராய் இன்றென்பது சாதியொருமை” யென்றார். அசத்து என்றவழி, அசத்தாயுள்ள பொருளெல்லாம் அடங்க, அச்சொல் ஒருமையாய் நிற்பதுபற்றி, “சாதியொருமை” யென்றார். இன்றாதல் - சத்தெதிர்யாவையும் சூனியமாதல். 2. இன்றாதற்கு இடம் சிவனது எதிராதலால், “அவனெதிர் என்பது அவாய் நிலையாய்” வந்ததாயிற்று, ஒரு வினை நிகழ்ச்சிக்கு இடமும் காலமும் கருவியும் வினைமுதலும் இன்றியமையாவாதலின், இன்றாதலாகிய வினைக்கு இன்றியமையாத இடம் அவாய்நிலை யாயிற்று. 3.சிவ. போ. சூ. 7. 4. சிவ. சித். சூ.5. 6. 5. திருக்களிற்றுப்படியார். 87. 6. “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும், ஒண்டொடி கண்ணே யுள” -குறள். 1. வெய்யோன் ஒளியில் ஒடுங்கி யெனவே, அதனின் வேறாய வழி ஒடுங்கி நிற்றல் பெறப்படாமையின், விளங்காது என்றற்கண், அதனின் வேறாய் விளங்கித் தோன்று தலின்றி யென உரை கூறப் படுகிறது. 2. வேறாய் விளங்கித் தோன்றல் இன்றெனவே, ஒன்றாய் அதுவதுவாய் இயைந்தொழியும் போலும் என்னும் ஐய மறுத்தற்கு “வெய்யோனை ஆகாத” என்று விசேடிக்கின்றார். 3. இக்கால விஞ்ஞானிகளும் நாண்மீன்களுக்கு ஒளி ஞாயிற்றானே யுண்டாமென்றே கூறுப. 4. மெய்யவன், மெய்ப்பொருளாகிய அவன் என விரியும்; இன் ஏதுப் பொருட்கண் வந்தது. 5. வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காதெனவே ஒன்றாதலும், வெய்யோனை யாகாத எனவே வேறாதலும் இல்லாமை மீனுக்கு அடை; உயிர் மெய்யவனில் காணும் என்பது பொருளாகிய உயிரின் வினையாயிற்று. உடனாய் மன்னுதலைக் காண் என்ற விடத்து, உவமைக்குரிய அடையை இயைத்து, ஒன்றாதலும் வேறாதலு மின்றி என்றும், மீன்போல என்பதற்கு வெய்யோனின் விளங்குதல் போல என இயைத்து அஞ்ஞாயிற்றானே ஒளியுடைய வாமாறு போல என்றும் உரை கூறுகின்றா ராதலின், “உவமையடை பொருளினும், பொருள்வினை யுவமையினும் சென்றியையும்” என்றார். 6. வெய்யோனை யாகாத என்பது வெய்யோனாகாத எனப் பொருள்படுதலின், ஐகாரம் சாரியையாயிற்று. 1. இவ்வாறே பாடியத்தும் உரைப்பர். (சிவஞானபாடியம் சூ. 5: 2. உரை) 2. மேலைவெண்பாவில் “சொன்ன சிவன் கண்ணா உளம் வினையால் கண்டறிந்து நிற்குங்காண்” என்றவிடத்து, உளமே என்றது ஈண்டும் எழுவாய் என்பது. உளம் - உயிர். 3. இத்திருவெண்பாவின் பொருளை, “அருளது சத்தியாகும் அரன்றனக் கருளையின்றித், தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சத்தியில்லை, மருளினை யருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட், கிருளினை யொளியா லோட்டும் இரவியைப் போல ஈசன்” (சிவ. சித். 5. 9) என்று சான்றோர் உரைப்பது காண்க. 4. இதனையே பாடியத்தின்கண், “ஈண்டுக் கூறியவாற்றான் விடய நுகர்ச்சிக்கண் ஆன்மாக்கள் தாமே யுணரமாட்டா; முதல்வன் திருவருள் உணர்த்த வுணருமென்ற தொக்கும்; முதல்வன் உணர்த்தும் வழி எல்லா வுயிர்கட்கும் எக்காலத்தும் ஒப்ப அறிவு நிகழக் காணாமையின், ஆன்மாக்கடோறும் அங்ஙனம் பல வேறு வகைப்பட உணர்வு நிகழ்தல் உணர்த்துதல் வேறுபாட்டானாயது எனல் வேண்டும்; வேண்டவே நிருவிகாரியென்னும் சுருதிகளோடு முரணி முதல்வன் விகாரியாவான் செல்லும்; விகாரமாவது செயற்கைக் குணத்தோடு சமவேதித்தல்; செயற்கையாவது யாதானு மொரு காரணம் பற்றி முன்னின்ற நிலையின் வேறுபடுதலேயாம்” என்று விளக்குதல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. 1. அருளாவது உயிர்கட்குப் பசுத்துவத்தை நீக்கிச் சிவத்துவம் அளித்தற்கண் உளதாகிய இரக்கம் - பாடியம். 2. இரவிபோல் ஏய்ந்து நிற்கும் அரன் எனவே, இரவி விகாரமின்றியே நிற்ப, தாமரைகள் அவனொளியால் ஒன்று மலர்தலும், ஒன்று முகைத்தலும் ஒன்று உலர்தலும் செய்தல் போல முதல்வனும் விகாரமின்றியே நிற்ப, அவனது சத்தி சங்கற்பத்தால் உயிர்கள் தோன்றல் முதலிய அனைத்தும் செய்தல் பெறப்படுதலால் அதனைக் குறிப்பெச்சத்தாற் போதருவிக்கின்றார். “விகாரங்கள் மருவான் வானின், முந்திரவி யெதிர்முளரி யலர்வுறும் ஒன்று அலர்வான் முகையாம் ஒன்று ஒன்றுலரும் முறையினாமே” (சிவப். 17) என்று சான்றோர் கூறுவது காண்க. 3. திருவருளாகிய சத்திசங்கற்ப மாத்திரையான் அனைத்தும் செய்தலை, காரைக்காலம் மையார், “அருளே யுலகெல்லாம் ஆள்விப்ப தீசன், அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே, மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும், எப்பொருளு மாவ தெனக்கு” (அற்பு. 9) என்று அருளுவது காண்க. 4. குறிப்பெச்சம் “சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை, புல்லிய கிளவி யெச்சமாகும்” (தொல். சொல்; 2. 4). 5. “இன்றி யென்னும் வினையெஞ்சிறுதி, நின்ற இகரம் உகரமாதல், தொன்றியன் மருங்கின் செய்யுளு ளுரித்தே” (தொல். எழுத். உயிர் மயங்கு. 35). 6. அவனன்றே யில்லை யென்றவிடத்து அன்றே யென்பது அசைநிலை 1. சித்தாந்த நெறியுணராதார், அருளாகிய மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையா ரல்லராதலின், அவர்க்கன்றி ஏனோர்க்கு விளங்காது என்றார். “அவனருளே கண்ணாகக் காணினல்லால்” என நாவரசரும், “அவனருளாலே அவன் றாள்வணங்கி” என மணிவாசகரும் அருட்கண்ணுடையராய் உரைத்தருளுவன காண்க. 2. சிவ. போ. சூ. 2. 3. ஏழாஞ் சூத்திரத்தால் உண்மை யதிகாரம் தொடங்குதலின், இதன் கண் அதற்குத் தோற்றுவாய் செய்யப்படுகிறது. 4. இலக்கண வோத்துள் நான்காஞ் சூத்திரத்தால் பசுவிலக்கணமும், ஐந்தாஞ் சூத்திரத்தாற் பாசவிலக்கணமும் உணர்த்தினா ராகலின், எஞ்சிநின்ற பதியிலக்கணம் இதன்கட் கூறப்படுவதாயிற்று. 1. “தாந்தமுணர்வின் தமியருள்” -சிவ. ஞா. போ. சூ. 5. 2. இச்சூத்திரப் பொருளை அருணந்தி சிவனார் “அறிவுறும் பொருளோ ஈசன் அறிவுறாதவனோ என்னின், அறிபொருள் அசித்தசத்தாம் அறியாத தின்றாமெங்கும், செறிசிவம் இரண்டுமின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும் நெறிதரு சத்தின் முன்னர் அசத்தெலாம் நின்றிடாவே” (சிவ. சித்தி. சூ. 6) என்று கூறுகின்றார். 3. உணராதெனின் என்றும் இயைவது பற்றி, “முன்னரும் சென்றியைந்தது” என்றார். 4. இருதிறன் என்புழியும், இரண்டு வகையின் என்புழியும் நின்ற உம்மைகள் முற்றும்மைகள். இவை விகாரத்தால் தொக்கன. 5. அல்லது என்பது குறிப்பு வினைமுற்று; இஃது அன்றியென வினையெச்சமாய் நிற்றலின், வினையெச்சக் குறிப்பு முற்று என்றும் இம்முற்றெச்சம் சிவசத்தாம் என்புழி ஆம் என்பதனோடு முடிதலால், “அன்றி ஆம் என இயையும் ” என்றும் உரைக்கின்றார். 6. சிவசத்து, சிவமாகிய சத்தென விரிதலால் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. சிவச்சத்தென வாராது சிவசத்தென வந்தது, “ஆதிபகவன்” (குறள்.1) என்புழிப்போல வடமொழி இலக்கணப் புணர்ச்சி முடிபு என்பதாம். 1. இக்கருத்தே, “செறிசிவம் இரண்டுமின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்” என அருணந்தி சிவனார் கூறுவது காண்க. 2. தம் உணர்வின் தமி யென்ற எழுவாய் ஐந்தாம் சூத்திரத்தினின்றும் கொணரப்படுகிறது. 3. மேற் புனருற்பவம் (சிவ. ஞா. போ. சூ. 2) உணர்த்துமிடத்து, “இதனானே, மேல் அந்தம் என்று உத்தேசமாய் எடுத்துக்கொண்ட முதல்வனுக்கு இலக்கணங் கூறியவாறு மாயிற்று; இது தடத்த விலக்கணம் எனப்படும் பொது வியல்பு” என்று கூறியது ஈண்டு நோக்கத்தக்கது. 4. முத்தொழில் செய்தல் முதல்வனுக்குத் தடத்தலக்கணம்; “இருதிற னல்லது சிவசத்தாம் என்றது சொரூப விலக்கணம் எனக்கொள்க. 5. சிறப்பியல்புக் குணங்களுட் பலவற்றை, “மண்முதல் முப்பதுமுதலா மூவிரண்டோவா, வொப்பில் தத்துவ மொரீஇய திப்பியன், ஒழிவற நிறைந்த வொருவன் புரைதீர், வண்ண மில்லி அமலன் கண்முதற், புலனொடு புணரான் இணையிலி யானென், மதத்தின் வாராப் பிறப்பிலி தனக்கென, நாமமில்லோன் நாதன் நாமயன், காலகாலன் கணக்கிலி கடையும், மூலமு நடுவு முனிந்தோன் மேலோன், ஆகுல மில்லி யகோப னமோகன், அபய னபங்க னகம்ப னசஞ்சலன், நித்தன் முத்தன் சுத்தன் சுதந்திரன், பந்தமும் வீடு மகன்றோன் சிந்தையோ, டின்பமுந் துன்பமு மிகந்தோன் யாவதும், புலமின் றுணர்ந்த புனிதன் கலரெனத், தணித்தலு மளித்தலுந் தடிந்தோன் தற்பரன், துரியமுங் கடந்த தூயோன் பெருமைக், கண்டமணுத்தர வணுவன் டத்துட, னின்று நுணங்கிய தண்டாச் சீர்த்தி, உரைதரு புணரிக் கரைகரையம்பிக் காட்சி முதலிய வளவையு மளவறச், சேட்பட வகன்றனன் சிவனெனச், சூழ்ச்சியி னிறைந்தோர் துணிந்தனர் நெடிதே” (ஞானா. 55. 4-27) என்பதனாலறிக. 1. சிவப். 72. 2. சிவப். 36. 3.சிவப். 70. 4. சிவ. சித்தி. சூ. 4.2. 5. சிவ. சித்தி. சூ. 9.2. 6. பசுஞானம் ஓருவாற்றான் பொதுவியல்புபற்றி உணரப்படுமெனக் கூறுதலாலும் எ-று. 7. அவையாவன பசுபாசங்கள். 8. பசுபாசங்களைச் சிறப்பியல்புபற்றி உணர்தல் சிவஞானத்தா னன்றி அமையாதாயினும் பொதுவியல்பு பற்றி யோதுதலானும், பாசவுணர்விற்கு அவற்றது பொதுவியல்பு விடயமாதல் கண்கூடாகப்படுதலானும், அப்பசுபாசங்கள் சிவசத்தாகா வென்பது பெறப்படும்; சிவசத்தினுடைய பொதுவும் சிறப்புமாகிய எவ்வியல்பும் சிவஞானத் தானன்றி உணரப்படாது ஆதலால் என்பது கருத்து. மேலும், உணரப்படும் உருவாதலால் இப்பசுபாசங்கள், உணருருவாகும் திறனல்லாத சிவசத்தாகா என்றற்கு, “ஒருவாற்றான் உணருரூவாதலு முடைமையின் சிவசத்தாவான் செல்லாமை யறிக” என்றார். உணருருவெனின் அசத்தாம் என்றும் இருதிறனல்லது சிவசத்தாமென்றும் ஆசிரியர் கூறியருளியது காண்க. 9. “உணருருவுடைமையின் சிவசத்தாவான் செல்லாமை யறிக” எனவே பசுபாசம் உணருருவாம் அசத்தாமென்பது பெறப்படவே பசுபாசங்கள் சத்தென்றறிந்துள்ள மாணாக்கன் இடர்ப்படாமைப் பொருட்டு, பொது வியல்பு பற்றி அசத்தெனப்படுமாயினும், “சிறப்பியல்பு நோக்கும் வழி அவை சத்தாதற் கிழுக்கின்மையும் அறிக” என்றார். பொதுவினும் சிறப்பு வலியுடைத்து. 1. “அபாவம் என்பது இன்மை; ஓர் பொருளைத், தவாது அவ்விடத்துத் தான் இலை என்றல்” (மணி, 27: 51-2) நையாயிகரும் வைசேடி கரும் பின்வந்த மீமாஞ்சகரும் இவ்வாறு கோடலின் “நையாயிகர் முதலியோர்” என்றார். (நியாய சூத்திரம் II. ii. 7-12. பாடியம் காண்க.) 2.பல நியாய நூல்களில் இக்கொள்கை காணப்படவில்லை. 3.சாங்கிய பிரவசன பாடியத்தில் பலவிடங்களில் இக்கருத்துக் காணப்படுகிறது. 1. சுட்டு என்னும் தொழிற்பெயர் தன்னாற் சுட்டப்படும் பொருள்களைக் குறித்து நிற்றலின், “ஆகுபெயர்” என்றார்; “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்புழியும் இக்கருத்தே கொண்டு, மக்கட் சுட்டென்பது இரு பெயரொட் டாகு பெயர் என இவ்வுரைகாரரே கூறுவர் (தொல். முதற் சூ. விருத்தி). 2. பசுஞானம், பாசஞானம், பதிஞானமாகிய சிவஞான மென்ற மூன்றனுள், சிறப்புடைய சிவஞானத்தால் அறியபபடாது ஏனை ஞானங்களால் அறியப்பட்ட சுட்டு என்றற்கு இவ்வாறு கூறுகின்றார். 3. “ஈண்டு அறிவு என்றது உலகத்துள்ளா ரறியும் அளவை யறிவினை; சுட்டென்றதனால் சுட்டியறிவது அதுவே யாகலின்” என்பது சிவஞானபாடியம். 4. “அறிவினாலறிந்த யாவும் அசத்தாதல் அறிதி” யென்ற புடைநூலா சிரியர், மீளவும் ‘தொன்மையறிவு தானொன்றை முந்தி யதுவதுவாகக் காணும், அறிவுகாண் அசத்து” (சிவப். 55) என்று கூறுகின்றார். 5. உபலத்தி - ஒன்றினை யுள்ளதென்று அறியும் அறிவு; அநுபலத்தி- இல்லையென்று அறியும் அறிவு. 1. இவ்வாறே சாங்கிய பிரவசன பாடியமும், பாதஞ்சல யோகபாடியமும் கூறுகின்றன. சிவஞான பாடியத்தும், “உலகத்துப் பொருளெல்லாம் முக்குணமய மாகலின்,அவை இராசதகுண மிகுதிப்பாட்டால் தூலமாய்க் காரியப்பட்டு விளங்கிநின்ற அவத்தையின் நீங்கித் தாமதகுண மிகுதிப்பாட்டால் சூக்குமமாய்ச் சத்திவடிவாய் விளங்காது நின்ற அவத்தையே புலனாகாமை யாகிய அபாவமா மெனவும், அஃது அவ்வப்பொருளின் தன்மை யெனவும் அதற்குக் காரணம் தாமதகுண மிகுதிப்பாடே யெனவும்.. ........ கூறியதுபற்றி யுணர்ந்து கொள்க” என்று கூறுப. 2. ஈண்டுக் கூறப்படும் கருத்தையே பாடியத்தின்கண் “இங்ஙனம் அசத்தென்றது வேறு பொருளெனக் கொண்டு சத்தாகிய திரவிய முதலிய பிரபஞ்சத்தை உணருருவாதல் பற்றி அசத்தென்றல் சாலாது; சாலுமாயினும் அதுபற்றி முதல்வன் அறியப்படாத பொருள் என்றல் பொருந்தாது என்னும் நையாயிகர் முதலியோரை மறுத்து மேற்கோளைச் சாதித்தவழி, சற்காரிய வாதத்தில் சத்தாகிய பிரபஞ்சத்தை அசத்தென்றல் அவசித்தாந்தம் எனச் சாங்கியர் முதலியோர் கூறும் ஆசங்கையை நீக்குதற் கெழுந்த தாகலின், அதனையே ‘பெரியாரைப் பிழையாமை (குறள். அதி. 90) என்புழிப்போல இரட்டுற மொழிந்து கொண்டு வேறுமோர் அதிகரணமாக வைத்துப் பொருள்கோடற் பாற்று” என்று கூறுப. 3. “புலனாகாத காரணமாகிய மாயை முதலியவற்றை நோக்கக் காரியமாகிய பிரபஞ்சம் அசத்தாதல் சாலும்” என்பது சிவஞானபாடியம். 1. “அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி” (சிவ. சித்தி.) என அருணந்தி சிவனார் கூறுவது காண்க. 2. “ஒரு சாரன அங்ஙனமாயினும் அறியப்பட்டன வெல்லாம் அவ்வாறு அசத்தா மென்றல் பொருந்தாது; என்னை, பிரமாணமின்மையின்”-சிவஞானபாடியம். 3. யாம் இறுக்கும் இறை - யாம் சொல்லும் விடை. 4. அறியான் என்னும் வினையாலணையும் பெயர் விளிவேற்றுமைக்கண் “தொழிலிற் கூறும் ஆனென்னிறுதி, ஆயாகும்மே விளிவயினான” (தொல். விளி. 16) என்பதனால் அறியாய் என வந்தமை தோன்ற, “விளியுருபேற்ற பெயர்” என்றார். 5. ஞானசம். 312.4. 6. நியா. சூ. ப. i. 29-31. 7. சத்து அசத்துக்களின் மெய்ம்மை பொய்ம்மைகளை முறையே கண்டு மெய்ம்மை யுணர்வால் பொய்ம்மையைக் கொள்ளா தொழிவது உண்மை யுணர்ந்தார் செயலாகும். “பொய்கண் டகன்ற மெய்கண்ட சத்தாகிய மெய்யுணர்ந்தார்க் கன்றி அசத்தாகிய அவா வினைப் பிறவிக்கு வித்தாத லறிந்து அறுத்தல் கூடாதென்பது தோன்றத் திருவள்ளுவனார், மெய்யுணர்தலின் பின் அவாவறுத்தலைக் கூறி யருளியது ஈண்டு நினைவுகூரத் தகுவது. 1. சற்காரியவாதம் சாங்கிய நூல்களில்தான் முதற்கட் காணப்படுகிறது. ஏனை நையாயிகர் முதலியோர் அசற்காரிய வாதிகள். ஆதலால், நையாயிகர்களை அசத்தறியாய் என்றவர், சாங்கியன் சற்காரியவாதி யாதலால், அவனை அசத்தலாய் என்று கூறுகின்றார். சற்காரிய வாதத்தின் இயல்பை ஞானாமிர்தம் சிவஞானபாடியம் முதலியவற்றுட் காண்க. 2. அவை யென்றது பிரபஞ்சமாகிய தொகுதியை. இலதாயொழிவது அசத்தாதலின், பிரபஞ்சம் அசத்தாம் என்றற்கு “அவை இன்றாமாறு” என்றார். 3. நீரிலெழுத்து நிகழ் என்ற அடையால் பொய்யன்றெனப்பட்டது என்னும் இவ்வுரைகாரர், பாடியத்தின்கண் இதனை “நீரிலெழுத்து எழுதுங்கால் உள்ளதாய்த் தோன்றுதலின், அது பொய்யாமாறு யாண்டைய தென்பது” என விளக்குகின்றார். இவ்வாறே, “கனவின்கண் மகளிரை மணந்து பேருவகை யுற்றுழியும், புலி முதலியவற்றைக் கண்டு அச்சம் மிக்குற்றுழியும் அவ்வனுபவக்குறி தூலவுடம்பின்கண் நிகழக் காண்டலானும் இன்னோரன்னவை மெய்யாதல் பெறப்பட்டமையின், ஏனைக் கனவின் நிகழ்ச்சியும் அவ்வாறே மெய்யா மென்பது தானே போதரும்” என்று கூறுவர். 4. நிகழ்நீரி லெழுத்தென்றாற் போல நிகழ் கனவு என்றும் நிகழ்பேய்த் தேரும் என்றும் இயைதலால், எங்குஞ் சென்றியையும் என்று உரைக்கின்றார். 1. இன்றாமாற்றிற்கு என வருதற்குரிய குவ்வுருபு தொக்கு நிற்பது பற்றி, “குவ்வுருபு விகாரத்தால் தொக்கது” என்றார். 2. இது பாடியத்தின்கட் காணப்படவில்லை. அவை இலவாம் என வாராது இன்றாம் என ஒருமை முடிபேற்று வருதற்கு அமைதி கூறுவார், “இன்றென்னும் ஒருமை அப்பண்பின்மேல் நின்றது என்றார், தோன்றி மறைவனவாகிய பிரபஞ்சத் தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் அசத்தாம் பண்பு உண்மையின்”, அப்பண்பின் ஒருமை நோக்கி, ‘‘இன்று” என ஒருமையாற் கூறினாரென்பதாம். 3. நீரிலெழுத்தும் கனவும் பேய்த்தேரும் அடுத்துவா லுவமையல்ல வென்றற்கு இவ்வமைதியைக் கூறுகின்றார். 4. சிவ. போ. சூ. 1. அதி. 2. வெண்பா. 5. பாடியத்தின்கண், இவ்வாறு இரட்டுற மொழிந்துகொண் டுரைத்தல் ஆசிரியர் கருத்தாமென்றற்கு, “அசத்தறியாய் எனவும் அசத்தலாய் எனவும், வேறு வேறு விளித்தலானும், ஆயின் ஓரின் எனவும், அசத்தாகும் இன்றாமாறு எனவும் ஒரு பொருட் கிளவியை இருகாற் கூறுதலானும்” என வேறும் காரணம் காட்டுகின்றார். 6. சிவ. சித்தி. சூ. 6.2. 7. சிவ. சித்தி. சூ. 6.3. 1. இச்சூத்திரத்தின் “உணருரு வசத்தெனின்” என்பதை முதலதிகரணமாகக் கொண்டு, “ஈண்டு அறிவினாலறியப்பட்ட சுட்டு அசத்தென்றது” என மேற்கோளும், “அவை தாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்” என ஏதுவும், “அசத்தறியாய் கேணீ’’ யென்றற் றொடக்கத்து வெண்பாவால் உதாரணமும் ஓதிய ஆசிரியர், இரண்டாமதிகரணமாக “இருதிறனல்லது சிவசத்தாமென இரண்டு வகையின்” இசைக்குமன் னுலகே என்பதை வைத்து ஓதுபவே யன்றி, “உணராது இன்மையின்” என்பதை ஓரதிகரணமாக வைத்து ஓதாமைக்குக் காரணம் “ஆண்டு அதிகரணத்துக்குரிய ஐயப்பாடு முதலியன நிகழாமையான் அதனை வேறுபடுத் துரைத்து” மேற்கொள்ள வேண்டா வாயிற்றென் றுரைக்கின்றார். 2. சிவ. சித்தி. சூ. 6. 4. 3. “இரண்டும் இவ்வாறாயின், முதல்வனது இயல்பு வேறு என்னையோ வென்னும் ஆசங்கையை நீக்கிப் பாரிசேட வளவையான் முதல்வனது சிறப்பியல்பு உணர்த்து முகத்தானே சத்தின் இயல்பு வரை செய்து உணர்த்தற் கெழுந்தது இரண்டா மதிகரணம்” எனப் பாடியத்துட் கூறுவர். ஈண்டுக் கூறுவதும் அமைவதே யென்பதை அடுத்துவரும் ஏதுவாலும் எடுத்துக்காட்டாலு மறிக. 1. சு. தேசிகர் உரை: இவ்விரண்டு தன்மையுமின்றி - உணருருவாந் தன்மையும் உணராதாந் தன்மையுமின்றி; வாக்கு - பாசஞானத்திற்கும்; மனம் - பசு ஞானத்திற்கும்; அதீதம் - அவ்விரண்டன் விருத்திகளைக் கடந்து அதீதமாய் நின்று; கோசரமாய் -ஒற்றுமைப்பட்டு நின்றுணரும் அனுபவ ஞான மாத்திரைக்கே விளங்கிக் கோசரிப்ப தாய்; நின்ற - நிற்கின்ற; அதுவே - அவ்வாறு நிற்கின்ற பொருள் இதுவென அளவைகளான் அறிய வாராமை பற்றி அதுவேயென மகா வாக்கியத்தாற் கூறப்படும் பதிப்பொருளே; சத்தாயுள்ள சிவம் என்று உணரற்பாற்று - சத்தாகிய சிவமாமென்று உணரும் பான்மை யுடைத்து எ-று. 2. “வேறற நின்றுணரும் அனுபவ ஞானமாத்திரையின் விளங்கிக் கோசரிப்பதாயும்” என்று சிவஞானபாடியம் கூறுகிறது. 3. “மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே” (சிவபுராணம்) என்ற மணிவாசகம் ஈண்டு நினைவுகூரத் தகுவது. 4. மகாவாக்கியமாவது தத்துவமசி யென்பது: இதன்கண் “தது” என்பது அதுவென்னும் தமிழ்ச்சொல் லுணர்த்தும் பொருள் குறிக்கும் சொல்; “தத்துவமசி யென வைத்த முப்பதத்திற்கு, ஒன்றே பொருளென் றன்றே பகர்வது” (சங்கற். மாயா. 201-2) என்றும் “சாற்றுமறை தத்துவமசி மாவாக்கியங்கள்” (சிவ. சித்தி. பரபக் மாயா. 15) என்றும் வருதல் காண்க. 5. வாங்மனோதீதம் என்பது வடநூன் முடிபு. 6. அதீதகோசரம் - அதீதமாயும் கோசரமாயும். கோசரித்தல் - விடயமாதல். 1. வாக்கு மனாதீதம் என்றது உணரப்படாமைக்கும், கோசரமென்றது உணரப்படுதற்கும் நின்றன. 2. “வாக்கு மனாதீத கோசரமாய் நிற்றலை வழியளவையாற் சாதித்து, இவ்விரண்டு தன்மையுமின்றி யென்றதனை வலியுறுத்தற் கெழுந்தது” இந்த ஏதுவெனப் பாடியம் கூறுகிறது. 3. ஈண்டுக் கூறப்படும் நிருவசனம், அநிர்வசன மென்பனவற்றிற்கு வேறாக, பிரகாசப்பொருள், அப்பிரகாசப் பொருள் எனப் பாடியம் கூறிற்று. 4. முன்னர் கூறப்படும் - முன்னே நிற்கும் உண்மை யதிகாரத்துட் சாதனவியலிற் கூறப்படும். 5. நிருவசனப் பொருட்குச் சாதனம் வேண்டாமையானும், அநிர்வசனப் பொருட்குச் சாதனம் பயன்படாமையானும், இருதன்மையுமின்றி வாக்கு மனாதீத கோசரமாய் நிற்பதொன்று பெறப்படும்; படவே, அதுவே சத்தாகிய சிவமென்பது இவ்வேதுவால் துணியப்படுதல் காண்க. 1. பிரகாசிக்கப்படுவதைப் பிரகாசம் என்றலின், உபசாரமாயிற்று. பாடியத்தும், “பிரகாசிக்கப்படுவதனைப் பிரகாசமென்று உபசரித்தார்” என்றே கூறுப. 2. “அவித்தை மாயவே மாயை, பிரியும் பிரிய ஞானமது பிறக்கும் பிறவா பேதமே” (சிவ. சித்தி. பரபக். மாயா. 12) எனவருமாற்றால், ஞாதிரு ஞானங்களும் அவற்றாற் காணப்படும் ஞேயங்களும் அவித்தையாதல் துணியப்படும். “பிறவா பேதமே” யென்றதனால் ஞாதிரு, ஞானம், ஞேயமெனப் பேதித்து நிற்கும் நிலையின்றாம் என்பது விளங்குதல் காண்க. 3. கேவலம் ஞானமாத்திரை யென்றது பிரமஞானம். “ஊனேயுயிரே யுணர்வேயென் றொன்றுமின்றி யுரையிறந்து, வானே முதலாம் பூதங்கள் மாய மாயாதே மன்னி, நானே பிரமெனத் தெளியும் ஞானம் பிரமஞானமே” (சிவ. சித் பரபக். மாயா. 14) என்பது இதனை வற்புறுத்துகிறது. 4. இங்ஙனம் பொருந்தா தென்பவர் மாயாவாதிகள். 5. யெவ ஹி (சங். பா. iii. 4:8) என்பது காண்க. “காரிய காரண பல லக்ஷண ரூப” மாகிய உலகியல் வியவகாரம் எனவும், இவை கடந்தநிலை பாரமார்த்தம் எனவும் படும். 1. அதற்கு அது - அப் பிரமாணத்துக்கு அப் பிரமப்பொருள். ஞேயமாகியவழி, ஞானமாத்திரையாய் நிற்குமென்றதோடு மாறுபட்டுக் குற்றமாய் முடியும். 2. (சாந்தோ. vi. 2.1) என்பது காண்க. 3. சுவேதாசுவதரம், அதர்வசிகை முதலிய உபநிடதங்கள். 4. ஈண்டு கூறப்படும் கருத்தையே அருணந்திசிவனார், “தத்துவஞ் சத்த சத்துச் சதசத்து மன்றென்றா லென், உய்த்துணர்ந் துண்டோ வின்றோ வென்றவர்க் குண்டென் றோதில், வைத்திடுஞ் சத்தேயாகும் மனத்தொடு வாக்கிறந்த, சித்துரு வதுவசித்தா மனத்தினால் தேர்வதெல்லாம்” (சிவ. சித். சூ. 6.5) என்பது காண்க. 5. அறிய என்பதை அறியின் எனக்கொண்டு, ஆராய்ந்தறியின் என உரை கூறுகின்ற ராகலின், இவ்வெடுத்துக்காட்டால் அமைதி காட்டுகின்றார். மழைபெய்யக் குளநிறையும் என்பது மழை பெய்யின் குளம் நிறையும் என்னும் பொருள் தருவது. 6. இரண்டும் என நிற்கவேண்டிய உம்மை, “இரண்டு அசத்தாம்” என நின்று இரண்டும் என்ற பொருள் தோன்ற வருதலால், தொக்க தென்றார். 7. “இரண்டாம் அசத்” தென நிற்பதை, இரண்டு அசத்தாமென மாறிப்பொருள் கூறுதலால், “அசத்தாமென மாறுக” என்றல் வேண்டிற்று. 8. சத்தாம் அறிவறியாமெய் என்பதைச் சத்தாம்மெய், அறிவறியா மெய்யென இயைத்து. சத்தென்பதும் மெய்யென்பதும் ஒருபொருளவாதல் பற்றி, “சத்தாகிய மெய்யென வியையும்” என்றார். 1. திருக்குறள் 610. இதன்உரை விளக்கத்தில் ஆசிரியர் பரிமேலழகரும், “அடியளந்தான் என்றது வாளா பெயராய் நின்றது” என்று கூறுவர். 2. இதுபற்றிச் சிவஞானபாடியத்தின்கண், “பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும் (தொல். சொல். எச்ச. 53) என்றது ஓத்தாகலின் சிவன்றாளெனச் சிவசத்தியின் மேல் வைத்து உயர்த்திக் கூறினார்” என்பர். 3. சிவ. சித்தி. சுபக். பாயிரம்.4. 4. இச்சூத்திரத்து முதலதிகரணத்தில் தொடக்கத்திலும் ஈற்றிலும் உரைத்தவாறு பற்றி ஈதுணரப்படும். 5. இச்சூனியவாதம் நாகார்ச்சுனர் முதல் மாத்தியமிகர் பலராலும் பின் வந்த புத்தவாதிகளாலும் பிறராலும் கொள்ளப்பட்டிருந்ததாக A. B. கீத், ஜேகோபி, ஷெர்பாட்சிகி முதலிய மேனாட்டு ஆராய்ச்சியாளர் கூறுவர். 6. இவர்கள் கூறிய உரைகள் இதுகாறும் கிடைத்தில. 1. ஈண்டுக் கூறியதன் மேலும் இரண்டு ஏதுக்களை யெடுத்து, இவ்வுரையாசிரியர், “மனத்தொடு கூடாத வழி ஆன்மாவுக்கு அறிவுண்டாதலின்மையின், வாக்குமனாதீத மாயவழிக் கோசரமாமாறு இன்மையானும், ஆன்மாவினோடு கூடி மன முதலிய கருவியாதல், அவற்றோடு கூடி ஆன்மாவாதல் அறியுமென்றல்” பொருத்தமுடைத் தாகலானும் வாக்கு மனாதீத மென்றல் பொருந்தாது என்று கூறி ஆராய்கின்றார்- சிவஞானபாடியம். 2. அறிவினா லறியப்பட்ட சுட்டு அசத்தென்றது - சிவ. போ. சூ. 6. அதி. 1. 3. கருவிகள் யாவும் அசத்தினையே யறியும் எனவே, சத்துப்பொருள் கருவிகட்கு எட்டாதென்பது இனிது விளங்குதலால், “ஒன்றாகிய முதற்பொருளை யறியமாட்டாது” என்றார். ஒன்றென்றது கருவி மேலும், ஒன்றை யென்றது ஒன்றாகிய முதற்பொருள் மேலும் நின்றன; ஒன்றென்ற தொன்றேகாண் ஒன்றே பதி என்புழிப் போல. 4. ஆன்மாவாகிய நீ அக்கருவிகளோடு கூடி யல்லது காண்பதில்லை யாதலால், “அவற்றான் அறிந்து வருகின்ற நீயும்” என்று உரைக்கின்றார்; “மாயாதனு விளக்கா மற்றுள்ளம் காணாதேல், ஆயாதா மொன்றை யதுவதுவாய்” (சிவ. போ. சூ. 4. அதி. 2. வெண்.) என்று ஆசிரியர் ஓதுமாறும், “காட்டிடுங் கரண மொன்றும் இல்லையேல் காணொணாதாம், நாட்டிய இவற்றால் ஞானம் நணுகவு மொண்ணா” (சிவப் .68) என்பதும் அறிக. 5. உணராய்; ஆயின் என இவ்வாறு பிரிக்காது,“உணராயாயின் என ஒரு தொடராக்கி யுரைப்பின் உணராத பொருளில்லையென விடுத்தல் வேண்டும். அவ்வாறன்றி, இரண்டாம் என விடுத்தல் உணர் பொருட்கன்றி ஏலாமையின் அஃது உரையன்மை யறிக” என்று பாடியத்துட் கூறுப. 1. நீ ஒரு பொருளை உணருமிடத்து உணரப்படும் அப்பொருள் வேறாகவும் உணரும் நீ வேறாகவும் இரண்டுபட்டு நிற்கின்றாயன்றோ; நீயே முதற்பொருளை அறிய லுறுவையாயின், நின்னின் வேறாம் பொருள் போல அம் முதற்பொருள் வேறாம் என்றற்கு, உணருகின்ற நின்னின் வேறாம் என்று உரைக்கின்றார். 2. உயிர்க்கு அறிவு விளங்கும் உண்மையாவது: ஆன்மாவுக்கு இயல்பாயுள்ள அறிவினைத் திருவருளால் மன முதலிய கருவிகள் விளக்குவது மாத்திரையே யன்றி முன் இலதனை உண்டாக்குவன வல்ல என்னும் உண்மை. இதனை நான்காஞ் சூத்திரத் தோதியவாற்றால் அறிக. 3. இவ் வெண்பாவின் பொருளை அருணந்தி சிவனார், “அறிபொருளசித்தாய் வேறாம் அறிவுறாப் பொருள் சத்தென்னின், அறிபவன் அறியானாகில் அதுவின்று பயனுமில்லை, அறிபவன் அருளினாலே அனன்னியமாகக் காண்பன், அறிபொரு ளறிவாய்வேறா யறிவரு ளுருவாய் நிற்கும்” (சிவ. சித். சூ. 6.6.) என்று உரைக்கின்றார். 4. “எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப” (குறள். 392) என்றாற்போல. உணர்ப என்பதும் அஃறிணைப்பன்மை யுணர்த்தும் பெயர் என்றார். பகரவீற்றுப் பல்லோர் படர்க்கை வினைமுற்றன்று. 5. உனின் என்பது “நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும், குறியதன் முன்னர் தன்னுரு பிரட்டலும், அறியத் தோன்றிய நெறியியல் என்ப” (தொல். எழுத்து. 160) என்ற விதிப்படி “உன்னின்” என வரவேண்டியது; அவ்வாறு வாராமையால், அவ்வியலுக்குரிய புறனடையாகிய, “ஈறியன் மருங்கின் இவையிவற் றியல்பெனக், கூறிய கிளவிப் பல்லாறெல்லாம், மெய்த்தலைப்பட்ட வழக்கொடு சிவணி, ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே” (எழுத்து. 171) என்பதனால் கொள்க என்றார். 1. இப்பகுதி, “ஆன்மா அறியும் உண்மையை யுணர்ந்தோன் ஏனைய போல அசத்தல்லாத தனி முதற்பொரு ளாகலான் அதனை அதனானே ஒற்றித்து நின்று காண்பன் என நையாயிகர் முதலியோரை மறுத்துக் கோசரமாமாறு உணர்த்தி, வாக்கு மனாதீதம் என்றதனை வலியுறுத்தியவாறா மென்க” எனப் பாடியத்திற் கூறப்படுகிறது. 2. இவ்வெண்பாவின் கருத்தை, “பாவிப்பதென்னிற் பாவம் பாவகங்கடக்கிற் பாவம், பாவிக்கு மதுநா னென்னிற் பாவகம் பாவம் கெட்டுப், பாவிப்பதென்னிற் பாவம் பாவனை யிறந்து நின்று பாவிக்கப்படுவதாகும் பரம்பர னருளினாலே” (சிவ. சித்தி. சூ. 6. 7.) என அருணந்திசிவனார் கூறுவர். 3. தன்னாலே தனையுணரும் என்றது சிவத்தாலே சிவத்தை யுணருமெனப் பொருள்கொண்டு தன்னைப் பற்றுதலென்னும் வழுவாம் என யோகர் மதம் பற்றிக் கூறுவார் ஆசங்கிப்பதாக உரைக்கின்றார். 4. யோகபாடியம்.i. 47. ii. 45. iii. 54. இந்த யோகரைப் பாதஞ்சலரென்றும் கூறுப. இந்த யோக முறை பௌத்தரில் ஒரு சாராராகிய யோகசாரர்க்கும் , சாங்கியர்க்கும் உண்டு. 1. “பாவிக்கின் மனாதி வேண்டும் பயனிலை” (சிவப். 86) என்று சான்றோர் கூறுவதால், “மன முதலியவற்றோடு கூடி நின்று பாவிக்கும் பாவகம் எனின்” என்று உரைக்கின்றார். 2. பாவனாதீதம் என்றது, பாவனைக்கு வேண்டும் மன முதலிய கரணங் கடந்த பாவனை. பாவகம் - பயனில் செயல்; “பாவகம் பலவும் செய்து” (பெரியபு. திருநீலகண். 26) என வருதல் காண்க. இக்கரணங் கடந்த பாவனை பயனின்றிக் கழிவதாம் என்பதை உமாபதிசிவனார், “கரணம் நீத்துப் பாவிப்ப னென்னில் என்னாம் பழுதுள” (சிவப். 86) என்றும், இது பாடாணவாதிகள் கூறும் முத்திநிலையா மெனக் காட்டி, “கரணாபாவம் மரணம் கருமரம், ஏய்ந்தவர் முத்தி சேர்ந்தவ ரன்றே, இனைய கதிக்கோர் முனைவரும் வேண்டா, தனி தரு துயர மெனுமிது திடனே, பாடாணத்திற் கூடாவிருக்கை” (சங்கற். 7: 11- 15) என்றும் கூடுதல் காண்க. 3. திருமூலர் முதலிய சான்றோரும் சூனியப் பொருளைப் பாழ் என்றே வழங்குவர். 4. இக்கருத்தையே, சிவப்பிரகாசம் “பாவகத்தால், பாவிக்கவொண்ணானென்று பாவிப்பனென்னின் நீ யென்” (86) என்று கூறுகின்றது. 5. “பாவிக்கவேண்டா ஆண்ட பரனருள் பற்றினோர்க்கே” (சிவப். 86.) 1. பாவனைக் கெட்டாமையால் பாழாயினும், திருவருளாற் பாவிக்கப்படும் பரம்பொருள் பாழாகாதென்பது கருத்து. “துரியமடங்கிய சொல்லறும் பாழை, அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்கள்” (திருமந். 2498) என்றும், “அந்தக் கற்பனை, யுதறிய பாழில் ஒடுங்குகின்றேனே” (2497) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. 2. புறம் - கடவுள் வாழ்த்து. 3. சிவ. போ. சூ. 9. பாவித்தல் செய்தலென்னும் பொதுப்பொருள் பயந்து நிற்கிறது. 4. இதன்பின், “யோக நூலார் கூறும் பாவனையாவது இந்நான்கனுன் ஒன்றாகற்பால தன்றி வேறின்மையின் நான்கினையும் கூறி மறுத்தார்” என்றொரு தொடர் பிற பதிப்புக்களிற் காணப்படுகிறது. யோக நூல்கள் பலவும் ஆராய்ந்து கூறும் இவ்வுரை யாசிரியர் தெரித்து மொழியா தொழியா ரென்றும் பாடியத்தின்கண் இது காணப்பட்டில தென்றும் அறிக. ஈண்டு, “நீ கூறும் ஏனைப் பாவகங்கள் போல மன முதலியவற்றோடு கூடி நின்று பாவிக்கும் பாவனையோ, அவற்றோடு கூடாது நின்று பாவிக்கும் பாவனையோ, இரண்டுமின்றிப் பாவிக்கும் பாவனையோ, இம்மூவகையு மின்றிப் பசித்தவன் உண்டதாக வைத்துப் பாவிக்கு மாறுபோல உணராத பொருளை உணர்ந்ததாக வைத்துப் பாவகம் செய்வதாகிய பாவனையோ கூறுவாயாக” என இந்நான்கினையும் முறையே மறுத்தவாறு. அற்றேல், ஒருவாற் றானும் பாவனைக் கெய்தாத பொருள் சூனியமாம் போலும் என்பாரை நோக்கித், “தன்னருளாற் பாவிப்பது பரமில் பாழ்” எனச் சித்தாந்தஞ் செய்தார்” எனப் பாடியம் கூறுவது அறியத்தக்கது. 1.என்று பௌட்கராகமம் (4: 2) கூறுவது காண்க. 2. சிவசமவாதத்தின் இயல்பைச் சங்கற்ப நிராகரணம் சித்தாந்தப் பஃறொடை முதலிய நூல்களுட் காண்க. 3. அத்துவிதம் என்பதற்கு ஈண்டு இரண்டறக் கலந்து நிற்றல் என்பது பொருள். 4. வியஞ்சகமாய் - விளக்கம் தருவதாய்; “மலநீங்கிய முத்தி நிலையினும் ஆன்மாவுக்கு அறிவு வியஞ்சகமாய் உடனின்றறிவிக்கும் முதல்வனை யின்றி அமையாது” என்று மேலே (இந்நூல் முதற்சூத்திர இறுதி யதிகரண முடிவு.) கூறியிருத்தல் காண்க. 5. “கண்ணுக்குக் காட்டாய வுள்ளத்தைக் கண்காணா” (சிவ. போ. சூ. 9. அதி. 1. வெண்.) 6. அல்லன், படான், உள்ளான், நின்றான் என்பன குறிப்பேதுக்களாகலின், இங்ஙனம் ஒரு தொடராகக் கொண்டுரைக்க. ஆங்கு, அசை. அறிவினுள்ளானாகலின் அறியப்படான் என்க. கண்டு அறிந்து காட்டாது எனக் கூட்டுக - பாடியம். 7. இவ்வெண்பாவின் கருத்தை அருணந்தி சிவனார், “அன்னிய மிலாமையானும் அறிவினுள் நிற்றலானும், உன்னிய வெல்லா முண்ணின் றுணர்த்துவ னாதலானும், என்னதி யானென் றோது மிருஞ்செருக் கறுத்தலானும், தன்னறி வதனாற்காணுந் தகைமையன் அல்லன் ஈசன்” (சிவ. சித்தி. சூ. 6.8) என்று கூறுகின்றார். 1. காட்டுதல் என்னுந் தொழிற் பெயரின், காட்டென்னும் முதனிலையே தனித்துநின்று தொழிற்பெயர்ப் பொருளைத் தருதலால். “முதனிலைத் தொழிற்பெயர்” என்றார். 2. அறிவுக்குக் காட்டாகி நிற்பதே ஒரு காரணமாய், ஆன்மவறிவு, முதல்வனைக் கண்டறிந்து ஆன்மாவுக்குக் கோசரமாம்படி காட்ட மாட்டாதென்பதைச் சாதித்தலின், “பெயரடையானும் ஓர் ஏதுக் கூறியவாறு” என்கின்றார். 3. நாலடியார்: தூய்தன்மை.9. 4. “ஒரு பொருட் பன்மொழியாய்” என்னாது, “குழிந்தாழ்ந்தகண் ணென்றாற் போலச் சிறப்பின்கண் வந்த மீமிசை” என்று பாடியத்துட் கூறுப. 5. கண்ணென்பது கண்ணொளிமேல் நிற்றலின், ஆகுபெயரென்றார். அஃது - அவ்வாறு பொருள் செய்தல். 1. சுத்த சைவரை யென்றும் (கூறப்படுவர்கள்) பாடவேறுபாடுண்டு. “இன்னவென் றறியா விருவரும் முயங்கி, ஒன்றா யுறுபயன் உவப்பும், இன்றாய் நிற்கு மிது சிவகதியே” (சங்கற்ப. 9. 1. 9-12) என்றும், “மாசதறில், அங்கமோ டெல்லா மகல வகலா வருளே, சங்கமே யாகத் தரித்திடலும் - துங்கமதாய், தானதனை நோக்கியருள் தன்னையுந்தன் றன்னையுமேல், ஆன அரன் றன்னையுமே யாய்ந்தழுந்தி- யேனையிவை, இன்னவெனக் காணா விருவரு மொன்றாகி, யுன்னு முறுபயனு மோருவப்பு - மன்னாமல், நிற்கை கதியென்ன நிகழ்த்திடுவான் சைவன்” (சித்தாந்தப்பஃ. 401- 4) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. 2. மாயாவாதிகள், “தத்துவமசி” என்னும் சொற்றொடர்க்கண் வரும் அது வென்னும் பொருட்டாய தது என்னும் சொல்லால் முதற் பொருளைக் குறித்துரைப் பராதலின், அது வென்னும் ஒன்று என்பதற்கு இவ்வாறு உரை கூறுகின்றார். 3. உயிர், அறிவுவடிவிற் றாதலால், அறி அறிவு என்றதற்கு, “அறிகின்ற ஞாதா” என்றுரைத்தார். ஞாதா, ஞாதிரு, காண்பான் என்பன ஒரு பொருளன. 4. இவ்வெண்பாவின் கருத்தை, “ஒன்றெனு மதனா லொன்றென் றுரைப்பதுண் டாகையாலே, நின்றனன் வேறாய்த் தன்னின் நீங்கிடா நிலைமையாலே, பின்றிய வுணர்வுக் கெட்டாப் பெருமையன் அறிவினுள்ளே, யென்று நின்றிடுதலாலே யிவனவ னென்னலாமே” (சிவ. சித்தி.சூ. 6.9 ) என்று அருணந்தி சிவனார் கூறுகின்றார். 1. உயிர், தான் உயிராதலேயன்றிச் சிவமுமாம் என்ற பொருள் தருதலின், எச்சப் பொருட்டாயிற்று. தான் உயிராதலாவது காண்பானாகிய ஞாதிருவாதல். 2. ஞேயமாகிய சிவத்தை யறியுமிடத்து, அந்த ஞேயமே இரண்டறக் கலந்து நின்று அறியு மாயினும் அங்ஙனம் அறியும் அவ்விடத்தே ஞேயமாகிய சிவமேயன்றி ஞாதிருவாகிய அறிவும் உண்டென்பது விளங்குதலால், உம்மை இறந்தது தழீஇய தென்றார். “முத்திதனின் மூன்று முதலு மொழியக்கேள், சுத்தவனு போகத் தைத் துய்த்தலணு - மெத்தவே, இன்பங் கொடுத்தலிறை யித்தை விளைவித்தல் மலம், அன்புடனே கண்டு கொளப்பா” (உண். விள. 50) என்று திருவதிகை, மனவாசகங் கடந்த தேவர் கூறுவதும், “ஒன்றாய் நின்ற வந்நிலையில், ஒன்றாகாமல் இரண்டாகாமல், ஒன்றும் இரண்டும் இன்றாகாமல், தன்னது பெருமை தாக்கா னாயினும், என்னது பெருமை யெல்லா மெய்தித், தன்னை யெனக்குத் தருவதை யன்றியும், என்னையும் எனக்கே தந்து” (இருபா.20 ) என்று அருணந்திசிவனார் கூறுவதும் நினைவு கூரத்தக்கன. 3. ‘இரண்டாகாமல்’ அறிவினுள் அருளால் மன்னி அறிவறிவிக்கும் இயல்புடைய னாதலின், அவ்வியல்பு அமையத் தோன்ற வேண்டி, அல்லன் என்னும் வினைக்குறிப்பு முற்று ஈண்டு, எச்சமாய் நின்றது. 4.அல்லன் என உயர்திணை யாண்பாலாய் நிற்கும் முற்றெச்சம், நிற்றலால் என வினைகொண்டு முடிவது வழுவன்று; “கற்றுக்கண் ணஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால், தக்க தறிவதாந் தூது” (குறள். 686) என்றாற்போல. 1. மிருகேந்திரம்: பஞ்ச கிருத்திய பிரகரண வியாக்கியானத்துட் காண்க. 2. பௌட். 4. 18. 3. பௌட்கரம். 4: 13.14. 4. துகளறு போதம். 25. “பகலிழந்த வான்போற் பரவுமலம் நீயாய், இகலறவே நின்றா யிழந்தா - யகலறிவு, வாடாத முத்தியினில் வாய்த்தவருட் கேவலநீ, நாடாத கேவலமுன்னாள்” எனவரும். 5. சிவ. போ.சூ. 4. அதி. 3. உதா. 1. 6. சிவ. போ. சூ. 4. அதி. 3. உதா. 2. 7. சிவ. சித்தி. சூ. iv. 36. 1. என்பது சித்தாந்த சாராவலி யோகபாதப் பகுதி. இதன்கண் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், அதீதம் என்ற ஐவகையவத்தைகளில் தொழிற்படும் கரணங்களை வகுத்துக் கூறுதல் காண்க. 2. சித்தாந்த சாராவலி முதலிய நூல்களிற் கூறுப போலும், ஈண்டுக் காணப்பட்டில. 1. இச்சூத்திர முதல் இறுதி வரை உண்மை யதிகாரமென்றும், 7,8,9 ஆகிய மூன்று சூத்திரங்களும் சாதனவியல் என்றும் பெயர் வகுத்து, “சிறப்பியல்பு பொதுவியல்பு போல் இடையே நீங்குதலின்றி எக்காலத்தும் ஒரு தன்மைத்தா யுள்ளது பற்றி உண்மை யெனப்படுமாகலின் அப்பெயர்த்தாயிற்று” என்றும், “பொது வியல்பாற் பெறப்பட்ட முப்பொருள்களினுள்ளும், விள்ளற்பாலதனை விண்டு அதனான் வரும் துன்பத்தின் நீங்குதலும், கொள்ளற்பாலதனைக் கொண்டு அதனான் வரும் இன்பத்தை உறுதலுமாகிய பயன் பெறுதற் கேதுவாகிய சாதனம் செய்யுமாறு உணர்த்துதலின், சாதனவியல் என்னும் பெயர்த்து” என்றும் சிவஞானபாடியம் கூறுகின்றது. இவ்வாறு பிரம சூத்திரத்துக்குச் சங்கரர் வகுத்த பாடியமும் இறுதிப்பகுதிகளைச் சாதனம் என்றும் பயன் என்றும் வகுத்துக்கொண்டு உரைப்பது நினைவுகூரத் தக்கது. 1. சிவ. போ. சூ. 7,8,9. 2. சிவ. போ. சூ. 6. 3. அதிகாரமும் ஓத்தும் என்றது, உண்மை யதிகாரமும் சாதனவியலும் என அறிக. 4. முன்னைய இரண்டு - முதல் இரண்டதிகரணங்களும். 5. ஒரு பொருண்மேல் வாராவழிச் சூத்திர மொன்றாமா றில்லை; ஆகையால் இது கூறல் வேண்டிற்று. 6. முதற்கண் - சாதனவியலின் முதற்கண்; பாடியத்தும், “அதிகாரியை யுணர்த்து வதாகிய இது சாதன வோத்தின் முன் வைக்கப்பட்டது” என்றே கூறுகின்றார். இனி, சாதனமும் பயனும் கூறுதற்கு முன்னர் என்று கொள்ளினு மமையும். 1. சத்தெதிர் யாவையும் சூனியமாதலின் சத்து அறியாது; அசத்து இலதாகலின் அறியாது; இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா எனச் சூத்திரத்தை இயைத்துக் கொள்க. 2. இரண்டாவன: சத்து, அசத்து என்பன. 3. “பாவகமேல்” (சூ. 6. அதி. 2. உதா.) என்ற வெண்பா வுரையில், “அன்றென்னிற் பாழதுவாம்” என்றும், “பாவிப்பது பரமில் பாழ்” என்றும் வந்தவிடத்து, பாழ் என்றதற்குச் சூனியம் என்று உரை கூறியது காண்க. 4. “சிவசத்தாமென” முற்சூத்திரத்திற் கூறியதையே ஈண்டுச் சத்து என்கின்றா ராதலால், “சத்தாகிய சிவம்” என்று உரைக்கின்றார். 5. சத்தின் இயல்பையும் அசத்தின் இயல்பையும் அறியும் அறிவுடைத்தாகிய ஒன்று உண்டென்பது என்றவாறு. இதனை மூன்றாம் அதிகரணத்தின்கண், இவ்விரண்டினையும் அறிவதாய் உபதேசியாய் நின்ற அறிவு அவ்விரண்டன்பாலும் உள்ளதாய் உள்ள வதுவே ஆன்மாவாம்” என்கின்றா ராதலின், ஈண்டு வாளா, “இருதிற னறிவுன தொன்று” என்று கூறுகின்றார். 6. சத்து, அசத்து என்ற இரண்டனுள் அசத்திற் பிரித்தலின், ஏகாரம் பிரிநிலைக்கண் வந்ததென்றார். 7. முத்திநிலையில் பசுகரணம் சிவகரணமாம் இயல்பை, “ஆற்றா லலை கடற்கே பாய்ந்தநீ ரந்நீர்மை, மாற்றியவாற்றான் மறிந்தாற்போல்- தோற்றிப், புலன்களெனப் போதம் புறம்பொழியு நந்தம், மலங்களற மாற்றுவிக்கும் வந்து” (களிறு-11) என்று சான்றோர் கூறுவது காண்க. 1. சிவ. சித்தி. சூ. 7.1. 2. எற்புழிக் கோடல், ஒருவகை யுத்தி; கூறப்பட்டதொரு சொல்லும் சொற்றொடரும் பலபொருள்களைக் குறித்து நிற்கின், இடத்துக்கேற்ற பொருளைக் கொள்வது அமையும் என்றற்கு அரண் செய்வதாம். ஈண்டு அறிவு என்றது பல்பொருட்கு ஏற்கும் இயைபுடைய தாயினும், அனுபவ அறிவினைக் கொள்வது ஈண்டைக்குப் பொருந்துவது பற்றி இதனைக் கூறினார். 3. “இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவிக்கு, வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்” (சொல். 33) என்பது தொல்காப்பியம். 4. சிவ. சித்தி. சூ. 1. 16. 5. சிவப். 2. 6. சிவ. போ. சூ. 1. 2. வெண்பா. 7. சிவ. சித்தி. சூ. 2. 53. 8. சிவ. சித்தி. சூ. 5.7. 9. சிவ. சித்தி. சூ. 1. 56. 10. திருநா. vi. நின்ற. 1. 1. மேற்கொண் டொழுகும் துணிபுக்கு மாறாய் முடிவது அவசித்தாந்தம் என்று நியாயபிந்து கூறுகிறது. 2. சிவப். 65. 3. இவ்வாறு கூறுவோர், சிவாத்துவித சைவரேயன்றி, சங்கிராந்த வாத சைவரும் பரிணாமவாத சைவருமாவர் எனப் பலருளரென்று சிவஞானசித்தி சிவப்பிரகாச வுரைகள் கூறுகின்றன. 4. இதனால், சத்தாகிய சிவம் சுட்டுணர்வின்றி நின்றறியு மென்றும், அசத்து என்றது சுட்டியறியப்படும் பிரபஞ்சம் என்றும் உரை கூறியவாறு காண்க. 5. சிவ. சித்தி. சூ. 7.1. 6. சத்தாகிய சிவத்தால் அசத்தெல்லாம் சுட்டியறியப்படுமாறு வேறு நில்லா என்றதனால், எடுத்துக்காட்டிய சான்றோர் உரைகட்கு மாறாய் அவசித்தாந்தமாதல் இல்லையென்று இதனால் வற்புறுத்துகின்றாரென வறிக. 7. முற்றுணர்வுடைமை இயற்கை யுணர்வின னாதல் முதலியன முதல்வனுக்குரிய குணங்கள் என்ப. (குறள். 9. பரிமே. உரை) 1. மெய் என்றது, இயற்கையாகிய சுட்டுணர்வின்றி நின்றறியும் அறிவின் மேலும், பொய் என்றது செயற்கையாகிய வேறாய் நின்று சுட்டி யுணரும் சுட்டுணர்வின் மேலும் நின்றன. 2. அவர் உரைப்பனவாகிய உரை வேறுபாடுகள் கிடைத்தில. 3.அன்னிய மில்லாமையுடைய அரற்கு என இயையும், அன்னிய மில்லாமை, வேறாகாமை; ஆகவே உடனாய் நிற்றல் பெறப்படும்; படவே, உடனாய் நிற்றற் குரிமையும் தோன்றுதலின், இவையெல்லாம் பெய்து. பசுபாசங்களொடு வேறாகாது உடனாய் நின்றறியும் அரனுக்கு என்று உரை கூறுகின்றார். உடனாய் நிற்றற்குரிய பசு பாசங்கட்கும் அரற்கும் இயைபு கூறுவார், அவை அவனுக்குள் வியாப்பியமாய் நிற்பனவாம் என்றற்கு, “தன்னுள் வியாப்பியமான பசுபாசங்கள்” என்றார். 1. பசுபாசங்களோடு அன்னியமில்லாது உடனாய் நிற்பதனால், சுட்டியறியக் கிடப்பதொன்று அவற்றின் வேறாக இல்லையென்பது தானே விளங்குதலின், “சுட்டியறியக் கிடப்ப தொன்றில்லை” என்றார். உடனாய் நிற்கும் முதல்வன் அறியலுறுவானாயின், எங்ஙன மறிவனென்னும் வினாவிற்கு விடை கூறுவதுபோல, “அன்னியமில்லான் அசத்தைக் காண்குவனேல், அன்னியமாக் காணான்’’ என ஆசிரியர் கூறுதலின், ஈண்டு உரையில், “அன்னியமாக் காணான்” என்பதற்கு, “அசத்தை அறியலுறுவானாயின் அறிந்தாங் கறிவதன்றி நம்மனோர் போல வேறாகச் சுட்டியறிவா னல்லன்” என விளக்குகின்றார். 2. மாணாத என்பது எதிர்மறைப் பெயரெச்சம்; இஃது ஈறு கெட்டு மாணா என நின்றது 3. இவ்வாறு முதல்வன் எல்லாம் ஒருங்கு அறிவன் என்பதுகொண்டு சிவாத்துவித சைவர், சத்தாகிய முதல்வன் வியாபக வறிவாயினும் உயிரின் பொருட்டு அசத்தென்று கூறப்படும் கருவிகளின் இடமாக நின்று அறிதல் கூடுமென்றாராக, “கதிர்முன் இருள்போல அவன் முன் மாணா அசத்து நில்லாது” என்று அவரை மறுத்தவாறென்று வழிநூலுரைகள் கூறுவது ஈண்டுக் குறிக்கத்தக்கது. 4. “அசத்தைக் காண்குவனேல்” எனவே, காண்டல் அவற்கு வேண்டிற்றில்லை யென்றும், அசத்தைக் காணாமை அவனது முற்றுணர் வுடைமைக்குக் குறைவாமன்றோ எனின், அவ்வசத்தைக் கண்டறிவதென்பது சிற்றுணர்வாய் முற்றுணர்வுக்கு மாறாதலின், அதனால் குறைவுண்டாகாது பெருமையேயாம் என்றும் இதனால் வற்புறுத்துகின்றார். செயற்கரிய செய்யும் பெரியோர், சிறியோர் செய்யும் எளியவற்றைச் செய்யாரென்பது அவர் பெருமைக்குக் குறைவு பயவாது அவர் பெருமையை மிகுவிக்குமாறு போல என அறிக. 5. இன்மை, ஈண்டு அழிந்து இல்லையாம் என்னும் பொருளதாகாது விளங்கித் தோன்றா தென்னும் பொருள்பட நின்றது. 1. உணர்வு என்பது உணரப்படும் பொருளையும், கதிர் என்பது கதிரையுடைய ஞாயிற்றையும் குறித்தலின், ஆகுபெயர் என்றார். 2. சிவ. சித்தி. சூ. 7.1. 3. “மன்னு மான்ம சந்நிதி யளவிற், காந்த பசாசத் தேய்ப்ப வாய்ந்த, உயிருட லியக்குஞ் செயலுறு பூட்டைப், பலவகை யுறுப்பு மிலகிய தொழில் போல், ஐம்பொறி புலன்க ளின்புறு மன்றே” (சங்கற்ப. சங்கிராந். 4-8) என்பது காண்க. 4. “பசுகர ணங்கள் சிவகர ணங்க ளாக மாறி யறிவும், ஏகமாமுயிர் யானென தின்றே” (சங்கற்ப. சங்கி.20-2) என்று வருவது காண்க. 5. சிவசங்கிராந்தவாத சைவர். “ஆன்மா விளக்கம் போல விகாரமின்றி அறிவு மாத்திரையாய் நிற்பதன்றி ஒன்றனை யறியுமாறில்லை; அவ்வான்மாவின் சந்நிதியில் காந்தபசாசம் போல உடல் இயங்குழி, அதன்கண் நின்று கருவிகளே விடயங்களை யனுபவிக்கு மெனவும், மலம் நீங்கும் வழிக் கண்ணாடியில் முகவொளி தோற்றுமாறு போல முதல்வன் திருவருள் ஆன்மாவின்மாட்டுச் சங்கிரமித்துத் தோன்றுமெனவும், அவ்வழி உப்பளத் திட்டவை யெல்லாம் உப்பாமாறு போல ஆன்மாச் சிவமேயாய் அவ்வான்மாவின் சந்நிதியில் அறிவனவாகிய கூறுவர்,” எனச் சிவசங்கிராந்த வாதிகள் கூறுவனவற்றை யெடுத்தோதி, “ஐம்பொறிகள் ஆன்மாவா லுணருமெனச் சாங்கியரை மறுத்த அதிகரணத்தானே மறுக்கப்பட்டமையின், அவையே சிவ கரணங்களாய்ச் சிவத்தை யறியுமென்பதை மறுத்து, அசத்து அறியா தென்றதனைச் சாதித்தற்கு எடுத்தோதிய ஏதுவை வலியுறுத்தற் கெழுந்தது இவ்விரண்டா மதிகரணம்” என்று சிவஞானபாடியம் கூறுகிறது. 1. சு. தேசி. உரை: அசத்தினுக்கு - தத்துவப் பிரபஞ்சத்திற்கு; உணர்வு - அறிவானது; இன்றென்றது - இல்லை யென்க எ-று. 2. “ஏனைப் பிரபஞ்சத்திற்கு அறிவுண்டெனக் கொள்வார் யாருமின்மையான் ஆண்டு ஐயப்பாடு நிகழாமையின், அதனை ஓரதிகரணமாக வைத்துச் சாதிக்க வேண்டா மையான்” -பாடியம். 3. “அவ்வசத்தாகிய தத்துவப் பிரபஞ்சமானது பொதுமையான் நோக்கும் வழி அறிவுடையது போலத் தோன்றினும் ஐயந் திரிபின்றி மாசறு காட்சியான் ஆராயும் வழி அறிவில்ல தாகலான் அசத்தினுக்கு உணர்வின்றென மேற்கொண்டது என்றவாறு”- பாடியம். 4. மாசறு காட்சி யையந் திரிபின்றி - சிவ. சித்தி. சுபக். 8. 1. “தேரோட வெஃகிநின் றத்தமாச், சிந்தையால் நீரென்று செத்துக் கவர்போடும், பண்பில் அருஞ்சுரம்” (கைந்நிலை. பாலை. 12) என்று சான்றோர் கூறுதல் காண்க. 2. பேய்த்தேர் அசத்தாதலை, “நீரிலெழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரு, மோரினவை யின்றாமா றொப்பு” (சிவ. போ. சூ. 6. அதி. 1. வெண்.) என்று கூறியவாற்றானு மறிக. 3. “வாய்த்தீயிற் கேடில்லை” (நாலடி. கல்வி. 6) என்புழிப் போல வாய்த்தல், நேர்பாட்டின் அருமை தோன்ற நின்றது. 4. பெற்றிமையின், என்றவிடத்து, பெற்றி யென்பதே அமைவதாயிருக்க, மைவிகுதி போந்து அப்பொருளே தந்து நிற்றலின், பகுதிப் பொருளே பயக்கும் விகுதியாயிற்று. “பேதாய் திதியாகும் பெற்றிமையின்” (சிவ. போ. சூ. 1. அதி. 1. வெண்.) என்புழி, பெற்றிமை சாதித் தன்மை யுணர்த்தி நின்றது. 1. வினை முதல், ஈண்டுக் குரவன் அறிவுறுக்கும் உபதேசமொழி. வினை நிகழ்ச்சிக்கு வினை முதலும் கருவியும் செயப்படு பொருளும் இன்றியமையா வாகலின், அவை யெஞ்சிநின்ற வழிப் பெறுதற்குரிய வாயில் அவாய்நிலை யெனவறிக. 2. கண்டுணர்வார்க்கு என வரவேண்டிய நான்காம் வேற்றுமை யுருபு தொக்குநிற்ப, கண்டுணர்வார் என்றே வந்தமையின், குவ்வுருபு தொக்கதென்றும், தொகுதற்கேது விகாரம் என்றும் இதனால் குறிக்கின்றார். “ஐந்தவித்தான் ஆற்றல்” (குறள். 25) என்புழிப் போல - சிவஞானபாடியம். 3. அதிகாரமாவது “ஓரிடத்து நின்றசொல் பல சூத்திரங்களோடும் சென்றியைந்து தன் பொருளைப் பயப்பிப்பது” (தொல் முதற் சூ. விருத்தி) என்ப. ஈண்டு அறிவென்பது சூத்திரத்தின்கண் நின்று வெண்பாக்கள் தோறும் இயைந்து வருவதுபற்றி, இதன் கண்ணும் வருவித் துரைக்கின்றா ராதலால், அதிகாரத்தான் வந்தது என்றார். 4. தன்மை - அறியுந்தன்மை. 5. சத்து, அசத்தென்ற இரண்டையும் அறிதலின் ஆன்மாவுக்குச் சதசத்து என்பது பெயராயிற்று. “சத்தசத்தறிவ தான்மாத் தான் சத்தும் சத்துமன்று, நித்தனாய்ச் சதசத்தாகி நின்றிடும்” (சிவ. சித்தி. சூ. 7.2) என்றும், “சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை, உய்த்தல் சதசத்தா முயிர்” (திருவருட். 17) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. 1. சு. தேசிகர் உரை: இருதிறன் - சத்து அசத்தென்னும் இரண்டின் இயல்பை; அறிவுளது - அறியும் பொருள். இரண்டலா - சத்தும் அசத்துமல்லாத; ஆன்மா - சதசத்தாகிய உயிராம் எ-று. 2. விடயம் என்றது ஈண்டு இருளையெனக் கொள்க. ஞாயிற்றின்முன் நில்லாமையால் ஞாயிறு இருளையும், இருள் ஞாயிற்றையும் காணாவாயினும், கண் ஞாயிற்றோடு கூடி ஞாயிற்றையும், இருளொடு கூடி இருளையும் காணுமாறு போல என்பதாம். 3. அனுமானம் கூறிக் காணுமாறு : - இருதிற னறிவுளது இரண்டலா ஆன்மா; என்னை, சத்தெதிர் நில்லாத அசத்தும் சத்தும் ஒன்றானொன்று அறியப்படாமையான்; யாவை யாவை தம்முள் ஒன்றானொன்று அறியப்படா, அவற்றின் வேறாய் அவற்றை அறிவதாய் ஒன்று உண்டு என்பதாம்; கண்போல என்க. சத்து அசத்தினையும், அசத்து சத்தினையும் அறியாவாயினும் அமையும்; இவ்விரண் டினையும் உயிர் அறியா தாயின், அவற்றின் உண்மையால் ஒருபயனுமில்லை ஆதலின், உயிரான் அவை யறியப்படுமென்பது பொருந்தும்; எனவே; உயிர் அவை யிரண்டனையும் அறியும் தன்மைத்தாம் என்பது தெளிவாதல் காண்க. 1. இருதிற னறிவுள திரண்டலா வான்மாவென மேற்கொண்டது என்றொரு தொடர் ஈண்டுக் காணப்படுகிறது. இங்கே பொருள் கூறப்படும் பொழிப்புரை இத்தொடர்க்குரிய தாகலின், மீளவும் அதனை யெடுத் தோதற்குரிய இயைபு இவ்வுரையில் காணப்பட வில்லை. 2. “ஆய் என்னும் வினையெச்ச மூன்றும் உள்ள வென்னும் பெயரெச்சக் குறிப்போடு முடிந்தன” என ஈண்டுக் காணப்படுவது ஏடெழுதினோரால் உண்டாகிய பிழை. உரையாசிரியர், பாடியத்தின்கண், “ஆ யென்னும் வினையெச்சம் இரண்டும் நின்ற வென்னும் பெயரெச்ச வினையோடு தனித்தனி முடிந்தன” என்றே கூறியிருத்தல் காண்க. 3. மூன்று பொருள்: இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை என்ற மூன்று வேற்றுமைத் தொகைப் பொருள். 4. சதசத்தாகிய உயிர் இவற்றை அறியும் என விடை கூறிய வழி, அசத்தாகிய கரணங்கள் சிவகரணங்களாக மாறி அறியும் என்னும் இவ்விருவரும் மறுக்கப்படு கின்றனர். (சங்கற்ப. 6: 20- 2.) 1. சிவாத்துவித சைவர், சிவசங்கிராந்த சைவர் என்ற இருவர், இவர்களை இவ்வதிகரண மேற்கோள் கருத்தை விளக்குமிடத்துக் கூறினாராதலின், ஈண்டு, “அவ்விருவர் மதங்களையும்” எனச்சுட்டி யொழிந்தார். 2. “பாசமும் பசுவும் ஈசனு மென்றிம், மூவகை யுணர்வுதா முதன்மைய” (சங்கற். சிவசம 1-2) என்பதனால் சிவசமவாதி கொள்கையும். “பஃறுளைக் கடத்தினுள் விளக்கேய்ப்ப, அறிவுளவாகும் உருவுறு முயிர்கள்” (சங்கற். ஈசுரவவி. 5-6) என்பதனால் ஈசுரவவி காரவாதி கொள்கையும், “கருமுகி லடர இரிதரு கதிர்போன், றறிவா முயிரிற் பிறியா தேயும்” (சங்கற். ஐக்க. 7-8) என்பதனால் ஐக்கியவாதி கொள்கையும் உணர்ந்து கொள்க. 3. “கொத்தை மாந்த ருய்த்துறுந் துயில்போற், காட்சி யென்னக் காணாத் துயர, மாட்சியை முத்தி யெனவகுத் தனரே” (சங்கற் பாடா. 7-9) என்பதனால் பாடாணவாதி கொள்கையும், “நித்த சுத்த முத்தராக, வைத்தன ருலகில் மறைவல் லோரே” (சங்கற். 4. “கருவியு மலமும் பிரிவுறப் பிரியா, ஞான நல்கலுந் தானது நோக்கி, தன்னையு மதனையுந் தன்முதற் பொருளையும், இன்னவென்றறியா விருவரு முயங்கி, யொன்றா யுறுபய னுவப்பும், இன்றாய் நிற்கும்” (சங்கற். சைவ. 10-5) என்பதனால் சுத்த சைவர் கொள்கை அறிக. 5. சிவப். 57. 1. இத்தன்மையால் ஆன்மா பசுத்துவத்தோடு கூடிப் பசுவெனவும் சிவத்துவத்தோடு கூடிச் சிவமெனவும் இரு தன்மைப்படும். இதனைச் சருவஞர் னோத்தராகமம், என்று கூறுகிறது. 2. அருவுருவம், அருவம் உருவம் என விரிந்து முறையே சத்தும் அசத்தும் குறித்து நிற்கிறது. 3. “நுணுகிய நூல்களை யறியும் ஆன்மாவே அருவாகிய சத்தினையும் உருவாகிய அசத்தினையும் அறிவ தாகலான், அஃது அவ்விரண்டுமன்றி வேறாம்” -சிவஞானபாடியம். 4. படுமெனின் - தன்னுண்மை யறியப்படு மெனின். 5. மூன்றனையும் - சத்தாய் நின்று சத்தையும், அசத்தாய் நின்று அசத்தையும், தன்னுண்மையும் என்ற மூன்றினையும். 1. இக்கருத்தை, “இரண்டின்பாலும், ஓத்துட னுதித்து நில்லா துதியாது நின்றிடாது, வைத்திடுந் தோற்றம் நாற்றம் மலரினின் வருதல் போலும்” (சிவ. சித்தி. சூ. 7. 2) எனப் பிறரும் கூறுவர். “உற்ற வாக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்” என்ற திருவாசகம் (அதிசய. 9) ஈண்டு ஒப்பு நோக்கற் குரியது. 2. அவ்விரண்டும் - சத்தும் அசத்தும் என்ற இரண்டும். 3. எடுத்தோதப்பட்ட சொற்களால் உணரப்படாது அவற்றினிடமாகக் குறிப்பால் உணர நிற்பது பற்றி, இது குறிப்பெச்சமாயிற்று. 4. சிவ. போ. சூ. 6. 5. தொல். சொல் உரி. 34. 6. இழையை எனப் பொருள்படுதலின், இரண்டாம் வேற்றுமை யுருபு விரித்துரைக்க என்கின்றார். 1. “உயிர் எத்தன்மைத் தெனின் உணருந்தன்மைத் தென்றல் செவ்வன் இறை” - தொல். சொல். 13. உரை. 2. சங்கற்ப. நிமித்த. 48. 3. ஆயிழையாய் என்று மகடூஉ முன்னிலையாக்குவோர், ஆய்ந்த இழைகளை யணிந்த பெண்ணே என உரை கூறுவர். அவ்வாறு கூறின், ஆன்மா அருவுருவம் அறிதல் - ஆன்மாவானது அருவாகிய சத்தினையும் உருவாகிய அசத்தினையும் அறிதலால்; அருவுருவம் அன்றாகும் - சத்தும் அசத்தும் அன்றாய் வேறாகும் எனப் பொருள்படும். படின், ஆன்மா இரண்டினையும் அறிதற்கு ஆதரவு இன்றாகிறது. இவ்விரண்டினையும் அறிவதாய் என மேற்கொண்டதனையே, அருவுருவம் அறிதல் என்பது மீளவும் கூறியதாய், கூறியது கூறலென்னும் குற்றமாய் முடிதலின், மகடூஉ முன்னிலை யாக்கல் பொருந்தா தென்பதாம். ஆயிழை ஆய் ஆன்மா என்புழி, ஆயிழை ஆய் என்பது ஏது கருப்ப விசேடணமாய், இவ்விரண்டினையும் அறிவதாய் என மேற்கொண்டதனை வற்புறுத்தி நிற்பது காண்க. “அறியும் அறிவு நீ அன்றோ உனக்குச், செறியுமலம் நின்றதோ செப்பாய் - அறிவுதனைப், பாராதே பார்த்தறிந்து பாசப் பழக்கமதில், வாராத தன்றோ வழக்கு” (துகளறு. 34) என்று சான்றோர் உரைப்பது காண்க. 4. ஆய் என்னுஞ் சொல் ஆக்கச்சொல்; “செயற்கைப் பொருளை யாக்கமொடு கூறல்” (தொல். சொல். 20) என வருதல் காண்க. 5. திருவா. கோயில். 7. 6.ஆன்மா சார்ந்ததன் வண்ணமாய் அடங்கித் தோன்றுவது, மலரின் கண் வாசம் அதன்கண் அடங்கித்தோன்றுவது போல இயைவது பற்றி. ஈற்றில் நிற்கும் தொக்கு என்னும் வினையைத் தோன்றல் என்பதனோடு இயைத்துத் தொக்குத் தோன்றல் எனக்கொள்க என்று உரைக்கின்றார். 1. காட்டுவ தொன்று இல்வழிக் காணாமையும், உள்வழிக் காண்டலும் உயிர்க்கு இயல்பென்பதை, “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” (திருநா. 309:3) என்று சான்றோர் கூறுதலால் அறிக. 2. மாறி மாறி யுணர்தலாவது “ஒருங்கே அறியமாட்டாது ஒரு விடயத்திற் சென்ற அறிவை மாற்றி மற்றொரு விடயத்தை யறிதல்” - சிவஞானபாடியம். 3. சிவசத்து எல்லாவற்றையும் ஒருங்கே ஓரியல்பால் உணர்வது; ஆன்மா ஒவ்வொன்றாய்க் கருவி கரணங்கொண்டு குறைபட உணர்வது; “ஒன்றொன்றாப் பார்த்துணர்வ துள்ளமே எவ்வுலகும் ஒன்று ஒன்றாப் பார்க்கும் உணர்ந்து” (சிவ. போ. சூ. 11. உதா.) எனவரும். “ஒரு பிணிவந்து அடுத்தபொழுது மயக்கத்தைப் பொருந்தியும் அதற்கான மருந்து செய்ய அதனாலே தெளிந்தும் அறிவு பெயர்தலையுடை நீ சொல்லுமிடத்து அந்தச் சத்தாகாய்; பசி வந்துற்ற பொழுது மயக்கத்தைப் பொருந்தியும், புசித்தபொழுது தெளிந்தும், அறிவு பெயர்தலை யுடையை என்றுமாம்; எனவே, கருத்தா ஒரு தன்மைத்தான அறிவுடையர், நீ அறிவு பெயர்தலையுடையை, ஆதலால் கருத்தாவல்லை யென்றதாம்”- பாண்டிப்பெருமாள் விருத்தி. 1. பாசமென்றது அசத்தாகிய பிரபஞ்சம் என அறிக. அசத்தாகிய பிரபஞ்சம் அறிவில்லாத தாகலின், அதற்கு அறிந்து அனுபவிக்கும் இயல்பு இல்லை. 2. ஆகாசமாகிய பூதத்துக்குச் சத்தம் குணமென்பது தத்துவ நூல்களிற் கண்டது. வியஞ்சகம் - துணை. 3. இதனையே சிவஞானபாடியம், “வியஞ்சகம் உள்வழி அறித லொப்பு மையால் சத்தாதலும், அஃது இல்வழி அறிவு நிகழாமை யொப்புமையால் அசத்தாதலும் ஆகியதோர் தன்மையுடைய அவ்விரண்டினும் வேறாகிய சதசத்தாவை யென்க” என்று கூறுகிறது. 4. இரண்டற்கும் - சத்தும் அசத்துமாகிய இரண்டினுக்கும்; “சத்தசத்தறிவ தான்மாத் தான் சத்தும் அசத்து மன்று., நித்தனாய்ச் சதசத்தாகி நின்றிடும்” (சிவ. சித்தி. சூ. 7. 2.) என்றும், ‘‘சதசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை, உய்த்தல் சதசத்தா முயிர்’’ (திருவருட் . 17) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இதனைச் சம்பிரதாய திட்டியெனப் பாண்டிப் பெருமாள் குறிக்கின்றார். 5. “வியஞ்சகம் இல்வழித் தலைப்பட்டும், அஃது உள்வழி நீங்கியும் நிற்பதாகிய மயக்கம், உண்டி இல்வழித் தலைப்பட்டும், அஃது உள்வழி நீங்கியும் நிற்பதாகிய பசியோ டொத்தலின்” பசியை நோயாக உருவகஞ் செய்தார் எனவரும் சிவஞான பாடியம் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. 6. வியஞ்சகமுள்வழித் தெளிவும் அஃதுஇல் வழி மயக்கமும் என்ற இரண்டினுள், தெளிவினை மருந்திற்றெளிந்து என்றாற்போல, மயக்கத்தை நோயாகக் கூறாமையின் ஏகதேசவுருவகமாயிற்று. 1. பசிநோய் தீர்க்கும் மருந்து - உணவு; பசியை நோயென்றலும், அது தீர்க்கும் உணவை மருந்தென்றலும் சான்றோர் வழக்கு, “ஆருயிர் மருத்துவி, துன்னிய என்னோய் துடைப்பாய்” (மணி. 17. 1-56. என்றும் , உணவை, “ஊனுடை மாக்கட் குயிர்மருந்து” (மணி. 19, 15.) என்றும் வருவன காண்க. 2. மயக்கமது என்பதில் அதுவென்பது பகுதிப்பொருள் விகுதி. அது வென்பது வேறுபொருள் தாராது பகுதியாகிய மயக்கமென்றதையே குறித்து நிற்பதுபற்றி இவ்வாறு கூறினார். 3. சத்தாகாய் என்பதற்குச் சத்தியுடையாயல்லை என்று பொருள் கொண்டமையின், சத்து என்றது சத்தியையுடையதென்னும் பொருள்படுதல் பெறப்படும். அங்ஙனமாவதற்கு விளக்கம் கூறலுற்று, “சத்தியுடைய பொருள் சத்தம்; அஃது ஈண்டு அம்முக்கெட்டுச் சத்து எனக் குற்றுகரவீறாய் நின்றது என்கின்றார். அம்மீறு, ஈறுகெட்டுக் குற்றுகரமாய் நிற்குமென்றற்கு, நாகம் அம்முக்கெட்டு நாகு என நின்று நாகணையான் என்றும், பெற்றம் என்பது பெற்றென நின்று, பெற்றொன்றுயர்த்த பெருமான் என்றும், பேதம், பேது செய்து என்றும், வாதம் வாது என்றும் வருதல் காண்க என்றும் காட்டுகின்றார். நாகம், பெற்றம் என்பன தமிழ்ச்சொல்; பேதம், வாதம் என்பன வடசொல். இருமொழியினும் இவ்வியல்புஉண்டென்றற்கு இத்துணையும் காட்டல் வேண்டிற்று. 4. ஞானசம் 80. 9. 5. ஞானசம். 312. 11. 6. சீவக. 1920. 7. ஞானசம். 366. 2. 8. அசத்துமலை யென்பதை அசித்துமலை யெனக் கொண்டால், நீ சத்தாகா தொழிவதே யன்றி, அந்தச் சித்தாந்தன்மையும் உடையை யாகாய் என்பது பொருளாம். சத்தாகாதொழிவதேயன்றி யென்பது இசையெச்சமாம். இசையெச்சமாவது பொருள் விளக்கம் குறித்துப் பெய்து கூறப்படும் ஏற்புடைய சொற்கூட்டம். அச்சித்து என்பது அசித்து என வந்ததாம். 1. சத்தாகாய் - சத்துமல்லை. சத்துமலையென்பது அருவல்லையென்றும் அசத்துமலை யென்பது உருவன்றென்றும் கொண்டு, சத்தாகாய் அசத்துமலை என்பவற்றிற்கு, அருவுருவமன்றாகும் (சிவ. போ. சூ. 8 உதா.) என்றதே மீளவும் கூறப்பட்டதாகப் பொருள் கூறுவாரும் உண்டு. இதனையே, “மேல் அருவுருவ மன்றாகும் என்றதன் பொருள்படக் கொண்டுரைப்பாருமுளர்” என்று கூறுகின்றார். 2. பெயர்த்துணர் நீ யென்றது அறிவுடைமைபற்றி வந்தது;அசத்து அறிந்து துய்யாமை யென்றது அறிவின்மை பற்றி வந்தது. 3. அவையாதல், அருவும் உருவுமாகிய பொருள் தருவனவாதல். 4. இவ்வெண்பாவின் பொருளை, அருணந்தி சிவனார், “சுத்தமெய்ஞ்ஞான மேனிச் சோதிபால் அசத்தஞ் ஞானம், ஒத்துறா குற்றமெல்லாம் உற்றிடும் உயிரின் கண்ணே, சத்துள போதே வேறாஞ் சதசத்தும் அசத்துமெல்லாம், வைத்திடும் அநாதி யாக வாரிநீர் லவணம் போலும்” (சிவ. சித். சூ. 7:3) என்பர். 5. அணைதலாம் என்று பாடங்கொண்டு, பாச ஞானம் பசு ஞானத்தைப் பொருந்தித் தோன்றுதலையுடைத்தாம் என்பர் பாண்டிப்பெருமாள். 6. மயக்கம துற்றும் மருந்திற் றெளிந்தும் என்ற விடத்துக் குறிக்கப்பட்ட மயக்கத்தை ஈண்டு எடுத்தோதுகின்றார்; உயிர்க்குள்ளதாகும் மயக்கம் சிவத்துக்கும் இல்லையாயின், இரண்டும் தம்முள் இயைவது கூடாதாகையால், உயிரோடு இயையும் இயைபுடைய சிவத்துக்கும் இருக்கலாமன்றோ என்பது “உண்டு போலும்” எனக் குறிக்கப்படும் ஐயம். 7. அது- உயிர்க்கு உள்ளதாகிய மயக்கம். 1. மேற்கூறிப் போந்த மயக்கமாவது “மயக்கமதுற்று மருந்திற் றெளிந்தும்” என்ற மயக்கம். 2. அசத்தாதல் விளையாது என்றவிடத்து ஆதல் நிலையுதலும், விளையாமை இல்லாமையும் குறித்து நிற்கின்றன. 3. சிவமும் சீவனும் சித்தாந்தன்மையால் ஒரு பெற்றிய எனப்படுதலால் “ஒரு பெற்றித்தாய அறிவெனப்படும் சிவம்” என்றார்; “சிவன் சீவன் என்றிரண்டும் சித்தொன்றாம்” (சிவ. சித்தி. 11. 11). என்றார் பிறரும். 4. இக்கருத்தே, “முனைத்திடாது அசத்துச் சத்தின் முன் இருள் இரவி முன்போல்” (சிவ. சித்தி. 7:1) என்று வருதல் காண்க. 5. மெஞ்ஞானம் தன்னில் அசத்தாதல் இல்லாமைக்குக் காரணம் காட்டுதற்குக் கதிர்முன் இருள்போல என உவமை யளவையைப் பெய்துரைக்கின்றார். 6. சிவன் உளதாய அன்றே உயிர்களும் உளவாம் என்பது; “என்று நீ அன்று நான்” எனத் தாயுமானாரும் கூறுவர். 7. அவ்வுயிர்களை மயக்கமாகிய அஞ்ஞானம் பற்றி நிற்பது. 8. இந்த வெண்பாவுக்குப் பாண்டிப் பெருமாள், “அஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் தன்னில் விளையாது - பாசஞானமாகிய அது சத்தாகிய சிவனுடைய ஞானத்தைப் பொருந்தித் தோன்றாது, அஃது எத்தாலெனில்; அசத்தாதல் - அது பொய்யுமாய்ச் சடமுமாகையால்; உள்ளம் அணைதலாம் - அந்தப் பாசஞானம் பசுஞானத்தைப் பொருந்தித் தோன்றுதலையுடைத்தாம்; மெய்ஞ்ஞானம் தானே உள அன்றே - சிவனுடைய சுத்த ஞானம் என்று உளது என்னில் அநாதியிலேயுளது; உளம் உளவாய்த் தான் - பசுஞானம் என்று உளது என்னில் அதுவும் அப்படி அநாதியேயுளதாம், அஃது என்போல வென்னில்; தண்கடல் நீர் உப்புப் போல்தான் - குளிர்ந்த கடலும் நீரும் உப்பும்போல; என்றது, கடல் என்றுண்டு அன்றே நீருண்டு, நீர் என்றுண்டு அன்றே உப்புண்டு: அவைபோலப் பதிஞானமும் பாசஞானமும் அநாதியிலேயுள்ளன எ-று. கடல் பதி, நீர் பசு, உப்பு பாசம். உப்பானது நீரிலே பொருந்தி நிற்பதொழிந்து கடலிற் பொருந்தாதானாற்போல அநாதியிலே ஒரு காலத்துண்டாயிருக்கப் பாசஞானம் பசுஞானத்தைப் பொருந்திநிற்கும் என்பதும், பதிஞானத்தைப் பொருந்தாதென்பதும் தோன்றியவாறறிக. சிவன் என்றுளன் அன்றே ஆன்மாவுண்டு; ஆன்மா என்று உண்டு அன்றே பாசமுண்டாயினும், பாசம் ஆன்மாவுடனே கூடி நிற்ப தொழிந்து கர்த்தாவுடனே கூடி நில்லாதென்னும் துணி பொருட் பக்கத்துக்குக் கடலும் நீரும் உப்பும் சபக்கமாயின வாறு காண்க” என்று உரைக்கின்றார். 1. அசத்தாதல் மெய்ஞ்ஞானந்தன்னில் விளையாது உள்ளம் அணைதல் தண்கடலில் உளதாகாது நீரிடத்துளதாகும் உப்புப்போலும் என இயையும். ஆதலால் விளையா தென்னும் எதிர்மறை வினையெச்சம் அணைதல் என்னும் தொழிற்பெயரோடு முடிந்தது; தொழிற் பெயரின் தொழிலொடு முடிதலை ஒற்றுமைபற்றி இவ்வாறு கூறினார். 2. தானேயென்பது மெய்ஞ்ஞானமாகிய சிவத்தைத் தனிப்பட நிறுத்திக் காட்டி அஃது என்றுளது அன்று என்னும் பொருண்மை விளங்க நிற்றல்பற்றிக் “கட்டுரைக்கண் வந்தது” என்கின்றார். “பதினோரெழுத்தும், தோற்றந்தாமே வினையொடு வருமே” (தொல். 10) என்றவிடத்து, தாமேயென்பது தோற்றத்தைச் சிறப்பித்துக் காட்டும் நயந்தோன்றச் சேனாவரையர், “தாமேயென்பது கட்டுரைச் சுவைபட நின்றது” என்பது காண்க. கட்டுரைத்தல், கட்டுரையென வந்தது. 3. திருக்குறள்: 61. அறிவறிந்த மக்கள் என்றவிடத்து, அறிந்த என்பது அறிதற்குரிய என வந்ததுபோல ஈண்டு, ஏய் என்பதற்கு ஏய்தற் குரிமையுடைய எனப் பொருள் கொள்ள நின்றது என்பார் ஏயுளமென்பது “அறிவறிந்த மக்கட்பேறு போல நின்றது” என்றார். 4.மலம் உயிர்கட்கு அனாதிபந்தமாம் உரிமை இந்நூல் நான்காம் சூத்திரத்து இரண்டாம் அதிகரணத்திறுதியிற் கூறப்படுகிறது. 5. முப்பொருள்களாகிய கடல், நீர், உப்பு என்றவை வியாபக வியாப்பியங்களாய் நிற்பன; உப்புக்கு நீர் வியாபகம்; உப்பு வியாப்பியம்; இவ்வாறே நீருக்குக் கடல் வியாபகம், நீர் வியாப்பியம். 1. இரண்டென்றது, சிவமாகிய சத்தும், பாசமாகிய அசத்து மாகும். நீருக்குக் கடலோடும் உப்போடும் இயைபுண்டாதல்போல உயிர்க்குச் சத்தோடும் அசத்தோடும் இயைபுண்டென்பது தெளிவிக்கப்பட்டது. 2. பிரமேயம், பிரமாதா, பிரமாணம், பிரமிதி என்ற நான்கும் பிரமாண நெறிக்கு இன்றியமையாதன என அளவை நூல்கள் கூறுகின்றன. பிரமேயம் - அளவையால் அளந்துகொள்ளப்படுவது; பிரமாதா - அளந்துகொள்பவன்; பிரமாணம் - அளத்தல்; பிரமிதி - இதனால் உண்டாகும் அறிவு. 3.ஐயந்திரிபுகளில்லாத உயிரறிவாகிய சிற்சத்தியைப் பிரமாணமெனப் பௌட்கரமும், என்று கூறுகிறது. 4.பௌட்கரம். பிரமாண. 8. 5. ஆன்ம சிற்சத்தியாகிய பிரமாணத்துக்குக் கண் முதலிய கருவிகள் துணையாதலால் (வியஞ்சகங்களாதலால்) அவையும் பிரமாணமாக உபசரித்துக் கூறப்படும். (பௌட். vii. 14) என்பதனால், “வியஞ்சகங்களாதலான், அது பற்றி அவையும் பிரமாணமென்று உபசரித்துக் கூறப்படும்” என்றார். 1. பௌட்கரம் பிரமாணபடலம். 2. இச்சூத்திரத்திற் காட்டப்பட்ட வெண்பாக்கள் ஐந்தனையும் தொகுத்து, “இந்த ஐந்து வெண்பாவானும் சிவன் சர்வஞ்ஞனாகையாலே ஒரு காலத்திலே அசத்தை அசத்தென்றும், பின்பு சத்தைச் சத்தென்றும் மயங்கி அறிதலில்லை; ஆகையாலே சிவனுடைய ஞானம் ஒரு படித்தாய் இருக்குமென்பதூஉம், கானலை நீரென்றும் பின்பு கானலென்றும் மயங்கி அறிந்தொழிந்து அறிவு ஒரு படித்தாயே இருந்தாற்போல அசத்தைச் சத்தென்றும், பின்பு சத்தை அசத்தென்றும் ஒருவன் மயங்கி அறிந்தொழிந்து அதுவும் ஒரு வழிப்பட்டிருக்கும் என்பதூஉம், அப்படி மருட்டி அறிவித்ததே பாசஞான மென்பதூஉம், தெருட்டி அறிவித்ததே சிவஞான மென்பதூஉம் மருட்ட மருண்டும் தெருட்டத் தெருண்டும் நிற்கின்றதே பசுஞான மென்பதூஉம் கூறி மூன்று முதலையும் தரிசிப்பித்தவாறு காண்க” என்று பாண்டிப் பெருமாள் கூறுகின்றார். 1. இச்சூத்திரத்திற்குப் பொருள் அருணந்தி சிவனார் “மன்னவன்றன் மகன் வேடரிடத்தே தங்கி வளர்ந்தவனை யறியாது மயங்கி நிற்ப, பின்னவனு மென்மகனீ யென்றவரிற் பிரித்துப் பெருமையுடன் தானாக்கிப் பேணுமாபோல், துன்னியவைம் புலவேடர் சுழலிற்பட்டுத் துணைவனையு மறியாது துயருறுந்தொல் லுயிரை, மன்னுமருட் குருவாகி வந்தவரி னீக்கி, மலமகற்றித் தானாக்கி மலரடிக்கீழ் வைப்பன்” (சிவ. சித்தி. 8:1) என்று கூறுவர். 2. அரன்கழல் பெறுமே யென்று பாடங்கொண்டு, “அரன்கழல் செலுமே யென்று பாடமாயின் திரோதம் நீங்கி ஞானமாய்ச் செல்லும் என்க” என்று பாண்டிப்பெருமாள் கூறுவர். 3. இச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின், ஆன்மாக்கள் ஞானத்தைப் பெற்றுணரும் முறைமை கூறுகின்ற தென்றே பாண்டிப் பெருமாளும் உரைக்கின்றார். 4. இருதிறன் அறிவுளது (சூ. 7) என்றதற்கு இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருள்பற்றி இருதிறனையும் அறியும் அறிவென்றும், மூன்றாம் வேற்றுமைத் தொகைப் பொருள்பற்றி இருதிறனால் விளங்கிய அறிவென்றும், ஏழாம் வேற்றுமைத் தொகைப் பொருள் பற்றி, இருதிறனிலுமுள்ள அறிவென்றும் பொருள் கொண்டு உரைத்ததற் கேற்ப, ஈண்டும் அசத்தான் விளங்கியென மூன்றாம் வேற்றுமைப் பொருளும், அசத்தின்பால் உளதாயென ஏழாம் வேற்றுமைப் பொருளும், அசத்தினை அறிந்தென இரண்டாம் வேற்றுமைப் பொருளும் கூறுகின்றார். 1. சத்தினையும் அசத்தினையும் அறிந்து நிற்கும் உரிமை ஆன்மாவுக்கு உண்டென்பது உணர்ந்தவழி, அவ்வுணர்வால் எய்தக் கூடிய பயனும், அப்பயனைச் சாதித்துக் கொள்ளுதற்குரிய சாதனமும், அச்சாதனம் வரும் வழியும் இச்சூத்திரத்தாற் கூறப்படுகின்றன. 2. அது வருவாய் - அச்சாதனமாவது வருதற்குரிய வழி. 3. பயனைச் சாதித்துக் கோடற்குரிய உரிமையினை ஏழாஞ் சூத்திரத்தில் இருதிறன் அறிவுளது என்றதனால் கூறி, இச்சூத்திரத்தில், பயனும், அதனைச் சாதித்துக் கொள்ளும் சாதனமும், சாதனம் வரும் வழியும் கூறுதலின், “இதனானே சூத்திர இயைபும் இனிது விளங்கும்” என்றார். 4. இதுகாறும் அறிவுக்கறிவாய் உண்ணின் றுணர்த்தி வந்த முதல்வன் புறத்தே மக்களுடம் புடனே குருவாய் எழுந்தருளுதற்குக் காரணம், அருளப்படும் ஆன்மாவின் நல்வினையாதலால், தவத்தினில் என ஆசிரியர் கூறியருளினாராக, “புண்ணிய விசேடத்தால்” என உரைகாரர் கூறுகின்றார். அறிவுக்கறிவால் உண்ணின்றுணர்த்துதற்குக் காரணம், அவற்கு ஆன்மாக்களின்பால் உள்ள அருள் என்பர். “அறிவினுள் அருளால் மன்னி” (சிவ. சித். சுபக். 1) எனச் சான்றோர் கூறுதல் காண்க. 5. ஐம்புலங்களையும் வேடரென உருவகம் செய்தமையின், அவற்றிடையே வளர்ந்தயரும் ஆன்மாவை “மன்னவ குமரன்” என்றார். “மன்னவன்றன்மகன் வேடரிடத்தே தங்கி வளர்ந்து அவனையறியாது மயங்கி நிற்ப” (சிவ.சித்தி. 8.1) என அருணந்தி சிவனாரும் கூறுதல் காண்க. 1. இதற்குப் பாண்டிப் பெருமாள் உரை வருமாறு: ‘ஆன்மாவே! செவிமெய் கண் வாய் மூக்கு என்னும் வேடருடனே கூடி வளர்ந்து உன்னுடைய வுண்மையை மறந்தாய்’ என்று தனக்குப் பிராணனாகி உண்ணின்று உபகரித்த கர்த்தாவே குருவாய் வந்து முன்னர் சனனங்களிலே சாலோக சாமீப சாரூப்பியமாகிய பதங்களையுடைய ராகப் பத்தி ஞான வைராக்கியங்களாலே கூடி இருப்பதாயுள்ள சரியை கிரியா யோகங்களைச் சாத்திர முறைமைகளிலே நிகழ்த்தி, அது நிமித்தமாக மகத்தாகிய ஞானத்தைப் பெறுதற்கு நல்ல சார்பிலே வந்தவர்களுக்கு அறிவிக்க, முன்பு நின்ற மருட்சியை விட்டு எக்காலத்தும் நீக்கமில்லாமையையுடைய கர்த்தாவுடைய திருவருளைப்பெறும்” என்பது. 2. மேலைச் சூத்திரத்தில் ஆன்மா என்றது; ஆன்மா - உயிர். 3. புலன், தனக்கிடமாகிய பொறிகளையுணர்த்தி நிற்றலின் ஆகுபெயர் என்றார். இது தானியாகுபெயர்; அஃதாவது இடத்து நிகழ் பொருள் இடத்துக் காதல். 4. அயர்வுக்குக் காரணம் வளர்ந்தது; புகழ்க்குக் காரணம் ஈதலாவதுபோல்; “இரப்பார்க்கொன் றீவார்மேல் நிற்கும் புகழ்” (குறள்.) என்பது காண்க. 5. தம்முதல் என்றவிடத்துத் தம்மென்னும் பன்மை, உயிர்ப்பன்மை குறித்து நின்றது. வளர்ந்தனை யென்ற ஒருமைவினை நீயென்னும் தோன்றா எழுவாய்க்கு முடிபு. இது பற்றியே வேறு முடிபு என்றார். 6. அந்நியமின்மையாவது ஆன்மாவுக்கும் முதல்வனுக்கு முள்ள பிரிக்க முடியாது நிற்கும் சம்பந்தம்; அஃது அத்துவித சம்பந்தம் எனப்படும். ஐம்புலத்தொடர்பு விட்டவழி, முதல்வன் திருவடியைச் சேர்தற்கு ஏதுவாகிய சம்பந்தம். ஆணவத்தோடு அத்துவித சம்பந்த முற்றிருக்கும் உயிர், ஆணவத்தடை விட்டவழி முதல்வனோடு அத்துவித சம்பந்தம் உறுவது இயல்பு; “ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத், தாணூவினோ டத்துவிதம் சாருநா ளெந்நாளோ” (எந். 28) என்றும், “அத்துவித மென்ற அந்நியச் சொற் கண்டுணர்ந்து, சுத்த சிவத்தைத் தொடருநா ளெந்நாளோ” (எந். 32) என்றும் தாயுமானார் கூறியருளுதல் காண்க. 7. அரன் என்றது அரனாகிய அந்த முதல்வன் என முதலையே சுட்டி நிற்றலின் “சுட்டுப்பெயர் பட நின்றது” என்றார். 1. பசுக்களின் பாசங்களை அரித்தலால் முதல்வனுக்கு அரன் என்பது காரணப்பெயர் என்பதாம். இவ்வாறே கண்ட நாராயணரும் மிருகேந்திர விருத்தியில் கூறுகின்றார். 2. சித்தெனப்படும் சாதியொருமை. “சிவன் சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றாம்” (சிவ. சித்தி. 11. 11) என்று சான்றோர் கூறுதல் காண்க. 3. ஐம்புலவேடரின் வளர்ந் தயர்ந்தனை யென இறந்த காலத்தாற் கூறுதலால், வளர்ந்தயர்தல் முன்பே ஆன்மாவுக்குளதாதல் பெறப்பட்டது. வளர்ந்தயர்ந்த செய்தியை மீண்டும் எடுத்தோதுவதுபற்றி அனுவாதமாயிற்று; முற்பட நிகழ்ந்ததனைப் பின்னரும் எடுத்தோதுவது அனுவாதம். 1.சாதகர், சாதனங்கொண்டு பயனைச் சாதித்துக் கொள்வோர்; சாதிக்கும் ஆற்றலாகிய அதிகாரமுள்ள ஆன்மாக்கள். 2. சைவசித்தாந்த நெறிக்கட் கூறப்படும் சாதனமும் வருவாயும் கூறாது தத்தம் சமயத்துக் கேற்ப வேறுபடக் கூறுவோரும் உளர்; அவர்கட்கு ஞானமாகிய சாதனம் தவத்தால் வரும் என்று கூறுகின்றார். ஞானம் சாதனம்; அது வரும் வாய் தவம் என அறிக. 3. ஸ்ரீ சு. தேசிகர் கூறும் பொருள்: ஈண்டு - இந்நான்கதிகரணங்களுள் வைத்து இம்முதலதிகரணத்து; இவ்வான்மாக்களுக்கு - மேற்கூறிப் போந்த இயல்புடைய ஆன்மாக்களுக்கு; முற்செய் தவத்தான் - படி முறையானன்றி இவ்வொரு பிறவியிற் செய்த தவத்தான் அமையாது முற்பிறவிகளிலே செய்து வந்த தவமாகிய சரியை கிரியாயோக விசேடத்தால்; ஞானம் - குரவனுணர்த்தியவாறு சிவஞானம் கண்ணாகக் கொண்டு அறிவதாகிய சாதன அறிவானது; நிகழும் என்றது - ஐயந்திரிபின்றி விளங்கும் எ-று. 4. மேற்கூறிப் போந்த இயல்பாவது சத்தினையும் அசத்தினையும் அறியும் ஆன்மாவின் இயல்பு. 5. படிமுறை - சோபானமுறை; பல பிறவிகளிலும் படிப்படியாகச் செய்து போதரும் முறை. 1. தவங்களை வருவாயாகவும் ஞானத்தைச் சாதனமாகவும் கூறுதலால் தவங்களே யமையும், ஞானம் வேண்டாவெனப் பிறர் மறுப்பாராயினர். தவங்களாவன சரியை, கிரியை, யோகம் என்பனவாகும். 2. ஸ்ரீ சு. தேசிகர் உரை: மேல் - முற்பிறவிகளில்; சரியை கிரியா யோகங்களைச் செய்துழி - சரியை கிரியா யோகங்களாகிய தவங்களைச் செய்து முற்றுப் பெற்றவிடத்து அத்தவங்கள் தாம்; நன்னெறியாகிய - வீடுபேறு எய்துதற்குச் சன்மார்க்கமாகிய; ஞானத்தை - மேற்கூறிய ஞானத்தை; காட்டியல்லது - பயப்பித்தன்றி; மோஷத்தைக் கொடாவாகலான் - முத்தியைக் கொடுப் பனவல்லவாகலான் ஈண்டு ஆன்மாக் களுக்கு முற் செய்தவத்தான் ஞானம் நிகழுமென மேற்கொண்டது எ-று. 3. “குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி” (தொல். சொல். கிளவி56) என்பது பற்றித் தவமெனப் பொதுப்படக் கூறியதனை இதன்கண் தெரிய விளக்குதல் வேண்டி, சரியை கிரியா யோகங்கள் என்றார். கிளந்துரைத்தல் - விளங்க எடுத்துரைத்தல். 4. கிரியை யோகங்கள் என வரவேண்டிய உம்மைத்தொகை கிரியா யோகங்களென வந்தது வடநூன் முடிபென்றார். கிரியையும் யோகமும் என விரிதலின், கிரியா யோகங்கள் என்பது உம்மைத்தொகையாயிற்று. 5. கிரியா என்றாற்போலச் சரியா எனவரும் வடசொல் சரியையெனத் தமிழ்க்குரிய நெறியின்கண் வந்தது; கலா என்பது கலையென்றும் கிரியா வென்பது கிரியை யென்றும் இவ்வாறே சரியா வென்பது சரியையென்றும் தமிழின்கண் வந்து வழங்கும். 1. உபாயம், உண்மை யென்ற இருவகையுள், உண்மைச் சரியை கிரியா யோகங்களை ஈண்டுக் கூறுகின்றார். உபாயச் சரியை கிரியா யோகங்கள் முத்தியை நோக்காது உலகியற்பொருளை நோக்கிநிற்கும். 2.உபலக்கணமாவது இனமாய பலவற்றுள் ஒன்றைக்கூறி ஏனையவும் உடன் கூறிக் கொள்ளுமாறு நிற்பது; இறைவன் தாளை வணங்காத் தலை பயனில்லை யென்றவழி, பாடாத வாயும், புகழ்கேளாச் செவியும், தொழாத கையும், வலஞ் செய்யாத காலும் பயனில்லையெனக் கொள்ளுதல் போல்வது; சரியை முதலிய வற்றோடு தீக்கைவகையும் சேர்ந்து நிற்றலின், உபலக்கணத்தால் “தீக்கைபெற்றுழியும்” என்பது வருவித்தார். 3. “(4,48) என்று பௌட்கரம் கூறுதலால் தீக்கை ஞானத்துக் கேதுவாவதன்றி நேரே முத்திக் கேது வாகாமை அறியப்படுகிறது; சிவஞான பாடியத்தும் “பவுட்கரத்தில் ஆசிரியத் தன்மையினதிகாரமும் மல நீக்கமும் சிவ விளக்கமும் ஞானத்தாற் பெறற்பாலனவாகான், ஞானபாதத்தையே எமக்குத் தெரித்தருளுக என முனிவர் வேண்டிக் கோடலானும், அவை வேறு பொருள்படுதற்கு ஏலாமையானும், மதங்கம் முதலியவற்றினும் இவ்வாறே கூறுதலானும் தீக்கையென்னும் சொற்குப் பொருள் மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது என்று ஆகமங்கள் கூறுதலானும், தீக்கையாவது சிவாகமங்களிற் கூறும் நித்திய முதலியவற்றின் அதிகாரமும் ஆகமக் கேள்வியி னதிகாரமும் என்னும் இரண்டனுள் ஓரதிகாரத்தை முற்றுவிக்க வல்லதாகிய பரமசிவனுடைய வியாபார சத்தியாமென்பது தீக்கைக்கெல்லாம் பொது விலக்கண மாகலானும், பிறவிக் குருடனுக்குப் படலத்தை நீக்கிய துணையானே பொருள்களைக் காட்டினாலன்றிக் காண்டல் கூடாமையானும்..... மறுக்க” என்று சிவஞான முனிவர் கூறுமாறு காண்க. 4. “பெருநெறிய பிரமாபுர மேவிய பெம்மான்” (1. 11) என்று ஞானசம்பந்தர் கூறுவது ஈண்டு நினைவு கூரத்தக்கது. 1. எக்காலமும் சரியை கிரியா யோகமாகிய தவங்களைச் செய்யுமவர்கள் தாங்கள் செய்த தவத்துக் கீடாகிய சாலோக சாமீப சாரூபமாகிய உண்மை பொருந்தி, அந்த முத்திப்பதங்களினுடைய பற்றுதலையும் நீக்குவாராக; தாம் தாம் செய்த தவங் களினுடைய சார்புகளிலே சன்னத்தையுடையராகி வந்து தோன்றி, முன்பு தவஞ்செய்து சாலோக சாமீப சாரூபமாகிய பிறவியைச் செய்து பற்றுதலை நீக்குவராக: வேதாகமங்களைக் கற்றுணர்ந்தோருடைய துணிவு சிவஞானத்தைப் பொருந்துதலைச் சொல்லும்; அதனைத் தரிசித்து” என்பர் பாண்டிப் பெருமாள். “இது சாத்திரதிட்டியால் வந்ததென அறிக” என்றும் அவர் கூறுகின்றார். 2. தவம் என்றதற்குச் சரியை கிரியை யோகங்கள் என்று பொருள் கூறப்பட்டமையின், ஈண்டும் தவம் என்றதற்குச் சரியை முதலியன பொருளாகக் கூறப்பட்டன. 3. சார்ந்து - சார்புடையோரிடத்தே வந்து தோன்றி என்பது பாண்டிப் பெருமாள் விருத்தி. 4. சரியை செய்தார்க்குச் சாலோகமும், கிரியை செய்தார்க்குச் சாமீபமும், யோகம் செய்தார்க்குச் சாரூபமும் பயக்கும் என்பதுபற்றிச் “சாலோகாதி பதங்களை ஒரு தலையாக நண்ணி” யென்றுரைத்தார். 5. வினைத்தொடர்பினை நுகர்ந்தன்றிக் கழித்தல் கூடாது என்பதுபற்றி “மீளநிலத்தின் கட் பிறந்து அனுபவித்து நீக்கிக்கோடற்பொருட்டு” எனவுரைத்தார். 1. நற்சார்பு - உயர்ந்தகுலம். 2. தத்துவஞானம் - ஈண்டு உண்மை ஞானமாகிய சிவஞானத்தின் மேல் நின்றது. 3. “உணர்வுசூழ் கடந்ததோருணர்வே” (திருமுறை ix “ஒளிவளர்”) என்று சான்றோர் கூறியருளியது ஈண்டு நினைவு கூரத்தக்கது. 4. “எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை, வீயாது பின்சென்றடும்” என்பது திருக்குறள். (207). 5. உண்ண வந்தான் என்பது உண்டற்பொருட்டு வந்தானென நிற்பது போல ஆகவென்பது ஆதற்பொருட்டென்னும் பொருள் தந்து நின்றது. 6. “பணியுமாம் என்றும் பெருமை” (குறள். 978.) என்புழிப்போல, ஆம் என்பது அசைநிலை. 7. “மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்கு, ஈட்டிய புண்ணிய நாதராகி யின்பம் இனிது நுகர்ந்தரனருளால் இந்தப் பார்மேல், நாட்டிய நற்குலத்தினில் வந்தவதரித்துக் குருவால், ஞான நிட்டையடைந் தடைவர் நாதன்தாளே” என்று அருணந்தி சிவனார் (சிவ. சித்தி. சூ. 8.24) கூறுவர். 8. இழிகுலத்தோர் - இழிகுலத்தில் வந்து உதித்தோர். சார்பு என்பதற்கு அருணந்தி சிவனார் நற்குலம் எனப்பொருள் கொண்டமையின், இவரும் உயர்குலம் என்று கூறுகின்றார். சார்பு வேறு குலம் வேறாதலின், நற்சார்பில் வந்துதித்தலாவது, தத்துவ ஞானப்பயிற்சியினையுடைய பெற்றோரிடையே தோன்றி, அவ்வியல் பினையுடைய சான்றோரிடையே வளர்ந்து சிறத்தல் எனக்கொள்க. ஞானம் ஒரு குலத்தாரது உரிமைப்பொருள் எனக் கருதுதல் இறைவன் திருவருள் நெறிக்கு மாறாய்ச் சிவத்துரோகமுமாவது காண்க. 1. பட்டசாரியனைக் குமரிலபட்ட ரென்பர். இவர் தென்னாட்டில் ஏழாம் நூற்றாண்டில் தோன்றியவரென்றும், பவபூதி யென்பார் இவருடைய மாணவரென்றும் கூறுவர். வைதிக நெறியை நாட்டில் நிலை நாட்டுதற்பொருட்டுப் புத்தசமயச் சான்றோரொருவரை இவர் கொன்றாரென்றும், வேதவேள்விகட்கு முதன்மை வற்புறுத்துதற்கு கடவுளே கிடையாது எனச் சாதித்தாரென்றும் கூறுவர். இவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தோர் இராமகிருட்டின பட்டர், சோமநாத பட்டர், சங்கர பட்டர், தினகர பட்டர், கமலாகரபட்டர் என வழங்கப்பட்டமையின், இவர் பட்டாசாரியர் எனப்பட்டார். “இது யாகாதி கன்மங்களைச் செய்து சுவர்க்காதி போகங்களை அனுபவித்தல் நன்று என்பார்க்கு முத்தியல்லது நன்றன்று எனபதூஉம், முத்தி பெறுவது என்று? என்போர்க்குக் கன்ம சமத்துவத்திலே யென்பதூஉம் கூறுகின்றது” எனப் பாண்டிப் பெருமாள் விருத்தி உரைக்கின்றது. 2. வைதிக நூல்களில் கூறப்பட்டுவரும் வேள்வி வகைகளை “இசைத்து வருவினை” யென்றார். இவற்றை வினை யென்றதனாலே. வினை போல அசத்தாகிய பயன்களை விளைவித்து ஞானத்தைப் பெறாவாறு தடுத்தும் நிற்குமென்பது துணியப்படும்; கொல்லாமை முதலிய என்பது தோன்றவே நல்லொழுக்கங்களாகிய சரியை முதலியன போலாது, வேத வேள்விகள் ஞானத்துக் கேதுவாகா என்பது தோன்றவே, திருவள்ளுவனார், “அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று (குறள். 259) என்றார் என அறிக. 3. உலகத்தில் மேலாய் வருகின்ற எக்கியாதிகன்மங்களாலுண்டாகும் சுவர்க்காதி இன்பம், பசித்தபொழுது உண்டு சிறிது பொழுது தாபம் தீர்ந்திருந்து பின்னையும் பசியையுடை யனாகின்றவனை யொக்கும், என்றது சுவர்க்காதி இன்பத்தையனுபவித்தாலும் மீண்டும் இகலோகத்தே பிறக்கவேண்டும் என்று கூறியவாறாம்- பாண்டி. விருத்தி. 1. நல்வினை தீவினை யிரண்டும் பொன் விலங்கும் இரும்பு விலங்கும் போலும் என்றும், அவற்றால் அசத்து விளைதலால் அவை தீர்ந்தாலன்றி ஞானம் விளையாதென்றும் நூல்கள் கூறுதலின், இசைத்த இருவினை யென்றார்; “வினையால் அசத்து விளைதலால் ஞானம், வினைதீரி னன்றி விளையா” (சிவ. போ. 12. அ. தி. 4.) என ஆசிரியர் கூறுவது காண்க. இறப்பில் தவத்தால் இசைத்த இருவினை யொப்பில் என இயைத்து, “இப்படிச் சுகதுக்கங்களை அனுபவிக்கிற தொழிந்து கன்மம் ஒரு காலத்தில் தொலையாதோ என்கிறாயாகில், போன சனனங்களிலே செய்த தபோ பலங்களினாலே புண்ணிய பாவங்கள் இரண்டும் ஒரு காலத்தே வந்து புசிக்கைக்குச் சமமொத்த எல்லையிலே” என்று பாண்டிப் பெருமாள் உரை கூறுவர். 2. சரியை முதலிய தவங்களை இறப்பில் தவம் என்றதனால், இரு வினைகள் இறப்புடைய வென்றும், இறத்தலாவது அனுபவத்தால் கெடுதல் என்றும் அறிக. சரியை முதலிய தவம் மேன்மேல் முறுகி வளருமென்பதை, “எல்லை யில்லாப் புண்ணியம் தோன்றி மேன்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்” (கண்ணப். 42.) என்பதனா லறிக. 3. ஞானத்தை வந்து மருவுவனாம் - மருட்சி நீங்கி முன்புண்டான ஞானத்தைப் பொருந்துவன்” - பாண்டி. விருத்தி. 4. இம்மையிற் புகழும் மறுமையில் இந்திரபதம் முதலிய துறக்க வின்பமும் பெறுவது குறித்தே வைதிக வேள்விகள் செய்யப்படுவன; அப்பயன்கள் நிலையில்லாதன வென்பதாம். 5. புத்திரப்பேறு வேண்டினோர் அது குறித்தும், அரசியற்புகழ் வேண்டினோர் அது குறித்தும் வேள்வி செய்க என வைதிக நூல்கள் கூறுதலால், “விதித்த நூல்களே சான்று” என்றார். 1. இம்மை மறுமைப் பயன்கள் தம்மின் மேலாய சிவானந்தப் பேற்றுக்குரிய ஞானத்தைப் பெறவொட்டாது தம்மையே நோக்குமாறு மயக்கும் குற்றமுடைய வாதலால் “தீவினைபோல” என்று கூறுகின்றார். தீவினை தன்னைச் செய்தார்க்குச் செய்தபொழுது தாம் கருதியது முடித்தே மெனத்தருக்கும் பொய்யின்பம் பயந்து துன்பக் காரணமாய் அறிவை மறைக்குமென வறிக. 2. ஒப்பில் என்பது ஒத்தால் என்னும் பொருள்பட நிற்றலின் வினையெச்சமாயிற்று. ஒத்தலென்னும் வினைக்குரிய முதலும், மருவுதலென்னும் வினைக்குரிய முதலும் வேறு வேறாதலால், “பிறவினை முதல்வினை கொண்டது” என்றார். 3. தவத்தானே என வரற்குரிய தேற்றேகாரம் தவத்தான் எனத் தொக்கதுபற்றி, “விகாரத்தால் தொக்கது” என்றார். 4. தன்மை முன்னிலையிடங்கட்குரிய வருதல்வினை, இருவினையாகிய படர்க்கைக்கண் வந்தமையின் வழுவமைதியாயிற்று; “தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும், தன்மை முன்னிலை யாயீரிடத்த” (கிளவி. 29) என்று ஆசிரியர் தொல்காப்பியர் ஓதுவது காண்க. 5. பசிப்பான் என்பது பசிப்பவனுக்கு உண்டியால் வரும் இன்பத்துக் காயினமையின் ஆகு பெயராயிற்று. 6. நூல்களின் தொழிலாகிய இசைத்தலென்பது “இசைத்து வருவினை” என நூலால் உணர்த்தப்படும் வினையொடு முடிந்த தென்பதாம். 7. மிசைத்த வென்ற பாடம் மிசையென்னும் இடைச் சொல்லடியாகப் பிறத்த பெயரெச்சம் எனவுரைக்க. 8. அது வினையாராய்ச்சியாய் முடிதலின் ஈண்டைக்குப் பயன்படாதாயிற்று. இருவகை வினைகளும் ஒத்தலென்பது சித்தாந்தத்திற் கேற்புடைத்தேயன்றி, இருவினைகளுள் மிக்கனவொத்தல் என்பது ஏற்புடைத்தன்று. 1. ஈண்டுக் கூறப்படும் கருத்துக்கள் உவமவாற்றலாற் கொள்ளப்படுவன. இவ்வாறு கோடலும் முறை யென்பதை, “எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்” (குறள். 445) என்பதற்குப் பரிமேலழகர் கூறு மாற்றாலறிக. 2. சரியை செய்தார்க்குச் சாலோகமும், கிரியை செய்தார்க்குச் சாமீபமும, யோகஞ் செய்தார்க்குச் சாரூபமுமாகிய முத்திகள் கிடைக்கும் என்றும், இம்மூன்றும் பதமுத்தி யென்றும் கூறுப; இவை பரமுத்தியாகிய ஞானப்பயனை நோக்க இடைப்பட்டன வாதலால், பதமுத்தியாகிய அவாந்தரப்பயன் என்றார். அவாந்தரப்பயன் - இடையே யுளதாகும் பயன். 3. சரியை கிரியா யோகங்களால் ஞானம் நிகழுமென்றா ராதலால், ‘மேற்கூறிய வாற்றால் நிகழும் ஞானம்’ என்றார். 4. சாங்கிய நூல்களும் நியாய நூல்களும் ஞானாசிரியனுடைய ஞானவுரை சன்மார்க்கத்துக்கு இன்றியமையாது என்பதை வற்புறுத்துகின்றன. ஆயினும், இறைவனாகிய ஞானாசிரியன் தான் உண்மை ஞானத்தை உள்ளவாறு உணர்த்துவன் என்பதை வற்புறுத்துவதில்லை. 1. உயிர்கட்குத் தத்துவ ஞானத்தின்கண் அவாவுண்டாயிற் றெனின், அவற்றின்பால் கிரியை முதலிய தவத்தின் பயனாய் மலபரிபாகமும் சத்திநி பாதமும் நிகழ்ந்துள்ளன என்பது உணரப்படும். 2. சரியை முதலிய தவம் முற்றும் வரை முதல்வன் உயிர்க்குயிராய் அவற்றின் உள்ளேயிருந்து உணர்த்துவன் என்பது சைவநூல் துணிபு. ஞானசம்பந்தர் முதலிய ஞானாசிரியன்மார்களும், “உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம், நிரைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்” (132. 4.) என்பது முதலியவற்றால் கூறுவது காண்க. 3. திருவருட்பயன். 42. 4. சங்கற்ப. சைவ. நிரா. 26- 7. “மாயா வுருவன் மாயா வுருவினை யேயான்” எனவும் பாடவேறுபாடுண்டு. 5. அதிட்டித்து நின்றுணர்த்துவதும் ஆவேசித்து நின்றுணர்த்துவது மென உணர்த்தல் வகை இரண்டெனவும், குருவை யதிட்டித்து நின்றுணர்த்துவது அன்று என மறுத்து ஆவேசித்து நின்றுணர்த்துவது ஈண்டுக் கூறப்படுகிறதெனவும், இதனால் உரைக்கின்றார். அதிட்டான பக்கம் பொதுவென்றும் ஆவேச பக்கம் சிறப்பெனவும் கூறுப. 6. விறகில் தீயினன் பாலிற் படு நெய்போல், மறை நின்றுளன் மாமணிச் சோதியான்” திருநா. 204: 10. 1. தூய ஆன்மாவாகிய குருமூர்த்தியின் ஞானமே தனக்கு உருவாகக் கொண்டு ஒன்றாய் நிற்பதை, “சுத்தான்ம சைதன்னியமே தனக்குச் சொரூபமாகக் கொண்டு” என்றார். 2. பாலில் நெய்போல் பொதுவாக எல்லாவுயிர்களிலும் மறைந்து நிற்கும் அதிட்டான பக்கம் போலாது, குருமூர்த்தியின் தூய ஞானமே வடிவாக அதன்கட் சிறப்புற ஆவேசித்து நிற்பதைத் தயிரில் நெய்போல விளங்கி நிற்றலான் என்றார். 3. சமய வேறுபாடு கற்பித்து மக்களைப் பல்வகையாகப் பிரித்து ஒருவரோடொருவர் கலாய்த்துக்கொள்ளுமாறு செய்யும் ஏனைச் சமய குரவரும் உண்மை ஞானம் கற்பிக்கும் சிவகுருவாய் இழுக்குறுதலால் சிறப்புடைய ஆவேச பக்கமே கொள்ளத்தக்க தென்பதாம். 4. இன்றியும் - இல்லையாகவும். 5. இனி, பாண்டிப் பெருமாள் “இது (இவ்வெண்பா) விஞ்ஞானகலர் பிரளயாகலர், சகலர்க்குக் கர்த்தா உணர்த்து முறையைக் கூறுகின்றது” எனக் கருத்துரைத்து, “ஆணவமலம் ஒன்றுமுடைய விஞ்ஞான கலர்க்கு மலபாசம் போக்கத்தக்க எல்லையுள் உண்ணின்றுணர்த்துகின்ற கர்த்தா உணர்த்தத் தானே உண்மை ஞானம் விளையும்; சுபாவமென ஞானமுண்டானவருக்கும் ஒருவன் உண்டாக்கவேண்டுகையில் அவன் குருவென்றதாம்; ஆணவமலமும் கன்மமலமும் உடையராகிய அந்தப் பிரளயா கலருக்கு உண்ணின்று உணர்த்துகின்ற கர்த்தா தானே தெய்வ குருவாய் வந்து முன்னின்று உணர்த்துவன்; ஆணவம் கன்மம் மாயையென்னும் மூன்று மலமுங் கூடி அஞ்ஞானத்தைப் பொருந்திய சகலர்க்கு மானிடமான திருமேனியைத் தரித்துவந்து கீடான முறைமையாலே தீக்கை நடத்திச் சரியை கிரியா யோகங்களிலே நிறுத்திப் பின்னர் உண்மை ஞானத்தை யுணர்த்துவன்” என்று பொருள்கூறி, “சகலர்க்குத் தீக்கை முறைமையிலே யென்றது, நிவிர்த்தி பிரதிட்டை வித்தை சாந்தி சாந்தியதீதம் என்னும் கலைகளிலே, மந்திரம் பதம் வன்னம் புவனம் தத்துவங்களை யடைத்துக் கலா சோதனை பண்ணிச் சுத்தனாக்கி மேலும் கன்மம் ஏறாதபடி உபதேசிப்பன் என்பதாம்” என விளக்கமும் கூறியுள்ளார். 1. தன்மையில் நின்றவாறாவது உயிர்க்குயிராய் ஒன்றுபட்டு நின்று உண்மை ஞானம் விளக்கிநிற்றல். 2. படைத்தல் காத்தல் அழித்தலென்ற முத்தொழிலும் நடாத்துதற்கு முதல்வன் நான்கு தோளும் மூன்று கண்ணும் கறைக்கழுத்து முடைய வடிவுகொண்டு விளங்குவன் என்று ஆகமங்கள் கூறுதலால், இவ்வடிவினையே குருவடிவாகக் காட்டிப் பிரளயாகலர்க்கு உபதேசம் செய்வனென்பது கருத்து. 3. அவிச்சை யென்றது ஆணவமன்று; அம்மலத்தோடு மாயா மலத்தின் சேர்க்கையால் உளதாகிய மயக்கம். “உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே” (சிவ. சித்தி. 2. 52) என்று சான்றோர் கூறுதல் காண்க. 4. முன்னுதல் கருதுதலாகலின், முன் என்றதற்கு அறிவாயாக என உரைத்தார். 5. முன்னென்பதற்கு முன்னைப் பொருளாகிய இறைவன் என்று கொண்டு, உணர்த்தும் என்னும் வினைகட்கு எழுவாயாக வுரைப்பினும் பொருந்தும் என்பதாம் 1. “முத்திதரும், நன்னெறி விஞ்ஞானகலர் நாடு மலமொன்றினையும், அந்நிலையே யுண்ணின் றறுத்தருளிப் - பின்னன்பு, மேவா விளங்கும் பிரளயாகலருக்குத், தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் - பூவலயம், தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல. முன்னின்று மும்மலந் தீர்த் தாட்கொள்கை - அன்னவனுக்காதி குணம்” ( போற்றி. 60-63.) என்பது காண்க. 2. “தவஞ்செய்தா ரென்றுந் தவலோகஞ் சார்ந்து, பவஞ்செய்து பற்றறுப்பாராக” (சிவ. போ. சூ. 8. அதி. 1.) என்றவிடத்துக் குறித்த “தவஞ்செய்தார்” ஈண்டு அச்சகலர் எனச் சுட்டப்படுகின்றார். 3. மேற்கோள்: “இவ்வான்மாக்களுக்குத் தமது முதல் தானே குருவுமாய் உணர்த்தும்” என்பது. 4. முன்னைய இரண்டுமாவன, விஞ்ஞானகலருக்கு உணர்த்தக் கொள்ளும் ஞான வடிவும், பிரளயாகலருக் குணர்த்தும் தேவ வடிவும் முதல்வன் தானே சங்கற்பித்துக் கொள்ளும் சுதந்தர வடிவங்களாதலால், அவை நிராதாரம் என்றும், சகலர்க்கு மக்கள் வடிவில் நின்றுணர்த்துதலின், அவ்வடிவம் ஆதாரமாதலின், சாதாரமென்றும் வழங்கும். ச+ ஆதாரம் = சாதாரம்; அஃதாவது ஆதாரமாக ஒன்றனோடு கூடியது. 5. இவ்வெண்பாவால், “உத்தமரான விஞ்ஞானகலரும் மத்திமரான பிரளயாகலரும் அதமரான சகலரும் இப்படி யென்னும் முறைமை கூறி அவர்களுக்கு உண்ணின்று உணர்த்துகின்ற கர்த்தாவே அவரவர் செய்திகள் அறிந்து குருவாவன் என்பது சாத்திர திட்டி” என்பர் பாண்டிப்பெருமாள். 6. உளங்கள், நெறியின் அறிவிக்கவன்றி அறியா; குறைவில் சகன்சூழ் கொள்பவர்க்குக் குறைகள் முன்பின் செறியுமாம்; குறையுடைய சொல் கொள்ளார் கொள்பவத்தின் வீடாம் எனச் சொற்களைப் பிரித்து முறைசெய்து கொள்க. 7. முன்பின் வினைகள் என்று பாண்டிப்பெருமாள் பாடம் கொள்வர். 1. இது வேதாகமங்கள் ஒழிந்த நூல்கள் நூலல்லவென்கின்றது எனப் பாண்டிப் பெருமாள் கருத்துரைக்கின்றார். 2. படிவழி - இதனைச் சோபான முiற யென்றும் கூறுப. 3. சகன் - சகத்தையுடைய கடவுளாகிய முதல்வன். சூழ் - சூழ்ந்து (நன்கு நினைந்து) உரைக்கப்படுவது சூழ் என நின்றது. 4. பிரளாயாகலர் சகலரென்ற இருவர்க்கும் அவரின் வேறாய் நின்று உணர்த்துதலால், கொள்பவர்க்கு என்றதற்குப் பிரளயாகலர் சகலர் ஆகிய இருவரையும் கொண்டார். 5. முன்னிலை - பிரளயாகலர் நிலை; பின்னிலை, சகலர் நிலை; முன்பின் வினைகள் செறியுமாம் என இயைத்து முன்பு செய்த வினைகள் பின் செறிந்து வாராநிற்கும்; என்றது, சஞ்சித கன்மம் தீஷையிலே போம்; பிராரத்தம் புசிக்கவேணும் என்றதாம்- பாண்டி. விருத்தி. 6. கொள்ளார் - கொள்ளுதலை வேண்டாத விஞ்ஞானா கலர்; நெறியில் குறையுடைய சொல் கொள்ளார் - பதிபசுபாசங்களைக் கூறுமிடத்துத் திருந்தக் கூறுதலின்றிக் குறையுடையவாகிய சாத்திரங்களைச் சாத்திரமென்று கொள்ளார்; என்றது குறைவற்ற நூல் வேதாகமங்களாதலால் அவையொழிந்த நூல்களை நூலென்று கொள்ளார்கள் என்றதாம்; எனவே, வேதாகமங்களின் வழிவந்த நூல்களே நூல் என்றதாம்- பாண்டி விருத்தி. 7. வீடு - வீடு பயக்கும் உணர்வு. குறைவில் சகன் சூழ் கொள்பவர்க்குக் கொள்பவத்தின் வீடாம் என இயைத்து, சர்வஞ்ஞத்துவத்தினும் சர்வ கர்த்திருத் துவத்தினும் சர்வானுக் கிரகத்தினும் குறைவில்லாத சகநாதன் அருளிச் செய்யப்பட்ட வேதாகமங்களைச் சாத்திரமென்று கொண்டு உணர்வார்க்கு எடுத்த தேகத்திலே முத்திப்பேறாம் என்பர் பாண்டிப்பெருமாள். 1. திருக்குறள், ஆள்வினை. 2. 2. வீடுபேற்றுக்கு உணர்வு காரணமாதலின், உணர்வாகிய காரணத்தை வீடெனக் காரியமாகக் கூறியதும், நன்ஞானமாகிய சூழ்ச்சி பிறத்தற்கு உபதேசம் காரணமாகலின், உபதேசமாகிய காரணத்தைச் சூழ் எனக் காரியமாகக் கூறியதும் உபசார வழக்கெனப் படும். ஆதலால் காரண காரியமாக உபசரிக்கப்பட்டன வென்றார். 3. அவை - அவ்வாறு காரண காரியமாக உபசரிக்கப்பட்டவை. 4. திருக்குறள். 25 5. செறியுமாம் என்புழி நின்ற ஆம் என்பது வீடு ஆம் என இயைந்து நிற்றலின், “ஆம் வீடெனவும் இயையும்” என்றார். 6. பிறர் உரைத்த உரையாவது: உளங்கள் அறிவிக்க அன்றி அறியா - ஆன்மாக்கள் அறிவித்தாலன்றி அறியாவாகலான்; நெறியின் முன்பின் குறைகள் செறியுமாம் - அவற்றிற்கு அறிவிக்கவே முந்து நூல்கள் எழுந்தன, ஏனையவெல்லாம் அவ்வச் சமயநெறியின் முன்னொடு பின் இணங்காது மாறுபடும் குறைகள் செறிவனவாம் ஆதலால்; குறையுடைய சொல் கொள்ளார் - அக்குறைபாடுடைய நூல்களைக் கொள்ளாது; குறைவில் சகன் சூழ் கொள்பவர்க்கு - குறைபாடில்லாத முதல்வனது சித்தாந்த நூல்களைக் கொள்பவர்க்கு; கொள்பவத்தின் வீடு ஆம் - கொண்டபிறவியில் தானே வீடுபேறாம் எ-று.”- சிவஞானபாடியம். 1. சிவ. போ. சூ. 7. அதி. 3. காண்க. 2. புனருத்தி - கூறியது கூறல். 3. திருவிசைப்பா. கருவூர். திருவிடை. 5. அறிவிக்க அன்றி அறியா உளங்கள் எனவே, தனக்கென ஓர் அறிவில்லை; குரு அறிவிக்கும் முறைமையொழிந்து அறியார்கள் என்பதனால், குருவும் சற்குருவாக வேணும், நூலும் வேதாகமமாக வேணும் என்றதாம் என்றும், இதுவும் சாத்திர திருட்டியென்றும் பாண்டிப் பெருமாள் கூறுகின்றார். 4. ஏந்திழையார் கண்ணீரும் என்று பாண்டிப் பெருமாள் விருத்தி பாடம் கொண்டுளது. 5. சகலராவார் யாவரென்னில் பிரமா முதல் எறும்பு ஈறாக ஆதலால், திவ்விய சாதியென்றும் மானுட சாதியென்றும் விலங்கு சாதி யென்றும் மூன்று விதமாவர் சகலர்; திவ்விய சாதிக்கு மந்தச் சத்தி நிபாதம்; மானுடசாதிக்கு மந்ததரமான சத்திநிபாதம்; விலங்கு சாதிக்கு மந்ததர விருத்தியான சத்திநிபாதம்; இப்படி வேதாகமங்களிலே கூறும் முறைமையறிக என்பது பாண்டி. விருத்தி. 6. இதற்குச் சிவஞான பாடியம், “தவத்தால் நன்மையுடைய மாணாக்கனே” என்று கூறுகிறது; பாண்டிப் பெருமான் இதனை மகடூஉ முன்னிலையாகக் கொள்கின்றார். 1. அருவாகி நின்றானை என்றும் உருவாகித் தோன்றானேல் என்றும் கூறிய பொருட்கேற்ப, அருவாகிய அன்பினையென்றும், உருவாகிய முலைப்பாலென்றும் உவமத்தையும் விரித்துரைத்தார். 2. “ஏந்திய ஆபரணத்தையுடையாரிடத்துக் காண்டற்கு இல்லாத முலைப்பாலும் கண்ணீரும் சிநேகத்தானும் சோகத்தானும் உண்டாகித் தோன்றினாற் போலவும்” என்பது பாண்டி. விருத்தி. 3. நீர் நிழல் போல் என்பதற்கு நீரின்கண்ணே பார்த்த நிழல் தோன்றினாற்போலவும் என உரை கூறி, “போல் என்பதனை இரண்டிடத்தும் கூட்டுக; இந்த மூன்றுவமை (முலைப்பால், கண்ணீர், நீர்நிழல்) விஞ்ஞானகலர் பிரளயாகலர் சகலர் மூவர்க்கும் உருவாய் நின்று உபகரிக்கும் முறைமை கூறியதாம் என்பர் பாண்டிப் பெருமாள். இனி இதற்கு அவர் கூறும் விளக்கம் வருமாறு: “குருதி பாலாய்த் தோன்றினாற்போல, விஞ்ஞானகலர்க்குப் பிராணனாய் நின்று உபகரித்த தற்சொரூபம் தானே பின்பும் தீவிரதரமாகிய சத்திநி பாதத்தாலே போதித்துப் போத சொரூபனாகி நிற்பன் என்பதாம்; கண்ணீர் போலப் பிரளயாகலர்க்கு அவர்களிடத்தே கலந்து நின்ற சிவன் தீவிரதரமாகிய சத்திநிபாதத்தாலே தெய்வ குருவாய்ப் போதித்து நிற்பன் என்பதாம்; நீர் நிழல் போல் உயிர்க்குயிராய் நிற்கின்ற சிவன், சகலர்க்கு மந்தம் மந்ததரம் என்னும் சத்திநிபாதத்தாலே அவர்களைப் போலத் திருமேனி கொண்டுவருவன் என்பதாம். 4. “காண்டற் கில்லையாய் அரூப சொரூபியாய் நிற்கின்ற சிவன் இப்படி மூன்று விதமான திருமேனி கொண்டு வாரானாகில் அவனை யாவர்தாம் அறிவார்” - பாண்டி. விருத்தி. 5. அருவாகி நின்ற முதல்வன் குருவுருவாய்த் தோன்றி ஞான முணர்த்துதற்கு ஏந்திழை முலைப்பாலையும் கண்ணீரையும் எடுத்துக்காட்டி யுவமித்தலின், இஃது எடுத்துக் காட்டுவமை; அது போலென்பது தொக்கிநிற்றல் இதற்கு அறிகுறி. 1. திருக்களிறு. 54. 2. திருக்குறள் அன்புடைமை 1 3. இல்லா வென்னும் குறிப்பு முற்று, இல்லாவாய் என எச்சவினை யாதலின், முற்றெச்சக் குறிப்பு என்றார். 4. இங்கே கூறப்படும் கருத்து சீதரர் முதலிய வைசேடிகர் நூல்களிலும் காணப்படுகிறது. 5. ஆன்ம சைதன்னியம் - ஆன்மா அறிவுடையதாம் தன்மை. 6. மயங்கி உணரா என இயையும். மயங்குதல் காரணமாக உணரா என நிற்றலின், இது காரண காரியப் பொருட்டு; சிவஞானபாடிமுயம், “மயங்கி உணரா என்றது, ஓதியுணர்ந்தான் என்பதுபோலக் காரண காரியப் பொருட்டாய் நின்றது” என்று கூறுதல் காண்க. 1. சிவசங்கிராந்த வாதசைவர் இந்திரியங்களே விடயங்களை அறிவிக்கும் என்பர்; இதனை, “செயலுறு பூட்டைப், பலவகை யுறுப்பும் இலகிய தொழில்போல், ஐம்பொறி புலன்கள் இன்புறு மன்றே” (சங்கற். 13. 5-7.) என வருதலாலறிக. 2. சு. தேசிகர் உரை: இவ்வான்மாக்கள் -உணர்த்த வுணரும் இயல்புடைய உயிர்கள்; ஐயுணர்வுகளால் - ஐம்பொறிகளால்; மயங்கி - மயக்கமுற்று; தம்மை உணரா என்றது - தமது சொரூபத்தை அறியா என்க. 3. உணர்வு, உணர்வுக் கேதுவாகிய பொறிகளுக்கு ஆயினமையின், ஆகுபெய ராயிற்று. இனி, சிவஞானபாடியம். இதனை, “ஐவகை யுணர்விற் கேதுவாகிய பொறிகளை ஐயுணர்வென் றுபசரித்தார்” என்றும், “ஐம்பொறி யென்றது உபலக்கணம்” என்றும் கூறும். 1. இது “கூறவே, ஒன்றறிந்தது ஒன்றறியாதாகிப் பளிங்கிலிட்ட வன்னம் போல் ஆன்மாவின் இயல்பை மயக்கி விடயக்காட்சிக்கே ஏதுவாகிய கருவியான் ஆன்மாவின் இயல்பு விளங்குமாறு இல்லையென, அவற்றது இயல்பைத் தெரித்துக்காட்டி ஆன்மசொரூபத்தை உணர்த்துதற்குக் குரவன் ஒருதலையான் வேண்டுமென மேலையதி கரணத்தை வலியுறுத்தவாறு. இங்ஙனம் உரையாதார்க்கு இனி என்பதனால் உணர்த்தப்படும் மேலை அதிகரணத்தோடு உளதாகிய இயைபு கூடாமை யறிக” என்று சிவஞானபாடியம் கூறுவது ஈண்டு அறியத்தக்கது. 2. இது ஞானதீக்கையினுடைய பெருமையும் பெத்த முத்திகளினுடைய நிலைகளும் கூறுகின்றதெனப் பாண்டிப் பெருமாள் விருத்தி கருத்துரைக்கின்றது; மேலும், “முன்னர் ஐந்து வெண்பாவானும் தன்முதல் குருவாய்த் தவத்தின் உணர்த்தினமை கூறி ஐம்புலன்களினாலும் மயங்கித் தம்மை யுணராமை நின்றது கூறுகிறதென்றும் அவ்விருத்தியே கூறுகின்றது. 3. நினைந்து என்றது இந்திரியங்களுடனே கூடி அது வதுவாய் நின்று சீவிக்கும் முறைமை அறிதலாம் - பாண்டி. விருத்தி. 1. வேறு என்பதற்கு இந்திரியங்களுக்கு வேறாய் என்றுமாம் - பாண்டி விருத்தி. 2. “அகண்டமும் தைவமே” “தைவமென்றுந்தைவமே” (சிவ. போ. சூ. 4அ.) எனப் பிறாண்டும் வருமாறு காண்க. சேதனத்தை அடிமையாகவும், அசேதனத்தை உடைமை யாகவும் கூறும் முறைமைபற்றி, ஈண்டுச் சிவசத்துக்கு அடிமையாம் என்றார். 3. இவ்வெண்பாவிற் கூறப்படும் கருத்தையே அருணந்தி சிவனார், “பன்னிறங்கள வைகாட்டும் படிகம்போ லுள்ளம், பல புலன்கள் நிறங்காட்டும் பரிசு பார்த்திட், டிந்நிறங்க ளென்னிறமன் றென்று தன்றன், னெழில் நிறங்கண் டருளினா லிந்நிறத்தின் வேறாய், பொய்ந்நிறவைம் புலனிறங்கள் பொய்யென மெய்கண்டான், பொருந்திடுவன் சிவத்தினொடும்” (சிவ. சித்தி. 8. 37) என்பர். 4. “பளிங்கு பல நிறங்களையும் காட்டும் முறைமைபோல ஆன்மாவும் இந்திரியங் களினுடைய சொரூபங்களைக் காட்டும் முறைமையை விசாரித்து; (என்றது, பளிங்கு பல நிறங்களையும் காட்டித் தன் இந்திரியங்களினுடைய நிறமல்ல, வேறாயிருந்த தென்று விசாரிக்க என்றதாம்) அப்படி, பல குணபேதமாய்ப் பொய்யாகின்ற இந்திரியங்களை நம்முடைய சொரூபத்துக்கு இவை வேறென்று கருதிப் பொய்யைப் பொய்யென்று மெய்யைத் தரிசித்தவன், உண்மையாகிய சிவனுக்கு அடிமையாவான்; இந்திரியங்களின் நீங்கித் திருவடி யடைவன்” என்று பாண்டிப் பெருமாள் உரை கூறுகின்றது, 5. “எக்காலத்தும் நிலைபெறுவதாகிய தன்னியல்பே மெய்யெனவும், இடையே விளங்கி மறைவதாகிய பொதுவியல்பே பொய்யெனவும் கூறப்படுவன” (சிவ. போ. சூ, 7 அதி.1.) 6. கேவலத்தில் ஆன்மா மலவிருளில் மூழ்கி அறிவு செயலற்றிருத்தலின், தன்னுண்மை அறியுமாறு இல்லையென்றார்; “அறிவிலன் அமூர்த்தன் நித்தன்... செயல்களில்லான்... கேவலத்தில் ஆன்மா,” (சிவ. சித்தி. 4. 38) என வருதல் காண்க. 1. ஈசன தருளாற் பாசத் தொகுதி, செறிவுறு செம்பிற் கறையுறு களிம்பு, குளிகை தாக்கவொளிபெற் றாங்கு, நித்த சுத்த முத்தராக, வைத்தன ருலகின் மறைவல்லோரே” (சங்கற். 9.) என்பது பேதவாத சைவரது கொள்கை. நித்த சுத்த முத்தரென்றது, அடிமையாகாது பெறுவானும் பேறுமாய் இருப்பரென்றவாறு. 2. சு. தே. உரை: இவ் ஆன்மா - ஐயுணர்வுகளான் மயங்கித் தன்னை யுணராது எனப்பட்ட ஆன்மா; தன்னை - சித்தாய் வியாபகமாகிய தன் இயல்பை; இந்திரியத்தின் - சடமாய் ஏகதேசமாகிய இந்திரியத்தின்; வேறு ஆவான் காணவே - வேறாக உணரும் வியாபக வுணர்விற்கு இந்திரியத்தான் ஆகக்கடவதொன்று இன்மையின் சற்குரவனால் அவ்வாறு உணரவே; தமது முதல் சீபாதத்தை - பிறிது காரணம் வேண்டாது தனக்கு ஆதாரமாகிய முதல்வனது திருவடியினை; அணையும் என்றது - தலைப்படும் என்க. 3. சகலத்தில் இந்திரியங்களோடு ஒன்றாய் இயைந்து நிற்கும் ஆன்மா, அவற்றின் வேறாகிய நிலையில் கேவலத்துக்கும் சகலத்துக்கும் உரியதாதலால், கேவலத்தை அணைதலும் உண்மையின் என்று குறிக்கின்றார். 1. “பன்னிறம் காட்டும்” என்னும் வெண்பாவின் விளக்க வுரையில், “ஆன்மா இந்திரியங் களுடனே கூடி நிற்றல் சிவனுடனே கூடி நிற்றல் ஒழிந்து தனித்து நில்லாது என்பதாம்” எனக் கருத்துரைத்து, “ஊசலாடினவன் ஊசற்கயிறு அற்றால் ஊசலுக்கும் தனக்கும் பூமியே ஆதாரமானாற் போல இந்திரியங்கள் கெட்டால் சிவனே ஆதாரம் என அறிக; எனவே, இந்திரியங்களின் நீங்கிக் கேவல சகலமாகிய மயக்க விகற்பங்களில் தேசம், காலம், இடம், குணம், குறி முதலாயின கருதாமல் நிட்டையடைக என்றதாம்” எனப் பாண்டிப்பெருமாள் கூறுவது காண்க. இங்கே, இந்திரியங்களினுடைய சொரூபத்துக்கு ஆன்ம சொரூபம் வேறு என்னும் துணிபொருட் பக்கமும், அஃது எத்தாலென்னில் அவை பொய்யாதலால் என்னும் ஏதுவும், அஃது என்போல வென்னில் பஞ்சவன்னமும் படிகமும் போல என்னும் சபக்கமும் காட்டியவாறறிக - பாண்டி. விருத்தி. 2. இக்கருத்தை, “பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்து, அறுகயி றூசலானேன் அதிகை வீரட்டனீரே” (27:6) என்று திருநாவுக்கரசர் முன்பே உரைத்தருளுவது நோக்கத்தக்கது. 1. கீழாலவத்தைக்கண் கருவிகளின் நீங்கிக் கேவலத்தைத் தலைப்பட்ட உயிர், மீளவும் மேலாலவத்தையில் நீங்கிய அக்கருவிகளோடே கூடும் என்பது ஐந்தவத்தைத்தே என்பதனால் பெறப்பட்டது; அதனால் “மீட்சியுண்டுபோலும்”என்னும் ஆசங்கை எழுவதாயிற்று. இனி, “தேகேந்திரியங்களை வேறு என்று கண்டவன் மீண்டும் பசுகரணமாய் நில்லான், சிவகரணமாய் நிற்பன் என்பதூஉம், தேகாந்தத்தே திருவடியைப் பெறுகை நிச்சயமென்பதூஉம் கூறுகின்றதெனப் பாண்டிப் பெருமாள் கூறுவர். 2. “வேத சாத்திர மிருதி புராணகலை ஞானம், விரும்ப சபை வைகரியாதித் திறங்கள் மேலாம், நாதமுடிவான வெல்லாம் பாசஞானம்” என்பது சிவஞான சித்தியார். (9:2). 3. “தேம்புனலை நீர்க்கடலும் சென்றுதரல் இன்று”- என்று சீவக சிந்தாமணி (848.) கூறுவது ஓராற்றால் இக்கருத்தைத் தெளிவிப்பது காண்க. “பொய்ந்நிறவைம்புலன் நிறங்கள் பொய்யென மெய்கண்டான், பொருந்திடுவன் சிவத்தினொடும் போதான் பின்னை, முன்நிறைநீர் சிறைமுறிய முடுகியோடி, முந்நீர்சேர்ந் தந்நீராய்ப்பின் நீங்கா முறைபோல்” (சிவ.சித்தி. 8:37) என்று அருணந்தி சிவனார் உரைப்பது காண்க. 4. “அணைகட்ட அந்த அணையிலே கட்டுண்டு நின்ற வெள்ளம் போன்ற ஆன்மா, தன்னைச் சிறை செய்து நின்ற இந்திரியங்களை உணரும் முறைமையானே உணர்ந்து நீங்கிக், கேடிலாத சிவனுடைய திருவடியைக்கூடி மீண்டும் பிறவாது; அஃது என்போல வென்னில், கட்டுண்டு நின்ற அணையை விட்டு அலையையுடைய கடலிலே சென்று அடங்குதலையுடைய ஆறுபோல; கடலிலே சென்று புக்க ஆற்று நீர் மீண்டும் அதன் வழியே ஏறினாலும் அந்த உப்பு நீராயே ஏறினாற்போல இந்திரியங்களுடனே கூடிப் பசுகரணமாய் நில்லாது சிவகரணமாய் நிற்கும் என்பதாம்; பசுகரணம் சிவகரணமாய் நிற்றலாவது அந்த இந்திரியங்களைத் தற்சொரூபமே சொரூபமாக்கி நிற்கும் நிலை; அந்த நிலை கூடாதாயின் பசுகரணம் சிவகரணமாகச் சாக்கிரத்தே அதீதம் வர இருத்தலாம்.” - பாண்டி. விருத்தி. 1. செழும்புனல் என்ற விடத்துச் செழுமை மிகுதியுணர்த்துகிறது; “செழுங்கோல் வாங்கிய மாச்சினை” (நற். 326) என்றாற்போல. 2. அடங்கும் ஆறுபோல் என்றதற்கு அடங்கி மறித்து வாராத ஆற்று நீர்போல என்று உரை கூறியதற்கு இதனால் அமைதி காட்டப்படுவது அறிக. கடல், சிவனுக்குவமை, நிறைவு குறைதலின்றியிருத்தற்கென அறிக - பாண்டிப் பெருமாள். 3. எய்துவாரில்லையாம், கண்ணில்லான் என்பன பாண்டிப்பெருமாள் கொண்ட பாடம். 4. உரு என்றவற்றுள் முன்னைய இரண்டும் பொருட்டன்மையை உணர்த்தின; பின்னையது உறுப்பின் மேற்று. உறுப்பு ஆதாரமாக நிற்றலானும் உறுப்புப் போறலானும் இந்திரியங்களை உறுப்பெனவும், கழலணிதற்கேதுவாகிய வெற்றிப் பாட்டைக் கழலெனவும் உபசரித்தார். சுட்டுச் சிறப்பின்கண் வந்தது. காண், முன்னிலையேவல். பேறே என்னும் ஏகாரம் ஏழனுருபின் பொருளுணர நின்றது; ஒற்று இரட்டியாமை இலேசாற் கொள்க” -சிவஞான பாடியம். 5. “மருவு பசு கரணங்கள் சிவகரணமாகத், துன்னிய சாக்கிரமதனில் துரியாதீதம் தோன்ற முயல்” (சிவ. சித்தி. 8: 34) எனவும், “மாயைமா மாயை மாயா வரும் இருவினையின் வாய்மை, ஆய ஆருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய்நிற்கும்” (சிவப். உண். 20) எனவும் இவ்வாறு ஓதுதலின், ஆண்டுப் பசுகரணம் போலப் பாசஞானமும் சிவஞானமேயாம் என்பது பெறப்படுதலின், “ஆற்றால் அலைகடற்கே பாய்ந்தநீர் அந்நீர்மை, மாற்றி அவ்வாற்றால் மறித்தாற் போல்” (களிறு.11) உலைவில் அரன்பாதத்தை உற்ற உயிர் புலன் வழி மீளினும் அதனாற்போந்த இழுக்கு என்னை என்னும் ஆசங்கையை நீக்கி அதனை வலியுறுத்தற்கு எடுத்துக்காட்டு” இது இவ்வுதாரணவெண்பா என்று சிவஞானபாடியம் கூறுகிறது. இது முன்வெண்பாவிற் கடலிலே ஆற்றுத் தண்ணீர் சென்று கூடினாற் போல ஒன்றாய் விடுமோ என்றவனுக்கு ஆகாதென்பது கூறியதாம்; அஃது எங்ஙனேயென்னில், எங்கும் வியாபித்து நிற்கின்ற ஆதித்த பிரகாசத்தைத் திமிரத்தாற் காணாத கண் திமிரம் நீங்கி அந்தப் பிரகாசத்துடனே கூடினவிடத்து வேறுமல்லவாய் ஒன்றுமல்லவாய் நின்றாற்போலச் சிவனுடைய திருவருளைக் கூடி அத்துவிதமாய் நிற்பன் என்பதாம் - பாண்டி. விருத்தி. 1. சிவ. சித்தி.பர. பாஞ்ச. மறுதலை. 25. எல்லா ரூபங்களும் சிவனே யென்னில் அவனைக் கூடுதற்கு ஒரு முதல் இல்லையாகும் - பாண்டிப் பெருமாள் விருத்தி. 2. இந்த ரூபங்களுக்கு வேறாய் நிற்பனென்னில் ஏகதேசியுமாய்க் கர்த்தாவுமல்லனாவன்; எனவே (முதல்வன்) சர்வ வியாபி யென்றதாம் - பாண்டி. விருத்தி. 3. எவ்வுருவும் கண்போல் அவயவங்கள் காணா - எல்லா ரூபங்களையும் காணும் தன்மையையுடைய கண்ணைப் போல நின்ற அவயவங்கள் காணாது நின்றாற் போலச் சிவன் எல்லாரிடத்தும் ஒக்க நிற்பினும் ஊனக்கண்ணுடையவர்கள் அவனை க் காணமாட்டார்கள்; ஞானக் கண்ணூடயவர்கள் காண்பார்கள் என்பதாம்; அக்கண்ணில்லான் கண் பேறே காண் அக்கழல் - திமிரத்தாலே கண் மறைந்திருந்தவன் அந்தப் படலத்தைக் கீறி நீங்கின பொழுது கண்பெற்ற பேறு போலும் அந்தச் சீபாதம் காட்டக் காணுமாறு; என்றது, திமிரம் நீங்கின கண் காண்கின்ற உண்மையும் காட்டுகின்ற பிரகாசத்தினுடைய உண்மையும் பெற்று நின்றாற் போல ஞானதிருட்டியை ஒன்றும் காணமாட்டாது- பாண்டி விருத்தி. 1. இக்கருத்து, பௌட்கர பாடியத்துப் பும்ஸ்துவ படலத்தும் கௌதமரது நியாய பாடியத்தும் உரைக்கப்படுகிறது. 2. “இனி, ஈண்டுக் கூறுவது பதிப்பொருட்கே யன்றிப் பசுபாசங்களுக்கு ஒரு தன்மை இல்லை எனக் கொண்டு, இவ்வாறாகலின், பசுஞான பாசஞானங்களும் சிவஞானமேயாம் என்பதோ? அன்றி, பசு பாசங்களுக்குப் பதிப்பொருளையன்றித் தமக்கென ஒவ்வொரு தன்மையுளது எனக்கொண்டு, இவ்வாறு ஆயினும், “உப்பளத்து அடுத்த புற்பலாலங்கள்” (சங்கற். சங்கிரா. நிராகரணம்) அவ்வுப்பேயாமாறு போலப் பசுஞான பாசஞானங்களில் சிவஞானம் சங்கிரமமாய்ப் பற்றுதலான் அவையும் சிவஞான மேயாம் என்பதோ? சொல்வாயாக - பசுபாசங்களின் உளவாய தன்மைகளெல்லாம் பதிப்பொருளின் தன்மையே, பிறிது இல்லை எனின், பசுவுக்கு ஒரு தன்மை இல்வழி, பசுக்கள் பாசத்தை விட்டுப் பதியினை அடையுமாறு இல்லையாய், “பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியினை அடைய முத்தி” (சிவசித். பரபக். பாஞ்சராத்திரி. மறுதலை. 25) என்னும் வேதாகம வசனங்களோடு முரணும். இனி, பதிப்பொருளை யின்றி அமையும் தன்மை அவற்றிற்கு வேறு உள எனக் கொள்ளின், அப்பொழுது பசுபாசங்களின் தன்மைகட்குச் சிவனால் ஆகப்படுவது ஒன்று இன்மையின், சிவனுக்கு இறைமை இன்றாய் முடியும்; ஆகலின், அவ்விரண்டும் கூடா. வேறு என்னையோ விடுக்குமாறு? எனின், - ஆன்மாவை யின்றி அமையாவாய் ஆன்மாவால் அதிட்டிக்கப்படும் ஐவகை உறுப்புக்களுள்ளும் மெய், வாய், மூக்கு, செவி யென்னும் நான்கு உறுப்புக்களும் தம்மாட்டுவந்த விடயங்களை இயைந்தறியும் தன்மையனவே யன்றிக், கண்ணுறுப்புப்போலச் சேய்மைக்கண் உளதாகிய விடயத்தையும் வியாபித் தறியும் தன்மை யுடையனவல்ல; கண்ணுறுப்பு அவ்வாறன்றிச் சேய்மைக்கண்ணும் ஒளியாற்சென்று இயைந்து அறியும் தன்மைத்து. அற்றேல், ஒளி மழுங்கிய கண்ணுக்கு ஏனை உறுப்புக்களோடு ஒப்பத் தன் கண் வந்த விடயத்தை மாத்திரமே காண்பதன்றிச் சேய்மைக்கண்ணும் வியாணொளியிழந்தார் கண் பெற்ற விடத்து, அவ்வியல்பிற்றாகிய கண்ணினது வெற்றிப்பாட்டைக் காண்பாயாக என்க; எனவே, அதுபோல, முதல்வனை இன்றியமையாவாய் முதல்வனால் அதிட்டிக்கப்படும் பசுபாச ஞானங்களுள், பாசஞானம் ஏகதேசமாய் விளங்கும் இயல்பிற்றன்றிப் பசுஞானம் போல வியாபகமாய் விளங்கும் இயல்பிற்றன்று. பசுஞானம் அவ்வாறின்றி வியாபகமாய் விளங்கும் இயல்பிற்று. அற்றேல், பசுஞானம் பாசஞானம்போல் ஏகதேசமாயன்றி விளங்கக் கண்டிலமால் எனின், பசுத்துவத்தால் அவ்வான்ம ஞானத்தை இழந்தார் பசுத்துவம் நீங்கி ஆன்ம ஞானத்தைப் பெற்றவழி வியாபகமாய் நிகழும் அதனது வெற்றிப்பாட்டை அறிவாயாக எனப் பொருளினும் உரைத்துக் கொள்ளப்படும்”- சிவஞானபாடியம். 1. ஒட்டு என்னும் அலங்காரம் பிறிது மொழிதல் என்றும் கூறப்படும். “கருதியபொருள் தொகுத்தது புலப்படுதற்கு, ஒத்ததொன்றுரைப்பின் அஃது ஒட்டென மொழிப” (சூ. 51) என்பது தண்டியலங்காரம். இந்த ஒட்டு என்னும் அணிப்பொருளை விளக்கிச் சிவஞான முனிவர் கூறுவது ஈண்டு உணரத்தக்கது. “இஃது என் சொல்லிய வாறோ எனின், ஆன்மா பசுத்துவம் நீங்கிச் சிவத்துவம் பெற்றவழிப் பசுகரணமும் சிவகரணமாய வாற்றால் அவ்வழி பசுஞானத்தோடு ஒப்பப் பாசஞானமும் உப்பளத்து அடுத்த பலாலம் (வைக்கோல் ) போலச் சிவஞானமேயாம் என்பது சிவாகம நூற்றுணிபு; ஆதலின் அவ்வைம்பொறியின் மீளினும் இழுக்கு இன்மையின், மீளாதென மேலை வெண்பாவிற் கூறியது எற்றுக்கு என்னும் சங்கிராந்தவாத சைவரை மறுத்து, முதல்வனே பசுபாசம் என்று அபேதம் கூறுதலும், முதல்வன் வேறு பசுபாசம் வேறு எனப் பேதம் கூறுதலும் ஏலாமையின், முதல்வனுக்கும் பசுபாசங்கட்கும் சரீர சரீரி பாவத்தான் (உடலுயிர்போலும் இயைபினால்) அபேதம் கூறுதல்வேண்டும்; வேண்டவே, சரீரசரீரிபாவத்தின் ஆன்மா ஐம்பொறிகளோடு அபேதமாய் நிற்பினும் அவை தத்தம் தன்மையில் நின்றியைந்தறிதலும் சென்றியைந்தறிதலும் ஆகிய இருவேறு இயல்புடைமையாகிய பேதம், கண்ணொளி மழுங்கிய வழிக் காணப்படா தாயினும் ஒளிபெற்ற வழிக் காணப்படுதலின் அவ்வாறே பசு ஞான பாச ஞானங்களில் சிவஞானம் அபேதமாய் விளங்கினும் அவை தத்தம் இயல்பில் திரியாவாய்ப் பாசஞானத்திற்கு ஏகதேச விளக்கமும் பசுஞானத்திற்கு வியாபக விளக்கமுமாகிய பேதமுடைமை பசுத்துவம் நீங்காத பெத்த நிலைக்கண் அறியப்படாதாயினும், பசுத்துவம் நீங்கிய முத்தியின்கண் அறியப்படுமாகலின், அவ்வியல்பிற்றாகிய ஆன்மஞானம் அவ்வியல்பினவாகிய ஐயுணர்வுகளை மீளப்பற்றுமாறு இல்லை என மேலை வெண்பாவின் பொருளை வலியுறுத்தவாறாம் என்க- சிவஞானபாடியம். 2. இவ்வாறே சிவஞானபாடியத்தினும், “இவ்வாறு உரையாதார்க்குச் சொற்கிடக்கை முறை ஏலாமையும், மேலை வெண்பாவினோடு இயைபின்மையும் உணர்க” என்று கூறுவர். அப்பிறர் இன்னாரென்றும், அவர் கூறியது இதுவென்றும் அறிய முடியவில்லை. 1. அந்தரங்கச் சிவனை என்றும், நீங்கி மலகன்மம் போம் என்றும், நீங்கானின் என்றும் பாடம் கொள்வர் பாண்டிப்பெருமாள். 2. திருக்களிறு. 11. 3. ஞானவுபதேசியாவதற்கு முன்பு கூடியிருந்த மலங்கள் பின்பும் கூடி நிற்குமாயின் பிரயோசனம் என் என்போர்க்கு முன்பு அவை தானாக மருவி நிற்பன்; இப்பொழுது நீங்குகையும் கூடுகையும் உண்டாகையால் பிரயோசன முண்டு என்கின்றது - பாண்டிப்பெருமாள் 4. உயிர்க்குயிராய் நின்று உபகரிக்கின்ற சிவன் நீ இந்த ஐந்து இந்திரியங்களின் அல்ல வேறு என்று உபதேசிப்பன்; அப்படி உபதேசிக்கவும் அந்த ஐந்து இந்திரியங்களினும் நீங்கி அந்த அந்தரங்கச் சிவனைக் கூடுகின்றானில்லை; இந்திரியங்களை வேறு என்றும் யான்அந்தரங்கமென்றும் போதிப்பிக்கவும் சிவனைக் கூடாமலிருக்கைக்குக் காரணம் என் என்பையாகில் பிராரத்த கன்மம் புசித்தறுமளவும் அந்த ஐந்து இந்திரியங்களையும் சடக்கென விட்டு நீங்கான் - பாண்டிப் பெருமாள். 1. அப்பாண்டிப் பெருமாள், நீர்ப்பாசி போல் மலகன்மம் நீங்கிப் போம் என்று கொண்டு, நீரிடத்து உண்டாகிய பாசி கல்லைவிட்டு எறிந்தபொழுது நீங்குமாறுபோல உன்னைவிட்டு நீங்காத சிவனாலே உன்னை விட்டு நீங்கி மலமும் கன்மமும் போம் என்றும், மலகன்மம் சிவனுடைய திருவருளைக் கூடினபொழுது நீங்கும், நீங்கின பொழுது கூடும்; கல்விட் டெறிந்தபொழுது நீங்கியும் நின்றபொழுது கூடியும் நிற்குமாறு போல என்பதாம் என்றும், நீங்கு நினைந்து என்றவிடத்து நீங்கும் எனச் செய்யுமென் முற்றாக்காது நினைந்து நீங்கு என ஏவலாக்கி, இப்படி மறைப்பது விடுவதாய் வருகின்ற முறையை நினைந்து நீங்குவாயாக என்றும் கூறுவர். “ஊருண் கேணி யுண்டுறை தொக்க, பாசி யற்றே பசலை காதலர், தொடுவுழித் தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே” (குறுந். 399. )என ஆசிரியர் பரணர் கூறுவது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. 2. நீங்கி மலகன்மம் என்று பாடங் கொண்டவர் பாண்டிப்பெருமாள்: நீங்கி மலகன்மம் என்று பாடங்கொண்டால், நீங்கி என்பதை “ஒடுங்கி”“வீங்கி” என்பனபோல் பெயராகக் கொண்டு, நீங்கின வாகிய மலகன்மம் எனப்பொருள் கொள்க என்று உரைக்கின்றார். 3. அந்தம் என்றது நான்காம் சத்தி நிபாதத்தை; அதுவும் நால்வகைப் படுமாகலின் அவற்றுள்ளும் மேம்பட்ட சத்தி நிபாதம் உடையாய் என்பார் அந்த தர என்றார்- சிவஞானபாடியம். 4. சிவஞானத்தால் ஆசிரியன் சிவோயம் எனத் தன்னுள்ளே பாவித்துச் சிவத்துவமசி என்று அறிவுறுப்பது சித்தாந்த மகாவாக்கியம்; இதைப் பெற்றுடையவன் இம்மகா வாக்கியப் பொருளை நாடோறும் பயின்று சிவோகம் எனப் பாவித்தொழுகுவன் - இது சிவஞான 5. அந்ததர, சிவனை ஐம்பொறியைவிட்டு அணைவாயாக; சகலன் ஐம்பொறியின் நீங்கான்; நீர்ப்பாசிபோல் நீங்கும் மலகன்மம் வரின் நீங்கானை நினைந்து நீங்குவாயாக என்பது பிறர் கூறும் உரை. 1. திருக்குறள். 60. இவ்வெண்பாவைப் பற்றிக் கூற வந்த பாண்டிப் பெருமாள், “இது தன்னை வினையைத் தலைவனை நினைய என்றதாம்; அஃது எப்படியென்னில் சிவன் கன்மத்துக் கீடாகத் திரோபவித்துப் புசிப்பிக்கிற முறைமையும், கன்மபோகம் வருகின்ற முறைமையும், தான் புசிக்கின்ற முறைமையும் திருவருளாலே பார்க்க, அதில் அழுந்துதலை நீங்கி ஆகாமியம் ஏறாமல் தேகாந்தத்தே வீடு பெறுதல் உடைத்தாம். எ-று. சிவனுடைய திருவருளைக் கூடின பொழுது மலமாயா கன்மம் நீங்கும், திருவருளை நீங்கின பொழுது கூடும் என்னும் பக்கத்துக்கு நீரும் பாசியும்போல் என்னும் சபக்கமும் காட்டியவாறறிக” என்று உரைத்து, “பாசிபடு குட்டத்துக் கல்லினை விட்டெறியப் படும்பொழுது நீங்கி அது விடும்பொழுதில் பரக்கும், ஆசு படு மலமாயை அருங்கன்மம் அனைத்தும் அரனடியை யுணரும்போது அகலும்பின் அணுகும்” (சிவ.சித்தி. 8:39) 2. வேதனைபற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கள் மேற் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமன்றே”(குறள். அவாவறுத்தல்) என்று பரிமேலழகர் உரைப்பது ஈண்டு நினைவு கூரற்பாலது. 3.ஊசல் கயிறற்றால் தாய் தரையேயாம் துணையான் என்ற ஏதுவை வலியுறுத்தற்கு, சிறை செய்ய நின்ற என்ற வெண்பாவே அமைவதாயிருக்க, மேலும் இரண்டு உதாரண வெண்பாக்களைக் கூறியது திருட்டாந்தாபாசம் என்று நியாய நூலார் காட்டும் வழுவாம் என்பதை விலக்கி இம்மூன்றும் ஒரு பொருண்மேல் வந்தன வாகலின் வழுவாகா என அமைதி கூறுகின்றார். 1. இச்சூத்திரத்துக்கு, “ஆன்மா கன்மங்களுக்கு ஈடான போகங்களினுடைய புசிப்பை அனுபவிக்கையில் அதனை ஞானதிருட்டியாலே நீங்கவேணும் என்னும் முறை கூறுகின்றது” எனக் கருத்துரைத்து “இது ஆன்ம சுத்தி பண்ணுதலாம்” என்று குறிக்கின்றார் பாண்டிப் பெருமாள். 2. சிவப். 71. 3. சிவ. போ. சூ. 10. 1. உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் என்றது. விசுவமாகிய வெயிலிலே நின்று அலைந்தவனுக்கு அது நீங்கக் குளிர்ந்த நிழலாயிருப்பன் என்றதாம் - பாண்டி, விருத்தி. 2. “கண்ட பொருளை இரட்டுறவே கருதல் ஐயம் திரியவே, கொண்டல் திரிவாம் பெயர் சாதி குணமே கன்மம் பொருளென ஐந்து, உண்டு அவ்விகற்ப வுணர்வினுக்கும் பொருளின் உண்மை மாத்திரத்தின் விண்டலில்லா அறிவாகும் விகற்ப மில்லாக் காட்சியே” (சிவ. சித்தி. அளவை. 9.) என்பது காண்க. 3. சிவ. சித்தி. 8:39, 1. ஞானா. 59. 2. “ஊனக்கண் - பசுஞானம்; பாசம் - பாசஞானம்; பசுஞானத்தாலும் பாசஞானத்தாலும் அறிதற்கரிதாகிய சிவனை ஞானக்கண்ணாலே தன்னிடத்தே நிற்கின்ற படியை ஆராய்ந்து, ஒருவர் ஊராததாகி விரைந்து செல்லும் கானற்றேரை யொக்கும் பாசம் என்று நீங்கச் சிவன் குளிர்ந்த நிழலாவன்; ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க; என்றது, பாச ஞானத்தாலும் பசுஞானத்தாலும் அறிதற் கரிய சிவனைத் திருவருளாலே கண்டு நிற்பதே நிலையாவது; அந்த நிலை கூடாமல் விசுவம் மேலிட்டதாயின், கானற்றேர் போல விசுவம் பொய்யென்று நீங்க அந்த நிலை ஆம்; அந்த நிலைமையும் கூடாதாயின் ஸ்ரீ பஞ்சாக்கரத்தை உச்சரிக்க என்றதாம்” என்பர் பாண்டிப்பெருமாள். இனி, அருணந்தி சிவனார், “பாச ஞானத்தாலும் பசுஞானத்தாலும பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞானத்தாலே, நேசமொடும் உள்ளத்தே நாடிப் பாத நீழற்கீழ் நில்லாதே நீங்கிப் போதின், ஆசைதரும் உலகமெல்லாம் அலகைத் தேராம் என்று அறிந்து அகல அந்நிலையே ஆகும் பின்னும், ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெல்லாம் ஓட” (சிவ. சித்தி. சூ. 9) என்று உரைக்கின்றார். 3. பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி என்பதற்கு, “அசத்தாயுள்ள வன்ன பேதங்களை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞான சொரூபம் என்று உரற்பாற்று” எனவரும் இரண்டாமதிகரண மேற்கோள் (பக். 280) விளக்கம் தருவதுகண்டு, இவ்வுரைகாரர் ஈண்டு வழங்கும் பொருளுரையைக் காண்பது நன்று. 4. சிவ. சித்தி. சூ. 1. 65. 5. அகம். 268. அகநானூற்று அச்சுப்படிகள், “நன்றுமன் னதுநீ நாடாய் கூறுதி” என்றே பாடங்கொண்டு உள்ளன. 6. நாடி எண்ணும் எனக் கூட்டி வினையெச்ச முடிபாக வைத்துரைப் பினும் அமையும் என்பது சிவஞானபாடியம். 1. உரா; “உராஅ வீர்க்கும் உட்குவரு நீத்தம்” (அகம். 18) எனவருவது காண்க. 2. ஊராத்தேர் என்பது, உராத்தேர் என்று குறுகியதாகக் கொண்டு உரை கூறும் திறம் இதனால் காட்டப்படுகிறது. “உருவில் பேஎய் ஊராத் தேரொடு, நிலம்படு மின்மினி போல” (அகம். 67.) எனச் சான்றோர் வழங்குதல் காண்க. 3. “பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில், என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும், பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக்கு யானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன்”- முத்தொள்ளாயிரம். இதன்கண் தீயேன் என்பது தியேன் எனக் குறுகி நிற்பது ஈண்டுக் காட்டப்படுகிறது. 1. சு. தே. உரை: ஈண்டு - இம்மூன்றதிகரணங்களுள் வைத்து இம் முதலதிகரணத்து; அம்முதலை - பாச ஞான பசு ஞானங்களான் உணரப்படாத முதல்வனை; ஞானக் கண்ணாலே - சிவஞானத்தினாலே; காண்க என்றது- அறிக என்க. 2. சு. தே. உரை: வாக்கு - நாதமுடிவான பாச ஞானமும்; மனம் - பசுஞானமுமாகிய; அதீதம் - அவ்விரண்டன் விருத்திகளைக் கடந்து அதீதமாய் நின்று; கோசரமாய் நிற்றலான் - ஒற்றுமைப்பட்டுணரும் பதிஞான மாத்திரைக்கே விளங்கிக் கோசரிப்பதா கலான் ஈண்டு அம்முதலை ஞானக்கண்ணாலே காண்க என மேற்கொண்டது என்க. 3.சிவ. போ. சூ. vi அதி. 2. மேற்கோள்: ஈண்டு வாக்கு என்றது வாக்காகிய நாதமுடிவான பாசஞானத்தை. மனம் என்றது, அவற்றின் வேறாகிய பசுஞானத்தை. வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற என்றது, அவ்விரண்டன் விருத்திகளைக் கடந்து அதீதமாயும் வேறற நின்றுணரும் அனுபவஞான மாத்திரையின் விளங்கிக் கோசரிப்ப தாயும் நின்ற எ-று. அங்ஙனம் நின்ற பொருள் இது என அளவைகளான் அறிய வாராமைபற்றி அது எனப் பொதுப்பட மகா வாக்கியத்துள் கூறியது என அறிக. தத்துவமசி என்பது மகா வாக்கியம். 1. இது தன்னையறியுமிடத்துச் சிவனுடைய ஞானத்தாலொழிந்து அறிதற்கு அரிதாகையால் சிவனை அறியுமிடத்து வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதவனாதலால் அவனுடைய ஞானத்தாலே தன்னையும் கண்டு தான் சுத்தனாகிய அவனையும் காணவேண்டும் என்பது கூறுதல் இதன் கருத்து எனப் பாண்டிப் பெருமாள் கூறுகின்றார். 2. முன்பு நான் என்று கருதிய எலும்போ நரம்போ சீயோ கோழையோ என்று ஆராய்ந்து பார்த்தவிடத்து அவையிற்றில் யாது என்று என்னை அறிகின்றிலேன், தெளிந்த கூறுபாட்டாலே ஆராய்ந்து; என்றது யாதொன்றினுடைய உண்மையை அறியுமிடத்தும் சிவனுடைய ஞானத்தாலன்றி அறிதல் இல்லை யென்னும் இடம் அறிந்து என்பதாம். எனவே, பசுஞானத்தாலும் பாசஞானத்தாலும் யாதொன்றையும் அறியவொண்ணாது என்பதாயிற்று - பாண்டி. விருத்தி. 3. சிவனுடைய அருளாலே சிவனையும் கண்டு தம்மையும் அறியார்களாகில் எந்தப் பொருளை ஆம்பொருள் இது என்று அறிவார்கள்; எனவே ஆகமப்பொருளும் இதுவென்று அறியார்கள் என்றும் இது சம்பிரதாயத் திட்டியால் அறிவித்தது என்றும் கூறுவர் பாண்டிப் பெருமாள். 4. இவ்வெண்பாவில் குறிக்கப்படும் ஆராய்ச்சியைத் திருவிடைமருதூர்மும்மணிக் கோவையின்கண் பட்டினத்தடிகள் செய்து, “மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர், பரவிய தோலின் பரப்போ தோலிடைப், புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை, ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்து, இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை, முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து, உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ள நின்று, ஊரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை, வைத்த மலத்தின் குவையோ வைத்துக், கட்டிய நரம்பின் கயிறோ உடம்பினுள், பிரியா தொறுக்கும் பிணியோ தெரியாது, இன்னது யான் என்று அறியேன் என்னை, எங்கும் தேடினேன் யாதிலும் காணேண்” என்றார்; இது, தேடி எனையறியேன் என்பதனை விளக்குகிறது. பின்பு, அரன் அருளால் அரனையும் தம்மையும் கண்ட திறம் கூறுவார், “ஞானநாட்டம் பெற்றபின் யானும், நின் பெருந்தன்மையுங் கண்டேன் காண்டலும், என்னையும் கண்டேன் பிறரையும் கண்டேன், நின்னிலை யனைத்தையும் கண்டேன்” என்றார். தமைக்காணார் என்னென அறிவார் என்பது, நின்னைக் காணா மாந்தர் தன்னையுங் காணாத் தன்மையோரே” (திருவிடை. மும். 13) என விளக்கப்படுகிறது. 1. தத்துவம் அகக்கருவி; தாத்துவிகம் - தத்துவ காரியமாகிய புறக் கருவிகள். 2. இவ்வெண்பாவின் கருத்து: “கண்டிடுங்கண் தனைக்காணா கரணங் காணா, கரணங்கள் தமைக்காணா உயிருங்காணா, உண்டியமர் உயிர் தானும் தன்னைக்காணா துயிர்க்குயிராம் ஒருவனையும் காணாதாகும், கண்டசிவன் தனைக்காட்டி உயிருங்காட்டிக் கண்ணாகக் கரணங்கள் காணாமல் நிற்பன், கொண்டரனை உளத்தில் கண்டடி கூடின் பாசம், கூடாது கூடிடினும் குறிப்படியில் நிறுத்தே” (சிவ. சித். 9:5) என்று அருணந்தி சிவனார் கூறுவதனாலும் தெளியப்படும். பாண்டிப் பெருமாள், “எல்லா வற்றையும் காட்டிய கண் தன்னைக் காண மாட்டாது; தன்னைக் காணமாட்டாத தன்றியும் தனக்குக் காட்டாகிய ஆன்மாவையும் காணமாட்டாது; கண்ணுக்குக் காட்டாய ஆன்மாவும் தன்னைக் காணமாட்டாது; ஆன்மாவுக்குக் காட்டாய் நிற்கின்ற சிவனையும் இப்படி ஆன்மாவினிடத்தே நிற்கின்ற முறைமையை விசாரிக்க” என்று பொருளுரைப்பர். 1. ஓரிடத்து நின்ற சொல்லும் பொருளும் ஒரு செய்யுளில் பலவிடத்தும் நின்று அச்செய்யுட் பொருள் நலத்தைப் புலப்படுத்து நிற்குமாயின், அங்ஙனம் நிற்பது அணிவகையில் சொற்பொருட்பின் வருநிலையணி யெனப்படும். 2. திருக்குறள்: 547. 3. “இப்படி சுபாவங்களால் காண்டற் கரியனாய்த் தன்னாலே தன்னைக் காண வேண்டுகையின் சிவனைக் கள்வன் தான் என்றார்; எனவே சிவனுடைய ஞானத்தாலன்றி இந்திரியாதி கரணங்களின் நீங்கித் தன்னையும் தன்னைக் கண்டு காட்டுகின்ற சிவனையும் காண்பது இல்லையாம்; ஆகவே, சிவனுடைய ஞானம் தாரகமாக நின்று விசுவம் மேலிட்ட பொழுது நீக்கவேணும் என்பதாயிற்று; இதுவும் சம்பிரதாய திட்டியால் அறிவித்தது” என்பது. - பாண்டி. விருத்தி. 1. குறிப்பு மொழியாவது: “எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகிப் பொருட் புறத்ததுவே குறிப்பு மொழி யென்ப.” - தொல். செய். 177. 2. திருவுந்தி. 23. 3. காட்டிய கண்ணே தனைக்காணா கண்ணுக்குக் காட்டாய உள்ளத்தைக் கண்காணா என முற்பட நிறுத்திய உவமையால் பிற்பட நிற்கும் பொருளை அதுபோல் என்ற சொல் பெய்து விளக்க நிற்கும் இயைபால் இஃது எடுத்துக்காட்டு உவமையாயிற்று; “அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே யுலகு” என்ற திருக்குறள் போல. 1. சு.தே. உரை: அசத்தாயுள்ள - நிலையுதலுடைய தற்சொரூபத்தைக் காட்டாது மறைத்து நிற்கும் நிலையுதல் இலவாயுள்ள: வன்ன பேதங்களை - பிரபஞ்சங்களை; அசத்தென்று - இவை நிலையுதலுடையவல்ல என்று; காண - விவேகித்தறியின்; உளதாய் நிற்பது - அங்ஙனம் நிராலம்பமாய் விளங்கித் தோன்றுவது; ஞானசொரூபம் என்று உணரற்பாற்று - பதிஞானத்தின் இயல்பென்று அறியற்பாலதாம் என்க நிராலம்பம் - அசைவில்லாமை 2. சத்து என்னும் சொல் நிலையுதலுடையது என்னுப் பொருள் தருவதாகலின், அசத்து என்பது நிலையுதல் இல்லாதது என்பதாயிற்று. 3. வன்னபேதம் - நிறவேறுபாடுகள். 1. சித்திரமெழுதுவோன் பலவகை வன்னங்களைக் கொண்டு அதனை உருவுபெற எழுதுவதுபற்றி இவ்வாறு பொருள் கொள்ளப்படுகிறது. 2. சிவ. சித்தி: சூ. 9:6. 3.மேற்படி சூ. 9: 6. “ஒன்றலாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்தரு மாநிதி யியற்றி, என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும் பொய்யெனவே நினைமனனே”- சுந்த. தேவா. 64: 5. 4. அசுத்தம், மிசிரம், சுத்தம் எனப்படும் மாயை வகை மூன்றனுள், அசுத்தமாயா காரியமான பிரபஞ்சம், அசுத்தப் பிரபஞ்சம் என்று இங்கே குறிக்கப்படுகிறது. 1. ஆகாசமுதலிய பூதங்களும் பிறவுமாகிய தத்துவங்களைத் தொகுத்து வான்முதல் என்று குறிக்கின்றார். 2. அளவு இறந்து- அளவைப் பிரமாணங்களைக் கடந்து அப்பாலாய் எழுந்தருளி வந்து- பாண்டி. விருத்தி. 3. சிவ. சித். சூ. viii 38. 4. இக்கருத்தையே, அருணந்தி சிவனார், “குறித்தடியில் நின்றட்ட குணமெட்டுச் சித்தி கோகனகன் முதல்வாழ்வு குலவுபத மெல்லாம் வெறுத்துநெறி அறுவகையும் மேலொடு கீழடங்க வெறும்பொய்யென நினைந்திருக்க மேலொடுகீழ் இல்லான், நிறுத்துவதோர் குணமில்லான் தன்னை யொருவர்க்கு நினைப்பரியான் ஒன்றுமிலான் தன்னை நேர்பட வந்துள்ளே பொறுப்பரிய பேரன்பை அருளி அதன்வழியே புகுந்திடுவன் எங்குமிலாப் போகத்தைப் புரிந்தே.” (சிவ. சித். சூ. 9 : 6) என்பது காண்க. 1. அசத்தாகிய பிரபஞ்சம் அசுத்தம், மிசிரம், சுத்தம் என்று மூவகைப்படும். இவற்றுள் அசுத்தப் பிரபஞ்சம் சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணமயமானது. சத்துவகுண விருத்தி இராசத குணவிருத்தி, தமோ குணவிருத்தி என மூன்று வகையாய் இஃது அறியப்படும். சத்துவ குணவிருத்தி பிரகாசம், சாந்தம், சுகம் என்ற மூவகையால் காணப்படும்; இராசத குணவிருத்தி, பிரவிருத்தி, கோரம், துக்கம் என்ற மூவகை வடிவில் காணப்படும்; தமோகுண விருத்தி நியமனம், மூடம், மோகம் என்ற மூன்று வடிவில் காணப்படும். முதல்வன் இந்த மூன்று குணங்களையும் கடந்தவனாதலால், இக்குண விருத்திகளில் அவன் காணப்படாமைபற்றி நிர்க்குணனாய் என்று குறிக்கின்றார். 2. மிசிரப் பிரபஞ்சம் முக்குணங்களைக் கடந்து நிர்க்குணமாய் உள்ளது; எனினும், இது மல கன்மங்களோடு விரவி நின்று, அவற்றின் காரிய வடிவில் வைத்துக் காணப்படும். மல காரியம் மோக முதலாக ஏழு வகைப்படும்; கன்மம் காரியம். அது சுகதுக்கமாகக் காணப்படும். முதல்வன் மல கன்மங்களைக் கடந்தவனாகையால் நின்மலன் என்று குறிக்கப்படுகின்றான். 3. சுத்தப் பிரபஞ்சம் மலகன்மங்களைக் கடந்து நின்மலமாய் உள்ளது; ஆயினும் காரியப்பட்டு அநித்தமாகும் இயல்புடையது; அதனால் அது சாதிசயம் ஆனந்தம் என்ற வடிவில் வைத்துக் காணப்படும்; முதல்வன் காரியப்படுவதில்லை ஆதலால் அவனை நித்தியானந்தன் என்று வழங்குகின்றனர். 4. இம்மூவகைப் பிரபஞ்சத்துள் ஆன்மா, சகுணனாகவும், சமலனாகவும் சாதிசயம் ஆனந்தம் உடையனாகவும் பொதுவியல்பு கொண்டு அறியப்படுவன்; முதல்வன் அவ்வகையாலும் அறியப்படாமையால் தற்பரமாய் நிற்பவன் என்று குறிக்கப்படு கின்றான். 5. இவ்வாறு நிற்கும் நிலைக்கு ஒப்புக்கூற முடியாமையால் இறைவனைத் தனி முதல்வன் என்று ஆசிரியர் அறிவிக்கின்றார். இக்குறிப்புக்களைச் சிவஞானபாடியத்துட் காண்க. 6. அறிவு. தன்னறிவின்கண் நீங்காது நிலைபெறும் அறிவு என்பர். 7. முன்னர்ச் சூனியம் போல் தோன்றிப் பின்னர் ஆனா அறிவாய்த் தோன்றுவது இங்கே வேறுபாடு என்பது. குணகுணிகட்கு வேற்றுமை யின்மையின் முதல்வனது ஞானத்தை முதல்வனென்று உபசரித்தார் - சிவஞானபாடியம். 1. இது இது என்று அறியப்பட்ட எல்லாப் பொருளையும் இது பொய்யா யிருந்ததென்று அறியச் சடக்கென இப்பொழுது உள்ளதாவது உண்மையாகிய சிவம், அதனை விசாரித்துப்பார்; என்றது சிவ சொரூபனுமாய்ச் சுத்தனுமாய் நின்று காணும் அவதரத்து அந்த அந்த உண்மையொழிந்து அசத்துத் தோன்றாது என்பதாம் - பாண்டி. விருத்தி. 2. சிவசொரூபத்துடனே கூடிச் சுத்தனாகி அசத்தை அசத்தென்று நீங்கினும் இதுவென்று அறியப்பட்ட நீ அந்தச் சிவமாகாய்; என்றது, சிவனுடைய கர்த்திருத்துவமும் பஞ்ச கிருத்தியமும் உனக்கு உண்டாகாது சிவசொரூபனாவையென்பதாம் - பாண்டி. விருத்தி. 3. உண்மையைத் தைவம் புணர்ந்து என இயைத்து, “அந்தச் சிவனுடனே கூடித் திருமேனியாய் அந்தச் சொரூபத்தைப் பெற்று” என்றும், “போம்” என்றதனை ஏவல் வினையாகக்கொண்டு, “பொய்யை நீங்கி நில்” என்றும் கூறி, “எனவே அந்தச் சிவனுடைய ரூபத்தைப் பெறுவதே சிவரூப மென்ப தாயிற்று; எனவே அசத்துமேலிட்டால் இது அசத்து என்றுநீங்கின் சிவரூபம் என்பதாயிற்று” என்பது பாண்டி. விருத்தி. 4. எனவே, நீ அசத்தும் அல்லை என்பது குறிப்பெச்சம்; “அசத்தைச் சத்துடன் நின்று நீக்கும் தன்மையால் சதசத்தாவை ” (சிவப். உண். 7) என்பது சிவஞானபாடியம். 1. “சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேனுனைச் சார்ந்திலேன்” (திருவா. 467) என மணிவாசகனார் வழங்குவது காண்க. 2. தேவனது உடைமை தைவம் என்பது; வடமொழி. 3. “மயக்கம துற்றும் மருந்தில் தெளிந்தும்” (சிவ. போ. சூ. 7:அதி. 3) என்ற வெண்பாவால் பெறப்பட்டதனையே ஈண்டுக் கடைப்பிடித்தற் பொருட்டுச் சுட்டி உணர்ந்த நீ சத்தல்லை. உண்மையைத் தைவம் புணர்ந்ததனால் பொய்விட்டுப் போம் ஆகலின் அசத்து மல்லை என வேறோராற்றானும் தெளிவித்தாராகலின், இது கூறியது கூறலன்மை உணர்க - சிவஞானபாடியம். 4. இவ்வெண்பா, “ஆன்மா சிவரூபனுமாய்ச் சுத்தனும் ஆனவிடத்து ஆன்மபாவம் இல்லையென்பது கூறுகின்றது” எனப் பாண்டிப் பெருமாள் கருத்துரைக்கின்றார். 5. கண்டதை அன்றன்று எனவிட்டு என இயைத்து, “இது இது என்று காணப்பட்ட பொருளையெல்லாம் இவையல்லவென்று நீங்கி; எனவே மீட்சிமொழியால் காணாத பொருளாமோ என்னில் அதுவும் அல்ல வென்று கருதி” என்றும், கண்ட சத்தாய் என்று கொண்டு காட்டாய் நின்று காட்டுகின்ற சிவசொரூபமாய் என்றும் பொருளுரைப்பது பாண்டி. விருத்தி. ஆக என்றது ஆய் எனத் திரிந்து நின்றது - பாடியம். 1. அண்டனையென்றதற்கு “அண்டங்களெல்லாம் தானாய் நிற்கின்ற சிவனை” என்பர் பாண்டிப்பெருமாள். 2. சுட்டுணர்வுக்குவிடயமாகாத முதல்வனை ஆராய்ந்து எ-று. 3. ஆசிரியன் சிவஞானத்தால் சிவோயம் எனத் தன்னுள்ளேபாவித்து, சிவத்துமசி என்று அறிவுறுக்கும் சித்தாந்த மகா வாக்கியப் பொருளை நாடோறும் பயின்று, சிவோகம் எனப் பாவிப்பானாயின்” என்று இப்பகுதியைச் சிவஞானபாடியம் விளக்குகின்றது. 4. உத்தமனின் பண்டு அணைந்த ஊனத்தைத் தான் விடுமாறு என்பதற்கு “உத்தம குருவினாலே தனக்கு அநாதியிலே பொருந்தின மலமாயா கன்மங்களை நீங்கு முறைமை” எனப் பொருள் உரைப்பர் பாண்டிப் பெருமாள். உத்தமனது ஞானத்தை உத்தமன் என்று உபசரித்தார் - சிவஞானபாடியம். 5. இங்கே காட்டிய வெண்பாக்களின் கருத்தை, அருணந்தி சிவனார், “கண்டவிவை யல்லேன் நான் என்றகன்று காணாக் கழிபரமும் நானல்லேன் எனக் கருதிக் கசிந்த தொண்டினொடும் உளத்து அவன் றான்நின்ற கலப்பாலே சோகம் எனப் பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி; விண்டகலும் மலங்களெல்லாம், கருடதியா னத்தால் விடமொழியு மதுபோல, விமலதையும் அடையும்; பண்டை மறைகளும் அது நான் ஆனேன் என்று பாவிக்கச் சொல்லுவது இப்பாவகத்தைக் காணே” (சிவ. சித். சூ. 9: 7) என்று கூறுவது காண்க. 6. இவ்வெண்பா, “இவன் அவனாகப் பாவித்தலாம்; இந்தப் பாவனையே வேதாந்தத்திலும் அது நான் என்னும் பாவனையாவதும் என்றவாறு; அது தற்பதம், தொம்பதம், அசிபதம் என மூன்றாம்” என்று உரைத்து, இவ்வாறு பல வெண்பாக்களால் பாச நீக்கம் கூறியதற்குக் காரணம் காட்டுவாராய், “அநேக காலமாய் மருவிப் போந்தமையால் நீக்குதற்கு அரிது என்பது தோன்ற என அறிக” என்று பாண்டிப் பெருமாள் கூறுகின்றார் 1. “இவ்விடத்து என்பது ஆன்மா பாசம் ஒருவி ஞானக்கண்ணினால் ஞேயமாகிய முதல்வனைக் கண்டவிடத்து எ-று.” 2. “விதிப்படி உச்சரிக்க என்பது ஆன்மா பாசம் ஒருவி ஞானக் கண்ணினால் பதியைச் சிந்தைநாடுக என ஈண்டு விதித்த விதியின் படியே ஓதுக எ-று.” 1. ஸ்ரீ பஞ்சாக்கரத்தையும் என வருதற்குரிய உம்மை தொக்கியிருக்கிறது; இதனை இறந்தது தழீஇய எச்சவும்மை என்று குறிக்கின்றார். இது மேற்சொன்ன சிவாகம் பாவனையைத் தழுவிக்கொண்டு நிற்பதுபற்றி இவ்வாறு கூறுகின்றார். 2. சிவ. சித்தி. சூ. 9: 1. 3. மானதம், மந்தம், உரையெனப்படும் இவ்வகை, என வடநூல்களில் காணப்படுவது மானதம் மனதிற்குள் சொல்லிக்கொள்வது; மந்தம், தன் காதளவிற்படச் சொல்லிக் கொள்வது;உரை வாய்விட்டுப் பிறர் செவிப்படச் சொல்லுவது. 4. சுத்த மானதம் என்பது கருவிகளோடு கூடியியங்கும் மனவெல்லையைக் கடந்துநிற்கும் உயிரின் அறிவெல்லை. 5. வடமொழிச் சூத்திரம் “தியாயேத்” என்று இதனை மொழி பெயர்த்துக்கொண்டு கூறுகிறது; அக்கூற்றையே ஈண்டு முனிவர் பெருமான் எடுத்துக் காட்டுகின்றார் எனக் கொள்க. 1.எனவே, இரண்டும் ஒரு தன்மையவாயினும் மேலே விதிக்கப்பட்ட சாதகருக்குப் பயன் ஞானம் பிரகாசித்து நிலை கூடுதலும், ஈண்டு விதிக்கப்படும் சாதகத்திற்குப் பயன் அது கூடிய வழியும் தாக்குவதாகிய வாசனையை நீங்குதலுமாகிய பயன் வேறுபாடு உண்மையின், ஒரு தலையால் சாதிக்கக் கடவதாகிய திருவைந்தெழுத்தை ஓதுதல் மிகையாகலும் சித்த சாதனமாகலும் யாண்டைய என மாணாக்கனுக்கு ஆசங்கையை நீக்கியவா றாயிற்று - சிவஞானபாடியம். “சிவசொரூபமானபொழுது மலம் தீரும் என்னும் பக்கத்துக்குத் தான் கருடனாகிய பாவனை முற்றின பொழுது விடந்தீரும் என்னும் சபக்கம் காட்டியவாறு; வேம்பு தின்ற புழுவுக்குக் கரும்பு கொடுத்தாலும் அதிற் பற்றாமல் வேம்பே நுகருமாறுபோல ஆன்மாவும் அப்படிக் கீழாய போகங்களிலே மேலிட்டுக்கொண்டு வருதல் நோக்கி” எனப் பாண்டிப் பெருமாள் கூறுகின்றார். 1.திருவருட்பயன் என்ற நூலாசிரியரான உமாபதி சிவனார் இங்கே குறிக்கப் படுகின்றார். இங்கே காட்டப்படும் அஞ்செழழுத் தருணிலை 2. இது ஆன்மா எந்த எந்தப் பொருளைக் கருதிற்று அந்த அந்தப் பொருள்களாய் நிற்குமாகையால் பஞ்சாக்கரத்தாலே இப்படி தியானிக்க அந்த நிலைமை எய்துமென்பது கூறுகின்றது என்பர் பாண்டிப்பெருமாள். 3. “பஞ்சாக்கரத்தாலே ஆன்மா சிவனுக்குத் தான் அடிமையாகிய முறைமையை யுணர்ந்து” என்று உரையும், “சி ஆகிய சிவனும், வ ஆகிய அருளும், ய ஆகிய ஆன்மாவுக்கு ஒருபுறமாய் நிற்க, ந ஆகிய திரோதமும், ம ஆகிய மலமும் ஒருபுறமாய் நிற்க, தான் நிற்க முறைமை அறிந்து நவ்வையும் மவ்வையும் நீங்கி, வவ்வே சொரூபமாய்ச் சிவனுக்கு அடிமையாய் நின்றதனை உணர்ந்து” என்று விளக்கமும் பாண்டிப்பெருமாள் விருத்தி கூறுகிறது. 1. சிவனை அஞ்செழுத்தாலே அங்க நியாசம் பண்ணி இதயகமலத்தே பூசித்து- பாண்டிப்பெருமாள். 2. அஞ்செழுத்தாலே குண்டலித்தானத்தே அக்கினி காரியம் பண்ணி - பாண்டிப் பெருமாள். 3. புருவமத்தியத்தே தியானிக்கில் - பாண்டிப்பெருமாள். 4. “மேலான சிவஞான சொரூபமாய் அவ்விடத்து அவனுக்கு அடிமையாம் எ-று. என்றது, பஞ்சாக்கரத்தின் உண்மையைப் பார்க்கவே அஞ்ஞானமாகிய பிரபஞ்சம் சீவியாதென்பதூஉம் சம்பிரதாய வழக்கால் காட்டியவாறு” என்பர் பாண்டிப் பெருமாள். 5. கோதண்டம் சானிக்கில் என்புழிக் கண்ணுருபும் அண்டனாம் என்புழிக் குவ்வுருபும் விரித்துரைக்க - சிவஞானபாடியம். 6. “சுட்டறிவு இறந்து ஞானத்தான் ஞேயத்தைக் கண்டு எங்கும் தானாக நிட்டை கூடிய வழியும்” என்றும், தொன்று தொட்டு வரும் ஏகதேசப் பழக்கம் என்றும் இவ்விடத்தே சிவஞானபாடியம் விளக்கம் கூறுகிறது. 1. இத்திருவெண்பாவின் கருத்தை, அஞ்செழுத்தாலான்மாவை அரனுடைய பரிசும் அரனுருவும் அஞ்செழுத்தால் அமைந்தமையும் அறிந்திட், டஞ்செழுத்தால் அங்ககர நியாசம் பண்ணி ஆன்மாவின் அஞ்செழுத்தால் இதயத்தர்ச்சித்து அஞ்செழுத்தால் குண்டலியின் அனலை யோம்பி அணைவரிய கோதண்ட மணைந்தருளின் வழிநின்று அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க மதியருக்கன் அணையரவம்போல் தோன்றும் ஆன்மாவில் அரனே” 2. சந்திராதித்தரிடத்து இராகு கேதுக்கள் வேறாய் நின்று ஒரு காலத்தே கூடினாற் போல ஆன்மாவும் சிவனும் வேறாய் நின்று ஒரு காலத்தேயோ கூடுவது என்னில் அது காணும் முறைமைக்குவமை. இனி, வேறற நின்று தோன்றுகிற முறைமைக்கு உவமை ஆன்மாக்களுடைய சத்திநிபாதம், பரிபக்குவம் - பாண்டிப்பெருமாள். 1. காணுமிடத்து அருளே தாரகமாக நின்று காண்டலால், அது காணவென்னும் பொழுது முற்பட்டு நிற்கும் என்றதாம் - பாண்டிப் பெருமாள். 2. காட்டத் தொல்தீ யென்ன என்று பாடங்கொண்டு, “விறகிற் பழைதாகி நிற்கும் அக்கினி” யென்று பொருள் உரைத்து, “என்றது, அநாதியிலே கூடி நின்ற அக்கினி கடைந்தபொழுது தோன்றினாற் போல ஒருவன் பரிபக்குவம் பெற்று அறியுமளவும் ஒன்றிநின்று தோன்றுவன் என்றதாம்; தொல்தீ, தொறீ யென வந்ததற்கு, “இது கெட்ட சந்தியும் விகாரமுமாம்” என்பது - பாண்டிப் பெருமாள் விருத்தி. 3. “அக்கினியைச் சேர்ந்த பொழுது இரும்பாந்தன்மை போய் அக்கினியேயாய் நின்றாற்போல ஆன்மாவை அடக்கிச் சிவனும் தானாகி நிற்பன் என்றதாம்; இது சிவசொரூபத்தைப் பெறுதற் குவமை; அடிமையாம் என்றது, இரும்பு அக்கினியினுள் உள்ளடங்கி நின்றாற்போல நிலைபெற்ற ஆன்மாக்களும் கூடி நிற்பது என 4. இது பஞ்சாக்கரத்தை உச்சரித்தால் சிவனைக் காணலாம் என்னும் பக்கத்துக்குச் சந்திராதித்தர்களும் இராகு கேதுவும் சபக்கமும், அநாதியிலே வேறற நின்று தோன்றுவன் என்ற பக்கத்துக்கு விறகும் தீயும் சபக்கமும், சிவனைக் கூடிச் சிவசொரூபனாவன் என்னும் பக்கத்துக்கு அக்கினியைச் சேர்ந்த இரும்பு சபக்கமும் ஆம் என அறிக - பாண்டிப் பெருமாள் விருத்தி. இவ்வெண்பாவின் கருத்தை அருணந்தி சிவனார். “அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க மதியருக்கன் அணையரவம்போல் தோன்றும் ஆன்மாவில் அரனே” (சிவ. சித்தி. 9: 8) என்பர். 1. அந்தரியமாக இதயகமலத்திலே இப்படி பூசித்தால் அருட்சொரூபனுமாய்ச் சுத்தனுமாவன் என்பது கூறுகின்றதெனப் பாண்டிப் பெருமாள் கருத்துரைக் கின்றார். 2. இதய கமலத்துக்குத் தண்டு எண் விரல் நீளம் என்றும், மண்முதல் நாளம் என்பதன் உரையில், பிருதிவி முதலாக மாயை ஈறாகிய அசுத்த மாயாதத்துவம் முப்பத் தொன்றையும் நாளத்திற் காட்டி, அதற்குமேல் சுத்தவித்தையை எட்டு இதழாய் எட்டு அக்கரத்தையுமுடைய தாமரைப்பூ என்று பாண்டி. விருத்தி கூறுகிறது. 3. வித்தியா தத்துவமெனப்படும் கலாதியும் சுத்தவித்தையும் எனக் கொள்க -சிவஞானபாடியம். 1. இத்தாமரைக்கு நிவிர்த்தி பிரதிட்டை வித்தையென்று மூன்று கலையும் ரூபமாயிருக்கும் என்றும், ஆன்மதத்துவம் இருபத்துநாலுக்கும் நிவிர்த்தி, வித்தியாதத்துவம் ஏழுக்கும் பிரதிட்டை, சுத்தவித்தைக்கு வித்தையென அசுத்தமாயா தத்துவம் முப்பத் தொன்றையும் வகுத்து, அம்மலர்க்கு மேலே ஈசுரம், சதாசிவம் என்ற இரண்டும் முறையே சாந்தி, சாந்தியதீதை என்ற கலைவடிவாம் என்றும், அதன் மேல் நாதரூபம் என்றும், அந்த நாதம் இடமாக விந்துச்சத்தி நிற்குமென்றும், அதன்கண்ணே சிவன் இருப்பன் என்றும் பாண்டிப் பெருமாள் விருத்தி கூறுகிறது. 2. கோயிற்புரா. பதஞ்சலி 70. 3. சிவ. சித்தி. சூ. 9:9. 4. அதச்சதனம் - கீழிடம். ஊர்த்துவச்சதனம் - மேலிடம். 1. இனி, இதுபற்றி விளக்கம் கூறலுற்ற பாண்டிப் பெருமாள் “இப்படி அந்தரியாகமாகிய பூசை செய்க என்றதனால் பகிரியாக பூசைசெய்ய வேணுமென்றில்லை; வேண்டிற்றாகில் செய் என்பது மீட்சி மொழிதாய சிருட்டியுமாம்” என்றும் கூறுவர். இவ்வெண்பாவின் கருத்தை விளக்க வந்த அருணந்திசிவனார், “நாட்டும் இதயந்தானும் நாபிதனில் அடியாய் ஞாலமுதல் தத்துவத்தால் எண்விரல் நாளத்தாய், மூட்டு மோகினி சுத்தவித்தை மலர் எட்டாய் முழுவிதழ் எட்டு அக்கரங்கள் முறைமையில் உடைத்தாய், காட்டுகம லாசனமேல் ஈசர் சதாசிவமும் கலாமூர்த்தமாம் இவற்றின் கண்ணாகும் சத்தி, வீட்டை யருள் சிவமூர்த்திமானாகிச் சத்திமேலாகி நிற்பன் இந்த விளைவறிந்து போற்றே” (சிவ. சித்தி. 9:9) என்றாராக, சிவஞான முனிவர், “அண்டமோர் அணுவாம் பெருமை கொண்டு கரணங்களெல்லாம் கடந்து நின்ற அவ்விறைவனே, அணுவோர் அண்டமாம் சிறுமை கொண்டு ஆன்மாக்கள் உய்தற் பொருட்டு உடம்பினுள்ளும் அவ்வாறு நிற்கின்றான்; அதனை யறிந்து செய்யாதவழிப் பூசையாற் பயனில்லை” என அறிவுறுத்துகின்றார். 1. ஈசர் என்றது ஆகுபெயராய் அவரால் அதிட்டிக்கப்படும் தத்துவத்தை உணர்த்திற்று. 2. அதனில் என்று வரவேண்டிய அன்சாரியை தொக்கி நிற்பது பற்றி இவ்வாறு கூறுகின்றார். ஈண்டுக் கலையுருவாம் சத்தி, நாதம் அதன் கண்ணாம் என மாறியுரைக்க வென்றும், ஆம் என்பதனை நாளம், மலர் , கலாரூபம் என்பனவற்றோடும் கூட்டியுரைக்க என்றும் சிவஞானபாடியம் கூறுகிறது. 1. இச்சூத்திரம் மலமாயா கன்மங்களை நீங்குமுறைமை கூறுகின்றது - பாண்டி . விருத்தி. 2. சாதிக்கும் பொருள் சாதகனாகிய ஆன்மா. 3. சாதித்துப் பெறப்படும் பொருள் சிவஞானம். 1. “சிவன் ஆன்மாவிலே ஆன்மாவாய் நின்ற முறைமைபோல ஆன்மாவும் சிவனிடத்திலே ஏகீபவித்து, முன்பு தன்னுடைய செயலானவை யெல்லாம் சிவனுடைய செயலான முறைமையைக் கண்டு நிற்க, ஆணவமும் மாயாமலமுமாகிய இவற்றுடனே மேலும் ஆகாமியமாகி வரும் வலியவினையும் இல்லையாம் என்றது. சிவனுடனே ஏகீபவித்து அந்தப்படியே ஒழுகி நிற்க என்றதாம்; அது யான் செய்தேன் பிறர் செய்தார், என்னது, யான் என்பதின்றி நிற்க என்றதாம்: அப்படி செருக்கற்று நிற்க, திருவருள் தாரகமாம் என அறிக” என்பது பாண்டி. விருத்தி. 2. அமைச்சரொடு அரசன் வந்தான் என்றாற்போல, மலமாயை தன்னொடு என்றவிடத்து நிற்கும் ஒடு ஒருவினை ஒடு; அதனால் இன்று என ஒருமைவினை வந்தது என்பதாம். வல்வினை எழுவாய், இன்று பயனிலை. 3. உவமைக்கு ஓதியது அவனே தானே ஆகிய என்பது. பொருள் - ஆன்மா; ஏகனாகி நிற்பது பொருளுக் கோதியது. அவனேதானே ஏகனாகிய அந்நெறி, தானே அவனே ஏகனாகி இறைபணி நிற்க என அமைவது காண்க. 1. ஒற்றுமையென்பது ஒரு பொருளாய் ஒற்றுமைப் படுவது, ஒன்று திரிந்தொன்றாய் ஒற்றுமைப்படுதல் முதல் ஒப்புமையான் ஒற்றுமைப்படுதல் ஈறாகப் பலவேறு வகை இருப்பதால் அவற்றை இங்கே தனித்தனியே எடுத்து இவ்வுரைகாரர் விளக்கிக் காட்டும் திறம் அறிந்துணரத்தக்கது. 1. “இவ்வா றொழுகும் இனைய வுயிர்க்கு, முன்னோன் தனது முதிரொளி ஞானம், அறியாப் பச்சைச் சிறு புழுக் கவர்ந்து, வண்டென உயிரைக் கொண்டிடும்” (சங்கற். சிவசம. சங்கற். 8-11) என்பது சிவசமவாதி கொள்கை. 2. ஸ்ரீ சு. தேசிகர் உரை: ஈண்டு - இவ்விரண்டதிகரணத்துள் வைத்து இம் முதலதிகரணத்து; பரமேசுரன்- ஞானக்கண்ணால் காணப்பட்ட அம் முதல்வன்; இவ்வான்மாவாய் - பெத்த நிலையில் உடனாய் நின்று அறியவும் வேறு காணப்படு மாறின்றி யானே அறிந்தேன் என்னும்படி உயிர் தானேயாய், நின்ற முறைமையான் - ஒற்றுமைப்பட்டு உயிரின் வழி நின்ற முறைமை போல; அவனிடத்து ஏகனாகி - ஈண்டு உயிர் அம் முதல்வனோடு உடனாய் நின்று அறியினும் தான் என வேறு காணப்படுமாறு இன்றி அவனோடு ஒற்றுமைப்பட்டு: நிற்க என்றது - நிற்க என்க. 1. ஆசிரியர் தொல்காப்பியனார் ஆறாம் வேற்றுமைக்கு ஓதியவற்றுள் காட்டிய “இயற்கையின்” என்ற இயற்கைக் கிழமையில் அடங்குவது உணர்ச்சிக்கிழமை; சாத்தனது அறிவு என்றாற்போல. 2. எனது என்னும் ஒருமை ஞானத்தையும் ஞேயத்தையும் குறித்து நிற்பதால், எனது ஞானம், எனது ஞேயம் எனத் தனித்தனிச் சென்று இயையும் என்றார். 3. செருக்குக்கு ஏதுவாகிய மலத்தைக் குறிப்பதால் ஆகுபெயராயிற்று. 4. மழை பெய்து குளம் நிறையும் என்ற விடத்துப் பெய்ய என்னும் செயவெனெச்சம் பெய்து எனச் செய்தென்னும் எச்சமாய் நின்றாற் போல அற அணையும் என வரவேண்டியது அற்று அணையும் என வந்தது என்பதாம். 1. இவ்வெண்பாவின் கருத்தைக் கூறலுற்ற பாண்டிப்பெருமாள் “ஆன்மபோதம் சீவிக்குமிடத்துப் பாசங்களையொழிந்து சீவியாது; அப்படிச் சீவிக்குமிடத்து ஆன்மாவும் அவற்றினுடைய சொரூபங்களாயே நிற்குமாதலால் அவற்றினுடைய உண்மையைப் பார்க்குமிடத்துச் சிவரூபத்தை யொழிந்து நீங்கவொண்ணாது; ஆகையால் தன்னுடைய பணி அவனுடைய பணி என்னுமிடத்துச் சிவரூபமாயே நிற்கும் என்பது கூறுகின்றது” என்று உரைக்கின்றார். 2. நான் அவனுக்குச் செய்தேன், அவன் எனக்குச் செய்தான் என்று கருதுமவர்க்குக் கருதத்தக்க ஆன்மபோதம் உண்டாம்; அப்படி ஆன்மபோதம் சீவிக்குமாதலாலே சிவன் தான் என்கைக்கு ஏகதேசமும் அவ்விடத்து இல்லையாய் அந்த ஆன்மாவிலே ஆன்மாவாய் நிற்பன்; என்றது யான் செய்தேன், பிறர் செய்தார், என்னது, யான் என்போர்க்கு ஆன்மபோதமே சீவித்து நிற்பது, அப்படி ஆன்ம போதம் சீவிக்குமிடத்துச் சிவன் தோன்றாமல் நிற்பன் என்றுமாம் - பாண்டி. விருத்தி. 3. யானென ஒன்றில்லை, எல்லாம் சிவன் தானே என்னுமவர்களை; என்றது, நானும் பிறர்க்குச் செய்யமாட்டேன், பிறரும் எனக்குச் செய்யமாட்டார், என்னதும் இல்லை, பிறரதும் இல்லை, நான் செய்வதும் ஒன்றில்லை, பிறர் செய்வதும் ஒன்றும் இல்லை, எனக்குச் செய்வானும் சிவனே, எல்லாம் சிவனுடைய செயலே, பிறர்க்குச் செய்வானும் சிவனே என நிற்கின்றவர்களை என்றதாம். 1. அப்படி சீவபோதம் சீவித்தலையுடையவர்களைத் தன்னுடைய திருவடியிலே அடக்கிக் கொண்டு இவனுடைய செயலெல்லாம் தன்னுடைய செயலென்றும் இவனுக்குச் செய்வ தெல்லாம் தனக்குச் செய்வதென்றும் அவனுடைய போதம் இல்லையென்றும் தானாய் நிற்பன் சிவன்; இது சம்பிரதாய திட்டியால் அறிவித்தது என அறிக - பாண்டி. விருத்தி. 2. நஞ்சொத்தற்கும் அமிழ்து ஒத்தற்கும் வினை முதல் “இவனே” ஆவதுபோல, தான் அது வாய் என்றவிடத்து ஆதற்கும், தானாம் என்றவிடத்து ஆதற்கும் வினைமுதல் “இறை” என்பது. 3. “உயிராய்க் காணுங்கால் சிவமில்லை, சிவமாய்க் காணுங்கால் உயிரில்லை; இரண்டுமாய்க் காணப்புகினும் தற்போதம் முற்பட்டு நிற்றலின், அவ்வழியும் சிவம் ஐயக்காட்சிக்குப் புலனாய் நிற்பதல்லது தெளிவுக் காட்சிக்குப் புலனாய் நிற்குமாறில்லை; ஆகலான், நான் அவன் என்று எண்ணினர்க்கு நாடுமுளம் உண்டாதல், தான் என ஒன்று இன்றியே தான் அதுவாய்” என்றார் -சிவஞான பாடியம். 1. சிவப்பிரகாசம், உண்மை - 8. 2. வினாவெண்பா - 11. 1. “ஆன்மாவும் பிறவுயிர்களைத் தனித்த முதலாய்ப் பிரித்தறியுமாறு இல்லையாயினும் சிவத்தைத் தரிசிக்கும் வழித் தான் அதுவாய் நின்று தன்னை அறியுமாறு போலப் பிறவுயிர் களையும் அச்சிவத்தின் வண்ணமாய்க் கண்டறிதல் அமைவுடைத்து” -சிவஞானபாடியம். 2. சிவப்பிரகாசம், உண்மை. 22 3. ” ” 28 4. பட்டினத்துப் பிள்ளையார், திருவிடை. மும்மணிக்கோ. 13 5. முதலதிகரணத்தில் “ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்கின்றுழி அதன்கண் விளங்கும் ஞாதிரு ஞான ஞேயப் பகுப்பு இறந்து நின்று உச்சரித்தாலன்றி மலவாசனை அறாமையால் அஃது அறும் வண்ணம் முதல்வனிடத்து ஏகனாகி நிற்றல்வேண்டும் என மலவாசனை அறுதற்கு உபாயம் கூறப்பட்டது என்றும், ஏனை மாயாகன்ம வாசனையறுதற்கு உபாயம் கூறுதற்கெழுந்தது இரண்டாம் அதிகரணம்” என்றும் சிவஞானபாடியத்தில் இவ்வுரைகாரர் கூறுவது காண்க. 1. ஸ்ரீ சு. தே. உரை: இறைபணி - அம்முதல்வன் அருள்வழி: வழுவாது நிற்க என்றது - சலியாமல் நிற்க என்பதாம். 2.அவன் அருளின்வழி நின்று செய்வது ஆன்மாவின் சுதந்திரத்துக்கு இழுக்கன்றோ என்று எழுந்ததோர் ஐயத்தைச் “சிவானந்தத்தை அனுபவித்தற்கு ஏதுவாய இறை பணி நிற்கை தன் இச்சைவழி நிற்றலேயாம்; ஆகலின், அது சுதந்திரமேயாம்” எனச் சிவஞான பாடியம் கூறுகின்றது. 3. அஞ்ஞானகன்மம், அஞ்ஞானமும் கன்மமும் என விரிதலால் உம்மைத் தொகையென்றார். அஞ்ஞானம் மாயைமேல் நின்றது. 4. முதல் அதிகரணத்தில் மலவாசனையறுதல் கூறப்பட்டுளது. 5. “மலமாய் மாயை மயக்கமும் செய்யுமன்றே” (சிவ. சித்தி. v. 53) என்று அருணந்தி சிவனார் உரைப்பது காண்க. 1. இறைபணியாக்கு, இல்லைவினை என்று பாண்டிப்பெருமாள் பாடங்கொள்வர். அதனால் அவர் கூறும் உரை வருமாறு:- இந்திரியங்கள் யாவையும் நாமல்ல; இந்திரியங்கள் விடயத்தின்மேற் செல்லுகின்ற செலவும் நம்முடைய செயலல்ல; நாமும் நமக்கென ஒரு சுதந்திர முடையமல்ல; சிவனுடைய அடிமையாவேம் என்று சொல்லிட, நாம் எந்தத் தேகத்தை எடுத்தோம் அந்தத் தேகத்தே தானும் எம்முடன் கூடி நின்று முன்புசெய்த வினைகளை அறிந்து புசிக்குமிடத்துக் கூட்டுவோனுடைய அருளே தாரகமாக நில்; நீ செய்யும் செயலெல்லாம் இறைவன் செயலென்று வை; மேல் ஆகாமிய கன்மம் ஏறா எ-று. இனி, நாம் அல்ல இந்திரியம் நம் வழியின் அல்ல வழி நாமல்ல நாமும் அரன் உடைமை - யாம் என்னில்” இல்லை வினையென்றும், அப்படி நிற்கக் கூடாதாகில் முன் எத்தனுவில் நின்றும் முற்செய்வினையும் தருவான் இறைபணியாற்கு இல்லை வினையென்றும் பொருள் உரைப்பினுமாம். எனவே, முன்பு செய்த வினைகள் தான் செய்தானாகவும், பிறர் செய்தாராகவும் கூறுதலால் ஏறியது; அப்படியின்றித் தாம் தாம் செய்த கன்மங்களைப் புசிக்குமிடத்துச் சிவனே கூட்டிப் புசிப்பிக்கையால் அவன் செயலைக் கண்டு நிற்கப் பிராரத்தம் புசிக்கிறதொழிந்து மேலைக்கு வினையேறாதென்றது - பாண்டி.விருத்தி. 1. உடலூழாய் ஒழிவதன்றி அவர்க்கு ஆதல் இல்லை - சிவஞானபாடியம். 2. தருவான் முன்னாம் எனக்கூறிக்கொள்க.ஆம் என்பது சொல்லெச்சம் - சிவ.பாடியம். 3. குற்றியோ மகனோ என்றவிடத்துக் குற்றியென்று துணிந்தவழி, மகன் அல்லன் குற்றி என்றும், மகன் அன்று குற்றி என்றும் இரு வகையாக விடை காணப்படும். இதன்கண் அல்லன், அன்று என்பவை அன்மைச்சொல் எனப்படும். குற்றியோ மகனோ என்ற இரண்டனுள், குற்றியென்பது கொள்ளப்பட்டபோது மகன் என்பது மறுக்கப்படும் பொருளும் குற்றி தழுவப்படும் பொருளுமாகும். மகன் அல்லன், குற்றி என்றவிடத்து, அன்மைச்சொல் மறுக்கப்படும் பொருளாகிய மகன் மேல் நிற்கிறது; மகன் அன்று குற்றி என்றவிடத்து, அன்மைச்சொல் குற்றியென்ற தழுவப்படும் பொருள்மேல் நிற்கிறது. அதுபோலவே, நாம் அல்ல இந்திரியம் என்றவிடத்து அல்ல என்னும் அன்மைச்சொல் தழுவப்படும் பொருளான இந்திரியங்களின்மேல் நிற்பதுபற்றி, அன்மைச்சொல் தழுவப்படும் பொருள்மேல் நின்றது என்றார். ஓத்து - ஓதப்படும் விதி. இவ்விதியின்கண், வேறிடத்தான என்பது குறிக்கும் வேறிடம், தழுவப்படும் பொருள் என்பது. 4. தொல்காப்பியம் சொல் - 25 1. “எல்லையில் பிறவி நல்கும் இருவினை எரிசேர் வித்தின் ஒல்லையில் அகலும்” -சிவப். 89. சஞ்சிதம் தீக்கையாலும், ஆகாமியம் ஞானத்தாலும் கழிவனவாதலால், நுகர்ந்தே கழிக்கவேண்டிய பிராரத்த வினை கொள்ளப்படுகிறது. அஃது உடம்பு உள்ளளவும் இருந்து பின் அதனோடே ஒழிந்துபோம். 2. தருதல் என்பது தன்மை முன்னிலை என்ற இரண்டிடத்திற்கே உரியது; அஃது இங்கே தருவான் எனப் படர்க்கைக்கண் வந்தது பற்றி இடவழு என்றும், வழுவாயினும் சான்றோர் வழக்கும் செய்யுளும் இலக்கணத்துக்கு முதலாதல்பற்றி அமைத்துக்கொள்ளப் படுவதனால் அமைதி என்றும் உரைக்கின்றார். 3 இறை பணியார்க்கு வினை உடலூழாய்க்கழியும் என்றும், ஏனையோர்க்கு உயிரூழாய் நின்று வருத்துமென்றும் சான்றோர் அறிவுறுத்துவர். 1.சார்ந்தவர்க்கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன் - திருஞானசம். 113: 5. “தன்னையடைந்தார் வினைதீர்ப்பதன்றோ தலையா யவர்தம் கடனாவது தான்” - திருநா. 1:4.” 2.“பத்திப்பேர் வித்திட்டே பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமே காவாப் பகையறும் வகை நினையா, முத்திக்கே விக்கத்தே முடிக்கு முக்குணங்கள் வாய் மூடாவூடா நாலந்தக்கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டுத் திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச்செயும் அவன்” - திருஞான. 126:7. “சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் கானவனாயினார்” - திருமந் 1447 3. “சார்ந்த என்னும் பெயரெச்சம் ஈறுதிரிந்தது” -சிவ. பாடியம். 1.அடைந்தவர்களை அஞ்சேல் என்று இரட்சிக்கை கருத்தாவுக்கு முறைமையாதலாலே அடைந்தவர்களை இரட்சித்தும் அடையாதவர்களை இரட்சியாதிருப்பினும் அவர் களுடன் வெறுப்பின்றியிருப்பன்; தன்னை அடைந்த அடியார்களைத் தன்னுடைய சொரூபமேயாக்கித் தன்னையடையாத பிறருடைய வினைகளைப் புசிக்கும்படி கொடுத்தலை ஆராய்ந்தவர்களிடத்து மேற்செய்யும் வினையில்லையாம், அவ்விடத்து எ-று அவ்விடத்தென்றது பிராரத்த கன்மம் புசிக்குமிடத்து; அஃதாவது, என்னுடைய செயலெல்லாம் உன்னுடைய செயலேயென்று, நீ என்னுடைய இடத்தே நின்று செய்விக்கிறாய், செய்கின்றாய் என்று தன் பணி அறுக்க என்றதாம் - பாண்டி. விருத்தி. 2. முன்வந்த தான் முதல்வனைக் குறிக்கிறது. 3.இந்நூல் பக்கம் 287ல் காண்க. 4.திருவாசகம் நீத்தல்: 39. 1. இது, சஞ்சிதவினை தீக்கையிலே போம், பிராரத்தம் புசிக்க வேண்டும், மேல் ஆகாமியம் ஏறாது ஞானவான்களுக்கு என்கின்றது - பாண்டிப் பெருமாள். 2. சிவ. போ. 10. அதி.1. “நானவன்.” 3. “தீக்கையாலே சஞ்சித கன்மங்களைப் புசிக்கப்பட்ட ஞானியிடத்தே பெருங்காயத்தை ஒரு பாத்திரத்தே நிறுத்திட்டு வைத்து அந்த நிறைக்கு ஒக்க வாங்கிவிட்டாலும் அதனுடைய நாற்றம் அதனிலே நின்றாற்போல முன்புசெய்ததாய் இந்தத் தேகத்துக்கமைந்த பிராரத்தம் புசிக்கின்றதொழிந்து பின்பு செய்யும் கன்மமும் அதற்கேற்ற தேகமும் பொருத்தி மீண்டும் புசித்தற்கும் பிராரத்தம் உண்டாகா; அஃது எத்தாலென்னில், அந்த ஞானிகள் சிவ சொரூபமேயாய் நின்றவதனால்; ஒன்றையுணரும் அளவில் சிவகரணமாய் நின்றுணரும் ஏகீபவித்தலால், ” என்றும், “இப்படி இந்த மூன்று வெண்பாவானும் ஆகாமிய கன்மங்களை நீக்கும் முறைமை கூறியவாறறிக; எனவே, தேகாந்தத்தே முத்தியென்பது கூறினாராயிற்று” என்றும் பாண்டிப் பெருமாள் கூறுகின்றார். 1. சிவப்பிரகாசம் உண்மை - 19. 2. திருமுருகு. 95 - 6. 3. இங்கு என்னும் சொல் வடசொல்லாதலால் அதனை முற்றுகரமாகக் கொண்டு, அது குற்றுகரம்போல இங்குளி என நின்றதுபற்றி, இலேசாற் கொள்க என்றார். 4. இதனால் கூறிப் போந்தது, சிவாகமங்களில் ஆண்டாண்டு ஞானிகட்குப் பிராரத்தவினை தாக்கும் என்றது, இங்குளி வாங்கும் கலத்தைப்போல வாதனை மாத்திரையாய் மெலிதாய் வந்து தாக்கும் என்னும் துணையே யாகலின், அவ்வாறு வரும் பிராரத்த வாதனை நுகர்ச்சியின் ஏறும் ஆகாமியவினை அவ்வுணர்வின் முன்னர்க் கெட்டொழிவதன்றிப் பிராரத்த நுகர்ச்சியின் ஏறும் ஆகாமியம் போலப் பிறவிக்கு வித்தாய் நிலைபெறுமாறு இல்லை என ஆசங்கையை நீக்கியவாறாம் என்க - சிவ. பாடியம் “ஞானிக்கு இருவினைகள் சென்றணையா, முற்செய்வினை இங்குத், தங்கிப்போம் பாத்திரமும் குலாலன் வினைதவிர்ந்த சக்கரமும் கந்தித்துச் சுழலுமாபோல், மங்கிப்போய் வாதனையால் உழல்விக்கும், எல்லா மலங்களும் பின் காயமொடு மாயும்” (சிவ. சித்தி. 10:6) என அருணந்தி சிவனாரும், “குவிவாய்த தசும்புறை யிங்கு ஆங்கு அசும்பறத் துடைத்தும், இருங்கடி யிகவாய் பெருங்கட னல்லதை, உடையதை யுடையரோ மற்றே” (ஞானா. 48: 14-17) என வாகீச பண்டிதரும் கூறுவன காண்க. 1.ஐம்புலன்கள் தமக்கு வியாப்பியமாய் அடங்கத் தாம் அவற்றை வியாபித்து மேற்பட்டு நிற்கும் முறைமையை ஆராய்ந்து -சிவ. பா. 2. அக்கினிக்குள்ளேயிருந்தாலும் இருக்கின்ற நெருப்பில் வேகாத நல்ல அக்கினித் தம்பனையுடைய தபோதனரைப் போலவும் பண்ணியமைந்த நல்ல புரவியைச் செலுத்துகின்ற பாகரைப் போலவும், பதி பசுபாசத்தை ஆராய்ந்துணர்ந்து பதியினுடைய திருவடி நீழலொழிந்து ஒரு நிழல் இல்லையென்று நினைப்பவர், ஐந்துவிடயங்களிலே சென்றார்களாயினும் அவற்றிலே மயங்கி ஞானவீரம் குலைந்து பதியுடைய திருவடியை நீங்கார்கள் என்றவாறு; எனவே திருவடியே தாரகமாக நிற்பார்க்கு வினை ஏறாதென்றும், இந்திரியம் கைகடந்து செல்லாது மீளுமென்றும் கூறிய பக்கத்துக்கு அக்கினித் தம்பனையுடையோரும் புரவிசெலுத்துவோரும் சபக்கமாயினவாறு அறிக; எனவே, ஞானவீரர் எப்படியிருந்தாலும் அவர்கள் இந்திரியங்களில் படார் என்றதாம்- பாண்டி. விருத்தி. இனி, அருணந்தி சிவனார், “அங்கித் தம்பனை வல்லார்க் கனல் சுடாதாகும், ஒளடத மந்திரமுடையார்க் கருவிடங்கள் ஏறா, எங்கித்தைக் கன்மமெலாம் செய்தாலும் ஞானிக், கிருவினைகள் சென்றணையா” (சிவ. சித்தி. 10: 6) என்றும், வாகீச பண்டிதர், “அறங்கரை நாவின் ஆன்றோருள்ளம், சிறந்தன்று மன்னோ தெரியுங்காலே” (ஞானா: 42: 20-1) என்றும் கூறுவது காண்க. 1. பொருள் அரனடி யோர்பவர் என்பது; அப்பொருளின் வினை திறன் நீங்கார் என்பது; அது நற்றவர் திறன் நீங்கார் என்றும், பாகர் திறன் நீங்கார் என்றும் இயைத்துப் பொருள் கூறப்படுகிறது. 2. நீரினது கீழ் என விரியும் ஆறாம் வேற்றுமைத்தொகை கீழ்நீர் என முன்பின்னாகத் தொக்கது போல அனலது நள் என விரிதற்குரிய இது நண்ணனல் என மாறி முன் பின்னாகத் தொக்கியுளது. நண்ணனல் என்றே கொண்டு தம்பால் நண்ணப்படும் அனல் என உரைப்பினும் பொருந்தும் என்பார், “தம்மால்...... அமையும்” என்று உரைக்கின்றார். 3. திருநாவு. 116:4. 4. குதிரைகட்குக் கதிகள் ஐந்து என்பர்; அக்கதிகளில் செல்லும் செலவு வகையிற் செல்லுமாறு பண்ணுவது இங்கே பண்ணுதலாம். 5. ஐம்புலன் உபலக்கணம் என்றும், திறல் வெற்றிப்பாடு என்றும் சிவஞானபாடியம் கூறுகிறது. 1. இக்கருத்தையே சிவஞானபாடியம், “அசத்தோடு சார்ந்த வழியும் சத்தோடு சார்ந்த வழியும் அதுவதுவாய்ச் சதசத்தாம் இயல்புடைய ஆன்மாக்கள் ஐம்புலனாகிய அசத்தைச் சார்ந்தும் அவர் திறன் நீங்காமை யாங்ஙனம் என்னும் ஆசங்கையை நீக்கி” அதனை வலியுறுத்துகிறது என்று கூறுகிறது. இனி, பாண்டிப் பெருமாள் விருத்தி, “இது ஞானவான்களிடத்து மாயாகன்மம் மேலிடாதென்று கூறுகின்றது” என்று உரைக்கின்றது. 2.சதசத்தாம் மெய்கண்டான் தன்னான் உணரின் என்று பாடங்கொண்டு, “இது சத்தினுடைய உண்மை, இது அசத்தினுடைய உண்மை என்று கண்டு நாம் இவை இரண்டினும் அல்லாத சதசத்தாயிருந்தேம் என்று தம்மைத் தரிசித்தவர் யாதொரு பொருளையும் ஆன்ம போதத்தாலே உணராமல் சிவபோதத்தாலே உணர்வாராயின்” என்றும், இதமித்தல் பாசத்தின் இன்றி - ஆணவமலத்தாலே இரதிக்கின்றதும் இல்லையாய்; ஏலா அசத்தின் அருகு அணையார் - பொய்யாகிய மாயா காரியத்தினும் பொருந்தார்; சத்தணைவார் - எப்பொழுதும் சிவனைக் கூடிச் சிவசொரூபமாய் இருப்பர், அவரிடத்திலே மாயாகாரியம் பொருந்தாது” என்றும் பாண்டிப் பெருமாள் உரைக்கின்றார். 3. சத்து அணைவார் ஆங்கு என்றதற்குப் பாசம் மேலிட்டதாகில் சடக்கெனச் சிவரூபத்தே கூடுவர் என்பாருமுளர்; எனவே, ஞானத்திலே நிற்குமளவும் அஞ்ஞானம் பொருந்தாதென்பதாம் என்பர் பாண்டிப் பெருமாள். 4.மெய்கண்டான் என்னும் ஒருமை காணின் என்னும் வினைகொண்டு முடிகிறது; சத்து அணைவார் என்னும் பன்மை அணையார் என்னும் வினைகொண்டு முடிகிறது. இவ்வாறு வேறு வினை முடிபுபெறுவதால், ஒருமையும் பன்மையும் மயங்கும் மயக்கம் இதன்கண் இல்லை என்று உரைக்கின்றார். 1.அருளின் என்பது அருளினால் என ஏதுப் பொருள் தருகிறது. 2 இதம் என்னும் பெயரடியாகப் பிறந்த தொழிற் பெயர் இதமித்தல் என்பது. இதற்குப்பொருள் இதம் செய்தல் என்பது. 3.மிக்க வெப்பத்துடன் விளங்கும் சுடரை, “கதம் மிக்கு எரிசுடர்” என்றது, சீற்றம் கொள்ளும் உயிருடைப் பொருட்கு உரிய இச்சொல்லை, உயிரில் பொருளாகிய சுடருக்கு ஏற்றி உரைத்தவாறு; இதனால் இஃது உபசார வழக்காயிற்று. சில உரைகாரர், இதனை இலக்கணை என்றும் கூறுவர். 4. பெரிய புரா. அமர்நீதி - 26. 5.அசத்தைச் சார்ந்து அசத்தாய் நிற்றல் இயற்கையன்று என்பது, “ஒன்றுமிகினும் ஒளிகவராதேல் உள்ளம், என்றும் அகலாது இருள்” (திருவருட். இருண்மலநிலை.9) எனப் புடை நூலாசிரியர் ஓதியவாற்றானும் அறிக- சிவ. பாடியம். 6.ஆயினும், அவை இலவாதற்கண் உளதாகிய ஐயப்பாடு முதலியன இறுதிச் சூத்திரத்தில், “அம்மலம் கழீஇ” யென்னும் அதிகரணத்துட் பெறப்படும் -சிவ. பாடியம். 1.“சிவன் முதலேயன்றி முதல் இல்லையென்னும், சிவனுடையது என் அறிவது என்றும் - சிவனவனது - என் செயலதாகின்றது என்றும் இவையிற்றைத், தன் செயலாக் கொள்ளாது” (திருக்களிறு. 64) என்பதனால் இறைபணி நிற்கும் ஆன்மா தனியே விடயித்தற்குரிய இயைபு இல்லையாம். 2.ஆலயவிஞ்ஞானம்: பிற கந்தங்கள் ஒடுங்கிய நிலையில் செயற்பாடின்றி அறிவாய் உளதென்னும் மாத்திரையாய் நிற்கும் விஞ்ஞான கந்தத்தைப் புத்தர்கள் ஆலயவிஞ்ஞானம் என வழங்குகின்றனர் - நீலகேசி புத்தவாதச் சருக்கவுரையுட் காண்க. (நீல.5: 513-4) 3. பயன் இரண்டாவன, பாச நீக்கமும் சிவப்பேறும் ஆகிய இரண்டு. 1. இச்சூத்திரம் “ பரமேசுவரனுடைய திருவடியைக் கூடும் முறைமை கூறுகின்றது” என்பர் பாண்டிப்பெருமாள். 2. பத்தாம் சூத்திரத்தின் வட மொழிபெயர்ப்பு இங்கே முதனூலாகக் கருதப்படுகிறது. “பாசநீக்கம் பெற்றோன் சுவாநுபூதியுடையவனாவன்” என்பதனை, 1.சிவானந்தானுபூதி யெனச் சிறப்பிக்காது வாளா சுவாநுபூதிமான் என்று வடமொழிச் சூத்திரத்தில் கூறியது. 2.அத்துவிதமாய் நின்று உதவி செய்து வரும் பெருங்கருணையை- சிவ. பாடியம். 3.காட்சியையுடைய கண்ணுக்குக் காட்டுகின்ற ஆன்மாவைப் போல ஆன்மா தேகத்தை நீங்கிச் சுத்தனானவிடத்துச் சிவன் ஆன்மாவைத் தானும் கண்டு தன்னையும் காணக் காட்டுதலாலே அத்தன்மையினை மறவாத அன்பினை யுடைத்தாகத் தன்னுடைய திருவடியைக் திருவருளைத் தாரகமாக நின்று காணும் முறைமை போல் அவ்விடத்தும் இந்திரியாதிகளை நீங்கித் திருவருளே தாரகமாக நின்று சீவன் முத்தரானவர்கள் என்றதாம்; எனவே இவ்விடத்தும் சிவனுடைய திருவடியைக் கூடிச் சிவானுபவத்தைப் பெற்றிருப்பார்கள் என்பதாயிற்று - பாண்டிப் பெருமாள் விருத்தி. “காயமொழிந்தால் சுத்தனாகி ஆன்மாக் காட்டக் கண்டிடும் தன்மையுடைய கண்ணுக்கு, ஏயும் உயிர் காட்டிக் கண்டிடுமாபோல ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன் இத்தை, ஆயும் அறிவுடையனாய் அன்புசெய்ய அந்நிலைமை இந்நிலையின் அடைந்த முறையாலே, மாயமெலாம் நீங்கி அரன்மலரடிக்கீழ் இருப்பன் மாறாத சிவானுபவம் மருவிக்கொண்டே” (சிவ. சித்தி.சூ. 11) என்று அருணந்தி சிவனார் கூறுவர். 1.காணும் உள்ளத்தைக் காண என்றும், காணும் கண்ணுக்குக் காட்டிக் காண்டலின் என்றும் இயைத்துப் பொருள் கூறப்படுவது காண்க. சூத்திரத்தில் காணும் என்றது உவமையாகிய கண்ணின் வினை; கண்டு என்பது பொருளாகிய ஆன்மாவின் வினை. 2.நாலடி - 64. 3. வேர்த்து வெகுளார் என்பது வெகுண்டு வேர்ப்பார் எனப் பொருள் பட்டாற்போலக் கண்டு காட்டலின் என்பது காட்டிக் காண்டலின் என மாறிவைத்துப் பொருள் கூறப்படுகிறது. 4.சிவ. சித்தி - 11 : 1. 5. அயராமை - மறவாமை. அத்துவிதநிலை மறக்கப்படாது என்பது. 6. சிவ. சித்தி - 11 : 1. 7.உள்ளத்தை என்றவிடத்துக் குவ்வுருபின் இடத்தே ஐயுருபு வந்து மயங்கினமையால் உருபு மயக்கம் என்றார். 1.ஒருங்கே விடயித்துச் செல்லுமாறு - உரை வேறுபாடு. 2.ஏனையவற்றையெல்லாம் கைவிட்டு முதல்வனிடத்து ஏகனாகி அவனருளாலல்லது ஒன்றையும் செய்யானாய் நின்ற உயிர் - உ. வே. 3.அத்துவிதமாய் உடனின்று கருணையான் உபகரித்துவரும் உரிமையை - உ. வே. 4. இம்முறைமையான் அம்முதல்வனை ஒருங்கே விடயித்து நிற்குமாறு உணர்த்தி - உ.வெ. 5. சிவப் - 7. 6. சங்கற். நிரா - 12. 1. திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா, கோயில் - 11, 10, 9, 7. 2. காரைக்காலம்மையார், அற்புத - 20. 3.இங்கே கூறப்படுவன சிவஞானபாடியத்தில் முன்னும் பின்னும் மாறிக் கூறப்படுகின்றன. 4. என்பது பதினோராஞ் சூத்திரம்; இதன்கண் என்பது சிவன் காட்டுவன் என்று பொருள்பட நிற்பது காண்க. 5.வடமொழிச் சூத்திரத்தில் என்றது உம்மை; இதனை எதிரது தழீஇய எச்சவும்மையாகக் கொள்க என்று 1. ஈசுர அவிகார வாதி முதலியோரை மறுத்து ஆன்மா ஒன்றனை விடயிக்குங்கால் முதல்வன் செய்யும் உபகாரம் கூறு முகத்தானே அத்துவித நிலை உணர்த்துதற் கெழுந்தது முதலதிகரணம் - சிவஞானபாடியம். 2. விடயம் - “பெத்தத்திற் பிரபஞ்சமும் முத்தியில் சிவமுமாம்”. 3. அவற்றது - ஆன்மாக்களது, ஆறாவது அறிதற் கிழமைக்கண் வந்தது. “அன்னபிறவும்” (தொல்.சொல்.வேற்.19) என்றதனாற் கொள்க என்பது சிவஞானபாடியம். இதனால் முதல்வன் தன்னை யறிதலும் ஆன்மாவின் பொருட்டு என்றும், அதனையும் ஆன்மாவில் தங்கிநின்று அறியுமென்றும் கூறியவாறு காண்க. 4. சிவ. போ. சூ - 2. 5. சிவ.போ. சூ - 5. 1. சிவ. சித்தி. 10: 6. 2.அமைந்துவிடயியா என்பது “உரத்துத் தரியாது என்றாற்போல வேறு வினையாய் நின்றமையின், இன்றி என்பது ஈரிடத்தும் கூட்டியுரைக்கப்பட்டது.” 1.சிவ. சித்தி - 11: 7. 2. புனருத்தி - கூறியது கூறல். 3. சிவப் - 58. 4. உண். விளக்- 51. 1. சிவப். 87 2. ஓரொன்றப் என்றும் பாட வேறுபாடுண்டு 3. அறிதற்கட்படும் வேற்றுமையில்லை போலும் என்றது, ஆன்மாக்களோடு உடன் நின்று அவற்றோடு ஒப்பக் காண்டலும் செய்யுமாயின், முதல்வன் ஆன்மாக்கள் போலக் கட்டுற்று விகாரியாவான் அன்றோ என்பது. 4. ஆன்மா, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐவகை விடயங்களை யுணரும் உணர்ச்சிக்கண்ணே, தன் இயல்பு இது என வேறு காணப்படுமாறு இன்றி அவ்வவ் விடயங்களே போல அதுவதுவாய்ச் செறிந்து நின்று அறியும் இயல்பிற்று; ஆகலான்- சிவஞான பாடியம். 1. என்றும் ஒரு பெற்றித்தாகிய பரம்பொருள் - உ.வே. 2. ஆகலான் உடனின்று அறிதலே பற்றி ஆன்மாவைப்போலப் பரம்பொருள் விகாரியாவான் சேறல் இன்று என்பது குறிப்பெச்சம் - சிவ. பாடியம். 3. “முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின், பின்வரு மென்னிற் பின்வரு நிலையே” - தண்டி. உணராது உணர்வது என இயையும்; அவற்று என்றவிடத்து, உருபு வாராமை, “சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையாது” (தொல். எழுத்து. தொகை. 15) வந்ததாம்; இதனை இச்சூத்திரத்து “மெய்பெற” என்ற இலேசாற் கொள்க. உணர்வது என்றது தொழிற்பெயர் மாத்திரையாய் நின்றது; “உறங்குவது போலும்” (குறள். 339) என்றாற்போல - இவை சிவஞானபாடியத்துக் கண்டவை. 4. இவ்வெண்பாவின் உரைப்பொருளை ஆராயும் பாண்டிப் பெருமாள், “சிவனும் சீவனும் சொரூபம் ஒன்று என்னில், சாயுச்சியமானாலும் அடிமையுண்டு என்பதூஉம், கலந்த விடத்தும் அத்துவிதமாய் இருக்குமென்பதூஉம், பெத்தம் முத்தி இரண்டினும் சிவன் பிரேரிப்பன் என்பதூஉம், சிவனுடைய சர்வஞ்ஞத்துவமும் பஞ்சகிருத்தியமும் இவனுக்கு இல்லையென்பதூஉம் கூறுகின்றது” எனக் கருத்துரைத்து, “பஞ்சவிடயங் களையும் ஒரு காலத்தே அறியாதாய் அவற்றுடனே கூடிநின்று அறிகின்ற ஆன்மா, ஐந்து இந்திரியங்களையும் போல் நின்று சிவனாலே அறியும்; அதனால், பஞ்சவிடயங் களையும் ஓரொன்றாகப் பார்த்து அறிவது ஆன்மாவே: எல்லாப் பொருளையும் சிவன் ஒரு காலத்தே அறிந்து பார்த்திருப்பன்” எனப் பொருள்கூறி, “ஆன்மா இந்திரியங் களுடனே கூடி இந்திரியங்களை விடயீகரிக்க அந்தந்த விடயங்களை அதுவதுவாய் நின்று சீவிக்கின்ற அவதரத்தில் இந்திரியங்கள் விடயீகரிக்க யாம் சிவனாலே அவற்றை அறிகின்றோம் என்பது அறியாதிருந்தாற்போலச் சிவன் அருளுடனே கூடிக் கலந்தவிடத்தும் அறியாதிருக்கவேணும் என்பதாம்; எனவே முத்தியினும் அந்நியமா யிருந்தே அனுபவிக்கவேணும் என்பதாயிற்று ஆகவே அடிமையுமாயிற்று; சிவன் எல்லாவற்றையும் ஒருகாலத்தே உணர்ந்து பார்த்திருப்பன் என்றதனால் சருவ பிராணிகளுக்கும் வேறறக் காட்டாய் நிற்பனாதலால், யாவரொருவர் யாதொன்றை உன்னினார்கள், அந்த உன்னினவற்றைத் தான் அறிந்து அவரவர் செயற்கேற்ற தன்மைகளைச் செய்வன்; ஆகையால், அப்படிச் சிவானுபவத்தை வேறற அளித்து நிற்பன் என்பதாம்; எனவே, சிவஞானத்தாலே சிவனைத் தரிசித்தவர்கள் சிவனை யொழிந்து வேறொன்று பாரார்கள் என்பதாம்; அப்படி இருப்பதே இருப்பது அல்லது ஒன்றொன்றாகப் பார்த்துணர்வது ஆன்மாவினுடைய அறிவாம் என்பதாயிற்று” என ஆராய்ந்துரைக்கின்றார். 1.ஆன்மாச்சிரயம் - தன்னைப்பற்றுதல் என்னும் குற்றம். 2.இதற்குச் சிவஞானபாடியம் கூறும் பொருள்: இணையடிகள் ஏகமாய் நின்று ஒன்று உணர - முதல்வன் திருவடிகளில் நானென ஒன்று இல்லென்று தானே என ஏகமாகி நின்று கொண்டே பிராரத்த வினைக்கு ஈடாக வரும் விடயத்தை உணர்வாராயின்; தான் போகமாய் விளைந்த பொற்பினான் - அதுதான் அச்சீவன் முத்தர்க்கு வினைப்பயனாதலின்றிச் சிவபோகமாய் விளைகின்ற பொலிவானே; உள்குவார் உள்கிற்றை உள்ளத்தால் உற்றுக்காணானோ - அவ்வாறு உணர்வாரால் உணரப்படும் விடயத்தை அவ்வுணர்வின் இடத்தாற் பொருந்தி அறிந்து தனதாக்கிக் கொள்ளான் கொல்லோ; ஏகமாய் உள்ளத்தின் கண் ஆனான் - பெத்தம் முத்தி இரண்டினும் அத்துவிதமாய் அவ்வறிவின்கண் நீங்காது உடனின்று உணர்த்தியும் உணர்ந்தும் வரும் அம்முதல்வன்” என்பது. 3. “தன்னுடைய திருட்டியுடனே ஏகமாய் நின்று தான் காட்டின தன்மை யொன்றையும் கண்டுணரப் பேரின்பமாய் விளைந்த சிவன் சருவவியாபியாய் ஆன்மாக்கள் யாவைக்கும் வேறறக் காட்டாய் நிற்கின்றவன், நினைந்தார் நினைந்த நினைவுகளைத் தன்னுடைய அருளாலே காணாதிருப்பனோ, தானும் அதிலே கூடிநின்று என்பது; எனவே, பெத்தமுத்திகள் இரண்டினும் சிவனே நின்று பிரேரிப்பிக்கின்றவன் என்பதூஉம், அவனையொழிந்து ஆன்மாக்கள் எவ்விடத்தும் ஒன்றை யறிந்து செய்யமாட்டாவென்பதூஉம், பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்குத் தோன்றி மற்றவற்றிற்குத் தோன்றாமல் காட்டாய் நிற்கின்றானென்பதூஉம் கூறியவாறு” - பாண்டி. விருத்தி. 1. “உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந் தறிதி யென்று, வெள்கினேன்.” திருநா. 75:3. 2. திருநா. 237: 1. 3. ஆனாமை - நீங்காமை - சிவ. பாடியம். 4. நில்லாது உணர்தலைப் பிரித்தமையின், (ஏகமாய் நின்றே என்ற விடத்து) ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது - சிவ. பாடியம். 1. இச்சொற்றொடர்கள் தொல்காப்பியத்துச் சேனாவரையர் உரையில் கண்டவை. (தொல். சொல். கிளவி. 20) 2. திருக்கோ: 9 3. சிவ. சித்தி: 1 : 62 4. சிவ. சித்தி. 2: 25. 1. திருவுந்தி. 33. 2. திருக்களிற்று. 76. 3. திருவாசகம். பண்டாய. 6. 4.“ஆன்மலாபம் இரண்டனுள் எஞ்சிநின்ற சிவப்பேறு கூடுமாறு” உணர்த்து கின்றதெனச் சிவஞானபாடியம் கூறும். 5. ஸ்ரீ. சு. தே. உரை: மறவாது - அவ்வத்துவித நிலையை மறவாது கடைப்பிடித்துச் செய்யும்; பத்தியினான் - அன்பானே; ஏத்த - முதல்வன் அருள்வழி நின்றால்; அவனது சீபாதத்தை - அவன் திருவடியாகிய சிவானந்தானு பூதியை; அணையும் - தலைப்படும் என்க. 6. சிவ. சித்தி. 11 : 1. 1.ஏத்துதலின் பயன் அருள்வழி நிற்றலாதலால், அவ்வாறு நிற்றலை ஏத்த என்றது உபசார வழக்காயிற்று. உபசார வழக்கின் இயல்பு முன்னர்க் கூறப்பட்டுள்ளது. 2. சிவஞானபோத வடமொழி பெயர்ப்பில் பராம் பக்திம் என்ற தொடரில் பக்தி என்று வருவதற்குச் சிவாக்கிர யோகிகள் இங்கே காட்டியவாறு கூறுகின்றார். (சிவாக்கி. பாடியம். பக். 501- 2) 3. சிவ. போ. சூ. 12. 4. செய்யல் ஆயின் - செய்வதனை ஆராய்ந்து பார்க்குமிடத்து. 5. அம்முதல்வன் உலகத்தார்போலன்றிப் பெத்தம் முத்தி இரண்டினும் அத்துவிதமாய் உடன் நின்றுகொண்டு யார் யார் யாது யாது செய்கின்றார் என்று அறிந்து அவரவர்க்கு அவ்வச் செய்திக்குத் தக்க பயனை அவ்வப்பொழுதே விளைவிப்பனாகலான் - சிவ. பாடியம். 1. நேசத்தர் தம்பால் நினைந்து என்பது பாண்டிப்பெருமாள் கொண்ட உரை 2. எல்லார்க்கும் - கண்ணொளியுடையவர், இல்லாத குருடர் ஆகிய எல்லார்க்கும். 3. எங்கணும் - பெத்தரிடத்தும் முத்தரிடத்தும். 4. அம்மலத்தின்கண்ணே யாவன் - பாசஞானமேயாய்த் தோன்றுவன். 1. பாசத்தார்க்கு இருட்கண் என்றதற்கு, “பாசபெந்திகளுக்குத் தோன்றாமல் நிற்பன்” என்றும், நினைந்து நேசத்தர் தம்பால் அருட்கண்ணாற் பாசத்தை நீக்கும் என இயைத்து, “தன்னை உள்ளபடி உணர்ந்து சிவநேசத்தை வைத்தவர்களிடத்து ஞானதிருட்டியைக் கொடுத்து அதனாலே பாசத்தாலங்களை நீக்குவன்; பாசத்தாலம் நீங்கவே தான் தோன்றுவன் என்பது மீட்சிமொழியாயிற்று” என்றும், தாமரை அலர்த்தும் பகல்போல் எனவே “பக்குவப் படாத பூவை அலர்த்தானென்று மீட்சி மொழியால் பக்ஷபாதியல்ல எனன்பதுமிலம்” நேசத்தார் என்று கொண்டு, “ஆதித்தன் அலர்த்துகைக்குப் பக்குவப்பட்ட தாமரைப் பூப்போல் என்னப்பட்ட நேசத்தையுடையவர்கள் என்பாருமுளர்” என்றும் பாண்டிப்பெருமாள் கூறுகின்றார். இனி, இவ்வெண்பாவின் கருத்தை, அருணந்திசிவனார், “எங்குந்தான் நிறைந்து சிவன் நின்றானாகில் எல்லாருங் காணவே வேண்டுந்தான் என்னில், இங்குந்தான் அந்தகருக் கிரவி யிருளாகும் ஈசன் அருட் கண்ணில்லார்க் கொளியாயே இருளாம்; பங்கந்தான் எழும்பதுமம் பக்குவத்தை யடையப் பரிதியலர்த் திடுவதுபோல் பருவஞ்சேர் உயிர்க்குத் துங்கஅரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே” (சிவ. சித்தி. 11: 8) என்று கூறுவது காண்க. 2. காணாரையும் என்பது காட்சியில்லாதாரையும், பகல் என்றது பகலைச் செய்வதாகிய ஞாயிற்றையும் குறித்து நிற்பதால் ஆகுபெயர் என்றார். 1. உணர்ந்தார் நேர் என்பது உணர்ந்தார்க்கு எனப் பொருள்படுதலின், நேர், நான்காம் வேற்றுமையை உணர்த்துவதாயிற்று. 2. “இதனானே முதல்வன் பெத்தம் முத்தி இரண்டினும் ஒப்ப நிற்பினும் ஒப்ப விளங்காமை உவமை மேல் வைத்து உணர்த்து முகத்தானே ஆன்மாவுக்கு முத்திநிலையிற் பூரண அறிவு நிகழுமாறும், அது முதல்வனது அறிவாகிய அருட்கண்ணை இன்றியமை யாமையும் கூறப்பட்டன” -சிவ. பாடியம். 3. ஆன்மாவைத் தனது திருவடிக்கண் சேர்த்துக் கோடற்கு உளதாகிய இச்சை மிகுதியால் அவ்வான்மாவின்கண் அநாதி முதல் அத்துவிதமாய் நிலைபெறும் முதல்வன்- சிவ. பாடியம். 4. மன்னியென்று பாடங்கொள்வர் பாண்டிப்பெருமாள். 5. அவ்வுயிரின் கண்ணதாகிய ஆணவமலத்தை உந்தித்தள்ளி - உ.வே. 1. எல்லாத் தொழிலும் தன் சந்நிதிக்கண் சத்தி சங்கற்ப மாத்திரையாய்ப் பரமின்றி விளையாட்டுப் போலச் செய்யும் அம்முதல்வன்- உ.வே. இவ்வெண்பாவின் கருத்தை, “நிலைபெற்ற இருளை மதி ஓட்டும் முறைமை போல அநாதியிலே தன்னிடத்து நிலைபெற்று நிற்கின்ற கர்த்தா தன்னுடைய காருணியத்தினாலே ஆணவமல முதலாயினவற்றை ஓட்டி; காந்தம் இரும்பை வலித்துத் தன்னுடைய வசமாக்கிக் கொள்ளுதலைப் போல அப்படிச் செய்யுமிடத்துச் சலனமும் விகாரமும் உண்டாகாவோ என்னின், சலிப்பும் விகாரமும் இலனாகியிருப்பன்” என்று விளக்கி, “மதியிருளைத் துரந்தாற் போல மலம் துரப்பன் என்பதனால், மலமாயா கன்மங்கள் அநாதியாய் இருக்குமவை அழியுமோ என்பார்க்குப் பக்குவமாயினார்க்கு அவை நீங்கி நிற்கும், கெடா என்பது கூறினார். அஃது எங்ஙனே என்னில் இருள் நிலைபெற்று நிற்கச்சே மதிவர நீங்கினாற் போல முதல் கெடாமல் மேலிடாமல் நிற்குமென்பதாயிற்று” என்பர் பாண்டிப்பெருமாள். 2. துகளறு - 36. 3. மலத்தைத் துரத்தற்குக் காரணம் அவ்வன்பெனப்படும் இச்சையே அன்றிப் பிறிதில்லை என்பது உணர்த்தி நிற்றலின் ஏகாரம் பிரிநிலை - உ. வே. 1.சத்திநிபாதம் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால்வகைப்படும். சிவபுண்ணியம் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நால்வகைப்படும். மேலும் சரியை முதலிய ஒவ்வொன்றும் சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நான்காக விரியும். ஞானத்திற்குக் காரணம் சரியை முதலியன என்றும், சரியை முதலியவற்றிற்குக் காரணம் மந்ததரம் முதலிய சத்திநிபாதம் என்றும் அறிக. 2.சேடமாய் என்பது பாண்டிப்பெருமாள் கொண்ட பாடம். 3. “நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா - சிவனுடைய சொரூபத்தைப் பெற்றுக் கூடுமிடத்து ஆன்மா கெட்டுக் கூடுமென்னில், கெடுமாயின் கூடுகைக்கு முதல் இல்லையாம்; எனவே, கெடாமற் கூடுவதில்லையாமோ வெனில்; நசித்திலதேல் ஒன்றாவதில்லை - கெடுவதும் இல்லை, எனில், வேறுமாய்ச் சாயுச்சியமில்லையாம்; எனவே கெட்டுக் கூடுவதுமில்லை, கெடாதாயிற் கூடுவதுமில்லை என்றார்; ஆனால் கூடுந்தன்மை எப்படி என்னில்; மலம் நசித்து - மலமானது கெட்டு; அப்பணைந்த உப்பின் உளம் அணைந்து சேடமாய்க் கப்பு இன்றாம் ஈசன் கழல் - நீருடன் ஆன்மாச் சிவனைக்கூடி அடிமையாய் வேறற இருக்கும் என்றவாறு. மலத்தினுடைய நீக்கத்தை இவ்விடத்துக் கெடும் என்றார், அவ்விடத்தும் அதனுடைய சேட்டிப் பில்லை யாதலால் எனக்கொள்க” -பாண்டி. உரை. 1.பாடாணவாதசைவர், “எல்லாக் கருவிகளும் நீங்கி ஆணவத்தோடு கூடி ஒன்று மறியாமல் கல்லுப்போற் கிடப்பது முத்தி என்பர். (சங். நிரா. பாடாண.) 2.மேலைவெண்பாக்கள் இரண்டினும் கூறியவாறு பூரண அறிவு விளங்கி ஆன்மா முதல்வன் வசமாய் ஒன்றுபட்டுக் கூடுங்கால் பண்டை ஏகதேச அறிவு கெட்டுக் கூடுமோ, கெடாது கூடுமோ எனக் கடாயினார்க்குக் கெட்டுக் கூடுமெனின், ஏக தேச அறிவு கெடாத வழி, வியாபகப்பொருள் விளங்குதல் இன்மையால் கூடுமாறில்லை; மற்று எங்ஙனம் கூடுமாறு எனின், ஏக தேச அறிவைச் செய்யும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் மாத்திரையே கெட்டொழிய, ஆன்மா தண்ணீரைச் சேர்ந்த உப்புப்போல முதல்வன் திருவடியைத் தலைப்பட்டு முதல்வனுக்குச் சேடமாம், முதல்வன் திருவடி அவ்வான்மாவைவிட்டுக் கவர்த்தலின்றி இயைந்து நிற்குமாகலான்”- 3. “அப்பணைந்த உப்புப்போல என்றது, நாழி உப்பும் நாழி நீரும் கூடின விடத்து நாழியாய் நீக்கவொண்ணாதாய் மிகுதியாகாமல் நின்றாற் போல, ஆன்மாவும் சிவனைக்கூடி நீக்கமற்று மிகுதியாகாமல் இருக்கும் என்பதாம்; இது கெட்டுக் கூடினதோ, கூடிக் கெட்டதோ என்னில் கெட்டுக் கூடிற்றுமில்லை, கூடிக் கெட்டதும் இல்லை, அவையிரண்டும் ஒரு மாத்திரத்தேயாம் என்பது தோன்ற, அப்பணைந்த உப்பு என்றார்: தன் கண்ணதாகிய கடினகுணம் நீங்கி அப்பினைச் சேர்ந்து ஒன்றாகிய உப்பு, ஆன்மா மலம் நசித்து முதல்வனைச் சேர்ந்து ஒன்றுபடுதல் மாத்திரைக்கு உவமையாயிற்று - சிவ. பாடியம். 1. நசித்தணைந்து என்பது காரணகாரியப் பொருட்டாய்ப் பிறவினை கோடலின் செயவெனெச்சத்திரிபாதல் அறிக - உ. வே. 2. இந்நூல் பக்கம் 3. அவினாவிருத்தி - விட்டு நீங்காமையாகிய செயல். 4. வெங்கொண்மூ என்றும், யுண்டும் என்றும் பாடங்கொள்வர் பாண்டிப்பெருமாள் 5. கேவலாவத்தையில் ஆன்மா ஆணவமல மொன்றே கொண்டு நிற்கும், சகலத்தில் ஆணவத்தோடு மாயை கன்மமென்ற இரண்டொடும் கூடி மும்மலரும் கொண்டு நிற்கும்; சுத்தத்தில் மாயை கன்மங்களின்றி, மலமும் தன் சேட்டை கெட்டு நிற்க, பூரண அறிவு விளங்கி நிற்கும் என அறிக. 6. “நித்தமாகிய மலத்திற்கு நாசமாமாறும், அது நசித்தவழி ஏகதேசமாய் விளங்கிய அறிவே பூரணமாய் விளங்கி வியாபகத்தைத் தலைப்படுமாறும் உவமையின் மேல் வைத்து இனிது வி ளக்கி மேலதனை வலியுறுத்துதற்கு” இவ்வெண்பா காட்டப் படுகிறதெனச் சிவஞானபாடியம் கூறுகிறது. “சீவன்முத்தி தசையும், பரமுத்தி தசையும் கூறுகின்றது” இவ்வெண்பா என்பர் பாண்டிப்பெருமாள். 1. தனது ஒளி சங்கோசமாய்ச் சிறிதே விளங்கி - உ. வே. 2. எங்கணும் விகாசமாய் விளங்கும் முறைமை போல - உ. வே. 3. பிரபஞ்ச விடயத்தை அறிந்து அதில் அழுந்தும் - உ. வெ. 4. முதல்வன் திருவருள் அம்மலசத்தியைக் கெடுத்து அடக்கிய வழி அவ்வறிவே பூரணமாய் விளங்கிக் கப்பின்றி (பிரிவின்றி) அம்முதல் 5.பொருளின் தன்மை, அப்பொருள் அழியுங்காறும் உடன் நிற்பதாகலின், கேடின்மை, தன்மை யெனப்பட்டது. 6. மலத்து என்றவிடத்து அத்துச்சாரியை உளதாகவும் வேற்றுமையுருபு நில்லாமைக்கு அமைதி கூறுவாராய், “இலேசாற் கொள்க” என்றார். ஐகார வேற்றுமைத் திரிபு கூறும் சூத்திரத்து (தொல். எழுத். தொகை. 15) “அன்ன பிறவும்” என்றது இலேசு. சூத்திரங்களுக்குப் பொருள் மூன்று வகையாகக் காண்பது உரை மரபு. எடுத்தோதும் சூத்திரத்தின் சொற்பொருள் ஒன்று. அது எடுத்தோத்து எனப்படும். உத்தி வகையாற் கொள்வது ஒன்று; மிக்கும் விதந்துகொண்டும் நிற்கும் சொற்களாகிய இலேசு வகையாற் கொள்வது ஒன்று. பொருளொன்று, எடுத்தோத்தாலும் உத்தியாலும் கொள்ளப்படாதாயின் இலேசினால் கொள்ளப்படும். இவ்வுரை மரபு பற்றி, “இலேசினாற் கொள்க” என்று உரைக்கின்றார். 1. ஆன்மாவின் அறிவு மறைந்தும் ஒடுங்கியும், மறைப்பு நீங்கிப் பூரணமாய் விளங்கியும் நிலவும் திறத்தை விளக்குதற்கே பொன்வாள் உவமை காட்டப்பட்டது; ஆயினும், அறிவு சிறிது விளங்கிய வழியும், பூரணமாய் விளங்கிய வழியும், ஆன்மா செய்வன இவை யென்பார், உலகை யுண்ணும், வரத்துச் செல்லும் என்று பொன்வாளின் என்பது; சிவஞானபாடியத்தினும், “இது விளங்குதல் மாத்திரைக்கு ஏகதேச உவமை என்பார், உலகையுண்ணும், வரத்துச்செல்லும் என வேற்றுமையும் உடன் கூறினார்” என உரைப்பது காண்க. வரம், எல்லாவற்றிற்கும் மேற்பட்டதாகிய இறைவன் திருவடி; “வரன் என்னும் வைப்பு” (குறள். 24.) என்றாற் போல. 2. ஞாயிற்றை மறைத்துக்கொண்டிருந்த முகிற்படலம் ஒருபுடையே ஒதுங்கியவழி, அதன் மறைப்புச் செயல் ஒடுங்கி ஞாயிற்றொளியில் மழுங்கிக் கீழ்ப்படுவது போல, மலம் மறைப்புச்சத்தி மடங்கிக் கீழ்ப்பட்டுக் கிடக்கும் என்பது உவமையால் பெறப்படும் என்பது. மந்திரத்தால் நெருப்பின் சுடும் சத்தி தடுக்கப்பட்டபோது நெருப்பு அழியாதவாறுபோல மலத்தின் மறைப்புச் சக்தி கெட்டவழி மலம் அழியாது என்ற இக்கருத்து, என்று கிரணாகமத்தில் கூறப்படுகிறது. இனி, பாண்டிப் பெருமாள், “ஆதித்தன் பகற்காலத்தில் பிரகாசமுமின்றி, இராக்கலத்து இருளுமின்றி, நடுவே மேகம் மறைக்க ஒருதன்மையாய் மக்கினமாய் இருந்த தன்மை போல, சீவன் முத்தராயினார் நேரே சிவப்பிரகாசமும் இன்றி,நேரே திரோதாயியினுடைய மறைப்புமின்றிப் பிராரத்துவ கன்மம் புசித்துத் தேகாந்தத்தே முகில் நீங்கிப் பிரகாசம் மிகுந்தாற் போலச் சிவசொரூபத்தைக் கூடிக் கலந்து வேறற நிற்பர் என அறிக” என்பர். இவர் வெங்கொண்மூ என்றும், உலகையுண்டும் என்றும் பாடங்கொள்வர். 1. இது, மனவாக்குக்கு எட்டாத சிவனைச் சிந்தித்துக் கண்டு வழிபடும் முறைமை கூறுகின்றது - பாண்டி. விருத்தி. சிந்திதன் - சிந்தையின்கண் அறியக்கூடியவன். 1. சீபாதத்தை - உ. வே. 2. தன்னைப்போல் அயரா அன்பின் அரன்கழல் அடைந்த மெய்ஞ்ஞானிகளோடு- உ. வே. 3. சிவந்த கமலம் போன்ற வலிய சீபாதத்தைக் கூடவொட்டாத அந்த மலத்திரயங் களையும் போக்கி, அப்படி மும்மலங்களும் நீங்கச் சீவன் முத்தராயினாருடனே கூடி மயக்கமறச் சிவன் அளவிலே சிவநேசம் மிகுந்தவர்களுடைய திருமேனியையும் திருக்கோயில்களையும் சிவனெனக் கண்டு வழிபடும் என்க; என்றது, நிட்டையிலே கூடி அனவரதமும் இருத்தலே மிகுந்தது; அது கூடாதோர் நிட்டையுடையோருடனே கூடி மலத்திரயங்களையும் நீங்கினவர்களாயுள்ள வேடத்துள்ளோரை வழிபட்டுத் திருக்கோயில் தண்டன் பண்ணுக என்றதாம். மும்மலங்களையும் நீங்க வென்றதாயிற்று. இந்தத் திருமேனிகளை வழிபடலே மும்மலத்தை யுணர்த்துமாதலாலே, அசிந்திதனாகிய கர்த்தாவைச் சிந்திதனாகக் கண்டு வழிபட வேண்டுதலின் (இது) கூறினார்- பாண்டி.விருத்தி. இனி, அருணந்திசிவனார், “செங்கமலத் தாளிணைகள் சேரலொட்டாத் திரிமலங்க ளறுத்தீசன் நேசரொடுஞ் செறிந்திட் டங்கவர்தம் திருவேடம் ஆலயங்க ளெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப்பாடி எங்கும்யாம் ஒருவர்க்கும் எளியோ மல்லோம் யாவர்க்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித் திங்கள்முடி யாரடியார் அடியோ மென்று திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடை யோரே” (சிவ. சித்தி. சூ. 12.) என்று கூறுகின்றார். 4. மேலைச் சூத்திரத்துக்கு எழுவாய் ஆன்மா என்பது; பொதுப்பட நிற்கும் அதனை ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால் சீவன் முத்தனாகிய ஆன்மா என்று வருவித்துக் கொள்ளுகின்றார். 1. திரோபவிக்குமிடத்து அஃதொழிய வேறொன்றுமில்லை என்னும்படி திரோபவித்து, மீண்டும் அனுக்கிரகிக்குமிடத்துத் தான் ஒழிந்து இல்லை யென்னும்படி அனுக்கிர கிக்கும் ஆதலால் நோன்றாள் என்றார் பாண்டிப்பெருமாள். திரோபவித்தல்- மறைத்தல். “வலியினையுடைய தாள்” என்பர் - நச்சினார்க்கினியர் (முருகு.4. உரை). 2. திருவருட்பயன், உயிர்விளக்கம் - 5. 3. நீராற் கழுவத்தக்கது ஆகலின், மலம் கழீஇ என்றார்; அறியாமையைச் செய்யும் மலத்தை ஞான நீரால் கழுவி என்று பொருள் உரைக்கப்படுதலின், குறிப்புருவகம் என்றார். உருவக வாய்ப்பாட்டாற் கூறாமல் கழீஇ என்ற வினையால் குறித்தலின் குறிப்புருவக மாயிற்று. 4. மாலற நேயம் மலிந்தவர் என்பது மலங்கழீஇ அன்பரொடு மருவினவர்களையே குறித்து வாளா அவர் என்னும் பொருள்பட நிற்கிறது என்றற்குச் சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது என்றார். “ஏறனையான் உளன் சீவகசாமி என்பான், வானேற நீண்ட புகழான் சரிதம்” (சீவக.6.) என்றவிடத்து, சீவகசாமி யென்பான் உளன்; அவன் சரிதம் என்று கூறவந்த அதன் ஆசிரியர், “வானேற நீண்ட புகழான்” என்று கூறினாற்போல, இது சுட்டுப்பெயர் மாத்திரையாய் நிற்கிறது என்பதாம். 5. தொழும் என்பது செலும் என்பதுபோலப் படர்க்கை வினைமுற்றாகலின், இஃது அணைந்தோரது தன்மை யென்பது பெறப்படுகிறது. 1.இச்சூத்திரத்து அதிகரணங்களின் மேற்கோள்களாகிய கண்ணழித்துரைகள் யாவும் முறையே, களைக இணங்குக வழிபடுக என விதிப்பொருளே கொண்டு கூறப்படுவது பற்றி இவ்வாறு கூறுகின்றார். 2. இது, சீவன் முத்தர்க்கு அறிவு புறம்பே வியாபரிக்கும் திறத்தை உணர்த்துகின்றதெனச் சிவஞானபாடியம் கூறுகிறது. 3. ஸ்ரீ. சு. தே. உரை: ஈண்டு - இம்மூன்று அதிகரணத்துள் வைத்து இம்முதலதிகரணத்து; ஆணவம் மாயை கான்மியம் என்னும் மலங்களை - ஆணவம் மாயை கான்மியம் என்று கூறப்படும் மும்மலங்களை; களைக என்றது - நீக்குக என்க. 1. கன்மம் செய்யப்பட்டுள்ள வினை; மூலகன்மத்தை நோக்கக் காரிய மாதலின், இது கான்மியம் என்றும் வழங்கப்பெறும் என்பது. 2. மலமாயைகளோடு வைத்துக் களைய நின்றது ஆகாமிய வினையே யாதல் கண்டு“அதுவே ஈண்டு எடுத்துக்கொள்ளப்பட்டதாகலின், காமியம் என்பது தலைக்குறை என்று” உரைப்பவரும் உண்டு. 3. அஞ்ஞானங் காட்டுமால் ஆணவமும் என்பது பாண்டிப்பெருமாள் கொண்ட பாடம். 1. புண்ணிய பாவங்களைப் பயக்கும் விருப்பு வெறுப்புக்களாய்ப் பொருந்தும் இக்கன்ம மலமும் - உ. வே. 2. மாயா தத்துவம் ஈறாக - உ. வே. 3. இவ்வெண்பா, “மலத்திரயங்கள் உள்ளளவும் ஞானம் கூடாதாகையால் அவற்றை நீங்கவேணும் என்கின்றது” எனக் கருத்துரைத்து, “கன்ம மலமாவது புண்ணிய பாவங்களாகிய போகங்களைப் பொருந்தும்; மாயா மலம் பிருதிவி முதலாகிய பொய்யை மெய்யாகக் கருதி மயங்க மயக்குதலைச் செய்யும்; ஆணவமலம் பொய்யாகியவற்றிலே சுபத்தை அடையப்பண்ணும்; இந்த மூன்று மலங்களுடனே கூடி நிற்றல் உண்மை ஞானிக்கு ஆகாது; ஆதலால் இவை நீங்கி நில் என்றவாறு என்றது, அனவரதமும் நிட்டை புரியவேணும்” என்று பொருள் கூறுவர் பாண்டிப்பெருமாள். 4. சிவ.சித்தி -2: 11. 5. சிவ.சித்தி- 11: 2. 1. ஆணவ கன்மங்களை, இவ்வாணவம், இக்கான்மியம் எனச் சுட்டிக் கூறுதலின், மாயையினும் அவ்வாறு சுட்டு வருவித்து இம்மாயை என உரைத்துக்கொள்க என்பது. 2. புண்ணிய பாவங்கள் தமக்குரிய காரண காரியங்களைக் குறித்து நிற்பதனால், உபசாரம் என்று உரைக்கின்றார்; பாடியத்தில் 3. விட்ட ஆகுபெயர், விடாத ஆகுபெயர், விட்டும் விடாத ஆகுபெயர் என்ற மூன்று வகை ஆகுபெயர்களுள், மாயை காண்மாயை என்பதில் முன்னின்ற மாயை விடாத ஆகுபெயர். இடவாகுபெயரும் அது போன்றவையும் விட்ட ஆகுபெயர் எனவும், சினையாகுபெயரும் அது போன்றவையும் விடாத ஆகுபெயர் எனவும், ஒருவகையில் நேரிய தொடர்பும், பிறிதொரு வகையில் தொடர்பு நேரே விளங்காமலும் வருபவை விட்டும் விடாத ஆகுபெயரெனவும் கூறப்படும். 4. காண் என்னும் வினை, காணப்படுவதாகிய மாயை என்னும் பெயரொடு முடிவதனால், ‘செயப்படு பொருளொடு முடிந்த வினைத்தொகை” என்றார். வினைத்தொகையிலுள்ள வினைப்பகுதி பெயரெச்ச வினையாதலால் இவ்வாறு முடிபு காட்டினார். 5. இவை - கான்மியம் முதலிய மும்மலங்கள். 6. திருக்குறள் 340. 1. அஞ்ஞானம் ஆன்மாவுக்கு இயற்கையன்று; ஆணவமலச் சார்பினால் உண்டாவது; அதுபற்றியே, அஞ்ஞானம் காட்டும் இவ்வாணவம் எனப்பட்டது; ஆனால் இவ்வதிகரத்துக் காட்டப்பட்ட ஏது, அவைஎன்று மும்மலங்களையும் பொதுவாகச் சுட்டிக்காட்டி, அஞ்ஞானத்தை உணர்த்தும் என்று கூறுகிறது அன்றோ? அவ்வாறு கூறியதன் கருத்து என்னையெனில், ஏனைய மாயை கன்மங்களும், ஆணவச்சார்பால் அஞ்ஞானம் காட்டும் என்பதை உணர்த்துவது என அறிக. 2. மும்மலங்களையும் களைந்த சான்றோருடைய “இச்சை வியாபரிக்கும்” திறம் இதனால் உணர்த்தப்படுகிறதென்று சிவஞானபாடியம் கூறுகிறது. 3. ஸ்ரீ சு. தே. உரை: சிவபத்தர்களோடு - அத்துவித நிலையைக் கடைப்பிடித்துச் செய்யும் அன்பானே முதல்வன் அருள்வழி நின்ற சீவன் முத்தர்களோடு; இணங்குக என்றது- நட்புச் செய்க என்க. 4. அணைதல் என்றது, இங்கே, இடையறாது சிந்தித்திருத்தல். 1.அடுத்துவரும் ஏதுவில் சிவபத்தரல்லாத ஏனையோர் “அல்லாதார்” எனக் குறிப்பிடுவதால், இங்கே அவர்களைக் கொணருகின்றார். 2. ஸ்ரீ. சு. தே. உரை: அல்லாதார் - பத்தியினால் மறவாது ஏத்தி முதல்வனது சீபாதத்தை அணையாத பாசத்தார்; அஞ்ஞானத்தை - சுட்டியுணர்வதாகிய விபரீத வுணர்வை; உணர்த்துவராகலான் - அறிவிப்பாராகலான், இனிச் சிவபத்தர்களோடு இணங்குக என மேற்கொண்டது என்க. 3. திருவாசக. போற்றி. 42:53. 1. மறைப்பித்துத் தம்மை மலங்களில் வீழ்க்கும் சிறப்பிலார் தம் திறத்துச் சேர்வை மறைப்பித்து என்று பாடங்கொண்டு, “திருவருளில்லாத பெத்தான்மாக்கள் மலங்களிலே வீழ்ந்து தம்மையும் பாசத்தையும் சிவத்தையும் அறியாமல் இருக்கின்ற வர்களாகையாலே தம்மைச் செறிந்தவர்களையும் உண்மையை மறைத்துப் பிறப்பித்து மலங்களிலே விடுதலைச் செய்யும் அச்சிறப்பிலார் தம்முடைய இடத்துக் கூடியிருத்தலை மீள விடுத்து” என்றும், “ஆன்மா அரைத்த மஞ்சள் போலப் பற்றினதைப் பற்றும் என்பது” என்று கருத்தும் கூறுகின்றார் பாண்டிப் பெருமாள். 2. அன்பில்லார் - ஈசனிடத்தும், அடியவரிடத்தும், வேறு எவ்வுயிரிடத்தும் அன்பில்லாதவர். 1.“பத்தர் இனத்தாய் பரன் உணர்வினால் உணரும் மெய்த்தவரை வினை மேவா -பத்தர்களுடைய கூட்டமாய்ச் சிவஞானத்தாலே உணரா நின்ற உண்மை ஞானிகளை ஆர்ச்சிதமாகிய வினை கூடாதென்பதாயிற்று” என்றும். “சிவஞானிகள் எப்பொழுதும் சிவஞானத்தையே பிரகாசிப்பர்கள்; ஆதலாலே அடைந்தவர்கள் வினையும் நீக்குவார்கள் என்பதாயிற்று; ஆன்மா மருவினதொன்றிலே மருவுமாதலால் என அறிக. இதுவும் சம்பிரதாய திட்டி” என்பர் பாண்டிப்பெருமாள். 2. சிவபத்தரது பெருந்தகைமை, “மறவியை மாற்றி ஞானக்கண்ணை விளக்கிப் பிறவிக் குழியினின்றும் எடுத்து நன்னெறிக்கண் வாழ்விக்கும்” சிறப்புடைமை. 3. மலம், அதனால் உண்டாகும் பிறவிக்குழியை உணர்த்துவது பற்றி ஆகுபெயராயிற்று. 4. சிறப்பிலார் என்பதிலுள்ள சிறப்பும், பத்தர் இனத்துப் பித்தாய் என்பதிலுள்ள பித்தும் அன்பினையே குறிக்கின்றமையால், சிறப்பு எனவும் பித்து எனவும் குறிக்கப்படுதற்குரிய காரணத்தை இங்கே விளக்குகின்றார். 1. சேர்வை - சேர்க்கை, கூட்டுறவு, இணக்கம் எனவரும். 2. உலகியலில் பெரியார் இணக்கம் கொள்ளப்படுவதும், சிற்றினத்தின் சேர்க்கை தள்ளப்படுவதும் போல, ஞானவாழ்வில் சிவபத்தர் இணக்கம் கொள்ளப்படுவதும், அல்லாதார் சேர்ச்கை தள்ளப்படுவதும் வற்புறுத்தப்படுகின்றன. “பரவுமின் பணிமின் பணிவாரொடே, விரவுமின் விரவாரை விடுமினே” (திருநத.157:5) எனவும், “விண்டொழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம், உண்டிறைஞ்சு வானவர் தம்மைத் தாங்கிய இறைவனை உலகத்தில், வண்டு வாழ்குழல் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி யிடமாகக் கொண்ட நாதன் மெய்த் தொழில்புரி தொண்டரோ டினிதிருந்தமை யாலே” (திருஞான. 242: 2) எனவும் சமயஞான குரவன்மார் கூறுதல் காண்க. 3. இவ்வதிகரணம் “அவரது இச்சை வியாபரிக்கும்” திறம் கூறுகிறதெனச் சிவஞான பாடியம் உரைக்கின்றது. 1. ஸ்ரீ. சு. தே. உரை: பத்தரது திருவேடத்தையும் - அயரா அன்பின் அரன்கழல் ஏத்தும் மெய்யன்பருடைய திருவேடங்களையும்; சிவாலயத்தையும் - சிவாலயங் களையும்; பரமேசுரன் எனக்கண்டு - முதல்வன் எனவே ஐயுறவின்றித் தெளிந்து; வழிபடுக என்றது - வழி 2. திருப்பல்லாண்டு. 8. 3. திருநா. 140. 4. திருஞான. 270, 271. 1. “எங்கும் சிவமாய் இருத்தலால், எங்கெங்கும் தங்கும் சிவன்” (திருமந். 2722) என்பது காண்க. 2. “இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியும் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகிப் பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவும் தம்முருவும் தாமேயாகி நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே” என்பது நின்ற திருத்தாண்டகத்தின் முதல் திருத்தாண்டகம். (திருநா. 308:1.) 3. திருவுருத்திரம் என்பது ஸ்ரீ ருத்திரம் என வழங்குவது; சிறப்புடைய சிவமந்திரங்களுள் ஒன்று. பண்டை நாளில் சிவன் கோயில்களில் இந்தத் திருவுருத்திரம் காலைச் சந்தியில் ஓதப்படுதற்கு வேந்தர்கள் நிவந்தங்கள் விட்டிருக்கும் செய்தியைக் கல்வெட்டுக்கள் (திருச்சி மாவட்டம், துறையூர் A. R.No.157 of 1937-8) குறிப்பிடுகின்றன. 1. திருவுருத்திரத்துள் உயிர்ப்பொருள், உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி எடுத்து ஓதுவது இங்கே குறிக்கப்படுகிறது. 2. தத்துவாதீதனா யிருக்கின்ற சிவன் தன்னை யாவரும் அறிதலை விரும்பித் தன்னுடைய திருமேனியைத் தனது பத்தர்களிடத்தே கொடுத்துத் தன்னாலே யாவர்கள் யாதொன்றையும் அறியும்படி அவர்களுடைய உயிர்க்குயிராய் எழுந்தருளி யிருப்பனாதலால், தன்னை உணருகின்ற பத்தர்களிடத்தே தயிரில் நெய்போலத் தோன்றுவன்; பாசபந்திகளுக்குப் பாலில் நெய்போலத் தோன்றுதல் இல்லையாய் இருப்பன் எ-று. எனவே, எங்கும் ஒக்க நிற்பவன் தயிரில் நெய்போலப் பத்தர்களிடத்துத் தோன்றி நிற்பனாதலால் அவர்களைச் சிவனாகவே வழிபடுவது நன்றென்றவாறாயிற்று என்பர் பாண்டிப் பெருமாள். 1. தன்னுணரச் செய்து என்றொரு சொல்லைப் பெய்து உரைத்தது, சொல்லெச்சமாயிற்று. 2. இருத்தல், இருத்துதல் எனப் பொருள்படுதலால் பிறவினைத் தொழிற்பெயர் என அறிக. இருத்துதல், இருப்பது ஒருத்தனும், இருப்பித்தவன் வேறொருவனுமாக இருப்பதைக் காட்டும்; இஃது இரு என்னும் வினைக்குரியவனுக்கு ஆகாமல் இருப்பித்தவனுக்கு ஆதலால் பிறவினை. 3. தன்னுணரும் நேசத்தர் என்பது, தன்னைக் குறியிறந்து நின்று உள்ளவாறு உணரும் அன்பு நெறியினை யுடையராதலால் அவர்பால் தயிரில் நெய்போல் தோன்றுவன் என்று இதனால் விளக்கப்படுகிறது. தன்னைக் குறியும் இறந்து நின்று உணர்தலால் என்பது ஏது. இது கைசெய்தூண் மாலையவர் (குறள்.10:35.) என்றாற் போல ஏதுவை உட்கொண்டு நிற்கிறது. 4. தன்னுணரவேண்டி, தன்னுணர, தன்னுணரும் என்று மூவிடத்திற் கூறியது. 5.பாசத்தார்க்கு என்பது பாசத்தாரிடத்து எனப்பொருள் படுதலால், ஏழாம் வேற்றுமையுருபு வருதல் வேண்டும்; அதனிடத்தே நான் . 6. இன்றாம் பதி என்ற விடத்து இன்று என்பதற்கு இல்லையெனப் பொருள்செய்தல் ஆகாது; பதியாகிய முதல்வன் இல்லாமற் போவதில்லை; அப்பாசத்தாரிடத்தே விளங்காமல் இருக்கின்றான். ஆனது பற்றியே விளங்காமை குறித்து நின்றது என்று குறிக்கின்றார். 1. இவ்வெண்பாவின் கருத்தை, அருணந்தி சிவனார், “அறிவரியான் தனையறிய ஆக்கையாக்கி, அங்கங்கே உயிர்க்குயிராய் அறிவு கொடுத்து அருளால், செறிதலினால் திருவேடம் சிவனுருவே யாகும், சிவோகம் பாவிக்கு மத்தால் சிவனுமாவர்” (சிவ. சித்தி: 12- 3) என்பது காண்க. 2. “இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத், தோன்றாதிருக்கவும் வல்லன் மற்று அதன், கான்றுபடு கனையெரி போலத் தோன்றவும் வல்லன் தான் தோன்றுங் காலே” (புறம். 315) என ஒளவையார் பாடுவது காண்க. 3. விளங்கித் தோன்றுவன் என்பதை, நம்பியாரூரர் முதலாயினார் வரலாற்றில் இறைவன் அவர்கள் கண்ட திருவுருவேயாய் விளங்கித் தோன்றி உரையாடியருளிய திறங்களால் இனிது அறியலாம். 1. காணப்பட்ட வடிவுகளெல்லாம் தானாகியிருந்து அவை அல்லவாகி நிற்கின்ற சருவ வியாபியாய சிவன், காட்டத்தில் அக்கினி, வேறாக உண்டானபடி யல்லவானாற் போல எங்கும் வியாபித்து நின்று ஒருவன் தனக்கு வேண்டினபொழுது பிரார்த்தித்த விடத்தே, கடைய வந்து அக்கினி தோன்றினாற் போல மந்திர மூர்த்தமாகக் கண்டதொரு மூர்த்தமாதலால் அந்த அந்த இடத்திலே, அந்த ஞானமே திருமேனியான ஆனந்த ரூபியாய்த் தோன்றாமலிருப்பனோ? தோன்றுவன், அந்தச் சிவசொரூபம் தானாகி நின்று காணும் தபோதனர்க்கு எ-று. எனவே, திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனியை மந்திர மூர்த்தமாகக் கண்டு தற்பாவனையால் பாவிக்க, அந்தப் பாவனை யிறந்த சொரூபம் தானாம் என்றவாறு”- பாண்டி. விருத்தி. 2. காட்டத்தில் அங்கி யென்றது உவமை. 3. ஆனான் என்றும், தோன்றானோ என்றும், முதல்வனை உயர்திணை வாய்பாட்டாற் கூறுபவர், நின்று அங்கு உளதாம் என வேறு வாய்ப்பாட்டாற் கூறியது, அவன் பரம்பொருளாகிய பொருண்மை (பொருட்டன்மை) பற்றி யென்று இங்கே அமைதி காட்டுகின்றார். 4. வருகின்ற அதிகரணம். 1. விதியொன்றினை முதற்கண் கூறிப் பின்பு அதனையே வேறொரு குறிப்புப் பற்றி எடுத்தோதுவது உண்டு; அந்நெறியில் அதனை முதலிற் கூறுவது புரோவாதம் எனவும், பிற்கூறுவது அனுவாதம் எனவும் வழங்கும். களைக, இணங்குக, வழிபடுக என்ற விதியை, இவற்றை இயல்பாகவே செய்து வருவார்க்குப் புரோவாதமாக (விதிமுகமாகக்) கூறல் வேண்டா; வற்புறுத்தும் குறிப்பால் அனுவாதமாக உரைத்தல் வேண்டும் என்பது இங்கே நிகழ்த்தப்படும் ஆசங்கை. 2. சு. தே. உரை. இவ்விடங்களின் - மேற்கூறிய திருவேடங்கள் சிவாலயங் களிடத்தே; வழிபடுக என்றது-வழிபாடு செய்க என்க. 3. வழிபடுக என்றது, ஏவல் கண்ணிய வியங்கோளாதலின், விதித்தலை வலியுறுத்தவாறு என்று தெருட்டுகின்றார். 1. வழிபடுக என்பது விதியாய் வற்புறுத்தப்பட்டது போல ஏனைய களைக, இணங்குக என்று கூறப்பட்டனவும் விதித்தற் பொருளில் வந்தன என்பது. “எடுத்த மொழி இனம் செப்பலு முரித்தே” (தொல். சொல். 61) என்பதனால் “இனம் பற்றி” என்றார். 2. சிவ. போ. சூ. 9. அதி. 1. 3. நாலடி : தூய்தன்மை. 2. 4. “புவிமுதல் ஐம்பூதமாய்ப் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய்க் கரணம் நான்காய், அவையவை சேர் பயனுருவாய் அல்லவுருவாய் நின்றான்” (திருஞானசம். 29:7.) என்று அருளுவதால், முதல்வன் “எல்லாவற்றினும் கலப்பால் அதுவது தானாகியும் பொருண்மையால் அல்லனாகியும்” நிற்பது காண்க. பயனுருவாய் நின்றபோது செய்தற்குரிய வழிபாடு, அல்லவுருவாய் நின்றபோதும் செய்தற்குரியதே என்பது யாவர்க்கும் ஒப்பமுடிந்ததொன்று; அதனால், தாற்பரியத் தால் அஃது “ஒருதலையான் வேண்டும்” என்பதைப் பெறுவிக்கப்படும். 1.திருவேடத்தையும் சிவாலயத்தையும் வழிபடுக என்றால், இவற்றைச் சிவனென்று வழிபடுக என ஒற்றுமைப்படுத்திக் கூறியதாம். திருவேடம், சிவாலயம் என்ற இவ்விடங்களில் சிவனை வழிபடுக என்றது, அவற்றின் வேறாகச் சிவனைத் தேறி வழிபடுக என வேற்றுமைப் படுத்திக் கூறியதாம். 2. “வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும், தீமையிலாத சொலல்” என்பது பொது விதி; இதன்கண் எய்தாத பொய்மையை, “பொய்மையும் வாய்மை யிடத்த புரை தீர்ந்த, நன்மை பயக்கும் எனின்” என விதிப்பது, எய்தாதது எய்துவித்ததாம்; இனி, “பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்பது விதி. “ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று” என்றது, முன்னைய விதி கெடாதபடி பாதுகாப்பதாகின்றது. இஃது எய்தியது இகந்துபடாமைக் காப்பதாம். “உண்ணாது நோற்பார் பெரியர்” என்பது விதித்தது; “பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரிற் பின்” என்றது எய்தியது ஒருமருங்கு மறுத்ததாம். முதல்வன் அதுவது தானாய் நின்றவிடத் தெய்திய வழிபாடு, அல்லனாகிய விடத்து எய்தாது இகந்து போகாதபடி ஒருதலையான் வேண்டுமென வற்புறுத்தப்படுவதால், 3. வாறு என்னும் சொல் போல எனப்பொருள் படுவதனால், உவம வுருபுபட நின்றது என்றார். “ஞாயிறு தோன்ற உலகெலாம் மறைத்து நிற்கும் இருள் நீங்கும் ; அவ்வாறே நல்லறிவு தோன்ற மனத்திற் படிந்திருக்கும் அறியாமை யெல்லாம் நீங்கும்” என்பதில் அவ்வாறு என்னும் சொல் அதுபோல எனப் பொருள் தந்து நிற்க, வாறு என்பது போல வென்னும் பொருள்பட வருமாறு வழக்கினுள்ளும் காணலாம். 4. இவ்வெண்பாவில், கண்டார்க்கு என்பதைக் கண்டால் எனவும், என்றதையும் என்பதை என்றதுவும் எனவும் பாடங்கொள்வர் பாண்டிப்பெருமாள். இது பற்றி அவர் கூறும் பொருள் வருமாறு; “அது இது என்றது அதுவல்லான் - அதுவல்ல இதுவல்ல என்று நீக்கப்பட்ட தேக முதலாயினவும் அல்லன்; கண்டால் அது இது என்றதுவும் அல்லான் - விசாரித்துப் பார்க்கில் அதுவல்ல இதுவல்ல என்று தேக முதலாயினவற்றைப் பிரித்து நீக்கப்பட்ட ஆன்மாவும் அல்லன்; பொதுவதனில் அத்துவிதம் - பொதுவாக அவ்விரண்டினும் நின்று அவற்றைச் சேட்டிப்பித்து நிற்பன்; ஆதல் - ஆதலினாலே; அகண்டமும் தைவமே - சர்வமும் சிவமயமாம்: அத்துவிதி அன்பின் தொழு - அப்படி அந்தச் சிவலிங்கத்தினும் வேறறக் கலந்து நிற்பன் அவனை நேசித்து அந்தச் சிவலிங்கத்தைப் பூசை நமஸ்காரம் செய் எ-று. ஏகாரம், தேற்றம் 1. பக்கு இசைத்தல் - பிரிந்து இசைப்பது; தோணி “பார்த்தாக்கப் பக்குவிடும்” (குறள். 1068.) என்றாற்போலப் பிளந்து (பிரிந்து) இசைப்பது என அறிக. 2. ஈண்டுக் கூறப்படும் பேதம், அபேதம், பேதாபேதம் என்ற மூவகை இயைபுகளையும் உமாபதி சிவனார், “பொற்பணிபோல் அபேதப் பிறப்பிலதாய் இருள் வெளிபோல் பேதமும் சொற்பொருள் போல் பேதா பேதமும் இன்றி, பெருநூல் சொன்ன அறத்திறனால் விளைவதாய் உடலுயிர், கண் அருக்கன், அறிவொளி போல் பிரிவரும் அத்துவிதமாகும் சிறப்பினது” (சிவப்.7) என்று கூறுவது காண்க. உடல் உயிர் அபேத நிலை; கண் அருக்கன் பேத நிலை; அறிவொளி பேதா பேத நிலை என்க. இந்நிலை மூன்றினையும் திருஞானசம்பந்தர், ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்பர் (11:2) இதுபற்றியே மெய்கண்ட தேவரும், அவர் மாணவரான அருணந்தி சிவனாரும் முறையே, “அவையே தானே ஆய்” (சிவ. போ. சூ. 2) எனவும், “உலகெலாமாகி வேறாய் உடனுமாய் ” (சிவ. சித்தி. சூ. 2:1) எனவும் கூறினரென அறிக. 1. உம்மைத்தொகையாகவே, அதுவும் இதுவும் என்பது பொருளாயிற்று. 2.இருபெயரொட்டுப் பண்புத்தொகை யாகும்போது அதுவாகிய இது எனப்பொருள்படும். 3. அல்லான் என்பது அன்மை யடியாகப் பிறந்த குறிப்பு வினைமுற்று; இங்கே எச்சமாய் நிற்றலால் முற்றெச்சக் குறிப்பு என்றார்; இது குறிப்பு முற்றெச்சம் எனவும் வழங்கும். 4. பண்டு, இன்று முதலிய குற்றுகரங்கள் பண்டை, இன்றை என ஐயீறுடைய குற்றகரமாவது போல, என்றது என்பது என்றதை என ஐயீற்றுடைக் குற்றுகரமாயிற்று. 5. இந்நூல் 321. ம் பக்கம் காண்க. 6. அன்பு என்பது அன்பு விளையும் இடத்துக்கு ஆகி நிற்பதால் ஆகுபெயராயிற்று. 7. 8. இவ்வாறு உரைப்பவர் உரைப்பது; அது இது என்றது அதுவல்லான் - அருவென்றும் உருவென்றும் சொல்லப்படுவதாகிய அத் திருமேனிகளையுடையனும் அல்லனாய்; அதுவிது என்றதையும் அல்லான் - அருவுருவம் எனப்படும் அத்திருமேனியையு முடையன் அல்லனாய்; பொது அதனில் - அம்மூன்றற்கும் பொதுவாய்; அத்துவிதமாக நிற்பன் என்பது. 1. அன்பின் தொழு- அன்பினால் தொழுக. இங்கு, அன்பின் என்றது ஏதுப் பொருட்கண் வரும் ஐந்தனுருபேற்ற இயற்பெயர். 2. இவ்வத்துவித ஞானம் அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்தென்று கண்டு ஒருவுதலான் உளதாம் பயனாகலான் - உ. வே. “இது வழிபாட்டாலன்றி வினை நீங்காது என்கின்றதெனப் பாண்டிப்பெருமாள் கூறுவர். 3.அத்துவித ஞானம் மேம்பட்டு நிகழாதாகலின்- உ. வே. 1.வினையால் அசத்து விளைதலால் - யாதொரு வினையைச் செய்யுமிடத்து அந்த விளையினாலே அஞ்ஞானம் விளைந்துவருமாகையால்; என்றது மனவாக்குக் காயத்தாலொழிந்து ஒரு வினையும் கூடாது; அந்த வினையைச் செய்யுமிடத்து ‘யான் செய்தேன் பிறர் செய்தார், என்னது, யான் என்று ஒழிய வாராதாகையால் யான் என்பது உள்ள அளவும் வினை நீங்காதாயிற்று. ஞானம் வினைதீரினன்றி விளையாது - அப்படியாகிய வினை நீங்கினாலன்றி உண்மை ஞானம் விளையாது; வினைதீர ஞானத்தை நாடித் தொழவே அது நிகழும் - அந்த வினையைத் தீரத் திகழ்ந்த ஞானத்தினை ஆராய்ந்தறிந்து வழிபட அந்தச் சிவப்பிரகாசம் தோன்றும்; ஆனத்தால் அன்பின் தொழு - ஆகையால் அன்பினையுடையையாய்ச் சிவபத்தரையும் சிவலிங்கத்தையும் அன்பினாற் கண்டு வழிபடுக; அப்படி வழிபட்டு வரவே தேகாந்தமளவும் பிராரத்தம் புசிக்கவேணும்; புசிக்குமிடத்து யான் எனது என்றொழிய வாராது, அது வருமளவும் வினை ஏறும்; அந்த வினை ஞானத்திலே நின்று நீக்கவேண்டும்; அந்த ஞானத்தில் நிற்றல் எப்பொழுதும் கூடாதாகையால் தொண்டர்களையும் சிவலிங்கத்தையும் வழிபடவே, வந்த வினை ஏறாது என்றதாம். ஞானத்தை நாடி என்றது, கன்மம் புசித்தற்கு வருகின்ற முறைமையும், இந்திரியங்கள் விடயீகரிக்கின்ற முறைமையும், தான் அதுவதுவாய் நிற்கின்ற முறைமையும் கர்த்தா புசிப்பிக்கின்ற முறைமையும் ஆராய என்றதாம் - பாண்டி. விருத்தி. 2. “அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து என்று காண உளதாய் நிற்பது ஞான சொரூபம்” (பக். 340) என்று உரைத்து, இவ்வாறு அசத்தாகிய பாசம் ஒருவ உளதாகிய ஞானம் நிலைபெறுதற்கு “இவ்விடத்து ஸ்ரீ பஞ்சாக்கரத்தை விதிப்படி உச்சரிக்க” (பக்.349) என்றாராகலின், அம்முறையே இங்கே, வழிபாடு பற்றிய ஆராய்ச்சியில் திருவைந்தெழுத்துப் பேசப்படுகிறது. 1. பதி ஞானம் ஒன்றேயாகலின், விளையாது என ஒருமை வினைமுற்றுக்குரிய துவ்விகுதி தொக்கது என்றார். 2. பின்வந்த ஞானம் என்னும் பெயர், ஞானத்தையுடையார்க்கு ஆகிவருதலின், ஆகுபெயராயிற்று. 3. “ இது தான் அவனான பின்பு வழிபாடு என் என்பார்க்கு அது வேண்டுமென்பதூஉம், ஆசாரியனே சிவன், அவனை எவ்விடத்தும் காண்டல் வேண்டும் என்பதூஉம் கூறுகின்றது” என்பர் பாண்டிப்பெருமாள். 1. “ஒன்றையும் அறியாமலிருந்து ஆன்மாவைத் தன்னுடைய அருளினாலே ஆணவம் மாயை காமியம் என்னும் மூன்றையும் தரிசிப்பித்து தன்னைத் தரிசிப்பித்து, தன்னுடைய சொரூபமே சொரூபமாக நிறுத்திய குருபரனை, அவன் தானான பின்பு தேகமுள்ளளவும் மறக்கின்றது பாதகமாம்; அதுவல்லதூஉம், அப்படிக் குருமூர்த்தமாகிய சிவன்தான் தன்னுடைய சொரூபமே இவனுக்குச் சொரூபமாகச் செய்தவிடத்தும் அடிமையாகவன்றோ நிற்கின்றான்; அதனாலே எவ்விடத்தும் அடிமையாகவன்றோ நிற்கின்றான்; அதனாலே எவ்விடத்தும் அடிமையேயானால் இவ்விடத்தும் அடிமையாய் நின்று தொழுகையன்றோ தனக்குப் பலமாவது எ-று. எனவே, சிவனுடைய சொரூபமான விடத்தும், பெறுவானும், கர்த்தாவும், அடிமையும் உண்டு என்னும் துணிவும், இவ்விடத்தும் அப்படி அடிமையாய் நீங்காமல் நின்று வழிபட வேண்டுமென்பதூஉம் கூறினார் 2. திருக்குறள். 110. 3. அலதும் எனப் பாடங்கொண்டு, பிழை என்றதற்குப் பாதகமாம் எனப் பொருள் உரைத்து, அலது என்றதற்கு, “இது பிழையாதல் அன்றியும் என்று உரைப்பாருமுளர்” என்றார். இப்பாடங் கொண்டவர் பாண்டிப்பெருமாள். 4. “இறந்தாரை யெண்ணிக் கொண்டற்று” (குறள். 22) என்ற விடத்துக் கொண்டால் என்பது கொண்டு என வந்தாற்போல. 1. சிவ. சித்தி. 11: 10. 2. இந்நூல் பக். 321 காண்க. 3. மஹான் என்னும் வடசொல் மான் எனத்திரிந்தது என்பார் “வடசொற்றிரிபு” என்றார். பெருமையுணர்த்தும் மா என்னும் தமிழ்ச்சொல் னகரவீறு பெற்றுப் பெரியோன் என வந்த வகையினை இவ்வுரைகாரர் மறந்துபோய் இவ்வாறு கூறுகின்றார். அப்பெரியோனை எனப் பொருளுரைத்த மையின், அகரச்சுட்டினை வருவித்துரைக்க என்று உரைக்கின்றார். இனி, பாண்டிப் பெருமாள் மானே என்று பாடங்கொள்ளாமல் ஆனால் தொழுகை வலி என்று பாடங்கொண்டு அதற்கேற்ப உரை கூறுகின்றார். 4. தொழுகை வலிதருவது; அதனை வலியென்று கூறியது உபசாரம், உபசார வழக்கின் இயல்பு மேலே கூறப்பட்டுளது. 5. “இது சிவனையும் குருவையும் சாத்திரத்தையும் ஒன்றாக நினைந்து வழிபட வேண்டும் என்றது” எனப் பாண்டிப் பெருமாள் கூறுகின்றார். 1. சிவமென்னும் அந்ததரன் என்று பாடங்கொண்டு, “சர்வான்மாக்களுக்கும் பிராணனாகியுள்ளான் என்னும் சிவன்” என்று பொருளுரைப்பர் பாண்டிப் பெருமாள். 2. இதற்குப் பாண்டிப்பெருமாள் உரைக்கும் பொருள்: சிவமென்னும் அந்ததரன் சிந்தைநேர் நோக்கச் சிவமுண்டாம் ஒன்று மலர்த்தார்க்குப் பவம் இன்றாம்- சர்வான்மாக்களுக்கும் பிராணனாகியுள்ளானென்னும் சிவன் சிவம்பிரகாசிக்கும் ஒரு மலத்தையுடைய விஞ்ஞானகலர்க்கு நின்ற நிலையிலே திருவுள்ளத் தடைக்கப் பிறவி யில்லையாகும், பார்க்கப் பவம் இன்றாம்; சிவமுண்டாம் இரண்டு மலத்தார்க்கு ஒண்குருவால் சிந்தைநேர் நோக்கக் கண் வாசகத்தில் பவம் இன்றாம் - சிவம் பிரகாசிக்கும் இரண்டு மலத்தையுடைய பிரளயாகலர்க்குச் சகத்தில் ஒண்குருவாய்ச் சிந்தை நேராகப் பார்க்க, திருநயனங்களாலே பார்க்கப் பிறவி இல்லையாகும்; சிவமுண்டாம் மும்மை மலர்க்கு இன்று இங்கு தண்குருவால் சிந்தைநேர் நோக்க இன்நூல் பவம் இன்றாம் - சிவம் பிரகாசிக்கும் மூன்று மலத்தையுடைய சகலர்க்கு இப்பொழுது சகத்திலே அவர்களைப்போலத் திருமேனி கொண்டு ஒள்ளிய ரூபனாகி வந்து திருவுளத் தடைக்கத் திருநயனங்களாலே பார்க்க இனிய சாத்திரங்களா யினவற்றை யுணர்த்தப் பிறவி இல்லையாகும் எ-று. நூல் என்றது நூலையுணர்த்த என்பதாம். பவம் இன்றாம், சிவம் உண்டாம் என்பதனை எவ்விடத்தும் கூட்டுக. சகலர்க்கு எல்லாம் வேண்டுமென அறிக. இது சம்பிரதாய திட்டியால் அறிவித்தது.” இன்னூல் என்பது பாண்டிப் பெருமாள் கொண்ட பாடம். 1. “வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தத் திறன்” என்று உமாபதி சிவனார் கூறுதலின், தெளிவாகிய அந்ததரம் சித்தாந்தமாயிற்றென அறிக. “வெ. என்று மகுடாகமம் இக்கருத்தையே வற்புறுத்துவது காண்க. 2. எனப்படும் என்பது என்னும் என வந்தது. 3. “அன்றியனைத்தும் பெயர்ப்பயனிலையே” (தொல். சொல். 67) என்றவிடத்து, அன்றியனைத்தும் என்பது அவ்வனைத்தும் எனப் பொருள்படுவது போல, இன்றிந்நூல் என்பது இந்நூல் எனப் பொருள்படுகிறது என்று கூறுகின்றார். 4. “தான் உரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாமுணர, ஏது திருட்டாந்தத்தால் இன்று” என்பது. 1. “தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன், பரிமாநிரையிற் பரந்தன்று வையை” என்பது பரிபாடற் பகுதியென்று நுண்பொருண்மாலையால் அறிகின்றோம். 2. தொழுமியல்பான் என்பது பாண்டிப் பெருமாள் கொண்ட பாடம். 3. இது “நூன்மரபு - தனியன்” எனப் பாண்டிப்பெருமாள் விருத்தியுரையிற் காணப்படுகிறது. இதற்குச் சிவஞான முனிவர் உரையில்லை; பாண்டிப் பெருமாள் கூறும் உரை வருமாறு: எந்தை சனற்குமரன் ஏத்தித் தொழும் இயல்பான் - எம்முடைய சுவாமியான சனற்குமார பகவான் தோத்திரங்கள் முதலாயின கூறித் தொழுத முறைமையாலே; நந்தி அருள் செய்த ஞான நூல் - ஸ்ரீ நந்தி தேவ நாயனார் அவருக்கு அருளிச்செய்த ஞான நூலை; சிந்தை செய்து தாரணியோர் தாம் உணர மெய்கண்டான் உரைத்தான் - யாம் பெற்றதெல்லாம் யாவரும் பெறுக என்பது திருவுள்ளத் தடைத்து இப்பொழுது தமிழ் நூலாகப் பூமியுள்ளோர் அறியும்படி அசத்தை அசத்தென்று நீக்கிச் சத்தைத் தரிசித்தவன் அருளிச் செய்தான்; ஏது திருட்டாந்தத்தால் இன்று - பக்கம் ஏது திருட்டாந்தங்களால் இப்பொழுது எ-று. என்றது, பரமேச்சுரன் நந்திகேச்சுர தேவர்க்கு அருளிச்செய்ய, அவர் சனற்குமார. பகவானுக்கு அருளிச்செய்ய, அந்தப் பரம்பரையில் மெய்கண்டதேவ நாயனார்க்கு அருளிச்செய்ய அவர் இப்படித் தமிழாக அருளிச்செய்தார் என்பதாம்.”