தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (மூன்றாம் பகுதி) செய்யுளியல் வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (மூன்றாம் பகுதி) செய்யுளியல் உரையாசிரியர் : நச்சினார்க்கினியர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 280 = 296 படிகள் : 2000 விலை : உரு. 185 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : ஃப்ராம்ட் ஆப்செட் 34, திப்புத் தெரு இராயப்பேட்டை, சென்னை - 600 014. கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி(EFEO)யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே ஜிஉயர்தனிச் செம்மொழிஜி எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், ஜிஉலக முதன் மொழி தமிழேஜி என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனை யையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! ஷிஎங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர்ஷி என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. ஷிபுத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்ஷி தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [ciuaháÇa®fŸ - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய ஜிஇலக்கண வரலாறுஜி என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனிபாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பை செய்ததுடன் பிழையின்றி நூல்கள் வெளிவருவதற்கு மெய்ப்பும் பார்த்து உதவிய பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும்போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க. குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், முனைவர் இரா. திருமுரு கன், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், பா. இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், கி.த.ப. திருமாறன் ஆகி யோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஆசாரா. ஆசாரக் கோவை ஆய்ச்சி. ஆய்ச்சியர் குரவை ஊர்சூழ். ஊர்சூழ்பரி எச்ச. எச்சவியல் எழு. தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை களவழி. களவழி நாற்பது கானல். கானல்வரி குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப் படலம் சிலப். சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி சூளா. சூளாமணி செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் திருச்சிற். திருச்சிற்றம்பலக் கோவையார் துறவு. துறவுச் சுருக்கம் துன்ப. துன்ப மாலை தொல். தொல்காப்பியம் நற். நற்றிணை நாலடி. நாலடியார் நான்மணி. நாண்மணிக்கடிகை நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப் பாலை பதிற். பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பொருந. பொருநராற்றுப் படை மதுரைக். மதுரைக்காஞ்சி மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. திருமுருகாற்றுப் படை வேட்டு. வேட்டுவரி வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளு மாறு ஷிதொல்காப்பிய வாழ்வியல் விளக்கம்ஷி இதனொடும் இணைக்கப்பட்டுளது! வெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே! அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, ஜிதமிழின மீட்புப் பணிஜியெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் ஜிகருவிநூல் பதிப்பகம்ஜி என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, ஜிதமிழின மீட்புப் பணிஜியெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், ஜிபெரியாரைத் துணைக்கோடல்ஜி என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள ஜிமண்ஜி எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து ஜிஇந்தாஜி என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் ஜிதொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தைஜிச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் 8 செய்யுளியல் நச்சினார்க்கினியருரை செய்யுட்குரிய உறுப்புக்கள் 1. மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ யாத்த சீரே யடியாப் பெனாஅ மரபே தூக்கே தொடைவகை யெனாஅ நோக்கே பாவே யளவிய லெனாஅத் திணையே கைகோள் கூற்றுவகை யெனாஅக் கேட்போர் களனே காலவகை யெனாஅப் பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ முன்னம் பொருளே துறைவகை யெனாஅ மாட்டே வண்ணமோ டியாப்பியல் வகையின் ஆறுதலை யிட்ட வந்நா லைந்தும் அம்மை யழகு தொன்மை தோலே விருந்தே யியைபே புலனே யிழைபெனாப் பொருந்தக் கூறிய வெட்டொடுந் தொகைஇ நல்லிசைப் புலவர் செய்யு ளுறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத் தனரே. என்பது சூத்திரம். இவ்வோத்து செய்யுளது இலக்கணம் உணர்த்தினமையிற் செய்யுளியல் என்னும் பெயர்த்து: எனவே இவ்வோத்து நுதலியது செய்யுளிலக்கண மாயிற்று. பாயிரத்துள் 'வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி, னெழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்வல்' என்றமையான் இதற்கு முன்னர்க்கூறிய அதிகாரங்களிலும் இவ்வதிகாரத்தும் எல்லாம் வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேண்டுவன கூறி, அவ்விரண்டும் பற்றிச் செய்யுள் நிகழுமாதலான் அச் செய்யுட்குரிய இலக்கணத்தை யெல்லாம் இவ்வோத்தினுள் தொகுத்துக் கூறுகின்றார் என்றுணர்க. இங்ஙனங் கூறவே, முற்கூறிய ஓத்துக்களோடு இயைபுடைத்தாயிற்று. இவ்வோத்தினுள் இத்தலைச் சூத்திரம்;. இவ்வோத்தினுள் மேற்கூறுகின்ற செய்யுட்கு உறுப்பாவன இவையென்று அவற்றின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. இதன் பொருள். மாத்திரையென்றது எழுத்திற் குரித்தாக எழுத்ததிகாரத்தோதிய மாத்திரைகள் தத்தம் அளவின் இறந்து பாவின் ஓசை வேறுபாடுகளையுணர்த்தி விராஅய் நிற்கும் நிலையை; மாத்திரை யென்றது மாத்திரையளவை என்பதூஉம், எழுத்தியல் என்றது எழுத்தியல் வகையை என்பதூஉம் மேலைச் சூத்திரத்தாற் பெறுக. எழுத்தியல் வகையென்றது எழுத்ததிகாரத்துக் கூறிய எழுத்துக்கள் செய்யுட்கியலும் வகையை. அசைவகையென்றது இயலசையும் உரியசையும் என இருவகையாம் அசைக்கூறுபாட்டினை. யாத்தசீர் என்றது பொருள்பெறத் தொடர்ந்து நிற்குஞ் சீரை: எனவே அசையும் தனித்தனியே பொருள் பெறுவனவும் தனித்தனிப் பொருளின்றிச் சீராயவழிப் பொருள் பெறுவனவும் என இருவகையாம்; தேமா, சாத்தன் எனவரும். அடியென்றது அச்சீர் இரண்டும் பலவுந்தொடர்ந்ததோருறுப்பை. யாப்பென்றது அவ்வடிதொறும் பொருளேற்று நிற்பச் செய்வ தொரு செய்கையை. மரபென்றது காலந்தொறும் இடந்தொறும் வழக்குத் திரிந்த வாற்றுக்கேற்ப வழுப்படாமற் செய்வதொரு முறைமையை. தூக்கென்றது பாக்களைத் துணித்து நிறுத்தலை. தொடைவகையென்றது எழுத்துச்சொற் பொருள்களை எதிரெதிர் நிறீஇத் தொடுக்கின்ற தொடைப்பகுதிகளை. நோக்கென்றது மாத்திரை முதலிய உறுப்புக்களையுடைத்தாய்க் கேட்போர்க்கு நோக்குதல்படச் செய்தலை. நோக்குதல் - பயன்கோடல். பாவென்றது இவ்வுறுப்புக்களையுடைத்தாய்ச் சேட்புலத்திருந்து சொல்லும் பொருளுந் தெரியாமல் ஒருவன் கூறிய வழியும், இஃது இன்ன செய்யுளென்றறிவதற்கு ஏதுவாகிப் பரந்துபடச் செய்வதோரோசையை. அளவியல் என்றது அடிவரையறையை. திணையென்றது அகத்திணையும் புறத்திணையும் அறியச் செய்தலை. கைகோள் என்றது அவ்வத்திணையொழுக்கம் அறியச்செய்தலை. கூற்றுவகையென்றது அச்செய்யுட்கேட்டோரை இது கூறுகின்றோ ரின்னோரென அறிவித்தலை. கூற்றிவை என்பது பாடமாயின் அஃது எண்ணிய மூன்றனையுந் தொகுத்ததாம். கேட்போர் என்றது இன்னார்க்குக் கூறுகின்றது இதுவெனத் தெரித்தலை. களனென்றது இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் முதலியன உணரச் செய்தலை. காலவகையென்றது முக்காலத்தும் திணை நிகழ்ச்சிக்கண்ணே பொருணிகழ்ச்சி யுணரக் கூறலை. பயனென்றது சொல்லிய பொருளாற் பிறிதொன்று பயப்பச் செய்தலை. மெய்ப்பாடென்றது சொற்கேட்டோர்க்குப் பொருள் கட்புல னாதலை. எச்சவகையென்றது சொல்லப்படாத ஒழிபும் தழீஇக் கொள்ளச் செய்தலை: அது கூற்றும் குறிப்பும் என வருதலின் வகையென்றார். முன்னமென்றது கூறுவாரையும் கூறக்கேட்டோரையும் குறிப்பான் எல்லாரும் கருதும்படி செய்தலை. பொருள் என்றது புலவன் தான்தோற்றிக்கொண்டு செய்வதொரு பொருண்மையை. துறைவகை யென்றது முதலுங் கருவும் முறை பிறழ்ந்தாலும் இஃது இதன்பாற்படுமென்று ஒருதுறைப்படுத்தற் கேதுவாயதொரு கருவியுளதாகச் செய்தலை. மாட்டென்றது அகன்றும் அணுகியுங் கிடந்த பொருள்களைக் கொண்டுவந்து தொடராகக் கூட்டி முடித்தலை. வண்ணம் என்றது ஒருபாவின்கண் ணிகழும் ஓசை விகற்பத்தை. எனாஅ என்ற எல்லாம் எண்ணிடைச்சொல். ஏகாரங்கள் எண்ணுப்பொருள. யாப்பியல் வகையினாறுதலையிட்ட அந்நாலைந்தும் என்றது யாப்பிலக்கணப் பகுதியான் அவ்வண்ணத்தொடு கூடிய இருபத்தாறும் எ-று. அம்மை.... வகுத்துரைத்தனரே என்றது அம்மை முதலிய எண்வகை வனப்பொடும் முற்கூறிய இருபத்தாறுந்தொகுத்து முப்பத்து நான்குறுப்பாக்கி இம்முப்பத்துநான்கும் நல்லிசைப்புலவர் செய்யப்படுஞ் செய்யுட்கு உறுப்பாமென்று கூறி, அங்ஙனம் இலக்கணமே கூறிவிடாதே அவற்றைத்தாஞ்செய்தல் வன்மை யினமைந்து சுவடுபட வகுத்தனர் அவ்வத் துறையெல்லாம் போயினார் என்றவாறு. செய்யுளுறுப்பெனக்கூறி வல்லிதின் வகுத்துரைத்தனரென மாறுக. இருபத்தாறு என்றும் எட்டு என்றும் இருவகையாற் றொகை கூறியது, இருபத்தாறும் தனிநிலைச் செய்யுட்கு ஒன்றொன்றனை இன்றியமை யாவாய் வருதலும், அவ்வெட்டும் பல செய்யுட்டொடர்ந்த தொடர் நிலைச் செய்யுட்கே பெரும்பான்மையும் உறுப்பாய் வருதலும், தனிநிலைக் கண் ஒரோவொன்றாயும் வருதலும் அறிவித்தற்கு என்க. இவ்வுறுப்புக் குறையாமற் செய்யுட் செய்வார் நல்லிசைப் புலவர் என்பதூஉம், அடி வரையறை கூறியவற்றிற்கே இவ்விலக்கணமென்பதூஉம், அடிவரையறை யில்லா நூன் முதலிய ஆறற்கும் திணை முதலிய உறுப்பு ஆகா என்பதூஉம், அவற்றுள் நூலும் உரையும் ஒழிந்த நான்கும் செய்தார் நல்லிசைப் புலவராகார் என்பதூஉம் உணர்க. இனி நூலும் உரையும் செய்தாரும் நல்லிசைப் புலவர் என்பது பின்னர் அவற்றிற் கிலக்கணம் கூறும் வழி யுணர்க. உறுப்பெனவே உறுப்புடைச் செய்யுளும் அதன்கண் ml§F«., உறுப்பினது ஈட்டம் முதலாதலின். இவ்வாசிரியர் தளையை உறுப்பாகக் கொள்ளாத தென்னை யெனின்:- தளையாவது சீரினது தொழிலாய்ப் பாக்களின் ஓசையைத்தட்டு இருசீரிணைந்த தாகும்; அவ்வாறிணைந்த இருசீரினையும் ஆசிரியரெல் லாம் இருசீர்க்குறளடியென அடியாகவே வகுத்துக்கொண்டாராதலின் தளையென வேறோருறுப்பின்றாம். அன்றியும், தளையான் அடிவகுப் பாரும் உளராயினன்றே அதனை உறுப்பென்று கொள்ளவேண்டுவது; அங்ஙனம் வகுத்துக்கொள்ளாமையின் உறுப்பென்னாது சீரது தொழிலாய் ஓசையைத் தட்டு நிற்பதொன்றென்றே கொண்டார். அதனை யுறுப்பென் பார்க்குச் சீரான் அடி வகுத்தல் குற்றமாம். தொல்காப்பியரோடு ஒருசாலைமாணாக்கராகிய காக்கைபாடினியாரும் உறுப்பென்னார்; பின்றோன்றிய காக்கைபாடினியார் முதலியோர் கொள்வர்; அது பொருந்தாது. இச்சூத்திரத்துட் கூறிய முறையே முறையாமாறு வருகின்ற சூத்திரங்களின் பொருட்கிடையான் உய்த்துணர்க. வனப்பெட்டும் தனித்தனி வருமாறும் தம்முள் இயைபுடைமையும் ஆண்டுணர்க. இவ்வுறுப்பினை ஆசிரியன் குறியும் உலகத்தார் குறியுமாகக் கொள்க. இவற்றை உயிரில்லாத கலவையுறுப்புப்போற் கொள்க. (1) மாத்திரை யளவும் எழுத்தியல் வகையும் 2. அவற்றுள் மாத்திரை யளவு மெழுத்தியல் வகையும் மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர். இது நிறுத்தமுறையானே மாத்திரையும் எழுத்தியலும் உணர்த்து கின்றது. (இ-ள்.) அவற்றுள், மாத்திரையளவும் என்பது முற்கூறியவற்றுள் மாத்திரையைச் செவிகருவியாக உணர்ந்துகொள்ளும் நிலையும். எழுத்தியல் வகையும் என்பது முற்கூறிய முப்பத்துமூன்றெழுத்தும் யாப்பிலக்கணத்திற்குப் பதினைந்துபெயரவாய் நடக்குங் கூறுபாடும். மேற்கிளந்தன்ன என்மனார் புலவர் என்பது எழுத்தோத்திற் கூறிய இலக்கணத்திற் பிறழாமை வருமென்று கூறுவர் புலவர் எ-று. ஈண்டு அளவென்றது எழுத்திலக்கணத்தில் எழுத்திற்குக் கூறிய மாத்திரைகள் தத்தம் ஓசைகளைப் புலப்படுத்தி நிற்குமாறு தொடர்பு படுத்தி விராஅய் நிற்பச்செய்யும் நிலையை அளந்துகோடலை: என்றது "அளபிறந்துயிர்த்தலு மொற்றிசை நீடலும்" (தொல். எழுத். 33) என்னுஞ் சூத்திரத்தானும் "குறுமையு நெடுமையு மளவிற் கோடலின்" (தொல். எழுத். 50) என்னுஞ் சூத்திரத்தானும் செய்யுட்குரிய ஓசை தருமெனக் கூறிய நெட்டெழுத்துக்களும் ஒற்றெழுத்துக்களும் தத்தம் பாவின் ஓசையை வேறுபடத்தந்து நிற்கும் என்றதாம். இவ்விரண்டு சூத்திரத்தொடும் மாத்திரையளவை மாட்டெறிந்தார் 'இவன் அளந்த அளவு நன்று' என்றாற்போல, அளவு அளவுத்தொழின்மேனின்றது. இதனாலல்லது செய்யுள் வேறுபாடு உணரலா காமையிற் சிறப்புறுப்பாக ஏனையுறுப்புக் களின் முன்னே கூறினார். (எ-டு.) "வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி" (கலி.11) எனவும் "கடியவே கனங்குழாஅய் காடென்றா ரக்காட்டுள்" (கலி. 11) எனவும் குற்றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரைமிகுத்து விராஅய் நின்றவாறு காண்க. "குரங்ங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி" (அகம். 4) "பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் களிறெனவு முரைத்தனரே" (கலி. 11) எனக் குற்றெழுத்துக்களெல்லாம் இடையினின்ற ஒற்றெழுத்துக்களை மாத்திரை மிகுத்து விராஅய் நின்றவாறு காண்க. இதுவும் எழுத்தியற் சூத்திரங்க ளிரண்டும் ஆணைகூறின. இனி எழுத்து முப்பத்துமூன்றனுட் சில எழுத்துக்களை உயிர் என்னும் பெயர்கொடுத்து அவற்றைக் குறிலும், நெடிலும், அளபெடையும், குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஐகாரக்குறுக்கமும், ஔகாரக் குறுக்கமும் எனப் பெயர்வேறுபாடு கொடுத்து அதனோடு எட்டாக்கியும், சில எழுத்துக்களை மெய்என்னும் பெயர்கொடுத்து அவற்றை மெல்லின மும், வல்லினமும், இடையினமும், ஆய்தமும், ஒற்றளபெடையும் எனப் பெயர் வேறுபாடு கொடுத்து அதனோடு ஆறாக்கியும், இவையிரண்டுங் கூடியவற்றை உயிர்மெய் என வேறொரு பெயராக்கியும் மேற்கூறியவாறே பதினைந்து பெயரவாய் ஈண்டு நடக்குமென்றற்கு 'எழுத்தியல்வகை' யென்றார். இவ்வெழுத்தினை எழுத்தினுட்கூறிய சூத்திரங்களொடு மாட் டெறிந்தார். அவை 'ஔகார விறுவாய்' (தொல். எழுத். 8) 'அ, இ, உ, எ, (எழுத். 3) 'ஆ, ஈ, ஊ, ஏ' (எழுத். 4) 'நீட்டம் வேண்டின்' (எழுத். 6) 'அவை தாங், குற்றியலிகரம்' (எழுத். 2) 'ஓரள பாகு மிடனுமா ருண்டே' (எழுத். 57) 'வல்லெழுத் தென்ப' (எழுத். 19) 'மெல்லெழுத்தென்ப' (எழுத். 20) 'இடை யெழுத்தென்ப' (எழுத். 21) 'உயிர்மெய்யல்லன' (எழுத். 60) என்பனவாம். அளபெடையிரண்டும் எழுத்தாந்தன்மை மேலே பெறுதும். (செய். 17). இவற்றுட் குறிலும் நெடிலும் குற்றுகரமும் அசைக்குறுப்பாம். ஒற்றடுத்த அசைகள் வேறுபடாமையின் ஒற்று அசைக் குறுப் பாகாது: ஒற்றளபெடைக் குறுப்பாம். நெடிலும், அளபெடையிரண்டும், உயிரும், உயிர்மெய்யும், மூவினமும், ஐகார ஔகாரக்குறுக்கமும் தொடைக்குறுப்பாம். குறிலும், நெடிலும், அளபெடையிரண்டும், மூவினமும், ஆய்தமும் வண்ணத்திற் குறுப்பாம். இவற்றை இயற்கையெழுத்துஞ் சார்பெழுத்தும் என இரண்டாகவும் வகுப்பர். (2) அசை 3. குறிலே நெடிலே குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி நேரு நிரையு மென்றிசிற் பெயரே. இது நிறுத்த முறையானே அசை கூறுகின்றது. (இ-ள்.) குறிலும் நெடிலும் தனித்துவந்தும், குறிலிரண்டு இணைந்து வந்தும், குறிற்பின்னர் நெடிலிணைந்துவந்தும், பின்னர் இந்நான்கும் ஒற்றொடு வருதலோடே பொருள்பெற ஆராய்ந்து நிரனிறை வகையான் நேரசையும் நிரையசையும் என்று பெயர்கூறினார் ஆசிரியர் எ-று. குறிலும் நெடிலும் தம்முள் மாத்திரையொவ்வாவேனும் அவற்றின் மாத்திரையை நோக்காது எழுத்தாந்தன்மைநோக்கி இரண்டற்கும் ஒரோவோரலகு பெறுமென்றார். இது குறிலிணைக்குங் குறினெடிற்கும் ஒக்கும். நேரசை நிரையசை என்ற பெயர், ஆட்சியும் குணமும் காரணமாகப் பெற்ற பெயர். இரண்டெழுத்தானாகாது ஓரெழுத்தானாதலின் நேரிய தன்றே: அதனான் நேரியஅசை நேரசை என்றாயிற்று. 'உயிரி லெழுத்து மெண்ணப் படாஅ' (தொல். செய். 44) என்றலின் எண்ணப் படாத ஒற்றுக்கள் பயன்படாது அசைத்துநிற்றலின் அசையென்னும் பெயரும் எய்திற்று. இரண்டெழுத்து நிரைதலின் இணையசையென்னும் பொருள்பட நிரையசை யென்றாயிற்று. (எ-டு.) அ, ஆ, அல், ஆல் எனவும்; பல, பலா, புகர், புகார் எனவும் வரும். ஒற்றுக்கள் எழுத்தாய் நின்று அலகுபெறுதற் குரியவல்லவென்பது மொழி மரபின்கண்ணே 'மொழிப்படுத் திசைப்பினும்' (எழுத். 53.) என்பதன்கட் கூறியவாற்றானுணர்க. குறில் நெடில் என எழுத்தாக ஓதினவேனும் 'நெட் டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி' (எழுத். 43) என்றதனான் நெடில் சொல்லாந்தன்மையும் 'குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே' (எழு. 44) என்றதனாற் குறிலும் சிறுபான்மை சொல்லாந்தன்மையும் பெறும்; அன்றியும் ஒற்றுக் கூறினமையானும் பெறும். 'உள்ளார் தோழி' என நேரசை நான்கும் 'வரி வரால் கலா வலின்' என நிரையசை நான்கும் வந்தன. (3) இதுவுமது 4. இருவகை யுகரமோ டியைந்தவை வரினே நேர்பும் நிரைபு மாகு மென்ப. இது கூறாத அசைக்கூறுங் கூறுகின்றது. (இ-ள்.) இருவகை உகரமோடு என்பது குற்றுகர முற்றுகரங்க ளோடே. அவையியைந்துவரின் - மேற்கூறிய நேரசையும் நிரையசையும் பிளவுபடாது ஒருசொல்விழுக்காடுபட இயைந்துவரின், நேர்பும் நிரைபும் ஆகுமென்ப - நிறுத்தமுறையே நேரசையோடியைந்த குற்றுகரமும் அதனோடியைந்த முற்றுகரமும் நேர்பசை எனப்படும்: நிரையசையோடு இயைந்த குற்றுகரமும் அதனோடியைந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் எ-று. நேரின்பின் உகரம்வருதலின் நேர்பு: நிரையின்பின் உகரம் வருதலின் நிரைபு என ஆட்சியும் குணமும் காரணமாகப்பெற்ற பெயராதல் மேற்கூறியவற்றுட் காண்க. (எ-டு.) வண்டு, நாகு, காம்பு, மின்னு, நாணு, தீர்வு: நேரசைமூன்றன் பின்னும் இருவகை உகரமும் வந்து நேர்பசையாயின. குறிற் பின்வரும் இருவகையுகரமும் நேர்பசையாகாமை மேற்கூறுகின்றார். வரகு, குரங்கு, மலாடு, மலாட்டு, இரவு, புணர்வு, உலாவு என நிரையசைநான்கன் பின்னர்க்குற்றுகரமும், நிரையசைமூன்றன்பின்னர் முற்றுகரமும் வந்து நிரைபசையாயின. குறினெடி லொற்றின்பின் வந்த முற்றுகரம் உளவேற் காண்க. 'குற்றிய லுகரமு மற்றென மொழிப' (எழுத். 105) என்ற விதியாற் குற்றுகரம் புள்ளிபெற்றுநின்றும் புள்ளிபெற்றஒற்றுப் போன்று ஒடுங்கி நில்லாது தன்னான் ஊரப்பட்டமெய்யுந்தானும் அரைமாத்திரையவாய் நின்றதேனும், அகன்றிசைத்தலின் ஒற்றென்றலு மாகாது ஒருமாத்திரை பெற்ற உயிர்போல அகன்றிசையாமையின் உயிரென வேறோரலகு கொடுத்தலுமாகாது இதனைச்செயற்பாலது வேறோரசை யாக்குதலென நோக்கி நேர்பசை நிரைபசை என வேண்டினார் ஆசிரியர். பின்னுள்ளோர் அலகு பெறுமென்று கொண்டாரேனும் அவர்க்கும் அலகுபெறா வென்றுங் கொள்ள வேண்டியவாறும், தேமா, புளிமா, ஒழியக் காசு, பிறப்பு எனக் குற்றுகரவீறாக வேறுதாரணங்கொள்ள வேண்டியவாறும் உணர்க; எனவே குற்றுகரம் அலகுபெறாதாயிற்று. வண்டு, கொண்டி என ஓசை ஒவ்வாமை செவி கருவியாக உணர்க. ஒரு மாத்திரைபெற்ற முற்றுகரம் நேர்பசை நிரைபசையாமோ வெனின்;. வண்டு வண்டு வண்டு வண்டு என்புழிப் பிறந்த அகவலோசை மின்னு மின்னு மின்னு மின்னு என்புழியும் பெறப்படுதலானும் வெண்பாட்டீற்றடி வண்டுஎனக் குற்றுகரவீற்றா னின்றுழியுங் கோலு என முற்றுகர வீற்றா னின்றுழியும் ஒத்தவோசையவா மாகலானும் அவ்வசைக ளாயின. இஃது 'எழுத்தளவெஞ்சினும்............மொழிப' (செய். 43) என்ற விதியாற் பெறுதும். (4) எய்தியது விலக்கல் 5. குறிலிணை யுகர மல்வழி யான. இது தனிக்குறிலானாகிய நேரசைப்பின்னும் இருவகை உகரம் வந்து நேர்பசையாதலை விலக்கினமையான் எய்தியது விலக்கியதூஉமாம். குற்றுகரங் குற்றெழுத்துப்போன்று அலகுபெறுமென்றமையின் எய்தாதது எய்துவித்து வழுவமைத்ததூஉமாம். (இ-ள்.) குற்றெழுத்தோடிணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகர மும் அல்லாதவிடத்தே முற்கூறிய நேர்பசையாவன; எனவே குற்றெழுத் தோடிணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகரமும் வந்துழி நிரையசையாம் எ-று. இனி, 'உடம்பொடுபுணர்த்தல்' என்பதனாற் குறிலிணையெனக் குற்றுகரத்தையும் குற்றெழுத்தென வேண்டினமைபெற்றாம். (எ-டு.) ஞாயிறு வலியது என ஓரசைப்பின்னர் வருகின்ற குறிற்பின்வந்த குற்றுகரம் குற்றெழுத்துப்போன்று குறிலிணையுகரமாய் அலகுபெற்றதேனும் குற்றுகரமே யென்று இலக்கணமல்லதொரு வழுவமைத்தவாறு. இங்ஙனம் குற்றுகரம் எழுத்தளபெஞ்சுமெனவே, 'குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி, னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும்' (எழுத். 67) என விதித்த நுந்தையென்னும் முதற்கட் குற்றுகரம், எழுத்தளவெஞ்சிக் குற்றெழுத்துப் போன்று அலகுபெறுதலுங் கொள்க. கரு, மழு இவை முற்றுகர நிரையசையாம். (5) இயலசை, உரியசை 6. இயலசை முதலிரண் டேனைய வுரியசை. இது முற்கூறிய அசையை இருகூறுசெய்து அவற்றிற்கு எய்தாதது எய்துவிக்கின்றது. (இ-ள்.) இயலசை முதலிரண்டு - முதற்கண்ணின்ற நேரும் நிரையும் இயற்றிக்கொள்ளப்படாது இயற்கைவகையான் நின்றாங்குநின்று தளைத்தலின் இயலசை யென்றும்: ஏனைய வுரியசை - ஒழிந்த இரண்டும் இயற்றிக்கொள்ளப்பட்டுத் தொழில் செய்தற்குரியவாதலின் உரியசை யென்றும் பெயராம் எ-று. அங்ஙனம் இயற்றுதல் சீருட் காண்க. (6) தனிக்குறில் முதலில் நேரசை ஆகாத இடம் இதுவெனல் 7. தனிக்குறின் முதலசை மொழிசிதைத் தாகாது. இஃது எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. (இ-ள்.) மொழி சிதைத்து - பொருடந்து ஒற்றுமைப்பட்டு நிற்ப தொரு சொல்லைப் பொருளைக்கெடுத்து: தனிக்குறில் - முதலெழுத்தைத் தனிக்குறிலாக்கின்: முதலசையாகாது - அது நேரசையாகாது எ-று. எனவே, பொருள் தந்து ஒற்றுமைப்பட்டுநில்லாது விட்டிசைத்து நின்றுழி நேரசையாம் என்றவாறாயிற்று. புளிமா என்ற வழிப் புளியென்று ஒற்றுமைப்பட்டு நின்ற சொல்லைச் சிதைத்து முதல் நின்ற பகர உகரத்தை நேரசையாக அலகிடப்படாது. இனி விட்டிசைத்து நேரசையாங்கால் ஏவல், குறிப்பு, தற்சுட்டு, வினா, சுட்டு என ஐந்து பொருளின்கண் விட்டிசைத்து நேரசையாம். (எ-டு.) 'வெறிகமழ் தண்புறவின் வீங்கி யுகளும் மறிமுலை யுண்ணாமை வேண்டிப் - பறிமுன்கை அஉ வறியா வறிவி லிடைமகனே நொ.அலைய னின்னாட்டை நீ' நொ என்பது ஏவல். அ உ என்பது அக்கரந் தம்மையே சுட்டுதலிற் றற்சுட்டு. 'அ ஆ விழந்தானென் றெண்ணப்படும்' (நாலடி. 9) என்பது அருட்குறிப்பு. அ அவனும் இ இவனும், உ உவனும் என்பது சுட்டு. எ எவன் என்பது வினா. 'உரையிற்கோடல்' என்பதனான் ஐந்தெழுத்தும் விட்டிசைத்தல் கொள்க; 'அ, இ, உ, எ, ஒ என்னுமப்பா லைந்தும்' (எழுத். 3) என வரும். இவை மொழி சிதைத்துத் தனிக்குறிலாய் நேரசையாயினவாறு காண்க. (7) குற்றியலிகரம் அலகுபெற்றும் பெறாதும் வரும் எனல் 8. ஒற்றெழுத் தியற்றே குற்றிய லிகரம். இது குற்றியலிகரம் அலகு பெற்றும் அலகு பெறாதும் வரும் என்கிறது. (இ-ள்.) குற்றியலிகரம் ஒற்றியற்று எழுத்தியற்று - குற்றியலிகரமாவது ஒற்றியல்பினையுடைத்து: அதுவேயன்றி, எழுத்தியல்பினையும் உடைத்து எ-று. என்றது அலகுபெறாதவழி ஒற்றாம்: அலகு பெற்றவழி யெழுத்தாம் என்றவாறு. (எ-டு.) 'குழலினி தியாழினி தென்ப'(குறள். 66) என ஆசிரியத் தளையாயும் 'அருளல்ல தியாதெனின்' (குறள். 256) எனக் கலித்தளையாயும் வருதலிற் குற்றியலிகரம் அலகுபெறாது ஒற்றியற்றாயிற்று. 'நினக்கி யாரே மாகுது மென்று, வனப்புற' (கலி. 82) "நினக்கியா னுரைப்பக் கேண்மதி" என இக்குற்றியலிகரங்கள் அலகுபெறுதலின் குற்றியலிகரம் எழுத்தியற் றாயிற்று. இங்ஙனம் சான்றோர் செய்யுள் வருதல் பெருவரவிற்று. ஒற்றினையும் எழுத்தென்று ஓரோரிடத்துக் கூறினாரேனும், ஈண்டு ஒற்றுஎழுத்து எனக்கூறலின் ஒற்றல்லாவெழுத்தை யுணர்த்திற்று. (8) முற்றுகரத்திற்கு இலக்கணம் 9. முற்றிய லுகரமு மொழிசிதைத்துக் கொளாஅ நிற்ற லின்றே யீற்றடி மருங்கினும். இது குற்றியலுகரத்திற் கினமாகிய முற்றுகரத்திற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ - முற்றியலுகரமும் வருமொழியைச் சிதைத்துப் பிரித்து அவற்றினின்றும் வாங்கிக் கொடுக்கப்படா: எனவே நிலைமொழித்தொழிலாகிய உகரமும் நிலைமொழியீறு கெட நின்ற உகரமுமே கொள்க, நிற்றல் இன்றே ஈற்றடி மருங்கினும் - அதுதான் இடையினன்றி ஈற்றடி யிடத்திலும் இயலசையாய் நிற்றலின்று . எனவே உரியசையாயே நிற்கும், எ-று. 'நாணுடை யரிவை' (அகம். 34)என்புழி வருமொழியின் உகரம் வந்தேறியது முற்றுகரமாகாதென்றுணர்க. இனி 'நாணுத்தளை யாக வைகி' 'இரவுத்துயின் மடிந்த தானை'(அகம். 24) 'சுறவுக்கொடி'(சிந். முத். 493) 'விழவுத்தலைக் கொண்ட' (அகம். 17) 'மின்னுநிமிர்ந் தன்ன' (நற். 51) இவை நிலைமொழித்தொழிலாகிய உகரம் பெற்றன. நீர்க்கு, நிழற்கு என நின்ற நான்கனுருபும் நிலைமொழித்தொழிலுகரமாம். உலவுகடல், விரவுகொடி எனின் அதுவாம். சுரும்புலவு நறுந்தொடையலள், கலனளவு நலனளவு இவை நிலைமொழியீற்று மகரங்கெட நின்ற உகரம் முற்றுகர மாயின. இனி 'இனத்துள்ள தாகு மறிவு'(குறள். 454) 'இன்னா தினியார்ப் பிரிவு' (குறள். 1158) 'கருமமே கல்லார்கட் டீர்வு' 'பேரறிவாளர் துணிவு' 'பாடறியா தானை யிரவு' 'போற்றாதார் முன்னர்ச் செலவு' (நான்மணி. 10) 'புன்க ணுடைத்தாற் புணர்வு'(குறள். 1152) 'புனைமலர்த் தாரகலம் புல்லு' 'அஞ்சொன் மடவார்க் கருளு' 'கோலு' இவை யடியிறுதிக்கண் உரியசை யாய் நின்றவாறு காண்க. ('நிற்றலின்றே') என்றதற்கு ஈற்றடிக்கண் நிற்றலில்லையென்று கூறின் அவை முடியாவாம். இவை அசைக்கும் ஓசைக்கும் உறுப்பாம். உகரமும் என்ற உம்மையாற் குற்றுகரமும் 'சேற்றுக்கா னீலம்' எனப்பிரித்துக் கொடாமனின்றவாறும் 'எய்போற்கிடந்தானென்னேறு' (பு.வெ. வாகை. 22) என இறுதிக்கண் உரியசையாய் நின்றவாறுங் காண்க. நாகுண்டு என்பது குற்றுகரமாகாது. (9) உரியசைகள் ஒற்றுப் பெற்று நிற்குமெனல் 10. குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. இஃது உரியசைகள் ஒற்றுப்பெற்று நிற்குமென எய்தாத தெய்து வித்தது. (இ-ள்.) குற்றியலுகரமும் முற்றியலுகரமும் - முற்கூறிய குற்றியலுகர மும் முற்றியலுகரமும், ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே - வருமொழி வல்லெழுத்து வரும் வழி வல்லொற்றொடு தோன்றி நிற்கவும் பெறும். எ-று. (எ-டு.) 'சேற்றுக்கா னீலம்' 'நாணுத்தளை யாக வைகி' (அகம். 29) 'நெருப்புச் சினம் தணிந்த' (புறம். 125) 'கனவுக்கொல் நீகண்டது' (கலி. 90) என இருவகை உகரமும் ஒற்றடுத்து உரியசையாயினவாறு காண்க. உம்மை எதிர்மறையாதலின் ஒற்றடாது வருதலே பெரும்பான்மை யென்றுணர்க. நிலைமொழி ஒற்றுப்பெற்று உண்ணும், நடக்கும் என்பன தேமா புளிமாவாயே நிற்கும்; விக்குள், கடவுள் என்பனவும் அவை. (10) சீர்க்குப் புறனடை 11. அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன ருணர்த்தலும் வல்லோ ராறே. இது முற்கூறியவற்றிற்கும் இனி வருஞ் சீர்க்குமெல்லாம் புறநடை. (இ-ள்.) அசையும் சீரும் இசையொடு சேர்த்தி - அசைகளையும் சீர்களையும் ஓசையொடு சேர்த்தி, வகுத்தனர் உணர்த்தலும் வல்லோர் ஆறே - வேறுபாடு உணர்த்தலும் செய்யுளிலக்கணத்துறை போயினாரது நெறி எ-று. முற்கூறிய மாத்திரையென்னு முறுப்பின் ஓசையை யளந்து இன்னோசையும், இன்னாவோசையும் அறிந்து உணர்த்துக எ-று. (எ-டு.) 'தருக்கிப் புணர்ந்து தணந்த தமது, பொருப்புப் புடைத்துப் புடைத்து'என்றால் வெண்பாவீற்றடி இன்னோசைத்தாகாமையிற் 'பொருப்புத் தழைந்த பொழிந்து' என மெல்லினவோசை சேர்க்க இன்னோசைத்தாயிற்று. 'நிலமிசை நீடுவாழ்வார்'(குறள். 3) இதனுள் வாழ்வாரென்னும் ஓசையை வகுந்து வார் என நேரசைச் சீராக்க அசையான் இன்னோசைத் தாயிற்று. இதனை வகையுளி என வேறோருறுப்பாக்குவாருமுளர். இனிக்கட்டளையடியையும் சீர்வகையடியையும் இசையொடு சேர்த்தி இன்னோசை யுணர்க. அஃது 'அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய'(செய். 58)என்ற பதினான்கெழுத்தளவும் வருங் கட்டளை வெண்பா வெண் சீரே யொன்றின் கலித்தளை தட்டு இன்னோசை பெறாதாம். மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் என்றாற் றுள்ளலோசையும் பிறக்கும். இதனை மாசேர்வாய் பாதிரி காருருமுக் காருருமு எனின் இன்னோசைத்தாய்ச் செப்பலோசைபிறக்கும். இனிச்சீர்வகையடிக்கும் 'யாதானு நாடாமா லூராமால்' (குறள். 397) என்றாற் சீர்வகைத்துள்ளலோசையும், 'என்னொருவன்' என்றாற் சீர்வகைச் செப்பலோசையும் பிறக்குமாறு இசையொடு சேர்த்தி யுணர்க. இனி ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் மாசேர்வாய் என்றால் ஞாயிறு என்ற இயற்சீர்ப்பின் நிரையொன்றி ஆசிரியத்தளையாயிற்றேனும் கலித்தளைப்பாற்படுதலும்:ஞாயிறு புலிசேர்வாய் புலிசேர்வாய் மாசேர்வாய் என்றவழிப் புலிசேர்வாய் மாசேர்வாயென நேரொன்றிற் றேனும் கலித்தளைப்பாற்படுதலும் இசையொடு சேர்த்தியுணர்க. இவ்வாறே பிறவும் வகுத்துணர்த்துதல் அத்துறைபோயினார்க்கே தெரிவதாம். இனி உம்மையான் அடியுமிவ்வாறே வகுத்துணர்த்துக. 'நுதல திமையா நாட்ட மிகலட்டுக், கையது கணிச்சியொடு மழுவே'(அகம். கடவுள் வாழ்த்து.) என்புழி இகலட்டு என்னுஞ்சீர் குறித்த பொருளை முடியநாட்டும் யாப்பென்னும் உறுப்பினுள் அடங்காது 'இகலட்டுக் கையது' என மேலிலடியொடு பொருள் கூடிற்றேனும் இசையொடு சேர்த்தி வகுத்ததாயிற்று. இன்னும் அதனானே எழுத்தல் கிளவியாகிய 'சுஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை' என்பதனை அசையொடுஞ் சீரொடுஞ் சேர்த் துணர்த்தலுங் கொள்க. இனி அகவன் முதலிய நான்கோசையினையும் ஒன்று மூன்றாக்கி வகுத்தல் தொல்காப்பியனார் கருத்தன்றாயிற்று; என்னை? இயலசை மயங்கிய இயற்சீரும், உரியசை மயங்கிய இயற்சீரும், வெண்சீரும்பற்றி யோசை வேறுபடத்தோன்றலின் அவை பன்னிரண்டென்னும் வரையுள் அடங்காவென்பது பற்றி. இன்னும் 'இசையொடு சேர்த்தி' என்றதனானே 'ஓரள பாகுமிடனு மாருண்டே'(எழுத். 57) என்ற ஐகாரமும் பொருள் சிதைந்திசையொடு சேர்தல் கொள்க. 'வண்கொன் றையைமருட்டுங் காண்' புகழ்த லானாப் பெருவண் மையனே' இவை முதலிடைகடைகளிற் சிதைந்தும் வருமென்று கொள்க. (11) சீரின் இலக்கணமும் அதன் வகையும் 12. ஈரசை கொண்டும் மூவசை புணர்த்துஞ் சீரியைந் திற்றது சீரெனப் படுமே. இது நிறுத்தமுறையானே சீருணர்த்துவான் றொடங்கி அவற்றின் பகுதியும் அவற்றது பொதுவிலக்கணமும் உணர்த்திற்று. (இ-ள்.) ஈரசை யியைந்துகொண்டும் - ஈரசை தம்மில் இயைந்து பொருள்கொண்டும்: மூவசை யியைந்து கொண்டும். - மூவசை தம்மிலி யைந்து பொருள்கொண்டும்: இற்றது சீரெனப்படும் - இற்று நிற்பது சீரென்று சிறப்பித்துச் சொல்லப்படும். சீர்புணர்த்தும் சீரெனப்படும் - அவ்வாறன்றி அச்சீர்தான் ஒரு சீரோடொருசீர் தொடரப் பிறர் கூட்டப் பட்டு நின்றாலுஞ் சீரென்று சொல்லப்படும் என்றுங் கொள்க எ-று. 'இயைந்து' என்றதனையும் 'கொண்டு' என்றதனையும் ஈரசைக்கும் மூவசைக்குங் கூட்டி, 'கொண்டு' என்பதற்குப் பொருள்கொண்டு என்று பொருளுரைக்க. நடுவுநின்ற 'சீர்' என்றதனைப்'புணர்த்தும்' என்றதனொடு மாறிக்கூட்டுக. இயைந்து என்றதனான் ஒருசீர்க்கட் பலசொற்றொடர்ந்து வரினும் அவை யொன்றுபட்டு நிற்றல் வேண்டுமென்றுணர்க. எனவே சொல் லெல்லாம் ஈரசையும் மூவசையுமாயல்லது வாராவென்பதூஉம் இனிப் புணர்த்தும் என்றதனான் அச்சீர்கள் அவ்வாறிற்று நிற்குமேனும் பிறர் தொடர்பு படுத்தும் வழிப் புணர்ச்சிவிகார மெய்தாமற் றம்முட்டொ டர்ந்து நிற்றலும் புணர்ச்சிவிகாரமெய்தியுந் தொடர்ந்து நிற்றலுமுடைய என்பதூஉங் கொள்க. (எ-டு.) 'போந்து சென்று சார்ந்து சார்ந்து, மதனுடை நெஞ்சமொடு நடுநா ளென்னாது' இவை புணர்ச்சிவிகாரமெய்தாமல் இசையிற்றுத் தொடர்ந்தன. 'கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி' (நாலடி. 156) இது வல்லெழுத்துப் புணர்ச்சியெய்திற்று. இன்னும் அதனானே ஒரு சொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டு மாற்றான் வேறு சீராக்கியவழியும் அச்சீர்வகையான் வேறுசொல் லிலக்கணம் பெறும். அது 'மம்மர் நெஞ்சினோன் றொழுதுநின் றதுவே' (அகநா. 56) என்புழி நின்றது என்னுங் குற்றுகரவீற்றுச் சொல்லினைப் பிரித்து அதுவே என வேறொரு சீராக்க முற்றுகரமாகி வேறுபடுதல் கொள்க. பிறர் தொடர்புபடுத்தின செய்யுள் 'உலக முவப்ப வலனேர்பு' (முருகு. 1) 'யாதானு நாடாமால்' (குறள். 397 )எனவும் 'வசையில் - புகழ் வயங்கு வெண்மீன்'(பட்.1)எனவும்ஈரசைச்சீரும்மூவசைச்சீரும் வந்தன. (12) ஈரசைச்சீர் 13. இயலசை மயக்க மியற்சீ ரேனை உரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர். இது முறையானே இயலசையும் உரியசையும் வேறு வேறு தம்முண் மயங்கிவரும் ஈரசைச்சீர் உணர்த்திற்று. (இ-ள்.) இயலசை மயங்கினவற்றை இயற்சீரென்றும் உரியசை மயங்கினவற்றை ஆசிரியவுரிச்சீரென்றும் கூறுப எ-று. மயக்கம் என்றது தம்மொடு தாமயங்குதலும் தம்மொடுபிறிதும் மயங்குதலுமாம். (எ-டு.) நேர்நேர், நிரைநிரை எனத் தம்மொடு தாமயங்கின; இரண்டனையும் பிரித்து நேர்நிரை நிரைநேர் எனப் பிறிதொடுமயக்க இந்நான்கும் இயற்சீராயின. இந்நான்கு வழியுமல்லது வேறுகூட்டமின்மையும் உணர்க. இவற்றைத் தேமா, புளிமா, பாதிரி, கணவிரி எனவும், கருவிளம் கூவிளம் எனவும் காட்டுப; பிறவாறுங் காட்டுப. நேர்புநேர்பு, நிரைபு நிரைபு எனத் தம்மொடு தாம் மயங்கின. இரண்டனையும் பிரித்து நேர்பு நிரைபு, நிரைபு நேர்பு எனப் பிறிதொடு மயக்க இந்நான்கும் ஆசிரிய வுரிச்சீராயின. இவற்றை வீடுபேறு, தடவுமருது, பாறுகுருகு, வரகுசோறு எனக்காட்டுப. செய்யுளுள். 'அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை' (குறுந். 216) என நான்கியற்சீரும் வந்தன. 'வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப' (புறம். 35) எனவும் 'நறவுண் மண்டை நுடக்கலி னிறவுக்கலித்து' (அகம். 96) எனவும் 'பூண்டுகிடந்து வளரும் பூங்கட் புதல்வன்' எனவும் 'வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்' (முருகு. 106) எனவும் வந்தவற்றுள் வீற்றுவீற்று எனவும் இறவுக்கலித்து எனவும் பூண்டுகிடந்து எனவும் வசிந்துவாங்கு எனவும் நான்காசிரியவுரிச்சீரும் வந்தன. நான்குபாவிற்கும் இயற்றலானும், இயல்புவகையான் ஒரே சொல் லாய்வருதல் பெரும்பான்மை யாகலானும் இயற்சீரெனவும், ஆசிரியத்திற்கு உரிமையான் ஆசிரிய உரிச்சீரெனவும் ஆட்சியுங் குணமுங்காரணமாகப் பெற்ற பெயர். 'இயற்சீரிறுதிமுன்'(செய். 19) எனவும் 'வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர் (செய். 23) எனவும் பிறாண்டும் ஆள்ப. (13) உரியசையின்பின் நிரையசை வரினும் உரிச்சீராம் எனல் 14. முன்னிரை வரினும் அன்ன வாகும். இஃது இயலசையும் உரியசையும் மயங்கிச் சீராமாறு கூறுகின்றது. (இ-ள்.) 'உரியசை மயக்க மாசிரிய வுரிச்சீர்' (செய். 13) என்ற அதிகாரத்தான் அவ்வுரியசை முன்னர் நிரையசைவரினும் அவ்வுரியசை மயக்கமாகிய ஆசிரியவுரிச்சீராம் எ-று. அவை நேர்புநிரை, நிரைபுநிரை. (எ-டு.) நீடுகொடி நாணுத்தளை, உரறுபுலி விரவுகொடி எனவரும் . செய்யுளுள் . 'ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ'(புறம். 55) 'நாணுத்தளை யாக வைகிமாண் வினைக்கு' (அகம். 29) 'களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை'(புறம். 64) 'உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை' (புறம். 3) 'ஓங்குதிரை வியன்பரப்பின் '(மதுரைக். 1) 'பன்னு தமிழ்ப் பாவலர்க்கு' 'களிற்றுநிணத் துகிலுடுத்த' 'பிணர்மோட்டுப் பேய்மகள்'(முருகு. 50, 51) 'நிலவுமணல் வியன்கானல்' (புறம். 17) எனவும் ஆசிரியத்திலும் வஞ்சியிலும் வந்தன. 'தூங்குசிறை யன்னந் துயில்வதியுஞ் சோணாட்டு' எனவும் 'ஏடு - கொடி யாக வெழுதுகோ' எனவும் வெண்பாவினுட் கட்டளையடி யல்வழிச் சிறுபான்மை வந்தன. கட்டளையடியன்மை இசையொடு சேர்த்தி யுணர்க. இவை இயலசையொடு மயங்கினமையிற் பாதிரி கணவிரிபோலக் கொள்க (14) உரியசையின்பின் நேரசைவரினும் இயற்சீராம் எனல் 15. நேரவ ணிற்பி னியற்சீர்ப் பால. இஃது இயலசை உரியசை மயக்கத்துப் பிறப்பன இரண்டியற் சீருணர்த்திற்று. (இ-ள்.) அவண் நேர்நிற்பின் இயற்சீர்ப்பால - மேனின்ற அதிகாரத் தான் உரியசையிரண்டன் முன்னும் நேரசைவரின் அவையிரண்டும் இயற்சீர்ப்பாலவாம் எ-று. அவை நேர்புநேர், நிரைபுநேர். (எ-டு.)சேற்றுக்கால், வேணுக்கோல், களிற்றுத்தாள், முழவுத்தோள் எனவரும்; நீத்துநீர், குளத்துநீர் எனவும் போது பூ, மேவுசீர், விறகுதீ, உருமுதீ எனவும் கண்டு கொள்க. இவையெல்லாம் பாதிரி கணவிரி என்னும் இயற்சீர்ப்பாற்படும். போதுபூ, விறகுதீ என்னுமிரண்டன்கட் குற்றுகரம் மேல்வரும் நெடிலோடிணைந்து நிரையாய்ப் பாதிரி கணவிரிபோல நிரையாமோ வெனின்; ஆகா; - அக்குற்றுகரம் நேர்பும் நிரைபுமாயே நின்று நேரும் நிரையு முதலாய் நிரையீறாகிய சீர்தளை கொண்டாங்குத் தட்கும்; செய்யுளுள் . 'நீத்துநீர்ப் பரப்பி னிவந்துசென் மான்றேர்' எனப் போது பூவும், விறகு தீயும் வந்தன. (15) இயலசையின்பின் உரியசைவரினும் இயற்சீராம் எனல் 16. இயலசை யீற்றுமு னுரியசை வரினே நிரையசை யியல வாகு மென்ப. இது மேனின்ற இயற்சீரதிகாரத்தான் ஈரசைச்சீருள் உரியசை இயலசை மயக்கத்துள் ஒழிந்து நின்ற நான்கியற்சீரும் உணர்த்திற்று. (இ-ள்.) இயலசை ஈற்று முன் உரியசை வரினே - இயலசை யிரண்டன் முன்னும் உரியசையிரண்டும் ஒன்றிரண்டு செய்து மயங்கி நான்காங்கால் அவ்விரண்டு உரியசையும்; நிரையசை இயலவாகும் என்ப - இயலசை மயக்கமாகிய இயற்சீர் நான்கனுள் நிரையீற்ற பாதிரியும் கணவிரியும் போல வருஞ் சீரொடு தட்கும் எ-று. அவை நேர்நேர்பு, நேர்நிரைபு, நிரைநேர்பு, நிரைநிரைபு என வருங்கால் நேர்முதலிரண்டும் பாதிரி போலவும் நிரை முதலிரண்டும் கணவிரிபோலவும் கொள்க. இச்சூத்திரமும் தளைக்குமாறு கூறிற்றாம். (எ-டு.) போரேறு நன்னாணு, பூமருது காருருமு, கடியாறு பெருநாணு, மழகளிறு நரையுருமு எனவரும். (16) உயிரளபெடை சீர்நிலை யாதலேயன்றி அசைநிலையும் ஆம் எனல் 17. அளபெடை யசைநிலை யாகலு முரித்தே. இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி. எழுத்ததிகாரத்து 'நெட்டெழுத்தேழே யோரெழுத் தொருமொழி (எழுத். 43) என்றதனாற் சொல்லாந்தன்மையெய்திய அளபெடை ஈண்டு ஈரசைச்சீர் கூறிய அதிகாரத்தானும் இயற்சீராந் தன்மையெய்திற்று, அதனையே எழுத்துநிலைமைப்படுத்து அசைநிலையும் வேண்டலின். (இ-ள்.) அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே - அளபெடை மேற்கூறிய இயற்சீர்நிலைமை பெறுதலேயன்றி ஓரசையாய் நிற்றலுமுரித்து எ-று. உம்மையாற் சீர்நிலையாதலே வலியுடைத்து. நிலையென்றதனான் எழுத்துநிலையும் நேர்ந்தார். அங்ஙனம் சீர்நிலை பெறுங்கால் முற்கூறிய ஈரசைச்சீர் பதினாறனுள் ஆசிரியவுரிச்சீராறும், போதுபூ விறகுதீ என்னு மிரண்டியற் சீரும் ஒழித்து ஒழிந்த நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை, நேர்நேர்பு, நேர்நிரைபு, நிரைநேர்பு, நிரைநிரைபு என்னுமியற்சீர் எட்டுமாம். அங்ஙனமாதல் ஒருமொழியகத்தேயுடைய என்பது. ஆஅ எனத் தேமாவாயிற்று. கடாஅ எனப் புளிமாவாயிற்று. யாஅது என ஈரெழுத்து ஞாயிறு ஆயிற்று; என்னை? கடாஅ என்புழி அளபெடைய தாகாரம் பிரித்துக் குறினெடிலாயினாற்போல ஆகாரத்துப் பின்னின்ற அகரமுங் குற்றுகரமுங் குறிலிணையெனப் பட்டமையினென்பது. ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். ஆஅழி என்பது மூவெழுத்துப் பாதிரி. வடாஅது என்பது மூவெழுத்துக் கணவிரியாம். படாஅகையென்பது நாலெழுத்துக் கணவிரியாம். ஆஅங்கு என ஈரெழுத்துப் போரேறாம். ஆஅவது என மூவெழுத்துப் பூமருது. புகாஅர்த்து என்பது கடியாறாம். பராஅயது என்பது மழகளிறாம். இவை ஒரே சொல்லாகி நின்று எட்டியற்சீரானும் அளபெடுத்தன. 'தேஎந் தேரும் பூஉம் புறவின் , ஓஒரி துள்ளுஞ் சேஎரி நண்ணிக், குராஅம் பிணையல் விராஅங் குஞ்சிக் குடாஅரிக் கோவல ரடாஅரின் வைத்த கானெறிச் சென்றனர் கொல்லோ மேனெறிச் சென்று பொருள்படைப் போரே.' இதனுள் இயலசை மயங்கிய இயற்சீர் நான்கும் வந்தன. ஒழிந்த நான்கும் இவற்றுள் அடங்கும். இங்ஙனம் சீர்நிலையெய்தி வழக்கிற்கும் செய்யுட்கும் பொதுவாயது இயற்கையளபெடை என்றும், செய்யுட்குப் புலவர் ஓசை கருதிச் செய்துகொண்டது செயற்கையளபெடை என்றுங்கொள்க; இவ்விதி கட்டளையடிக்கென்றுணர்க. இவை சீர்நிலையடிக்காயின் தனிநிலை, முதனிலை இடைநிலை, இறுதிநிலை எனக்கொள்வர். "ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோடு ஈஇ ரிரையுங்கொண் டீரளைப் பள்ளியுள் தூஉந் திரையலைப்பத் துஞ்சா திறைவன்றோள் மேஎ வலைப்பட்ட நம்போ னறுநுதால் ஓஒ வுழக்குந் துயர்." 'ஆஅ வளிய வலவன் ' எனவும், 'ஏஎர் சிதைய வழாஅ லெல்லாநின், சேஎயரி சிந்திய கண்' எனவுமிவை நேர்நேரும் நிரைநேருமாக அலகிடுப. இனி ஓரசையாங்காற் செயற்கையளபெடை சீர்நிலையாதல் செய்யுட்கே யுரியவாதல் போல, இயற்கையளபெடை அசைநிலையாதல் செய்யுட்கே யுரிய வாதலும், புணர்ச்சிவகையான் எழுத்துப்பேறாகிய அளபெடைகள் அசைநிலை யாதலும், பொருள் புலப்பாட்டிற்குப் புலவர் செய்த செயற்கையளபெடையுட் சிலவும் அசைநிலையாதலுங் கொள்க. (எ-டு.)'உப்போஒ வெனவுரைத்து மீள்வாள்' என்புழிப் பண்ட மாற்றின்கட் பகரவோகாரத்திற்குள்ள ஓரலகே பெறுதலின் ஓரசை யாயிற்று. "நூறோஒநூ றென்பாள்" என்பதும் அது. இவை இயற்கையளபெடை யசைநிலையாயின. 'பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்த கடுவன்' என்புழிப் 'பலாஅ' எனப் புளிமாவாகாது ஓரசையாய்க் கோட்டு என்பதுங் கூட்டிக் கணவிரியாக அலகு பெறும். 'குறியதன் முன்னரும்' (எழுத். 226) என்னுஞ் சூத்திரத்தாற் பெற்ற அகரமும் அளபெடைபோல் அசைநிலை யாயிற்று. "நிலம்பாஅய்ப் பாஅய்ப் பட்டன்று நீணிலா மென்றோள் கலம்போஒய்ப்போஒய்க் கெளவை செய' எனப் போஒய்ப்போஒய் எனச் செய்கைக் குறிப்புப் புலப்படச் செய்யுள் செய்தவழியும் அசைநிலையாயிற்று. இவை ஓசை சிதைத்தாற் செய்யுளின்பஞ்சிதையுமென்று அலகிடுகைக்கட் சிதைத்தார். இவை அலகுபெறாவெனவே, நெடிலின் றன்மையேயாயிற்று. இதனானே குற்றிகரம்போல் எழுத்தாந்தன்மையும் பெற்றாம். இனி, வாஅழ்க எனவும், தூஉமணி எனவும் மூவசைச்சீரானும் வருதல் உம்மை யாற் சீர்நிலை யெய்து மென்றதனாற் பெறுதும். அவை வெண்சீரும் வஞ்சிச் சீருமாம். (17) ஒற்றளபெடை சீர்நிலையாதலே யன்றி அசைநிலையும் ஆம் எனல் 18. ஒற்றள பெடுப்பினு மற்றென மொழிப. இஃது ஒற்றளபெடையும் சீர்நிலையாதலேயன்றி அசைநிலையுமா மென எய்தாதெய்துவித்தது. (இ-ள்.) ஒற்று அளபு எடுப்பினும் அற்றென மொழிப - ஒற்றள பெடுத்தாலும் உயிரளபெடை போலச் சீர்நிலையெய்தலும் ஓரசையாய் நிற்றலுமுரித்து எ-று. ஒற்றெனவே, 'ங ஞ ண ந ம ன வ ய ல ள வாய்தம்' என்னும் பதினோ ரொற்றுங் குறிற்கீழும் குறிலிணைக்கீழும் அளபெடுத்தல் பெறுதும். மங்ங்கலம் எனவும், அரங்ங்கம் எனவும் வரும். ஏனையவற்றோடும் ஒட்டுக. சீராமெனவே, ஈரசைச்சீரும் மூவசைச்சீருமாதல் பெறுதும். மேல் எழுவகைச்சீர் கூறுதலின் இதனை ஈண்டுவைத்தார். ஓரசையாதல் சிறுபான்மை. (எ-டு.) `கண்ண் தண்ண்ணெனக் கண்டும்கேட்டும்' (மலைபடு. 352) என்புழிக்கண்ண் ணென்பது சீர்நிலையெய்தித் தேமாவாயிற்று. `தண்ண்ணென' என்றவழித் தட்பத்திற் சிறப்புக் கூறுதற்காக இயற்சீர்க்கண் ணகரவொற்றினை மிகக்கொடுத்து அளபெடுத்துச் செய்யுள்செய்தார். அது, மாசெல்சுரம் என்னும் வஞ்சிச்சீராவது ஆகற்க: பாதிரி என முன்னின்ற இயற்சீரேயாக என வழுவமைத்தவாறு. இதுவும் ஓரசை சிதையாது நிற்கவும் அலகுபெறா தெனவே எழுத்தின்றன்மை எய்திற்று. இது வழக்கிற்குஞ் செய்யுட்கும் உறுப்பாய் நின்றன அளபெழுதலும், தோற்றிக்கொண்டன அளபெழுதலுமாம். சுள்ள்ளென்றது, புள்ள்ளென் றது, நள்ள்ளென்றது, கிண்ண்ணென்றது - இவை வழக்கிற்குஞ் செய்யுட்குமுரிய. தோற்றினது - கண்ண்ணென முற்காட்டினாம். இருவகை யுகரமீறாய்க் கொங்ங்கு, குரங்ங்கு, மின்ன்னு, எஃஃகு என்பன உயிரளபெடையின் வருமெழுத்தொடுகூடிப் போரேறு, கடியா றென நிற்குமாறுபோலாது வண்டு வரகு என்னும் உரியசைப் பாற்படுதலின் உயிரளபெடையின் வேறாக வோதினார். இருவகையு கரத்தோ டியையாத வழிக் 'கண்ண் டண்ண்ணென' 'கஃஃ றென்னுங் கல்லத ரத்தம்' எனத் தேமாவாக அலகுபெற்றன. இனி, 'நீட்டம் வேண்டின்' (எழுத். 6) என்னுஞ் சூத்திரத்துட் காட்டிய 'செய்யுட்க ணோசை சிதையுங்கா லீரளபு மையப்பா டின்றி யணையுமா - மைதீரொற் றின்றியுஞ் செய்யுட் கெடினொற்றை யுண்டாக்கு குன்றுமே லொற்றளபுங் கொள்' என்னும் மாபுராணச் சூத்திரத்துள் 'மைதீரொற்று' என்றதனானே, சீர்வகை யடியோசைகெடின் ஒற்றில்லாத சொல்லிற்கோசை அவ்வொற்றை உண்டாக்கியு நிற்குமென்றும், 'குன்றுமே லொற்றளபுங்கொள்' என்றத னானே அவ்வொற்றானும் ஓசை நிறையாவிடின் அங்ஙனம் வருவித்த ஒற்றை அளபெடுத்துங்கொள்க வென்றுங் கூறியவிதியுங்கொள்க. "அம்பொ ரைந்து டைய்ய காம னைய்ய னென்ன வந்தண னம்புநீர ரல்லர் நன்கு ரங்கு நீர ராயினுந் தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பி னெஞ்சு நேர்ந்து தாழ்வர்தாம் பொங்க ரவ்வ வல்கு லாரெ னப்பு கன்று சொல்லினான்" (சீவக. 1997) இதனுள் யகரவகரவொற்றில்வழி ஓசை அவ்வொற்றை யுண்டாக் கிற்று. அஃது அளபெடுத்தது வந்துழிக்காண்க. (18) வெண்பா உரிச்சீர் 19. இயற்சீ ரிறுதிமுன் நேரவ ணிற்பின் உரிச்சீர் வெண்பா வாகு மென்ப. இது முறையானே மூவசைச்சீருணர்த்துதறொடங்கி, அவற்றுள் வெண்பாவுரிச்சீர் உணர்த்துகின்றார். (இ-ள்.) அவண் இயற்சீரிறுதிமுன் நேர்நிற்பின் - அவ்விடத்திற் கூறிய இயலசையானாகிய இயற்சீரிறுதிக்கண் நேரசை வந்து நிற்பின்: வெண்பா வுரிச்சீராகுமென்ப - அந்நான்கும் வெண்பாவுரிச்சீராமென்று கூறுவர் புலவர் எ-று. அவை : நேர்நேர்நேர், நிரைநிரைநேர், நேர்நிரைநேர், நிரைநேர்நேர் எனவரும். இவற்றை மாசெல்வாய், புலிவருவாய், மாவருவாய், புலிசெல்வாய் எனவும், தேமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், புளிமாங்காய் எனவுங் காட்டுப. செய்யுள். "காமன்கா ணென்று கருவூரார் பாராட்டத் தாமந்தாழ் கோதை வருவானை - யாமு மிருகுடங்கை யானெதிரே கூப்பித் தொழக்கண் டொருகுடங்கை யாயின கண்" என நான்கு வெண்சீருங் காண்க. இஃது ஆட்சியுங் குணமுங் காரணமாகப் பெற்றபெயர், வெண்பாவிற்கும் அதன் பகுதியாகிய கலிப்பாவிற்கு முரிமையின். இனிப் பொதுவாக இயற்சீரென்றால் இயலிசை மயக்கமாகிய இயற்சீர் நான்கனையும், பொதுவாக உரிச்சீரென்றால் உரியசை மயக்க மாகிய உரிச்சீர் நான்கனையுமே கோடல் வேண்டினார் இத்தொல் காப்பியனாரென்பது, இச்சூத்திரத்தானும் 'வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீ, ரின்பா நேரடிக்' கென்பதனானும் (செய். 23) பெறுதும்; இதனான் ஆட்சியும் பெற்றாம். இதுவுங் கட்டளை யடிக்குஞ் சீர்வகையடிக்கு முரித்து. (19) வஞ்சிச்சீர் 20. வஞ்சிச் சீரென வகைபெற் றனவே வெண்சீ ரல்லா மூவசை யான. இஃது ஒழிந்த மூவசைச்சீர் கூறுகின்றது. (இ-ள்.) வஞ்சிச்சீரென்று கூறுபடுக்கப்பட்டன. மேற்கூறிய வெண்சீரல்லா மூவசைச் சீரெல்லாம் எ-று. அவை வருமாறு; நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்கனையும் நிறுத்தி, ஒருகால் நேர்முன்னாகவும், ஒருகால் நிரைமுன்னாகவும், ஒருகால் நேர்புமுன்னாகவும், ஒருகால் நிரைபுமுன்னாகவும் எடுத்து நேரீறாக முடிக்கப் பதினாறாம்; அவ்வாறெடுத்து நிரையீறாக முடிக்கப் பதினாறாம்; அவ்வாறெடுத்து நேர்பீறாக முடிக்கப் பதினாறாம், அவ்வாறெடுத்து நிரைபீறாக முடிக்கப் பதினாறாம்; ஆகவே, அறுபத்துநான்காயிற்று. அவ்வாறெடுத்த நான்கு முறைமைக்கும் நடுவு நேரும் நிரையும் நேர்பும் நிரைபுமாக நிற்குமாறும் உணர்க. அவை. (எ-டு.) 1. நேர்நேர்நேர் மாசேர்வாய் 2. நேர்நிரைநேர் மாவருவாய் 3. நேர்நேர்புநேர் மாபோகுவாய் 4. நேர்நிரைபுநேர் மாவழங்குவாய் 5. நிரைநேர்நேர் புலிசேர்வாய் 6. நிரைநிரைநேர் புலிவருவாய் 7. நிரைநேர்புநேர் புலிபோகுவாய் 8. நிநிரைபுநேர் புலிவழங்குவாய் 9. நேர்புநேர்நேர் பாம்புசேர்வாய் 10. நேர்புநிரைநேர் பாம்புவருவாய் 11. நேர்புநேர்புநேர் பாம்புபோகுவாய் 12. நேர்புநிரைபுநேர் பாம்புவழங்குவாய் 13. நிரைபுநேர்நேர் களிறுசேர்வாய் 14. நிரைபுநிரைநேர் களிறுவருவாய் 15. நிரைபுநேர்புநேர் களிறுபோகுவாய் 16. நிரைபுநிரைபுநேர் களிறுவழங்குவாய் எனவும் நேரீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. வெண்சீரென மேற்காட்டிய நான்கு மொழித்தொழிந்த பன்னிரண் டும் வஞ்சியுரிச்சீர். 17. நேர்நேர்நிரை மாசேர்சுரம் 18. நேர்நிரைநிரை மாவருசுரம் 19. நேர்நேர்புநிரை மாபோகுசுரம் 20. நேர்நிரைபுநிரை மாவழங்குசுரம் 21. நிரைநேர்நிரை புலிசேர்சுரம் 22. நிரைநிரைநிரை புலிவருசுரம் 23. நிரைநேர்புநிரை புலிபோகுசுரம் 24. நிரைநிரைபுநிரை புலிவழங்குசுரம் 25. நேர்புநேர்நிரை பாம்புசேர்சுரம் 26. நேர்புநிரைநிரை பாம்புவருசுரம் 27. நேர்புநேர்புநிரை பாம்புபோகுசுரம் 28. நேர்புநிரைபுநிரை பாம்புவழங்குசுரம் 29. நிரைபுநேர்நிரை களிறுசேர்சுரம் 30. நிரைபுநிரைநிரை களிறுவருசுரம் 31. நிரைபுநேர்புநிரை களிறுபோகுசுரம் 32. நிரைபுநிரைபுநிரை களிறுவழங்குசுரம் எனவும் நிரையீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. 33. நேர்நேர்நேர்பு மாசேர்காடு 34. நேர்நிரைநேர்பு மாவருகாடு 35. நேர்நேர்புநேர்பு மாபோகுகாடு 36. நேர்நிரைபுநேர்பு மாவழங்குகாடு 37. நிரைநேர்நேர்பு புலிசேர்காடு 38. நிரைநிரைநேர்பு புலிவருகாடு 39. நிரைநேர்புநேர்பு புலிபோகுகாடு 40. நிரைநிரைபுநேர்பு புலிவழங்குகாடு 41. நேர்புநேர்நேர்பு பாம்புசேர்காடு 42. நேர்புநிரைநேர்பு பாம்புவருகாடு 43. நேர்புநேர்புநேர்பு பாம்புபோகுகாடு 44. நேர்புநிரைபுநேர்பு பாம்புவழங்குகாடு 45. நிரைபுநேர்நேர்பு களிறுசேர்காடு 46. நிரைபுநிரைநேர்பு களிறுவருகாடு 47. நிரைபுநேர்புநேர்பு களிறுபோகுகாடு 48. நிரைபுநிரைபுநேர்பு களிறுவழங்குகாடு எனவும் நேர்பீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. 49. நேர்நேர்நிரைபு மாசேர்கடறு 50. நேர்நிரைநிரைபு மாவருகடறு 51. நேர்நேர்புநிரைபு மாபோகுகடறு 52. நேர்நிரைபுநிரைபு மாவழங்குகடறு 53. நிரைநேர்நிரைபு புலிசேர்கடறு 54. நிரைநிரைநிரைபு புலிவருகடறு 55. நிரைநேர்புநிரைபு புலிபோகுகடறு 56. நிரைநிரைபுநிரைபு புலிவழங்குகடறு 57. நேர்புநேர்நிரைபு பாம்புசேர்கடறு 58. நேர்புநிரைநிரைபு பாம்புவருகடறு 59. நேர்புநேர்புநிரைபு பாம்புபோகுகடறு 60. நேர்புநிரைபுநிரைபு பாம்புவழங்குகடறு 61. நிரைபுநேர்நிரைபு களிறுசேர்கடறு 62. நிரைபுநிரைநிரைபு களிறுவருகடறு 63. நிரைபுநேர்புநிரைபு களிறுபோகுகடறு 64. நிரைபுநிரைபுநிரைபு களிறுவழங்குகடறு எனவும் நிரையீற்று மூவசைச்சீர் பதினாறும் வந்தன. இவை அறுபத்துநான்கினும், - நான்கு நீக்கி, ஒழிந்த அறுபதும் வஞ்சியுரிச்சீராம். செய்யுள்: 'மேற்கோட்டுநீர் கீழ்ப்பரந்துதன் விழுக்கோட்டுமெய் வியல்விசும்புதோய்ந் தோங்குமுன்னர்க் காம்புகிழியப் பாய்ந்துசென்றுசென் றாங்குநலிபுநின் றெதிர்த்துமீண்டாங் கதிர்த்துக்கரைகொன் றலங்குகோட்டுமுத் திலங்குநிலவுச்செய் தூர்திரைக் காவிரி பரக்குந் தண்டலை மூதூ ரோனே பேரிசை வளவன் சுரம்படர்ந்து வருந்துவ தெவனோ நிரம்பா வாழ்க்கைப் பாணர் கடும்பே' இதனுள் நேரீற்று மூவசைச்சீர் பதினாறுள் வெண்சீர் நான்கு மொழித்து ஒழிந்த பன்னிரண்டு வஞ்சியுரிச்சீரும் முறையானே வந்தன. 'தண்டண்டலைத் தாதுறைத்தலின் வண்டோட்டுவயல் வாய்புகைபுகரந் தயலாலையி னறைக்கடிகையின் வழிபோகுவர மறித்துருபுகிளர்ந் தோங்குசென்னிலை வாங்குகதிர்தரீஇப் போது தூங்குசிலை மீதுபுகுந்துபுகுந் தொடுங்குசெய்தொழில் வழங்குகிளிக்குழாந் திருந்துகோட்டுமிசைக் குரங்குவிருந்துகொளு நன்னர் நன்னாட் டென்னா குங்கொல் பொன்னிநன் னாட்டுப் பொருந னெங்கோன் றாடோய் தடக்கை மல்லவ னாடுகெழு திருவிற் பீடுகெழு வேந்தே' இதனுள் நிரையீற்று வஞ்சிச்சீர் பதினாறும் வந்தன. 'வான்பெய்யாது தீம்பெயல்பெய்து மால்யாறுபேர்ந்து கால்சுரந்துபாய்ந்து சுரைபொய்யாது நிரைவளஞ்சான்று வரையாதுதந்து பலாப்பழுத்துவீழ்ந்து பாம்புகொள்ளாது வீங்குசுடர்நீண்டு வித்துநாறுவாய்த்து முத்துக்கரும்புபூத்து வரம்புகொள்ளாது நிரம்புபெருங்கூட்டு விசும்புநீங்குமஞ்சு துயின்று பெயர்ந்து பேர்ந்து வாழை யோங்கிய கோழிலைப் பரக்குந் தண்டா யாணர்த் தென்ப வென்றும் படுவது கூட்டுண்டு கடவது நோக்கிக் குடிபுறந் தரூஉம் வேந்த னெடுநிலைத் தண்குடை நிழற்று நாடே' இதனுள் நேர்பீறாகிய வஞ்சிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. 'சீற்றம்மிகுபு செல்சினஞ்சிறந்து கூற்றொத்துவிரைபு கோள்குறித்துமுயன்று புலிப்போத்துலவும் பொலங்கொடியெடுத்துப் புகலேற்றுமலைந்து பகையரசுதொலைத்து வேம்புமீதணிபு போந்துபடத் தொடுத்து வீற்றுவீற்றுப்புனைந்து வேற்றுச்சுரும்புகிளர்பு களிறுகால்கிளர்ந்து குளிறுகுரல்படைத்துச் சொரிந்துதூங்குகடாத்து விரைந்து மலைந்துதொலைத்து மணங்கம ழாரமொடு தயங்கக் கூடிய வென்வேற் சென்னி பொன்னியற் புனைகழல் பாடுபெறு பாணினும் பலவே பாடா தோடிய நாடுகெழு வேந்தே இதனுள் நிரைபீற்று வஞ்சிச்சீர் பதினாறும் முறையானே வந்தன. (20) வஞ்சிச்சீர் பெரும்பாலும் பிறபாவினுள் வாரா எனில் 21. தன்பா வல்வழித் தானடை வின்றே. இஃது அவற்றைப் பாவிற்குரிமை கூறுகின்றது. (இ-ள்.) இவ்வறுபது வஞ்சிச்சீரும் தம் பாவல்லா ஆசிரியம், வெண்பா, கலியுள் வாரா எ-று. எனவே, சிறுபான்மையான் ஆவன மேற்கூறுதும். (எ-டு.) முற்காட்டியவற்றுட் காண்க. இதன் பயன் ஆசிரியவுரிச்சீர் தூங்கலோசையை ஆக்குமாறுபோல, இஃது அகவலோசையை ஆக்கா தென்பதாம். (21) ஈரசைச்சீரும் மூவசைச்சீரும் வஞ்சியுள் மயங்கும் எனல் 22. வஞ்சி மருங்கி னெஞ்சிய வுரிய. இது மற்றைச்சீர்கள் வஞ்சியுள் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) கட்டளையல்லா வஞ்சிப்பாவின்கண் ஈரசைச்சீர் பதினாறும் மூவசைச்சீர் அறுபத்துநான்கும் உரிய எ-று. எனவே, கட்டளையிற் கூறாராயிற்று. 'வசையில்புகழ் வயங்கு வெண்மீண்' (பட்டினப். 1) எனத் தன்முன்னர்த் தான்வந்தும், 'திசை திரிந்து தெற்கேகினும்' (பட்டினப். 2) என இயற்சீர் நிற்பத் தன்சீர் வந்தும், 'தற்பாடிய தளியுணவின்' (பட்டினப். 3) எனத் தன்முன்னர் வெண்சீர்வந்தும், 'புட்டேம்பப் புயன்மாறி' (பட்டினப். 4) என இரண்டு வெண்சீர்வந்தும், 'புள்ளுந்துயின்று புலம்புங்கூர்ந்து' என ஆசிரியவுரிச்சீர் வந்தும் தூங்கலோசை பிறக்கும் என்று உணர்க. (22) வெண்சீரும் உரிச்சீரும் கட்டளை ஆசிரியப்பாவினுள் வாரா எனல் 23. வெண்பா வுரிச்சீ ராசிரிய வுரிச்சீர் இன்பா நேரடிக் கொருங்குநிலை யிலவே. இது கட்டளை ஆசிரியத்திற்கு அடியுறழப்படாத சீர் இவை யென்கின்றது. (இ-ள்.) வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் கட்டளை ஆசிரியப்பாவில் வரும் அளவடிக்குப் பொருந்த நிற்றலின்று எ-று. எனவே, நீடுகொடி, உரறுபுலி என உரியசை முன் னிரை யீற்ற விரண்டும் உறழும் என்பது ஈண்டுக்கொள்க. கட்டளையடி யிங்ஙனம் வருமெனவே சீர்வகையடிக்கு வெண்சீரும் ஆசிரியவுரிச்சீரும் பொருந்த வரும் என் றுணர்க. `வெண்சீர்வந்தன மேற்கூறுப'. 'வண்புகழ் நிறைந்து வசிந்து - வாங்கு' (முருகு . 106) என ஆசிரியவுரிச்சீர் பொருந்த வந்தது. (23) நிரையீற்று ஆசிரிய உரிச்சீர் கலியுள் வரும் எனல் 24. கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ. இது கட்டளைக்கலிக்கட் சீர்மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) கலித்தளையானாய கலிப்பாவில்வரும் நேரடியிடத்து முற் கூறிய உரியசைமுன் னிரையீற்ற விரண்டுசீர் வருதலும் நீக்கப்படா எ-று. உம்மை இறந்ததுதழீஇயிற்று. 'ஓங்குதிரை யடுக்கம்பாய்ந் துயிர்செகுக்குந் துறைவகேள்' 'விளங்குமணிப் பசும்பொன்னின் வியலறைமேல் விளையாடி' என வரும். இவ்வாறு கூறவே, சீர்வகைக் கலியடிக்கு இவை யொழிந்த ஆசிரிய வுரிச்சீர்களும் ஏனைச்சீர்களும் வேண்டியவாறு வரப்பெறுமாயின. (24) நேரீற்று இயற்சீர் கலிப்பாவில் வாரா எனல் 25. கலித்தளை யடிவயி னேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே. இதுவும் கட்டளையடிக்கொரு சீர்வரையறை கூறுகின்றது. (இ-ள்.) கலித்தளையானாய கலிப்பாவில் வரும் நேரடியிடத்துத் தேமா புளிமா என்னும் நேரீற்றியற்சீரிரண்டும் நிற்றற்குரிய வல்ல, துள்ளலோசையைத் தெரிவோர்க்கு எ-று. இங்ஙனம் வரைந்தோதவே, சீர்வகையடிக்கண் இவ்விரண்டியற் சீரும் வருதல் பெறுதும். (எ-டு.) "ஐயிரு தலையி னரக்கர் கோமான்" (கலி. 38) என வரும். எனவே, நேரீற்றியற்சீர் ஒழிந்த எட்டியற்சீரும் கலிக்குவருதலும் ஆசிரியத்திற்கும் வெண்பாவிற்கும் ஒழிந்த பத்தியற்சீரும் வருதலும் பெற்றாம். (25) நேரீற்று இயற்சீர் வஞ்சிப்பாவினுள் அடிமுதற்கண் வாரா எனல் 26. வஞ்சிமருங்கினு மிறுதி நில்லா. இது கட்டளையல்லா வஞ்சிப்பாவில் வரப்பெறா இயற்சீர் கூறுகின்றது. வஞ்சித்தளை மருங்கிலும் என்னாது வஞ்சி மருங்கினும் என வாளா கூறினமையின் கட்டளையன்மை பெறுதும்; தளைத்தற்றொழில் கட்டளையடிக்கண்ணதாகலின். (இ-ள்.) வஞ்சிப்பாவிடத்தும் நேரீற்றியற்சீர் இரண்டும் இறுதலொடு நில்லா முதற்சீர்க்கண் எ-று. என்றது மற்றைப் பாக்களைப்போலச் சீரியைந்திறுதல் மாத்திரை யன்றி முதற்சீர்தோறும் தம்முள் வேறுபாடுதோன்றத் தூக்கப் படும் ஓசை வஞ்சிக்கு வேண்டுதலின் அவ்வோசைப்படப் பெரும்பான்மை நில்லா தேமா, புளிமா என்னும் இரண்டும் எ-று: என்னை? முதற்சீர் வருஞ்சீரொடு தொடருங்கால் இறுதற்றொழில் பெறுவது நின்ற சீராகலின்; எனவே, நலிந்து கூறியவிடத்துச் சிறுபான்மை தூக்கப்படுமோசைபடவும் நிற்கும் என்றுணர்க. உம்மை இறந்தது தழீஇயிற்று. (எ-டு.) "கொற்றக் கொடியுயரிய" "களிறுங் கதவெறிந்தன" என நேரீற்றியற்சீர் முதற்கட் டூங்காவாயின. "அகல்வயன் மலைவேலி, நிலவு மணல் வியன்கானல்" (புறம். 17) எனவும் "மேதக மிகப்பொலிந்த, வோங்கு நிலை வயக்களிறு" (மதுரைக். 14,15) எனவும் ஒழிந்த இயற்சீர் முதற்கட் டூங்கின. இவை கட்டளையன்மையுணர்க. "புன்காற் புணர் மருதின்" "தேன்றாட் டீங்கரும்பின்" என நலிந்து கூறியவழித் தூங்கின. இனி, "மண்டிணிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும், விசும்புதை -வரும் வளியும், வளித்தலைஇய தீயுந், தீமுரணிய நீரும்" (புறம். 2) என ஈற்றுக்கண் வருதல் பெரும்பான்மையாதலின், இறுதி நில்லா எனப் பொருள் கூறலாகாமை யுணர்க. 'மருங்கு' என்றதனான் நேர்நிலை வஞ்சிக்கே இவ்வரையறை; வியநிலை வஞ்சிக்கு இன்றென உணர்க. (26) அசையும் சீராகும் எனல் 27. இசைநிலை நிறைய நிற்குவ வாயின் அசைநிலை வரையார் சீர்நிலை பெறலே. இது நான்கசையுஞ் சீராம் இடனும் உடைய என்கின்றது. (இ-ள்.) இசைநிலை நிறைய நிற்குவ வாயின் - ஓசைநிலைமையாற் சீர்த்தன்மைப்பட நிறைந்து நிற்குமாயின், அசைநிலை வரையார் சீர்நிலை பெறல் - அசைநிலைமைப்பட்ட சொற்களை யெல்லாம் சீர்நிலை பெறுதற்கு வரையார் எ-று. (எ-டு.) 'கழறொழா மன்னவர்தங் கை' "அவிழ்ந்த துணியசைக்கு மம்பலமுஞ் சீக்கு, மகிழ்ந்திடுவார் முன்ன மலருங் - கவிழ்ந்து, நிழறு ழாயானை நெடுமான்றேர்க் கிள்ளி, கழறொழா மன்னவர்தங் கை" 'புனனாடன் பேரே வரும்' "பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபே, ருன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கன்னோ, மனனொடு வாயெல் லாம் மல்குநீர்க் கோழிப், புனனாடன் பேரே வரும்." "எய்போற் கிடந்தா னென் னேறு" (பு.வெ.வாகை. 22) "மேவாரை யட்ட களத்து" (களவழி. 25, 27, 36) என நேரசையும், நிரையசையும், நேர்பசையும், நிரைபசையும் சீர்ஆயின. இவை ஒரோவோரசைக்குக் காட்டினவேனும் ஒழிந்த அசை கட்குங் கூறிக்கொள்க. இங்ஙனம் கூறாக்கால் வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும்' (செய். 72) என்ற விதி ஆமாறின்று. (27) உரியசைச்சீரும் இயற்சீருள் அடங்கித் தளைகொள்ளப்படும் எனல் 28. இயற்சீர்ப் பாற்படுத் தியற்றினர் கொளலே தளைவகை சிதையாத் தன்மை யான. இஃது எய்தியது ஒருமருங்கு மறுத்தது; இயலசையிரண்டுஞ் சீர்நிலை யெய்தியுந் தளைபடா என்றலின். உரியசைதட்கும் என்றலின் எய்தாதது எய்துவித்ததூஉமாம். (இ-ள்.) இயற்சீர்ப் பாற்படுத்து - முன்னர்க் கூறிய உரியசை யிரண்டும் இயற்சீர்க்கண்ணே கூறுபடுத்து, தளைவகை சிதையாத்தன்மையான - அவ்வியற்சீர்க்குக் கூறுந்தளைவகை கெடாத தன்மைக்கண்ணே, இயற்றினர் கொளல் - அவற்றையும் இயற்றிக் கொள்க எ-று. நேரீற்றியற்சீர் அதிகாரத்தாற் றேமாபுளிமாப்போலத் தட்டல் கொள்க. தளைவகை சிதையா என்றது எய்தியுந் தளையா என்று கொள்க. `சிலைவிலங்கு நீள்புருவஞ் சென்றொசிய நோக்கி, முலைவிலங்கிற் றென்று முனிவாண் - மலைவிலங்கு, தார்மாலை மார்ப தனிமை பொறுக்குமோ, கார்மாலை கண்கூடும் போழ்து.' 'நெய்த்தோர் நிறைத்துக் கணம்புகல'(பு. வெ. 40) என இரண்டசைச்சீரும் இயற்சீர் வெண்டளையாகத் தட்டன. 'தளைவகை சிதையாத்தன்மையான' என இடம் நியமித்தது, சீர்வகையான் அசைச் சீரெனவேறுநின்று அடியுறழ்ந்து எழுபது எனப்பட்ட தளைவகை நோக்குங்கால் வேறெண்ணுந்தொகைபெறாது இயற்சீர்க்கண் அடங்கும் என்றற்கு. எனவே, கட்டளையடிக்கே இவ்வரையறை: அல்லுழி வரையறை யின்மையிற் றளை கொள்ளப்படாதென்றுணர்க. இக்காலத்தார் சீர்வகையடிக்குந் தளை கொள்வர். "தடமண்டு தாமரையின் றாதா டலவ, னிடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடை ஞெண்டு, பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந், தூழி நடாயினா னூர்" என்றவழிக் கண்டு என்பதனை இயற்சீர்வெண்டளை யென்பர். இனிக் 'கலித்தளையடிவயின்' (செய். 25) என்றதன்பின் இச்சூத்திரங் கூறுதலின், இவையுங் கலிக்கு விலக்குண்டு ஆசிரியத்திற்கும் வெண்பாவிற் கும் உரிய வாயின; எனவே, ஆசிரியத்திற்கு இயலசைமயங்கிய இயற்சீர் நான்கும் உரியசைமயங்கிய இயற்சீர் ஆறும் ஆக இயற்சீர் பத்தும், முன்னிரை யீற்ற ஆசிரியவுரிச் சீரிரண்டும் ஈண்டுக்கூறிய அசைச்சீரிரண் டும் ஆகப்பதினான்கும் அடியுறழுமாயின. வெண்பாவிற்கு இருவகை இயற்சீர் பத்தும் வெண்சீர் நான்கும் அசைச்சீர் இரண்டும் எனப் பதினாறு சீரும் அடியுறழுமாயின. கலிக்கு நேரீற்றியற்சீர் ஒழிந்த இயற்சீர் எட்டும் வெண்சீர் நான்கும் ஆசிரியவுரிச்சீர் இரண்டும் எனப் பதினான்கும் அடியுறழுமாயின. இனி நாற்பத்துநான்கும் உண்மைவகையான் இயற்சீர் பத்தும் ஆசிரியவுரிச்சீர் இரண்டும் வெண்சீர் நான்கும் அசைச்சீர் இரண்டும் எனப் பதினெட்டாயின. இவற்றுள் இருநிலைமைப் படுவனபட்டு முப்பத் தொன்றாமாறு 'சீர்நிலைதானே' (செய். 41) என்னுஞ் சூத்திரத்துட் கூறுதும். (28) கலிப்பாவில் கட்டளையடிக்கண் ஓரடியுள் இறுதியில் நிற்கும் வெண்சீரின் முதலசை நேரசையாயினும் நிரையாகக் கொள்ளப்படும் எனல் 29. வெண்சீ ரீற்றசை நிரையசை யியற்றே. இது வெண்சீராற் கலித்தளையாமாறுணர்த்திற்று. கலிக்கு விலக்கிய நேரீற்றியற்சீரதிகாரம் பற்றி இயற்சீர் கூறியதல்லது கலியதிகாரம் விலக்காமை யுணர்க. (இ-ள்.) வெண்சீரீற்றசை - வெண்சீர்கள் பல தொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி அவ்வெண்சீர்களுள் ஈற்றுநின்ற சீரின் முதல்வந்த நேரசை, நிரையசையியற்று - மற்றை, நிரைமுதல் வெண்சீர் வந்து கலித்தளையாயவாறு போலக் கலித்தளையாம் எ-று. என்றது, வெண்சீர்ப் பின்னர் நிரைவந்து தட்டலே சிறந்தது என்றார். அதுவுமன்றி வெண்சீர் நான்கும் ஒன்றினும் அது வெள்ளோசையையுந் தருதலிற் கட்டளையாகாமை கருதி முன்னர் மூன்றுசீரும் பகைத்தே வரல் வேண்டும் என்றும், அவை தம்முட் பகைத்தலிற் பின்வருஞ் சீர் ஒன்றினும் பகைத்த தன்மையாய்த் துள்ளலோசையே நிகழ்த்துமென்றுங் கூறினார். வெண்சீர் என்றது அஃறிணையியற் பெயராதலிற் பன்மைப்பாற் படவுணர்க. வெண்சீர்களுள் என ஏழனுருபு தொக்கது. ஈறு என்றது இறுதிச்சீரை. ஈற்றசையென்றது இறுதிச்சீரினுடைய முதல் அசை யென்றவாறு. (எ-டு.)"அடிதாங்குமளவன்றி யழலன்ன வெம்மையால்' (கலி - 11) என இவ்வெண்சீர்கள் பகைத்து வந்து ஈற்றுசீரின் முதற்கணின்ற நேரசை நிரையசை போலத் துள்ளலோசைகோடலிற் கலித்தளையாயிற்று. இது கட்டளைக்கே யென்பது 'தளைவகை சிதையாத்தன்மை யான' (செய். 28) என நின்ற அதிகாரத்தாற் கொள்க. "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்" (கலி - 11) என்புழி வெண்சீரிறுதி நிரைமுதலியற்சீர் தட்டலிற் றுள்ளலோசை சிறவாதாயிற்று. 'பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணை மென்றோள்' (கலி. 1) போன்று. (29) கட்டளையடி யல்லாதவழி வெண்சீரும் ஆசிரியவடியினுள் வரும் எனல் 30. இன்சீ ரியைய வருகுவ தாயின் வெண்சீர் வரையா ராசிரிய வடிக்கே. இது கட்டளை யல்லுழி வெண்சீர் மயங்குமாறு உணர்த்திற்று. (இ-ள்.) இனிய ஓசை பொருந்த வரும் ஆசிரிய வடிக்கண் வெண்சீரும் வரப்பெறும் எ-று. (எ-டு.) "இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத், தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து" (புறம். 19) என்றவழித் தலையாலம் என ஆசிரியவடியுள் இன்சீர் இயைய வெண்சீர் வந்தது. வருகுவதாயின் என்ற ஒருமையான் ஓரடிக்கண் ஒன்றே வருதல் சிறப்புடைத்து; பலவருதல் சிறப்பின்றாம். (30) கட்டளையடி அல்லாதவழி வஞ்சிச்சீரும் ஆசிரியத்துள் வரும் எனல் 31. அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீர் ஒன்றுத லுடைய வோரொரு வழியே. இது வஞ்சிச்சீர் ஆசிரியத்துத் தூங்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) அந்நிலை மருங்கின் - கட்டளை யல்வழி இன்சீரியைய வரின், வஞ்சி உரிச்சீர் ஓரொரு வழியே ஒன்றுதலுடைய - வஞ்சிச்சீர்களும் ஒரோவொருவழி ஆசிரியத்துடன் பொருந்துதல் உடைய எ-று. ஒருவழி யென்னாது ஓரொருவழியென்றது அறுபது வஞ்சிச் சீரினும் பத்துச்சீரே வருதலும் அவை பயின்றுவாராமையும் அறிவித்தற்கு. (எ-டு.) மாசேர்சுரம், புலிசேர்சுரம், மாசெல்காடு, புலிசெல்காடு, மாசெல்கடறு, புலிசெல்கடறு, பாம்புசேர்வாய், பாம்புவருவாய், களிறுசேர்வாய், களிறுவருவாய் எனவரும். செய்யுளுள்: "மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை குறிஞ்சியொடு கமழும் குன்ற நாடன்' என மாசேர்சுரமும், புலிசேர்சுரமும் வந்தன. "முன்றிலாடு - மஞ்ஞை மூதிலை கறிக்கும்" என மாசெல்காடு வந்தது. "அலரிநாறு துவர்வா யமர்த்த நோக்கின்" எனப் புலிசெல்காடு வந்தது. "கள்ளார்ந் திலங்கு வண்டுமயங்கு தாமரை" என மாசெல்கடறு வந்தது. "கரடிவழங்கு குன்று கண்டு போகி" எனப் புலிசெல்கடறு வந்தது. "காடுதேரா வுழிதருங் கடுங்கண் யானை" எனப் பாம்புசேர்வாய் வந்தது. "சந்துசிதைய வுழுத செங்குரற் சிறுதினை" எனப் பாம்புவருவாய் வந்தது. "மருந்துநாடாத் திருந்து சிலம்பிற் சேக்கும்" எனக் களிறுசெல்வாய் வந்தது. "கடறுகவரா விழிந்து கான்யாறு வரித்த" எனக் களிறுவருவாய் வந்தது. பாம்புவருவாய் களிறுவருவாய் என்ற இரண்டும் நேர்பும் நிரைபும் முன் வருதலின் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீரெனப்படா. (31) அடியாவது இது எனல் 32. நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே. இது நிறுத்தமுறையானே சீருணர்த்தி அடியுணர்த்துகின்றது. (இ-ள்.) நாற்சீர் கொண்ட அளவடி அடியென்று சிறப்பித்துக் கூறப்படும் எ-று. எனவே, ஒழிந்த நான்கடியும் சிறப்பிலவாயின. 'திருமழை தலைஇய விருணிற விசும்பின்' (மலைபடு. 1) 'அகர முதல வெழுத்தெல்லா மாதி' (குறள். 1) 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்' (கலி. 11) என நாற்சீரடியாற் சான்றோர் மூன்றுபாவுங் கூறியவாறுணர்க. குறளடி யானும் சிந்தடியானும் சிறுபான்மை கூறினார். (32) தளையும் தொடையும் நாற்சீர் அடிக்கண்ணேயே வரும் எனல் 33. அடியுள் ளனவே தளையொடு தொடையே. இது நாற்சீரடியின் சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்.) அந்நாற்சீரடியான் வருங் கட்டளையடிக்கண் உள்ளனவே எழுபது தளையும் பத்தொன்பதினாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொரு தொடையும் என வரையறைப்படுவன எ-று. எழுபது தளைப்பகுதியாற் கட்டளையடி யென வுறழ்வதூஉம், அறுநூற் றிருபத்தைந்தடியென வரையறைப்படுவதூஉம், பத்தொன்பதி னாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொன்றென்னும் தொடைப் பகுதி கொள்ளப்படுவதூஉம் நாற்சீரடியேயாயிற்று; எனவே, நாற்சீரான்வருஞ் சீர்வகையடிக்குத் தளையுந் தொடையுங் கொள்ளின், அவை வரையறை யில என உணர்க. அளவடி இரண்டியைந்தும் ஒன்று வந்துந் தொடைகோடலும், ஒழிந்தவடி நான்கும் விகற்பத்தொடை கொள்ளாமையும் உணர்க. (33) கட்டளைப்பாட்டிற்கும் தொடைக்கும் ஒரு கருவி 34. அடியிறந்து வருத லில்லென மொழிப. இது கட்டளைப்பாட்டிற்குந் தொடைக்கும் ஒரு கருவி கூறுகின்றது. (இ-ள்.) அறுநூற்றிருபத்தைந் தடியுள்ளும் ஓரடி நின்றாங்கு வருகின்ற அடியும் முன்னின்றவடியை இறந்து வருதலில்லை என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. என்றது, முற்கூறிய தளைவகையேயன்றி, அடியோடு அடிக் கூட்டத்துத் தளைகொள்ளுங்காலும் வந்த வடியே வரவேண்டு மென்ப தூஉம், தொடை கொள்ளுங்காலும் வந்த வடியே வரவேண்டு மென்ப தூஉம் கூறியவாயின; எனவே, தேமா தேமா தேமா தேமா என்னும் அடிக்கட்டொடை கொள்ளுங்கால் "வாமா னேறி வந்தோன் மன்ற" என வந்த அடியே வரல் வேண்டுமென்பதூஉம், "தேமாஞ் சோலைத் தீந்தே னுண்ட, காமர் தும்பி யாகல் கண்டது" எனத் தளைவழுவாகித் தொடைப் பகுதியுட் படாதென்பதூஉம் கூறியவாறாயிற்று. இனி வெண்பாவினுள், "சென்றே யெறிப வொருகால் சிறுவரை, நின்றே யெறிப பறையினை - நன்றேகாண்" (நாலடி. 34) எனப் பன்னிரண்டெழுத்தடியொன்றனையும் இருகாற் சொல்லி எதுகை கொள்ளுங்கால் அடியோடடிக் கூட்டத்துத் தளைவகை சிதையாது தொடைப் பகுதியுட்பட்டவாறு காண்க. "யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின், றானூட யானுணர்த்தத் தானுணரான் - றேனூறு கொய்தார் வழுதிக் குளிர்சாந் தகல மெய்தா திராக்கழிந்த வாறு" எனப் பதினான்கெழுத்தின் இகந்ததின்றேனும் தளைவகை யொன்றாமையிற் றொடைப் பகுதியுட் படாதாயிற்று. வண்டு வரகு வரகு வரகு என நின்ற வடியை மீட்டும் வண்டு வரகு வரகு வரகு எனத்தந்து தொடை கொள்ளுங்கால் ஆசிரியத்தளை தட்டு வழுவாயிற்று. கலிக்கு அன்னதொரு வரையறையின்று. அது "வெண்சீ ரீற் றசை" (செய். 29) என்னுஞ் சூத்திரத் தானும், "தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா" (செய். 55) என்னுஞ் சூத்திரத்தானும் உணர்க. ஏனை அகவலும் வெள்ளையுமே வரையறைப் பட்டன. இதனானே, அறுநூற்றிருபத்தைந்தடியும் தம்முன்னர்த் தாமே வந்து தளையுந் தொடையும் வழுப்படாமற் கொள்ளுமென்றவாறு. (34) நாற்சீரடியான் வந்த பாட்டே சிறப்புடைய பாடல் எனல் 35. அடியின் சிறப்பே பாட்டெனப் படுமே. இதுவும் அந்நாற்சீரடியின் சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்.) அடியின்பாட்டே - அந்நாற்சீரடியென்னும் உறுப்பான் வந்த பாட்டையே, சிறப்பெனப்படுமே - சிறப்புடைப்பாட்டென்று கூறப்படும் எ-று. அடியினாற் செய்யுள் வரையறை கூறலன்றி மாத்திரை முதலிய உறுப்பான் இத்துணைப்படுஞ்செய்யுளென்று வரையறை கூறப்படாமை யின் அடியான் வந்ததே பாட்டென்றார். அது மூவகைச் சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற்சீரடியானே மூன்று பாவும்வரப் பெரும்பான்மை செய்யுட் செய்து, வஞ்சிப்பா சிறுவரலிற்றாகச் செய்யுள் செய்தவாற்றா னுணர்க. (35) நாற்சீரடியின் பகுப்பும், அவற்றின் பெயரும் முறையும் தொகையும் 36. நாலெழுத் தாதி யாக வாறெழுத்து ஏறிய நிலத்தே குறளடி யென்ப. 37. ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே ஈரெழுத் தேற்ற மல்வழி யான. 38. பத்தெழுத் தென்ப நேரடிக் களவே ஒத்த நாலெழுத் தேற்றலங் கடையே. 39. மூவைந் தெழுத்தே நெடிலடிக் களவே ஈரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப. 40. மூவா றெழுத்தே கழிநெடிற் களவே ஈரெழுத்து மிகுதலு மிவட்பெறு மென்ப. இவை ஐந்து சூத்திரமும் உதாரணச் சுருக்கமும் உரையியைபும் நோக்கி உடனெழுதப்பட்டன. இவை நாற்சீரடி இத்துணைப் பகுதிப்படு மென அவற்றின் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றன. (இ-ள்.) நாலெழுத்து முதலாக ஆறெழுத்துக்காறும் ஏறிய மூன்று நிலத்தையுமுடைத்து குறளடி எ-று. சிந்தடிக்கெல்லை ஏழெழுத்தொன்றுமே என்று கூறுவர், எட்டு மொன்பதும் ஆகிய இரண்டுமல்லாதவிடத்து எ-று. அளவடிக்கெல்லை பத்தெழுத்தொன்றுமே என்று கூறுவர், அதனோடொத்த பதினொன்றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினான்குமாகிய நான்கெழுத்தானாகிய நான்கு நிலனும் ஏற்றமாய் வாராதவழி எ-று. நெடிலடிக்கெல்லை பதினைந்தெழுத் தொன்றுமே என்று கூறுவர், அதற்குப் பதினாறும் பதினேழுமாகிய இரண்டெழுத்தும் மிக்குவரும் நிலமிரண்டும் இயல்பென்று கூறுவர் எ-று. கழிநெடிலடிக்கெல்லை பதினெட்டெழுத்தாமென்று கூறுவர், அதற்குப் பத்தொன்பதும் இருபதுமாகிய இரண்டெழுத்தும் மிக்குவரும் நிலமிரண்டையும் இவ்விடத்தே பெறுமென்று சொல்லுவர் எ-று. குறளடியொழிந்தனவற்றை இங்ஙனம் வகுத்துரைத்தார், தலை யிடை கடை யென்னும் மூன்று கூற்றான் ஒன்றற்கொன்று சிறப்புமிழிபு முடைமையின். (எ-டு.) 'பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு நீங்கி நீர்வாய்க் கொண்டு நீண்ட நீல நீர்வாய் யூதை வீச ஊர்வாய் மணியேர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னெல் லூர வமையேர் மென்றோ ளம்பரி நெடுங்க ணிணையீ ரோதி யேந்திள வனமுலை யிறும்பமன் மலரிடை யெழுந்த மாவி னறுந்தழை துயல்வரூஉஞ் செறிந்தேந் தல்கு லணிநடை அசைஇய வரியமர் சிலம்பின் மணிமருள் வளர்குழல் வளரிளம் பிறைநுத லொளிநிலவு வயங்கிழை யுருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்கிய வணிநிலவு மணிநக ரிருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்ப மொழிகுவ தன்றே. இதனுள் நாற்சீரடிக்கட் பதினேழு நிலத் தைவகையடியும் முறையானே வந்தவாறு காண்க. மக்களுள் தீரக்குறியானைக் குறளனென்றும், அவனிற் சிறிது நெடியானைச் சிந்தனென்றும், ஒப்பவமைந்தானை அளவிற்பட்டா னென்றும், அவனிற் சிறிது நெடியானை நெடியானென்றும், அவனின் மிகநெடியானைக் கழியநெடியா னென்றும் கூறுபவாகலின் அவைபோலக் கொள்க, இப்பெயர். இவை சீர்வகை யடிக்கும் ஒக்கும்: என்னை? சுருங்கியவெழுத்தானும் இருசீரானும் வருவன குறளடி எனவும், ஏறியவெழுத்தானும் முச்சீரானும் வருவன சிந்தடி எனவும், இடைநிகரான வெழுத்தானும் நாற்சீரானும் வருவன அளவடி எனவும், மிக்கவெழுத்தானும் ஐஞ்சீரானும் வருவன நெடிலடி எனவும், அவற்றின் மிக்க வெழுத்தானும் அறுசீர் முதலிய சீரானும் வருவன கழிநெடிலடியெனவும் இங்ஙனம் இருவகையடிக்கும் ஒருபெயரே கொள்க. அவை, 'ஓங்குதிரை வியன்பரப்பின்' (மதுரைக். 1) 'வலமா திரத்தான் வளிகொட்ப' (மதுரைக். 5) 'சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே' (புறம். 235) 'சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே' (புறம். 235) 'நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ' (கலி. 39) 'கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணத்தொடு விளையாட' "மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரு நாண முழுதுலகு மூடி முளைவயிர நாறித் தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற் சுடரோய்நின் னடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டாற் சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச் சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப் பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து புலன்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே." (சூளா. துறவு. 64) என இவற்றை முறையானே குறளடி சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி எனப் பெயர் கூறுப; எண்சீரின் மிக்கன சிறப்பில. (39-40) ஐந்தெழுத்தின் மிக்குச் சீர்கள் வாரா எனல் 41. சீர்நிலை தானே யைந்தெழுத் திறவாது. இது மேலெழுத் தெண்ணி அடிவகுத்த கட்டளையடிக்குச் சீரும் எழுத்தெண்ணி வகுக்கின்றது. (இ-ள்.) ஒருசீரினது நிலைமைதான் ஐந்தெழுத்து இறந்து வாராது எ-று. பெருமைக்கு எல்லைகூறி வரையறுப்பவே, சிறுமைக்கு எல்லை வரையறைப்படாது; ஒன்று முதலாக வருதல் பெற்றாம். அசைநிலையிற் பிரிந்து நிற்றலிற் றானே யென்பது பிரிநிலை யேகாரம். அவற்றையுஞ் சீரென அடக்குக எனின்: . அவை இயற்சீர்ப் பாற்படுத்து இயற்ற வேண்டா; இங்ஙனம் பாற்படுவனவற்றைச் சேரக் கூறலின் மயங்கக்கூறலென்னுங் குற்றமாம். இனி அவை மூன்றெழுத்தி னிகவாமை உரையிற் கொள்க. அச்சீர்கள் வருமாறு: நுந்தையும் வண்டும் ஓரெழுத்துச் சீரென்ப. தேமா, ஞாயிறு, போதுபூ, போரேறு, மின்னு, வரகு என இயைந்த ஆறும் ஈரெழுத்துச் சீராகும் என்ப. புளிமா, பாதிரி வலியது, மேவுசீர், நன்னாணு, பூமருது, கடியாறு, விறகுதீ, மாசெல்வாய், நீடுகொடி அரவொடுகூட மூவெழுத்துச்சீர் பதினொன்றாகும். கணவிரி, பெருநாணு, காருருமு, உருமுத்தீ, மழகளிறு, மாவருவாய், புலிசெல்வாய், நாணுத்தளை, உரறுபுலியொடு ஒன்பதுசீரும் நாலெழுத்துச் சீராகு மென்ப. நரையுருமு, புலிவருவாய், விரவுகொடி மூன்றும் ஐயெழுத்துச் சீராகு மென்ப. 'எழுத்தளவெஞ்சினும்' (செய். 43) என்னுஞ் சூத்திரத்தான் இங்ஙனங் காட்டினாம். ஆகச் சீர் முப்பத்தொன்றாம். (41) சமநிலை வஞ்சிக்கு ஆறெழுத்தானும் சீர்வரும் எனல் 42. நேர்நிலை வஞ்சிக் காறு மாகும். இது வஞ்சிப்பாவினுள் வருஞ்சீர்க்கு எழுத்துவகை கூறுகின்றது. (இ-ள்.) சமநிலை வஞ்சிக்கு ஆறெழுத்துமாம் எ-று. அஃது இருசீரான் வரும்; முச்சீரான் வருவது வியநிலை வஞ்சி. மேல்நின்ற வதிகாரத்தாற் பெருமைக்கெல்லை கூறினார். சிறுமைக் கெல்லை மேற்கூறுப. (46) எனவே, ஆறெழுத்தி னிகந்தன கட்டளையடிக்காகா வென உணர்க. உம்மை இறந்தது தழீஇயிற்று, ஐந்தேயன்றி ஆறுமாமென்றலின். அவை முற்கூறிய உதாரணங்களுட் காண்க. (42) சீர்களுக்குரிய எழுத்துக்கள் மிகினும் குறையினும் தத்தம் ஓசைநலம் குன்றாவெனல் 43. எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்லென மொழிப. இது முற்கூறிய சீர்கட்கெல்லாம் பொதுவிதி. (இ-ள்.) எழுத்தளவெஞ்சினும் - முற்கூறிய சீர்களெல்லாம் கட்டளையடிக்குத் தத்தம் எழுத்துக் குறைந்தும் மிக்கும் தம் அளவிறந்து வரினும், சீர்நிலைதானே குன்றலும் மிகுதியும் இல்லென மொழிப - அவை அவ்வச்சீரெனவேபட்டுச் செய்யுளுள் அவ்வப்பாக்களின் ஓசையை யுணர்த்தி, ஒரு தன்மையவாயே நிற்கும், சுருக்கப்பெருக்கம் இலவென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எனவே, அவை கட்டளைக்கு எழுத்தெண்ணி அடிவகுக்கு மாற்றான், இயற்சீரும் உரிச்சீரும் ஒருநிலைமைப்படுதலும், வஞ்சிச்சீர் பலநிலைமைப்படுதலும் உடைய வேனும், அவ்வெழுத்திற்கல்லது சீர்க்குச் சுருக்கம் பெருக்கமிலவென்று கூறியவாறா யிற்று. தானே என்றதனான் அசைச் சீர்க்கும் இருநிலைமை கொள்க. அவை இருநிலைமைப்படுமாறு. 1. 'இயலசை மயங்கிய வியற்சீர் நான்கனுட் புளிமா வொழிந்த வியற்சீர் மூன்று நுந்தை தேமா ஞாயிறு பாதிரி வலியது கணவிரி யெனவிரு வகையா யிருமூன் றாக வியம்பினர் புலவர்' நுந்தை - ஓரெழுத்துத் தேமா, ஞாயிறு - ஈரெழுத்துப் பாதிரி, வலியது - மூவெழுத்துக் கணவிரி.இவற்றுட் குற்றுகரம் எழுத்தெண்ணப். பெறாமை யானும் அலகு பெறலானும், இருநிலைமை எய்திற்று. உரியசை மயங்கின இயற்சீராறும், போதுபூ, மேவுசீர், விறகுதீ, உருமுத்தீ போரேறு, நன்னாணு, பூமருது, காருருமு, மழகளிறு, நரையுருமு, கடியாறு, பெருநாணு என்று ஈருகரத்தான் ஈராறாகும். இவை குற்றுகர முற்றுகரங்களான் இருநிலைமை எய்தின. இருவகை இயற்சீராய பதினெட்டு, புளிமாவொடு பத்தொன்ப தாகும்; ஆக இயற்சீர் பத்தொன்பது; இவற்றுள், 2. 'நுந்தை தேமா புளிமா நேரீறா மன்றி வந்த வீரெண் சீராய்ப் பாதிரி கணவிரி யாகிநின் றவையு ளொன்றி வந்தன வாசிரி யத்தளை யொன்றா தனவே வெண்டளை யாகும்' 3. 'முன்னிரை யீற்றவா சிரிய வுரிச்சீர் நீடு கொடியே நாணுத் தளையே உரறு புலியே விரவு கொடியென வீருக ரத்தா னீரிரண் டாகிப் பாதிரி கணவிரி போலத் தட்கும்' என உரிச்சீர்கள் இருநிலைமை எய்தின. 4. 'வண்டும் மின்னும் வரகு மரவுமெனக் கண்டஈ ருகர வசைச்சீர் நான்குந் தேமா புளிமா வாகித் தட்கும்' என அசைச்சீரும் இருநிலைமை எய்தின. வெண்சீர் நான்கும் ஒருநிலைமையவேயாம். 5. 'வெண்சீர் நான்குந் தம்முற் றாம்வந்து தட்ட வெண்டளை கட்டளைக் காகா சீர்வகை யான்வருங் கலிக்கும் வெள்ளைக்கு மாகுமென்ப வறிந்திசி னோரே' 6. வெண்சீர் தம்முண் மாறாங் கலித்தளை கட்டளைக் கலிக்கென் றொட்டிய தாகு மதனோ டியற்சீர் ஒன்றி வரினது கட்டளை வெள்ளைக் காகு மென்ப' 7. 'இயற்சீ ரசைச்சீ ருரிச்சீர்வெண் சீரென மயக்கற வகுத்த சீர்க ளெல்லா மொன்றுதலை யிட்ட வொருமுப் பஃதே,' ஆக நால்வகைச் சீரும் முப்பத்தொன்று. இனி வஞ்சியுரிச்சீர் பல நிலைமைப்படுமாறு 'குறளடிமுதலா' (57) என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். (43) எழுத்தெண்ணிச் சீர்வருங்கால் ஒற்றும் குற்றுகரமும் ஆய்தமும் எண்ணப்படா வெனல் 44. உயிரில் லெழுத்து மெண்ணப் படாஅ உயிர்த்திற மியக்க மின்மை யான. இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) உயிரில் எழுத்தும் எண்ணப்படாஅ - ஒற்றும் ஆய்தமுங் குற்றுகரமும் எழுத்தெனப் பெயர் கூறினாரேனும் எழுத்தாக எண்ணப் படா; என்னை? உயிர்த்திறம் இயக்கம் இன்மையான - அவை தத்தம் ஓசை இனிது விளங்க ஒலித்தற்குக் கூறிய எண்வகை நிலத்தினும் விளங்க இயங்காமையின், எ-று. என்றது எழுத்தெண்ணுமிடத்து அவை ஒழித்தெண்ணுக என்றவாறு, இது கட்டளைக்கு 'பேர்ந்து சென்று' என்பதனுள் அவை யொழித்து எண்ணப்பட்டது. பின்னுள்ளோர் கொண்ட கட்டளைக் கலித்துறை, சந்தந் தாண்டகங்கட்கும் இவ்வாறெழுத்தெண்ணுதல் வேண்டுமென்றுணர்க. (44) சமநிலை வஞ்சியடி இருசீரான் வரும் எனல் 45. வஞ்சி யடியே யிருசீர்த் தாகும். இஃது அதிகாரத்தானின்ற வஞ்சியடியாமாறு கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய சமநிலைவஞ்சியினடி இருசீரையுடைத்தாகி வரும் எ-று. ஏகாரம் பிரிநிலை, சிறப்பில்லா வியநிலை வஞ்சியினின்றும் பிரித்தலின். வியநிலை வஞ்சிக்குக் கட்டளை யின்று. இங்ஙனம் கூறவே, வஞ்சியடியும் ஒருவாற்றான் உறழப்படுமாயிற்று. அது 'குறளடி முதலா' (57) என்பதனுட் காட்டுதும். இங்ஙனம் வஞ்சியுறழாவிடிற் குன்றக் கூறலென் னுங் குற்றந் தங்கும். (45) சமநிலை வஞ்சிக்கு எழுத்துச் சிறுமை 46. தன்சீ ரெழுத்தின் சின்மை மூன்றே. இது முன்னர்ச் சமநிலைவஞ்சிக்குப் பெருமைக் கெல்லை கூறினமையின் ஈண்டுச் சிறுமைக்கெல்லை கூறுகின்றது. (இ-ள்.) அவ்வஞ்சிச் சீருக்கு எழுத்தின் சிறுமை மூன்றே எ-று. 'தன்' என்றது முற்கூறிய வஞ்சியை. (எ-டு.)'கொன்றுகோடுநீடு கொலைக்களிறுகடாஅய்' என வரும். ஏகாரத்தானே மேல் வருகின்ற வியநிலை வஞ்சிக்காயின் மூவெழுத்தினி ழிந்து ஈரெழுத்தானும் வருமென்று கொள்க; நுந்தைகாடு என வரும். (46) வியநிலை வஞ்சியடி முச்சீரானும் வரும் எனல் 47. முச்சீ ரானும் வருமிட னுடைத்தே. இஃது ஒழிந்த வியநிலைவஞ்சி கூறுகின்றது. (இ-ள்.) வஞ்சியடி இருசீரானன்றிச் சிறுபான்மை முச்சீரானும் வரப்பெறும் எ-று. 'உடைத்து' என்றதனான் இது கட்டளையன்மையும் சான்றோர் செய்யுளுட் பயிலாமையும் பெறுதும். இரண்டனையும் வஞ்சியடி என வரையாது கூறவே இரண்டடியும் மயங்கிவந்த பாட்டை மயக்கடிவஞ்சி யெனவும் வேறு வேறு வந்தனவற்றைக் குறளடிவஞ்சி, சிந்தடிவஞ்சி யெனவுங் கூறிக்கொள்க. (எ-டு.) "தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ" (புறம். 4) எனவும் "நிலைக்கொராஅ விலக்கம் போன்றன" (புறம். 4) எனவும் குறளடியும் சிந்தடியும் வந்தமையான் இப்பாட்டு மயக்கடி வஞ்சியாம். (47) வஞ்சியடியுள் அசை கூனாகி வரும் எனல் 48. அசைகூ னாகு மவ்வயி னான. இதுவும் அதற்கெய்தியதொரு விதி. (இ-ள்.) அவ்விரண்டடியின் கண்ணும் நான்கசையும் கூனாய் வரப்பெறும் எ-று. (எ-டு.)'வாள், வலந்தர மறுப்பட்டன' (புறம். 4). இதனை வாள் வலந்தர என 'யாத்தசீர்' (செய். 1) என்றதனான் ஒரு சீராக்கின் வலந்தருதல் வாள்மேற் செல்ல மறுப்பட்டன என்னும் பயனிலை நின்று வற்றுதலின் வாள் என நேரசை கூனாயிற்று. 'அடி, யதர்சேறலி னகஞ்சிவந்தன' 'வண்டு, மலர்தேர்ந்து வரிபாடின' 'களிறே, கதவெறியாச் சிவந்துரைஇ' (புறம். 4) என நான்கசை கூனாயின. களிறே என்ற ஏகாரம் அசையாதலிற் பொருளின்றி நின்றது. இனி இச்சூத்திரம் பொதுவாய் நிற்றலிற் றூக்கிரண்டுபட இடையினுங் கடையினுங் கூனாய் நிற்பனவுங் கொள்க. (எ-டு.) 'கலங்கழாஅலிற், றுறை, கலக்கா னாதே' எனத் துறையென இடைக்கண் நிரையசை கூனாயிற்று. 'மாவழங்கலின் மயக்குற்றன, வழி' இதனுள் வழியென இறுதிக்கண் நிரையசை கூனாயிற்று. 'தேரோடத் துகள்கெழுமின, தெருவு' என இறுதிக்கண் நிரைபசை கூனாயிற்று. ஒழிந்தன வந்துழிக் காண்க. (48) சீர் கூனாகும் இடம் இதுவெனல் 49. சீர்கூ னாத னேரடிக் குரித்தே. இது மூன்று பாவிற்கும் உரிய அளவடிக்கு எய்தாததெய்து விக்கின்றது. (இ-ள்.) அளவடிக்குச் சீர் கூனாதல் உரித்து எ-று. இஃது இருவகையடிக்கும் உரித்து. (எ-டு.) 'அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை வாடா வள்ளியங் காடிறந் தோரே' (ஆசிரியப்பா. குறுந். 219) 'உதுக்காண், சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்' (வெண்பா) 'உலகினுட், பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்' (கலிப்பா) என்று மூன்றுபாவினும் வந்தன. ஏற்புழிக்கோடல் என்பதனான் அடிமுதற்கட் கோடும். தன்னினமுடித்தல் என்பதனான் வஞ்சிக்குங் கொள்க. 'உலகே, முற்கொடுத்தார் பிற்கொளவும்' எனவரும். (49) ஐவகையடிகளையும் விரிக்குங்கால் அறுநூற்று இருபத்தைந்து அடிகளாகும் எனல் 50. ஐவகை யடியும் விரிக்குங் காலை மெய்வகை யமைந்த பதினேழ் நிலத்த எழுபது வகையின் வழுவில வாகி அறுநூற் றிருபத் தைந்தா கும்மே. மேல் நாற்சீரடியினை ஐவகையாகக் கூறி இதனானே அறு நூற்றிருபத் தைந்தாகுமென அவற்றின் விகற்பமுங் கூறினார். (இ-ள்.) ஐவகை அடியும் விரிக்குங் காலை - மேற்கூறிய ஐவகை யடியும் விரிக்குமிடத்து, மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்த - பொருள்வகையமைந்த பதினேழ் நிலத்தவாய், எழுபது வகையின் வழுவில வாகி - எழுபதுவகைக் குற்றம் நீங்கி, அறுநூற்று இருபத்தைந் தாகும்மே - அறுநூற்றிருபத்தைந்தாம் எ-று. எனவே, பதினேழ்நிலத்தேறினும் எழுபதுவகைக் குற்றம் விரவினும் அறுநூற்றிருபத்தைந்து என்ற கட்டளை யாகாதாயிற்று. அகவற்கு இயற்சீர் பத்தொன்பதும் உரிச்சீர் நான்கும் அசைச்சீர் நான்கும் ஆக இருபத்தேழும், வெள்ளைக்கு இயற்சீர் பத்தொன்பதும் வெண்சீர் நான்கும் அசைச்சீர் நான்கும் ஆக இருபத்தேழும், கலிக்கு நேரீற்றியற்சீர் மூன்றொழிந்த இயற்சீர் பதினாறும் உரிச்சீர் நான்கும் வெண்சீர் நான்கும் ஆக இருபத்து நான்கும், ஆக எழுபத்தெட்டுச் சீர்களுள் அகவற்கும் வெள்ளைக்கும் அசைச்சீர் எட்டும் இயற்சீர்ப்பாற்படுத்துத் தளைகோடலின் அவற்றை இயற்சீர்க்கண் அடக்க எழுபதாம். சீர்கள் ஒன்று ஒன்றனொடு தட்குங்கால் அவை பொருளானன்றி ஓசையைக் கடக்குமாறின்மையின் அவ்வோசை கெடாது வருதற்கு எழுபதுதளை வழுவின்றி வரல்வேண்டும் என்பார் 'எழுபது வகையின் வழுவில' என்றார். இவ்வண்ணந் தளைகொண்டாரேனுந் தளைக்குக் கழித்த அசைச்சீரெட்டும் சீராய் நின்று அடியுறழுமென வுணர்க. அகவற்கு ஆசிரியத்தளையும், வெள்ளைக்கு இயற்சீர் வெண்டளை யும், இயற்சீரொடுதட்ட வெண்சீர்வெண்டளையும், துள்ளற்குக் கலித்தளையும் ஆக அறுநூற்றிருபத்தைந்து தளையும் மூன்று பாவிற்கும் பகுக்குங்கால் அகவற்கு முந்நூற்றிருபத்து நான்கும், வெள்ளைக்கு நூற்றெண்பத்தொன்றும், கலிக்கு நூற்றிருபதுமாம். 'மெய்வகை யமைந்த' என்றதனான் நான்கு சீரினும் உறழ்கின்ற சீரினை அடிமுதற்கண்ணே வெளிப்படவைத்து அவ்வச்சீரினடியாக்கிப் பெயருங்கொடுத்து அகவற்கு ஒரோவொன்று பன்னீரடியாகவும் ஒழிந்த இரண்டற்கும் பிறவாறாகவும் உறழப்படும். இனி அகவற்கு உறழுமாறு 8. 'இயற்சீ ருரிச்சீ ரசைச்சீர் கூடி யிரண்டு தலையிட்ட வையைந்து சீராய் அகவற் கொரோவொன் றுறழு மடித்தொகை யீரா றென்ப வியல்புணர்ந் தோரே' 9. 'அகவற் குரியசீ ரிருபத் தேழனுள் நுந்தையும் வண்டும் முதல்வரு மடிக்கண் அந்நான் கெழுத்தும் முதலாய்க் கொண்டு பதினைந் தளவு மேறிப் பெறுந்தொகை யீரா றீரா றாகுமென்ப' (24) (எ-டு.)நுந்தை வண்டு வண்டு வண்டு எனவும்; நுந்தை காருருமு நளிமுழவு நளிமுழவு எனவும் ஓரெழுத்துத் தேமாவடி நான்குமுதற் பன்னிரண்டளவும் உயர்வனவற்றிற்கு முதலடியும் முடிவிலடியுங் காட்டினாம். இதற்குமேல் வருவனவற்றிற்கும் இடைநின்றனவற்றிற்கு மிவ்வாறே சீர்தளைப் பெய்து ஒட்டிக்கொள்க. வண்டு வண்டு வண்டு வண்டு எனவும் வண்டு காருருமு நளிமுழவு நளிமுழவு எனவும்; வண்டு என்னும் ஓரெழுத்துச் சீரடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவுங்காட்டினாம். 10. 'தேமா மின்னு வரகுமுதல் வருமடி யைந்துமுத லீரெட் டளவு முயர்ந்து வந்த தொகைமூ வொருபத் தாறே' (36) தேமா. வண்டு வண்டு வண்டு எனவும்; தேமா காருருமு நளிமுழவு நளிமுழவு எனவும்; தேமாஅடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவும் காட்டினாம்; மின்னு, வரகு என்னும் இரண்டற்கும் இஃதொக்கும். 11. 'ஞாயிறு போதுபூப் போரேறு புளிமா, அரவு முதலா வந்தவைந் தடியு மாறு தொட்டுப் பதினே ழளவு முயர்ந்த தொகையா றொருபஃ தாகும்' (60) ஞாயிறு வரகு வண்டு வண்டு எனவும் ஞாயிறு நளிமுழவு நளிமுழவு நளிமுழவு எனவும் ஞாயிற்றடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவுங் காட்டினாம். போதுபூ போரேறு என்னும் இரண்டற்கும் ஈதொக்கும். புளிமா வண்டு வண்டு வண்டு எனவும் புளிமாக் காருருமு நளிமுழவு நளிமுழவு எனவும் ஒட்டுக. அரவுக்கும் இவ்வாறே யொட்டுக, என்றைந் தடிக்கும் முதலும் முடிவும் காண்க. 12. 'பாதிரி வலியது மேவுசீர் நன்னாணுப் பூமருது கடியாறு விறகுதீ நீடுகொடி யாதி யாகிய வடிக டாமே யேழுமுதன் மூவா றளவு முயர்ந்த தொகையாறு முடியிட்ட தொண்ணூ றாகும்' (96) பாதிரி வரகு வண்டு வண்டு எனவும்; பாதிரி நளிமுழவு நளிமுழவு நளிமுழவு எனவும் பாதிரியடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவுங் காட்டினாம். ஒழிந்த ஏழற்கும் இவ்வாறே யொட்டிக் காண்க. 13. 'கணவிரி யுரறுபுலி காருருமு பெருநாணு உருமுத்தீ மழகளிறு நாணுத்தளை முதலா வந்த வடிக ளிருநான்கு தொட்டுப் பத்தொன் பானள வும்முயர்ந் ததொகை நான்குமுடி யிட்ட வெண்ணொரு பஃதாம்' (84) கணவிரி வரகு வண்டு வண்டு எனவும் கணவிரி நரையுருமு நரையுருமு நரையுருமு எனவும் கணவிரியடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவுங் காட்டினாம். ஒழிந்தவற்றிற்கும் இவ்வாறே யொட்டிக்கொள்க. 14. 'விரவுகொடி நரையுருமு முதல்வரு மடிக ளொன்று தலையிட்ட விருநான்குதொட்டே யைந்நான் களவு முயர்ந்த தொகைதா மூவெட்டாக மொழிந்தனர் புலவர்' (24) விரவுகொடி வரகு வண்டு வண்டு எனவும்; விரவுகொடி நளிமுழவு நளிமுழவு நளிமுழவு எனவும் விரவுகொடியடி பன்னிரண்டற்கும் முதலும் முடிவுங் காட்டினாம். ஒழிந்ததற்கும் இவ்வாறே யொட்டிக் காண்க. 15. 'அகவற் குறழ்ந்த வடித்தொகை கூறின் நான்குதலை யிட்ட நாலைந் தனோடு மூவொரு நூறா மொழிந்தனர் புலவர்' ஆக அடிமுந்நூற்றிருபத்து நான்கு; 324. இனி வெள்ளைக்கு உறழுங்கால் ஏழும் எட்டும் ஒன்பதும் பத்தும் ஆகிய எழுத்தானாய வடிகள் முதலா வந்தவை பதினான்கெழுத்தளவும் உயருங்கால் ஓரு சீர் எட்டடியும் ஏழடியும் ஆறடியும் ஐந்தடியும் பெற்று நூற்றெண்பத்தொன்றாம். 16. 'இயற்சீ ரசைச்சீர் வெண்சீர் கூடி யிரண்டு தலையிட்ட வையைந்து சீராய் வெள்ளை யுறழு மாறு கூறி னெட்டு மேழு மாறு மைந்துமென் றொட்டு மடிகளைப் பெறுமவை தாமே' 17. 'வெள்ளைக் குரியசீ ரிருபத் தேழனுள் நுந்தை வண்டு ஞாயிறு போதுபூப் போரேறு முதலா வந்த வடிக ளேழு தொட்டே யீரே ழளவு முயர்ந்த தொகைநா லொருபஃ தாகும்' (40) (எ-டு.)நுந்தை வரகு வரகு வரகு எனவும்; நுந்தை நளிமுழவு காருருமு காருருமு எனவும் நுந்தையடிக்கு முதலும் முடிவுங்காட்டினாம். வண்டிற்கும் இஃதொக்கும். ஞாயிறு வண்டு வரகு வரகு எனவும்; ஞாயிறு காருருமு மாவருவாய் காருருமு எனவும் ஞாயிற்றடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். போதுபூ, போரேறு என்னும் இரண்டற்கும் இஃதொக்கும். 18. 'தேமா மின்னு வரகு வலியது பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது கடியாறு விறகுதீ மாசெல் வாய்முதல் வந்த வடிக ளிருநான்கு தொட்டே யீரே ழளவு முயர்ந்து பெறுந்தொகை யேழுமுடி யிட்டவே ழொருபஃ தாகும்' (77) தேமா வரகு வரகு வரகு எனவும், தேமா நளிமுழவு காருருமு பாதிரி எனவும் தேமாவடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். மின்னு வரகு என்னு மிரண்டற்கும் இஃதொக்கும். வலியது வண்டு வரகு வரகு எனவும், வலியது காருருமு காருருமு பாதிரி எனவும் ஒட்டுக. ஒழிந்தவற்றையும் இவ்வாறே யொட்டுக. 19. 'கணவிரி பெருவேணுக் காருருமு புலிசெல்வாய் மழகளி றுருமுத்தீ மாவரு வாய்புளிமா வரவு முதலாக வந்த வடிக ளொன்பது முதலா மீரே ழளவு முயர்ந்து பெறுந்தொகை யுணரக் கூறி னான்குதலை யிட்ட வையொரு பஃதாம்' (54) கணவிரி வண்டு வரகு வரகு எனவும் கணவிரி காருருமு காருருமு தேமா எனவும் கணவிரியடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். காருருமு வண்டு வரகு வரகு எனவும் காருருமு காருருமு காருருமு ஞாயிறு எனவும் ஒட்டுக. புளிமா வரகு வரகு வரகு எனவும் புளிமா புலிவருவாய் காருருமு தேமா எனவும் ஒட்டுக. ஒழிந்தவற்றிற்கும் ஏற்குமாறறிந் தொட்டுக. 20. 'நரையுருமு புலிவருவாய் முதலா மடிக ளீரைந்து தொட்டே யீரே ழளவு முயர்ந்து பெறுந்தொகை யீரைந் தாகும்' (10) நரையுருமு வண்டு வரகு வரகு எனவும்; நரையுருமு காருருமு பாதிரி தேமா எனவும் நரையுருமு அடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். புலிவருவாய்க்கும் இஃதொக்கும். பதினான்கெழுத் தினேறியக்காற் செப்பலோசை திரிபுடைய கட்டளைக்கென்பது இசையொடு சேர்த்தி யுணர்க. 21. 'வெள்ளைக் குறழ்ந்த வடித்தொகை கூறி னொன்று முடியிட்டவெண் ணொருபது நூறாம்' (181) இனிக் கலிக்கு உறழுமாறு: 22. 'நேரீ றொழிந்த வியற்சீ ரெட்டும் வெண்சீ ரிருசீர் தம்மொடு கூட்டி நான்குதலை யிட்ட நாலைந் தாதி யொரோவொன் றைந்தடி யுறழப் பெறுமே' 23. 'கலிக்குற ழுஞ்சீ ரிருபத்து நான்கனுண் ஞாயிறு போதுபூப் போரேறு முதலா வந்த வடிகள் பதின்மூன்று தொட்டே யொன்றுதலை யிட்ட வீரெட் டளவு முயர்ந்து பெறுந்தொகை மூவைந் தாகும்' (45) ஞாயிறு புலிசெல்வாய் புலிசெல்வாய் மாசெல்வாய் எனவும்; ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் மாசெல்வாய் எனவும் ஞாயிற்றடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். இவற்றிற்கு முதலே ஆசிரியத்தளையும் ஈற்றிலே வெண்சீர் வெண்டளையுந் தட்குமாலெனின், 'நிரைமுதல் வெண்சீர்' (செய். 60) என்னுஞ் சூத்திரத்தானும் 'வெண்சீ ரீற்றசை' (செய். 29) என்னும் சூத்திரத்தானும் அவை கலித்தளையாமாறு காண்க. 24. 'பாதிரி வலியது மேவுசீர் நன்னாணுப் பூமருது கடியாறு விறகுதீ மாசெல்வாய் நீடுகொடி முதலா வந்த வடிக ளீரேழ் தொட்டே மூவா றளவும் வந்து பெறுந்தொகை யுரைப்பி னதுவே யைந்துமுடி யிட்டநா லொருபஃ தாகும்' (45) பாதிரி புலிசெல்வாய் புலிசெல்வாய் மாசெல்வாய்எனவும்; பாதிரி புலிவருவாய் புலிவருவாய் மாவருவாய் எனவும் பாதிரியடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். ஒழிந்தவற்றிற்கும் இஃதொக்கும். 24. 'கணவிரி யுரறுபுலி காருருமு பெருநா ணுருமுத்தீ மழகளிறு நாணுத்தளை புலிசெல்வாய் மாவருவாய் முதலா வந்த வடிகள் மூவைந்து தொட்டுப் பத்தொன்பா னளவு முயர்ந்து பெறுந்தொகை முன்ன ரஃதே' (45) கணவிரி புலிசெல்வாய் புலிசெல்வாய் மாசெல்வாய் எனவும்; கணவிரி புலிவருவாய் புலிவருவாய் மாவருவாய் எனவும் கணவிரியடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். 26. 'விரவுகொடி நரையுருமு புலிவருவாய் முதலா வந்த வடிக ளீரெட்டுத் தொட்டே யைந்நான் களவு முயர்ந்து பெறுந்தொகை மூவைந் தாக மொழிந்தனர் புலவர்' (15) விரவுகொடி புலிசெல்வாய் புலிசெல்வாய் மாசெல்வாய் எனவும்; விரவுகொடி புலிவருவாய் புலிவருவாய் புலிவருவாய் எனவும் விரவு கொடியடிக்கு முதலும் முடிவுங் காட்டினாம். ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். 27. 'கலிக்குரித் தாக வுறழ்ந்த வடித்தொகை, யீரைம் பதனொடு நாலைந் தாகும்' (120) 28. 'மூவ கைப்பா விற்கு முறழ்ந்த தொகை அறுநூற் றிருபத் தைந்தா கும்மே' ஆக அடி (625) இவற்றுள் அகவற்கு நாற்பத்தொன்றும் வெள்ளைக்குப் பதினெட் டும் ஆக ஐம்பத்தொன்பதடிக்குத் தளைவழுப்படுதலின் அவை களைந்து தொடைகொள்ளுமாறு 'மெய்பெறு மரபின்' (செய். 101) என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். (50) நாற்சீரடிபோல் ஏனைய அடிகள் விரிக்கப்படா எனல் 51. ஆங்கனம் விரிப்பி னளவிறந் தனவே பாங்குற வுணர்ந்தோர் பன்னுங் காலை. இஃது ஒழிந்த நான்கடியையும் நாற்சீரடிபோல வுறழ்க என்பார்க்கு அவை யுறழாமைக்குக் காரணங் கூறுகின்றது. (இ-ள்.) ஆங்கனம் விரிப்பின் அளவிறந்தனவே - அந்நாற்சீரடிபோல மற்றை நான்கடியினையும் விரிப்பின் அவை இலக்கணங் கூறுதற்கு வரையறைப்படாது எண்ணிறந்தனவாம்; பாங்குற உணர்ந்தோர் பன்னுங்காலை - பகுதியுற வறிந்தோர் விரிக்குங் காலத்து எ-று. முதனூலாசிரியர் சிறப்புடையனவற்றிற்கும் சிறப்பில்லனவற்றிற்கும் ஒருங்கிலக்கணங் கூறின் அவையொத்த விலக்கணத்தவாமென்று கருதி வரையறைப்படுவனவற்றிற்கே இலக்கணங்கூறி வரையறையின்றிப் பரந்தன வற்றிற்கு இலக்கணங் கூறிற்றிலர். அவர்கருத்து நோக்கி இவ்வாசிரியரும் யாமும் அவ்வாறே கூறினேமென்று கூறியதாயிற்றிதன் கருத்து: ஆயின் சிறப்புடைய கட்டளையடி சான்றோர் செய்யுளுட் பயின்றுவரல் வேண்டும் பிறவெனின்; இந்நூல் செய்த காலத்திற் றலைச் சங்கத்தாரும் இடைச்சங்கத்தாருங் கட்டளையடி பயின்றுவரச் செய்யுள்செய்தார் என்பது இச்சூத்திரங்களாற் பெறுதும். பின்பு கடைச்சங்கத்தார்க்கு அஃதரிதாதலிற் சீர்வகையடி பயிலச் செய்யுள் செய்தாரென்றுணர்க. இக்காலத்தார் அளவடியாற் செய்யுள் செய்திலரென்று கடைச்சங்கத்தார் செய்த அளவடி சிறப்பின்றாகாதது போல அதுவும் கொள்க. வஞ்சிக்கு வரையறைப்படும்படி 'குறளடி முதலா' (செய். 57) என்பதனுட்கூறுதும். (51) ஐவகை அடியும் ஆசிரியத்திற்கு உரிய எனல் 52. ஐவகை யடியு மாசிரியக் குரிய. இது முன்னர்க் கூறிய கட்டளையடி இன்ன பாவிற்கு உரிய என்கின்றது. (இ-ள்.) நாலெழுத்துமுதல் இருபதெழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ் நிலனும் ஆசிரியப்பாவிற்குரிய எ-று. எனவே தளைவழுவின்றி இருபத்தேழ் சீரான்வந்த முந்நூற்றிருபத்து நான்கடியும் ஆசிரியத்திற்கு உரிய எ-று. முன்னர்ப் பொதுவாக வோதிய தனை யீண்டுப் பகுத்தார். (எ-டு.) 'பேர்ந்து பேர்ந்து சென்று சென்று' என்பது. இவ்வாறு ஓராசிரியத்துக்கண் ஐந்தடியுங் கூறின முறையே நிற்க வேண்டுமென வோதினமையின் எவ்வாற்றானும் அவ்வைந்தும் ஆசிரியத் துக்கண் வருதற்குரியவென்பதே ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று. இக்கருத்தா னன்றே 'பேர்ந்து சென்று' என்ற உதாரணத்து ஈரடிக் கூட்டத்துத்தளை வழுப்பலவும் வருவவாயின. (52) ஆசிரியத்துள் தளைவிரவி வரினும் இழுக்காது எனல் 53. விராஅய் வரினு மொரூஉநிலை யிலவே. இஃது எய்தியது இகந்துபடாமைக் காத்தது, தளைவழுவியதியாது மாகாதோவென்று கருதியதனைச் சீர்வகையடியாமென்றலின். (இ-ள்.) ஆசிரியம் இருபத்துமூன்று தளையிற் சில வழுவினும் முற்கூறிய பதினேழ் நிலத்தினொன்று குறைந்து பதினாறு நிலத்தினீங்கி வாரா எ-று. உம்மை இறந்தது தழீஇயிற்றாகலான் ஓரடிக்கட் டளை வழுப்பட வரினும் அவை கட்டளையாகாமற் சீர்வகையடியாய் ஐந்தெழுத்து முதல் இருபதெழுத்தளவும் வரும் என்றவாறு. அது சான்றோர் செய்யுளுள் வந்துழிக் காண்க. (53) எய்தாதது எய்துவித்தல் 54. தன்சீர் வகையினுந் தளைநிலை வகையினும் இன்சீர் வகையி னைந்தடிக்கு முரிய. இஃது எய்தாத தெய்துவித்தது; உரிச்சீராற் சீர்வகையடியும் உரிச்சீராற் றளைவகையடியும் உள, அவையும் முற்கூறிய ஐவகை நிலனும் பெறுமென்றலின். தன்சீரெனவே அதிகாரத்தான் ஆசிரியவுரிச்சீராயிற்று. (இ-ள்.) தன்சீர் வகையினும் - ஆசிரியவுரிச்சீரின் கூற்றானும். தளை நிலைவகை யினும் - அச்சீரானாய தளைநிலைக்கூற்றானும், இன்சீர் வகையின் ஐந்தடிக்கும் உரிய - இன்சீர்ப்பகுதியோடே அவ்வாசிரியம் முற்கூறிய ஐவகையடியான் வந்து பதினேழ் நிலத்தினிகந்து வாரா எ-று. தன்சீரென்னாது வகையென்றது முன்னிரையீற்ற விரண்டனையுந் தளை கொள்ளுமென்றற்கும், ஏனை நான்குரிச்சீருந் தளை கொள்ளா வென்றற்கும். தளை நிலைவகையென்றது உரிச்சீராற் றளைவருங்கால் ஓரடியின் இரண்டுவரின் ஓசையுண்ணா தென்றற்கு. இன்சீர் வகையின் என்றது ஆசிரியவுரிச்சீர் நான்கும் நிரலே நின்றுழித் தூங்கலோசை பிறத்தலின் இயற்சீர்கள் ஒன்றிடையிட்டு வரவேண்டும் சீர்வகைக் கென்பதூஉம், அதற்கும் இன்னோசை மிகவுமின்றென்பதூஉம் முன்னிரை யீற்ற விரண்டும் இடையில் வாராது அடி முதற்கண்ணே வந்து இயற் சீரொடு தட்டு இன்னோசைத் தாமென்பதூஉம், அசையோரடிக் கிரண்டு வந்து தட்டாலும் இன்னோசைத்தாமென்பதூஉம் அறிவித்தற்கு. (எ-டு.) 'ஓங்குகோட்டுத் தொடுத்த பாம்புபுரை யருவி 'நிவந்துதோன்று களிற்றி னிலங்குகோடு புரைய' இவை இயற்சீரொன்றிடையிட்டு உரிச்சீரான் வந்தன. 'பாம்புமணி யுமிழும் பானா ளீங்குவரல்' (அகம். 8) இஃது இரண்டிடையிட்டது. 'ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளீஇ' (புறம். 55) 'உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை' (புறம். 3) இவை தளைநிலைவகையான் வருதலாற் கட்டளையாய் இன்னோசை பெற்றன. இனி, ஐந்தெழுத்து முதலாத் தன்சீர்வகை வருதலும் தளைவகை யேழெழுத்து முதலாக வருதலும் உரையிற் கொள்க. அவை 'ஓங்குகோட்டு மீது பாய்ந்து பாய்ந்து முசுக்கலை யாடு நாடற் குரைப்பதை யெவன்கொ னந்தோளே தோழீ' இஃது ஐந்தெழுத்தாற் றன்சீரடி வந்தது. 'ஆடுகொடி நுடங்கு காடு போந்து விளங்கிழை நகர்வயிற் சேர்ந்தனம் முழங்குக வானந் தழங்குரல் சிறந்தே' இஃது ஏழெழுத்தாற் றளைநிலையடி வந்தது. வகை யென்றதனான் இயற்சீர்ப்பாற் படுத்திய அசைச்சீர் இன்சீராய்த் தன்சீர்வகையினுந் தளைநிலைவகையினும் வரும். இஃது இருவகையடிக்கு மிலக்கணங் கூறிற்று. (54) வெண்சீர்முன் வெண்சீர்வந்து ஒன்றிய வெண்டளை கட்டளை வெண்பாவிற்கு வாரா எனல் 55. தன்சீ ருள்வழித் தளைவகை வேண்டா. இது முன் ஆசிரியத்திற்குச் சீர்வகையுந் தளைவகையுங் கூறிய முறையே வெண்பாவிற்கும் அவ்விரண்டுங் கூறுகின்றது. (இ-ள்.) வெண்சீர் நிற்ப வெண்சீர்வந்தொன்றிய வெண்டளை கட்டளை வெண்பாவிற்கு வேண்டா எ-று. எனவே வெண்சீர் நிற்ப வெண்சீர்வந்தொன்றிய வெண்டளை கட்டளைக்கலிக்கு ஈரடிக்கூட்டத்துத் தொடைகொள்வழி வேண்டும் என்று கொள்க. இது தொடை கொள்வழிக் காண்க. தன்சீரென்றது வெண்சீரை; உள்வழியென்றது அவ்வெண்சீரே வருஞ்சீராயவழி யென்றவாறு; எனவே வெண்சீர் நிற்ப இயற்சீர்வந் தொன்றிய வெண்டளை வேண்டும் என்றவாறாயிற்று: இது நுதலியதறி தற்பாற்படும். 'வெண்சீ ரொன்றின் வெண்டளை கொளாஅல்' 'வெண்சீ ரொன்றினும் வெண்டளை யாகு மின்சீர் விரவிய காலை யான' என்றார் காக்கைபாடினியார். இது தளைகொள்ளாமைக்குக் காரணம் "அளவுஞ் சிந்தும்"(செய். 58) என்னுஞ் சூத்திரத்துட் கூறுதும். (55) பத்தியற்சீரும் தட்குமாறு 56. சீரியை மருங்கி னோரசை யொப்பின் ஆசிரியத் தளையென் றறியல் வேண்டும். இது கட்டளையடிக்கட் பத்தியற்சீருந் தட்குமாறு கூறுகின்றது. (இ-ள்.) இயற்சீர்பத்தும் பிறசீரோ டியையுங்காற் றத்த மீற்றசை வருஞ் சீரின் முதலசையோ டொன்றின் அஃது ஆசிரியவடிக்குத் தட்கு முறைமை யென்றறியல் வேண்டும் எ. று ஒப்பினெனவே ஒவ்வாதது இயற்சீர்வெண்டளை யென்றெதிர் மறுத்துக் கொள்ளப்படும். (எ-டு.) 'அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி'(பெரும்பாண்) என்ற வழி நேரும் நிரையும் ஒன்றி நேரொன்றாசிரியத்தளை நிரையொன்றாசிரியத் தளையாயின. 'கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க வதற்குத் தக' (குறள். 391) என நேரும் நிரையும் ஒன்றாது இயற்சீர் வெண்டளையாயிற்று. 'நீத்துநீர்ப் பரப்பி னிவந்துசென் மான்றேர்' என்புழி நீத்துநீர் என்பது நேர்புநேர் பாதிரிபோல நின்று பரப்பின் என்பதனொடு நிரையொன் றாசிரியத்தளையாயிற்று. 'சேற்றுக்கா னீலம்' இது நேர்புநேர் பாதிரிபோல நின்று ஒன்றாது இயற்சீர் வெண்டளையாயிற்று. இனிக் 'காரேறு பொருத கண்ணகன் செறுவின்' என்புழிக் காரேறு என்னும் நேர்நேர்பு பாதிரிபோல நின்று பொருத என்பதனொடு நிரையொன்றாசிரியத் தளையாயிற்று. 'வானூடு போய' என நேர் நேர்பு ஒன்றாது இயற்சீர் வெண்டளையாயிற்று. 'வானிரைத்து மணந்து' என நேர் நிரைபு பாதிரிபோல நின்று மணந்து என்பதனொடு நிரையொன் றாசிரியத் தளையாயிற்று. 'யானிருந்து தூங்கும்' என நேர்நிரைபு ஒன்றாது இயற்சீர் வெண்டளையாயிற்று. 'வெயிலாடு முசுவின்' (குறுந். 38) என நிரைநேர்வு கணவிரிபோல நின்று முசு என்பதனொடு நிரையொன்றா சிரியத்தளையாயிற்று. 'வரையாடு வன்பறழ்' என நிரைநேர்பு ஒன்றாமையின் இயற்சீர் வெண்டளையாயிற்று. 'கடலுடுத்து விசும்புசூடி' என நிரைநிரைபு ஒன்றி நிரையொன் றாசிரியத் தளையாயிற்று. 'சிலைவிலங்கு நீள்புருவம்' என நிரைநிரைபு ஒன்றாமையின் இயற்சீர் வெண்டளையாயிற்று; என உரியசை மயங்கிய இயற்சீராறும் ஒன்றியும் ஒன்றாதும் வந்தன. ஓரசைச் சீரிரண்டும் இயற்சீருமாய்த் தட்குமாறு முற்கூறினாம். (56) வஞ்சியடி உறழுமாறு 57. குறளடி முதலா வளவடி காறும் உறழ்நிலை யிலவே வஞ்சிக் கென்ப. இது வஞ்சியடி யுறழுமாறும் அது பெறுநிலனு முணர்த்திற்று. (இ-ள்.) நாலெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தளவும் உறழுநிலை யில, வஞ்சியடிக்குஎ-று. முற்கூறிய அறுபது வஞ்சியுரிச்சீருள்ளும் இருபத்துநான்கு சீர் ஓரோன்று இருநிலைமையவாகவும் இருபத்தெட்டுச்சீர் ஒரோவொன்று நான்கு நிலைமையவாகவும் எட்டுச்சீர் ஒரோவொன்று எட்டு நிலைமைய வாகவும் கொள்ளப்படும். அங்ஙனம் கொள்ளவே இருநூற்றிருபத்து நான்காம். அவற்றுள் இருநிலைமைப்படும் இருபத்துநான்கும் நேரீறெட்டும், நிரையீறெட்டும், நேர்பீறு நான்கும், நிரைபீறு நான்குமாம். அவை மாபோகுவாய், மாவழங்குவாய், புலிபோகுவாய், புலிவழங் குவாய், பாம்புசேர்வாய், பாம்புவருவாய், களிறுசேர்வாய், களிறுவருவாய் எனவும் மாசேர்சுரம், மாவருசுரம், மாபோகுசுரம், மாவழங்குசுரம், புலிசேர்சுரம், புலிவருசுரம், புலிபோகுசுரம், புலிவழங்கு சுரம் எனவும், மாசேர்காடு. மாவருகாடு. புலிசேர்காடு, புலிவருகாடு எனவும்; மாசேர் கடறு, மாவருகடறு, புலிசேர்கடறு, புலிவருகடறு எனவும் வரும். மாபோகுவாய் என்றதற்கு மாமேவுவாய் என முற்றுகரங்கொடுத்து இருநிலைமையாக்குக. ஒழிந்தனவற்றுட் குற்றுகரங்கட்கு மிவ்வாறே முற்றுகரம் பெய்தொட்டுக. இவற்றுள் மாசேர்சுரத்திற்கு ஞாண்ஞாயிறு எனவும் மாவருசுரத் திற்கு மாவலியதெனவும் புலிசேர்சுரத்திற்கு வருஞாயிறு எனவும் புலிவருசுரத்திற்குத் திருவலியது எனவும் எழுத்துக்குறையுஞ் சொற்பெய்து இருநிலைமை யாக்குக. இங்ஙனம் இருநிலைமையான் நாற்பத்தெட் டாயிற்று. இவற்றுள் ஏழெழுத்துச்சீர் இரண்டாம். இனி நான்கு நிலைமைப்படும் சீரிருபத்தெட்டும் நேரீறுநான்கும். நிரையீறெட்டும். நேர்பீறெட்டும், நிரைபீறெட்டுமாம். அவை பாம்புபோகுவாய், பாம்புவழங்குவாய், களிறுபோகுவாய், களிறுவழங்கு வாய் எனவும்; பாம்புசேர்சுரம், பாம்புவருசுரம், பாம்புபோகு சுரம், பாம்புவழங்குசுரம்,களிறுசேர்சுரம், களிறுவருசுரம், களிறுபோகு சுரம், களிறுவழங்குசுரம், எனவும்; மாபோகுகாடு,மாவழங்குகாடு, புலிபோகுகாடு, புலிவழங்குகாடு, பாம்புசேர்காடு, பாம்புவருகாடு, களிறுசேர்காடு, களிறுவருகாடு எனவும்; மாபோகுகடறு, மாவழங்கு கடறு, புலிபோகுகடறு, புலிவழங்குகடறு, பாம்புசேர்கடறு, பாம்புவரு கடறு, களிறுசேர்கடறு, களிறுவருகடறு எனவும் இவற்றைப் பாம்பு போகுவாய், மின்னுப்போகுவாய், பாம்புமேவுவாய், மின்னுமன்னுவாய் என ஒன்று நான்காக வாய்பாடுபடுத் தெல்லாவற்றோடு மொட்டுக. இவ்விருபத்தெட்டனுட் பாம்புசேர்சுரத்திற்குப் பாம்புசேர்வது. மின்னுச்சேர்சுரத்திற்கு மின்னுச்சேர்வது எனவும்; பாம்புவருசுரத்திற்குப் பாம்புவலியது, மின்னுவருசுரத்திற்கு மின்னுவலியது எனவும்; களிறுசேர் சுரத்திற்கு ஒளிறுஞாயிறு, அரவுசேர்சுரத்திற்குப் பரவுஞாயிறு எனவும்; களிறு வருசுரத்திற்குக் களிறுவலியது, அரவுவருசுரத்திற்கு அரவுவலியது எனவுங்கொள்க. இங்ஙனம் நான்கு நிலைமைகொள்ளவே நூற்றிருபத் திரண்டாயிற்று. இவ்விருபத்தெட்டனுள் முற்றுகரம் பெய்தால் ஏழெழுத் தாகுசீர் பதினாறும் எட்டெழுத்தாகுசீர் மூன்றுமாம். இனி எட்டு நிலைமைப்படுஞ் சீரெட்டும் நேர்பீறுநான்கும் நிரைபீறு நான்குமாம். அவை பாம்புபோகுகாடு. பாம்பு வழங்குகாடு, களிறுபோகுகாடு, களிறுவழங்குகாடு எனவும் பாம்புபோகுகடறு, பாம்புவழங்குகடறு, களிறுபோகுகடறு, களிறுவழங்குகடறு எனவும் வரும். இவற்றுள் ஒன்றற்கு மூன்றுரியசை யுண்மையின் முதற்கணின்ற வற்றை யுரியசை யிரண்டற்குந் தனித்தனி முற்றுகரம்பெய்து பின்னிரண் டற்கும் முற்றுகரம்பெய்து நான்கு நிலைமை யெய்துவித்துப் பின்னரீற் றினிரையுரியசை யொன்றனையும் முற்றுகரமாக்கி யதனொடு முன்னர் நின்றவற்றை வேறுவேறு முற்றுகரம்பெய்து நான்குநிலைமை யெய்துவிக்க எட்டாயிற்று. இவற்றுள் ஏழெழுத்தாஞ் சீர் பதினைந்தும் எட்டெழுத் தாஞ் சீர் ஆறும் ஒன்பதெழுத்தாஞ் சீர் ஒன்றுமாம்; ஆக இருநூற்றிருபத்து நான்காயிற்று. 29. "அறுபஃ தாக வகுத்த வஞ்சியுண் மூவெண் சீர்களிருநிலைமை யெய்தி நாலேழ் சீராக நான்குநிலை யெய்தி யிருநான் கிறுசீ ரிருநான்கு நிலையெய்தி யிருநூற் றிருபத்து நான்காய் விரியும்" 30. "அவற்றுளொன் பதெழுத் தாஞ்சீ ரொன்று மிருநான்கெழுத்தா குஞ்சீ ரொன்பது மேழெழுத் தெய்துவ முப்பத்து மூன்று மாகநாற் பத்து மூன்று மாக நூற்றெண் பத்தொன் றடியுற ழும்மே" இனி யடியுறழாத நாற்பத்துமூன்றும் உறழுமாறு: எட்டுநிலைமை யெய்துவனவற்றில் அரவுவிரவுகுரவு என ஒன்ப தெழுத்துச் சீரொன்று - 1. நான்குநிலை யெய்துவனவற்றில் அரவுவிரவுசுரம், புலிவிரவுகுரவு, அரவுவருகுரவு என எட்டெழுத்துச் சீர் மூன்று - 3. எட்டுநிலைமை யெய்துவனவற்றில் அரவுவிரவுகாவு, மின்னுவிரவு குரவு, அரவுமேவுகுரவு, அரவுவிரவுகடறு, அரவுவழங்கு குரவு, களிறு விரவுகுரவு என எட்டெழுத்துச் சீராறு - 6. ஆக எட்டெழுத்துச் சீரொன்பது. இரண்டு நிலைமை யெய்துவனவற்றில் புலிவிரவுசுரம், புலிவருகுரவு என ஏழுத்துச் சீரிரண்டு: நான்கு நிலைமை யெய்துவனவற்றில் அரவுவிரவுவாய், மின்னு விரவுசுரம், அரவுவருசுரம், அரவுமேவுசுரம் அரவுவழங்குசுரம், களிறு விரவுசுரம், புலிவிரவுகாவு, அரவுவருகாவு, மாவிரவுகுரவு, புலிமேவுகுரவு, புலிவிரவுகடறு, புலிவழங்குகுரவு, மின்னுவருகுரவு, அரவுமேவுகடறு, அரவுவருகடறு, களிறுவருகுரவு என ஏழெழுத்துச்சீர் பதினாறு - 16. எட்டுநிலைமை யெய்துவனவற்றில் மின்னுவிரவுகாவு, அரவுமேவு காவு, அரவுவிரவுகாடு. அரவுவழங்குகாவு, களிறுவிரவுகாவு, மின்னுமேவு குரவு,மின்னுவிரவுகடறு, மின்னுவழங்குகுரவு, பாம்புவிரவுகுரவு, அரவு மேவு கடறு, அரவுபோகுகுரவு, களிறுமேவுகுரவு, அரவுவழங்கு கடறு, களிறு விரவுகடறு , களிறுவழங்குகுரவு என ஏழெழுத்துச்சீர் பதினைந்து - 15. ஆக ஏழெழுத்துசீர் முப்பத்து மூன்று. இனிஒழிந்த நூற்றெண்பத்தொன்றும் அடியுறழுமாறு:. 31. "மூவெழுத் துச்சீ ராறாதி யொன்பானு நாலெழுத் துச்சீ ரேழாதி பத்து மையெழுத் துச்சீ ரெட்டாதி பதினொன்று மாறெழுத் துச்சீ ரொன்பது முதலீ ராறு முயருங் காலை மேல்வருஞ் சீர்களு மூன்று நான்கு மைந்து மாறு மெழுத்தா னாகுஞ் சீர்வந் தாங்கவ் வெண்களை யுறழ்ந்த வடித்தொகை யெழுநூற் றிருபத்து நான்கென மொழிப" இங்ஙனங் கூறியவாற்றான் இயற்சீர் கட்டளையடிக் குறழா வென்றுணர்க. (எ-டு.) 'கால்காய்ந்தது காம்புநீடி' என்பது ஆறெழுத்தடி. 'நல்கூர்ந்தது வில்லோர்சுரம்' என்பது ஏழெழுத்தடி. 'வான்பெய்தது மண்குளிர்ப்புற ' என்பது எட்டெழுத்தடி. 'தேன்பெய்தது செழுநகர்தொறும்' என்பது ஒன்பதெழுத்தடி; இவை மூவெழுத்துச்சீர் மாசேர்காடு நான்கடியும் வந்தவாறு; ஒழிந்தனவுமன்ன. 'மண்மாய்ந்தென வுள்வீழ்ந்தது' என்பது ஏழெழுத்தடி. 'விண்மாய்ந்தென மேற்றொடுத்தது' என்பது எட்டெழுத்தடி. 'காடோங்கிய கல்கெழுசுரம்' என்பது ஒன்பதெழுத்தடி. 'கோடோங்கிய குறும்பொறைமருங்கு' என்பது பத்தெழுத்தடி. இவை நான்கடியும் நாலெழுத்து மாசேர்சுரம் நின்றுறழ்ந்தவடி: ஒழிந்தனவும் அன்ன. 'மழைபெய்தென வான்வெள்ளென்று' என்பது எட்டெழுத்தடி. 'தழைபச்செனத் தண்ணென்காவு' என்பது ஒன்பதெழுத்தடி. 'கமழ்பூந்துணர் கள்ளவிழ்தொறும்' என்பது பத்தெழுத்தடி. 'இமிழ்தூங்கிசை யினச்சுரும்புவர' என்பது பதினோரெழுத்தடி. இவை நான்கும் ஐயெழுத்துப் புலிசேர்சுரம் நின்றுறழ்ந்தவடி. இனி ஆறெழுத்துசீர் வருமாறு 'அமைவிடுநொடி யஞ்சியோர்த்து' என்பது ஒன்பதெழுத்தடி. 'கனைகுரலன கானத்தளகு' என்பது பத்தெழுத்தடி. 'தினைப்புனத்தித ணயற்பிரியாது' என்பது பதினோரெழுத்தடி. 'மனைக்குறமகள் கடைப்புறந்தரும்' என்பது பன்னீரெழுத்தடி. இவ்வாறே யொழிந்தனவு முறழ்ந்துகொள்க. வஞ்சி மூன்றுபாவும்போலச் சிறப்பின்மையின் ஈண்டுப்போதந்து கூறினார். ஒழிந்த முச்சீரடி சிறுவரவிற்றாகலின் அதற்குக் கட்டளையடிக்குக் கூறிற்றிலர். (57) வெண்பாவிற்குரிய நிலம் 58. அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய தளைவகை யொன்றாத் தன்மை யான. இஃது ஆசிரியவடிக்கும் அதனடைத்தாகிய வஞ்சியடிக்கும் உரிய நிலங்கூறி வெண்பாவிற்குரிய நிலங் கூறுகின்றது. (இ-ள்.) அளவடி யைந்தும் சிந்தடி மூன்றும் என்ற எட்டு நிலனும் வெண்பாவிற்குரிய; தளைவகை யொன்றாத தன்மையான் எ-று. 'ஒன்றாத்தன்மையான்' என்றதனானே ஒன்றியவாகாவாயின. அஃது இயற்சீரொன்றிய வாசிரியத்தளை வாராமையும், வெண்சீர்நிற்ப வெண்சீர் வந்தொன்றிய வெண்டளை செப்பலோசைக்குந் துள்ள லோசைக்கு மொப்ப வுரியதாகலின் அது வாராதென்றலும் கூறியவாறாம். ஒன்றாதென்றதனானே கலித்தளை யொன்றுமென்று பொருடரு மேனும் அஃதிலக்கணமன்மை யுணர்க. எனவே முற்கூறிய இயற்சீர் வெண்டளையையும் வெண்சீரியற்சீரொடு தட்டவெண்சீர் வெண்டளை யையும் விலக்காமையுணர்க. (எ-டு.) 'நின்று நினைந்து நெடிது பெயர்ந்து' என்பது ஏழுத்துத்தடியா யிசைநிலை நிறையநின்ற அசைச்சீரியற் சீராய்த் தட்டது. 'கற்றவரைச் சேர்வர் கலைநிறையுங் காட்சியார் பெற்றன மென்றே பெயர்ந்து' இது பதினான்கெழுத்தடி. 'அறிவறிந்தார்த் தேற்றியக்கா லஞ்சுவ தில்லை' இது பதினான்கெழுத்தென்னுஞ் சீர்வகையொன்றலிற் கட்டளை யாகாது. இதனும்பர் நெடிலடியான் வந்தன சீர்வகை யடியாம். 'வானவரு நான்முகனும் வாசவனு மாமுனிவ ரானவருங் காணா வரன்.' எனப் பதினாறெழுத்தான் வந்த வெண்சீரொன்றிய சீர்வகை யடி. 'வானவரு நான்முகனும் வாசவனுங் காணாரே' என்பதில் துள்ளலோசை யுணர்க. இவ்வெண்பாவை ஏந்திசைச் செப்பலெனப் பின்னுள்ளோர் கூறுவர். அவர் கூறும் ஒழுகிசையுந் தூங்கிசையும் பெரும்பான்மை பதினான்கெழுத்தி னிகந்து வாராவென் றுணர்க. முச்சீரான் வரும் ஈற்றடியும் முதல் மூன்றுநிலத்தி னிகந்து வாராமை யுரையிற் கொள்க. 'மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய் தேமா வரகு' இது, 'மாவருவாய் மாவருவாய் மாவருவாய் மாற்றினரே' என இரண்டற்கும் ஒப்ப நின்றவாறுங் காண்க. இதனானே மேலீரடிக் கூட்டத்துத் தொடைகொள்ளுங்காற் கலிக்கு வெண்சீரொடு தட்ட வெண்சீர்வெண்டளை கொள்ளுமாறுணர்க. (58) கலிப்பாவிற்குரிய நிலம் 59. அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி இருநெடி லடியுங் கலியிற் குரிய இது முறையானே கலிக்குரிய நிலங் கூறுகின்றது. (இ-ள்.) இருநெடிலடியும் - நெடிலடியும் கழிநெடிலடியும், அளவடி மிகுதி உளப்படத் தோன்றி - அளவடிக்குரித்தென ஐவகையடியின் மிகுதி யாகிய பதின்மூன்றும் பதினான்குமாகிய எழுத்துக்களொடு தோற்றப்பட்டு, கலியிற்குரிய - கலிப்பாவிற் குரியவாம் எ-று. அளவடி யைந்தனுண் மிகுதியெனவே பதின்மூன்றும் பதினான்கு மென்பது பெறுதும். இனிச் சீர்வகையடியாய் இந் நிலங்களைத் தப்பி வருவனவுங் கொள்க. (எ-டு.) "ஐயிரு தலையி னரக்கர் கோமான்" (கலி. 38) "சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர்" (கலி. 4) எனப் பதினொன்றும் பன்னிரண்டும் எழுத்தான் வந்தன . (59) நிரையீற்று இயற்சீர், நிரையீற்று ஆசிரிய உரிச்சீர் ஆகியவற்றின்முன், நிரைமுதல் வெண்சீர் வந்து தட்பின் கலித்தளையாம் எனல் 60. நிரைமுதல் வெண்சீர் வந்துநிரை தட்பினும் வரைநிலை யின்றே யவ்வடிக் கென்ப. இதுவும் அவ்வடிக்கெய்தியதொரு தளைவிகற்பங் கூறுகின்றது. (இ-ள்.) நிரைமுதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும் - நிரையீற்றியற் சீரும் நிரையீற்றாசிரிய வுரிச்சீரும் நிற்ப நிரைமுதல் வெண்சீர் வந்து நிரையாயொன்றியக்காலும், வரைநிலை இன்றே அவ் வடிக்கு என்ப - கட்டளையடிக்கு நீக்கும் நிலையின்று; எனவே கலித்தளையாம் எ-று. (எ-டு.) ''மணிபுரை திருமார்பின் மறுத்தயங்கத் தோன்றுங்கால்" என்புழித் திருமார்பின் என்னு நிரைமுதல் வெண்சீர்வந்து மணிபுரை யென்னு நிரையீற்றியற்சீரொடு தட்டுக் கலித்தளையாயிற்று. "ஓங்குநிலை யகன்மார்பி னொளிதிகழு மாமேனி" இது நிரையீற் றாசிரியவுரிச்சீரோடு அவ்வாறு தட்டது. எனவே நிரைமுதலியற்சீர் வந்து நிரைதட்பினும் அதனொடு நேர்முதல் வெண்சீர் வந்து ஒன்றாதொழியினுந் துள்ளலோசை பிறவாமை யிற் கட்டளையடியாகாது எ-று. அவ்வடிக்கெனவே இவ்விதி கட்டளையடிக்குக் கூறியது. இதனானே நிரையீற்றியற்சீர்ப் பின்னர் நிரைமுதல் வெண்சீரும் நேர்முதல் வெண்சீரு முதல்வந்து பின்னர் வெண்சீர் அடுக்கிய வெண்டளை வரினுஞ் சிறிது துள்ளலோசை பிறத்தலின் அதனைச் சீர்வகையடி யென்றுணர்க. (எ-டு.) 'அணிமுக மதியேய்ப்ப வம்மதியை நனியேய்க்கு மணிதிகழ் மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண் (கலி. 64) என வருவனவும் பிறவுமாம். (60) சீர்வகையான் வரும் கலியடி தளைவிரவியும் வரும் எனல் 61. விராஅய தளையு மொரூஉநிலை யின்றே. இதுவும் அவ்வடி சீர்வகையான் வருதற்கொரு விதி. (இ-ள்.) சீர்வகையான் வருங் கலியடி தளைவிரவினுங் கடியப் படாது எ-று. என்றது வெண்சீரோடும் ஒழிந்த சீரொடும் விராஅய்த் தட்பினும் எ-று. (எ-டு.) 'மடியிலான் செல்வம்போல் மரனந்த வச்செல்வம்' (கலி. 35) எனவும் 'வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற' (கலி. 25) எனவும் பிறவாறும் வரும். (61) இயற்சீர் வெள்ளடி ஆசிரியப்பாவினுள்ளும் வரும் எனல் 62. இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கின் நிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே. இது வெள்ளடி ஆசிரியத்துள் வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) இயற்சீர் வெள்ளடி - இயற்சீர் வெண்டளை ஆசிரியச் சீரான் வரும் வெள்ளடி, ஆசிரிய மருங்கின் நிலைக்குரி மரபின் நிற்கவும் பெறுமே - ஆசிரியப்பாவின்கண் நிற்றற்குரிய மரபிலே நிற்கப்பெறும் எ-று. உம்மை எதிர்மறை. ஆசிரியவடியொடு மயங்கி அதற்குரிமைபூண்டு நிற்குமென்பார் நிலைக்குரி மரபினென்றார். இதனானே மயங்காமல் இயற்சீர் வெள்ளடி முழுதும் வரவும் பெறுமென்றுங் கொள்வாருமுளர். (எ-டு.) 'எறும்பி யளையிற் குறும்பல் சுனைய வுலைக்கல் லன்ன பாறை யேறிக் கொடுவி லெயினர் பகழி மாய்க்கும்' (குறுந். 12) என இயற்சீர் வெள்ளடி பின்வருகின்ற ஆசிரியவடியொடு மயங்கி வந்தது. இனி 'கொலை நவில் வேட்டுவன் கோள்வேட் டெழுந்த புகர்முக யானை நுதன்மீ தழுத்திய செங்கோற் கடுங்கணை போலு மெனாஅது நெஞ்சங் கவர்ந்தோ ணிரையிதழ்க் கண்ணே.' இது வெள்ளடிமுழுதும் வந்ததென்று பேராசிரியர் காட்டினார்; இதனை அகவலோசை பிறக்குமென்று கொள்ளின் இயற்சீர் வெண்டளையான் வருமென்ற கட்டளைவெண்பா வின்றாமென மறுக்க. இனி ஆசிரியத்துள் இங்ஙனம் வருமெனவே வெண்பாவினுள் ஆசிரியவடி முழுவதூஉந் தன்றளையொடு வாராது சிறிது வருமென்று கொள்க. அது கலிக்கும் பரிபாடற்கும் உறுப்பாய் வரும் வெண்பாக்களில் ஆசிரியத்தளை வருமேனும் அவை வெள்ளைக் கொச்சகமாமாறு முணர்க. (62) ஐஞ்சீரடி மூன்று பாவிற்கும் வரும் எனல் 63. வெண்டளை விரவியு மாசிரியம் விரவியும் ஐஞ்சீ ரடியு முளவென மொழிப. இது மூன்றுபாவிற்கும் ஐஞ்சீரடியும் வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) வெண்பாவொடுங் கலிப்பாவொடும் விராஅயும் ஆசிரியப்பா வொடு விராஅயும் வரும் ஐஞ்சீரடிகளும் உளவென்று கூறுவர் புலவர் எ-று. ஈண்டுத் தளையென்றது அப்பாக்களை. வெண்டளையெனவே இரண்டு வெண்டளையும் அடங்கலின் அவற்றுள் வெண்சீர் வெண்டளை யான் வருஞ் சீர்வகை வெண்பாவுஞ் சீர்வகைக்கலியும் அடங்கின. இனி 'நிரைமுதல் வெண்சீர்'(40) என்னுஞ் சூத்திரம் இதற்கதிகார மாதலின் கட்டளைக்கலிக்கும் ஐஞ்சீரடி கொள்க. தளையென்றதனாற் கட்டளைவெண்பா விற்குங் கொள்க. அடியும் என்ற உம்மையான் வெண்பாவினுள் மிகவுஞ் சிறுபான்மை வருதல் கொள்க. உளவென்றதனாற் கலிப்பாவினுள்ளும் அதற்குறுப்பாய் வரும் பாக்களுள்ளும் பெரும்பான்மை வருதலும் ஆசிரியத்துள் அடுக்கி வருதலுங் கொள்க. (எ-டு.) 'கண்டகம் பற்றிக் கடக மணிதுளங்க வொண்செங் குருதியு ளோஒ கிடப்பதே கெண்டிக் கெழுதகை யில்லேன் கிடந்தூடப் பன்னா, ளழுதகண் ணீர்துடைத்த கை' எனவும் 'கிடங்கிற் கிடங்கிற் கிடந்த கயலைத் தடங்கட் டடங்கட் டளிரியல் கொள்ளாள் - கிடங்கில் வளையாற் பொலிந்தகை வையெயிற்றுச் செவ்வா யிளையாடன் கண்ணொக்கு மென்று' எனவும் இவற்றுள் இரண்டாமடி ஐஞ்சீரடி வந்தவாறு காண்க. 'அரவணிந்த கொடிவெய்யோ னகம்புக்கான் அரசவையன் றகற்றியே' எனவும் 'அணிகிள ரவிர்பொறித் துத்திமா நாகத் தெருத்தேறித் துணியிரும் பனிமுந்நீர்த் தொட்டுழந்து மலைந்தனையே' எனவும், இவை கலியுள் ஐஞ்சீரடி வந்தன. 'தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக' (கலி. 39) என்று கலிக்குறுப்பாகிய ஆசிரியத்துள் ஐஞ்சீரடி வந்தது. பிறவுறுப்புக்களிலுங் கலித்தொகையுள் ஐஞ்சீரடி வருமாறு காண்க. 'சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே' (புறம். 235) என்பது முதலாக நான்கடி ஆசிரியத்துள் ஐஞ்சீரடுக்கி வந்தன. தன்னினமுடித்தல் என்பதனாற் கட்டளை யாசிரியத்திற்கு வருமேனு முணர்க. இன்னும் ஐஞ்சீரடியும் என்ற உம்மையாற் கொச்சகக்கலிக்கு ஐஞ்சீரடியும் வருமாறு கொள்க. 'மன்றுபார்த்து நின்றுதாயைக் கன்றுபார்க்கு மின்றும் வாரார்' என வரும். இதனை இனமென்பாருமுளர் பின்னுள்ளோர். (63) கலிப்பாவினுள் அறுசீரடியும் வரும் எனல் 64. அறுசீரடியே யாசிரியத் தளையொடும் நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி; கலிக்கு ஐஞ்சீரடி யெய்தியதன் மேலே அறுசீரடியும் எய்துவித்தலின். (இ-ள்.) நேரடி முன்னே - நாற்சீரடிக்கு முன்னும் பின்னும், அறுசீரடியே ஆசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉம் - அறுசீரடி தனக்குரிய வெண்டளையோடன்றி ஆசிரியத்தளையொடு வழங்கப்பெற்று நடக்குங் கலியினுள் எ-று. முன் என்றதனை இடமுன்னாகவுங் காலமுன்னாகவுங் கொள்க. தளையொடும் என்ற உம்மையாற் றனக்குரிய வெண்சீர் வெண்டளையான் வருதலும் மயங்கி வருதலும் பெற்றாம். (எ-டு.) 'முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப் போக அன்னைக் குரைப்பல் அறிவாய் கடலேயென் றலறிப் பேருந் தன்மை மடவார் தணந்துகுத்த வெண்முத்தம் புன்னையரும் பேயென்னப் போவாரைப் பேதுறுக்கும் புகாரே யெம்மூர்." கரைபொரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதி ராயின் அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கைவே லஞ்சுக நும்மை வரையர மங்கையர் வவ்வுதல் அஞ்சுதும் வார லையோ' இவை மூன்றாமடி நேரடியாக முன்னும் பின்னும் அறுசீரடி வந்தன. இவற்றுக்கு ஆறாஞ்சீர்கள் ஆசிரியத்தளையான் வந்தன. நெறிபெற்று என்றதனாற் பாக்கட்டளை விட்டன்றி யொரு செய்யுள் முழுவதூஉந் தானே வருதலுங் கொள்க. "தொக்குத் துறைபடியுந் தொண்டையஞ்செவ் வாய்மகளிர் தோண்மேற் பெய்வான் கைக்கொண்ட நீருட் கருங்கண் பிறழ்வ கயலென் றெண்ணி மெய்க்கண்ணும் பெய்கல்லார் மீண்டுகரைக் கேசொரிந்து மீள்வர் காணா ரெக்கர் மணற்கிளைக்கு மேழை மகளிர்க்கே யெறிநீர்க் கொற்கை" எனவரும். இவை கொச்சகக்கலி. 'வரைபுரை திரைபோழ்ந்து மணநாறு நறுநுதல் பொருட்டு வந்தோய்'' என ஆசிரியத்தளையானும் அறுசீரடி வந்தது. கட்டளையன்றேற் றளையென்றதனை நாற்சீரடிக்குத் தளைகோட லின்றென்றார். இவற்றிற்குத் தளை வரையறையின்று. இவற்றைப் பின்னுள்ளோர் இனமென்பர். (64) கலிப்பாவினுள் முடுகியல் பெற்று எழுசீரடியும் வரும் எனல் 65. எழுசீ ரடியே முடுகிய னடக்கும். இது முறையானே கலிக்கு எழுசீரடியாமாறு கூறுகின்றது. (இ-ள்.) ஏழுசீரான் வரும் அடியே முடுகியற்கண்ணே பயின்று நடக்கும் எ-று. ஏகாரம் பிரிநிலை . (எ-டு.) "கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணத்தொடு விளையாட" என எழுசீரடி முடுகி வந்தது. இவை கலிக்கும் பரிபாடற்கும் உரிய. முடுகாத எழுசீரடி வந்துழிக் காண்க. (65) கலிப்பாவினுள் முடுகியல்பெற்று வரும் எழுசீரடியேயன்றி, அறுசீரடி, ஐஞ்சீரடியும் வரும் எனல் 66. முடுகியல் வரையார் முதலீ ரடிக்கும். இஃது எய்தாத தெய்துவித்தது; எழுசீரடியே யன்றி அறுசீரடியும் ஐஞ்சீரடியும் முடுகு மென்றலின். (இ-ள்.) எழுசீரடிக்கு முன்னின்ற அறுசீரடிக்கும் ஐஞ்சீரடிக்கும் இம் முடுகியல் நீக்கார் எ-று. முதலீரடிக்கும் என்ற வும்மை எச்சவும்மை யாதலின் நாற்சீரடியும் இத்துணைப் பயிலாது முடுகுமென்க. (எ-டு.) மேலைச்சூத்திரத்துட் காட்டுதும். (66) முடுகியலடி ஆசிரியத்துள்ளும் வெண்பாவினுள்ளும் வாரா எனல் 67. ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும் மூவகை யடியு முன்னுத லிலவே. இது முடுகியல் இன்னபாவிற்கு உரித்தென்கின்றது. (இ-ள்.) தனியே வரும் ஆசிரியப்பாவினும் வெண்பாவினும் முடுகியலடி மூன்றும் வரப்பெறா எ-று. மூன்றென்றது நாற்சீரடியும் ஐஞ்சீரடியும் அறுசீரடியுமான அடிகளை. எழுசீரடி முன்னுதலின்று என்றதனான் முற்கூறிய மூன்றடி யானும் வரும் முடுகியலொடு விராஅய்த் தொடர்ந்து ஒன்றாய்க் கலிக்குறுப்பாய் வரும் ஆசிரியமும் வெண்பாவுமுள என்று கொள்க. (எ-டு.) "நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத் தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக வேய்புரை மென்றோட் பசலையு மம்பலும் மாயப் புணர்ச்சியு மெல்லா முடனீங்கச் சேயுயர் வெற்பனும் வந்தனன் பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே" (கலி. 39) இஃது அறுசீரடியும் ஐஞ்சீரடியும் முடுகி ஒரு தொடராய் வந்த ஆசிரியம். "தகைவகை மிசைமிசைப் பாய்மா ரார்த்துட னெதிரெதிர் சென்றார் பலர்" (கலி. 102) எனவும், "இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்க வரிபரி பிறுபிறுபு குடர்சோரக் குத்தித்தன் கோடழியக் கொண்டானை யாட்டித் திரிபுழக்கும் வாடில் வெகுளி யெழிலேறு கண்டை யிஃதொன்று வெருவரு தூம மெடுப்ப வெகுண்டு திரிதருங் கொல்களிறும் போன்ம்' (கலி. 104) எனவும் இவை நாற்சீரடி முடுகியலோடொன்றாய் வந்த வெண்பா. இதனுள் ஐஞ்சீரடியும் வந்தது. "மேனிலை மிடைகழி பிழிபுமேற் சென்று வேனுதி புரைவிறற் றிறனுதி மருப்பின் மாறஞ்சான் பானிற வெள்ளை யெருத்தத்துப் பாய்ந்தானைக் கோணாது குத்து மிளங்காரித் தோற்றங்காண் பான்மதி சேர்ந்த வரவினைக் கோள்விடுக்கு நீனிற வண்ணனும் போன்ம்" (கலி. 104) என ஐஞ்சீரடி முடுகியலோ டொன்றாய் வந்த வெண்பா. "மலர்மலி புகலெழ வலர்மலிர் மணிபுரை நிமிர்தோள் பிணைஇ யெருத்தோ டிமிலிடைத் தோன்றினன் றோன்றி வருத்தினான் மன்றவிவ் வேறு " (கலி. 102) இஃது அறுசீரடி முடுகியலோ டொன்றாய் வந்த வெண்பா. இவற்றை அராகமென்னாமோ வெனின்: என்னாம்; அராகமாவது பிறிதொன்றனொடு கூட்டி அற்றுவியாமற் றானே போய் அற்று நிற்பதாம். அது பரிபாடற் செய்யுளுறுப்பென்பர்; இது பிறிதொன்றனொடு கூட்டி அற்றுவித்துக் கோடற்குரித்தாம்; இவ்வேறுபாடு அறிக. (67) ஆசிரியப்பாவினுள் ஈற்றயலடியும் இடையடியும் முச்சீராயும் வரும் எனல் 68. ஈற்றய லடியே யாசிரிய மருங்கின் தோற்ற முச்சீர்த் தாகு மென்ப. 69. இடையும் வரையார் தொடையுணர் வோரே. இரண்டு சூத்திரமும் உரையியைபு நோக்கி உடன்கூறின. இவை ஆசிரியத்துட் சிந்தடி வருமென எய்தாதெய்துவித்தன. (இ-ள்.) ஆசிரிய மருங்கி னீற்றயலடியே தன் தோற்றரவு முச்சீரை யுடைத்தாய் வரத்தோன்றும்; தொடையுணர்வோர் இடையிலும் வருதலும் நீக்கார் எ-று. ஏகாரம் பிரிநிலை. முச்சீர்த்து என ஒருமை கூறியவதனான் ஈற்றயலடிக்கண் ஒன்றே வருதல் பெரும்பான்மையென்றும், தொடையுணர்வோர் என்றதனான் இடை இரண்டிணைந்து வருதலும், தோற்றம் என்றதனான் இடை யொன்று வருதலும் கொள்க. (எ-டு.) "நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே" (குறுந். 3) இஃது ஈற்றயலடி முச்சீர்த்தாயிற்று. "நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர்பொல் லாதே" இஃது இடையிரண்டிணைந்து வந்தது. "சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தல் மன்னே பெருஞ்சோற் றானு நனிபல கலத்தல் மன்னே யென்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே யம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே நரந்த நாறுந் தன்கையாற் புலவுநாறு மென்றலை தைவரு மன்னே யருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ யிரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர வஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற் சென்று வீழ்ந் தன்றவ னருநிறத் தியங்கிய வேலே யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ வினிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநரு மில்லைப் பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன் றீயாது வீயு முயிர் தவப் பலவே" (புறம் . 235) இதனுள் 'நரந்த நாறுந் தன்கையால்' எனவும் 'அருநிறத்தியங்கிய வேலே' எனவும் தனித்து வந்தன. 'பெரியகட் பெறினே'என்பது சொற்சீரடி. இதனைக் குறளடியாக்கிக் குறளடியும் வருமென்பர் பின்பு நூல் செய்த வாசிரியர். 'உப்பிலாஅ வவிப் புழுக்கல்'(புறம் . 363) முதலிய வஞ்சியடி. (69) கலிப்பாவிற்கு முச்சீரடியும் வரும் எனல் 70. முச்சீர் முரற்கையு ணிறையவு நிற்கும். இது கலிக்குச் சிந்தடியும் வருமென எய்தாததெய்துவித்தது. (இ-ள்.) முரற்கையுள் - கலிப்பாவினுள், முச்சீர் நிறையவும் நிற்கும் - முச்சீரடி ஒரு செய்யுண்முழுதும் நிறையவு நிற்கும் எ. று உம்மையான் முதலிடைகடை என்னும் மூன்றிடத்தும் ஒரோவடி யாயும் இரண்டும் பலவுமாய வடியாயும் நிற்கும் என்றவாறு. (எ-டு.) 'நீர்வரக் கண்கலுழ்ந் தாங்குக் கார்வரக் கண்டனங் காதலர் தேர்வரக் கண்டில மன்னோ பீர்வரக் கண்டனந் தோளே' முச்சீரடி முழுதும் வந்தது. 'அரிபரி பறுப்பன சுற்றி யெரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்க ணுருவ மாலை போலக் குருதிக் கோட்டொடு குடர்வ லந்தன' (கலி. 103) இது முடுகியலான் முதலடியும் மூன்றாமடியும் முச்சீராய் வந்தது. 'நின்கண்ணாற் காண்பென்மன் யான்' (கலி. 39) இதுவும் இடையில் வந்தது. 'செய்தானக் கள்வன் மகன்' (கலி. 51) இஃது ஈற்றில் வந்தது. பலவும் வந்தன வந்துழிக் காண்க. (70) வஞ்சிப்பாவின் இறுதி ஆசிரிய அடியான் முடியும் எனல் 71. வஞ்சித் தூக்கே செந்தூக் கியற்றே. இது வஞ்சிக்குஞ் சிந்தடி வரும் என்கின்றது. (இ-ள்.) வஞ்சிப்பாவினிறுதி ஆசிரியப்பாவினிறுதி போன்று இறுக எ-று. 'செந்தூக்கியற்று' என்ற மாட்டேற்றானே, ஆசிரியத்திற் கோதிய சீரானுந் தளையானும் ஈற்றயலடி முச்சீரடியாய் வருதலும், இடைக்கண் முச்சீரடி வருதலும் பெறப்பட்டது. (எ-டு.) " வாள், வலந்தர மறுப்பட்டன செவ்வானத்து வனப்புப்போன்றன தாள், களங்கொளக் கழல்பறைந்தன கொல்ல் லேற்றின் மருப்புப்போன்றன தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ நிலைக்கொரா விலக்கம்போன்றன மாவே, யெறிபதத்தா னிடங்காட்டக் கறுழ்பொருத செவ்வாயா னெருத்துவவ்விய புலிபோன்றன களிறே, கதவெறியாச் சிவந்துராஅய் நுதிமழுங்கிய வெண்கோட்டா னுயிருண்ணுங் கூற்றுப்போன்றன நீயே, யலங்குளைப் பரீஇயிவுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி மாக்கட னிவந்தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ அனையை யாகன் மாறே தாயி றூவாக் குழவி போல வோவாது கூஉநின் னுடற்றியோர் நாடே" (புறம் 4) என முச்சீரடியிடை வந்து மண்டலவாசிரியத்தானிற்றது. "அரிமயிர்த் திரண்முன்கை" என்னும் பாட்டினுள் 'இழைபெற்ற பாடினிக்குக் குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே எனவாங் கொள்ளழற் புரிந்த தாமரை வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே' (புறம். 11) இஃது ஈற்றயலடி முச்சீர்த்தாகிச் செந்தூக்கியற்றா யிற்ற வஞ்சிப்பா. தனிச்சொற் பெறுமென்று பின்னுள்ளோர் கூறிய நூல்கள் சான்றோர் செய்யுட் காகாவென்று கொள்க. ஈற்றடி வரைந்தோதவே, இடையினெல்லாவடியும் வரப்பெறு மாயின. 'நேரிழை மகளி ருணங்குணாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை' (பட்டினப்.) என ஆசிரியவடியும் வெள்ளடியும் இடைவந்தன. (71) வெண்பாவின் இறுதியடி முச்சீரான் வரும் எனல் 72. வெண்பாட் டீற்றடி முச்சீர்த் தாகும். இது வெண்பாவிற்கு முச்சீர் வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) வெண்பாவினிறுதியடி முச்சீரான் வருதலை உடைத்தாகும் எ-று. (எ-டு.) மேற்காட்டுதும். சீர்த்தென்னாது 'ஆகும்' என ஆக்கங் கொடுத்தமையான், அத்துணை யாக்கமின்றி நாற்சீரான் மண்டலித்து வருதலும், இடையினும் முதலினுஞ் சிறுபான்மை முச்சீரான் வருதலுங் கொள்க. (எ-டு.) "அறையருவி யாடா டினைப்புனமுங் காவாள் பொறையுயர் தன்சிலம்பிற் பூந்தழையுங் கொய்யா ளுறைகவுள் வேழமொன் றுண்டென்றா ளன்னை மறையறநீ வாழிய மையிருங் குன்று" என மண்டலித்து வந்தது. "அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய் நட்டாலு நண்பல்லார் நண்பல்லர் கெட்டாலு மேன்மக்கண் மேன்மக்க ளேசங்கு சுட்டாலும் வெண்மை தரும்" (மூதுரை) இது மூதுரை. " நாளுமொன் றீயாப் பகலும் பகாஅ அ நண்புடைக் கேளிர்ப் பிரிவுந் தகா அ னிவனென்னுஞ் சொல்லுமிம் மூன்றும் வகாஅ தொழிக வெமக்கு" இவை சான்றோரெல்லாரும் பிறழச் செய்தவேனும், பாட்டாய் வருதலின் மந்திரமாகா. இனி, " வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவ னான்மாடக் கூடலிற் கல்வலிது சோழ னுறந்தைக் கரும்பினிது தொண்டைமான் கச்சியுட் காக்கை கரிது " " கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட் கரைத்திருந்த சாந்து தொட் டப்பேய் மறைக்குமா மாட்டாது மற்றுந்தன் கையைக் குறைக்குமாங் கூர்ங்கத்தி கொண்டு" இவை ஔவையுங் காரைக்காலம்மையுங் கூறியன. "உலகு பசிப்பப் பசிக்கு முலகு துயர்தீரத் தீரு நிலவு நிறுத்திவாழ் வஞ்சி யுடையாழ்வி யென்னு மொருத்தியா லுண்டிவ் வுலகு" அங்ஙனம் செய்யுள் செய்த முன்னோரைக் கண்டு (கலி. 105) பின்னுள்ளோர் இவற்றைச் செய்யுளாகச் செய்தலின் இவற்றை ஆரிடமென்பார் இவ்விதி யறியாதார். (72) வெண்பாவின் இறுதிச்சீர் அசைச்சீரான் வரும் எனல் 73. அசைச்சீர்த் தாகு மவ்வயி னான. இது மேலதற்கு எய்தியதொரு விதி (இ-ள்.) அவ்வெண்பாவின் ஈற்றில்வரும் முச்சீரடியின் இறுதிச்சீர் அசைச்சீராய் நிற்கும் எ-று. இயற்சீர்ப் பாற்படுத்தியற்றினர் கொளலே'(செய். 28) என்பதனுள் வெண்பாவின் முதலுமிடையும் இயலசைச்சீரிரண்டும் வாரா: உரியசைச் சீரிரண்டும் வரும்: என்றதனை, ஈண்டு இறுதிக்கண் இயலசைச்சீரும் உரியசைச்சீரும் வருமென்றவாறு. (73) வெண்பாவின் இறுதியடியின் இரண்டாம்சீர் நேர் ஈறாய் வரின் அதனொடு நிரையும் நிரைபும் இறுதிச்சீராகி வந்து தளைகொள்ளும் எனல் 74. நேரீற் றியற்சீர் நிரையு நிரைபும் சீரேற் றிறூஉ மியற்கைய வென்ப. இஃது அவ்வசைச்சீர் நான்கனுள் நிரையும் நிரைபும் இன்னுழி நின்று இன்னவாறு தட்கும் என்கின்றது. (இ-ள்.) நிரையும் நிரைபும் நேரீற்றியற்சீர்ப்பின்னே தளை கொண்டிறும் இயல்பின எ-று. 'இயற்சீர்ப் பாற்படுத் தியற்றுக'(செய். 28) என்றவைதாம் வருஞ் சீரொடு தட்குமாறு கூறி, ஈண்டு அவை முன்னின்ற சீரொடு தட்குமாறு கூறுகின்றது. (எ-டு.) " கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை" (குறள். 15) "நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத் தவல மிலர்" (குறள். 1072) "தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது" (குறள். 7) "அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு" (குறள். 1) இவை தேமா புளிமா என்னும் நேரீற்றியற்சீர் நிரையசைச்சீரொடும் நிரைபசைச் சீரொடுந் தட்டன. (74) வெண்பாவின் இறுதியடியின் இரண்டாம்சீர் நிறையீறாய் வரின் அதனொடு நேரும் நேர்பும் இறுதிச் சீராய் வந்து தளைகொள்ளும் எனல் 75. நிரையவ ணிற்பி னேரு நேர்பும் வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர். இஃது ஒழிந்த நேரும்நேர்பும் இன்னுழிநின்று இன்னவாறு தட்குமென்கின்றது. (இ-ள்.) மேலைச் சூத்திரத்துக் கூறிய விரண்டாஞ் சீரிடத்து நிரை யீற்றியற்சீர்ப்பின் ஒரு நேரும்நேர்பும் வந்து தட்டனீக்கப்படா தென்பர் மெய்ம்மொழிப் புலவர் எ-று. (எ-டு.) 'பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்' (குறள். 1121) 'அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்' (குறள். 94) 'இனிய வுளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று' (குறள். 100) 'படைகுடி கூழமைச்சு நட்பா ணாறு முடை யா னரசரு ளேறு' (குறள். 381) எனப் பாதிரி கணவிரி என்னும் நிரையீற்றியற்சீர் நேரசைச் சீரொடும் நேர்பசைச்சீரொடுந் தட்டன. இனி, ஒன்றென முடித்தலான் வெண்பாவுரிச்சீர் நின்று நேரசைச் சீரொடும் நேர்பசைச்சீரொடும் தட்டலும் ஒழிந்தன விரண்டொடும் தளையாமையுங் கொள்க. (எ-டு.) 'பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார் இறை வடிசேரா தார்' (குறள். 10) 'இருள்சேர் இருவினையுஞ் சேரா விறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' (குறள். 5) எனத் தட்டன. (75) கலிப்பாவின் இறுதி ஆசிரியத்தானும் வெண்பாவானும் முடியும் எனல் 76. எழுசீ ரிறுதி யாசிரியங் கலியே. 77. வெண்பா வியலினும் பண்புற முடியும். இரண்டும் உரையியைபு நோக்கி ஒன்றாகக் கூறப்பட்டன. இது கலிக்குஞ் சிந்தடி கூறி ஈறு வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) கலிப்பா எழுசீரிறுதியாகி ஆசிரியத்தானும் வெண்பாவி னிறுதியானும் முடியும் எ-று 'எழுசீரிறுதி யாசிரியம்' எனவே, ஆசிரியவடி பலவும் வந்து எருத்தடி முச்சீராகவே வருமென்பதூஉம், 'வெண்பாவியல்' எனவே கட்டளைவெண்பாவானும் சீர்வகை வெண்பாவானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருமென்பதூஉம் பெற்றாம். (எ-டு.) "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் " (கலி. 11) என்னுங் கலியிறுதியின் 'இனைநலமுடைய' என்னும் ஆசிரியம் ஈற்றடி நாற்சீரும் அயலடி முச்சீருமாக ஏழு சீரானிற்றது. 'மணிநிற மலர்ப்பொய்கை ' (கலி. 71) என்னுங் கலியி னிறுதி 'மெல்லியான் செவிமுதன் மேல்வந்தான் காலைபோ லெல்லாந் துயிலோ வெடுப்புக நின்பெண்டி ரில்லி னெழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப் பாணன் புகுதராக் கால்' என வெண்பா வியலா னிற்றது. இது கலிக் குறுப்பாய் வருதலின் ஆசிரியத்தளையும் வந்தது. இஃது ஒத்தாழிசைக்கும் பெரும்பான்மை விதி. 'பண்புற' என்றது விசேட மிக முடியுமென்றவாறு; எனவே, இரு சீரும் நாற்சீரும் ஐஞ்சீருமாயவடிகளான் முடிவனவெல்லாங் கொச்சகம்: அவை இத்துணை விசேடமில எ-று. 'இயல்' என்றதனான் மூன்றடியிற் குறைந்த வெள்ளைச் சுரிதகம் வரிற் பண்புற முடியாவாம். (76,77) யாப்பின் இலக்கணம் 78. எழுத்து முதலா வீண்டிய வடியிற் குறித்த பொருளை முடிய நாட்டல் யாப்பென மொழிப யாப்பறி புலவர். இது நிறுத்தமுறையானே யாப்புணர்த்துகின்றது. (இ-ள்.) எழுத்து முதலா ஈண்டிய அடியில் - எழுத்து முதலாக அசையுஞ் சீரு மொன்றாகத் தொடர்ந்தீண்டிய வடியிலே, குறித்த பொருளை முடிய நாட்டல் - தான் வைப்பக் கருதிய பொருளைப் பிறிதோரடியுங் கொண்டு கூட்டா தமைந்துமாறச் செய்தல், யாப்பென மொழிப யாப்பறி புலவர் - யாப்பென்று சொல்லுவர் அவ்வாறி யாத்தலை வல்ல புலவர் எ-று. (எ-டு.) "நீரின் றண்மையுந் தீயின் வெம்மையும்" எனவும், "துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக் காற்றொட்டு" (நாலடி. 2) எனவும், அரிதா யவறனெய்தி யருளியோர்க் களித்தலும் (கலி. 11) எனவும், "வசையில்புகழ் வயங்குவெண்மீன்" (பட்டினப். 1) எனவும் இந் நால்வகைச் செய்யுட்கண் முடியுந் துணையும் அடிதோறுங் குறித்த பொருளை முடிய நாட்டியவாறு காண்க. 'யாப்பறிபுலவர்' என்றதனான் இருசீரானும் முச்சீரானும் குறித்த பொருளை முடிப்பனவும், அங்ஙன முடித் தொழிந்து அச்சீரை மேல் வருகின்ற வடியொடு பொருண்முடியச் செய்வனவும் சிறுபான்மை யாப்பென்று கொள்க. (எ-டு.) ''மண்டில மழுங்க, மலைநிறங் கிளர, வண்டின மலர்பாய்ந் தூத, மீமிசைக் கண்டற் கானற் குருகின மொலிப்ப" (அகம். 260) என இருசீரானும் முச்சீரானும் நாற்சீரானும் குறித்த பொருளை முடிய நாட்டினவாறு கண்டுகொள்க. முச்சீரானாட்டுவன வெண்பாவிற் பயின்று வருமாறு உரையிற் கொள்க. (78) அதன் பகுதி 79. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே அங்கத முதுசொல் அவ்வேழ் நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழிய தென்மனார் புலவர். இது முற்கூறிய யாப்பிற்கோர் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) பாட்டுஉரை நூலே வாய்மொழி பிசியே அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் - பாட்டுக்களும் உரைகளும் நூல்களும் மந்திரங்களும் பிசிகளும் அங்கதமும் முதுசொல்லும் எனப்பட்ட அவ்வேழு பொருளிடத்தும், வண்புகழ் மூவர் - கொடையாற் பெற்ற புகழினையுடைய சேர சோழ பாண்டிருடைய , தண்பொழில் வரைப்பின் - குளிர்ச்சியை உடைய நாவலம் பொழிலுள் தமக்கு வரைந்து கொண்ட வடவேங்கடந் தென் குமரியிடத்து, நாற்பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் - மலைமண்டலம் சோழமண்டலம் பாண்டிய மண்டலம் தொண்டை மண்டலம் என்னும் நான்கு பெயரை உடைய தமிழ்நாட்டார் நடாத்தும், யாப்பின் வழியது என்மனார் புலவர் - செய்யுளின் பெயர் தனக்குப் பெயராகவும் உடைத்து மேற்கூறிய யாப்பு எ-று என்றது, குறித்த பொருளை அடிக்கண் முடிய நாட்டுதலே யன்றி இப் பகுதிப்படச் செய்தலும் யாப்புறுப்பென்றதாம். பாட்டுச்செய்யுள் உரைச்செய்யுள் நூற்செய்யுள் எனத் தமிழ்நாட்டார் வழங்கியவாறே பெயர் பெறுமென்றவாறு. எனவே, அந்நாட்டார் வழங்கும் யாப்புப் பகுதி கூறினாராயிற்று. (79) மரபாவது இது எனல் 80. மரபே தானு, நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன. இது நிறுத்த முறையானே மரபென்னு முறுப்பு யாப்பின்கண் வருமாறு கூறுகின்றது. (இ-ள்.) மரபேதானும். - மரபென்ற வுறுப்புத்தானும்; நாற்சொல்லிய லான். - நான்கு சொல்லையும் உலகத்தோர் எழுவகை வழுவும்படாமல் வழங்குகின்ற வழக்கு, வழுவாதன; யாப்புவழிப்பட்டன. முற்கூறிய யாப்பிலக்கணத்தின் வழியிலே பொருத்தமுடையவாய்க் கிடப்பன எ-று. இந்நூலிடத்து இதற்கு முன்னும் பின்னும் கூறப்படும் மரபுளதாக லின், இந்நூலுட் கூறிய இலக்கணங்களினின்றும் இதனைப் பிரித்துப் பிரிநிலையேகாரத்தாற் கூறினார். நாற்சொல்லாவன: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல். பெயர் வினை யிடை யுரி என்பன இயற்சொல்லின் பாகுபாடாகலின், இயற்சொல் அந்நான்கு பாகுபாட்டானும் செய்யுட்குரித்தாயிற்று. இந் நான்கு சொல்லானுங் காலந்தோறும் இடந்தோறும் வழங்குகின்ற வழக்குஞ் செய்யுளுமிடைதெரியாமற் றொடர்வு படுத்தி முறைமை பிறழாமற் செய்யுட் செய்க என்றவாறு. (எ-டு.) 'ஓதியு மோதா ருணர்விலா ரோதாது மோதி யனைய ருணர்வுடையார் - தூய்தாக நல்கூர்ந்துஞ் செல்வ ரிரவாதார் செல்வரும் நல்கூர்ந்தா ரீயா ரெனின்' (நாலடி. 270) இது வழக்காகவுங் கூறப்படும். ஒரு காலத்து வழங்கிய சொற்களும் பொருள்களும் அணிகளும் கோலமும் முதலியன ஒருகாலத்து வழங்கா தனவுமுள. ஓரிடத்து நிகழும் பொருண் மற்றோரிடத்து நிகழாதனவுமுள. அக்காலமும் இடமும் பற்றி ஏற்றவாற்றாற் செய்யுள் செய்க என்றவாறு. அதோளி, இதோளி, உதோளி, குயின் என்றாற் போல்வன இடைச் சங்கத்திற்காவன பின்னர் ஆகாவாயின. 'அட்டா னானே குட்டுவன்' (பதிற்றுப். 47) 'உச்சிக் கூப்பிய கையினர்' (முருகு. 185) என்றாற்போல்வன கடைச்சங்கத்திற்காயின சொற்கள், இக்காலத்திற்காகா வாயின. 'வரிமணன் ஞெமிரக் கற்பக நடக்கும் பெருமிதப் பகட்டிற்குத் துறையு முண்டோ' (புறம். 90) 'கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன' (புறம். 102) என்றாற்போலும் உவமப் பொருள்களும் இக்காலத்திற்காகாவாயின. இன்னும் அந் நான்கு நிலத்தும் ஓரிடத்துப் பொருள் ஓரிடத்துவரக் கூறலும், உலகொடு மலைதலும், சமய நூல்களொடு மலைதலும், கலைக ளொடு மலைதலும், பிறவும் இன்னோரன்னவை பொருண்மரபிற் றப்பாம். இவை நாடக வழக்கிற்காமாறு அகத்திணை யியலுட் கூறிற்று. 'குண்டல மொருபுடை குலாவி வில்லிட விண்டலர்ந் தொருபுடை தோடு மின்செய' (சீவக. 6009) 'வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர் நுண்பூ ணாகந் திளைப்ப' (முருகு. 31) "அம்மல ரடியுங் கையு மணிகிளர் பவள வாயுஞ் செம்மலர் நுதலு நாவுந் திருந்தொளி யுகிரோ டங்கேழ் விம்மிதப் பட்டு வீழ வலத்தக மெழுதி யிட்டா ளம்மலர்க் கண்ட முள்ளிட் டரிவையைத் தெரிவை தானே" (சீவக. 2446) என்றாற் போலும் அணியுங் கோலமும் இக்காலத்திற்காகாவாயின. 'புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி யொலிக்குழைச் செயலை யுடைமா ணல்குல்' (அகம் 7) இது பருவத்துக்கேற்ற அணி. 'கொல்வினைப் பொலிந்த' (அகம்.9) என்னும் பாட்டுக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்ற பொருள் தத்தமரபிற் றாய் வந்தது. பிறவுமன்ன. மலையைப் பிறங்கலென்று பின்பு திரித்தாற்போல, இக்காலத்தார் உயர் என்று மலையைக் கூறலாகாது. இனிக் குடவாயிலைக் 'கொற்றச் சோழர் குடந்தை வைத்த' (அகம். 90) எனவும், 'பிறங்குநிலை மாடத் துறந்தை' (புறம். 69) எனவும் முன்னோர் திரித்த வகையானே, இக்காலத்துக் களத்தூரைக் களந்தையென்றாற்போலத் திரிப்பனவும் அறிக. இனித் தமிழ் நூற்கண் வழுவமைத்தவாறன்றி ஆரியரும் பிறபாடை மாக்களும் வேண்டுமாற்றாற் றமிழ்ச் செய்யுள் செய்தல் மரபன்றென் றுணர்க. (80) பாக்களுக்குரிய ஓசை அகவல் ஓசை ஆசிரியப்பாவிற்கு உரித்து எனல் 81. அகவ லென்ப தாசிரி யம்மே. இது நிறுத்த முறையானே தூக்குணர்த்துகின்றது; நிறுக்கப்படும் பொன் வெள்ளி முதலிய பொருள்களைப் பெற்றுழியன்றிக் கழஞ்சு, தொடி, துலாம் எனத் துலைக்கோலாற் றூக்கி யளக்கு மாறில்லை; அதுபோல அடிவரையறை யுடையவாய்ப் பரந்த பாவினை யடிகளாற்றுணித்துத் தூக்கி ஓசை வேறுபாடுணர்த்துதலிற் றூக்கு எல்லாப் பாவிற்கும் பொது வாயிற்று. (இ-ள்.) வழக்கினுள் அகவல் என்று வழங்கப்படும் ஓசையை ஆசிரியத்திற்குரியது என்ப எ-று. அகவிக் கூறலின் அகவலாயிற்று. அஃதாவது கூற்றும் மாற்றமும் ஆகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாங் கருதியவா றெல்லாம் வரையாது கூறுவது. அதனை வழக்கினுள் அழைத்தலென்ப. அங்ஙனம் கூறுமிடத்துத் தொடர்ந்து கிடந்தவோசை அகவலாம். அவை களம்பாடு பொருநர் கண்ணும் கட்டுங் கழங்கும் இட்டுரைப் பார்கண்ணும், தம்மின் உறழ்ந்துரைப்பார் கண்ணும், பூசலிசைப்பார் கண்ணும் கேட்கப்படும். வழக்கின் கணுள்ளதாய் அங்ஙனம் அழைத்துக் கூறும் ஓசை ஆசிரியப்பா எ-று. (81) செப்பலோசை வெண்பாவிற்கு உரித்தெனல் 82. அதாஅன் றென்ப வெண்பா யாப்பே. இது வெண்பாவிற்குரிய செப்பலோசை கூறுகின்றது. (இ-ள்.) மேற்கூறிய அகவிக் கூறு மோசையன்றிச் செப்பிக்கூறு மோசை யெல்லாம் வெண்பா எனப்படும் என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. யாப்பு என்றதனான் அவ்வோசை செய்யுண் முழுவதூஉம் ஒருங்கு தழீஇக் கிடக்கும் என்றவாறு. அழைத்துக் கூறா தொருவற் கொருவன் இயல்புவகையான் ஒரு பொருண்மையைக் கட்டுரைக்குங்கால் எழுந்த வோசை செப்பலோசை யெனப்படும். அவ்விரண்டு மல்லது வழக்கினு ளின்மையின் 'அதாஅன் றென்ப' என அவைகளினிலக்கணம் பெறலாயிற்று. (82) துள்ளலோசை கலிப்பாவிற்கு உரித்தெனல் 83. துள்ள லோசை கலியென மொழிப. இது செய்யுட்கண் நிகழுதற்குரிய துள்ளலோசை கூறுகின்றது. (இ-ள்.) வழக்கியலாற் கூறாது முரற்கைப்படுமாற்றாற் றுள்ளச் சொல்லுமோசை கலிப்பா எனப்படும் எ-று. (83) தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கு உரித்தெனல் 84. தூங்க லோசை வஞ்சி யாகும். இஃது அச்செய்யுட்கணிகழ்தற்குரிய தூங்கலோசை கூறுகின்றது. (இ-ள்.) அடியிறுதியிற் றூங்காது சீர்தொறுந் தூங்கப்படும் ஓசை வஞ்சிப்பாவாகும் எ-று. துள்ளலுந் தூங்கலும் வழக்கின்கண் நிகழாவென்றுணர்க. (84) பிற பாக்களைப்போல மருட்பாவிற்குத் தனித்த ஓசை இன்று எனல் 85. மருட்பா வேனை யிருசா ரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்றே. இது மருட்பாவிற்கு வேறோசையின்றென்கின்றது. (இ-ள்.) மருட்பா - மருட்பாவிற் கோசையாவது; ஏனை இரு சாரல்லது தானிது என்னுந் தனிநிலை இன்றே - ஒழிந்த இருகூறுமல்லது தானாக வேறுபடுத்து இதுவென்று காட்டும் தனிநிலை இன்று எ-று. எனவே செப்பலும் அகவலுங் கூடியது மருட்பாவாயிற்று. அதிகாரப்பட்டுச் செய்யுட்குரியவாய் நின்ற துள்ளலுந் தூங்கலும் ஒழிந்தனவே வரும் என்றற்கு 'ஏனை'யென்றார். சூத்திரங்களை நிறுத்த முறையாற் கொள்ளாது எதிர்சென்று கோடலிற் செப்பல் முன்னும் அகவல் பின்னுமாம். (85) மேற்கூறிய ஓசைகளாலேயே அவ்வப்பாக்களும் வரும் எனல் 86. அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார். இது மேலனவற்றிற் கொரு வரையறை கூறுகின்றது. (இ-ள்.) மேற்கூறிய நான்கோசையானல்லது செய்யுளை முதனூற் கண் ஆசிரியர் கிளவார் எ-று. எனவே, யானும் அதுவே கருதினேன் என்றார். ஆங்கு என்றது அகத்தியத்தினை. இதன் பயன் முற்கூறிய பாக்களாற் பெயர் பெறாத பரிபாடல் முதலிய செய்யுள்கட்குமோசை இவையொழிய வேறின்றென்பதூஉம், மருட்பாப்போல வஞ்சியுங்கலியுந் தம்மிற்கலவா வென்பதூஉம், பிற்காலத்து நூல் செய்த ஆசிரியர் பாவுறுப்பினை மயக்கம்பட வேண்டுவா ருளராயின் அவரை விலக்குவதூஉம், முதனூலாசிரியர் இசைக்குப் பண்ணுந்திறமும் பகுத்தாற்போல, இயற்குப் பாவும் இனமும் பகுத்தார் கொல் என்னும் ஐயம் நீக்குவதூஉம் ஆம். இவர் கருத்தாற் சான்றோரும் இனங் கொள்ளாராயினர். (86) தூக்கின் இலக்கணம் 87. தூக்கியல் வகையே யாங்கென மொழிப. இது தூக்கிற்கு இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தூக்கென்று சொல்லப்பட்ட உறுப்பு நடக்கும் இடவகை சொல்லப்பட்ட நான்கிடமும் எ-று. தூக்கென்பது சொல்லின் முடியும் இலக்கணமாம். அது நிறுத்தலும் அறுத்தலும் பாடலும் என்றின்னோரன்னவற்றுமேனிற்கும். ஈண்டும் அவ்வாறே பாவென்னும் பொருளை இத்துணையடி யென நிறுத்துக் கூறுபாடறிதலும் அவ்வத்தூக்குள் வழீஇச்சொல்லுவாரது உறுப்பு விகாரப்பட்டு ஓடுவது போன்று அசையுமாறும் காண்க. "பாவென மொழியினுந் தூக்கினது பெயரே" என்றார் பிறராதலிற் றூக்கினைப் பா என்றலுமாம். இரு சீர் முதல் ஐஞ்சீர்காறும் பரந்துபட்ட அகவலோசையைப் 'பெரியகட் பெறினே' எனச் சொற்சீரடியாகவும் 'யாம்பா டத்தான் மகிழ்ந்துண்ணு மன்னே' என அளவடியாகவும் 'நரந்த நாறுந் தன் கையால்' எனச் சிந்தடியாகவும் 'சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே' என நெடிலடியாகவும் தூக்குத் துணித்தவாறு காண்க (புறம். 235). இங்ஙனம் தூக்கின்றென 'நரந்த நாறுந்தன் கையாற் புலவு, நாறு மென்றலை தைவரு மன்னே' என்றதனை இரண்டு நாற் சீரடியாக அலகிட அகவலோசை பிறவாமை யுணர்க. 'உள்ளார் கொல்லோ தோழி' என்பதற்கு முள்ளுடை என்பது அடியெதுகையாய்ச் சிந்தடியும் நெடிலடியுமாகக் கொள்ள நின்றதனையுந் தூக்குத் துணித் திரண்டனையும் அளவடியாக்கியவாறுங் காண்க. தூக்கின்றெனின் மயக்கடிவஞ்சி யிடைத் தெரியாமையு முணர்க. (87) தொடையின் பெயரும் வகையும் இவை எனல் 88. மோனை யெதுகை முரணே யியைபென நானெறி மரபின தொடைவகை யென்ப. இது நிறுத்தமுறையானே தொடை கூறுகின்றார்; அவற்றின் பெயரும் முறையுமுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொடைமோனையும் எதுகையும் முரணும் இயைபும் என நான்கு வழியாகிய முறைமையினையுடைய எ-று. நெறிமரபின எனவே அளபெடை வழுவமைத்துக்கொண்ட எழுத்தாகலின் அவ்வாறு சிறந்ததன்றாம். தொடைவகை யென்றதனான் அசையந்தாதியுஞ் சீரந்தாதியுங் கொள்க. இவைதாம் அறுநூற்றிருபத்தைந்தடிக் கண்ணும் வந்தவடியே வரவும் பிறவடிவரவும் தொடுப்பனவும், ஓரடிக்கண்ணே தொடுப்பனவும், கட்டளையடியொடு தொடுப்பனவும், சீர்வகையடி தம்மொடுதாமுந் தம்மொடுபிறவும் வந்து தொடுப்பனவும் எனப் பலவாயின. (88) அளபெடை கூட்டத்தொடை ஐந்து எனல் 89. அளபெடை தலைப்பெய வைந்து மாகும். இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்.) அந் நான்குடனே உயிரளபெடையைக் கூட்டத் தொடை யைந்துமாம் எ-று. உம்மை எச்சவும்மையாகலின் ஒற்றளபெடை கூட்ட ஆறுமாம். என்றவாறு. உயிரின் பின்னது ஒற்றாகலின் உயிரளபெடையை யெடுத் தோதி ஒற்றளபெடைய உம்மையாற் கொண்டார். கலிக்கு ஒற்றளபெடை துள்ளலோசையை நிகழ்த்தாதவாறு மேற்காண்க. (89) தொடையாதற்கு வேறு பிறவும் உளவெனல் 90. பொழிப்பு மொரூஉவுஞ் செந்தொடை மரபும் அமைத்தனர் தெரியி னவையுமா ருளவே. இதுவுமது (இ-ள்.) பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும் அமைத்தனர் - பொழிப்புத் தொடையும் ஒரூஉத்தொடையுஞ் செந்தொடை யிலக் கணமும் ஓரடிக்கண்ணே வருமென்றமைத்தனர் ஆசிரியர்; தெரியின் அவையுமாருளவே - ஆராயின் அவையுந்தொடையாதற்குள எ-று. தெரியின் என்றதனாற் செந்தொடை ஓரடிக்கண் வரினும் ஈரடியா னன்றி உணர வாராது எனக்கொள்க. இக்கருத்தான் ஈண்டுப், போத்தந்து வைத்தார். அவையும் என்ற உம்மையை எச்சப்படுத்திப் பிறவும் ஓரடிக் கண்ணே வருவனவும் உளவெனக் கொள்க. அவை முற்றெதுகையும், கிளைமுற்றெதுகையும், இரண்டந்தாதியும், இருவகை நிரனிறுத்தமைத் தவும், விட்டிசையுமாம். (90] ) நிரனிறைத் தொடையும் இரட்டைத் தொடையும் உளவெனினும் அவையும் மேற்கூறிய தொடைகளுள் அடங்கும் எனல் 91. நிரனிறுத் தமைத்தலும் இரட்டை யாப்பு மொழிந்தவற் றியலான் முற்று மென்ப. இது நிரனிறைத் தொடையும் இரட்டைத்தொடையுமென இரண்டு தொடை கூறி அவையும் முற்கூறிய தொடைப்பாற்பட்டு அடங்கல் கூறுகின்றது. (இ-ள்.) நிரனிறைப் பொருள் வகையான் தொடுக்குந் தொடையும் வந்த சீரே நாற்காற்றொடுக்குந் தொடையும் முன்னைத் தொடைப் பாற்பட்டு அடங்கும் எ-று. யாத்தவெனினுந் தொடுத்தவெனினும் ஒன்று. "அடலமர் வேல் நோக்கி நின்முகங் கண்டே யுடலு மிரிந்தோடு மூழ்மலரும் பார்க்குங் கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்புந் தடமதிய மாமென்று தாம்" என்ற வழி உடலுங் கடலுமென நிரனிறைத் தொடைமேற் கூறுமாற்றான் எதுகைத் தொடையாய் அடங்கும். "பரவை மாக்கடற் றொகுதிரை வரவும் பண்டைச் செய்தி யின்றிவள் வரவும்" என இவ்வாறு நிரனிறுத்தலும் ஒன்று. அஃது இயைபின்பாற்படுமென்க. ஒழிந்தனவும் அன்ன. இரட்டைத்தொடை யென்பது ஒருசொல்லே நான்கு சீருமாகி வருமென்பது. அது "ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும்" என வரும், இது குறையீற்றிரட்டை; யியைபுத்தொடையாய் அடங்கும். "பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ நாவீற்றிருந்த புலவீர்காள் பாடுகோ" என்பது நிரையீற்றிரட்டை. இதுவும் இயைபாய் அடங்கிற்று. செந் தொடையாய் அடங்குவன உளவேற் கண்டுகொள்க. மற்று, இவை இவ்வாறு அடங்குவனவற்றை விதந்தோதுவதென்னையெனின், இவையுந் தொடைப் பாடுகண்டு ஐயுற்றானை ஐயமறுத்தாரென்பது. எனவே ஒழிந்த பொருள்கோள் தாமேநின்று தொடைப்பாடு காட்டி ஐயஞ்செய்யாமை யின் அவை கூறாராயின ரென்பது. நிரனிறையாயின் இனைத்தென எண்ணி நிறுத்த பொருட்கேற்ப எதிர்பொருளும் எண்ணி நிறுத்துச் செய்யப் படுதலின் அது வேறுதொடையாங் கொலென்று ஐயஞ்செல்லுமென்பது. மொழிந்தவற்றியலானெனவே, தனக்கு வேறியல்பில்லாத செந்தொடை நீக்கப்பட்டது. பொழிப்பும் ஒரூஉவும் போல ஓரடியுள் நின்று தொடைமை செய்யினும் அவை முற்றாய் அடங்கும். ஈரடிக் கூட்டத்துத் தத்தம் வகையாற் தொடைமை செய்யாவென்ப. (91) மோனையின் இலக்கணம் 92. அடிதொறுந் தலையெழுத் தொப்பது மோனை. இது மோனையிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) அடிதோறும் முதற்கண் ஓரெழுத்து வரத் தொடுப்பது மோனைத் தொடையாம் எ-று. முன்னர் "அடியுள் ளனவே தளையொடு தொடையே"(செய். 33) என்பதனான் ஓரடிக்கண்ணே தளையுந் தொடையும் வருமென்பது பெறுதலானும், ஈண்டு அடிதொறும் எனப் பன்மை கூறுதலானும் ஈரடிக் கூட்டத்துந் தளையுந் தொடையும் வருமென்பது பெறுதலானும், ஓரடிக் கண்ணும் ஈரடிக்கண்ணும் தளையுந் தொடையுங் கோடல் வேண்டுமென் றுணர்க. 'தலையெழுத்தொப்பது' என்றற்கு, அடிகளின் முதலெழுத்தும் சீர்களின் முதலெழுத்தும் என்பது பொருளாம். அடிதொறுமென்பது ஈரடியையும் ஓரடியையும் உணர்த்தலின், அடிமோனையும் இணைமோனையும் பொழிப்புமோனையும் ஒரூஉ மோனையும் கூழைமோனையும் மேற்கதுவாய்மோனையும் கீழ்க்கதுவாய் மோனையும் முற்றுமோனையுமென மோனை எண்வகைப்படுமாயிற்று. 'பொழிப்புமொரூஉவும்'(செய். 90) என்னுஞ் சூத்திரத்தான், இவ் வாசிரியர் கொண்ட பொழிப்பும் ஒரூஉவுங் கோடலன்றி இணை முதலியன கொள்ளுமாறென்னையெனின்; அச் சூத்திரத்து 'அவையுமாருளவே' எனச் சூத்திரஞ்செய்தமையான் அவையும் பிறவும் ஓரடித்தொடையு முள என்று பொருடருதலிற் றொடைக்குச் சிறந்து தோன்றும் இணை முதலியனவுங் கோடும். (எ-டு.) 'கான மஞ்ஞை யீன்ற முட்டை காத லின்றி வீசு மந்தி'. இஃது ஈரடியும் எழுத்தொத்தலிற் றன்னொடுதான் வந்து தொடுத்த கட்டளை அடிமோனை. 'கோதை மார்பிற் கோதை யானுங் கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்'. இஃது எழுத்தொவ்வாமையிற் பிறவடிதொடுத்த கட்டளையடி மோனை. 'யாண்டுங் காணேன் மாண்டக் கோனை யானுமோ ராடுகள மகளே' (குறுந். 31) இஃது இருவகையுந் தொடுத்தது. 'கண்டற் கானற் குருகின மொலிப்பக் கரையா டலவன் அளைவயிற் செறிய '. இது சீர்வகையடி தொடுத்தது. 'உவவுமதி யுருவி னோங்கல்வெண்குடை' (புறம். 3) 'ஒடுங்கா வொலிகடற் சேர்ப்ப னெடுந்தேர்' இவை கட்டளை யிணைமோனை. 'உலக முவப்ப வலனேர்பு திரிதரு' (முருகு. 1) இது சீர்வகை யிணைமோனை. 'செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை' (முருகு. 5) 'கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு' (குறள். 393) இவை கட்டளைப் பொழிப்புமோனை. 'வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப' இது சீர்வகைப் பொழிப்புமோனை. 'வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்' (புறம். 6) 'வானிடு வில்லின் வரவறியா வாய்மையால்' (நாலடி. கடவுள் வாழ்த்து) இவை கட்டளையொரூஉமோனை. 'கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முன்' (குறள். 403) இது சீர்வகையொரூஉமோனை. 'வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்' 'அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும்' (நாலடி. 89) இவை கட்டளைக் கூழைமோனை. 'மடக்கண் மயிலின மறலி யாங்கு' இது சீர்வகைக் கூழைமோனை. 'கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர' (நான்மணி. 12) 'பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல்' (நாலடி. 267) இவை மேற்கதுவாய்மோனை. 'எல்லை யெம்மொடு கழிப்பி யெல்லுற' (அகம். 200) 'நல்லார் நயவ ரிருப்ப நயமிலா' (நாலடி. 265) இவை கீழ்க்கதுவாய் மோனை. 'ஒல்லா தொல்வ தென்றலு மொல்லுவது' (புறம். 196) இது சீர்வகைக் கீழ்க்கதுவாய் மோனை. 'கற்க கசடறக் கற்பவை கற்றபின்' (குறள். 391) இது முற்றுமோனை. இது சீர்வகை முற்றுமோனை. இனிக் கலிக்கு 'இணையிரண் டியைந்தொத்த முகைநாப்பட் பிறிதியாதும்' (கலி. 78) இஃது இணைமோனை. 'அரிமதர் மழைக்கண்ணீ ரலர்முலைமேற் றெறிப்பபோல்' இது பொழிப்புமோனை. 'பெண்டெனப் பிறர்கூறும் பழிமாறப் பெறுகற்பின்' (கலி. 78) இஃது ஒரூஉமோனை. 'களிபட்டார் கமழ்கோதை கயம்பட்ட வுருவின்மேல்' (கலி. 72) இது கூழைமோனை. 'அளியென வுடையேன்யா னவலங்கொண் டழிவலோ' (கலி. 20) இது மேற்கதுவாய்மோனை. 'முளிகழை யுயர்மலை முற்றிய முழங்கழல்' (கலி. 25) இது சீர்வகை மேற்கதுவாய்மோனை. 'மணிநிற மலர்ப்பொய்கை வளர்ந்தருளு மயிலோனை' இது கீழ்க்கதுவாய்மோனை. 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்' (கலி. 11) இது முற்றுமோனை. இவற்றுக்குச் சீர்வகை பலவும் வருமாறுணர்க. இச்சூத்திரமுதலாகக் கூறுங் கட்டளையடிக்குத் தொடை கொள்ளுங்காற் றளைவழுக்கழித்துத் தொடைகொள்ளுமாறு 'மெய் பெறு மரபின்'(செய். 101) என்பதனுட் காட்டுதும். (92) எதுகையின் இலக்கணம் 93. அஃதொழித் தொன்றி னெதுகை யாகும். இஃது எதுகை கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய முதலெழுத்தினையொழித்து இரண்டடியினும் சீர் முழுதும் ஒன்றினும், இரண்டாமெழுத்தே ஒன்றினும், ஓரடிக்கண் முதலிருசீர்க்கண் இரண்டாமெழுத்து ஒன்றினும், முதற்சீரினும் மூன்றாஞ் சீரினும் இரண்டாமெழுத்து ஒன்றினும், முதற்சீரினும் நான்காஞ்சீரினும் இரண்டாமெழுத்து ஒன்றினும், முதற்சீரொழித்து ஏனைய ஒன்றினும், முதலயற் சீரொழித்து ஏனைய ஒன்றினும், ஈற்றயற் சீரொழித்து ஏனைய ஒன்றினும். நாற்சீரும் ஒன்றினும் தலையாகெதுகை, அடியெதுகை, இணை யெதுகை. பொழிப்பெதுகை. ஒரூஉவெதுகை, கூழையெதுகை, மேற்கதுவா யெதுகை, கீழ்க்கதுவாயெதுகை, முற்றெதுகை எனக் கூறப்படும் எ-று. அயலெழுத் தொன்றின் என்னாது முதலெழுத்தைச் சுட்டியவத னான், முதலெழுத்தின் மாத்திரை தம்முள் ஒத்தல் வேண்டுமென்று கொள்க. (எ-டு.) 'மாயோன் மார்பி னாரம் போலுஞ் சேயோன் சேர்ந்த வெற்பிற் றீநீர்' இது தம்மொடு தாம் வந்த கட்டளைத் தலையாகெதுகை. "வானிடு வில்லின் வரவறியா வாய்மையாற் கானிலந் தோயாக் கடவுளை யாநிலம்' (நாலடி. கட. வாழ்.) இது தம்மொடு தாம் வந்த கட்டளை அடியெதுகை. 'சிலைவிலங்கு நீள்புருவஞ் சென்றொசிய நோக்கி முலைவிலங்கிற் றென்று முனிவாள்' இது சீர்வகையடிக் கட்டளையொடு தொடுத்த தலையாகெதுகை. 'அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பரிதி' (பெரும்பாண். 1,2) இது கட்டளையடிச் சீர்வகையடியொடு தொடுத்த அடியெதுகை. 'தலையெழுத் தொப்பது மோனை' (செய். 92) என்றலிற் றலையாகு மோனை இவ்வாசிரியர் கொள்ளார். 'வைகலும் வைகல்' (நாலடி.) என்னும் வெண்பாவிற் சீர்முழுதும் வருதலின் வழிமோனைப் பாற்படும். 'புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ' (பதிற். 71) 'மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்' (குறள். 204) இவை இணையெதுகை. 'பொன்னேர் மேனி நன்னிறஞ் சிதைத்தோர்' 'உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்' இவை பொழிப்பெதுகை. 'உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை' 'பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசை' (புறம். 158) 'வாண்மாய் குருதி களிறுழக்கத் தாண்மாய்ந்து' (களவழி. 1) இவை ஒரூஉவெதுகை. 'இன்னா ரென்னா தின்பம் வெஃகி' 'குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து' (முருகு. 266) இவை கூழையெதுகை. 'பொன்னேர் மேனி துன்னினர் நன்றே' 'கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் மண்டி' (நாலடி. 48) இவை மேற்கதுவாயெதுகை. 'உள்ளி னுள்ளம் வேமே யுள்ளாது' (குறுந். 102) 'படியை மடியகத் திட்டா னடியினான்' (நான்மணி. கட. வாழ்.) இவை கீழ்க்கதுவாயெதுகை. 'கன்னிப் புன்னை யன்னந் துன்னும்' 'இன்றுகொ லன்றுகொ லென்றுகொ லென்னாது' (நாலடி. 36) இவை முற்றெதுகை. இனிக் கலிக்கு. 'அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின்' (கலி. 2) 'எறிதிரை செறிகையான் மிகவாங்கி மீதோங்கி' இவை இணையெதுகை. 'பெருவரை யுறழ்மார்பிற் றிருவோங்கு கரியோனை' இது பொழிப்பெதுகை. 'அணி வேங்கை செறிநீழற் கிளியோப்பு மணிநிறத்தாள்' இஃது ஒரூஉவெதுகை. 'மணிவரை யணிமார்பிற் பணிமேவும் பெரியோனை' இது கூழையெதுகை. 'அலைகடற் றுயிலுணரா மலையெடுத்த நிலையோனை' இது மேற்கதுவாயெதுகை. 'கதிபல விதியாற்சென் றழுந்தாமற் றுதித்தேத்தி' இது கீழ்க்கதுவாயெதுகை. 'திரிபுர மெரிசூழ வரிவாங்கும் பெரியோனை' இது முற்றெதுகை. (93) மோனை எதுகைத் தொடைகளுக்குக் கிளையெழுத்துக்களும் உரிய எனல் 94. ஆயிரு தொடைக்குங் கிளையெழுத் துரிய. இது முற்கூறியவற்றோ டொப்பன சில தொடை கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய மோனைக்கும், எதுகைக்கும் கிளை யெழுத்துக்க ளும் ஒன்றிவரப் பெறும் எ. று கிளையெழுத்தாவன: வருக்கமோனையும். வருக்கவெதுகையும். வல்லினவெதுகை யும், மெல்லினவெதுகையும், இடையினவெதுகையும் என ஐந்தாம். (எ-டு.) 'வயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி' (அகம். 24) இது கட்டளையடிச் சீர்வகையடியொடு தொடுத்த வருக்க மோனை. 'கல்லாதா னொட்பங் கழியநன் றாயினுங் கொள்ளா ரறிவுடை யார்' (குறள். 104) இது கட்டளைவருக்கமோனை. 'கேளிர் போலக் கேள்கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறி' (பொருந. 74, 75) இது கட்டளைவருக்கவெதுகை. 'வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்துஞ் சீருடை நன்மொழி நீரொடு சிதறி' (பொருந. 23, 24) இஃது இரண்டுந்தொடுத்தது. 'வானுயர் வெற்ப விரவின் வரல்வேண்டா யானை யுடைய சுரம்' இது கட்டளைவருக்கவெதுகை. 'தக்கார் தகவில ரென்ப தவரவ ரெச்சத்தாற் காணப் படும்' (குறள். 114) இது கட்டளைவல்லினவெதுகை. 'அத்தக் கள்வ ராதொழு வறுத்தெனப் பிற்படு பூசலின் வழிவழி யோடி' (அகம். 7) இஃதிரண்டுந் தொடுத்தது. 'அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல்' (குறள். 543) இது கட்டளைமெல்லினவெதுகை. 'நும்மில் புலம்பினு முள்ளுதொறு நலியுந் தண்வர லசைஇய பண்பில் வாடை' (அகம். 58) இது சீர்வகைமெல்லினவெதுகை. 'எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு' (குறள். 299) இஃதிடையினவெதுகை. 'மள்ளர் மள்ள மறவர் மறவ செல்வர் செல்வ செருமேம் படுந' (பெரும்பாண். 455, 56) இது சீர்வகைஇடையினவெதுகை. முரண்டொடையின் இலக்கணம் 95. மொழியினும் பொருளினு முரணுதன் முரணே. இது முறையானே முரண் கூறுகின்றது. (இ-ள்.) சொல்லானும் பொருளானும் பகைத்தல் முரண்டொடை எ-று. அவை ஐவகைய. சொல்லும் சொல்லும் முரணுதலும், பொருளும் பொருளும் முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதலும்,சொல்லும் பொருளும் பொருளொடு முரணுதலும், சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணுதலும் என. (எ-டு.) 'செவ்வரை நிவந்த சேணிடை யருவி வெண்மறி கறித்த முல்லை' இது கட்டளை ஈரடியும் சொல்லும் சொல்லும் முரணிற்று. 'செந்தொடைப் பகழி வாங்கிச் சினஞ்சிறந்து கருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்' இஃதிருவகை யடியும் அங்ஙனம் முரணிற்று. 'நெருப்பி னன்ன சூட்டுச் சேவ னீர்சேர் கானத்து நெடுமணற் கிளைப்ப' இது கட்டளையீரடியும் பொருளும் பொருளும் முரணிற்று. 'நீரோ ரன்ன சாயற் றீயோ ரன்னவென் னுரனவித் தன்றே' (குறுந். 95) இஃதிருவகையடியும் அங்ஙனம் முரணிற்று. 'தண்சே றாடிய தயங்கிணர்க் கடத்து வெம்பொருட் பிரிவை வேண்டிச் சென்றார்' இது கட்டளையீரடியுஞ் சொல்லும் பொருளுஞ் சொல்லொடு முரணிற்று. 'சிறுநல் கூர்ந்த செல்சுடர் மாலை நெடுநீர்ப் பொய்கைக் குறுநர் தந்த' இஃதிருவகை யடியும் அங்ஙனம் முரணிற்று: சிறுநல் கூர்ந்ததுக்குச் சிறிய பொருளின்று. 'செந்தீக் கானஞ் சென்ற மாதர் நீரின் மையி னெஞ்சழிந்து வருந்த' இது கட்டளை யீரடியுஞ் சொல்லும் பொருளும் பொருளொடு முரணிற்று. செந்தீக்கு நிறமும் சொல்லுமுண்டு, நீர்க்குச் சொல்லின்று. 'செந்தீ யன்ன சினத்த யானை நீர்நசை பெறாஅக் கற்பிற் றேர்நசைஇ' இஃதிருவகை யடியும் அங்ஙனம் முரணிற்று. 'செங்குரற் பைந்தினை விளைபுன மேவிப் பைங்கிளி கடியும் பான்மொழி மகளிர்' இது கட்டளையீரடியும் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணிற்று. 'செவ்வேற் சேஎய் திருமண மறுத்த கருவிற் கானவன் வரில்' இது சீர்வகையடி அங்ஙனம் முரணிற்று. 'பன்மை சின்மை பற்று விடுதலென் றென்பன' (தொ.சொ. 78) இது கட்டளை இணைமுரண். 'நிலவு மிருளும் போல்வ நீர்வரை' இது சீர்வகை. 'கார்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ்' 'எழுநூறு நன்றிசெய் தொன்றுதீ தாயின்' (நாலடி. 357) இவை கட்டளைப் பொழிப்பு முரண். 'வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானங் கருவிருந்தா லிக்கும் பொழுது' (கார்நாற்பது.1) இது சீர்வகை. 'பின்னாவ தென்று பிடித்திரா முன்னே' (நாலடி. 5) 'இன்சொற் குழியு ளினிதெழூஉம் வன்சொல்' (நான்மணி. 14) இவை கட்டளை ஒரூஉமுரண். 'வரினு நோய்மருந் தல்லர் வாராது' (நற். 64) இது சீர்வகை. 'நிறுத்தலி னளவி னெண்ணி னென்றா' (தொல். சொல். 72) 'தேரும் யானையுங் குதிரையும் பிறவும்' (தொல். பொருள். 209) இவை கட்டளைக் கூழைமுரண். 'கண்ணுந் தோளுந் தண்ணறுங் கதுப்பும்' (நற். 84) இது கட்டளைக் கீழ்க்கதுவாய் முரண். 'அறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலின்' (தொல். சொல். 72) 'நிற்ற லிருத்தல் கிடத்த லியங்குதல்' இவை கட்டளை முற்றுமுரண். 'நீரு நிலனுந் தீயும் வளியு மாக விசும்போ டைந்து மாகும்' என்பது சீர்வகை. இவற்றை ஐவகையாக முற்கூறியாங்கு விரிப்பிற் பெருகு மாகலின் அவற்றுளேற்றன கொள்க. (95) இயைபுத்தொடையின் இலக்கணம் 96. இறுவா யொன்ற லியைபின் யாப்பே. இது முறையே இயைபு கூறுகின்றது. (இ-ள்.) இரண்டடியினும் பொருளியைபின்றி எழுத்தாதல் சொல்லாதல் ஈற்றிலே பொருந்தத் தொடுப்பது இயைபுத் தொடைக் கிலக்கணம் எ-று. 'அவரோ வாரார் கார்வந் தன்றே 'கொடிக்கு முல்லையுங் கடிக்கரும் பின்றே' இது கட்டளை எழுத்தடியியைபு. 'பரவை மாக்கடற் றொகுதிரை வரவும் பண்டைச் செய்தி யின்றிவன் வரவும்' இது கட்டளைச் சொல்லடியியைபு. சீர்வகையடிக்கு வந்துழிக் காண்க. 'ஓங்கிய சுரத்தை நீங்கி யேகி' இஃதிணை யியைபு. 'விரிந்தானா மலராயின் விளித்தாலுங் குயிலாயின்' (கலி. 28) இது பொழிப்பியைபு. 'கரவெழூஉங் கண்ணில் குழியு ளிரவெழூஉம்' (நான்மணி 16) இஃது ஒரூஉவியைபு. 'பொருசமத் தெழுவனர் பொருவினர் விரைவனர்' இது கூழையியைபு. 'நீருந் தீயு மாகிய விறைவனும்' இது மேற்கதுவாயியைபு. 'பொருவனர் விடுகணை தகைவன ரெதிர்வனர்' இது கீழ்க்கதுவாயியைபு. 'இயற்கையி னுடைமையின் முறைமையிற் கிழமையின்' (தொல். சொல். 80) இது முற்றியைபு. 'காம்பிவர் தோளுங் கருமதர் மழைக்கணும்' இது சீர்வகைப் பொழிப்பு. 'பகலுங் கங்குலு மகலா தொழுகும்' இது சீர்வகை மேற்கதுவாய். ஏனையவற்றிற்குச் சீர்வகை வந்துழிக் காண்க. இவற்றிற்கு எழுத்தியைபினும் சொல்லியைபினும் ஏற்றன கொள்க. வெவ்வேறாகக் கோடல் அரிதென் றுணர்க. (96) அளபெடைத் தொடையின் இலக்கணம் 97. அளபெழி னவையே யளபெடைத் தொடையே இது முறையே அளபெடைத் தொடை கூறுகின்றது. (இ-ள்.) அடி முதற்கண்ணே எழுத்துக்கள் அளபெழுந்தனவாயின் அவை அளபெடைத் தொடை எனப்படும் எ-று. அவை யென்றார். உயிரளபெடையும் ஒற்றளபெடையுங் கோடற்கு. (எ-டு.) 'உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழியென் னெஞ்சு' (குறள் 1200) இது கட்டளை உயிரளபெடை. 'பாஅ லஞ்செவிப் பணைத்தாள் மாநிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கி' (கலி. 5) இதுவும் இருவகையடியும் வந்த உயிரளபெடை. 'எஃஃகி லங்கிய கையரா யின்னுயிர் வெஃஃகு வார்க்கில்லை வீடு' இது கட்டளை யொற்றளபெடை. 'கஃஃ றென்னுங் கல்லதர்க் கானிடைச் சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை' இது சீர்வகையொற்றளபெடை. இவ்வொற்றளபெடை கட்டளைக்குக் கொள்ளாம்; ஒழிந்தன வற்றிற்கு வந்துழிக் காண்க. இவற்றிற்கு இணை முதலியன கொள்ளாம், சிறப்பின்மையின். (97) பொழிப்புத் தொடையின் இலக்கணம் 98. ஒருசீர் இடையிட்டு எதுகை யாயிற் பொழிப்பென மொழிதல் புலவ ராறே. இது நிறுத்த முறையானே பொழிப்பிற்கெல்லாம் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) ஒரு சீர் இடையிட்டு எதுகையாயின் பொழிப்பென மொழிதல் - ஒரு சீரை நடுவே யிட்டு வைத்து எதுகையாயிற் ,பொழிப் பெதுகை யென்று பெயர் கூறுக; அன்றிப் ஒருசீர் இடையிட்டு மோனை முரணியை வந்தனவாயிற் பொழிப்புமோனை, பொழிப்புமுரண், பொழிப் பியைபு எனப் பெயர் கூறுக; புலவராறே - இங்ஙனம் பெயர் கூறுதல் ஆசிரியர் கொண்ட நெறி எ-று. இங்ஙனம் எதுகையைப் புலப்பட வைத்து ஏனை அருத்தா பத்தியாற் கூறியது, எல்லாவற்றினும் எதுகை சிறந்து தோன்றுதல் கருதி. இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டினாம். (98) ஒரூஉத் தொடையின் இலக்கணம் 99. இரு சீரிடையிடி னொரூஉவென மொழிப இது நிறுத்தமுறையானே ஒரூஉவிற் கெல்லாம் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) இரண்டு சீரை நடுவேயிட்டு வைத்து முதற்சீரும் நாலாஞ் சீரும் ஒன்றிவரின் ஒரூஉமோனை , ஒரூஉவெதுகை, ஒரூஉ முரண். ஒரூஉவியைபு எனப்படும் எ-று. ஒரூஉவை விதந்தோதினார், வெண்பாவிற்குச் சிறந்து வருதலானும். ஆசிரியத்திற்கு ஏனையவற்றிற் சிறந்து தோன்றுதலானும். உதாரணம் முன்னர்க் காட்டினாம். (99) செந்தொடையின் இலக்கணம் 100. சொல்லிய தொடையொடு வேறுபட் டியலின் சொல்லியற் புலவரது செந்தொடை யென்ப. இது செந்தொடை கூறுகின்றது. (இ-ள்.) சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின் அது - முற்கூறிய தொடைகளெல்லாவற்றோடும் ஒவ்வாது வரின் அதனை, சொல்லியல் புலவர் செந்தொடை என்ப - இயற் சொல்லாற் செய்யுள் செய்யும் புலவர் செந்தொடை யென்று கூறுவர் எ-று. எனவே, விகாரப்படச் செய்யுஞ் செய்யுட்குச் செந்தொடை யின்னாதாயிற்று. (எ-டு.) "நெடுவேண் மார்பி னாரம் போலச் செவ்வாய் வானந் தீண்டிமீ னருந்து" (அகம். 120) "விருந்தினர் மூத்தார் பசுசிறு பிள்ளை" இவை கட்டளைச் செந்தொடை. "பூத்த வேங்கை வியன்சினை யேறி, மயிலின மகவு நாடன் நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே" இது சீர்வகைச் செந்தொடை. (100) தொடைகளின் தொகை 101. மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற்று ஒன்பஃ தென்ப வுணர்ந்திசி னோரே. இது வரையறைப்படுங் கட்டளையடிக்குத் தொடைத்தொகை கூறுகின்றது; எனவே சீர்வகைக்குத் தொடைவரையறை யின்று எ-று. (இ-ள்.) மெய்பெறு மரபின் தொடை வகை தாமே - கேட்டார்க்குத் தொடைப்பாடு வெளிப்படுக்கும் இலக்கணத்தவாகிய தொடைக் கூறுபாடுதாம்; ஐயீராயிரத்து ஆறைஞ் ஞூற்றொடு - பதின்மூவாயிரத் தோடே; தொண்டு தலையிட்ட பத்துக் குறை எழுநூற்று ஒன்பஃதென்ப - ஒன்பது தலையிலேவைத்த பத்துக்குறைந்த எழுநூற்றொன்பது என்று கூறுவர்; என்பது ஆறாயிரத்திருநூற்றுத் தொண்ணூற்றொன்று என்று கூறுவர்; உணர்ந்திசினோரே - கட்டளையின் றொடைப்பகுதி யறிந்தோர் எ-று. பதின்மூவாயிரத்தோடே ஆறாயிரத்திருநூற்றுத் தொண்ணூற் றொன்றெனவே, தொகை பத்தொன்பதினாயிரத் திருநூற்றுத் தொண்ணூற் றொன்றாயிற்று ஆக, 19291. பத்துக்குறை யெழுநூற்றொன்பதாவது அறுநூற்றுத் தொண்ணூற் றொன்பது. இதனை ஒன்பதனொடு பெருக்க ஆறாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொன்றாயிற்று. இதனை ஆறாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொன்று என்று விளங்கக்கூறாது ஒருகாற்குறைத்து அதன்மே லொருகாலேற்றி ஞாபகப் படச் சூத்திரஞ் செய்தது ஒரு பயனோக்கி; அது கட்டளையடி அறுநூற்றி ருபத்தைந்துந் தொடைகொள்ளுங்கால் ஐம்பத்தொன்பது வழுவுள. அவை களையப்படுமென்றற்கு. அவற்றுள் அடிமோனைத் தொடை மூன்று பாவினும் எழுபத்தெட்டுச் சீரானும் வருங்கால் ஈரடிக் கூட்டத்துத் தளைவழுக் களையவேண்டும்; அவ்வழி அகவற்கு நாற்பத் தொன்றும் வெள்ளைக்குப் பதினெட்டுமாக ஐம்பத்தொன்பது களையப் படும். அவை களையுமாறு: நுந்தை, வண்டு, தேமா, மின்னு, ஞாயிறு, போதுபூ, போரேறு, பாதிரி, மேவுசீர், நன்னாணு, பூமருது, நீடுகொடி, காருருமு, நாணுத்தளை என இந்நேராதி பதினான்கும் அகவற்குப் பெருகிய நிலத்திவ் விரண்டடி தளை வழுப்படும். வரகு, புளிமா, அரவு, வலியது, கடியாறு விறகுதீ, கணவிரி, உரறுபுலி, பெருநாணு, உருமுத்தீ, மழகளிறு, விரவுகொடி, நரையுருமு என இந்நிரை யாதி பதின்மூன்றுஞ் சுருங்கிய நிலத்து ஒரோவோரடி தளைவழுப்படும். ஆக அகவற்கு நாற்பத்தொருதளை வழுவாயின. இனி வெள்ளைக்கு முற்கூறிய சீர்களுள் ஆசிரியவுரிச்சீர் நான்கு நீக்கி வெண்சீர் நான்குங் கூட்ட இருபத்தேழாம். இதில் நேராதி பதினான்குஞ் சுருங்கிய நிலத்து ஒரோவொன்று தளைவழுப்படும். நிரையாதியில் வரகு, கடியாறு, விறகுதீ, வலியது என்னுநான்கும் பெருகிய நிலத்து ஒரோ வொன்று தளைவழுப்படும். ஆக வெள்ளைக்குப் பதினெட்டு வழுவாயிற்று. ஆகத் தளைவழு ஐம்பத்தொன்பதாயிற்று. அவை வருமாறு: வண்டு காருருமு நளிமுழவு நளிமுழவு என நிற்பக் கண்டு எனத் தொடைவருங்கால் வெண்டளையாய் வழுவாம். பதினான்கெழுத்திற்கும் இவ்வாறே கூறிக்கொள்க. வரகு நாகு காம்பு வண்டு என நிற்பக் குரவு எனத் தொடைவருங்கால் வெண்டளையாய் வழுவாம். இனி வண்டு வரகு வரகு. வரகு என நிற்பக் கண்டு எனத் தொடை வருங்கால் ஆசிரியத்தளையாய் வழுவாம். வரகு நளிமுழவு காருருமுப் பாதிரி நிற்பக் குரவு எனத் தொடைவருங்கால் ஆசிரியத் தளையாய் வழுவாம். இவ்வாறே எல்லாவற்றோடும் ஒட்டி வழுக்காண்க. கலிக்குத் தளைவழுவின்று. நுந்தை மொழிமுதற் குற்றுகரமாதலின் இதற்கொத்த மொழிமுதற் குற்றுகரமின்மையிற் கட்டளைக்குத் தொடை கோடல் சிறப்பின்று. இச்சிறப்பின்மை கருதாது தொடைகோடலும் ஒன்று. நுந்தைக்கு இருபதடிக் கழித்து அறுநூற்றைந்தடியுள் ஐம்பத்தாறு தளைவழுக்களைந்து ஒழிந்தவடி ஐந்நூற்று நாற்பத்தொன்பதனாற் பெற்ற அடிமோனைத்தொடை ஐந்நூற்று நாற்பத்தொன்பது. 549. நுந்தை யொழிந்த நேர்பதின்மூன்றுங் குற்றெழுத்து ஒற்றடுத்த நேரசையும் நெட்டெழுத்துத் தனியேவந்த நேரசையுமாக உதாரணங்காட்டிற்றேனும் அவற்றிற்குரிய மூவகையசையானும் வரும் உதாரணங்களையும் கூறிக் கொண்டு தொடை கொள்க. ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறே வேறுபடுமாறு அறிந்து சொற்களை வருவித்துத் தொடைகொள்க. 32. "ஒன்று தலையிட்ட வையைந்து சீரும் வழுவா யகவல் தொடைகொளல் கூறி னேரா திச்சீர் பதின்மூன் றற்குத் தத்தமக் குரிய பன்னீ ரடிக்குண் முடிவில் வருமீ ரடிக ளெல்லாம் பின்வரு மடியின் முதற்சீ ரோடு வெண்டளை யாகித் தளைவழூஉப் படுதலும் நிரையா திச்சீர் பதின்மூன் றற்குந் தத்தமக் குரிய பன்னீ ரடிகளுண் முதல்வரு மொரோவோ ரடிகளெல்லாம் பின்வரு மடியின் முதற்சீ ரோடு வெண்டளை யாகி முற்கூறி யாங்குத் தளைவழூஉப் படுதலு முடையவிவ் வடித்தொகை முப்பத் தொன்பதுந் தொடைகோ ளின்றெனத் துணிந்தனர் புலவர்" 33. "ஒன்று தலையிட்ட வையைந்து சீரும் வழுவா வெள்ளைத் தொடைகொளல் கூறி னேரா திச்சீர் பதின்மூன்றானு முறழு நிலங்களுட் பெற்ற வடிகளுண் முதல்வரு மொரோவோ ரடிக ளெல்லாம் பின்வரு மடியின் முதற்சீர் தம்மோ டாசிரி யத்தளை தட்டுவழுப் படுதலும் வரகு கடியாறு விறகுதீ வலியதெனு நிரையாதி யாகியசீர்க ணான்கா னுறழு மடிகளு ளிறுதி யடிகளு மங்ஙனந் தளைவழுப் படுதலு முடைமையி னிவற்றான் வந்த வடிபதி னேழுந் தொடைக்கியை பின்றெனத் துணிந்தனர் புலவர்" 34. "வழூஉக் களைந்த முதற்பா விரண்டற்குங் கலிக்கும் வரூஉ மடிமோ னைத்தொடை யைஞ்ஞூற்று நாற்பத் தொன்ப தாகும்" 35. "அவைபகுக் குங்கால் அகவற் கிருநூற் றெழுபத்து மூன்றும் வெள்ளைக் கொருநூற் றைம்பத் தாறுங் கலிக்கு நூற்றிரு பஃது மாகும்" 36. "வண்டு தேமா மின்னு ஞாயிறு போதுபூ போரேறு பாதிரி மேவுசீர் நன்னாணு பூமருது நீடுகொடி காருருமு நாணுத் தளையிவை யொரோவொன்று பத்தாக வகவல் பெற்ற விணைமோனைத்தொடை யீரைம் பஃதொடு முப்ப தாகும்" நேராதி பதின்மூன்றுக்குத் தொடை 130. 37. "வரகு புளிமா வரவு வலியது கடியாறு விறகுதீக் கணவிரி யுரறுபுலி பெருநாணு உருமுத்தீ மழகளிறு விரவுகொடி நரையுருமு ஒரோவொன்று பதினொன்றாக வகவல் பெற்ற விணைமோ னைத்தொடை நூற்று நாற்பத்து மூன்றென நுவல்வர்" நிரையாதி பதின்மூன்றற்குத் தொடை 143. ஆக அகவற்கு இணைமோனைத்தொடை 273. 38. "வண்டு ஞாயிறு போதுபூப் போரே றென்றிவை யொரோவென் றெவ்வே ழாகத் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை யொரோவொன் றாறாகக் காருருமு மாவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளைக் கிணைமோனை யெண்ப தாக வியலு மென்ப;" நேராதி பதின்மூன்றுக்குத் தொடை 80. 39. "வரகு வலியது கடியாறு விறகுதீக் கணவிரி பெருநாணுப் புலிசெல்வாய் மழகளிறு உருமுத்தீப் புளிமா வரவவ் வாறு நரையுருமுப் புலிவருவா, யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற விணைமோ னைத்தொடை யெழுபத் தாறாம்;" நிரை யாதிச்சீர் பதின்மூன்றற்குத்தொடை 76. ஆக வெள்ளைக்கு இணைமோனைத் தொடை 156. 40. "நேராதிச் சீரானு நிரையாதிச் சீரானு மொரோவொன் றைந்தாகக் கலிக்குவரு மிணைமோனை நூற்றிரு பஃதா நுவன்றனர் புலவர்" ஆகக் கலிக்கு இணைமோனைத் தொடை 120. 41. "மூவகைப் பாவிற்கு மொழிந்த விணைமோனை ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்ப தாகும்" ஆகத் தொடை 549. 42. "நேராதி யாகிய சீர்பதின் மூன்றா னொரோவொன்று பத்தாக வகவல் பெற்ற பொழிப்புமோ னைத்தொடை நூற்றுமுப் பஃதே" நேராதி பதின்மூன்றுக்குத் தொடை 130. 43. "நிரையாதி யாகிய சீர்பதின் மூன்றா னோரோவொன்று பத்து மொன்று மாக வகவல் பெற்ற பொழிப்புமோ னைத்தொடை நூற்று நாற்பத்து மூன்றென நுவல்ப" நிரையாதி பதின்மூன்றுக்குத் தொடை 143. ஆக அகவற்குப் பொழிப்பு மோனைத் தொடை 273. 44. "வண்டு ஞாயிறு போதுபூப் போரே றென்றிவை யொரோவொன் றெவ்வே ழாகத் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை யொரோவொன் றிருமூன் றாகக் காருருமு மாவரு வாயிவை யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற பொழிப்புமோ னைத்தொடை யெண்ப தாக வியம்பினர் புலவர்" நேராதி பதின்மூன்றற்குத் தொடை 80. 45. "வரகு வலியது கடியாறு விறகுதீக் கணவிரி பெருநாணுப் புலிசெல்வாய் மழகளிறு உருமுத் தீப்புளி மாவர வொரோவொன் றிருமூன் றாக வியைந்த பின்னர் நரையுருமுப் புலிவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற பொழிப்புமோ னைத்தொடை யெழுபத்தா றென வியம்பினர் புலவர்" நிரையாதி பதின்மூன்றற்குத் தொடை 76. ஆக வெள்ளைக்குப் பொழிப்புமோனை 156. 46. "நேரு நிரையு மாகிய சீர்க ளிருபத்து நான்கா னொரோவொன் றைந்தாகத் துள்ளல் பெற்ற பொழிப்புமோ னைத்தொடை யீரைம் பஃது மிருபது மாகும்" ஆகக் கலிக்குப் பொழிப்புமோனை 120. 47. "மூவகைப் பாவின் பொழிப்புமோ னைத்தொடை ஐந்நூற்று நாற்பத் தொன்ப தாகும்" ஆகத்தொடை 549. 48. 'நேராதி யாகிய சீர்பதின்மூன்றா னொரோஒ வொன்றுபத் தாக வகவல் பெற்றவொரூஉ மோனைத்தொடை நூற்றுமுப் பஃதே' நேராதி பதின்மூன்றுக்குத்தொடை 130. 49. "நிரையாதி யாகிய சீர்பதின் மூன்றா னொரோவொன் றுபத்து மொன்று மாக வகவல் பெற்ற வொரூஉமோ னைத்தொடை நூற்று நாற்பத்து மூன்றென நுவல்வர்" நிரையாதி பதின்மூன்றுக்குத் தொடை 143. ஆக அகவற்கு ஒரூஉமோனைத் தொடை 273. 50. "வண்டு ஞாயிறு போதுபூப் போரே றென்றிவை யொவ்வொன் றெவ்வே ழாகத் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை பொரோவொன் றிருமூன் றாகக் காருருமு மாவரு வாயிவை யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற வொரூஉமோ னைத்தொடை யெண்ணொரு பஃது மெய்து மென்ப" நேராதி பதின்மூன்றுக்குத் தொடை 80. 51. "வரகு வலியது கடியாறு விறகுதீக் கணவிரி பெருநாணுப் புலிசெல்வாய் மழகளிறு உருமூத் தீப்புளி மாவர வொரோவொன் றிருமூன் றாக வியன்ற பின்னர் நரையுருமுப் புலிவருவா யிவையொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற வொரூஉமோ னைத்தொடை யேழொரு பஃது மாறு மாகும்." நிரையாதி பதின்முன்றுக்குத் தொடை 76. ஆக வெள்ளை ஒரூஉமோனைத் தொடை 156. 52. "கலிக்கு வருஞ்சீர்இரு பத்து நான்கு மொரோவொன் றைந்தாகப் பெற்ற வொரூஉமோனை யீரைம் பஃது மிருபது மாகும்." ஆகக் கலிக்கு 120. 53. "மூவகைப் பாவிற்கு மொழிந்த வொரூஉமோனை ஐந்நூற்று நாற்பத்தொன்ப தாகும்." ஆகத்தொடை 549. 54. "நேர்பதின் மூன்றா னொரோவொன்று பத்தாக வகவல் பெற்ற கூழைமோ னைத்தொடை நூற்றுமுப் பஃதென நுவன்றனர் புலவர்" (130) 55. "நிரையாதி யாகிய சீர்பதின் மூன்றா னொரோவொன்று பத்து மொன்று மாக வகவல் பெற்ற கூழைமோ னைத்தொடை நூற்று நாற்பத்து மூன்றென நுவல்வர்" (143) ஆக அகவற்குக் கூழைமோனைத்தொடை 273. 56. "வண்டு ஞாயிறு போதுபூப் போரேறு என்றிவை ஒரோவொன் றெவ்வே ழாகத் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை யொரோவொன் றாகக் காருருமு மாவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற கூழைமோ னைத்தொடை யெண்பஃ தாகும்" (80) 57. "வரகு வலியது கடியாறு விறகுதீக் கணவிரி பெருநாணுப் புலிசெல்வாய் மழகளிறு உருமுத்தீப் புளிமா விவையொ ரோவொன் இருமூன் றாக வியன்ற பின்னர் நரையுருமுப் புலிவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற கூழைமோ னைத்தொடை யெழுபத் தாறா வியலுமென்ப" (76) ஆக வெள்ளைக்குக் கூழைமோனை. 156. 58. "நேரு நிரையு மாகிய சீர்க ளிருபத்து நான்கா னொரோவொன் றைந்தாகத் துள்ளல் பெற்ற கூழைமோ னைத்தொடை யீரைம் பஃது மிருபது மாகும்" (120) 59. "மூவகைப் பாவிற்குங் கூழைமோ னைத்தொடை ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்ப தாகும்" (549) 60. "நேர்பதின் மூன்றா னொரோவொன்று பத்தாக வகவற் குவரு மேற்கதுவாய் மோனை நூற்று முப்பஃ தென நுவன் றனரே" (130) 61. "நிரை யாகியசீர் பதின்மூன் றானொரோ வொன்று பத்து மொன்று மாக வகவல் பெற்ற மேற்கதுவாய் மோனை நூற்று நாற்பத்து மூன்றென நுவல்வர்." (143) ஆக அகவற்கு மேற்கதுவாய்மோனை 273. 62. "வண்டு ஞாயிறு போதுபூப் போரேறு என்றிவை யொரோவொன் றெவ்வே ழாகத் தேமா மின்னுப் பாதிரி மேவுசேர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை யொரோவொன் றாறாகக் காருருமு மாவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளைக்கு மேற்கதுவாய் மோனை யெண்பஃ தாகு மென்ப" (80) 63. "வரகு வலியது கடியாறு விறகுதீக் கணவிரி பெருநாணுப் புலிசெல்வாய் மழகளிறு உருமுத்தீப் புளிமா வரவொ ரோவொன் றீறாஇருமூன் றாக வியன்ற பின்னர் நரையுருமுப் புலிவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற மேற்கதுவாய் மோனை யேழொரு பஃது மாறு மாகும்" (76.) ஆகவெள்ளைக்கு மேற்கதுவாய் மோனை (156) 64. "நேரு நிரையு மாகிய சீர்க ளிருபத்து நான்கா னொரோவொன் றைந்தாகத் துள்ளல் பெற்ற மேற்கதுவாய் மோனை யீரைம் பஃது மிருபது மாகும்" (120) மூவகைப் பாவிற்கு முற்றுமோ னைத்தொடை ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்ப தாகும்; (549) 65. "எண்வகை மோனைக்கு மியன்ற பெருந்தொகை முந்நூற்றுத் தொண்ணூற் றிரண்டு தலையிட்ட நாலா யிரமா நவின்றனர் புலவர்" ஆக மோனைத்தொடை 4392. இனி எதுகை வருமாறு 66. "அகவற் கிருநூற் றெழுபத்து மூன்றும் வெள்ளைக் கொருநூற்றைம்பத் தாறுங் கலிக்கு நூற்றிரு பஃது மாக மூவகைப் பாவிற்குந் தலையா கெதுகை ஐஞ்ஞூற்று நாற்பத் தொன்ப தாகும்" (549) 67. "அடியெது கைத்தொடை கொள்ளுங் காலு மிம்மூ வகையா னதுபெ றுந்தொகை யைஞ் ஞூற்று நாற்பத் தொன்ப தாகும்" (549) 68. "வண்டு தேமா மின்னிவை யொரோவொன் றீரைந்தெய்திய விணையெது கைதா முப்ப தாக மொழிந்தன ரகவற்கு" (30) 70. "வலியது கடியாறு விறகுதீக் கணவிரி யுரறுபுலி பெருநாணு வுருமுத்தீ மழகளிறு விரவுகொடி நரையுருமு விவையொரோ வொன்றற் கொன்றுட னீரைந்தா வியன்ற இணையெதுகை நூற்றொரு பஃதாக நுவன்றன ரகவற்கு" (110) ஆக அகவற்கு இணையெதுகை 140. 71. "ஞாயிறு போதுபூ வெட்டுமுத லேழும் போரேறு நன்னாணுப் பாதிரி பூமருது மாசெல்வா யொன்பான் முதலா மாறு மேவுசீர் காருருமு மாவரு வாயிவை யீரைந்து தொட்டே யீரே ழெய்த வெள்ளை பெற்ற விணையெது கைத்தொகை யைம்பத் தொன்ப தாகு மென்ப" (59) 72. "வரகிரு நான்கு புளிமா வரவொன் பான் முதலா வொரோவொன் றிருமூன் றாக வெள்ளைக் கிணையெதுகை மூவா றாகும்" (18) ஆக வெள்ளைக்கு இணையெதுகை 77. 73. "நேர்நிரை யீற்றாற் கலிக்கிணை யெதுகை யிருமுப் பஃதாக வியலு மென்ப" (60) 74. "மூவகைப் பாவிற்கு மொழிந்த விணையெதுகை யிருநூற் றெழுபத் தேழா கும்மே" ஆக 277. 75. "வண்டு நான்கு மின்னுத் தேமா வைந்து ஞாயிறு போதுபூப் போரே றாறு பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது நீடுகொடி யேழு காருருமு நாணுத்தளை யெட்டு முதலா வந்தவவை யொரோவொன் றெவ்வேழ் நிலம்பெற வகவற்குத் தொக்க பொழிப்பெதுகை தொண்ணூற் றொன்றே" (91) 76. 'வரகிரு நான்கு புளிமா வரவொன்பான் வலியது விறகுதீக் கடியாறு பத்துக் கணவிரி யுருமுத்தீப் பெருநாணு வுரறுபுலி மழகளிறு பதினொன்று நரையுருமு விரவுகொடி யீராறு முதலா வந்தவை யொரோவொன் றொன்பது நிலம்பெற வகவற்குப் பொழிப்பெதுகை நூற்றோ டொருபத் தேழென நுவல்ப" (117) ஆக அகவற்குப் பொழிப்பெதுகை 208. 77. "வண்டு ஞாயிறு போதுபூப் போரே றெட்டு முதலா வேழுந் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல்வா யொன்பான் முதலாறுங் காருருமு மாவருவாய் பத்துமுத லைந்து மாக வெள்ளைக்கு வந்த பொழிப்பெதுகை யெண்ணொரு பஃதே யெய்து மென்ப" (80) 78. "வரகு வலியது கடியாறு விறகுதீ யெட்டுக் கணவிரி பெருநாணுப் புலிசெல்வாய் மழகளி றுருமுத்தீப் புளிமா வரவொன்பது நரையுருமுப் புலிவருவாய் பத்து முதலா வந்த வவையொரோ வொன்றைந் தாக வெள்ளை பெற்ற பொழிப்பெது கைத்தொடை யாறொரு பஃது மைந்து மாகும்" (65) வெள்ளைப் பொழிப்பெதுகை 145. 79. "வலியது விறகுதீக் கடியா றெனுமிவை யீரேழ் தொட்டுப் பதினெட் டளவுங் கணவிரி பெருநாணு வுருமுத்தீ மழகளிறு புலிசெல்வா யுரறுபுலிப் பதினைந்து முதலாப் பத்தொன் பானள வுயரவு நரையுருமு விரவுகொடிப் புலிவருவாய் பதினாறு முதலா விருபதின் காறு முயரவும் வருதலிற் றுள்ளல் பெற்ற பொழிப்பெ துகைதா மறுபஃ தாக வரைந்தனர் புலவர்" (60) 80. "மூவகைப் பாவிற்கு மொழிந்த பொழிப்பெதுகை நானூற் றொருபத்து மூன்றென நவில்ப" (413) 81. "நேர்பதின் மூன்றா னகவற் கொரூஉவெதுகை வண்டு நான்கு மின்னுத் தேமா வைந்து ஞாயிறு போதுபூப் போரே றாறு பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது நீடுகொடி யேழு காருருமு நாணுத் தளையெட்டு முதலா வொரோவொன் றெவ்வேழாக வியன்ற தொகைதா மேழொரு பஃதோ டிருபத் தொன்றே" (91) 82. "நிரைபதின் மூன்றா னகவற் கொரூஉவெதுகை வரகிரு நான்கு புளிமா வரவொன்பான் வலியது கடியாறு விறகுதீப் பத்துக் கணவிரி யுரறுபுலி பெருநாணு வுருமுத்தீ மழகளிறு பதினொன்று விரவுகொடீ நரையுருமு வீராறு முதலா வொரோவொன் றொன்பா னாகத் தொகைநூற் றொருபத் தேழே" (117) ஆக அகவற்கொரூஉவெதுகை 208. 83. "நேர்பதின் மூன்றான் வெள்ளைக் கொரூஉவெதுகை, விண்டு ஞாயிறு போதுபூப் போரே றெட்டுமுதலா வேழுந்தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை யொன்பான் முதலா வொரோவொன் றாறுங் காருருமு மாவரு வாய்பத்து முதலாக வொரோவொன் றைந்து மாக வறைந்த தொகைதா மெண்ணொரு பஃதே யெய்து மென்ப" (80) 84. "நிரைபதின் மூன்றான் வெள்ளைக் கொரூஉவெதுகை வரகு வலியது கடியாறு விறகுதீ யெட்டுக் கணவிரி பெருநாணு வுருமுத்தீப் புலிசெல்வாய் மழகளிறு புளிமாவர வொன்பது நரையுருமுப் புலிவருவாய் பத்துமுத லாக வொரோவொன் றைந்து நிலம்பெற் றாறொரு பஃது மைந்து மாகும்" (65) ஆக வெள்ளைக்கு ஒரூஉவெதுகை 145. 85. 'நேரீராறாற் கலிக்கொரூஉ வெதுகை பெருகிய நிலத்தி லொரோவொன்று களையப், பெறுந்தொகை நாற்பத் தெட்டுப் பின்னர் நிரையீ ராறாற் சுருங்கிய நிலத்திற் கொரோவொன் றுகளையப் பெறுந்தொகை யஃதா மிருவகைத் தொகையுந் தொண்ணூற்றாறே' (96) 86. "மூவகைப் பாவிற்கு மொழிந்த வொரூஉவெதுகை நானூற்று நாற்பத்தொன்ப தாகும்" (449) 87. "வண்டு தேமா மின்னிவை மூன்று மொரோவொன்று சுருங்கிய நிலத்து நந்நான் ககவல் பெற்ற கூழை யெதுகை யீரா றாக வியலு மென்ப" (12) 88. "வலியது கடியாறு விறகுதீப் பத்துக் கணவிரி யுரறுபுலி பெருநாணு வுருமுத்தீ மழகளிறு பதினொன்று விரவுகொடி நரையுருமு வீராறு முதலாக வொரோவொன் றொன்பா னாக வகவற்குக் கூழை யெதுகை தொண்ணூ றாகத் தொகுத்தனர் புலவர்" (90) ஆக அகவற்குக் கூழையெதுகை 102. 89. "ஞாயிறு போதுபூப் போரே றேழாப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை யொரோவொன் றாறாகக் காருருமு மாவருவா யொரோவொன் றைந்தாக வெள்ளை பெற்ற கூழை யெதுகை யாறொரு பஃது மொன்று மாகும்" (61) 90. "வரகிரு நான்கு புளிமா வரவொன்பான் முதலா வொரோவொன்று நந்நான் காக வெள்ளை பெற்ற கூழை யெதுகை யீரா றாக வியலு மென்ப" (12) ஆக வெள்ளைக்குக் கூழை யெதுகை 73. 91. "நிரை யீராறாற் கூழை யெதுகை யிருமுப் பஃதா வியலுங் கலிக்கே" (40) 92. "மூவகைப் பாவிற்குக் கூழை யெதுகை யிருநூற்று முப்பத் தைந்தா கும்மோ" (235) 93. "நேராதி யாகிய சீர்பதின் மூன்றாற் சுருங்கிய நிலத்தி லொரோவொன்று நான்காக வகவல் பெற்ற மேற்கதுவா யெதுகை யையொருபஃது மிரண்டு மாகும்" (52) 94. "வரகீ ரைந்து புளிமா வரவு பதினொன்று வலியது கடியாறு விறகுதீ யீராறு கணவிரி யுரறுபுலி பெருநாணு வுருமுத்தீ மழகளி றிவைபதின் மூன்று விரவுகொடி நரையுருமு வீரேழ் முதலா வொரோவொன் றேழாக வகவல் பெற்ற மேற்கதுவா யெதுகை தொண்ணூற்றொன்றே" (91) ஆக அகவற்கு மேற்கதுவா யெதுகை 143. 95. "வண்டு ஞாயிறு போதுபூப் போரே றெட்டு முதலா வொரோவொன் றேழுந் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை யொன்பான் முதலா வொரோவொன் றாறுங் கருருமு மாவருவா யீரைந்து முதலா வொரோவொன் றைந்து மாக வெள்ளைக்கு மேற்கதுவா யெதுகை யெண்பஃதாகும்" (80) 96. "வரகு வலியது கடியாறு விறகுதீ யெட்டு முதலா வொரோவொன்று நான்குங் கணவிரி பெருவேணுப் புலிசெல்வாய் மழகளி றுருமுத்தீப் புளிமா வரவிவை யொன்பா னரையுருமுப் புலிவருவா யீரைந்து முதலா வொரோவொன் றொருநான் காக வெள்ளைக்கு மேற்கதுவா யெதுகை யைம்பத் திரண்டே" (52) ஆக வெள்ளைக்கு மேற்கதுவா யெதுகை 132. 97. "நிரையீ ராறாற் கலிக்கு மேற்கதுவா யெதுகை நாற்பத் தெட்டா வெய்தும்" (48) 98. "மூவகைப் பாவிற்கு மொழிந்த மேற்கதுவா யெதுகை முந்நூற் றிருபத்து மூன்றே." (323) 99. "வண்டு நான்கு தேமா மின்னிவை யைந்து முதலா வொரோவொன் றேழாக வகவல் பெற்ற கீழ்க்கதுவா யெதுகை யொன்று தலையிட்ட நாலைந் தாகும்." (21) 100."வலியது கடியாறு விறகுதீப் பத்துக் கணவிரி யுரறுபுலி பெநாணு வுருமுத்தீ மழகளிறு பதினொன்று விரவுகொடி நரையுருமு வீராறு முதலா வொரோவொன் றொன்பா னாக வகவற்குக் கீழ்க்கது வாயெதுகை தொண்ணூ றாகத் தொகுத்தனர் புலவர்" (90) ஆக அகவற்குக் கீழ்க்கதுவா யெதுகை 111. 101."ஞாயிறு போதுபூப் போரே றென்றிவை யெட்டு முதலாவொரோவொன் றேழும் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல்வா யொன்பான் முதலா வாறுங் காருருமு மாவருவா யீரைந்து முதலா வொரோவொன் றைந்து மாகக் கீழ்க்கதுவா யெதுகை வெள்ளைக் கறுபத் தொன்றே" (61) 102. "வரகிரு நான்கு புளிமா வரவொன்பான் முதலா வொரோவொன் றொருநான் காக வெள்ளை பெற்ற கீழ்க்கதுவா யெதுகை யீரா றாக வியலு மென்ப. (11) ஆகவெள்ளைக்குக் கீழ்க்கதுவா யெதுகை 73. 103."நிரையீ ராறாற் கலிக்குக் கீழ்க்கதுவா யெதுகை நாற்பத் தெட்டே யாகும்." (41) 104."மூவகைப் பாவிற்கு மொழிந்த கீழ்க்கதுவா யெதுகை யிருநூற்று முப்பத் திரண்டே." (232) 105."வண்டு தேமா மின்னிவை மூன்றுஞ் சுருங்கிய நிலத்தி வொரோவொன்று நந்நான் காக வகவல் பெற்றமுற் றெதுகை யீரா றாக வியலு மென்ப" (12) 106."வலியது கடியாறு விறகுதீ யீராறு கணவிரி யுரறுபுலி பெருநாணு வுருமுத்தீ மழகளிறு பதின்மூன்று விரவுகொடி நரையுருமு வீரேழ் முதலா வொரோவொன் றேழாக வகவல் பெற்ற முற்றெ துகைதா மேழொரு பஃதா வியலு மென்ப" (70) ஆக அகவற்கு முற்றெதுகை 82. 107."ஞாயிறு போதுபூப் போரே றென்றிவை யெட்டு முதலா வொரோவொன் றேழும் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல்வா யொன்பான் முதலாக வாறு காருருமு மாவருவா யீரைந்து முதலா வொரோவொன் றைந்தா முற்றெதுகை வெள்ளைக் காறொரு பஃது மொன்று மாகும்" (61) 108."வரகிரு நான்கும் புளிமா வரவொன்பான் முதலா வொரோவொன் றொருநான் காக வெள்ளை பெற்ற முற்றெது கைதா மீரா றாக வியலு மென்ப" (12) ஆக வெள்ளைக்கு முற்றெதுகை 73. 109. "நிரையீ ராறாற் கலிக்குமுற் றெதுகை நாலொரு பஃது மெட்டு மாகும்" (48) 110."மூவகைப் பாவிற்கு மொழிந்தமுற் றெதுகை மூன்றுதலை யிட்ட விருநூ றாகும்" (203) 111."எதுகையென் பதனா னியன்ற பெருந்தொகை மூவா யிரத்தோ டிருநூற்று முப்பது" ஆகவே யெதுகைத் தொடை 3230. 112. "மோனைக்கு மெதுகைக்கு மொழிந்த தொடைத்தொகை யிருபத் திரண்டு முடியி னிட்ட வறுநூற் றுடனே ழாயிர மாகும்" ஆக மோனைக்கு மெதுகைக்கும் 7622. இனி முரண்வருமாறு 113."அகவற் கிருநூற் றெழுபத்து மூன்றும் வெள்ளைக் கொருநூற் றைம்பத் தாறுங் கலிக்கு நூற்றிரு பஃது மாகும்" 114."மூவகைப் பாவிற்கு மொழிந்த வடிமுரண் ஐஞ்ஞூற்று நாற்பத் தொன்ப தாகும்" (549) 115."நேரா திச்சீர் பதின்மூன் றானு மொரோவொன்று பத்தாக வகவற் கிணைமுர ணீரைம் பஃது முப்பது மாகும்" (130) 116."நிரையா திச்சீர் பதின்மூன் றானு மொரோவொன்று பத்து மொன்று மாக வகவல் பெற்ற விணைமுரண் டொடைதா மீரைம் பஃதொடு நாற்பத்து மூன்றே" (143) ஆக வகவற்கு 273. 117."வண்டு ஞாயிறு போதுபூப் போரே றெட்டு முதலா வொரோவொன் றேழுந் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை யொன்பான் முதலா வொரோவொன் றாறானுங் காருருமு மாவருவா யீரைந்து முதலா வொரோவொன் றைந்து மாக வெள்ளைக் கிணைமுர ணெண்பஃ தாகு மென்ப." (80) 118."வரகு வலியது கடியாறு விறகுதீத் தம்மொடு கணவிரி பெருநாணுப் புலிசெல்வாய் மழகளி றுருமுத்தீப் புளிமா வரவொன்பான் முதலா வொரோவொன் றிருமூன் றாக நரையுருமுப் புலிவருவா யீரைந்து முதலா வொரோவொன் றைந்தாக வெள்ளைக் கிணைமுர ணேழொரு பஃது மாறு மாகும்," (76) ஆக வெள்ளைக்கு 156. 119."நேரு நிரையு மாகிய சீர்க ளிருபத்து நான்கால் கலிக்கிணை முரண்டொடை யீரைம் பஃது மிருபது மாகும்." (120) 120."மூவகைப் பாவிற்கு மொழிந்த விணைமுர ணைஞ்ஞூற்று நாற்பத் தொன்பது மாகும்" (549) ஈண்டிணை முரணிற்குக் கூறிய சூத்திரங்களைப் பொழிப்பு முரணுக்கு மொரூஉமுரணுக்குங் கூழைமுரணுக்கும் மேற்கதுவாய் முரணுக்குங் கீழ்க்கதுவாய்முரணுக்கும் முற்றுமுரணுக்குங் கூறி இணை முரணுக்குத் தொடை கொண்டிவ்வாறே கொள்ள வொரோவொன் றைஞ்ஞூற்று நாற்பத்தொன்பதாம். 549. 121. "இணைமுரண்டொடையோ டேனைய கொள்ள வொரேவொன் றைஞ்ஞூற் நாற்பத் தொன்பதே" 122. "எண்வகை முரணா னியன்ற தொடைத்தொகை முந்நூற்றுத் தொண்ணூற் றிரண்டு முடிவிட் நாலா யிரமா நவின்றனர் புலவர்" ஆக 4392. இனியியைபு வருமாறு 123."அகவற் கிருநூற் றெழுபத்து மூன்றும் வெள்ளைக் கொருநூற் றைம்பத் தாறுங் கலிக்கு நூற்றிரு பஃது மாக மூவகைப் பாவிற்கு மெழுத்தடி யியைபே யைஞ்ஞூற்று நாற்பத் தொன்ப தாகும்." (549) 124."சொல்லடி யியைபு கொள்ளுங் காலு மூவகை யானும் வந்த பெருந்தொகை யைஞ்ஞூற்று நாற்பத் தொன்ப தாகும்" (549) 125."நேரா திச்சீர் பதின்மூன் றானு மொரோவொன்று பத்தாக வகவற் கிணையியை பீரைம் பஃது முப்பஃது மாகும்" (130) இவ் வைந்தினையு மூன்று பாவிற்கும் பகுக்குமாறு. 126."ஐந்து தொடையா னகவற்கு வருந்தொகை யொரோவொன் றிருநூற் றெண்பத்து மூன்றா வாயிரத்து நானூற் றொருபத் தைந்தே" (1415) 127. "ஐந்து தொடையான் வெள்ளைக்கு வந்ததொகை யொரோவொன் றொருநூற் றறுபத்து மூன்றா வெண்ணூற் றொருபத் தைந்தென மொழிப" (815) 128."ஐந்து தொடையாற் கலிக்கு வருந்தொகை யொரோவொன் றொருநூற் றிருபஃ தாக நூறு தலையிட்ட ஐஞ்ஞூ றாகும்" (600) 129."கூறிய மூன்றின் றொடைத்தொகை கூறினா லைஞ்ஞூற் றுடனெண் ணூற்று முப்பது" ஆக வைந்து தொடையானும் பெற்ற தொகை 2830. இனி 130."ஐவகை முரணும் வருக்க மோனையும் வருக்க வெதுகையும் வழி மோனையும் உயிரெது கையு முரைத்தசெந் தொடையு மறுநூற் றிருபத் தைந்தடி யோடுந் தொடைகொளும் வகையைத் தோன்றக் கூறி னுந்தை யெனுஞ்சீர் முதற்பா விரண்டிற்கு முறழ்ந்த வடிக ளிருபது நீக்கி யேனைச் சீரா லுறழ்ந்த வடித்தொகை யறுநூற் றைந்தே யாகு மவற்றுள் வழுநில மைம்பத் தாறுங் களைய வொரோவொன் றெய்திய தொடைத்தொகைக் கூறி னைஞ்ஞூற்று நாற்பத் தொன்ப தாகப் பத்துத் தொடையும் பெற்ற தொகைதா மையா யிரத்தொடு நானூற்றுத் தொண்ணூறு" ஆகப் பத்துத் தொடைக்கு மொரோவொன் றைஞ்ஞூற்று நாற்பத் தொன்பஃதாகப் பெற்ற தொகை 5490. நுந்தைக்கிரண்டும் மரபிற்கு மூன்றும் வழுப்போய் ஐம்பத்தாறு வழுவாயிற்று. இனி இத்தொகையை மூன்று பாவிற்கும் பகுக்குமாறு:. 131. "ஒரோவொன் றிருநூற் றெழுபத்து மூன்றாப் பத்தி னானு மகவல் பெறுந்தொகை யீரா யிரத்தோ டெழுநூற்று முப்பது" (2730) 132. "ஒரோவொன் றொருநூற் றைம்பத் தாறாப் பத்தி னானும் வெள்ளை பெறுந்தொகை யாயிரத் தைஞ்ஞூற் றறுபஃ தாகும்" (1560) 133. "ஒரோவொன் றொருநூற் றிருபஃ தாகப் பத்தி னானுந் துள்ளல் பெறுந்தொகை யாயிரத் திருநூ றாகு மென்ப." (1200) 134. "தொடைமூ வைந்தா னியன்ற தொகைதா மெண்ணா யிரத்தொடு முந்நூற் றிருபது." முற்கூறிய வைந்து மிதனாற்கூறிய பத்துமாகப் பதினைந்தானும் பெற்ற தொகை 8320. இனி மூன்றா மெழுத்தொன் றெதுகை. எழுத்தெண்ணப்படு மெழுத்துக்களிலும் எழுத்தாக வெண்ணாத வொற்றுக் குற்றுகரங்களிலுந் தொடை கொள்ளுமாறு: 135. "வண்டு மின்னு நுந்தைசேற் றுக்கா னீடுகொடி யிவ்வாற்றா னறுபது நீக்கி யேனைச் சீரா னுறழ்ந்த வடிக ளிருநூற் றறுபத்து நான்கா மவற்றுள் முப்பத் தொருவழுக் களைந்து கொள்ளப் பெற்ற வகவற் றொடைத்தொகை கூறி னிருநூற்று முப்பத்து மூன்றா கும்மே" (233) இதனுட் களைந்த சீரைந்து நீக்கி யேனைநேராதி யொன்பதிற்குப் பதினெட்டும் நிரையாதி பதின்மூன்றற்குப் பதின்மூன்றுமாக வழு முப்பத்தொன்றாயிற்று. 136."வண்டு மின்னு நுந்தைசேற் றுக்கா லிவற்றான் முப்பத் தொன்று நீக்கி யேனைச் சீரா னுறழ்ந்த வடிக ணூற்றோ டைம்ப தாகு மவற்றுள் வழுப்பதி னான்குங் களைய வெள்ளை பெறுந்தொடை நூற்று முப்பத் தாறே" (136) இதனுட் களைந்த சீர் நான்கு நீக்கி யேனைநேராதி பத்திற்குப் பத்தும் நிரையாதியுள் வரகு வலியது கடியாறு விறகுதீ யென்னும் நான்கற்கு நான்குமாக வழுப்பதினான்காயிற்று. ஆக விரண்டற்கும் வழு நாற்பத் தைந்து. 137."சேற்றுக்கா னீடுகொடிச் சீரைந்து நீக்கி யேனைச் சீராற் றுள்ளல் பெறுந்தொடை யொருநூற் றொருபஃ தாகு மென்ப." (110) 138."மூவகைப் பாவின் மூன்றா மெழுத்தொன் றெதுகை நானூற் றெழுபத் தொன்பது" (479) அகவற் கைந்தும் வெள்ளைக்கு நான்குங் கலிக் கிரண்டுமாக இவ்வகையாற் களைந்தசீர் களைந்து மிரண்டா மெழுத்தும் மூன்றா மெழுத்துஞ் சேரவொன்றிற் றலையாகெதுகைப்பாற் படுதலானும் பிறசீர் குறைந்து வேறுபடுத்திற் பிறதொடை சிறந்து இத்தொடை சிறந்து காட்டாமையானும் அங்ஙனங் களையவேண்டிற்றென வுணர்க. மெல்லின எதுகை முதலியன இனி 139. "மெல்லின வெதுகையு மிடையின வெதுகையு மாசிடையெதுகையு நெடின்மோ னையு நிரைமுதற் சீரு நுந்தையு நீக்கி நேர்முதற் சீர்கள் பதின்மூன் றானு வொரோவொன் றுறழு மடித்தொகை கூறி னூற்றோ டைம்பத் தாறா மவற்றுள் வழுநில மிருபத் தாறுங் களைய வொரோவொன் றெய்துந் தொடைநூற்று முப்பஃது" (130) 140. "அந்நாற் றொடையா னகவல் பெறுந்தொகை யைஞ்ஞூற் றிருபஃ தாகு மென்ப." (520) 141."நேர்பதின் மூன்றான் முன்னர்க் கூறிய நால்வகைத் தொடைக்கு மொரோவொன் றுறழ்ந்த வடித்தொகை தொண்ணூற்று மூன்ற னுள்ளும் வழுப்பதின் மூன்று களைய வொரோவொன் றெய்திய தொடைதா மெண்ப தென்ப வாக நாற்றொடை பெற்றவெண் டொடைதா முந்நூற் றிருபஃ தெனமொழிந் தனரே." (320) அவற்றுள் 142."நுந்தை வந்த மெல்லின வெதுகை முதற்பா விரண்டற்குந் தளைவழுக் களைந்து கொள்ளப் பெறுந்தொடை பதினே ழாகும்." (17) 143."நுந்தை தேமாக் களைந்துநேர் முதற்சீர் பன்னிரண் டானு முன்னர்க் கூறிய நாற்றொடை யொரொவொன் றெய்துந் தொடைதா மறுபஃ தாகக் கலிக்கு வருந்தொடை யிருநூற்று நாற்பஃ தென்றனர் புலவர்." (240) 144."நாற்றொடை யானும் பெற்ற தொடைதா மாயிரத் தோடு தொண்ணூற் றேழே" ஆக விந்நான்கு தொடைக்கும் பெற்ற தொகை 1097. இனி வல்லின வெதுகை வருமாறு 145."வல்லின வெதுகை வகுக்குங் காலை நிரைபதின் மூன்று மின்னு நுந்தையு மேவு சீரு நாணுத் தளையுங் களைய நேராதி பத்தா மவற்றிற் கிருபது வழுவுங் களைந்த பின்னர் அகவல் பெற்ற தொடைநூ றாகும்." 146."நிரைபதின் மூன்று மேவு சீரு மின்னு நுந்தையுங் களைந்து நேராதி பதினொன் றற்கும் பதினொரு வழுவுங் களைந்தபின் வெள்ளைக் கறுபத் தெட்டே நிரையீ ராறு நாணுத் தளையு மேவு சீருங் களையநே ராதி பத்தாற் கலித்தொடை யைம்பஃ தாகும்." 147."மூவகைப் பாவிற்கும் வல்லின வெதுகை யிருநூற் றொருபத் தெட்டென மொழிப." (218) இனி உயிரளபெடை வருமாறு 148. "அசைச்சீர் நான்குரி முதற்சீ ரெட்டு நுந்தை யெனப்பதின் மூன்று மொழிந்தது நேரேழ் நிரையே ழாகிய சீராற் பெற்ற வடிநூற் றறுபத் தெட்டனுள் மூவேழ் வழுவு நீக்கிய பின்ன ரகவல் பெற்ற வளபெடைத் தொடைதா நூற்றொடு நாற்பத் தேழென நுவல்ப" (147) 149."கூறிய பதின்மூன் றொழித்த பின்னர் நேரொன் பானு நிரையொன் பானு மாகிய சீராற் பெற்ற வடிதா நூற்றோ டொருபத் தேழா மவற்றுள் வழுப்பதி னொன்று நீக்கி வெள்ளைக் களபெடை நூற்றா றாகு மென்ப." (106) 150."உரிமுதற் சீரெட் டொழிந்த பின்னர் நேர்நிரை யீரெண் சீராற் றுள்ளற் களபெடை யெண்பஃ தாகு மென்ப." (80) 151."மூவகை யாற்பெறு முயிரள பெடைதா முந்நூற்று முப்பத்து மூன்றென மொழிப." (333) இனி யொற்றளபெடை வருமாறு 152.தேமாப் புளிமா வெனுமிரண் டற்கும் வழுநில மூன்று களைய வகவற் கொற்றள பெடைதா மிருபத் தொன்றே." (21) 153. "மாசெல்வாய் தேமா வழுவிரண்டு களைந்து புளிமாப் புலிசெல்வாய் கூட்டநான் கானும் வெள்ளைக் கொற்றள பிருபத்து நான்கே" (24) 154."முதற்பா விரண்டிற் கொற்றள பெடைதா மைந்துதலை யிட்டநா லொருபஃ தாம்" (45) ஆகவிரண்டு அளபெடையுங் கூட்ட 378. இனி, யொற்றளபெடை துள்ளலோசையைத் தள்ளி நிற்றலாற் கலிக்கு வாராதென் றுணர்க. 155."எட்டுத் தொடையா னியன்ற தொகைதா மொருநூற் றெழுபத் திரண்டுதலை யிட்ட வீரா யிரமே யாகு மென்ப" (2172) இனி யசையந்தாதி வருமாறு. தேமா முதனின்றுறழ்ந்த வடிக்கு, நான்காஞ் சீருந் தேமாவென நின்று மேல்வருமடியோ டந்தாதிக்க வேண்டுமென்றுணர்க. அது, 156."தேமா வண்டு வண்டு காமர்" என நின்று 'ம' என்பது மதித்தென வருமென்று கொள்க. இஃது ஒழிந்தவடிகட்கும் மேல்வருஞ் சீரந்தாதிக்குமென்று கொள்க. இது, முதற்பாவிரண்டற்குமே கொள்க. அங்ஙனம் கொள்ளுங்காற் போது பூவுக்குப் போதுகளெனவும் விறகுதீக்கு விரிகாரெனவுங் கொள்க. ஒழிந்தனவற்றிற்கு மிவ்வாறே கூறவேண்டுவன கூறிக்கொள்க. 157."தேமா வாறு ஞாயிறு புளிமா என்றிவை வேழு பாதிரி பூமருது நீடு கொடியெட் டுக்கா ருருமு நாணுத்தளை யொன்பது முதலா வந்த வசையந் தாதி யொரோவொன் றும்மே இருமூன் றாக வகவல் பெறுந்தொகை நாலொரு பஃது மெட்டு மாகும்" (48) இதற்குமேல் வருவனவற்றிற்கு "முதலா" வென்பதனை யெண்க ளோடு கூட்டிப் பொருளுரைக்க. 158."புளிமா வொன்பான் வலியது விறகுதீப் பத்துக் கணவிரி யுரறுபுலி மழகளி றீரா றுநரை யுருமு விரவுகொடி யீரேழ் முதலா வந்தா தியொரோ வொன்றே ழாக வகவல் பெறுந்தொகை யையொரு பஃது மாறு மாகும்." (56) ஆக, 104. 159."போதுபூப் போரே றிருநான்கு மேவுசீர் நன்னாணு மாசெல்வா யீரைந்து முதலா வொன்றைந் தாகமா வருவாய் காருருமு முந்நான்கு முதலாக மூன்று நிலமாக வெள்ளை பெற்ற வசையந் தாதி நாலைந் ததனோ டெட்டு மாகும்" (28) 160."விறகுதீக் கடியா றொன்பான் பெருநா ணுருமுத்தீப் புலிசெல்வாய் பதினொன்று முதலா வொரோவொன்று நான்காக வெள்ளை பெற்ற வசையந் தாதி நாலைந் தாகும்" (20) ஆக, 48. இனிக், கலிக்கசை யந்தாதி வருங்காற் றனக்குரிய இருபத்துநான்கு சீரு முறழ்ந்தவடிகளுக்கு வெண்சீர் நான்கு மீற்றின்கண்வருவதல்ல தொழிந்தவியற்சீர் பதினாறு முரிச்சீர் நான்கு மீற்றின்கண் வந்து அந்தாதித் தொடை கொள்ளாவென் றுணர்க. 161."நேரீ ராறு நிரையீ ராறு மாகிய சீர்கட் கொரோவொன் றைந்தாத் துள்ளல் பெற்ற வசையந் தாதி நூற்றோ டிருபஃ தாகு மென்ப." 120 162."மூவகைப் பாவிற்கு மசையந் தாதி யிருநூற் றெழுபத் திரண்டா கும்மே." (272) இனிச் சீரந்தாதி வருமாறு 163."வண்டு நுந்தை நான்கு தேமா மின்னிரு மூன்று முதலா வொரோவொன் றவ்வா றாக வகவல் பெற்ற சீரந் தாதி யிரபத்து நான்கே" (24) 164."வலியது விறகுதீக் கடியா றீரைந்து கணவிரி யுரறுபுலி பெருநாணு வுருமுத்தீ மழகளி றீராறும் விரவுகொடி நரையுருமு வீரேழ் முதலா வொரோவொன் றேழாக வகவல் பெற்ற சீரந் தாதி யேழொரு பஃதே யாகு மென்ப" (70) ஆக 94. 165."ஞாயிறு போதுபூப் போரே றெட்டுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது பத்து முதலாக வொரோவொன் றைந்தாகி மாவருவாய் காருருமு வீராறு முதலா மூன்று மரவு புளிமாப் பத்து முதனான்கும் வரக்கெட்டு முதலா நான்கு மாகியும் வெள்ளை பெற்றசீர் ரந்தாதி யையொரு பஃது மெட்டு மாகும்," (58) 166."மாசெல் வாயீ ரேழ்புலி செல்வாய் மாவரு வாயீ ரெட்டுப் புலிவரு வாயீ ரொன்பது முதல வந்து மும்மூன் றாகுஞ் சீரந் தாதி, துள்ளற் ரீறா றாகு மென்ப" (12) இதற்கு வந்த சீர் வருதல் கொள்க. 167."மூவகைப் பாவிற்குஞ் சீரந் தாதி நூற்றோ டறுபத்து நான்கென நுவல்ப நானூற்று முப்பத் தாறீ ரந்தாதி" ஆக விரண்டந்தாதியும் 436. இனி யெழுத்துவிட்டிசையும் குறிப்புவிட்டிசையும் வருமாறு:. 168."தேமா வைந்து ஞாயிறு போரேறு நன்னாணுப் பாதிரி பூமரு தேழுகா ருருமெட்டு முதலா வந்தவை யொரோவொன் ரீரைந்தா வகவல் பெற்ற விட்டிசைதா மேழொரு பஃதே யாகு மென்ப" (70) 169." ஞாயிறு போரே றிருநான்கு முதலேழ் பாதிரி தேமா நன்னாணுப் பூமருது மாசெல்வா யொன்பான் முதலா வாறு காருருமு மாவருவாய் பத்துமுத லைந்தா வெள்ளைக்கு வந்த விட்டிசை தாமே யையொரு பஃது நான்கு மாகும்" (54) 170."ஞாயிறு போரேறு பதின் மூன்று நன்னனாணுப் பாதிரி பூமருது மாசெல்வா யீரேழ் காருருமு மாவருவாய் மூவைந்து முதலா வந்தவை யொரோவொன் றையைந் தாகத் துள்ளல் பெற்ற விட்டிசை தாமே, நாலொரு பஃதே யாகு மென்ப." (40) 171."மூவகைப் பாவிற்கு மெழுத்து விட்டிசை நூற்றோ டறுபத்து நான்கே பின்னர்க் குறிப்பு விட்டிசையு மவ்வா றாகு மிருதொகை முந்நூற் றிருபத் தெட்டே" ஆக விருவகை விட்டிசையும் 328. 172."மோனை முதலா விட்டிசை யீறா வீரடித் தொடைகொளு மிருபத் தைந்தின் றொகைநிலை பதினோ ராயிரத் திருநூற் றைம்பத் தாறென வறைந்தனர் புலவர்" ஆக வீரடித்தொகை யிருபத்தைந்தனாலும் பெற்றதொகை 11256. இனி, யோரடித்தொடை கொள்ளுங்கால் அவையும் பின்வருமடி யொடு தளைவழுவப்படாமற் கோடும். அவற்றுட் பொழிப்பெதுகை வருமாறு 173."வண்டு நான்கு மின்னுத் தேமா வைந்து ஞாயிறு போதுபூப் போரே றாறு பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது நீடுகொடி யேழுகா ருருமு நாணுத்தளை யெட்டு முதலா வந்தவை யொரோவொன் றெவ்வேழ் நிலம்பெற வகவற்குத் தொக்க பொழிப்பெதுகை தொண்ணூற் றொன்றே. வரகிரு நான்கரவு புளிமா வொன்பான் வலியது விறகுதீக் கடியாறு பத்துக் கணவிரி யுருமுத்தீப் பெருநாணு வுரறுபுலி மழகளிறு பதினொன்று நரையுருமு விரவுகொடி யீராறு முதலா வந்தவை யொரோவொன் றொன்பது நிலம்பெற வகவற் பொழிப்பெதுகை நூற்றோ டொருபத் தேழென நுவல்ப." (117) இனி வருக்கப் பொழிப்பெதுகை வருமாறு: 174."வண்டைந்து மின்னுத் தேமா வாறு ஞாயிறு போதுபூப் போரே றேழு பாதிரி நன்னாணுப் பூமருது நீடுகொடி மேவுசீ ரெட்டுக் காருருமு நாணுத் தளையொன்பான் முதலா வொரோவொன் றாறா வகவல் பெற்ற பொழிப்பெது கைத்தொடை யெழுபத் தெட்டே யாகு மென்ப" (78) இனி நிரையாதி வருக்கப்பொழிப்பெதுகைக்கு முன்னர் நிரையாதிப் பொழிப்பெதுகைக்குக் கூறினவுரைச் சூத்திரத்தைக் கூறிக்கொண்டு அதன்றொகையே இதற்குங் கொள்க. 117 நேராதி வல்லினப் பொழிப்பெதுகை வருமாறு: 175."வண்டு நான்கு தேமா வைந்து ஞாயிறு போதுபூப் போரே றாறு நன்னாணுப் பாதிரி பூமருது நீடுகொடி யேழு காருருமு வெட்டு முதலா வந்தவை யொரோவொன் றெவ்வேழ் நிலம்பெற வகவல் பெறும்வல் லினப்பொழிப் பெதுகை யேழொரு பஃதே யெய்து மென்ப" (70) இனி நேராதி மெல்லினப் பொழிப்பெதுகைக்கு முன்னர் நேராதிப் பொழிப் பெதுகைக்குக் கூறிய உரைச்சூத்திரத்தைக் கூறிக்கொண்டு அதன்றொகையே யிதற்குங் கொள்க. 176."நால்வகை யகவற் பொழிப்புத் தொகைதா மைஞ்ஞூற் றெழுபத்தெட்டா கும்மே" ஆக 578. (14 குறைகின்றது). இனி வெள்ளைக்குப் பொழிப்பெதுகை வருமாறு: 177."வண்டு ஞாயிறு போதுபூப் போரே றெட்டு முதலா வேழுந் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல்வா யொன்பான் முதலாறுங் காருருமு மாவருவாய் பத்துமுத லைந்து மாக வெள்ளைக்கு வந்தபொழிப் பெதுகை யெண்ணொரு பஃதே யெய்து மென்ப" (80) 178."வரகு வலியது கடியாறு விறகுதீ யெட்டுக் கணவிரி பெருநாணுப் புலிசெல்வாய் மழகளி றுருமுத்தீ புளிமா வரவொன்பது நரையுரு முப்புலி வருவாய் பத்து முதலா வந்தவை யெரோவொன் றைந்தா வெள்ளை பெற்ற பொழிப்பெது கைத்தொடை யாறொரு பஃது மைந்து மாகும்" (65) "இனி வருக்கப்பொழிப்பு வருமாறு: 179."வண்டு ஞாயிறு போதுபூப் போரேறு பாதிரி மாசெல்வா யொன்பான் முதலாறு மின்னு நன்னாணுத் தேமா மேவுசீர் பூமருது பத்து முதலா வைந்து மாவருவாய் காருருமுப் பதினொன்று முதலா நான்கு மாக வந்த வாற்றான் வெள்ளை பெற்ற வருக்கப் பொழிப்பெதுகை யாறொரு பஃது மொன்பது மாகும்" (69) இனி நிரையாதி வருக்கப் பொழிப்பிற்கு முன்னர் நிரையாதிப் பொழிப்பெதுகைக்குக் கூறிய வுரைச்சூத்திரத்தைக் கூறியதன் றொகையே இதற்குங் கொள்க. 65 இனி வல்லினப் பொழிப்பெதுகை வருமாறு: 180."வண்டு ஞாயிறு போதுபூப் போரே றெட்டு முதலா வொரோவொன் றேழு மாசெல் வாய்பூ மருது தேமாப் பாதிரி நன்னாணு வொன்பான் முதலாறுங் காருருமு மாவருவாய் பத்துமுத லைந்து மாக வந்த வாற்றான் வெள்ளை பெற்ற வல்லினப் பொழிப்பெது கைதா மாறொரு பஃதோ டெட்டு மாகும்." (68) இனி மெல்லினப் பொழிப்பெதுகைக்கு முன்னர் நேராதிப் பொழிப் பெதுகைக்குக் கூறிய வுரைச்சூத்திரத்தையே கூறி அதன் றொகையே இதற்குக் கொள்க. 181."நால்வகை வெள்ளைப் பொழிப்பெது கைதாம் நானூற்று நாற்பத் தொன்றென மொழிப" ஆக 441. (14 குறைகின்றது). இனிக் கலிக்குப் பொழிப்பெதுகையும் வருக்கப் பொழிப் பெதுகையும் வருமாறு: 182."வலியது விறகுதீ கடியா றெனுமிவை யீரேழ் தொட்டுப் பதினெட் டளவுங் கணவிரி பெருநாணு வுருமுத்தீ மழகளிறு புலிசெல்வா யுரறுபுலி பதினைந்து முதலாப் பத்தொன் பானள வுயரவு நரையுருமு விரவுகொடி புலிவருவாய் பதினாறு முதலா விருபதின் காறு முயரவும் வருதலிற் றுள்ள லோசை பெற்றபொழிப் பெதுகை யறுபஃ தாக வறைந்தனர் புலவர்" (60) அறுபதாகும் வருக்கப் பொழிப்பெதுகையும் 60. ஆக 120. 183. "மூவகைப் பாவிற்கு மொழிந்த பொழிப்பெதுகை நானூற் றொருபத்து மூன்றென நவில்ப" (413) முற்றெதுகையும் வருக்கமுற்றெதுகையும் வருமாறு: 184."நுந்தை வண்டு நான்கு தேமா வைந்து முதலா வொரோவொன்று நான்கு மின்னிரு நான்கா வொருநிலத்து வருதலு மாக வகவல் பெற்ற முற்றெதுகை யீராறு மொன்று மாகு மென்ப" (13) இவற்றை யொரோவொன்றாகக் கொள்ளின் மற்றை யடியொடு தளை வழுப்படும்; அது "மந்தி தந்த பைந்தாட் செந்தினை" என நிற்ப மேலடி வந்தெனத் தொடை வந்தாற் றளை வழுவாமாறு காண்க. 185."வலியது விறகுதீக் கடியாறீ ராறுங் கணவிரி பெருநாணு மழகளி றுருமுத்தீ யுரறு புலிபதின் மூன்று நரையுருமு விரவு கொடிபதி னான்கு முதலா வொரோவொன் றேழாய் முற்றெது கைபெறும்" 186."வருக்கமுற் றெதுகையு மவ்வா றேபெற்று நூற்றுநாற் பஃது மகவற் கெய்தும்" (140) ஆக இருவகை முற்றும் 153. 187. "ஞாயிறு போதுபூப் போரே றென்றிவை யெட்டு முதலா வொரோவொன் றேழும் பாதிரி நன்னாணுப் பூமருது மாசெல்வாய் மேவுசீ ரொன்பது முதலா வாறுங், காருருமு மாவருவாய் பத்து முதலைந் துயரவும் புளிமா வரவிவை தம்மொடு வரகுந் தனித்தனி நான்கு மாகி வந்த விவற்றான் வெள்ளை பெறுமுற் றெழுபத்து மூன்றே யாகு மிங்ஙனம் வருக்க முற்றும் வந்தவெண் ணாக விரண்டன் றொகைநூற்று நாற்பத் தாறே (146) நிரையீ ராறுறழ்ந்த வடியறு பஃதிற் சுருங்கிய நிலத்தி லொரோவொன்று களையத் துள்ள லோசை பெற்றமுற்றுத் தொடைதா நாற்பத் தெட்டே யாகும் வருக்க முற்றுத் தொடையு மவ்வா றாக விரண்டன் றொகையுந் தொண்ணூற் றாறே." (96) 188."மூவகைப் பாவிற்கு மிருவகை முற்று முந்நூற்றுத் தொண்ணூற் றைந்தென மொழிப" (395) ஆக 1534. இனி யொருஉவெதுகை வருமாறு: 189. "நேர்பதின் மூன்றா னகவற் கொருஉவெதுகை வண்டு நான்கு மின்னுத் தேமா வைந்து ஞாயிறு போதுபூப் போரே றாறு பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது நீடுகொடி யேழு காருருமு நாணுத்தளை யெட்டு முதலா வொரோவொன் றெவ்வே ழாக வியன்ற தொகைதா மேழொரு பஃதோ டிருபத் தொன்றே." (91) 190. "நிரைபதின் மூன்றா னகவற் கொரூஉவெதுகை வரகிரு நான்கரவு புளிமா வொன்பான் வலியது கடியாறு விறகுதீப் பத்துக் கணவிரி யுரறுபுலி பெருநாணு வுருமுத்தீ மழகளிறு பதினொன்று விரவுகொடி நரையுருமு வீராறு முதலா வொரோவொன் றொன்பா னாகத் தொகைநூற் றொருபத் தேழே" 117. ஆக 208. 191. "நேர்பதின் மூன்றான் வெள்ளைக் கொரூஉவெதுகை வண்டு ஞாயிறு போதுபூப் போரே றெட்டுமுதலா வேழுந் தேமா மின்னுப் பாதிரி மேவுசீர் நன்னாணுப் பூமருது மாசெல் வாயிவை யொன்பான் முதலா வொரோவொன் றாறுங் காருருமு மாவருவாய் பத்து முதலா வொரோவொன் றைந்து மாக வறைந்த தொகைதா மெண்ணொரு பஃதே யெய்து மென்ப." (80) 192. "நிரைபதின் மூன்றான் வெள்ளைக் கொரூஉவெதுகை வரகு வலியது கடியாறு விறகுதீ யெட்டுக் கணவிரி பெருநாணு வுருமுத்தீப் புலிசெல்வாய் மழகளிறு புளிமா வரவிவை யொன்பது நரையுருமுப் புலிவருவாய் பத்து முதலா வொரோவொன் றைந்து நிலம்பெற் றாறொரு பஃது மைந்து மாகும்." (65) 193."நேரீ றானாற் கலிக்கொரூஉ வெதுகை பெருகிய நிலத்தி லொரோவொன்று களையப் பெறுந்தொடை நாற்பத் தெட்டுப் பின்னர் நிரையீ ராறிற் சுருங்கிய நிலத்தி லொரோவொன்று களையப் பெறுந்தொடை யஃதா மிருவகைத் தொடையுந் தொண்ணூற் றாறே." (96) 194. "மூவகைப் பாவிற்கு மொழிந்த வொரூஉ வெதுகை நானூற்று நாற்பத்தொன்ப தாகும்." (449) இனி வருக்கவொரூஉவருமாறு. 195."வண்டைந்து மின்னுத் தேமா வாறு ஞாயிறு போதுபூப் போரே றேழு மேவுசீர் பூமருது நன்னாணு நீடுகொடி யெட்டுக் காருருமு நாணுத்தளையொன்பான் முதலா வந்தவை யொரோவொன் றாறும் பாதிரி யேழு முதலா வேழு மாக வகவற்கு வருக்க வொரூஉத்தொகை யேழொரு பஃது மொன்பது மாகும்." (79) இனி நிரையாதி வருக்கவொரூஉவிற்கு முன்னர் நிரையாதி யொரூஉவிற்குக் கூறிய உரைச் சூத்திரத்தையே யிதற்குங் கொள்க 117. ஆக 196. இனி வெள்ளைக்கு நேராதி வருக்கவொரூஉ நுந்தை யொழிய முன்னர் நேராதி யொரூஉவிற்குக் கூறிய உரைச்சூத்திரத்தைக் கூறியதன் றொகையி லிதற்கேழு குறைத்துக் கொள்க 70. இனி வெள்ளைக்கு நிரையாதி வருக்க வொரூஉவிற்கு முன்னர் நிரையாதி யொரூஉவிற்குக் கூறிய வுரைச் சூத்திரத்தைக் கூறியதன் றொகையே யிதற்குங் கொள்க 65. ஆக 135. இனிக்கலிக்கு வருக்கவொரூஉவிற்கு முன்னரொரூஉவிற்குக் கூறியவுரைச் சூத்திரத்தையே கூறி யதன்றொகையே யிதற்குங் கொள்க. 96. ஆக 427. 196. "மூவகைப் பாவிற்கு மிருவகை யொரூஉத்தொகை, தொள்ளா யிரமே யாகு மென்ப." ஆக 900. (24 குறைகின்றது). 197."அளவடிக் களவரும் விகற்பத் தொடைதா நானூற்று முப்பத்து நான்குதலை யிட்ட வீரா யிரமே யாகு மென்ப" ஆக ஓரடித்தொடை 2434. 198."இருவகைத் தொடையா னியன்ற தொகைதாம் பதின்மூ வாயிரத் தறுநூற்றுத் தொண்ணூ றீரடித் தொடையு மோரடித் தொடையும்" (13690) இனி, இச் சூத்திரத்திற்குத் 'தொண்டுதலையிட்ட பத்துக் குறை யெழுநூற் றொன்றுமென்ப' வென்று பாடமோதிப் பதின்மூவாயிரத்தறு நூற்றுத் தொண்ணூறென்பாரும், இனிப் 'பத்துக்குறை யெழுநூற்றொன்று மென்ப' வென்று பாடமோதித் தொண்டுதலையிட்ட பத்துப்பத்தொன்ப தென்பாரும், இனித் 'தொண்டு தலையிட்ட பத்துக்குறை யெழுநூற் றொன்று மென்ப' வென்றுபாடமோதிப் பதின்மூவாயிரத்தறு நூற்றுத் தொண்ணூற் றொன்பதென்பாரும் இனிப் 'பத்துக்குறைய யெழுநூற் றொன்பஃதென்ப' வென்றுபாட மோதி யிதனை மிகவு நலிந்து பொருள் கொண்டு பதின் மூவாயிரத் தெழுநூற்றெட்டென்பாருமெனப் பல பகுதியராசிரியர். இவற்று ணல்லதுய்த் துணர்ந்துகொள்க. இனி 'மெய்பெறுமரபிற்றொடை'யெனவே விளங்கத்தோன்றா தனவுஞ் சிலதொடையுளவாயின. அவை ஆசிடை யெதுகை வேறுபாடும் மிரண்டடி யெதுகையுஞ், செந்தொடை வேறுபாடும் இரட்டையும் அந்தாதி வேறுபாடும் இணை, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்றும், கடையிணை, கடைக்கூழை, யிடைப்புணர், பின் என்பனவும் பிறவும் வேறுபா டாகக் கூறுவார் கூறுந்தொடைகளுமெல்லா மிதனானே தழீஇக் கொள்க. அவை மேற்கூறுதும். இனி, 199. "அடிதொடை மிசைபல விரவின வரினு முதல்வரு மதனது பெயர்கொளன் முறையே" எனச் சூத்திரஞ்செய்து பலரும் முதல் வந்த தொடையே தளையே முதலியனவே கொள்வர் பின்னுள்ளோர், அவரறியார். என்னை? 200."செங்காற் பைந்தினை யிதண மேறிப் பைங்காற் சிறுகிளி கடிவோ டந்தை" என்புழி எதுகையு முரணும் வந்துழி முதற்கண்ணதின்னது இறுதிக் கண்ண தின்னதென்று துணியலாகாமை கொள்க. இன்னுஞ் செய்யுட் செய்த சான்றோர் பல தொடையும் பலவிலக் கணமும் படவேண்டுமெனக் கருதிச் செய்தவற்றுட் சில களைந் தொன்றுகோடற்குக் காரணமின்மையு முணர்க. (101) தொடைப் பகுதிகளை விரிப்பின் வரம்பில எனல் 102. தெரிந்தனர் விரிப்பின் வரம்பில பல்கும். இது கட்டளையடிக்கொரு புறனடை. (இ-ள்.) அறுநூற் றிருபத்தைந்துள் ஒன்றை நிறுத்தி யதனோடறு நூற்று நான்கனையுங் கூட்டியு மதனொடு சீர்வகையடிகளையும் விகற்பத்தொடைகளையுங் கூட்டியுந் தொடுக்குந் தொடைப்பகுதிகளை விரிப்பி னெண்ணிறந்து பலவாம் எ-று. எனவே, இங்ஙனங் கூறாமல் வரையறைப்படுத்தி யிலக்கணங் கூறினாம் என்றார். (102) ஐயமறுத்தல் 103. தொடைவகை நிலையே யாங்கென மொழிப. இது ஐயமறுக்கின்றது. (இ-ள்.) சீர்வகையடியின் றொடைப்பகுதி வரையறைப்படாவேனும் அவை செய்யுட் கணிற்கும் நிலைமை முற்கூறிய கட்டளை போனின்று தொடைகொள்ளப் பெறுமென்று கூறுவர் புலவர் எ-று. என்றது வரையறையின்றேனுந் தொடைச்சுவடு படுமென்றவாறு. (103) நோக்கின் இலக்கணம் 104. மாத்திரை முதலா வடிநிறை காறும் நோக்குதற் காரண நோக்கெனப் படுமே. இது நிறுத்தமுறையானே நோக்குணர்த்துகின்றது. இது மேல்நாற் சொல்லாற் செய்யுஞ் செய்யுள் வழக்கியல்பினவாய் வெள்ளைமைகலந்து நிற்றலாகா தென்பதோ ரிலக்கணம். (இ-ள்.) மாத்திரை முதலா அடிநிறை காறும். - மாத்திரை முதலிய வுறுப்புக் கொண்ட வடிநிரம்புந் துணையும், நோக்குதற் காரணம் - கேட்டோர் மீண்டு நோக்கிப் பயன் கோடலையுடையதாகச் செய்யுங் கருவி, நோக்கு எனப்படுமே - நோக்கென்று பெயர்கூறப்படு மென்றவாறு. அடி நிறைகாறுமென்றது ஓரடிக்கணன்றிச் செய்யுள் வந்தவடி யெத்துணை யானும் நின்று முடிகாறும் எ-று. (எ-டு.) "முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ விரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானங் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவி ழலரி னாறு மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே." (அகம். 4) வைந்நுனை யென்றதனான் அலருந்துணையு மெல்லென்னாது வன்மைய தாய்க் கூரிதாய் நிற்றலி னரும்பியணித்தென்பது கூறிற்று. இல்லமுங்கொன்றையும் பிணி யவிழ்ந்தனவென்றது, அவை மரமாதலிற் கடிதிற் கரியாவாகலிற் கடிதிற்கரியும் முல்லைக்கு முன்னே மெல்லிய பிணியவிழ்ந்தமை கூறிற்று. காய்ந்த விரும்பு முறுக்கிவிட்ட வழியும் வெப்பமாறாதவாறு போல நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்ப மின்னுந் தணிந்தில தென்பதுதோன்ற இரும்புதிரித்தன்னமருப்பென்றார். இரலை, குழிதோறுந் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தினவாதலிற் பலகால் நீர்பருகுதற்குப் பரலையுடைய பள்ளத்தைச்சேர நின்றன என்றதாம். இத்துணையும் பருவந்தொடங்கிய துணையே வற்புறுத்திக் கூறிற்று. புலம்பு முழுவதும் நீங்கிற்றென்னாது ஒருபுடை தோன்றப் புறக்கொடுத்ததென்றமையின் அதுவும் பருவந்தொடங்கிய துணையே கூறிற்று. தொகுதியையுடைய மேகங் காற்றின் விசையான் விரைந்த கொடுந் துளியைச் சிதறிற்றெனவே புதுமை கூறிற்று. இத்துணையும் பருவந் தொடங்கி யணித்தென்றலின் வற்புறுத்தற் கிலேசானமை நோக்கிற்று. கொய்யாத வுளை பெருகுதலுங் கொய்த வுளை பல்காற் கொய்யப் பெற வேண்டுதலுங் கூறவே குதிரை மனச் செருக்குக் கூறிற்றாம். அதன் கழுத்து வளையும்படி விசித்த வாரொலி நரம்பிற்கு ஓதிய நால்வகைக் குற்றத்தினு மார்ப்பென்னுங் குற்றமெய்திய நரம்போசைபோல விசைப்பவென்க. பூத்த பொங்கரென்பதனாற் பசிப்பிணிதீர நுகரும் பொருளை யதுகுறைவறக் கொடுப்ப வுண்டு மகிழ்ந்து பின்பு தாம் இன்பம் நுகராநின்று வதியுமெனவே, யாமுமில்லற நிகழ்த்துதற்கும் நுகர்தற்குமேற்ற பொருள் களைக் குறைவறப் பெற்றுப் பின்னின்பம் நுகர்தல் வேண்டு மென்பது கூறினாளாம். பொங்கரிற் பசி தீர்ந்து துணையொடுவதியும் பறவையுந் தாதையுண்கிற பறவையுங் கலக்கமுறுதற்கஞ்சி மணியொலியை வீக்கிய தேரனென்றதனாற் காதலுமருளுமுடைமையின் அவற்றின் பிரிவிற்கும் பசிக்கு மிரங்கினானெனக் கூறவே யவையவற்கு நின்கண்ணும் பெருகுமென்றாளாம். வதியும் பறவைவண்டுந் தேனுமென்பதுந், தாதுண்பறவை சுரும்பென்பதும் "எங்கு மோடி யிடறுஞ் சுரும்புகாள் வண்டு காள்மகிழ் தேனி னங்காள்." (சீவக. குண. 42) எனப் பின்னுள்ளோர் கூறியவாற்றானு முணர்க. இதனாற் சேணிடை வரவையுணர்த்தும் மணியொலியை வாரொலிகேட்கு மணிமைக்கண்ணுங் கேளாயாயினையெனவு மவ்வா ரொலி தாதுண்பறவை யொலிக்கணடங்குதலின் கேட்கின்றிலையெனவுங் கூறினாளாயிற்று. வாரொலி நரம்போசை போறலின் பெருவரவாயிற்று. மாண்வினைத்தேரனென்றாள், அவன்றன் கருத்திற்கேற்ப வினை முடித்தமை தோன்ற; எனவே வன்புறைக்கேதுவாயின. தெய்வந்தங்கு மலையாதலிற் றெய்வமணநாறுங் காந்தளினுடைய போதவிழா நின்ற மலர்போல அவர் புணர்ந்தகாலத்துப் புதுமணநாறும் மரிவையெனவே யவர்பிரிந்து சேய்த்தன்றென வன்புறைக்கேதுவாயிற்று. ஆய்தொடி யென்றது, தோண்மெலிந்துழி அயலார்க்குப் புறமறைத் தல் வேண்டிச் செருகுந்தன்மையின்றி யணிந்த நிலையே கிடக்குந் தொடி யென்றவாறாம். இதுவும் பிரிந்து சேய்த் தன்றென்றவாறதாம். ஈண்டு மாணலமென்றது அவன் பிரிவுணர்த்திய காலத்துப் பிரிவிற்குடம்பட்டாள் போன்றுடம்படாது நின்ற நலத்தை; அது மெய்ப்பாடாம். இங்ஙனம் கோடல் நோக்கென் றுணர்க. (104) பா வகை நான்கு 105 ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே. இது நிறுத்த முறையானே பாவென்னு முறுப்புணர்த்துகின்றது. (இ-ள்.) ஆசிரியப்பாவும், வஞ்சிப்பாவும், வெண்பாவும், கலிப்பாவு மென நான்கு கூற்றது பாக்கூற்று விரி எ-று. வகை யென்றதனாற் றூக்கின் றொடர்ச்சியாகிய இப் பாவென்னு முறுப்பு நிகழுமோசையை அது நிகழுஞ்செய்யுளின் வேறுபட நோக்கிச் செய்யுட்கோ ருறுப்பென்றுணர்க வென்பதூஉம் வழக்கிற்குரியன செய்யுட்குமுரியவாமென்பதூஉ மோரொரு செய்யுட்க ணொரோவுறுப்பு வருமாறு மொன்றொன்றனொடு விராஅய்ப் பிறக்கும் பகுதியும் பொருள்வரையறையும் அடிவரையறையு மெல்லாங் கொள்க. பாநான்கெனவே, பாவினையுறுப்பாகவுடைய செய்யுளும்நான் கென்னும் வரையறையு மவற்றாற் பெயர் கோடலு மச்சூத்திரங்களாற் பெறுதும். "தூக்கே பாவே" யென்பதற்குப் "பாவென மொழியினுந் தூக்கினது பெயரே" யென்றா ரிதன் வழிநூலோரும். (எ-டு.) " உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய் துகில்பொதி பவள மேய்க்கு மகில்படு கள்ளியங் காடிறந் தோரே." இஃதாசிரியப்பா வுறுப்பாகிய செய்யுள். 'வசையில்புகழ் வயங்குவெண்மீன்' (பட்டினப். 1) இது வஞ்சியுறுப்பாகிய செய்யுள். 'வாரிய பெண்ணை வளர்குரும்பை வாய்த்தனபோ லேரிய வாயினு மென்செய்வ. - கூரிய கோட்டியானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை." இது வெண்பா வுறுப்பாக வந்த செய்யுள். 'அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்' (கலித். 11) இது கலியுறுப்பாக வந்த செய்யுள். இவற்றின் பாவைத் தூக்கி யடிவரையறுத்தவாறு காண்க. ஆசிரியப்பா வெண்பாவென முன்றூக்கிற் கூறியவாறன்றி ஆசிரியம் வஞ்சி யென்றுகூறினார், வழக்கிற்குஞ் செய்யுட்குமுரிய வாசிரியமும் வெண்பா வும் போலச் செய்யுட்குரிய கலியும் வஞ்சியுஞ் சிறப்பிலவோ வென் றையுறாமைக்கும் அவையவ் வையுறவுடைய வென்றற்கு மென்க. (105) பாவிற்குரிய பொருண்மை 106. அந்நிலை மருங்கி னறமுத லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப. இது பாப்பொருட்குரிமை கூறுகின்றது. (இ-ள்.) மேலைச்சூத்திரத்திற் றோற்றுவாய் செய்யப்பட்ட செய்யுளிடத்து வரு மறம் பொருளின்பமென்னும் மூன்று முதற்பொருட்கு மந்நான்குபாவு முரியன எ-று. மும்முதற் பொருளெனவே, அவற்றது துணைப்பொருளாகிய அற நிலையின்மையும் பொருணிலையின்மையும் இன்பநிலை யின்மையு மடங்குமென்க. உலகியற் பொருண்மூன்றனையு மிவையெனக் கூறி அவற்றைவிடுமாறுங் கூறவே வீடுங் கூறிற்றாம். அது கூறுதற்குரிய செய்யுளும் மேற்கொச்சகமென்று கூறுமாறுணர்க. (106) பாவகை நான்கனுள் பின்னைய இரண்டும், முன்னைய இரண்டனுள் அடங்கும் எனல் 107. பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் ஆசிரி யப்பா வெண்பா வென்றாங்கு ஆயிரு பாவினு ளடங்கு மென்ப. 108. ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை வெண்பா நடைத்தே கலியென மொழிப. இவை யிரண்டும் உரையியைபு நோக்கி உடன் கூறினாம். இவை விரித்தது தொகுத்தல். (இ-ள்.) பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் - பாக்கள் விரிந்த பகுதியை யுண்மைத் தன்மை நோக்கித் தொகுப்பின்; ஆசிரியப்பா வெண்பா என்றாங்கு ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப. - ஆசிரியப்பாவும் வெண்பாவு மென்றவ்விரண்டு பாவினுளடங்கு மென்று கூறுவர். அதற்குக் காரண மென்னையெனின், ஆசிரிய நடைத்தே வஞ்சி - ஆசிரிய விகற்ப மாகித் தூங்கலோசை விரிந்தடங்கும், ஏனை வெண்பா நடைத்தே கலியென மொழிப. - ஒழிந்த வெண்பாவின் விகற்பமாகித் துள்ளலோசை விரிந்தடங்கு மென்று முதனூலாசிரியர் கூறுதலின் எ-று. (எ-டு.) "வீடுபேறு மிகவிழைந்து நீடுநினைந்து நெடிதிருந்து" என அகவற்சீரான் வஞ்சித்தூக்குப் பிறந்தது. மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் என வெண்பாவினுட் கலிப்பாப் பிறந்தது. பண்புறவென்றதனான் ஆசிரியமும் வெண்பாவு மியல்பெனவும் ஒழிந்தன விகாரமெனவுங்கொள்க. ஏனையென்றதனான் மூன்றுபாவினுந் துள்ளிய கலியோசையு மொருவகையான் வெண்பா நடைத்தேயாம், இலக்கணக் கலி யோசையன்றாயினு மென்பது. (107, 108) வாழ்த்தியலின் கூறுபாடு நான்கு பாவிற்கும் உரித்து எனல் 109. வாழ்த்தியல் வகையே நாற்பாக்கு முரித்தே. இது முற்கூறிய மும்முதற் பொருட்கண் அறமானது வாழ்த்துதற் பொருட்டாய் நாற்பாவிற்கு முரித்தாமென்கின்றது. (இ-ள்.) வாழ்த்தியலின் கூறுபாடு நான்கு பாவிற்கு முரித்து எ-று. வகை யென்றதனாற் கடவுளரும், முனிவரும், பசுவும், பார்ப்பாரும், அரசரும், மழையும், நாடுமென்னு மறுமுறைவாழ்த்து வருதலே பெரும்பான்மைய என்பதூஉம், அங்ஙனம் வாழ்த்துங்காற் றனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்குப் பயன்படுதலுமென இருவகை யான் வாழ்த்து வரும் என்பதூஉம், முன்னிலையாகவும் படர்க்கையாகவும் வாழ்த்து வரும் என்பதூஉங் கொள்க. (எ-டு.) "மாநிலஞ் சேவடி யாகத் தூநீர் வளைநரல் பௌவ முடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வ னென்ப தீதற விளங்கிய திகிரி யோனே" (நற். வாழ்த்து) இது தனக்குப் பயன்பட வாழ்த்தியது. 'நீல மேனி வாலிழை பாகத் தொருவ னிருதா ணிழற்கீழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே' (ஐங்குறு. வாழ்த்து) இஃது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது. 'முக்கட் பகவ னடிதொழா தார்க்கின்னா பொற்பனை வெள்ளையை யுள்ளா ரெழிலின்னா சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா சத்தியான் றாடொழா தார்க்கு." (இன்னாநாற்பதுவாழ்த்து) "வானிடு வில்லின்..........முடிகவென்று" (நாலடி. வாழ்த்து) 'ஆறறியந் தணர்க்கு' (கலித். வாழ்த்து) இவற்றின் வேறுபாடுமுணர்க. இவை கடவுள் வாழ்த்தென்று பெயர் கூறப்படும். 'உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர் வித்து' (குறள். 24) இது முனிவரை வாழ்த்தியது. 'ஆயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே' (பதிற்றுப். 63) இஃது அரசரை வாழ்த்தியது. 'விசும்பிற் றுளிவீழி னல்லான்மற் றாங்கே பசும்புற் றலைகாண் பரிது' (குறள். 16) இது மழையை வாழ்த்தியது. ஒழிந்தன வந்துழிக்காண்க. இவை அறுமுறை வாழ்த்தெனப் பெயர் கூறப்படும். இயலென்றதனான் இயற்கையாய வாழ்த்திவை யெனவும், மேல்வரும் புறநிலை வாழ்த்து முதலியன இயற்கையன்றி வாழ்த்தின்பாற் சார்த்தப்படுவன எனவுங் கொள்க. வஞ்சிக்குதாரணம் வந்துழிக்காண்க. 'அங்கண் வானத் தமரரசர்' என்பது பின்னுள்ளோர் கூறிய வாழ்த்தியல். (109) புறநிலை வாழ்த்து கலியிலும் வஞ்சியிலும் வாராது எனல் 110. வழிபடு தெய்வ நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமி னென்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. இது, நான்கு பாவிற்கு முரித்தன்றி வரையறைப்படும் வாழ்த்து வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப - நீ வழிபடும் நின் குல தெய்வம் நின்னைப் புறத்தே நின்று காப்ப, பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து - இல்லறத்தாற் பொலிந்த செல்வத்தோடே நீ பெறும் புதல்வரும் அவர் பெறும் புதல்வருஞ் சிறப்பெய்தி, பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே - எல்லீரும் நீடுவாழ்வீராமினென்று தெய்வத்தைப் புறத்தே நிறுத்தி வாழ்த்தும் வாழ்த்து, கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ - கலிப்பாவுறுப்பாகவும் வஞ்சிப்பா வுறுப்பாகவும் பாடப்பெறா எ-று. எடுத்துக்கொண்ட காரியத்துக்கு ஏதுவாகிய தெய்வத்தினைப் படர்க்கையாக்கி அத் தெய்வத்தாற் பயன்பெறாநின்றா னொருவனை முன்னிலையாக்கிக் கூறலிற் புறநிலையாயிற்று. வகையென்றதனாற் கலியின் கூறாகிய பரிபாடற்கு மொக்கும். (எ-டு.) "அறிதுயி லரவணை யமர்ந்தோன் காப்ப அருட்கடம் பூண்ட வகலாச் செல்வமொடு நீயுநின் புதல்வருஞ் சிறந்து வாழிய பெரும பூழியர் கோவே" "திங்க ளிளங்கதிர்போற் றேந்திங்க ளூர்த்தேவன் மைந்தர் சிறப்ப மகிழ்சிறந்து - திங்கட் கலைபெற்ற கற்றைச் சடைக்கடவுள் காப்ப நிலைபெற்று வாழியரோ நீ" என வரும். இது பாவென்னுமுறுப்பிற்குப் பொருள் வரையறுத்தது. நின்னென ஒருமை கூறிப் பொலிமினெனப் பன்மை கூறியது, புதல்வரோடுகூடப் பாடுதற்கமையு மென்றற்கு. (110) வாயுறை வாழ்த்து முதலியனவும் கலியிலும் வஞ்சியிலும் வாராவெனல் 111. வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே செவியறி வுறூஉவென் றவையு மன்ன. இதுவும் பாக்களைப் பொருண்மேல் வரையறுக்கின்றது. (இ-ள்.) வாயுறைவாழ்த்தும் அவையடக்கியலுஞ் செவியறிவுறூஉவு மென் றம்மூன்றும் மேலைப் புறநிலை வாழ்த்துப்போல வாழ்த்துப் பகுதி யவாகலுங் கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாமையுமுடைய எ-று. அவையாமாறு மேற்கூறுதும். வாயுறையென்றது வாய்மை மொழி யாகிய மருந்தெனப் பண்புத்தொகை. மருந்துபோறலின் மருந்தென்றார். ஒருவன் சிறப்புக்கூறி வழுத்தி அவற்குப் பயன்படக் கூறலின் வாயுறை வாழ்த்தென்றார். மாட்டேற்றானே நிற்புறங்காப்ப என இட நியமித்தாற் போல இடநியமமுங் கொள்க. அவையடக்கியலென்பது அவையடக்கிய வியலென விரியும்; அஃது அவரடங்குமாற்றாற் றன்னையிழித்துக்கூறி அவரைப் புகழ்தல். அவைக்கட்டானடங்குதலாயின், அவையடங்கியலென்பது பாடமாதல் வேண்டும். செவியறிவுறூஉவாவது ஒருவர்க்குக் கேள்வியறிவு படுத்து அவரை வாழ்த்துதல்; என்று கூறப்பட்டவையும் ஆசிரியத்தானும் வெண்பாவானுங் கூறப்பெறும் எ-று. எனவே, இந்நான்கு பொருண்மேலும் ஆசிரியமும் வெண்பாவும் வருமென்பதூஉம், ஒழிந்தன வாராவென்பதூஉம், மருட்பா அவ் விரண்ட னானும் வருதலின் இப் பொருண்மேல் வருமென்பதூஉம் பெற்றாம். தெய்வத்தொடு பட்டமையிற் புறநிலை முற்கூறி, முன்னிலைக் குரிமையின் வாயுறை யதன்பின் கூறி, வரையறை யின்மையின் அதன் பின் அவையடக்கியல் கூறி, முன்னிலைக்கண்வருமேனும் இன்ன குணத்தை யாவாயெனப் புகழ்பட வாழ்த்திப் பிற்கூறுதல் வேறுபாடுடைமையின் அதன்பின் செவியறிவுறூஉக் கூறி இம்முறையே வைத்தார். இங்ஙனங் கூறிய பாவுறுப்பினை யுடைய நால்வகைச் செய்யுட்கும் இவ்வுறுப்பினதிலக்கண மெய்துவிக்க. (111) வாயுறை வாழ்த்தின் இலக்கணம் 112. வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குத லின்றி வழிநனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. இது முறையானே வாயுறை கூறுகின்றது. (இ-ள்.) வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் - முற்பருவத்துக் கைத்தும் கடுத்தும் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்பும் கடுவும்போல வெய்ய சொல்லினை, தாங்குதல் இன்றி வழிநனி பயக்கும் என்று - ஒரு தடையின்றிப் பிற்பயக்கும் எனக்கருதி, ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே - பாதுகாத்த சொல்லினானே மெய்யாக உறுத்துவது, வாயுறை வாழ்த்தே - வாயுறை வாழ்த்தாம் எ-று. (எ-டு.) 'இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநில முடையிலை நடுவண திடைபிறர்க் கின்றித் தாமே யாண்ட வேமங் காவல ரிடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடுபிறர் கொள்ளச் சென்றுமாய்ந் தனரே. அதனால், நீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற வுயிரு மில்லை மடங்க லுண்மை மாயமோ வன்றே கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலு லாங்கண் உப்பிலா வவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோ னீயப்பெற்று நிலங்கல னாக விலங்குபலி மிசையு மின்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே" (புறம் 363.) எனவரும். (112) அவையடக்கியலின் இலக்கணம் 113. அவையடக் கியலே யரிறபத் தெரியின் வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்று எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே. இது முறையே அவையடக்கியல் கூறுகின்றது. (இ-ள்.) அவையடக்கியலே அரில்தபத் தெரியின் - அவையடக்கிய வியலைக் குற்றமற ஆராயின், வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று - வல்லாதவற்றைக் கூறினும் அவற்றை ஆராய்ந்து கொள்க என்று, எல்லா மாந்தர்க்கும் வழிமொழிந்தன்று - எல்லார்க்கும் வழிபடு கிளவி கூறியதாம் எ-று. வல்லுதல் என்பது ஒன்றுவல்லனாதல்; அஃது ஒருவன் வல்லன வற்றை வல்ல என்பவாகலின் அதனெதிர்மறை 'வல்லா' என்றாயிற்று. (எ-டு.) "திரைத்த விரிக்கிற் றிரைப்பினா வாய்போ லுரைத்த வுரைபோகக் கேட்டு - முரைத்த, பயின்றவா செய்வார் சிலரேதந் நெஞ்சத் தியன்றவா செய்வார் பலர்" (இன்னிலை. அறப்பால். 5) இது பூதத்தாரவையடக்கு. அரிறப என்றதனாற் சிறுபான்மை யாப்பினும் பொருளினும் வேறுபட்ட கொச்சகத்தாற் கூறுந் தொடர்நிலைச் செய்யுட்கும் அவை யடக்கியல் கொள்க. அது "கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாது விட்டா னற்பா லழியு நகைவெண்மதி போனி றைந்த சொற்பா லுமிழ்ந்த மறுவும்மதி யாற்க ழூஉவிப் பொற்பா விழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார்" (சீவக. 4) என வரும். (113) செவியறிவுறூஉவின் இலக்கணம் 114. செவியுறை தானே, பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தற்றே. இது முறையே செவியுறை கூறுகின்றது. (இ-ள்.) செவிமருந்து போறலிற் செவியுறை யென்றார். பெருக்க மின்றிப் பெரியோர் நடுவ ணடங்கி வாழ்தல் கடப்பாடு எனக் கூறிச் செவிக்கு அறிவுறுத்துவது செவியறிவுறூஉ எ-று. தானே என்னும் ஏகாரம் பிரிநிலை; அஃது அடங்கி வாழ்வார்க்குப் புகழாதலின் வாழ்த்தின்பாற் பட்டது. அது. "வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந் தெனாஅ துருகெழு............ மன்னுக பெருமநீ நிலமிசை யானே" (புறம். 6) "என்று - மின்சொலெண் பதத்தை யாகுமதி பெரும" (புறம். 40) எனவரும். தானே என்றதனான் இன்னகுணத்தை யாவாயென்று வாழ்த்திப் பின் செவியறிவுறுத்தல் கொள்க. இத்துணையும் பாவின் பெயரும், எண்ணுமுறையும், வரையறையும், அவை பொருட்குரிமையுங் கூறின. (114) ஒத்தாழிசை முதலிய மூன்றும் நாற்சீரடிக்கண் வரும் எனல் 115. ஒத்தா ழிசையும் மண்டில யாப்புங் குட்டமும் நேரடிக் கொட்டின வென்ப. இதுவும் பாவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) ஒத்தாழிசையும் - ஒத்தாழ்ந்த வோசையும், மண்டில யாப்பும், - மண்டலித்துவரும் யாப்பும், குட்டமும் - இருசீரும் முச்சீருமாகிக் குறைந்து வருவனவும், நேரடிக்கு ஒட்டின என்ப - நாற்சீரடிக்குப் பொருந்தின என்று கூறுவராசிரியர் எ-று. என்றதனான், நாற்சீரடி முரற்கைபடத் துள்ளிவருதலேயன்றித் தாழம்பட வோசைபெற்றும் வருமென்றார். அதுவே ஒத்தாழிசையை ஒத்து மூன்றாய் வருமென்று "ஒத்துமூன் றாகு மொத்தா ழிசையே" (141) என்புழிக் கூறுமாற்றா னுணர்க. இனி நாற்சீரடியாய் வருமாசிரியமும் வெண்பாவும் ஈற்றயலடியும் ஈற்றடியும் முச்சீராய் வருமென முன்விதித்தவை ஒருகால் நாற்சீராயும் வருமென்றற்கு மண்டிலயாப்பென்றார்; அது மண்டிலவாசிரியாப்பாவும் மண்டிலவெண்பாவுமாம். (எ-டு.) "வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கியவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே" (குறுந். 18) எனவும் "அறையருவி யாடா டினைப்புனமுங் காவாள்..........குன்று" எனவும் மண்டலித்து வந்தன. இனி நாற்சீரடியாய் வரும் ஆசிரியப்பாவும் குட்டம்பட்டு வருமென்றார். ஆசிரியப்பாவிற்குக் குட்டமாவது குறளடிவஞ்சியும் சிந்தடிவஞ்சியும் பொருந்தி வருதல். வெண்பாவிற்குக் குட்டமாவது ஈற்றயலடியேயன்றி ஏனையடியுங் குறைதல். (எ-டு.) "வளித்தலைஇய தீயும் தீமுரணிய நீருமென் றாஅங்கு" (புறம். 2) என நாற்சீரடிக்கு இருசீரும் முச்சீரும் பொருந்தி ஆசிரியம் வந்தது. "அட்டாலும்பால்" "வஞ்சிவெளிய" "நாளும்" "கறைப்பற் பெரு" இவையே கொள்க. இவை வெண்பாக் குட்டம் பட்டு வந்தன. (115) குட்டம் தரவிலும் வரும் எனல் 116. குட்ட மெருத்தடி யுடைத்து மாகும். இது முற்கூறிய குட்டம் தரவுக்கும் உரித்தென்கின்றது. (இ-ள்.) தரவினது ஈற்றடி குறைந்துவருதலை யுமுடைத்தாம் எ-று. எருத்து என்றது தரவை; அஃது "எருத்தே கொச்சகம்" (153) என்பதனானுணர்க. "மெல்லிணர்க் கொன்றையும்" (முல்லை. 3.) "மலிதிரை யூர்ந்துதன்" (முல்லை. 4) எனவும் வரும். (116) மண்டிலமும் குட்டமும் ஆசிரியத்துள் வரும் எனல் 117. மண்டிலங் குட்ட மென்றிவை யிரண்டும் செந்தூக் கியல வென்மனார் புலவர். இது முற்கூறிய மண்டிலமுங் குட்டமும் ஆசிரியத்துக்குப் பெரும்பான்மை வருமென்கின்றது. (இ-ள்.) மண்டிலம் குட்டம் என்றிவை இரண்டும் - மண்டிலங் குட்ட மென்று முற்கூறியவை யிரண்டும், செந்தூக்கு இயல என்மனார் புலவர் - ஆசிரியப்பாவின் கண்ணே பயில நடக்குந் தன்மையையுடைய என்று கூறுவர் புலவர் எ-று. எனவே, வெண்பாவின்கண் சிறுபான்மை வருமென்றவாறாயிற்று. இரண்டு மங்ஙனம் வருதல் சான்றோர் செய்யுளுட் காண்க. (117) நெடுவெண் பாட்டு முதலிய ஐந்தும் வெண்பா யாப்பினுள் வரும் எனல் 118. நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கிளை பரிபாட் டங்கதச் செய்யுளோடு ஒத்தவை யெல்லாம் வெண்பா யாப்பின. இது வெண்பாவென்னு முறுப்பினை இன்னுழியாமெனப் பொருளுஞ் செய்யுளும்பற்றி வரையறுக்கின்றது. (இ-ள்.) முற்கூறிய நெடுவெண்பாட்டுங் குறுவெண்பாட்டுங் கைக்கிளைப் பொருண்மேல் வருஞ் செய்யுளும் பரிபாடற் செய்யுளும் வசையாகிய பொருண்மேல் வருஞ் செய்யுளுமென்ற ஐந்துந் தம்மினொத்த செய்யுளெல்லாம் வெண்பாவென்னும் முறுப்பினான் யாக்கப்படுந் தன்மையையுடைய எ-று. எனவே, பெரும்பான்மை குறித்தபொருளை மறையாமற் செப்பிக் கூறலே அதற்கிலக்கணமாயிற்று. "முன்னைய நான்கும்" (தொல். பொ. 52) என்ற அகத்திணையியற் கைக்கிளையும், "கடவுளும் வரையார்" (பொ. 83) என்ற உம்மையாற்கொண்ட புறத்திணையியற் கைக்கிளையும்; அன்றிக் "காமஞ் சாலா விளமையோள்" (பொ. 50) என்ற கைக்கிளையும், "கைக்கிளை வகையோடு" (பொ. 90) என்ற கைக்கிளையுட் கடவுட்கைக் கிளை யல்லாக்கைக்கிளையும் ஆகாவென்று கொள்க. (எ-டு.) "அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொன் மாலுமென் னெஞ்சு" (திருக். 1081) இஃது அகப்புறக்கைக்கிளை. "களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை யளியா னளிப்பானே போன்றான். - றெளியாது செங்காந்தள் மெல்விரலாற் சேக்கை தடவந்தே னென்காண்பே னென்னலால் யான்" (முத்தொள். 66) "மங்குன் மனங்கடைஇ மான்மாலை நின்றேற்குப் பொங்கு மருவிப் புனனாடன் - கங்குல் வருவான்கொல் வந்தென் வனமுலைமேல் வைகித் தருவான்கொன் மார்பணிந்த தார்" (முத்தொள்.) இவை சுட்டி ஒருவர்ப் பெயர்கோடலிற் புறப்புறக் கைக்கிளை, "குடுமிப் பருவத்தே கோதை புனைந்த நெடுமுத்தப் பூத னிருப்பப் - படுமுத்தம் புன்னை யரும்பும் புகாஅர்ப் புறம்பணையாய்க் கென்னை முறைய ளிவள்" இது கடவுட்கைக்கிளை. இனி "முன்னைய மூன்றும்" (பொ. 105) எனக் களவியலுட் கூறிய கைக்கிளை யிலும் வருமேனும் உணர்க. இனி ஒருபொருணுதலாது திரிந்துவருங் கலிவெண்பாட்டும் ஈண்டுக் கூறிய நெடுவெண் பாட்டோடு ஒருபுடை யொப்புமையுடைமையின் அக் கலிவெண்பாட்டாக இக்காலத்தோர் கூறுகின்ற உலாச் செய்யுளும் புறப்புறக் கைக்கிளைப் பொருட்டாதல் ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. அவ்வுலாச் செய்யுள் இரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின் கூறாமாறு ஆண்டுக் கூறுதும். இக்காலத்து அதனை ஓருறுப்பாகச் செய்து செப்பலோசையாகவுங் கூறுவர்; அது துள்ளலோசைக்கே யேற்குமாறுணர்க. பரிபாடலென்பது பரிந்து வருவது; அது கலியுறுப்புப்போலாது நான்கு பாவானும் வந்து பலவடியும் வருமாறு நிற்குமென் றுணர்க. அது மேற்காண்க. அங்கதச் செய்யுள் பண்புத்தொகை; அஃ திருவகையாதல் மேற்கூறும். (118) கைக்கிளை வெண்பாவானன்றி மருட்பாவானும் வரும் எனல் 119. கைக்கிளை தானே வெண்பா வாகி ஆசிரிய வியலான் முடியவும் பெறுமே. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்.) கைக்கிளைதான் முன்பு வெண்பாவுறுப்பாகிப் பின் ஆசிரியப்பா உறுப்பாக வரவும்பெறும் எ-று. இங்ஙனம் வருவது மருட்பா ஆவதுஉம், அதுதான் அகப்புறக் கைக்கிளை யென்பதூஉம் உணர்க. (எ-டு.) "திருநுதல் வேரரும்புந்.............தணங்கே" (பு.வெ.கைக். 3) என வரும். (119) பரிபாடல் முற்கூறிய வெண்பா யாப்பில் அன்றி இதுபா என்னும் இயல் நெறியில்லாப் பொதுப்பாவினும் வரும் எனல் 120. பரிபா டல்லே தொகைநிலை விரியின் இதுபா வென்னு மியனெறி யின்றிப் பொதுவாய் நிற்றற்கு முரித்தென மொழிப. இது பரிபாடற்காவதொரு புறனடை கூறுகின்றது. (இ-ள்.) பரிபாடல்லே - பரிபாடல் முற்கூறியவாறே வெண்பா வுறுப்பான் வருதலே யன்றி, தொகைநிலை விரியின் - தொகைநிலையும் விரியுமாகக் கூறிய பா நான்கனுள், இது பா என்னும் இயல்நெறி இன்றி - இது பாவென்றறியப்படும் இயல் வழியின்றி, பொதுவாய் நிற்றற்கும் உரித்தென மொழிப - பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றற்கும் உரித்தென்று கூறுப எ-று. உம்மை இறந்தது தழீஇயிற்று. (எ-டு.) "மண்ணார்ந் திசைக்கு முழவொடு கொண்டதோள் கண்ணா துடன்வீழுங் காரிகை கண்டோர்க்குத் தம்மோடு நிற்குமோ நெஞ்சு." எனப் பரிபாடல் வெண்பாவுறுப்பான் வந்தது. "ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலை தீயுமிழ் திறலொடு முடிமிசை யணவர" என்றது வெண்டளையும் ஆசிரியத்தளையும் விராஅய்த் துள்ள லோசை படவுங் கூறப்படுதலின் இது பாவென்னு மியனெறியின்றிப் பொதுவாய் நின்றது. கலிக்கும் இதற்கும் வேறுபாடுள என்பது கலிக்கோதிய இலக்க ணங்கள் இதற்கின்மையானும் ஆசிரியர் இவ்வாறு வேறு கூறலானும் பெறுதும். (120) பரிபாடற்குரிய உள்ளுறுப்புக்கள் 121. கொச்சக மராகஞ் சுரிதக மெருத்தொடு செப்பிய நான்குந் தனக்குறுப் பாகக் காமங் கண்ணிய நிலைமைத் தாகும். இது பரிபாடற்கேற்ற உள்ளுறுப்புக் கூறுகின்றது. இவை சிறப்புறுப்பாகிய முப்பத்து நான்குமன்றி இதற்கும் கலிக்கும் உறுப்பாய் வருமென்று கொள்க. (இ-ள்.) கொச்சகம் என்றது "எருத்தே கொச்சகம்" (தொல். செய்.153) என்புழிக் கூறுகின்றாம். சிறப்பில்லதனைக் கொச்சையென்றுகூறும் வழக்கு நோக்கி இதனையுஞ் சிறப்பின்மையாற் கொச்சகம் என்றா ரென்பாருமுளர். குறிலிணை பயின்ற அடி அராகம்; சுரிதகம் - அடக்கியல்; எருத்து - தரவு; என்ற இவற்றோடே முற்கூறிய நான்கு பாவையுந் தனக் குறுப் பாகக்கொண்டு காமப்பொருளைக் கருதிய நிலைமைத்தாய் வரும் எ-று. தனக்கென்றதனான் அவையல்லன பிறவுறுப்புங்கொள்வது மேற்கூறுதும். கண்ணிய என்றதனாற் கடவுள் வாழ்த்தும், மலைவிளை யாட்டும், புனல்விளையாட்டும், பிறவு மெல்லாம் காமங்கண்ணியே வருமென்று கொள்க. கொச்சகவுறுப்புப் பயிலவருதலின் முன் வைத்தார். அராகம் இடையினல்லது வாராது. எருத்தினை ஈற்றில் வைத்தது தரவின்றியும் அது (பரிபாடல்) வருதலின். (எ-டு.) "வானா ரெழிலி மழைவள நந்தத் தேனார் சிமைய மலையி னிழிதந்து நான்மாடக் கூட லெதிர்கொள்ள வானா மருந்தாகு தீநீர் மலிதுறை மேய விருந்தையூ ரமர்ந்த செல்வநின் றிருந்தடிதலையுறப் பரவுதுந் தொழுதே" இது தரவு. "ஒருசார் அணிமலர் வேங்கை மராஅ மகிழம் பிணிநெகிழ் பிண்டி சிவந்துசேர் போங்கி மணிநிறங் கொண்ட மலை; ஒருசார் தண்ணறுந் தாமரைப் பூவி னிடையிடை வண்ண வரியிதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப விண்வீற் றிருக்குங் கயமீன் விரிதகையிற் கண்வீற் றிருக்குங் கயம்; ஒருசார் சாறுகொளோதத் திசையொடு மாறுற் றுழவி னோதை பயின்றறி விழந்து திரிநரு மார்த்து நடுநரு மீண்டித் திருநயத் தக்க வயல்; ஒருசார் அறத்தொடு வேதம் புரைதவ முற்றி விறற்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் திறத்திற் றிரிவில்லா வந்தண ரீண்டி யறத்திற் றிரியா பதி; இவை நான்கும் கொச்சகம் ஆங்கொருசார் உண்ணுவ பூசுவ பூண்ப வுடுப்பவை மண்ணுவ மணிபொன் மலைய கடல பண்ணிய மாசறு பயந்தரு காருகப் புண்ணிய வணிகர் புனைமறு கொருசார் விழைவதை வினையெவன் மென்புல வன்புலக் களம ருழவர் கடிமறுகு பிறசார்; ஆங்க அனையவை நல்ல நனிகூடு மின்ப மியல்கொள நண்ணி யவை" இது கொண்டுநிலை. வண்டு பொரேரென வெழ வண்டு பொரேரென வெழுங் கடிப்பிகு வேரிக் கதவமிற் றோட்டிக் கடிப்பிகு காதிற் கனங்குழைதொடர மின்மினி வாய்ந்த விளங்கொளி நுதலா ரூர்களிற் றன்ன செம்ம லோருமவ் வாயிருள் பனிச்சை வரிசிலைப் புருவத் தொளியிழை யோங்கிய வொண்ணுத லோரும் புலத்தோ டளவிய புகழணிந் தோரும் நலத்தோ டளவிய நாணணிந் தோரும் விடையோ டிகலிய விறனடை யோரும் நடைமட மேவிய நாணணிந் தோருங் கடனுரை திரையிற் கருநரை யோருஞ் சுடர்மதிக் கதிரெனத் தூநரை யோரு மடையர் குடையர் புகையர் பூவேந்தி யிடையொழி வின்றி யடியுறையா ரீண்டி விளைந்தார் வினையின் விழுப்பயன் றுய்க்குந் துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையு மிருகே ழுத்தி யணிந்த வெருத்தின் வரைகெழு செல்வ னகர்; வண்டொடு தும்பியும் வண்டொடை யாழார்ப்ப விண்ட கடகரி மேகமோ டதிரத் தண்டா வருவியோ டிருமுழா வார்ப்ப வரியுண்ட கண்ணாரோ டாடவர் கூடிப் புரிவுண்ட பாடலோ டாடலுந் தோன்றக் கூடு நறவொடு காமமுகிழ் விரியக் கூடா நறவொடு காமம் விரும்ப வினைய பிறவு மிவைபோல் வனவு மனையவை யெல்லா மியையும் புனையிழைப் பூமுடி நாகர் நகர்" இவையும் கொச்சகம். மணிமரு டகைவகை நெறிசெறி யொலிபொலி யவிர்நிமிர் புகழ்கூந்தற் பிணிநெகிழ் துளையிணை தெளியொளி திகழ் ஞெகிழ் தெரியரி மதுமகிழ் பரிமலர் மகிழுண்கண் வாணுதலோர் மணிமயிற் றொழிலெழி லிகலிமலி திகழ்விழி திகழ்கடுங் கடாக்களிற் றண்ண லவரோ டணிமிக வந்திறைஞ்ச வல்லலிகப்பப் பிணிநீங்க நல்லவையெல்லா மெய்தருந் தொல்சீர் வரைவாய் தழுவிய கல்சேர் கிடக்கைக் குளவா யமர்ந்தா னகர்" இது முடுகியல். திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத் திகழ்வெழ வாங்கித்தஞ் சீர்ச்சிரத் தொற்றி மகர மறிகடல் வைத்து நிறுத்துப் புகழ்சால் சிறப்பி னிருதிறத் தோர்க்கு மமுது கடைய வருவயி னாணாகி மிகாஅ விருபட மாழியான் வாங்க வுகாஅ வலியி னொருதோ ழங்கால மறாஅ தணிந்தோருந் தாம்; மிகாஅ மறலிய மேவலி யெல்லாம் புகாவெதிர் பூண்டாருந் தாம்; மணிபுரை மாமலை ஞாறிய ஞால மணிபோற் பொறுத்தாருந் தாம்; பணிவில்சீர்ச் செல்விடைப் பாகன் றிரிபுரஞ் செற்றுழிக் கல்லுயர் சென்னி யிமையவின் னாணாகித் தொல்புகழ் தந்தாருந் தாம்" இவையுங் கொச்சகம். "அணங்குடை யருந்தலை யாயிரம் விரித்த கணங்கொள் சுற்றத் தண்ணவை வணங்கி நல்லடி யேத்திநிற் பரவுதும் எல்லேம் பிரியற்கவெஞ் சுற்றாமொ டொருங்கே." இஃது ஆசிரிய சுரிதகம் அன்ன அணங்குடை யருந்தலை யாயிரம் விரித்தமை காரணமாகக் கூறலிற் காமங் கூறிற்று. அராகம் வந்தன வந்துழிக் காண்க. கொச்சகங்களும் வெள்ளையாதல் பெரும்பான்மை மேலிதற்குக் கூறுகின்ற வுறுப்புக்கள் வந்துழியுமொக்கும், முடுகியலுஞ் சொற்சீரடியும் வெள்ளடியோடு தொடர்ந்து வருதலின். "காமரு சுற்றமொ டோருங்குநின் னடியுறை யாமியைந் தொன்றுபு வைகலும் பொலிகென வேமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழிப் புலவநின் றாணிழ றொழுதே" (பரிபாடல். 1) இதுவுஞ் சுற்றத்தொடுபிரியாமை கூறலிற் காமங் கண்ணிற்று. "எரிமலர் சினைஇய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருஞெமர்ந் தமர்ந்த மார்பினை மார்பிற் றிருமணி பிறங்கும் பூணினை மால்வரை யெரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை சேவலங் கொடியோய்நின் வலவயி னிறுத்து மேவலுட் பணிந்தமை கூறும் நாவ லந்தண ரருமறைப் பொருளே" (பரிபாடல். 1) என ஆசிரியம் வந்தது. "நின்னொக்கும் புகழ்நிழலவை" (பரிபாடல். 1) இது வஞ்சித்தூக்கு. பிறவுமன்ன. செப்பிய என்றதனான் ,அராகமின்றி வருதலுங், கொச்சக மீற்றடி குறையாது வருதலும், அவ்வழி யசைச்சீராகி யிறுதலும், வெள்ளைச் சுரிதகத்தா னிறுதலுங் கொள்க. "அறவோ ருள்ளா ரருமறை காப்ப" (பரிபாடல் திரட்டு. 3) வென்னும் பரிபாடலுட் "செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை மறுமுறை யானு மியைக நெறிமாண்ட தண்வரல் வையை யெமக்கு" என வெள்ளைச் சுரிதகத்தா னிற்றது. (121) இதுவுமது 122. சொற்சீ ரடியும் முடுகிய லடியும் அப்பா நிலைமைக் குரிய வாகும். இதுவு மதற் குள்ளுறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) சொற்சீரடியு முடுகியலடியும் பரிபாடற் குள்ளுறுப்பாய் நிற்றற் குரியவாம் எ-று. அடியென்றதனான் முற்கூறியவடியொடு தொடர்ந்தல்லது தாமாக வாரா வென்றுணர்த்துக. சொற்சீரடி மேற்கூறுப. முடுகியலடியாவது, வெண்பாவொடு விராய்த்தொடர்ந் தொன்றாக நிற்கும். அராகமாவது, தாமே வேறு சில வடியாய் வரும். உரியவெனவே கலிக்கித்துணை யுரியவல்ல வென்றுணர்க. எனவே அராகவுறுப்புத் தேவபாணிக்கல்லது வாராதென்றுணர்க . (122) சொற்சீரடியின் இலக்கணம் 123. கட்டுரை வகையா னெண்ணொடு புணர்ந்தும் முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் ஒழியசை யாகியும் வழியசை புணர்ந்தும் சொற்சீர்த் திறுதல் சொற்சீர்க் கியல்பே. இது மேலெண்ணிய சொற்சீரடியாமா றுணர்த்துகின்றது. (இ-ள்.) கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும் - புனைந் துரை வகையாற் கூறுமாறுபோல் எண்ணொடு கூடியும், முற்றடி யின்றிக் குறைவுசீர்த்தாகியும் - தூக்குப்பட்டு முடியும் அடியின்றிக் குறை வாகிய சீரையுடைத்தாகியும், ஒழியசை யாகியும் - வேறோர் அசையொடு கூடாது ஒழிந்து நிற்பதோர் இயலசையாகியும், வழியசை புணர்ந்தும் - அவ்வாறன்றி அதனொடு பல அசை புணர்க்கப்பட்டு நின்றும், சொற்சீர்த்து இறுதல் சொற் சீர்க்கு இயல்பே - ஓரெழுத்தொருமொழி முதலிய சொற்க ளெல்லாந் தாமே சீர்த்தன்மைபெற ஓசை பெற்று முடிந்து நிற்றல் சொற்சீரடிக்கு இலக்கணமாம் எ-று. (எ-டு.) "வடவேங்கடந் தென்குமரி" (தொல். பாயிரம்) எனவும், "அ,இ, உ,எ,ஒ வென்னு மப்பா லைந்தும்" (எழுத். 3) எனவும் இவை யெண்ணொடு புணர்ந்தன. "கறையணி மிடற்றினவை கண்ணணி நுதலினவை பிறையணி சடையி னவை" எனத் தூக்குப்பட்டு முடியாமற் குறைந்தன. "ஒரூஉக் கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற" (கலி. 88) ஒரூஉவென நிரையசைதானே யொழியசையாயிற்று. ஆங்கெனவருந் தனிச்சொல் வழியசைப்பாற்படும். "நொந்து, நகுவனபோ னந்தின கொம்பு; இனைந்துள்ளி, யுகுவது போலுமென் னெஞ்சு; எள்ளித் தொகுபுட னாடுவ போலு மயில்; கையி லுகுவன போலும் வளை" (கலி . 33) இவை முச்சீரடியான் வந்தனவு நாற்சீரடியான் வந்தனவுமாய் நின்றவா றுணர்தற்கு "நகுவன" "உகுவது" "தொகுபுடன்" "உகுவன" எனத் தொடைச்சுவடுபடுத்துக் கூறவே யவற்றின் முன்னின்ற சொற்கள் வழியசை புணர்ந்த சொற்சீரடியாயவாறு காண்க. இவை யிடைநிலைப் பாட்டன்றிக் கொச்சகமாகலின் வரையறையின்றித் "தொகுபுட னாடுவ போலு மயில்" என நாற்சீரடியானும் வந்தன. இவை மேலெண்ணவும்படும். இவை கலிக்கண் வருங்கா லொத்தாழிசையினும் உறழ்கலியினும் முடுகியல் வாராமையும், அவற்றுட் சொற்சீரடி வருங்காற் றனிச் சொல்லாயல்லது வாராமையுங் கொள்க. "சீர்கூ னாத னேரடிக் குரித்து" (செய். 49) என்றமையின் ஒழியசை கூனாக வமையும். சீர்கூனாகக் கூறியவை யீண்டுச் சொற்சீரடியானடங்குமாறு முணர்க. இவை பரிபாடற்கே யுரியவென்றாரேனும் இயல்பென்றதனானே யாண்டும் வருதலும் இலக்கணமென்பது பெற்றாம். அது, "பா அ வண்ணஞ், சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்" (செய். 215) என்பதனானு முணர்க. முடுகியலடி முற்காட்டினாம். அங்கதச் செய்யுளின் வகை 124. அங்கதந் தானே யரிறபத் தெரியிற் செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே. இது முறையானே அங்கதங் கூறுகின்றது. (இ-ள்.) வசைச் செய்யுளைக் குற்றமற ஆராயிற் செம்பொருளங்கத மும், பழிகரப்பங்கதமும் என அவ்விருவகையினையு டைத்து எ-று. அவை புகழ்போன்று வசையாதலும், வசைபோன்று புகழாதலும் படவருமென்றற்கு அரிறப என்றார். "நூற்றுவர் தலைவனைக், குறங்கறுத்திடுவான்" (கலி. 52) என்றது, புகழ்போன்று வசை; மாயோன்கூற வுணர்தலின் இது அங்கதத்தின்பாற்படும். "கொடைமடம் படுதலல்லது" (புறம் . 142) என்பது வசைபோன்று புகழ். இது செம்பொருளின் பாற்படும். இதனானே அங்கதமாகாதென்பது கருத்தாயிற்று. (124) செம்பொருளங்கதம் 125. செம்பொரு ளாவன வசையெனப் படுமே. இது முறையே செம்பொருளங்கதங் கூறுகின்றது. (இ-ள்.) வாய்கரவாது கூறுப்படும் வசை செம்பொருள்வசை யெனப்படும் எ-று. அவை வெண்பாவே யன்றிச் சிறுபான்மை மற்றைய பாக்களானும் வருமென் றுணர்க. (எ-டு.) "இருடீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே குருடேயு மன்றுநின் குற்ற - மருடேயும் பாட்டு முரையும் பயிலா தனவிரண் டோட்டைச் செவியு முள" இஃது ஏழிற்கோவை ஔவையார் பாடியது. "எம்மிகழ் வோரவர் தம்மிகழ் வோரே எம்மிக ழாரவர் தம்மிக ழாரே தம்புக ழிகழ்வா ரெம்புக ழிகழ்வோர் பாரி யோரி நள்ளி யெழினியாய் பேகன் பெருந்தோண் மலைய னென்றிவ் வெழுவரு ளொருவனு மல்லை யதனா னின்னை நோவ தெவனோ அட்டார்க் குதவாக் கட்டி போல நீயு முளையே நின்னன் னோர்க்கே யானு முளனே தீப்பா லோர்க்கே குருகினும் வெளியோய் தேஎத்துப் பருகுபா லன்னவென் சொல்லுகுத் தேனே" கலிப்பாட்டான் வருவன வசைக் கூத்தினுட் காண்க. "அறச்சுவையிலன் வையெயிற்றினன் மயிர்மெய்யான் மாசுடையினன் பொய்வாயாற் புகழ்மேவலன் மைகூர்ந்த மயலறிவினன் மேவருஞ் சிறப்பி னஞ்சி யாவரும் வெரூஉ மாலிக் கோவே" இது வஞ்சிப்பாட்டு. (125) பழிகரப்பு அங்கதம் 126. மொழி கரந்து மொழியினது பழிகரப் பாகும். இது பழிகரப்பங்கதங் கூறுகின்றது. (இ-ள்.) வசைப்பொருளினைச் செம்பொருள் படாம லிசைப்பது பழிகரப் பங்கதமாம் எ-று. "ஈயென விரத்தல்"(புறம். 204) என்னும் பாட்டினுள் "தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கட,லுண்ணா ராகுவர் நீர்வேட் டோரே" என்றவழி நின் செல்வங் கடற்போற் பெரிதேனும் பிறர்க்கினிதாய் நுகரப்படாதென வசையைச் செம்பொருளாகாமற் கூறியவாறு காண்க. புறத்தினுட் பலவு மிவ்வாறே வருவன காண்க. வெண்பாவில் வருவன வந்துழிக் காண்க. (126) முற்கூறிய இருவகை அங்கதமும் ஓரொன்று இரண்டு வகைப்படும் எனல் 127. செய்யுட் டாமே யிரண்டென மொழிப. இது மேற்கூறிய இரண்டுமே இவ்வகையானும் பகுக்கப்படு மென்கின்றது. (இ-ள்.) முற்கூறிய செய்யுட்டாம் ஒரோவொன்றி ரண்டாம் எ. று அவை செம்பொருட் செவியுறையங்கதம், பழிகரப்புச் செவியுறை யங்கதம், செம்பொருளங்கதம், பழிகரப்பங்கதம் என நான்கு கூறுபடும் எ-று. பாய்த்துள், விக்குள் என்றாற்போலச் செய்யுளென்பதுந் தொழிற் பெயர். (127) இருவகைச் செவியுறை அங்கதங்களின் இயல்பு 128. துகளொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயிற் செவியுறைச் செய்யு ளதுவென மொழிப. இது முற்கூறிய இருவகைச் செவியுறையுங் கூறுகின்றது. (இ-ள்.) அரசன் தனக்குரிய அரசியலிற் றப்பிய நிலையைக் கூறுங் கூற்றோடும், அவ்வறம் பொருளின்பம் பயக்கக் கூறுங் கூற்றோடும் ஒரு செய்யுட் கூடி வந்ததாயின் அது செம்பொருட்செவியுறையங்கதம், பழிகரப்புச் செவியுறையங்கதம் எனப் பெயர் கூறப்படும் எ-று. துகளாவது படை குடி கூழமைச்சு நட்பு அரணென்னுமிவற்றைப் பாதுகாவா திருத்தல். (எ-டு.) " நளியிரு முந்நீ ரேணி யாக வளியிடை வழங்கா வானஞ் சூடிய மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர் முரசுமுழங்கு தானை மூவ ருள்ளு மரசெனப் படுவது நினதே பெரும வலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினு மிலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினு மந்தண் காவிரி வந்துகவர் பூட்டத் தோடுகொள் வேலின் றோற்றம் போல வாடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது நினதே யத்தை, யாங்க நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே நினவ கூறுவ லெனவ கேண்மதி யறம்புரிந் தன்ன செங்கோ னாட்டத்து முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண் டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றாரே ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக்கொண் டன்றோ வன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக் களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை யூன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே மாரி பொய்ப்பினும் வாரி குன்றினு மியற்கை யல்லது செயற்கையிற் றோன்றினுங் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞால மதுநற் கறிந்தனை யாயி னீயு நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயினின் னடிபுறந் தருகுவ ரடங்கா தோரே" (புறம் . 35) இது இஞ்ஞால மியற்கையல்லது தமது செயற்கையிற்றோன்றினுங் காவலனைப் பழிக்கும்; இதனையுமுணராதே நீ வேற்றரசர்க்குப் பெறுதற் கரிதாகிய சிறந்த நாட்டினை நினதாகப் பெற்று வைத்தும் அதனை யழிக்கின்றது நினக்கரசியலன்றென்று அவனாட்டை யழித்தமை கூறுதலின், துகளொடு புணர்வும், குடிபுறந்தரின் நினக்குச் செல்வ முதலிய சிறத்தலிற் பகைவர் நின்னை வணங்குவரெனப் பொருளொடு புணர்வும் வெளிப்படக் கூறலிற் செம்பொருட் செவியுறையங்கதமாயிற்று. "வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி நெடியவென் னாது சுரம்பல கடந்து வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி யோம்பா துண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே திறப்பட, நண்ணார் நாண வண்ணாந் தேகி யாங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ் மண்ணாள் செல்வ மெய்திய நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே" (புறம் 47) இது சோழன் நலங்கிள்ளியுழைநின்று உறையூர்புக்க இளந்தத்த னென்னும் புலவனைக் காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்றுவந்தா னென்று கொல்லப் புக்குழி யவ்வரசற்கு வருகின்ற துகளினைக் கோவூர் கிழார் புலப்படாமற் செய்யுள் செய்து தமது சொல்லை யரசன் கேட்டஞ் சினானென்னும் பொருளை நிறுத்தலிற் பழிகரப்புச் செவியுறை யங்கதமாயிற்று. இவ்வாறே புறத்தினுட் செவியுறைச் செய்யுட்கள் பலவும் வருவனவுள. அவ்வேறுபா டுணர்ந்து கொள்க. புகழொடும் பொருளொடும் என்று பாடமோதின் மேல் "வசை யொடும் நகையொடும்" (செய். 129) என்பது பொருந்தாதாம். (128) ஒழிந்த அங்கதச் செய்யுட்களின் இயல்பு 129. வசையொடு நகையொடும் புணர்ந்தன் றாயின் அங்கதச் செய்யு ளென்மனார் புலவர். இஃது ஒழிந்த அங்கதச் செய்யு ளிருவகைத் தென்கின்றது. (இ-ள்.) வசைப்பொருளொடும் அதனாற் பிறந்த நகைப்பொரு ளொடும் ஒரு செய்யுட் கூடிவருமாயின் அதனைச் செம்பொருளங்கதம் பழிகரப்பங்கதம் எனப் பெயர் கூறப்படும் எ-று. அவை இலக்கியச் செய்யுளுட் காண்க. முன்னர்ச் செம்பொருள் வசைக்குக் காட்டிய உதாரணங்களினும் இவ்வேறுபாடுய்த் துணர்க. (129) கலிப்பாவின் வகைகள் 130. ஒத்தா ழிசைக்கலி கலிவெண் பாட்டே கொச்சக முறழொடு கலிநால் வகைத்தே. இது கலிப்பாவென்னும் உறுப்பினை இத்துணைப் பகுதியான் வருமென வகுத்து வருஞ் செய்யுள் பற்றிய விரிவு கூறுகின்றது. (இ-ள்.) ஒத்தாழிசைக்கலியும், கலிவெண்பாவும் , கொச்சகக் கலியும், உறழ்கலியுமெனக் கலி நான்கு கூறுபடும் எ-று. ஒத்தாழிசையென்னு முறுப்புடையது ஒத்தாழிசைச் செய்யுள். அது ஒத்தாழிசையென வினைத்தொகையாம். தாழிசையென்றது கட்டளைக் கலிக்குத் தரவு மிகத் துள்ளாதுவரத் தாழிசை யதனிற் றாழம் பட்டு வருதலிற் பெற்ற பெயர். இங்ஙனம் வருவது கட்டளைக் கலியே. இப்பெயர் பன்மையாற் பெற்ற பெயர்., இனி ஒழிந்தவுறுப்பிற் றாழிசை சிறத்தலிற் றலைமையாற் பெற்ற பெயருமாம். இனிச் சீர்வகையான் வருங்கலிக்குத் தரவு மிகத் துள்ளிவரும்; இதற்குத் தாழிசையோசை தாழம்பட்டே வருதலும், சிறுபான்மை நேரீற்றியற்சீர் வருதலுங் கொள்க. எனவே கொச்சகத்திற்காயிற் றாழிசை, "நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே" (கலி. 7) எனத் தாழம்பட்ட வோசையின்றி வரும். இனிக் கலிவெண்பாட்டுக் கலியாகிய வெண்பாட்டு; இது முன்மொழி நிலையல். கொச்சகம் உறுப்பினாற் பெற்ற பெயர். உறழ்கலி பொருளினாற் பெற்ற பெயர். தம்மினொத்துவருதலானும் சிறப்புடைமையானும் ஒத்தாழிசை முற் கூறிற்று. நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசைக்கலி அறுபத்தெட்டு வந்தது. இதற்குங் கொச்சகத்திற்கு மிடையே கலிவெண்பாக் கூறிற்று, அதுவும் இவைபோல வுறுப்புக்களுடைத்தாயும் வருமென்றற்கு. தரவும் போக்குஞ் சிறுபான்மையின்றியும் வருதலிற் கொச்சக மதன்பின்ன தாயிற்று. அடக்கியலின்றியும், அடிநிமிர்ந்தும், ஒழுகிசையின்றியும் வருதலின் அதன்பின்னது உறழ்கலியாயிற்று. பரிபாடலுங் கலியாகாவோவெனின் கலியும் பரிபாடலுமென வேறாக இரண்டு தொகை வழங்குதலானும், உறுப்பின் வேறுபாட்டானும் வேறென்றுணர்க. (130) ஒத்தாழிசைக் கலியின் வகைகள் 131. ஒத்தா ழிசைக்கலி யிருவகைத் தாகும். இது முறையே ஒத்தாழிசைப் பகுதி கூறுகின்றது. இ-ள். (131) அகநிலை ஒத்தாழிசைக் கலியின் உறுப்புக்கள் 132. இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென நடைபயின் றொழுகு மொன்றென மொழிப. (இ-ள்.) இது மேற்கூறிய ஒத்தாழிசை யிரண்டனுள் ஒன்று தாழிசையுந் தரவுஞ் சுரிதகமும் தனிச்சொல்லும் என நான்குறுப்பாகப் பயின்று வருமென்று கூறுவர் புலவர் எ-று. அவ்வாறு பயின்று வருமெனவே இத்துணை யேனையொன்றும் பயிலாது வருமென்பதாம். செய்யுளிடையே நிற்றலானும், தாழம்பட்டவோசையின்றியும் வருவனவுங் கோடற்கும் தாழிசையென்னாது பொதுவாக இடைநிலை யென்றார். அவைதாமே பாட்டாயும் வருதலும், அங்ஙனம் வருங்கா லொன்றும் பலவுமாயும் வருதலுங் கோடற்குப் பாட்டென்றார். இதனைத் தரவிற்கு முற்கூறினார் ஒத்தாழிசைக்கலியென இதனாற் பெயர்பெறுதலின். இவ்வேறுபட்ட உதாரணங்கள் மேற்காட்டுதும். முகத்துத் தரப்படுதலிற் றரவு; உடம்புந் தலையும் வேறுபாடாக வழங்கும் வகையான் உடம்பிற்குக் கழுத்துப்போல் இது முன்னிற்றலின் எருத்தென்று பெயர் கூறுப. போக்கிற்கிலக்கணம் மேற்கூறுதும். முன்னும் பின்னும் பிறவுறுப்புக்களை யடையநிற்றலின் அடை நிலை. அது தனி நின்றுஞ் சீராகலிற் றனிச் சொல் எனவும் படும். எனவே தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் முறையே வருதல் மரபாம். சிறுபான்மை தனிச்சொலின்றியும் வருதலிற் றனிச் சொல்லை யீற்றிற் கூறினார். (132) தரவிற்குரிய அடியளவு 133. தரவே தானும் நாலடி யிழிபாய் ஆறி ரண்டுயர் பேறவும் பெறுமே. இது தரவிற்கு அளவு கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய தரவிற்கு அளவுதான் நான்கடி முதலாகப் பன்னிரண்டடிகாறும் வரப்பெறும் எ-று. எனவே ஒன்பது நிலம்பெற்றதாம். உம்மையாற் சிறுபான்மை பன்னிரண்டடியி னுயரவும் பெறும். அது "நீரார் செறுவி னெய்தலொடு நீடிய நேரித ழாம்ப னிரையிதழ் கொய்ம்மார் சீரார் சேயிழை யொலிப்ப வோடு மோரை மகளி ரோதை வெரீஇ யார லார்கை யஞ்சிறைத் தொழுதி யுயர்ந்த பொங்க ருயர்மர மேறி யமர்க்கண் மகளி ரலப்பிய விந்நோய் தமர்க்குரைப் பனபோற் பல்குரல் பயிற்று முயர்ந்த போர்வி னொலிநல் லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்ய னாயின் வதுவை நாளால் வைகலு மஃதியா னோவேன் றோழி நோவாய் நீயென வெற்பார்த் துறுவோய் கேளினித் தெற்றென" (கலி. 75) இது பதின்மூன்றடியான் வந்தது. (133) தாழிசைக்குரிய அடியளவு 134. இடைநிலைப் பாட்டே தரவகப் பட்ட மரபின தென்ப. இது தாழிசைக்கு அளவு கூறுகின்றது. (இ-ள்.) தாழிசையாவது தரவிற்சுருங்கின முறைமையினை யுடையது எ-று. அகப்படுதலென்பது அகம், புறமென் றிருகூறு செய்தவழி முற்கூற்றினுடம்படுதல். முன் காலமுன்னாம். எனவே ஆறடி முதல் இரண்டடி காறும் வரப்பெறுமென்று கொள்க. மரபினது என்றதனான் நான்கடித்தரவிற்கு நான்கடித் தாழிசை வருதலுங் கொள்க. இவற்றிற்குதாரணம் மேற்காட்டுதும், இதனானே பன்னீரடியிகந்த "நீரார் செறுவின்" (கலி. 75) என்ற தரவிற்கும் "எல்லி வருதி யெவன்குறித் தனையெனச் சொல்லா திருப்பே னாயி னொல்லென விரியுளைக் கலிமான் றேரொடு வந்த விருந்தெதிர் கோடலின் மறப்ப லென்றும்" (கலி. 75) எனத் தரவகப்பட்ட தாழிசை வருதல் கொள்க. (134) தனிச் சொற்குரிய இடம் 135. அடைநிலைக் கிளவி தாழிசைப் பின்னர் நடைநவின் றொழுகு மாங்கென் கிளவி. இது தனிச்சொற் கிடங் கூறுகின்றது. (இ-ள்.) ஆங்கென்னு மசைச்சொல்லாய் அடைநிலையாகிய சொல் தாழிசையின்பின்னே பயின்று வரும் எ-று. ஆங்கென்னுமசைச்சொல் பயிலுமெனவே அல்லாதன பொருள் பெறவருதல் பெற்றாம். ஆங்கென ஏழனுருபா யிடப்பொருளுணர்த்திற் றேல் யாண்டும் பொருளுணர்த்தல் வேண்டும். அங்ஙனம் நில்லாமையின் அசைநிலையாயிற்று. உதாரணம் மேற்காட்டுதும். (135) சுரிதகத்தின் இலக்கணம் 136. போக்கியல் வகையே வைப்பெனப் படுமே இஃது ஒழிந்த சுரிதகம் உணர்த்திற்று. (இ-ள்.) போக்கின திலக்கணப் பகுதி வைப்பென்று கூறப்படும் எ-று. என்றது போக்குதலும் வைத்தலுமென்னும் இரண்டிலக்கண முடைத்து எ-று. செய்யுள் பிறிதொன்றினை யவாவாமற் கடைபோகச் செய்தலிற் போக்கெனவும், முற்கூறிய தரவு தாழிசைகளிற் பொருள்களைக் கொண்டு தொகுத்து வைத்தலின் வைப்பெனவும் படும் என்றவாறு. இதனை அடக்கியலென்றும், வாரமென்றும் மேற்கூறுவார்; ஆண்டப்பொருள் களுமுணர்க. (136) சுரிதகத்திற்குரிய அடியளவும் அதன் பொருள் வைப்பும் 137. தரவிய லொத்து மதனகப் படுமே புரைதீ ரிறுதி நிலையுரைத் தன்றே. இதுவுஞ் சுரிதகத்தெல்லை கூறுகின்றது. (இ-ள்.) சிறுபான்மை தரவுகளோடொத்தும், உம்மையான் ஏறியும் வருமாயினும், பெரும்பான்மை தரவின்பாகம் பெறுதலை யிலக்கணமாக வுடைத்தாய் வரும். அங்ஙனம் வருமிடத்துப் பெரும்பான்மையும் இடைநிலைப்பாட்டின் பொருளை முடிவுகாட்டியே நிற்கும் எ-று. இயலென்றதனாற் றரவின் பொருள்கொண்டு முடியவும் பெறு மென்று கொள்க. சிறுமைக் கெல்லை கூறாமையின் ஆசிரியத்திற்குக் கூறிய மூன்றடியே சிறுமையாம். அகப்படுமெனவே தரவின் பாகமாகிய ஆறடியே உயர்விற்கெல்லையென்பதூஉம், இழிவிற் கெல்லை கூறாமையிற் பன்னீரடித்தரவிற்காயினு மூன்றடியான் வருமென்பதூஉம், அடிவரை யிறந்த தரவிற்கு மிவ்வாறே வருமென்பதூஉங் கொள்க. வெள்ளைச் சுரிதகத்திற்கும் இஃதொக்கும். ஒத்து மென்றலின் ஆசிரியம் மண்டிலமாய் வருதலுங் கொள்க. இறுதி யென்றது இடைநிலைப்பாட்டை. (எ-டு.) தரவு மிகத்துள்ளாமற் றாழிசை தாழம்பட்டுவந்த கட்டளைக் கலி வந்துழிக் காண்க. "வலிமுன்பின் வல்லென்ற யாக்கைப் புலிநோக்கிற் சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர் அற்றம்பார்த் தல்குங் கடுங்கண் மறவர் தாங் கொள்ளும் பொருளில ராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவலிற் புள்ளும் வழங்காப் புலம்புகொ ளாரிடை வெள்வேல் வலத்திர் பொருடரல் வேட்கையி னுள்ளினி ரென்ப தறிந்தன ளென்றோழி காழ்விரி கவையார மீவரு மிளமுலை போழ்திடைப் படாஅமை முயங்கியு மமையாரென் றாழ்கதுப் பணிகுவர் காதலர் மற்றவர் சூழ்வகை யெவன்கொ லறியே னென்னும் முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீநீரைக் கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மமையாரென் னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவ ருள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்; நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென் னொன்ணுதல் நீவுவர் காதலர் மற்றவ ரெண்ணுத லெவன்கொ லறியே னென்னும் என வாங்கு கழிபெரு நல்கலொன் றுடைத்தென வென்றோழி யழிவொடு கலங்கிய வெவ்வத்த ளொருநாணீர் பொழுதிடைப் படநீப்பின் வாழ்வாளோ வொழிகினிப் பெருமநின் பொருட்பிணிச் செலவே" (கலி. 4) இது மிகவுந் துள்ளிவந்த எட்டடித்தரவுந் தாழம்பட்ட வோசை பெற்றுத் தரவகப்பட்ட மரபினவாகிய நான்கடித்தாழிசை மூன்றும் ஆங்கென்னு மசைநிலைத் தனிச் சொல்லுந் தரவின் பாகம்பெற்று நான்கடியா யிறுதிநிலையுரைத்த சுரிதகமும் பெற்றுத் தரவினுந் தாழிசையினு நேரீற்றியற்சீரும் பெற்று வந்த ஒத்தாழிசைக்கலி. நேரீற்றியற்சீர் கட்டளைக்கு வாராமை யுணர்க. "ஞாலமூன் றடித்தாய முதல்வற்கு முதுமுறைப் பாலன்ன மேனியா னணிபெறத் தைஇய நீலநீ ருடைபோலத் தகைபெற்ற வெண்டிரை வாலெக்கர் வாய்சூழும் வயங்குநீர்த் தண்சேர்ப்ப; ஊரல ரெடுத்தரற்ற வுள்ளாய்நீ துறத்தலிற் கூருந்தன் னெவ்வநோ யென்னையு மறைத்தாள்மன் காரிகை பெற்றதன் கவின்வாடக் கலுழ்பாங்கே பீரல ரணிகொண்ட பிறைநுத லல்லாக்கால்; இணைபிவ்வூ ரலர்தூற்ற எய்யாய்நீ துறத்தலிற் புணையில்லா வெவ்வநோ யென்னையு மறைத்தாள்மன் துணையாருட் டகைபெற்ற தொன்னல மிழந்தினி யணிவனப் பிழிந்தத னணைமென்றோ ளல்லாக்கால்; இன்றிவ்வூ ரலர்தூற்ற வெய்யாய்நீ துறத்தலி னின்றதன் னெவ்வநோ யென்னையு மறைத்தாண்மன் வென்றவே னுதியேய்க்கும் விறனல னிழந்தினி நின்றுநீ ருகக்கலுழு நெடும்பெருங்க ணல்லாக்கால், அதனால், பிரிவில்லாய் போலநீ தெய்வத்திற் றெளித்தசொல் லரிதென்னா டுணிந்தவ ளாய்நலம் பெயர்தரப் புரியுளை நெடுமான்றேர் கடவுபு விரிதண்டார் வியன்மார்ப விரைகநின் செலவே" (கலி. 124) இது நாலடி யிழிபாகிய நான்கடித்தரவிற்கு மரபென்ற இலேசாற் கொண்ட நான்கடித் தாழிசை தம்முள் அளவொத்து வந்து, நடைநவிலாது பொருள்பெற்ற தனிச்சொல்லும் பெற்றுத் தரவியலொத்து இறுதிநிலை யுரைத்த சுரிதகமும் பெற்ற வொத்தாழிசைக் கலிப்பா. "பாஅ லஞ்செவிப் பணைத்தாண் மாநிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறதர் பட்ட வாறுமயங் கருஞ்சுர மிறந்துநீர் செய்யும் பொருளினும் யாமுமக்குச் சிறந்தன மாத லறிந்தனி ராயி னீளிரு முந்நீர் வளிகலன் வௌவலி னாள்வினைக் கழிந்தோர் போற லல்லதைக் கேள்பெருந் தகையோ டெவன்பல மொழிகுவம் நாளுங் கோண்மீன் றகைத்தலுந் தகைமே; கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின் புல்லென்ற களம்போலப் புலம்புகொண் டமைவாளோ; ஆள்பவர் கலக்குற வலைபெற்ற நாடுபோற் பாழ்பட்ட முகத்தோடு பைதல்கொண் டமைவாளோ; ஓரிரா வைகலுட் டாமரைப் பொய்கையு ணீர்நீத்த மலர்போல நீநீப்பின் வாழ்வாளோ;" என வாங்கு, "பொய்ந்நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட், டெந்நாளோ நெடுந்தகாய்நீ செல்வ தந்நாள்கொண் டிறக்குமிவ ளரும்பெற லுயிரே" (கலி. 5) இது சிறுமைக் கெல்லை கூறிய ஈரடித்தாழிசையும், ஆசிரியத்திற்குக் கூறிய சிறுமையான் வந்த மூன்றடிச் சுரிதகமும் பெற்றது. "இமயவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தண னுமையமர்ந் துயர்மலை யிருந்தன னாக வையிரு தலையி னரக்கர் கோமான் றொடிபொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை யெடுக்கல் செல்லா துழப்பவன் போல வுறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை நீடிரு விடரகஞ் சிலம்பக் கூஉய்த்தன் கோடுபுய்க் கல்லா துழக்கு நாடகேள்" (கலி. 38) என்ற விதன் உள்ளுறையுவமத்தாற் றலைவி விழுமங் கூறியதனையு முடன்கொண்டு, சுரிதகத்து, "நின்னுறு விழுமங் கூறக்கேட்டு வருமே தோழி நன்மலை நாடன் வேங்கை விரிவிட நோக்கி வீங்கிறைப் பணைத்தோள் வரைந்தனன் கொளற்கே" (கலி. 38) எனக் கூறுதலின் இயலென்ற இலேசாற் றரவின் பொருள் கொண்டிற்ற சுரிதகம் வந்தது. "பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர வாடெழி லழிவஞ்சா தகன்றவர் திறத்தினி நாடுங்கா னினைப்பதொன் றுடையேன்மன் னதுவுந்தான்" (கலி. 16) என்னும் நான்கடித் தரவிற்குச் "செய்பொருட் சிறப்பெண்ணிச் செல்வார்மாட் டினையன தெய்வத்துத் திறனோக்கித் தெருமர றேமொழி வறனோடின் வையத்து வான் றருங் கற்பினாள் நிறனோடிப் பசப்பூர்த லுண்டென அறனோடி விலங்கின்றவ ராள்வினைத் திறத்தே" (கலி. 16) எனச் சுரிதகம் ஐந்தடியான் மிக்கு வந்தது. இது ஒத்தும் என்ற வும்மையாற் கொண்டது. "அரிதே தோழிநா ணிறுப்பாமென் றுணர்தல் பெரிதே காமமென் னுயிர்தவச் சிறிதே பலவே யாமம் பையுளு முடைய சிலவே யெம்மோ டுசாவு மன்றி லழலவிர் வயங்கிழை யொலிப்ப வுலமந் தெழிலெஞ்சு மயிலி னடுங்கிச் சேக்கையு ளழலா கின்றவர் நக்கதன் பயனே மெல்லிய நெஞ்சு பையுள்கூ ரத்தஞ் சொல்லினா னெய்தமை யல்ல தவர் நம்மை வல்லவன் றைஇய வாக்கமை கடுவிசை வில்லினா னெய்தலோ விலர்ம னாயிழை வில்லினுங் கடிதவர் சொல்லினுட் பிறந்தநோய்; நகைமுதலாக நட்பினு ளெழுந்த தகைமையி னலித லல்ல தவர்நம்மை வகைமையி னெழுந்த தொன்முரண் முதலாப் பகைமையி னலிதலோ விலர்ம னாயிழை பகைமையிற் கடிதவர் தகைமையி னலியுநோய்; நீயலே னென்றென்னை யன்பினிற் பிணித்துத்தஞ் சாயலிற் சுடுத லல்ல தவர்நம்மைப் பாயிரு ணீக்கு நோய்தபு நெடுஞ்சுடர்த் தீயினாற் சுடுவதோ விலர்ம னாயிழை தீயினுங் கடிதவர் சாயலிற் கனலுநோய்; ஆங்கு, அன்னர் காதல ராக வவர்நமக் கின்னுயிர் போத்தரு மருத்துவ ராயின் யாங்கா வதுகொ றோழி யெனையதூஉந் தாங்குதல் வலித்தன் றாயி னீங்கரி துற்றன்றவ ருறீஇய நோயே" (கலி. 137) இது இடைநிலைப்பாட்டென்றதனாற் றாழம்பட்ட வோசையின் றிவந்த இடை நிலைப்பாட் டைந்தடியான் வந்தது. ஆறடியான் வருவன வந்தவழிக் காண்க. "இன்னரிச் சிலம்பிற் சின்மொழி யைம்பாற் பின்னொடு கெழீஇய தடவர வல்குல் நுண்வரி வாட வாராது விடுவாய் தண்ணந் துறைவ தகாஅய் காணீ" (கலி. 125) இதுவுந் தாழிசையல்லா விடைநிலைப்பாட்டு. "காணாமை யிருள்பரப்பிக் கையற்ற கங்குலான் மாணாநோய் செய்தான்கட் சென்றாய்மற் றவனைநீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே" (கலி. 123) இது தாழிசையெனவும், இடைநிலைப்பாட்டெனவும்படும். இடைநிலைப் பாட்டாய்த் தனியே வருவன கொச்சகமென் றுணர்க. வெள்ளைச் சுரிதகத் தான்முடிவனவும் வந்துழிக் காண்க. புரைதீரென்றதனாற் றாழிசைப்பொரு ளேயன்றி அவற்றொடு போக்கியற்பொருளுங்கொண்டு புடைபடாது வருவனவுங் கொள்க. அது "அரைசினு நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ" (கலி. 8) என முடித்தலின் "நச்சல் கூடாது பெரும விச்செல வொழிதல் வேண்டுவல் சூழிற் பழியின்று" (கலி. 8) எனத் தாழிசைப்பொருளைக்கொண்டு பின்பு "மன்னவன் புறந்தர வருவிருந் தோம்பி நன்னகர் விழையக் கூடி னின்னுறல் வியன்மார்ப வதுமனும் பொருளே" (கலி. 8) எனப் போக்கியற் பொருளையும் கொண்டிற்றது. பிறவுமன்ன. (137) ஏனைய ஒத்தாழிசைக் கலியும் அதற்குரிய பொருண்மையும் 138. ஏனை யொன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே. இஃது ஒழிந்த ஒத்தாழிசை கூறுகின்றது. (இ-ள்.) ஒழிந்த வொத்தாழிசை முன்னிலை யிடமாகத் தேவரைப் பராவும் பொருண்மைத்து எ-று. எனவே இது அகநிலைச் செய்யுளாகாதென்பதூஉம், முன்னைய தகநிலைச் செய்யுளாமென்பதூஉம் பெறுதும், முன்னிலைக்கண் வருமெனவே முன் நாற்பாவிற்கு முரித்தென்ற வாழ்த்தியல் நான்கு கலிக்கு மெய்திற்றேனும் அவை தேவபாணி யாகாவாயின. அங்ஙனம் பராவினும் படர்க்கையாய வழிப் புறநிலை வாழ்த்தேயாம்; பாட்டுடைத் தலைவனைக் கூட்டிக்கூறினு மென்பது பெறுதும். எனவே பாட்டுடைத் தலைவனைக் கூட்டினுங் கூட்டாவிடினுந் தேவர்ப் பராயிற்றேயாம்; முன்னிலை யென்பதும் பெற்றாம். கலிப்பாப் புலனெறி வழக்கேயன்றிச் சிறுபான்மை கடவுட்பராஅய பொருளானும் வருமென்றற் கிதனைப் பிற்கூறினார். தெய்வந் தானே நின்னை யான் காப்பேனெனக் கூறும் செய்தி உலக வழக்கமாகா தென் றுணர்க. (138) மேற்கூறிய கலியும் இருவகைப்படும் எனல் 139. அதுவே, வண்ணக மொருபோ கெனவிரு வகைத்தே. இஃது ஏனையொன் றென்றபெயர்த்தாழிசை, வண்ணகவொத் தாழிசை யெனவும், ஒருபோகெனவு மிரண்டாம் எ-று. இதன் பயன் இவற்றுள் ஒரு போகு ஒத்தாழிசையெனப் பெயர் கூறப் பெறாதென்பதாம். அது அகநிலை யொத்தாழிசையை முற்கூறிப் பின் சிறுபான்மை தோன்ற ஏனையொன்றெனவுங் கூறிப் பின்னரு முற்கூறிய வொத்தாழிசையைச் சேர வண்ணகத்தை வைத்துப் பின் ஒரு போகென வேறுபட வைத்ததனானும், அதனிலக்கணங் கூறுகின்ற "எருத்தே கொச்சகம்" (செய். 153) என்னுஞ் சூத்திரத்துத் தாழிசை யுறுப்புப் பெறு மெனக் கூறாமையானு முணர்க. இக்காலத்தார் ஒருபோகினையும் ஒத்தாழிசையென்னுந் தாழிசை பெய்து காட்டுவர்; அது தொல்காப்பியனார் கருத்தன்மையுணர்க. (139) வண்ணக ஒத்தாழிசைக் கலியின் உறுப்புக்கள் 140. வண்ணகந் தானே, தரவே தாழிசை யெண்ணே வாரமென்று அந்நால் வகையிற் றோன்று மென்ப. இது முறையானே வண்ணகங் கூறுகின்றது. (இ-ள்.) வண்ணகவொத்தாழிசைதான் தரவுந் தாழிசையும் எண்ணுறுப்புஞ் சுரிதகமுமென் றெண்ணிய நான்கு முறைமையாற் றோன்றும் எ-று. தனிச்சொல்லையும் அதிகாரத்தாற்கொள்க. தரவினாற் றெய்வத்தை முன்னிலையாக நிறுத்தித் தாழிசையாற் றெய்வத்தை வண்ணித்துப் புகழ்தலின் வண்ணகமாயிற்று. ஒழிந்த வுறுப்பான் வண்ணிப்பினும் அதற்குச் சிறந்தவுறுப் பிதுவேயாம்; எனவே அகநிலைச் செய்யுளுட் டாழிசை வண்ணித்து வாராதாயிற்று. எண்ணுறுப்பு மேற்கூறுப. உதாரணமும் மேற்காட்டுதும். அவ்வுறுப்பு நீர்த்திரைபோன் முறையே சுருங்கிவருதலி னதனை யம்போதரங் வொத்தாழிசை யென்றும், வண்ண மென்றதனை அராக வுறுப்பாக்கி யவ்வுறுப்புடையது வண்ணவொத்தாழிசை யென்றுங் கூறுவாருமுளர். இது பின்னுள்ளோர் கூறிய நூற்கெல்லா முதனூலாதலின், தொல்காப்பியனாரை மாறுபடுதல் மரபன்றென்க. (140) வண்ணக ஒத்தாழிசைத் தரவிற்குரிய அடியளவு கூறல் 141. தரவே தானும், நான்கு மாறு மெட்டு மென்ற நேரடி பற்றிய நிலைமைத் தாகும். இஃது ஏனையொன்றற்குத் தரவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தேவபாணிக்காயின் தரவுதானும் நான்குமுதற் பன்னிரண் டடியிறுதியாகவாராது; எட்டும் ஆறும் நான்கு மென்ற சமநிலையைப் பற்றிய நிலைமைத்தாய் வரும் எ-று. இதனாற் றலையளவு, இடையளவு, கடையளவுகள் கூறியவாறு. ஒழிந்த உறுப்பிற்கு மிவைகொள்க. நேரடிபற்றிய வென்றதற்கு அளவடியென்ப தீண்டுக் கூறவேண்டா மையிற் சமநிலையானன்றி வியநிலையான்வாராதென்பதே பொரு ளாயிற்று. (141) வண்ணகத்திற்கு ஒத்தாழிசை இவ்வாறு வரும் எனல் 142. ஒத்துமூன் றாகு மொத்தா ழிசையே. இது தாழிசை கூறுகின்றது. (இ-ள்.) பொருளும் அளவுந் தம்முளொத்து மூன்றாய் வருந் தேவபாணிக்கண் வருந் தாழிசை எ-று. இவை பொருளொக்குமெனவே அகநிலையொத்தாழிசைக்கண் வருந் தாழிசை சிறுபான்மை பொருளொவ்வாதும் வருதல் பெற்றாம். (எ-டு.) "கல்லெனக் கவின்பெற்ற" (கலி.5) என்னுந்தாழிசையை இடப்பொருளோடு உவமைகூறி "ஓரிரா வைகலுள்" (கலி. 5) என்னுந் தாழிசையை இடத்தியல் பொருளோ டுவமை கூறியவாறுணர்க. (142) மேலதற்கு அடியளவு கூறல் 143. தரவிற் சுருங்கித் தோன்று மென்ப. இது முன்னர்வந்த வொத்தாழிசைபோற் றாழிசை தரவோடொத்து வாராதென ஐயமகற்றியது. (இ-ள்.) வண்ணத்தின்றாழிசை எட்டும் ஆறும் நான்குமென்ற சமநிலைத்தரவிற் சுருங்கித் தோன்றும் எ-று. வாளாதே 'சுருங்கு' மென்னாது 'தோன்று' மென்றதனாற் தரவின் பாதியாகிய நான்கடியு மூன்றடியுமே தனக்குப் பெருமைக்குஞ் சிறுமைக்கு மெல்லையென்று கொள்க. ஈரடியிரண்டும் வந்து தொடர்தலின் நான்கடித் தரவின் பாகமாகிய ஈரடித்தாழிசை யாகாதாயிற்று. இங்ஙனங் கூறாக்கால் ஏழடிப் பெருமையாகத் தாழிசை கோடல்வேண்டும். இதனாற் கூறிய நான்கடியானு மூன்றடியானுமன்றி ஐந்தடியானு மிரண்டடியானும் வாராதென்பதாயிற்று. (143) வண்ணகத்திற்குரிய சுரிதகம் இவ்வாறு வரும் எனல் 144. அடக்கியல் வாரந் தரவோ டொக்கும். இது சுரிதகத்தெல்லை கூறுகின்றது. (இ-ள்.) அடக்கியல்பிற்றாகிய சுரிதகந் தரவோடொக்கும் எ-று. முன்னர்ப் பல்வகையாற் புகழ்ந்த தெய்வத்தினை யொரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் அடக்கியலாயிற்று. தெய்வத்தையன்றி மக்களைப் புகழ்ந்த அடியும் வருதலின் வாரமாயிற்று. நிறுத்த முறையானே எண்ணுறுப்புணர்த்தாது மயங்கக்கூறியவத னானே தனிச்சொல் வருங்கால் எண்ணீற்றுப் பின்னுஞ் சுரிதகத்தின் முன்னும் புணர்க்க.(144) எண் உறுப்பின் அளவு 145. முதற்றொடை பெருகிச் சுருங்கும னெண்ணே. இஃது எண்ணுறுப்பாமா றுணர்த்துகின்றது. (இ-ள்.) எண்ணாவது முற்படப் பெருகிய வழிமுறையாற் சுருங்கிவரப் பெறும் எ-று. தொடையென்றதனான் ஒழிந்த எண்களுந் தொடை பெறுதலும் நேர்ந்தவாறாயிற்று. முற்படவெனவே பிற்படச் சில வருமென்பது பெற்றாம். பெருகி யென்றதனான் ஈரடியா னிரண்டைநாட்டி வழிமுறை சுருங்கி வருமெனவே ஈரடியிற் சுருங்கி யோரடியாயும், ஓரடியிற் சுருங்கி யிருசீராயும், இருசீரிற் சுருங்கி யொருசீராயும் ஒன்றற்கொன்று பாகமே சுருங்குதல் கொள்க. "நாற்சீரடிகொண்ட தடியெனப்படும்" (செய். 32) என்றலின் அளவடியே கொள்க. இருசீரான் வருவன இரண்டிணைந்து அளவடியாதற்கேற்பத் தொடை கொண்டு சுவடுபடநிற்றலானும், ஒரு சீரான் வருவனவும் நான்கிணைந்து அளவடியாதற்கேற்பத் தொடை கொண்டு சுவடுபடநிற்றலானும் அவையும் அளவடிக்க ணடங்கின. மன் ஆக்கமாதலிற் சுருங்கியும் பலவாதல் கொள்க. ஈரடியும் ஓரடி யும் இருசீரும் ஒருசீருமாய்ச் சுருங்கி வாராநிற்கவும் இரண்டிற்கு நான்கும், நான்கிற்கு எட்டும், எட்டிற்குப் பதினாறுமாய் ஒன்றற்கொன்று உறுப்பு வகையான் இரட்டிக்குமெனக் கொள்க. இருசீர் வருவன குறளடியெனப் படுதலின் மேற் சின்னமென்பன அடியினடங்காவொரு சீரேயாயின. ஆகவே இதனை யொழிந்த எண் மூன்றும் நான்குமாய்த் தலை யெண், இடையெண் கடையெண் எனவும் படுதல் நோக்கி மேல் "எண்ணுஞ் சின்னமும்" எனப் பிரித்தோதுப. இனி அளவடியிற் சுருங்குமென்றலின் இவ் வளவடியிற் சுருங்கிய இருசீரையும் ஒருவழிச் சின்னமெனலும் படும். இனி ஈரடி யிரண்டனைப் பேரெண்ணெனவும், ஓரடி யதனிற்குறைதலிற் சிற்றெண்ணெனவும், இவற்றிற்கும், பின்வருஞ் சின்னத்திற்கும் இடையே நிற்றலின் இருசீரை இடையெண்ணெனவும், முடிவிற்கு அளவாய் நிற்குஞ் சின்னத்தினை அளவெண்ணெனவும் பெயர் கூறினு மமையும். இருசீரினை முச் சீராக்கியும் ஒரு சீரினை யிருசீராக்கியும் அலகு வைப்பின் அதற்கசையுஞ் சீரும் இசையொடு சேராமையுணர்க. (145) மேலதற்கொரு புறனடை 146. எண்ணிடை யொழித லேத மின்றே சின்ன மல்லாக் காலை யான. இது மேலதற்கொரு புறனடை. (இ-ள்.) முற்கூறிய எண்களின்றி வருதல் செய்யுட்கு ஏதமின்று, சின்ன வெண்ணொன்று நில்லாதவிடத்து எ-று. எனவே சின்னவெண்ணொழியாது மூவகையெண்ணும் ஒழிதலும், சின்ன வெண்ணொழியுமிடத்து மூவகையெண்ணும் ஒழியாது வருதலுஞ் சுவையுடைய வாயின. இடையென்றதனாற் றலையெண்ணு மிடையெண்ணுமல்லன எட்டு நான்காகியும், பதினாறு எட்டாகியுங் குறைந்து வருதலுங் கொள்க. மூவகை யெண்ணுஞ் சின்னமும் பெற்றுவருதல் சிறப்புடைமை ஏதமின் றென்பதனாற் பெறுதும். (எ-டு.) "மணிவிளங்கு திருமார்பின் மாமலராள் வீற்றிருப்பப் பணிதயங்கு நேமியும் பானிறத்த சுரிசங்கு மிருசுடர்போ லிருகரத்தி லேந்தியமர் மாயோனும் பங்கயத்தி லுறைவோனும் பாகத்தோர் பசுங்கொடிசேர் செந்தழற்கண் ணுதலோனுந் தேருங்கா னீயென்பார்க் கவரவர்த முள்ளத்து ளவ்வுருவா யல்லாத பிறவுருவு நீயென்னிற் பிறவுருவு நீயேயா யளப்பரிய நான்மறையா னுணர்த்துதற் கரியோனே எவ்வுயிர்க்கு முயிரேயா யியங்குதனின் றொழிலாகி யவ்வுயிர்க்க ணடங்கியே யருளாது நிற்றலினால் வெவ்வினைசெய் தவையுழந்து வெம்பிறவிக் கடலழுந்த வவ்வினையை யகற்றாம னிற்பதுநின் னருளன்றே; பல்லுயிரும் படைப்பதுநின் பண்பென்றே பகர்தலினால் வல்வினையின் வலைப்பட்டு வருத்தங்கூ ருயிர்தம்மை நல்வினையே பயில்வித்து நடுக்கஞ்செய் பகைநீக்கி யல்லல்வா யழுந்தாம லகற்றுவது மருளன்றே; அழிப்பதுநின் றொழிலென்றே யறைந்தாலு முயிரெல்லா மொழித்தவற்று ளுணர்வுகளை யொருவாம லுடனிறுத்திப் பழிப்பின்றிப் பல்காலு மிப்பரிசே பயிற்றுதலி னழிப்பதுவு மில்லையா லாங்கதுவு மருளன்றே; வேள்வி யாற்றி விதிவழி யொழுகிய தாழ்வி லந்தணர் தம்வினை யாயினை; வினையி னீங்கி விழுத்தவஞ் செய்யு முனைவர் தமக்கு முத்தி யாயினை; இலனென விகழ்ந்தோர்க் கிலையு மாயினை; உளனென வுணர்ந்தோர்க் குளையு மாயினை; அருவுரு வென்போர்க் கவையுமாயினை; பொருவற விளங்கிப் போத மாயினை; பானிற வண்ணனீ, பனிமதிக் கடவுணீ நீனிற வுருவுநீ, நிறமிகு கனலிநீ; யறுமுக வொருவனீ; யானிழற் கடவுணீ; பெறுதிரு வுருவுநீ பெட்பன பிறவுநீ; மண்ணுநீ விண்ணுநீ மலையுநீ கடலுநீ, எண்ணுநீ யெழுத்துநீ இரவுநீ பகலுநீ பண்ணுநீ பாவுநீ பாட்டுநீ தொடருநீ அண்ணனீ அமலனீ அருளுநீ பொருளுநீ ஆங்க இனையை யாகிய விறைவநின் னடியிணை சென்னியின் வாங்கிப் பன்னாள் பரவுதும் மலர்தலை யுலகின் மன்னுயிர்க் கெல்லா நிலவிய பிறவியை நீத்தல் வேண்டி முற்றிய பற்றொடு செற்ற நீக்கி முனிமை யாக்கிய மூவா முத்தியை மயலற வளித்தநின் மலரடி யரிய வென்னா துரிதினிற் பெறவே" இஃது எட்டடித்தரவுந் தரவின் பாகம்பற்றிய நான்கடித்தாழிசை மூன்றும், ஈரடியிரண்டும், ஓரடிநான்கும், இருசீரெட்டும், ஒருசீர் பதினாறு மாகிய நால்வகையெண்ணுந் தனிச்சொல்லும், எட்டடிச்சுரிதமும் பெற்ற தலையளவு வண்ணகப் பெருந்தேவபாணி. "பலியுருவிற் கேலாத படைமழுவாள் வலனேந்திப் புலியுரிமேற் பைத்தலைதாழ் பூங்கச்சை விரித்தமைத்துக் கண்கவருந் திருமேனி வெண்ணூலின் கவின்பகைப்பத் தண்கமழ்பூந் தாரிதழி தலைமலைந்து பிறைதயங்க மொழிவலத்தான் மயங்காதே முறுவலாற் றோலாதே விழிவலத்தா னுருவழிந்தோன் வேடங்கண் டுணர்வழியக் கலிகெழு கடற்கச்சிக் கமழிளந் தேமாவி னொலிதளிரு முலைச்சுவடு முடன்சிறப்ப வுலவுங்கால்; நீறேறுந் திருமேனி நெடும்பகலே நிலவெறிக்க வேறேறிக் கடைதோறு மிடுபலிக்கு வருதிரா லேறேறி யிடுபலிக்கு வரும்பொழுது மிடைபிரியாக் கூறேறும் பசும்பாகங் கொள்ளுமோ கொள்ளாதோ; பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால் வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீர்வருங்காற் கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ; நாணாக மடந்தையர்பாற் பலிக்கென்று நடந்தக்காற் பூணாகந் தழீஇக்கொளினும் பொங்காது போலுமாற் பூணாகந் தழீஇக்கொளினும் புகையுயிர்த்துப் பொங்காத கோணாகம் யாந்தருபால் குடிக்குமோ குடியாதோ; எரிகல னிமைக்கு மிடவயிற் றொடிக்கைப் பரிகல னேந்தும் பரிசிறந் ததுகொல்; உமையவள் விலக்கவு மொலிகட னஞ்ச மிமையவர் தம்மை யிரந்துண் டதுகொல்; இடையெழும் பொழில்கட்கு மிமைப்பளவிற் கொல்லேறே; கடைதொறு மதுநிற்பக் கற்பித்த வாறெவன்கொல்; இரப்புநீர் வேட்டதுகேட் டிமையவரென் பட்டனரே; பரப்புநீர்க் கங்கையோ படர்சடையிற் கரந்ததே; பூண்டன வென்பு, புனைந்தது தும்பை, ஆண்டன பூதம், மறைவன வேதம், இசைப்பன பல்பேய், எழீஇயது வீணை, அசைப்பன வேணி, அதிர்வன பொற்கழல்; எனவாங்கு; எல்வளை மகளி ரிடுபலி நசைஇப் பல்கடை திரிதருஞ் செல்வநிற் பரவுதுங் கொடியணி யேனம் பொடியணிந்து கிடப்ப வடதிசை வாகை சூடித் தென்றிசை வென்றி வாய்த்த வன்றாள் வளவ னிமிழிசை வேங்கடம் போலத் தமிழகத்து நாவலொடு பெயரிய ஞாலங் காவல் போற்றி வாழிய நெடிதே" இஃது ஒருசீர்ச் சின்னமொன்று மொழித்தல்லனவெல்லா முற்கூறிய வுதாரணம் போல வந்தது. "ஆயிரங் கதிராழி யொருபுறந்தோன் றகலத்தான் மாயிருந் திசைசூழ வருகின்ற வரவுணர்த்த மனக்கமல மலரினையு மலர்த்துவான் றானாத லினக்கமல முணர்த்துவபோன் றெவ்வாயும் வாய்திறப்பக் குடதிசைக்கண் மறைவதூஉ மறையென்று கொள்ளாமைக் கடவுளர்தம் முறங்காத கண்மலரே கரிபோக ஆரிருளும் புலப்படுப்பா னவனேயென் றுலகறியப் பாரகலத் திருள்பருகும் பரிதியஞ் செல்வகேள்; மண்டலத்தி னிடைநின்று வாங்குவார் வைப்பாராய் விண்டலத்திற் கடவுளரை வெவ்வேறு வழிபடுவோ ரோங்குலகம் முழுதும்போர்த் திருவுருவி னொன்றாக்கி யாங்கவரை வேறுவே றளித்தியென் றறியாரால்; மின்னுருவத் தாரகைநீ வெளிப்பட்ட விடியல்வாய் நின்னுருவத் தொடுங்குதலா னெடுவிசும்பிற் காணாதா ரெம்மீனுங் காலைவா யிடைக்கரந்து மாலைவா யம்மீனை வெளிப்படுப்பாய் நீயேயென் றறியாரால்; தவாமதியந் தொறுநிறைந்த தண்கலைக டலைத்தேய்ந் துவாமதிய நின்னொடுவந் தொன்றாகு மென்றுணர்வா ரம்மதியி னின்னொளிபுக் கிருளகற்றாத் தவற்றாற்கொ லம்மதியம் படைத்தாயு நீயேயென் றறியாரால்; நீராகி நிலம் படைத்தனை, நெருப்பாகி நீர்பயந்தனை ஊழியிற் காற்றெழுவினை யொளிகாட்டி வெளிகாட்டினை கருவாயினை, விடராயினை கதியாயினை, விதியாயினை உருவாயினை, யருவாயினை யொன்றாயினை, பலவாயினை; எனவாங்கு, விரிதிரைப் பெருங்கட லமிழ்தத் தன்ன வொருமுதற் கடவுணிற் பரவுதுந் திருவொடு சுற்றந் தழீஇக் குற்ற நீக்கித் துன்பந் தொடரா வின்ப மெய்திக் கூற்றுத்தலை பனிக்கு மாற்றல் சான்று கழிபெருஞ் சிறப்பின் வழிவழி பெருகி நன்றறி புலவர் நாப்பண் வென்றியொடும் விளங்கி மிகுகம்யா மெனவே" இது குறைந்த இருவகைச் சின்னமும் பெற்று ஒழிந்த உறுப்போடு அவ்வாறே வந்தது. "உறைபதியி னுடனயனை யுந்தியினாற் படைத்தோயு மறைகடல்சூழ் நிலமுதலா வனைத்துலகும் புரப்போயுந் திருநிறமே கரிபோகத் திருமேகம் பயந்தோயு மொருநிறமே நிறமாக வொள்ளொளியை யுயிர்த்தோயு மறுவகத்த மார்பென்ன மலர்மகளை வைத்தோயு நிறத்தோடு நெஞ்சொத்த நிலமடந்தை கணவனுநீ; பின்னமா யொன்றாகும் பெருமாயை யியற்றுவா யின்னமா யந்தெளிய வெமக்கருளி யிமையவர்க்கு மன்னமாய் முன்னொருகா லறம்பயந்த வறிவனீ; குறியாதும் பிழையாத குலமறையை முதன்மயங்கி வெறியாகு மலரோற்கு வெளிப்படுத்து வேறுபடுத் தறியாத மறையெமக்கு மறிவித்த வறிவனீ; மாணாத மதிகொடுத்து வானவரை மயக்கியுங் கோணாத மதிவாங்கிக் கொடுத்தருளி யடியவர்க்குக் காணாத மதிகாட்டுங் கருணைகூர் காட்சியைநீ; வானுநீ நிலனுநீ மதியுநீ விதியுநீ தேனுநீ யமுதுநீ திருவுநீ யருவுநீ; அன்புநீ யருளுநீ யாதிநீ யந்தநீ யின்பநீ துன்பநீ யின்மைநீ யுண்மைநீ; எனவாங்கு, நால்வகை யுருவிற் பால்வே றாகிய கால முதல்வநிற் பரவுதும் ஞாலத்து நல்லவை யல்லவை யெல்லா நினாஅது செல்வ நோக்கி னெய்திய வல்லிதிற் றுயரொடு தொல்வினை நீங்கிப் பெயராச் சுற்றம் பெறுகம்யா மெனவே" இது ஆறடித்தரவும், மூன்றடித்தாழிசை மூன்றும், ஒருசீர்ச்சின்னம் பதினாறும், தனிச்சொல்லும், ஆறடிச்சுரிதகமும் பெற்றுவந்த இடையளவு வண்ணகத் தேவபாணி. "கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக் கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய யழல்விழிச் சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத் தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க வார்புன லிழிகுருதி யகலிட முடனனைப்பக் கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடைக்கையோய்; முரசதிர் வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப் புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்ல ரடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவண் நிலஞ்சேரப் பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ; கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க வலியிய லவிராழி மாறெதிர்ந்த மருட்சோவு மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கச் சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ; படுமணி யினநிரை பரந்துட னிரிந்தோடக் கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு வெரிநொடு மருப்படர வீழ்ந்துதிறம் வேறாக வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ; இலங்கொளி மரகத மெழின்மிகு வியன்கடல் வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம்; விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொன்னும் பொருகளி றட்டோய் புரையு நின்னுடை; கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை ஒலியிய லுவண மோங்கிய கொடியினை வலியுயர் சகட மாற்றிய வடியினை; போரவுணர்க் கடந்தோய்நீ புணர்மருதம் பிளந்தோய்நீ நீரகல மளந்தோய்நீ, நிழறிகழைம் படையோய்நீ ஊழிநீ யுலகுநீ யுருவுநீ யருவுநீ யாழிநீ யருளுநீ யறமுநீ மறமுநீ; எனவாங்கு, அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைச் செவ்வே லச்சுதன் றொன்றுமுதிர் கடலுலக முழுதுட னொன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே. இது இருசீர் நான்கும் ஒருசீரெட்டும் பெற்று வந்தது. இதனுட் போரவுணர்க்கடந்தோ யென்பதனை முச்சீராக்கியும், ஊழிநீ யென்பதனை யிருசீராக்கியும் பின்னுள்ளோர் காட்டுதல் பொருந்தாமை யுணர்க. (146) ஒருபோகின் வகை 147. ஒருபோ கியற்கையு மிருவகைத் தாகும். இஃது ஒத்தாழிசை யிரண்டனுள் ஏனையொன்றனை வண்ணகம், ஒரு போகென இருவகைத்தென்றார்; அவற்றுள் ஒருபோகும் இருவகைத்தா மென்கின்றது. உம்மை யிறந்ததுதழீ இய எச்சவும்மை. (இ-ள்.) ஒருபோகின் இயல்பும் இரண்டு கூறாம் எ-று. இதன் பயன் ஒருபோகன்றிக் கொச்சகம் அம்போதரங்கமென்றும் பெயர்வழங்கினு மமையு மென்றவாறாயிற்று. (147) அவ்வகையின் பெயரும் முறையும் 148. கொச்சக வொருபோ கம்போ தரங்கமென்று ஒப்ப நாடி யுணர்தல் வேண்டும். இது மேல் வகுத்த இரண்டற்கும் பெயரும் முறையும் கூறுகின்றது. (இ-ள்.) கொச்சக வொருபோகு, அம்போதரங்க வொருபோகு என்றிரண்டாகப் பெயர்கொடுத்துப் பொருந்த ஆராய்ந்துணரப்படும் அவை எ-று. கொச்சக வுடை போலப் பெரும்பான்மையுந் திரண்டுவருவது கொச்சகமெனவும், பல வுறுப்புக்களு முறையே சுருங்கியும், ஒரோ வழிப் பெருகியும், முடுகியுங் கடைக்கண் விரிந்து நீர்த்தரங்கம்போறலின் அம்போதரங்கமெனவுங் கூறினார். இவையும் ஒத்தாழிசைப் பகுதியென் பார் போக்கிய வொத்தாழிசையானே ஒருபோகென் றாரெனக் கொள்க. அம்போதரங்க வொருபோகென்பது மது. ஒருபோகென்பது பண்புத்தொகைப்புறத்தன்மொழி. இடை யீடில்லா நிலத்தினை யொருபோகென்ப வாகலின் அது ஒப்பினாகிய பெயர். ஒருபோகென்றதனைத் 'திரிதோட்ட வெளி' என்றது போலக் கொள்க. (148) கொச்சக ஒருபோகின் இலக்கணம் 149. தரவின் றாகித் தாழிசை பெற்றுந் தாழிசை யின்றித் தரவுடைத் தாகியும் எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும் அடக்கிய லின்றி யடிநிமிர்ந் தொழுகியும் யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது கொச்சக வொருபோ காகு மென்ப. இது முறையே கொச்சக வொருபோகு கூறுகின்றது. (இ-ள்.) தரவின் றாகித் தாழிசை பெற்றும் என்பது தனக்கினமாகிய வண்ணகத்திற்கோதிய தரவின்றித் தாழிசையேபெற்றும் எ-று. அவை பரணிப் பாட்டாகிய தேவபாணி முதலியன. இது தரவொடுபட்ட தாழிசை யிலக்கணமின்றி வேறாய் வருமென் றற்குத் தரவின்றாகியெனத் தரவை விலக்கினார். எனவே இவையொத்து மூன்றாதலும், தரவிற்சுருங்கி நான்கும் மூன்றும் அடிபெறுதலும், ஒரு பொருண்மேல் வருதலும், தாழம்பட்ட வோசையவே யாதலும், கடப்பாடில என்றவாறாம். அங்ஙனங் கூறியவதனானே பரணியுளெல்லா மீரடியானே வருதலும் தாழம்பட்டன வோசையல்லன விராஅய் வருதலும், முடுகி வருதலும், இனித் தாழிசை மூன்றடுக்கித் தனியே வருவழி ஈரடி முதலிய பலவடியான் வருதலும், இனிப் பத்தும் பதினொன்றும் பன்னிரண்டுமாகி யொருபொருண்மேல் வரும் பதிகப்பாட்டு நான்கடியின் ஏறாதுவருதலும், அங்ஙனம் வருங்காற் றாழ்ந்தவோசை பெற்றும் பெறாதும் வருதலும், அவை யிருசீரெண் முதல் எண்சீரளவும் வருதலும் என்ற இன்னோரன்ன பல பகுதியெல்லாம் வரையறையின்றித் தழுவப் பட்டன. இவ் வேறுபாடெல்லா முளவேனுந் தாழம்பட்டவோசை பெரும்பான்மைய வாதலிற் றாழிசை யென்றார். இங்ஙனந் தாழிசைப்பேறு விதந்தோதவே யொழிந்த வுறுப் பெல்லாம் விலக்குண்டமைபெற்றாம். தாழிசையுறுப்புப் பெறுவதியா தெனிற் கொச்சகவொருபோகெனப் பொது வகையா னின்ற செய்யுளாம். அது நோக்கியாயிற்றுப் பலவுமெண்ணி வேற்றுமையுடையதென் றொருமையாற்கூறியது. முதற்றொடை பெருகிச் சுருங்குமா றெண்ணின்றித் தனியே யெண்ணெனலா காமையானும், ஓசை வேறாதலானும், ஈரடித்தாழிசை பேரெண்ணாகா. (எ-டு.) "உளையாழி யோரேழு மொருசெலுவி னொடுங்குதலான் விளையாட நீர்பெறா மீனுருவம் பரவுதுமே......" என்றாற் போல்வன பரணிச்செய்யுளுட் பயின்றுவரும். இவ்வாறு பல தொடர்ந்துவரிற் பஃறாழிசைக் கொச்சக மென்றும், மூன்று தாழிசை வரிற் சிஃறாழிசைக் கொச்சகமென்றுங் கூறவுமமையும். மற்றுப் பரணியாவது காடுகெழுசெல்விக்குப் பரணிநாட் கூழுந் துணங்கை யுங்கொடுத்து வழிபடுவதொரு வழக்குப் பற்றியது. அது பாட்டுடைத் தலைவனைப் பெய்து கூறலிற் புறத்திணை பலவும் விராயிற்றேனுந் தேவபாணியேயாம். "கன்று குணிலாக் கனியுகுத்த மாயவ னின்று நம் மானுள் வருமே லவன் வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவ னீங்குநம் மானுள் வருமே லவன்வாயி லாம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவ னெல்லைநம் மானுள் வருமே லவன்வாயின் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ" (சிலப். ஆய்ச்சி.) இது படர்க்கைப் பரவலாய் மூன்றடுக்கிய வழி மூன்றடியான் வந்தது. இது கந்திருவமார்க்கத்தா னிடை மடக்கி நான்கடியாமாறு முணர்க. "யானைத்தோல் போர்த்துப் புலியி னுரியுடுத்துக் கான வெருமைக் கருந்தலைமே னின்றாயால் வானோர் வணங்க மறைமேன் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்; வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் கரியதிரி கோட்டுக் கலைமிசைமே னின்றாயா லரியரன்பூ மேலா னகமலர்மேன் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்; சங்கமும் சக்கரமுந் தாமரைக் கையேந்திச் செங்க ணரிமான் சினவிடைமே னின்றாயாற் கங்கைமுடிக் கணிந்தகண் ணுதலோன் பாகத்து மங்கை யுருவாய் மறைபோற்ற வேநிற்பாய்" (சிலப். வேட்டு) இவை முன்னிலைப் பரவலாய் மூன்றடுக்கி நான்கடியான் வந்தன. பதிகப்பாட்டிற்கு ஈண்டுக் கூறிய வேறுபாடுகள் திருவாய்மொழி, திருப்பாட்டு, திருவாசகம் என்கின்ற கொச்சக வொருபோகுகளிற் காண்க. அவை உலகவழக் கன்மையிற் காட்டா மாயினாம். ஆகி யென்றதனான் ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி வருதலும், தேவபாணியன்றி யாப்பினுள் வேறுபட்டு வருவனவற்றின் கூறாய் அங்ஙனம் மூன்றடுக்கி வாராது தொடர்ந்த பொருளாய் நான்குமுதற் பலவு மடுக்கி வருதலும், தனிச்சொற் பெற்று வருதலும், தாழம்பட்ட வோசை யின்றி மூன்றடுக்கி வருதலும், சுட்டி யொருவர் பெயர்கொண்டு அவரையுந் தெய்வமென்றே பரவலும், அடுக்கிவந்து அடக்கியலான் முடிதலும், பிறவுங் கொள்க. (எ-டு.) "சுடரொடு திரிதரு முனிவரு மமரரு மிடர்கெட வருளுநின் னிணையடி தொழுதேம் அடல்வலி யெயினர்நின் னடிதொடு கடனிது மிடறுகு குருதிகொள் விறறரு விலையே; அணிமுடி யமரர்த மரசொடு பணிதரு மணியுரு வினைநின மலரடி தொழுதேங் கணநிரை பெறுவிற லெயினிடு கடனிது நிணனுகு குருதிகொ ணிகரடு விலையே; துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய வெடிபட வருபவ ரெயினர்க ளரையிரு ளடுபுலி யனையவர் குமரிநி னடிதொடு படுகட னிதுவுகு பலிமுக மடையே." (சிலப். வேட்.) இவை மூன்றடுக்கி முடுகியலாய் வந்த தாழிசைக் கொச்சக வொருபோகு. "என்றிவை சொல்லி யழுவாள் கணவன்றன் பொன்றுஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள நின்றா னெழுந்து நிறைமதி வாண்முகங் கன்றிய தென்றுகண் ணீர்கையின் மாற்றியபின் னழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன் றொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளா னெழுதெழின் மலருண்க ணிருந்தைக்க வெனப்போனான் மாயங்கொன் மற்றென்கொன் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுவேன் பொருளுரையோ விதுவென்று காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் றீவேந்தன் றனைக்கண்டு திறங்கேட்பல் யானென்றா ளென்றா ளெழுந்தா ளிடருற்ற தீக்கனா நின்றா ணினைந்தா ணெடுங்கயற்க ணீர்சோர நின்றா ணினைந்தா ணெடுங்கயற் ணீர்துடையாச் சென்றா ளரசன் செழுங்கோயில் வாயில்வாய்." (சிலப். ஊர்சூழ்) இவை தொடர்ந்த பொருளாய் நான்கடுக்கின. "சொன்னது, அரசுறை கோயி லணியார் ஞெகிழங் கரையாமல் வாங்கிய கள்வனா மென்றே கரையாமல் வாங்கிய கள்வனா மென்றே குரைகழன் மாக்கள் கொலைகுறித் தாரே, எனப், பொங்கி யெழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் திங்கள் முகிலோடுஞ் சேணிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப வழுதாடன் கேள்வனை யெங்கணாஅ வென்னா வினைந்தேங்கி மாழ்குவாள்." (சிலப். துன்பமாலை.) இவை தனிச் சொற்பெற்றுத் தனிவந்தன. "இளமா வெயிற்றி யிவைகாணின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் கொல்லன் றுடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்த முன்றி னிறைந்தன; முருந்தே ரிளநகை காணாய்நின் னையர் கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன் புள்வாய்ப்புச் சொன்ன கணிமுன்றி னிறைந்தன; கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னைய ரயலூ ரலற வெறிந்தநல் லானிரைக ணயனின் மொழிநர் நரைமுது தாடி யெயின ரெயிற்றியர் முன்றி னிறைந்தன" (சிலப். வேட்டு.) இவை தாழிசை யோசையின்றி யடுக்கி வந்தன. "கோவா மலையாரங் கோத்த கடலாரந் தேவர்கோன் பூணாரந் தென்னவர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பாரால்; பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னந் திகிரிப் பொருபடையா னென்பரால்; முந்நீரி னுன்புக்கு மூவாக் கடம்பொறிந்தான் மன்னர்கோன் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர்கோன் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவிறோ ளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்." (சிலப். ஆய்ச்சி.) இவை அரசரைத் தெய்வமென்றே பரவியன. குன்றக் குரவையுள் "சீர்கெழு செந்தில்" என்னுந் தாழிசை முதல் பலவடுக்கி வந்து பின்னர் "என்றியாம், பாடக் ......கேட்டு" என்று அடக்கியற் பொருள் பெற்று முடிந்தவாறு காண்க. இன்னுஞ் சிலப்பதிகாரத்துள் வரும் வேறுபாடெல்லாம் இவ் விலேசான் முடித்துக் கொள்க. தாழிசையின்றித் தரவுடைத்தாகியு மென்பது மேற்கூறிய தாழிசை யின்றித் தரவேபெற்று வருதலும் எ-று. ஈண்டுந் தரவோசை பெறுவது பொதுவாய்நின்ற கொச்சக வொருபோகென்னுஞ் செய்யுள். அது தாழிசையொடுபட்ட தரவிலக்கணத் திற் றிரிந்து வருமென்றற்குத் தாழிசையின்றியென விலக்கினார். அது தொடர்நிலைச் செய்யுளாய்வருந் தேவபாணியுந் தரவிணைக் கொச்சக மாய் வருவதும் நான்கும் ஆறும் எட்டும் அடியாய் வருதல் கடப்பாடின்று என்பதூஉங் கொள்க. தரவென்னும் உறுப்பைச் செய்யுளுடைத் தெனவே யொழிந்தவுறுப்பு விலக்குண்டன. ஆகியு மென்றதனாற் றனிச்சொல்லும் சுரிதமும் பெற்றும் பெறாதும் வருதலும், பெரும்பான்மை யிரண்டிணைதலுங் கொள்க. அவை தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்ற தரவு கொச்சகம், தரவிணைக் கொச்சக மெனப் பெயர் கூறப்படும். இதனாற் றரவிலக்கண மிழந்ததேனும் பெரும்பான்மை தாழம்பட்ட வோசைக் குரித்தன் றென்பது நேர்ந்தவா றாயிற்று. (எ-டு.) "பூணாக வென்பணிந்தான் பூதத்தான் வேதத்தான் கோணாகக் கச்சையான் கோடேந்து கொல்லேற்றான் மாணாக வெண்ணூலான் வாணுதலோர் பாகங்கொண் டூணாகும் பிச்சையா னுண்ணாத நஞ்சுண்டான் வான்யாறு தாழ்ந்த சடையான் மழுவலத்தான் யானார்வஞ் செய்யு மிறை; எனவாங்குப் பாடி யிறைஞ்சுவோர்க் கெல்லாம் வினைமாசு தீர விளக்காகுந் தோற்றத் தனையோய் மறலிக்கு மச்சம் பயந்த புனைபூங் கழற்கான்மேற் பூவோடு நீர்தூஉய் மனைமாண்ட பாக முளப்பட வாழ்த்தி யெனைநாளு மேத்துது மெந்தையே நின்னை நினையா தொழியற்க நெஞ்சு."........... இது தரவிணைக் கொச்சகம். தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்றன வந்துழிக் காண்க. இதனானே தொடர்நிலைச் செய்யுளின் முதற்கணின்ற தேவபாணி தன் பொருளொடு தான் முடிந்தன தனித்தரவு கொச்சகமாம். (எ-டு.) "உலக மூன்று மொருங்குட னேத்துமண் டிலக மாய திறலறி வன்னடி வழுவி னெஞ்சொடு வாலிதி னாற்றவுந் தொழுவ றொல்வினை நீங்குக வென்றியான்." (வளையாபதி) மூவா முதலா வுலகம்மொரு மூன்று மேத்தத் தாவாத வின்பந் தலையாயது தன்னி னெய்தி யோவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே" (சீவக. கட. வாழ்.) எனவரும். இவ்வளையாபதி முதலியவற்றுள் தேவபாணியல்லாத தொடர் பொருட் செய்யுட்களை "யாப்பினும் பொருளினும் வேற்றுமை யுடையது" என்றதாற் றரவுகொச்சகமென்று கொள்க, அவை தம் பொருளொடு தாமுடியாமையின். எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றியும் என்பது வண்ணகத்திற் கோதிய எண்ணுஞ் சின்னமுமின்றி ஒழிந்த தரவு தாழிசை தனிச்சொல் சுரிதக மென்னும் நான் குறுப்புடையதுங் கொச்சக வொருபோகாம் எ-று. இதற்கு இல்லா உறுப்பையே கூறிற்று உள்ளது நிற்றலை வேண்டி. (எ-டு.) "ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்துக் கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி மாறாப்போர் மணிமிடற்ற வெண்கையாய் கேளினி; படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ கொடுகொட்டி யாடுங்காற் கோடுய ரகலல்குற் கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ; மண்டமர் பலகடந்து மதுகையா னீறணிந்து பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள் வண்டாற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரளத் தலையங்கை கொண்டுநீ காபால மாடுங்கான் முலையணிந்த முறுவலாண் முற்பாணி தருவாளோ; எனவாங்கு, பாணியுந் தூக்குஞ் சீரு மென்றிவை மாணிழை யரிவை காப்ப வாணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி." (கலி. 1) இது நான்குறுப்பான் வந்ததேனுந் தேவபாணியாய் வருதலின் முதனிலை யொத்தாழிசை யாகாது. ஏனை யொன்றே யென்ற ஒத்தாழிசையே யாமாயினும் அவற்றிற் குரிய எண்ணுஞ் சின்னமும் இழத்தலிற் கொச்சக வொரு போகாயிற்று. அடக்கியலின்றி யடிநிமிர்ந் தொழுகியுமென்பது அடக்கியல் தனித்து வருதலின்றி யவ்வடக்கியலோடு ஒரு செய்யுளாய் அடிபரந் தொழுகியும் எ-று. அடக்குமியல்பின் றென்றது முற்கூறிய வுறுப்புக் களைத் தனியே வந்து அடக்கி நிற்கும் இலக்கண மின்றியே வரும் எ-று. எனவே "எழுசீ ரிறுதியா சிரியங் கலியே" (செய். 76) "வெண்பா வியலினும் பண்புற முடியும்" (செய். 77) என்ற விதியாற் பெற்ற இறுதி ஒரு தொடராய் இற்று நிற்றலும், அடி நிமிரும் என்றதனான் முற்கூறியவற்றின் அடிவரைறையை யிகத்தலும், ஒழுகும் என்றதனான் எழுசீ ரிறுதியல்லாத எல்லாவடியுங் கலியேயா யொழுகி வருதலும் பெற்றாம். (எ-டு.) "மழை நுழைந்து புறப்பட்ட மதியமு ஞாயிறும்போ லுழைவழங்கு வலம்புரியுந் திகிரியு மொளிசிறப்பப் பச்சென்ன வானிட்ட வில்லேபோற் பசுந்துழாஅய்க் கச்சென்னக் கனல்கின்ற கதிர்முலைமேற் கவின்செய்ய வம்மேகத் திடைப்பிறந்த நரையுருமே றதிசயிப்ப மைம்மேனி மருங்கதிர வரியேறு வால்புடைப்ப விண்டோயு மணிநீல வெற்பிடை வேய்மிடைந்தாங் கெண்டோளு மிடுநீழ லிளங்கிளிகள் களிகூரக் கொதியாது கொதித்தெறிந்த கோட்டெருமை தலையின் மிசை மிதியாத சீறடி மிதித்தன போற்றோன்றத் தாங்கிய புகர்வாளுங் கேடகமுந் தனித்தனியே வாங்கிய கோளரவு மதியமும் போன்றிலங்க மைதொடுத்த கடற்புறஞ்சூழ் மலையென்ன மணியல்குல் கொய்துடுத்த பொற்றுகிலின் கொழுஞ்சோதிக் கொழுந்தோட நீனின்ற வடிவத்தா னெடியோனை முதற்பயந்த தாயென்று முதுமறை பரவினும் யாயென் றல்ல தியாந்துணி யலமே" எனவரும். தேவபாணியான் வெண்பாவியலான் முடிந்தது வந்துழிக் காண்க. இக்கருத்தறியாதார் வெண்பாவியலாற் பண்புற முடிந்த கலியடியுடைய தனை வெண்கலிப்பா வென்பர். யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையதென்பது மேற்கூறிய வாறும் இனி வருகின்றவாறுமன்றி யாப்பின் வேறுபடுதலும் பொருளின் வேறுபடுதலும் எ-று. அவை இருசீர்முதல் எண்சீர்காறும் வந்து முற்கூறியவாறன்றி அடிக்கண் நந்நான்காய் வரும். சில பிறவடிவிராயும் வருவனவும், பலவடிவந்தும், நான்கடி வந்தும் பாமயங்கி வருவனவும், இனி யீரடியான் வருவனவற்றுள் ஈற்றடி மிக்குங் குறைந்தும் குறையாதும்வந் தியலசைச் சீர்பெற்று வருவனவும், ஓசையும் பொருளு மினிதாகாது வருவனவும், அவ்விரண்டடிச் செய்யுண் முடிந்து நிற்கவும், ஈற்றடி யொன்றும் இரண்டும் மிக்குவருவனவும், பிறவாறாய் வருவனவும், இனி மூவடியான் வருவனவற்று ளீற்றடிகுறைந்தும் முதலடி மிக்கும் இடையடி குறைந்தும் இறுதியடி மிக்கும் மூன்றடியிற் குறையாதும் பிறவாறாயும் வருவனவும், இம்மூவடி யிற்றபின் ஈற்றடியொன்றும் இரண்டும் மிக்குவருவனவும், பிறவாய் வருவனவும், இனி நான்கடியாய் வருவனவற்றுண் முதலிடை கடையிற் குறைந்து வருவனவும், அம்முதலிடை கடைக்கண்ணே யோரடியுமீரடியுஞ் சீர்மிக்கு வருவனவும், பிறவாறாய் வருவனவும், அந்நான்கடி யிற்றபின் ஈற்றடியொன்றும் இரண்டும் மிக்குவருவனவும், இங்ஙனம் மிக்கு ஒரு பொருண்மேன் மூன்றடுக்கி வருவனவும், பத்தடுக்கி வருவனவும், அளவியலின் வேறுபடுவனவும், இனி யைந்தடியான் வருவனவற்றுள் ஈற்றடிகுறைந்து வருவனவும், அவ்வைந்தடி யிற்றபின் ஓரடியும் ஈரடியும் மிக்குவருவனவும், முச்சீரான் இற்றுச் சிலசீர் மிக்கு வருவனவும், இனி ஆறுமுதலிய வடிகளான் வருவனவும், இவ் விலக்கண மெல்லாம் பெற்றுவருதலுங் கடவுட் பொருட்டொடர் நிலைகள் பல தரவுந் தாழிசையுமாகி யிடைமிடையச் செய்வனவும் அடக்கியலின்றி யடிநிமிர்ந்து வருவனவும் அடக்கியல் பெற்று வருவனவும் இன்னோரன்ன பல பகுதிகளுங் கொள்ளப்படும். பொருள் வேறுபடுமென்றலிற் புறப் பொருளான் வருவனவுங் கொள்க. இவற்றுட் சில கந்தருவமார்க்கத்தான் இடைமடக்கி வருவனவுங்கொள்க. (எ-டு.) "நெய்யொடு தீயொக்கச் செய்யானைச் சேர்வார்க்குப் பொய்யாத வுள்ளமே, மெய்யாதல் வேண்டும்." இது குறளடி நான்கான்வந்தது. இது குட்டம்படாது. "மையணி கண்டனை வானோ ரையனை யாயிரம் பேழ்வாய்ப் பையர வம்பல பூணும் மெய்யனை மேயது வீடே" இது சிந்தடி நான்கான்வந்தது. இவ்வா றியலசைச்சீரான் வருவது வந்துழிக் காண்க. "நீறணிந்த திருமேனி நெருப்புருவங் கிளைத்தது போற் கூறணிந்த குங்குமங்கொண் டொருமுலையேர் குறிசெய்ய வேறணிந்த சுடரெறிப்ப வேனிலாற் கெரிவிழித்த வேறணிந்த வெல்கொடியோ யெவ்வுயிர்நிற் றவிர்ந்தனவே" "வென்றான் வினையின் றொகையாய் விரிந்து தன்க ணொன்றாய்ப் பரந்த வுணர்வின் னொழியாது முற்றுஞ் சென்றான் றிகழுஞ் சுடர்சூ ழொளிமூர்த்தி யாகி நின்றா னடிக்கீழ்ப் பணிந்தார் வினைநீங்கி நின்றார்" (சூளா. காப்பு) மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரு நாணமுழுது...............வே" (சூளா. துறவு. 64) இவை கொச்சகம்போல அடுக்கிவாராது தாழம்பட்டவோசைத் தரவுகொச்சகம். "ஒரு வான்யா றோடுச டாடவிப் பெரு நாகமே பூணும் பெருமா னரு வானா னாயினு மன்பர்க் குரு வாயினா னுள்ளத்தி னுள்ளே" இது அளவடிநான்காய் நிரையசைச் சீராகிய சொற்கள் முதலில் வந்து பிறசீர் விராஅயிற்று. அசைச்சீரின்றி யிங்ஙனம் வருவன தரவு கொச்சக மாம். "முழங்குதிரைக் கொற்கைவேந்தன் முழுதுலக மேவல்செய மொழிசெய் கோமான் வழங்குதிறல் வாண்மாறன் மாச்செழியன் றாக்கரிய வைவேல் பாடிக் கலங்கிநின் றாரெலாங் கருதலா காவண மிலங்குவா ளிரண்டினா லிருகைவீ சிப்பெயர்ந் தலங்கன்மா லையவிழ்ந்த தாடவா டும்மிவள், பொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம் விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே" இது பிற பொருளான் அளவொவ்வாது பலவடிவந்து பாமயங் கிற்று. "தடந்தாட் கொத்த தமனியச் சிலம்பு படந்தாழ் கச்சைப் பாம்பொடு மிளிர வென்றாடு திருத்தாதை வியந்துகை துடிகொட்ட நின்றாடு மழகளிற்றை நினைவாரே வினையிலரே" இது நான்கடியுமொத்துப் பாமயங்கி வந்தது. "கங்கை சூடிய கபாலிநின் னடியிணை தங்கு நெஞ்சினர் தளர்வுறு பிறவியை நீப்பர்" இது ஈரடியா யீற்றடி மிக்கது. "புனைமலர்க் கடம்பின் பூந்தார்ச் சேந்த நினையடி பரவுதும் யாம்" இது ஈரடியாயீற்றடி குறைந்தது. "கொன்றை வேய்ந்த செல்வ னடியை யென்று மேத்தித் தொழுவோம் நாமே" இது ஈற்றடி குறையாது இயலசைச்சீ ரடிதோறும் வந்தது "அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி மறுவறு பத்தினி போல்வை கினீரே" இது ஓசையும் பொருளு மினிதாக வந்தது. "கொன்றைசேர் சடைமுடியோன் கொந்தழல்போன் மேனியோ னொன்றிய யெண்களை யோவாதே யுள்ளுக செல்கதி யின்றிச் சிவகதி சேர்வதோர் நல்லறி வெய்துது நாமே" இது ஈரடியிற்றதன்மே லீற்றடி யிரண்டு மிக்குவந்து ஒன்றுட்பட்டது. "நண்பி தென்று தீய சொல்லார் முன்பு நின்று முனிவுசெய்யா ரன்பு வேண்டு பவர்." இது மூன்றடியான். வந்து ஈற்றடி குறைந்து அசைச்சீரா னிற்றது. "தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னாமென்னாம் யாளியைக் கண்டஞ்சி யானை தன் கோடிரண்டும் பீலிபோற் சாய்ந்து விடும்பிலிற்றி யாங்கே" இது முதலடி மிக்கது. "பூண்ட பறையறையப் பூத மருள நீண்ட சடையா னாடுமே நீண்ட சடையா னாடு மென்ப மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே" இது இடையடி குட்டம்பட்டு இறுதியடி மிக்கது. கந்திருவ மார்க்கத்தான் இடைமடக்கிய நான்கடியுமாம். "வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை நீனிற வண்ணநின் னிறைகழல் தொழுதனம்" இது மூன்றடியிற் குறையாதது. "பிறையணிந்த சடைமுடியோன் பிஞ்ஞகன் பெம்மான் கறையணிந்த கண்டத்தான் கையிலங்கு சூலத் திறையணிந்த நெஞ்சினோர்க் கின்றாம் பிறவி; இம்மைப் பிணியு மியலும் பசியொடு தம்மைத் துறந்திடுந் தாவில் புகழுளதாம்" இது மூன்றடி யிற்றதன்மே லீரடி மிக்குவந்தது. "சதுர்முக வொருவநின் சரணடைந்தே முதிர்மிகு நீரு ளழுந்துமிவ் வங்க நாவாய் திருவுறு நிலைமைத்தாய்ப் போதெனக் கூறி நிற்பா ரதிர்வன ரிருகையு மாற்றுறக் கூப்பி நிற்பார்" இது நான்கடியாய் முதலடி குறைந்தது. "தனுவெழ வரிவையைத் தகுமணம் புணர்ப்பின் முனிவுறு தொழிலினை மூளா ணனிதவிர்த் திலர்க்கிடு நாடொறு நாடொறுங் கனியென வினியண்முன் கலந்தமற் றவற்கே" இது இரண்டாமடி குறைந்து வந்தது. "கல்லாலந் தன்னிழற்கீழ்க் கல்வித் துறைபயந்த காமர்காட்சி நல்லானை நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை யெல்லாரு மேத்தப் படுவானை யெஞ்ஞான்றுஞ் சொல்லாதார்க் கெல்லாந் துயரல்ல தில்லைத் தொழுமின்கண்டீர்" இஃது ஈற்றயலடி குறைந்து, சீரடியாசிரியத்தான் நேரடிமுன்னிறு மென்ற விலக்கணக் கொச்சகம் வந்தும் பாவின் வேறுபட்டதாம். "வண்டணி கொண்ட மதுமலர்க் கொன்றை யினமாலை கொண்டணி செஞ்சடைக் கோட்டிளந் திங்கள்போலப் பண்டணி யாகப் பலர்தொழுங் கங்கைநீர் வைத்தா னுண்டணி கொண்டநஞ் சுண்பார்க் கமிழ்தாமே" இது அளவடியிரண்டு மைஞ்சீரடியிரண்டும் வந்தது. "கண்டெழப் பாவை தனிக்கரம் பிடிப்ப ராயிற் கொண்டவற் பேணிக் குடிக்கு விளக்காகும் நெண்டெழி னெடுமனை தன்னை நீங்கிப்போய்......... மற்றொரு குழகன் றன்னையே" இது முதலடி மிக்கது. "போதுறு முக்குடைப் பொன்னெயி லொருவன் றாதுறு தாமரை யடியே தாதுறு தாமரை யடியடைந் தாரெனிற் றீதுறு தீவினை யிலரே" இது சிலவடிகுறைந் திடைமடக்கிப் பிறவாயிற்று. இவை யளவடியின் வேறுபட்டவாறுங் காண்க. "கடாமுங் குருதியுங் கால்வீழ்த்த பச்சைப் படாமும் புலித்தோலுஞ் சாத்தும் பரம னிடாமுண்ட நெற்றியா னெஞ்ஞான்றுங் கங்கை விடாமுண்ட வார்சடையான் வெண்ணீ றணிந்தான் மெய்யுறு நோயில்லை வேறோர் பிறப்பில்லை யையுறு நெஞ்சில்லை யாகாத தொன்றில்லை." "வேயே திரண்மென்றோள் வில்லே கொடும்புருவம் வாயே வளர்பவள மாந்தளிரே மாமேனி நோயே முலைசுமப்ப தென்றார்க் கருகிருந்தா ரேயே விவளொருத்தி பேடியோ வென்றார் எரிமணிப்பூண் மேகலையாள் பேடியோ வென்றார்" (சீவக. 652) இவை நான்கடிச் செய்யுளிற்றபின் ஈற்றடி யிரண்டும், ஒன்றும் மிக்கு வந்தன. "மூவுலகு மீரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணம் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே;" "பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல வுந்தியுடை விண்ணவனைக் கண்ணுந் திருவடியுங் கையுங் கனிவாயுஞ் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே;" "மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சங் கடந்தானை நூற்றுவர்பா னாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே, நாராய ணாவென்னா நாவென்ன நாவே" (சிலப். ஆய்ச்சியர் குரவை) இவை படர்க்கைப் பரவலாய் ஒருபொருண்மேன் மூன்றடுக்கி நான்கடியிற்றபின் ஓரடி மிக்கு வந்தன. இவ்வாறே பத்தடுக்கி யொருபொருண்மேற் பதிகப்பாட்டாய் வருவனவும் இதனா னமைக்க. "வெறியுறு கமழ்கண்ணிவே....... பின்" இது சிந்தடியான் வந்து ஈற்றடி குட்டம்பட்டது. "வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டு மாய மடமகளி ரெல்லீருங் கேட்டீமி னாய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க பாய்திரை வேலிப் படுபொரு ணீயறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ வென்கணவன் கள்வனோ வல்லன் கருங்கயற்கண் மாதரா யொள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்" (சிலப். துன்ப) இது ஐந்தடிச் செய்யுண் முடிந்தபின் ஈரடி மிக்கது. "கோழியுங் கூவின......... பாவாய்" இது ஐந்தடியான் வந்து ஈற்றடி முச்சீரான் இற்று அடியீற்றின்கண் இருசீர் மிக்கது. திருவெம்பாவை யெட்டடியான் வந்திவ்வா றிற்றன. இக்காலத்து ஒருபோகுகளிற் றரவுந் தாழிசையும் இடைமிடைந்து வருமாறு காண்க. பிறவும் வந்துழிக் காண்க. இவையெல்லாங் கொச்சகமாமென்று கூறுவர்புலவர் எ-று. இனி யிவ்வாறுவந்த கொச்சகங்களையெல்லா மொரு வரையறைப் படுத்துப் பாத்தோறு மினஞ்சேர்த்திப் பண்ணிற்குத்திறம்போலப் பின்னுள்ள ஆசிரிய ரடக்குவர்; அதனை அகத்தியமுந் தொல்காப்பியமும் உணர்ந்து அவர்தங் கருத்தறிந்த ஆசிரியர் அவ்வாறடக்காமைக்குக் காரணங் கூறுவர். அவர் கூறுமாறு. "கொன்றை வேய்ந்த செல்வ னடியை.....நாமே" ஈரடியான் வருதலின் வெண்செந்துறை யென்பார்க்கு ஒருசீர் குறைவின்றி வருதலின் வெண்பாவிற் கினமாகாது கலிப்பாவினொரு கூற்றிற் கினமாத லுஞ் சீரானுந் தளையானும் ஆசிரியத்திற் கினமாதலு முடைத்தென்று மறுப்பர். இனிச் சந்தஞ் சிதைந்து புன்பொருளாய் வருவனவற்றைத் தாழிசையெனிற் றாழம்பட்ட வோசையும் விழுமிய பொருளு மில்லன வற்றிற் கப்பெயர்கூறின் முற்கூறிய தாழிசைகட்குஞ் சந்தஞ் சிதைந்து புன்பொருளாய் வருதலுரித்துமாம். அதனான் அப்பெய ராகாதெனவு மறுப்பர். "கன்று குணிலா" (சிலப். ஆய்ச்சி) இது வெண்டளையான் வருதலின் ஆசிரியத்திற்கினமாகாதென மறுப்பர். இனி இது நான்கடியான் வருமேற் கலிவிருத்தமா மென்பார்க்கு. "நெருப்புக் கிழித்து விழித்ததோர் நெற்றி யுருப்பிற் பொடிபட் டுருவிழந்த காம னருப்புக் கணையா னடப்பட்டார் மாதர் விருப்புச் செயநின்னை விரும்புகின் றாரே" என்றது காட்ட வெண்டளை தட்டலின் வெண்டாழிசைக்கு இழுக்கின்மையுங் கலித்தளையின்மையிற் கலிக்கு இனமாகாமையுங் கூறி மறுப்பர். இனிக் குறளடியானுஞ் சிந்தடியானும் வருவனவற்றைச் சீரளவான் வஞ்சிக்கினமென்பார்க்கு அவை நான்கடியான் வருதலானும், பா வேறுபடுதலானுஞ் சீர் இயற்சீராகலானும் ஆகாதென்ப. குறளடிச் செய்யுண் மூன்றுவரிற் றாழிசையெனவுஞ் சிந்தடிச் செய்யுண் மூன்றுவாரா வெனவுங் கூறின் அதற்கு மொரு காரணங்கூற லரிதென மறுப்பர்; பிறவு மிவ்வாறு ஒன்றற்கினமாயது வேறு ஒன்றற்கினமாயும் வருதலின் இனஞ்சேர்த்த லாகாதென மறுப்பர். இங்ஙனம் இனஞ்சேர்த்துதற் கரியவற்றைக் கலிப்பாவென அடக்கியது பெரும்பான்மை கலிக்கேற்றவோசையே பெற்று வருதலின். இத் தொல்காப்பியர் "முந்துநூல் கண்டு முறைப்படவெண்ணி" (தொல். பாயிரம்) நூல் செய்தலின் எல்லாவற்றிற்குமொரு பரிகாரங் கொடுத்துக் கொச்சகத்து ளடக்கினார். அது மேற்றொட்டு வந்த மரபு. இனிப் பொருள் வேறுபடுதலாவன. தேவரைப் படர்க்கையாக்கிக் கூறலுஞ் சுட்டியொருவர் பெயர் கொளப்படுதலும், புறப்பொருளொடு தொடர்தலும், முற்கூறிய பொருள்கள் பிறவாறு வருதலுமாம். இங்ஙனம் பொருள் வேறுபடுதல் இதனுள் ஓதிய நான்கற்கும் யாப்பு வேறுபட்டவற்றிற்கும் பொது. வெட்சிமுதற் பாடாண் டிணையீறாகிய பொருள் வேறுபாடு வரையறை உடைய. என்னை; அவை முற்கூறிய இரண்டற்கும் உரியவாகலின். அது பெரும்பான்மை பரணிச் செய்யுட்கு இடைவிராய் வரும். இவ்வாறு கொச்சகத்தினை வரைந்தோதவே ஆசிரியமும் வெண்பாவும் ஒருபொருண் மேற் பல மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதும் பத்துமாகி வருதலும் பிறவாறாய் வருதலும் வரையறையிலவாயின. அவை ஐங்குறுநூறு, முத்தொள்ளாயிரம், கீழ்க்கணக்கு முதலியவற்றுள்ளும் பிறவற்றுள் ளுங் காண்க. தேவபாணியல்லாச் செய்யுளெல்லாம் யாப்பும் பொருளுஞ்சேர வேறுபடு மென்றுணர்க. அது முற்கூறியவற்றுட் காண்க. "வெண்பலிச் சாந்த முழுமெய்யு மேற்பூசி யுண்பலிக் கூரூர் திரிவது மேலிட்டுக் கண்பலிக் கென்று புகுந்த கபாலிமு னெண்பலித் தாளிவள் யாதுவாய் வாளே. இது "காமப் பகுதி கடவுளும் வரையார்" (தொல். புறத். 28) என்ற பாடாண்டிணையாகலின் பொருள் வேறுபட்டது. 'கன்றுகுணிலா' (சிலப். ஆய்ச்சி) என்பது அந் நிலத்திற்குரிய தெய்வத்தை அவர் பராவுதலிற் கைக்கிளையன்று. இவை பலவுறுப்பிழந்தனவேனுங் கொச்சக வொருபோகென்னும் பொது விலக்குண்ணாமையிற் அப்பொதுப்பெய ரெல்லாவற்றிற்கு மாகு மென்று எய்துவித்தார். ஆகுமென்றதனான் ஒருபோகென்னாது சிறுபான்மை கொச்சக மென்று வழங்குதலு மாமென்று கொள்க. (149) அடக்கியலின்றி அடிநிமிர்ந்த கொச்சக ஒருபோகிற்குரிய அளவு 150. ஒருபான் சிறுமை யிரட்டியத னுயர்பே. இது அதிகாரத்தானின்ற நான்கனுள் இறுதிநின்ற அடக்கியலின்றி யடிநிமிர்ந்த கொச்சக வொருபோகிற்கு அளவு கூறுகின்றது. (இ-ள்.) ஒழிந்த கலிக்கெல்லாம் உள்ளுறுப்புப்பற்றி யளவு கூறினார். பத்தடியிற் சுருங்காது இருபதடியினேறாது வரும் அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகு மென்ற கொச்சக வொருபோகு எ-று. இது முன் னடி நிமிர்ந்தொழுகு மென்றதற்ஒரு வரையறை கூறி ஐயமகற்றியது. இஃதேற்புழிக் கோடலென்பதனானும் அதுவென்ற ஒருமையானுங் கொண்டது. (எ-டு.) "தடங்கடற் பூத்த தாமரை மலராகி யடங்காத முரற்சியா னருமறை வண்டிசைப்ப வாயிர வாராழி யவிரிதழின் வெளிப்பட்ட சேயித ழெனத்தோன்றுஞ் செம்பகலி னிரவகற்றிப் படுபனிப் பகைநீங்கப் பருவத்து மழையானே விடுமழை மறுத்திடினும் மென்மலரின் மதுமழையான் நெடுநிலங் குளிர்கூர நீர்மைசா னிழனாறி யண்டங்கள் பலபயந்த வயன்முதலா மிமையோரைக் கொண்டங்கு வெளிப்படுத்த கொள்கையை யாதலி னோங்குயர் பருதியஞ் செல்வநின் னீங்கா வுள்ள நீங்கன்மா ரெமக்கே" இது பத்தடியிற் சுருங்காது அடக்கியலின்றி யடிநிமிர்ந்தொழுகி யது. மேலிருபதடி வந்துழிக் காண்க. (150) அம்போதரங்க ஒரு போகிற்குரிய அடியளவு 151. அம்போ தரங்க மறுபதிற் றடித்தே செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை. இது மேனின்ற அதிகாரத்தாற் கடவுள் வாழ்த்தாகிய அம்போதரங்க வொருபோகிற்கு அடிவரையறைகூறுகின்றது. அம்போதரங்க வொருபோகு, தன்னுறுப்பெல்லாங் கூடி யறுபதடித்தாயும் அவ்வறுபதற்கு இரட்டியாகிய நூற்றிருபதடியை யுடைத்தாயும்வரும். சிறுமைக் கெல்லை கூறுமிடத்து அவ்வறுபதற் செம்பாகமாகிய முப்பதடியிற் பாகமாகிய பதினைந்தடியான் வரும் எ-று. ஏகாரம். எதிர்மறை. அறுபதன் செம்பால் முப்பதன்வாரம் பதினைந் தென்றுணர்க. எனவே, இடையள வறுபதும், தலையளவு அதனிரட்டி யாகிய நூற்றிருபதும், கடையளவு பதினைந்துமாயின. இனி அறுபதும், முப்பதும், பதினைந்தும் எனச் சிற்றெல்லைக்கே தலையளவு இடையளவு. கூறிற்றெனக்கொண்டு இவற்றில் கடையள வாகிய சிற்றெல்லைக்குப் பேரெல்லை முப்பதும், இடையளவாகிய சிற்றெல்லைக்குப் பேரெல்லையறுபது மெனப் பொருளுரைக்கிற் றலையளவிற் சிற்றெல்லைக்கும் இடையளவிற் பேரெல்லைக்கும் வேறுபா டின்றியும் இடையளவிற் சிற்றெல்லைக்கும் கடையளவிற்கும் வேறுபா டின்றியும் நிற்குமென மறுக்க. அங்ஙனம் நூற்றிருபது தரவிற் கெல்லை மேனின்ற அதிகாரத்தான் இருபதாகவும் அதனோடொத்து வருத லிலக்கணத்தவாகிய அடக்கியல் இருபதடியாகவும், நாற்பதடி பெறப்படும்; சிற்றெண் பதினாறும் அராகம் நான்குமாக இருபதடி பெறப்படும். கொச்சகம் இருமூன்றாகி ஒன்றுபத்தடிபெற்று அறுபதடியாம். இனிப் பதினைந்தடியான் வருவன தரவு இரண்டடியும், கொச்சகம் இருமூன்றாகி ஆறும், அராகம் ஒன்றும், சிற்றெண் நான்கும், அடக்கிய லிரண்டுமாகப் பதினைந்தடியாம். இடையளவிற்கும் இவ்வாறே வருமாறறிக. மேலளவு கூறும்வழிக் கூறாது மேற்கூறுகின்ற பாவிற்கு ஈண்டளவு கூறினார் அதிகாரம்பற்றி. (151) அம்போதரங்க ஒருபோகின் உறுப்புக்கள் 152. எருத்தே கொச்சக மராகஞ் சிற்றெண் அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே. இது முன்னர்க் கூறிய அம்போதரங்கவுறுப்பு இவை யைந்துமெனக் கூறியவாறு. (இ-ள்.) தரவுங் கொச்சமும் அராகமுஞ் சிற்றெண்ணும் அடக்கியல் வாரமுமென ஐந்துறுப்புடையது அம்போதரங்கவொருபோகு எ-று. தரவெனினும் எருத்தமெனினும் ஒக்கும். பலகோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொச்சக மென்பவாகலின், அது போலச் சிறியவும் பெரியவும் விராஅடுக்கியுந் தம்மு ளொப்ப வடுக்கியும் வருஞ்செய்யுளைக் கொச்சகமென்றார். இது ஒப்பினா கிய பெயர். இக்காலத்து இது மகளிர்க்குரியதாய்க் கொய்சகமென்று வழங்கிற்று. இது முறையே சுருங்கிவரும் எண்ணுப்போலாது அடியுஞ் சீருந் தளையும் வேறுபட்டு வருமென்றுணர்க. இது வெண்பாவாகற் பெரும்பான்மை அராகமாயது அறாதுகடுகிச் சேறல் பிறிதொன்றுபெய்து ஆற்றவேண்டுந் துணைச் செய்ததாகிய பொன்னை அராகித்த தென்பவாகலின் இதுவும் ஒப்பினாகிய பெயர்; மாத்திரை நீண்டுந் துணிந்தும் வாராது குற்றெழுத்துப் பயின்று உருண்டு வருதலின். சிற்றெண்ணாவது; நால்வகையெண்ணினும் இறுதிநின்ற எண். வாரம் முற்கூறிற்று. (எ-டு.) "செஞ்சுடர் வடமேரு விருமருங்குந் திரிகின்ற வெஞ்சுடரு மதியமும்போல் வேலொடுகே டகஞ்சுழல மாயிரு மணிப்பீலி மயிலெருத்திற்றோன்றுங்காற் சேயொளி கடற்பிறந்த செந்தீயிற் சிறந்தெறிப்ப மறுவருந்தம் மனத்துவகைக் கலுழ்ச்சியான் வளர்த்தெடுத்த வறுவருந்தம் முலைசுரந்தாங் ககடிருந்தூ றமுதூட்ட வூருருவத் தெயின்மூன்று மொருங்கவித்தோன் வியப்பெய்த வீருருவத் தொருபெருஞ்சூர் மருங்கறுத்த விகல்வெய்யோய்; ஆங்க, வினையொழி காலத்து வெவ்வெயிற் கோலத் தனைவருந் தத்த மறம்புரிந் தாங்கு முனையடு கொற்றத்து முந்நான் குருவிற் கனைகடல் சுட்டன கண்; தேவரு மக்களுஞ் சீற்றத்தா னஞ்சாமைக் காவல் புரியுங் கதிர்மதி போலுமே மூவிரு தோன்றன் முகம்; மடமகள் வள்ளி மணிக்கம் பலம்போ லிடையிடை சுற்றுத லின்றுந் தவிரா தொடையமை தார்க்கடம்பன் றோள்; அவ்வழி, யடியிணை சேரா வவுணரை நுங்கிப் பொடிப்பொடி யாகிப் பொருப்பொடு மாய விடியுமிழ் வானத் திடைநின்று கூஉங் கொடியணி கோழிக் குரல்; விழுச்சீ ரமரர் விசும்பிடைத் தோன்றிப் பழிச்சிநின் றார்த்தார் பலர்; உருகெழு முருகிய வுருமென வதிர்தொறு மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்; பெருகள வருமறை பெறுநெடு மொழியொடு பொருகள வழியிசை புகல்வன சிறுகுறள்; சிவந்தன திசை சிலம்பின மலை நிவந்தன தலை நிரம்பின குறை; ஆர்த்தன மறை யாடினர் பலர் போர்த்தன துகள் பொழிந்தனர் மலர்; ஆங்கனந் தோன்றிய வடுபோர் வென்றியின் வீங்கிருந் தொடித்தோள் விடலை நினக்கே யாமறி யளவையிற் றமிழ்புனைந் தேத்துகம் நின்னீ தக்க தாயினு நின்னெதிர் நாணில மாகல் வேண்டும் யாணர்க் கடம்புங் களிமயிற் பீலியுந் தடஞ்சுனை நீரோடு நின்வயின் அமர்ந்த வாராப் புலமை வருகமா ரெமக்கே" என்பது இடையள வம்போதரங்க வொருபோகு. இவ்வுறுப்புக்களின் அளவு கூறாமையின் ஏற்றவாறறிந்து கூறப்படும். இது நாற்பத்து நான்கடியான் வந்தது. இவை யிக்காலத்து மிக வழங்கா. ஒரு போகு போலன்றி யிதற்களவை முற்கூறியது அம்போதரங்க வொருபோகின் அளவே மேற்கூறுகின்ற மூன்று பாக்கட்கும் அளவென் றற்கு. இவ்வதிகாரத்தான் வருகின்றவற்றோடு இதற்குறுப்பிலக்கணம் ஏற்பன வறிந்துகொள்க. வெள்ளடி யியலாற் றிரிவின்றி வருமென்றலின், அவ்வளவை மேல்வருகின்ற கலிவெண்பாட்டிற் கின்றென்றுணர்க. (152) கலிவெண்பாவின் இலக்கணம் 153. ஒருபொரு ணுதலிய வெள்ளடி யியலான் திரிவின்றி வருவது கலிவெண் பாட்டே. இது முறையே கலிவெண்பாக் கூறுகின்றது. (இ-ள்.) ஒரு பொருளைக் கருதி வாராநிற்ப வேறுமொரு பொருளே படவுஞ் சொற்றொடர்ந்து கிடப்பத் தொடுக்கப்பட்ட வெள்ளையடியாற் றிரிவின்றி வருவது கலிவெண்பாட்டாம் எ-று. இயலென்றதனாற் கட்டளையடியாய் வருதலுந் தனக்குரிய வெண்டளையான் வருதலும் பன்னீரடியான் வருதலும் பிறவுமாகிய இலக் கணஞ் சிதையாதனவற்றுக்கே ஒருபொருணுதலி வரவேண்டுவது. அவ்வா றன்றித் தீர்ந்துவருவன ஒருபொருணுதலாக் கலிவெண்பாவாம் எ-று. அவ்விலக்கணத்திற் றிரிந்துஞ் சீருந் தளையுஞ் சிதைந்தும் அடியிகந்தும் பாவகை சிதைந்தும் ஒரு பொருணுதலியும் வெண்பாவிய லான் வந்தனவுங் கலியோசையாமென் றுணர்க. இதனான் ஒரு பொரு ணுதலியது கட்டளையாய்த் திரிவின்றி வருமெனவும், ஒரு பொருணுத லாதது சீர்வகையாய்த் திரிவுடைத்தாய் வருமெனவுங் கூறிற்றாம். (எ-டு.) "அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப் பிரிந்துறை சூழாதி யைய விரும்பி நீ யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவா தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ வுளநா ளொரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை யொன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினு மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ சென்ற விளமை தரற்கு . (கலி. 18) இது பன்னீரடியான் வந்து ஒரு பொருணுதலிய கட்டளைக் கலிவெண்பா. இதனுட் பெண்டன்மைக்கு ஏலா நுண்பொருளினைத் தலைவ னெதிர் நின்றுணர்த்துவான் செவ்வன் கூறாது தலைவன் பண்டுகூறின சிலவற்றை வாங்கிக்கொண்டு கூறுங் கூற்று. நீ மறந்தாயென்பது யாம் உணரக் கூறுகின்றாள் இவளென்பதுபட நின்றமையின் ஒருபொரு ணுதலிற்றாயிற்று. அஃது அகப்பொருளேயாமாறும் ஒழிந்த பாக்களும் அவ்வாறு வருமேனும் அங்ஙனம் நுதலிய பொருளான் செய்யுள் வேறுபடாமையின் ஆண்டு ஆராய்ச்சியின்று. இது வெண்பாவாயிற் குறித்த பொருளை மறைத்துக் கூறாது செப்பிக் கூறல்வேண்டும். இஃ தன்னதன்றிப் பொருள் வேறுபடுதலானுந் துள்ளிவருதலானுங் கலிவெண் பாட்டாயிற்று. "மரையா மரல்கவர" (கலி. 6) என்னும் பாட்டுப் பதினோரடியான் ஒரு பொருணுதலிற்று. நூற்றைம்பது கலியுட் கலிவெண்பாட்டு எட்டு. அவற்றுள் ஒருபொருணுதலி வருவனவற்றின் பொருள் வல்லார்வாய்க் கேட்டுணர்க. இன்னும் இயலென்றதனாற் பன்னீரடியி னிகந்து ஒரு பொருணுதலி வருவனவும் அங்ஙனம் வந்து தளை விரவி வருவனவுங் கொள்க. "சுடர்த்தொடீ கேளாய் தெருவினா மாடும்" (கலி. 51) என்னும் பாட்டு அடியிகந்து ஒரு பொருணுதலியது. "கயமல ருண்கண்ணாய் காணா யொருவன் வயமா னடித்தேர்வான் போலத் தொடைமாண்ட கண்ணியன் வில்லன் வருமென்னை நோக்குபு முன்னத்திற் காட்டுத லல்லது தானுற்ற நோயுரைக் கல்லான் பெயருமற் பன்னாளும் பாயல் பெறேஎன் படர்கூர்ந் தவன்வயிற் சேயேன்மன் யானுந் துயருழப்பே னாயிடைக் கண்ணின்று கூறுத லாற்றா னவனாயிற் பெண்னென் றுரைத்த நமக்காயி னின்னதூஉங் காணான் கழிதலு முண்டென் றொருநாளென் றோணெகிழ் வுற்ற துயராற் றுணிதந்தோர் நாணின்மை செய்தே னறுநுதா லேன லினக்கிளி யாங்கடிந் தோம்பும் புனத்தய லூசலூர்ந் தாட வொருஞான்று வந்தானை யைய சிறிதென்னை யூக்கி யெனக்கூறத் தையா னன்றென் றவனூக்கக் கைநெகிழ்பு பொய்யாக வீழ்ந்தே னவன் மார்பின் வாயாச்செத் தொய்யென வாங்கே யெடுத்தனன் கொண்டான்மேன் மெய்யறியா தேன்போற் கிடந்தேன்மன் னாயிடை மெய்யறிந் தேற்றெழுவே னாயின்மற் றொய்யென வொண்குழாய் செல்கெனக் கூறி விடும்பண்பி னங்க ணுடைய னவன்" (கலி 37) இது தையா னன்றென்று என மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாமற் றோழி தலைவிக்குரைத்தது. இதுகேட்டுத் தலைவன் தன்னை நயந்தானென இவள் கருதினாள்போலுமெனத் தலைவி கருதுமாற்றாற் றோழி கூறியவாறும், இதனானே தலைவி யினிக் கரந்தொழுகாது உடம்படுக்கு மென்பதூஉ மொரு பொருளாயிற்று. இது "அறக்கழிவுடையன" (தொல். பொருளி. 24) என்னும் பொருளியற் சூத்திரத்தில் வழுவமைத்தவாறுங் காண்க. "தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய் தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா மொருங்கு விளையாட வவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த இல்லிருப்பாய் கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தற் றகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ யேதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றே னாயிழா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற் றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிது மையலை மாதோ விடுகென்றேன் றையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப அல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன்" (கலி. 111) இது தளைவிரவி யைஞ் சீரடியும் வந்து ஒரு பொருணுதலாதது. "இடுமு ணெடுவேலி" (கலி. 12) என்னும் பாட்டுத் தளைவிரவி யவ்வாறு வந்தது. பாவகை சிதைந்தன வந்துழிக் காண்க. ஒன்றென முடித்தலாற் பொருள்வகை சிதைதலுங் கொள்க. அவ்விரண்டுஞ் சேரச் சிதைந்தன இக்காலத்தார் கூறுகின்ற உலாச் செய்யுளாம். இனி யிக்காலத்தார் கூறும் மடற்செய்யுளும் பாவகை சிதைவின்றேனும் "ஏறிய மடற்றிறம்" ஆகிய பெருந்திணைப் பொருளாகலின் அதனைக் கலிவெண்பாட்டென்று கோடும். மேலிற் சூத்திரத்தாற் கூறுங் கலிவெண்பாட்டுக்களும் பெருந் திணையாயும் வருதலின்; இதனை வெண்பாவெனிற் றொல்காப்பிய னார்.................... கலிவெண்பாப் பெருந்திணைப் பொருளின் வாராதென்று கொள்க. "வெண்பா விதியான் விரவுறுப் பின்றித் தன்பா வகையொடு பொருந்திய பொருளே யொன்றுவிளைந் திற்ற விறுதித் தாகும்." என்று இசை நூலினும் இவ்வாறே யோதிக் கொச்சகச் செய்யுளுமுள வென்றார். இதனுள் விரவுறுப்பின்றியென வேண்டாது கூறியவதனான் விரவுறுப்புடையது வேறுபொருள் விளையாதெனவும், விரவுறுப்பில்லது வேறுபொருள் விளைத்து இறுமெனவும் பெறவைத்தலின் அவ்வாறே விரவுறுப் பில்லாக் கலிவெண்பாட்டும் வேறுபொருள் விளக்குமென ஈண்டுக்கூறி விரவுறுப் புடையது "வெண்பாவியலான் வெளிப்படத் தோன்று" மென்று மேலைச் சூத்திரத்தாற் கூறுகின்றார். (153) விரவுறுப்புடைய கலிவெண்பாவின் இலக்கணம் 154. தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் ஐஞ்சீ ரடுக்கியு மாறுமெய் பெற்றும் வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும். இது மேல் வெளிப்படு பொருட்டெனப்பட்ட கலிவெண்பா விரவுறுப்புடைமையின் வேறுவேறு கூறுகின்றது. (இ-ள்.) தரவும் போக்கும் பாட்டிடை மிடைந்தும் - தரவிற்கும் போக்கிற்கும் இடையன பாட்டாகிப் பயின்றும், ஐஞ்சீர் அடுக்கியும் - வேறுநின்ற வொருசீரினை யளவடியோடு அடக்கிக்கூற ஐஞ்சீராகியும், ஆறு மெய்பெற்றும் - அவ்வாறே இருசீரடுக்க ஆறுசீர் பெற்றும், வெண்பாஇயலான் வெளிப்படத் தோன்றும் - வெண்பா வெனப்பட்ட வுறுப்பி னியற்கை சிதையாமற் பொருள்புலப்படத் தோன்றும் எ-று. எனவே தரவும் போக்கும் முற்கூறியவாறே முன்னும் பின்னும் நிற்றலும் சுரிதகமாயின் அகவலும் வெள்ளையுமாகி வருதலும் அவை தனிச்சொற் பெற்றும் பெறாதும் நிற்றலுங் கொள்க. பாட்டிறுதி நிற்கும் போக்கினைத் தரவொடு முற்கூறியது தரவிறுதி சீரானிறுமாறுபோல வெள்ளைக் சுரிதகமும் ஒரோவழிச் சீரா னிறுமென்றற்கு. (எ-டு.) "நயந்தலை மாறுவர்" (கலி. 80) என்னும் மருதக்கலியுள் "ஐயவெங், காதிற் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும் போதில் வறுங்கூந்தற் கொள்வதை நின்னையா மேதிலார் கண்சாய நுந்தை வியன்மார்பிற் றாதுதேர் வண்டின் கிளைபடத் தைஇய கோதை பரிபாடக் காண்கும்" எனத் தேமாவா னிற்றது. இனிப் பாட்டினைப் போக்கின்பின் வைத்ததனாற் போக்குப்போல் நாற்சீரா னிறும்பாட்டும் வருஞ் சிறுபான்மையென்று கொள்க. (எ-டு.) "கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் றிஃதோ பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு" (கலி. 141) எனவரும். இங்ஙனம் வைப்பவே வருகின்ற ஐஞ்சீரடுக்கலும் ஆறுமெய் பெறுதலும் இப்பாட்டின்கணன்றி யேலாவாயின. இதனை யீற்றுக்கண் வைத்ததனானே மேற்கூறுங் கொச்சகமுந் தரவும் போக்குமின்றி யிப்பாட்டு மிடைந்தும் வருமென்பதூஉம் இவ்வதிகாரத்தாற் கொள்க. மெய்யென்றதனான் அடுக்குஞ்சீ ரதன் முதலினும் இறுதியினும் வருமென்று கொள்க. இயற்கை சிதையாமற் றோன்றுமெனவே கட்டளையுங் கட்டளை யல்லதுமென்ற வெண்பாவிலக்கண மிரண்டுஞ் சிதையாமை வருமென்றாராம். வெளிப்பட வென்றதனாற் றளைவிரவி வருதலுங் கொள்க. தரவும் போக்குமென்ற உம்மைகள் எண்ணும்மைகள். ஒழிந்த மூன்றும் இறந்தது தழீஇய எச்சவும்மை. கலிவெண்பாட்டுத் தனிநிலையின்றி விரவுறுப்பாயும் வருமென்ற லின், "சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல் சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த சான்றீ ருமக்கொன் றறிவுறுப்பென் மான்ற துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டுந் துஞ்சே னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தெ னெவ்வநோய் தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவென் பாய்மா நிறுத்து; யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப மாமேவி நின்று மடல்புணையா நீந்துவேன் றேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு; உய்யா வருநோய்க் குயலாகு மைய லுறீஇயா ளீத்தவிம் மா; காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரும் மாணிழை மாதரா ளேஎரெனக் காமனது ஆணையான் வந்த படை; காமக் கடும்பகையிற் றோன்றினேர்க் கேம மெழினுத லீத்தவிம் மா; அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும் வகையினா னுள்ளஞ் சுடுதரு மன்னோ முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் தகையாற் றலைக்கொண்ட நோய்; அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற நேரிழை யீத்தவிம் மா; ஆங்கதை, அறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென் றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே" (கலி. 139) இது தரவும் போக்கும் பாட்டிடைமிடைந்த கலிவெண்பாட் டாசிரியச் சுரிதகத் தான் வந்தது. இவ்வாறே வெள்ளைச் சுரிதகத்தான் வருவனவுங் கொள்க. "கண்டவி ரெல்லாங் கதுமென வந்தாங்கே பண்டறியா தீர்போல நோக்குவீர் கொண்டது மாவென் றுணர்மின் மடலன்று மற்றிவை பூவல்ல பூளை யுழிஞையோ டியாத்த புனவரை யிட்ட வயங்குதார்ப் பீலி பிடியமை நூலொடு பெய்ம்மணி கட்டி யடர்பொன் னவிரேய்க்கு மாவிரங் கண்ணி நெடியோன் மகனயந் துகந்தாங் கனைய வடிய வடிந்த வனப்பினென் னெஞ்ச மிடிய விடைக்கொள்ளுஞ் சாய லொருத்திக்கு அடியுறை காட்டிய செல்வேன் மடியன்மி னன்னே னொருவனேன் யான்; என்னானும் பாடெனிற் பாடவும் வல்லேன் சிறிதாங்கே யாடெனி லாடலு மாற்றுகேன் பாடுகோ வென்னு ளிடும்பை தணிக்கு மருந்தாக நன்னுத லீத்த விம் மா திங்க ளரவுறிற் றீர்க்கல்லா ராயினுந் தங்காதல் காட்டுவர் சான்றவ ரின்சாய லொண்டொடி நோய்நோக்கிற் பட்டவென் னெஞ்சநோய் கண்டுங்கண் ணோடாதிவ் வூர்; தாங்காச் சினத்தொடு காட்டி யுயிர்செகுக்கும் பாம்பு மவைப்படி லுய்யுமாம் பூங்கண் வணர்ந்தொலி யைம்பாலாள் செய்தவிக் காம முணர்ந்து முணராதிவ் வூர்; வெஞ்சுழிப் பட்ட மகற்குக் கரைநின்றா ரஞ்சலென்றாலு முயிர்ப்புண்டா மின்சீர் செறிந்தேர் முறுவலாள் செய்தவிக் காம மறிந்து மறியாதிவ் வூர்; ஆங்க என்க ணிடும்பை யறீஇயினெ னுங்கட் டெருளுற நோக்கித் தெரியுங்கா லின்ன மருளுறு நோயொடு மம்ம ரகல விருளுறழ் கூந்தலா ளென்னை யருளுறச் செயினுமக் கறனுமா ரதுவே" (கலி. 140) இது 'பாடெனி' லென்றும், 'ஆடெனி' லென்றும் எதுகையியைந்த அளவடி 'என்னானும்' என வேறுநின்ற சீரொடுங்கூடி யைஞ்சீரடுக்கிற்று. இதனுள் 'ஆங்க' எனத் தனிச்சொல் வந்தது. "காராரப் பெய்த" (கலி. 109) என்னு முல்லைப்பாட்டுள் "இவடான் றிருந்தாச் சுமட்டின ளேனைத் தோள்வீசி வரிக்கூழ் வட்டி தழீஇ யரிக்குழை யாடற் றகையள் கழுத்தினும் வாலிதி னுண்ணிதாத் தோன்று நுசுப்பு" என ஐஞ்சீரடுக்கியும் "இவள்தான் வருந்தநோய் செய்திறப்பி னல்லான் மருந்தல்லள் யார்க்கு மணங்காதல் சான்றாளென் றூர்ப்பெண்டிர் மாங்காய் நறுங்காடி கூட்டுவேம் யாங்கு மெழுநின் கிளையொடு போவென்று தத்தங் கொழுநரைப் போகாமற் காத்து முழுநாளும் வாயி லடைப்ப வரும்" என ஐஞ்சீரடுக்கிய சுரிதகத்தானும் வந்தது. "அரிதினிற் றோன்றிய யாக்கை புரிபுதாம் வேட்டவை செய்தாங்கே காட்டிமற் றாங்கே யறம்பொரு ளின்பமென் றம்மூன்றி னொன்றன் றிறஞ்சேரார் செய்யுந் தொழில்க ளறைந்தன் றணிநிலைப் பெண்ணை மடலூர்ந் தொருத்தி யணிநலம் பாடி வரற்கு, ஓரொருகா லுள்வழியா ளாகி நிறைமதி நீரு ணிழற்போற் கொளற்கரியள் போரு ளடன்மாமே லாற்றுவே னென்னை மடன் மாமேன் மன்றம் படர்வித் தவள்; வாழி சான்றீர் பொய்தீ ருலக மெடுத்த கொடிமிசை மையறு மண்டலம் வேட்டனள் வையம் புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு மின்னா விடும்பைசெய் தாள்; அம்ம சான்றீர்; கரந்தாங்கே யின்னாநோய் செய்யுமற் றிஃதோ பரந்த சுணங்கிற் பணைத்தோளாள் பண்பு. இடியுமிழ் வானத் திரவிருள் போழுங் கொடிமின்னுக் கொள்வேனென் றன்னள் வடிநாவின் வல்லார்முற் சொல்வல்லே னென்னைப் பிறர்முன்னர்க் கல்லாமை காட்டி யவள்; வாழி சான்றீர். என்றாங்கே, வருந்தமா வூர்ந்து மறுகின் கட் பாடத் திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே பொருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை போலக் கொடுத்தார் தமர்" (கலி. 141) இதனுள் "வாழி சான்றீர்," "அம்ம சான்றீர்" என ஈற்றுக்கண் வந்த சீர்களை முதலடிக்கட் பொருள்முடியுமாறு கூட்டி ஐஞ்சீரடுக்கியாங் கடுக்க அறுசீரா னவ்வாறு வந்ததாம். இதற்கும் அறுசீரடுக்கியும் எனக் கூட்டிப் பொருளுரைக்க. என்றாங்கு, தனிச்சொல். "புரிவுண்ட" (கலி. 142.) என்னும் நெய்தற்கலியுள் "புரிவுண்ட புணர்ச்சியுள்" எனக் கலித்தளையும் வந்து "புல்லாரா மாத்திரை யருகுவித் தொருவரை யகற்றலிற் றெரிவார்கண்" எனவும் "இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தனள்" எனவும், இயற்சீர் நிரையாயொன்றியும் பாவேறுபட்டு "எல்லையு மிரவுங் கழிந்தன வென்றெண்ணி யெல்லிரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல" என ஐஞ்சீரடிவந்த வெள்ளைச் சுரிதகமும் பெற்ற கலிவெண் பாட்டு. முற்கூறிய சொற்சீரடியே ஈண் டைஞ்சீரும் அறுசீருமா யடுக்கின என்றுணர்க. இதற்கு இச்சீர்களை விதந்தோதவே கலிக்கு நேர்ந்த சொற்சீரடி ஒத்தாழிசைக்கும் இதன் முற்கூறிய கலிவெண்பாட்டிற்கும் வாராவென் றுணர்க. இதற்கினமாகிய முடுகியலும் அவ்விரண்டிற்கும் வாராமை கொள்க. இவற்றிற்கு வரையறை அம்போதரங்கத்திற் கோதிய வரையறையே வேறின்றென வுணர்க. இனிப் பலவுறுப்பின்றி யவ்வாறு ஒருபாட்டே வரின் அதனை வெண்கலியென்பாரு முளர். நூற்றைம்பது கலியுள் அவ்வாறு வருவன இன்மையின் அது சான்றோர் செய்யுளொடு மாறுகொள்ளுமென மறுக்க. தாழம்படாமையின் இடைநிலைப்பாட்டென்னாதேயும், துள்ள லுஞ் செப்பலும் என்னு மிருவகைக் கொச்சகமும் ஒருங்கு வாராமையிற் கொச்சகமென்னும் பேர் கொடாதும் பாட்டென்றார்; அது வெண்பாவிய லான் வெளிப்பட வருமெனவே வெள்ளைக் கொச்சகமெனப்படும் எ-று. (154.) அகநிலைக் கொச்சகக்கலியின் இலக்கணம் 155. பாநிலை வகையே கொச்சகக் கலியென நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே. இது நிறுத்தமுறையே அகநிலைக் கொச்சகக்கலி கூறுகின்றது. (இ-ள்.) மேற்பாவிநின்ற நிலைவகையான் கொச்சகக்கலியா மென்று நூலறிந்த ஆசிரியர் கூறித் துணித்தனர் எ-று. அறை - துணித்தல் "அறைக்கரும்பு" (பொருந. 193) போல. பாநிலை யென்றது மேலொருபோகெனக் கூறிய கொச்சகப்பாநிலையை நோக்கிற்று, அதுவுங் கொச்சகமாதலின். துணித்தன ரென்றதனான் அதிகாரத்தாற் சேட்படக்கூறிய "தரவின் றாகித் தாழிசை பெற்றும்" (செய். 149) என்ற தொன்றனையுமே துணித்து மாற்றி, யொழிந்தன பாவிநின்ற வகையான் இவ்வக நிலைக்கொச்சகமும் வருமென்றுணர்க. எனவே பரணிப்பாட்டுப்போல வெளிப்பட்டு அகநிலைக் கொச்சகம் வாராவென்றாராம். 'வகை'யென்றதனான் அதிகாரத்தானின்ற கலிவெண்பாவினது பாநிலையுங் கொள்ளப்படும். அது கொள்ளுங்கால் முன்னிற் சூத்திரத்திற் கூறிய நிலையெல்லாங் கொள்ளப்படும். "ஒருபொருணுதலிய" (செய். 154) என்னுஞ் சூத்திரத்தினிலை கொள்ளலாகாதென்றுணர்க. எனவே ஒருபொருணுதலாது வெளிப்படத் தோன்றுங் கலிப்பாட்டினுறுப் பொத்துத் தரவும் போக்கும் பாட்டும் இடைமிடைந்தும், பாட்டுக் கொச்சகமாயும், அவை யைஞ்சீரும் அறுசீருமடுக்கி வருதலுமெல்லாங் கொள்ளப்படும். இவ்வாறு வந்தன வெண்பாவிற் சிதைந்து ஓசையும் பொருளும் வேறாகலிற் கொச்சகமென்றார். தரவிணைந்து வாராது யாப்பின் வேறுபட்டு ஒருதரவே வந்தாற் கொச்சகமென்றலுந் தரவிணைந்துழிச் சுரிதகம் பெறுதலும் வேறாகலிற் கொச்சகக் கலி என்றார். தரவிணைந்து தனிச்சொல்லுஞ் சுரிதகமுமுடன் பெறுதலும் எல்லாம் யாப்பின் வேறுபட்ட கொச்சகமென்றலும், ஒத்தாழிசை மூன்றடுக்கினு மவற்றின் வேறுபாடறிந்து கொச்சகமென்றலும், தேவபாணியாகாதவழிக் காமப் பொருள்பற்றி வாராது அறம் பொரு ளின்பம் வீடென்னு நான்கும் பற்றிப் பொருள் வேறுபட வந்தன கொச்சக மென்றலும், பாவேறுபட்டன கொச்சகமென்றலும், பிறவும் உணர்வோரே நூலறி புலவர்; அல்லாதார் நூலுணராரென்ப தறிவித்தற்கு 'நூனவில் புலவ'ரென்றார். எனவே கொச்சகக்கலியுள் ஒருசாரனவற்றை இனமென்பார்க்கு அவை அவ்வப்பாக்களுள் வரின் இவ்வகையே கொச்சகமெனல் வேண்டும். அது பொருந்தாதென்ற வாறாயிற்று. (எ-டு.) "செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய வகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்லை மன்ற வினி; செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி யன்பற மாறியா முள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை யென் றிறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குநின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாம லாண்டோ ரவலம் படுதலு முண்டு" (கலி.19) இது தரவிணைக்கொச்சகம். கொச்சகம் வெண்பாவாயும் வருதலானுந் தாழிசையொடு தொடராது வருதலானும் இது கொச்சக மாயிற்று. ஒரு பொருணுதலி யிவ்வாறு வரினுங் கொச்சகமென்றுணர்க. "மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன் கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற் சீர்மிகு சிறப்பினோன் மரமுத லசைத்த நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப் பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்; ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுத லன்பெனப் படுவது தன்கிளை செறாமை யறிவெனப் படுவது பேதையார் சொன்னோன்றல் செறிவெனப் படுவது கூறியது மறாமை நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல் பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல் ஆங்கதை யறிந்தனி ராயினென் றோழி நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க தீம்பா லுண்டோர் கொள்கலம் வரைதலி னின்றலை வருந்தியா டுயரஞ் சென்றனை களைமோ பூண்கநின் றேரே" (கலி. 133) இது தனிச்சொல்லின்றி யாசிரியச்சுரிதகம் பெற்ற தரவிணைக் கொச்சகம். "மின்னொளி ரவிரற லிடைபோழும் பெயலேபோற் பொன்னகை தகைவகிர் வகைநெறி வயங்கிட்டுப் போழிடை யிட்ட கமழ்நறும் பூங்கோதை யின்னகை யிலங்கெயிற்றுத் தேமொழித் துவர்ச்செவ்வாய் நன்னுதா னினக்கொன்று கூறுவாங் கேளினி நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து நுதலு முகனுந் தோளுங் கண்ணு மியலுஞ் சொல்லு நோக்குபு நினைஇ யைதேய்ந் தன்று பிறையு மன்று மைதீர்ந் தன்று மதியு மன்று வேயமன் றன்று மலையு மன்று பூவமன் றன்று சுனையு மன்று மெல்ல வியலு மயிலு மன்று சொல்லத் தளருங் கிளியு மன்று; எனவாங்கு, அனையன பலபா ராட்டிப் பையென வலையர் போலச் சோர்பத னொற்றியென் னெஞ்சு நெகிழ்ந்த செவ்வி காணூஉப் புலையர் போலப் புன்க ணோக்கித் தொழலுந் தொழுதான் றொடலுந் தொட்டான் காழ்வரை நில்லாக் கடுங்களி றன்னோன் றொழூஉந் தொடூஉமவன் றன்மை யேழைத் தன்மையோ வில்லை தோழீ" (கலி. 55) இது தனிச்சொல்லும் ஆசிரியச்சுரிதகமும் பெற்ற தரவிணைக் கொச்சகம். "வெல்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தா னல்லாற்றி னுயிர்காத்து நடுக்கறத் தான்செய்த தொல்வினைப் பயன்துய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போற் பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர வானாது கலுழ்கொண்ட வுலகத்து மற்றவ னேனையா னளிப்பான்போ லிகலிருண் மதிசீப்பக் குடைநிழ லாண்டாற்கு மாளிய வருவாற்கு மிடைநின்ற காலம்போ லிறுத்தந்த மருண்மாலை; மாலைநீ, தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த போதுபோற் குவிந்தவென் னெழினல மெள்ளுவா யாய்சிறை வண்டார்ப்பச் சினைப்பூப்போற் றளைவிட்ட காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்; மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழ லிசைகேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய் செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார் பாராட்டும் பொய்தீர்ந்த புணர்ச்சியுட் புதுநலங் கடிகல்லாய்; மாலைநீ, தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்பப் பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மைபா ராட்டுவாய் தகைமிக்க புணர்ச்சியார் தாழ்கொடி நறுமுல்லை முகைமுகந் திறந்தன்ன முறுவலுங் கடிகல்லாய்; எனவாங்கு, மாலையு மலரு நோனா தெம்வயி னெஞ்சமு மெஞ்சுமற் றில்ல வெஞ்சி யுள்ளா தமைந்தோ ருள்ளு முள்ளி லுள்ள முள்ளு ளுவந்தே" (கலி. 118) இது "நடைநவின் றொழுகு மாங்கென் கிளவி" (செய். 135) என்னு மிலக்கணஞ் சிதைய இடையிடைச் சொற்சீரடி பலவருதலின் ஒத்தாழிசை யாகாது எண்ணிடையிட்டுச் சின்னங் குன்றிய கொச்சக மாயிற்று. இனி "அகன்ஞாலம்............மயங்கியோரே" (கலி. 119) "எஃகிடை தொட்டகார்" (கலி. 32) இவையும் இவ்வாறே வந்தன. இனி யாப்பின் வேறுபட வந்த "அருடீர்ந்த காட்சி" (கலி. 120) "நயனும் வாய்மையும்" (கலி. 130) என்பனவும் ஒக்கும். இனிப் பலவடுக்கிப் பொருட்டொடராய அறம் பொரு ளின்பம் வீடென்பன விராய்ப் பொருள் வேறுபடவருந் தரவுகொச்சகம் பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலியனவாம். "கொடியவுங் கோட்டவு நீரின்றி நிறம்பெறப் பொடியழற் புறந்தந்த பூவாப்பூம் பொலங்கோதைத் தொடிசெறி யாப்பமை யரிமுன்கைப் பணைத்தோளா யடியுறை யருளாமை யொத்ததோ நினக்கென நரந்தநா றிருங்கூந்த லெஞ்சாது நனிபற்றிப் பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் விரன்முறைச் சுற்றி மோக்கலு மோந்தனன் நறாஅ வவிழ்ந்தன்ன வென்மெல்விரற் போதுகொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன் றொய்யி லிளமுலை யினிய தைவந்து தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி யளிக்கு மையல் யானையின் மருட்டலு மருட்டினன்; அதனால், அல்லல் களைந்தனென் றோழி நந்நக ரருங்கடி நீவாமை கூறி னன்றென நின்னொடு சூழ்வ றோழி நயம்புரிந் தின்னது செய்தா ளிவளென மன்னா வுலகத்து மன்னுவது புரைமே" (கலி. 54) "அதனால்" எனத் தனிச்சொற்பெற்று அடக்கியலில்லாச் சுரிதகத் தோடு அடிநிமிர்ந்தோடிய பாநிலைக் கொச்சகக் கலிப்பா. "பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி யீர்நறுங் கமழ்கடாத் தினம்பிரி யொருத்த லாறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டு மென்னு மருளில் சொல்லு நீசொல் லினையே நன்னர் நறுநுத னயந்தனை நீவி நின்னிற் பிரியலெ னஞ்சலோம் பென்னு நன்னர் மொழியு நீமொழிந் தனையே அவற்றுள், யாவோ வாயன மாஅன் மகனே கிழவ ரின்னோ ரென்னாது பொருடான் பழவினை மருங்கிற் பெயர்பு பெயர்புறையு மன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின் றிமைப்புவரை வாழாண் மடவோ ளமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே" (கலி. 21) "அவற்றுள்" என ஐஞ்சீரடிவந்து தனிச்சொல்லும் அடக்கியலு மின்றிச் சுரிதகம்பெற்று அடிநிமிர்ந்தோடிய கொச்சகம்; "அகன்ஞாலம் விளக்கும்" (கலி. 119) என்பது அடிநிமிர்ந்தோடிய அகநிலைக் கொச்சகம். கொச்சகவொருபோகோடு ஒப்பாமாறு. "மன்று பார்த்து நின்று தாயைக் கன்று பார்க்கு மின்றும் வாரார்" இஃது இருசீர் நான்கடித்தரவு கொச்சகம். "தஞ்சொல் வாய்மை தேற்றி யஞ்ச லோம்பென் றகன்ற வஞ்சர் வாரா ராயி னெஞ்ச நில்லா தேகாண்" இது முச்சீர் நான்கடித்தரவு கொச்சகம். "நீரலர் தூற்றத் துயிலா நெடுங்கங்குல் வாரல ராகி யவரோ வலித்தமைந்தார் ஆரலார் நாரைகா ளன்றில்கா ளன்னங்கா ளூரலர் தூற்றயா னுள்ள முகுவேனோ" இது நாற்சீர் நான்கடித்தரவு கொச்சகம். "கன்னி ஞாழற் கமழ்பூங் கானல் யான்கண்ட பொன்னங் கொடியை யீன்றோ ரில்லை போலுமான் மன்னன் காக்கு மண்மேற் கூற்றம் வரவஞ்சி யன்ன தொன்று படைத்தா யாயி னெவன்செய்கோ" இஃ தைஞ்சீர் நான்கடியான் வந்தது. இனி "நூனவில்புலவ" ரென்றதனான் இதனைக் கோவையாக்கி யெழுத்தெண்ணி யளவியற்படுத்துச் செய்வனவுந் தரவுகொச்சகம். அவற்றுள் நேரெழுத்து வருவனவுங் கொச்சகமாம். (எ-டு.) "திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளீசர்தில்லைக், குரு..............கின்றதே" (திருச்சிற்ற. 1) "போதோ விசும்போ............பதியே" (திருச்சிற்ற. 2) இவை பதினேழும் பதினாறுமாய் வந்த தரவுகொச்சகம். "குயிலைச் சிலம்படிக் கொம்பினை............பளிக் கறையே" (திருச்சிற்ற. 30) "காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல், சீரணி...........மூதியமே" (திருச்சிற்ற. 400) இவை யொரோவெழுத்து மிக்க தரவுகொச்சகம். "காண்பா னவாவினாற் காதலன் காதலிபின் னடவா நிற்ப நாண்பால ளாகுதலா னன்னுதறன் கேள்வன்முன் னடவா நிற்ப வாண்பான்மை குன்றா வயில்வே லவன்றனக்கு மஞ்சொ லாட்கும் பாண்பால் வரிவண்டு பாடு மருஞ்சுரமும் பதிபோன் றன்றே" இஃது அறுசீர் நான்கடித்தரவு கொச்சகம். பிறவு மன்ன. "இலங்கொளி வெண்மருப்பி னிட்டகை தூங்கவோ ரேந்தல் யானை, கலங்கஞ ரெய்திக் கதூஉங் கவளங் கடைவாய் சோரச் சிலம்பொழி குன்றென நின்றது செய்வ தெவன்கொ லன்னாய்" இஃது அறுசீர் மூன்றடிக் கொச்சகம். "தண்ணந் துறைவன் றார்மேற் போன வண்ண வண்டு வாரா தற்றே வண்ண வண்டு வாரா தாயிற் கண்ணீர் நில்லா தேகாண்" இது நான்கடியாசிரியத்துள் இறுதி முச்சீரான் வந்து யாப்பு வேறுபட்டது. "நிணங்கொள் புலாலுணங்கு முன்றினின்று புள்ளோப்புத றலைக்கீ டாகக் கணங்கொள்வண் டார்த்துலாங் கன்னி நறுஞாழல் கையி னேந்தி மணங்கமழ் பூங்கானன் மன்னிமற் றாண்டோ ரணங்குறையு மென்ப தறியே னறிவேனே லடையேன் மன்னோ" (சிலப். கானல்) இஃது ஈற்றயலடி குறைந்தது. இதனைப் பாமயக்கத்துக்கும் ஏற்று நிற்றலின் ஈண்டுக் காட்டிற்று "அறுசீ ரடியே" (செய். 64) என்னுஞ் சூத்திரத்திற் கூறிற்றேனு மென்பது. இது ஒருபொருண்மேன் மூன்றடுக்கி வருதலுங் கொள்க. "கோடல் விண்டு கோப மூர்ந்த கொல்லைவாய் மாடு நின்ற கொன்றை யேறி மௌவல் பூத்த பாங்கெலா மாடு மஞ்ஞை யன்ன சாய லாய வஞ்சொன் மாதரா யாடன் மைந்தர் தேரும் வந்து தோன்றுமே" இது நடுவீரடி மிக்கது. "இரங்கு குயின்முழவா வின்னிசையாழ் தேனா வரங்க மணிபொழிலா வாடும்போலு மிளவேனி லரங்க மணிபொழிலா வாடுமாயின் மரங்கொன் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்" "வண்டுளர் பூந்தார் வளங்கொன்றைத் தாரன்றே முத்தரும்பிப் பைம்பொன் மலர்ந்து முருகுயிர்க்குந் தொத்தரும்பு கானற் றுறையேந் துறைவந் தெமது தொன்னலமு நாணு நிறைவளையும் வௌவி நிறையற்றா னஞ்சேர்ப்பன்" இவை அடியும் அசையுஞ் சீரு மிடைமடக்கிச் சிலவடி குறைந்தன. இவை யசையுஞ் சீரும் அடிமடக்கியும் வரும். "புன்னை நீழ னின்றார் யார்கொ லன்னை காணின் வாழாள் தோழி" "மல்ல லூர விவ்வி லன்றாற் பல்பூங் கோதை யில்" இவை ஈரடியா யீற்றடி குறையாதுங் குறைந்தும் வந்தன. "கொய்தினை காத்துங் குளவி யடுக்கத்தெம் பொய்தற் சிறுகுடி வாரனீ யைய நலம்வேண்டின்" இது ஈரடியா யீற்றடிமிக்கது. இதுவும் ஒருபொருண்மேன் மூன்றடுக்குதலுங் கொள்க. இன்னும் முற்கூறிய கொச்சகவொருபோகின் பகுதியாய் வேறுபட்டு வருவன வந்துழிக்காண்க. "வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாங் கொடிபடு வரைமார்பிற் கோழியார் கோமானே; துணைவளைத் தோளிவண் மெலியத் தொன்னலந் தொடர்ப்புண்டாங் கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற்கோர் மாறென்று துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரே; அதனாற், செவ்வாய்ப் பேதை யிவடிறத் தெவ்வா றாங்கொலி தெண்ணிய வாறே" இது தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்றுப் பொருள் வேறுபட்ட தரவிணைக் கொச்சகம். இனிக் கலிவெண்பா வுறுப்பொத்துப் பாவேறுபடுவன வருமாறு. "ஒன்று, இரப்பான்போ லிளிவந்துஞ் சொல்லு முலகம், புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன், வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போ, னல்லார்கட் டோன்று மடக்கமு முடையன், இல்லோர் புன்க ணீகையிற் றணிக்க வல்லான் போல்வதோர் வண்மையு முடையன் அன்னா னொருவன்றன் னாண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டீ சுடரிழாய் பன்மாணும்; நின்னின்றி யமையலேன் யானென்னு மவனாயி னன்னான்சொ னம்புண்டல் யார்க்குமிங் கரிதாயி னென்னுற்ற பிறர்க்குமாங் குளகொல்லோ நறுநுதால்; அறியாய்நீ வருந்துவல் யானென்னு மவனாயிற் றமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கு மரிதாயி னளியரோ வெம்போல வீங்கிவன் வலைப்பட்டார்; வாழலேன் யானென்னு நீநீப்பி னவனாயி னேழைய ரெனப்பலர் கூறுஞ்சொற் பழியாயிற் சூழுங்கா னினைப்பதொன் றறிகிலேன் வருந்துவல் சூழுங்கா னறுநுதா னம்முளே சூழ்குவம்; அவனை நாணடப் பெயர்த்த னமக்குமாங் கொல்லாது பேணின ரெனப்படுதல் பெண்மையு மன்றவன் வௌவினன் முயங்கு மாத்திரை வாவெனக் கூறுவேன் போலக் காட்டி மற்றவன் மேஎவழி மேவாய் நெஞ்சே" (கலி. 47) இது ஒன்றெனவும் அவனைஎனவுஞ் சொற்சீருந் தனிச்சொல்லும் வந்து இடைநிலைப்பாட்டினுள் ஒன்றோரடி மிக்கு ஒருபொருண்மேல் மூன்று வருதலின் ஒத்தாழிசையாகாது கொச்சகமாய்க் கலிவெண்பாட்டின் வேறாயிற்று. "வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு வானீங்கு வைப்பின் வழங்காத்தேர் நீர்க்கவாங் கானங் கடத்தி ரெனக் கேட்பின் யானொன் றுசாவுகோ வைய சிறிது; நீயே செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின் கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே இவட்கே செய்வுறு மண்டில மையாப் பதுபோன் மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே; நீயே வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் மரீஇய வம்பு தெரிதியே; இவட்கே, சுனைமா ணீலங் காரெதிர் பவைபோ லினைநோக் குண்க ணீர்நில் லாவே; நீயே, புலம்பிய லுள்ளமொடு பொருள்வயிற் செலீஇய வலம்படு திகிரி வாய்நீ வுதியே; இவட்கே, யலங்கிதழ்க் கோடல் வீயுகு பவைபோ லிலங்கே ரெல்வளை யிறையூ ரும்மே; எனநின், சென்னவை யரவத்து மினையவள் நீநீப்பிற் றன்னலங் கடைகொள்ளப் படுதலின் மற்றிவ ளின்னுயிர் தருதலு மாற்றுமோ முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே" (கலி. 7) இது கலிவெண்பாவிற்கோதிய வூறுப்புப்பெற்றதேனுந் தரவு வெண்பாவாய் ஒழிந்தன வெண்பாவன்மையிற் கொச்சகமாயிற்று. "காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா டாமரைக் கண்புதைத் தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா னீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற் பூணாக முறத்தழீஇப் போதந்தா னகனகலம் வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி யருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே; அவனுந்தான் ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும் வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத் தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங் கானக நாடன் மகன்; சிறுகுடி யீரே சிறுகுடி யீரே வள்ளிகீழ் வீழா வரைமிசைத் தேன்றொடா கொல்லை குரல்வாங்கி யீனா மலைவாழ்ந ரல்ல புரிந்தொழுக லான்; காந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின் வாங்கமை மென்றோட் குறவர் மடமகளிர் தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலாற் றம்மையருந் தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்; எனவாங்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்; அவரும், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபக லெல்லா முருத்தெழுந் தாறி யிருவர்கட் குற்றமு மில்லையா லென்று தெருமந்து சாய்த்தார் தலை; தெரியிழாய் நீயுநின் கேளும் புணர வரையுறை தெய்வ முவப்ப வுவந்து குரவை தழீஇயா மாடக் குரவையுட் கொண்டு நிலைபாடிக் காண்; நல்லாய், நன்னா டலைவரு மெல்லை நமர்மலைத் தந்நாண்டாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்; புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றில் நனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ; விண்டோய்கன் னாடனு நீயும் வதுவையுட் பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ பண்டறியா தீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ; மைதவழ் வெற்பன் மணவணி காணாமற் கையாற் புதைபெறூஉங் கண்ணுங் கண்ணோ; என்னை மன், நின்கண்ணாற் காண்பென்மன் யான்; நெய்த லிதழுண்கண் ணின்கண்ணா கென்கண் மன; எனவாங்கு, நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத், தகைமிகு தொகைவகை..............வினியே" (கலி. 39) இதனுள் "ஏன லிதணத்து" என்பது முதலிய கொச்சகங்கள் வெண்பாவாய்ப் 'புனவேங்கை' முதலியன துள்ளலோசை விராய்த் தளையொன்றிய கொச்சகமாய் ஒழிந்த பாவு மயங்கிச் சுரிதகமும் முடுகி வருதலின் இது கொச்சகமாயிற்று. "கொடுமிட னாஞ்சிலான்" (கலி. 36) என்னும் பாட்டுள் "பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல் சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள்" என முற்றடியின்றிக் குறைவு சீர்த்தாகிய சொற்சீரடி வருதலின் இதுவுங் கொச்சகமாயிற்று. "மலிதிரை யூர்ந்து" (கலி. 104) என்னும் முல்லைப்பாட்டுள் "இரிபெழு பதிர்பதிர் பிகந்துடன் பலர்நீங்க" "தாளெழு துணிபிணி யிசைதவிர் பின்றி" எனவும் முடுகுதலிற் கொச்சகமாயிற்று. இவற்றுட் கலிவெண்பாப்போலச் சொற் சீரடியும் வந்தன. பிறவுமன்ன. மேலைச் சூத்திரத்துள் இதற்கதிகாரம்பட இடைநிலைப்பாட் டினை யீற்றின் வைத்தமையிற் றரவும் போக்குமின்றி யிடைநிலைப் பாட்டே வருதலுங் கொச்சகமாம். (எ-டு.) "காலவை, சுடுபொன் வளைஇய வீரமை சுற்றொடு பொடியழற் புறந்தந்த செய்யுறு கிண்கிணி; உடுத்தவை, கைவினைப் பொலிந்த காசமை பொலங்காழ்மேன் மையில் செந்துகிர்க் கோவை யவற்றின்மேற் றைஇய பூந்துகி லைதுகழ லொருதிரை; கையதை, யலவன் கண்பெற வடங்கச் சுற்றிய பலவுறு கண்ணுட் சிலகோ லவிர்தொடி; பூண்டவை, யெறியா வாளு மெற்றா மழுவுஞ் செறியக் கட்டி யீரிடைத் தாழ்ந்த பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின் மையற விளங்கிய வானேற் றவிர்பூண்; சூடின, இருங்கடன் முத்தும் பன்மணி பிறவு மொருங்குடன் கோத்த வுருளமை முக்காழ்மேற் சுரும்பார் கண்ணிக்குச் சூழ்நூ லாக வரும்பவிழ் நீலத் தாயிதழ் நாணச் சுரும்பாற்றுப் படுத்த மணிமருண் மாலை; ஆங்க, அவ்வும் பிறவு மணிக்கணி யாகநின் செல்வுறு திண்டேர்க் கொடுஞ்சினை கைப்பற்றிப் பைப்பையத் தூங்குநின் மெல்விரற் சீறடி நோதலு முண்டீங் கென்கை வந்தீ செம்மானின் பாலுண் ணிய பொய்போர்த்துப் பாண்டலை யிட்ட பலவல் புலையனைத் தூண்டிலா விட்டுத் துடக்கித்தாம் வேண்டியார் நெஞ்சம் பிணித்த றொழிலாத் திரிதரு நுந்தைபா லுண்டி சில; நுந்தைவாய் மாயச்சூ டேறி மயங்குநோய் கைமிகப் பூவெழி லுண்கண் பனிபரப்பக் கண்படா ஞாயர்பா லுண்டி சில; அன்னையோ, யாயெம் மகனைப்பா ராட்டக் கதுமெனத் தாம்வந்தார் தம்பா லவரொடு தம்மை வருகென்றார் யார்கொலோ வீங்கு; என்பாலல், பாராட் டுவந்தோய் குடியுண் டீத்தை; என், பாராட்டைப் பாலோ சில; செருக்குறித் தாரை, யுவகைக்கூத் தாட்டும் வரிசைப்பெரும் பாட்டொ டெல்லாம் பருகீத்தை தண்டுவென் ஞாயர் மாட்டைப்பால்" (கலி. 85) என இப்பாட்டு இடைநிலைப்பாட்டே முழுதும் வந்தது. இஃது உறழ்பொருட் டன்மையிற் கொச்சகம். இவை யெல்லாங் கலிவெண்பா வுறுப்பொத்துப் பாவேறு பட்ட கொச்சகம். "எருத்தே கொச்சகம்" (செய். 153) என்னுஞ் சூத்திரத்தே அம்போ தரங்கத்திற்குக் கூறியவளவே மேல்வருகின்ற மூன்று பாக்கட்கு மளவென்று கூறிப் போந்ததனான் அளவு முணர்க. இனிக் கொச்சக வொருபோகுடன் மாட்டெறிதலின் அதனளவு இதற்கும் அளவாமெனின் ஆகாது; வண்ணத்திற்கோதிய வுறுப்பமைய வாராதது கொச்சக மாதலின் அதற்கோதிய அளவே கொச்சகவொரு போகிற்கு அளவாயுஞ் சிறிது வேறுபட்டும் வரும். இது அங்ஙனம் வாராதென்று கொள்க. இதற்கு இரண்டடி முதற் பத்தடியளவும் வருவன தரவுகொச்சகமாமா றுதாரணத்திற் காண்க. (155) உறழ்கலியின் இலக்கணம் 156 கூற்று மாற்றமு மிடையிடை மிடைந்தும் போக்கின் றாத லுறழ்கலிக் கியல்பே. இது முறையானே உறழ்கலி கூறுகின்றது. (இ-ள்.) ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்றொருவர் கூறிச்சென்று பின்னர் அவற்றை யடக்குவதொரு சுரிதகமின்றி முடிவது உறழ்கலியாம் எ-று. 'போக்கின்'றெனவே ஒழிந்த வுறுப்புக்களெல்லாங் கலிவெண் பாட்டிற் கோதியவாறே வருமென்பதூஉம், பா மயங்கி வருமென்பதூஉம், அம்போதரங்கத்தினளவே யளவென்பதூம் மேனின்ற வதிகாரத்தாற் பெற்றாம். 'இயல்'பெனவே இயல்பன்றி விகாரவகையாற் சில போக் குடையவாதலும், அவை தாம் ஆசிரியமேயாகலும், சில தரவும் போக்கு மின்றி வருதலுஞ் சிறுபான்மை கொள்க. போக்குடையன தரவின்றி வாராமையுங் கொள்க. வெள்ளைக் கொச்சகம் பலவந்து அவற்றுள் ஒன்றைச் சுரிதக மெனின் அதற்குப் போக்கியற் பொருண்மை யின்மையான் அதனை நீக்கிப் போக்கியற் பொருண்மையின்றேனும் ஆசிரியம் வந்துழி யப்பாட்டிற் கொரு முடிவு காட்டி நிற்றலின் ஆசிரியமே போக்கியலாமெனக் கொண்டாம். நாடகச்செய்யுட்போல வேறுவேறு துணிபொருளவாகிய பலதொடர்ந்த வேறுபாடு நோக்கியும், பொருள்வேறுபாடுநோக்கியும், வரலாற்று முறைமை நோக்கியும், அதற்குரியதோர் இலக்கணத்தான் உறழ்கலியென வேறொரு செய்யுளென்றார்; கொச்சகத்தின் அடங்காமை யின். "மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை, மரபு வழிப்பட்ட சொல்லி னான" (மரபியல் 90) என மரபு கூறலின். (எ-டு.) "அரிநீ ரவிழ்நீல மல்லி யனிச்சம் புரிநெகிழ் முல்லை நறவோ டமைந்த தெரிமலர்க் கண்ணியுந் தாரு நயந்தார் பொருமுரண் சீறச் சிதைந்து நெருநையி னின்றுநன் றென்னை யணி; அணைமென் றோளாய் செய்யாத சொல்லிச் சினவுவ தீங்கெவ னையத்தா லென்னைக் கதியாதீ தீங்கின்மை தெய்வத்தாற் கண்டீ தெளிக்கு மற்றது அறிவல்யா னின்சூ ளனைத்தாக நல்லார் செறிதொடி யுற்ற வடுவுங் குறிபொய்த்தார் கூருகிர் சாடிய மார்புங் குழைந்தநின் றாருந் ததர்பட்ட சாந்தமுஞ் சேரி யரிமத ருண்கண்ணா ராராக் கவவிற் பரிசழிந் தியாழநின் மேனிகண் டியானுஞ் செருவொழிந்தேன் சென்றீ யினி; தெரியிழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய்நீ தீதின்மை யாற்றி னிறுப்பல் பணிந்து; அன்னதே லாற்றல்காண் வேறுபட் டாங்கே கலுழ்தி யகப்படின் மாறுபட் டாங்கே மயங்குதி யாதொன்றுங் கூறி யுணர்த்தலும் வேண்டாது மற்றுநீ மாணா செயினு மறுத்தாங்கே நின்வயிற் காணி னெகிழுமென் னஞ்சாயி னென்னுற்றாய் பேணாய்நீ பெட்பச் செயல்" (கலி. 91) இது தரவும் பாட்டு முடைத்தாய் ஐஞ்சீரடுக்கியும் ஆறு மெய் பெற்றும் வந்தும் போக்கின்றியுற்ற உறழ்கலி. முற்கூறிய பொருளைத் தொகுத்துக் கூறாமையி னிறுதிநின்ற "பேணாய்நீ பெட்பச் செயல்" என்றது வெள்ளைச் சுரிதகமாகாதாம். அது "அன்னதேயாயினு மாகமற் றாயிழாய், நின்னகை யுண்கம் முயங்குவாய் நின்னெஞ்ச, மென்னொடு நின்ற தெனின்" எனப் பின்னுமொன்று தலைவன் கூறற்கும் உடம்பட்டு நிற்றலின். இவ்வாறன்றி யாசிரியம் செய்யுளை முடித்துக் காட்டுதலின் அதனைச் சிறு பான்மை கொண்டார். "நலமிக நந்திய நயவரு தடமென்றோ ளலமர லமருண்க ணந்நல்லாய் நீயுறீஇய வுலமர லுயவுநோய்க் குய்யுமா றுரைத்துச்செல்; பேரேமுற் றார்போல முன்னின்று விலக்குவா யாரெல்லா நின்னை யறிந்ததூஉ மில்வழி தளரியா லென்னறிதல் வேண்டிற் பகையஞ்சாப் புல்லினத் தாயர் மகனேன் மற்றியான் ஒக்குமன் புல்லினத் தாயனைநீ யாயிற் குடஞ்சுட்டு நல்லினத் தாய ரெமர்; எல்லா, நின்னொடு சொல்லி னேதமோ வில்லைமன்; ஏதமன் றெல்லை வருவான் விடு; விடேன் உடம்பட்டு நீப்பார் கிளவி மடம்பட்டு மெல்லிய வாத லறியினு மெல்லியா னின்மொழிகொண் டியானோ விடுவேன்மற் றென்மொழிகொண் டென்னெஞ்ச மேவல் செயின்; நெஞ்சேவல் செய்யா தெனநின்றாய்க் கெஞ்சிய காதல்கொள் காமங் கலக்குற வேதிலார் பொய்ம்மொழி தேறுவ தென்; தெளிந்தேன் றெரியிழாய் யான்; பல்கால்யாங் கான்யாற் றவிர்மணற் றண்பொழி லல்க லகலரை யாயமொ டாடி முல்லை குருந்தொடு முச்சிவேய்ந் தெல்லை யிரவுற்ற தின்னங் கழிப்பி யரவுற் றுருமி னதிருங் குரல்போற் பொருமுர ணல்லேறு நாகுட னின்றன பல்லா னினநிரை நாமுடன் செலற்கே" (கலி. 113) இது போக்கிலக்கண மில்வழி யாசிரியச்சுரிதகம்பெற்ற உறழ்கலி. "வாரி நெறிப்பட்டு" (கலி. 114) என்னும் முல்லைப் பாட்டும் 'சுணங்கணி வனமுலை' (கலி. 60) என்னுங் குறிஞ்சிப் பாட்டு மது. "ஒரூஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யா நின்னை வெரூஉதுங் காணுங் கடை; தெரியிழாய் செய்தவ றில்வழி யாங்குச் சினவுவாய் மெய்பிரிந் தன்னவர் மாட்டு; ஏடாநினக்குத் தவறுண்டோ நீவீடு பெற்றா யிமைப்பி னிதழ்மறை பாங்கே கெடுதி நிலைப்பா லறியினு நின்னொந்து நின்னைப் புலப்பா ருடையவர் தவறு; அணைத்தோளாய் தீயாரைப் போலத் திறனின் றுடற்றுதி காயுந் தவறிலேன் யான்; மானோக்கி நீயழ நீத்தவ னானது னாணில னாயி னலிதந் தவன்வயி னூடுத லென்னோ வினி; இனி, யாது மீக்கூற்ற நாமில மன்ற தகையது கண்டைப்பாய் நெஞ்சே பனியானாப் பாடில்கண் பாயல் கொள" (கலி. 87) இது தரவும் போக்குமின்றி ஐஞ்சீரடுக்கி வந்த உறழ்கலி. சொற்சீரடி வந்தன வந்துழிக் காண்க. பிறவு மன்ன. (156) ஆசிரியத்திற்குரிய அடியின் சிறுமை பெருமை 157 ஆசிரியப் பாட்டி னளவிற் கெல்லை ஆயிர மாகு மிழிபுமூன் றடியே. இது நிறுத்த முறையே ஆசிரியத்திற்கு அளவியல் கூறுகின்றது. (இ-ள்.) ஆசிரியப்பாவின் பெருக்கத்துக்கு எல்லை யாயிரமாகும். சுருக்கத்தற்கெல்லை மூன்றடியாகும் எ-று. (எ-டு.) "நீல மேனி வாலிழை பாகத், தொருவ னிருதா ணிழற்கீழ் மூவகை யுலகு முகிழ்த்தன முறையே" (ஐங்குறு. வாழ்த்து) இது சுருக்கத்திற் கெல்லை. கூத்தராற்றுப்படை தலையளவிற் கெல்லை. மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் ஒழிந்த பாட்டேழும், பரிபாடலுங், கலியும் ஒழிந்த தொகையாறும் இடையளவிற் கெல்லை. பாட்டினெல்லை யென்னாது அளவென்றதனான் அதனியற்றாகிய வஞ்சிக்கும் இவ்வாறே கொள்க. "செங்கண்மேதி கரும்புழக்கி யங்கணீலத் தலரருந்திப் பொழிற்காஞ்சி நிழற்றுயிலுஞ் செழுநீர் நல்வயற் கழனி யூரன் புகழ்த லானாப் பெருவண் மையனே" இது சிற்றெல்லை. பட்டினப்பாலை யிடையளவிற் கெல்லை. மதுரைக்காஞ்சி தலையளவிற் கெல்லை. (157) நெடுவெண் பாட்டிற்கும் குறுவெண் பாட்டிற்கும் உரிய அடியளவு 158 நெடுவெண் பாட்டு முந்நா லடித்தே குறுவெண் பாட்டிற் களவெழு சீரே. இது முறையே வெண்பாவின் அடியளவை கூறுகின்றது. (இ-ள்.) நெடுவெண்பாப் பேரெல்லை பன்னீரடியையுடைத்து. குறுவெண்பாச் சிற்றெல்லை யீரடியையுடைத்து எ-று. இதனை வெண்பாட்டளவிற் கெல்லையென்னாது குறு வெண்பாட்டு நெடுவெண்பாட்டெனப் பெயர் கொடுத்துக் குறுமையும் நெடுமையும் அளவியலொடு படுத்துக்கொள்ளப்படுதலின் அளவியல் வெண்பாட்டு முளவென்பதூஉம், அது சிறப்புடைத்தென்பதூஉம் பெறுதும். எனவே, நெடுவெண்பாவின் பன்னீரடியிற் பாகமாகிய ஆறடியே யளவியல் வெண்பாவுக்குப் பேரெல்லையாகவும், அதன் பாகமாகிய மூன்றடியே குறுவெண்பாவிற்குப் பேரெல்லையாகவுங் கோடும். அங்ஙனங் கொள்ளவே நெடுவெண்பாவிற் கிழிந்த வெல்லை யேழடியாகவும் அளவியல் வெண்பாவுக்கு இழிந்தவெல்லை நான்கடியாகவுங் கொள்ளப் படும். இங்ஙனம் அளவியல்வெண்பாச் சிறப்புடைமை நோக்கி யாசிரியர் "அம்மை தானே யடிநிமிர் வின்றே" (செய். 236) என்று நெடுவெண்பா நேர்ந்திலர். அடிநிமிர் வின்றென்றது ஆறடியின் மிகாமையை. உரையிற் கோடலென்பதனாற் செப்பிக் கூறுஞ் செய்யுட்கு நான்கடியே மிக்க சிறப்புடைத்தெனக் கொள்க. "சிறப்புடைப் பொருளை பிற்படக் கிளத்தல்" என்பதனாற் குறள்வெண்பாவுஞ் சிறப்புடைமை பெறுதும். இக் கருத்தானே கீழ்க்கணக்கில் நான்கடியும் ஈரடியுமே மிக வந்தவாறும் முத்தொள்ளாயிரத்து நான்கடியே மிகவந்தவாறுங் காண்க. (எ-டு.) "யாதானு நாடாமால்" (திருக். 397) "இருதேவர் பார்ப்பா ரிடை" (ஆசாரக். 31) "துகடீர் பெருஞ் செல்வம்" (நாலடி. 2) "இனிதுண்பா னென்பா னுயிர்கொல்லா துண்பான் முனிதக்கா னென்பான் முகனொழிந்து வாழ்வான் றனிய னெனப்படுவான் செய்தநன் றில்லா னினிய னெனப்படுவான் யார்யார்க்கே யானு முனியா வொழுக்கத் தவன்" (நான்மணி. 60) "ஆரெயின் மூன்று மழித்தா னடியேத்தி யாரிடத்துத் தானறிந்த மாத்திரையா னாசாரம் யாரு மறிய வறனாய மற்றவற்றை யாசாரக் கோவை யெனத்தொகுத்தான் றீராத் திருவாயி லாய திறல்வண் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியென் பான்" (ஆசாரக். காப்பு) என இவை முறையே வந்தன. ஒழிந்த நெடுவெண்பாட்டு வந்துழிக் காண்க. (158) வசைப் பாட்டிற்குரிய அளவு 159 அங்கதப் பாட்டள வவற்றோ டொக்கும். இது வசைப்பாட்டெல்லை கூறுகின்றது. (இ-ள்.) வசைப்பாட்டினெல்லை முற்கூறியவைபோல ஈரடிச் சிறுமையும் பன்னீரடிப் பெருமையுமாய் வரும் எ-று. (எ-டு.) "இருடீர் மணிவிளக்கத் தேழிலார்" இது நான்கடியான் வந்தது. பிறவு மன்ன. (159) கலிவெண்பாவிற்கும் மருட்பாவிற்கும் அடிவரையறை இல்லை எனல் 160 கலிவெண் பாட்டே கைக்கிளைச் செய்யுள் புறநிலை வாயுறை செவியறி வென்றிவை தொகுநிலை யளவி னடியில வென்ப. இஃது "ஒருபொருணுதலிய" (செய். 154) என்னுஞ் சூத்திரத்திற் சீர்வகைக் கலிவெண்பாவிற்கும், நால்வகை மருட்பாவிற்கும் அடிவரை யறை யின்மை கூறுகின்றது. (இ-ள்.) கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள் புறநிலை வாயுறை செவியறிவு என்றிவை - கலிவெண்பாட்டு, கைக்கிளைச் செய்யுள், புறநிலை வாழ்த்துப் பொருண்மேல் வரும் செய்யுள், வாயுறை வாழ்த்துப் பொருள் மேல் வரும் செய்யுள், செவியறிவுறூஉப் பொருண்மேல் வருஞ் செய்யுள் என்றிவ்வைந்தும், தொகுநிலை அளவின் அடியில என்ப - பெருமைக்கு எல்லை இத்துணையெனத் தொகுத்துக் கூறும் தன்மையை உடைய அளவான் வரும் அடியையுடைய அல்லவென்று கூறுவர் புலவர் எ-று. (எ-டு.) "சுடர்த்தொடீ கேளாய் தெருவினா மாடும்" (கலி.51) இது ஒருபொருணுதலிப் பதினாறடியான்வந்தது. "திருந்திழாய் கேளாய் " (கலி. 65) என்பது இருபத்தொன்பதடியான் வந்தது. "இதனைக் கைக்கிளையோ டெண்ணுதலிற் கைக்கிளைப் பொருளொடுங் கலிவெண்பாட்டுவருதல் கொள்க. அது கலித்தொகைக்க ணின்மையிற் காட்டாமாயினாம். ஒழிந்த வுறுப்பொடுகூடிய கலிவெண் பாட்டுக்கள் பெற்ற அடிவரையறையும் அவ் வுதாரணங்களுட் காண்க. இனிக், "கனவினிற் காண்கொடாக் கண்ணுங் கலந்த நனவினுண் முன்விலங்கு நாணு -மினவங்கம் பொங்கோதம் போழும் புகாஅர்ப் பெருமானார் செங்கோல் வடுப்படுப்பச் சென்று" (முத்தொள். 62) இது புறப்புறக் கைக்கிளை. இதனைக் கைக்கிளைப் பொருண்மேல் வந்த கலிவெண்பாட் டெனின் இது சுட்டி யொருவர்ப் பெயர்க்கொண்ட பாடாண்டிணைப் புறப்பொருளாகலானுங் கலிவெண்பாட்டு அப் பொருண்மேல்வருதல் சிறுபான்மையாதலானும் இது பன்னீரடியினிகவாது வருதலானும் வெண்பாவேயாம். இவ்வாறு புறப்பொருளான் வந்து இரண்டுறுப்பாயும் ஓருறுப்பாயும் பாவும் பொருளும் வேறுபட்டு வெள்ளடியினிகந்து வருங் கலிவெண்பாவாகிய உலாச்செய்யுள் அடிவரையன்றி வருமாறும் பெருந்திணைப் பொருண்மேல் வரும் மடற்செய்யுளும் ஓருறுப்பாய் அடியிகந்து வருமாறும் இக்காலத்துக் கூறுகின்றவற்றுட் காண்க. அது திருவுலாப்புறத்துள்ளும் "வாமான வீசன் வரும்" (ஆதியுலா.) என முடித்து மேல் வேறோறுப்பாயவாறும் ஒழிந்த உலாக்களுள் வஞ்சியுரிச்சீர் புகுந்த வாறும் அடிவரையறை யின்மையுமாம்.அகப்புறமும் புறப்புறமுமாய மருட்பாவாய கைக்கிளை யடிவரையறையின்றி வந்தன வந்துழிக் காண்க. காமஞ்சாலா இளமையோள்வயின் வந்த கைக்கிளையுங் காட்சி முதலிய கைக்கிளையும் ஆசிரியத்தினும் வஞ்சியினும் வாரா. எனவே யொழிந்த பாவினுள் எல்லாக் கைக்கிளையும் வருமாயின. "என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே யாமே, புறஞ்சிறை யிருந்தும் பொன்னன் னம்மே போரெதிர்ந் தென்னை, போர்க்களம் புகினே கல்லென் பேரூர் விழவுடை யாங்க ணேமுற்றுக் கழிந்த மள்ளர்க் குமணர் வெரூஉந் துறையன் னன்னே" (புறம் 84) இது சுட்டி யொருவர்ப் பெயர்க் கொள்ளாத பாடாண்டிணைக் கைக்கிளை, "விடியல் வெங்கதிர்" (கலி 45) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுள் "கால்பொர நுடங்கலிற் கறங்கிசை யருவிநின் மால்வரை மலிசுனை மலரேய்க்கு மென்பதோ புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பிய வென்றோழி பல்லிதழ் மலருண்கண் பசப்பநீ சிதைத்ததை" என்பதூஉம், "நறவினை வரைந்தார்க்கும் " (கலி. 99) என்னும் மருதப்பாட்டினுள் "அறனிழ லெனக்கொண்டாய் நின்குடை யக்குடை புறநிழற் கீழ்ப்பட்டாளோ விவளிவட் காண்டிகா பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை" என்பதூஉம் சுட்டி யொருவர் பெயர் கொள்ளாத கைக்கிளையா மெனின் இவை தலைவனன்பின்மை மெய்யாயினன்றே கைக்கிளையாவது; அவைவரைவு கடாவலும் ஊடலுங் காரணமாக அன்பிலனென்றலி னொரு தலைக் காமமல்ல. ஒழிந்த அடிவரையின்றி வருமாறு மேற்கொள்க. (160) புறநிலை வாழ்த்து முதலிய மூன்றும் மருட்பாவான் வரும் எனல் 161. புறநிலை வாயுறை செவியறி வுறூஉவெனத் திறநிலை மூன்றுந் திண்ணிதிற் றெரியின் வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும் பாவின வென்ப. இது கைக்கிளைமருட்பாவல்லாத மருட்பாவும் அதுவே போலவருமென்றற்கு உடம்பட்டமை கண்டு ஈண்டுக் கூறுகின்றது. (இ-ள்.) இம் மூன்றும் முன்பு வெண்பாவும் பின்பு ஆசிரியமுமாய் வரும் எ-று. "மருட்பா வேனை யிருசீ ரல்லது" (செய். 85) என்ற வழி இன்னவாறு வருமென்னாமையின் இது கைக்கிளை மருட்பாப்போல வருமென்றதற்கு முன்பு வெண்பா வியலினும் பின்பு ஆசிரிய வியலினும் முடியுமென்று அவை வருமுறை கூறினார். முன்னர் இம் மூன்று பொருட்கும் இலக்கணங் கூறிப் போந்தவற்றிற்கு இன்னவாறுஞ் செய்யுட்செய்த லுரித்தென்று ஈண்டு ஓரு செய்யுள் வேறுபாடு கூறினார். இவை புறத்திணையுள்ளல்லது வாராவென்றற்குத் திண்ணிதினென் றார். எனவே இவை கைக்கிளைமருட்பாப்போல ஆண்பாற் கைக்கிளை யும் பெண்பாற் கைக்கிளையுமாய் அகனும் புறனும் பற்றி வாராவென்பது பெற்றாம். இயலென்று இருகாற் கூறியவதனான் இரண்டு பாவும் இயற்சீரான் வருதல் சிறப்புடைத் தென்க. 'பண்புற' என்றதனான் வெண்பாவி னிழிபாகிய எழுசீரானன்றி யெண்சீரான் வருதலும், ஆசிரியத்தி னிழிபாகிய மூன்றடி வரினும் எருத்தடி குட்டம்பட்டு வருதலும், வெண்பா நாலடி முதற் பன்னீரடியளவு முயர்தல் சிறப்புடைத்தெனவும் வெண்பாப் பலவடிவரினு மாசிரிய மூன்றினிகவா தென்றுங் கொள்க. 'பாவின' வென்றதனான் இவ்விருபகுதியுந் தத்தம் பாக்கள் வேறுவேறு நிகழுமென்று கொள்க. "எறும்பி யளையிற் குறும்பல் சுனைய" (குறுந். 12) என்னும் பாட்டுப்போல வோசை கலந்து வாரா. (எ-டு.) "தென்ற லிடைபோழ்ந்த தேனார் நறுமுல்லை முன்றின் முகைவிரியு முத்தநீர்த் தண்கோளூர்க் குன்றமர்ந்த கொல்லேற்றா னிற்காப்ப வென்றுந் தீரா நண்பிற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே' இது புறநிலை. இஃது அடியிகந்தது வந்துழிக் காண்க. "பலமுறையு மோம்பப் படுவன கேண்மின் சொலன்முறைக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந்து நிலமுறையி னாண்ட நிகரில்லார் மாட்டுஞ் சிலமுறை யல்லது செல்வங்க ணில்லா விலங்கு மெறிபடையு மாற்றலு மன்புங் கலந்ததங் கல்வியுந் தோற்றமு மேனைப் பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும் விலங்கிவருங் கூற்றை விலக்கலு மாகா தனைத்தாத னீயிருங் காண்டிர் - நினைத்தகக் கூறிய வெம்மொழி பிழையாது தேறிநீ ரொழுகிற் சென்றுபயன் றருமே" இது வாயுறை. "பல்யானை மன்னர் முருங்க வமருழந்து கொல்யானைத் தேரொடுங் கோட்டந்து நல்ல தலையாலங் கானம் பொலியத் தொலையாப் படுகளம் பாடுபுக் காற்றிப் பகைஞ ரடுகளம் வேட்டோன் மருக வடுதிற லாழி நிமிர்தோட் பெருவழுதி யெஞ்ஞான்று மீர முடையையா யென்வாய்ச்சொற் கேட்டி யுடைய வுழவரை நெஞ்சனுங்கக் கொண்டு வருங்கா லுழவர்க்கு வேளாண்மை செய்யன் மழவ ரிமைக்கும் வரைகா ணிதியீட்டங் காட்டு மமைச்சரை யாற்றத் தெளிய லடைத்த வரும்பொரு ளாறன்றி வௌவலி னத்தை பெரும்பொரு ளாசையாற் சென்று பெருங்குழிசி, மன்ற மறுக வகழாதி யென்று மறப்புற மாக மதுரையா ரோம்பு மறப்புற மாசைப் படேற்க வறத்தா லவையார் கொடுநாத் திருத்தி நவையாக நட்டார் குழிசி சிதையாதி யொட்டார் செவி புதைக்குந் தீய கடுஞ்சொற் கவிபடைத்தாய் கற்றார்க் கினனாகிக் கல்லார்க் கடிந்தொழுகிச் செற்றார்ச் செகுத்துநிற் சேர்ந்தாரை யாக்குதி யற்ற மறிந்த வறிவினாய் மற்று மிவையிவை நீவா தொழுகி னிலையாப் பொருகட லாடை நிலமக ளொருகுடை நீழற் றுஞ்சுவண் மன்னே" இது செவியுறை. (161) பரிபாடற்குரிய அடிவரையறை 162. பரிபா டல்லே நாலீ ரைம்ப துயர்வடி யாக ஐயைந் தாகு மிழிவடிக் கெல்லை. இது முறையே பரிபாடற் கெல்லை கூறுகின்றது. (இ-ள்.) பரிபாடற் குறுப்பாகிய வெண்பாவும், பொதுப்பாவும் நானூறடி பெருக்கத்திற் கெல்லையாகவும் இருபத்தைந்தடி சுருக்கத்திற் கெல்லையாகவும் பெறும் எ-று. அவை தொகையுட் காண்க. (162) பிறன்கோட் கூறல் 163. அளவியல் வகையே யனைவகைப் படுமே. இது பிறன் கோட் கூறல். (இ-ள்.) யான் கூறிய அளவியலின் கூறுபாடு அத்துணைப் பகுதிப்படும் எ-று. என்றது யாம் சிறப்புடைத்தெனக் கூறிய பெருமைக்கெல்லை யத்துணைப் படுமெனவே பிறர் பெருமைக்கெல்லை கொள்ளாதது சிறப்பின் றென்றவாறாயிற்று. (163) அடிவரையறை இல்லாத செய்யுட்கள் ஆறு எனல் 164. எழுநிலத் தெழுந்த செய்யுட் டெரியின் அடிவரை யில்லன வாறென மொழிப. இது நான்குபாவிற்கும் முற்கூறிய அளவிற் படாதன கூறுகின்றது. (இ-ள்.) அகமும் புறமுமாகிய எழுநிலத்திலுந் தோன்றிய செய்யுளை யாராயின் அடிவரையின்றி வரும் இலக்கணத்தன ஆறென்று கூறுவர் புலவர் எ-று. எழுநில மென்றதற்குப் பாட்டு உரைநூல் (சூ. 79) முதலியனவுமாம். (164) அவையாமாறு 165. அவைதாம், நூலி னான வுரையி னான நொடியொடு புணர்ந்த பிசியி னான வேது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பி னான. இது முற்கூறிய ஆறற்கும் பெயரும் முறையும் உணர்த்திற்று. (இ-ள்.) முற்கூறிய அடிவரை யில்லாதனதாம் நூலின் கண்ணாவன வும், உரையின் கண்ணாவனவும், நொடியின் மாத்திரையவாகிய பிசியின் கண்ணாவனவும், ஒருமொழிக்கேதுவாகி வரும் முதுமொழிக்கண்ணாவன வும், மறைத்துக் கூறுஞ் சொல்லாற் கூறிய மந்திரத்தின் கண்ணாவனவும் சொல்லுகின்ற பொருளை இடைகரந்து சொல்லும் குறிப்பின் கண்ணானவுமென ஆறுவகைப்படும் எ-று. 'நூலினான' என்பது சூத்திரச் செய்யுட்களுள் ஆசிரியமாய் வந்து அளவை பெறாதனவற்றை நோக்கிற்று. அச் சூத்திரத்தை நோக்கி வருமுறையும் ஒரு செய்யுளாம். ஒழிந்தன வழக்கின் கண்ணுஞ் செய்யுட் கண்ணும் வரினும் ஈண்டுச் செய்யுளை நோக்குதற்கு அவற்றுக் கண்ண வென்றார். இவையும் அளவிகந்து வருவனவே. அளவு முற் கூறிற்றாம். (165) நூல்களின் இலக்கணம் 166. அவற்றுள் நூலெனப் படுவது முதலு முடிவு மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றகன்ற வுரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே. இஃது அந்நூல்கள திலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) நூலெனப்படுவது - நூலென்று சிறப்பித்துச் சொல்லப் படுவது, முதலும் முடிவும் மாறுகோள் இன்றி - முன்னும் பின்னு மாறு படாது, தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி - தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டி, உள்நின்று அகன்ற உரையொடு பொருந்தி - தன்னுள்ளே அடங்கி நின்று விரிந்த உரையொடு பொருந்தப்பட்டு, நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பு - பருப்பொருட்டாகாது நுண் பொருட்டாகப் பொருள் விளக்கலாகிய அவ்விலக்கணம் அதன் இலக்கணம் எ-று. அது எழுத்து முப்பத்து மூன்றெனத் தொகுத்ததனைப் பின்னர்க் குறிலும் நெடிலும் மூவினமுஞ் சார்பிற்றோற்றமுமென வகுத்தாற் போல் வனவும் பிறவுமென் றுணர்க. சாதிபற்றிப் படுவதென ஒருமையாற் கூறினார். (166) நூலின் பகுதி நான்கு எனல் 167. அதுவே தானு மீரிரு வகைத்தே. இஃது அந் நூற்பகுதி நான்கா மென்கின்றது. (இ-ள்.) அந்நூற்பகுதி நான்காம் எ-று (167) அவற்றின் பெயரும் முறையும் 168. ஒருபொரு ணுதலிய சூத்திரத் தானும் இனமொழி கிளந்த வோத்தி னானும் பொதுமொழி கிளந்த படலத் தானும் மூன்றுறுப் படக்கிய பிண்டத் தானுமென்று ஆங்கனை மரபி னியலு மென்ப இஃது அந் நான்கற்கும் பெயரும் முறையு முணர்த்திற்று. (இ-ள்.) ஒருபொருள் நுதலிய சூத்திரத்தானும் - அந் நூல் ஒரு பொருளே கருதி வரும் சூத்திரத்தானும், இனமொழி கிளந்த ஓத்தி னானும் - இனமாய பொருளைக் கூறிய ஓத்தினானும், பொதுமொழி கிளந்த படலத்தானும் - பலபொருட்குப் பொதுவாகிய இலக்கணங்களைக் கூறிய படலத்தானும், மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் - மூன்று உறுப்பை அடக்கி வரும் பிண்டத்தானும், என்று ஆங்கு அனைமரபின் இயலும் என்ப - என்று கூறிய அத் தன்மைத்தாகிய மரபினான் நடக்கும் என்று கூறுவர் புலவர் எ-று. ஆங்கென்ற மிகையான் பிண்டமே யன்றிப் பிண்டியென்பதும் ஒன்றுளதென்று கொள்க. (168) சூத்திரத்தின் இலக்கணம் 169. அவற்றுட், சூத்திரந் தானே யாடி நிழலி னறியத் தோன்றி நாடுத லின்றிப் பொருணனி விளங்க யாப்பினுட் டோன்ற யாத்தமைப் பதுவே. இது முறையே சூத்திரவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) அவற்றுள் சூத்திரந்தானே ஆடிநிழலின் அறியத் தோன்றி - அந் நான்கனுள் ஒருபொருள் நுதலுஞ் சூத்திரமாவது: ஒருபொருணுதலுங் காற் கண்ணாடி சிறிதாயினும் அகன்றுபட்ட பொருளை யறிவித்தாங்கு அறியத் தோன்றி, நாடுதலின்றிப் பொருள் நனிவிளங்க - தெரிதல் வேண்டாதபடி அவ்வகன்ற பொருளை மிகவும் விளங்குமாற்றான், யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே - செய்யுளுள் தோன்றச் செய்து முடிக்கப்படுவது எ-று. (169) ஓத்திலக்கணம் 170. நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு ஓரினப் பொருளை யொருவழி வைப்பது ஓத்தென மொழிப வுயர்மொழிப் புலவர். இஃது ஓத்திலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) இனமொழி கிளக்குங்காற் சிதர்ந்து கிடப்பப் பலவோத்தாகச் செய்யாது, மணியை நிரலவைத்தாற்போல ஓரினப் பொருளையெல்லாம் ஒருவழியே தொகுப்பது ஓத்தென்று கூறுவர் சிறந்த சொற்புலவர் எ-று. நேரினமணியெனவே யொருசாதியினுந் தம்மி னொத்தனவே கூறல் வேண்டும் எ-று. 'வேற்றுமையோத்தும்' 'வேற்றுமைமயங்கியலும்' 'விளிமரபும்' என மூன்றன் பொருளையும் ஒன்றாக வேற்றுமையோத்தென்னாது வேறுவேறு வைத்தவாறு காண்க. (170) படலத்தின் இலக்கணம் 171. ஒருநெறி யின்றி விரவிய பொருளான் பொதுமொழி தொடரினது படல மாகும். இது முறையே படலங் கூறுகின்றது. (இ-ள்.) ஒருபொருள்நெறியின்றிப் பலவேறு வகைப்பட்ட பொருளெல்லா வற்றிற்கும் வேறு வேறிலக்கணங் கூறக்கருதி யவற்றுக்குப் பொதுமொழியாகத் தொடர்ந்துவரின் அது படலமாம் எ-று. 'பொதுமொழி கிளந்த படலம்' எனவே யொருநெறிப்பட்ட பொருட்குப் பொதுவாய் வருதலையும் விலக்கி விரவிய பொருட்குப் பொதுவாக மொழிவது படலமாயிற்று. படலமாவது அதிகாரமாம். (171) பிண்டத்தின் இலக்கணம் 172. மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின் றோன்றுமொழிப் புலவரது பிண்ட மென்ப. இது பிண்டங் கூறுகின்றது. (இ-ள்.) சூத்திரமும் ஓத்தும் படலமுமென்கின்ற மூன்றுறுப்பினை யும் உள்ளடக்கிய தன்மைத்தாய் வரின் விளங்கிய மொழியையுடையபுலவ ரதனைப் பிண்டமென்று பெயர் கூறுவர் எ-று. அம் மூன்றனையும் உறுப்பெனவே பிண்டமென்பது உறுப்பி யென்பது பெற்றாம். தொல்காப்பிய மென்பது பிண்டம். அதனுள் எழுத்துச் சொற்பொருளென்பன படலம். ஓத்துஞ் சூத்திரமு மொழிந்த விரு கூறுமாம். 'தோன்றுமொழிப் புலவ' ரென்றதனாற் பிண்டத்தினையு மடக்கி நிற்பது வேறு பிண்டியெனப்படும். அது முதனூலாகிய அகத்தியம். என்னை? இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என மூன்று பிண்டத் தினையும் அடக்கி நிற்றலின். (172) உரைநடையின் வகை நான்கு எனல் 173. பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று உரைவகை நடையே நான்கென மொழிப. இது "நூலினான வுரையி னான " (செய். 166) என நிறுத்த முறையே நூலுணர்த்தி யுரை கூறுகின்றது. (இ-ள்.) பாட்டிடை வைத்த குறிப்பினானும் - ஒரு பாட்டினை யிடையிடை கொண்டு நிற்குங் கருத்தினான் வருவனவும் எ. று. அவை தகடூர் யாத்திரையும், சிலப்பதிகாரமும் போல்வன. ஆண்டுப் பிறபாடை தழுவி வருவன தமிழுரை யாகாமையின் ஈண் டாராய்ச்சி யின்றாம். அதன்கட்டமிழுரை யுள்ளன ஈண்டடங்கும். பாவின் றெழுந்த கிளவி யானும் என்பது - பாட்டின்றிச் சூத்திரத் திற்குப் பொருளெழுதுவன போல்வன. சூத்திரம் பாட்டெனப்படா, பாட்டும் உரையும் நூலுமென வேறோத லின் . அன்றியுஞ் சூத்திரங் கருதிய பொருளையன்றி யுரையான் வேறொரு பொருள் கூறி அதனைத் தொடர்புபடுத்திக் கூறாமையின்; ஆண்டும் ஒருவன் கூறியதற்கு ஒருவன் பொருள் கூறுகின்றானாம். ஒழிந்த பாட்டிற் கும் இவ்வாறே உரைகூறுவனவுமொக்கும். பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும். - பொருண் முறைமையின்றிப் பொய்யாகத் தொடர்ந்து கூறுவன எ-று. அவை ஓர் யானையுங் குதிரையுந் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக் கியையாப் பொருள் பட்டதொரு தொடர்நிலையாய் ஒருவனுழை யொருவன் கற்று வரலாற்று முறைமையான் வருகின்றன. பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் - பொய்யெனப் படாது மெய்யெனப்பட்டு நகுதற்கேதுவாகுந் தொடர்நிலையானும் எ-று. இவை சிறுக்குரீஇயுரையும், தந்திரவாக்கியமும் போல்வன. இவை பொய்யெனப்படா; உலகியலாகிய நகை தோன்றுதலின். என் றுரைவகை நடையே நான்கென மொழிப - என்றுரைப்பகுதி வழக்கு இந் நான்குமென் றுரைப்பர் புலவர் எ-று. வகை யென்றதனான் உரைப்பகுதிய பிறவு முள. அவை மரபியலுட் கூறுப. (173) ] அந்நான்கும் இரண்டாம் எனல் 174. அதுவே தானு மீரிரு வகைத்தே. இஃது அந் நான்கனுள் முதலன இரண்டும் ஒன்றாகவும் ஏனைய விரண்டும் ஒன்றாகவும் தொடுக்கப்படும்; அவற்றால் பயன்கொள்ளுங் காலத்து எ-று. (174) உரைநடை வகை நான்கற்கு இவரிவர் உரியர் எனல் 175. ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே யொன்றே யார்க்கும் வரைநிலை யின்றே. இது மேனின்ற அதிகாரத்தான் இறுதிநின்ற இரண்டன் பகுதியு மாகிய ஒன்று செவிலிக்கே யுரித்து. ஒழிந்த இரண்டனானாகிய ஒன்றும் வரைவின்றி எல்லார்க்கு முரித்து எ-று. தலைவியை வற்புறுக்கும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியர் என்றவாறு. இக் கருத்தானே சான்றோர், "செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவு நெடியவு முரைபல பயிற்றி யின்னே வருகுவ ரின்றுணை யோரென உகத்தவை மொழியவு மொல்லாள்" (நெடுநல் 153. 4) என்றார் பாட்டினுள். பிற சான்றோரும் "செம்முது செவிலியர் பொய்ந் நொடி பகர" என்றார். மற்றும் என்றதனான் இவையே யன்றி வருகின்ற பிசியுஞ் செவிலிக் குரித்தென்க. இனிப் பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின்றெழுந்த கிளவியும் வரையறையின்றி வருமாறு பலவற்றுள்ளுங் காண்க. (175) பிசியின் வகை 176. ஒப்பொடு புணர்ந்த வுவமத் தானுந் தோன்றுவது கிளந்த துணிவி னானும் என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே. இது முறையே பிசி யிரண்டென்கின்றது. தன்கட் கிடந்த வொப்புமைக் குணத்தொடு பொருந்தி வருமாற்றை யுவமப் பொருளானும், இனியொன்று கூற வொன்றுதோன்றுந் துணிவிற் றாகக் கூறுங் கூற்றானும் என் றிருகூற்றதாகும் பிசி கூறுபடு நிலைமை எ-று. அவை, "பிறை கல்வி மலை நடக்கும்" இது ஒப்பொடு புணர்ந்த வுவமம். இது யானையென்றாம். "முத்துப்போற் பூத்து முகிழிற் கிளிவண்ணம் நெய்த்தோர்க் குருதி நிறங்கொண்டு வித்துதிர்த்து" என்பது மது. இது கமுகின் மேற்று. "நீராடான் பார்ப்பா னிறஞ்செய்யா னீராடி னூராடு நீரிற் காக்கை" இது தோன்றுவது கிளந்த துணிவு. இது நெருப்பென்றாம். வகை யென்றதனான் இது செவிலிக்கே யுரித் தென்க. (176) முதுமொழியின் இலக்கணம் 177. நுண்மையுஞ் சுருக்கமு மொளியுடை மையும் மென்மையு மென்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி யென்ப. இது முதுமொழி கூறுகின்றது. (இ-ள்.) நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றி - கூர்மையும், சொற்சுருங்கி இருத்தலும், விழுப்பமும், எளிதிற் பொருள் தெரிதலும் என்ற இந் நான்கும் விளங்கத் தோன்றி, குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் - அறம் பொரு ளின்ப மென்னு மூன்றனுள் ஒன்றை முடித்தற்கு வருமாயின், ஏது நுதலிய முது மொழி என்ப - அங்ஙனம் வந்ததனை அப் பொருள் முடித்தற்குக் காரண மாகிய பொருளினைக் கருதி வரும் முதுமொழி யென்பர் புலவர் எ-று. "உழுத வுழுத்தஞ்செய் யூர்க்கன்று மேயக் கழுதை செவியரிந் தற்றே - வழுதியைக் கண்ட கருங்க ணிருப்பப் பெரும்பணைத்தோள் கொண்டன மன்னோ பசப்பு" இதனுள் ஒன்றன் வினைப்பயன் ஒன்று நுகர்ந்ததெனக் குறித்து அப்பொருளியைபின்மை கூறியதனைச் சொற்றொடரினிது விளக்கா தேனும் முற்கூறிய முதுமொழிக்கண்ணே யப்பொருளை முடித்தற்கேது வாகிய இயைபின்மை கிடந்து முடித்தவாறு காண்க. இதனுள் நுண்மை முதலிய நான்குங் காண்க. பழமொழி யிவ்விலக்கணம் பற்றிச் செய்தது. (177) மந்திரத்தின் இலக்கணம் 178. நிறைமொழி மாந்த ராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திர மென்ப. இது மந்திரச் செய்யுள் கூறுகின்றது. (இ-ள்.) சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டுங் குறைவின்று பயக்கச் சொல்லுமாற்றலுடையார் அவ்வாணையாற் கிளக்கப்பட்டுப் புறத்தார்க்குப் புலனாகாமை மறைத்துச் சொல்லுஞ் சொற்றொட ரெல்லாம் மந்திர மெனப்படும் எ-று அவை வல்லார்வாய்க் கேட்டுணர்க. தானேயென்று பிரித்தார். இவை தமிழ்மந்திரமென்றற்கும் மந்திரந்தான் பாட்டாகி யங்கத மெனப்படுவனவுள, அவை நீக்குதற்கு மென்றுணர்க. அவை "ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய வந்தண் பொதியி லகத்தியனா ராணையாற் செந்தமிழே தீர்க்கசுவா கா" "முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - யரணிய லானந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோட னானந்தஞ் சேர்கசுவா கா" இவை தெற்கில் வாயில் திறவாத பட்டிமண்டபத்தோர் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவுஞ் சாவவும்பாடி யின்னவாறாகவெனச் சவித்தற் பொருட்டாய் வந்த மந்திரம் பாட்டாய் வருதலின் அங்கதமாயிற்று. இதனான் "நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்" (திருக். 28) என்றார். (178) குறிப்புமொழி 179. எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப் பொருட்புறத் ததுவே குறிப்புமொழி யென்ப. இது முறையே கூற்றிடைவைத்த குறிப்புணர்த்துகின்றது. (இ-ள்.) எழுத்து முடிந்தவாற்றானுஞ் சொற்றொடர்ந்த வாற்றானுஞ் சொற்படு பொருளானுஞ் செவ்வன் பொருளறியவரிதாகிப் பொருட் புறத்தே பொருளுடைத் தாயும் நிற்பது குறிப்பு மொழியாவது எ-று. (எ-டு.) "குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையி னடக்கிய மூக்கினர் தாம்" இது குஞ்சரமென்ப துணர்த்திற்று. இது கூறுகின்ற பொருளைக் கரந்து கூறப்பட்டு ஏது முதலியவற்றொடு புணராது நின்றது. இது பாட்டு வடிவிற்றாய் வருதலிற் பிசியெனலு மாகாது. குறித்த பொருளை முடிய நாட்டாது நாற்சொல்லியலான் யாப்புவழிப் படாமையின் மரபழிந்து பிறவுங் குறைதலிற் பாட்டெனவும் படாதாயிற்று. அதனான் இது அடிவரை யறையின்றாயிற்று. (179) பண்ணத்தியின் இலக்கணம் 180. பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டி னியல பண்ணத்தி யியல்பே. 181. அதுவே தானும் பிசியொடு மானும் 182. அடிநிமிர் கிளவி யீரா றாகும். 183. அடியிகந்து வரினுங் கடிவரை யின்றே. அளவியல் வகை 184. கிளரியல் வகையிற் கிளந்தன தெரியின் அளவியல் வகையே யனைவகைப் படுமே. (181-184 - இவற்றிற்கு உரை கிட்டவில்லை) திணை 185. கைக்கிளை முதலா வெழுபெருந் திணையும் முற்கிளந் தனவே முறைநெறி வகையின். இது நிறுத்த முறையே திணை யென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) கைக்கிளை முதலா எழுபெருந் திணையும் - கைக்கிளை முதலாக முல்லை, குறிஞ்சி,பாலை, மருதம்,நெய்தல் பெருந்திணை யென்ற எழுநிலனும், முறைநெறி வகையின் - அவற்றிற்கு முறைமை வழியாற் புறமென அடைத்த வெட்சி முதற் பாடாண் பகுதி யீறாகிய எழுபகுதி யோடே கூட்ட, முற்கிளந்தனவே - முன்னர்க் கிளக்கப்பட்டனவேயாகச் செய்யுட் குறுப்பாய் நிற்கும் எ. று எனவே அகமேழும் புறமேழும் அவ்விரண்டற்கும் பொதுவாகிய கரந்தை யொன்றுமாகப் பதினைந்தனுள் ஒன்று செய்யுட் குறுப்பா யல்லது வேறுறுப்பின் றென்றவாறாயிற்று. (185) ‘ களவின் இலக்கணம் 186. காமப் புணர்ச்சியு மிடந்தலைப் பாடும் பாங்கொடு தழாலுந் தோழியிற் புணர்வுமென்று ஆங்கநால் வகையினு மடைந்த சார்பொடு மறையென மொழிதன் மறையோ ராறே. இது முறையே கைகோள்செய்யுட் குறுப்பாமாறு கூறுகின்றது. கைகோளாவன களவு கற்பு. அவை தாங் காமத்தின் கண்ணெழுத லான் அவற்றுட் பிறந்த வுள்ள நிகழ்ச்சி யிடைவிடாது மேற்சிறந்து பெருகி யகலாப் பகுதியெனக் கொள்க. அவற்றைத் தொகுத்தவை செய்யுட் குறிப்பென்றார். காமப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடு தழாலும் தோழியிற் புணர்வும் - இயற்கைப்புணர்ச்சியும். அதன்பின்னர் இடந் தலைப்பாடும், அதன் பின்னர் அவன்வயிற் பாங்காகிய பாங்கற்குக் கூறி யவனாற் கூடுதலும், அதன் பின்னர் அவள்வயிற் பாங்காகிய தோழியை யிரந்து குறைமுடித்துக் கோடலும், என்று ஆங்க நால்வகையினும் அடைந்த சார்பொடு - என்ற அந் நாற்பகுதிக்கண்ணும் பொருந்திய சார்பினான், மறையென மொழிதல் மறையோர் ஆறே - களவொழுக்கம் இதுவென்று பிறர்கருதச் செய்யுள் செய்தல் கந்திருவ வழக்கம் எ-று. கந்திருவர்க்கு மறையோர் ஓதிய நெறி அதுவாகலின் மறையோரா றென்றார். என வினையெச்சம். எனவே பாங்கனுந் தோழியு முணர்ந்துழியுங் களவென்றல் மறையோர் வழக்கு எ-று. இக்களவு இல்லதன்றி யுலகியலாதலின் நிறையுடையார் மறைவெளிப்படா தொழுகலிற் றாமேசென்று இடந்தலைப்பாட்டிற் கூடுதலும், அது நிகழாவழியுங் கூட்டம் நினைந்து அவள் ஆயத்திடை நின்ற வழியும் அவளருமை யறிந்து பாங்கனை யுடம்படுத்திக் கூடுதலும், அவன் தோழியைப் போலக் கூட்டுந் தன்மையிலனாதலிற் றோழியாற் கூடுதலு மென முறைமை கூறினார். களவு இந்நான்கு பகுதியானு மடங்கும் (எ-டு.) "கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை" (குறுந். 62) இது இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தது. "உறுதோறுயிர் ...தோள்" (குறள். 1106) "சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய்" (நற். 39) "வேட்ட பொழுதின... டோள்" (குறள். 1105) இவை களவியலிற் கண்டுகொள்க. (186) கற்பின் இலக்கணம் 187. மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலும் இருமுத லாகிய வியனெறி திரியாது மலிவும் புலவியு மூடலு முணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே. இது கற்பென்னுங் கைகோள் கூறுகின்றது. (இ-ள்.) மறை வெளிப்படுதலும் தமரிற் பெறுதலும் - மறைந் தொழுகும் ஒழுகலாறு வெளிப்படுதலும், தமர்கொடுப்பக் கரண வகையாற் பெறுதலும், இரு முதலாகிய இயல்நெறி திரியாது - என்னும் இவ்விரண்டு முதலிய ஆசான் முதலியோர் செய்விக்கும் வழக்குநெறி திரியாது, மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது - மகிழ்ச்சியும் புலத்தலும் ஊடலும் உணர்த்தலும் நான்கும் பிரிவுளப் பட்ட ஐந்தும் புணர்ந்தது, கற்பெனப்படுமே - கற்பு எனப்படும் எ-று. மலிவு முதலிய வைந்துங் கைகோளின்பாற் சார்த்தித் தலைவனுந் தலைவியும் ஒழுகும் ஒழுகலாறெனவே படும். முன்னை மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலுமென்னும் இரண்டும் பிறரொடு பட்ட வொழுகலாறெனப்படும். அவை ஆசான் முதலியோர் செய்வித்தலின். மலிதலென்பது இல்லொழுக்கமும் புணர்ச்சியு முதலியவற்றான் மகிழ்தல். புலவியென்பது புணர்ச்சியான் வந்த மகிழ்ச்சி குறைபடாமற் காலங்கருதிக் கொண்டுய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. ஊடலென்பது உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்புமொழியானன்றிக் கூற்றுமொழியா னுரைப்பது. அங்ஙனம் ஊடனிகழ்ந்தவழி யதற் கேதுவாகிய காரிய மின்மை உணர்வித்த லுணர் வெனப்படும். இல்லது கடுத்த மயக்கந் தீர வுணர்த்துதலான் உணர்த்துதலெனவும் அதனை உணர்தலான் உணர்வெனவும் படும். புலவியாயி னுணர்த்தாது குளிர்ப்பக் கூறித் தளிர்ப்ப முயங்குதன் முதலியவற்றா னீங்கும். பிரிவு இந் நான்கற்கும் வேறுபடுதலிற் பின்வைத்தார். அதனை யூடலொடு வைப்பவே யவ்வூடலுட் பிறந்த துனியும் பிரிவின்பாற்படும், அது காட்டக்காணாது கரந்து மாறுதலின். (எ-டு.) "எம்மனை முந்துறத் தருமோ தம்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே" (அகம். 195) இது மறைவெளிப்பாடு: "பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர வோரிற் கூடிய வுடன்புணர் கங்குல்" (அகம். 86) என்பது தமரிற்பெறுதல். "விரிதிரைப்பெருங்கடல்" (குறுந். 101) இது மலிதல். "நாணுக் கடுங்குரைய ளாகிப் புலவி வெய்யணா முயங்குங் காலே" இது புலவி "நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை நீசேர்ந்த வில்லினாய் வாராமை பெறுகற்பின்" (கலி. 77) இஃது ஊடல் "விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவு மரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கவிந் தொழியுமென் புலவி" (கலி. 75) இஃது உணர்தல். "திறனல்லயான் கழற யாரை நகுமிம் மகனல்லான் பெற்ற மகன்" (கலி. 86) இது துனி. துனித்தல், வெறுத்தல். பிரிவெனவே ஆறு மடங்கும். அவை முன்னர்க் காட்டினாம். (187) புறத்திணைக் கைகோள் 188. மெய்பெற வவையே கைகோள் வகையே. இது புறத்திணைக் கைகோள் கூறுகின்றது. (இ-ள்.) மெய்பெறக் கைகோள்வகை யவையே என்பது, பொருள் பெற வரும் கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே எ-று. எனவே அகத்திற்குப் புறனாயினும் புறத்திணைக் கைகோள் அவ்வாறு வேறுவகைப்படக் கூறப்படா. பொதுவகையானே மறைந்த வொழுக்கமும் வெளிப்பாடும் என இரண்டாய் அடங்கும் அவை எ-று. அவை வெட்சித்திணையுள்ளும் ஒழிந்த திணையுள்ளுங் காண்க. (188) களவினுள் கூற்று நிகழ்த்துதற்குரியார் 189. பார்ப்பான் பாங்கன் றோழி செவிலி சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோடு அளவியன் மரபி னறுவகை யோருங் களவினிற் கிளவிக் குரிய ரென்ப. இது கூற்றென்னு முறுப்புணர்த்துகின்றது. (இ-ள்.) பார்ப்பான்முதலாகக் கிழவன் கிழத்தியோ டெண்ணப் பட்ட கூற்றிற்கு எல்லையாக நடந்த முறைமையையுடைய அறுவருங் களவொழுக்கத்து நிகழ்ந்தன கூறினாராகவல்லது ஒழிந்தோர் கூறினாராகச் செய்யுள் செய்யப்பெறார் எ-று. நன்றுந் தீதுமாராய்ந்து உறுதி கூறுதலிற் பார்ப்பானை முற்கூறித் தலைவன்வழி நின்றொழுகும் பாங்கனைப் பிற்கூறினார். தோழிகூற்றிற் செவிலிகூற்றுச் சிறுபான்மை வருதலின் அதனைப் பின்வைத்தார். சிறப்புடையன பிற்கூறினார். அவ்விரண்டும் ஒன்றற்கொன்று சிறப் புடைமையு முணர்க. (எ-டு.) "சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே." (கலி. 9) இது பார்ப்பான் கூற்று. "காமங் காம மென்ப காம மணங்கும் பிணியு மன்றே நினைப்பின்........தோளோயே. (குறுந். 204) இது பாங்கன் கூற்று. ஏனைய முன்னர்க் காட்டினாம். (189) கற்பினுள் கூற்று நிகழ்த்துதற்குரியார் 190. பாணன் கூத்தன் விறலி பரத்தை யாணஞ் சான்ற வறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். இதுவுமது: அவ்வெண்ணப்பட்ட வறுவரும் பார்ப்பார் முதலாக முற்கூறிய அறுவரோடே கூடத் தொகுத்து இப் பன்னிருவருங் கூறிய கூற்றாகச் செய்யுள் செய்யப்பெறுங் கற்பினுள் எ-று. கிளவியென்னுஞ் சொல் ஈண்டுப் பொருண்மேற்று. இசைப் பின்னரது நாடகமாதலின்: பாணன்பின் கூத்தனும், பெண்பாலாகலின் விறல்படஆடும் விறலி அவர் பின்னும், அவ்வினத்துப் பரத்தை அவர் பின்னும், அகப்பொருட்குச் சிறவாமையின் அறம் பொருள்கூறும் அறிவர் அவர் பின்னும், ஏதிலாராகிய கண்டோர் அவர் பின்னும் வைத்தார். தொன்னெறிமரபின் என்றதனான், பாகனும் தூதனுங்கூறலு மமையும். அவர் புறப்பொருட்குச் சிறந்தவர். "செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் பையுண் மெய்ந் நிறுத் தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே" (அகம். 14) இது பாணன் கூற்று. "ஆடலிற் பயின்றனை யென்னா தென்னுரை யூடலிற் றெளிதல் வேண்டும்" என்பது கூத்தன் கூற்று. "மரந்தலை மணந்த நனந்தலைக் கானத் தலந்தலை ஞெமயத் திருந்த குடிஞை பொன்செய் கொல்லனி னினிய தெளிப்பப் பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர் நெடுந்தேர் வன் பான் முரம்பி னேமி யதிரச் சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே யிடைச்சுரத் தெழிலி யுறைத்தென மார்பிற் குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு நறுந்தண் ணியன்கொல் நோகோ யானே" (நற். 394) இது கண்டோர் கூற்று. "விதையர் கொன்ற முதையற் பூழி யிடுமுறை நிரம்பிய வீரிலை வரகின் கவைக்கதிர் கறித்த காமர் மடப்பிணை யரலை யங்காட் டிரலையொடு வதியும் புறவிற் றம்மநீ நயந்தோ ளூரே யெல்லி விட்டனன்று வேந்தெனச் சொல்லுபு பரியல் வாழ்கநின் கண்ணி காண்வர விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா வண்பரி தயங்க எழீஇறித் தண்பெயல் கான்யாற் றிடுமணற் கரைபிறக் கொழிய எல்விருந் தயரு மனைவி மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர் போயே" (நற். 121) இது பாகன் கூற்று. ஒழிந்தன கற்பியலுட் காண்க. (190) கூற்று நிகழ்த்துதற்குரிய ரல்லாதார் 191. ஊரு மயலுஞ் சேரி யோரும் நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்னையுங் கொண்டெடுத்து மொழியப் படுவ தல்லதைக் கூற்றவ ணின்மை யாப்புறத் தோன்றும். இது பெரும்பான்மையுங் கூற்று நிகழ்த்தாதோரைக் கூறுகின்றது. இது களவிற்கும் கற்பிற்கும் பொது. (எ-டு.) "ஊஉ ரலரெழச் சேரி கல்லென வானா தலைக்கு மறனி லன்னை" (குறுந். 262) "தெரிகணை நோக்கிச் சிலைநோக்கி*** *** *** சாய்த்தார்தலை" (கலி. 39) "எந்தையு, நிலனுற.....யென்னும்" (அகம். 2) என்றாற் போல்வன கொள்க. "துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய்" (ஐங்குறு. 393) இஃது அயலோர் கூற்றுச் சிறுபான்மை வந்தது. அகத்திணைக்கண் இங்ஙனம் வருமெனவே புறத்திணைக்கண் அவர்கூறவும் பெறுமென்பது. இது நோக்கிப் பெரும்பான்மை கூறாதாரை யுங் கூறினார். முன்னைய மூன்றும் பெண்பாலும், நோய்மருங்கறிநர் இருபாலும், ஒழிந்தார் ஆண்பாலுமாமென்றுணர்க. (191) நற்றாய் கூற்று நிகழ்த்தும் இடம் 192. கிழவன் றன்னொடுங் கிழத்தி தன்னொடும் நற்றாய் கூறன் முற்றத் தோன்றாது. இஃது எய்தாததெய்துவித்தது. (இ-ள்.) கிழவனோடும் கிழத்தியோடும் இடையிட்டு நற்றாய் கூறுதல் நிரம்பத் தோன்றாது. எனவே அல்லுழிக் கூறப்பெறும் நற்றாயும் எ-று. (எ-டு.) "செறிந்த சேரிச் செம்மன் மூதூ ரறிந்த மாக்கட் டாகுக தில்ல" (அகம். 15) இது நற்றாய் அல்லுழிக் கூறியது. தாயென ஒருமையாற் கூறவே தலைவியுடைய நற்றா என்பதாயிற்று. தந்தை, தன்னையர்க்கும் இஃது ஒக்கும். முற்றவென்றதனான், தலைவன் றமர் யாவருங் கூறாரெனவுணர்க. தோன்றா தென்றதனானே புறத்திணைக்கண் வரைவின்றி வழக்கிற்குப் பொருந்துமாறு கொள்க. (192) கண்டோர் கூற்று நிகழ்த்துதற்குரிய இடம் 193. ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. இதுவுமது. (இ-ள்.) ஒள்ளிய தொடியினையுடைய செவிலியொடும், தலைவ னொடும், தலைவியோடும் இடைச்சுரத்துக் கண்டோர் மொழிதல் முதனூலிற்கண்டது எ-று. ஒண்டொடிமாதரென்றார் செல்வச் சிறப்புடைமைதோன்ற. கண்டதென மிகைபடக்கூறியவதனான், தலைவி நடைமெலிந்து அசைந்தமை கண்டல்லது "சேர்ந்தனை செல்"லென்னார் என்றும், அவ்விருவர் கூட்டத்தன்றி, தனித்துழிக் கூறாரென்றுங் கொள்க. உதாரணம் முற்காட்டினாம். (193) இடைச்சுரத்தில் தலைவியின் தமர்வரின் தலைவன் கூற்று நிகழ்த்தும் முறைமை 194. இடைச்சுர மருங்கிற் கிழவன் கிழத்தியொடு வழக்கிய லாணையிற் கிளத்தற்கு முரியன். இதுவுங் கூற்று விகற்பங் கூறுகின்றது. (இ-ள்.) இடைச்சுரத்தி லுடன்போய்க் கிழத்தியொடுங் கிழவன் நீதிநூல் வழியாற் கிளத்தற்கும் உரியன் எ-று. அது தலைவி தமர் இடைச்சுரத்திற் கண்ணுறின் அவர்கேட்க அவட்குக் கூறுவானாய் வழக்கியல் கூறலும் உரியனென்க. நீதிநூல் பிறழக் கூறின் இராக்கதமாம். (எ-டு.) "நுமர்வரி னோர்ப்பி னல்லது அமர்வரின் முந்நீர் மண்டல முழுது மாற்றா தெரிகணை விடு தலோவிலனே யரிமதர் மழைக்கண் கலுழ்வகை யெவனே" உம்மையான் அவ்வாறன்றி மருட்டிக் கூறவும் பெறும். (எ-டு.) "அழிவில முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர.......மாறே" (நற். 9) இது தெய்வம்போல விடுந்தன்மையினை யல்லை யென மருட்டினான். (194) கண்டோரும் வழக்கியலாணையின் கூற்று நிகழ்த்துவர் எனல் 195. ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங் குரியர் முனனத்தி னெடுத்தே. இதுவுங் கண்டோர் கூற்று. (இ-ள்.) கண்டோர்கூறுங் கூற்றும் தலைவன் தலைவியொடு மொழிந்தாற்போல வழக்கியலாணையாற் கிளத்தற்குரியர் எ-று. தலைவனுந் தலைவியும் ஒழிந்தோராவார் கண்டோர். அவர் வழக்கியலாணையாற் கிளத்தற்கு உரியர் என்பார் முன்னத்தி னெடுத்துக் கூறுப என்றார். அதிகாரத்தான் அறநூற்கருத்தான் உரைப்பரென்க. "பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செயு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே" (கலி. 9) எனவரும். இங்ஙனம் வழக்கியலாணையாற் கிளவாதன "கண்டோர் மொழிதல் கண்டது" (அகத். 40) என்பதனாற் கூறிற்று. (195) தலைவன் தலைவியருடைய கூற்றைக் கேட்போர் இவர் எனல் 196. மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியும் நினையுங் காலைக் கேட்குந ரவரே. இது கேட்போரென்னு முறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) முன்னர்க் கூற்றிற்குரியர் என்ற பன்னிருவருள், தலைவி கிளவியையும் தலைவன் கிளவியையும் கேட்டற்குரியர் அவ்விருவரையும் ஒழிந்த பதின்மரும் எ-று. மனையோள்கிளவியுங் கிழவன்கிளவியும் என்பதனை மேற் போயின கூற்றிற்கும் கூட்டுக. கூட்டவே, அவ்விருவர் கிளவி மேற்கூறுவன வும் கேட்பனவும் எனவும், தத்தம் கிளவி கூறவும் கேட்கவும் பெறாரென வும் கூறியவாறாயிற்று. இங்ஙனம் விலக்கியவற்றுள் வேறுபட வருவன மேற்கூறுகின்றார். தத்தங் கிளவியைத் தம்மிற்றாம் கேட்பரென்றலை விதந்தோத வேண்டாமையின், தலைவனுந் தலைவியுங் கேட்பரென்னாராயினார். நினையுங்காலை என்றதனான் தலைவனுந் தலைவியும் தனித்தனி கூற அவற்றைக்கேட்ட பதின்மரும் தாங்கேட்ட கூற்றிற்குச் செய்யத்தகுவன தம்மு ளாய்ந்து கோடற்கு உரியர் என்று கொள்க. எனவே தலைவன்கூறப் பரத்தை கேட்டலுந், தலைவிகூறப் பரத்தை கேட்டலு முதலியவற்றுள், புலனெறி வழக்கிற்கு ஏலாதன விலக்கப்பட்டன. (எ-டு.) "விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே" (அகம். 58) இது தலைவிகூற்று. தலைவன் கேட்டது. "வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே" (நற். 9) இது தலைவன்கூற்று. தலைவிகேட்டது. "நின்கேள், புதுவது பன்னா ளும்பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணியது தேர" (கலி. 24) எனவும், "மாலையு முள்ளா ராயிற் காலை யாங்கா குவென்கொல் பாண வென்ற மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்" (அகம். 14) எனவும், "உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ" (அகம். 17) எனவும், ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே" (குறுந். 362) எனவும், எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ" (கலி. 142) எனவும், இவை தோழியும் பாணனும் செவிலியும் அறிவரும் கேட்பத் தலைவி கூற்று வந்தன. "இடிக்குங்கேளிர் நுங்குறை யாக" (குறுந். 58) எனவும், "எலுவ சிறாஅ ரெம்முறு நண்ப" (குறுந். 129) எனவும், "ஊர்க பாக வொருவினை கழிய" (அகம். 44) எனவும், "பேரமர் மழைக்கண் ணின் றோழி செய்த வாரஞர் வருத்தங் களையா யோவென" (நற்.) எனவும், "சான்றவிர் வாழியோ சான்றவிர்" (கலி. 139) எனவும், இவை பார்ப்பானும் பாங்கனும் பாகனும் தோழியும் கண்டோரும் கேட்பத் தலைவன் கூற்று நிகழ்ந்தன. "ஒன்றித் தோன்றும் தோழி மேன" (அகத். 39) என்றலின், தோழி கூற்றும் தலைவி கூற்றேயாம். (196) பார்ப்பார் அறிவர் ஆகியோருடைய கூற்றைக் கேட்போர் இவர் எனல் 197. பார்ப்பா ரறிவ ரென்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. இதுவுமது. (இ-ள்.) பார்ப்பாரும் அறிவருமென்கின்ற இருவர் கூற்றும் அகமும் புறமுமாக யார்க்குஞ் செய்யுளென்றவற்றொடும் பொருந்தி வருதலின் அகத்திணையோர்க்கும் புறத்திணையோர்க்குங் கேட்டலை வரையார் எ-று. இனி வரையாரென்றதனை யெச்சப்படுத்துச் சிலர்க்கு வரையப்படு மென்று கொள்க. அவை பார்ப்பார் கூற்றுத் தலைவனுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்பினல்லது பிறர்கேட்டற் கேலாமையும், அறிவர் கூற்றுத் தலைவனுந் தலைவியும் தோழியுஞ் செவிலியும் நற்றாயுங் கேட்டற்குரி மையும் புறத்திணைக்கண்ணும் பொதுவியற் கரந்தையோர்க்குப் பார்ப்பார் கிளவி யேலாமையும் அறிவர் கிளவி யேற்புடைமையும் பிறவுமாம். எனவே தலைவி அறிவர் வாயிலாயவழி மறாமையும் புறத்திணைத் தலைவர்க்கு மவ்வாறே அவர்வழி நிற்றல் வேண்டுமென்பதூஉங் கூறியவாறு. அறிவராவார் முக்காலமு முணர்ந்தோரும் புலநன்குணர்ந்த புலமையோரும். (எ-டு.) கூறியவற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் காண்க. (197) பரத்தை வாயில்கள் ஆகியோருடைய கூற்றைக் கேட்போர் இவர் எனல் 198. பரத்தை வாயி லெனவிரு வீற்றும் கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப்பய மிலவே. இதுவுமது. (இ-ள்.) பரத்தையும் வாயில்களும் என்னும் இரண்டு வேறுபாட்டின் கண்ணும் கிழத்தி கேட்பாளாகக் கருதிக் கூறாத கூற்றுப் பயமில எ-று. கிழத்தியைச் சுட்டாவெனத் தலைவிபாங்காயினார் கேட்பக் கூறுதலுமமையும். (எ-டு.) "செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதிவ ணுலமந்து வருகஞ் சென்மோ தோழி" (அகம். 106) இது தலைவிக்குப் பாங்காயினார் கேட்பக் கூறியது. வாயில்களுந் தலைவி யூடல்தீரவே கூறவேண்டுதலின் அவள் கேட்பவே கூறுவராவர். இன்னு மதனானே தோழி கேட்ப வாயில்கள் கூறினு மமையும். (எ-டு.) "ஓருயிர் மாத ராகலி னிவளுந் தேரா துடன்றனள் மன்னே" இது வாயில்கள்கூறத் தலைவி கேட்டலுந் தோழி கேட்டலுமாம். (198) வாயில்கள் தம்முள் கூறுவதும் உண்டு எனல் 199 வாயி லுசாவே தம்மு ளுரிய. இதுவுமது. (இ-ள்.) முற்கூறிய அதிகாரத்தாற் றலைவியைச் சுட்டி யொருவ ரொருவர்க் குரைப்பார்போல வாயில்கள் தம்முட் கூறவும் பெறும்; அவையுந் தலைவி கேட்ப எ-று. "தண்ணந் துறைவன் கொடுமை, நம்மு ணாணிக் கரப்பா டும்மே" (குறுந். 9) இது பாடினி பாணர்க் குரைத்தது. "மலரைப் பொறாவடி மானுந் தமியள்மன் னன்னொருவன் பலரைப் பொறாதென் றிழிந்துநின் றாள்பள்ளி காமனெய்த வலரைப் பொறாதன் றழல்விழித் தோனம் பலம்வணங்காக் கலரைப் பொறாச்சிறி யாளென்னை கொல்லோ கருதியதே" (திருச்சிற். 367) இதுபோல்வன பிறவும் வாயில்கள் தம்முட் கூறின. உம்மை யெதிர்மறையாகலின் கேட்குநள் அவளெனப்பட்ட வாறன்றித் தம்முட் டாங்கேட்டல் சிறுபான்மையாம். (199) கேட்குந போலவும் கிளக்குந போலவும் அஃறிணை மருங்கினும் அறையப்படுதல் 200. ஞாயிறு திங்க ளறிவே நாணே கடலே கானல் விலங்கே மரனே புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே யவையல பிறவும் நுவலிய நெறியாற் சொல்லுந போலவுங் கேட்குந போலவும் சொல்லியாங் கமையு மென்மனார் புலவர். இது கேட்போருங் கூற்றும் வேறுபட வருமாறு கூறுகின்றது. பொருளியலுள் வழுவமைக்கப்பட்டவை கூறுவனவுங் கேட்குநவுமாய் ஈண்டு வருதலின் ஆராய்கின்றார். (இ-ள்.) ஞாயிறுமுதல் நெஞ்சீறாக் கூறியனவும் அவை போல்வன பிறவும் மேற் "செய்யா மரபிற் றொழிற் படுத் தடக்கியும்" (தொ.பொ. 196) எனப் பொருளியலுட் பொதுவகையாற் கூறியவாற்றான் அவைதாங் கூறுவன போலவுங் கேட்பன போலவுங் கூறுமாறமையு மென்று கூறுவர் புலவர் எ-று. கூற்றும் உடன்கூறினார் மேற்கூற்றிற்குரியன இவையென வரையறாமையின். பொழுதாவன: மாலையும், யாமமும், எற்பாடும், காரும், கூதிரும், பனியும், இளவேனிலும்போல்வன. பிறவுமென்றதனான் புல்லும் புதலும் முதலியனவுங் கொள்க. (எ-டு.) "கதிர்பகா ஞாயிறே கல்சேர்தி யாயி னவரை நினைத்து நிறுத்தென்கை நீட்டித் தருகுவை, யாயிற் றவிருமென் னெஞ்சத் துயிர் திரியா மாட்டிய தீ" (கலி. 142.) "வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போழ்தி னெழால்வாழி வெண்டிங்காள்" "உறுதி தூக்காத் தூங்கி வறிவே" (நற். 284) "நேர்ந்தநங் காதலர் நேமி நெடுந்திண்டே ரூர்ந்த வழிசிதைய வூர்கின்ற வோதமே பூந்தண் பொழிலே புணர்ந்தாடு மன்னமே யீர்ந்தண் டுறையே யிதுதகா தென்னீரே" (சிலப். கானல்வரி) "பொங்கிரு முந்நீ ரகமெலா நோக்குபு திங்களுட் டோன்றி யிருந்த குறுமுயா லெங்கே ளிதனகத் துள்வழிக் காட்டீமோ" (கலி. 144) "காய்ந்தநோ யுழப்பாரைக் கலக்கிய வந்தாயோ.........மாலை" (கலி. 120) "நீ காணவும் பெற்றாயோ காணாயோ மடநெஞ்சே" (கலி. 123) எனவரும். புள்ளெனவே வண்டு முதலியனவும் அடங்கும். "அம்மெ னிணர வடம்புகா ளன்னங்காள்" (சிலப். கானல்.) ஒழிந்தன வந்துழிக் காண்க. (200) இடம் 201. ஒருநெறிப் பட்டாங் கோரியன் முடியும் கரும நிகழ்ச்சி யிடமென மொழிப. இது களமெனப்பட்ட வுறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) பலவும் ஒருவழித் தொக்கவற்றுக்கெல்லாம் ஓரிலக்கணத் தான் முடியுங் கரும நிகழ்ச்சியை யிடமென்று கூறுப எ-று. களமெனினும் இடமெனினு மொக்கும். அது ஒரு செய்யுட் கேட்டால் இது இன்ன இடத்து நிகழ்ந்ததென்றறிதற்கு ஏதுவாயதோ ருறுப்பு. அது காட்சியும் ஐயமுந் துணிவும் புணர்ச்சியும் நயப்பும் பிரிவச்சமும் வன்புறையும் இன்னோரன்னவும் ஒரு நெறிப்பட்டு இயற்கைப் புணர்ச்சி யென்னும் ஓரிலக்கணத்தான் முடியுமென்பது. கருமநிகழ்ச்சியென்பது காமப்புணர்ச்சியென்னுஞ் செயப்படு பொருணிகழ்ச்சி. இது வினைசெயிடம். "எலுவ சிறாஅர்" (குறுந். 129) "கேளிர் வாழியோ" (குறுந். 280) என்பன பாங்கற் கூட்டமிடனாக ஒருவழிப்பட்டன. பிறவு மன்ன. இது புறத்திணைக்கு மொக்கும். (201) காலம் 202. இறப்பே நிகழ்வே யெதிர தென்னுந் திறத்தியன் மருங்கிற் றெரிந்தன ருணரப் பொருணிகழ் வுரைப்பது கால மாகும். இது காலமென்னு முறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) இறப்பே நிகழ்வே எதிரது என்னும் திறத்து - இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூன்று காலத்தே, இயல் மருங்கின் - எல்லாத்திணையும் நிகழ்கின்ற நிகழ்ச்சிக் கண்ணே, பொருணிகழ் வுணரத் தெரிந்தன ருரைப்பது காலமாகும் - பொருணிகழ்ச்சியுணரத் தெரிந்தனரா யுரைப்பது காலமென்னும் உறுப்பாம் எ-று. (எ-டு.) "வில்லோன் காலன கழலே.......முன்னியோரே" (குறுந். 7) இதனுள் வில்லோன் தொடியோள் என்பன பொருள். முன்னியோர் என்பது, தம்பொருள் நிகழ்ச்சியாகலின் இஃதிறந்த காலமெனப்படும். இதற்குச் சிறந்தாரவர்களாதலின் அவர்களே பொருளாயினார். "மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே யரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப் பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற் கல்கெழு கானவர் நல்குறு மகளே" (குறுந். 71) இது நிகழ்காலம் "பகலும் பெறுவையிவ டடமென் றோளே" (கலி. 49) இஃதெதிர்காலம். புறத்திற்கு மிவ்வாறே யின்றியமையாதென்பது; பெரும்பொழுதுஞ் சிறுபொழுதும் முதல், கரு, உரிப்பொருளொடு கூடித் திணையாகலின் இக்காலம் அவற்றின் வேறாம். (202) பயன் 203. இதுநனி பயக்கு மிதன்மா றென்னும் தொகைநிலைக் கிளவி பயனெனப் படுமே. இது பயனென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) இது மிகவும் பயக்கும் இதனானெனத் தொகுத்துக் கூறப்படும் பொருள் பயனென்னு முறுப்பாம் எ-று. (எ-டு.) "மாறாக் காதலர் மலைமறந் தனரே யாறாக் கட்பனி வரலா னாவே வேறா மென்றோள் வளைநெகி ழும்மே கூறாய் தோழியான் வாழு மாறே" இது தோழியைத் தூதுவிடுதல் பயனாக வந்தது. இது புறத்திற்கு மொக்கும். இங்ஙனம் பயனுறுப்பாகவே செய்யுள்வருமாறுணர்க. (203) மெய்ப்பாடு 204. உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும். இது மெய்ப்பாடென்னும் உறுப்புக் கூறுகின்றது. அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோ ராற்றான் வெளிப்படுதல். உய்த்துணர்ச்சி யின்றிச் செய்யுளிடத்துவந்தபொருளானே கண்ணீரரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தன் முதலிய சத்துவம் படுமாறு வெளிப்படச் செய்வது மெய்ப்பா டென்னு முறுப்பாம் எ-று. அது தேவருலக முதலியவற்றைக்கூறினுங் கண்டாங்கறியச் செய்யுள் செய்தல் செய்யுளுறுப் பென்றார். (எ-டு.) "மையற விளங்கிய மணிமரு ளவ்வாய்தன் மெய்பெறா மழலையின் விளங்குபூ ணனைத்தரப் பொலம்பிறை யுட்டாழ்ந்த புனைவினை யுருள்கலன் நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர வுருவெஞ்சா திடைகாட்டு முடைகழ லந்துகி லரிபொலி கிண்கிணி யார்ப்போவா தடிதட்பப் பாலோ டலர்ந்த முலைமறந்து முற்றத்துக் கால்வறேர் கையி னியக்கி நடைபயிற்றா வாலமர் செல்வ னணிசால் பெருவிறல் போல வருமென் னுயிர்" (கலி. 81) இவை போல்வனவற்றுள் அவ்வாறு காண்க. தலைவருபொருளான் எனவே நோக்குறுப்பானுணர்ந்த பொருட் பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பாடாமென்று கொள்க. (204) ஈண்டுக்கூறிய மெய்ப்பாடு, முன்னர் மெய்ப்பாட்டியலில் கூறப்பட்டதேயன்றி வேறன்று எனல் 205. எண்வகை யியனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே. எச்சம் 206. சொல்லொடுங் குறிப்பொடும் முடிவுகொ ளியற்கை புல்லிய கிளவி யெச்ச மாகும். இது முறையே யெச்சமென்னு முறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) கூற்றினானுங் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத் தொடு பொருந்திய கிளவி யெச்சமென்னு முறுப்பாம் எ-று. முடிவுகொளியற்கையெனவே செய்யுட்கண்ணதன்றிப் பின் கொணர்ந்து முடித்தல் பெற்றாம். (எ-டு.)"செங்களம் படக்கொன்ற........குலைக்காந் தட்டே" (குறுந். 1) இக் காந்தளான் யாங் குறையுடையமல்ல மெனத் தலைவற்குக் கூறிற் கூற்றெச்சமாம்; அக்கூற்றுஞ் செய்யுட்குச் சிதைவின்மையின். அது காண்பாயாகிற் காணெனத் தலைவியை நோக்கி யிடத்துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம்; அவனைக் கூடுகவெனத் தான் கூறாளாகலின். (206) முன்னம் 207 இவ்விடத் திம்மொழி யிவரிவர்க் குரியவென்று அவ்விடத் தவரவர்க் குரைப்பதை முன்னம். இது முன்னமென்கின்ற உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) இவ்விடத்துத் தோன்றிய இம்மொழி கூறற்குரியோருங் கேட்டற்குரியோரும் இன்னாரென்று அறியுமாற்றா னங்ஙனமறிதற் குரித்தாக நாட்டியதோரிடத்தே கூறுவோர்க்குங் கேட்போர்க்கும் ஏற்ற வுரையாகச் செய்யுளுட்கிடத்திக் கூறுவது முன்னம் எ-று. இவரிவர்க்குரிய வென்றறிவான் செய்யுட் கேட்போனெனவும், அவ்விடத் தவரவர்க் குரைக்க வென்றார் ஆசிரியரெனவுங் கொள்க. என்றென்பது ஈண்டு வினையெச்சம்; சொல்லெச்சமன்று. அறியவென வொரு வினை வருவிக்க. அது உரைப்பதையென்னும் வினைப்பெயரொடு முடியும். (எ-டு.) "யாரிவ னெங்கூந்தற் கொள்வா னிதுவுமோ, ரூராண்மைக் கொத்த படிறுடைத்து" (கலி. 89) என்றக்கால் இது கூறுகின்றாள் தலைவி யென்பதுஉங் கூறப்பட் டான் தலைவனென்பதூஉம் முன்னத்தான் உணரப்பட்டவாறு காண்க. இவை அகம் புறமென்னும் இரண்டற்கும் பொது. (207) பொருள் வகை 208. இன்பமு மிடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமு மென்றிவை யிழுக்கு நெறியின்றி யிதுவா கித்திணைக் குரிப்பொரு ளென்னாது பொதுவாய் நிற்றல் பொருள்வகை யென்ப. இது பொருளென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்றிவை யிழுக்குநெறியின்றி - இன்பமுந் துன்பமும் புணர்தலும் பிரிதலும் உலகவொழுக்கமு மெனப்பட்ட இவை தப்பும் வழியின்றி, இதுவாகித் திணைக்கு உரிப்பொருள் என்னாது - இத்திணைக்குரியபொரு ளிதுவாக வென்று ஆசிரிய ரோதிய பொருளின்றி, பொதுவாய் நிற்றல் பொருள் வகை என்ப - அவற்றுக்கெல்லாம் பொதுவாகப் புலவனாற் செய்யப்படுவது பொருட் கூறெனப்படும் எ-று. இன்பத் துன்பங் கூறுதலிற் புறத்திற்குங்கொள்க. ஒழுக்கம் இரண்டற்குங்கொள்க. வகையென்றதனாற் புலவன்றான் வகைந்ததே பொருளென்று கொள்க. அதுவின்றிச் செய்யுள் செய்தலாகாதென்பது கருத்து. (எ-டு.) "கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுத லந்தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறனசைஇச் சென்றவென் னெஞ்சே" (அகம். 9) என்றாற் போலப் புலவன் வகுப்பனவாம். இப்பாட்டுப் பாலையேனும் முல்லை முதலினவற்றிற்கும் இப்பொருள் பொதுவாம். பொதுமையென்றது எல்லாவுரிப்பொருட்கு மேற்கப் பலவேறு வகையவாகச் செய்தல். இவ்வாறு வருவன புறப்பொருள் கூறியவற்றுள்ளுங் காண்க. (208) துறை 209. அவ்வ மாக்களும் விலங்கு மன்றிப் பிறவவண் வரினுந் திறவதி னாடித் தத்த மியலின் மரபொடு முடியின் அத்திறந் தானே துறையெனப் படுமே. இது துறையென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இ-ள்.) அவ்வ மாக்களும் விலங்கும் அன்றி - ஐவகை நிலத்திற்கு முரியவெனப்படும் பல்வேறு வகைப்பட்ட மக்களும் மாவும் புள்ளும் ஓதிவந்தவாறன்றி, பிற திறவதின் நாடியவண்வரினும் - பிறவற்றைத் திறவிதாக ஆராய்ந்து செய்யுட் கண்ணே புலவன் படைத்துச் செய்யினும் ஒக்கும். (எ-டு.) "ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காற் கொழுநிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ வகன்மதி தீங்கதிர் விட்டது போல முகனமர்ந் தீங்கே வருவா ளிவள்யார்கொ லாங்கேயோர் வல்லவன் றைஇய பாவைகொ னல்லா ருறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருவங் கொண்டதோர் கூற்றங்கொ லாண்டார் கடிதிவளைக் காவார் விடுதல் கொடியியற் பல்கலைச் சில்பூங் கலிங்கத்த ளீங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வ மகள்" (கலி. 56) இதனுள் ஞாழல் முடித்தாளென நெய்தற்றலைவி போலக்கூறி "ஊர்க்கா னிவந்த பொதும்பருள்" என்றதனான் மருதத்துக் கண்டான் போலக் கூறிப் பின் குறிஞ்சிப் பொருளாகிய புணர்தல் நிமித்தம் உரிப் பொருளாக முடித்தான். இவ்வாறு மயங்கினுங் குறிஞ்சித்துறைப்பாற் பட்ட துறையுறுப்பான் வந்ததென்க. இஃது ஓதிய இலக்கணமன்றாயினும் முற்கூறிய பொருள்வகை போற் புலவர் செய்த தோருறுப்பு: இதுவுங் கொள்ளப்பெறு மென்றார். இது புறத்திற்கும் ஒக்கும். (209) மாட்டு 210. அகன்றுபொருள் கிடப்பினு மணுகிய நிலையினும் இயன்றுபொருண் முடியத் தந்தன ருரைத்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின். இது மாட்டென்னும் உறுப்புக் கூறுகின்றது. மாட்டுதலாவது கொண்டுவந்து கொளுத்துதல். (இ-ள்.) அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் - பொருள் கொள்ளுங்கால் அகன்று பொருள் கிடப்பச் செய்யினும் அணுகிக்கிடப்பச் செய்யினும், இயன்று பொருள் முடியத் தந்தனர் உரைத்தல் - இவ்விரு வகையானுஞ் சென்று பொருள் முடியுமாற்றாற் கொண்டு வந்து கூட்டியுரைப்பச் செய்தல், மாட்டு என மொழிப பாட்டு இயல் வழக்கின் - மாட்டென்னும் உறுப்பென்று கூறுவர் செய்யுள் வழக்கினுள் எ-று. இது மொழிமாற்றுப் பொருள்கோளன்றிப் புலவர் வேறுசெய்வ தொரு செய்கை. இது பல பொருட்டொடராற் பல வடியான் வரும் ஒரு செய்யுட்கண்ணும், பல செய்யுளைப் பல பொருட்டொடரான் ஒரு கதையாகச் செய்யுமிடத்தும் வரும். (எ-டு.) முருகாற்றுப்படையுள் "மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக் கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட் கோபத் தன்ன தோயாப் பூந்துகில் பல்காசு நிரைத்த சில்கா ழல்குற் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித் துணையோ ராய்ந்த விணையீ ரோதிச் செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக் கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும் பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர் நுண்பூ ணாகந் திளைப்பத் திண்காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின் குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்டா தப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் சூரர மகளி ராடுஞ் சோலை மந்தியு மறியா மரம்பயி லடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் ...................பார் முதிர் பனிக்கடல்" (முருகு. 12-45) இதனுள் அடிமுதல் மேனியீறா யுள்ளவற்றையுடைய சூரரமகளிர் பலருடனே கிள்ளி, இடையிடுபு, வைத்து, பண்ணி, செரீஇ, இட்டு, வளைஇ, திளைப்ப, கொட்டி, அப்பி, தெறியா, ஏத்திப், பாடி, ஆடும் வெற்பின் அடுக்கத்துச் சோலையிற் காந்தட்கண்ணி மலைந்த சென்னிய னென அகன்றும் அணுகியும் மாட்டியவாறுணர்க. இப் பாட்டும் பிற பாட்டுக்களும் இவ்வாறே மாட்டுறுப்பு வருமாறுணர்க. ஆரிய மன்னர் பறையின்" என்பதுமது. இனிப் பல செய்யுட்கண் வருமாறு சிந்தாமணியுள் யாங்கூறிய வுரைகள் பலவற்றானு முணர்க. அருமையும் பெருமையும் உடையவாய்ப் பரந்தசொற் றொடர்ந்து பொருள் தருவதோ ரின்பம்நோக்கிச் சான்றோர் இம் மாட்டிலக்கணமே யாண்டும் பெரும்பான்மை வரச் செய்யுள்செய்தலிற் பின் தொடர்நிலைச் செய்யுள் செய்தவர்களும் இம்மாட்டிலக்கணமே யாண்டும்வரச் செய்யுள் செய்தார். இதுவும் பொருள்வகைபோற் புலவர்செய்து கொண்டதாயிற்று. (210) மாட்டும் எச்சமும் இன்றியும் செய்யுள் செய்யப்படும் எனல் 211. மாட்டு மெச்சமும் நாட்ட லின்றி உடனிலை மொழியினுந் தொடர்நிலை பெறுமே. இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) தொடர்நிலையென்பது முற்கூறிய இருவகைத்தொடர் நிலைச் செய்யுள்; மாட்டும் எச்சமும் நாட்டலின்றி - முற்கூறிய மாட்டும் எச்சங்களும் நிறுத்தலின்றி, உடனிலைமொழியினும் பெறும். அச் செய்யுட் கிடந்தவாறே யமையச்செய்யினுஞ் செய்யுட்டன்மையைப் பெறும் எ-று. (எ-டு.) "முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய வாரேன் வாழிய நெஞ்சே" (பட். 218-220) "வேலினும் வெய்ய கான மவன் கோலினுந் தண்ணிய தடமென் றோளே" (பட். 300,301) அகன்று கிடந்து மாட்டின்றி வந்தது. "யானே யீண்டையேனே" (குறுந். 54) என்னும் பாட்டு அணுகி மாட்டின்றி வந்தது. சிந்தாமணியுள் மாட்டும் எச்சமுமின்றி யுடனிலையாயமைந்தன பலவும் யாம் கூறியவுரையா னுணர்க. எச்சமும் மாட்டும் என்னாத முறைப் பிறழ்ச்சியானே எச்சமுதலிய நான்குறுப்பு மின்றி அச் செய்யுள் வரப்பெறும் என்று கொள்க. (எ-டு.) "வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதலப் பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் றின்னா தெறிதரும் வாடையோ டென்னா யினள்கொ லென்னா தோரே" (குறுந். 110) இது எச்சமின்றி வந்தது. "தாமரை புரையுங் காமர் சேவடி" (குறுந். கடவுள்வாழ்த்து) இப் பாட்டு முன்னமின்றி வந்தது. "மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே" (குறுந். 71) இப் பாட்டுப் பொருளின்றி வந்தது. "ஈயற்புற்றத்து" (அகம். 8) என்னும் பாட்டுத் துறைவகை யின்றி வந்தது. மாட்டும் எச்சமுமெடுத்தோதினார் முன்னமும் பொருளுந் துறைவகையும்போல இன்றியமையாச் சிறப்பினவல்ல வென்றற்கு. (211) வண்ணம் இத்துணைத்து எனல் 212. வண்ணந் தாமே நாலைந் தென்ப. இது முறையே வண்ணம் இத்தனை பகுதிய என்கின்றது. (இ-ள்.) வண்ணந்தாம் இருபதென்று கூறுவர் புலவர் எ-று. தாமேயென்றார். அவை நூறும்பலவுமாக வேறுபடக் கொள்ளி னும் இவ்விருபதின் கண்ணே யடங்கும்; வேறு சந்தவேற்றுமை செய்யா வென்றற்கு. அது நுண்ணுணர்வுடையோர்க்குப் புலனா மென்றுணர்க. (212) வண்ணங்களின் பெயர்கள் 213. அவைதாம், பாஅ வண்ணந் தாஅ வண்ணம் வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ண மியைபு வண்ண மளபெடை வண்ணம் நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ் சித்திர வண்ணம் நலிபு வண்ண மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண மொழுகு வண்ண மொரூஉ வண்ண மெண்ணு வண்ண மகைப்பு வண்ணந் தூங்கல் வண்ண மேந்தல் வண்ணம் முருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று ஆங்கன மறிப வறிந்திசி னோரே. இது மேற்கூறப்பட்ட வண்ணங்களினது பெயர் வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறிய நாலைந்தும் அவ்விருபது பெயர் வேறு...... (213) பாஅ வண்ணத்தின் இலக்கணம் 214. அவற்றுள், பாஅ வண்ணஞ் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும். தாஅ வண்ணத்தின் இலக்கணம் 215. தாஅ வண்ணம், இடையிட்டு வந்த வெதுகைத் தாகும். வல்லிசை வண்ணத்தின் இலக்கணம் 216. வல்லிசை வண்ணம் வல்லெழுத்துப் பயிலும். மெல்லிசை வண்ணத்தின் இலக்கணம் 217. மெல்லிசை வண்ண மெல்லெழுத்து மிகுமே. இயைபு வண்ணத்தின் இலக்கணம் 218. இயைபு வண்ண மிடையெழுத்து மிகுமே. 214-218 - இவற்றிற்கு உரை கிட்டவில்லை அளபெடை வண்ணத்தின் இலக்கணம் 219. அளபெடை வண்ண மளபெடை பயிலும். (இ-ள்.) இரண்டளபெடையும் பயிலச் செய்வது எ. று (எ-டு.) "மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம்" (அகம். 99) "கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்" (மலைபடு. 352) என வரும். "தாஅம் படுநர்க்குத் தண்ணீ ருளகொல்லோ ஆஅம் பலபழி யன்னை யறிவுறில் வாஅம் புரவி வழுதியொ டெம்மிடைத் தோஒம் நுவலுமிவ் வூர்" இஃதளபெடைத் தொடையாம். (219) நெடுஞ்சீர் வண்ணத்தின் இலக்கணம் 220. நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். இது நெடுஞ்சீர் வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) நெடுஞ்சீர்வண்ணமாவது நெட்டெழுத்துப் பயின்று வரும் எ-று. (எ-டு.) "மாவா ராதே மாவா ராதே" (புறம். 273) எனவரும். "நீரூர் பானா யாறே காடே நீலூர் காயாம் பூவீ யாதே யூரூர் பாகா தேரே பீரூர் தோளாள் சீறூ ராளே" இதுவு மிறைக்கவியாம். (220) குறுஞ்சீர் வண்ணத்தின் இலக்கணம் 221. குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும். இது குறுஞ்சீர்வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) குறுஞ்சீர்வண்ணமாவது குற்றெழுத்து மிக்குவரும் எ-று. "குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி" (அகம். 4) எனவரும். "உறுபெய லெழிலி தொகுபெயல் பொழியச் சிறுகொடி யவரை பொதிதளை யவிழக் குறிவரு பருவ மிதுவென மறுகுபு செறிதொடி நறுநுத லழிய லறியலை யரிவையவர் கருதிய பொருளே" இதுவும் மிறைக் கவியாம். (221) சித்திர வண்ணத்தின் இலக்கணம் 222. சித்திர வண்ணம், நெடியவுங் குறியவு நேர்ந்துடன் வரூஉம். இது சித்திரவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) சித்திரவண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் ஒப்ப விராய்ச் செய்வது எ-று. (எ-டு.) "சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளி ராரணங் கினரே வாரல் வரினே யானஞ் சுவலே சாரல் நாட நீவர லாறே" எனவரும். "ஊர்வழி யூர்ந்தார் வாசி பேரச் சேரி சார்வரி தொல்லாதிப் பீர்தீர் தோழி தோளே" இதுவும் மிறைக் கவியாம். பல்வண்ணம் படுதலின் இதனைச் சித்திரவண்ண மென்றார். (222) நலிபு வண்ணத்தின் இலக்கணம் 223. நலிபு வண்ண மாய்தம் பயிலும். இது நலிபுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) நலிபுவண்ணம் ஆய்தம் பயின்றுவரும் எ-று. "அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்" (குறள். 178) "னஃகான் றஃகா னான்கனுரு பிற்கு" (தொல், எழுத். புணர். 21) எனவரும். நலிபென்பது ஆய்தம். "எஃகோ டவன்காப்ப வேமார்ந்தாள் போதந்தாள் யஃகுநீர்க் கான்யாற் றவிர்மண லெக்கர் மேல்" என்றாற் றொடைப்பாற்படும். (223) அகப்பாட்டு வண்ணத்தின் இலக்கணம் 224. அகப்பாட்டு வண்ணம், முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. இஃது அகப்பாட்டு வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) அகப்பாட்டு வண்ணமாவது முடித்துக்காட்டாத் தன்மையாலே முடிந்ததன்மேலே நிற்பதாம் எ-று. அது தன்னை முடித்தற்குரிய ஈற்றசை யேகாரத்தான் வாராது இறுதி இடையடிபோன்று நிற்பது. (எ-டு.) "பன்மீ னுணங்கற் படுபுள் ளோப்பியும் புன்னை நுண் டாது நம்மொடு தொகுத்தும் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியு மணந்ததற் கொவ்வான் றணந்துபுற மாறி யினைய னாகி யீங்குத் துறந்தோன் பொய்த லாயத்துப் பொலந்தொடி மகளிர் கோடுயர் வெண்மண லேறி யோடுகல னெண்ணுந் துறைவன் றோழி" "ஆணமில் பொருளெமக் கமர்ந்தனை யாடி" (கலி. 1) எனவரும். (224) புறப்பாட்டு வண்ணத்தின் இலக்கணம் 225 புறப்பாட்டு வண்ணம், முடிந்தது போன்று முடியா தாகும். இது புறப்பாட்டு வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) புறப்பாட்டு வண்ணமாவது இறுதியடிப் புறத்ததாகவுந் தான் முடிந்ததுபோன்று நிற்றல் எ-று. (எ-டு.) "இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே" (புறம். 363.) 'முன்னியவினையே' முடிந்ததுபோன்று முடியாதாயிற்று. (225) ஒழுகு வண்ணத்தின் இலக்கணம் 226. ஒழுகு வண்ண மோசையி னொழுகும். இஃது ஒழுகுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) முற்கூறியவாறன்றி யொழுகிய வோசையாற் செய்வது ஒழுகுவண்ணம் எ-று. ஒழிந்தனவும் ஒழுகுமேனும் அவற்றின் வேறிலக்கணமுடைய.. "அம்ம வாழி தோழி காதலர்க் கின்னே பனிக்கு மின்னா வாடையொடு புன்கண்மாலை யன்பின்று நலிய வுய்யல ளிவளென் றுணரச் சொல்லிச் செல்லுநர்ப் பெறினே சேய வல்ல வின்னளி யிறந்த மன்னவர் பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே" என வரும். (226) ஒரூஉ வண்ணத்தின் இலக்கணம் 227. ஒரூஉ வண்ண மொரீஇத் தொடுக்கும். இஃது ஒரூஉவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) ஒரூஉவண்ணமாவது யாற்றொழுக்குப்போலச் சொல்லிய பொருள் பிறிதொன்றனை யவாவாமை அறுத்துச் செய்வது எ-று. "யானே, யீண்டை யேனே யென்னலனே ஆனா நோயொடு கான லஃதே துறைவன் றம்மூ ரானே மறையல ராகி மன்றத் தஃதே" (குறுந். 97) எனவரும். "சிறியகட் பெறினே யெமக்கீயுமன்னே பெரியகட் பெறினே" (புறம். 235) என்பதுமது. இஃது யாப்புப்போலப் பொருணோக் காதோசையே கோட லானும் அடியிறந்து கோடலானும் யாப்பெனப்படாது. இனி யெல்லாத் தொடையும் ஒரீஇச் செந்தொடையாற் றொடுப்பது ஒரூஉவண்ணமெனக் கூறிப் "பூத்த வேங்கை" என்பது உதாரணங் காட்டுவது தொடைப்பகுதியாம். (227) எண்ணு வண்ணத்தின் இலக்கணம் 228. எண்ணு வண்ண மெண்ணுப் பயிலும். இஃது எண்ணு வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) எண்ணு வண்ணமாவது அடிக்கண்ணே எண்ணுப் பயின்று வருவது எ-று. இது காரணப்பெயர். "நன்ன னேற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி பொன்னணி வல்விற் புன்றுறை யென்றாங்கு" (அகம். 44) எனவரும். "நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல்" (பதிற்று. இரண்டு. 14) "நுதலுந் தோளுந் திதலை யல்குலும்" (அகம். 119) என்பவுமது. (228) அகைப்பு வண்ணத்தின் இலக்கணம் 229. அகைப்பு வண்ண மறுத்தறுத் தொழுகும். இஃது அகைப்பு வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) அகைப்புவண்ணமாவதுவிட்டுவிட்டுச்செல்லும் ஓசையையுடையது எ-று. அகைத்தல் அறுத்தலாதலிற் காரணப்பெயர். ஒருவழி நெடில் பயின்றும் ஒருவழிக் குறில் பயின்றும் அற்றும் வருவது. "வாரா ராயினும் வரினு மவர்நமக் கியாரா கியரோ தோழி" (குறுந். 110) எனவரும். "தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தை அடைய அசைத்த ஆர்மலைப் பாட்டூர் அண்ண லென்பான் இயன்ற சேனை முரசிரங்கும் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முடிக்கும் வேலின் அன்னவன்" என்பதுமது. (229) தூங்கல் வண்ணத்தின் இலக்கணம் 230. தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். இது தூங்கல் வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) தூங்கல் வண்ணமாவது தூங்கலோசைத்தாகி வரும் எ-று. அது வஞ்சிபோலற்றுச் சேறல். "யானூடத் தானுணர்த்த யானுணரா விட்டபின் றானூட யானுணர்த்தத் தானுணரான் - றேனூறும்" (முத்தொள். 107) எனத் தூங்கல் வண்ணம்வந்தது. (230) ஏந்தல் வண்ணத்தின் இலக்கணம் 231. ஏந்தல் வண்ணஞ் சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும். இஃது ஏந்தல் வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) ஏந்தல் வண்ணமாவது ஒருகாற் சொல்லிய சொல்லானே சொல்லப்படும் பொருள்சிறப்பச் செய்தல் எ-று. ஏந்தல் ஒருசொன்மிகுதல். (எ-டு.) "வைகலும் வைகல்.........துணராதார்" (நாலடி. 39) "கூடுவார் கூடல்கள் கூட லெனப்படா கூடலுட் கூடலே கூடலுங் - கூட லரும்பிய முல்லை யரும்பவிழ் மாலைப் பிரிவிற் பிரிவே பிரிவு" எனவரும். (231) உருட்டு வண்ணத்தின் இலக்கணம் 232. உருட்டு வண்ண மராகந் தொடுக்கும். இஃது உருட்டு வண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) உருட்டு வண்ணமாவது அராகந் தொடுக்குமது எ-று. உருட்டிச் சொல்லப்படும் அராகம், ஞெகிழா துருண்ட வோசைத்தாகலின், இது குறுஞ்சீர் வண்ணத்தின் வேறாம். (எ-டு.) "உருகெழு முருகிய முருமென வதிர்தொறு மருகெழு சிறகொடு மணவரு மணிமயில்" என வரும். (232) முடுகு வண்ணத்தின் இலக்கணம் 233. முடுகு வண்ணம், அடியிறந் தோடி யதனோ ரற்றே. இது முடுகுவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) முடுகு வண்ணமாவது முடுகியல்தொடுத்த அடியோடு பிறவடி வேறுபடத் தொடர்ந்தோடுவது எ-று. (எ-டு.) "நெறியறி செறிகுறி புரிதிரிபு" (கலி. 39) என்னுஞ் சுரிதகமும், "இரிபெழு பதிர்பதிர் பிகந்து" (கலி. 104) என்பது முதலியனவுமாம். இவ் வேறுபாடு நோக்கி யிதனைச் சொற்சீரடியும் முடுகிய லடியுமெனப் பரிபாடற்கு விதந்தோதினார். (233) வண்ணங்கள் மேற்கூறிய இவையே எனல் 234. வண்ணந் தாமே யிவையென மொழிப. இது புறனடை (இ-ள்.) சந்தவேற்றுமைசெய்வன இவையல்லது வேறில்லை எ-று. வண்ணமாவது சந்தம். தாமேயென அவற்றின்சிறப்புக் கூறிற்று. இதன் கருத்துப் பாக்களொடும் பிறவற்றோடும் உறழ அது பலவகைப் பட்டு வரையறை யின்றாமாயினும் அவையெல்லாம் இருபதின் கூறாகிய சந்தவேற்றுமையாவதல்லது சந்த வேற்றுமை விளங்கா வாறாயிற்று. (234) அம்மையின் இலக்கணம் 235. சின்மென் மொழியாற் றாய பனுவலின் அம்மை தானே யடிநிமிர் வின்றே. இதன் தொகைச் சூத்திரத்துள் ஆறுதலையிட்ட வந்நாலைந்து மெனக் கூறுபடுத்தி வேறுறீஇப் பின்ன ரெட்டுறுப் பெனக் கூறியதென்னை யெனின் அவை யொரோ செய்யுட்கோதிய வுறுப்பென்பதூஉம் இவை பல செய்யுளுந் திரண்டவழி இவ்வெட்டுறுப்பும் பற்றித் தொகுக்கப்படு மென்பதூஉம் அறிவித்தற்கெனக் கொள்க. இவற்றை வனப்பென்று பெயர் கூறிற்றுப் பலவுறுப்புந் திரண்ட வழிப்பெறுவதோ ரழகாதலின். இப்பெயர் சூத்திரத்தாற் பெறவேண்டுவார் "வனப்பிய றானே வகுக்குங் காலைச், சின்மென் மொழியான்" எனப் பாடமோதுப. இது பெரும்பான்மை பல செய்யுளுறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர் நிலைக்குப் பெறுவதோ ரழகென்பதூஉம், சிறுபான்மை தனிச்செய்யுட்கும் இவ்வழகு கொள்ள வேண்டுமென்பதூஉம், இருபத்தாறு றுப்பும் அங்ஙனந் திரண்ட செய்யுட்கு முரித்ததென்பதூஉம் உணர்த்துதற்குத் தொகைச் சூத்திரத்தைப் பிரித்தோதிப் பின்னும் ஓரினப்படுத்தி யொரு சூத்திரமாகவே யோதினா ரென்றுணர்க. இவ் வனப்பை யொரோ செய்யுளுட் கொள்ளின் மாத்திரை முதலியவற்றின் அழகு பிறவாதாம். இங்ஙனம் வகுப்பவே தனிநிலைச் செய்யுளுந் தொடர்நிலைச் செய்யுளும் எனச் செய்யு ளிரண்டா யிற்று. இனிக் கூறுகின்றன தொடர்நிலைச் செய்யுளென் றுணர்க. இது முறையே அம்மை கூறுகின்றது. அம்மை குணப்பெயர். அமைதிப்பட்டு நிற்றலின் அம்மையாயிற்று. (இ-ள்.) சின்மென் மொழியான் - சின்மையாய் மெல்லியவாய சொல்லானும், தாய பனுவலின் - இடையிட்டு வந்த பனுவல் இலக்கணத் தானும், அடிநிமிர்வின்று தான் அம்மை - அடி நிமிர்வின்றாய் வருவதுதான் அம்மை யெனப்படும் எ-று. அடிநிமிராதென்றது ஆறடியின் ஏறாமையை. சிலவாதல் சொல் லெண்ணுச் சுருங்குதல். மெல்லியவாதல் சிலவாகிய சொற்களும் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தான் வருதல். தாய பனுவலின் என்பது அறம்பொருளின்ப மென்னு மூன்றற்கு மிலக்கணங்கூறுவன போன்றும் இடையிடையே அன்றாயுந் தாவிச் செல்வதென்றவாறு. அங்ஙனம் வந்தது பதினெண்கீழ்க்கணக்கு. அதனுள் இரண்டடியானும் ஐந்தடியானுஞ் சிறுபான்மை யாறடியானு மொரோ செய்யுள் வந்தவாறும் அவை சின்மென் மொழியாய் வந்தவாறும் அறம்பொரு ளின்பத்திலக்கணங் கூறிய பாட்டுக்களும் பயின்று வந்தவாறும் இடையிடையே கார்நாற்பது களவழிநாற்பது முதலியன வந்தவாறுங் காண்க. உள்ளுறுப்பாய்ப் பதினெட்டையும் வனப்பெனல் படுமென்றுங் கொள்க. "பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து மிருடீர வெண்ணிச் செயல்" (திருக். 675) இஃது இலக்கணங்கூறலிற் பனுவலினென்றார். "மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று" (திருக். 1112) இஃது இலக்கிய மாதலின், தாயவென்றார். தாவுதல் இடையிடுதல். அதனுள்ளுறுப்பாகிய பாட்டுக் கடோறும் மாத்திரை முதலிய வுறுப்புக்க ளேற்பன பலவும் வருமாறும் இவ் வனப்பெட்டனுள் ஏற்பன பலவும் வருமாறு முணர்க. ஆசாரக் கோவையுள் "ஆரெயின் மூன்றும்" (தற்சிறப்புப் பாயிரம்) ஆறடியாற் சிறுபான்மை வந்தது. (237) அழகின் இலக்கணம் 236. செய்யுள் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே யழகெனப் படுமே. இது முறையே அழகு கூறுகின்றது. (இ-ள்.) வழக்குச்சொற் பயிலாமற் செய்யுளுட் பயின்றுவருஞ் சொல்லானே சீர்த்துப் பொலிவுபெறப் பாடின் அப் பகுதி அழகெனப்படும் எ-று. அவ்வகை யென்றதனான் அவை வேறுவேறாக வந்து ஈண்டிய தொகைநிலைச் செய்யுளென்றுணர்க. அவை நெடுந்தொகை முதலிய தொகையெட்டுமாம் அது தலைச்சங்கத்தாரை யொழிந்தோர் சிறுபான்மை வழக்கும் பெரும்பான்மை செய்யுட்சொல்லுமாக இவ் விலக்கணத்தாற் செய்தவாறே இக்காலத்துச் செய்யினுமாம் எ-று. தாயபனுவலின்மையின் மூவடிமுப்பது முதலியனவும் அழகின்பாற்படும். இவற்றுள்ளும் ஒரோ செய்யுட்கண் மாத்திரை முதலியவுறுப்பும் ஏற்ற வகையான் வருமாறு காண்க. (236) தொன்மையின் இலக்கணம் 237. தொன்மை தானே, உரையொடு புணர்ந்த பழமை மேற்றே. இது தொன்மை கூறுகின்றது. (இ-ள்.) தொன்மையாவது உரைவிராஅய்ப் பழமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது எ-று. அவை பெருந்தேவனார் செய்த பாரதமும், தகடூர்யாத்திரையும் போல்வன. சிலப்பதிகாரமும் அதன் பாற்படும். (237) தோலின் இலக்கணம் 238. இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியா னடிநிமிர்ந் தொழுகினுந் தோலென மொழிப தொன்னெறிப் புலவர். இது தோல் கூறுகின்றது. அஃது இருவகையது. அவை கொச்சகத்தானும் அகவலானுஞ் செய்யப்படுவனவாம். (இ-ள்.) இழுமென்னு மோசையையுடைய மெல்லென்ற சொல்லானே அறம் பொரு ளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும் ஆசிரியப்பாட்டான் ஒருகதை மேற்றொடுப்பினுந் தோலென்றுகூறுவர் பழநெறியை யறிந்த புலவர் எ-று. யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது (செய். 149) என்ற வழிப் பொருள்வேறுபட்டுக் கொச்சகத்தாற் செய்யப்படுவன தோலாம் எ-று. இவை பொருட்டொடர். அவை சிந்தாமணி முதலியன. அவை பாவிற்கினமாகிய துறையும் விருத்தமும் பற்றிச் செய்தன வென்பார்க்கு அப்புலவர் செய்யுட் செய்கின்ற காலத்திற்குநூல் தொல் காப்பியமாயவாறும் அவர் இனங் கொள்ளாதவாறும் அவ்வினங்கடாம் இலக்கணக் குறைபாடுடையவாறுங் கொச்சகம்போற் சிறவாவாறும் முன்னர் விளங்கக் கூறியவற்றைக்கொண்டும் பின்புசெய்த நூல்கள் முன்புசெய்த செய்யுட்கு விதியாகாதவாறு கொண்டும் மறுக்க. பின்னோர் தாஞ்செய்த நூல்கட்கு அவை உதாரணமாகக் காட்டலின் அச் செய்யுள் அந் நூல்கட்கு முன்னாயவாறு முணர்க. இனித் தொல்காப்பியனாரை யொழிந்த ஆசிரியர் பதினொருவருட் சிலர் இனமுங்கொண்டார். அதுபற்றி யாப்பருங்கல முதலியவற்றினும். இனங்கொண்டாரென்பார்க்கும் அவர்கள் அகத்தியனார்க்கு மாறாக நூல்செய்தவராவர். அவை வழிநூலெனப்படாவென்று மறுக்க. இனி யாசிரியப்பாவான் அடிநிமிர்ந்துவந்தன தேசிகப்பா முதலியன. (238) விருந்தின் இலக்கணம் 239. விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. இது விருந்து கூறுகின்றது. (இ-ள்.) விருந்தென்று கூறப்படுவதுதானும் புதிதாகத் தொடுக்கப் படுந் தொடர்நிலைச் செய்யுளின்மேற்று எ-று. தானுமென்றவும்மை யிறந்ததுதழீஇயிற்று. முற்கூறிய தோல் பழைய கதையைப் புதிதாகக் கூறலென்றும், இது பழையதும் புதியதுமாகிய கதைமேற்றன்றித் தான் புதிதாகப் படைத்துத் தொடர்நிலைச்செய்யுள் செய்வதென்றும் பொருள் தருதலின். அவை முத்தொள்ளாயிரமும் பின்னுள்ளார் பாட்டியன்மரபிற்கூறிய கலம்பகச்செய்யுள் முதலியனவும் ஆம். (239) இயைபின் இலக்கணம் 240. ஞகாரை முதலா ளகார வீற்றுப் புள்ளி யிறுதி யியைபெனப் படுமே. இஃது இயைபு கூறுகின்றது. (இ-ள்.) ஞணநமனயரலவழள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றனை யீறாகக்கொண்டு செய்யுளைப் பொருட்டொடராகச்செய்வது இயைபெனப்படும் எ-று. இயை பென்றதனானே பொருளியைதல் பெற்றாம். பரந்தமொழி யானடிநிமிர்ந்த தோல் உயிரீற்றவாயேவரும். னகரவீற்றா னிற்றுப் பொருடொடர்ந்தன மணிமேகலை யும், உதயணன்கதையும். ஒழிந்த வொற்றுக்களுக்கும் இலக்கணமுண்மையின் இலக்கியம் இக்காலத்து வீழ்ந்தன போலும். எனப்படுவதென்றதனான் இக்காலத்தார் கூறும் அந்தாதிச் சொற் றொடருங்கொள்க. (240) புலனது இலக்கணம் 241 சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலனுணர்ந் தோரே. இது புலம் கூறுகின்றது. (இ-ள்.) பாடி மாற்றங்களானே செவ்விதாகக் கூறப்பட்டு ஆராய்ந்து காணாமை பொருள் தானே தோன்றச் செய்வது புலனென்றுகூறுவார் அறிவறிந்தோர் எ-று. அவை விளக்கத்தார் கூத்து முதலிய வெண்டுறைச் செய்யுளென்று கொள்க. (241) இழைபின் இலக்கணம் 242. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா வைந்தடி யொப்பித்து ஓங்கிய மொழியா னாங்கன மொழுகின் இழைபி னிலக்கண மியைந்த தாகும். இஃது இறுதி நின்ற இழைபுகூறுகின்றது. (இ-ள்.) ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடக்காது - வல்லொற் றடுத்த வல்லெழுத்துப் பயிலாமல், குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து - இருசீர் முதல் எழுசீரடியளவும் அவ்வைந் தடியினையும் ஒப்பித்து, ஓங்கிய மொழியான் ஆங்கனம் ஒழுகின் - நெட்டெழுத்துப்போல் ஓசைதரும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களு முடைய சொல்லானே முற்கூறிய வாறே தெரிந்தமொழியாற் கிளந்து ஓதல் வேண்டாமற் பொருள் புலப்படச் செய்யின். இழைபின் இலக்கணம் இயைந்ததாகும் - இழைபினது இலக்கணம் பொருந்திற்றாம் எ-று. கழிநெடிலடியானும் வருமென்றாரேனும் எழுசீரின் மிகாதென்று கொள்க. ஒப்பித்தென்றதனாற் பெரும்பான்மை நாற்சீரடியான் வருஞ் செய்யுட்கண்ணே யொழிந்த நான்கடியும் வருமென்றுகொள்க. அவ்வாறு வருவன கலியும் பரிபாடலும்போலு மிசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்றுணர்க. இவ்வைப்பு இசை இனத்திற்குரியவாதலிற் றேர்தல் வேண்டாது பொருள்தோன்றச் செய்க வென்றார். இத் தொல்காப்பியனார் மேற்கூறியது இசைத்தமிழாகலின் அதற்கு அதிகாரம்பட இதனை ஈற்றுக்கண் வைத்தார். இனி யாப்பருங்கல முதலியவற்றிற் கூறிய சித்திரகவியினையும் ஈண்டுச்சேரக் கூறுகவெனின் யத்திரமு மந்திரமுமாய்த் தெய்வத்திற்கே யுரியவாகக் கூறும் மிறைக்கவி இம் முப்பத்துநான் குறுப்பும்போல வகனைந்திற்குரிய சான்றோர் செய்யுட் குறுப்பாய் வாராவென்றும் அத்திணைக்குரிய மரபு வழுவினஎன்றுங் கருதித் தொல்காப்பியனார் கூறாமையானும் அவற்ற திலக்கணங் கூறிய ஆசிரியரும் அவற்றிற்கு இலக்கியஞ் சான்றோர் செய்யுட்களுட் காணாமையின் "வடவெழுத் தொரீஇய எழுத்தொடு புணர்ந்த சொல்" லானன்றி வடவெழுத்தாற் பெரும் பான்மை வரச் செய்யுள் தாமேசெய்து இலக்கியமாகக் காட்டினா ராதலானும் யாமும் இம்மிறைக்கவி யிலக்கணம் ஈண்டுக் கூறாமாயினாம். (242) அதிகாரப் புறனடை 243. செய்யுண் மருங்கின் மெய்பெற நாடி யிழைத்த விலக்கணம் பிழைத்தன போல வருபவுள வேனும் வந்தவற் றியலான் திரிவின்றி முடித்த றெள்ளியோர் கடனே. இஃது இவ்வோத்திற்கூறிய யாப்பிலக்கணத்திற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) செய்யுண் மருங்கின் மெய்பெறநாடி யிழைத்த இலக்கணம்- செய்யுளிடத்துப் பொருள்பெற ஆராய்ந்து தந்திரஞ் செய்யப்பட்ட இலக்கணத்தில், பிழைத்தனபோல வருப வுள வேனும். - வழீஇயின போன்று பின்தோன்றி வருவனவுளவேனும், வந்தவற்றியலாற் றிரிபின்றி முடித்தல் தெள்ளியோர்கடன். முற்கூறிய இலக்கணத்தொடு திரியாமல் முடித்துக்கோடல் அறிவுடையோர்கடன் எ-று. அவை யெண்சீரின் மிக்கனவற்றைக் கழிநெடிலடிப்பாற் சார்த்து வனவும், வெண்பாவாயே வந்து கொச்சகமா யடங்குவனவும், ஆசிரியம் அவ்வாறு வருவனவும், கொச்சகங்களின் வேறுபாடும், தொடை வேறுபாடுகளும், பிறவுமாம். (243) எட்டாவது செய்யுளியல் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரை நிறைவேறியது. நூற்பா நிரல் (எண் : நூற்பா எண்) அஃதொழித் தொன்றின் 93 அகப்பாட்டு வண்ணம் 224 அகவல் என்ப 81 அகன்று பொருள் 210 அகைப்பு வண்ணம் 229 அங்கதந் தானே 124 அங்கதப் பாட்டளவு 159 அசைச்சீர்த் தாகும் 73 அசைகூ னாகும் 48 அசையும் சீரும் 11 அடக்கியல் வாரம் 144 அடிதொறுந் தலையெழுத்து 92 அடிநிமிர் கிளவி 182 அடியிகந்து வரினும் 183 அடியிறந்து வருதல் 34 அடியின் சிறப்பே 35 அடியுள் ளனவே 33 அடைநிலைக் கிளவி 135 அதாஅன் றென்ப 82 அதுவே தானும் ஈரிரு 167 அதுவே தானும் ஓரிரு 174 அதுவே தானும் பிசி 181 அதுவே, வண்ணகம் 139 அந்நிலை மருங்கின் அறம் 106 அந்நிலை மருங்கின் வஞ்சி 31 அம்போ தரங்கம் 151 அவ்வ மாக்களும் 209 அவ்வியல் பல்லது 86 அவற்றுள், சூத்திரம் 169 அவற்றுள், நூலெனப் 166, 478 அவற்றுள், பாஅ வண்ணம் 214 அவற்றுள், மாத்திரை 2 அவைதாம், நூலினான 165 அவைதாம், பாஅ வண்ணம் 213 அவையடக் கியலே 113 அளபெடை தலைப்பெய 89 அளபெடை யசைநிலை 17 அளபெடை வண்ணம் 219 அளபெழின் அவையே 97 அளவடி மிகுதி 59 அளவியல் வகையே 163 அளவுஞ் சிந்தும் 58 அறுசீ ரடியே 64 ஆங்கனம் விரிப்பின் 51 ஆசிரிய நடைத்தே 108 ஆசிரியப் பாட்டின் 157 ஆசிரியம் வஞ்சி 105 ஆசிரிய மருங்கினும் 67 ஆயிரு தொடைக்கும் 94 இசைநிலை நிறைய 27 இடைச்சுர மருங்கின் 194 இடைநிலைப் பாட்டே...தரவ 134 இடைநிலைப் பாட்டே...தரவு 132 இடையும் வரையார் 69 இதுநனி பயக்கும் 203 இயலசை மயக்கம் 13 இயலசை முதலிரண்டு 6 இயலசை யீற்றுமுன் 16 இயற்சீர் இறுதிமுன் 19 இயற்சீர்ப் பாற்படுத்து 28 இயற்சீர் வெள்ளடி 62 இயைபு வண்ணம் 218 இருசீர் இடையிடின் 99 இருவகை யுகரமோடு 4 இவ்விடத் திம்மொழி 207 இழுமென் மொழியான் 238 இறப்பே நிகழ்வே 202 இறுவாய் ஒன்றல் 96 இன்சீர் இயைய 30 இன்பமும் இடும்பையும் 208 ஈரசை கொண்டும் 12 ஈற்றய லடியே 68 உய்த்துணர் வின்றித் 204 உயிரில் லெழுத்தும் 44 உருட்டு வண்ணம் 232 ஊரு மயலும் 191 எண்ணிடை யொழிதல் 146 எண்ணு வண்ணம் 228 எண்வகை யியனெறி 205 எருத்தே கொச்சகம் 152 எழுசீர் அடியே 65 எழுசீர் இறுதி 76 எழுத்தள(வு) எஞ்சினும் 43 எழுத்து முதலா 78 எழுத்தொடும் சொல்லொடும் 179 எழுநிலத் தெழுந்த 164 ஏந்தல் வண்ணம் 231 ஏழெழுத் தென்ப 37 ஏனை யொன்றே 138 ஐவகை யடியும்-ஆசிரிய 52 ஐவகை யடியும்-விரிக்குங்காலை 50 ஒண்டொடி மாதர் 193 ஒத்தா ழிசைக்கலி-இரு 131 ஒத்தா ழிசைக்கலி-கலி 130 ஒத்தா ழிசையும் 115 ஒத்துமூன் றாகும் 142 ஒப்பொடு புணர்ந்த 176 ஒருசீர் இடையிட்டு 98 ஒருநெறிப் பட்டாங்கு 201 ஒருநெறி யின்றி 171 ஒருபான் சிறுமை 150 ஒருபொரு ணுதலிய சூத்திரத் 168 ஒருபொருள் நுதலிய வெள்ளடி 153 ஒருபோ கியற்கையும் 147 ஒரூஉ வண்ணம் 227 ஒழிந்தோர் கிளவி 195 ஒழுகு வண்ணம் 226 ஒற்றள பெடுப்பினும் 18 ஒற்றெழுத் தியற்றே 8 ஒற்றொடு புணர்ந்த 242 ஒன்றே மற்றும் 175 கட்டுரை வகையான் 123 கலித்தளை மருங்கின் 24 கலித்தளை யடிவயின் 25 கலிவெண் பாட்டே 160 காமப் புணர்ச்சியும் 186 கிழவன் றன்னொடும் 192 கிளரியல் வகையின் 184 குட்ட மெருத்தடி 116 குற்றிய லுகரமும் 10 குறளடி முதலா 57 குறிலிணை யுகரம் 5 குறிலே நெடிலே 3 குறுஞ்சீர் வண்ணம் 221 கூற்றும் மாற்றமும் 156 கைக்கிளை தானே 119 கைக்கிளை முதலா 185 கொச்சகம் அராகம் 121 கொச்சக வொருபோகு 148 சித்திர வண்ணம் 222 சின்மென் மொழியான் 235 சீர்கூ னாதல் 49 சீர்நிலை தானே 41 சீரியை மருங்கின் 56 செம்பொருள் ஆவன 125 செய்யுள் தாமே 127 செய்யுள் மருங்கின் 243 செய்யுள் மொழியான் 236 செவியுறை தானே 114 சேரி மொழியான் 241 சொல்லிய தொடையொடு 100 சொல்லொடுங் குறிப்பொடும் 206 சொற்சீ ரடியும் 122 ஞகாரை முதலா 240 ஞாயிறு திங்கள் 200 தரவிய லொத்தும் 137 தரவிற் சுருங்கித் 143 தரவின் றாகித் 149 தரவும் போக்கும் 154 தரவே தானும் நாலடி 133 தரவே தானும் நான்கும் 141 தன்சீர் உள்வழித் 55 தன்சீ ரெழுத்தின் 46 தன்சீர் வகையினும் 54 தன்பா அல்வழித் 21 தனிக்குறின் முதலசை 7 தாஅ வண்ணம் 215 துகளொடும் பொருளொடும் 128 துள்ளலோசை 83 தூக்கியல் வகையே 87 தூங்க லோசை 84 தூங்கல் வண்ணம் 230 தெரிந்தனர் விரிப்பின் 102 தொடைவகை நிலையே 103 தொன்மை தானே 237 நலிபு வண்ணம் 223 நாலெழுத் தாதி 36 நாற்சீர் கொண்டது 32 நிரனிறுத் தமைத்தலும் 91 நிரைமுதல் வெண்சீர் 60 நிறைமொழி மாந்தர் 178 நிரையவண் நிற்பின் 75 நுண்மையும் சுருக்கமும் 177 நெடுஞ்சீர் வண்ணம் 220 நெடுவெண் பாட்டு முந்நால் 158 நெடுவெண் பாட்டே 118 நேர்நிலை வஞ்சிக்கு 72 நேரவண் நிற்பின் 15 நேரின மணியை 170 நேரீற் றியற்சீர் 74 பத்தெழுத் தென்ப 38 பரத்தை வாயில் 198 பரிபா டல்லே...தொகை 120 பரிபா டல்லே...நாலீரைம்பது 162 பாட்டிடைக் கலந்த 180 பாட்டிடை வைத்த 173 பாட்டுரை நூலே 79 பாணன் கூத்தன் 190 பாநிலை வகையே 155 பார்ப்பா ரறிவர் 197 பார்ப்பான் பாங்கன் 189 பாவிரி மருங்கினைப் 107 புறநிலை வாயுறை 161 புறப்பாட்டு வண்ணம் 225 பொழிப்பும் ஒரூஉவும் 90 போக்கியல் வகையே 136 மண்டிலங் குட்டம் 117 மரபே தானும் 80 மருட்பா வேனை 85 மறைவெளிப் படுதலும் 187 மனையோள் கிளவியும் 196 மாட்டும் எச்சமும் 211 மாத்திரை எழுத்தியல் 1 மாத்திரை முதலா 104 முச்சீர் முரற்கையுள் 70 முச்சீ ரானும் 47 முடுகியல் வரையார் 66 முடுகு வண்ணம் 233 முதற்றொடை பெருகிச் 145 முற்றிய லுகரமும் 9 முன்னிரை வரினும் அன்ன 14 மூவா றெழுத்தே 40 மூவைந் தெழுத்தே 39 மூன்றுறுப் படக்கிய 172 மெய்பெற வவையே 188 மெய்பெறு மரபின் 101 மெல்லிசை வண்ணம் 217 மொழிகரந்து மொழியினது 126 மொழியினும் பொருளினும் 95 மோனை எதுகை 88 வசையொடும் நகையொடும் 129 வஞ்சிச் சீரென 20 வஞ்சித் தூக்கே 71 வஞ்சி மருங்கின் 22 வஞ்சி மருங்கினும் 26 வஞ்சி யடியே 45 வண்ணகந் தானே 140 வண்ணந் தாமே 234 வண்ணந் தானே 212 வல்லிசை வண்ணம் 216 வழிபடு தெய்வம் 110 வாயி லுசாவே 199 வாயுறை வாழ்த்தே-அவை 111 வாயுறை வாழ்த்தே-வய 112 வாழ்த்தியல் வகையே 109 விராஅய் வரினும் 53 விராஅய தளையும் 61 விருந்தே தானும் 239 வெண்சீர் ஈற்றசை 26 வெண்டளை விரவியும் 63 வெண்பாட்(டு) ஈற்றடி 72 வெண்பா வியலினும் 77 வெண்பா வுரிச்சீர் 23 எடுத்துக்காட்டு, மேற்கோள், செய்யுள், செய்யுளடி - அகரவரிசை நிரல் நூற்பா பாடல், பாடலடி பக்கம் அ 2,7, 123 அ இ உ எ ஒ 223 அஃகாமை 32, 74 அகரமுதல 26 அகல்வயல் 56 அகலிரு விசும்பின் 155 அகன்ஞாலம்.... மயங்கியோரே 192 155 அகன்ஞாலம் விளக்கும் 193 109 அங்கண் வானத்து 9 அஞ்சொல் மடவார்க்கு 72, 115 அட்டாலும் பால்சுவையின் 80 அட்டானானே குட்டுவன் 93 அடங்காதார் மிடல்சாய 48 அடிஅதர் சேறலின் 29 அடிதாங்கும் அளவின்றி 118 அணங்குகொல் 63 அணிகிளர் அவிர்பொறி 60 அணிமுகம் மதி 149 அணிமுடி அமரர்தம் 165 93 அணிவேங்கை... நிழல் 94 அத்தக் கள்வர் 94 அந்தணர் நூற்கும் 92 அம்பும் அழலும் அவிர்கதிர் 18 அம்பொ தைந்து டைய்ய 200 அம்பொன் இணர 226 அம்ம வாழி தோழி 75 அமிழ்தினும் ஆற்ற 57 அமைவிடு நொடி 63 அரவணிந்த கொடி 29, 32, 77, 78, 92, 105 அரிதாய அறனெய்தி 154 அரிதினில் தோன்றிய யாக்கை 187 137 அரிதே தோழி 151 156 அரிநீர் அவிழ் நீலம் 201 70 அரிபு அரிபு அறுப்பன சுற்றி 92 அரிமதர் மழைக்கண் 153 அரும்பொருள் வேட்கையின் 181 71 அரிமயிர்த்திரள் முன்கை 155 அருள்தீர்ந்த காட்சியான் 192 8 அருளல்லது 137 அரைசினும் நிலையில்லா 152 31 அலரிநாறுதுவர்வாய் 97 அலைகடல் துயிலுணரா 13,49 அவரே, கேடில் விழுப்பொருள் 96 அவரோ வாரார் கார் 27 அவிழ்ந்த துணி அசைக்கும் 2 அவைதாம், குற்றிய லிகரம் 194 அழிவில முயலும் 11 அளவும் சிந்தும் 92 அளியென உடையேம் 125 அறச்சுவையிலன் 121 அறவோர் உள்ளா 160 அறன்நிழல் எனக் கொண்டாய் 110 அறிதுயில் அரவணை 58 அறிவறிந்தார்த் 155 அறுசீர்அடியே 195 95 அறுத்தலின் குறைத்தலின் 149 அறுவருக் கறுவரை 172 72, 115 அறை அருவி ஆடாள் 155 அறைக்கரும்பு 189 ஆ 17 ஆஅ அளிய அலவன் 2 ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ 190 ஆடலின் பயின்றனை என்னாது 54 ஆடுகொடி நுடங்கு 146 ஆயிரம் கதிராழி 159 178 ஆரியம் நன்று தமிழ்தீது 120 ஆயிரம் விரித்த அணங்குடை 109 ஆயிரவெள்ள ஊழி 158, 235 ஆரெயில் மூன்றும் 109, 149 ஆறறி அந்தணர்க்கு 169 இ 196 இடிக்குங் கேளிர் நுங்குறை யாக 153 இடுமுள் நெடுவேலி 183 2 இடைஎழுத் தென்ப 92 இணையிரண்டு இயைபு ஒத்த 137 இமயவில் வாங்கிய 150 30 இமிழ்கடல் வளைஇய 112 இமிழ்கட லுடுத்தஇப் பெருங்கண் 57 இமிழ் தூங்கிசை 96 இயற்கையின் உடைமையின் 13 இயற்சீர் இறுதி 73 இயற்சீர்ப் பாற்படுத்து 155 இரங்கு குயில் முழவா 195 67, 155, 233 இரிபு எழுபு அதிர்பு அதிர்பு 199 9 இரவுத்துயில் மடிந்த தானை 158 இரு தேவர் பார்ப்பார் 125, 159 இருள்தீர்மணி விளக்கத்து 155 இலங்கொளி வெண்மருப்பின் 194 154 இவடான் திருந்தாச் சுமட்டினள் 187 154 இவடான் வருந்த நோய்செய்து 187 149 இளமா எயிற்றி 166 9 இனத்துள்ள தாகும் அறிவு 95 இன்சொற் குழியுள் 93 இன்று கொல் அன்றுகொல் என்று கொல் 137 இன்னரிச் சிலம்பின் 152 93 இன்னர் என்னாது இன்பம் 9 இன்னாது இனியார்ப் பிரிவு 225 இன்னா வைகல் வாரா முன்னே 158 இனிதுண்பா னென்பான் ஈ 211 ஈயல் புற்றத்து ஈர்ம்புறம் 126 ஈயென இரத்தல் உ 80 உச்சிக் கூப்பிய கையினர் 49 உதுக்காண், சுரந்தானா வண்கை 17 உப்போஒ என உரைத்து 196 உயங்கின்று அன்னை என்மெய் 2 உயிர்மெய் அல்லன 3 உயிரில் எழுத்தும் 109 உரன் என்னும் தோட்டியான் 232 உருகெழு முருகியம் 93 உருவக் கடுந்தேர் முருக்கி 12, 92 உலகம் உவப்ப வலனேர்பு 149 உலகம் மூன்றும் ஒருங்குடன் 168 49 உலகினுள், பெருந்தகையார் 72 உலகு பசிப்பப் பசிக்கும் 49 உலகே முற்கொடுத்தார் 14, 92 உவவு மதி உருவின் 177 உழுத உழுத்தஞ் செய் 87, 93, 105 உள்ளார் கொல்லோ தோழி 97 உள்ளின் உள்ளம் வேமே 97 உறாஅர்க் குறுநோய் 200 உறுதி தூக்கத் தூங்கி 186 உறுதோறு உயிர்தளிர்ப்ப 221 உறுபெயல் எழிலி தொகுபெயல் 146 உறைபதியி னுடனயனை 160 ஊ 191 ஊஉர் அலரெழச் சேரி கல்லென 196 ஊர்க பாக ஒருவினை கழிய 209 ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் 222 ஊர்வழி ஊர்ந் தார்வாசி எ 155 எஃகிடை தொட்ட கார் கவின்பெற்ற 192 97 எஃஃகிலங்கிய கையராய் 223 எஃகோ டவன்காப்ப ஏமார்ந்தாள் 191 எந்தையும் நிலனுறப் பொறாஅன் 187 எம்மனை முந்துறத் தருமோ 125 எம்மிகழ்வோர் தம்மிகழ்வோரே 9, 27 எய்போல் கிடந்தானென் னேறு 121 எரிமலர் சினைஇய கண்ணை 155 எருத்தே கொச்சகம் 200 94 எல்லா விளக்கும் 134 எல்லி வருதி எவன் குறித்தனை 196 எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ 92 எல்லை எம்மொடு கழிப்பி எல்லுற 196, 201 எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப! 149 எழுசீர் இறுதி 169 4, 41 எழுத்தளவு எஞ்சினும் 95 எழுநூறு நன்றி செய்து ஒன்று 93 எறிதிரை செறிகையான் 62 எறும்பி அளையின் 149 என்றிவை சொல்லி அழுவாள் 166 160 என்னை புற்கை உண்டும் 207 149 என வாங்குப்பாடி 168 ஏ 14 ஏடு கொடியாக எழுதுகோ ஐ 154 ஐய எம் காதின்குழை 25, 59 ஐயிரு தலையின் அரக்கர் கோமான் ஒ 92 ஒடுங்கா ஒலி கடல் 115 ஒத்து மூன்றாகும் 123 ஒருஉக் கொடியியல் நல்லார் 149 ஒரு வான் யாறோடு 171 156 ஒரூஉநீ எம்கூந்தல் கொள்ளல் 203 92 ஒல்லாது ஒல்லும் என்றலும் 196 ஒன்றித் தோன்றும் தோழி 155 ஒன்று இரப்பான் போல் 196 ஓ 96 ஓங்கிய சுரத்தை நீங்கிஏகி 54 ஓங்கு கோட்டுத் தொடுத்த 54 ஓங்கு கோட்டு மீது 24 ஓங்குதிரை அடுக்கம்பாய்ந்து 14, 40 ஓங்கு திரை வியன்பரப்பின் 14, 54 ஓங்கு மலைப்பெருவில் 80 ஓதியும் ஓதார் 2, 57 ஓரளபாகும் 198 ஓருயிர் மாதர் ஆகலின் 8 ஔகார இறுவாய் க 18, 97 கஃஃ றென்னும் 149 கங்கை சூடிய கபாலி 172 56 கடலுடுத்து விசும்புசூடி 118 கடவுளும் வரையார் 31 கடறு கவரா இழிந்து 149 கடாமும் குருதியும் 174 12 கடித்துக் கரும்பினை 2 கடியவே கனங்குழாஅய் 31 கண்டகம் பற்றிக் கடகமணி 92 கண்டல் கானல் குருகினம் மொய்ப்ப 154 கண்டவிர் எல்லாம் 186 149 கண்டெழப் பாவை தனிக்கரம் 174 195 கண்டோர் மொழிதல் 18, 219 கண்ண் தண்ண்ணென 92 கண்ணுடையர் என்பவர் 95 கண்ணும் தோளும் தண்ணறுங் 31 கண்போல் மலர்ந்த 93 கதிபல விதியாற் சென்று 200 கதிர்பகா ஞாயிறே 92 கந்தில் பிணிப்பர் கனிற்றை 57 கமழ் பூந்துணர் 153 கயமலர் உண்கண்ணாய் காணாய்யொருவன் 182 149 கயமல ருண்கண்ணாய் காணாய் 167 31 கரடிவழங்கு 154 சுரந்தாங்கே 184 96 கரவெழூஉங் கண்ணீர் 7 கருமமே கல்லார்கண் தீர்வு 64 கரைபொரு கான்யாற்றங் 48 கலம்கழாஅலின் 28 கலித்தளை அடிவயின் 92 கல்லா தவரும் 149 கல்லாலந் தன்னிழற்கீழ் 173 142 கல்லெனக் கவின் பெற்ற 40,65 கவிரிதழ் கதுவிய 27 கழல் தொழாஅ மன்னவர்தம் கை 118 களியானைத் தென்னன் 14 களிற்றுக் கணம் பொருத 14 களிற்றுநிணத் துகிலுடுத்த 26 களிறும் கதவெறிந்தன 48 களிறே கதவெறியா 56, 92 கற்க கசடற 113 கற்பால் உமிழ்ந்த மணியும் 58 கற்றவரைச் சேர்வர் 123 கறையணி மிடற்றினவை 72, 115 கறைப்பல் பெருமோட்டு 149 கன்று குணிலாக் கனி உகுத்த 164, 177 155 கன்னி ஞாழல் கமழ் பூங் கானல் 194 160 கனவினால் காண்கொடா 10 கனவுக்கொல் நீகண்டது 57 கனைகுரலன 31 காடு தேரா 57 காடோங்கிட 137 காணாமை இருள்பரப்பி 152 155 காண்பான் அவாவினால் 194 149 காமப் பகுதி 177 189 காமம் காமம் என்ப 118 காமம் சாலா இளமையோள் 96 காம்பிவர் தோளும் 155 காமர் கடும்புனல் 197 121 காமரு சுற்றமோடு ஒருங்கு 18 காமன் காண் என்று 200 காய்ந்த நோய் உழப்பாரை 95 கார்பெயல் பெய்தபின் 155 காரணி கற்பகம் கற்றவர் 194 154 காராரப் பெய்த 187 57 கால் சாய்ந்தது 160 கால்பொர நுடங்கலின் 155 காலவை, சுடுபொன் வளைஇய 199 92 கான மஞ்ஞை 63 கிடங்கில் கிடங்கில் 80 கீழ்மரத் தியாத்த சேம வச்சன்ன 179 குடத்தலையர் செவ்வாயில் 118 குடுமிப்பருவத்தே கோதை புனைந்த 80 குண்டலம் ஒருபுரை குலாவி வில்லிட 155 குயிலை, சிலம்படிக் கொம்பினை 194 2, 221 குரங்ங்குளைப் பொலிந்த 8 குழலினி தியாழினி தென்ப 4 குற்றிய லுகரமும் அற்று 5 குற்றியலுகரம் முறைப்பெயர்... முதலும் 3 குற்றெழுத்தைந்தும் 43, 45, 51 குறளடி முதலா 17 குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் 93 குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து 231 கூடுவார் கூடல்கள் கூடல் எனப்படா 146 கெடலறு மாமுனிவர் 161 74 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு 94 கேளிர் போலக் கேள் கொளல் 201 கேளிர் வாழியோ கேளிர் 208 கைகவியாச் சென்று 118 கைக்கிளை வகையோடு 155 கொடியவும் கோட்டவும் 192 155 கொடுமிடல் நாஞ்சிலான் 199 124 கொடைமடம் படுதல் அல்லது 93 கொண்டு பாராட்டுவார் 155 கொய்தினை காத்தும் 196 149 கொல்லையஞ் சாரல் 164 80 கொல்வினைப் பொலிந்த 62 கொலைமுதல் வேட்டுவன் 26 கொற்றக் கொடி உயரிய 80 கொற்றச் சோழர் 46 கொன்று கோடு நீடு 149 கொன்றைசேர் சடை முடியோன் 172 149 கொன்றை வேய்ந்த செல்வன் 172, 175 186 கோடல் எதிர்முகை 155 கோடல் விண்டு கோபம் ஊர்ந்த 57 கோடோங்கிய குறும்பொறை மருங்கு 92 கோதை மார்பின் கோதை யானும் 149 கோவா மலையாரம் 167 149 கோழியும் கூவின குக்கில் 175 ச 31 சந்து சிதைய 149 சங்கமும் சக்கரமும் 165 149 சதுர்முக ஒருவ 173 154, 196 சான்றவிர் வாழியோ 185, 227 28, 56, 93 சிலைவிலங்கு 40, 69, 227 சிறியகட் பெறினே 40, 63, 87 சிறுசோற் றானும் 95 சிறுநல் கூர்ந்த 123 சீர்கூனாதல் 149 சீர்கெழு செந்திலும் 167 189 சீர்கெழு வெண்முத்தம் 23 சீர்நிலை தானே 20 சீற்றம் மிகுபு 11, 97 சுஃஃ றென்னும் 153, 160 சுடர்த்தொடீஇ கேளாய் 182, 206 149 சுடரொடு திரிதரும் 165 156 சுணங்கணி வனமுலை 203 59 சுற்றமை வில்லர் 9 சுறவுக்கொடி 227 சூரல் பம்பிய 157 செங்கண் மேதி 206 செங்களம் பட 95 செங்குரல் பைந்தினை 152 செஞ்சுடர் வடமேரு 95 செந்தீ அன்ன 95 செந்தீக் கானம் 95 செந்தொடைப் பகழி 175 செம்முகச் செவிலியர் 70 செய்தான்அக் கள்வன் மகன் 137 செய்பொருள் சிறப்பெண்ணி 151 18 செய்யுட்கண் ஓசை 92 செருநர்த் தேய்த்த 121 செருநர் விழையா 95 செவ்வரை நிவந்த 190 செவ்வழி நல்யாழ் 155 செவ்விய தீவிய சொல்லி 190 95 செவ்வேல் சேஎய் திருமணம் 198 செறிதொடி 192 செறிந்த சேரி 9 சென்றே எறிப 186 சொல்லின் சொல்லெதிர் 149 சொன்னது, அரசுறை கோயில் 166 ஞ 137 ஞாலம் மூன் றடித்தாய 149 த 94 தக்கார் தகவிலர் 63 தகைமிகு தொகைவகை 67 தகைவகை மிசைமிசை 155 தஞ்சொல் வாய்மை 194 150 தடங்கடல் பூத்த 149 தடந்தாட் கொத்த 172 28 தடமண்டு தாமரை 95 தண்சேறாடிய 196 தண்டா ரகலமும் 20 தண்ண் தண்டலை 199 தண்ணந்துறைவன் கொடுமை 155 தண்ணந்துறைவன் தார்மேல் 195 11 தருக்கிப் புணர்ந்து 155 தரவின் றாகி 189 57 தழை பச்சென 34 தன்சீர் உள்வழி 74 தனக்குவமை இல்லாதான் 149 தனுஎழ அரிவையை 173 219 தாம்பாடு நர்க்கு 211 தாமரை புரையும் 149 தாளாளர் அல்லாதார் 173 155 தாளெழு துணிபிணி 199 110 திங்கள் இளங்கதிர் 160 திருந்திழாய் கேளாய் 119 திருநுதல் வேரரும்பும் 93 திரிபுரம் எரிசூழ 32 திருமழை தலைஇய 155 திருவளர் தாமரை 194 113 திரைத்த விரிப்பின் 187 திறனல்ல யாம்கழற 57 தினைப்புனத்து இதண் 153 தீம்பால் கறந்த கலம் 182 77 துகடீர் பெருஞ்செல்வம் 149 துடியொடு சிறுபறை 166 191 துறந்ததற் கொண்டு 14 தூங்குசிறை அன்னம் 126 தெண்ணீர்ப் பரப்பின் 191 தெரிகணை நோக்கி 161 தென்றல் இடைபோழ்ந்த 17 தேஎந் தேரும் பூஉம் 34 தேமாஞ் சோலை 95 தேரும் யானையும் குதிரையும் 48 தேறோடத் துகள் 57 தேன்பெய்தது 64 தொக்குத்துறை 229 தொடுத்த வேம்பின் சினை 47 தோல் துவைத்தம்பின் ந 137 நச்சல் கூடாது 152 149 நண்பி தென்று 173 154 நயந்தலை மாறுவார் 184 155 நயனும் வாய்மையும் 192 87 நரந்தம் நாறும் 57 நல்கூர்ந்தது 92 நல்லார் இருவர் 156 நலமிக நந்திய 202 128 நளியிரு முந்நீர் 160 நறவினை வரைந்தார்க்கும் 13 நறவுண் மண்டை 74 நன்றறி வாரின் 228 நன்னன் ஏற்றை 187 நாணுக் கடுங் குரையள் 9 நாணுடை அரிவை 9, 10, 14 நாணுத்தளை யாக வைகி 228 நாள்கோள் திங்கள் 72, 115 நாளும் ஒன்றீயாப் பகலும் 155 நிணங்கொள் புலால் 195 63 நிரைமுதல் வெண்சீர் 69 நிலத்தினும் பெரிதே 17 நிலம் பாஅய் பாஅய் 11 நிலமிசை நீடுவாழ் வார் 95 நிலவும் இருளும் 14 நிலவு மணல் வியன் 95 நிலனும் நீரும் தீயும் 47 நிலைக்கு ஒராஅ 95 நிறுத்தலின் அளவின் 178 நிறைமொழி மாந்தர் 95 நிற்றல் இருத்தல் கிடத்தல் 8 நினக்கி யாரேம் 8 நினக்கியான் 70 நின்கண்ணால் 196 நின்கேள் புதுவது 58 நின்று நினைந்து 121 நின்னொக்கும் புகழ் 200 நீ காணவும் பெற்றாயோ 2, 18 நீட்டம் வேண்டின் 15, 56 நீத்துநீர்ப் பரப்பின் 130 நீயே வினைமாண் காழகம் 70 நீர்வரக் கண் 155 நீரலர் தூற்ற 194 176 நீராடான் பார்ப்பான் 133 நீரார் செறுவின் 69, 77 நீரின் தண்மையும் 96 நீரும் தீயும் ஆகிய 220 நீரூர்பு ஆனா 109, 157 நீலமேனி வாலிழை 149 நீறணிந்த திருமேனி 171 94 நுடக்கலின் இறாக்கலித்து 11 நுதலது இமையா நாட்டம் 228 நுதலும் தோளும் திதலை 94 நும்மில் புலப்பின் 173 நூலி னான உரையி னான 124 நூற்றுவர் தலைவனை 17 நூறோஒநூ றென்பாள் 17 நெட்டெழுத் தேழே 100 நெடுவேள் மார்பின் 28 நெய்த்தோர் நிறைத்து 149 நெய்யொடு தீஒக்க 171 95 நெருப்பின் அன்ன 149 நெருப்புக் கிழித்து 176 10 நெருப்புச் சினம் 200 நேர்ந்தநங் காதலர் 71 நேரிழை மகளிர் 40, 67, 232 நெறிஅறி செறிகுறி 123 நொந்து நகுவன 187 நோய்சேர்ந்த திறம் ப 96 பகலும் கங்குலும் 202 பகலும் பெறுவை இவள் 93 படியை அகத்திட்டான் 75 படைகுடி கூழ்அமைச்சு 29 பண்டரங்கம் ஆடுங்கால் 92 பயவார்கண் செல்வம் 96 பரவை மாக்கடல் 161 பலமுறையும் ஓம்பப் படுவன 161 பல்யானை மன்னர் முருங்க 195 பலவுறு நறுஞ்சாந்தம் 17 பலாஅக்கோட்டுத் தீங்கனி 146 பலியுருவிற்கு ஏலாத 158 93 பறம்பிற் கோமான் 224 பன்மீன் உணக்கல் 95 பன்மை சின்மை பற்று விடுதல் 155 பாஅய் பாஅய்ப் பசந்தன்று 199 97, 137 பாஅல் அஞ்செவி 150 9 பாடறியா தானை இரவு 137 பாடின்றிப் பசந்தகண் 151 149 பாம்பு கயிறா 164 54 பாம்புமணி உமிழும் 155 பால்மருள் மருப்பின் 193 87 பாலென மொழியினும் 75 பாலொடு தேன் 2 பிடியூட்டிப் பின்னுண்ணுங்ங் 14 பிணர்மோட்டு 80 பிறங்கு நிலைமாடத்து 75 பிறவிப் பெருங்கடல் 149 பிறை அணிந்த சடை 173 176 பிறைகவ்வி மலை நடக்கும் 95 பின்னாவ தென்று 11 புகழ்தல் ஆனா 154 புரிவுண்ட புணர்ச்சி 188 80 புவிப்பல் கோத்த 22 புள்ளும் துயின்று 9 புன்கண் உடைத்தால் புணர்வு 93 புன்கால் உன்னத்து 26 புன்கால் புணர்மருதின் 118 புன்னை அரும்பும் 133 155 புன்னை நீழல் 195 149 புனைமலர்க் கடம்பின் 9 புனைமலர்த்தாரகலம் 149 பூண்ட பறைஅறைய 173 13 பூண்டு கிடந்து 149 பூணாக என்பணிந்தான் 168 100 பூத்த வேங்கை வியன் 92 பெண்டெனப் பிறர்கூறும் 87 பெரியகட் பெறினே 149 பெரியவனை மாயவனை 174 93 பெருவரை உறழ்மார்பின் 40, 52 பேர்ந்து பேர்ந்து 196 பேரமர் மழைக்கண் 9 பேரறிவாளர் 187 பேரில் கிழத்தி யாக 200 பொங்கிரு முந்நீர் 96 பொருசமத்து எழுவனர் 10 பொருப்புத் தழைந்த 96 பொருவனர் விடுகணை 235 பொருள்கருவி காலம் 93 பொன்நேர் மேனி 27 பொன்னார மார்பின் 149 பொன்னிமயக் கோட்டு 93 பொன்னேர் மேனி துன்னின 149 போதுறு முக்குடை 174 155 போதோ விசும்போ 194 12 போந்து சென்று 9 போற்றாதார் ம 118 மங்குல் மனம் கடைஇ 72 மடக்கண் மயிலினம் 149 மடந்தாழு நெஞ்சத்து 175 61 மடியிலான் செல்வம் போல் 26 மண்டிணிந்த 78 மண்டிலம் மழுங்க 120 மண்ணார்ந் திசைக்கும் 57 மண் மாய்ந்தென 77, 92 மணிநிற மலர்ப் பொய்கை 93 மணிவரை அணி மார்பின் 146 மணிவிளங்கு திருமார்பின் 12 மம்மர் நெஞ்சினோன் 190 மரம் தலைமணந்த 219 மராஅ மலரொடு விராஅம் 161 மருட்பா ஏனை 37 மருந்து நாடாத் திரிந்து 202 மருந்தெனின் மருந்தே 153 மரையா மரல் கவர 181 235 மலர்காணின் மையாத்தி 62 மலர்மலி புகலெழ 199 மலரைப்பொறா அடி 155 மல்லல் ஊர 195 116, 155 மலிதிரை ஊர்ந்து 131, 199 149 மழை நுழைந்து புறப்பட்ட 169 57 மழை பெய்தென 168 94 மள்ளர் மள்ள 93 மறந்தும் பிறன்கேடு 63, 155 மன்றுயிர்த்து 61, 193 137 மன்னவன் புறந்தர 152 97 மனைக்குறமகள் 109 மாநிலம் சேவடி யாக 155 மாமலர் முண்டகம் 190 93 மாயோன் மார்பின் 31 மாரியொடு மலர்ந்த 210 மால்வரை நிவந்த 196 மாலையும் உள்ளா ராயின் 48 மாவழங்கலின் 220 மாவா ராதே மாவா ராதே 203 மாறாக்காதலர் 155 மின்ஒளிர் அவிர் அறல் 191 9 மின்னு நிமிர்ந் தன்ன 109 முக்கட் பகவன் 211 முட்டாச் சிறப்பின் 176 முத்துப் போல் பூத்து 149 முந்துநூல் கண்டு 176 149 முந்நீரி னுட்புக்கு 167 178 முரணில் பொதிய 149 முருந்தேர் இளநகை 166 104 முல்லை வைந்நுனை 149 முழங்குதிரைக் கொற்கை 172 92 முளிகழை உயர்மலை 31 முன்றிலாடு மஞ்ஞை 64 முன்னைத்தஞ் சிற்றில் 118 முன்னைய நான்கும் 118 முன்னைய மூன்றும் 40, 149 மூவடிவினா லிரண்டு 36, 171 149 மூவா முதலா உலகம் 168 149 மூவுலகும் ஈரடியான் 174 92 மெய்பெறு மரபின் 116 மெல்லிணர்க் கொன்றையும் 77 மெல்லியான் செவிமுதல் 2 மெல்லெழுத் தென்ப 26 மேதக மிகப்பொலிந்த 27 மேவாரை அட்ட 20 மேற்கோட்டு நீர் 67 மேனிலை இடைகழிபு 149 மைஅணி கண்டனை 171 3 மொழிப்படுத் திசைப்பினும் ய 92 யாண்டும் காணேன் 48 யாத்தசீர் 12 யாதானும் நாடாமால் 87 யாம்பாடத் தான் 207 யார் இவன் எங்கூந்தல் 56 யான் இருந்து தூங்கும் 34, 230 யான் ஊடத் தான் உணர்த்த 211, 227 யானே ஈண்டை யேனே 149 யானைத் தோல் போர்த்து 165 வ 12, 22, 78, 105வசையில்புகழ் 72, 115 வஞ்சி வெளிய குருகு 123 வடவேங்கடம் 4 வடாஅது பனிபடு நெடுவரை 155 வடிவுடை நெடுமுடி 196 80 வண்காது நிறைத்த 11 வண்கொன்றையை 149 வண்டணி கொண்ட 174 155 வண்டுளர் பூந்தார் 195 12, 23 வண்புகழ் நிறைந்து 61 வயக்குறு மண்டிலம் 94 வயங்கு கதிர் கரந்த 80 வரிமணல் ஞெமிர 149 வரிவளைக்கை வாளேந்தி 95 வரினும் நோய்மருந்து அல்லர் 95 வருதும் எனமொழிந்தார் 196 வருந்தாது ஏகுமதி 100 வருந்தினர் மூத்தார் பசு 2 வருவர்கொல் வயங்கிழாஅய் 64 வரைபுரை திரை 56 வரையாடு வன்பறழ் 2 வல்லெழுத் தென்ப 40 வலமா திரத்தான் 137 வலிமுன்பின் வல்லென்ற 148 128 வள்ளியோர்ப் படர்ந்து 115 வளித்தலைஇய 34 வாமான் ஏறி 160 வாமான ஈசன் வரும் 149 வாய்வதின் வந்த 175 211, 229 வாரா ராயினும் வரினும் 156 வாரி நெறிப்பட்டு 203 105 வாரிய பெண்ணை 94 வாரியும் வடித்தும் 93 வாள்மாய் குருதி 200 வாள்வரி வேங்கை 48, 71 வாள் வலந்தர 56 வான்நிறைந்து மணந்து 57 வான்பெய்தது 20 வானம் பொய்யாது 58 வானவரும் 121 வானா ரெழிலி 92, 93, 109 வானிடு வில்லின் 94 வானுயர் வெற்ப 149 வானுற நிமிர்ந்தனை 173 56 வானூடு போய் 108 விசும்பின்துளிவீழின் 160 விடியல் வெங்கதிர் 57 விண்பாய்ந்தென 190 விதையர் கொற்ற முதை 187 விரிதிரைப் பெருங்கடல் 96 விரிந்தானா மலராயின் 187 விருந்தெதிர் கொள்ளவும் 9 விழாத்தலை வந்த 196 விளங்குதொடி முன்கை 24 விளங்குமணிக் கொடும்பூண் 108 வீடுபேறு விழைந்து 55 வெண்சீர் ஒன்றினும் 149 வெண்பலி சாந்தம் 177 149 வெண்பா இயலினும் 169 13, 19 வெண்பா உரிச்சீர் ஆசிரிய 27 வெண்பாட்டு ஈற்றசை 153 வெண்பா விதியின் 56 வெயிலாடு முசுவின் 92 வெயிலுருப் புற்ற 155 வெல்புகழ் மன்னவன் 191 13 வெளிற்றுப் பனந்துணியின் 149 வெறியுறு கமழ் கண்ணி 175 149 வென்றான் வினையின் 171 186 வேட்ட பொழுதின் 149 வேயே திரள்மென் தோள் 174 165 வேரல் வேலி 155 வேனில் உழந்த 197 93, 231 வைகலும் வைகல் நூற்பாக்கள் 137, 146, 149, 153, 154, 155 என்பனவற்றின் உரையின் எடுத்துக்காட்டுகள் விரிவாக உள்ளமையின் அந் நூற்பாக்களின் எடுத்துக்காட்டுகளுக்கே பக்க எண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்கோள் கலிப்பாக்கள் நிரல் சூத்திரம் பாடல் தொடக்கம் கலித்தொகையின் பாடல் எண் 155 அகன்ஞாலம் 119 154 அரிதினில் 141 137 அரிதேதோழி 137 156 அரிநீர் அவிழ்நீலம் 91 153 அரும்பொருள் வேட்கையின் 18 155 அருள் தீர்ந்த காட்சியான் 120 149 ஆறறி அந்தணர்க்கு 1 153 இடுமுள்நெடுவேலி 12 137 இமயவில் வாங்கிய 38 137 இன் அரிச்சிலம்பின் (தாழிசை) 125 155 எஃகிடை தொட்டகார் கவின் 32 156 ஒரூஉநீ எங்கூந்தல் கொள்ளல் 87 155 ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் 47 154 கண்டவிர் எல்லாம் 140 153 கயமலர் உண்கணாய் காணாய் 37 137 காணாமை இருள்பரப்பி (தாழிசை) 123 155 காமர்கடும் புனல் கலந்து எம்மோடு 39 154 காராரப் பெய்த 109 155 காலவை சுடுபொன் 85 155 கொடுமிடல் நாஞ்சிலான் 36 154 சான்றவிர் வாழியோ சான்றவிர் 139 156 சுணங்கணி வனமுலை 60 154 சுரந்தாங்கே இன்னா (கலிஉறுப்பு) 141 155 செவ்விய தீவிய சொல்லி 19 137 ஞாலம் மூன்றடித் தாய 124 153 தீம்பால் கறந்த கலம் 111 154 நயந்தலை மாறுவார் மாறுக 80 155 நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் 130 156 நலம்மிக நந்திய 113 133, 134 நீரார் செறுவில் நெய்தலொடு 75 137 பாஅல் அஞ்செவி 5 137 பாடின்றிப் பசந்தகண் 16 155 பால்மருள் மருப்பின் 21 154 புரிவுண்ட புணர்ச்சியுள் 142 153 மரையா மரல்கவர மாரி வறப்ப 6 155 மலிதிரை ஊர்ந்து மண்கடல் 104 155 மாமலர் முண்டகம் 133 155 மின்ஒளிர் அவிர் அறல் 55 137 வலிமுன்பின் வல்லென்ற யாக்கை 4 156 வாரிநெறி 114 155 வெல்புகழ் மன்னவன் 118 155 வேனில் உழந்த வறிதுஉயங்கு 7 பாலைக்கலி 12. குறிஞ்சிக்கலி 6 மருதக்கலி 5. முல்லைக்கலி 5. நெய்தற்கலி 14. கூடுதல் - 42. ஏனைய தேவபாணிக் கலிப்பாக்கள் நிரல் 146 ஆயிரம் கதிராழி ஒருபுறந்தோன்று 146 உறைபதியி னுடன்அயனை உந்தியினால் 146 கெடலறு மாமுனிவர் கிளர்ந்துடன் 152 செஞ்சுடர்வடமேரு இருமருங்கும் 150 தடங்கடல் பூத்த தாமரை மலராகி 146 பலி உருவிற்கு ஏலாத படைமழுவாள் 149 பூணாக என்புஅணிந்தான் 146 மணி விளங்கு திருமார்பின் மாமலராள் 149 மழைநுழைந்து புறப்பட்ட மதியமும் கூடுதல் 42 + 9 =51 கலிப்பாடல்கள். இவையே அன்றிக் கலிப்பா அடிகள் பல பல செய்திகளுக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. உரை நூற்பாக்கள் அகரவரிசை நிரல் நூற்பா எண் சூத்திர முதற்குறிப்பு உரை நூற்பா எண். அ 101 அகவற்கு இருநூற்று எழுபத்து மூன்றும் 66, 113, 123 50 அகவற்கு உரியசீர் இருபத்து ஏழனுள் 9 50 அகவற்கு உறழ்ந்த அடித்தொகை கூறின் 15 101 அசைச்சீர் நான்குஉரி முதற்சீர் எட்டு 148 101 அடி எதுகைத் தொடை கொள்ளுங் காலும் 68 101 அடி தொடை மிசை பல விரவின வரினும் 199 101 அந்நாற் றொடையான் அகவல் பெறுந்தொகை 140 57 அவற்றுள்ஒன் பதெழுத் தாஞ்சீர் ஒன்று 30 101 அவைபகுக் குங்கால், அகவற்கு இருநூற்று 35 101 அளவடிக் கண்வரும் விகற்பத் தொடைதாம் 197 57 அறுபஃ தாக வகுத்த வஞ்சியுள் 29 இ 101 இணைமுரண் தொடையோடு ஏனைய கொள்ள 121 43 இயலசை மயங்கிய இயற்சீர் நான்கனுள் 1 43 இயற்சீர் அசைச்சீர் உரிச்சீர் வெண்சீர் 7 50 இயற்சீர் உரிச்சீர் அசைச்சீர் கூடி 8 50 இயற்சீர் அசைச்சீர் வெண்சீர் கூடி 16 101 இருவகைத் தொடையான் இயன்ற தொடைதாம் 198 உ 101 உரிமுதல் சீரெட்டு ஒழிந்த பின்னர் 150 எ 101 எட்டுத் தொடையான் இயன்ற தொகைதாம் 155 101 எண்வகை முரணான் இயன்ற தொடைத்தொகை 122 101 எண்வகை மோனைக்கும் இயன்ற பெருந்தொகை 66 101 எதுகை என் பதனான் இயன்ற பெருந்தொகை 111 ஐ 101 ஐந்து தொடையான் அகவற்கு வருந்தொகை 126 101 ஐந்து தொடையான் கலிக்கு வருந்தொகை 128 101 ஐந்து தொடையான் வெள்ளைக்கு வருந்தொகை 127 101 ஐவகை முரணும் வருக்க மோனையும் 130 ஒ 101 ஒரோ ஒன்று இருநூற்று இருபஃதாக 133 101 ஒரோ ஒன்று இருநூற்று எழுபத்து மூன்றா 131 101 ஒரோ ஒன்று இருநூற்று ஐம்பத்தாறா 132 101 ஒன்று தலையிட்ட ஐயைந்து சீரும் 32, 33 க 50 கணவிரி உரறுபுலி காருருமு பெரு நாணு 13, 25 50 கணவிரி பெருவேணுக் காருருமு புலிசெல்வாய் 19 50 கலிக்கு உரித்தாக உறழ்ந்த அடித்தொகை 27 50 கலிக்கு உறழும் சீர் இருபத்து நான்கனுள் 23 101 கலிக்கு வரும்சீர் பத்தும் நான்கும் 52 101 கூறிய பதின்மூன்று ஒழித்த பின்னர் 149 101 கூறிய மூன்றன் தொடைத்தொகை கூறினால் 129 ச 101 சேற்றுக்கால் நீடுகொடிச் சீரைந்து நீக்கி 137 101 சொல்லடி இயைபு கொள்ளுங் காலும் 124 ஞ 101 ஞாயிறு போதுபூ எட்டு முதல் ஏழும் 71 101 ஞாயிறு போதுபூப் போரேறு ஏழா 89 101 ஞாயிறு போதுபூப் போரேறு என்றிவை 101 101 ஞாயிறு போதுபூப் போரேறு என்றிவை 107, 187 101 ஞாயிறு போதுபூப் போரேறு எட்டு 165 50 ஞாயிறு போதுபூப் போரேறு புனிமா 11 101 ஞாயிறு போரேறு இருகான்டு முதலேழ் 169 101 ஞாயிறு போரேறு பதின்மூன்று நன்னாணு 170 த 101 தேமா புளிமா எனும் இரண்டற்கும் 152 50 தேமா மின்னு வரகுமுதல் வரும் அடி 10 50 தேமா மின்னு வரகு வலியது 18 50 தேமா வண்டு வண்டு காமர் 156 101 தேமா வாறு ஞாயிறு புளிமா 157 101 தேமா வைந்து ஞாயிறு போரேறு 168 101 தொடை மூவைந்தான் இயன்ற தொகைதான் 134 ந 50 நரை உருமு புலிவருவாய் முதலாம் அடிகள் 20 101 நால்வகை அகவல் பொழிப் புத்தொகைதாம் 176 101 நால்வகை வெள்ளைப் பொழிப்பெது கைதாம் 181 101 நாற்றொடை யானும் பெற்ற தொடைதாம் 144 101 நிரைஆதி ஆகிய சீர்பதின் மூன்றான் 43, 49, 55 101 நிரையா கிய சீர் பதின்மூன்றான் ஒரோ 61 101 நிரையா திச் சீர் பதின்மூன் றானும் 116 101 நிரைஈ ராறான் கலிக்கு முற்றெதுகை 109 101 நிரைஈ ராறான் கலிக்குத் கீழ்க்கதுவாய் 103 101 நிரைஈ ராறான் கலிக்குத் மேற்கதுவாய் 97 101 நிரைஈ ராறான் கூழை எதுகை 91 101 நிரை பதின்மூன்றான் அகவற்கு ஒரூஉ எதுகை 82, 190 101 நிரை பதின்மூன்றான் வெள்ளைக்கு ஒரூஉ எதுகை 84, 192 101 நிரை பதின்மூன்று மேவு சீரும் 146 101 நுந்தை தேமாக் களைந்து நேர் முதற்சீர் 143 43 நுந்தை தேமா புளிமா நேரீறு 2 101 நுந்தை வண்டு நான்கு தேமா 184 101 நுந்தை வந்த மெல்லின எதுகை 142 101 நேர்ஆதிச் சீரானும் நிரைஆதிச் சீரானும் 40 101 நேர்ஆ திச்சீர் பதின்மூன் றானும் 115, 125 101 நேர்ஆதி யாகிய சீர்பதின் மூன்றான் 48, 93 101 நேர் ஈறு ஆறான் கலிக்கு ஒரூஉ எதுகை 85, 193 101 நேர் ஈறு ஆறு நிரைஈறு ஆறு 161 101 நேர் ஈறு ஒழிந்த இயற்சீர் எட்டும் 22 101 நேர்நிரை ஈற்றான் கலிக்கு இணை எதுகை 73 101 நேர்பதின் மூன்றான் ஒரோ ஒன்று பத்தாக 54, 60 101 நேர்பதின் மூன்றான் முன்னர்க் கூறிய 141 101 நேர்பதின் மூன்றான் வெள்ளைக்கு ஒரூஉ எதுகை 83, 191 101 நேர்பதின் மூன்றான் அகவற்கு ஒரூஉ எதுகை 81, 189 101 நேரும் நிரையும் ஆகிய சீர்கள் 46, 58, 64, 119 ப 50 பாதிரி வலியது மேவுசீர் நன்னாணு 12, 24 101 புளிமா ஒன்பான் வலியது விறகுதீ 158 101 போதுபூப் போரேறு இருநான்கு மேவுசீர் 159 ம 101 மாசெல்வாய் தேமா வழுவிரண்டு களைந்து 153 101 மாசெல் வாயீ ரேழ் புலி செல்வாய் 166 43 முன்நிரை ஈற்ற ஆசிரிய உரிச்சீர் 3 101 முதற்பா இரண்டற்கு ஒற்றள பெடைதான் 154 101 மூவகைப்பாவிற்கும்அசைஅந்தாதி 162 101 ,, இருவகைமுற்று 188 101 ,, எழுத்து விட்டிசை 171 101 ,, இருவகை ஒரூஉத்தொகை 196 50 ,, உறழ்ந்த தொகை 28 101 ,, கூழைஎதுகை 92 101 ,, கூழைமோனைத்தொடை 59 101 ,, முற்றுமோனைத்தொடை 65 101 ,, மொழிந்த இணைஎதுகை 74 101 ,, மொழிந்த இணைமோனை 41 101 ,, மொழிந்த இணைமுரண் 120 101 ,, மொழிந்த ஒரூஉ எதுகை 86, 194 101 ,, மொழிந்த ஒரூஉ மோனை 53 101 ,, மொழிந்த கீழ்க்கதுவாய் 104 101 ,, மொழிந்த பொழிப்பெதுகை 80 101 ,, மொழிந்த மேற்கதுவாய் 98 101 ,, மொழிந்த முற்றெதுகை 110 101 ,, மொழிந்த அடிமுரண் 114 101 ,, வல்லினஎதுகை 147 101 ,, சீர்அந்தாதி 167 101 ,, மொழிந்த பொழிப்பெதுகை 183 101 மூவகைப்பாவின் மூன்றாம் எழுத்தொன்று 138 101 மூவகைப்பாவின் மொழிப்பு மோனைத்தொடை 47 101 மூவகை யாற்பெறும் உயிரளபெடைதான் 151 57 மூவெழுத் துச்சீர் ஆதிஒன் பானும் 31 101 மெல்லின எதுகையும் இடையின எதுகையும் 139 101 மோனைக்கும் எதுகைக்கும் மொழிந்த தொடைத் தொகை 112 101 மோனைமுதலா விட்சை ஈகு 172 வ 101 வண்டுஞாயிறு போதுபூ போரேறு 38, 44, 50, 56, 62, 77, 95, 117, 177, 179, 180 101 வண்டுதேமா மின்னு ஞாயிறு 36 101 வண்டுதேமா மின்னிவை ஒரோஒன்று 69 101 வண்டுதேமா மின்னிவை மூன்று 87, 105 101 வண்டு நான்கு மின்னுந் தேமா 75, 173 101 வண்டு நான்கு தேமா மின்னிவை 99 101 வண்டு நான்கு தேமா ஐந்து 175 101 வண்டு நுந்தை நான்கு தேமா 163 101 வண்டு மின்னு நுந்தை சேற்றுக்கால் 135, 136 43 வண்டு மின்னு வரகும் அரவும்என 4 101 வண்டைந்து மின்னுந் தேமா வாறு 174, 195 101 வரகிரு நான்கு புளிமாவர ஒன்பான் 72, 76, 90, 102, 108 101 வரகீ ரைந்து புளிமா வரவு 94 101 வரகு புளிமா வரவு வலியது 37 101 வரகு வலியது கடியாறு விறகுதீ 39, 45, 51, 57, 63, 78, 96, 118, 178 101 வருக்கமுற் றெதுகையும் அவ்வாறே பெற்று 186 101 வல்லின எதுகை வகுக்குங் காலை 145 101 வலியது கடியாறு விறகுதீ கணவிரி 70 101 வலியது கடியாறு விறகுதீ பத்துக் 88, 100 101 வலியது கடியாறு விறகுதீ ஈறாறு 106 101 வலியது விறகுதீக் கடியாறு எனுமிவை 79, 182 101 வலியது விறகுதீக் கடியாறு ஈரைந்து 164 101 வலியது விறகுதீக் கடியாறு ஈராறும் 185 101 வழூஉக் களைந்த முதற்பா இரண்டற்கும் 34 50 விரவுகொடி நரைஉருமு புலிவருவாய் முதலா 26 50 விரவுகொடி நரைஉருமு முதல்வரும் அடிகள் 14 101 விறருதீக் கடியாறு ஒன்பான் பெருநாண் 160 43 வெண்சீர் தம்முள் மாறாம் கலித்தளை 6 43 வெண்சீர் நான்கும் தம்முன் தாம்வந்து 5 50 வெள்ளைக்கு உரியசீர் இருபத் தேழனுள் 17 50 வெள்ளைக்கு உறழ்ந்த அடித்தொகை கூறின் 21 