தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (முதல் பகுதி) வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (முதல் பகுதி) உரையாசிரியர் : நச்சினார்க்கினியர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 440 = 456 படிகள் : 2000 விலை : உரு. 285 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : ஃப்ராம்ட் ஆப்செட் 34, திப்புத் தெரு இராயப்பேட்டை, சென்னை - 600 014. கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி (EFEO)யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே 'உயர்தனிச் செம்மொழி' எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், 'உலக முதன் மொழி தமிழே' என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனை யையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! ஷிஎங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர் என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. ஷிபுத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம் தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [உரையாசிரியர்கள் - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய 'இலக்கண வரலாறு' என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனிபாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பை செய்ததுடன் பிழையின்றி நூல்கள் வெளிவருவதற்கு மெய்ப்பும் பார்த்து உதவிய பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும்போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க.குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், முனைவர் இரா. திருமுரு கன், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், பா. இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், கி.த.ப. திருமாறன் ஆகி யோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஆசாரா. ஆசாரக் கோவை ஆய்ச்சி. ஆய்ச்சியர் குரவை ஊர்சூழ். ஊர்சூழ்பரி எச்ச. எச்சவியல் எழு. தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை களவழி. களவழி நாற்பது கானல். கானல்வரி குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப் படலம் சிலப். சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி சூளா. சூளாமணி செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் திருச்சிற். திருச்சிற்றம்பலக் கோவையார் துறவு. துறவுச் சுருக்கம் துன்ப. துன்ப மாலை தொல். தொல்காப்பியம் நற். நற்றிணை நாலடி. நாலடியார் நான்மணி. நாண்மணிக்கடிகை நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப் பாலை பதிற். பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. திருமுருகாற்றுப்படை வேட்டு. வேட்டுவரி வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளு மாறு ஷிதொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இதனொடும் இணைக்கப்பட்டுளது! ஷிவெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே! அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் 'கருவிநூல் பதிப்பகம்' என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, 'தமிழின மீட்புப் பணி'யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், 'பெரியாரைத் துணைக்கோடல்' என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள 'மண்' எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து 'இந்தா' என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் 'தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தை'ச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால் தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்' "தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி" என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் 'பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்' என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும்,'பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது' என்னும் கருத்தால், "பழைய காப்பியக்குடியில் உள்ளான்" என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு 'விருத்த காவ்யக்குடி' என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி 'காவ்ய மாதா' எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கின ராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார் கூறுவார் உளர். அப்பெயர்கள் 'பல்காயம்' என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்" ஆய்ந்து, தமிழியற்படி "எழுத்தும் சொல்லும் பொருளும்" ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், "போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்" (1006) "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்" (1336) "தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" (385) எனத் தமிழமைதியையும், "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் "ஆயிரம் விரித்த" என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரி பாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் 'எத்துணையோ பரிபாடல்களின்' அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவேயன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசை களையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசை களும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் 'சேமமட நடைப் பாட்டி' என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் "பாட்டி என்பது பன்றியும் நாயும்" என்றும் "நரியும் அற்றே நாடினர் கொளினே" என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ 'பாட்டி' என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமை யால் உரையாசிரியர்கள் "இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது" என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! "கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் 'பூரியர்கள்' 'மற்றையவர்கள்' எனவும் கலித்தொகையில் 'ஐவர்கள்' எனவும் வழங்குகின்றது. 'அன்' ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. "தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. "தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட 'மார்', 'தோழிமார்' எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. "வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. "கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, 'அடுக்கியகோடி' என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. "சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது." இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் 'திருக்குறள்' எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், 'தண்டமிழ் ஆசான் சாத்தன்' என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் 'பொய்யில் புலவன்' என்றும், திருக்குறளைப் 'பொருளுரை' என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். 'அறமுதலாகிய மும்முதற் பொருள்' என்பது தொல்காப்பியம். 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு' என வருவதும் தொல்காப் பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் 'அறம்' என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் 'ஓரை' என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல 'ஹோரா' என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். 'யவனர் தந்த வினைமாண் நன்கலம்' இவண் வந்ததும், அது 'பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)' பெயர்ந்ததும், 'யவன வீரர் அரண்மனை காத்ததும்' முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் 'தோகை' 'அரி' முதலிய சொற் களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் 'ஓரை' என்பது. அச் சொல்லை அவர்கள் அங்கு 'ஹோரா' என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை 'முழுத்தக்கால்' என்பதும், 'என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?' என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - 'நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது' என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், "செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே" என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, "நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு" உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து 'மாலியரோ' எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பி யத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. "மாவும் மாக்களும் ஐயறிவினவே" என்னும் தொல்காப்பியர், "மக்கள் தாமே ஆறறி வுயிரே" என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமைகளை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், "நில்லா உலகம் புல்லிய நெறித்தே" என 'உலகம் நிலையாமை பொருந்தியது' என்ற அளவிலேயே அமைகிறார். "காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் 'புரைதீர்காமம்' என்றும் (1027) 'காமப் பகுதி கடவுளும் வரையார்' என்றும் (1029) கூறியிரார். "ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்" என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், "கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" என்றும் (1034), புறநிலை வாழ்த்து, "வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்" என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் 'வழிபடு தெய்வம்' என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் 'தெய்வம் உணாவே" என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், 'கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை', 'அருளொடு புணர்ந்த அகற்சி', 'காமம் நீத்தபால்' என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப்பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்ட மாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் 'முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த'தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல் களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். "ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்" என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறிய தாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் "தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்" என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப் பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, "அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்" என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல் காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். "உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே" (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை "கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்" (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. "அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்" (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்த வாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற் களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். "எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப" "மழவும் குழவும் இளமைப் பொருள" "ஓதல் பகையே தூதிவை பிரிவே" "வண்ணந் தானே நாலைந் தென்ப" ஓரியல் யாப்புரவு 'ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்' என்பது தொல்காப்பியர் வழக்கம். "வல்லெழுத் தென்ப கசட தபற" "மெல்லெழுத் தென்ப ஙஞண நமன" "இடையெழுத் தென்ப யரல வழள" சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற் காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். "அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே" என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங் களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். "அளபெடைப் பெயரே அளபெடை இயல" "தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல" என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல் காப்பியர். "வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே". "ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்". இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. "மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்". இவை அடி எதுகைகள். "விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே" "நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை". முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. "வயவலி யாகும்" "வாள்ஒளி யாகும்" "உயாவே உயங்கல்" "உசாவே சூழ்ச்சி" இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. "இழுமென் மொழியால் விழுமியது பயிலல்" "எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்" இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. "மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே" "ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்" என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. 'மாற்றருஞ் சிறப்பின் மரபியல்' என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் "பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே" என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். "வகரக் கிளவி நான்மொழி ஈற்றது" "அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே" இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். "தாமென் கிளவி பன்மைக் குரித்தே" "தானென் கிளவி ஒருமைக் குரித்தே" "ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை" இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி 'இளையர்' உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா 'கைக்கிளை முதலா' எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. "ஏறிய மடல் திறம்" என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். 'மறம்' எனப்படும் துறையும் 'கண்ணப்பர் திருமறம்' முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. 'உண்டாட்டு' என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. 'தேரோர் களவழி' களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். 'ஏரோர் களவழி' என்பது பள்ளுப்பாடலாகவும், 'குழவி மருங்கினும்' என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. "காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்" என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். "அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்" என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் 'ஒலியன்' ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? "தொல்காப்பி யன் ஆணை" என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல் காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, 'யாப்பருங்கலம்' முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது 'புலமை இலக்கணம்' என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. "தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே" என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் 'விண்ணவர் கோமான்' விழுநூல், 'கப்பத் திந்திரன் காட்டிய நூல்' என்பவற்றையும் 'இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்' என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் "புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்" என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், "தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே" என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. "இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்" என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். 'அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ' எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், "தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை" என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?" என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமையுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். "மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்றார். அவர் கேள்வியுற்றது 'விண்ணுலக ஐந்திரம்!' அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! "ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்" என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி 'ஐந்திரம்' என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு 'படிமையோன்' என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாத னுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லையாம். இனி 'ஐந்திறம்' என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. 'ஐந்திரம்' எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் "தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன" என்னும் நூற்பாவை அடுத்துப் "பறழ்எனப் படினும் உறழாண் டில்லை" என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. "இக்காலத்து இறந்தன" என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் "கொல்லே ஐயம்" என்பதை அடுத்த நூற்பா "எல்லே இலக்கம்" என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத் தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக் காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. "உருவுட் காகும்; புரைஉயர் வாகும்" "மல்லல் வளனே; ஏபெற் றாகும்" "உகப்பே உயர்தல்; உவப்பே உவகை" என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி "நன்று பெரிதாகும்" என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, 'அவற்றுள்' என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. 'மாற்றருஞ் சிறப்பின் மரபியல்' என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, "சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே" என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத் திற்கும் இடையே "ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான" என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, "பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே" என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய" என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், 'மரபியல்' செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். "வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். "வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை" என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண் டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் 'கிழமை' என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த 'புறக்காழ்' 'அகக்காழ்' 'இலை முறி' 'காய்பழம்' இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். "நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்" என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள 'நூலின் மரபு' பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. "அவற்றுள், சூத்திரந்தானே" என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) "சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்" என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் 'வாழ்வியல் விளக்க'த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் பொருளதிகார இயலமைதி எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்பவற்றைப் போலவே பொரு ளதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் உயரிய கட்டுமுறை யாகும். எழுத்து, சொல் ஆகியவற்றைக் கருவியாகக் கொண்டது பொருள். உலகத்துக் காணப்படும் பொருள்களைக் காட்சிப் பொருள் கருத்துப் பொருள் என இருவகைப் படுத்துவர். அவற்றை வாழ்வியல் முறைக்குத் தக முதல், கரு, உரி என மூவகைப்படுத்திக் காண்பது பொருளியல் கண்ட தமிழ் மேலோர் முறையாகும். அவற்றை முறையே கூறி, அகவொழுக்க நெறிமுறைகள் ஏழனையும் அதன் சார்புகளையும் அகத்திணை இயல் என்னும் முதல் இயலில் கூறுகிறார். கைக்கிளை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அத்திணைகள். அகத்திணை ஏழானாற் போல அமைந்த புறத்திணை ஏழனையும் புறத்திணை இயல் என்னும் அடுத்த இயலில் கூறுகிறார். அவ்வேழு திணைகளும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாம். மூன்றாம் இயலாகக் களவியல் வைக்கிறார். அது அகத்திணைக் கைகோள் இரண்டனுள் முற்பட்டதாம். களவுக் காதல் விளக்கம் கள வொழுக்கம், இயற்கைப் புணர்ச்சி, களவொழுக்கத்தில் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலோர் நிலை, இடந்தலைப்பாடு, வரைவு (திருமணம்) என்பவை கூறப்படுகின்றன. நான்காவதாம் இயல், கற்பியல். அதில், மணவாழ்வு, மணமக்கள் கூற்று, பிறர் கூற்று, அலர், பிரிவு, அறநிலை என்பவை முறையே கூறப்பட்டுள. கைகோள் ஆகிய களவு, கற்பு என்னும் இரண்டன் தொடர்பாகவும் பிறவாகவும் சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லும் பொருளியல் ஐந்தாவதாக இடம்பெறுகிறது. அறத்தொடு நிலை, வரைவுகடாதல், புலனெறி வழக்குகள், தலைவி தோழி முதலோர் பற்றிய சில குறிப்புகள் இதில் உரைக்கப்பட்டுள்ளன. ஆறாவதாக அமைந்தது மெய்ப்பாட்டியல். மெய்ப்பாடு என்பதன் பொருள், மெய்ப்பாடுகளின் வகை, அவை தோன்றும் நிலைக்களங்கள், அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், கைக்கிளை பெருந்திணை மெய்ப்பாடுகள், வாழ்நலத்திற்கு ஆகாக் குறிப்புகள், மெய்ப்பாட்டு நுட்பம் என்பவை முறையே இதில் கூறப்பட்டுள. பொருள் விளக்கச் சிறப்பமைந்த உவமை இயல் ஏழாவதாக இடம் பெறுகிறது. உவமையின் வகை, உவம உருபு, உவமையை உணருமுறை, உள்ளுறை உவமம், உவமை பற்றிய புறனடை என்பவை இவ்வியலில் பேசப்படுகின்றன. எட்டாம் இயல் தொல்காப்பியத்துவரும் இயல்கள் இருபத்து ஏழிலும் விரிவுடையதாகிய செய்யுள் இயல். ஈதொன்று மட்டுமே 240 நூற்பாக்களைக் கொண்டது. நூலில் ஏறத்தாழ ஏழில் ஒரு பங்காக அமைந்தது. இதனை அடுத்ததாக 112 நூற்பாக்களை யுடையது இதனை அடுத்த மரபியல் ஆகும். இச் செய்யுளியல், "மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ" எனத் தொடங்கி முப்பத்து நான்கு வகையில் செய்யுள் உறுப்புகள் அமைதலை முதல் நூற்பாவிலேயே தொகுத்துக் கூறி, அவற்றை முறையே கூறி முடிக்கிறார். எல்லா இயல்களிலும் வைப்பு முறைச் சிறப்புண்டு எனினும் இவ்வியல் கொண்ட வைப்புமுறை நனிபெரும் சிறப்புடையதாம். பொருள் வைப்புமுறை மாத்திரை, எழுத்தியல், அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களம், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பவை அவை. தொல்காப்பிய நிறைவில் வருவது மரபியல். தொல்காப்பியர் முறை திறம்பா வைப்புமுறை, முறை மாற்றி வைக்கப்பட்டதில் தலைமை கொண்டது இவ்வியலாயிற்று. மாற்றரும் சிறப்பின் மரபு என மரபுமாண்பு கிளப்பதுடன் தொடங்குவது இது (1500). இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் இவை இவை எனச் சுட்டி முறைமுறையே கூறி, "சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே" என்று நிறைவு செய்கிறார் (1525). பின்னர் உயிர்களை ஓரறிவுமுதல் ஆறறிவு ஈறாகப் பகுத்துரைத்து, ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் கூறி, "பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே" என முடிபும் கூறுகிறார் (1568). இது காறும் நூற்பா இடமாற்றச் சிக்கல் ஏற்பட்டமையன்றி, இடைச் செருகல் ஏற்படவில்லை. 'இது கூறுவேம்' என்று தொடங்கி, 'இது கூறினேம்' என முடித்தபின், அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்பார் இயல்புகள் பற்றி (1570 - 1584) பதினைந்து நூற்பாக்கள் வந்து, ஓரறிவுயிரிகளின் சில சிறப்பியல்களைக் (1585 - 1588) கூறி, "இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்" என இயல் நிறைவாகக் காட்டிய பின்னரும் நூல்வகை, சூத்திரம், உரை, நூற்சிதைவுகள், நூல் உத்திகள் என்பவை (1590 - 1610) இடம் பெற்று நூல் நிறைகின்றது. ஓரறிவு உயிரிபற்றிக் கூறிய இடத்தொடு (1526) தொடர்புடைய அகக் காழ், புறக்காழ், தோடு மடல் இலை முறி காய்பழம் என்பவை நெட்டிடை தள்ளப்பட்டுக் (1585) கூறப்படுதலும், இடையே "நூலே கரகம்" முதலாக மரபொடு பொருந்தாப் பொருள் இடம்பெறலும் சேர்ப்பு என்பதை விளக்க வேண்டுவது இல்லை. மரபு இயற்கை தழுவியது; இளமை, ஆண்மை பெண்மை எனக் கூறப்பட்டது. நூலும் கரகமும் குடையும் கொடியும் ஏரும் பிறவும் பிறப்பொடு தொடர்புடையவையா? இயற்கைத் தொடர்பு உடையவையா? 'கவச குண்டலத் தொடு பிறத்தல் கதைக்க உதவும்' நடைக்கு ஆகுமா? மரபியலில் உரையாசிரியர்கள் காலத்திற்கு முன்னரே, பல்வேறு திணிப்புகளும் மாற்றங்களும் செய்யப்பட்டுள என்பதை அறிந்து கொள்ளல் இப்பகுதிக்குச் சாலும். - இரா. இளங்குமரன் பொருளதிகார வாழ்வியல் விளக்கம் தமிழினம் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு தொல்காப்பி யத்தைப் பெற்றபேறு ஆகும். ஏனெனில், தொல்காப்பியர்க்கு முன்னரே இலக்கிய இலக்கணக் கலைவள மெய்யியல் நூல்கள் பலப்பல இருந்தன எனினும் அவற்றைக் காணற்கியலாக் காலநிலையில் அவற்றின் முழுமை யான எச்சமாக நமக்குக் கிடைத்தது தொல்காப்பியமே ஆதலால்! இப் பேற்றினுள்ளும் தனிப்பெரும் பேறு, தொல்காப்பியப் பொருளதிகாரம் பெற்ற பேறு. மூவதிகாரங்களையுடைய தொல்காப்பியம் எழுத்து சொல் அளவில் பயிலப்பட்டு, பொருள் மறைக்கப்பட்டிருந்த காலமும் உண்டு. பொருளின் சிறப்பு அக் காலத்தையே, "எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப் பதிகாரமும் வவ்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, 'பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம்' என்று வந்தார்; வர, அரசனும் புடைபடக் கவன்று 'என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமே எனின் இவை பெற்றும் பெற்றிலேம்' என்று சொல்லா நிற்ப" என்னும் இறையனார் களவியல். அவ்வுரையால் பொருளதிகாரப் பயிற்சி நாட்டில் குன்றியமையும் அதில் வல்லார் இல்லாமையும், பொருளதிகாரம் மறைவுண்டமையும் விளக்கமாம். வெளிப்பாடு இந் நிலையிலிருந்த தொல்காப்பியம், தமிழே வாழ்வாகிய புலமைச் செல்வர்கள் சிலர் தண்ணருளால் ஏட்டுப் படியாகக் காக்கப்பட்டன; அக் காவலுக்கு அரண்போல உரை வல்ல பெருமக்கள் சிலர் உரைகண்டு உயிரூட்டினர்; அதனை அரிதின் முயன்று தேடிப் பெருமக்களில் சிலர் அச்சிட்டு நடமாட விட்டனர். இவ்வாறு வழிவழியாகப் பெற்ற பேறே, நம் வாழ்வியல் களஞ்சியமாம் தொல்காப்பியத்தை நாம் பெற வாய்ப்பாகிய தாம். பொருள் வளம் இலக்கணம் என்பது எழுத்து சொல் அளவில் அமைவதே, இந் நாள்வரை உலகம் கண்டது. ஆனால், தொல் பழ நாளிலேயே வாழ்வியல் இலக்கணமாம் பொருள் இலக்கணமும், மொழி இலக்கணத்துடன் இணைத்துத் தமிழில் கூறப்பட்டமை பெருமிதமும் விந்தையும் உடையதாம். தொல்காப்பியக் கொடைவளத்திற்குப் பாரிய சான்றாக விளங்குவன திருக்குறள், பாட்டு, தொகை என்னும் பழமை சான்றவை. தொல்காப்பியர் வகுத்தருளிய அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் விளக்கமாகத் திகழ்வது திருக்குறள். பாட்டு தொகைகளில் அமைந்த பாடல்கள் அனைத்தும் தொல்காப்பிய அகம், புறம் ஆகிய பொருள் விளக்கமாய்த் திணை, துறை கொண்டு அமைந்தவை. பின்வர வாகிய நூல்களும், தொல்காப்பியப் பெருமணி மாலையில் ஒன்றும் பலவுமாய் எடுத்துக் கொண்டு கோக்கப் பெற்றவையே. இனித் தொல்காப்பியம் போல விரிவிலக்கணமோ முழுதுறு இலக்கணமோ கொள்ளாத நூல்களும், தொல்காப்பியச் சார்பாய், சார்பின் சார்பாய் வெளிப்பட்டவையே. தமிழ் நெறிக்கு அயலாகவும் மாறாகவும் தோன்றியன தாமும், தொல்காப்பியத்தை வேண்டுமாற்றால் பயன்படுத்திக் கொண்டு புற்றீச லாய்ப் புறப்பட்டவையேயாம். ஆகையால், தமிழர் வாழ்வியல் அளவுகோல் என அமைந்த தொல்காப்பியப் பொருளியல் வாழ்வு விரிவு மிக்கதாம். பொருளதிகாரத் தொடக்கம் அகவாழ்வில் கிளர்கின்றது. 'அகத் திணை இயல்' என்பது அது. அக வொழுக்கம் பற்றிக் கூறுவது என்பதே அதன் பொருளாம். அகம் அக வாழ்வு என்பது, இல்வாழ்வு, இல்லற வாழ்வு, உள்ளத்தால் வாழும் உணர்வு வாழ்வு! புற வாழ்வு என்பது, அக வாழ்வில் இருந்து கிளர்ந்து விரிவாக்க முற்று உலக வாழ்வாகத் திகழ்வது. அக வாழ்வு என ஒன்று இல்லாக்கால் புற வாழ்வு என ஒன்று அரும்பியிருக்கவே இயலாது! அகம், புறம் என்பது ஆட்சியே அன்றிப் புறம், அகம் என ஆட்சி இல்லையாம். அறம் அறம் என்பதன் தோற்றமே, அகவாழ்வின் தோற்றமாம்! தக்காள் ஒருத்தி தக்கான் ஒருவன் உள்ளத்திலோ, தக்கான் ஒருவன் தக்காள் ஒருத்தி உள்ளத்திலோ பதிவாகும் நிலைக்கு 'அறம்' எனப் பெயர் சூட்டியவர் தமிழ் மூதறிவாளர். அதனைப் போற்றி உரைத்தவர் தொல் காப்பியர் (1152). தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல் முதலாகச் சொல்லப்படுவன அவை. அதனாலேயே வள்ளுவம் "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என இல்வாழ்வில் முழங்கியது. அக வொழுக்கம் பற்றிக் கூறப்புகும் ஆசிரியர் நல்ல சூழலை முதற்கண் உருவாக்கிக் கொள்கிறார். தமிழர் கண்ட அகவொழுக்கம் 'கைகோள்' எனப்பட்டது. கை என்பதன் பொருள், ஒழுக்கம். கோள், கொள்ளுதல்; அக் கைகோள் களவு, கற்பு என இரண்டாம். களவில் தொடங்கிக் கற்பில் நிறைவுறல் அன்றி வழுவுதல் ஆகாது என்னும் வரையறை உடையது அக் கைகோள். கைகோள் தோன்றுமிடம் அல்லது தொடங்குநிலை, 'கைக்கிளை' எனப்பட்டது. ஒழுக்கம் கிளைக்கும் நிலையே கைக்கிளை என்க. (கணவனை இழந்த தாபத நிலை, பின்னாளில் 'கைம்மை' என வழங்கியமை கட்டமை ஒழுக்கப் பொருளிலேயே என்பது எண்ணத் தக்கது.) ஏழு திணை கைக்கிளையில் தொடங்கும் காதல் வாழ்வு, மேலே ஐந்திணை (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை) பெருந்திணை என ஏழு திணைகளாக வகுத்துக் கூறப்படுவதை முதல் இயல் முதல் நூற்பாவில் சுட்டுகிறார். அது, "கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப" (947) என்பது. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் என்றமையால், 'நடுவண் ஐந்திணை' உண்மையைக் குறிக்கிறார் (948). நிலம் தமிழ் நிலம் 'நானிலம்' என்னும் பகுப்புடையது. அந் நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பன. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்படும் நிலைத்திணை (தாவரம்) வளமாக வளரும் இடத்தை அந் நிலைத்திணையின் பெயராலேயே வழங்கினர்! நிலைத்திணைகளில் பொலிவுமிக்கதும் உள்ளம் கவர்வதும் பூ. ஆதலால் நிலைத்திணைப் பூப் பெயரே அகம், புறம் இரண்டற்கும் அடையாளம் ஆயின. நடுவண் ஐந்திணையுள் நடுவண் திணையாகப் பாலையைக் கொள்கிறார் தொல்காப்பியர். அதனால், அத்திணை ஒழிந்த திணைகள் நான்கற்கும் நானிலங்களை வழங்குகிறார். பாலை என்பது பால்மரம். அது மழையற்று வறண்ட நிலத்தும் வளர்வது. அதனால், அப் பெயரால் பாலை நிலம் வழங்கப் பட்டது. மலையும் காடும் வளமற்று வறண்ட நிலையில் அதனைப் பாலையாகக் கொள்வது தமிழக வழக்காயிற்று. இதனையே, "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியப்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" என்றார் இளங்கோவடிகள். ஆனால், குமரிக்கண்டத்திருந்த ஏழ்முன் பாலை, ஏழ்பின்பாலை என்னும் நாடுகள் நம் கருத்தில் தோன்றி, ஐந்திணை நிலமும் இயல்பாக இருந்ததை விளக்கும். நானிலத்து ஒழுக்கங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்பட்டவை போலவே, பாலை நில ஒழுக்கமும் பாலை எனப்பட்டது. முறையே இவ்வைந்திணை ஒழுக்கங்களும் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் எனப்பட்டன. பல்வேறு வகையாகக் கூறப்படுவது பொருள். அதனை அகத்திணை அமைவு கருதி, முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என மூவகைப் படுத்திக் கூறினர் (950). முதற்பொருள் என்பது, நிலமும் பொழுதும். கருப்பொருள் என்பது, முதற்பொருள் வழியாகக் கருக்கொண்ட பொருள். உரிப்பொருள் என்பது, உயரிய மாந்தப் பிறப்பின் உரிமையாய் அமைந்த ஒழுக்கப் பொருள். இம் முப் பொருள்களுள் மூன்றாவதாகிய ஒழுக்கப் பொருளே - உரிப்பொருளே - ஆசிரியர் கூறுதற்கு எடுத்துக்கொண்ட பொருளாகும். முதற் பொருளாகிய நிலமும் பொழுதும், உரிப்பொருள் நிகழ்தற்கு அமைந்த இடமும் காலமும் பற்றியவை. உரிப்பொருள் விளக்கத்திற்கு அமைந்தது கருப்பொருள். ஆதலால், அவற்றைக் கூறும் ஆசிரியர் முதற்பொருளினும் கருப்பொருளும் கருப்பொருளினும் உரிப்பொருளும் ஒன்றில் ஒன்று சிறந்தது என்கிறார். ஏனெனில், இடம் காலம் சூழல் எனப் பேசுவன எல்லாம் வாழ்வுக்காகவே ஆதலால். இம் முறை வகுப்புத் தாமே கண்டு படைத்து வைத்தது இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறார். அது, "பாடலுள் பயின்றவை நாடுங் காலை" என்பது (949). நிலத்தைக் கூறும் போது நிலத்தின் பெயரை வாளா கூறாமல், அவ்வந் நிலத்தவர் வழிபட்டு வந்த தெய்வப் பெயரையும் சேர்த்தே சுட்டுகிறார். கருப்பொருள் கூறத் தொடங்கும்போதும், தெய்வம் என்பது மக்கள் உள்ளத்தே கருக்கொண்டு விளங்கிய பொருள் என்பதைச் சொல்லியே பிற கருப்பொருள்களைக் கூறுகிறார் (964). மேல், கீழ் கடல் கொண்ட குமரிக் கண்டமும் சரி, எஞ்சியுள்ள தமிழகமும் சரி, இவை மேல் மலைதொட்டுக் கீழ் கடல் எனப் படிப்படியே அமைந்த வையே. மலை நிலம் உயர்ந்தது ஆதலால், மேல், மேற்கு என உயரப் பொருளால் அத் திசை குறிக்கப்பட்டது. கடல் நிலம் தாழ்வுடையது ஆதலால், கீழ், கிழக்கு எனத் தணிவுப் பொருளால் அத்திசை குறிக்கப்பட்டது. முல்லை முதல் இந் நிலையில், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என அமையும் நில அமைப்பின் படியே திணை வைப்புச் செய்யாமல், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என முறைப்படுத்திக் கூறுகிறார். அம் முறையே பலரும் சொல்லிய முறை எனவும் உறுதி மொழிகிறார். அது, "மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே" என்பது (951). இனிக் காலம் சொல்லும் போதும், "காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர்" (952) "பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப" (953) "வைகறை விடியல் மருதம்; எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்" (954) "நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே" (955) "பின்பனி தானும் உரித்தென மொழிப" (956) என்றே வரிசைப் படுத்துகிறார். இருத்தல் "உணவின் சுவை நாவிலே இல்லை; வயிற்றிலே இருக்கிறது" என்றால், மறுதலையாகத் தோன்றும் அல்லவா. ஆனால், உண்மை அது தானே! பசித்துக் கிடந்து உண்ணக் காத்திருப்பவன் விரும்பி உண்ணும் உணர்வுக்கும், பசியின்றி 'உண்ண வேண்டுமே' என்பதற்காக உண்பவன் உணர்வுக்கும் எவ்வளவு இடைவெளி! அக இன்பம், கூடுதலில் இல்லை; கூடுவதை எதிர்பார்த்து இருத்தலிலேயே இருக்கிறது! இத் தெளிவின் தீர்ப்பாகவே முல்லை, குறிஞ்சி என முறை வைத்தனர். நில அமைப்புப் பற்றிக் கூறல் தொல்காப்பியர் நோக்கு இல்லை. ஒழுக்க அமைதிபற்றிக் கூறுதலே அவர் நோக்கு. தொல் காப்பிய உரிப்பொருள் விளக்கமாகவே காமத்துப்பால் இயற்றியவர் திருவள்ளுவர். அவர் இறுதிக் குறளாக, "ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்" என்றமை விளக்கமாக்கும். இதன் மேல்விளக்கமாக, "உணலினும் உண்டது அறல் இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது" என்பதும் (1326) எண்ணி மகிழத்தக்கது. நிலம், பொழுது வாழும் இடம், காலம், சூழல் ஆகியவைக்கும் வாழ்வார்க்கும் தொடர்பு உண்டா? உண்டு என்பது வெளிப்படை. மலைவாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும், கடல் வாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும் ஓர் ஒப்பானவையா? முல்லை ஆயர் தொழிலும் குடிநலம் பேணலும், மருத உழவர் தொழிலும் குடிநலம் பேணலும், ஓர் ஒப்புமை அமைந்தவையா? பனிநாள் மழைநாள் இளவேனில் நாள் மாறுதல், மக்கள் ஊண் உடை உறை நிலை மாற்றங்களை ஆக்க வில்லையா? இனிய விடியற் பொழுதும், கொடிய நண்பகல் வேளையும், மஞ்சள் மாலையும், காரிருள் கப்பிய யாமமும் என்னென்ன மாற்றங்களை யெல்லாம் ஏற்படுத்திவிடுகின்றன! குளிர் தூங்கும் அருவிச் சூழலும், கொதிக்கும் பாலைச் சூழலும் தனித்தனிப் பதிவுகளை உருவாக்கி விட வில்லையா? இவற்றை எண்ணுவார், வாழ்வுக்கு நிலமும் பொழுதும் சூழலும் உடனாகி நிற்றலை உணரத் தவறார். நாடக உயிர்ப்பு, உரையாட்டு நடிப்பு தோற்றம் என்பவற்றில் இருந்தாலும், மேடையும் திரையும் ஒளியும் பிறவும் அவற்றை மேம்படுத்துதல் நாம் அறியாதது இல்லையே! கருப்பொருள் 'கரு' என்பது 'கர்' என்னும் வேர்வழிச் சொல். கருமம் கருவி கருத்தன் என்பவற்றின் மூலமும் கர் என்பதே. கர் என்பது கார், கால், காள், காழ் என்றாகியும் விரிவாக்கம் பெறும். கருமை, கருமுகில் வழிப்பட்ட வான் சிறப்பாய், வையகச் சிறப்பு ஆக்குவதாம். அம் மழை இன்றிப் புல்லும் கருக் கொள்ளா என்னின், பிறவற்றைச் சொல்ல என்ன உண்டு? "மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை" என்பது குறிப்பு. "நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு" என்பது வள்ளுவ வான்சிறப்பின் நிறைவு. வான் ஒழுக்கே (மழையே), வையக ஒழுக்கு (ஒழுக்கம்) மூலம் என்பதை உரைத்தது அது. ஆறு ஒழுக்கு நெறி வழி என்பன வெல்லாம் ஆற்று நடைக்கும் ஆள் நடைக்கும் உரியவையாக இருத்தலைக் கருதுக. அன்றியும் நீரின் தன்மையே நீர்மை என்பதையும் நீர்மையாவது பண்புடைமை என்பதை யும் உணர்தல் இனிதாம். இனித் தொல்காப்பியர், "தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப" எனக் கருப்பொருள் வகைகளைக் கூறுகிறார் (மா = விலங்கு; புள் = பறவை; செய்தி = தொழில்). இவ்வாறு கொள்ளப்படுவன பிறவும் உள; அவற்றையும் கொள்க என்கிறார். 'பிறவும்' என்றதனால், தலைமகன் பெயர், தலைமகள் பெயர், நீர், ஊர், பூ, மக்கள் என்பனவற்றை இணைத்துக் கொள்கிறார் களவியல் உரைகாரர். வாழ்வியல் ஆசான் ஒருவன் ஞால நூல், கால நூல், திணை நூல் வல்லானாகவும் திகழ்தல் வேண்டும் என்பதைக் கூறாமல் கூறுவது இப்பகுதி என்க. தெய்வத்தை நினைந்து உயிர்க்கமுதாம் உணவு உண்ணுதல் வழக்கத்தை வெளிப்படுத்துதல் போலத் "தெய்வம் உணாவே" என்றார் என்பதும் எண்ணத்தக்கது. இஃது உலகந் தழுவிய நெறியாதல் அறிக. இதனைச் சுட்டுவார் பேரா. சி. இலக்குவனார். உரிப்பொருள் முல்லை நிலமும், முல்லைக்குரிய கார் காலமும் முன்வைத்த ஆசிரியர், உரிப்பொருள் சொல்லும் போது குறிஞ்சியை முதற்கண் வைத்துள்ளார். அது "புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே" என்பது (960). முல்லைக்குத் தந்த நில கால முதன்மையை, உரிப் பொருளுக்கும் தருதல் ஆகாது என்பது ஆராய்வார் எவர்க்கும் புலப்படும். ஏனெனில், முல்லை என்பது புணர்தலின் பின்னாக ஏற்படும், எதிப்பார்த்திருக்கும் 'இருத்தல்' ஒழுக்கம்; அது கூடுதல் இல்லாமல் நிகழாது; ஆதலால், குறிஞ்சி முல்லை என முறை வைத்தல் மேற் கொள்ளப்பட்டது என்பதற்காகவே, "தேருங் காலை" என்றார். தேருங் காலையாவது ஆராயும் பொழுது. கண்டாராகிய ஆடவரும் பெண்டிரும் காட்சியால் ஒருப்பட்டுக் கருத்தாலும் ஒருப்பட்டு 'ஒருவரை இன்றி ஒருவர் இல்லை' என்னும் அறவுணர்வு ஓங்கிய நிலையிலேயே ஒருவரை ஒருவர் மீளவும் காண எதிர்பார்த்திருத்தல் இயற்கை. ஆதலின், நடைமுறை வாழ்வறிந்த நன்முறை மாற்றமே குறிஞ்சி (புணர்தல்) முல்லை (இருத்தல்) என்னும் வைப்பு முறையாம். பிரிதல் கூடினார் இருவர் எதிர்பார்த்து இருப்பார் என்னின், நிகழ்ந்தது என்ன என எண்ணின் தெளிவு கிட்டும். அது 'பிரிதல்' என்பது. ஆதலால், குறிஞ்சி முல்லை என்னும் இரண்டன் இடையே பாலையை (பிரிவை) வைத்தல் முறைமையாயிற்றாம். பிரிவு என்பது வேளைப் பிரிவும், நாளைப் பிரிவும், திங்கள் முதலாம் பிரிவும் எனப் பலவகைத்தாம். இவற்றுள் வேளைப் பிரிவே முல்லைப் பிரிவு ஆகும். கூடு துறந்து செல்லும் பறவை போலவும் தொழுவம் பிரிந்து செல்லும் கால்நடை போலவும் வீடு துறந்து சென்று, வேலை முடித்து மாலையில் மீளும் வேளைப் பிரிவே இம் முல்லைப் பிரிவு. "கணவன் பிரிந்து சென்றால் அவன் மீள வரும் வரை மனைவிக்குக் கதவே காது" என்னும் பாவேந்தர் படைப்பு முல்லைப் பிரிவாகும். இந் நாளில் வேலை நிமித்தமாக வெளியே சென்று மாலையில் திரும்பி வரும் மனைவியைக் கணவன் நோக்கியிருத்தலும் இருவரும் காலையில் பிரிந்து மாலையில் திரும்பும் கடமையுடையராய் 'ஒருவரை ஒருவர் நினைந்திருத்தலும் இருத்தல்' எனத் தகும். "ஓதல் பகையே தூது இவை பிரிவே" என்னும் பிரிவுகள், நெடிய பிரிவுகள் ஆகலின் அவை இல்லத்தின் எல்லை கடந்து, கடற் பரப்பு வரை நீண்டு 'நெய்தல்' எனப்பட்டது. நெய்தல் ஒழுக்கம் இரங்கல். வெப்பத்தால் வெண்ணெய் உருகும் உருக்கம் போல உருகும் நிலை அது. கடலும் அலையும் கானலும் காற்றும் அமைந்த சூழல் பிரிந்தார்க்குத் துயரைப் பெருக்குதலின் இரங்கல் நெய்தல் ஆயது. கொஞ்சம் என்பது சிறிது என்னும் பொருளது. சிறிதளவும் சிறிது நேரமும் கொஞ்சம் எனப்படுதல் வழக்கம். கொஞ்சுதல் என்பது மகிழ்வுப் பொருளும் தரும். "கெஞ்சும் கொஞ்சும்" என்பது திருப்புகழ். கொஞ்சுத லாம் மகிழ்தல், அளவால் குறைந்திருத்தலே நெஞ்ச நிறைவாழ்வு என்பதை வெளிப்படுத்தும். இச் சொல் வழக்கு ஆழமிக்க அகப் பொருள் இலக்கண வழிப்பட்டதாகும். கூடியிருத்தலுக்குக் குளிர்கால யாமப் பொழுதை மட்டுமே குறித்து, எஞ்சிய காலமும் பொழுது மெல்லாம் பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாக அமைத்துக் கொண்ட நலவாழ்வு முறை நானிலம் போற்றத்தக்கதும், கொண்டு ஒழுகத் தக்கதுமாம். ஊடல் இனி ஊடல் என்னும் மருதத்தின் பொருள் தான் என்ன? உடலுக்கு ஒரு பெயர் 'கூடு' என்பது. "கூடு விட்டு இங்கு ஆவிதான் போன பின்பு" என்பதில் வரும் கூடு உடல் இல்லையா? குடம்பை தனித் தொழியப் புள் பறந்தற்றே என்பதில் வரும் குடம்பையும் கூடு தானே! கூடும் கூடும் (உடலும் உடலும்) ஒன்றுதல் கூடல். கூடும் கூடும் கூடாமல் ஓர் எண்ணம் ஊடு தடுத்திருத்தல் ஊடல். ஆதலால் உடனிருந்தும் பிரிதல் ஊடல் ஆகின்றது. ஆகவே அகவாழ்வில் நம் முந்தையர் கொண்டிருந்த தெளிந்த கருத்தும் அறிவுறுத்தமும் பாராட்டுக்கு உரியவையாம். இவ் வகையால், உரிப் பொருள் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என முறைப்படுத்தப்பட்டன. நிமித்தம் புணர்தல் எனின் வருதல், காணல், உரையாடல், பிரிதல் என்பனவும் நிகழ்வன தாமே. இவை, புணர்தல் நிமித்தம் எனப்பட்டன. இவ்வாறே பிரிதல் முதலியனவும் நிமித்தம் உடையவையாய்ப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பவை முதலாகப் பெயரீடு பெற்றன. நிமித்தம் என்பது சார்பாவது. பெயர் இனி உரிப் பொருளுக்கு உரியார் எவர்? அவர் பெயர் என்ன? தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் சோழன் கரிகால் பெருவளத்தான் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் வல்வில் ஓரி வையாவிக் கோப் பெரும் பேகன் பெருங்கோப் பெண்டு கண்ணகி -இவ்வாறெல்லாம் வருவன பாடுபுகழ் பெற்ற பெயர்கள். இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பும் திணையும் துறையும் உடையவை. தொண்டைமானுழைத் தூது சென்ற ஔவையார் பாட்டு, சேரமான் கணைக்கால் இரும் பொறை உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்னும் இன்ன வரலாறும் உடையவை. இப்படிப் பெயர்களோ ஊர்க் குறிப்போ இல்லாத பாடல்கள் அகப் பாடல்கள். பாடும் பொருளோ, உள்ளத்தே கொண்டொழுகும் உணர்வுப் பொருள். அதனை உடையார் இவரெனக் கூறின் என்னாம்; புறப்பொருள் ஆகிவிடுமே! ஆதலால், "மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்" என்பது ஆணை மொழியாயிற்று (1000). அவர் பெயரை எங்கே கூறலாம்? எனின், "புறத்திணை மருங்கின் பொருந்துதல் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே" என்பது வரையறையான விடையாயிற்று (1001). இவ்வாறு பெயர் கூறல் ஆகாது என்பது மட்டுமில்லை. மறைமுக மாகவோ குறிப்பாகவோ கூட இன்னார் என அறிதற்குரியவை அகப் பாடலில் இடம்பெறல் ஆகாது. அப்படி ஒரு பாட்டுடைத் தலைவன் இன்னார் என அறியப்படுவன் ஆயின், அவனைப் பற்றிய அப் பாடலை, அகப்பாடல் வகையில் இருந்து நீக்கிப் புறப்பாடல் வகையில் சேர்ப்பதைத் தொகுப்பாளர் கொண்டனர் என்பதை அறியும் போது, அந் நெறி வழிவழியாகப் போற்றப்பட்டமை விளங்கும். இனி, அகப் பொருளில் இடம் பெறுவார்க்கு என்ன பெயர்தான் வைப்பது எனின், தலைவன் தலைவி, கிழவன் கிழத்தி, ஒருவன் ஒருத்தி, தோழன் தோழி, செவிலி நற்றாய் இன்னவான உரிமைப் பெயர்களே வரும். அன்றியும் ஆயர், வேட்டுவர், கோவலர், எயினர், உழவர், கிழார், நுளையர், பரதவர் என்னும் வினைநிலைப் பெயர்களும் வரும் "பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே" எனச் சுட்டுகிறார் (966). அகனைந்திணைக்கும் உரிமைப் பட்டவரே கிழவன், கிழத்தி என்றும், தலைவன் தலைவி என்றும் வழங்கப்பட்டனர். இக் கிழமை பின்னே நிலவுரிமைக்கும் குடிமைத் தலைமைக்கும் பெயராயிற்று. கோவூர் கிழார், முதிரத்துக் கிழவன், நிலக் கிழார், பெருநிலக் கிழார் என்னும் பெயர்கள் ஏட்டிலும் நாட்டிலும் காண்பவையும் கேட்பவையும். "செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்" என்பது மனைக் கிழமை, நிலக் கிழமை என்பவற்றின் இணைப்பாகும். ஆகார் சிலர் அகனைந்திணைக்குத் தக்கவர் அல்லர் எனச் சிலர் அந் நாளில் ஒதுக்கப்பட்டும் இருந்தனர். தம் முரிமைப்பட்டு வாழ முடியாதவராய்ப் பிறர்க்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர் அவருள் ஒருவர். அடிமைப்பட்டுக் கிடப்பானுக்கு உரிமை இன்பவாழ்வு கொள்ள வாயாது; வாய்ப்பி னும் தன்னோடு தன்னையடுத்தவரையும் அடிமையில் கிடக்கவே வைப்பன். ஆதலால் அவரைப் பாடுதற் பொருளாகப் புலமையர் கொண்டிலர். ஒருத்தி ஒருவனை விரும்புகிறாள், அவனிடம் தன் விருப்பையும் கூறுகிறாள். அவனோ, நீங்கள் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கலாம். ஆனால் நானோ எனக்குச் சம்பளம் தருபவர் சொற்படியே என் வாழ்வை அமைக்க முடியும் என்கிறான். அவன் வாழுரிமையனா? ஏவுவார் ஏவுவதை அன்றித் தாமே எண்ணிச் செய்யாதவரும் உண்டு. அவர் செயல்புரிதலில் வல்லவராக இருப்பினும், எண்ணிச் செய்யும் திறம் இல்லாதராதலின் அவரும் உரிமை இன்ப வாழ்வுக்கு உரியவர் ஆகார் ஆயினர். இனி, ஏவுவதைச் செய்தலும் இல்லாராய்ப் பிறரைத் தாம் ஏவித் தம் கடனைத் தட்டிக் கழிப்பாரும் உளர். அத்தகையரும் அன்பின் ஐந்திணையைப் பேணிக் கொள்வார் அல்லர். ஆதலால், இத்தகையர் அகத்திணைத் தலைமைக்கு உரியவர் அல்லர். தள்ளத் தக்கவர் ஆவர் எனப்பட்டனர். ஏனெனில் பாடு பொருட் சிறப்புப் போலவே, பாடப்படுவார் சிறப்பும் கருதியதே அகப்பாட்டு. அகத்திணைக்குத் தக்காராகக் கருதப்படாத இவர் அன்பின் ஐந்திணைகளுக்கு முன்னாம் கைக்கிளைக்கும் பின்னாம் பெருந்திணைக் கும் உரியர் என்று கூறுவதும் உரைமரபாக உள்ளது. இத்தகையர் இன்ப வாழ்வைப் புறத்திணைக்கண் சார்த்திக் காண்பதை அன்றி, அகத் திணைக்கண் சார்த்திக் காணக் கூடாது எனல் பொருந்துமோ என எண்ண வேண்டியுளது. "அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கிலும் கடிவரை இலபுறத்து என்மனார் புலவர்" என்பது நூற்பா (969). கடிவரை இல - நீக்குதல் இல்லை. இதனை, "புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே" என்பதனொடு இணைத்து நோக்கலாம் (1001). பிரிவார் தகவு இன்பத்தை மேம்படுத்துவதாகிய பிரிவு எவ்வெவ் வகையால் ஏற்படும், அப் பிரிவிற் குரியவர் தகுதி என்ன என்பதை அடுத்தே குறிப்பிடு கிறார் ஆசிரியர். கற்பியலில் மேல்விளக்கமும் தருகிறார் (1133 - 1137). பாடு புகழ் பெறுவோர் தக்கோர் ஆதலின், அவர்தம் அறக்கடமை நாட்டுக்கடமை பொருட்கடமை புலப்படும் வகையால், அவர்கள் பிரிவு வகைகள் இவையெனக் கூறுகிறார். "ஓதல் பகையே தூதிவை பிரிவே" என்றும் (971) "பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே" என்றும் (979) வருவன அவை. ஓதல் பிரிவு என்பது, இளமைக் கல்வி பெறுவாரை அன்று; கற்றுத் துறை வல்லாராய் மேனிலைக் கல்வி பெறச் செல்வாரைக் குறித்தது. பகைப் பிரிவாவது, நாட்டுக்குப் பகைவரால் உண்டாகிய கேட்டை ஒழிக்கக் களஞ் செல்லும் பிரிவு. தூதாவது, வழிமொழிதல்; ஆள்வோரால் சொல்லப்பட்டது எதுவோ அதனை மறவாது மாறாது சொல்லும் வகையால் சொல்லி நலம் செய்தலாகும். பொருள் வயின் பிரிதல், குடிமை நலம் காக்கவும், அறப்பணி புரியவும் வேண்டும் ஆக்கம் தேடற்குப் பிரிதலாகும். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னைத் தமிழர் கொண்ட இப் பிரிவு வகைகளை அறிவியல் வளர்ந்த இந் நாளின் பிரிவுகளொடு எண்ணிப் பார்ப்பின் புதுமை ஏதேனும் உண்டோ? அயல் மாநிலம் செல்வாரும், அயல் நாடு செல்வாரும் எண்ணிப் பார்க்கலாமே! தெரிவு இந் நாளில் அயலகம் செல்வதற்குத் தக்கார் எனத் தெரிவு செய்யப்படுவார் இலரா? இவ்வாறே இப்பிரிவுகளுக்குத் தக்காராகத் தெரிவு செய்தமை அறிய வாய்க்கின்றது. பகைதணி வினைக்குச் செல்வார் அரசின் ஆணை வழிதானே செல்வர்! தூது என்பதும் அரசின் ஆணை வழி நிகழ்வதுதானே! அவ்வாறே ஓதல் என்பதும் அரசின் ஆணை வழிப்பட்டது; ஆகலின், உடன் எண்ணினார். இம் மூவருள், ஓதற்குச் செல்வாரையும் தூதிற்குச் செல்வாரையும் தனித்து நோக்கி விடுத்தலை ஆள்வோர் கடமையாகக் கொண்டனர். "மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்" ஆதலாலும், "அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்" ஆதலாலும், ஆள்வோன் அத் துறைகளில் மேம்பட்டு நிற்பாரைக் கண்டு அத்தொழிற்கு ஏவுவான். அவ்வாறு காண்பனோ எனின், "வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்" (665) என்பது வள்ளுவம். ஆதலால் தக்கோனைத் தெரிந்து ஏவுதல் அவற்கு இயல்பாகும். மற்றும், "ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்" என்பதால் ஒற்றறிதல் வகையாலும் காண்பானாம் (581). ஓதற் சிறப்பாலும் தூதுத்திற மாண்பாலும் உயர்ந்து விளங்குவார் எவரோ அவரே அதற்குரியராக விடுக்கப்படுவர். இதனால் தொல்காப்பியர், "அவற்றுள், ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன" (972) என்றார். இனிப் பகைதணிவினையாம் படைக்குத் தெரிவும் பயிற்சியும் முதன்மையாகக் கருதிப் பேணப்பட்டமையாலும், அவர் அணி அணியாகச் செல்வார் ஆதலாலும், அவரை இவரோடு எண்ணினார் அல்லர். அன்றியும் அவர் செல்லுதலும், தான் தேர்ந்த தலைவரொடு அவர் செல்லுதலும் தான் செல்வதாகவே ஆகும் ஆதலால் அவரைத் தனித்துக் கூறினார் அல்லர் (978). இனிப் பொருட் பிரிவுக்குரியர் இருவகையார். அவர் அரசின் சார்பில் பொருட் பொறுப்பினராய் வரிதண்டுவாரும் அறங்காப்பாருமாக இருப்பார் ஒருவகையர். மற்றொரு வகையர் குடிமை நலம் காத்தற்குப் பொருட் பிரிவு மேற்கொள்வார் வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலும் குடிமை நலம் காக்கும் பொருட் பிரிவேயாம். இவருள் முன்னவர் முல்லை குறிஞ்சி முதலாகிய நானிலத் தலைவரும் ஆவர். ஆதலால், "மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே" (975) என்றார். அவர் மன்னர் கடமை என்னவோ அதனை அவர் சார்பாக இருந்து செய்கின்ற செயல் வீறு உடையவராம். அதனால் அவர், "மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப" எனச் சொல்லப்பட்டார் (976). "ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாடைங்காப் பேதையிற் பேதையார் இல்" எனப்படுபவர் போன்றாராக இல்லாமல் ஓதி உணர்ந்து ஓதவல்லாராகத் திகழ்ந்த உயர்ந்தவர் வழியிலே நெறிமுறைகள் வகுத்துப் பரப்பப்பட்டன. அதனால் "உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான" (977) என்றார் தொல்காப்பியர். "வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான" (1592) என்று மரபியலில் கூறுவது இவண் நோக்கத்தக்கதாகும். கடற்பிரிவு இவண் குறிக்கப்பட்டோர் கடல் கடந்து அயல் நாட்டுக்குப் பிரிதலும் உண்டு. அவர் பிரிந்து செல்லுங்கால் தம்மொடு மகளிரை அழைத்துச் சென்றனரோ எனின் இல்லை என்பதை, "முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை" (980) என்று உரைத்தார். முந்நீர்வழக்கம் = கடற்செலவு. ஆடவர் மகளிரோடு கடல் கடந்து சென்றால், சென்ற நாட்டி லேயே தங்கிவிடக் கூடும் என்றும், மகளிர் இவண் இருப்பின் அவரை நாடி ஆடவர் மீள்வர் என்றும், மண்ணை மறவா நிலையைப் போற்றும் வகையால் இம் முறையை வகுத்தனர் என்றும் கொள்ளலாம். மடலேறுதல் உயிராகக் காதலித்த ஒருத்தியை மணக்க, அவள் பெற்றோர் தடையாக இருத்தலும் ஏற்பட்டுளது. தலைவியால் விரும்பப்படாத ஒருவனின் உற்றார் உறவினர் மணம்பேச வருதலும் நேர்ந்துளது. அந் நிலையில், காதலித்தவன் தன் காதலை ஊரறியச் செய்தேனும் ஊரவர் வழியாக மணமுடிக்க எண்ணுதலும் வழக்கம். அவ் வெண்ண முதிர்வே 'மடலேறுதல்' என்னும் முறையாயிற்று. பனங்கருக்கினை எடுத்துக் குதிரைபோல் செய்து அதில் ஏறி அமர்ந்து, உண்ணாதும் பருகாதும் பாடுகிடந்து, காதலித்த தலைவியை அடையும் முயற்சியே இஃதாகும். அரம்பம் போன்ற பனங்கருக்கால் உடலைக் கிழித்துக் குருதி சொட்ட உயிரையும் பொருட்டாக எண்ணாமல் மணக்க விரும்புவானைக் கண்டு, தலைவியின் பெற்றோர் உற்றோர் இரக்கம் கொள்ளலும், சான்றோர் எடுத்துரைத்தலும் மணம் கூடலும் நேரும். இவ்வாறு ஆடவர் மடலேறல் உண்டு எனினும், மகளிர் மடலேறும் வழக்கம் இல்லை. இதனை, "எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான" என்கிறார் (981). எத்திணை மருங்கினும் என்பது எந் நிலத்தும். "கடலன்ன காம முழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்" என்பதை இவண் எண்ணலாம் (குறள். 1137). ஆடவரினும் மகளிர் அடக்கமும் அறிவும் அமைவுமிக்காராக இருத்தலால், அவர் மடலேறுதல் அளவும் செல்லார் என்பதை, "செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான" என்று ஆசிரியர் கூறுவதால் அறியலாம் (1155). எண்ணிப் பார்ப்பின், கால இட தொழில் நிலைகள் மாறுபட்ட இக் கால நிலையிலும், இவ்வுளவியல் மாறிற்றில்லை என்பதை உணர முடியும். ஆடவர் வலிந்து மணங் கோடலை அன்றி, மகளிர் வலிந்து மணங்கோடல் செய்தி நடைமுறையில் இல்லாமை எவரும் அறிந்ததே. கூற்று அகவாழ்வில் இடம்பெறுவார் பேசும் இடம், பேச்சு என்பவற்றை முறையாகக் கூறும் ஆசிரியர், நற்றாய், செவிலித்தாய், தோழி, கண்டோர், தலைவன், பிறர் என வகுத்துக் கொள்கிறார். அவர்கள் பேசுவது கூற்று எனப்படும். கூற்று = கூறுவது. கூற்று நிகழம் சூழல் ஒன்று வேண்டுமே. அச் சூழல், 'கொண்டு தலைக்கழிதல்', 'உடன் போக்கு' எனப்படுகிறது. அது இந் நாளில், 'கூட்டிக் கொண்டு போதல்' எனப்படுகிறது. 'ஓடிப்போதல்' எனப் பழிக்கவும் படுகிறது. முன்னாள் வாழ்வொடு எண்ணின், பழித்தற்கு இடமில்லை என்பதொடு, அந் நாள் மாந்தர் இதனை ஏற்றுப் போற்றிய சிறப்பும் படிப்பினையாக நமக்கு அமையும். ஒரு தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொண்ட நிலையில், தலைவியைப் பெற்றவளாகிய நற்றாய் தனித்து வருந்துதலும் பேசுதலும் முதன்மை இடம் பெறுகின்றன. தாய் தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொள்ளும் போது, நற்றாய், தன்னையும் தலைவனையும் தன் மகளையும் எண்ணிப் புலம்பு வாள், குறிபார்த்தல் தெய்வம் வேண்டல் என்பன புரிவாள், நன்மையாவதும், தீமையாவதும் அஞ்சத்தக்கதும் ஆகியவற்றைக் கூறிவருந்துவாள். தோழி யிடத்திலும் கண்டோர் இடத்திலும் வினாவுவாள் (982). செவிலி தாய் ஊரின் எல்லை வரை சென்று தேடுவாள். செவிலித் தாய் ஊரைத் தாண்டியும், வழிநடந்தும் தேடுவாள் (983). ஊரைவிட்டுத் தலைவன் தலைவியர் போகிவிடாமல் ஊரின் அயலிடத்தே இருப்பினும், அதுவும் பிரிவாகவே கொள்ளப்படும். இதனையும் இவ்விடத்தே குறிப்பிடுகிறார் (984) ஆசிரியர். தோழி தான் வேறு தலைவி வேறு என்றில்லாமல் ஒன்றியவள் தோழி. தலைவியைத் தலைவன் உடன் கொண்டு போதலே நலம் என்பதைத் தான் உணர்தலால் தலைவனிடம் எடுத்துரைப்பாள்; உடன்போக்கு ஏற்ற போது தலைவிக்கு நல்லுரை சொல்லுவாள்; உறவைப் பிரிதலால் உண்டாகும் தன் வருத்தமும் உரைப்பாள்; உடன் போக்கினரை மீட்டு அழைக்கச் செல்லும் தன் தாயைத் தடுத்து மீளுமாறு சொல்வாள்; மகளின் பிரிவை அறிந்து வருந்தும் பெற்ற தாய்க்குத், தலைவி மாறா அன்பால் பிரிந்தமை உரைத்துத் தேற்றுவாள் (985). இவை அவள் கூற்று நிகழும் இடங்கள். கண்டோர் வழிச் செல்வாரைக் 'கண்டோர்', வாளா பார்த்துக் கொண்டு செல்லாமல் உரையாடும் வகையையும் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். பொழுது போனமை, வழியின் தொலைவு, இடையே உண்டாம் அச்சம் என்பவற்றைக் கண்டோர், உடன் போக்கினர்க்கு உரைப்பர்; செல்லும் ஊர்த் தொலைவும் தம் ஊர் நெருக்கமும் கூறித் தம் ஊர்க்கு அழைப்பர்; உடன் போவோர் நிலைக்காக வருந்தியுரைத்து அவரூர்க்குத் திரும்பிச் செல்லுமாறும் சொல்லுவர்; அவரைத் தேடிவரும் செவிலியைக் கண்டு தேற்றித் திரும்புமாறு வேண்டுவர்; இவ்வாறு கண்டோர் உரை அமையும் (986). தலைவன் கூற்றுகளை மேலும் விரிவாகச் சொல்கிறார் (987). உள்பொருள் நிகழ்ச்சி; அந் நிகழ்ச்சி உறுப்பினர்; உறுப்பினர் உரைக்கும் உரை - இவற்றை இவ்வகத்திணையியலில் மட்டுமன்றிப் பின்னே வரும் களவியல், கற்பியல் ஆகியவற்றிலும் விரிவாகக் கூறுகிறார். இவை நாடகக் காட்சிகள் போன்றவை அல்லவா! நாடகம் என்பது நாட்டில் நிகழாததா? நிகழாத ஒன்று அல்லது இட்டுக் கட்டிய ஒன்று ஏற்றுக் கொள்ளவும் படாது; பயன் படவும் படாது. ஓரிடத்து ஒருகாலத்து ஒருசிலரிடத்து நிகழப் பெறுவனவே ஏற்ற புனைவுவகையால் நாடகமாகவும் காப்பியமாகவும் அமை கின்றனவாம். எங்கும் என்றும் எவரிடத்தும் காணலாகாப் பொருள் பற்றிப் பேசின், இல்பொருளாக ஏற்பாரின்றி ஒழியும். தொல்காப்பியர்க்கு முற்பட விளங்கிய இலக்கிய இலக்கண நூல் வழக்குகளும், அவர் கண்ட உலகியல் வழக்குகளும், ஒருங்கே தொகுக்கப் பட்டுத் தொகையாக்கியதே அவர் வழங்கிய வாழ்வியல் இலக்கணமாகும். சான்றுகள் உடன்போக்கு, அறமே என நினைந்த ஒரு தாயுள்ளம் கூறுகின்றது. "மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி இனிய ஆகுக தில்ல; அறநெறி இதுவெனத் தெளிந்தஎன், பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே" (ஐங். 371) "மழைபொழிந்து வழிகுளிரட்டும்; அறம் இதுவெனத் தெளிந்த என்மகள் சென்ற இடம்" என்னும் இது, பெற்றவள் உள்ளம் பேசுவது இல்லையா? தலைவியைத் தலைவனொடு விடுக்கும் தோழி, "இவளே நின்னலது இலளே; யாயும் குவளை உண்கண் இவளலது இலளே; யானும் ஆயிடை யேனே; மாமலை நாட மறவா தீமே!" என்பது, குறிய தொடர்களில், எத்துணைப் பெரிய நேய உரை! "இதுநும் ஊரே; யாவரும் கேளிர்; பொதுவறு சிறப்பின் வதுவையும் காண்டும்; ஈன்றோர் எய்தாச் செய்தவம் யாம் பெற் றனமால்; மீண்டனை சென்மே" கண்டோர், தலைவன் தலைவியர்க்கு உரைக்கும் இவ்வுரை, எத்தகு கனிவும் பெருமிதமும் தாங்குதலும் உடையதாகத் திகழ்கின்றது! "இது உங்கள் ஊர்; இருப்பவர் எல்லாம் உம் உறவினர்; சிறப்புற மணம் நிகழ்த்துவேம்; உங்கள் பெற்றவர் பெறாப் பேறு எங்களுக்கு வாய்த்தது; வருக" என்னும் இவ்வுரை தாய்மையுள்ளம் தெய்வவுள்ள மாகிச் சுரந்த சுரப்பு அல்லவோ! உடன்போக்குக்கு ஓர் உள்ளம் உடன்வந்து வழிகாட்டுகின்றதே: "எங்களூர் இவ்வூர்; இதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர்; வேறில்லை தாமுமூர் - திங்களூர் நானும் ஒருதுணையா நாளைப்போ தும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து" (கிளவித்தெளிவு) தொல்காப்பியர் வழங்கிய கூற்றுவகை வெள்ளப் பெருக்கே, சங்கத்தார் அகப்பாடல்களும், பிற்காலக் கோவை முதலிய பாடல் களுமாம். அகவலும் வெண்பாவும் கட்டளைக் கலியும் பாவினமும் இக் கூற்றுவகையை விளக்குவனவாகப் பிற்காலத்தில் விளங்கினும், தொல் காப்பியர் நாளில் கலிப்பாவும் பரிபாவும் பெருவரவாகக் கொண்டிருந்தன. இவற்றை யெல்லாம் வடித்தெடுத்த பாகாக, "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர்" என நூற்பா கிளர்ந்ததாம் (999). நினைத்தல் பிரிவு, பிரிவு வகைக் கூற்று என்பவற்றை உரைத்த ஆசிரியர் அது தொடர்பான வேறு சில குறிப்புகளையும் வழங்குகிறார். நினைத்தலும் செய்தலொடு ஒக்கும் என்பது ஓர் உயர்ந்த உளவியல் ஒழுக்கம். அவ் வொழுக்கம் விளங்கும் வகையால், "நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்" என்று கூறி, "நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே" என்கிறார். "பிரிவுக்காலத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள், தலைவன் தலைவியால் நினைத்தற்கு உரியவையும் ஆகும்" என்பதுடன், "நிகழ்ந்த அது நெஞ்சில் நிலைபெற்றிருத்தலும் அப் பிரிவாகிய பாலைத் திணையே ஆகும்" என்பதும் இவற்றின் பொருள். இவ்வகத்திணையில் இணைக்கத் தக்கவை எவையும் இல்லையோ எனின், மரபு நிலை நீங்கா மாட்சியொடு இணைக்கும் பொருளை இணைத்தலும் ஏற்கக் கூடியதே என்கிறார் (991). உள்ளுறை சிந்திக்க வைக்கும் செய்தி எதுவோ அது செயலூக்கியாகத் திகழுதல் உறுதி. அதனால், அகத்திணை உரையாடல்களில் ஓர் அரிய உத்தியை வகுத்து, நூன் மரபாகப் போற்றினர். அஃது உள்ளுறை உவமை என்பது. இயல்பாக வழங்கும் உவமையொடு, இவ்வுள்ளுறை உவமையும் வரச் செய்யுள் இயற்றல் சிறக்கும் அகப்பொருளுக்கு என்று கூறும் அவர், அதன் இலக்கணத்தை, "உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்முடிகென உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமை" என்கிறார் (994). "அலை கொழித்துத் திரட்டிய மணல் மேட்டை அசையும் துகிலைப் போலக் காற்றுத் தூற்றும் கடற்கரைத் தலைவனே" என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தலைவன் தலைவியர் சந்திப்பு ஊரவர் அறிந்து தூற்றப்படு பொருளாகியமையைத் தோழி உணர்த்துகிறாள் தலைவனுக்கு. இதன் உட்கருத்து 'காலம் நீட்டாது உடனே மணந்து கொள்' என்று ஏவுதலாகும். இதனை, "முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர் நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப" என்கிறாள் (நற். 15). உள்ளகத்துப் பொருளாகிய அகம், உவமை வழியால்கூட வெளிப்படல் சிறப்பன்று என்று கொண்ட உயர்நெறியே இவ் வுள்ளுறை எனல் சாலும். இதன்மேல் இறைச்சி என்பதொன்றும் உண்டு. அதனை உவமையியல் முதலியவற்றில் விரியக் கூறுகிறார் ஆசிரியர். கருப்பொருளை அடியாகக் கொண்டு உள்ளுறை தோன்றும் என்னும் ஆசிரியர் 'தெய்வம்' என்னும் கருப்பொருள் உள்ளுறையில் இடம் பெறக் கூடாது என்று வரம்பு காட்டுகிறார். புலப்பாடு இல்லாத ஒன்றைக் காட்சியளவால் விளக்கிப் புலப்படுத்தலே முறை. அவ்வாறு காட்சி வகையால் காட்டமுடியாத ஒன்றால், புலப்படுத்த எண்ணல் புலப்பாடாக்காது என்பதால் விலக்கினார் எனத் தெளியலாம். எழுதிணை ஏழுதிணைகளாகக் கூற எடுத்துக் கொண்டவற்றுள் முந்து நிற்கும் கைக்கிளை இலக்கணமும், பிந்து நிற்கும் பெருந்திணை இலக்கணமும் இயல் நிறைவில் கூறி அமைகிறார். மக்கள் எழுவர் என்றால், மூத்தாரும் இளையாரும் ஒப்ப 'மக்கள்' எனவே படுவர். அது போல், அகத்திணை ஏழு எனின், முன்னும் பின்னுமாகிய இவையும் அகத்திணைகளேயாம். புறத் திணையொடு பொருந்துவன ஆகா. அகம் புறம் எனல் இரண்டே யன்றி அகப்புறம் புறப்புறம் என்பன பொருந்தாப் பிற் பிரிவாயவை. இளையராய் இருப்பார் விளையாட்டுக் காதலும், வேட்கை மிக அமைந்தார் அளவொடும் அமையாராய்க் கொள்ளும் பெருவிருப்பும், முறையே இக் கைக்கிளை, பெருந்திணை எனலாம். கைக்கிளை "காமம் சாலா இளமை யோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே" என்பது முன்னதன் இலக்கணம் (996). "பருவம் அடையாத ஒருத்தி; அவள் பருவம் அடைந்தவளா அடையாதவளா என்பதை அறிந்து கொள்ளாத இளையவன் ஒருவன்; ஆனால், அவளால் தாங்காத் துயர் தான் கொள்வதாகக் கூறுகிறான். தன்னைப் புரிந்து கொண்டு நடத்தலால் தனக்கும் அவளுக்கும் ஏற்படும் இன்பத்தையும் இல்லாக்கால் இருவர்க்கும் ஏற்படும் துன்பத்தையும் தானே பெருமிதமாகக் கூறுகிறான்; அவளிடமிருந்து மறுமொழி என எதுவும் அவன் பெற்றான் அல்லன்; எனினும், தானே சொல்லி அதனால் இன்பப் பட்டுக் கொள்கிறான்; இதுவே கைக்கிளை எனப்படுவது" என்பது இதன்பொருள். இந் நிலை, பால் பிரிவு இல்லாமல் பயிலும் இளம் பள்ளிகளிலும், இளையோர் பணிபுரியும் தொழிலகங்களிலும், நெருங்கி உறையும் குடியிருப்புகளிலும் பெருக நிகழ்தலும் சொல்லுறவாகத் தொடங்கி நல்லுறவாகப் பின்னே திகழ்தலும் காண்பார் கைக்கிளையாவது காதல் தொடக்கம் எனவே உளவியற்படி கொள்வர். உரிய வழிகாட்ட லால் உயரிய வாழ்வுக்கு அடித்தளம் ஆக்குவர். பெருந்திணை இனிப் பெருந்திணை என்பதை எண்ணுவோம். ஆசிரியர் பெருந்திணையை, "ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே" என்கிறார். மடலேறுதல், இளமை நீங்கியபின் விரும்புதல், தெளிவற்ற காமமிகை, மிக்க காமத்தால் செய்யும் துணிவுச் செயல் ஆகிய நான்கும் பெருந்திணை எனப்படுபவை என்பது இதன் பொருளாம். இத் திணையை அகத்தொடு முரணா வகையில் ஆய்ந்த அறிஞர் வ. சுப. மாணிக்கனார், "ஐந்திணையாவது அளவுக் காதல்; பெருந் திணையாவது மிகுதிக்காதல். பெரும் என்ற அடை அளவினும் மிகுதிப்பாட்டை மிகையைக் குறிக்கின்றது. பெருமூச்சு, பெருங்காற்று, பெருமழை, பெருமிதம், பெரும்பேச்சு, பெருங்காஞ்சி, பெருவஞ்சி என்ற தொடர்களை உடன் நோக்குக" என்பது இவண் கொள்ளத் தக்கது. "களவை நாணின்றி வெளிப்படுத்திக் கற்பு ஆக்கினமையின் (ஏறியமடல் திறம்) ஐந்திணைப் படாது பெருந்திணைப்பட்டது" என்றும், "இல்வாழ்க்கையில் காதல் நுகர்ச்சிக்கு ஒத்த மதிப்புக் கொடாது, இளமையை வேண்டுமளவு நுகராது, பொருள் முதலாயவற்றில் நாட்டம் கொண்டு ஒழுகுவது மிகையாதலின் இளமைதீர்திறம் பெருந்திணை யாயிற்று" என்றும், "கற்பு போய்வரும் பொருளில்லை. நாணோ ஒழுக் கத்தை விடாது அரிதில் போய்வரும் தன்மையது. நாண்விட்டமையால், காமத்து மிகுதிறத்தால் பெருந்திணையாயிற்று" என்றும், "களவுத் தலைவி மன்னரின் விழாவிற்கும் மகளிரின் துணங்கைக்கும் இல்லங் கடந்து புறப்பட்டே போய் விட்டாள். எண்ணம் சொல் அளவில் அமையாது இயங்கிய இச் செய்கை மிக்க காமத்து மிடல்" எனப்படும் என்றும் இவற்றின் முடிபையும் கூறுவார் மாணிக்கர். (தமிழ்க் காதல் - 234 - 257). அகத்திணையை அடுத்து ஆசிரியர் புறத்திணை இயல் கூறினார். "முற்படக் கிளந்த எழுதிணை" (947) என்றவர், அவ்வெழுதிணைகளுக்கும் அமைந்த புறத்திணைகள் ஏழனையும் கூறுதலை நூன் முறையாகக் கொண்டார். நாம் எடுத்துக் கூறிய அகத்திணை தொடர்பான களவு, கற்பு எனக் கைகோள் இரண்டனையும், அவற்றின் தொடர்பான எஞ்சுதல் பொருள் கூறிய 'பொருளிய'லையும் கண்டு, புறத்திணை இயலைக் காணலாம். பொருள் தொடர்ச்சி நோக்கியது இவ்வமைப்பாகும். களவு ஒருவர்க்கு உரிமையாம் பொருளை ஒருவர் கவர்ந்து கொள்ளுதல், உலகியலில் சொல்லப்படும் களவாகும். அக் களவைக் கடிந்து 'கள்ளாமை' (களவு செய்யக் கருதாமை) கூறும் வள்ளுவர், "உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்" என்பார். "உள்ளத்தால் உள்ளலும் (நினைத்தலும்) செய்தலோடு ஒக்கு" மென, உளமொன்றிய உரைவகுத்து ஆசிரியர் உளப் பாங்கை வெளிப்படுத்து வார் உரையாசிரியர் பரிமேலழகர். அத்தகைய பழிக் களவல்லாமல் 'உயிர் தளிர்க்கச் செய்யும்' உள்ளங் கவர் களவு ஈதாகும். ஆதலால், வாழ்வியல் நெறிவகுத்த சான்றோர், ஒருவரை ஒருவர் உள்ளத்தால் கவர்ந்து ஒன்றுபடும் இயற்கை இயைபை, இயற்கைப் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி, கடவுட் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, ஒன்றிய பாலது ஆணை, காமக் கூட்டம், ஊழால் கூடும் கூட்டம் என்றெல்லாம் பெயரீடு செய்து பாராட்டினர். அன்றியும் களவு பிறர் அறியாவகையில் நிகழும் நிகழ்வு ஆதலால் 'மறை' எனவும், 'மறைநெறி' எனவும், 'மறையோர் ஆறு' எனவும் குறியீடு செய்து நம் முந்தையர் வழங்கினர். இக் களவின் முதல் நிலையாம் காட்சியை, "ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையில் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே" என்கிறார் தொல்காப்பியர் (1039). "உலகியலில் ஒருவரோடு ஒருவரை இணைக்கின்ற சூழல் என ஒன்று உண்டு. அன்றி அவரை அவ்வாறு இணையச் செய்யாத சூழல் என்பதொன்றும் உண்டு. இவ் விரண்டனுள் இணையச் செய்யும் உயர்ந்த சூழல் வலிமையால், ஒத்த ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் காணுதற்கு வாய்க்கும். அக் காட்சியால் ஏற்படும் உள்ளப் பதிவே, 'பால்' ஒன்றுதலாகிச் சிறக்கும். ஒத்த என்னும் நிலையில், சற்றே மிக்கோன் கிழவன் எனினும் நீக்குதற் குரியது இல்லை; ஏற்கத் தக்கதேயாம்" என்கிறார் (1039). ஒத்த கிழவனும் கிழத்தியும் என்பதன் ஒப்பு எவை எனின், "பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே" என்னும் பத்துவகை ஒப்புமாம் (1219). இவ் வொப்புகளின் அருமை போற்றின் இல்லற வாழ்வு இனிதின் அமையும். உள்ளப் பொருத்தம் இருவருக்கும் உண்டா என்பதை முதற்கண் காண வேண்டியிருக்க, இறுதிவரைகூடக் காண்பதும் கேட்பதும் இல்லை! ஆனால், பெயர் என்றும் நாள் கோள் என்றும் பார்க்க வேண்டாதன பொருத்தமெனப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பெற்றோர் அறியாமல் தாமே மணந்து கொள்ளலும், வேற்றிடம் சென்று விடலும், தம்மைத் தாமே முடித்துக் கொள்ளலும் பெருக்கமாகி வருதல் கண்கூடு. மணப்பெண் பார்க்க வருவார்; வீடு பார்க்கின்றனர்; வளம் பார்க்கின்றனர்; பெற்றோர் தமக்குள் பெண் ஆண் பிடித்தம் பற்றிப் பேசிக் கொள்கின்றனர்; உற்றார் உறவினர் பிடித்தமும் கருதுகின்றனர். தப்பித் தவறி ஆணின் விருப்பைக் கேட்பாரும் பெண்ணின் விருப்பைக் கேட்டு நடத்தல் அருமையே! இந் நிலையில், இருமனம் ஒன்றி விட்டாரையும், சாதி சமய செல்வ நிலைகாட்டி ஒன்றிவிடாது தடுக்க முந்துவாரே பலராகின்றனர். போராடிப் பெற முடியாராய் அவர் 'முடிந்த பின்னர்' இவர் முட்டி என்ன? மோதி என்ன? சாதி சமயம் செல்வம் கணியம் கண்மூடி வெறி இவை இறந்தவரை மீட்டுத் தருமா? தொல்காப்பியர் கூறிய பத்துப் பொருத்தம் பற்றி எண்ணிப் பாராமல், சோதிடன் சொல்லும் பத்துப் பொருத்தமும் பார்த்துப் பொருத்தமென முடித்து, மனப்பொருத்தம் இல்லாதார் வாழ்வு, வீட்டிலேயே விரும்பி உண்டாக்கி வைக்கப்பட்ட நிரய (நரக) வாழ்வு என எண்ணுவார் பெருகினால் அல்லாமல், இதற்குத் தீர்வு வாயாதாம். களவியலைக் கூறத் தொடங்கும் ஆசிரியர், "இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணும் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே" என்கிறார் (1038) இதற்கு, "உயிர்களுக் கெல்லாம் பொதுவாகிய இன்பமும், அவ்வின்பத் துய்ப்பிற்குத் தேவையாம் பொருளும், அப் பொருள் தேடுதற்காம் அறமும் என்பவற்றை ஒருங்கே கொள்ளும் வகையில் அன்பொடு கூடும் கூட்டத்தின் தொடக்கமாகியது களவு எனப்படும் காமக் கூட்டம். அக் கூட்டத்தை ஆராயும் போது அது, மறையோர் மணமாகச் சொல்லப்படும் மணம் எட்டனுள் இசைத் துறை வல்லோராம் யாழோர் (கந்தவர்) மணத்தினை ஒப்பதாம்" எனல் பொருளாம். களவு என்பதை விளக்க உவமை கூறுவார், அயல் நெறியாளர் மணவகையுள் ஒன்றனைச் சுட்டினார் என்பதும், அச் சுட்டுதலும் கண்முன் காணற்கியலாக் கற்பனைப் படைப்பராம் கந்தருவரைக் காட்டினார் என்பதும் உரிய பொருள் விளக்கத்திற்கோ, உரிய தமிழ் நெறிக்கோ உதவாததாம். தமிழ் கூறு நல்லுலக வழக்கும் செய்யுளும் நோக்கிக் கூறும் குறிக்கோள் உடையவர், விண்ணுலாவுவாராக அயலார் இட்டுக் கட்டிக் கூறுவாரை, உவமை காட்டுதல் ஏற்புடையதன்றாம். "உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்" என்னும் தம் உவமை இலக்கணத்திற்கு மாறாம். மேலும் கண்டறியா ஒன்றைக் காட்டுதற்குக் கண்டறிந்த ஒன்றை ஒப்புக் காட்டுதலை யன்றிக் கண்டறிந்த ஒன்றை விளக்கக் காணா ஒன்றைக் காட்டுதல், "ஆகாயப் பூ நாறிற்று என்புழிச் சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்" என்னும் உரைக்கே அது எடுத்துக்காட்டாகிவிடும். அயல்நெறி ஒன்றனை விளக்குவார், தமிழ் நெறியுள் இன்னது போல்வது என்பதே நூன்முறையாம். இந்நூற்பாவின் நான்காம் அடியாகிய, "மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்" என்னும் ஓரடியை விலக்கிக் காணின், எப்பொருள் குறைதலும் இன்றிக் கண்ணேர் சான்றும் வாய்த்துச் சிறத்தல் கண் கூடு. ஆதலால், இவ் வோரடி உரைகண்டார் காலத்திற்கு முற்படவே மூலத்தின் இடையே சேர்க்கப்பட்ட பொருந்தாச் சேர்ப்பு என்பது புலப்படும். இப்படிச் சேர்ப்பு உண்டோ எனின், இடைச் சேர்ப்பு, இடமாற்றம், நூற்பாச் செறிப்பு, நூற்பா விடுப்பு என்பனவும் தொல்காப்பியத்துள் உளவாதல் ஆய்வார் இயல்பாகக் காணக் கூடியவையாம். 'வைசியன்' என்னும் ஒரு சொல் பழந்தமிழ் நூல்கள் எவற்றிலும் இடம் பெறாதது. பின்னூலார் தாமும் அயற் சொல்லென வெளிப்பட அறிந்தது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளமை (1578) மேற்போக்காக நோக்குவார்க்கும் சேர்மானத்தைக் காட்டிவிடத் தவறாது. இவ்வாறாயின் இவ்வடி நீக்கிய நூற்பாவின் பொருள் என்ன? பொருந்தும் வகை என்ன? என்பவை தெளிவு பெறல் வேண்டும். "காமக் கூட்டம் என்பது, பாடுதுறைவல்லாரும் யாழ்த்திற வோருமாகிய பாணர்தம் இணைப்பை ஒப்பது. அது பிரிவு என்பது அறியா வாழ்வினது என்பதாம். பாணர் கூட்டம் என்றும் பிரிவறியாப் பெருமையது என்பது, பாணன் பாடினி அவர்தம் சுற்றம் என்பவை மண் குடிசையில் இருப்பினும் காடுகரைகளில் திரியினும் மன்னர் மாளிகைக்குச் செல்லினும் ஒன்றாகவே இருந்ததைச் சங்கச் சான்றோர் பாடல்கள் தவறாமல் சொல்கின்றன. எந்தப் புலவரும் அப்படித் துணையொடும் சுற்றத்தொடும் சென்றமை அறியுமாறு இல்லை. தள்ளமுடியாச் சான்றைத் தள்ளி, இல்லாத அயற்சான்றைத் தேடி அலைதல் தேவை அற்றதாம். தலைவன் தலைவியை 'யாழ' என்று விளிக்கும் வழக்கு பண்டு முதலே இன்று வரை தொடர்தல் (யாழ, ஏழ, ஏழா என வழங்கப் படுதல்) இதனொடும் எண்ணத் தக்கது. இனி இவ் வடியை விடுதலால் ஏதேனும் நூற்பாவிற்குப் பொருள் இடரோ விடுபாடோ ஏற்படுமோ எனின் அவையும் இல்லையாம். அன்றியும் இரண்டு நூற் பாக்களுக்குப் பொருந்தவுரைத்த உரைகள் திருந்தும் வகையும் உண்டாகின்றதாம். அதனை மேலே காணலாம். இனி இன்பமும் பொருளும் அறமும் என்னும் இம்முறை முறையோ; அன்றிச் செய்யுளியலில் "அறம் முதலாகிய மும்முதற் பொருள்" என்பது முறையோ எனின், இரண்டும் முறையே ஆகலின் ஆசிரியர் கூறினார் என்க. மேலும், "வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும் நடுவணது எய்தாதான் வாழ்க்கை உலைப்பெய்து அடுவது போலும் துயர்" என வருதலால், பொருள் முன்வைப்பு அறியலாம். இம் மூவகையும் ஆசிரியன் ஆணை வழியவே என்பது "மும்முதல்" என்ற குறியீட்டால் விளங்கும். சொல்லும் இடம் குறித்து எதுவும் முதற் பொருளாகக் கொண்டுரைக்கும் உரிமையினது என்பதால் தான் 'மும் முதல்' என மூன்றற்கும் முதன்மை கூறப்பட்டதாம். காட்சி தலைவன் தலைவியருள் எவர்முற்காண்பரோ எனின், அவ் வினாவுதலுக்கு இடம் வைக்காமல், "ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப" என இருவரும் ஒத்துப் பார்க்கும் ஒருமிப்புப் பார்வையே அது என்றார். 'தகவிலார் மாட்டு எம் பார்வை பதிந்திராது' ஆகலின், 'இவர் தக்காரே' என இருவரும் எண்ணுதல் ஐயம் ஆகும்; தெளிவும் ஆகும் (1040). இருவர் கண்ணும் கருத்தும் ஒன்றுபட்டமையால், அது நெஞ்சக் கலப்பாகிச் சிறக்கும் (1042). இவை இயற்கையாக நிகழ்ந்தவை ஆதலால் 'இயற்கைப் புணர்ச்சி' எனப்படுவதாயிற்று. இயல்பாக நடைபெற்றது இயற்கை. இத் தலைவனும் தலைவியும் முன்னரே அறிந்தவராகவும் இருக்க லாம். ஆனால், அறிந்த அந் நாள் ஏற்படாமல் ஓரிடத்து ஒருவேளையில் ஒரு சூழலில் ஒருவரும் எண்ணாமல் நிகழ்வதே இஃதெனத் தெளிய லாம். பிரிவு நெஞ்சங்கலந்த அவர்கள் பிரிந்த பின் ஏற்படும் உளப்பாடுகளை ஒன்பதாக எண்ணுகிறார் தொல்காப்பியர்: இடையீடு படாது விரும்புதல், அவ்வாறே இடையீடு இல்லாமல் எண்ணுதல், இவற்றால் உடல் மெலிவடைதல், எண்ணம் நிறைவேறுதற்கு என்ன செய்யலாம் எனக் கூறுதல், அடங்கிக்கிடந்த நாணம் எல்லை கடத்தல், நினைப்பவை - காண்பவை - எல்லாமும் தம் எண்ண வெளிப்பாடாகவே தோன்றல், தம்மை மறத்தல், மயக்கம் கொள்ளல், வாழ்வை வெறுத்துக் கூறல் என்பவை தலைவன் தலைவியர் இருவர் பாலும் நிகழ்வன (1046). இடம் தலைப்படல் அழைத்துப் பேசாதவற்றை அழைத்துப் பேசுதல், பேசாதன பேசுவனவாகக் கொள்ளுதல், அவற்றின் நலம் உரைத்துப் பாராட்டல், தலைவன் தான் மகிழ்வுறாமை காட்டித் தலைவி இருக்கும் நிலை அறிதல், தலைவன் தனக்குப் பிரிவால் உண்டாகும் மெலிவினை விளக்குதல், தம் இருவர்க்கும் உண்டாகிய தொடர்புநிலை உரைத்தல், தன்னைப் பற்றிய தெளிவு தலைவிக்கு உண்டாகுமாறு தலைவன் கூறுதல் என்பவை இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தோன்றுவன (1047). தலைவன், தன் குடிவரவால் அமைந்த பெருமையும் தன் அறிவாற்ற லும் பெருகி நிற்றலாலும், தலைவி, தன் குடிவரவாய பெருமையுடன் இயல்பான அச்சம் நாணம் உறுதிப்பாடு ஆயவை கொண்டு இருத்தலாலும் இருவர் தகுதியும் பேணிக் காக்கும் வகையில் உள்ளுறுதி காத்து நிற்பார் (1044, 1045). தாம் முந்துறக் கண்ட இடத்துக் காணற்கும் முந்துவர். கண்ட அவ் விடத்தில் மீளக் காணுதல் 'இடந்தலைப்பாடு' எனப்படும். தலைப்பாடாவது கூடுதல். ஏதாவது ஒன்றை முன்னிட்டுத் தலைவியின் உடலைத் தொடுதல், புனைந்துரை வகையால் பாராட்டுதல், தக்க இடம் பார்த்து நெருங்குதல், தலைவி நழுவிச் செல்லுதல் கண்டு வருந்துதல், அதுபற்றி நெடிது நினைத்து நைதல், நெருங்குதல், தொடுதலுறப் பெறுதல், பெற்றபின் 'உன்னை எவ் வகையாலும் மறவேன்' என உறுதி கூறுதல் என்பவை இடந்தலைப் பாட்டில் நிகழ்வன. "மெய்தொட்டுப் பயிறல்; பொய்பா ராட்டல்; இடம் பெற்றுத் தழாஅல்; இடையூறு கிளத்தல்; நீடு நினைந் திரங்கல்; கூடுதல் உறுதல்; சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம்; உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும்" என்பது இதன் தொல்காப்பிய நடை (1048). மெய் தொடல் இதில், மெய் தொட்டுப் பயிறல் முதலியவை வறிதே கூறுவனவா? வாழ்வில் நடைபெறுவனவா? காதல் உரிமையர் சந்திக்கும் படம் - கதை - காட்சி இன்னவற்றை மின்வெட்டென நொடிப் பொழுது இதுகால் நாம் பார்ப்பினும், இவற்றுள் ஒன்று புலப்படுதல் தவறாதே! மெய் தொட்டுப் பயிறல், கூடுதல், நுகர்ச்சி, புணர்ச்சி என்பன வெல்லாம், பழிப்புக்குரியவையாகவோ உடல் கலக்கும் கூட்டமாகவோ கொள்ளக் கூடியவை அல்ல. தலைவி கூந்தலில் பூ இருக்க, அப்பூவை அடுத்துவரும் வண்டை ஓட்டுதல் வழியாகத் தொடுதல் 'வண்டோச்சி மருங்கணைதல்' என்னும் மெய்தொட்டுப் பயிறல். இந் நாளில் இக் காட்சி அருமை அல்லது புனைவு எனத் தோன்றின், ஆலையில் வேலை பார்த்துவரும் ஒருத்தி தலையில், பஞ்சுத் துகளோ நூலோ இருப்பதாக மெய் தொட்டுப் பயிறல் கண்கூடு. புணர்ச்சி ஈராறுகள் கூடுதல் கூடுதுறை; கடலொடு ஆறு கூடுதல் கொண்டு புணரி; இரண்டு சொற்கள் கூடல் புணர்ச்சி; பூவை மணத்தல் என்பது முகர்தல்; நுகர்தல். இன்னவகையில், மெய்தொட்டுப் பயிறல் முதலிய வற்றைக் கொள்ளவே பண்டை அகப்பொருள் புலனெறி வழக்காகும். காதலித்தான் ஒருவன் ஊரறிய மனங்கொண்டு வாழாக்கால் சென்ற ஊரே முன்னின்று அறங்காட்டிய நெறி, அந்நெறி. பெற்றோரால் கரணம் முடித்தோ கரணம் பிறரால் முடிக்கப்பட்டோ ஓரிற்படுத்தல் என்னும் நிகழ்வு நேரிட்ட பின்னன்றிக் கூடுதலை ஒப்பாதது புலனெறி வழக்கம். அத்தகு மெய்யுறு கூட்டம் முன்னுற நிகழ்தலும் மகப்பேறு பெறுதலும் என்பவை, சங்கப் பாடல்களில் சான்றுக்கும் இல்லாதவை. அகப் பொரு ளும் சரி, புறப் பொருளும் சரி கறையிலாத் தூயதாகக் கொள்ளப்பட்ட தன் விளக்கமே பொருளதிகாரச் சுருக்கச் செய்தியாம். உதவலும் தடையும் தலைவியைக் கண்டு மகிழ்ந்தவன், பிரிந்த போது கவலைப்படுத லுடன் அமையான். தலைவியை மீளவும் கண்டு அவளைத் துணையாகக் கொண்டு மனையறம் நடத்தும் வேட்கையனாக இருப்பான். தலைவியைக் காணற்கு வாயிலாக, அவள் உயிர்த் தோழியின் உதவியைப் பலவகையாலும் நாடுவான். தன் உயிர்த் தோழனாக இருப்பான் துணையையும் கொள்வான். தலைவன் தலைவியர் உறுதிப் பாட்டைப் பெருக்கும் வகையால் தலைவன் தலைவியர் இருவரும் காணத் தடையாகியும், காண வாய்ப்பு உண்டாக்கித் தந்தும் பங்களிப்புச் செய்வர். இரவில் சந்தித்தல், பகலில் சந்தித்தல், சந்திப்புக்கு இடையூறு என்பனவும் நிகழும். தோழி, தலைமகள் இளமைப் பருவம் உரைப்பாள்; அவள் அறியாள் என்பாள்; அரியன் என்பாள்; தலைவனை நெருங்கா வகையில் அகற்றுவாள்; அவன், தோழியிடம் மன்றாடிக் கேட்கவும் ஆவன்; அவள் இசைவைப் பெறுதலுமாவன்; பெற வாயா நிலையில் மடலேறுதல் கூறவும் ஆவன். பாங்கன் நிமித்தம் தோழனால் உண்டாகும் கூட்டத்தைப், "பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப" என்பார் தொல்காப்பியர் (1050). அவை: காட்சி, ஐயம், துணிவு, வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன. இவற்றுள் முதல் மூன்றும் கைக்கிளை; அடுத்த ஐந்தும் அன்பின் ஐந்திணை; இறுதி நான்கும் பெருந்திணை. இவற்றை, "முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே" (1051) என்றும், "முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே" (1052) என்றும் கூறுவனவற்றால் தெளிவிப்பார். "மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்" என்னும் நெறியைப் பழைய உரையாசிரியர்கள் கொண்டமையால், முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே என்பதற்கு, அசுரம் பைசாசம் இராக்கதம் என்னும் மூன்று மணங்களையும், 'பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' என்பதற்கு, பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்னும் நான்கு மணங்களையும் பொருளாகக் கொண்டனர் (இளம். நச்.). "பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப" என்னும் முன்னை நூற்பாவை (1050) அடுத்து வருதலை விட்டுப் (1051-2) பொருந்தா மணத்தைப் பொருத்திக் காட்டினர் (1038). மறையோர் மணவகை இவண், மறையோர் தேஎத்து மன்றல் எட்டும் பற்றிய குறிப்பை அறிதலும் வேண்டுவதாம். தள்ளத் தக்கதா கொள்ளத் தக்கதா என்பதற்கு உரிய பொருள் வேண்டுமே. பிரமம்: நாற்பத்தெட்டு ஆண்டு பிரமசரியம் காத்தவனுக்குப் பன்னீராண்டுக் கன்னியை அணிகலம் அணிந்து கொடுப்பது. பிரசாபத்தியம்: மைத்துன முறையான் மகள் வேண்டிச் செல்ல மறுக்காமல் கொடுத்தல். ஆரிடம்: தக்கான் ஒருவனுக்குப் பொன்னாற் பசுவும் காளையும் செய்து அவற்றினிடையே பெண்ணை நிறுத்தி அணிகலம் பூட்டி 'இவற்றைப் போல் நீங்கள் பொலிவுடன் வாழ்க' என வாழ்த்திக் கொடுப்பது. தெய்வம்: வேள்வி ஆசிரியனுக்கு வேள்வித் தீயின் முன் கன்னியைத் தட்சிணையாகக் கொடுப்பது. கந்தருவம்: கந்தருவ குமரனும் கன்னியரும் தன்முன் தான்கண்டு கூடினாற் போல, ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் கூடி மணப்பது. அசுரம்: 'கொல்லேற்றினை அடக்கியவன் இவளை மணத்தற் குரியன்;' 'வில்லேற்றினான் இவளை மணத்தற்குரியன்' எனக் கூறி வைத்து, அதன்படி செய்தாற்குக் கொடுப்பது. இராக்கதம்: தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக வலிந்து கவர்ந்து செல்வது. பைசாசம்: மூப்புடையாள், உறங்குவாள், மதுமயக்கம் உடையாள் ஆயோரைக் கூடுதல். -இவை தமிழர் மணமல்ல என்பது, 'மறையோர் தேஎத்து மன்றல்' என்பதால் புலப்படும். மக்கட்சட்டம், அரசியல் சட்டம் என்பவற்றால் குற்றமாகக் கொள்ளப்படுவனவும் - பட வேண்டுவனவும் எவையோ, அவையே இப் பட்டியலாக அமைகின்றதாம். 'பெண்ணடிமை' என்று பேசுவார் கண்ணுக்கு இவையெல்லாம் தட்டுப்படா போலும்! 'காதல்' அறம்! என்னும் ஔவையுரைக்கு இவ்வெண்வகை மணங்களுள் ஒன்றற் கேனும் இடமுண்டோ? கந்தருவம் இடம் பெறாதோ எனின், 'கண்டதும் கூடுதல்' என்பது கந்தருவம். அவரை மணத்தல் வேண்டுவதுமன்று; ஏற்றதுமன்று; ஆதலால், களவு கற்பாதல் உயிரான தமிழ் மணத்தொடு எதுவும் ஒவ்வாததாம். தலைவன் கூற்று பகலில் சந்திக்கும் இடம் இரவில் சந்திக்கும் இடம் என்னும் ஈரிடங்களிலும் சந்திக்கத் தவறிவிட்ட போதும், பார்க்க முடியாத வகையில் நெடும் பொழுது கடந்த போதும், காணவேண்டி நின்று காணா நிலையில் வேட்கை மிகுந்து மயங்கிய போதும், தான் புகுதற்குக் கூடாத காலத்துப் புகுதலால் விருந்தினனாகிய போதும், தலைவியே விரும்பி ஏற்கும் விருந்தின் போதும், முயற்சியை முன்னிட்டுப் பிரிய நேரும் போதும், நாணத்தால் தலைவி விலக்கி நிற்கும் போதும், வரைந்து (மணந்து) கொள்ளுமாறு தோழி சொல்லும் உயர்ந்த சொல்லைக் கேட்கும் போதும், வரைதலை உடம்பட்டு ஏற்கும் போதும், வரைதலை அவர்கள் மறுக்கும் போதும், தலைவன் கூற்று உண்டாகும். இந்நூற்பாவைத் தலைவி கூற்று வகையாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். இளம்பூரணர், தலைவன் கூற்று வகையாகக், கொண்டார். தலைவியைப் பற்றிய சில குறிப்புகளை அடுத்துக் கூறி, அவள் கூற்றுகள் எவை என அடைவு மேலே செய்தலால், இது தலைவன் கூற்றெனலே தகுதியாம் (1055). தலைவி இயல்பு இன்ப ஒழுக்கில் நிலை பெற்றுவரும் நாணம் மடம் என்னும் உயரிய பண்புகள் தலைவிக்கு உரியவை; ஆதலால், குறிப்பினால் கருத்தை வெளிப் படுத்துவாள்; தக்க இடத்தில் மட்டுமே சொல்லால் வெளிப்படுத்துவாள்; அல்லாமல் அவள் விருப்பை வெளிப்பட உணர்த்தமாட்டாள் (1054). விருப்பத்தை வெளியிடாத கண் இல்லாமையால், அதுவே கருத்தை வெளிப்படுத்திவிடும் (1055). தலைவன் விருப்பினை ஏற்றுக் கொள்ளும் தலைவியே எனினும், (உடம்பாட்டினள் எனினும்) உடம்பாடில்லாள் போலக் கூறுதலும் உண்டு (1056). - என்பவை, ஆசிரியர் தலைவியின் நாணம் மடம் குறித்த இயற்கைச் செய்தி அறிந்து கூறும் தெளிவினவையாம். இந்நாளிலும், அன்பின் ஐந்திணைப் படும் வாழ்வினர் இத்தகையராகவே இருத்தல் வெளிப்படை. நாணம் மகளிர் நாணுதல் நயம் 'திருநுதல் நாணு' என்னும் இயற்கையான நாணமாகும். கற்பித்துவருவது அன்று; 'நாணுதல் ஆகாது' எனத் தம் முனைப்புக் கொண்டாரும், நாணாமல் இருக்க முடியாத இயற்கை நாணுதல் அஃதாதலின், "கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற" என்பது வள்ளுவம். மடம் மடம் என்பது இளமையொடு கூடிய உயரிய ஓர் இயற்கை. கற்றவை கேட்டவை என்பவற்றுள் தக்கவற்றை விடாப்பிடியாகக் கொள்ளும் கொள்கை வீறு ஆகும் அது. துறவர் நிலைப் பயிற்றிடம் 'மடம்' எனப் பெயர் கொள்ளப்பட்டது இக் கொள்கைக் கடைப்பிடி கருதியேயாம். அங்கே இப் பண்பியல் அருகியமையே, இப் பொருளை மறுக்கவும், 'சமையல் கூடம் - சாப்பாடு' என்பவை தழுவிய 'மடைப்பள்ளி' நிலை யத்து வாழ்வினர் என்னும் பொருளுக்கு அவர்களை இடமாக்கியதாம். எம்துயர் தாங்குவதுடன் பிறர் துயரும் யாம் தாங்குவேம் என்னும் கொள்கைத் தவவீறு காவி ஆகும். காவுதல் - தாங்குதல். காவு தடி காவடி. "காவினேம் கலமே" புறம். இக்காவி உடையளவில் நிற்கும் இடமும் உண்டுதானே! அதுபோல். கூற்று தலைவனை மறைத்து நின்று காணுதல் முதலாகத் தலைவி கூற்று நிகழும் இடங்களையும் புதுவதோர் மணம், புதுவதோர் பொலிவு முதலாயவை கண்டு தோழி கூற்று நிகழுமிடங்களையும், களவு ஊரவர் அறிய வெளிப்படு நிலை முதலாகச் செவிலி கூற்று நிகழுமிடங்களையும் நாடக உத்தியில் நயமுற உரைக்கிறார் தொல்காப்பியர் (1057, 1060, 1061). இடையிடையே களவொழுக்கம் குறித்த நுணுக்கச் செய்திகள் சிலவற்றையும் குறிப்பிடுகிறார். தலைவி கூற்று தலைவி தானாகக் கூறும் இடங்களும் உண்டு என்பதைக் கூறு கின்றார். ஆதலால், வினாவிய வழியே தலைவி பிற இடங்களில் கூறுவாள் என்பதைப் புலப்படுத்துகிறார். திருமணம் செய்யும் காலத்தைத் தள்ளிவைத்துத் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரியும் போதும், திருமணம் செய்யாமல் தேடிவந்து நீங்கும் தலைவனைக் கண்டபோதும், அயலார் மணம் வேண்டி நிற்றலைத் தலைவனுக்கு உரையெனத் தோழிக்கு உரைக்கும் போதும் தலைவி தானே கூறுதல் உண்டு (1058). "உயிரைப் பார்க்கிலும் உயர்ந்தது நாணம்; அந் நாணத்தினும் குற்றமற்ற அறிவான் அமைந்த கற்பு உயர்ந்தது"; என்று முன்னோர் சொல்லிய சொல்லை ஏற்றுக் கொண்ட மனத்துடன், தலைவன் இருக்குமிடம் தேடிச் செல்லுதலும், தன்துயர் வெளிப்படுத்தாத நல்ல சொற்களைச் சொல்லுதலும் ஆகிய நிலையிலும் தலைவி கூற்று நிகழ்தல் உண்டு (1059). குறிப்புகள் சில அகவாழ்வியல் அறியார் போலத் தான் கொண்ட வேட்கையைத் தலைவன் முன் கூறுதல் பெரிதும் தலைவிக்கு உண்டாதல் இல்லை; புதிய மண்கலத்தில் ஊற்றப்பட்ட நீர் புறத்தே பொசிவது போல அவள் மெய்ப்பாட்டால் புலப்பட்டுவிடும் (1064). இயற்கைப் புணர்ச்சி, தாமே கொண்டது ஆதலால் தோழன், தோழி என்பார் தூதர்களாக இருத்தல் அன்றித், தமக்குத் தாமே தூதாதலும் தலைவன் தலைவியர்க்கு உண்டு (1065). தலைவி தலைவனைச் சந்திக்கக் கூடும் இடத்தை அவளே கூறுவாள். அவள் வருதற்குத் தக்க இடமாக அமைய வேண்டும் ஆதலால் (1066). தலைவியை அன்றித் தான் வேறாக இல்லாத தோழி குறிக்கும் இடமும் உண்டு (1067). தலைவியைக் காணவரும் தலைவனுக்குத் தோழன் மூன்றுநாள் அளவே உடனாவன் (1068). தலைவனைப் பற்றித் தெளிந்த கருத்து வேண்டுதலால் அவன் தோழனைச் சுட்டிக் கேட்கும் முறையைத் தலைவி கொள்வாள். அவள் கேட்டல் 'துணைச் சுட்டுக் கிளவி' எனப்படும் (1069). தலைவி அறிந்துகொள்ள வேண்டிய நற்பொருள் பலவற்றையும் அறியச் செய்பவள் தாய் ஆவாள். தாய் எனப்படுவாள் செவிலி ஆவள் (1070). தலைவிக்குத் தோழியாக இருப்பவள் அச் செவிலியின் மகளே ஆவள். அத் தலைவியின் தாய்க்குத் தோழியாயவள், தோழியின் தாயாகிய தன் செவிலித்தாயே என்பதால் அவள் வழிவழி உரிமை புலப்படும் (1071). தலைவிக்கு வழிகாட்டும் அறிவுத் துணையாகத் தோழி இருத்தலால், அவள் தலைவியை நன்கு ஆராய்தலும் சிறப்பேயாம் (1072). தலைவியை அடைவதற்குத் தலைவன் தன்னிடம் வேண்டி நிற்றலாலும், தலைவியின் குறிப்புணர்ந்து கொள்ளலாலும், இருவரும் ஓரிடத்து இருத்தலை அறிதலாலும் அவர்கள் இருவருக்கும் உள்ள அன்புணர்வைத் தோழி உணர்ந்து கொள்வாள். இதற்கு, 'மதியுடம் படுதல்' என்பது பெயர் (1073). தோழி மதியுடம் பட்டு உணர்ந்தால் அல்லாமல், அதன்பின் நிகழ்தற்குரிய கடமைகள் நடைபெற மாட்டா என்பர் (1074). தலைவன் தலைவியர் கூடுதல் முயற்சிக்கும் வரைதல் நிகழ்வுக்கும் அவளே பொறுப்பாளியாக இருத்தலால், அவர்களைப் பற்றி அறிந்திருத்தல் கட்டாயமாம் (1075). தலைவன் தலைவியர் சந்திக்கும் இடம் 'குறி' எனப்படும். அது இரவுக் குறி, பகற்குறி என இரண்டாம் (1076). 'இரவுக் குறி' மனைக்கண் உள்ளார் 'பேசும் ஒலி கேட்கும்' அளவுள்ள மலை சார்ந்த இடமாகும். ஆனால், அது மனைக்குள்ளிடம் ஆகாது (1077). மனைக்கு அப்பாலானதாகவும் தலைவி அறிந்த இடமாகவும் இருப்பதே 'பகற்குறி' இடமாகும் (1078). தலைவன் தான் குறியிடம் வந்ததைக் குறியால் அறிவிக்க, அக் குறியிடம் இல்லாத வேறு இடத்திற்குத் தலைவி சென்று அவனைத் தேடிக் காணாமல் வருதற்கும் நேரும் (1079). மிக அமைந்த சிறப்பான இடம் வாய்க்குமெனில் ஆங்காங்குச் சென்று சந்தித்தலும் உண்டு (1080). களவொழுக்கத்தின் போது நேரமும் நாளும் தவறிய நிலை தலைவனுக்கு இல்லை (1081). வரும் வழியின் அருமை, நேரும் கேடு, அச்சம், இடையூறு என்ப வற்றைப் பற்றியவற்றால் நேரமும் நாளும் தவறுவதும் தலைவனுக்கு இல்லை (1082). தலைவி காதலறம் கொள்ளுதலை அவள் தந்தை முதலியோர் அவள் குறிப்பாலேயே அறிவர் (1083). தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலி அறிந்து கொண்டவாறு நற்றாயும் அறிவாள் (1084). களவொழுக்கம் அரும்பிய நிலையில் இருந்து விரிந்து ஊரறியும் செய்தியாவது தலைவனாலேயே ஆம் (அம்பல் - அகத்து ஒடுங்கியிருந்த நிலை; அலர் = மலர்ந்து மணம் பரவுதல் போன்ற நிலை) (1085). களவு வெளிப்பட்டபின் மணம் கொள்ளல், களவு வெளிப்படுமுன் மணம் கொள்ளல் என மணங்கொள்ளும் (வரைவு) வகை இரண்டாகும் (1086). வெளிப்பட்டபின் மணங் கொள்ளல் கற்புமணம் போன்றது. எனினும், முன்னே கூறிய 'ஓதல் தூது பகை' வகைப் பிரிவுகளை மணம் கொள்ளுமுன் கொள்ளல் தலைவனுக்கு இல்லை. ஆனால், திருமணத்தை இடையே வைத்துப் பொருள் தேடுதற்காகப் பிரியும் பிரிவு ஒன்று மட்டும் அவனுக்கு உண்டு. இவையெல்லாம் களவியல் ஒழுக்கச் செய்திகள். சிறு விளக்கம் 'கண்டதும் காதல்' என்பது அவ்வளவில் ஒழியாமல் இருப்பதற்காக இத்தனை வகைக் கட்டொழுங்குகளை நம் முந்தையர் விதித்திருந்தனர் என்பது, எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்க ஒழுகலாறாகும். "கண்டதும் காதல், கலைந்ததும் மறத்தல்" என்பதற்கு இடமில்லா நெறிமுறைகள் இவையாம். தலைவியும் தலைவனும் தாமே கண்டு ஒருமித்தனர். ஆனால், தலைவன் தோழனோ, தலைவி தோழியோ அறியாமல் அடுத்த நாள் அவர்கள் தாமே கண்டிலர். தோழன் ஆய்வு - இடிப்பு - கண்டிப்பு - தடை என்பவற்றுக்கு ஈடு தந்தே தலைவன் தலைவியைக் காண முடிந்தது. தோழியின் ஆய்வு - மறைப்பு - மறுப்பு - புறக்கணிப்பு என்பவற்றுக்கு ஈடுதந்தே தலைவி தலைவனைக் காணமுடிந்தது. தலைவற்குத் தோழன் 'இடிக்கும் கேளி'ராகவே இருந்தான். தலைவிக்குத் தோழி இணையில்லா 'அறிவுத் துணை'யாகவே திகழ்ந்தாள். அவளே, களவுக்கு இசைவு தந்து, கற்பு வாழ்வுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட துணிவாட்டி. அந் நிலையை அமைவாய்ச் செய்யமுடியா நிலையில், தாய்க்கு அறிவித்து உடன் போக்குக்கு வழிகாட்டி உரிமையறம் நிலை நாட்டுபவளும் அவள். இத் தகு கட்டொழுங்கு இல்லாமல் இருவராகவே காதலித்திருப்பின் அக்காதல் நீள்வதற்கும் நிலைப்பதற்கும் பொறுப்பாவார் எவர்? நிழல்போல் தொடர்ந்து நீங்கா நெறிகாட்டும் நேயப் பிறவியர் இவர்கள். தோழன், தோழியர் என்னும் இவருள்ளும், தோழியின் பங்களிப்போ கற்பு வாழ்விலும் அருவியாய் ஆறாய்த் திகழும் நீர்மையது. தோழி தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே இடம் பெறுகிறது. ஆனால் தோழி என்னும் சொல்லோ 550 இடங்களில் வருகிறது. தோழி என்னும் சொல்லின் ஆட்சிப் பெருக்கம், அக வாழ்வில் அவள் ஆட்சிப் பெருக்கம் உணர்த்துவதேயாம். அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர். "ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலாரே; பாங்கன் ஒரு துறையளவில் வந்து போய் விடுகிறான்; பாணன் சிலபொழுது வருகிறான்,, தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இடமில்லை. தலைவனது தந்தை உடன்பிறந்தார் பற்றி ஒன்றும் சொல்வதாகாது; தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவர் அல்லர். கற்பினில் வரும் மழலைமகன் இளந்தூதுவனே அன்றி உரையாடான்; தோழியும் செவிலியும் அன்னையும் பரத்தையும் அக இலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரிது" என்கிறது தமிழ்க் காதல். மேலும் சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 842 பாடல்கள் தோழியிற் கூட்டம் என்னும் ஒரு துறைக்கே வருவன. இதனால் அக இலக்கியத்திற்குத் தோழி என்னும் ஆள், இன்றியமையாதவள் என்பதும் தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம்" என விளக்குகின்றது. தோழி சொல்லாடும் இடங்கள் களவுப்பகுதியில் நாற்பத்து ஏழு; கற்புப்பகுதியில் இருபத்தொன்று; ஆக அறுபத்தெட்டு எனக் குறிப்பிடு கிறார் ஆசிரியர் தொல்காப்பியர். அவள் உரையாடும் இடங்களையும் திறங்களையும் நோக்கும் போது, பெண்ணியல்பு என்று சொல்லப்படும் பெருமைக் குணங்கள் எல்லாமும் ஓருருக் கொண்டு விளங்கும் உயரிய படைப்பே அவள் என்பது விளக்கமாகும். தலைவிக்கும் தோழிக்கும் உரிய உரிமை, உயிர் உரிமை. அதனால் பிறருக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் தோழிக்குத் தோழியாகவே விளங்குகிறாள். அவள், இவளைத் தோழி என்கிறாள். இவள், அவளைத் தோழி என்கிறாள். இத்தகைய ஒத்த உரிமையே தோழமையின் நிலைக் களம். இன்னும் ஒருபடி மேலே செல்கிறது அவர்கள் தோழமை. தோழி தலைவியை 'அன்னை' என்பாள். தலைவி தோழியை 'அன்னை' என்று உரிமையாய் அழைப்பாள். நம் தாய், நம் தலைவர், நம் வாழ்வு, நம் உயிர் என்று இருவரும் ஒப்பிதமாகக் கூறுவர். தங்கள் உயிர்கலந்து ஒன்றிய தோழமையை, ஒரு தோழி சொல்கிறாள்: "தாயோ, தன் கண்ணைவிட மேலாக இவளை விரும்புகிறாள். தந்தையோ, இவள் கால் நிலத்தில் படுவதையும் பொறுக்காதவனாய் 'உன் சிற்றடி சிவக்க எங்கே செல்கிறாய்' என்று தடுப்பான். நானும் இவளுமோ, பிரிவு இல்லாமல் அமைந்த நட்பால் இரண்டு தலைகளையுடைய ஓருயிர்ப் பறவை போல உள்ளோம்!" என்கிறாள். எத்தகைய அரிய உவமை! தலைவன் தன் தலைவிக்கு வாய்த்த தோழியைப் பற்றிச் சொல்கிறான்: "தோழி எதைச் செய்கிறாளோ, அதையே செய்கிறாள் தலைவி. மிதப்பின் தலைப்பக்கத்தைத் தோழி பிடித்தால், தலைவியும் அத் தலைப்பக்கத்தையே பிடிக்கிறாள். மிதப்பின் அடிப்பக்கத்தைத் தோழி பிடித்தால், அவ் வடிப்பக்கத்தையே தலைவியும் பிடிக்கிறாள். மிதப்பை விட்டு விட்டுத் தோழி வெள்ளத்திலே போனால், தலைவியும் போவாள் போலும்" என்பது அவன் நெஞ்சார்ந்த உரை. இன்ன சிறப்பால் தான் தோழியைக் கூறும் தொல்காப்பியர், "தாங்கரும் சிறப்பின் தோழி" என்றார் போலும் (1060) ! கற்புமணம் கற்பு மணம் என்பது என்ன? எனின், "கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே" என்பது (1088). கரணமாவது சடங்கு; மணச் சடங்கு. கிழவற்குக் கொடுத்தற்குரிய முறைமையர் கொடுக்க, கிழத்தியைக் கொள்வதற்குரிய முறைமையர் கொள்வதே திருமணக் கொடையாகும். கிழவன் கிழத்தியரின் பெற் றோரைப் பெற்றவர்கள், இக் கொடையைச் செய்வராதலால் 'தாதா' எனப்பட்டனர். தாதா = கொடையாளர். அப் பெயர் ஆண்பால் அளவில் சுருங்கி, முறைப் பெயராக இன்று வழங்குகிறது. 'தாத்தா' என்பது அது. முழுத்தம் திருமணச் சடங்கு முழுமதி நாளில் இரவுப்பொழுதில் நடந்தமை யால் அதனை 'முழுத்தம்' என வழங்கினர். அதன் அடையாளமே முழுத்தம் பார்த்தல், முழுத்தக்கால் நடுதல் என்பனவும், வளர்பிறை நாளில் மணவிழா நடத்திவருவதுமாம். திருமணக்கரணம் மணமக்களை நீராட்டி, புத்துடை உடுத்தச் செய்து, மக்களைப் பெற்ற மங்கையர் நால்வர் மங்கலவிழா நிகழ்த்தி, "கற்பினில் வழாஅ நற்பல உதவிப் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு" என்று வாழ்த்தியமை அகநானூற்றில் 86ஆம் பாடலாகத் திகழ்கின்றது. அதன் 136ஆம் பாட்டும் அதனைச் சுட்டுகிறது. இம் முழுத்தமே 'முகூர்த்தம்' எனப்பட்டு, 24 மணித் துளி அளவு குறிக்கும் குறுங்காலமாகியும், அயன் மொழி வழியில் ஆகாச் சடங்கு நெறியாகியும் இந் நாள் நிகழ்வதாயிற்று. திருமணப் போது இரவாக இருந்ததால் முழு நிலவு ஒளி இருப்பினும் விளக்கேற்றினர். 'ஓமத்தீ' வளர்த்திலர்; வந்தவர்க்கு உணவு வழங்கினரே அன்றி, வாளா எரியில் படைத்திலர். அம்மி மிதிக்கும் இழிமை ஏற்படவில்லை. மணமகள் கற்போடு இருந்தால், அருந்ததி விண்மீன் போல் விளங்குவாள். இல்லையானால், அகலியை கல்லானால் போலக் கெட்டு மிதிபடுவாள் என்னும் அடையாளமாம் 'அரை கல்'லை (அம்மியை) மிதித்தல் அறிவுப் பிறப்பினர் ஏற்கத் தக்கதா? மணமேடைக்கு வந்து சடங்குகள் பலவும் முடித்தபின், மணமகன், 'மணமகளை மணக்க மாட்டேன்' எனக் காசிச் செலவு மேற்கொள்ள லும், பெண்ணைப் பெற்றவன் அவன் பின்னே போய் அவனை வணங்கி, நன்மொழியுரைத்து மணமேடைக்கு அழைத்து வந்து மணம் செய்வித்த லும், சிந்தனை சிறிதேனும் உள்ளவர் ஒப்பும் செயலாகுமா? காசிக்குப் போகின்றவன் மேடைக்கு வந்து ஊடே எழுந்து போவது விழாவுக்கு வந்தோர் அனைவரையும், 'மூக்கறுத்துப் புள்ளி குத்துவது' அல்லவா! 'உலகம் தட்டை என்பதே இறைமொழி' என்ற உறுதிப் போக்கின ரும் அஃது உருண்டை என ஒப்புக் கொள்ளும் அளவில், அறிவியல் வளர்ந்துள்ள போதிலும் கண்மூடித்தனத்தில் உருண்டு புரளல்தான் 'கனமதிப்பு' என எண்ணுவாரும், எண்ணுவார் வழியில் நிற்பாரும் என்றுதான் சிந்திப்பாரோ? தமிழன் தன்மானங் கெட்டுப் போன முதல் நாள், வடமொழி வழிச் சடங்கை ஏற்றுக் கொண்ட நாளேயாம்! அதன் விளைவு என்ன? தொல்காப்பியத் தூய தமிழ் நெறிகளையும் வடவர் நெறிப் பொருள்காட்ட உரையாசிரியர்களுக்கு இடம் ஆயிற்றாம். அதனைப் பின்னே காண்போம். 'உடன்போக்கு' என்பது, தலைவன் தலைவியரின் பெற்றோர் உற்றார் தொடர்பு இல்லாமல் அகன்று போன அயலிடத்து நிகழ்ச்சி. ஆங்கேயும் மணச் சடங்கு இல்லாமல் மணமக்கள் உடனுறைதல் இல்லை. அதனால், "கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான" என்றார் தொல்காப்பியர் (1089). "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே" என அக் கரணம் இல்லாக் காலமும், அக் கரணம் முன்னர்க் கொண்டாரும் அதன் பின்னர்க் கொண்டவரும் பற்றிய நூற்பா இஃது (1090). மூவர் மூவர் என்பார் முடியுடைய மூவேந்தர் என்பவர். 'போந்தை, வேம்பே, ஆர் என வரூஉம் மாபெருந்தானையர்' என ஆசிரியரால் கூறப் பட்டவர். 'முத்தமிழ்', 'முப்பால்' என்பவை போல, 'மூவர்' என்றால் எவராலும் அறியப்பட்டவர். அவர்கள் மூவர் குடியிலும் திருமணக் கரணம் முதற்கண் நிகழ்ந்தது. அக் கரணம் பின்னர் அவர்க்கு உட்பட்ட நானிலத் தலைவர், அரசியல் அலுவலர், ஊர்த் தலைமையர், ஊரவர் என்பார்க்கும் படிப்படியே நிகழலாயிற்று. மன்னர் குடியில் உண்டாகிய மரபுகளே பிறந்தநாள் விழா, சிறந்த நாள் விழா, பள்ளி எழுச்சி, திருவுலா, திருநீராட்டு, திருவூசல் முதலியன வாகக் கோயில் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் வழங்கின என்பதை அறியின், அடிப்படை விளங்கும். "மன்னன் எப்படி மக்கள் அப்படி" என்பது இதன் சுருக்கக் குறிப்பு. இம் மூவரை வருணப் பிரிவிற்குத் தொடர்புபடுத்திக் கீழோர் என்பதற்கு 'வேளாண்'குடியினர் எனப் பொருள் காணற்கு இடமில்லை! பொருள், பதவி, தலைமை எனச் சிக்கல் ஏற்படும் இடங்களிலேதான், சிக்கல் தீர்வுக்கு வழியும் காணப்படும் என்பது எண்ணத்தக்கது. பல மனைவியருள் முதன் மனைவியே ஆளுரிமை வாய்ந்தவள் 'கோப்பெருந் தேவி' எனப்படுவதும், அவள் மக்களே ஆளுரிமையர் என்பதும் எண்ணின் இது தெளிவாம். ஐயர் இனி, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" என்பது அடுத்த நூற்பா (1091). ஐயர் யாத்தனர் என்னும் சொல் வந்ததும் இந் நாள் 'ஐயர்' அந் நாளே யாம் தாம் அறநெறி அமைத்துத் தந்த மூலவர் என்று மேடையில் மட்டுமல்லாமல் நூலிலும் முழக்கமிடுகின்றனர். சாதிமைக் கொடி பிடித்தலை, மேற்கொண்டவர்கள் 'வெறி'யை அன்றி, இந் நூற்பாவில் எள்ளளவும் அப் பொருளுக்கு இடமில்லை. சங்கப் புலவர்கள் பாடல்களில் இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பு உண்டு. அப் பெயர்களில் ஒன்றில் தானும் 'இன்ன ஐயர்' என ஒரு பெயரைக் காட்ட முடியுமா? ஐயர் என்பது சாதிப் பெயராயின், வேடர் கண்ணப்பரும், பாணர் திருநீலகண்டரும் உழவர் நந்தனாரும் சேக்கிழாரால் 'ஐயர்' எனப்பட்டிருப்பரா? போப்பையர், கால்டுவெல் ஐயர் ஐயர்சாதியினரா? இக் குடி எனப்பார்த்தலில்லா வீரசைவர் 'ஐயர்' என்பது சாதியா? ஐயன் - ஐயர் - ஐயா - ஐயை - ஐயாம்மா - ஐயாப்பா என்னும் முறைப் பெயர்கள் எக் குடியினர்க்காவது தனியுரிமைப் பட்டயம் கொண்டதா? தம் ஐயன் என்பதுதானே 'தமையன்'. தமையன் என்பாரெல்லாம் 'ஐயன்' சாதிதானா? 'இளமாஎயிற்றி இவைகாண் நின்ஐயர்' என எயிற்றிக்குச் சுட்டுதல் 'அப்பா'வா, சாதிப் பெயரா? ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் வரும் 'ஆசறு காட்சி ஐயர்' சாதிப் பெயரா? களவுமணம் ஒப்பாத எண்மணப் பேறுடையார்க்கு, "அறத்தொடு நின்றேனைக் கண்டு திறற்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்" என்னும் குறிஞ்சிக்கலி பொருந்துவதா? 'இவர் அவர்' எனப் பகுக்கும் சாதிப்பிரிவு அல்லாத சால்புப் பெருமக்கள், எக்குடிப் பிறப்பினும் அவரெல்லாம் கரணம் வகுத்து வழிநடத்திய ஐயரே ஆவர் என்க. களவுக் காதல் கற்பு அறமாகாதவகையில், ஓரீர் இடங்களில் உண்டாகிய பொய்யும் வழுவும் கண்ட குடிமைப் பெருமக்கள், அறமன்றச் சான்றோர்கள் ஆயோர் திருமணக் கரணம் செய்வித்து, ஊரறிய ஒப்புக்கொள்ள வைத்த பட்டயப் பதிவே 'கரணம்' ஆகும். "பொய்யாவது, செய்ததனை மறைத்தல். வழுவாவது, செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவாம் ஆதலால் கரணம் வேண்டுவதாயிற்று" என்பது இளம்பூரணர் உரை. நச்சினார்க்கினியரோ வேதமுறை மணமே பொருளாக்கினார். ஆனால், பொதுச் சடங்கு செய்தே தழும்பேறிப் போகிய செம்முது பெண்டிர் நடத்திய அகநானூற்றுப் பாடலையே எடுத்துக் காட்டினார் (136). எடுத்துக் காட்டிய அளவில் மனத்தில் தடை ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா! நாம் எழுதும் உரை என்ன? எடுத்துக்காட்டும் மேற்கோள் என்ன? முழந்தாளுக்கும் மொட்டைத் தலைக்கும் போடும் முடிப்பு எனச் 'சிறிதளவேனும் சிந்திப்பானும் உண்மை அறிவானே' எனத் தோன்றியிராமல் போகியிருக்குமா? அவரே அறிவார்! "கரணம் என்ப", என்னும் தொடர்க்கு, "ஈண்டு 'என்ப' என்றது முதனூலாசிரியரையன்று; வடநூலோரைக் கருதியது" என, 'ஆடுகளம் அமைத்துக் கொண்டு' ஆட்டத்தில் தெளிவாக இறங்குகிறார் நச்சி னார்க்கினியர். "ஒருவர் சுட்டாமல் தாமே தோன்றிய கரணம், வேத நூற்கே உளதென்பது பெற்றாம்" என்று மேற்குறிப்பும் காட்டுகிறார். நெஞ்சுதளை "கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுதளைஅவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்" என்பது தலைவன் கூற்றுவகையுள் முற்பட நிற்பது (1092). "கட்டிப் போடப்பட்டிருந்த நெஞ்சம் அக் கட்டினை நீங்கியது எதனால்? கரணம் முடிந்த உரிமை நிலையால்!" என்பது இதற்கு வெளிப் படையான பொருள். திருமணம் முடிந்து விட்டமையால் மனம் திறந்த மகிழ்வுடையன் ஆனான் தலைவன் என்பது தானே குறிப்பு. "இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி வேட்கை தணியாது வரைந்தெய்துங் காறும் இருவர் மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டுவிடப்படுதல்" என உரை கூறுகிறார் இளம்பூரணர். "ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும் இருவகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து, ஆன்றோராவார், மதியும் கந்தருவரும் அங்கியும். களவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளும் கூட்ட மின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக் கூடிய கூட்டத்தின் கண்ணும்: அது நாலாம் நாளை இரவின் கண்ணதாம்" என உரை வரைந்து, குறுந்தொகை 101 ஆம் பாடலை எடுத்துக்காட்டி, 'இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி' என்கிறார். கற்பவர்தாம் முடிவு செய்து கொள்ளவேண்டும்! "ஆசிரியன் சொல் எப்படி யிருந்தாலும், இப்படித்தான் உரை எழுதுவேன்" என உறுதி கொண்டமை தானே, இத்தகு இடங்களில் வெளிப்படுகிறது! எத்தகைய பேரறிஞர்! 'அவர் அறியாத் தமிழ்நூற் கடற்பரப்பு ஏதேனும் இருந்திருக்க முடியுமா?' என ஆர்வ நெஞ்சத்தை ஆட்கொள்கிறாரே! 'இவரைப் போல உரை காணற் கெனவே பிறந்தார் எவரே?' என ஏங்க வைக்கும் அவர் ஏன், இப்படி எழுதுகிறார். இது தான் சார்ந்ததன் வண்ணமாதல் போலும்! அல்லது 'இன்னான் எனப்படும் சொல்' என்பது போலும்! கற்பில் கூற்றுவகை கற்புக் காலத்தில் தலைவன் கூற்றுவகை முப்பத்தொன்றனைக் காட்டுகிறார். அவ்வாறே தலைவி, தோழி முதலியோர் கூற்று வகைகளை யும் கூறுகிறார் (1092 - 1101). "ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென"த் தலைவன் தலைவியைப் பாராட்டலும், "அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும்" எனக் குறையுணர்ந்து பணிதலும், குடிவாழ்வுக்கு இன்றியமையாதவை. இவை தலைவன் கூற்றுள் இரண்டு (1092). "உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையில் திரியா அன்பின் கண்ணும்" என உரிமை உணர்ந்து தலைவி பெருமை போற்றுதல், உரிமை வேட்கைக் காலத்தும் போற்றத்தக்கது. இது தலைவி கூற்றுள் ஒன்று (1093). "பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும்" என்பது தோழி கூற்றுள் ஒன்று. தோழிக்கு இருந்த உரிமை, உறுதி, காவல் கடன் என்பவற்றைக் காட்டுவது இது (1096). காமக் கிழத்தி என்பாளுக்கும் அகவாழ்வில் இடமிருந்ததால் அவள் கூற்றும் உண்டு. செவிலி, அறிவர் ஆயோர் கூற்றும் இடம்பெறும். வாயிலோர் தலைவன் தலைவியர் ஊடற்கண் அதனை நீக்குவார் வாயிலோர் எனப்படுவர். அவர்கள் பாணர் கூத்தர் என்பவர். அவர்கள், உரிமையுடன் சென்று பழகும் இயல்பினர் ஆதலால் "அகம்புகல் மரபின் வாயில்" எனப்படுவர் (1098). இனிய ஓரியல் இல்வாழ்க்கையில் தலைவி வழியில் தலைவனும், தலைவன் வழியில் தலைவியும் நிற்றல் சிறப்பாதலால், "காமக் கடப்பினுள் பணிந்த கிளவி காணும் காலை கிழவோற் குரித்தே வழிபடு கிழமை அவட்கிய லான" என்றும் (1100) "அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே" என்றும் (1101) கூறினார். அலர் முதலியன களவுக் காலம் கற்புக் காலம் இரண்டிலும் 'அலர்' உண்டு (1108). அவ் வலரில் தான் அன்புப் பெருக்கம் உருவாகும் (1109). தலைவன் விளையாட்டும் அவ்வாறே பெருக்கும் (1110). தலைவனுக்குச் சொல்லவிரும்புவனவற்றைப் பிறருக்குக் கூறுவது போல வாயில்கள் கூறல் உண்டு. அது 'முன்னிலைப் புறமொழி' எனப்படும் (1113). வேற்று இடத்திற்குச் சென்று தலைவி நிலையைத் தலைவனுக்கு உரைத்தலும், தலைவியிடம் வந்து வேற்றிடத்தில் இருக்கும் தலைவன் நிலையைக் கூறுதலும் பாணர்க்கு உண்டு (1115) தாய் போல் கண்டித்தலும் தழுவிக் கொள்ளலும் தலைவிக்கு உரிய மனைக் கிழமையாம் (1119). பிறவற்றை எண்ணுதற்கும் கூடாத பாசறைக்குப், பெண்ணொடு செல்லுதல் இல்லை (1121). புறப்பணி புரிவார்க்கு அக் கட்டளை இல்லை (1122). தன்னைப் புகழ்ந்து கூறும் சொற்களைத் தலைவன் முன் தலைவி மேற்கொள்ள மாட்டாள் (1126). ஆனால், அவன் அயன்மனை சார்ந்து பின் இரந்து நிற்றலும் தெளித்தலும் ஆகிய இடங்களில் அவள் தற்புகழ்தலும் கொள்வாள் (987). தலைவன் சொல்லை மறுத்துக் கூறுதல் பாங்கனுக்கு உண்டு (1127). ஆனால் அம் மறுத்துக் கூறல் மிகுதியாக இராது (1129). பிரிவுக்குத் தலைவி வருந்தும் இடத்தெல்லாம் அவளை வற்புறுத்தித் தேற்றிச் செல்வதே தலைவன் வழக்கம் (1130). பிரிந்து செல்லுதற்கு ஏற்படும் இடைத்தடை, செலவைத்தடுத்தல் இல்லை. தேற்றிச் செல்வதற்கே உதவும் (1131). தலைவன் மேற் கொண்ட வினைப்பொழுதில், தலைவி நிலைபற்றி எவரும் உரையார். அவன் வினைமுடித்த போது, தலைவி நிலை அவனுக்குத் தானே தோன்றும் (1132). பூப்புண்டாகிய நாளில் இருந்து பன்னிரண்டு நாள்கள் தலைவன் தலைவியைப் பிரியான். ஏனெனில், அந் நாள் கருவுறும் நாள் ஆதலின் (1133). ஓதல் பிரிவு மூன்றாண்டுக்கு மேற்படாது (1134). காவல் பிரிவு, தூதுப் பிரிவு பொருள் தேடும் பிரிவு என்பவை எல்லாம் ஓராண்டிற்கு மேல் ஆகாது (1135, 1136) தலைவன் தலைவியுடன் ஊரைக் கடந்து ஆறு குளம் கா என்பவற்றுக்குச் சென்று மகிழ்தலும் உரியவை என்பர் (1137). வினை கருதிப் பிரிந்த தலைவன், அவ்வினை முடித்ததும் இடை வழியில் தங்குதல் இல்லை; மனம் போல உரிய இடத்து உதவும் குதிரையாகிய பறக்கும் விலங்கைக் கொண்டிருத்தலால் (1140). இன்ன செய்திகளை அடைவு செய்து கற்பியலை முடிக்கும் ஆசிரியர் தமிழர் அறநெறியை அருமைப்பட மொழிகிறார். அது, "காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" என்பது (1138). சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன் = முதுமையடைந்ததன் பயன். இறத்தல் = கடத்தல். அளவிறந்த, வரை இறந்த என்பவற்றில் வரும் இறந்த என்பதைக் கருதுக. குடிநலம் சிறக்க வாழ்ந்த முதுமையின் பயன் யாதாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவிப்பது இந் நூற்பா. அப்பயன் 'சிறந்தது பயிற்றல்' என்பதாம். 'கமம் நிறைந்து இயலும்' என்பது, 'கமம்' என்னும் சொல்லின் பொருள். பிறைமதி எனத் திகழ்வது கமம். பிறைமதி - வளர் மதியாய் - நிறைமதியாய் விளங்குவது போலக் கமம் என்னும் 'காமம்' விளக்கமுறும். இன்பம் என்பது, எல்லா உயிர்க்கும் பொதுமையது என்பது ஆசிரியன் உரை (1169). ஆனால், காமம் மாந்தர்க்கே சிறப்பின் அமைந்த உணர்வு - அதனாலேயே வள்ளுவ மூன்றாம் பால், இன்பத்துப் பால் எனக் குறியீடு பெறாமல் 'காமத்துப்பால்' எனக்குறியீடு பெற்றதும் அச் சொல்லையே 39 இடங்களில் பயன்படுத்தியதுமாம். காமம் வரும் ஈரிடங்களில் மட்டுமே இன்பமும் வந்து, அமைவுற்றமையும் அறிக. இக் காமம் நிறைவுற்ற முதுமைக் காலம், 'காமம் சான்ற கடைக் கோட்காலை' ஆகும். அக் காலத்தில் அவர்களுக்கும் குடிவழிக்கும் பாதுகாப்பான நன்மக்கள் தோன்றிச் சிறந்து விளங்குவர்; அவர்களை அன்றி இல்லறச் சுற்றமாகவும் உரிமை உறவுச் சுற்றமாகவும் பலர் இருப்பர்; குடும்பத் தலைவர்களால் அறவாழ்வின் அருமை அவர்கள் அறிந்து திகழ்வர்; மக்கள், சுற்றம் ஆகிய இவர்களுக்குத் தம் பிறவிப்பயனாகச் சிறக்கும் மேல் நெறிகளைக் காட்டி அந் நெறியில் அவர்கள் நிற்குமாறு பயிற்றுதல் கடமையாம் (1138). சிறந்தது பயிற்றல் என்பது சுட்டும் சிறப்பு - 'செம்பொருள்' என்பதாம். "பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் 'சிறப்பென்னும்' செம்பொருள் காண்ப தறிவு" என்று வாய்மொழி கூறுதல் காண்க. இச் சிறப்பு வளர்நிலையே வாழும்போதே பெறும் வீடுபேறு ஆகிய அவாவறுத்தல். "வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில்" என்பது வீடுறு வழியும், "ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்" என்பது வீடுபேறுமாம். தமிழ் நெறியில் இல்லறம் துறவறம் என அறம் இரண்டன்று. இல்லறம் ஒன்றே அறம். அவ்வறம் மேற்கொண்டார் அனைவரும் தம் இல்லறக் கடமைகளை இனிது நிறைவேற்றித் தம் மக்களுக்கும் தம் சுற்றத்திற்கும் பயிற்ற வேண்டுவ எல்லாம் பயிற்றி அவர்களும் அவ்வழியில் தொடருமாறு பற்றற்ற வாழ்வு மேற்கொள்வதே அவ்வறத்தின் நிறைவாகும். இதனாலேயே அறத்தை இரண்டு ஆக்காமல் ஒன்றாக்கியது வள்ளுவம் என்பதும், துறவுப் பகுதியில் 'அறம்' என்னும் சொல் ஒன்றுதானும் இல்லாது அமைந்தது என்பதுமாம். மணிவிழா இனி, 'மணிவிழா' என்பது முதுவர்கள் தம் குடும்பப் பொறுப்பை மக்களிடம் ஒப்படைத்து அவர்கள் பேணலொடும் உதவியொடும் அறப்பணி - அருட்பணி ஆற்றுவதை மேற்கொள்வதற்கென்றே அமைக்கப்பட்டது என அறியின் 'இரண்டாம் திருமணம்' 'அறுபதாம் கலியாணம்' என்னும் பெயர்களைக் கொள்ளாதாம். 'பொலிவுச் சடங்கு போலிச் சடங்காகியமை' அறிவர் வழிகாட்டத் தவறியமையாலேயே எனக் கருதின் மீட்சி கிட்டுதற்கு வாய்க்கும்! ஏனெனில், அடங்கு கொள்கை சடங்காகிவிட்டதல்லவா! பொருளியல் இனி, அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல் ஆயவற்றில் சொல்லாதனவும், சொல்ல வேண்டுவன உண்டு என்று ஆசிரியர் கருதுவனவும் பொருளியலில் இடம் பெற்றுள ஆதலால், 'எச்ச இயல்' என ஆசிரியர் ஆளுதல் ஒத்த குறியீடு ஆம். அசைமாறல் ஒரு தொடர் மொழியில், ஒலிமாறி ஒலிப்பினும் பொருள் பொருந்தியே வரும்; ஆனால் அசை மாறுபடுதல் கூடாது; அது வழுவாகி விடும். "ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்ப ஆய்ந்தவர் கோள்" என்னும் குறள் ஊறொமை உற்றபின் ஒல்காமை என வருதல் வேண்டும். அவ்வாறு வாராக்காலும் பொருள் அவ்வாறே கொள்ளுதல் வேண்டும். ஆனால் அசையாகிய உறுப்பு மாறின் யாப்பு வழுவாகவே அமைந்து விடும். முன்னது பொருள்காண் நெறி; பின்னது இலக்கண நெறி. முன்னதில் பொருள் போற்றுதலும் பின்னதில் யாப்புப் போற்றுதலும் வேண்டும் என்பதாம் (1141). தனிமொழி நாடக உத்தியில் தனிமொழி என்பதொன்று உண்டு. தானே பேசும் பேச்சு அது. பக்கச் சொல், பாற்கிளவி, தனிமொழி என்பவை அது. நெஞ்சொடு கிளத்தல் என்னும் வகையால் தன்நெஞ்சுக்குத் தானே கூறுவது, இதில் ஒருவகை. உறுப்பு உடையது போலவும், உணர்வு உடையது போலவும், மறுத்துக் கூறுவது போலவும் கற்பித்துக் கொண்டு கூறுதல் இது. இனிச் சொல்லாடுதல் இல்லாதவற்றைச் சுட்டி அவை செய்யாதனவற்றைச் செய்தனவாகக் கூறுதலும், பிறர் கொண்ட துயரைத் தான் கொண்ட பிணிபோலச் சார்த்திக் கூறுதலும் தலைவன் தலைவியர் ஒருபாற்சொற்களாகும் (1142). நற்றாய் செவிலித்தாய் ஆயோர்க்கும் தனிச்சொல் வழக்குண்டு (1145). தலைவன் தலைவியர் காணுதற்கு அரிய நிலை உண்டாகிய காலத்து அவர்களுக்குள் கனவுக் காட்சியும் உண்டு. உடன்போக்கு நேரிட்ட காலத்து நற்றாய் செவிலித்தாய், கனவு காணலும் உண்டு (1143, 1144). வாழ்வின் உயிர் நிலையாம் அன்பு நாணம் மடம் ஆகிய மூன்றும் தலைவன் தலைவி நற்றாய் செவிலி என்னும் நால்வர்க்கும் உரியவை (1147). தன் தலைவனைப் பிரிந்த தலைவி பசலையடைந்து வருந்தும் போது தன் உறுப்புகளும் தலைவன் பிரிந்ததை அறிந்தன போலக் கூறலும் வழக்கம் (1148). பிரிவால் மெலிந்த போதும் இவற்றுக்கு என்ன ஆயின என்பாளே அன்றித் தலைவன் இருக்கும் இடத்தைத் தலைவி தேடி அடைவது இல்லை (1149). தலைவன் ஒரு பக்கமாக வருங்கால் தன் நெஞ்சுக்குக் கூறுவது போல் தலைவன் கேட்கக் கூறுவதும் உண்டு (1150). தலைவன் உண்மையை மறைக்கும் போதும், தலைவிக்கு விருப்பு மிகுந்த போதும் அல்லாமல் மற்றைப் போதுகளில், கண்டு கொள்ளாதவ ளாகவே தலைவி அமைவாள் (1151). தலைவன் தலைவியர் காதலை உணர்த்தத் தக்க பொழுது இது என அறிந்த பின்னரே, தோழி அறத்தொடு நிற்றலை (காதல் வெளிப்படுத் துதலை) மேற்கொள்வாள் (1152). தலைவனுக்குள்ள எளிமை, பெருமை, விருப்பமிகுதி ஆகியவற்றை உரைத்தல், பிறர் கூறுவது கேட்டு அது பற்றிக் கருத்துரைத்தல், இடையூறு உண்டாகிய போது இடைவந்து தீர்த்தல், தாமே எதிர்ப்பட்டுக் காணல், மெய்யாக நிகழ்ந்தது இதுவெனல் என்னும் ஏழுவகையாலும் தோழி களவொழுக்கத்தை வெளிப்படுத்துவாள் என்று புலமையர் கூறுவர் என்பார் தொல்காப்பியர் (1153). தக்க இடம் வாய்த்தால் அல்லாமல் தோழி சொல்லமாட்டாள் ஆதலால், செவிலி, தலைவி நிலையை உணர்ந்து கொள்ளலும் உண்டு. ஏனெனில், அடக்கம், நிலைப்பாடு, நேர்மை, கூறுவது கூறல், அறிவு, அரியதன்மை என்பவை பெண்டிர்க்கு இயல்பு என்பதால் (1154, 1155). தலைவன் தலைவியர் களவொழுக்கத்திற்கு இசைந்த தோழி, அதனைக் கற்பொழுக்கமாக்கத் திட்டமிட்டே துணிவான சில செயல் களைச் செய்வாள். தலைமகன் வரும்பொழுது, வழி, காவல்மிகுதி ஆகியவற்றைக் கூறி அவற்றால் நேரும் தீமையைச் சுட்டுவாள்; அவற்றை நோக்கித் தான் மனங்கலங்கி வருந்துதலை உரைப்பாள்; சந்திக்கும் இடத்தில் உண்டாகும் இடையூற்றை உரைப்பாள்; இரவில் வருக என்பாள்; பகலில் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வாராதே என்றும் கூறுவாள்; நன்மையாகவும் தீமையாகவும் புலப்படப் பிறிதொன்றனைக் கூறுவாள்; இவையெல்லாம் தலைவன் மேல் கொண்ட வெறுப்பாலோ காதலைத் தடுக்க வேண்டும் என்னும் எண்ணத் தாலோ செய்வன அல்ல! காதல் வேட்கையைப் பெருக்கிக் கடிமணத்தை விரைந்து முடிக்குமாறு தூண்டுதல் குறிப்புகளேயாம் (1156). தேர் யானை குதிரை முதலியவற்றில் ஊர்ந்து வந்து தலைவன் தலைவியைக் காணலும் உண்டு (1158). உண்ணுதல் இல்லாத ஒன்று உண்டதாகக் கூறுதலும் அகத் தொழுக்க வழக்கமாகும். அது, பசலை பரவுதலைப் பசலை உண்டது என்பது போல்வது (1159). தலைவி வீட்டை விட்டு வெளியேற முடியாத காவல் மிக்க பொழுதில் (இற்சிறை) தலைவனிடம் தோழி, எங்கள் இல்லத்தார் பெரும்பொருளைப் பரிசமாக வேண்டியுளர் என்பது உண்டு. ஏனெனில், அவன் அவளைத் தேடி வராமல் இருக்கவும், மணமுடித்து மனையறம் காக்க வேண்டும் பொருள் தேடி வருதற்குத் தூண்டுதலாக இருக்கவும் ஆகும் (1160). ஆனால் தலைவன் பொருள் தேடச் செல்லும் வழித்துயர் பற்றிச் சொல்லவும் தவறாள் (1162). வீட்டுக் காவற்பட்ட தலைவி உயிர்நிலையாகிய அன்பு, அன்பு வழிப்பட்ட அறம், அறத்தால் அடையும் இன்பம், பெண்மைக்கு இயல் பாகிய நாணம் என்பவற்றை நீங்கி ஒடுங்கிய நிலை பழிக்கப்படுவதில்லை. ஏனெனில், அவள் செயலும் உணர்வும் ஒடுக்கப்பட்டுள்ள சூழல் அஃதாதலால் அவ்வக் காலத்து வாழும் சான்றோர் தக்கநெறி என ஏற்றுக் கொண்ட(1161)வற்றைத் தழுவிச் செய்யுள் செய்தல் முறையையாம் (1163). உலக வழக்கில் பொருந்தாதது போல் தோன்றும் ஒன்று, அகப் பொருட்கு அமைவுடையதாக இருப்பின் அதனை வழக்காக ஏற்றுக் கொள்ளல் பழியாகாது (1164). ஆனால் அப் பொருள் நாணத்தக்கதாக இல்லாத நற்பொருளாக அமைதல் வேண்டும் (1165). முற்பட்ட இலக்கிய இலக்கணங்களிலும் 'கைம்மை' 'கைம்மைத் துயர்' என்பவை இடம் பெற்றுள. மகளிராகவே விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும் போற்றப் பட்டது. கடுவனாம் ஆண்குரங்கு இறந்ததாக அதனைத் தாங்காத மந்தி, தன் இளங்குட்டியைச் சுற்றத்திடையே விட்டுவந்து பாறையில் மோதி இறக்க அதனைக் "கைம்மை உய்யாக் காமர் மந்தி" என்று புனைவு வகையாற் பாராட்டியதும் உண்டு. ஆனால், இந் நாளில் கைம்மை மணம் வரவேற்புக் குரியதாயிற்று. மனைவியை இழந்தான் கணவனை இழந்தாளை மணமுடித்துக் கொண்டு 'வாழ்வு தருதல்' 'உயரறம்' எனப் பாராட்டப்படுத லாயிற்று. இது காலங்கண்ட அறநெறி. இதனைப் போற்றுதல் - செய்யுள் செய்தல் (புலனெறி வழக்கம் ஆக்குதல்) புலமையாளர் கடன்! இவ் வகையில் பாவேந்தர் படைப்பும், அதன் பின்வரவாம் படைப்புகளும் பெருக்கமிக்கவை அல்லவா! ஆசிரியர் தொல்காப்பியர் வாழ்வியல் காப்புள்ளம் இத்தகைய எதிரது போற்றுதலை ஆணை யாக்கிச் சிறப்பிக்கின்றது என்க. அன்புப்பெருக்கால் அழைக்கும் சொல் 'எல்லா' என்பது. அச் சொல் ஆண்பால் பெண்பால் ஆகிய இருபாலுக்கும் உரிய பொதுச் சொல் ஆகும். இச் சொல்லே ஏலா, ஏலே, ஏழா, ஏடா என வழங்குவதாம். "எல்லே இளங்கிளியே" எனப் பறவைக்கும் ஆயது! 'எல்லா' ஒப்புரிமை இதுகால் பெரிதும் ஆண்பால் தழுவி நிற்கின்றது. 'யாழ' என்னும் சொல் இருபாற் குரியதாக இருந்து 'ஏழா' ஆயது என்பதும் கருதத்தக்கது (1166). பங்குரிமைச் சொத்தாக வாராதது; கொடை புரிந்தாலும் கொடுத்த வரை விட்டுச் செல்லாதது; செயல் திறனால் தங்கவைக்க முடியாதது; பிறரால் கையகப் படுத்திக் கொள்ளவும் முடியாதது; அத்தகு பொருளை ஒருவர் உரிமைப் பொருளாகக் கொள்வது போன்றது, தலைவியின் உறுப்புகளைத் தோழி தன் உறுப்புகளாகக் கொண்டு உரைப்பது; உரிமையில்லாதது அது எனினும், பொருந்திவருதல் அக நூல்களில் உண்டு. ஆதலால், அதனைப் போற்றிக் கொள்ளல் கடன் என்கிறார் (1167). "என்தோள் எழுதிய தொய்யில்" என்பது தலைவி தோளைத் தன் தோளாகக் கருதித் தோழி சொல்வதாம் (கலித். 18). ஓரிடத்துக் கூறும் தலைவி தலைவன் என்னும் சொற்கள், அவ்விடத்துள்ளாரை அன்றி, எவ்விடத்துள்ளார்க்கும் உரியவையாய் வருதலே வழக்கமாகும். இன்னான்தான், இன்னாள்தான் என்று குறித்துக் கூறப்படாமல் உலகத்துள்ள ஒருவன் ஒருத்தி என்பார் எவர்க்கும் உரிமையுடையது எனத் தெளிவித்தார் (1168). உயிர்க்கெல்லாம் பொதுப் பொருளாய் அமைந்தது இன்பம் என்பதை, "எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்" என்கிறார் (1169). அமர்தல் = தங்குதல்; நெஞ்சத்துத் தங்குதல்; மேவற்று = விருப்ப முடையது. இதனால் இன்பம் உயிர்ப்பொது என்றார். ஏனை அறம் பொருள் என்பவை மாந்தர்க்குரியவை என்பது குறிப்பாகக் கூறப்பட்டது. மற்றும் காதல் காமம் என்பவையோ எனின் உயிர்ப் பொதுமை விலக்கி ஆடவர் பெண்டிர்க்கே உரிமைப்படுத்தப்பட்டது. குறிஞ்சி புணர்தல்; முல்லை இருத்தல் என்பன முதலாக ஒழுக்கம் சொல்லப்படும் என்றாலும், அவை அந் நிலத்திற்குச் சிறப்பே யன்றி, மற்றை நிலத்து நிகழாதவை அல்ல. நானிலத்திற்கும் பொதுவாக அமைந்தவையே யாம். ஆதலால், ஊடல் என்னும் உரிப்பொருள் மருதம் ஒன்றனுக்கே அமைந்தது இல்லை; மற்றை நிலத்தவர்க்கும் உண்டு; அவ்வூடல் தீர்ப்பாரும் அவண் உண்டு என்பாராய், "பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே நிலத்திரி பின்றஃது என்மனார் புலவர்" என்றார். நால்வர் = நானிலத்தவர். 'நால் வருணத்தவர்க்கும்' என்று வழக்கம் போல உரைகண்டனர் பழைய உரையாசிரியர்கள் (1170). நிலமக்கள், தலைமக்கள், அடியோர், வினைவலர் ஆகிய நால் வகையார்க்கும் எனக் குறிப்பு எழுதுவார் இளவழகனார். தலைவிக்கு உடன்போக்குக் கொள்ளவேண்டும் என்றும், திருமணம் நிகழ்தல் வேண்டும் என்றும் ஏற்படும் உந்துதல்களை "ஒருதலை உரிமை வேண்டியும்" என்னும் நூற்பாவில் கூறுகிறார் ஆசிரியர் (1171). உறுதியாக இல்லற வாழ்வு மேற்கொள்ளல் வேண்டும் என்னும் நிலையிலும், 'வினையே ஆடவர்க்கு உயிர்' ஆதலால், அது குறித்துப் பிரிவு நேரும் என்னும் அச்சம் ஏற்பட்ட நிலையிலும், அம்பல் அலர் என்பவற் றால் களவொழுக்கம் வெளிப்பட்டுப் போகும் என்னும் அஞ்சுதல் உண்டாகிய நிலையிலும், தன்னைத் தலைவன் காண வருங்கால் ஏற்படும் இடையூறு பற்றி எண்ணிய நிலையிலும் தலைவிக்கு உடன்போக்குப் பற்றியும் மணங்கொள்ளல் பற்றியும் உந்துதல் உண்டாகும். சூழலால் உண்டாம் எண்ணங்கள் செயலூக்கியாகத் திகழும் அடிப்படையை விளக்கியது இது. எவ்வொரு வினைப்பாட்டுக்கும் சூழலும் எண்ணமும் தூண்டலாய் அமைந்து துலங்கச் செய்யும் என்னும் வரையறை நல்ல தெளிவுறுப்புச் செய்தி. வாழ்வுக்குத் தேவையான இரக்கம் எப்பொழுது உண்டாகும் எனின் ஒருவர் கொண்ட வருத்தத்தைத் தானும் உணரும் போதேயாம். நோவற்க நொந்தது அறியார்க்கு என்பது வள்ளுவம். "துயரத்தை அறிந்து கொள்ளாதவர்க்குத் துயரை உரையாதே" என்பது அது. இரக்கம் உண்டாக்கும் அருள் வாழ்வு துயரம் கண்டபோது ஏற்படுவது ஆகலின், "வருத்த மிகுதி சுட்டும் காலை உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம்" என்றார் தொல்காப்பியர் (1172). வாழ்வின் வளர்நிலை இன்புரை கேட்ட லினும் துன்புரை கேட்டு அருள்வதிலேயே உள்ளது என்பது அருமை மிக்கது. ஊடற் போதில் தலைவி உயர்வு விளக்கமாம். அதேபொழுதில் தலைவன் பணிவும் விளக்கமாம் (1173). அவ்வூடற் பணிவு இல்லையேல் கூடலின்பம் கொள்ளான்! "மகளிர் ஊடல் தணிக்கவும் பணியேன்" என்பது இல்லறத்திற்கு ஏற்காத செயல். கற்பொழுக்கத்தின் போது தலைவன் தலைவியர் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்வதை விலக்கார்; புகழ்தல் இல்லறம் சிறக்க வாய்ப் பாம் என்றது இது (1174). முன்னே உரைத்த உள்ளுறை உவமம் போல இறைச்சி என்ப தொன்றும் அகப்பொருளில் இடம் பெறும். இறைச்சி என்பது கூறும் பொருளுக்கு அப்பாலாய் அமைவது. "இறைச்சி தானே பொருட்புறத் ததுவே" என்பது அதன் இலக்கணம். சொல்ல வேண்டிய கருத்துக்கு வேறாக அடைமொழி அமைவில் நின்று பயன்செய்வது. 'பொருட்புறத்ததுவே' என்பதற்கு 'உரிப்புறத் ததுவே' என்பது இளம்பூரணர் பாடம். பொருட் புறத்ததுவே என்பது நச்சினார்க்கினியர் பாடம். இறைச்சியை ஆராய்ந்து பார்த்தவர்க்கு வெளிப்படக் கூறும் பொருளுக்குப் புறத்ததாகிய பொருள் உள்ளமை புலப்படும் என்பதை, "இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே" என்பார் (1176). அன்பு கொள்ளத் தக்க கருத்துகளைக் கருப்பொருள்களின் உரைப் பொருளாகக் காட்டித், தலைவி வருந்தும் போது வற்புறுத்தித் (தோழி) தெளிவு செய்தல் 'வன்புறை' எனப்படும் (1177). தலைவியைத் தலைவன் பாராட்டின் அவளுக்கு இருவகையில் அச்சம் உண்டாகும். ஒன்று, பொருள் தேடுதற்குப் புறப்படுவனோ என்னும் அச்சம். மற்றொன்று, செயல் மேற்கொண்டு பிரிவனோ என்னும் அச்சம். இரண்டுமே பிரிவச்சமாம் (1178). தலைவி அயலாள் ஒருத்தியைப் பாராட்டினால் உள்ளே ஊடல் உண்டு என்பதன் வெளிப்பாடு அது என்பர் (1179). பிறள் ஒருத்தி இத்தகையள் எனத் தலைவி பாராட்டின், அது பற்றித் தலைவன் குறிப்பறிவதற்குரிய வழியுமாகும் (1180). தலைவன் குறையை அயல் பெண்டிர் உரைக்கும் போதும் தானே உணரும் போதும் உடனே இடித்துரைக்காமல் அவன் அன்பு கெழும நிற்கும் போதும் ஊடி நிற்கும் போதுமே கூறுவள். கூறுவதைக் கூறினாலும் கூறுதற்கு இடமும் காலமும் அறிந்து கூறுதலே கூறுதல் பயன் செய்யும் என்னும் உளநிலை உரைத்தது இது. இடித்துரை கூறுவாரும் அறிவுரை கூறுவாரும் எண்ணிப் போற்ற வேண்டிய குறிப்பு ஈதாம் (1181). குறித்த காலம் கடக்கு முன்னரே அக்காலம் கடந்து விட்டதாகக் கூறுதல் மடமை, வருத்தம், மயக்கம், மிகுதி என்னும் இந் நான்கனாலும் ஏற்படும். தன்னிடம் மன்றாடி நின்ற தலைவனைத் தோழி அப்பால் படுத்துதல் அன்றி மெய்யுரைத்தல், பொய்யுரைத்தல், நயந்துரைத்தல் எனப் பலவகைப் 'படைத்து மொழி'களாலும் நலம் பேணிக் காப்பாள் (1183). புகழ்ந்து கூறுதலை மறுத்துக் கூறுதலும், ஐயுற்றுக் கூறுதலும் தலைவனுக்கு உண்டு. (அதனைத் தலைவி கொள்ளாள்) (1184). துன்பம் எதுவும் நேராமல் காத்தல் தன் கடமை ஆதலால் தோழிக்குத் துணிந்துரைக்கும் உரை உண்டு (1185) தலைவன் தலைவியரைப் புகழ்ந்துரைக்கும் நிலையும் உண்டு (1186). ஊடல் தீர்க்கும் வாயிலாக இருப்பவர் தம் சொல்லைக் குற்றமற்றதாய் வெளிப்படக் கூறுவர் (1187). முன்னே கூறிய உள்ளுறை என்பது, உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படும் (1188). இவையன்றி இன்பப் பொருளாகவும் உள்ளுறை வரும் (1189). மங்கலச் சொல், வசைச் சொல், மாறுபாடில்லாத ஆளுமையால் சொல்லிய சொல் என்பனவும் உள்ளுறையுள் அடங்கும் (1190) (இவற்றின் விளக்கம் உவமைப் பகுதியில் காணலாம்) தலைமக்கட்கு ஆகாக் குணங்களாம் சினம் அறியாமை பொறாமை வறுமை என்னும் நான்கும் ஏதேனுமொரு காரணத்தால் அவர்களொடு தொடர்பு படுத்திக் கூறுதல் உண்டு (1191). தோழி தலைவியை 'அன்னை' எனலும், தலைவி தோழியை 'அன்னை' எனலும் இருவரும் தலைவனை 'என்னை' எனலும் பழமை யான மரபினதாம். சொல்லாலும் எழுத்தாலும் வெளிப்படாத உலகியல் முறை என்பர் புலமையர் (1192). ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என்பவை இத்தகையவை என்பது கொண்டு மனத்தால் கொள்ளுவதை அல்லாமல் வேறுவகையால் வெளிப்படக் காட்ட இயலாதவையாகும். "நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட லாகாப் பொருள என்ப" என்பது இதன் முடிநிலை (1193). இமையவர் உலகம், கடலொலிக்கும் உலகம் என எவ்வுலகம் எனினும், ஒப்பு உரு முதலியவை இல்லாத காலம் இல்லாமையால் சொல்லைச் சொல்லிய வகையாலே பொருள் அறிந்து கொள்வர் என்பதாம். மக்கள் மொழி சொற்களாக இவை இருப்பதால் எவரும் தாம் கேட்டுணர்ந்த வகையால் பொருள் கண்டு கொள்வர். வழக்குச் சொல்லாக இருப்பவற்றை விளக்க வேண்டுவதில்லை என்பதால் ஒரு சொல் வழக்கிழந்தால் பொருள் விளக்கமும் இழந்துபோம் என்னும் மொழியியல் முறையால் இப்பொருளியலை நிறைவித்தார் ஆசிரியர். அது, "இமையோர் தேஎத்தும் எறிகடல் வைப்பினும் அவையில் காலம் இன்மை யான" என்பது (1194). புறத்திணை அகத்திணையை அடுத்து ஆசிரியரால் வைக்கப்பட்ட புறத்திணை பற்றி நாம் கருதலாம். அகம் புறம் என்பவை முரண்பட்டவை அல்ல. வாழ்வின் இருபக்கங்கள் அவை. "அகங்கை ஏழு எனின், புறங்கையும் ஏழு" என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் நற்கிழமை காட்டி உரைத்த விளக்கம் இதனைத் தெளிவாக்கும். பிறவிப் பேறு அக வாழ்வால் அமைந்தது; அதனைச் சிறப்பிக்கவே இல்வாழ்வு கொண்டது; அவ் வாழ்வுக்கு, இன்றியமையாத் துணைப் பொருளாக அமைவது புறவாழ்வு. இன்னும் எண்ணினால், அகவாழ்வு அமைந்து திகழ, அவ்வப்போது மேற் கொள்ளும் முயற்சி வாழ்வே, புறவாழ்வாகும் என்னலாம். அகவாழ்வு சிறக்க வேண்டுவதாம் பொருள் தேடல், அறம்புரிதல், காவல் கடன்புரிதல், சந்து செய்தல், கலைமேம்படுதல், துறவுமேற்கொள்ளல் என்பன வெல்லாம் புறவாழ்வுப் பகுதியேயாம். போரும் கொடையும் புகழும் போற்றலும் எதற்காக, அகவாழ்வு சிறக்கவே. அகச் சிறப்பே பாரகச் சிறப்பின் அடிமூலம் - நிலைக்களம் - எனக் கண்ட நம் முந்தையர் வகுப்பு இது. அகத்திற்கு, (வெளிப்பட அறியும் வகையில்) நான்கியல்களை (அகத்திணை களவு கற்பு பொருள்) வகுத்த ஆசிரியர், புறத்திணை என ஒன்றனை வகுத்ததை எண்ணல் சாலும். மேலும், மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு என்னும் நான்கியல்களும், அகம், புறம் ஆகிய இரு பொருள்களுக்கும் பொதுமையாயவையே என்பதையும் எண்ணலாம். ஏழுதிணை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை பெருந்திணை கைக்கிளை என்னும் அகத்திணை ஏழுக்கும் முறையே, வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி பாடாண் என்னும் ஏழும் புறத்திணைகளாகும். குறிஞ்சி முல்லை என்பவை எவ்வாறு மலர்ப் பெயர்களோ, அவ்வாறே வெட்சி முதல் காஞ்சிவரை மலர்ப்பெயர்களே. 'பாடாண்' என்னும் ஒன்று மட்டுமே, பாடு புகழ் கருதிய திணைப் பெயராம். தமிழர் வாழ்வாகிய அகம் புறம் என்னும் இரண்டும் பூவால் குறியீடு பெற்றமை, இயற்கையொடு தழுவிய சீர்மை வெளிப்படுத்தும். ஒரு பெண் பருவம் உறுதல் 'பூப்பு' எனவும், ஓர் ஆண் பருவமுறுதல் 'அரும்புதல்' எனவும் வழங்கும் மாறாவழக்குக் கொண்டும் உணரலாம். "மலரினும் மெல்லிது காமம்" என்பதும், "மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்பதும் வள்ளுவங்கள். அகக் காதல் எவ்வாறு அறத்தொடக்கம் உடையதோ அதுபோல், புறவாழ்வும் அறத்தொடக்கம் உடையது என்பது காட்டுவது வெட்சித் திணை. அது வெட்சி என்னும் வெண்ணிறப் பூவை அடையாளமாகக் கொண்டது. வெட்சி பகைவரொடு போரிடத் தொடக்கம் செய்வதே வெட்சித் திணை. அது, பகைவர் ஆக்களைக் கவர்ந்து வருதல் வழியாகப் போர்த் தொடக்கம் செய்வதாகும். அஃது, அறத்து வழி நிகழும் என்பதை, 'ஆதந்து ஓம்பல்' என்பார். வெட்சியின் இலக்கணம், "வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்" என்பது (1003). வீரர்தாமே வேற்றவர் இடத்திற்குச் சென்று, ஆக்களைக் கவர்ந்து வருவராயின் அது கூடா ஒழுக்கமாகிய களவாகிவிடும். அக் களவன்று என்பாராய், 'வேந்து விடு முனைஞர்' என வேந்தன் ஏவல் வழிச் செல்லும் வீரர் என்றார். அவர் செய்யும் செய்கை கொடுமைப்பட்டது அன்று என்பாராய், 'ஆதந்து ஓம்பல்' என்றார். ஆக்களைக் கவர்ந்து வருங்கால் புல் கண்ட இடத்து மேயவிட்டு, நீர் கண்ட இடத்துக் குடிக்க விட்டு, நிழல் கண்ட இடத்துப் படுக்க விட்டு, ஓட்டி அலைக்காமல் மெல்லென நடத்திவருதல் என்பது விளங்க, 'ஆதந்து ஓம்பல்' என்றார். உயிரோம்பல், உடலோம்பல், விருந்தோம்பல் முதலாம் ஓம்பல்களை எண்ணுக. "ஆவிற்கு நீரூட்டுவதை, அயலாரை ஏவிச் செய்யாமல், தாமே செய்தல்தான் தகவு" என்னும் வள்ளுவம். வீடு கட்டியவர், தம் கண்காணிப் புக்கு மட்டுமன்றி, வளமாகவும் வாழ்வாகவும் காக்கத்தக்க ஆவைக் காக்கவே, பக்கத்தே மாட்டுத் தொழுவம் அமைத்தனர். 'மாடு' என்பது, பக்கம் என்னும் பொருளொடு, செல்வம், பொன் என்னும் பொருளும் கொண்டமை இதனாலேயே ஆம். 'தொழுகை'க்கு உரியதாக இருந் தமையால்தான், ஆன் உறைவிடம் தொழு 'தொழுவம்' என்னும் பெயர் களையும் கொண்டதாம். தமிழர் வாழ்வொடு இரண்டறக் கலந்த அப்பண்பாடே 'பொங்கல் விழா'வெனப் பொலிவுற்றுப் போற்றப்படுவதாம் 'மாட்டுப் பொங்கல்' என்பது நாடறி செய்தி. ஆக்கள் உடலை உராய்வதற்காகவே, வழியில் "ஆவுருஞ்சு குற்றி" நட்ட செய்தி நயமிக்கது! ஆக்களைக் கவர்ந்து வருதல் போர்க்கு அடையாளமாவதொடு, அதனைப் பேணும் அறமுமாம் என்பதனால், போர்க்களத்தில் இருந்து அகற்றப்படுவனவற்றுள் தலையிடம் பெற்றது ஆவேயாம் (புறம். 9). ஆநிரை கவரச் செல்லும் படைகள் ஆரவாரித்தல், புறப்பட்டவர் ஊர்ப் பக்கத்தே கேட்ட விரிச்சி என்னும் சொல், பகைநாட்டு ஒற்றர் அறியாவாறு புகுதல், அயலார் அறியாவாறு அவர் நாட்டு நிலையைத் தம் ஒற்றரால் அறிதல், பகைவர் ஊரைச் சுற்றி வளைத்துத் தங்குதல், தம்மைத் தடுக்கவந்த பகைவரை அழித்தல், ஆநிரையைக் கவர்தல், அதனைத் தடுத்ததற்கு வந்தாரை விலக்கி மீள்தல், கவர்ந்த ஆக்களைக் கவலையின்றிக் கொண்டு வருதல், தம்மை எதிர்பார்த்திருக்கும் தம்மவர் மகிழத் தோன்றுதல், ஆக்களை ஊர்க்குக் கொண்டு சென்று நிறுத்துதல், அப் பணியில் ஈடுபட்டவர்க்குப் பங்களிப்புச் செய்தல், செயல்முடித்த மகிழ்வில் களிப்புறுதல், கலைவல்லார்க்குப் பரிசு வழங்குதல் என்னும் பதினான்கு துறைகளை உடையது வெட்சித் திணை என்பார் ஆசிரியர் (1004). மேலும் எடுத்த செயலை முடிக்கவல்ல வீரர்தம் குடிச் சிறப்பு, வெற்றித் தெய்வமாகப் போற்றப்படும் கொற்றவை வழிபாடு என்பனவும் வெட்சி சார்ந்தனவே. வேலன் வேடம் பூண்டு ஆடும் மருளாடி, காந்தள் மாலை சூடி ஆடும் வெறியாடல், இன்னாரைச் சேர்ந்த வீரர் இவர் என அறிதற்குப் பனை, வேம்பு, ஆத்தி என்னும் (சேரர் பாண்டியர் சோழர்) மாலை சூடி ஆடிய கூத்து, வள்ளி என்னும் கூத்து, புகழ்மிக்க வீரக் கழல் அணிதல், எதிரிட்டு நின்று போரிடும் வேந்தனை உன்னமரத்தொடு ஒப்பிட்டுக் கூறும் உன்னநிலை, மன்னனை மாயோனொடு ஒப்பிட்டுச் சொல்லும் பூவை நிலை, போரில் பகைவரை ஓட்டல், பசுக்களை மீட்டித்தருதல், வேந்தன் சிறப்பு உரைத்தல், தன்வீறு தோன்ற வஞ்சினம் கூறல் என்பவை பசுக்களை மீட்டிச் செல்வார் செயல்கள். மற்றும், வரும் படையைத் தடுத்தல், வாட்புண்பட்டு வீழ்தல் எனப்படும் பிள்ளை நிலை; வாட் போரிட்டு வென்றவனுக்குப் பறை முழங்கப் பரிசு வழங்கிய பிள்ளையாட்டு, களப்போரில் இறந்துபட் டார்க்கு நினைவாகக் கல்லெடுத்தல், அதனை நீராட்டுதல், கல் நடுதல், அதனைச் சூழக் கோயில் எடுத்தல், வழிபடுதல் என்று சொல்லப்பட்ட கற்கோள் நிலை என்பனவும் வெட்சியே. பசுக்களைக் கவர்தல் போன்றதே, மீட்டுக் கவர்ந்து செல்லலும் ஆதலால், இரண்டையும் வெட்சியாகக் கொண்டார் தொல்காப்பியர். ஆனால், பசுக்களை மீட்டுச் செல்லுதலைக் 'கரந்தை' எனத் தனித் திணை ஆக்கி மொழிந்தனர் பின் நூலினர் (பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை). "வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம்" எனக் கொண்டனர் அவர். ஆனால், எழுதிணை என்னும் வரம்புகடத்தலும், அகப்புறம், புறப்புறம் எனப் பொருந்தாப் பிரிவுவகை காட்டலும் நேரிட்டனவாம். நிரை கவர்வார்க்கும் மீட்டுவார்க்கும் அடையாளம் வேறு காட்டவே முன்னவர் வெட்சியும், பின்னவர் கரந்தையும் (கருநிறப் பூ) - சூடியதென்க. காதல் ஒழுக்கம் அனைத்திற்கும் குறிஞ்சி முதலாதல் போலப் புறத்திணைக் கெல்லாம் முதலாவது வெட்சி என்றும், இரண்டு திணைகளும் களவில் நிகழ்வன என்றும், "வெட்சி தானே குறிஞ்சியது புறனே" என்பதற்கு ஒப்புக் காட்டுவார் நாவலர் பாரதியார். இப் பகுதியில் கூறப்பட்ட வெட்சிப் போரில் இறந்து சிறப்புற்றவர் நடுகல் இந்நாளும் பலவாகக் காணலும், அவற்றில் அவர் பெயரும் பெருமையுமாகிய எழுத்துப் பொறித்திருத்தலும், 'ஆவட்டி' என ஊர்ப் பெயர் இருத்தலும் எண்ணத் தக்கவை. இதில் வரும் "காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல்" என்பனவே காட்சிக் காதை, கால்கோட்காதை, நீர்ப்படைக்காதை, நடுகற்காதை, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை எனச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டமாக உருக்கொண்டதாம். வஞ்சி முல்லை என்னும் அகத்திணைக்குப் புறமாக அமைந்தது வஞ்சித் திணையாகும். ஆடவர் பிரிதலும், மகளிர் அவரை எதிர் நோக்கி இல்லில் இருத்தலும் இரு திணைக்கும் பொதுவாதலால், முல்லைக்கு வஞ்சி புறனாயிற்றாம் (1007). மண்ணைக் கவரும் எண்ணமிக்குடைய வேந்தன் ஒருவனை, அவன் அஞ்சுமாறு மற்றொரு வேந்தன் படையெடுத்துச் சென்று வென்றடக்கு வதே வஞ்சித்திணை யாகும். "எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே" என்பது நூற்பா (1008). துறை போரிடச் செல்லும் படையின் எழுச்சி, பகைவர் நாட்டைச் சூழ்ந்து தீயிடல், விளங்கிய படையின் பெருமை, வேந்தன் கொடுக்கும் கொடைச் சிறப்பு, பகையை நெருங்கி அழித்த வெற்றி, பெற்ற பரிசு விருது (மாராயம்) பற்றிய பெருமை, தம்மைப் பொருட்டாக எண்ணாமல் போரிட்ட திறம், பெருகிவரும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் கற்சிறைபோல (அணை போல) எதிரிட்டு வரும் படையைத் தனித்து நின்று தடுக்கும் பெருமிதம், படைஞர்க்கு விரும்பும் வகையால் உணவு வழங்கும் பெருஞ்சோற்று நிலை, வெற்றி பெற்றவரிடத்துத் தோன்றும் பொலிவு, தோற்றவர்க்கு உண்டாகிய அழிவு, பகைவர் நாட்டின் அழிவுக்கு வருந்திப்பாடும் சிறந்த வள்ளைப் பாட்டு, அழிக்க வரும் படையைத் தடுத்து நிறுத்திய வீரரைத் தழுவுதல் ஆகிய தழிஞ்சி என்னும் பதின் மூன்று துறைகளையுடையது வஞ்சித் திணை (1009). குறிப்பு காலம் மாறியது; கருவி மாறியது; கருத்தும் மாறியது; எனினும், இற்றைப் போர்களிலும் இத்துறைகள் சொல்லும் முறைகள் நிகழவே செய்கின்றன. மாராயம் என்பது வேந்தனால் பெற்ற விருது. அவ்விருதுப் பெயரே பெயராக விளங்கும் குடும்பங்கள் இன்றும் உண்டு. கற்சிறையாவது அணை. கல்லால் தடுத்து நிறுத்துதல் வழக்கமே அணைக்கட்டு; 'கல்லணை' கரிகாலன் வைத்துச் சென்ற புகழ் எச்சம். வள்ளை என்பது உலக்கைப் பாட்டு. வேந்தனைப் பாடும் புகழ்ப்பாட்டு; மகளிர் பாடிக் கொண்டு உலக்கை குற்றும் பாடல்; சிலம்பில் வள்ளைப் பாட்டு உண்டு. தழுஞ்சி என்பது தழுவுதல். நல்லதும் அல்லதும் நேர்ந்தபோதில் உரிமையுடையார் தழுவிக் கொள்ளுதல், ஆடல் களத்தில் வெற்றி பெற்ற வீரர்களைப் பார்வையர், ஓடிவந்து தழுவுதல் என்பன எண்ணலாம். உழிஞை உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் (1012). அரணை முற்றுகை இடுதலும் பற்றுதலும் என்பவை உழிஞைத் திணை. ஊடல் கொண்ட இல்லாள் கதவடைத்து ஊடியிருத்தலும், வாயில்கள் வேண்டிநின்று கதவைத் திறக்கச் செய்து உட்புகுதலும் ஆகியவை உழிஞையொடு ஒப்பதாகலின் உழிஞை மருதத்திற்குப் புறனாயது. உழிஞைத் திணை எட்டுவகை யுடையது. பகைவர் நாட்டைப் பற்றிக் கொள்ளுமுன்னரே வெற்றியுறுதியால் விரும்பியவர்க்கு விரும்பியதைத் தருதல், சொல்லிய வண்ணமே செய்து முடிக்கும் வேந்தன் திறம், வலிய மதில்மேல் ஏறிப் போரிடல், பகைவர் ஏவும் அம்புகளைத் தடுக்கும் தோற்படை (கேடயம்) மிகுதி, அரணின் உள்ளே உள்ளவன் செல்வச் சிறப்பு, அதனால் தன்னொடு போரிட வந்த புறத்தோனை வருந்தச் செய்தல், தான் ஒருவனாக வெளிப்பட்டு வந்து போர் அடர்த்தல், புறத்தோன் தாக்குதற்குக் கலங்க வேண்டாத மதில் வன்மை என்பவை அவை (1013). இவ்வெட்டனுள் முன்னவை நான்கும் மதிலை முற்றுவோன் பற்றியவை. பின்னவை நான்கும் மதிலைக் காப்போன் பெற்றியவை. முற்றுவோனும் காப்போனும் கொள்ளும் போர் நிலை பன்னிரு துறைகளாகக் கூறுவார் ஆசிரியர் (1014). தும்பை தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாகும் (1015). இரங்குதல் இருதிணைக்கும் பொதுமையானது. களப் போர் அழிவு அத்தகையது ஆகும். வீரத்தை வெளிப்படுத்துதலே நோக்கமாகக் கொண்டு போரிட வந்தவன் திறத்தை அழிக்கும் சிறப்பினது தும்பை (1016). நிலம் கவர்தலோ, மதில் பற்றுதலோ கருத்தாகக் கொள்ளாமல் வீரத்தை வெளிப்படுத்தும் ஒன்றே நோக்கமெனக் கொண்டு போரிட வந்தவன் ஆதலின் அவனை, "மைந்து பொருளாக வந்த வேந்தன்" என்றார் ஆசிரியர் (1016). மகனுக்கு 'மைந்தன்' எனப் பெயரிட்ட நோக்கு நாம் எண்ணத்தக்கது. மைந்து = வீரம். நெருங்கிச் செல்ல இயலாத வீரன்மேல் பகைவர் அயலேநின்று ஏவிய கணைகளும் வேல்களும் உடலைச் சூழ்ந்து மொய்த்துக் கிடத்தலும், உயிர் பிரிந்த பின்னரும் அவ்வுடல் நிலத்தில் படாமல் துள்ளி நிற்றலும் என்னும் இரு திறப்பட்ட சிறப்புகளையுடையது தும்பை (1017). தும்பைத் திணை பன்னிரு துறைகளை உடையது. இவற்றுள், தாக்குவானும் தாக்கப்படுவானுமாகிய தலைவர் இருவரும் களத்தில் ஒருங்கே இறந்து படுதல் என்பது ஒருதுறை. அது, 'இருவர் தபுதி'. 'எருமை மறம்' என்பது ஒருதுறை. அது, மறவன் ஒருவன், தன் தலைவன் படை உடைந்து பின்னிடும் நிலையில் உள்ளே புகுந்து தான் ஒருவனாகத் தடுத்துக் காப்பது. அவன் செயல் அஞ்சாத் தறுகண் அமைந்த எருமையின் இயலை ஒத்திருத்தலால் 'எருமை மறம்' எனப்பட்டது. அவன் எருமை மறவன் எனப்பட்டான். எருமை விருது பெற்றான் ஒருவன் பெற்ற ஊர் எருமையூர். அது, மகிச ஊர் என அயன்மொழியாளரால் மாற்றி மறைக்கப்பட்டு, இன்று கருநாடக மண்ணில் மைசூராக உள்ளது. ஒருவனை எருமை எனல் பழநாளில் பெறற்கரிய பெருமை. இன்றோ எள்ளல் பொருள்! ஏன்? வழக் கொழிவே காரணமாம். இத்துறையை, "ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமை" என்கிறார். கூழையாவது பின்னணிப்படை. தும்பையின் இன்னொரு துறை, தொகைநிலை. அது, "இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலை" எனப்படுகிறது. "எவரும் வாழாமல் ஒழிவது தான் வாழப் பிறந்ததன் நோக்கமா?" என அசைக்கும் துறை இது! போர் முடிவு சிந்திக்கவே வைக்கிறது; ஆனால், அச் சிந்தனை களத்தில் இருந்து கழிந்த உடனே கழிந்து போவதுதான் மீளமீளப் போராட்டத் தொடர்! வாகை வாகை என்னும் புறத்திணை பாலை என்னும் அகத்திணைக்குப் புறனாவது (1019). அகத்திணையில் நிலமிலாப் பாலை பொதுவாக இருத்தல் போலப் புறத்திணையில் எல்லாத் திணைக்கும் பொதுமையானது வாகையாகும். தாம் கொண்ட குறைவிலா அறிவு ஆற்றல் முதலியவற்றைப் பிறரினும் மிகுத்துக் காட்டிக் கூறுவது வாகைத்திணை என்பர். அது, "தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப" என்பது. தாவுஇல் = தாழ்வு - குறைவு இல்லாத. பாகுபட - மிகுதிப்பட. தமிழ்நெறி கூறவந்தவர் தொல்காப்பியர். அவர் அயல்நெறி கூற நூல் செய்தார் அல்லர் என்னும் அடிப்படையை உணர்ந்தே தொல்காப்பியத் திற்கு உரை, உரை விளக்கம் புரிதல் வேண்டும். வாகைத் திணையில் வரும் ஒரு நூற்பா பெரிதும் எண்ணத்தக்கதாக அமைந்துளது. அது, "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும், பாலறி மரபின் பொருநர் கண்ணும், அனைநிலை வகையொடு ஆங்கெழு வகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்" என்பது (1012). "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்பதற்கு ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும். அவையாவன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன" என்றார் இளம்பூரணர். வேட்டல் வேட்பித்தல் என்னும் இரண்டையன்றி அவரால் சான்று காட்டப் 'பார்ப்பனப் பக்கம்' இடம் தரவில்லை. ஓதலாவது 'கல்வி' என்று கூறி, கல்வி விழுப்பம், கற்றோர் விழுப்பம், கற்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவெல்லாம் மாந்தப் பொதுநிலை அறம் கூறும் பாடல்களையே காட்டினார். எண்பொருளவாகச் செலச்சொல்லல், நுண்பொருள் காண்டல் (குறள். 424) இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் (குறள். 222) இவை பார்ப்பனப் பக்கம் என்னின், என்னதான் நாம் சொல்வது? 'இரவலர் புரவலை நீயும் அல்லை' என்ற புறப்பாட்டைப் 'பார்ப்பன பக்கம்' என்ன இளம்பூரணர்க்கு எப்படித் துணிவு வந்ததோ? ஆனால், நச்சினார்க்கினியரையோ சொல்ல வேண்டா! பார்ப்பனர் என்றதும், பருந்தெனப் பாய்ந்து எடுத்துக்கொண்டு எழுதுவதற்கே பிறந்தவர், என விரிவாக எழுதினார்: "ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறும். ஆறு பார்ப்பியல் என்னாது வகையென்றதனால் அவை தலை இடை கடையென ஒன்று மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க. அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஓத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப் படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமும் தருமநூலும் இடையாய ஓத்து. அதர்வம் வேள்வி முதலிய சடங்கு கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமே யன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின், அவற்றோடு கூறப்படா தாயிற்று. ஆறங்கமாவன, உலகியற் சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும் அவ் விரண்டையும் உடனாயும் ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம், பார்த்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம், வாராகம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சத்தமுமாம். தரும நூலாவன உலகியல் பற்றிவரும் மனுமுதலிய பதினெட்டும். இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின. இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சி நூலும், அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஓத்து. எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஓத்தாம் என்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம். இனித் தமிழ்ச் செய்யுட் கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச் சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்பும் சிறப்பின்மையும் அறிவித்தற்கு" 'பார்ப்பனப்பக்கத்து' ஓதுதலுக்குத்தான், இவையெல்லாம் எழுதி னார். மேலும், "இனிப் பார்ப்பனப் பக்கத்து வகையாவன பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்தே கற்பு நிகழ்வதற்கு முன்னே, களவில் தோன்றினானும், அவள் பிறர்க்கு உரியவள் ஆகிய காலத்துக் களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்து இருந்துழித் தோன்றினா னும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினாரும் அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன்றினா ருமாகிய சாதிகளாம். இன்னோரும் தத்தம் தொழில் வகையால் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். பார்ப்பனர் என்பதை வசைச் சொல்லாகவும், பழிச் சொல்லாகவும் கருதி அச் சொல்லைப் பிறர் சொன்னால் வெறுப்பவர், அப்பழஞ் சொல்லுக்கு உரிமை கொண்டாடல் பொருந்துமா? பார்ப்பனர், அந்தணர் என்பன வெல்லாம் பிராமணர்களாகிய எங்களையே என்பவர்க்கு இப் பகுதியை 'இனியர்' வழங்கிய படையலாக்கல் தகும்தானே! இவ் வெழுத்தின்படி, எச்சாதியேனும் தூயது எனப்பெருமை கொண்டாட முடியுமா? சாதி கெட்டதற்குப் பெயர் சாதி எனச் சாதித்தல் அறமாகுமா? சாதி என்பது விலங்குக்கும் பறவைக்கும் மீனுக்கும் உரிய 'இனப் பிரிவு' என்பது 'மரபியல்' செய்தி. இல்லாச் சாதியை உருவாக்கி, இழிவாக்கிக் காட்டியமை எச்சாதியர் சாதனை? எண்ணுவார் அறிவர். பார்ப்பனர், அந்தணர், அறிவர், அறவர், அரசர், வணிகர், வேளாளர், கொல்லர், தச்சர், மறவர், பறையர், பள்ளர், முதலி, பிள்ளை, செட்டி என்னும் எப்பெயரும் சாதிப் பெயர் இல்லை. புலவர் ஆசிரியர் கணியர் எனச் சாதியர் இல்லாமைபோல், பார்ப்பார் என்பதும் சாதிப் பெயர் இல்லை. பிராமணர் அவர் என்னின், அவர் தூய தமிழ்ப் பெயரைக் கொள்ளார். தூய தமிழ்க் கடவுள் பெயர் சொல்லவும் சொல்லார்; சூட்டவும் சூட்டார்; சூட்டியிருப்பினும் மாற்றி வைப்பதையே வழிவழியாகப் போற்றுவார். செம்பொருட் சிவம் 'ருத்ரா' ஆவர். அம்மை 'அம்பா' ஆவார். முருகன் 'சுப்பிரமணியன்' ஆவான்; (சுப்பிரமணியன் - பிராமணனுக்கு நன்மை செய்பவன்) முருகனைச் சுப்பிரமணியனாக்கி, இருவரும் ஒருவரே என்று கூறினாலும், சுப்பிரமணியனின் மனைவி தேவயானையையும் வள்ளிக் குறத்தியையும் ஒன்றாக்க மாட்டார். ஏன்? கீழ் சாதி என இணைக்க உடன் பாடில்லை! விழிப்புடையவர்கள், பிறர் விழிக்கக் கடமை செய்தல் வேண்டும்! அஃதறம்! அந்தண்மை! ஆனால், 'விழித்தலே ஆகாது' எனத் திட்டமிட்டுத் 'தமிழே தீட்டு' 'தமிழினம் தீண்டக் கூடாத இனம்' என்று கண்மூடித் தனத்தைக் கால மெல்லாம் பெருக்கித் தமிழினமே தமிழினப் பகையாக இருக்கச் செய்துவருதல், இன்றில்லை எனினும், விரைவில் தமிழரை எண்ணிப் பார்க்கச் செய்தல் உறுதி! ஒப்பநோக்கும் உயர்குணத்தர் இவருள் இருந்திலரோ எனின், இருந்தவரும் இருப்பவரும் இக் குறைக்கு ஆட் படாத வணங்கத்தக்க பெருமையர்! அவர் என்றும் தமிழரால் போற்றப் படுபவரே அன்றிப் புறக்கணிக்கப்பட்டார் அல்லர் என்பது வரலாற் றுண்மை. இனிப் 'பார்ப்பனப் பக்கம்' யாதெனப் பார்க்கலாம். பார்ப்பனர் என்னும் பெயரை எண்ணுதல் வேண்டும். பார்த்தார் - பார்க்கிறார் - பார்ப்பார். பார்த்தனர் - பார்க்கின்றனர் - பார்ப்பனர். பார்த்தல் வழியாக ஏற்பட்ட முக்காலப் பெயர்கள் இவை. இவற்றுள் பார்ப்பார், பார்ப்பனர் பெயர்களாக வழக்கூன்றின. கணியம் பார்ப்பார், குறிபார்ப்பார், ஏடு பார்ப்பார், ஐந்திரம் (பஞ்சாங்கம்) பார்ப்பார், நாடி பார்ப்பார், கணக்குப் பார்ப்பார், சகுனம் பார்ப்பார் எனப்படுவார் வழக்கில் இல்லாமல் போய்விடவில்லையே! இப் பார்ப்பார், அறுவகைத் தொழில் பார்ப்பாராகத் தொல் காப்பியர் காலம் தொட்டே வாழ்ந்த தமிழர். அவர்கள் குருக்கள், ஓதுவார், பூசகர் (பூசாரி) பண்டாரம், பூக்கட்டி, வேளார் என்பார். குருக்கள், பூசகர் - வழிபாட்டாளர். ஓதுவார் - தேவபாணி இசைப்பார். பண்டாரம் - கோயில் பொருட்காவலர். பூக்கட்டி - நந்தவனம் பேணி, மலர் பறித்துத் தருவார்; மாலை தொடுப்பார். வேளார் - தெய்வப் படிவம் செய்வார், மண்ணீட்டாளர்; குயவர் என்பாரும் அவர். குயவர் - பார்ப்பார்; குயம் - குசம் ஆகிப் புல்லாகி, பார்ப்பாரும் ஆகியது. குசம் - தருப்பைப்புல் (அறுகு) தருப்பைப் புல்லால் வந்தவன் குசன் (லவன் குசன்). இனி, இவரையன்றித் தலைவன் களவுக்குத் துணையாய பார்ப்பனப் பாங்கன், வேள்வி செய்யாத வேளாப்பார்ப்பான், வானியல் நுணுக்கம் அறிந்த முதுகண்ணன் அல்லது கணியன் என்பாரும் அறிய வருகின்றனர். இவர்கள் எத் தொழில் செய்தாரோ, அத் தொழில் செய்த பார்ப்பார். இவருள் தொல்காப்பியர் நாளில் வாழ்ந்தவர் அறுவகைப் பார்ப்பார் ஆகலின் அவர்தம் தொழில் கருதி எண்ணினார். ஆசாரிய (கம்ம)த் தொழிலர் ஐவர் பகுப்பு இன்னும் உளதாதல் ஒப்பிட்டுக் காணத்தக்கது. 'ஐவகை மரபின் அரசர் பக்கம்' என்பது ஐவகைக் குடிவழியினராகிய அரசர் பகுதி என்பது. சேரர் சோழர் பாணடியர் என்பார் மூவேந்தரும், வேளிரும், குறுநில மன்னரும் என்பார்போல் தொல்காப்பியர் காலத்தில் அறியப்பட்ட ஐவர், தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டியனை எதிரிட்டார் பல்வகையர் ஆதல் போல், அந் நாளில் ஐந்து வகை அரச குடியினர் இருந்தமையால் அவரைக் குறித்தார். ஒரே காலத்தில் சேரர் சிலரும், சோழர் சிலரும், பாண்டியர் சிலரும் ஆட்சிக் கட்டிலில் இருந்தமை அறியவரினும், அவர் ஒருகுடியினர் ஆதலின் ஒருவராகவே எண்ணப்பட்டனர். வேளிர் போல்வாரும் அவ்வாறேயாம், 'பதினெண்குடி வேளிர்' எனல் அறிக. "இரு மூன்று மரபின் ஏனோர் பக்கம்" என்பது இவ்விரு வகையினரையும் அல்லாமல், அறுவகைப்பட்ட பிற குடியினர் பகுதி. அவர் "அறுதொழிலோர்" எனத் திருக்குறளில் குறிக்கப் பட்டவராகலாம். அவ்வறு தொழிலோர், "உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில் கற்ப நடையது கரும பூமி" (கரும பூமி = தொழில் உலகம்) என்று கூறும் திவாகர நிகண்டு. மேலே குறித்த மூன்று பகுதிகளுடன், குற்றமற்ற செயற்பாடுடைய வரும், இறப்பு நிகழ்வு என்னும் கால அறிவால் எதிரது உணரவல்லவரும், வாழும் நெறிகளை வகுத்துக் காட்டியவரும் ஆகிய அறிவர் பகுதியும், எண்வகை வழக்குடைய துறவர் பகுதியும் (நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல் எரியோம்பல், ஊரடையாமை, காட்டுணவு கோடல், வழிபாடு என்பவை துறவர் எண்வழக்கு என்பார் இளம்பூரணர். உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலில் இருத்தல், நீரில் நிற்றல், காமம் கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்தல் போல்வன என்பார் நாவலர் பாரதியார்) அறவியல் அறிந்து மறத்திறம் புரியும் போர்வீரர் பகுதியும், அத்தகையதாகிய ஒப்பற்ற பெருமிதப் பகுதியும் கூடிய எழுவகைச் சிறப்பினது வாகைத்திணை என்கிறார் தொல்காப்பியர் (1021) இவை வாகைத் திணையின் வகை. வாகைத்திணையின் துறைகளைக் 'கூதிர் வேனில் என்றிரு பாசறை' எனத் தொடங்கும் அடுத்த நூற்பாவில் கூறுகிறார் (1022). அத்துறைகளை மற வகை அறவகை என இரண்டாகப் பகுத்து இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே (9+9=18) எனக் கூறுகிறார். அவற்றுள், எட்டுவகை நுதலிய அவையம் என்பதொரு துறை. அத்தகு அவையமே திருவள்ளுவர் கூறும், பெற்றோர் தம் மக்களை முந்தியிருக்கச் செய்யும் அவையமாகும். "குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காதல்இன் பத்துள் தங்கித் தீதறு நடுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாவின்மை என்றாங்கு இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை" என்று அவ்வவையத்தைக் கூறும் ஆசிரியமாலை. அவ்வவையில் ஒருநாள் அளவேனும் தங்குதற்கு வாய்ப்பின், பலப்பல பிறப்புத் துயர்களையும் படலாம் என்பதை, "உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின் பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்ப இம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே" என்று கூறி முடிக்கின்றது. குடிப்பிறப்பு, உடை; நூல் சூடும்பூ; ஒழுக்கம், அணிகலம்; வாய்மை, ஊண்; தூயகாதல், உறைவிடம்; நடுவுநிலை, நகர்; அழுக்காறு இல்லாமை, அவா இல்லாமை, செல்வம்; இவற்றையுடையவர் தோலா (தோல்வியுறாத, பொய்க்காத) நாவின் மேலோர். இத்தகும் அவையம் ஒன்றை எண்ணிய அளவிலேயே எத்தகைய பெருமிதம் உண்டாகின்றது! அவர்கள், தகுதி இல்லார் வரினும் அவரைத் தகுதியராக்கிக் கொள்ளுதல் இன்றித் தள்ளுதல் இல்லார் என்னும் சிறப்பினர் ஆதலால்தான், எந் நிலத்தாரும் எக் குடியாரும் எத் தொழிலாரும் ஆடவர் பெண்டிர் என்னும் பால்வேறுபாடும் இல்லாமல் புலமைச் செல்வராகத் திகழ்ந்தனர் என்பது சங்கச் சான்றோர் பெயர்ப்பட்டியலைப் புரட்டிய அளவானே புலப்படும். இந்நிலை தாழ்ந்து தடம் புரண்டமை, தன்மகன், ஆசான்மகன், பொருட் கொடையன் முதலோர்க்குக் கற்பித்தலும், களி, மடி, மானி, கள்வன், பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன், தொன்னூற் கஞ்சித் தடுமாறுளத்தன், தறுகணன் பாவி, படிறன், இன்னோர்க்குக் கற்பித்தல் ஆகாமையும், கற்பிப்போன் கருத்தாகி விட்டதை வெளிப்படுத்தும் நன்னூல் கொண்டு தெளியலாம். நோயுள்ளவனுக்குத் தானே மருத்துவன் உதவி வேண்டும்! நோயனை நெருங்க விடேன் என்பான், மருத்துவன் என்னும் பெயர்க் குத் தானும் உரிமையன் ஆவனா? இதில் கூறப்படும் இன்னொருதுறை, "கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை" என்பது. கட்டாவது உறுதிப்பாடு. உரன் என்பதும் அது. "உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்" "பொறிவாயில் ஐந்தவித்தான்" என்னும் வள்ளுவங்கள் கட்டமை ஒழுக்கம் பற்றியவை. கண்ணுமை = பொருந்தி நிற்கும் தன்மை. இதற்கு அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை என்பவற்றை எடுத்துக் கூறுவார் இளம்பூரணர். வாகைத் திணையின் நிறைவுத் துறைகளாக வருவன, அருளொடு புணர்ந்த அகற்சி என்பதும் காமம் நீத்த பால் என்பதுமாம். வாகையாவது வெற்றி: வாழ்வின் வெற்றியாவது அருள்கலந்த துறவும் (அருட்பணி புரிவதற்காகவே கொள்ளும் பற்றறுதலும்) காமம் நீங்கிய தூய்மையும் ஆகும் என்கிறார். இவ்விடத்தே, நாம் முன்னர்க் கண்ட, "காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே" என்னும் கற்பியல் நிறைவு விளக்கத்தை எண்ணல் வேண்டும். "ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப" என்னும் களவியல் தொடக்கமும் நோக்குதல் வேண்டும். மேலும், ஆரா இயற்கை அவா நீத்துப் பேரா இயற்கைப் பெற்றியுறுதல் கூறும் வள்ளுவ மும் எண்ணல் வேண்டும். காஞ்சி காஞ்சி என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். பலவகைச் சிறப்புகளும் உடையதுதான் உலகம்; எனினும் அது நிலை பெறாத் தன்மையும் பொருந்தியதாகும் என்பது காஞ்சித் திணையின் பொருள். "பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே" என்பது நூற்பா (1024). புல்லுதல் பொருந்துதல். நில்லா உலகம் என்றது, அழுது அரற்றுதற்குக் கூறியதா? உலகியல் உண்மை புரிந்து, உரமாகக் கடனாற்றுதற்கும், நில்லா உலகில் நிலைபெற வாழமுடியும் என்பதைப் புகழால் நிலை நாட்டுதற் குமேயாம். "மன்னா (நிலையா) உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந் தனரே" என்னும் புறமும், "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்" என்னும் அறமும் தெளிவிக்கும். காஞ்சி, உலகியல் அறிவு முதிர்நிலை என்பதும், பெருந்திணை காமமுதிர்நிலை என்பதும் எண்ணின் புறனாதல் புலப்படும். மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை என்பது முதலாகக் காடு வாழ்த்து ஈறாகக் காஞ்சித்திணை இருபது துறைகளையுடையது. முன்னவை பத்தும் ஒப்பிலாச் சிறப்பும், பின்னவை பத்தும் நிலையாமைக் குறிப்பும் கூறுவன. மாற்றுதற்கு அரியது இறப்பு. அதனைச் சிறப்பு ஆக்குதற்குக் கூடும். அதனாலேயே இறப்பு என்பதற்குச் 'சிறப்பு' என்னும் பொருளும் நம் முந்தையர் கண்டனர். மாண்டார் என்பதும் அப் பொருளதே. சிறப்புடன் இறக்கும் இறப்பே இறப்பு (மற்றவை சாவு) என்றனர். இதனை, "மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை" என்றார் ஆசிரியர். அமர்க்களம் சென்றான் ஒருவன், அருங்கடனாற்றி அமர்க்களத்தே அமரன் ஆகின்றான். குடிமையராலும் நாட்டவராலும் தெய்வமாகக் கல்நட்டு, பீடும் பெயரும் எழுதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகின்றான். வானுறையும் தெய்வ நிலையை வையகத்தே பெற்றுவிடுகிறான். இது பெருமை; பிறர் பெறாப் பெருமை; கூற்றுக்கும் அஞ்சாத பெருமை என்பதன் வழி மொழிதலாக, "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு" எனவரும் குறளை எண்ணினால் 'பெருமை' ஆளப்பட்ட வகை தெரிந்து பொருள் புலப்பாடும் ஆகும். நிலையாமை போலிமையாகத் திணிக்கப் படாமல், அவரவரே அறிவு முதிர்வு, அகவை முதிர்வு. பட்டறிவு என்பவற்றால் தாமே உணர்ந்து போற்றும் வகையில் அமைந்தமை, தமிழியல் நெறியாம். அதனாலேயே போர்க்களம், இறப்பு, அழிவு, வெற்றி என்பவை யமைந்த புறத்திணையின் முடிநிலையாகிய காஞ்சித் திணையின் திரட்டு என நிலையாமை வைக்கப் பட்டதாம். நாலடியார், இளமை நிலையாமை யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை என்னும் நிலையாமைகளை முதற்கண் கூற, திருக்குறளோ படிமான வளர் முறையில் தொல்காப்பிய நெறி போற்றி இல்லற முதிர்வில் அருளுடைமை தொடங்கி வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல் லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என வரிசைப் படுத்தியமை உணர்ந்து போற்றத்தக்கது. கணவன் இறக்க மனைவியும் உணர்வொன்றி இறத்தல் 'மூதானந்தம்'. காதலியை இழந்தமை 'தபுதாரம்' காதலனை இழந்தமை 'தாபதம்' கணவனொடு மனைவி தீப்புகுதல் 'முதுபாலை' அமர் மேம்பட்டு அமரனாகிய மகனொடு முடியும் தாய் நிலை 'தலைப்பெயல் நிலை' எவரெவர் முடிந்து சென்றாலும் முடிந்து போகாமல் கிடக்கும் சுடு - இடுகாட்டினை வாழ்த்தும் வாழ்த்து 'காடு வாழ்த்து' இன்னவை காஞ்சித் திணைத் துறைகளுள் சில. பாடாண் திணை பாடாண் திணை என்னும் புறத்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும். கைக்கிளையின் ஒருபாற் கூற்றுப் போண்றதே, புரவலர்ப்புகழும் புகழ்ச்சி ஆதலின், அதன் புறன் ஆயிற்று. "அமரர்கண் முடியும் அறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப" என்பது பாடாண் பற்றிய இலக்கணத்தின் ஒருபகுதி. அமரர்கண் என்றதும் பழைய உரைகாரர்கள் விண்ணேறித் தேடினர். மண்ணின் மக்களுக்கு மண்ணின் மைந்தரால் தந்த மண்வள நூல் என்பதை மறந்து விட்டனர். எனினும் எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல் மிதக்கும் என்பதுபோல் நாவலர் பாரதியார் வழியாக உண்மை கண்டது தமிழ் உலகம். தொடர்ந்து குழப்புவதே குறியாகி எழுதினாரும் உளர் எனினும் தகவுரையை ஏற்றுப் போற்றினாரும் உளர் என்பது தொல்காப்பியத் தோன்றல் பேரா. இலக்குவனார், பேரா. வெள்ளை வாரணனார் முதலியவர்களால் வெளிப்பட்டது. "அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப்பிறந்த பெயராய்ப் போர் செய்தலையே தமக்குரிய தொழிலாகக் கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாம்" "போர் மறவர்பாற் சென்று அமைவனவாக முன் இவ்வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சி யீறான புறத்திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை எனப்பட்டன என்பார் நாவலர் சோம சுந்தர பாரதியார். இக் கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றுக்கும் சங்கத்தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும்" என்பார் வெள்ளைவாரணர் (தொல் காப்பியம்; தமிழிலக்கிய வரலாறு பக். 108-9). பாடாண் துறையி தம்மைச் சார்ந்தாரை உட்படுத்தி, 'வண்ணம் பாடுவம்' என்பது கண்கூடு. மக்கட் காதல் பாட்டு, தெய்வக் காதல் பாட்டாகவும் வரும் என்பதை, "காமப் பகுதி கடவுளும் வரையார்" என்பதன் வழியே சுட்டுவார் ஆசிரியர் (1029). தேவார, திருவாசக, திருவாய் மொழி முதலாம் இறைநூல்களிலும் கோவை நூல்களிலும் இக் காதல் பாக்களைக் காணலாம். குழந்தைகள் மீது கொண்ட பேரன்பால் பாடுதலும் உண்டு. ஆழ்வாரின் கண்ணன் பிள்ளைத் தமிழும், பாரதியாரின் கண்ணன் பாட்டும், பிள்ளைத் தமிழ் நூல்களும் இதன் விரிவாக்கமாம். காதல் தழுவிய இப் பாடல்களில் ஊரும் பேரும் பிறசிறப்பும் கூறுதல் உண்டு. ஏனெனில் அகப் பாடலில் அவ்வுரிமை இல்லை ஆதலால், இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார் (1031). இவையெல்லாம் வழக்கொடு கூடியவை என்பதை, "வழக்கொடு சிவணிய வகைமை யான" என்றார் (1032, 1033). கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் பண்டே இருந்தமையாலும், அவ் வாழ்த்துடன் தொடர்புடையவை சில வாழ்த்தப் பெற்றமையாலும் அவற்றைத் தொகுத்து வாழ்த்தினை நான்காக்கிக் கூறினார். "கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே" என்பது அது (1034). கொடிநிலை கந்தழி வள்ளி என்பவை குற்றமற்ற சிறப்பினவை. இவை மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வருவன என்பது இதன் பொருள். கொடி என்பது வளைவுப் பொருளது. ஆதலால், படர்கொடி, ஆடு கொடி, பாம்பு, மின்னல் முதலிய பொருள்களைத் தரும். கந்தழி என்பது கந்து அழி என்னும் இருசொல் இணைவு. கந்தாவது கட்டுத்தறி. கட்டுத் தறி, நெய்வார் கருவிக்கு அமைந்த நிலைத் தூண்; மாடு கட்டுதற்கு அன்றி யானை கட்டுதற்கும் தறியுண்டு; கட்டிவைக்கும் இடம் கட்டுத் துறை; கட்டிவைக்கப் பயன்படும் தூண் கட்டுத்தறி. அழி என்பது அழிப்பது. கட்டினை அழிப்பது (அ) கட்டற்றது கந்தழி. வள்ளி என்பது வளம், வளமை. கொடி ஒன்று வள்ளி; கொடை யாளர் வள்ளியோர்; வள்ளி, வளத்தக்காள் ஆகிய இல்லாள். கடவுள் வாழ்த்து என நூலொடு பாடப்பட்டுக் கிளர்ந்த நூல் நாமறி அளவில் முற்படக் கிடைத்தது திருக்குறளே. அதில் கடவுள் என்னும் சொல் ஆளப்பட வில்லை எனினும், கடவுள் வாழ்த்தென அதிகாரப் பெயர் உண்டு. அதிகாரப் பெயர் தவறாமல் மூலப்படி, உரைப்படி எல்லாவற்றிலும் இருந்துள்ளமை அறிதலால் நூலொடு கூடியமைந்ததேயாம். தொகைநூல் கடவுள் வாழ்த்தோ பாட்டின் கடவுள் வாழ்த்தாகிய திருமுருகாற்றுப்படையோ தொகுத்தார் அடைவில் அமைந்தவை. இவ் வகையால் திருக்குறளை முன்வைத்து, கடவுள்வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத் தல் என்னும் நான்கு அதிகார வரிசையொடு ஒப்பிட்டுக் காணின் பொருந்த லாம் எனத் தக்க தெளிவு உண்டாகின்றது. கொடி நிலை என்பது மின்னுக் கொடி என்னும் இளங்கோவடிகள் ஆட்சியால் மழையொடு தொடர்புறுதல் அறியலாம். ஆகலின், வான் சிறப்பு எனலாம். கந்தழி என்பது பற்றற்றது என்னும் பொருள் தருதலால் பற்றற்ற நீத்தார் பெருமை அக் கந்தழி ஆகலாம். வள்ளி, வளமிக்க தன்மையொடு, உளமிக்க தன்மையும் ஒன்றிய அறன் வலியுறுத்தலாகக் கொள்ளலாம். இவ் வகையால் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கும் முறையே, தொல்காப்பியர் கூறிய கடவுள் வாழ்த்து, கொடி நிலை, கந்தழி, வள்ளி என்பவற்றை உட்கொண்ட அமைப்பு ஆகலாம் என்பது. இதனை அருமையாக எடுத்துக் காட்டியவர் பேரா. மு. இராகவ ஐயங்கார் (பொருளதிகார ஆராய்ச்சி. பக். 143). இவ்வாறு அமைதி கொள்ளல் தகுமோ எனின், 'தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர்' என்னும் விரி கட்டுரை காணல் தெளிவாம். 'நூல்: திருக்குறளுக்கு உரை திருக்குறளே' என்பது; எம் நூல். ஒரே ஒரு குறிப்புச் சான்று 'அறம் முதலாகிய மும்முதற்பொருள்' என்னும் தொல்காப்பியமே, 'முப்பால்' முன்னோடி. ஒரு தெளிவு புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப்பொருள் வைப்பு முறை, தொல்காப்பியர் உரைத்தது (960). திருக்குறள் காமத்துப்பால் இவ்வைந்து உரிப்பொருள்களையே மாறா வரிசையில் வைத்து, ஒன்றற்கு ஐந்து அதிகாரங்களாக, ஐந்தற்கும் இருபத்து ஐந்து அதிகாரங்களைக் கொண்டு அமைகின்றது. ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காண்க. உறக்கம் கொள்வதற்குப் பாடும் பாட்டு, கண்படைநிலை. உறக்கம் நீங்குவதற்குப் பாடும் பாட்டு, துயிலெடை நிலை. பிறந்தநாள் கொண்டாடுதல், பெருமங்கலம். முடிபுனைவிழா, மண்ணுமங்கலம். பரிசில் பெற்று விடை பெறுதல், பரிசில் விடை. வாழ்த்துக் கூறுதல், ஓம்படை. பாடாண் திணையின் துறைகளுள் சில இவை. மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இவ் வழக்கங்கள் புதுப் பொலிவுடன் இன்றும் நிகழ்தலை எண்ணிப்பார்க்கலாமே. மேலும் வாயுறை வாழ்த்து செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து என்பனவும் பாடாண் துறைகளே. அவற்றைச் செய்யுளியலில் காணலாம். யாம் பெற்ற பேற்றை நீவிரும் பெறுக என வழிகாட்டும் 'ஆற்றுப் படை' என்பதும் இப் பாடாண் துறைகளுள் ஒன்றேயாம். அது, "ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம்" என்பது (1037). செல்லும் வழியில் தம் எதிரேவரும் பாணர் கூத்தர் முதலோர்க்கு அப் பாணர் கூத்தர் முதலோர், யாம் இவரைக் கண்டு இவ்வளம் பெற்றேம்; நீவிரும் சென்று பெறலாம்; செல்லும் வழி ஈது; சென்று பயன் கொள்க என வழிப்படுத்துவது ஆற்றுப்படை யாகும். பத்துப் பாட்டுள் செம்பாதி ஆற்றுப்படை என்பதால் அது போற்றப் பட்ட வகை புலப்படும். அந் நாள் நிலநூல், சுற்றுலா நூல், வரலாற்று நூல், வழிகாட்டி நூல், மக்கள் தொடர்பு நூல், மாந்த நேய நூல் என்பனவாக ஆற்றுப் படை விளங்கியமை புலப்படும். மேலும் கலையே வாழ்வாக இருந்தவர் நிலை, அவர்தம் கருவி அமைப்பு, கலைத் திறம், வளம்பெற்றபின் வைத்து வாழத் தெரி யாமை, நிலைப்பிலா வாழ்விலும் நிலைத்த குடும்பமும் சுற்றமுமாக வாழ்ந்த வாழ்வு என்பனவும் புலப்படும். சான்றாகத் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடு கடாம்) என்பவற்றை நோக்குக. பாடுபுகழ்பெற்ற மன்னரும் தாம் பாணரும் கூத்தருமாகப் பாடினர் எனின், அவ் வாற்றுப் படையின் செல்வாக்கு தானே விளங்கும். "போக்குக் கற்றவன் 'போலீசுக்'காரன் (போக்கற்றவன்) வாக்குக் கற்றவன் வாத்தியாயன்" (வக்கற்றவன்) என்பது புது வழங்குமொழி. இப் போக்குக் கற்றவனும் வாக்குக் கற்றவனுமாகத் திகழ்ந்தவன் ஆற்றுப்படைக் கலைவல்லான் எனல் சாலும்! மெய்ப்பாடு மெய்யின்கண் உண்டாகிய உணர்வு, பிறர்க்குப் புலப்படும் வகையால் வெளிப்படுவது, மெய்ப்பாடு ஆகும். "மெய்ப்பாடாவது பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல்" என்பார் பேராசிரியர். உள்ளத்து நிகழ்வது, கருத்துப் பொருள்; அது முகம், கண், காது, கால், கை, வாய், மெய் (உடல்) முதலியவற்றின் அசைவு, துடிப்பு, நடுக்கம், நிறமாற்றம், தடுமாற்றம், மயக்கம், மகிழ்வு, கிளர்ச்சி, துள்ளல் - இன்ன வற்றால் பிறர் அறியத் தோன்றும். இத் தோற்றமே அகவுணர்வின் வெளிப்பாடு ஆகும். குறிப்பறிதல், குறிப்புணர்தல், குறி கூறுதல், கோள் தாங்கி (கோடாங்கி) கூறல் என்பன வெல்லாம், மெய்ப்பாடு உணரவல்லார் தம் தேர்ச்சியினால், பிறரை ஒப்புக்கொள்ள வைப்பனவாம். காப்பியக் கவின், மெய்ப்பாட்டில் தங்கியுளது எனலாம். இயலினும் இசையும், இசையினும் கூத்தும், பொது மக்களை யன்றிப் புல மக்களையும், இளையர் முதுவர் ஆகியோரையும் ஒருங்கே கவர்தல் மெய்ப்படக் காட்டும் சிறப்பாலேயாம். 'நாடகமே உலகம்' என்பது மாறித் 'திரையே உலகம்' 'காட்சியே உலகம்' என ஆகிய காலம் இது. 'ஆடுநர்க் கழியும் உலகம்' என மெய்யியல் காட்டியது பழந்தமிழ்ப் புறநானூறு. ஆடிச் செல்வாரைப் போல-வேடமிட்டு ஆடிச் செல்வாரைப் போல-போவது உலகியல் என்பது அது. கூனியாக நடித்தவன் மீது, செருப்பை எடுத்து எறிந்தான் பார்வை யன் ஒருவன். "இதுவரை எனக்குக் கிடைத்த எப் பரிசும், இப் பரிசு போலாகாது" என்று பாராட்டி, அடையாளப் பொருளாக்கிக் கொண் டான் கூனியாக நடித்தவன். அவன் மெய்யாக உணர்ந்து நடித்ததுமன்றிப் பார்ப்பவன் தன்னையும் தன்னை மறந்துபோகச் செய்து விட்டான் அல்லவா! மெய்ம் மறந்து நோக்கச் செய்து விடுவது, மெய்ப்பாடு ஆகும் நிலை இது. மெய்ப்பாடு கலையாக இல்லாமல், வாழ்வாகி விடும் போது, எத்தனை பேரை நம்பி ஏமாறச் செய்ய - இழப்புக்கு ஆளாக்க முடிகின்றது என்பதை நாம் கேளாமலும் காணாமலும் இல்லையே. துறவர் போலிமை, கூடா ஒழுக்கமாவது இது. மெய்ப்பாட்டு விளக்கம், உயர்கலை விளக்கம்! ஆனால், அவன் வாழ்வில் மெய்யனாக இல்லாவிடில், பெருந் தீமையாம் என்க. தொல்காப்பியர், மெய்ப்பாடுகள், அவை தோன்றும் நிலைக் களங்கள், அகவாழ்வு புறவாழ்வு இரண்டிலும் மெய்ப்பாட்டின் பங்களிப்பு, ஆகாதமெய்ப்பாடுகள் இன்னவை பற்றி ஆழமாக எண்ணிக் கூறுகிறார். அவர்தம் நுண்மாண்நுழைபுலமும், கலைத்துறைக் கவினும், கட்டமை கோப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இயற்றியுள்ளார். சுவைப் பொருள், அதனை நுகரும் பொறியுணர்வு, அது உள்ளத் துப்பட்ட போது தோன்றும் குறிப்பு, அக் குறிப்பு மெய்யில் தோற்றமுறும் காட்சி என ஒரு மெய்ப்பாடு நான்காகும். மெய்ப்பாடு நூலோரால் எண்வகையாக உரைக்கப்படும். அவை, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. இவ் வெட்டையும், மெய்ப்பாட்டு நிலைக்களம் நான்கொடும் பெருக்கிக் காணின் முப்பத்து இரண்டாம்; இவற்றைச் சுவையும் சுவைப் பொருளும் ஒன்றாக்கிப் பதினாறு எனவும், உள்ளக் குறிப்பும் உடற் குறிப்பும் ஒன்றாக்கி எட்டு எனவும் கொள்வதும் உண்டு. இவற்றைக் கூறி மெய்ப்பாட்டியலை விளக்குகிறார் தொல்காப்பியர் (1195 - 1197). முதல் மெய்ப்பாடாக நகைச்சுவையையும் இறுதி மெய்ப்பாடாக உவகைச் சுவையையும் தொல்காப்பியர் கூறுதல், அவரின் பழுத்த உளவியல் தேர்ச்சி காட்டும். இத் தேர்ச்சியின் வயப்பாடே, திருவள்ளுவர் 'நகையும் உவகையும் கொல்லும் சினம்' என முதலும் முடிவுமாகியவை இணைத்த இணைப்பாம். ஒவ்வொரு மெய்ப்பாடும் தோன்றும் காரணங்களை நான்கு நான்காகக் கூறுகிறார் தொல்காப்பியர். "எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகை நான்கு என்ப" என்பது நகைச்சுவைக்குக் காரணமானவற்றைக் கூறியது (1198). எள்ளலாவது இகழ்தல்; எள்போல் சிறிதாக எண்ணிக் கூறுதல். இருவர் இருந்தனர் ஓர் இருக்கையில், இடையே இருந்த இடத்தில் ஒருவன் வந்து அமர்ந்தான். அவன் அழுக்குடை கண்டு "நீ முட்டாளா, மடையனா?" என்றான் இருந்த ஒருவன். "இருவருக்கும் இடையே இருப்பவன் யான்" என்றான். எள்ளல், மீட்டோர் எள்ளலும் ஆகியது இது. நடக்க முடியாமல் தத்திப்பித்தி நடக்கும் குழந்தை நடை, அக் குழந்தை பேசும் மழலை நகைச்சுவைக்கு இடமாகி இன்பம் பயத்தல் கண்கூடு. ஆரியர் கூறும் தமிழ் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாதலைக் கூறும் செயிற்றியம். அதனை உரையில் காட்டுவார் பேராசிரியர். ஆங்கிலர் பேசும் தமிழும் அத்தகையதே. மொழிநிலையில் அவர்கள் இளமையராகத் தோன்றுதலே நகைக்கு இடம் தந்தது என்க. பேதைமை பேதைமைத் தன்மை; அறியாத்தனம். அதனைக் காணும்போது நகைச் சுவை உண்டாகும். ஒருத்தி கைக்குழந்தை வைத்திருந்தாள்; அவள் கூந்தல் அவிழ்ந்து விட்டது. முன்னே அவள் அக்கை இருந்தாள். அவர்களுக்கு இடையே ஒருதூண்! தூணின் ஒருபக்கம் இருந்து கொண்டு குழந்தையை நீட்டினாள் தங்கை. அக்கை, தூணின் இருபக்கமும் இரண்டு கைகளையும் நீட்டிக் குழந்தையை வாங்கினாள். இந்தக் காட்சியை எண்ணின் நகைப்பு வராமல் போகுமா? நேரிலே கண்டால்... 'யான் கண்டது இது'. மூன்றாமவர் குழந்தையை வாங்கியபின், 'ஏதோ தோன்றியதுபோல்' மூவரும் நகைத்தனர்.. மடமை மடமை என்பது அறிவுறுத்தக் கேட்டாலும், தான் கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ளாமல், அறிவுறுத்துவானையும் அறியாதவனாகக் கருதுதல், "காணாதாற் காட்டுவான் தான்காணான்; காணாதான், கண்டா னாம் தான்கண்ட வாறு" என்பது போன்ற தன்மை (குறள். 849) அறிவுறுத்தியதைக் கேட்டு அதை விடாப்பிடியாகக் கொள்ளும் 'மடம்' ஓர் உயரிய பண்பியல். மகளிர்க்கு உரியதாகவும், துறவர்க்கு உரியதாகவும் அமைந்த மடம் அது. முன்னது தன்மை, பின்னது அத் தன்மையர் - உறையும் இடம். இம் மெய்ப்பாடுகளுக்கெல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டு வழங்குகின்றனர் இளம்பூரணரும் பேராசிரியரும். சங்க இலக்கியம் வாழ்வியல் இலக்கணமாக இருப்பதன் சான்று அது. அதன் இலக்கணம் தொல்காப்பியத்தில் உண்டு என்றால், அதன் பொருள் என்ன? தொல்காப்பியர்க்கு முன்னரே பரவிக் கிடந்த வழக்காறும் இலக்கியங் களும் இலக்கணங்களுமே அவர் தொகை நூலுக்கு மூலப்பொருள்களாக இருந்தன என்பதை நோக்கத் தமிழ்மாந்தர் தொன்மையும் கலைச் சிறப்பும் பண்பாட்டு முதிர்வும் புலப்படும். செயிற்றியத்தில் இருந்து இளம்பூரணர் காட்டும் பாட்டு அதனை இழந்து விட்ட நம்மை வாட்டவே செய்யும். நகைக்கு மூலமாம் எள்ளல் முதலியவற்றைத் தம் எள்ளல் அடியாக வும், பிறர் எள்ளல் அடியாகவும் ஒன்று இரண்டாதலை விளக்குவர் உரையாசிரியர்கள். அவ்வாறே தம் இளமை, பிறரிளமை எனக் கூறி எள்ளல் முதலிய நான்கையும் எட்டாக்குவர். உரிய சான்றும் காட்டுவர். அழுகை அழுகைச் சுவை, இளிவு (இழிவு), இழவு, அசைவு (முன்னிருந்த நிலையில் தாழ்தல்), வறுமை என்பவற்றின் வழியாகத் தோன்றும் (1199). இழிவு - இகழ்ந்து பேசுதலால் உண்டாவது; இழிவு - இழப்பின் வழிவரு வது; அசைவு - பழம் பெருமை, மதிப்பு ஆயவை குன்றல்; நிலைதாழ்தல்; வறுமை, துய்ப்புக்கு வழியில்லாமை; "பட்ட இழிவும் பழித்த இழிவும் பக்கம் பக்கம் எண்ணின் எண்ணுவார்க்கு 'இளி'வின் அழுகை புலப்படும். இழவின் அழுகையே, 'ஒப்பாரி'; 'கையறுநிலை'ப் பாடல்கள். அசைவின் பாடே, பாரிமகளிரை வருத்திக் கிளர்ந்த பாட்டு! "அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே" என்பது அது (புறம். 112). வறுமை அழுகைப்பிழிவு, "இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு" என்பது (குறள். 1048). அசைவு என ஒன்று இருந்தாலும் நான்கும் அசைப்பனவேயாம். விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்து அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்ததும், அழுகையொடு ஒத்ததாகலின் இளிவரலையும், தான் இளிவந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின் பின் வியப்பையும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின் அதனை அடுத்து அச்சத்தையும், அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன் பின்னும், அவ் வீரத்தின் பயனாகிப் பிறர்க்குவரும் வெகுளியை அதன்பின்னும், வெகுளிக்கு மறுதலையாகவும் ஓதுதற்குச் சிறந்ததாகவும் முதலாவது சொல்லிய நகைக்கு இயைபானதாகவும் அமைந்த உவகையை இறுதியிலும் வைத்தார் என வைப்பு முறை காட்டுவார் பேராசிரியர். நகை போலவே அழுகை முதலியனவும் தன்னிடத்துத் தோன்று தலும் பிறரிடத்துத் தோன்றுதலும் என எட்டாக்குவார் பேராசிரியர். இளிவு - பிறர் இகழ்விற் பிறக்கும் அவலம். 'இழிவே' என்னும் பாடம் சிறக்கும் என்பார் நாவலர் பாரதியார். இளிவரல், மானம் குன்ற வருவது. "இளிவரின் வாழாத மானமுடையார்" எனவும் "இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார்" எனவும் வருதலான் இப் பொருட்டாதலை அவர் விளக்குவார். இளிவு, பழிபடு குற்றமின்றியும் வரும் ஆதலால் தன்னெஞ்சு சுடுதல் இன்மையால் வாழ்வு வெறுப்பு விளையாது. இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் குன்றவரும் நிலையிழிவைக் குறிக்கும் என வேறுபாடும் காட்டுவார். இளிவரல், மூப்பு பிணி வருத்தம் மென்மை என்பவற்றால் உண்டாகும் (1200). முற்றத் தளவும் போக முடியாத முதுமையின் வாழ்வை வெறுக்கும் தாய் நிலையும், பசிப்பிணிக் கொடுமையில் மனைவியும் மக்களும் வருந்தும் வருத்தமும் தம் நொய்ய வாழ்வும் எடுத்துக்காட்டும் ஒரு பாட்டு (புறம். 159). இளிவரல் விளைவு விளக்கம்: "குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே" என்னும் சேரமான் கணைக்கால் இரும்பொறை பாட்டும் (புறம். 74). "சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சியபாட்டு" என்னும் குறிப்புமாம். மருட்கை "புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே" என்பது மருட்கைச் சுவை தோன்றும் நிலைக்களங்கள் பற்றியது (1201). மருட்கையாவது மயக்கம். பாராதன ஒன்றைப் பார்த்தல் மயக்கமாக்கும். எறும்பு ஒன்று எட்டடி நீளம் ஈரடி உயரத்தில் வரக்கண்டால், பூனை வடிவில் யானை ஒன்று நம் முன்வந்தால், இறந்து போனான் எனப்பட்ட ஒருவன் நம்முன் நடந்து வரக்கண்டால் மருட்கை தோன்றாமல் இராதே. "பறழுக்கு (குட்டிக்கு) வயிற்றில் பையையுடைய கங்காரு, பறக்கு மீன், சிற்றுயிர் உற்றக்கால் பற்றிப் பிசைந்துண்ணும் பூச்செடி, இருதலை, முக்கண் ஐங்கால் அறுவிரல் முதலிய வழக்கிறந்த உறுப்புடைய உயிர்கள் போல்வன" என்பார் நாவலர். அச்சம் அணங்கு விலங்கு கள்வர் தம் இறை என்பன நான்கும் அச்சச் சுவை நிலைக் களங்கள் (1202). ஒரு மரத்தில் ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்துவிட அதனை அறிந்தான், அவ்விடத்தை இரவில் போய்க்காண அஞ்சுதலும், சுடுகாட்டுக்குத் தனியே இரவில் சென்று மீள்வதற்கு அஞ்சுதலும், பேய் பிசாசு என்று கற்பிக்கப்பட்டவற்றை நினைத்து அஞ்சுதலும் அணங்குவழி அச்சம். மயக்கும் பெண்பேய் பற்றிய புனைவு பழமை மிக்கது; நீலி கதையோ நெடுங்கதை. இவை நூல்வல்லார் சுட்டும் அளவுக்கும் பெருக்கமாக மக்கள் வழக்கில் இருந்தமை புலப்படும். பேய் பிடித்தல் பேயோட்டல் உடுக்கடி என்பன இன்றும் மறைந்து விடவில்லையே! புலி விலங்கு ஒன்று நம்முன் நிற்பதாகக் கனவில் காணினும் உண்டாகும் அச்சத்தை நோக்கும் போது நேரில் கண்டால்! கள்வர் அச்சம் தந்த பாதுகாப்பே கதவு, பூட்டு, அரண், அகழ், காவல், இன்னவை. கள்வன் வலியனா காப்பு வலியதா என்பது முடிவுக்கு வராத பொருளாகவே என்றும் உள்ளது. இறை - கடவுள், ஆள்வோன், ஆட்சி அலுவலன், தலைவன் ஆய பல பொருள் ஒரு சொல். "கடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று" என்பது அரசன் அதிவீரராம பாண்டியன் பாடியது. ஆசிரியரைக் கண்டு ஓட்டமெடுத்த மாணவர் ஒளிந்தது மட்டு மில்லை; 'கழிந்ததும்' உண்டு. எழுத்தறி வித்தவன் இறைவன் எனப்பட்ட காலம் இருந்தது முதியர்க் கேனும் நினைவில் நிற்கும். பெருமிதம் பெருமிதம் வேறு செருக்கு (தலைக்கனம்) வேறு. பெருமிதப் பேறும் தலைக்கனத் தாழ்வும் எதிரிடைகள். "பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்" என்னும் குறள் (979) விளக்கம் இரண்டும். பெருமிதச் சுவைக்களம், "கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே" என்பது (1203). கல்விச் சிறப்பு, போரில் காட்டியவீறு, வழிவழிப் புகழ், இணையிலா ஈகை என்பவை அவர்க்கே யன்றி அவர் பெற்றோர்க்கும் சார்ந்தோர்க்கும் பெருமிதம் தரும். கற்றவன் கொண்ட பெருமை கற்பித்தவனையும் உயர்த்திப் பிடிக்கிறதே! ஆயிரத்தில் ஒரே ஒருவன் பெற்ற கல்விச் சிறப்பு, அவ் வாசிரியன் மதிப்பை நாடறிபொருளாக்கி விடுகின்றதே! ஏனாதி என்னும் பட்டம் தறுகண் வழியாகப் பெற்றமை வரலாறு. மார்பு கொண்ட வேல் மறு பக்கம் துளைத்துச் செல்ல, புறப்புண் எனக் கொள்ளவும் நேருமே என வடக்கிருந்து உயிர் துறந்த புகழாளன் புகழ், வென்றவனையும் வென்றவன் ஆக்கிற்றே. "நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ! சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே" என்னும் புறப்பாட்டு (66). வ. உ. சிதம்பரனார், வீரபாண்டியக் கட்டபொம்மன் போர்வீறு நாடறிய லாயது, மெய்ப்பாட்டுத் திறத்தாலேயே! அவர்களைப் பற்றிய நூலைக் கற்றார் ஆயிரத்தில் ஒருவரும் அருமையே! கொடைப் பெருமிதம் என்ன, முல்லை பல்லைக் காட்டிப் பாடியா பாரியிடம் தேர்ப்பரிசு பெற்றது! உடுத்தாது போர்த்தாது என அறிந்தும் மயிலுக்குப் 'படாம்' வழங்கினானே பேகன்! ஏன்? "வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய" எனப் பாடுபுகழ் பெற்றானே குமணன்! இவை பெருமித மாதல் இவர் வேடமிட்டு நடிப்பார்க்கும் கிட்டுகின்றதே! வெகுளி "உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே" என்பது வெகுளிச் சுவை நூற்பா (1204). காலை வெட்டுதல் கையை வெட்டுதல் கண்ணைத் தோண்டுதல் உறுப்பறை. குடிகோள் ஒருகுடியையே முற்றாக அழித்தல். ஒருவன் செய்த குற்றத்திற்கு அவனைச் சார்ந்தாரையெல்லாம் கெடுத்தல். அலை - அலைக் களித்தல். அலைத்தலோடு அமையாமல் அதற்கு மகிழ்தல். பிறர்துயர்ப்படுதல் கண்டு களிப்புறுதல். கொலை: நன்றிமறத்தலையும் கொலையாகக் கண்ட தமிழ் மண்ணில், "கொள்ளும் பொருளிலர் எனினும் தலை துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவுதல்" கலித்தொகைச் செய்தி. உவகை உவகைச் சுவை நான்கும், "செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்று அல்லல் நீத்த உவகை நான்கே" என்பது (1205) "உனக்கு உவகை வந்தால் என்முதுகுக்கு ஒட்டுப் போட வேண்டும்" என்று வருந்திக் கூறினான் தன் நண்பனிடம். 'அவன் உவகை இவன் அல்லல்' ஆதல் ஆகாது என்பாராய் உவகையை 'அல்லல் நீத்த உவகை' என்றார். உவகை இருபாலும் இல்லை யேல் அஃது உவகையன்றாம். பாலியல் உவகைக்கும் இவ் விருபால் ஒப்பும் இருத்தலைக் கருதியே "உருவு, நிறுத்த காமவாயில்" என்றவர் தொல் காப்பியர் என்பதை எண்ணின் விளக்கமாம். இந் நாள் மருத்துவ அறிவியல் இதனை வலியுறுத்தி ஆய்வு மேற்கொள்ளச் சொல்லுதல் தொல்காப்பிய அறிவர்தம் மேம்பாட்டு விளக்கம் (1219). செல்வ உவகை பரம்பரை உடல் நிறத்தையே மாற்றிவிடுதல் கண்கூடு. புலன் என்பது புலமை அன்று; கல்விப்புலமை பெருமிதச் சுவைக் களங்களுள் ஒன்று. இப் புலன் "காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்" என்பது போல அறிவு வழியாகத் துய்க்கும் பேறு. அது, அதன் வண்ணமாக அமைந்து மாறிப்புகும் இன்பம். அறிதோறும் அறியாமை கண்டு மகிழும் புலனுகர்வே இவண் புலன் எனப்பட்ட தாம். புணர்வு உயிர்பகுத்தன்ன இருவர் ஒருவராகித் துய்க்கும் இன்பம். "தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு?" என ஐயவினா எழுப்பி அமைந்த விடை காட்டியது குறள் (1103). "உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தின் இயன்றன தோள்" என்று உவந்து வினாவியதும் அது (குறள். 1106). உவத்தல் என்னும் சொல்வழியாகப் பிறந்தவையே 'புணர்வு' தொடர்பான மக்கள் வழக்குச் சொற்கள் என்பதை எண்ணிப் பார்ப்பின் உண்மை புலப்படும். புணர்வு நட்புப் பொருளதேனும் இதன்பாற்படுத்தல் கூடாதாம். "ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள" என்பது வள்ளுவம். விளையாட்டும் இருபாற் பொது. கடலாட்டு, புனலாட்டு, சோலைக் காட்சி, மலைச் செலவு, சிலம்பாட்டம், கும்மி, கோல், குரவை, பந்து என்பன வெல்லாம் உவகைப் பொருளவே ஆம். அல்லல் தொடராது அமைந்த இன்பங்களே இவை என்பதை இந் நாள் விளையாட்டுக் குழுவினர் எண்ணிப் பார்க்க இதனை அவர்க்குப் படையல் ஆக்கலாம். சிற்பி கட்டும் கட்டுமானச் சீர்மை தொல்காப்பியர் கைப்பொ ருளாக இருத்தல் இவற்றாலும் மேல் வருவனவற்றாலும் புலப்படும். மேலும், இலக்கண வறட்சி என்பதற்கு இடம் தராமல், "உள்ளப் பட்ட நகைநான் கென்ப" "விளிவில் கொள்கை அழுகை நான்கே" "யாப்புற வந்த இளிவரல் நான்கே" "மதிமை சாலா மருட்கை நான்கே" "பிணங்கல் சாலா அச்சம் நான்கே" "சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே" "வெறுப்ப வந்த வெகுளி நான்கே" "அல்லல் நீத்த உவகை நான்கே" என முதலடியோடு எதுகை வருவது கருதியது அன்றி, அப் பொருள்களின் உயிர்நாடியாம் அடைமொழிகளை நடைப்படுத்தியுள்ள நயம், நினைப்பவர் நெஞ்சம் நிலைக்கவைக்கும் நீர்மை யுடையதாம். மேலும் 32 மெய்ப்பாடு மெய்ப்பாட்டு நிலைக்களங்கள் முப்பத்திரண்டு கூறிய அவர், அவை அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பானவை என வைத்து, அகத்துக்கே அவ்வாறு முப்பத்திரண்டு நிலைக்களங்கள் உண்மையைத் தொகுத்துச் சொல்கிறார். "ஆங்கவை ஒருபா லாக ஒருபால்" எனத் தொடர்கிறார். உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு என்றும், கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு என்றும், முனிதல், நினைதல், வெருவுதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு என்றும், கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்றும், நாலெட்டாகப் பகுத்து உரைக்கும் அவற்றை முறையே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் புணர்வு மெய்ப்பாடுகள் என்று கூறுவார் நாவலர். களவு மெய்ப்பாடு களவிற்குச் சிறந்த மெய்ப்பாடுகள் இவை என்பதை நான்கு நான்காக அறுவகைப் படுத்தி முறையாக அடுத்து ஓதுவார் ஆசிரியர். தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் விரும்பி நோக்குதல், தலைவிக்கு நெற்றியில் வியர்வை உண்டாதல், காட்சி இன்பத்தைப் பிறர் அறியாதவாறு மறைத்தல், தமக்கு உண்டாகிய மாற்றத்தைப் பிறர்க்குப் புலப்படாவாறு மறைத்தல் என்பவை நான்கும் முதற்பகுதி. இவைமுறையே புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நடுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க்கு இன்மை எனப்படும். உள்ளத்து உணர்வைப் புலப்படாது மறைக்க முயன்றாலும் அவ்வுணர்வு ஓங்கிக் கூந்தலை விரிக்கவும், காதணியைத் திருகிக் கழற்றவும், மற்றை அணிகளைத் தடவவும், உடையை மாற்றி உடுத்தவும் ஆகிய மெய்ப்பாடுகள் நான்கும் இரண்டாம் பகுதியாம். இவற்றை, முறையே கூழைவிரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடைபெயர்த்து உடுத்தல் என்பார் ஆசிரியர். ஒடுங்கிய இடையைத் தடவுதல், அணிந்த அணிகளை மீளவும் திருத்தமாக அணிதல், தன் உளத்தில் இல்லாத வலிமையை இருப்பதாகக் காட்டிக் கொள்ளல், கைகள் இரண்டையும் தலைமேல் வைத்து ஆர்வம் காட்டல் என்பவை மூன்றாம் பகுதி. இவை முறையே, அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல்வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் என்பனவாம். தலைமகன் சிறப்பியல்பைப் பாராட்டுதல், அறியாமை நீங்கி அறிவு மேம்படக் கூறுதல், அலர் எனப்படும் இரக்கமில்லாச் சொல்லை ஏற்று நாணுதல், தலைவன் வழங்கும் உடைமுதலியன கொள்ளுதல் என்பவை நான்கும் நான்காம் பகுதி. இவை முறையே, பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்பன. நெஞ்சங் கலந்த நிலையை இனி மறையாமல் தோழிக்கு வெளிப் படுத்துதலே நலம் எனத் தலைவி எண்ணுதலும், தலைவனைக் கண்டு மகிழ்ந்த மகிழ்வை வளர்க்கும் வகையால் மறுத்தலும், அவன் காணா வகையில் மறைந்து கொள்ளுதலும், ஒருகால் காணுமாயின் மகிழ்தலும் ஆகியவை நான்கும் ஐந்தாம்பகுதி. இவை முறையே, தெரிந்துடம்படுதல், திளைப்பு வினைமறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழி உவத்தல் என்பன. தன்னை அழகுறுத்துவார் செயல் கண்டு மனம் வருந்துதல், தலைவனைப் பிரிந்திருக்கும் தனிமையால் வருந்துதல், வருத்தத்தால் கலக்கமிக உரையாடுதல், எதுவும் செய்யமாட்டாத தன்நிலையை உரைத்தல் என்பவை நான்கும் ஆறாம் பகுதி. இவை முறையே, புறஞ் செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் என்பன. அன்பின் ஐந்தணையின் எல்லை கையற வுரைத்தல் என்பதே. தனிமை மெய்ப்பாடு தலைவனைப் பிரிந்த தனிமையில் தலைவியின் மெய்ப்பாடுகளாக இருபதை எண்ணுவார் ஆசிரியர். இன்பம் தருவன வெல்லாம் துன்பம் தருவனவாகத் தோன்றுதலால் அதனை வெறுத்தல், தனிமைத் துன்பம் தாங்காமல் புலம்புதல், உருவெளித் தோற்றம் கண்டு வருந்துதல், கூட்டத்திற்கு இடையூறானவற்றை எண்ணுதல், பசி வருத்தினும் தாங்கியிருத்தல், வண்ணம் மாறுதல், உணவு குறைதல், உடம்புமெலிதல், உறக்கம் கொள்ளாமை, கனவு கண்டு மயங்குதல், மெய்யையும் பொய்யாகக் கொள்ளல், பொய்யையும் மெய்யாகக் கொள்ளுதல், ஐயமுறுதல், தலைவன் உறவினரை விரும்புதல், அறத்தைப் பழித்துரைத்தல், உள்ளகம் உளைதல், எப்பொருளைக் காணினும் அப் பொருளைத் தலைவனொடு ஒப்பிட்டுக் காணல், ஒப்பிய வகையால் உவப்புறல், தலைவன் பெயர்கேட்க அவாவுதல், கலக்கமுறல் என்பவை அவை (1216). இவை யெல்லாம் களவு நிலை மெய்ப்பாடுகள். கற்பு மெய்ப்பாடு கற்புநிலை மெய்ப்பாடுகளை அடுத்தே கூறுகிறார் ஆசிரியர் (1217, 1218). களவு வழித்தே கற்பு ஆகலின் அவற்றின் இறுதியும் முதலும் இணைத்துக் காண வேண்டியவையாம். களவுக் கூட்டத்திற்குத் தடையுண்டாய போது இடித்துரைத்தல் வெறுப்பை மனத்தில் நிலைநிறுத்தல், தமர்க்கும் பிறர்க்கும் அஞ்சுதலால் தலைவனைக் காணாது விலகல், அவன் குறிவருதலை மறுத்தல், தூது சொல்லுமாறு தான் விரும்புவன நோக்கிக் கூறுதல், உறக்கமும் சோர்வு மாக இருத்தல், காதல் மிகுதல், உரையாடாமை என்பவை மனம் அழியாத கூட்டத்திற்குரிய மெய்ப்பாடுகள். மேலும், தெய்வத்திற்கு அஞ்சுதல், உயர்ந்த அறம் ஈதெனத் தெளிதல், இல்லாததையும் இட்டுச் சொல்லிச் சினம் கொள்ளல், உள்ளதாம் உயர்வையும் வெறுத்துரைத்தல், இரவு பகலெனக் கூடியிருந்ததை எண்ணி மகிழ்தல், அவற்றை மறுத்திருத்தல், அருள்மிகக் கொள்ளல், அன்புப் பெருக்காதல், பிரிவு தாங்காமை, தலைவனைப் பற்றிப் பிறர் கூறிய பழிச் சொல் கேட்டு வருந்தல் என்பனவும் அவற்றொடு கூடிய மெய்ப்பாடுகளாம். காதலிருவர்க்கும் வேண்டிய ஒப்புமை பத்தும் முன்னே அகத்திணை இயலில் கூறப்பட்டன. அவை, "பிறப்பே குடிமை" முதலியன. ஆகாமெய்ப்பாடு காதலுக்கு ஆகாத மெய்ப்பாடுகள் இவை என்பதை, "நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி, வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை இன்புறல், ஏழைமை மறப்போடு, ஒப்புமை, என்றிவை இன்மை என்மனார் புலவர்" என்றார் (1220). நிம்பிரி - பிழையைப் பொறுத்துக் கொள்ளாமை; கொடுமை அறனெறி அழிப்பு. வியப்பு - தன்னைப் பெருமையாகப் பாராட்டல்; புறமொழி - புறங்கூறுதல்; வன்சொல் - வடுவாக்கும் சொல்; பொச்சாப்பு - மறதி; மடிமை - சோம்பல்; குடிமை இன்புறல் - குடிப் பெருமை பேசி இன்புறுதல்; ஏழைமை மறப்பு - நிலையில் தாழ்வெனக் கருதாமை; ஒப்புமை - ஒப்பிட்டுக் காட்டிக் கூறுதல்; இன்மை என்பது இவையெல் லாம் இல்லாமை என்னும் பொருளதாம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காது வீம்பு காட்டும் குடும்பம் கெட்டுத் தொலைதல் மிகுதியாதலால் அது தலைப்பட வைக்கப்பட்டது போலும். அவ்வொன்று கைவரின் மற்ற தீயவை பலவும் ஒழிதல் உண்மையாம். தற்பெருமை கொள்வார், தம்மைச் சிறுமைப்படுத்தத் தாமே கட்டியங் கூறுபவர் ஆவர். பொதுவாழ்வுக்கே தற்பெருமை ஆகாது எனின் குடும்ப வாழ்வுக்கு அதன் வாடையும் அடித்தல் ஆகாது. புறமொழியாவது புறங் கூறுதல் இழிவுமிக்கது. குடும்ப இழிவை ஊரிழிவாக ஆக்கும் கொடுமைப் பழிவழியது அது. அதனைத் "துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு" என வினாவும் குறள் (188). வன்சொல் சுடுசொல், நாகாத்தல்; குடும்ப நலங்காத்தல். தீயினால் சுட்டது ஆறினும் ஆறாதது வாயினால் சுட்டது! குடிப் பெருமை கூறுவது - பிறந்த குடிப்பெருமை கூறுவது, புகுந்த குடிப் பழியாகக் கொள்ளப்பட்டுக் கேடாதல் பெருவழக்கு. பிறந்த குடிப்பெருமை, புகுந்த குடியில் நடந்து கொள்ளும் நடையாலேயே சிறக்கப் பெற வேண்டுமேயன்றித் தான் கூறுதலால் இல்லை என்பதை உணர்தல் இல்லறச் சீர்மை. ஏழைமையாகிய நிலை சூழலால் ஏற்படுவது. நிலையில் தாழ்வு வறுமை ஏற்படல் பொதுவானது. அது குறித்து எங்கள் குடும்பம் இப்படிப் பட்டது எனத் தாழ்த்திக் கொண்டு ஒடுங்கி இருப்பதும் ஒப்புரிமை இல்லறச் சிறப்புக்கு உதவாது. மனைவியைக் கணவன் இன்னவள் போல என்று ஒப்புக்காட்டி உரைப்பதோ, கணவனை மனைவி இன்னவன் போல என ஒப்புமை காட்டி உரைப்பதோ தீமையைத்தாமே கை கூப்பி வரவேற்பது ஒப்பதாம். இவையெல்லாம் நீங்கிய ஒத்த உரிமை வாழ்வே உயர்வாழ்வு, வாழ்வாங்கு வாழும் வாழ்வு எனத் தெளிவித்தாராம். ஆகாக் குணங்களை அடுக்கி வைத்துள்ள இந் நூற்பாவினை உணர்ந்து பாராமல் எத்தனை குடும்பங்கள் கெட்டுள்ளன; கெட்டு வருகின்றன! கெடுப்பவற்றைக் கூறியது கதைப் படைப்புக் கருவுக்காகவா? கெடாத வாழ்வு சுரக்கட்டும் என்னும் பேரருள் குறிப்பு என உணர்வார், உணர்ந்த பின்னரேனும் வாழ்வில் போற்றி உய்வார்! தொல்காப்பியர் வேட்கை, தம் அறிவைப் பாராட்டுவர் கற்பார் என்பது அன்று. கற்பார் நிற்பாராதல் வேண்டும் என்பதே. அதனை மெய்ப்பாட்டியல் நிறைவு நூற்பாவான் உணர்த்துகிறார்: "கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே" என்பது (1221). உணர்வுடை மாந்தர் உணர்வர்; பிறர் எண்ணி அறிதல் அரிது. ஆதலால், உணர்ந்து போற்றுக என்றார். "உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே" என்பதும் அவர் உரை (876). "உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று" என்பது வள்ளுவர் உரை (குறள். 718). உவமை முதிய மாடு ஒன்று புல்லைக் கடித்தது; புல்லைக் கடிக்க முடியாமல் நாவால் தடவி வளைத்தது;அகப்பட்ட அளவில் குதப்பியது. அதனைக் கண்ட ஒரு முதியவர், "பல்போனவன் பக்காவடை தின்பது போலத் தின்கிறது" என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன்; அவர்க்குப் பல் இல்லை. அவர் பட்டறிவு அப் 'பழமொழி'யாக வெளிப்பட்டது என உணர்ந்தேன். அது புதுமொழியே. அவரே சொன்னதாகக் கூட இருக்கலாம். ஆனால், பழமொழி, உவமை, விடுகதை போன்றவை தோன்றும் பட்டறிவு நன்கு புலப்பட்டது. மாநிறம், கிளிப்பச்சை, மயில் கழுத்துச் சீலை, காக்கைக் கறுப்பு - இப்படிப் படைக்கப்பட்டவை பொதுமக்கள் கொடையே. புலிப்பாய்ச்சல், ஆமைநடை, குதிரை ஓட்டம், மாடுபோல உழைத்தல் - இன்னவையும் அப்படியே. குதிரைவாலி, காடைக்கண்ணி, வாளவரை - இவையெல்லாம் பொதுமக்கள் வழங்கியவையே. அலைபோல, சூறாவளிபோல, காற்றாடி போல, பம்பரம் போல - என்பன வெல்லாம் பெரிய இலக்கிய வாணர் படைப்பு இல்லை. மக்கள் வாழ்வில் காணப்படும் உவமைகள் இவை. உள்ளதை உள்ளவாறு மட்டும் சொல்லாமல், அதனை ஒத்த ஒன்று காட்டிப் பொருள் விளங்கவும் பொலிவு ஏற்படவும் செய்யும் உவமை மக்கள் பொது வளமாகப் புலமையர் கண்டு கொண்டு பாராட்டி ஒழுங்குபடுத்தியதேயாகும். கிளிப்பச்சையில் வண்ணம் உவமை. குதிரை வாலியில் வடிவு உவமை. புலிப்பாய்ச்சலில் வினை உவமை. மழைக் கொடையில் பயன் உவமை. சோழன் யானை, பகை வேந்தர் குடையை எற்றி எற்றித் தள்ளியது. யானை எற்றுதல், கொற்றக் குடையின் வடிவம், நிறம் ஆயவை ஆ உதைக்கும் காளாம்பியைக் (காளானைக்) கண்முன் கொண்டு வந்தது. அதன் பொருளும் ஒப்பும் விளக்கமும் அவரை வயப்படுத்தின. அதனால், "ஓஒ உமன் உறழ் வின்றி ஒத்ததே" எனத் தொடங்கினார். உவமை எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒப்பாகி விட்டது என்பது அவர் வியப்பு. புலவர் பொய்கையார். நூல் களவழி நாற்பது. சிவந்ததும் கூர்மையானது மாகிய நாரையின் அலகைப் புலவர், "பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவழக் கூர்வாய் செங்கால் நாராய்" என்றார். அதனைக் கேட்ட வேந்தன், பூரித்துப் போய்ப் புலவனை அழைத்துப் பரிசு வழங்கினான். உவமைப் பெருமை அல்லவா இது. புலவர் சத்திமுற்றப் புலவர்! கிழங்கைப் பிளந்து பார்த்தால் நாரையின் நாவும் தோற்றம் தருகிறதே. வண்ணமும் வடிவும் ஒத்த உவமை இது. மழைபோலக் கொடையைக் கூறுவர். ஆனால், மழைப் பொழிவு போன்றது சொற்பொழிவு எனக் கண்டார் ஒருவர். 'பிரசங்கம்' என்றும், 'பெருஞ்சொல் விளக்கம்' என்றும் வழங்கி வந்தவரிடையே 'சொற் பொழிவு' என ஒரு சொல்லைத்தந்தது மன்றிச், 'சொற்பொழிவாற்றுப் படை' என்னும் நூலும் தந்தார். அவர் நெல்லை பால்வண்ணர் என்பார். வினையும் பயனும் அமைந்த உவமை. உவமை வகை "வினை பயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம்" என உவமை வகைகள் இவை எனக் கூறுவார் (1222). உவமை ஒவ்வொன்றும் தனித்தனியே வரும் என்பது இல்லை. இரண்டு மூன்று சேர்ந்து வருதலும் உண்டு. வினையும் பயனும் ஓர் உவமையில் இருக்கலாம். ஓர் உவமையில் வண்ணமும் வடிவும் பொருந்தியிருக்கலாம். உவமையாகக் கூறுவது உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியர் ஆணை (1224). பெருமை நன்மை காதல் வலிமை என்பவற்றை நிலைக்களமாகக் கொண்டுவரும். தாழ்ந்த பொருள் உவமையாவதை ஏற்கும் இடமும் உண்டு என்றும் கூறுவார் (1226). ஆனால் அத் தாழ்ந்ததி லும் உயர்ந்த தன்மையே உவமையாக்கப்படும் என்பது குறிப்பு. நன்றியறி தலுக்கு, "நாயனையார் கேண்மை கெழீஇக் கொள வேண்டும்" என்று உவமைப்படுத்துவது இல்லையா! அதுபோல். முழுமையான பொருள் முதல்; முதற் பொருளின் உறுப்பாக அமைந்தது சினை. முதற் பொருளுக்கு முதற்பொருளும், முதற் பொரு ளுக்குச் சினைப்பொருளும், சினைப் பொருளுக்கு முதற் பொருளும், சினைப் பொருளுக்குச் சினைப் பொருளும் உவமையாதல் உண்டு. "மலை போன்ற யானை" -முதலுக்கு முதல் உவமை "தாமரை அன்ன தண்குடை" -முதலுக்குச் சினை உவமை "பனை நெடுங்கை" -சினைக்கு முதல் உவமை "ஆடுகை கடுப்பத் திரிமருப்பு" (கடுப்ப - போல; மருப்பு - கொம்பு) சினைக்குச் சினை உவமை "பவழச் செவ்வாய்" என்பது பவழத்தை வாய்க்கு உவமை காட்டியது. எதனால் உவமையாயிற்று எனின், செம்மை என்னும் நிறத்தால் உவமையாகியது. பவழ நிறமும் வாயின் நிறமும் சிவப்பு ஆதலால் உவமையாம். இதில் செம்மை என்பது வெளிப்படத் தெரிய உவமை அமைந்துள்ளது. இவ்வாறு வெளிப்படத் தெரியா வகையில் 'பவழவாய்' எனினும் உவமையே. இரண்டும் உவமையே எனினும் முன்னதில் செம்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பின்னதில் அப்படிக் காட்டப்படாமல் மறைந் துள்ளது. ஆதலால் முன்னது சுட்டிக் கூறிய உவமை; பின்னது சுட்டிக் கூறா உவமை என்கிறார் ஆசிரியர். "சுட்டிக் கூறா உவமை யாயின் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே" என்பது அது (1228). புணர்த்து - பொருத்தி; புணர்ந்தன - பொருந்துவன. எடுத்துக் கொண்டது எதுவோ அது, பொருள். அதற்கு ஒப்புமை காட்டப்படுவது எதுவோ அது, உவமை. இரண்டும் பொருந்த அமைதல் வேண்டும். (1229). பொருள் என்பதைப் பிற்காலத்தார் உவமேயம் என்றனர். உவமை என்பதை உவமானம் என்றனர்; ஒப்பினைப் பொதுத் தன்மை என்றனர். இரண்டற்கும் அமைந்த இணைப்புச் சொல்லை உவம உருபு என்றனர். அவ்வுருபு வெளிப்பட இருந்தால் உவம விரி என்றும், மறைந்திருந்தால் உவமத் தொகை என்றும் வழங்கினர். முத்துப்பல் என்பது முத்துப் போன்ற பல் என உவமை ஆகும். இதில், 'பல்' பொருள்; 'முத்து' உவமை. ஆனால், இவ்வாறு அன்றிப் 'பல் முத்து' எனினும் உவமையாகும் என்றார் ஆசிரியர். அதனை, "பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்" என்பது (1230). இதனை உருவகம் என்பது பிற்கால வழக்கு. பொருளினும் உவமை பெரியதாகவும் சிறியதாகவும் இருத்தலும் உண்டு. அலைக் கூந்தல் - அலைபோலும் கூந்தல் (பெரியது); ஊசிக் கோபுரம் - ஊசிபோலும் கோபுரம் (சிறியது) (1231). உவமை என்பதை உணர்த்தும் சொற்கள் இவையென அடுக்கிக் கூறுகிறார் ஆசிரியர். அப் பட்டியைப் பார்த்த அளவிலேயே வாழ்வுக்கும் உவமைக்கும் உள்ள நெருக்கம் புலப்படும். அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய என்பன ஆசிரியர் கூறுவன. முப்பத்தாறு உருபுகளைக் குறித்து விட்டு 'அன்னவை பிறவும்' எனச் சேர்த்துக் கொள்ளக் கூறுகிறார். அப்படிச் சேர்ந்தவை பல (1232). "அவன் 'கணக்காக' இவன் உள்ளான்" "அவள் 'கணக்காக' இவள் பேசுகிறாள்" இவண் 'கணக்காக' என்னும் பொருள்தரும் உவமை உருபு. இயல்பாக இறந்து கிடப்பவனுக்கும் உறங்கிக் கிடப்பவனுக்கும் வெளித் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. ஆதலால் 'செத்து' என்பது உவமை உருபாயிற்று. 'புலி செத்து' என்றால் புலிபோல என்பதே பொருள். செத்து > செத்திரம் > சித்திரம் ஆயது ஒவ்வியம் > ஓவியம் ஆயது; ஒவ்வ உவம உருபு. செத்து என்பது பழந்தமிழ்ச்சொல்; ஆயினும் உவம உருபுப் பட்டியில் இடம் பெற்றிலது. சாயல், பார்வை என்பவையும் வழக்கில் காணும் உவமை உருபுகளே. இன்னவாறு மக்கள் வழக்கில் மறைந்து கிடப்பன பலவும் இன்னும் இடம் பெற்றில. புது நூல் ஒரு மொழியின் வளர்ச்சி, காலந்தோறும் வழங்கும் சொற்களை யெல்லாம் தொகுத்து அடைவு செய்தலும் பயன்படுத்தலும் இலக்கண விரிவாக்கம் செய்தலும் ஆகும் என்பதைக் குறித்துக் காட்டுகின்றன. இன்னவை, மூவாயிர ஆண்டுக்கு முற்படு தொல்காப்பியத்தில் பின்னை மூவாயிர ஆண்டு மொழிவளர்ச்சி சேர வேண்டின், காலந் தோறும் அப்பணி நிகழவேண்டும் என்பதாம். இவ் வுவமை உருபுகளையும் இன்ன இன்ன பொருளில் வரும் என வகுத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியர்க்கு உண்டு. அம் மரபு படிப்படியே அருகிப் போயிற்று. இரண்டாக வரும் பொருளுக்கு, உவமையும் இரண்டாக வரும். "இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே" (1243) என்கிறார். "இணை மாலை போலும் மணமக்கள்" "திருக்குறள் ஈரடி என்னிருமக்கள்" "பொன்காண் கட்டளை போன்ற சுண்ணம் பூசிய மார்பு" உள்ளுறை முன்னே அகத்திணையில் சொல்லப்பட்ட உள்ளுறை பற்றியும் அதனோடு சிறப்புடைய இறைச்சி பற்றியும் இவ் வுவமைப் பகுதியில் ஆசிரியர் சில கூறுகிறார். (உள்ளுறை: அகத்திணை இயல் 46-48; இறைச்சி: பொருளியல் 35-37; உள்ளுறை வகை ஐந்து பொருளியல்: 48) உவமை இயலில் உள்ளுறை 'உவமைப் போலி' எனவும், இறைச்சி 'உடனுறை' எனவும் கூறும் வழக்குண்மையைக் குறிப்பிடுகிறார் (உவமை. 24, பொருளியல் 48). இப் பெயர்கள் இவற்றின் பொருள் புரிதற்கு உதவுகின்றன. உள்ளுறை இறைச்சி என்பவை இன்றும் வழங்குமொழிகளாக உள. ஆனால், தொல்காப்பியர் வழங்கிய பொருளில் வழங்கப்படவில்லை. ஒருநூலின் உள்ளே வருவன இவை என முற்படக் குறிப்பதை உள்ளுறை என்றும் உள்ளடக்கம் என்றும் கூறுதல் நாம் அறிந்தது. புலாலை இறைச்சி என்பதும் மக்கள் வழக்கே. உள்ளுறை இறைச்சிகள் சொல் அளவில் நின்று பொருள் நிலையில் இழப்புற்றது போலவே இவற்றை இந் நாளில் பாவலர்தம் பாடு பொருளில் கொள்ளும் திறம் இல்லாராகிவிட்டனர். ஏனெனில் இவற்றைத் தெளிவாகப் பொருள் புரிந்து ஓதி, ஓதியதைப் பயன்படுத்தித் தமிழ் வளமாக்கும் நிலை அற்றுப் போகியது. உள்ளுறையும் இறைச்சியும் பழந்தமிழர் ஆழங்கால் பட்ட ஆய்வு வழியே கண்டெடுத்த வயிரக் கட்டியும் பவழப் பாறையுமாம். உள்ளுறை என்பது என்ன? 1. உள்ளுறை உவமை சார்ந்தது. 2. உவமை போலப் பொருள் உவமை உருபு என்ற அமைவு இல்லாதது. 3. உவமைப் போலி எனவும் வழங்கப்படுவது. 4. வினை பயன் உறுப்பு உருவு பிறப்பு என்னும் ஐவகையில் வரும். 5. தெய்வம் தவிர்ந்த கருப் பொருள்களை இடமாகக் கொண்டு வரும். 6. இதன் இலக்கணம்; "உள்ளுறுத் திதனோடு ஒத்துப் பொருள்முடிகஎன உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்" என்பது (எடுத்துக் கொண்ட பொருளை உள்ளே செறிய வைத்து அமைக் கப்படும் உவமை என்பது இதன் சுருக்க இலக்கணம்). அகப் பொருளில் பயிலும் இவ்வுள்ளுறை தலைவி, தோழி, தலைவன், செவிலி ஆயோர் கூறுதற்கு உரியர். தலைவி, அவள் அறிந்த இடம், பொருள் கொண்டு சொல்வாள். தோழி, அவள் வாழும் நிலப்பரப்பளவும் கொண்டு சொல்வாள். தலைவன், அவன் அறிந்த விரிவாலும் அறிவாலும் சொல்வான். மற்றவர்க்கு இன்ன இடமென்னும் வரையறை இல்லை. உள்ளுறை இன்பந்தழுவியதாகவும் துன்பந்தழுவியதாகவும் உவமை வழியில் வெளிப்படும். உள்ளுறை கருப்பொருள் என்னும் இயற்கைச் சூழலில் இருந்து முகிழ்ப்பது. வெளிப் பார்வைக்குச் செடி கொடி மரம் பறவை விலங்குகளின் இயல் செயல்களைப் புனைவதுபோல் தோன்றும். இவற்றைக் கூறுவது தாம் கூறப்புகுந்த அகப் பொருளுக்கு நயமும் நலனும் சேர்ப்பதற்கே என்பதை உட்கொண்டே துய்க்க வேண்டும். பொருளும் காணவேண்டும். இல்லாக்கால் இயற்கைப் புனைவு என்று மட்டுமே கொள்ளலாகி விடும். அது பாடுபுலவன் கருதிய பொருளுணர்ந்து ஓதுவதாக அமையாமல் 'வாளா' அமைந்துவிடும். "உள் ஒன்று வைத்து அதற்கு இணையான புறம் ஒன்று கூறுவர். கூறினும் அத் தொடர்பான உட்கருத்து மெய்யுள் உயிர் போல விளங்கிக் கிடக்கும்" என்பார் வ. சுப. மாணிக்கனார். "உடம்போ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையோ டெம்மிடை நட்பு" என்னும் உடலுயிர்க் காதல் (குறள். 1122) உள்ளுறையாக, உள்ளுறை இலக்கணம் அமைந்தது என்க. பொதுமக்கள் வழக்குப் போல நேரிடையாக இடித்துக் கூறாமல், அறவோர் உரைபோல் வலியுறுத்து நேராகக் கூறாமல், கனிவொடு கூறிக் காதலும் கற்பும் வாழ்வும் வளமும் சிறக்கக் கூறுவது உள்ளுறை அடிப்படையாம். ஒரு சான்று: "யாரினும் இனியன்; பேரன் பினனே; உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்; சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாயே." இது, குறுந்தொகை 85. தலைவனுக்குப் பரிந்து கூறவந்த பாணனை நோக்கித் தோழி கூறியது இது. "இனியவருள் எல்லாம் இனியன்; அன்பருள் சிறந்த அன்பன்; பாணனே நீ பரிந்து பேசும் தலைவன் தான் எத்தகையன்? ஊரனாகிய அவன் ஊர்க்குருவியைக் கண்டவன் தானே! பெட்டைக் குருவி கருக்கொண்டு முட்டையிடப் போகிறது என்பதை முன்னுணர்ந்து இனிய கரும்பின் வெண்பூவைக் கொய்து வந்து முட்டை இட்டு வைத்தற்குரிய ஈன்இல் ஆகிய கூட்டைக் கட்டி முடித்தது" என்பது இப்பாடல் திரட்டுப் பொருள். முட்டையிடும் பெட்டை என்று, ஆண்குருவி கூடு கட்டும் ஊரன், கருக் கொண்ட மனைவியை விட்டு விட்டு அயலே போய் விட்டானே ஊர்க் குருவியைக் கண்டேனும் ஊரன் புரிந்து கொள்ளக் கூடாதா? என்பது இதன் உள்ளுறை. குருவிக் குடும்பத்தைத் தோழி எடுத்துக் கூறியது இயற்கைப் புனைவு மட்டுமே கருதியதா! உட்பொருள் வைத்த உரை கருதியதே அல்லவோ! இறைச்சி இறைச்சி பற்றிக் காணலாம்: "இறைச்சி தானே பொருட்புறத் ததுவே" "இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே" என்பவை இறைச்சி இலக்கணம் (1175, 1176). பொருளியலில் உள்ள இந்நூற்பா விளக்கம், உள்ளுறையின் தொடர்பு கருதி இவண் கூறப்படுகிறது. இறை கூர்தல், இறைகொண்ட, இறைகொள்ளும் என்பன சங்க நூல்களில் பெருக வழங்குவன. இறை என்பது தங்குதல். இறை என்னும் அரசுவழிப் பெயரும், கடவுள் வழிப் பெயரும் தங்குதல் பொருளவே. ஒன்றில் ஒன்று ஒன்றியிருத்தல் இறைச்சியாம். இதனை 'உடனுறை' என்றது அறிந்தோம். மலருள் மணம் போலவும் தேனுள் சுவைபோலவும் ஒன்றி உடனாகி இருப்பது இறைச்சி. கொழுமை தங்கியிருப்பது என்னும் பொருளிலேயே ஊனாகிய இறைச்சியும் பெயர் பெற்றதாகலாம். உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் வேறுபாடு என்ன எனின், உள்ளுறை, உவமையைக் கூறிப் பொருந்திய பிறிதொரு பொருளைப் பெற வைப்பது. அவ்வாறன்றிச் சொல்லிய பொருளிலேயே அதன் குறிப்பாகப் பிறிதொரு பொருளைக் கொள்ள வைப்பது இறைச்சி. "குறிப்புப் பொருளே இறைச்சியாகும்; உள்ளுறை உவமைபோல ஒன்றற்கு ஒன்று என்று ஒப்புமைப் படுத்திப் பார்ப்ப தெல்லாம் இங்குக் கூடாது; இயலாது" என்பார் பெருமுனைவர் தமிழண்ணல். "இறைச்சி தானே உரிப்புறத் ததுவே" என்பது இளம்பூரணர் பாடம். "இறைச்சிப் பொருள் என்பது உரிப்பொருளின் புறத்ததாகித் தோன்றும் பொருள்" என்பது அவர் உரை. "ஓரறிவு உயிர்முதல் ஐயறிவு உயிரி ஈறாகிய கருப்பொருள் இயக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு மாந்தர்தம் காதல் கற்பு ஆகிய பாலுணர்வு வாழ்வைக் குறிப்பால் உணர்த்துவது இறைச்சி" எனத் தெளியலாம். "அம்ம வாழி தோழி, யாவதும் வல்லா கொல்லோ தாமே; அவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோடு யாஅம் துணைபுணர்ந்து உறைதும் யாங்குபிரிந் துறைதி என்னா தவ்வே" என்னும் இது, ஐங்குறுநூறு (333). பறவைகளை நொந்து சொல்லியது என்னும் குறிப்புடைய இப்பாட்டு, "பறவைக் கூட்டமாம் யாம், துணை துணையாக வாழுகிறோம். இது கண்டும் நீதுணை பிரிந்து எவ்வாறு வாழ்கிறாய் என்று கேட்கமாட் டாவோ?" என்று தலைவி கூறிய இறைச்சி. இத்தகைய உள்ளுறை இறைச்சி ஆகியவை அகப் பொருளின் அகப் பொருளாக அமைதல் தமிழர்தம் நாகரிகக் கொள்கலங்கள் எனத் தக்கவை. கதையர் இந் நாள் கதைப்புனைவர் கருத்தில் கருக்கொள்ளுமா இவ் வக நாகரிகம்! குப்பை வாரிக் கொட்டும் எழுத்தாளர் தம் குடும்பத்து உறுப்பினரும் படிப்பரே என்று துளியளவேனும் எண்ணியேனும் எழுதக் கூடாதா? "இன்னும் இப்படி எழுதினால், உன் மனைவியையும் மகளையும் உன் எழுத்துப்படி செய்வோம் என்று கண்டித்து எழுதினர். அவன் எழுதினான் 'அவருள் எவர் என்னவர்' என்பதை என்னாலேயே கண்டு கொள்ள முடியாத போது நீதானா கண்டு கொள்வாய்" என்று மறுமொழி எழுதும் அயல் நாட்டு நிலை இந் நாட்டுக்கு எய்துதலைத் தவிர்க்க வேனும் எழுதுக என்பதே எம் உள்ளுறை, இறைச்சிகளாம். வேறுவகை உவமை "பாரியே ஒருநீதானா கொடையன்; மாரியும் உண்டே" என்பது மறுப்பது போன்ற உவமை அல்லவா. விரைந்து செல்லும் கதிரே, வரம்பிட்டுச் செல்கிறாய்; மறைகிறாய்; வருகிறாய்; விண்ணிலேயும் பகலில் மட்டும் விளங்குகிறாய்; நீ எப்படிச் சேரலாதனுக்கு ஒப்பாவாய் என்பதும் உவமையே (புறம். 8). அது ஓரீஇ (விலக்கி)க் கூறல் உவமை (1254). கொடியோ இடையோ என ஐயுற்றுத் தடுமாறுவதாகக் கூறுவது தடுமாறு உவமம் (1256). தடுமாறல் என்பது இன்றும் வழக்குச் சொல் இல்லையா! 'தட்டுத் தடுமாறி' என்னும் இணைச் சொல்லும் வழக்கில் உண்டே. அற்றைக் கலைச் சொல், இற்றைவழக்குச் சொல்லாவது இது. "மதியத் தன்ன வாள்முகம் போலும் தாமரைப் புதுப்பூ" என இரண்டு முதலிய உவமைகளை அடுக்குதல் ஆகாது. ஆதலால் "அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே" என்றார். இனி, "கலகவான் விழி வேலோ சேலோ மதுரவாய் மொழி தேனோ பாலோ" (திருப்புகழ்) என்பது அடுக்கியது ஆகாது. ஐய உவமை யாகிவிடும். உவமை வழிப்பட்டவையே அணிகள் அனைத்தும் என்னும் துணிவால் 'மயங்கா மரபின்' நூல் யாத்த தொல்காப்பியர், 'உவமை இயல்' என்றே வகுத்தார். பின்னூல்கள் பிறபிற விரித்துப் பெருக்கி, பொருள் விளக்குதல் என்னும் வகையால் பொருள் தகுதி இழந்து போயின; போகின்றன. அகம் புறம் ஆகிய பொருள்களுக்கு இடமாகியதும், மெய்ப்பாடு உவமை என்பவற்றின் உறைவிட மாகியதும், செய்யுள். ஆதலால், அதனைச் 'செய்யுளியல்' என்று வகுத்தார் ஆசிரியர். செய்யுள் உறுப்பு செய்யுள் உறுப்புகள் என முப்பத்து நான்கினை எண்ணி, அவற்றை முறையே, விரிக்கிறார். செய்யுள், பா, தூக்கு, பனுவல், தொடை, யாப்பு என்பன வெல்லாம் ஒருபொருள் குறித்த, பொருள் பொதிந்த சொற்கள். பொதுமக்கள் வழக்கில் பண்டு தொட்டு இன்று வரை வழங்கிவரப் பெறுவன. செய்யுள் செய் - விளைநிலம்: செய்தற்கு இடமாகியது; செம்மை செய்யப்பட்டது; புன் செய்; நன் செய்; செயல், செய்கை என்பனவற்றின் மூலமாய சொல். பா - பரவுதல், விரிதல் பொருளது. பார், பாரி, பாய், பாய்தல், பாய்ச்சுதல் இன்னவற்றின் அடிச்சொல். தூக்கு - தூக்கிப் பார்க்கும் எடை, எடைக்கல், ஆராய்தல், உயர்த்துதல், எடுத்தல் இன்னவற்றின் ஏவல். பனுவல் - பன் - பருத்தி; பன்னல் - பருத்தி, கூறுதல்; பனுவல் - பாடல்; நூல். "பஞ்சிதன் சொல்லா பனுவல் இழை யாக" -நன். தொடை - தொடுக்கப்படுவது, இணைப்பது, இசைப்பது; மாலை - தொடையல்; எதுகை மோனை முதலியன தொடுத்தல்; தொடுப்பு, தொடர்பு - நட்பு; தொடுக்கும் - தொடர்பு. ஒன்றோடு ஒன்று ஒன்றுவது தொடை. யாப்பு - யா - கட்டு; யாமரம் கட்டுதற்குரிய பட்டையும் வளாரும் உடையது; யாக்கை - உடல்; யாத்தல் - கட்டுதல்; ஆக்கை - கட்டும் நார், வளார்; யாப்பு - பாத்தி, பாத்தி கட்டுதல்; கட்டுதல் அமைந்த பாட்டு. செய்யுள் குறித்த சொற்கள் அனைத்தும் மக்கள் வழக்கில் உள்ளதால், அவற்றுக்குள்ள இடம் புலப்படும். நாட்டுப் பாட்டு பழமொழி பன்னீராயிரம் கொண்ட தொகுதி உண்டு. பழமொழி பதின்மூவாயிரம் தொகுத்தார் பாவாணர். பழமொழிகள் பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. 'முது மொழி' என்பதும் அது. செய்யுள் வகையுள் அது ஒன்று. "ஆடிப் பட்டம் தேடி விதை" "சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்" இவற்றைப் பாருங்கள். ஆடி, தேடி; எதுகைத் தொடை இது. முதல் எழுத்து மாத்திரை ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து அவ் வெழுத்தாகவோ அதன் இன எழுத்தாகவோ வருவது 'எதுகை'! "தைப்பனி தரையைப் பிளக்கும்" "மாசிப்பனி மச்சைப் பிளக்கும்" இவற்றில், தை, த என்றும், மா, ம என்றும் முதல் எழுத்து ஒத்திருத்தலால் யாப்பியற்படி இவை 'மோனை' எனப்படும். "முதலெழுத்து ஒத்தல் மோனை" "முதல் எழுத்து அளவால் ஒத்து, இரண்டாம் எழுத்து ஒத்தல் எதுகை" எதுகை மோனையை வெறுக்கும் ஒருவர் கூறினாராம்! "மோனை பார்ப்பவர் முழுமூடர்; எதுகை பார்ப்பவர் ஏதுமறியார்" இவ் விரண்டிலும் மோனை ஒட்டிக் கொண்டனவே! 'மோனை எதுகை வெறுப்பரும், விலக்க முடியாதவை அவை என்பது, இதன் குறிப்பாம். ஏனெனில், இம் மண்ணில் வளம் இம் மண்ணின் மைந்தரை விடாமல் ஒட்டும் என்பதே'. இனித் தாலாட்டு என்ன? ஒப்பாரி என்ன? விடுகதை என்ன? மாமி அடித்தாளோ மல்லிகைப்பூச் செண்டாலே! பாட்டி அடித்தாளோ பால் போட்டும் கையாலே! - துள்ளி வருகின்றனவே மோனை! இது தாலாட்டு! கத்தரிக் காய் எங்களுக்குக் கயிலாசம் உங்களுக்கு பூசணிக்காய் எங்களுக்கு பூலோகம் உங்களுக்கு. - இவ் வொப்பாரியில் மோனை மட்டுமா; இறுதி இயைபும் அமைந்துளதே. தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! - இறுதியில் இவ்வாறு பொருந்திய இசைவருவது 'இயைபு.' பின்னே வரும் பெட்டியும் குட்டியும் இயைபே! நாலு மூலைப் பெட்டி நந்த வனத்துப் பெட்டி ஓடும் குதிரைக் குட்டி வீசும் புளிய ஆக்கை இது விடுகதை; கிணறு - கமலை - ஏற்றம் இறைக்கும் மாடு, சாட்டைக் கோல் பற்றியது. ஓ, வீ என்பன நெட்டெழுத்து ஒன்றுதல் மோனை (நெடிலொன்று மோனை). கணவன் பொய் சொல்கிறான்; மனைவி சொல்கிறாள்: "வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கத்தாழ முள்ளு கொத்தோட குத்திச்சாம்" இதில், எதுகை மோனை மட்டுமா? மேற்கதுவாய் எதுகை வந்துளது; இரண்டாம் அடியில் இரண்டாம் சீர் ஒன்றுதானே எதுகை பெறவில்லை. இப்படி வருவது, 'மேற் கதுவாய்', 'கதுவாய்' இப்பொழுது எப்படி வழங்குகின்றது. 'கொறுவாய்', உடைந்து போனது என்னும் பொருளில் வழங்குகின்றது. கதுவாய், இல்லாமல் போனது என்னும் பொருள் தருவது. இன்னும் பாருங்களேன்: "பள்ளம் மேடு பார்த்துப்போ", "அவனுக்கு நல்லது கெட்டது புரியாது", "எப்படியும் உள்ளதும் இல்லதும் வெளியாகிவிடும்", "பெரியவர் சிறியவர் அறியாமல் பேசாதே" இவையெல்லாம் முரண்கள்; எதிரிடையாயவை. இவ் விலக்கணம் முரண் தொடை. 'ஆ' 'ஓ' என்று சொல்வது இல்லையா? நீட்டிச் சொன்னால் ஆஅ, ஓஒ என வரும். 'பாலோ ஒஒ பால்' 'தயிரோ ஒஒ தயிர்' இப்படி நீட்டிச் சொல்வது, நாள்தோறும் நாம் கேட்பவை தானே. ஒலி அளவில் மிகுவதால் அளபெடை என்பது பெயர். இசை பாடும் போது, நீட்டி நீட்டிப் பாடுவதைக் கேட்கிறோமே! அவையெல்லாம் அளபெடை. இயலுக்கு ஒருமாத்திரை அளவுதான் கூட்டல் உண்டு. சில இடங்களில் இரண்டு மாத்திரை கூட்டலும் உண்டு. ஆனால், இசைக்கு அளவு அவரவர் தொண்டை தான் போலும்! "காயாத கானகத்தே"-எவ்வளவு நீட்டி இசைக்கக் கேட்டது! 'எல்லாம் பாட்டு! எங்கும் பாட்டு! எவரும் பாட்டு! என்ற தமிழ்மண், பாட்டுப் பாடி இசைக்கும் பாணன் துணைவிக்குப் 'பாட்டி' என்று பெயரிட்டது. பாட்டன், பாட்டி என முறைப் பெயரும் கண்டது. 'பாட்டாங்கால்' எனப் பாடுபட்டுப் பண்படுத்திய தோட்டப் பெயர் கொண்டது. பாட்டியர் திட்டுதல் ஆகாது! ஏனெனில், பழங்காலத்தில் பன்றி, நாய், நரி என்பவற்றுக்கும் பாட்டி என்பது பெயராக இருந்துள்ளது (1165). 'உள்ளதைச் சொல்லப் பொல்லாப்பு வேண்டாவே' -பாருங்களேன் இப் பழமொழியில் எதுகை கொஞ்சுதல்! இன்னொரு செய்தி; உரை யாசிரியர் காலத்துக்கு முன்னரே பாட்டி பற்றிய இவ் வழக்கு அழிந்து விட்டது. அதனால், எடுத்துக்காட்டுத்தர அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. பாட்டு அளவு பாட்டு என்றால் பெரிதாக - நீளமாக - இருக்க வேண்டுமா? அரும்பாடு பட்டு அமைக்க வேண்டுமா? இல்லை! இல்லை! என்கிறார் தொல்காப்பியர். ஓர் அடி சிறப்பாக அமைந்தால் போதும்; அது பாட்டு! சரி, அடி என்றால் 16-சீர், 32-சீர், 64-சீர் என நீண்டிருக்க வேண்டுமா? வேண்டாவே! இருசீர் அடி குறளடி; குறளடி ஒன்று அருமையாக அமைந்து விட்டால் அது பாட்டுத்தான். குறள் அடி என்றால் இரண்டடியுடைய குறட்பாவை அன்று; இரண்டு சீர்களையுடையது. அதனை உலகறியக் காட்டிய பாட்டி ஔவையார்: "அறஞ்செய விரும்பு" "ஆறுவது சினம்" என்றார். அரிய பாட்டுகள்தாமே இவை. செய்யுள் இனிச் செய்யுள் பற்றித் தொல்காப்பியர் சொல்வதை அறியலாம். செய்யுள் முதல் உறுப்பு மாத்திரை; அடுத்தது எழுத்து. மாத்தல் என்பது அளத்தல். மாத்தம் அளவு. 'பா' என்றால், அளவுக்கு முதலிடம் தருதல் வேண்டும். அவ், அளவும் எழுத்திலேயே தொடக்கமாகிவிட வேண்டும். மற்றை மற்றை உறுப்புகளிலும் அளவு பேணப்பட வேண்டும் என்னும் முற் குறிப்பினது மாத்திரை என்பதாம். அளவுடன் அமைந்தனவே எழுத்தொலிகள். 'நா' எழுந்து ஒலி செய்ய வேண்டும் எனின், அசையாமல் இயலாது. நா, இதழ், வாய் இன்னவை அசையும். அசையின், இசையாம். அவ் வசைகள் சில சீராக அமைவது சீர்; அச் சீர்களைக் கொண்டு அல்லது சீர்களால் அமைவது அடி; அடி தனித்து நிற்பினும் பிற அடிகளொடு கட்டுற்று நிற்பினும் யாப்பு ஆகும். இதுவரை சொல்லப்பட்ட மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு என்னும் ஆறும் செய்யுள் மாளிகையின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களாவன. பா - பாவு ஆடை நெய்யும் தறியைப் பாருங்கள்; அங்கே அசை, சீர், அடி, பா என்பவையும் தளை, தொடை என்பவையும் உண்டு. அவர்கள் நெய்வதும், இவர்கள் செய்வதும் ஒப்பது! 'நூற்றல்' என்பது நூல் இழைத்தலையும் நூல் இயற்றலையும் குறிக்கும் சொல்லாயிற்று. இவை, தமிழர் வாழ்வியல் தொழிலொடு கலையுணர்வும் ஒன்றிச் செல்லுதல் காட்டும். 'கலை' என்பது ஆடைக்கும், பாடல் முதலிய கலைகளுக்கும் பொதுப் பெயராதல் அறிக. அடி ஒன்றன் அடியாக இருப்பது அடி. தேக்கடி, தேரடி, மரத்தடி மட்டுமா? 'இரயிலடி' எனத் தொடர்வண்டி நிலையம், பெயர் கொண்டதே. அடி ஒன்று கொண்டது, இயற்கை அல்லது நிலைத்திணை. ஆயிரம் அடி ஆல மரமும் ஓரடியின் வளர்ச்சியே. அடி ஒன்றுடையது இயக்கமின்றி நின்றது. இயக்கமாக இரண்டு அடி வேண்டியதாயிற்று. ஆம்! ஊன்று நிலை, இயக்க நிலை யாக - இரண்டு அடிகள் தேவைப்பட்டன. பறவைகள் ஈரடி பெற்றன. விலங்குகள் குறுக்கில் இயங்குவன. அதற்கு வாய்ப்பாக நான்கு அடிகள் கொண்டன. பூனை என்ன யானை என்ன; எலி என்ன புலி என்ன; நான்கு அடிகள் கொண்டன. மாந்தனும் ஒருகாலம் நான்கு அடிகள் கொண்டிருந்தே நிமிர்ந்தான். முன்னிரண்டு அடிகளும் கைகள் ஆயின. இக் காலம் வரை அந் நிலையைக் காட்டும் சான்றாகக் குழந்தை தவழ்ந்து பின் நிமிர்கிறது. முழுதுறு சான்றாக இருப்பது குரங்கு. நடக்கக் காலாக இருப்பவை, பற்றிப் பிடிக்கக் கையாகவும் இருத்தலைக் கண்டு எண்ணலாம்! வாற் குரங்கு, வாலில்லாக் குரங்கு என்னும் வகையையும் நோக்கலாம். அடி இரண்டு - முழந்தாள் இரண்டு - தொடை இரண்டு; தொடை இரண்டும் தொடுத்தது இடை அல்லது இடுப்பு, இடுப்பின் மேலே, தொடை தொடையாக இணை இணையாக - அமைந்த முள்ளந்தண்டு முதுகெலும்பு எத்தகைய அரிய இயற்கைக் கொடை! ஈரடி ஈரடிப் பெருமை என்ன? தனித்தனியே நின்றால் - தொடுக்கப்படாமல் நின்றால், ஊன்று நிலை மட்டுமே இருக்கும்; இயக்கநிலை எய்தாது. இயக்கத்திற்குத் தொடை வேண்டும். ஆதலால், தொடை - தொடையல் என்பவை தொடுத்தல், தொடர்ச்சி, தொடர்பு, தொடரி எனத் தொடர்ந்தன. இயங்கா மலையும் இடையீடு இன்றி இருந்தால், மலைத் தொடர் எனப்பட்டது. ஈரடி எவ்வளவு நடக்கும்? கடக்கும். மண்ணையும் கடக்கும்; விண்ணையும் கடக்கும். இக் கற்பனையே, ஈரடியால் உலகளந்த 'கதை.' வள்ளுவர் காலத்திலேயே இக் கதை கிளர்ந்தமையால் அவர், மெய்ம்மை காட்ட வேண்டி, "மடியில்லாத முயற்சியாளி எவனாக இருந்தாலும் அவன் மண்ணையும் விண்ணையும் எட்டலாம்" என்றார். பாரடி யெல்லாம் சுற்றிவரப் படர்ந்த அடிகள் எத்தனை? -குழந்தாய்! படர்ந்த அடிகள் எத்தனை? ஈரடி தானே குழந்தாய் - திருக்குறள், ஈரடி தானே குழந்தாய்! என ஈரடியால் உலகளந்த - அளக்கும் - விளக்கம் அறியலாம். இவை யெல்லாம் அடியும் தொடையும் 'பா'வியக்கமாகும் வாழ்வியல் அடிக் களங்களாம். சும்மா என்ன வேலை செய்கிறாய்?-சும்மா இருக்கிறேன். எதற்குப் போகிறாய்?-சும்மா போகிறேன்! என்ன பேசுகிறீர்?-சும்மா பேசுகிறோம்! உயர் பொருட் 'சும்மா', உற்ற தாழ்நிலை இது. 'சும்மா' என்றால், நோக்க மற்ற - குறிக் கோளற்ற - ஒரு நிலையை வெளிப்படுத்தலாக இந் நாள் விளங்குகின்றது. ஆனால், செய்யுள் ஒன்று கிளம்ப வேண்டும் என்றால், 'சும்மா' கிளம்பக் கூடாது. நோக்கு நோக்கு ஒன்று கொண்டே செய்யுள் கிளம்ப வேண்டும். "குறிக்கோள் இலாது கெட்டேன்" என்று வாழ்வு அமைதல் ஆகாது; அவ்வாறு, "குறிக்கோள் இலாது கெட்டது" என வாக்கும் அமைதல் ஆகாது. நோக்கு ஓரிடத்து மட்டும் இல்லை எல்லா உறுப்புகளும் பொருந்த நோக்குவதாக அமைவது நோக்கு. நோக்கு மட்டும் செவ்விதாக அமைந்தால் போதுமா? நோக்கை அடையும் வழியும் செவ்விதாக அமைதல் வேண்டும். "பெற்றவள் பசியைத் தீர்த்தல் பிள்ளையின் கடமை என்றாலும், அப் பசியை எப்படியும் தீர்க்கலாம் எனின், அப் பெற்றவளே ஒப்பாள்" என்பது, தமிழ் மண்ணின் கொள்கை. ஆதலால், "நோக்குடன், நோக்கை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும்" என்பதை ஆசிரியர் தொல்காப்பியர் 'மரபு' என்றார். மரபு ஓரிடத்தை அடைதல் நோக்குடன் புறப்பட்டார், போகும் வழி, போகும் முறை என்பவற்றைக் கட்டாயம் கருதவேண்டும் என்பதால், வழி நடைக்குச் 'சாலை விதி'கள் சட்டமாக்கப் பட்டமை உலகளாவிய முறை. பாட்டைக்குக் கண்டதைப் பாட்டுக்கும் கண்டது நம் பண்டையர் முறை. அதுவே, 'மாற்றருஞ் சிறப்பின் மரபு' என்பது. அதனைத் தெள்ளிதில் உணரச் செய்வதே தொல்காப்பிய மரபியல். மரபு பேணி அமைத்தல், நோக்குடையதாதல் என்ற அளவில் பா அமையின் 'பாடுவோன்' அறிவு நிலை சார்ந்தோ உணர்வு நிலை சார்ந்தோ மட்டும் அமைந்து விடும்! தூக்கு பாடுவோன், தானே துய்க்கவோ பாடல் இயற்றினான்? இல்லையே! அவன், படிப்பானைக் கருத்தில் கொள்ளாமல் பாடினால், அப் பாட்டு அவனைத் தொடாமலே போகிவிடுமே! ஆதலால், படிப்பான் எண்ணத் தைத் தான் நுண்ணிதின் உணர்ந்தவனாய் அல்லது பயில்வான் எவ்வெவ் வகையால் எல்லாம் ஆய்வான் - தடைவிடை கிளத்துவான் - என்பவற்றை யெல்லாம் எண்ணி அப் படிப்பாளியாகத் தான் இருந்து கொண்டு பாவைப் படைக்க வேண்டும். அதற்குத் தான் 'தூக்கு' என்பது பெயர். தூக்குக்கு ஒத்துவராதது 'தூக்கு' என்னும் பெயர் கொள்ளத் தகுவது ஆகாதே (தூக்கு = பாட்டு). தொடை சொல்லும் பொருள் தெளிவு திட்பம் மரபு இன்னவற்றை உடையது எனினும், சுவையுடையதாகச் சொல்லப்பட்டால்தான், கேட்பார் விரும்ப அமையும். ஆதலால், பாவலன் கேட்பான் செவியைத் தன் செவியாகக் கொள்ளலும் கடப்பாடாம். கேட்கும் சுவை "செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" எனப் பாராட்டப்படும். "அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" எனவும் போற்றப்படும். தன் வயப்படுத்திக் கொள்ளாமல் ஒருவனுக்குச் சொல்லப்படும் செய்தி உட்புக வாய்ப்பே இல்லாமல், வாளா போகிவிடும். இன்னது கொண்டே பாவின் நயத்திற்குத் 'தொடை' என்னும் ஒன்றையும் கண்டனர். அத் தொடைகளே மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, செந்தொடை என்பனவாம். அளவு எத்தகு சுவையது எனினும் - பொருள் பொதிவு உடையது எனினும் - அளவோடு அமைதலும் வேண்டும் என்பதும் தொல்காப்பியர் தெளிவு. ஆதலால், 'அளவியல்' என்றோர் உறுப்பையும் கொண்டார். இவற்றை முறையே தொல்காப்பியர் மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவியல் என வரிசைப்படுத்துகிறார். கட்டடக் கட்டுமானப் பொருள்களாக நாம் முன்னர்க் கண்ட ஆறு உறுப்புகளையும் கொண்டு, கட்டப்பட்ட கட்டுமான உறுப்புகள் இந்த ஆறும் எனலாம். யாப்பு மாளிகைக்குக் கட்டுமானப் பொருள், கட்டுமானப் பணி என்பவை மட்டுந்தாமா உண்டு? தளமென்ன, பூச்சு என்ன, வண்ணமென்ன, வனப்பு என்ன, ஏந்து என்ன, இயைவு என்ன - எல்லாமும் கருதப்பட வேண்டுமே! எல்லாமும் கூடும் போதுதானே 'ஏராரு மாளிகை'யாய் ஏற்றம் பெறும்! இவற்றைக் கருத்தில் கொண்டே, பிற உறுப்புகளை வகுத்தும் தொகுத்தும் கூறுகிறார் ஆசிரியர். திணை எனப்பட்ட அகப் பொருள் (அகத்திணை) புறப் பொருள் (புறத்திணை) என்னும் இரண்டும், பாடுபொருளாக இருக்க வேண்டும். களவு கற்பு என்னும் கைகோள் (ஒழுக்க நெறி) இடம் பெற வேண்டும். அவற்றைக் கூற்று வகையால் கூற வேண்டும். கூறினால் அதனைக் கேட்போர், கேட்கப்படும் இடம், கேட்கும் காலம் என்பனவும் பொதுள வேண்டும். கேட்டல் பயன். கேட்டலால் உண்டாகும் மெய்ப்பாடு, இன்னும் சேர்க்கத் தக்கனவாம் பிற (எச்சம்) என்பவும் இணைய வேண்டும். கூறுவார் இவர், கேட்பார் இவர் என்னும் குறிப்பும் (முன்னம்), கேட்பார்க்குப் பயனுண்டாகப் புலவனால் படைக்கப்படும் புதுமைப் பொருள், கூறப்படும் பொருளின் துறை, ஒன்றனோடு ஒன்று பொருந்தி நிற்கும் வகை (மாட்டு), ஓசை இன்பமாம் வண்ணம் என்பனவும் ஒன்ற வேண்டும். இவையெல்லாம் எண்ணின், உறுப்புகள் இருபத்து ஆறாம், செய்யுள் 'வனப்பு' எனப்படுவன எட்டு. அவை: அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பன (அவற்றின் விளக்கம் மேலேவரும்). பாடுவது எளிது "இவ்வளவும் பார்த்துப் பாடுவதுதான் பாவா? அப்பாடா! நடக்கும் செயலா? பாடல் இயற்றுவது எளிமை இல்லை" என்கிறீர் களா? இல்லை! இல்லவே இல்லை! "முடியாது என்னும் எண்ணத் தடை ஒன்றே தடை! பாடல் இயற்றுவது தடையில்லை! யாப்புத் தடையும் இல்லை! யார் தடையும் இல்லை! இதனை முதற்கண் தெளிவித்து விட வேண்டும்" என்பதற்காகவே, பழமொழி, தாலாட்டு, விடுகதை முதலிய வற்றில் எல்லாம் 'யாப்பியல்' இயல்பாக அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டப்பட்டது. இதற்காகவே எம்மால் எழுதப்பட்ட நூல் ஒன்று 'எளிதாகப் பாடலாம்' என்னும் யாப்பியல் நூல். மிக எளிது மூச்சுவிடுமுன்னே முன்னூறு பாடுவாராம்! நானூறும் பாடுவாராம்! 'ஆச்சு' என்று தும்மல் அடிக்குமுன்னே, ஆயிரம் பாடிவிடுவாராம்! ஒரு புலவர் கூறியது இது. இன்னொரு புலவர் கூறுகிறார்: "ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன் இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீர ராகவன்" என்று தம்மைக் குறிப்பிடுகிறார். இன்னொரு வேந்தன் - பின்னாளை வேந்தன், "கன்னல் பாகில் கோல்தேனில் கனியில் கனிந்த கவிபாட" என்கிறான். "தென்னுண் தேனின் செஞ்சொற் கவியின்பம்" என்கிறான் ஒரு பெரும்புலவன். "சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் மன்னிய இன்குறள்வெண் பா" என்பது வள்ளுவ மாலையுள் ஒன்று. வண்ணம் பாடல் அரிதுதான் - ஆனால்! அருணகிரியார்க்கு? ஒலியல் அந்தாதி பாடலும் அரிதே - ஆனால்! வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளுக்கு? ஏகபாதம் என்னும் 'ஓரடி' பாடல், அருமையே - ஆனால்! சோழ வந்தான் அரசஞ்சண்முகனார்க்கு? பண் சுமந்த பாடல் எவ்வளவு எளிமையாகப் பாடியுளர் தேவார மூவர்! பாரதியாரும் பாவேந்தரும், பாவாலே நிலைத்து விடவில்லையா? செந்தமிழும் நாப்பழக்கம்! பாடிப்பாடித் தழும்பேறினால் அரியதும் எளியதாம்! வளையக் காட்சியைப் (சர்க்கசைப்) பார்த்தால் அருமையெல்லாம், எவ்வளவு எளிமை! ஆர்வம் வருக! அதிலே ஊன்றுக! அதன் வடிவே ஆகுக! ஆக்குவ வெல்லாம் ஆக்கமிக்க பாடலேயாம்! அசையும் இசையும் அசையும் சீரும் அடுக்குவதா பாட்டு? இல்லை! "அசையும் சீரும் இசையொடு சேர்த்தி" இனிக்கப்பாடுக என்கிறார் (1268) ஆசிரியர். அசைவகை, சீர்வகை, அடிவகை, தளைவகை, பாடலாகும் வகை என்பவற்றை எல்லாம் விரிவாகக் கூறுகிறார். புதுப்பா இந்நாளில் புதுக்கவிதை எனப்படுகிறது; உரைவீச்சு எனப்படுகிறது. 'ஐக்கூ' எனப்படுகிறது. 'வசனகவிதை' எனவும் தோன்றியது. இளங்கோ வடிகள் உரைப்பாட்டு மடை இயற்றினார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் சிலப்பதிகாரம் வழங்கலாயிற்று. பாட்டும் உரையுமாக நடந்த பெருந்தேவனார் பாரதமும் கிளர்ந்தது. இவற்றை யெல்லாம் தொல்காப்பியம் கொள்ளுமா? தள்ளுமா? தொல்காப்பிய அளவுகோல், கொள்ளுவது, தமிழ்வழக்கு; தள்ளுவது அயல்வழக்கு; தொல்காப்பியம் கொள்ளுவது மொழிக்காவல் - பண்பாட்டுக் காவல். தொல்காப்பியம் தள்ளுவது மொழிக்கேடு, பண்பாட்டுக்கேடு. தொல்காப்பியம் கொள்ளுவது மொழித் தூய்மை. தொல்காப்பியம் தள்ளுவது மொழிக் கலப்பு. ஒரோ ஒருகால் ஒருவேற்றுச் சொல்லை ஏற்பினும், அது தமிழியல்பு கொண்டு அமைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக அமைத்தல் ஆகாது. வேற்றுச் சொல்லை மாற்றித் தமிழியல்பில் வழங்கினும் கட்டாயம் வேற்று எழுத்து வடிவத்தை எந்த வகை கொண்டும் புக விடுதல் ஆகாது என்பனவேயாம். இவை மீண்டும் இங்கு வலியுறுத்தித் தொகுத்துக் கூறியது, பழமரபு காக்கும் இலக்கண நூல் - மறைநூல் - தொல்காப்பியம் என்பதை உறுதிப்படுத்தவேயாம். எத்தகைய பெருமையர் - அருமையர் - பதவியர் - ஆட்சியர் - எனினும், அவர் தொல்காப்பிய நோக்கைப் பாதுகாத்துப் போற்ற உரிமையரே அன்றி, அழிக்க உரிமைப்பட்டவர் அல்லர் என்பதே, அவரை (தொல்காப்பியரை) அடுத்து வந்த நூலாசிரியர் ஒருவர் கட்டளை அது, தொல்காப்பியன் தன் ஆணை என்பது. அது வருமாறு: "கூறிய குன்றினும் முதல்நூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்தன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே" பெருந்தொகை. 1368) தோம் இன்று = குற்றம் இன்றி. தடையா? மொழிவளர்ச்சிக்கு இவ்வாணை தடை இல்லையா? மொழிக் காவல், மொழி வளர்ச்சித் தடையாகாது. வளர்ச்சிக்குரிய ஆக்கங் களை யெல்லாம் இயல்தோறும் அதிகாரம் தோறும் புறநடையாக ஆசிரியர் சொல்லிச் செல்வதையும், நூற்பாக்களில் சுட்டுதலையும் எண்ணிப்பார்ப்போர் இவ்வாறு கூற எண்ணியும் பாரார் என்க. உரைப்பா செய்யுள் ஒன்றே யாப்பு எனப் பின்னூல்கள் கொண்டிருக்கவும், தொல்காப்பிய முந்து நூலோ, எழுவகை யாப்புக்களைக் குறிக்கிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பவை அவை. அவற்றைக் கூறும் நூற்பாவிலேயே, "வண்புகழ் மூவர் தண்பொழில் உரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர்" என்றார் (1336). பாட்டு யாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழி யாப்பு, பிசியாப்பு, அங்கத யாப்பு, முதுசொல்யாப்பு என இவற்றை விரித்துக் கொண்டால் தெளிவாகும். பிசியாவது புதிர் (விடுகதை). அங்கதம் வசையும் இசையும் அமைந்த பா. முதுசொல் - பழமொழி. இவற்றின் விளக்கம் மேலேகாண்போம். சொல்மரபு சொல்லின் மரபு சொல்லும் ஆசிரியர், "மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று" என்கிறார் (1337). நாற் சொல்லாவது, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனச் சொல்லதிகாரத்துச் சொல்லப்பட்டவற்றை. ஓசைவகை அகவல் என்பது என்ன எனின், மயில் அகவுதல் போல்வது. அந்த யாப்பினை ஆசிரியர் கற்பித்தற்கும் நூல் இயற்றுதற்கும் பெரிதும் பயன்படுத்தியமையால் 'ஆசிரியப்பா' எனவும் பட்டது. நூல் இயற்றப் பயன்படுத்தியமையால் 'நூற்பா' எனப்பட்டது. இரண்டற்கும் வேறுபாடு, அகவற் பாவிற்குரிய அடிவரையறை, முடிநிலை என்பவை நூற்பாவிற்குக் கொள்ளுதல் வேண்டுவது இல்லை. ஓர் அடியாலும் வரலாம்; குறைந்தும் வரலாம். மிக்குப் பெருகிவரினும் அகவல் முடிவுபோல் முடியவேண்டும் என்பது இல்லை என்பவை இவற்றின் வேறுபாடாம். ஆசான், நுவல்வது > நூல் ஆயது; அதன்பா, நூற்பா எனப்பட்டது. நூல், மறை என்பன இலக்கணம் குறித்துநின்று பின்னர்ப் பொருள் விரிவும், திரிபும் கொண்டன. மறை என்பதன் பழம்பொருள் பாதுகாப்பு, களவு என்பவையாம். எ-டு: மெய்ம்மறை (கவசம்) ; மறையோர் - களவொழுக்கக் காதலர் (1442). அகவல் ஓசை இருவகையாம். அவை நேர் ஒன்றல், நிரை ஒன்றல் மா முன் நேர், விளமுன் நிரை என்பன. செப்பல் ஆசிரியர் உரைப்பது போல் ஒரு போக்காக இல்லாமல், கூற்றும் மாற்றமும் - செப்பும் வினாவும் - போல வரும் யாப்பு வெண்பா யாப்பு. "அஃதான் றென்ப வெண்பா யாப்பே" (அஃது + அன்று = அஃதான்று) வெண்பா ஓசை செப்பல். காய்முன் நேர்வரல் செப்பல். துள்ளல் கலிப்பாவின் ஓசை துள்ளல். நின்று மேலேறிக் கீழேவீழ்தல் துள்ளல் 'துள்ளல் ஆட்டம்' (துள்ளாட்டம்) ஆட்டங்களுள் ஒன்று. தத்து வாய்மடை, கலிங்கல் என்பவை நீர் துள்ளிவீழும் இடங்களாம். துள்ளி வீழும் நீர் துள்ளி > துளி ஆயது. மீன் துள்ளி, துள்ளம் என்பவை ஊர்ப் பெயர்கள். "தனதனனா தனதனனா தனதனனா தனதனனா" நீர் துள்ளி வீழ்தல்போல் சீர் இறுதி நெடிலாகவும் அடுத்த சீர்முதல் குறிலாகவும் இருத்தல் காண்க. "காய்முன் நிரைவரல் கலித்தளை" என்க. எ-டு. "அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்" தூங்கல் இனி "தனதனதன தனதனதன" என்னும் ஓசையுடன் வரின் வஞ்சித் தளை. அது தூங்கல் ஓசை எனப்படும். தூங்கல் என்பது யானை. அதன் கையை இப்பாலும் அப்பாலும் அசைப்பது போலவும், தொங்கும் ஊசல், காதணி, கடிகையாரத் தொங்கல் என்பன இயங்கும் இயக்கம் போலவும் இப்பாலும் அப்பாலும் செல்வது. தூங்கல் ஓசை வஞ்சிப்பாவின் ஓசை. கனிமுன் நிரையும், கனிமுன் நேரும் வருதல். முன்னது ஒன்றிய வஞ்சி; பின்னது ஒன்றா வஞ்சி. எ-டு : "முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தது" என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்து. இவை முழுவதும் ஒன்றிய வஞ்சி. மருட்பா இந்நாற்பாவுடன் மருட்பா என ஒன்று உண்டு. அதனை 'அம்மையப்பன்' போலவும் 'நரமடங்கல்' (நரசிம்மம்) போலவும் என்பார் யாப்பருங்கல விருத்தியார். யானைக் கையும், அரிமா உடலும் கொண்ட 'யாளி' என்னும் உருவம் கோயிற் சிலைகளில் உண்டே அது போல் என்பது. மருளாவது மயக்கம். இதுவும் அதுவும் கலந்த ஒன்று. வெண்பா முன்னாக அகவல் பின்னாக அமையும் யாப்பு அது (1342). செந்தொடை தொடை பற்றி முன்னரே கண்டோம் தொடை எதுவும் வாராமல் தொடுப்பதும் தொடையே! அது பொருளே போற்றிவரும் 'செந்தொடை' என்பது (1357). செம்மையாவது இயல்பு. இருபா அகவல் வெண்பா கலிப்பா வஞ்சிப்பா எனப் பாவகை நான்கெனக் கூறினும், அகவலுள் வஞ்சியும், வெண்பாவுள் கலியும் அடங்குதலின் ஆசிரியப்பா, வெண்பா என்னும் இரண்டு பாவினுள் அடங்கும் என்பார். (வஞ்சி நெடும் பாட்டு என்னும் பட்டினப்பாலையும், வெண்கலிப்பா, கலிவெண்பா என்னும் யாப்பும் இவண் நோக்கத் தக்கவை) வாழ்த்து 'ஐங்குறு நூல்' வாழ்த்துதலையே முதலடியாகக் கொண்ட முதற் பத்து உடையது. "வாழி யாதன் வாழி யவினி" என்பதே அம் முதலடி பத்தும். சிலப்பதிகாரக் காப்பியம், ஒருவரைக் காணும் காலும், அவரிடம் விடை பெறும் காலும் வாழ்த்துடன் வந்து வாழ்த்துடன் விடை பெறு தலைக் காட்டும். கடவுள் வாழ்த்திலேயே, திருவள்ளுவர் நீடு வாழ்தலைச் சுட்டினார் இருமுறை. இன்பத்துப் பாலில் நீடு வாழ்க என்பாக்குத் தும்முதலைச் சுட்டினார். வாழ்த்துதல் என்னும் பண்பு நம்மவர் உயர்பண்பு. இதன் மூல வைப் பகம் தொல்காப்பியம். அது, "வாழ்த்தியல் வகைநாற் பாவிற்கும் உரித்தே" (1366) என்று எங்கெங்கும் வாழ்த்துக்கு வழி கூறியுள்ளது. புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியறிவுறூஉ என்பவற்றை அறம் முதலாகிய மும்முதற் பொருளையும் காக்கும் வகையால் கூறுகின்றது (1363). புறநிலை வாழ்த்து நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னைக் காப்பதாக! பழியற்ற வகையில் செல்வம் சேர்வதாக! வழிவழியாகக் குடிநலம் பெருகி வாழ்வாயாக! - என்று வாழ்த்துவது புறநிலை வாழ்த்து (1367). "எவ்விடத்தாயினும் தெய்வம் உறைதலின், திருக்கோயில் வளாகமே யன்றி எங்கும் வழிபாடு செய்யலாம்; வாழ்த்துக் கூறலாம்" என்பதை உணர்த்தும் வகையால் புறநிலை வாழ்த்து என்றார். நீ வழிபடு தெய்வம் 'நிற்புறம் காப்ப' என்பது இறை உடனாகி ஒன்றாகிக் காக்கும் என்பது. "புறம் புறம் திரிந்த செல்வமே" என்னும் மணிவாசகத்தால் இது புலப்படும். மற்றும், "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்" என்னும் குறள் (1023) முயற்சியாளனுக்குத் தெய்வம் ஓடிவந்து உதவும் என்பதும் எண்ணத் தக்கது. "தெய்வம் நின்புறம் நிற்பதாக" என்று வாழ்த்துதலால் புறநிலை வாழ்த்தாம். வாயுறை வாழ்த்து வேம்புபோல் கசப்பும், நஞ்சுபோல் அழிப்பும் உடைய கொடிய சொற்கள் இடம் பெறல் இல்லாமல், வாழ்த்துதலும், நீ எடுக்கும் முயற்சி களும் செல்லும் செலவுகளும் மேலும் மேலும் நலமாக அமைவதாக என்று வாழ்த்துதலும் வாயுறை வாழ்த்தாம். வாயுறை வாயில் இருந்து பொழியும் அமிழ்து. வானில் இருந்து பொழியும் அமிழ்துபோல் வாயில் இருந்து பொழியும் அமிழ்து வாயுறை ஆயிற்று. உறை = மழை, அமிழ்து. இன்பத்து அமிழ்த்துவது ஆதலாலும் வாய்க்கண் இருந்து அவ்வின்பச் சுரப்பு வெளிப்படுதலாலும் வாயுறை ஆயிற்று. "வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே" என்னும் இந் நூற்பாவிற்கு (1369), "முற்பருவத்துக் கைத்தும் பிற்பருவத்து உறுதிபயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாயின சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்கு மெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்கும் கிளப்பினான் மெய்யாக அறிவுறுத் துவது வாயுறை வாழ்த்து எனப்படும்" என்பது பேராசிரியர் உரை. அவையடக்கியல் தேர்ச்சியில்லாத சொற்களைச் சொல்லும் வகை தெரியாமல் யான் சொன்னாலும் உங்கள் தேர்ச்சியால் அமைத்துக் கொண்டு அருள்வீராக என அவையோரை வேண்டிக் கொள்ளுதல் அவையடக்கியலாகும். அவையை அடக்குதல் தகுமோ எனின், அவைக்குந் தான் அடங்கியமை உரைத்து வேண்டுதலால் அவர்தம் தகவால் அடங்குவர் ஆதலால் அவரை, அடங்குதல் வகையால் அடக்குதல் ஆயிற்று என்க. "என்றும் பணியுமாம் பெருமை" என்பது கூறுவார்க்கும் கூறக் கேட்பார்க் கும் பொதுமையது ஆகலின். 'அடங்கிப் போதல், அடக்கும் கருவி' என்பது அரிய வாழ்வியல் வளச் செய்தியாம். செவியுறை செவியை உறுத்தும் வகையில் இடித்துக் கூறி இன்பம் சேர்ப்பது செவியுறை ஆகும். உறுத்தும் உரை உறை ஆயது. இடிக்கும் துணையாரை இல்லாதவர் வாழ்க்கை கெடுப்பவர் இல்லாமலும் கெடும் என்பது வாய்மொழி யாதலும், "இடிக்கும் கேளிர்" என்பது நட்பியலாதலும் அறிந்து போற்றத் தக்கவை. "செவியுறை தானே பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே" என்பது நூற்பா (1371). பொங்குதல் = செருக்குதல்; புரையோர் = உயர்ந்தோர்; அவிதல் = அடங்கி நடத்தல். "எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்வில்லை பெரியார்ப் பிழைத்தொழுகு வார்" என்பது வள்ளுவம் (896). புறநிலை வாழ்த்துக் கூறும்போது அவ் வாழ்த்து, கலிப்பாவும் வஞ்சிப்பாவும் கொள்ளாது என்றார் ஆசிரியர். ஏன்? வாழ்த்து அளவுடையதாக அமைதல் வேண்டும். வரம்பிலா வாழ்த்து இயல்பிலாததாகிவிடும். ஈரடி, மூவடி, நாலடி அளவில் அமையும் வெண்பாவும் அகவலும். ஆனால், கலியும் வஞ்சியும் அவ்வாறு அமையா. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம் என்ன அமையும் கலியும், அதன் இளையோன் போன்ற வஞ்சியும் வாழ்த்துக்கு வேண்டா என்று ஒதுக்கிய வகை இதுவாம் (1367, 1417). சிலர் மேடையில் வாழ்த்தும் வாழ்த்துதல் அவையோர்க்கு மட்டுமன்றி, வாழ்த்துப் பெறுவோரையும் நெளிய வைத்தல் கண்கூடு. அம்மட்டோ! அம் மேடை விட்டு இறங்கியதும் எவ்வளவு வாழ்த்திப் பேசினாரோ அதனினும் மிகப் பழிப்பதும் கேட்க, 'சீ! சீ! என்ன பிறவி இது' என்று பழி கொள்வாராக்கும், இவ் வாழ்த்து வேண்டுவது தானா? இதற்கு மாறானவரும் உண்டு. மனையில் புகழ்வார்; மன்றில் பழிப்பார் அவர். ஆதலால், "கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு" "எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு" என்றார் வள்ளுவர் (819, 820). வண்ணம் வளமான இசையமைந்த பா, வண்ணப்பா, வள் > வண். வண் + அம் = வண்ணம். வண்ணம் எழுத்தின் தோற்றத்திலேயே தோன்றியது. மெய்யியல் தோற்றம் எப்படி எழுத்தொடு கொண்டதோ, அப்படிக் கொண்டது வண்ணமும். ஓசை நயம் கொண்டு வண்ணங்களை இருபது எனக் குறித்தார் தொல்காப்பியர். அதனை நூறாக்கினர் பின்னவர்; பன்னூறாகப் பாடிய வரும் உளர். பாஅ வண்ணம்: அசையா சீரா தளையா பார்க்க வேண்டா வண்ணம் பாஅ வண்ணம். அவ் வண்ணம் இலக்கணம் கூறும் நூலுள் பயில (நிரம்ப) வரும். அதற்குச் சொல்லே சீராய் அமையும். நூற்பா வண்ணம் என்பதும் இதற்கு ஒரு பெயர். "அவற்றுள், பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்" என்னும் இந் நூற்பாவே, பாஅ வண்ணச் சான்று (1470) தாஅ வண்ணம்: இடையிட்டு வரும் எதுaகை யுடையது தாஅ வண்ணம். எ-டு: "உரிச் சொற் கிளவி விரிக்கும் காலை" (782) வல்லிசை வண்ணம்: வல்லெழுத்துப் பலவாக அமைந்தால் அது வல்லிசைவண்ணம். எ-டு: "மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை" (1025) மெல்லிசை வண்ணம்: மெல்லெழுத்துப் பலவாக அமைதல் மெல்லிசை வண்ணம். எ-டு: "வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்" (420) இயைபு வண்ணம்: இடையெழுத்துப் பலவாக வருதல் இயைபு வண்ணம். எ-டு: "தலைவரு விழும நிலையெடுத் துரைப்பினும்" (985) அளபெடை வண்ணம்: உயிரள பெடை, ஒற்றளபெடை என்னும் அளபெடை இரண்டும் மிகுந்து வருவது அளபெடை வண்ணம். எ-டு: "ஓரூஉ வண்ணம் ஒரீஇத் தோன்றும்" 1483) "கண்ண் டண்ண் எனக் கண்டும் கேட்டும்" நெடுஞ்சீர் வண்ணம்: நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடுஞ்சீர் வண்ணம். எ-டு: "கேடும் பீடும் கூறலும் தோழி" (1048) குறுஞ்சீர் வண்ணம்: குற்றெழுத்து மிகுந்து வருவது குறுஞ்சீர் வண்ணம். எ-டு: "புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ" (1053) சித்திரவண்ணம்: நெடிலும் குறிலும் ஒப்ப வருவது சித்திரவண்ணம். எ-டு: "காமம் நீத்த பாலி னானும்" (1022) நலிவு வண்ணம்: ஆய்த எழுத்து மிகுந்து வரின் அது நலிபு வண்ணம். எ-டு: "னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு" (123) அகப்பாட்டு வண்ணம்: இறுதியடி இடையே வரும் அடிபோல் நிற்பது.அதாவது முடியாத் தன்மையான் முடிந்ததாய் அமையும். எ-டு: "மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின்" (1593) (நுதலிய நெறியின இருவகை இயல எனமுடிக்க) புறப்பாட்டு வண்ணம்: முடிந்தது போல் தோன்றி முடியாததாய் வருவது புறப்பாட்டு வண்ணம். "இன்னா வைகல் வாரா முன்னே செய்நீ முன்னிய வினையே முந்நீர் வைப்பகம் முழுதுடன் துறந்தே" -ஈற்றயலடி முடிந்தது போன்று முடியாத தாயிற்று (பேரா). ஒழுகு வண்ணம்: ஒழுகிய இனிய ஓசையால் வருவது ஒழுகு வண்ணம். "உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும் மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும்"... (106) ஒரூஉ வண்ணம்: கூறப்பட்ட வண்ண வகையுள் எதனையும் சாராது வண்ணம் நீங்கிச் செந்தொடையாக வருவது. "சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்" (349) எண்ணுவண்ணம்: ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுவகை பொருந்தி வருவது எண்ணுவண்ணம். எ-டு: "நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்" (1589) அகைப்பு வண்ணம்: அறுத்து அறுத்து வருவது அகைப்பு வண்ணம். அகைத்தல் = அறுத்தல். "ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே....." (1526) தூங்கல்வண்ணம்: வஞ்சியுரிச் சீராகிய கனிச்சீர் மிகுந்து வருவது தூங்கல் வண்ணம். தூங்கல் = அசைநடையது. "முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை" (சிலம்பு) ஏந்தல் வண்ணம்: சொல்லிய சொல்லினாலே சொல்லப்பட்டது சிறக்க வருவது ஏந்தல் வண்ணம். "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்" (குறள். 751) உருட்டு வண்ணம்: உருளை ஓடும் ஓட்டம் போலச் சொல் ஓட வருவது உருட்டு வண்ணம். உருளற்கு ஏற்ப நெடிலும் வல்லொற்றும் பெரிதும் வாராது தொடுத்தல் வேண்டும். எ-டு: "எரியுரு வுறழ விலவ மலர" (கலி.33) முடுகு வண்ணம்: உருட்டு வண்ணம் போன்று, நாற்சீரடியின் மிக்க அடியில் வருவது முடுகுவண்ணம். எ-டு: "நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ" (கலித். 39) வண்ணங்கள் இவை என எண்ணி அவற்றை நிரற்பட உரைத்து நிறைவில், "வண்ணந் தாமே இவையென மொழிப" என முடித்தார் (1490). வண்ண இயற்கை: வண்ணங்கள் இருபதும் குறுங்கணக்கு, நெடுங் கணக்கு என்னும் 'அரிவரி' வரிசையிலேயே இயல்பாக அமைத்துக் கொண்ட அருமை வியக்கத்தக்கதாம். பெயர்களைப் பாருங்களேன்: பா அ வண்ணம், நூற்பா வண்ணம், தாஅ வண்ணம் - இடையிடல்தானே தாவுதல்; வல்லிசை, மெல்லிசை, இயைபு ஆகிய மூன்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் வருதல் தானே. இனி, அளபெடை வண்ணம் சீரிய ஓசை நீட்டம் கருதியது அல்லவோ! நெடுஞ்சீர் குறுஞ்சீர், சித்திரம் நலிபு என்பவை முறையே நெடில், குறில், நெடிலும் குறிலும், ஆய்தம் என்பவை மிகுந்தவைதாமே. அகப்பாட்டு புறப்பாட்டு வண்ணங்கள் முடிநிலை பற்றியவை. ஒழுகு வண்ணம் ஆற்றுநீர் ஓட்டம் போல்வது; ஒரூஉ, வண்ணமில்லா வனப் பினது; எண்ணுவண்ணம் எண்ணிக்கை சுட்டிவருவது. தூங்கல், ஏந்தல், உருட்டு, முடுகு என்பவை முறையே அசைந்துவருதல், பல்கால் வருதல், உருண்டுவருதல் ஆகிய நடைகுறித்தவை. இவையெல்லாம் செயற்கை யில்லா இயற்கை யமைந்தவை. இனி, இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் எங்கிருந்து காட்டப்பட்டன என்பதைப் பாருங்கள். 14 வண்ணங்களுக்குத் தொல்காப்பியத்தில் இருந்தே எடுத்துக்காட்டுகள் காட்டப்பட்டுள. ஏந்தல் வண்ணத்திற்கு "இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு, இன்னென் சாரியை இன்மை வேண்டும்" என்பதும் (131) உருட்டு வண்ணத்திற்கு, "உளவென மொழிப இசையொடு சிவணிய" என்பதும் (33) எடுத்துக்காட்டு ஆகலாம். அவ்வா றாயின், நான்கு வண்ணங்களுக்கு மட்டுமே எடுத்துக்காட்டுக் காட்ட இயலாதாயிற்று. ஏன்? ஒற்றளபெடை வருதல் இலக்கிய வழக்கிலும் அரிதானது. புறப்பாட்டு வண்ணம் நூற்பாவிற்கு ஏலாதது. தூங்கல் வண்ணம் வஞ்சியடி யுடையது; நூற்பாவோ அகவலடி யுடையது. இனி முடுகு வண்ணமோ நாற்சீர் அடியின் மிக்க அடிக்கண் வருவது; நூற்பா அடிக்குப் பொருந்தாதது. இன்னவற்றாலேயே, இவ்வண்ணங்களுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியத்திலே இலக்கியமும் காட்ட இயலாததாயிற்று. வண்ணம் பாடிய இசை நூலும் அன்று; காப்பியமும் அன்று; தொல்காப்பியம். இலக்கணம் கூற வந்தநூல் இவ்வளவும் கூறியது செயற்கரிய சீர்மையது அன்றோ! ஓர் இலக்கணத்தை இத்தகு சுவையும் நயமும் கமழ இயற்றல் எளிமையாமா என்பதை உணர்ந்து போற்றுவதற்கே நாம் எடுத்துக் கூறுவதிதுவாம். தொல்காப்பியர் அரிய படைப்பாளி மட்டுமல்லர்; மிக இனிய துய்ப்பாளியுமாவர் என்பதன் சான்றுகளுள் ஈதொன்று என்க. வனப்பு வனப்பு எனச் சொல்லப்பட்ட செய்யுள் உறுப்புக் கூறும் ஆசிரியர், அம்மை முதலாகக் கூறுகிறார். வனப்பு = இயற்கை எழில் (வனம் > வனப்பு). "கைபுனைந் தியற்றாக் கவின்பெரு வனப்பு" என்பது முருகு. அம்மை: "அம்மை தானே அடிநிமிர்வு இன்றே" (1491) என்கிறார். நிமிர்தல் = மிகுதல். அடிமிகாமல் சுருங்கச் சொல்வதே அம்மை என்னும் அழகாகும். பத்துவகை அழகுகளில் சுருங்கச் சொல்லல் என்பதே முதல் அழகு (நன்). "அம்ம கேட்பிக்கும்" (61) என்பது போதுமே. அழகு : செய்யுட் சொல்லாகிய உரிச்சொல் மிகுதியாக வர இயற்றுவது அழகு என்னும் வனப்பாகும். எ-டு : "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்" (813) தொன்மை : இடை இடையே உரைநடை வரப் பழமையாக வழங்கிவரும் பொருளைக் கூறும் செய்யுள்களை யுடையது தொன்மை. இதற்குத் 'தகடூர் யாத்திரை'யைக் கூறுவர். சில பாடல்களை யன்றி நூல் எய்திற்றில்லை. எய்திய பாடல்கள் எம்மால் உரைகண்டு நூலாக்கம் பெற்றுளது. பெருந்தேவனார் பாரதம் உரையிடை இட்டது. தோல் : 'இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்தமொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர்" என்னும் இந் நூற்பாவின் முதல் இலக்கணத்திற்கு இம் முதல் அடியே எடுத்துக்காட்டு. பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகுவதற்குச் சான்று பத்துப்பாட்டு. விருந்து : விருந்து என்பது புதிதாகப் பாடும் நூல் வகையைக் குறிக்கும். புதுயாப்பினது என்பதுமாம். முத்தொள்ளாயிரம், அந்தாதி, கலம்பகம் என்பவற்றை எடுத்துக்காட்டுவார் பேராசிரியர். இயைபு: 'ஞ்' என்னும் எழுத்து முதல் 'ன்' என்னும் எழுத்து ஈறாக வரும் புள்ளி எழுத்துக்களைக் கொண்டு முடியும் பாடல்களையுடைய நூல் இயைபு இலக்கணம் உடையதாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்பன இவ்வகையின. 'என்' என முடிந்தவை. புலன் : எளிய வழக்குச் சொற்களைக் கொண்டு ஓடிய ஓட்டத்தில் பொருள் புரியுமாறு பாடப்படுவது புலன் என்னும் வனப்பாகும். எ-டு : குடும்ப விளக்கு; இருண்ட வீடு; பாஞ்சாலி சபதம். இழைபு : வல்லொற்று வாராது குறளடி முதலாக ஏறிய அடிகள் பலவும் வரத்தொடுப்பது இழைபு வனப்பு எனப்படும். இதுவும் புலன் போன்ற பொருள் புலப்பாடு உடையதாதல் வேண்டும். எ-டு : கலியும், பரிபாடலும் என்பார் பேராசிரியர். வனப்பு அமைக. இனிப் 'பா' பற்றிச் சில காணலாம். பா, உரைப்பா பா = பாட்டு. இப் பாட்டினைத் தொல்காப்பியத்தை உள்வாங்கி, ஏட்டுப்பாட்டு எனவும் நாட்டுப்பாட்டு எனவும் இரு வகையாகக் காணலாம். ஏட்டுப்பாட்டு என்பது அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபா, அங்கதப்பா, தேவபாணி என்பனவாம். நாட்டுப்பாட்டு என்பது, உரைப்பாட்டு, பிசிப்பாட்டு, முதுமொழிப் பாட்டு, மந்திரப்பாட்டு, குறிப்புப்பாட்டு, பண்ணத்தி என்பவை. அகவல் : அகவல் முதலாகிய பாக்கள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளும் கூறுவனவாக வரும். அவற்றுக்குச் சீர் வரை யறை அடிவரையறை முடிநிலை வரையறை என்பவையும் உண்டு. ஆசிரியப்பா நால்வகைப்படும். அவை நேரிசை, நிலைமண்டிலம், அடிமறிமண்டலம், இணைக்குறள் என்பன. இறுதியடிக்கு முன்னடி முச்சீராய் வருவது நேரிசை. எல்லா அடிகளும் நாற் சீராய் வருவது, நிலைமண்டிலம். எந்த அடியை எந்த அடியாக மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது, அடிமறி மண்டிலம். முதலடியும், இறுதியடியும் நாற்சீரடியாய் இருக்க இடையடிகள் சில இருசீர் முச்சீர் அடிகளாகவும் வருதல், இணைக்குறள். ஆசிரியப்பா இது சங்கநாளில் பெருஞ் செல்வாக்குடையதாக விளங்கியது. மேற்கணக்கு எனப்படும் பாட்டு, தொகையாகிய பதினெட்டு நூல்களில் கலித்தொகை, பரிபாடல் என்னும் இரண்டும் தவிர்ந்த பதினாறு நூல்களும் அகவலால் அமைந்தவையே. இந் நாள்வரை அதன் செல்வாக்குப் பெருகியே உள்ளது. மூன்றடிச் சிறுமை ஆயிரம் அடிப்பெருமை எனப்பட்ட அப் பா ஆயிரம் அடியைத் தாண்டியும் வள்ளலாரால் பாடப்பட்டது. வெண்பா : வெண்பா ஈரடிச் சிறுமையும் பாடுவோர் எண்ணத் திற்குத் தகுந்த பெருமையும் உடையது. கலித்தொகையில் கலிவெண்பாவும் உண்டு. குறள்வெண்பா, குறுவெண்பாட்டு எனப்படும். அதனின் நீண்ட வெண்பா நெடுவெண்பாட்டு எனப்படும். குறுவெண்பாவுக்குக் குறள் நூலும், மற்றை வெண்பாவுக்குப் புறப்பொருள் வெண்பாமாலையும் நமக்குக் கிடைத்த தனி நூல்கள். பாரத வெண்பா பெருந்தேவனார் பெயரால் விளங்குகிறது. உரையிடையிட்ட வெண்பாவுடையது. 830 பாடல்கள் அளவில் முன்னும் பின்னும் இல்லாமல் கிடைத்து வெளிப்பட் டுளது. அது பிற்காலத்தே உரையிடையிட்ட தோற்றமுடையது ஆயிற்றுப் போலும்! வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா எனப் பல வகைகளை யுடையது. வெண்பாப் பாடுதலில் பின்னாளில் பெரும் புகழோடு விளங்கியவர் புகழேந்தியார். அவர் கொண்டவை நேரிசை வெண்பா. நான்கடியான் வருவது அது. மூவடியால் வருவது சிந்தியல். இரண்டாமடியில் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை; பன்னீரடி வரையுடையது பஃறொடை (பல தொடை); அதனின் நீண்டது கலிவெண்பா. கலிப்பா : கலிப்பா பல உறுப்புகளையுடையது. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம், வண்ணகம் என்பன அதன் உறுப்புகள். கொச்சகம் சிலவாகவும், பலவாகவும் வரும். பின்வந்த தாழிசை, துறை, விருத்தம் என்னும் இனப்பாவிற்குத் 'தாய்ப்பா' கலிப்பா. தரவு - முற்படத் தந்து நிறுத்துவது. தாழிசை-தாழமமைந்த ஓசையுடையது; ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது. சுரிதகம் - முடிநிலை. அம்போத ரங்கம் - நீரலை போல்வது; கரைசாரச்சாரச் சுருங்கி வரும் அலைபோலச் சுருங்கிவரும் அடிகளையுடையது. கொச்சகம் என்பது கொய்சகம். மகளிர் உடுத்தும் உடை இடையில் மடிப்புடன் வருவதுபோல் வருவது. இன்றும் 'கொசுவம்' என வழங்கப்படுவது. விரிவுமிக்கதும் கூற்றும் மாற்றமுமாகத் தொடர வாய்த்ததும், இசை கூட்டிப் பாட வாய்ப்பதும் இது. காலப்போக் கில் அருகி வருவது இப்பா. வண்ணகம் இசை நலம்மிக்கது. வஞ்சிப்பா : வஞ்சிப்பா குறளடி வஞ்சி, சிந்தியல் வஞ்சி என இருவகையது. முன்னது இரு சீராலும் பின்னது முச்சீராலும் வருவது. வஞ்சிப்பாவும் பாடுதல் அரிதாயிற்று. அன்றியும் அப் பாவால் அமைந்த நூல் ஒன்றுதானும் இல்லை. கிடைத்தவை தனித்த பாடல்களேயாம். பரிபா : பரிபா என்பது கலிப்பாவைப் போல் பல உறுப்புகளை யுடையது (1377). 140 அடி வரை நீள்வது; 25 அடிச் சிறுமையது; அருவியும் ஆறும் பரியும் கரியும் கீரியும் முயலும் நடையிடுவது போன்ற நடையது. பண்வகுத்துப் பாடப்பட்ட பெருமைக்குரியது. இந் நாளில் அதனைப் பாடுவார் அரியர் ஆயினர். அந் நாளில் ஒரு நூலாவது கிளர்ந்தது. அதன் பெயர் பரிபாடல். 70 பரிபாடல்களில் முற்றாகக் கிடைத்தவை 22 மட்டுமே. மருட்பா : மருட்பா வெண்பாமுன்னாகவும் அகவல் பின்னாகவும் கொண்ட மயக்கப்பா என்பது முன்னரே கண்டுளோம். தனிநூலாக்கம் மருட்பா பெற்றதில்லை. அங்கதம் : அங்கதப்பாவும், தேவபாணிப் பாவும் பொருள் வழியால் பெயர் பெற்றவை. தனியாப்புப் பெற்றவை அல்ல. அங்கு = வளைவு. சொல்வதை உள்ளது உள்ளபடி நேருக்குநேர் உள்ளவாறு கூறாமல், புகழாகவும் வசையாகவும் பாடுவது அங்கதமாகும். அங்கதம், செம்பொருள் பழிகரப்பு (பழியை மறைத்துக் கூறல்) என இருவகைப்படும் (1381). செம்பொருள் என்பது வசையை வெளிப்படக் கூறும். வசையை மறைத்துக் கூறுதல் பழிகரப்பு. தேவபாணி என்பது, இறை வழுத்துப் பாடல். அது பாடல் அளவால் பெருந்தேவபாணி, சிறு தேவபாணி என இருவகைப்படும் (1395) கலி வகையைச் சேர்ந்தது. பாடுபுகழ் : சங்க நாளில் "இன்னது பாட இவர்" என்னும் புகழ் பெற்றார் இருந்தனர். குறிஞ்சிக்குக் கபிலன்; முல்லைக்கு நப்பூதன்; மருதம் மருதனிலநாகன்; நெய்தல் நல்லந்துவன்; பாலை பெருங்கடுங்கோ. இவர் இத் திணைகளைப் பாடுதலில் வல்லார். பரணன் வரலாறு பாடுதலில் வல்லான். பின்னாளிலும் 'இது பாட இவர் வல்லார்' எனப் புகழ் மரபு ஒன்றும் கிளர்ந்தது. இனி, அடி வரையறை இல்லாத உரை முதலியவற்றை எண்ணு வோம். இவை பொதுமக்கள் புலமக்களாய்த் தமிழுக்கு வழங்கிய கொடையாகும். உரைப்பா : உரைப்பா நான்கு வகை என்பதை, "பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பா இன்று எழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் உரைவகை நடையே நான்கென மொழிப" என்பார் ஆசிரியர் (1429). இதில் வரும் உரைவகை நடை என்பதே 'உரைநடை' என்னும் வழக்குக்கு மூலமாகும். பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட்குறிப்பு உரை, பாடல் இல்லாமலே சொல்லப்பட்ட உரை, பொருளொடு பொருந்தாத பொய் (புனைவு) உரை, பொருளொடு பொருந்திய நகைச்சுவை உரை என நால்வகை உரைநடைகளும் பண்டுதொட்டே வழங்குதலைக் குறிக்கிறார் ஆசிரியர். ஆதலால், பண்டை உரைநடை வழக்குக்குன்றி மீட்டெடுப்புச் செய்யப்பட்டது பின்னே என்பதை உணரலாம். மெய்ப்பாடுகளுள் முதற்கண் வைக்கப்பட்டது 'நகைச்'சுவை. அச் சுவை மிக ஆக்கப்பட்ட உரைநடை நூல்கள், அந் நாளே இருந்தன என்பதையும் இந் நூற்பாவால் உணரலாம். பிசி : பிசி என்பது 'புதிர்' என இந் நாளில் வழங்குகின்றது. 'விடுகதை' எனவும் படுகிறது. ஒப்பமைந்த உவமை, ஒன்று சொல்ல ஒன்று தோன்றுவதாம் குறிப்பு என இருவகையாகப் பிசிவரும். "அச்சுப் போலே பூப்பூக்கும் அமலே என்னக் காய்காய்க்கும்." இது, உவமை பற்றி வந்தது என்பார் இளம்பூரணர். 'பிறை கவ்வி மலை நடக்கும்' என்றுரைத்து யானையைச் சுட்டுவார் பேராசிரியர். "நீராடான், பார்ப்பான் நிறம் செய்யான் நீராடின் ஊராடு நீரிற்காக் கை" என்று பின்னதற்கு எடுத்துக்காட்டும் தருவார் அவர். இது நெருப்பு. முதுமொழி : நுண்மை - சுருக்கம் - விளக்கம் - எளிமை என்பவை விளங்கக் கருதிய பொருளைத் தருவது முதுமொழியாகும். "கன்றுக் குட்டிமேயக் கழுதைக் குட்டியைக் காதறுத்தான்" என்பதும் "பழிஓரிடம்; பாவம் ஓரிடம்" என்னும் பழமொழியும் அறிக. மந்திரம் : "நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" என்பது இதன் இலக்கணம் (1434). சொல்லிய சொல், வெல்லும் சொல்லாக அமையவல்லார் ஆணை மொழியே மந்திரம் ஆகும். 'தானே' என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரம் என்பதற்கு என்றார் பேராசிரியர். இதற்கு அவர் காட்டும் பாட்டுகளும் விளக்கமும்: "ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தால் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால் செந்தமிழே தீர்க்க சுவா" எனவும், "முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - அரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தம் சேர்க சுவா" எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் என்பது. குறிப்பு : குறிப்பு என்பது எழுத்தொடும் சொல்லொடும் பொருந் தாது, புறத்தால் பொருள் அறியுமாறு பாவால் கூறுவது. பிசிக்கும் இதற்கும் வேறுபாடு அது உரைப்பாட்டாய் வருவது; இது பாவாய் வருவது என்பது. "குடத்தலையார் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய மூக்கின ராம்" என்பது பேராசிரியர் காட்டும் எடுத்துக்காட்டு. இது, யானை. பண்ணத்தி : பாட்டிடையே அமைந்ததாய்ப் பாட்டாகி வருவது பண்ணத்தி (1436). நத்துதல் விரும்புதல். பண் நத்தி என்பது பண்ணத்தி. சிலம்பில் பாட்டின் இடையே பாட்டென எதுகை மோனை இயைய நடையிடும் உரைப்பாட்டு மடை இஃதாகும். இசைநய எடுப்பொடும் பாடற்கும் ஏற்றதாம். நிறைவு "சொல்லப்பட்ட இலக்கணம் பிழைத்தது போலத் தோன்றினும், தோன்றக்கூடும். அதனை வந்ததொன்றைக் கொண்டு மாறுபாடு இல்லாமல் அமைத்துக் கொள்ளுதல் தெளிந்த அறிவினர் கடமை" என்று இச் செய்யுளியலை நிறைவிக்கிறார் ஆசிரியர் (1499). மரபியல் வழக்கு : "வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லானே" (1592) என வழக்கு என்பதைக் கூறுகிறார். "பண்புடையார்ப் பட்டுண் டுலகம்" என்பது இது. சட்டத்தின் ஆளுகையினும் சான்றோர் காட்டும் சால்பு ஆளுகையே உலகை - உலகியலைக் காக்கும் என்பதன் குறிப்பு இதுவாம். மரபு : சான்றோரும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபு ஆகும். மரபு மாற்றருஞ் சிறப்பினது என்கிறார். ஏனெனில், மரபுமாறின் பிறிது பிறிதாகிப் போகும் (1500, 1591). மரபு என்னும் சொல்லே, அதன் பொருள் விளக்கமாக உள்ளது. ஒரு மரத்தின் வித்து மீண்டும் மரமாகி வித்துத் தந்து, வழிவழி மாறாமை போல, மரபு என்பது மாறாதது; மாற்றக் கூடாதது; மாற்றின் பொருட்கேடாகும் என்பவற்றை எண்ணல் நலம். இளமை : மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் குறிப்பிட்டு முறையே அவற்றை விளக்குகிறார். தொல்காப்பியர் கூறும் இளமைப் பெயர்கள் பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்பவை. ஆண்மை : ஆண்பாற் பெயர்களாக ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பவற்றைக் குறிக்கிறார். பெண்மை : பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பவை பெண்பாற் பெயர் என்கிறார். இளமைப் பெயர்களும், அவற்றைப் பெறுவனவும் பார்ப்பு - பறவை, தவழ்பவை, குரங்கு. பறழ் - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குட்டி - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குருளை - நாய், பன்றி, புலி, முயல், நரி. கன்று - யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). பிள்ளை - பறவை, தவழ்பவை, மூங்கா, வெருகு, எலி, அணில், பன்றி, புலி, முயல், குரங்கு, ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). மக - குரங்கு, மக்கள். மறி - ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய். குழவி - குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம், மக்கள், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). போத்து - ஓரறிவு (நெல் புல் அல்லாதவை). இவ் விளமைப் பெயர் முதல் அடங்கலில் சுட்டப்படாதது : ஆண்பாற் பெயர்களுள் அமைந்தது. "குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே" என மக்கள் இளமைப் பெயர் இரண்டே குறிக்கிறார். 'இரண்டு அல்லவை கிளவ (சொல்ல) அல்ல' என்றும் கூறுகிறார். ஆய்வு பிள்ளை என்னும் பெயர் பெருவழக்காக இந் நாள் உள்ளது. ஆண்பிள்ளை, பெண்பிள்ளை, ஆண்பிள்ளைப்பிள்ளை (ஆம்பிளப் பிள்ளை), பெண்பிள்ளைப் பிள்ளை (பொம்பிளப் பிள்ளை) எனவும் வழங்குகின்றன. 'பிள்ளைத்தமிழ்' இலக்கியம் பெருவரவினது. 'பிள்ளை யாண்டான்' என்பதும் வழக்கு. இவ்வாறு வழக்கு உள்ளமையால், "முடிய வந்த அவ்வழக்கு உண்மையின் கடிய லாகா கடனறிந் தோர்க்கே" என்னும் ஆணை கொண்டு நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் (1568). குழந்தை என்னும் பொருளில் 'பாப்பா' என்பது பெருவழக்காக உள்ளது. பார்ப்பு, பறவை இளமைப் பெயர். அப் பெயர் பாப்பு - பாப்பா என ஆயது. பெண் குழந்தை கண்'பாவை' எனப் பெற்றோரால் பேணப் படுவதால் 'பாவை' எனப்பட்டது. பார்வை > பாவை. பாவை நோன்பு, பாவை ஆட்டம் என்பன வழக்கில் உள்ளன. இஞ்சி, மஞ்சள் முளைகள் பழநாள் தொட்டுப் 'பாவை' என வழங்கப்பட்டன. அப் பெயர், இப் பட்டியில் இடம்பெறவில்லை. குருளை 'சிங்கக் குருளை' எனக் கம்பரால் ஆளப்படுகின்றது. சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது அது. 'குட்டி' என்னும் பெயர் பெண் மக்கள் இளமைப் பெயராக வழங்கப்படுதல் எவரும் அறிந்தது. அது போல் 'குட்டன்' ஆண்பாலுக்கு வழங்கப்படுதல் நாலாயிரப் பனுவலில் உண்டு. 'என் மாணிக்கக் குட்டன்' என்பது அது. இப் பெயர்கள் சேரலத்தில் பெருவழக்காக உள்ளவை. குட்டியப்பா சிற்றப்பா; குட்டிப்பல் சிறியபல்; குட்டி சிறுமை ஒட்டு. இவ்வாறு இவ் வியலை ஆய்தல் பெரும் பயன் செய்யும். இவ் வியலில் விடுபாடு உண்டு; இடைப்பாடு உண்டு; முன்பின் தள்ளல் உண்டு; பொருந்தாச் சேர்ப்பும் உண்டு. மரபு காக்கவென்றே ஆக்கப் பட்ட அருமையமைந்த இவ் வியலில் உள்ள மரபுக் கேடுகள் பலப்பல. அவை தனியே ஆயப்பட்டுத் தனி நூலாக்கம் பெறுகின்றன, இங்கு இவ் வாழ்வியல் நோக்குக்கு ஏற்ற அளவில், குறிப்புகள் இடம்பெறு கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி மேலே செல்லலாம். "சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே" என்று முடித்த ஆசிரியர், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமைந்த உயிரிகளைப் பற்றிக் கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டில், 'செடி கொடிகளுக்கு உயிர் உண்டு' என்பதை ஆய்ந்து உலகப் புகழ் பெற்றார் சர் சகதீச சந்திரபோசு. ஆனால், அவர்க்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியரால் காணப்பட்ட அவ் வுண்மை, தமிழரால் அறிவிக்கப்படாமலும், ஆராய்ந்து நிறுவப்படாமலும் அடங்கிக் கிடப்பதாயிற்று. அறிவியல் விளக்கமாக அமைந்த இப் பகுதியை இன்றேனும் தமிழ அறிவியலார் பயன்கொள்ளல் கட்டாயத் தேவை. தமிழில் அறிவியல் சிறந்து விளங்கியமையை உலகுக்கு எடுத்துக்காட்டலும், தமிழ் மரபில் அறிவியல் நூல் யாத்தலும் அவர்தம் கடமையாம். இதற்கு ஓர் அறிமுகமாக எம்மால் 'தமிழில் அறிவியல்' என்றோர் சுவடி வெளிப்படுத்தப்பட்டுளதாம். அறிவுவகை அறிவியல் எவ்வளவு எளிமையாய் இனிமையாய் உயிரோட்டம் பெறுகிறது என்பதை இந் நூற்பாக்களைக் கொண்டு தெளிக. 'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே; இரண்டறி வதுவே அதனொடு நாவே; மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே; நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே; ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே; ஆறறி வதுவே அவற்றொடு மனனே; நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே" (1526) இவ்வாறு அறிவு வகை கூறியவர், அவ் வறிவு உயிர்களை எடுத்துக் காட்டுகிறார். "புல்லும் மரனும் ஓரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே" "நந்தும் முரளும் ஈரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே" "சிதலும் எறும்பும் மூவறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே" "நண்டும் தும்பியும் நான்கறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே" "மாவும் மாக்களும் ஐயறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே" "மக்கள் தாமே ஆறறி வுயிரே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே" (1527 - 1532) எமக்கு முன்னரே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே என்று முந்தை அறிவரைச் சுட்டினார் ஆசிரியர். புல்லும் மரனும் என்றால் பூண்டு, செடி, கொடி என்பன அக் கிளைப் பிறப்பு. அவ்வாறே பிறவும் கொள்க. ஆய்வு ஐந்து வகை, உயிரிகளையும் சுட்டும் நூற்பாக்களின் அமைதி கண்டு, ஆறாம் அறிவு உயிரியைச் சுட்டும் நூற்பாவை மீண்டும் காண்க. "மக்கள் தாமே ஆறறி வுயிரே" என்னும் இந் நூற்பா, இவ் வோரடியால் முடிந்து விடவில்லையா? ஐந்து நூற்பாக்களிலும் 'பிறவும் உளவே' என்பதைப் படியெடுத்த கை, ஆறாவதும் அப்படியே எடுத்துவிட்டது என்பது புலப்படவில்லையா? மக்களைச் சுட்டிய அவர் மக்கள் தாமே என்று உறுதிப்படுத்தி யமை புலப்படவில்லையா. பிறரைச் சுட்டவேண்டிக் கூறினார் எனின், அடுத்த அடியைப் 'பிறரும் உளரே அக்கிளைப் பிறப்பர்' என்றல்லவோ யாத்திருப்பார்? இதன் விளைவு என்ன? "மக்கள் தேவர் நரகர் உயர்திணை" என நன்னூலாரை நூற்பா யாக்க வைத்ததென்க. 'தேவரும் நரகரும்' வடவேங்கடம் தென்குமரி ஆயிடை வாழ்நரா? செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தரா? காழ் : ஓரறிவு முதலாகக் கூறிய ஆசிரியர் புறக்காழ், அகக்காழ் (வயிரம்), தோடு, இலை, காய் இன்னவற்றைக் கூறவேண்டுமானால் எங்கே கூறுவார்? கூறியிருப்பார்! இவ் வுயிரிகளைத் தொடர்ந்து தானே கூறி யிருப்பார். வைப்பு முறை தவறா வன்பிடியராகிய அவர் தம் 'கட்டமைதி' அறிந்தார், இவ் விட்டமைதியைத் தெளிவாக அறிவர். 1532ஆம் நூற்பாவில் இருந்து 1585ஆம் நூற்பா வரை 'இடைப் பிற வர' நூல் யாப்பாரா? அவர் வரன்முறைப்படியே ஆண்பாற் பெயர் பெண்பாற் பெயர் இவற்றை முடித்து, அந்தணர், அரசர், வைசியர், வேளாளர், மாந்தர் என்பார் பற்றி 1570 முதல் 1584 வரை கூறுகிறார். பின்னர் ஓரறிவுயிர் பற்றித் தொடர்கிறார். இவை அவர் வைப்பு முறை எனலாமா? "எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல்மிதக்கும்" என்பது பழமொழி. இடைச்சேர்ப்பின் உண்மை வெளிப்பாடு இஃதென்க. இதனைப் பற்றி அப் பகுதியில் காணலாம். ஆண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் ஏறு - பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், சுறா. ஏற்றை - எல்லா ஆணுக்கும் பொது. ஒருத்தல் - புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை. களிறு - வேழம், கேழல். சே - எருது. சேவல் - மயிலலாப் பறவை, குதிரை. இரலை - புல்வாய். கலை - புல்வாய், உழை, முசு. மோத்தை - ஆடு. தகர் - ஆடு. உதன் - ஆடு. அப்பர் - ஆடு. போத்து - பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்வன, மயில், எழால். கண்டி - எருமை. கடுவன் - குரங்கு. பெண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் பேடை - கோழி பெடை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெட்டை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெண் - மக்கள். பிணா - மக்கள். மூடு - ஆடு. நாகு - எருமை, மரை, பெற்றம், நந்து. கடமை - ஆடு. அளகு - கோழி, கூகை, மயில். மந்தி - குரங்கு, முசு, ஊகம். பாட்டி - பன்றி, நாய், நரி. பிணை - புல்வாய், நவ்வி, உழை, கவரி. பிணவு - பன்றி, புல்வாய், நாய். பிணவல் - பன்றி, புல்வாய், நாய். பிடி - யானை. ஆ - பெற்றம், எருமை, மரை. இவற்றைக் கூறிய ஆசிரியர், கூகையைக் கோட்டான் என்பதும், கிளியைத் தத்தை என்பதும், வெருகைப் பூசை என்பதும், பன்றியை ஏனம் என்பதும் பிறவும் சுட்டுகின்றார். இவ்வளவும் கூறியபின், "பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே" என எடுத்த பொருளை முடித்ததைக் கூறுகிறார் (1569) ஒட்டுவேலை இதன் மேலே தொடர்கிறது நூற்பா: "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய" (1570) மேலே அரசர்க்குரியவை. வைசிகற்குரியவை, வேளாண் மாந்தர்க் குரியவை இவை இவை எனக் கூறுகிறார். 'இழிந்தோர்' என்று நாலா மவரைச் சுட்டுகிறார். இவற்றை முடித்து, 'புறக்காழ்' தொடங்குகிறார். இவ்வாறு தொல்காப்பியர் அமைத்திருத்தல் இயலாது என்பதை அவர்தம் ஓரியல் ஓதினாரும் அறிவர். இவ் வியலிலேயே 'மாற்றருஞ் சிறப்பின் மரபு' என்று தொடங்கி இளமைப் பெயர், ஆண்பாற்பெயர். பெண்பாற் பெயர் இன்னவை எனக் கூறினார். இளமைப் பெயர் இவை இவை பெறுமென (1503 - 1524) உரைத்து, "சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே" என முடித்தார் (1525). அதன்மேல் ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களை ஓதினார் (1526 - 1532). அந் நூற்பாவில், 'மக்கள் தாமே ஆறறிவுயிரே' என்று கூறி ஆண்பாற் பெயரை (1533 - 1549) நிறைத்து, "ஆண்பால் எல்லாம் ஆண் எனற் குரிய; பெண்பால் எல்லாம் பெண் எனற் குரிய; காண்ப அவைஅவை அப்பா லான" என்றார் (1550). அதன்மேல் பெண்பாற் பெயரைக் கூறத் தொடங்கி, "பிடியென் பெண்பெயர் யானை மேற்றே" (1551) எனக்கொண்டு "பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே" என முடித்தார் (1569). கூறிய இவை 'மாற்றருஞ் சிறப்பின் மரபு'கள் என்பதில் தடையில்லை. ஆனால், நூலே கரகம், படையும் கொடியும், கண்ணி யும் தாரும், வாணிகம் வேளாண் என்பவை மாற்றருஞ் சிறப்பினவா? மாறுவது மரபா? இளமை, ஆண்மை, பெண்மை என்பவை தற்கிழமை - தன் பிறப்புரிமை - கொண்டவை. பின்னே கூறியவையோ 'எடுத்தால் உண்டு. விடுத்தால் இல்லை. இவை பிறவியுரிமை எனின், இளமை போலவோ, ஆண்மை போலவோ, பெண்மை போலவோ பிறவியொடு வந்தவையா? எங்கேனும், பிறந்த பிறவி நூலொடும், படையொடும், குடை யொடும் ஏரொடும் பிறவொடும் பிறந்ததுண்டா? ஏன்? மானங்காக்கும் உடையொடு தானும் பிறந்ததுண்டா? மேல் தோல் - தற்கிழமை. உடை - பிறிதின் கிழமை. (கிழமை = உரிமை). கதை கட்ட வேண்டுமானால், கவசகுண்டலப் பிறப்புக் கூறிப்பொய்ப்பிக்கலாம். நடைமுறை ஆகுமா? இருதலை ஒட்டல், ஈருடல் ஒட்டல் நேரலாம். அவை பிறப்பொடு நேர்ந்தவை. இயற்கை இணைப்பு. செய்பொருள் தாய் வயிற்றினின்று வரும்போதே இருந்ததென்றால், சொல்பவர் சொன்னாலும் கேட்பவர்க்கு மதிவேண்டும் அல்லவோ! மரபொடு பொருந்தாத ஒட்டு ஒன்றை ஒட்டவே இயற்கையாய் அமைந்திருந்த தொடர்ச்சியை வெட்டி ஊடே தம் விருப்பத்தை ஒட்டி, வெட்டிய இயற்கைத் தொடர்பை மீண்டும் ஒட்டி வைத்தமை புலப்படுகின்றது. இவ்வொட்டு வேலை உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்பட்டது என்பது அவர்கள் உரை இப்பகுதிக்கும் உள்ளமையால் தெளிவாகும். அவர்கள் காலத்தில் வருணப்பிரிவுச் சிறுமை செய்தலும் ஏற்றலும் உணராவகையில் பழகிப்போய் விட்டன ஆகவேண்டும் அல்லது அவர்கள் ஒப்புக் கொண்டவை ஆகவேண்டும். ஏனெனில், அப் பிரிவை வலுவாக்கி உள்நாட்டிலும், மொழியாக்கம் செய்து வெளிநாட்டிலும் பரப்பிய ஆய்வுத் தோன்றல்கள், இருபதாம் நூற்றாண்டிலும் இருந் துள்ளமை கண்கூடாம் அல்லவோ! இனி, இடையொட்டுப் போகக் கடையொட்டையும் விட்டுவிட வில்லை. நூலின் மரபாக, "மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான" "மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும்" "வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான" "மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின" "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்" "வழிஎனப் படுவது அதன்வழித் தாகும்" "வழியின் நெறியே நால்வகைத் தாகும்" "தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே" இவ்வளவுடன் நூலை நிறைத்துப் புறனடை கூறல் முறைமை. ஆனால், சூத்திரம் காண்டிகை நூற்குற்றம் உத்தி என்பவை தொடர்கின்றன. வழிநூல் முதனூல் என்பவும் ஊடு புகுகின்றன. நூற் புறனடை என்னத்தக்க நூற்பா ஊடு கிடந்து பாடிழந்து நிற்கின்றது. அது, "நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிபில் சொல்லொடு தழாஅல் வேண்டும்" என்பதாகும் (1589). ஐம்பூதக் கலப்பே உலகம் என்பதை இந் நாள் அறிவியல் அறிஞர் மெய்ப்பிப்பதை அந்நாளே கூறிய அறிவர் தொல் காப்பியர் எனின் எத்தகைய நுண்ணியர் அவர். பின்னொட்டு இனி, இம் மரபியல் ஒட்டுப்பகுதியெனக் கருதும் நூற்பாக்களில் வரும் சொற்கள் மூன்று, சுட்டத் தக்கவை. ஒன்று : உத்தி. இரண்டு : காண்டிகை. மூன்று : வைசியன். உத்தியும் காண்டிகையும் இவ் வொட்டில் அன்றித் தொல் காப்பியத்தில் இடம்பெறாதவை வைசியனோ, மிகப்பிற்படு சொல். தொகை, பாட்டு, கீழ்க்கணக்கு, முத்தொள்ளா யிரம் வரை இடம்பெறாதது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றமை இயல்பில்லை. செய்யுளியலில் நூல், சூத்திரம், இயல் முதலியவை இடம் பெற் றுள்ளன. அங்கே இடம் பெற்றிருக்க வேண்டும் மரபியலில் வரும் நூல், உரை முதலியன. தொல்காப்பியர் கூறும் சூத்திர இலக்கணம் : "சூத்திரம் தானே, ஆடி நிழலில் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே" என்பது (1425). இது செய்யுளியலில் உள்ளது. இனி, மரபியலில் வருவது, "மேற்கிளந் தெடுத்த யாப்பின் பொருளொடு சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகி துளக்கல் ஆகாத் துணைமை எய்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகையானும் பயன்தெரி வுடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்" என்பது (1600). இரண்டு நூற்பாக்களும் ஒருவர் நூற்றவை தாமா? முன்னே கூறியதைப் பின்னேயும் கூறியதும் ஏன்? கூறவேண்டியிருப்பின், 'மேற் கிளந்தன்ன', 'முற்கிளந்தன்ன' என்று கூறுதல் அன்றோ, 'அவர் நூன் முறை'. ஆய்ஞர் முடிபு இத் தொல்காப்பிய ஆய்வில் தலைப்பட்ட புலமைச் செல்வர் இருவர் கருத்துகளை நாம் அறிதல் இம் மரபியல் ஒட்டின் தெளிவுக்கு உதவும். "மக்களை நிலத்தாற் பிரித்துரைப்பதன்றி நிறத்தால் (வருணத்தால்) பிரித்துப் பேசுதல் பழந்தமிழ் மரபன்றாம். அயலாரால் இந் நாட்டில் பிற்றை நாளில் புகுத்தப்பட்ட நால்வகைச் சாதிப்பிரிவு, தொன்மை வாய்ந்த தொல்காப்பிய மரபியலிலும் பிற்காலத்தவரால் நுழைத்து உரைக்கப்பட்டுள்ளது. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாக உயிர்களுக்கு வழங்கும் மரபுப் பெயர்களை விரித்துரைக்கும் இவ்வியலில் 1 முதல் 70 வரை அமைந்த நூற்பாக்கள் முற்கூறிய மரபினையே விரித்துரைப்பனவாம். இவற்றின் பின் 86 முதல் 90 வரையுள்ள நூற்பாக்களும் இம் மரபினையே தொடர்ந்து பேசுவன. ஒன்றற்கு ஒன்று நீங்காத தொடர்புடையனவாய் அமைந்த இச் சூத்திரங்களின் இடையே, "நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய" என்பது முதல், "அந்த ணாளர்க் கரசுவரை வின்றே" என்பது முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும், சிறிதும் தொடர்பற்ற நிலையிற் பின்வந்தவர் ஒருவரால் நுழைக்கப்பட்ட இடைச் செருகலாகும். இவை தொல்காப்பியனாரால் இயற்றப்பட்டன அல்ல என்பது சிறிது நூற் பயிற்சியுடையார்க்கும் தெளிவாகத் தோன்றும். இவ்வாறே இவ் வியலில் சேர்க்கப்பட்டனவாக ஐயுறுதற் குரியனவும் சில உள" என்பது முதுநூற் புலமையர் க. வெள்ளைவாரணனார் எழுத்து (தொல்காப்பியம் - தமிழிலக்கிய வரலாறு பக். 16). தமிழ்நெறிக் காவல் நூலாக எழுந்த தொல்காப்பியத்தை, ஆரிய வழி நூலாகக் காட்டி மாசு ஏற்றினோர் தம், மாசு துடைக்க என்றே தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தும், விரிந்த ஆய்வுரை வரைந்தும், அதனாலேயே முனைவர் பட்டம் பெற்றும் தமிழ்ப் பெருங்காவலராகத் திகழ்ந்த பேராசிரியர் சி. இலக்குவனார், "மரபுகளை விளக்கும் இம் மரபியல், ஆசிரியர் கூறிப்போந்தவாறு நமக்குக் கிடைத்திலது என்று எண்ண வேண்டியுள்ளது. தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கட்டுக் கோப்புக்கு உட்படுத்திச் சொல்லும் ஆற்றல் பெற்றுள்ள ஆசிரியர் போக்குக்கேற்ப மரபியல் அமைந்திலது. முறைபிறழ்ந்து கிடக்கின்றது. ஆசிரியர் கருத்துக்குப் பொருந்தாத செய்திகள் கூறப்பட்டுள்ளன. இடைச்செருகல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு நிற்கின்றது" என்கிறார் (தொல்காப்பிய ஆராய்ச்சி. 249). மெய்ம்மை காண இப் பெருமக்கள் மேலாய்வு துணையாம் என்பதால் இவண் எடுத்துக்காட்டலாயிற்று. தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் தமிழர் வாழ்வியலே யன்றி அயலவர் வாழ்வியல் பற்றியதுமன்று; ஒட்டியதுமன்று என உறுதிப்படுத்துவோமாக. - இரா. இளங்குமரன் நச்சினார்க்கினியர் தனிப்பெருஞ்சிறப்பு தமிழெனும் பெருங்கடற் பரப்பில் ஒரு கலஞ்செலுத்தி உலாக் கொண்டு, உயர்மணித் தொகுதிகளையெல்லாம் தொகுத்துப் பின்னவர்க்குக் கருவூலமென வைத்துச் சென்ற உரையாசிரியர் ஒருவர் உண்டென்றால் அவர் நச்சினார்க்கினியரே! அவரை அடுத்து எண்ணத்தக்க ஒருவர் யாப்பருங்கல விருத்தி உரைகாரரே! இன்னொருவர் அடியார்க்குநல்லார். எத்தனை நூல்களுக்கு உரை கண்டுள்ளார் நச்சினார்க்கினியர்! எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுளார்! வாழ்நாளை எல்லாம் முற்றாக உரை வரைதற்கெனவே பயன்படுத்திய பெருந்தகை நச்சினார்க்கினியரே. உரை கண்ட நூல்கள் "பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும் ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே" என்னும் வெண்பாவுரைக்குமாறு தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி ஆகியவற்றுக்கு நச்சினார்க்கினியர் வரைந்த உரை நமக்கு வாய்த்துள்ளது. குறுந்தொகைக்குப் பேராசிரியர் வரைந்த உரை அகப்படாமை போலவே நச்சினார்க்கினியர் வரைந்த 20 பாடல்களின் உரையும் அகப்பட்டிலது. தொல்காப்பியம் முழுவதற்கும் உரைகண்டிருப்பி னும் பொருளதிகாரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமையியல், மரபியல் ஆகிய மூன்றியல்களுக்கும் உரை கிடைத்திலது. `பாரத்தொல் காப்பியம்' என்னும் வெண்பா நச்சினார்க்கினியர் உரையை `விருத்தி' என்று கூறியிருப்பினும் தொல்காப்பியத்தில் காண்டிகை உரை என்னும் குறிப்பே உள்ளது. பத்துப்பாட்டு கலித்தொகை ஆகியவற்றி லும் `விருத்தி' என்னும் குறிப்பு இல்லை. ஆதலால் இவ்வெண்பாப் பாடியவர் விருத்தி என்று கருதினார் என்று கொள்ளலாம். நச்சினார்க் கினியர் கருத்து அஃதன்று என்றும் கொள்ளலாம். பெயரும் குடிவழியும் நச்சினார்க்கு (விரும்பினார்க்கு) இனியர் என்பது இறைவன் பெயர்களுள் ஒன்று என்பர். "நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே" என்பது அப்பரடிகள் தேவாரம் (4.66:1). இதில் பெயராக வந்திலது. இறைவன் இயலாகவே வந்துளது என்பது எண்ணத்தக்கது. அப்பரடி களுக்குக் காலத்தால் மிகப்பிற்பட்ட சிவஞானமுனிவரர், "நச்சினார்க் கினியாய் போற்றி" என்றதும் இயல்விளிப் பெயரேயாம். பெயரன்று என்பதறிக. இவற்றால் இவர் இயற்பெயர் வேறொன்றாக இருந்து இவர்தம் உரைச் சிறப்பறிந்தவர்கள் இப்பெயரை வழங்கியிருத்தல் வேண்டும். அதுவே இயற்பெயர்போல அமைந்துவிட்டது எனலாம். 'மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர்' என்று தொல் காப்பியம், பத்துப்பாட்டு ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதி நிறைவிலும் வருகின்றது. இக்குறிப்பை விளக்குவதுபோல், "வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த ஆசான் பயின்ற கேள்விப் பாரத்து வாசன் நான்மறை துணிந்த நற்பொருள் ஆகிய தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாளன் நவின்ற வாய்மை நச்சினார்க் கினியன்" என இவரைப் பற்றிய பாயிரப் பகுதி கூறுகின்றது. இவற்றால் இவர் மதுரையார் என்பதும் "பாரத்துவாச கோத்திரத்தார் ஆகிய பிராமணர் என்பதும் புலப்படும். பாரத்துவாச கோத்திரத்தினர் வைணவர், சுமார்த்தர், மாத்துவர் என முப்பிரிவினர் என்றும் அவருள் இவர் சுமார்த்தர் என்றும் அத்வைதக் கொள்கையர்" என்றும் கூறுவர் (உரையாசிரியர்கள் பக். 141; நச்சினார்க்கினியர் பக். 6, 7). சமயம் இவர் வேத வழிப்பட்ட நெறியினர் எனினும் `சிவச்சுடர்' எனப் பாயிரம் சொல்லுதலாலும் நூலில் வரும் சில குறிப்புகளாலும் சிவனெறிப் பற்றாளர் என்று கொள்ளலாம். எனினும் இவர்தம் சிந்தாமணி உரையைப் பயின்றாரும், அச் சிந்தாமணி யுரையை அச் சமய நோக்குக்கு முரணா வகையில் உரை வரைய வேண்டும் என்பதற்காகவே அச்சமயம் புகுந்து அழுந்தக் கற்று அதன் முன்னே தாம் எழுதிய உரையை விடுத்துப் புத்துரை செய்தார் என்று கூறப்படும் செய்தி அறிந்தாரும் நச்சினார்க்கினியர் சமயச் சால்பைப் போற்றாமல் இரார். ஒரு நூலுரை செய்தற்காகத் தம் வழிவழிச் சமயந் துறந்து வேறொரு சமயத்துப் புகுந்தார் என்பதினும், அக்கொள்கை களை அழுந்தக் கற்றார் என்பதே சிறக்கும். ஒருகால் அச்சமயத்தார்க் கன்றிப் பிற சமயத்தார்க்குக் கற்பித்தல் இல்லை என்னும் கடுநெறி ஒன்று இருந்திருக்குமானால் அச் சமயத்திற்கே புகழ் வருவதாக இல்லை. அதனை அச்சமயஞ் சார்ந்து பயின்று, பயின்று முடித்த பின்னர் அதனைத் துறந்து தம் சமயம் சார்ந்தார் நச்சினார்க்கினியர் எனின், இவர் சூழ்ச்சியாளர்; பயன்கருதிய இந்நாளைக் கட்சி மாறியர்போல் - சமய மாறியர் - என்ற பழியே இவர்க்கு எய்துவதாம். இவற்றின் இடையேயும் ஒரு பசுமையான செய்தி : ஒரு நூலுக்கு மரபு பிறழாமல் உரை வரைவதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டார் என்பதே. இச்செயல் இந்நாளைக்கு மட்டுமன்று எதிர் நாளைக்கும் இனிய வழிகாட்டும் மாண்பினதாம். காலம் நச்சினார்க்கினியர் உரை வழியால் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்களுக்கும், நன்னூல் பவணந்தியார், திருக்குறள் பரிமேலழகர், சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் ஆகியோர்களுக்கும் பிற்பட்டவர் இவர் என்பதற்குச் சான்றுகள் உண்மையால் 14ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியினர் என்பது தெளி வாகும். தமிழ்ம்மை "தத்தம் புதுநூல் வரிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டும் என்றுணர்க" என்றும் (புறத். 35), "இனித் தேவர்க்குரியவாக உரிஞையிற் றுறைகள் பலருங் கூறுவரால் எனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன வாகலிற் றமிழ் கூறு நல்லுலகத்தன அல்லவென மறுக்க" என்றும் (புறத். 12), "அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றா ரென்பது உணர்தற்கு னகர இறுவாய் என்றார்" என்றும் (நூன். 1), "தானே என்று பிரித்தார், இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந்தான் பாட்டாகி அங்கதம் எனப்படுவன வுள, அவை நீக்குதற்கும் என்றுணர்க" என்றும் (செய். 178) இன்னவாறு கூறுமிடங்களில் தமிழ் வரம்புக்குரிய நூல் தொல்காப்பியம் என்பதை உணர்ந்து கூறுகின்றார். அதனைப் போற்றுதல் கடப்பாட்டையும் வலியுறுத்துகிறார். எதிரிடை "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற். 4) என்னும் நூற்பாவில், "ஈண்டு `என்ப என்றது முதனூலாசிரியரை யன்று; வடநூலோரைக் கருதியது" என்கிறார். இவ்வாறு எதிரிடைப் போக்கில் அல்லது வலிந்த நோக்கில் செல்வதால் தாம் சுட்டிய தமிழ் நெறியைத் தாமே சிதைப்பவராக உரை வரையத்துணிந்தார். அதனால், "அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார்" (கற். 1) என்றும் "முற்காலத்து நான்கு வருணத்தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது" (கற். 2) என்றும், "மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி; ஆன்றோராவார் மதியும் கந்தருவரும் அங்கியும்" என்றும் (கற். 5) கூறுவதும், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்பதன் (புறத். 20) உரை விளக்கங் களும், "வேத முடிபு" (அகத். 5), "வேத நெறி அன்மை" (அகத். 11), "வேத நூலுள் இழைத்த பொருண் முடிபு" (அகத். 28), "வேதத்தையே" (அகத். 31), "வேதவிதி" (புறத். 2), "வேத முடிபு" (கள. 8) என நெடுகலும் கூறிச் செல்லுதலும் அவர் எடுத்துக்கொண்ட நூலின் தடத்தை மாற்றி எங்கோ இட்டுச் செல்லுதல் தெளிவாகின்றது. கந்தருவநெறிக்கும் களவுநெறிக்கும் உள்ள வேறுபாட்டை, "கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றற்குத் துறையமை என்றார்" என்று பிறர்க்கு இல்லாத் தெளிவு காட்டும் திறத்தார் நச்சினார்க்கினியர் (கள. 1) என்பதை மறக்க முடியாது. அறிந்தே செய்யும் பிழை காலம் உலகம் என்னும் சொற்களை வடசொற்களாகச் சேனா வரையர் கூற, "காலம் உலகம் என்பன வடசொல் அன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறாராகலின்" (சொல். 58) என்று ஆசிரியர் ஆணை கூறுபவர் நச்சினார்க்கினியர். இவர் "அகர இகரம் ஐகாரமாகும்", "அகர உகரம் ஔகாரமாகும்" என்னும் நூற்பாக்களின் உரைகளில் "அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம்போல இசைக்கும்; அது கொள்ளற்க"; "அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஔகாரம் போல இசைக்கும்; அது கொள்ளற்க" என்று எழுதுதல், நூலாசிரியர் கருத்துக்கு மாறுகொளல் என்பது தெளிவாகின்றது. மேலும், "ஆகும் என்றதனான் இஃதிலக்கணம் அன்றாயிற்று" என்றும் கூறுகிறார். இஃது இவர் அறியாமையால் செய்வதன்று என்பது விளங்குகின்றது. சில இடங்களில் வலிந்து சூத்திரங்களை நலித்துப் பொருள் கூறும் வழக்கினை இவர் மேற்கொண்டவர் என்பதும் அதையும் உணர்ந்து கொண்டே செய்தார் என்பதும் விளங்குகின்றது. "அளபிறந் துயிர்த்தலும்" எனவரும் நூன்மரபு நூற்பா (33) விளக்கத்தில், "சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை எல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே" என்னும் மரபியற் சூத்திரத்தானே (103) "இவ்வாறே சூத்திரங்களை நலித்துப் பொருளுரைப்பன வெல்லாம் கொள்க" என இவர் எழுதுதல் இவர் தம் உட்கோளைத் தெளிவாக்கும். "வரகு, கொற்றன் ஈரெழுத் தொருமொழி; அகத்தியனார் ஐயெழுத் தொருமொழி; திருச்சிற்றம்பலம் ஆறெழுத் தொருமொழி; பெரும்பற்றப் புலியூர் ஏழெழுத்தொரு மொழி" என்று அவர் எழுத்தெண்ணிக் காட்டுதல் (குற்றியலுகரம், மெய்களை நீக்கி எண்ணிக் காட்டுதல்) செய்யுளியற் கோட்பாட்டை உரைநடைக் கோட்பாடாக்கிக் காட்டும் முறையல்லா முறையாகிவிடுகின்றது. கரணம் வடநூல் பற்றியது எனப் பல்கால் கூறும் நச்சினார்க்கினியர் காட்டும் மேற்கோள்களோ அகம். 86, 136ஆம் பாடல்களாம். அவற்றில் அங்கியங் கடவுளோ அறிகரியாக மந்திர வகைக் கரணமோ ஒன்றும் இல்லாமை எவர்க்கும் வெளிப்பட விளங்கியும்கூட, "கரணங்கள் நிகழ்ந்த வாறும் தமர் கொடுத்தவாறும் காண்க" என்று துணிந்து கூறுகிறார். இந்நிலை நூற்கருத்துக்கோ நூலாசிரியர்க்கோ பெருமை தருவது இல்லை என்பது பற்றிக் கவலை கொண்டார் இல்லை எனலாமா? தம் கொள்கையை நூலாசிரியர் தலையில் கட்டிவிடுதல் எனலாமா? ழ, ள என்னும் இரண்டு எழுத்துகளும் பிறப்பு செய்கைகளில் ஒவ்வா என்பதை உணரும் நச்சினார்க்கினியர், "ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபில வேனும் `இடையெழுத் தென்ப யரல வழள' (எழுத். 21) என்றாற் சந்தவின்பத்திற்கு இயையுடைமை கருதிச் சேரவைத்தார் போலும்" என ஆசிரியர் வைப்பு முறைக்குச் சான்று தேடிக் காட்டிச் சிறப்புச் செய்கின்றாரே! (நூன். 1). 'கண்ணிமை நொடியென' ஆசிரியர் வைப்பு முறை செய்ததை, "நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமை யின்" என்று எவ்வளவு கூர்ப்புடன் உரைக்கிறார்! (நூன். 7). "இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத்தொகைக் கண்ணும் பண்புத்தொகைக் கண்ணும் அன்றி ஒரு மொழிக் கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணம் இல்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமல் போதலே நன்றென்று கூறலும் ஒன்று" என்று எவ்வளவு சால்புடன் கூறுகிறார்! (நூன். 24). 'காரும் மாலையும் முல்லை' என்னும் ஆசிரியர் நூற்பா நடைக்கு, "முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி இருத்தற்கும் உபகாரப் படுவது கார் காலமாம்; என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன் விரைபரித்தேரூர்ந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉங்காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆகலின், அவை வெப்பமும் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்து வரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும் ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் களி சிறந்து மாவும் புள்ளும் துணையோடின்புற்று விளையாடுவன கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக் குறிப்பு மிகுதலானும் என்பது. புல்லைமேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் தீங்குழல் இசைப்பவும் பந்தர் முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று" என்று எதுகை மோனை இயற்கையழகு கொஞ்சும் உரைப்பாட்டு இலக்கிய நடையில் எழுது கின்றார் நச்சினார்க்கினியர் (அகத். 6). நூலாசிரியரோடு ஒப்ப ஒரு நூலாசிரியராயன்றோ திகழ்கின்றார்! இவ்வாறாகவும், வலிந்தும் நலிந்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை - ஆசிரியர் நூலுக்கும் தமிழர் நெறிக்கும் ஒவ்வாது இவர் கூறியுள்ள உரை - நடுவுள்ளங்கொண்டு நாடுவாரையும் வருத்தும். "இது போன்ற உரைகளையெல்லாம் தொல்காப்பியர் காண நேர்ந்தால் எத்துணை நொந்து போவார். இவற்றையெல்லாம் படித்துவிட்டு இத்துணைக் காலம் தமிழுள்ளம் மரக்கட்டையாகவே இருந்து வந்திருப் பதுதான் வியப்பாகும்" என்றும் "நச்சினார்க்கினியர் பிற சமயங்களை வெறுத்துப் பேசாதவராயினும் வேத வைதிகப் பற்றுமிக்கவர். ஆனால் வேண்டாத இடங்களிலெல்லாம் `வேதம் வேதம்' என்று கூறிக் கொண்டே இருப்பதால் அவரது வேதப் பற்றைக் கண்டு நாம் சலிப்படைகிறோம்" என்றும், "அவருடைய காலத்தில் தமிழைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு சர்வாதிகாரியைப் போலவே விளங்கியிருப்பார். இங்கிலாந்து நாட்டில் ஜான்ஸன் காலத்தில் ஜான்ஸன்ஆங்கில மொழியின் சர்வாதிகாரியைப் போல விளங்கினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் நச்சினார்க்கினியரை அப்படி நினைத்துக்கொள்ளலாம். பாட்டின் சொல் லமைப்பை அவர் எப்படிச் சிதைத்தாலும் பண்டிதர் பரம்பரை வழிவழி யாக அவரைப் போற்றி வந்திருக்கின்றமையும் நினைக்கத்தக்கது" என்றும் வருவன (நச்சினார்க்கினியர் - பேரா. மு. அண்ணாமலை) தெளிந்து கூறிய தேர்ச்சி யுரைகளாம். "உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்" என்பது முதுவோர் உரை! அவ்வுள்ளது சிதைப்பதை உணர வாய்த்திருந்தும், உணர்த்தக் கேட்டும் - கற்றும் - இருந்தும், இந்நூற்றாண்டின் இடைக்கால ஆய்வுக்கள மேலாண்மையரும் நச்சினார்க்கினியர் சிதைவுக்கு விளக்கங்கூறியே விழுப்பம் எய்தினர் என்னும்போது அக்காலச்சூழலில் நச்சினார்க்கினியர் சில இடங்களில் தடம் மாறி உரை வரைந்தது வியப்பும் இல்லை! பரியதோர் குறையும் இல்லை! நச்சினார்க்கினியர் புலமை, `ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமைக்கும் ஏமாப் புடைத்து' என்பதற்குச் சான்றாவது; எத்தனை உவமைகள்! எத்தனை எடுத்துக்காட்டுகள்! எத்தனை வரலாற்றுப் பின்னல்கள்! எத்தனை சிறப்புப் பெயர்கள்! "ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு `ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்' என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப" (நூன். 2). "கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிப் பிறந்த செவ்வண்ணம் போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார்" (நூன். 6). "அகரந் தனியே நிற்றலானும் பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை யுடைத் தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல" (நூன். 8). "ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன (வாகிய உயிர் மெய்கள்) ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை எனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாரி யுப்பில் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வ தோர் பொருட்பெற்றி" (நூன். 10). இவை நூன்மரபில் நச்சினார்க்கினியர் காட்டும் உவமைகள். நச்சினார்க்கினியர் உரையால் மட்டுமே அறியப்படும் நூல்கள் சில உள. அவற்றுள் சீரிய ஒன்று `பெரும் பொருள் விளக்கம்' என்பது. அந்நூலைப் புறத்திரட்டு வழியால் பெயரறிந்து கொள்ளவும் ஒப்பிட்டுக் காணவும் வாய்க்கின்றது. புறத்திரட்டில் காணாத பாடல்கள் மிகப் பல புறத்திணை இயலில் இடம் பெற்றுத் தனி நூலாகி உள்ளன. களவியல் கற்பியல்களிலும் புறத்திணையியலில் காணப்படும் பெரும் பொருள் விளக்க வெண்பாக் களை அன்னவை, எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. அவற்றை நோக்க அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் கூடிய பொருளின் முழுப்பரப்பும் தழுவிய நூலாக அந்நூல் இருந்திருத்தல் கூடுமென எண்ண இடமா கின்றது. தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை என்பவற்றிலிருந்தும் அரிய பாடல்களைப் பரிசிலென வழங்குகின்றார் இனியர். வரலாற்றுச் செய்தி புறத்திணையியலில் நச்சினார்க்கினியர் காட்டும் வரலாற்றுச் செய்திகள் மிகப் பலவாம். "ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம்" (புறத். 7). அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்களை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் பொன்முடியார் ஆகியோர் பாடிய தகடூர் யாத்திரைப் பாடல்களைக் குறிக்கிறார் (புறத். 8). பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி (நக்கண்ணையார்), ஒத்த அன்பினாற் காமுறாதவழியும் குணச்சிறப்பின்றித் தானே காமுற்றுக் கூறியதை, காமப்பகுதி கடவுளும் வரையார் என்னும் நூற்பாவில் (புறத். 28) எடுத்துக்காட்டுகிறார். தமிழகத்துச் செய்தியாம் இவையன்றி அக்காலத்தில் தமிழில் வழங்கிய இராமாயண பாரதப் பழநூல்களில் இருந்து (அவை அகவற் பாவால் இயற்றப்பட்டவை) மேற்கோளும் செய்திக் குறிப்பும் காட்டுகிறார். கொள்ளார் தேஎங் குறித்த கொற்றத்திற்கு (புறத். 12) "இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது" என்கிறார். "செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ, ஒருவன் மண்டிய நல்லிசை நிலை" என்பதற்கு (17) "குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்கள் ஐவரையும் கொன்று வெற்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன" என்கிறார். இவ்வாறு இராமாயண பாரதச் செய்திகளை எடுத்துக்காட்டுவ துடன் தொன்ம (புராண)ச் செய்திகளையும் சுட்டுகிறார். "இரணியனைப் போல வலியானும் வருத்தத்தானும் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று" என்பது ஒன்று (புறத். 19). `முழுமுதல் அரணம்' என்பதை விளக்கும் நச்சினார்க்கினியர் (புறத். 10), "முழு அரணாவது மலையும் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறி களும் ஏனைய பொறிகளும் பதணமு மெய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின் றமைந்த வாயிற்கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப் பட்டதாம்" எனச் செறிவு மிகக் கூறுகிறார். இனி இதே நூற்பாவில், "சிறப்புடை அரசியலாவன மடிந்த உள்ளத்தோனையும், மகப்பெறாதோனையும், மயிர் குலைந்தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெயரோனையும், படை இழந்தோனை யும், ஒத்தபடை எடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருதலும் முதலாயினவுமாம்" என்று சொல்ல வேண்டும் என்னும் ஆர்வத்துடிப்பால் இயைத்துக் கூறுகின்றார். தெளிபொருள் 'குற்றியலிகரம்' உயிரா? ஒற்றா? இதனை இந்நாளிலும் ஒற்று என்பார் உளர். "ஊர்ந்தெனவே குற்றியலிகரமும் உயிரென்பது பெற்றாம். உயிர்க்கல்லது ஏறுதலின்மையின்" என்கிறார் (மொழி. 1). இராக் காக்கை, இராக் கூத்து எனவரின் இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து எனப் பொருள் தரும் என்றும், இராஅக் காக்கை, இராஅக் கூத்து எனவரின் இராத என்னும் எதிர்மறைப் பெயரெச்சப் பொருள் தரும் என்றும் விளக்குகிறார் (உயிர். 25). இவ்வாறு மயக்கம் அறுக்கும் இடங்கள் பலவாம். "இல்லொடு கிளப்பின் இயற்கையாகும்" என்பதற்குக் 'கோவில்' என்று எடுத்துக்காட்டுக் கூறுகிறார் (உயிர். 91). அது 'கோயில்' என்றே இருந்திருக்கும். 'படியெடுத்தோர் பிழையோ' என எண்ண வேண்டியுளது. இளம்பூரணர் மரபு நிலை மாற்றாமல் 'கோயில்' என்றே கொண்டார் என்பது அறியத்தக்கது. 'கோவில்' என்பது 19ஆம் நூற்றாண்டு உரைநடைக் காலத்து வந்த தவறான புது வழக்கு. வழக்குகள் 'புடோலங்காய்' என்பதைப் புள்ளிமயங்கியல் புறநடையில் (110) எடுத்துரைக்கிறார் நச்சினார்க்கினியர். 'புடலங்காய்' என்பது அவர் காலத்தில் அவ்வாறு வழங்கிற்றுப் போலும்! "ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க" என்கிறார் (உயிர். 67). இவ்வாறு காலவழக்கு இடவழக்கு ஆகியவற்றைச் சுட்டுதலை யும் இவர் வழக்காகக் காணலாம். மாட்டின் விளைவு `மாட்டு' என்பதோர் இலக்கணத்தைத் தொல்காப்பியர் செய்யுளிய லில் கூறுகின்றார். ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைப்பார் போல அவ்விலக்கணம் கொண்டு நச்சினார்க்கினியர் மாட்டிச் செல்லும் தனிச் செலவில் அவர்க்கு ஒப்ப ஒருவர் இதுகாறும் இருந்தார் இலர். அம் மாட்டுரையே, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலியவற்றுக்கு மறைமலையடிகளாரைப் புத்துரை காண ஏவிற்று. நெடுநல்வாடை, முருகாற்றுப்படை ஆகியவற்றுக்குக் கோதண்டபாணியாரை நயவுரை காணத் தூண்டிற்று! இவருரையில் அமைந்துள்ள சில நூற்பாக்களின் பொருட்போக்கே நாவலர் பாரதியாரைத் தொல்காப்பியப் புத்துரை காண அழுத்திற்று. இவையும் நச்சினார்க்கினியர் கொடையெனின் கொள்ளத் தக்கவாம். "ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ?" என்னும் சாமிநாத தேசிகர் உரையே, "தனித்தமிழ் இயக்கம்"காண எதிரிடைத் தூண்டல் ஆயிற்று அல்லவோ! எதிரிடைப் பயனும் ஏற்புடைப் பயனாதல், எண்ணுவார் எண்ணத் திண்மையும் எழுச்சிச் செயற்பாடும் பற்றியவை. மற்றையரோ நீரில் கரைந்த மண்ணாகி நெளிந்து போய்விடுவர். - இரா. இளங்குமரன் பொருளதிகாரம் நச்சினார்க்கினியருரை அ அகத்திணையியல் அகத்திணை ஏழும் இவை எனல் 1. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப. என்பது சூத்திரம். நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த் தினமையின் இது பொருளதிகாரமென்னும் பெயர்த் தாயிற்று. இது நாண்மீனின் பெயர் நாளிற்குப் பெயராயினாற் போல்வ தோர் ஆகுபெயர். பொருளாவன:- அறம் பொருளின்பமும், அவற்றது நிலையின்மையும், அவற்றினீங்கிய வீடுபேறுமாம். பொருளெனப் பொதுப்படக் கூறவே, அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரியும், காட்சிப் பொருளும், கருத்துப் பொருளும், அவற்றின் பகுதியாகிய ஐம்பெரும் பூதமும், அவற்றின் பகுதி யாகிய இயங்குதிணையும் நிலைத்திணையும், பிறவும் பொருளாம். எழுத்துஞ் சொல்லும் உணர்த்தி அச்சொற்றொடர் கருவியாக உணரும் பொருள் உணர்த்தலின், மேலதிகாரத் தோடு இயைபுடைத்தாயிற்று. அகத்திணைக்கண் இன்பமும், புறத்திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. இது வழக்கு நூலாதலிற் பெரும்பான்மையும் நால்வகை வருணத் தார்க்கும் உரிய இல்லறம் உணர்த்திப் பின் துறவறமுஞ் சிறுபான்மை கூறுப. அப்பொருள்கள் இவ்வதிகாரத்துட் காண்க. பிரிதனிமித்தங் கூறவே, இன்ப நிலையின்மையுங் கூறிக் காமஞ் சான்ற என்னுங் கற்பியற் சூத்திரத்தான் துறவறமும் கூறினார். வெட்சி முதலா வாகையீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும். என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங் கூறி இந்நிலையா மையானும் பிறவாற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ங்னங் கூறவே, இவ்வாசிரியர் பெரிதும் பயன் தருவதோர் இலக்கணமே கூறினராயிற்று, இதனாற் செய்த புலனெறி வழக்கினையுணர்ந்தோர் இம்மை மறுமை வழுவாமற் செம்மை நெறியான் துறைபோவராதலின். இப்பொருளை எட்டுவகையான் ஆராய்ந்தாதென்ப. அவை அகத்திணை புறத்திணையென இரண்டு திணை வகுத்து அதன்கட்கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவா யேழும் வெட்சி முதற் பாடாண்டிணை யிறுவா யேழுமாகப் பதினான்கு பால் வகுத்து, ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி பரிபாடல் மருட்பா வென அறுவகைச் செய்யுள் வகுத்து, முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லென நால்வகை நிலன் இயற்றிச் சிறுபொழு தாறும் பெரும்பொழு தாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்து, அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமெனப் பதினான்கு வழுவமைத்து, நாடக வழக்கும் உலகியல் வழக்குமென இருவகை வழக்கு வகுத்து, வழக்கிடமுஞ் செய்யுளிடமுமென இரண்டு இடத்தான் ஆராய்ந்தாராதலின். எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்பார் முதல் கரு உரியுந், திணைதொறும் மரீஇய பெயருந், திணைநிலைப் பெயரும், இருவகைக் கைகோளும், பன்னிருவகைக் கூற்றும், பத்துவகைக் கேட்போரும், எட்டுவகை மெய்ப்பாடும், நால்வகை உவமமும், ஐவகை மரபு மென்பர். இனி, இவ்வோத்து அகத்திணைக்கெல்லாம் பொது இலக்கண முணர்த்துதலின் அகத்திணையியலென்னும் பெயர்த் தாயிற்று; என்னை? எழுவகை யகத்திணையுள் உரிமைவகை யான் நிலம் பெறுவன இவையெனவும் அந்நிலத்திடைப் பொதுவகையான் நிகழ்வன கைக்கிளை பெருந்திணை பாலை யெனவுங் கூறலானும், அவற்றுட் பாலைத்திணை நிலவகையான் நடுவணதெனப்பட்டு நால்வகை யொழுக்கம் நிகழா நின்றுழி அந்நான்கனுள்ளும் பிரிதற் பொருட்டாய்த்தான் பொதுவாய் நிற்குமெனக் கூறலானும், முதல் கரு உரிப்பொருளும் உவமங் களும் மரபும் பொதுவகையாற் கூறப்படுதலானும், பிறவும் இன்னோரன்ன பொதுப் பொருண்மைகள் கூறலானுமென்பது. இங்ஙனம் ஓதிய அகத்திணைக்குச் சிறப்பிலக்கணம் ஏனை ஓத்துக்களாற் கூறுப. ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதொரு பொருளாதலின் அதனை அகம் என்றார். எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம்; இதனை ஒழிந்தன, ஒத்த அன்புடையார்தாமே யன்றி எல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும், இவை இவ்வாறிருந்த வெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும், அவை புறமெனவே படும். இன்பமே யன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாலெனின், அதுவும் காமங் கண்ணிற்றேல் இன்பத்துள் அடங்கும். ஒழிந்த துன்பம் புறத்தார்க்குப் புலனாகாமை மறைக்கப்படாமையிற் புறத்திணைப் பாலதாம். காமம் நிலையின்மையான் வருந் துன்பமுந் தாபதநிலை தபுதாரநிலை யென வேறாம். திணையாவது ஒழுக்கம்; இயல்: இலக்கணம்; எனவே, அகத்திணையியலென்றது இன்பமாகிய ஒழுக்கத்தினது இலக்கணமென்றவாறாயிற்று. இவ்வோத்துக்கள் ஒன்றற் கொன்று இயைபுடைமை அவ்வவ்வோத்துக்களுட் கூறுதும். இனி, இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனிற் கூறக் கருதிய பொருளெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : கைக்கிளை முதலா - கைக்கிளை யெனப் பட்ட ஒழுக்கம் முதலாக; பெருந்திணை இறுவாய் - பெருந்திணை யென்னும் ஒழுக்கத்தினை இறுதியாகவுடைய ஏழனையும்; முற்படக் கிளந்த எழுதிணை என்ப - முற்படக் கூறப்பட்ட அகத்திணை யேழென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எனவே, பிற்படக் கூறப்பட்ட புறத்திணையும் ஏழுளவென்றவாறா யிற்று. எனவே, இப்பதினான்கு மல்லது வேறு பொருளின் றென வரையறுத்தா ராயிற்று. அகப்புறமும் அவை தம்முட் பகுதியாயிற்று. முதலும் ஈறும் கூறித் திணை யேழெனவே நடுவணைந்திணை உளவாதல் பெறுதும். அவை மேற் கூறுப. கைக்கிளை யென்பது ஒருமருங்கு பற்றிய கேண்மை. இஃது ஏழாவதன் தொகை. எனவே, ஒருதலைக் காமமாயிற்று. எல்லா வற்றினும் பெரிதாகிய திணை யாதலின் பெருந்திணை யாயிற்று. என்னை? எண்வகை மணத்தினுள்ளும் கைக்கிளை முதல் ஆறு திணையும் நான்கு மணம் பெறத் தானொன்றுமே நான்கு மணம் பெற்று நடத்தலின். பெருந்திணையிறுவாய் - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. முற்படக் கிளந்தவென எடுத்த லோசையாற் கூறவே, பிற்படக் கிளந்த எழுதிணை யுளவாயின. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை என வரும். ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணை யேழென்ற தென்னையெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாயவாறு போல, அகத்திணை யேழற்குப் புறத்திணையே ழென்றலே பொருத்த முடைத்தா யிற்று. ஆகவே, அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந்நிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின் ஒன்றொன்றற்கு இன்றியமையாதவாறாயிற்று. கரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின், வேறு திணையாகாது. எண்வகை மணத்தினும் எதிர்சென்று கூறுவதாகலானுங், காமஞ்சசாலா விளமைப்பருவம் அதன் கண்ணதாகலானுங் கைக்கிளையை முற்கூறினார். என்ப வென்றது அகத்தியனாரை. இக் குறியீடுகளும் அகத்தியனா ரிட்ட வென்றுணர்க. எழுவகைத் திணையு.ள் தமக்கென நிலம்பெறுவனவும் பெறாதனவும் 2. அவற்றுள், நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே இது முற்கூறிய ஏழனுள் தமக்கென நிலம் பெறுவனவும், நிலம் பெறாதனவுங் கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள் - முற்கூறிய ஏழு திணையுள்; நடுவண் ஐந்திணை - கைக்கிளை பெருந்திணைக்கு நடுவுநின்ற ஐந்தொழுக்கத்தினை; படு திரை வையம் பாத்திய பண்பே - ஒலிக்குந் திரைசூழ்ந்த உலகிற்கு ஆசிரியன் பகுத்துக்கொடுதத இலக்கணத்தை; நடுவணது ஒழிய - நடுவணதாகிய பாலையை அவ்வுலகம் பெறாதே நிற்கும் படியாகச் செய்தார் எ-று. எனவே, யானும் அவ்வாறே நூல் செய்வ லென்றார். உலகத்தைப் படைக்கின்ற காலத்துக் காடும் மலையும் நாடுங் கடற்கரையுமாகப் படைத்து, இந்நால்வகை நிலத்திற்கு ஆசிரியன் தான் படைத்த ஐவகை ஒழுக்கத்திற் பாலை யொழிந்தனவற்றைப் பகுத்துக் கொடுத்தான். அப் பாலை ஏனையபோல ஒருபாற் படாது நால்வகை நிலத்திற்கும் உரியதாகப் புலனெறி வழக்கஞ்செய்து வருதல்பற்றி. பாலைக்கு நடுவணதென்னும் பெயர் ஆட்சியும் குணனும் காரணமாகப் பெற்ற பெயர். நடுவு நிலைத்திணையே நண்பகல் வேனில் (9) என ஆள்ப. புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவு நிகழ்தலானும், நால்வகை யுலகத்திற்கிடையிடையே, (முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படவங் கொள்ளும்.) (சிலப். காடு 54,56 என முதற்பொருள் பற்றிப் பாலை நிகழ்தலானும், நடுவணதாகிய நண்பகற் காலந் தனக்குக் காலமாகலானும், புணர்தற்கும் இருத்தற்கும் இடையே பிரிவு வைத்தலானும், உலகியற் பொருளான அறம்பொருளின்பங்களுள் நடுவணதாய பொருட்குத் தான் காரணமாகலானும், நடுவணதெனக் குணம் காரணமாயிற்று. பாயிரத்துள் எல்லை கூறியதன்றி ஈண்டும் எல்லை கூறினார், புறநாட்டிருந்து தமிழ்ச்செய்யுள் செய்வார்க்கும் இதுவே இலக்கணமாமென்றற்கு. இவ்விலக்கணம், மக்கள் நுதலிய அகனைந்திணைக்கே யாதலின் இன்பமே நிகழுந் தேவர்க்காகாது. காமப் பகுதி கடவுளும் வரையார் (தொல் பொருள் 83) என்பது புறம். நடுவணாற்றிணை யென்னாது ஐந்திணை யென்றார், பாலையும் அவற்றோ டொப்பச் சேறற்கு. ï¤âizia _‹whf nk‰gF¥g®.(2) நடுவணைந்திணைப் பகுப்பு 3. முதல்கரு வுரிப்பொருள் என்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை. இது நடுவ ணைந்திணையைப் பகுக்கின்றது (இ-ள்.) பாடலுள் பயின்றவை நாடும் காலை - புலனெறி வழக்கிடைப் பயின்ற பொருள்களை ஆராயுங் காலத்து; முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே - முதலுங் கருவும் உரிப் பொருளும் என்ற மூன்றேயாம்; நுவலுங் காலை முறை சிறந்தனவே - அவைதாம் செய்யுள் செய்யுங்கால் ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதலுடைய எ-று. முதலிற் கருவும், கருவின் உரிப்பொருளுஞ் சிறந்து வரும். இங்ஙனம் பாடலுட் பயின்ற பொருள் மூன்றெனவே, இம்மூன்றும் புறத்தினைக்கு உரியவென்பது பெறுதும். அது புறத்திணைச் சூத்திரங்களுள், வெட்சி தானே குறிஞ்சியது புறனே (56) என்பன முதலியவற்றாற் கூறுப. பாடலுட் பயின்று வருமெனவே வழக்கினுள் வேறுவேறு வருவன அன்றி ஒருங்கு நிகழாவென்பதூஉம், நாடுங் காலை யெனவே புலனெறிவழக்கிற் பயின்றவாற்றான் இம்மூன்றனையும் வரையறுத்துக் கூறுவதன்றி வழக்கு நோக்கி இலக்கணங் கூறப்படாதென்பதூஉம் பெறுதும், நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் (தொல். பாயிரம்) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டனானும் ஆராய்தல் வேண்டுதலின். இஃது இல்லதெனப்படாது, உலகியலேயாம். உலகியலின்றேல், ஆகாயப்பூ நாறிற்றென்றுழி அது சூடக் கருதுவாருமின்றி மயங்கக் கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும். இச்செய்யுள் வழக்கினை நாடக வழக்கென மேற்கூறினார், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலாது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைந்துரை வகையான் கூறும் நாடக இலக்கணம் போல யாதானுமொரோவழி ஒரு சாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமுங் காலமும் நியமித்துச் செய்யுட் செய்த ஒப்புமை நோக்கி. மற்று இல்லோன் தலைவனாக இல்லது புணர்க்கும் நாடக வழக்குப்போல் ஈண்டுக் கொள்ளாமை நாடக வழக்கு என்னுஞ் சூத்திரத்துட் (53) கூறுதும். கணங்கொ ளருவிக் காள்கெழு நாடன் குறும்பொறை நாட னல்வய லூரன் தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற் கடும்பகல் வருதி கையறு மாலை கொடுங்கழி நெய்தலுங் கூம்புங் காலை வரினுங் களைஞரோ விலரே. (ஐங்குறு. 183) என் இவ் ஐங்குறுநூற்றுள் இடம் நியமித்துக் கூறியது செய்யுள் வழக்கு. இனி அவை முறையே சிறந்து வருமாறு:- முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ இரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானங் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்த் தன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவிழ் அலரின் நாறும் ஆய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே. (அகம் 4) இது குறித்த காலம் வந்ததும், அவரும் வந்தாரென ஆற்றுவித்தது. இக் களிற்றியானைநிரையுள், முல்லைக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. கிளைபா ராட்டும் கடுநடை வயக்களிறு முளைதரு பூட்டி வேண்டுகுள கருத்த வாணிற வுருவின் ஒளிறுபு மின்னிப் பரூஉவுறைப் பஃறுளி சிதறிவான் நவின்று பெருவரை நளிர்சிமை அதிர வட்டித்துப் புயலே றுரைஇய வியலிருள் நடுநாள் விறலிழைப் பொலிந்த காண்பின் சாயற் றடைஇத் திரண்டநின் றோள்சேர் பல்லதைப் படாஅ வாகுமெங் கண்ணென நீயும் இருள்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கி வரிவயங் கிரும்புலி வழங்குநர்ப் பார்க்கும் பெருமலை விடரகம் வரவரி தென்னாய் வரவெளி தாக வென்ணுதி யதனான் நுண்ணிதிற் கூட்டிய பன்மா ணாரந் தண்ணிது கமழு நின்மார் பொருநாள் அடைய முயங்கே மாயின் யாமும் விறலிழை நெகிழச் சாஅய்தும் அதுவே அன்னை யறியினு மறிக அலர்வாய் அம்பன் மூதூம் கேட்பினுங் கேட்க வண்டிறை கொண்ட வெரிமருள் தோன்றியொடு ஒண்பூ வேங்கை கமழுந் தண்பெருஞ் சாரற் பகல்வந் தீமே. (அகம் 218) இஃது இடத்துய்த்துப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் வரைவு கடாயது. இம் மணிமிடை பவளத்துட், குறிஞ்சிக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல் உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற்போர் நெடுவே ளாவி அறுகோட்டியானைப் பொதினியாங்கண் சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியலம் என்ற சொற்றாம் மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த வேய்மருள் பணைத்தோள் நெகிழச் சேய்நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலின் நிழல்தேய்ந் துலறிய மரத்த அறைகாய் பறுநீர்ப் பைஞ்சுனை ஆமறப் புலர்தலின் உகுநெற் பொரியும் வெம்மைய யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடியச் சுரம்புல் லென்ற ஆற்ற அலங்குசினை நாரின் முருங்கை நவிரல் வான்பூச் சூரலங் கடுவளி எடுப்ப ஆருற் றுடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன் கடல்போல் தோன்றல காடிறந் தோரே. (அகம். 1) இது பிரிவிடையாற்றாது தோழிக்குக் கூறியது. இக் களிற்றியானை நிரையுட், பாலைக்கு முதலுங் கருவும் வந்து உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் ஊர்மடி கங்குலின் நோன்றளை பரிந்து கூர்முள் வேலி கோட்டின் நீக்கி நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டூது பனிமலர் ஆரு மூர யாரை யோநிற் புலக்கேம் வாருற்று உறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தல் பிறளும் ஒருத்தியை நம்மனைத் தந்து வதுவை அயர்ந்தனை யென்ப அஃதியாங் கூறேம் வாழியர் எந்தை செறுநர் களிறுடை அருஞ்சமந் ததைய நூறும் ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லி னள்ளு ரன்னஎம் ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க சென்றீ பெருமதின் தகைக்குநர் யாரோ. (அகம்.46) இது வாயின் மறுத்தது. இக் களிற்றியானைநிரையுள், மருதத்திற்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. வண்டூது பனிமல ரெனவே வைகறையும் வந்தது. கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப மீனார் குருகின் மென்பறைத் தொழுதி குவையிரும் புன்னைக் குடம்பை சேர அசைவண் டார்க்கும் அல்குறு காலைத் தாழை தளரத் தூக்கி மாலை அழிதக வந்த கொண்ட லொகு கழிபடர்க் காமர் நெஞ்சங் கையறு பினையத் துயரஞ் செய்துநம் அருளா ராயினும் அறாஅலியரோ அவருடைக் கேண்மை அளியின் மையின் அவறைவு முனைஇ வாரற்க தில்ல தோழி கழனி வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்புந் தண்ணுமை வெரீஇய தடந்தாள் நாரை செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை அகமடற் சேக்குந் துறைவன் இன்றுயின் மார்பின் சென்றஎன் நெஞ்சே. (அகம்.40) இது பொருட் பிரிவிடைத் தோழிக்கு உரைத்தது. இக்களிற்றி யானைநிரையுள், நெய்தற்கு முதலுங் கருவும் வந்து உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. இச்சிறப்பானே, முதலின்றிக் கருவும் உரிப் பொருளும் பெறுவனவும், முதலுங் கருவுமின்றி உரிப்பொருளே பெறுவனவுங் கொள்க. திருநகர் விளங்கு மாசில் கற்பி னரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு நின்னுடைக் கேண்மை யெவனோ முல்லை யிரும்பல் கூந்த னாற்றமும் முருந்தேர் வெண்ப லொளியுநீ பெறவே. இது பொருள்வயிற் பிரிந்தோன் சுரத்து நினைந்து உரைத்தது. இது முதற்பொருளின்றி வந்த முல்லை. கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி யிளைய தேவ வியங்குபரி கடைஇப் பகைமுனை வலிக்குந் தேரொடு வினைமுடித் தனர்நங் காத லோரே. இது வந்தாரென் நாற்றுவித்தது. இது முதலுங் கருவு மின்றி வந்த முல்லை. நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற் - பிறையெதிர்ந்த தாமரை போன்முகத்துத தாழ்குழலீர் காணீரோ வேமரை போந்தன வீண்டு. (திணைமாலை. 1) இது மதியும்படுத்தது. இது முதற்பொருளின்றி வந்த குறிஞ்சி. முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னொள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே. இஃது இளையள் விளைவிலள் என்றது. முதலுங் கருவு மின்றி வந்த குறிஞ்சி. இது நாணநாட்டம். நாளு நாளு மாள்வினை யழுங்க வில்லிருந்து மகிழ்வோருக் கில்லையாற் புகழென வொண்பொருட் ககல்வர்நங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே (சிற்றெட்டகம்) இது வற்புறுத்தாற்றியது. இஃது உரிப்பொருளொன்றுமே வந்த பாலை. பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை முன்னும் பின்னு மாகி யின்னும் பாண னெம்வயி னானே. இது வாயின் மறுத்தது. இஃது உரிப்பொருளொன்றுமே வந்த மருதம். அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப் பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி யேதின் மாக்களு நோவர் தோழி யொன்று நோவா ரில்லைத் தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே. இது கழிபடல் கிளவி. இது பேரானும் உரிப்பொருளா னும் நெய்தலாயிற்று. இங்ஙனம் கூறவே, உரிப்பொருளின்றேற் பொருட்பயனின் றென்பது பெற்றாம். இதனானே முதல் கரு வுரிப்பொருள் கொண்டே வருவது திணையாயிற்று. இவை பாடலுட் பயின்ற வழக்கே இலக்கணமாதலின் இயற்கையாம். அல்லாத சிறுபான்மை வழக்கினைச் செயற்கையென மேற்பகுப்பர். முதல் இன்னது என்பதும் அதன் பகுப்பும் 4. முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டன் இயல்னெ மொழிப இயல்புணர்ந் தோரே. இது நிறுத்த முறையானே முதல் உணர்த்துவான் அதன் பகுதியும் அவற்றுட் சிறப்புடையனவும் கூறுகின்றது. (இ,ள்.) முதல் எனப்படுவது - முதலெனச் சிறப்பித்துக் கூறப்படுவது; நிலம் பொழுது இரண்டன் இயல்பு என மொழிப - நிலனும் பொழுதும் என்னும் இரண்டனது இயற்கை நிலனும் இயற்கைப் பொழுதும் என்று கூறுப; இயல்புணர்ந்தோரே - இடமும் காலமும் இயல்பாக உணர்ந்த ஆசிரியர் எ-று. இயற்கையெனவே, செயற்கை நிலனுங் செயற்கைப் பொழுதும் உளவாயின. மேற் பாத்திய (2) நான்கு நிலனும் இயற்கை நிலனாம். ஐந்திணைக்கு வகுத்தபொழுதெல்லாம் இயற்கையாம்; செயற்கை நிலனும் பொழுதும் முன்னர் அறியப்படும். முதல் இயற்கைய வென்றதனாற் கருப்பொருளும் உரிப் பொருளும் இயற்கையுஞ் செயற்கையுமாகிய சிறப்புஞ் சிறப்பின்மையும் உடையவாய்ச் சிறுவரவின வென மயக்கவகையாற் கூறுமாறு மேலே கொள்க. இனி நிலத்தொடு காலத்தினையும் முதல் என்றலின், காலம் பெற்று நிலம் பெறாத பாலைக்கும் அக்காலமே முதலாக அக்காலத்து நிகழும் கருப்பொருளும் கொள்க. அது முன்னர்க் காட்டிய உதாரணத்துட் காண்க. நிலப்பகுப்பு ஆவன 5. மாயோன்மேய காடுறை உலகமுஞ் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகவும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. இது நடுவணது (2) ஒழிந்த நான்கானும் அப் வையத்தைப் பகுக்கின்றது. (இ-ள்) மாயோன் மேய காடு உறை உலகமும், சேயோன் மேயமை வரை உலகமும், வேந்தன் மேய தீம் புனல் உலகமும், வருணன் மேய பெரு மணல் உலகமும் - கடல்வண்ணன் காதலித்த காடுறையுலகமுஞ், செங்கேழ் முருகன் காதலித்த வான் தங்கிய வரைசூழுலகமும், இந்திரன் காதலித்த தண்புன னாடுங், கருங்கடற் கடவுள் காதலித்த நெடுங் கோட்டெக்கர் நிலனும்; முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையான் சொல்லவும் படுமே - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென ஒழுக்கங் கூறிய முறையானே சொல்லவும் படும் எ-று. இந்நான்கு பெயரும் எண்ணும்மையொடு நின்று எழுவாயாகிச் சொல்லவும்படும் என்னும் தொழிற்பயனிலை கொண்டன. என்றது, இவ்வொழுக்கம் நான்கானும் அந்நான்கு நிலத்தையும் நிரனிறை வகையாற் பெயர் கூறப்படுமென்றவாறு. எனவே, ஒழுக்கம் நிகழ்தற்கு நிலம் இடமாயிற்று. உம்மை எதிர்மறையாகலின், இம்முறையன்றிச் சொல்லவும் படுமென்பது பொருளாயிற்று. அது தொகை களினுங் கீழ்க்கணக்குக்களினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க. முல்லை நிலத்துக் கோவலர், பல்லா பயன் தருதற்கு மாயோன் ஆகுதி பயக்கும் ஆபல காக்க வெனக் குரவை தழீஇ மடைபல கொடுத்தலின், ஆண்டு அவன் வெளிப்படுமென்றார். உ-ம்: அரைசுபடக் கடந்தட்டு என்னு முல்லைக் கலியுட் பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய ஆடுகொ ணேமியாற் பரவுதும் (கலி. 105) என வரும், படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும் பாலொடு கோட்டம் புகின். (கலி. 109) என அவன் மகனாகிய காமனும் அந்நிலத்திற்குத் தெய்வமாதல் அவ்வகை பிறவுங் கருவென மொழிப (18) என்புழி வகை யென்றதனாற்கொள்க. இனிக் குறிஞ்சி நிலத்துக் குறவர் முதலியோர் குழீஇ வெறியயர்தற்கு வேண்டும் பொருள் கொண்டு வெளியயர்ப வாகலின், ஆண்டு முருகன் வெளிப்படுமென்றார். அஃது, அணங்குடை நெடுவரை என்னும் அகப் பாட்டினுட், படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவ ளிவள். (அகம். 22) எனவரும். சூரர மகளிரொ டுற்ற சூளே (குறுந். 53) என்புழிச் சூரர மகளிர் அதன் வகை. இனி ஊடலுங் கூடலுமாகிய காமச்சிறப்பு நிகழ்தற்கு மருத நிலத்துத் தெய்வமாக ஆடலும் பாடலு மூடலு முணர்தலும் உள்ளிட்ட இன்ப விளையாட்டு இனிதினுகரும் இமையோர்க்கும் இன்குரலெழிலிக்கும் இறைவனாகிய இந்திரனை ஆண்டையோர் விழவுசெய்து அழைத்தலின், அவன் வெளிப்படு மென்றார். அது, வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்தமை தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு (கலி. 98) என, இந்திரனைத் தெய்வமென்றதனானும், இந்திர விழவூ ரெடுத்த காதையானும் உணர்க. இனி நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளந் தப்பின் அம்மகிளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார். அவை, சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான் (பத்து.பட்டின.86.7) எனவும், கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி (அகம்.110) எனவும், அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி யாயு மாயமொ டயரும் (அகம். 240) எனவும் வரும். இனிப் பாலைக்குச் சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலி.16) எனவும், வளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ (கலி.16) எனவும் ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற் றோன்றிய மழையினை யுங் காற்றினையும் அத்தெய்வப் பகுதியாக்கிக் கூறுப வாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவி கொடுக்குங்கால் அங்கி ஆதித்தன்கட் கொடுக்குமென்பது வேதமுடிபாகலின், ஆதித்தன் எல்லா நிலத்திற்கும் பொது வென மறுக்க. இவ்வாசிரியர் கருப்பொருளாகிய தெய்வத்தினை முதற் பொருளொடு கூட்டிக் கூறியது தெய்வழிபாட்டு மரபிதுவே, ஒழிந்தது மரபன்றென்றற்கு. எனவே அவ்வந்நிலத்தின் தெய்வங்களே பாலைக்குந் தெய்வமாயின. உறையுலகென்றார், ஆவும் எருமையும் யாடும் இன்புறு மாற்றான் நிலைபெறும் அக்காட்டின் கடவுளென்றதற்கு. மைவரை எனவே மழைவளந் தருவிக்கும் முருகவேளென்றார். இந்திரன் யாற்றுவளனும் மழைவளனுந் தருமென்றற்குத் தீம்புனலென்றார். திரைபொருது கரை கரையாமல் எக்கர் செய்தல் கடவுட்கருத்தென்றற்குப் பெருமணலென்றார். இனி, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற முறை யென்ன? யெனின், இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின், கற்பொடு பொருந்திக் கணவன் சொற் பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது. எனவே, முல்லையென்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று, முல்லை சான்ற முல்லையம் புறவின் என்பவாகலின். புணர்தலின்றி இல்லறம் நிகழாமையிற் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். இதற்குதாரணம், கருங்காற் குறிஞ்சி சான்றவெற் பணிந்து என்பது. புணர்ச்சிப்பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். மருதஞ் சான்ற மருதத் தண்பணை என்புழி, மருதமென்றது ஊடியுங் கூடியும் போகம் நுகர்தலை. பரத்தையிற் பிரிவு போலப் பிரிவொப்புமை நோக்கி நெய்தலை ஈற்றுக்கண்வைத்தார். நெய்தற் பறையாவது இரங்கற் பறையாகலின் நெய்தல் இரக்கமாம். ஐதகலல்குல் மகளிர் நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே (புறம்.389) என வரும். இனி, இவ்வாறன்றி முல்லை முதலிய பூவாற் பெயர் பெற்றன இவ்வொழுக்கங்களெனின், அவ்வந் நிலங்கட்கு ஏனைப் பூக்களும் உரியவாகலின் அவற்றாற் பெயர் கூறலும் உரியவெனக் கடாயினாற்கு விடையின்மை உணர்க. இதனானே நடுவுநிலைத்திணை யொழிந்த நான்கற்கும் பெயரும் முறையுங் கூறினான். இந்நான்கும் உரிப்பொருளாதல் புணர்தல் பிரிதல் (14) என்புழிக் கூறுதும். கருப்பொருளாகிய தெய்வத்தை முதற்பொருளொடு கூறியது, அவை வந்த நிலத்தின் பயத்த வாய் (19) மயங்குமாறு போல மயங்காது இது வென்றற்கும், கருப்பொருளுடைத் தெனப்பட்ட பாலைக்குத் தெய்வத்தை விலக்குதற்கு மென்றுணர்க. உ-ம்: வன்புலக் காட்டுநாட் டதுவே (நற். 59) எனவும், இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்.. கன்மிசைச் சிறுநெறி (அகம். 128) எனவும், அவ்வய னண்ணிய வளங்கே ழுரன் (அகம். 26) எனவும், கானலுங் கழறாது மொழியாது (அகம். 170) எனவும் நால்வகை யொழுக்கத்திற்கு நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க. (5) முல்லைக்குங் குறிஞ்சிக்கும் உரி பெரும்பொழுதும் சிறுபொழுதும் 6. காரும் மாலையும் முல்லை குறிஞ்சி கூதில் யாமம் என்மனார் புலவர். இது முதலிரண்டனுள் நிலங் கூறிக் காலங்கூறுவான் முல்லைக்குங் குறிஞ்சிக்கும் பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுங் கூறுத னுதலிற்று. (இ-ள்.) காரும் மாலையும் முல்லை - பெரும்பொழுதினுட் கார்காலமுஞ் சிறுபொழுதினுள் அக்காலத்து மாலையும் முல்லையெனப்படும்; குறிஞ்சி கூதில் யாமம் என்மனார் புலவர் - பெரும் பொழுதினுட் கூதிர்காலமுஞ் சிறுபொழுதினுள் அதன் இடையாமமுங் குறிஞ்சி யெனப்படும் எ-று. முதல் கரு உரிப்பொருயென்னும் மூன்றுபாலுங்கொண்டு ஒரு திணையாமென்று கூறினாரெனும், ஒரு பாலினையுந் திணையென்று அப்பெயரானே கூறினார், வந்தான் என்பது உயர்திணை என்றாற்போல. இது மேலனவற்றிற்கும் ஒக்கும். இக்காலங்கட்கு விதந்து ஒரு பெயர் கூறாது வாளா கூறினார், அப்பெயர் உலகவழக்கமாய் அப்பொருள் உணர நிற்றலின். காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின், அதனை இம்முறை யானே அறுவகைப் படுத்து, இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார். இனி ஒரு நாளினைப் படுசுடரமையந் தொடங்கி மாலையெனவும், அதன்பின் இடையாமமெனவும், அதன்பின் விடிய லெனவும், அதன்பின் காலை யெனவும், அதன்பின் நண்பக லெனவும், அதன்பின் எற்பாடெனவும் ஆறாகப் பகுத்தார். அவை ஒரோவென்று பத்து நாழிகையாக இம்முறையே சூத்திரங்களுட் சிறுபொழுது வைப்பர். பின்பனியும் நண்பகலும் பிற்கூறிய காரணம் அச்சூத்திரத்து கூறுதும். முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாதற்குக் காரணமென்னையெனின், பிரிந்து மீளுந் தலைவன்றிறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுதலே முல்லைப் பொருளாயும், பிரிந்து போகின்றான் திறங்கூறுவனவெல்லாம் பாலையாயும் வருதலின், அம்முல்லைப் பொருளாகிய மீட்சிக்குந் தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார்காலமாம்; என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன், விரைபரித்தேரூந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉங் காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆதலின், அவை வெப்பமுந் தட்பமும் மிகாது இடை நிகரவாகி ஏவல் செய்துவரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும், ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலிற் களிசிறந்து, மாவும் புள்ளுந் துணையோ டின்புற்று விளையாடுவன கண்டு தலைவற்குந் தலைவிக்குங் காமக் குறிப்பு மிகுதலானுமென்பது. புல்லை மேய்ந்து கொல்லேற்றொடு புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் தீங்குழ லிசைப்பவும் பந்தர்முல்லை வந்து மணங்கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்குங் காமக்குறிப்புச் சிறத்தலின், அக்காலத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று. இனிக் குறிஞ்சியாவது புணர்தற்பொருட்டு. அஃது இயற்கைப் புணர்ச்சி முதலியனவாம். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின் களவு நீட்டிப்பக் கருதுந் தலைவற்குக் களவினைச் சிறப்பிக்குங்கால், தலைவி அரியளாக வேண்டுமாகவே அவ்வருமையை ஆக்குவது ஐப்பசியுங் காத்திகையுமாகிய கூதிரும் அதன் இடையாமமு மென்பது. என்னை? இருள் தூங்கித் துளி மிகுதலிற் சேறல் அரிதாதலானும், பானாட் கங்குலிற் பரந்துடன் வழங்காது மாவும் புள்ளுந் துணையுடன் இன்புற்று வதிதலிற்காமக்குறிப்புக் கழியவே பெருகுதலானுங், காவன் மிகுதி நோக்காது வருந் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங்கால் இன்பம் பெருகுதலின், இந்நிலத்திற்குக் கூதிர்காலஞ் சிறந்ததெனப்படும். உ-ம் : விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப வேந்தனும் வெம்பகை தணிந்தனன் றீம்பெயற் காரு மார்கலி தலையின்று தேரும் ஓவத் தன்ன கோபச் செந்நிலம் வள்வாய் ஆழி உள்ளுறு புருளக் கடவுக காண்குவம் பாக மதவுடைத் தாம்பசை குழவி வீங்குசுரை மடியக் கனையலங் குரல காற்பரி பயிற்றிப் படுமணி மிடற்ற பயநிரை யாயங் கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர் கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க மணமனைப் படரும் நனைநகு மாயுரைலத் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப் புன்காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் நீர்குடி சுவையிற் றீவிய மிழற்றி முகிழ்நிலாத் திகழ்தரு மூவாத் திங்கள் பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி வருகுவை யாயின் தருகுவென் பாலென விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித் திதலை யல்குலெங் காதலி புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. (அகம்.54) இது பாகற்குரைத்தது. இது முல்லைகட் காரும் மாலையும் வந்தது. மன்று பா டவிந்து மனைமடிந் தன்றே கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே யாமங் கொளவரிற் கனைஇக் காமங் கடலினு முரைஇக் கரைபொழி யும்மே யெவன்கொல் வாழி தோழி மயங்கி இன்ன மாகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடுஞ் சூழாது கைம்மிக் கிறும்புபட் டிருளிய இட்ட ருஞ்சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கானக நாடன் வரூஉம் யானைக் கயிற்றுபுறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார்பு இட்டருங் கண்ண படுகுழி யியவின் இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே. (அகம் 128) இரவுக்குறிக்கட் சிறைப்புறமாகத் தோழிக்கு உரைப்பாளாக உரைத்தது. இது குறிஞ்சிக்குக் கூதிரும் யாமமும் வந்தது. நிலனும் பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல் வேண்டும்; வேண்டவே, அதற்கிடையின்றிக் கூறிய மாலையும் அதன் சினையாமாதலிற், கார்காலத்து மாலையென்பது பெற்றாம். இது கூதிர்யாமம் என்பதற்கும் ஒக்கும். குறிஞ்சிக்கு முன்பனியு முரித்தெனல் 7. பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி; முற்கூறிய குறிஞ்சிக்கு முன்பனியும் உரித்தென்றலின். (இ-ள்.) பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப - பனி முற்பட்ட பருவமுங் குறிஞ்சிக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எதிர்தலென்பது முன்னாதல்; எனவே, முன்பனியாயிற்று, அது ஞாயிறுபட்ட அந்திக்கண் வருதலின். உரித்தென்றதனாற் கூதில் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க. உ-ம்: பனியடூஉ நின்ற பானாட் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய அலைத்தி முரணில் காலை (அகம். 125) என முன்பனியாமங் குறிஞ்சிக்கண் வந்தது. மருதத்திற்குரிய சிறுபொழுதும் நெய்தற்குரிய சிறுபொழுதும் 8. வைகுறு விடியன் மருதம் எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் ளளதோன்றும். இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது. (இ-ள்.) வைகுறு விடியல் மருதம் - வைகறையும் விடியற் காலமும் மருதமாதலும்; எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் - எற்படுகாலம் நெய்தலாதலும் பொருள் பெறத் தோன்றும் எ-று. வைகுறுதலும் விடியலும் என்னும் உம்மை தொக்கு நின்றது. செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ என்றாற் போல வைகுறுதலை வைகுறு என்றார். அது மாலையாமமும் இடையாமமுங் கழியுந்துணை அக்கங்குல் வைகுறுதல். அது கங்குல் வைகிய அறுதியாதனோக்கி வைகறை யெனவுங் கூறுப. அதுவும் பாடம். நாள் வெயிற் காலையை விடியலென்றார். விடியல் வெங்கதிர் காயும் வேயம லகலறை (கவி.45) என்ப விடியல் வைகறை யிடூஉ மூர (அகம். 196) என்றது, விடியற்கு முன்னர்த்தாகிய வைகறை என உருபுதொக்கு முன்மொழி நிலையலாயிற்று. பரத்தையின் பிரிந்த தலைவன் ஆடலும் பாடலுங் கண்டுங்கேட்டும் பொழுகழிப்பிப் பிறர்க்குப் புலனாகாமல் மீளுங்காலம் அதுவாதலானுந், தலைவிக்குக் கங்குல் யாமம் கழியாது நெஞ்சழிந்து ஆற்றாமை மிகுதலான் ஊடல் உணர்த்தற்கு எளிதாவதோர் உபகார முடைத்தாத லானும் வைகறை கூறினார். இனித் தலைவி விடியற்குக்காலஞ் சிறுவரைத்தாதலின் இதனாற் பெறும் பயன் இன்றென முனிந்து வாயிலடைத்து ஊடனீட்டிப்பவே அவ்வைகறை வழித்தோன்றிய விடியற்கண்ணும் அவன் மெய்வேறுபாடு விளங்கக் கண்டு வாயில் புகுத்தல் பயத்தலின் விடியல் கூறினார். வீங்குநீர் என்னும் மருதக்கலியுள், அணைமென்றோள் யாம்வாட அமர்துணைப் புணர்ந்துநீ பொதுக்கொண்ட கெளவையிற் பூவணிப் பொலிந்தநின் வதுவையங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை. (கலி.66) என மருதத்திற்கு வைகறை வந்தது. விரிகதில் மண்டலம் என்னும் மருதக்கலியுள், தணந்தனை யெனக்கேட்டுத் தவறோரா தெமக்குநின் குணங்களைப் பாராட்டுந் தோழன்வந் தீயான்கொல் கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத்துஞ்சி யணங்குபோற் கமழுநின் னலர்மார்பு காணிய. (கலி.71) என மருதத்துக் காலை வந்தது. காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி (குறுந். 45) என்பதும் அது. நிழற் செய்யவுந், தண்பதம்பட்ட தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாங் குடம்பை நோக்கி உடங்கு பெயரவும், புன்னை முதலிய பூவினாற்றம் முன்னின்று கஞற்றவும், நெடுந்திரை யழுவத்து நிலாக்கதிர் பரப்பவுங், காதல் கைமிக்குக் கடற்கானுங் கானற்கானும் நிறைகடந்து வேட்கைபுலப்பட உரைத்தலின், ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற்பொருள் சிறத்தலின் ஏற்பாடு நெய்தற்கு வந்தது. உ-ம்: நெடுவேள் மார்பின் ஆரம் போலச் செவ்வாய் வானந் தீண்டிமீன் அருந்தும் பைங்காற் கொக்கின நிரைபறை யுகப்ப எல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயின் கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு மதரெழில் மழைக்கண் கலுழ இவளே பெருநாண் அணிந்த சிறுமென் சாயல் மாணலஞ் சிதைய ஏங்கி யானாது அழல்தொடங் கினளே பெரும அதனால் கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ வல்வில் இளையரோ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ பெண்ணை ஓங்கிய வெண்மணற் படப்பை அன்றில் அகவும் ஆங்கண் சிறுகுரல் நெய்தலெம் பெருங்குழி நாட்டே (அகம்.120) பகற்குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்தது. நெய்தற்கு ஏற்பாடு வந்தது. கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப (அகம்.40) என்பதனுன் மாலையும் வந்தது. கலியுள் மாலைக்காலம் நெய்தலின்கண் வந்தவாறு காண்க. இதுமேல் நிலனொருங்கு மயங்குத லின்று (12) என்பதனாற் பெறுதும். இவற்றிற்கு அறுவகை இருதுவும் உரிய வென்பதன்றிக் காரும் இளவேனிலும் வேனிலும் பெரும்பொழுதாகக் கொள்ப என்றற்குப் பொருள் பெறத் தோன்றும் என்றார். இனி நெய்தற்கு ஒழிந்த மூன்று காலமும் பற்றிவரச் சான்றோர் செய்யுட் செய்திலர், அக்காலத்துத் தலைவி புறம் போந்து விளையாடாமையின். அங்ஙனம் வந்த செய்யுளுளவேல் அவற்றையுங் கொள்க. கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன் எம்மில் பெருமொழி கூறித் தம்மில் கையுந் காலுந் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. (குறுந். 8) இது குறுந்தொகை. புறனுரைத்தாளெனக் கேட்ட பரத்தை தலைவனை நெருங்கித் தலைவன் பாங்காயினார் கேட்ப உரைத்தது. இது முதுவேனில் வந்தது. அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை அரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை இழையணி பணைத்தோ ளையை தந்தை மழைவளந் தரூஉ மாவண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண் கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங் குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு வேழ வெண்புணை தழீஇப் பூழியர் கயநா டியானையின் முகனமர்ந் தாஅங் கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய நெருந லாடினை புனலே யின்றுவந் தாக வனமுலை யரும்பிய கணங்கின் மாசில் கற்பிற் புதல்வன் தாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை யெள்ளலஃதமைகுந் தில்ல சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத் தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய் முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும் பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம் இளமை சென்று தவத்தொல் லஃதே இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே. (அகம். 6) பரத்தையொடு புனலாடி வந்தமைகேட்டுத் தலைவி புலந்தது. இது இளவேனில் வந்தது. ஏனைய வந்தவழிக் காண்க. நாடகவழக்கானன்றி உலகியல் வழக்கானும் அச் சிறு பொழுது அப்பெரும்பொழுதிற்குப் பொருந்து மென்றதற்குத் தோன்று மென்றார். இதன் பயன் இவ்விரண்டு நிலத்துக்கு மற்றை மூன்று காலமும் பெரும்பான்மை வாராதென்றலாம். (8) பாலைக்குரிய காலம் 9. நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலோடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. இது நிலனுடைய நான்கற்குங் காலங் கூறி அந்நான்கற்கும் பொதுவாகிய பாலைக்குங் காலங் கூறுகின்றது. (இ-ள்.) நடுவு நிலைத்திணையே - பாலைத்திணை; நண்பகல் வேனிலொடு - எற்பாடுங் காலையும் என்னும் இரு கூற்றிற்கு நடுவணதாகிய ஒரு கூறு தான் கொண்டு வெம்மை செய்து பெருகிய பெரும்பகலோடும் இளவேனிலும் முதுவேனிலும் என்னும் இரண்டனோடும்; முடிவு நிலை மருங்கின் - பிரிவெனப்படுதற்கு முடிவுடைத்தாகிய குறிஞ்சியும் முல்லையுமாகிய ஒரு மருங்கின் கண்ணே; முன்னிய நெறித்து - ஆசிரியன் மனங்கொள்ளப்படும் நெறியையுடைத்து எ-று. நிலை யென்றது நிலத்தினை. முடிவுநிலைப்பகுதிக்கண் முன்னப்படுமெனவே அத்துணை யாக்கமின்றி ஒழிந்த மருதமும் நெய்தலும் முடியாநிலமாய் அத்துணை முன்னப்படாவாயின பாலைக் கென்பதாம். பிரிவின்கண் முடிய வருவன வெல்லாம் இவ்விரண்டற்கும் முடியவருதலும் ஒழிந்த இரண்டற்கும் அவை குறைய வருதலும் உரையிற் கொள்க. என்னை? சுரத்தருமை அறியின், இவள், ஆற்றாளாமெனத் தலைவன் செலவழுங்குதலுந், துணிந்து போதலும், உடன் போவலெனத் தலைவி கூறுதலும், அதனை அவன் விலக்கலும், இருந்திரங்கலும் போல்வன பலவும் முடியவரும் நிலங் குறிஞ்சியும் முல்லையுமாகலின். சுரத்தருமை முதலிய நிகழாமையின் மருதமும் நெய்தலும் அப்பொருண் முடியவாராவாயின. நன்றே காதலர் சென்ற ஆறே அணிநிற இரும்பொறை மீமிசை மணிநிற வுருவின தோகையு முடைத்தே. (ஐங்குறு.431) இது சுரத்தருமை நினைந்து வருந்தினேனென்ற தலைவிக்கு அவ்வருத்தம் நீங்கக் கார்கால மாயிற்றென்று ஆற்றுவித்தது. இப்பாட்டு முதலிய பத்தும் முல்லையுட் பாலை. கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்தின் தவிர்குதல் யாவது மாற்றருந் தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே. (ஐந்குறு.451) இது பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது. மேற்கூறிய பருவங்கண்டு கிழத்தியுரைத்த இப்பத்தும் முல்லையுட் பாலை. கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ இருங்கல் வியலறை வரிப்பத் தாஅ நன்மலை நாடன் பிரிந்தென ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய். (ஐங்குறு.219) இது வரைவிடை வைத்துப் பிரிந்துழித் தலைவி யாற்றாமை கண்டு தோழி கூறியது. இது குறிஞ்சியுட் பாலை. ஏக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்டுளி வீசிப் பசலை செய்தன பனிபடு துறையே. (ஐந்குறு.141) இது வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்குந் தோழிக்குத் துறை யின்பமுடைத்தாகலான் வருத்திற்றெனத் தலைவி கூறியது. இது சுரத்தருமை முதலியனவின்றி நெய்தற்குட் பாலை வந்தது. ஏனைய வந்துழிக் காண்க. முந்நீர் வழக்கஞ் சிறுபான்மையாகலின் நெய்தற்கு முடிய வாராதாயிற்று. இக்கருத்தானே பிரிவொழுக்கம் மருதத்திற்கும் நெய்தற்குஞ் சிறுபான்மையாகப் புலனெறிவழக்கஞ் செய்யப்படும். எற்பாட்டுக்கு முன்னர்த்தாகிய நண்பகலைப் பாலைக்குக் கூற வேண்டிப் பின் வைத்தாரேனும் பெரும்பொழுதிற்கு முற்கூறுதலின் ஒருவாற்றாற் சிறுபொழுதாறும் முறையே வைத்தாராயிற்று. காலையும், மாலையும் நண்பகலன்ன கடுமைகூரச் சோலை தேம்பிக் கூவன் மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம் பயந் துறந்து, புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின், இன்பத்திற்கு இடையூறாகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலுஞ் சிறப்புடைய ஆயின. தென்றல் யாற்றுத் திரைமணல் அடைகரை வண்டு வரிபாடத் தண்போ தலர்ந்து தாதுந் தளிரு மேதகத் துவன்றிப் பல்பூஞ் சோலைப் பன்மலர் நாற்றமொடு செவ்விதிற் றென்றல் நொவ்விதிற் றாகிக் குயில் கூஉக் குரலும் பயில்வதன் மேலும் நிலவுஞ் சாந்தும் பயில்வுறு முத்தும் இன்பம் விளைக்கு நன்பொருள் பிறவும் பண்டைய போலாது, இன்பம் மிகத்தரும் இளவேனிற் காலத்துப், பொழில் விளையாடியும், புதுப்பூக்கொய்தும், அருவியாடியும் முன்னர் விளையாட்டு நிகழ்ந்தமை பற்றிப் பிரிந்த கிழத்தி மெலிந்துரைக்குங் கிளவி பயின்று வருதலானும், உடன்போக்கின்கண் அக்காலம் இன்பம் பயக்குமாதலானும் இளவேனிலொடு நண்பகல் சிறந்த தெனப்பட்டது. பிரிந்த கிழத்தி இருந்து கூறுவன கார்கால மன்மையின் முல்லை யாகா. உ-ம்: கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை வறனுறல் அங்கோ டுதிர வலங்கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை இரவுக்குறும் பலற நூறி நிரைபகுத் திருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலைவில் ஆடவர் போலப் பலவுடன் பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திறுக்கும் அருஞ்சுரம் இறந்த கொடி யோர்க் கல்கலும் இருங்கழை இறும்பின் ஆய்ந்துகொண் டறுத்த நுணங்குகண் சிறுகோல் வணங்கிறை மகளிரொ டகவுநர்ப் புரந்த வன்பின் கழல்தொடி நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் அன்னநின் அலர்முலை யாகம் புலம்பப் பலநினைந் தாழ லென்றி தோழி யாழவென் கண்பனி நிறுத்த வெளிதோ குரவுமலர்ந் தற்சிர நீங்கிய வரும்பத வேனி லறலவிர் வார்மண லகல்யாற் றடைகரைத் துறையணி மருதோ டிகல்கொள வோங்கிக் கலுழ்தளிர் அணிந்த இருஞ்சினை மாஅத் திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப் புகைபுரை அம்மஞ் சூர நுகர்குயில் அகவுங் குரல்கேட் போர்க்கே. (அகம்.97) இது வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது. இக் களிற்றியானைநிரையுள் இருவகை வேனிலும் பாலைக் கண் வந்தன. நண்பகலொடுவருவன வந்துழிக் காண்க. (9) பாலைக்குப் பின்பனியும் உரித்தெனல் 10. பின்பனி தானும் உரித்தென மொழிப இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்.) நடுவுநிலைத் திணைக்கு முற்கூறிய வேனிலன்றிப் பின்பனிக்காலமும் உரித்து எ-று. இது கூதிரை, முன்பனியாகிய மார்கழியுந் தையுந் தொடர்ந்தாற் போல, வேனிலாகிய சித்திரை முதலிய நான்கற்கு முன் பின்பனி யாகிய மாசியும் பங்குனியுந் தொடர்ந்தவென்று கூறினார். உ-ம்: பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி. (கலி.31) இது தனித்தோர்க்குப் பின்பனி ஆற்றற்கு அரிது, இஃதெவர்க்கும் ஏதமாம் எனவும், இதனான் இறந்துபடுவே னெனவுங் கூறிற்று. அம்ம வாழி தோழி காதலர் நூலறு முத்திற் றண்சித ருறைப்பத் தாளித் தண்பவர் நாளா மேயும் பனிபடு நாளே பிரிந்தனர் பிரியு நாளும் பலவா கவ்வே (குறுந்.104) தலைவி தோழிக்கு உரைத்தது. இதுவும் அது. பின்பனிக்கு நண்பகல் துன்பஞ்செய்யா தென்பதூஉம், அதற்குச் சிறுபொழுது வரைவில வென்பதூஉம் கூறிற்று; என்னை? சூத்திரத்துத் தான் எனத் தனித்து வாங்கிக் கூறினமையின். (10) பாலைப்பகுதியும் அவற்றிற்குப் பின்பனி உரித்தெனலும் 11. இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும் உரியதாகும் என்மனார் புலவர். இது பாலைப் பகுதி இரண்டெனவும் அவ்விரண்டற்கும் பின்பனி உரித்தெனவுங் கூறுகின்றது. (இ-ள்.) இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும் - நான்கு வருணத்தார்க்குங் காலிற் பிரிவும் வேளாளர்க்குத் கலத்திற் பிரிவுந் தத்தம் நிலைமைக்கேற்பத் தோன்றினும்; உரியது ஆகும் என்மனார் புலவர் - பின்பனிக்காலம் அவ்விரண்டற்கும் உரிமைபூண்டு நிற்குமென்று கூறுவர் புலவர் எ-று. கடலினை நிலமென்னாமையிற் கலத்திற் பிரிவு முன்பகுத்த நிலத்துள் அடங்காதென்று, அதுவும் அடங்குதற்கு இரு வகைப் பிரிவும் என்னும் முற்றும்மை கொடுத்துக், காலிற் பிரிவொடு கூட்டிக் கூறினார். கலத்திற் பிரிவு அந்தணர் முதலிய செந்தீவாழ்நர்க்கு ஆகாமையின் வேளாளர்க்கே உரித்தென்றார். வேத வணிக ரல்லாதார் கலத்திற் பிரிவு வேதநெறி யன்மையின் ஆராய்ச்சியின்று. இக்கருத்தானே இருவகை வேனிலும் நண்பகலும் இருவகைப் பிரிவிற்கும் ஒப்ப உரியவன்றிக், காலிற் பிரிவுக்குச் சிறத்தலுங், கலத்திற் பிரிவிற்கு இளவேனி லொன்றுங் காற்றுமிகாத முற்பக்கத்துச் சிறுவரவிற்றாய் வருதலுங் கொள்க. ஒழிந்த உரிப்பொருள்களினும் பாலை இடை நிகழுமென்றலிற் பிரிய வேண்டிய வழி அவற்றிற்கு ஓதிய காலங்கள் கலத்திற் பிரிவிற்கு வந்தாலும் இழுக்கின்று. என்னை? கார்காலத்துக் கலத்திற்பிரிவும் உலகியலாய்ப் பாடலுட் பயின்று வருமாயினென்க. தோன்றினும் என்ற உம்மை சிறப்பும்மை; இரண்டு பிரிவிற்கும் பின்பனி உரித்தென்றலின். இனிக் கலத்திற்பிரிவிற்கு உ-ம்: உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ இரவும் எல்லையும் அசைவின் றாகி விரைசெல லியற்கை வங்கூ ழாட்டக் கோடுயர் திணிமண லகன்றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய ஆள்வினைப் புரிந்த காலதல் நாள்பல கழியா மையி னழிபட ரகல வருவர் மன்னாற் றோழி தண்பணைப் பொருபுனல் வைப்பின் நம்மூ ராங்கட் கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப் பெருவன மலர அல்லி தீண்டிப் பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல் கூதள மூதிலைக் கொடிநிரைக் தூங்க அறனின் றலைக்கு மானா வாடை கடிமனை மாடத்துக் கங்குல் வீசத் திருந்திழை நெகிழ்ந்து பெருங்கவின் சாய நிரைவளை யூருந் தோளென உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே (அகம்.255) இது தோழி தூதுவிடுவது காரணமாக உரைத்தது. இம் மணிமிடை பவளத்துப் பின்பனி வந்தவாறும் நண்பகல் கூறாமையும் அவர் குறித்தகாலம் இதுவென்பது தோன்றியவாறுங் காண்க. குன்ற வெண்மண லேறி நின்றுநின்று இன்னுங் காண்கம் வம்மோ தோழி களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே வருகின்றாரெனக் கேட்ட தலைவி தோழிக்கு உரைத்தது. இது பின்பனி நின்ற காலம் வரைவின்றி வந்தது. கடலிடைக் கலத்தைச் செலுத்துதற்கு உரிய காற்றொடு பட்ட காலம் யாதானுங் கொள்க. ஆகுமென்றதனான் வேதவணிகரும் பொருளின்றி இல்லறம் நிகழாத காலத்தாயிற் செந்தீ வழிபடுதற்கு உரியோரை நாட்டிக் கலத்திற் பிரிதற்கு உரியரென்று கொள்க. மேலனவற்றிற்குப் புறனடை 12. திணைமயக் குறுதலுங் கடிநிலை இலவே நிலனொருங்கு மயங்குதல் இன்றென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே. இஃது உரிப்பொருள் மயங்கு மென்றலின் மேலனவற்றிற்குப் புறனடை. (இ-ள்.) திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே மாயோன் மேய (5) என்பதனுள் ஒரு நிலத்து ஓரொழுக்கம் நிகழுமென நினைத்துக் கூறிய ஒழுக்கம் அவ்வந்நிலத்திற்கே உரித்தா யொழுகாது தம்முள் மயங்கிவருதலும் நீக்கப்படா; நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிப - அங்ஙனம் ஒருநிலத்து இரண்டொழுக்கந் தம்முள் மயங்குதலன்றி இரண்டு நிலம் ஒரோவொழுக்கத்தின்கண் மயங்குதல் இல்லை என்று கூறுவர்; புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - அங்ஙனம் நிலனும் ஒழுக்கமும் இயைபுபடுத்துச் செய்யும் புலனெறி வழக்கத்தினை. மெய்பெற உணர்ந்த அறிவினையுடை யோர் எ-று. என்றது, ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கி வருமென்பதூஉம், நிலன் இரண்டு மயங்காவெனவே காலம் இரண்டு தம்முள் மயங்குமென்பதுஉங் கூறினாராயிற்று. ஆகவே, ஒரு நிலமே மயங்குமாறாயிற்று. உரிப்பொருண் மயக்குறுதல் என்னாது திணை மயக்குறுதலும் என்றார், ஓர் உரிப் பொருளோடு ஓர் உரிப்பொருள் மயங்குதலும், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே காலம் மயங்குதலும், கருப்பொருள் மயங்குதலும் பெறுமென்றற்கு, திணையென்றது அம் மூன்றனையுங் கொண்டே நிற்றலின். உ-ம்: அறியே மல்லே மறிந்தன மாதோ பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் சாந்த நாறு நறியோள் கூந்த னாறுநின் மார்பே தெய்யோ (ஐங்குறு 240) இது புறத்தொழுக்க மின்றென்றாற்குத் தோழி கூறியது. புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை வளைவெண் மருப்பிற் கேழல் புரக்குங் குன்றுகெழு நாடன் மன்றதன் பொன்போல் புதல்வனோ டென்னீத் தோனே (ஐங்குறு.265) இது வாயில்களுக்குத் தலைவி கூறியது. வன்கட் கானவன் மென்சொன் மடமகள் புன்புல மயக்கத் துழுத வேனற் பைம்புறச் சிறுகிளி கடியுநாட பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே (ஐங்குறு.283) இது தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப் பள்ளி யிடத்துச் சென்ற தோழி கூறியது. இவை குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தன; இவை ஓரொழுக்கம் நிகழ்தற்கு உரியவிடத்தே ஓரொழுக்கமும் நிகழ்ந்தன. அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி யாயி னென்னதூஉ மறிய வாகுமோ மற்றே முறியிணர்க் கோங்கம் பயந்த மாறே (ஐந்குறு.366) இஃது இவ்வேறுபாடென்னென்ற செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியான் அறத்தொடு நிற்றல். இது பாலையிற் குறிஞ்சி. இஃது உரிப்பொருளொடு உரிப் பொருண் மயங்கிற்று. மேல் வருவனவற்றிற்கும் இவ்வாறு உய்த்துணர்ந்து கொள்க. வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழின் முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநற் குறிநீ செய்தனை யென்ப வலரே குரவ நீள்சினை யுறையும் பருவ மாக்குயிற் கெளவையிற் பெரிதே (ஐங்குறு.369) இது பொழிலிடத்து ஒருத்தியொடு தங்கிவந்தும் யான் பரத்தையை அறியேனென்றாற்குத் தோழி கூறியது. வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை யிருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீநயந் துறையப் பட்டோள் யாவ ளோவெம் மறையா தீமே (ஐந்குறு.370) இது பரத்தையர்க்குப் பூவணிந்தமை கேட்ட தலைவி அஃதின்றென்றாற்குக் கூறியது. இவை பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன. அருந்தவ மாற்றியார் (கலி. 30) என்னும் பாலைக்கலியும் அது. அன்னை வாழிவேண் டன்னை யுதுக்கா ணேர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழியூஉ நெய்தன் மயக்கிவந் தன்று நின்மகள் பூப்போ லுண்கண் மரீ இய நோய்க்குமருந் தாகிய கொண்கன் றேரே. (ஐங்குறு.101) இஃது அறத்தொடு நின்றபின் வரைதற்குப் பிரிந்தான் வரைவொடு வந்தமை தோழி செவிலிக்குக் காட்டியது. இது நெய்தலிற் குறிஞ்சி. கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே (ஐங்குறு.122) கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே உறாஅ வலறுமுலை மடாஅ வுண்ணாப் பாவை யூட்டு வோளே. (ஐங்குறு 128) இவை பெதும்பைப் பருவந்தாள் ஒரு தலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித் தலைவன் குறிப்புணர்ந்தது. இப்பத்தும் நெய்தற்கண் மருதம். யானெவன் செய்கோ பாணவா னாது மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் புல்லென் றனவென் புரிவளைத் தோளே. (ஐங்குறு.133) இது தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்றாயாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது. இப் பத்தும் நெய்தற்கண் மருதம். வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை மிதிப்ப நக்க கண்போ னெய்தல் கட்கமழ் தானாத் துறைவற்கு நெக்க நெஞ்ச நேர்கல் லேனே. (ஐங்குறு.151) இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைவி வாயின் மறுத்தது. இப்பத்தும் நெய்தற்கண் மருதம். இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி முகம்புதை கதுப்பின ளிறைஞ்சிநின் றோளே புலம்புகொண் மாலை மறைய நலங்கே ழாக நல்குவ ளெனக்கே. (ஐங்குறு.197) இடந்தலைப் பாட்டிற் றலைவி நிலைகண்டு கூறியது. இது நெய்தலிற்புணர்த் னிமித்தம். வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன் தண்ணக மண்ணளை நிறைய நெல்லி னிரும்பூ வுறைக்கு மூரற்கிவள் பெருங்கவி னிழப்ப தெவன்கொ லன்னாய் (ஐங்குறு. 30) இது தோழி அறத்தொடு நின்றது. பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங் கழனி யூரநின் மொழிவ லென்றுந் துஞ்சுமனை நெடுநகர் வருதி யஞ்சா யோவிவ டந்தைகை வேலே. (ஐங்குறு.60) இது தோழி இரவுக்குறி மறுத்தது. நெறிமருப் பெருமை நீலஇரும் போத்து வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங் கழனி யூரன் மகளிவள் பழன வெதிரின் கொடிப்பிணை யலளே. (ஐங்குறு.91) இஃது இளையள் விளைவில ளென்றது. கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக் காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு நுந்தை நும்மூர் வருது மொண்டொடி மடந்தை நின்னையாம் பெறின (ஐங்குறு.92) இது நின் தமர் வாராமையின் எமர் வரைவு நேர்ந்தில ரென்று தோழி கூறக் கேட்ட தலைவன் தலைவிக்குக் கூறியது. இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன. இக் காட்டியவெல்லாம் ஐங்குநூறு. புனையிழை நோக்கியும் என்னும் மருதக் கலியும் (கலி.76) அது. முரசுடைச் செல்வர் புரவிக் சூட்டு மூட்டுறு கவரி தூக்கி யன்ன செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர் மூதா தின்றல் அஞ்சிக் காவலர் பாக லாய்கொடிப் பகன்றையொடு பரீஇக் காஞ்சியி னகத்துக் கரும்பருத்தி யாக்குந் தீம்புன லூர திறவ தாகக் குவளை யுண்க ணிவளும் யானுங் கழுநீ ராம்பல் முழுநெறிப் பைந்தழை காயா ஞாயிற் றாகத் தலைப்பப் பொய்த லாடிப் பொலிகென வந்து நின்னகாப் பிழைத்த தவறோ பெரும கள்ளுங் கண்ணியுங் கையுறை யாக நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் நிலைத்துறைக் கடவுட் குளப்பட வோச்சித் தணிமருங் கறியாள் யாயழ மணிமருண் மேனி பொன்னிறங் கொளலே (அகம்.156) இது தலைவியைத் தோழி யிடத்துய்த்துத் தலைவனை வரைவு கடாயது. இவ்வகப்பாட்டும் அது. இன்னும், மயக்குறுதலும் என்றதனான் அவ்வந் நிலங்கட்கு உரிய முதலுங் கருவும் வந்து உரிப்பொருள் மயங்குவனவுங் கொள்க. அஃது அயந்திகழ் நறுங்கொன்றை (கலி.150) என்னும் நெய்தற் கலியுட் காண்க. இக்கருத்தானே நக்கீரரும் ஐந்திணையுள்ளுங் களவு நிகழுமென்று கொண்ட வாறுணர்க. இனிக் காலம் ஒருங்கு மருங்குங்காற் பெரும்பொழுது இரண்டும் பெரும்பான்மையுஞ் சிறுபான்மை சிறுபொழுதும் மயங்குதலுங் கொள்க. மழையில் வான மீனணிந் தன்ன குழையமன் முசுண்டை வாலிய மலர வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் பெரிய சூடிய கவர்கோற் கோவலர் எல்லுப் பெயலுழந்த பல்லா நிரையொடு நீர் திகழ் கண்ணியர் ஊர்வயிற் பெயர்தர நனிசேட் பட்ட மாரி தளிசிறந் தேர்தரு கடுநீர் தெருவுதொ றொழுகப் பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக் கூதிர்நின் றன்றாற் பொழுதே காதலர் நந்நிலை யறியா ராயினுந் தந்நிலை யறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக் காய்சின யானைக் கங்குற் சூழ அஞ்சுவர விறுத்த தானை வெஞ்சின வேந்தன் பாசறை யோரே. (அகம்.264) இது தோழிக்குத் தலைவி கூறியது. இம் மணிமிடைபவளத்துள் முல்லையுட் கூதிர் வந்தது. மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித் துள்ளுப்பெயல் கழிந்த பின்றைப் புகையுறப் புள்ளிநுண் துவலை பூவகம் நிறையக் காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத் துய்த்தலைப் பூவின் புதலிவர் ஈங்கை நெய்தோய்த் தன்ன நீர்நனையந்தளிர் இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர அவரைப் பைம்பூப் பயில அகல்வயற் கதிர்வார் காய்நெல் கட்கினி திறைஞ்சச் சிதர்சினைத் தூங்கும் அற்சிர அரைநாட் காய்சின வேந்தன் பாசறை நீடி நந்நோ யறியா அறனிலாளர் இந்நிலை களைய வருகுவர் கொல்லென ஆனா தெறிதரும் வாடையொடு நோனேன் தோழியென் தனிமை யானே (அகம்.294) இரு பருவ வரவின்கண் வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது. இம் மணிமிடைபவளத்து முல்லையுள் முன்பனி வந்தது. நிலமுங் கருவும் மயங்கின. கருங்கால் வேங்கை வீயுகு துறுக லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை யெல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. (குறுந்.47) இஃது இரா வந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழியாக நிலாவிற்கு உரைப்பாளாய் உரைத்தது. இக் குறுந் தொகையுட் குறிஞ்சியுள் வேனில் வந்தது. விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப (அகம். 54) என்பது கார்காலத்து மீள்கின்றான் முகிழ்நிலாத் திகழ்தற்குச் சிறந்த வேனிலிறுதிக்கண் தலைவிமாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது. இது முல்லைக்கண் வேனில் வந்தது. துஞ்சுவது போல விருளி விண்பக இமைப்பது போல மின்னி யுறைக் கொண்டு ஏறுவது போலப் பாடுசிறந் துரைஇ நிலம்நெஞ் சுட்க ஓவாது சிலைத்தாங் கார்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள் ஈன்றுநா ளுலந்த வாலா வெண்மழை வான்றோ யுயர்வரை யாடும் வைகறைப் புலலே ரணிந்த காண்பின் காலைத் தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து வெண்புறக் குடைய திரிமருப் பிரலை வார்மண லொருசிறைப் பிடவவிழ் கொழுநிழற் காமர் துணையோ டமர்துயில் வதிய அரக்குநிற விருவின் ஈயல் மூதாய் பரப்பி யவைபோற் பாஅய்ப் பலவுடன் நீர்வார் மருங்கி னீரணி திகழ இன்னும் வாரா ராயின் நன்னுதல் யாதுகொல் மற்றவர் நிலையே காதலர் கருவிக் காரிடி யிரீஇய பருவ மன்றவர் வருதுமென்றதுவே (அகம்.139) இது பிரிவிடையாற்றாது தோழிக்கு உரைத்தது. இம் மணிமிடை பவளத்துப் பாலைக்கண் முன்பனியும் வைகறையும் ஒருங்கு வந்தன. தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக்கைபோற் பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம் புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதின்கண்; இது தரவு. சேயார்கட் சென்றவென் னெஞ்சினைச் சின்மொழி நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி வாய்விரிபு பனியேற்ற விரவுப்பன் மலர்தீண்டி நோய்சேர்ந்த வைகலான் வாடை வந்த தலைத்தரூஉம்; போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச் சூழ்பாங்கே சுடரிழாய் கரப்பென்மற் கைநீவி வீழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணு மிருந்தும்பி யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்; தொடிநிலை நெகிழ்த்தார்கட் டோயுமென் னாருயிர் வடுநீங்கு கிளவியாய் வலிப்பென்மன் வலிப்பவு நெடுநிலாத் திறந்துண்ண நிரையிழழ் வாய்விட்ட கடிமலர் கமழ்நாற்றங் கங்குல்வந் தலைத்தரூஉம்; இவை மூன்றுந் தாழிசை. எனவாங்கு, இது தனிச்சொல். வருந்தினை வதிந்தநின் வளைநீங்கச் சேய்நாட்டுப் பிரிந்துசெய் பொருட்பிணி பின்னோக்கா தெய்தி நம் அருந்துயர் களைஞர் வந்தனர் திருந்தெயி றிலங்குநின் றேமொழி படர்ந்தே (கலி.29) இது சுரிதகம். இஃது ஒத்தாழிசை. வந்தாரென ஆற்றுவித்தது. இதில் வேனிலும் வாடையுங் கங்குலும் மாலையும் வந்தன. அம்ம வாழி தோழி சிறியிலைக் குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணீஇய வாவ லுகக்கு மாலையு மின்றுகொல் காதலர் சென்ற நாட்டே (ஐங்குறு.339) இவ் ஐங்குறுநூறு பாலைக்கண் மாலை வந்தது. தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற் கடும்பகல் வருதி கையறு மாலை கொடுங்கழி நெய்தலுங் கூம்பக் காலை வரினுங் களைஞரோ விலரோ (ஐங்குறு.183) பருவ வரவின்கண் மாலைப்பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது. இவ் ஐங்குறுநூறு நெய்தற்கண் மாலை வந்தது. தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற் பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போ லெல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பி னல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம் போன் மயங்கிரு டலைவர வெல்லைககு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழ லினிவரி லுயருமற் பழியெனக் கலங்கிய தனியவ ரிடும்பைகண் டினைதியோ வெம்போல வினியசெய் தகன்றாரை யுடையை யோநீ (கலி.129) என நெய்தற்கலியுட் கலங்குலும் மாலையும் முன்பனியும் வந்தன. ஒழிந்தனவும் மயங்குமாறு வந்துழிக் காண்க. கைக்கிளையும் பெருந்திணையும் நான்கு நிலத்தும் மயங்குதல் 13. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. இஃது எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) உரிப்பொருள் அல்லன - உரிப்பொருளென்று ஓதப்படும் ஐந்திணையும் அல்லாத கைக்கிளையும் பெருந்திணையும், மயங்கவும் பெறும் - நால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும் - எ-று. உம்மை, எச்சவும்மை யாதலின், உரிப்பொருளாக எடுத்த பாலையும் நால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும் என்றவாறாம். பாலையென்பது ஒன்று பிரிந்து பலவாகிய கூற்றின் மேற்றாதலின், ஒற்றுமைப்பட்டு நிகழ்கின்றார் இருவர் பிரிந்துவரலும் பாலையாமன்றே? அதனான், அதுவுங் குணங் காரணமாய்ச் செம்பால் செம்பாலையாயினாற்போல நின்றது. ஊர்க்கா னிவந்த என்னுங் குறிஞ்சிக்கலியுள், ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம் மாதர் கொண்ட மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ (கலி.56) என்பது நிலம்வரையது வந்த கைக்கிளை. இதனைக் குறிஞ்சியுட் கோத்தார் புணர்ச்சி யெதிர்ப்பாடகலின். கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே யாயர் மகள் (கலி. 103 வளியா வறியா வுயிர்காவல் கொண்டு நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற் கெளியவோ வாயமக டோள் (கலி. 103) அவ்வழி முன்ளெயிற் றேஎ ரிவளைப் பெறுமிதோர் வெள்ளேற் றெருத்தடங்குவான்; ஒள்ளிழை, வாருறு கூந்தற் றுயில்பெறும் வைமருப்பிற் காரி கதனஞ்சான் கொள்பவன்... (கவி. 104) என்றாற்போல ஏறு தழுவினாற்கு உரியன் இவளென வந்த கைக்கிளை களெல்லாம் முல்லைக்கலி பலவற்றுள்ளுங் காண்க. முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே (105) என்பதனான் அவை கைக்கிளையாயின. இனி எழின்மருப் பெழில்வேழம் (கலி.138) என்றது முதலிய நாலு பாட்டும் ஏறிய மடற்றிறமான (51) பெருந்திணை. என்னை? மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் தேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு (கலி.139) என்றாற் போல்வன வருதலின். புரிவுண்ட புணர்ச்சி (கலி. 142) என்றது முதலிய ஆறு பாட்டுந் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந்திணை. இவற்றை நெய்தலுட் கோத்தார், சாக்காடு குறித்த இரங்கற் பொருட்டாகலின். கூனுங் குறளும் உறழ்ந்து கூறும் பெருந்திணையும் (கலி. 94) ஊடற் பகுதியவாகலின் மருதத்துட் கோத்தார். கல்லாப் பொதுவனை நீமாறு (கலி. 112) எனப் பொதுவியர் கூறலும், நடா அக் கரும்பமன்ற தோளாரைக் காணின் விடாஅலோம் பென்றா ரெமர் (கலி. 112) எனப் பொதுவர் கூறலும் மிக்க காமத்து மிடலாகிய பெருந்திணை யாகலின் முல்லையுட் கோத்தார். நறவினை வரைந்தார் (99) ஈண்டு நீர்மிசை (100) என்னுங் கலிகளுங் காமத்து மிகுதிறத்தான் அரசனை நோக்கிச் சான்றோர் கூறியவாகலின் மருதத்துக் கோத்தார். இனி, வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த வுருப்பலி ரங்காட்டு (அகம்.11) எனக் காடுறை புலகத்துப் பாலை வந்தது. தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக வடங்காதார் மிடல்சாய வமரர்வந் திரத்தலின் மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரைக் கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலு முடன்றக்கான் முகம்போல வொண்கதிர் தெறுதலிற் சீறருங் கணிச்சியோன் சினவலி னவ்வெயி லேறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந் தியங்குந ராறுகெட விலங்கிய வழலவி ராரிடை மறப்பருங் காத லிவளீண்ட டொழிய விறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைஇய (கலி.2) இது மைவரை யுலகத்துப் பாலை வந்தது. மறந்தவ ணமையா ராயினும் (37) என்னும் அகப்பாட்டுள் தீம்புனலுலகத்துப் பாலை வந்தது. அருளி லாளர் பொருள் வயி னகல (அகம். 305) என்னும் அகப்பாட்டினுட் பெருமணலுலகத்துப் பாலை வந்தது. இன்னும் பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண்ணே உரிப் பொருள் மயங்கியுங் காலங்கள் மயங்கியும் வருவனவெல்லாம் இதனான் அமைத்துக்கொள்க. (13) உரிப்பொருளாவன 14. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே இதுவும் மேனிறுத்த முறையானன்றியும் அதிகாரப் பட்டமை கண்டு உரிப்பொருள் கூறுகின்றது, உரிப்பொருள் உணர்ந்தல்லது உரிப்பொருளல்லன உணரலாகாமையின். (இ-ள்.) புணர்தலும் புணர்தனிமித்தமும்; பிரிதலும் பிரிதனிமித்தமும்; இருத்தலும் இருத்தனிமித்தமும்; இரங்கலும் இரங்கனிமித்தமும்; ஊடலும் ஊடனிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்கால் ஐந்திணைக்கும் உரிப்பொருளாம் எ-று. தேருங்காலை என்றதனாற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வந்நிமித்தங்களும் உரியவென்று ஆராய்ந்துணர்க. இக்கருத்தே பற்றி மாயோன் மேய (5) என்பதனுள் விரித்துரைத்தவாறுணர்க. அகப்பொருளாவது புணர்ச்சியாகலானும் அஃது இருவர்க்கும் ஒப்ப நிகழ்தலானும் புணர்ச்சியை முற்கூறிப், புணர்ந்துழி யல்லது பிரிவின்மையானும் அது தலைவன் கண்ணதாகிய சிறப்பானுந் தலைவி பிரிவிற்குப் புலனெறி வழக்கின்மையானும் பிரிவினை அதன்பிற் கூறிப், பிரிந்துழித் தலைவி ஆற்றியிருப்பது முல்லை யாகலின் இருத்தலை அதன்பின் கூறி, அங்ஙனம் ஆற்றியிராது தலைவனேவலிற் சிறிது வேறுபட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை தலைமகளதே யாதலின் அவ் விரங்கற்பொருளை அதன்பிற் கூறி, இந்நான்கு பொருட்கும் பொதுவாதலானுங் காமத்திற்குச் சிறந்த லானும் ஊடலை அதன்பிற் கூறி இங்ஙனம் முறைப்படுத்தினார். நான்கு நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும் முற்பட்ட புணர்ச்சியே புணர்தற் சிறப்புடைமையிற் குறிஞ்சியென்று அதனை முற்கூறினார். அவை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கற்கூட்டமுந் தோழியிற்கூட்டமும் அதன் பகுதியாகிய இருவகைக் குறிக்கண் எதிர்ப்பாடும் போல்வன. தலைவன் தோழியைக் குறையுறும் பகுதியும், ஆண்டுத் தோழி கூறுவனவுங் குறை நேர்தலும் மறுத்தலும் முதலியன புணர்ச்சி நிமித்தம். இனி, ஓதலுந் பகையும் தூதும் (25) அவற்றின் பகுதியும் பொருட்பிரிவும் உடன்போக்கும் பிரிவு. ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்துந் தோழியொடு வலித்தன் (41) முதலியன பிரிதனிமித்தம். பிரிந்தபின் தலைவி வருந்துவனவுந் தோழி யாற்றுவித்தனவும் பாலையாதலிற் பின்னொருகாற் பிரிதற்கு நிமித்தமாம், அவை பின்னர்ப் பிரியும் பிரிவிற்கு முன்னிகழ்தலின். இனித் தலைவி, பிரிவுணர்த்தியவழிப் பிரியாரென்றிருத் தலும், பிரிந்துழிக் குறித்த பருவ மன்றென்று தானே கூறுதலும், பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவனவும் போல்வன இருத்தல். அப் பருவம் வருவதற்கு முன்னர்க் கூறுவன முல்லை சான்றகற்பு அன்மையிற் பாலையாம். இனிப் பருவங்கண்டு தலைவி ஆற்றாது கூறுவனவும், தோழி பருவமன் றென்று வற்புறுத்தினவும், வருவரென்று வற்புறுத்தினவும், தலைவன் பாசறைக்கண் இருந்து உரைத்தனவும், அவை போல்வனவும் நிமித்தமாதலின் இருத்தனிமித்தமெனப்படும். இனிக் கடலுங் கானலுங் கழியுங் காண்டொறும் இரங்கலும், தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புணர்துணைப் புள்ளுங் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக்கடல் முதலியனவும், தலைவன் நீங்குவனவு மெல்லாம் நிமித்தமாம். புலவி முதலியன ஊடலாம். பரத்தை, பாணன் முதலியோர் ஊடனிமித்தமாம். ஏனையவும் வழக்கியலான் நால்வகை நிலத்துஞ் சிறுபான்மை வருமேனும், பெரும்பான்மை இவை உரியவென்றற்குத் திணைக்குரிப் பொருளே யென்றார். உரிமை குணமாதலின் உரிப்பொருள் பண்புத்தொகை. உ-ம்: கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை நாறிணர்க் குவளையோ டிடைப்பட விரைஇ யைதுதொடை மாண்ட கோதைபோல நறிய நல்லோண் மேனி முறியினும் வாயது முயங்கற்கு மினிதே (குறுந்.62) இக்குறுந்தொகை புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது. அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட் பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற் றிருமணி புரையு மேனி மடவோ ளியார்மகள் கொல்லிவ டந்தை வாழியர் துயர முறீஇயின ளெம்மே யகல்வய லரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந் தண்சேறு தாஅய் மதனுடை நோன்றாட் கண்போ னெய்தல் போர்விற் பூக்குந் திண்டேர்ப் பொறையன் றொண்டி தன்றிறம் பெறுகவிவ ளீன்ற தாயே (நற். 8) இந் நற்றிணையும், முலையே முகிழ்முகிழ்த் தனவே (337) என்னுங் குறுந்தொகையும் புணர்தனிமித்தம். அன்றவன் ஒழிந்தன்றும் இலையே வந்துநனி வருந்தினை வாழியெ னெஞ்சே பருந்திருந் துயாவிளி பயிற்றும் யாஅவுயர் நனந்தலை உருள் துடி மகுளியின் பொருள்தெரிந் திசைக்குங் கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம் எம்மொ டிறத்தலுஞ் செல்லாய் பின்னின் றொழியச் சூழ்ந்தனை யாயிற் றவிராது செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே மறவல் ஓம்புமதி எம்மே நறவின் சேயிதழ் அனைய வாகிக் குவளை மாயிதழ் புரையு மலிர்கொள் ஈரிமை உள்ளகங் கனல உள்ளுதோ றுலறிப் பழங்கண் கொண்ட கதழ்ந்துவீழ் அவிரறல் வெய்ய வுகுதர வெழிர்இப் பையெனச் சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கைப் பூவீ கொடியிற் புல்லெனப் போகி யடர்செய் ஆயகல் சுடர்துணை யாக இயங்காது வதிந்தநங் காதலி யுயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே (அகம்.19) இது மறவலோம்புமதி யெனப் பிரிவு கூறிற்று. அறியாய் வாழிதோழி யிருளற விசும்புடன் விளக்கும் விரைசெலல் திகிரிக் கடுங்கதி ரெறித்த விடுவாய் நிறைய நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய் நீரற வறந்த நிரம்பா நீளிடை வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில் உள்ளூன் வாடிய கரிமூக்கு நொள்ளை பொரியரை புதைத்த புலம்புகொள் இயலின் விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும் இல்லோக் கில்லென் றியைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் அருளே காதல ரென்றி நீயே (அகம்.53) இது பிரிதனிமித்தம். வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது. வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே (குறுந்.21) இது பருவங்கண்டுழியும் பொய் கூறாரென்று ஆற்றியிருந்தது. அவரோ வாரார் முல்லையும் பூத்தன பறியுடைக் கையர் மறியினத் தொழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை யிடை மகன்சென்னி சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே (குறுந். 221) இது பருவங்கண்டாற்றாது கூறியது. இது முல்லைசான்ற கற்பா யிற்று, அவன் கூறிய பருவம் வருந்துணையும் ஆற்றியிருத்தலின். மடவ மன்றதடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிண ருழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே. (குறுந். 66) இது பருவமன்றென்று வற்புறுத்தலின் இருத்தனிமித்த மாயிற்று. தேம்படு சிமய (94) என்னுங் களிற்றியானைநிரையும் இருத்தனிமித்தமாம். இக்காலம் வருந்துணையும் ஆற்றினா ளெனத் தான் வருந்துதலின். கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியா தொருநின் னல்லது பிறதியாதும் இலனே இருங்கழி மலர்ந்த கண்போ னெய்தல் கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து பறைவ கிளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமால் அலவ பல்காற் கைதையம் படுசினை யெவ்வமோ டசாஅங் கடற்சிறு காக்கை காமர் பெடையொடு கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து நின்னுறு விழுமங் களைந்தோள் தன்னுறு விழுமம் நீந்துமோ வெனவே (அகம்.170) இவ் அகப்பாட்டு நெய்தல். இரங்கலுரிப்பொருட்டாயிற்று. ஞாயிறு பட்ட வகல்வாய் வானத் தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த பிள்ளை யுள்வாய்ச் செரீஇய விரைகொண் டவையும் விரையுமாற் செலவே (குறுந்.92) இஃது இரங்கனிமித்தம் தருக்கேம் பெருமநின் னல்கல் விருப்புற்றுத் தாழ்ந்தாய்போல் வந்து தகவில செய்யாது சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய் வீழ்ந்தார் விருப்பற்றக் கால் (கலி.69) இஃது ஊடனிமித்தம். பிறவும் வேறுபட வருவனவெல்லாம் அறிந்து இதன்கண் அடக்கிக் கொள்க. பாலைக்கட் குறிஞ்சியும் நெய்தலும் மயங்குதல் 15. கொண்டுதலைக் கழியினும் பிரிந்தவ ணிரங்கினும் உண்டென மொழிப ஓரிடத் தான. இது முற்கூறிய ஐந்தனுட் பாலைக்கட் குறிஞ்சி மயங்குமாறும் நெய்தன் மயங்குமாறுங் கூறுகின்றது. (இ-ள்.) கொண்டு தலைக்கழியினும். தலைவன் தலைவியை உடன்கொண்டு அவள் தமரிடத்து நின்று பிரியினும், பிரிந்து அவண் இரங்கினும் - தலைவன்; உடன்கொண்டு போகாது தானே போதலின் தலைவி மனையின்கண் இருந்து இரங்கினும்; ஓரிடத்தான - இவ்விரண்டும் ஓரிடத்தின்கண்ணே ஓரொழுக்கமாயின; உண்டென மொழிப - இவ்வொழுக்கந்தான் நான்கு வருணத்திலும் வேளாண் வருணத்திற்கு உண்டென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. கொண்டு தலைக்கழிதலான் இடையூறின்றிப் புணர்ச்சி நிகழுமெனினும், பிரிவு நிகழ்ந்தவா றென்னையெனின். இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்தி (தொல். பொருள். 41) என மேலே கூறுவாராதலின் தலைவி தந்தையுந் தன்னையருந் தேடிப் பின் வந்து இவ்வொழுக்கத்திற்கு இடையூறு செய்வரென்னுங் கருத்தே இருவருள்ளத்தும் பெரும்பான்மை நிகழ்தலிற் பிரிவு நிகழ்ந்தவாறாயிற்று. ஆகவே பாலைக்கண்ணே குறிஞ்சி நிகழ்ந்ததாயிற்று. உ-ம்: வேனிற் பாதிரிக் கூனி மாமலர் நறைவாய் வாடல் நாறு நாட்சுரம் அரியார் சிலம்பிற் சீறடி சிவப்ப எம்மொ டொராறு படீஇயர் யாழநின் பொம்ம லோதி பொதுள வாரி அரும்பற மலர்ந்த வாய்பூ மராஅத்துச் சுரும்புசூ ழலரி தைஇ வேய்ந்தநின் தேம்பாய் கூந்தற் குறும்பல மொசிக்கும் வண்டுகடிந் தோம்பல் தேற்றாய் அணிகொள நுண்கோ லெல்வளை தெளிர்க்கும் முன்கை மெல்லிறைப் பணைத்தோள் விளங்க வீசி வல்லுவை மன்னால் நடையே கள்வர் பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார் மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாஅத்து நாரரை மருங்கின் நீர்வரப் பொளித்துக் களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் கல்லா உமணர்க்குத் தீமூட் டாகுந் துன்புறு தகுந ஆங்கண் புன்கோட்டு அரிலிவர் புற்றத் தல்கிரை நசைஇ வெள்ளரா மிளிர வாங்கும் பிள்ளை யெண்கின் மலைவயி னானே (அகம்.257) இது கொண்டு தலைக்கழிதற்கண் தலைவன் தலைவி நடையை வியந்தது. இஃது அகம். அழிவிலர் முயலும் (நற்.9) என்பது பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தது. இனித் தலைவி பிரிந்திருந்து மிகவும் இரங்குதலின் இரங்கினு மெனச் சூத்திரஞ்செய்து, அதனானே பாலைப்பொருட் கண் இரங்கற் பொருள் நிகழுமென்றார். உ-ம்: ஓங்குமலைச் சிலம்பிற் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன ஊன்பொதி யவிழாக் கோட்டுகிர்க் குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப் பொறிகிள ருழுவைப் பேழ்வா யேற்றை யறுகோட் டுழைமான் ஆண்குர லோர்க்கும் நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந் துண்ணா வுயக்கமோ டுயிர்செலச் சாஅய்த் தோளுந் தொல்கவின் றொலைய நாளும் பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி மருந்துபிறி தின்மையின் இருந்தும்வினை யிலனே (அகம். 147) இதனுள் வெள்ளி வீதியைப்போலச் செல்லத் துணிந்த யான் பலவற்றிற்கும் புலந்திருந்து பிரிந்தோரிடத்தினின்றும் பிரிந்த பெயர்வுக்குத் தோணலந் தொலைய உயிர்செலச் சாஅய் இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றேனென மிகவும் இரங்கியவாறு மெய்பாடுபற்றி யுணர்க. இஃதும் அகம். வானமூர்ந்த (11) என்னும் அகப்பாட்டினுள் (அகம். 11) மெய்புகு வன்ன கைகவர் முயக்க மவரும் பெறுகுவர் மன்னே எனக் கூறி, அழுதன் மேவாவாய்க் கண்ணுந் துயிலுமென இரக்கம்மீக் மீக்கூறியவாறு முணர்க. குன்றியன்ன (133) என்னும் அகப்பாட்டும் (133) அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தன. இங்ஙனம் இச்சூத்திரவிதி உண்மையிற் சான்றோர் அகத்தினுங் கலியினும் ஐங்குறுநூற்றினும் பாலைக்கண்ணே உடன்போக்கு நிகழ்ந்த செய்யுட்களைக் கோத்தாரென் றுணர்க. இல்லிருந்து செந்தீயோம்பல் வேளாளர்க்கு இன்மையிற் கொண்டு தலைக்கழிதல் அவர்க்கு உரியதாயிற்று. ஒழிந்த மூன்று வருணத்தோருந் தமக்கு உரிய பிரிவின்கட் செந்தீ யோம்புவாரை நாட்டிப் பிரிப; ஆகலான், அவர்க்கு ஏனைப் பிரிவுகள் அமைந்தன. இதனைக் கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே (143) எனக் கற்பியலிற் கரணம் வேறாகக் கூறுமாறு ஆண்டுணர்க. வேர்முழுதுலறி நின்ற (145) என்னும் மணிமிடைப வளத்துட் கூழுடைத் தந்தையிடனுடை வரைப்பி, னூழடி யொதுங்கினு முயங்கும் எனவுங் கிளியும் பந்தும் (49) என்னும் களிற்றியானை நிரையுள், அல்குபத மிகுந்த கடியுடை வியனகர் எனவும், நெல்லுடைமை கூறிய அதனானே வேளாண் வருணமென்பது பெற்றாம். பாலைக்கட் குறிஞ்சி மயங்குதல் 16. கலந்த பொழுதும் காட்சியும் அன்ன. இதுவும் பாலைக்கட் குறிஞ்சி மயங்கு மென்கின்றது. (இ-ள்.) கலந்த பொழுதும் காட்சியும் - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலமும் அதன் முன்னர்த்தாகிய வழிநிலைக் காட்சி நிகழ்ந்த காலமும்; அன்ன - முன்னர்ச் சூத்திரத்துட் கொண்டுதலைக்கழிந்த காலத்தை உடைய எ-று. என்றது, முன்னர்க் குறிஞ்சி பாலைக்குரிய இருவகை வேனிற்கண் நிகழ்ந்தாற் போல இவையும் இருவகை வேனிற்கண் நிகழுமென்றவாறு. மழைகூர் காலத்துப் புறம் போந்து விளையாடு தலின்மையின் எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாகலானும், அதுதான் இன்பஞ் செய்யாமையானும் இருவகை வேனிற் காலத்தும் இயற்கைப்புணர்ச்சி நிகழுமென்றது இச்சூத்திரம். முன்னர்க் கூதிரும் யாமமும் முன்பனியுஞ் சிறந்ததென்றது, இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்க் களவொழுக்கம் நிகழ்தற்குக் காலமென்றுணர்க. அது, பூவொத் தலமருந் தகைய வேவொத் தெல்லாரு மறிய நோய்செய் தனவே தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப் பரீஇ வித்திய வேனற் குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே (குறுந்.72) என வரும். இக்குறுந்தொகையுட் குரீஇயோப்புவாள் கண்ணென வழி நிலைக் காட்சியைப் பாங்கற்குக் கூறினமையின் அத்தினைக்கதிர் முற்றுதற்கு உரிய இளவேனிலும் பகற்பொழுதுங் காட்சிக்கண் வந்தன. கொங்கு தேர் வாழ்க்கை என்பதும் இளவேனி லாயிற்று; தும்பி கொங்கு தேருங்காலம் அதுவாதலின். கலத்தலுங் காட்சியும் உடனிகழு மென்றுணர்க. கலத்தலின்றிக் காட்சி நிகழ்ந்ததேல் உள்ளப்புணர்ச்சி யேயாய் மெய்யுறு புணர்ச்சியின்றி வரைந்து கொள்ளுமென்றுணர்க. (16) முதற்பொருள் யாண்டும் இருவகைத்தாதல் 17. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே. இது முற்கூறிய முதற்பகுதியைத் தொகுத்து எழுதிணையும் இவ்வாற்றானுரிய வென்கின்றது. (இ-ள்.) முதல் எனப் படுவது - முதலென்று கூறப்படும் நிலனும் பொழுதும்; அ இது வகைத்து - அக்கூறியவாற்றான் இருவகைப்படும் யாண்டும் எ-று. இது கூறிற்றென்ற லென்னும் உத்திவகை. இதன்பயன் முதல் இரண்டுவகை என்றவாறாம். தமக்கென நிலனும் பொழுதும் இல்லாத கைக்கிளையும் பெருந்திணையும் நிலனில்லாத பாலையும் பிறமுதலொடு மயங்கினவேனும் அவை மயங்கிய நிலனும் பொழுதும் அவ்வத்திணைக்கு முதலெனப்படுமென்பதாம். இது முன்னின்ற சூத்திரத்திற்கும் ஒக்கும். (17) கருப்பொரு ளிவையெனல் 18. தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் களருவென மொழிப. இது நிறுத்தமுறையானேயன்றி அதிகாரப்பட்டமையின் உரிப்பொருள் கூறி ஒழிந்த கருப்பொருள் கூறுத னுதலிற்று. (இ-ள்.) தெய்வம் உணாவே மா மரம் புள் பறைசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇ - எல்லாத் திணைக்குந் தெய்வம் உணா விலங்கு மரம் புள்பறை தொழிலென்று இவற்றை யாழின் கூற்றோடே கூட்டி; அவ்வகை பிறவும் கருஎன மொழிப - அவைபோல்வன பிறவுங் கருவென்று கூறுவர் ஆசிரியர் எ-று. யாழின் பகுதி என்றதனான் மற்றையபோலாது பாலைக்குப் பாலை யாழென வேறு வருதல் கொள்க. அவ்வகை பிறவும் என்றதனான் எடுத்தோதிய தெய்வம் ஒழிய அவற்று உட் பகுதியாகிய தெய்வமும் உள; அவை மாயோன்மேய (5) என்புழிக் காட்டினாம். இதனானே பாலைக்குத் தெய்வமும் இன்றாயிற்று. இன்னும் அவ்வகை என்றதனானே, பாலைக்கு நிலம் பற்றாது காலம்பற்றிக் கருப்பொருள் வருங்காற் றம்மியல்பு திரிய வருவனவும் வருமென்று கொள்க. எந்நில மருங்கிற் பூ (19) என்பதனாற் பூவும் புள்ளும் வரைவின்றி மயங்குமெனவே ஒழிந்த கருவும் மயங்குமென்பது சூத்திரத்துட் பொருளன்றியும் (659) என்பதனான் உரையிற் கொள்க. அது அயந்திகழ் நறுங்கொன்றை (150) என்னும் நெய்தற்கலியுட் காண்க. முல்லைக்கு உணா, வரகுஞ் சாமையும் முதிரையும்; மா, உழையும் புல்வாயும் முயலும்; மரம், கொன்றையுங் குருந்தும்; புள், கானக்கோழியுஞ் சிவலும்; பறை, ஏறுகோட்பறை; செய்தி, நிரை மேய்த்தலும் வரகு முதலியன களை கட்டலும் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ். பிறவுமென்றதனான், பூ, முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும்; நீர் கான்யாறு; ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும். குறிஞ்சிக்கு உயா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா, புலியும் யானையுங் கரடியும் பன்றியும்; மரம், அகிலும் ஆரமுந்தேக்குந் திமிசும் வேங்கையும்; புள், கிளியும் மயிலும்; பறை முருகியமுந் தொண்டகப்பறையும்; செய்தி, தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுந் தினை முதலியன விளைத்தலுங் கிளிகடிதலும்; யாழ். குறிஞ்சி யாழ். பிறவுமென்றதனான், பூ காந்தளும் வேங்கையுஞ் சுனைக்கு வளையும்; நீர், அருவியுஞ் சுனையும்; ஊர், சிறுகுடியுங் குறிச்சியும். மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்; மா, எருமையும் நீர் நாயும்; மரம், வஞ்சியுங் காஞ்சியும் மருதமும்; புள், தாராவும் நீர்க்கோழியும்; பறை, மணமுழவும் நெல்லரிகிணையும்; செய்தி நடுதலுங் களைகட்டலும் அரிதலுங் கடாவிடுதலும்; யாழ், மருதயாழ். பிறவுமென்ற தனான், பூ, தாமரையுங் கழுநீரும்; நீர், யாற்று நீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், ஊர்க யென்பனவேயாம். நெய்தற்கு உணா, மீன்விலையும் உப்புவிலையும்; மா, உமண்பகடு போல்வன; முதலையுஞ் சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று; மரம், புன்னையும் ஞாழலுங் கண்டலும்; புள் அன்னமும் அன்றிலும் முதலியன; பறை, மீன் கோட்பறை; செய்தி, மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும் அவை விற்றலும்; யாழ் நெய்தல்யாழ். பிறவு மென்றதனான், பூ கைதையும் நெய்தலும்; நீர் மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர் பட்டினமும் பார்க்கமும். இனிப் பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும்; மா வலியழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்; மரம், வற்றின இருப்பையும் ஓமையும் உழிஞையும் ஞெமையும்; புள், கழுகும் பருந்தும் புறாவும்; பறை, சூறைகோட்பறையும் நிரை கோட்பறையும்; செய்தி, ஆறலைத்தலுஞ் சூறைகோடலும்; யாழ், பாலையாழ். பிறவுமென்றதனான்; பூ, மராவுங் குராவும் பாதிரியும்; நீர், அறுநீர்க்கூவலுஞ் சுனையும்; ஊர், பறந்தலை. இன்னும் பிறவு மென்றதனானே இக் கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. அவை பெயரும் வினையும் (20) என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். பிறவு மென்றதனாற் கொள்வன, சிறுபான்மை திரிவுபடுதலிற், பிறவு மென்று அடக்கினார். ஒருநிலக் கருப்பொருள் ஒழிந்த நிலத்து மயங்குதல் 19. எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். இது முற்கூறிய கருப்பொருட்குப் புறனடை. (இ-ள்.) எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் - எழுதிணை நிகழ்ச்சியவாகிய நால்வகை நிலத்தும் பயின்ற பூவும் புள்ளும்; அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் - தத்தமக்கு உரியவாகக் கூறிய நிலத்தொடுங் காலத்தொடும் நடவாமற் பிற நிலத்தொடுங் காலத்தொடும் நடப்பினும்; வந்த நிலத்தின் பயத்த ஆகும் - அவை வந்த நிலத்திற்குக் கருப்பெருளாம் எ-று. ஓடு அதனோடியைந்த ஒருவினைக் கிளவி (சொ. 75) யாதலின் உடன் சேறல் பெரும்பான்மையாயிற்று. வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தின் (சொ. 83) என்பதனான் நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலமென்று அடக்கினார். பூவைக் கருவென ஓதிற்றிலரேனும் முற்கூறிய மரத்திற்குச் சினையாய் அடங்கிற்று. ஒன்றென முடித்தலான் நீர்ப்பூ முதலியனவும் அடங்கும். இங்ஙனம் வருமிடஞ் செய்யுளிடமாயிற்று. உ-ம்: தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை தேனிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் (கலி.52) இது மருதத்துப்பூ, குறிஞ்சிக்கண் வந்தது. உடையிவ ளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல விடைகொண்டியா மிரப்பவு மெமகொள்ளா யாயினை கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை யடையொடு வாடிய வணிமலர் தகைப்பன (கலி.3) இது மருதத்துப்பூ, பாலைக்கண் வந்தது. கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல் (கலி.27) இது குறிஞ்சிக்குப் பயின்ற மயில் பாலைக்கண் இளவேனிற் கண் வருதலிற் பொழுதொடு புள்ளு மயங்கிற்று. கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியில் (குறிஞ்சிப்.) வரைவின்றிப் பூமயங்கியவாறு காண்க. பிறவும் இவ்வாறு மயங்குதல் காண்க. ஒன்றென முடித்தலாற் பிற கருப்பொருள் மயங்குவன உளவேனுங் கொள்க. (19) திணைப்பெயரும் திணைநிலைப்பெயரும் இருவகையாதல் 20. பெயரும் வினையுமென் றாயிரு வகைய திணைதொறு மரீஇய திணை நிலைப் பெயரே. இது பிறவு (18) மென்றதனாற் றழுவிய பெயர்ப் பகுதி கூறுகின்றது. (இ-ள்.) திணைதொறும் மரீஇய பெயர் - நால்வகை நிலத்தும் மரீஇப்போந்த குலப்பெயரும்; திணைநிலைப் பெயர் - உரிப்பெருளிலே நிற்றலையுடைய பெயரும்; பெயரும் வினையுமென்று அஇருவகைய - பெயர்ப்பெயரும் வினைப்பெயருமென்று அவ்விரண்டு கூற்றையுடையவாம் எ-று. நால்வகை நிலத்தும் மருவிய குலப்பெயராவன: - குறிஞ்சிக்குக் கானவர் வேட்டுவர் இறவுளர் குன்றவர் வேட்டு வித்தியர் குறத்தியர் குன்றுவித்தியர்; ஏனைப் பெண்பெயர் வருமேனும் உணர்க. முல்லைக்குக் கோவலர் இடையர் ஆயர் பொதுவர் இடைச்சியர் கோவித்தியர் ஆய்ச்சியர் பொதுவியர். நெய்தற்கு நுளையர் திமிலர் பரதவர் நுளைத்தியர் பரத்தியர்; ஏனைப் பெண் பெயர் வருமேனும் உணர்க. மருதத்திற்குக் களமர் உழவர் கடையர் உழத்தியர் கடைசியர்; ஏனைப் பெண்பெயர் வருமேனும் உணர்க. முன்னர் வந்த நிலத்தின்பயத்த என்புழிக் காலத்தையும் உடன் கோடலின் ஈண்டுந் திணைதொறு மருவுதலும் பொழுதொடு மருவுதலும் பெறப்படுதலிற் பொழுது முதலாக வரும் பாலைக்குத் திணைதொறு மரீஇய பெயருந் திணைநிலைப்பெயருங் கொள்க. எயினர் எயிற்றியர் மறவர் மறத்தியர் எனவும், மீளி விடலை காளை எனவும் வரும். இனி உரிப்பொருட்குரிய தலைமக்கள் பெயராவன, பெயர்ப் பெயரும் நாடாட்சிபற்றிவரும் பெயருமாம். குறிஞ்சிக்கு வெற்பன் சிலம்பன் பொருப்பன், கொடிச்சி; இஃது ஆண்பாற் கேலாத பெயராயினும் நிலை யென்றதனாற் கொள்க. முல்லைக்கு அண்ணல் தோன்றல் குறும்பொறை நாடன், மனைவி. நெய்தற்குக் கொண்கன் துறைவன் சேர்ப்பன் மெல்லம்புலம்பன். தலைவிபெயர் வந்துழிக் காண்க. மருதத்திற்கு மகிழ்நன் ஊரன், மனையோள் எனவரும். இக் காட்டிய இருவகையினும் பெயர்ப்பெயரும் வினைப்பெயரும் பாடலுட் பயின்ற வகையாற் பொருயோக்கியுணர்க. ஈண்டுக் கூறிய திணைநிலைப்பெயரை ஏவன் மரபின் (24) என்னுஞ் சூத்திரத்து அறுவகையரெனப் பகுக்குமாறு ஆண்டுணர்க. (20) திணைதொறுமரீஇய பெயரினருள்ளும் தலைமக்களாய் வழங்குவாரும் உண்மை 21. ஆயர்வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர் ளஆவயின் வரூஉங் கிழவரும் உளரே. இது முன்னர்த் திணைதொறு மரீஇய பெயருடையோரினுந் திணைநிலைப்பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரென முல்லைக்குங் குறிஞ்சிக்கும் எய்தாததெய்துவித்தது. (இ-ள்.) ஆடூஉத் திணைப்பெயர் - முற்கூறிய ஆண்மக்களாகிய திணைதொறும் மரீஇய பெயர்களுள்; ஆயர் வேட்டுவர் வரூஉங்கிழ வரும் உளர் - ஆயரினும் வேட்டுவரினும் வருங் கிழவரும் உளர், ஆவயின் (வரூஉங் கிழவியரும் உளர்) - அவ்விடத்து வருந் தலைவியரும் உளர் எ.று. ஆயர் வேட்டுவரென்னும் இரண்டு பெயரே எடுத்தோதினாரேனும் ஒன்றென முடித்தலான் அந்நிலங்கட்கு உரிய ஏனைப்பெயர்களான் வருவனவுங் கொள்க. தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசை இப் பாங்ககு முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா மொருங்கு விளையாட வவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன் மற்றென்னை முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய் கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்த றகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ யேதிலார் தந்தபூக் கொள்வாய்நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற் றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி யிருந்துமோ நீ பெரிது மையலை மாதோ விடுகென்றேன் றையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ யாயர் மகளிரியல்புரைத் தெந்தையும் யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன். (கவி.111) ஆயர் மகனையுங் காதலை கைம்மிக ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து. (கலி.107) தோழிநாங் காணாமை யுண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க விரைத்தாங்குக் கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாம் கண்டாய்நம் புல்லினத் தாயர் மகன். (கலி. 115) என்றாற் போல்வன பிறவும் வருவன கொள்க. இன்னும் ஏனலு மிறங்குகதி ரிறுத்தன (132) என்னும் அகப் பாட்டி னுள் வானிணப் புகவிற் கானவர் தங்கை எனவும், மெய்யிற்றீரா (28) என்பதனுள் வேட்டுவற் பெறலோ டமைந்தனை எனவும் வருவனவும் பிறவுங் கொள்க. வேட்டு என்னுந் தொழிலுடையானை வேட்டுவன்றலிற் குறிப்பு வினைப்பெயர். குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்ற ளிளைய ளாயினு மாரணங் கினளே. (ஐந்குறு.256) இது வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது. இப்பத்தினுட் குறுவன் மகள் எனக் கூறுவன பல பாட்டுக்கள் உள; அவையுங் கொள்க. இவ்வாற்றான் இந்நிலத்து மக்கள் பெயரும் பெற்றாம். ஏனைய பெயர்களில் வந்தன வுளவேற் கொள்க. ஏனைய திணைதொறுமரீஇய பெயரினருள்ளும் தலைமக்களாய் வழங்குவாரும் உண்மை 22. ஏனோர் பாங்கினும் எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே. இது முல்லையுங் குறிஞ்சியும் ஒழிந்தவற்றுள் திணைதொறு மரீஇய பெயருடை யோரினுந் திணைநிலைப் பெயராகிய தலை மக்களாய் வழங்குவாரும் உளரென எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) ஏனோர் பாங்கினுந் திணைநிலைப்பெயர் எண்ணுங் காலை - ஒழிந்த பாலைக்கும் நெய்தற்கும் உரியராகக் கூறிய மக்கள் கூற்றினும் வருந் தலைமக்கள் பெயரை ஆராயுங்காலத்து; ஆனா வகைய - அவை பெரும்பான்மையாகிய கூறுபாட்டினை யுடைய எ-று. உ-ம்: சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவி லெயினர் தங்கைநின் முலைய சுணங்கெனநினைதி நீயே யணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே (ஐங்குறு.363) இவ் வைங்குறுநூறு உடன்போகின்றான் நலம் பாராட்டிய கூற்றாம். முளவுமா வல்சி யெயினர் தங்கை யிளமா வெயிற்றிக்கு நின்னிலை யறியச் சொல்லினே னிரக்கு மளவை வென்வேல் விடலை விரையா தீமே. (ஐங்குறு.364) இவ் வைங்குறுநூறு கொண்டுடன்போம் காலத்திற்குக் கொண்டு டன்போக் கொருப்படுத்துவ லென்றது. கணமா தொலைச்சித் தன்னையர் தந்த நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பும் நலமா ணெயிற்றி போலப் பலமிக நன்னல நயவர வுடையை யென்னோற் றனையோ மாவீன் றளிரே. (ஐங்குறு.365) இவ் வைங்குறுநூறு வரைவிடை வைத்துப் போகின்றான் மாவினை நோக்கிக் கூறியது. ஏனைப் பெயர்களில் வருவன வந்துழிக் காண்க. முற்றா மஞ்சட் பசும்புறங் கடுப்பச் சுற்றிய பிணர சூழ்கழி யிறவின் கணங்கொள் குப்பை யுணங்குதிற நோக்கிப் புன்னையங் கொழுநிழன் முன்னுய்த்துப் பரப்புந் துறைநனி யிருந்த பாக்கமும் முறைநனி யினிதும னளிதோ தானே துனிதுறந் தகன்ற வல்கு லைதமை நுசுப்பின் மீனெறி பரதவர் மடமகண் மானேர் நோக்கங் காணா வூங்கே. (நற்.101) இது வரைதற் பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி சிறைப்புறமாகக் கூறியது. அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லைக் குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே யிதற்கிது மாண்ட தென்னா ததற்பட் டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்ச மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை நுண்வலைப் பரதவர் மடமகள் கண்வலைப் படூஉங் கான லானே. (குறுந்.184) இது கழறிய பாங்கற்குக் கூறியது. கடுந்தே ரேறியுங் காலிற் சென்றும்... என்நினை யுங்கொல் பரதவர் மகளே. (நற்.349) என வரும். இது நற்றிணை. இவளே, கான நண்ணிய (45) என்னும் நற்றிணைப் (45) பாட்டினுட் கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே என்று அவனருமை செய்தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பான் அறிவித்துக் கூறினாள். ஏனைப் பெண்பெயர்க்கண் வருவனவும் வந்துழிக் காண்க. (22) அடியோரும் வினைவலரும் தலைமக்களாதற் குரியரெனல் 23. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங் கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர். இது மேல் நால்வகை நிலத்து மக்களுந் தலைமக்களாகப் பெறுவரென்றார்; அவரேயன்றி இவருந் தலைமக்களாகுப, கைக்கிளை பெருந்திணைக்க ணென்கின்றது. (இ-ள்.) அடியோர் பாங்கினும். பிறர்க்குக் குற்றேவல் செய்வோரிடத்தும்; வினை வலர் பாங்கினும். பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோரிடத்தும்; கடி வரையில புறத்து என்மனார் புலவர். தலைமக்களாக நாட்டிச் செய்யுட்செய்தல் நீக்கப்படாது நடுவணைந்திணைப் புறத்து நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள் எ-று. கூன்பாட்டினுள், நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணா முசாவுவங் கோனடி தொட்டேன். எனவும், பேயும் பேயுந் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டோர் நகாமை வேண்டுவல். (கலி.94) எனவும் பெருந்திணைக்கண் அடியோர் தலைவராக வந்தது. என்னை? கோன் அடிதொட்டேன் என்றமையானும் கோயில் என்றமையானும் இவர்கள் குற்றேவன்மாக்கள் என்பது ஆயிற்று. ஏஎயிஃதொத்தன் என்னும் குறிஞ்சிக்கலியுள் போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள் வேட்டார்க் கினிதாயி னல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண் பவர். (கலி.62) தீயகாமம் இழிந்தோர்க்குரிமையின், இதுவும் அடியோர் தலைவராக வந்த கைக்கிளை. அடியோரெனவே இருபாற்றலை மக்களும் அடங்கிற்று. கடிவரையில என்றதனான் அவருட் பரத்தை யரும் உளரென்று கொள்க. இகல்வேந்தன் என்னும் முல்லைக்கலியுள், மேயுநிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ ராயனை யல்லை பிறவோ வமரருண் ஞாயிற்றுப் புத்தேண் மகன். (கலி.108) என்பதனாற் றலைவன் வினைவல பாங்கனாயினவாறு காண்க. இதனுள், புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ வினத்துளா னென்னைக்குக் கலத்தொடு செல்வதோ தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ. (கலி.108) என்றவழி எமரேவலான் யாஞ் செய்வதன்றி யாங்கள் ஏவ நின்னெஞ்சம் இத்தொழில்கள் செய்கின்றதில்லை என்றலின் வினைவல பாங்கினாளாய தலைவி கூற்றாயிற்று. யாரிவன் என்னும் முல்லைக்கலியுள் (112), வழங்காப் பொழுதுநீ கன்றுமேய்ப் பாய்போல் வழங்க லறிவா ருரையாரே லெம்மை யிகழ்ந்தாரே யன்றோ வெமர். (கலி.112) இதுவும் வினைவலபாங்கினளாய தலைவியை நோக்கி அத்தலைவன் கூறினது. நலமிக நந்திய என்னும் முல்லைக்கலியுள், பல்கால்யாங் கான்யாற் றவிர்மணற் றண்பொழில் அல்கல் அகலறை யாயமொ டாடி முல்லை குருந்தொடு முச்சிவேய்ந் தெல்லை யிரவுற்ற தின்னுங் கழிப்பி அரவுற்று உருமி னதிருங் குரல்போற் பொருமுர ணல்லேறு நாகுட னின்றன பல்லா னினநிரை நாமுடன் செலற்கே. (கலி.113) இது தாழ்த்துப் போதற்குத் தலைமையின்றிக் கடிதிற் போகல் வேண்டுமென்றமையானும், நல்லேறும் நாகும்போல் நாமுங் கூடப் போகல் வேண்டுமென்றமையானுந், தலைவன் வினைவல பாங்கினனாயின னென்க. வினைவல்லா னென்னாது பாங்கினென்றதனாற் றமரேவல் செய்வது பெறுதும். இஃது அவ்வந்நிலத்து இழிந்தோர்க்கு எஞ்ஞான்றுந் தொழிலேயாய் நிகழுமென்றும், புனங்காவலும் படுபுள்ளோப்புதலும் இவ்வாறன்றி உயர்ந்தோர் விளையாட்டாகி இயற்கைப் புணர்ச்சிப்பின்னர்ச் சின்னாளிற் றவிர்வரென்றும் வேறு பாடுணர்க. இக்கூறிய இருதிறத்தோருந் தமக்கு உரியரன்மை யான் அறம் பொருளின்பம் வழாமை நிகழ்த்துதல் அவர்க்கரிதென்பது பற்றி இவற்றை அகப்புறமென்றார். தலைமக்களாதற்குச் சிறந்தாராவார் 24. ஏவல் மரபின் ஏனோரும் உரியர் ஆகிய நிலைமை யவரும் அன்னர். இது முன்னர்ப் பெயரும் வினையும் (20) என்பதனுள் திணைதொறுமரீஇய பெயருந் திணைநிலைப்பெயருமெனப் பகுத்த இரண்டனுள், திணைதொறுமரீஇய பெயருட் டலைவராதற் குரியாரை அதிகாரப்பட்டமையிற் கூறி, அங்ஙனந் தலைவராகற் குரிமையின் அடியோரையும் வினைவலபாங்கி னோரையும் அதன்பிற் கூறிப், பின்னர் நின்ற திணைநிலைப் பெயராதற்குச் சிறந்தார் அறுவகைய ரெனப் பகுக்கின்றது. (இ-ள்.) மரபின் - வேதநூலுட்கூறிய இலக்கணத்தானே; ஏவல் ஆகிய நிலைமையவரும் - பிறரை ஏவிக்கொள்ளுந் தொழில் தமக்குளதாகிய தன்மையையுடைய அந்தணர் அரசர் வணிகரும்; அன்னர் ஆகிய அவரும் - அம்மூவரையும்போற் பிறரை ஏவிக்கொள்ளுந் தன்மையராகிய குறுநிலமன்னரும் அரசராற் சிறப்புப் பெற்றோரும்; ஏனோரும் - நால்வகை வருணமென்று எண்ணிய வகையினான் ஒழிந்து நின்ற வேளாளரும்; உரியர் - உரிப்பொருட் டலைவராதற்கு உரியர் எ-று. ஆகிய என்பதனை ஏவலொடும் அன்னரொடுங் கூட்டுக. எனவே, திணைநிலைப்பெயர் அறுவகையாயிற்று. வேந்த விடுதொழிலிற்....bghUns (637) என்பதனான் வேளாளரே அரசராற் சிறப்புச் செய்யப்பெறுவரென்றுணர்க. இனி வில்லும் வேலுங் கழலு... முரிய (639) என்பதனான் ஏனோருஞ் சிறுபான்மை சிறப்பு பெறுவரென்றுணர்க. உரிப்பொருட்டலைவர் இவரேயா தலைத்தாம் மேற்பிரிவிற்குக் கூறுகின்றவாற்றானும் உணர்க. தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம் அணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே; ஈர்ந்த ணாடையை யெல்லி மாலையை. (கலி.52) என வரும். முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை புண்கண் குய்ப்புகை கழுமத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக ரினிதெனக் கணவ னுண்டலி னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே. (குறுந்.167) இது குறுந்தொகை. இது பார்ப்பானையும் பார்ப் பனியையுந் தலைவராகக் கூறியது. கடிமனை சென்ற செவிலி கூற்று. வாயினேர்வித்தலுமாம். வருதும் என்ற நாளும் பொய்த்தன அரியே ருண்கண் நீரும் நில்லா தண்கார்க் கீன்ற பைங்கொடி முல்லை வைவாய் வான்முகை அவிழ்ந்த கோதை பெய்வனப் பிழந்த கதுப்பும் உள்ளார் அருள்கண் மாறலோ மாறுக அந்தில் அறனஞ் சலரே ஆயிழை நமரெனச் சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் பனிபடு நறுந்தார் குழைய நம்மொடு துனிதீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குவள் வாழிய நெஞ்சே விசும்பின் ஏறெழுந்து முழங்கினு மாறெழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறைப் போர்வேட் டெழுந்த மள்ளர் கையதை கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி மானடி மருங்கிற் பெயர்த்த குருதி வான மீனின் வயின்வயின் இமைப்ப அமரகத் தட்ட செல்வந் தமர்விரைந் துரைப்பக் கேட்கும் ஞான்றே (அகம்.144) மீண்டவன் நெஞ்சிற்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது. இம்மணிமிடைபவளத்து வேந்தன் தலைவனாயி னவாறுந் தான் அமரகத்து அட்ட செல்வத்தையே மிக்க செல்வமாகக் கருதுதற் குரியாள் அரசமரபின் தலைவியே என்பதூஉம் உணர்க. பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ. (கலி.31) இதனுள் வேந்தன் தலைவனாயினவாறும் வகைகொண்ட தலைமையின் அழகை நுகரவிரும்பினாள் என்றலிற் றலைவியும் அவ்வருணத்தாளாயவாறும் உணர்க. உலகுகிளர்ந்தன்ன என்னும் அகப்பாட்டுள் (255) வாணிகன் தலைவனாகவுங் கொள்ளக் கிடத்தலிற்றலைவியும் அவ்வருணத் தலைவியா மென்றுணர்க. தடமருப் பெருமை மடநடைக் குழவி தூண்டொறும் யாத்த காண்டகு நல்லிற் கொடுங்குழை பெய்த செழுஞ்செவிப் பேதை சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகையுண் டமர்த்த கண்ண டகைபெறப் பறைநுதற் பொறித்த சிறுநுண் பல்விய ரந்துகிற் றலையிற் றுடையின ணப்புலந் தட்டிலோளே யம்மா வரிவை யெமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று சிறியமுள் ளெயிறு தோன்ற முறுவல் கொண்ட முகங்காண் கம்மே. (நற்.120) விருந்தொடு புக்கோன் கூற்று. செவிலிகூற்றுமாம். இந்நற்றிணை வாளை யீர்ந்தடிவகைஇ என்றலின் வேளாண்வருண மாயிற்று. மலைமிசைக் குலைஇய உருகெழு திருவின் பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித் தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர இருநிலங் கவினிய வேமுறு காலை நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாண்மலர் உதிரும் புறவடைந் திருந்த அருமுனை இயவின் சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த வலங்குதலைப் பெருஞ்சூடு கள்ளார் களமர் களந்தொறும் மறுகும் தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில் அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து வினைவயிற் பெயர்க்குந் தானைப் புனைதார் வேந்தன் பாசறை யேமே (அகம்.84) இது தூதுகண்டு வருந்திக் கூறியது. இக் களிற்றியானை நிரையுள்தன்னூரும் அருமுனையியவிற் சீறூர் என்றலிற்றான் குறுநில மன்னனென்பது பெற்றாம். அகலிருவிசும்பகம் (214) என்னும் அகப்பாட்டும் பொருணோக்கினான் இதுவேயாமா றுணர்க. இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத் தொருபடை கொண்டு வருபடை பெயர்க்குஞ் செல்வ முடையோர்க்கு நின்றன்று விறலெனப் பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச் செல்வே மாதல் அறியாள் முல்லை நேர்கால் முதுகொடி குழைப்ப நீர்சொரிந்து காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ முழங்குதொறுங் கையற் றொடுங்கிநப் புலந்து பழங்கண் கொண்ட பசலை மேனியள் யாங்கா குவள்கொ றானே வேங்கை ஊழுறு கிளர்வீ கடுப்பக் கேழ்கொள ஆகத் தரும்பிய மாசறு சுணங்கினள் நன்மணல் வியலிடை நடந்த சின்மெல் லொதுக்கின் மாத யோளே. (அகம்.174) இது மீள்வான் நெஞ்சிற் குரைத்தது. இதனுட் பூக்கோளேய தண்ணுமை விலக்கிச் செல்வே மென்றலின் அரசனாற் சிறப்புப் பெற்ற தலைவன் என்பதாயிற்று, இன்னுஞ் சான்றோர் செய்யுள்களுள் இங்ஙனம் வருவனவற்றை அவற்றின் பொருணோக்கி உணர்க. (24) பாலை என்னும் பிரிவின் வகை 25. ஓதல் பகையே தூதிவை பிரிவே. இத் துணையும் அகத்திற்குப் பொதுவாகிய முதல் கரு வுரிப் பொருளே கூறி இனி இருவகைக் கைகோளுக்கும் பொதுவாகிய பாலைத்திணை கூறிய எழுந்தது. (இ-ள்.) பிரிவே - பாலையென்னும் பிரிதற் பொருண்மை; ஓதல் பகையே தூது இவை - ஓதற்குப் பிரிதலும், பகைமேல் பிரிதலும், பகைமேற் பிரிதலும் பகைவரைச் சந்துசெய்தன் முதலிய தூது பற்றிப் பிரிதலுமென மூன்று வகைப்படும் எ-று. ஒரோவொன்றே அறமுந் துறக்கமும் பொருளும் பயத்தற் சிறப்புநோக்கி இவற்றை இவையென விதந்தோதினார். இவை யென்றதனை எடுத்தலோசையாற் கூறவே அறங்கருதாது அரசரேவலான் தூதிற்பிரிதலும், போர்த்தொழில் புரியாது திறைகோடற்கு இடை நிலத்துப் பிரிதலுஞ் சிறப்பின்மை பெறுதும். அறங் கருதாது பொருள் ஈட்டுதற்குப் பிரிதலும் பொருள்வயிற் பிரிவிற்கு உண்மையின் இவற்றோடு ஓதாது பிற்கூறினார். அந்தணர்க்குரிய ஓதலுந் தூதும் உடன் கூறிற்றிலர், பகைபிறந்தவழித் தூது நிகழ்தலின். (25) பிரிவுள் ஓதலுந் தூதும் இவர்க்குரியவெனல் 26. அவற்றுள், ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன. இது முற்கூறியவற்றுள் அந்தணர் முதலிய மூவர்க்கும் இரண்டு பிரிவு உரித்தென்கிறது. (இ-ள்.) அவற்றுள் - அம்மூன்றனுள்; ஓதலும் தூதும் உயர்ந்தோர்மேன - ஓதற்பிரிவுந் தூதிற்பிரிவும் அந்தணர் முதலிய முவரிடத்தன எ-று. எனவே, ஒழிந்த பகைவயிற்பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தாரென்றுணர்க. உ-ம்: அரம்போ ழவ்வளை தோணிலை ஞெகிழ நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி ஈர்ங்கா ழன்ன அரும்புமுதி ரீங்கை ஆலி யன்ன வால்வீதாஅய் வைவா லோதி மையணல் எய்ப்பத் தாதுறு குவளைப் போதுபிணி யவிழப் படா அப் பைங்கட் பாவடிக் கயவாய்க் கடாஅம் மாறிய யானை போலப் பெய்துவறி தாகிய பிறங்குசெலற் கொண்மூ மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப் பனியடூஉ நின்ற பானாட் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய அலைத்தி முரணில் காலைக் கைதொழு மரபிற் கடவுள் சான்ற செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின் விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் பெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருவளக் கரிகால் முன்னிலை செல்லார் சூடா வாகைப் பறந்தலை ஆடுபெற ஒன்பது குடையும் நன்பக லொழித்த பீடில் மன்னர் போல ஓடுவை மன்னால் வாடைநீ யெமக்கே. (அகம்.125) இதனுட் பலருங் கைதொழும் மரபினையுடைய கட வுட்டன்மைய மைந்த செய்வினையெனவே ஓதற்பிரிதலென்பது பெற்றாம். சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே (192) என்பதனாற் கிழவனும் கிழத்தியும் இல்லறத்திற் சிறந்தது பயிற்றாக்கால் இறந்ததனாற் பயனின் றாதலின், இல்லறம் நிரம்பாதென்றற்கு நிரம்பா வாழ்க்கை யென்றார். இல்லறம் நிகழ்கின்ற காலத்தே மேல்வருந் துறவறம் நிகழ்த்துதற்காக அவற்றைக் கூறும் நூல்களையும் கற்று அவற்றின் பின்னர்த் தந்துவங்களையுமுணர்ந்து மெய்யுணர்தல் அந்தணர் முதலிய மூவர்க்கும் வேண்டுதலின் ஓதற்பிரிவு அந்தணர் முதலியோர்க்கே சிறந்ததென்றார். பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படி வந்தான் மறுத்தர லொல்வதோ. (கலி.15) என்பதும் அது; மையற்ற படிவம் அந்தணர் முதலியோர் கண்ண தாகலின். விருந்தின்மன்னர் (54) என்னும் அகப்பாட்டில் வேந்தன் பகைமையைத் தான் தணிவித்தமை கூறலின் அந்தணன் தூதிற் பிரிந்தமை பெற்றாம். வயலைக் கொடியின் வாடிய மருங்கல் (புறம். 305) என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூது சென்றவாறுணர்க. அரசன் தூதுசேறல் பாரதத்து வாசுதேவன் தூது சென்றவாற்றா னுணர்க. அது. படர்ந்தாரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே. (சிலப். ஆய்ச்சி) என்பதனானுணர்க. வணிகன் சென்ற தூது வந்துழிக் காண்க. (26) பகைவயிற் பிரிவு அரசர்க்கே உரித்தெனல் 27. தானே சேறலும் தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. இது பகைவயிற் பிரிவு. அரசர்க்கே உரித்தென்கின்றது. (இ-ள்.) தானே சேறலும் - தன்பகைக்குந் தானே செல்லுதலும்; தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் - அவனொடு நட்புக்கொண்ட ஒழிந்தோர் அவற்குத் துணையாகிச் செல்லுதலுமாகிய இதுபகுதியும்; வேந்தன் மேற்று. அரசன்கண்ண எ-று. எனவே, வணிகர்க்கு உரித்தன்றாயிற்று. தானேயென்று ஒருமை கூறிய அதனானே முடியுடை வேந்தர் தாமே சேறலும் ஏனோரெனப் பன்மைகூறிய அதனானே பெரும்பான்மையுங் குறுநிலமன்னர் அவர்க்காகச் சேறலும், முடியுடை வேந்தர் அவர்க்காகச் சிறுபான்மை சேறலும் உணர்க. முடியுடைவேந்தர் உள்வழிக் குறுநில மன்னர் தாமே செல்லாமையுணர்க. இதனை வேந்தர்க்குற்றுழி (இறை. கள. 38) யென்ப ஏனையார். அவ்வேந்தர் இல்வழிக் குறுநிலமன்னருந் தாமே சேறல் வேந்துவினை யியற்கை (32) என்பதன்கட் கூறுப. இதனானே தன்பகைமேலும் பிறர்பகை மேலும் ஒருகாலத்திற் சேறலின்றென்றார். கடும்புனல் கால்பட்டு என்னும் பாலைக்கலியுள், மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர் தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ. (கலி.31) எனவும், பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் (கலி.31) எனவும் மண்கோடலுந் திறைகோடலும் அரசர்க்கே உரித்தாகக் கூறியது. நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே. (கலி.31) எனச் சுரிதகத்துக் கூறியவாற்றா னுணர்க். பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புணை யாகி யொருபெருங் காதலர் சென்றார் - வருவது காணிய வம்மோ கனங்குழை கண்ணோக்கா னீணகர் முன்றின்மே னின்று. இது வேந்தர்க்குற்றுழி வேந்தன் பிரிந்தது. கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்னநின் பிழையா நன்மொழி தேறிய விவட்கே (நற்.10) இது குறுநிலமன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது. மலைமிசைக் குலைஇய (அகம்.84) என்பதும் அது. இனி வேட்கைமேற் சேறலும் நாடுகாணச் சேறன் முதலி பயவும் பாலையாகப் புலனெறி வழக்கஞ் செய்யாமை உணர்க. வேந்தனென்று ஒருமையாற் கூறினார். மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவும் (சொல். 449) என்னும் விதிபற்றி சிவணிய வென்பதனை வினையெச்ச மாக்கி நட்பாடல் வேண்டி யென்றுமாம். (27) ஏனைப்பிரிவு இவையெனல் 28. மேவிய சிறப்பி னேனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே. இது முறையானே தன் பகைமேற்சென்ற அரசன் திறை பெற்ற நாடுகாத்து அதன்கண் தன்னெறிமுறை அடிப்படுத்துதற்குப் பிரிதலும் ஏனை வணிகர் பொருட்குப் பிரிதலுங் கூறுகின்றது. (இ-ள்.) முல்லை முதலாச் சொல்லிய மேவிய சிறப்பின் - தானே சென்ற வேந்தன் தனக்கு முல்லை முதலாக முற்கூறப்பட்ட நால்வகை நிலனுந் திறையாக வந்து பொருந்திய தலைமையானே; பிழைத்தது - முன்னர் ஆள்பவர் கலக்குறுத்த அலைபெற்று நெறிமுறைமை தப்பிய அந்நாடு; முறையாற் பிழையாதாகல் வேண்டியும் பிரிவே - தன்னுடைய பழைய நாடுகளை ஆளும் நெறிமுறைமையினானே தப்பாமல் ஆக்கம் பெறக் காத்தலை விரும்பிப் பிரிதலும் பிரிவே; ஏனோர் படிமைய இமழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே - முற்கூறிய அந்தணர் அரசரை ஒழிந்த வணிகர் தமக்கு விரதங்களுடையவாக வேதநூலிற் கூறிய ஒள்ளிய பொருள் தேடி முடியும்படி பிரிதலும் பிரிவே எ-று. பிரிவை இரண்டற்குங் கூட்டுக. சிறப்பிற் பிரிதலும் எனச் சேர்க்க, சொல்லிவென்பதும் பிழைத்ததென்பதும் தொழிற் பெயர். முறையாற் காக்கவென முடிக்க. விரதமானவை கொள்வதூஉம் மிகைகொளாது. கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசல் - (பட்டினப். 209:11) முதலியன. உ-ம்: ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மரா அமும் பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியு மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியு மேனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலு மானேற்றுக் கொடி யோன்போ லெதிரிய விலவமும் ஆங்கத் தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப் போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற நோதக வந்தன்றா லிளவேனின் மேதக; பல்வரியின வண்டு புதிதுண்ணும் பருவத்துத் தொல்கவின் றொலைந்தவென் றடமென்றோ ளுள்ளுவா ரொல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்; திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்; அறல்சாஅய் பொழுதோடென் மணிநுதல் வேறாகித் திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவா ரூறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி யாறின்றிப் பொருள்வேஃகி யகன்றநாட் டுறைபவர்; என நீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர் பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர் செருமேம் பட்ட வென்றியர் வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே. (கலி.26) இதனுள் ஒல்குபு நிழல்சேர்ந்தார்க்கு எனவே, முன்னர் ஆள்பவர் கலக்குறுத்த அலைபெற்றுப் பின் தன்னை நிழலாகச் சேர்ந்தாரென்பதூஉம், அவர்க்குப் பின்னர் உலைவு பிறவாமற் பேணிக் காத்தானென்பதூஉம், விருந்துநாட்டு என்பதனான் திறைபெற்ற புதிய நாடென்பதூஉம் பெற்றாம். ஏனைய வற்றிற்கும் இவ்வாறே கூறிக்கொள்க. ஏதினாடு - புதிய நாடு, ஆறின்றிப் பகைவர் பொருளை விரும்பின நாட்டென்றும் அவரை யகன்ற நாட்டென்றும் பொருள் கூறுக. செருவின் மேம்பட்ட என்றது, நாடுகளை. அதனாற் பெற்ற வென்றியெனவே, நாடு திறைபெற்றமை கூறிற்று. படைபண்ணிப் புனையவும் (17) என்னும் பாலைக் கலியுள் வல்வினை வயக்குதல் வலித்திமன் என்பதற்கு, வலிய போர்செய்து அப்பகைவர் தந்த நாட்டை விளக்குதற்கு வலித்தியெனவுந், தோற்றஞ்சா றொகுபொருள் என்பதற்குத் தோற்றம் அமைந்த திரண்ட பொருளாவன அந் நாடுகாத்துப் பெற்ற அறம் பொருளின்பம் எனவும், பகையறு பயவினை என்பதற்குப் பகையறுதற்குக் காரணமாகிய நாடாகிய பயனைத் தரும் வினையெனவும், வேட்டபொருள் என்பதற்கு அறம்பொருள் இன்பம் எனவும் பொருளுரைத்துக் கொள்க. பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து பொருள் கூறுக. இனிக், கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங் கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து. (அகம்.93) என வாணிகர் பொருள்வயிற் பிரிந்தவா றுணர்க. நட்டோ ராக்கம் வேண்டியு மொட்டிய நின்றோ ளணிபெற வரற்கு மன்றோ தோழியவர் சென்ற திறமே. (நற். 286) என்பதனுள் அணியென்றது பூணினை. பிறவும் இவ்வாறு வருவன உயர்த்துணர்ந்து கொள். (28) பொருட்பிரிவு நால்வர்க்கு முரித்தாதல் 29. மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே இஃது எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) மேலோர் முறைமை - மேல் அதிகாரப்பட்டு நின்ற வாணிகர்க்கு ஓதிய அறந்தலைப் பிரியாப் பொருள் செயல்வகை; நால்வர்க்கும் உரித்து - அந்தணர்க்கும் அரசர்க்கும் இருவகை வேளாளர்க்கும் உரித்து எ-று. இதற்கு வணிகர்க்கு வேதநூலுள் இழைத்த பொருண் முடிவானே இந்நால்வரும் பொருண்முடிப்பரெனிற் பிரிவொன்றாகி மயங்கக் கூறலென்னும் குற்றம் தங்குமாகலின் அது கருத்தன்று; இந்நால்வருள், அந்தணர் ஓதலுங் தூதும் பற்றிப் பொருண் முடித்தலும், அரசர் பகை வயிற் பிரிவு பற்றிப் பொருண்முடித்தலும், உயர்ந்த வேளாளர் பகைவயிற் பிரிவு பற்றிப் பொருண்முடித்தலும் உழுதுண்பார் வாணிகத்தாற் பொருண்முடித்தலுங் கருத்து. இவற்றுள் வேள்விக்குப் பிரிந்து சடங்கிற்கு உறுப்பாகியும் அதற்குக் குரவனாகியும் நிற்றல் உரிமையின் ஆண்டு வேள்வி செய்தான் கொடுத்த பொருள்கோடல் வேண்டுதலானும் அறங்கருதித் தூதிற் பிரியினும் அவர் செய்த பூசனை கோடல் வேண்டுமாகலானும் அவை அந்தணர்க்குப் பொருள் வருவாயாயின. வேள்விக்குப் பிரிதல் ஓதற் பிரிவின் பகுதியாயிற்று. உ-ம்: நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன்றுடைத்தென வெண்ணி யதுதேற மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற் றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெம் செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய் தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலமாயிற் றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி னொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று கொல்லெ னுயிர். (கலி.24) இதனுள் நடுநின் றென்றதனான் இரு பெரு வேந்தரை யுஞ் சந்து செய்வித்தற்கு யான் நடுவே நிற்பலென்றும், எஞ் செய்பொருள் முற்றுமள வென்றதனான் அது முடித்தபின்னர் யாம் பெறுதற் குரியவாய் அவர் செய்யும் பூசனையாகிய பொருண் முடியு மளவுமென்றும், அந்தணன் பொருள்வயிற் பிரியக் கருதிக் கூறிய கூற்றினை அவன் தலைவி கூறியவாறுணர்க. இதனுட் கடிமனைகாத் தென்றதனை இல்லறமாகவும், ஓம்ப வென்றதனைச் செந்தீயோம்ப வென்றுங் கொள்க. நன்கலங் களிற்றொடு நண்ணா ரேந்தி வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து (அகம்.124) என்புழி, நன்கலந் திறைகொடுத்தோ ரென்றலிற் பகைவயிற் பிரிவே பொருள்வருவாயாயிற்று. ஒழிந்தனவும் இவ்வாறே உய்த்துணர்க. மேலோர் முறைமை ஏனோர்க்கு முரித்தே என்னாது நால்பர்க்கு முரித்தே என்றது. முற்கூறிய வணிகரையொழிந்த இரு வகை வேளாளரையுங் கூட்டியென் றுணர்க. அவர் பொருள்வயிற் பிரிந்தனவுஞ் சான்றோர் செய்யுள்களை நோக்கி உய்த்துணர்ந்து கொள்க. அவர்களுள் உழுதுண்பார்க்குக் கலத்திற்பிரிவும் உரித்து, ஏனையோர்க்குக் காலிற்பிரிவே உரித்தென்றுணர்க. (29) வேளாளர்க்கு இப்பிரிவும் உரித்தெனல் 30. மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப இஃது இறுதிநின்ற வேளாளர்க்கு இன்னுமொரு பிரிவு விகற்பங்கூறுகின்றது. (இ-ள்.) மன்னர் பாங்கின் - அரசரைச் சார்ந்து வாழும் பக்கத்தராகி நிற்றல் காரணமாக; பின்னோர் ஆகுப. பின்னோரெனப் பட்ட வேளாளர் வரையறையின்றி வேந்தன் ஏவிய திறமெல்லா வற்றினும் பிரிதற்கு ஆக்கமுடையராகுப எ-று. மன்னர் பின்னோரென்ற பன்மையான் முடியுடை யோரும், முடியில்லாதோரும், உழுவித்து உண்போரும், உழுது உண்போரு மென மன்னரும் வேளாளரும் பலதென்றார் (636). வேளாண்மாந்தர்க்கு (635) வேந்துவிடுதொழிலின் (636) என்னும் மரபியற் சூத்திரங்களான் வேளாளர் இருவகைய ரென்ப. அரசரேவுந் திறமாவன பகைவர்மேலும் நாடுகாத்தன் மேலுஞ் சந்துசெய்வித்தன் மேலும் பொருள்வருவாய் மேலுமாம். அவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத்தலை வருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டி நாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோருங், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட் கொடைக்குரிய வேளாளராகுப. இருங்கோ வேண்மா னருங்கடிப் பிடவூர் (புறம். 395) எனவும் ஆலஞ் சேரி மயிந்த... னூருண் கேணிநீ ரொப்போன் எனவுஞ் சான்றோர் செய்யுட்செய்தார். உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அழுந்தூர்வேளிடை மகட்கோடலும் அவன் மகனாகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கூர்வேளிடை மகட் கோடலுங் கூறுவர். இதனானே, பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயின் (புறநா.35) எனவும், ஞாலத்துக், கூலம் பகர்நர்குடி புறந் தராஅக் குடிபுறந் தருநர் பார மோம்பி (பதிற்றுப்.13) எனவுஞ் சான்றோர் கூறியவாறுணர்க. உ-ம்: வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார் தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய் கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ தண்பனி நாளே தனித்து (30) என வரும். வேதத்தினாற் பிறந்த நூல்களும் நால்வகை வருணத்தார்க்கும் உரியவாதல் 31. உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான. இது நான்கு வருணத்தோர்க்கும் எய்தாத தெய்துவித்து. (இ-ள்.) ஓத்தின் ஆன - வேதத்தினாற் பிறந்த வட நூல்களுந் தமிழ்நூல்களும்; உயர்ந்தோர்க்கு உரிய - அந்தணர் அரசர் வணிகர்க்கும், உயர்ந்த வேளாளர்க்கும் உரிய எ-று. அவை சமயநூல்களும் ஒன்றற்கொன்று மாறுபாடு கூறுந் தருக்க நூல்களும் தருமநூல்களும் சோதிடமும் வியாகரணம் முதலியனவும் அகத்தியம் முதலாகத் தோன்றிய தமிழ்நூல்களுமாம். வேதந் தோன்றிய பின்னர் அது கூறிய பொருள்களை மஇவையும் ஆராய்தலின் ஓத்தினான வென்று அவற்றிற்கு பெயர் கூறினார், ஓத்தென்பது வேதத்தையே யாதலின். (31) வேந்தன்தொழில் வேளிர்க்கும் உரித்தெனல் 32. வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே. இது மலய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் றொழில் உரித்தென்கிறது. (இ-ள்.) வேந்து வினை இயற்கை - முடியுடைவேந்தர்க்குரிய தொழிலாகிய இலக்கணங்கள்; வேந்தனின் ஒரீஇய ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்து - அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறுநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையன எ-று. அவர்க்குரிய இலக்கணமாவன, தம் பகைவயிற் றாமே சேறலுந், தாம் திறைபெற்ற நாடுகாக்கப் பிரிதலும் மன்னர் பாங்கிற் பின்னோரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம். உ-ம்: விலங்கிருஞ் சிமயக் குன்றத் தும்பர் வேறுபன் மொழிய தேஎ முன்னி வினைநசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு புனைமா ணெஃகம் வலவயி னேந்திச் செலன்மாண் புற்ற (அகம்.215) என்புழி வேறு பன்மொழிய தேஎத்தைக் கொள்ளக் கருதிப் போர்த்தொழிலைச் செலுத்தும் உரன்மிக்க நெஞ்ச மென்றலின், இது குறுநில மன்னன் தன்பகைவரின் நாடு கொள்ளச் சென்றதாம், வேந்தனெனப் பெயர் கூறாமையின். பசைபடு பச்சை நெய்தோய்த்து (244) என்னும் அகப்பாட்டினுள் முடிந்தன் றம்மநாம் முன்னிய வினையே என்றலிற் றானே குறுநில மன்னன் சென்றதாம். ஏனை வந்துழிக் காண்க. (32) வேளிர்க்குப் பொருட்பிரிவும் உரித்தாதல் 33. பொருள்வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத் தான. இஃது அக் குறுநில மன்னர்க்குப் பொருள்வயிற் பிரிதலும் ஓதற் பிரிதலும் உரிய வென்கின்றது. (இ-ள்.) பொருள் வயினும் - தமக்குரிய திறையாகப் பெறும் பொருளிடத்தும்; உயர்ந்தோர் ஒழுக்கத்துக்கு ஆன பொருள் வயினும் - உயர்ந்த நால்வகை வருணத்தார்க்குரிய ஒழுக்கத்திலேயான ஓத்திடத்தும்; பிரிதல் அவர்வயின் உரித்து - பிரிந்துசேறல் அக் குறுநில மன்னரிடத்து உரித்து எ-று. பொருள்வயிற் பிரிதல் பொருள் தேடுகின்ற இடத்தின் கண்ணென வினைசெய்இடமாய் நின்றது. உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான (31) என்று அவ் வோத்தினை அவரொழுக்கத்தி லேயான பொருளென்றார். அச் சூத்திரத்திற் கூறிய ஓதற்பிரிவே இவர்க்கும் உரிதென்று கொள்க. இவற்றுக்குச் சான்றோர் செய்யுள்களுள்வழிப் பொருள்படுமாறு உய்த்துணர்ந்து கொள்க. (33) பொருட்பிரிவு முதலியவற்றில் தலைவியொடு பிரிதல் இல்லையெனல் 34. முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை. இது முற்கூறிய ஓதல் பகை தூது காவல் பொருள் என்ற ஐந்தனுட் பகையுங் காவலும் ஒழிந்தவற்றிற்கு ஓரிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) ஓதலுந் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு தலைவியொடு கூடச் செல்லுதலின்று எ-று. தலைவியை உடன்கொண்டு செல்லாமை முற்கூறிய உதாரணங்களிலும் ஒழிந்த சான்றோர் செய்யுள்களுள்ளுங் காண்க. இதுவே ஆசிரியர்க்குக் கருத்தாதல் தலைவியொடு கூடச் சென்றாராகச் சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்யாமையான் உணர்க. இனித், தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன் கொண்டு சென்மினெனக் கூறுவனவுந், தோழி கூறுவனவுஞ், செலவழுங்குவித்தற்குக் கூறுவனவென்று உணர்க. அக்கூற்றுத் தலைவன் மரபு அன்றென்று மறுப்பன மரபுநிலை திரியா (45) என்பதனுள் அமைந்தது. இனி, இச் சூத்திரத்திற்குப், பொருள்வயிற் பிரிவின்கண் கலத்திற் பிரிவு தலைவியுடன் சேறலில்லை; எனவே, காலிற் பிரிவு தலைவியுடன் சேறல் உண்டு என்று பொருள் கூறுவார்க்குச் சான்றோர் செய்த புலனெறிவழக்கம் இன்மை உணர்க. இனி, உடன்கொண்டு போகுழிக் கலத்திற் பிரிவின்று, காலிற்பிரிவே யுளதென்பாரும் உளர். தலைவி மடலேறினாளாகக் கூறும் புலனெறிவழக்கம் இன்றெனல் 35. எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேற் பொற்புடை நெறிமை இன்மை யான. இஃது இத்துணையும் பாலைக்கு உரிய இலக்கணங் கூறி, மகடூஉ அதிகாரப்படுதலிற் பெருந்திணைக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) எத்திணை மருங்கினும் - கைக்கிளைமுதற் பெருந் திணையிறுவாய் ஏழன்கண்ணும்; மகடூஉ மடல்மேல் நெறிமை - தலைவி மடலேறினாளாகக் கூறும் புலனெறிவழக்கம்; பொற்புடைமை இன்மையான - பொலிவுடைமையின்று; ஆதலான் அது கூறப்படாது எ-று. கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் (குறள். 1137) எனவரும். கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலூரார் மைந்தர்மே லென்ப - மடலூர்தல் காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் வேட்டமா மேல்கொண்ட போழ்து என்றாராலோவெனின், இது மடலேற்றன்று; ஏறுவலெனக் கூறிய துணையாம். (35) உடன்போக்கின்கண் நற்றாயிரங்கற் பகுதிகளாவன 36. தன்னும் அவனும் ளஅவளுஞ் கட்டி மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம் நன்மை தீமை யச்சஞ் சார்தலென்று அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ முன்னிய காலம் மூன்றுடன் விளக்கித் தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலும் ஆகிய கிளவியும் அவ்வழி யுரிய. இது பிரிவிலக்கணம் அதிகாரப்பட்டு வருதலிற் கொண்டு தலைக்கழிந்துழி வருந்துவோர் தாயதென்பதூஉம் அதனது பகுதியுங் கூறுகின்றது. (இ-ள்.) போகிய திறத்து நற்றாய். தலைவியுந் தலைவனும் உடன்போய காலத்து அம்மகட் பயந்த நற்றாய்; தன்னும் அவனும் அவளுஞ் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பலும். தன்னையும் தலைவனையுந் தன் மகளையுங் குறித்துக் காலம் மூன்றுடன் நிலைபெற்று வரும் நல்வினை தீவினைக்குரிய காரியங்களைத் தன் நெஞ்சிற்கு விளக்கி வருந்திக் கூறுதலும்; அச்சஞ் சார்தல் என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம் அவற்றொடு தொகைஇப் புலம்பலும். அச்சஞ் சார்தலென்று கூறப்பட்டவற்றையும் அவைபோல்வன பிறவற்றை யும் பல்லி முதலிய சொல் நற்சொல் தெய்வங் கட்டினுங் கழங்கினும் இட்டு உரைக்கும் அத்தெய்வப் பகுதியென்றவற்றொடு கூட்டி வருந்திக் கூறலும்; தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் புலம்பலும். தோழியது ஆற்றாமையைக் கண்டுழியுந்த, தலைவியைத் தேடிப் போய்க் காணாது வந்தாரைக் கண்டுழியும் வருந்திக் கூறலும்; அவ்வழி ஆகிய கிளவியும். அவ்வுடன் போக்கிடத்துச் சான்றோராற் புலனெறி வழக்கஞ் செய்தற்குரியவாய் வருங் கிளவிகளும்; உரிய. உடன்போகிய திறந்து உரிய எ-று. நற்றாய் புலம்பலுங் கிளவியும் போகியதிறத்து உரிய வென முடிக்க. என்றென்பதனையும் புலம்பலென்பதையும் யாண்டுங் கூட்டுக. இங்ஙனம் உடன்போக்கி வருந்துதல் நோக்கித் தாயை முற்கூறித் தலைவன் கொண்டு போயினமை நோக்கித் தலைவி முன்னர் அவனைக் கூறினார். அவளும் அவனும் என்று பாடம் ஓதுவாரும் உளர். உதாரணம், மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி யினிய வாகுக தில்ல அறநெறி யிதுவெனத் தெளிந்தவென் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே (ஐங்.371) இதனுள் அறநெறி இதுவெனத் தெளிந்த என்மக ளென்று தாய் கூறவே, உடன்போக்குத் தருமமென்று மகிழ்ந்து கூறி அங்ஙனங் கூட்டிய நல்வினையைத் தன் நெஞ்சிற்கு விளக்கிப் புலம்பியவாறு காண்க. நாடொறுங் கலுழு மென்னினு மிடைநின்று காடுபடு தீயிற் கனலியர் மாதோ நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை யுண்கண் மடவரற் போக்கிய புணர்ந்த வறனில் பாலே (ஐங். 376) இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க. பால். பழவினை. இவை ஐங்குறுநூறு. இனி அச்சம் இருவகைத்து; தலைவி ஆண்டை விலங்கும் புள்ளும் ஆறலைப்போரும் முதலிய கண்டு அஞ்சும் அச்சமுந், தந்தை தன்னையர் பின்சென்றவர் இஃதறமென்னாது தீங்கு செய்கின்றாரோ என்று அஞ்சும் அச்சமுமென. நினைத்தொறுங் கலுழு மிடும்பை யெய்துக புலிக்கோட் பிழைத்த சுவைக்கோட்டு முதுகலை மான்பிணை யணைதர வாண்குரல் விளிக்கும் வெஞ்சுர மென்மக ளுய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே (ஐங்.373) இதுவும் ஐங்குறுநூறு. கேளாய் வாழியோ மகளைநின் தோழி திருநகர் வரைப்பகம் புலம்ப அவனொடு பெருமலை இறந்தது நோவேன் நோவல் கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி முடங்குதாள் உதைத்த பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயில் எறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையும் ஆங்கண் அஞ்சுவரத் தகுந கானம் நீந்திக் கன்றுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்து மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன் கறவை தந்த கடுங்கான் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ முதுவாய்ப் பெண்டின் செதுகால் குரம்பை மடமயி லன்னஎன் நடை மெலிபேதை தோள் துணை யாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கண் சேக்கோள் அறையுந் தண்ணுமை கேட்குநற் கொல்லெனக் கலுழுமென் னெஞ்சே (அகம்.63) இவை அச்சங் கூறின. தந்தை தன்னையர் சென்றாரென்று சான்றோர் செய்யுட் செய்திலர், அது புலனெறி வழக்கம் அன்மையின். இனிச் சார்தலும் இருவகைத்து, தலைவி சென்று சாரும் இடனும், மீண்டு வந்து சாரும் இடனுமென. உ-ம்: எம்வெங் காமம் இயைவ தாயின் மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாக லார்கைப் பறைக்கட் பீலித் தோகைக் காவின் துளுநாட் டன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற் செறிந்த சேரிச் செம்மல் மூதூர் அறிந்த மாக்கட் டாகுக தில்ல தோழி மாரும் யானும் புலம்பச் சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி யன்ன கடியுடை வியன்நகர்ச் செறிந்த காப்பிகந் தவனொடு போகி அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத் துய்த்த வாய துகள்நிலம் பரக்கக் கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி வன்கை யெண்கின் வயநிரை பரக்கும் இன்றுணைப் பிரிந்த கொள்கையோ டொராங்குக் குன்ற வேயில் திரண்ட என் மென்றோள் அஞ்ஞை சென்ற ஆறே (அகம். 15) அருஞ்சுரம் இறந்தவென் பெருந்தோட் குறுமகள் திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி மனைமணல் அடுத்து மாலை நாற்றி உவந்தினை தயரு மென்ப யானு மான்பிணை நோக்கின் மடநல் லாளை யீன்ற நட்பிற் கருளான் ஆயினும் இன்னகை முறுவல் ஏழையைப் பன்னாட் கூந்தல் வாரிநுசுப்பிவர்ந் தோம்பிய நலம்புனை யுதவியோ உடையேன் மன்னே அஃதறி கிற்பினோ நன்றுமற் றில்ல அறுவை தோயும் ஒரு பெருங் குடுமிச் சிறுபை நாற்றிய பஃறலைக் கருங்கோல் ஆகுவ தறியும் முதுவாய் வேல கூறுக மாதோநின் கழங்கின் றிட்பம் மாறாது வருபனி கலுழுங் கங்குலின் ஆனாது துயருமென் கண்ணினிது படீஇயர் எம்னை முந்துறத் தருமோ தன்மனை உய்க்குமோ யாதவன் குறிப்பே (அகம். 195) இவ் வகப்பாட்டு இரண்டும் தெய்வத்தொடு படுத்துப் புலம்பியது. இல்லெழும் வயலை யிலையு மூழ்த்தன சொல்வன் மாக்களிற் செல்லு மஃகின மயிலடி யிலைய மாக்குரல் நொச்சிப் பயிலிணர் நறும்பொழிற் பாவையுந் தமியள் ஏதி லாளன் பொய்ப்பப் பொய்மருண்டு பேதை போயினள் பிறங்குமலை யிறந்தென மான்ற மாலை மனையோர் புலம்ப ஈன்ற தாயு மிடும்பைய ளெனநினைந்து அங்கண் வானத் தகடூர்ந்து திரிதருந் திங்களங் கடவுள் தெளித்துநீ பெயர்த்தரிற் கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய குடுமியஞ் செல்வங் குன்றினுங் குன்றாய் தண்பொழில் கவித்த தமனிய வெண்குடை ஒண்புகழ்த் தந்தைக் குறுதி வேண்டித் தயங்குநடை முதுமை தாங்கித் தான்றனி யியங்குநடை யிளமை யின்புற் றீந்த மான்றே ரண்ண றோன்றுபுகழ் போலத் துளங்கிரு ளிரவினு மன்ற விளங்குவை மன்னாலிவ் வியலிடத் தானே (தகடூர் யாத்திரை) இது தெய்வத்தை நோக்கிக் கூறியது. மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை யன்புடை மரபினின் கிளையோ டாரப் பச்சூன் பெய்த பைந்தினை வல்சி பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேல் விடலையோ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே (ஐந்குறு.391) இவ் வைங்குறுநூறு நிமித்தத்தொடு படுத்துப் புலம்பியது. நற்சொல்லொடு படுத்தன வந்துழிக் காண்க. இனி அன்ன பிறவு மென்றதனான், ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் வான்றோய் இஞ்சி நன்னகர் புலம்பத் தனிமணி இரட்டுந் தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர் முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த வல்லேர் வாழ்க்கை விழுத்தொடைமறவர் வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிபடுத்துத் தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந் துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்தணிந் தார்வ நெஞ்சமோ டாய்நலன் அளைஇத்தன் மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல துஞ்சா முழவிற் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கு நெறியிருங் கதுப்பினென் பேதைக் கறியாத் தேஎத் தாற்றிய துணையே (அகம். 35) இவ்வகம் தலைவன் மிகவும் அன்புசெய்கவென்று தெய்வத்திற்குப் பராஅயது. நீர்நசைக் கூக்கிய வுயவல் யானை யியம்புணர் தூம்பி னுயிர்க்கு மத்தஞ் சென்றனண் மன்றவென் மகளே பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே (ஐங்குறு. 377) இவ் வைங்குறுநூறு யாம் இவற்றைக்கண்டு வருந்த இவற்றை எமக்கு ஒழித்துத் தான் நீரிலா ஆரிடைப் போயினா வென்றது. என்னு முள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையோ டழுங்கன் மூதூரலரெழச் செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே (ஐங்குறு.372) இஃது என்னை நினைப்பாளோவென்றது. இன்னும் இதனானே, செய்யுள்களுள் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் அமைத்துக் கொள்க. செல்லிய முயலிற் பாஅய சிறகர் வாவலுகக்கு மாலையாம் புலம்பப் போகிய வவட்கோ நோவேன் றேமொழித் துணையிலள் கலுழு நெஞ்சின் இணையே ருண்க ணிவட்குநோ வதுவே (ஐங்குறு.378) இது தோழி தேஎத்துப் புலம்பல். இஃது ஐங்குறுநூறு. தோழி தேஎத்துமெனப் பொதுப்படக் கூறியவதனான் தோழியை வெகுண்டு கூறுவனவுங் கொள்க. வரியணி பந்தும் வாடிய வயலையு மயிலடி யன்ன மாக்குர னொச்சியுங் கடியுடை வியனகர்க் காண்வரத் தோன்றத் தமியே கண்டதண் டலையுந் தெறுவர நோயா கின்றே மகளை நின்றோழி யெரிசினந் தணிந்த இலையி லஞ்சினை வரிப்புறப் புறவின் புலம்பு புலம்புகொ டெள்விளி யுருப்பவி ரமையத் தமர்ப்பன ணோக்கி யிலங்கிலை வெள்வேல் விடலையை விலங்குமலை யாரிடை நலியுங்கொ லெனவே (நற்.305) என வரும். இதுவென் பாவைக் கிளியநன் பாவை யினுவென் பைங்கிளி எடுத்த பைங்கிளி யிதுவென் பூவைக் கினியசொற் பூவையென் றலம்வரு நோக்கி னலம் வருஞ் சுடர் நுதல் காண்டொறுங் காண்டொறுங் கலங்க நீங்கின ளோவென் பூங்க னோளே (ஐங்குறு.375) இவ் ஐங்குறுநூறு தேடிக் காணாது வந்தாரைக் கண்டு புலம்பியது. இனி அவ்வழியாகிய கிளவிகளுட்சில வருமாறு :- ஒருமக ளுடையேன் மன்னே யவளுஞ் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை யருஞ்சுர நெருநற் சென்றனள் இனியே, தாங்குநி னவல மென்றனி ரதுமற் றியாங்கன மொல்லுமோ வறிவுடையீரே யுள்ளி னுள்ளம் வேமே யுண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவென் அணியியற் குறுமக ளாடிய மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே (நற்.184) இந் நற்றிணை தெருட்டும் அயலில்லாட்டியர்க் குரைத்தது. கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக் களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ ஒய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி தாதெரு மறுகின் மூதூ ராங்கண் எருமை நல்லான் பெருமுலை மாந்தும் நாடுபல இறந்த நன்ன ராட்டிக்கு ஆயமும் அணியிழந் தழுகின்று தாயும் ஈன்றோள் தாராய் இறீஇயரென் னுயிரெனக் கண்ணு நுதலு நீவித் தண்ணெனத் தடவுநிலை நொச்சி வரிநிழ லசைஇத் தாழிக் குவளை வாடுமலர் சூடித் தருமணற் கிடந்த பாவையென் அருமக ளேயென முயங்கின ளழுமே (அகம். 165) இம் மணிமிடை பவளத்துத் தாய் நிலையும் ஆயத்து நிலையுங் கண்டோர் கூறியவா றுணர்க. மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த வன்பி லறனு மருளிற்று மன்ற வெஞ்சுர மிறந்த அஞ்சி லோதி பெருமட மான்பிணை யலைத்த சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே (ஐங்குறு.394) இவ் ஐங்குறுநூறு தலைவி மீண்டு வந்துழித் தாய் சுற்றத்தார்க்குக் காட்டியது. நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினு மெம்மனை வதுவை நன்மணங் கழிகெனச் சொல்லி னெவனோ மற்றே வென்வேன் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே (ஐங்குறு.399) இவ் ஐங்குறுநூறு தலைவன் மீண்டு தலைவியைத் தன் மனைக்கட் கொண்டுவந்துழி அவன்தாய் சிலம்புகழீஇ நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குக் கூறியது. இன்னுஞ் சான்றோர் செய்யுள்களுள் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. சேரியுஞ் சுரத்தும் தேடிச் செல்லும் தாயரும் உண்மை 37. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந் தாமே செல்லுந் தாயாரும் உளரே. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்.) ஏமப் பேர்ஊர்ச் சேரியும் சுரத்தும். பதியெழு வறியாப் பேரூரிற் றெருவின்கண்ணும் அருவழிக்கண்ணும்; தாமே செல்லும் தாயரும் உளர். தந்தையுந் தன்னையரும் உணரா முன்னம் எதிர்ப்பட்டு மீட்டற்குத் தாமே போகுந் தாயரும் உளர் எ-று. உம்மை எண்ணும்மை. தாயரெனப் பன்மை கூறித் தாமே யெனப் பிரித்தனாற் சேரிக்கு நற்றாய் சேறலுஞ், சுரத்திற்குச் செவிலித்தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்தவென்றுணர்க. உ-ம்: வெம்மலை யருஞ்சுர நம்மிவ ணொழிய விருநில முயிர்க்கு மின்னாக் கானம் நெருநற் போகிய பெருமடத் தகுவி யைதக லல்குற் றழையணிக் கூட்டுங் கூழை நொச்சிக் கீழ தென்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலுங் காணிரோ கண்ணுடை யீரே (அகம்.275) வண்டலைக் காணார் தே எத்து நின்று காணில் ஆற்றீரெனக் கூறினமையின் ஆயத்திற்கன்றி இற்புறஞ் சென்று சேரியோர்க்கு உரைத்ததாயிற்று. நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார் பிறங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார் நாட்டி னாட்டி னூரி னூரிற் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரு முளரோநங் காத லோரே (குறுந்.130) இது செவிலி தேடத் துணிந்தது. இக் குறுந்தொகையுள் நம்மாற் காதலிக்கப்பட்டாரென்றது அவ் விருவரையும். தாயருமுளரென்றத னாற்றந்தையும் அன்னையரும் வந்தால் இன்னது செய்வலென்றலும் உளவென்று கொள்க. நுமர்வரி னோர்ப்பி னல்ல தமர்வரின் முந்நீர் மண்டில முழுது மாற்றாது என்றாற் பேல்வன. அடி புறத்திடாதாள் புறம்போதலும் பிரிவென்றற்குச் சேரியுங் கூறினார். அஃது ஏமம் இல் இருக்கை யன்றாதலின். (37) மனைஅயற் பிரிதலும் பிரிவுள் அடங்குமெனல் 38. அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே. இதுவும் பாலைக்கு ஒரு வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) அயலோர் ஆயினும். முற்கூறிய சேரியினுஞ் சுரத்தினுமன்றித் தம் மனைக்கு அயலே பிரிந்தாராயினும்; அகற்சி மேற்று. அதுவும் பிரிவின்கண்ணதாம் எ-று, எனவே நற்றாய் தலைவியைத் தேர்ந்து இல்லிற் கூறுவனவுஞ் சேரியிற் கூறுவனவும் பிரிந்தாரைப் பின் சென்றதேயாயிற்று. இக்கருத்தான் ஏமப்பேரூர் என்றார். இதனானே மனையயற்கட் பரத்தையிற் பிரிவும் பாலையென்று உய்த்துணர்க. (38) உடன்போக்கின்கண் தோழி கூற்றுக்கள் நிகழுமாறு 39. தலைவரும் விழும் நிலையெடுத் துரைப்பினும் போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும் நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந் தோளை யழிந்தது களைஇய வொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோடு என்றிவை யெல்லா மியல்புற நாடின் ஒன்றித் தோன்றுந் தோழி மேன. இது தாயர்க்கு உரியன கூறி, தோழிக்குக் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. (இ-ள்.) தலைவரும் விழுமநிலை எடுத்து உரைப்பினும் - தலைவன் கொண்டுதலைக்கழியாவிடிற் றலைவிகண் தோன்றுந் துன்பநிலையைத் தலைவற்குந் தலைவிக்கும் விளங்கக் கூறினும்; பேர்க்கற்கண்ணும் - அதுகேட்டு இருவரும் போகற்கொருப் பட்டுழித் தலைவியைப் போகவிடும் இடத்தும்; விடுத்தற் கண்ணும் - தலைவியை அவனொடு கூட்டி விடுக்குங்காற் றலைவற்குப் பாதுகாவலாகக் கூறும் இடத்தும்; நீக்கலின் வந்த தம் உறு விழுமமும் - தாயரை நீக்குதலான் தமக்குற்ற வருத்தத்திடத்தும்; வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் - மெய்யும் பொய்யும் உணர்ந்த அறிவரது தரும நூற்றுணிபும் இதுவெனக் கூறிப்பின் சென்று அவரை மீட்டற்கு நினைந்த தாயது நிலைமை அறிந்து அவரை மீளாதபடி அவளை மீடுக்கொளினும், நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு - தலைவிபோக்கு நினைந்து நெஞ்சு மிகப் புண்ணுற்றுத் தடுமாறுந் தாயை அவ் வருத்தந் தீர்த்தல் வேண்டி உழுவலன்பு காரணத்தாற் பிரிந்தாளென்பது உணரக்கூறி அவளை நெருங்கி வந்து ஆற்றுவித்தல் கூற்றோடே; என்றிவை யெல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன - என்று இச் சொல்லப் பட்டன எல்லாவற்றுக்கண்ணும் இலக்கண வகையான் ஆராயுங் காலத்துத் தான் அவள் என்னும் வேற்றுமையின்றி ஒன்றுபடத் தோன்றும் தோழிமேன கிளவி எ-று. உ-ம்: வெல்போர்க் குரிசில்நீ வியன்சுரன் னிறப்பிற் பல்கா ழல்கு லவ்வரி வாடக் குழலினு மினைகுவள் பெரிதே விழவொலி கூந்தனின் மாஅ யோளே (ஐங்குறு. 306) இவ் ஐங்குறுநூறு. குழலினும் இரங்குவளென்று பிரிந்தவள் இரங்குதற் பொருள்படத் தோழி தலைவரும் விழுமம் தலைவற்குக் கூறினாள். உன்னங் கொள்கையோ டுளங்கரந் துறையும் அன்னை சொல்லும் உய்கம் என்ன தூஉம் ஈரஞ் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கெளவையும் ஒழிகம் நாடுகண் அகற்றிய உதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல உவவினி வாழி தோழி யவரே பொம்மல் ஓதி நம்மொ டொராங்குச் செலவயர்ந் தனரால் இன்றே மலைதொறும் மால்கழை பிசைந்த கால்வாய் கூரெரி மீன்கொள் பரதவர் கொடுந்திமி னளிசுடர் வான்தோய் புணரி மிசைக்கண் டாங்கு மேவரத் தோன்றும் யாஉயர் நனந்தலை உயவல் யானை வெரிநுச்சென் றன்ன கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக் காடுமீக் கூறுங் கோடேந் தொருத்தல் ஆறுகடி கொள்ளு மருஞ்சுரம் பணைத்தோள் நாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை நிறையிதழ் உண்கண் மகளிர்க்கு அரிய வாலென அழுங்கிய செலவே (அகம். 65) இதனுள் அன்னைசொல்லும் பெண்டிர் கெளவையுந் தலை வரும் விழுமமென்று தலைவிக்குக் கூறினாள். இனிப் போக்கற்கட் கூறுவன பலவுமுள. இலங்குவீங் கெல்வளை யாய்நுதல் கவின் பெறப் பொலந்தேர்க் கொண்கனும் வந்தன னினியே யிலங்கரி நெடுங்கண் அனந்தல் தீர்மதி நலங்கவர் பசலையை நகுகம் யாமே (ஐங்குறு. 200) இவ் ஐங்குறுநூற்றின்கண் அனந்தறீர் என்றதனானே உடன் கொண்டு போதற்கு வந்தானெனப் பாயலுணர்த்திக் கூறிற்று. வேலும் விளங்கின வினைஞரு மியன்றனர் தாருந் தையின தழையும் தொடுத்தன நிலநீ ரற்ற வெம்மை நீங்கப் பெயனீர் தலைஇ உலவையிலை நீத்துக் குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் தேம்படப் பொதுளின பொழிலே கானமும் நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாட் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் போது வந்தன்று தூதே நீயும் கலங்கா மனத்தை யாகி யென்சொல் நயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி தெற்றி யுலறினும் வயலை வாடினும் நொச்சி மென்சினை வணர்குரல் சாயினும் நின்னினும் மடவள் நனிநின் னயந்த அன்னை யல்லல் தாங்கிநின் னையர் புலிமருள் செம்மல் நோக்கி வலியாய் இன்னுந் தோய்கநின் முலையே (அகம்.259) இவ் வகம் போக்குதற்கண் முயங்கிக் கூறியது. அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த நன்னெடுங் கூந்த னரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கே ழூர வின்கடுங் கள்ளி னிழையணி கொடித்தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்னநின் பிழையா நன்மொழி தேறிய விவட்கே (நற்.10) இந் நற்றிணை தலைவியைப் பாதுகாக்கவெனத் தோழி கையடைப் படுத்துவித்தது. புதல்வனீன்ற (நற்.355) என்பதும் அது. இவளே நின்னல திலளே யாயுங் குவளை யுண்க ணிவளல திலளே யானு மாயிடை யேனே மாமலை நாட மறவா தீமே இதுவும் அது. விளம்பழங் கமழுங் கமஞ்சூற் குழிசி பாசந் தின்ற தேய்கான் மத்தம் நெய்தெரி யியக்கம் வெளின்முதன் முழங்கும் வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன்கா லரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோ ளிவைகாண் டோறும் நோவர் மாதோ வளியரோ வளியரென் னாயத் தோரென நும்மொடு வரவுதா னயரவுந் தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே. (நற்.12) இந் நற்றிணை போக்குதல் தவிர்ந்ததாம். அவளே, யுடைனம ராயமோ டோரை வேண்டாது மடமான் பிணையின் மதர்த்த நோக்கமோ டென்னினு நின்னினுஞ் சிறந்த மென்மொழி யேதி லாளன் காதலி னானாது பால்பாற் படுப்பச் சென்றன ளதனான் முழவிமிழ் பந்தர் வினைபுனை நல்லில் விழவயர்ந் திருப்பி னல்லதை யினியே நீயெவ னிரங்குதி யன்னை யாயினுஞ் சிறந்த நோய்முந் துறுத்தே. என்னினும் நின்னினுஞ் சிறந்தோன் தலைவ னென்று தவிர்தல் தருமநூல்விதி என்பது. இனி விழவயர்ந்திருப்பினல்லதை எனவே மீட்டற்குச் சேறல் அறன் றென்று மீட்டாளாயிற்று. அன்னை வாழியோ வன்னை நின்மக ளென்னினும் யாயினு நின்னினுஞ் சிறந்த தன்னம ரிளந்துணை மருட்டலின் முனாஅது வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம் விழைவுடை யுள்ளமோ டுழைவயிற் பிரியாது வன்கண் செய்து சென்றனள் புன்கண் செய்து சென்றனள் புன்கண் செல்தல் புரைவதோ வன்றே. இது தாயை வற்புறுத்துயது, இயல்புற என்றதனானே தலைவன் கரணவகையான் வரைந் தானாக எதிர்சென்ற தோழிக்கு யான் வரைந்தமை நுமர்க்குணர்த்தல் வேண்டுமென்றாற்கு அவள் உணர்த்தினே னென்றலுந் தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறுதலுங் கொள்க. கருவிரன் மந்திக் கல்லா விளம்பார்ப்பு இருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோன் மதிபுடைப் பதுபோற் றோன்று நாட வரைந்தனை நீயெனக் கேட்டியா னுரைத்தனெ னல்லனோ வஃதென் யாய்க்கே (ஐங்குறு 280) புள்ளு மறியாப் பல்பழம் பழுனி மடமா னறியாத் தடநீர் நிலைஇச் சுரநனி யினிய வாகுக வென்று நினைத்தொறுங் கலுழு மென்னினு மிகப்பெரிது கலங்கின்று தோழிநம் மூரே (ஐங்குறு.398) இன்னும், இதனானே செய்யுட்கண் வேறுபட வருவன வெல்லாம் அமைத்துக்கொள்க. ஊஉ ரலரெழச் சேரி கல்லென ஆனா தலைக்கு மறனி லன்னை தானே யிருக்கத்தன் மனையே யானே நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற் கரும்புநடு பாத்தி யன்ன பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. (குறுந்.262) இதுபோக்கு நேர்ந்தமை தோழி கூறியது. பிறவுமன்ன. (39) கொண்டுதலைக்கழிந்துழிக் கண்டோர் கூற்றுக்கன் நிகழுமாறு 40. பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவி னாகிய குற்றங் காட்டலும் ஊரது சார்வுஞ் செல்லுந் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமோடு அழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ் சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினுங் கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. இது, கொண்டுதலைக்கழிந்துழி இடைச்சுரத்துக் கண்டோர் கூறுவன கூறுகின்றது. (இ-ள்.) பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் - உடன் போயவழி மாலைக்காலமுஞ் சேறற்கரிய வழியும் அஞ்சுவரக் கூறி, அவற்றது தீங்கு காரணமாகப் போகின்றார்க்கு வரும் ஏதம் அறிவித்தலும்; ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் - எம்மூர் அணித்தெனவும் நீர் செல்லுமூர் சேய்த்தெனவும் அன்புடை நெஞ்சத்தாற் கூறுங் கூற்றுக்களும்; புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்து எதிர் கூறி விடுப்பினும் - புணர்ந்து உடன்போய இருவர்கண்ணுந் தணவா நெஞ்சினராகி ஆற்றாமை மீதூர ஏற்றுக்கொண்டு நின்று இனி இதின் ஊங்குப் போதற்கரியது நும் பதிவறிற்பெயர்தல் வேண்டுமென்று உரைத்து மீட்டலும்; ஆங்கு அத்தாய்நிலைகண்டு தடுப்பினும் விடுப்பினும் - அவ்விடத்துத் தேடிச் சென்ற அச்செவிலியது நிலைகண்டு அவளைத் தடுத்து மீட்பினும், அவர் இன்னுழிச் செல்வரென விடுத்துப் போக்கினும்; சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும், சேய்த்தாகிய நிலைமைக் கண்ணே நீங்கின அவ்விருவருடைய போக்கிடத்தும்; வரவினும் - செவிலியது வரவிடத்தும்; கண்டோர் மொழிதல் கண்டது என்ப - இடைச்சுரத்துக் கண்டோர் கூறுதல் உலகியல் வழக்கினுட் காணப்பட்ட தென்று கூறுவர் புலவர் எ-று. எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேர்ந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியல் மடந்தை அரிய சேய பெருங்க லாறே. (சிற்றெட்டகம்) இதனுட் கதிரும் ஊழ்த்தனனெனவே பொழுதுசேறலும், பெருங் கலாறெனவே ஆற்றதருமையும் பற்றிக் குற்றங் காட்டியவாறு காண்க. எல்லுமெல்லின்று என்னுங் குறுந்தொகைப் (390) பாட்டும் அது. நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள் பல்கதிர்ச் செல்வன் கதிரு மூழ்த்தனன் அணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேந்தனை சென்மே. (பொருளியல்) இஃது எம்மூர் அணித்தென்றதனாற் சார்வும், அதனானே செல்லுந்தேயஞ் சேய்த்தெனவுங் கூறிற்று. மகட்பயந்து வாழ்வோர்க்கு இவளைக் கண்டு அருள் வருதலின் ஆர்வநெஞ்ச மென்றார். இதுநும் மூரே யாவருங் கேளிர் பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டும் மீன்றோ ரெய்தாச் செய்தவம் யாம்பெற் றனமால் மீண்டனை சென்மே. இஃது அழிந்தெதிர் கூறி விடுத்தது. இது கொடுப்போரின்றிக் கரண முண்மை (141) கூறிற்று. மீட்டுழி இன்னுழிச் சென்று இன்னது செய்ப என்றல் புலனெறிவழக்கன்று. பெயர்ந்து போகுதி பெரூமூ தாட்டி சிலம்புகெழு சீறடி சிவப்ப விலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே. சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே. (கலி.9) கடன் மேய சங்கங் கழியடைந்த பெண்ணை மடன்மேய வாழ்குர லன்றில் - கெடலருஞ்சீர் வாமா னெடுங்கோதை வான்றீண்டு கொல்லிமேற் றேமாவின் மேய கனி. இவை செவிலியைத் தடுத்தன. சிலம்புஞ் சிறுநுதலுஞ் சில்குழலும் பல்வளையு மொருபாற் றோன்ற அலங்கலந் திண்டோளும் ஆடெருத்தும் ஒண்குழையு மொருபாற்றோன்ற விலங்க லருஞ்சுரத்து வேறுருவின் ஓருடம்பாய் வருவார்க் கண்டே அலங்கல் அவிர்சடையெம் அண்ணல் விளையாட்டென் றகன்றேம் பாவம் இது தெய்வமென யாங்கள் போந்தேம், நுமக்கேய்தச் சேறலா மென்று விடுத்தது. நெருப்பவில் கனலி யுருப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்த வரிநிழ லசைஇச் சிறுவரை யிறப்பிற் காண்டி செறிதளிர்ப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வே லண்ணல் முன்னிய சுரனே. (ஐங்குறு. 388) இஃது ஐங்குறுநூறும் அது. அஞ்சுடர்நீள் வான்முகந் தாயிழையு மாறிலா வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண்டஞ்சி யொருசுடரு மின்றி யுலகுபா ழாக விருசுபரும் போந்தனவென்றார் இஃது இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியது. அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத் தொலிவ லீந்தி னுலவை யங்காட் டாறுசென் மாக்கள் சென்னி யெறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை மானோக்கு மிண்டிவ ரீங்கைய சுரனே வையெயிற் றையண் மடந்தை முன்னுற் றெல்லிடை நீங்கு மிளையோ னுள்ளங் காலொடு பட்ட மாரி மால்வரை மிளிர்க்கு முருமினுங் கொடிதே. (நற்.2) காண்பா னவாவினாற் காதலன் காதலிபின் னடவா நிற்ப நாண்பால ளாதலா னன்னுதல் கேள்வன்பின் னடவா நிற்ப வாண்பான்மை குன்றா வயில்வே லவன்றனக்கு மஞ்சொ லாட்கும் பாண்பால வண்டினமும் பாட வருஞ்சுரமும் பதிபோன் றன்றே. மடக்கண் டகரக் கூந்தற் பணைத்தோள் வார்ந்தவா லெயிற்றுச் சேர்த்துசெறி குறங்கிற் பிணைய லந்தழை தைஇத் துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின் றோளே யெழுமினோ வெழுமினங் கொழுநர்க் காக்கம் ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த வொள்வாண் மலையன தொருவேற் கோடி யாங்குநம் பன்மைய தெவனோவிய ணன்மைதலைப் படினே. (நற்.170) இஃது இடைச்சுரத்துக் குறும்பினுள்ளோர் இவரைக் கண்டு கோள்இழைப்புற்றார்க்கு அவர்பெண்டிர் கூறியது. இவை செலவின்கட் கூறியன. வில்லோன் காலன கழலே தொடி யோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே யாரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயி லழுவ முன்னி யோரே (குறுந். 7) என்பதும் அது. கடியான் கதிரெறிப்பக் கல்லளையில் வெம்பியவக் கலங்கற் சின்னீ ரடியா னுலகளந்த வாழியா னாக்கிய வமிர்தென் றெண்ணிக் கொடியான் கொடுப்பக் குடங்கையிடங் கொண்டிருந்து குடித்துச் சென்ற வடியேர் தடங்கணவ் வஞ்சிக்கொம் பீன்றாரிவ் வருவார் போலும் நமரே யவரெனி னண்ணினீர் சொன்மி னமர்வி லொராவவதி யாய்நின் - றமரோ விளக்கி னனையாளைத் தான்கண்டாள் கண்டேன் களக்கனி வண்ணனை யான் அறம்புரி யருமறை நவின்ற நாவிற் றிறம்புரி கொள்கை யன்தணிர் தொழுவலென் றொண்டொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெ மம்ம சுரத்திடை யவளை யின்றுணை யினிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கன் மலையிறந் தோளே (ஐங்குறு.387) இவை செவிலி வரவின்கட் கூறின. எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை யென்மக ளொருத்தியும் பிறன்மக னொருவனுந் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய ரன்னா ரிருவரைக் காணிரோ பெரும காணே மல்லேங் கண்டனங் கடத்திடை யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய மாணிழை மடவர றாயிர்நீர் போறிர்; பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும் நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே; சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செயுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ் சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே; எனவாங்கு. இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடீஇச் சென்றன ளறந்தலை பிரியா வாறுமற் றதுவே (கலி.9) என்னும் பாலைக்கலியும் அது. இக்கூறியவாறன்றி இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இச்சூத்திரத்தான் அமைக்க. (40) உடன்போக்கின்கண்ணும் பிறாண்டுந் தலைவனுடைய கூற்றுக்கள் 41. ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும் ஒன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினும் இடைச்சுர மருங்கின் அவள்தம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை யுளப்பட அப்பாற் பட்ட ஒரு திறத் தானும் நாளது சின்மையு மிளமைய தருமையுந் தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும் இன்மையது இளிவும் உடைமைய துயர்ச்சியும் அன்பின தகலமு மகற்சிய தருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் வாயினுங் கையினும் வகுத்த பக்கமோடு ஊதியங் கருதிய வொருதிறத் தானும் புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலும் தூதிடை யிட்ட வகையி னானும் ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையுந் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் காவற் பாங்கி னாங்கோர் பக்கமும் பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோடு உரைத்திற நாட்டம் கிழவோன் மேன இஃது உடன்போக்கினுள் நற்றாயுந் தோழியுங் கண்டோருங் கூறுவன கூறித் தலைவன் ஆண்டும் பிறாண்டுங் கூறுங் கூற்றும் கூறுகின்றது. தமரினும் பருவத்துஞ் சுரத்து மென்னும் மூன்றற்கும் ஒன்றாவென்பதனையும் ஒன்றிய வென்பதனையுங் கூட்டி ஏழனுருபு விரித்துப் பொருளுரைக்க. (இ-ள்.) ஒன்றாத் தமரினும் - உடன்போக்கிற்கு ஒன்றாத் தாயர் முதலியோர் கண்ணும்; பருவத்தும் - இற்செறிப்பாற் புறம்போகற்கு ஒன்றாமையானுந் தலைவனொடு கூட்டம்பெறாது ஆற்றியிருக்கும் பருவம் ஒன்றாததானும் ஒன்றாப் பருவத்தின் கண்ணும்; சுரத்தும். அரிய சேய கல்லதர் ஆகலிற் போதற்கு ஒன்றாச் சுதத்தின்கண்ணும்; ஒன்றிய தோழியொடு வலிப்பினும் - தலைவி வேண்டியதே தான் வேண்டுதலிற்பின் தமர் கூறுங் கடுஞ்சொற் கேட்டற்கும் ஒருப்பட்டு நொதுமலர் வரவிற்காற்றாது உடன்போக்கிற் கேலாத கடுங்கோடை யெனக் கருதாது கொண்டுதலைக் கழிதற்கு ஒன்றிய தோழியொடு தலைவன் ஆராய்ந்து உடன்போக்கினைத் துணியினும்; விடுப்பினும் - தலைவியை ஆற்றியிருப்பளெனக் கருதி உடன்கொண்டு போகாது தலைவன் விடுப்பினும்; இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக் கடைக் கொண்டு பெயர்த்தலிற் கலங்கு அஞர்எய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை உளப்பட அப்பால் பட்ட ஒரு திறத்தானும் - தந்தையுந் தன்னையரும் இடைச்சுரத்திடத்தே பின்சென்று பொருந்தித் தலைவியைப் பெயர்த்தல் வேண்டுதலிற் றலைவி மிகவருந்தித் தமர்பாற்பட்டு உரையாடாது தலைவன் பாற்படுதலின், அவள் கற்பொடு புணர்ந்தமை சுற்றத்தாரும் சுரத்திடைக் கண்டோரும் உணர்ந்த வெளிப்பாடு உளப்படக் கொண்டு தலைக்கழிதற் கூற்றின் கண்பட்ட பகுதிக்கண்ணும்; கடைக்கொண் டெய்தியென்க. கடை - பின் தமரெனவே தந்தை தன்னயரை உணர்த்திற்று. முன்னர்த் தாய்நிலை கண்டு தடுப்பினு (40) மென்றலின், தாயர்தாமே சென்றமை முன்னத்தாற் றமர் உணர்ந்து, வலிதிற்கொண்டு அகன்றானோ வென்று கருதியும் அவ்வரைவு மாட்சிமைப்படுத்தற்கும் பின்சென்று அவள் பெயராமற் கற்பொடு புணர்ந்தமை கண்டு, தலைவன் எடுத்துக்கொண்ட வினைமுடித்தலும் ஒருதலை யென்றுணர்ந்து, பின்னர் அவரும் போக்குடன்பட்டு மீள்பவென்று கொள்க. அவ்வெளிப்பாடு கற்பாதலிற் கற்பென்றார். உளப்படவென்றதனான் வலித்தலும் விடுத்தலும் அகப்பட வென்றாராயிற்று. நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் - வாழ்க்கைநாள் சிலவாதல் ஏதுவாகப் பொருள் செய்தல் குறித்தாரை இளமையது அருமை இன்பத்தின்கண்ணே ஈர்த்து ஒன்றாமையும், மடியின்மை ஏதுவாகப் பொருள்செயல் குறித்தாரையாதானும் ஓர் ஆற்றாற் பொருள் செய்யலாகாது. தத்தம் நிலைமைக்கேற்பச் செயல்வேண்டு மென்னுந் தகுதியதமைதி ஒன்றாமையும், இன்மையான் வரும் இளிவரவு நினைத்துப் பொருள்செய்ய நினைந்தாரைப் பெருளுடைமைக் காலத்து நிகழும் உயர்ச்சி அதற்கு இடையூறாகிப் பொருணசை யுள்ளத்தைத் தடுத்து ஒன்றாமையும், பிரிந்துழி நிகழும் அன்பினது அகலங் காரணமாகப் பொருள்செய்யக் குறித்தரைப் பிரிவாற்றாமை யிடைநின்று தடுத்து ஒன்றாமை யுமாய், ஒன்று ஒன்றனோடு ஒன்றாது வரும் பொருட்டிறத்துப் பிரிதற்குத் தலைவன் உள்ளம் எடுத்த பகுதிக்கண்ணும்; எனவே, நாளது சின்மையுந் தாளாண்பக்கமும் இன்மைய திளிவும் அன்பின தகலமும் பொருள் செயல்வகைப்பால ஆதலும், இளமையதருமையுந் தகுதிய தமைதியும் உடைமைய துயர்ச்சியும் அகற்சிய தருமையும் இன்பத்தின்பால ஆதலுங் கூறினார். இவ்வெட்டும் பொருள் செயற்கு ஒன்றா வென்னாமோ எனின், வாழ்நாள் சிறிதென்று உணர்ந்து அதற்குள்ளே பொருள் செய்து அறமும் இன்பமும் பெறுதற்குக் கருதிய வழி, ஆண்டு முயற்சியும் இன்மை யான்வரும் இளிவரவும் அதற்கு ஒருப்படுத்துங் கருவியாதலானும், பொருள் பின்பு அன்பிற்குப் பெருக்கந்தருமாதலானும், இந்நான்கும் பொருள்செய்தற்கு வேண்டுமென மறுக்க. இவ்வெட்டற்குந் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உறவேற் கண்டுகொள்க. ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே (குறுந்.63) இக் குறுந்தொகையுள் இன்மையதிளிவு நெஞ்சிற்குக் கூறியவாறு காண்க. பகுதியென்றதனானே, தலைவன் பிரிவலெனக் கூறுவனவும் பிறவுங் கொள்க. இன்றே சென்று வருதும் நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர்முடுக இளம்பிறையன்ன விளங்கு சுடர்நேமி விசும்புவீசுக் கொள்ளியிற் பைம்பயிர் துமியக் காலியற் செலவீன் மாலைசெய்திச் சின்னிரை வாள்வளைக் குறுமகள் பன்மா ணாக மணத்துவக்குவமே (குறுந். 189) எனவரும். இது குறுந்தொகை. இவை வணிகர்க்கே உரியன. இனித் தலைவன் கூற்றினைத் தலைவியுந் தோழியுங் கொண்டு கூறுவன பெரும்பான்மை. அவையெல்லாம் நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே (44) என மேல்வருஞ் சூத்திரத்துட் காட்டுதும். வாயினுங் கையினும் வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் - உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத்திடத்துங் கூறுபடுத்துக் கூறிய நூல்களாற் பெறும் பயனைக் கருதிய ஒரு கூற்றின் கண்ணும்; என்றது, வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு மென்றதாம். இதற்குத் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கொள்க. புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் - போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறுத்தல் (புறம் 8) அரசியலன்றாதலிற் றமக்கேற்ற புகழும் பெருமையும் எடுத்துக்காட்டி இதனாற் பிரிது மெனத் தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்; இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. தூது இடையிட்ட வகையினானும் - இதுபெரு வேந்தர் பொருவது குறித்துழி இருவரையுஞ் சந்து செய்வித்தற் பொருட்குக் கூட்டத்திற்கு இடையிட்ட பிரிதற் பகுதிக்கண்ணும்: ஒருவனுழை ஒருவன் மாற்றங்கொண் டுரைத்தலிற் றூதாயிற்று. வகையென்றார், வணிகரின் அரசர்க்கும் அரசரின் அந்தணர்க்குந் தூது சிறந்ததென்றற்கும், குறுநில மன்னர்க்குப் பெரும் பான்மை யென்றற்கும், வேந்தர் தம்மின் இழிந்தாருழைத் தூதுசேறல் உரித்தன்றென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் - தனக்கு ஆக்கஞ் சிறந்த நட்புடையோராகித் தோன்றும் நம்புடையோர்க்கு உற்றுழி உதவச் சேறற்கண்ணும்; இதற்கு மலைமிசைக் குலைஇய (அகம். 84) என்பதூஉம் இருபெரு வேந்தர் மாறுகொள் (அகம். 174) என்பதூஉம் முன்னர்க் காட்டினாம். (சூ. 24. உரை) அவற்றை உதாரணமாக் கூறிக்கொள்க. மூன்றன் பகுதியும் - அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற் காமநுகர்வலென்று பிரிதற்கண்ணும்; மண்டிலத்து அருமையும் - அங்ஙனம் பொருள் வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமை கூறிப் பிரிதற்கண்ணும்; இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற புகழினராகிய வேற்று வேந்தர்தமது மீக்கூற்றங் கருதிப் பிரிதற்கண்ணும்; இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. தோன்றல் சான்ற என்றதனாற் றெவ்வர் தன்னின் மிக்காரெனக் கேட்டுழி அழுக்காறு தோன்றலின், அதுவும் பிரிதற்கு ஏதுவாமென்றுணர்க. இஃது அரசர்க்கே யுரித்து. பாசறைப் புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் அவள் வருந்துவளென நினைத்துத் தனிமை கூறும் இடத்தும்; இனைக் கிழவி நிலையே (தொல், பொ. கற். 45) என்றுஞ் சூத்திரத்தான் விலக்குவரெனின், அதற்கு உம்மை விரித்துக் கிழவி நிலையை வினைசெய்யாநிற்றலாகிய இடத்து நினைந்து கூறினானாகக் கூறார்; வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றுமென்று பொருளாமென்றுணர்க. முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் - வகையின் வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட வினை முடிந்த காலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு விரும்பிக் கூறிய வகையின்கட் டோன்றிய வேறொரு வினைத்திறத்திடத்தும்; என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகைமேற் சேறல் உளதாதலை. காவற்பாங்கின் பக்கமும் - வேந்தன் றன்னாற் காக்கப்படுவனவாகிய பகுதிகளின் கூற்றிற் பிரியுமிடத்தும்; பகுதி ஆகுபெயர்; அவையானை குதிரை முதலியவற்றைக் காத்தலும், அரசர்க்குத் தருமமாகிய வேட்டையிற்சென்று கடுமாகொன்று ஏனையவற்றைக் காத்தலும் முதலியன. ஆங்கோர் பக்கமும் - அவன் காத்தற்குரிய பகுதிக்கண்ணே நிற்பார் கூற்றிற் பிரியுமிடத்தும்; அவர் தாபதர் முதலியோர் பலருமாம். பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலும் தெளித்தலும் என இருவகையோடு - பரத்தையிற் பிரிதற் காரணத்தாற் பரிபுலம்பெய்திய தலைவியை எய்தி இரத்தலும் இரந்தபின்னர் ஊடலுணர்த்தலும் என்ற இரு பகுதியோடே; உரைத்திற நாட்டம் கிழவோன் மேன - முற்கூறிய இடங்களிற் கூற்று நிகழுங் கூறுபாட்டை நிலைபெறுத்துதல் தலைமகனிடத்தனவாம் எ-று. உ-ம்: ஆறுசெல் வருத்தவுஞ் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான் வர றுணிந்த விவளினு மிவளுடன் வேய்பயி லழுவ முவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே இது தோழியொடு வலித்தது. அப்பாற்பட்ட ஒருதிறத்தானும் என்றதனானே, தலைவியிடத்துத் தலைவன் கூறுவன பலவுங் கொள்க. உ-ம்: வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன செம்முகை யவிழ்ந்த முண்முதில் முருக்கின் சிதரல் செம்மல் தாஅய் மதரெழின் மாணிழை மகளிர் பூணுடை முலையின் முகைபிணி அவிழ்ந்த கோட்கமோ டசைஇநனை அதிரல் பரந்த அந்தண் பாதிரி உதிர்வீ அஞ்சினை தாஅய் எதிர்வீ மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம் அணங்குடை நகரின் மணந்த பூவின் நன்றே கானம் நயவரும் அம்ம கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பிற் பிடிமிடை களிற்றின் தோன்றுங் குறுநெடுந் துணைய குன்றமும் உடைத்தே (அகம்.99) இவ் வகப்பாட்டுத் தலைவியை மருட்டிக் கூறியது. உயர்கரைக் கானியாற் றவிரற லகன்றுறை வேனிற் பாதிரி விரைமலர் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே கண்ணினுங் கதவநின் முலையே முலையினுங் கதவநின் றடமென் றோளே (ஐங்குறு. 361) இவ் ஐங்குறுநூறு உடன்போய வழித் தலைவன் புகழ்ச்சிக்கு நாணித் தலைவி கண்புதைத்துழி அவன் கூறியது. அழிவில முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்ட றைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயி லாலும் நறுந்தண் பொழில கானங் குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே (நற். 9) என வரும். இது புணர்ச்சி மகிழ்ந்தபின் வழிவந்த நன்மை கூறி வருந்தாது ஏகென்றது. இது நற்றிணை. பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம் மாநிலைப் பள்ளி யல்க நம்மொடு மானுண் கண்ணியும் வருமெனின் வாரார் யாரோ பெருங்க லாறே இது விடுத்தற்கட் கூறியது. வினையமை பாவையி னியலி நுந்தை மனைவரை யிறந்து வந்தனை யாயிற் றலைநாட் கெதிரிய தண்பத வெழிலி யணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும் நீவிளை யாடுக சிறிதே யானே மழகளிறுரிஞ்சிய பராரை வேங்கை மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி யமர்வரி னஞ்சேன் பெயர்க்குவெ னுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே. (நற். 362) இது நற்றிணை. நுமர்வரி னோர்ப்பி னல்ல தமர்வரின் முந்நீர் மண்டில முழுது மாற்றா தெரிகணை விடுத்தலோ விலனே யரிமதர் மழைக்கண் கலுழ்வகை யெவனே. இவை தமர் வருவரென ஐயுற்றுக் கூறியன. அவர் வந்து கற்பொடு புணர்ந்தன வந்துழிக்காண்க. அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் பெயர்ந்தநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி (கலி.11) இதனுள் எனவென்றதனாற் றலைவன் கூற்றுப் பெற்றாம். இது மூன்றன் பகுதி. புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத் துறந்துவந் தோயே யருந்தொழிற் கட்டூர் நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை யுள்ளுதொறுங் கலிழு நெஞ்சம் வல்லே யெம்மையும் வரவிழைத் தனையே (ஐங்குறு.445) இது பகைவயிற் பிரிந்தோன் பருவங்கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பியது. முல்லைநாறுங் கூந்தல் கமழ்கொள நல்ல காண்குவ மாஅ யோயே பாசறை யருந்தொழி லுதவிநங் காதனன் னாட்டுப் போதரும் பொழுதே (ஐங்குறு.446) இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவவரவின்கண் உருவு வெளிப்பட்டுழிப் புலம்பியது. உதவியென்றலின் வேந்தற்குற்றுழியாயிற்று. வந்தாற்றான் செல்லாமோ வாரிடையாய் வார்கதிரால் வெந்தாற்போற் றோன்றுநீள் வேயத்தந் - தந்தார் தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி மகரக் குழைமறித்த நோக்கு (திணைமாலை. 77) இஃது உருவு வெளிப்பாடு நின்னொடு போதுவே னென்று அவளை ஆற்றுவித்தது. திணைமாலையிற் பாலை. நனிசேய்த் தென்னாது நற்றே ரேறிச்சென் றிலங்கு நிலவி னிளம்பிறை போலக் காண்குவெம் தில்லவவள் கவின்பெறு சுடர்நுதல் விண்ணுய ரரண்பல வௌவிய மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே (ஐங்குறு.443) இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன்தான் குறித்த பருவத்து வினை முடியாமையிற் புலம்பியது. தழங்குகுரன் முரசங் காலை யியம்பக் கடுஞ்சின வேந்தன் றொழிலெதிர்ந் தனனே மெல்லவன் மருங்கின் முல்லை பூப்பப் பொங்குபெயற் கனைதுளி காரெதிர்ந் தன்றே யஞ்சி லோதியை யுள்ளுதொறுந் துஞ்சா தலமர னாமெதிர்ந் தனமே (ஐங்குறு. 448) இது வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவம் வந்துழி மீளப் பெறாது அரசன்செய்தியும் பருவத்தின் செய்தியுந் தன்செய்தி யுங் கூறிப் புலம்பியது. இப் பாசறைப் புலம்பல் பத்தனுள்ளும் வேறுபாடு காண்க. தூதிற் பிரிந்துழிப் புலம்பியன வந்துழிக் காண்க. நீடின மென்று கொடுமை தூற்றி வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந் தியாம்வெங் காதலி னோய்மிகச் சாஅய்ச் சொல்லிய துரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே (ஐங்குறு.478) இது தூதுகண்டு அவள் கூறிய திறங்கூறெனக் கேட்டது. பனிமலர் நெடுங்கண் பசலை பாயத் துனிமலி துயரமோ டரும்பட ருழப்போள் கையறு நெஞ்சத் துயவுத்துணை யாகச் சிறுவரைத் தங்குவை யாயிற் காண்குவை மன்னாற் பாணவெந் தேரே (ஐந்குறு.477) இது தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைவன் கூறியது. படுந்தடங்கட் பல்பணைபோல் வான்முழங்கன் மேலுங் கொடுந்தடங்கட் கூற்றமின் னாக - நெடுந்தடங்க ணீர்நின்ற நோக்கி னெடும்பணைமென் றோளாட்குத் தேர்நின்ற தென்னாய் நீ சென்று (திணைமாலை 115) இஃது இளையோரைத் தூது விட்டது. ஐய வாயின செய்யோள் கிளவி கார்நா ளுருமொடு கையறப் பிரிந்தென நோய்நன்கு செய்தன வெமக்கே யாமுறு துயரமவ ளறியினோ நன்றே (ஐங்குறு. 441) இது வினைமுடியாமையிற் பருவங்கண்டு மீளப்பெறாத தலைவன் தூதர் வார்த்தை கேட்டு வருந்தியது. பிறவும் வேறுபட வருவன கொள்க. முரம்பு கண் ணுடையத் திரியுந் திகிரியொடு பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே யொண்ணுதற் காண்குவம் வேந்துவினை விடினே (ஐந்குறு. 449) இது வேந்தன் திறைகொண்டு மீள்வுழித் தானுஞ் சமைந்த தேரை அழைத்துக்கண்டு திண்ணிதின் மாண்டன்று தே ரெனப் பாகனொடு கூறியவழி அவ்வேந்தன் திறைவாங்காது வினைமேற் சென்றானாகப் பாகனை நோக்கிக் கூறியது. இவை ஐங்குறுநூறு. மலைமிசைக் குலைஇய என்னும் (84) அகப்பாட்டும் அது. கலித்தொகையுட் புத்தி யானை வந்தது காண்பான் யான் றங்கினேன் (மருதக்கலி. 32) என்பன முதலியவற்றான் யானை முதலியவற்றையுங், கடவுட்பாட்டான் (மருதக் கலி. 28) தாபதரையுங் காத்தற்குப் பிரிந்தே னெனக் கூறினானென்பது பெற்றாம். ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க் கடியரோ வாற்றா தவர்; கடியர் தமக், கியார்சொல்லத் தக்காரா மாற்று; வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின் மாய மருள்வா ரகத்து; ஆயிழாய், நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா மென்க ணெவனோ தவறு; இஃதொத்தன், புள்ளிக்கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல் வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவு மொள்ளிதழ் சோந்தநின் கண்ணியு நல்லார் சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந் தவறாதல் சாலாவோ கூறு; அதுதக்கது. வேற்றுமை யெண்கண்ணோ வோராதி தீதின்மை தேற்றக்கண் டீயாய் தெளிக்கு; இனித் தேற்றெம்யாந் தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீகூறும் பொய்ச்சூ ளணங்காயின் மற்றினி யார்மேல் விளியுமோகூறு. (கலி. 88) இதனுள் இரத்தலுந் தெளித்தலும் வந்தவாறு காண்க. பிறவும் இவ்வாறு வருவன கொள்க. உடன்போக்கின்கண் செவிலி முதலியோருங் கூற்று நிகழ்துதல் 42. எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே. இது முன்னர்க் கூற்றிற்கு உரியரெனக் கூறாதோர்க்குங் கூற்று விதித்தலின் எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) எஞ்சியோர்க்கும் - முன்னர்க் கூறாது நின்ற செவிலிக் குந்த தலைவிக்கும் ஆயத்தோர்க்கும் அயலோர்க்கும் எஞ்சுதல் இலவே - கூற்றொழித லில எ-று. செவிலிக்குக் கூற்று நிகழுமாறு :- கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோள் அளியும் அன்புஞ் சாயலும் இயல்பும் முன்னாள் போலாள் இறீஇயரென் உயிரெனக் கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த கடுங்கட் கறவையிற் சிறுபுற நோக்கிக் குறுக வந்து குவவுநுதல் நீவி மெலெனத் தழீஇயினே னாக என்மகள் நன்னர் ஆகத் திடைமுலை வியர்ப்பப் பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்டி வறனிழல் அசைஇ வான்புலந்து வருந்திய மடமான் அசாவினந் திரங்குமரல் சுபைக்குங் காடுடன் கழிதல் அறியின் தந்தை அல்குபத மிகுந்த கடியுடை வியனகர்ச் செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக் கோதை யாயமோ டோரை தழீஇத் தோடமை அரிச்சிலம் பொலிப்பஅவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே. (அகம். 49) இவ் வகப்பாட்டு உடன்போன தலைவியை நினைந்து செவிலிமனையின்கண் மயங்கியது. அந்த நீளிடை யவனொடு போகிய முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவர றாய ரென்னும் பெயரே வல்லா றெடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே (ஐங்குறு. 380) இவ் ஐங்குறுநூறு செவிலி தெருட்டுவார்க்குக் கூறியது. முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின என்னும் அகப்பாட்டு (7) மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின் சென்று நவ்விப் பிணையைக் கண்டு சொற்றது. செவிலி கானவர் மகளைக் கண்டு கூறியதுமாம். காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந்தனவே யகலிரு விசும்பின் மீளினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. (குறுந் 44) இது குறுந்தொகை. செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. இடிதுடிக் கம்பலையு மின்னாத வோசையு மிசையி னாராக் கடுவினை யாளர் கடத்திடைப் பைங்குரவே கவன்று நின்றாய் கொடுவினை மேற்செய்த வெம்மேபோ னீயும் படுசினைப் பாவை பறித்துக்கோட் பட்டாயோ பையக் கூறாய். இது செவிலி குரவொடு புலம்புயது தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப வீன்றாய்நீ பாவை யிருங்குரவே - யீன்றாண் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டா யீதென்று வந்து. (திணைமாலை 65) இது குரவே வழிகாட்டென்றது குடம்புகாக் கூவல் குடிகாக்குஞ் சின்னீ ரிடம்பெறா மாதிரியு மேறாநீ ளத்த முடம்புணர் காத லுவப்ப விறந்த தடம்பெருங் கண்ணிக்கு யான்றாயர் கண்டீர். இது நீ யாரென்று வினாயினார்க்குச் செவிலி கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. இனித் தலைவிகூற்று நிகழுமாறு:- பைபயப் பசந்தன்று நுதலுஞ் சாஅய் ஐதா கின்றென் தளிர்புரை மேனியும் பலரும் அறியத் திகழ்தரும் அவலமும் உயிர்கொண்டு கழியின் இல்லதை நினையின் எவனோ வாழி தோழி பொரிகால் பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்ற வாலி யொப்பின் தூம்புடைத் திரள்வீ ஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க ஈனல் எண்கின் இருங்கிளை கவரும் சுரம்பல கடந்தோர்க கிரங்குப வென்னார் கெளவை மேவல ராகி இவ்வூர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரைய அல்லஎன் மகட்கெனப் பரைஇ நம்முணர்ந் தாறிய கொள்கை யன்னை முன்னர்யாம் என்னிதற் படலே. (அகம். 95) இது போக்குடன்பட்டமை தலைவி தோழிக் குரைத்தது. அகம். அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே யினியே வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர வீந்துக் காங்குத் தாங்கு மளவை தாங்கிக் காம நெரிதரக் கைநில் லாதே. (குறுந். 149) இக் குறுந்தொகை நாண நீங்கினமை கூறியது. சிலரும் பலருங் கடைக்க ணோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்ப நூற்றச் சிறுகோல் வலத்த ளன்னை யலைப்ப வலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமான் பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூலே. (நற்.149) இந் நற்றிணை அலர் அச்சம் நீங்கினமை கூறியது. சேட்புல முன்னிய வசைநடை யந்தணிர் நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த் தாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின்பெற வாரிடை யிறந்தன ளென்மி னேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே. (ஐங்குறு. 384) இவ் ஐங்குறுநூறு யான் போகின்றமை ஆயத்திற்கு உரைமின் என்றது. கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக் கோள்வல் வேங்கைய மலை பிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க ணற்றோ ணயந்துபா ராட்டி யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே. (ஐங்குறு. 385) இவ் ஐங்குறுநூறு இன்று யான் தேரேறி வருத்தமின்றிப் போகின்றமையாய்க்கு உரைமின் என்றது. கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியுஞ் சுரநனி வாரா நின்றன ளென்பது முன்னுற விரைந்தனி ருரைமி னின்னகை முறுவலெம் மாயத் தோர்க்கே. (ஐங்குறு. 397) இவ் ஐங்குறுநூறு மீள்கின்றாளென்று என் வரவு ஆயத் தார்க்குக் கூறுமின் என்றது. வேய்வனப் பிழந்த தோளும் வெயிறெற வாய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப் பரியல் வாழி தோழி பரியி னெல்லையி லிடும்பை தரூஉ நல்வரை நாடனொடு வந்த மாறே. (ஐங்குறு. 392) இவ் ஐங்குறுநூறு மீண்டும் வந்த தலைவி வழிவரல் வருத்தங் கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது. அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட் டுவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலுழி நீரே. (ஐங்குறு.203) இஃது உடன்போய் மீண்ட தலைவி நீ சென்ற நாட்டு நீர் இனியவல்ல; எங்ஙனம் நுகர்ந்தாயென்ற தோழிக்குக் கூறியது. அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ வறனுண் டாயினு மறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற வருவிக் கோள்வரு மென்னையை மறைத்த குன்றே. (ஐங்குறு. 312). இவ் ஐங்குறுநூறு நின்ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என்னென்ற தோழிக்குத் தலைவி தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது. பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க. இனி ஆயத்தார் கூற்று நிகழுமாறு:- மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி தான்வரு மென்ப தடமென் றோளி யஞ்சின ளஞ்சின ளொதுங்கிப் பஞ்சி மெல்லடி பரல்வடுக் கொளவே. இனி அயலோர் கூற்று நிகழுமாறு:- துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ யறம்புலந்து பழிக்கு மங்க ணாட்டி யெவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளோநின் மடமகள் வெந்நிறல் வெள்வேல் விடலைமுந் துறவே. (ஐங்குறு.393). செய்யுளியலுட் பார்ப்பான் பாங்கன் (தொ. பொ. செய். 190) பாணன் கூத்தன் (தொ. பொ. செய். 191) என்னுஞ் சூத்திரங்களாற் பார்ப்பான் முதலியோர் கூற்றுக் கூறுமாறு உணர்க. (42) முன்னிகழ்ந்தவை பின் தலைவனுந் தலைவியும் நினைத்தற்கு நிமித்தமாதல் 43. நிகழ்ந்தது நினைத்தற் கேதுவும் ஆகும்.. இதுவும் பாலையாவதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) முன்னர் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்கு முரிய நிமித்தமாம் எ-று. என்றது, முன்னர்த் தலைவன்கண் நிகழந்ததொரு நிகழ்ச்சி பின்னர்த் தலைவி நினைத்தற்கும் ஏதுவுமாம். முன்னர்த் தலைவிகண் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி பின்னர்த் தலைவன் நினைத்தற்கும் ஏதுவாமென்றவாறாம். உம்மை எச்சவும்மையாதலிற் கூறுதற்குமாம் என்று கொள்க. உ-ம்: நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவ ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும். (கலி. 4) இது, தலைவன் கண் நிகழ்ந்த மிகுதித் தலையளி வஞ்சமென்று தலைவி உட்கொண்டு பிரியுங்கொல்லென நினைத்தற்கு நிமித்த மாயிற்று. இதனானே தலைவன் செய்திகளாய்ப் பின்னர்த் தலைவி கூறுவனவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாக அமைத்துக்கொள்க. இனி, அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கொள்ளாள் தமியள் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயல் முறுவயலள் கண்ணிய துணரா அளவை யொண்ணுதல் வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த ஓமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கு நிரைநிலை அதர பரன்முரம் பாகிய பயமில் கானம் இறப்ப வெண்ணுதி ராயி னறத்தா றன்ளென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக என்னுநள் போல முன்னங்காட்டி முகத்தின் உரையா ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தெற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையல் மோயின ளுயிர்த்த காலை மாமலர் மணியுரு விழந்த அணியழி தோற்றம் கண்டே கடிந்தனஞ் செலவே ஒண்தொடி யுழையம் ஆகவும் இனைவோள் பிழையலள் மாதோ பிரிதுநாம் எனினே. (அகம். 5) இருங்கழி முதலை மேந்தோ லன்ன... ஞான்றே. (அகம். 3) இவை அகம்: வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை கந்துபிணி யானையயாவுயிர்த் தாஅங் கென்றூழ் நீடிய வேய்பயி லழுவத்துக் குன்றூர் மதிய நோக்கி நின்றுநினைந் துள்ளினெ னல்லனோ யானே முள்ளெயிற்றுத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுத லெமது முண்டோர் மதிநாட் டிங்க ளுரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிகல்தப வுலவை யாகிய மரத்த கல்பிறங்கு மாமலை யும்பரஃதெனவே. (நற்.62) இது நற்றிணை. இவை தலைவிகண் நிகழ்ந்தனவும் அவடன்மையும் பின்னர்த் தலைவன் நினைந்து செலவழுங்குதற்கு நிமித்த மாயவாறு காண்க. அறியாய் வாழி தோழி யிருளற (அகம். 53) என்பது தலைவன்கண் நிகழ்ந்தது தலைவி நினைந்து தோழிக்குக் கூறியது. நெஞ்சு நடுக்குற என்னும் பாலைக்கலியும் (23) அது. உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரொடும் விளையாடு வான்மன்னோ பெறலரும் பொழுதொடு விறங்கிணர்த் துருத்திசூழ்ந் தறலாரும் வையையென் றறைகுந ருளராயின். (கலி.30) இதுவும் அது. ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினை பொரியரை வேம்பின் புள்ளி நீழற் கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் வில்லே ருழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன்முதல் வந்த வுரன்மாய் மாலை யுள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய வினைமுடித் தன்ன வினியோண் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே. (நற்.3) என்னும் நற்றிணையும் அது. இவ்வாறன்றி வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (43) தலைவியும் தோழியும் தலைவன்கண் நிகழ்ந்த கூற்றைக் கூறிநிற்றலும் பாலையே ஆதல் 44. நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே. இஃது ஒன்றாத் தமரினும் (தொல். பொ. அகத். 41) என்னுஞ் சூத்திரத்திற்கொரு புறனடை கூறுகின்றது. (இ-ள்.) நிகழ்ந்தது கூறி. ஒன்றாத்தமரினும் என்னுஞ் சூத்திரத்துத் தலைவன்கண் நிகழ்ந்த கூற்றினைத் தலைவியுந் தோழியுங் கூறி, நிலையலுந் திணையே. அதன்கண் நிலைபெற்று நிற்றலும் பாலைத் திணையாம் எ-று. உ-ம்: அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப் பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது ஒழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ வுளநா ளொரோஒகை தம்முட் டழீஇ யொரொஒகை யொன்றன் கூறாடை யுடுப்பவரே ஆயினும் மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ சென்ற விளமை தரற்கு. (கலி. 18) இதனுள் உளநாள் என்றது, நளது சின்மை; அரிதரோ சென்ற இளமை தரற்கு என்றது இளமையதருமை; உள்ளந் துரப்பங் என்றது உள்ளத்தான் உஞற்றுதலான் தாளான் பக்கம்; சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவாது என்றது தகுதியது அமைதி, தத்தம் நிலைமைக் கேற்பப் பொருள்செய்ய வேண்டுதலின் அது பாணிக்கு மென்றலின்; ஒரோஒகை தம்முட் டழீஇ ஒரோஒகை, ஒன்றன்கூ றாடை உடுப்பவரே யாயினும் என்றது இன்மைய திளிவு; வளமை விழைதக்க துண்டோ என்றது உடைமைய துயர்ச்சி; பிரிந்துறை சூழாதி ஐய என்றது அன்பினதகலம், பிரிந்துறைந் தன்புபெருக்கல் வேண்டா தம்முளொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை என்றலின்; தொய்யிலுஞ் சுணங்கும் நினைத்துக்காண் என்றது அகற்சிய தருமை. இவ் வெட்டுந் தாமே கூறல் வேண்டி னமையின் முன்னொருகால் தலைவன் கூறக்கேட்டுத் தோழியுந் தலைவியும் உணர்ந்தமை கூறியவாறு காண்க. பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ (கலி. 15) என்பது ஓதற்குப் பிரிவலெனத் தலைவன் கூறியது கேட்ட தோழி கூறியது. நோற்றோர் மன்ற தாமே கூற்றம் கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத் தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர் நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து ஆழல் வாழி தோழி தாழா அது உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால் வரிமரல் நோன்ஞாண் வார்சிலைக் கொளீஇ அருநிறத் தழுத்திய அன்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் பழகுவ ராதலோ வரிதே முனாஅது முழவுறழ் திணிதோ ணெடுவே ளாவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின் ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே (அகம். 61) இவ் வகப்பாட்டின் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழந்தோரே துறக்கம் பெறுவரெனத் தன்சாதிக்கேற்பத் தலைவன் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலைத் தோழி கூறினாள். வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார் தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய் கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ தண்பனி நாளே தனித்து இது குறைமொழிந்து வேண்டினமை தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது. அரிதாய வறனெய்தி (பாலைக்கலி. 11) என்றது மூன்றன் பகுதி (41) தலைவன் கூறக்கேட்ட தலைவி கூறியது. யானெவன் செய்கோ தோழி பொறிவரி வானம் வாழ்த்திப் பாடவும்அருளாது உறைதுறந் தெழிலி நீங்கலிற் பறையுடன் மரம்புல் லென்ற முரம்புயர் நனந்தலை அரம்போழ் நுதிய வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார் நெல்லி நீளிடை எல்லி மண்டி நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடு மெழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் மொழிபெயர் தேஎந் தருமார் மள்ளர் கழிப்பிணிக் கறைத்தோல் நிறைகண் டன்ன வுவலிடு பதுக்கை யாளுகு பறந்தலை உருவில் பேஎய் ஊராத் தேரொடு நிலம்படு மின்மினி போலப் பலவுடன் இரங்குபரல் இமைக்கும் என்பநந் நலந்துறந் துறைநர் சென்ற ஆறே (அகம். 67) இது மண்டிலத்தருமை தலைவன் கூறக் கேட்ட தோழி கூறியது. நம்நிலை யறியா ராயினுந் தம்நிலை அறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக் காய்சின யானை கங்குல் சூழ அஞ்சுவர விறுத்த நானை வெஞ்சின வேந்தன் பாசறை யோரே (அகம். 264) இது தலைவன் பாசறைப் புலம்பினமை கூறக்கேட்ட தலைவி நம்நிலை அறியாராயினும் எனக் கூறினாள். திசை திசை தேனார்க்குந் திருமருத முன்றுறை என்பது (கலி.26) காவற் பாங்கின்கட் டலைவன் கூறியது கேட்ட தலைவி கூறியது. பிறவும் வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (44) மரபு திரியாமல் சில பொருள்கள் திணைகளிடை விரவுதல் 45. மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும் என்ப. இது மரபியலுட் கூறப்படும் மரபன்றி அகத்திணைக்கு உரிய மரபுகள் கூறுகின்றது. (இ-ள்.) மரபுநிலை திரியா மாட்சிய ஆகி - புலனெறி வழக்கஞ் செய்துவருகின்ற வரலாற்று முறைமை திரியாத மாட்சியவாகி; விரவும் பொருளும் விரவும் என்ப - பாலைத் திணைக்குங் கைக்கிளை பெருந்திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் ஏனைத் திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் விரவி வருமென்று கூறுவர் புலவர் எ-று. அவை தலைவி ஆற்றாமை கண்டுழிப் பிரிந்த தலைவன் மீண்டுவந்தானெனத் தோழி கூறுவனவும், வரைவிடை வைத்துப் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்திக் கூறுவனவும், உடன் போயவழி இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டும் வந்துழித் தலைவன் றோழிக்குக் கூறுவனவும், யானினைத்த வெல்லை யெல்லாம் பொருள் முடித்து வாராது நின்னல நயந்து வந்தேனெனத் தலைவன் கூறலும், பொருள்வயிற் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்துவனவும், இடைச்சுரத்துத் தலைவன் செலவு கண்டோர் கூறுவனவும், அவன் மீட்சி கண்டோர் கூறுவனவும், ஊரின்கட் கண்டோர் கூறுவனவும் பிறவுமாம். அவை பாலைத் திணைக்கு விரவும் பொருளா மென்றுணர்க. உ-ம்: கோடுயர் பன்மலை யிறந்தன ராயினு நீட விடுமோ மற்றே நீடுநினைந்து துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி யுடைத்தரும் வெள்ள மாகிய கண்ணே (ஐங்குறு. 358) இவ் ஐங்குறுநூறு தலைவன் மீண்டானென்றது. பாடின்றிப் பசந்தகண் (பாலைக்கலி. 16) என்பதும் அது. வளைபடு முத்தம் பரதவர் பகருங் கடல்கெழு கொண்கன் காதன் மடமகள் கெடலரும் துயர நல்கிப் படலின் பாயல் வௌவி யோளே (ஐங்குறு. 195) இவ் ஐங்குறுநூறு வரைவிடைவைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு வருந்திக் கூறியது. புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதி னிறம்பெறு மீரிதழ்ப் பொலிந்த வுண்க ணுள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ் செல்ல றீர்க்கஞ் செல்வா மென்னுஞ் செய்வினை முடியா தெவ்வஞ் செய்த லெய்யா மையோ டிளிவுதலைத் தருமென வுறுதி தூக்கத் தூங்கி யறிவே சிறிதுநனி விரைய லென்னு மாயிடை யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய உடம்பே (நற். 284) இந் நற்றிணையும் அது. கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ வேனில் அதிரலொடு விரைஇக் காண்வரச் சில்லைங் கூந்த லழுத்தி மெல்லிணர்த் தேம்பாய் மரா அம் அடைச்சி வான்கோல் இலங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச் சின்மெல் லொதுக்கமொடு மென்மெல இயலிநின் அணிமாண் சிறுபுறங் காண்டுஞ் சிறுநனி ஏகென ஏகல் நாணி ஒய்யென மாகொள் நோக்கமொடு மடங்கொளச் சாஅய் நின்றுதலை யிறைஞ்சி யோளே அதுகண்டு யாமுந் துறுதல் செல்லேம் ஆயிடை அருஞ்சுரத் தல்கி யேமே இரும்புலி களிறட்டுக் குழுமும் ஓறையுங் களிபட்டு வில்லோர் குறும்பிற் றதும்பும் வல்வாய்க் கடுந்துடிப் பாணியுங் கேட்டே (அகம். 261) இது மீண்டு வந்தோன் தோழிக்கு உரைத்தது. திருந்திழை யரிவை நின்னல முள்ளி யருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு வுறுகெனச் சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச் சிறுகண் யானை திரிதரு நெறிவிலங் கதர கானத் தானே (ஐங்குறு. 355) இவ் ஐங்குறுநூறு பெற்ற பொருள் கொண்டு நின்னலம் நயந்து வந்தேன் என்றது. இது. அளிதோ தானே நாணே யாள்வினை யெளிதென லோம்பன்மி னறிவுடை யீரே கான்கெழு செலவின் னெஞ்சுபின் வாங்கத் தான்சென் றனனே தமிய னதாஅன் றென்னா வதுகொ றானே பொன்னுடை மனைமாண் டடங்கிய கற்பிற் புனையீ ரொதி புலம்புறு நிலையே இது செலவு கண்டோர் கூறியது. மரந்தலை மணந்த நனந்தலைக் கானத் தலந்தலை ஞெமையத் திருந்த குடிஞை பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்பப் பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர் நெடுந்தேர் வன்பான் முரம்பி னேமி யதிரச் சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே யிடைச்சுரத் தெழிலி யுறைத்தென மார்பிற் குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு நறுங்கண் ணியன்கொ னோகோ யானே (நற். 394) இந் நற்றிணை வரவுகண்டோர் கூறியது. இணைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தன ளெல்லையு மிரவுங் கழிந்தன வென்றெண்ணி யெல்லிரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் துணிவாங் கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றா னல்லெழின் மார்பனைச் சார்ந்து (கலி. 142) இது பெருந்திணைக்கட் கண்டோர் கூறியது. குரவை தழீஇயா மரபுளி பாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும் மாசில்வான் முந்நீர் வளைஇய தொன்னிலம் ஆளுங் கிழமையொடு புணர்ந்த வெங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே (கலி. 103) இச் சுரிதகத்துக் குரவையாடல் ஏறுகோடற் கைக்கிளை யுள் விராய்வந்தவாறுங் குரவைக்குரிய தெய்வத்தையன்றி அரசனை வாழ்த்திய வாழ்த்து விராய்வந்தவாறுங் கொள்க. விரவும் பொருளும் விரவுமெனவே ஆய்ச்சியர் குரவைக்கூத்தல்லது வேட்டுவவரிக்குரிய வெறியாடல் விரவாதென்றுணர்க. இஃது எண்வகைச் சுவையான் வரும் மெய்பபாடுங் கூத்தொடும் படுதலின் அச்சுவை பற்றி வரும் மெய்ப்பாட்டிற்கும் உரித்தாயிற்று. இனி காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்தின் (தொல்.பொ.41) தலைவன் கூறியவற்றைக் கற்பில்லுள், தலைவன் பகுதியி னீங்கிய தகுதிக்கட் (தொல்.பொ.கற்.9) தலைவி பரத்தையராகக் கூறுவனவும் இச்சூத்திரத்தான் அமைக்க அவை மருதக்கலியும் கடவுட்பாட்டுங் முதலியன, (கலி.93,95,96,97) அவற்றை ஆண்டுக் காட்டுதும்; கண்டுணங்க. இனிக் தலைவி கற்பினுட் பிரவாற்றாது எம்மையும் உடன்கொண்டு சென்மினென்பனவும், அவன் அவட்கு மறுத்துக் கூறுவனவும் இதனான் அமைக்க. உ-ம்: மரையா மரல்கவர மாரி வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறா அத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா லென்னீ ரறியாதீர் போல விவைகூறி னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு (கலி. 6) இக் கலி எம்மையும் உடன்கொண்டு சென்மினென்றது. செருமிகு சினவேந்தன் என்னும் பாலைக்கலியுள், எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியன் மேவந்த சீறடித் தாரை யல்லிசே ராயித ழரக்குத் தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ (கலி. 13) இது தலைவிக்குத் தலைவன் உடன் போக்கு மறுத்துக் கூறியது. இதன் கரிதகத்து, அனையவை காதலர் கூறலின் வினைவயிற் பிரிகுவ ரெனப்பெரி தழியாதி (கலி. 13) என வினைவயிற்பிரிவு கூறலின் இது கற்பிற் கூறியதாயிற்று. இன்னும் இச் சூத்திரத்தான் அமைத்தற்குரிய கிளவிகளாய் வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க. (45) அகத்திணைப்பொருளை உணரவரும் உவமங்கள் 46. உள்ளுறை உவமம் ஏனை உவமமெனத் தள்ளா தாகும் திணையுணர் வகையே. இஃது உவமவியலுள் அகத்திணைக் கைகோள் இரண்டற்கும் பொதுவகையான் உரியதொன்று கூறுகின்றது. (இ-ள்.) உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - மேற்கூறம் உற்றுறை உவமம்தான் ஏனைய உவமம் என்று கூறும்படி உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாய் நின்றது; திணை உணர் வகை தள்ளாது ஆகும். அகத்திணை உணர்தற்குக் கருவியாகிய உள்ளுறை, உவமம்போல எல்லாத் திணையையும் உணருங் கூற்றைத் தள்ளா தாய் வரும். நல்லிசைப் புலவர் செய்யுட் செய்யின் எ-று. எனவே ஏனையோர் செய்யிற் றானுணரும் வகைத்தாய் நிற்கும் என்றவாறாம். உ-ம்: விரிகதிர் மண்டிலம் வியல்விசும் பூர்தரப் புரிதலை தளையவிழ்ந்த பூவங்கட் புணர்ந்தாடி வரிவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுட் டுனிசிறந் திழிதருங் கண்ணினீரறல்வார வினிதமர் காதல னிறைஞ்சித்தன் னடிசேர்பு நனிவிரைந் தளித்தலி னகுபவள் முகம்போலப் பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத் தனிமலர் தளைவிடூஉந் தண்டுறை நல்லூர் (கலி. 71) என்பது. விரியுங் கதிரையுடைய இளஞாயிறு விசும்பிலே பரவாநிற்க, விடியற்காலத்தே இதழ்கண் முறுக்குண்ட தலைகள் அம்முறுக்கு நெகிழ்ந்த செவ்விப்பூவிடத்துக், கள்ளை வண்டு நுகர்ந்து விளையாடி, அதனாலும் அமையாது பின்னும் நுகர்தற்கு அவ்விடத்தைச் சூழ்ந்து திரியும் அச்செல்வமிக்க செய்கையுட், பசிய இலைகளுடனின்ற தாமரைத்தனிமலர், தனக்கு வருத்தஞ் செய்யும் பனி ஒரு கூற்றிலே வடியாநிற்கத், தான் மிகச்செவ்வியின்றி அலருந் துறையினையுடைய ஊர எ-று. இதனுள் வைகறைக்காலத்து மனைவயிற் செல்லாது, இளைய செவ்வியையுடைய பரத்தையரைப் புணர்ந்து விளையாடி, அதனா னும் அமையாது, பின்னும் அவரைப் புணர்தற்குச் சூழ்ந்து திரிகின்ற இவ்வூரிடத்தே, நின்னைப் பெறாது, சுற்றத்திடத்தேயிருந்து கண்ணீர் வராநிற்க, நீ ஒருகால் அளித்தலிற், சிறிது செவ்வி பெற்றாளா யிருக்கும்படி வைத்த தலைவியைப் போலே, எம்மையும் வைக்கிறாயென்று, காமக்கிழத்தி உள்ளுறைவுவமங் கூறினாள். துனி மிகுதலாலே பெருக்கு மாறாது வீழ்கின்ற கண்ணீர் காமத்தீயாற் சுவறி அறுதலை உடைத்தாயொழுக, அவ் வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலிற் சிறிது மகிழ்பவள் முகம் போல என்ற ஏனை யுவமம், தாமரைமலர் பனிவாரத் தளைவிடுமென்ற உள்ளுறை யுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நின்றது. இஃது உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே (தொ. பொ. பொருளியல் 42) என்ற பொருளியற் சூத்திரத்தி சிறப்பென்ற உள்ளுறை. இவ் வேனை யுவமம் உள்ளுறையுவமத்திற்குச் சிறப்புக்கொடுத்து உள்ளுறை யவுமம்போலத் திணையுணர்ந்தலைத் தள்ளாது நின்றவாறு காண்க. இஃது இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு முவம மருங்கிற் றோன்று மென்ப (தொல். பொ. உவ. 28) என உவமப்போலிக்குக் கூறுதலின் அவ்விரண்டுந் தோன்றி நின்றது. ஏனோர் கெல்லா மிடம்வரை வின்றே (தொல். பொ. உப. 27) என்று உவமப்போலியிற் கூறுதலாற் காமக்கிழத்தியும் உள்ளுறையுவ மங் கூறினாள். குறிஞ்சியிலும் மருதத்திலும் நெய்தலிலும் இவ்வாறு வரும் கலிகளும், யானே ஈண்டை யேனே யென்னலனே யேனல் காவலர் கவணொடு வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலி னிவக்கும் கானக நாடனோ டாண்டொழிந் தன்றே (குறுந். 54) என்னும் இக் குறுந்தொகைபோல வருவனவும் இச் சூத்திரந்தான் அமைக்க. பேராசிரியரும் இப்பாட்டின் மீனெறி தூண்டிலென்றதனை ஏனையுவமமென்றார். இனித் தள்ளாதென்றதனானே, பாஅ லஞ்செவி என்னும் பாலைக்கலியுட் (5) டாழிசை மூன்றும் ஏனையு மவமாய் நின்று கருப்பொருளொடு கூடிச் சிறப்பியாது தாமே திணைப் பொருள் தோன்றுவித்து நிற்பன போல்வனவுங், கரைசேர் வேழங் கரும்பிற்பூக்குந் துறைகே ழூரன் (ஐங்குறு. 12) என்றாற் போலக் கருப்பொருள் தானே உவமமாய் நின்று உள்ளுறைப் பொருள் தருவனவும், பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. இது புறத்திற்கும் பொது. இதனான் உள்ளுறையுவமமும், ஏனையுவமமு மென உவமம் இரண்டேயென்பது கூறினார். உள்ளுறையுவமம் தெய்வம் நீங்கலான ஏனைய கருப்பொருளிடமாகப் பிறத்தல் 47. உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக் கொள்ளும் என்ப குறியறிந் தோரே. இது முறையே உள்ளுறையுவமங் கூறுகின்றது. (இ-ள்.) உள்ளுறை - உள்ளுறை யெனப்பட்ட உவமம்; தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப - தெய்வ முதலிய கருப்பொருளுட் டெய்வத்தை ஒழித்து ஒழிந்த கருப்பொருள்களே தனக்குத் தோன்றும் நிலனாகக் கொண்டு புலப்படுமென்று கூறுப; குறி அறிந்தோரே - இலக்கணம் அறிந்தோர் எ-று. எனவே, உணவு முதலிய பற்றிய அப்பொருணிகழ்ச்சி பிறிதொன்றற்கு உவமையாகச் செய்தல் உள்ளுறையுமமாயிற்று. உ-ம்: ஒன்றே னல்ல னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரு நாடனொ டொன்றேன் றொழிமற் றொன்றி னானே (குறுந். 208) இக் குறுந்தொகை, பிறிதொன்றின் பொருட்டுப் பொருகின்ற யானையான் மிதிப்புண்ட வேங்கை நசையற உணங்காது மலர்கொய்வாக்கு எளிதாகி நின்று பூக்கும் நாடனன்றதனானே தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் நம்மை இறந்துபாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினானெனவும், அதனானே நாமும் உயிர்தாங்கியிருந்து பலரானும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம் போல எனவும், உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க. ஒழிந்தனவும் வந்துழிக் காண்க. இனி அஃது உள்ளத்தான் உய்த்துணரவேண்டுமென மேற் கூறுகின்றார். (47) உள்ளுறை யுவமமாவது இதுவெனல் 48. உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென உள்ளுறுத் திறுவதை யுள்ளுறை யுவமம். இதுவும் அங்ஙனம் பிறந்த உள்ளுறையுவமத்தினைப் பொருட்கு உபகாரம்பட உவமங்கொள்ளுமாறு கூறுகின்றது. (இ-ள்.) இதனோடு ஒத்துப்பொருள் முடிகென உள்ளுறுத்து - யான் புலப்படக் கூறுகின்ற இவ்வுவமத்தோடே புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடிவதாகவென்று புலவன் தன் உள்ளத்தே கருதி; உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம் - தான் அங்ஙனங் கருதும் மாத்திரையே யன்றியுங் கேட்டோர் மனத்தின் கண்ணும் அவ்வாறே நிகழ்த்துவித்து அங்ஙனம் உணர்த்துவதற்கு உறுப்பாகிய சொல்லெல்லாம் நிறையக் கொண்டு முடிவது உள்ளுறையுவமம் எ-று. இதனானே புலவன் தான் கருதியது கூறாதவழியுங் கேட்டோர்க்கு இவன் கருதிய பொருள் ஈதென்றாராய்ந்து கோடற்குக் கருவியாகிய சிலசொற் கிடப்பச் செய்தல் வேண்டுமென்பது கருத்தாயிற்று. அது, வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண் டோங்குய ரெழில் யானைக் கனைகடாங் கமழ்நாற்ற மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான் வீங்கிறை வடுக்கொள்ள வீழுநர்ப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர்! (கலி.66) இதனுள், வீங்கு நீர் பரத்தையர் சேரியாகவும், அதன்கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர் பரத்தையரைத் தேரேற்றிக்கொண்டு வரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம்மலரைச் சூழ்ந்த வண்டு தலைவனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள் வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப்பரத்தையர் தமது நலத்தை அத் தலைவனை நுகர்வித்தலாகவுங், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டுமருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும், பொருள் தந்து ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருத்தத்திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோனுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க. புறவும் இவ்வாறு வருவன வெல்லாம் இதனான் அமைக்க. இங்ஙனங் கோடலருமை நோக்கித் துணிவொடு வரூஉந் துணி வினோர் கொளினே (தொல். பொ. உவ. 23) என்றார். (48) ஏனை உவமம் இதுவெனல் 49. ஏனை யுவமந் தானுணர் வகைத்தே. இஃது ஒழிந்த உவமங் கூறுகின்றது. (இ-ள்.) ஒழிந்த உவமம் உள்ளத்தான் உணரவேண்டாது சொல்லிய சொற்றொடரே பற்றுக்கோடாகத் தானே உணரநிற்குங் கூறுபாட்டிற்று எ-று. பவளம்போலும் வாய் என்றவழிப் பவளமே கூறி வாய் கூறாவிடின் உள்ளுறையுவமமாம். அவ்வாறின்றி உவமிக்கப் படும் பொருளாகிய வாயினையும் புலப்படக் கூறலின் ஏனையுவம மாயிற்று. அகத்திணைக்கு உரித்தல்லாத இதனையும் உடன் கூறினார் உவமம் இரண்டல்லதில்லையென வரையறுத்தற்கும், இதுதான் உள்ளுறை தழீஇ அகத் திணைக்குப் பயம்பட்டு வருமென்றற்கும். (49) கைக்கிளைக்குச் சிறந்தபொருள் இதுவெனல் 50. காமஞ் சாலா விளமை யோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை எய்தி நன்மையுந் தீமையும் என்றிரு திறத்தான் தன்னோடும் அவளொடுந் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே. இது முன்னர் அகத்திணை ஏழென நிறீஇ. அவற்றுள் நான்கற்கு நிலங்கூறிப், பாலையும் நான்கு நிலத்தும் வருமென்று கூறி, உரிப்பொருளல்லாக் கைக்கிளை பெருந்திணையும் அந்நிலத்து மயங்கும் மயக்குமுங்கூறிக், கருப்பொருட்பகுதியும் கூறிப் பின்னும் பாலைப்பொருளாகிய பிரிவெல்லாங் கூறி, அப்பகுதியாகிய கொண்டு தலைக்கழிவின்கட்கண்ட கூற்றுப்பகுதியுங் கூறி, அதனோடொத்த இலக்கணம் பற்றிப் முல்லை முதலியவற்றிற்கு மரபுகூறி, எல்லாத்திணைக்கும் உவமம் பற்றிப் பொருள் அறியப் படுதலின் அவ்வுவமப் பகுதியுங் கூறி, இனிக் கைக்கிளையும் பெருந்திணையும் இப்பெற்றிய வென்பார், இச்சூத்திரத்தானே கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இது வென்பது உணர்த்துகின்றார். (இ-ள்.) காமம் சாலா இளமையோள் வயின் - காமக் குறிப்பிற்கு அமைதியில்லாத இளமைப் பிராயத்தாள் ஒருத்தி கண்ணே; ஏமஞ்சாலா இடும்பை எய்தி - ஒரு தலைவன் (இவள் எனக்கு மனைக்கிழத்தியாக யான் கோடல் வேண்டுமெனக் கருதி) மருந்து பிறிதில்லாப் பெருந்துயரெய்தி; நன்மையும் தீமையும் என்று இருதிறத்தான் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து - தனது நன்மையுங் அவளது தீமையுமென்கின்ற இரண்டு கூற்றான் மிகப் பெருக்கிய சொற்களைத் தன்னொடும் அவளொடுங் கூட்டிச்சொல்லி; சொல் எதிர்பெறாஅன் சொல்லி இன்புறல் - அச்சொல்லுதற்கு எதிர்மொழி பெறாதே பின்னுந் தானே சொல்லி இன்புறுதல்; புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே - பொருந்தி தோன்றுங் கைக்கிளைக் குறிப்பு எ-று. அவளுந் தமருந் தீங்குசெய்தாராக அவளொடு தீங்கைப் புணர்த்துந், தான் ஏதஞ்செய்யாது தீங்பட்டானாகத் தன்னொடு நன்மையைப் புணர்த்தும் என நிரனிறையாக உரைக்க. இருதிறத்தாற்றருக்கிய எனக் கூட்டுக. உ-ம்: வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்றோட் பேரெழின் மலருண்கட் பிணையெழின் மானோக்கிற் காரெதிர் தளிர்மேனிக் கவின்பேறு சுடர் நுதற் கூரெயிற்று முகைவெண்பற் கொடி புரைநுசுப்பினாய் நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடி வீசினை யாருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள்! உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக விளமையா னுணராதாய் நின்றவ றில்லானுங் களைநரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய் நடைபெலிந் தயவுவுற்றி நாளுமென்னலியுநோய் மடமையா னுணராதாய் நின்றவ நில்லாது மிடைநில்லா தெய்க்குநின் னுருவறிந் தணிந்துதம் உடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; அல்லல்கூர்ந்த தழிபுக வணங்காகி யடருநோய் சொல்லினு மறியாதாய் நின்றவ றில்லானு மொல்லையே யுயிர்வௌவு முருவறிந் தணிந்துதஞ் செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; எனவாங்கு, ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந் நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் புனையிழாய் மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவென் போல்வல்யா னீபடு பழியே (கலி. 58) எனத் தான் உயிர்கொடுத்தானாகத் தனது நன்மைகூறி அவளது தீங்கெல்லாங் கூறுவான், மடலேறுவேன்போலு மென்று ஐயுற்றுக் கூறியவாறு காண்க. அவளைச் சொல்லுதலே தனக்கின்பமாதலிற் சொல்லி யின்புறலென்றார். இது புல்லித் தோன்றும் கைக்கிளை யெனவே காமஞ் சான்ற இளமையோள்கண் நிகழுங் கைக்கிளை இத்துணைச் சிறப்பின்றாயிற்று. அஃது எல்லா விஃதொத்தன் (61) என்னுங் குறிஞ்சிக் கலியுள், இவடந்தை, காதலின் யாரீக்குங் கொடுக்கும் விழுப்பொருள் யாதுநீ வேண்டியது; பேதாஅய், பொருள் வேண்டும் புன்கண்மை யீண்டில்லை யாழ மருளி மடநோக்கி னின்றோழி யென்னை யருளீயல் வேண்டுவல் யான் (கலி. 61) எனவரும். இது கைகோளிரண்டினுங் கூறத்தகாத வாய்பாட்டாற் கூறலிற் கைக்கிளையென்றார். குறிப்பென்றதனாற் சொல்லியின்புறினுந் தலைவன்றன் குறிப்பின் நிகழ்ந்தது புறத்தார்க்குப் புலனாகாதென்பதூஉம், அகத்து நிகழ்ச்சி அறியும் மனைவியர்க் காயின் அது புலனாமென்பதூஉங், கொள்க. அது கிழவோள் பிறள்குணம் (தொல். பொ. பொரு. 40) என்னும் பொருளியற் சூத்திரத்து ஓதுப. காமஞ் சாலா இளமையோள்வலினெனப் பொதுப் படக் கூறிய அதனான் வினைவல பாங்காயினார்கண்ணும் இவ்விதி கொள்க. இதனைக் காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்து என்னும் (109) முல்லைக்கலியான் உணர்க. (50) பெருந்திணையிலக்கணம் 51. ஏறிய மடற்றிற மிளமை தீர்திறம் தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. இது முறையானே இறுதிநின்ற பெருந்திணை யிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) ஏறிய மடற்றிறம் - மடன்மா கூறுதலன்றி மடலேறுதலும்; இளமை தீர் திறம் - தலைவற்கு இளையளாகாது ஒத்த பருவத்தாளாதலும்; தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் - இருபத்து நான்காம் மெய்ப்பாட்டின் நிகழ்ந்து ஏழாம் அவதிமுதலாக வரும் அறிவழி குணன் உடையளாதலும்; மிக்க காமத்து மிடலொடு தொகைஇ - காமமிகுதியானே எதிர்பபட்டுழி வலிதிற் புணர்ந்த இன்பத்தோடே கூட்டப்பட்டு; செப்பிய நான்கும் - கந்திருவத் துட்பட்டு வரீஇயிற்றாகச் செப்பிய இந்நான்கும், பெருந்திணைக் குறிப்பே - பெருந்திணைக் கருத்து எ-று. மடன்மா கூறுதல் கைக்கிளையாம். மடற்றிற மென்றதனான் அதன் திறமாகிய வரைபாய்தலுங் கொள்க. இளமைதீர்திறம் என்றதனாற்றலைவன் முதிர்ச்சியும், இருவரும் முதிர்ந்த பருவத்துந் துறவின்பால் சேறலின்றிக் காமம் நுகர்தலும் கொள்க. காமத்து மிகுதிறம் என்றனாற் சிறிது தேறப்படுதலுங் கொள்க. இவை கந்தருவத்துட் படாஅ வழிஇயின. இவற்றுள் ஏறிய மடற்றிறமுங் காமத்துமிகுதிறமும் புணர்ச்சிப்பின் நிகழ்வனவாம்; அது, மடன்மா கூறுமிடனுமா ருண்டே (தொல். பொ. கள. 11) என்பதனாண் ஏறுவல் எனக் கூறிவிடாதே ஏறுதலாம். உ-ம்: சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல் சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென் மான்ற துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் நெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டு துங்சே னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப் வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தெ னெவ்வநோய் தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவென் பாய்மா நிறுத்து; யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப மாமேலே நின்று மடல்புணையா நீந்துவேன் றேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு; உய்யா வருநோய்க் குயலாகு மைய லுறீஇயாளீத்தவிம் மா; காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு மாணிழை மாதரா ளேஎரெனக் காமன தாணையால் வந்த படை; காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம மெழினுத லீத்தவிம் மா; அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும் வகையினா னுள்ளஞ் சுடுதரு மன்னோ முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு; அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற நேரிழை யீத்தவிம் மா; ஆங்கதை, யறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ ருயர்நிலை யுலக முறீஅ யாங்கென் றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே. (கலி. 139) இஃது ஏறிய மடற்றிறம். உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்ககலம் புல்லினெஞ் ஞான்றும் புறம்புல்லி னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது. (கலி. 94) இதனுட், கொக்குரித்தன்ன வென்பதனாற் றோல் திரைந் தமை கூறலின் இளமைதீர் திறமாயிற்று. உளைத்தவர் கூறு முரையெல்லா நிற்க முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த பழங்கள் ளனைத்தாய்ப் படுகளி செய்யும் முழங்கும் புனலூரன் மூப்பு (புற. வெ. 12:14) அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம் பெருந்தோள் விறலி பிணங்கல் - சுரும்போ டதிரும் புனலூரற் காரமிர்த மன்றோ முதிரு முலையாண் முயக்கு (புற. வெ. 12:13) என்பவவும் அது. புரிவுண்ட புணர்ச்சி என்னும் (கலி. 142) நெய்தற்பாட்டு காமத்து மிகுதிறம். இதனைப் பொருளியலுட் காட்டுதும், ஆண்டோதும் இலக்கணங்களுந் தோன்ற. இதனுட் டெளிந்து கூறுவனவும் ஆண்டுக் காண்க. ஏ எ யிஃதொத்த னாணிலன் றன்னொடு மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்று மேவினு மேவாக் கடையு மவையெல்லா நீயறிதி யானஃதறிகல்லேன் பூவமன்ற மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான் புல்லினி தாகலிற் புல்லின னெல்லா தமக்கின் தென்று வலிதிற் பிறர்கின்னா செய்வது நன்றாமோ மற்று. (கலி. 62) இது மிக்க காமத்துமிடல். செப்பிய நான்கெனவே, செப்பாதனவாய் அத்துணைக் கந்தருவமாகக் கூறுகின்ற பின்னர் நான்கும் பெருந்திணை பெறும் (தொல். பொ. கள. 14) என்ற பெருந்திணையும் நான்கு உளவென்று உணர்க. குறிப்பென்றதனான் அந்நான்கும் பெருந்திணைக்குச் சிறந்தனவெனவும், ஈண்டுக் கூறியன கைக்கிளைக்குச் சிறந்தன வெனவுங் கொள்க. (51) இயற்கைப்புணர்ச்சிக்கு முன் நிகழும் கைக்கிளை இவையெனல் 52. முன்னைய நான்கும் முன்னதற் கென்ப. இது முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே (தொல். பொ. கள. 14.) எனக் களவியலுட் கூறுஞ் சிறப்பில்லாக் கைக்கிளை போலன்றிக் காமஞ் சாலா இளமையோள்வயிற் கைக்கிளை போல இவையுஞ் சிறந்தன என, எய்தாதது எய்துவித்தது. (இ-ள்.) இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னிகழ்ந்த காட்சியும் ஐயமுந் தெரிதலும் தேறலும் என்ற குறிப்பு நான்கும் நற்காமத்துக்கு இன்றியமையாது வருதலின், முற்கூறிய சிறப்புடைக் கைக்கிளையாதற்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் எ-று. களவியலுட் கூறுங் கைக்கிளை சிறப்பின்மையின் முன்னதற்குரியவெனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப (தொல். பொ. கள. 2) என்றது முதலாக இந்நான்குங் கூறுமாறு ஆண்டுணர்க. இவை தலைவி வேட்கைக் குறிப்புத் தன்மேனிகழ்வதனைத் தலைவன் அறிதற்கு முன்னே தன் காதன்மிகுதியாற் கூறுவனவாதலிற் கைக்கிளையாயின. இவை தலைவற்கே உரியவென்பது, சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப (தொல். பொ. கள. 3) என்னும் சூத்திரத்திற் கூறுதும். இவையும் புணர்ச்சி நிமித்தமாய்க் குறிஞ்சியாகாவோ வெனின், காட்சிப்பின் தோன்றிய ஐயமும் ஆராய்ச்சியுந் துணிவும் நன்றெனக் கோடற்கும் அன்றெனக் கோடற்கும் பொதுவாகலின், இவை ஒருதலையாக நிமித்தமாகா; வழிநிலைக் காட்சியே நிமித்தமா மென்றுணர்க. (52) புலனெறி வழக்கம் கலிப்பாவின்கண்ணும் பரிபாடற்கண்ணும் நடத்தற்கு உரித்தாதல் 53. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கங் கலியே பரிபாட் டாயிரு பாங்கினும் உரிய தாகு மென்மனார் புலவர். இது புலனெறி வழக்கம் இன்னதென்பதூஉம், அது நடுவணைந்திணைக்கு உரிமையுடைத்தென்பதூஉம், இன்ன செய்யுட்கு உரித்தென்பதூஉம் உயர்த்துத னுதலிற்று. (இ-ள்.) நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் - புனைந்துரைவகையானும், உலகவழக்கத்தானும்; பாடல் சான்ற புலனெறி வழக்கம். புலவராற் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம்; கலியே பரிபாட்டு அஇரு பாங்கினும் உரியது ஆகும் என்மனார் புலவர். கலியும் பரிபாடலுமென்கின்ற அவ்விரண்டு கூற்றுச் செய்யுளிடத்தும் நடத்தற்கு உரியதாமென்று கூறுவர் புலவர் எ-று. இவற்றிற்கு உரித்தெனவே, அங்ஙனம் உரித்தன்றிப் புலனெறி வழக்கம் ஒழிந்த பாட்டிற்கும் வருதலும், பலனெறி வழக்கம் இல்லாத பொருள் இவ்விரண்டற்கும் வாராமையுங் கூறிற்று. இவை தேவ பாணிக்கு வருதலுங் கொச்சகக் கலி பொருள்வேறுபடுதலுஞ் செய்யுளியலுள் வரைந்து ஓதுதும். மக்கணுதலிய அகனைந்திணையுமென (தொல். பொ. அகத். 54). மேல்வரும் அதிகாரத்தானும், இதனை அகத்திணையியலுள் வைத்தமையானும். அகனைந்திணை யாகிய காமப்பொருளே புலனெறி வழக்கத்திற்குப் பொருளாமென் றுணர்க. பாடல் சான்ற என்றதனாற் பாடலுள் அமைந்தன வெனவே, பாடலுள் அமையாதனவும் உளவென்று கொள்ளவைத்தமையிற், கைக்கிளையும் பெருந்திணையும் பெரும்பான்மையும் உலகியல் பற்றிய புலனெறி வழக்காய்ச் சிறுபான்மை வருமென்று கொள்க. செய்யுளியலுட் கூறிய முறைமையின்றி ஈண்டுக் கலியை முன்னோதியது, கலியெல்லாம் ஐந்திணைப் பொருளாய புலனெறி வழக்கிற் காமமுங், கைக்கிளை பெருந்திணையாகிய உலகியலே பற்றிய புலனெறி வழக்கிற் காமமும் பற்றி வருமென்றற்கும், பரிபாடல் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றி வருமென்றற்கும் என்றுணர்க. ஆசிரியமும் பெண்பாவும் வஞ்சியும் அகம் புறமென்னும் இரண்டற்கும் பொதுவாய் வருமாறு நெடுந்தொகையும் புறமுங் கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பன வற்றுட் காண்க. மருட்பாத் தானிது வென்னுந் தனிநிலை (தொ. பொ. செய். 85) இன்மையின் வரைநிலையின்று. மனைநெடு வயலை வேழஞ் சுற்றுந் துறைகே ழூரன் கொடுமை நாணி நல்ல னென்றும் யாமே யல்ல னென்னுமென் றடமென் றோளே (ஐங்குறு. 11) இதனுள் முதல் கரு வுரிபொருளென்ற மூன்றுங் கூறலின் நாடக வழக்குந், தலைவனைத் தலைவி கொடுமை கூறல் உலகியலாகலின் உலகியல் வழக்கும் உடன்கூறப்பட்டன. இவ்விரண்டுங் கூடிவருதலே பாடலுட் பயின்ற புலனெறி வழக்கமெனப்படும். இவ்விரண்டனுள் உலகியல் சிறத்தல் உயர்ந்தோர் கிளவி (தொ. பொ. பொரு. 23) என்னும் பொருளியற் குத்திரத்தானும் மரபியலானும் பெறுதும். முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக் குவளை புண்கண் குய்ப்கை கழுமத் தான்றுழந் தட்ட தீம்புளிப்பாக ரினிதெனக் கணவ னுண்டலி ணுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே (குறுந் 167) இஃது உலகியலே வந்தது. இனி அவ்வந் நிலத்து மக்களே தலைவராயக்கால் அவை உலகியலேயாம். இனிக் கைக்கிளையுள் ஆசுரமாகிய ஏறுகோடற் கைக்கிளை, காமப் பொருளாகிய புலனெறிவழக்கில் வருங்கால், முல்லை நிலத்து ஆயரும் ஆய்ச்சியருங் கந்தவருமாகிய களவொழுக்கம் ஒழுகி வரையுங்காலத்து, அந்நிலத்தியல்பு பற்றி ஏறுதழுவி வரைந்து கொள்வரெனப் புலனெறி வழக்காகச் செய்தல் இக்கலிக்குரித்தென்று கோடலும் பாடலுள் அமையாதன என்றதனாற் கொள்க. அது மலிதிரையூர்ந்து என்னும் முல்லைக்கலியுள் (4) ஆங்க ணயவர் தழூஉ என்னுந் துணையும் ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறிப், பாடுகம் வம்மின் என்பதனாற் றலைவனைப் பாடுகம் வாவென்றாட்கு, அவளும்நெற்றிச்சிவலை... மகள் ஒருக்கு நாமாடு... மகன் என்பனவற்றான் அலரச்சம் நீங்கினவாறும், அவற்றான் வருந்திய வாறுங் கூறிப் பாடியபின்னர்த், தோழி, கோளரிதாக நிறுத்த கொலையேற்றுக் காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே யார்வுற் றெமர்கொடை நேர்ந்தா ரலரெடுத்த வூராரை யுச்சி மிதித்து (கலி. 104) என எமர் கொடை நேர்ந்தாரெனக் கூறியவாறுங் காண்க. இவ்வாறே இம்முல்லை நிலத்து அகப்பொருளொடு கலந்து வருங் கைக்கிளை பிறவுமுள; அவையெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. புனைந்துரைவகையாற் கூறுப வென்றலிற் புலவர் இல்லனவுங் கூறுபவாலோவெனின், உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந்தொழுகுதல் அறமெனக்கருதி, அந்நல்லோக்குள்ளனவற்றிற் சிறிது இல்லனவுங் கூறுதலன்றி, யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறாரென்றற்கன்றே நாடகமென்னாது வழக்கென்பா ராயிற்றென்பது. இவ்வதிகாரத்து நாடகவழக்கென்பன, புணர்ச்சி உலகிற்குப் பொதுவாயினும், மலைசார்ந்து நிகழுமென்றுங், காலம் வரைந்தும், உயர்ந்தோர் காமத்திற் குரியன வரைந்தும், மெய்ப்பாடு தோன்றப் பிறவாறுங் கூறுஞ் செய்யுள் வழக்காம். இக்கருத்னே முதல்கருவுரிப்பொரு ளென்ற மூன்றே - நுவலுங் காலை (தொல். பொ. அகத். 3) என்று புகுந்தார் இவ்வாசிரியர். இப் புலநெறிவழக்கினை இல்ல தினியது, புலவரா னாட்டப் பட்ட தென்னாமோவெனின், இல்லதொன்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ்செய்யா தாகலானும், உடன்கூறிய உலகியல் வழக்கத்தினை ஒழித்தல் வேண்டு மாகலானும், அது பொருந்தாது. அல்லதூஉம் அங்ஙனங்கொண்ட இறையனார் களவியலுள்ளும், வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கு முரித்தே (இறையனார் 37) அரச ரல்லா வேனை யோக்கும் புரைவ தென்ப வோரிடத் தான் (இறையனார். 38) எனவும், வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென் றாங்கவ் விரண்டு மிழிந்தோர்க் குரிய (இறையனார். 39) எனவும் நான்கு வருணமுங் கூறி, நால்வகைத் தலை மக்களையும் உணர்த்தலின் இல்லதென்பது தொல்லாசிரியர் தமிழ்வழக்கன்றென மறுக்க. இக்கருத்தானே மேலும் மக்க ணுதலிய வகனைந் திணையும் (தொல். பொ. அகத். 54) என்பர். அகனைந்திணைக்கண்ணும் தலைவன் முதலியோர் இயற்பெயராற் கூறப்பெறார் எனல் 54. மக்கள் நுதலிய அகனைந் திணையுஞ் சுட்டி ஒருவர் பெயர்கௌப் பெறாஅர். இது முற்கூறிய புலநெறி வழக்கிற்குச் சிறந்த ஐந்திணைக் காவதொரு வரையறை கூறுகின்றது. (இ-ள்.) மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் - மக்களே தலைமக்களாகக் கருதுதற்குரிய நடுவ ணைந்திணைக்கண்ணும்; சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் - திணைப்பெயராற் கூறினன்றி ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறி, அவரது இயற்பெயர் கொள்ளப்பெறார் எ-று. இது நாடக வழக்குப் பற்றி விலக்கியது. அவை வெற்பன் துறைவன் கொடிச்சி கிழத்தியெனவரும். மக்கள் நுதலிய என்பதனானே மக்களல்லாத தேவரும் நரகருந் தலைவராகக் கூறப்படாரெனவும், அகனைந்திணையும் என்றதனானே கைக்கிளையும் பெருந்திணையுஞ் சுட்டி ஒருவர் பெயர்கொண்டுங் கொள்ளாதும் வருமெனவுங் கொள்க. அகனைந்திணையெனவே அகமென்பது நடுவுநின்ற ஐந்திணையாதலிற் கைக்கிளையும் பெருந்திணையும் அவற்றின் புறத்துநிற்றலின் அகப்புறமென்னும் பெயர் பெறுதலும் பெற்றாம். இனி அவை வரையறையுடைமை மேலைச் சூத்திரத்தான் அறிக. கன்று முண்ணாது கலத்தினும் படாது - நல்லான் றீம்பா னிலத்துக்... கவினே. இது (குறுந். 27) வெள்ளி வீதியார் பாட்டு, மள்ளர் குழீஇய விழவினானும்... மகனே (குறுந். 31) இது காதலற் கெடுத்த ஆதிமந்திபாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற் புறமாமென் றஞ்சி வாளாது கூறினார். ஆதிமந்திதன் பெயரானுங், காதலனாகிய ஆட்டனத்தி பெயரானுங் குறிற் காஞ்சிப்பாற்படும். ஆதி மந்தி போல ஏதஞ் சொல்லிப் பேதுபெரி துறலே (அகம். 236) எனவும், வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே (அகம். 147) எனவும், அகத்திணைக்கட் சார்த்துவகையான் வந்தன அன்றித் தலைமைவகையாக வந்தில என்பது. வருகின்ற (55) சூத்திரத்துப் பொருந்தின் என்னும் இலேசானே இச் சார்த்துவகை கோடும். இது பெயரெனப் பட்ட கருப்பொருளாதலிற் கூற்றிற்கு உரிய தோழியும் பாங்கனும் முதலிய வாயிலோரையும் பொதுப்பெயரா னன்றி இயற்பெயர்த் தொடக்கத்தன கூறப்பெறாரென்று கொள்க. உ-ம்: முகிழ்முகிழ்த் தேவர வாயினு முலையே யரவெயிற் றொடுக்கமொ டஞ்சுதக் கனவே களவறி வாரா வாயினுங் கண்ணே நுழைநுதி வேலி னோக்கரி யவ்வே யிளைய ளாயினு மணங்குதக் கிவளே முளையிள நெருப்பின் முதுக்குறைந் தனளே யதனா னோயில ளாகுக தில்ல சாயிறைப் பணைத்தோ ளீன்ற தாயே இது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளக் கைக்கிளை. ஆள்வினை முடித்த வருந்தவ முனிவன் வேள்வி போற்றிய விராம னவனொடு மிதிலை மூதூ ரெய்திய ஞான்றை மதியுடம் பட்ட மடக்கட் சீதை கடுவிசை வின்ஞா ணிடியொலி கேளாக் கேட்ட பாம்பின் வாட்ட மெய்தித் துயிலெழுந்து மயங்கின ளதாஅன்று மயிலென மகிழ்................................ இது சுட்டி ஒருவர் பெயர் கொண்ட கைக்கிளை. இஃது ஆசுரமாகலின், முன்னைய மூன்றுங் கைக்கிளை யென்றதனாற் கோடும். யாமத்து மெல்லையும் (நெய்தற்கலி. 22) என்றது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளாப் பெருந்திணை. பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான் பாண்டியன் மடமகள் பணைமுலைச் சாந்தம் வேறு தொடங்கிய விசய னெஞ்சத் தாரழ லாற்றா தைஇ யோகியிற் பொதியிற் சாந்த மெல்லாம் பொருதிரை முத்தினு முழங்கழற் செந்தீப் பொத்துவது போலும் புலம்புமுந் துறுத்தே. இது சுட்டி ஒருவர் பெயர்கொண்ட பெருந்திணை. இவை சான்றோர் செய்யுளுட் பெருவரவிற்றன்மையினன்றே முற்சூத்திரத்து முன்னும் பின்னும் இவற்றை வைத்த தென்பது. முட்காற் காரை முதுகனி யேய்ப்பத் தெறிப்ப விளைந்த தீங்கட் டார நிறுத்த வாயந் தலைச்செல வுண்டு பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப் புலம்புக் கனனே புல்லணற் காளை யொருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்குந் தொடுத லோம்புமதி முதுகட் சாடி யாதரக் கழுமிய துகளன் காய்தலு முண்டக் கள்வெய் யோனே. (புறம். 258) இது வெட்சித்திணை பெயர் கொள்ளாது வந்தது. முலைபொழி தீம்பான் மண்சேறு படுப்ப மலர்தலை யுலக மோம்பு மென்ப பாசிலைத் தொண்டைப் பல்லவ னாணையின் வெட்சித் தாயத்து வில்லே ருழவர் பொருந்தா வடுகர் முனைச்சுரங் கடந்து கொண்ட பல்லா னிரையே. இது வேந்துவிடு தொழிற்கண் வேந்தனைப் பெயர் கூறிற்று. ஒழிந்தனவும் புறத்திணையியலுட் காண்க. (54) இயற்பெயர் புறத்திணையொடு பொருந்தி அகத்திணைக்கண்ணும் வருதல் 55. புறத்திணை மருங்கிற் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே. இது புறத்திணக்குத் தலைவர் ஒருவராதலும், பலராதலும் உரிப்பொருட்குத் தலைவர் பலராகாமையுங் கூறலின், எய்தாத தெய்துவித்து எய்தியது விலக்கிற்று. (இ-ள்.) அகத்திணை மருங்கிற் பொருந்தின் - ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறும் இயற்பெயர் அகத்திணைக்கண்ணே வந்து பொருந்துமாயின்; புறத்திணை அளவுதல் மருங்கின் அல்லது இல - ஆண்டும் புறத்திணை கலத்தலிடத்தின் அல்லது வருதலில்லை எ-று. எனவே, பிறத்திணை கருப்பொருளாயும், அதுதான் உவம மாயும் அகத்திணையுட் கலக்குமென்பதூஉம் இதனானே விரித்தாராயிற்று. அளவுமெனவே ஒரு செய்யுட்கண்ணும் அப் புறத்திணையாகிய இயற்பெயர்களுஞ் சிறப்புப் பெயர்களும் ஒன்றேயன்றுப் பலவும் வருதலுங் கொள்க. ஒருவரென்பது அதிகாரப் பட்டமையின் அகத்திற்கு வரும் உரிப்பொருட்பெயர் ஒன்றுதல் கொள்க. உ-ம் : வண்டுபடத் ததைந்த என்னும் அகப் பாட்டினுள் (1) முருக னற்போர் நெடுவே ளாவி...... யாங்கண் எனவே புறத்திணைத் தலைவன் இயற்பெயர் ஒன்றே வந்தவாறும், அவன் நிலக் கருப்பொரு ளாய் அகத்திற்கு வந்தவாறும், உரிப்பொருட் டலைவன் ஒருவனே யானவாறுங் காண்க. எவ்வியிழந்த வறுமையர் பாணர், பூவில் வறுந்தலை போலப் புல்லென்று (குறுந் 19) என்பது கருப்பொருளுவமமாய் வந்தது. கேள்கே டூன்றவும் என்றும் அகப்பாட்டுப் (93) புறத்திணைத் தலைவர் பலராய் அகத்திணைக்கண் அளவவந்தது. புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும் என்பதனானே, முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும் என்னும் (158) புறப்பாட்டு எழுவர் மாய்ந்த பின்றை எனப் புறத்திணைத் தலைவர் பலராய் வந்தது. பிறவும் இவ்வாறு வருவன இதனான் அமைக்க. இன்னும் இதனானே அகப்புறமாகிய கைக்கிளை பெருந்திணைக்கும் இப்பன்மை சிறுபான்மை கொள்க. உ-ம்: ஏறும் வருந்தின வாயரும் புண்கூர்ந்தார் நாறிருங் கூந்தற பொதுமகளி ரெல்லாரு முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ டெல்லாம் புணர்குறிக் கொண்டு. (கலி. 101) பொருந்தின் எனவே, தானுந் தன்னொடு பொருந்துவதூஉம் என இரண்டாக்கிச் சார்த்துவகையான் வரும் பெயர்க்குங் கொள்க. நாடக வழக்கினுளது முன்னர்ச் சூத்திரத்துட் காட்டினாம். பெயர்கள் பலவாதலின் இல வெனப் பன்மை கூறினார். (55) முதலாவது அகத்திணையியற்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகையுரை முடிந்தது. 2 புறத்திணையியல் வெட்சித்திணை குறிஞ்சிக்குப் புறணாதலும் அது பதினான்கு துறைத்து ஆதலும் 56. அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணந் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே. இவ்வோத்து முற்கூறிய அகத்திணை ஏழற்கும் புறமாகிய புறத்திணை யிலக்கணம் உணர்த்தினமையிற் புறத்திணையிய லென்னும் பெயர்த்தாயிற்று. புறமாகிய திணையெனப் பண்புத் தொகையாம். அதனை முற்படக் கிளந்த (தொல். பொ. அகத். 1) என்புழிப் புற்படக் கிளந்தனவும் உளவெனத் தோற்றுவாய் செய்து போந்து, அவற்றின் இலக்கணங்களும் பெயரும் முறையுந் தொகையும் வருகின்ற சூத்திரங்களான் திறப்படக் கூறுவல் என்றலின், மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச் சூத்திரம் முற்கூறிய குறிஞ்சித்திணைக்குப் புறன் வெட்சித்திணை என்பதூஉம், அதுதான் இப்பகுதித்தென்பதூஉம் உணர்த்துத னுதலிற்று. (இ-ள்.) அகத்திணை மருங்கின் அரிதல்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் - அகத்திணை யென்னும் பொருட்கட் பிணக்கற அறிந்தோர் கூறிய புறத்திணையது இலக்கணத்தைக் கூறுபட ஆராந்து கூறின்; வெட்சி தானே குறிஞ்சியது புறனே - வெட்சியெனப்பட்ட புறத்திணை குறிஞ்சி யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம், உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே - அதுதான் அஞ்சுதகத் தோன்றும் பதினான்கு துறையினையுடைத்து எ-று. அகத்திணைக்கண் முதல் கரு வுரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பை யென்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடை யொப்புமை பற்றிச் சார்புடையவாதலும், நில மில்லாத பாலை பெருந்திணை கைக்கிளை யென்பனவற்றிற்கு வாகையுங் காஞ்சியும் பாடாண்டிணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை யொப்புமை பற்றிச் சார்புடைய வாதலுங் கூறுதற்கு அரில்தபவுணர்ந்தோ ரென்றார். ஒன்று ஒன்றற்குச் சார்பாமாறு அவ்வச் சூத்திரங்களுட் கூறுதும். தானே யென்றார், புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின் பாடாண்டிணை ஒழிந்தனவற்றிகும் இஃதொக்கும். களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுந் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும் போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார். வெட்சித் திணையாவது களவின்கண் நிரைகொள்ளும் ஒழுக்கம். இதற்கு அப்பூச் சூடுதலும் உரித்தென்று கொள்க. வேற்றுப்புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி அரண் சேர்வதோர் உபாயமாதலின் உட்குவரத்தோன்றுமென்றார். மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந்துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகு மார்க்கமாதலிற் றுறையென்றார், எல்லாவழியு மென்பதனை எல்லாத் துறையுங் காவல்போற்றினார் என்பவாகலின். எனவே, திணையுந் துறையுங் கொண்டாராயிற்று. அகத்திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறை யென்பது (பொ. 521) உறுப்பாகக் கூறினார். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடையவென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே அகப்பொருட் பகுதி பலவாயினும் ஒரு செய்யுளுட் பலபொருள் விராஅய்வரினும், ஒரு துறையாயினாற்போலப் புறத்திணைக்கும் அவ்வப் பொருட் பகுதியும் ஒரு துறையாதலும், ஒரு செய்யுளுட் பலதுறை ஒருங்குவந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியனவெல்லாம் புறத் திணைக்குங் கொள்க. (1) வெட்சித் திணையின் பொதுவிலக்கணம் 57. வேந்துவிடு முளைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பல் மேவற்றாகும். இது வெட்சியெனக் கூறிய புறத்திணைக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) வேந்து விடு முனைஞர் - வேந்தனால் விடப்பட்டு முனைப்புலங் காத்திருந்த தண்டத் தலைவர்; வேற்றுப் புலக்களவின் - பகைநிலத்தே சென்று களவினானே; ஆ தந்தோம்பல் மேவற்றாகும் - ஆநிரையைக் கொண்டுபோந்து பாதுகாத்தலைப் பொருந்துதலை யுடைத்தாகும் வெட்சித்திணை எ-று. களவுநிகழ்கின்ற குறிஞ்சிப்பொருளாகிய கந்தருவமணம் வேத விதியானே இல்லாறமாயினாற்போல, இருபெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்குசெய்யத் தகாத சாதிகளை ஆண்டுநின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினாற் றாமே கொண்டுவந்து பாதுகாத்தலுந் தீதெனப்படா அறமேயாம் என்றற்கு ஆதந்தோம்பலென்றார். அது. ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரு வெம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென வறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின் (புறம் 9) எனச் சான்றோர் கூறியவாற்றா னுணர்க. மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்றற்கு மேவற்றாகுமென்றார். அகநாட்டன்றிப் புறஞ்சிறைப் பாடியில் ஆநிரை காக்குங் காவலரைக் கொன்றே நிறைகொள்ள வேண்டுதலின் ஊர் கொலையுங் கூறினார். வேந்துவிடு வினைஞர் என்னாது முனைஞர் என்றதனானே முனைப்புலங் காத்திருந்தோர் தாமே சென்று நிரைகோடலுங், குறுநிலமன்னர் நிரைகோடலும், ஏனை மறவர் முதலியோர் நிரைகோடலுமாகிய வேத்தியல் அல்லாத பொதுவியலுங் கொள்க. முன்னர் (தொல். பொ. புறத். 1) வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவுகூறிய அதனானே, அகத்திற்கு ஏனைத் திணைக்கண்ணுங் களவு நிகழ்ந்தாற் போலப் புறத்திணை யேழற்குங் களவுநிகழுங்கொ லென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணிவுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். வேந்துவிடு முனைஞர் என்றமையான், இருபெருவேந்தருந் தண்டத்தலைவரை ஏவி விடுவரென்றும், ஆ தந்தோம்பும் என்றதனாற் களவின்கட் கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்பலென்றும், பொருள் கூறுமாறு சூத்திரஞ் செய்தாராகலின், இருபெருவேந்தர் தண்டத்தலைவரும் அவரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரியராயினர்; ஆவவே இருவர்க்குங் கோடற்றொழில் உளதாயிற்றாதலின் அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் மீட்டல் கரந்தை என்பரால் எனின், அதனையும் இச் சூத்திரத்தானும் வருகின்ற சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண்டார். மீட்டலை வெட்சிக் கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை யென்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனாகாமை உணர்க. களவி னென்பதற்கு களவினானெனவுங் களவின்கணெனவும் இருபொருட்டாகக் கூறுதல் உய்த்துக் கொண்டுணர்தலென்னும் உத்தியாம். புறப்பொருட்கரிய அறனும் பொருளுங் கூறத்தொடங்கி, ஈண்டு அறத்தாற் பொருளீட்டுமாறுங் கூறினார். (2) வெட்சித்திணைத்துறை பதினான்கும் இருபத்தெட்டு ஆதல் 58. படையியங் கரவம் பாக்கத்து விரிச்சி புடைகெடப் போகிய செலவே புடைகெட ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை முற்றிய ஊர்கொலை யாகோள் பூசன் மாற்றே நோயின் றுய்த்த னுவலுழித் தோற்றந் தந்துநிறை பாதீ டுண்டாட்டுக் கொடையென வந்த ஈரேழ் வகையிற் றாகும். இதுமுன் ஈரேழாமென்ற துறை, இருவகைப்பட்டு இருபத் தெட்டாமென்கின்றது. (இ-ள்.) படை இயங்கு அரவம் - நிரைகோடற்கு எழுந்த படை பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும், நிரைமீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும்; உ-ம்: வெவ்வாண் மறவர் மிலைச்சிய வெட்சியாற் செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு மார்க்குங் கழலொழி யாங்கட் படாலியரோ போர்க்குந் துடியொடு புக்கு (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு. 1236. நிரைகோடல் 5) அடியதி ரார்ப்பின ராபெயர்த்தற் கன்னாய் கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளார் விறல்வெய்யோர் யாதாங்கொல் வாளார் துடியர்வளம் (புறத்திரட்டு. 1245) இவை கண்டோர் கூற்று. பாக்கத்து விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர் போந்து விட்ட பாக்கத்துக் கங்குலின் நல்வாய்ப்புட் கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போந்தோர் கூறியவற்றை வாய்ப்புள்ளாகக் கேட்டலும்; உ-ம் : திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோ னின்றுரைத்த நற்சொ - னிரையன்றி யெல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால் வல்லைநீர் சென்மின் வழி (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1239) வந்தநீர் காண்மினென்றாபெயர்ப்போர் மாட்டிசைத்த பைந்தொடியார் கூறும் பறவாப்பு - ளுய்ந்த நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை வரையளவைத் தாவதா மண் இவை விரிச்சியை வியந்தன. புடைகெடப் போகிய செலவே - நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டுநின்று மீண்டுபோய்ப் பற்றார் புலத்து ஒற்றல் உணராமற் பிற்றை ஞான்று சேறலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் ஆண்டு ஒற்றப்படாமற்சேறலும்; உ-ம்: பிறர்புல மென்னார் தமர்புல மென்னார் விறல்வெய்யோ ராயிருட்கட் சென்றார் - நிரையுங் கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப் படாஅ முகம்படுத் தாங்கு (பெரும் பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1240. நிரைகோடல் 9) கங்கை பரந்தாங்குக் கானப் பெருங்கவலை யெங்கு மறவ ரிரைத்தெழுந்தார் - தங்கிளைக்கண் மன்றுகாண் வேட்கை மடிசுரப்பவேதோன்றும் கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு. (புறத்திரட்டு. 1246) இவை கண்டோர் கூற்று. புடைகெடப் ஒற்றின் ஆகிய வேயே - நிரைகோடற்கு எழுந்தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ்வொற்று வகையான் அவர் உணர்த்திய குறளைச் சொல்லும், நிரைமீட்டற்கு எழுந்தோர் அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய குறளைச் சொல்லும்; உ-ம்: ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங் கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்குஞ் சரந்தெரிந்துகொண்டு. நெடுநிலை யாயத்து நிரைசுவ டொற்றிப் படுமணி யாயம் பகர்ந்தோய் - நெடிது மனக்குரிய காதல் வயவேந்த னென்று நினைக்குரிய வாக நிரை. இவை கண்டோர் கூற்று. வேய்ப்புறம் முன்றின் ஆகிய புறத்திறை - நிரைகோடற்கு எழுந்தோர் வேயுரைத்தோரிடத்துச் செய்யுஞ் சிறப்புக்கள் முடிந்தபின்னர் உளதாகிய நிரைப்புறத்து ஒடுங்கிய இருக்கைப் பகுதியும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று விரைவொழிந்து இருக்கின்ற இருக்கையும்; உ-ம்: கரந்தியல் காட்டுத்தீப் போலப் பெரிதும் பரந்துசென் மள்ளர் பதிந்தா -ரரந்தை விரிந்தவியுமாறுபோல் விண்டோயத் தோன்றி யெரிந்தவியும் போலுமிவ் வூர். இது கண்டோர் கூற்று. இருநில மருங்கி னெப்பிறப் பாயினு மருவின் மாலையோ வினிதே யிரவி னாகோண் மள்ளரு மருள்வரக் கானத்து நாம்புறத் திறுத்தென மாகத் தாந்தங் கன்றுகுரல் கேட்டன போல நின்றுசெவி யோர்த்தன சென்றுபடு நிரையே. (தகடூர் யாத்திரை. புறத்திரட்டு. 1251. நிரைமீட்சி) இது மறவர் கூற்று. முற்றிய ஊர்கொலை. நிரைகோடற்கு எழுந்தோர் அவர் புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டுநிறை நிரை காவலரைக் கொன்று பகையறுத்தலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் அவ்வூரைவிட்டுச் சிற்றூரைக் காத்துக் கோடலும்; உ-ம்: அரவூர் மதியிற் கரிதூர வீம விரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெறாஅர் கொதித்து. சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண் டிகலுழந்த வல்வில் லிளையோர்புண் டீரத் துகளெழுங்கொல் பல்லான் றொழு. இவை கண்டோர் கூற்று. ஆகோள் - நிரைகோடற்கு எழுந்தோர் எதிர்விலக்குவோர் இலராக நிரையகப்படுத்தி மீட்டலும், நிறைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரையை அற்றமின்றி மீட்டலும்; உ-ம் : கொடுவரி கூடிக் குழுஉக்கொண் டனைத்தா னெடுவரை நீள்வேய் நரலும் - நடுவூர் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற நிணநிரை வேலார் நிலை (புற. வெ. வெட்சி. 9) கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர்க் கருதார் குழாஅந் துரத்து நிரைமீண்ட தோள். (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு. 1247. நிரைமீட்சி. 5) இவை கண்டோர் கூற்று. தொடலைக் கரத்தையெனக் கரத்தை சூடினமை கூறினார். தன்னுறுதொழிலான் நிரைமீட்டலின். இது பொதுவியற் கரந்தையிற் (60) கூறுதும். பூசன் மாற்று - நிரை கொண்டுபோகின்றார் தம் பின்னே உளைத்தற் குரலோடு தொடர்ந்து சென்று ஆற்றிடைப் போர் செய்தோரை மீண்டு பூசலைமாற்றுதலும், நிரையை மீட்டுக் கொண்டு போகின்றார் தம் பின்னர்வந்து போர் செய்தோரை மீண்டு நின்று பூசலை மாற்றுதலும்; உ-ம்: ஒத்த வயவ ரொருங்கவிய நாண்படரத் தத்த மொலியுந் தவிர்ந்தன - வைத்தகன்றார் தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் றாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில் இரவூ ரெறிந்து நிரையொடு பெயர்ந்த வெட்சி மறவர் வீழவு முட்காது கயிறியல் பாவை போல வயிறிரித் துழைக்குரற் குணர்ந்த வளைப்புலி போல முற்படு பூசல் கேட்டனர் பிற்பட நிணமிசை யிழுக்காது தமர்பிண மிடறி நிலங்கெடக் கிடந்த கருந்தலை நடுவண் மாக்கட னெருப்புப் போல நோக்குபு வெஞ்சிலை விடலை வீழ்ந்தன னஞ்சுதக் கன்றாற் செஞ்சோற்று நிலையே. இது கண்டோர் கூற்று. வெட்சிமறவர் வீழ்ந்தமை கேட்டு விடாது பின்வந்தோன் பாடு கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று. நோய் இன்று உய்த்தல் - நிரைகொண்டோர் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாங்கொண்ட நிரையினை இன்புறுத்திக் கொண்டு போதலும், மீட்டோரும் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாம் மீட்ட நிரையினை இன்புறுத்திக்கொண்டு போதலும்; உ-ம்: புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வின்மே லசைஇயகை வெல்கழலான் - றன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும் நெடுவரை நீழ னிரை. (புற.வெ.வெட்சி 11) கல்கெழுசீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத் தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு மள்ளர் நடவா வகை. (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1248. நிரைமீட்சி. 6) இவை கண்டோர் கூற்று. நுவலுழித் தோற்றம் பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத் தற்குக் காரணமான நிரைகொண்டோர் வரவும், ஊரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவும்; உ-ம்: மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லு மையணற் காளை மகிழ்துடி - கையணல் வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட வுய்த்தன்றுவகை யொருங்கு. (புறம். வெ.வெட்சி. 12) காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா மீட்ட மகனை வினவுறா - னோட்டந்து தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு மென்னெதிர்ப் பட்டாயோ வென்று. (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1249 நிரைமீட்சி. 7) இது கண்டோர் கூற்று. தந்து நிரை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம் மூழ்ப்புறத்துத் தந்து நிறுத்தலும், நிரைமீட்டோர் மீட்ட நிரையினைத் தந்து நிறுத்தலும்; உ-ம் : குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங் களிறொடு தேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான மெல்லாம் பெறுக விடம். கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற் போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர் தாமேய் புலம்போலத் தந்து. பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற் பாதீடாயிற்று; வேந்தனேவலாற் றாங்கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும், மீட்டோருந் தத்தநிரையைப் பகுத்துக்கோடலும், நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத்தலும்; உ-ம்: ஒள்வாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற் கூறிட்டார் கொண்ட நிரை யாமே பகுத்திடல் வேண்டா வினநிரை தாமே தமரை யறிந்தனகொ - லேமுற வன்றீன்ற தம்மை யறிந்துகொள் கன்றேய்ப்பச சென்றீண்டு மாங்கவர்பாற் சேர்ந்து. (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1250. நீரைமீட்சி 8) இவற்றுள் முன்னையது கண்டோர் கூற்று; ஏனையது மறவர் கூற்று. உண்டாட்டு - நிரைகொண்டார்தாங்கொண்ட நிரையைப் பார்த்துத் தாங்கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதலும், நிரைமீட்டார் வென்று நிரை மீட்ட கொற்றத்தான் உண்டாடுதலும்; உ-ம் : நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின் பாசுவ லிட்ட புன்காற் பந்தர்ப் புனறரு மிளமண னிறையப் பெய்ம்மி னொன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று நிரையொடு வரூஉ மென்னைக் குழையோர் தன்னிலும் பெருஞ்சா யலரே (புறம். 262) இது புறம். பகைவர் கொண்ட படுமணி யாய மீட்டிவட் டந்த வாட்டிறற் குரிசின் முழவுத் துயின்மறந்த மூதூ ராங்கண் விழவுத் தலைக்கொண்ட விளையாட் டாயத் தூண்சுடு கொழும்புகைக் கருங்கொடி யும்பர் மீன்சுடு புகையின் விசும்புவாய்த் தன்றே கைவல் கம்மியர் பலகூட் டாரமொடு நெய்பிழி நறுவிரை நிலம்பரந்த தன்றே காவிற் காவிற் கணங்கொள் வண்டெனப் பூவிலை மகளிர் புலம்படந் தனரே சந்தியுஞ் சதுக்கமும் பந்தர் போகிய வாடுறு நறவின் சாடி தோறுங் கொள்வினை மாற்றாக் கொடை யொடு கள்விலை யாட்டியுங் கைதூ வாளே. இவை கண்டோர் கூற்று. கொடை - தாங் கொண்ட நிரையை இரவலர்க்கு வரையாது கொடுத்து மனகிழ்தலும், நிரைமீட்டோர்க்கு வென்றிப் பொருட்டு விளைந்த கொடைப்பகுதியும்; உ-ம் : இளமா வெயிற்று யிவைகாணின் னையர் தலைநாளை வேட்டத்துத் தந்த நிரைகள் கொல்லன் றுடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்த முன்றி னிறைந்தன. (சிலப். வேட்டுவவரி) கொடைத்தொழி லெல்லாங் குறைவின்றிப் பண்டே முடித்தன னென்றிருந்த மூத்தோன் - கொடைக்கு வரம்பில னென்றே மருண்டா னிரைகோட் கரந்தையங் கண்ணியாற் கண்டு. இவை கண்டோர் கூற்று. என ஈரேழ் வந்த வகையிற்றாகும் - என்று கூறப்பட்ட பதினான்கும் மீட்டுமொருகால் விதந்த இரு கூற்றையுடைத்தாகும் வெட்சித் திணை எ-று. எனவே ஒன்று இரண்டாய் இருபத்தெட்டாயிற்று. இனித் துறையென முற்கூறினமையின், இது காரியமாக இதற்குக் காரணமாயினவெல்லாம் படையியங்கரவமெனவே படும். அவை இருபெருவேந்தரும் போர்தொடங்குங்காற் பூக்கோளேவி நிரைகோடல் குறித்தோன் படைத்தலைவரைத் தருக வென்றலும், அவர் வேந்தற்கு உரைத்தலும், அவர் படையைக் கூஉய் அறிவித்தலும், படைச் செருக்கும், அதனைக் கண்டோர் கூறலும், அவர் பகைப்புலக் கேட்டிற்கு இரங்கி வருந்தலும், நாட்கோடலும், அவர் கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும் பிறவுமாம். களவிற் செல்வோர்க்கும் அரவங்கூறினார், அவர் பாக்கத்தே தங்கி விரிச்சிபெற்றுப் போதலின். அவற்றுட் சில வருமாறு:- கடிமனைச் சீறூர்க் கருங்கட் கறவை வடிநவில் வேலோன் மறுத்தோம்ப லோட்டா னடிபுனை தோலி னரண்சேர்ந்து மள்ளர் வருகமன் வாயிற் கடை. இது படைத்தலைவர் படையாளரைக் கூயினது. வாள்வலம் பெற்ற வயவேந்த னேவலாற் நாள்வ லிளையவர் தாஞ்செல்லி - னாளைக் கனைகுர னல்லாத்தன் கன்றுள்ளப் பாலா னனைவது போலுநம் மூர். (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1237. நிரைகோடல். 6) இது படைச்செருக்கு; கண்டோர் கூறியது. வந்த நிரையி னிருப்பு மணியுட னெந்தலை நின்றலை யாந்தருது - முந்துநீ மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொள்ளவை கொற்றங் கொடு. (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு 1238. நிரைகோடல் 7) இது தெய்வத்திற்குப் பராஅயது; பிறவும் வருவனவெல்லாம் இதனான் அடக்குக. இனிப் பாக்கத்து விரிச்சிக்குக் காரணங்களாவன; பாக்கத்துச் சென்றுழி இருப்புவகுத்தலும், பண்டத்தொடு வல்சி ஏற்றிச் சென்றோரை விடுத்தலும், விரிச்சி வேண்டாமென விலக்கிய வீரக்குறிப்பும், விரிச்சிக்கு வேண்டும் நெல்லும் மலரும் முதலியன தருதலும், பிற நிமித்தப் பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தலும் பிறவுமாம். உ-ம் : நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ டெங்கோ னேயின னாதாலின் யாமத்துச் செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய் மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப விரிச்சி யோர்த்தல் வேண்டா வெயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே. (தகடூர்யாத்திரை, புறத்திரட்டு. 1241. நிரைகோடல் 10) இது விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு; பிறவும் வந்துழிக் காண்க. அரசன் ஏவலாற்போந்தோரும் விரிச்சி கேட்டார், இன்ன ஞான்று வினைவாய்க்குமென்று அறிதற்கு. இனி வேய்க்குக் காரணங்களாவன: வேய்கூறினார்க்குச் சிறப்புச் செய்தல் போல்வன. உ-ம் : மாற்றருந் துப்பின் வயவேந்த னல்லனே யேற்ற பெருஞ்சிறப் பின்றீதும் - வேற்றூரிற் புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி நல்வே யுரைத்தார்க்கு நாம். என வரும். இனி ஏனைய ஒன்று பலவாய்த் துறைப்பாற் படுவன வந்துழிக் காண்க. இங்ஙனம் புறத்திணைக்குச் சிறுவரவிற்றாதலின் அன்றே பாடல் சான்ற புலனெறி வழக்கமென்று (தொல்.பொ.அகத். 53) அகத்திற்குக் கூறியது. நிரைமீட்குங்கால் அறிந்தார் அறிந்தவாற்றானே விரைந்து சென்று மீட்பாராதலின் அரசனை உணர்த்தாதே மீட்டல் பெறுதும். இவற்றிற்குந் துறைப்பகுதி கொள்க. (3) இவையும் வெட்சித்திணை ஆதல் 59. மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையு மத்திணைப் புறனே. இவையும் வெட்சித்திணையா மென்கின்றது. (இ-ள்.) மறங்கடைக் கூட்டியதுடிநிலை - போர்க்களத்து மறவரது மறத்தினைக் கடைக்கூட்டிய நிலையும்; சிறந்த கொற்றவை நிலையும் - அத்தொழிற்குச் சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும்; அத்திணைப்புறனே - அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையாம் எ-று. நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு மொத்திலங்க மெய்பூசி யோர்ந்துடீஇத் - தத்தந் துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர் குடிநிரை பாராட்டக் கொண்டு. இஃது இருவகை வெட்சிக்கும் பொது, நிரை கொண்டோர்க்கும் மீட்டோர்க்கும் துடிகொட்டிச் சேறலொத்தலின். அருமைத் தலைத்தரு மானிரையு ளையை யெருமைப் பலிகோளியைந்தா - ளரசனும் வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென் றியாந்தன்மேற் சீறாம லின்று. இதனானே வருகின்ற வஞ்சித்திணைக்குங் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்கு கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற்செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடு வராதலின். இனிக் கொற்றவைநிலைப் பகுதியுட் சில வருமாறு:- நச்சிலைவேற் காளைக்கு நாளையே கொற்றவை கைச்சிலையு நல்கும்யாங் காணேங்கொல் - மிச்சில்கூர் வாளின்வாய்த் தீண்டாத வார்குருதி மெய்சாய்ப்பத் தாளின்வாய் வீழ்த்தான் றலை. இஃது உயிர்ப்பலி; இது பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. ஆடிப்பண் பாடி யளவின்றிக் கொற்றவை பாடினி பாடற் படுத்துவந்தா - ணாடிய தோளுழலை யாடுவோன் றோளினுந் தூக்கமைத்த தாளுழலை யாடுவோன் றாள். இது குருதிப்பலி; பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. புறத்திணை வழுஏழ் ஆவன 60. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும், உறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே யாரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் வாடா வள்ளி வயவ ரேத்திய ஓடாக் கழனிலை உளப்பட ஓடா உடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையும் மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் ஆரமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலுஞ் சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலுந் தலைத்தா னெடுமொழி தன்னொடு புணர்த்தலும் அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும் வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட பிள்ளை நிலையும் வாள்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற் கருளிய பிள்ளை யாட்டுங் காட்சி கால்கோ ணீர்ப்படை நடுதல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்று இதுமூன்று வகையிற் கல்லொடு புணரச் சொல்லப்பட்ட வெழுமூன்று துறைத்தே. இது முன் இருபெருவேந்தர்க்கும் போர்செயத் தொடங்குதற்குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக் கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துத னுதலிற்று; இவை வேத்தியலின் தன்னுறு தொழிலாய் வருதலின் வழுவாயின. இவை அகத்திற்கும் புறத்திற்கும் உரியவாய் வருவனவும், புறத்திற் கெல்லாம் பொதுவாய் வருவனவு மாதலிற் பொதுவியலுமாயின. (இ-ள்.) வெறி அறி சிறப்பின் - தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களை அறியுஞ் சிறப்பினையும்; வெவ்வாய் வேலன் - உயிர்க்கொலை கூறலின் வெவ்வாயினையும் உடையனாகிய வேலன்; வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - தெய்வமேறி யாடுதலைச் செய்த காந்தளும்; செவ்வேள்வேலைத் தான் ஏந்திநிற்றலின் வேலனென்றார். காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென்றார். வேலனைக் கூறினமையிற் கணிக்காரியையுங் கொள். காந்தளை யுடைமையானும் பனந்தோடு உடைமையானும் மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்ட யர்ந்த என்றதனானும் வேலன் ஆடுதலே பெரும்பான்மை; ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை என்றுணர்க. உ-ம் : அமரகத்துத் தன்னை மறந்தாடி யாங்குத் தமரகத்துத் தன்மறந் தாடுங் - குமரன்முன் கார்க்காடு நாறுங் களனிழைத்துக் காரிகையா ரேர்க்காடுங் காளை யிவன். இது சிறப்பறியா மகளிராடுதலிற் புறனாயிற்று; வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது. உ-ம் : அணங்குடை நெடுவரை யுச்சியின் இழிதருங் கனங்கொள் அருவிக் கான்கெழு நாடன் மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல் இதுவென அறியா மறுவரற் பொழுதில் படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடுவேட் பேணத் தணிகுவள இவளென முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூறக் களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள் ஆரநாற வருவிடர்த் ததைந்த சாரற் பல்பூ வண்டுபடச் சூடிக் களிற்றிரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்தியங்கு மரபின் வயப்புலி போல நன்மனை நெடுநகர்க் காவலர் அறியாமைத் தன்னசை யுள்ளத்து நன்னசை வாய்ப்ப இன்னுயிர் குழைய முயங்குதொறு மெய்ம்மலிந்து நக்கனெ னல்லனோ யானே யெய்த்த நோய்தணி காதலர் வரவீண் டேதில் வேலற் குலந்தமை கண்டே. (அகம். 22) பனிவரை நிவந்த என்னும் (அகம். 98) பாட்டும் அது. இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரை யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின் வெறி யாடிய காந்தள் அகத்திற்கு வந்தது, இது வேத்தியற் கூத்தன்றிக் கருங்கூத்தாதலின் வழுவுமாய் அகத்திற்கும் புறத்திற்கும் பொது வாதலிற் பொதுவியலு மாயிற்று. வேலன் றைஇய வெறியயர் களனும் (பத்து. முருகு. 222) என்றாற் போலச் சிறப்பறியும் வேலன் தானே ஆடுதலுஞ் சிறுபான்மை புறத்திற்குங் கொள்க. மாவரும் புகழ் ஏந்தும் பெருந் தானையர் - மாமுதலியன வற்றான் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும்படையாளர்; உறு பகை வேந்திடை தெரிதல் வேண்டிப் போந்தை வேம்பே ஆர் என மலைந்த பூவும் - அப்புகழ்தான் உறும்பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டிப் போந்தை வேம்பு ஆரென்று கூறிச் சூடின பூவும்; இதன் கருத்து, ஏழகத்தரும் யானையும் நாயும் கோழியும் ழும் வட்டும் வல்லுஞ் சொல்லும் முதலியவற்றான் தமக்கு வரும் வெற்றிப் புகழைத் தாம் எய்துதற்குச் தத்தம் வேந்தர் அறியாமற் படைத்தலைவர் தம்முண் மாறாய் வென்று ஆடுங்கால் இன்ன அரசன் படையாளர் வென்றாரென்றதற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர் என்பதூஉம், அக்கூத்தும் வேத்தியற் கூத்தின் வழீஇயின கருங்கூத் தென்பதூஉம், அது தன்னுறு தொழிலென்பதூஉம் உணர்த்தியதாம். இதனை இங்ஙனந் தன்னுறு தொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது தும்பையாம். புழ்ந்து கூறிற்றெனிற் பாடாண்டிணையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக்கூத்திற்கும் இடையே இதனை வைத்தது இக்கருத்தானே யென்றுணர்க. உ-ம் : ஏழக மேற்கொண் டிளையோ னிகல்வென்றான் வேழ மிவனேற வேந்துளவோ - வேழுலகுந் தாந்தயங்கு நாகந் தலைதயங்க வாடாமோ போந்தையங் கண்ணி புனைந்து. இது போந்தை மலைந்தாடியது. குறும்பூழ்ப்போர் கையெறிந்து கொற்றம் பெறுத லிறும்பூதென் றியாமாடல் வேண்டா - செறுங்கோன் குலமதிக்கு மாறறியிற் கொற்றவன் வேம்பு தலைமலையற் பாலதூஉ மன்று. இது வேம்பு தலைமலைந்தாடியது. ஆர்வேய்ந்த கோலத்தோ டாடுவர் பாடுவர் போர்வேந்தர் பெற்றநாள் போன்றுவப்பர் - சீர்சால் பறைகெழு வாரணப்போர் பண்டிகழ்ந்தோ ரின்று சிறைகெழு வாரணப்போர் செய்து. இஃது ஆர்மலைந்தாடியது இவை தன்னுறு தொழிலாயவாறு காண்க. வாடா வள்ளி - வாடுங் கொடியல்லாத வள்ளிக் கூத்தும்; அஃது இழிந்தோர் காணுங் கூத்து. உ-ம் : மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக் கண்ட முருகனுங் கண்களித்தான் - பண்டே குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப் பிறமக ணோற்றாள் பெரிது இது பெண்பாற்குப் பெருவரலிற்று. இதனைப் பிற்கூறினார், வெறியறி சிறப்பன்மையும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவா தல்லது அகத்திணைக்கண் வந்து பொதுவாகாமையும் பற்றி. வயவர் ஏத்திய ஓடாக் கழனிலை உளப்பட - முன்பு கழல் கால் யாத்த யவீரர் இளமைப் பருவத்தானொருவன் களத்திடை ஓடாது நின்றமை கண்டு அவனைப் புகழ்ந்து அவற்குக் கட்டிய கழனிலைத் கூத்து. ஓடாமையாற் கட்டின கழல், ஏத்திய நிலையாற் கட்டின கழல், இது வள்ளிப்பின் வைத்தலின் இருபாலாரும் ஆடுதல் கொள்க. கொடி முதலியன அவனை வியந்து கொடுத்தல் அத்துறைப் பகுதியாம். உ-ம் : மீளாது பெற்ற விறற்கழலோன் வாளாட்டின் வாளாடு கூத்திவந் தாடினாள் - வாளாட்டின் மண்ணாளு மன்னரே பெண்ணாவார் வண்மைக்குப் பெண்ணாடின் யாதாம் பிற ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்னநிலையும் - பிறக்கடியிடா உடன்ற வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உன்ன நிலையும்; என்றது, வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன், வேந்தற்கு நீ வென்றி கொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வலெனப் பரவுதலும், எம்வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு பொதுளுக எனவும் பகைவேந்தற்கு ஆக்கம் உளதெனில் அக்கோடு படுவதாக எனவும் நிமித்தங் கோடாலும், என விருவகைத் தெய்வத் தன்மை; அஃதுடை மையான் அடுக்கிய உன்ன நிலையுமென்றார். உ-ம் : துயிலின் கூந்தற் றோளினைப் பேதை வெயினிழ லொழிய வெஞ்சுரம் படர்ந்து செய்பொருட் டிறவீராகிய நும்வயி னெனக்கொன்று மொழியின ளாகத் தனக்கே யருநகை தோன்றிய வழுகுரற் கிளவியள் கலுழ்கண் கரந்தனடானே யினியே மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇத் தலைசாய்த் திருத்த சிலைவலம் போற்றி வேந்து வழக்கறுத்த கான நீந்த லொல்லுமோ பூந்தொடி யொழிந்தே இதனுள், மன்னவற் பராஅய் முன்னியது முடித்தோ ருன்னஞ் சிறக்கு மொள்வினை நினைஇ என்றது, வேந்தனைப் பரவுக்கடனாக அடுக்கிய உன்னநிலை. முன்னங் குழையவுங் கோடெலா மொய்தளிரீன் றன்னங் குழையொலித் தோங்குவாய் - மன்னரைக் கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை வென்று களங் கொள்ளுமேல் வேத்து. இவை மறவர் செய்தலிற் றன்னுறு தொழிலாம். பொன்னின் அன்ன பூவின் சிறியாலைப் புன்கால் உள்ளத்துப் பகைவன் எங்கோ (பதிற்.6) என்பதும் அது. இரண்டு நிலையாற் பொதுவுமாயிற்று. மன்னவன் வெற்றியே கருதாது இங்ஙனம் இருநிலைமையுங் கருதலின் வழுவு மாயிற்று. மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவைநிலையும் என்றது; மாயோன் விழுப்புகழ் - மாயனுடைய காத்தற் புகழையும், மேயபெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ் - ஏனோர்க்கு உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்தலென்னும் புகழ்களையும்; மன்பூவை நிலையும் மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலையும்; என்றது ஒன்றனை ஒன்றுபோற் கூறுந்துறை. மன் எனப் பொதுப்படக் கூறியவதனான் நெடுநிலமன்னர்க்குங் குறுநில மன்னர் முதலியோர்க்குங் கொள்க. பெருஞ்சிறப்பு என்றதனான் படைத்தலுங் காத்தலும் அழித்தலுமன்றி அவரவர் தாமாகக் கூறலும், முருகன் இந்திரன் முதலியோராகக் கூறலுங் கொள்க. உ-ம் : ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனுங் கடல்வளர் புரிவளை புரையுமேனி யடல்வேந் நாஞ்சிற பனைக்கொடி யோனு மண்ணுறு திருமணி புரையு மேனி விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனு மணிமயி லுயரிய மாறா வென்றிப் பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென ஞாலங் காக்குங் கால முன்பிற் றோலா நல்லிசை நால்வ ருள்ளுங் கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம் வலியொத் தீயே வாலி யோனைப் புகழுத் தீயே யிகழுந ரடுநனை முருகொத் தீயே முன்னியது முடித்தலி னாங்காங் கவரவ ரொத்தலின் யாங்கு மரியவு முளவோ நினக்கே............. (புறம். 56) என இதனுள் அங்ஙனம் உவமித்தவாறு காண்க. குருந்த மொசித்தஞான் றுண்டா லதனைக் கரந்த படியெமக்குக் காட்டாய் - மரம்பெறாப் போற்பிற் குருகுறங்கும் பூம்பின னீர்நாட மாற்பிற் கிடந்த மறு இது சோழனை மாயோனாகக் கூறிற்று. ஏற்றூர்தி யானு மிகல்வெம்போர் வானவனு மாற்றலு மாள்வினையு மொத்தொன்றி னொவ்வாறே கூற்றக் கணிச்சியோன் கண்மூன் றிரண்டேயா மாற்றல்சால் வானவன் கண் இது சேரனை அரனாகக் கூறிற்று. இந்திர னென்னி னிரண்டேக னேறூர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை - யந்தரத்துக் கோழியா னென்னின் முகனொன்றே கோதையை யாழியா னென்றுணரற் பாற்று இது சேரனைப் பல தேவராகக் கூறிற்று. கோவா மலையாரங் கோத்த.... (சிலப். ஆய்ச். உள்வரி) முந்நீரி னுள்புக்கு மூவாக்........ (சிலப். ஆய்ச். உள்வரி) பொன்னிமயக் கோட்டுப் புலி... (சிலப். ஆய்ச். உள்வரி) என்பனவும் அவை. தாமரைக் கண்ணியைத் தண்ணறுஞ் சாந்தினை ...... சிறுகுடி யோரே (கலி. 52) இஃது உரிப்பொருட் டலைவனை முருகனாகக் கூறியது. இங்ஙனம் புறத்தும் அகத்தும் வருதலிற் பொதுவாயிற்று. இறப்ப உயர்ந்த தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின் வழுவுமாயிற்று. தாவா என்றதனானே அரசர்புகழைக் காட்டுவாழ்வோர்க்குக் கூறுதலும், அவரை அரசர் பெயராற் கூறுதலுங் கொள்க. வீங்குசெலற் பரிதி வெவ்வெயி லெறித்தலி னாங்க ணோக்கா தாங்கு நீபோ யரசுநுகம் பூண்ட பின்னர் நின்னிலை முரசுடை வேந்தர் முகந்திரிந் தனரே யஃதான் றுவவுமதி நோக்குநர் போலப் பாணரொடு வயிரியர் பொருநர்நின் பதிநோக் கினரே யதனா னதளுங் கோடு முதலிய கூட்டுண் டிகலி னிசைமேஎந் தோன்றிப் பலவா கியநில நீபெறு நாளே இது முடியுங் குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித்துக் கூறியும் புகழ்மிகுத்தது. பல்லிதழ் மென்மலர் என்னும் (109) அகப்பாட்டினுள் அறனில் வேந்த னாளும், வறனுறு குன்றம் பலவிலங் கினவே எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினார். ஆர் அமர் ஓட்டலும் - குறுநில மன்னருங் காட்டகத்து வாழும் மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங்காண்டலும்; உ-ம் : பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின் மினேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ் நன்மை நிறைந்த நயவரு பாண சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம் வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே வேந்துடன் றெறிந்த வேலே யென்னை சாந்தா ரகல முளங்கழிந் தன்றே யுளங்கிழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிற லோச்சினன் றுரந்த காலை மற்றவன் புன்றலை மடப்பிடி நாணக் குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே (புறம். 308) இது சீறூர் மன்னன் வேந்தனைப் புறங்கண்டது. கள்ளின் வாழ்த்திக் கள்னின் வாழ்த்திக் காட்டொடு மிடைந்த சீயா முன்றி னாட்செருக் கனந்தர்த் துஞ்சு வோனே யவனெம் மிறைவன் யாமவன் பாணர் நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் னிரும்புடைப் பழவாள் வைத்தன னின்றிக் கருங்கோட்டுச் சீறியாழ் பணைய மிதுகொண் டீவதி லாள னென்னாது நீயும் நின் வள்ளி மருங்குல் வயங்கிழை யணியக் கள்ளுடைக் கலத்தேம் யாமகிழ் தூங்கச் சென்றுவாய் சிவந்து மேல்வருக சிறுகண் யானை வேந்துவிழு முறவே (புறம். 316) இது மறவன் ஆரமரோட்டல் கூறியது. இவை தன்னுறுதொழில் கூறியன. இவை புறம். ஆரமரோட்ட லென்பது பொதுப்படக் கூறவே, வேந்தர்க்கு உதவியாகச் செல்வோரையுங் கொள்க. உ-ம் : வெருக்குவிடை யன்ன வெருணோக்குக் கயந்தலைப் புள்ளூன் றின்ற புலவுநாறு கயவாய் வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் சிறியிலை யுடையின் கரையுடை வான்முள் ளுகநுண்கோற் செறித்த வம்பின் வலாஅர் வல்விற் குலாவரத் கோலிப் பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புலந்த தழீஇய வங்குடி சீறூர்க் குமிழுண் வெள்ளை பகுவாய் பெயர்த்த வெண்காழ் தாய வண்காற் பந்த ரிடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப் பாணரோ டிருந்த நாணுடை நெடுந்தகை வலம்படு தானை வேந்தற் குலந்துழி யுலக்கு நெஞ்சறி துணையே (புறம். 324) இது புறம். வேந்தற்குத் துணையாகச் செல்வோரைக் கூறியது. இணைப்படைத் தானையரசோ டுறினுங் கணைத்தொடை நாணுங் கடுந்துடி யார்ப்பி னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை னெருத்து வலிய வெறுழ்நோக் கிரலை மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ் தாடி யுருத்த கடுஞ்சினத் தோடா மறவர் (கலி. 15) எனக் கலிஅகத்தும் வந்தது. வயங்குமணி பொருத என்னும் (197) அகப்பாட்டினுள் சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந் ததர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர். (அகம். 167) எனச் சாத்தெறிதலும் அது - இங்ஙனம் பொதுவாதலிற் பொது வியலாயிற்று. வேந்தரொடு பொருதலின் வழுவுமாயிற்று. ஆ பெயர்த்துத் தருதலும். வெட்சிமறவர் கொண்ட நிரையைக் குறுநிலமன்னராயினுங் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத்தருதலும்; உ-ம் : ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்த திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ள முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெளிக்கு மான்மேற் புடையிலங் கொள்வாட புனைகழ லோயே (புறம். 259) இது குறுநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது. வளரத் தொடினும் வௌவுபு திரிந்து விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத் தளரு நெஞ்சந் தலைஇ மனையோள் உளருங் கூந்த னோக்கிக் களர கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக் காணலென் கொல்லென வினவினை வரூஉம் பாண கேண்மதி யாணரது நிலையே புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந் தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டுங் கையுள போலுங் கடிதன் மையவே முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர் நெடுநிரை தழீஇய மீளி யாளர் விடுகணை நீத்தந் துடிபுணை யாக வென்றி தந்து கொன்று கோள் விடுத்து வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லா னிரையொடு வந்த வுரைய னாகி யுரிகளை யரவின் மானத் தானே யரிதுசெ லுலகிற் சென்றன னுடம்பே கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கி விலக்கம் போல அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே உயரிசை வெறுப்பத் தோன்றிப் பெயரே மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி யிடம்பிறர் கொள்ளாச் சிறுநெறிப் படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே (புறம். 260) இதனுள் தன்னூறென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப்பட்ட நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. இனிக் கண்டோரும் மறவருங் கூத்தரும் பாணரும் விறலியருங் கூறினும், அவர்தாம் கையற்றுக் கூறினும், அத்துறைப் பாற்படும். உ-ம் : பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண் இரும்பறை யிரவல சேறி யாயிற் றொழாதனை கழித லோம்புமதி வழாஅது வண்டுமேம் படூஉம் வறநிலை யாறே பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து கல்லா மறவர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே (புறம். 263) இது கண்டோர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. விசும்புற நிவந்த என்னும் (131) அகப்பாட்டும் அது. இதனுள் மறவர் நாளாவுய்த்த என வேந்துறு தொழில் அல்லாத வெட்சித்திணையும் பொதுவியற் கரந்தைக்கண்ணே கொள்க; இஃது ஏழற்கும் பொதுவாகலின். தருதலென்ற மிகையானே நிரையல்லாத கோடலும் அத்துறைப் பாற்படும். வலஞ்சுரி மராஅத்து (அகம். 83) என்னுங் களிற்றியானை நிரையுள், கறையடி மடப்பிடி கானத் தலறக் களிற்றுக்கன் றொழித்த வுவகையர் கலிசிறந்து கருங்கால் மரா அத்துக் கொழுங்கொம்பு பிளந்து பெரும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர் நறவுநொடை நல்லிற் புதவுமுதற் பிணிக்குங் கல்லா இளையர் பெருமகன் புல்லி என யானைக்கன்றைக் கவர்ந்தவாறு காண்க. இதுவும் வேத்தியலின் வழீஇயினவாறு காண்க. வேந்தன் சீர் சால் சிறப்பு எடுத்து உரைத்தலும். வேந்தற்கு உரிய புகழ் அமைந்த தலைமைகளை ஒருவற்கு உரியவாக அவன்றன் படையாளரும் பிறரும் கூறலும்; இதுவும் வழு, வேந்தர்க் குரிய புகழைப் பிறர்க்குக் கூறினமையின். அத்த நண்ணிய நாடுகெழு பெருவிறல் கைப்பொருள் யாதொன்று மிலனேநச்சிக் காணிய சென்ற இரவன் மாக்கள் களிற்றொடு நெடுந்தேர் வேண்டினுங் கடல வுப்பொய் சாகாட் டுமணர் காட்டக் கழிமுரி குன்றத் தற்றே யெள்ளமை வின்றவ னுள்ளிய பொருளே (புறம். 313) இது புறம். படையாளர் கூற்று. இதற்கு முடியுடை வேந்தன் சிறப்பெடுத்துரைத்தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகா தென்றுணர்க. தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும். தன்னிடத் துளதாகிய போர்த்தொழிலின் முயற்சியானே வஞ்சினங்களைத் தன்னொடு கூட்டிக் கூறலும்; உ-ம் : தானால் விலங்காற் றனித்தாற் பிறன்வரைத்தால் யானை யெறித லிளிவரவால் - யானை யொருகை யுடைய தெறிவலோ யானு மிருகை சுமந்துவாழ் வேன் என வரும். பெருநீர் மேவற் றண்ணடை யெருமை யிருமருப் புறழு நெடுமா நெற்றின் பைம்பய றுதிர்த்த கோதின் கோலணைக் கன்றுடை மரையா துஞ்சுஞ் சீறூர்க் கோளிவண் வேண்டேம் புரவே நாரரி நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தித் துறைநனி கெழீஇயக் கம்பு னீனுந் தண்ணடை பெறுதலு முரித்தே வைந்நுதி நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே (புறம். 297) மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழி தன்னொடு புணர்த்தவாறு காண்க. சீறூர் புரவாகக் கொள்ளேன்; தண்ணடை கொள்வேனெனத் தன்னுறுதொழில் கூறினான். இதுவும் பொது - புறம். வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட பிள்ளைநிலையும். தன்மேல் வருங் கொடிப் படையினைத் தானே தாங்குதல், வாட்டொழிலிற் பொய்த்தலின்றி மாற்றோரைக் கொன்று தானும் வீழ்தலென இரண்டு கூறுபட்ட - போரிற் சென்றறியாத மறமக்கள் தாமே செய்யுந் தறுகணாண்மையும்; வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத்தலைவரு மாகிய இளையர் செய்யினும் தன்னுறு தொழிலாதலிற் கரந்தையாம்; தும்பையாகாதென்று உணர்க. உ-ம் : ஏற்றெறிந்தார் தார்தாங்கி வெல்வருகென் றேவினாள் கூற்றினுந் தாயே கொடியளே - போர்க்களிறு காணா விளமையாற் கண்டிவனோ நின்றிலனேன் மாணாருள் யார்பிழைப்பார் மற்று இது வருதார் தாங்கல். ஆடும் பொழுதி னறுகயிற்றுப் பாவைபோல் வீடுஞ் சிறுவன்றாய் மெய்ம்மகிழ்ந்தாள் - வீடுவோன் வாள்வாயின் வீழ்ந்த மறவர்தந் தாயரே கேளா வழுதார் கிடந்து இது வாள் வாய்த்துக் கவிழ்தல். கெடுக சிந்தை கடிதிவ டுணிவே என்னும் (279) புறப்பாட்டும் இதன்பாற் படும். இவை தன்னுறுதொழில். போரிற் சென்றறியாதவன் சேறலின் வழு. வாண்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கு அருளிய பிள்ளையாட்டும் - வாளாற் பொருது உயர்ந்த அரசிளங் குமரனை அந் நாட்டிலுள்ளார் கொண்டு வந்து பறை தூங்கிசையாக ஒலிக்கும்படி அவற்கு அரசுகொடுத்த பிள்ளைப் பருவத்தோனைக் கொண்டாடிய ஆட்டும்; இதுவும் நாட்டிலுள்ளார் கொடுத்தலிற் றன்னுறுதொழி லாய் வழுவுமாயிற்று. உ-ம் : வன்கண் மறமன்னன் வாண் மலைந்து மேம்பட்ட புன்றலை யொள்வாட் புதல்வற்கண் - டன்புற்றுக் கான்கெழு நாடு கொடுத்தார் கருதார்க்கு வான்கெழு நாடு வர என வரும். இதனைப் பிள்ளைத்தன்மையினின்று பெயர்த்தலிற் பிள்ளைப் பெயர்ச்சியு மென்ப. அனைக்குரி மரபிற் கரநதையும் - ஆரம ரோட்டல் முதலிய ஏழுதுறைக்கும் உரிய மரபினையுடைய கரந்தையும்; கரந்தையாவது தன்னுறு தொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின் வெட்சித்திணை போல ஒழுக்கமன்று. அந்தோவெந்தை என்னுளம் (261) புறப்பாட்டினுள், நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை விரகறி யாளர் மரபிற் சூட்டி நிரையிவட்ட டந்து எ-று காண்க. அது அன்றி - அக் கரந்தையே அன்றி; காட்சி - கல்கெழு சுரத்திற் சென்று கற்காண்டலும், அது கொணர்ந்து செய்வன செய்து நாட்டிப், பின்னர்க் கற்காண்டலும் என இருவகையாம். உ-ம் : தாழி கவிப்பத் தவஞ்செய்வர் மண்ணாக வாழிய நோற்றனை மால்வரை யாழிசூழ் மண்டல மாற்றா மறப்புகழோன் சீர்பொறிப்பக் கண்டனெ னின்மாட்டோர் கல் இது கல் ஆராய்கின்றார் காட்சி. ஊர்நனி யிறந்த பார்முதிர் பறந்தலை யோங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீ போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்துப் பல்லான் கோவலர் படலை சூட்டக் கல்லா யினையே கடுமான் றோன்றல் வானேறு புரையுறுநின் றாணிழல் வாழ்க்கைப் பரிசிலர் செல்வ மன்றியும் விரிதார்க் கடும்பகட் டியானை வேந்த ரொடுங்கா வென்றியு நின்னொடு செலவே (புறம். 265) இது கோவலர் படலைசூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது. கல்லாயு மேறெதிர்ந்து காண்டற் கெளிவந்த வல்லான் படலைக்கு வம்மினோ - வெல்புகழாற் சீரியல் பாடல் சிதையாமல் யாம்பாடத் தூரிய மெல்லாந் தொட என்பதும் அது. கால்கோள் - கல்லுறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும், நாட்டிய பின்னர் அவன் ஆண்டுவருதற்குக் கால்கோடலும் என இரு வகையாம்; உ-ம் : வரையறை சூழ்கிடக்கை மாத்தாட் பெருங்கல் வரையறை செய்யிய வம்மோ வரையறை வாராப் பெரும்புகழ் வல்வேல் விடலைக்கு மோறாற்றாற் செய்வ துடைத்து இது வரையறை செய்யிய வம்மோ என ஒருவனைத் தெய்வமாக நிறுத்துதற்கு இடங்கொள்ளப்பட்டமையானும், அவ்விடத்துக் கால் கோடலானுங் கால்கோள். காப்பு நூல் யாத்துக் கடிகமழ் நீராட்டிப் பூப்பலி பெய்து புகைகொளீஇ - மீப்படர்ந்த காளை நடுகற் சிறப்பயர்ந்து கால்கொண்மி னாளை வரக்கடவ நாள் இது நட்டுக் கால் கொண்டது. இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப் புடைநடு கல்லி னாட்பலி யூட்டி நன்னீ ராட்டி நெய்ந்நறைக் கொளீஇய மங்குன் மாப்புகை மறுகுடன் கமழு மருமுனை யிருக்கைத் தாயினும் வரிமிடற் றரவுறை புற்றத் தற்றே நாளும் புரவலர் புன்க ணோக்கா திரவலர்க் கருகா தீயும் வண்மை யுரைசா னெடுந்தகை யோம்பு மூரே (புறம். 329) இதன் கண்ணும் அது வந்தவாறு காண்க. நீர்ப்படை - கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டியவழி நீராட்டுதலு மென இருவகையாம்; உ-ம் : வாளமர் வீழ்ந்த மறவோன்கல் லீர்த்தொழுக்கிக் கேளி ரடையக் கிளர்ந்தெழுந்து - நீள்விசும்பிற் கார்ப்படுத்த வல்வேறு போலக் கழலோன்க னீர்ப்படுத்தார் கண்ணீரி னின்று இது நீர்ப்படை. பல்லா பெயர்த்து நல்வழிப் படர்ந்தோன் கல்சொரிந் தாட்டிய நீரே தொல்லை வான்வழங்கு நீரினுந் தூய்தே யதனாற் கண்ணீரருவியுங் கழீஇத் தெண்ணீ ராடுமின் றீர்த்தமா மதுவே. இது நாட்டி நீராட்டியது. நடுதல் - கல்லினை நடுதலும், அக் கல்லின்கண் மறவனை நடுதலுமென இருவகையாம்; உ-ம் : சீர்த்த துகளிற்றாய்த் தெய்வச் சிறப்பெய்த நீர்ப்படுத் தற்கு நிலைகுறித்துப் - போர்க்களத்து மன்னட்ட வென்றி மறவோன் பெயர்பொறித்துக் கன்னட்டார் கல்சூழ் கடத்து. இது கல் நாட்டியது. கோள்வாய்த்த சீயம்போற் கொற்றவர்தம் மாவெறிந்து வாள்வாய்த்து வீழ்ந்த மறவேலோய் - நாள்வாய்த் திடைகொள லின்றி யெழுத்துடைக் கல்வாய் மடைகொளல் வேண்டும் மகிழ்ந்து. இது மறவனை நாட்டியது. சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை - அவன் செய்த புகழைத் தகும்படி பொறித்தலும், அக்கல்லைத் தெய்வமாகி அதற்குப் பெருஞ் சிறப்புக்களைப் படைத்தலுமென இருவகையாம். உ-ம் : கைவினை மாக்கள் கலுழக்க ணோக்கிழந்து செய்வினை வாய்ப்பவே செய்தமைத்தார் - மொய்போர் மறவர் பிணம்பிறக்கி வாள்வாய்த்து வீழ்ந்தோன் பிறபெயர்சூழ் கன்மேற் பெரிது. இது பெயர் முதலியன பொறித்தது. அன்றுகொ ளாபெயர்த் தாரமரில் வீழ்ந்தோன்கற் கின்றுகொள் பல்லா னினமெல்லாங் - குன்றாமற் செய்ம்மினோ சீர்ப்பச் சிறப்பாகத் தீபங்கள் வைம்மினோ பீடம் வகுத்து. இஃது அதற்குச் சிறப்புப் படைத்தது. வாழ்த்தல் - கால் கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்து வாழ்த்தலும், பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்தலு மென இருவகையாம். உ-ம் : ஆவாழ் குழக்கன்றுய் வித்துக் களத்தவிந்த நீவாழ வாழிய நின்னடுக - லோவாத விற்கோட்ட நீண்டதோள் வேந்தன் புலிபொறித்த பொற்கோட் டிமயமே போன்று. இது கல்வாழத்து பெருங்களிற் றடியின் என்று (263) புறப்பாட்டில் தொழாதனை கழித லோம்புமதி என வாழ்த்தியவாறு காண்க. என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர. என்று முன்னர்க் கூறப்பட்ட அறுவகை இலக்கணத்தையுடைய கல்லொடு பின்னரும் அறுவகை இலக்கணத்தையுடைய கற்கூடச் சொல்லப்பட்ட - இக்கூறப்பட்ட பொதுவியல்; எழு மூன்று துறைத்து. இருபத்தொரு துறையினையுடைத்து எ-று. ஆரம ரோட்டன் முதலிய எழுதுறைக்குரிய மரபினை யுடைய கரந்தையும், அக் கரத்தையே யன்றி முற்கூறிய கல்லோடே பிற்கூறிய கல்லுங் கூடக் காந்தளும் பூவும் வள்ளியுங் கழனிலையும் உன்னநிலையும் பூவைநிலையும் உளப்பட இச்சொல்லப்பட்ட பொதுவியல் இருபத்தொரு துறையினை யுடைத்தெனக் கூட்டுக. மாயோனிறம்போலும் பூவைப் பூ நிறமென்று பொருவுதல் பூவை நிலையென்றால், ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல் வேண்டும்; ஆசிரியர் அவை கூறாமையின், அது புலனெறிவழக்க மன்மை யுணர்க. இதனுட் கரந்தைப் பகுதி ஏழும் வேறு கூறினார், காட்டகத்து மறவர்க்குங் குறுநில மன்னர்க்கும் அரசன் படையாளர் தாமே செய்தற்கும் உரிமையின். கற்பகுதி வேத்தியற் புறத்திணைக்கும் பொதுவாகலின் வேறு கூறினார். ஏனைய அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகலின் வேறு கூறினார். இனித் துறையென்றதனான் ஒன்று பலவாம். அவை, கற்காணச் சேறலும், இடைப்புலத்துச் சொல்லுவனவுங், கண்டுழி யிரங்குவனவும், கையறுநிலையும், பாணர் கூத்தர் முதலியோர்க் குரைப்பனவும், அவர் தமக்குரைப்பனவும், போல்வன கற்காண்டலின் பகுதியாய் அடங்கும். கால்கொள்ளுங் காலத்து, மாலையும் மலரும் மதுவுஞ் சாந்தும் முதலியன கொடுத்தலும், அனையோற்கு இனைய கல்தகுமென்றலுந், தமர்பரிந்திரங்கலும் முதலியன கால்கோளின் பகுதியாய் அடங்கும். நீர்ப்படுக்குங்கால் ஈர்த்துக்கொண்டொழுக்கலும், ஏற்றிய சகடத்தினின்று இழிந்தவழி ஆர்த்தலும், அவர் தாயங் கூறலும், முதலியன நீர்ப்படையாய் அடங்கும். நடுதற்கண், மடையும் மலரும் மதுவும் முதலியன கொடுத்துப் பீலித்தொடையலும் மாலையும் நாற்றிப் பல்லியம் இயம்ப விழவுச் செய்யுஞ் சிறப்பெல்லாம் நடுதலாய் அடங்கும். பெயரும் பீடும் எழுதுங்காலும் இப்பகுதிகள் கொள்க. நாட்டப்படுங் கல்லிற்குக் கோயிலும் மதிலும் வாயிலும் ஏனைச்சிறப்புக்களும் படைத்தல் பெரும் படைப்பகுதியாய் அடங்கும். வாழ்த்தற்கண்ணும் இதுதான் நெடிது வாழ்கவெனவும், இதன்கண்ணே அவனின்று நிலாவுக வெனவும், பிறவும் கூறுவனவு மெல்லாம் வாழ்த்துதலாய் அடங்கும். ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப்பகுதி கூறிக்கொள்க. இனிப் பரலுடை மருங்கிற் பதுக்கை என்னும் (264) புறப்பாட்டினுள், அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித், தினி நட்டனரே கல்லும் எனக் கன்னாட்டுதல் பெரும்படைக்குப் பின்னாகக் கூறிற்றாலெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டுநாட்டோர் முறைமை யென்பது சீர்த்தகு சிறப்பின என்பதனாற் கொள்க. பெயரும் பீடு மெழுதி யதர்தொறும் - பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் என அகத்திற்கும் (அகம். 131) வருதலிற் பொதுவியலாயிற்று; இவை ஒரு செய்யுட்கண் ஒன்றும் பலவும் வருதலும், அகத்தின்கண் வருதலுஞ், சுட்டி யொருவர் பெயர் கோடலுங், கொள்ளமையும் உடையவென்று உணர்க. இப்பொதுவியலின்பின் வஞ்சி வைத்தார், வஞ்சிக் கண்ணும் பொதுவியல் வருவனவுள என்றற்கு. அது வேந்து வினை முடித்தனன் என்னும் அகப்பாட்டினுட் (104) சுட்டியொருவர் பெயர் கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க. (5) வஞ்சி முல்லையது புறனாதல் 61. வஞ்சி தானே முல்லையது புறனே. இது, தம்முண் மாறுபாடு கருதி வெட்சித்திணையை நிகழ்த்திய இருபெரு வேந்தருள் தோற்றோ னொருவன் ஒருவன் மேற்செல்லும் வஞ்சித்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனா மென்கின்றது. வஞ்சியென்றது ஒருவர்மே லொருவர் சேறலை. அதற்கு வஞ்சி சூடிச் சேறலும் உலகியல். (இ-ள்.) வஞ்சி தானே வஞ்சியெனப்பட்ட புறத்திணை; முல்லையது புறனே - முல்லை யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் எ-று. ஏனை உழிஞை முதலியவற்றினின்று பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை.. பாடாண்டிணைக்குப் பிரிதலின்மையிற் பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே (தொ. பொ. புற. 24) என்ப. ஏனைய பிரித்துக் கூறுவர். முதலெனப்பட்ட காடுறையுலகமுங், கார் காலமும், அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும், அரசன் பாசறைக்கட் டலைவியைப் பிரிந்து இருத்தலும், அவன் தலைவி அவனைப் பிரிந்துமனைவயினிருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒப்பச் சேறலின், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. வெஞ்சுடர் வெப்பம் நீங்கத் தண்பெயல் பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றொடு சென்றிருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம் முதல் கருவுரியும் வந்தனவாம். முல்லைப் பாட்டினுள், கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி. (பத்துப் முல்லைப் 24- 28) என்பதனான் உணர்க. (6) வஞ்சித்திணை இலக்கணம் 62. எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே இது முல்லைக்குப் புறனென்ற வஞ்சித்திணை இன்ன பொருட்டென்கின்றது. (இ-ன்.) எஞ்சா மண் நசை - இருபெருவேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே; அஞ்சுதகத் தலைசென்று - ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக அந்நாட்டிடத்தே சென்று; வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று - ஒரு வேந்தனை ஒருவேந்தன் கொற்றங்கோடல் குறித்தல் மாத்திரைத்து வஞ்சித்திணை எ-று. ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் மற்றவனும் அம் மண்ணழியாமற் காத்தலுக்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சி வேந்த ராவரென்றுணர்க. எதிர்சேறல் காஞ்சி என்பராலெனின், காஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமை யுணர்க. ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடைத் அதிகமான் இருந்ததாம். இங்ஙனம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே, மேற்கூறும் துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலா மென்றுணர்க. (7) வஞ்சி பதின்மூன்று துறைத்து ஆதல் 63. இயங்குபடை யரவ மெரிபரந் தெடுத்தல் வயங்க லெய்திய பெருமை யானுங் கொடுத்த லெய்திய கொடைமை யானும் அடுத்தூர்ந்து அட்ட கொற்றத் தானும் மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருளின்றுய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல வொருவன் றாங்கிய பெருமை யானும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே. இது முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்று துறைத் தென்கிறது. (இ-ள்.) இயங்கு படை அரவம் - இயங்குகின்ற இருபடையெழுச்சியின் ஆர்ப்பரவமும்; உ-ம் : விண்ணசைஇச் செல்கின்ற வேலிளையா ரார்ப்பெடுப்ப மண்ணசைஇச் செல்கின்றான் வாள்வேந்த னெண்ண மொருபாற் படர்தரக்கண் டொன்னார்த முள்ள மிருபாற் படுவ தெவன். (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு 1255- பகைவயிற் சேறல் 4) சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் என்னும் புறப்பாட்டும் (31) அது. இறும்பூதாற் பெரிதே கொடித்தே ரண்ணல் வடிமணி யணைத்த பணைமரு ணோன்றாட் கடிமரத்தாற் களிறணைத்து நெடுநீர துறைகலங்க மூழ்த்திறுத்த வியன்றானையொடு புலங்கெட நெரிதரும் வரம்பில் வெள்ளம் வாண்மதி லாக வேன்மிளை யுயர்த்து வில்விசை யுமிழ்ந்த வைம்முள் ளம்பிற் செவ்வா யெஃகம் வளைஇய வகழிற் காரிடி யுருமி னுரறுபு முரசிற் கால்வழங் காரெயில் கருதிற் போரெதிர் வேந்த ரொரூஉப நின்னே. (பதிற்றுப் .33) இப் பதிற்றுப்பத்தும் அது. போர்ப்படை யார்ப்பப் பொடியா யெழுமரோ பார்ப்புர வெண்ணான்கொல் பார்வேந்த - னூர்ப்புறத்து நில்லாத தானை நிலனெளிய நீளிடைப் புல்லார்மேற் செல்லும்பொழுது. இஃது எதிர்செல்வோன் படையரவம். எரிபரந்து எடுத்தல் - இருவகைப் படையாளரும் இருவகைப் பகைப்புலத்துப் பரந்துசென்று எரியை எடுத்துச் சுடுதலும்; இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க. உ-ம் : வினைமாட்சிய விரைபுரவியொடு மழையுருவின தோல்பரப்பி முனைமுருங்கத் தலைச்சென்றவர் விளைவயல் கவர்பூட்டி மனைமரம் விறகாகச் கடிதுறைநீர்க் களிறுபடீஇ யெல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கஞ் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப் புலங்கெட விறுக்கும் வரம்பி றானை. (புறம். 16) எனவும், களிறு கடை இயதாட் கழலுரீஇய திருந்தடிக் கணைபொருது கவிவண்கையால் கண்ணொளிர் வரூஉங் கவின்சாபத்து (புறம். 7) என்னும் புறப்பாட்டினுள், எல்லையு மிரவு மெண்ணாய் பகைவ ரூர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை யாகலின் எனவும் வரும். இவை கொற்றவள்ளைப் பொருண்மையவேனும் உட்பகுதி பலவுந்த துறையாய் வருதலின், எதிபரந் தெடுத்தற்கும் உதாரணமாயின. வயங்க லெய்திய பெருமையானும் - ஒருவர் ஒருவர் மேற்செல்லுங்காற் பிறவேந்தர் தத்தந் தானையோடு அவர்க்குத் துணையாய வழி அவர் விளக்கமுற்ற பெருமையும்; உ-ம் : மேற்செல்லுங் காலைத் துணைவந்த வேந்தர் தம் பாற்செல்லச் செல்லும் பரிசினா - னாற்கடல்சூழ் மண்மகிழுங் காட்சியான் மீன்பூத்த வானத்து வெண்மதிபோன் மேம்பாட்டான் வேந்து என வரும். இஃது இருவருக்கும் பொது. கொடுத்தல் எய்திய கொடைமையானும் - மேற்செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கல முதலியன கொடுத்தலும், பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத் தொழிலும்; உ-ம் : வேத்தமர் செய்தற்கு மேற்செல்வான் மீண்டுவந்த தேத்துநர்க் கீதுமென் றெண்ணுமோ - பாத்தி யுடைக்கலி மான்றே ருடனீந்தா னீந்த படைக்கலத்திற் சாலப் பல. என வரும். சிறா அர் துடியர் பாடுவன் மகா அர் தூவெள் ளறுவை மாயோற் குறுகி யிரும்புட் பூசலோம்புமின் யானும் விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவெ னெம்போற் பெருவிதுப் புறுக வேந்தே கொன்னுஞ் சாதல் வெய்யோற்குத் தன்றலை மணிமருண் மாலை சூட்டி யவன்தலை யொருகாழ் மாலை தான்மலைந் தனனே. (புறம்.291) என்பதும் அது. அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும் - எடுத்துச் சென்ற இரு பெருவேந்தர் படையாளர் வரவறியாமல் இரவும் பகலும் பலகாலும் தாம் ஏறி அந்நாட்டைக் காவல் புரிந்தோரைக் கொன்ற கொற்றமும்; உ-ம் : நீணில வேந்தர் நாட்செல் விருப்பத்துத் தோள்சுமந்த திருத்த லாற்றா ராள்வினைக் கொண்டி மாக்க ளுண்டியின் முனிந்து முனைப்புல மருங்கி னினைப்பருஞ் செய்வினை வென்றியது முடித்தனர் மாதோ யாங்குள கொல்லினி யூங்குப்பெறுஞ் செருவே என வரும். யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து முனையெரி பரப்பிய துன்னருஞ் சீற்றமொடு மழைதவழ்பு தலைஇய மதின்மர முருக்கி நிரைகளி றொழுகிய நிரைய வெள்ளம் பரந்தாடு கழங்கழி மன்மருங் கறுப்பக் கொடி விடு குரூஉப்புகை பிசிரக் கால்பொர வழல்கவர் மருங்கி னுருவறக் கெடுத்துத் தொல்கவி னழிந்த கண்ணகன் வைப்பின் வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்துப் பீரிவர்பு பரந்த நீரறு நிறைமுதற் சிவந்த காந்தண் முதல்சிதை மூதிற் புலவுவில் லுழவிற் புல்லாள் வழங்கும் புலில்லை வைப்பிற் புலஞ்சிதை யரம்பி னறியா மையான் மறந்துதுப் பெதிர்ந்தநின் பகைவர் நாடுங் கண்டுவந் திசினே கடலவுங் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர் (பதிற்றுப் . 15) என்னும், பதிற்றுப்பத்தும் அழிவு கூறிய இடம் அப்பாற்படும். மாராயம் பெற்ற நெடுமொழியானும் - வேந்தனாற் சிறப்பெய்திய அதனாற் றானேயாயினும் பிறரேயாயினுங் கூறும் மீக் கூற்றுச் சொல்லும்; சிறப்பாவன ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும், நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படை வேண்டியவாறு செய்க என்றது. இஃது அப்படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப்படை என்று வரையறை செய்தது. உ-ம் : போர்க்கட லாற்றும் புரவித்தேர்ப் பல்படைக்குக் கார்க்கடல் பெற்ற கரையன்றோ - போர்க்கெல்லாந் தானாதி யாகிய தார்வேந்தன் மோதிரஞ்சே ரேனாதிப் பட்டத் திவன். இது பிறர் கூறிய நெடுமொழி. துடி யெறியும் புலைய வெறிகோல் கொள்ளு மிழிசின கால மாரியி னம்பு தைப்பினும் வயற்கெண்டையின் வேல்பிறழினும் பொலம்புனை யோடை யண்ணல் யானை யிலங்குவான் மருப்பி னுதிமடுத் தூன்றினு மோடல் செல்லாப் பீடுடை யாளர் நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளுந் தண்ணடை பெறுதல் யாவது படினே மாசின் மகளிர் மன்ற னன்று முயர்நிலை யுலகத்து நுகர்ப் வதனால் வம்ப வேந்தன் றானை யிம்பர் நின்றுங் காண்டிரோ வரவே. (புறம் 287) இது தண்ணடை பெறுகின்றது சிறிது; சுவர்க்கம் பெறுதல் நன்று என்று நெடுமொழி கூறியது. போர்க்களம் புக்கு நொடுமொழி கூறுலும் நண்டு அடக்குக. பொருளின்று உய்த்து பேராண் பக்கமும்- பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும் பகுதியும்; உ-ம் : மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ னடர்வினைப் பொலிந்த சடர்விடு பாண்டிற் கையிகந் தமருந் தையணற் புரவித் தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின் விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத் தண்ணறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட் டண்ணல் யானை யெறித லொன்றோ மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல் கடியமை கள்ளுண் கைவல் காட்சித் துடிய னுண்க ணோக்கிச் சிறிய கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையதன் வேறிரித் திட்டு நகுதலு நகுமே. (தகடூர் யாத்திரை) இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது. பல்சான் றீரே பல்சான் றீரே குமரி மகளிர் கூந்தல் புரைய வமரி னிட்ட வருமுள் வேலிக் கல்லென் பாசறைப் பல்சான் றீரே முரசுமுழங்கு தானைநும் அரசு மோம்புமி னொளிறேந்து மருப்பினுங் களிறும் போற்றுமின் எனை நாட் டாங்குநும் போரே யனைநா ளெறியா ரெறிதல் யாவண தெறிந்தோ ரெதிர்சென் ரெறிதலுஞ் செல்லா னதனா லறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே பலமென் றிகழ்த லோம்புமி னுதுக்காண் நிலனளப்பன்ன நில்லாக் குறுநெறி வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி எல்லிடைப் படர்தந் தோனே கல்லென வேந்தூர் யானைக் கல்ல தேந்துவன் போலான்ற னிலங்கிலை வேலே. (புறம். 301) இதுவு மது. வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும் - தன்படை நிலையற்றாது பெயர்ந்தவழி விசையொடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினாற்போலத் தன்மேல்வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும்; உ-ம் : கார்த்தரும் புல்லணற் கண்ணஞ்சாக் காளைதன் றார்ப்பற்றி யேர்தரு தோணோக்கித் தார்ப்பின்னர் ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யாடுப்பின் றேர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக் கிணைவனை நோக்கி நகும் (தகடூர் யாத்திரை. புறத்திரட்டு. 1370) என வரும். இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு கூறியது. வேந்துடைத் தானை முனைகெட நெரிதர வேந்துவாள் வலத்த னொருவ னாகித் தன்னிறந்து வாராமை விலக்கிலிற் பெருங்கடற் காழி யனையன் மாதோ வென்றும் பாடிச் சென்றோர்க் கன்றியும் வாரிப் புரவிற் காற்றாச் சீறூர்த் தொன்மை சுட்டிய வண்மை யோனே (புறம். 330) என்பதும் அது. வருகதில்வல்லே என்னும் (287) புறப்பாட்டும் அதன் பாற்படும். முன்னர் மாராயம் பெற்றவனே பின்னர் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என்றுணர்க. பிண்டம் மேய பெருஞ்சோற்றுநிலையும் - வேந்தன் போர்தலைக் கொண்ட பிற்றைஞான்றுதானே போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதொரு முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக் கொடுத்தல் மெயின பெருஞ்சோற்று நிலையும்; உ-ம் : இணர்ததை ஞாழற் கரைகெழு பெருந்துறை மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற் பாசடைப் பனிக்கழி துழைஇப் புன்னை வாலிணர்ப் படுசினை குருகிறை கொள்ளு மல்குறு கான லோங்குமண லடைகரைத் தாழடும்பு மலைந்த புணரிவளை ஞரல விலங்குகதிர் முத்தமொடு வார்துகி ரெடுக்குந் தண்கடற் படப்பை மென்பா லனவுங் காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவர் செங்கோட் டாமா னூனொடு காட்ட மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும் குன்றுதலை மணந்த புன்புல வைப்புங் கால மன்றியுங் கரும்பறுத் தொழியா தரிகா லவித்துப் பல்பூ விழவிற் றேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலைச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம் குழவிமிழ் மூதூர் விழவுக்காணுஉப் பெயருஞ் செழும்பல் வைப்பிற் பழனப்பாலும் ஏனல் உழவர் வரகுமீ திட்ட காண்மிகு குளவிய வன்புசே ரிருக்கை மென்றினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புலந் தழீஇய புறவணி வைப்பும் பல்பூஞ் செம்மற் காடுபய மாறி யரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண் டொண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்ந் தோங்கிய கடற்றவும் பிறவும் பணைகெழு வேந்தரும் வேளிரு மொன்றுமொழிந்து கடலவுங் காட்டவு மரண்வலியார் நடுங்க முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடாஅய் முழங்கு மந்திரத் தருந்தெறன் மரபிற் கடவுட் பேணிய ருயர்ந்தோ னேந்திய வரும்பெறற் பிண்டங் கருங்கட் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறைமகி ழிரும்பலி யெறும்பு மூசா விறும்பூது மரபிற் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார வோடாப் பூட்கை யொண்பொறிக் கழற்காற் பெருஞ்சமந் ததைந்த செருப்புகன் மறவ ருருமுநில னதிர்க்குங் குரலொடு கொளை புணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியுங் கடுஞ்சின வேந்ததேநின் றழங்குகுரன் முரசே (பதிற்றுப். 30) என வரும். இது பதிற்றுப்பத்து. துறை எனவே கள்ளும் பாகும் முதலியனவும் அப்பாற் படும். வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோ ரன்ன விளைய ரிருப்பப் பலர்மீது நீட்டிய மண்டையென் சிறுவனைக் கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் ளறுவை போர்ப்பித் திலதே. (புறம். 286) உண்டியின் முந்தா துடனுண்பான் றண்டேறன் மண்டி வழங்கி வழீஇயதற்கோ - கொண்டி மறவர் மறமிக் குயிர்நேர்ந்தார் மன்னர்க் குறவிலர் கண்ணோடா தோர்ந்து என்பன கொள்க. வென்றோர் விளக்கமும் - அங்ஙனம் பிண்டமேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர் மிகை கண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியாற்றிறைகொடுப்ப அதனை வாங்கினார்க்கு உளதாகிய விளக்கத்தைக் கூறலும்; உ-ம் : அறாஅ யாண ரகன்கட் செறுவி னருவி யாம்ப னெய்தலொ டரிந்து செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப்பக டுதிர்த்த செழுந்செந் நெல்லி னம்பண வளவை யுறைகுவித் தாங்குக் கடுந்தேற் றுறுகிளை மொசிந்தன துஞ்சுஞ் செழுங்கூடு கிளைத்த விளைந்துணை மகா அரின் உலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே யூரெரி கவர வுருத்தெழுந் துரைஇப் போர்புசுடு கமழ்புகை மாதிர மறைப்ப மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர் குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயி லாரெயிற் றோட்டி வௌவினை யேற்றொடு கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து புலவுவியல் லிளைய ரங்கை விடுப்ப மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ வான்பயம் வாழ்நர் கழுவுடலை மடங்கவப் பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றேன வருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற் பெருங்களிற் றியானையோ டருங்கலந் தரா அர் மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற் பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி யுரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி யறிந்தனை யருளா யாயின் யாரிவ ணெடுந்தகை வாழு மோரே (பதிற்றுப். 71) என வரும். இருங்கண் யானையோ டருங்கலந் தெறுத்துப் பணிந்துகுறை மொழித லல்லது பகைவர் வணங்கா ராதல் யாவதோ மற்றே. (பதிற்றுப். ) இதுவும் அது. இவை பதிற்றுப் பத்து. தோற்றோர் தேய்வும் - அங்ஙனந் திறைகொடுத்தோரது குறைபாடு கூறுதலும்; உ-ம் : வாஅன் மருப்பிற் களிற்றியானை நிரை மாமலையிற் கணங்கொண்டவ ரெடுத்தெறிந்த விறன்முரசங் கார்மழையிற் கடிதுமுழங்கச் சாந்துபுலர்ந்த வியன்மார்பிற் றொடிசுடர்வரும் வலிமுன்கைப் புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங் கழற்காற் பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வா ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ யிடுக திறையே புரவெதிர்ந் தோர்க்கென வம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ வனையை யாகன் மாறே பகைவர் கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக் கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசை தொலையாக் கற்பநின் றெம்முனை யானே (பதிற்றுப். 80) என வரும். இது பதிற்றுப்பத்து. குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் - வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற் கிரங்கித் தோற்றோனை விளங்கக் கூறும் வள்ளைப்பாட்டும்; வள்ளை. உரற்பாட்டு. கொற்றவள்ளை, தோற்ற கொற்றவன் கொடுக்குந் திறை என்று சொல்வாரும் உளர். உ-ம் : வேரறுகு பம்பிச் சுரைபரந்து வேளைபூத்து ஊரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் அகையிலைவேல் காய்த்தினார் நாடு (முத்தொள். புறத்திரட்டு. 1279. பகைப்புலம் பழித்தல் 4) என வரும். அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ - அங்ஙனம் வென்றுந் தோற்றும் மீண்ட வேந்தர் தம் படையாளர் முன்பு போர் செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்ட ழிந்தவர்களைத் தாஞ் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியுந் தழுவிக்கோடலுடனே முற்கூறியவற்றைத் தொகுத்து; படைதட் டழிவோர் என்று மாறுக. தழிச்சுதல் தழிஞ்சி யாயிற்று. பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின் என்றாற் போல. உ-ம் : தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண். (பெரும் பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1273. பாசறை 6) என வரும். வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமங் களையாப் பாய்பரிக் கலிமா இருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப் புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ வாட்டோட் கொத்த வன்கட் காளை சுவன்மிசை யசைத்த கையன் முகனமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப நற்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே (நெடுதல். 176. 188) இதுவும் அது. கழிபெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே - மிகப் பெருஞ் சிறப்பினையுடையவாகிய துறை பதின்மூன்றாம் எ-று. வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்தன வெல்லாம் இருவர்க்கும் பொதுவாய் வருமென்பது தோன்றக் கழிபெருஞ் சிறப்பென்றார். இனி இயங்குபடையரவ மெனவே இயங்காத வின்ஞாணொலி முதலியனவும் கொள்க. இத்திணைக்கும் பொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப்படுத்தலுங் கொள்க. அவை: - கொற்றவை நிலையுங், குடைநாட்கொளும், வாணாட்கோளும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப் புலத்தார் இகழ்வும், இவைபோல்வன பிறவும் இயங்குபடையரவமாய் அடங்கும். நிரைகோடற்கு ஏவிய அரசருள் நிரைகொண்டோக்கும் நிரை கொள்ளப் பட்டோர்க்கும் விரைந்து ஏகவேண்டுதலிற் குடைநாட்கோளும் வாணாட்கோளும் இன்றியமையாதன அன்மையின் ஈண்டுக் கூறாராயினார். அவை உழிஞைக்குக் கூறுப, அதற்கு இன்றியமையாமையின். இனித் துணைவந்த வேந்தருந் தாமும் பொலிவெய்திய பாசறை நிலை கூறலும், அவர் வேற்றுப்புலத்திருத்தலின் ஆண்டு வாழ்வோர் பூசலிழைத்து இரிந்தோடப் புக்கிருந்த நல்லிசை வஞ்சி முதலியனவும் வயங்கலெய்திய பெருமைப் பாற்படும். துணைவேண்டாச் செருவென்றி (புறம். 16) நாடக வழக்கும்; துணை வேண்டுதல் உலகியல் வழக்கு. நீயே புறவினல்ல லன்றியும் பிறவும் (46) என்னும் புறப்பாட்டும் வள்ளியோர்ப் படர்ந்து (47) என்னும் புறப்பாட்டும் முதலியன துணைவஞ்சி என்பார்க்கு அவை மேற்செலவின் கண் அடங்காமையிற் பாடாண்டிணை யெனப்படுமென் றுரைக்க. இனி மேற்செல்வான் மீண்டு வந்து பரிசில் தருமென்றல் வேத்தியலன்றாகலிற் பரிசிலர்க்குக் கொடுத்தலும் படைக்கல முதலியவற்றொடு கூறினார். இனிக் கடிமரந்தடிதலுங், களிறும் மாவுந் துறைப்படிவனவற்றைக் கோறலும், புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியனவும் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின்பாற்படும். அவை கருவூரிடைச் சேரமான் யானையை யெறிந்தாற் போல்வன. இனிப்புண்பட்டோரை முன்னர்ச்செய்த படைவலங்கூறி அரசராயினும் உழையராயினும் புகழ்வன போல்வனவுந் தழிஞ்சிப் பாற்படும். இதனை முதுமொழிவஞ்சி என்பர். ஆண்டுக் கொடுத்தல் முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை அழியுநர் புறக்கொடை அயில்வா ளோச்சாக் - கழிதறு கண்மை (புற. வெ. வஞ்சி. 20) யெனின், அஃது ஒருவன் றாங்கிய பெருமைப்பாற்படு மென்றுணர்க. இச் சூத்திரத்து ஆன் எல்லாம் இடைச்சொல். இது செவ்வெண் உம்மை எண்ணினை இடையிட்டுக் கொண்டது. இனி ஏனையவற்றிற்கும் ஆன் உருபு கொடுத்து அதற்கேற்பப் பொருள் கூறலும் ஒன்று. (8) உழிஞை மருதத்துப் புறனாதல் 64. உழிஞை தானே மருதத்துப் புறனே. இஃது உழிஞைத்திணை அகத்திணையுள் மருதத்திற்குப் புறனாமென்கின்றது. (இ-ள்.) உழிஞை தானே - உழிஞை யென்று கூறப்பட்ட புறத் திணை; மருதத்துப்புறனே - மருதமென்று கூறப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் எ-று. இப்பெருவேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எதிர்செலற் காற்றாது போய் மதிலகத் திருந்த வேந்தன் மதில் பெரும்பான்மையும் மருதத்திடத்த தாதலானும், அம்மதிலை முற்றுவோனும் அந் நிலத்திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத் திருத்தல் ஒப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம் போல இதற்கும் பெரும்பொழுது வரைவின்மையானுஞ், சிறுபொழுதினும் விடியற்காலமே போர் செய்தற்குக் காலமாதலானும் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று. மருதநிலத்து மதிலாதல் அகநாடு புக்கவரருப்பம் வௌவி (மதுரைக். 149) யெனப் பாட்டிற் கூறியவாற்றானும், பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற், றுணங்குல னாழியிற் றோன்று மொரெயின், மன்னன் (புறம் 338) என்றதனானுங் கொளற் கரிதாய்க் கொண்டகூழ்த்தாகி யகத்தார், நிலைக்கெளிதா நீர தரண் (குறள். 745) என்றதனானு முணர்க. மற்று எதிர்சென்றானை வஞ்சி வேந்தன் என்னுமெனின், அஃது இருவருந் தத்தம் எல்லைக்கண் எதிர்சென்றிறுப்பரென்றலின் வஞ்சியாகா தாயிற்று. உழிஞைத்திணையது பொது இலக்கணம் 65. முழுமுத லரண முற்றலுங் கோடலும் அனைநெறி மரபிற் றாகு மென்ப. இது மேற்கூறிய உழிஞைத்திணையது பொதுவிலக்கணம் உணர்த்துகின்றது. (இ-ள்.) முழுமுதல் அரணம் - வேற்றுவேந்தன் குலத்துக் கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற முழு அரணை, முற்றலும் கோடலும் - சென்ற வேந்தன் வளைத்தலும், இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலுமாகிய; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப - இரண்டு வழியாகிய இலக்கணத்தை உடைத்து அவ்வுழிஞைத்திணை என்று கூறுவர் புலவர் எ-று. முழு அரணாவது, மலையுங் காடும் நீருமல்லாத அகநாட்டுட்செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத், தோட்டி முள் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் ஏப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து, எழுவுஞ் சீப்பும் முதலியவற்றான் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம். இனி, மலையரணும் நிலவரணுஞ், சென்று சூழ்ந்து நேர்தலில்லாத ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல் அடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்களும் அமைந்தனவாம். இனிக் காட்டரணும் நீரரணும் அவ்வாறே வேண்டுவன யாவும் அமைந்தனவாம். இங்ஙனம் அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந் தழித்தலும் கலியூழிதோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இது வஞ்சமுடைத்தாயிற்று. சிறப்புடை அரசியலாவன, மடிந்த உள்ளத்தோனையும் மகப் பெறாதோனையும் மயிர் குலைந்தோனையும் அடிபிறக்கிட் டோனையும் பெண்பெயரோனையும் படையிழந்தோனையும் ஒத்தபடை யெடாதோனையும் பிறவும் இத்தன்மைடையோரையுங் கொல்லாது விடுதலுங், கூறிப் பொருதலும் முதலியனவாம். இனி ஆகுமென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச் சென்று அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன் வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க. (10) உழிஞை எட்டுத் துறைத்து ஆதல் 66. அதுவே தானு மிருநால் வகைத்தே. இது முற்கூறிய முற்றலுங் கோடலும் ஒருவன் தொழிலன் றென்பதூஉம், முற்கூறியதுபோல ஒருதுறை இருவர்க்கு முரியவாகாது, ஒருவர்க்கு நான்கு நான்காக எட்டாமென்பதூஉங் கூறுகின்றது. (இ-ள்.) அதுவே தானும் - அவ்வுழிஞைத் துறைதானும்; இருநால் வகைத்து. மதில்முற்றிய வேந்தன் கூறு நான்கும் அகத்தோன்கூறு நான்குமென எட்டு வகைத்து எ-. அது மேற்கூறுப. (11) அவை எட்டுத்துறையுமாவன 67. கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமும் அகத்தோன் செல்வமு மன்றி முரணிய புறத்தோ ணணங்கிய பக்கமுந் திறப்பட வொருதான் மண்டிய குறுமையு முடன்றோர் வருபகை பேணா ராரெயி லுளப்படச் சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே. இது முற்கூறிய நாலிரு துறைக்கும் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்.) கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும் - பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றியும் தன்னை இகழ்ந்தோரையுந் தான் இகழ்ந்தோரையும் கொள்ளாரென்ப. உ-ம் : மாற்றுப் புலந்தோறு மண்டிலமாக் கள்செல வேற்றுப் புலவேந்தர் வேல்வேந்தர்க் - கேற்ற படையொலியிற் பாணொலி பல்கின்றா லென்னா ருடையன தாம்பெற்று வந்து. (பெரும் பொருள் விளக்கம் புறத்திரட்டு 1272. பாசறை 5) என வரும். கழிந்தது பொழிந்தென என்னும் (203) புறப்பாட்டினுள் ஒன்னார் ராரெயி லவர்கட் டாகவு நுமதெனப் பாண்கட னிறுக்கும் வள்ளியோய் என்பதும் அது. ஆனா வீகை யடுபோர் என்னும் (42) புறப்பாட்டும் அது. இராமன் இலங்கை கொள்வதன் முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் - அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத் தலைவன் முதலியோரும் வேற் வேந்தன்பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தலும்; உ-ம் : மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந் தெழுவாளா னேற்றுண்ட தெல்லா - மிழுமென மட்டவிழ் கண்ணிமறவேந்தன் சீற்றத்தீ விட்டெரிய விட்ட மிகை. (தகடூர் யாத்திரை, புறத்திரட்டு 1340, எயில் காத்தல் 6) என வரும். மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற்றுவனெனத் தான்முன்னிய துறைபோகலின் (பத்துப் பட்டின. 271 - 273) என்பதும் அது, மாற்றார் மதிலும் அகழுஞ் சுட்டிக் கூறலின். அடுநை யாயினும் விடுநை யாயினும் நீயளந் தறிதிநின் புரைமை வார்கோற் செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடுந் தண்ணான் பொருனை வெண்மணற் சிதையக் கருங்கைக் கொல்ல ணரஞ்செய் யவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பச் காவுதொறுங் கடிமரந் தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப வாங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின் சிலைத்தார் முரசங் கறங்க மலைத்தனை யென்பது நாணுத்தக புடைத்தே (புறம். 36) இது புறத்துழிஞையோன்கண் தூதன் அவன்சிறப்பு எடுத் துரைத்தது. வயலைக் கொடியின் வாடிய மருங்கு லுயவ லூர்திப் பயலைப் பார்ப்பா னெல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே யேணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யானையு மணிகளைந் தனவே (புறம். 305) இது தூதருரை கேட்ட அகத்துழிஞையோன் திறங்கண்டோர் கூறியது. இவை புறம். தொல் எயிற்கு இவர்தலும் - ஒருகாலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப்பகலுள் அழித்துமென்று கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தலும்; உ-ம் : இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப் பொற்றாரான் போனகங்கைக் கொள்ளானா - லெற்றாங்கொ லாறாத வெம்பசித் தீ யாற வுயிர் பருகி மாறா மறலி வயிறு (புறத்திரட்டு. 1927) என வரும். மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி யப்பியெவ் வாயு மெந்திரப் பறவை யியற்றின நிறீஇக் கல்லுங் கவணும் கடுவிசைப் பொறியும் வில்லும் கணையும் பலப்படப் பரப்பிப் பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை யினரும்பொறை பூட்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே (தகடூர் யாத்திரை) இப் பொன்முடியார் பாட்டும் அது. இதனாற் பூச்சுடுதல் பெற்றாம். தோலின் பெருக்கமும் - அங்ஙனம் மதின்மேற் சென்றுழி மதிலகத் தோர் அப்புமாரி விலக்குதற்குக் கிடுகுங் கேடகமும் மிடையக் கொண்டு சேறலும்; உ-ம் : இருசுட ரியங்காப் பெருமூ திலங்கை நெடுந்தோ ளிராமன் கடந்த ஞான்றை யெண்கிடை மிடைந்த பைங்கட் சேனையிற் பச்சை போர்த்த பல்புறத் தண்டை யெச்சார் மருங்கினு மெயிற்புறத் திறுத்தலிற் கடல்சூ ழரணம் போன்ற துடல்சின வேந்தன் முற்றிய வூரே (ஆசிரியமாலை, புறத்திரட்டு, எயில் கோடல். 1334) என வரும். நின்ற புகழொழிய நில்லா வுயிரோம்பி யின்றுநாம் வைக லிழிவாகும் - வென்றொளிரும் பாண்டி னிரைதோற் பணியார் பகையரணம் வேண்டி லெளிதென்றான் வேந்து (புற. வெ. உழிஞை. 12) இதுவும் அது. அரணத்தோர் தத்தம் பதணத்து நிற்றலிற் றோல் கூறிற்றிலர். இந்நான்கும் முற்றுவோர்க்கே உரியவெனக் கொள்க. அகத்தோன் செல்வமும் - அகத்து உழிஞையோன் குறைவில்லாத பெருஞ்செல்வங் கூறுதலும்; அவை படை குடி கூழ் அமைச்சு நட்பும் நீர்நிலையும் ஏமப் பொருள் மேம்படு பண்டங்களும் முதலியனவாம். உ-ம் : பொருசின மாறாப் புலிப்போத் துறையு மருவரை கண்டார்போ லஞ்சி. யொருவருஞ் செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் றேர்வேந்த னெல்லார்க்கு மெல்லாங் கொடுத்து (தகடூயாத்திரை. புறத்திரட்டு. 1339. எயில் காத்தல் 5) அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினு முழவ ருழாதன நான்குபய னுடைத்தே யொன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே, நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்க ணற்றதன் மலையே வானத்து மீன்க ணற்றவன் சுனையே யாங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினுந் தாளிற் கொள்ளலிர் வாளிற் றாரலன் யானறி குவனது கொள்ளு மாறே சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே நாடுங் குன்று மொருங்கீ யும்மே (புறம் 109) என்னும் புறப்பாட்டும் அது. அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும் - மாறுபட்ட புறத்தோனை அகத்தோன் தன் செல்வத்தான் அன்றிப் போர்த் தொழிலான் வருந்திய கூற்றும்; உ-ம் : கலையெனப் பாய்ந்த மாவு மலையென மயங்கம ருழந்த யானையு மியம்படச் சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பலபுறங் கண்டோர் முன்னா ளினியே யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் நூற்றயற் கிடப்பக் களையாக் கழற்காற் கருங்க ணாடவர் உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப மிளைபோ யின்று நாளை நாமே யுருமிசை கொண்ட மயிர்க்கட் டிருமுர சிரங்க வூர்கொள் குவமே. (தகடூர் யாத்திரை) என வரும். இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன்படைபட்ட தன்மைகூறக் கேட்டோற்கு, அவர் கூறியது. திறப்பட ஒரு தான் மண்டிய குறுமையும் - அகத்திருந் தோன் தன்னரணரழிவு தோன்றியவழிப் புறத்துப் போர் செய்யுஞ் சிறுமையும்; உ-ம் : வருகதில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூதாங்காங் கிசைப்ப நூலரி மாலை சூடிக் காலின் தமியன் வந்த மூதி லாளன் அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த வொருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வா டிருத்தாத் தனக்கிரிந்த தானைபெயர்புற நகுமே (புறம். 284) என வரும். உடன்றோர் வருபகை பேணார் ஆர் எயில் உளப்பட - புறத்தோன் அகத்தோன்மேல் வந்துழி அவன் பகையினைப் போற்றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுத லகப்பட; உ-ம் : மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென வையக மறிய வலிதலைக் கொண்ட தெய்வழி யென்றி வியன்றார் மார்ப வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித் திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற் புண்கூர் மெய்யினுராஅய்ப் பகைவர் பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை யாண்டகை மறவர் மலிந்துபிறர் தீண்டல் தகாது வேந்துறை யரணே (தகடூர் யாத்திரை) இஃது அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழுவரண் கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று. இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது. சொல்லப்பட்ட நாலிருவகைத்தே - மேலிரு நால்வகைத் தென்று சொல்லப்பட்ட இருநான்கு பகுதியதாம் உழிஞைத் திணை எ-று. முற்கூறிய தொகையேயன்றி ஈண்டுந் தொகை கூறினார். அந்நாலிரண்டுமேயன்றி அவைபோல்வனவும் நாலிரண்டு துறைதோன்று மென்றற்கு. அவை புறத்து வேந்தன் தன் துணையாகிய அரசனையாயினுந் தன் படைத்தலைவரையா யினும் ஏவி அகத்து வேந்தர்த் துணையாகிய அரசனது முழு முதலரண் முற்றலும் அவன்றா னதனைக் காவல் கோடலும் நிகழ்ந்தவிடத்தும் இவ் விருநான்கு வகையும் இருவர்க்கு முளவாதலாம். உதாரணம் முற்காட்டியவே; வேறு வேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப் படையியங்கரவ (புறம். 8) முதலியனவும் அதிகாரத்தாற் கொள்க. அது, இலங்குதொடி மருப்பிற் கடா அம் வார்ந்து நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சர மெரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக் கால்கிளர்ந் தன்ன கடுஞ்செல லிவுளி கோன்முனைக் கொடியினம் விரவா வல்லோ டூன்வினை கடுக்குந் தோன்றல பெரிதெழுந் தருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர் கண்விட் டனவே முரசங் கண்ணுற்றுக் கதித்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் கறங்கிசை வயிரொடு வலம்புரி யார்ப்ப நெடுமதி னிரைஞாயிற் கடிமிளைக் குண்டுகிடங்கின் மீப்புடை யாரரண் காப்புடைத் தேஎ நெஞ்சுபுக லழிந்து நிலைதளர் பொரீஇ யொல்லா மன்னர் நடுங்க நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே (பதிற்றுப்பத்து) என வரும். இனித் தேவர்ககுரியவாக உழிஞையிற்றுறைகள் பலவுங் கூறுவாருளராலெனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டிவாறு செய்வன வாகலின் தமிழ் கூறு நல்லுலகத் தன (தொல். பாயிரம்) அல்லவென மறுக்க. இனி முரசழிஞை வேண்டுவா ருளரெனின் முரசவஞ்சியுங் கோடல் வேண்டுமென மறுக்க. இனி ஆரெயிலுழிஞை முழுமுதலரணம் என்றதன்கண் அடங்கும். இனி இவற்றின் விகற்பிப்பன வெல்லாம் அத் துறைப்பாற்படுத்திக் கொள்க. உழிஞை வேந்தர் இருவர்க்கும் பொதுவாம் துறைகள் 68. குடையும் வாளு நாள்கோ ளன்றி மடையமை யேணிமிசை மயக்கமுங் கடைஇச் சுற்றம ரொழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வு மன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியு மற்றதன் புறத்தோன் வீழ்ந்த புதுமை யானும் நீர்ச்செரு வீழ்ந்த பாசியு மதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும் அகமிசைக் கிவர்ந்தோன் பக்கமும் இகன்மதிற் குடுமி கொண்ட மண்ணுமங் கலமும் வென்ற வாளின் மண்ணோ டென்றத் தொகைநிலை யென்னுந் துறையொடு தொகைஇ வகைநான் மூன்றே துறையென மொழிப. இஃது எய்தாத தெய்துவித்தது; உழிஞைத்திணையுள் இருபெரு வேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியவான துறை இதற்கு முன்னர்க் கூறாமையின். (இ-ள்.) குடையும் வாளும் நாள்கோள் அன்றி - தன் ஆக்கங்கருதி குடிபுறங்காத்து ஓம்பற்கெடுத்த குடைநாட் கொள்ளுதலும் அன்றிப் பிறன்கேடு கருதி வாணாட் கொள்ளுதலும் அன்றி; புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாள்கொள்ளுமென்க, தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞையெனப் படாதாகலின். அகத்தோனும் முற்று விடல்வேண்டி மற்றொரு வேந்தன் வந்துழித் தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள்ளும். நாள்கொளலாவது நாளும் ஓரையுந் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக் காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னர்ச் செல்லவிடுதல். உ-ம் : பகலெறிப்ப தென்கொலோ பான்மதியென் றஞ்சி யிகலரணத் துள்ளவ ரெல்லா - மகநலிய விண்டஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள் கண்டஞ்சிச் சிம்பிளித்தார் கண். (பெரும்பொருள் விளக்கம். பிறத்திரட்டு. எயில்கோடல்) இது புறத்தோன் குடை நாள்கோள். குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று நின்றுயர் வாயிற் புறநிவப்ப - வொன்றார் விளங்குருவப் பல்குடை விண்மீன்போற் றோன்றித் துளங்கினவே தோற்றந் தொலைந்து (தகடூர் யாத்திரை. பிறத்திரட்டு. 1337 எயில்காத்தல் 3) இஃது அகத்தோன் குடை நாட்கோள். தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி யழுது விழாக்கொள்வ ரன்னோ - முழுதளிப்போன் வானாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோ ளென்று நினைத்து (பெரும் பொருள் விளக்கம் புறத்திரட்டு 1326 எயில் கோடல் 5) முற்றரண மென்னு முகிலுருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவா ணாட்கொண்டான் - புற்றிழிந்த நாகக் குழாம்போ னடுங்கின வென்னாங்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு.1338. எயில்காத்தல் 4) இஃது அகத்தோள் வாணாட்கோள். மடையமை ஏணிமிசை மயக்கம் - மீதிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசைநின்று புறத்தோரும் அகத்தோரும் போர் செய்தலும்; உ-ம் : சேணுயர் ஞாயிற் றிணிதோளா னேற்றவு மேணி தவிரப்பாய்ந் தேறவும் - பாணியாப் புள்ளிற் பரந்து புகல்வேட்டார் போர்த்தொழிலோர் கொள்ளற் கரிய குறும்பு இது புறத்தோர் ஏணிமயக்கம். இடையெழுவிற் போர்விலங்கும் யானையோர் போலு மடையமை யேணி மயக்கிற் - படையமைந்த ஞாயில் பிணம் பிறக்கித் தூர்த்தார் நகரோர்க்கு வாயி லெவனாங்கொல் மற்று இஃது அகத்தோர் ஏணிமயக்கம். இனி இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க. உ-ம் : பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ ருடன்றெழுந்த காலை - யிருவரும் மண்ணோடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும் (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு 1330. எயில்கோடல் 9) என வரும். கடைஇச் சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு முற்றிய முதிர்வும் - புறத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற் செய்யும் போரின்றாக, அகத்தோன் படையை வென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு, உள்மதிலை வளைத்த வினை முதிர்ச்சியும்; அகத்தோன் தன் படையைச் செலுத்திப் புறமதிலிற்செய்யும் போரின்றாகப், புறத்தோன் படையைத் தள்ளி வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த வினை முதிர்ச்சியும்; உ-ம் : கடல்பரந்து மேருச்சூழ் காலம்போற் சென்றோர் கொடிமதில் காத்தோரைக் கொல்லக் - கடலெதிர் தோன்றாப் புலிபோ லரண்மறவர் தொக்கடைந்தார் மான்றேரான்மூதூர் வரைப்பு இது புறத்தோன் முற்றிய முதிர்வு. ஊர்சூழ் புரிசை யுடன்சூழ் படைமாயக் கார்சூழ்குன் றன்ன கடைகடந்து - போர்மறவர் மேகமே போலெயில் சூழ்ந்தார் விலங்கல்போன் றாகஞ்சேர் தோள்கொட்டி யார்த்து இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு. அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும். புற மதிலிலன்றி உள்மதிற்கட் புறத்தோனான் முற்றப்பட்ட அகத்தோன் விரும்பின மதில்காவலும், அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திலிருந்த புறத்தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும்; நொச்சியாவது காவல். இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க: அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைக் காத்தலுமென இருவர்க்கு மாயிற்று. இக்கருத்தானே நோச்சி வேலித் தித்த னுறந்தை (அகம். 122) என்றார் சான்றோரும். உ-ம் : இருகன்றி னொன்றிழந்த வீற்றாப்போற் சீறி யொருதன் பதிசுற் றொழியப் புரிசையின் வேற்றரணங் காத்தான் விறல்வெய்யோன் வெஞ்சினத்துக் கூற்றரணம் புக்கதுபோற் கொன்று இஃது அகத்துழிஞையோன் எயிற்காத்த நொச்சி. தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் விரும்பாதா ரூர்முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு. (பெரும் பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1328. எயில்கோடல் 7) இது புறத்தோன் மனங்காத்த நொச்சி. மணிதுணர்ந்த தன்ன மாக்குர னொச்சிப் போதுவிரி பன்மர னுள்ளுஞ் சிறந்த காத னன்மர நீமற் றிசினே கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த தொடியணி மகளி ரல்குலுங் கிடத்தி காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலி னூர்ப்புறங் கொடாஅ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே (புறம். 272) இது சூடின நொச்சியைப் புகழ்ந்தது. மற்று அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும் - இடைமதிலைக் காக்கின்ற அகத்துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம்மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக் கொண்ட புதுக்கொளும், அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ்விடத்தினைப் பின்னை யகத்தோன் தான் விரும்பிக் கொண்ட புதுக்கோளும்; பிற்பட்ட துறைக்குப் புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள் கொள்க. முன்னர்ப் புறமதிலின் போர்போல இடை மதிலினும் போர் கூறினார். உ-ம் : வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கா லஞ்சி யொதுங்காதார் யார்யாவர் - மஞ்சுசூழ் வான்றோய் புரிசை பொறியு மடங்கின வான்றோ ரடக்கம்போ லாங்கு (பெரும் பொருள்விளக்கம். புறத்திரட்டு. 1329. எயில்கோடல் 8) இது புறத்தோன் வீழ்ந்த புதுமை. தாக்கற்குப் பேருந் தகர்போன் மதிலகத் தூக்க முடையோ ரொதுங்கியுங் - கார்க்க ணிடிபுறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றா ரடிபிறக் கீடு மரிது (தகடூர்யாத்திரை. புறத்திரட்டு 1341. எயில்காத்தல் 7) இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை. நீர்ச் செரு வீழ்ந்த பாசியும் - கொண்ட மதிலகத்தை விட்டுப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத் தாக்கல் ஆற்றாத அகத் தோரும் எயிற்புறத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட் போரை விரும்பின பாசியும்; பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் பாசி யென்றார். உ-ம் : பொலஞ்செய் கருவிப் பொறையுமிப் பண்ணாய் நிலந்திடர் பட்டதின் றாயிற் - கலங்கமர்மேல் வேத்தமர் செய்யும் விரகென்னாம் வேன்மறவர் நீத்துநீர்ப் பாய்புலியோ னின்று இஃது இருவருக்கும் ஒக்கும். வேறு வேறு வருமெனினுங் காண்க. அதா அன்று ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும் - அம் மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறனும்; பாசியென்றார், நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின். உ-ம் : மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர் பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு இது புறத்தோன் பாசிமறம். தாந்தங் கடை தொறுஞ் சாய்ப்பவு மேல்விழுந்த வேந்தன் படைப்பிணத்து வீழ்தலா - னாங்கு மதுக்கமழுந் தார்மன்னர்க் குள்ளூர் மறுகிற் பதுக்கையும் வேண்டாதாம் பற்று இஃது அகத்தோன் பாசிமறம். அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கமும் - புறஞ்சேரிமதிலும் ஊரமர்மதிலும் அல்லாத கோயிற் புரிசைகளின் மேலும் ஏறிநின்று போர்செய்தற்குப் பரந்துசென்றோன் கூறுபாடும்; உ-ம் : வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் கொடுமுடி மேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோட னினைந்து இது புறத்தோன் அகமிசைக்கிவர்தல். புற்றுறை பாம்பின் விடநோக்கம் போனோக்கிக் கொற்றுறை வாய்த்த கொலைவேலோர் - கொற்றவ னாரெயின்மேற் றோன்றினா ரந்தரத்துக் கூடாத போரெயின்மேல் வாழவுணர் போன்று இஃது அகத்தோன் அகமிசைக்கிவர்தல். இகன்மதிற் குடுமி கொண்ட மண்ணு மங்கலமும் - அங்ஙனம் இகல்செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, பட்ட வேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடும் மங்கலமும்; உ-ம் : மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின்முடி சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து இது புறத்தோன் மண்ணு மங்கலம். வென்றி பெறவந்த வேந்தை யிகன்மதில்வாய்க் கொன்று குடுமி கொளக்கண்டு - தன்பால் விருந்தினர் வந்தார்க்கு விண்விருந்து செய்தான் பெருந்தகையென் றார்த்தார் பிறர் இஃது அகத்தோன் மண்ணு மங்கலம். வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற - இருபெருவேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்றவாளினைக் கொற்றவைமே னிறுத்தி நீராட்டுதலோடே கூட; உ-ம் : செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொல்-முற்றியோன் பூவொடு சாந்தும் புகையவி நெய்ந்நறைத் தேவொடு செய்தான் சிறப்பு இது புறத்தோன் வாண்மங்கலம். வருபெரு வேந்தருக்கு வான்கொடுத்து மற்றை யொருபெரு வேந்தற்கூரீந்தா - ளொருவன்வா ளிவ்வுலகிற் பெற்ற விகற்கலையேற் றூர்தியா ளவ்வுலகிற் போய்ப்பெறுங்கொ லாங்கு இஃது அகத்தோன் வாண்மங்கலம். ஒன்றென முடித்தலான் இருவர் வேற்குஞ் சிறுபான்மை மண்ணுதல் கொள்க. பிறர்வேல் போலா தாகி யிவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே யிரும்புற நீறு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கும் மங்கல மகளிரொடு மாலை சூட்டி யின்குர லிரும்பை யாழெடுத் தியம்ப தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங் கிருங்கடற் றானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே (புறம். 332) என வரும். தொகைநிலை என்னுந் துறையொடு தொகைஇ - அவ்வாண் மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்துபட்ட படைக்கடற்கெல்லாஞ் சிறப்புச் செய்வான் ஒருங்கு வருகெனத் தொகுத்தல் என்னுந் துறையொடு முற் கூறியவற்றைத் தொகுத்து; உ-ம் : கதிர்குருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை யெதிர்சுருக்கி யேந்தெயில்பாழாக்கிப் - பதியிற் பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு முயர்வான் குறித்த துலகு இது புறத்தோன் தொகை நிலை. தலைவன் மதில்சூழ்ந்த தார்வேந்தர்க் கொன்று வலைவன் வலைசுருக்கி யாங்கு - நிலையிருந்த தண்டத் தலைவர் தலைக்கூட வீற்றிருந்தா னுண்டற்ற சோற்றா ரொழிந்து இஃது அகத்தோன் தொகைநிலை. வகைநால் மூன்றே துறை என மொழிப - அங்ஙனம் ஒன்று இருவகைப்பட வந்த பன்னிரண்டேயாம் உழிஞைத்துறை என்று கூறுவர் ஆசிரியர் எ-று. முற்றலையுங் கோடலையும் இருவகையென்றார். துறை யென்றதனான் அவற்றின் பகுதியாய் வருவனவும் அத்துறைப்பாற் படுத்துக. உழையரை அழைத்து நாட்கொள்க என்றலும், அவர் அரசர்க்கு உரைப்பனவுங் குடைச்சிறப்புக் கூறுவனவும், முரசு முதலியன நாட்கோடலும், பிறவுங் குடைநாட் கோடாலாய் அடங்கும். இது வாணாட் கோடற்கும் ஒக்கும். பொருவார்க்கும் அல்லுழிப் போவார்க்குங் குடை பொதுவாகலின் முற்கூறி, மேற்வருகின்ற போர்த்தொழிற்கே சிறத்தலின் வாளினைப் பிற்கூறினார். இவை போர்த்தொழிற்கு ஏதுவாகலின் முற்கூறினார். எயிலுட் பொருதலும், புட்போல உட்பாய்தலும், ஆண்டுப்பட்டோர் துறக்கம் புகுதலும், பிறவும் பாசிமறத்தின்பாற் படும். ஏறுந் தோட்டியுங் கதவும் முதலியன கோடல் அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கத்தின்பாற் படும். படிவம் முதலியன கோடல் குடுமிகொண்ட மண்ணு மங்கலத்தின் பாற்படும். புறத்தோன இருப்பிற் றொகைநிலைப் பாற்படும். துறையென மொழிப என எல்லாவற்றையுந் துறையென்று கூறுகின்றவர் தொகைநிலை யென்னுந் துறையெனத் தொகைநிலையை விதந்தோதினார். அது பலவாகாது இரண்டு துறைப்பட்டு வேறு வேறு துறையாம் என்றற்கு. அது தும்பைத் தொகைநிலைபோல் இருபெரு வேந்தரும் உடன் வீழ்தலுஞ் சிறுபான்மை உளதாமென் றுணர்க. எதிர்செல்லா தடைத்திருந்தோன் புறப்பட்டுப் படுதல் சிறுபான்மையாதலின், இதனையும் வேறொரு துறையாக்கிப் பதின்மூன் றென்னராயினார். உ-ம் : அறத்துறைபோ லாரெயில் வேட்ட வரசர் மறத்துறையு மின்னாது மன்னோ - நிறைச்சுடர்க ளொன்றி வரப்பகல்வா யொக்க வொளிதேய்ந்தாங் கின்றிவர் வீழ்ந்தா ரெதிர்ந்து என வரும். இதுவேறு வேறு வருதலுஞ் சிறுபான்மை. இன்னுந் துறை யென்றதனானே புறத்தோன் கவடிவித்துதலுந் தொகை நிலைப்பாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க. அது, மதியேர் வெண்குடை என்னும் (392) புறப்பாட்டினுள், வெள்ளை வரகுங் கொள்ளும் விந்தும் வைகலுழவ வாழிய பெரிரெனச் சென்றியா னின்றென னாக என வரும். ஒன்ற வென்றதனான் அகத்தோன் வாண்மண்ணுதல் சிறுபான்மை என்று கொள்க. இனி மகண்மறுத்தோன் மதிலை முற்றுதன் மகட்பாற் காஞ்சிக்கண் அடங்கும். யானையுங் குதிரையுங் மதிற்போர்க்குச் சிறந்தன அன்மையிற் கொள்ளராயினர். ஈரடியிகந்து பிறக்கடி யிடுதலுங்கேடு என்று உணர்க. தும்பை நெய்தலது புறணாதல் 69. தும்பை தானே நெய்தலது புறனே. இது தும்பைத்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனாமென்கின்றது. இதுவும் மைந்து பொருளாகப் பொருதலின் மண்ணிடையீடாகப் பொரும் வஞ்சிக்கும் மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும்பிற் கூறினார். (இ-ள்.) தும்பைதானே நெய்தலது புறனே - தும்பை யென்னும் புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாகும் எ-று. தும்பை யென்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர். நெய்தற்குரிய பெருமணலுலகம் போலக் காடும் மலையுங் கழனியு மல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும் பொழுது வரைவின்மையானும், ஏற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமுந் தலைமகட்கே பெரும்பான்மை உளதாயவாறுபோலக் கணவனை இழந்தார்க்கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக்குறிப்பின் அருள்பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குப வாகலானும், ஒருவரும் ஒழியாமற் பட்டுழிக் கண்டோர் இரங்குப வாகலானும் பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று. (14) தும்பைத்திணையது பொது இலக்கணம் 70. மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை யழிக்குஞ் சிறப்பிற் றென்ப. இஃது அத்தும்பைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) மைந்து பொருளாக வந்த வேந்தனை - தனது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறு பொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தனை; சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்றென்ப - அங்ஙனம் மாற்றுவேந்தனும் அவன் கருதிய மைந்தே தான் பெறு பொருளாக எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க்குஞ் சிறப்பினை யுடைத்து அத்தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. வரல் செலவாதல் செலவினும் வரவினும் (தொல். சொல். கிளவி. 28) என்பதன் பொதுவிதியாற் கொள்க. மைந்து பொருளாக என்பதனை வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட்டுக. அஃது இருவர்க்கும் ஒத்தலின். எனவே இருவரும் ஒருகளத்தே பொருவாராயிற்று. இது வேந்தனைத் தலைமையாற் கூறினாரேனும் ஏனையோர்க்குங் கொள்க. அவரும் அதற்குரியராதலின். இதனைச் சிறப்பிற் றென்றதனான் அறத்திற் றிரிந்து வஞ்சனை யாற் கொல்வனவும் தேவராற் பெற்ற வரங்களாற் கொல்வனவும், கடையூழிக் கட்டோன்றிய ஆதலிற் சிறப்பிலவாம். அவையுஞ் சிறுபான்மை கொள்க. (15) தும்பைக்குரிய சிறப்புவிதி 71. கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற் சென்ற வுயிரி ளின்ற யாக்கை யிருநிலந் தீண்டா வருநிலை வகையோடு இருபாற் பட்ட வொருசிறப் பின்றே. இது தும்பைக்காகவதோர் இலக்கணங் கூறுதலின் எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) கணையும் வேலும் துணையுற மோய்த்தலின் - பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகல நின்று அம்பானெய்தும் வேல்கொண்டேறிந்தும் போர்செய்ய, அவ்வம்பும் வேலும் ஒன்றோடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின்; சென்ற உயிரின் நின்ற யாக்கை. சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு; இருநிலந் தீண்டா யாக்கை அருநிலை வகையோடு - வாளுந் திகிரியு முதலியவற்றான் ஏறுண்ட தலையேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரு நிலையுடைத்தாகிய கூறுபாட்டோடே கூடி; இருபாற்பட்ட ஒரு சிறப்பின்று. இரண்டு கூறுபட்ட ஒரு சிறப்பிலக்கணத்தை யுடைத்து முற்கூறிய தும்பைத்திணை எ-று. எனவே, முற்கூறிய மைந்துபொருளாகப் பொருதலினும் நின்ற யாக்கை சிறத்தலும் இருநிலந் தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலுங் கூறினார். இது திணைச் சிறப்புக் கூறியது. மொய்த்தலி னென்றது. யாக்கை யற்றாட வேண்டுதலிற், கணையும் வேலுமன்றி வாள் முதலியனவும் ஏதுவாகக் கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறு போல், அலீகன்இற அற்றுழியும் உடம்பாடுதலின், அட்டையாட லெனவும் இதனைக் கூறுப. இனி மேற்றுறை கூறிகின்றது மைந்துபொருளாக வந்ததுஞ் சென்றதுமாகிய பொது இலக்கணத்திற்கே எண்றுணர்க. நிரை கொள்ளப்பட்டோன் பொருகளங் குறித்துப் போர்செய்தலும் அவன் களங்குறித்தது பொறாது நிரைகொண்டானுங் களங்குறித்துப் போர் செய்தலும் வெட்சிப்புறத்துத் தும்பையாம். வஞ்சியுள்ளும் விழுப்புண்பட்ட வீரரை நோக்கி வேந்தற்குப் பொறாமை நிகழ்ந்து துறக்கம் வேண்டுழி நிகழ்ந்த தும்பையும் வஞ்சிப்புறத்துத் தும்பையாம். முற்றப் பட்டோனை முற்று விடுத்தற்கு வேறொரு வேந்தன் வந்துழி. அவன் புறம்போந்து களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும், அவன் களங்குறித்துழிப் புறத்தோனும் களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத் தும்பையாம். இவையெல்லாம் மண்ணசையும் அரண்கோட லுமின்றி மைந்து பொருளாகச் சென்று துறக்கம் வேட்டுப் பொருந் தும்பைச் சிறப்புக் கூறிற்று. மேற்காட்டுந் துறைகளெல்லாம் இச்சூத்திரத்துக்கூறிய இரண்டற்கு மன்றி, பொருளாயதற்கேயா மென்றுணர்க. உதாரணம்:- நெடுவேல் பாய்ந்த மார்பின் மடல்வன் போந்தையி னிற்கு மோர்க்கே (புறம். 297) எய்போற் கிடந்தானென் னேறு (புறப். பொருள். 176) என வருவன கணையும் வேலும் மொய்த்து நின்றன. கிடந்தானென்புழி நிலந்தீண்டாவகையின் நின்ற யாக்கை யாயிற்று. வான்றுறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவ ரென்பதற்குச் சான்றுரைப்ப போன்றன தங்குறை - மான்றேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட வுயிர்விடாப் பாய்ந்தன மேன்மேற்பல. (பெரும் பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1350. அமர் 6) இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டாவகை. பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணெமதே மண்ணெமதே வென்று. இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டா வகை. இது திணைக்கெல்லாம் பொது அன்மையிற் றியையெனவும் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற் றுறையெனவும் படாது; ஆயினுந் துறைப் பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதாமென் றுணர்க. (16) தும்பை பன்னிரு துறைத்து ஆதல் 72. தானை யானை குதிரை யென்ற நோனா ருட்கு மூவகை நிலையும் வேன்மிகு வேந்தனை மோய்த்தவழி யொருவன் தான்மீண் டெறிந்த தார்நிலை யன்றியும் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் ஒருவ னொருவனை யுடைபடை புக்குக் கூழை தாங்கிய வெருமையும் படையறுத்துப் பாழி கொள்ளு மேமத் தானுங் களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு பட்ட வேந்தனை யட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் வாள்வாய்த்து இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரு மொழியாத் தொகை நிலைக்கண்ணுஞ் செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் பல்படை யொருவற் குடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலு முளப்படப் புல்லிந் தோன்றும் பன்னிரு துறைத்தே. இது மைந்து பொருளாகிய தும்பைத்திணைக்குத் துறை இனைத்தென்கிறது. (இ-ள்.) தானை யானை குதிரை எனற நோனார் உட்கும் மூவகை நிலையும் - தானைநிலை யானைநிலை குதிரை நிலை என்று சொல்லப்பட்ட போர்செய்தற்கு ஆற்றா அரசர் தலைபனிக்கும் மூன்று கூறுபாட்டின்கண்ணும்; நோனார் உட்குவரெனவே நோன்றார் உட்காது நிற்பாராயிற்று. அவர் போர்கண்டு சிறப்புச் செய்யும் தேவரும் பிணந்தின் பெண்டிரும் படையாளர் தாயரும் அவர் மனைவியருங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியருங் கண்டோரும் பிறரு மென்று கொள்க. துறக்கம்புகு வேட்கையுடைமையிற் காலாளை முற்கூறி, அதன் பின்னர் மதத்தாற் கதஞ்சிறந்து தானும் போர்செய்யும் யானையைக் கூறி, மதஞ்சிறவாமையிற் கதஞ்சிறவாத குதிரையை அதன்பிற கூறினார். குதிரையானன்றித் தேர் தானே செல்லாமையிற் றேர்க்கு மறமின்றென்று அது கூறாராயினார். நிலை யென்னாது வகை யென்றதனான் அம்மூன்று நிலையுந்தாமே மறஞ்சிறப்பப் பொருதுவீழ்தலும், அரசனே வலின் தானை பொருது வீழ்தலும், யானையுங் குதிரையும் ஊர்ந்தாரேவலிற் பொருதலும், படையாளர் ஒருவரொருவர் நிலை கூறலும் அவர்க்கு உதவலுமென இப்பகுதியெல்லாங் கொள்க. இனி தாயர் கூறுவன மூதின் முல்லையாம்; மனைவியர் கூறுவன இல்லாண்முல்லையாம்; கண்டோர் கூறுவன வல்லாண் முல்லையாம்; பாணர் கூறுவன பாண்பாட்டாம் என்க. இவை கூறி ஏனைக் கூத்தர் முதலியோர் கூறுவன கூறார். மனம் ஞெகிழ்ந்து போவாரு முளர். அவை ஓரொரு துறையாக முதனூற்கண் வழங்காமையானும் அவற்றிற்கு வரையறை யின்மையானும் இவர் தானைநிலையென அடக்கினார். இச்சிறப்பான் இதனை முற்கூறினார். அத்தானை சூடிய பூக்கூறலும், அதனெழுச்சியும், அரவமும், அதற்கரசன் செய்யுஞ் சிறப்பும், அதனைக் கண்டு இடை நின்றோர் போரை விலக்கலும் அவர் அதற்குடம்படாமைப் போர் துணிதலும், அத்தானையுள் ஒன்றற்கிரங்கலும், அதற்குத் தலைவரை வகுத்தலும், வேந்தன் கற்றத்தாரையுந் துணை வந்த அரசரையும் ஏத்துவனவும், நும்போர் எனை நாட்டு என்றலும், இது பெருவேந்தரும் இன்னவாறு பொருதுமென்று கையெறிதலும் போல்வன வெல்லாம் இத்துறைப்பாற் படும். உ-ம் : கார்கருதி நின்றதிருங் கெளவை விழுப்பணையான் சோர்குருதி சூழா நிலனனைப்பப் - போர்கருதித் துப்புடைத் தும்பை மலைந்தான்றுகளறுசீர் வெப்புடைத் தானையெம் வேந்து (புற. வெ. தும்பை. 1) இது பூக் கூறியது. இதனைத் திணைப்பாட்டு மென்ப. வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையுங் கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப் பன்மணிப் பூணான் படைக்கு. (புற. வெ. தும்பை. 2) இது சிறப்புச் செய்தது. வயிர்மேல் வளைநரல வைவேலும் வாளுஞ் செயிர்மேற் கனல்விழிப்பச் சீறி - யுயிர்மேற் பலகழியு மேனும். பரிமான்றேர் மன்னர்க் குலகழியு மோர்த்துச் செயின் (புற. வெ. தும்பை. 4) இது விலக்கவும் போர் துணிந்தது. மின்னார் சினஞ்சொரிவேன் மீளிக் கடற்றானை யொன்னார் நடுங்க வுலாய்நிமிரி - னென்னாங்கொ லாழித்தேர் வெல்புரவி யண்ணன் மதயானைப் பாழித்தோண் மன்னர் படை (புற. வெ. தும்பை. 5) இஃது இரண்டனுள் ஒன்றற்கு இரங்கியது. கங்கை சிறுவனும் காய்கதிரோன் செம்மலு மிங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக் - கங்கை சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார் மறுவந்தார் தத்த மனம். இது பெருந்தேவனார் பாட்டு; (புறத்திரட்டு. அமர் 10) குருக்கள் தமக்குப் படைத் தலைவரை வகுத்தது. இனிப் போர்த்தொழிலாற் றானைநிலை வருமாறு : குழாக்களிற் றரசர் குறித்தெழு கொலைக்களம் விழாக்களம் போல மெய்ம்மலி யுவகையர் ஆண்மை யுள்ளங் கேண்மையிற் றுரத்தலின் அழுந்துபடப் புல்லி விழுந்துகளம் படுநரும் நீர்ப்பெயற் பிறந்த மொக்குள் போலத் தாக்கிய விசையிற் சிதர்ந்துநிலம் படுநருந் தகருந் தகருந் தாக்கிய தாக்கின் முகமுகஞ் சிதர முட்டு வோரும் முட்டியின் முறைமுறை குத்து வோருங் கட்டிய கையொடு கால்தட் குநருங் கிட்டினர் கையறத் தொட்டுநிற் போருஞ் சுட்டிய பெயரற விட்டழிப் போருஞ் சக்கரம் போலச் சங்குவிட் டெறிநருஞ் சிலைப்புடை முரசிற் றலைப்புடைக் குநரும் மல்லிற் பிடித்தும் வில்லி னெற்றியும் ஊக்கியும் உரப்பியு நோக்கியு நுவன்றும் போக்கியும் புழுங்கியு நாக்கடை கல்வியும் எயிறுடன் றிருகியுங் கயிறுபல வீசியும் இனைய செய்தியின் முனைமயங் குநரும் பிறப்பும் பெருமையுஞ் சிறப்புஞ் செய்கையும் அரசறி பெருமையும் உரைசெல் லாண்மையும் உடையோ ராகிய படைகொண் மாக்கள் சென்று புகு முலக மொன்றே யாதலின் ஒன்றுபடு மனத்தொடு கொன்று கொன்று வப்பச் செஞ்சோற்று விலையுந் தீர்ந்துதம் மனைவியர் தம்பிணந் தழீஇ நொந்துகலுழ்ந் திரங்கவும் புதுவது வந்த மகளிர்க்கு வதுவை சூட்டிய வான்படர்ந் தோரே. (புறத்திரட்டு. 1355. அமர். 10) எனவும், சென்ற புயிர்போலத் தோன்றா துடல்சிதைந்தோ னின்ற வடிபெயரா நின்றவை - மன்ற லரமகளிர் மங்கலத்திற் காங்காங்கு வைத்த மரவடியே போன்றன வந்து எனவும் வரும். வெண்குடை மதிய மேனிலாத் திகழ்தரக் கண்கூ டிறுத்த கடன்மருள் பாசறைக் குமரிப் படைதழீஇத் கூற்றுவினை யாடவர் தமர்பிற ரறியா வமர்மயங் கழுவத் திறையும் பெயருந் தோற்றி னுமரு ணாண்முறை தபுத்தீர் வம்மி னீங்கெனப் போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரும் அரவுமிழ் மணியிற் குறுகார் நிறைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே. (புறம். 294) கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். (குறள். படைச். 4) நறுவிரை துறந்த நரைவெண் கூந்த லிரங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன் மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த குடப்பாற் சில்லுறை போலப் படைக்குநோ யெல்லாந் தானா யினனே. (புறம். 276) தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற் கொற்கத் துதவினா னாகுமால் பிற்பிற் பலர்புகழ் செல்வந் தருமால் பலர்தொழ வானக வாழ்க்கையு மீயுமா லன்னதோர் மேன்மை யிழப்பப் பழிவருவ செய்பவோ தானேயும் போகு முயிர்க்கு. (தகடூர்யாத்திரை புறத்திரட்டு. 1315. படைச். 9) என வரும். கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும் வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலு மொத்தன்று மாதோ விவற்கே செற்றிய திணிநிலை யலறக் கூழை போழ்ந்துதன் வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி யோம்புமி னோம்புமி னிவணென வோம்பாது தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக் கன்றமர் கறவை மான முன்சமத் தெதிர்ந்ததன் றோழற்கு வருமே. (புறம். 275) இஃது உதவியது. இனி யானைநிலைக்குங் குதிரைநிலைக்குந் துறைப்பகுதியாய் வருவனவுங் கொள்க. அஃது அரசர்மேலும் படைத்தலைவர்மேலும் ஏனையோர்மேலும் யானை சேறலுங், களிற்றின்மேலுந் தேரின் மேலுங் குதிரைசேறலுந், தன்மேலிருந்து பட்டோருடலை மோந்து நிற்றலும் பிறவுமாம். உ-ம் : மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற் காயத்தூறஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயுந் தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேன் மலையுறையுந் தெய்வம்போல் வந்து. (பெரும் பொருள் விளக்கம் புறத்திரட்டு. 1401. யானை மறம். 14) கையது கையோ டொருதுணி கோட்டது மொய்யிலைவேன் மன்னர் முடித்தலை - பைய வுயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே யெங்கோன் வயவெம்போர் மாறன் களிறு இவை யானைநிலை. பல்லுருவக் காலின் பரியுருவத் தாக்கித்தன் றொல்லை யுருவிழந்த தோற்றம்போ - லெல்லா மொருகணத்துத் தாக்கி யுருவிழந்த பாய்மாப் பொருகளத்து வீழ்ந்து புரண்டு மாவா ராதே மாவா ராதே எல்லார் மாவும் வந்தன வெம்மிற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த செல்வ னூரு மாவா ராதே யிருபேர் யாற்ற வொருபெருங் கூடல் விலங்கிடு பெருமரம்போல வுலந்தன்று கொல்லவன் மலைந்த மாவே (புறம். 273) பருத்தி வேலிச் சீறூர் மன்ன னுழத்தத ருண்ட வோய்நடைப் புரவி கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ நெய்ம்மதி யருந்திய கொய்சுவ லெருத்திற் றண்ணடைமன்னர் தாருடைப் புரவி யணங்குடை முருகன் கோட்டத்துக் கலந்தொடா மகளிரி னிகழ்ந்துநின் றவ்வே. (புறம். 299) இவை குதிரைநிலை. நிலம் பிறக்கிடுவது போல என்னும் (303) புறப்பாட்டும் அது. இவை தனித்து வாராது தொடர்நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர்யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க. புறநானூற்றுள் தனித்து வருவனவுங் கொள்க. வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை - தன்படை போர்செய்கின்றமை கண்டு தானும் படையாளர்க்கு முன்னேசென்று வேலாற் போர்செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி, அதுகண்டு வேறோரிடத்தே பொருகின்ற தன் றானைத் தலைவனாயினும் தனக்குத் துணைவந்த அரசனாயினும் போரைக் கைவிட்டு வந்து வேந்தனொடு பொருகின்றாரை எறிந்த தார் நிலைக்கண்ணும்; தாரென்பது முந்துற்றுப் பொரும்படையாதலின் இது தார் நிலையாயிற்று. உ-ம் : வெய்யோ னெழாமுன்னம் வீங்கிருள் கையகலச் செய்யோ னொளிதிகழுஞ் செம்மற்றே - கையகன்று போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் றார்தாங்கி நின்ற தகை. (பெரும் பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1363. தானைமறம். 4) என வரும். நிரப்பாது கொடுக்கும் என்னும் (180) புறப்பாட்டினுள் இறையுறு விழுமந் தாங்கி என்பதும் அது. இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போ ரினக்களிற்றி யானை யியறேர்க் குரிசி னுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை யெடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்ச னடுத்தெறி குறட்டி னின்றுமாய்ந் தனனே மறப்புகழ் நிறைந்த மைந்தினோ னிவனு முறைப்புழி யோலை போல மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே. (புறம். 290) இதுவும் அதன்பாற்படும். அன்றியும் இருவர் தலைவர் தபுதிப்பக்கமும். இருபெரு வேந்தர் தானைத்தலைவருந் தத்தம் வேந்தர்க்காகித் தார்தாங்குதலே யன்றி அத்தலைவரிருவருந் தம்மிற்பொருது வீழ்தற் கண்ணும்; பக்கமென்றதனான் அவரு ளொருவரொருவர் வீழ்தலுங் கொள்க. உ-ம் : ஆதி சான்ற மேதகு வேட்கையி னாளுங் கோளு மயங்கிய ஞாட்பின் மதியமு ஞாயிறும் பொருவன போல வொருத்தி வேட்கையி னுடன்வயிற்றிருவர் செருக்கூர் தண்டி னெருக்கின ரெனவு மரவணி கொடி யோற் கிளையோன் சிறுவனும் பெருவிறல் வீமற் கிளையோன் சிறுவனு முடன்றமர் தொடங்கிய காலை யடங்கா ருடங்குவருஞ் சீற்றத்துக் கைப்படை வழங்கி யிழந்தவை கொடாஅர் கிடந்தன வாங்கித் தேர்மிசைத் தமியர் தோன்றார் பார்மிசை நின்றுசுடர் நோக்கியு மொன்றுபடத் திருகியுந் தும்பியடி பிணங்கு மண்ணிற் றோற்றமொடு கொடி கொடி பிணங்கி வீழ்வன போல வொருவயின் வீழ்ந்தடு காலை யிருபெரு வேந்தரும் பெரிதுவந் தனரே. இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் கண்டுகொள்க. இனித் தலைவரேயன்றிப் பிறரும் அவ்வாறு பொரினும் அதன்பாற் படுத்துக. உடைபடை ஒருவன் புக்கு ஒருவனைக் கூழைதாங்கிய எருமையும் - தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத் தலைவன் சென்று நின்று அங்ஙனங் கெடுத்த மாற்று வேந்தன் படைத்தலைவனை அவன் எதிர்கொண்டுநின்ற பின்னணி யோடே தாங்கின கடாப்போலச் சிறக்கணித்து நிற்கு நிலைமைக் கண்ணும்; ஒருவ னொருவனைத் தாங்கின எருமையென முடிக்க. உ-ம் : சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால் வேற்றெருமை போன்றா னிகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடை வருங்காற் பின்வருவார் யார் என வரும். படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும் - கைப் படையைப் போக்கி மெய்யாற் போர்ச்செய்யும் மயக்கத்தின் கண்ணும். பாழி, வலி; இஃது ஆகுபெயர். உ-ம் : கெகால்லேறு பாய்ந்தழிந்த கோடுபோற் றண்டிறுத்து மல்லேறு தோள்வீமன் மாமனைப் புல்லிக்கொண் டாறாத போர்மலைந்தான் ஆங்கரசர் கண்டார்த்தா ரேறாட லாய ரென (பாரதம்) என்னும் பாரதப்பாட்டுக் கொள்க. நீலக் கச்சைப் பூந்துவ ராடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வருங் களிற்றொடு வேறுரந்தினியே தன்னுந் துரக்குவன் போலு மொன்னல ரெஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக் கையின் வாங்கித் தழீஇ மொய்ம்பி னூக்கி மெய்க்கொண் டனனே (புறம். 274) என்பதும் அது. களிறெறிந் தெதிர்ந்தோர் பாடும் - மாற்றுவேந்தன் ஊர்ந்து வந்த களிற்றைக் கையெறிந்தானுங் கடுக்கொண்டெதிர்ந்தானும் விலக்கி அவனையும் அக்களிற்றையும் போர்செய்தோர் பெருமைக்கண்ணும்; உ-ம் : இடியா னிருண்முகிலு மேறுண்ணு மென்னும் படியாற் பகடொன்று மீட்டு - வடிவே லெறிந்தார்த்தார் மள்ள ரிமையாத கண்கொண் டறிந்தார்த்தார் வானொரு மாங்கு. என வரும். வானவர் போரிற் றானவர்க் கடந்த மான வேந்தன் யானையிற் தனாஅது பல்படை நெரிவ தொல்லான் வீமன் பிறக்கிடங் கொடானதன் முகத்தெறிந் தார்த்துத் தானெதிர் மலைந்த காலை யாங்கதன் கோடுழக் கிழிந்த மார்பொடு நிலஞ்சேர்ந்து போர்க்கோள் வளாகந் தேர்த்துக ளனைத்தினு மிடை கொள லின்றிப் புடைபெயர்ந்து புரண்டு வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன் பெருந்தகை யாண்மையொடு பெயர்த்தலோ வரிதே. இப் பாரதப்பாட்டும் இதன்பாற்படும். இது களிறெறிந்தான் பெருமை கூறுதலின் யானைநிலையுள் அடங்காதாயிற்று. களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும். அங்ஙனம் நின்று களிற்றொடு பட்ட வேந்தனைக் கொன்ற வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச் சூழ்ந்து நின்று ஆடுத் திரட்சிக் கண்ணும்; அமலுதல் நெருங்குதலாதலின், அமலை யென்பதூஉம் அப்பொருட்டாயிற்று; உ-ம் : ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாம் கேளன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி யாடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து என வரும். நான்மருப் பில்லாக் கானவில் யானை வீமன் வீழ்த்திய துடன்றெதிர்ந் தாங்கு மாமுது மதுரை மணிநிறப் பாகனோ டாடமர் தொலைத்த லாற்றான் றேரொடு மைத்துனன் பணியின் வலமுறை வந்து கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந் திறைஞ்சின னைவர்க் கிடையோ னதுகண்டு மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனாது வேழம் விலக்கி வினைமடிந் திருப்பச் சூர்மருங் கறுத்த நெடுவேள் போல மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய வாளுகு களத்து வாள்பல வீசி யொன்னா மன்னரு மாடினர் துவன்றி யின்னா வின்ப மெய்தித் தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே. இப் பாரதப்பாட்டும் அது. வாள் வாய்த்து இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும் - இருபெரு வேந்தர் தாமும் அவர்க்குத் துணையாகிய வேந்தருந் தானைத்தலைவருந் தானையும் வாட்டொழின் முற்றி ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்ந்த தொகைநிலைக் கண்ணும்; உ-ம் : வருதார் தாங்கி யமர்மிகல் யாவது பொருதாண்டொழிந்த மைந்தர் புண்டொட்டுக் குருதிச் செங்கைக் கூந்த நீட்டி நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டி ரெடுத்தெறி யனந்தர்ப் பறைச்சீர் தூங்கப் பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்து மறத்தின் மண்டிய விறற்போர் வேந்தர் தாமாய்ந்த னரே குடை துளங் கினவே யுரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞில மிடங்கெட வீண்டிய வியன்கட் பாசறை களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர வுடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவி னோரு மாற்ற வரும்பெற லுலக நிறைய விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே (புறம். 62) என வரும். செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் - போரிடத்தே தன்வேந்தன் வஞ்சத்தாற் பட்டானாகச் சினங்கொண்ட மனத்தனாய்ப் பெரும்படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல புகழைப் பெற்ற நிலைமைக் கண்ணும்; அது குருகுல வேந்தனைக் குறங்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர்மக்க ளைவரையுங் கொன்று வென்றி கொண்ட அசுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன. தன்னரசன் அறப்போரிடத்துப் படாது வஞ்சனையாற் படுதலின், அவனுக்குச் சினஞ் சிறந்தது. இச்சிறப்பில்லாத தும்பையும் இக்கலியூழிக்கா மென்பது சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்று (தொல். பொ. புற. 15) என்புழிக் கூறிற்று. உ-ம் : மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபி னருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக் காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி னைவகை வேந்தரோ டரும் பெறற் றம்பியைக் கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற் றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற் றம்பியர் மூவரு மைம்பான் மருகரு முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியந்தனர் நயந்த விசும்பி னியன்றலை யுலகமு மறிந்ததா லதுவே இப்பாரதப் பாட்டினுள் அவ்வாறாதல் காண்க. ஒருவற்குப் பல் படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் - அங்ஙனம் நல்லிசை எய்திய ஒருவற்கு வஞ்சத்தாற் கொன்ற வேந்தன் பல்படை புறங்கொடுத்தலின் அவரைக் கோறல் புரிதல் அறனன்றென்று கருதாது அவன் வாளாற் றடிந்து கொன்று குவித்தற் கண்ணும்; வஞ்சத்தான் தன் வேந்தனைக் கொள்றமைபற்றித் தனக்குக் கெட்டோரையும் அடங்கக் கோறற்கு உரியானை நல்லிசை முன்னர்ப் பெற்றோனெற்ர். நூழிலாவது கொன்று குவித்தல், வள்ளை நீக்கி வயமீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் வேழப் பழனத்து நூழிலாட் டோதை (பத்துப் மதுரைக் 255. 257) என்றாற்போல, உ-ம் : அறத்திற் பிறழ வரசெயியுந் தானை மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச் செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே பல்படையார் பட்ட படி என வரும். புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. பொருந்தித் தோன்றும் பன்னிரு துறையினை யுடைத்துத் தும்பைத்திணை எ-று. இன்னும், உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து எனவுங் கூட்டிப் பன்னிரண்டின் கண்ணும் முற்கூறிய வெட்சித்திணை முதலியவற்றான் நிகழுந் துப்பையும் வந்துகூடப் பின் அவற்றிற்கு முரியவாய்ப் பொருந்தித்தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றும் பொருள் கொள்க. பொருள் இடமாகத் துறை இடத்தியல் பொருளாங் கால், ஏனைத் திணைக்கட் கூறினாற் போல, ஒன்று நிகழ்ந்தபின் ஒன்றுநிகழாது இரண்டு படைக்கும் பொருந்த ஒரு காலத்து இத்திணை நிகழுமென்றற்குப் புல்லித் தோன்றும் என்றார். பல்பெருங் காதமாகிய நெடுநெறியிடைத் துணிந்த இடத்தையும் உலகம் துறையென்பது போல இச் சூத்திரத்துத் துறையைத் தொகுதியுடன் அறுதி காட்டிற்றென்றுணர்க. இவ்விலக்ககணம் மேல் வருகின்ற திணைகட்கும் ஒக்கும். (17) வாகை பாலையது புறனாதல் 73. வாகை தானே பாலையது புறனே. இவ் வாகைத்திணை பாலையெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாமென்கின்றது. (இ-ள்.) வாகை தானே - இனிக் கூறாதுநின்ற. புறத்திணையுள் வாகையெனப்பட்டது தானே; பாலையது புறனே. பாலையென்னும் அகத்திணைக்குப் புறனாம் எ-று. என்னை? பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி, இல்லறம் நிகழ்த்திப் புகழெய்துதற்குப் பிரியுமாறுபோலச், சுற்றத்தொடர்ச்சியின் நீங்கி அறப்போர் செய்து துறக்கம் பெருங் கருத்தினாற் சேறலானும், வாயினுந் மனையோரை நீங்கிச் சேறலானும் பிரிவுள தாயிற்று. பாலை தனக்கென ஒரு நிலமின்றி நால்வகை நிலத்தும் நிகழு மாறு போல, முற்கூறிய புறத்திணை நான்கும் இடமாக வாகைத் திணை நிகழ்தலிற் றனக்கு நிலமின்றாயிற்று. நாளு நாளு மாள்வினை யழுங்க வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழ் என ஆள்வினைச் சிறப்புக் கூறிப் பிரியுமாறு போல, இதற்குப் துறக்கமே எய்தும் ஆள்வினைச்சிறப்புக் கூறலுங் கொள்க. பாலை பெருவர விற்றாய்த் தொகைகளுள் வருமாறு போல வாகையுங் பெருவரவிற்றாய் வருதலும் கொள்க. (18) வாகைத்திணையது பொது இலக்கணம் 74. தாவில் கொள்கைத் தத்தங் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்த லென்ப. இஃது அவ் வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) தாவில் கொள்கைத் தத்தங் கூற்றை - வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு, வருணத் தோரும் அறிவருந்தாபதர் முதலியோருந் தம்முடைய கூறுபாடுகளை; பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப - இருவகைப்பட மிகுதிப்படுத்தலென்று கூறுவர் ஆசிரியர் எ-று. இருவகையாவன, தன்னைத் தானே மிகுதிப்படுத்தலும் பிறர் மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகைக்குள் உறழ்ச்சியாற் பெற்ற வென்றியை வாகையெனவும் இயல்பாகப் பெற்ற வென்றியை முல்லையெனவுங் கூறுவர். படுதலென்னாது படுத்த லெனப் பிறவனையாற் கூறினார். அவர் தம்மினுறழாத வழியும் ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோர் இவரென் றுரைத்தலும் வாகை யென்றற்கு ஒன்றனோடு ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன்றென்றாற்போல உலகமுழுதும் அறியும் உயர்ச்சியுடமையும் அது. தாவில் கொள்கை யெனவே இரணியனைப்போல வலியினாலும் வருத்தத்தானுங் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று. (19) வாகையின் சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறல் 75. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபி னரசர் பக்கமும் இருமூன்று பரபி னேனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி னாற்றிய வறிவன் றேயமும் நாலிரு வழக்கிற் றாபதப்பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணும் அனைநிலை வகையோ டாங்கெழு வகையிற் நொகைநிலை பெற்ற தென்மனார் புலவர் இது வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினார். இன்னும் அதற்கேயாவதொரு சிறப்பிலக்கணம் பொதுவகை யாற் கூறுகின்றது. மேற்கூறி வருகின்றாற்போலத் துறைப் படுத்திக் கூறுதற்கேலாத பரப்புடைச் செய்கை பலவற்றையுந் தொகுத்து ஒரோவொன்றாக்கி எழுவகைப்படுத்திக் கூறுதலின். (இ-ள்.) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பழக்கமும் - ஆறு கூற்றினுட்பட்ட பார்ப்பியற் கூறும்; ஆறு பார்ப்பியலென்னாது வகை யென்றதனான் அவை தலை இடை கடை யென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க. அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஓத்து; இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமு மாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுந்தருமநூலும் இடையாய ஓத்து; அதர்வம் வேள்வி முதலிய ஒழுக்கங் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுஞ் சூழும் மந்திரங்கள் பயிறலின் அவற்றொடு கூறப்படாதாயிற்று. ஆறங்கமாவன, உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும், அவ்விரண்டையும் உடனாராயும் ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்துவாசம் ஆபத்தம்பம், ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம். தருமநூலாவன, உலகியல்பற்றி வரும் மனுமுதலிய பதினெட்டும்; இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின. இனி, இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சிநூலும் அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் கடையாய ஒத்து. எழுத்துஞ்சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப் பயன் தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஒத்தாமென்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரமும் போல்வன இலக்கியம். இனித் தமிழ்ச்செய்யுட்கண்ணும் இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீகனாருங் கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையுங், கடைச் சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்பையுஞ் சிறப்பின்மையையும் அறிவித்தற்கு. இவற்றுள் தருக்கமுங் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம். இனி ஓதுவிப்பனவும் இவையேயாகலின் அவைகட்கும் இப்பகுதி மூன்றும் ஒக்கும். ஓதுவித்தலாவது கொள்வோ னுணர்வு வகை அறிந்து அவன் கொள்வரக் கொடுக்கும் ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுமாம். வேட்டலாவது, ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகியற்றீயாயினும் ஒன்றுபற்றி மங்கல மரபினாற் கொடைச்சிறப்புத் தோன்ற அவிமுதலிய வற்றை மந்திரவிதியாற் கொடுத்துச் செய்யுஞ் செய்தி. வேளாண்மைபற்றி வேள்வியாயிற்று. வேட்பித்தலாவது, வேள்வியாசிரியர்க்கோதிய இலக்கணமெல்லாம் உடையனாய், மாணாக்கற்கு அவன் செய்த வேள்விகளாற் பெரும் பயனைத் தலைப்படுவித்தலை வல்லனாதல். இவை மூன்று பகுதியவாதல் போதாயனீயம் முதலியவற்றானுணர்க. கொடுத்தலாவது, வேள்வியாசானும் அவற்குத் துணையாயினாரும் ஆண்டு வந்தோரும் இன்புறுமாற்றான் வேளாண்மையைச் செய்தல். கோடலாவது, கொள்ளத் தரும் பொருள்களை அறிந்து கொள்ளுதல். உலகு கொடுப்பினும் ஊண் கொடுப்பினும் ஒப்ப நிகழும் உள்ளம் பற்றியுந், தாஞ் செய்வித்த வேள்விபற்றியுங் கொடுக்கின்றான் உவகைப்பற்றியுங், கொள்பொருளின் ஏற்றிழிவு பற்றியுந், தலை இடைகடையென்பனவுங் கொள்க. இனி வேட்பித்தன்றித் தனக்கு ஓத்தினாற் கோடலுங் கொடுப்பித்துக் கோடலுந் தான் வேட்டற்கக் கோடலுந் தாயமின்றி இறந்தோர் பொருள் கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலுந்துரோணாசாரியனைப் போல்வார் படைக்கலங் காட்டிக் கோடலும் பிறவுங் கோடற்பகுதியாம். பார்ப்பியலென்னாது பக்கமென்றதனானே பார்ப்பார் ஏனை வருணத்துக்கட்கொண்ட பெண்பாற்கட்டோன்றின வருணத்தார்க்குஞ் சிகையும் நூலும் உளவேனும் அவர் இவற்றிற்கெல்லாம் உரியரன்றிச் சிலதொழிற்கு உரியரென்பது கொள்க. உ-ம் : ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்த லீத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும் அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி (பதிற்றுப். 24) இஃது அந்தணர்க்குக் கூறிய பொது. முறையோதி னன்றி முளரியோ னல்லன் மறையோதி னானிதுவே வாய்மை - யறிமினோ வீன்றாள் வயிற்றிருந்தே யெம்மறையு மோதினான் சாந்றான் மகனொருவன் றான் இஃது ஓதல். இனி ஓதற்சிறப்பும் ஓதினாற்கு உளதாஞ் சிறப்புங் கூறுதலுங் கொள்க. இம்மை பயக்குமா லீயக் குறைவின்றாற் றம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றா லெம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல் மம்ம ரறுக்கு மருந்து (நாலடி. 132) ஆற்றவுங் கற்றா ரறிவுடையா ரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு வேற்றுநா டாகா தமவேயா மாதலா லாற்றுணா வேண்டுவ தில் (பழமொழி) ஒத்த முயற்சியா னொத்து வெளிப்படினு நித்திய மாகநிரம்பிற்றே - யெத்திசையுந் தாவாத வந்தணர் தாம்பயிற்றக் காவிரிநாட் டோவாத வோத்தி னொலி இஃது ஓதுவித்தல். எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு (குறள். 424) இஃது ஓதுவித்தற் சிறப்பு. நன்றாய்ந்த நீணிமிர்சடை முதுமுதல்வன் வாய்போகா தொன்றுபுரிந்த வீரிரண்டி னாறுணர்ந்த வொருமுதுநூ லிகல்கண்டோர் மிகல்சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து பொய்யோராது மெய்கொளீஇ மூவேழ் துறையு முட்டின்று போகிய வுரைசால் சிறப்பி னுரவோர் மருக வினைக்குவேண்டி நீ பூண்ட புலப்புல்வாய்க் கலைப்பச்சைக் சுவற்பூண் ஞாண் மிசைப் பொலிய மறங்கடிந்த வருங்கற்பின் அறம்புகழ்ந்த வலைசூடிச் சிறுநுதற்பே ரகலல்குற் சிலசொல்லிற் பலகூந்த னினக்கொத்தநின் றுணைத்துணைவியர் தமக்கமைந்த தொழில்கேட்பக் காடென்றா நாடென்றாங் கீரேழி னிடமுட்டா அது நீர்நாண நெய்வழங்கியு ம்ண்ணாணப் பலவேட்டும் மண்ணாணப் புகழ்பரப்பியும் அருங்கடிப் பெருங்காலை விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை யென்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந் தண்புனற் படப்பை யெம்மூ ராங்க ணுண்டும் தின்று மூர்ந்து மாடுகஞ் செல்வ லத்தை யானே செல்லாது மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவள ரிமயம் போல நிலீஇய ரத்தை நீ நிலமி யானே (புறம் 16) இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறும் காண்க. ஈன்ற வுலகளிப்ப வேதிலரைக் காட்டாது வாங்கியதா யொத்தானம் மாதவத்தோ - னீந்த மழுவா ணெடி யோன் வயக்கஞ்சால் வென்றி வழுவாமற் காட்டிய வாறு. இது பரசுராமனைக் காசிபன் வேட்பித்த பாட்டு. நளிகட லிருங்குட்டத்து என்னும் (26) புறப்பாட்டினுள் அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தன. இலனென்னு மெவ்வ முரையாமை யீதல் குலனுடையான் கண்ணே யுள (குறள் 223) இஃது ஈதல் ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228) இஃது ஈதற் சிறப்பு. நிலம்பொறை யாற்றா நிதிபல கொண்டுங் குலம்பெறு தீங் கந்தணர் கொள்ளார் - நலங்கிளர் தீவா யலிசொரியத் தீவிளங்கு மாறுபோற் றாவா தொளிசிறந்த தாம் (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு. 1160. குடிமரபு 10) இஃது ஏற்றல். தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்துவிடும் (நாலடி 48) இஃது ஏற்றற் சிறப்பு ஒதுசித்தலும் வேட்பித்தலும் ஏற்றலும் அந்தணர்க்கே உரிய. ஐவகை மரபின் அரசர் பக்கமும் - ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ் செய்தல் என்னும் ஐவகையிலக்கணத்தை யுடைய அரசியற் கூறும். வகையென்றதனான் முற்கூறிய மூன்றும் பொதுவும், பிற்கூறிய இரண்டுஞ் சிறப்புமாதல் கொள்க. பார்ப்பார்க்குரியவாக விதந்த வேள்வியொழிந்த வேள்விகளுள் இராசசூயமுந் துரந்த வேள்வியும் போல்வன அரசர்க்குரிய வேள்வியாம். கலிங்கங் கழுத்து யாத்துக் குளம்புங் கோடும் பொன்னணிந்த புனிற்றாநிரையுங், கனகமும் கமுகும் அன்ன முதலியனவும் செறிந்த படப்பை சூழ்ந்த மனையுந், தண்ணடையுங், கன்னியரும், பிறவுங் கொடுத்தலும், மழுவாணெடியோ னொப்ப உலகு முதலியன கொடுத்தலும் போல்வன அவர்க்குரிய ஈதலாம். படைக்கலங்களானும் நாற்படையானுங் கொடைத்தொழிலானும் பிறவாற்றானும் அறத்தின் வழாமல் காத்தல் அவர்க்குரிய காப்பாம். அங்ஙனம் காக்கப்படும் உயிர்க்கு ஏதஞ்செய்யும் மக்களையாயினும் விலங்கையாயினும் பகைத்திறத்தையாயினும் அறஞ்செய்யா அரசையாயினும் விதிவழியான் தண்டித்தல் அவர்க்குரிய தண்டமாம். இஃது அரசர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும். வகை யென்றதனானே களவு செய்தோர் இருக்கையிற் பொருள் கோடலும், ஆறிலென்று கோடலுஞ், சுங்கங் கோடலும், அந்தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப் பொருள் நும்மிடத்து யான் கொள்வலெனக் கூறிக்கொண்டு அது கோடலும், மறம்பொருளாகப் பகைவர்நாடு கோடலுந், தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன்றாயங்கோடலும், பொருளில் வழி வாணிகஞ் செய்துகோடலும், அறத்திற்றிரிந்தாரைத் தண்டத்திற் றகுமாறு பொருள்கோடலும் போல்வன கொள்க. அரசியலென்னாது பக்கமென்றதனான் அரசர் ஏனைவருணத்தார்கட் கொண்ட பெண்பாற்கட் டோன்றி வருணத்துப் பகுதியோருஞ் சில தொழிற்குரியர் என்று கொள்க. உ-ம் : சொற்பெயர் நாட்டங் கேள்வி நெஞ்சமென் றைந்துடன் போற்றி யவைதுணை யாக வெவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கைக் காலை யன்ன சீர்சால் வாய்மொழி யுருகெழு மரபிற் கடவுட் பேணியர் கொண்ட தீயின் சுடரெழு தோறும் விருப்புமெய் பரந்த பெரும்பெய ராவுதி (பதிற்று. 21) என வரும். கேள்வி கேட்டுப் படிவ மொடியாது வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச் சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல் வேறுபடு திருவி னின்வழி வாழியர் கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் வரையக நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக் கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற் புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற் பருதி போகிய புடைகிளை கட்டி யெஃகுடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன் சூடுநிலை யுற்றுச் சுடர்விடு தோற்றம் விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள் ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவி லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங் காவற் கமைந்த வரசு துறை போகிய வீறுசால் புதல்வர்ப் பெற்றனை யிவணர்க் கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப அன்னவை மருண்டனெ னல்லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை வண்மையு மாண்பும் வளனு மெச்சமுந் தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபல நனந்தலை பெயரக் கூறினை பெருமநின் படிமை யானே (பதிற்று. 74) எனவும் வருவனவற்றுள் ஓதியவாறும் வேட்டவாறுங் காண்க. ஒருமழுவாள் வேந்த னொருமூ வெழுகா லரசடு வென்றி யளவோ - வுரைசான்ற வீட்டமாம் பல்பெருந்தூ ணெங்கும் பசுப்படுத்து வேட்டநாள் பெற்ற மிகை இதுவும் வேட்டல். விசையந் தப்பிய என்னும் பதிற்றுப் பத்து ஈகை கூறிற்று. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் (குறள். 560) இது காவல் கூறிற்று. கடுங்கண்ண கொல்களிற்றான் என்னும் (14) புறப்பாட்டுட் படைக்கலங் கூறியவதனாற் காத்தல் கூறியவாறுங் காண்க. தொறுத்தவய லாரல் பிறழ்நவு மேறு பொருதசெறு வுழாது வித்துநவுங் கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இருங்க ணெருமையி னிரைதடுக் குநவுங் கலிகெழு துணங்கை யாடிய மருங்கின் வளைதலை மூதா வாம்ப லார்நவு மொலிதெங்கி னிமிழ்மருதிற் புனர்வாயிற் பூம்பொய்கைப் பாடல் சான்ற பயங்கெழு வைப்பி னாடுகவி னழிய நாமம் தோற்றிக் கூற்றடூஉ நின்ற யாக்கை போல நீசிவந் திறுத்த நீரழி பாக்கம் விரிபூங் கரும்பின் கழனி புல்லெனத் திரிகாய் விடத்தரொடு காருடை போகிக் கவைத்தலைப் பேய்மகள் கழுதூர்ந் தியங்க வூரிய நெருஞ்சி நீறாடு பறந்தலைத் தாதெரு மறுத்த கலியழி மன்றத் துள்ள மழிய வூக்குநர் மிடறபுத் துள்ளுநர் பனிக்கும் பாழா யினவே காடே கடவுண் மேன புறவே யொள்ளிழை மகளிரொடு மள்ளர் மேன வாறே யவ்வனைத் தன்றியு ஞாலத்துக் கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் குடிபுறந் தருநர் பார மோம்பி யழல் சென்ற மருங்கின் வெள்ளி யோடாது மழைவேண்டு புலத்து மாரி நிற்ப நோயொடு பசியிகந் தொரீஇப் பூத்தன்று பெருமநீ காத்த நாடே (பதிற்றுப். 13) இதனுள், மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும் அறத்திற்றிரிந்த வேந்தனை யழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக் காத்தவாறும் கூறிற்று. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். (குறள் 550) இது தண்டம். இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும்; வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும்; வாணிகரையும் வேளாளரையும் வேறுகூறாது இருமூன்று மரபினேனோரெனக் கூடவோதினார், வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்குமொத்தலின். இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண் கோடல் பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக்கூட்டி ஆறென்பாரு முளர். வழிபாடு இருவகை வேளாளர்க்கும் உரித்து. இனி வேட்டலைக் கூட்டுவார் அரசராற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்தென்பர். பக்கமென்பதனான் வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன்னியராகத் தோன்றினாரையும் அடக்குக. ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குந் தொழில்வரையறை அவர்நிலைகளான் வேறுவேறு படுதல்பற்றி அவர்தொழில் கூறாது இங்ஙனம் பக்கமென்பதனான் அடக்கினார். இவை ஆண்பால் பற்றி உயர்ச்சிகொண்டன. உ-ம் : ஈட்டிய தெல்லா மிதன்பொருட் டென்பதே காட்டிய கைவண்மை காட்டினார் - வேட்டொறுங் காமருதார்ச் சென்னி கடல்சூழ் புகார்வணிகர் தாமரையுஞ் சங்கும்போற் றந்து (பெரும்பொருள் விளக்கம் புறத்திரட்டு. 1161. குடிமரவு 11) இது வாணிகரீகை! உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே பிறப்போ ரன்ன வுடன் வயிற் றுள்ளுஞ் சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியு மொருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவரு ளறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே (புறம். 183) இது வேளாளர் ஓதலின் சிறப்புக் கூறியது. ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர் (குறள். 228) இஃது இருவர்க்கும் ஈதற்சிறப்புக் கூறிற்று. போர்வாகை வாய்ந்த புலவலரின் மேதக்கா ரேர்வாழ்ந ரென்பதற் கேதுவாஞ் - சீர்சா லுரைகாக்கு மன்னர்க் கொளிபெருகத் தாந்தம் நிரைகாத்துத் தந்த நிதி இது வேளாளர் நிரைகாத்தது. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல் பவர் (குறள். 1033) இஃது உழவுத்தொழிற் சிறப்பு இருவர்க்குங் கூறியது. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவுந் தமபோற் செயின். (குறள். 120) இது வாணிகச் சிறப்பு இருவர்க்குங் கூறியது. இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை விடுப்ப வொழிதலோ டின்ன - குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாகக் கொண்டார் கயவரோ டென்றா வுணரற்பாற் றன்று. (நாலடி. குடி. 3) இதுவழிபாடு கூறியது. ஏனைய வந்துழிக் காண்க. மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடை யோன் பக்கமும்; தேயத்தைக் கிழவோ டேஎத்து (இறையனாரகப். 8) என்றாற்போலக் கொள்க. உ-ம் : வாய்மை வாழ்ந மூதறி வாள நீயே யொருதனித் தோன்ற லுறைபதி யாருமி லொருசிறை யானே தேரி னவ்வழி வந்தநின் னுணர்வுமுதற் றங்குந் தொன்னெறி மரபின மூவகை நின்றன காலமு நின்னொடு வேறென யாரோஒ பெருமநிற் றேர்கு வோரே என வரும். வாடாப் போதி மரகதப் பாசடை மரநிழ லமர்ந்தோ னெஞ்சம் யார்க்கு மகளின் றீந்தே னுரைந்துநனி ஞெகிழ்ந்து மலரினு மெல்லி தென்ப வதனைக் காமர் செவ்வி மாரன் மகளிர் நெடுமா மழைக்கண் விலங்கிநிமிர்ந் தெடுத்த வாளும் போழ்ந்தில வாயின் யாதோ மற்றது மெல்லிய ளவாறே இதுவும் அது. கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென்றுணர்க. நாலிருவழக்கிற் றாபதப் பக்கமும் - அவ்வறிவர் கூறிய ஆகமத்தின்வழி நின்று வீடுபெற முயல்வார்க்கு உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தவம்புரியுங் கூறும்; வழக்கென்றதனான் அந்நாலிரண்டுந் தவம்புரிவார்க்கு உரியனவுந் தவஞ்செய்து யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இருவகைய வென்று கொள்க. அவற்றுள் தவஞ்செய்வார்க்கு உரியன. ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம் பொறுத்தல், தட்பம் பொறுத்தல், இடம் வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை என எட்டும். இவற்றிற்கு, உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைத் தடுத்தலும், ஐந்தீநாப்பணும் நீர்நிலையினும் நிற்றலுங், கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலுந், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையுந், துறந்தக்காற்றொட்டும் வாய்வாளாமையும் பொருளென்றுணர்க. இனி யோகஞ்செய்வார்க்குரியன. இயமம் நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைநிலை நினைதல் சமாதி என்னும் எட்டும் ஆம். இவற்றை, பொய்கொலை களவே காமம் பொருணசை யிவ்வகை யைந்து மடக்கிய தியமம். பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பய மாசாற் களித்தலொடு நயனுடை மரபி னியம மைந்தே நிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் றொத்த நான்கி னொல்கா நிலைமையே டின்பம் பயக்குஞ் சமமே முதலிய வந்தமில் சிறப்பி னாசன மாகும் உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுந் தந்த மியக்கந் தடுப்பது வளிநிலை பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாம லொருவழிப் படுப்பது தொகைநிலை யாமே மனத்தினை யொருவழி நிறுப்பது பொறைநிலை நிறுத்திய வம்மன நிலைதிரி யாமற் குறித்த பொருளொடு கொளுத்த னினைவே ஆங்கனம் குறித்த வாய்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி என்னும் உரைச்சூத்திரங்களா னுணர்க. பக்கமென்றதனான், முட்டின்றி முடிப்போர் முயல்வோர் என்பனவும், நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி - யூரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி (புற.வெ. வாகை 14) என்பனவுங் கொள்க. ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளி ரிழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகுங் கழைக்க ணெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகிற் கடுந்தெறற் செந்தீ மாட்டிப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே (புலம் 251) எனவும், வைததனையின் சொலாக் கொள்வானு நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானு - ஊறிய கைப்பதனைக் கட்டியென்றுண்பானு மிம்மூவர் மெய்ப்பொருள் கண்டுவாழ் வார் (திரிகடுகம். 48) எனவும், ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து (குறள். 126) எனவும், ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும் (குறள். 370) எனவும், நீஇ ராட னிலக்கிடை கோடல் தோஒ லுத்த ஒள்ளெரி யோம்ப லூரடை யாமை யுறுசடை புனைதல் காட்டி லுணவு கடவுட் பூசை யேற்ற தவத்தி னியல்பென மொழிப எனவும் வரும். ஏனைய வந்துழிக் காண்க. அறிமரபிற் பொருநர்கட் பாலும் - தாந்தாம் அறியும் இலக்கணங் களானே போர்செய்வாரிடத்துக் கூறுபாடும்; அவை சொல்லானும் பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் சூதானும் பிறவாற்றானும் வேறலாம். உ-ம் : விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின் (குறள். 648) இது சொல்வென்றி. வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையா ழந்நரம்பு மச்சுவையு மாய்ந்து (புறப். வெ. ஒழிவு. 18) இது பாடல்வென்றி. கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு - பெய்யூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந் தொடுகழன் மன்னன் றுடி. (புறப். வெ. ஒழிபு. 17) இஃது ஆடல்வென்றி இன்கடுங் கள்ளி னாமு ராங்கண் மைந் துடை மல்லன் மதவலி முருக்கி யொருகான் மார்பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே நல்கினும் நல்கா னாயினும் வெல்போர்ப் போரருந் தித்தன் காண்கதி லம்ம பசித்துப் பணைமுயலும் யானை போல விருதலை யொசிய வெற்றிக் களம்புகு மள்ளற் கடந்தடு நிலையே (புறம். 80) இது மல்வென்றி, கழகத் தியலுங் கவற்றி னிலையு மழகத் திருநுதலா ளாய்ந்து - புகழத்துப் பாய வகையாற் பணிதம் பலவென்றா னாய வகையு மறிந்து (புற. வெ. ஒழிபு. 16) இது சூதுவென்றி, அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர். அக்கூறுபட்ட ஆறுபகுதியும் நிலைக் களமாக அவற்றுக்கண் தோன்றி வேறுபட்ட கூறுபாட்டோடு முன் னைய ஆறுங் கூட்டி அவ்வெழுகூற்றான் துறை பல திரண்ட தொகை பெற்றது அவ்வாகைத்திணை என்று கூறுவா ராசிரியர் எ-று. அனையென்றது சுட்டு. நிலை - நிலைக்களம். நிலையது வகை. ஆங்கென்றதனை அனைநிலைவகையோ டென்ப தன்கண் வகைக்கு முன்னே கூட்டுக. ஓடு எண்ணிடைச் சொல்லாதலின் முன் னெண்ணியவற்றோடு கூட்டி ஏழாயிற்று. இனிப் பார்ப்பனபக்கத்து வகையாவன பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்புநிகழ்வதற்கு முன்னே களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்திருந்துழித் தோன்றினானும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற் கண்ணும் இவ்வாறே தோன்றினாருமாகிய சாதிகளாம். இன்னோருந் தத்தந் தொழில்வகையாற் பாகுபட மிகுதிப் படுத்தல் வாகைத் திணையாம். ஒழிந்த பகுதி ஐந்தற்கும் இஃதொக்கும். இன்னும் பெண்பாலுயர்ந்து ஆண் பாலிழிந்தவழிப் பிறந்த சாதிகளும் அனைநிலைவகைப் பாற்படும். யோசிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலைவகை யோராவர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப்பக்கத்தாராவர். தகர்வென்றி பூழ்வென்றி கோழி வென்றி முதலியன பாலறிமரபிற் பொருநர்கண் அனை நிலைவகையாம். ஒரு வரையறைப்படாது பலதுறைப்படுவனவற்றை யெல்லாந் தொகைநிலையெனத் தொகுத்து ஒரோவொன் றாக்கிக் கூறினார்; தொகுத்துக் கூறலென்னும் உத்திவகையான். பார்ப்பன வாகை அரச வாசையென் றோதினால் அவற்றின் பகுதி அடங்காமையிற்குன்றக் கூறலாமாதலின் இங்ஙனமோதினார். காட்டாதனவற்றிற்கு உதாரணங்கள் வந்துழி வதுழிக் காண்க. (20) மறத்துறை ஒன்பதும் அறத்துறை யொன்பதுமாக வாகைக் குரிய துறை பதினெட்டாதல் 76. கூதிர் வேனி லென்றிரு பாசறைக் காதலி னொன்றிக் கண்ணிய மரபினும் ஏரோர் களவா மன்றிக் களவழித் தேரோர் தோன்றிய வென்றியுந் தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரவையும் ஒன்றிய மரபிற் பின்றோர்க் குரவையும் பெரும்பகை தாங்கும் வேலி னானும் அரும்பகை தாங்கு மாற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையி னொன்றொடு புணர்ந்து தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானும் ஒல்லாரிடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானு மாவி னானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும் கட்டி னீத்த பாலி னானும் எட்டுவகை நுதலிய வவையத் தானும் கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும் இடையில் வண்புகழ்க் கொடைமை யானும் பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானும் அருளொடு புணர்ந்த வகற்சி யானும் காம நீத்த பாலி னானுமென்று இருபாற்பட்ட வொன்பதிற்றுத் துறைத்தே இது மேல் தொகுத்துக் கூறிய எழுவகைத் திணையுள் அடங்காதவற்றிற்கு முற்கூறிய துறைகளே போலத் தொடர் நிலைப்படுத்தாது மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப்படுத்துத் துறை கூறுகின்றது. (இ-ள்.) கூதில் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும் - கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற இருவகைப் பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில்லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய மரபானும்; கூதிர், வேனில் ஆகுபெயர். அக்காலங்களிற் சென்றி ருக்கும் பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமை பெற்றக் காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந்திருத்தல். இக்காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றியாயிற்று. தலைவி மேற் காதலின்றிப் போரின்மேற் காதலின் சேறலின் ஒன்றியென்றார். இக்காலத்துச் சிறப்புப்பற்றி இரண்டடையும் ஓதினாரேனும் ஓர்யாட்டை எல்லை இருப்பினும் அவற்றுவழித் தோன்றிய ஏனைக் காலங்களும் இரண்டாகி அவற்றுள் அடங்குமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று. வினைவயிற் பெயர்க்குந் தானைப் புனைதார் வேந்தன் பாசறை யேமே (அகம். 84) எனத் தலைவியை நினைவன வாகைக்கு வழுவாம். அகத்திற்கு வழுவன்றென்றற்கு மரபென்றார். ஏனைய காலங்களாற் பாசறைப் பெயர் இன்றைன்றற்கு இரண்டானும் பெயர் கூறினார். இங்ஙனங் கூறவே முற்கூறிய துறைபோலத் தொடர் நிலைப்படுத்தலின்றாய் இதனானே பலவாகி ஒருதுறைப்படுத்தலும் இன்றாயிற்று. இனி இருத்தற்பொருண் முல்லையென்பதே பற்றிப் பாசறைக் கண் இருத்தலாற் பாசறைமுல்லையெனப் பெயர் கூறுவாரும் உளர். உ-ம் : மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடைய மாதற்பாற் பெற்ற விலியளவோ - கூதிரின் வெங்கண் வறல்வேந்தன் பாசறையுள் வேனிலா னைங்கணை தோற்ற வழிவு. (பெரும் பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1271. பாசறை 4) எனவரும். கவலை மறுகிற் கடுங்கண் மறவ ருவலைசெய் கூரை யொடுங்கத் - துவலைசெய் கூதிர் நலியவு முள்ளான் கொடித்தேரான் மூதின் மடவாண் முயக்கு (புறப். வெ. வாகை 15) எனவும் வரும். ஏரோர் களவழி(த் தேரோர் தோற்றிய வென்றி) யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் - வேளாண்மாக்கள் விளையுட் காலத்துக் களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிணைப் பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் செய்கைகளை மாறாது தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியானும்; என்றது, நெற்கதிரைக் கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து, அதரிதிரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல, அரசனும் நாற்படையையும் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக வாள்மடல் ஓச்சி ஆதரிதிரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றொடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ஈனாவேண்மாள் இடந்துழந்தட்ட கூழ்ப் பலியைப் பலியாகக் கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப்பெற்றன பலவற்றை யும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம். உ-ம் : இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பிற் கருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த வாண்மின் னாக வயங்குகடிப் படைந்த குருதிப் பல்லிய முரசுமுழக் காக வரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரவி வீசுவளி யாக விசைப்பறு வல்லில் வீங்குநா ணுகைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை யீரச் செறுவிற் றேரே ராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு செஞ்சாற் பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி விழுத்தலை சாய்த்த வெகுவரு பைங்கூழ் பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர் கான நரியொடு கழுதுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுநர்க் கிருந்த பீடுடை யாள தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்திற் போர்வை யரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன வோடை நுதல வோல்குத லறியாத் துடியடிக் குழவிப் பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தகைவெய் யோயே (புறம். 369) என வரும். நளிகட லிருங்குட்டத்து என்னும் (26) புறப்பாட்டுப் பலி கொடுத்தது. களவழி நாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது. ஓஒ வுவமை யுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெல்லாங் கீழ்மேலா யாவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து (களவழி நாற்பது. 36) என வரும். தேரோர் வென்ற கோமான் முன்தேர்க் குரவையும் - தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பானே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரொடு கை பிணைத்தாடுங் குரவையானும்; உ-ம் : சூடிய பொன்முடியும் பூணு மொளிதுளங்க வாடிய கூத்தரின்வேந் தாடினான். வீடிக் குறையாடல் கண்டுவந்து கொற்றப்போர் வாய்த்த விறையாட வாடாதார் யார் விழவுவீற்றிருந்த வியலு ளாங்கட் கோடியர் முழவின் முன்ன ராடல் வல்லா னல்லன் வாழ்கவவன் கண்ணி வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த் திலங்கும் பூணன் பொலங்கொடி யுழிஞையன் மடம்பெரு மையி னுடன்றுமேல் வந்த வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே (பதிற்றுப். 56) என வரும். ஒன்றிய மரபிற் பின்தேர்க் குரவையும் தேரோரை வென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே, தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூறிச்சுற்றம் ஆடும் குரவையானும்; உ-ம் : வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப வுண்டாடும் பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து (பெரும் பொருள் விளக்கம் புறத்திரட்டு. 1430. களம்.12). என வரும், களிற்றுக் கோட்டன்ன வாலெயிறழுத்தி விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுபையினள் குடர்த்தலைத் துயல்வரச் சூடிப் புணத்தின மானாப் பெருவளஞ் செய்தோன் வானத்து வயங்குபன் மீனினும் வாழியர் பலவென வுருகெழு பேஎய்மக ளயரக் குருதித்துக ளாடிய களங்கிழ வோயே (புறம். 371) என்பதும் அது. பெரும்பகை தாங்கும் வேலினாலும் - போர்க்கணன்றியும் பெரியோராகிய பகைவரை அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் வன்மையானும்; காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட முக்கட் கடவுட்குச் சூலவேல் படையாதலானும் முருகற்கு வேல் படையாதலானுஞ் சான்றோர் வேற்படையே சிறப்பப் பெரும் பான்மை கூறலானும் வேலைக் கூறி ஏனைப் படைகளெல்லாம், மொழிந்த பொருளோ டென்ற வவ்வயின் மொழியா ததனையு முட்டின்று முடித்தல் (தொல். பொ. மர.110) என்னும் உத்தியாற் பெறவைத்தார். உ-ம் : குன்று துகளாக்குங் கூர்ங்கணையான் வேலெறிந் தன்று திருநெடுமா லாடினா - னென்றும் பனிச்சென்று மூளாத பல்கதிரோன் சேயோ டினிச்சென் றமர்பொரா யென்று இது பாரதம். இரும்புமுகஞ் சிதைய நூறி யொன்னார் அருஞ்சமங் கடத்த லேனோர்க்கு மெளிதே நல்லரா வுறையும் புற்றம் போலவுங் கொல்லேறு திரிதரு மன்றம் போலவும் மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை யுளனென வரூஉ மோரொளி வலனுயர் நெடுவே லென்னைகண் ணதுவே (புறம். 309) என்பதும் அது. இவ்வே, பீலியணிந்து என்னும் (95) புறப்பாட்டும் அது. அரும்பகை தாங்கும் ஆற்றலானும் - வெலற்கரும் பகைவர் மிகையை நன்கு மதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைதியானும்; உ-ம் : எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாண ருண்டுகடை தப்பலி னொக்க லொற்கஞ் சொலியத் தன்னூர்ச் சிறுபுல் லாளர் முகத்தவை கூறி வரகுகட னிரக்கு நெடுந்தகை யரசுவரிற் றாங்கும் வல்லா ளன்னே (புறம். 327) என வரும். களம்புக லோம்புமின் என்னும் (87) புறப்பாடும் அது. வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும் - உயிர்வாழ்க்கையைப் பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபாட்டானும்; பக்கமென்றதனாற் தாபதப்பக்கமல்லாத போர்த் தொழிலாகிய வல்லாண்மையே கொள்க. உ-ம் : கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து மலிபுகழ் வேண்டு மனத்த - ரொலிகடழ் சூழ் மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார் புண்ணகலாப் போர்க்களத்துப் போந்து (புறத்திரட்டு. 1347. அமர் 3) இப் பாரதத்துள் அது காண்க. ஒல்லார்நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றொடுபுணர்ந்து தொல்லுயிர் வழங்கிய அவிப்பலியானும். பகைவர் நாணும்படியாக உயர்ந்தோரான் நன்குமதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனத் தான் கூறிய பகுதியிரண்டனுள் ஒன்றனோடே பொருந்திப் பல பிறப்பினும் பழகி வருகின்ற உயிரை அங்கியங்கடவுட்குக் கொடுத்த அவிப்பலியானும்; நாணுதலாவது நம்மை அவன் செய்யாதே நாம் அவனை அறப்போர் செய்யாது வஞ்சனையான் வென்றமையான் அவன் தன்னுயிரை அவிப்பலி கொடுத்தானென நாணுதல். உ-ம் : எம்பியை வீட்டுத லெம்மனைக்கா யான்படுதல் வெம்பகன்முன் யான்விளைப்ப னென்றெழுந்தான்-றம்பி புறவோரிற் பாணிப்பப் பொங்கெரிவாய் வீழ்ந்தா னறவோன் மறமிருந்த வாறு இப் பாரதத்துள் ஒருவன் இன்னது செய்வலென்று அது செய்ய முடியாமையின் அவிப்பலி கொடுத்தவாறு காண்க. இழைத்த திகவாமைச் சாவாரை யாரே பிழைத்த தொறுக்கிற் பவர் (குறள். 779) இதுவும் அது. ஒல்லாரிடவயிற் புல்லிபாங்கினும் - பகைவராயினும் அவர் சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும் போல்வன வேண்டியக்கால் அவர்க்கவை மனமகிழ்ந்து கொடுத்து நட்புச் செய்தலானும்; உ-ம் : இந்திரன் மைந்த னுயிர்வேட் டிரந்திரவி மைந்தனை வெல்வான் வரங்கொண்டான் - றந்தநா ளேந்திலைவேன் மன்னனே யன்றி யிதற்குவந்த வேந்தனும் பெற்றான் மிகை இப் பாரதத்துப் பகைவனாற் படுதலறிந்துந் தன் கவச குண்டலங் கொடுத்தமை கூறினமையிற் புல்லியபாங்காயிற்று. அது வீரம்பற்றிய கருணையாகலின் வாகையாயிற்று. இத்துணையு மறத்திற்குக் கூறியன. பகட்டினானும் மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும் - எருதும் எருமையுமாகிய பகட்டினானும் யானையுங் குதிரையுமாகிய மாவினானுங் குற்றத்தினீங்குஞ் சிறப்பினான் அமைந்தோரது கூறுபாட்டானும்; இவற்றான் உழவஞ்சாமையும் பகையஞ்சாமையுமாகிய வெற்றி கூறினார். பக்கமென்றதனாற் புனிற்றாவுங் காலாளுந் தேருங் கொள்க. உ-ம் : யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிறந்தோ ரேனை நிரையுடைய வேர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டே ருடையோர்க் கரசரோ வொப்பு (பெரும்பொருள் விளக்கம்.புறத்திரட்டு. 1159. குடிமரபு 9) எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறைய னென்றனி ராயி னாறுசெல் வம்பலிர் மன்பதை மருள வரசுகளத் தவியக் கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை மீபிணத் துருண்ட தேயா வாழியிற் பண்ணமை தேரு மாவு மாக்களு மெண்ணற் கருமையி னெண்ணின்றோ விலனே கந்துகோ ளீயாது காழ்பல முருககி யுகக்கும் பருந்தி னிலத்துநிழல் சாடிச் சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர் ஆபரந் தன்ன செலவிற்பல் யானை காண்பலவன் றானை யானே (பதிற்றுப். 77) என்பதும் அது. கட்டில் நீத்த பாலினானும் - அரசன் அரசவுரிமையைக் கைவிட்ட பகுதியானும்; அது பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி. உ-ம் : கடலு மலையுந் தேர்படக் கிடந்த மண்ணக வளாக நுண்வெயிற் றுகளினு நொய்தா லம்ம தானே யிஃதெவன் குறித்தன னெடியான் கொல்லோ மொய்தவ வாங்குசிலை யிராமன் றம்பி யாங்கவ னடிபொறை யாற்றி னல்லது முடி பொறை யாற்றலன் படிபொறை குறித்தே. இஃது அரசு கட்டினீத்த பால். பரிதி சூழ்ந்தவிப் பயங்கெழு மாநில மொருபக லெழுவ ரெய்தி யற்றே வையமுந் தவமுந் தூக்கிற் றவத்துக் கையவி யனைத்து மாற்றா தாதலிற் கைவிட் டனரே காதல ரதனால் விட்டோரை விடாஅ டிருவே விடாஅ தோரிவள் விடப்பட் டோரே (புறம். 358) என்பதும் அது. எட்டுவகை நுதலிய அவையத்தானும் - எண்வகைக் குணத்தினைக் கருதிய அவையத்தாரது நிலைமையானும்; அவை குடிப்பிறப்பு கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவு நிலைமை அழுக்காறின்மை அவாவின்மை என விவை யுடையராய், அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல். உ-ம் : குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற் காத லின்பத்துத் தூங்கித் தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலு மழுக்கா றின்மை யவாஅ வின்மையென விருபெரு நிதியமு மொருதா மீட்டுந் தோலா நாவின் மேலோர் பேரவை யுடன் மரீஇ யிருக்கை யொருநாட் பெறுமெனிற் பெறுக தில் லம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மலர்தலை யுலகத்துக் கொட்கும் பிறப்பே (ஆசிரியமாலை புறத்திரட்டு. 827. அவையறிதல் 11) என இதனுள் எட்டும் வந்தன. கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும் - வேத முதலிய வற்றாற் கட்டுதலமைந்த ஒழுக்கத்தொடு பொருந்திய காட்சியானும்; கண்ணதுதன்மை கண்மையெனப் படுதலின் அதனைக் கண்ணுமையென உகரங் கொடுத்தார். எண்மை வன்மை வல்லோர் என்பன எளுமை வலுமை வல்லுவோர் என்றாற்போல. இவை மனத்தான் இவ்வொழுக்கங்களைக் குறிக்கொண்டு ஐம்பொறியினையும் வென்று தடுத்தலாம். அவை இல்லறத்திற்கு உரியவாக நான்கு வருணத்தார்க்குங் கூறிய அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, பிறர்மனை நயவாமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை முதலியனவாம். உ-ம் : ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து (குறள். 126) ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும் (குறள். 131) சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி (குறள். 118) பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு (குறள். 148) படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர் (குறள். 172) அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறான் என்ற லினிது (குறள். 181) தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு (குறள். 201) ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு (குறள். 161) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல் (குறள். 158) பிறவும் இந்நிகரனவெல்லாங் கொள்க. விழையா வுள்ளம் விழையு மாயினுங் என்றுங், கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கரனும் பொருளும் வாழமை நாடித் தற்றக புடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்தல் இனைய பெரியோ ரொழுக்க மதனா லரிய பெரியோர்த் தேருங் காலை (அகம். 286:8.13) என இது தொகுத்துக் கூறியது. இடையில் வண்புகழ்க் கொடைமையானும் - இடையீ டில்லாத வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்; உலகமுழுதும் பிறர்புகழ் வாராமைத் தன்புகழ் பரத்தலின் இடையிலென்றார். வண்புகழ் - வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும். இக்கொடைப் புகழுடையான் மூப்புப் பிணி சாக்காட்டுக்கு அஞ்சாமையின் அது வாகையாம். உ-ம் : மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே துன்னருஞ் சிறப்பி னுயர்ந்த செல்வ ரின்மையி னிரப்போர்க் கீஇ யாமையிற் றொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே தாடாழ் படுமணி யிரட்டும் பூநுத லாடியல் யானை பாடுநர்க் கருகாக் கேடி னல்லிசை வயமான் றோன்றலைப் பாடி நின்றனெ னாகக் கொன்னே பாடுபெறு பாரிசிலன் வாடினன் பெயர்தலென் னாடிழந் ததனினு நனியின் னாதென வாள்தந் தனனே தலையெனக் கீயத் தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையி னாடுமலி யுவகையொடு வருகுவ லோடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே (புறம். 165) என வரும் இது புறம். பிழைத்தோர்த் தாங்குங் காவலானும் - தம்மைப் பிழைத்தோரைப் பொறுக்கும் பாதுகாப்பானும்; காவலாவது இம்மையும் மறுமையும் அவர்க்கு ஏதம்வாராமற் காத்த லாதலான், இஃது ஏனையோரின் வெற்றியாயிற்று. உ-ம் : தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தா - லும்மை யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொ லென்று பரிவதூஉஞ் சான்றோர் கடன் (நாலடி 58) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை (குறள். பொறை 1) என வரும். பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் - அரசர்க்குரிய வாசிய படை குடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறுவனவு மாகிய பொருட்டிறத்துப்பட்ட வாகைப் பகுதியானும்; பக்கமென்றதனான் மெய்ப்பொரு ளுணர்த்துதலுங் கொள்க. உ-ம் : படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு (குறள். 381) நாடு அரண் முதலாகக் கூறுவனவெல்லாந் திருவள்ளுவப் பயனிற் காண்க. படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணு முடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி யிட்டுந் தொட்டுங் கல்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசின் மேய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே (புறம். 188) கேள்வி கேட்டுப் படிவ மொடியாது (74) என்னும் பதிற்றுப்பத்தும் அது. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லாத வர்க்கு (குறள். 354) என வரும். அருளொடு புணர்ந்த அகற்சியானும் - அருளுடைமை யொடு பொருந்திய துறவறத்தானும்; அருளொடு புணர்தலாவது ஓருயிர்க்கு இடர் வந்துழித் தன்னுயிரையும் கொடுத்துக் காத்தலும், அதன் வருத்தந் தனதாக எண்ணி வருந்துதலும், பொய்யாமை கள்ளாமை முதலியனவுமாம். இக்கருத்து நிகழ்ந்த பின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின் இதுவும் அறவெற்றியாயிற்று. உ-ம் : புனிற்றுப் பசியுழந்த புலிப்பிணவு தனாது முலைமறாக் குழவி வாங்கி வாய்மடுத் திரையெனக் கவர்புற நோக்கி யாங்க ஏரிளங் குழவியின் முன்சென்று தானக் கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய வாளொயிற்றுக் கொள்ளையிற் றங்கினன் கதுவப் பாசிலைப் போதி மேவிய பெருந்தகை யாருயிர் காவல் பூண்ட பேரருட் புணர்ச்சியி னகலு மாறே தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் (குறள். 318) வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந் தீமை யிலாத சொலல் (குறள். 291) களவென்னுங் காரறி வாண்மை யளவென்று மாற்றல் புரிந்தார்க ணில் (குறள். 287) யாதனின் யாதனி னீங்கியா னோத லதனி னதனி னிலன் (குறள். 341) ஏனையவும் இதன்கண் அடக்குக. காமம் நீத்த பாலினானும் - அங்ஙனம் பிறந்த பின்னர் எப்பொருள்களினும் பற்றற்ற பகுதியானும்; உ-ம் : காமம் வெகுளி மயக்க மிவைமூன்றின் நாமங் கெடக் கெடு நோய் (குறள் 360) என வரும். பாலென்றதனான் உலகியலு ணின்றே காமத்தினைக் கைவிட்ட பகுதியுங் கொள்க. இளையர் முதிய ரெனவிருபால் பற்றி விளையு மறிவென்ன வேண்டா - விளையனாத் தன்றாதை காம நுகர்தற்குத் தான்காம மொன்றாது நீத்தா னுளன். (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு. 542. அறிவுடைமை.15) என வரும். என்று இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே. முன்னர் ஒன்பானும் பின்னர் ஒன்பானுமாக இரண்டு கூறுபட்ட ஒப்தாகிய பதினெட்டுத் துறையினையுடைத்து வாகை எ-று. இதனுள் ஏது விரியாதனவற்றிற்கும் ஏது விரித்தவாற்றான் இருபாற்பட்ட பதினெட்டாத லுடைத்தென முடிக்க. (21) காஞ்சி பொருந்திணையது புறனாதல் 77. காஞ்சி தானே பெருந்திணைப் புறனே. இத்துணையும் உரிப்பொருள் பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி, இஃது உரிப்பொருளல்லாத பெருந்திணைக்குப் புறனிது வென்கின்றது. இதனை வாகைக்குப் பின்வைத்தார், வீரக் குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு. (இ-ள்.) காஞ்சிதானே பெருந்திணைப் புறனே - எழுதிணையுட் காஞ்சிதானேயெனப் பிரிக்கப்பட்ட புறத்திணை பெருந்திணைக்குப் புறனாம் எ-று. அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், எண்வகை மணத்தினும் நான்கு மணம்பெற்ற பெருந்திணை போல இக்காஞ்சியும் அற முதலாகியமும் முதற்பொருளும் அவற்றது நிலையின்மையு மாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத் திணைகட்கும் ஒத்த மரபிற்றாகலானும், பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே (தொல். களவியல் 14) என்ற நான்குஞ் சான்றோர் இகழ்ந்தாற்போல அறம் முதலியவற்றது நிலையின்மை யுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், ஏறிய மடற்றிறம் (தொல். அகத். 51) முதலிய நான்குந் தீய காமமாயினவாறு போல உலகிய னோக்கி நிலையாமையும் நற்பொருளன்றாகலானும், உரிப்பொரு ளிடைமயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணை போல அறம்பொருளின்பம் பற்றியன்றி வேறுவேறு நிலையாமை யென்பதொரு பொருளின்றாதல் ஒப்புமை யானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். அகத். 1) ஏழனையும் அகமென்றலின், அவ்வகத்திற்கு இது புறனாவதன்றிப் புறப்புறமென்ல் ஆகாமை யுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். (22) காஞ்சித் திணையது பொதுவிலக்கணம் 78. பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும் நில்லா வுலகம் புல்லிய நெறித்தே. இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.) பாங்கருஞ் சிறப்பின் - தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக; பல்லாற்றானும். அறம் பொருள் இன்பமாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வமும் இளமையும் முதலிய வற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து - நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறி யினையுடைத்துக் காஞ்சி எ-று. எனவே, வீடு பேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையா மையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று. பாங்கு. துணை. உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட்பகுதி ஏதுவாகக் கூறினன்றி உலகென்பதற்கு வடிவு வேறின்மையிற் பல்லாற்றானுமென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் கணந்தோறுங் கெடுவனவுங் கற்பந்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமை யுணர்தலின் வீடு ஏதுவாயிற்று. பல்லாற்றானுமென்றதனாற் சில்லாற்றானும் வீடேதுவாகலன்றி நிலையாமைக் குறிப்பு ஏதுவாகலுங் கொள்க. இஃது அறிவன்தேயமுந் தாபதப்பக்கமும் பற்றி நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம். உ-ம் : மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப் பொன்னந் திகிரி முன்சமத் துருடடிப் பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின் முன்னோர் செல்லவுஞ் செல்லா தின்னும் நிலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற வுளனே வாழியர் யானெனப் பன்மா ணிலமக ளழுத காஞ்சியு முண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே (புறம். 365) இதனுள் உண்டென உரைப்பரால் உணர்ந்தோ ரென்றலின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வார்க்கு நில்லா உலகம் புல்லியதாயிற்று. வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர் பல்வேறு நிலையாமையை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம்.(23) நிலையின்மைப் பொருள்களை வகுத்தோதுதல் 79. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையுங் கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியு மறத்தி னானும் ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோற் பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமும் இன்னனென் றிரங்கிய மன்னை யானும் இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத் துன்னருஞ்சி சிறப்பின் வஞ்சினத் தானும் இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோன் துன்னுதல் கடந்த தொடாஅக் காஞ்சியும் நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி யாஞ்சி யானும் நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும் முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையோடு தொகைஇ யீரைந் தாகு மென்ப பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத் தானுந் தாமே யேங்கிய தாங்கரும் பையுளுங் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும் நனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையுங் கழிந்தோர் தேஎத் தழிபட ரூறீஇ யொழிந்தோர் புலம்பிய கையறு நிலையுங் காதலி யிழந்த தபுதார நிலையும் காதலன் இழந்த தாபத நிலையும் நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடை யிட்ட பாலை நிலையும் மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத் தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையும் மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிலையருஞ் சிறப்பின் துறையிரண் டுடைத்தே. இது முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாகவன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும்பகுதி கூறுகின்றது. இதுவும் வாகையைத் தொகுத்தோதிய பொதுச்சூத்திரம் போலத் துறை யோடும் படாது நிலையின்மைப் பொருளை வகுத்தோதிய சூத்திர மென்றுணர்க. (இ-ள்.) மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும் - பிறராற்றடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங் காஞ்சியானும்; கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள்வகையாற் கூறுபடுத்துங் கடவுள். அதனைப் பேரூர்க் கூற்றம் போலக் கொள்க. கூற்றத்திற்குக் காலமென்பது வேறன்மை யிற் காலம் உலகம் என (தொல். சொல். கிளவி. 58) முன்னே கூறினார். உ-ம் : பல்சான் றீரே பல்சான் றீரே கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீ ராயினு மல்லது செய்த லோம்புமி னதுதான் எல்லாரு முவப்ப தன்றியும் நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே (புறம். 195) இது வீடேதுவாக வன்றி வீடுபேற்று நெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது. இருங்கடலுடுத்த என்னும் (369) புறப்பாட்டும் அது. கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - இளமைத் தன்மை கழிந்து அறிவுமிக்கோர் இளமை கழியாத அறிவில் மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்; முதுமை மூப்பதலான் அது காட்சிப்பொருளாக இளமை நிலையாமை கூறிற்றாம். உ-ம் : இனிநினைந் திரக்க மாகின்று திணிமணற் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கய மாடு மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையென லறியா மாயமி லாயமொ டுயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்த நீர்நணிப் படுகோ டேறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்து மணற் கொண்ட கல்லா விளமை யளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண் டூன்றி நடுக்குற் றிருமிடை மிடைந்த சிலசொற் பெருமூ தாளரே மாகிய வெமக்கே (புறம். 243) இது வீடுபெறுதற்கு வழி கூறியது. பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத் தினானும் - நன்றாகிய குணம் உறுநிலையாகப் பெறுகின்ற பகுதியை யாராந்து பெறுதற்குப் பட்ட விழுப்புண் தீர்ந்து வாழும் வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சியானும்; இது யாக்கை நிலையின்மையை நோக்கிப் புகழ்பெறுதல் குறித்தது. இதனை வாகைத்திணைப் பின்னர் வைத்தார்; இக்காஞ்சியும் வாகையொடு மயங்கியுங் காஞ்சியாதல் பற்றி. உ-ம் : பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக் கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச் சென்று களம்புக்க தானை தன்னொடு முன்மலைந்து மடிந்த வோடா விடலை நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன் புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச் சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை யரசுமலைந்து தாங்கிய களிறுமடி பறந்தலை முரண்கெழு தெவ்வர் காண விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே இது போர் முடிந்த பின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு உடம்பினது நிலையின்மையினையும் பண்புற வருதலையும் நோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று. ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும் - கங்குல் யாமத்துக் காத்தற்குரிய சுற்றக் குழாமின் மையின் அருகுவந்து புண்பட்டோனைப் பேய்தானே காத்த பேய்க் காஞ்சியானும்; பேண் காத்ததென்றலின் ஏமம் இரவில் யாமமாயிற்று. ஏமம் காப்புமாம். ஓம்புதலாவது அவனுயிர் போந்துணையும் ஓரியும் நரியுங் கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப் பாதுகாத்தலாம். இது சுற்றத்தாரின்மை கூறலிற் செல்வ நிலையாமை யாயிற்று. பக்கமென்றதனாற் பெண்டிர் போல்வார் காத்தலும் பேயோம்பாத பக்கமுங் கொள்க. புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற் கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - யுண்ணு முறையோரி யுட்க வுணர்வொடு சாயாத விளையோன் கிடந்த விடத்து என வரும். ஏனைய வந்துழிக் காண்க. இன்னன் என்று இரங்கிய மன்னையானும் - ஒருவன் இறந்துழி அவன் இத்தன்மையோனென்று ஏனையோர் இரங்கிய கழிவு பொருட்கண் வந்த மன்னைக் காஞ்சியானும்; இது பலவற்றின் நிலையாமை கூறி இரங்குதலின் மன்னைக் காஞ்சியென வேறு பெயர் கொடுத்தார். இது பெரும்பான்மை மன் என்னும் இடைச்சொற் பற்றியே வருமென்றற்கு மன் கூறினார். இது மன்னையெனத் திரிந்து காஞ்சியென்பதனோடடுத்து நின்றது. இஃது உடம்பொடு புணர்த்தல். சிறியகட் பேறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே யென்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே யம்பொடுவேனுழைவழியெல்லாந்தானிற்கு மன்னே (புறம்.235) என இப் புறப்பாட்டு மன் அடுத்து அப்பொருள் தந்தது. பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே யாடுநர்க் கீத்த பேரன் பினனே யறவோர் புகழ்ந்த வாய்கோ லன்னே திறவோர் புகழ்ந்த திண்ணன் பினனே மகளிர் சாயன் மைந்தர்க்கு மைந்து துகளறு கேள்வி யுயர்ந்தோர் புக்கில் அனைய னென்னா தத்தக் கோனை நினையாக் கூற்ற மின்னுயி ருய்த்தன்று பைத லொக்கற் றழீஇ யதனை வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனந்தலை யுலக மரந்தை தூங்கக் கெடுவி னல்லிசை சூடி நடுக லாயினன் புரவல னெனவே (புறம் 221) இது மன் அடாது அப்பொருள்தந்தது. செற்றன் றாயினும் என்னும் (222) புறப்பாட்டு முதலியனவும் அன்ன. இதனை ஆண்பாற் கையறுநிலை யெனினும் அமையும். இன்னது பிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும் - இத்தன்மைய தொன்றனைச் செய்த லாற்றேனாயின் இன்னவாறாகக் கடவேனெனக் கூறிய வஞ்சினக் காஞ்சியானும்; அதுதான் செய்யக் கருதியது பொய்த்துத் தனக்கு வருங் குற்றத்தான் உயிர்முதலியன துறப்பே னென்றல். சிறப்பு-வீடு பேறன்றி உலகியலிற் பெருஞ்சிறப்பு. உ-ம் : மெல்ல வந்தே னல்லடி பொருந்தி யீயென விரக்குவ ராயிற் சீருடை முரசுகெழு தாயத் தரசோ தஞ்ச மின்னுயி ராயினுங் கொடுக்குவெ னிந்திலத் தாற்ற லுடையோராற்றல் போற்றாதென் னுள்ள மௌயீளய மடவோன் றெள்ளிதிற் றுஞ்சுபுலி யிடறிய சிதடன் போல வுய்ந்தனன் பெயர்தலோ வரிதே மைந்துடைக் கழைதின் யானைக் காலகப் பட்ட வன்றிணி நீண்முளை போலச் சென்றவண் வருந்தப் பொரேஎ னாயிற் பொருந்திய தீதி னெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தன் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகவென்றாரே (புறம். 73) நகுதக் கனரே நாடுமீக் கூறுநர் மடங்கலிற் சினைஇ என்னும் (72, 71) புறப்பாட்டுக்கள் உயிருஞ் செல்வமும் போல்வன நிலையும் பொருளென நினையாது வஞ்சினஞ் செய்தன. இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற் றுன்னுதல் கடந்த தொடாஅக் காஞ்சியும் - இனிதாகிய நகையினையுடைய மனைவி தன் கணவன் புண்ணுற்றோனைப் பேய் தீண்டுதலை நீக்கித் தானுந் தீண்டாத காஞ்சியானும்; என்றது, நகையாடுங் காதலுடையாள், அவனைக் காத்து விடிவளவுஞ் சுற்றுதலன்றி முயங்குதற்கு உள்ளம் பிறவாதபடி அவன் நிலையாமையை எய்தினானென்றவாறு. இதுவும் ஆண்பாற் காஞ்சியாம். இக் காஞ்சியென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக. தீங்கனி யிரவமொடு வேம்பு மனைச்செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கப் பையப் பெயர்த்து மையிழு திழுகி யையவி சிதறி யாம்ப லூதி யிசைமணி யெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்கம் வம்மோ காதலந் தோழி வேந்துறு விழுமந் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே (புறம். 281) என வரும். நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி ஆஞ்சியானும் - உயிர்நீத்த கணவன் தன்னுறவை நீக்கின வேல்வடுவாலே மனைவி அஞ்சின ஆஞ்சிக்காஞ்சியானும்; எஞ்ஞான்றும் இன்பஞ்செய்த கணவனுடம்பு அறிகுறி தெரியாமற் புண்பட்ட அச்சம் நிகழ்தலின், யாக்கை நிலையாமை கூறியதாம். பேஎத்த என்பது உரிச்சொன் முதனிலையாகப் பிறந்த பெயரெச்சம். அஞ்சின, ஆஞ்சி யென நின்றது. இன்ப முடம்புகொண் டெய்துவிர் காண்மினோ வன்பி னுயிர்புரக்கு மாரணங்கு தன்கணவ னல்லாமை யுட்கொள்ளு மச்சம் பயந்ததே புல்லார்வேல் மெய்சிதைத்த புண் (தகடூர் யாத்திரை. புறத்திரட்டு 1405. மூதின் மறம் 82) என வரும். இனி வேலிற் பெயர்த்த மனைவி யென்று பாடமோதி, அவ்வேலான் உயிரைப் போக்கின மனைவி யென்றுகூறி, அதற்குக் கெளவைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோ - னவ்வேலே யம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற் கொம்பிற்கு மாயிற்றே கூற்று. (புறம். வெ. காஞ்சி. 23) என்பது காட்டுப. நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் - பெண்கோளொழுக்கத்தினொத்து மறுத்தல் பற்றிப் பகைவனாய் வலிந்துகோடற்கு எடுத்துவந்த, அரசனொடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்; வேத்தியலாவது உயிர்போற்றாது வாழ்தலின், அவரது நிலையின்மை நோக்கி, அவரோடொத்து மகளிரைப் படுத்தற் கஞ்சி மறுப்பாராதலின் அஞ்சியவென்றும், மேல்வந்த வென்றுங் கூறினார். அம்முதுகுடிகள் தாம் பொருது படக் கருதுதலின் உயிரது நிலையாமை உணர்ந்த காஞ்சியாயிற்று. பாலென்றதனான் முதுகுடிகளேயன்றி அனைநிலைவகை யெனப்பட்டார்கண்ணும் (தொல். புறத்திணை 20) இத்துறை நிகழ்தல் கொள்க. உ-ம் : நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையு நெடிய வல்லது பணிந்துமொழியலனே நெடிய வல்லது பணிந்துமொழி யலனே இஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதீப் போல அணங்கா யினள்தான் பிறந்த வூர்க்கே (புறம். 349) என வரும். களிறணைப்பக் கலங்கின காஅ தேரோடத் துகள்கெழுமின தெருவு மாமறுகலின் மயக்குற்றன வழி கலங்கழா அலிற் றுறை கலக்குற்றன தெறன்மறவ ரிறைகூர்தலிற் பொறைமலிந்து நிலனெளிய வந்தோர் பலரே வம்ப வேந்தர் பிடியுயிர்ப் பன்ன கைகவ ரிரும்பி னோவுற ழிரும்புறங் காவல் கண்ணிக் கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை மைய னோக்கிற் றையலை நயந்தோ ரளியர் தாமேயிவ டன்னை மாரே செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி நிரலல் லோர்க்குத் தரலோ வில்லெனக் கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர் குழா அங் கொண்ட குருதியம் புலவொடு கழாஅத் தலைய கருங்கடை நெடுவேல் இன்ன மறவர்த்தாயினு மன்னோ என்னா வதுகொறானே பன்னல் வேலியிப் பணைநல் லூரே (புறம். 345) இதனுள் நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென என்றலின், அரசர்க்கு மகட்கொடைக் குரியரல்லாத அனைநிலை வகையோர் பாற்பட்டது. முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந்தாகு மென்ப - தன்கணவன் தலையைத் தன்முகத்தினும் முலையினுஞ் சேர்த்துக்கொண்டு, அத்தலையான் மனைவி யிறந்த நிலைமையானுந் தொகைபெற்றுக் காஞ்சி பத்துவகைப் படுமென்று கூறுவாராசிரியர் எ-று. தலை, அவள் இறத்தற்கேதுவாகலின் அது வினைமுதலா யிற்று. மேல் துறை இரண்டென்பாராகலின், இவை பத்தும் ஒருதுறையா மென்றற்கும்இவை ஆண்பாற்குரிய வென்றற்கும் ஈரைந்தென வேறொரு தொகை கொடுத்தார். அவன் தலையல்லது உடம்பினை அவள் பெறாமையின், அவன் யாக்கைக்கு நிலை யின்மை யெய்தலின், இதுவும் ஆண்பாற்கே சிறந்ததாம். மனைவி இறந்துபடுதலும் அதனாலெய்துதலின் மேல்வருகின்ற பெண் பாற்கும் இயைபுபடப் பின்வைத்தார். இதற்கியைபு படத் தொடாக்காஞ்சியும் ஆஞ்சிக் காஞ்சியும் பெண்பாலொடுபட்ட ஆண்பாற் காஞ்சியாதலின் முன் வைத்தார். இவை ஒருவகையாற் பெண்பாற் கண்ணும் நிலையின்மை யுடைய வாயினும் இரண்டிடத்தும் ஓதிச் சூத்திரம் பல்காமற், சிறப்புடைய ஆண்மகற்கே ஓதிப் பெண்பாற் பகுதியுந் தழீஇயினா ரென்றுணர்க. இனி வருகின்ற பத்தும் பெண்பாற்கே யுரிமையின் அவற்றிற்கும் ஈரைத் தென்பதனைக் கூட்டி முடிக்க. உ-ம் : நிலையி லுயிரிழத்தற் கஞ்சிக் கணவன் தலையொழிய மெய்பெறாள் சாய்ந்தாள் - தலையினால் வண்ணம் படைத்தான் முழுமெய்யு மற்றதன் உண்ணின்ற தன்றோ வுயிர் என வரும். பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத்தானும் - பெரும்புகழுடையனாகி மாய்ந்தானொருவனைச் சுற்றிய பெண்கிளைச் சுற்றங் குரல் குறைவுபட்ட கூப்பீட்டு மயக்கத்தானும்; என்றது, சுற்றத்தார் அழுகைக்குரல் விரவியெழுந்த ஓசையை. ஆய்தவென்பது உள்ளத னுணுக்கம். மாய்ந்த பூசன் மயக்க மென்று பாடமாயிற், சுற்றம் ஒருங்கு மாய்ந்தவழிப் பிறரழுத பூசன் மயக்கமென்று கொள்ளினும் அமையும். ஈண்டு மாய்ந்த மகனெற்தூஉஞ் சுற்றப்படுவானை அறிவித்தற்கே; ஆண்பாலும் உடன்கூறியதன்னு. மேலனவற்றிற்கும் இஃதொக்கும். உ-ம் : இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கு - முரைமயங்க வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுந் துடி (தகடூர் யாத்திரை புறத்திரட்டு. 1438. இரங்கல் 3) என வரும். மீனுண் கொக்கின் றூவியன்ன என்னும் (277) புறப்பாட்டும் அது. தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும் - அச்சுற்றத்தாரு மின்றி மனைவியர்தாமே தத்தங் கொழுநரைத் தழீஇயிருந்து அழுதது கண்டோர் பொறுத்தற்கரிய நோயானும்; தாமே யெனப் பன்மை கூறினார், ஒருவர்க்குத் தலைவியர் பலரென்றற்கு. ஏகாரஞ் சுற்றத்திற் பிரித்தலிற் பிரிநிலை. இது செல்வமும் இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது. மழைகூர் பானாட் கழைபிணங் கடுக்கத்துப் புலிவழங் கதரிடைப் பாம்புதூங் கிறுவரை இருள்புக்குத் துணிந்த வெண்குவரற் கல்லளை யொருதனி வைகிய தனைத்தே பெருவளத்து வேனின் மூதூர்ப் பூநாறு நறும்பக லெழுதுசுவர் மாடத்துக் கிளையுடை யொருசிறை யவரின்று நிகழ்தரு முறவே யதனா லழுதுபனி கலுழ்ந்தவெங் கண்ணே யவ்வழி நீர்நீந்து பாவை யசைவது நோக்கிச் சேணிடை யகன்ற துயிலே யதுவினி யவருடைக் கனவோ டிவ்வழி யொருநாள் வாரா தாயினுய் யாதாங் கொல்லோ மெலிந்து மெலியுமென் யாக்கையிற் கழிந்த கழியுமென் னாருயில் நிலையே. என வரும். கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்ப என்னும் (349) புறப்பாட்டும் அது. தாமே யேங்கிய என்பதற்குச் சிறைப்பட்டார்தாமே தனித்திருந்த தென்று கூறிக், குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளில் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத் தீத்தணியத் தாமிரந் துண்ணு மளவை யீன்ம ரோவிவ் வுலகத் தானே. (புறம். 74) என்னும் புறப்பாட்டுக் காட்டுவாரும் உளர். கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் - மனைவி தன் கணவன் முடிந்தபொழுதே உடன் முடிந்து போகிய செலவு நினைந்து கண்டோர் பிறர்க் குணர்த்திய மூதானந்தத் தானும்; ஆனந்தம் - சாக்காடு. முதுமை கூறினார், உழுவலம்பு பற்றி. இப்படி யிறத்தலின் இது யாக்கை நிலையின்மை. உ-ம் : ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்ப ரிடை தெரியார் - போரில் விடனேந்தும் வேலாற்கம் வெள்வளையி னாட்கம் உடனே யுலந்த துயிர் (பு.வெ.சிறப்பிற் பொது . 9) என வரும். நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும். மிகுதிமிக்க அருநிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் தன் தனிமையை வெளிப்படுத்தின முதுபாலை யானும்; புலம்பியவெனவே அழுதல் வெளிப்படுத்தல் கூறிற்று. பாலையென்பது பிரிவாகலின், இது பெரும்பிறிதாகிய பிரிவாதல் நோக்கி முதுபாலை யென்றார். நனிமிகு குரமென்று இருகால் அதனருமை கூறவே, பின்பனிப் பிரிவு அதற்குச் சிறந்த தன்றாயிற்று. இதுவும் இன்பமும் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறிற்று. இளையரு முதியரும் வேறுபுலம் படர வெடுப்ப வெழாஅய் மார்பமண் புல்ல விடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த வளையில் வறுங்கை யோச்சிக் கிளையு ளின்ன னாயின னிளையோ னென்று நின்னுரை செல்லு மாயின் மற்று முன்னூர்ப் பழுனிய கோளியா லத்துப் புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன் வளனுஞ் செம்மலு மெமக்கென நாளு மானாது புகழு மன்னை யாங்கா குவள்கொ லளியன் தானே (புறம். 254) என வரும். கழிந்தோர் தேஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் - கணவனொடு மனைவியர் கழிந்துழி அவர்கட்பட்ட அழிவு பொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்துபடாதொழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியருந் தனிப்படருழந்த செயலறு நிலைமை யானும்; ஒழிந்தோரென வரையாது கூறினமையிற் கழிந்தோராற் புரக்கப் படும் அவ்விருதிறத்தாரையும் உடன்கொள்க. கழிந்தோ ரென்ற பன்மையான் ஆண்பாலுந் தழீஇயினார், கையறுநிலை அவரையின்றி அமையாமையின். ஆண்பாற் கையறுநிலை மன்னைக்காஞ்சியுள் அடங்கும். அழிவாவன புனல்விளை யாட்டும், பொழில் விளையாட்டுந், தலைவன்வென்றியும் போல்வன. உ-ம் : தேரோன் மகன்பட்ட செங்களத்து ளிவ்வுடம்பிற் றீராத பண்பிற் றிருமடந்தை - வாரா புலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ வலகற்ற கற்பி னவள் (பாரதம்) என வரும். காதலி இழந்த தபுதார நிலையும் - தன் மனைவியைக் கணவனிழந்த தபுதார நிலையானும்; என்றது தாரமிழந்த நிலை - தன் காதலியை இழந்தபின் வழிமுறைத் தாரம் வேண்டின், அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும், எஞ்ஞான்றும் மனைவியல்லாதானுந் தபுதார நிலைக்கு உரியனாயினும், அது காஞ்சியாகாதென்றற்குந், தபுதார நிலையென்றே பெயர்பெறுதன் மரபென்றற்குங், காதலியிழந்த நிலையுமென்றே ஒழியாது, பின்னுந் தபுதார நிலையு மென்றார். தலைவர் வழிமுறைத் தாரமும் எய்துவாராதலின் அவர்க்கு நிலையாமை சிறப்பின்மை ஆண்பாற் காஞ்சியன்றாயிற்று. இஃது யாக்கையும் இன்பமும் ஒருங்குநிலையின்மையாம். உ-ம் : யாங்குப் பெரிதாயினு நோயள வெனைத்தே யுயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற் கள்ளி போகிய களரியம் பறந்தலை வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத் தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை யின்னும் வாழ்வ லென்னிதன் பண்பே (புறம். 245) என வரும். காதலன் இழந்த தாபதநிலையும் - காதலனை யிழந்த மனைவி தவம் புரிந்தொழுகிய நிலைமையானும்; இருவரும் ஒருயிராய்த் திகழ்ந்தமையின் உயிரும் உடம்பும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியேயாம். இதனை இல்லறம் இழத்தலின் அறநிலையின்மை அமையு மென்ப. உ-ம் : அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையா யினவே யினியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் அல்லிப் படூஉம் புல்லாயினவே (புறம் 248) என வரும். நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடையிட்ட பாலைநிலையும் - கற்புடைய மனைவி தன் கணவன் இறந்துபட அவனோடு எதிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்து கூறிய புறங்காட்டு நிலையானும்; எல்லா நிலத்தும் உளதாகித் தனக்கு வேறு நிலனின்றி வருதலானும் நண்பகல்போல் வெங்கனலான் வெதுப்பு தலானும் புறங்காட்டைப் பாலையென்றார்; பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு நிலையென்றார். உ-ம் : பல்சான் றீரே பல்சான் றீரே செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டாது அடகிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சியாகப் பரற்பெற் பள்ளிப் பாயின்று வதியு முயவற் பெண்டிரே மல்லே மாதோ பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையுந் தீயுமொ ரற்றே (புறம். 246) என வரும். மாய்பெருஞ் சிறப்பிற் புதல்வன் பெயரத் தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும். பொருகளத்துப் பொருது மாயும் பெருஞ் சிறப்பிற் றீர்ந்து தன்மகன் புறங்கொடுத்துப் போந்தானாக, அது கேட்டுத் தாய் சாக்காடு துணிந்து சென்று மகனைக் கூடுங் கூட்ட மொன்றானும்; இனி அவன் பிறர்சிறப்பு மாய்தற்குக் காரணமாகிய பெருஞ்சிறப்பொடு களப்பட்டுத் துறக்கத்துப் போயவழி அவனோடு இறந்துபட வரும் தாயது தலைப் பெயனிலைமையொன்றானும்; இவ் விருகூறும் உய்த்துக்கொண்டுணர்த லென்னும் உத்தி. நிலையென்றதனான் அவள் இறந்துபடாது மீடலுஞ் சிறுபான்மை யாம் காஞ்சி யென்று கொள்க. அஃது அன்பிற்கு நிலையின்மையாம். உ-ம் : வாதுவல் வயிறே வாதுவல் வயிறே நோவே னத்தை நின்னீன் றனனே பொருந்தா மன்ன ரருஞ்சம முருக்கி யக்களத் தொழிதல் செல்லாய் மிக்க புகர்முகக் குஞ்சர மெறிந்த வெஃகம் அதன்முகத் தொழிய நீபோந் தனையே யதனா, லெம்மில் செய்யாப் பெரும்பழி செய்த கல்லாக் காளையை யீன்ற வயிறே (தகடூர் யாத்திரை. பிறத்திரட்டு. 1407. மூதின்மறம். 4) இத் தகடூர்யாத்திரை கரியிடை வேலொழியப் போந்ததாற்குத் தாய் தப வந்த தலைப்பெயனிலை. எற்கொண் டறிகோ வெற்கொண்ட றிகோ வென்மக னாத லெற்கொண் டறிகோ கண்ணே கணைமூழ் கினவே தலையின் வண்ண மாலையும் வாளிவிடக் குறைந்தன வாயே பொங்கு நுனைப் பகழி மூழ்கலிற் புலர்வழித் தாவ நாழிகை யம்புசெறிந் தற்றே நெஞ்சே வெஞ்சரங் கடந்தன குறங்கே நிறங்கரந்து பலசரம் நிரைத்தன வதனா லவிழ்பூ வப்பணைக் கிடந்தோன் கமழ்பூங்கழற்றீங் காய்போன் றனனே இத் தகடூர் யாத்திரை துறக்கத்துப் பெயர்ந்த நெடுங்கேரளன் தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை. நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோண் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறின னென்றுபலர் கூற மண்டமர்க் குடைந்தன னாயி னுண்ட வென் முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே (புறம். 278) இப் புறப்பாட்டு மீண்டது. ஈன்று புறந்தருதல் என்னும் (312) புறப்பாட்டும் அது. மலர்தலை உலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் சொல்லாக் காடு வாழ்த்தொடு - அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்று முறைமையினைப் பலரும் பெரிதுணரும்படியாகப் பிறந்தோரெல்லாரும் இறந்துபோகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை வாழ்த்துதலானும்; உ-ம் : உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப் பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு புலவுங்கொ லென்போல் புலவுக் களத்தோ டிகனெடுவே லானை யிழந்து (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு. 1439. இரங்கல் 4) என வரும். களரி பரந்து கள்ளி போகிப் பகலுங் கூஉங் கூகையொடு பிறழ்பல் ஈம விளக்கிற் பேஎய் மகளிரோ டஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு நெஞ்சமர் காதல ரழுத கண்ணீ ரென்புபடு கடலை வெண்ணீ றவிப்ப எல்லார் புறனுந் தான்கண் டுலகத்து மன்பதைக் கெல்லாந் தானாய்த் தன்புறங் காண்போர்க் காண்பறியாதே (புறம். 356) இதுவும் அது. தொகைஇ ஈரைந்து ஆகுமென்ப - தொகைபெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவர் ஆசிரியர்; நிறையருஞ் சிறப்பிற் றுறை இரண்டு உடைத்தே - ஆதலான் அக்காஞ்சி நிறுத்தற்கு எதிர் பொருளில்லாத பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறையும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினையுடைத்து எ-று. எனவே, முற்கூறிய பத்தும் இப்பத்துமாக இருபதென் பதுங் கூறினாராயிற்று. நிறையருஞ் சிறப்பென்றதனானே மக்கட்குந் தேவர்க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச் சிறப்புடைத்தாகக் கூறப்படுவது; ஏனை அஃறிணைப்பகுதிக் கணுள்ள நிலையாமை காஞ்சிச் சிறப்பன்று என்றுணர்க. (24) பாடாண்டிணை கைக்கிளைப் புறனாதலும் இத்துணைப் பொருளுடைத்தாதலும் 80. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. இது மேற் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் (தொல் புறத்திணை 1) என்புழிக் கிடக்கைமுறை கூறிய முறையான் இறுதி நின்ற பாடாண்டிணைக்குப் பொது விலக்கணம் உணர்த்துவான் அதற்குப் பெயர் இன்ன தெனவும், அது கைக்கைளைப் புறனா மெனவும், அஃது இத்துணைப் பொருளுடைத் தெனவுங் கூறுகின்றது. (இ-ள்.) பாடாண்பகுதி கைக்கிளைப் புறனே - பாடாணெனப்பட்ட புறத்திணையது கூறு கைக்கிளையென்று கூறப்பட்ட அகத்திணைக்குப் புறனாம்; நாடுங்காலை நாலிரண்டு உடைத்து - தன்னை நாடிச் சொல்லுவார் செய்யுளுண் முடிந்த பொருள் பாடாணாகவே நிறுப்ப நாடுங்காலத்து எண்வகைப் பொருளுடைத்து எ-று. பாடாணென்பது பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண் மகனையும் நோக்காது. அவனதொழுகலாறாகிய திணை யுணர்த்தின மையின் வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்ட, ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டலின் அவை தம்மின் வேறாகிய ஒருதலைக் காமமாகிய கைக்கிளையோ டொத்தலிற் பாடாண்டிணை கைக்கிளைப் புறனாயிற்று. வெட்சி முதலிய திணைகளுஞ் சுட்டி யொருவர் பெயர் கொடுத்துங் கொடாதும் பாடப்படுதலிற் பாடாண்டிணையாயினும், ஒருவனை ஒன்று நச்சிக் கூறாமையின், அவர் பெறுபுகழ் பிறரை வேண்டிப் பெறுவதன்றித் தாமே தலைவராகப் பெறுதலின், அவை கைக்கிளைப்புறன் ஆகாமை உணர்க. இவ் விருகூறுந் தோன்றப் பகுதியென்றார். புகழை விரும்பிச் சென்றோர் வெட்சி முதலியவற்றைப் பாடின், அவை கைக்கிளைப் புறன் ஆகாவென உணர்க. இதனானே புறத்திணை ஏழற்கும் பெயரு முறையும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று. நாலிரண்டாவன இப்பாடாண்டிணைக்கு ஓதுகின்ற பொதருட்பகுதி பலவும் கூட்டி ஒன்றும் இருவகை வெட்சியும் பொதுவியலும் வஞ்சியும் ஊழிஞையுந் தும்பையும் வாகையுங் காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம். இனி இக்கூறிய ஏழு திணையும் பாடாண்டிணைப் பொருளாமாறு காட்டுங்கால் எல்லாத் திணையும் ஒத்தவாயினும், அவை பெரும்பான்மையுஞ் சிறுபான்மையு மாகி வருதலும் அவை இரண்டும் பலவும் ஒருங்கு வருதலும் பாடாண்டிணைக்கு மேற்கூறும் பொருளும் விராய் வருதலுமாமென்று உணர்க. உ-ம் : முனைப்புலத்துக் கஃதுடை முன்னரைபோல் வேந்தூர் முனைப்புலம்பு முன்னிரையும் வீசி - யெனைப்புலத்துஞ் சென்றது நின்சீர்த்தி தேர்வளவ தெய்வர்போ னன்றுமுண் டாக நமக்கு இது கூற்று வகையானன்றிக் குறிப்புவகையான் ஒன்று பயப்பானாக்கி நினைத்துரைத்தலின் வெட்சியும் வாகையும் வந்த பாடாண்டிணையாம். அவ்லெறி வுலக்கை வாழச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடிந்தை நெல்லின் விளைவயற் பரந்த தடந்தா ணாரை இரிய வயிரைக் கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின் வெண்கை மகளிர் வெண்குரு கோப்பு மழியா விழவி னிழியாத் திவவின் வயிரிய மாக்கள் பண்ணமைத் தெழீஇ மன்ற நண்ணி மறுகுசிறை பாடு மகன்கண் வைப்பி னாடும னளிய விரவுவேறு புலமொடு குருதி வேட்ட மயிர்புதை மாக்கண் கடிய கழற வமர்கோ ணேரிகந் தாரெயில் கடக்கும் பெரும்பல் யானைக் குட்டுவன் வரம்பி றானை பரவா வூங்கே (பதிற்றுப் 29) இதில்இமையவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்கௌதமனார் துறக்கம் வேண்டினா ரென்பது குறிப்பு வகையாற் கொள்ள வைத்தலின் இது வஞ்சிபொருள் வந்த பாடாணாயிற்று. இலங்கு தொடிமருப்பின் என்னும் பதிற்றுப்பத்து உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞையாயினும் பதின் துலாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடாணாயிற்று. பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ நட்டோர்க கல்லது கண்ணஞ் சலையே வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே நிலந்திறம் பெயருங் காலை யாயினுங் கிளந்த சொன்னீபொய்ப்பறி யலையே சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக் கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக் குன்றுநிலை தளர்க்கு முருமிற் சீறி யொருமுற் றிருவ ரோட்டிய வொள்வாள் செருமிகு தானை வெல்போ ரோயே யாடுபெற்றழிந்த மள்ளர் மாறி நீகண் டனையே மென்றனர் நீயு நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் செல்வக் கோவே சேரலர் மருக காறிரை யெடுத்தமுழங்குகுரல் வேலி நன்ந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனி னடையடுப் பறியா அருவீ யாம்ப லாயிர வெள்ள வூழி வாழி யாத வாழிய பலவே (பதிற்றுப். 63) இது வாகைத் துறைப் பாடாண்டுபாட்டு. இப் பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண்டிணையே யாயிற்று. புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும் உணர்க. (25) ஒன்றன்பகுதியுள் தேவர்பகுதி தோன்றுமாறு 81. அமரர்கண் முடியு மறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி யொன்று மென்ப. இது முன்னர் எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள் ஏழொழித்துத் தன் பொருட்பகுதிகள் எல்லாங் கூடி ஒன்றாமென்ற பாடாண்டினை தேவரும் மக்களுமென இருதிறத்தார்க்கே உரிய என்பார் அவ்விரண்டினுள் தேவர் பகுதி இவையென்ப துணர்த்துகின்றது. (இ-ள்.) அமரர்கண் முடியும் அறுவகையானும் - பிறப்பு வகையானன்றிச் சிறப்புவகையான் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்; புரைதீர் காமம் புல்லிய வகையினும் - அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள்களை வேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக்கண்ணும்; ஒன்றன் பகுதி ஒன்றும் எனப - மேற் பாடாண் பகுதியெனப் பகுத்து வாங்கிக் கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களுமெனப் பகுத்த இரண்டனுள் தேவர்க்கு உரித்தாம் பகுதியெல்லாந் தொக்கு ஒருங்குவருமென்று கூறுவார் ஆசிரியர் எ-று. அமரர்கண்ணே வந்து முடியுமெனவே அமரர் வேறென்பதூஉம் அவர்கண்ணே வந்து முடிவன வேறென்ப தூஉம் பெற்றாம். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம். இவை தத்தஞ் சிறப்பு வகையான் அமரர்சாதிப் பாலவென்றல் வேத முடிவு. இதனானே பிறப்பு முறையாற் சிறந்த அமரரை வாழ்த்தலுஞ் சொல்லாமையே முடிந்தது தந்திரவுத்தி வகையான். வகையென்றதனானே அமரரை வேறு வேறு பெயர் கொடுத்து வாழ்த்தலும் ஏனைப் பொதுவகையாற் கூறி வாழ்த்தினன்றிப் பகுத்துக கூறப்படாமையுங் கொள்க. புரை, உயர்ச்சியாதலின் உயர்ச்சியில்லாத காமமாவது மறுமைப்பயன் பெறுங் கடவுள்வாழ்த்துப் போல் உயர்ச்சியின்றி இம்மையிற் பெறும் பயனாதலின், இழிந்த பொருள்களிற்செல்லும் வேட்சைக் குறிப்பு. புல்லிய வகையாவது, அம்மனக்குறிப்புத் தேவர்கண்ணே பொருந்திய கூறாது தன் பொருட்டானும் பிறன்பொருட்டானும் ஆக்கத்துமேல் ஒருவன் காமுற்றவழி அவை அவற்குப் பயன்கொடுத்தலாம். இது ஒன்றனுக்கு பகுதியென்க. இத்துணைப் பகுதியென்று இரண்டிறந்தன கூறாது, வாளாதே பகுதி யென்றமையின் தேவரும் மக்களுமென இரண்டே யாயிற்று, அத்தேவருட் பெண் டெய்வங் கொடிநிலை கந்தழி (88) என்புழி அடங்கும். மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையிற் செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ (புறம். 3) என்றாற் போலச் சிறுபான்மை ஆண்மக்களொடு படுத்துப் பாடுப. வகையென்றதனான் வாழ்த்தின்கண் மக்கட்பொருளும் உடன்தழுவினும் அவை கடவுள் வாழ்த்தாமென்று கொள்க. உ-ம் : எரியெள்ளு வன்ன திறத்தன் விரியிணர்க் கொன்றையம் பைந்தா ரகலத்தன் பொன்றா ரெயிலெரி யூட்டிய வில்லன் பயிலிருள் காடமர்ந் தாடிய ஆடல னீடிப் புறம்புதை தாழ்ந்த சடையன் குறங்கறைந்து வெண்மணி யார்க்கும் விழவின னுண்ணூற் சிரந்தை யிரட்டும் விரல னிரண்டுருவாய் ஈரணி பெற்ற வெழிற்றகைய னேரு மிளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறேற்கும் பண்பின் மறுமிடற்றன் றேறிய சூலம் பிடித்த சுடர்ப்படைக் காலக் கடவுட் குயர்கமா வலனே (பதிற்றுப்பத்து) இது கடவுள் வாழ்த்து. தொகைகளிலும் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக. இனி அறுமுறை வாழ்த்து வருமாறு: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (குறள். 28) கெடுப்பதூஉங் கெட்டாக்குச் சார்வாய் மற்றாங்கே யெடுப்பதூஉ மெல்லா மழை (குறள். 15) நாகின நந்தி யினம்பொலியும்போத்தென வாய்வா ளுழவர் வளஞ்சிறப்ப ஆயர் அகன்றார் சுரைய கறந்தபால் சீர்சிறந்த வான்பொருள் வட்டத் தயிராகு மத்தயிர் மெல்லக் கடைவிடத்து நெய்தோன்ற நெய்பயந்து நல்லமு தன்ன வளையாகு நல்ல புனிதமு மெச்சிலு நீக்கித் துனியின்றி யன்ன பெரும்பயத்த வாகலாற் றொன்மரபிற் காரார் புறவிற் கலித்த புதர்மாந்தி யாவா ழியரோ நெடிது ஏனைய வந்துழிக் காண்க. புயல்சூடி நிவந்த பொற்கோட் டிமயத்து வியலறைத் தவிசின் வேங்கை வீற்றிருந்தாங் கரிமான் பீடத் தரசுதொழ விருந்து பெருநிலச் செல்வியொடு திருவீழ் மார்பம் புதல்வருந் தாமு மிகலின்று பெறூஉந் துகளில் கற்பின் மகளிரொடு விளங்கி முழுமதிக் குடையி னமுதுபொதி நீழ லெழுபொழில் வளர்க்கும் புகழ்சால் வளவன் பிறந்தது பார்த்துப் பிறர்வாய் பரவநின் அறங்கெழு சேவடி காப்ப உறந்தையோ டூழி யூழி வாழி யாழி மாநில மாழியிற் புரந்தே இது கடவுளை வாழ்த்தி ஒழியாது தனக்குப் பயன்படுவோன் ஒருவனையுங் கூட்டி வாழ்த்துதலின் புரைதீர்காமம் புல்லிய வகையாயிற்று. ஒன்றன்பகுதியுள் மக்கட்பகுதி தோன்றுமாறு 82. வழங்கியன் மருங்கின் வகைபட நிலைஇப் பரவலும் புகழ்ச்சியுங் கருதிய பாங்கினு முன்னோர் கூறிய குறிப்பினுஞ் செந்துறை வண்ணப் பகுதி வரைவின் றாங்கே. இது மேல் ஒன்றன்பகுதி (தொல். புறத்திணை 26) என்புழித் தோற்றுவாயாகச் செய்த இருபகுதியுள் மக்கட் பகுதி கூறுகின்றது. (இ-ள்.) பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் - ஒரு தலைவன் தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்ந்துரைத்தலுங் கருதிய பக்கத்தின் கண்ணும்; வகைபட முன்னோர் கூறிய குறிப்பினும் - அறம்பொருளின் பங்களின் கூறுபாடு தோன்ற முன்னுள்ளோர் கூறிய குறிப்புப் பொருளின்கண்ணும்; செந்துறை நிலைஇ - செவ்வனம் கூறுந் துறை நிலைபெற்று; வழங்குஇயல் மருங்கின். வழங்குதல் இயலுமிடத்து; ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்று - அச்செந்துறைக் கண் வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கு நிலைமையின்று எ-று. பரவல் முன்னிலைக்கட் பெரும்பான்மை வரும், பரவலும் புகழ்ச்சியுந் தலைவன் கண்ணவாய்ப் பரிசில் பெறுதல் பாடுவான் கண்ணதாகலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குப் புறனா யிற்று. முன்னோர் கூறிய குறிப்பும் பாடப்படுவோன்கண் வேட்கையின்மையிற் கைக்கிளையாம். குறிப்பென்றார், அறம்பொருள் இன்பம் பயப்பச் செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது உறுதி பயத்தலைக் குறித்துச் செய்தலின். செந்துறையாவது, விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும். வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா (பத்துப். குறிஞ்சிப். 31) என்பவாகலானும், ஐவகை நிறத்தினையும் வண்ணமென்ப வாகலானும், வண்ணமென்பது இயற்சொல்; வருண மென்பது வடமொழித் திரிபு. ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்றெனவே வருகின்ற காமப் பகுதியிடத்து வண்ணப்பகுதி வரையப்படுமாயிற்று; கைக்கிளைக் கிழத்தியை உயர்ந்தோன் வருணத்துப் படுத்துக் கூறாதது, அனைநிலை (தொல். புறத்திணை 20) வருணத்துப்படுத்துத் தோன்றக் கூறலின். உ-ம் : நிலநீர் வளிவிசும் பென்ற நான்கி ளைப்பரி யையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழ லைந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை போர்தலை மிகுத்த வீரைம் பதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை யக்குர னனைய கைவண் மையையே அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்பீ டழித்த செருப்புகன் முன்ப கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே யெழுமுடி கெழீஇய திருஞெம ரகலத்து நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வியங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத்தொகுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேந்தே யிலங்குமணி மிடைந்த பொலங்கலத் திகிரிக் கடலக வரைப்பினிப் பொழின்முழு தாண்டநின் முன்றிணை முதல்வர் போல நின்றுநீ கொடாஅ நல்லிசை நிலைஇத் தவாஅ அலியரோவிவ் வுலகமோ டுடனே (பதிற்றுப். 14) பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு; இதனை வாழ்த்திய லென்பர். வரைபுரையு மழகளிற்றின்மிசை வான்றுடைக்கும் வகையபோல விரவுருவின கொடிநுடங்கும் வியன்றானை விறல்வேந்தே நீ. யுடன்று நோக்கும்வா யெரிதவழ நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும் வெண்டியங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின் நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த வெம்மள வெவனோ மற்றே யின்னிலைப் பொலம்பூங் காவி னன்னாட் டோருஞ் செய்வினை மருங்கி னெய்த லல்லதை யுடையோ ரீதலு மில்லோ ரிரத்தலுங் கடவ தன்மையிற் கையற புடைத்தென ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் வடலின் நின்னா டுள்ளுவர் பரிசில ரொன்னார் தேஎத்து நின்னுடைத் தெனவே (புறம். 38) இது புகழ்ச்சிக்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு. இயைபியன்மொழி யென்பதும் அது. உண்டா லம்மலிவ் வுலக மிந்திர ரமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழுனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி னுலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்வில ரன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்றாள் பிறக்கென முயலுந ருண்மை யானே (புறம். 182) இது வகைபட முன்னோர் கூறிய குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு. இது முனிவர் கூறுமாறு போலக் கூறிப் பரவலும் புகழ்ச்சியுங் கூறாது மறைமைப்பயன் பிறர்க்குறுதி பயப்பக் கூறலிற் கைக்கிளைப் புறனாய் பாடாணாயிற்று. இவை செந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பதூஉம் வேண்டுறை மாக்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக்குரியவாகி வருமென்பதூஉங் கூறின், அவை ஈண்டுக் கூறல் மயங்கக் கூறலாம். அன்றியும் ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ஙனங் கூறாது இத்திணைக்கே உரித்தாகக் கூறுதற்கொரு காரணமின்மையானும் அங்ஙனங் கூறாரென்ப. பரவலும் புகழ்ச்சியும் அவ்வப் பொருண்மை கருதினாரைத் தலைவராக வுடைமையானும், ஏனையது அக்குறிப்பிற்றன் றாகலானும், அதற்குப் பாட்டுடைத் தலைவர் பலராயினும் ஒருவராயினும் பெயர்கொடுத்துங் கொடாதுங் கூறலானும் வேறு வைத்தாரென்க. இத்துணை வேறுபாடு டையதனைப் பரவல் புகழ்ச்சியொடு கூட வைத்தார், அவை முன்னோர் கூறிய குறிப்பினுள்ளும் விராய்வரும் என்றற்கு. இன்னும் அதனானே பாடாண்டிணைப் பொருண்மை மயங்கிவரினும் முடிந்த பொருளாற் பெயர் பெறுமென்று கொள்க. நிலமிசை வாழ்நர் என்னும் (43) புறப்பாட்டுப் புலவன் அரசனை வைது ஆறியது நன்குரைத்தல். அஃது இயற்கை வகையானன்றிச் செயற்கை வகையாற் பரவலும் புகழ்ச்சியுந் தொடர்ந்த முன்னோர் கூறிய குறிப்பு. இன்னும் மயங்கி வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (27) எய்தியதன்மேற் சிறப்புவிதி 83. காமப் பகுதிய கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினு மென்மனார் புலவர். இது முற்கூறிய கடவுட்கும் மக்கட்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) காமப்பகுதி - முன்னர்ப் புரைதீர் காம (தொல். புறம். 26) மென்றதனுட் பக்குநின்ற புணர்ச்சி வேட்கை; கடவுள் பாங்கினும் வரையார் - கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக்கார்; ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர் - மக்களிடத்தும் நீக்காரென்று கூறுவர் புலவர் எ-று. பகுதி ஆகுபெயர். அது கடவுண்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர் மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவுங், கடவுண் மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம். இன்னும் பகுதியென்றதனானே எழுதிணைக்குரிய காமமுங் காமஞ்சாலா இளமையோள்வயிற் (தொல். அகம். 50) காமமுமன்றி இது வேறொரு காமமென்று கொள்க. உ-ம் : நல்கெனி னாமிசையா ணோமென்னுஞ் சேவடிமே லொல்கெனி னுச்சியா ணோமென்னு - மல்கிரு ளாட லமர்ந்தாற் கரிதா லுமையாளை யூட லுணர்த்துவதோ ராறு (புற. வெ. பாடாண். 48) பல்லேற்ற பரிகலத்துப் பலியேற்றன் மேலிட்டு வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப வருதிரால் வல்லேற்ற முலைமகளிர் மனமேற்ப நீரேறுங் கொல்லேற்றுக் கறுகிடினுங் கொள்ளுமோ கொள்ளாதோ குடுமிப் பருவத்தே கோதை புனைந்தே யிடுமுத்தம் பூத னிருப்பப் - படுமுத்தம் பின்னை யரும்பும் புகாஅர்ப் புறம்பணையார்க் கென்ன முறைய ளிவள் என வரும். களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை யளியா னளிப்பானே போன்றான் - றெளியாதே செங்காந்தண் மெல்லிரலாற் சேக்கை தடவந்தே வென்காண்பே னென்னலால் யான் (முத்தொள். 63) அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டேந்திப் பணியாயே யெம்பெருமா னென்று - கணியார்வாய்க் கோணலங் கேட்பதூஉங் கொண்கர் பெருமானார் தோணலஞ் சேர்தற் பொருட்டு என வரும். அடிபுனை தொடுகழன் மையணற் காளைக்கென் தொடிகழித் திடுதல்யான் யாயஞ் சுவலே யடுதோண் முயங்க லவைநா ணுவலே யென்போற் பெருவிதுப் புறுக வென்று மொருபாற் படாஅ தாகி யிருபாற் பட்டவிம் மைய லூரே (புறம். 83) இது பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி ஒத்த அன்பினாற் காமமுறாதவழியுங் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது, இதனானடக்குக. இன்னும் ஏனோர் பாங்கினும் என்பதனானே கிளவித்தலை வனல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவுங் கொள்க. உ-ம் : கார்முற்றி யிணரூழ்த்த கமழ்தோட்ட மலர்வேய்ந்து சீர்முற்றிப் புலவர்வாய்ச் சிறப்பெய்தி யிருநிலந் தார்முற்றி யதுபோலத் தகைபூத்த வையைதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூரன் (கலி.67) இது குறிப்பினாற் பாட்டுடைத்தலைவனைக் கிளவித் தலை வனாகக் கூறியது. மீளிவேற் றானையர் புகுதந்தார் நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே (கலி. 31) என்பதும் அது. இவ்வாறு வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (28) மக்கள் குழவிக்கண்ணும் புரைதீர்காமம் உரித்தாதல் 84. குழவி மருங்கினுங் கிழவ தாகும் இது முன்னிற்சூத்திரத்திற் பக்குநின்ற காமத்திற்கன்றிப் புரைதீர்காமத் (தொல். புறம். 26) திற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) குழவிமருங்கினும் கிழவதாகும் - குழவிப் பருவத்துங் காமப்பகுதி உரியதாகும். எ-று. மருங்கென்றதனான் மக்கட்குழவியாகிய ஒருமருங்கே கொள்க; தெய்வக்குழவி யின்மையின். இதனை மேலவற்றோ டென்றாது வேறு கூறினார், தந்தையரிடத்தன்றி ஒரு திங்களிற் குழவியைப் பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையுஞ் தாலுஞ்சப்பாணியும் முத்தமும் வரவுரைத்தலும், அம்புலியுஞ் சிற்றிலுஞ் சிறுதேருஞ் சிறு பறையுமெனப் பெயரிட்டு வழங்குதலானு மென்பது. இப்பகுதிகளெல்லாம் வழக்கொடு சிவணிய (தொல். புறம். 31) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். இப்பருவத்துக்கு உயர்ந்த வெல்லை மூவகை வருணத்தாரும் இருபிறப்பாள ராகின்ற பருவமாம். வேளாளர்க்கும் மூவகையோர்க்குரிய பருவமே கொள்க. குழவிப்பருவங் கழிந்தோர் அது வேண்டியக்காலும் அக்குழவிப் பருவமே கருதிப் பாடுக வென்றதற்குக் கிழவதாகுமென்றார். இதற்குப் பரிசில் வேட்கை அக்குழவிக் கணன்றி அவன் தமர்க்கண்ணுமாமென் றுணர்க. உ-ம் : அன்னா யிவனொருவ னந்தரத்தா னானென்றான் முன்ன மொருகான் மொழியினான் - பின்னுங் கலிகெழு கூடலிற் கண்ஞீடி வந்து புலியாய்ப் பொருவான் புகும் அந்தரத்தானா னென்றான் அம்புலி வேறாயும் ஒருகாலத்தே விளையாட்டு நிகழ்த்துமென. இது மதுரையிற் பிட்டுவாணிச்சி மகற்கு மங்கலக் குறிப்பாற் சான்றோர் கூறியது. (29) ஊரிற்பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் இத்திணைக்கு உரித்தாதல் 85. ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப. இது புரைதீர் காமத்திற்கன்றிப் பக்குநின்ற காமத்திற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்.) பக்குநின்ற காமம் ஊரிற் பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று. தோற்றமுமென்றது, அக்காமந் தேவரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் விளக்கத்தை. அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம். இச் சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்புமென்று பொருள் கூறின், மரபியற்கண்ணே ஊரும் பெயரும் (தொல். மரபியல் 27) என்னும் சூத்திரத்து ஊர்பெறுதலானும், முன்னர் வண்ணப்பகுதி (தொல். புறம். 27) என்பதனாற் பிறப்புப் பெறுதலானும் இது கூறியது கூறலாமென்றுணர்க. மேற்கூறிய ஐந்து சூத்திரங்கட்கும் புறனடை 86. வழக்கொடு சிவணிய வகைமை யான. இது அமரர்கண் முடியும் (தொல். புறம். 26) என்னுஞ் சூத்திர முதலியவற்றுக்கெல்லாம் புறனடை. (இ-ள்.) கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு தோற்ற மீறாகக் கிடந்தனவெல்லாஞ் சான்றோர் செய்த புலனெறிவழக்கோடே பொருந்திவந்த பகுதிக்கண்ணேயான பொருள்களாம் எ-று. எனவே, புலனெறிவழக்கின் வேறுபடச் செய்யற்க என்பது கருத்து. கடவுள் வாழ்த்துப் பாடுங்கான் முன்னுள்ளோர் பாடியவாறன்றி முப்பத்து மூவருட் சிலரை விதந்து வாங்கிப் பாடப்பெறாது. இனி அறுமுறைவாழ்த்துப் பாடுங்கால் முன்னுள்ளோர் கூறியவாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும் வாழ்த்தப்படா. இனிப் புரைதீர் காமம் புல்லிய வகையும் ஒருவன்றொழுங் குலதெய்வத்தை நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது. இனிச் செந்துறைப்பாடாண்பாட்டு முன்னுள்ளோர் கூறியவாறன்றி இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப்படாது. இனிக் காமப்பகுதிக் கடவுளரைக் கூறுங்காலும் பெண்டெய்வத் தோடு இயல்புடையாரைக் கூறினன்றி எண்வகை வசுக்கள் போல்வாரையும் புத்தர், சமணர் முதலியோரையுங் கூறப்படாது. இனி மக்களுள் ஒருவனைத் தெய்வப் பெண்பால் காதலித்தமை கூறுங்காலும் மக்கட்பெண்பாற்குக் காதல் கூறுங்காலும் முன்னோர் கூறியவாறன்றிக் கூறப்படாது. இனிக் குழவிப்பருவத்துக் காமங் கூறுங்காலும் முன்னர்க் காப்பும் பின்னர் ஏனையவுமாக முன்னுள்ளோர் கூறியவாறன்றிக் கூறப்படாது. இனி ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது. இன்னுஞ் சிவணிய வகைமை என்றதனானே முற்கூறியவற் றோடே நாடும் ஊரும் மலையும் யாறும் படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரும் பிறவும் வருவன வெல்லாங் கொள்க. உ-ம் : முற்பற்றி னாரை முறைசெய்யிற் றானென்னைக் கைப்பற்றக் கண்டேன் கனவினு - ளிப்பெற்றித் தன்னைத் தனக்கே முறைப்படி னென்செய்யும் பொன்னம் புனனாட்டார் கோ ஏரியு மேற்றத்தி னாலும் பிறர்நாட்டு வாரி சுரக்கும் வளனெல்லாந் - தேரி னரிதாளின் கீழுகூஉ மந்நெல்லே சாலுங் கரிகாலன் காவிரிசூழ் நாடு (பொருந.) இவை நாடும் யாறும் அடுத்து வந்தன. மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மு ளொலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான் கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும் இஃது ஊர் அடுத்து வந்தது. மிதியற் செருப்பிற் பூழியர் கோவே குவியற் கண்ணி மழவர் மெய்ம்மறை பல்பயந் தழீஇய பயங்கெழு நெடுங்கோட்டு நீரறன் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வற் கொக்கின் பரிவேட் பஞ்சாச் சீருடைத் தேஎத்த முனைகெட விலங்கிய நேருயர் நெடுவரை யயிரைப் பொருந (பதிற்றுப். 21) இது மலை யடுத்தது. ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும் (புறம். 14) இது படையடுத்தது. பூங்க ணெடுமுடிப் பூவைப்பூ மேனியான் பாம்புண் பறவைக் கொடிபோல - வோங்குக பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க் கொல்யானை மன்னன் கொடி (புற.வெ.பாடாண். 39) இது கொடியடுத்தது. வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின் மாலை வெண்குடை யொக்குமா லெனவே (புறம். 60) இது குடையடுத்தது. முரசுமுழங்கு தானை மூவருங் கூடி யரசவை யிருந்த தோற்றம் போல (பொருந. 54.5) இது முரசடுத்தது. சாலியரி சூட்டான் மடையடைக்கு நீர் நாடன் மாலு மழைத்தடக்கை மாவளவன் - காலியன்மா மன்னர் முடியுதைத்து மார்பகத்துப் பூணுழக்கிப் பொன்னுரைகற் போன்ற குளம்பு இது புரவியடுத்தது. ஆயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சான் மன்ன ரெயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சினவேற் கிள்ளி களிறு (முத்தொள். யானைமறம் 17) இது களிறடுத்தது. நீயே, யலங்குளைப் பரீஇயிபுளிப் பொலந்தேர்மிசைப் பொலிவு தோன்றி மாக்கட னிவந்தெழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ (புறம். 4) இது தேரடுத்தது. மள்ளர் மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப (புறம். 10) இது தாரடுத்தது. இவற்றுட் சிலவற்றை வரைந்துகொண்டு சின்னப்பூ வென்று பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா றுணர்க. (31) புறத்திணைக்குரிய மெய்பெயரினிடமாகவும் அகத்திணை வருமாறு 87. மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே. இது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளும் பாடாண்டிணைக்குரிய மெய்ப்பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழுமென்கின்றது. (இ-ள்.) மெய்ப்பெயர் மருங்கின் - புறத்திணைக்குரிய மெய்ப் பெயர்களின் மருங்கே; வழி வைத்தனர் - புறத்திணை தோன்றுதற்கு வழியாகிய அகத்திணையை வைத்தார் முதனூலாசிரியர் எ-று. என்றது எனக்கும் அதுவே கருத்தென்பதாம். வழியென்பது ஆகபெயர். மெய்ப்பெயராவன புறத்திணைக் குரிய பாட்டுடைத் தலைவர் பெயரும் நாடும் ஊரும் முதலியனவாம். இதன் கருத்துச் சுட்டியொருவர் பெயர்கௌப் பெறாஅர் (தொல். அகம். 54) என அகத்திணையியலுட் கூறினமையிற், கிளவித் தலைவன் பெயரை மெய்ப்பெயராகக் கொள்ளாது, ஏனைப் புறத்திணையாற் கொண்ட மெய்ப்பெயரிடம் பற்றி, அகத்திணைப் பொருள் நிகழவும் பெறுமென்பதாம். உ-ம் : அரிபெய் சிலம்பின் என்னும் (6) அகப் பாட்டினுள் (6) தித்தனெனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லினென நாடும், உறந்தையென ஊருங், காவிரியாடினை யென யாறுங் கூறிப், பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க. மருங்கு என்றதனாற் பாட்டுடைத் தலைவன் பெயர் கூறிப் பின்னர் நாடு முதலியன கூறல் மரபென்று கொள்க. அதுவும் அச்செய்யுளாற் பெற்றாம். நீலம்பூத்த மரமிசை நிமிர்பாலுங் குயிலெள்ள நலம்பூத்த நிறஞ்சாய நம்மையோ மறந்தைக்க கலம்பூத்த வணியவர் காரிகை மகிழ்செய்யப் புலம்பூத்துப் புகழ்பானாக் கூடலு முள்ளார்கொல். (கலி. 27) இதனுட் கூடலிடத்துத் தலைவி யென்பது கூறினார். கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின் மேவிளையாட்டும் விரும்பால்கொல். (கலி. 27) இதனுள் வென்வேலான் குன்றென மலை கூறினார். திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நீழல் சேர்ந்தாரைத் தாங்கித் தம் இசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர் (கலி. 26) இதனுள் ஆறு கூறினார். புனவளர் பூங்கொடி என்னும் (27) மருதக்கலியும் அது. கரிய மலர்நெடுங்கட் காரிகைமுன் கடற்றெய்வங் காட்டிக் காட்டி யரியசூள் பொய்த்தா ரறனிலரென் றேழையம்யாங் கறிகோ மைய விரிகதிர் வெண்மதியு மீன்கணமு மாமென்றே விளங்கும் வெள்ளைப் புரிவளையு முத்துங்கண் டாம்பல் பொதியவிழ்க்கும் புகாரே யெம்மூர் (சிலப். கானல். 7) இது முதலிய மூன்றும் புகாரிற் றலைவியெனக் கூறியவாறு காண்க. இன்னுஞ் சான்றோர் செய்யுட்கண் இங்ஙனம் வருவனவெல்லாம் இதனான் அமைக்க. இக்கருத்தினாற் செய்யுள் செய்த சான்றோர் தமக்கும் பாடாண்தலைவர்கண் நிகழ்ந்த ஒருதலைக் காமமேபற்றி அகத்திணைச் செய்யுள் செய்தாரேனும் தம்மிசை பரந்துலகேத்த வேதினாட்டு றைபவர் (கலி. 26) என்று இவை பாடாண்டிணையெனப் பெயர்பெறா என்றற்கு இது கூறினார். பிறப்பில்லாத் தெய்வங்களும் பாடாண்டிணைக்குரியவாதல் 88. கொடிநிலை கந்தழி வள்ளி யென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றுங் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. இது தேவரும் மக்களுமெனப் பகுத்த முறைமையானே அப்பகுதியிரண்டுங் கூறி இன்னும் அத்தேவரைப்போல் ஒருவழிப் பிறக்கும் பிறப்பில்லாத தெய்வங்களும் பாடாண்டிணைக்கு உரிய என்கிறது. (இ-ள்.) கொடிநிலை - கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் மண்டிலம்; கந்தழி - ஒரு பற்றுக்கோடின்றி அருவாகித் தானே நிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி - தண்கதிர் மண்டலம்; என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் - என்று சொல்லப்பட்ட குற்றந் தீர்த்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே - முற்கூறிய அமரரோடே கருதுமாற்றான் தோன்றும் எ-று. பொய்தீ ருலக மெடுத்த கொடி மிசை மையறு மண்டிலம் வேட்டனள் வையம் புரவூக்கு முள்ளத்தே னென்னை யிரவூக்கு மின்னா விடும்பைசெய் தாள் (கலி. 141) என்ற வழிக் கீழ்த்திசைக்கண்ணே தோன்றும் மண்டில மென்றாற் போலக் கொடிநிலை யென்பதூஉம் அப்பொடந்ததோர் ஆகுபெயர். இனி எப்புறமும் நீடுசென்று எறித்தலின் அந்நீடனிலைமை பற்றிக் கொடிநிலை யென்பாருமுளர். குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே (குறுந்.132) என்றார்போல. வள்ளியென்பதுவுங் கொடியை; என்னை? பன்மீன் தொடுத்த உடுத்தொடை கொடியெனப்படுதலின், அத் தொடையினை இடைவிடா துடைத்தாதலின் அதனை அப்பெயராற் கூறினார், முத்துக்கொடி யெனவும் மேகவள்ளி யெனவுங் கூறுமது போல. கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய் நிற்றலின் இடையே வைத்தார். இனி அமரரென்னும் ஆண்பாற் சொல்லுள் அடங்காத பெண்பாற் றெய்வமும் வள்ளியென்னுங் கடவுள் வாழ்த்தினுட் படுவனவாயின, பாடா ணெனப்படா வாயினுமென்பது; என்னை? ஞாயிறு நெருப்பின்றன்மையும் ஆண்டன்மையும் உடைமையானுந், திங்கள் நீரின்றன்மையும் பெண்டன்மையும் உடைமையானு மென்பது. அல்லதூஉம், வெண்கதிர் அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் வள்ளி யென்பதூஉமாம் என்பது. உ-ம் : மேகத்தான் வெற்பா னிமையான் விழுப்பனியா னாகத்தா னீமறைய நாட்கதிரே - யோகத்தாற் காணாதார் நின்னை நிலையாமை கட்டுரைப்பர் நாணாத கண்ணெனக்கு நல்கு இது கொடிநிலை வாழ்த்து. சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்குஞ் சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த தூய்மையதா மைதீர் சுடர் இது கந்தழி வாழ்த்து. பிறைகாணுங் காலைத்தன் பேருருவ மெல்லாங் குறைகாணா தியாங்கண்டு கொண்டு - மறைகாணா தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென் றாய்ந்தது நன்மாயை யாம் இது வள்ளி வாழ்த்து. தனிக்கணிற் பாகமுந் தானாளு மாமை பனிக்கண்ணி சாவு படுத்துப் பனிக்கணந் தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென் றியாமுரையா நிற்கு மிடத்து இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள் வாழ்த்து (33) எய்தாதது எய்துவித்தல் 89. கொற்ற வள்ளை யோரிடத் தான. இஃது எய்தாதது எய்துவித்தது; தேவர்க்கும் உரியவாம் ஒரு சார் அப்பாடாண்டிணைக் கொற்றவள்ளை யென்றலின். (இ-ள்.) கொற்றவள்ளை - அதிகாரத்தாற் கைக்கிளைக்குப் புறனாய் வெட்சி முதல் வஞ்சி யீறாகிய பாடாண் கொற்றவள்ளை; ஓரிடத்தான - மேற்கூறி நின்ற தேவர் பகுதிக்கண்ணதன்றி அவரின் வேறாகிய மக்கட் பகுதிக்கண்ணது எ-று. எனவே, உழிஞை முதலிய பாடாண் கொற்றவள்ளை நற்கிளைஞருங் கூளிச்சுற்றமும் ஒன்றனை நச்சிப் புகழாதே வாளா கூறுதலும், ஈண்டுக் கூறுகின்ற கொற்றவள்ளை புலவன் ஒன்றனை நச்சி வெட்சி முதலிய ஏழனானும் புகழ்ந்துரைத்தலுமாயிற் றாதலிற் படையியங் கரவம் (தொல். புறம். 3) முதலாக வஞ்சியிற் டுகுன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையீறாகக் கிடந்த பொருட் பகுதியெல்லாம் பாடாண்டிணையாகப் பாடுங்கால் மக்கட்கே யுரிய என்பதூஉம், உழிஞை முதலியவற்றைப் பாடாண்டிணையாகப் பாடுங்கால் அவை மக்கட்குந் தேவர்க்கும் ஒப்ப உரியவென்பதூஉம் கூறுதலாயிற்று. என்னை? அரசியலாற் போர் குறித்து நிரைகோடாலும் மீட்டலும் மேற்செல்லும் வஞ்சியுந் தேவர்க் கேலாமையாயினும், அவுணரான் முற்றப்பட்ட துறக்கத்தினை அகத்துழிஞை யரணாக்கி மனுவழித் தோன்றிய முசுகுந்தனோடு இந்திரன் காத்தாற் போல்வனவும் பிறவுந் தேவர்க்குக் கூறுதலான் அவரும் மதில் முற்றியவழிப் போர் தோன்றுதலும் ஆண் வென்றியெய்துதலும் உடையராதலின் பாடாண்பொருட்கும் உரியாரென நேர்பட்டது. இச்சூத்திரம் மக்கட்கெய்திய பொருண்மையை மீட்டுங்கூறி நியமித்ததாம்; ஆகவே, வெட்சி முதல் வஞ்சியிற் கொற்றவள்ளை ஈறாய பொருண்மை உழிஞைமுதற் பாடாண்டிணைக் குரியராகி இடைபுகுந்த தேவர்க காகாவென விதிவகையான் விலக்கியதாம். ஆகவே, தேவர்க்கு உழிஞை முதலிய கொற்றவள்ளை ஆமென்பதூஉம் கூறினாராயிற்று. கொடிநிலை முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப் பட்டாரை அதிகாரங்கொண்ட அளவேயாமென் றுணர்க. உ-ம் : மாவாடிய புலம் நாஞ்சிலாடா கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை யினம்பரந்தபுலம் வளம்பரப்பறியா நின்படைஞர். சேர்ந்த மன்றங் கழுதை போகி நீ யுடன்றோர் மன்னெயி றோட்டி வையா கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப் பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின் ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி முனையகன் பெரும்பா ழாக மன்னிய புருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக் கடும்பரிக் கதழ்சிற கைகப்பநீ நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடா (பதிற்றுப் 25) இது புலவன் பொருணச்சிக் கூறலிற் பாடாண்கொற்ற வள்ளை. வல்லராயினும் வல்லுந ராயினும் (57) காலனுங் காலம் (41) என்னும் புறப்பாட்டுக்களும் அது. மக்கட் பாடாண்டிணைக்குரிய துறைகளாவன 90. கொடுப்போ ரேத்திக் கொடா அர்ப் பழித்தலும் அடுத்தூர்ந் தேத்திய வியன்மொழி வாழ்த்துஞ் சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலர்க் குரைத்த கடைநிலை யானுங் கண்படை கண்ணிய கண்படை நிலையுங் கபிலை கண்ணிய வேள்வி நிலையும் வேலி னோக்கிய விளக்கு நிலையும் வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறூஉவும் ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்துங் கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத் தொக்க நான்கு முளவென மொழிப. இது முன்னிற் சூத்திரத்து அதிகாரப்பட்டு நின்ற மக்கட் பாடாண்டிணைக் குரிய துறை கூறுகின்றது. (இ-ள்.) கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் - பிறர்க்கு ஈவோரைப் பிறரி னுயர்த்துக் கூறிப் பிறர்க் கீயாதாரை இழித்துக் கூறலும்; சான்றோர்க்குப் பிறரை யிழித்துக் கூறற்கண்ணது தக்க தன்றேனும் நன்மக்கள் பயன்பட வாழ்தலுந் தீயோர் பயன்படாமல் வாழ்தலுங் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவரென்பது பயப்பக் கூறலின் இவர்க்கு இங்ஙனங் கூறுதல் தக்கதாயிற்று. இதனை ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலுமென மூவகையாகக் கொள்க. உ-ம் : தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர் வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாஞ்சில அரிசி வேண்டினே மாகத் தான்பிற வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி யிருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர் தேற்றா வீகையு முளதுகோல் போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே (புறம். 140) இது கொடுப்போர் ஏத்தியது. பாரி பாரி யென்றுபல வேத்தி யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே (புறம். 107) என்பதுவும் அது. ஒல்லுவ தொல்லு மென்றலு மியாவர்க்கு மொல்லா தில்லென மறுத்தலு மிரண்டு மாள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே யொல்லா தொல்லு மென்றலு மொல்லுவ தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே யிரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை யனைத்தா கியரினி யிதுவே யெனைத்துஞ் சேய்த்துக் காணாது கண்டன மதனால் நோயில ராகநின் புதல்வர் யானும் வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை நாணல தில்லாக் கற்பின் வாணுதன் மெல்லியற் குறுமக ளுள்ளிச் செல்வ லத்தை சிறக்க நின் னாளே (புறம். 196) புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன் (குறள். 237) இவை கொடாஅர்ப் பழித்தல். களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப் பாடின் பனுவற் காண ருய்த்தெனக் களிறில வாகிய புல்லரை நெடுவெளிற் கான மஞ்ஞை கணனொடு சேப்ப வீகை யரிய விழையணி மகளிரொடு சாயின் றென்ப வாஅய் கோயில் சுவைக்கினி தாகிய குய்யுடை யடிசில் பிறர்க்கீ வின்றித் தம் வயி றருத்தி யுரைசா லோங்குபுக ழொரீஇய முரசுகெழு செல்வர் நகர்போ லாதே (புறம். 127) இஃது ஆயைப் புகழ்ந்து ஏனைச் செல்வரைப் பழித்தது. மின்னுந் தமனியமும் வெற்றிரும்பு மொன்றாகிப் பொன்னின் பெயர்படைத்தாற் போலாதே. கொன்னே யொளிப்பாரு மக்களா யொல்லுவ தாங்கே யளிப்பாரு மக்களா மாறு (பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு 288) இதுவும் அது. அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் - தலைவனெதிர் சென்று ஏறி அவன் செய்தியையும் அவன் குலத்தோர் செய்தியையும் அவன்மேலே ஏற்றிப் புகழ்ந்த இயன்மொழி வாழ்த்தும்; என்றது, இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம் இக்குணங்கள் இயல்பென்றும், அவற்றை நீயும் இயல்பாக உடையை யென்றும், அன்னோர்போல எமக்கு நீயும் இயல்பாக ஈ யென்றும் உயர்ந்தோர் கூறி அவனை வாழ்த்தலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று. இதனை உம்த் தொகையாக்கி இயன்மொழியும் வாழ்த்துமென இரண்டாக்கிக் கொள்க. இஃது ஒருவர் செய்தியாகிய இயல்பு கூறலானும் வண்ணப் பகுதியின்மையானும் பரவலின் வேறாயிற்று. உ-ம் : மாசற விசித்த வார்புற வள்பின் மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை யொலிநெடும் பீலி யொன்பொறி மணித்தார் பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை யுருகெழு முரசம் மண்ணி வாரா வளவை யெண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை யறியா தேறிய வென்னைத் தெறுவர இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை யதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல் அதனொடு மமையாதணுக வந்துநின் மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென வீசி யோயே வியலிடங் கமழ இவணிசையுடையோர்க் கல்ல தவண துயர்நிலை யுலகத் துறையு ளின்மை விளங்கக் கேட்ட மாறுகொல் வலம்படு குரிசினீ யீங்கிது செயலே (புறம் 50) இவை போல்வன வெல்லாம் இயன்மொழி. மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி வரைமிசை யருவியின் வயின்வயினுடங்கக் கடல்போ றானைக் கடுங்குரல் முரசங் காலுறு கடலிற் கடிய வுரற வெறிந்து சிதைந்தவாள் இலைதெரிந்த வேல் பாய்ந்தாய்ந்த மா வாய்ந்து தெரிந்த புகன்மறவரொடு படுபிணம் பிறங்க நூறிப் பகைவர் கெடுகுடி பயிற்றிய செகாற்ற வேந்தே நின்போ, லசைவில் கொள்கைய ராகலி னசையாது ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம் நிலம்பயம் பொழியச் சுடர் சினந் தணியப் பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த விலங்கு கதிர்த்திகிரி முந்திசி னோரே (பதிற்றுப் 69) இது முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பதுபடக் கூறிய இயன்மொழி வாழ்த்து. முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவு மரசுடன் பொருத வண்ண னெடுவரைக் கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும் பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக் கொல்லி யாண்ட வல்வில் லோரியுங் காரி யூர்ந்து பேரமர்க் கடந்த மாரி யீகை மறப்போர் மலையனும் ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற் கூவிளங் கண்ணிக் கொடும்பூ ணெழினியும் ஈர்ந்தண் சிலம்பி னிருடூங்கு நளிமுழை யருந்திறற் கடவுள் காக்கு முயற்சிமைப் பெருங்க னாடன் பேகனுந் திருந்துமொழி மோசி பாடிய ஆயு மார்வமுற் றுள்ளி வருந ருலைவுநனி தீரத் தள்ளா தீயுந் தகைசால் வண்மைக் கொள்ளா ரோட்டிய நள்ளியு மெனவாங்கு எழுவர் மாய்ந்த பின்றை யழிவரப் பாடி வருநரும் பறிருங் கூடி யிரந்தோ ரற்றந் தீர்க்கென விரைந்திவண் உள்ளி வந்தனென் யானே விசும்புறக் கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி யாசினிக் கவினிய பலவி னார்வுற்று முட்புற முதுகனி பெற்ற கடுவன் துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரு மதிரா யாணர் முதிரத்துக் கிழவ இவண்விளங்கு சிறப்பினி யல்தேர்க் குமண இசைமேந் தோன்றி வண்மையொடு பகைமேம் படுகநீ யேந்திய வேலே (புறம். 158) இஃது இன்னார் போல எமக்கு ஈ யென்ற இயன்மொழி வாழ்த்து. இன்று செலினுந் தருமே சிறுவரை நின்று செலினுந் தருமே பின்னும் முன்னே தந்தனெ னென்னாது துன்னி வைகலுஞ் செலினும் பொய்யல னாகி யாம்வேண்டி யாங்கெம் வறுங்கல நிறைப்போன் தான்வேண்டி யாங்குத் தன்னிறை யுவப்ப வருந்தொழின் முடியரோ திருந்துவேற் கொற்ற னினமலி கதச்சேக் களனோடு வேண்டினுங் களமலி நெல்லின் குப்பை வேண்டினும் அருங்கலங் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை பிறர்க்கு மன்ன வறத்தகை யன்னே யன்ன னாகலி னெந்தை யுள்ளடி முள்ளு நோவ வறாற்க தில்ல ஈவோ ரரியவிவ் வுலகத்து வாழ்வோர் வாழஅவன் றாள்வா ழியவே (புறம். 171) இது படர்க்கையாகிய இயன்மொழி வாழ்த்து. இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிகன் ஆயலன் பிறருஞ் சான்றோர் சென்ற நெறியென ஆங்குப்பட் டன்றவன் கைவண் மையே (புறம். 134) இது பிறருஞ் சான்றோர் சென்ற நெறி யென்றமையின் அயலோரையும் அடுத்தூர்ந்தேத்தியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதன்கண் அடக்குக. சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலற்கு உரைத்த கடை நிலையானும் - சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த வருத்தந் தீர வாயில் காக்கின்றவனுக்கு என் வரவினை இசையெனக் கூறிக் கடைக்கணின்ற கடை நிலையும்; இது வாயிலோனுக்குக் கூறிற்றேனும் அவ்வருத்தந் தீர்க்கும் பாடாண்தலைவனதே துறையென்பது பெற்றாம். இழிந்தோரெல்லாந் தத்தம் இயங்களை இயக்கிக் கடைக் கணிற்றல் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் (தொல். பொரு. புறத். 36) என்புழிக் கூறுதலின், இஃது உயர்ந்தோர்க்கே கூறியதாம். உ-ம் : வேற்றுச் சுரத்தொடு வேந்தர்கண் வெம்மையு மாற்றற்கு வந்தனேம் வாயிலோய் - வேற்றார் திறைமயக்கு முற்றத்துச் சேனோங்கு கோயில் இறைமகற்கெம் மாற்ற மிசை என வரும். வாயி லோயே வாயி லோயே வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம் முன்னியது முடிக்கு முரனுடை யுள்ளத்து வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க் கடையா வாயி லோயே கடுமான் றோன்றல் நெடுமா னஞ்சி தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல் அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென வறுந்தலை யுலகமு மன்றே யதனாற் காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர் மழுவுடைக் காட்டகத் தற்றே யெத்திசைச் செலினு மத்திசைச் சோறே (புறம். 206) இது தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது வாயிலோனை நோக்கிக் கூறலின் பரிசில் கடாயதின்றாம். ஆன் அசை; ஏழனுருபாக்கி எல்லாவற்றிற்கும் விரித்தலுமொன்று. கங்ணபடை கண்ணி கண்படை நிலையும். அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியவழி மருத்துவரும் அமைச்சரும் முதலியோர் அவர்க்குக் கண்டுயில்கோடலைக் கருதிக் கூறிய கண்படை நிலையும்; கண்படை கண்ணிய என்றார், கண்படை முடி பொருளாக இடைநின்ற உண்டி முதலியனவும் அடக்குதற்கு. உ-ம் : வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னிநின் னோவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர் களிறுகவர் முயற்சியிற் பெரிது வருந்தினரே யுலகங் காவலர் பலர் விழித் திருப்ப வறிது துயில் கோடல் வேண்டுநின் பரிசின் மாக்களுந் துயில்கமா சிறிதே என வரும். கபிலை கண்ணிய வேள்வி நிலையும் - சேதாவினைக் கொடுக்கக் கருதிய கொடை நிலை கூறுதலும்; இது வரையா ஈகையன்றி இன்னலுற்றாற் கொடுக்கவென உயர்ந்தோர் கூறு நாட்காலையிலே கொடுப்பதாமாதலின் வேறு கூறினார். கண்ணிய என்றதனாற் கன்னியர் முதலோரைக் கொடுத்தலுங் கொள்கை. பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந் தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச் சென்னிதன் மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள் போர்த் தானுலக மண்ணுலகா மன்று வேலின் ஓக்கிய விளக்கு நிலையும் - வேலும் வேற்றலையும் விலங்காதோங்கியவாறு போலக் கோலொடு விளக்கும் ஒன்று பட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலையும். இன் : உவமப்பொருள். இது கார்த்திகைத் திங்களிற் கார்த்திகை நாளின் ஏற்றிய விளக்குக் கீழும்மேலும் வலமுமிடமுந் திரிபரந்து சுடர்ஓங்கிக் கொழுந்துவிட்டெ ழுந்தென்று அறவோராக்கங் கூறப்படுவதாம். உ-ம் : மைமிசை யின்றி மணிவிளக்குப் போலோங்கிச் செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள் வேலினுங் கோடாது வேந்தன் மனைவிளங்கக் கோலினுங் கோடா கொழுந்து என வரும். வேலின் வெற்றியை நோக்கி நின்ற விளக்கு நிலையெனப் பெருள் கூறி, வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி யொளிசிறந் தோங்கி வரலா - லளிசிறந்து நன்னெறியே காட்டு நலந்தெரி கோலாற்கு வென்னெறியே காட்டும் விளக்கு (புறப்.வெ.மாலை. பாடாண். 12) என்பது காட்டுவாரும் உளர். அவர் இதனை நித்தம் இடுகின்ற விளக்கென்பர். வாயுறை வாழ்த்தும் - வாயுறை வாழ்த்தே... வேம்புங்கடுவும் என்னும் (111) செய்யுளியற் சூத்திரப்பொருளை உரைக்க. இதற்கு ஒரு தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின் இதுவுங் கைக்கிளைப் புறனாகிய பாடாணாயிற்று. செவியுறைக்கும் இஃதொக்கும். உ-ம் : எருமை யன்ன கருங்கல் இடைதோறு ஆனிற் பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை நீயோ பெரும நீயோ ராகலி னின்னொன்று மொழிவல் அருளு மன்பு நீக்கி நீங்கா நிரயங்கொள் பவரோ டொன்றாது காவல் குழவி கொள்பவரி னோம்புமதி யளிதோ தானேயது பெறலருங் குரைத்தே (புறம். 5) இதனுள் நிரயங் கொள்வாரோடொன்றாது காவலை யோம் பென வேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி அவற்கு உறுதி பயத்தலின் வாயுறை வாழ்த்தாயிற்று. காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் நூறுசெறு வாயினுந் தமிதுப்புக் குணினே வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும் அறிவுடை வேந்த நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடு பெரிது நந்தும் மெல்லியன் கிழவ னாகி வைகலும் வரிசை யறியாக் கல்லென் கற்றமொடு பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின் யானை புக்க புலம்போலத் தானு முண்ணா னுலகமுங் கெடுமே. என்னும் புறப்பாட்டும் அது. தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின், அவர் சூத்திரப் பொருளாகத் துறைகூற வேண்டு மென்றுணர்க. செவியுறை தானே (தொல். பொ. செ. 114) என்னும் சூத்திரப் பொருண்மை இவ்வுதாரணங் கட்கு இன்மை உணர்க. செவியறிவுறூஉவும் - இதற்குச் செவியுறை தானே என்னும் செய்யுளியற் (114) சூத்திரப் பொருளை உரைக்க. ஒருவுதலை ஒரூஉதலெனவும் ஒரூஉவெனவுங் கூறுமாறு போல, உறுவும் ஊறூஉதலெனவும் உறூஉவெனவுங் கூறப்படும். உ-ம் : அந்தணர் சான்றோ ரருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி மொழிநின்று கேட்டன்முறை (புற.வெ. மாலை. பாடாண். 33) வடாஅது. பனிபடு நெடுவரை வடக்குந் தெனாஅ துருகெழு குமரியின் தெற்குங் குணாஅது. கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்குங் கீழது. முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டி னீர்நிலை நிவப்பின் கீழு மேல தானிலை யுலகத் தானு மானது உருவும் புகழுமாகி விரிசீர்த் தெரிகோல் ஞமன்ன் போல வொருதிறம் பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப மண்டி யடர்புகர்ச் சிறுகண் யானை செவ்வதி னேவிப் பாசவற் படப்பை யாரெயில் பலதந் தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப் பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே யிறைஞ்சுக பெருமதின் சென்னி சிறந்த நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே வாடுக விறைவநின் கண்ணி யொன்னார் நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே யாங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கிய தண்டா வீகைத் தகைமாண் குடுமி தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ நிலமிசை யானே (புறம். 6) இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றொடு செவியுறையுங் கூறினார், செவியுறைப் பொருள் சிறப்புடைத்தென்று அவன் கருதி வாழ்தல் வேண்டி. ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் - தெய்வ வழிபாடு உடைத்தாயினும் மக்கள் கண்ணதேயாகித் தோன்றும் பாட்டுடைத் தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படக்கையாக வாழ்த்தும் வாழ்த்தும்; தெய்வஞ் சிறந்ததேனும் மக்கள் அதிகாரப்படுதலின் அவர் கண்ணதேயாதற்கு ஆவயின் வரூஉம் என்றார். இதற்கு வழிபடு தெய்வம் என்னும் செய்யுளியற் (110) சூத்திரப் பொருளை யுரைக்க. இதுவுந் தலைவன் குறிப்பின்றித் தெய்வத்தான் அவனை வாழ்விக்கும் ஆற்றலுடையார் கண்ணதாகலிற் கைக்கிளைப் புறனாயிற்று. உ-ம் : கண்ணுதலோன் காப்பக் கடன்மேனி மால்காப்ப வெண்ணிருதோ ளேந்திழையா டான்காப்பப் - பண்ணியனூற் சென்னியர்க் களிக்குந் தெய்வநீ மன்னுக நாளுமிம் மண்கிசையானே (பெரும்பொருள் விளக்கம் கடவுள் வாழ்த்து. புறத்திரட்டு 1501) என வரும். கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇ - மேற் காமப்பகுதி யென்ற கைக்கிளை யல்லாத கைக்கிளையின் பகுதியோடே வாயுறை வாழ்த்துஞ் செவியறிவுறூஉம் புறநிலைவாழ்த்துங்கூட நான்காகிய தொகைபெற்ற நான்கும்; வாயுறை வாழ்த்து முதலிய மூன்றுந் தத்தம் இலக்கணத்திற்றிரிவுபடா; இக்கைக்கிளை திரிவுபடுமென்றற்கு எண்ணும்மையான் உடனோதாது உளப்படவென வேறுபடுத்தோதினார். அகத்திணையியலுள் இருபாற்குங் கூறிய கைக்கிளையுங், காமஞ்சாலா இளமையோள்வயிற் (தொல். பொ. அகத் 50) கைக்கிளையும், முன்னைய நான்கும் (தொல். பொ. அகத். 52) என்ற கைக்கிளையும், காமப்பகுதி என்ற கைக்கிளையும், களவியலுண் முன்னைய மூன்றும் (தொல். பொ. கள. 28) என்ற கைக்கிளையும் போலாது எஞ்ஞான்றும் பெண்பாலார் கூறுதலின்றி இடைநின்ற சான்றோ ராயினும் பிறராயினுங் கூறுதற்கு உரித்தாய் முற்காலத்து ஒத்த அன்பினராகிக் கடைநிலைக்காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்ததனான் துறந்த பெண்பாற் கைக்கிளையாதலின் ஒருத்தியைத் துறந்ததனான் துறந்த பெண்பாற் கைக்கிளையாதலின் திரிபுடைத்தாயிற்று. இது முதனிலைக் காலத்துத் தான்குறித்தது முடித்துப் பின்னர் அவளை வருத்தஞ்செய்து இன்பமின்றி பொழிதலான் ஒருதலைக் காமமாயிற்று. உ-ம் : அருளா யாகலோ கொடிதே யிருள்வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின் காரெதிர் கானம் பாடினே மாக நினறு நெய்தலிற் பொலிந்த வுண்கள் கலுழ்ந்து வா ரரிப்பனி பூணக நனைப்ப வினைத லானா ளாக விளையோய் கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென யாந்தற் றொழுதனம் வினவக் காந்தண் முகைபுரை விரலிற் கண்ணீர் துடையா யாமவன் கிளைஞரே மல்லேங் கேளினி யெம்போ லொருத்தி நலனயந் தென்றும் வரூஉ மென்ப வயங்குபுகழ்ப் பேகன் ஒல்லென வொலிக்குந் தேரொடு முல்லை வேலி நல்லூ ரானே (புறம் 144) இது கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளை வகைப் பாடாண்பாட்டு. கிளையை மன்னெங் கேள்வெய் யோற்கென வினவ, யாங்கிளையல்லேம் முல்லை வேலி நல்லூக்கண்ணே வருமென்று சொல்வாரெனக் கூறுதலின், அஃது ஏனைக் கைக்கிளைகளின் வேறாயிற்று. கன்முழை யருவி என்னும் (147) புறப்பாட்டும் அது. தொக்க நான்கும் உள என மொழிப - அந்நான்கும் முற்கூறிய அறனோடே தொக்குப் பத்தாய்ப் பாடாண்பகுதிக்கண்ணே உளவாய் வருமென்று கூறுவர் ஆசிரியர் எ-று. தொக்க நான் கென்றதனான் இந்நான்கும் வெண்பாவும் ஆசிரியமுந் தொக்குநின்ற மருட்பாவானும் வருமென்பதூஉம் கொள்க. இவற்றை மேல் வருகின்றவற்றோடு உடன்கூறாராயி னார், அவை இழிந்தோர் கூறுங் கூற்றாகலின். (35) இதுவுமது 91. தாவி னல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூத ரேத்திய துயிலெடை நிலையுங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறா அர்க் கறிவுறீஇச் சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமுஞ் சிறந்த நாளணி செற்ற நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங் கலமுஞ் சிறந்த சீர்த்தி மண்ணுமங் கலமும் நடைமிகுத் தேத்திய குடைநிழன் மரபும் மாணார்ச் சுட்டிய வாண்மங் கலமும் பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் பெற்ற பின்னரும் பெருவள னேத்தி நடைவயிற் றோன்று மிருவகை விடையும் அச்சமு முவகையு மெச்ச மின்றி நாளும் புள்ளும் பிறவற்றி னிமித்தமுங் காலங் கண்ணிய வோம்படை யுளப்பட ஞாலத்து வரூஉ நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே. இதுவும் அது. (இ-ள்.) தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை நிலையும் - தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவற்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏத்தின துயிலெடை நிலையும்; கிடந்தோர்க்கெனப் பன்மைகூறவே, அவர் துயிலெடுப்புத் தொன்றுதொட்டு வருமென்பதூஉஞ், சூதர் மாகதர் வேதாளிகர் வந்திகர் முதலாயினோருட் சூதரே இங்ஙனம் வீரத்தான் துயின்றாரைத் துயிலெடுப்பு வரென்பதூஉம், யாண்டும் முன்னுள்ளோரையும் பிறரையுங் கூறப்படுமென்பதூஉங் கொள்க. அவர் அங்ஙனந் துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழல் அவர் கருத்தாகலின் ஒருதலைக் காமம் உளதாயிற்று. உ-ம் : கானம் பொருந்திய கயவாய் மகளிரின் யானுறுந் துயர நந்திய பானாள் இமையாக் கண்ணோ டமையாக் காத்தநின் மூதின் முதல்வன் றுயில்கொண் டாங்குப் போற்றா மன்னரை யெள்ளிச் சிறிதுநீ சேக்கை வளர்ந்தனை பெரும தாக்கிய வண்கை யவுண னுயிர்செல வாங்கவ னன்றுணர்ந் தாங்கு வென்றி மேய வாடா வஞ்சி மலைந்த சென்னிப் போரடு தானைப் பொலந்தேர் வளவ நின் றுயி லெழுமதி நீயும் ஒன்றா வேந்தர் பொன்றுதுயில் பெறவே என வரும். கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும் - ஆடன்மாந்தரும் பாடற்பாணரும் கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியுமென்னும் நாற்பாலாருந் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்; கூத்தராயிற் பாரசவரும் வேளாளரும் பிறரும் அவ்வாடற் றொழிற்கு உரியோர்களும் பாரதி விருத்தியும் விலக்கியற் கூத்துங் கானகக் கூத்துங் கழாய்க் கூத்தும் ஆடுபவராகச் சாதி வரையறையிலராகலின் அவரை முன்வைத்தார்; பாணரும் பொருநருந் தத்தஞ் சாதியில் திரியாது வருதலிற் சேரவைத்தார்; முற்கூறிய முப்பாலோருட் கூத்தாராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின்கட் பட்ட குறிப்புக்களும் புறத்துப் போந்து புலப்படஆடுவர்; அது விறலாகலின் அவ் விறல்பட ஆடுவாளை விறலி யென்றார். இவளுக்குஞ் சாதிவரையறை யின்மையிற் பின் வைத்தார். பாணரும் இசைப் பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப் பாணரு மெனப் பலராம். பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநருமெனப் பலராம். விறலிக்கு அன்னதொரு தொழில் வேறுபாடின்றித் தொழிலொன்றாகலின் விறலியென ஒருமையாற் கூறினார். ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும் - இல்லறத்தைவிட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங் கண்டகாட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையி னானே தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்து பெறாதார்க்கு இன்னவிடத்தே சென்றாற் பெறலாமென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடும்; பக்கமென்றதனானே அச்செய்யுள்களைக் கூத்தராற்றுப் படை, பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப்பண்பு முதலியனவுங் கூறுதலுங் கொள்க. உ-ம் : வான்றோய் வெண்குடை வயமா வளவன் ஈன்றோர் தம்மினுந் தோன்ற நல்கினன் சுரஞ்செல் வருத்தமோ டிரங்கி யென்றும் இரந்தோ ரறியாப் பெருங்கலஞ் சுரக்குவன் சென்மதி வாழிய நீயே நின்வயின் ஆடலு மகிழான் பாடலுங் கேளான் வல்லே வருகென விடுப்பி னல்லது நில்லென நிறுக்குவ னல்ல னல்லிசைப் பெருந்தகை வேந்தர் கோலமொடு திருந்தா வாழ்ககையின் வருந்து வோயே திருமழை தலைஇய விருணிற விசும்பின் (பத்து. மலைப்படு 1) இவை கூத்தராற்றுப்படை பாணன் சூடிய பசும்பொற்றாமரை மாணிழை விறலி மாலையொடு விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ யூரீர்போலச் சுரத்திடை யிருந்தனிர் யாரீ ரோவென வினவ லானாக் காரெ னொக்கற் கடும்பசி யிரவல பென்வே லண்ணற் காணா வூங்கே நின்னினும் புல்லியே மன்னே யினியே இன்னே மாயினே மன்னே யென்று முடாஅ போரா வாருத லறிந்துப் படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் எத்துணை யாயினு மீத்த னன்றென மறுமை நோக்கின்றோ வன்றே பிறர், வறுமைநோக் கின்றவன் கைவண் மையே (புறம். 141) மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை (பத்துப். சிறுபாண். 1) இவை பாணாற்றுப்படை. சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன் வள்ளிய னாதல் வையகம் புகழினும் உள்ள மோம்புமி னுயர்மொழிப் புலவீர் யானும், இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை யொருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றிப் பாடிமிழ் முரசி னியறேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினே னாக அகமலியுவகையோ டணுகல் வேண்டிக் கொன் றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கின னஞ்சி யானது பெயர்த்தனெ னாகத் தானது சிறிதென வுணர்ந்தமை நாணிப் பிறிதுமோர் பெருங்களிறு நல்கி யோனே யதற்கொண்டு இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினுந் துன்னரும் பரிசில் தருமென என்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே (புறம். 394) அறாஅ யாண ரகன்றலைப் பேரூர்ச் சாறுகழி வழிநாள் (பத்துப். பெருந. 1,2) இவை பெருநராற்றுப்படை. சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவப் பெய்யினும் பெய்யா தாயினு மருவி கொள்ளுழு வியன்புலத் துழைகா லாக மால்புடை நெடுவரைக் கோடுதோ நிழிதரும் நீரினு மினய சாயற் பாரி வேள்பாற் பாடினை செலினே (புறம். 105) மெல்லியல் விறலிநீ நல்லிசை..... காணியசென்மே (புறம். 133) இவை விறலியாற்றுப்படை. கூத்தராற்றுப்படை தடுமாறு தொழிலாகாமற் கூத்தரை ஆற்றுப்படுத்ததென விரிக்க. ஏனையவும் அன்ன. முருகாற்றுப்படையுட் புலம்பிரிந் துறையுஞ் சேவடி (62,3 ) யெனக் கந்தழி கூறி, நின்னெஞ்சத் தின்னசை வாய்ப்புப் பெறுதி (65,6) யெனவுங் கூறி, அவனுறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென்றால் அவன் விழுமிய பெறலரும் பரிசினல்கும் (294, 5) எனவுங் கூறி, ஆண்டுத்தான் பெற்ற பெருவளம் அவனும் பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணராது பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை யென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க. இனி முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஓரிரவலனை ஆற்றுப்படுத்த தென்பது பொருளாகக் கொள்க. இனிக் கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப்பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யாமை யுணர்க. இனி இசைப்புலவர்க்கும் நாடகப் புலவர்க்கும் இங்ஙனங் கூறலமையாது; அவருள் உயர்ந்தோரல்லாதாரும் அத்தொழிற்குப் பெரும்பான்மையும் உரியராய் நடத்தலின். நாளணி செற்றம் நீக்கிச் சிறந்த பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும் - நாடொறுந் தான் மேற்கொள்ளுகின்ற செற்றங்களைக் கைவிட்டுச் சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணியும்; அரசன் நாடோறும் தான் மேற்கொள்கின்ற செற்றமாவன சிறை செய்தலுஞ் செருச்செய்தலுங் கொலைபுரிதலும் முதலியன. சிறந்த தொழில்களாவன. சிறைவிடுதலுஞ் செருவொழிதலுங் கொலையொழிதலும் இறைதவிர்தலுந் தானஞ்செய்தலும் வேண்டின கொடுத்தலும் பிறவுமாம். மங்கலவண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணியென்ப. ஆகுபெயரான் அப்பொருள் கூறிய செய்யுளும் வெள்ளணியாயிற்று. உ-ம் : அந்தண ராவொடு பொன்பெற்றார் நாவலர் மந்தரம்போன் மாண்ட களிறூந்தார் - எந்தை யிலங்கிலைவேற் கிள்ளி யிரேவதிநா ளென்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு (முத்தொள். 40) இது சிலம்பி கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற் றென்றலின் வெள்ளணியாயிற்று. செய்கை யரிய களவழிப்பா முன்செய்த பொய்கை யொருவனாற் போந்தரமோ - சைய மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்தி கொலைச்சிறை தீர் வேத்துக் குழாம் இது சிறைவிடுதல் கூறிற்று. கண்ணார் கதவந் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர் தேர்வேந்தன் தென்னன் திருவுத்த ராடநாட் போர்வேந்தன் பூசலிலன் (முத்தொள். 39) இது செருவொழிந்தது. ஏமாரு மன்னீ ரெயிறிறமி னெங்கோமான் வாமான்றேர்க் கோதை சதயநாள் - ஆமாறு காம நுகருமின் கண்படுமி னென்னுமே யேம முரசின் குரல் இதனுள் இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறதலின் இழிந்தோர் ஆறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கலமென்றதனானே பக்கநாளுந் திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை யுணர்க. சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் - அரசர்க்குச் சிறப்பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும் நீராட்டு மங்கலமும்; இதனைப் பிறந்தநாளின் பின் வைத்தார், பொன்முடி புனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும் இது வருமென்றற்கு. குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தொடு கூடிய மண்ணு மங்கலமும் கொள்க. உ-ம் : அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள் வேய்ந்த வொளிமுடி பொன்மலையே யோக்கு - மொளிமுடிமேன் மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே லந்தரத்துக் கங்கை யனைத்து என வரும். இதனானே யாண்டு இத்துணைச் சென்தென்று எழுதும் நாண்மங்கலமும் பெறுதும். நடைமிகுத்து ஏத்திய குடைநிழன் மரபும் - உலக வொழுக்கத்தை இறப்ப உயர்த்தப் புகழ்ந்து கூறப்பட்ட குடை நிழல திலக்கணமும்; இங்ஙனம் புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை? அந்நிழல் உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக் குடி புறங்காத்தற்குக் குறியாகக் குடைகொண்டேனென்று அக் கொற்றவன் குறிக்கவும் படுதலின். மரபென்றதனாற் செங்கோலுந் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க. உ-ம் : மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத் திங்க ளதற்கோர் திலதமாம் - எங்கணும் முற்றுநீர் வைய முழுதும் நிகற்றுமே கொற்றப்போர்க் கிள்ளி குடை (முத்தொள். 35) என வரும். அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப் புறநீர்போன் முற்றும் பொதியும் - பிறரொவ்வா மூவேந்த ருள்ளு முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டான் குடை எனவும், ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றா அங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை வெயின்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ (புறம். 35) எனவும், திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங் கொங்கலர் தார்ச்சென்னி குறிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான் (சிலப். மங்கல.1) எனவும், திங்கண் மாலை வெண்குடை யான் சென்னி செங்கோ லதுவோச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி (சிலப். கால்வரி) ஞாயிறு போற்றுது ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான் (சிலப். மங்கல) எனவும் இவை குடையையும் செங்கோலையுங் திகிரியையும் புனைந்தன. மாணார்ச் சுட்டிய வாண்மங்கலமும் - பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்; இது பிறர் வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப் பரவும் வென்ற வாளின் மகண் (புறம். 68) என்பதனின் வேறாயிற்று. புகழ்ச்சிகட்பகைவரை இகழ்ந்து புகழ்தலின் மாணார்ச் சுட்டிய என்றார். உ-ம் : ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள் பாடிக் கூளிகள் வம்மினோ கூத்தாடக் - காணிக்குத் தீராத வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி நீராட்டி யுண்ட நிணம் என வரும். அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வொள்வாள் பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச் - சுரும்பொடு வண்டாடும் பக்கமு முணடு குறுநரி யுண்டாடும் பக்கமு முணடு (முத்தொள். 38) இது பிறர் கூறியது. இது பரணியிற் பயின்றுவரும். மன்னெயில் அழித்த மண்ணு மங்கலமும் - மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளைவரகுங் கொள்ளும் வித்தி மங்லமல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடு மங்கலமும்; அழித்ததனான் மண்ணுமங்கலம். உ-ம் : கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில் (புறம். 15) என எயிலழித்தவாறு கூறி, வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூப நட்ட (புறம். 15, 20 -1) எனவே, ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க. குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலழித்தல் கூறாமையின் இதனின் வேறாயிற்று. பரிசில் கடை இயநிலையும் - பரிசிலரை நீக்குதலமையாது நெடிது கொண்டு ஒழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன் கடும்பினது இடும்பை முதலியன கூறித் தான் குறித்தபொருண்மையினைச் செலத்திக் கடாவின நிலையும்; கடைக்கூட்டு நிலையும் - வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும் நிலையும்; இதுவும் இழிந்தோர் கூற்றாயிற்று; இருத்தலே அன்றிக் கடாவுதலின். நிலையென்றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டு மென்னுங் குறிப்பும் பரிசினிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க. உ-ம் : ஆடுநனி மறந்த கோடுய ரடுப்பி னாம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்மையின் தோலொடு திரங்கி யில்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொ றழுஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனையோ ளெவ்வம் நோக்கி நினைஇ நிறப்டந் திசினே நற்போர்க் குமண என்னிலை யறிந்தனை யாயி னிந்நிலைத் தொடுத்துங் கொள்ளா தமையலெ னடுக்கிய பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணார் முழவின் வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே (புறம். 164) இது பரிசில் கடா நிலை. மதியேர் வெண்கடை யதியர் கோமான் கொடும்பூ ணெழினி நெடுங்கடை நின்றியான் பசலை நிலவின் பனிபடு விடியற் பொருகளிற் றடிவழி யன்ன வென்கை யொருகண் மாக்கிணை யொற்றுபு கொடாஅ வுருகெழு மன்ன ராரெயின் கடந்து நிணம்படு குருதிப் பொரும்பாட் டீரத் தணங்குடை மரபி னிருங்களந் தோறும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும் வைகலுழவ வாழிய பெரிதெனச் சென்றியா னின்றனெ னாக வன்றே யூருண் கேணிப் பகட்டிலைப் பாசி வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை நுண்ணூற் கலிங்க முடீஇ யுண்மெனத் தேள்கடுப் பன்ன நாட்படு தேறல் கோண்மீ னன்ன பொலங்கலத் தளைஇ யூண்முறை யீத்த லன்றியுங் கோண்முறை விருந்திறை நல்கி யோனே யந்தரத் தரும்பெற லமிழ்த மன்ன கரும்பிவட் டந்தோன் பெரும்பிறங் கடையே (புறம். 392) இது கடை நிலை. நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பா டெருவைப் பசுந்தடி தடுப்பப் பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர் புற்கை நீத்தனம் வரற்கே (புறம். 64) இது போகல் வேண்டுங் குறிப்பு. ஊனு மூணுமுனையி னினிதெனப் பாலிற் பெயதவும் பாகிற் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லியது பருகி விருந்துறுத் தாற்றி யிருந்தனெ மாகச் சென்மோ பெருமவெம் விழவுடை நாட்டென யாந்தன் னறியுந மாகத் தான்பெரிது அன்புடை மையி னெம்பிரி வஞ்சித் துணரியது கொளாஅ வாகிப் பழமூழ்த்துப் பயம்பகர் வறியா மயங்கரின் முதுபாழ்ப் பெயல்பெய் தன்ன செல்வத் தாங்கண் ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச் சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி யூன்சுகிர் வலந்த தெண்க ணொற்றி விரல்விசை தவிர்க்கு மரலைப் பாணியின் இலம்பா டகற்றல் யாவது புலம்பொடு தெருமர லுயக்கமுந் தீர்க்குவ மதனா னிருநிலங் கூலம் பாறக் கோடை வருமழை முழக்கிசைக் கோடிய பின்றைச் சேயை யாயினு மிவணை யாயினு மிதற்கொண் டறிநை வாழியோ கிணைவ சிறுதனி, யொருவழிப் படர்கென் றோனே யெந்தை யொலிவெள் ளருவி வேங்கட நாட னுறுவருஞ் சிறுவரு மூழ்மாறுய்க்கு மறத்துறை யம்பியின் மான மறப்பின் றிருங்கோ ளீராப் பூட்கைக் கரும்ப னூரன் காதன் மகனே (புறம். 381) இது மேலும் இக்காலத்தும் இங்ஙனந் தருவலென்றானெக் கூறினமையின் அவன் பரிசினிலை கூறிற்று. குன்றும் மலையும் பலபின் னொழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென நின்ற வென்னயந் தருளி யீதுகொண்டு ஈங்ஙனஞ் செல்க தானென வென்னை யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன் காணா தீத்த விப்பொருட் கியானோர் வாயிகப் பரிசில னல்லேன் பேணித் தினையனைத் தாயினு மினிதவர் துணையள வறிந்து நல்கினர் விடினே (புறம். 208) என்னும் புறப்பாட்டும் அப்பரிசினிலையைக் கூறியது காண்க. பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றும் இருவகை விடையும் - அங்ஙனம் பரிசில் பெற்றபின் அவனும் அவன் கொடுத்த பெருவளனை உயர்த்துக்கூறி உலகவழக்கியலான் தோன்றும் இரண்டு வகைப்பட்ட விடையும்; இருவகையாவன, தலைவன் தானே விடுத்தலும் பரிசிலன் தானே போகல் வேண்டுமெனக் கூறிவிடுத்தலுமாம். உ-ம் : தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டிய தொடையமை கண்ணித் திருந்துவேற் றடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பி னற்றார்க் கள்ளின் சோழன் கோயிற் புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப் பனிக்கயத் தன்ன நீணகர் நின்றெ னரிக்கூடு மாக்கிணை யிரிய வொற்றி யெஞ்சா மரபின் வஞ்சி பாட வெமக்கென வகுத்த வல்ல மிகப்பல மேம்படு சிறப்பி னருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே யதுகண்டு இலம்பா டுழந்த வென் னிரும்பே ரொக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநருஞ் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரு மரைக்கமை மரபின மிடற்றியாக் குநரு மிடற்றமை மரபின வரைக்கியாக் குநருங் கடுந்தே ரிராம னுடன் புணர் சீதையை வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை யிழைப் பொலிந் தாஅங் கறாஅ வருநகை யினிதுபெற் றிகுமே யிருங்கிளைத் தலைமை யெய்தி யரும்படி ரெவ்வ முழந்ததன் றலையே (புறம். 378) இது தானே போலென விடுத்தபின் அவன் கொடுத்த வளனை உயர்த்துக் கூறியது. உயிர்ப்பிடம் பெறா அதூண்முனிந் தொருநாட் செயிர்த்தெழு தெவ்வர் திறைதுறை போகிய செல்வ சேறுமெந் தொல்பதிப் பெயர்ந்தென மெல்லெனக் கிளந்தன மாக வல்லே யகறி ரோவெம் மாயம் விட்டெனச் சிரறிய வன்போற் செயிர்த்த நோக்கமொடு துடியடி யன்ன தூங்குநடைக் குழவியொடு பிடிபுணர் வேழம் பெட்டவை கொள்கெனத் தன்னறியளவையிற் றரத்தர யானும் மென்னறி யளவையின் வேண்டுவ முகந்துகொண் டின்மைதீர வந்தனென் (பத்துப். பொருந. 119-29) இது யான் போகல்வேண்டுமெனக் கூறி விடுத்தபின், அவன் தந்த வளனை உயர்த்துக் கூறியது. நடைவயின் தோன்று மென்றதனாற் சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்துவரும் விடைகள் பலவுங் கொள்க. அவை பரிசில் சிறிதென்று போகலும், பிறர்பாற் சென்று பரிசில் பெற்றுவந்து காட்சிப் போகலும், இடைநிலத்துப பெற்ற பரிசிலை இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறுவனவும், மனைவிக்கு மகிழ்ந்து கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாங் கொள்க. உ-ம் : ஒருதிசை யொருவனை யுள்ளி நாற்றிசைப் பலரும் வருவர் பரிசின் மாக்கள் வரிசை யறிதலோ வரிதே பெரிது மீத லெளிதே மாவண் டோன்ற லதுநற் கறிந்தனை யாயிற் பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே (புறம். 121) இது சிறிதென்ற விடை. இரவலர் புரவலை நீயு மல்லை புலவல ரிரவலர்க் கில்லையு மல்லர் இரவல ருண்மையுங் காணினி யிரவலர்க் கீவோ ருண்மையுங் காணினி நின்னூர்க் கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த நெடுநல் யானையெம் பரிசில் கடுமான் றோன்றல் செல்வல் யானே (புறம். 162) இது பிறன்பாற் பெரிதுபெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை. வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி என்னும் (152) புறப்பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க்குக் கூறியது. நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும் பன்மாண் கற்பினின் கிளைமுத லோர்க்குங் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்து மென்னாது நீயும் எல்லோர்க்குங் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேற் குமண னல்கிய வளனே (புறம். 163) இது மனைவிக்குக் கூறியது. நாளும் புள்ளும் பிறவற்று நிமித்தமும் அச்சமும் உவகையும் எச்சமின்றிக் காலங்கண்ணிய ஓம்படை உளப்பட - நாணிமித்தத் தானும் புண்ணிமித்தத்தானும் பிறவற்றினிமித்தத்தானும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய தீங்கண்டு அஞ்சிய அச்சமும் அது பிறத்தற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவின்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின் அவர் தலைவர் உயிர்வாழுங் காலத்தைக் கருதிய பாதுகாவன் முற் கூறியவற்றோடே கூட. ஒருவன் பிறந்த நாள்வயின் ஏனைநாள்பற்றிப் பெருந்தாமை பிறத்தலும், அவன் பிறந்த நாண்மீனிடைக் கோண்மீன் கூடிய வழி அவன் நாண்மீனிடைத் தீது பிறத்தலும், வீழ்மீன் தீண்டியவழி அதன்கண் ஒரு வேறுபாடு பிறத்தலும் போல்வன நாளின்கண் தோன்றிய நிமித்தம். புதுப்புள் வருதலும் பழம்புட் போதலும் (புறம். 20) பொழுதன்றிக் கூகை குழறலும் போல்வன புள்ளின்கண் தோன்றி நிமித்தம்; ஓர்த்து நின்றுழிக் கேட்ட வாய்ப்புள்ளும் ஓரிக்குர லுள்ளிட்டனவுங், கழுதுடன் குழீஇய குரல்பற்றலும் வெஞ்சுடர் மண்டிலத்துக் கவந்தம் வீழ்தலும் அதன்கண் துளைதோன்றுதலுந் தண் சுடர் மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண் தோன்றிய நிமித்தம். உவகை - அன்பு. இந்நிமித்தங்கள் பிறந்துழித் தான் அன்பு நிகழ்த்தினான் ஒரு பாடாண்டலைவனது வாழ்க்கை நாளிற்கு ஏதம் வருங்கொலென்று அஞ்சி அவற்குத் தீங்கின்றாகவென்று ஓம்படை கூறுதலின் அது காலங்கண்ணிய ஓம்படையாயிற்று. எஞ்ஞான்றுந்த தன் சுற்றத்து இடும்பை தீர்த்தானொருவதற்கு இன்னாங்கு வந்துழிக் கூறுதலின், இற்றைஞான்று பரிசிலின்றேனும் முன்னர்ப் பெற்ற பரிசிலை நினைந்து கூறினானாமாகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று. இவன் இறத்தலான் உலகுபடுந் துயரமும் உளதாகக் கூறலிற் சிறந்த புகழுங் கூறிற்று. நெல்லரியு மிருந்தொழுவர் என்னும் (24) புறப்பாட்டினுள் நின்று நிலைஇயர்நின் னாண்மீன் என அவனாளிற்கு முற்கூறியவாற்றான் ஓரிடையூறு கண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஓம்படை கூறியது. உ-ம் : ஆடிய வழற்குட்டத் தாரிரு ளரையிரவின் முடப்பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்துக் கயங்காயப் பங்குனி யுயரழுவத்துத் தலைநாண்மீ னிலைதிரிய நிலைநாண்மீ னதனெ திரேர்தரத் தொன்னாண் மீன் றுறைபடியப் பாசிச் செல்லா தூசி முன்னா தளக்கர்த்திணை விளக்காகக் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி யொருமீன் வீழ்ந்தன்றால் விசும்பி னானே யதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையிசை யருவி நன்னாட்டுப் பொநன் நோயில னாயி னன்றுமற் றில்லென வழிந்த நெஞ்ச மடியுளம் பரப்ப வஞ்சின மெழுநாள் வந்தன் றின்றே மைந்துடை யானை கைவைத் துறங்கவுந் திண்பிணி முரசங் கண்கிழிந் துருளவுங் காவல் வெண்குடை கால்பரிந் துலறவுங் காலியற் கலிமாக் கதியின்றி வைகவு மேலோ ருலக மெய்தின னாகலி னொண்டொடி மகளிர்க் குறுதுணை யாகித் தன்றுணை யாய மறந்தனன் கொல்லோ பகைவர்ப் பிணிக்கு மாற்ற னசைவர்க் களந்து கொடையறியா வீகை மணிவரை யன்ன மாஅ யோனே (புறம். 229) இப்புறப்பாட்டும் அது. இதனுட் பாடாண்டலைவனது நாண்மீனை வீழ்மீன் நலிந்தமை பற்றிக் கூறியது. இருமுந்நீர்க் குட்மும் வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும் வறி துநிலைஇய காயமு மென்றாங் கவையளந் தறியினு மளத்தற் கரியை யறிவு மீரமும் பெருங்கண் ணோட்டமுஞ் சோறுபடுக்குந் தீயோடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே திருவி லல்லது கொலைவில் லறியார் நாஞ்சி லல்லது படையு மறியார் தினறறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவ ருண்ணா வருமண் ணினையே யம்புதுஞ்சுங் கடியரணா லறந்துஞ்சுஞ் செங்கோலையே புதுப்புள் வரினும் பழம்புட் போகினும் விதுப்புற வறியா வேமக் காப்பினை யனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மோ (புறம். 20) இப் புறப்பாட்டும் அது. புதுப்புள் வந்ததும் பழம்புட் போயதுங் கண்ட தீங்கின் பயன் நின்மேல் வாராமல் விதுப்புறவறியா ஏமக் காப்பினையாக என்று ஓம்படை கூறியது. அது மேல் நின்னஞ்சுமென்று அச்சங்கூறி வெளிப்படுத்ததனான் உணர்க. மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரும், என்றாங் கைம்பெரும் பூதத் தியற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும் வலியுந்த தெறலு மளியு முடையோய் நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின் வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் யாணர் வைப்பி னன்னாட்டுப் பொருந வான வரம்பனை நீயோ பெரும வலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை யீரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் பா அல்புளிப்பினும் பகலிருளினும் நாஅல்வேத நெறிதிரியினுந் திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ வத்தை யடுக்கத்துச் சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை யந்தீ யந்தண ரருங்கட னிறுக்கு முத்தீ விளக்கிற் றுஞ்சும் பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே (புறம். 2) என்னும் புறப்பாட்டுப் பகைநிலத்தரசற்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்ற நிற்பாயென அச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின் ஓம்படை வாழ்த்தாயிற்று காலனுங் காலம் என்னும் (41) புறப்பாட்டும் அது. ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே - உலகத்துத் தோன்றும் வழக்கினது கருத்தினானே மூன்று காலத்தொடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்டிணை எ-று. என்றது, இவ்வழக்கியல் காலவேற்றுமை பற்றி வேறு படுமாயின், அவையும் இப்பொருள்களின் வேறுபடா என்பதுணர்த்தியவாறு. அவை, பகைவர்நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு நின்றும் அகற்றிப் பொருதல் தலையாய அறம்; அதுவன்றிப் பொருள் கருதாது பாதுகாவாதான் நிரையைத் தான் கொண்டு பாதுகாத்தல் அதனினிழிந்த இடையாய அறம்; அதுவன்றிப் பிறர்க்கு அளித்தற்கு நிரைகோடால் நிகழினும், அஃது அதனினுமிழிந்த கடையாய அறமெனப்படும். இனிப் பகைவன் போற்றாத நாட்டைக் கைக்கொண்டு தான் போற்றச் சேறலும், பொருள் வருவாய் பற்றிச் சேறலும், வஞ்சித்துச் சேறலும் போல்வன ஒன்றனின் ஒன்றிழிந்த ஞாலத்து நடக்கைக் குறிப்பு. மாற்றரசன் முற்றியவழி ஆற்றாதோன் அடைத்திருத் தலும் அரசியலாயினும், அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுந், தனக்கு உதவிவர வேண்டி யிருத்தலும், ஆற்றலின்றி ஆக்கங்கருதாது காத்தேயிருத்தலும் ஒன்றனினொன்றிழிந்த நடக்கைக் குறிப்பு. இனி வாகைக்குப் பார்ப்பன ஒழுக்க முதலியன நான்கற்கும் வேறுபட வருதலுங் கொள்க. காஞ்சிக்கும் அவரவர் அறிவிற்கேற்ற நிலையாமை கொள்க, உயிரும் உடம்பும் பொருளுமென்ற மூன்றும் பற்றி. இது பாடாண்டிணையுட் கூறினார், எல்லாத் திணைக்கும் புறனடையாதல் வேண்டி. இனிக் கடவுள் வாழ்த்திற்குத் தலை இடை கடைகோடலும், அறுமுறை வாழ்த்திற்கும் அவற்றின் ஏற்றிழிவு பற்றிக் கோடலும், பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. முற்கூறியன வெல்லாம் ஓம்படையுளப்படக் கண்ணிய வருமென்பது. (36) இரண்டாவது புறத்திணையியற்கு, மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கியர் செய்த காண்டிகையுரை முடிந்தது.