தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் சொல்லதிகாரம் - கல்லாடம் உரையாசிரியர் : கல்லாடர் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 272 = 288 படிகள் : 2000 விலை : உரு. 180 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் 20 அஜீ முல்க் 5வது தெரு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி (EFEO) யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே ‘உயர்தனிச் செம்மொழி’ எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், ‘உலக முதன் மொழி தமிழே’ என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனை யையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! “எங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர்” என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. “புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்” தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [உரையாசிரியர்கள் - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய ‘இலக்கண வரலாறு’ என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனிபாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பையும் பெற்றுத்தந்த பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும்போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க. குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், ஆகியோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு எச்ச. எச்சவியல் எழுத். எழுத்ததிகாரம் ஐங். ஐங்குறுநூறு கலி. கலித்தொகை கிளவி. கிளவியாக்கம் குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை சிறுபஞ்ச. சிறுபஞ்சமூலம் சொல். சொல்லதிகாரம் தொல். சொல். தொல்காப்பியம் சொல்லதிகாரம் நற். நற்றிணை நாலடி. நாலடியார் மலைபடு. மலைபடுகடாம் பதிற். பதிற்றுப்பத்து புறம். புறநானூறு பொருந. பொருநராற்றுப்படை முருகு. திருமுருகாற்றுப்படை வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளுமாறு “ தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் ” இதனொடும் இணைக்கப்பட்டுளது! “வெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே! ” அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் ‘கருவிநூல் பதிப்பகம்’ என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள ‘மண்’ எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து ‘இந்தா’ என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் ‘தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தை’ச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் உள்ளடக்கம் தொல்காப்பியம் ... 01 சொல்லதிகார இயலமைதி ... 22 சொல்லதிகார வாழ்வியல் விளக்கம் ... 25 கல்லாடர் ... 52 சொல்லதிகாரம் - கல்லாடம் 1. கிளவியாக்கம் ... 57 2. வேற்றுமையியல் ... 107 3. வேற்றுமை மயங்கியல் ... 130 4. விளிமரபு ... 150 5. பெயரியல் ... 163 6. வினையியல் ... 184 7. இடையியல் ... 229 நூற்பா நிரல் ... 236 சொல் நிரல் (மேற்கோள்) ... 240 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) ... 247 செய்யுள் நிரல் (மேற்கோள்) ... 257 கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) ... 260 கலைச்சொல் நிரல் (உரைவழி) ... 264 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் ... 269 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம்’ “தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி” என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் ‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’ என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும்,‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது’ என்னும் கருத்தால், “பழைய காப்பியக்குடியில் உள்ளான்” என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு ‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கின ராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரி பாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவேயன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசை களும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல்காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமை யால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப் பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பி யத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமைகளை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப்பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்ட மாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல் களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப் பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல் காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்த வாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற் களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப ஙஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற் காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங் களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல் காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல் காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்கு கின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பியன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல் காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ் செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல் காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமையுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாத னுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம் ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லையாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பா வியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண் டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் சொல்லதிகார இயலமைதி சொல்லதிகாரம் கிளவியாக்கம் (சொல்லாக்கம்) முதலாக எச்சவியல் இறுதியாக ஒன்பது இயல்களை உடையது. அவ்வியல்கள் முறையே கிளவியாக்கம், வேற்றுமைஇயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. இவை ஒன்றற் கொன்று தொடரிபோல் - சங்கிலிபோல் - தொடர்புடையன. சொல் சொல் என்பது பொருளுணர்த்தும் கருவி; மாந்தர் தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி. சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும் தேவை நிறைவேற்றத்திற்கும் தம் பட்டறிவால் இயற்கையின் துணை கொண்டு படைக்கப்பட்ட செய்நேர்த்தியுடையது. சொல்லின் ஆற்றல் பெரிது. “ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால்” என்பது பழமொழி. சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் ‘கூற்று’ என்றொரு பெயரைத் தந்தது கூறுபடுத்துவது அழிப்பது கூற்றெனப்படுதல் அறியத்தக்கது. சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றார் (640). அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத்தக்கனவும் உண்டு என்பதால், “மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்றார் (877). நெல் மணி இல்லாத நெல்லை ‘நெல்’ என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு. நெல் மணி பிடித்தலைப் ‘பலன்’ பிடித்தல் என்பர்;ஆடு மாடு கருக் கொள்ளுதல் ‘பலப்படுதல்’ எனப்படும். மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன்மற்றை உயிரிகளின் வாழ்வில் பலன் எனப்படுகின்றது. பலன் இல்லா நெல்லும் பயன் இல்லாச் சொல்லும் ஒத்தவை என்பதால் ‘சொல்’ என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டாயிற்று. சொல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது. “பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்” என்னும் வள்ளுவ உவமை எண்ணின், உண்மை விளக்கமாம். சொல்லதிகார முதலியலின் பெயர் ‘கிளவியாக்கம்’. ஆக்கம் என்பது என்ன? ஆக்குவது ஆக்கம். ‘ஆக்குப் புரை’ என்பது சமையல் அறை. சொல்லை ஆக்குதல், நெல்லைச் சோறாக்கும் செயல்போல்வது என்பதை, உரையாசிரியர் சேனாவரையர், “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று. ஆக்கம், அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத் தாரை அரிசியாக்கினார் என்ப ஆகலின்” என்றது எண்ணத்தக்கது. கிளவி சொல்லாதல், இரட்டைக் கிளவி என்பதால் வெளிப்பட விளங்கும். கிளத்தல் வழியாவது கிளவி. கிளத்தல் சொல்லுதல். இனி, உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை; ஆண், பெண், பலர், ஒன்று, பலஎன்னும் ஐம்பால், வினா விடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்; ஒருமை பன்மையாகிய எண்; இவற்றுள் வரும் வழு - வழா நிலை என்பனவெல்லாம் கிளவியாக்கத்தில் இடம் பெறுகின்றன. வேற்றுமை அடுத்துள்ள வேற்றுமையியலில் வேற்றுமை வகை, வேற்றுமை உருபு, பொருள் நிலை என்பவை கூறப்பட்டுள்ளன. வேற்றுமை உருபுகள் மயங்குதல் வேற்றுமை மயங்கியலாக விரிகின்றது. விளி நான்காவது இயல் விளி மரபு என்பது. விளி என்பதன் இலக்கணம், உயர்திணைப் பெயர் விளியேற்கும் முறை, முறைப் பெயர் விரவுப் பெயர், அஃறிணைப் பெயர் ஆயவை விளியேற்கும் முறை பற்றியது அது. பெயர் அடுத்த இயல் பெயரியல், சொற்களின் இயல்பு, பெயர்ச் சொல்லின் இலக்கணம், உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் என்பவை பற்றிய விதிகள் விளக்கங்கள் பற்றியது அது. வினை ஆறாம் இயல் வினை இயல். வினைச் சொல் என்பதன் இலக்கணம் கூறி, உயர்திணை வினை ஆஃறிணைவினை, விரவுவினை, வியங்கோள், வினை, எச்சம் பற்றியது அது. இடை ஏழாம் இயல் இடை இயல். இடைச் சொல் என்பதன் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் பற்றிக் கூறியது அது. எண்ணிடைச் சொல் விளக்கமும் உடையது. உரி உரியியல் என்பது எட்டாவது இயல். இடைச் சொல் போலவே உரிச்சொல்லும் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் என்பவற்றைக் கொண்டுளது. உரிச் சொல்லுக்குப் பொருள் காண் முறையும் கூறுகிறது. அகராதி எனவும் நிகண்டு எனவும் பின்னே எழுந்த வரவுகளுக்கு இவ்விடையியலும் உரியியலும் மூலவைப்பகம் ஆகும். எச்சம் ஒன்பதாவது எச்சவியல். நால்வகைச் சொற்கள், பொருள்கோள் வகை, தொகைகள் வினைமுற்று வகை, சில மரபுக் குறிப்புகள் ஆகிய வற்றைக் கூறி நிறைகின்றது அது. இச் சொல்லதிகாரம் உரைவல்லார் பலரைத் தன்பால் ஈர்த்துளது என்பது இதற்குக் கிடைத்துள்ள உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகியோர் உரைகளால் புலப்படும். - இரா. இளங்குமரன் சொல்லதிகார வாழ்வியல் விளக்கம் திணை திணை பால் எண் இடம் காலம் ஆகிய பொதுவகுப்பு உலகப் பொதுமையது. எனினும் தமிழர் கண்ட திணை பால் வகுப்பு அருமையும் பெருமையும் மிக்கவை. சொல்லதிகார முதலியலாகிய கிளவியாக்க முதல் நூற்பாவே, “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்கிறது. ‘திணை’ என்பது திண்மை என்னும் பண்பு வழியில் அமைந்த சொல் திண்மை உடலுக்கும் உளத்திற்கும் உண்டேனும், இவண் உளத்திண்மை குறித்ததேயாம். உளத்திண்மையாவது உறுதியான கட்டொழுங்கு. அதனை ஆசிரியர் மேலே விளக்கியுரைப்பார். பெண்மைக்குத் திண்மை வேண்டும் என்னும் வள்ளுவம் ஆண்மைக்கு நிறையும் துறவர்க்கு நோன்பும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் எவரோ அவர் உயர்திணையர்; அவ்வுயர் ஒழுக்கம் இல்லாரும் மற்றை உயிரிகளும் உயிரில்லாதனவும் அல்திணையாம் (அஃறிணையாம்) என்கிறார். தொல்காப்பியர். மக்களெல்லாரும் உயர்திணையர் என்னாமல் உயர் ஒழுக்கம் உடையாரே உயர்திணையர் என்றார், “அவ்வுயர் ஒழுக்கம் இல்லார் மாந்தரே எனினும் அவர்கள் மக்கள் அல்லர்; மாக்கள் எனப்படுவர். விலங்கொடும் இணைத்துச் சொல்லப்படுவர்” என்பதை, “மாவும் மாக்களும் ஐயறி வினவே” என்பார் மேலே. திணை இரண்டும் ஐம்பாலாகப் பகுக்கப்படுதலை அடுத்து உரைக்கிறார் (485, 486). பால் பால் என்பது தூய்மை; வால் என்பதும் அதுவே. பட்டொளி வீசும் பகல் ‘பால்’ ஆகும். இரவு பகல் எனப் பகுத்தலால் பால் என்பது பகுதி, பக்கம் என்னும் பொருள்களைக் கொண்டது. எ-டு: மேல்பால், கீழ்பால். பக்கங்களை இணைப்பது ‘பாலம்’ எனப்பட்டது. இவ்வாறும் மேலும் விரிபொருள் கொண்டது பால். ஓர் உயிரின் தோற்றம், வளர்வு, வீவு என்பனவும் உலகத்தியற்கை எனப்பட்டது. அதனால் உகலத்தியற்கை யாம் ஊழுக்குப் ‘பால்’ என்பதொரு பெயரும் உண்டாயிற்று. திணையை இரண்டாகக் கண்ட நம் முன்னோர் பால் என்பதை ஐந்து எனக் கண்டனர். அவை ஆண், பெண், பலர், ஒன்று, பல என்பன. உயர் திணைப்பால் மூன்றாகவும், அஃறிணைப்பால் இரண்டாகவும் கொண்டனர். திணை பால் என்பவற்றைச் சொல்லமைதி கொண்டு வகுக் காமல் சொல் சுட்டும் பொருள் அமைதியைப் பண்பாட்டு வகையால் வகுத்த அருமை நினைந்து மகிழத் தக்கதாம். ஆண்பால் சொல் அடையாளம் என்ன? பெண்பால் சொல் அடையாளம் என்ன? “னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” “ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” என்கிறார் தொல்காப்பியர் (488, 489) இவ்வாறே பிறவும் தொடர்கிறார். நெடிய தொலைவில் இருந்து உருண்டுவரும் கல், தேய்வுறும்; தேய்ந்து தேய்ந்து சுருங்கி நிற்கும். அதுபோல் நெட்ட நெடுங்காலத்தின் முன் தோன்றிப் பெருக வழங்கும் சொற்கள் தேய்தல் இயற்கை. அவன், அவள்,அவர், அது, அவை என்பனவற்றின் இறுதி எழுத்து ஒன்றுமே நின்று அச்சொல்லமைதியைக் குறித்த வகை இது. வந்த+அவன் = வந்தவன்; எனத் தேய்தல் இல்லையா? மக்கள் வழக்கில் எப்படி வழங்கப்படுகிறதோ, அதனைத் தக்க வகையில் புலமையாளர் போற்றிக் கொண்ட முறை இன்னதாம். பால் திரிபு ‘அரவானி’ என்பார் உளர். அரவான் இறப்போடு தம்மைப் புனைந்து தாலியறுக்கும் சடங்காக நடத்தி வருகின்றனர். அது வரவரப் பெருக்கமும் ஆகின்றது. முழுதுறு ஆண்மையோ, முழுதுறு பெண்மையோ அமையாதவர் அவர். ஓர் எருமையின் கொம்பைப், “பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப” என உவமை காட்டுகின்றது கலித்தொகை. போர்க்களம் புக விலக்கப்பட்டவராக இருந்தனர் அவர். ஆனால் களியாட்டத்தில் பங்கு கொண்டனர். பதினோராடல்களுள் ஒன்று பேடு. ஆண்மை இயல்பு மாறியவரையும் பெண்மை இயல்பு மாறியவரை யும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். “ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி” என்கிறார். ஆண் தன்மை மாறிப் பெண் தன்மை மிக்கார் பேடியர் என்றும், பெண் தன்மை மாறி ஆண் தன்மை மிக்கார் அலியர் என்றும் கூறப் படுகின்றனர். இலக்கணம் கூறவந்த ஆசிரியர் பால்திரி தன்மையரை எப்பால் வகுப்பில் சேர்த்தல் வேண்டும் என்னும் ஐயம் பயில்வார்க்கு எழாவாறு, “இப்பால் படுத்திக் கூறுக” என இலக்கணம் வகுத்தார் என்க. செப்பும் வினாவும் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதொரு கிளவியாக்க நூற்பா (496). ‘வினா விடை’ மலிந்த காலம் இது. வினாவுதலும் விடை தருதலும் வழக்கு. ஆனால், ஆசிரியர் தொல்காப்பியர் பார்வை ஆழமானது. வினாவு தற்கு உரிய பொருள் ஒன்று இல்லாமல் வினாவுதல் என்பது இல்லையே என எண்ணியவராய் விடை என்பதனைக் குறிக்கும் ‘செப்பு’ என்னும் சொல்லை முன்வைத்துச் “செப்பும் வினாவும்” என்றார். செப்பல் ஓசையமைந்த வெண்பா, வினாவுக்கும் விடைக்கும் பொருந்தி வரக் கண்ட புலமையர், அதனைப் போற்றி வளர்த்த இலக்கியப் பரப்பு பேரளவினதாம். வினா விடை வெண்பா, சேதுவேந்தர் அவையில் சிறக்க வளர்ந்தது. இரட்டையர், காளமேகர் முதலியோர் பாடியவை தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றன. வினாவேவிடை “படிப்பாயா” என வினாவுகிறார் ஒருவர். வினாவப் பட்டவர், “படியேனோ? (படிக்க மாட்டேனோ?)” என அவரும் வினாத் தொடுக் கிறார். இவ்வினாவும் விடையே என்பதை மக்கள் வாழ்வியல் வழக்குக் கண்டு உரைத்துள்ளார் தொல்காப்பியர் அது, “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” என்பது (497). தகுதி சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றிலோ பயன்படுத்தக்கூடாத சொல் என்று அவைக் குறிப்பில் இருந்து விலக்கக் கூறுதல் மக்களாட்சி நடைமுறை. இம்முறை பெரியவர் முன்பிலும், பெரு மக்கள் அவை முன்பிலும் பண்டே பயன்படுத்தப்பட்ட செம்முறை ஆகும். மாண்டார், இறந்தார், துஞ்சினார், செத்தார் என்பனவெல்லாம் ஒரு பொருள் தருவனவே எனினும், ‘செத்தார்’ என்பது மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. விடுக்கப்படுவது, ‘ஓலை’ என்றாலும் அது ‘திருமுகம்’ எனப் பட்டது. ‘விளக்கை அணை’ என்னாமல், ‘விளக்கை அமர்த்து’, ‘குளிரவை’ என்பவை மின் காலத்திலும் பின்பற்றல் உண்டு. இவற்றை அவையல்கிளவி, (இடக்கரடக்கு) என்றும், மங்கல வழக்கு என்றும் கூறப்பட்டன. “இதனை இவ்வாறு கூறுதலே தகுதி” எனச் சான்றோரால் வகுக்கப்பட்டது ’தகுதி வழக்கு’ என்பதாம் இதனைத், “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே” என்கிறார் (500). இனச் சுட்டு ஞாயிறு என்பதற்கும் செஞ்ஞாயிறு என்பதற்கும்வேறுபாடு உண்டா? உண்டு. ஞாயிறு என்பதைப் பொது வழக்கிலும் செய்யுள் வழக்கி லும் கொள்ளலாம். ஆனால், செஞ்ஞாயிறு என்பது பொது வழக்குச் சொல் அன்று; அது, செய்யுள் வழக்குச் சொல். ஏனெனில், இனச்சுட்டு இல்லாச் சொல் செஞ்ஞாயிறு என்பது கரு ஞாயிறு என ஒன்று இல்லையே; அதனால் ‘செந்தாமரை’ என்பது பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உண்டே எனின், அது இனச் சுட்டுடைய பண்பினது. வெண்டாமரை உள்ளதே! “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க் கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே” என்பது நூற்பா (501). இயற்கை செயற்கை இயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் செயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் என்னும் நெறிமுறைகள் உண்டு. ‘மண்திணிந்த நிலம்’ என அதன்செறிவு கூறப்படும். மக்கள் வழக்கிலும் நிலம் வலிது; நீர் தண்ணிது எனப்படும். ஆனால் செயற்கைப் பொருளுக்குக் கூறும் முறை வேறானது. ‘பயிர் செழுமையானது’ எனஆக்கச் சொல் தந்து கூறுதல் வேண்டும். ஆக்கச் சொல்லொடு காரணம் கூறலும் வழக்கு. “நீர் விட்டு களைவெட்டி உரமிட்டு வளர்த்ததால் பயிர் செழுமையானது” என ஆக்கம் காரணம் பெற்று வருதல் உண்டு. ஆக்கம் காரணம் அறிவிக்காமல் அறியத்தக்கது எனின், காரணம் இல்லாமலும் ஆக்கம் வரும். உழவர் முதலோர் வழக்குகளில் ஊன்றிய ஊன்றுதலே இவ்விலக்கண ஆட்சி முறையாம் (502 - 505). ஒருவர் அவர், பலர்பால் சொல், ஆனால் ஒருவரை அவர் எனச் சிறப்பு வகையால் கூறல் உண்டு. அம்முறை இலக்கண முறை ஆகாது; மக்கள் வழக்கு முறையாகும். வேந்தனே எனினும் அவனைப் பாடிய புலவரை அவன் என்னாது அவர் எனல் உரையாசிரியர் மரபு. அதனால் ‘அவனை அவர் பாடியது’ என்றே நெறியாக வழங்கினர். “கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது” என்று சிறப்பு வகையாலே பாடல் தொகுத்தவர்கள் போற்றி உரைத்தனர். ஆர் இறுதி வரும் பெயரோடு சாதிப் பெயர் ஒட்டுதல் இல்லை என்பதை உணர்வார் அதனைப் போற்றத் தவறார். ஆனால் செய்யுளில் ஒரு புலவரை ஒரு புலவர் “பரணன் பாடினன்”, “கபிலன் பாடிய மையணி நெடுவரை” என ஒருமைப் பெயராகவே குறித்தனர். இவை எண்ணிப் போற்றத்தக்கவையாம். தாய்ப்பசு வரும் என்பதை, “இன்னே வருகுவர் தாயர்” என்கிறது முல்லைப் பாட்டு. இஃது அஃறிணையை உயர்திணை ஆக்கிக் கூறியது ஆகும். இவ் விலக்கணத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் (510). யாது எவன் யாது என்றோ எவன் என்றோ வினாவின் வினாவப் பட்ட பொருள் முன்னர் அறியப்படாத பொருளாக இருத்தல் வேண்டும். என்பது மரபு. வரையறை இடக்கண் வலிக்கிறது; வலக் கண் வலிக்கிறது எனத் தனித் தனியே கூறல் உண்டு. ஒரு கண் வலிக்கிறது எனலும் வழக்கே. இரண்டு கண்களும் வலித்தால், இரண்டு கண்கள் வலிக்கின்றன எனல் மரபு ஆகாது இரண்டு கண்களும் வலிக்கின்றன” என்பதே மரபு. ஏனெனின், கண்கள் இரண்டே ஆதலால் உம்மை இட்டுச் சொல்லல் வேண்டும். இவ்வளவே என வரம்புடையவற்றை உம்மையிட்டுக் கூறாமை பிழையாகும். ‘முத்தமிழ் வல்லார்’ என்னாமல் ‘முத்தமிழும் வல்லார்’ எனலே முறை ஏனெனின் தமிழ்: மூன்றே ஆகலின். இதனை, “இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு வினைப்படு தொகையின் உம்மைவேண்டும்” என்கிறார் (516). எங்குமே இல்லாத பொருளைச் சொன்னாலும் அவ்வாறு உம்மை தந்தே சொல்ல வேண்டும் (517). எ-டு: “எந்த முயலுக்கும் கொம்பு இல்லை” அல்லது இல்லது துவரம் பயறு உள்ளதா என்று ஒரு வணிகரிடம் வினாவினால் உள்ளது எனின் உள்ளது என்பார். இல்லை எனின் இல்லை என்று கூறார். ஆனால், துவரம் பயறு போன்ற ஒரு பயறு வகையைச் சுட்டிக் கூறுவார். பாசிப்பயறு உள்ளது; மொச்சைப் பயறு உள்ளது என்பார். ‘இல்லை’ என்று சொல்லுதல் தம் வணிக மரபுக்கு ஆகாது என அவர் கொண்டுரைக்கும் உரை வழக்கு இன்றும் நடைமுறையில் காண்பதேயாம். இதனை, “எப்பொருள் ஆயினும் அல்லது இல்எனின் அப்பொருள் அல்லாப் பிறிது பொருள் கூறல்” என்கிறார் தொல்காப்பியர் (618). இன்னும், ‘இருந்ததுதான்;’ ‘நாளை வரும்’ என்பதும் இவ்வழிப் பட்டதே. இல்லை என்பது இல்லை என்னும் மக்கள் வழக்கைச் சுட்டுவது இது. பெயர்; சுட்டு ஔவையார் வந்தார்; அவர், அரண்மனையை அடைந்தார். இதில் ஔவையார் என்பது இயற் பெயர். அவர், சுட்டுப்பெயர். இயற்பெயரைச் சொல்லிய பின்னரே சுட்டுப் பெயரைச் சொல்லுதல் வழக்கம். ஆனால், செய்யுளில் சுட்டுப் பெயரை முதற்கண் சொல்லிப் பிற்பட இயற்பெயர் கூறலும் உண்டு. பெயர்களுள் சிறப்புப் பெயர், இயற்பெயர் என இரண்டும் வருவதாயின் சிறப்புப் பெயரை முற்படக் கூறி, இயற்பெயரைப் பிற்படக் கூறவேண்டும் என்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். எ-டு: ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ சிறப்புப் பெயரைப் பின்னே வைத்து, இயற்பெயரை முற்பட வைத்தல் ஆகாது என்பதை வலியுறுத்தவே இதனைக் கூறினாராம் (524). ஒரு சொல் பலபொருள் கால் என்பது பல பொருள் ஒரு சொல். உறுப்பு, சக்கரம், காற்று, கால்பங்கு, கால்வாய் முதலாய பலபொருள்களை யுடையது. இவ்வொரு சொல், இப் பல பொருளுக்கு இடமாகி வருதலை அறிய வகை என்ன? கால், கை, தலை என்னும் இடத்து உறுப்பு என்றும், ‘கால் பார் கோத்து’ என்னும் இடத்துச் சக்கரம் என்றும், புனல் அனல் கால் என எண்ணுமிடத்துக் காற்று என்றும், ஒன்றே கால் என்றும் இடத்துக் கால் பங்கு என்றும், கண்வாய் கால்வாய் என்னும் போது நீர் வருகால் என்றும் அறிய முடிகின்றது. இவ்வாறு அறியு முறையை ஆசிரியர் கிளவி யாக்கத்தில் சுட்டுகிறார். பொருள் மயக்கம் உண்டாகா வகையில் பொருள் காண வழிகாட்டுகிறார். “அவற்றுள், வினைவேறு படூஉம் பல பொருள் ஒருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் நேரத் தோன்றும் பொருள்தெரி நிலையே” என்பது அது (535). வேற்றுமை தொல்காப்பியர்க்கு முன்னர் வேற்றுமை ஏழாக எண்ணப் பட்டுள்ளது. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமை விளியாகும் நிலையையும் முதல் வேற்றுமையின் திரிபாகவே கொண்டு அதனைத் தனித்து எண்ணாமல் இருந்துளர். ஆனால் தொல்காப்பியர், “வேற்றுமை தாமே ஏழென மொழிப” என்று கூறி, “விளிகொள் வதன்கன் விளியோடு எட்டே” எனத் தனித்து எண்ணியுள்ளார் என்பது அவர்தம் நூற்பாக்களின் அமைதியால் விளக்கம் ஆகின்றது. வேற்றுமை எட்டு என எண்ணப்பட்ட வகை அது. பெயர், விளி வேற்றுமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என எண்ணாமல், “அவைதாம், பெயர் ஐ ஒடு கு இல் அது கண் விளி என்னும் ஈற்ற” என எண்ணியுள்ளார். ஐ என்றால் இரண்டாம் வேற்றுமை என்றும்... கு என்றால் நான்காம் வேற்றுமைஎன்றும்... கண் என்றால் ஏழாம் வேற்றுமை என்றும்... அறியச் செய்துள்ளார். ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் பெயர், ஐ, ஒடு என உருபுகளைக் கொண்டு எண்ணும் வகையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொருள் வேறுபடுத்தும் சொல்லே பெயராகி விடுகின்றதே. ஆதலால் இந்நெறி மேற்கொண்டனர் நம்முன்னோர். ஐ என்னும் உருபு வெளிப்பட்டோ மறைந்தோ வரக் கண்டதும் அதன் பொருள் புலப்பட்டு விடும். ஆதலால் உருபையும் அவ்வுருபு வழியாக ஏற்படும் பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேற்றுமை உருபு-பொருள்-களைப் படைத்துளர். முருகன் என்னும் பெயர் எழுவாய் நிலையில் நின்று உருபுகளை ஒட்டும்போது முருகனை, முருகனால், முருகனுக்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா என வேறுபடுகின்றது. உருபு மாற மாறப் பொருளும் மாறுபடுதலால் வேற்றுமை என்றனர். “முருகன் வாழ்த்தினான்” “முருகனை வாழ்த்தினான்” என்பவற்றில் வாழ்த்தியவனும் வாழ்த்துப் பெற்றவனும் வேற்றுமையாகிவிட வில்லையா! இவ்வேறுபாட்டை உருபு ஆக்குதலால் வேற்றுமை உருபு எனப்பட்டது. உருபு என்பது வடிவம் அடையாளம். அரசுத்தாள் என்பதன் அடையாளம் உருபா. வினை, பண்பு, உவமை, உம்மை இன்னவற்றின் அடையாளச் சொற்களையும் உருபு என்றது இதனால்தான். மரம் நட்டினான்; மரத்தை நட்டினான் மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் ஊரை அடைந்தான். ஊரை நீங்கினான் ‘காளையைப் போன்றான்’ இப்படியெல்லாம் வருவனகொண்டு இன்ன உருபு இன்ன பொருளில் வரும் எனக் கண்டு அம்மரபு போற்றுமாறு காத்தனர். ஆயினும் சில உருபு மயக்கங்களும் உண்டாயின. சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை மறுக்கவும் ஆயின. என் வீடு என்பது, எனதுவீடு என ஆறாம் வேற்றுமையாகும். என் மகள் என்று வரும்போது எனது மகன் எனக் கூடாது. ஏன்? வீடு உடைமைப் பொருள். மகள் உடைமைப் பொருள் அன்று. உறவுப் பெயர்; உரிமைப்பெயர். எனக்கு மகள் என உறவுரிமை தருதலே முறையாகும் (578) இந்நாளில் அடிக்கப்படும் திருமண அழைப்பிதழ் களில் பல இவ்வேறுபாடு அறியாமல் அடிக்கப்படுவதைக் காணலாம். எவ்வளவோ நுண்ணிய அறிவால் கண்டு வைத்த கட்டுக் கோப்பான நம் மொழி அக்கறை இல்லாத மக்களால் அழிக்கப்படு வதற்கு இஃதொரு சான்றாம். உருவாக்கிக் காத்த உயர்ந்த அறிவாளர் வைத்துள்ள மொழிச் சுரங்கம் இலக்கணம் என்னும் உணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் இத்தகு குறைகள் ஏற்படா. வேற்றுமை வரிசை சொற்கள் பெயர் வினை இடை உரி என நான்காக எண்ணப்படினும் பெயர், வினை என்னும் இரண்டனுள் அடங்கும். அப்பெயரே முதல் வேற்றுமை; அப்பெயராகிய எழுவாய் வினைபுரிதல் விளக்கமே வாழ்வியலாகும். அவற்றை முறையே வைப்பு முறையால் வைத்த அருமையது இரண்டாம் வேற்றுமை முதலியனவாம். இவ்வருமையை முதற்கண் கண்டுரைத்தவர் உரையாசிரியர் தெய்வச்சிலையார். அவர் கூறுமாறு: “யாதானும் ஒருதொழிலும், செய்வான் உள்வழி யல்லது நிகழா மையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இதுவெனக் குறிக்க வேண்டுதலின் செயப்படு பொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்கு ஆம் கருவி தேடுதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்து முடித்த பொருளைத்தான் பயன்கோடலே அன்றிப் பிறர்க்கும் கொடுக்கும்ஆதலின் அதனை ஏற்றுநிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவதுஆயிற்று. அவ்வாறு நீங்கிய பொருளைத் தனது என்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின.” மணிமாலை போல வேற்றுமையமைவு விளக்கம் சிறத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். நூலாசிரியர் கண் கொண்டு உரையாசிரியர் நோக்கி யுரைக்கும் இன்னவை நூற்பெருமையை மேலும் பெருமை செய்வதாம். ஒடு “ஊராட்சித்தலைவரொடு உறுப்பினர்கள் கூடினர்” இது செய்தித் தாளில் வரும் செய்தி. உறுப்பினர்கள் பலர்; தலைவரோ ஒருவர். ஆயினும் தலைவரோடு என அவர்க்கு முதன்மை கொடுப்பது ஏன்? “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது தொல்காப்பிய நாள் தொட்ட நடைமுறை வழக்கம் (575). விளி மரபு அம்மை அன்னை தந்தை தங்கை அக்கை தம்பி முதலான முறைப்பெயர்கள் விளிக்கப்படும் பெயர்களாக வழக்கில் மாறாமல் உள்ளன. விளித்தல் அழைத்தல், கூப்பிடுதல். அம்மா, அம்மே, அம்மோ என்றெல்லாம் வழங்குதல் பழமையும், ‘அம்ம’ என்று அண்மை விளியாம் பழமையும் இவ்வியலால் நன்கு அறியப்படும். “அண்மைச் சொல்லே இயற்கையாகும்” என்றும் விளியேலாமை குறிப்பார் (612). இம் மரபு தமக்கு முற்றொட்டே வரும் வகையை உணர்த்துமாறே ‘விளிமரபு’ என்று பெயரிட்டு வழங்கினார் என்பதும் அறியத்தக்கது. கோமான், பெருமாள் என்பன ஈற்றயல் நெடிலாகியவை. இவை விளியாம்போது இயற்கையாய் அமையும் என்கிறார். பெருமானே, பெருமாளே, கோமானே எனவருதல் இருவகை வழக்கிலும் உண்டு. “உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்கும் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான” என விளியை விரிவாக்கிப் போற்றுகிறார் (637). குழந்தை தொட்டுப் பெருமுதுமை வரை மக்கள் வாழ்வில் மட்டுமா? இறையடியாரும் “அம்மையே அப்பா ஒப்பிலாமணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று விளிக்கும் விளிமரபு மாறாமரபு அல்லவா! சொல்லும் பொருளும். பெயர் வினை இடை உரி என முறையே சொற்களை எண்ணும் ஆசிரியர் அவற்றின் இலக்கண அடிமூலம் கூறுவாராய், “எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே” என்கிறார். தமிழ்ச் சொற்களில் இடுகுறி என்பதொரு சொல் இல்லை என்பதைச் சொல்லி எல்லாச் சொற்களும் பொருள்புணர்ந்தனவே என உறுதி மொழிகிறார் (640). பெயர், வினை சொற்கள் இரண்டே என்பாராய், “சொல் எனப் படுப பெயரே வினைஎன்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே” என்பது (643) குடிக்கணக்கு எடுப்பார் தலைக் கட்டு எண்ணுவது போன்ற தாம். தலைக்கட்டு வரி ஊர்ப்பொதுப் பணிக்கு ஊரவர் மதிப்பிட்டுப் பெறும் தொகையாகும். ஆள் எண்ணிக்கையில் இருந்து வரிதண்டலுக்கு விலக்கப்பட்ட முறை போல்வது அது. பொருளை உணர்த்துவது பெயர். பொருளின் பெயர்ச்சி (புடை பெயர்தல்) வினை. என இரண்டன் பொருந்துதலும் நோக்கத் தக்கது. இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சொல்லென ஆகாவோ எனின், “இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப” என்பார் (644). பெண்மகன் ஆண், பெண், பிள்ளை எனவும்; ஆண்பிள்ளை, பெண்பிள்ளை எனவும்; வழங்கல் உண்டு. ஆண்மகன்; பெண்மகள் என்பனவும் வழங்கு வனவே. பெருமகள் பெருமாள் ஆகும்; பெருமகன் பெருமான் ஆவது போல. ‘பெண் பெருமாள்’ என்பார் வரலாற்றில் இடம் பெற்றுளார். தொல்காப்பியர், “பெண்மை அடுத்த மகன் என் கிளவி” என்பதைக் குறிக்கிறார். அதனால், ‘பெண்மகன்’ என வழங்கப் பெற்றமை அறியவரும். உரையாசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப” என்கிறார். கல்வி அறிவாற்றலால் தக்கோர் அவையில் முந்தியிருக்கச் செய்யும் கடமையமைந்த பெற்றோரை நோக்க, மகற் காற்றல் என்பது இருபாலையும் தழுவியபேறும் உண்டெனக் கொள்ளத் தகும். இனி இந்நாளிலும் பெண்மகவை ‘வாடா’ ‘போடா’ என்பதும், ஆண்பெயராக்கி அழைப்பதுடன் ஆணுடையுடுத்து மகிழ்தலும் காணக் கூடியனவேயாம். குறிப்பாகப் பெண்பிள்ளை இல்லார் அவ்வாறு செல்வமாகப் போற்றி மகிழ்தல் அறியலாம். தொல்காப்பியர் நாளை எச்சமாக அதனை எண்ணலாம். பெயர்வகை உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் என விரிவாகப் பட்டிய லிட்டுக் காட்டும் ஆசிரியர் நூற்பாக்களொடு சங்கத்தார் பெயர்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் மொழித் தூய்மை பேணும்வழி தானே புலப்படும். நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின்பெயர், வினைப் பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயர், முறைநிலைப் பெயர், சினை நிலைப் பெயர், திணை நிலைப் பெயர், ஆடியற்பெயர், எண்ணியற் பெயர் என்னும் இவை இடைக்கால பிற்கால வேந்தர் முதலோரால் கொண்டு போற்றப்படாமையால் இந்நாளில் முறை நிலைப் பெயர் (அம்மா, அப்பா, அண்ணா, அக்கை) தாமும் ஒழிந்துபடும் நிலைமை எண்ணத் தகும். சிறுநுண் நச்சுயிரியினால் பேருயிரியாம் மாந்தர் அழிந்துபடுதல் ஆகாது என அறிவியலாளரும் அரசியலாளரும் எடுக்கும் நலத்துறை அக்கறையில் ஒரு சிறிதளவு தானும் மொழித்துறை, பண்பாட்டுத் துறையில் கருத்துச் செலுத்தவில்லையே என்னும் ஏக்கம் உண்டாக்கு வது தொல்காப்பியர் சுட்டிக் காட்டும் பெயர் வகைகள் ஆகும் (647-650). அவர்கள் அவன் அவள் அவர் அது அவை என்பன ஐம்பாற் பெயர்கள். இந்நாளில் ‘அவர்கள்’ எனப் பலர்பால் வழங்கப்படுகிறது. ‘ஆசிரியர் அவர்கள்’ எனச் சிறப்பொருமைப் பெயராகவும் வழங்கப்படுகிறது. ‘கள்’ என்பது அஃறிணைப் பன்மைப் பெயர் ஈறு. அது மக்கட் பெயரொடு ஆண்கள் பெண்கள் அவர்கள் என வருதல் ஆகாது. ஆடுகள் மாடுகள் மலைகள் எனவரும் என்பது பழைய மரபு. “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பல அறி சொற்கே” என்பது தொல்காப்பியம் (654). பலவின் பாலுக்குரிய ‘கள்’ பலர்பாலுக்கும் வருதல் சங்கத்தார் காலத்திலேயே தோற்றமுற்று வரவரப் பெருக்க மாகிவிட்டது. அவர்கள் எனக் கள்ளீறு இல்லாமல் ஒருவரைச் சொன்னால் அவர் பார்வையே வேறாகிப் ‘பண்போடு பேசத் தெரியவில்லை’ எனப் பழிப்புக்கும் ஆளாகிவிடுதல் இந்நாளில் கண்கூடு. தாம், தான் தாம் என்பது பன்மைக்குரிய சொல் (669). எ-டு: அவர்தாம் கூறினார்; அவர் தம்முடைய பணிக்குச் சென்றார். தான் என்பது ஒருமைக்குரிய சொல் (670). எ-டு: அவன்தான் கூறினான்; அவன் தன்னுடைய பணிக்குச் சென்றான். எல்லாம் என்பது பன்மைச் சொல் (671). எ-டு: அவர் எல்லாம்; அவை எல்லாம். இப்படித் தெளிவாகத் தொல்காப்பியம் கூறியும் இந்நாளை இதழாசிரியர் நூலாசிரியர் தாமும் கண்டு கொள்வதில்லை. அவர் தன்னுடைய வேலையுண்டு தானுண்டு என்றிருப்பார் - என அச்சிட்ட செய்தி படிப்பார் அப்பிழையைக் கற்றுக்கொண்டு பரப்பாள ரும் ஆகிவிடுகிறாரே! வினை வினை என்பதன் இலக்கணம் ‘காலத்தொடு தோன்றும்’ என்பது. அது ‘வேற்றுமை கொள்ளாது’ என்பதும் அதன் இலக்கணமே. இதனைச் சொல்லியே வினையியலைத் தொடங்குகிறார். மெய்யியல் வல்லாராகிய அவர், செயல் வழியாம் வினையைச் சொல்வதை அன்றித் ‘தலைவிதி’ என்னும் பொருளில் ஆளவில்லை. 49 நூற்பாக்கள் அதற்கென வகுத்தும் அவ்வாறு ஆளாமை தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளமைதியை விடுத்து வேறு வகையில் செல்லார் என்பது நாட்டும். ‘செய்வினை’ செய்தல்; அதனை நீக்க ‘வினைக் கழிவு’ செய்தல் அறிவியல் பெருகிவருவது போலப் பெருகி வருதலை நினைக்க ஏதோ மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் போலத் தோன்றுதல்தானே உண்மை. விரைவு வாரான் ஒருவனும் வருவான் ஒருவனும் விரைவுக் குறிப்பில் வந்தேன் வந்தேன் எனல் உண்டே! உண்ணப் போவான் ஒருவன் உண்டேன் எனலும் உண்டே! இது குற்ற மல்லவோ எனின், “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்பனார் புலவர்” என அமைதி காட்டுகிறார் ஆசிரியர் (726). நிகழ் காலம் மலை நிற்கும் எனவும், கதிர் இயங்கும் எனவும் வழங்குகிறோம். மலை நின்றதும், நிற்கின்றதும், நிற்பதும் ஆகிய முக்காலத்திற்கும் உரியதாக இருந்தும் நிகழும் காலத்துச் சொல்லுதல் வழு இல்லையா? கதிர் இயங்கியது; இயங்குகிறது; இயங்கும்; இவ்வாறு இருந்தும், நிகழ்காலத்தில் சொல்லுதல் வழுத்தானே! ஆசிரியர் தெளிவிக்கிறார்: “முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம் முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச் சொல் கிளத்தல் வேண்டும்” என்பது அவர்காட்டும் அமைதி (725). முக்காலத்திற்கும் ஒத்தியலும் அவற்றைச் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டால் சொல்ல வேண்டும் என வழிகாட்டுகிறார். தெளிவு இச் சுழலுள் போவான் செத்தான் எனின் வழுவாகும் அல்லவோ! அப்படிச் சொல்லுதல் வழக்கில் உண்டே எனின், நிகழப் போவதை உறுதி யாகக் கொண்டு நிகழ்ந்ததாகக் கூறியது அது என்கிறார். “வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை” என்பது நூற்பா (730). இடைச் சொல்: ‘நான்’ என்பது தன்மைப் பெயர். ‘நீ’ என்பது முன்னிலைப் பெயர். ‘நான் நீ’ என்று நின்றால் பொருள் விளக்கம் பெறுவது இல்லை. “நானும் நீயும்” என்னும் போது பொருள் விளக்கம் பெற வாய்க்கின்றது; ‘செல்வோம்’ எனச் சேர்த்தால் பொருள் முடிபு கிட்டுகின்றது. சொற்கள் பெயர், வினை எனப் பகுக்கப் பட்டாலும், இத்தகு (உம்) இணைப்புகளும் வேண்டியுள. இவ்விணைப்புச் சொற்களே இடைச் சொற்கள் எனப்படுகின்றன. இடைச் சொல் என்பதால் சொல்லுக்கு இடையே மட்டும் வரும் சொல் என்பதாகாது. சொல்லுக்கு முன்னும் பின்னும் இடையும் வேண்டும் இடத்தால் வருவது இடைச் சொல் எனப்பட்டது என்க. “இடைச் சொல் தான் சார்ந்த பெயரின் பொருளையும் வினையின் பொருளையும் தழுவி நிற்றல் அன்றித் தனித்து நடக்கும் தன்மையது அன்று” என்று ஆசிரியர் கூறுகிறார் (734). எலும்புகளை இணைக்கவும் இயங்க வைக்கவும் இணைப்பு மூட்டுகள் உடலில் இடம் பெற்றிருப்பன போலச் சொற்பொருள் விளக்கத் திற்கு இடைச்சொற்கள் உதவுகின்றன எனல் தகும். “யான் அரசன்; யான் கள்வன்” இடைச் சொல் பெறா நிலையில் இத் தொடர்கள் தரும் பொருளுக்கும், “யானோ அரசன்; யானே கள்வன்” என இடைச் சொல் இணைதலால் வரும் தொடர்கள் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிட்டுத் தோன்றவில்லையா? இடைச் சொற்கள் சொல்லுறுப்புகளே எனினும் சொல்லுக்கும் பொருளுக்கும்; தொடர்புப் பாலமாக இருப்பவை அவையே. இனி, இடைச் சொல் தானும் பொருளின்றி வாரா என்பதன் விளக்கமே, “கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” என வருவது முதலான நூற்பாக்கள். உரிச்சொல் இயற்றப்படும் செய்யுள் சுவையும் தெளிவும் உறுதியும் அழகும் கொண்டு விளங்குமாறு இதற்கு இதுவே உரிய சொல் எனத் தேர்ந்து வைக்கப்படும் சொல் உரிச் சொல்லாகும். பெயர் வினை இடை என்னும் முச் சொற்களைக் கொண்டே எடுத்த பொருளைக் கூறிவிட முடியும். ஆனால் உரிச் சொல் தரும் சுவை முதலிய நலங்கள் ஏற்பட்டு ஆழ்ந்து எண்ணவும் மீள மீளக் கற்கவும் வாய்க்காமல் அமையும். அவையறிந்து பேசுவார் தம்மைச், சொல்லின் தொகையறிந்த தூய்மை அவர், சொல்லின் நடையறிந்த நன்மையவர், சொல்லின் வகை யறிவார் (711 - 713) என்று வள்ளுவர் தொகுத்துக் கூறும் இலக்கணம் அமைந்த சொல் உரிச்சொல் ஆகும். உரிச் சொல் உணர்வில் நின்று சுவை யாக்குதல், உரிப்பொருள் ஒப்பது எனப் பெயரீடு கொண்டு உணரலாம். நிகண்டு படைப்பாளி கொண்ட பொருள் நயம் படிப்பாளியும் கொள்ளல் வேண்டும் எனின் புரிதல் வேண்டும். காட்சிப் பொருள் போலக் குருத்துப் பொருளை அறிதலின் அருமை நோக்கியே உரிச்சொல் விளக்கமாக நிகண்டு நூல்கள் தோற்றமுற்றன அந்நிகண்டு நூல்களில் ஒன்றன் பெயர் உரிச்சொல் நிகண்டு என்பது. வழக்காற்றில் நிகழ்கின்றவற்றைக் கொண்டு திரட்டி வைக்கப்பட்ட சொல்லடைவே நிகண்டு என்னும் பொருட் (காரணப்) பெயராகும். உரிச்சொல் இத்தகு செய்யுட் சொல்லைப் பொருள் உணர்ந்து ஓதிச் சுவைக்கும் வகையில் வழிகாட்டியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த உரிச் சொல் இயல் அதன் விளக்கமாகும். வேண்டும் வேண்டும் சொல்களை உருவாக்கிக் கொள்ள அடிச் சொல்லாகத் திகழும் அருமை உரிச் சொல்லுக்கு உண்டு. தொல்காப்பியர், ‘உறு தவ நனி’ என்னும் உரிச் சொற்களைக் கூறி, மூன்று என்னும் எண் தந்து, மிகுதி என்னும் பொருள் தருவன அவை என்கிறார். “சால உறு தவ நனி கூர் கழிமிகல்” என ஆறு எண்ணுகிறார் நன்னூலார். உரிச் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்து ஓத வேண்டுவது இல்லை; அவற்றுள் பொருள் வெளிப்பாடு உடைய சொல் பொருள் வெளிப்பாடு அரிய சொல் என்பவற்றுள் பின்னதையே கூறினேம் என்கிறார். அவ்வாறானால் வெளிப்பட வாராச் சொல்லென அவர் எண்ணுவன வற்றையே கூறுகிறார் என்பது தெளிவாகும். மிகுதி மிகுதிப் பொருள் தரும் உறு என்னும் உரிச்சொல் ‘உறுபசி’ என வள்ளுவத்தில் ஆளப்படுகிறது; ‘உறுதுயர்’ என்பதும் அது. உறு என்பது உறுதல், உறுதி, உற்றார், உறவு, உறக்கம், உறிஞ்சுதல் உறுவலி முதலிய சொல்லாக்க அடிச் சொல்லாக அமைந்திருத்தலும் நெருக்கம் கட்டொழுங்கு மிகுதி என்னும் பொருள்களைச் சார்ந்தே நடை யிடுதலும் அறியத் தக்கதாம். மிகுதிப் பொருள் தரும் ‘தவ’ என்பது, தவப்பிஞ்சு தவச் சிறிது என மக்கள் வழக்கிலும் இடம் பெற்றுள்ளது. இது, தவம், தவசம், தவசி, தவசு எனச் சொல்லாக்கம் பெற்று வழங்குதலும் காணலாம். நல், நன், நன்று, நனவு, நனி, நனை என்பன வாழ்வியல் வளச் சொற்களேயாம். மழ, குழ மழலை, மதலை, குழந்தை, குதலை என்னும் சொற்களை எண்ணிய அளவில் இளமை மின்னலிடல் எவர்க்கும் இயற்கை. தொல்காப்பியர், “மழவும் குழவும் இளமைப் பொருள” என்கிறார். உள்ளங்கள் ஒன்றிப் போகிய வகையால் உண்டாகிய பொருள் அல்லவோ இது. அலமரல் அலமரல் என்பது தொல்காப்பியர் நாளில் வெளிப்படப் பொருள் வாராச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் ‘அல மருதல்’ மக்கள் வழக்குச் சொல்லாகி விட்டது. அலமருதல் சுழற்சிப் பொருளிலேயே வழங்குகின்றது. தெருமரல் என்பதும் அப்பொருளதே. சீர்த்தி சீர் சீர்மை சீர்த்தி சீரை என்பன வெல்லாம் இலக்கிய வழக்கில் உள்ளவை. முன்னிரண்டு சொற்களும் மக்கள் வழக்கிலும் உள்ளவை. சீர்த்தி என்ன ஆயது? ‘கீர்த்தி’ ஆகிவிட்டது. வேற்றுச் சொல் எனவும் கொள்ளப் பட்டது. சீரை ‘சீலை’யாகிவிட்டது. சீரை என்னும் துலைக் கோல் பொருள் இலக்கிய அளவில் நின்று விட்டது. குரு ‘குரு’ என்பது ஒளி என்னும் பொருள் தரும் உரிச்சொல். உள்ளொளி பெருக்குவான் ‘குரு’. குருந்து, குருந்தம், குருமணி, குருதி என்பன ஒளிப்பொருள் - நிறப் பொருள் - தருவன. குருத்து என்பது மக்கள் வழக்குச் சொல். ஒளியுடன் வெளிப்படுவது அது. குருத் தோலையும் குருத்திலையும் மிக வெளிறித் தோன்றுதல் ‘குரு’ வின் பொருள் காட்டுவன. குருந்தத்துக் குருமணி நினைவில் எழலாமே! அதிர்வு “அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும்” என்பது அப்படியே நடையில் வழங்கும் உரிச்சொற்களாக உள்ளனவே. “அதிர்ந்து போனார்” “விதிர் விதிர்த்துப் போனேன்” வழக்கிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் சொற்கள் தாமே இவை. தொல்காப்பியர் நாளில் அருஞ் சொற்களாக இருந்ததால்தானே விளக்கம் தந்தார். கம்பலை கண்ணீரும் கம்பலையும் என்பதோர் இணைமொழி. கண்ணீர் விட்டு அழுவதே அது. அழுகையால் உண்டாகும் ஒலி கம்பலை. “கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள” என்கிறார் தொல்காப்பியர். அரவம் - ஒலி; நீ இருக்கும் அரவமே இல்லையே என்பது வழக்கில் உள்ளது. பாம்புக்கு அரவம் எனப் பெயர் வந்தமை இதனால் அறியலாம். ‘கமலை’ கம்பலை என்பதன் தொகுப்பே. அழுங்கல் அழுகையால் அறியலாம். கலித்தல் துள்ளல்; அலை ஒலியால் கலித்தல் விளங்கும். ‘சும்’ என்பது மூச்சின் ஒலிக்குறிப்பு. புலம்பு ஆற்றுவார் இல்லாமல் புலம்புதல் உண்டு. தானே பேசுதலை ‘ஏன் புலம்புகிறாய்?’ என்பதும் வழக்கே. “புலம்பே தனிமை” என்பது தொல் காப்பியம். புலம்பல் உரிப்பொருளுக்கு உரிய நெய்தல் நிலப் பெயர் ‘புலம்பு’ எனப்படும். அதன் தலைவன் புலம்பன்! வெம்மை கோடைக் காலத்தில் தமிழகத்து வாழும் வளமைமிக்கார் கோடைக் கானைலை நாடி உறைவர். கோடைமலை சங்கச் சொன்றோர் பாடு புகழ் பெற்றது. கோடைக்கு அதனை நாடும் இக் காலநிலைபோல், தொல் காப்பியர் காலத்தே வெப்பத்தைத் தேடி உறையும் குளுமை மிக்க நிலையும் இருந்திருக்கும் போலும் அதனால், “வெம்மை வேண்டல்” என ஓர் உரிச் சொல்லையும் பொருளையும் சுட்டுகிறார். நாம் நம் அன்பர்களைக் குளுமையாக வரவேற்க; குளிர்நாட்டார் ‘வெம்மையாக வரவேற்றல்’ காண்கிறோமே! பேம், நாம் குழந்தைகள் அழுமானால் அச்சம் காட்டி அடக்குதல் இன்றும் சிற்றூர் வழக்கம். அவ்வச்சக் குறிப்பு ‘பே பே’ என ஒலி எழுப்புதலும் தொண்டையைத் தட்டுதலும் ஆகும். ‘பே’ (பேம்) என்னும் குறிப்பு அச்சப் பொருள் தருதல் தொல் காப்பியர் நாளிலேயும் இருந்தது. ‘பேய்’ என்பதன் மூலம் இப் பேம் ஆகும். ‘ஓர் ஆளும் கருப்புடையும் பேய்’ என்பார் பாவேந்தர். ‘நா’ (நாம்) என்பதும் அச்சப் பொருள் தருதல் ‘நாமநீர்’ என்னும் கடலலைப்பால் புலப்படும். நாயும் அச்சப் பொருளாதல் அறிந்தது. உரும் உரும் அச்சமாதல் விலங்குகள் உருமுதலால் விளங்கும். உரும் இடியும் ஆகும். உரும் வழியே உண்டாகிய ‘உருமி’க் கொட்டு, கேட்ட அளவால் அசைப்பது தெளிவு. இவற்றைத் தொகுத்து “பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றார். ‘உரு’ என்பதை மட்டும் தனியே எடுத்து “உரு உட்கு (அச்சம்) ஆகும்” என்றும் கூறினார். கண்டறியாத் தோற்றங்களும் விலங்குகளும் பாம்பு முதலியனவும் அஞ்சச் செய்தலை எண்ணி ‘உரு’ எனத் தனித்துக் கூறினார். அவர்தம் விழிப்புணர்வு வெளிப்பாடு இன்னவையாம். ஆய்தல் ‘ஆய்தம்’ என்னும் எழுத்து முப்பாற்புள்ளி வடிவினது; ஆய்தப் புள்ளி என்பதும் அது; அஃகேனம் என்பதும் அதற்கொரு பெயர்; என்பவற்றைக் கூறும் ஆசிரியர், ஆய்தம் என்பதன் பொருள் ‘நுணுக்கம்’ என்கிறார். “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது அது. ‘ஆய்வுப் பட்டறை’ எனப் பெயரிட்டு ஆய்வாளர் பலர் கூடித் திட்ட மிட்டுச் செய்து வரும் தொடர் நிகழ்வாகிய அதன் பெயர் தானும் பிழையாயது என்பது அறியாமலே ஆய்வுகள் நிகழ்கின்றன. ‘பட்டடை’ என்னும் சொல் தொழிலகப் பெயர். ‘பட்டடை’ என்பது “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு” என வள்ளுவரால் ஆளப்பட்ட சொல் (821) ஆய்தல் என்பது நாட்டுப்புறப் பெருவழக்குச் சொல். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்று கூறுதல் இந்நாள் வரை மாறியதில்லை. முற்றல் அழுகல் பூச்சி முதலியவை போக்கித் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளுதலே ஆய்தல் பொருளாக அமைகின்றது. ஆய்தலினும் நுணுக்க ஆய்வு ‘ஆராய்தல்’ (ஆர் ஆய்தல்). ஆய்வும், ஆராய்வும் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் நுண்ணிய நோக்குடைய சொற்கள். ஒன்றின் ஒன்று நுணுகியவையாக, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்பவற்றைச் சுட்டும் இவ்வுரிச் சொல் விளக்கம் அரிய வாழ்வியல் விளக்கமாம். ஓயா உழையப்பாளி, ஓயாப் போராளி, ஓயாச் சிந்தனையாளர், ஓயாப் பொருளீட்டாளர் ஓய்வு கொள்ளும் நிலை என்பது யாது? தம் ஓயாப் பாட்டின் பயன்பாட்டை மீள் பார்வை பார்க்க வேண்டும் அல்லவா! அவ்வாய்வு தானே ஓய்வின்பயன்! ஓய்வு என்பது சிந்தித்தலும் அற்றுப் போன நிலை அன்றே! அச் சும்மா இருக்கும் நிலை கோடியர்க்கு ஒருவர் இருவர் அல்லரோ தேடிக் கண்டு கொள்வது! அச் ‘சும்மா’ அரும் பொருளுள் அரும் பொருள். ஓய்வு கொள்வார்க் கெல்லாம் பொதுப் பொருளாகக் கைவர வல்லது ஆய்தலேயாம். ஆதலால் ஓய்தலில் நுண்ணியது ஆய்தல். ஆய்ந்து கண்ட பொருளை அடக்கிவைத்துக் கொள்வதால் ஆய்ந்து கண்ட பயன் தான் என்ன? அதனால் ஆய்ந்து கண்ட பயன் கருத்துகளைப் பலருக்கும் பல விடத்தும் சென்று கூறுதல் நிழத்தல் ஆகும். குடை நிழற்றல் என்பது நாடு தழுவுதல் போல் இந்நிழத்தல் ஆய்தலினும் நுண்மை யுடையதாம். இருந்தும் நடந்தும் நுவலும் நிலையும் இயலாமையாயின் அந்நிலை யிலும் தாம் கண்ட அரும்பயன் பொருள் - நுவன்று நுவன்று வந்த பொருள் - பின் வருவோர்க்குக் கிட்டும் வகையால் நுவன்றதை நூலாக்கி (நுவல் > நூல்) வைத்தல் வேண்டும். அக்கொடை உயர்கொடை என்பதை ஔவையார் “தாதா கோடிக்கு ஒருவர்” என்று பாராட்டுகிறார். ஓய்தல் முதல் சாய்த்தல் (வடித்தல்) வரைப்பட்டவை ஒன்றில் ஒன்று நுண்ணியவை ஆதலின் “உள்ளதன் நுணுக்கம்” என்றார். எவ்வொரு கடப்பாட்டில் ஊன்றியவரும் தம் ஊன்றுதல் கடனாக உயர்கொடை புரியலாம் என்னும் அரிய வழிகாட்டுதல், உரிச்சொல் வழியாகத் தரப்பெற்றதாம். வை வையே கூர்மை என்பதோர் உரிச்சொல் விளக்கம் (870). வை என்பதற்குக் கூர்மைப் பொருள் எப்படி வாய்த்தது? ‘வை’ என்னும் நெல்லைப் பார்த்தால் - நெல் நுனியாம் மூக்கைப் பார்த்தால் கூர்மை நன்கு புலப்படும். மழிதகடு போலும் கூர்மையுடையது நெல் மூக்காகும். வெகுளி “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (855) என்பது வண்ணத்தை விலக்கி எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிச் சொல் விளக்கம். சினங் கொண்டார் கண்நிறம் என்ன? அவர் முகத்தின் நிறம் என்ன? - இவற்றை நோக்கின் வெகுண்டாரின் முகமும் கண்ணும் காட்டிவிடும். “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்” என்பது குறள். கறுப்பும் சிவப்பும் நிறம் குறித்து வாராவோ எனின், “நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப” என்று கூறுவார் (856). எறுழ் காளையை அடக்க விரும்புவார் அதன் கொம்பை வளைத்துத் திமிலைப் பற்றித் தாவி ஏறி அடக்குதல் வழக்கம். திமிலுக்கு ‘எறுழ்’ என்பது பெயர். எறுழ் என்பதன் பொருள் வலிமை என்பதாம். எறுழ் என்னும் உரியொடு எறும்பு, எறும்பி (யானை) என்பவற்றை எண்ணினால் வலிமை விளக்கமாம். “எறுழ் வலியாகும்” என்பது நூற்பா (871). கலியானர் உண்ணாட்டு வாணிகரன்றி அயல் நாட்டு வாணிகராகப் பெரும் பொருள் ஈண்டியவர் கலியாணர் எனப்பட்டனர். கலி=மிகுதி; யாணர் = வருவாயினர். யாணர் என்பதன் பொருள் புதிதுபடல் (புதிய வளம் பெறுதல்) என்பார் தொல்காப்பியர் (862) யாணர் என்பதை யன்றி ‘யாண்’ என்னும் உரிச் சொல்லைக் காட்டி, “யாணுக் கவினாம்” என்றும் கூறுவார் (864). புதுவருவாயும் கவினும் பெருக்குவதாய திருமணம் ‘கலியாணம்’ எனவும் வழங்கப்படுதல் விளக்கமாக வில்லையா? வேற்றுச் சொல்லென மயங்காதீர் என்கிறது உரிச் சொற் பொருள். உணர்தல் உள்ளது உள்ளவாறு உணரும் உணர்ச்சி எவர்க்கு உண்டு என்று வினாவின், “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்கிறார் (876). சொல்லும் பொருளும் சொல்வோன் குறிப்பும் வெளிப்படப் புலப்பட்டு விடுமா? என வினாவின், உணர்வோர்க்கும் உடனே வெளிப் படப் புலப்படுதல் அரிது. ஆனால் அவரே ஆழ்ந்து நோக்கின் பொருள் புலப்படுதல் இல்லாமல் போகாது என்பதை, “மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்பதனால் தெளிவுபடுத்துகிறார் (877). இது முன்னரும் சுட்டப்பட்டது. எச்சம் ஒரு தொகையை ஒருவரிடம் தந்து செலவு கணக்குக் கேட்பார் எச்சம் எவ்வளவு என வினாவுவார். எச்சமாவது எஞ்சியிருப்பது. ஒருவர் தம் வாழ்வின்பின் வைப்பாக வைத்துச் செல்லுவன வெல்லாம் எச்சம் என்பதால், “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்” என்றார் பொய்யாமொழியார். எச்சம் என்பதற்கு மக்கள் எனச் சொல்லை மாற்றினாரும் பொருள் கண்டாரும் உண்டு. ஆனால் தொல்காப்பிய எச்ச இயல் எஞ்சியது என்னும் தெளிபொருள் தந்து விளக்குகிறது. இவ்வதிகாரத்தில் சொல்லியவைபோகச் சொல்ல வேண்டி நிற்கும் எச்சத்தைச் சொல்வதால் எச்சவியல் எனப்பட்டது. எச்சம் மக்கள் வாழ்வில் மாறாது வழங்கும் விளக்க மிக்க சொல்லாம். நால்வகைச் சொற்கள் தமிழ்கூறும் நல்லுலகச் செய்யுள் வழக்கிலே பயிலும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நான்காக எண்ணி இயலைத் தொடங்குகிறார். தமிழுலகத்து வழங்கும் வழுவிலாச் சொல் இயற்சொல் என்றும், ஒரு பொருள் குறித்த பல சொல்லும் பலபொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய தமிழ்ச் சொல் திரிசொல் என்றும், தமிழ் வழங்கும் நிலப் பரப்பின் அப்பாலாய் வழங்கிய சொல் திசைச் சொல் என்றும், வடக்கிருந்து வந்து வழங்கிய வேற்றுச் சொல் வடசொல் என்றும் இலக்கணம் கூறினார். தொல்காப்பியர் காலத்திற்கு முற்படவே தமிழர் கடல் வணிகம் செய்தமையும் அயல் வணிகர் இவண் வந்து சென்றமையும் உண்டாகிச் சொற்கலப்பு நேர வாய்ப்பிருந்தும் அச் சொற்களைச் செய்யுட் சொல்லாக ஏற்றார் அல்லர். வட சொல்லையும் தமிழியல்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தமிழ்நெறிச் சொல்லாக வருவதையே வற்புறுத்தி ஏற்றுக் கொண்டார். திசைச் சொல்லும் திரிசொல்லும் தமிழியற் சொல் போலவே தமிழ் எழுத்து வடிவு கொண்டிருந்தமையால் அவ்வெழுத்தை விலக்கிச் சொல்லாட்சி செய்யுமாறு சொல்ல அவர்க்கு நேரவில்லை. ஆதலால் வடசொல் ஒன்று மட்டுமே தமிழுக்கு வேற்றுச் சொல்லாகவும் வேற்றெழுத்துச் சொல்லாகவும் தொல்காப்பியர் நாளில் இருந்தமை விளங்கும். அச்சொல்லை அப்படியே கொள்ளாமல் தமிழ் மரபுக்குத் தகுமாறு கொள்ளவேண்டும் என்னும் உறுதியால், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என நெறிகாட்டினார். இவ்வாணை எந்த அயல் மொழிக்கும் உரிய பொது ஆணையெனப் போற்றுதல் மொழிக்காப்பாளர் கட்டாயக் கடமையாம். ஓர் அயற்சொல்லைக் கொள்ள வேண்டும் நிலை எப்படி உண்டாகும்? ஓர் அயற் சொல்லுக்கு ஒத்த அல்லது ஏற்ற சொல், அதனைக் கொள்ள விரும்புவார் மொழியில் இல்லாமல் இருக்க வேண்டும். சொல் இல்லை எனினும், ஏற்ற சொல்லை ஆக்கிக் கொள்ள முடியாத அரிய சொல்லாக அஃது இருத்தல் வேண்டும். அச்சொல்லை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அப்பொருளை விளக்கிக் கூற முடியாத இடர் எடுத்துக் கொள்வார் மொழியில் இருத்தல் வேண்டும். இத்தகு நிலைகளிலேயே அயற் செல்லைத் தம் மொழியியற் கேற்பக் கொள்ள வேண்டும் என்பனவே இந் நூற்பாவின் கருத்துகளாம். வளமான செல்வமும் வாய்ப்பான வாழ்வும் உடையான் கடன் கொண்டு வாழ விரும்பான். கடன் கொள்ளல் இழிவெனவும் கொள்வான். அந் நிலையில், கடனாளன் என்னும் பெயர் கொள்வதற்காகக் கடன் கொள்ளுதலை அருவறுப்பாகவும் கொள்வான். அப் பொருட்கடன் போன்றதே வேண்டாச் சொற்கடனுமாம். பொருட்கடன் வேண்டாது பெற்றுக் கொண்டே போனால், உள்ளவை உரியவை அனைத்தும் அக் கடனாலேயே இழந்து எல்லாமும் இல்லாமல் ஒழிந்து போவான். இந்நிலையை எண்ணுவார் வேண்டாச் சொற்கடனைக் கொள்ளார். ஒரு சொல்லைக் கட்டாயம் எடுத்தாகவேண்டும் நிலை இருந் தாலும், மகப்பேறு வாயாதவர் ஒரு குழந்தையை மகவாகக் கொள்ளும் போது தம் குடும்பத்துக் குழந்தை என்பதை முற்றிலும் காக்கும் வகையால், அக் குழந்தையின் முன்னைத் தொடர்பை விலக்கித் தம் குடும்பத்திற்குத் தகுபெயர் சூட்டித் தம் குடிமை உறுப்பாகவே வளர்த்து வருதல் போல் அயற் சொல்லைத் தம்மொழிக்குத்தகக் கொண்டு ஆளவேண்டும் இதனைக் கூறுவதே, “எழுத்து ஒரீஇ, எழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்னும் ஆணையாம். இவ்வாணையை மொழிக் காவலர் காலம் காலமாகப் போற்றி னர். ஆனால் நாட்டுக் காவலர் போற்றத் தவறினர். அயன்மொழியார் வழியில் சாய்ந்தனர். மொழிக் காவலும் நாட்டுக் காவலும் ஒப்பப் போற்றிய மன்னர் காலத்தில் அயலெழுத்துப் புகவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு இடமான வட மொழியார், படிப்படியே ஊர்கள் பெயர்கள் முதலியவற்றை மாற்றி வழங்க இடந்தந்தனர். மெய்க் கீர்த்தியில் மிக இடந் தந்தனர். அயன் மொழி வழிபாடு சடங்கு என்பவற்றை ஏற்றனர். அதனால் பொது மக்கள் வாழ்விலும் இந் நிலை புகுந்தது. கட்டிக் காத்த மொழிக் காவலர்களும், அயற் சொற்களேயன்றி அயலெழுத்துகளும் கொள்ளத் தலைப்பட்டனர். பின்னே வந்த அயன் மொழியாகிய ஆங்கிலம் பிரெஞ்சு போர்த்துக் கேசியம் உருது இந்தி ஆகிய மொழிச் சொற்களும் புகுந்து மொழியழிப்புப் பணியை முழு வீச்சாக செய்தன. தமிழால் வாழ்வாரும் இதற்குப் பங்காளர் ஆயினர். “தொல்காப்பிய ஆணை மீறிய இக்குற்றம் காட்டுத்தீயாகப் பரவி இந்நாளில் மொழியை அழிக்கின்றது” என்பதை இன்று உணர்ந்தாலும் பயனுண்டு. இல்லையேல் அயலார் கணக்குப்படி தமிழும் விரைவில் ‘இருந்த மொழி’ என்னும் நிலையை அடைதல் ஆகவும் கூடும். “தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்” எனச் சான்றோர் ஒருவர் பெருமிதம் கொண்டார்! தோன்ற விரித்துரைத்தாலும் போற்றிக் கொள்வார் இல்லாக்கால் என்ன பயனாம்? உரைநடைக்கு இல்லாத சில இடர்கள் செய்யுள் நடைக்கு உண்டு. அதற்கென அமையும் கட்டொழுங்குகள் சில; சுவை, நயம், ஒலி, பொருள் என்பவை கருதி வழங்கு சொற்கள் சற்றே மாற்றமாய் அமைத்துப் போற்றுதற்கு இடனாகும். அதனால் சில சொற்களில் மெல்லெழுத்து வல்லெழுத்தாகவும், வல்லெழுத்து மெல்லெழுத்தாகவும், சில எழுத்து களை விரிக்கவும், சில எழுத்துகளைத் தொகுக்கவும், சில எழுத்துகளை நீட்டவும், சில எழுத்துகளைக் குறுக்கவும் ஆகும். ஆனால் இம்மாற்றங் களால் சொல்லின் பொருள் மாற்றமாவது இல்லை என்றும் செய்யுள் நயம் மிகும் என்றும் அறிய வேண்டும் என்று இலக்கியக் கல்விக்கு நெறிகாட்டு கிறார் (886). பாடலுக்குப் பொருள்கண்டு சுவைக்கத் தக்க வகையைப் ‘பொருள்கோள்’ எனக் கூறி அவ் விளக்கமும் தருகிறார் (887). இவை பயில்வார்க்குப் பயின்று சிறந்தார் காட்டும் வழியாகத் திகழ்கின்றன. ஆக்கிவைத்த உணவை உண்ண அறிந்தான் ஆக்கும் வகையையும் அறிந்துகொள்ளல் இரட்டை நலமாதல் போல் நலம் செய்வன இத்தகு துய்ப்பு நெறி காட்டலாகும். ஈ, தா, கொடு ‘ஈ’ என்றோ ‘தா’ என்றோ ‘கொடு’ என்றோ கூறுவதில் பொதுவாக நோக்குவார்க்கு வேறுபாடு இல்லை. ஆனால் நுணுகி நோக்கின் வேறுபாடு உண்டு. இதனை விளக்குகிறார் தொல்காப்பியர். கொடுப்பவனினும் அவனிடம் ஒன்றைப் பெற வருவோன் தாழ்வுடையன் எனின், ‘ஈ’ என்று கூறுவான். இருவரும் ஒப்புடையவர் எனின் பெறுவோன் ‘தா’ என்று கூறுவான். கொடுப்போனினும் பெறுவோன் உயர்ந்தவன் எனின் ‘கொடு’ என்று கூறுவான் என்று அக்கால மக்கள் வழக்கினை உரைக்கிறார். இரப்பவர் அனைவரும் இழிந்தாரும் அல்லர் கொடுப்பவர் அனைவரும் உயர்ந்தாரும் அல்லர். இரு நிலைகளிலும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் உண்டு. உயர்வு தாழ்வு என்பவை வயது அறிவு பண்பு உதவி நன்றிக் கடன் தொண்டு ஆளுரிமை என்பவற்றால் ஆவனவேயாம். பிறவிக் குல வேற்றுமை இல்லாததும் கருதப்படாததுமாம் காலநிலை தொல் காப்பியர் கால நிலையாம். வாராதனவும் பேசாதனவும் இந்தச் சாலை சென்னையில் இருந்து வருகிறது. கன்னி வரை செல்கிறது. என்று கூறுதல் உண்டு. இச் சாலை எங்கே போகிறது என வினாவுதலும் உண்டு. எறும்பு அணில் மலை முதலியவை பேசுவதாகக் கதைகள் உண்டு. இம்முறை உலகளாவியதாகவும் பெருவரவினதாகவும் உள. குழந்தையர் கல்விக்கு ஏற்றது இம் முறை எனப் போற்றவும் படுகிறது இதனைத் தொல்காப்பியர், “வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னும் குறிப்புரை யாகும்” (905) என்கிறார் (என்னா = என்று சொல்லாத). அடுக்கு அடுக்கு என்றாலே ஒன்றற்கு மேற்பட்டது என்பது பொருள். அடுக்குச் சட்டி, அடுக்குப் பானை என்பவை அன்றி அடுக்கு மல்லி அடுக்குப் பாறை என இயற்கை அடுக்கும் உண்டு. பாடலில் இசை கருதி அடுக்கு வரும் எனின், நான்கு முறை அடுக்கலாம் என்றும், விரைவு கருதிய அடுக்கு மும்முறை வரலாம் என்றும் ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார் (906, 907). எந்த ஒன்றிலும் அளவீடு இருத்தல் வேண்டும் என்னும் ஆசிரியர் மொழிக் காவல் நெறி இஃதாம். ஒரு பொருள் இருசொல் உயர்தலும் ஓங்குதலும் ஒன்று தானே! மீயும் மிசையும் ஒன்று தானே! ஒருபொருள் தரும் இரு சொற்களை இணைத்தல் ஆகுமா எனின் ஆகுமென மக்கள் வழக்குக் கொண்டு தொல்காப்பியர் சொல்கிறார். அது, “ஒரு பொருள் இரு சொல் பிரிவில வரையார்” என்பது. வரையார் = நீக்கார், விலக்கார். புதுவரவு பழைய சொற்கள் காலவெள்ளத்தில் அழிந்துபடுவது போலப் புதுப்புதுச் சொற்கள் தோற்றமும் ஆகின்றனவே எனின் வாழும் மொழி என்பதன் அடையாளம் அதுவே என்பர் மொழியறிஞர். இதனைக் “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (935) என்கிறார். கடிசொல் லாவது விலக்கும் சொல் நாட்காட்டி, எழுதுகோல், செய்தித்தாள் என்பன வெல்லாம் காலம் தந்த புதுவரவுகள் அல்லவா! மொழிவளம் செய்யும் சொற்களின் பெருக்கமும் தொடர் வரவுமே மொழிவளம் ஆதலால், அவற்றைப் போற்றிக் காக்க ஏவினார். - இரா. இளங்குமரன் கல்லாடர் தொல்காப்பியத்திற்கு உரைகண்டாருள் ஒருவர் கல்லாடனார். இவர் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டுள்ளார். அவ்வுரையும் இடையியல் பத்தாம் நூற்பா உரை தொட்ட அளவிலேயே கிட்டியுள்ளது. எஞ்சியவை கிட்டிற்றில்லை. இவர் “ஒல்காப் புலமைத் தொல்காப்பியத்திற்கு உரை யிடையிட்ட விரகர் கல்லாடர்” என்று பாராட்டப்படுகிறார். கல்லாடம் என்பது பாண்டி நாட்டகத்ததோர் ஊர் என்பது மணிவாசகர் வாக்கால் அறிய வாய்க்கின்றது. “கல்லாடத்தினில் கலந்தினிதருளி” என்கிறது அது. அக் கல்லாடத்துப் பிறந்ததனாலோ, முந்தையோர் பெயர்வழி வந்தமை யாலோ கல்லாடர் என்னும் பெயர் பெற்றார் எனலாம். பெயர் கல்லாடர் என்னும் பெயரால் அறியப் பெறுவார் நால்வருளர். அவருள், சங்க நூல்களால் அறியப்பெறும் கல்லாடர் ஒருவர். அவரே, யாப்பருங்கலவிருத்தியுடையாரால் கபிலர் பரணர் கல்லாடர் மாமூலர் என எண்ணப்படும் வரிசையுடையவர். மற்றொருவர், கல்லாடம் எனப்படும் அகப்பொருள் நூல் அருளியவர். இவ்விருவரினும் வேறொருவரே, தொல்காப்பிய உரையாளர் கல்லாடர். இனித் திருவள்ளுவமாலைக் கல்லாடரோ எனின், பெயர் சூட்டும் அளவில் ஒருவர் இட்டமைத்ததே அப்பெயர் என்க. காலம் இக் கல்லாடர் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் தெய்வச் சிலையார்க்கும் பழைய உரையாசிரியர்க்கும் முற்படவும், மற்றையோர்க் கெல்லாம் பிற்படவும் இருந்தவர் என்பது விளங்குகின்றது. “பெண்மை அடுத்த மகனென் கிளவி” என்பதற்குச் சேனாவரையரைத் தழுவி உரைவரையும் இவர், “நாணுவரை இறந்தாள் தன்மையளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுது மாறோக்கத்தார் வழங்குவர். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு” என்கிறார் (167). ஆனால், தெய்வச்சிலையாரோ “விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் பெண்மகன் என்பது பண்டையோர் வழக்கு” என்கிறார். இதனால் தெய்வச்சிலையார் கல்லாடர்க்குப் பிற்பட்டவராக இருத்தல் வேண்டும் எனக் கொள்ளலாம். பிரயோக விவேக நூலார் “மக்கட் சுட்டு என்பதனைக் கல்லாட னாரும் பின்மொழியாகு பெயராய் நின்ற இரு பெயரொட்டுப் பண்புத் தொகை என்பர்” என்று கல்லாடர் பெயரைச் சுட்டிக் கூறுகிறார் (பிரயோக. 22 உரை). ஆதலால் அவர்க்கு முன்னரும் நச்சினார்க்கினியர்க்குப் பின்னருமாம் காலத்தில் அதாவது 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தவர் எனக் கொள்ளலாம். நாடு முன்னவர்கள் உரையையே வாங்கிக்கொண்டு எழுதும் இவர் நும்நாடு யாது என்னும் வினாவுக்குப் பாண்டிநாடு என்று விடை கூறுவது கொண்டு பாண்டிநாட்டவர் என உறுதி செய்ய முடியாது எனினும் கல்லாடம் பாண்டி நாட்டகத்ததோர் ஊர் என அறியப்படுதலாலும், மாறோகம் கொற்கைப்பகுதி ஆதலாலும், அதனைச்சுட்டி ‘இப்பொழுது மாறோக்கத்தார் வழங்குவர்’ என்று பாண்டிநாட்டு ஆற்றூர்ச் சேனா வரையர் வழங்குமாறே வழங்குதலாலும் இவர் பாண்டி நாட்டவர் ஆகலாம். சமயம் ஆறாம் வேற்றுமை பற்றிய நூற்பாவில் வரும் (சொல். 81) நிலை என்பதற்குப் பிறரெல்லாம் சாத்தனது நிலை என்றும் அவரவரது நிலைமை என்றும் கூறினாராகவும், பெரிதும் முன்னையோர் உரையைத் தழுவியே உரை வரையும் இவர் இவ்விடத்தில், “நிலை - பெண்ணாகத்துப் பெருஞ் சங்கரனாரது நிலை. இஃது ஒன்றிய தற்கிழமை” என்று கூறுவது சிவநெறிச் சார்பினர் என்று கொள்ளக்கிடக்கிறது. சால்பு இவர் ‘இரண்டு வகையாக இலக்கணம் கூறி, “இரண்டனுள் நல்லது தெரிந்துரைக்க” என்பதும் (210), ஒரு காரணத்தைக் கூறி, “பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம்” என்பதும் (222) ஐயமுற்ற இடங்களில் ‘வாராது போலும்’ எனப் போலும் வாய்பாட்டால் கூறுவதும் இவர்தம் சால்பினைச் சாற்றுவன. விருத்தியுரை எடுத்த பொருளை நன்கு விளக்கிக் கூறுதலில் இவர் பெரிதும் கருத்துச் செலுத்துகிறார். அதனால் இவ்வுரையை விருத்தியுரை எனக் கொண்டமை வெளிப்படுகின்றது. “ஓசை எனினும், அரவம் எனினும், இசை எனினும், ஒலி எனினும் எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்தல் ஓசைக்கும் பொது கிளவி எனினும் மாற்றம் எனினும் மொழி எனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும்” என்றும் (1), “சேரி என்பது பலகுடியும் சேர்ந்திருப்பது. தோட்டம் என்பது பலபொருளும் தொக்கு நின்ற இடம்” என்றும் (49) கூறுகிறார். முன்னதில் ஒருபொருட் பன்மொழிகளைத் தொகுத்துரைப்பதும், பின்னதில் தோடு (தொகுதி) என்னும் வேர்ப்பொருள் உணர்ந்து கூறுவதும் அவர்தம் பொருள் விளக்கச் சிறப்பைப் புலப்படுத்தும். “எல்லாச் சொல்லும்” என்பதற்குத் தமிழ் இலக்கணம் கூறும் நூலாகலின் தமிழ்ச் சொல்லே சுட்டப்படுவது எனத் தெரியப் பெறுமாயினும் நன்கு விளங்குமாறு ‘தமிழ்ச்சொல் எல்லாம்’ என்று இவர் உரைப்பது (158) குறிப்பிடத்தக்கது. உரைநயம் முயற்கோடு, ஆமை மயிர்க் கம்பலம் என்பவை இன்மைப் பொருள். இவற்றுடன் “அம்மிப்பித்தும் துன்னூசிக்குடரும்” என இவர் இயைத்துக் கொள்வது (34) சுவை மிக்கது. ‘ஏமாளி கோமாளி’ என்பவை இன்றும் வழக்கில் உள்ளவை. இவர் ‘ஏமாள் கோமாள்’ என்கிறார் (148). கன்று என்பது ‘பூங்கன்று’ என வருதலைச் சுட்டுகிறார் (55). “கலம் - சாத்தனது கலம்; கலம் என்பதனை ஒற்றிக் கலத்தின் மேற் கொள்க. பிற கலத்தின்மேற் கொள்ளாமைக் காரணம் என்னை எனின் இஃதொரு பொருள் இருவர்க்குடைமையாக நிற்கும் வேறுபட்டதாகலின் என்க. இஃது உரையிற் கோடல்” என்று இவர் தரும் விளக்கம் புதுவது. “காடன், நாடன்” என்பவற்றுக்குக் “காடி, நாடி” எனப் பெண்பால் கூறுவதும் (177), “உழுது கிழுது” (235) என்பதும் புதுமைய. நன்னூலார் ‘இடைப்பிறவரல்’ என்பதை இவர் ‘இடைக் கிடப்பு’ என்பதும் அது. வினையெச்ச வாய்பாடுகளின் வைப்பு முறையைக் கூறும் இவர் “செய்து என்பது முதலாகச் செய்தென என்பது ஈறாக அந்நான்கும் இறந்தகாலத்தவாகலான் முன்னே உடன் வைக்கப்பட்டன. அவற்றுள், செய்து என்பது பெருவழக்கிற்று ஆகலின் அவற்றுள்ளும் முன் வைக்கப்பட்டது (230) என்பது முதலாகக் கூறுவதும், பிறிது பிறிது இடங்களில் இவ்வாறே விரித்துரைப்பதும் ஆசிரியர் வைப்புமுறைச் சிறப்பை வெளிப்படுத்துவனவாம். ஒரு சூத்திரப் பொருளை வேறொரு சூத்திரத்தால் பெற வாய்ப் பிருந்தும் ஆசிரியர் மீண்டும் கூறுதலைக் கூறியது கூறலாகக் குறை காணாமல், “மாணாக்கனை நன்கு தெளிவித்தற் பொருட்டுக் கூறினார்” என நிறையாக்குகின்றார் (117). சில இடங்களில் இவர் உரைக்கும் வேறுபாடுகள் சுவையானவை. ‘பொற்றொடி’ என்பதை இரு பெயரொட்டுக்கு எடுத்துக்காட்டும் இவர் “இஃது அன்மொழித் தொகையன்றோ எனின், படுத்தலோசை பட்டவழி அன்மொழித் தொகையாம்; எடுத்தலோசை பட்டவழி ஆகுபெய ராகும்” என்கிறார். காலங்குறித்த பல்லோர் மதங்களைத் திரட்டிக்கூறும் இவர், “காலம் தன்னை மூன்று என்பாரும் தொழிலாவது பொருளினது புடைபெயர்ச்சி யாகலின் அஃது ஒரு கணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பதொன்று இல்லை; ஆதலின், இறப்பும் எதிர்வும் எனக்காலம் இரண்டே என்பாரும், நிகழ்காலம் என்ற ஒன்றுமே உண்டு என்பாரும் எனப்பல மதம் உண்டு என்பது அறிவிக்கப்பட்டது” என்பது தம் உரையைக் கற்பார் பல்லோர் உரைகற்ற பயனை அடைய வேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதினார் என்பது புலப்படுகின்றது. - இரா. இளங்குமரன் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரை 1 கிளவியாக்கம் திணை இரண்டு எனல் 1. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்னுதலி யெடுத்துக்கொள்ளப்பட்டதோ வெனின், அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயருரைப்பவே விளங்கும். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின் சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃது இடுகுறியோ காரணக்குறியோ வெனின், காரணக் குறி. என்னை காரணம் எனின், சொல்லுணர்த்தினமை காரணத்தின் என்பது. என்னை? கிளவியாக்கம் எழுவாயாக, எச்சவிய லிறுதியாகக் கிடந்த ஒன்பது ஓத்துக்களுள்ளும் சொல்லின்கட் கிடந்த விகற்பமெல்லாம் ஆராய்ந்தார் எனக் கொள்க. அதிகாரம் என்றதன் பொருண்மை என்னையெனின் முறைமை. அவ்வோத்துக்களுள்ளும் எனைத்துவகையான் உணர்த்தினாரோவெனின் எட்டு வகைப்பட்ட இலக்கணத்தான் உணர்த்தினார் என்பது. அவையுணரச் சொல்லுணர்ந்தானாம். அவை யாவையெனின் இரண்டு திணைவகுத்து, அத்திணைக்கண் ஐந்து பால் வகுத்து, ஏழுவழு வகுத்து, எட்டு வேற்றுமை வகுத்து, ஆறு தொகை வகுத்து, மூன்று இடம் வகுத்து, மூன்று காலம் வகுத்து, இரண்டிடத்தான் ஆராய்ந்தாராம் என்பது. சொல்லிற்கிலக்கணமாமாறு என்னையோவெனின் இன்மை முகத் தானும் உண்மை முகத்தானும் அமைந்த இலக்கணமா மென்றுணர்க. அவற்றுள் இரண்டு திணையாவன உயர்திணையும் அஃறிணையும் என இவை. ஐந்து பாலாவன ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பலவென இவை. ஏழுவழு வாவன திணைவழூஉ, பால்வழூஉ, இடவழூஉ, காலவழூஉ, மரபுவழூஉ, செப்புவழூஉ, வினாவழூஉ என இவை. வேற்றுமை எட்டாவன எழுவாய் வேற்றுமை முதலாக விளி வேற்றுமையீறாகக் கிடந்த இவை. தொகையாறாவன வேற்றுமைத்தொகை, உவமத்தொகை, வினைத் தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகையென இவை. மூன்றிடமாவன தன்மை, முன்னிலை, படர்க்கை என இவை. மூன்றுகாலமாவன இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என இவை. இரண்டு இடமாவன வழக்குஞ் செய்யுளுமாகிய இவை. சொல்லிலக்கணங்கள் எட்டு என்றதற்கு விதி உரையிற்கோட லெனவுணர்க. இனிப் பிறவிலக்கணமுண்டெனினும், இவை பெரும் பான்மைய வென்றாதல், அவையும் இவற்றுள் அடங்கு மென்றாதல் கொள்ளப்படும் என்க. மற்றுச் சொல்லென்றதற்குப் பொருண்மை என்னையெனின், ஓசையென்றவாறு. ஆனால் கடலொலியும், காரொலியும், விண்ணொலி யும் சொல்லாம் பிறவெனின், அற்றன்று. ஓசை யெனினும், அரவமெனி னும், இசையெனினும், ஒலியெனினும், எழுத்தானாம் ஓசைக்கும் எழுத்தல் ஓசைக்கும் பொது. கிளவி யெனினும், மாற்ற மெனினும், மொழியெனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருளறி வுறுக்கும் ஓசைமேல் நிற்கும். எனவே, எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் ஓசையும் உளவோ எனின், உள; அவை முற்கும் வீளையும் இலதையும் அனு கரணமும் என்றித்தொடக்கத்தன. அவை சொல்லெனப்படா. பொருளறி வுறுக்கும் எழுத்தொடு புணரா வோசை மேலதன்று ஆராய்ச்சி. எனவே எழுத்தல் ஓசையும், எழுத்தொடு புணராது பொருள் அறிவிக்கும் ஓசை யும்,எழுத்தொடு புணர்ந்து பொருளை அறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்தே பொருளை அறிவுறுத்தாது இறிஞி, மிறிஞி யென்றாற்போல வரும் ஓசையும் என ஓசை நான்கு வகைப்படும். அந்நான்கனுள் பின்னின்ற விரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப்படு கின்றன. மேலதிகாரத்தோடு இவ்வதிகாரத்திடை இயைபு என்னையோ வெனின், மேற்பாயிரத்துள் எழுத்துஞ் சொல்லும் பொருளும் என நிறுத்தார். நிறுத்த முறையானே எழுத்துணர்த்திச் சொல்லுணர்த்திய வெடுத்துக்கொண்டார் என்பது. எழுத்தொடு சொல்லிடை வேற்றுமை என்னையெனின், தன்னை யுணர்த்திநின்றவழி எழுத்தெனப்படும்; தான் இடை நின்று பொரு ளுணர்த்தியவழிச் சொல்லெனப்படும். இம் முதலோத்து என்னுதலி யெடுத்துக் கொள்ளப்பட்டதோ வெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும். இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின், கிளவியாக்க மென்னும் பெயர்த்து. கிளவி என்பது சொல்; ஆக்கம் என்பது சொற்கள் பொருள்கண் மேலாமாறு. சொற்கள் பொருள்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கமென்னும் பெயர்த்து. ஒருவன் மேலாமாறு இது, ஒருத்தி மேலாமாறு இது, பலர் ஆமாறு இது, ஒன்றன் மேல் ஆமாறு இது, பலவற்றின் மேலாமாறு இது, வழு அமையுமாறு இது எனப் பொருள்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்க மென்னும் பெயர்த் தாயிற்று. மற்று, ஏனையோத்துக்களுள்ளும் பொருள்கண் மேலாமாறே யன்றோ உணர்த்தினது? மாறுணர்த்தியதில்லை யெனின், ஏனையோத்துக் களுட் பொருள்கண் மேலாய் நின்றவற்றிலக்கண முணர்த்தினார்; ஈண்டு அவைதம்மை யாமாறுணர்த்தினார் என்பது. மற்றுப் பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும், இடைச் சொல்லும், உரிச்சொல்லுமெனச் சொல்லும் நான்கேயாதலான் ஓத்தும் நான்கேயாகற் பாலவெனின், ஆகா. என்னை? நான்கு வகைப்பட்ட சொல்லிற்கும் பொதுவிலக்கணம் இவ் வோத்தினுள் உணர்த்தினார். அவற்றுள் முதற்கண்ணது பெயர்ச்சொல்லாதற்கு இலக்கணம் வேற்றுமை யோத்துள்ளும், வேற்றுமை மயங்கிய லுள்ளும், விளிமரபினுள்ளு முணர்த்தினார். உணர்த்திய இலக்கணமுடைய பெயரைப் பெயரியலுள் உணர்த்தினார். உணர்த்தி, அதன் பின்னே கிடந்த வினையை வினையி யலுள் உணர்த்தினார். உணர்த்தி, அதன் பின்னே கிடந்த இடைச்சொல்லை இடைச்சொல் லோத்தினுள் உணர்த்தினார். உணர்த்தி, அதன் பின்னே கிடந்த உரிச்சொல்லை உரிச்சொல்லோத்தினுள் உணர்த்தினார். பின்னை எல்லா வோத்தினுள்ளும் எஞ்சி நின்ற சொற்களை எச்சவியலுள் உணர்த்தி னார். இவ்வகையான் எல்லாம் உணர்த்தினா ராகலின் இவ்வோத்தெல்லாம் வேண்டியதூஉம், இம்முறையே கிடந்ததூஉமாயின. இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், சொல்லும் பொருளும் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இனி, (இ-ள்.) உயர்திணை யென்மனார் மக்கட்சுட்டே என்பது உயர் திணையென்று சொல்லுப ஆசிரியர், மக்களாகிய நன்கு மதிக்கப்படும் பொருளை என்றவாறு. அஃறிணை யென்மனார் அவரல பிறவே என்பது அஃறிணையென்று சொல்லுப ஆசிரியர், அவரினீங்கிய அல்லவாகிய பிறபொருளை என்றவாறு. ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே என்பது அவ்விரண்டு பொருளையும் உணர்த்துஞ் சொற்கள் என்றவாறு. எனவே உயர்திணைச் சொல்லும் உயர்திணைப் பொருளும், அஃறிணைச் சொல்லும் அஃறிணைப் பொருளும் எனச் சொல்லும் பொருளு மடங்கின. உயர் என்னும் சொல்லின் முன்னர்த் திணை என்னுஞ் சொல்வந்து இயைந்தவாறு யாதோவெனின், ஒருசொல்முன் ஒருசொல் வருங்கால் தொகைநிலை வகையான் வருதலும், எண்ணுநிலை வகையான் வருதலும், பயனிலை வகையான் வருதலுமென இம் மூன்று வகையல்ல தில்லை. இதற்கு விதி உரையிற் கோடல் என்னுந் தந்திரவுத்தி. அவற்றுள் தொகைநிலை வகையான் வந்தது யானைக்கோ டென்பது. எண்ணுநிலை வகையான் வந்தது நிலனுநீருமென்பது. பயனிலை வகையான் வந்தது சாத்தனுண்டான் என்பது. மற்று, எச்சவகை அடுக்குவகை பொருள்கோள் வகை ஆக்கவகை இடைச் சொல்வகை உரிச்சொல் வகையென்றாற் போலப் பிறவும் வகையுளவெனின், நால்வகைச் சொல்லினும் சிறப்புடைய பெயரினை யும், வினையிற் சிறப்புடைய முற்றுச் சொல்லினையும் பற்றி, வழக்கிடத் துப் பெரும்பான்மையும் வருவன அவையே யாகலின் அம்மூன்றல்லது இல்லையென்றார் போலும். அவையாவன:- எச்சவகை: உண்டுவந்தான், உண்டசாத்தன் என்றாற்போல்வன. அடுக்கு வகை; பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ என்றாற்போல்வன. பொருள்கோள் வகை: சுரையாழ அம்மிமிதப்ப என்றாற்போல்வன. ஆக்கவகை: சாத்தன் தலைவனாயி னான் என்றாற்போல்வன. இடைச்சொல் வகை: 'யானோ தஞ்சம் பெரும' (புறம். 34) என்றாற்போல்வன. உரிச்சொல்வகை: 'செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப' (பொருந. 134) என்றாற் போல்வன. அவற்றுள் இது தொகைநிலை வகையான் வந்தது. தொகைநிலை வகையாறனுள்ளும் வினைத்தொகை; வினைத்தொகை மூன்றனுள்ளும் இறந்தகால வினைத்தொகை. என்மனார் என்றது என்பவென்னும் முற்றுச்சொல்லினைக் 'குறைக்கும் வழி குறைத்தல்' என்பதனால் பகரங் குறைத்து, 'விரிக்கும் வழி விரித்தல்' என்பதனான் மன்னும் ஆரும் என்பன இரண்டு இடைச் சொற்பெய்து விரித்து என்மனாரென்றாயிற்று. இம் முற்றுச்சொற்குப் பெயராகிய ஆசிரியரென்பது செய்யுள் விகாரத்தாற் றொக்கது; இஃதெச்சவகை. என்றாரெனற்பாலதனைக் காலமயக்கத்தான் என்மனார் என்றாரென உணர்க. இனி, உயர்திணை யென்பதற்குமுன் என்ப என்னும் சொல் முதனூலாசிரியனது கூற்றினைப் பின், தான் கூறுகிற மக்கட்சுட்டென்பத னோடு இயைவித்தற்குக் கொண்டுகூறு நிலைமைக்கண் வந்ததாகலின், உயர்திணை யென்னுஞ் சொல்லும், என்ப என்னுஞ் சொல்லும், பின் வருகிற "மக்கட் சுட்டு" என்னுஞ் சொல்லினொடு வேற்றுமைத் தொகையுள் இறுதியுருபு தொகைநிலை வகையான் வந்ததென்ப. பொருளியைபு கூறுவதல்லது தம்முட் சொல்லியைபு இலவென வுணர்க. மக்கட் சுட்டென்பது மக்களாகிய சுட்டு. சுட்டு என்பதன் பொருள் நன்கு மதிப்பு. அஃதாகுபெயரான் மக்கண்மேனின்றது. மக்களென்னாது சுட்டென்றது தான் உயர்திணையென இடுகின்ற குறியீட்டிற்குக் காரணம் இதுவென்பது விளக்கல் வேண்டிப் போலும். இனி, ஆசிரியரென்பதனொடு மக்கட்சுட்டு என்பதூஉம் பொருளியைபல்லது சொல்லியைபு இன்றென வுணர்க. ஏ என்பது ஈற்றசை. அஃறிணை என்பது அல்லாததாகிய திணையெனக் குணப்பண்பு பற்றி வந்த பண்புத்தொகை. உயர்திணை யல்லாததாகியதென மேனின்ற உயர்திணை என்னுஞ் சொல் வருவித்துக் கொள்க. உயர்திணை யென்பதற்கு ஏற்ப, இழிதிணை யென்று இல் என்னும் பொருணோக்கம் என உணர்க. முன்னின்ற சுட்டென்பதன் முன் அஃறிணை யெனவந்த சொல்லும் சூத்திரத்துட் பொருட்படை யென்னும் வினை முடிவி னிறுதிக்கண் வந்ததாகலின் பொருளியைபல்லது சொல்லியைபின்றென உணர்க. ஈண்டும் என்மனாரென்பது மேற்சொல்லியவாறே நின்ற தென வுணர்க. அவரல வென்பது நீக்கப்பொருண்மைக்கண் தொக்க ஐந்தாம் வேற்றுமைத் தொகை. அலபிற என்பது அல்லவாகிய பிற என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையென வுணர்க. பிறவற்றை என்னும் இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கு நின்றது. அவரல என்னாது பிறஎன்றது, அஃறிணை உயிருடையனவும் உயிரில்லனவும் என இருகூறாய், அவ்விரு கூறும் தத்தம் வகையானும் வேறுபட்டு நின்றமை விளக்கிய வென்பது. ஏ என்பது ஈற்றசை. அ என்னும் சுட்டு "நீட வருதல் செய்யுளுள் உரித்தே" (எழுத். 208) யென்பதனான் நீண்டு, பிறவும் வேண்டும் செய்கைப்பட்டு, ஆயிரு திணையென நின்றது. இருதிணை என்பதனோடு அவ்வென்பது பெயர்பற்றி வந்த தத்தங் குறிப்பிற் பொருள் செய்யும் இடைச் சொல்லென்பது அல்லது மூவகையுட் சொல்லியைபு கூறப்படாது. இருதிணை என்பது இரண்டாகிய திணை யென இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பிற என்பதனோடு ஆயிருதிணை யென்பதூஉம் பொருட் படை யாகிய வினைமுடிவின்கண் வந்ததாகலிற் சொல்லியைபு இன்றென்பது. திணையென்பதனோடு இசைக்கும் என்பது தொகைநிலையான் வந்தது. தொகையுள் இரண்டாம் வேற்றுமைத் தொகைப் பொருள்நிற்ப வுருபு தொகுதலின் உருபுதொகை யெனப்படும். இனி 'பெயரும் தொழிலும்' (எழுத். 132) என்றெழுந்த பொது விதியை இரண்டாவதற்கு விலக்கிச் 'சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையலும்' (எழுத். 151) என்று சிறப்புவிதி யோதுதலின் செய்யுள் விகாரத்தாற் சாரியை நிற்ப, உருபு தொக்கது போலும். ஆயிருதிணையை யும் என்னும் முற்றும்மையும் செய்யுள் விகாரத்தாற் றொக்கது. இசைக்கும் என்பது செய்யுமென்னு முற்றுச்சொல், அது பின்நின்ற சொல்லென்பதனொடு பயனிலை வகையான் வந்தது. "இசைப்பு இசையாகும்" (சொல். 310) என்பதனான் இசைக்கும் என்பதன் பொருள் ஒலிக்குமென்பதேயாயினும், சொல்லிற்குப் பொரு ளுணர்த்தும்வழியல்லது ஒலித்தல் கூடாமையின், உணர்த்து மென்னும் தொழிலை இசைக்குமென்னும் தொழிலாற் கூறியவாறாகக் கொள்க. இதுவுமொரு மரபுவழுவமைதி போலும். பொருளை உணர்த்துவான் ஒரு சாத்தனே எனினும் அவற்கது கருவியாக அல்லது உணர்த்தலாகாமையின் அக் கருவிமேல் தொழி லேற்றிச் சொல் உணர்த்தும் என்று கருவிக்கருத்தாவாகச் சொல்லிற்றாக உணர்க. 'மன' என்பதூஉம் வினை பற்றிய அசைநிலை இடைச்சொல் லாகலின் அதனோடியைபு கூறப்பட்டது. மன் என்று பாடமோதுவாரும் உளர். இச் சூத்திரத்தாற் சொல்லிய பொருள்: இவ்வதிகாரத்துச் சொல்லுகிற சொல்லது தொகைவரையறையும், அதனை வரையறுக்குங் கால், பொருளானல்லது வரையறையின்மையின் அப்பொருளது தொகை வரையறையும், பொருட்கு நூலகத்து ஆட்சி பெற்ற குறியீடும் உணர்த்தின வாறாயிற்று. (1) உயர்திணை முப்பால் 2. ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே. என் - எனின் மேல் திணை கூறுசெய்தார்; இனி அத்திணைக்கண் பால் கூறு செய்தல் நுதலிற்று. (இ-ள்.) ஆண்மகனை யறியுஞ் சொல்லும், மகளை யறியுஞ் சொல்லும், பலரை யறியுஞ் சொல்லொடு கூடி, அம் மூன்று பாலினை உணர்த்துஞ் சொல்லும் உயர்திணையன எ-று. அறிசொல் என்புழிச் சொல்லிற்கு அறிதல் கூடாமையின், சாத்தன் அறியுஞ்சொல் என ஒரு பெயர் வருவித்துக் கொள்க. ஏ: ஈற்றசை. அவ்வே என வகரஞ் செய்யுள் விகாரத்தான் வந்தது. 'சிவணி' என்பது பல்லோர் அறியுஞ் சொல்லொடு கூட என ஒரு தொகைப்பொருண்மை தோன்ற நின்றதொரு சொல்லென்று சொல்லுக. இவ்வாறன்றிச் சிவணி யென்பதைச் செய்தென்னும் வினையெச்சமாக்கி "உயர்திணைய" என்னும் ஆறாம் வேற்றுமை வினைக்குறிப்பு நீர்மையு முடைமையின் அதனொடு முடிந்ததெனக் கூறுவாரும் உளர். இதனாற் சொல்லியது, மேற்கூறிய உயர்திணை யென்பது, விரி வகையான் ஆண்பால் பெண்பால் பன்மைப்பாலென மூன்று கூறுபடும் என்பதூஉம், அப்பொருள் முக்கூறுபடுமெனவே தந்திரவுத்தி வகையான் மேற்கூறிய உயர்திணைச் சொல் என்பது விரிவரையறையான் ஆண்பாற் சொல், பெண்பாற் சொல், பன்மைப்பாற் சொல்லென மூன்று கூறுபடும் என்பதூஉம் கூறியவாறாயிற்று. (2) அஃறிணை இருபால் 3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று ஆயிரு பாற்சொல் லஃறிணை யவ்வே. என் - எனின் மேல் அஃறிணையென்றார்; அதனை இனைத்துப் பால்படுமென்று, அது படும் பால்விரித்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒன்றனை யறியுஞ் சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல்லுமென்று சொல்லப்பட்ட அவ்விரண்டு பாலினையு முணர்த்துஞ் சொல் அஃறிணையன எ-று. இதனாற் சொல்லியது, மேற்கூறிநின்ற அஃறிணைப் பொருளினை யும், அஃறிணைச் சொல்லினையும் விரிவகையான் ஒருமை பன்மை யெனவும், ஒருமைச்சொல் பன்மைச்சொல் எனவும் இரண்டு கூறுபடும் என்பதூஉம் கூறியவாறாயிற்று. (3) பேடியும் தெய்வமும் உயர்திணைக்கண் அடங்குதல் 4. பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென வறியும் அந்தந்தமக் கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். என் - எனின் ஐயமறுத்தலை நுதலிற்று; என்னை? மேற்றொகையுள், ஒழிந்த தேவரும், நரகரும், மன்பதையு ளொழிந்த பேடியும் எவ்வாறாங் கொல் என்று ஐயுற்றாற்கு அவையும் இவ்வாறாம் என்கின்றமையின். (இ-ள்.) உயர்திணையிடத்துப் பெண்மைத் தன்மையை யெய்த வேண்டி, ஆண்மைத் தன்மையி னீங்கிய பேடியென்னும் பொருளும், தெய்வத் தன்மையைக் கருதின தெய்வமென்னும் பொருளும் இவை யிரண்டும், இவையெனத் தம்மை வேறு பால் அறிவிக்கும் ஈற்றெழுத் தினையுடைய சொற்களையுடைய வல்ல; மேற்கூறிய மக்களென்னும் உயர்திணையிடத்து முப்பாலினையும் உணர்த்துஞ் சொற்கள் அவ்விடத்தி னின்று நீங்கி வந்து தம்மை யுணர்த்தும் எ-று. (எ-டு.) பேடி வந்தாள், பேடியர் வந்தார், வாசுதேவன் வந்தான், திருவினாள் வந்தாள், முப்பத்து மூவரும் வந்தார், சந்திராதித்தர் வந்தார் எனினும் அமையும். அந்தந் தமக்கிலவே என்றதனான், மக்களும் தேவருமல்லாத நிரயப் பாலரும் மக்களை யுணர்த்தும் முப்பாற் சொல்லானுஞ் சொல்லப்படுவ ரென்பது கொள்க. (எ-டு.) நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் என வரும். முன்னின்ற சுட்டிய வென்பது செய்யிய என்னும் வினையெச்சம், அதற்கு வினை 'திரிந்த' என்னும் பெயரெச்சம், பின்னின்ற சுட்டிய வென்பது செய்த என்னும் பெயரெச்சம். உயர்திணை மருங்கின் பெண்மை சுட்டிய ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும் என மொழிமாற்றாகக் கொள்க. உயர்திணை மருங்கின் என்னும் ஏழாவதற்குப் பெயர்நிலைக் கிளவி என்பதனை முடிவாக்கி, இடைநின்ற சொல்லைப் பெயர்நிலைக் கிளவிக்கு அடையாக்கிப் பொருளுரைத்துக் கொள்க. இரண்டிடத்துப் பெயர்நிலைக்கிளவியுஞ் சொல்லினாற் பொரு ளறியப்படுதலின் பேடியுந் தெய்வமு மென்னும் பொருட்கு ஆகு பெயராய் நின்றவென வுணர்க. தெய்வமென்றது தெய்வத் தன்மையை. இதனாற் சொல்லியது, முன் சொல்லிநின்ற பொருள் வரையறையுள் அடங்காது நின்ற பொருளினையும் ஒருவாற்றான் அடங்கக் கூறியவா றாயிற்று. எனவே உயர்திணைப்பொருள், பொருள்முகத்தான் மக்களுந் தேவரும் நரகருமென மூன்று கூறுபடும். சொல் முகத்தான் மக்களென்ற தன் மேற்பட்டு ஒன்றேயாம். உயர்திணைப் பாலாயிற் பொருள் முகத்தான் ஆண்பால், பெண்பால், ஆணலி, பெண்ணலி, பேடிப்பால், ஆண்பாற் பன்மை, பெண்பாற் பன்மை, ஆணலிப் பன்மை, பெண்ணலிப் பன்மை, பேடிப் பன்மை, ஆண்பாலொடு பெண்பால் கூடிய பன்மை, பெண்பாலோடு ஆண்பால் கூடிய பன்மை, ஆண்பாற் சிலர், பெண்பாற் சிலர் என விகற்பித்து நோக்கப் பலவகைப்படும். இப்பலவகையுஞ் சொல்வகை மூன்றல்ல தின்மையின் மூன்றேயாயின. இவ்வாற்றானே தேவர், நரகர் என்பனவற்றது பாகுபாடும் அறிந்து கொள்க. இனி, அஃறிணை உயிருடையதூஉம், உயிரில்லதூஉமென இரண்டாய், அவற்றுள் உயிருடையது ஆணும் பெண்ணும், ஆண் சிலவும் பெண் சிலவும், ஆண் பன்மையும், பெண் பன்மையும், அவ்விரண்டுந் தொக்க சிலவும், அவ்விரண்டுந் தொக்க பலவும், உயிரல்லவற்றது ஒருமையும் சிலவும் பலவும் என இவ்வாற்றாற் பல பகுதிப்படுமேனுஞ் சொல்வகை நோக்க இரண்டல்லது இன்மையின் இரண்டேயாயின என்பது. இனி மக்கண் முதலியவற்றின் வேறுபாடும் அறிந்து கொள்க.(4) ஆண்பால் ஈறு 5. னஃகான் ஒற்றே ஆடூஉ வறிசொல். என் - எனின் நிறுத்தமுறையானே மேற்கூறிய உயர்திணைச் சொல்லுள் ஆடூஉ அறிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆடூஉ வறியுஞ் சொல்லாவது னகாரமாகிய ஒற்றினை யீறாகவுடைய சொல் எ-று. (எ-டு.) உண்டான், உண்ணாநின்றான், உண்பான்; இவை தெரிநிலை வினை. கரியன், செய்யன்: இவை குறிப்புவினை. சூத்திரம் 'னஃகா னொற்றே யாடூஉ வறிசொல்' எனப் பொதுப்பட நின்றமையின் புதன், குபேரன், உண்டேன், உண்மின் என்பனவும் ஆண்பா லுணர்த்துதற்குச் சென்றனவேனும், பொதுமை விலக்கி மேற்சொல்லுகின்ற விதிகளாற் படர்க்கையிடத்து முற்றுச்சொற்கீறா யல்லது வாராதெனக் கொள்க. இது மேற்கூறுவனவற்றிற்கும் ஒக்கும். உண்டான் என்புழி நான்கெழுத்துக்கூடி ஆண்பாலுணர்த்தின ஆயினும், பிறவெழுத்துக்கள் பிறபாலுணர்த்தும்வழியும் வருதலான் னகர ஒற்றையே தலைமைபற்றி ஆடூஉ அறிசொல் என்றார். (5) பெண்பால் ஈறு 6. ளஃகான் ஒற்றே மகடூஉ வறிசொல். என் - எனின் மகடூஉ வறிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மகடூஉவினை யறியும் சொல்லாவது ளகாரமாகிய ஒற்றினை யீறாகவுடைய சொல் எ-று. (எ-டு.) உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள்; இவை தெரிநிலை வினை. கரியள், செய்யள்: இவை குறிப்புவினை. வேறுபாடு அறிந்துகொள்க. இனி முற்சூத்திரத்துரையில் விரித்தாங்கு 'னஃகா னொற்றே ஆடூஉ வறிசொல் எனச் சூத்திரம் பொதுப்பட நின்றமையின்' என்று தொடங்கி உரைத்தவைகளெல்லாம் ஈண்டும் விரித்துரைத்துக் கொள்க. (6) பலர்பால் ஈறு 7. ரஃகான் ஒற்றும் பகர இறுதியும் மாரைக் கிளவி உளப்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. என் - எனின் பலரை யறியுஞ் சொல்லாமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ரஃகானாகிய ஒற்றும், பகரமாகிய விறுதியும், மாரென் னும் சொல்லுமுட்பட இம்மூன்றும் நிரம்பத் தோன்றும் பலரையறியும் சொற்கு எ-று. பலரையறியுஞ் சொல்லாவன: ரகரம், பகரம், மார் என்பனவற்றை ஈறாகவுடைய சொற்கள் எ-று. (எ-டு.) உண்டார், உண்ணாநின்றார், உண்பார், கரியர், செய்யர், உண்ப, தின்ப, ஆர்த்தார் கொண்மார், வந்தார், பூக்குழாய் என்னையர் கணில்லாக *தீது எனவரும். ரகரஒற்று மூன்றுகாலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதலான் முன் வைக்கப்பட்டது. பகரம் எதிர்காலமாகிய ஒருகாலம் பற்றி வருதலான் உயிர்மெய்யெழுத்தேனும் அதன்பின் வைக்கப்பட்டது. மார் என்பதூஉம் எதிர்காலம் பற்றி வரினும் ஒற்றாய் வருதலானும் பெரு வழக்கின்றாதலானும் பகரத்தின் பின் வைக்கப்பட்டது. நேரத்தோன்றும் என்றதனான், உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம், கரியம், செய்யம் என மகர ஈறுங் காட்டுவாருண்மையின் "யானுமென் னெஃகமுஞ் சாறும்" என்புழி அம்மகரம் அஃறிணையும் உட்படுத்துத் திரிவுபட நிற்றலின் அம்மஃகான் திரிபுடையது; இவையே திரிபில்லன என்பன கொள்ளப்பட்டன. சொற்கு என்பது சொல்லெனச் செய்யுள் விகாரத்தான் தொக்கதென உணர்க. நான்காவது விரியாது நேரத்தோன்றும் பலரறிசொல் மாரைக் கிளவி யுளப்பட மூன்றுமென எழுவாயும் பயனிலையுமாக்கிக் கொள்ளின், நேரத்தோன்றும் பலரறிசொல் இவையென நேரத் தோன்றாதனவும் பலரறிசொல்லுளவென்ற கருத்து அருத்தாபத்திப்பட்டு அவையுந் தமக் குடன்பாடாய் மேற்கூறுவன போல நிற்பதொரு சொன்னோக்கப்படுத லானும், தோன்றும் என நின்ற செய்யும் என்ற சொல் முற்றோசைப் பட்டு, பயனிலை வகையாதற் கியையாது நிற்றலானும் அவ்வாறு கூறலாகாதென வுணர்க. மேல் 'ஈற்றினின்றிசைக்கும் பதினோரெழுத்தும்' என்று பொதுவாக ஈறென்று கூறுகின்றாராகலின் ஈண்டுப் பகரவிறுதி என்றுங் கூறியது என்னையெனின், ஆண்டுக் கூறுகின்றது மொழியது ஈறென்ப தன்றே? ஈண்டகரம் உயர்திணைப் பன்மையை யுணர்த்துங்கால் தானே நின் றுணர்த்தாது பகரவொற்றின் மேலேறி அதன் பின்னின் றுணர்த்து மென்றற்குக் கூறியதென வுணர்க. இக்கருத்து மேற்கூறுவனவற்றிற்கும் பொருந்தும். பகரவிறுதி யென்பன இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அகரம் பகரவொற்றொடு புணர்ந்து நிற்றலாற் பகரமெனவும் பட்டது. அவ்வாறு நிற்புழி அதனிறுதி நிற்றலின் இறுதியெனவும் பட்டது. (7) *'இல்லாத தீது' என்பதும் பாடம். ஒன்றன்பால் ஈறு 8. ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். என் - எனின் உயர்திணைச் சொல்லாமாறுணர்த்தி, இனி அஃறிணைச் சொல்லாமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒன்றனை யறியுஞ் சொல்லாவன த ற டக்க ளென்கிற வொற்றுக்களை யூர்ந்துவருகிற குற்றியலுகரமாகிய வெழுத்தினை யீறாகவுடைய சொற்கள் எ-று. (எ-டு.) உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கரியது, செய்யது எனவரும். இவை தகரமூர்ந்து வந்த குற்றியலுகர ஈற்றவாம். கூயிற்று, தாயிற்று, கோடின்று, குளம்பின்று என வரும். இவை றகரமூர்ந்து வந்த குற்றியலுகர ஈற்றவாம். குண்டுகட்டு, கொடுந்தாட்டு என வரும்இவை டகரமூர்ந்து வந்த குற்றியலுகர ஈற்றவாம். மற்று ட த ற என்று எழுத்துக் கிடக்கை முறையாற் கூறாதது என்னை எனின், தகரம் மூன்று காலமும், வினைக்குறிப்புங் கோடலான் முன் வைக்கப்பட்டது. றகரம் இறந்த காலமொன்றும், வினைக்குறிப்புங் கோடலான் அதன்பின் வைக்கப்பட்டது. டகரம் வினைக்குறிப்பல்லது கோடலின்மையின் அதன்பின் வைக்கப்பட்டது. உகரத் திறுதி - உகரமாகிய விறுதியெனப் பண்புத் தொகை. அத்து: அல்வழிச் சந்தி. உகரவீற்றுச் சொல்லிற்கு உகர விறுதி யென்பது இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. குற்றியலுகரம் என்பது மெலிந்து நின்றது. (8) பலவின்பால் ஈறு 9. அ ஆ வஎன வரூஉம் இறுதி அப்பான் மூன்றே பலவறி சொல்லே. என் - எனின். அஃறிணைக்கண் பலவறிசொல்லாமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அ, ஆ, வ என்று சொல்லவருகிற இறுதிகளையுடைய அக்கூற்று மூன்று சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல் எ-று. (எ-டு.) உண்டன, உண்ணா நின்றன, உண்பன, குறிய, கரிய, செய்ய என இவை அகரவீற்றன. உண்ணா, தின்னா என இவை ஆகாரவீற்றன. உண்குவ தின்குவ என இவை வகரவீற்றன. அகரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும் கோடலின் முன் வைக்கப்பட்டது. ஆகாரம் எதிர்காலமாகிய ஒரு காலமே கோடலானும், எதிர்மறை வினைக்கணல்லது வாராமையானும் அதன்பின் வைக்கப் பட்டது. வகரமும் அகரமென அடங்குமே யெனினும் அவ் அகரம் போல மூன்று காலத்தும் வினைக்குறிப்பின்கண்ணும் வாராது, உண்டல், தின்றல் இவை முதலிய தொழில்தொறும் உண்குவ, தின்குவ என எதிர்காலம் பற்றியே வேறொரு வாய்பாட்டான் வருதலான் அவ்வகரத்தோடு அடங்கா நிலைமையது. சிறப்புடைய அகரத்தை முன் கூறி இதனை அதன்பின் வைத்தார் என்பது. இக்கடா பகர ஈற்றிற்கு மொக்கும். பலவறிசொல் என்னும் எழுவாய்க்கு இறுதி என்பது பயனிலை யாக்கின் அப்பால் மூன்று என்பது நின்று வற்றுமாகலின், மூன்று என்பதையே பயனிலையாக்கி இறுதி என்பதனை இறுதியை யுடைய மூன்று எனப் பயனிலைக்கு அடையாக்கி உரைக்க. இப்பதினோ ரீறுகளும் வினைக்கண் பால் விளக்குதல் 10. இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய ஈற்றினின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும் தோற்றந் தாமே வினையொடு வருமே. என் - எனின் மேல், பாலுணர்த்தும் என்னப்பட்ட எழுத்து இனைய என்பதூஉம், அவை வினைக்கண்ணின் றுணர்த்தும் என்பதூஉம், வினைக்கண்ணும் ஈற்றினின் றுணர்த்தும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டு திணையிடத்தும் உளவாகிய ஐந்து பாலினையும் அறியும்படி மொழியது ஈற்றுக்கண்ணே நின்றுணர்த்தும், மேற்சொல்லப் பட்ட பதினொரு வகை யெழுத்தும். அவைதாம் பாலுணர்த்துதற்குப் புலப்படுமிடத்து வினைச்சொல்லொடு வந்து புலப்படும் எ-று. பதினோரெழுத்துமாவன னஃகானொற்றும், ளஃகானொற்றும், ரஃகானொற்றும், பகரமும், மாரும், துவ்வும், றுவ்வும், டுவ்வும், அவ்வும், ஆவும், வவ்வும் என இவை. இசைக்கும் என்பது, செய்யும் என்னும் முற்றுச் சொல் பெயரெச்சமாக, உணர்த்தும் என்னும் பொருள் படும். மேற்கூறிய திணையினையும், பாலினையும் ஈண்டு வரையறுத்து "இருதிணை மருங்கின் ஐம்பால்" எனக் கூறிய காரணம் என்னையெனின், உயர்திணைப் பொருள் தேவரும், நரகரும் எனவும் உயர்திணைப் பாலுள் பேடியும் அலியுமெனவும் விரிந்து நின்ற பொருள்களுமுண்மையின், இப்பொருட் பகுதியெல்லாஞ் சொற்பகுதி பிற இன்மையின் ஐந்தாய் அடங்கினவே யெனினும், அப்பொருட் பாகுபாடுபற்றி நூலகத்து வேறு திணையும் பாலுமாக விளங்கவுங் கூடும்கொல்லோ என்று மாணாக்கன் ஐயுறுவானாயினும் என்று 'இவையல்ல தில்லை' என ‘விரித்துத் தொகுத்தல்’ என்னும் இலக்கணத்தான் வரையறுத்து 'இருதிணை யைம்பால்' என்றாராகக் கொள்க. முதற் சூத்திரத்துட் கூறப்பட்ட சொல்லிலக்கணம் எட்ட னுள்ளும் திணைபால் என்பனவற்றது இலக்கணமே இத்துணையுங் கூறியது எனவுணர்க. முன்னின்ற நான்கு சூத்திரமுந் திணையும் பாலும் சொல்லும் பொருளும் வரையறை யிலக்கணமும் கூறின எனவும், பின்னின்ற ஆறும் அத்திணையும் பாலும் உணர்த்துஞ் சொற்களின் இலக்கணங் கூறின எனவும் உணர்க. (10) பாலறி சொற்கள் தம்முள் மயங்கலாகாமை 11. வினையின் தோன்றும் பாலறி கிளவியும் பெயரின் தோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே. என் - எனின் வழுக்காத்தலை நுதலிற்று. வழுக்காக்குமிடத்து வழுவற்க என்று காத்தலும், வழுவமைக என்று காத்தலும் என இரண்டாம். அவற்றுள் இது வழுவற்க என்று காத்தல். (இ-ள்.) வினைச்சொல்லா னடங்கும் பாலறியப்படும் பொருளும், பெயர்ச்சொல்லா னடங்கும் பாலறியப்படும் பொருளும் என இவ்விருவகைப் பொருளும் ஒன்றோடொன்றை மயங்கச் சொல்லுதல் பொருந்தா; தத்தம் இலக்கணத்தானே சொல்லுத லுடைய எ-று. (எ-டு.) உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது அது, உண்டன அவை என வரும்; இவை வினை. அவன் உண்டான், அவள் உண்டாள், அவர் உண்டார், அது உண்டது, அவை உண்டன என வரும். இவை பெயர். 'பாலறி கிளவி' யென்றதனை ஈண்டும் பொருள்மேற் கொள்க. அவ்வாறு பொருள்மேற் கொள்ளவே பொருள் பற்றி நிகழும் வழுவெல்லாம் படாமற் கூறுக என்பதாம். அவ்வழுக்களின் பெயரும், முறையும், தொகையும் ஓரிடத்துங் கூறிற்றிலரே யாயினும் உரையிற் கோடல் என்பதனான் இச் சூத்திரத்து உரையுட் கொள்ளப் படும். அவையாவன: திணைவழூஉ, பால்வழூஉ, இடவழூஉ, காலவழூஉ, மரபுவழூஉ, செப்புவழூஉ, வினாவழூஉ என இவையாம். இவையெல்லாம் மரபுவழு என ஒன்றேயாகற்பால எனின் அவ்வாறு ஒன்றாயடங்குமே யெனினும் அம்மரபினைப் பகுத்துத் திணைபற்றிய மரபினைத் திணையென்றும், பால் பற்றிய மரபினைப் பாலென்றும், இடம் பற்றிய மரபினை இடமென்றும், காலம் பற்றிய மரபினைக் காலமென்றும் செப்புப் பற்றிய மரபினைச் செப்பென்றும், வினா பற்றிய மரபினை வினாவென்றும் பகுத்து இவ்வாறு ஒன்றனையும் பற்றாது வருவதனை மரபென ஒன்றாக்கி இலக்கணமும் வழுவுங் கூறினாரென்பது. அவற்றுள் திணைவழூஉ: உயர்திணைப்பால் மூன்றும் அஃறிணைப் பால் இரண்டனொடு மயங்கி உயர்திணைவழூஉ மூவிரண்டாறாம்; இனி அஃறிணைப்பாலிரண்டும் உயர்திணைப் பால் மூன்றனோடு மயங்கி அஃறிணைத் திணைவழூஉ இருமூன்று ஆறாம். இவை பெயர்வினை யென்னும் இரண்டனோடு உறழ இருபத்து நான்காம். (எ-டு.) அவன் வந்தது, அவன் வந்தன என்றாற் போல்வன பெயர் பற்றிய உயர்திணைத் திணைவழூஉ. அது வந்தான், அது வந்தாள், அது வந்தார் என்றாற்போல்வன பெயர் பற்றிய அஃறிணைத் திணைவழூஉ. இனி, வந்தான் அது, வந்தான் அவை என்றாற்போல்வன வினை பற்றிய அஃறிணைத் திணைவழூஉ. இனிப் பெயரொடு பெயர் பற்றிய திணைவழூஉ. வினையொடு வினை பற்றிய திணைவழூஉ என விகற்பிக்கப் பலவுமாம். (எ-டு.) அவன் அது, அவன் அவை என்றாற் போல்வன பெயரொடு பெயர் பற்றிய திணைவழூஉ. உண்டான், தின்றான், ஓடினான் பாடினான் சாத்தன் என ஒருவன்மேற் பல வினை கூறுகின்றுழி உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் என்றாற்போல்வன வினையொடு வினை பற்றிய திணை வழூஉ. இனிப் பால்வழூஉ: உயர்திணைப்பால் மூன்றும் ஒன்று இரண்ட னொடு மயங்கி மூவிரண்டாறாம். அஃறிணைப் பாலிரண்டும் ஒன்ற னோடு ஒன்று மயங்கி ஓரிரண்டாயின. ஆகப் பால்வழூஉ எட்டு வகைப் படும். அவை வினை பெயர் என்னும் இரண்டனோடுறழப் பதினாறாம். (எ-டு.) அவன் உண்டாள், அவன் உண்டார் என்பன உயர்திணைப் பெயர் பற்றிய பால் வழூஉ. அது வந்தன, அவை வந்தது என்பன அஃறிணைப் பெயர் பற்றிய பால் வழூஉ. உண்டான் அவள், உண்டான் அவர் என்பன உயர்திணை வினை பற்றிய பால் வழூஉ. வந்தது அவை, வந்தன அது என்பன அஃறிணை வினை பற்றிய பால் வழூஉ. இனிப் பெயரொடு பெயரும் வினையொடு வினையும் பற்றிய வழுவாவனவும் உள. (எ-டு.) அவன் யாவள், அது யாவை என இவை பெயரொடு பெயர் பற்றிய பால்வழூஉ. உண்டான், தின்றாள், ஓடினான், பாடினாள், சாத்தன் எனவும், உண்டது, தின்றன, வந்தது, கிடந்தன ஓரெருது எனவும் இவை வினையொடு வினை பற்றிய பால்வழூஉ. இனி இடவழூஉ: தன்மை முன்னிலை படர்க்கையென்னும் மூன்றும் ஒன்று இரண்டனோடு மயங்கி மூவிரண்டாறாம். (எ-டு.) யான் உண்டாய், யான் உண்டான் என்பன. பெயர் வினைகளைப்பற்றி வரும் விகற்பம் இவற்றிற்கு மொக்குமென உணர்க. காலவழூஉ: இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் ஒன்று இரண்டனொடு மயங்கி மூவிரண்டாறாம். (எ-டு.) செத்தானைச் சாகின்றான் எனவும், சாவான் எனவுங் கூறினாற்போல வருவன. இவையிற்றிற்கும் பெயர் வினைகளைப் பற்றி வரும் விகற்பங் கொள்க. மரபுவழூஉ: ஒரு பொருட்குரிய மரபினை ஒரு பொருட்கு உரித்தாகச் சொல்லுதலாம். (எ-டு.) யானை மேய்ப்பானை இடையனென்றும், ஆடு மேய்ப்பானைப் பாகனென்றும், யானையுட் பெண்ணை ஆ என்றும், ஆவினுட் பெண்ணைப் பிடி என்றும் கூறினாற் போல்வன. செப்பு வழுவிற்கும் வினாவழுவிற்கும் உதாரணம் மேல் வருகின்ற 'செப்பும் வினாவும்', (13) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்ளப்படும். எழுவகை வழுவும் இச்சூத்திரத்துள் 'மயங்கல்கூடா' என்றதனாற் பெறுது மெனின், மேல் 'செப்பு வினாவும் வழாஅ லோம்பல்' (13) எனச் செப்புவழுவும், வினாவழுவும் கூறலமையா தெனின், இதனுள் அடங்கினவற்றையே உலகத்துச் சொல்லெல்லாம் உயர்திணைச்சொல் அஃறிணைச் சொல் என வரையறையுற்றாற் போல வினாவுரையும் செப்புரையுமென இரண்டாக வரையறைப் படுத்த ஒரு நிலைமை கண்டு அதனை உணர்த்துதற் பொருட்டு மீட்டும் விளங்கக் கூறினாரென்று சொல்லுப. எழுவகை வழுவிற்கும் இஃதொரு பொதுவிதி கூறிய தெனவும், சிறப்பு விதி வேறு வேறு கூறிற்றெனவும் உரைக்கப்படும். செப்புவினா ஒழிந்தவற்றிற்குச் சிறப்புவிதி யாதோவெனின் வினையியலுட் கடைக்கண் காலவழுவிற்கு விதிபெறுதும். மரபு வழுவிற்கு விதி பொருளதிகாரத்து மரபியலென்னும் ஓத்திடைக் கண்டு கொள்ளப்பெறுதும். ஒழிந்த திணைபாலிடங்கட்கு விதி 'னஃகா னொற்று' முதலிய சூத்திரங்களாற் கூறிற்றென வுணர்க. இவ்வாறு நூனயமாதல் இச்சூத்திரத் துரையினுட் கண்டு கொள்க. இவ்வதிகாரத்துக் கூறப்படும் விதி மாணாக்கன் ஒரு பொருளினைக் கூறுந்திறன் அறியாது இடர்ப்படுதல் நோக்கி இன்ன பொருளை இன்ன வாறு கூறுக என்று அதனிலக்கணம் கூறுதலும், அதனை அவ்வாறொழிய வுங் கூறுதலும் ஆம் என்று கருதினும் கருதற்க என்று அதனை வழுவற்க என்று காத்தலும், அவ்வாறு வழுப்படக் கூறிய வழக்கினுட் சிலவற்றை அதனகத்து அவ்வாறு கூறுதற்கொரு பொருட் காரணங் கண்டு அமைதி கூறுதலுமென மூவகை. அவற்றுள் இச்சூத்திரம் வழுவற்க என்னும் விதி கூறிற்றென வுணர்க. (11) பேடி என்பது ஆண்பாலால் சொல்லப்படாமை 12. ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி ஆண்மை அறிசொற் காகிட னின்றே. என் - எனின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி யுணர்த்துதல் நுதலிற்று. மேல் 'பெண்மை சுட்டிய' (கிளவி. 4) என்றதனுள் பேடியை முப்பாலா னுஞ் சொல்லுக என்னும் விதியுள் ஒரு கூற்றை விலக்கிய தெனவுணர்க. (இ-ள்.) உயர்திணை யிடத்துப் பெண்மையைக் கருத வேண்டி ஆண்மைத் தன்மை நீங்கிய பேடி யென்னும் பெயராற் சொல்லப்படும் பொருண்மை ஆண்மகனை யறியுஞ் சொல்லாற் சொல்லுதற்கு ஆமிடன் இல்லை என்றவாறு. எனவே பெண்பாலானும் பன்மைப்பாலானுஞ் சொல்லுக எ-று. (எ-டு.) பேடி வந்தாள், பேடியர் வந்தார் என இவை. 'இடன்' என்ற மிகுதியான் பேடிவந்தான் என்பதும் சிறுபான்மை அமையுமென்பது. அவ்வாறமையுமென விலக்கிப் பெற்றது என்னை யெனின், பெரும்பான்மை சிறுபான்மை யுணர்த்துதல் எனவுணர்க. இதனைப் 'பெண்மை சுட்டிய' (சொல். 4) என்றதன்பின் வையாது, இத்துணையும் போதந்து மேற்கூறப்படுகின்ற வழுவமைதிகளொடு சொல்லி வைத்த முறையன்றிக் கூற்றினான் பெண்ணும் ஆணும் அல்லதனை அவ்வப்பாற் சொல்லாற் சொல்லுதலும் வழுவமைதி யென்பது பெறப்பட்டது. வழுவமைதிகள்தாம் இலக்கணம் உள்வழிக் கூறும் வழுவமைதி யும், இலக்கணம் இல்வழிக் கூறும் வழுவமைதியும் என இருவகைப் படும். அவற்றுள் இஃது இலக்கணமில்வழிக் கூறிய வழுவமைதி என உணர்க. இது பால்பற்றிப் பிறந்தொரு மரபு வழுவமைதி என உணர்க. (12) செப்பின் கண்ணும் வினாவின் கண்ணும் வழுவலாகாமை 13. செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல். என் - எனின் செப்புவழுவும், வினாவழுவும் காத்தல் நுதலிற்று. (இ-ள்.) செப்பினையும், வினாவினையும் வழுவாமல் ஓம்புக; என்றது பரிகரித்துக் கூறுக எ-று. (எ-டு.) சாத்தா சோறுண்ணாயோ என்றாற்கு உண்பேன் என்றலும் உண்ணேன் என்றலும் எனக் கொள்க. செப்பு வினா என்றவற்றுள், செப்பு மறுத்தலும், உடன்படுதலு மென இரண்டு வகைப்படும். நுந் நாடியாது என்றாற்குப் பாண்டிநாடு என்றாற்போல்வன இவ்விரண்டனுள் அடங்காதெனினும் ஒருவகையான் அடக்கிக் கொள்ளப்படும். இனி வினா ஐந்து வகைப்படும்: அறியான் வினாதல், அறி வொப்புக் காண்டல், ஐயமறுத்தல், அவனறிவு தான்கோடல், மெய் அவற்குக் காட்டல் என. 'அறியான் வினாதல் அறிவொப்புக் காண்டல், ஐயமறுத்தல் அவனறிவு தான்கோடல், மெய் அவற்குக் காட்டலோடு ஐவகை வினாவே' என்பதுங் கண்டுகொள்க. வழாஅல் ஓம்பலெனவே வழுவுதலும் உண்டென்பது பெறப் பட்டது. அவற்றுட் செப்புவழூஉ வினா வெதிர் வினாதலும், ஏவுதலும், உற்றது உரைத்தலும், உறுவது கூறலும், சொற்றொகுத்து இறுத்தலும், சொல்லாதிறுத்தலும், பிறிதொன்று கூறுதலும் என எழுவகைப்படும். உறுகின்றது கூறல் என்னும் ஒன்றுண்டேல் உற்றதுரைத்தலுள் அடங்கு மெனக் கொள்க. அவற்றுள் பிறிதொன்று கூறல் அமையா வழூஉ வெனப்படும். கருவூருக்கு வழி யாது எனப் பருநூல் பன்னிருதொடி என்றாற்போல்வன. மற்றைய ஆறும் அமையும் வழு எனப்படும். வினாவெதிர் வினாதல் 'வினாவுஞ் செப்பே' (கிளவி. 14) என்ற வழிக் கொள்ளப்படும். ஏவலும் உற்றதுரைத்தலும் உறுவது கூறலும் என்ற மூன்றுஞ் 'செப்பே, வழீஇயினும்' (கிளவி. 15) என்புழிக் கொள்ளப் படும். சொற்றொகுத்திறுத்தல் 'எப்பொரு ளாயினும்' (கிளவி. 35) என்புழியும், 'அப்பொருள் கூறின்' (கிளவி. 36) என்புழியும் கொள்ளப் படும். சொல்லா திறுத்தலாகிய 'பெருமா! உலறினீரால், என்றார்க்கு வாளாதே 'உலறினேன்' என்றாற் போல்வன, அதிகாரப் புறனடையாகிய 'செய்யுள் மருங்கினும்' (சொல். 463) என்புழிக் கொள்ளப்படும். வினாவழூஉ, தான் வினாவுகின்றதனைக் கேட்டான் இறுத்தற்கிடம் படாமல் வினாதல் என ஒன்றேயாம். (எ-டு.) ஒரு விரல்காட்டி இது நெடிதோ குறிதோ என்றாற் போல்வன. வினாவிற்கமையா வழுவல்லது அமையும் வழூஉ வென்ப தொன்றில்லை. இனி 'வழாஅல்' என்பது, வழுவியென்னுஞ் செய்தெ னெச்சத்து எதிர்மறையாகிய வழாமல் என்னுஞ்சொல் குறைக்கும் வழிக் குறைத்தல் என்பதனான் இடைநின்ற மகரம் குறைந்து நின்றதென வுணர்க. செப்பு ஆசிரியன்கண்ணதாகலானும், வினாவினை யறிவிப்பது அதுவாகலானும், வினாவின்றியும் அது நிகழுமாகலானும், வழூஉப் பன்மை அதன்கண்ணது ஆகலானும் முற் கூறப்பட்டது. வினாவுரையுஞ் செப்பு நிகழ்தலிற் செப்பென ஒன்றேயா யடங்காதோ எனின் அங்ஙனம் அடங்குமாயினும் ஒன்றனை யறியாது கூறல் வினாவென்றும், ஒன்றனையறிவித்தற்குக் கூறல் செப்பென்றும் இரண்டாகப் பகுத்து ஆராய்ந்தாரென வுணர்க. (13) வினா செப்பாகவும் வருமாறு 14. வினாவும் செப்பே வினாவெதிர் வரினே. என் - எனின் செப்பு வழுவமைதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) வினாவென்று சொல்லப்படுகின்றதும் ஒரோவழிச் செப்பென்று சொல்லப்படும்; ஒருவன் ஒன்றனை வினாவத் தானும் அதற்கு எதிர் ஒன்றனை வினாவி இறைப்பொருள் படுத்துமே யெனின், எ-று. (எ-டு.) சாத்தா சோறு உண்ணாயோ? என்றாற்கு, உண்ணேனோ? என்பது. இது வினா வழுவமைதியன்றோ எனின்? பிறிதொரு வினாவந்து வினாப்பொருள் பயவாது செப்புப்பொருள் பயப்பநிற்றலின், செப்பு வழுவமைதியென அடக்கினார். (14) செப்பு வழுவமைதி 15. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே அப்பொருள் புணர்ந்த கிளவி யான. என் - எனின் இதுவும் செப்பு வழுவமைதியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செப்பென்று சொல்லப்பட்டது வழுவி வரினும் வரைந்து மாற்றப்படாது; எவ்விடத்தெனின் வினாப்பொருண்மையொடு பொருந்திய சொல்லிடத்து எ-று. (எ-டு.) உறையூர்க்குச் செல்லாயோ சாத்தா என, நீ செல் என்றல் ஏவுதல்; உறையூர்க்குச் செல்லாயோ சாத்தா என, என் கால் முட்குத்திற்று என்றல் உற்றதுரைத்தல்; உறையூர்க்குச் செல்லாயோ சாத்தா என, என்கடனுடையார் வளைப்பர், பகைவரெறிவர் என்றல் உறுவது கூறல். செப்பே என்புழி ஏகாரம் பிரிநிலை. அதனைப் பிரித்து வழு வமைதி கூறினமையின், வினாவிற்கு வழுவமைதி இல்லை யென்பது பெறப்பட்டது. வழீஇயினும் என்ற உம்மை இழிவுசிறப்பு. இம்மூன்று சூத்திரத்துள் முன்னையது வழுவற்க என்னும் விதி; பின்னைய இரண்டும் வழுவமைதி கூறியதென உணர்க. (15) செப்பு வினாவிற்குரிய மரபு 16. செப்பினும் வினாவினும் சினைமுதற் கிளவிக்கு அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே. என்-எனின் செப்புவானொடு வினாவுவானிடைக் கிடந்ததொரு மரபிலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) செப்பின்கண்ணும் வினாவின்கண்ணும், சினைக் கிளவிக் கும் முதற்கிளவிக்கும் அவ்வப் பொருளுக்கு அவ்வப் பொருளேயாம், ஒன்றனோடொன்றைப் பொருவிக் கூறுமளவிற்றாகிய பொருள் எ-று. (எ-டு.) கொற்றன்மயிர் நல்லவோ சாத்தன்மயிர் நல்லவோ என வினாவிடத்துக் கொற்றமயிரிற் சாத்தன்மயிர் நல்ல, சாத்தன்மயிரிற் கொற்றன் மயிர் நல்ல என்று இறுக்க. பிறவுமன்ன. இது சினைக்கிளவி. கொற்றனல்லனோ சாத்தனல்லனோ என வினாவின விடத்துச் சாத்தனிற் கொற்றன் நல்லன், கொற்றனிற் சாத்தன் நல்லன் என இறுக்க. இது முதற்கிளவி. சினையென்பது உறுப்பு. முதலென்பது அவ்வுறுப்பினையுடை யது. அப்பொருளாகு மென்றதற்குப் பொருள் சினைக்குச் சினையும், முதற்கு முதலும் என்பதன்றி, அவ்வச் சினைக்கு அவ்வச் சினையும் அவ்வம் முதற்கு அவ்வம் முதலுமென்பது கொள்ளப்படும். சினை முற்கூறியவதனான் அவ்வச் சினைக்கு அவ்வச் சினை கூறாது முதலொடு கூறுதலும் உள என்பது கொள்ளப்படும். (எ-டு.) இவள் கண் நல்லவோ கயல் நல்லவோ என வரும். உறழ்பொருளென்னாது துணையென்றவதனான் உவமத்துக் கண்ணுஞ் சினை முதல்கள் தம்மின் மயங்காமற் கூறுக என்பது கொள்ளப் படும். இன்னும் அதனானே அச் சினைமுதற் பொருள்களை யெண்ணு மிடத்தும் இனமொத்தனவே எண்ணுக என்பதூஉங் கொள்ளப்படும். உவமம், வினை பயன் மெய் உரு என நான்கு வகைப்படும். (எ-டு.) புலி பாய்ந்தாங்குப் பாய்ந்தான், மழைவண்கை, துடி போலும் இடை, பொன்போலு மேனி எனவரும். இவற்றுள் சினை முதல் மயங்கக் கூறினவும் இவ்விலேசான் அமைத்துக் கொள்ளப்படும். இனி எண்: முத்தும், மணியும், பவளமும், பொன்னும் என எண்ணுக. இதற்கு அமைதியுண்டேனுங் கொள்க. இச்சூத்திரத்தாற் சொல்லியது: செப்பினையும் வினாவினையும் பற்றிப் பொருவின்கண்ணும், உவமத்தின் கண்ணும், எண்ணின்கண்ணும் பிறக்கும் மரபிலக்கணமும் மரபு வழூஉவமைதியும் என உணர்க. பொருவென்பது ஒன்றை ஒன்றனோடு ஒக்குமென்பதன்றி அதனின் இது நன்று என மிகுத்துக் கூறுவது. உவமம் என்பது ஒப்புணர்த்தலென உணர்க. (16) தகுதியும் வழக்கும் பற்றிய மரபு 17. தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே. என் - எனின் மரபு வழீஇ யமையுமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தகுதியினையும் வழக்கினையும் பொருந்தி நடக்குமிலக் கணத்திற் பக்கச்சொல் நீக்கு நிலைமையுடைய அல்ல எ-று. தகுதியென்பது மங்கல மரபினாற் கூறுதலும், இடக்க ரடக்கிக் கூறுதலும், குழுவின்வந்த குறிநிலை வழக்கும் என மூன்று கூறுபடும். (எ-டு.) செத்தாரைத் துஞ்சினார் என்றலும், ஓலையைத் திருமுகம் என்றலும் மங்கலமரபு. கண்கழீஇ வருதும், கான்மேனீர் பெய்து வருதும், கைகுறியராயிருந்தார், பொறையுயிர்த்தார், புலிநின்றிறந்த நீரலீரத்து, கருமுகமந்தி, செம்பினேற்றை என்பன இடக்கரடக்கிக் கூறல். பொற் கொல்லர் பொன்னைப் பறியென்றலும், வண்ணக்கர் காணத்தை நீலமென்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் குழுவின் வந்த குறுநில வழக்கு. வழக்காறு இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ வழக்கும், மரூஉ வழக்கும் என இருவகைப்படும். (எ-டு.) முன்றில், மீகண் என்பன இலக்கணத்தொடு பொருந்திய மரூஉவழக்கு. அருமருந்தன்னானை அருமந்தன் என்றலும், நட்டு வியந்தானை நட்டுய்ந்தானென்றலும், பொதுவில் என்பதனைப் பொதி யில் என்றலும், மலயமான் நாட்டை மலாடு என்றலும், சோழ நாட்டைச் சோணாடு என்றலும் என இவை மரூஉவழக்கு. இவ்வாறு சொற்சிதையச் சொல்லுவனவன்றிப் படுபொருள் சிதையச் சொல்லுவனவும் மரூஉவழக்கு என்று கொள்ளப்படும். கரிய மயிரினைச் சிறுவெள்வாய் என்றும், களமருட் கரியாரை வெண்களமர் என்றும், புலைக்களமருட் செய்யாரைக் கருங்களமர் என்றும், நீரினையும் பாலினையும் ஒரோவழிச் சிலபல வென்றும், அடுப்பின் கீழ்ப்புடையை மீயடுப்பு என்றுங் கூறுவன. இலக்கணவாய்பாடின்றி மருவிய வாய்பாடும் தாமே இலக்கண மாகக் கூறுவன இலக்கணத்தொடு பொருந்திய மரூஉ எனப்படும். இலக்கண வாய்பாடு உள்வழிச் சொற்சிதையவும் வருவன மரூஉ வழக்கு எனப்படும். தகுதியென்பது பட்டாங்குச் சொல்லுதல் நீர்மையின்மை நோக்கி அவ்வாய்பாடுகளைந்து இவ்வாறு சொல்லுதும் என்று உடம்பட்டுச் சொல்லி வருவது. வழக்காறென்பது வழங்கற்பாடே மேற்கொண்டு ஒருகாரணம் நோக்காது வாய்பாடு பகுத்துப் பயிலச் சொல்லி வருவது. இச்சூத்திரத்தாற் சொல்லியது பரந்து பட்ட மரபு வழூஉக்களுள் சிலவற்றைப் பொருட்காரணம் பற்றியும், நன்மக்கள்தாம் பயில வழங்குத லாகிய காரணவழக்குப் பற்றியும் வழுவமைத்தவாறு என வுணர்க. இவற்றுள் தகுதியென்றது பொருள்பற்றி யமைந்தது. வழக்காறு வழங்குதல் பற்றி யமைந்தது. யானை, யாறு, யாடு என்னும் இன்னோ ரன்னவற்றை ஆனை, ஆறு, ஆடு என்னும் இன்னோரன்ன வாகக் கூறுத லும் வழக்காறென இதனுட் கொள்ளப்படும். பிறவுமன்ன. அவை சான்றோர் சொன்ன செய்யுளுட் பெரும்பான்மை காணப்படாமையின் இதனுட் கொள்ளாது 'கடிசொல் லில்லை காலத்துப் படினே' (எச்ச.50) யென்புழிக் கொள்ளப்படும். (17) இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர் செய்யுட்கே ஆதல் 18. இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. என் - எனின் இதுவும் வழக்கிற்குஞ் செய்யுட்கும் மரபுவழீஇ யமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தமக்கு இனஞ் சுட்டுதலில்லாத பண்பு கொண்டு நின்ற பெயர்ச்சொற்கள் வழக்கினகத்து நெறியல்லாத, செய்யுட்கு நெறியாம் எ-று. வழக்காறாவன பெருங்கொற்றன், பெருங்கூத்தன் என்றாற் போல்வன.இவை சிறியானொருவனை நோக்கி வந்தனவல்ல; பண்பின்றி உயர்த்திச் சொல்லிய என்பது. இனிச் செய்யுளாறாவன 'மாக்கடல் நிவந்தெழு செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ' (புறம். 4) எனவும், 'நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே' (அகம். 2) எனவும் *'வெண்கோட்டி யானைச் சோணைப் படியும்' (குறுந். 75) எனவும் வரும். கருஞாயிறும், குறுங்கருந் திங்களும், கருங்கோட்டி யானையும் உண்மை கண்டு சொல்லினா னல்லன் என்பது. வழக்கினுள் பண்புகொள்பெயர் வருங்கால் குணமின்றி விழுமிதாகச் சொல்லவந்து நிற்கும்; செய்யுளுள் வருங்கால் குணம் தன்கணுடையவாய் வந்து நிற்கும். 'இடுகு கவுண் மடப்பிடி' என்றும், 'நால்வாய் வேழம்' என்றும், 'மறப்புலி' என்றும், 'மடப்பிணை' என்றும், 'வடவேங்கடந் தென்குமரி' என்றும் இனனில் பண்புகொள் பெயரேயன்றி, இனனில் தொழில்கொள் பெயரும் இனனில் பெயர்கொள் பெயருமாய் வருவன வுளவோவெனின் அவ்வாறு வருவனவற்றையும் ஒன்றினமுடித்த லென்பதனான் இதன் அகத்துச் செய்யுள் விதியாக அமைக்கப்படும். பண்புப் பெயரென்னாது பண்புகொள் பெயரென்றார்; கரியது, கரியன எனப் பண்பினைப் பிரியாது வருவன வொழியப் பண்பினைக் கொண்டு செஞ்ஞாயிறு எனவும், பண்பினைக் கொள்ளாது ஞாயிறு எனவும் வருவனவற்றின் மேற்று இவ்வாராய்ச்சி யென்றறிக வென்பது. இவ்வாறு பண்புகொள் பெயரென்று கூறவே, குறுஞ்சூலி, குறுந்தகடி, குறுமூக்கி, செம்போத்து என்பன அப்பண்பினைப் பற்றி அல்லது அச் சூலி, தகடி, மூக்கி, போத்து என்று வழங்குத லின்மையின் அது வாளாது பெயரெனப்படும். இதனாற் சொல்லியது வழக்கிடத்தும், செய்யுளிடத்தும், பண்பிட னாகப் பிறப்பதொரு வழுவமைதியும், பண்பு பற்றிப் பிறக்கும் இனனில் விதப்பும் இனனுடைய விதப்பும் என்னும் இருவகைச் செய்யுள் விகாரமுஞ் சொல்லியதென உணர்க. செஞ்ஞாயிறு என்புழிச் செம்மையென்னும் பண்பிற்கு, கருமை வெண்மை என இனமுளவேயெனினும் ஞாயிற்றோடு அடுத்தமையான் இனமின்றாய் இனனில் விதப்பாயிற்று. ஞாயிறு என்பது இனமிலதேனும் செம்மையென்னும் பண்படுத்தமையின் கரியதும் ஒரு ஞாயிறுள்ளது போல இனமுடைத்தாய் இனனுடை விதப்பாயிற்று. (18) * (பாடம்) வெண்கோட்டியானைச் சோணைப் படியும் என்பது. இயற்கைப் பொருளைக் கிளக்குமாறு 19. இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல். என் - எனின் உலகத்துப் பொருளெல்லாம் இருவகைப்படும்; இயற்கைப் பொருளும், செயற்கைப் பொருளும் என. அவற்றுள் இயற்கைப் பொருண்மேல் மரபிலக்கணம் வழாமற்சொல் நிகழற்பால வாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்கை யாகிய பொருளை இத்தன்மைத் தெனச் சொல்லுக எ-று. (எ-டு.) நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளியுளரும் எனவரும். இயற்கைப் பொருள் செயற்கைப் பொருளென்கிறது அவ்வியற்கை செயற்கையென்னும் பண்பினையோ அப் பண்படைந்த பொருளி னையோ எனின், பண்படைந்த பொருளினை எனவுணர்க. அஃதேயெனின், இயற்கைப் பொருள் இது, செயற்கைப் பொருள் இது என வேறுபட நில்லாது, நிலம் வலிது என்ற வழக்கத்தானே, கல்லுமிட்டிகையும் பெய்து குற்றுச் செய்யப்பட்ட விடத்து நீர்நிலமுஞ் சேற்று நிலமும் மிதித்து அவ்வயினின்றா னொருவன் அந்நிலமல்லாத நிலமிதித்தவிடத்து நிலம் வலிதாயிற் றென்றும் வருமாலெனின் ஒரு பொருடானே இயற்கையான பண்படுத்த விடத்து இயற்கை என்றும், செயற்கையான பண்படுத்த விடத்துச் செயற்கையென்றும் பண்பான் வேறுபடுதலல்லது பொருளான் வேறன்று என்று உணர்க. முன், நீர் நிலம் மிதித்தான் கூறும் வழக்கினுள் பொருட்கு உண்மை வகையான் வன்மையின்றே யெனினும், அவன் மனக்குறிப்புப் பற்றி, அதுவும் வன்மையாயிற்று என உணர்க. இவ்விலக்கணங் கூறிப் பயந்தது என்னையெனின், மேற் செயற்கைப் பொருளகத்து மரபுவழூஉ அமைத்தற் பொருட்டாய் உலகத்துப் பொருளை இயற்கை செயற்கை என இரு பாகுபாடு செய்து அவற்றைக் கூறும் மரபிலக்கணம் அறிவித்தார் எனக் கொள்க. (19) செயற்கைப் பொருளைக் கூறுமாறு 20. செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல். என் - எனின் செயற்கைப் பொருண்மேல் மரபு இலக்கணம் வழாமற் சொல் நிகழற்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செயற்கையாகிய பொருளை ஆக்கம் என்னும் வாய்பாட் டொடு சொல்லுக எ-று. (எ-டு.) மயிர் நல்லவாயின, பைங்கூழ் நல்லவாயின எனவரும். மேற்கூறிய 'இற்றெனக் கிளத்தல்' (கிளவி.19) இதற்கு அதிகாரத் தான் வருவித்துக் கொள்க. (20) ஆக்கச்சொல் காரணத்தொடு தொடர்தல் 21. ஆக்கந் தானே காரண முதற்றே. என் - எனின் மேலதற்கொரு புறனடையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய ஆக்கச் சொற்றானே காரணச் சொல்லை முன்னாகவுடைத்து எ-று. (எ-டு.) கடுவுங் கைபிழியெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்லவாயின, எருப்பெய்து இளங்களை கட்டு நீர் கால் யாத்தமையாற் பைங்கூழ் நல்லவாயின எனவரும். ஆக்கம் முற்கூறிக் காரணம் பிற்கூறியும் வருமாலெனின், பெரும் பான்மையும் முற்கூறிக் கூறப்படுதலின் முதற்று என்றார்போலும். இனி முதல் என்பதனைக் காரணமாக்கிக் கூறுதலுமொன்று. (21) அச்சொல் காரணம் இன்றியும் வருமாறு 22. ஆக்கக் கிளவி காரணம் இன்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. என் - எனின் எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய ஆக்கச் சொற்றான் காரணத்தை யொழியச் சொல்லுதலுங் குற்றமில்லையென்று சொல்லுப ஆசிரியர் வழக்கி னிடத்து என்றவாறு. உம்மை யெதிர்மறையாகலான் காரணம் கொடுத்துக் கூறல் வலியுடைத்து. (எ-டு.) மயிர் நல்லவாயின, பைங்கூழ் நல்லவாயின எனவரும். செய்யுள் விதியுள்வழிச் செய்யுளென்று கூறி, வாளாதேயோதுஞ் சூத்திரமெல்லாம் வழக்கே நோக்குதல் நூற்கிடையாகலின் 'வழக்கினுள்' என்பது மிகை; அதனாற் செயற்கைப் பொருள் காரணங் கொடுத்து ஆக்கங் கொடாதே சொல்லுதலும், காரணமும் ஆக்கமும் இரண்டுங் கொடாதே சொல்லுதலுங் கொள்ளப்படும். (எ-டு.) கடுவுங் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல எனவும், பைங்கூழ்நல்ல எனவும் வரும். எனவே செயற்கைப் பொருள் காரணமும் ஆக்கமுங் கொடுத் தலும், காரணமொழிய ஆக்கங் கொடுத்தலும், ஆக்க மொழியக் காரணங் கொடுத்தலும், காரணமும் ஆக்கமும் இரண்டுங் கொடாதே சொல்லு தலும் என நான்கு வகைத்து. இவற்றுள் முன்னைய விதியொன்றும் மரபிலக்கணம்; பின்னைய மூன்றும் மரபுவழு வமைதி. அவற்றுள் இச்சூத்திரத்தாற் கூறியது பெரும்பான்மை, இலேசினாற் கூறிய இரண்டுஞ் சிறுபான்மை யென உணர்க. இவை யமைவதற்குக் காரணம் உணர்வாருணர்வுவகைபற்றிப் போலும். (22) உயர்திணைப்பால் ஐயத்துக்கண் பால் வழுவி அமையுமாறு 23. பால்மயக் குற்ற ஐயக் கிளவி தானறி பொருள்வயின் பன்மை கூறல். என் - எனின் இன்னும் உலகத்துப் பொருள்தான், ஐயுறும் பொருளுந் துணியும்பொருளும் என இரு வகைத்து. அவற்றுள் ஐயுறும் பொருட்கண் உயர்திணைப்பால் ஐயத்துக்கண் பால்வழீஇ அமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) திணையறிந்து பால் மயங்கலுற்ற ஐயச்சொல், தான் அறிந்த உயர்திணைப் பொருளிடத்துப் பன்மையாகக் கூறுக எ-று. (எ-டு.) ஒருவன்கொல்லோ ஒருத்திகொல்லோ இதோ தோன்று வார்? என்பது. இவ்வையம், கண்டவிடத்து ஐயமும், காணாவிடத்து ஐயமும் என இருவகைத்து. இனிக் காணாதவழி ஒருவனோ பலரோவென்று ஐயுறும் பான்மயக்கமுங் கொள்க. இது தானறியானாவதல்லது அப்பொருள் இருபாலுமாய் நிற்றலில்லை. பிற மற்றொன்றாகிய அப்பொருளைப் பன்மையாற் கூறுதல் வழூஉ; வழூஉவே யெனினும் அமைக எனப் பால்வழூஉ அமைத்தவாறாயிற்று. இவ் வையத்துக்கு இலக்கண வழக்கென வேறு காணாமையின் இதுதான் இலக்கணமாகற்பாற்று எனின், வேறு வழக்கில்லை யெனினும், இது பொருள்வகை தொக்க வழூஉ வெனப்படும். ஒருவனோ ஒருத்தியோ தோன்றுகின்றார் எனப் பொதுவாகக் கூறல் இலக்கண வழக்காம் பிறவெனின், அவ்வாறு கூறுவாரின்மையானும், ஆர் என்பது ஆண்பாற் கல்லது ஏலாமையானும் ஆகாதென மறுக்க. (23) திணைபால் ஐய வழுவமைதி 24. உருவென மொழியினு மஃறிணைப் பிரிப்பினும் இருவீற்று முரித்தே சுட்டுங் காலை. என்-எனின் திணை ஐயத்துக்கண்ணும், அஃறிணைப்பால் ஐயத்துக்கண்ணும் வழீஇயமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உருவெனச் சொல்லுமிடத்தும் அஃறிணைப் பிரிப்பின் கண்ணும், இவ்விரண்டு கூற்றின் கண்ணும், ஐயமுரித்துக் கருதுங்காலத்து எ-று. என்றது திணையையந் தோன்றியவழி உருவு என்று சொல்லுக. அஃறிணைப்பாலையந் தோன்றியவழி அஃறிணை இயற்பெயராகிய பொதுப்பெயராற் சொல்லுக எ-று. ஒருமையும் பன்மையும் வினையாற் பிரிக்கப்படுதலின், ஆகுபெய ரான் அஃறிணை இயற்பெயர் பிரிப்பு எனப்பட்டது. ஐயமென்பது அதிகாரத்தான் வருவிக்க. திணையையம் அஃறிணைப்பால் ஐயம் என்பன சூத்திரத்துள் இல்லையாயினும், உருவென்றும், அஃறிணைப்பிரிப்பு என்றுங் கூறிய வாய்பாட்டான் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். (எ-டு.) குற்றிகொல்லோ மகன் கொல்லோ இதோ தோன்றுகின்ற உருவு? என்பது, ஒன்றின முடித்தல் என்பதனான் உருவேயன்றி வடிவு, பிழம்பு, பிண்டம் என்பனவற்றானுஞ் சொல்லுக. இதற்குக் காணாதவிடத்து ஐயமுங்கொள்க. இனி, அஃறிணைப்பால் ஐயம், ஒன்றுகொல்லோ பலகொல்லோ செய்புக்க பெற்றம்? என்பது. இதற்குக் கண்டவிடத்து ஐயம் என்ப தில்லை. இதனுள், திணை ஐயத்துக் கூறிய உருவு என்னும் வழக்கு உடலுயிர் கூட்டப் பொருண்மையாகிய மகன் என்னும் நிலைமைக்கு ஏலாது அவனுடலைப் பிரிய நின்று உணர்த்தினமையான் அதுவும் ஒரு திணைவழுவமைதி எனப்படும். அஃறிணைப் பால்ஐயத்துக் கூறிய இயற்பெயர் பொது வெனினும் சொல்லுதற்கண் ஒருபால்மேல் நிகழற்பாலது அவ்வாறு நில்லாது இருபால்மேலும் நின்றமையின் இதுவும் ஒரு மரபு வழூஉவமைதி எனக் கொள்க. (24) துணிபொருட்கண் சொல்லும் மரபு 25. தன்மை சுட்டலும் உரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. என் - எனின் துணிபொருட்கண் மரபிலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தனது தன்மையாகிய அன்மைத்தன்மையைச் சொல்லுத லும் உரித்து என்று சொல்லுப ஆசிரியர், அன்மைப் பொருள் எவ்விடத் தெனின் ஐயத்திற்கு மறுதலையாகிய துணிபிடத்து எ-று. தன்மை சுட்டல் என்புழி இன்னதன்மை என்பது இன்றேனும், மேல் அன்மைக்கிளவி என்றதனான் அன்மைத் தன்மை என்பது ஓர் ஒப்பிற் கொள்க. கிளவியென்பது பொருள். (எ-டு.) பெண்டாட்டி அல்லன் ஆண்மகன், ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி, குற்றி அல்லன் மகன், மகன் அன்று குற்றி, பல அன்று ஒன்று, ஒன்று அல்ல பல என்பன. பெண்டாட்டியல்லன் ஆண்மகன் என்புழி ஆண்மகன் என்னும் பெயர் எழுவாயாய் அல்லன் என்னும் வினைக் குறிப்பினைப் 'பண்பு கொள வருதல்' என்னும் பயனிலையாக முன்னேகொண்டு நின்றமையின், பெண்டாட்டி என்னும் பெயர்க்கு முடிவு இல்லை யெனின், அதற்கு உருபு தொகையாக்கி நீக்கப் பொருட்கண் பெண்டாட்டியின் அல்லன் என ஐந்தாவதனை விரித்து முடிபு கொள்க. இதனாற் சொல்லியது என்னையெனின், இருபொருள் ஐயுற்றுத் துணியும்வழி, அவ்வையுற்ற பொருட்டன்மை இத்துணி பொருளிடத்து இன்மையும், துணிபொருட்டன்மை அவ்வையப்பொருட்கண் இன்மை யுங் காணுமன்றே? கண்டுழி, இஃதன்மை அதற்கும், அஃது அன்மை இதற்கும், அன்மை யாதானும் ஒன்றன்மேல் ஆக்கிக் கொடுப்பினும் அமையும் என்று கருதற்க. இஃது அன்மை யதற்கும் உண்டே யெனினும் துணிந்தவழி உள்பொருளாய் நின்று காணப்பட்டது. அஃது அன்மை யாதலின் இதன்மேலிருக்க என மரபிலக்கணங் கூறியவாறாயிற்று. (25) வண்ணச்சினைச்சொல் பற்றிய மரபு 26. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். என் - எனின் வண்ணச் சொல்லதொரு மரபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பண்பினை யுணர்த்துஞ் சொல்முன்னர்; பண்பினை யுடைய சினைப்பொருளை யுணர்த்துஞ்சொல் அதற்பின்; அச்சினையை யுடைய முதற்பொருளை யுணர்த்துஞ் சொல் அதன் பின் என்று கேட்டான் அடைவுகருதும்படி அம்மூன்றும் அம்முறைமையின் மயங்காமல் வழக்குப்பெற்று நடக்கும் வண்ணச் சினைச் சொல் எ-று. (எ-டு.) பெருந்தலைச் சாத்தன், செங்கால் நாரை என வரும். பெரும்பலாக்கோடு, பெருவழுதுணங்காய் என மயங்கியும் வருமாலோவெனின், அவ்வாறு மயங்கிக் கூறுவன கண்டன்றே இவ்விலக்கணம் எழுந்தது? இதனான் அதனை அழிவழக்கென்று மறுக்க. *(பெருந்தலையானையுடையதும் வெறும்புல்லா நல்லேறும்? வேறு பொருள் கொண்டியைபுமாவதும்) எனின்; அவ்வாறு பொருள் கோடல் செய்யுட் கல்லது இன்றென்று மறுக்க. 'முறை' என்றவதனானே ஒரு முதற்பொருட்கண் இரண்டு பண்படுத்து வருவனவும் வழக்கினுள் உள என்று அமைத்துக் கொள்ளப் படும். (எ-டு.) இளம்பெருங் கூத்தன், சிறுகருஞ்சாத்தன் என வரும். 'இள' என்னுஞ் சொல் பெருமை யென்பதனொடும் இன்றாய்க் கூத்தன் என்பதனோடு இயைபு கோடல் மரபன்மையின் அமைக்கப்பட்டது. இன்னும் இவ்விலேசானே சினைப்பொருட்கண் இரண்டு பண்படுத்து வருவனவும், செய்யுளுள் உள என்றும் அமைக்கப்படும். (எ-டு.) 'சிறுபைந்தூவிச் செங்காற்பேடை' என வரும். 'நடைபெற்று' என்றதனான் அவ்வடை சினை முதல்கள் செய்யுட் கண் முறை மயங்கியும் வரப்பெறும் என்பது கொள்ளப்படும். (எ-டு.) 'பெருந்தோட் சிறுநுசுப்பிற் பேரமர்க்கட் பேதை' என வரும். அடைசினை முதல் என்று, பின்பும் வண்ணச் சினைச் சொல் என்றது என்னையெனின், முற்கூறியது இலக்கண வாய்பாடாகலான் அவ்விலக் கண முடையது இதுவென வேண்டுதலின், அவ்விலக்கணத்தான் அவ்விலக்கணமுடைய பொருட்குக் குறியிட்டார் என வுணர்க. இதனாற் சொல்லியது என்னையெனின் அடை சினை முதற் பொருள்களைக் கூறுங்கால் இன்னவாறு கூறுக என்று அவற்றது மரபிலக்கணமும் அவ்வழி மரபு வழுவமைதியும் கூறியவாறாயிற்று.(26) * இப்பகுதி சிதைந்துள்ளதாகத் தோன்றுகிறது. பால் திணை வழுவமைதி 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய உயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. என் - எனின் உயர்திணைப் பால்வழுவமைதியும், அஃறிணைத் திணை வழுவமைதியும் உடன் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணையிடத்து, ஆண்பாலினையும் பெண்பாலினை யும் அத்திணைப் பன்மைப்பாலாற் சொல்லுஞ் சொல்லும், அஃறிணை யொன்றனை உயர் திணைப் பன்மையாற் சொல்லுஞ் சொல்லும் இவை யிரண்டும் வழக்கின்கண்ணே யுளவாகி யுயர்த்துச் சொல்லும் பொருண் மைக்கண் வரும் சொல்லாம்; இலக்கணத்திடத்துச் சொல்லும் நெறியல்ல எ-று. (எ-டு.) தாம் வந்தார் என்பது. இலக்கண மருங்கிற் சொல்லாறல்ல என்ற மிகையானே காதன் மிகுதியான் உயர்திணை அஃறிணையாகவும், அஃறிணை உயர் திணையாகவும் கூறுவனவும் அமைத்துக் கொள்க. (எ-டு.) என் பாவை வந்தது, போயிற்று; என் யானை வந்தது, போயிற்று என இவை உயர்திணை அஃறிணையாயின. இனி ஓர் ஆவினை எம் அன்னை வந்தாள், போயினாள் எனவும்; ஓர் எருத்தினை எந்தை வந்தான் போயினான் எனவும் கூறுவன அஃறிணை உயர்திணையான் வந்தனவாம். மற்று, இவை ஆகுபெயரன்றோ எனின், ஒப்புள்வழிச் சொல்வது ஆகுபெயர்; இது காதலுள்வழிக் கூறுவது என உணர்க. இதனுள் உயர்திணை அஃறிணையான் வந்தன 'குடிமையாண்மை' (சொல். 57) என்புழிச் சிறப்பென்புழிப்பட்டு அடங்குமாலோவெனின், அவை காதலின்றிச் சிறப்பித்துச் சொல்லுவன என வேற்றுமையுணர்க. 'வழக்கினாகிய' என்றதனான் பிறவும் உயர்திணைப் பெயர்களை அஃறிணைமேல் வைத்துச் சொல்லுவனவும் செய்யுட்கண் அமைத்துக் கொள்க. (எ-டு.) கன்னி நறுஞாழல், கன்னி எயில், கதிர் மூக்காரல், கரியவனாகம் என்பன போல்வன. இதனாற் சொல்லியது, வழக்கின்கண்ணுஞ் செய்யுட்கண்ணும் ஒரோவொரு காரணத்தைப் பற்றிப் பாலினையுந் திணையினையும் மயங்கக் கூறுவன கண்டு அவற்றிற்கு அமைதி கூறியவாறாயிற்று. (27) இடம் உணர்த்தும் சொற்கள் பற்றிய மரபு 28. செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்தும் உரிய வென்ப. என் - எனின் இடம்பற்றி நிகழுஞ் சொற்களுட் சிலவற்றிற்கு இலக்கணங் கூறுவான், அச்சொற்களின் இடங்களது பெயரும் முறையுங் கூறியமுகத்தான் அவற்றிற்குப் பொதுவிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செலவுப் பொருண்மைக்கண்ணும், வரவுப் பொருண் மைக்கண்ணும், தரவுப் பொருண்மைக்கண்ணும், கொடைப் பொருண் மைக்கண்ணும், நிலைபெற்றுத் தோன்றுகின்ற செலவு வரவு தரவு கொடை யென்ற நான்கு சொல்லும், தன்மை முன்னிலை படர்க்கை யென்று சொல்லப்பட்ட அம்மூன்றிடத்திற்கும் பொதுவகையான் உரிய எ-று. (எ-டு.) சிறப்புவகையாற் கூறும்வழிக் காட்டுதும். (28) தன்மை முன்னிலைக்குரிய சொற்கள் 29. அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த. என் - எனின் மேற்கூறிய சொற்களுள் சிலவற்றிற்குச் சிறப்பு வகையான் இட இலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறப்பட்ட நான்கு சொல்லுள்ளும், தரும் வரும் என்னுஞ் சொல்லிரண்டும் தன்மைக்கும் முன்னிலைக்கும் ஆம்; படர்க்கைக்கு ஆகா எ-று. (எ-டு.) எனக்குத் தருங் காணம், நினக்கு வருங் காணம் என வரும். படர்க்கைக்குரிய சொற்கள் 30. ஏனை யிரண்டும் ஏனை யிடத்த. என் - எனின் இதற்கும் விதியொக்கும் என்றவாறு. (இ-ள்.) ஒழிந்த செல்லும் கொடுக்கும் என்னுஞ் சொல் இரண்டும், ஒழிந்த படர்க்கையிடத்திற்கு உரிய; தன்மைக்கும் முன்னிலைக்கும் ஆகா எ-று. (எ-டு.) அவர்க்குச் செல்லுங் காணம், அவர்க்குக் கொடுக்குங் காணம் எனவரும். பொதுச் சூத்திரத்துள் தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய தரவினையும் வரவினையும் தரவு வரவு என்று ஓதாது வரவினைச் செலவினோடு இயைபு படுத்தியும், படர்க்கைக்குரிய கொடுக்கும் என்பதனொடு செல்லும் என்பதைக் கூறாது தரவென்பதனை இயை யவைத்தும் கூறிய முறையன்றிக் கூற்றினாற் கொடைப் பொருட்கண் கொடுக்கும் என்பதனைத் தரும் என்றும், செல்லும் என்பதனை வரும் என்றும் கூறுவனவற்றை இடவழுவாக்கி யமைத்துக் கொள்ளப்படும் என்பது. வரவு தரவு என்பன தம்முள் இயைபுபட நின்றனவா லெனின் தம்முள் இயைபுடைய எனினும் முன்கூறிய செலவினோடும் வரவுப் பொருளான் இயைபுபடுதலின் இத்தரவினோடு இயைபின்றாயிற்று என உணர்க. 'புனல்தரு பசுங்காய் தின்ற' (குறுந். 292) அவர்க்கு வரூஉங் காணம் என்றாற்போல்வன கொடைத் தொழிலிடை மயக்கமாகக் கொள்க. இன்னும் வரவினொடு செலவு கூறிய முறையன்றிக் கூற்றான் அக் கொடைத்தொழிலல்லாச் செலவு வரவின்கண்ணும் இடமயக்கம் கூறுவன அமைத்துக் கொள்ளப்படும். (எ-டு.) 'தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது', (அகம். 36) 'யானெய்த அம்பு நின்மேற் செல்லும்.' 'அரிமலர்ந் தன்னகண் அம்மா கடைசி திருமுகமுந் திங்களுஞ் செத்துத் - தெருமந்து வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி ஐயத்து நின்ற தரா' இந்நிகரனவெல்லாங் கொள்க. இந்நான்கு சொல்லுமே இடமயக்கம் ஆராய்ந்தது என்னை, எல்லாப் பெயர்களும் வினைகளும் இடத்தொடு பட்டால் வருவதெனின், வேற்றுமையுண்டு. அவ்வாறு தத்தம் இடங்கள் மேல்நின்ற சொற்கள் ஒன்றனோடு ஒன்று சேருமியல்பு கூறுதல் இந்நான்கற்கும்அல்லது இன்மையின் இவற்றையே கூறினார் என்பது. செலவு முதலிய சொல் நான்கும் படர்க்கையே எனினும், வரும் தரும் என்னும் இரண்டு படர்க்கையும் தன்மை முன்னிலைகளோடு இயைபு பட்டும், செல்லும் கொடுக்கும் என்னும் இரண்டும் தமக்கேற்ற படர்க்கையோடு இயைபு பட்டும் நின்றவாறு கண்டுகொள்க. இவற்றாற் சொல்லியது, ஓரிடத்துச் சொல் ஓரிடத்துச் சேரு மிடத்துப் பிறக்கும் இட இலக்கணமும் இடவழுவமைதியும் என்பது. (30) அறியாப் பொருள்மேல் வரும் சொற்கள் 31. யாதெவ னென்னும் ஆயிரு கிளவியும் அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும். என் - எனின் உலகத்துப் பொருள்தான் அறிந்த பொருளென்றும், அறியாப் பொருளென்றும் இரண்டு வகைத்து. அவற்றுள், அறியாப் பொருண்மேல் நிகழுஞ் சொல்லது இலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) யாது எவன் என்று சொல்லப்படும் அவ்விரண்டு சொல்லும் தன்னான் அறியப்படாத பொருளிடத்து வினாச்சொல்லாய் யாப்புறத் தோன்றும் எ-று. (எ-டு.) நுந்நாடு யாது? இப்பண்டியுள்ளது எவன்? என வரும். இவற்றுள் எவன் என்பது இக்காலத்து 'என்' என்றும், 'என்னை' என்றும் மருவிற்று. 'செறிய' என்றதனாற் பிறவும் அவ்வினாப் பொருளிடத்து வருவன கொள்ளப்படும். (எ-டு.) யாவன், யாவள், யாவர், யார், யாவை, யா, எப்பொருள் என இவை. எவன் என்பது அஃறிணை இருபாற்கும் உரியது எனினும் இதனானே ஒருமைப்பான்மேல் வருவதே பெரும்பான்மை யென்பது உரையிற் கோடல் என்பதனாற் கொள்ளப்படும். (31) அவற்றுள் யாது என்னும் சொல் 32. அவற்றுள், யாதென வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாதலும் உரித்தே. என் - எனின், மேல் அறியாப் பொருண்மேல் நிகழும் என்ற மரபிலக்கணம் கூறிய சொற்களுள் ஒன்றற்குச் சிறிதறிந்தவழியும் வருமரபும் உண்டென்று அறிந்து அது காத்தல் நுதலிற்று. (இ-ள்.) மேல்வினாவப்பட்ட இரண்டனுள்ளும், யாது என்று சொல்ல வருகின்ற வினாப்பொருளை உணரநின்ற சொல், அறிந்த பொருளிடத்துண்டாகிய ஐயந்தீர்தற்கு ஆராய்ந்த சொல்லாதலும் உரித்து. எ-று. (எ-டு.) ஒருவன் ஐந்து எருதுடையான், காப்பக் கொடுத்தவற்றுள் ஒன்று கெட்டதென்று காப்பான் சொல்லினவிடத்து எருதுடையான் வெள்ளை, காரி என்னும் ஐயம் தீர்தற்பொருட்டு அவற்றுள் யாதென்று வினாதல் என்பது. மேற்சூத்திரத்துப் பின்தொடர்புடையது என்பதனைப் பின் வைக்கற்பாற்று என்பதனான் இதனோடு இயைபுடைய யாதென்பதனை எவனின் பின்வையாது, முன்வைத்த முறையன்றிக் கூற்றினான், அச் சூத்திரத்து எடுத்தோத்தானும், இலேசானும் அறியாப் பொருளிடத்தும் ஐயந்தீர்த்தற்கும் சில வருமெனக் கொள்க. (எ-டு.) நமருள் யாவன் போயினான்? அவற்றுள் எவ்வெருது கோட்பட்டது என்றாற்போல்வன. இச் சூத்திரத்தாற் கூறியது வழுவமைதி யன்றோ எனின், முன்பு அறியாப் பொருள் என்றதும் ஒருவகையானும் அறியாமையென்பது இன்மையின், அதனைப் பார்க்க இது சிறுபான்மை யென்பதல்லது வழுவென வாகாது என உணர்க. இவற்றாற் சொல்லியது, வினாப் பொருண்மேன் நிகழும் சொற்களது பெரும்பான்மை சிறுபான்மை மரபிலக்கணம் என உணர்க. (32) முற்றும்மை வழங்கும் மரபு 33. இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். என் - எனின் இன்னும் உலகத்துப் பொருள்தான் வரையறை யுடையதூஉம் இல்லதூஉம் என இருவகைத்து; அவற்றுள் வரையறை யுடையது தொகை பெறும்வழிப் படுவதொரு மரபிலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இத்துணையென்று வரையறுக்கப்பட்ட சினைக் கிளவியும், முதற்கிளவியும் தம்மை மேலொரு வினையொடு படுத்துச் சொல்லுவதாக அதற்குத் தொகை கொடுத்துக் கூறுமிடத்து அத் தொகைச் சொல் இறுதிக்கண் உம்மை கொடுத்துச் சொல்லுதலை வேண்டும் எ-று. (எ-டு.) நம்பி கண்ணிரண்டும் நொந்தன, நங்கை முலையிரண்டும் வீங்கின; இது சினைக்கிளவி. தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார், முப்பத்து மூவரும் வந்தார்; இவை முதற்கிளவி. 'வினைப்படு தொகுதி' என்றமையான் தொகை கொடாத வினைப் பாட்டின்கண் உம்மையின்றி, கண்நொந்தது, கண் நொந்தன எனவரும். 'இரு தோள் தோழர்பற்ற' எனவும் 'ஒண்குழை யொன்றொல்கி' எனவும், உம்மையின்றி வந்தனவும் உளவா லெனின் அவை செய்யுளுள் தொகுக்கும்வழித் தொகுத்தலென்பதனான் தொக்குநின்றன. இவ்வாறு வழக்கினுள் இல்லையென் றுணர்க. 'இருதிணை மருங்கின் ஐம்பாலறிய' (10) என்ற சூத்திரத்துள்ளும் உம்மையின்றி வந்தன. உடம்பொடு புணர்த்த லென்பதனான் செய்யுளுள் உம்மையின்றி வருவனவும், உளவென்றலும் ஒன்று. இது சிறுபான்மை. இனி வினைப்படாத பெயர்ப்பாட்டின்கண் தமிழ்நாட்டு மூவேந்தர் இவர் எனினும் அமையும் என்பது. (33) இல்லாப் பொருளைச் சொல்லும் மரபு 34. மன்னாப் பொருளும் அன்ன இயற்றே. என் - எனின் இன்னும் உலகத்துப் பொருள் இல்லதும் உள்ளதும் என இருவகைத்து; அவற்றுள் இல்லதன்மேற் பிறக்கும் மரபிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உலகத்து இல்லாப் பொருளும் மேலதனோடு ஒத்த இயல்பினையுடைத்து எ-று. 'அன்னவியல்பு' என்பது மேலும் பிறபொருள் ஒழிந்தனவும் உளவெனப்படுதற்கு அஞ்சி முற்றும்மை கொடுக்க என்றான். அதுபோல ஈண்டும் ஒழிவதஞ்சி எச்சவும்மை கொடுக்க என்பான் 'அன்னவியற்று' என்றான் என்பது. (எ-டு.) முயற்கோடும் ஆமைமயிர்க் கம்பலமும் அம்மிப்பித்தும் துன்னூசிக் குடரும் சக்கிரவர்த்தி கோயிலுள்ளும் இல்லையெனவரும். மேற் சூத்திரத்து முற்றும்மையோடு இச்சூத்திரத்தை மாட்டேற்ற லின் முயற்கோடும் ஆமைமயிர்க் கம்பலமும் யாண்டும் இல்லை என்பது உதாரணமாகற் றெனின், யாண்டும் என்னாது இல்லை யெனவும் வழக் கமைதலின் இதுவே பொருளன்மையை வாளாதே இல்லையென்ப தன்றி ஓர் இடத்தொடுபடுத்து இல்லையென்புழி எச்ச வும்மை கொடாது விடிற் பிறவிடத் துண்மை சேறலின் மாட்டேற் றொருபுடைச் சேறல் என்பதாகக் கொண்டு மேற்காட்டிய உதாரண மாகற்பால என்பது. (34) தன்பால் இல்லாத பொருளைச் சொல்லும் மரபு 35. எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின் அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல். என் - எனின் சொற்றொகுத்து இறுத்தல் என்னுஞ் செப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எவ்வகைப்பட்ட பொருளாயினும் தன்னுழை யுள்ள தல்லதனை இல்லையெனலுறுமே யெனின், அவன் வினாவின பொருளல்லாத பிறிதுபொருள் கூறி இல்லையென்க எ-று. (எ-டு.) பயறுளவோ வணிகீர் என்றக்கால் உழுந்தல்லது இல்லை யென்க. பயறுளவோ என்றால், அல்லதென்ப தொழியவும் பயறில்லை உழுந்துள என இந்நிகரனவுஞ் சொல்லுப வாகலான் அல்லதென்பது வேண்டா வெனின், அல்லதென்பது அஃறிணை யொருமைப்பாற் குரியதே எனினும் மற்றை நான்கு பாற்கண்ணும் பால்வழுவாயுந் திணை வழுவாயுஞ் சென்று மயங்கல் கண்டு, அதனைக் காத்தற் பொருட்டாகச் சொல்லினார் என்பது. (எ-டு.) அவனல்லது, அவளல்லது, அவரல்லது, அதுவல்லது, அவையல்லது எனவரும். அவனல்லது என்புழி அல்லது என்பதனைப் பின் பிறன் இல்லை என்று வருவதனொடு படுத்து வழுவாதல் அறிக. அப்பொருளல்லா என்பது மிகை; அதனாற் பிறிது பொருள் கூறும் வழியும் அவன் வினாயதற்கு இனமாயவற்றையே கூறுக என்றவாறு. இதனாற் சொல்லியது, செப்பின்கண் பிறப்பதொரு வழுக்கண்டு அதனை அமைத்தற்குக் கூறியவாறாயிற்று. இதனுள் வழுவென்பது என்னையெனின், அவன் வினாயதனை மறுப்பதன்றி, அவன் வினவாத பிறிதொன்றனையும் உடம்பட்டுக் கூறினமையின் என்பது. வழுவமைதி யேற் பிறிதுபொருள் கூறுக என விதிக்கற்பாற்று அன்றெனின், அவ்வாறு கூறலாகாதென மறுத்து இவ்வாறு கூறுக என்பதொரு விதி நீர்மைத்தது என்பது. (35) மேலதற்கொரு புறனடை 36. அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல். என் - எனின் இதுவும் மேலதற்கொரு புறனடையாய இறுத்தல் வகைமை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அவன் வினாவின பொருடன்னைச் சொல்லுமிடத்துச் சுட்டி இல்லையென்று சொல்லுக எ-று. (எ-டு.) இப்பயறு அல்லது இல்லை, இவையல்லது பயறு இல்லை. (36) ஒரு பொருள்மேல் இருபெயர் வழுக்காத்தல் 37. பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே. என் - எனின் இஃது ஒரு பொருண்மேல் இருபெயர் வழுக்காத்தல் நுதலிற்று. மேல் இவையல்லது பயறு இல்லை என்பதனைப் பற்றிப் பிறத்தலான் மேலதற்கே புறனடை யெனினும் அமையும். (இ-ள்.) பொருளொடு பொருந்தாச் சுட்டுப்பெயராயினும் பொருள் வேறுபடாது; ஒரு பொருளேயாகும் எ-று. (எ-டு.) இவையல்லது பயறு இல்லை எனவரும். இவை யென்பது பயறே யெனினும் பயறென்பது பின்னுண்மை யின் தன்மேற் செல்லாது பிறிதொன்றனைச் சொல்லியது போலும் நோக்குடைத்தே யெனினும் அமைக எ-று. இதனாற் சொல்லியது ஒரு பொருண்மேல் இருபெயரும் பல பெயருங்கூறுதல் இலக்கணமே யெனினும், இயைபுபடக் கூறவேண்டு மென்று அவ்வழி இயைபில்லது கண்டு அம் மரபுவழுவினை அமைத்தவாறாயிற்று. (37) இயற்பெயரும் சுட்டுப்பெயரும் ஒருங்குவரும் மரபு 38. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றின் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய என்மனார் புலவர். என் - எனின் இதுவும் ஒரு பொருண்மேல் இருபெயர் வழுக்காத்தல் நுதலிற்று. (இ-ள்.) இயற்பெயராகிய சொல்லும், சுட்டுப்பெயராகிய சொல்லும், வினைச்சொற்கண்ணே கூடவருங் காலந் தோன்றின், அவற்றுட் சுட்டுப் பெயர்க்கிளவியை முற்படச் சொல்லார்; இயற் பெயருக்குப் பின் வைத்துச் சொல்லுக என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) சாத்தன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க; கொற்றி வந்தாள் அவட்குப் பூக்கொடுக்க என்றாற்போல்வன. தன்னின முடித்தல் என்பதனானே விரவுப்பெயர்களின் இயற் பெயரொழிந்தனவுங் கொள்ளப்படும். (எ-டு.) முடவன் வந்தான் அவற்குச் சோறு கொடுக்க என்றாற் போல்வன. 'இயற்பெயர் வழிய' என்ற மிகையான், உயர்திணைப் பெயர்க்கும் அஃறிணைப் பெயர்க்குஞ் சுட்டுப்பெயர் பிற் கூறுக என்பது கொள்ளப் படும். (எ-டு.) நம்பிவந்தான் அவற்குச் சோறு கொடுக்க; எருது வந்தது அதற்குப் புல் இடுக எனவரும். 'ஒருங்கியலும்' என்ற மிகையான் இம்மூவகைப் பெயர்க்குஞ் சுட்டுப்பெயர் கூறும்வழி அகரச்சுட்டே கிளக்க என்பது கொள்ளப்படும். 'வினைக்கொருங்கியலும்' என்று வினைக்கே கூறுதலாற் பெயர்க்கு யாது முற்கூறினும் அமையும் என்பது. (எ-டு.) சாத்தன் அவன்; அவன் சாத்தன் எனவரும். இதனாற் சொல்லியது பொருட்பெயரொடு சுட்டுப்பெயர் கூறும் வழி பிற்கூறாது முற்கூறின் பிற பொருள்மேலே நோக்குப்பட நிற்பது கண்டு அவ்வாறு கூறற்க என மரபு வழுக்காத்தவாறு எ-று. (38) எய்தியது விலக்கல் 39. முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே. என் - எனின் எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) மூவகைப் பெயர்களுள் சுட்டுப்பெயரை முற்படச் சொல்லுதல் செய்யுளிடத்தாயின் அமையும் எ-று. (எ-டு.) "அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன், விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி - முகனமர்ந் தன்னை யலர்கடப்பந் தாரணியி லென்னைகொல், பின்னை யதன்கண் விளைவு?" என வரும். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. இதனாற் சொல்லியது முற்கூறலாகாது என்னப்பட்ட சுட்டுப் பெயர் மொழிமாற்றியும் பொருள் கொள்ளும் நயம் செய்யுட்கண் உண்மையான் அதனகத்தாயின் அமையும் என்று நேர்ந்தவா றாயிற்று. (39) சுட்டு முதலாகிய காரணக் கிளவியைச் சொல்லும் முறை 40. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும் சுட்டுப்பெய ரியற்கையின் செறியத் தோன்றும். என் - எனின் இதுவுஞ் சுட்டுப்பெயர் ஆராய்ச்சியே கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டெழுத்தை முதலாகவுடைய காரணப் பொருளை உணரநின்ற சொல்லும் மேற்கூறிய சுட்டுப்பெயர் இயல்பு போலப் பெயர்ப்பின்னே யாப்புறத் தோன்றும் எ-று. (எ-டு.) சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனான் தன் ஆசிரியன் உவக்கும். சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள்; அதனாற் கொண்டவன் உவக்கும் எனவரும். மேற்கூறிய வகைகளெல்லாம் இதற்கும் ஒக்கும். இதுவும் ஆண்டே யடங்காதோவெனின், ஆண்டுச் சுட்டுப் பொருள் வழி வந்தது, ஈண்டு அப்பொருளது குணத்துவழி வந்தது என உணர்க. (40) இயற்பெயரும் சிறப்புப்பெயரும் ஒருங்குவரின் சொல்லும் மரபு 41. சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். என் - எனின் இதுவும் ஒருபொருண்மேல் இருபெயர் வழுக் காத்தலை நுதலிற்று. (இ-ள்.) சிறப்பினாகிய பெயர்ச்சொற்கும் உம்மையாற் பிற பெயர்க்கும் இயற்பெயராகிய சொல்லை முற்படச் சொல்லார்; பிற்படச் சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) ஏனாதி நல்லுதடன், வாயிலான் சாத்தன், படைத்தலைவன் கீரன் என இவை சிறப்புப்பெயர். பிறவும் என்றது குலத்தினான் ஆய பெயரும், கல்வியினான் ஆய பெயரும், தொழிலினான் ஆய பெயரும், பிறவும் என்பது. (எ-டு.) சேரமான் சேரலாதன், சோழன் நலங்கிள்ளி, பாண்டியன் மாறன்: இவை குலப்பெயர். ஆசிரியன் சாத்தன் என்றாற்போல்வன கல்வியினா னாகிய பெயர். வண்ணாரச் சாத்தன், தச்சக் கொற்றன், நாவிதன் மாறன்: இவை தொழிலினா னாகிய பெயர். இதனாற் சொல்லியதுஒருபொருட்கு இருபெயர் கூறும்வழி யாது முற்கூறினும் அமையும் என்று கூறலாகாது. மேற்றொட்டுங் கூறிவந்த மரபானே கூறாவிடின், அப்பொருண்மேற் செல்லாது பிற பொருண்மேல் நோக்குப்படுமென மரபு வழுவற்க என்றவாறாயிற்று. (41) ஒருபொருள்மேல் பலபெயர் வரின் வழுக்காக்குமாறு 42. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே. என் - எனின் ஒருபொருள்மேற் பலபெயர் வழூஉக் காத்தல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு பொருளைக் கருதிய வேறு வேறாகிய பெயர்ச்சொற் பெயர்க்கு வரும் வினையை வேறுபடச் சொல்லின் ஒரு பொருட்குப் பொருந்தும் இடமில்லை; அதனான் வரும் பெயரை யெல்லாஞ் சொல்லிப்பின் தொழில் சொல்லுக எ-று. (எ-டு.) ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என வரும். இனி இரட்டுற மொழிதல் என்னும் ஞாபகத்தான் ஒரு பொருளைக் கருதிய வேறு வேறாகிய பெயர்ச் சொற்கண் வேற்றுத் தொழிலைப் பெயர் தோறுஞ் சொல்லின் ஒரு பொருட்குப் பொருந்தும் இடம் சில என, வேறு அல்லாத ஒரு தொழிலைப் பெயர்தோறும் சொல்லின் ஒரு பொருட்குப் பொருந்தும் இடனுடையதூஉங் கொள்ளப் படும். (எ-டு.) ஆசிரியன் வந்தான், பேரூர்கிழான் வந்தான், செயிற்றியன் வந்தான், இளங்கண்ணன் வந்தான், சாத்தன் வந்தான் எனவரும். இதனாற் சொல்லியது, ஒரு பொருள்மேல் வரும் பல பெயர்க்கண் மரபிலக்கணமும் மரபு வழுவமைதியுங் கூறியவா றாயிற்று. ஞாபகத்தான் கொண்டது மரபு வழுவமைதி. அதனை வழூஉவென்றது என்னை யெனின், ஒருநிலைக்கண் அதுதானே பல பொருள்மேலுஞ் சேறலான் என்பது. (42) எண்ணின்கண் வரும் திணைவழுவமைதி 43. தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென்று எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். என் - எனின் எண்ணின்கண் திணைவழு வமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தன்மையாகிய சொல்லினையும் அஃறிணையாகிய சொல்லினையும் விரவி யெண்ணுமிடத்து உண்டாகிய திணை விராய் வருதலை நீக்கார் கொள்வர் ஆசிரியர் எ-று. என்று என்றது எண்ணசை. (எ-டு.) "யானும் என் னெஃகமுஞ் சாறும்" "அவனுடை, யானைக் குஞ் சேனைக்கும் போர்" என வரும். இதனுள் அவன் வந்தது என்றாற் போலும் திணை வழுவில்லை யெனின், அதுவேயன்று, திணை எண்ணுமிடத்தும் இன மொத்தனவே எண்ணுக என முன் சொல்லினமையானும் திணைவழுவாவது பொருந் தாது விடுவது என்ப தாகலானும், இதுவும் திணைவழூஉ எனப்படும். இவ்வாறு இடர்ப்படுகின்றது என்னை? இதனை மரபு வழுவமைதி என்று கூறுக எனின், 'வியங்கோ ளெண்ணுப் பெயர் திணை விரவு வரையார்' (45) என ஆசிரியர் மேற்கூறுகின்றமையின் இதற்கும் அதுவே கருத்து என்பது பெறுதும். இனிச் சொல்லொடு சொல் முடித்தலே திணைவழு வெனினுஞ் 'சாறும்' என்னும் உயர்திணை முற்றுச்சொல்லே எஃகம் என்னும் அஃறிணையினையும் உளப்படுத்தமையின் வழுவும் இதன்கண் உண்டு என உணர்வது. 'மருங்கின்' என்ற மிகையான், முன்னிலையோடு அஃறிணை எண்ணுதலும், படர்க்கையோடு அஃறிணை எண்ணுதலும் கொள்க. (எ-டு.) நீயும் நின்படைக்கலமுஞ் சாறிர், அவனும் தன் படைக்கலமும் சாறும் எனவரும். இவற்றுள், எண்ணுவழு வல்லது முடிபுவழுவில்லை. இதனாற் சொல்லியது எண்ணுப்பொருட்கண் திணைபற்றிப் பிறக்கும் மரபு வழுவமைதியென உணர்க. சிறுபான்மை திணைவழூஉ வமைதியும் எனவுணர்க. (43) ஒருவன் ஒருத்திப் பெயர் மேல் எண்ணில ஆதல் 44. ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது. என் - எனின் எண்ணும் வகையாற் சொல்லும் ஒருவகைச் சொல் நிகழ்ச்சி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருமைப் பொருட்குரிய எண்ணாய், உயர்திணை இருபாற்கும் பொதுவாகிய ஒருவர் என்னுஞ் சொல்லினின்றும் பொதுமைகெடப் பிரித்துணரப்படும் ஒருவன் என்னுஞ் சொல் லாயினும் ஒருத்தி என்னுஞ் சொல்லாயினும் எண்ணாத பொழுது தன் ஒருமை விளங்குந் துணையல்லது, எண்ணுமுறைக்கண் முதலெண்ணுங் காலும் அவ்வாறே எண்ணுக எ-று. (எ-டு.) ஆண்மக்கள் பலர் நின்றாரை எண்ணுங்காலும் ஒருவர் இருவர் நால்வர் என்று எண்ணுக; பெண்டிர் பலரை எண்ணுங்காலும் அவ்வாறே எண்ணுக. ஒருவன் என்பதும் ஒருத்தி என்பதும் ஒருமையெண்ணே; எண்ணு முறைமைக்கண்ணும் ஆகாமை யென்னையெனின், பொருளான் ஆகாமை இல்லை. ஒருவன் என்பதற்கேற்ப மேலும் இருவன் மூவன் என னகர வீற்றியைபு இன்மையானும், ஒருத்தி என்பதற்கு ஏற்ப இருத்தி முத்தி யென இகரவீற்றியை பின்மையானும், மேல் வருகின்ற ரகரவீற் றோடு ஒருவர் என்பது சொல் லியைபுடைமையின் அதுவே கொள்ளப்பட்டது. இதனாற் சொல்லியது எண்ணின்கட் பிறக்கும் மரபிலக்கணம் என உணர்க. (44) வியங்கோள் எண்ணுப்பெயரது திணை வழுவமைதி 45. வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். என் - எனின் எண்ணின்கண் திணைவழுவமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வியங்கோட்கண் எண்ணப்படும் பெயரைத் திணை விராய்வரும் வரவினை நீக்கார் கொள்வர் ஆசிரியர் எ-று. (எ-டு.) ஆவும் ஆயனுஞ் செல்க எனவரும். தன்னின முடித்தல் என்பதனான், வியங்கோளல்லாத விரவு வினைக் கண்ணுஞ் சிறுபான்மை வருவன கொள்க. அவை ஆவும் ஆயனுஞ் சென்ற கானம் என்பன போல்வன. இதனாற் கூறியது, எண்ணின்கண் திணைபற்றிப் பிறக்கும் மரபுவழூஉவமைதி என உணர்க. (45) வேறுவினைப் பொதுச்சொற்களது முடிபு 46. வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார். என் - எனின் வேறுவினைப் பொதுச்சொற்களது மரபுவழுக் காத்தல் நுதலிற்று. (இ-ள்.) வேறு வினையுடையவாகிய பல பொருளையும் பொதிந்துநின்ற பொதுச்சொல்லை ஒரு பொருளது வினையாற் சொல்லார் உலகத்தார்; அதனான் அவற்றிற் கெல்லாம் பொதுவாகிய வினையானே சொல்லுக எ-று. (எ-டு.) அடிசில் கைதொட்டார், அயின்றார்; அணிகலம் அணிந்தார், மெய்ப்படுத்தார்; இயம் இயம்பினார், படுத்தார் எனவரும். இதனாற் சொல்லியது, பலபொருட்குரிய பொதுப்பெயர்ச் சொல்லை எடுத்து மேலதன் வினை கூறும்வழி மரபு வழுவற்க எ-று. இஃதிலக்கணமாகப் பல பொருளும் ஒரு சொல்லுதற்கண் அடங்கி நில்லாது வேறு வேறு அடிசில் எனவும், அணி எனவும் வரும் வரவும், ஒன்றன்வினை யொன்றற்கு வரும் வரவும் வழுவாக்கிச் "செய்யுண் மருங்கினும்" (சொல். 463) என்னும் அதிகாரப் புறனடையான் அமைத்துக் கொள்க என்பது. (46) இதுவுமது 47. எண்ணுங் காலும் அதுவதன் மரபே. என் - எனின் இதுவும் அது. (இ-ள்.) வேறுவினைப் பொதுச்சொற்களைப் பொதுமையிற் பிரித்து எண்ணுங்காலத்தும் ஒன்றன் வினையாற் கிளவாது பொது வினையாற் கிளத்தல் அதற்கிலக்கணம் எ-று. (எ-டு.) யாழுங் குழலும் பறையும் இயம்பினார் எனவரும். இதனாற் சொல்லியது, அப்பொதுச்சொற்களைப் பிரித் தெண்ணும் வழியும் வினை முடிபின்மரபு வழுவாமற் சொல்லுக என்பதாயிற்று. (47) இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையாமை 48. இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசையா. என் - எனின் உரிச்சொற்கண் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. (இ-ள்.) இரட்டித்துச் சொல்லப்படுஞ் சொற்கள் அவ் விரட்டித்துச் சொல்லுதலிற் பிரித்துச் சொல்லப்படா எ-று. அது இசை, குறிப்பு, பண்பென மூன்று வகைப்படும். (எ-டு.) சுருசுருத்தது, மொடுமொடுத்தது என இவை இசை பற்றி வந்தன. கொறுகொறுத்தன, மொறுமொறுத்தார் என்பன குறிப்புப் பற்றி வந்தன. குறுகுறுத்தார், கறுகறுத்தார் என்பன பண்பு பற்றி வந்தன. இதனாற் சொல்லியது, ஒரு பொருட்கண் இரு சொல்லினை ஒரு பொருள் வேறுபாடு குறியாது கூறின் அது மரபன்று எனினும், அவ்வாறு இரட்டிக் கூறலே அவற்றிற்கு அடிப்பாடாகலின், இனி, அதனை மரபு வழுவற்க என மரபு கூறியவாறாயிற்று. இது மரபு வழுவமைதி போலும். (48) ஒருபெயர்ப் பொதுச்சொல்லைச் சொல்லும் மரபு வழுவாமை 49. ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும். என் - எனின் ஒருபெயர்ப் பொதுச்சொற்கண் மரபுவழுக் காத்தல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு பெயர்ப்பட நின்ற பொதுச்சொல்லை ஆண்டுள்ள பொருள் ஒழிய உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் தெரிந்து கொண்டு வேறே கிளத்தற்குக் காரணம் அப்பொருட்கண் தலைமையும் பன்மையும் என்றவாறு. (எ-டு.) பார்ப்பனச்சேரி என்பது உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது. எயினர் நாடு என்பதும் குற்றிளை நாடு என்பதும் அத்திணைக் கண் பன்மை பற்றிய வழக்கு. கமுகந்தோட்டம் என்பது அஃறிணைக்கண் தலைமை பற்றி வந்தது. இது தானே பன்மை யுள்வழிப் பன்மை பற்றி வந்ததூஉமாம். ஒடுவங்காடு, காரைக்காடு என்பன பன்மை பற்றி வந்தன. சேரி என்பது பல குடியுஞ் சேர்ந்திருப்பது. தோட்டம் என்பது பல பொருளுந் தொக்கு நின்ற இடம். பிறவும் அன்ன. இதனாற் சொல்லியது பல பொருளும் உள்வழிப் பிறப்பதொரு பெயர்ச்சொல்லினை அப் பல பொருளினையும் உடன் கூறியன்றே கூறற் பாலது? அவ்வாறன்றி அப்பொருட் டலைமையும் பன்மையும் பற்றிச் சொல் தொகுத்திறுத்தல் கண்டு அம் மரபுவழு அமைத்தற்குக் காரணம் கூறியவாறாயிற்று. (49) ஒன்றொழி பொதுச்சொல் 50. பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லாம் மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. என் - எனின் ஆண் பெண் என்னும் இருபாற்கும் பொதுவாகிய பெயர்க்கண் வரும் மரபுவழுக் காத்தல் நுதலிற்று. (இ-ள்.) பெயரினும் தொழிலினும் ஆண் பெண் என்னும் இருபாற்குமுரிய பொதுமையிற் பிரிந்து, ஒரு பாற்கண்ணே நடப்பன வெல்லாம் இலக்கண முறைமையின் மயங்கின என்று மாற்றல் கூடா; யாதோ காரணமெனின் அம்மயக்கம் வழக்கின் அடிப்பட்ட வதனான் எ-று. அப்பொதுப்பெயர், உயர்திணை, அஃறிணை எனவும், ஆண்பால் பெண்பாலெனவும் பெயர்வினையொடு வைத்துறழ எண்வகைப் படும். அவையாவன: உயர்திணைக்கண் பெயரிற்பிரிந்த பெண்ணொழி மிகு சொல்லும், ஆணொழி மிகுசொல்லும், தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகுசொல்லும்; அஃறிணைக்கண் பெயரிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகுசொல்லும்; தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும் ஆணொழி மிகு சொல்லும் என இவை. (எ-டு.) வடுகரசர் ஆயிரவர் மக்களையுடையர், பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர் எனவும், அரசனோடு ஆயிரவர் மக்கள் தாவடி போயினார், இன்று இவ்வூரார் எல்லாந் தைநீர் ஆடுப எனவும் உயர்திணைக்கட் பெயரினும் தொழிலினும் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும் ஆணொழி மிகுசொல்லும்; நம் அரசன் ஆயிரம் யானையை யுடையன், நம்பி நூறு எருமை யுடையன் எனவும், இன்று இவ்வூர்ப் பெற்ற மெல்லாம் உழவு ஒழிந்தன, இன்று இவ்வூர்ப் பெற்ற மெல்லாம் அறத்திற்குக் கறக்கும் எனவும் இவை அஃறிணைக்கட் பெயரினுந் தொழிலினும் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும் ஆணொழி மிகு சொல்லுமாம். 'எல்லாம்' என்றதனான் மேற்சூத்திரத்து ஒருபெயர்ப் பொதுச் சொல்லன்றித் தலைமை பற்றி வருவனவும் சிறுபான்மை கொள்க. (எ-டு.) ஆதீண்டுகுற்றி, வயிரக்கடகம் என்னுந் தொடக்கத்தன. இன்னும் அதனானே, இனஞ் செப்பாது ஒரு தொழிற்கண் மிகை விளக்குதற் பொருட்டாக வருவனவும் அமைத்துக் கொள்க. (எ-டு.) இவர் பெரிதும் சொல்லுமாறு வல்லர், இவர் பெரிதுங்கால் கொண்டோடுவர், இவ்வெருது புல்தின்னும் என வரும். இதனாற் சொல்லியது இருதிணையிடத்தும் ஆண்பாற்கும் பெண் பாற்கும் சொல்லுதற்கண்ணே உரிய பெயர்கள், அப்பொதுமை யொழிய ஒரு பாற்கண்ணே யோடுதன் மரபன்று; மரபன்றாயினும் அமையுமென்று மரபுவழு அமைத்தவாறு. இலேசினாற் கொண்டனவும் மரபுவழு வமைதி என உணர்க. (50) திணை விரவிய பெயர்கள் முடியுமாறு 51. பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே. என் - எனின் செய்யுளகத்துத் திணைவழுவமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பல விடத்தானுந் திணை விரவி யெண்ணப்படும் பெயர் அஃறிணை முடிபினவாம், செய்யுளகத்து எ-று. (எ-டு.) 'வடுக ரருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங் குறுகா ரறிவுடை யார்.' என வரும். 'பலவயினானும்' என்றதனாற் சிலவயினான் திணை விரவாது உயர்திணையான் எண்ணி அஃறிணையான் முடிவனவும் கொள்க என்பது. (எ-டு.) "பாணன் பறையன் துடியன் கடம்பன் என்று, இந்நான் கல்லது குடியுமில்லை" (புறம். 335) எனவரும். சிலவயினான் திணை விரவி எண்ணி, உயர்திணையான் முடிவன வுங் கொள்ளாமோ வெனின், சான்றோர் செய்யுட்கண் அவ்வாறு வருவன இன்மையிற் கொள்ளாம் என்பது. 'வடுகரருவாளர்' என்பதூஉம் சான்றோர் செய்யுள் அன்றாலெனின், 'கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும், நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகன் மறவரும் என, நான்குடன் மாண்டதாயினும்' (புறம். 55) என்பதும் உண்மையின் அமையும் என்பது. அஃதேல் 'திங்களுஞ் சான்றோரு மொப்பர்' (நாலடி. 151) எனவும், "வேந்தன் பெரும்பதி மண்ணான் மாந்தர், ஈங்கிம் மூவர் இதற்குரி யாரே" எனவுஞ் சான்றோர் செய்யுளுள்ளும் வருமாலெனின், திங்களும் பதியும் என்பன அஃறிணை முடிபினவெனினும் தாம் உயர்திணைப் பொருள வாகலின், அவை இந்நிகரனவல்ல; இவற்றின்கட் சிறுபான்மை வழுவினையும் இப்பலவயினானும் என்றதனானாதல் அதிகாரப் புறனடையானாதல் அமைத்தும் என்பது. இதனாற் சொல்லியது செய்யுட்கண் திணைவிரவி எண்ணியவழிப் பொதுவாக முடியாது ஒரு திணையான் முடிவது கண்டு அதனை அமைத்தவாறு. இனிப் பொதுமுடிபிலவென்று அஃறிணை முடிபிற் றாதற்குக் காரணம் என்னோவெனின் அவ்வாறெண்ணிய உயர்திணையும் பொரு ளென்னும் பொதுமையான் அஃறிணையின் அடங்கும்; உயர்திணையுள் அஃறிணை அடங்காது என்பது போலும். (51) பலபொருள் ஒருசொல் இருவகை எனல் 52. வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல்லென்று ஆயிரு வகைய பலபொருள் ஒருசொல். என் - எனின் மேற் பல சொல்லான் வரும் ஒரு பொருளுணர்த் தினான்; இனி ஒரு சொல்லான் வரும் பல பொருளுணர்த்துவான் அவற்றின் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையினான் வேறுபடும் பலபொருள் ஒரு சொல்லும், வினையினான் வேறுபடாத பலபொருள் ஒரு சொல்லும் என இருவகைய பலபொருள் ஒருசொல் எ-று. (எ-டு.) மா, வாள், கோல், கன்று, தளிர், பூ, காய், பழம் என்னுந் தொடக்கத்தனவற்றுள் மா என்பதே பலசாதியு முணர்த்திப் பொதுவாய் நின்றது. அல்லன எல்லாம் ஒரு சாதியை உணர நிற்றலின் பொதுமை யிலவால் எனின், அவ்வாறு பொதுமைப்படாவாயினும் விகற்பித்து நோக்கத் தம்முள்ளே சாதி மாறுபாடுடைய என உணர்க. இவற்றான் உலகத்துப் பெயர்கள் எல்லாம் ஒரு பொருளோடும், ஓரிடத்தோடும், ஒரு காலத்தோடும், பண்போடும், தொழிலோடும், உறுப்போடும் படுத்து நோக்கப் பலபொருள் ஒருசொல் எனப்படும் போலும். (52) வினை வேறுபடூஉம் பலபொருளொரு சொல் 53. அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே. என் - எனின் மேற்கூறிய பலபொருள் ஒரு சொல்லினுள் வினை வேறு படூஉம் பலபொருள் ஒரு சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட இரண்டனுள் வினை வேறுபடும் பலபொரு ளொருசொல் வேறுபடுக்கும் வினையானும், வினையொடு வரும் இனத்தானும், சார்பினானும் இப்பொழுது இவன் கூறியது இப்பொருள் எனத் தெளியத் தோன்றும், பொருளாராய்ச்சிப்படும் நிலைமைக்கண் எ-று. (எ-டு.) மாப் பூத்தது, காய்த்தது: இவை வேறுபடு வினை. மாவும் அரசும் புலம் படர்ந்தன, மாவும் மருதும் ஓங்கின: இவை இனம் பற்றி வந்தன. வில் பற்றி நின்று கோல் தா என்பதூஉம், தூம்பு பற்றி நின்று கோல் தா என்பதூஉம், பலகை பற்றி நின்று வாள் தா என்பதூஉம் சார்பு பற்றி நின்றன. உரையிற் கோடல் என்பதனான், பல பொருளொருசொல் வினை இனம் சார்புகளைப் பற்றிப் பலபொருளை ஒழித்து ஒரு பொருண்மேல் நில்லாது, சில பொருளொழித்துச் சில பொருண்மேல் நிற்பதூஉங் கொள்ளப்படும். 'கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும்' (அகம். 330) என்றாற் போல வரும். இனமுஞ் சார்பும் பற்றி வரும் அவையிற்றை வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல் என்றது என்னையெனின், அவ்வினமுஞ் சார்பும் அவ்வினைச் சொல்லை வேறுபடுக்கும்வழி அதனொடு கூடி நின்று வேறு படுப்பின் அல்லது தாமாக நில்லாமை நோக்கி அவையிற்றையும் வினை வேறுபடூஉம் பலபொருள் ஒரு சொல்லென்ப. பொதுச் சூத்திரத்துள் இரண்டையும் ஒன்றாக அடக்கி, ஈண்டு அதன் பாகுபாடு தோன்ற விரித்துக் கூறினவாறு போலும். அதனால் சூத்திரத்து இனமுஞ் சார்பும் என்பனவற்றை முன்னின்ற வினையொடு தொடர்பு படப் பொருள் உரைத்துக் கொள்க. (53) மேலதற்கொரு புறனடை 54. ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும். என் - எனின் மேற் சூத்திரத்திற்கொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய வினை வேறுபடூஉம் பல பொருளொரு சொல், வினையான் வேறுபட நில்லாது பொதுவாகிய வினையொடு பொருந்திப் பொருட் பொதுமைப்பட நின்றுழியும், மேல்வினையான் வேறுபட்டாற் போல இன்னது இதுவென வேறுபட நிற்றலும் வழக்கிடத்து உண்டு எ-று. (எ-டு.) மா வீழ்ந்தது என்பது, வீழ்தல் வினை எல்லா மாவிற்கும் பொதுவே யெனினும், இவ்விடத்து இக்காலத்து இவன் சொல்லுகிறது இம்மாவினை யென்று உணர நிற்கும் என்றவாறு. என்றது முன்கூறிய வினை வேறுபடாப் பலபொரு ளொருசொல்லும் ஒருநிலைமைக்கண் வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொற்போல உணர நிற்கும் எ-று. அஃதேல் பல பொருள் ஒரு சொல்லினை இரண்டாக ஆக்கியது என்னை ஒன்றே ஆகற்பாற்றெனின், அவ்வாறு ஒன்றாயதனையே உணர்தல் வேற்றுமை நோக்கி இரண்டாகப் பகுத்தார் என உணர்க. (54) வினை வேறுபடாஅப் பலபொருளொருசொல் 55. வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். என் - எனின், வினை வேறுபடாப் பலபொருளொரு சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையினான் வேறுபடாத பல பொருள் ஒருசொல் ஆராயுங்காலத்து இன்னது இது எனக் கிளக்கப்பட்ட ஆராய்ச்சியை யுடைய இடத்து நடக்கும் எ-று. (எ-டு.) கன்று நீர் ஊட்டுக என்புழிக் கேட்டான் இன்ன கன்றென்பது அறியானாமே யெனின், ஆன்கன்று, எருமைக் கன்று, பூங்கன்று எனக் கிளந்து சொல்லுக. 'நினையுங்காலை' என்றதனான் கிளவாது கூறினால் கருமச்சிதை வுண்டெனிற் கிளந்து கூறுக; அல்லுழி வேண்டியவாறு கூறுக என்பது பெறப்பட்டது. 'கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறார்' (குறுந். 241) என்புழிக் கருமஞ் சிதைந்தது என்பதின்மையின் கிளவாது சொல்லவும் அமைந்தது என்பது. எனவே பலபொருள் ஒரு சொல் வேறுபடு வினையான் உணரப்பட்டு நிற்றலும், வேறுபடு வினையின்றிப் பொது வினையான் உணரப்பட்டு நிற்றலும், பொதுவினையான் கருமச்சிதை வுள்வழிக் கிளந்து சொல்லப்பட்டு நிற்றலும், கருமச்சிதைவில்வழிப் பொது வினையாற் கிளவாது சொல்லப்பட்டு நிற்றலும் என நான்கு பகுதிப் பட்டது என உணர்க. இச் சூத்திரங்களாற் கூறியது பலபொருள் ஒரு சொல் வினை பற்றிப் பிறக்கும் மரபிலக்கணப் பாகுபாடு என உணர்க. (55) மரபு வழுக்காத்தல் 56. குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி. என் - எனின், இதுவுமொரு செயற்கைப்பொருளின்மேல் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. (இ-ள்.) உலகத் தொப்ப முடிந்த பொருளை ஒவ்வாமற் சொல்லக் குறித்தவன் சொல்லுஞ் சொல்லாதற்கு ஒரு காரணங் கூறிக் கூறுஞ் சொல்லாயிருக்கும் எ-று. (எ-டு.) பல்லார்தோ டோய்ந்து வருதலாற் *பூம்பொய்கை நல்வய லூரநின் றார்புலால் - புல்லெருக்க மாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையான் காதற்றாய் நாறு மெமக்கு. இதனான் சொல்லியது, ஓர் இயற்கைப் பொருளை ஓர் இயற்கையாக ஒரு காரணங்கருதிக் கூறுமிடத்துத் தான் கருதிய காரணத்தினை விளங்கச் சொல்லுகவென ஒரு மரபாராய்ச்சி கூறியவாறு. இதுவும் ஒரு மரபு வழுவமைதிபோலும். (56) * (பாடம்) 'பாய்புனல்' சில உயர்திணைப்பெயர் அஃறிணை முடிபு கோடல் 57. குடிமை ஆண்மை இளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை அரசே மகவே குழவி தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற்றொடு சிவணி முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கின் நிலையின வாயினும் அஃறிணை மருங்கின் கிளந்தாங் கியலும். என் எனின், திணைவழுக்காத்தல் நுதலிற்று. (இ-ள்.) குடிமை என்னும் சொல்லும், ஆண்மை யென்னும் சொல்லும், இளமை யென்னும் சொல்லும், மூப்பு என்னும் சொல்லும், அடிமையென்னும் சொல்லும், வன்மையென்னும் சொல்லும், விருந்து என்னும் சொல்லும், குழு என்னும் சொல்லும், பெண்மையென்னும் சொல்லும், அரசு என்னும் சொல்லும், மகவு என்னும் சொல்லும், குழவி யென்னும் சொல்லும், தன்மை திரிந்ததனாற் பெற்ற பெயர்ச்சொல்லும், உறுப்பிற் பெயர்ச்சொல்லும், காதல் என்ற சொல்லும், சிறப்பித்துச் சொல்லும் சொல்லும், செறுத்துச் சொல்லும் சொல்லும், விறல் என்னும் சொல்லும் என்று சொல்லப்பட்ட பதினெட்டுச் சொல்லும் உட்பட வந்த தன்மையனவும், பிறவும் அவற்றொடு கூட்டித் தொக்கு இவ்வகையாகிய குறிப்பினான் உணரப்படுஞ் சொற்களெல்லாம் உயர்திணையிடத்தே நிலைபெற்றன வாயினும், அஃறிணை யிடத்துச் சொல்லுமாறு போலச் சொல்லப்பட்டுநடக்கும் எ-று. (எ-டு.) இவற்குக் குடிமை நன்று, தீது; ஆண்மை நன்று, தீது; இளமை நன்று, தீது; மூப்பு நன்று, தீது; அடிமை நன்று, தீது; வன்மை நன்று, தீது; விருந்து வந்தது, போயிற்று; குழு நன்று, பிரிந்தது என வரும். இவற்கு என்பதை ஏற்புழியொட்டிக் கொள்க. பெண்மை நன்று, தீது; அரசு வந்தது, போயிற்று; மகநன்று, தீது; குழவி எழுந்தது, கிடந்தது. தன்மை திரிபெயர்: அலிவந்தது, போயிற்று. உறுப்பின் கிளவி: குருடு வந்தது, போயிற்று. காதல்: என் யானைவந்தது, போயிற்று; என் பாவை வந்தது, போயிற்று. சிறப்பு: கண்போலச் சிறந்தாரைக் கண்ணென்ற லும், உயிர்போலச் சிறந்தாரை உயிரென்றலுமாம்; ஆதலின், அஃது "ஆலமர்செல்வன் அணிசால் பெருவிறல் - போலவரும் எம் உயிர்" (கலி. 81), என் உயிர் வந்தது, போயிற்று; என் கண் வந்தது, போயிற்று எனவும் வரும். செறற்சொல்: கெழீஇயிலி வந்தது, போயிற்று; பொறியறை வந்தது, போயிற்று. விறற்சொல்: பெருவிறல் வந்தது, போயிற்று எனவரும். 'அன்ன பிறவும்' என்றதனால் பேடிவந்தது, பேடிகள் வந்தன, வேந்து வந்தது, வேள் வந்தது, குரிசில் வந்தது, ஒரு கூற்றம் வந்தது, புரோசு வந்தது, உலகு வந்தது என்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. இவற்குக் குடிமைநன்று என்றதன் பொருள் இக் குடிமகன் நல்லன் என்னும் பொருண்மையாகக் கொள்க. பிறவும் இவ்வாறே உயர்திணை யாக உணர்க. குடிமை என்பது குடியாண்மை எனவும், ஆண்மை என்பது ஆண்மகன் எனவும், இளமை என்பது இளவல் எனவும், மூப்பு என்பது முதுமை எனவும், அடிமை என்பது அடி எனவும், வன்மை என்பது வலி எனவும், விருந்து என்பது புதுமை எனவும், குழு என்பது கூட்டம் எனவும், திரள் எனவும், ஆயம் எனவும், அவை எனவும், பெண்மை யென்பது பெண் எனவும், குழவி என்பது பிள்ளை எனவும், மதலை எனவும் பிறவும் வாய்பாடுற்றமை அறிக. இவற்றுள் ஆண்மை பெண்மை என்றாற்போல்வன விரவுப் பெயராய் நிற்கும். குடிமை அடிமை அரசு என்றாற்போல்வன உயர்திணைப் பெயராய் நிற்கும். இவ்விகற்பமும் அறிந்து கொள்க. இக்குடிமை முதலியன எல்லாம் உயர்திணைப் பண்பாகலான் அப்பண்புச்சொல் தன் பொருண்மேல் ஒருஞான்றும் நில்லாது தன்னையே யுடைய பொருண்மேலே தன்பொருளுந் தோன்றிப் பிரியாது நின்றமை யின் உயர்திணை யாயிற்று என்பது. அவையிற்றிற்கடி பண்பு என்பது போதரல் வேண்டிக் குடிமை யாண்மை யெனப் பண்பு வாய்பாடு படுத்துக் கூறினார் போலும். தன் பொருண்மேல் நில்லாது என்றது என்னை, இளமை, மூப்பென்றாற்போல்வனவற்றிற்கு அப்பண்புதன்மேலும் வழக்குண் டால் எனின், அவ்வாறு வருவனவுஞ் சிறுபான்மை உளவேனும் அடிமை, அரசு, மகவு, குருடு, கூன் என்றாற் போல்வன பொருண்மே லன்றிப் பண்பின்மேல் வழங்க லின்மையின் அவற்றிற் கெல்லாம் முன்கூறியதே நினைவென்பது. இனி இவையெல்லாம் அப்பண்பின்மேல எனவும், பண்புகொள வருதலென்னும் ஆகுபெயராற் பொருண்மேலே நின்றன எனவும், அவற்றுக்கண்ணது ஈண்டு ஆராய்ச்சி யெனவும், அவற்றுப் பண்புப் பொருண்மேல் வழக்கில்லனவற்றை இறந்த வழக்கெனவும் பிறவாறும் கூறுவாருமுளர். அதுவும் அறிந்து கொள்க. இதனாற் சொல்லியது பண்பு நிமித்தமாகப் பொருள் நிகழுஞ் சொற்கள் பலவுந் தம் பொருட்கேற்ப உயர்திணையாய் முடியாது சொற் கேற்றவாற்றான் அஃறிணையான் முடிவனகண்டு அதனை ஈண்டு அமைத்தவாறு என உணர்க. (57) இதுவுமது 58. காலம் உலகம் உயிரே உடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா உயர்திணை மேன. என் - எனின் இதுவுந் திணைவழுக்காத்தல் நுதலிற்று. (இ-ள்.) காலமென்னுஞ் சொல்லும், உலகமென்னுஞ் சொல்லும், உயிர் என்னுஞ் சொல்லும், உடம்பு என்னுஞ் சொல்லும், இருவினையை யும் யாவர்க்கும் வரைந்தூட்டுந் தெய்வத்தின்மேல் பால் எனவருஞ் சொல்லும், வினை என்னுஞ் சொல்லும், பூதம் என்னுஞ் சொல்லும், ஞாயிறு என்னுஞ் சொல்லும், திங்கள் என்னுஞ் சொல்லும், சொல் என்னுஞ் சொல்லும் என்று வருகிற பத்துச் சொல்லினொடு பிறவும் அத்தன்மையவாகிய உயர்திணைப் பொருண்மேல் வருஞ் சொற்கள் எல்லாம் உயர்திணையிடத்துப் பால் உணர்த்துஞ் சொல்லான் பிரித்துச் சொல்லப்படா; அஃறிணைப்பாலான் சொல்லப்படும் எ-று. (எ-டு.) இவற்குக் காலமாயிற்று; உலகு பசித்தது; உயிர் போயிற்று; உடம்பு நுணுகிற்று; இவர்க்குப் பாலாயிற்று; வினை நன்று, வினை தீது; இவனைப் பூதம் புடைத்தது; ஞாயிறு எழுந்தது, பட்டது; திங்கள் எழுந்தது, பட்டது; சொல் நன்று, தீது. 'பிறவும்' என்றதனான் செவ்வாய் எழுந்தது, பட்டது; வெள்ளி எழுந்தது, பட்டது என வரும். என்னை இவை உயர்திணையாயினவாறு எனின், காலம் என்றது காலனை; உலகமென்றது உலகத்தாரை; உயிர் என்றது உயிர்க்கிழவனை; உடம்பு என்றது அஃது உடையானை; பால் என்பது இன்பத் துன்பங்களை வகுப்பதொரு தெய்வம்; வினையென்பது வினைத்தெய்வம்; பூதம் என்பது தெய்வப்பகுதி; ஞாயிறு, திங்கள் என்பன தெய்வம்; சொல் என்பது சொன்மடந்தையை. ஆயின், இவற்றை மேலவற்றோடொன்றாக ஓதாதது என்னை யெனின், அவையெல்லாம் பண்படியாகப் பொருள்மேல் நிகழ்தலின் அவற்றை 'முன்னத்தின் உணருங் கிளவி' என வேறொரு வகையான் கிளந்து, கிளவாது வரும் பெயரினை வேறொரு வகையாக்கிக் கூறினார் என உணர்க. இவற்றுள் பூதம், ஞாயிறு, திங்கள் என்பன ஒழித்து அல்லன எல்லாம் ஆகுபெயரான் அஃறிணைப் பெயர் உயர்திணைமேல் நின்றன என உணர்க. இதனாற் சொல்லியது, இவையும் சில உயர்திணைப் பெயர் தம் பொருட்டாகுபெயராய் அதற்கேற்ப முடியாது சொற்கேற்ப முடிவதனைக் கண்டு, அதனை அமைத்தவாறாயிற்று. (58) 'குடிமை ஆண்மை' என்பனவற்றிற்குப் புறனடை 59. நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே. என் - எனின், 'குடிமை ஆண்மை' என்றதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நின்ற வாய்பாட்டானே நின்று உயர்திணை முடிபு பெறுதல் இக் காலம், உலகம் என்னுந் தொடக்கத்தனவற்றிற்கு இயல் பன்று. எனவே மேற்கூறிய ஆண்மை என்னுந் தொடக்கத்தனவற்றிற்கு இயல்பு எ-று. (எ-டு.) குடிமைநல்லன், வேந்துசெங்கோல் நல்லன் என வரும். உயர்திணை முடிபிழந்து நின்றனவற்றை அம்முடிபுடைய என்று எய்துவித்தவாறு. இம்முடிபு இலக்கணமாதலின், இதுவே பெரும்பான்மை யாகற்பாற்று எனின், இலக்கணமே எனினும் வழக்குப் பயிற்சியான் அதுவே பெரும்பான்மை யாகற்பாற்று என உணர்வது. இச்சொற்கள் ஈறு வேறுபட்டு குடிமகன், வேந்தன், ஆண்மகன் என நிற்பனவற்றிற்கு உயர்திணை முடிபே முடிபெனக் கொள்க. இதனாற் சொல்லியது மேற்கூறிய இருவகைத் திணைவழு வினையும் ஒருவகைத் தன்மேல் முடிபுடையவாயும் வருவன கண்டு அவற்றின் உண்மையும், இவற்றின் இன்மையும் உடன்கொண்டு கூறியவாறாயிற்று. (59) காலம் உலகம் என்பனவற்றிற்குப் புறனடை 60. இசைத்தலும் உரிய வேறிடத் தான. என் - எனின், 'காலமும் உலகமும்' என்பதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காலமும் உலகமும் என்னுந் தொடக்கத்தன உயர்திணை முடிபு பெறுதலும் உடைய; அவ்வோதிய வாய்பாடு ஒழிய வேறு வாய்பாடாயின விடத்து எ-று. (எ-டு.) காலம் என்பது மகரவீறு; காலன் என்னும் னகரவீறாய் நின்றுழிக் காலன் கொண்டான் என முடியும். உலகத்தோர் பசித்தார், உயிர்க்கிழவன் போயினான் என்பனவும் அவை. இதனாற் சொல்லியது. மேல் 'நின்றாங்கிசைத்தல் இவணியல் பின்று' என்ற விலக்கு, இவண் எனக் காலமும் உலகமும் என்னும் வாய்பாட்டினையே நோக்கி விலக்காது, அப் பொருண்மேல் வரும் வாய்பாடுகளெல்லாம் விலக்குவது போலும் நோக்கப்பட நின்றது என்று கொள்ளினுங் கொள்ளற்க, என்று அவை வேறிடத்தாயின் இசைக்கும் எனவுங் கூறவேண்டிக் கூறினார் என்பது. (60) எடுத்த மொழி இனம் செப்பலும் உண்மை 61. எடுத்த மொழிஇனம் செப்பலும் உரித்தே. என் - எனின், இஃது அருத்தாபத்தி மேற்று. (இ-ள்.) விதந்தமொழி தன்னினத்தைக் காட்டி நிற்றலும் உரித்து; உம்மையான் காட்டாது நிற்றலும் உரித்து எ-று. (எ-டு.) கீழ்ச்சேரிக் கோழி அலைத்தது என்புழி மேற்சேரிக் கோழி அலைப்புண்டது என்பது சொல்லாமையே முடிந்ததாம். குடங் கொண்டான் வீழ்ந்தான் எனக் குடம்வீழ்தலும் முடிந்தது. இவை இனஞ் செப்பின. ஆ வாழ்க, அந்தணர் வாழ்க என்பன இனஞ் செப்பாதன. இவையும் இனம் செப்பின என்னாமோ எனின், சொல்லுவான் கருத்து அஃதன்மையானும், மறுதலை பல உள்வழி இனஞ் செப்பாமை யானும் இனஞ்செப்பாவாயின என உணர்க. (61) பன்மை சுட்டிய பெயர்கள் முடியுமாறு 62. கண்ணும் தோளும் முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறும் கடப்பா டிலவே தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே. என் - எனின், திணைவழுக்காத்தல் நுதலிற்று. (இ-ள்.) கண்ணும் தோளும் முலையும் பிறவும் ஆகிய பன்மைப் பொருளை உணர்த்திய சினை நிலைமை உணர நின்ற சொற்கள் தம் பன்மையான் கூறுதலையே இலக்கணமுறையாக உடைய அல்ல; அதிகாரத்தானும் உயர்திணையாய் முடிதலுடைய; எப்பொழுதுமோ எனின், அற்றன்று; தமது வினைக்கேற்ற எழுத்தினான் சொல்ல நினையாது தம் முதல்வினையான் சொல்லக் கருதிய பொழுது எ-று. (எ-டு.) கண் நல்லள், தோள் நல்லள், முலை நல்லள் என்பனவாம். பிறவும் என்பதனான் புருவம் நல்லள், காது நல்லள் எனவும் வரும். திணைவழு அதிகாரம் கூறி வாராநின்றதன் இடையே "எடுத்த மொழி என்று" இயைபில்லது கூறிய அதனான் ஒருமைச்சினை உயர்திணையாய் முடிவனவுங் கொள்க. (எ-டு.) மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என வரும். இதனாற் சொல்லியது, உயர்திணைச் சினைப் பொருள் தனக்கேற்ற சினை வினை கொள்ளாது முதல்வினை கொண்டு முடிவன கண்டு அதனை அமைத்தவாறு என்க. 'வினையிற் றோன்றும் பாலறி கிளவி' (சொல்.11) முதலாக இத்துணையுஞ் சென்ற ஆராய்ச்சி எண்வகை இலக்கணத்துள்ளும் எழுவகை வழுவாராய்ச்சி என உணர்க. (62) கிளவியாக்கம் முற்றிற்று. 2 வேற்றுமையியல் வேற்றுமை ஏழ் எனல் 63. வேற்றுமை தாமே ஏழென மொழிப. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமை ஓத்து என்னும் பெயர்த்து. வேற்றுமை என்பன சில பொருளை உணர்த்தினமையான் காரணப் பெயராயிற்று. மற்று, வேற்றுமை என்னும் பொருண்மை என்னையெனின், பொருள்களை வேற்றுமை செய்தலின் பெயர் முதலிய எட்டற்கும் வேற்றுமை என்னும் பெயராயிற்று. யாதோ வேற்றுமை செய்தவாறெனின், ஒரு பொருள் ஒருவழி ஒன்றனைச் செய்யும் வினைமுதலாகியும் (1), ஒருவழி ஒன்று நிகழ்தற்கு ஏதுவாகியும் (3), ஒருவழி ஒன்று செய்தற்குக் கருவி யாகியும் (3), ஒருவழி ஒன்று செய்தற்குச் செயப்படுபொருளாகியும் (2), ஒருவழி ஒன்று கொடுப்பதனை ஏற்பதாகியும் (4), ஒருவழி ஒன்றற்கு உவமமாகியும் (5), ஒருவழி ஒன்று நீங்குதற்கு இடமாகியும் (5), ஒருவழி ஒன்றற்கு எல்லையாகியும் (5), ஒருவழி ஒன்றற்கு உடைமையாகியும் (6), ஒருவழி ஒன்று செய்தற்கு இடமாகியும் (7), ஒருவழி முன்னிலை யாதற் பொருட்டு விளிக்கப்படுவதாகியும் (8), இன்னோரன்ன பிறவுமாகிய பொதுப்பட நிற்றலுடைத்து. அவ்வாறு நின்றதனைப் பெயர் முதலியன ஒரோ ஒன்றாகச் சென்று அப்பொதுமையின் வேற்றுமைப்படுத்தி ஒரு பொருட்கு உரிமை செய்து நிற்றலின் வேற்றுமை எனப்பட்டது. இவ்வாறு எட்டற்கும் பொதுப்பட நின்றதொரு பொருணிலையல்லது பொதுப்பட நின்றதொரு சொன் னிலைமை வழக்கிடைக் காணாமால் எனின், அவ்வாறு வழக்கில்லை எனினும் சாத்தன், சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண், சாத்தா என ஒன்றன் வடிவோடு ஒன்றன் வடிவு ஒவ்வாது, இவ்வேற்றுமைகள் வரும்வழிச் சாத்தன் என்னும் வாய்பாடு எங்கும் நின்றமையின் பொதுநிலை என்பது உய்த்து உணரப்படும். எழுவாய் அதனொடு வேற்றுமைப்பட்டதோ எனின், சாத்தனை என்றது போல்வதொரு வாய்பாடு இல்லெனினும் அவ்வேழனோடும் ஒவ்வா நிலைமை உடைமையின் இதுவும் ஒரு வாய்பாடாயிற்று என உணர்க. அன்றியும் செயப்படுபொருள் முதலாயினவற்றின் வேறு படுத்துப் பொருண்மாத்திரம் உணர்த்தலின், எழுவாய் வேற்றுமை யாயிற்று என்பாரும் உளர். அல்லதூஉம், வேற்றுமை என்பது பன்மை பற்றிய வழக்கெனினும் அமையும். இவ்வேற்றுமை செய்யும்வழிப் பலசொல் ஒரு பொருளாகியும் பல பொருள் ஒரு சொல்லாகியும் வரும். இனிப் பலசொல் ஒருபொருளாகி வரும்வழி, பல வேற்றுமை பல சொல்லாகியும், ஒரு வேற்றுமை பல சொல்லாகியும் வரும். அவையாமாறு அறிந்துகொள்க. மேலோத்தினோடு இவ்வோத்தியைபு என்னையோ எனின், மேல் ஓத்தினுள் நான்கு வகைப்பட்ட சொற்களும் பொருள்கண் மேலாமாறு சொல்லிப் போந்தார். அவற்றுள் முதலது பெயர்ச்சொல்; அதற்கு இலக்கணம் உணர்த்திய எடுத்துக் கொண்டார் என்பது. யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின், எல்லாப் பெயர்களும் எழுவாயாகிப் பயனிலை கோடலும், ஒருவழி எழுவாயாகாது வேறொரு நிலைமையவாய் நிற்றலும், உருபேற்றலும், ஒருவழிச் சிலபெயர் உருபேலாது நிற்றலும், காலந் தோன்றாமை நிற்றலும், ஒருவழித் தொழிற்பொருளொடு கூறியக்கால் காலந்தோற்றி நிற்றலும், விளியேற்று நிற்றலும், சில பெயர் விளியாக நிற்றலும், இன்னோரன்ன பிறவும் பெயரது இலக்கணமென உணர்த்தினார் என்பது. பொது இலக்கணமேயன்றி உருபிலக்கணம் உணர்த்தினாரால் எனின், அவ்வாராய்ச்சி பெயரது இலக்கணமாய்விடுதல் உடைமையின் அமையும் என்பது. மற்று இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், தன்னான் உணர்த்தப்படும் பொருளை இனைத்தென்று வரையறுத்தல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை என்று சொல்லப்படுவன தாம் ஏழென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. தாம் என்பது சந்தவின்பம். ஏ என்பது ஈற்றசையாம் என்க. (1) விளியொடு கூட்ட வேற்றுமை எட்டெனல் 64. விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. என் - எனின், ஒழிந்த வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) விளிகொள்வதன்கண் விளியோடு எட்டு வகைப்படும் வேற்றுமை என்றவாறு. விளிகொள்வது என்பது, பெயரின்கண் விளி என்றவாறு. விளியோடு எட்டு என்னாது பெயர்க்கண் விளி என்றதனான் பெற்றது என்னையெனின், மற்றை வேற்றுமை போலப் பெயர்ப்புறத்துப் பிரிய வாராது, அப்பொருளே ஈறுதிரிதல், முதலாய வடிவினதாகி வருதல் உணர்த்தியது என்றவாறு. 'வேற்றுமை தாமே எட்டு' என ஒரு சூத்திரமாகக் கூறாதது என்னை யெனின், இதன் சிறப்பின்மை அறிவித்தற்கு வேறு கூறினார் என்பது. யாதோ சிறப்பின்மை எனின், விளியேலாப் பொருளுண்மையின் என்பது. அஃதேல் பயனிலை கொள்ளாப் பெயரும் உளவெனின், அதனோடு இதனிடை வேற்றுமை உண்டு. அஃது ஒருவழிக் கொள்வது ஒருவழிக் கொள்ளாதாய் நிற்கும். அதுதானுஞ் சிறுபான்மை. இஃது யாண்டுங் கொள்ளாதென கொள்ளாதாயே நிற்கும் என்பது. இவ்வாறன்றி எல்லாஞ் சொல்லார் என்பதும் ஒன்று. பல சொல்லும் உள எனினும், ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்பன பெருவழக்கின ஆகலின் உருபினுள் அவ்வாறனையுமே கொண்டு அவற்றோடு எழுவாயினையும் விளியினையுங் கூட்டி எட்டு என்றார் என்பது. (2) வேற்றுமைகளின் பெயரும் முறையும் 65. அவைதாம், பெயர் ஐ ஒடு கு இன்அது கண்விளி என்னும் ஈற்ற. என் - எனின், வேற்றுமைகளின் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் வேற்றுமை என்று சொல்லப்பட்டவைதாம் பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி இறுதியாக உடையன எ-று. அப்பெயர் பெயர். அம்முறை: எழுவாய் வேற்றுமை ஏனை வேற்றுமைக்கும் சார்பாதல் நோக்கி முன் வைக்கப்பட்டது. விளி வேற்றுமை, எல்லாவற்றினுஞ் சிறப்பின்மை நோக்கிப் பின் வைக்கப் பட்டது. ஐயினை இரண்டாவதென்றும், ஒடுவினை மூன்றாவ தென்றும், இவ்வாறே இவை கூறுதற்குக் காரணம் உண்டோ எனின், காரணம் இல்லை; காரணம் இல்லையேல் வேண்டியவாறு கூறினும் அமையும் எனின், அமையாது; முன்னூலுள் ஓதிய முறை அதுவென்பது. (3) எழுவாய் வேற்றுமை 66. அவற்றுள், எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. என் - எனின், நிறுத்த முறையானே முதற்கண் நின்ற பெயர் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட வேற்றுமை எட்டனுள் முதல் வேற்றுமையாவது பெயர்ச்சொல், பயனிலைப்பாடு தோன்ற நிற்கும் நிலைமை எ-று. (எ-டு.) ஆ, மக்கள் எனவரும். விளியோடு இதனிடை வேற்றுமை என்னை யெனின், ஈறு திரிதலும், ஈறு திரியாமையும், ஈறு திரியாதவழி ஒருவழிப் படர்க்கை யாதலும், முன்னிலை யாதலும் எனக் கொள்க. (4) எழுவாய் பயனிலை ஏற்குமாறு 67. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை உரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே. என் - எனின், மேற் சொல்லப்பட்ட எழுவாய் வேற்றுமை என்பது, ஆறுவகைப்பட்ட பயனிலையும் ஏற்று நிற்பது என்றவாறு. (இ-ள்.) பொருட்டன்மை கருதிவரும் வரவும், ஏவலைக் கொள்ள வரும் வரவும், தனது தொழிலினைச் சொல்ல வரும் வரவும், வினாவுதற் பொருண்மைக்கு ஏற்று வரும் வரவும், தனது பண்பினைக் கொள்ள வரும் வரவும், பெயர்கொண்டு முடிய வரும் வரவும் என்று சொல்லப்பட்டவை யனைத்தும் வரும் பெயர்ச்சொல்லது பயனாகிய நிலைமை எ-று. என்றது, முதல் வேற்றுமையாவது இவ் ஆறு பொருண்மையுந் தோன்ற நிற்பது என்றவாறு. அவ்வப் பொருண்மையை விளக்குவன பின்வருஞ் சொற்கள் என்றவாறு. 'பெயர்ப் பயனிலை' யென்றது பின் வருகின்ற சொற்களே யன்று, அவ்வச் சொல்லின் பொருண்மையினைக் குறித்த பெயர் நிற்கும் நிலைமை வேறுபாடுகளை எ-று. நிலை என்னாது பயனிலை என்றது அப்பெயர்களைக் கேட்பின் இப்பொழுது இப்பொருள் இன்ன நிலைமைத்து என உணரும் உணர்ச்சிக்குப் பயன்பட நிற்கும் நிலைமைய என்றற்கு என்பது. (எ-டு.) 'பொருண்மைசுட்டல்': ஆ உண்டு என்பது. இதன் பண்பு முதலியவற்றைக் கருதாது பொருட்டன்மையைக் கருதி நிற்றலான் பொருண்மை சுட்டல் எனப்பட்டது. உண்மை என்பது பண்பன்றோ எனின், அன்று. அப்பொருட்டன்மை என்பது போலுங் கருத்து. ஆ இல்லை என்பதும் இதன்கட் பட்டடங்கும். 'வியங்கொள வருதல்': ஆ செல்க என்பது. இது மேற் சொல்லு கின்ற வினைநிலையுணர்த்தலுள் அடங்கும். ஆயினும் வேறுபாடுண்டு. அது தன்கண் நிகழ்ந்ததொரு வினை. இது மேல் தன்கண் தொழில் நிகழ்வதாக ஒருவனான் ஏவப்பட்டு நிற்கும் நிலை என உணர்க. 'வினைநிலையுரைத்தல்': ஆ கிடந்தது என்பது. 'வினாவிற் கேற்றல்': ஆ யாது என்பது. 'பண்பு கொள வருதல்': ஆ கரிது என்பது. இதுவும் வினைநிலை யுரைத்தலுள் அடங்காதோ எனின், அடங்கும் எனினும் வினைக் குறிப்பாகலான் வேறு கூறினார் என்பது. 'பெயர் கொள வருதல்': ஆ பல,ஆ இது என்பது. மேற் சூத்திரத்து எழுவாய் வேற்றுமை 'பெயர்' என்னாது 'தோன்று நிலை' என்றதனான் பெயர்கள் ஒரோவழி எழுவாயாகத் தாம் பயனிலை கொள்ளாது மற்றோர் எழுவாயின் பயனிலையொடு தாமும் பயனிலை யாயும், ஒரோவழித் தாமே பயனிலையாயும், ஒரோவழி எழுவாயோடு இயைபு படாது பயனிலைக்கு அடையாயும் பிறவாறாயும் வருவனவும் உள என்பது கொள்ளப்பட்டது. (எ-டு.) தானும் பயனிலையாயது, ஆயன் சாத்தன் வந்தான் என்பது. இது ஆயன் வந்தான், சாத்தன் வந்தான் என வினைப் பின்னும் நிற்கும் என்பது. சாத்தன் என்பது எழுவாய். ஆயன் என்பதன் முன்னே பயனிலையாய் நின்றதன்றாலோ எனின், அவ்வாறும் ஆம் எனினும் சொல்லுவான் கருத்து அன்னதன்று என்பது. ஆயனாகிய சாத்தன் என்பது பண்புத் தொகையாமாலோ எனின், ஓசை பிளவு பட்டிசைத்தலான் ஆகாது என்பது. தானே பயனிலையாயது, ஆ பல என்பது. பயனிலைக்கு அடையாயது, சாத்தன் தலைவனாயினான் என்பது. பிறவாறாய் வருதல் - ஆசிரியன் பேரூர் கிழான் செயிற்றியன் இளங்கண்ணன் சாத்தன் வந்தான் என்பது, ஒரு பெயர் எழுவாயாய் நில்லாது பல பெயரும் ஒருங்கே எழுவாயாய் நிற்பன எனக் கொள்க. இன்னும் இவ்விலேசினான், பெயர்கள் எழுவாயாய்ப் பயனிலை கொண்டமைந்து முற்றிநில்லாது, எழுவாய் தானும் பயனிலையுங்கூடி ஒரு சொல் நீர்மைப்பட்டு மற்றோர் எழுவாய்க்குப் பயனிலையாய் வருவனவும் கொள்ளப்படும். அவை சினையின் தொழிலை முதற் கேற்றிக் கூறலும், பண்பின் தொழிலைப் பண்படைந்த பொருட்கு ஏற்றிக் கூறலும், தொழிலின் வினையைத் தொழிலடைந்த பொருட்கு ஏற்றிக் கூறலும், இடத்து நிகழ்பொருளின் தொழிலை இடத்திற்கு ஏற்றிக் கூறலும் என இன்னோ ரன்ன பலவகைப்படும். (எ-டு.) சினை வினை முதற்கு ஏற்றிக் கூறல் சாத்தன் கண்நல்லன், இவ்யானை கோடு கூரிது என்பன போல்வன. பண்பின் வினை பண்படைந்த பொருட்கு ஏற்றிக் கூறல் இம்மணி நிறம் நன்று, இம்மலர் நாற்றம் பெரிது என்பன. தொழிலின் வினையைத் தொழிலடைந்த பொருட்கு ஏற்றிக் கூறல்; இக்குதிரை நடை நன்று, இத்தேர் செலவு கடிது என்பன. இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்திற்கு ஏற்றிக் கூறல் இவ்வாறு நீர் ஒழுகும், இவ்வயல் நெல் விளையும் என்பன. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. இன்னும் அவ்விலேசானே எழுவாய்க்குப் பயனிலையாய் வந்த பெயர், தானும் எழுவாயாய்ப் பயனிலை கொண்டும், உருபேற்றும் வருவனவுங் கொள்ளப்படும். (எ-டு.) இறைவன் அருளல் எம் உயிர் காக்கும், எனவும், இறைவன் அருளலின் யாம் உயிர் வாழ்தும் எனவும் வரும். இஃது ஆறாவதாம் எனினும் நோக்கு அஃதன்று என்பது. பயனிலை முன்னும் பின்னும் நிற்றலும், பயனிலை சில சொல் இடைக்கிடப்ப வருதலும் ஈண்டே கொள்ளப்படும். ஆ செல்க, செல்க ஆ - என முன்னும் பின்னும் நின்றது. ஆ சாத்தனுய்ப்ப, எருமை தன் கன்றினொடு மருங்காக, தானிவ்வூரி னின்றும் அவ்வூரின்கட் செல்லும் - இஃதிடைக் கிடந்த சொல்லொடு வந்தவாறு. இறைவன் அருளல் என்பது எழுவாயொடு பொருளியைபு இன்றாயினும், வினைமுதற் பொருள் தோன்ற வந்தமையின் பெயர் கொளவருதல் என வழங்கும் என்பது. "சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே" (நற். 50) எனவும், "கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கி" (புறம். 117) எனவும் வரும் பண்புகளும் பொருளியைபில எனினும் ஒருவாற்றான் பெயர் கொள்ள வந்ததன் மேற்பட்டு அடங்கும் என்பது. எழுவாய் வேற்றுமையின் விகற்பங்கள் எல்லாம் வழக்கினகத் தறிந்து இவ்விலேசினகத்து அமைத்துக் கொள்க. (5) தொகைப்பெயரும் பயனிலை கொள்ளுதல் 68. பெயரி னாகிய தொகையுமா ருளவே அவ்வும் உரிய அப்பா லான. என் - எனின், தனிப்பெயரேயன்றித் தொகைப்பெயர்களும் பயனிலை கொள்ளும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டு பெயர்ச்சொன் முதலாக வுளவாகிய தொகைச் சொற்களும் உள எ-று. (எ-டு.) யானைக்கோடு உண்டு. செல்க, வீழ்ந்தது, யாது, பெரிது பல - என வரும். இவை பெயரினாகிய தொகை. கொல்யானை உண்டு, செல்க, வீழ்ந்தது, யாது பெரிது, பல - என இவை வினையினாகிய தொகை. தொகையும் பயனிலை கொள்ளும் என்கின்றமையின் இவையும் எழுவாயாகற்பாலபிற; அதற்கு விதியாதோ எனின், எச்சவியலுள் "எல்லாத் தொகையும்" (சொல். 420) என்னும் சூத்திரத்துக் கூறப்படும் என்பது. (6) பெயர்கள் அனைத்தும் பயனிலை கோடல் செவ்விது ஆதல் 69. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப. என் - எனின், பெயர் உருபேற்கும்வழிப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எவ்விடத்துப் பெயரும் விளங்கத்தோன்றி மேற் சொல்லப்பட்ட வேற்றுமையாய்ப் பயனிலை கொள்ளும் இயல்பின் கண்ணே நிற்றல் செவ்விது என்று சொல்லுப ஆசிரியர் என்றவாறு. மேற்காட்டின இவ்விதி மேல் (சொல். 67) பெற்றாமன்றோ எனின், மேல் பெற்றதனையே ஈண்டும் தந்து வலியுறுத்தார், பிறிதொன்று விளக்கிய என்பது. அஃது யாதோ எனின், பயனிலை ஏற்றலிற் செவ்விது என, உருபேற்றலும் பெயர்க்கு இலக்கணமன்றே? அதனிற் செவ்விய ஆகாதனவும் உள என்பது. நீயிர் என்பது பெயர். நீயிரை என உருபேலாது. இது நும் என்னும் பெயரது அல்வழிப் புணர்ச்சித் திரிபு என்பது. நும்மை என உருபேற்கு மால் எனின், பிற சந்தித் திரிபு போல நிலைமொழி நிலை தோற்ற நில்லாது திரிந்து பிறிதொரு பெயர் நிலைமைப்பட நிற்றலின் வேறொரு பெயர் என வேண்டியது போலும். இதனகத்து விகற்பமெல்லாம் உரையிற் கொள்க. இந்நிகரன ஓருருபும் ஏலாதன. அவ்வாய்க் கொண்டான் என்பது, அவ்வாய்க்கட் கொண்டான் என ஏழன் உருபேலாதது. இந்நிகரன பிற உருபேற்குமேனும் அறிந்துகொள்க. (7) உருபு பெயரது இறுதிக்கண் வருதல் 70. கூறிய முறையின் உருபுநிலை திரியாது ஈறுபெயர்க் காகும் இயற்கைய என்ப. என் - எனின், உருபேற்றலும் பெயர்க்கிலக்கணம் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் கூறப்பட்ட முறைமையினிடை நின்று வருகிற ஐ முதலாகிய உருபும், தத்தம் வாய்பாட்டு நிலைமையின் வேறாகாது பெயர்க்கீறாய் வரும் இயல்பினையுடைய என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண் என வரும். மேல் "குஐ ஆன் என வரூஉம் இறுதி" (சொல். 110) என்று செய்யுட் கண் உருபீறு திரிபு கூறுகின்றார் ஆதலின், அஃதொழிய வழக்கினுள் திரிபில்லை என்றற்கு 'நிலை திரியாது' எனப்பட்டது என்க. (8) பெயர்ச்சொற்கள் காலங்காட்டாமை எனல் 71. பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே. என் - எனின், இதுவும் பெயர்க்கு ஓர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயராகிய நிலைமையுடைய சொற்கள் காலந் தோன்றா; யாண்டுமோ எனின், அன்று; காலந் தோன்றுதற்குப் பொருந்தும் ஒரு கூற்றுத் தொழிற்பெயரல்லாத விடத்து என்றவாறு. என்றது பெயர்தாம் பெயர்ப்பெயரும், தொழிற் பெயரும் என இரு வகைப்படும். பெயர்ப் பெயராவன சாத்தன், கொற்றன் என ஒரு தொழிலாற் பெயரன்றி அவ்வப் பொருட்கு இடுகுறியாய் வருவன. இவை காலம் தோன்றா. தொழிற்பெயராயின் தோன்றும். தொழிற்பெயர் தாமும் தொழிலின் மேல் நின்ற தொழிற்பெயரும், பொருள்மேல் நின்ற தொழிற்பெயரும் என இருவகைப்படும். அவற்றுள் தொழிலின்மேல் நின்றனவும் காலந் தோன்றா; அவை உணல், தின்றல் எனப் பொருளது புடைபெயர்ச்சியை அறிவித்து நிற்கும் என்பது. இவற்றுள் பூசை, வேட்டை என்றாற் போல்வன வினைச்சொற்கு அடியாய்ப் புடைபெயர்ச்சியை விளக்காது பெயர்ப்பெயரே போல் நிற்பனவும் உள என்பது. இனிப் பொருண்மேல் நின்றனவும், வினைமுதற் பொருண்மேல் நிற்பனவும் செயப்படுபொருண்மேல் நிற்பனவும் என இரு வகைப் படும். அவ்விருவகையும் காலந்தோன்றி நிற்கும் என்றவாறு. அவை தாமும் ஓசை வேற்றுமையான் ஒருவழி வினை எனப்பட்டு நிற்பனவும், வினையாகாது பெயரேயாய் நிற்பனவும் என இருவகைப்படும். (எ-டு.) உண்டான், தின்றான், உண்டது, தின்றது எனப்படுத்த லோசையான் வினையெனப்பட்டுக் காலந் தோன்றி நின்றன. உண்டவன், தின்றவன், உண்ணுமது, தின்னுமது என்பன ஓசை வேற்றுமையானன்றித் தாமே பெயராய்க் காலங்காட்டி நின்றன. இவை வினைமுதற்கண் பாகுபாடு. "கொலைவர் கொடுமரந் தேய்த்தார்" (கலி. 12) "அவன் ஏறிற்று இக்குதிரை" என்றாற் போல்வன வினைப்பெயரே. அவை செயப்படு பொருட்கண் காலங் காட்டி நின்றன. யான் சொன்னவன், 'உண்பவை நாழி உடுப்பவை இரண்டு' (புறம். 189) என்றாற் போல்வன தாமே செயப்படு பொருண்மேற் பெயராய்க் காலந்தோன்றி நின்றன. இவை செயப்படு பொருட்பாகுபாடு. நிலமும் காலமும் கருவியும் பற்றிவரும் தொழிற்பெயர் விகற்பமுங் கொள்க. (எ-டு.) ... ... உண்டது என்பது இத்தொழிற்பெயர்களின் காலவிகற்பம் என அறிக. பெயர்ப்பெயர் காலந் தோன்றா என்பதற்கு விதி யாதோ எனின் இச் சூத்திரத்தான் எய்தவும் பெறும் என்பது. (9) இரண்டாம் வேற்றுமை 72. இரண்டாகுவதே, ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலின் தோன்றும் அதுவே. அதற்குரிய முடிக்கும் சொற்கள் 73. காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின் ஓப்பின் புகழின் பழியின் என்றா பெறலின் இழவின் காதலின் வெகுளியின் செறலின் உவத்தலின் கற்பின் என்றா அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின் நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின் நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா அன்ன பிறவும் அம்முதற் பொருள என்ன கிளவியும் அதன்பால என்மனார். என் - எனின், எழுவாய் வேற்றுமை அதிகாரம் உணர்த்தினார். இனி அம் முறையானே இரண்டாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டாம் எண்ணுமுறைக்கண்ணதாகிய ஐ என்னும் பெயரையுடைய வேற்றுமைச்சொல் யாதானும் ஓரிடத்து வரினும் வினையும் வினைக்குறிப்பும் என்று சொல்லப்படுகின்ற இரண்டும் அடியாக வரும். பொருள்பற்றிச் சொல்லின் காப்பு என்பது முதலாய்ச் சிதைப்பு ஈறாய் ஓதப்பட்ட இவையும், இவை போல்வன பிறவுமாகிய அவ்வவ்வினை வினைக்குறிப்பு என்னாநின்ற முதற்பொருளைப்பற்றி வருகின்ற எல்லாச் சொற்களும் அவ் இரண்டாவதன் கூற்றன என்று சொல்லுவர் புலவர் எ-று. (எ-டு.) மரத்தைக் குறைத்தான் என்பது வினை. குழையை யுடையன் என்பது வினைக்குறிப்பு. காப்பு - ஊரைக் காக்கும். ஒப்பு - தாயை யொக்கும். ஊர்தி - யானையை ஊரும். இழை - எயிலை யிழைக்கும். ஓப்பு - கிளியை யோப்பும். இவை வினை. புகழ் - ஊரைப் புகழும். பழி - நாட்டைப் பழிக்கும். பெறல் - ஊரைப் பெறும். இழவு - ஊரை இழக்கும். காதல் - மனைவியைக் காதலிக்கும். வெகுளி - படையை வெகுளும். செறல் - செற்றாரைச் செறும். உவத்தல் - தாயை யுவக்கும். இவை வினைக்குறிப்பு. கற்பு - நூலைக் கற்கும். அறுத்தல் - ஞாணை அறுக்கும். குறைத்தல் - மரத்தைக் குறைக்கும். தொகுத்தல் - நெல்லைத் தொகுக்கும். பிரித்தல் - வேலியைப் பிரிக்கும். நிறுத்தல் - பொன்னை நிறுக்கும். அளவு - அரியை அளக்கும். எண் - அடைக்காயை எண்ணும். ஆக்கல் - அறத்தை யாக்கும். சார்தல் - வாய்க்காலைச் சாரும். செலவு - நெறியைச் செல்லும். கன்றல் - சூதினைக் கன்றும். நோக்கல் - சேயை நோக்கும். அஞ்சல் - கள்ளரை அஞ்சும். சிதைப்பு - நாட்டைச் சிதைக்கும் எனவும் வரும். 'அன்ன பிறவும்' என்றதனால் விரலை முடக்கும், நாவினை வணக்கும் என்றற்றொடக்கத்து வினையும், அறவினையுடையன், ஊரை இன்புடையான் என்ற சொற்றொடக்கத்து வினைக்குறிப்பும் கொள்க. பிறவும் அன்ன. காப்பின் என்பது முதலான இன்னெல்லாம் உருபும் அல்ல, சாரியையும் அல்ல, அசைநிலை எனக் கொள்க. இடைநின்ற என்றா என்பன எண்ணிடைச் சொற்களாம். மற்றைய வேற்றுமைபோல் இது படும் பொருண்மை உணர்த்தாது முடிபு உணர்த்தியது என்னை; இம்முடிபு ஏனை வேற்றுமைக்கும் உளவாலெனின், ஈண்டு முடிபு அன்று உணர்த்தியது; வினை வினைக் குறிப்பின் மேலிட்டு அது படுஞ் செயப்படுபொருளினை உணர்த்திற்றாக உரைக்கப்படும். செயப்படுபொருண்மையாவது என்னையோவெனின் ஒருவன் செய்யும் தொழிலினைத் தானுறுதல் எனக் கொள்க. அத்தொழிலினை உறுவதிதுவேயோ? அத்தொழில் செய்வானுங் கருவியுஞ் செய்கின்ற காலமும் இடனும் என இன்னோரன்னவும் அத் தொழிலுறு மாலோ வெனின், அவை உறும் எனினும் பெரும்பான்மையும் இதன் கண்ணது என்பது கருத்து. வினை என்னாது 'வினைக்குறிப்பு' என்றது என்னையோ எனின், மரங்குறைத்தான் என்புழிக் குறைக்கப்படுதல் என்பது போலாகாது, குழையையுடையவன் என்புழிக் குழையி னுடைமைப்பாடு செயப்படு பொருளாய் விளங்கி நில்லாமையின் வேறு கூறினார் என்பது. அச்செயப்படுபொருள்தான், இல்லதொன்றாய் உண்டாக்கப் படுவதும், உள்ளதொன்றாய் உடல் வேறுபடுக்கப்படுவதும், உள்ள தொன்றாய் ஒரு தொழில் உறுவிக்கப்படுவதும், உள்ளதொன்றாய் ஒன்றனானுறப்படுவதும் எனப் பலவகையாம். இல்லதொன்று உண்டாக்கல் - எயிலையிழைத்தான் என்பது. உள்ளதொன்றனை உடல் வேறாக்கல் - மரத்தைக் குறைத்தான் என்பது. உள்ளதொன்று ஓர் தொழிலுறுவித்தல் - கிளியை யோப்பும் என்பது. உள்ளதொன்றனை யொன்றுறுதல் - நூல் நூற்றான் என்பது. பிறவும் அன்ன. இன்னும் இச் செயப்படுபொருள்தான் தன்கண்ணும் ஒரு தொழில் நிகழ்ந்து செயப்படு பொருளாவனவும், தன்கண் தொழில் நிகழாது செயப்படுபொருளாவனவும் என இருவகைய. தன்கண்ணும் தொழில் நிகழ்ந்தது அறுத்தல், குறைத்தல் என்பனவாம்; அறுத்தல், குறைத்தல் மரமுதலாய தம் கண்ணும் நிகழ்ந்தன ஆகலின். தன்கண் நிகழாதது, வாய்க்காலைச் சாரும் என்றாற் போல்வன. பிறவும் அன்ன. இன்னும் இரண்டாவதன் செயப்படுபொருள் தெரிநிலைச் செயப்படு பொருளும், தெரியாநிலைச் செயப்படு பொருளும் என இருவகைத்தாம். தெரிநிலை - மரத்தைக் குறைத்தான் என்பது. தெரியாநிலை - சாத்தனான் மரம் குறைக்கப்பட்டது என்பது. மற்றிஃது எழுவாயன்றோ எனின், சொல் நிலை அன்னதாயினும் சாத்தனான் என நின்ற உருபினை நோக்கப் பொருணிலை அன்னது அன்று என உணர்க. சோற்றை அட்டான் எனச் செய்வான் கருத்துள்வழிச் செயப்படு பொருளாதலும், சோற்றைக் குழைத்தான் எனக் கருத்தில்வழிச் செயப்படு பொருளாதலும் என இருவகைய. இனிச் செய்வானும் செயப்படு பொருளும் என்னும் இரண்டும் ஒன்றேயாயும் வரும். (எ-டு.) சாத்தன் தன்னைக் குத்தினான் என வரும். இனிச் செயப்படு பொருட்கேதுவாயதூஉம் செயப்படுபொருளாய் வரும். அவை கற்கப்படும் ஆசிரியர், கற்கப்படா ஆசிரியர் என வரும். மற்றும் இதன் கருத்து விகற்பம் உரையிற் கொள்க. (10, 11) மூன்றாம் வேற்றுமை 74. மூன்றா குவதே ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே. அதனை முடிக்கும் வாய்பாடுகள் 75. அதனின் இயறல் அதற்றகு கிளவி அதன்வினைப் படுதல் அதனி னாதல் அதனிற் கோடல் அதனொடு மயங்கல் அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி அதனோ டியைந்த ஒப்பல் ஒப்புரை இன்னான் ஏது ஈங்கென வரூஉம் அன்ன பிறவும் அதன்பால என்மனார். என் - எனின், மேல் நிறுத்த முறையானே மூன்றாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றாமெண்ணுமுறைக் கண்ணதாகிய ஒடு என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல் வினைமுதல் கருவியாகிய காரணங்களை உடைத்து. அஃது வருமாற்றைச் சொல்லின் ஒன்றனா னொன்று பண்ணப்படும் பொருண்மை, ஒன்றனானொன்று நகுதல் என்னும் பொருண்மை, ஒன்றனானொன்று தொழிலுறுதல் என்னும் பொருண்மை, ஒன்றனானொன்று ஆதல் என்னும் பொருண்மை, ஒன்றனானொன்றைக் கோடல் என்னும் பொருண்மை, ஒன்றனோ டொன்று மயங்கல் என்னும் பொருண்மை, ஒன்றனோடொன்றியைந்து ஒரு வினையாதல் என்னும் பொருண்மை, ஒன்றனோடொன்றியைந்து வேறு வினையாதல் என்னும் பொருண்மை, ஒன்றனோடொன் றியைந்து ஒப்பல்லா வொப்பினை யுரைத்தல் என்னும் பொருண்மை, இத் தன்மை யான் என்னும் பொருண்மை, ஏதுப் பொருண்மை என்னும் இவையும், இப்பெற்றியானே இதனிடத்து வருகின்ற அத்தன்மையான பிற பொருள் களும் அம்மூன்றாவதன் கூற்றன என்று சொல்லுவர் புலவர் எ-று. மூன்றாவதற்கு உருபு ஒடுவும், ஆனும் என இருவகைத்து. ஆன் என்பது எடுத்தோதிற்றிலரெனினும் "அதனினியறல் அதற்றகு கிளவி" என ஓதிய வாய்பாட்டான் பெறுதும் என்பது. வினைமுதல் கருவி என்றோதிய பொருண்மை இவ்விரண் டுருபிற்கும் ஒக்கும் என்பது. (எ-டு.) 'வினைமுதல்' - கொடியொடு துவக்குண்டான். நாயாற் கோட்பட்டான். 'கருவி' - 'ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்', வேலானெறிந்தான் என வரும். 'அதனினியறல்' - 'தச்சன் செய்த சிறுமா வையம்' என்பது. 'அதற்றகு கிளவி' - வாயாற்றக்கது வாய்ச்சி என்பது. 'அதன் வினைப்படுதல்' - நாயாற்கோட்பட்டான், சாத்தனான் முடியுமிக்கருமம் என்பன. 'அதனினாதல்' - வாணிகத்தானாயினான் என்பது. 'அதனிற் கோடல்' - காணத்தாற்கொண்ட அரிசி என்பது. 'அதனொடு மயங்கல்' - எண்ணொடுவிராய அரிசி என்பது. அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி' - சாத்தனொடு கொற்றன் வந்தான் என்பது. அதனோடியைந்த வேறுவினைக் கிளவி' - மலையொடு பொருத மால்யானை, காவோடறக்குளந் தொட்டான் என்பன. வேறுவினை என்பது ஒன்றன்கண்ணே வினையாதல். 'அதனோடியைந்த வொப்பலொப்புரை' - நூலொடு நார் இயைந்தது போலும், முத்தொடு பவழம் கோத்தது போலும் என்பன. 'இன்னான்' என்பது, இத்தன்மையான் என ஒருவன் பெற்றி கூறல்; அஃது கண்ணாற் கொத்தை, காலான் முடவன் என்பன. 'ஏது' - முயற்சியிற் பிறத்தலான் இசை நிலையாது என்பது. அதனினியறல் முதலாக அதனிற்கோடல் ஈறாக ஓதிய பொருண்மை எல்லாம் சூத்திரத்துள் ஆனுருபின் சுவடுபட ஓதினமையின் பெரும்பான்மை ஆனுருபிற்கே உரியவாம். சிறுபான்மை ஒடுவுருபிற்கும் வருவன உளவேல் கொள்க. இவற்றுள், அதனினியறல், அதன் வினைப்படுதல் என்றோதிய இரண்டும் வினைமுதற் பாகுபாடு. அதனிற் கோடல், கருவியின் பாகுபாடு போலும். அதற்றகு கிளவியும் அதனினாதலும் ஏதுவின் பாகுபாடு. அதனொடு மயங்கல் முதலாக அதனோடியைந்த ஒப்ப லொப்புரை ஈறாக ஓதின எல்லாம், ஒடுவுருபு கொடுத்தோதினமையின் பெரும்பான்மையும் ஒடு உருபிற்கே உரிய; சிறுபான்மை ஆனுருபிற்கும் வருவன உளவேற் கொள்க. இன்னான் என்னும் பொருண்மையும், ஏது என்னும் பொருண்மை யும் ஓருருபின் எடுத்தோதாமையின் வழக்கிற் கேற்றவாறு கொள்ளப் படும். முன்னும் ஏதுவின் பாகுபாடோதி வைத்துப் பின்னும் ஏது எனவோதியது அவ்வாறொழிய வருவனவற்றைக் கருதிப் போலும். அவ்வேது காரக ஏதுவும் ஞாபக ஏதுவும் என இரு வகைத்து. முயற்சியிற் பிறத்தல் காரகம்; பிறத்தலான் இசைநிலையாது என்பது ஞாபகம். அஞ்ஞாபகத்தைப் போலும் ஈண்டு ஏது என ஓதியது. 'அன்ன பிறவும்' என்றது சூத்திரத்துள் எடுத்தோதின பாகுபாட்டி னொழிந்தனவும் பிற பொருட் பாகுபாடுகளும் கருதிப் போலும். அவை யெல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க. (12, 13) நான்காம் வேற்றுமை 76. நான்கா குவதே கு எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எப்பொரு ளாயினும் கொள்ளும் அதுவே. அதனை முடிக்கும் வாய்பாடுகள் 77. அதற்குவினை உடைமையின் அதற்குடம் படுதலின் அதற்குப்படு பொருளின் அதுவாகு கிளவியின் அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாதலின் நட்பின் பகையின் காதலின் சிறப்பினென்று அப்பொருட் கிளவியும் அதன்பால என்மனார். என் - எனின், நிறுத்த முறையானே நான்காம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்காமெண்ணு முறைமைக்கண்ணதாகிய குவ்வென் னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல் யாதொரு பொருளினையும் ஏற்பதாக உணர்த்தி நிற்கும். இன்னும், அது தான் வரும் பொருட் பாகுபாட்டினைச் சொல்லின் ஒன்றற் கொன்று பயன்படுதலென்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று பொருள் மேற்கொடுப்பதாக உடம்படுத லென்னும் பொருண்மை, ஒன்றற் கொரு பொரு ளுரிமையுள்வழிக் கூறிடப்படுதலென்னும் பொருண்மை, அம்முதற்பொருள்தான் திரிந்து வேறாதல் என்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று பொருத்தமுடைத் தாதல் என்னும் பொருண்மை, ஒரு பொருளினை மேற்பெறுதல் காரணமாக ஒரு தொழில் நிகழ்தலென்னும் பொருண்மை, ஒன்றற் கொன்று நட்பாதலும், பகையாதலும் என்னும் பொருண்மை, ஒன்றற் கொன்று காதல் உடைத்தாதல் என்னும் பொருண்மை, ஒன்றற்கொன்று சிறத்தல் என்னும் பொருண்மை என்று சொல்லப்பட்ட அப்பொருண் மேல் வரும் சொற்களும், நான்காம் உருபின் கூற்றன என்று கூறுவர் புலவர் எ-று. 'எப்பொருளாயினும்' என்றது, மூன்றிடத்துப் பொருள்களது பன்மை நோக்கி. சொற்கள் பொருள்களை உணர்த்துதல் உரிமை நோக்கிச் சொல் தன்மேல் வினைப்பட, எப்பொருளாயினும் கொள்ளுமென்று கூறினாரெனினும் கோடலையுணர்த்தும் என்றவாறாகக் கொள்க. (எ-டு.) 'அதற்கு வினையுடைமை' - சாத்தற்குச் சோறு கொடுத்தான், கரும்பிற்கு வேலி, மயிர்க்கு எண்ணெய் என்பன. 'அதற் குடம்படுதல்' - சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் என்பது. 'அதற்குப் படுபொருள்' - சாத்தற்குப் படுபொருள் கொற்றன் என்பது. 'அதுவாகு கிளவி' - கடிசூத்திரத்துக்குப் பொன் என்பது. 'அதற்கு யாப்புடைமை' -கைக்கு யாப்புடையது கடகம். அதற் பொருட்டாதல் கூழிற்குக் குற்றேவல் செய்யும் என்பது. 'நட்பு' - அவற்கு நட்பு உடையன், அவற்குத் தமன் என்பன. 'பகை' - மக்கட்குப் பகை பாம்பு, அவற்குப் பகை மாற்றான் என்பன. 'காதல்' - நட்டார்க்குக் காதலன், தாய்க்குக் காதலன் என்பன. 'சிறப்பு' - வடுகரரசர்க்குச் சிறந்தோர் சோழிய அரசர், கற்பார்க்குச் சிறந்தது செவி என்பன. அதற்கு வினையுடைமை முதலாகக் கூறப்பட்டன எல்லாம் முன் கூறிய கொடைப்பொருளின் பாகுபாடு அல்ல. பிற பொருளென அறிக. அவற்றுள், அதற்குடம்படுதல், அதற்குப் படுபொருள் என்னும் இரண்டும் கொடைநீர்மையும் சிறிதுடைய. உம்மையான் பிறவும் அதன்பாலுள. பண்ணிற்குத் தக்கது பாட்டு, பூவிற்குத் தக்கது வண்டு என்பனபோல வரும்; பிறவும் அன்ன. உம்மை இறந்ததுதழீஇய எச்சவும்மை யாகலான் இந்நிகரன கோடற்கு இடம்படாவா லெனின், இறந்தது தழீஇய அதனையே இரட்டுற மொழிதல் என்னும் ஞாபகத்தினான் எதிரது தழீஇயதூஉ மாக்கிக் கூறப்பட்டது எனக் கொள்க. (14, 15) ஐந்தாம் வேற்றுமை 78. ஐந்தா குவதே இன்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது என்னும் அதுவே. இதன் பொருளினை முடிக்கும் வாய்பாடுகள் 79. வண்ணம் வடிவே அளவே சுவையே தண்மை வெம்மை அச்சம் என்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை என்றா முதுமை இளமை சிறத்தல் இழித்தல் புதுமை பழமை ஆக்கம் என்றா இன்மை உடைமை நாற்றம் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென்று அன்ன பிறவும் அதன்பால என்மனார். என் - எனின், நிறுத்த முறையானே ஐந்தாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐந்தாம் முறைமைக்கண்ணதாகிய இன் என்னும் பெயரையுடைய வேற்றுமைச்சொல் இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் என வரூஉம் பொரூஉப் பொருளினைத் தனக்குப் பொருளாக உடைத்து. அது வருமாற்றை விரிப்பின், வண்ணம் முதலாகப் பற்று விடுதல் ஈறாகச் சொல்லப்பட்ட இப்பொருண்மைகளும் பிற பொருண் மைகளும் அவ்வைந்தாவதன் கூற்றன என்று சொல்லுவர் புலவர் எ-று. இனி ஐந்தாவது பொரூஉப்பொருளும், நீக்கப்பொருளும், எல்லைப் பொருளும், ஏதுப் பொருளும் என நால்வகைத்து. அவற்றுள், பொரூஉப் பொருள் சிறப்புடைமையின் முன்னெடுத்து ஓதப்பட்டது. பொரூஉ என்பது ஒன்றை ஒன்றின் மிகுத்துக் கூறல். இதனின் ஒழிவாகிய உவமமும் இரட்டுற மொழிதல் என்னும் ஞாபகத்தான் ஈண்டே கொள்ளப் படும். நீக்கம் உதாரணப் பகுதி கூறுகின்றவழிக் கொள்ளவைத்தார் என்பது. எல்லையும் ஏதுவும் அன்ன பிறவான் கொள்ள வைத்தார் என்பது. (எ-டு.) காக்கையிற்கரிது களம்பழம் என்றாற் போல்வன. இதனின் என்பது காக்கையின் என்பது. இற்று என்பது கரிது என்பது. இது என்பது களம்பழம் என்பது. என்றது, காக்கையினுங் கரியது களம்பழம் என்று மிகுத்துக் கூறியவாறாயிற்று. உவமத்திற்கும் இதுவே உதாரணமாம். காக்கையைப் போலக் கரிது களம்பழம் என்றவாறாம். இனி வண்ணமென்பது ஐந்து வகைத்து. கருமை முதலியன காக்கையிற் கரிது களம்பழம் என்றாற்போல்வன. வடிவு என்பது முப்பத்திரண்டு வகைத்து. அவை வட்டம், சதுரம், கோணம் முதலியன. இதனின் வட்டமிது என்பது. அளவு - நெடுமை, குறுமை, நீளம் எனப் பலவாம். இதனின் நெடிது இது என்பது. சுவை - அறுவகைப்படும். அவை கைப்பு முதலியன. இதனின் தீவிது இது என்பது. தன்மை - இதனின் தண்ணிது இது என்பது. வெம்மை - இதனின் வெய்யது இது என்பது. அச்சம் - கள்ளரின் அஞ்சும் என்பது. இஃது ஏதுவின்கண் வரும். நன்மை - இதனின் நன்று இது என்பது. தீமை - இதனின் தீது இது என்பது. சிறுமை - இதனின் சிறிது இது என்பது. பெருமை - இதனிற் பெரிது இது என்பது. வன்மை - இதனின் வலிது இது என்பது. மென்மை - இதனின் மெலிது இது என்பது. கடுமை - இதனின் கடிது இது என்பது. முதுமை - இதனின் மூத்தது இது என்பது. இளமை - இவனின் இளையோன் இவன் என்பது. சிறத்தல் - இவனிற் சிறந்தவன் இவன், இதனிற் சிறந்தது இது என்பன. இழித்தல் - இவனின் இழிந்தவன் இவன், இதனின் இழிந்தது இது என்பன. புதுமை - இவனிற் புதியன் இவன், இதனிற் புதிது இது என்பன. பழமை - இவனிற் பழையன் இவன், இதனிற் பழையது இது என்பன. ஆக்கம் - இவனின் ஆயினான், வாணிகத்தின் ஆயினான் இவன் என்பன. இஃது ஏதுப்பொருட்கண்ணும் வரும். இன்மை - இவனின் இலன் இவன் என்பது. உடைமை - இவனின் உடையன் இவன் என்பது. நாற்றம் - இதனின் நாறும் இது என்பது. இவையெல்லாம் பொரூஉப் பொருளாம். தீர்தல் - ஊரிற்றீர்ந்தான் என்பது. பன்மை - இவரிற் பலர் இவர், இதனிற் பல இவை என்பன. சின்மை - இவரிற் சிலர் இவர், இதனிற் சில இவை என்பன. இவையும் பொரூஉப் பொருளவாம். பற்றுவிடுதல் - ஊரிற் பற்றுவிட்டான், காமத்திற் பற்று விட்டான் என்பன. இவை நீக்கம். மருவூரின் மேற்கு, கருவூரின் கிழக்கு என்பன எல்லைப் பொருளவாம். முயற்சியிற் பிறத்தலின் இசை நிலையாகாது என்பது ஏதுப் பொருளது. 'அன்ன பிறவும்' என்றது, எடுத்தோதின பொரூஉப் பொருளின் பாகுபாட்டினும் நீக்கப்பொருளின் பாகுபாட்டினும் ஒழிந்தவற்றிற்கும், பிற பொருட் பாகுபாட்டிற்கும் புறனடை என உணர்க. (16, 17) ஆறாம் வேற்றுமை 80. ஆறா குவதே அதுஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதன திதுவெனும் அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. அதனை முடிக்கும் வாய்பாடுகள் 81. இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின் செயற்கையின் முதுமையின் வினையின் என்றா கருவியின் துணையின் கலத்தின் முதலின் ஒருவழி உறுப்பின் குழுவின் என்றா தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன கூறிய மருங்கின் தோன்றுங் கிளவி ஆறன் பால என்மனார் புலவர். என் - எனின், நிறுத்த முறையானே, ஆறாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறாம் எண்ணுமுறைமைக்கண்ணதாகிய அது என்னும் பெயரையுடைய வேற்றுமைச் சொல், தன்னோடு தொடர்ந்ததொரு பொருளையும் தன்னின் வேறாகியதொரு பொருளையும், இதனது இது என்னும் கிழமை செப்பிநிற்றலை இலக்கணமாக உடைத்து. அது வருமாற்றைச் சொல்லின், இயற்கை என்பது முதலாகத் திரிந்து வேறு படுதல் ஈறாக ஓதப்பட்ட பொருட் பாகுபாடுகளும், பிறவும் 'அத்தன்மை தன்னினும் பிறிதினும்' என ஓதிய இருவகையிடத்து வரும் பாகுபாடு களும் அவ் ஆறாம் வேற்றுமைக் கூற்றன என்று சொல்லுவர் புலவர் எ-று. 'இதனதிது என்னுங் கிளவி' என்னாது 'அன்ன' என்றதனான் அஃறிணை யொருமை தோன்றவரும் அது என்பதன்றி அஃறிணைப் பன்மை தோன்ற வருவதோர் அகரஉருபும் உண்டென்று கொள்ளப்படும். அஃதேல் அவை அஃறிணை இருபாற்கும் உரிய உருபாயின் அவ்வாறு போல, உயர்திணை முப்பாற்கும் உரியவுருபு கூறாரோ எனின், அவ்வாறு வரும் வழக்கின்மையின் கூறாராயினார் என்பது. நமன், நமள், நமர் என்பனவற்றுள் அன், அள், அர் என்பன உயர்திணை உருபன்றோ எனின், பிறவுருபு போலத் தொகுத்தலும் விரித்தலும் இன்மையானும், தற்கிழமையும் பிறிதின் கிழமையும் என்னும் இரண்டிடத்தும் வாராமையானும், மற்றைப் பெயரும் உருபும் ஆகக் கொள்ளாத ஆறாம் வேற்றுமைத்தொகைச்சொற் போல இரு பொருணிலைமைத்தொரு சொல்லென எச்சவியலுள் கூறுகின்றார் என்பது. அஃதேல் உயர்திணைப் பொருளை யுடைமை செப்புமாறு என்னை எனின், அதற்கு 'மேல் வருகின்ற ஓத்தினுள், 'அது என் வேற்றுமை' என்புழிக் கூறுவர் என்பது. தன்னினும் என்புழிக் கிழமை ஐந்துவகைப்படும்; ஒன்று பல குழீஇய தற்கிழமையும், வேறுபல குழீஇய தற்கிழமையும், ஒன்றியற் கிழமையும், உறுப்பின் கிழமையும், மெய்திரிந்தாகிய தற்கிழமையும் என. பிறிதின் கிழமை இது போலப் பகுதிப்படாது என்க. ஒன்று பல குழீஇயது - எட்குப்பை, எண்ணது குப்பை என்றவாறு, வேறு பல குழீஇயது - படைக்குழாம். ஒன்றியற் கிழமை - நிலத்ததகலம், சாத்தனதியற்கை. உறுப்பின் கிழமை - யானையது கோடு, புலியது உகிர். மெய்திரிந்தாகியது - எட்சாந்து. பிறிதின் கிழமை - சாத்தனது தோட்டம் என வரும். இனி அவ்விரு கிழமையும் ஒட்டுமாறு: இயற்கை - சாத்தனதியற்கை. இது தாற்கிழமையுள் ஒன்றியல் தற்கிழமை. உடைமை - சாத்தனதுடைமை. இது பிறிதின்கிழமை; தற்கிழமை யும் படும்போலும். முறைமை - ஆவினது கன்று. இது பிறிதின் கிழமை. கிழமை - சாத்தனது கிழமை. செயற்கை - சாத்தனது செயற்கை; இவ்விரண்டும் தற்கிழமை. ஆகுபெயராயவழிப் பிறிதின் கிழமையுமாம். முதுமை - அவனது முதுமை. இது தற்கிழமை. வினை - சாத்தனது வினை. இதுவும் ஆகுபெயராயவழிப் பிறிதின் கிழமையுமாம். கருவி - சாத்தனது வாள்; இது பிறிதின் கிழமை. துணை - சாத்தனது துணை; இதுவும் அது. கலம் - சாத்தனது கலம்; கலம் என்பதனை யொற்றிக் கலத்தின் மேற்கொள்க. பிற கலத்தின்மேற் கொள்ளாமை காரணம் என்னை எனின், இஃதொரு பொருள் இருவற் குடைமையாக நிற்கும்; வேறுபட்டதாகலின் என்க. இஃது உரையிற் கோடல். இதுவும் அது. முதல் - சாத்தனது முதல், சாத்தனது தோட்டம் என ஓர்க. இதுவும் ஓர் உடைமை வேறுபாடு எனக் கொள்க. இதுவும் அது. ஒருவழி யுறுப்பு - யானையது கோடு. உறுப்பு என்னாது ஒரு வழியுறுப்பு என்றது, ஓருறுப்பினையுடைமையாகக் கருதாது பலவற்றை யுங் கருதி உரிமையாகாத பொருள்தானாம் என்பது போலும். இது தற்கிழமையுள் உறுப்பின் தற்கிழமை. குழுவு - எட்குப்பை, படைக்குழாம் என்பன. இவை தற்கிழமை யுள் ஒன்று பலகுழீஇயதூஉம் வேறுபல குழீஇயதூஉம் ஆம். குழு என்பது உடல் நோக்கிற்று. தெரிந்துமொழிச் செய்தி - கபிலரது பாட்டு. இதுவும் பாரியது பாட்டு எனவும் நிற்றலின் இரு பொருட்குரிமையாம். கபிலரது என்புழி மெய்திரிந் தாகியதன்பாற்படும், பாரியது என நிற்புழிப் பிறிதின் கிழமையாம். நிலை - பெண்ணாகத்துப் பெருஞ்சங்கரனாரது நிலை. இஃது ஒன்றியல்தற்கிழமை. வாழ்ச்சி - சாத்தனது வாழ்ச்சி; இது வாழ்தல் என்னும் தொழில் கருதினவழித் தற்கிழமை. வாழும் இடம் கருதியவழிப் பிறிதின் கிழமையாம். திரிந்து வேறுபடுவன - எட்சாந்து, கோட்டு நூறு என்பன. சாத்தனது சொல் என்பதும் பிறவும் ஒரு பொருள் முழுவதூஉம் திரியாதன. பரணரது பாட்டியல் என்றாற் போல வருவன எல்லாம் உதாரண வாய்பாடாக எடுத்தோதாது 'திரிந்து வேறுபடும்' எனப் பொதுப் பட ஒரு பொருண்மையாக எடுத்தோதினமையிற் கொள்ளப்படும். பிறவும் என்றதனால் சாத்தனது வனப்பு, சாத்தனது ஆண்மை, சாத்தனது நடை, சாத்தனது புத்தகம் எனவரும். பிறவும் அன்ன. (18, 19) ஏழாம் வேற்றுமை 82. ஏழா குவதே கண்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின் அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே. அதற்குரிய உருபுகள் 83. கண்கால் புறமகம் உள்உழை கீழ்மேல் பின்சார் அயல்புடை தேவகை எனாஅ முன்இடை கடைதலை வலமிடம் எனாஅ அன்ன பிறவும் அதன்பால என்மனார். என் - எனின், நிறுத்த முறையானே ஏழாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஏழாம் எண்ணுமுறைக் கண்ணதாகிய கண் என்னும் பெயரையுடைய வேற்றுமைச்சொல் வினைசெய்யிடமும், நிலமும், காலமுமாகிய மூன்று பொருட்கண்ணும் வரும். அதன் உருபு வரும் பாகுபாட்டைச் சொல்லின், கண் என்னும் உருபு முதலாய்ப் புடை என்னும் உருபு ஈறாக ஓதப்பட்ட உருபுகளும், இடையே தேவகை என ஓதிய திசைக்கூற்றுப் பொருண்மையும், பின்னரும் முன் என்னும் உருபு முதலாக இடம் என்னும் உருபு ஈறாக எடுத்தோதப்பட்ட உருபுகளும் அத்தன்மைய பிற உருபுகளும் அவ்வேழாவதன் கூற்றன எ-று. வினைசெய்யிடம் - வினை செய்யாநிற்றலாகிய இடம். வினை செய் நிலம் - ஒரு தொழில் நிகழாது வரையறை யுடையதோர் இடம். காலம் என்பது ஒரு தொழில் நிகழ்தற்குக் காலமாய் வரையறைப்பட்டு நிற்பது. இம்மூன்றன்கண்ணும் ஏழாவது வருமிடத்து இடமும் இடத்து நிகழ்பொருளும் வேறுபட வருவனவும், வேறுபடாமல் வருவனவும் என இருவகைய. (எ-டு.) வினை செய்யிடம் - தட்டுப்புடையுள் வந்தான், தட்டுப் புடையுள் வலியுண்டு. நிலம் - குன்றத்துக் கூகை, குன்றத்துக்கண் குவடு, ஆகாயத்துக்கண் பருந்து. காலம் - மாரிக்கண் வந்தான், மாரிக்கண் நாள் என வரும். கண் - ஊர்க்கண் இருந்தான். கால் - ஊர்க்கால் இருந்தான். புறம் - ஊர்ப்புறத்து இருந்தான். அகம் - மாடத்தகத்து இருந்தான். உள் - ஊருள் இருந்தான். உழை - சான்றோருழைச் சென்றான். கீழ் - மாடத்துக்கீழ் இருந்தான். மேல் - மாடத்துமேல் இருந்தான். பின் - ஏர்ப்பின் சென்றான். சார் - காட்டுச்சார் ஓடுங் களிறு. அயல் - ஊரயல் இருந்தான். புடை - ஊர்ப்புடை இருந்தான். இவையெல்லாம் உருபு. தேவகை என்பது திசைக்கூறு. இது பொருள். திசை என்பது ஆகாயம்போல் வரையறைப்படாது சொல்லுவான் குறிப்பினவாய் நிற்றலின் வேறு பொருளென்று, நிலமென்புழி அடக்காது, கொண்டுபோந்து கூறினார்போலும். வடக்கண் வேங்கடம், தெற்கட்குமரி எனவரும். முன் - தேர் முன் சென்றான். இடை - சான்றோரிடை இருந்தான். கடை - கோயிற்கடைச் சென்றான். தலை - தந்தைதலைச் சென்றான். வலம் - கைவலத் துள்ளது கொடுக்கும். இடம் - கையிடத்துப்பொருள் - என வரும். 'பிறவும்' என்றதனான், கிழவோள் தேஎத்து (இறை அக. 10), கிழவி மாட்டு என்றாற் போல்வன கொள்க. ஏனை வேற்றுமைபோலப் பொருட்பாகுபாடு இன்றி உருபின் பாகுபாடே உண்மையின் அதனை விரித்தோதினார் எனக் கொள்க. ஓதின உருபுகளெல்லாவற்றினும் கண் எனும் உருபு சிறந்தமையின் முன்வைத்தது என்பது. மற்றும் புறம், அகம் என்பனபோல்வன எல்லாம் பெயராய், ஆறாவதன் பொருண்மையாய் வருகின்றமையின் ஏழனுருபு ஆமாறு என்னையெனின், அகம் புறம் என்பன ஓரிடத்தினை வரையறுத்து உணர்த்தும்வழி ஆறாவதாம்; அவ்வாறன்றிக் கண் என்பது போல இடம் என முழுதுணர்வு செல்லநின்றவழி ஏழாவதாம் எனக் கொள்க. இது நோக்கிப் போலும் கண் கால் எனக் கண் என்பதனை இருகாலாவது கூறியது என்பது. இவ்வாறன்றிக் கண் என்பது ஓரிடத்தினை வரையறாது முழுவதும் உணரநிற்கும் உருபு எனவும், அல்லது ஓரிடப் பொருள் உணர்த்திநிற்கும் உருபு எனவும் கூறுவதொரு நயமுண்டுபோலும். (20, 21) ஆறுருபிற்கும் பொதுவிலக்கணம் 84. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றுநின் றியலும் தொகைவயிற் பிரிந்தே. என் - எனின், ஐ முதலிய ஆறுருபிற்கும் பொதுவாய இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைச் சொல்லினது பொருளை விரித் துணர்த்துங் காலத்து, அவ்வேற்றுமைப் பொருள்கள் பெயரது ஈற்றின் கண்ணே நின்று நடக்கும், தொக்க விடத்து நின்று எ-று. (எ-டு.) மரம் குறைத்தான் என்பது மரத்தைக் குறைத்தான் என இறுதிக்கண் விரிந்து நின்றது. தாய் மூவர் என்பது தாயொடு மூவர் என விரிந்தது. பிறவும் அன்ன. இது "கூறிய முறையின்" (தொல். சொல். 70) என்றதனான் அடங்காதோ எனின், அஃது உருபுநிற்கும் இடம் கூறியது; அங்ஙனம் நின்ற உருபு விகாரப்பட்டுத், தொக்குநின்று பின் விரியும்வழியும் பிறாண்டு விரியாது முன்கூறியதனையே திரிபுபடுவழிக் கூறியது இஃது எனக் கொள்க. (22) உருபு நோக்கிவரும் சொற்களின் இலக்கணம் 85. பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்ப. என் - எனின், உருபு நோக்கிவரும் சொற்களின் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பல நெறியாக அவ்வவ் வேற்றுமையின் பொருளொடு பொருந்தி ஒலிக்கும் எவ்வகைப்பட்ட சொல்லும் வேற்றுமைபோலப் பிரியாது இறுதிக்கண் விரிந்து நிற்றற்குரிய எ-று. விரித்தற்குரிய என்பது, முன்னின்ற அதிகாரத்தான் கொள்க. இனித் தொகுத்தலும் உரிய என்பது, ஒன்றென முடித்தல் என்பதனான் கொள்க. (எ-டு.) படைக்கை என்பது படையினைப் பிடித்த கை என விரிந்தது. குதிரைத் தேர் என்பது குதிரையாற் பூட்டப்பட்ட தேர் என விரிந்தது. பிறவும் அன்ன. ஆறாவதற்குப் பொருள் விரிதல் இல்லை. உருபுகள் தொகுத்தலும் விரிதலும் கூறியவழியே அவ்வுருபு நோக்கி வரும் சொற்கள் தொகுத்தலும் விரித்தலும் அடங்குமால் எனின், அவ்வுருபு தொக்குழித் தொக்கும், விரிந்துழி விரிந்தும் நிற்றல் ஒருதலை யன்மையின், அதற்கும் வேறு கூற வேண்டும் என்பது. மரம் குறைத்தான், குழையை உடையன். உருபு தொக்குழித் தொகாதாயிற்று எனக் கொள்க. (23) வேற்றுமையியல் முற்றிற்று. 3 வேற்றுமை மயங்கியல் இரண்டாவது ஏழாவதனொடு மயங்கல் 86. கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்(கு) உரிமையும் உடைத்தே கண்என் வேற்றுமை. என்பது சூத்திரம். இனி, இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உருபும் பொருளும் உடன் மயங்குதலும், ஒருவழி உருபே மயங்குதலும், ஒன்றற்குரியத னோடு ஒன்று மயங்குதலும், இரண்டும் ஒத்து மயங்குதலும், ஒரு பொருண்மை ஒன்றற்கே உரியதாகாது பலவற்றொடு மயங்குதலும், ஒன்றனது ஒரு பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றனது பல பொருளோடு ஒன்று மயங்குதலும், ஒன்றற்குரிமை பூண்டு எடுத்தோதின பொருள்வழி மயங்குதலும், ஓதாத பொருள்வழி மயங்குதலும், ஒன்று தன் மரபாய் மயங்குதலும், இலக்கண வழக்குள்வழி மயங்குதலும், இலக்கணமில்வழி மயங்குதலும், மயக்கவகையான் மயங்குதலும், ஒன்றனொடு பொருள் முடிந்து தொடர்ந்தடுக்கி மயங்குதலும், ஒன்ற னொடு பொருண் முடியாது தொடர்ந்தடுக்கி மயங்குதலும், தொகையுள் மயங்குதலும், தொகையில்வழி மயங்குதலும், உருபு வேற்றுமையாய் மயங்குதலும், உருபும் உருபும் மயங்குதலும், என்றின்னோரன்ன வேற்றுமை மயக்கம் பல கூறலின் வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று. இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், நிறுத்த முறையானே இரண்டாவது, அதிகாரத்தானே நின்ற ஏழாவதனொடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கருமச்சார்ச்சியல்லாத சார்தல் என்னும் பொருண்மைக்கு உரித்தாதலையுடைத்துக் கண் என்னும் வாய்பாட்டதாகிய ஏழாம் வேற்றுமை எ-று. (எ-டு.) அரசரைச் சார்ந்தார், அரசர்கட் சார்ந்தார் என வரும். கருமச்சார்ச்சிக்கண் அரசர்கண் சார்ந்தார் எனின், அரசர் இடமாக, சாரப்பட்டது பிறிதாவான் செல்லலின் கருமமல்லாச் சார்பு என்று ஓதப்பட்டது. (1) இதுவுமது 87. சினைநிலைக் கிளவிக் கையும் கண்ணும் வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர். என் - எனின், இதுவும் அவ்விரண்டன் மயக்கமே உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சினையாகிய நிலைமையையுடைய பொருண்மைக்கு இரண்டாவதும் ஏழாவதும் அதன் வினை கூறு நிலைமைக்கண் ஒத்த பொருள என்று கூறுவர் புலவர் எ-று. (எ-டு.) கண்ணைக் குத்தினான், கண்ணின்கண் குத்தினான் என வரும். சினைக்கண் இவ்விரண்டும் வரும் என்றது என்னை, பிறவும் வருமால் எனின், முன் இடப்பொருட்கண் வரும் என்ற ஏழாவது, மற்றொரு வேற்றுமையொடு தொடர்ந்து கூறும்வழிச் செயப்படு பொருட்கண் வருதலும் கண்டு அது கூறியவாறு எனக் கொள்க. தொடர்ந்து கூறும் வழியாமாறு உணரச் சொல்லுகின்றார். வினைநிலை என்றது இரண்டாவதற்கு ஓதிய வினை, வினைக்குறிப்பு என உணர்க. (2) இதுவுமது 88. கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. என் - எனின், இதுவும் அவ்விரண்டன் மயக்கமே உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் கன்றல் என்னும் பொருண்மையும், செலவு என்னும் பொருண்மையும் பொருந்தி வரும் அவ்வுருபுகளது வினை கூறுமிடத்து எ-று. (எ-டு.) சூதினைக் கன்றினான், சூதின்கண் கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கண் சென்றான் என வரும். (3) முதல் சினைப் பெயர்களில் வரும் உருபுகள் 89. முதல்சினைக் கிளவிக் கதுஎன் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே. என் - எனின், வேற்றுமைக்கண்ணதொரு சொல்லுதல் வகைமை உணர்த்துதல் நுதலிற்று. மேற்கூறிய சினைநிலைக் கிளவி என்பதற்குப் புறனடை எனினும் அமையும். முதற்பொருட்கும் முதலொடு தொடர்ந்த சினைப்பொருட்கும் உருபுகள் வருமாறு கூறினாராம். (இ-ள்.) அது என் வேற்றுமை முதற்கண் வரின் அதன் சினைக்கு இரண்டாம் வேற்றுமை வரும் எ-று. (எ-டு.) யானையது கோட்டைக் குறைத்தான்; சாத்தனது கண்ணைக் குத்தினான் என வரும். (4) இதுவுமது 90. முதன்முன் ஐவரின் கண்என் வேற்றுமை சினைமுன் வருதல் தெள்ளி தென்ப. என் - எனின், இதற்கும் அக்கருத்து ஒக்கும். (இ-ள்.) முதற்கண்ணே இரண்டாம் வேற்றுமை வரின் ஏழாம் வேற்றுமை சினைக்கண்ணே வருதல் விளங்கிற்று என்று சொல்லுவர் புலவர் எ-று. (எ-டு.) யானையைக் கோட்டின்கண் குறைத்தான், சாத்தனைக் கண்ணின்கண் குத்தினான் என வரும். 'தெள்ளிது' என்றதனான், சிறுபான்மை இரண்டாவது தானேயும் வரப்பெறும். அஃது யானையைக் கோட்டைக் குறைத்தான், சாத்தனைக் கண்ணைக் குத்தினான் எனக் கொள்க. இவற்றுள் முதல் சினைப் பொருட்குக் கண்ணுருபினைத் தொடர்ந்து கூறும்வழி இரண்டாவதனோடு ஒப்பச் செயப்படு பொருட்கண் ஏழாவது வந்தவாறு கண்டுகொள்க. மணியது நிறத்தைக் கெடுத்தான், மணியை நிறத்தின்கண் கெடுத்தான், மணியை நிறத்தைக் கெடுத்தான்: இது பண்பு. தலைமகனது செலவை அழுங்குவித்தல், தலைமகனைச் செலவின்கண் அழுங்கு வித்தல், தலைமகனைச் செலவை அழுங்குவித்தல்: இது தொழில். பிறவும் அன்ன. இவ்வாறு மூன்று மூன்றுருபு வாராது, ஒரு பொருளது இரண்டா வதன் தொடர்ச்சி பற்றி இரண்டாவது தானே வருவனவும் கொள்க. (எ-டு.) சாத்தனை நூலை ஓதுவித்தல், யாற்றை நீரை விலக்கினான் என்பன போல்வன. பிறவும் அன்ன. (5) முதலும் சினையும் சொல்லுவான் குறிப்பினவாதல் 91. முதலும் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. என் - எனின், முதல் சினை என்னும் பொருண்மை அதிகாரப் பட்டமை கண்டு அப்பொருளை ஆராய்தல் நுதலிற்று. (இ-ள்.) முதல் என்றும் சினை என்றும் சொல்லப்படுகின்ற பொருள்கள் இது முதல் இது சினை எனத் தம்மின் வேறுபட நில்லாது, ஒருவன் சொல்லும் காலத்து அவன் சொல்லும் கருத்தின்கண் இது முதல் இது சினை என வேறுபாடு உணர நிற்கும் எ-று. (எ-டு.) கோட்டது நுனியைக் குறைத்தான், கோட்டை நுனிக்கண் குறைத்தான், கோட்டை நுனியைக் குறைத்தான். இது சினை முதலாய் வந்தவாறு. படை யென்பதனை முதலாகப் பார்க்கும்வழிப் படையினது யானை என சினையே போலே நிற்கும் என்பது. (6) பிண்டப்பெயர்களும் அவ்வியல்பினவாதல் 92. பிண்டப் பெயரும் ஆயியல் திரியா பண்டியல் மருங்கின் மரீஇய மரபே. என் - எனின், மேலதன் முடிபு முடிதலுடையது பிறிதும் உண்டென் பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) திரட்சி என்னும் பொருளினை யுணர நின்ற பெயர்களும் மேற்கூறிய சினைமுதல்களது இயல்பின. அவை கோடற்குக் காரணம் என்னை எனின், முற்காலத்து நடந்த கூற்றேதுவாகப் பிற்காலத்து நடந்து மருவின முறைமையுடையன அவையாகலான் எ-று. 'ஆயியல் திரியா' என்றது மேல், சினை முதலாய் முதல் சினையாய் வந்தவாறு போலப் பிண்டமே பொருளாய் அப்பொருளே பிண்டமாய் வருமென்றவாறு. அன்றி, பொருணிலைமை சொல்லுவான் குறிப்பினவா றாயின் அவ்வாறு போலப் பொருளின் வேறு பிண்டம் என்பதொன்றுள தாகல், அச்சொல்லுவான் குறிப்பின் பாலது என்றவாறு. (எ-டு.) அப்பிண்டந்தான் ஒன்று பல குழீஇயதும், வேறு பல குழீஇயதும் ஆம். ஒன்றுபல குழீஇயது எள்குப்பை. எள்ளின் வேறு குப்பை என்று உண்மை வகையின் இல்லையென்றவாறு. வேறு பல குழீஇயது படைக்குழாம். முதல் சினை எனவும், பொருள் பிண்டம் எனவும், இவை யாராய நின்றமையின் மற்றொன்று விரித்தல் என்னுங் குற்றமாம்பிறவெனின், அதற்கோர் அதிகாரப்பட்டு நின்றதாகலானும் பொருள் ஆராய்ச்சியும் இச் சொல்லாராய்ச்சிக்குப் பயன்படும் நிலைமைத்தாகலானும் அமையும் என்பது. (7) ஒடுஉருபு உயர் பொருளுணர்த்தும் பெயர்வழி வருமாறு 93. ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே. என் - எனின், மூன்றாம் வேற்றுமைப்பொருட்கண்ணதொரு சொல்லுதல் வகைமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவினை கொண்டு முடிதலுடைய ஒடு என்னும் சொல், அவ் வொருவினையையுடைய இரு பொருளினுமாய் எதன் பின் வருமோ எனின், அது கூறுவான் அப் பொருளின் அப்பொழுது உயர்ந்ததாகக் கருதியதன் பின் வரும் எ-று. (எ-டு.) அரசரொடு வந்தார் சேவகர் என்பதைச் சேவகரொடு வந்தார் அரசர் என்னற்க. இனி அவ்வுயர்புதாம் குலத்தான் உயர்தலும், தவத்தான் உயர்தலும், நிலைமையான் உயர்தலும், உபகாரத்தான் உயர்தலும் எனப் பலவகைய. இழிந்தவழி ஒடு வைத்துச் சொல்லுவது அந்நேரத்து அவற்றாய தொழின்மைச் சிறப்பு நோக்கி என உணர்க. அவை, நம்பி நாயொடு வந்தான் என்றாற் போல்வன. (8) மூன்றினும் ஐந்தினும் வந்து மயங்கும் ஏதுப்பொருள் 94. மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி நோக்கோ ரனைய என்மனார் புலவர். என் - எனின், மூன்றாம் வேற்றுமையும், ஐந்தாம் வேற்றுமையும் ஏதுப்பொருண்மைக்கு ஒத்த கிழமைய என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றாவதனின் ஆனும், ஐந்தாவதனின் இன்னும் விளங்கச் சொல்லப்பட்ட ஆக்கப்பொருண்மையொடு கூடிய ஏது என்னும் பொருண்மை அவ்வுருபுகளான் அப்பொருள் விளங்குமிடத்து இரண்டும் ஒருதன்மைய எ-று. (எ-டு.) வாணிகத்தான் ஆயினான், வாணிகத்தின் ஆயினான் என்பன. 'கிளவி' யென்ற பெயராற் பொருளினை ஆக்கமொடு புணர்ந்த தென்று விசேடித்துக் கூறினமையின், ஆக்கமல்லா ஏது ஒத்த கிழமைத் தன்று என்பது போலும் கருத்து. (9) இரண்டாவது மூன்றனோடும் ஐந்தனோடும் மயங்குமாறு 95. இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கமவ் இரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும். என் - எனின், இரண்டாவது மூன்றாவதனோடும், ஐந்தாவத னோடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டாம் வேற்றுமையிடத்து, பொறியான் நோக்கப் படுதலன்றி மனத்தான் நோக்கப்படும் நோக்கம் மேல் மூன்றாவதன் கண்ணும், ஐந்தாவதன்கண்ணும் ஒத்த கிழமைய வென்றோதிய ஏதுப் பொருள்படும் எ-று. (எ-டு.) வானோக்கி வாழும் என்பது, வானை நோக்கி வாழும், வானானாய பயன் நோக்கி வாழும், வானினாய பயன் நோக்கி வாழும் என வரும். ஏதுவுமாகும் என்ற உம்மையான் தன் பொருட்பாடே சிறந்தது. இனி ஏதுவாம்வழிச் செயப்படுபொருள் படுதற்கு உரிய நோக்கி என்பதனை ஒழிய, வானை வாழும் என்றாற்போல நிற்க வேண்டும் எனின், செயப்படு பொருள் ஒழிய, ஏதுப்பொருட் குறிப்பொடு செயப்படு பொருளாய் நிற்கும் என்பது போலும் கருத்து. (10) ஆறாவதன் பொருளில் வரும் உயர்திணைத் தொகையில் நான்கனுருபு விரிதல் 96. அதுஎன் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுஎன் உருபுகெடக் குகரம் வருமே. என் - எனின், ஆறாவது நான்காவதனோடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அது என்னும் வாய்பாட்டையுடைய ஆறாம் வேற்றுமை, உயர்திணைத் தொகைவயின் அது என்னும் வாய்பாடு கெட நான்காவதாய் வரும் எ-று. (எ-டு.) நம்பி மகன், நம்பிக்கு மகன் என்பது இலக்கண மில்வழி மயங்கல், நம்பியது மகன் என்பது இன்மையினென்க. இச்சூத்திரத்தானே குவ் வுருபோடொத்துத் தன் பொருள்பட நில்லாது பெயர்போல் ஆறாவது பால் தோன்றி நிற்கும் என்பது பெற்றாம். இந் நயத்தானே வினைக்குறிப்பு உரிமைப்படா நிற்கும் வழியுண்டேனும் கொள்க. (11) தடுமாறு தொழிற்பெயர்க்கண் இரண்டும் மூன்றும் வந்து மயங்குமாறு 97. தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும் கடிநிலை இலவே பொருள்வயி னான. என் - எனின், இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தனக்கே உரித்தாய் நில்லாது ஒருகால் ஈற்றுப்பெயரொடும் சென்று தடுமாறும். வினையுடைய பெயர்க்கண், இரண்டாவதும் மூன்றாவதும் நீக்கும் நிலைமையில பொருள்படுமிடத்து எ-று. (எ-டு.) புலி கொல் யானை என்பது, ஒருகால் புலியைக் கொன்ற யானை எனவும், ஒருகால் புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் கொல்லுதல் தொழில் இரண்டற்குஞ் சென்று வருதலின் தடுமாறு தொழிற்பெயர் எனப்பட்டது. புலியான் என்புழி வினை யாதோ எனின், ஆண்டும் வினை 'கொன்ற' என்பது. அஃதேல் புலி கருவியாக யானை யாகிய பிறிதொன்றனைத்தான் கொன்றது என்பது பொருளாமோ எனின், 'செயப்படு பொருளைச் செய்தது போல' (248) என்பதனான் கொல்லப் பட்ட என்பது பொருளாக நோக்கப் புலனாகும் என்பது. செயப்படுபொருட்கண் வினைதொகுமோ எனின், செய்குன்று, உறைபதி எனப் பிறபொருட்கண்ணுந் தொகும் என்பது. (12) மேலதற்கொரு புறனடை 98. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப உணரு மோரே. என் - எனின், மேலதற்கொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறுதிப் பெயர் முன்னர்ப் பொருளறிய வருஞ் சொல்லான் இன்ன வேற்றுமையென அறிப, அத்தொகைச் சொல்லது பொருளினை உணர்வார் எ-று. (எ-டு.) புலி கொல் யானை ஓடுகின்றது, புலி கொல் யானைக் கோடு வந்தது என வரும். மெய்யறிபனுவல் என்றதனான், பொருள் இயைய வாராதனவும் உள; அவை 'புலி கொல் யானை கிடந்தது' என்றாற் போல்வன. ஆண்டுச் சொல்லுவான் குறிப்பினான் அறிக. (13) ஓம்படைப் பொருளில் இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கல் 99. ஓம்படைக் கிளவிக்கு ஐயும் ஆனும் தாம்பிரி விலவே தொகவரு காலை. என் - எனின், இதுவும் இரண்டாவதும் மூன்றாவதும் ஒத்த வுரிமைய தொகைக்கண் வரும் காலத்து எ-று. (எ-டு.) 'புலிபோற்றிவா, வாழி யைய' என்பது. இது புலியைப் போற்றிவா எனவும், புலியான் போற்றிவா எனவும் விரியும் என்பது. புலி என்றது புலியான் வரும் ஏதத்தினை. ஓம்படை யென்பது போற்றுதல். ஈண்டும் இரண்டாவது செயப்படு பொருளோடு ஏதுப்பொருள் படுகின்றது போலும். 'தொகவருகாலை' என்றதனான் இவ்வேற்றுமை மயக்க மெல்லாம் தொக்குழியே மயங்கு மென்பது கொள்ளப்பட்டது. முன்னே ஆனுருபினோடு இன்னுருபும் ஏதுப்பொருட்டாகும் என்றோதப்பட்டமையின், ஒன்றின முடித்தல் என்பதனான் புலியிற் போற்றிவா என ஐந்தாவதும் கொள்க. (14) வாழ்ச்சிக் கிழமையில் ஆறாவதும் ஏழாவதும் மயங்கல் 100. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழும் ஆகும் உறைநிலத் தான. என் - எனின், ஆறாவதனோடு ஏழாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறாவதனிடத்து வாழ்ச்சி யென்னும் உரிமைக்கு ஏழாவதும் ஆகும்; யாண்டோ எனின், ஆண்டு அஃதுறை நிலத்துக்கண் எ-று. (எ-டு.) காட்டு யானை, காட்டதுயானை, காட்டின்கண் யானை என விரியும். 'உறை நிலத்தான' என்றதனான் உறையா நில மாயக்கால் ஆறாவதன்கண் வந்ததாகாது, ஏழாவது தானேயாம் என்றவாறு. அஃது ஊருள் யானையாய்க் காட்டுள் மேயவிட்டதனைக் காட்டுயானை யென்னும் வழிக் கொள்க. மற்று இது வாழ்ச்சியுள் 'ஆறன் மருங்கின் வாழ்ச்சி'யாயினவாறு என்னை? அஃது யானைக்காடு என்பதன்றே? ஆண்டு யானையுட் காடு என ஆகாதால் எனின், யானை காட்டின்கண் வாழ்தலான் உடைமை யாயிற்றன்றே? அதனான் காட்டியானை யென அக்காட்டிற்கு யானையை உறுப்பாகக் கூறும்வழி வாழ்தலடியாக நின்றதாகலின், அதனையும் வாழ்ச்சிக் கிழமை யென்று கூறியவாறு போலும். அதனாற் போலும் சிறுபான்மை என்றது எ-று. (15) கொடைப்பொருளில் நான்காவதும் ஆறாவதும் மயங்கல் 101. குத்தொக வரூஉம் கொடையெதிர் கிளவி அப்பொருள் ஆறற் குரித்து மாகும். என் - எனின், நான்காவதன் பொருள் ஆறாவதன்கண் செல்லுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கு என்னும் வாய்பாடு தொக்கு வருகின்ற கொடைத் தொழிலினை யேற்றுக்கொண்டு நின்ற சொல் மயங்குமாறு கூறின், அப்பொருண்மை, ஆறாவது உடைமைப்பொருளாதற்கு உரித்துமாம் எ-று. (எ-டு.) நாகர்பலி என்பது நாகர்க்குப் பலி, நாகரது பலி என விரியும். கொடைக்கிளவி என்னாது 'எதிர்கிளவி' என்றதனான், இவ்வாறு மயங்குவது எதிர்கிளவி அல்லாக்கால் மயங்காது என்பது. எதிர்தல் என்பது விழுப்பமுடையாரை நுதலியக்காற் கொண்டு வைத்து விரும்பிக் கொடுப்பது. மற்றிது நிகழ்தலின்மையின் நான்காவது ஆயவாறு என்னை யெனின், நிகழ்ந்ததேயன்றிக் கொடை நிகழ்கின்றதும், நிகழ்வதும் பொருண்மை வகையாற் கொடையெனப்படும் என்பது. (16) அச்சப்பொருளில் ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்கல் 102. அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும் எச்சம் இலவே பொருள்வயி னான. என் - எனின், ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அஞ்சுதல் என்னும் பொருண்மைக்கு ஐந்தாவதும், இரண்டாவதும் தம்மில் ஒத்த நிலைமையவாம் பொருள்படு மிடத்து என்றவாறு. (எ-டு.) புலி அஞ்சும் என்பது புலியை யஞ்சும், புலியின் அஞ்சும் என விரியும். அவ்வச்சம் கள்ளரின் அஞ்சும் என்னும் வழக்கிற் பொருள்படு நிலைமையும் உண்டு; ஈண்டு அது கொள்ளற்க. ஓம்படை என்றதற்கண் கூறியவாற்றான் புலியான் அஞ்சும் என மூன்றாவதன் வரவும் கொள்க. (17) வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை 103. அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது உருபினும் பொருளினும் மெய்தடு மாறி இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம் திரிபிடன் இலவே தெரியு மோர்க்கே. என் - எனின், வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் எடுத்தோதப்பட்ட அத்தன்மையன பிறவு மாகிய, பழையதாகிய நெறிமுறையினைப் பிழையாது, உருபானும் பொருளா னும் தத்தம் வடிவு தடுமாறி, தனக்குரிய இடம் பிறிதின் இடமாகிய அவ்விரண்டிடத்தும் நிலைபெறுகின்ற வேற்றுமையுள் எல்லாம் அமையா வழுவென்று கழிக்கப்படுதலைத் தம்மிடத்து உடையவல்ல ஆராய்வார்க்கு எ-று. இதனாற் சொல்லியது வேற்றுமையோத்தின்கண் இன்ன பொருட்கு இன்னது உரித்தென எடுத்தோதப்பட்ட வேற்றுமைகள் அவ்வப் பொருட்கு, உரியவாறாய் நில்லாது பிற பொருட்கண்ணும் சென்று மயங்குத லுண்மை கண்டு இவை வழுவன்றோ என்று வினாய மாணாக்கற்கு, அவை மேற்றொட்டுப் பிறபொருண்மேலும் வழங்கும் முடிவினை ஆராய்ந்த முதனூலாசிரியர்களும் வழங்கி வருதலான் வேற்றுமைவழு என்று புறத்திட்டா ரல்லர். அதனானே, யானும் அம் முடிபே நேர்ந்தேன் என்பது கூறியவாறு. இதுவும் மரபு வழுவமைதி. 'அன்ன பிறவும்' என்றதனான் கொண்டவற்றிற்கு உதாரணம், முறைக்குத்துக் குத்தினான் என்பதொரு தொகை, முறையாற் குத்தினான் முறையிற் குத்தினான் என மூன்றாவதும் ஐந்தாவதும், ஏதுப்பொருட்கண் மயங்கி விரிந்தன. இனித் தொகையின்றி நின்று, கடலொடு காடு ஒட்டாது என்னும் வழக்கின்கண் கடலைக் காடு ஒட்டாது என இரண்டாவது மயங்கி வந்தது. இன்னுந் தொகையல்லாத தந்தையொடு சூளுற்றான் என்னும் வழக்கின்கண் தந்தையைச் சூளுற்றான் என இரண்டாவது மயங்கி வந்தது. பிறவும் அன்ன. (18) பல உருபு தொடர்ந் தடுக்கியவழிப் படுவதோர் இலக்கணம் 104. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொல் நடைய பொருள்செல் மருங்கே. என் - எனின், பல உருபு தொடர்ந்தடுக்கியவழிப் படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐ முதலிய அறுவகை யுருபும் தம் பொருள் தொடர்ச்சிப் பட அடுக்கிவருகின்ற அவ்வேற்றுமைப் பொருண்மையினை யுடைய சொற்கள், அவ்வடுக்கின் கடைக்கண் நின்ற வேற்றுமைச் சொல்லிற்கு முடிபாகிய சொல்லினையே தமக்கு முடிபாகவுடைய, பொருள்படும் இடத்து எ-று. (எ-டு.) யானையது கோட்டை நுனிக்கண் குறைத்தான். யானையது என்பது கோடு என்பதனொடு தற்கிழமைப் பட்டு ஆண்டே முடிந்தது. நுனிக்கண் என்னும் ஏழாவது குறைத்தான் என்பதனொடு முடிந்தது. இடைக்கண் நின்ற கோடு என்னும் இரண்டாவது முடிபு இன்றி நின்றது. அவ்வாறு தனக்குரியதொரு முடிபின்றே எனினும் ஏழாவதன் முடிபொடு முடிந்ததாகக் கொள்ளப்படும், அவ்வாறு பொருள்பட நின்றமையான் என்பது. தினையிற் கிளியைக் கடியும் என்பது தினையின் என்னும் ஐந்தாவது கிளியை என்னும் இரண்டாவதன் வினையொடு முடிந்தது. பிறவுமன்ன. அதிகாரத்தான் இதுவும் ஒரு மரபு வழுவமைதி என உணர்க. (19) உருபு நிற்குமிடம் இவை எனல் 105. இறுதியும் இடையும் எல்லா உருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார். என்-எனின், உருபு நிற்குமிடம் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) இருபொருளின் இறுதிக்கண்ணும் அவ் விரு பொருளின் இடையின்கண்ணும் அறுவகை வேற்றுமையுருபும் வழக்குப்படும் பொருளிடத்து நிலைபெறுதலை நீக்கார் ஆசிரியர் எ-று. (எ-டு.) கடந்தான் நிலத்தை, வந்தான் சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு, வலியன் சாத்தனின், ஆடை சாத்தனது, இருந்தான் குன்றத் துக்கண்: இவை இறுதிக்கண் வந்தன. நிலத்தைக் கடந்தான், சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான், சாத்தனின் வலியன், சாத்தனது ஆடை, குன்றத்துக் கண் இருந்தான்: இவை இடையின்கண் வந்தன. மற்று இது "பெயர்க்காகும்" (70) என்றவழி அடங்கிற்றுப் பிற எனின், அஃது ஒரு சொற்கண்ணுருபு நிற்குமாற்றிற்குச் சொல்லியது. இஃது இரு சொற்கண் உருபு நிற்குமாற்றிற்குச் சொல்லியதென உணர்க. அஃதேல், அவ்வொரு சொற்கணின்ற உருபினை அதன் முடிபாகி வரும் சொல்லொடுபடுத்து நோக்க, இருசொற்கண் வந்ததாம் என்பது சொல்லாமையும் அமையவும் பெறுமன்றோ எனின், அவ்வாறு உய்த்துணர்வதனையே இனிது உணர்தற் பொருட்டாகவும், உருபுநோக்கி வரும் சொல் அவ்வுருபின் முன்னில்லாது பின்னிற்றல் மயக்க நீர்மைத்து எனற் பொருட்டாகவும் ஈண்டுக் கூறினார் என உணர்க. "வரையார்" எனவே வழுவுடைத்து அன்று என்பது போந்தது. "நெறிபடுபொருள்" என்றதனான், இவ்வாறு இடையும் இறுதி யும் உருபுநிற்பது, உருபேற்று வழங்கும் பெயர்க்கண்ணே; வழங்காத பெயர்க்கண் நில்லா என்பது. (எ-டு.) அவ்வழிக் கொண்டான் என்பது, அவ்வழிக்கட் கொண்டான் எனவும், கொண்டான் அவ்வழிக்கண் எனவும் அவ்வாறு வழங்குவாரின்மை இல்லாதாயிற்று. வழங்குவா ருண்மையின் அவ்விட மென்னும் பெயர்க்கண் அவ்விடத்துக்கண் கொண்டான் எனவும், கொண்டான் அவ்விடத்துக்கண் எனவும் நின்றதென உணர்க. மற்றிஃது, "எவ்வயிற் பெயரும்" (சொல். 69) என்புழி அடங்கிற் றன்றோ எனின், இதுவும் அவ்விருசொற்கண் வருமாற்றிற்குக் கூறினார் என்பது. (20) ஆறனுருபிலக்கணமும், எல்லாவுருபிற்கும் பொதுவிலக்கணமும் 106. பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. என் - எனின், விசேடவகையான் உருபிற்கு உரியதோர் இலக்கண மும், எல்லா உருபிற்கும் பொதுவாயதோர் இலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓர் உருபு ஓருருபினை ஏற்று நிற்றலும் எல்லா உருபுகளும் தொக்கு வருதலும் இவை இரண்டும் முறைமைப்பட வியலும் வழக்கின்கண்ணேயுள என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) பிறிது பிறி தேற்றற்கு உதாரணம்: சாத்தனதனை, சாத்தனத னொடு என ஏழாவதன்காறும் ஒட்டுக. சாத்தனது அது எனத் தன்னுருபு தன்னை ஏலாது. பிறிது பிறிதேற்கும் என ஏற்பது ஆறாவ தென்பதும் அஃது அதனையொழிய ஏற்குமென்பதூஉம் பெறுமாறு என்னை எனின், முன்னர் உருபேற்பது பெயரென்று கூறினமையின் பிறிதெனவே அஃது அல்லாத தென்பது பெற்றாம். அஃதேயெனின், பிற சொற்களும் பிறிதெனப்படுமால் எனின் கோடலென்பதனான் இது வயிற்றென்பது. உருபு பிறிதேற்றலெனவே தன்னை யேலாதென்பது பெற்றாம். இனி "ஒன்றின முடித்தல்" என்பதனான் சாத்தனது நன்று எனப் பயனிலைகோடலும் சாத்தனதோ என விளியேற்றலும் உடைத்து என்பது கொள்ளப்படும். உருபு தொக்குவருதற்கு உதாரணம்: நிலங்கடந்தான், தாய்மூவர், கருப்புவேலி, வரைவீழருவி, சாத்தன் ஆடை, குன்றக்கூகை எனவரும். இவ்வுருபுகள் தொகுமிடத்து உருபும் பொருளும் உடன் தொகலும், ஒருவழி உருபே தொகலும் என இருவகைய. அவ் ஆறு உருபினுள்ளும் ஆறாவது உருபே தொகுவது, அல்லன எல்லாம் இவ்வாறு தொகும் எனக் கொள்க. படைக்கை என்பது உருபும் பொருளும் உடன் தொக்கது. நிலங்கடந்தான் என்பது உருபு தொக்கது. பிறவும் அன்ன. இதனான் சொல்லியது உருபு தன்னிலக்கண மாறிப் பெய ரிலக்கணம் எய்துதலும், தன்பொருள்வழித் தான் இல்லாததாகலும், வழுவே எனினும் முற்கொண்டமைந்த வழக்காதலான் களையலாவன அல்ல என மரபு வழுவமைதி கூறியவாறு. (21) எய்தியது விலக்குவது 107. ஐயும் கண்ணும் அல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகா இறுதி யான. என் - எனின், மேல் உருபுகள் தொக்குவரும் என்புழித் தொக்கு வருவனவற்றது நிலை ஒவ்வாமை கண்டு அஃது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டாவதன் பொருண்மையும், ஏழாவதன் பொருண் மையும் அல்லாத பொருள்களிடத்து வருகின்ற உருபுகள் தமக்கு உண்மை யாகிய வடிவு தொகா, இருமொழியின் இறுதிக்கண் எ-று. (எ-டு.) கடந்தான் நிலம், இருந்தான் குன்றத்து எனவரும். வந்தான் சாத்தனொடு என்பது வந்தான் சாத்தன் என உருபு தொக்குழி அப்பொருள் விளங்காமையின் அந்நிகரன இறுதிக்கண் தொகாவாயின. "நாணில மன்ற" (35) என்னும் குறுந்தொகையுள் "பிரிந்திசினோர்க்கு அழல்" என ஆன் இறுதிக்கண் தொக்கு நின்றதால் எனின், அந்நிகரன வழக்கினுள் இன்மையின் செய்யுள் விகாரம் என்க. (22) உருபுகள் ஒரோவழித் தம் பொருண்மையின்றி மயங்குதல் 108. யாதன் உருபின் கூறிற் றாயினும் பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும். என் - எனின், உருபுகள் ஒரோவழித் தம் பொருண்மையின்றி மயங்குதலுடைய என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு பொருண்மை யாதானும் ஓர் உருபினான் கூறப்பட்ட தாயினும் அப்பொருண்மை அவ்வுருபினதாகாது, அப்பொருள் செல்லும் கூற்றினையுடைய வேற்றுமை ஆண்டு வந்து சார்ந்த அப்பொருளினைக் கொள்ளும் எ-று. (எ-டு.) "கிளையரி நாணற் கிழங்குமணற் கீன்ற, முளையோ ரன்ன முள்ளெயிற்றுத் துவர்வாய்" (அகம். 212) என்னும் பாட்டினுள், மணலுள் ஈன்ற என்பது மணற்கீன்ற என்றாயிற்று. இவ்வாறு பொருளன்றியும் மயங்கும் என்றதால் வேண்டிய வாறெல்லாம் வரப்பெறும் என்றவாறாம்பிற எனின், அதுவன்று; வழக்குள்வழியது அம்முடிபு எனக் கொள்க. (23) எதிர்மறைக்கண்ணும் வேற்றுமை தம் பொருளின் திரியாமை 109. எதிர்மறுத்து மொழியினும் தத்தம் மரபின் பொருள்நிலை திரியா வேற்றுமைச் சொல்லே. என் - எனின், அவ்வேற்றுமைகள் தம் பொருள் மாறுபட நின்ற வழியும், தம் பொருள் திரியா என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐ முதலிய ஐவகை உருபிற்கும் செயப்படுபொருள் முதலாக ஓதப்பட்ட பொருண்மைகளை எதிர்மறைபடச் சொல்லினும் தமக்குரிய மரபாகிய அப்பொருள் நிலைமையின் திரியா அவ் வேற்றுமைச் சொற்கள் எ-று. (எ-டு.) மரத்தைக் குறையான், சாத்தனொடு வாரான் எனவரும். பிறவும் அன்ன. (24) உருபுகளுட் சில செய்யுளுள் திரிபுபட நிற்றல் 110. கு ஐஆன் என வரூஉம் இறுதி அவ்வொடும் சிவணும் செய்யு ளுள்ளே. என் - எனின், அவ்வுருபுகளுள் ஒருசாரன செய்யுளுள் திரிபுபட நிற்றலுடைமை கண்டு அஃது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கு என்றும், ஐ என்றும், ஆன் என்றும் சொல்ல வருகின்ற உருபு ஈறுகள் அகரத்தொடு பொருந்தி ஈறு திரிந்து நிற்றலும் உடைய, செய்யுளிடத்து என்றவாறு. அவைகளை முன்னர்ச் சொல்லுதும். (25) எய்தியது விலக்கல் 111. அவற்றுள், அஎனப் பிறத்தல் அஃறிணை மருங்கின் குவ்வும் ஐயும் இல்லென மொழிப. என் - எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) அ என ஈறு திரிந்து நிற்றல், அஃறிணை இடத்துக்'கு' என்னும் உருபும், ஐ என்னும் உருபும் நில்லாமையுடைய எ-று. எனவே, உயர்திணையிடத்து மூன்றுருபும் திரியும் என்பதூஉம், அஃறிணைக்கண் ஆன் என்னும் உருபு ஒன்றுமே திரியும் என்பதூஉம் பெற்றாம். (எ-டு.) "கடிநிலை யின்றே யாசிரியர்க்க" (எழுத். 389) ஆசிரியர்க்கு எனற்பாலது ஆசிரியர்க்க என்றாயிற்று. "காவலோனக் களிறஞ் சும்மே" - காவலோனை எனற்பாலது காவலோன என்றாயிற்று. புலவரான் என்பது புலவரான என்றாயிற்று. இவை உயர்திணைக்கண் திரிந்தவாறு. புள்ளினான் என்பது புள்ளினான என்றாயிற்று. இஃது அஃறிணைக்கண் திரிந்தவாறு. அவ்வொடும் என்ற உம்மை எதிர்மறையாகலான் ஈறு திரியாமல் நிற்றல் பெரும்பான்மை. இவை இடைச்சொல் லாதலின் 'தம்மீறு திரிதல்' (சொல். 25) என்புழி அடங்காவோ எனின், வழக்கினுள் இவ்வாறு வாராமையின் அடங்கா என்பது. (26) நான்காவது ஏனை வேற்றுமைப் பொருளொடு மயங்கல் 112. இதன திதுவிற் றென்னும் கிளவியும் அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும் அதனாற் செயற்படற் கொத்த கிளவியும் முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கமும் காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும் அன்ன பிறவும் நான்கன் உருபில் தொன்னெறி மரபின தோன்ற லாறே. என் - எனின், நான்காம் வேற்றுமை, ஏனைய வேற்றுமைக் கண்ணெல்லாம் சென்று மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இப் பொருளினுடையதுதான் இத்தன்மைத்து என்று சொல்லப்படும் ஆறாவதன் பொருண்மையும், ஒன்றனை யொன்று கொண்டிருக்கும் என்று சொல்லப்படும் இரண்டாவதன் பொருண்மையும், ஒன்றான் ஒன்று செயப்பாடுடைத்தாதற்குப் பொருந்துதல் என்னும் மூன்றாவதன் பொருண்மையும், முறைமையைக் கொண்டெழுந்த ஆறாவதன் பெயர்ச்சொல்லாகிய சொல்லின் பொருண்மையும், எல்லைப் பொருண்மையை வரைந்து உணர்த்தலுடைய ஐந்தாம் வேற்றுமைப் பொருண்மையும், பண்பினாகி வருகின்ற ஐந்தாவதன் பொரூஉப் பொருண்மையும், காலப் பொருண்மையான் அறியப்படுகின்ற ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும், பற்று விடுதலாகிய ஐந்தாவதன் நீக்கப் பொருண்மையும், தீர்தல் என்னும் வாய்பாட்டதாகிய ஐந்தாவதன் நீக்கப் பொருண்மையும், அத்தன்மையன பிற வேற்றுமைப் பொருளிடத்து நான்கனுருபின் அமைத்துக் கூறுதலைப் பழையநெறி முறையாகவுடைய அவை தோன்றும் நெறிக்கண் எ-று. (எ-டு.) யானையது கோடு கூரிது என்புழி, யானைக்குக் கோடு கூரிது என்றாயிற்று. இவளைக் கொள்ளும் இவ்வணி என்புழி, இவளுக்குக் கொள்ளும் இவ்வணி என்றாயிற்று. வாயாற்றக்கது வாய்ச்சி என்புழி, வாய்க்குத் தக்கது வாய்ச்சி என்றாயிற்று. ஆவினது கன்று என்புழி, ஆவிற்குக் கன்று என்றாயிற்று. கருவூரின் கிழக்கு என்புழி, கருவூர்க்குக் கிழக்கு என்றாயிற்று. சாத்தனின் நெடியன் என்புழிச் சாத்தற்கு நெடியன் என்றாயிற்று. மாரியுள் வந்தான் என்புழி, மாரிக்கு வந்தான் என்றாயிற்று. ஊரிற் பற்றுவிட்டான் என்புழி ஊர்க்குப் பற்றுவிட்டான் என்றாயிற்று. ஊரில் தீர்ந்தான் என்புழி ஊர்க்குத் தீர்ந்தான் என்றாயிற்று. இனி, 'அன்னபிறவும்' என்றதனால் ஊரிற்சேயன் என்புழி, ஊர்க்குச் சேயன் என்றாயிற்று. காட்டிற்கணியன் என்பதும் அது. இவையெல்லாம் உருபும் பொருளும் உடன் மயங்கின எனக் கொள்க. மற்று இம்மயக்கம் 'அன்ன பிறவும்' என்புழி அதிகாரத்தானே அடங்காதோ எனின், அஃது ஒன்றனோடு ஒன்று பரிமாறும் அதிகாரத்தது; இஃது ஒன்று பலவற்றொடு சென்று மயங்கும் அதிகாரத்தது; ஆகலின் அதனுள் அடங்காது என்க. (27) மற்றையுருபுகளும் தம்முள் மயங்குமாறு 113. ஏனை உருபும் அன்ன மரபின மானம் இலவே சொல்முறை யான. என் - எனின், நான்காவ தொழித்து ஒழிந்த வேற்றுமை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்காவது ஒழிந்த உருபுகள் ஐந்தும், நான்காவது போலப் பல வேற்றுமைப் பொருட் கண்ணும் சென்று மயங்குமிடத்துக் குற்றம் இல்லை. அவ்வாறு சொல்லிவரும் வழக்கு முறைமைக்கண் எ-று. வழக்கினுளவேல் கண்டுகொள்க என்பன, காணாமையின் காட்டா மரபினவாம். (28) வினைச்சொல் இலக்கணம் 114. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலம் கருவி என்றா இன்னதற் கிதுபய னாக என்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழில்முதல் நிலையே. என் - எனின், வினைச்சொல் லிலக்கணம் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.)தொழிலினையும், தொழில் நிகழ்த்தும் கருத்தாவினையும், அவனான் செய்யப்படு பொருளினையும், அவன் தொழில் நிகழ்த்தற்கு இடமாகிய நிலத்தினையும், அதற்கு இனமாகிய காலத்தினை யும், அதற்குத் துணையாகிய கருவியினையும், இன்னாற்கு இது என்று சொல்லப்படுகின்ற அப்பொருளினையும், இதனை ஏற்றுக் கொண்டவத னான் பயனாகச் சொல்லப்படுகின்ற அப்பொருண்மை யினையும் தொகைசெய்து அவ்வெட்டும் என்று சொல்லும் ஆசிரியன், வினைச்சொல் பிறத்தற்கு இடமாகிய பொருளது நிலைமையை எ-று. (எ-டு.) வனைந்தான் என்பது. இதனுள் எட்டும் வந்தவாறு: வனைந்தானென வனைதல் தொழின்மை விளங்கிற்று. வனைந்தான் என ஒருவனும், வனையப்பட்ட குடம் முதலாய செயப்படுபொருளும் விளங்கின. வனைந்ததோரிடம் அகமானும் புறமானும் விளங்கிற்று. கோலும் திகிரியும் முதலாகிய கருவியும் விளங்கிற்று. வனைவித்துக் கொண்டானும் விளங்கி, வனைந்தான் பெற்றதொரு பயனும் மரபானும் பொருளானும் விளங்கின. பிறவும் அன்ன. வினையது இலக்கணம் வினையியலுள் கூறற்பாலது. அதனை, ஈண்டுக் கூறியது என்னை எனின், வேற்றுமைகளைப் பெயர்க்கே உரிமை செய்து கூறினமையின், வினையோடு என்னும் இயல்பில என்பதுபட்டு நின்றமையின் அவ்வினை வருங்காலும் வேற்றுமைகளொடு வருவது என்பது அறிவித்தற்கு ஈண்டுக் கூறப்பட்டது. கூறிய எட்டிலக்கணங்களுள் வினை என்பது பொருட் குறிப்பான் இரண்டாவதாய்ச் சேர்ந்தது. செய்வது எழுவாயாய்ச் சேர்ந்தது. செயப்படு பொருள் இரண்டாவதாய்ச் சேர்ந்தது. நிலமும் காலமும் ஏழாவதாய்ச் சேர்ந்தன. கருவி மூன்றாவதாய்ச் சேர்ந்தது. இன்னதற்கு இது பயனாக என்னும் இவ்விரண்டும் நான்காவதாய்ச் சேர்ந்தன. இவ்வாறு ஆறாவதும், விளியும் ஒழிய மற்றைய ஆறும் வந்தவாறு கண்டுகொள்க. (29) மேலதற்கொரு புறனடை 115. அவைதாம், வழங்கியல் மருங்கின் குன்றுவ குன்றும். என் - எனின், மேலதற்கொரு புறனடையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட எண்வகை இலக்கணமும் வழக்கு நடத்துமிடத்துக் குறைவன குறைந்து வரும் எ-று. (எ-டு.) கொடி ஆடிற்று, வளி துஞ்சும் என்பன. செயப்படுபொருளும், இன்னார்க்கு என்பதும், இது பயனாக என்பதும் இல்லை. துஞ்சும் என்புழியும் குன்றின உள. பிறவும் அன்ன. (30) ஆகுபெயர் ஆமாறு 116. முதலிற் கூறும் சினையறி கிளவியும் சினையிற் கூறும் முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுத லுரைக்கும் கிளவியொடு தொகைஇ அனைமர பினவே ஆகுபெயர்க் கிளவி. என் - எனின், ஆகுபெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதற்பொருள் ஏதுவாகக் கூறப்படும் சினைப்பொருளை அறியுஞ்சொல்லும், சினைப்பொருள் ஏதுவாகக் கூறப்படும் முதற் பொருளை அறியுஞ் சொல்லும், ஒருபொருள் பிறந்த இடத்தினைச் சொல்ல அவ்விடத்தினான் பிறந்த பொருளை உணர நிற்கும் சொல்லும், ஒரு பண்பினைச் சொல்ல அப்பண்படைந்த பொருளினை விளங்க நிற்குஞ் சொல்லும், ஒரு தொழிலினைச் சொல்ல அத்தொழில் நிகழ்ச்சி யான் அதனை உணர நிற்குஞ் சொல்லும், ஒரு பொருள்மேல் இரண்டு பொருளினை ஒட்டிச் சொல்ல அஃது அப்பொருளினை ஒழிய அதனை யுடைய வேறொரு பொருளினை உணர நிற்குஞ் சொல்லும், ஒரு வினையை நிகழ்த்திய கருத்தாவினைச் சொல்ல அதனான் நிகழ்த்தப்பட்ட தனை உணர நிற்குஞ் சொல்லும், இவை எழுந்த அம்மரபின் தொக்க தம் பெயர் கூறியவழிக் காரணமாய் நின்றவற்றையே தம் இலக்கணமாக வுடைய சொற்கள் ஆகு பெயர்ச் சொல்லாம் எ-று. (எ-டு.) 'முதலிற்கூறும் சினையறிகிளவி': கடுத்தின்றான், தெங்கு தின்றான் என்பன. 'சினையிற் கூறும் முதலறிகிளவி': இலைநட்டு வாழும், பூநட்டு வாழும் என்பன. 'பிறந்த வழிக்கூறல்' : குழிப்பாடி. 'பண்புகொள் பெயர்' : நீலம் என்பது. 'இயன்றது மொழிதல்': ஏறு, குத்து. 'இருபெயரொட்டு': பொற்றொடி. இஃது அன்மொழித் தொகையன்றோ எனின், படுத்தலோசைப் பட்டவழி அன்மொழித் தொகையாம்; எடுத்தலோசைப் பட்டவழி ஆகுபெயராகும் என்பது. 'வினைமுதலுரைக்குங் கிளவி': தொல்காப்பியம், கபிலம். (31) இதுவுமது 117. அவைதாம், தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும் ஒப்பில் வழியால் பிறிதுபொருள் சுட்டலும் அப்பண் பினவே நுவலுங் காலை. என் - எனின், இதுவும் ஆகுபெயர்க்கண்ணே படுத்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முற்கூறிய ஆகுபெயர்கள் தத்தம் பொருட்கண் ஆங்கால் தாம் முன்பு உணர்த்தி நின்ற பொருட்கு வேறன்றி அதனொடு தொடர்ந்த பொருளொடு பொருந்தி நிற்றலும், அம்முதற் பொருளொடு பொருத்த மில்லாத கூற்றினான் நின்று பிறிது பொருள் உணர்த்தலும் என்று சொல்லப் படுகின்ற அவ்விரு வகை இலக்கணத்தினையும் உடைய சொல்லுங் காலத்து எ-று. (எ-டு.) தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணல்: தெங்கு, கடு என்னும் தொடக்கத்தன. ஒப்பில் வழியான் பிறிது பொருள் சுட்டல்: குழிப்பாடி, பொற்றொடி என்பன. இதனாற் சொல்லியது ஒன்றனது பெயரை ஒன்றற்கு இடுங்கால், அம்முதற் பொருளொடு தொடர்பு உள்வழியே இடவேண்டும் என்று கருதின் அது வேண்டுவ தில்லை; அம்முதற் பொருளொடு தொடராது பிறவாற்றானும் இயைபுள்வழியும் இடலாம் என்பது கூறியவாறாயிற்று. அஃதேல் இச் சூத்திரப் பொருண்மை மேல் சூத்திரத்து ஓதியவாற் றானே பெற்றாமன்றோ எனின், பெற்று நின்றதனையே இவ்வாறு ஒப்பில்வழியும் ஆம் என மாணாக்கனை நன்கு தெளிவித்தற் பொருட்டுக் கூறினார் என்பது. (32) இதுவுமது 118. வேற்றுமை மருங்கில் போற்றல் வேண்டும். இதுவும் ஆகுபெயர்க்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவ்வாகுபெயர்களை ஐ முதலிய ஆறு வேற்றுமைப் பொருண்மையிடத்தினும் இயைபுடைமையைப் பாதுகாத்து அறியல் வேண்டும் ஆசிரியன் எ-று. (எ-டு.) பொற்றொடி என்னும் ஆகுபெயர் பொற்றொடியைத் தொட்டாள் - பொற்றொடியை என இரண்டாவதன் பொருண்மைத்து. தொல்காப்பியம் என்பது தொல்காப்பியனால் செய்யப்பட்டதென மூன்றாவதன் பொருண்மைத்து. தண்டூண் என்னும் ஆகுபெயர் தண்டூணாதற்குக் கிடந்தது என நான்காவதன் பொருண்மைத்து. பாவை என்னும் ஆகுபெயர் பாவையினும் அழகியாள் என ஐந்தாவதன் பொருண்மைத்து. கடு என்னும் ஆகுபெயர் கடுவினது காய் என ஆறாவதன் பொருண்மைத்து. குழிப்பாடி என்னும் ஆகுபெயர் குழிப்பாடியுள் தோன்றியது என ஏழாவதன் பொருண்மைத்து. பிறவும் அன்ன. இதனாற் சொல்லியது, முன் ஒப்பில் வழியான் பிறிது பொருள் சுட்டலுமாம் என்றமையின், அப்பிறிது பொருள் சுட்டியவாறு பாகுபாடு பெறுங்கொல்லோ எனின், இவ்வாறு வேற்றுமைப் பொருள் உள்வழியே ஆகுபெயராவது; பிறவழி யாகாது என்று கூறியவாறு. (33) அளவும் நிறையும் ஆகுபெயர் ஆதல் 119. அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி உளவென மொழிப உணர்ந்திசி னோரே. என் - எனின், இன்னொருசார் ஆகுபெயர் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) அளவுப் பெயரினையும் நிறைப் பெயரினையும் மேற் கூறிய ஆகுபெயரொடு கொள்ளுமிடங்கள் உள என்று சொல்லுவர் உணர்வுடையோர் எ-று. (எ-டு.) நாழி உழக்கு என இவை அளவுப்பெயர். ஈண்டு இதன் பொருள் அதற்காயிற்றோ எனின், அளக்கப்பட்ட பொருட்கண் கிடந்த வரையறைக்கண் அப்பெயர் பொருட் காயிற்று எனக் கொள்க. தொடி, துலாம் என்பன நிறைப்பெயர்; ஈண்டு வரையறைக் குணத்தினான், பெயர் பொருட்காயிற்று என உணர்க. மற்றிவை "கிளந்தவல்ல" (சொல். 120) என்னும் புறனடையுள் அடங்காவோ எனின், இவற்றை உலகத்தார் பெயர்க் குறிப்பு என்று கொள்ளாது அப்பொருட்குப் பெயர்போலக் கொண்டமையின் வேறு கூறினார் எனக் கொள்க. (34) ஆகுபெயர்க்குப் புறனடை 120. கிளந்த அல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. என் - எனின், மேற்கூறிய ஆகுபெயர்க்கண் மேல் எடுத்தோதின வல்லாதன வேறு பல தோன்றினும் அவ்வெடுத்தோதப்பட்டவற்றின் இயல்பினானே உணர்ந்து கொள்க எ-று. (எ-டு.) யாழ்கேட்டான், குழல் கேட்டான் என அவற்றினாகிய ஓசைமேல் நின்றன. பசுப் போல்வானைப் பசு என்ப, பாவை போல் வாளைப் பாவை என்ப. இனி ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் என்னும் எண்ணுப்பெயர்களும் வரையறைப் பண்பின் பேர் பெற்ற ஆகுபெயர் எனக்கொள்க. அவ் வெண்ணுப்பெயரின் அறிகுறியாகிய அலகுநிலைத் தானங்களும் அப்பெயரவாயின எனக் கொள்க. இனி அகரமுதலாகிய எழுத்துக்களை உணர்த்துதற்குக் கருவியாகிய வரிவடிவுகளும் அப்பெயரவாம். தாழ்குழல், திரிதாடி என்பன இரு பெயரொட்டு அன்மையின் ஈண்டே கொள்க. மண்ணானாய கலத்தை மண் என்றும், பொன்னானாய கலத்தைப் பொன் என்றும் இவ்வாறே காரணத்தின் பெயரினைக் காரியத்துக்கு இட்டும், கடி சூத்திரத்திற்காக இருந்த பொன்னைக் கடிசூத்திரம் என்றும், தண்டூணாதற்குக் கிடந்த மரத்தினைத் தண்டூண் என்றும், இவ்வாறே காரியத்தின் பெயரினைக் காரணத்திற்கு இட்டும் வருவன எல்லாம் கொள்க. இனி எழுத்து எனவும் சொல் எனவும் கூறிய இலக்கணங்களைக் கூறிய நூல்மேல் ஆகுபெயராய் வருவனவும் ஈண்டே கொள்க. 'வேறு' என்றதனான் அவ் வாகுபெயர்கள் தொல்காப்பியம், வில்லி, வாளி என ஈறுதிரிந்தனவும் ஈண்டே கொள்க. இவ்வாகுபெயரை இவ் வோத்தினுள் கூறினார். இதுவும் எழுவாய் வேற்றுமை மயக்கமாகலின் ஈண்டே கூறினார் என்பது. (35) வேற்றுமை மயங்கியல் முற்றிற்று. 4 விளிமரபு விளி வேற்றுமையது பொதுவிலக்கணம் 121. விளிஎனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய என்ப. இவ் வோத்து என்ன பெயர்த்தோ எனின், விளிமரபு என்னும் பெயர்த்து. மேலோத்தினோடு இவ் வோத்திடை இயைபு என்னோ எனின், மேல் "வேற்றுமை விளியோடு எட்டே" (சொல். 64) என நிறுத்தார்; அந்நிறுத்த முறையானே விளியொழித்து அவ்வேழும் உணர்த்தி இனி ஒழிந்து நின்ற விளியை உணர்த்துகின்றார் என்பது. இம்முதற்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் விளி வேற்றுமையது பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று எ-று. (இ-ள்.) விளி என்று சொல்லப்படுவன தம்மை ஏற்கும் பெய ரோடு யாப்புறத் தோன்றும் தன்மைய என்று சொல்லுவர் புலவர் எ-று. 'படுப' எனப் பன்மை கூறிய அதனான், அவ்விளிதான் ஈறு திரிதலும் ஈற்றயல் நீடலும், பிறிது வந்தடைதலும், இயல்பாதலும் என நான்கு வகைப்படும் என்பது பெறப்பட்டது. 'தெளிய' என்றதனான் விளி தன்னை எழுவாயின் வேறுபாடதன்றி வேறொரு வேற்றுமை என்பாரும் உளர் என்பதூஉம், இவ்வாறு ஒரு வேற்றுமையாக நேர்ந்தார் என்பதூஉம் பெறப்பட்டன. (1) இஃது அப் பெயர்களைக் கூறுவல் எனல் 122. அவ்வே, இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப. என் - எனின், மேற்சொல்லப்பட்டவற்றை இனிச் சொல்லுப என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் விளி யேற்பனவும் ஏலாதனவும் எனச் சொல்லப் பட்டவற்றை இவை என அறியும்படி வழக்குக்குத் தழுவ எடுத்தோதுப ஆசிரியர். அதனான் யானும் அம்முடிபே கூறுவல் என்பது. இது மொழிவாம் என்னும் தந்திரவுத்தி மற்றஃதாமாறு என்னை, கிளப்பல் என்னாது, கிளப்ப என்றமை யின், முதனூலுள் அவ்வாறு கூறும் என்பதன்றே பெறுவது எனின், சொற்கிடை அது எனினும் ஆண்டுக் கூறியவாறு போல யானும் ஈண்டுக் கூறுவல் என்பது கருத்தாகக் கொள்க. இனிக் கிளப்ப என்பதனைப் பெயர்ப்படுத்துக் கூறலும் ஒன்று. (2) உயர்திணையின் விளியேற்கும் ஈறுகள் 123. அவைதாம், இ உ ஐ ஓ என்னும் இறுதி அப்பால் நான்கே உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. என் - எனின், உயிரீற்று உயர்திணைப் பெயருள் விளியேற்பன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் விளியேற்கும் எனப்பட்டவை தாம் இ, உ, ஐ, ஓ, என்று சொல்லப்பட்ட ஈறுகளையுடைய அக்கூற்று நான்கு பெயரே உயர்திணையிடத்து மெய்ப் பொருளினைச் சுட்டிய விளியினைக் கொள்ளும் பெயராவன எ-று. உயிரீற்று உயர்திணைப் பெயர்களுள் விளியேற்பன இந்நான்கும் எனவே ஒழிந்த உயிரீறு விளியேலா என்பதூஉம் இதனாற் பெற்றாம். உயிரீறு பன்னிரண்டும் உயர்திணைப் பெயர்க்கு ஈறாமோ எனின் அஃது ஈண்டு ஆராய்ச்சி யன்று; ஈறாவனவற்றுள் விளியேற்பன இவை என்றவாறு. மக என்னும் அகரவீறும், ஆடூஉ மகடூஉ என்னும் ஊகரவீறும் இந்நிகரன விளிஏலாதன எனக் கொள்க. 'மெய்ப்பொருள் சுட்டிய' என்றதனான், இவ்வீற்று அஃறிணைப் பெயர்களும் இவ்வுயர்திணைபோல விளிஏற்பன என்பது கொள்ளப் படும். அவை தும்பி தும்பீ எனவும், முல்லை முல்லாய் எனவும் வரும். (3) இகர ஐகார ஈறுகள் விளியேற்குமாறு 124. அவற்றுள், இஈ யாகும் ஐஆய் ஆகும். என் - எனின், மேற்சொல்லப்பட்ட நான்கனுள்ளும் இகரவீறும் ஐகாரவீறும் விளியேற்குமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட நான்கீற்றுப் பெயருள்ளும் இகரஈற்றுப் பெயர் ஈகாரமாய் விளியேற்கும்; ஐகார ஈற்றுப் பெயர் ஆயாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) நம்பி - நம்பீ, நங்கை - நங்காய் என வரும். இவை ஈறுதிரிதல். ஓகாரமும் உகரமும் விளியேற்குமாறு 125. ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும். என் - எனின், ஒழிந்த இரண்டு ஈறும் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓகார ஈற்றுப் பெயரும் உகர ஈற்றுப் பெயரும் ஏகாரத் தொடு பொருந்தி விளியேற்கும் எ-று. (எ-டு.) கோ - கோவே எனவும், வேந்து - வேந்தே எனவும் வரும். இவை பிறிது வந்தடைதல். (5) மேற்கூறிய உகரம் குற்றிய லுகரமெனல் 126. உகரந் தானே குற்றிய லுகரம். என் - எனின், ஐயமறுத்தல் நுதலிற்று; என்னை மேல் 'இ உ ஐ ஓ' (சொல். 123) என்புழி இன்ன உகரம் என்று தெரித்துக் கூறாமையானும், உடன் ஓதப்பட்ட எழுத்துக்கள் முற்று இயல்பினவாதலானும், இன்ன உகரம் என்பது அறியாது ஐயுற்றான் ஐயந்தீர்த்தமையின் என்பது. (இ-ள்.) மேற் கூறப்பட்ட உகரந்தான் முற்றிய லுகரம் அன்று; குற்றியலுகரமாம் எ-று. (6) ஏனைய உயிர் உயர்திணையில் விளியேலா எனல் 127. ஏனை உயிரே உயர்திணை மருங்கின் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர். என் - எனின், வேண்டாகூறி வேண்டியது முடித்தலை உணர்த்தல் நுதலிற்று. என்னை, வேண்டா கூறியவாறு எனின் அவைதாம் இ உ ஐ ஓ என்புழி இந்நான்கு ஈறும் விளியேற்கும், ஒழிந்த உயிரீறு விளியேலா என்பது பெற்றமையின் என்பது. இனி வேண்டியது முடித்தவாறு என்னை யெனின், ஒழிந்த உயிரீறு வேற்றுமை ஏலா; இன்னும் மேற் சொல்லிய உயிரீறு இனிக் கூறுமாறு போலாது விளியேற்கும் என்றமையின். (இ-ள்.) மேற்கூறிய நான்கு உயிரீறே யன்றி ஒழிந்த உயிரீறுகள் உயர்திணைப் பெயரிடத்துத் தாம் விளித்தலைக் கொள்ளா என்று சொல்லுவர் புலவர் எ-று. இவ்விதி மேலே பெற்றாமன்றோ எனின், மேற் கூறியவாறன்றி விளியேற்கும் என்பது கருத்தெனக் கொள்க. கணி - கணியே என இகரஈறு ஏகாரம் பெற்றது. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (7) இகரஈற்று அளபெடைப் பெயர் விளியேற்குமாறு 128. அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகும் செயற்கைய என்ப. என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று; என்னை? ஈகாரமாதல் விலக்கி இயல்பாய் விளி யேற்கும் என்றமையின். (இ-ள்.) அளபெடுத்தலான் மிகுகின்ற இகரமாய இறுதியை யுடைய பெயர் இயல்பாய் விளியேற்கும் செய்தியையுடைய எ-று. (எ-டு.) தொழீஇஇஇ, (கலி. 103) 'தொழீஇ' (சிறுபஞ்ச. 38) என்பது பெயர், விளியும் அஃதே எனக் கொள்க. இஃது இயல்பு இயற்கைய என்று பன்மை கூறிய அதனான் இவ்வளபெடை மூன்று மாத்திரையின் நிமிர்ந்து நிற்கும் என்று கொள்ளப்படும். செயற்கைய என்றதனான் இவ்வளபெடைப் பெயர் எழுதும்வழி ஐந்தெழுத்திட்டு எழுதுக என்று கொள்ளப்பட்டது. (8) முறைப்பெயரில் 'ஐ'ஈறு ஆ வாகவும் வருதல் 129. முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி ஆவொடு வருதற் குரியவும் உளவே. என் - எனின், மேற்சிறப்புவிதி வகுத்தலை நுதலிற்று; முறைப் பெயரிடத்து ஐகாரவீறு ஆயாய் விளியுருபேற்று வருதலே அன்றி 'ஆ'வாயும் விளியேற்கின்றமையின். (இ-ள்.) முறைப் பெயரிடத்து ஐ என்னும் ஈறு ஆயொடு வருதலேயன்றி ஆவொடு வருவதற்கு உரியனவும் உள எ-று. (எ-டு.) அன்னை - அன்னா என்றும், அத்தை - அத்தா என்றும் வரும். உம்மை எதிர்மறை. அதனான் ஆயாதலே பெரும்பான்மைத்து. மற்றிவை விரவுப் பெயர்களை உயர்திணைப் பெயர்களொடு மாட்டெறிப ஆதலானும் அம்மாட்டேற்றிற்கு ஏற்ப உயர்திணைப் பெயர்களுள் இவ்வாறு விளியேற்பன இன்மையானும் ஆண்டுக் கூறற்பா லதனை ஈண்டுக் கூறினார் எனக் கொள்க. (9) அண்மைவிளி இயல்பாதல் 130. அண்மைச் சொல்லே இயற்கை யாகும். என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று; மேற்கூறியவாறன்றி இன்னுழி இயல்பாம் என்கின்றமையின். (இ-ள்.) மேற்கூறிய உயிரீறு நான்கினையுமுடைய அணியாரைக் கூவும் சொற்கள் மேற் கூறியவாறன்றி இயல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) நம்பி வாழி, நங்கை வாழி, வேந்து வாழி, கோ வாழி என வரும். (10) உயர்திணையில் விளியேற்கும் புள்ளியீறுகள் 131. னரலள என்னும் அந்நான் கென்ப புள்ளி இறுதி விளிகொள் பெயரே. என் - எனின், உயர்திணைக்கண் உயிரீறு விளியேற்பன இவை என்பது உணர்த்தி இனி இவ்வுயர்திணைக்கண் புள்ளி ஈறு விளியேற்பன இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ன ர ல ள என்று சொல்லப்பட்ட அந் நான்கு ஈற்றுப் பெய ரும் என்று சொல்லுப ஆசிரியர், புள்ளியீற்றினை உடைய விளித்தலைக் கொள்ளும் உயர்திணைப் பெயராவன எ-று. புள்ளியீற்றுள் இவை கொள்ளும் எனவே ஒழிந்தன விளிகொள்ளா என்பதூஉம் பெற்றாம். (எ-டு.) பொருந, பாண எனவரும். எல்லாரும் முதலாயின விளி ஏலாதன எனக் கொள்க. (11) புள்ளி யீற்றுள் விளி ஏலாதன 132. ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா. என் - எனின், வேண்டா கூறி வேண்டியது முடித்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட நான்கும் அல்லாத புள்ளியீறு உயர்திணையிடத்து விளித்தலைக் கொள்ளா எ-று. மற்று இவ்விதி மேலே பெற்றாம் அன்றோ எனின், மேற் சொல்லிய நான்கு புள்ளியீறும் இனிக் கூறுமாறு போலாது விளியேற்ற லும் உடைய என்றற்கு மிகைபடக் கூறப்பட்டது எனக் கொள்க. (எ-டு.) னகர ஈற்றுள் மேலோதுகின்ற அன்னீறும் ஆனீறும் அல்லாத னகர வீறு தம்முன் - தம்முன்னே எனவும், நம்முன் - நம்முன்னே எனவும் விளியேற்றது. ரகர ஈற்றுள் ஓதுகின்ற அர் ஈறும் ஆரீறும் அல்லாத இர் ஈறு பெண்டிர், பெண்டீரே என ஏகாரம் பெற்றும் கேளிர், கேளிர் என இயல்பாயும் விளி ஏற்றன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. இன்னும் இம்மிகையானே ஏனைய புள்ளியுள்ளும் சிறுபான்மை யாவனவுள. 'விளங்கு மணிக்கொடும் பூண் ஆஅய்' (புறம். 130) என யகர ஈறு இயல்பாய் விளி ஏற்றன. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (12) னகர ஈறு விளி ஏற்குமாறு 133. அவற்றுள், அன் என் இறுதி ஆவா கும்மே. என் - எனின், மேல் நிறுத்த முறையானே, னகர ஈறு விளியேற்கு மாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) அந்நான்கு புள்ளியுள்ளும் னகர ஈற்று அன் என்னும் பெயரின் இறுதி ஆவாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) சோழன்-சோழா, சேர்ப்பன்-சேர்ப்பா என வரும். (13) னகர ஈறு அண்மை விளியில் அகரமாதல் 134. அண்மைச் சொல்லிற் ககரம் ஆகும். என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் அன் ஈறு அணியாரை விளிக்குஞ் சொல்லிடத்து அகரமாகும் எ-று. (எ-டு.) சோழன்-சோழ, சேர்ப்பன்-சேர்ப்ப என வரும். (14) ஆனென் இறுதி விளி யேற்குமாறு 135. ஆனென் இறுதி இயற்கை யாகும். என் - எனின், னகர ஈற்றுள் ஒருசாரன விளி ஏற்குமாறு நுதலிற்று. (இ-ள்.) ஆன் என்னும் னகர இறுதிப் பெயர் இயல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) சேரமான், மலையமான் என வரும். (15) எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் 136. தொழிலிற் கூறும் ஆனென் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவன் செய்யும் தொழில் ஏதுவாகக் கூறப்படுகின்ற ஆன் என்னிறுதிப்பெயர் விளியேற்கு மிடத்து ஆயாகும் எ-று. (எ-டு.) உண்டான் - உண்டாய். நின்றான் - நின்றாய் என வரும். (16) இதுவுமது 137. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. என் - எனின், இதுவும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) அவற்றுள் பண்பு தனக்குப் பொருண்மையாக் கொண்ட பெயரும் மேற்கூறிய தொழிற்பெயரோடு ஒரு தன்மைத்து எ-று. (எ-டு.) கரியான் - கரியாய், செய்யான் - செய்யாய் என வரும். (17) ஆனீற்று அளபெடைப்பெயர் விளி யேற்குமாறு 138. அளபெடைப் பெயரே அளபெடை இயல. என் - எனின், எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) ஆனீற்று அளபெடைப் பெயர் மேற்கூறிய (சொல். 128) இகரவீற்று அளபெடைப் பெயர்போல இயல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) உழாஅன், கிழாஅஅன் என வரும். மற்று இஃது ஆனென் இறுதி இயற்கை யாகும்' என்றவழியே அடங்காதோ எனின் அளபெடுத்த அன்னென் இறுதியாகலின் வேறு கூறிற்றுப்போலும். (18) னகார ஈற்று முறைப்பெயர் விளி ஏற்குமாறு 139. முறைப் பெயர்க் கிளவி ஏயொடு வருமே. என் - எனின் இதுவும் எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்.) னகார ஈற்று முறைப்பெயராகிய சொல், ஏகாரம் பெற்று விளியேற்கும் எ-று. (எ-டு.) மகன் - மகனே, மருமகன் - மருமகனே என வரும். மற்று இது விரவுப்பெயரன்றோஎனின், மேல் (சொல். 127) ஐகார வீற்றுள் கூறியவாறே கூறுக. (19) னகார ஈற்றுள் விளி ஏலாதன 140. தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரும் அன்றி அனைத்தும் விளிகோள் இலவே. என் - எனின், னகார வீற்றுள் விளி ஏற்பன எல்லாம் உணர்த்தி இனி விளி ஏலாதன கூறுகின்றது. (இ-ள்.) தான் என்னும் ஆனீற்றுப் பெயரும் சுட்டெழுத்தை முதலாகவுடைய அன்னீற்றுப் பெயர்களும் யான், யாவன் என்ற அவ் வனைத்துப் பெயர்களும் மேற்கூறியவாற்றானாயினும் பிறவாற்றா னாயினும் விளிகோடல் இல எ-று. தான், யான் என்பன ஆனீறே எனினும் விளியேலா எனக் கொள்க. அவன், இவன், உவன் என்னும் சுட்டுப் பெயரும் யாவன் என்னும் வினாப் பெயரும் அன்னீறே எனினும் விளிஏலா என்றவாறு. மற்றுத் 'தான்' விரவுப்பெயர் என்பதன்றோ எனின், விரவுப் பெயர்களை உயர் திணைப்பெயர்களொடு மாட்டெறியும் வழி (சொல். 153) விலக்கற்பாடு மாட்டெறிதற் கொப்பன இன்மையின் ஈண்டே கூறினார் என்பது. (20) ரகார ஈற்றுப்பெயர் விளி யேற்குமாறு 141. ஆரும் அருவும் ஈரொடு சிவணும். என் - எனின், நிறுத்த முறையானே ரகாரவீறு விளியேற்குமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) ஆர் என்னும் ஈறும், அர் என்னும் ஈறும், ஈர் என்னும் வாய்பாட்டொடு பொருந்தி விளியேற்கும் எ-று. (எ-டு.) பார்ப்பார் - பார்ப்பீர், கூத்தர் - கூத்தீர் என வரும். (21) எய்தியதன்மேற் சிறப்பு விதி 142. தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே. என் - எனின், இஃது எய்தியதன் மேல் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய இரண்டு ஈறும் தொழிற் பெயர்க்கு ஈறாய்வரின் மேற்கூறிய ஈரோடு ஏகாரம் பெற்று வருதலும் குற்றமின்று என்று சொல்லுவார் விளங்கிய அறிவினையுடையார் எ-று. (எ-டு.) உண்டார் - உண்டீரே, தின்றார் - தின்றீரே என வரும். அர் ஈறு வந்தவழிக் கண்டு கொள்க. 'வழுக்கின்று' என்றதனான், தொழிற்பெயரல்லனவும் ஈரொடு ஏகாரம் பெறுதல் கொள்க. (எ-டு.) நம்பீரே, கணியீரே எனவரும். (22) இதுவுமது 143. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. என் - எனின், இதுவும் எய்தியதன்மேல் சிறப்பு விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) அவ்விரண்டு ஈற்றுப் பண்புகொள் பெயரும் அத் தொழிற்பெயரோடு ஒரு தன்மைத்து எ-று. (எ-டு.) கரீயீரே, செய்யீரே எனவரும். ஈண்டும் ஆர்ஈறு வந்தவழிக் கண்டுகொள்க. (23) எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் 144. அளபெடைப் பெயரே அளபெடை இயல. என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) ரகார ஈற்று அளபெடைப்பெயர் னகார ஈற்று அளபெடைப் பெயர் போல (சொல். 138) இயல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) மகாஅஅர், சிறாஅஅர் எனவரும். (24) ரகார ஈற்றுப் பெயர்களுள் விளி ஏலாதன 145. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. என்-எனின்: ரகார ஈற்றுப் பெயர்களுள் விளி ஏலாதன கூறுகின்றது. (இ-ள்.) ரகார ஈற்றுச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய பெயர்கள் னகார ஈற்றுச் சுட்டுமுதற்பெயர் (140) போல விளியேலாவா யிற்று எ-று. (25) இதுவுமது 146. நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்று அம்முறை இரண்டும் அவற்றியல் பியலும். என் - எனின், இதுவும் விளியேலாதன கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) நும் என்னும் சொல்லினது திரிபாகிய நீயிர் என்னும் சொல்லும், வினாப்பொருளை உணர நின்ற சொல்லாகிய யாவர் என்னும் சொல்லும் என்று சொல்லப்பட்ட அம் முறையினை யுடைய சொல் இரண்டும் மேல் விளியேலாது என்று சொல்லப்பட்ட சுட்டுப்பெயர் போலத் தாமும் விளியேலா எ-று. நீயிர் என்பது இர் ஈறாகலின், ஈண்டு எய்திய தின்மையின் விலக்கல் வேண்டா எனின், 'ஏனைப்புள்ளி' (132) என்பதனுள் இர் ஈறுங் கொள்ளப் பட்டமையின் வேண்டும் என்பது. (26) லகார ளகார ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்குமாறு 147. எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும். என் - எனின், நிறுத்த முறையானே லகார ஈறும் ளகார ஈறும் விளியேற்குமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) லகார ளகாரம் என எஞ்சிய இரண்டெழுத்தினையும் இறுதியாகவுடைய பெயர்கள் ஈற்றினின்ற எழுத்திற்கு அயலெழுத்து நீண்டு விளியேற்றல் வேண்டும் எ-று. (எ-டு.) குரிசில் - குரிசீல், தோன்றல் - தோன்றால், மக்கள் - மக்காள் எனவரும். (27) எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் 148. அயல்நெடி தாயின் இயற்கை யாகும். என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) அவ்விரண்டு ஈற்றுப்பெயரும் ஈற்றயலெழுத்து நீண்ட நிலைமையவாயின் இயல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) ஆண்பால், பெண்பால், ஏமாள், கோமாள் எனவரும். (28) இதுவுமது 149. வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆள்என் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. என் - எனின், அவ்விரண்டீற்றுள் ளகார ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) வினையினானும், பண்பினானும் ஆராயத் தோன்றும் ஆள் என்னும் இறுதி விளிக்குமிடத்து ஆயாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) உண்டாள் - உண்டாய் எனவும், கரியாள் - கரியாய் எனவும் வரும். (29) இதுவுமது 150. முறைபெயர்க் கிளவி முறைப்பெய ரியல. என் - எனின், இதுவும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) ளகார ஈற்றுப்பெயர் னகார ஈற்று முறைப் பெயர் போல (சொல். 139) ஏகாரம் பெற்று விளியேற்கும் எ-று. (எ-டு.) மகள் - மகளே; மருமகள் - மருமகளே என வரும். மற்று இதுவும் விரவுப்பெயரன்றோ எனின் மேற்கூறியவாறே (சொல். 129) கொள்க. (30) னகார ஈற்றுள் விளி ஏலாதன 151. சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர். என் - எனின், இஃது ளகார ஈற்றுள் விளியேலாதன உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ளகார வீற்றுச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவள், இவள், உவள் என்னும் பெயர்களும், வினாப் பொருண்மை யுடைய யாவள் என்னும் பெயரும், னகார ஈற்றுச் சுட்டெழுத்து முதற்பெயரும் வினாவின் பெயரும் போல (சொல். 140) விளியேலா என்று சொல்லுவர் புலவர் எ-று. (31) லகார ளகார ஈற்று அளபெடைப் பெயர்கள் விளி ஏற்குமாறு 152. அளபெடைப் பெயரே அளபெடை இயல. என் - எனின், லகார ளகார ஈற்றுப்பெயர் இரண்டற்கும் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) லகார ஈற்றுப்பெயர் அளபெடைப் பெயரும் ளகார ஈற்று அளபெடைப் பெயரும் னகார ஈற்றுப் பெயர்போல (சொல். 138) இயல்பாய் விளியேற்கும் எ-று. (எ-டு.) மாஅஅல், கோஒஒள் எனவரும். அதிகாரத்தான் இவ்விதிகளுள் ளகார ஈற்று விளி யேலாதனவுங் கூறி இது கூறுகின்றமையின் அதிகார மாறிற்று என உணர்க. (32) விரவுப்பெயர் விளி ஏற்குமாறு 153. கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை. என் - எனின், விரவுப் பெயர் விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. மேல் உயர்திணைப் பெயர்க்கண் விளியேற்கும் எனப்பட்ட உயிரீறு நான்கினையும் புள்ளியீறு நான்கினையுமே தமக்கு ஈறாகவுடைய உயர்திணைப் பெயரோடு அஃறிணை விரவி வரும் பெயர்கள் அவ்வீறு களில் எடுத்தோதின முறைமையையுடைய விளிக்குங் காலத்து எ-று. (எ-டு.) சாத்தி - சாத்தீ; தந்தை - தந்தாய்; பூண்டு - பூண்டே என வரும். ஓகாரவீற்று விரவுப்பெயர் கண்டதில்லை. இவை உயிர் ஈறு. இனிப் புள்ளியீறு, சாத்தன் - சாத்தா, கூந்தல் - கூந்தால் என வரும். ரகார - ளகார ஈறாய் வரும் விரவுப்பெயர் கண்டதில்லை. (33) அஃறிணைப் பெயர்கள் விளி ஏற்குமாறு 154. புள்ளியும் உயிரும் இறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின் தெளிநிலை உடைய ஏகாரம் வரலே. என் - எனின், உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் விளியேற்கு மாறு உணர்த்தி, இனி அஃறிணைப் பெயர் விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புள்ளி யெழுத்தினையும் உயிரெழுத்தினையும் ஈறாக வுடைய அஃறிணையிடத்து எல்லாப் பெயர்களும் விளிக்கு நிலைமை பெறுங்கால முண்டாயின் அவ்விடத்து ஏகாரம் வருதலைத் தெளியப்படு நிலையை யுடையன எ-று. (எ-டு.) நரி - நரியே; புலி - புலியே; அணில், அணிலே; மரம் - மரமே எனவரும். "வருந்தினை வாழி நெஞ்சம்" (அகம். 19) எனவும் "காட்டுச் சாரோடுங் குறுமுயால்" எனவும் பிறவாறும் விளியேற்று வந்தனவால் எனின், அவ்வாறு வருவன வழக்கினகத்து இன்மையின் அவை செய்யுள் விகாரமெனக் கொள்க. "விளிநிலை பெறூஉங் காலந்தோன்றின்" என்றது அவை விளியேற்கு நிலைமை சிறுபான்மை யென்றது என உணர்க. தெளிநிலை யுடைய என்றது அவ்வேகாரம் பற்றிஅறிதற்குக் கூறியதாகக் கொள்க.(34) விளி ஏற்கும் பெயர்கள் சேய்மையில் அளபிறந்து ஒலிக்கும் எனல் 155. உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்குங் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான. என் - எனின், மேற்கூறிய மூவகைப் பெயர்க்கும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மேல் விளியேற்றற்குரியனவாக எடுத்தோதப்பட்ட எல்லாப் பெயர்களும் தத்தம் மாத்திரையின் மிக்கிசைக்கும் விளிக்குங் காலத்து; யாண்டுமோ எனின், அற்றன்று, சேய்மைக் கண் இசைக்கும் வழக்கிடத்து எ-று. (எ-டு.) நம்பீஇ, சாத்தாஅ எனவரும். வரையறை இன்மையின் வேண்டியவாறு அளபெழும் எனக் கொள்க. ஆயின், உயிர் பன்னிரண்டு மாத்திரையும், ஒற்றுப் பதினொரு மாத்திரையும் எனக் கொள்க. (35) அம்ம என்னும் சொல் விளி ஏற்குமாறு 156. அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. என் - எனின், இதுவும் விளித்திறத்தொடு படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அம்ம என்று சொல்லப்படுகின்ற அகர வீற்று அசைச் சொல் ஆகாரமாகி நீண்டு நிற்றல் அவ்விளியேற்கு முறைமையை யுடைய பெயர்களொடு பொருந்தாதாயினும் பெயர் விளிகளோடு இதனையும் ஒரு விளிநிலைமைத்தாகக் கொள்வர் தெளிந்த அறிவினையுடையார் எ-று. (எ-டு.) அம்மா கொற்றா என வரும். (36) உயர்திணைப் பெயருள் விளி ஏலாதன 157. த ந நு எஎன அவைமுத லாகித் தன்மை குறித்த னளரவெ னிறுதியும் அன்ன பிறவும் பெயர்நிலை வரினே இன்மை வேண்டும் விளியொடு கொளலே. என் - எனின். இதுவும் உயர்திணைப்பெயருள் விளியேலாதன கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) த, ந, நு, எ என்று சொல்லப்பட்ட அவ் வெழுத்துக்களை முதலாகவுடையவாகிய, ஒரு தொடர்ச்சித் தன்மையைக் குறித்த ன, ள, ர என்னும் ஈற்றெழுத்தினையுடைய பெயர்களும் அத்தன்மையான பிற பெயர்களுமாயுள்ள பெயராகிய நிலைமையையுடைய சொற்கள் வரின், மேல் விளியேற்கும் எனப்பட்ட பெயரொடு விளிகோடல் இல்லாமையை வேண்டும் ஆசிரியன் எ-று. (எ-டு.) தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர்; எனவும், பிறவும் என்றதனான், மற்றையான், மற்றையாள், மற்றையார்; பிறன், பிறள், பிறர்; எனவும் வரும். இவற்றை உயர்திணைப் பெயர்களொடு கூறாது ஈண்டுக் கூறியது என்னை எனின், இவை ஓரினத்துட்பட்டு இயைந்து வருதலான் ஈண்டுப் போதந்து உடன் கூறினார் எனக் கொள்க. (37) விளிமரபு முற்றிற்று. 5 பெயரியல் நால்வகைச் சொற்கும் பொதுவிலக்கணம் 158. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே. என்பது சூத்திரம். இவ்வோத்து என்னை பெயர்த்தோ வெனின், பெயரிலக்கணம் உணர்த்தினமையின் பெயரியல் என்னும் பெயர்த்து. மேலோத்தினோடு இதற்கியைபு என்னோ எனின், பெயரிலக்கணம் உணர்த்தி அவ் விலக்கண முடைய அவ்வியற்பெயர் இவையென்றவற்றது பகுதி யுணர்த்திய எடுத்துக்கொண்டார் என்பது. இனி, இம் முதற்சூத்திரம் என்னுதலிற்றோ எனின் நான்கு வகைப்பட்ட சொல்லிற்கும் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தமிழ்ச்சொல்லெல்லாம் ஒரு பொருள் உணர்த்துதலைக் கருதியே நடக்கும்; பொருளுணர்த்துதலைக் கருதாது நடப்பன இல்லை எ-று. (எ-டு.) சாத்தன், கொற்றன் என அவ்வப் பெயர்கள் அவ்வப் பொருள்களை உணர்த்தின. உண்டான், தின்றான் என அவ்வவ் வினைச் சொற்கள் அவ்வவ் வினையை உணர்த்தின. அதுமன் உறுகால் எனவும், சென்மதி தவச்சேய்நாட்டார் எனவும் வருமிவை, அவ்வவ்விடையும் உரியும் அவ்வப் பெயர்வினைகளை யடுத்து நின்று ஒருபொருளை உணர்த்தின. மற்று, இஃது "ஆயிரு திணையின் இசைக்குமன சொல்" (சொல்.1) என்புழி அடங்கிற்றுப் பிற எனின், ஆண்டு எல்லாச் சொல்லும் ஒருதலை யாகப் பொருளுணர்த்தும் என்னும் துணிபு விதியின்மையின் ஈண்டுக் கூறினார் என்பது. மற்று அசைநிலை இடைச்சொற்கள் பொருள் உணர்த்தாவால் எனின், அவையும் ஒருவாற்றான் சிறுபான்மை பொருளுணர்த்து மென உணர்க. அல்லதூஉம் இது பெரும்பான்மையெனினும் அமையும் என்பது. முயற்கோடு என்னும் தொடக்கத்தன பொருள் உணர்த்தாவால் எனின், இவை நன்மக்கள் வழக்கின்கண் பொருண்மை திரிந்து முயற்கோடு இல்லை யெனப் பின்வருஞ் சொல்லொடு படுத்து நோக்க அவற்றது இன்மை விளக்க வந்தவாம். இனி இறிஞி, மிறிஞி என்னும் தொடக்கத்தன பொருள் விளக்காவாலெனின், அவை நன்மக்களது வழக்கில் இன்மையின் ஈண்டு ஆராயப்படா என்பது. (1) சொல் பொருளையும் தன்னையும் உணர்த்துமாறு 159. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர். என் - எனின், இதுவும் அச்சொற்கள் பொருள் உணர்த்தும்வழிக் கிடந்ததோர் இலக்கணம் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) பொருள் தெரிய நிற்றலும், அப்பொருளை அறியப்படாது சொற்கள் தெரிய நிற்றலும் என்னும் இவையிரண்டும், சொற்கள் ஏதுவாக உளவாகும் என்று சொல்லுவர் புலவர் எ-று. பொருண்மை தெரிதற்கு உதாரணம் மேற் காட்டினவே. சொன்மை தெரிதற்கு உதாரணம் பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச் சொல், பெயரெச்சம், வினையெச்சம், முற்றுச்சொல் என்பன. இவை அவ்வச் சொற்களையே பொருளாக உணர்த்தின எனக் கொள்க. மற்றிதுவும் பொருண்மை தெரிதலேயாம் பிற எனின் தாம் பொருண்மை யுணர்த்தும்வழிச் சொல்லென வேறுபட்டு நிற்குமாகலின் இதனை வேறு கூறினார் என்பது. மற்று ஒருசொல் தன்னின் வேறாயதொரு சொல்லைப் பொருண்மையாக உணர்த்தாது 'வேறென்கிளவி' யென்றாற்போல அச்சொல் தன்னையே உணரநிற்றலும் உண்டாமென்ன, அதுவுஞ் சொன்மைதெரிதல் என அடங்கிற்றுப் போலும். மற்று மேல் எய்திய பொருண்மைதெரிதல் ஈண்டுக் கூறல் வேண்டா எனின் முற்கூறியதின் பிற்கூறியது வலியுடைத்து ஆகலின் அஃது விலக்குண்ணும் என உம்மை கொடுத்தாயினும் ஓதற்பாலவான நன்குணர்த்தற் பொருட்டு உடனோதினார் என உணர்க. (2) சொல் இருவகையான் பொருளுணர்த்தும் எனல் 160. தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. என் - எனின், இதற்கும் அக்கருத்து ஒக்கும். (இ-ள்.) இச் சொல்லினது பொருள் இது எனத் தெரிந்து வேறு நிற்றலும், அவ்வாறன்றிச் சொல்லுவான் குறிப்பினான். இச்சொல்லினது பொருள் இது என அறிய நிற்றலும் எனப் பொருண்மை நிலை இரு பகுதித்து என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) இடா, மிடா என்பன தெரிபு வேறு நிலையல். சோறுண்ணா நின்றான், கற்கறித்து 'நன்கு அட்டாய்' என்றல் குறிப்பிற்றோன்றல். (3) நால்வகைச் சொற்களில் சிறப்புடையன இவை எனல் 161. *சொல்லெனப் படுப பெயரே வினையென்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே. என் - எனின், மேற்பொருளுணர்த்து மெனப்பட்ட சொல்லிற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன பெயர்ச் சொல் லென்றும், வினைச்சொல் லென்றும் அவை யிரண்டு என்று சொல்லுப இலக்கணம் அறிந்த ஆசிரியர் எ-று. பெயர்ச்சொல் பொருளை உணர்த்துதலின் முற் கூறப்பட்டது. வினை பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிலினை உணர்த்தலின் அத்துணைச் சிறப்பிற்றன்று என்று பிற் கூறப்பட்டது. 'என' சிறப்பின்கண் வந்தது. (4) *'சொல்லெனப்படுவ' என்பது பாடம். இடைச்சொல்லும் உரிச்சொல்லும் 162. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப. என் - எனின், இறந்ததுகாத்தலை நுதலிற்று. (இ-ள்.) இடைச்சொல்லாகிய சொல்லும் உரிச்சொல்லாகிய சொல்லும் பெயர்வினைகட்கு இடமாகிய இடத்தே தோன்றும்; தாமாகத் தோன்றா எ-று. இடைச்சொல் முற்கூறிய காரணம் என்னை எனின் எழுகூற்றதாகிய (252) வழக்குப்பயிற்சி நோக்கி என்க. 'மருங்கு' என்றதனான் அவ்விடை யுரிகள் பெயர் வினைகளை அடைந்து தோன்றுங்கால், தம்மருங்கினான் தோன்றுதலும் பெயரதும் வினையதும் மருங்கினான் தோன்றுதலும் என இருவகை என்பது கொள்ளப்படும். அதுமன், உறுகால் என்பன தம்மருங்கிற் றோன்றின. அவன், அவள், உண்டான், உண்டாள் என்பன அவற்றுமருங்கிற் றோன்றின. இத்துணையுங் கூறியன நான்கு சொல்லிற்கும் பொதுவிலக்கணம்; மேற்கூறுகின்றது பெயரதிலக்கணம் என உணர்க. (5) பெயரது இலக்கணம் 163. அவற்றுள், பெயரெனப் படுபவை தெரியுங் காலை உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ உருபின தோன்ற லாறே. என் - எனின், நிறுத்த முறையானே பெயர்ச் சொற்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் பெயர்ச் சொல்லென்று சொல்லப்படுவனவற்றை ஆராயுங் காலத்து உயர் திணைக்கு உரிமையுடையனவும், அஃறிணைக்கு உரிமையுடையனவும், அவ்விரு திணைக்கும் ஒத்த உரிமையுடையனவும் என அம்மூன்று கூற்றன அவை தோன்று நெறிக்கண் எ-று. அப்பெயர் பெயர்; அம்முறை முறை; அத்தொகை தொகை என உணர்க. (6) ஒருபாற்குரிய தொழில்கள் ஏனைப்பாற்கும் உரியவாதல் 164. இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவிக்கும் உரியவை உரிய பெயர்வயி னான. என் - எனின், இதுவும் பெயர்க்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) இருதிணையினின்றும் பிரிந்த ஐம்பாற் பொருட்கும் ஒருபாற்குரிய தொழில்கள் ஏனைப்பாற்கும் உரியவாம். இவ்வாறு உரியவாவது எச்சொல்லிடத்தோ எனின், வினைச்சொல்லிடத் தாகாது; பெயர்ச் சொல்லிடத்தேயாம் எ-று. நஞ்சுண்டான் சாம், நஞ்சுண்டாள் சாம், நஞ்சுண்டார் சாவர், நஞ்சுண்டது சாம், நஞ்சுண்டன சாம் என்பது. மற்று அவ்வாண்பான் மேற் கூறற்குரிய சாதலென்னும் வினை மற்றை நான்கு பாற்கண்ணும் தனித்தனி கூறாமல் சென்றதென உணர்க. உண்டான் என்பதனைப் படுத்த லோசையாற் பெயராக்கிக் கொள்க. பார்ப்பான் கள்ளுண்ணான் என்பது கள்ளுண்டல் அதற்கு இன்மையின் அஃறிணைப் பான்மேற் செல்லாதாயிற்று. (7) உயர்திணைப் பெயர்கள் 165. அவ்வழி, அவன்இவன் உவன்என வரூஉம் பெயரும் அவள்இவள் உவள்என வரூஉம் பெயரும் அவர்இவர் உவர்என வரூஉம் பெயரும் யான்யாம் நாம்என வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவர் என்னும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே. என் - எனின், நிறுத்த முறையானே உயர்திணைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவ்வாறு மூன்று கூற்றவாய் நின்ற பெயர்களிடத்து அவன் என்பது முதலாக உவர் என்பது ஈறாக ஓதப்பட்ட சுட்டுப்பெயர் மும்மூன்று என்பதும், யான் என்னுந் தனித்தன்மைப் பெயர் ஒன்றும், யாம் என்னும் படர்க்கையுளப்பாட்டுத் தன்மைப் பெயர் ஒன்றும், நாம் என்னும் முன்னிலை யுளப்பாட்டுத் தன்மைப்பெயர் ஒன்றும், யாவன் யாவர் யாவள் என்று சொல்லப்படுகின்ற அவ்வினாவிடத்துப் பெயர் மூன்றுமாகப் பதினைந்தும் ஒருவன் ஒருத்தி பலர் எனப் பாலறிய வந்த உயர்திணைப் பெயராம் எ-று. (8) இதுவுமது 166. ஆண்மை அடுத்த மகனென் கிளவியும் பெண்மை அடுத்த மகளென் கிளவியும் பெண்மை அடுத்த இகர விறுதியும் நம்மூர்ந்து வரூஉம் இகர ஐகாரமும் முறைமை சுட்டா மகனும் மகளும் மாந்தர் மக்கள் என்னும் பெயரும் ஆடூஉ மகடூஉ ஆயிரு கிளவியும் சுட்டு முதலாகிய அன்னும் ஆனும் அவைமுத லாகிய பெண்டென் கிளவியும் ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ அப்பதி னைந்தும் அவற்றோ ரன்ன. என் - எனின், இதுவும் உயர்திணைப்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆண்மை என்னுஞ் சொல்லை முன்னடுத்த ஆண்மகன் என்னும் பெயர்ச்சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன்னடுத்த பெண்மகள் என்னும் பெயர்ச் சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன்னடுத்த பெண்டாட்டி என்னுஞ் சொல்லும், நம் என்பதை அடுத்து வருகின்ற இகர ஐகார ஈற்று நம்பி, நங்கை என்னும் பெயர்ச் சொற்களும், முறைப் பொருண்மையைக் கருதாத மகன் மகள் என்னும் பெயர்ச் சொற்களும், மாந்தர் மக்கள் என்னும் பெயர்ச்சொற்களும், ஆடூஉ மகடூஉ வாகிய அவ்விரு வகைச் சொற்களும், சுட்டெழுத்தாகிய அகரத்தை முதலாகவுடைய அவ்வாளன், இவ்வாளன், உவ்வாளன் என்னும் அன்னீற்றுப் பெயர்ச்சொல்லும், அம்மாட்டான், இம்மாட்டான், உம்மாட்டான் என்னும் ஆனீற்றுப் பெயர்ச்சொல்லும், இன்னும் அச் சுட்டெழுத்தை முதலாகவுடைய அவ்வாட்டி, இவ்வாட்டி, உவ்வாட்டி எனப் பெண்டாட்டி யென்னும் பொருண்மை உணரவரும் பெயர்ச் சொல்லும், பொன்னன்னான், பொன்னன்னாள், பொன்னன்னார் என ஒப்புப் பொருண்மையொடு வரும் பெயர்ச்சொல்லொடு தொக்க பதினைந்து சொல்லும் மேற்கூறிய பெயரே போலப் பாலறி வந்த உயர்திணைப் பெயராம் எ-று. (9) இதுவுமது 167. எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை அடுத்த மகனென் கிளவியும் அன்ன இயல என்மனார் புலவர். என் - எனின், இதுவும் உயர்திணை யொருசார் பெயர்களை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எல்லாரும் என்று சொல்லப்படுகின்ற படர்க்கைப் பெயர்ச்சொல்லும், எல்லீரும் என்று சொல்லப்படுகின்ற முன்னிலைப் பெயர்ச்சொல்லும், பெண்மை என்னும் சொல்லை முன்னடுத்த பெண் மகன் என்னும் பெயர்ச்சொல்லும் இவை மூன்றும் அவைபோலப் பாலறியவந்த உயர்திணைப் பெயராம் எ-று. நாணுவரை யிறந்து ஆண் தன்மையளாகிப் புறத்துப் போய் விளையாடும் பெண்மகளைப் பெண்மகன் என்பது முற்காலத்து வழக்கம். அதனை இப்பொழுதும் மாறோகத்தார் வழங்குவர். மாறோகம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு. (10) இதுவுமது 168. நிலைப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரோடு அன்றி அனைத்தும் அவற்றியல் பினவே. என் - எனின், இஃது உயர்திணையொருசார் பெயர்களை உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) அருவாளன் சோழியன் என்றாற்போல ஒருவன் தான் பிறந்த நிலத்தினாற் பெற்ற பெயர்களும், மலையமான் சேரமான் பார்ப்பான் அரசன் என்றாற்போல அவன் தான் பிறந்த குடியாற் பெற்ற பெயர்களும், அவையத்தார் அத்திகோசத்தார் வணிக கிராமத்தார் என்றாற் போலத் தாம் திரண்ட திரட்சியினாற் பெற்ற பெயர்களும், உண்டான் என்றாற்போல அவன் தான் செய்யும் தொழிலாற் பெற்ற பெயர்களும், அம்பர் கிழாஅன் அம்பருடையான் என்றாற் போல அவன் தனது உடைமையாற் பெற்ற பெயர்களும், கரியான் செய்யான் என்றாற் போலத் தனது பண்பினான் பெற்ற பெயர்களும், தந்தையர் தாயர் என்றாற் போலப் பல்லோரைக் கருதின தமது முறையான் பெற்ற பெயர்களும், பெருங் காலர் பெருந்தோளர் பெருங்கண்ணர் என்றாற்போலப் பல்லோரைக் கருதின தமது சினை நிலைமையாற் பெற்ற பெயர்களும், குறவர் ஆயர் வேட்டுவர் என்றாற்போலப் பல்லோரைக் கருதின குறிஞ்சி முதலிய திணைகளாற் பெற்ற பெயர்களும், இளந்துணை மகார் தம்மிற் கூடிவரும் வழக்கின்கண் அவர் தமது விளையாட்டு வகையான் தாமே தமக்கு அப்போதைக்குப் பட்டிபுத்திரர் கங்கை மாத்திரர் என்றாற்போலப் படைத்திட்டுக் கொண்ட பெயர்களும், ஒருவர் இருவர் மூவர் நால்வர் என்றாற்போல இத்துணையர் எனத் தமது வரையறை யுணரநிற்கும் எண்ணியல்பினாற் பெற்ற பெயர்களும் மேற்கூறிய பெயர்கள் போலப் பாலறியவந்த உயர்திணைப் பெயராம் எ-று. (11) உயர்திணைப் பெயர்க்குப் புறனடை 169. அன்ன பிறவும் உயர்திணை மருங்கின் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. என் - எனின், இஃது உயர்திணைப் பெயருக்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய அத்தன்மை பிறவுமாயுள்ள உயர்திணை யிடத்துப் பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறியவந்த எல்லாப் பெயர்களும் அவ் வுயர்திணைக்குரிய பெயர்களாம் எ-று. (எ-டு.) ஏனாதி, வாயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான், பிறன், பிறள், பிறர், தமன், தமள், தமர், நுமன், நுமள், நுமர், மற்றையான், மற்றையாள், மற்றையார் என வரும். பிறவும் அன்ன. (12) அஃறிணைப் பெயர்கள் 170. அதுஇது உதுஎன வரூஉம் பெயரும் அவைமுத லாகிய ஆய்தப் பெயரும் அவைஇவை உவைஎன வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை என்னும் பெயரும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே. என் - எனின், நிறுத்த முறையானே அஃறிணைப் பெயராமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) அது, இது, உது என்று சொல்லப்படுகின்ற சுட்டுமுதற் பெயர்களும், சுட்டெழுத்தினை முதலாகவுடைய அஃது, இஃது, உஃது என்னும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகரப் பெயர்களும், அவை, இவை, உவை என்று சொல்ல வருகின்ற சுட்டுமுதற்பெயர்களும், அச் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவ், உவ், இவ் என்னும் வகர வீற்றுப் பெயர்களும், யாது, யா, யாவை என்று சொல்ல வருகின்ற அவ்வினாப் பொருளிடத்து வரும் மூன்று பெயருமாக வரூஉம் பதினைந்து பெயர்களும், ஒருமை பன்மைப்பால் அறியவந்த அஃறிணைப் பெயராம் எ-று. (13) இதுவுமது 171. பல்ல பலசில என்னும் பெயரும் உள்ள இல்ல என்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரும் ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன. என் - எனின், இதுவும் அஃறிணை யொருசார்ப் பெயர்களை நுதலிற்று. (இ-ள்.) பல்ல பல சில என்று சொல்லப்படுகின்ற பெயர்களும், உள்ள இல்ல என்னும் பெயர்களும், உண்டது உண்டன என்றாற் போலவரும் வினைப்பெயர்களும், கரியது கரியன என்றாற்போல வரும் பண்பினைக் கொண்ட பெயர்ச் சொற்களும், ஒன்று பத்து நூறு ஆயிரம் என்றாற்போலச் சொல்லப்படுகின்ற இத்துணையென வரையறை உணர்த்தும் எண்ணுக்குறிப்பாற் பெற்ற பெயர்ச்சொற்களும், பொன் னன்னது, பொன்னன்ன என்றாற்போல உவமத்தினாற் பெற்ற பெயர்ச் சொற்களும், உட்பட அக்கூற் றொன்பதும் மேற்கூறிய பெயர் போலப் பாலறிய வரும் அஃறிணைப் பெயர்களாம் எ-று. (14) அஃறிணை இயற்பெயர் பலவறி சொல்லாதல் 172. கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே. என் - எனின், இதுவும் பாலறிய வரும் அஃறிணை யொருசார்ப் பெயர்களை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கள் என்னும் வாய்பாட்டொடு பொருந்தும் அவ் வஃறிணை யியற்பெயர்கள் பலவறி சொல்லாதற்குக் கொள்ளும் இடமுடைய எ-று. கள்ளொடு சிவணின இயற்பெயர் பலவறி சொல்லாகக் கொள்ளு மிட முடைய எனவே, கள்ளொடு சிவணாத பெயர்கள் பலவறி சொல் லாகக் கொள்ளப்படா; ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்கும் என்றவாறு. (எ-டு.) நாய்கள், ஆக்கள் எனப் பன்மை யுணர நின்றன; நாய், ஆ எனக் கள்ளொடு சிவணாமையிற் பொதுவாய் நின்றன எனக் கொள்க. (15) அஃறிணைப் பெயர்க்குப் புறனடை 173. அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. என் - எனின், இஃது அஃறிணைப்பெயர்க்குப் புறனடை உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) அத்தன்மையன பிறவுமாகிய அஃறிணையிடத்துப் பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த எல்லாப் பெயர்களும் அவ்வஃறிணைக்குரிய பெயர்களாம் எ-று. (எ-டு.) ஆ, நாய், கழுதை, ஒட்டகம், புலி, புல்வாய் எனச் சாதி பற்றி வருவன வெல்லாங் கொள்க. நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்பன அவற்றின்பாற்படும். உண்டல், தின்றல் எனப் பால்காட்டாத தொழிற் பெயரும், கருமை செம்மை யெனப் பால்காட்டாத பண்புப் பெயரும், மற்றும் அவற்றுப்பாலே படும் எனக் கொள்க. மற்றையது, மற்றையன, பிறிது, பிற என்பனவுங் கொள்க. பிறவும் அன்ன. (16) அஃறிணை இயற்பெயர் பாலுணர்த்துமாறு 174. தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. என் - எனின், மேற் புறனடையுள் பால் அறிய வருவனவற்றோடு ஒன்றாக ஓதப்பட்ட இயற்பெயர்கள் பாலறிய வருமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) அஃறிணையிடத்து ஒருமையும் பன்மையுமாகிய பால்கள் எப்பொழுது தெரிவனவாலெனின் பால் காட்டும் வினையொடு வரும் பொழுது எ-று. (எ-டு.) ஆ வந்தது, ஆ வந்தன எனவும் வினையான் பாலறிய வந்தவாறு கண்டுகொள்க. (17) விரவுப்பெயர் முடிக்கும் சொற்களான் திணை தெரிதல் ஓரன்ன 175. இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமையின் திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும் நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையோ டல்லது பால்தெரி பிலவே. என் - எனின், நிறுத்த முறையானே விரவுப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருதிணைப் பொருட்கும் ஒன்று போன்ற உரிமை காரண மாக அவ்வத்திணைக்கண் செலவு வரவுடைத்தாய் உயர்திணைக்கண் சென்ற காலத்து உயர்திணைப் பெயராயும் அஃறிணைக்கண் சென்ற காலத்து அஃறிணைப் பெயராயும் வேறுபடுகின்ற விரவுப்பெயர்க ளெல்லாம் ஆராயுங்காலத்து அவ்வத் திணையே யுணர்த்துதற்குரிய முறைமையினையுடைய வினைச் சொற்களான் அல்லது, திணைதெரிதல் இல எ-று. (எ-டு.) சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது என வரும். வினையானேயன்றித் தத்தம் மரபிற் பெயராலும் திணையறியப் படும் என்பது. (எ-டு.) சாத்தன் ஒருவன், சாத்தன் ஒன்று என வரும். இன்னும் அவ்விலேசானே மேற்கூறிய (174) அஃறிணையுடைய பெயர்களும், வினையானே யன்றிப் பெயரானும் பால் அறியப்படு மெனக் கொள்க. ஆ ஒன்று, ஆ பல எனவரும். (18) விரவுப்பெயர் விரவுவினையானும் திணையறியப்படுமாறு 176. நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின் உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே அன்ன மரபின் வினைவயி னான. என் - எனின், அவ்விரவுப்பெயர் தத்தம் மரபின் வினையானன்றி, விரவு வினையானும் திணை யறியப்படும் என எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) நிகழ்காலத்தை யுடைத்தாய் நின்ற பலரை யுணர்த்தாது என்று வரைந்தோதப்பட்ட செய்யும் என்னும் சொல் காரணமாக அவ் விரவுப்பெயர் உயர்திணை யொருமைப்பா லென்பது தோன்ற நிற்றலும் உரித்து; (யாண்டுமோ எனின், அன்று) அத்தன்மையவான முறைமை யினையுடைய சில செய்யும் என்னும் வினைச்சொல்லிடத்து எ-று. (எ-டு.) சாத்தன் யாழெழூஉம், குழலூதும், பாடும் எனவும், சாத்தி சாந்தரைக்கும், பூத்தொடுக்கும் எனவும் வரும். சாத்தன் கிடக்கும் என்பது, அன்ன மரபின் வினையன்மையின் திணை தெரியாதாயிற்று. இனி வினையியலுள் வியங்கோளின் பின்னர்ச் (சொல். 228)செய்யும் என்பதனை இயைபின்றி வைத்து ஆராய்ந்ததனான் வியங்கோள் வினையி னானும் உயர்திணையொருமை தோன்றும் என்றும் கொள்ளப்படும். (எ-டு.) சாத்தன் யாழெழூஉக, குழலூதுக எனவரும். இத்துணையுங் கூறியது விரவுப்பெயரது பொது விலக்கணம் என உணர்க. (19) விரவுப் பெயர்க்குப் பெயரும் முறையும் தொகையும் 177. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே எல்லாம் நீயிர் நீஎனக் கிளந்து சொல்லிய வல்ல பிறவும் ஆஅங்கு அன்னவை தோன்றின் அவற்றொடுங் கொளலே. என் - எனின், விரவுப்பெயர்க்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருதிணைக்கண்ணும் வாளாது இயன்று வருதலான் இயற்பெயரெனவும், ஒரு சினைக் காரணத்தாற் பெற்றமையிற் சினைப் பெயர் எனவும், சினையொடு தொடர்ந்த முதலை யுணர்த்தினமையிற் சினைமுதற்பெயரெனவும், முறைமையாற் பெற்றமையின் முறைப் பெயராகிய சொல்லெனவும், ஒரு காரணம் இன்மையின் வாளாது தாமெனவும், தானெனவும், எல்லாமெனவும், நீயிரெனவும், நீ எனவும் ஆசிரியனான் விதந்தோதப்பட்டன வல்லாத பிறவுமாகிய பெயர்களிடத்து இருதிணையினும் விரவும் அத்தன்மையன தோன்றுமாயின் அவற் றொடுங்கூட ஆசிரியன் விதந்தோதின பெயர்களை விரவுப்பெயராம் எனக் கொள்க எ-று. அப்பெயர் பெயர்; அம்முறை முறை; அத்தொகை தொகை என்பதாம். இயற்பெயர் முதலாக முறைப்பெயர் ஈறாக ஓதினவெல்லாம் பலவெனினும், ஞாபக வகையான் ஒன்றெனப் பட்டன. பிறவும் என்றதனாற் கொள்வன யாவை யெனின், குறவன் இறவுளன் குன்றுவன் எனவும், காடன் காடி எனவும், நாடன் நாடி எனவும், துறைவன் சேர்ப்பன் தரையன் திரையன் எனவும் ஒருமைத் திணைப் பெயராய் வருவனவும், ஆண் பெண் என்பனவும், பிறவும் இன்னோரன்ன வும் போலும். (20) விரவுப்பெயரின் விரி 178. அவற்றுள், நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே ஏனைப் பெயரே தத்தம் மரபின. என் - எனின், மேல் தொகுத்தோதின விரவுப்பெயர்களை விரித் தோதுதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் ஓதப்பட்டவற்றுள் இயற்பெயரெனப்பட்டது நான்கு வகைப்படும். சினைப்பெயர் எனப்பட்டது நான்கு வகைப்படும். சினைமுதற் பெயரினையும் நான்கு வகைப்படும் என்று கூறுவர் ஆசிரியர். முறைப்பெயர்க் கிளவி எனப்பட்டது இரண்டு வகைப்படும். இவ்வாறு இவை வகைப்பட்டமையின் ஏனையவும் அவ்வகைப்படுங்கொல் என்று ஐயுறின், அவ்வகைப் படாது ஒழிந்த பெயர்கள் ஐந்தும் அவ்வோதிய வாய்பாடேயாகும் மரபினையுடைய எ-று. மேல் தொகையான் ஒன்பது எனப்பட்ட விரவுப்பெயர் இவ்விரி நிலையான் பத்தொன்பதாயின எனக் கொள்க. (21) இயற்பெயர் நான்கு எனல் 179. அவைதாம், பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர் பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயரென்று அந்நான் கென்ப இயற்பெயர் நிலையே. என் - எனின், மேல் இயற்பெயர் நான்கு என்றமையின் அவற்றின் பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) அவ்வாறு வகுக்கப்பட்டனதாம் யாவை எனின், பெண்மை இயற்பெயரும், ஆண்மை இயற்பெயரும், பன்மை இயற் பெயரும், ஒருமை இயற்பெயரும் என்று சொல்லப்பட்ட அந்நான்கும் என்ப இயற்பெயரது நிலைமையை எ-று. (22) சினைப்பெயர் நான்கு எனல் 180. பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயரென்று அந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. என் - எனின், சினைப்பெயர் நான்கு என்றமையின் அவற்றின் பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மைச் சினைப்பெயரும், ஆண்மைச் சினைப் பெயரும், பன்மைச் சினைப்பெயரும், ஒருமைச் சினைப்பெயரும் எனப் பட்ட அந்நான்கும் என்று சொல்லுப சினைப்பெயரது நிலைமையை எ-று. (23) சினை முதற்பெயர் நான்கு எனல் 181. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென்று அந்நான் கென்ப சினைமுதற் பெயரே. என் - எனின், சினைமுதற்பெயரும் நான்கு என்றமையின் அவற்றின் பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மை சுட்டிய சினைமுதற்பெயரும், ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரும், பன்மை சுட்டிய சினைமுதற்பெயரும், ஒருமை சுட்டிய சினைமுதற்பெயரும் எனப்பட்ட அந்நான்கும் என்று சொல்லுப சினைமுதற் பெயர் எ-று. (24) முறைப் பெயர் இரண்டு எனல் 182. பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென்று ஆயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. என் - எனின், முறைப்பெயரும் இரண்டுவகைப்படும் என்றமை யின் அவற்றின் பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மை முறைப்பெயரும், ஆண்மை முறைப் பெயரும் எனப்பட்ட அவ்விரண்டும் என்று சொல்லுப, முறைப் பெயரது நிலைமையை எ-று. (25) பெண்மை சுட்டிய பெயர் 183. பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. என் - எனின், மேல் விரித்தவற்றுள் பெண்மைப் பெயரெல்லா வற்றையும் தொகுத்து இரு திணைக்கும் உரியவாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) மேல் விரித்தோதினவற்றுள் பெண்மையைக் கருதின எல்லாப் பெயரும் அஃறிணையுள் பெண்ணொன்றற்கும் உயர்திணையுள் ஒருத்திக்கும் நிற்றல் பொருந்தின எ-று. பெண்மை சுட்டிய பெயர் பெண்மை இயற்பெயர் எனவும், பெண்மைச் சினைப்பெயர் எனவும், பெண்மைச் சினைமுதற் பெயர் எனவும், பெண்மை முறைப்பெயர் எனவும் நான்கு வகைப்படும். (எ-டு.) பெண்மையியற்பெயர் - சாத்தி வந்தது, சாத்தி வந்தாள் எனவரும். பெண்மைச் சினைப்பெயர் - முடத்தி வந்தது, முடத்தி வந்தாள் என வரும். குறளி என்பதும் அப்பாற்படும். பெண்மைச் சினைமுதற்பெயர் - முடக்கொற்றி வந்தது, முடக்கொற்றி வந்தாள் எனவரும். பெண்மை முறைப்பெயர் - தாய் வந்தது, தாய் வந்தாள் எனவரும், ஆய் என்பதும் அது. யாய் என்பதோ எனின், தன்மையோடு அடுத்தமையின் முறைப் பெயரேனும் உயர்திணை எனப்படும். (26) ஆண்மை சுட்டிய பெயர் 184. ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. என் - எனின், ஆண்மைப்பெயர் எல்லாவற்றையும் தொகுத்து இரு திணைக்கும் உரியவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆண்மையைக் கருதின பெயர்களெல்லாம் அஃறிணை யுள் ஆண் ஒன்றற்கும் உயர்திணையுள் ஒருவற்கும் நிற்றல் பொருந்தின எ-று. அவை ஆண்மை இயற்பெயர் எனவும், ஆண்மைச் சினைப்பெயர் எனவும், ஆண்மைச் சினைமுதற்பெயர் எனவும், ஆண்மை முறைப்பெயர் எனவும் நான்கு வகைப்படும். (எ-டு.) ஆண்மையியற்பெயர் - சாத்தன் வந்தது, சாத்தன் வந்தான் எனவரும். ஆண்மைச் சினைப்பெயர் - முடவன் வந்தது, முடவன் வந்தான் என வரும். ஆண்மைச் சினைமுதற் பெயர் - முடக்கொற்றன் வந்தது, முடக்கொற்றன் வந்தான் எனவரும். ஆண்மை முறைப்பெயர் - தந்தை வந்தது, தந்தை வந்தான் என வரும். நுந்தை யென்பதும் அது. எந்தை என்பது தன்மை யடுத்தமையின் உயர்திணைப் பெயராம். (27) பன்மை சுட்டிய பெயர் 185. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவர் என்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே. என் - எனின், பன்மைப் பெயரெல்லாவற்றையும் தொகுத்து இரு திணைக்கும் உரியவாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) பன்மையைக் கருதிய எல்லாப் பெயர்களும் அஃறிணைக் கண் ஒன்றும் பலவும், உயர்திணைக்கண் ஆண்பாலும் பெண்பாலும் என்று சொல்லப்படும் அந் நான்கு பாற்கும் ஒரு தன்மைய எ-று. பன்மை சுட்டிய பெயர் பன்மை இயற்பெயரும், பன்மைச் சினைப் பெயரும், பன்மைச் சினைமுதற்பெயரும் என மூன்று என்று உணரப் படும். ஈண்டுப் 'பன்மை' என்றது இருதிணைப் பன்மையும் அன்று; பலபால் மேலும் வருதலின் பன்மை என்றாராகக் கொள்க. (எ-டு.) பன்மை யியற்பெயர் - யானை வந்தது, யானை வந்தன, யானை வந்தான், யானை வந்தாள் என வரும். பன்மைச்சினைப்பெயர் - நெடுங்கழுத்தல் வந்தது, வந்தன, வந்தான், வந்தாள் எனவரும். பன்மைச் சினைமுதற் பெயர் - பெருங்கால் யானை வந்தது, வந்தன, வந்தான், வந்தாள் எனவரும். ஈண்டு ஒன்றே என்றதனை அஃறிணை ஆண் ஒன்றனையும் பெண் ஒன்றனையுமாகக் கொள்க. பன்மைக்கும் அஃதொக்கும். உயிரில் ஒன்றும் பலவும் கொள்ளற்க. ஒருவர் என்பதனை உயர்திணை இருபால்மேலும் கொள்க. (28) ஒருமை சுட்டிய பெயர் 186. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. என் - எனின், ஒருமைப்பெயர் எல்லாவற்றையும் தொகுத்து இரு திணைக்கும் உரியவாமாறுணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) ஒருமையைக் கருதின எல்லாப் பெயரும் அஃறிணையுள் ஒன்றற்கும் உயர்திணையுள் ஒருவற்கும் நிற்றல் பொருந்தின எ-று. ஒருமைப்பெயர் ஒருமை யியற்பெயரும், ஒருமைச் சினைப் பெயரும், ஒருமைச் சினைமுதற் பெயரும் என மூன்று வகைப்படும். (எ-டு.) ஒருமை யியற்பெயர் - கோதை வந்தது, வந்தான், வந்தாள் எனவரும். ஒருமைச் சினைப்பெயர் - செவியிலி வந்தது, வந்தான், வந்தாள் என வரும். ஒருமைச் சினை முதற்பெயர் - கொடும் புறமருது வந்தது, வந்தான், வந்தாள் எனவரும். (29) தாம் என்னும் விரவுப்பெயர் 187. தாமென் கிளவி பன்மைக் குரித்தே. என் - எனின், தாம் என்பது இரு திணைக்கும் உரித்தாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) தாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் உரித்து எ-று. (எ-டு.) தாம் வந்தார், தாம் வந்தன எனவரும். வாளாது 'பன்மை' என்றமையின் ஆண்பன்மையும் பெண் பன்மையும் எனக் கொள்க. (30) தான் என்னும் விரவுப்பெயர் 188. தானென் கிளவி ஒருமைக் குரித்தே. என் - எனின், தான் என்னும் சொல் இரு திணைக்கும் உரித்தாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தான் என்னும் சொல் இருதிணை ஒருமைக்கும் உரித்து எ-று. (எ-டு.) தான் வந்தது, தான் வந்தான், தான் வந்தாள் என வரும். வாளாதே ஒருமை என்றமையின் பெண்பால் மேலும், ஆண்பால் மேலும் கொள்க. (31) எல்லாம் என்னும் விரவுப்பெயர் 189. எல்லாம் என்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே. என் - எனின், எல்லாம் என்னும் சொல் இரு திணைக்கும் உரித்தாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) எல்லாம் என்று சொல்லப்படும் பெயராகிய நிலைமையை யுடைய சொல் இருதிணைப் பன்மையிடத்தையும் கருதிய நிலைமைத் தாகும் எ-று. (எ-டு.) எல்லாம் வந்தார், (எல்லாம் வந்தீர்), எல்லாம் வந்தன, (எல்லாம் வந்தேம்) எனவரும். வாளா பன்மை என்றமையின், இரண்டிடத்தும் ஆண்பன்மையும் பெண்பன்மையும் கொள்க. (32) மேலதற்கு எய்தியது ஒருமருங்கு மறுத்தல் 190. தன்னுள் ளுறுத்த பன்மைக் கல்லது உயர்திணை மருங்கின் ஆக்கம் இல்லை. என் - எனின், எய்தியது ஒரு மருங்கு மறுத்தல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றிடத்தும் இருதிணைமேலும் சென்றமையின் தன்மையிடத்து அஃறிணைக்கண் ஆகாது என்றமையான், எல்லாம் என்னும் சொல் சொல்லுவான் தன்னை உள்ளுறுத்து அஃறிணை மொழி கூறாமையின் தன்மைப் பன்மைக்கு உயர்திணை யிடத்தல்லது அஃறிணை யிடத்து ஆகுதல் இல்லை எ-று. 'உயர்திணை மருங்கின் அல்லது' என மொழி மாற்றிக் கொள்க. (எ-டு.) எல்லாம் உண்டும் என்பது. மற்று இஃது அஃறிணை மொழி கூறாமையின் அஃறிணைத் தன்மை இல்லை என்பது பெறுதுமாகலின் இது கூறல் வேண்டா எனின், மேல் "பல்வழி நுதலிய நிலைத்தாகும்" என அதற்கு விதி சென்றமையின் அது விலக்கல் வேண்டும் என்பது. மற்று எல்லாம் உண்டும் என்ற தன்மைக்கண் வருகின்ற வரவினை உயர்திணைப் பெயராக வேறோதற்பாற்று எனின், எல்லாம் என்பது போல உயர்திணைக்கே உரித்தானது போல முன்னிலைக்கண்ணும் படர்க்கைக் கண்ணும் விரவாநிற்றலின் ஈண்டே யோத இன்னுழிவரைவின்றி உயர்திணைப் பெயராம் எ-று. (33) நீயிர், நீ என்பன திணைதெரியாமை 191. நீயிர் நீயென வரூஉம் கிளவி பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள. என் - எனின், நீயிர் நீ என்பனவற்றை இரு திணைக்கும் உரிய வாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) நீயிர் எனவும் நீ எனவும் வரூஉம் சொற்கள் திணை தெரிபில, உயர்திணையாயும் அஃறிணையாயும் உடனுணர்த்தலைப் பொருண்மையாக வுடைய எ-று. மற்றுத் திணை தெரியாமையின் அன்றே விரவுப்பெயராயது? இது சொல்லவேண்டுமோ எனின், மேல் விரவுப்பெயர்களைத் "தத்தம் வினையோடல்லது பால் தெரிபில" (175) என்றமையின், இவையும் தத்தம் மரபின் வினையான் உணரற்பாடு சென்றமை கண்டு இவை முன்னிலைப் பெயராகலின் இவற்றுக்கு வரும் முன்னிலை வினையும் விரவாகலான் எய்தியது விலக்குதற்குக் கூறினார் என்பது. (எ-டு.) நீயிர் வந்தீர், நீ வந்தாய் என்பன; திணை கண்டு கொள்க. (34) நீ என்பது ஒருமைக்குரித்தாதல் 192. அவற்றுள், நீஎன் கிளவி ஒருமைக் குரித்தே. என் - எனின், நீ என்னும் சொல் பாற்குரித்தாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) இவ்விரண்டனுள்ளும் நீ என்னும் சொல் இருதிணை முன்னிலை ஒருமைக்குரித்தாம் எ-று. (எ-டு.) நீ வந்தாய் எனவரும். இஃது இருபாற்கும் உரித்தாயவாறு கண்டுகொள்க. அஃறிணைக் கண்ணும் பெண் ஒருமைக்கண்ணும் ஆண் ஒருமைக்கண்ணும் கொள்க. (35) நீயிர் என்பது பன்மைக் குரித்தாதல் 193. ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. என் - எனின், நீயிர் என்னும் சொல் இருதிணைப் பன்மைக்கும் உரித்தாமாறு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) எஞ்சிநின்ற நீயிர் என்னும் சொல், இருதிணைப் பன்மைக்கும் உரித்தாம் எ-று. (எ-டு.) நீயிர் வந்தீர் என உயர்திணைப் பலர்மேலும் அஃறிணைப் பலவற்றின் மேலும் வந்தவாறு கண்டு கொள்க. ஈண்டும் அஃறிணைப் பெண் பன்மையினையும் ஆண் பன்மை யினையும் உயர்திணைப் பெண் பன்மையினையும் ஆண் பன்மையினை யும் கொள்க; இது பன்மைப் பெயர் ஆராய்ச்சியெனக் கொள்க. (36) ஒருவர் என்பது உயரிருபாற்கும் பொதுவாதல் எனல் 194. ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை. என் - எனின், உயர்திணை அதிகாரத்தின் ஒழிபு உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவர் என்று சொல்லப்படுகின்ற பெயர்நிலை யுடைய சொல் உயர்திணை ஆண்பாலும் பெண்பாலுமாகிய இருபாற்கும் உரிமையையுடைத்து ஆராயுங்காலத்து எ-று. (எ-டு.) ஒருவர் வந்தார் என்றால் இருபாற்கும் உரித்தெனக் கொள்க. இருபாற்கும் உரித்து என்பது ஒரு சொல்லதன்கண்ணேயோ எனின், ஒன்று சொல்லுதற்கண்ணே எனக் கொள்க. மற்று இருவரைக் கூறும் பன்மைக்கிளவி எனவும் பிறவும் இருபாலினையும் ஒருகாலே தழுவியும் வருமால் எனின், ஆண்டுச் சொல்லிற்படுவது ஒருபாலே; மற்றைப் பால் குறிப்பாற் பெறப்படுகின்றது எனக்கொள்க. மற்று இருபாலென்றால் பன்மை ஒழிந்த இருபாலும் என்பது யாங்ஙனம் பெறுதும் எனின், ஒருவர் என நின்ற ஒருமை வாய்பாட்டான் பன்மை நீங்கிற்று எனக் கொள்க. பாலதிகாரத்தே சொல்லாது ஈண்டுச் சொல்லியது என்னை எனின், ஒருபாற் குரித்தாகாது விரவி வருகின்ற நீர்மையான் ஈண்டுப் போந்தது எனக் கொள்க. (37) மேலதற்கு முடிபு 195. தன்மை சுட்டின் பன்மைக் கேற்கும். என் - எனின், இஃது ஒருவர் என்னும் சொற்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) முற்கூறிய ஒருவர் என்னும் சொல்லினது சொல் முடியுந் தன்மையைக் கருதின் தான் காட்டுகின்ற பொருண்மைக்கு ஏற்ப ஒருமைச் சொல்லொடு முடியாது ஒருவர் என ரகர ஈற்றதாய் நின்ற அச்சொல் தன்மைக்கு ஏற்பப் பன்மைச் சொல் கொண்டு முடியும் எ-று. (எ-டு.) ஒருவர் வந்தார் எனவரும். இதுவும் பால்பற்றிய ஒரு மரபு வழுவமைதி எனக் கொள்க. (38) மேற்கூறிய மூன்று பெயர்களும் குறிப்பான் பால் உணர்த்துமாறு 196. இன்ன பெயரே இவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையின் உணர்தல். என் - எனின், இவ்வொருவர் என்னும் சொற்கும், மேற்கூறிய நீயிர் நீ என்னுஞ் சொற்கட்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) நீயிர், நீ என்னும் இவை இரண்டும், உயர்திணைக்குரிய, என்றும் அஃறிணைக் குரிய என்றும், ஒருவர் என்பது ஆண்பாற் குரித்து, பெண்பாற் குரித்து என்றும் பால் தெரிய நில்லாமையின் அவை ஈண்டு இன்ன பெயர் என்பது அறியல் வேண்டின் அச்சொற்களைக் கூறுவான் கருத்தினை அச்சொற்களொடு சேர்த்தி நீயிர், நீ எனவும், ஒருவர் எனவும் மேலோதிய முறையானே திணையும் பாலும் உணர்ந்துகொள்க எ-று. விலங்கு வருதற்பாலதல்லதொரு வழியிருந்து நீயிர் வந்தீர் என்றானும், நீ வந்தாய் என்றானும் கூறின், ஈண்டு உயர்திணை எனவும், இனி, மக்களில்வழி யிருந்து அவை கூறின் அஃறிணை எனவும், இனிக் காட்டுக்கண் புகுதல் போகாநின்றுழி ஒருவர் புகுந்தார் எனின் ஆண்பா லெனவும், ஆண்மக்கள் புகுதற்பாலதல்வழி ஒருவர் இருந்தார் எனில் பெண்பால் எனவும், இடமும் காலமுமாகிய முன்னத்தான் உணர்ந்தவாறு கண்டு கொள்க. மற்று, இஃது அதிகாரத்தான் ஒருவர் என்னும் சொற்கே கூறியதன்றோ நீயிர் நீ என்பவற்றையும் உடன்கூட்டி யுரைத்தவாறு என்னை எனின், பன்மை கூறிய அதனானும் ஏற்புழிக் கோடல் என்பத னானும் இம் மூன்றற்குங் கொள்ளப்பட்டது. (39) பெண்மகன் என்னும் சொற்குமுடிபு கூறல் 197. மகடூஉ மருங்கின் பால்திரி கிளவி மகடூஉ இயற்கை தொழில்வயி னான. என் - எனின், இதுவும் உயர்திணையொழிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்பாற்குரிய ஈற்றதாய் நில்லாப் பெண்மக னெனப் பெண்பால் ஆண்பாலாகத் திரிந்து நின்ற சொற்கு முடிபாக அதன் தொழில் கூறுமிடத்து அப்பெண்பாற் பொருண்மையின் இயல்பிற்று எ-று. (எ-டு.) பெண்மகன் வந்தாள் எனவரும். இதுவும் ஒரு மரபு வழுவமைதி எனக் கொள்க. இதுவும் அந் நீர்மைத் தாகலின் ஈண்டுப் போந்தது எனக் கொள்க. (40) செய்யுட்கண் வரும் ஈற்றயல் ஆகாரம் ஓகாரம் ஆதல் 198. ஆஓ ஆகும் பெயருமா ருளவே ஆயிடன் அறிதல் செய்யு ளுள்ளே. என் - எனின், இது பெயரீறு செய்யுளுள் திரியும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆகாரம் ஓகாரமாகி நிற்கும் பெயரும் உள. அவ் விடங்களை அறிக செய்யுளிடத்து எ-று. (எ-டு.) 'வில்லோன் காலன கழலே' (குறுந். 7) எனவும், 'தொடி யோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே' (குறுந். 7) எனவும் வரும். 'ஆயிடனறிதல்' என்றதனான் ஆகாரமாதற்கு ஏலாதவழியே ஓகாரம் ஆவது இயல்பு எனக் கொள்க. இனிக் கிழவோன் என்பது ஆகாரமாக வழக்கின்மையின் அது செய்யுள் விகாரம் அன்று; இயல்பாகிய ஈறு எனக் கொள்க. இதுவும் செய்யுள் மரபு வழுவமைதி எனக் கொள்க. (41) விரவுப்பெயர் செய்யுளுள் வரும் முறைமை 199. இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கின் தோன்ற லான. என் - எனின், செய்யுள் இடத்து விரவுப்பெயர் வருவது ஒரு முறைமை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) அச் செய்யுள்களில் கருப்பொருள் கூறும்வழிக் கிளக்கப் படும் இயற்பெயராகிய விரவுப்பெயர் உயர்திணை யுணர்த்தாது அஃறிணைப்பொருள் உணர்த்தும். அதற்குக் காரணம் என்னை எனின், அவ்வந் நிலங்களி னிடமாகிய இடத்து அவற்றுக்கு உறுப்பாய்த் தோன்றுதலான் எ-று. (எ-டு.) "கடுவன் முதுமகன் கல்லா மூலர்க்கு வதுவை யயர்ந்த வன்பறழ்க் குமரி" என வரும். இவை அஃறிணையை நோக்கி நின்றன எனக் கொள்க. மற்று இவ்விரவுப்பெயர்கள் கருப்பொருள்களுள் அந்நிலத்து மக்கட் பெயராய் உயர்திணை மேல்வரின் என்னை குற்றம் என்றார்க்கு அவ்வம்மக்களை இவ்விரவுப்பெயர்களான் கூறுதல் சான்றோர் செய்யுட் கண் கண்டிலாமையின் அது மரபு அன்று என்றாரெனக் கொள்க. (42) எய்தியது விலக்கல் 200. திணையொடு பழகிய பெயரலங் கடையே. என் - எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யுளுள் உயர்திணை யுணர்த்தாது நிற்பது இவ்வைந்திணையோடும் அடிப்பட்டு அவ்வைந்திணை உடையானது உடைமைக் கிழமை உணர்த்தி நிற்கும் பெயர் அல்லாத இடத்துக் கண்ணே; ஆண்டாயின் உயர்திணையை உணர்த்தும் எ-று. 'கழனி ஊரன்' (ஐங்.18) என்பது போல்வன செய்யுட்கண் இறைச்சிப் பொருளவாய் வந்தும் உயர்திணையை நோக்கியவாறு கண்டுகொள்க. மேல் 'உயர்திணை சுட்டா' என்றது, விரவுப்பெயர்க்கு அன்றே? இவை உயர்திணைப்பெயர் ஆயினமையின் எய்தியது விலக்கித் திணை சுட்டா என்று ஒழிவதன்றி 'நிலத்துவழி மருங்கிற் றோன்றலான' என்று காரணம் கூறினமையின் உயர்திணை பெயரானவற்றிற்கும் இவ்விதி எய்தும் கொல்லோ என்று மாணாக்கன் ஐயுறுவானென்று போலும். (43) ஐந்தாவது பெயரியல் முற்றிற்று. 6 வினையியல் வினைச்சொற்கு பொதுவிலக்கணம் 201. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வினையது இலக்கணம் உணர்த்தினமையின் வினையியல் என்னும் பெயர்த்து. மேல் ஓத்தினோடு இவ்வோத்திடை இயைபு என்னையோ வெனின், முன்னைப் பெயரியலுள் நிறுத்த முறையானே (சொல். 161) பெயர் உணர்த்தி அதன் பின்னர் வினை உணர்த்திய தொடங்கினார் என்பது. இதன் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், வினைச் சொற்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினைச்சொல் என்று சொல்லப்படுவது அறுவகை உருபினையு மேலாதே, ஆராயுங்கால், காலத்தொடு புலப்படும் எ-று. (எ-டு.) உண்டான் என்பது வேற்றுமை கொள்ளாது எனல் வேண்டியது, மேல், "கூறிய முறையின்" (சொல். 70) என்ற சூத்திரத்தான் நின்ற பெயர்க்கு முதலும் இடையும் வருதல் ஆகாது என்பதேயன்றி, வினைக்காயின் முதலும் இடையும் எல்லாம் ஆம் என்பதும் கொள்ளக் கிடந்தமையின் அது விலக்கிய என்பது. 'நினையுங்காலை' என்றதனான், காலம் தன்னை மூன்று என்பாரும், தொழிலாவது பொருளினது புடை பெயர்ச்சி யாகலின், அஃது ஒருகணம் நிற்பதல்லது இரண்டு கணம் நில்லாமையின் நிகழ்ச்சி என்பதொன்று இல்லை ஆதலின் இறப்பும் எதிர்வும் எனக் காலம் இரண்டே என்பாரும், நிகழ்காலம் என்ற ஒன்றுமே உண்டு என்பாரும் எனப் பல மதம் உண்டு என்பது அறிவிக்கப்பட்டது. (1) காலம் மூன்று எனல் 202. காலந் தாமே மூன்றென மொழிப. என் - எனின், மேற்காலமொடு தோன்றும் என்றார் அக்காலத்தை இனைய என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காலம் எனப்படுவனதாம் மூன்று என்று சொல்லுப ஆசிரியர் எ-று. (2) காலத்தின் பெயரும் முறையும் தொகையும் 203. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமும் குறிப்பொடும் கொள்ளும் மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே. என் - எனின், மேல் தொகை கூறப்பட்ட காலத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் கூறி அவைதாம் வினைக்குறிப்பிற்கும் வினைச் சொற்கும் உண்டு என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்று சொல்லப்படுகின்ற அம்முக்காலமும் வினைக்குறிப்பொடும் கொள்ளப்படும் உண்மை நிலையினையுடைய அவை தோன்றுமிடத்து எ-று. இறப்பு நிகழ்வு எதிர்வு என்பன முறையே கிடந்த பெயர் முறை. (எ-டு.) கரியன் செய்யன் என்பன. இவை ஆசிரியற்கே காலம் புலப்பட நின்றமையின் மேலைச் சூத்திரத்து அடங்காது என்று வேறு கூறப்பட்டது என்பது. 'மெய்ந்நிலை' என்பது வினைக்குறிப்புக் காலத்தைத் தெற்றென விளக்கிக் காட்டாமையான் வினையன்று என்று கருதினும் கருதற்க; அதுவும் வினையது இலக்கணம் மெய்ம்மையாக உடையது எ-று. (3) வினைச்சொற்களது பாகுபாடு 204. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ வுருவின தோன்ற லாறே. என் - எனின், வினைச்சொற்களது பாகுபாடு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) குறிப்புவினைத் தன்மையானும், தெரிநிலை வினைத் தன்மையானும், முறைமைப்படத் தோன்றிக் காலத்தொடு வருகின்ற வினைச்சொற்கள் எல்லாம் உயர்திணைக்கு உரியனவும் அஃறிணைக்கு உரியனவும் அவ்விரு திணைக்கும் ஒன்று போன்ற உரிமை உடையனவும் என அம் மூன்று கூற்றை உடைய, தோன்று நெறிக்கண் எ-று. மேல் 'குறிப்பொடுங்கொள்ளும்' (சொல். 203) எனக் குறிப்பு இயைபுபற்றி நிற்றலிற் குறிப்பு முன் கூறப்பட்டது. வினைக்குறிப்பிற்கும் காலம் உண்டே என்பது வலியுறுத்தற்குப் பின்னும் காலமொடு தோன்றும் என உடன் கூறப்பட்டது. (4) உயர்திணைத் தன்மைப்பன்மை வினைமுற்று 205. அவைதாம், அம்ஆம் எம்ஏம் என்னும் கிளவியும் உம்மொடு வரூஉம் கடதற என்னும் அந்நாற் கிளவியோ டாயெண் கிளவியும் பன்மை யுரைக்கும் தன்மைச் சொல்லே. என் - எனின், மேல் நிறுத்த முறையானே உயர்திணை யுணர்த்துதல் நுதலிற்று. உயர்திணை வினைதாம், தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் என இருவகைய; அவற்றுள், தெரிநிலை வினை முன்னுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதுதானும் தன்மை வினையும் படர்க்கை வினையும் என இருவகைத்து. அவற்றுள் தன்மை முன் உணர்த்திய தொடங்கினார். தன்மைதானும் உளப்பாட்டுத்தன்மை தனித்தன்மை என இருவகைத்து. அவற்றுள் உளப்பாட்டுத் தன்மை முன் உணர்த்திய தொடங்கினார் என உணர்க. (இ-ள்.) மேற் பகுக்கப்பட்ட வினையின் முப்பாகுபாடும் ஆகிய அவையாமாறு இனிச் சொல்லுவல்; அம் ஆம் எம் ஏம் என்னும் ஈற்றையுடைய நான்குவகைச் சொற்களும், உம்மொடு வருகின்ற கும், டும், தும், றும் எனப்படுகின்ற அந்நான்கு ஈற்றுச் சொல்லுமாகிய அவ்வெட்டுச் சொல்லும், அவன் தன்னொடு பிறனையும் கூட்டிப் பன்மையினைச் சொல்லும் தன்மைக்கு உரிய சொல்லாம் எ-று. (எ-டு.) அம் - உண்டனம், உண்டிலம்; உண்ணாநின்றனம், உண்கின்றனம்; உண்ணாநின்றிலம், உண்கின்றிலம்; உண்பம், உண்குவம், உண்ணலம் என வரும். இவற்றுள் நிகழ்காலம் நிற்கின்றனம் என்றாற்போல வரும் வாய்பாட்டு விகற்பமும் அறிக. இனி அம்மறை ஒருவாய்பாட்டதாய்ச் சொல் தன்னானே உண்டிலம் என்றாற்போல மறுத்து வருதலே அன்றி உண்டனம் அல்லம் முதலிய வாய்பாட்டான் மறுத்து வருதலும் கொள்க. ஆம்:- உண்ணா நின்றாம், உண்டாம், உண்டிலாம், உண்கின்றாம், உண்ணாநின்றிலாம்; உண்பாம், உண்குவாம், உண்ணாம் என வரும். எம்:- உண்டெம், உண்டிலெம்; உண்ணாநின்றெம், உண்கின்றெம்; உண்ணாநின்றிலெம், உண்கின்றிலெம்; உண்பெம், உண்குவெம்; உண்ணெம் என வரும். ஏம்:- உண்டனேம், உண்டிலேம்; உண்ணாநின்றேம், உண்கின் றேம்; உண்ணாநின்றிலேம்; உண்பேம், உண்குவேம், உண்ணேம் எனவரும். இவற்றிற்கும் உண்டாமல்லெம், உண்டாமல்லேம் என்ற விகற்பமும் அறிக. இனி, உம்மொடு வரூஉங் கடதறக்கள், உண்கும், உண்டும், வருதும், சேறும் என எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும் எனக் கொள்க. இவற்றுள் மறைவாய்பாடுந் நாற்கிளவியும் என்பார் எண்ணும் மையினைத்தொகுத்து ஒடு விரித்தார் எனக் கொள்க. (5) தன்மை ஒருமை வினைமுற்று 206. கடதற என்னும், அந்நான் கூர்ந்த குற்றிய லுகரமோ(டு) என்ஏன் அல்என வரூஉம் ஏழும் தன்வினை உரைக்குந் தன்மைச் சொல்லே. என் - எனின், தனித்தன்மை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கடதற என்று சொல்லப்பட்ட அந்நான்கு ஒற்றினையும் ஊர்ந்த குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் நான்கும் என் ஏன் அல் என்னும் மூன்று ஈற்றுச் சொல்லும் எனச் சொல்ல வருகின்ற அவ்வேழு சொல்லும் தன்மைப்பன்மைச் சொல்போலச் சொல்லுவான் தன்னொடு பிறன் வினையையும் உணர்த்தது, தன் வினையையே உணர்த்தும் தன்மைச் சொல்லாம் எ-று. ஒடு, எண்ணொடு. இவற்றுள் முன்னைய நான்கும் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும். (எ-டு.) உண்கு, உண்டு, வருது, சேறு, உரிஞுகு, திருமுகு என வரும். இவற்றுள் தகர உகரம்; "கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினுந், தொல்லது விளைந்தென நிலம் வளங்கரப்பினும்" (புறம். 203) என்னும் புறப்பாட்டினுள் பொழிந்து எனவும் விளைந்து எனவும் இறந்தகாலம் பற்றி வந்தன. சிறுபான்மை நிகழ்காலமும் உண்டேனும் அறிந்து கொள்க. இனிக் ககர உகரத்திற்கு: "அழாஅற்கோ வினியே நோய்நொந் துறைவி" (குறுந். 192) என்னும் குறுந்தொகைப் பாட்டினுள் அழுது என்னும் உடன்பாட்டிற்கு அழாஅற்கு என எதிர்மறை வந்தது. ஒழிந்த எதிர்மறை வாய்பாடும் உளவேல் அறிக. இனி என் ஏன் என்பன இரண்டு ஈறும் முக்காலத்தும் உடன் பாட்டினும் மறையினும் வரும் எனக் கண்டு கொள்க. (எ-டு.) உண்டனென், உண்டிலென்; உண்ணாநின்றனென், உண்கின்றனென்; உண்ணாநின்றிலென், உண்கின்றிலென்; உண்பென், உண்குவென், உண்ணலென் என வரும். இவை என். இனி ஏன்: உண்டேன், உண்டிலேன்; உண்ணாநின்றேன், உண்கின் றேன்; உண்ணாநின்றிலேன், உண்கின்றிலேன்; உண்பேன், உண்குவேன், உண்ணேன் என வரும். உண்டிலென், உண்டேனல்லேன் எனவரும் மறைவிகற்பமும் அறிக. இவ்விரண்டீறும் மூன்று காலத்தும் வருதலான் முன் வைக்கற்பால எனின், முன் சூத்திரத்துக் கடதறக்கள் கடைக்கண் நின்ற அதிகாரம் பற்றி அவற்றை முற்கூறினார் எனவுணர்க. அல்ஈறு உண்பல், தின்பல் என எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும். உண்ணாநிற்பல் எனச் சிறுபான்மை நிகழ்காலம் பற்றியும் வரும். ஒழிவல், தவிர்வல் எனச் சில வினைக்கண் மறைவாய்பாடும் அறிக. அல்லாதவற்றிற்கும் உண்ணாதொழிவல் என்றாற் போன்ற வாய்பாடு மறையாய்ச் சொல்லுமாறும் அறிக. (6) செய்கு என்னும் முற்றுவினை வினையொடு முடிதல் 207. அவற்றுள் செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்வியல் திரியா தென்மனார் புலவர். என் - எனின், அவ்வேழனுள் ககர உகர ஈற்றிற்கு முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஏழனுள்ளும் செய்கு என்னும் சொல் பெயரொடு முடியாதே வினையொடு முடியினும், பெயரொடு முடிந்தன போல அம்முற்றுச் சொல்லாகல் இயல்பின் திரியாது எ-று. (எ-டு.) உண்கு வந்தேன் என்பது. இனி ஒன்றென முடித்தல் என்பதனான் உண்கும் என்பதும் இவ்வாறே வினையொடு முடியும். (எ-டு.) உண்கும் வந்தேம் என்பது. வினையெச்ச முற்றாய் அமையாதோ எனின், முன்முற்றாய்ப் பெயர் கொண்டு நின்று, பின் வினையெச்ச முற்றாய் வந்தன அன்மையின், இவ்வாறு ஓதினார். உண்கோ யான் என்னப் பெயரொடு முடிந்ததால் எனின், அவ்வாறு வருவன உளவேனும் சிறுபான்மை; வினைகோடலே பெரும்பான்மை என உணர்க. (7) உயர்திணைப் படர்க்கை ஒருமை வினைமுற்று 208. அன்ஆன் அள்ஆள் என்னு நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. என் - எனின், உயர்திணைத் தன்மை வினை உணர்த்தி அத்திணைப் படர்க்கை வினை உணர்த்துவான் எடுத்துக்கொண்டார் என்பது. அப் படர்க்கை வினைதான், ஒருமைவினையும் பன்மைவினையும் என இருவகைத்து. அவற்றுள் ஒருமைவினைதான் ஆண்பால் ஒருமையும் பெண்பால் ஒருமையும் என இருவகைத்து. அவ்விருவகை ஒருமையும் இதனாற் கூறுகின்றது என உணர்க. (இ-ள்.) அன், ஆன், அள், ஆள் என்று சொல்லப்பட்ட நான்கு ஈற்றுச் சொல்லும், ஒருவன் ஒருத்தி என்னும் ஒருமைப் பாலிடத்தின் படர்க்கையை உணர்த்தும் சொல்லாம் எ-று. முக்காலத்தும் உடன்பாடும் மறையும் என இருவகையாய் வரும். அவற்றுள் அன்: உண்டனன், உண்டிலன்; உண்ணாநின்றனன், உண் கின்றனன்; உண்ணாநின்றிலன், உண்கின்றிலன்; உண்பன், உண்குவன், உண்ணலன் எனவரும். இனி ஆன்: உண்டான், உண்டிலான்; உண்ணாநின்றான், உண்கின்றான்; உண்ணாநின்றிலான், உண்கின்றிலான்; உண்பான், உண்குவான், உண்ணான் என வரும். இவை ஆண்பால் ஒருமை. இனி அள்: உண்டனள், உண்டிலள்; உண்ணாநின்றனள், உண்கின்ற னள், உண்ணாநின்றிலள், உண்கின்றிலள்; உண்பள், உண்குவள், உண்ணலள் என வரும். இனி ஆள்: உண்டாள், உண்டிலாள்; உண்ணாநின்றாள், உண்கின் றாள்; உண்ணாநின்றிலாள், உண்கின்றிலாள்; உண்பாள், உண்குவாள், உண்ணாள் என வரும். இவை பெண்பாலொருமை. இவற்றிற்கு உண்டனனல்லன், உண்டனனல்லான்; உண்டன ளல்லள், உண்டனளல்லாள் எனப் பிற வாய்பாட்டான் வரும் மறையும் அறிக. (8) உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று 209. அர்ஆர் பஎன வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. என் - எனின், உயர்திணைப்பன்மைப் படர்க்கைவினை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அர் ஆர் ப என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும் பல்லோர் இடத்துப் படர்க்கை உணர்த்தும் சொல்லாம் என்றவாறு. இவற்றுள் முன்னைய இரண்டும் மூன்று காலத்தும் வரும். (எ-டு.) அர்:- உண்டனர், உண்டிலர்; உண்ணாநின்றனர், உண்கின்றனர்; உண்ணாநின்றிலர், உண்கின்றிலர்; உண்பர், உண்குவர், உண்ணலர் என வரும். ஆர்:- உண்டார், உண்டிலார்; உண்ணாநின்றார், உண்கின்றார், உண்ணாநின்றிலார், உண்கின்றிலார்; உண்பார், உண்குவார், உண்ணார் என வரும். இவற்றிற்கு உண்டனரல்லர், உண்டனரல்லார் என வரும் மறை விகற்பமும் அறிக. இனிப் பகரம் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும். (எ-டு.) உண்ப, உண்குப என வரும். இஃது உண்ணாநிற்ப என நிகழ்காலத்தும் வரும். இதற்கு எதிர்மறை வாய்பாடும் உண்டேல் அறிக. இனி ஒழிப, தவிர்ப எனச் சில வினைக்கண் மறை வாய்பாடும் உண்மை அறிக. உண்ணாதொழிப என்னும் மறைதானே ஏனையவற்றிற்கு மறை ஆமாறும் அறிக. (9) மார் என்பது வினையொடு முடிதல் 210. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப. என் - எனின், இதுவும் படர்க்கைக்கு உரியது ஓர் ஈறும் அதன் முடிபு வேற்றுமையும் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மார் என்னும் சொல்லை ஈறாகவுடைய சொல்லும் பல்லோரை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். அது தான் பிற முற்றுச் சொற்போற் பெயரொடு முடியாது காலத்தை உணர்த்தும் சொல்லாகிய வினைச்சொல்லொடு முடியும். அவ்வாறு முடிந்ததாயினும் முற்றாம் இயல்பின் திரிபின்று என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. மார் எதிர்காலம் ஒன்றுமே பற்றி வரும். (எ-டு.) 'ஆர்த்தார் கொண்மார் வந்தார்' என வரும். உண்மார் தின்மார் என நிகழ்காலம் உண்டேனும் அறிக. இதுவும் வினையெச்ச முற்றாய் அடங்காதோ எனின், மேற்கூறிய வாறே கூறுக. உண்ணன்மார் என எதிர்காலம் உண்டேனும் அறிக. இனி 'நிலவன்மாரோ புரவலர்' (புறம். 375) என்றும், 'பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே' (புறம். 375) என்றும், 'நோய்மலி வருத்தங் காணன்மார் எமரே' (நற். 64.) என்றும், பெயர் கொண்டு முடிந்தனவால் எனின் அவை நிலவுக, பாடுக, காண்க எனவரும் வியங்கோளிற்கு எதிர்மறை; இதன் மறை அல்ல என்று போகலும் ஒன்று. வினை கொள்ளும் என்பது பெரும்பான்மை; சிறுபான்மை பெயர் கொண்டு வரும் என்பதும் ஒன்று. இரண்டனுள் நல்லது தெரிந்து உரைக்க. (10) உயர்திணை வினைமுற்றின் தொகை 211. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்று தலையிட்ட முன்னுறக் கிளந்தன உயர்திணை யவ்வே. என் - எனின், விரித்துத்தொகுத்தல் என்னும் இலக்கணத்தான் இவை உயர்திணைக்கு உரிய எனத் தெரிநிலை வினையைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த மூன்றனை முடியிலே உடைய இருபதும் மேற் கிளவியாக்கத்து முன்னுறச் சொல்லப்பட்ட உயர்திணையன ஆம் எ-று. மூன்று தலையிட்ட அந்நாலைந்து எனக் கொள்க. மூன்று தலையிட்டு என்றும் பாடம் உண்டு. உதாரணம் மேற்காட்டினவே கொள்க. அவ்விருபத்து மூன்றனுள் பன்மைக்கு உரிய ஈறு உளப்பாட்டுப் பன்மை ஈறு எட்டும், படர்க்கைப் பன்மை ஈறும், மாரும் உட்பட நான்கும் எனப் பன்னிரண்டாம் இவற்றுள் உளப்பாட்டுத் தன்மை ஈறு எட்டும், சொல்லுவான் பிறன்வினையும் உள்ளிட்ட மாத்திரமேயாய் தன்வினை கூறும் தன்மை என ஆகலிற் படர்க்கைப் பன்மை நான்கும் போலப் பன்மைச் சிறப்பின்மை அறிக. ஒருமை ஈறு:- தனித்தன்மை ஈறு ஏழும், படர்க்கை யொருமை ஈறு நான்கும் ஆகப் பதினொன்றாம். இப்பதினொன்றுள் அன் ஆன் என்னும் இரண்டும் ஆண்பாற்கே உரிய ஒருமை. அள் ஆள் என்னும் இரண்டும் பெண்பாற்கே உரிய ஒருமை. தனித்தன்மை ஏழும் இருபாற்கும் உரிய ஒருமை. ஆகலின் முன்னையனபோல ஒருமைச்சிறப்பில எனக் கொள்க. மேற் கூறுகின்ற யார் (213) என்பதனொடுகூட, உயர்திணை ஈறு இருபத்து நான்காம் எனக் கொள்க. இவ்வுயர்திணை ஈறு இருபத்து நான்கும் இவ்வீற்று வினைச் சொற்கட்கு முடிபாய் வரும். பெயர்க்கும், ஒன்றென முடித்தல் என்பதனான் ஈறாய் அவ் விடமும் பாலும் உணர்த்தும் என்பது கொள்ளப்படும். இவற்றைப் பெயர்ச்சொற்கும் ஈறாகப் பெயரியலுள் ஓதாதது என்னையெனின், இவையே அன்றிப் பிறவும் ஈறு உண்மையின் ஓதார் ஆயினார் போலும். அஃதேல், பிறவற்றையும் சுட்டி வரையறை செய்க எனின், அப் பிற ஈறுகள் நம்பி என ஆண்பால்மேனின்ற இகர ஈறு, அவ்வாட்டி எனப் பெண்பால்மேல் நின்றும்; நங்கை என நின்ற ஐகாரம் தந்தை என ஆண்பால்மேல் நின்றும்; ஆடூ என ஆண்பால்மேல் நின்ற ஊகாரம் மகடூ எனப் பெண்பால்மேல் நின்றும்; அவன் என ஆண்பால்மேல் நின்ற னகரம் சாத்தன் என விரவின்மேல் நின்றும்; அவள் என நின்ற ளகரம் மக்கள் எனப் பன்மை மேல் நின்றும், அவ்வாறு மயங்கி வருதலின் வரையறுக்கப்படா என்றொழிந்தார் போலும். (11) உளப்பாட்டுத்தன்மை வினைமுற்றின் திரிபு 212. அவற்றுள், பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி எண்ணியல் மருங்கின் திரிபவை உளவே. என் - எனின், உளப்பாட்டுத்தன்மைத் திரிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) முற்கூறியவற்றுள் உளப்பாட்டுத் தன்மைச் சொற்கள் எண்ணும்போது அஃறிணையையும் உளப்படுத்தித் திரிவன உள எ-று. திரிபவை என்னுந் தொழிற்பெயர்... திரிபென்னுந் தொழிலின் மேலது பொருணிலையாக்கித் திரிபுகள் உளவென உளப்படுத்தித் திரிவன உள எ-று. இனித் திரிபவை என்னுஞ் சொல்லினைத் திரிபாகிய அவை என இரண்டாக்கி அவை என்பதுந் தங்கு... ளையாக்கியும் உரைக்க. இனி அவை திரியுங்கால் அம், ஆம் என்னும் இரண்டும் தன்னொடு முன்னின்றானை உளப்படுக்கும். எம் ஏம் என்னும் இரண்டும் தன்னொடு படர்க்கையானை உளப்படுக்கும். உம்மொடு வரூஉம் க, ட, த, றக்கள் நான்கும் அவ்விருவரையும் உளப்படுக்கும் எனக் கொள்க. இச்சூத்திரத்து வேறுபாடுள என்றது அல்லது இவ்வகை என விளங்கக் கூறாமையின் இதனை உரையிற் கொள்ளப்படும். (எ-டு.) யானும் நீயும் உண்டனம்,யானும் நீயும் உண்டாம்; யானும் அவனும் உண்டனெம், யானும் அவனும் உண்டேம்; யானும் நீயும் உண்டும், உண்கும், வருதும், சேறும்; யானும் அவனும் உண்கும், உண்டும், வருதும், சேறும் என ஒட்டிக்கொள்க. (12) யார் என்பது உயர்திணை முப்பாற்கும் உரித்தாதல் 213. யாஅர் என்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கும் உரித்தே. என் - எனின், உயர்திணைத் தெரிநிலைவினை உணர்த்தி, அதன் வினைக்குறிப்பினுள் ஒன்றனை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யார் என்று சொல்லப்படுகின்ற வினாப்பொருளை உணர நின்றசொல் மேற்சொல்லப்பட்ட உயர்திணையிடத்து முப்பாற்கும் உரித்து எ-று. (எ-டு.) யார் அவன், யார் அவள், யார் அவர் எனவரும். மேல் வினைக்குறிப்புக் கூறுழிக் கூறுக எனின், ஆண்டுக் கூறுவன போலாது இஃது ஈறு திரியாது தானொன்றே மூன்று பாற்கும் உரித்தாயின மையின் வேறு கூறினார் எனக்கொள்க. (13) செய்யுட்கண் சில வினையீறுகளது திரிபு 214. பாலறி மரபின் அம்மூ வீற்றும் ஆவோ ஆகும் செய்யு ளுள்ளே. என் - எனின், அவ்விருபத்து மூன்று ஈற்றுள்ளும் மூன்றற்குச் செய்யுளகத்துப் பிறப்பதொரு திரிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பால் அறியப்படும் மரபினையுடைய அம்மூன் றீற்றின் கண்ணும் ஆகாரம் ஓகாரமாம் செய்யுளிடத்து எ-று. அம்மூன்றாவன, மேல் 'ஆ ஓ ஆகும்' (சொல். 198) என்றமையான் ஆன், ஆள், ஆர் எனக் கொள்க. (எ-டு.) "வினவி நிற்றந்தோனே" (அகம். 48),"நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே"(அகம். 248), "சென்றோ ரென்பிலர் தோழி" (அகம். 31) என வரும். இம் மூன்றும் படுத்தலோசையான் தொழிற்பெயராயவழி ஆவோ வாதல் பெயரியலுட் கொள்ளப்படும் (சொல். 198). (14) ஆய்என் கிளவி ஆகார ஈறும் ஓகாரமாதல் 215. ஆயென் கிளவியும் அவற்றோ ரன்ன. என் - எனின், இது மேலதன் முடிபு முடிதலுடையது பிறிதும் உண்டென்பதும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆய் என்னும் ஈற்றுச் சொல்லும் மேற்சொல்லப்பட்ட மூன்றீற்றினோடும் ஆகாரம் ஓகாரமாதல் கொள்ளப்படும் எ-று. (எ-டு.) "வந்தோய் மன்ற தெண்கடற் சேர்ப்ப" (அகம். 80)என வரும். இது விரவுவினையுள் உள்ள தாகலான், ஈண்டுக் கூறியது என்னை யெனின், விரவே எனினும் இவ்வாறு திரிவது உயர்திணையின் மேல் வந்ததாகலானும், ஆ ஓ ஆதல் அதிகாரப்பட்டமையானும் எனக் கொள்க. (15) உயர்திணைக் குறிப்புவினை 216. அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும் கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பி னானும் பண்பி னானுமென்று அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும் அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் குறிப்பே காலம். என் - எனின், நிறுத்த முறையானே உயர்திணைத் தெரிநிலைவினை உணர்த்தி அதன் குறிப்புவினை உணர்த்திய எடுத்துக் கொண்டார் என்பது. (இ-ள்.) ஆறாம் வேற்றுமையது உடைமைப் பொருட் பெயர்க் கண்ணும் ஏழாம் வேற்றுமையது நிலப்பொருட் பெயர்க்கண்ணும், உவமப்பொருட் பெயர்க்கண்ணும், கருமை முதலிய நிறப் பண்புப் பெயர்க்கண்ணும் என்று சொல்லப்பட்ட அந்நான்கு கூற்றுப் பெயர்க் கண்ணும் வருகின்ற வினைச்சொல், வினைக்குறிப்பாய்த் தோன்றும்; அவையேயன்றி, அன்மை என்னும் பண்புப்பெயரடியாக வருவதும், இன்மை என்னும் பண்புப்பெயரடியாக வருவதும், உண்மை என்னும் பண்புப்பெயரடியாக வருவதும், வன்மை என்னும் பண்புப் பெயரடியாக வருவதும், அத்தன்மையினையுடைய பிற பண்புப் பெயர்களும், பிற பெயர்களும் அடியாக வருவனவுமாயுள்ளதைக் குறித்துக் கொள்ளப்படும் எல்லாச் சொல்லும் குறிப்பு வினைச்சொல்லாம் எ-று. 'அப்பால் காலம்' என்பது ஆகுபெயரான் காலமுடைய வினைச் சொல்லினைக் குறிப்பாய்த் தோற்றும் என்பார் 'குறிப்பொடு தோன்றும்' என்றாராகக் கொள்க. இனி, அக்கூற்றுக் காலங் குறித்துக் கொள்ளப்படுமெனக் காலந் தன்மேலதாயும் படும். 'குறிப்பே காலம்' என்றது முன் 'குறிப்பொடு தோன்றும்' என்ற காரணத்தான் அச் சொற்கட்குக் குறிப்புவினை யெனப் பெயரிட்டவாறாகக் கொள்க. ஈண்டுங் காலம் என்றது ஆகுபெயரான், வினை. வினைக்குறிப்பு என்பதனொடும் குறிப்புவினை என்பதனொடும் வேற்றுமை இல்லை என வுணர்க. இதனாற் சொல்லியது ஒரு பொருட்கு உடைமையாகிய உடைமைப் பெயரும், ஒரு பொருள் நிகழ்தற்கு இடமாகிய இடப் பெயரும், ஒரு பொருளது குணமாகிய ஒப்புமைப்பண்பும் நிறப்பண்பும் குணப்பண்புமாகிய பண்புப்பெயரும், இன்னும் ஒரு பொருள் நிகழ்வதற் கிடமாகிய காலப்பெயரும், ஒரு பொருளது புடைபெயர்ச்சியாகிய தொழிற்பெயரும், ஒரு பொருளது உறுப்பாகிய சினைப்பெயரும் என இவ்வறுவகைப் பெயரும் அடியாக இவற்றொடு பால் காட்டும் இடைச் சொற்களைக் கூட்டக் காலமும் குறித்துக் கொள்ளும் நீர்மையாய் வருவன எல்லாம் வினைக்குறிப்பு என்பார் பெரும்பான்மையனவற்றை எடுத்தோதி அல்லனவற்றை 'அன்ன பிறவும்' என்றதனாற் கொள்க என்றார் என உணர்க. ஒப்புமைப்பண்பு குணப்பண்பினுள் அடங்காதோ எனின், அஃது ஒருபொருட்கண்ணே கிடப்பதன்றி அவ்விருபாற் பொருட்கண்ணும் கிடத்தலின் வேறு ஆயிற்றுப் போலும். பண்பென ஒன்றாக ஓதியதனை ஒப்புமைப் பண்பு, நிறப்பண்பு, குணப்பண்பு எனப் பிரிக்கின்றது என்னையெனின், நிறப்பண்பு கட்புலம்; மற்றையன பிறபுலம் என்பது கருதிப் போலும். குணப்பண்பு என ஒன்றாக ஓதாது அன்மை இன்மை எனப் பிரித்தோதியது என்னை எனின், இவை ஒரு பொருட்குப் பெயர் ஆகி நின்றுழி நன்மை தீமை என்பனவற்றொடு வேறுபாடுடைய என்றதனான் இவற்றின்மேல் வரவு பெரும்பான்மை என்றாதல் பிறவாதல் கருதிப் போலும். உடைமை என்றும் நிலம் என்றும் ஓதாது, வேற்றுமைப் பொருள்களை எடுத்து ஓதியது என்னை எனின், அப் பெயரடியாக வினைக் குறிப்பு வந்தவழி அவ் வேற்றுமைப் பொருளுணர்ச்சி உண்டு என்பது கருதிப் போலும். .... கலத்தோனெனப் பொருள் பற்றி வந்த வினை யுடையவனென இரண்டாவதன் பொருண்மையன்றோ எனின், அன்று; சொன்முடிந்து நின்றவழி உணர்ச்சி அவ்வாறாயினும் உடைமைக்கு அடியாயுள்ளது ஆறாவது என்பது கருதிப்போலும். அறுவகைப் பெயராவன - பண்புப் பெயர், இடப்பெயர், காலப் பெயர், தொழிற்பெயர், சினைப்பெயர், உடைமைப் பெயர் என இவை. இவற்றிற் கெல்லாம் உதாரணம் இதன் ஈறு கூறுகின்ற மேலைச் சூத்திரத்துள் காட்டுதும். (16) உயர்திணை வினைக்குரிய ஈறு 217. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி உயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. என் - எனின், மேற்கூறிய வினை, வினைக்குறிப்பிற்கு ஈறாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை அறிய வந்த அத்தன்மைத்தான மரபினையுடைய காலங் குறித்துக் கோடலொடு வரும் வினைச்சொற்கள் உயர்திணையிடத்து மேற்கூறிய தெரிநிலைவினை யீறுகளோடு ஈறு வேறுபாடில எ-று. என்றது, இவற்றிற்கென ஈறு வேறில்லை; மேற்கூறிய இருபத்து மூன்று ஈறுமே இவற்றிற்கும் ஈறாவன என்றவாறு. இருபத்து மூன்று ஈறாதல் சென்றதேனும் இதுபொழுது காண்கின் றது உளப்பாட்டுத் தன்மையுள் அம் முதலிய நான்கும், அத்தன்மை யொருமையுள் என் ஏன் என்னுமிரண்டும், படர்க்கையுள் அன் முதலிய ஒருமை நான்கும், அர் ஆர் என்னும் பன்மையிரண்டும். அல்லனவும் உளவேற்கொள்க. (எ-டு.) உடையம், உடையாம்; உடையெம், உடையேம்; உடையென், உடையேன்; உடையன், உடையான்; உடையள், உடையாள்; உடையர், உடையார் என அதுச்சொல்வேற்றுமையுடைமை வந்தவாறு. இவற்றுள் ரகாரம் முதலாகிய ஈறுகள் பெயர் நோக்கொழிய வினை நோக்குள்வழிக் கொள்க. இனிப் பொருளுடையன், பொருளையுடையான்; வில்லுடையன், வில்லையுடையான் என்றாற்போல இரு சொல்லாய் வாராது பொருளன், வில்லன் என்றாற்போல, ஒரு சொல்லாய் வருதலும்,அது பல பொருளன், வல்வில்லன் என்றாற்போல்வன அடையடுத்து வருதலுங் கொள்க. நிலத்தம், நிலத்தாம்; நிலத்தெம், நிலத்தேம்; நிலத்தினென், நிலத்தினேன்; நிலத்தன், நிலத்தான்; நிலத்தள், நிலத்தாள்; நிலத்தர், நிலத்தார் எனக் கண்ணென்னும் வேற்றுமை வந்தவாறு. இவற்றின் விகற்பமும் அறிக. பொன்னன்னம், பொன்னன்னாம்; பொன்னன்னெம், பொன்னன் னேம்; பொன்னன்னென், பொன்னன்னேன்; பொன்னன்னன், பொன்னன் னான்; பொன்னன்னள், பொன்னன்னாள்; பொன்னன்னர், பொன்னன்னார் என இவை ஒப்புவந்தவாறு. இவற்றின் விகற்பமும் அறிக. கரியம், கரியாம்; கரியெம், கரியேம்; கரியென், கரியேன்; கரியன், கரியான்; கரியள், கரியாள்; கரியர், கரியார் என இவை பண்பு வந்தவாறு. இவை ஒழியச் செம்மை முதலிய பண்பொடும் இவ்வாறு ஒட்டுக. இவற்றின் விகற்பமும் அறிக. அல்லம், அல்லாம்; அல்லெம், அல்லேம்; அல்லென், அல்லேன்; அல்லன், அல்லான்; அல்லள், அல்லாள்; அல்லர், அல்லார் என இவை அன்மை வந்தவாறு. இன்மை முதலியனவும் இவ்வாறொட்டுக. இவற்றின் விகற்பமும் அறிக. வன்மை என்பதனை இரட்டுற மொழிதலாகக் கொண்டு வன்மை யும் வலிமையும் ஆக்கி வல்லம், வலியம் என இருவாற்றானும் ஒட்டுக. நல்லம், தீயம், சேயம், அணியம் எனப் பிற பண்போடும் எல்லா ஈற்றையும் ஒட்டுக. இவற்றின் விகற்பமும் அறிக. ஓராட்டையம், ஒரு திங்களம், ஒரு நாளம் என எல்லாக் காலத்தோடும் எல்லா ஈற்றோடும் ஒட்டுக. ஊணம், தீனம், செலவினம், வரவினம் என எல்லாத் தொழிலொடும், எல்லா ஈற்றொடும் ஒட்டுக. முடவன், குருடன், செவிடன் என எல்லாச் சினையொடும் எல்லா வீற்றையும் ஒட்டுக. இவற்றின் வாய்பாட்டு விகற்பமும் அறிக. உடைமைப்பெயரும், பண்புப்பெயரும், காலப்பெயரும், தொழிற்பெயரும், சினைப்பெயரும் வந்தவாறு. (17) அஃறிணைப்பன்மைத் தெரிநிலை வினைமுற்று 218. அஆ வஎன வரூஉம் இறுதி அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. என் - எனின், நிறுத்த முறையானே (சொல். 204) உயர்திணை வினையும் வினைக்குறிப்பும் உணர்த்தி அஃறிணை வினை உணர்த்துதல் நுதலிற்று. அஃறிணை வினைதான் ஒருமை வினையும் பன்மை வினையும் என இரு வகைத்து; அவற்றுள் பன்மைவினை உணர்த்திய தொடங்கினார் என்பது. ஒருமையன்றோ முன்னையதெனின், யாண்டும் ஒருமையை முன்கூறின் அதற்கொரு சிறப்புண்டுகொல் என்பதுபடும் என்று 'முந்துமொழிந்ததன் தலைதடுமாற்று' என்பதொரு தந்திரவுத்தியும் உண்டாதலான் இவ்வாறு கூறினார் என்க. (இ-ள்.) அ, ஆ, வ என்று சொல்ல வருகின்ற ஈறுகளை யுடைய அக்கூற்று மூன்று சொல்லும் பலவற்றை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம் எ-று. (எ-டு.) உண்டன, உண்டில, உண்ணாநின்றன, உண்ணாநின்றில, உண்கின்றன, உண்கின்றில, உண்பன, உண்ணல என அகரம் வந்தவாறு. இவ்வகரம் வருங்கால் உடன்பாட்டின்கண் னகர ஒற்றொடு கூடியும், மறைக்கண் லகர ஒற்றோடு கூடியும்அல்லது வாராது போலும். உண்ட, தின்ற, வந்த, போய என வருமால் எனின், அவை எல்லாக் காலங்களிலும் வாராமையான் அந்நிகரனவற்றின் னகரம் செய்யுள் விகாரத்தான் குறைந்தது என்க. உண்ணா, தின்னா என ஆகாரம் வந்தவாறு. இதற்கு உடம்பாடு, எக்காலத்தும் இல்லையெனக் கொள்க. வகரம் ; உண்குவ. இதற்கு எதிர்காலமே உள்ளது, இதற்கு மறை உண்ணல என அகரத்தின் மறை எனக் கொள்க. உண்டன அல்ல, உண்டன இல்லை எனப் பிறவாய்பாட்டு மறையும் அறிக. (18) அஃறிணை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று 219. ஒன்றன் படர்க்கை தறட ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். என் - எனின், ஒருமைப் படர்க்கையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒன்றனை உணர்த்தும் படர்க்கைச்சொல் தறடக்களை ஊர்ந்த குற்றியலுகரமாகிய ஈற்றெழுத்தினையுடைய சொற்களாம் எ-று. (எ-டு.) வந்தது, வந்திலது; வாராநின்றது, வாராநின்றிலது; வருகின்றது, வருகின்றிலது; வருவது, வாராது எனத் தகரம் வந்தவாறு, கூறிற்று, தாயிற்று என றகரம் இறந்த காலம்பற்றி வந்தவாறு. இது உண்டல், தின்றல் என்னும் எல்லாத் தொழிலொடும் ஓடாமையும் அறிக. தனக்கு என ஏற்ற மறையின்மையும் அறிக. குண்டுகட்டு, கொடுந்தாட்டு என்பன டகரம். இது வினைக்குறிப்பின்கண் வருவதெனக் கொள்க. மற்று இது வினைக்குறிப்பு ஓதும்வழி ஓதாதது என்னை எனின், மேல் குறிப்பினைத் தெரிநிலைவினையினொடு மாட்டெறிப ஆகலான் இத்தெரிநிலையுள் அடங்கா உகரமில்லது கண்டு, ஆண்டு மாட்டேலாது என ஈண்டே கூறினாரென வுணர்க. இவ்வாறு பன்மையும் ஒருமையும் அறிவிக்கும் ஈறுகள் கிளவி யாக்கத்துள்ளே ஓதினார் அன்றோ எனின், ஆண்டு இடவரையறை யின்மையின் ஈண்டு அவற்றிற்கு இடம் வரையறுத்தவாறாகக் கொள்க. இக்கடாவும் விடையும் உயர்திணைப் படர்க்கை வினைக்கும் ஒக்கும் எனக் கொள்க. அவற்றுள் பாலுணர்த்தும் என்ற னகரவீறு தனித்தன்மைக் கண் என்னென்புழி இருபாற்கும் பொதுவாய் நின்றதால் எனின், ஆண்டும் ஒருமையு மென்னுந் துணையும் உணர்த்தியது எனக் கொள்க. அக்குறை பாடுகளான் அன்றே அவ்வெழுத்துப் பதினொன்றற்கும் படர்க்கை வினையென இடம் வரையறுத்த தெனக் கொள்க. (19) அஃறிணை வினைமுற்றின் தொகை 220. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே. என் - எனின், மேல் விரித்தனவற்றை எல்லாம் தொகுத்து, இன்ன திணைக்குரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பன்மையும் ஒருமையும் ஆகிய பால்களை யறிய வந்த அவ் ஆறும் அஃறிணையுடையன எ-று. ஆறாவன, அகர ஆகார வகரங்களும், தகர றகர டகரங்களை யூர்ந்த குற்றியலுகரம் மூன்றும் எனக் கொள்க. ஒன்றென முடித்தலென்பதனான் இவ்வீறு பெயர்க்கும் ஈறாதல் கொள்க. (20) எவன் என்பது அஃறிணை இருபாற்கும் உரித்தாதல் 221. அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும் ஒக்கும் என்ப எவனென் வினாவே. என் - எனின், அஃறிணைத் தெரிநிலைவினை உணர்த்தி, அதன் வினைக்குறிப்புக் கூறுவார், இருபாற்கும் உரியதொரு குறிப்புணர்த்து கின்றாரென்பது. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட அஃறிணையிடத்து ஒருமை பன்மையாகிய இருபாற் பொருண்மைக்கும் மிகுதி குறைவின்றி யொக்கும் என்று சொல்லுவர் ஆசிரியர்; அஃது யாது எனில் எவனென்று சொல்லப்படும் வினாப்பொருண்மையுடைய சொல்லினை எ-று. (எ-டு.) எவன் அது, எவன் அவை. இதனை மேற் கூறுகின்ற வினைக்குறிப்பொடு கூறாதது என்னை யெனின், இஃது ஈறுதிரியாது இருபாற்கும் ஏற்பது ஒன்றாகலின் வேறு கூறினார் என்பது. தெரிநிலைவினை யீறுகளே குறிப்பிற்கும் ஈறாம் என்று மாட் டேற்றுதற் கேலாதால் எனின், அவ்வாறு ஏலாமையினன்றே இது வேறு கூறியது என்க. இதனோடு அஃறிணை ஈறு ஏழென்பது பெற்றாம். ஈண்டு னகரம் அஃறிணைப்பான்மேல் நின்றது, "னஃகானொற்றே ஆடூஉ வறிசொல்" என்றவழிப் படர்க்கை யிடத்து முற்றுச்சொற்கு ஈறாய் திரிபின்றி உணர்த்தும். அவ்வாறே திரிபின்றிப் பன்மை உணர்த்தும் என்ற ரகாரம் யாரென்னும் வினாவின்கண் ஒருமைக்கும் உரித்தாய் நின்ற தன்றோ? அவை ஆகின்றவாறறிந்தது. (21) அஃறிணை வினைக்குறிப்பு 222. இன்றில உடைய என்னும் கிளவியும் அன்றுடைத் தல்ல என்னும் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளஎன் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉம் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும். என் - எனின், அஃறிணை வினைக்குறிப்புணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இன்று, இல, உடைய என்னும் சொற்களும், அன்று உடைத்து அல்ல என்னும் சொற்களும், நிறப்பண்புப் பெயரினைத் தனக்கடியாகக் கொண்ட சொல்லும், உள என்னும் சொல்லும், நிறப் பண்பும் குணப்பண்பும் எனப்பட்ட இருவகைப் பண்புப் பெயரும் காரணமாக உளதாகிய அப்பண்படைந்த சினையொடு முதலை உணர்த் தும் சொல்லும், உவமப்பெயரைத் தனக்கு அடியாகக் கொண்டுவரும் சொல்லொடு தொக்க அக்கூற்றுப் பத்துச் சொல்லும் காலங் குறித்துக் கோடலொடு வரும் வினைச்சொல்லாகக் கொள்ளப்படும். எ-று. (எ-டு.) இன்று: - இவ்வெருது கோடின்று. இல:- இவ்வெருது கோடில. கோட்டினது இன்மை முதற்கு ஏற்றிக் கூறும்வழி இவ்வாறாம், இனி அக்கோடு தனக்கே இன்மை கூறும்வழி இவ்வெருதிற்குக் கோடின்று என ஒரு பொருள்முதற் கூறியானும், இவ்விடத்துக் கோடின்று என ஓரிடம் கூறியானும், இக்காலத்துக் கோடின்று என ஒரு காலம் கூறியானும் வரும். உடைய:- இவ்வெருதுகள் கோடுடைய. அன்று:- நாய் அன்று நரி. உடைத்து:- இவ்வெருது கோடுடைத்து. அல்ல:- உழுந்தல்ல பயறு. பண்புகொள் கிளவி:- செய்யது, செய்ய. இது பொதுவாக ஓதினா ராதலின் எல்லா நிறப்பண்பினோடும் ஒருமை பன்மைப்பட ஒட்டிக் கொள்க. உள:- உழுந்துளவெனக் குறிப்புணர்த்தியும் வரும். பண்பினாகிய சினைமுதற்கிளவி:- குறுங்கோட்டது, குறுங்கோட்டன; வெண்கோட்டது, வெண்கோட்டன என இருவகைப் பண்பும் பற்றி வரும். ஒப்பொடு வரூஉங் கிளவி:- பொன்னன்னது பொன்னன்ன என வரும். உடைமைப் பொருட்பெயர் முதலாய அறுவகைப் பெயரினும், உடைமைப் பொருட்பெயர் முதலியன, உடைத்து உடைய என்ற வாய்பாட்டான் கொள்ளப்பட்டன. அவ்வுடைமைதான் தற்கிழமையும் பிறிதின் கிழமையும் என்னும் இருவகையினும் வரும். இவ்வெருது இப்பொழுது மணியுடைத்து எனப் பிறிதின்கிழமை வந்தவாறு. இனி உண்டு உள என்றும், இன்று இல என்றும் ஒரு பொருள் தனது உண்மையும் இன்மையும் கூறும்வழி அன்றி, அப்பொருளினைப் பிறிதொரு பொருட்கண் உண்மையும் இன்மையுங் கூறியவழி அது உடைமையாய் விடுமாகலான் இவற்றானும் உடைமைப் பொருள் பற்றி வருதல் கூறப்பட்டதாம். பண்புப்பெயருள் நிறப்பண்பு பற்றி வருதல் 'பண்புகொள் கிளவியும்' என்றதனான் பெறப்பட்டது. இனிக் குணப்பண்புப்பெயர், அன்று அல்ல என்பவற்றானும், ஒரு பொருள் தனது உண்மையும் இன்மையும் உணர்த்திவரும் உண்டு உள இன்று இல என்பனவற்றானுங் கொள்ளப்பட்டது. உள என்று பன்மை வாய்பாடோதிய வதனான் அதன் ஒருமையாகிய உண்டு என்பதனையும் 'தன்னின முடித்தல்' என்பதனான் கொள்க. நன்று, தீது, சேய்த்து, அணித்து என்னும் பிற பண்புகளை 'இன்றில' என வேறோதியவாற்றானே 'ஒன்றென முடித்தல்' என்பதனான் கொள்க. இவற்றுள் உண்டு உள என்பவற்றிற்கும், உடைத்து உடைய என்பவற் றிற்கும், இன்று இல என்பனவற்றை எதிர்மறையாகக் கொள்க. இவைதம்மைச் சேரவைத்து ஓதாராகியது செய்யுள் நோக்கிப் போலும். ஒப்புமைப் பண்புப்பெயர் 'ஒப்பினானும்' என்பதனான் கொள்ளப் பட்டது. சினைப்பெயர் 'பண்பினாகிய சினைமுதற் பெயரும்' என்பதனான் கொள்ளப்பட்டது. இனியிவண் ஈண்டுக்கூறாதன இடப்பெயரும் காலப்பெயரும் தொழிற்பெயரும் என மூன்றுமே. அவற்றை உயர்திணை வினைக்குறிப்பு ஓதியவழி 'அன்னபிறவும்' (216) என்று வைத்து, அதன் பின்னர்ச் சூத்திரத் தும் 'அன்னமரபின்' (217) என்றோதினதான் கொள்ளப்படுமென்றுணர்க. வடாதுவேங்கடம், மூவாட்டையது, செலவிற்று எனவரும். இவற்றின் உதாரண வாய்பாட்டு விகற்பங்களும் அறிந்துகொள்க. இதன் பொருட்பெயர் முதல் அறுவகைப் பெயரினும் வரும் வரவினைத் தொகுத்தானும் விரித்தானும் ஓதாது, சிலவற்றை விரித்தும், சிலவற்றைத் தொகுத்தும், சிலவற்றைக் கூறாதும் 'அப்பாற்பத்தும் குறிப்பு' என்று விட்ட கருத்து என்னை எனின், இவை பெரும்பான்மை யன என்றவாறு. பிறிது காரணம் உண்டாயினும் அறிந்திலம். (22) அஃறிணை வினைக்குறிப்பிற்குரிய ஈறு 223. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. என் - எனின், மேற்கூறிய வினைக்குறிப்பிற்கு ஈறு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பன்மையும் ஒருமையுமான பால்களை அறிய வந்த அத்தன்மைத்தான மரபினையுடைய காலம் குறிப்பாய் வரும் வினைச் சொற்கள், அஃறிணையிடத்து மேற்கூறிய தெரிநிலைவினை ஈறுகளோடு ஈறு வேறுபாடில எ-று. மேற்கூறிய (சொல். 220) அறுவகை ஈற்றுள் டகரவுகரம் ஈண்டு மாட்டேற்றிற் கேலாமையின் ஆண்டே கூறப்பட்டது. அஃது ஒழிந்த ஐந்து ஈறும் மேல் எடுத்தோத்தானும் இலேசானும் வந்தவற்றிற்கு ஈறாயவாறு கண்டுகொள்க. உடைத்து எனவும், சிறிது எனவும், கருங்கோட்டது எனவும், குறுங்கோட்டது எனவும், பொன்னன்னது எனவும், வடாது எனவும், மூவாட்டையது எனவும், உண்டிலது எனவும் தகரவுகரம் வந்தது. செம்மற்று (கலி. 40) எனவும், அன்று எனவும், குறுங்கோட்டிற்று எனவும், மேற்று எனவும், வைகற்று எனவும், செலவிற்று எனவும் றகரவுகரம் வந்தது. பொருள எனவும், அல்ல எனவும், கரிய எனவும், கோட்ட எனவும், பொன்னன்ன எனவும், வடக்கண்ண எனவும், மூவாட்டையன எனவும், செலவின எனவும் அகரம் ஈறாய் வந்தது. இனி ஆகாரம்: இம்மணி நல்ல என்னும் உடம்பாட்டுக் குறிப்பிற்கு மறையாக இம்மணி பொல்லா என வந்தவாறு கண்டு கொள்க. "கதவவாற் றக்கதோ காழ்கொண்ட இளமுலை" (கலி.57) என்புழிக் கதவ என்பது கதத்தினையுடைய என்னும் பொருண்மைக்கண் வகரம் ஈறாய் வந்தவாறு கண்டுகொள்க. மேல் தெரிநிலைவினைக்கண் கூறிய டகரவுகரம் பூணை உடைத்து என்னும் பொருண்மைக்கண் பூட்டு எனவும், இடத்து என்னும் பொருண்மைக்கண் 'வகைதெரிவான் கட்டேயுலகு' (குறள். 27) எனவும், எந்நாளிடத்து என்னும் பொருண்மைக்கண் 'எந்நாட்டாகும் நும்போரே' எனவும், உண்மையை உடைத்து என்னும் பொருண்மைக்கண் உண்டு எனவும், விளையுளை யுடைத்து என்னும் பொருண்மைக்கண் 'வேலி யாயிரம் விளையுட்டு ஆக' (பொருந. 247) எனவும், குழிந்த கண்ணை யுடைத்து என்னும் பொருண்மைக்கண் 'குண்டுகட்டு' எனவும் பொருள் இடம் காலம் பண்பு தொழில் உறுப்பு என்னும் அறுவகைப் பெயரும் அடியாக வந்தவாறு கண்டுகொள்க. (23) விரவுவினையின் பெயரும் முறையும் தொகையும் 224. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யும் செய்த என்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் திரிபுவேறு படூஉம் செய்திய வாகி இருதிணைச் சொற்கும் ஓரன்ன உரிமைய. என் - எனின், மேல் நிறுத்த முறையானே விரவுவினை யுணர்த்து வான் தொடங்கி, அவற்றின் பெயரும் முறையும் தொகையும் உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) முன்னிலையிடத்தினைத் தனக்குப் பொருண்மையாக உணர்த்துஞ் சொல்லும், ஏவலைத் தனக்குப் பொருண்மையாகக் கொண்ட சொல்லும், வினைச்சொல்லை ஒழிபாகவுடைய சொல்லும், இன்மை என்னும் பண்பினை உணர்த்துதலுடைய சொல்லும், வேறு என்னும் சொல்லும், செய்ம்மன என்னும் சொல்லும், செய்யும் என்னும் சொல்லும், செய்த என்னும் சொல்லும் என்று சொல்லப்படுகின்ற அவ் வடைவின்கண் நின்ற அவ்வெட்டுச் சொல்லும் ஒருகால் உயர்திணைக் கண்ணும், ஒருகால் அஃறிணைக்கண்ணும் பொதுமையிற் றிரிந்து வேறு பட்டு நிற்கும் தொழிலினையுடைய வாகி இருதிணையாகிய பொருட்கும் ஒன்று போன்ற உரிமையுடைய எ-று. முன்னிலை யென்பது முன் உயர்திணைக்கண்ணும், அஃறிணைக் கண்ணும் தன்மையும் படர்க்கையும் கூறிய இடங்களுள் கூறாது நின்றது ஆகலானும், தான் பல ஈற்றான் பயின்று வருவதாகிய வழக்குப் பயிற்சி யுடைமையானும், முற்றுச்சொல்லாதலானும் முன் வைக்கப்பட்டது. இனி, அதன் பின்னர் வியங்கோள் முற்றுச் சொல்லுமாய்ப் பெரும் பான்மை வரவு படர்க்கை என ஓரிடமாய்ப் பலவழக்கிற்று ஆகலான் வைக்கப்பட்டது. இவை இரண்டும் அவற்றுப் பொருண்மையான் பல வீற்றை ஒன்றாக அடக்கப்பட்டன. அவற்றின் பின்னர் அவைபோல வழக்குப்பயிற்சி யுடைமையான் வினையெச்சம் வைக்கப்பட்டது. இஃது அச்சொல்லின் முடிபிலக்கணத்தான் ஒன்றாக அடக்கி ஓதப்பட்டது. இன்மை செப்பலும் வேறென் கிளவியும், முன்னிலையும் வியங்கோளும் போல, முற்றே யெனினும் வினையெல்லாம் போலாது சிறுவரவின ஆகலானும், வினைக்குறிப்பின் பன்மையானும் வினையெச்சத்தின் பின் வைக்கப்பட்டன. அவற்றின் பின்னர்ச் செய்ம்மன என்பது தெரிநிலை முற்றே எனினும் பலவாய்பாட்டதாயினும் வழங்குவா ரின்மையின் பின் வைக்கப்பட்டது. அதன் பின்னர் செய்யும் என்பது ஒருவழி முற்றாம் நிலைமையும் உடைத்தாகலின் அதன்பின் வைக்கப்பட்டது. அதன் பின்னர் அதனோடு ஒத்த பெயரெச்சம் ஆகலின் செய்த என்பது வைக்கப் பட்டது. இன்மை செப்பல் முதல் ஐந்தும் அச்சொற்கள் தம்மையே ஓதின எனினும், வேறு என்பதொன்றும் ஒழிய, மற்றையன எல்லாம் பல வாய்பாட்டன என்று கொள்க. அஃதென்னையாமாறு எனின், இல்லை என்னாது 'இன்மை செப்பல்' என்றதனான், இல்லை என்பதும் இல் என்பதும் என இரண் டாயிற்று. செய்ம்மன, செய்யும், செய்த என்பன உண்மன, தின்மன எனவும்; உண்ணும் தின்னும் எனவும், உண்ட தின்ற எனவும், பல வாய்பாட்ட வாயின. செய்ம்மன என்றால் உண்மன தின்மன பெறுமாறு என்னை எனின், அச்சொற்களின் பொருண்மையும் ஒருவழிச் செய்ம்மன என்பதனாற் சொல்லப்படுதலின், இஃது அவற்றிற்கெல்லாம் பொது வாய்பாட்டது என்பது. அஃதேல் அவ்வாறாவது பொருளுணர நின்றவழியன்றே? இஃது அச்சொல் தன்னை உணர நின்றவிடமால் எனின், அஃதொக்கும்; பொருண்மையான் பொதுமையுடைய சொல்லினைக் கூறவே அதனுள் வகையாகிய சொற்களும் "தன்னின முடித்தல்" என்னும் தந்திரவுத்தி யான் அடங்கும் என்பது போலும் கருத்து. (24) முன்னிலை ஒருமைக்குரிய ஈறுகள் 225. அவற்றுள், முன்னிலைக் கிளவி, இஐ ஆயென வரூஉம் மூன்றும் ஒப்பத் தோன்றும் ஒருவற்கும் ஒன்றற்கும். என் - எனின், மேல் நிறுத்தமுறையானே முன்னிலைவினை உணர்த்துவான், அவற்றுள் ஒருமையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இ, ஐ, ஆய் என்று சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும் உயர்திணை ஆண்பாலும் பெண்பாலுமாகிய ஒருமைப் பாற்கும் அஃறிணை ஒருமைப்பாற்கும் மிகுதி குறைவின்றி ஒப்பத் தோன்றும் எ-று. 'ஒன்று' என்றாரே எனினும் உயிருடைய ஒன்றன் மேலது பெரும் பான்மை என உணர்க. (எ-டு.) உண்டி என இகரவீறு எதிர்காலமே பற்றி வரும். உண்ணா நிற்றி எனச் சிறுபான்மை நிகழ்காலவரவு உண்டேனுங் கொள்க. இவ்வீற்று வினைக்குறிப்பு உண்டேனும் அறிக. ஐ - உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை, உண்பை, கரியை என வரும். ஆய் - உண்டாய் உண்ணாநின்றாய் உண்பாய் எனவும், கரியாய் செய்யாய் பொல்லாய் எனவும் வரும். உண்ணாதி எனவும், உண்டிலை உண்ணா நின்றிலை உண்ணலை எனவும், உண்டிலாய், உண்ணாநின்றிலாய், உண்ணலாய் எனவும் வரும் மறைவாய்பாடும் அறிக. (25) முன்னிலைப் பன்மைக்குரிய ஈறுகள் 226. இர்ஈர் மின்என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் சொல்லோ ரனைய என்மனார் புலவர். என் - எனின் முன்னிலைப் பன்மை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இர், ஈர், மின் என்று சொல்ல வருகிற மூன்று ஈற்றுச் சொல்லும் உயர்திணைக்கண் பல்லோரிடத்தும் அஃறிணைக்கண் பலவற்றினிடத்தும் சொல்லுதலை ஒரு தன்மையாக வுடைய என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) இர் - உண்டிர், உண்ணாநின்றிர், உண்பிர் எனவும், கரியிர் எனவும் வரும். ஈர்:- உண்டீர், உண்ணாநின்றீர், உண்பீர் எனவும், கரியீர் எனவும் வரும். மின்:- உண்மின் தின்மின் என எதிர்காலமே பற்றி வரும். உண்ணா நின்மின் என நிகழ்காலவரவு உண்டேனும் கொள்க. இவ்வீறு ஏவற்கண்ணே வருவது எனக் கொள்க. உண்டிலிர், உண்ணாநின்றிலிர், உண்ணலீர் எனவும்; உண்டிலீர், உண்ணாநின்றிலீர், உண்ணீர் எனவும்; உண்ணன்மின் எனவும் வரும் மறையும் அறிக. மேலைச் சூத்திரத்து எதிர்காலமொன்றினும் வரும் இகரம் முற்கூறினமையான் ஒழிந்த முன்னிலையீறும் கொள்ளப்படும். அவையாவன:- மொழிக்கீறாம் எனப்பட்ட இருபத்து நான்கீற் றுள்ளும் எடுத்தோதியவையொழித்து ஒழிந்தன எனக்கொள்க. (எ-டு.) நட, வா, விரி, ஈ, கொடு, கூ, மே, கை, நொ, போ, வௌ என இவை உயிரீற்றுள் எடுத்தோதாதன. இவை முன்னிலை ஏவ லொருமை. எடுத்தோதின இகர ஐகார வீற்றுள்ளும் அறியெனவும் உரை யெனவும் ஏவற்கண் வருவனவும் அறிந்துகொள்க. உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், தெவ், தாழ், கொள் என இவை புள்ளியீறு பதினொன்றும் வந்தவாறு. ஊட்டு என்பது குற்றியலுகரவீறு. இதுவும் ஏவலொருமை. ஆய் எனவும், இர், ஈர் எனவும், மின் எனவும் ஓதினமையின் யகர னகரங்களில் ஐகாரங்கொள்ளவெண் ... ... ... னின் அவை அவ் வெழுத்தீறன்றிச் சொல்வாய்பாடாய் வேறு வருதலின் இவை வேறாகக் கொள்ளப்பட்டன எனக் கொள்க. உண்ணும், தின்னும் எனப் பன்மைக்கண் உம்மீறு மகரவீற்றின் வேறுபாடாகக் கொள்க. லகரவீறு மறைக்கண் உண்ணல் என வரும். அல்லீறும், ஆலீறும் அழேல் என வரும் ஏலீறுங் கொள்க. ணகரவீற்றுள் உண்டுகாண், சொல்லிக்காண், வருங்காண் என்னும் காணீறும் கொள்க. உண்டுபார் என்பதோ எனின், அஃது ஒரு சொல்லாதலன்றி அத் தொழிலைச் செய்து அதன் விளைவை மேற்பார் என்னும் ஒருமை தோன்ற நிற்றலின் வேறு சொல் என்க. உண்டுகாண் என்பதும், இவ்வாற்றான் வேறன்றோ எனின், அது சொல்லுவான் கருத்தன்று என்க. அவன் வருவன்காண் என்பதோ எனின், ஆண்டு காண்டற்றொழில் கருத்தன்மையின், அசைநிலையாதல் தத்தம் குறிப்பானே வேறொரு பொருள் உடைத்தாதல் கொள்க. உண்கிடு உண்கிடாய் என்பனவோ எனின் அவை சான்றோர் செய்யுட்கண் இன்மையிற் "கடிசொல் இல்லை காலத்துப் படினே" (சொல். 442) என்பதனாற் கொள்ளப்படும். அது முன்னிலையாயவாறு என்னை எனின், இவற்றுள் உண்கிடு நீ எனப் பிற முன்னிலை போல் முற்றாய் முன்னிலைப் பெயர் கொள்வதன்றி, அவனுண்கிடு என்றானும், யான் உண்கிடு என்றானும் பிற பெயர் வந்த பிற தொழிலினை நீ உடம்படு என்று முன்னிலை நீர்மை தோன்ற நிற்றலின் முன்னிலை யாயிற்றுப் போலும். இவற்றுள் உண்கிட என்பதொருவழி நீயுண்கிடா என முன்னிலைப் பெயர் கொண்டு நிற்றலும் உண்டு. இனி உண்ணுங்கோள் என்பதோ எனின், அது உண்ணுங்கள் எனக் கள்ளொடு, உண்ணும் என்பது அசைநிலையடுத்து உம் ஈறு மரீஇயவா றெனக் கொள்க. முன்னிலை ஈற்றுவகையெல்லாம் தொகுத்து நோக்க எழுத்து வகையான் இருபத்து நான்கீறும், சொல்வகையான் யகரவீற்றுள் ஆய் என்பதும், ரகரவீற்றுள் இர் ஈர் என்பனவும், னகரவீற்று மின் என்பதும், ணகரவீற்றுக் காண் என்பதும், மகரவீற்று உம் என்பதும், லகரவீற்றுள் அல், ஆல், ஏல் என்பனவும் ஆக முப்பத்து மூன்றாயின. பிறவாறு உளவேனும் அறிக. (26) முன்னிலை ஒழிந்த வினைகள் 227. எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே. என் - எனின், விரவுவினை யெட்டனுள்ளும் முன்னிலைவினை யொழித்து ஒழிந்தனவற்றிற்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முன்னிலையொழித்து எஞ்சிய சொற்கள் ஏழும் மூன்றிடத் தும் பொருந்தி ஐந்துபாற்கும் உரியவாம், அவை தோன்றும் நெறிக்கண் எ-று. அவ்வேழனுள்ளும் மேற் சிறப்பு விதியுடைய வியங்கோளும், வினையெச்சமும், செய்யும், செய்த என்பனவும் ஒழித்து, ஒழிந்தன இன்மை செப்பலும் வேறென் கிளவியும் செய்ம்மனவும் என்னும் மூன்றற்கும் ஈண்டு உதாரணம் காட்டுதும். (எ-டு.) யானில்லை, யானும் நீயுமில்லை, யானுமவனு மில்லை, யானு நீயுமவனுமில்லை, யாம் இல்லை, நாமில்லை, நீயில்லை, நீயிரில்லை, அவனில்லை, அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவையில்லை என இன்மை செப்பல் வந்தவாறு. யான்வேறு, யானும் நீயும் வேறு, யானுமவனும்வேறு, யானும் நீயுமவனும் வேறு, யாம்வேறு, நாம்வேறு, நீவேறு, நீயிர்வேறு, அவன் வேறு, அவள்வேறு, அவர்வேறு, அதுவேறு, அவைவேறு என வேறென் கிளவி வந்தவாறு. யான் செய்ம்மன, யானும் நீயும் செய்ம்மன, யானுமவனுஞ் செய்ம்மன, யானும் நீயு மவனுஞ் செய்ம்மன, யாம் செய்ம்மன, நாம்செய்ம்மன, நீ செய்ம்மன நீயிர் செய்ம்மன, அவன் செய்ம்மன, அவள் செய்ம்மன, அவர் செய்ம்மன, அது செய்ம்மன, அவை செய்ம்மன, எனச் செய்ம்மன வந்தவாறு. செய்ம்மன என அகரவீற்றதே எனினும், யான் செய்ம்மன என்புழி யான் செய்வேன் என்றும், நீ செய்ம்மன என்புழி நீ செய்வை என்றும், அவன் செய்ம்மன என்புழி அவன் செய்வன் என்றும் முற்றுச்சொல் நீர்மைத்தாய்ப் பால் காட்டும் என்பது. இஃது இக் காலத்து இறந்த வழக்கிற்று. இடத்தொடு என வாளா ஓதினமையின் மூன்று இடமும் கொள்ளப் பட்டது. (27) வியங்கோள்வினை முன்னிலை தன்மைகளில் வாராது எனல் 228. அவற்றுள், முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி. என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ-ள்.) முன்னிலை தன்மை என்று சொல்லப்பட்ட அவ் விரண்டிடத்தொடு நிலைபெறாதாகும், ஏவற்பொருண்மையை உணர்த்துஞ்சொல் எ-று. (எ-டு.) அவன் செல்க, அவள் செல்க, அவர் செல்க, அது செல்க, அவை செல்க என வரும். தன்மை முன்னிலை என்னாது முன்னிலை தன்மை என்றதனாற் சிறுபான்மை முன்னிலைத் தன்மைக்கண்ணும் வருமெனக் கொள்க. (எ-டு.) "கடாவுக பாக நின் கால்வல் நெடுந்தேர்", யான் செல்க காட்டிற்கு என வரும். மற்று, இவ்வியங்கோள் ஏவல் கண்ணியதும் ஏவல் கண்ணாததும் என இருவகைத்து. ஏவல்கண்ணியதாவது உயர்ந்தான் இழிந்தானை இன்னது செய்க என விதித்தல். ஏவல் கண்ணாததாவது இழிந்தான் உயர்ந்தானை இன்னது செய்யப்பெற வேண்டிக்கோடல். மற்று அது பெரும்பான்மையும் "உணர்க" என்றாற்போலக் ககரங்கிடைத்து வருமே எனினும், வாழியர் என அர் ஈறாயும், வாழிய என யகரவீறாயும் "இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்" (சொல்.19) என அல் ஈறாயும், "மறைக்குங் காலை மரீஇய தொரால்" (சொல். 443) என ஆல் ஈறாயும், "காணன்மார் எமர்" (நற். 64) என மாரீறாயும், 'அஞ்சாமை யஞ்சுவதொன்றின்' என மகர ஐகார வீறாயும் வரும். இவற்றுள் அஞ்சாமை என்பது தொழிற்பெயர் மறையன்றோ எனின், தொழிற்பெயர் மறையும் உண்டெனினும், அஞ்சுவென்னும் தொழிற்பெயர் வாய்பாடும் ஒருவழி வியங்கோளா மாகலின் மறையும் அந்நிகர்த்ததாம் என்பது. மற்று உண்ணற்க, உண்ணேற்க, உண்ணாற்க என்பவோ எனின் அவை அப்பதத்திடை வேறுபாடல்லது முன்கூறிய ககரவீற்றவாகல் ஒக்கும். (28) செய்யும் என்னும் சொல் நிகழாத மூன்று இடம் 229. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச் செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா. என் - எனின், இதற்கும் அக்கருத்தொக்கும். (இ-ள்.) பலரது படர்க்கையும் முன்னிலையும் தன்மையும் ஆகிய அவ்வயின் என்று சொல்லப்பட்ட மூன்றும் நிகழ்காலத்தைத் தமக்குக் காலமாக உடைய செய்யும் என்னும் சொல்லொடு வருவனவாகக் கொள்ளப்படா என்றவாறு. எனவே படர்க்கையிற் பல்லோர் படர்க்கை ஒழித்து ஒழிந்த நான்கு படர்க்கைக்கண்ணும் வரும் என்பதாம் எ-று. (எ-டு.) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும் என வரும். அஃதேல், "ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்" (குறள். 653) எனவும், "என் குறை நீயே சொல்ல வேண்டுமா லலவ" (அகம். 170) எனவும், "யான் போகல் வேண்டும்" எனவும் ஒழிந்த இடத்தும் வந்ததால் எனின், வாராது; அவற்றிற் கெல்லாம் சொன்னிலை வேறாகப் பொருள் உரைக்கப்படும் என்பது. நிகழும் காலம் என்றது என்னை? அவன் உண்ணும் என எதிர்காலத்தும் வருமால் எனின், அது கால மயக்கம் எனக் கொள்க. நிகழ்கால வரவு இக்காலத்து இல்லையால் எனின், உண்டு. 'அவன் என் செய்யும்?' என்றார்க்கு 'அவன் இப்பொழுது ஓதும்' என்றாற் போல்வன நிகழ்காலத்தது எனக் கொள்க. செய்யும் என்னும் சொல்தான் முற்றும் எச்சமும் என இருவகைத்து. அவற்றுள் முற்று விலக்கியது ஈண்டை விலக்கு எனக் கொள்க. இதனொடு முன்கூறிய முற்று ஈறெல்லாம் தொகுத்து நோக்க, உயர்திணை ஈறு இருபத்து நான்கும், அஃறிணை ஈறு ஏழும். இனி விரவு, வினையெச்சமும் பெயரெச்சமும் முற்றும் என மூவகைத்து. அவற்றுள் மூன்று ஈறாகிய முன்னிலையும், வியங்கோளும், இன்மை செப்பலும், வேறென் கிளவியும், செய்ம்மனவும் ஆகிய ஐந்தனுள்ளும் முன்னிலை ஈறு முப்பத்து மூன்றும், வியங்கோள் ஈறு ஏழும், இன்மை செப்பல் ஈறு இரண்டும், வேறு என் கிளவியது ஈறு ஒன்றும், செய்ம்மன என்பதன் ஈறு ஒன்றும் ஆக நாற்பத்து நாலாம்; பிறவுமாம். மேலும் அறிக. (29) வினையெச்ச வாய்பாடுகள் 230. செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி. என் - எனின், இதுவும் மேல் 'எஞ்சியகிளவி' என்று ஓதிய பொது விதியுட்பட்ட வினையெச்சம் என்பதற்கு வாய்பாட்டு வேற்றுமையும் முடிபு வேற்றுமையும் கூறுவான் தொடங்கி, அவ்வினையெச்சங்களுள் சிறப்புடைய வாய்பாடுகளைத் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்து என்பது முதலாகச் செயற்கு என்பது ஈறாக ஓதப்பட்ட அக்கூற்று ஒன்பது வாய்பாட்டதாம், முன் வினையெஞ்சு கிளவி என்றோதப்பட்டது எ-று. அவற்றுள் செய்தென்பது முதலாகச் செய்தென என்பதீறாக அந்நான்கும் இறந்தகாலத்தவாகலான் முன்னே உடன் வைக்கப்பட்டன. அவற்றுள் செய்தென்பது பெருவழக்கிற் றாகலின் அவற்றுள்ளும் முன் வைக்கப்பட்டது. அவற்றுள் செய்தென என்பது அவற்றிற்கு எல்லாம் சிறு வழக்கிற்று ஆதலானும், பிறவினையும் கோடலானும் பின்வைக்கப் பட்டது. இனிச் செய்யியர் என்பது முதலாகச் செயற்கு என்பது ஈறாக ஐந்தும் எதிர் காலத்தவாகலானும், பிறவினையுங் கோடலுண்மையானும், பிறவினை கோடலுமுடைய செய்தென வினையின் பின்னர் உடன் வைக்கப்பட்டன. அவ்வைந்தும் எதிர்காலத்தவேனும் செய்யியர் செய்யிய என்னும் இரண்டும் வாய்பாட்டு வேற்றுமையல்லது பொருள் வேற் றுமையின்மையின் உடன் வைக்கப்பட்டன. செயின் என்பது வாய்பாட்டு வேற்றுமையொடு பொருள் வேற்றுமையும் உடைமையின் அவற்றின் பின்னர் வைக்கப்பட்டது. செய என்பது எதிர்காலத்ததே யன்றிப் பிற காலத்துஞ் சிறுபான்மை வருதலான் அதன்பின் வைக்கப்பட்டது. செயற்கு என்பது அவைபோல வழக்குப்பயிற்சி யின்மையின் எல்லாவற்றினும் பின் வைக்கப்பட்டது. இதன் முன் செய்தென்றோதிய வாய்பாடு, குற்றியலுகரத்தான் ஆராயப்பட்ட கடதற என்னும் நான்கீறும், இகரவீறும், யகரவீறும் என அறுவகைப்பட்டது. அவ்வறுவகையுஞ் செய்தெனப் பொருண்மையான் ஒன்றாக வைக்கப்பட்டன. அஃதேல் செய்யூ, செய்பு, செய்தென என்பனவும் இதனுள் அடங்காவோ எனின், அவ்வாறு அடங்குமேனும் இவற்றிற்கு வேறுபாடு உண்டென்று அறிவித்தற்கு வேறோதினார் என்பது. யாதோ வேற்றுமை எனின், செய்தென்றதன் ஈறு செய்தல் என்னும் தொழிற்கண்ணே செய்து எனத் தகரவுகர வீறாயும், உண்டல் என்னுந் தொழிற்கண்ணே உண்டு என டகரவுகரவீறாயும், தின்றல் என்னும் தொழிற்கண்ணே தின்று என றகரவுகரவீறாயும், புகுதல் என்னுந் தொழிற்கண்ணே புக்கு எனக் ககரவுகர வீறாயும், ஓடல் என்னுந் தொழிற்கண்ணே ஓடி என இகரவீறாயும், தூவுதல் என்னும் தொழிற்கண்ணே தூய் என யகரவீறாயும் ஒரு தொழிற்கண்ணே வேறுபட வந்தவாறு. ஒரு தொழிற்கண்ணே வேறுபட வாராமையுடைய அத்தொழில் எல்லாவற்றிலும் உழூஉ எனவும், உழுபு எனவும், உழுதென எனவும்; உண்ணூஉ எனவும், உண்குபு எனவும், உண்டென எனவும்; தின்னூஉ எனவும்; தின்குபு எனவும்; தின்றென எனவும்; புகூஉ, புகுபு, புக்கென எனவும்; ஓடூஉ, ஓடுபு, ஓடென எனவும்; தூஉ, தூபு, தூய் எனவும் வேறுபடாது வருதலுடைமையின் வேறு கூறினார் என்பது. செய்யூ என்பதற்குச் செய்யா என்பதூஉம் ஓர் வாய்பாடு. அதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்ளப்படும். இதனை இறந்தகால விரைவுப்பொருட்டு என்பாரும் உளர். செய்து என்பதற்குச் செய்யாநின்று என்பதூஉம் ஓர் நிகழ்கால வாய்பாடு. அதுவும் ஒன்றென முடித்தல் என்பதனான் கொள்ளப்படும். இனிச் செய்யியர் என்பது மழை பெய்யியர் எழுந்தது என்பது. செய்யிய என்பது மழை பெய்யிய எழுந்தது என்பது. செயின் என்பது மழைபெய்யிற் குளம் நிறையும் என்பது. இது நிகழின் அது நிகழும் என்னுங் காரணப்பொருள் பற்றி வரும். இதற்கு மழை பெய்தாற் குளம் நிறையும் என ஆல் என்பதும் ஓர் வாய்பாடு. அதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க. 'நனவிற் புணர்ச்சி நடக்கலும்' (கலி. 39:35) என உம் ஈறாதலும் கொள்க. இதுவும் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க. மழை பெய்தக்கால் என்பதோ எனின், அது பின்னோதுகின்ற கால் என்னும் வாய்பாடெனக் கொள்க. மழை பெய்யுமேலும் மழை பெய்யுமேனும் என வரும் ஏல் ஏன் என்பனவோ எனின் அவற்றையும் இதன் குறிப்பென்று கோடலும் ஒன்று. அன்றியும் இவ்வெச்சப் பொருள்படுவன சில இடைச்சொல்லென்று கோடலும் ஒன்று. 'ஒன்றானும் தீச்சொல்' (குறள். 258) என்புழி ஆனோ எனின், அதுவும் அப்பால் ஓரிடைச் சொல் என்றலும் ஒன்று. ஆயினும் என்னுஞ் சொல் ஆனும் என இடைக்குறைந்து நின்றது என்றலும் ஒன்று. 'நுணங்கிய கேள்வியரல்லால்' (குறள். 419) என்புழி அல்லால் என்பதோ எனின், அன்றி என்னுஞ் செய்தெனெச்சக் குறிப்பிற்கு அதுவுமொரு வாய்பாடு என்பது. அல்லராயினென்பது பொருளாக்கி இதன் குறிப்பு என்பாரும் உளர். இனிச் செய என்பது மழை பெய எழுந்தது என்பது. மழை பெய்யக் குளம் நிறைந்தது என இறந்தகாலத்துக்கண்ணும் வரும். மழை பெய்யக் குளம்நிறையும் என நிகழ்காலத்துஞ் சிறுபான்மை வரும். இவ்வெச்சந்தான் ஒருவழி மழை பெயக் குளம் நிறைந்தது எனக் காரணப்பொருளாயும், குளம் நிறைய மழை பெய்ததெனக் காரியப் பொருளாயும், மழைபெய எழுந்ததென அதற்பொருட்டென்னும் பொருட்டாயும், மழை பெய்யச் சாத்தன் வந்தான் என உடனிகழ்ச்சியாய் நிகழ்ந்ததற்கண் இடப்பொருட்டாயும் பிறவாறாயும் வரும் என்பது. இனி, 'துன்னிப் பெரிய வோதினுஞ் சிறிய வுணரா' (புறம். 375) என்புழிப் பெரிய சிறிய என்பன, பெருமை சிறுமைப் பண்படியாக வந்தமையின் இவ்வெச்சத்தின் குறிப்பு என்றலும் ஒன்று. இவ்வெச்சப் பொருள் உரிச்சொல் என்றலும் ஒன்று. இனிச் செவ்வன் தெரிகிற்பான் எனவும், 'புதுவதி னியன்ற அணியன்' (அகம். 66) எனவும், புதுவது புனைந்த வெண்கை யாப்பு (மலை. 28) எனவும், 'பொய்கைப்பூப் புதிதீன' (கலி. 31) எனவும், 'பெருங்கையற்ற வென்புலம்பு' (புறம். 210) எனவும், சிறுநனி நீ துஞ்சியேற்பினும் (கலி.12) எனவும், ஒல்லைக் கொண்டான் எனவும், பிறவும் அகரவீறன்றிப் பிறவீறாய் வருவனவும் அவ்வாறே உரைக்கப் படும். இனிச் செயற்கு என்பது உணற்கு வந்தான் என்பது. இஃது அதற் பொருட்டென்னும் பொருள்பற்றி வரும். இது உணல் என்னும் தொழிற் பெயர் நான்காம் உருபு ஏற்றவாறன்றோ எனின், அதுவுமொரு வழக் குண்டு. பெயர்ப்பொருண்மை நோக்கியவழி அதுவாகவும், காலம் நோக்கியவழி வினையெச்சமாகவும் கொள்க. எற்றுக்கு என்பது இதன் குறிப்பு வாய்பாடாகக் கொள்க. (30) இதுவுமது 231. பின்முன் கால்கடை வழியிடத் தென்னும் அன்ன மரபிற் காலங் கண்ணிய என்ன கிளவியும் அவற்றியல் பினவே. என் - எனின், இதுவும் ஒரு வினையெச்சமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பின் என்பது முதலாக இடத்தென்பதீறாக ஓதப்பட்ட அத்தன்மைத்தான வாய்பாட்டு முறைமையினையுடைய காலத்தைக் குறித்த எல்லாச் சொல்லும் மேற் சொல்லிய ஒன்பதும் போல வினை யெச்சத்துக்கு வாய்பாடாம் இயல்பினையுடைய எ-று. (எ-டு.) பின்: "இளமையுந் தருவதோ இறந்த பின்னே" (கலி.15) என வரும். முன்: "வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை" (குறள். 435) எனவரும். பின் என்பது பின்னரென்றும், பின்னை என்றும் வரும். முன் என்பது முன்னரென்றும் முன்னை என்றும் வரும். இனிப் பின் என்பதும் முன் என்பதும் ஒரு வினையிடத்து வாராது பிற்கொண்டான், முற்கொண்டான் எனத் தாமேயும் வரும். கால்: "வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால்" (கலி.35) எனவரும். கடை: "தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை" (கலி.22) எனவரும். வழி: "படுசுடர் மாலையொடு பைதனோ யுழப்பாளைக் குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை விடுவழி விடுவழிச் சென்றாங்கவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே" (கலி.130) எனவரும். இடத்து: "களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து" (குறள். 879.) எனவரும். இவை காலம் விளக்கி நில்லாத குறிப்பாதலிற்போலுங் 'காலங் கண்ணிய' என்றது. இவையிற் குறிப்பு ஓரோர் காலங்களைக் குறித்துக் கொள்ள நிற்கும் என்பது. விடுத்தக்கால் என்பது விடுத்து என இறந்தகாலக் குறிப்பாயிற்று. "வாரி வளங்குன்றிக்கால்" (குறள். 14) என்பது குன்றின் என எதிர்காலக் குறிப்பாயிற்று. முன் செய்து, செய்யூ என்ற வாய்பாடு தம்மையே ஓதினவாறு போலன்றி ஈண்டு அன், ஆள், அர், ஆர் என்றாற்போல அவற்றை ஈறு பற்றி ஓதினார் எனக் கொள்க. மற்று இக்காட்டிய உதாரணங்களெல்லாம் பெயரெச்சமும் பெயருமாகற்பால எனின், அவற்றின் பொருள் நோக்குஞ் சொல்நிலையுஞ் சந்திநிலைமையும் அன்ன வன்மையின் இவ்வாறு வருவனவற்றை வினையெச்சமென்கின்றார் போலும். ஆயினும் இவை செய்த செய்யா நின்ற செய்யும் என்னும் பெயரெச்சங்களும் இவற்றின் மறைகளும் போலும்வாய்பாடுகளை யடைந்தல்லது வாராவென்பது. 'என்ன கிளவியும்' என்றதனால் பான், பாக்கு, வான், வாக்கு எனவும் பிறவாறும் வருவன கொள்க. (எ-டு.) உண்பான் வந்தான், உண்பாக்கு வந்தான், கொள்வான் வந்தான், கொள்வாக்கு வந்தான் எனவரும்; பிறவுமன்ன. ஆக வினையெச்சவாய்பாடு எடுத்தோத்து வகையான் பதினைந் தும், தந்திரவுத்தி வகையானும் இலேசானும் நோக்கப் பலவகையாயும் முடிந்தது. இலேசு என்பது எடுத்தோத்து இல்வழி, மிகைக்கூற்று முதலியவற்றான் ஆய்ந்து கூறல். அது குறிப்பான் வெளிப்படுப்பது. (31) வினைமுதல் வினை கொண்டு முடியும் வினையெச்சங்கள் 232. அவற்றுள், முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின. என் - எனின், அக்கூறப்பட்ட எச்சங்களுள் முதற்கணின்ற மூன்றற்கும் முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறப்பட்ட வினையெச்ச வாய்பாடுகளுள் முதற்கண் எடுத்தோதப்பட்ட செய்து, செய்யூ, செய்பு என்னும் மூன்றும் அவ்வெச்சவினையை நிகழ்த்தின கருத்தாவினது வினையை யுணர்த்துஞ் சொல்லினையே பின்பு முடிபாகக் கொண்டு முடியும் எ-று. (எ-டு.) உண்டுவந்தான், உண்ணூஉ வந்தான், உண்குபு வந்தான் என வரும். செய்தெனெச்சத்தின் குறிப்பாகிய இன்றி, அன்றி யென்பனவும் 'தம்மின் றமையா நந்நயந் தருளி' (நற்.1) எனவும், 'தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலின்' (கலி. 19) எனவும் வினைமுதல் வினையாய் முடிந்தவாறு கண்டுகொள்க. (32) அம்மூன்றும் முதல்வினை கொண்டு முடிதல் 233. அம்முக் கிளவியும் சினைவினை தோன்றின் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய என்மனார் புலவர். என் - எனின், இதுவும் அம்மூன்றன் திறத்துப்படுவதொரு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அம் மூன்று சொல்லும் சினைப்பொருளிடத்து வினை யெச்சமாய்த் தோன்றின் முன் கூறின விதிக்கேற்பச் சினை வினையான் முடியாது அச்சினையையுடைய முதல்வினையோடு ஒன்றாய் முடியினும், பிறவாற்றான் முடியினும் முன் கூறிய வினையோடு ஒன்றாதற்றன்மையை உடைய என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) கையிற்று வீழ்ந்தான், கையிறூஉ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் எனவரும். மற்றிது கையிற வீழ்ந்தான் எனச் செயவென்னெச்சத் திரிபாகற் பாற்றெனின், அவ்வாறாவது இறுதற்றொழில் கையதும் வீழ்தற்றொழில் முதலதுமாயின் அன்றே? இறுதலும், வீழ்தலும் கையதாகக் கூறுகின்ற தாயின் அதனுள் அடங்காது என்பது. அதன் பொருள் கையிற்று வீழ்ந்த வாறாகக் கொள்க. காலழுகி வீழ்ந்தான் என்பதும் அது. கையிற்றான், காலழுகினான் என்பன ஈண்டைக்கு உதாரணமாமோ எனின் அவை வினையெச்சமன்மையிற் "கண்ணுந் தோளும் முலையும் பிறவும்" (சொல். 62) என்று ஆண்டைக்கே உதாரணமாமெனக் கொள்க. மற்று, கையிற்று வீழ்ந்தான், காலழுகி வீழ்ந்தான் என்பனவும் ஆண்டைத் திணை வழுவமைதிக்கு உதாரணமாதலின் ஈண்டைக் கூறவேண்டா எனின்; திணைவழுவுக்கு அன்று ஈண்டுக் கூறுகின்றது; அதற்கு விதி கண்ணுந்தோளும் (சொல். 62) என்பதே. ஈண்டு மேல் தன்வினையான் முடியும் என்று கூறியன ஒருவழித் தன்னொடு தொடர்ந்த பிறவினை யானும் முடியும் என்பதாயிற்று. "சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய" என்பதனான் இதுவுமொருமரபு வழுவமைதி எனக் கொள்க. குரங்கு கையிற்று வீழ்ந்ததென இம்முடிபு அஃறிணை வினைக்குங் கொள்க. ஈண்டுச் சினைவினை முதல்வினையொடு முடியும் என்பதே சொல்லியதெனின், சாத்தனது கையிற்று வீழ்ந்தது என வினைமுடிபுள்ள வழியும் சாத்தனது கையிற்று வீழ்ந்தான் எனவுமாம் பிறவெனின், ஆகாது. அம்முதல் தானும் எழுவாயாகியவழியது இம்முடிபெனக் கொள்க. (33) ஒழிந்த வினையெச்சங்கள் இருவினையும் கொண்டு முடியும் என்பது 234. ஏனை எச்சம் வினைமுத லானும் ஆன்வந் தியையும் வினைநிலை யானும் தாமியல் மருங்கின் முடியும் என்ப. என் - எனின், ஒழிந்த எச்சங்கட்கு முடிபு கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) முதனிலை மூன்றும் ஒழித்து, ஒழிந்த வினையெச்சங்க ளெல்லாம் அவ்வினைமுதல் வினையானும் அவ்விடத்து வந்து பொருந்தும் பிற வினைமுதல் வினையானும் தாம் நடக்குமிடத்து முடிபு பெறும் என்று சொல்லுவர் ஆசிரியர் எ-று. (எ-டு.) மழைபெய்தென வளம்பெற்றது, மழை பெய்தென உலகமார்ந்தது. மழைபெய்யிய எழுந்தது, மழைபெய்யிய மாதவர் அருளினார். மழை பெய்யியர் எழுந்தது, மழை பெய்யியர் மாதவர் அருளினார். மழைபெய்யின் அறம் பெருகும், மழைபெய்யின் குளம் நிறையும். மழைபெய்ய எழுந்தது, மழைபெய்யக் குளம் நிறைந்தது. மழைபெயற்கு எழுந்தது, மழைபெயற்கு மாதவர் அருளினார். சாத்தன் தான் உண்டபின் வந்தான், சாத்தன் உண்டபின் கொற்றன் வந்தான். சாத்தன் தான் உண்ணாமுன் வந்தான், சாத்தன் உண்ணாமுன் கொற்றன் வந்தான். சாத்தன் தான் உண்டக்கால் வரும், சாத்தன் உண்டக்கால் கொற்றன் வரும். சாத்தன் தான் உண்டக்கடை வரும், சாத்தன் உண்டக்கடை வரும் கொற்றன். சாத்தன் தான் உண்டவழி வரும், சாத்தன் உண்டவழிக் கொற்றன் வரும். சாத்தன் தான் உண்டவிடத்து வரும், சாத்தன் தான் உண்டவிடத்துக் கொற்றன் வரும். என இருவழியும் ஒட்டுக. எடுத்தோதாத பிற வாய்பாட்டிற்கும் உண்பான் வந்தான், சாத்தன் உண்பான். கொற்றன் வந்தான் என்றாற்போல ஒட்டுக. இவ்வெச்சங்களுள் குறிப்புள்ளவற்றிற்கும் இவ்வாறு கொள்க. (34) வினையெச்சங்கள் அடுக்கியபோது முடியுமாறு 235. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியா தடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே. என் - எனின், இவ்வெச்சங்களுள் எடுத்தடுக்கியவழிப் படுவதொரு முறைமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பலவாற்றானும் வினையெச்சமாகிய சொற்கள் ஒரு சொல்லொடு ஒரு சொல்லாய் முறை முடியாதே பலவாயடுக்கி வரினும், முன்னின்ற எச்சம் முடியவே அல்லாதனவும் பொருள் முடிந்தனவாம் எ-று. (எ-டு.) உழுது உண்டு தின்று ஓடிப் பாடி வந்தான் எனவரும். உண்ணூஉ தின்னூஉ ஓடூஉப் பாடூஉ வந்தான் எனப் பிற எச்சங்களும் அடுக்கி வருவன கொள்க. 'பன்முறையானும்' என்றதனான் ஓரினத்து எச்சமே அன்றி, பலவினத்து எச்சங்களும் மயங்கி அடுக்குதலும் கொள்க. (எ-டு.) உழுதுகிழுதுண்பான், ஓடூஉ பாடூஉ வந்தான் என்பன. இனிச் சொன்முறை முடியாது அடுக்கிவரினும் என்று சொற்கண் முறை முடித்தடுக்கலும் உண்டு என்பது போதரக் கூறிய அதனான் சொற்கண் முறை முடித்தடுக்கி வரினும் முன்னது முடியவே முடியும்; முடியாக்கால் முடிந்தனவும் முடிந்திலவாம் என்பது கொள்க. (எ-டு.) உழுது வந்தான் கிழுதுவந்தான், ஓடி வந்தான் பாடி வந்தான் என நின்றவழி முடியாதவாறு அறிந்து கொள்க. ஒன்றென முடித்தல் என்பதனான் பெயரெச்சம் அடுக்கியவழியும் முன்னது முடிய முடியும் என்பது கொள்க. (எ-டு.) "நெல்லரியும் இருந்தொழுவர்" (புறம். 24) என்னும் புறப்பாட்டினுள் பாயுந்து எனவும், தூங்குந்து எனவும், தரூஉந்து எனவும், பாயும் எனவும், கெழீஇய எனவும், அடுக்கிநின்ற பெயரெச்சம் எல்லாம் 'மிழலை' என்னும் பெயர்கொண்டு முடிந்தவாம் என்று உணர்க. (35) பெயரெச்சம் 236. நிலனும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய செய்யும் செய்த என்னும் சொல்லே. என் - எனின், எஞ்சிய கிளவி என்று எடுத்தவற்றுள் வினையெச்சம் உணர்த்திப் பெயரெச்சமாகிய செய்யும் செய்த என்பனவற்றிற்கு முடிபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நிலப்பொருட்பெயரும், செயப்படுபொருட் பெயரும், காலப்பொருட் பெயரும், கருவிப்பொருட் பெயரும், வினைமுதற் பொருட்பெயரும், வினைப்பொருட் பெயருமாகச் சொல்லப்பட்ட அவ்வறுவகைப் பொருட் பெயர்க்கும் ஒரு தன்மையான உரிமையினையுடைய, செய்யும் செய்த என்னும் இருவகைப்பட்ட சொல்லும் எ-று. (எ-டு.) நிலம்: அவன் உண்ணும் இல்லம், அவள் உண்ணும் இல்லம், அவர் உண்ணும் இல்லம், அது உண்ணும் இல்லம், அவை உண்ணும் இல்லம் எனவரும். பொருள்: அவனுண்ணும் சோறு, அவளுண்ணும் சோறு, அவ ருண்ணும் சோறு, அது உண்ணும் சோறு, அவை உண்ணும் சோறு என வரும். காலம்: அவனுண்ணுங்காலை, அவளுண்ணுங்காலை, அவருண்ணுங்காலை, அதுவுண்ணுங்காலை, அவை யுண்ணுங் காலை எனவரும். கருவி: அவனெறியுங் கல், அவளெறியுங் கல், அவரெறியுங் கல், அஃது எறியும் கல், அவையெறியுங் கல் எனவரும். வினைமுதல்: உண்ணுமவன், உண்ணுமவள், உண்ணுமவர், உண்ணுமது, உண்ணுமவை எனவரும். வினை: அவனுண்ணுமூண், அவளுண்ணுமூண், அவருண்ணு மூண் அதுவுண்ணுமூண், அவையுண் ணுமூண் எனவரும். இனி, செய்த என்பதற்கும் இவ்வாறே யான் உண்ட இல்லம், நீ உண்ட இல்லம், அவன் உண்ட இல்லம் என்றாற்போல மூன்று இடத்திற் கும் இவ்விடத்து வாய்பாட்டு விகற்பங்களும் அறிந்து ஒட்டிக் கொள்க. ஈண்டுச் செய்யும் என்பது முற்றும் எச்சமும் என இருவீற்றவாகும் சிறப்புடைமையின் முற் கூறப்பட்டது. மற்றுச் செய்யும் என்பது 'பல்லோர் படர்க்கை' என்புழிக் கூறிற் றாகலின் ஈண்டுக் கூறவேண்டா எனின், ஆண்டு முற்றாய நிலைமைக்குக் கூறியது; ஈண்டு அஃது எச்சமாகிய நிலைமைக்குக் கூறியது எனக் கொள்க. மற்று அது அவ்விருநிலைமையும் பெயரொடு முடிய மேல் அவ்வேறுபா டறியுமாறு என்னை எனின், முற்றாய்ப் பெயர் கொண்டவழி மற்றொரு சொல் நோக்காது செப்பு மூடியக்காற்போல அமைந்துமாறும். எச்சமாய்ப் பெயர் கொண்டக்கால் அமையாது மற்றுமொரு சொல் நோக்கிற்றுப் போல நிற்கும் என்பது. இனி முற்றாயவழி உண்ணும் என ஊன்றினாற்போல நலிந்து சொல்லப்படும் என்றும், எச்சமாயவழி ஊன்றாது நெகிழ முடிபு சொல்லப்படும் என்றுங் கொள்க. அஃதேல் "பல்லோர் படர்க்கை" (229) என்புழிக் கூறியது முற்றிற்கு என்றும், ஈண்டுக் கூறியது எச்சத்திற்கு என்றும் பெறுமாறு என்னை எனின், ஈண்டுச் செய்த என்பதனொடு படுத்து முடிபு கூறினமை யானும், ஆண்டு முற்றாயவழிக் கொள்ளாதன பற்றி விலக்கினமை யானும் பெறுதும் என்பது. மற்று, இம் முற்று நிலைமையையும் எச்ச நிலைமையையும் இரண்டிரண்டாகப் பகுத்தோதாதது என்னை எனின், பொருள் வேற்றுமை யல்லது வாய்பாட்டு வேற்றுமையின்மையின் கூறாராயினார் என்பது. இவ் வறுவகைப் பெயருள்ளும் வினைமுதற்பெய ரொழித்து ஒழிந்தவற்றிற்கெல்லாம் வினைமுதற்பெயர் முன்வந்தல்லது பொருள் முற்றாது என்பதூஉம், வினைமுதற்பெயர் வருவழிப் பின்னின்ற எச்சத் தோடு எழுவாயாய் இயைகின்றதோ, பிறவேற்றுமையா யியைகின்றதோ என்னும் விகற்பமும், ஈண்டு வினைமுதற் பெயரேயன்றிப் பிறபெயரொடு முடியாததற்குக் காரணம் 'வினையே செய்வது' என வினை யிலக்கணம் கூறியவழி வினைச்சொற் குறிப்பாய்ப் பிற பெயரும் புக்கமையாது என்பதூஉம், அவ்வெட்டனுள் கடைக் கண் இரண்டும் ஒழிய மற்றை ஆறும் ஈண்டோதப்பட்டன என்பதூஉம் அறிந்து கொள்க. யான் ஆடை ஒலிக்கும் இல்லம், ஆடை ஒலித்த கூலி என்றாற் போல்வன முடியுமாறு என்னை எனின், அவ்வினையிலக்கணத்துள் இன்னதற்கு இது பயன் என்னும் அவ்விரண்டெனப் பெயர் வகையாலின் 'தன்னின முடித்தல்' என்பதனாற் கொள்ளப்படும் என்பது. "மற்றிந்நோய் தீரும் மருந்தருளாய் ஒண்டொடீ" (கலி. 60) எனவும், "நின்முகங் காணு மருந்தினேன் என்னுமால்" (கலி. 60) எனவும் வருவனவாமாறு என்னை எனின், தீரும் மருந்து என்பது தீர்தற்குக் காரணமாகிய மருந்து என்றவாறு. காண்டல் காரணமாக அதன் காரியமாகப் பிறந்த அருளே மருந்தாதற்றன்மையது என்றவாறு. இவ்வாறு காரணப்பெயரும் காரியப்பெயருமாய் வருவன அவ் விலக்கணம் எட்டனுள்ளும் அடங்காமையின் 'ஒன்றென முடித்தல்' என்பதனாற் கொள்ளப்படும். யான் செல்லும் ஊர், யான் போந்த ஊர் என்பன நிலப்பெயருள் அடங்கும். 'ஊர்களிறு மிதித்த நீர்' (குறுந். 52) எனவும், 'நூலாக் கலிங்கம்' (பதிற். 12) எனவும், 'எள்ளாட்டின எண்ணெய்' எனவும், உண்ட எச்சில் எனவும் வருவன செயப்படுபொருளின் விகற்பமாக்கி அதனுள் அடக்கிக் கொள்க. இவ்வாறு வரும் பிறபெயர் விகற்பங்களும் அறிந்து அடக்கிக் கொள்க. அவையாவன 'தேரொடும் அவர்ப் புறம் காணேனாயின் சிறந்த இவனினும்' (புறம். 71) 'குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி' (முருகு. 199) என்றாற் போல்வன. இனிச் செய்யும் என்பது செய்யாநிற்கும் எனவும், செய்த என்பது செய்யாநின்ற எனவும் வரும் வாய்பாட்டு வேற்றுமையும் 'தன்னின முடித்தல்' என்பதனாற்கொள்க. இனிச் செய்த என்பதன் குறிப்பாய் இன்ன அன்ன என்ன எனவும் கரிய, செய்ய எனவும் வரும்; இவையும் அதனாற் கொள்க. (36) செய்யும் என்பதற்கு ஒரு முடிபு 237. அவற்றொடு வருவழிச் செய்யுமென் கிளவி முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே. என் - எனின், செய்யும் என்பதற்கு இன்னும் முடிபு வேற்றுமை கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய அறுவகைப் பெயரொடு முடிந்து வரு மிடத்துச் செய்யும் என்னும் சொல் முன் "பல்லோர் படர்க்கை" (சொல். 229) என்றதற்கண் வரையப்பட்ட மூன்று கூற்றின்கண்ணும் உரிமை யுடைத்து எ-று. மூன்று கூற்றாவன பல்லோர் படர்க்கையும், முன்னிலையும் தன்மையும். அவையாவன: அவருண்ணும் இல்லம், அவருண்ணும் சோறு, அவர் ஓதுங்காலை, அவர் எறியுங்கல், உண்ணுமவர் வந்தார், அவருண்ணும் ஊண் - இவை பல்லோர் படர்க்கை. நீயுண்ணும் இல்லம், நீயிர் உண்ணும் இல்லம், நீ உண்ணும் சோறு, நீயிர் உண்ணும் சோறு, நீ ஓதுங் காலை, நீயிர் ஓதுங் காலை, நீ எறியுங்கல், நீயிர் எறியுங் கல், உண்ணும் நீ வந்தாய், உண்ணு நீயிர் வந்தீர், நீ உண்ணுமூண், நீயிர் உண்ணுமூண் - இவை முன்னிலை. யானுண்ணும் இல்லம், யாமுண்ணும் இல்லம், நாம் உண்ணும் இல்லம், யானுண்ணும் சோறு, யாம் உண்ணும் சோறு, நாம் உண்ணும் சோறு, யானுண்ணுங்காலை, யாமுண்ணுங்காலை, நாமுண்ணுங்காலை, யானெறியுங் கல், யாமெறியுங் கல், நாமெறியுங் கல், உண்ணும்யான் வந்தேன், உண்ணும்யாம் வந்தோம், உண்ணும் நாம் வந்தோம், யானுண்ணுமூண், யாமுண்ணுமூண், நாமுண்ணுமூண் - இவை தன்மை. யானும் நீயும் உண்ணுமில்லம், யானுமவனும் உண்ணுமில்லம், யானும் நீயும் அவனும் உண்ணுமில்லம் என்றாற்போல வரும் வாய்பாடும் ஒட்டிக் கொள்க. இதனாற் சொல்லியது, செய்யும் என்பதற்கு முற்றாயவழி விலக்கிய இடங்கள் எச்சமாயவழி வரும் என இறந்தது காத்ததாயிற்று. (37) இவ்விருவகை எச்சமும் எதிர்மறுத்து மொழியினும் பொருள்நிலை திரியாமை 238. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா. என் - எனின், பெயரெச்சமும் வினையெச்சமும் தனித்தனி முடியு மாறு கூறிவிட்டு, இனி அவ்விரண்டற்கும் உடனெய்துவது ஓரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயரெச்சமாகிய சொல்லும், வினையெச்சமாகிய சொல்லும் தொழிலினை எதிர்மறுத்துச் சொன்னவிடத்தும் அவ்வச் சொல்லாதற் பொருண்மை நிலையில் வேறுபடா எ-று. (எ-டு.) உண்ணும் சாத்தன் என்பது உண்ணாச் சாத்தன் என வரும். செய்த என்பதற்கு இதுவே மறை. கரியசாத்தற்குச் செய்ய சாத்தன் எனவும், நல்ல சாத்தற்குப் பொல்லாச் சாத்தன் எனவும், தீய சாத்தன் எனவும் வரும். பெயரெச்சக் குறிப்பு மறைவிகற்பமும் அறிக. இம்மறைக்கண் உண்ணாச் சாத்தன் என ஆகார ஈறாயே நிற்கும், இவை பெயரெச்சம். இனி, வினையெச்சம் உண்டுவந்தான் என்பது, உண்ணாது வந்தான் எனவரும். இவ்வெச்சம் சோறு உண்டாயிருந்தது எனவும், சோறு ஆவதாயிருந்தது எனவும் ஒரு சொல்லடுத்தபோது சோறின்றி எனவும் சோறு அன்றி எனவும், வேறு வேறு குறிப்பு வாய்பாட்டதாம் எனக் கொள்க. செய்யூ, செய்பு என்பனவற்றிற்கும் இதுவே மறை. இனிச் செய்தென என்பது முதல்வினையொடு முடிந்தவழி இம் மறையானே வரும். மழை பெய்தென மரங்குழைத்தது எனப் பிறவினை யாய வழிச் செய்தென் எச்சத்து எதிர்மறையே தனக்கு மறையாய், மழைபெய்யாமல் மரங்குழையாதாயிற்று என வரும். இனிச் செய்யியர் செய்யிய என்பன இரண்டற்கு மறைபடுவழித் தன்வினை பிறவினை என்னும் இருவழியுஞ் செயவென்னெச்சத்தின் மறையானே முடியும். மழை பெய்யாமல் எழுந்தது, மழைபெய்யாமல் மரம் குழையாதாயிற்று. இனிச் செய்யிய என்பதற்கும் இவ்வாறே கொள்க. செயின் என்பதற்குச் சொல்தன்னான் மறையின்றி மழை பெய்யா விடின் அறம்பெறாது, மழைபெய்யாவிடின் மரங் குழையாது எனப் பிற சொல்லானே மறையாய் வரும் போலும். உண்ண என்பதற்கு உண்ணாமல் எனவும், உண்ணாமை எனவும், மறை அல்லும் ஐயும் என ஈர் ஈற்றதாம். உண்ணாமே என்பதோ எனின், அதுவும் மரூஉ என்க. இனிப் 'பெரிய ஓதினும்' என்பதற்குச் 'சிறிய ஓதினும்' எனவரும் குறிப்பு மறை விகற்பமும் அறிக. செயற்கு என்பதற்கு உணற்கு வந்தான், உண்ணாமல் வந்தான் என இதன் மறையே மறையெனக் கொள்க. உண்ணாதொழிவான் எனப் பிற வாய்பாடாயும் வரும். இனிப் பின் என்பது உண்ணாதபின் என வரும். முன் என்பது உண்ணாதமுன் எனவரும். கால் என்பது உண்ணாக்கால் எனவரும். கடை என்பது உண்ணாக்கடை எனவும், வழி என்பது உண்ணாத வழி எனவும், இடத்து என்பது உண்ணாதவிடத்து எனவும் வரும். பான், பாக்கு என்றாற்போல்வன உண்ணாதொழிவான் என்றாற் போல வேறுவாய்பாடாய் வரும். மற்று மறை விகற்பமுள்ளனவும் அறிந்துகொள்க. இதனால் சொல்லியது இவ்வாறு பெயரெச்சமும் வினையெச்சமும் எதிர்மறுத்துவரும் என்பது போதரக் கூறினமையின் அதனுள் அடங்கிற் றென்பது. இரு வழியும் பெயரெச்சம் எனப்படுதலும் பெயரொடு முடிதலுமுடைய என்றாயிற்று. அஃதேல் முற்றுச்சொன் மறுத்தவழியும் முற்றென்பது எற்றாற் பெறுதும் எனின், வேற்றுமையிலக்கணத்துள் 'எதிர்மறுத்து மொழியி னும்' என்பதனுள் அவ்வேற்றுமையினை எதிர்மறுத்து வரும் என்பது போதரக்கூறினமையின் அடங்கிற் றென்பது. மற்று இவ்வெச்சமும் அதன்பால் அடங்காதோ எனின், எடுத்தோத் தில்வழியன இலேசும் உத்தியும் என்க. அஃறிணை வினையுள் 'அ ஆ' (218) என்று ஆகாரவீற்றை ஓதினமை யானும் மறையுமாம் என்பது பெறுதும். முற்றுச்சொல் எதிர்மறுத்தவழி உண்டான் என்பதற்கு உண்ணான் என ஈறு வேறுபடாது வருதலானும், உண்ணுமுன் என்பதற்கு உண்ணாத முன் என்றும், உண்ண என்பதற்கு உண்ணாமல் என்றும் எச்சங்கள் ஈறு வேறுபட்டு வருதலானும், அவை இயல்பு என்று, விகாரமுடைமையின் இவ்வெச்சங்களை எடுத்து ஓதினார் என்றலும் ஒன்று. முற்றுச்சொன் மறைவிகற்ப மெல்லாம் அவ்வீற்றுள்ளே காட்டியவாறு கண்டுகொள்க. இனிச் செய்யும் என்பது முற்றாயவழி அதன் எதிர்மறை ஆண்டுக் கூறும் உயர்திணை அஃறிணைப்பன்மை மேல் வினையாய் உண்ணும் அவன் என்பதற்கு உண்ணானவன் எனவும், உண்ணும் அது என்பதற்கு உண்ணாது அது எனவும் வரும் என்று அறிக. மற்று இவ்விரவுவினை வினைமுற்றாயவற்றின் தனக்கேற்ற வினையில்லன ஆண்டுணர்த்தும் உயர்திணை அஃறிணை வினையான் மறைபடுமாறறிந்து கொள்க. (38) இடைப்பிறவரல் 239. தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின் எச்சொல் லாயினும் இடைநிலை வரையார். என் - எனின், இதுவும் அவ்வெச்சங்களிடை நிகழும் முடிபு வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முன் கூறிய பெயரெச்சமும் வினையெச்சமும் தத்தம் எச்சமாகிய பெயரொடும் வினையொடும் பொருள் இயையும் கருத்தினை யுடைய பெயர் முதலிய எவ்வகைச் சொல்லாயினும் அம் முடிதற்கு இடைநிற்றலை நீக்கார் ஆசிரியர்; எனவே கொள்வர் என்றவாறு. வரையார் என்றமையின் இதுவும் ஒரு மரபு வழுவமைதி நீர்மைத்து என்பது போந்தது. சிவணுங் குறிப்பு என்றமையின் சிவணாக் குறிப்பின வரையப் படும் என்பது. (எ-டு.) அடுஞ்செந்நெற்சோறு அட்ட செந்நெற்சோறு என வரும். இவை பெயரெச்சம். "உப்பின்று புற்கையுண்கமா, கொற்கை யோனே" என்பது வினையெச்சம். சிவணாக்குறிப்பினது வல்லமெறிந்த நல்லிளங் கோசர் தந்தை மல்லல் யானைப் பெருவழுதி என்பது. இனி ஒன்றென முடித்தல் என்பதனான் உண்டான் பசித்த சாத்தன் என்றாற் போல வரும் முற்று இடைக் கிடப்புங் கொள்க. (39) செய்யும் என்னும் சொல் ஈறு கெடுமாறு 240. அவற்றுள், செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம் அவ்விடன் அறிதல் என்மனார் புலவர். என் - எனின், இவ்வெச்சங்களுள் செய்யும் என்னும் பெயரெச்சத் திற்கு ஈறு வேறுபட்டுக் கெடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறிய எச்சங்களுள் செய்யுமென்னும் பெயரெச்சத் திற்கு ஈற்றின்மேல் நின்ற உகரம் தன்னான் பற்றப்பட்ட மெய்யொடும் கெட்டு முடியும். அவ்வாறு கெடும் இடங்களை அறிக என்று சொல்லுவர் புலவர் எ-று. (எ-டு.) வாவும் புரவி வழுதி, யான் போகும் புழை என்பன வாம்புரவி, போம்புழை எனவரும். இனி 'உருவு திரை' என்றாற்போல ஈறுதான் கெடுவனவும் உளவாலெனின், அது வினைத்தொகை என மறுக்க. "சாரல்நாட என் தோழியுங் கலுழ்மே" என அவ்வுகரந் தானேறிய மெய்யொழியக் கெட்டவிடம் உளவால் எனின், 'அவ்விடனறிதல்' என்ற மிகைவாய்பாட்டான் ஒரோவழி மெய்யொழியக் கெடுதலும் உண்டு என்பது கொள்ளப்படும். இனிச் 'செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு' என்றாரன்றே? மற்று அது, 'அம்பலூரும் அவனொடு மொழிமே' (அகம். 51) என முற்றாயவழியும் வந்ததாலெனின் அதனையும் இவ்விலேசினாற் கோடலும் ஒன்று. இதனையும் உதாரணமாகக் கூறியது 'உரையிற் கோடலான்' என்றலும் ஒன்று. இனி வாவும் புரவி என உகரங் கெடாது வருதற்கு விதி யாதெனின் "மெய்யொடுங் கெடும்" என்ற உம்மை எதிர்மறை யாகலான் மெய் யொடுங் கெடாது நிற்றல் பெரும்பான்மை என்பதூஉம் பெறப்படும். ஏற்புழிக் கோடல் என்பதனான் ஆடும்நாகம் என்றாற்போல் - வுழிக் கெடாமையும் கொள்க. (40) செய்தென்னும் வினையெச்சத்துக்கண் வரும் காலமயக்கம் 241. செய்தென் எச்சத் திறந்த காலம் எய்திடன் உடைத்தே வாராக் காலம். என் - எனின், செய்தென்னும் வினையெச்சத்துக் கால மயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறந்தகாலத்தையுடைய செய்தென்னும் வினையெச்சம் தன்னிறந்தகாலத்தினை நோக்க வாராதவாகிய இயல்பினையுடைய எதிர்காலத்தினையும் நிகழ்காலத்தினையும் பொருந்தும் கூற்றினை யுடையது எ-று. இறந்தகாலத்துச் செய்தெனெச்சம் என மொழிமாற்றிக் கொள்க. (கிடந்தவாறும்) வாராக்காலம் என எதிர்காலமும் நிகழ்காலமும் அடங்கின. (எ-டு.) உழுது வருவான் சாத்தன் என்பது. இது வருவான் என்னும் எதிர்காலவினை கொண்டமையான் முன் உழுது என நின்ற இறந்த காலம் உழுவது என மேல் எதிர்காலத்தாயிற்று. கொடியாடித் தோன்றும் என்பது அத்தோற்றமும் ஆட்டமும் உடனிகழ்தலான் நிகழ்காலமாயிற்று. 'ஒன்றென முடித்தல்' என்பதனான் செய்யூ, செய்பு என்பனவற் றிற்கும் இவ்வாறே மயக்கங் கொள்க. மற்றும் அவ்வினையெச்ச வாய்பாடுள்ளும் காலம் மயங்குவன உளவேல் அவையும் இவ்வாற் றானே கொள்க. இச்சூத்திரம் காலவழுவமைதி.இஃது ஒருசொன்மயக்கம். (41) நிகழ்காலச்சொல் ஏனைக்காலங்களையும் உணர்த்தல் 242. முந்நிலைக் காலமுந் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும். என் - எனின், எல்லா வினைச்சொற்களும் பொருளது உண்மை யியற்கை கூறும்வழிச் செய்யும் என்னும் வினைச்சொல்லொடு காலம் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றுவகைப்பட்ட நிலைமையினையுடைய காலத்தும் தோன்றும் இயல்பினையுடைய எவ்வகைப்பட்ட பொருளையும்; நிகழ்காலத்தினைத் தனக்குக் காலமாகவுடைய, பிறகாலத்தினையும் பொதியும் பொருள் நிலைமையினை யுடைய செய்யும் என்னும் சொல்லினான் சொல்லுதலை விரும்பும் ஆசிரியன்,எ-று. (எ-டு.) மலை நிற்கும், யாறு ஒழுகும், தீச்சுடும் என்னும் இவை. தீ எத்தன்மைத்தென்றால் அதன்றன்மை எக்காலத்தும் உளதாதலிற் பண்டு சுட்டது இன்றுஞ் சுடுகின்றது மேலுஞ் சுடுவது என மூன்று காலத்தானும் கூறவேண்டுவதனை நிகழ்காலத்தான் சொல்ல அவை யெல்லாம் கூறியவாறாயிற்று எனக் கொள்க. "முந்நிலைக் காலமும் தோன்றுமியற்கை எம்முறைச் சொல்" என்றமையான் ஒருபொருள் ஒருகாலத்தொழிலன்றி எக்காலத்தும் நிகழும் தொழிலியல்பு கூறும் வழியது இம்மயக்கம் எனக் கொள்க. சொல் என்றதற்குப் பெயர்ப்பொருளை என்க. இனிச் சொல் லெனினும் படும். மெய்ந்நிலை என்றதனாற் நிகழ்காலச் சொல்லொடு ஒவ்வாது மூன்று காலத்தையும் பொதியும் நிலைமையது இச் செய்யு மென்னும் சொல் என்பது பெறப்பட்டது. இதுவும் காலமயக்கவமைதி. ஈண்டு மயங்கியது எச்சொல்லோ எனின், நெருப்புச்சுடும் என்றவழி சுட்டது, சுடாநின்றது, சுடுவது என்று மூன்றுகாலச் சொல்லும் செய்யும் என்பதனான் சொல்லப்படுதலின், அவை மயங்கின எனப்படும். இச்சுடுமென்ற சொற்றானும் தான் நிகழ்காலத்ததாய் நிற்றலைவிட்டு ஒரு சொல்லுதற்கண்ணே மூன்று காலமும் பட நிற்றலின் அதுவும் மயங்கிற்று எனப்படும். இஃது ஒரு சொன்மயக்கம். (42) விரைவுப்பொருளில் காலம் மயங்கல் 243. வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்மனார் புலவர். என் - எனின், வினைச்சொல் எல்லாவாற்றானும் விரைவுப் பொருட்கண் எதிர்காலமும் நிகழ்காலமும் இறந்தகாலத்தொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எதிர்காலத்தும் நிகழ்காலத்தும் ஒருபடியாக வருகின்ற வினைச்சொல்லாகிய சொல்லின் பொருண்மையை இறந்த காலமாகக் கருதிக் கூறுதல் விரைவுப் பொருண்மை உடைய என்று சொல்லுவர் புலவர் எ-று. (எ-டு.) ஒருவனை ஒருவன் ஒரு குறைபொருட்டான் இன்னும் உண்டிலையோ போதாயோ என்புழி, உண்பேன், போதுவேன் எனற்பா லதனை, உண்டேன் போந்தேன் என்னும். இனி உண்கின்றானைக் கேட்பினும் உண்ணாநின்றேன் போதுவல் என்னாது உண்டேன், போந்தேன் என்னும். இவை அமைதற்குக் காரணம் செய்யாததனைச் செய்த தாக்கித் தன் விரைவு தோன்றக் கூறும் கருத்தினன் ஆதலின் என்பது. இதுவும் சொல்லொடு சொன்மயக்கம். இஃது எல்லாச் சொன்மேலும் கொள்க. (43) சிறப்புப் பொருட்கண் காலம் மயங்கல் 244. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வ தில்வழி நிகழும் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. என் - எனின், வினைச்சொல் எல்லாவற்றினும் நன்மையானும் தீமையானும் மிக்கதொரு பொருட்கண் ஒருவன் செய்தி கூறுமிடத்து எதிர்காலம், இறந்த காலத்தொடும் நிகழ்காலத்தொடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உலகத்து ஒருவழி நன்மையானும் ஒருவழித் தீமை யானும் தவஞ்செய்தல், தாய்க்கொலை என்பன மிக்க தொழிலிடத்து வரும். தவஞ்செய்வான், தாயைக் கொல்வான் என்னும் வினைப் பெயர்ச்சொல்லான் ஒருவன் தன்னை வேறுகூறுதலைக் குறித்த வினைப் பெயர்க்கு முடிபாக அம்மிக்க வினைப்பயனாகிய சுவர்க்கம் புகுதலும், நிரயம் புகுதலும் என்னும் பண்பினை மேல் வரும் சுவர்க்கம் புகுவன், நிரயம் புகுவன் என்னும் சொற்களான் தன்னைச் சொல்லுதலையும் குறித்த அவ்வினைமுதலாகிய பொருள்தான் மிக அத்தொழிலினைச் செய்யா திருந்த நிலைமைக்கண்ணே அத்தொழிலைச் செய்ததன்பயனை உறுகின்றானைக் கண்டான் போல ஒருவன் தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் எனச் சொல்ல நிகழ்காலத்தின் கண்ணே உண்மைபெறத் தோன்றும் பொருண்மையினை யுடைத்தாம் எ-று. (எ-டு.) தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும், தாயைக் கொன்றான் நிரயம் புகும் என முன் கண்ணழிவுள் வந்தனவே எனக் கொள்க. இதனாற் சொல்லியது இவ்வினை செய்வான்மேல் இவ்வினை எய்தும் என்னும் பொருண்மை. இவ்வினை செய்து, பின்னை இவ்வினை செய்கின்றான் எனக் காலம் மயங்கவரும் என்பது கூறக் கருதினான் கூறியவாறாக்கி இதற்கேற்பச் சொன்னிலை யறிந்து பகுத்துக் கொள்க. 'ஒன்றென முடித்தல்' என்பதனான் அறஞ் செய்தான் சுவர்க்கம் புக்கான் என இரண்டுவினையும் இறந்தகாலத்தாற் கூறுதலும், அறஞ் செய்யா நிற்குமவன் சுவர்க்கம் புகுவன் என நிகழ்காலம் ஒன்றனையும் மயங்கக் கூறுதலும் மற்றுள்ளதுங் கொள்க. 'நிகழுங்காலத்து மெய்பெறத் தோன்றும்' என்றதனான் சுவர்க்கம் புகுவான் என்னாது சுவர்க்கம் புகும் என்பதன்றி அறஞ்செய்வான் என்பதனை அறஞ்செய்தான் எனக் கூறுதல் சூத்திரத்துப் பெற்றிலமால் எனின், அது முன்னின்ற சூத்திரத்துள் அப்பொருளினைக் கூறும் இலக்கண வாய்பாடு இது என நிறுத்தின அதிகாரவாற்றலாற் பெற வைத்தார் போலும். மற்றும், முன் இவ்வினை செய்வான் இவ்வினை செய்யும் என்பதுபடச் செய்த தில்லாமை தோன்றக் கூறி வைத்துப் பின்னையும் செய்வதில் வழி என்றது என்னை எனின், அங்ஙனம் செய்வானாய் முன்னின்றவன் பின்னையதனைச் செய்தவழிக் கூறுதலும் ஒன்றுண்டாத லின் அதுநீக்கிய கூறினார் போலும். அதுவும் சொல்லொடு சொன் மயக்கம். (44) வினைமுற்றுச் சொல்லது பொருள்படு நிலைமை 245. இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி இருவயி னிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். என் - எனின், இது வினைமுற்றுச் சொல்லது பொருள் படுநிலைமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இக்காரியத்தினைச் செய்தல் வேண்டும் என்று சொல்லப்படும் முற்றுச்சொல் இரண்டிடத்து நிலைபெறும் பொருண்மை உடைத்தாகும். அவை இரண்டிடமும் யாவை யெனின் அக்காரியத்தைச் செய்வான் தன்னிடத்தும், அவன் செய்தலை வேண்டியிருப்பான் பிறனொருவனிடத்தும் எ-று. (எ-டு.) சாத்தன் ஓதல்வேண்டும் என்பது. இதனுள் வேண்டும் என்னும் முற்றுச்சொல் ஒருவழிச் சாத்தன் என்பது எழுவாயாய், வேண்டும் என்னும் பயனிலை யொடு முடிந்தவழி அது வேண்டுதல் சாத்தனதாயும், சாத்தன் என்னும் எழுவாய் ஓதலென்னும் சொல்லொடு முடிந்தவழி, இவன் ஓதவேண்டியிருக்கும் இவன் தந்தை யெனப் பிறர்மேலதாயும் நின்றவாறு அறிந்துகொள்க. இதனாற் சொல்லியது சொற்பொருள் உணர்த்தும்வழி இயல்பான் தானுணர்த்துவதனை யொழிய அடைசொற்களாற் பிறவழியும் நோக்கும் எனக் காலவழுவமைதிக்கிடையே இதுவும் ஒரு மரபு வழுவமைதி என்பது கூறியவாறாயிற்று. (45) வற்புறுத்தற்கு வரும் வினாச்சொல் எதிர்மறைப்பொருளும் படல் 246. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற் குரிமையும் உடைத்தே. என் - எனின், இதுவும் வினைச்சொல்லது பொருள்படும் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவன் ஒரு தொழிலினைச் செய்தானாகத் தன்னை ஒருவன் மனங் கொண்டிருந்தவழி தான் அது செய்யாமை அவன் மனத்து வலியுற வேண்டி அது செய்திலேன் என எதிர்மறைப் பொருட்கண் வருகின்ற வினாவினையுடைய வினைச்சொல், அவ்வாறு தான் அது செய்யாமை உணர்த்துதற்கு நின்ற நிலைமை எதிர்மறுத்துத் தான் அது செய்தானாக உடன்பட்டமை அவற்கு உணர்த்துதற்கு உரிமையினையும் உடைத்து எ-று. (எ-டு.) கதத்தானாதல் களியானாதல் மயங்கி இன்னாங் குரைத்துப் பின் தெருண்டவழி, அவ்வின்னாங்கு உரைக்கப்பட்டான், 'நீ என்னை வைதாய்' என்றக்கால், 'யான் வைதேனோ' எனத் தான் வையாமையை வலியுறுத்தற்குக் கூறி, அதுதானே 'அப்பொழுது வைதேன்; நோகாதே' என்று நேர்ந்தமை படவும் நிற்கும் என்பது. உம்மை எதிர்மறையாகலான் மறுத்தல் பெரும்பான்மை; நேர்தல் சிறுபான்மையெனக் கொள்க. இவ்வாறு பொருளுணர்த்துகின்றது தொடர்க்கண் வினா இடைச் சொல்லாகலான் அஃதாண்டைக்காராய்ச்சி யன்றோ எனின், அச்சொல் லெடுப்பானே வைதேன் என்னும் உடன்பாட்டு வினைச்சொல் வைதேனோ என ஒருவழி வைதிலேன் என்னும் எதிர்மறைப் பொருள் பெரும்பான்மையாயும், ஒருவழி அம்மறைநிலையை விட்டுத் தன்னுடம் பாட்டுப் பொருண்மை சிறுபான்மையாயும் நின்றமையான், ஈண்டைக் கும் ஒரு வழூஉவமைதி ஆராய்ச்சித்தாயிற்று என்பது. (46) இயற்கையிலும் தெளிவிலும் காலம் மயங்கல் 247. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை. என் - எனின், இயற்கை தெளிவு என்னும் பொருட்கண் எதிர்காலம், இறந்தகாலத்தொடும் நிகழ்காலத்தொடும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வாராக்காலமாகிய எதிர்காலத்துப் பிறக்கும் வினைச் சொல்லாகிய சொல்லின் பொருண்மை இறப்புக் காலச் சொல்லானும் நிகழ்காலச் சொல்லானும் மிகத் தோன்றும்; யாண்டு எனின், ஒன்றனது இயற்கையினையும் ஒன்றனது தெளிவினையும் ஒருவன் சொல்லுங் காலத்து எ-று. இயற்கை என்பது, வழங்குங்கால் தான் ஒன்றனை இஃது இப்பெற்றியதாகும் என்று அறிந்திருந்த இயல்பு எ-று. தெளிவு என்பது, ஒரு நூல்நெறியான் இது நிகழும் எனக் கண்டு வைத்துத் துணிதல் எ-று. (எ-டு.) இக்காட்டுள்போகின் கூறை கோட்படுவன் என்னாது இக்காட்டில் புகின் கூறை கோட்பட்டான் எனவும், கூறை கோட்படு கிறான் எனவும் கூறுதல்; இஃது இயற்கை. எறும்பு முட்டைகொண்டு தெற்றி ஏறுவது கண்டுழி மழை பெய்வதாம் என்னாது பெய்தது எனவும், பெய்கின்றது எனவும் கூறுதல்; இது தெளிவு. இதுவுஞ் சொல்லொடு சொன்மயக்கம். (47) செயப்படுபொருளைச் செய்ததாகக் கூறுதல் 248. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. என் - எனின், இதுவும் வினைச்சொற்கண் நிகழும் மரபு வழூஉவமைதி கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பிறிதொன்றனான் ஒருதொழில் செய்யப்படுவ தாகிய பொருளினைத் தான் அத்தொழிலினைச் செய்ததுபோல அத்தொழில் அதன்மேற்படக் கூறுதலும் வழக்கின்கண்ணே நடக்கும் முறைமை உடையதாம் எ-று. (எ-டு.) இல்லம் மெழுகிற்று, சோறு அட்டது எனவரும். இனி 'ஒன்றென முடித்தல்' என்பதனான் இவ்வாள் எறியும், இச்சுரிகை குத்தும் எனச் செய்தற்கு உடனாகிய கருவியைத் தான் செய்ததாகச் சொல்லுவதும், அரசன் எடுத்த ஆலயம் என்றாற்போல ஏவினானைக் கருத்தாவாகச் சொல்லுவதும் அமைத்துக் கொள்ளப்படும். எனவே, கருத்தா, கருத்தாவும், ஏது கருத்தாவும், கருவிக் கருத்தாவும், கரும கருத்தாவும் என நான்கு வகைப்படூஉம் என்பதும், அவற்றுள் இது கரும கருத்தா என்பதும் பெறப்பட்டன. இன்னும் இதனானே உண்டல், தின்றல் என்னுந் தொழில் தன்னையும் உண்டது, தின்றது என்று கருத்தாவினைப் போலக் கூறும் வாய்பாடும் கொள்க. (48) இறந்த காலம் எதிர்காலத்தொடு மயங்கல் 249. இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. என் - எனின், மேற்கூறிய கால மயக்கம் போல ஒரு பொருண்மை யைக் குறியாது பல பொருட்கண்ணும் மயங்குவன வற்றுள், இறந்த காலம் எதிர்காலத்தொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறப்பும் எதிர்வும் என்று சொல்லப்பட்ட அவ்விரு காலமும் மயங்குஞ் சொல்லாகிய சொற்களிடத்து மயக்கமாய்த் தோன்றும் எ-று. (எ-டு.) யாம் பண்டு விளையாடுவது இக்கா; யாம் பண்டு சூது பொருவது இக்கழகம் எனவரும். (49) நிகழ்காலமும் இறந்த காலத்தொடு மயங்கல் 250. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். என் - எனின், இதுவும் அப்பொருட்கண் இறந்ததனொடு நிகழ்வது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒழிந்த நிகழ்காலமும் இறந்ததனொடு மயங்குதலை நீக்கார் ஆசிரியர் எ-று. (எ-டு.) யாம் பண்டு விளையாடுங் கா எனவரும். இனி 'ஒன்றென முடித்தல்' என்பதனான் இறந்ததனோடு எதிர்வ தும் நிகழ்வதும் மயங்கியவாறுபோல நிகழ்வதனோடு இறந்ததுவும், எதிர்வும், எதிரதனோடு இறந்ததுவும் நிகழ்வதும் மயங்குமாறு கொள்க. யாம் இன்று விளையாடா நின்றது இக்கா என்புழி, விளையாடிற்று எனவும் விளையாடுவது எனவுங் கூறுதல் நிகழ்கால மயக்கம். யாம் நாளை விளையாடுவது இக்கா என்புழி விளையாடிற்று எனவும், விளையாடா நின்றது எனவுங் கூறுதல் எதிர்கால மயக்கம். இவை இதுபொழுது வழக்கினுள் ஏலா எனினும், இவ்வாறு மயங்குதற்கு இலக்கணம் உண்மையானும், 'க ச த ப முதலிய' (எழுத். 143) என்புழிச் சொல்லுமுறை என்பதனைச் 'சொல்லிய முறைமை' என்றமையானும் அமையும் எனக் கொள்க. (50) ஆறாவது வினையியல் முற்றிற்று. 7 இடையியல் இடைச்சொற்குரிய பொதுவிலக்கணம் 251. இடையெனப் படுப பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே. இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், இடைச்சொல்லிலக்கணம் உணர்த்துதலான் இடைச்சொல் லோத்து என்னும் பெயர்த்து. இடைச்சொல் என்னும் பொருண்மை என்னை யெனின், பெயர் வினைகள் உணர்த்தும் பொருட்குத் தான் இடமாக நிற்றலான் இடைச் சொல்லாயிற்று. இச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், இடைச்சொற் கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இடைச்சொல் என்று சொல்லப்படுவன பெயர்ச் சொல்லொடும் வினைச்சொல்லொடும் வழக்குப்பெற்று நடக்கும்; அவ்வாறு அவற்றொடு நடத்தலல்லது தாமாக நடக்கும் இயல்பில எ-று. (எ-டு.) அது மன், வருகதில் அம்ம எனவரும். தமகியல்பில என்றதனான் பெயரொடும் வினையொடும் அவ் விடைச் சொற்கள் வருவழிச் சொற்புறத்துவழி வருதலும், அச் சொல்வழி வருதலும் என இருவகைத் தென்பது பெறப்பட்டது. (எ-டு.) வருகதில், உண்டான் எனவரும்: இவை வினை. அதுமன் மற்றையது எனவரும்: இவை பெயர். மற்று இச்சூத்திரத்தின் பொருண்மையும், இலேசின் பொருண்மை யும் "இடைச்சொல் கிளவியும், உரிச்சொல் கிளவியும்" என்ற சூத்திரத் துள்ளும் அதன் இலேசினுள்ளும் அடங்குமால் எனின், அது நிரனிறை வாய்பாட்டதாகலாற் பெயரொடுபட்டு இடை வருமென்றும் வினை யோடு உரிவருமென்றும் கொள்ளக் கிடந்தமையின், இடையும் இரண்டொடும் வருமென்றற்குக் கூறினார் என்பது. இனி அவ்விலேசு நிரனிறைச் சூத்திரத்ததாகலாற் புறத்துவழி வருதல் இடைச்சொற்காகவும், உள்வழி வருதல் உரிச்சொற்காகவுங் கொள்ளக்கிடக்கும் என்பது கருதி, ஈண்டும் இருவகையானும் இடை வரும் என்பதற்கு இலேசு கூறினார் போலும். (1) இடைச்சொற்களின் பாகுபாடு 252. அவைதாம், புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும் வினைசெயல் மருங்கின் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி யாகி வருநவும் இசைநிறைக் கிளவி யாகி வருநவும் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும் ஒப்பில் வழியான் பொருள்செய் குநவுமென்(று) அப்பண் பினவே நுவலுங் காலை. என் - எனின், அவ்விடைச் சொற்களின் பாகுபாடாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் இடைச்சொல் என்று சொல்லப்பட்டவைதாம் இரு மொழி தம்மிற் புணர்தலியன்ற நிலைமைக்கண் அவற்றின் பொரு ணிலைமைக்குதவி செய்து வருவனவும், வினைச்சொற்களை முடிக்கு மிடத்துக் காலங்காட்டும் இடைச்சொற்களொடு கூடித் தாம் பால்காட்டுஞ் சொற்களாய் வருவனவும், வேறுபாடு செய்த பொருண்மையிடத்து வேற்றுமையுருபாய் வருவனவும், வழக்கின்கண் தமக்கு ஒரு பொரு ளின்றித் தாம் அடைந்த பெயர் வினைகளை அசையப்பண்ணி நிற்கும் நிலைமையவாய் வருவனவும், பெயர்ப் பொருளிடத்துப் பொருளின்றி ஓரோர் அசையை நிறைத்தற் பொருண்மையவாய் வருவனவும், பெயர் வினைகள் போல விளங்கப் பொருளுணர்த்தாத சொற்கள் தத்தம் குறிப்பானே ஒரு பொருளை உணர்த்தி வருவனவும், ஒத்த என்னும் வாய் பாடு தன்கண் நில்லாத கூற்றானே நின்ற ஒப்புமைப் பொருண்மையை உணர்த்தி வருவனவும் என்று சொல்லப்பட்ட அவ்விலக்கணங்களை உடையனவாம், அவற்றைச் சொல்லுங் காலத்து எ-று. புணர்ச்சிக்கண் வருவன எழுத்தோத்தினுள் 'இன்னேவற்றே' (119) யென்னும் சூத்திரத்தான் ஓதப்பட்டன. இனித் தன்னின முடித்தல் என்பதனான் காரம், கரம், கான் என்னும் எழுத்துச் சாரியையுங் கொள்ளப்படும். (எழுத். 134) வினைச்சொற்கள் பால்காட்டி வருவன வினையியலுள், 'அம் ஆம் முதலாக' (சொல். 205) ஈறுபற்றி ஓதினவெல்லாம் எனக் கொள்க. இனி அவ்வினைச் சொற்கள் 'காலமொடு வருநவும்' என்றதனான், காலங்காட்டி வருவன, உண்டான் என்புழி இடைக்கண் டகரமும், உண்ணாநின்றான் என்புழி ஆநின்றும், உண்பான் என்புழிப் பகரமும், அத்தன்மைய பிறவும் எனக்கொள்க. காலம் உணர்த்தி வருதலான் அவை காலம் எனப்பட்டன. உண்டான் என்புழிக் காலங்காட்டும் டகரத்துடனே பால் காட்டும் ஆன் வந்தவாறு அறிக. இவ்வாறு பாலும் காலமும் காட்டுவன வினைக்கென் றோதினும் அதனைப் பெரும்பான்மையாக்கி உண்டவன் என்றாற் போலப் பெயர்க்குங் கொள்க. இனி 'ஒன்றென முடித்தல்' என்பதனான் வினைச்சொற்கண் பாலுணர்த்துவனவேயன்றிப் பெயர்க்கே உரிய வாய்பாட்டான் உணர்த்து வனவுங் கொள்ளப்படும். அவை நம்பி, நங்கை என்னும் இகர ஐகார ஈறுபோல்வன எனக் கொள்க. வேற்றுமை யுருபாய் வருவன வேற்றுமை யோத்தினுள் 'அவை தாம் பெயர் ஐ ஒடு கு' (சொல். 65) என்னும் சூத்திரத்துப் பெயர் ஒழிந்த ஏழும் எனக் கொள்க. இவற்றை ஓத்து அடைவுபற்றி முன் கூறாதது, வினைக்கண் வருவன பெரும்பான்மையாகல் பற்றிப் போலும். மற்றை அசைநிலையும், இசைநிறையும், குறிப்பிற் பொருள் செய்குநவும் இவ்வோத்தினுள் தத்தம் சிறப்புச் சூத்திரத்துள்ளே உதாரணங் காட்டப்படும். ஒப்பில் வழியாற் பொருள் செய்குநவற்றிற்கு உதாரணம் இதன் பின்னதிகாரத்து உவமையியலுள் காணப்படும். இச்சூத்திரத்து முன்னைய மூன்றும் முன்னர் ஓதிப் போந்தன வாகலான் முன் வைக்கப்பட்டன. பின்னையது பின்னதிகாரத்துக் கூறலான் பின் வைக்கப்பட்டது. இடையன இவ்வோத்தினுள் கூறப்படுதலான் இடைநின்றன. ஆயின் இடைக்கணின்ற மூன்றனுள்ளும் பொருள் செய்வதனை முன் சொல்லாது அசைநிலை இசைநிறைகளை முன் சொல்லியது என்னை எனின், இவை இரண்டும் ஒழிய ஈற்றின் முன்னும் பின்னும் நின்றவை யெல்லாம் பெரும்பான்மையினவாய் நிற்றலானும், அவைதாம் இவை யாய் நிற்றலானும், இவைதாம் அவையாய் நிற்றல் சிறுபான்மை யாகலானும் என்பது. (2) இடைச்சொற்காவதோர் இலக்கணம் 253. அவைதாம், முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும் அன்னவை எல்லாம் உரிய என்ப. என் - எனின், இன்னும் அவற்றிற்காவதொரு விதியுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் வகுக்கப்பட்டவைதாம், முன்னிடத்தும் பின்னிடத் தும் பெயர்வினையாகிய மொழிகளை அடைந்து வருதலும், அச்சொற்கள் தம்மீறு ஒருவழி எழுத்து வேறுபட்டு வருதலும், மற்றோர் இடைச்சொல் தான் நிற்குமிடத்தே நிற்றலுமாகிய அத்தன்மையை யுடைய இலக்கணம் எல்லா வற்றிற்கும் இலக்கணமாதற்குரிய எ-று. (எ-டு.) முன்னடுத்தது: அதுமன், கேண்மியா என்பன. பின் னடுத்தது: கொன்னூர், ஓஒதந்தார் என்பன. ஈறுதிரிந்தது: மன்னைக் காஞ்சி, இஃதொத்தன் என்பன. பிறிதவணிலையல்: மகவினை, மடவை மற்றம்ம என்பன. மன்னைச் சொல், தில்லைச்சொல் என்பனவோ எனின், அவை பொருளுணர்த்தாது சொல் தம்மை உணர நின்றவாகலான் ஈண்டைக்கு ஆகா என்பது. மற்றென்னை திரிபு பெறுமாறு எனின், உடம்பொடு புணர்த்தல் என்பதனான் அவற்றை இவ்வாறு ஓதிய சூத்திரங்களான் பெறுதும் என்பது. (3) 'மன்': பொருட் பாகுபாடு 254. கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்(று) அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. என் - எனின், இது தத்தங்குறிப்பிற் பொருள் செய்குநவற்றுள் ஒன்றன் பொருட்பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கழிவுப் பொருண்மைக்கண் வரும் மன்னும், ஆக்கப் பொருண்மைக்கண் வரும் மன்னும், ஒழியிசைப் பொருண்மைக்கண் வரும் மன்னும் என மூன்று கூற்றதாம் என்ப, மன்னென்னும் சொல்லது பொருட்பாகுபாட்டு வேற்றுமை எ-று. இவ்வாறு பொருளுணர்த்தலும் அவ்விடைச் சொற்காவதோர் இலக்கணம் என்பது. அவ்வுதாரணம் உரையிற் கொள்ளப்படும். (எ-டு.) 'சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே' (புறம். 235) இது கழிவு. பண்டு காடுமன்: இஃது ஆக்கம். பண்டு காடு என்பதன்றோ இன்று நாடு என்று ஆக்கமுணர்த்துகின்றது எனின், அதன் பொருளை இதுவுங் கூடிநின்று உணர்த்திற்று என உணர்க. பண்டு கூரியதொரு வாண்மன்: இஃது ஒழியிசை. இன்றொரு குறைபாடுடைத்தாயிற்று என்னுஞ் சொல் ஒழிந்தமை தோற்றுவித்து நின்றமை காண்க. (4) 'தில்': பொருட் பாகுபாடு 255. விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்(று) அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. என் - எனின், இதுவும் அது. (இ-ள்.) விழைவின் கண்ணதும், காலத்தின் கண்ணதும், ஒழியிசைக்கண்ணதும் என மூன்று கூற்றதாம் என்ப, 'தில்' என்னும் இடைச்சொல் எ-று. (எ-டு.) "வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி, யரிவையைப் பெறுகதில் லம்ம யானே" (குறுந். 14) இது விழைவு. "பெற்றாங் கறிகதில் லம்மஇவ் வூரே" (குறுந். 14) என்பது காலம். "வருகதில் அம்மவெஞ்சேரி சேர" (அகம். 276) என்பது ஒழியிசை. (5) 'கொன்': பொருட் பாகுபாடு 256. அச்சம் பயமிலி காலம் பெருமையென்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே. என் - எனின், இதுவும் அது. (இ-ள்.) அச்சத்தின்கண்ணும், பயனின்மைக்கண்ணும், காலத்தின் கண்ணும், பெருமைக்கண்ணும் என அக்கூறு நான்காம் கொன்னைச் சொல் எ-று. (எ-டு.) 'கொன்முனையிரவூர்' (குறுந். 91) என்பது அச்சம். கொன்னே வந்தான் என்பது பயனின்மை. "கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ" என்பது காலம். 'கொன்னூர் துஞ்சினும்' (குறுந். 138) என்பது பெருமை. (6) 'உம்': பொருட் பாகுபாடு 257. எச்சஞ் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று அப்பா லெட்டே உம்மைச் சொல்லே. என் - எனின், இதுவும் அது. (இ-ள்.) எச்சத்தின்கண்ணதும், சிறப்பின்கண்ணதும், ஐயத்தின் கண்ணதும், எதிர்மறைக்கண்ணதும், முற்றின்கண்ணதும், எண்ணி கண்ணதும், தெரிநிலைக்கண்ணதும், ஆக்கத்தின் கண்ணதும் என அக்கூறு எட்டாம் 'உம்' என்னுஞ் சொல் எ-று. எச்சம் இறந்தது தழீஇயதும், எதிரது தழீஇயதும் என இரு வகைத்து. அவையாவன:- யான் கருவூர்க்குச் செல்வேன் என்றாற்கு யானும் அவ்வூர்க்குப் போதுவல் என்பதும், அவ்வாறு கூறினார்க்கு யானும் உறையூர்க்குப் போதுவன் என்பதூஉம் என இவை. இனிச்சிறப்பு - உயர்வுசிறப்பும், இழிவுசிறப்பும் என இரு வகைத்து. உயர்வு - தேவர்க்கும் வேம்பு கைக்கும் என்பது; ஊர்க்கும் அணித்தே பொய்கை (குறுந். 113) என்பதும் அது. இழிபு - அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது என வரும். ஐயம் - பத்தும் எட்டும் உள என்பது. எதிர்மறை - கொற்றன் வருதற்கும் உரியன் என்பது. இவ்வெதிர் மறை "அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே" (எழுத். 155) எனப் பண்பு பற்றியும் வரும். எச்சத்தோடு இதனிடை வேற்றுமை யென்னையெனின், அது பிறிதொரு பொருளினைத் தழுவும், இஃது அப்பொருட் டாயினும் ஒரு கூற்றைத் தழுவும் என்பது. இனி முற்று - தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என்பது. 'யாது மூரே', (புறம். 192) 'நாளு மன்னான் புகழு மன்னை' என்பனவும் முற்றும்மை. இனி எண் - நிலனும் நீருந் தீயும் வளியும் ஆகாயமுமெனப் பூதமைந்து என்பது. இனித் தெரிநிலை - 'நன்றுமன்று தீதுமன்று' என்பது "இடை நிகர்த்தது" என்றொரு பொருண்மை தெரிவித்து நிற்றலான் தெரிநிலை என்றாயிற்று. இனி ஆக்கம் - நெடியனும் வலியனுமாயினான் என்பது. இஃது எண்ணன்றோவெனின், ஒருபொருடன்னையே சொல்லுதலின் அன்றா யிற்றுப்போலும். மற்றும் இதனகத்து விகற்பமெல்லாம் அறிந்துகொள்க. (7) 'ஓ': பொருட் பாகுபாடு 258. பிரிநிலை வினாவே யெதிர்மறை ஒழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ இருமூன் றென்ப ஓகா ரம்மே. என் - எனின், இதுவும் அது. (இ-ள்.) பிரிநிலைப்பொருண்மை, வினாப்பொருண்மை, எதிர் மறைப் பொருண்மை, ஒழியிசைப் பொருண்மை, தெரிநிலைப் பொருண்மை என இவற்றைச் சிறப்புப் பொருண்மையொடு தொகுத்து ஆறு என்று சொல்லுப ஆசிரியர் ஓகாரத்துப் பொருண்மை எ-று. (எ-டு.) பிரிநிலை - இவருள், அவனோ கொண்டான் என்பது. இஃது இப்போது வினாவாய் நடக்கின்றதென உணர்க. இனி வினா - அவனோ அல்லனோ என்பது. இனி எதிர்மறை - யானோகொள்வேன் என்பது. இனி ஒழியிசை - கொளலோ கொண்டான் என்பது. இனித் தெரிநிலை - நன்றோவன்று தீதோவன்று என்பது. இனிச் சிறப்பு - ஓஒபெரிது என்பது. (8) 'ஏ': பொருட் பாகுபாடு 259. தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை யிவ்வைந் தேகா ரம்மே. என் - எனின், இஃது ஏகாரம் பெரும்பான்மை பொருள்படுமாறும் சிறுபான்மை யசைநிலையாமாறும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தேற்றப்பொருண்மை, வினாப்பொருண்மை, பிரிநிலைப் பொருண்மை, எண்ணுப்பொருண்மை, ஈற்றசையாதல் என இவ்வைந்து வகைப்படும் ஏகாரம் எ-று. (எ-டு.) தேற்றம் - அவனே கொண்டான். இனி வினா - நீயே கொண்டாய்? இனிப் பிரிநிலை - இவருள், அவனே கொண்டான். இனி எண் - நிலனே நீரே தீயே வளியே. இனி ஈற்றசை - 'கடல்போல் தோன்றல காடிறந் தோரே.' (அகம்.1) ஈற்றசை என்றமையான் மொழி முதற்கண் அசையாகாது என்பது. (9) 'என': பொருட் பாகுபாடு 260. வினையே குறிப்பே யிசையே பண்பே எண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங் கண்ணிய நிலைத்தே யெனவென் கிளவி. என் - எனின், இது பொருள்படுவதொன்றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முன்னின்ற வினைச்சொல்லைப் பின்வரும் வினைச் சொல்லோடு இயைவித்தலென்னும் பொருண்மையும், குறிப்புப் பொருண்மைக்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வரும் சொல்லோடு இயைவித்தலென்னும் பொருண்மையும், இசைப்பொருட்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வரும் சொல்லோடு இயைவித்தலென்னும் பொருண்மையும், பண்புப்பொருட்கண் வரும் உரிச்சொல்லினைப் பின்வரும் சொல்லோடு இயைவித்த லென்னும் பொருண்மையும்.... (10) ஏழாவது இடையியல் முற்றிற்று. தொல்காப்பியச் சொல்லதிகாரம் கல்லாடனார் உரை முற்றிற்று. நூற்பா நிரல் (எண் : நூற்பா எண்) அஆவஎன - சொல்லே 9 அஆவஎன - படர்க்கை 218 அச்சக் கிளவிக்(கு) 102 அச்சம் பயமிலி 256 அடைசினை முதலென 26 அண்மைச் சொல்லிற் 134 அண்மைச் சொல்லே 130 அத்திணை மருங்கின் 221 அதற்குவினை உடைமையின் 77 அதனின் இயறல் 75 அதுஇது உதுஎன 170 அதுஎன் வேற்றுமை 96 அதுச்சொல் வேற்றுமை 216 அப்பொருள் கூறின் 36 அம்ம என்னும் 156 அம்முக் கிளவியும் 233 அயல்நெடி தாயின் 148 அர்ஆர் பஎன 209 அவ்வழி அவன்இவன் 165 அவ்வே இவ்வென 122 அவற்றுள், அஎனப் 111 அவற்றுள், அன்என் இறுதி 133 அவற்றுள், இஈ 124 அவற்றுள், எழுவாய் 66 அவற்றுள், செய்கென் 207 அவற்றுள், செய்யும் 240 அவற்றுள், தருசொல் 29 அவற்றுள், நான்கே 178 அவற்றுள், நீயென் 192 அவற்றுள், பன்மை 212 அவற்றுள், பெயரெனப் 163 அவற்றுள், முதனிலை... 232 அவற்றுள், முன்னிலைக் கிளவி 225 அவற்றுள், முன்னிலை தன்மை 228 அவற்றுள், யாதென 32 அவற்றுள், வினைவேறு 53 அவற்றொடு வருவழிச் 237 அவைதாம், அம்ஆம் 205 அவைதாம், இஉ 123 அவைதாம், தத்தம் 117 அவைதாம், புணரியல் 252 அவைதாம், பெண்மை 179 அவைதாம், பெயர்ஐ 65 அவைதாம், முன்னும் 253 அவைதாம், வழங்கியல் 115 அளபெடைப் பெயரே 138, 144, 152 அளபெடை மிகூஉம் 128 அளவும் நிறையும் 119 அன்ஆன் அள்ஆள் 208 அன்ன பிறவும்... அஃறிணை 173 அன்ன பிறவும் உயர்திணை 169 அன்ன பிறவும் தொன்னெறி 103 ஆஓ ஆகும் 198 ஆக்கக் கிளவி 22 ஆக்கந் தானே 21 ஆடூஉவறி சொல் 2 ஆண்மை அடுத்த 166 ஆண்மை சுட்டிய 184 ஆண்மை திரிந்த 12 ஆயென் கிளவி 215 ஆரும் அருவும் 141 ஆறன் மருங்கின் 100 ஆறா குவதே 80 ஆனென் இறுதி 135 இசைத்தலும் உரிய 60 இடைச்சொற் கிளவியும் 162 இடையெனப் படுப 251 இதனதிதுவிற் 112 இதுசெயல் வேண்டும் 245 இயற்கைப் பொருளை 19 இயற்கையின் உடைமையின் 81 இயற்பெயர்க் கிளவியுஞ் 38 இயற்பெயர் சினைப் பெயர் 177 இர்ஈர் மின்னென 226 இரட்டைக் கிளவி 48 இரண்டன் மருங்கின் 95 இரண்டா குவதே 72 இருதிணைச் சொற்கும் 175 இருதிணைப் பிரிந்த 164 இருதிணை மருங்கின் 10 இறப்பின் நிகழ்வின் 203 இறப்பே எதிர்வே 249 இறுதியும் இடையும் 105 இறைச்சிப் பொருள் வயின் 199 இன்றில உடைய 222 இன்ன பெயரே 196 இனச்சுட் டில்லாப் 18 இனைத்தென அறிந்த 33 ஈற்றுப்பெயர் முன்னர் 98 உகரந் தானே 126 உயர்திணை யென்மனார் 1 உருபுதொடர்ந் தடுக்கிய 104 உருவென மொழியினு 24 உளவெனப் பட்ட 155 எச்சஞ் சிறப்பே 257 எஞ்சிய இரண்டன் 147 எஞ்சிய கிளவி 227 எடுத்த மொழி யினஞ் 61 எண்ணுங் காலும் 47 எதிர்மறுத்து மொழியினுந் 109 எப்பொரு ளாயினும் 35 எல்லாச் சொல்லும் 158 எல்லாம் என்னும் 189 எல்லாரும் என்னும் 167 எவ்வயிற் பெயரும் 69 ஏழா குவதே 82 ஏனை உயிரே 127 ஏனை உருபும் 113 ஏனை எச்சம் 234 ஏனைக் காலமும் 250 ஏனைக் கிளவி 193 ஏனைப் புள்ளி 132 ஏனை யிரண்டும் 30 ஐந்தா குவதே 78 ஐயும் கண்ணும் 107 ஒருபெயர்ப் பொதுச்சொல் 49 ஒருபொருள் குறித்த 42 ஒருமை சுட்டிய... 186 ஒருமை யெண்ணின் 44 ஒருவர் என்னும் 194 ஒருவரைக் கூறும் 27 ஒருவினை ஒடுச்சொல் 93 ஒன்றறி கிளவி 8 ஒன்றறி சொல்லே 3 ஒன்றன் படர்க்கை 219 ஒன்றுவினை மருங்கின் 54 ஓம்படைக் கிளவிக்கு 99 ஓவும் உவ்வும் 125 கடதற என்னும் 206 கண்கால் புறமகம் 83 கண்ணும் தோளும் 62 கருமம் அல்லாச் 86 கழிவே ஆக்கம் 254 கள்ளொடு சிவணும் 172 கன்றலும் செலவும் 88 காப்பின் ஒப்பின் 73 காலந் தாமே 202 காலம் உலகம் 58 கிளந்த அல்ல 120 கிளந்த இறுதி 153 குஐ ஆன்என 110 குடிமை யாண்மை 57 குத்தொக வரூஉம் 101 குறித்தோன் கூற்றம் 56 குறிப்பினும் வினையினும் 204 கூறிய முறையின் 70 சிறப்பி னாகிய 41 சினைநிலைக் கிளவி 87 சுட்டுமுத லாகிய 40 சுட்டுமுதற் பெயரும் 151 சுட்டுமுதற் பெயரே 145 செப்பினும் வினாவினும் 16 செப்பும் வினாவும் 13 செப்பே வழீஇயினும் 15 செய்து செய்யூச் 230 செய்தென் எச்சத்து 241 செயப்படு பொருளைச் 248 செயற்கைப் பொருளை 20 செலவினும் வரவினும் 28 சொல்லெனப் படுப 161 தகுதியும் வழக்குந் 17 தடுமாறு தொழில் 97 தத்தம் எச்சமொடு 239 தநநு எஎ ன 157 தன்மை சுட்டலும் 25 தன்மை சுட்டின் 195 தன்மைச் சொல்லே 43 தன்னுள் உறுத்த 190 தாமென் கிளவி 187 தானென் கிளவி 188 தானென் பெயரும் 140 திணையொடு பழகிய 200 தெரிநிலை யுடைய 174 தெரிபுவேறு நிலையலும் 160 தேற்றம் வினாவே 259 தொழிலிற் கூறும் 136 தொழிற்பெய ராயின் 142 நான்கா குவதே 76 நிகழூஉ நின்ற 176 நிலப்பெயர் குடிப்பெயர் 168 நிலனும் பொருளும் 236 நின்றாங் கிசைத்தல் 59 நீயிர் நீயென 191 நும்மின் திரிபெயர் 146 பண்புகொள் பெயரும் 137, 143 பல்ல பலசில 171 பல்லா றாகப் 85 பல்லோர் படர்க்கை 229 பலவயி னானும் 51 பன்முறை யானும் 235 பன்மை சுட்டிய 185 பன்மையும் ஒருமையும்... 211, 217, 220, 223 பால்மயக் குற்ற 23 பாலறி மரபின் 214 பிண்டப் பெயரும் 92 பிரிநிலை வினாவே 258 பிறிதுபிறி தேற்றலும் 106 பின்முன் கால்கடை 231 புள்ளியும் உயிரும் 154 பெண்மைச் சினைப்பெயர் 180 பெண்மை சுட்டிய உயர்திணை 4 பெண்மை சுட்டிய எல்லாம் 183 பெண்மை சுட்டிய சினைமுதற் 181 பெண்மை முறைப்பெயர் 182 பெயர்நிலைக் கிளவி 71 பெயரி னாகிய 68 பெயரினும் தொழிலினும் 50 பெயரெஞ்சு கிளவியும் 238 பொருண்மை சுட்டல் 67 பொருண்மை தெரிதலுஞ் 159 பொருளொடு புணராச் 37 மகடூஉ மருங்கின் 197 மன்னாப் பொருளும் 34 மாரைக் கிளவியும் 210 மிக்கதன் மருங்கின் 244 முதல்சினைக் கிளவிக்கு 89 முதலிற் கூறும் 116 முதலும் சினையும் 91 முதன்முன் ஐவரின் 90 முந்நிலைக் காலமும் 242 முற்படக் கிளத்தல் 39 முறைப்பெயர்க் கிளவி ஏயொடு 139 முறைப்பெயர்க் கிளவி முறைப் 150 முறைப்பெயர் மருங்கின் 129 முன்னிலை வியங்கோள் 224 மூன்றனும் ஐந்தனும் 94 மூன்றா குவதே 74 யாஅர் என்னும் 213 யாதன் உருபின் 108 யாதெவ னென்னும் 31 ரஃகா னொற்றும் 7 வண்ணம் வடிவே 79 வன்புற வரூஉம் 246 வாராக் காலத்தும் 243 வாராக் காலத்து வினைச் 247 வியங்கோள் எண்ணுப் 45 விழைவே காலம் 255 விளிஎனப் படுப 121 விளிகொள் வதன்கண் 64 வினாவுஞ் செப்பே 14 வினையின் தோன்றும் 11 வினையினும் பண்பினும் 149 வினையெனப் படுவது 201 வினையே குறிப்பே 260 வினையே செய்வது 114 வினைவேறு படாஅப் 55 வினைவேறு படூஉம்.. 52 வேற்றுமை தாமே 63 வேற்றுமைப் பொருளை 84 வேற்றுமை மருங்கின் 118 வேறுவினைப் பொதுச்சொல் 46 ளஃகா னொற்றே 6 னஃகா னொற்றே 5 னரலள என்னும் 131 சொல் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) அ அஃது 170 அணியம் 217 அணிலே 154 அத்தா 129 அத்திகோசத்தார் 168 அது 170 அதுமன் 162, 251 அம்பர்கிழாஅன் 168 அம்மாட்டான் 166 அரசன் 168 அருமந்தன 17 அருவாளன் 168 அல்லம் 217 அல்லர் 217 அல்லள் 217 அல்லன் 217 அல்லாம் 217 அல்லார் 217 அல்லாள் 217 அல்லான் 217 அல்லெம் 217 அல்லென் 217 அல்லேம் 217 அல்லேன் 217 அவ் 170 அவ்வாட்டி 166 அவ்வாளன் 166 அவர் 168 அவன் 168 அவையத்தார் 168 அழாஅஅன் 138 அழேல் 226 அன்று 223 அன்னா 129 ஆ ஆ 173 ஆக்கள் 172 ஆகாயம் 173 ஆடு 17 ஆடூஉ 166 ஆண்பால் 148 ஆண்மகன் 166 ஆயர் 168 ஆயிரம் 120, 171 ஆறு 17 ஆனை 17 இ இஃது 170 இடா 160 இது 170 இம்மாட்டான் 166 இருவர் 168 உ உடையம் 217 உடையர் 217 உடையள் 217 உடையன் 217 உடையாம் 217 உடையார் 217 உடையாள் 217 உடையான் 217 உடையெம் 217 உடையென் 217 உடையேம் 217 உடையேன் 217 உண்கிட 226 உண்கிடா 226 உண்கின்றன 218 உண்கின்றனம் 205 உண்கின்றனர் 209 உண்கின்றனள் 208 உண்கின்றனன் 208 உண்கின்றனென் 206 உண்கின்றாம் 205 உண்கின்றார் 209 உண்கின்றான் 208 உண்கின்றில 218 உண்கின்றிலம் 205 உண்கின்றிலர் 209 உண்கின்றிலன் 208 உண்கின்றிலாம் 205 உண்கின்றிலார் 209 உண்கின்றிலான் 208 உண்கின்றிலெம் 205 உண்கின்றிலேம் 205 உண்கின்றலேன் 206 உண்கின்றெம் 205 உண்கின்றேம் 205 உண்கின்றேன் 206 உண்கு 206 உண்குப 209 உண்குபு 230 உண்கும் 205 உண்குவ 9 உண்குவம் 205 உண்குவர் 208 உண்குவள் 208 உண்குவன் 208 உண்குவாம் 205 உண்குவார் 209 உண்குவாள் 208 உண்குவான் 208 உண்குவெம் 205 உண்குவென் 206 உண்குவேம் 205 உண்குவேன் 206 உண்குவை 225 உண்டது 8 உண்டன 9, 218 உண்டனம் 205 உண்டனர் 209 உண்டனள் 208 உண்டனன் 208 உண்டனென் 206 உண்டனேம் 205 உண்டனை 225 உண்டாம் 205 உண்டாய் 136, 149, 225 உண்டார் 7, 209 உண்டாள் 6, 162, 208 உண்டான் 5, 162, 208 உண்டி 225 உண்டிர் 226 உண்டில 218 உண்டிலது 223 உண்டிலம் 205 உண்டிலர் 209 உண்டிலன் 208 உண்டிலாம் 205 உண்டிலாய் 225 உண்டிலார் 209 உண்டிலாள் 208 உண்டிலான் 208 உண்டிலிர் 226 உண்டிலீர் 226 உண்டிலெம் 205 உண்டிலென் 206 உண்டிலேம் 205 உண்டிலேன் 206 உண்டீர் 226 உண்டீரே 142 உண்டு 206 உண்டுகாண் 226 உண்டும் 205 உண்டென 230 உண்ணல் 226 உண்ணல 218 உண்ணலம் 205 உண்ணலர் 209 உண்ணலாய் 225 உண்ணலாய் 225 உண்ணலை 225 உண்ணன்மார் 210 உண்ணா 9, 218 உண்ணாக்கால் 238 உண்ணாதி 225 உண்ணாதது 238 உண்ணாநிற்ப 209 உண்ணாநிற்றி 225 உண்ணாநின்மின் 226 உண்ணாநின்றது 8 உண்ணாநின்றன 9, 218 உண்ணாநின்றனம் 205 உண்ணாநின்றனர் 209 உண்ணாநின்றனன் 208 உண்ணாநின்றனென் 206 உண்ணாநின்றாம் 205 உண்ணாநின்றாய் 225 உண்ணாநின்றார் 209 உண்ணாநின்றாள் 6, 208 உண்ணாநின்றான் 5, 208 உண்ணாநின்றிர் 226 உண்ணாநின்றில 218 உண்ணாநின்றிலம் 205 உண்ணாநின்றிலர் 209 உண்ணாநின்றிலன் 208 உண்ணாநின்றிலாம் 205 உண்ணாநின்றிலார் 209 உண்ணாநின்றிலிர் 226 உண்ணாநின்றிலீர் 226 உண்ணாநின்றிலேம் 205 உண்ணாநின்றிலேன் 205 உண்ணாநின்றீர் 226 உண்ணாநின்றெம் 205 உண்ணாநின்றேம் 205 உண்ணாம் 206 உண்ணார் 209 உண்ணான் 209 உண்ணீர் 226 உண்ணுமது 238 உண்ணுமவர் 236 உண்ணுமவள் 236 உண்ணுமவன் 236 உண்ணுமவை 236 உண்ணூஉ 230 உண்ணேன் 206 உண்ப 209 உண்பது 8 உண்பம் 205 உண்பர் 209 உண்பல் 206 உண்பன் 208 உண்பாய் 225 உண்பார் 209 உண்பாள் 6 உண்பான் 5 உண்பிர் 226 உண்பீர் 226 உண்பெம் 205 உண்பென் 206 உண்பேம் 205 உண்பேன் 206 உண்மின் 226 உஃது 170 உது 170 உம்மாட்டான் 166 உரிநுகு 206 உவ் 170 உவ்வாட்டி 166 உவ்வாளன் 166 உவை 170 உழுபு 230 உழுதென 230 உழூஉ 230 ஊ ஊணம் 217 எ எட்குப்பை 81, 92 எட்சாந்து 81 எல்லாரும் 167 எல்லீரும் 167 ஏ ஏமாள் 148 ஏனாதி 169 ஒ ஒட்டகம் 173 ஒருவர் 168 ஒன்று 120, 171 ஓ ஓடென 230 ஓடி 230 ஓடுபு 230 ஓடூஉ 230 க கங்கைமாத்திரர் 168 கணியீரே 142 கணியே 127 கபிலம் 116 கரிய 9, 223 கரியது 8, 171 கரியம் 217 கரியர் 7, 217 கரியன் 5, 217 கரியாம் 25, 49, 137, 217 கரியாய் 137 கரியார் 217 கரியான் 137, 217 கரியிர் 226 கரியீர் 226 கரியீரே 143 கரியெம் 217 கரியென் 217 கரியேம் 217 கரியேன் 217 கருங்களமர் 17 கருங்கோட்டது 223 கழுதை 173 கறுகறுத்தார் 48 காரை 17 காழ்த்தவிடத்து 231 கிழவிமாட்டு 82 கிழாஅஅன் 138 குண்டுகட்டு 8, 219 குரிசில் 147 குருடன் 217 குழையையுடையன் 85 குளம்பின்று 8 குறவர் 168 குறிய 9 குறுகுறுத்தார் 48 குறுங்கோட்டது 222 குறுங்கோட்டன 222 குறுங்கோட்டிற்று 223 குறுஞ்சூலி 18 குறுந்தகடி 18 குறுமூக்கி 18 கூத்தீர் 141 கூயிற்று 8 கூறிற்று 219 கேளிர்! 132 கொடுந்தாட்டு 8, 219 கொன்னூர் 251 கோ 132 கோஒஒள் 152 கோட்ட 223 கோடில 222 கோடின்று 222 கோடுடைத்து 222 கோடுடைய 222 கோமாள் 148 கோவே 125 ச சாத்தனதனை 106 சாத்தனதனொடு 106 சாத்தனதோ 106 சாத்தனாடை 106 சாத்தாஅ! 155 சாத்தீ 153 சில 171 சிறாஅஅர் 144 சிறிது 223 சுண்ணத்தான் 169 சுருசுருத்தது 48 செஞ்ஞாயிறு 18 செம்போத்து 18 செம்மற்று 223 செய்து 230 செய்ய 9, 222 செய்யதும் 7 செய்யர் 7 செய்யள் 6 செய்யன் 137, 225 செய்யான் 168 செய்யீரே 143 செலவிற்று 223 செலவின 223 செலவினம் 217 செவிடன் 217 சேயம் 217 சேர்ப்ப 134 சேர்ப்பா 133 சேரமான்! 135 சேரமான் 41 சேறு 206 சேறும் 205 சோணாடு 17 சோழ 134 சோழா 133 சோழியன் 168 த தந்தாய் 153 தந்தையர் 168 தம்முனே 132 தமள் 169 தமன் 169 தவிர்வல் 206 தாயர் 168 தாயிற்று 8, 219 திருமுகு 206 தின்குவ 9 தின்குபு 230 தின்பல் 206 தின்மின் 226 தின்றீரே 142 தின்றென 230 தின்னா 9 தின்னும் 226 தின்னூஉ 230 தீயம் 217 தீனம் 217 தும்பீ 123 துலாம் 119 தூஉ 230 தூபு 230 தூய் 230 தொடி 119 தொடியோள் 198 தொடுவழி 231 தொல்காப்பியம் 116 தொழீஇ 128 தொழீஇஇஇ 128 தோன்றால் 147 ந நங்காய் 124 நங்கை! 130 நங்கை 166 நம்பி! 130 நம்பி 166 நம்பியீரே 142 நம்பீ! 124 நம்பீஇ 155 நம்முன்னே 132 நல்லம் 217 நாய் 173 நாய்கள் 172 நால்வர் 168 நாழி 119 நிலத்தம் 217 நிலத்தர் 217 நிலத்தள் 217 நிலத்தன் 217 நிலத்தாம் 217 நிலத்தார் 217 நிலத்தாள் 217 நிலத்தான் 217 நிலத்தினென் 217 நிலத்தினேன் 217 நிலத்தெம் 217 நிலத்தேம் 217 நிலம் 173 நின்றாய் 136 நீர் 173 நீலம் 17 நுமர் 169 நுமள் 169 நுமன் 169 நூறு 120, 171 நெடுவெண்டிங்கள் 18 ப பட்டிபுத்திரர் 168 படைக்குழாம் 81, 92 படைக்கை 85, 106 பத்து 120 பல்ல 171 பல 171 பலபொருளன் 217 பறி 17 பார்ப்பான் 168 பார்ப்பீர் 141 பிற்கொண்டான் 231 பிற 177 பிறர் 169 பிறள் 169 பிறன் 169 பிறிது 173 பின்னர் 231 பின்னை 231 புக்கு 230 புக்கென 230 புகுபு 230 புகூஉ 230 புல்வாய் 173 புலவரான 111 புலி 173 புலியே 154 புள்ளினான் 111 பூட்டு 223 பெண்டாட்டி 166 பெண்டீரே 132 பெண்பால்! 148 மழை பெய்யுமேலும் 230 மழை பெய்யுமேனும் 230 பெருங்கண்ணர் 168 பெருங்காலர் 168 பெருங்கூத்தன் 18 பெருங்கூற்றன் 18 பெருந்தோளர் 168 பொதியில் 17 பொருள 223 பொல்லாய் 225 பொன்னன்னது 171, 224 பொன்னன்னம் 217 பொன்னன்னர் 217 பொன்னன்னள் 217 பொன்னன்னன் 217 பொன்னன்ன 171, 222 பொன்னன்னாம் 217 பொன்னன்னார் 166, 217 பொன்னன்னாள் 166, 217 பொன்னன்னான் 166, 217 பொன்னன்னெம் 217 பொன்னன்னென் 217 பொன்னன்னேம் 217 பொன்னன்னேன் 217 ம மக்கள் 166 மக்காள் 147 மகடூஉ 166 மகள் 166 மகன் 166 மகளே 153 மகனே 139 மகாஅஅர் 144 மடப்பிணை 18 மரமே 154 மருமளே 153 மருமகனே 139 மலாடு 17 மலையமான் 135, 168 மற்றையது 173 மற்றையன 173 மற்றையார் 169 மற்றையாள் 169 மற்றையான் 169 மறப்புலி 18 மாந்தர் 166 மீகண் 17 மீயடுப்பு 17 முயற்கோடு 158 முல்லாய் 123 முடவன் 217 முற்கொண்டான் 231 முன்றில் 17 முன்னர் 231 முன்னை 231 மூவர் 168 மேற்று 223 ய யா 170 யாது 170 யாவை 170 வ வடக்கண்ண 223 வடாது 223 வண்ணத்தான் 169 வந்தக்கால் 231 வந்தது 219 வந்திலது 219 வரவினம் 217 வருது 206 வருதும் 205 வருவது 219 வல்லம் 217 வல்வில்லன் 217 வலியம் 217 வனைந்தான் 114 வாயிலான் 169 வாராது 219 வாராநின்றது 219 வாராநின்றிலது 219 வானி 120 விடுத்தக்கால் 231 விடுவழி 231 வில்லன் 217 வில்லி 120 வினையுட்டு 223 வெண்கோட்டது 222 வெண்கோட்டன 222 வேட்டுவர் 168 வேந்து 130 வேந்தே! 125 வைகற்று 223 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) அ அச்சுறிகை குத்தும் 248 அட்ட செந்நெற் சோறு 239 அடிசில் கைதொட்டார், அயின் றார் 46 அடிமை நன்று, தீது 57 அடும் செந்நெற் சோறு 239 அணிகலம் அணிந்தார் மெய்ப்படுத்தார் 46 அது இல்லை 227 அது உண்டது 11 அது உண்ணும் 229 அது செய்ம்மன 227 அது செல்க 228 அது யாவை (வழு) 11 அது வந்தன (வழு) 11 அது வந்தார் (வழு) 11 அது வந்தாள் (வழு) 11 அது வந்தான் (வழு) 11 அது வேறு 227 அந்தணர் வாழ்க 61 அம்மா கொற்றா 156 அம்மிப் பித்தும் துன்னூ சிக் குடரும் சக்கிரவர்த்தி கோயிலுள்ளும் இல்லை 34 அரசர்கட் சார்ந்தார் 86 அரசரைச் சார்ந்தார் 86 அரசரொடு வந்தார் சேவகர் 93 அரசனோடு ஆயிரவர் மக்கள் தாவடி போயினார் 50 அரசன் எடுத்த ஆலயம் 248 அரசு வந்தது, போயிற்று 57 அரியை அளக்கும் 73 அலிவந்தது, போயிற்று 57 அவ்வழிக் கொண்டான் 105 அவ்விடத்துக்கண் கொண்டான் 105 அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது 257 அவர் இல்லை 227 அவர் உண்டார் 11 அவர் உண்ணும் ஊண் 237 அவர்செய்ம்மன 227 அவர்வேறு 227 அவன் இல்லை 11 அவள் உண்டாள் 11 அவள் உண்ணும் 229 அவள் செய்ம்மன 227 அவள் செல்க 228 அவள் வேறு 227 அவற்குத்தமன் 77 அவற்கு நட்புடையன் 77 அவற்குப் பகை மாற்றான் 77 அவற்றுள் எவ்வெருது கோட் பட்டது? 32 அவன் அவள் அவர் அது அவை உண்ணும் இல்லம் 236 அவன் அவள் அவர் அது அவை உண்ணும் ஊண் 236 அவன் அவள் அவர் அது அவை உண்ணும் காலை 236 அவன் அவள் அவர் அது அவை உண்ணும் சோறு 236 அவன் அவள் அவர் அது அவை எறியும் கல் 236 அவன் அது 11 அவன் அவை 11 அவன் இல்லை 227 அவன் உண்டார் 11 அவன் உண்டாள் 11 அவன் உண்டான் 11 அவன் உண்ணும் 229 அவன் உண்ணும் இல்லம் 237 அவன் ஒதுங் காலை 237 அவன் உண்ணும் சோறு 237 அவன் ஏறிற்று இக்குதிரை 71 அவன் சாத்தன் 38 அவன் செய்ம்மன 227 அவன் யாவள் 11 அவன் வந்தது (வழு) 11 அவன் வந்தன (வழு) 11 அவன் வேறு 227 அவனும் தன் படைக் கலமும் சாலு(ரு)ம் 43 அவனே கொண்டான் 259 அவனோ கொண்டான் 258 அவனோ அல்லனோ? 258 அவனோ கொண்டான்? 258 அவை இல்லை 227 அவை உண்டன 11 அவை உண்ணும் 228 அவை செய்ம்மன 227 அவை செல்க 228 அவை வந்தன (வழு) 11 தவஞ் செய்தான் சுவர்க்கம் புகும் 244 அறம் செய்யாநிற்குமவன் சுவர்க்கம் புகுவன் 244 அறவினையுடையன் 73 ஆ ஆ இது 67 ஆகாயத்துக்கண் பருந்து 83 ஆதீண்டு குற்றி 50 ஆர்த்தாக் கொண்மார் வந்தார் 210 ஆசிரியன் சாத்தன் 41 ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இனங் கண்ணன் சாத்தன் வந்தான் 42 ஆமைமயிர்க்கம்பலமும் முயற்கோடும் சக்கிர வர்த்தி கோயிலுள்ளும் இல்லை 34 ஆண்மை நன்று தீது 57 ஆபல 67 ஆயன்சாத்தன் வந்தான் 67 ஆய்வந்தது 183 ஆயாது 67 ஆவந்தது 174 ஆவந்தன 174 ஆவாழ்க 61 ஆவிற்குக் கன்று 112 ஆவினது கன்று 81 ஆவினுட் பெண்ணைப் பிடிஎன்றல் (வழு) 11 ஆவும் ஆயனும் செல்க 45 ஆன்கன்று நீரூட்டுக 55 இ (இஃது) குத்து 116 (இஃது) ஏறு 116 இஃதொத்தன் 253 இக்காட்டுள் புகின் கூறை கோட்பாட்டான் 247 இக்காட்டுள் புகின் கூறை கோட்படுகிறான் 247 இக்குதிரை நடை நன்று 67 இத்தேர் செலவு கடிது 67 இதனின் இழிந்தது இது 79 இதனின் கடிது இது 79 இதனின் சிறந்தது இது 79 இதனின் சிறிது இது 79 இதனின் தண்ணிது இது 79 இதனின் தீது இது 79 இதனின் தீவிது இது 79 இதனின் நன்று இது 79 இதனின் நாறும் இது 79 இதனின் நெடிது இது 79 இதனிற் பழையது இது 79 இதனின் புதிது இது 79 இதனிற் பெரிது இது 79 இதனின் மூத்தது இது 79 இதனின் மெலிது இது 79 இதனின் வட்டம் இது 79 இதனின் வலிது இது 79 இதனின் வெய்யது இது 79 இந்நூல் எழுத்து 120 இந்நூல் சொல் 120 இப்பொன் கடிசூத்திரம் 120 இப்பண்டி உள்ளது எவன்? 31 இப்பயறல்லது இல்லை 36 இம்மணி நிறம் நன்று 67 இம்மலர் நாற்றம் பெரிது 67 இம்மணி நல்ல 223 இம்மணி பொல்லா 223 இயம் இயம்பினார், படுத்தார் 46 இருவன் மூவன் இருத்தி முத்தி (இவை வழு) 44 இருந்தான் குன்றத்து 106 இருந்தான் குன்றத்துக்கண் 105 இல்லம் மெழுகிற்று 248 இலை நட்டு வாழும் 116 இவ்வாள் எறியும் 248 இவ்யானை கோடு கூரிது 67 இவ்வயல் நெல்விளையும் 67 இவற்குக் காலம் ஆயிற்று 58 இவ்வாறு நீர் ஒழுகும் 67 இவரிற் சிலர் இவர் 79 இவரிற் பலர் இவர் 79 இவளுக்குக் கொள்ளும் இவ்வணி 112 இவனின் ஆயினான் இவன் 79 இவனின் இலன் இவன் 79 இவனின் இழிந்தவன் இவன் 79 இவனின் உடையன் இவன் 79 இவனின் இளையோன் இவன் 79 இவனின் சிறந்தவன் இவன் 79 இவனின் பழையன் இவன் 79 இவனின் புதியன் இவன் 79 இவையல்லது இல்லை 37 இறைவன் அருளலின் யாம் உயிர் வாழ்தும் 67 இறைவன் அருளால் எம் முயிர் காக்கும் 67 இன்று இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறத்திற்கக் கறக்கும் 50 இன்று இவ்வூரார் எல்லாம் தைந்நீராடுப 50 உ உடம்பு நுணுகிற்று 58 உண்கு வந்தேன் 207 உண்குபு வந்தான் 232 உண்கும் வந்தேம் 207 உண்டது அது 11 உண்டது தின்றன வந்தது கிடந்தன ஓரெருது (வழு) 11 உண்டன அவை 11 உண்டனர் அல்லர் 209 உண்டனர் அல்லார் 209 உண்டனள் அல்லள் 208 உண்டனள் அல்லாள் 208 உண்டார் அவர் 11 உண்டாள் அவள் 11 உண்டான் அவர் 11 உண்டாள் அவள் 11 உண்டான் அவன் 11 உண்டான் தின்றான் ஓடினான் பாடினான் சாத்தன் 11 உண்டான் பசித்த சாத்தன் 239 உண்டு வந்தான் 232 உண்டேன் போந்தேன் 243 உண்ணாச் சாத்தன் 238 உண்ணும் சாத்தன் 238 உண்ணாது வந்தான் 238 உண்ணூஉ வந்தான் 232 உண்பாக்கு வந்தான் 231 உண்பான் வந்தான் 231 உணற்கு வந்தான் 230 உயிர்க்கிழவன் போயினான் 60 உயிர்போயிற்று 58 உலகத்தோர் பசித்தார் 60 உலகு பசித்தது 58 உழுந்துள 222 உழுந்து அல்ல பயறு 222 உழுதுகிழுது உண்பான் 235 உழுதுண்டு தின்றோடிப் பாடி வந்தான் 235 உழுது வருவான் சாத்தன் 241 உழுந்தல்லது இல்லை 35 உறையூர்க்குச் செல்லாயோ, சாத்தா என 15 உறையூர்க்குச் செல்லாயோ, சாத்தா? என என் கடனுடையார் வளைப்பர் என்றல் 15 ஊ ஊர்க்கால் இருந்தான் 82 ஊர்க்குச் சேயன் 112 ஊர்க்குத் தீர்ந்தான் 112 ஊர்க்குப் பற்றுவிட்டான் 112 ஊர்ப்புடை இருந்தான் 83 ஊரின் தீர்ந்தான் 79 ஊரின் பற்றுவிட்டான் 79 ஊருள் இருந்தான் 83 ஊரை இழக்கும் 79 ஊரைக் காக்கும் 73 ஊரைப் பெறும் 73 எ எண்ணது குப்பை 81 எண்ணொடு விராய அரிசி 75 எயிலை இழைக்கும் 73 எயினர் நாடு 49 எருது வந்தது; அதற்குப் புல்லிடுக, 38 எருப்பெய்து இளங்களை கட்கு நீர்கால் யாத்தமை யான் பயிர் நல்ல 22 எருப்பெய்து......நல்லவாயின 22 எருமைக்கன்று நீரூட்டுக 55 எல்லாம் உண்டும் 190 எல்லாம் வந்தன 189 எல்லாம் வந்தார் 189 எல்லாம் வந்தீர் 189 எல்லாம் வந்தோம் 189 (எறும்பு முட்டைகொண்டு தெற்றி ஏறுவது கண்டுழி) மழை பெய்கின்றது என்றல்; மழை பெய்தது என்றல் 247 எவன் அது 221 எவன் அவை 221 என் கண் வந்தது, போயிற்று 57 என் காதல் வந்தது, போயிற்று 27, 57 என் பாவை வந்தது, போயிற்று 27, 57 என் யானை வந்தது, போய்ற்று 57 என் கால் முட்குத்திற்று என்றல் 15 எனக்குத் தரும் காணம் 29 ஏ ஏர்ப்பின் சென்றான் 82 ஏனாதி நல்லுதடன் 41 ஒ ஒடுவங் காடு 49 (ஒரு) கூற்றம் வந்தது 57 ஒருவர் வந்தார் 194 ஒருவன்கொல்லோ ஒருத்தி கொல்லோ இதோ தோன்றுவார்? 23 ஒருவிரல் காட்டி, பூஇது குறிதோ நெடிதோ?பூ என்றல 13 ஒன்று கொல்லோ பலகொல்லோ செய்புக்க பெற்றம்? 24 ஓஒ தந்தார் 253 ஓ ஓடூஉப் பாடூஉ வந்தான் 235 ஓஒ பெரிது 258 க கடந்தான் நிலத்தை 105 கடந்தான் நிலம் 107 கடலொடு காடொட்டாது 103 கடி சூத்திரத்துக்குப் பொன் 77 கடுத்தின்றான் 116 கடுவும் கைபிழி யெண்ணெயும் பெற்றமையான் மயிர் நல்ல 22 கடுவும்......நல்ல வாயின 21 கண்கழீஇ வருதும் 17 கண் குறைத்தான் 90 கண்ணான் கொத்தை 75 கண்ணிண்கண் குத்தினான் 87 கண்ணைக் குத்தினான் 87 கண் நல்லள் 62 கதிர் மூக்கு ஆரல் 27 கபிலரது பாட்டு 81 கமுகந் தோட்டம் 49 கரிய சாத்தன் 238 கரிவனாகம் 27 கரும்பிற்கு வேலி 77 கருமுகமந்தி 17 பூகருவூர்க்கு வழி யாது?பூ என்றாற்கு, பூபருநூல் பன்னிரு தொடிபூ என்றல் 13 கருவூரின் கிழக்கு 79 கருவூருக்குக் கிழக்கு 112 கள்ளரின் அஞ்சும் 79 கற்பார்க்குச் சிறந்தது செவி 77 கன்று நீரூட்டுக 55 காக்கையிற் கரிது களம்பழம் 78 காட்டுச்சார் ஓடும் களிறு 82 காணத்தாற் கொண்ட அரிசி 75 காது நல்லள் 62 காமத்தின் பற்றுவிட்டான் 79 காரைக்காடு 49 கால்மேல் நீர்பெய்து வருதும் 17 காலன் கொண்டான் 60 காலான் முடவன் 75 காவோடு அறக்குளம் தொட்டான் 75 கிளியை ஓப்பும் 73 கீழைச்சேரிக் கோழி அலைத்தது 61 குடங்கொண்டான் வீழ்ந்தான் 61 குடிமை நல்லன் 59 (இவற்குக்) குடிமை நன்று, தீது 57 குரிசில் வந்தது 57 குருடு வந்தது, போயிற்று 57 குழவி எழுந்தது கிடந்தது 57 குழிப்பாடி 118 குழையை உடையன் 73 குற்றி அல்லன் மகன் 25 குற்றிகொல்லோ மகன் கொல்லோ இதோ தோன்றுகின்ற உரு? 24 குற்றிளை நாடு 49 குன்றத்துக்கண் இருந்தான் 105 குன்றத்துக்கண் குவடு 82 குன்றத்துக் கூகை 82 கூழிற்குக் குற்றேவல் செய்யும் 77 கெழீஇயிலி வந்தது 57 கைக்கு யாப்புடையது கடகம் 77 கைகுறியராய் இருந்தார் 17 கையிடத்துப் பொருள் 82 கையிற்று வீழ்ந்தான் 233 கையிறுப்பு வீழ்ந்தான் 233 கையிறூஉ வீழ்ந்தான் 233 கைவலத்துள்ளது கொடுக்கும் 82 கொடியொடு துவக்குண்டான் 74 கொடி ஆடிற்று 115 கொடி துஞ்சும் 115 கொடுத்தான் சாத்தற்கு 105 கொடும்புற மருது வந்தது 186 கொடும்புற மருது வந்தாள் 186 கொடும்புற மருது வந்தான் 186 கொண்டான் அவ்விடத்துக் கண் பொருள் 105 கொப்பூழ் நல்லள் 62 கொல்யானை உண்டு 68 கொள்வாக்கு வந்தான் 231 கொள்வான் வந்தான் 231 கொளலோ கொண்டான் 258 (கொற்றன் நல்லனோ சாத்தன் நல்லனோ என வினவினவிடத்து) கொற்றனின் சாத்தன் நல்லன் என்று இறுத்தல் 16 (கொற்றன் மயிர் நல்லவோ, சாத்தன் மயிர் நல்லவோ என வினவின விடத்து) கொற்றன் மயிரின் சாத்தன் மயிர் நல்ல என்று இறுத்தல் 16 கொற்றன் வருதற்கும் உரியன் 257 கோட்டது நுனியைக் குறைத்தான் 91 கோட்டை நுனிக்கண் குறைத்தான் 91 கோட்டை நுனியைக் குறைத்தான் 91 கோதை வந்தது 186 கோதை வந்தாள் 186 கோதை வந்தான் 186 கோயிற்கடைச் சென்றாள் 82 ச சாத்தற்குக் கொடுத்தான் 105 சாத்தற்குச் சோறு கொடுத்தான், 77 சாத்தற்கு மகளுடம்பட்டார் சான்றோர் 77 சாத்தற்கு நெடியன் 112 சாத்தன் அவன் 38 சாத்தன் ஒருவன் 175 சாத்தன் ஒன்று 175 சாத்தன் ஓதல் வேண்டும் 245 சாத்தன் கண் நல்லன் 67 சாத்தன் கையெழுதுமாறு வல்லன்; அதனால் தன் ஆசிரியன் உவக்கும் 40 சாத்தன் தலைவன் ஆயினான் 67 சாத்தன் தன்னைக் குத்தினான் 73 சாத்தன் தான் உண்டக்கடை வரும், கொற்றம் வரும் 234 சாத்தன் தான் உண்டக்கால் கொற்றம் வரும் 234 சாத்தன் தான் உண்டவழிகொற்றம் வரும் 234 சாத்தன் தான் உண்டவிடத்து கொற்றம் வரும் 234 சாத்தன் தான் உண்ணாமுன் கொற்றம் வரும் 234 சாத்தன்மயிரின் கொற்றன்மயிர் நல்ல என்றிறுத்தல் 16 சாத்தன் யாழெழூஉம் குழலூதும் 176 சாத்தன் வந்தது 84, 175 சாத்தன் வந்தான் 67, 175 சாத்தன் வந்தான்; அவற்குச் சோறு கொடுக்க 38 சாத்தனது ஆண்மை 81 சாத்தனது தோட்டம் 81 சாத்தனது இயற்கை 81 சாத்தனது உடைமை 81 சாத்தனது ஒற்றிக்கலம் 81 சாத்தனது கண்ணைக் குத்தினான் 89 சாத்தனது கிழமை 81 சாத்தனது செயற்கை 81 சாத்தனது சொல் 81 சாத்தனது துணை 81 சாத்தனது தோட்டம் 81 சாத்தனது நடை 81 சாத்தனது நன்று 106 சாத்தனது புத்தகம் 81 சாத்தனது முதல் 81 சாத்தனது முதுமை 81 சாத்தனது வனப்பு 81 சாத்தனது வாழ்ச்சி 81 சாத்தனது வாள் 81 சாத்தனது வினை 81 சாத்தனின் கொற்றன் நல்லன் 16 சாத்தனைக் கண்ணுட் குத்தினான் 90 சாத்தனின் வலியன் 105 சாத்தனை நூலை ஓதுவித்தான் 90 சாத்தனொடு கொற்றன் வந்தான் 75 சாத்தனொடு வந்தான் 105 பூசாத்தா,.....பூ என்றாற்கு, உண்பேன், உண்ணேன் என்றல். 14 பூசாத்தா, சோறுண்டாயோ?பூ என்றாற்கு, பூஉண்ணேனோ?பூ என்பது, 13 சாத்தி சாந்தரைக்குமாறு வல்லள்; அதனால் தன் கொண்டான் உவக்கும். 40 சாத்தி வந்தது 183 சாத்தி வந்தாள் 183 சாத்தன் வந்தான்; அவட்குப் பூக்கொடுக்க. 38 சான்றோரிடை இருந்தான் 82 சிறுகருஞ் சாத்தன் 26 சிறுபைந்தூவி 26 சூதின்கட் கன்றினான் 88 சூதினைக் கன்றினான் 88 செங்கால் நாரை 26 செம்பின் ஏற்றை 17 செய்ய சாத்தன் 238 செவ்வாய் எழுந்தது, பட்டது 58 செவியிலி வந்தது 186 செவியிலி வந்தாள் 186 செவியிலி வந்தான் 186 செற்றாரைச் செறும் 73 சேயை நோக்கும் 73 சேரமான் சேரலாதன் 41 சொல் நன்று, தீது 58 சோழன் நலங்கிள்ளி 41 சோற்றை அட்டான் 73 சோற்றைக் குழைத்தான் 73 சோறு அட்டது 248 சோறு ஆவதாயிருந்தது 238 சோறு இன்றியிருந்தது. 238 சோறு உண்டாயிருந்தது. 238 ஞ ஞாணை அறுக்கும் 73 ஞாயிறு எழுந்தது, பட்டது 58 த தச்சக் கொற்றன் 41 தட்டுப்புடையுள் வந்தான் 82 தட்டுப்புடையுள் வலியுண்டு 82 தந்தை தலைச் சென்றான் 82 தந்தையொடு சூளுற்றான் 103 தந்தை வந்தது 184 தந்தை வந்தான் 184 தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார். 257 தலைமகனைச் செலவின்கண் அழுங்குவித்தல் 90 தலைமகனைச் செலவை அழுங்குவித்தல் 90 தவம் செய்யின் சுவர்க்கம் புகும் 244 தாம் வந்தன 187 தாம் வந்தார் 27, 187 தாய்க்குக் காதலன் 77 தாய் வந்தது 183 தாய் வந்தாள் 183 தாயை உவக்கும் 73 தாயை ஒக்கும் 73 தாயைக் கொன்றான் நிரயம் புகும் 244 தாழ்குழல் வந்தாள் 120 தான் வந்தது 188 தான் வந்தான் 188 திங்கள் எழுந்தது 58 திரிதாடி வந்தான் 120 திருவினாள் வந்தாள் 4 தினையின் கிளியைக் கடியும். 104 தீய சாத்தன் 238 தீவெய்து 19 துடிபோலும் இடை 16 தெங்கு தின்றான் 116 தேர்முன் சென்றான் 82 தேரோடும் புறம். 236 தேவர்க்கும் வேம்பு கைக்கும் 257 தோள் நல்லன் 62 ந நங்கை முலையிரண்டும் வீங்கின 33 நஞ்சுண்டான் சாம் 164 நட்டார்க்குக் காதலன் 77 நம்பிக்கு மகன் 96 நம்பி கண்ணிரண்டும் நொந்தன 33 நம்பி நாயொடு வந்தான் 93 நம்பி நூறு எருமை யுடையன் 50 நம்மரசன் ஆயிரம் யானை யுடையன் 50 நமருள் யாவன் போயினான்? 32 நரகர் வந்தார் 4 நரகன் வந்தான் 4 நரகி வந்தாள் 4 நல்ல சாத்தன் 238 நன்றுமன்று தீதுமன்று 257 நன்றோ அன்று தீதோ அன்று 258 நாட்டைப் பழிக்கும் 73 நாம் இல்லை 227 நாம் செய்ம்மன 227 நாம் வேறு 227 நாயன்று நரி 222 நாயாற் கோட்பட்டான் 76 நாவிதன் மாறன் 41 நாவினை வணக்கும் 73 நிலத்தது அகலம் 81 நிலத்தைக் கடந்தான் 105 நிலம் வலிது 19 நிலனும் நீரும் தீயும் வளியும் ஆகாயமும் எனப் பூதம் ஐந்து 257 நிலனே நீரே தீயே வளியே 258 நீ இல்லை 227 நீ செய்ம்மன 227 நீயிர் உண்ணும் இல்லம் 237 நீயிர் உண்ணும் ஊண் 237 நீயிர் உண்ணும் சோறு 237 நீயிர் எறியும் கல் 237 நீயிர் ஓதும் காலை 237 நீயிர் இல்லை 227 நீயிர் செய்ம்மன 227 நீயிர் வேறு 227 நீயும் நின்படைக்கலமும் சாறிர் 43 நீயே கொண்டாய் 259 (பூஉறையூர்க்குச் செல்லாயோ, சாத்தாபூ என) பூநீ செல்பூ என்றல் 15 நீர் தண்ணிது 19 நீலம் 116 நீ வந்தாய் 192 நீ வேறு 227 நும் நாடு யாது? 31 பூநும் நாடியாதுபூ என்றாற்கு, பூபாண்டு நாடுபூ என்றல் 13 நூல் நூற்றான் 73 நூலைக் கற்கும் 73 நெடியனும் வலியனும் ஆயினான் 257 நெடுங்கழுத்தல் வந்தது 185 நெடுங்கழுத்தல் வந்தன 185 நெடுங்கழுத்தல் வந்தாள் 185 நெடுங்கழுத்தல் வந்தான் 185 நெடுநூலொடு நார் இயைந்தது போலும் 75 நெடுவெண்டிங்கள் 18 நெல்லைத் தொகுக்கும் 73 நெறிக்கண் சென்றான் 88 நெறியைச் செல்லும் 73 நெறியைச் சென்றான் 88 ப படைத்தலைவன் கீரன் 41 படையை வெகுளும் 73 பண்டு காடுமன் 254 பண்டு கூரியதோர் வாள்மன் 254 பண்ணிற்குத் தக்கது பாட்டு 77 பத்தும் எட்டும் உள 257 பரண பாட்டியல் 81 பல அன்று ஒன்று 25 பாண்டியன் மாறன் 41 பார்ப்பனச் சேரி 49 பாரியது பாட்டு 81 புருவம் நல்லள் 62 புரோசு வந்தது 57 புலிகொல் யானை 97 புலிகொல் யானை ஓடுகின்றது 98 புலிகொல் யானைக் கோடு வந்தது 98 பூபுலிநின் றிறந்த நீரல் ஈரத்துபூ 17 புலி பாய்ந்தாங்கு பாய்ந்தான் 16 புலியது உகிர் 81 பூங்கன்று நீரூட்டுக 55 பூதம் புடைத்தது 58 பூ நட்டு வாழும் 116 பூவிற்குத் தக்கது வண்டு 77 பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் 25 பெண்மை நன்று, தீது 57 பெருங்கால் யானை வந்தது 185 பெருங்கால் யானை வந்தன. 185 பெருங்கால் யானை வந்தாள் 185 பெருங்கால் யானை வந்தான் 185 பெருந்தோள் சிறு நுசுப்பின் பேரமர்க்கண் பேதை 26 பூபெருமா, உலறினீரால்பூ என்றாற்கு, வாளாதே பூஉலறினேன்பூ என்றல் 13 பெருவிறல் வந்தது 57 பேடிகள் வந்தன 57 பேடியர் வந்தார் 4, 12 பேடி வந்தது 57 பேடி வந்தாள் 4, 12 பைங்கூழ் நல்லவாயின 20, 22 பொல்லாச் சாத்தன் 238 பொறியறை வந்தது, போயிற்று 57 பொன் போலும் மேனி 16 பொன்னை நிறுக்கும் 73 ம மக்கட்குப் பகை பாம்பு 77 மக்களை யுடையர் 50 மக நன்று 57 மணியது நிறத்தைக் கெடுத்தான் 90 மணியை நிறத்தின்கண் கெடுத்தான் 90 மணியை நிறத்தைக் கெடுத்தான் 90 மயிர்க்கு எண்ணெய் 77 மயிர் நல்லவாயின 20, 22 மரத்தைக் குறைக்கும் 73 மரத்தைக் குறைத்தான் 73 மரம் குறைக்கப்பட்டது 73 மருவூரின் மேற்கு 79 மழை பெய்தென உலகம் ஆர்ந்தது 234 மழை பெய்தென மரம் குழைத்தது 234 மழை பெய்தென வளம் பெற்றது 234 மழை பெய்யக் குளம் நிறைந்தது 230 மழை பெய்யக் குளம் நிறையும் 230 மழை பெய்யச் சாத்தன் வந்தான் 230 மழை பெய்யாமல் எழுந்தது 238 மழை பெய்யாமல் மரம் குழையா தாயிற்று 238 மழை பெய்யாவிடின் அறம் பெறாது 238 மழை பெய்யாவிடின் மரம் குழையாது 238 மழை பெய்யிய எழுந்தது; மாதவர் அருளினார் 234 மழை பெய்யியர் எழுந்தது; மாதவர் அருளினார் 234 மழை பெய்யின் அறம் பெறும்; குளம் நிறையும் 234 மழை பெய்ய எழுந்தது 230 மழை பெயற்கு எழுந்தது; மாதவர் அருளினார் 234 மழை வண்கை 16 மன்னைக் காஞ்சி 253 மனைவியைக் காதலிக்கும் 73 மாடத்தகத்து இருந்தான் 82 மாடத்து மேல் 82 மாப்பூத்தது, காய்த்தது 53 மாரிக்கண் நாள் 82 மாரிக்கண் வந்தான் 82 மாரிக்கு வந்தான் 112 மா வீழ்ந்தது 54 மாவும் மருதும் ஓங்கின 53 முடக்கொற்றன் வந்தது 184 முடக்கொற்றன் வந்தான் 184 முடக்கொற்றி வந்தது 183 முடவன் வந்தான்; அவற்குச் சோறு கொடுக்க 38 முத்தும் மணியும் பவளமும் பொன்னும் 16 முத்தொடு பவழம் கோத்தது போலும் 75 முப்பத்து மூவரும் வந்தார் 4 முயற்கோடும்......சக்கிரவர்த்தி கோயிலுள்ளும் இல்லை 34 முயற்சியின் பிறத்தலான் இசை நிலையாது 75 முலை நல்லள் 62 மூக்கு நல்லள் 62 மூப்பு நன்று, தீது 57 ய யாம் இல்லை 227 யாம் இன்று விளையாடிற்று இக்கா 250 யாம் இன்று விளையாடுவது இக்கா. 250 யாம் நாளை விளையாடாநின்றது இக்கா. 250 யாம் நாளை விளையாடிற்று இக்கா 250 யாம் பண்டு சூதுபொருவது இக் கழகம் 249 யாம் பண்டு விளையாடும் கா 250 யாம் பண்டு விளையாடுவது இக்கா 249 யாம் செய்ம்மன 227 யாம் வேறு 227 யார் அவர் 213 யார் அவள் 213 யார் அவன் 213 யாழும் குழலும் பறையும் இயம்பினார். 47 யாற்றை நீரை விலக்கினான் 90 யான் ஆடை ஒலிக்கும் இல்லம் 236 யான் ஆடை ஒலித்த கூலி 236 யான் இல்லை 227 யான் உண்டாய் 11 யான் உண்டான் 11 யான் செய்ம்மன 227 யான் செல்லும் ஊர் 236 யான் நீ அவன் உண்ட இல்லம் 236 யான் போந்த ஊர் 236 யான் யாம் நாம் உண்ணும் இல்லம் 236 யான் யாம் நாம் உண்ணும் ஊண் 236 யான் யாம் நாம் உண்ணும் காலை 236 யான் யாம் நாம் உண்ணும் சோறு 236 யான் யாம் நாம் எறியும் கல் 236 யானும் அவனும் இல்லை 227 யானும் அவனும் உண்ணும் இல்லம் 236 யானும் அவனும் செய்ம்மன 227 யானும் அவனும் வேறு 227 யானும் நீயும் அவனும் இல்லை 227 யானும் நீயும் அவனும் உண்ணும் இல்லம் 236 யானும் நீயும் அவனும் செய்ம்மன 227 யானும் நீயும் அவனும் வேறு 227 யானும் நீயும் இல்லை. 227 யானும் நீயும் உண்ணும் இல்லம் 236 யானும் நீயும் செய்ம்மன 227 யானும் நீயும் வேறு. 227 யானைக்குக் கோடு கூரிது. 112 யானைக் கோடுண்டு 68 யானை மேய்ப்பானை இடையன் என்றல் (வழு) 11 யானையது கோட்டைக் குறைத்தான் 89 யானையது கோட்டை, நுனிக்கண் குறைத்தான் 104 யானையது கோடு 81 யானையுட் பெண்ணை ஆ என்றல் 11 யானையைக் கோட்டைக் குறைத்தான் 90 யானை வந்தது 185 யானை வந்தது, போயிற்று 57 யானை வந்தன 185 யானை வந்தாள் 185 யானை வந்தான் 185 யானோ கொள்வேன்? 258 வ வடுகரசர்க்குச் சிறந்தார் சோழிய அரசர் 77 வந்தது அவை 11 வந்தன அது 11 வந்தான் அது 11 வந்தான் அவை 11 வந்தான் சாத்தனொடு 105 வல்லம் எறிந்த நல்லிளங்கோசர் தந்த மல்லல் யானைப் பெருவழுதி 239 வலியன் சாத்தனின் 105 வளி உளரும் 19 வன்மை நன்று, தீது 57 வாசுதேவன் வந்தான் 4 வாணிகத்தான் ஆயினான் 74, 94 வாணிகத்தின் ஆயினான் 94 வாணிகத்தின் ஆயினான் இவன். 79 வாய்க்காலைச் சாரும் 73 வாய்க்குத் தக்கது வாய்ச்சி 112 வாயான் தக்கது வாய்ச்சி 75 வாயிலான் சாத்தன் 41 பூவானோக்கி வாழும்பூ 95 விரலை முடக்கும் 73 விருந்து வந்தது, போயிற்று 57 வில் பற்றி நின்று, பூகோல் தாபூ என்பது 53 வினை நன்று, தீது 58 வெண்கோட்டி யானை 18 வெள்ளி எழுந்தது, பட்டது 58 வேந்து (செங்கோல்) நல்லன் 59 வேந்து வந்தது 57 வேலான் எறிந்தான் 74 வேள்வந்தது 57 செய்யுள் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) 228 அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின் 240 அம்பல் ஊரும் அவனொடு மொழிமே - அகம். 51 30 அரி மலர்ந்தன்னகண் .......... தரா. 39 அவன் அணங்கு நோய் செய்தான்...... விளைவு 206 அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி - குறுந். 192 236 ஆர்களிறு மிதித்த நீர் திகழ் - குறுந். 52 210 ஆர்த்துஆ கொண்மார் வந்தார் 18 இடுகுகவுண் மடப்பிடி 33 இருதோள் தோழர் பற்ற 231 இளமையும் தருவதோ இறந்த பின்னே - கலி. 15 71 உண்பவை நாழி உடுப்பவை இரண்டே - புறம். 189 239 உப்பின்று புற்கை உண்கமா கொற்கையோனே 229 என்குறை நீயே சொல்ல வேண்டுமாலலவ - அகம். 170 230 ஒன்றானும் தீச்சொல் - குறள். 258 229 ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும்......மவர் - குறள். 653 259 கடல் போல் தோன்றல காடிறந் தோரே - அகம். 1 228 கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர் 51 கடுஞ்சினத்த கொல்களிறும்........ மாண்டதாயினும் - புறம். 55 199 கடுவன் முதுமகன் கல்லா...... குமரி 223 கதவவால் தக்கதோ காழ்கொண்ட இளமுலை - கலி. 57 200 கழனி ஊரன் - ஐங்குறு. 206 கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்..... காப்பினும் - புறம். 203 53 கழிப்பூக்குற்றும் கானல் அல்கியும் - அகம். 330 231 களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து - குறள். 879 54 கன்றாற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர் - குறுந். 241 154 காட்டுச்சார் ஓடும் குறு முயால் 228 காணன்மார் எமர் - நற். 64 111 காவலோனக் களிறு அஞ் சும்மே 75 காவோடு அறக்குளம் தொட்டான் - திரி. 70 223 காழ்கொண்ட இளமுலை - கலி. 57 108 கிளைஅரில் நாணற்கிழங்கு மணற்கு ஈன்ற முளை - அகம். 212 231 குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் - கலி. 30 236 குண்டு சுனை பூத்த வண்டுபடு கண்ணி - முருகு. 199 71 கொலைவர் கொடுமரம் தேய்த்தார் - கலி. 12 256 கொன்முனை இரவூர்போல - குறுந். 91 256 கொன்வரல் வாடை நினதெனக் கொண்டேனோ 256 கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே - குறுந். 138 67 கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி - புறம். 117 240 சாரல் நாட என் தோழியும் கலுழ்மே 254 சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே - புறம். 235 230 சிறுநீநனி துஞ்சி ஏற்பினும் - கலி. 12 26 சிறுபைந் தூவிச் செங்காற் பேடை 67 சிறுமை பெருமையின் காணாது துணிந்தே - நற். 50 223 செம்மற்று - கலி. 40 1 செய்யார் தேஎந் தெருமரல் கலிப்ப - பொருந. 134 230 செல்வன் தெரிகிற்பான் - பாயிரம் 214 சென்றோர் என்பிலர் தோழி - அகம். 31 51 திங்களும் சான்றோரும் ஒப்பர் - நாலடி. 151 230 துன்னிப் பெரிய ஓதினும் சிறிய உணரா - புறம். 375 232 தம்மின் றமையா நந்நயந் தருளி - நற். 1 215 தெண்கடற் சேர்ப்ப - அகம். 80 236 தேரோடு அவர்ப்புறம் காணேன் ஆயின் - புறம். 71 231 தொடர்கூரத் துவ்வாமை வந்தக் கடை - கலி. 22 198 தொடியோள் மெல்லடி - குறுந். 7 231 தொடுவழித் தொடுவழி - கலி. 30 206 தொல்லது விளைந்தென - புறம். 203 232 தொல்லெழில் வரைத்தன்றி - கலி. 19 214 நல்லை மன்னென நகூஉப் பெயர்ந்தோளே - அகம். 248 232 நந்நயந் தருளி - நற். 1 230 நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே - கலி. 39 107 நாணில மன்றஎங் கண்ணே....... அழலே - குறுந். 35 18 நால்வாய் வேழம் 206 நிலம் வளங்கரப்பினும் - புறம். 203 210 நிலவன் மாரோ புரவலர் - புறம். 375 236 நின்முகம் காணு மருந்தினேன் என்னுமால் - கலி. 60 229 நீயே சொல்லல் வேண்டுமால் அலவ - அகம். 170 230 நுணங்கிய கேள்வியர் அல்லால் - குறள். 419 236 நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ - பதிற்றுப்.12 18 நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே - அகம். 2 235 நெல்லரியும் இருந்தொழுவர்....... பாயுந்து - புறம். 24 210 நோய்மலி வருத்தம் காணன்மார் எமரே - நற். 64 231 படுசுடர் மாலையொடு - கலி. 30 56 பல்லார்தோள் தோய்ந்து..... எமக்கு 210 பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே - புறம். 375 51 பாணன்........ குடியும் இல்லை - புறம். 335 231 பைதனோ யுழப்பாளைக் - கலி. 30 230 புதுவதின் இயன்ற அணியன் - அகம். 66 230 புதுவது புனைந்த வெண்கை யாப்பு 17 (புலி) நின்று இறந்த நீரல் ஈரத்து 30 புனல்தரு பசுங்காய் தின்ற - குறுந். 292 230 பெருங்கையற்ற வென்புலம்பு - புறம். 210 26 பெருந்தலைப் புல்லார் நல்லார் 255 பெற்றாங்கு அறிகதில் அம்மஇவ் வூரே- குறுந். 14 230 பொய்கைப்பூப் புதிதுஈன - கலி. 31 18 மடப்பிணை 236 மற்றிந்நோய் தீரும் மருந்தருளாய் ஒண்யொடி - கலி. 60 18 மாக்கடல் நடுவண்...... கவினை மாதோ - புறம். 4 255 யரிவையைப் பெறுகதில் லம்ம யானே - குறுந். 14 7 யானும் என் எஃகமும் சாறும் 43 யானும் என் எஃகமும்...... போர் 1 யானோ தஞ்சம் பெரும - புறம். 34 223 வகைதெரிவான்கட்டே உலகு - குறள். 27 51 வடுகர் அருவாளர் வான்கருநாடர்.... அறிவுடையார் 215 வந்தோய் மன்ற தெண்கடல் சேர்ப்ப - அகம். 80 232 வயவுநோய் நலிதலின் - கலி. 19 255 வருகதில் அம்ம எஞ்சேரி சேர - அகம். 276 154 வருந்தினை வாழி என் நெஞ்சம் - அகம். 19 231 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை - குறள். 435 215 வார்ந்து இலங்கு வைஎயிற்று.... யானே - குறுந். 14 231 வலனாக வினையென்று - கலி. 35 231 வாரி வளங்குன்றிக்கால் - குறள். 14 240 வாவும் புரவி வழுதி 206 வான்கண்மாறினுஞ் - புறம். 203 95 வான் நோக்கி வாழும் உலகெலாம் - குறள். 542 198 வில்லோன் காலன கழலே.... சிலம்பே - குறுந். 7 132 விளங்குமணிக் கொடும்பூ ணாய்நின் நாட்டு - புறம். 130 214 வினவி நிற்றந் தோனே - அகம். 48 18 வெண்கோட்டு யானை சோணை படியும் - குறுந். 75 51 வேந்தன் பெரும்பதி மண்ணாள் மாந்தர்..... உரியாரே 223 வேலி ஆயிரம் விளையுட்டு ஆக - பொருந. 246, 47 கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) (எண் : நூற்பா எண்) அ அஃறிணை 1, 3 அஃறிணை இயற்பெயர் 174 அஃறிணைக் கிளவி 43 அஃறிணைக்குரிமை 204 அஃறிணை விரவுப்பெயர் 153 அச்சக் கிளவி 102 அசைச்சொல் நீட்டம் 156 அசைநிலைக் கிளவி 252 அண்மைச் சொல் 130, 134 அதுச்சொல் வேற்றுமை 216 அதுவென் வேற்றுமை 89, 96 அதுவெனப் பெயரியவேற்றுமைக் கிளவி 80 அளபெடைப் பெயர் 138, 144, 152 அறியாப் பொருள் 31 அன்மைக் கிளவி 25 ஆ ஆக்கக் கிளவி 22 ஆக்கமொடு கூறல் 20 ஆகுபெயர்க் கிளவி 116 ஆடியற் பெயர் 168 ஆடூஉ அறிசொல் 2, 5 ஆண்மை அறிசொல் 12 ஆண்மை இயற்பெயர் 179 ஆண்மைச் சினைப்பெயர் 180 ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 181 ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி 4, 12 ஆண்மை முறைப்பெயர் 182 ஆய்தப் பெயர் 170 ஆயென் கிளவி 215 இ இகர இறுபெயர் 128 இடைச்சொற் கிளவி 162 இடைநிலை 239 இது செயல் வேண்டும் என்னுங் கிளவி 245 இயற்கைப் பொருள் 19 இயற்பெயர் 177, 178 இயற்பெயர்க் கிளவி 38, 41, 199 இரட்டைக் கிளவி 48 இருதிணை 10 இருதிணைக்கும் ஓரன்ன உரிமை 204 இருதிணைச் சொல் 175, 224 இருதிணைப் பிரிந்த ஐம்பாற் கிளவி 164 இருபாற் கிளவி 221 இருபாற் சொல் 3 இருபெயரொட்டு 116 இருவயின் நிலையும் வேற்றுமை 103 இற்றெனக் கிளத்தல் 19 இறைச்சிப் பொருள் 199 இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 78 இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர் 18 உ உடன்மொழிப் பொருள் 191 உடைப் பெயர் 168 உம்மைச் சொல் 257 உயர்திணை 1, 2, 4 உயர்திணைக்கு உரிமை 204 உரிச்சொல் கிளவி 162 உருபு தொக வருதல் 106 உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி 104 உருபுநிலை 70 உளவென் கிளவி 222 உறழ்துணைப் பொருள் 16 உறுப்பின் கிளவி 57 எ எடுத்த மொழி 61 எண்ணியற் பெயர் 168 எண்ணுக்குறிப் பெயர் 171 எண்ணுத்திணை விரவுப்பெயர் 51 எழுவாய் வேற்றுமை 66 எனவென் கிளவி 260 ஏ ஏதுக் கிளவி 94 ஐ ஐம்பால் 10 ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 72 ஒ ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 74 ஒப்பல் ஒப்புரை 75 ஒப்பினாகிய பெயர்நிலை 171 ஒப்பொடு வரூஉம் கிளவி 166, 222 ஒருபெயர்ப் பொதுச் சொல் 49 ஒருமை இயற்பெயர் 179 ஒருமைச் சினைப்பெயர் 180 ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் 181 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒருவழியுறுப்பு 81 ஒருவினை ஒடுச்சொல் 93 ஒருவினைக் கிளவி 75 ஒன்றறி கிளவி 8 ஒன்றறிசொல் 3 ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒன்றுமார் வினை 88 ஓ ஓம்படைக் கிளவி 99 க கண்ணென் வேற்றுமை 86, 90, 216 கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 82 காரணக் கிளவி 40 காலக் கிளவி 210, 223 காலங் கண்ணிய என்ன கிளவி 231 காலமொடு வரூஉம் வினைச்சொல் 204 குடிப் பெயர் 168 குழுவின் பெயர் 168 குற்றியலுகரம் 126 குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி 217 குற்றியலுகரம் 8, 206, 219 கொடையெதிர் கிளவி 101 கொன்னைச் சொல் 256 ச சார்பென் கிளவி 86 சினைநிலைக் கிளவி 87 சினைநிலைப் பெயர் 168 சினைப்பெயர் 177, 178 சினைமுதற் கிளவி 33 சினைமுதற்பெயர் 177, 178 சினையறி கிளவி 116 சுட்டிக் கூறல் 36 சுட்டுப்பெயர் 40 சுட்டுப்பெயர்க் கிளவி 38 சுட்டுமுதற் பெயர் 140, 145, 151 செய்கென் கிளவி 207 செய்தென் எச்சம் 241 செய்யும் என்னும் கிளவி 229 செய்யுமென் கிளவி 237 செயப்படுபொருள் 248 செயற்கைப் பொருள் 20 செயற்படற்கு ஒத்த கிளவி 112 செறற்சொல் 57 சேய்மையின் இசைக்கும் வழக்கம் 155 சொற்குறிப்பு 91 சொன்மை தெரிதல் 159 த தகுதி 17 தடுமாறு தொழிற்பெயர் 97 தருசொல் 29 தன்மைச் சுட்டல் 25 தன்மைச் சொல் 43, 205 தன்மை திரிபெயர் 57 தன்வினை உரைக்கும் தன்மைச் சொல் 206 தன்னுள் உறுத்த பன்மை 190 தாமென் கிளவி 187 தானென் கிளவி 188 தானென் பெயர் 140 திணைநிலைப் பெயர் 168 தில்லைச் சொல் 255 தீர்ந்துமொழிக் கிளவி 112 தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி 4 தெரிந்த கிளவி 32 தெரித்துமொழி கிளவி 56 தெரிபு வேறு நிலையல் 160 தொழில்முதல்நிலை 114 தொழிற்படக் கிளத்தல் 248 தொழிற்பெயர் 142 தொன்னெறி மரபு 112 ந நிலப்பெயர் 168 நின்றாங்கு இசைத்தல் 59 நும்மின் திரிபெயர் 146 நோக்கல் நோக்கம் 95 ப பகுதிக்கிளவி 17 பண்பினாகிய சினைமுதற் கிளவி 222 பண்புகொள் கிளவி 222 பண்புகொள் பெயர் 116, 137, 143, 168, 171 பல்லோர் அறியும் சொல் 2 பல்லோர் படர்க்கை 229 பலர்வரை கிளவி 176 பலரறிசொல் 7 பலவற்றுப் படர்க்கை 218 பலவறி சொல் 3, 9, 172 பற்றுவிடு கிளவி 112 பன்மை இயற்பெயர் 179 பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி 212 பன்மைச் சினைப்பெயர் 180 பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 62 பன்மை சுட்டிய சினைமுதற் பெயர் 181 பால்திரி கிளவி 197 பால்பிரிந் திசையா உயர்திணை 58 பால் மயக்குற்ற ஐயக் கிளவி 23 பால்வரை கிளவி 112 பால்வரை தெய்வம் 58 பாலறி மரபு 214 பாலறி வந்த அஃறிணைப் பெயர் 170 பாலறி வந்த உயர்திணைப் பெயர் 165 பாலறி வந்த என்ன பெயர் 169, 173 பிண்டப் பெயர் 92 பிறிதுபிறி தேற்றல் 106 பிறிது பொருள் கூறல் 35 பிறிதுபொருள் சுட்டல் 117 புணரியல் நிலை 252 பெண்டென் கிளவி 166 பெண்மை இயற்பெயர் 179 பெண்மைச் சினைப்பெயர் 180 பெண்மை சுட்டிய உயர்திணை 4 பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 181 பெண்மை முறைப்பெயர் 182 பெண்மையடுத்த மகனென் கிளவி 167 பெயர்ச்சொற் கிளவி 112 பெயர்தோன்றுநிலை 66 பெயர்நிலைக் கிளவி 41, 71, 167, 189, 194 பெயர்ப்பயனிலை 67 பெயரின் தோன்றும் பாலறி கிளவி 11 பெயரினாகிய தொகை 68 பெயரெஞ்சு கிளவி 238, 240 பொதுப்பிரி பாற் சொல் 44 பொருட்கிளவி 77 பொருண்மை தெரிதல் 159 பொருண்மை நிலை 160 பொருள்செல் மருங்கு 108 பொருள் தெரிநிலை 53 பொருள் புணர்ந்த கிளவி 15 பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் 37 ம மக்கட் சுட்டு 1 மகடூஉ வறிசொல் 2, 6 மகளென் கிளவி 166 மகனென் கிளவி 166 மயங்குமொழிக் கிளவி 249 மன்னாப் பொருள் 34 மன்னைச் சொல் 254 மாரைக் கிளவி 7, 210 முதல்சினைக் கிளவி 89 முதலறி கிளவி 116 முந்நிலைக் காலம் 242 முப்பால் 213 முப்பாற் சொல் 2 முற்படக் கிளத்தல் 39 முறைநிலைப் பெயர் 168 முறைப் பெயர் 129, 156, 177, 178, 182 முறைப்பெயர்க் கிளவி 139, 150 முன்னத்தின் உணருங் கிளவி 57 முன்னிலைக் கிளவி 225 மூவிடம் 28 மெய்ந்நிலைப் பொதுச் சொல் 242 மெய்ப்பொருள் 123 மெய்யறி பனுவல் 98 மேலைக் கிளவி 217 ய யானென் பெயர் 140 வ வண்ணச் சிலைச் சொல் 26 வருசொல் 29 வழக்கினாகிய உயர்சொற் கிளவி 27 வழக்கு 17 வழக்குவழி 50 வழாஅல் ஓம்பல் 13 வாராக் காலம் 241, 243, 247 வாழ்ச்சிக் கிழமை 100 வியங்கோட் கிளவி 228 வியங்கோள் 224 வியங்கோள் எண்ணுப் பெயர் 45 விரைந்த பொருள் 243 விளிகொள் பெயர் 123, 131 விறற்சொல் 57 வினாவின் கிளவி 32, 213 வினாவின் பெயர் 140, 146, 151 வினாவுடை வினைச்சொல் 246 வினைக் குறிப்பு 72 வினைச்சொற் கிளவி 243, 247 வினைசெய் இடம் 82 வினைசெயல் மருங்கு 252 வினைப்படு தொகுதி 33 வினைப்பெயர் 168 வினைப்பெயர்க் கிளவி 171 வினைமுதல் உரைக்கும் கிளவி 116 வினைமுதல் கருவி 74 வினைமுதற் கிளவி 236, 244 வினையின் தோன்றும் பாலறிகிளவி 11 வினையெஞ்சு கிளவி 224, 230, 238 வினை வேறு படாஅப் பலபொருள் ஒருசொல் 52, 55 வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல் 52, 53 வேற்றுமைக் கிளவி 112 வேற்றுமைப் பொருள் 84 வேறுபெயர்க் கிளவி 42 வேறுவினைக் கிளவி 75 வேறுவினைப் பொதுச்சொல் 46 வேறென் கிளவி 224 கலைச்சொல் நிரல் (உரைவழி) (எண் : நூற்பா எண்) அ அஃறிணைத் திணைவழூஉ 11 அகரஉருபு 81 அசைநிலை இடைச்சொல் 1 அடைச்சொற்கள் 245 அதற்குடம்படுதல் 77 அதிகாரப் புறனடை 13, 45 அதிகாரவாற்றல் 244 அதுவாகு கிளவி 77 அம்மிப்பித்து 34 அருத்தாபத்தி 7 அல்வழிச் சந்தி 8 அல்வழிப் புணர்ச்சி 69 அல்வழிப் புணர்ச்சித் திரிபு 69 அலகுநிலைத் தானங்கள் 120 அவனறிவு தான்கோடல் 13 அழிவழக்கு 26 அழுங்குவித்தல் 90 அறியான் வினாதல் 13 அறிவொப்புக் காண்டல் 13 அறுவகைப் பெயர் 216 அன்மொழித் தொகை 1 அன்மொழித் தொகையான் 116 ஆ ஆக்கப்பொருண்மை 94 ஆடூஉ அறிசொல் 5 ஆடூமகடூ 123 ஆணலி 4 ஆணொழி மிகுசொல் 50 ஆதீண்டுகுற்றி 50 ஆமைமயிர்க் கம்பலமும் 34 ஆறுதொகை 1 இ இசைகுறிப்பு பண்பு 48 இடக்கரடக்கல் 17 இடத்து நிகழ் பொருள் 67 இடத்துநிகழ் பொருளின் தொழில் 67 இடமயக்கம் 30 இடவழு 30 இடவழூஉ 1, 11 இடாமிடா 160 இடுகுறி 71 இடைக்குறைந்து நின்றது 230 இடைநிகர்த்தது 257 இதனதிது என்னுங் கிளவி 81 இயற்கை பொருள் 19 இரட்டுற மொழிதல் 42, 77, 217 இரண்டு கணம் 201 இரண்டு திணை 1 இருபெயரொட்டுப் பண்புத்தொகை 1, 7, 8 இல்லதொன்று உண்டாக்கல் 73 இலக்கணமில்வழிக் கூறிய வழுவமைதி 12 இலக்கண வாய்பாடு 26 இற்றெனக்கிளத்தல் 228 இறந்தகால வினைத்தொகை 1 இறந்தது காத்த(ல்) 237 இறந்ததுதழீஇய எச்சவும்மை 77 இறந்த வழக்கு 227 இறைச்சிப் பொருள் 200 இறைப்பொருள் 14 இறைவன் அருளல் 67 இன்மை செப்பல் 224 இனனில் விதப்பு 18 ஈ ஈற்றசை 1, 2, 63 உ உடம்பொடு புணர்தல் 33 உடைமை 63 உம்மை எதிர்மறை 111, 129 உயர்திணை வினைக்குறிப்பு 222 உருபிலக்கணம் 63 உருபீறு திரிபு 70 உருபு 25 உருபுதொகை 1 உருபும் பொருளும் 112 உரையிற் கோடல் 1, 11, 31, 53, 81, 240 உவமத்தொகை 1 உள்பொருள் 25 உளப்பாட்டுத்தன்மை 205 எ எட்டுவகைப்பட்ட இலக்கணத்தான் 1 எட்டுவேற்றுமை 1 எடுத்த மொழி 62 எடுத்தோத்து 32 எண்ணசை 43 எண்ணிடைச் சொற்கள் 73 எண்ணுநிலை 1 எதிர்கிளவி 101 எதிர்மறுத்து மொழிதல் 238 எதிரது தழீஇ 77 எல்லை 63 ஏ ஏழுவழு 1 ஏற்புழிக்கோடல் 196, 240 ஏதுப்பொருட் குறிப்பு 95 ஐ ஐந்துபால் 1 ஐயமறுத்தல் 4, 13 ஒ ஒப்பலொப்புரை 75 ஒப்பில்வழி 117 ஒப்புணர்த்தல் 16 ஒப்புமைப்பண்பு 216 ஒப்புள்வழி 27 ஒப்பொடு வரூஉங் கிளவி 222 ஒருகணம் 201 ஒருகூற்றை விலக்குதல் 12 ஒருசொன் மயக்கம் 241 ஒருமை இயற்பெயர் 179 ஒருமை ஈறு 211 ஒருமைச்சொல் 3 ஒருமைத் திணை 177 ஒருமை வாய்பாடு 194 ஒன்றியற் கிழமை 81 ஒன்றினமுடித்தல் 18, 24, 99, 106 ஒன்று பலகுழீஇயது 81, 92 ஒன்றென முடித்தல் 85, 207, 220, 222, 230, 235, 236, 239, 241, 244, 248, 250, 252 ஓ ஓசை பிளவுபட்டிசைத்தல் 67 ஓம்படை 99, 102 க கண்டு வைத்துத் துணிதல் 247 கருப்பொருள் 199 கருமச்சார்ச்சி 86 கருமச்சிதைவு 55 கருமமல்லாச் சார்பு 86 கருவி 63 கருவிக்கருத்தா 1 கள்ளொடு சிவணின இயற்பெயர் 172 காட்டா மரபின 113 காரக ஏது 75 காரணக்குறி 1 கால மயக்கம் 229 காலமயக்கவமைதி 242 காலவழுவமைதி 245, 241 காலவழூஉ 1, 11 கிளவியாக்கம் 1 குணப்பண்பு 216 குறிப்புவினை 6 குறிப்பு வினைச்சொல் 216 குறைக்கும் வழி குறைத்தல் 1, 13 கொடைக்கிளவி 101 ச சந்தவின்பம் 63 சான்றோர் செய்யுள் 17, 51, 199 சிவணுங் குறிப்பு 239 சிறப்பின்மை 64 சிறப்பு 77 சிறுபான்மை 64 சிறுவழக்கிற்று 230 சினைக்கிளவி 33 சினையொடு முடியா 233 செப்பு மூடியக்காற்போல அமைதல் 236 செப்புரை 11 செப்பு வழுவமைதி 14 செப்புவழூஉ 1 செய்த என்னும் பெயரெச்சம் 4 செயப்படுபொருள் 63 செய்யும் என்னும் முற்றுச்சொல் 10 செய்யுள் விகாரம் 7, 107, 218 செயற்கைப் பொருள் 19 சொல்லுவான் குறிப்பினவாறாதல் 92 சொல்லுவான் குறிப்பு 98 சொல்லொடு சொன்மயக்கம் 243, 244 சொல் வாய்பாடு 226 சொன்மயக்கம் 242 சொன்மை தெரிதல் 159 ஞ ஞாபக ஏது 75 ஞாபகம் 42 ஞாபக வகை 177 த தடுமாறு தொழிற்பெயர் 97 தத்தம் குறிப்பு 226 தத்தம்வினை 191 தந்திரவுத்தி 2, 218, 224, 231 தற்கிழமை 103 தவஞ்செய்தல் 244 தவஞ்செய்தான் சுவர்க்கம் புகும் 244 தவத்தான் உயர்தல் 93 தற்கிழமையும் பிறிதின் கிழமையும் 222 தன்மை சுட்டல் 25 தன்னின முடித்தல் 38, 45, 222, 224, 236 தனித்தன்மை 205 தாய்க்கொலை 244 திணைவழூஉ 1 துலாம் 119 தெய்வப்பகுதி 58 தெரிநிலை 6 தெரியாநிலைச் செயப்படுபொருள் 73 தொகுக்கும்வழித் தொகுத்தல் 33 தொகை நிலை 1 தொடி 119 ந நாணுவரை யிறந்த ஆண் தன்மையார் 167 நாழி உழக்கு 119 நிகழ்கால மயக்கம் 250 நிரம்பத் தோன்றும் பலரையறியும் சொல் 7 நிரயம் புகுதல் 244 நிரனிறைச் சூத்திரம் 251 நிரனிறை வாய்பாடு 251 நிறப்பண்பு 216 நிறுத்த முறை 201 நின்றாங்கிசைத்தல் 60 நின்று வற்றுமாகல் 9 நீக்கப்பொருண்மை 1 நீடவருதல் 1 நூற்கிடை 22 நூனயமாதல் 11 ப படர்க்கையுளப் பாட்டுத் தன்மைப்பெயர் 165 படைக்குழாம் 92 படைக்கை 106 பண்புகொளவருதல் 57, 67 பண்புத்தொகை 8 பயனிலைப்பாடு 66 பயனிலைவகை 1 பல்லோர் படர்க்கை 236 பலரறிசொல் 7 பாட்டியல் 81 பற்றுவிடுதல் 79 பன்மை இயற்பெயர் 179 பன்மைச்சொல் 3 பன்மைப் பெயர் ஆராய்ச்சி 193 பால்தெரிபில 191 பால்வழூஉ 1 பான்மயக்கம் 23 பிரிந்திசினோர்க்கு அழல் 107 பிரிநிலை 15 பிறிதவணிலையல் 253 பிறிதின் கிழமை 81 பிறிது பிறி தேற்றல் 106 பிறிதுபொருள் கூறுதல் 35 பிறிது வந்தடைதல் 125 புடைபெயர்ச்சி 71, 201, 216 புறனடை 21, 37, 54, 60, 79, 89, 119 பெண்டாட்டி அல்லன் ஆண்மகன் 25 பெண்ணலி 4 பெண்ணொழி மிகுசொல் 50 பெண்மை இயற்பெயர் 179 பெயர் கொள வருதல் 67 பெயர்ப் பயனிலை 67 பெயர்ப்பெயர் 71 பெருவழக்கு 230 பொது வாய்பாடு 224 பொதுவிலக்கணம் 28 பொருண்மைசுட்டல் 67 பொருந்தாச் சுட்டு 37 பொருளாராய்ச்சி 53 பொரூஉப் பொருள் 79 ம மங்கல மரபு 17 மயக்க நீர்மைத்து 105 மரபாராய்ச்சி 56 மரபிலக்கணம் 26 மரபுவழுவமைதி 1, 22, 103, 106, 197, 239, 245 மரபு வழூஉ 1, 11 மரபு வழூஉவமைதி 16 மரூஉ 238 மரூஉவழக்கு 17 மறைவாய்பாடு 205, 206 மன்னைக் காஞ்சி 253 மனக்குறிப்பு 19 மாட்டெறிப 129 மாட்டெறியும் வழி 140 மாட்டேற்றல் 34, 223 மாட்டேற்றுதல் 221 மாட்டேற்றொருபுடைச் சேறல் 34 மிகைபடக் கூறல் 132 முதனூள் 122 முந்துமொழிந்ததன் தலைதடு மாற்று 218 முப்பத்து மூவர் 4 முயற்கோடு 34, 158 முதற்கிளவி 33 முற்படச் சொல்லுதல் 39 முற்றும்மை 1, 34 முறை மயங்குதல் 26 முறைமை 1 முன்னத்தின் உணருங் கிளவி 58 முன்னிலை யுளப்பாட்டுத் தன்மைப் பெயர் 165 மெய் அவற்குக் காட்டல் 13 மெய்யறிபனுவல் 98 மொழிமாற்று 4, 39 மொழிவாம் என்னும் தந்திரவுத்தி 122 ர ரகரஒற்று 7 வ வண்ணச்சினைச்சொல் 26 வரையறை 33 வழூஉவமைதி 246 வழக்குப் பயிற்சி 162, 224 வாய்பாட்டு விகற்பம் 236 வாழ்ச்சி 81 விண்ணொலி 1 வியங்கொள வருதல் 67 வியங்கோ ளெண்ணுப் பெயர் 43 விரவுப்பெயர் 38, 140 விரிக்கும் வழிவிரித்தல் 1 விரித்துத் தொகுத்தல் 10, 211 விரைவு தோன்றக் கூறுதல் 243 விளிக்கப்படுவது 63 வினாவழூஉ 1 வினாய மாணாக்கர் 103 வினாவிற் கேற்றல் 67 வினாவுரை 11 வினைக்குறிப்பு 203 வினைத்தெய்வம் 58 வினைநிலை 87 வினைநிலையுரைத்தல் 67 வினைமுதலாதல் 63 வினைமுதலுரைக்குங் கிளவி 116 வெண்களமர் 17 வேற்றுமைத்தொகை 1 வேண்டிக்கோடல் 228 வேற்றுமை ஒத்து 63 வேறென் கிளவி 159 வேறுபலகுழீஇயது 92 வேறுபல குழீஇயதூஉ 81 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1847 ஆக. எழுத்து. நச்சர் மழவை. மகாலிங்கையர் (பிலவங்க, ஆவணி) 2. 1858 தொல். நன். மூலம் சாமுவேல் பிள்ளை 3. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 4. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 5. 1868 நவ. எழுத்து. இளம். சுப்பராய செட்டியார் 6. 1868 சூத்திர விருத்தி - சிவஞானமுனிவர் ஆறுமுக நாவலர் 7. 1885 பொருள். நச்சர். பேரா. சி.வை.தா. 8. 1891 சூன் எழுத்து. நச்சர்* ” (கர, வைகாசி) 9. 1892 சொல். நச்சர் ” 10. 1905 பாயிரம். சண்முக விருத்தி அரசன் சண்முகனார் 11. 1916 பொருள் (1, 2) நச்சர் பவானந்தம் பிள்ளை 12. 1916 பொருள் (3, 4, 5), நச்சர் ” 13. 1917 பொருள். பேரா. ” 14. 1917 பொருள் (8) நச்சர் ரா. ராகவையங்கார் 15. 1920 பொருள் (1, 2), இளம். கா. நமச்சிவாய முதலியார் 16. 1921 ” வ.உ. சிதம்பரம் பிள்ளை 17. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 18. 1922 மே தொல். மூலம் புன்னைவனநாத முதலியார் 19. 1922 பாயிரங்கள்* கா. நமச்சிவாய முதலியார் 20. 1923 பொதுப்பாயிரம்* சதாசிவ பண்டாரத்தார் 21. 1923 எழுத்து. நச்சர் கனகசுந்தரம் பிள்ளை 22. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 23. 1924 பொருள். மூலம் கா. நமச்சிவாய முதலியார் 24. 1927 சொல். இளம். ” 25. 1928 எழுத்து. இளம். வ.உ.சி. 26. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 27. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 28. 1930 எழுத்து (மொழி) ” 29. 1933 பொருள் (3, 4, 5) இளம். வ. உ. சி. 30. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 31. 1934 பொருள். நச்சர் எ. கனகசபாபதிப்பிள்ளை 32. 1935 பொருள். பேரா. ” 33. 1935 பொருள்-மேற்கோள் விளக்க அகராதி ம. ஆ. நாகமணி 34. 1935 பொருள் (6-9) இளம் வ.உ.சி., எ. வை. பிள்ளை 35. 1935 பொருள். இளம்* வ.உ.சி., எ.வை. பிள்ளை 36. 1937 எழுத்து. நச்சர் யாழ்ப்பாணம் கணேசையர் 37. 1937 எழுத்து. குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 38. 1937 சொல் (1, 2, 3) (மொழி) ” 39. 1938 சொல். சேனா. கணேசையர் 40. 1938 ஏப்ரல் பொருள் (1) விளக்கம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 41. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 42. 1942 பொருள் (1) சோமசுந்தர பாரதியார் 43. 1942 பொருள் (2) ” 44. 1942 பொருள் (6) ” 45. 1943 மார்ச் தொல் - மூலம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 46. 1943 பொருள். பேரா. கணேசையர் 47. 1944 அக். எழுத்து. ஆராய்ச்சி வேங்கடராஜூலு ரெட்டியார் 48. 1944 எழுத்து. நச்சர் தேவநேயப் பாவாணர் 49. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாதிரியார் 50. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 51. 1947 பொருள் (1, 2 நச்சர்) கழகம் 52. 1948 பொருள். நச்சர் கணேசையர் 53. 1948 பொருள் (1, 3) (மொழி) ஈ.எ. வரதராஜ ஐயர் 54. 1948 பொருள் (4, 5) (மொழி) ” 55. 1949 பொருள் (1, 2) (மொழி) பி.சா.சு. சாதிரியார் 56. 1950 பொருள் (3-5) நச்சர் கழகம் 57. 1951 பொருள். பேரா. ” 58. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 59. 1952 பொருள் (1, 2) இளம். கழகம் 60. 1952 பொருள் (3, 4, 5) மொழி பி.சா.சு. சாதிரியார் 61. 1953 பொருள். இளம். கழகம் 62. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 63. 1955 எழுத்து. இளம். சுந்தரமூர்த்தி 64. 1956 பொருள் (6-9) மொழி பி.சா.சு. சாதிரியார் 65. 1960 தொல். மூலம் பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்) 66. 1961 தொல். முழுவதும் புலியூர் கேசிகன் 67. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 68. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 69. 1962 தொல். நன். எழுத்து வெள்ளைவாரணனார் 70. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 71. 1963 சொல். தெய்வ. ” 72. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 73. 1963 தொல் (மொழி)* இலக்குவனார் 74. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 75. 1965 எழுத்து - நச்சர்* ” 76. 1965 தொல். பொருள் (8) நச்சர் ” 77. 1966 சொல். சேனா. ” 78. 1967 எழுத்து. நச்சர் இராம. கோவிந்தசாமி 79. 1967 இ. தொகை (எழுத்து) ச.வே. சுப்பிரமணியன் 80. 1968 தொல். பொருள் புலவர் குழந்தை 81. 1968 சூத்திரவிருத்தி தண்டபாணி தேசிகர் 82. 1968 பொருள் (8) ஆபிரகாம் அருளப்பன் 83. 1969 தொல். (வளம்) வடலூரனார் 84. 1969 எழுத்து. இளம். அடிகளாசிரியர் 85. 1970 சொல். சேனா. கு.மா. திருநாவுக்கரசு 86. 1971 செப். தொல். நன். சொல். வெள்ளைவாரணனார் 87. 1971 சொல். கல். பழைய தெ. பொ. மீ. 88. 1971 இ. தொகை (சொல்) ச.வே.சு. 89. 1972 தொல். நன். ரா. சீனிவாசன் 90. 1974 பொருள் (8)* வடலூரனார் 91. 1975 தொல். பொருள் (1) உ. வ. மு. அருணாசலம் பிள்ளை 92. 1975 தொல். களஞ்சியம் அறவாணன், தாயம்மாள் அறவாணன் 93. 1975 தொல். ஒப்பியல் அறவாணன் 94. 1977 தொல். சொல் அ.கு. ஆதித்தர் 95. 1978 இ. தொகை (யாப்பு, பாட்டியல்) ச. வே. சு. 96. 1979 எழுத்து. இளம். கு. சுந்தரமூர்த்தி உரைவளம் 97. 1980 செப். சிறப்புப் பாயிரம் ஆ. சிவலிங்கனார் 98. 1980 டிச. நூன்மரபு ” 99. 1981 சூன் மொழி மரபு ” 100. 1981 மரபியல் கு. பகவதி 101. 1981 டிச. பிறப்பியல் ஆ. சிவலிங்கனார் 102. 1982 மார்ச் புணரியல் ” 103. 1982 மே தொகைமரபு ” 104. 1982 சூலை கிளவியாக்கம் ” 105. 1982 நவ. உருபியல் ” 106. 1982 டிச. உயிர் மயங்கியல் ” 107. 1983 ஏப். புள்ளி மயங்கியல் ” 108. 1983 செப். குற்றியலுகரப் புணரியல் ” 109. 1983 அக். வேற்றுமையியல் ” 110. 1983 புறம் வெள்ளைவாரணனார் 111. 1983 களவு ” 112. 1983 கற்பு ” 113. 1983 பொருள் ” 114. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 115. 1984 மே விளிமரபு ” 116. 1984 சூலை பெயரியல் ” 117. 1984 செப். வினையியல் ” 118. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 119. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 120. 1985 பொருள். பேரா. கு. சுந்தரமூர்த்தி 121. 1985 செய்யுளியல். இளம். அடிகளாசிரியர் 122. 1985 உவமவியல் வெள்ளைவாரணனார் 123. 1986 மெய்ப்பாடு ” 124. 1986 சூலை இடையியல் ஆ. சிவலிங்கனார் 125. 1986 பொருள். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 126. 1987 அக். உரியியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 127. 1988 செப். சொல். இளம். அடிகளாசிரியர் 128. 1988 செப். எழுத்து பாலசுந்தரம் 129. 1988 அக். சொல் ” 130. 1988 டிச. எச்சவியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 131. 1989 சொல். ஆத்திரேயர் உரை வ. வேணுகோபாலன் 132. 1989 செய்யுளியல் (உ.வ.) க. வெள்ளைவாரணனார் 133. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி 134. 1989 அக். பொருள் (3-7) பாலசுந்தரம் 135. 1989 நவ. பொருள் (1, 2) ” 136. 1989 எழுத்து (பேருரை) இராம. சுப்பிரமணியன் 137. 1989 அகம் (மொழி) நிர்மல் செல்வமணி 138. 1991 மார்ச் அகத்திணையியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார்  Foot Notes 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார்