தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையம் வாழ்வியல் விளக்கம் புலவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியன்மார் பண்டித வித்துவான் தி. வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்பெயர் : தொல்காப்பியம் சொல்லதிகாரம் - தெய்வச்சிலையம் உரையாசிரியர் : தெய்வச்சிலையார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதற்பதிப்பு : தி.ஆ. 2034 (2003) தாள் : 18.6 கி. வெள்ளை மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 10 புள்ளி பக்கம் : 16 + 328 = 344 படிகள் : 2000 விலை : உரு. 215 நூலாக்கம் : பாவாணர் கணினி 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : ஓவியர் புகழேந்தி அச்சு : ஃப்ராம்ட் ஆப்செட் 34, திப்புத் தெரு இராயப்பேட்டை, சென்னை - 600 014. கட்டமைப்பு : இயல்பு வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017 தொலைபேசி: 2433 9030 புதுச்சேரிப் பிரெஞ்சு இந்தியப் பள்ளி (EFEO) யின் ஆய்வு மாணாக்கருக்காகப் பண்டித வித்துவான் கோபாலையரால் பிழை நீக்கிச் செப்பம் செய்யப்பட்ட தொல்காப்பிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு இவை பதிப்பிக்கப்படுகின்றன முன்னுரை தமிழ்மொழி - இனப் பாதுகாப்பு வைப்பகம் தொல்காப்பியம். அது, மொழி இலக்கணமே எனினும், தமிழர் வாழ்வியல் ஆவணமாகத் தீட்டி வைக்கப்பட்டதும் ஆகும். தொல்பழங் கல்வெட்டுகளைத் தேடிப்போய்க் காணவும், துருவித் துருவிப் பார்த்துக் கற்கவும், பொருள் உணரவும் இடர்ப்படுவது போல் இல்லாமல், தமிழ் எழுத்துக் கற்றார் எவரும் ஆர்வம் கொண்டால், ஓதி உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைக்கும் வகையில் கையில் கனியாகக் கிடைத்தது தொல்காப்பியம். தொல்காப்பியர், நூலை ஆக்கிய அளவில் அப்பணி நின்று போய் இருப்பின், நிலைமை என்னாம்? மூவாயிர ஆண்டுகளுக்கு முந்தை ஏடு இது காறும் வென்று நிற்க வல்லதாகுமா? அதனைப் படியெடுத்துப் பேணிக் காத்தவர், உரைகண்டவர் என்போர், அவர்தம் நூலைக் காத்தும் பரப்பியும் ஆற்றிய அரும்பணி எத்தகையது? கறையானுக்கும் நீருக்கும் நெருப்புக்கும் ஆட்படாமல் ஏட்டைக் காத்தவர் எனினும், கருமியராய் அவ்வேட்டைப் பதிப்பிப்பார்க்குக் கொடாது போயிருப்பின், பதிப்பு என்றும், குறிப்புரை என்றும், விளக்க வுரை என்றும், ஆய்வு என்றும் நூலுருக் கொண்டு இத் தமிழ்மண்ணின் மாண்பைத் தன்னிகரற்ற பழைமைச் சான்றாகக் கண் நேர் நின்று காட்ட வாய்த்திருக்குமா? நன்னூல் என்னும் பின்னூல் கொண்டே ‘உயர்தனிச் செம்மொழி’ எனக் கால்டுவெலார் தமிழ்மொழியை மதிப்பிட்டார் எனின், அவர் தொல்காப்பியத்தைக் கற்க வாய்த்திருந்தால், ‘உலக முதன் மொழி தமிழே’ என உறுதிப்பட நிறுவியிருப்பார் அல்லரோ! தொல்காப்பியத்தைப் பதிப்பித்தல் அரும்பணி என்றால், அதனை விற்றுக் காசு குவிக்கும் அளவிலா நூல்கள் விலைபோயின? 500 படிகள் அச்சிட்டு இருபது ஆண்டுகளில் விற்கப்பட்டால் அவ்விழப்பைத் தாங்கிக் கொண்டும் எத்தனை பேரால் வெளியிடமுடியும்? அவ்வாறாகியும், தொல்காப்பியப் பதிப்புகள் இருநூற்றுக்கு மேலும் உண்டு என்றால் அச்செயலைச் செய்தவர்கள் எவ்வளவு பாராட்டுக்குரியவர்கள். தமிழ்மண்ணின் உணவை உண்டு வாழ்வோர் அனைவரும் அம் மொழிக் காவலர்களை நன்றியோடு நினைத்தல் தலைக்கடனாம். ஏனெனில், உலகில் நமக்கு முகவரி தந்து கொண்டிருப்பாருள் முதல்வர் தொல்காப்பியத்தை அருளியவரே ஆதலால். இனித் தொல்காப்பியம், அங்கொருவரும் இங்கொருவருமாகப் பகுதி பகுதியாக வெளிப்படுத்தியவற்றை எல்லாம் ஓரிடத்து ஓரமைப்பில் கிடைக்க உதவியது சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம். அதுவும், பலப் பல காலப் பணியாகவே செய்து நிறைவேற்றியது. இதுகால், தமிழ்மண் பதிப்பகம் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணின் மணமாகக் கிளர்ந்த அந்நூலை ஒட்டுமொத்தமாக அனைவர் உரையுடனும் ஒரே பொழுதில் வெளியிடுதல் அரும்பெரும் செயலாம். மொழிஞாயிறு பாவாணர், பன்மொழிப்புலவர் கா. அப்பாத் துரையார், அருமணிக் குவைகளைத் தருவார் போல் நூல்களைத் தந்த ந.சி. கந்தையா ஆயோர் நூல்களை யெல்லாம் ஒரே வேளையில் ஒருங்கே வெளியிட்டுச் சிறப்பெய்தி வருவது தமிழ்மண் பதிப்பகம். ஆயிரத்து நானூறு பக்கங்களையுடைய கருணாமிர்த சாகரத்தைத் துணிந்து வெளியிட்டது போலவே, தொல்காப்பிய உரைகள் அத்தனையையும் வெளியிடுகிறார்! பத்தாயிரம் பக்க அளவில் அகரமுதலிகளையும் வெளியிடுகிறார் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் மொழிப்போர் வீரர் இளவழகனார். மொழிக் காவல் கடன்பூண்ட அவர், மொழிக் காவல் நூலை வெளி யிடுதல் தகவேயாம்! அத்தகவைப் பாராட்டுமளவில் அமையின், பயன் என்னாம்? தொல்காப்பியம் தமிழ் கற்றார், தமிழ் உணர்வாளர், தமிழ் ஆய்வாளர் இல்லங்களிலெல்லாம் தமிழ்த் தெய்வக் கோலம் கொள்ளச் செய்தல் இருபாலும் பயனாம்! “எங்கள் தொல்பழம் பாட்டன் தந்த தேட்டைத் தமிழ்மண் தந்தது. அதனை எங்கள் பாட்டன் பாட்டியர் படித்துவிட்டு அவர்கள் வைப்புக் கொடையாக எங்களுக்கு வைத்துளர்” என்று வருங்காலப் பேரன் பேர்த்தியர் பாராட்டும் வகையில் இந்நூல்களைப் பெற்றுத் திகழ்வார்களாக! வழிவழி சிறக்கச் செய்வார் களாக. “புத்தகம் ஏற்றுப் பொலிவதே புத்தகம்” தமிழ்த் தொண்டன் இரா. இளங்குமரன் பதிப்புரை தமிழுக்கும் தமிழருக்கும் உயிராக அமைந்த நூல்கள் தொல்காப்பிய மும் திருக்குறளும் ஆகும். தமிழ் மொழியின் தலைநூலாம் தொல்காப்பியம் குறளுக்கு முப்பால் கொள்கை வகுத்த நூல். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்த பெரு நூல். தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பெருமக்கள் அனைவரும் தமிழ் மொழியின் நீள, அகல, ஆழம் கண்ட பெருந்தமிழ் அறிஞர்கள் ஆவர். தமிழ் மொழிக்கு நிலைத்த பணியைச் செய்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பேரிலக்கண நூலுக்குப் பதிப்புரை எழுத முனைந்த எனக்கு ஒருவித அச்சமும் நடுக்கமும் உண்டானது இயற்கையே. பெரும் புயற்காற்றுக்கு இடையே கடலில் கலம் செலுத்திக் கரைகண்ட மீகானைப் போல் எம் முயற்சிக்குத் தக்க அறிஞர்களும் நண்பர்களும் துணையிருந்ததால் இம் முயற்சியில் வெற்றி கண்டுள்ளேன் என்ற பெருமித உணர்வால் இப் பதிப்புரையை என் தமிழ்ப்பணியின் சுவடாகப் பதிவு செய்துள்ளேன். இப் பதிப்பில் காணும் குறைகளைச் சொல்லுங்கள் அடுத்த பதிப்பில் நிறைவு செய்வேன். படிப்பாரும் எழுதுவாரும் தேடுவாரும் இன்றிச் செல்லுக்கு இரை யாகிக் கெட்டுச் சிதைந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பழந்தமிழ்ச் செல்வங்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருந்தமிழ் அறிஞர்கள் தமிழ்ப் பணியைத் தவப்பணியாய்ச் செய்தவர்கள். பழந்தமிழ் இலக்கிய வெளியீட்டுக்குக் கால்கொண்டவர் ஈழத்தமிழறிஞர் ஆறுமுக நாவலர்; சுவரெழுப்பியவர் தி.வை. தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் உ.வே. சாமிநாதையர் என்பார் தமிழ்ப்பெரியார் திரு.வி.க. [உரையாசிரியர்கள் - முனைவர் மு.வை. அரவிந்தன், (1995) பக். 716]. தமிழ்ப்பண்பாட்டின் புதைபொருட்களாம் பழந்தமிழ் இலக்கியங் களைப் புதைபொருள் ஆராய்ச்சியாளன் போல் தோண்டி எடுத்து அவற்றின் பெருமையைத் தமிழுலகிற்கு ஈந்த இப் பெருமக்களுக்குத் தமிழுலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தொல்காப்பியப் பெருமை வாழும் தமிழ் நூல்களில் தொல்காப்பியம் முதல் நூல், தலைநூல். தமிழில் தோன்றிய இலக்கண நூல்கள் அனைத்துக்கும் தாய் நூல். மூவாயிரம் ஆண்டுகளாக இடையறாது வாழ்ந்துவரும் பெருமையும், பேரிலக்கணப் பெரும்பரப்பும் கொண்டு திகழ்வது. தனி மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசாது, பொது மாந்தப் பண்பை முன்நிறுத்திப் பேசும் தலையிலக்கணநூல். இந்திய வரலாற்றில் வடமொழி மரபுக்கு வேறுபட்ட மரபுண்டு என்பதை உணர்ந்துகொள்ளத்தக்க வகையில் நமக்குக் கிடைத் திருக்கின்ற சான்றுகளில் தலையாய சான்றாய் விளங்குவது தொல் காப்பியம் ஒன்றுதான். பதிப்பின் சிறப்பும் - பதிப்பு முறையும் 1847 முதல் 1991 வரை 138 பதிப்புகளும் (தொல்காப்பியப் பதிப்புகள், முனைவர் ச.வே.சுப்பிரமணியன், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பக். 166), அதற்குப் பிறகு 2003 வரை ஏறத்தாழ 15 பதிப்புகளுக்குக் குறையாமலும் வந்துள்ளன. இப் பதிப்புகள் அனைத்தும் பல்வேறு காலத்தில் பலரால் தனித்தனி அதிகாரங்களாகவோ உரையாசிரியர் ஒருவரின் உரைகளை உள்ளடக்கியதாகவோ வந்துள்ளன. பழைய உரையாசிரியர்களின் உரைகளை முழுமையாக உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு தொல் காப்பியம் முழுமையாக எவராலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ் வெளியீட்டிற்கு முன் உள்ள பெரும் பணியை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு தாயின் மகப்பேற்றுக்கு முன்பும் பின்பும் உள்ள உணர்வுதான் என் மனக்கண்ணின் முன் நிழலாடு கிறது. பழுத்த தமிழறிவும், தொல்காப்பியத்தில் ஊன்றிய இலக்கண அறிவும் மிக்க சான்றோர்கள் இப் பதிப்புப் பணியில் உற்ற துணையாக வாய்த்ததும், சிறந்த தமிழறிவும் பதிப்புக் கலை நுணுக்கமும் வாய்த்த நண்பர்களின் பங்களிப்பும் எனக்குப் பெரும் பலமாய் அமைந்தன. அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன். ஆய்வாளர்களுக்குப் பயன்படும் நோக்கில் நூல்கள் பன்முகப் பார்வையுடன் வருகிறது. உரையாசிரியர்கள் மேற்கோள்களாக எடுத்தாண்ட பழந்தமிழ் நூல்களில் வருகின்ற சொல், சொற்றொடர் மற்றும் பாடல்களும், அரிய கலைச் சொற்களும் தனித்தனியே அகர வரிசையில் தரப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த அதிகாரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களின் வாழ்க்கை வரலாறும், அவர்களைப் பற்றிய அரிய செய்திகளும் தரப்பட்டுள்ளன. திட்பமும், செறிவும் நிரம்பிய தனித்தமிழ் நடையில், பசி நோக்காது, கண்துஞ்சாது பணி முடிக்கும் முதுபெரும் புலவர், பாவாணர் கொள்கைகளுக்கு முரசாய் அமைந்த தனித்தமிழ்க் குரிசில் இலக்கணச் செம்மல் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு முழுமைமிக்க செம்பதிப்பாய் இதை வழங்கி யுள்ளது. இதுவரையிலும் எவரும் செய்யாத முறைகளில் இந் நூலின் 14 தொகுதிகளும் நல்ல எழுத்தமைப்புடனும், அச்சமைப்புடனும், உயர்ந்த தாளில், சிறந்த கட்டமைப்புடன், நீண்டகாலம் பாதுகாத்து வைக்கத்தக்க வகையில் வெளிவருகின்றன. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 19ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் மறுமலர்ச் சிக்கு வித்திட்டவர் தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் ஆவார். இவரால் தமிழ் மொழி மீட்டுருவாக்கம் பெற்றதும் புத்துயிர் கொண்டதும் தமிழ் வரலாற்றில் நிலைபெற்ற செய்திகளாகும். இவரின் மரபினர் வ. சுப்பையா பிள்ளையின் பேருழைப்பால் உருப்பெற்றது திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். அரசோ பல்கலைக் கழகங்களோ செய்ய வேண்டிய தமிழ்ப்பணியைத் தனி ஒரு நிறுவனமாய் இருந்து செய்த பெருமைக்குரியது. தமிழ் மறுமலர்ச்சிக்குப் பண்ணையாய் அமைந்த இக் கழகத்தின் பணி இன்றுவரை தொடர்கிறது. கழகம் வெளியிட்டுள்ள தொல்காப்பியப் பதிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிக்கத்தக்கன. மணிவாசகர் பதிப்பகம் இதன் நிறுவனர் முனைவர் ச. மெய்யப்பனார். தாம் பெற்ற தமிழறிவைத் தமிழ் உலகிற்குத் தருபவர். சொல் சுருக்கமும், செயல் வலிவும், கொள்கை உறுதியும் மிக்க உயர்பெரும் பண்பாளர். இவர் தோற்றுவித்த மணிவாசகர் பதிப்பகம் தமிழ்க்காப்புப் பதிப்பகமாகும். பதிப்புலகில் தமிழ்த் தொண்டாற்றும் என்னைப் போன்றவர்களுக்கு காப்பாக இருந்து ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவர். இக்கால் தமிழுலகில் வலம்வரும் தமிழ் பதிப்புலகச் செம்மலாவார். தமிழுக்கு வளம் சேர்க்கும் நூல்களைத் தளராது தமிழ் உலகிற்கு வழங்குபவர். ஆரவாரமில்லாத ஆழ்ந்த புலமையர். பெரும்புலவர் நக்கீரனார் புலவர் நக்கீரனார், புலவர் சித்திரவேலனார் இப் பெருமக்கள் இருவரும் என் வாழ்வின் கண்களாக அமைந்தவர்கள். என் வாழ்விலும் தாழ்விலும் பெரும்பங்கு கொண்டவர்கள். இவர்களால் பொது வாழ்வில் அடையாளம் காட்டப்பட்டவன். உழை உயர் உதவு எனும் கருப் பொருளை எமக்கு ஊட்டியவர் நக்கீரனார் ஆவார். மலை குலைந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர். மொழிஞாயிறு பாவாணர் நூல்கள் செம்பதிப்பாய் வருவதற்கு இரவும் பகலும் உழைத்த தொண்டின் சிகரம். தலைநூலாம் தொல்காப்பியப் பெருநூல் வருவதற்கு விதையாய் இருந்தவர். இலக்கணச்செம்மல் இரா. இளங்குமரனார் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற இவர் எழுதிய ‘இலக்கண வரலாறு’ என்னும் நூலில் இப் பெருமகனாரைப் பற்றி மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கம், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன், பேராசிரியர் மு.வை. அரவிந்தன் ஆகியோர் எழுதிய மதிப்புரையிலும், எம் பதிப்பகம் வெளியிட்டிருக்கின்ற தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்திலும் இப் பெருமகனாரைப் பற்றிய பெருமை உரைகளைக் காண்க. தெளிந்த அறிவும் கொண்ட கொள்கையில் உறுதியும் செயலில் திருத்தமும் வாழ்வில் செம்மையும் எந்த நேரமும் தமிழ்ச் சிந்தனையும் ஓய்விலா உழைப்பும் சோர்வறியாப் பயணமும் தன்னை முன்னிலைப் படுத்தாது தமிழை முன்னிலைப்படுத்தும் பண்பும் மிக்கவர். வாழ்வின் முழுப்பொழுதும் தமிழ் வாழ தம் வாழ்வை ஈகம் செய்யும் இப் பெரு மகனின் தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம் இந் நூலின் தனிச்சிறப்பு. தமிழ் மரபு தழுவிய இவரின் ஆழ்நிலை உணர்வுகள் எதிர்காலத் தமிழ் உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கமாய் அமையும் என்று நம்புகிறேன். இவரால் எழுதி வரவிருக்கின்ற சங்கத்தமிழ் வாழ்வியல் விளக்கத்தை எம் பதிப்பகம் தமிழ் உலகிற்கு அருஞ்செல்வமாக வழங்க உள்ளது. இப் பெரும்புலவரின் அரும்பணிக்கு தோன்றாத் துணையாய் இருப்பவர் திருவள்ளுவர் தவச்சாலைக் காப்பாளர் கங்கை அம்மையார் ஆவார். திருவள்ளுவர் தவச்சாலைக்கு யான் செல்லும் போதெல்லாம் அன்பொழுக வரவேற்று எனக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர். பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் அறிவிலும், அகவையிலும், மூத்த முதுபெரும் தமிழறிஞர். தொல் காப்பியப் பெருங்கடலுள் மூழ்கித் திளைத்தவர். பிற நூல்களை ஒப்பு நோக்கி இரவென்றும் பகலென்றும் பாராது முதுமைப் பருவத்திலும், தம் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது இந் நூல்களின் உருவாக்கத் திற்குத் தன்னலமற்ற தமிழ்த் தொண்டு செய்தவர். தொல்காப்பிய வெளியீடு தொடர்பாகப் புதுச்சேரியில் உள்ள இவரின் இல்லம் செல்லும்போதெல் லாம் இவர் துணைவியார் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. எந்த நேரத்தில் இப் பெருமகனின் வீட்டிற்குச் சென்றாலும் எம் பதிப்பகம் வெளியிடுகின்ற தொல்காப்பியப் பதிப்புப் பணியிலேயே மூழ்கியிருந்த இவரைக் கண்டபோதெல்லாம் மெய்சிலிர்த்துப் போனேன். இவர் எழுதிய தமிழிலக்கணப் பேரகராதியையும் எம் பதிப்பகம் விரைவில் தமிழுல கிற்குச் செல்வமாக வழங்கவுள்ளது. இவருடைய தம்பிமார்கள் தி.சா. கங்காதரன், தி.வே. சீனிவாசன் ஆகியோர் தொல்காப்பிய நூல் பதிப்பிற்குப் பண்டித வித்துவான் கோபாலையருக்குப் பெருந்துணையாய் இருந்து பங்காற்றியவர்கள். புலவர் கி.த.பச்சையப்பன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மேனாள் தலைவர். எந்நேரமும் தமிழ் - தமிழர் எனும் சிந்தையராய் வாழ்பவர். ஓய்வறியா உழைப்பாளி. எம் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்குத் துணையிருந்த பெருமையர். நுண்ணறி வாளர் பண்டித வித்துவான் கோபாலையரையும், பெரும்புலவர் சா. சீனிவாசனாரையும், பழனிபாலசுந்தரனாரையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்துத் தொல்காப்பியப் பதிப்புப் பணிக்கு அவர்களின் பங்களிப்பையும் பெற்றுத்தந்த பண்பாளர். முனைவர் ந. அரணமுறுவல் எம் தமிழ்ப்பணிக்குத் துணையாயிருப்பவர். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு மேன்மையுற உழைப்பவருக்குக் கொள்கை வழிப்பட்ட உறவினர். சாதி மதக் கட்டுக்குள் அடங்காத சிந்தையர். எந் நேரமும் பிறர் நலன் நாடும் பண்பினர். தமிழை முன்னிறுத்தித் தன்னைப் பின்னிறுத்தும் உயர்பெரும் பண்பாளர். மொழிஞாயிறு பாவாணர்பால் அளவில்லா அன்பும் மதிப்பும் கொண்டவர். தனித்தமிழ் இயக்க வளர்ச்சிப் போக்கில் இவரின் பங்கும் பணியும் பதியத்தக்கவை. இவரின் கைபட்டும் கண்பட்டும் தொல்காப்பிய நூல்கள் நேர்த்தியாகவும், நல்ல அச்சமைப்புடனும், மிகச்சிறந்த கட்டமைப்புடனும் வருகின்றன. அ. மதிவாணன் உடன்பிறவா இளவலாய், தோன்றாத் துணையாயிருப்பவர். எனக்குச் சோர்வு ஏற்படும்போதெல்லாம் தோள் கொடுத்து நிற்பவர். எனது வாழ்வின் வளமைக்கும் உயர்வுக்கும் உற்றதுணையாய் இருப்பவர். உரிமை யின்பால் நான் கடிந்துகொண்ட போதும் இன்முகம் காட்டிய இளவல். கணவரின் நண்பர்களை அடையாளம் கண்டு உதவியாய் இருப்பவர் இவரின் துணைவியார் இராணி அம்மையார். தொல்காப்பியப் பதிப்பில் தனித்தமிழ் நெறி போற்றும் இவ்விணையரின் பங்கும் பதியத் தக்கது. அயலகத் தமிழர்களின் அரவணைப்பு 20ஆம் நூற்றாண்டின் இணையற்றத் தமிழ்ப் பேரறிஞர் மொழி ஞாயிறு பாவாணரின் நூல்களை எம் பதிப்பகம் முழுமையாக வெளியிட்டு தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் தனி முத்திரை பதித்தது. இவ் வரும்பணியாம் தமிழ்ப் பணிக்கு திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்ற மண் ணில் ஓய்விலா உழைப்பிற்கு இடையில் தாய்மொழியாம் தமிழ்மொழி மீதும், தன்னினமாம் தமிழ் இனத்தின் மீதும் பற்று மிக்க வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர் வி.ஜே.பாபு, அரிமாபுரி (சிங்கப்பூர்) வெ. கரு. கோவலங்கண்ணனார், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத் தலைவர் இரா. திருமாவளவன் ஆகியோர் எம் பணிக்கு பெரும் துணையிருந்தனர். உங்கள் கைகளில் தவழும் தமிழர்களின் தலைநூலாம் தொல்காப்பியத் தொகுப்புகளின் வெளியீட்டிற்கும் இப் பெருமக்களின் அரவணைப்பு எனக்குப் பெரிதும் துணையிருந்தது என்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. நூலாக்கத்திற்கு உதவியவர்கள் தொல்காப்பிய நூலைக் கொடுத்துதவிய பண்புநிறை நண்பர் க. குழந்தைவேலன், திருத்தப்படிகளைப் பார்த்து உதவிய பெரும்புலவர் ச.சீனிவாசன், பெரும்புலவர் பழனிபாலசுந்தரம், புலவர் த. ஆறுமுகம், முனைவர் செயக்குமார், இளங்கோ, புலவர் உதயை மு. வீரையன், கி. குணத் தொகையன், மா.து. இராசுகுமார், முனைவர் வீ. சிவசாமி, சி. செல்வராசன், மா.செ. மதிவாணன், ஆகியோர் நூல் உருவாக்கத்திற்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்கள். சே. குப்புசாமி இதுகாறும் வந்த தொல்காப்பியப் பதிப்புகளைவிட எம் பதிப்பு சிறந்த முறையில் வருவதற்கு முனைவர் அரணமுறுவலின் வழிகாட்டுதலின் படி கணினி இயக்குநர் குப்புசாமி அளித்த பங்களிப்பு வியக்கத்தக்கது. நூற்பாவையும் உரையையும் சான்றுப்பாடலையும் வரிசை எண்களையும் வேறுபடுத்திக் காட்டி அறிஞர்களின் திருத்தக் குறியீடுகளை நேரில் கேட்டு உள்வாங்கிக்கொண்டு பிழையின்றி வருவதற்கு அடித்தளமாய் அமைந்தவர். பிழைகளை நுணுகிப் பார்த்துத் திருத்திக் கண்துஞ்சாது இரவும்பகலும் உழைத்தவர். இவருக்குத் துணையாக இருந்து இவர் இட்ட பணியைச் செய்தவர்கள் கணினி இயக்குநர் செ. சரவணன் மற்றும் மு. கலையரசன். நூல் கட்டமைப்பாளர் தனசேகரன் நூலின் உள்ளும் புறமும் கட்டொழுங்காய் வருவதற்கு என் உணர்வுகளைப் புரிந்துகொண்டு சோர்வின்றி உழைத்தவர். நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நான் கூறியதைக் கேட்டு அதை அப்படியே செய்து முடித்து எனக்குப் பல்லாற்றானும் துணையிருந்தவர். நூல் அழகிய அச்சு வடிவில் வருவதற்குத் துணையிருந்த பிராம்ட் அச்சகப் பொறுப் பாளர் சரவணன், வெங்கடேசுவரா அச்சக உரிமையாளர் மற்றும் அச்சுப் பணியர் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்குரியோர் நான் இட்ட பணியைத் தட்டாது செய்த எம் இளவல் கோ. அரங்க ராசன், எனது மாமன் மகன் வெங்கடேசன், என் மகன் இனியன் ஆகியோர் தொல்காப்பியம் செம்பதிப்பாய் வருவதற்கு உதவியாய் இருந்தவர்கள். மேலட்டை ஓவியத்தை மிகச்சிறந்த முறையில் வடிவமைத் துக் கொடுத்தவர் ஓவியர் புகழேந்தி. தமிழர்களின் கடமை தமிழ்ப் பண்பாட்டின் புதைபொருளாய் அமைந்த தொல்காப்பியப் பெருநூலை பெரும் பொருட் செலவில் பொருளாதார நெருக்கடிகளுக் கிடையில் தமிழுலகம் இதுவரை கண்டிராத அளவில் முழுமைமிக்க செம்பதிப்பாய் ஒரேநேரத்தில் 14 நூல்களாகத் தமிழ் உலகிற்குக் கொடுத் துள்ளோம். தமிழரின் வாழ்வியல் கூறுகளை அகழ்ந்து காட்டும் தொல் காப்பியம் முன்னைப் பழமைக்கும் பழமையது; பின்னைப் புதுமைக்கும் புதுமையது. அறிவியல் கண்கொண்டு பார்ப்பார்க்கு இவற்றின் பழமையும் புதுமையும் தெரியும். ஆய்வுலகில் புகுவார்க்குத் திறவுகோலாய் அமைந்தது. எவ்வளவு பெரிய அரிய மொழியியல் விளக்க நூலைத் தமிழர்களாகிய நாம் பெற்றுள்ளோம் என்பதை உணரும்போது ஒருவிதப் பெருமிதம் மேலோங்கி நிற்கிறது. தமிழின் அறிவியல் செல்வம் தமிழர்களின் இல்லந் தோறும் இருக்க வேண்டிய வாழ்வியல் களஞ்சியம் தொல்காப்பியமாகும். இவ் வாழ்வியல் களஞ்சியத்தைக் கண்போல் காக்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இளந்தமிழா, கண்விழிப்பாய்! இறந்தொ ழிந்த பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அனைத்தையும் நீ படைப்பாய்! ....... இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே! என்ற பாவேந்தர் வரிகளை நினைவுகூர்வோம். கோ. இளவழகன் பதிப்பாளர் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஆசார. ஆசாரக்கோவை ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை களவழி. களவழி நாற்பது குறள். திருக்குறள் குறிஞ்சிப். குறிஞ்சிப்பாட்டு குறுந். குறுந்தொகை சிறுபாண். சிறுபாணாற்றுப்படை சிலப். சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி சூளா. சூளாமணி திணைமாலை. திணைமாலை நூற்றைம்பது திரிகடு. திரிகடுகம் தூதுவிடு. தூதுவிடு சருக்கம் தொ.எ. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் தொ.சொ. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தொ.பொ. தொல்காப்பியம் பொருளதிகாரம் நற். நற்றிணை நான்மணி. நான்மணிக்கடிகை நாலடி. நாலடியார் நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப்பாலை பதிற்று. பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பெரும்பாண். பெரும்பாணாற்றுப்படை மணிமே. மணிமேகலை மதுரைக். மதுரைக்காஞ்சி மலைபடு. மலைபடுகடாம் முருகு. திருமுருகாற்றுப்படை முல்லைப். முல்லைப்பாட்டு வாழ்வியல் விளக்கம் தமிழன் பிறந்தகமாகிய குமரிக் கண்டத்தைக் கொடுங்கடல் கொண்டமையால், பல்லாயிரம் இலக்கண - இலக்கிய - கலை நூல்கள் அழிந்துபட்டன. அவற்றின் எச்சமாக நமக்கு வாய்த்த ஒரேவொரு நூல் தொல்காப்பியம் ஆகும். அம் மூலமுதல் கொண்டு கிளர்ந்தனவே, பாட்டு தொகை கணக்கு காவியம் சிற்றிலக்கியம் இலக்கணம் நிகண்டு உரைநடை என்னும் பல்வகை நூல்களாம். அன்றியும், நம் தொன்மை முன்மை பண்பாடு மரபு என்பவற்றின் சான்றாக இன்றும் திகழ்ந்துவரும் நூலும் அதுவேயாம். அந் நூலின் வாழ்வியல் விளக்கம் விரிவுமிக்கது. அதனை ஓரளவான் அறிந்து, பேரளவான் விரித்துக் கொள்ளு மாறு “தொல்காப்பிய வாழ்வியல் விளக்கம்” இதனொடும் இணைக்கப்பட்டுளது! “வெள்ளத்(து) அணையாம் காப்பியமே வேண்டும் தமிழ்க்குன் காப்பியமே!” அறிஞர்கள் பார்வையில் பதிப்பாளர் பைந்தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் தேடித் தந்தவர் நம் பாவாணர். அவருடைய நூல்களை அழகுறத் தொகுத்து வெளியிட்டமைக் காக இளவழகனார் பாவாணரை மீண்டும் உயிர்த்தெழச் செய்துவிட்டார் என்று நான் கருதுகிறேன். அந்தச் சிறப்பும் பெருமையும் இளவழகனா ருக்கு உண்டு. கடந்த ஆண்டு பாவாணரின் 38 நூல்களைப் பதிப்பித்த கோ. இளவழகன் அவர்கள் இவ்வாண்டு மீதி நூல்களையும் மற்றும் நூல் வடிவம் பெறாதவற்றையும் வெளிக்கொணர்ந்தமையைப் பாராட்டுகிறேன். இந்தி மேலீடு தமிழ் மண்ணில் காலூன்றி நிலைபெற முயன்ற அறுபதுகளில் இந்தியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும் என வீறுகொண்டெழுந்த நல்லிளஞ் சிங்கங்களுக்கு நான் தலைமையேற்று, சிறைப்பட்ட காலத்தில் தம் சொந்த ஊரான உரத்த நாட்டுப் பகுதியில் செயலாற்றிச் சிறைப்பட்டவர் அருமை இளவல், தமிழ்மொழிக் காவலர் கோ. இளவழகன் அவர்கள். தமிழ்மண் பதிப்பகத் தின் வாயிலாகப் பாவாணரின் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட் டுள்ள தமிழ்மொழி, இன, நாட்டுணர்வு மிக்க திரு. கோ. இளவழகன் அவர்களின் பணி பாராட்டிற்குரியது; பெருமைக்குரியது. முனைவர் கா. காளிமுத்து பேரவைத் தலைவர் தமிழக சட்டப்பேரவை இனவுணர்வோடு தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர் பாவாணர். அவருடைய நூல்களை எடுப்புடனும் அழகாகவும் நல்ல முறையில் புதுப்பித்த இளவழகன் ஆழநோக்கி, அடக்கத்துடன் பணியாற்றுபவர். அவருடைய இந்தப்பணியால், இக்காலத்தவர் மட்டுமன்றி, வருங்காலத் தலைமுறையினரும் நல்ல பயன் பெறுவர். அதனால் தமிழ்ச் சமுதாயத்திற்கு லாபத்தை உண்டாக்கி யிருக்கிறார். தமிழர் தலைவர் கி. வீரமணி திராவிடர் கழகம் தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக் கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்கநாள் முதலே கொண்டமை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத்தக்கதாம்.... தமிழ்மண் பதிப்பகம் ‘கருவிநூல் பதிப்பகம்’ என்னும் பெருமைக்கு உரியதாய்த் திகழ்கின்றது. நூலாக்க ஆர்வம் போலவே, நூல் வெளியீட்டு ஆர்வமும் உடையாரே இத்தகு கருவி நூல்களை வெளியிட இயலும். ஏனெனில், கதை நூல்கள் ஐந்நூறு, ஆயிரம் என்று வெளியிடும் பதிப்பகங்களும் ஓரிரு கருவிநூல்களை வெளியிடக் காணல் அருமையாம். ஆனால், தமிழ்மண் பதிப்பகம் வெளியிடும் நூல்கள் எல்லாமும், கருவி நூல்களாகவே இருத்தல் செயற்கரிய செய்யும் செழும் செயலாம். தமிழ்மண் பதிப்பகம் என்னும் தன் பெயருக்கு ஏற்பத் தமிழ்மண்ணுக்கும் தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் அரணாக அமையும் நூல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வெளியிடுதலைத் தன் தொடக்க நாள் முதலே கொண்டமை, ‘தமிழின மீட்புப் பணி’யெனக் கொள்ளத் தக்கதாம். இப்பொத்தக வாணிகம், வாணிகம் செய்வார்க்கு வாய்த்ததோர் வாணிகமும் ஆம் என்னும் பாராட்டுக்கும் உரியதாம். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு இளவழகனார், திருவள்ளு வர் குறித்த ஓர் அதிகாரத்தைத் தேர்ந்த கடைப்பிடியாகக் கொண்டவர். அவ்வதிகாரம், ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்பது. புலமை நலம் சான்ற பெருமக்கள் துணையே அவர்தம் பதிப்புப் பணிக்கு ஊற்றமும் உதவியுமாய் அமைந்து உலகளாவிய பெருமையைச் செய்கின்றதாம். பாவாணர் நூல்களை வெளியிடுவதன் மூலம் இனமான மீட்புப் பணியை இளவழகனார் செய்து வருகிறார். தமிழ்மண் பதிப்பகம் எனும் பெயரில் உள்ள ‘மண்’ எனும் சொல், செறிவு, மணம், மருவுதல் நல்ல பண்பாடுகள் கலத்தல் எனும் பொருள்களை உள்ளடக்கியுள்ளது. இலக்கணப் புலவர் இரா. இளங்குமரனார் திருச்சிராப்பள்ளி பள்ளி மாணவப் பருவத்திலேயே இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போரில் தளை செய்யப்பெற்ற தறுகண்ணர் கோ. இளவழகன். பெரிதினும் பெரிதாய - அரிதினும் அரிதாய பணிகளை மேற்கொள்வதில் எவர்க்கும் முதல்வராய் முன்நிற்பவர். ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருத சாகரத் தின் அளவுப் பெருமை கருதி அஞ்சித் தயங்காமல் துணிந்து மறுவெளியீடு செய்த பெருமை இவர்க்கு உண்டு. பாவாணர் படைப்புகள் அனைத்தையும் ஒரு சேர நூல்களாக வெளியிட்டமை தமிழ்ப்பதிப்புலகம் காணாத பெரும் பணி. பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார், அறிஞர் ந.சி.கந்தையா ஆகியோரின் தமிழ் மறுமலர்ச்சிக் களமாகிய படைப்புகளை யெல்லாம் தேடியெடுத்து ‘இந்தா’ என்று தமிழ் உலகுக்குத் தந்தவர். பிழைகளற்ற நறும் பதிப்புகளாக நூல்களை வெளியிடுவதில் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தனித்துப் பாராட்டத்தக்கது. தமிழ்க்கடல் புலவர் இரா. இளங்குமரனாரின் ‘தொல்காப்பியச் சொற்பொருள் களஞ்சியத்தை’ச் செப்பமாக வெளியிடுவதில் அவர் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளை அண்மையிலிருந்து அறிந்தவன் நான். செயற்கரிய செய்யும் இளவழகனாரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநிற்பது நற்றமிழ்ப் பெருமக்கள் அனைவரின் கடன். முனைவர் இரா. இளவரசு தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழக உயராய்வு மையம் உள்ளடக்கம் தொல்காப்பியம் ... 01 சொல்லதிகார இயலமைதி ... 21 சொல்லதிகார வாழ்வியல் விளக்கம் ... 24 தெய்வச்சிலையார் ... 50 சொல்லதிகாரம் - தெய்வச்சிலையம் 1. கிளவியாக்கம் ... 57 2. வேற்றுமையியல் ... 93 3. வேற்றுமை மயங்கியல் ... 114 4. விளிமரபு ... 134 5. பெயரியல் ... 146 6. வினையியல் ... 167 7. இடையியல் ... 197 8. உரியியல் ... 221 9. எச்சவியல் ... 245 நூற்பா நிரல் ... 285 சொல் நிரல் (மேற்கோள்) ... 290 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) ... 295 செய்யுள் நிரல் (மேற்கோள்) ... 302 கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) ... 311 கலைச்சொல் நிரல் (உரைவழி) ... 317 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் ... 324 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம் ’“தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி”என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம்‘பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல்’என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும், ‘பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது’என்னும் கருத்தால்,“பழைய காப்பியக்குடியில் உள்ளான்”என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு‘விருத்த காவ்யக்குடி’ என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி ‘காவ்ய மாதா’ எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கின ராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் ‘பல்காயம்’ என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும்” ஆய்ந்து, தமிழியற்படி “எழுத்தும் சொல்லும் பொருளும்” ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும்” (1006) “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும்” (1336) “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (385) எனத் தமிழமைதியையும், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் “ஆயிரம் விரித்த” என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களையுடைய பரி பாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களையுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் ‘எத்துணையோ பரிபாடல்களின்’ அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதியாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளை யடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவேயன்றிக் கட்டளை யடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந்நேர்பசை நிரைபசையை வேறு எவ் விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசை களையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசை களும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங்கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழியாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் ‘சேமமட நடைப் பாட்டி’ என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் “பாட்டி என்பது பன்றியும் நாயும்” என்றும் “நரியும் அற்றே நாடினர் கொளினே” என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ ‘பாட்டி’ என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல் காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமை யால் உரையாசிரியர்கள் “இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது” என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! “கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் ‘பூரியர்கள்’ ‘மற்றையவர்கள்’ எனவும் கலித்தொகையில் ‘ஐவர்கள்’ எனவும் வழங்குகின்றது. ‘அன்’ ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. “தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. “தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட ‘மார்’, ‘தோழிமார்’ எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. “வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. “கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, ‘அடுக்கியகோடி’ என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. “சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல் காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதே யன்றிப் பிற்பட்டதாகாது.” இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் ‘திருக்குறள்’ எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், ‘தண்டமிழ் ஆசான் சாத்தன்’ என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவருமாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் ‘பொய்யில் புலவன்’ என்றும், திருக்குறளைப் ‘பொருளுரை’ என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப் பியம். ‘அறமுதலாகிய மும்முதற் பொருள்’ என்பது தொல்காப்பியம். ‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு’ என வருவதும் தொல்காப் பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத்திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் ‘அறம்’ என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ‘ஓரை’ என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ‘ஹோரா’ என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். ‘யவனர் தந்த வினைமாண் நன்கலம்’ இவண் வந்ததும், அது ‘பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு)’ பெயர்ந்ததும், ‘யவன வீரர் அரண்மனை காத்ததும்’ முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் ‘தோகை’ ‘அரி’ முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ‘ஓரை’ என்பது. அச்சொல்லை அவர்கள் அங்கு ‘ஹோரா’ என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. திருமணத்தை முழுத்தம் என்பதும், திருமண நாள் பார்த்தலை முழுத்தம் பார்த்தல் என்பதும், திருமணக் கால்கோளை ‘முழுத்தக்கால்’ என்பதும், ‘என்ன இந்த ஓட்டம்; முழுத்தம் தவறிப்போகுமா?’ என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - ‘நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது’ என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே” என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, “நாள்மீன் விரவிய கோள்மீனுக்கு” உவமை சொல்லும் அளவில் தெளிந் திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில் தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து ‘மாலியரோ’ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடுபட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பி யத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையளவிலேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. “மாவும் மாக்களும் ஐயறிவினவே” என்னும் தொல்காப்பியர், “மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமைகளை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” என ‘உலகம் நிலையாமை பொருந்தியது’ என்ற அளவிலேயே அமைகிறார். “காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் ‘புரைதீர்காமம்’ என்றும் (1027) ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’ என்றும் (1029) கூறியிரார். “ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும்” என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதிகாரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதையும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், “கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்றும் (1034), புறநிலை வாழ்த்து, “வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்” என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் ‘வழிபடு தெய்வம்’ என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் ‘தெய்வம் உணாவே” என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமய நெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், ‘கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை’, ‘அருளொடு புணர்ந்த அகற்சி’, ‘காமம் நீத்தபால்’ என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத்தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந்தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப்பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்ட மாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வதுபோல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் ‘முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த’தாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். “ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார்” என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறியதாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் “தொல்காப்பிய இலக்கணத்தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம்” என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுருபேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமை யியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப் பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, “அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல் காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். “உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே” (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை “கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்” (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. “அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர்” (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம் இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்த வாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற் களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். “எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப” “மழவும் குழவும் இளமைப் பொருள” “ஓதல் பகையே தூதிவை பிரிவே” “வண்ணந் தானே நாலைந் தென்ப” ஓரியல் யாப்புரவு ‘ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல்’ என்பது தொல்காப்பியர் வழக்கம். “வல்லெழுத் தென்ப கசட தபற” “மெல்லெழுத் தென்ப ஙஞண நமன” “இடையெழுத் தென்ப யரல வழள” சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற் காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். “அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே” என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறையிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங் களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். “அளபெடைப் பெயரே அளபெடை இயல” “தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல் காப்பியர். “வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே”. “ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்”. இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. “மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்”. இவை அடி எதுகைகள். “விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே” “நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை”. முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது முற்றெதுகை; பின்னது முற்றுமோனை. “வயவலி யாகும்” “வாள்ஒளி யாகும்” “உயாவே உயங்கல்” “உசாவே சூழ்ச்சி” இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடைமொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “இழுமென் மொழியால் விழுமியது பயிலல்” “எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும்” இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. “மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே” “ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்” என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். “வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” “அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். “தாமென் கிளவி பன்மைக் குரித்தே” “தானென் கிளவி ஒருமைக் குரித்தே” “ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை” இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட்டெனவோ நஞ்சை இறக்கி ‘இளையர்’ உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற்குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்துகொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா ‘கைக்கிளை முதலா’ எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. “ஏறிய மடல் திறம்” என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். ‘மறம்’ எனப்படும் துறையும் ‘கண்ணப்பர் திருமறம்’ முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. ‘உண்டாட்டு’ என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. ‘தேரோர் களவழி’ களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ‘ஏரோர் களவழி’ என்பது பள்ளுப்பாடலாகவும், ‘குழவி மருங்கினும்’ என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல்” என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். “அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும்” என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ‘ஒலியன்’ ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? “தொல்காப்பியன் ஆணை” என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கணமாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங்காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல் காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, ‘யாப்பருங்கலம்’ முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப்படுவது ‘புலமை இலக்கணம்’ என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. “தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே” என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் ‘விண்ணவர் கோமான்’ விழுநூல், ‘கப்பத் திந்திரன் காட்டிய நூல்’ என்பவற்றையும் ‘இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்’ என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் “புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர்” என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல்காப்பியனார், “தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே” என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. “இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண்” என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். ‘அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ’ எனின் அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், “தாமரைக் கண்ணானின் உலக இன்பத் திலும் உயரின்பம் ஒன்று இல்லை” என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் “தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு?” என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமையுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ‘ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்’ என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். “மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்றார். அவர் கேள்வியுற்றது ‘விண்ணுலக ஐந்திரம்!’ அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! “ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும்” என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ‘ஐந்திரம்’ என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு ‘படிமையோன்’ என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாத னுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக்குரிய தாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லையாம். இனி ‘ஐந்திறம்’ என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல்காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ‘ஐந்திரம்’ எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் “தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன” என்னும் நூற்பாவை அடுத்துப் “பறழ்எனப் படினும் உறழாண் டில்லை” என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. “இக்காலத்து இறந்தன” என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் “கொல்லே ஐயம்” என்பதை அடுத்த நூற்பா “எல்லே இலக்கம்” என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. “உருவுட் காகும்; புரைஉயர் வாகும்” “மல்லல் வளனே; ஏபெற் றாகும்” “உகப்பே உயர்தல்; உவப்பே உவகை” என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி “நன்று பெரிதாகும்” என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, ‘அவற்றுள்’ என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலிலேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலிலேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. ‘மாற்றருஞ் சிறப்பின் மரபியல்’ என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, “சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே” என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே “ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான” என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, “பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே” என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால் இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கி றோம். எப்படி? “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய” என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், ‘மரபியல்’ செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். “வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். “வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை” என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண் டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் ‘கிழமை’ என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த ‘புறக்காழ்’ ‘அகக்காழ்’ ‘இலை முறி’ ‘காய்பழம்’ இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்” என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள ‘நூலின் மரபு’ பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. “அவற்றுள், சூத்திரந்தானே” என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) “சூத்திரத்தியல்பென யாத்தனர் புலவர்” என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்தலால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம்மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் ‘வாழ்வியல் விளக்க’த்தில் காணலாம். - இரா. இளங்குமரன் சொல்லதிகார இயலமைதி சொல்லதிகாரம் கிளவியாக்கம் (சொல்லாக்கம்) முதலாக எச்சவியல் இறுதியாக ஒன்பது இயல்களை உடையது. அவ்வியல்கள் முறையே கிளவியாக்கம், வேற்றுமைஇயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. இவை ஒன்றற் கொன்று தொடரிபோல் - சங்கிலிபோல் - தொடர்புடையன. சொல் சொல் என்பது பொருளுணர்த்தும் கருவி; மாந்தர் தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி. சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும் தேவை நிறைவேற்றத்திற்கும் தம் பட்டறிவால் இயற்கையின் துணை கொண்டு படைக்கப்பட்ட செய்நேர்த்தியுடையது. சொல்லின் ஆற்றல் பெரிது. “ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால்” என்பது பழமொழி. சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் ‘கூற்று’ என்றொரு பெயரைத் தந்தது கூறுபடுத்துவது அழிப்பது கூற்றெனப்படுதல் அறியத்தக்கது. சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றார் (640). அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத்தக்கனவும் உண்டு என்பதால், “மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்றார் (877). நெல் மணி இல்லாத நெல்லை ‘நெல்’ என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு. நெல் மணி பிடித்தலைப் ‘பலன்’ பிடித்தல் என்பர்;ஆடு மாடு கருக் கொள்ளுதல் ‘பலப்படுதல்’ எனப்படும். மக்கள் வாழ்வில் கொள்ளும் பயன்மற்றை உயிரிகளின் வாழ்வில் பலன் எனப்படுகின்றது. பலன் இல்லா நெல்லும் பயன் இல்லாச் சொல்லும் ஒத்தவை என்பதால் ‘சொல்’ என்பதற்கு நெல் என ஒரு பொருள் உண்டாயிற்று. சொல் தரும் உணவு சோறு என்றும் சொன்றி என்றும் வழக்கில் ஆயது. “பயனில் சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்” என்னும் வள்ளுவ உவமை எண்ணின், உண்மை விளக்கமாம். சொல்லதிகார முதலியலின் பெயர் ‘கிளவியாக்கம்’. ஆக்கம் என்பது என்ன? ஆக்குவது ஆக்கம். ‘ஆக்குப் புரை’ என்பது சமையல் அறை. சொல்லை ஆக்குதல், நெல்லைச் சோறாக்கும் செயல்போல்வது என்பதை, உரையாசிரியர் சேனாவரையர், “வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையான் இவ்வோத்துக் கிளவியாக்க மாயிற்று. ஆக்கம், அமைத்துக் கோடல், நொய்யும் நுறுங்கும் களைந்து அரிசியமைத் தாரை அரிசியாக்கினார் என்ப ஆகலின்” என்றது எண்ணத்தக்கது. கிளவி சொல்லாதல், இரட்டைக் கிளவி என்பதால் வெளிப்பட விளங்கும். கிளத்தல் வழியாவது கிளவி. கிளத்தல் சொல்லுதல். இனி, உயர்திணை, அஃறிணை என்னும் இருதிணை; ஆண், பெண், பலர், ஒன்று, பலஎன்னும் ஐம்பால், வினா விடை; இயல்பு வழக்கு தகுதி வழக்கு, தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூவிடம்; ஒருமை பன்மையாகிய எண்; இவற்றுள் வரும் வழு - வழா நிலை என்பனவெல்லாம் கிளவியாக்கத்தில் இடம் பெறுகின்றன. வேற்றுமை அடுத்துள்ள வேற்றுமையியலில் வேற்றுமை வகை, வேற்றுமை உருபு, பொருள் நிலை என்பவை கூறப்பட்டுள்ளன. வேற்றுமை உருபுகள் மயங்குதல் வேற்றுமை மயங்கியலாக விரிகின்றது. விளி நான்காவது இயல் விளி மரபு என்பது. விளி என்பதன் இலக்கணம், உயர்திணைப் பெயர் விளியேற்கும் முறை, முறைப் பெயர் விரவுப் பெயர், அஃறிணைப் பெயர் ஆயவை விளியேற்கும் முறை பற்றியது அது. பெயர் அடுத்த இயல் பெயரியல், சொற்களின் இயல்பு, பெயர்ச் சொல்லின் இலக்கணம், உயர்திணைப் பெயர்கள், அஃறிணைப் பெயர்கள், விரவுப் பெயர்கள் என்பவை பற்றிய விதிகள் விளக்கங்கள் பற்றியது அது. வினை ஆறாம் இயல் வினை இயல். வினைச் சொல் என்பதன் இலக்கணம் கூறி, உயர்திணை வினை ஆஃறிணைவினை, விரவுவினை, வியங்கோள், வினை, எச்சம் பற்றியது அது. இடை ஏழாம் இயல் இடை இயல். இடைச் சொல் என்பதன் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் பற்றிக் கூறியது அது. எண்ணிடைச் சொல் விளக்கமும் உடையது. உரி உரியியல் என்பது எட்டாவது இயல். இடைச் சொல் போலவே உரிச்சொல்லும் பொது இலக்கணம் சிறப்பிலக்கணம் என்பவற்றைக் கொண்டுளது. உரிச் சொல்லுக்குப் பொருள் காண் முறையும் கூறுகிறது. அகராதி எனவும் நிகண்டு எனவும் பின்னே எழுந்த வரவுகளுக்கு இவ்விடையியலும் உரியியலும் மூலவைப்பகம் ஆகும். எச்சம் ஒன்பதாவது எச்சவியல். நால்வகைச் சொற்கள், பொருள்கோள் வகை, தொகைகள் வினைமுற்று வகை, சில மரபுக் குறிப்புகள் ஆகிய வற்றைக் கூறி நிறைகின்றது அது. இச் சொல்லதிகாரம் உரைவல்லார் பலரைத் தன்பால் ஈர்த்துளது என்பது இதற்குக் கிடைத்துள்ள உரையாசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், தெய்வச்சிலையார் ஆகியோர் உரைகளால் புலப்படும். - இரா. இளங்குமரன் சொல்லதிகார வாழ்வியல் விளக்கம் திணை திணை பால் எண் இடம் காலம் ஆகிய பொதுவகுப்பு உலகப் பொதுமையது. எனினும் தமிழர் கண்ட திணை பால் வகுப்பு அருமையும் பெருமையும் மிக்கவை. சொல்லதிகார முதலியலாகிய கிளவியாக்க முதல் நூற்பாவே, “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” என்கிறது. ‘திணை’ என்பது திண்மை என்னும் பண்பு வழியில் அமைந்த சொல். திண்மை உடலுக்கும் உளத்திற்கும் உண்டேனும், இவண் உளத்திண்மை குறித்ததேயாம். உளத்திண்மையாவது உறுதியான கட்டொழுங்கு. அதனை ஆசிரியர் மேலே விளக்கியுரைப்பார். பெண்மைக்குத் திண்மை வேண்டும் என்னும் வள்ளுவம் ஆண்மைக்கு நிறையும் துறவர்க்கு நோன்பும் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும். உயர்ந்த ஒழுக்கம் உடையவர் எவரோ அவர் உயர்திணையர்; அவ்வுயர் ஒழுக்கம் இல்லாரும் மற்றை உயிரிகளும் உயிரில்லாதனவும் அல்திணையாம் (அஃறிணையாம்) என்கிறார் தொல்காப்பியர். மக்களெல்லாரும் உயர்திணையர் என்னாமல் உயர் ஒழுக்கம் உடையாரே உயர்திணையர் என்றார், “அவ்வுயர் ஒழுக்கம் இல்லார் மாந்தரே எனினும் அவர்கள் மக்கள் அல்லர்; மாக்கள் எனப்படுவர். விலங்கொடும் இணைத்துச் சொல்லப்படுவர்” என்பதை, “மாவும் மாக்களும் ஐயறி வினவே” என்பார் மேலே. திணை இரண்டும் ஐம்பாலாகப் பகுக்கப்படுதலை அடுத்து உரைக்கிறார் (485, 486). பால் பால் என்பது தூய்மை; வால் என்பதும் அதுவே. பட்டொளி வீசும் பகல் ‘பால்’ ஆகும். இரவு பகல் எனப் பகுத்தலால் பால் என்பது பகுதி, பக்கம் என்னும் பொருள்களைக் கொண்டது. எ-டு: மேல்பால், கீழ்பால். பக்கங்களை இணைப்பது ‘பாலம்’ எனப்பட்டது. இவ்வாறும் மேலும் விரிபொருள் கொண்டது பால். ஓர் உயிரின் தோற்றம், வளர்வு, வீவு என்பனவும் உலகத்தியற்கை எனப்பட்டது. அதனால் உகலத்தியற்கை யாம் ஊழுக்குப் ‘பால்’ என்பதொரு பெயரும் உண்டாயிற்று. திணையை இரண்டாகக் கண்ட நம் முன்னோர் பால் என்பதை ஐந்து எனக் கண்டனர். அவை ஆண், பெண், பலர், ஒன்று, பல என்பன. உயர் திணைப்பால் மூன்றாகவும், அஃறிணைப்பால் இரண்டாகவும் கொண்டனர். திணை பால் என்பவற்றைச் சொல்லமைதி கொண்டு வகுக் காமல் சொல் சுட்டும் பொருள் அமைதியைப் பண்பாட்டு வகையால் வகுத்த அருமை நினைந்து மகிழத் தக்கதாம். ஆண்பால் சொல் அடையாளம் என்ன? பெண்பால் சொல் அடையாளம் என்ன? “னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” “ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்” என்கிறார் தொல்காப்பியர் (488, 489) இவ்வாறே பிறவும் தொடர்கிறார். நெடிய தொலைவில் இருந்து உருண்டுவரும் கல், தேய்வுறும்; தேய்ந்து தேய்ந்து சுருங்கி நிற்கும். அதுபோல் நெட்ட நெடுங்காலத்தின் முன் தோன்றிப் பெருக வழங்கும் சொற்கள் தேய்தல் இயற்கை. அவன், அவள்,அவர், அது, அவை என்பனவற்றின் இறுதி எழுத்து ஒன்றுமே நின்று அச்சொல்லமைதியைக் குறித்த வகை இது. வந்த+அவன் = வந்தவன்; எனத் தேய்தல் இல்லையா? மக்கள் வழக்கில் எப்படி வழங்கப்படுகிறதோ, அதனைத் தக்க வகையில் புலமையாளர் போற்றிக் கொண்ட முறை இன்னதாம். பால் திரிபு ‘அரவானி’ என்பார் உளர். அரவான் இறப்போடு தம்மைப் புனைந்து தாலியறுக்கும் சடங்காக நடத்தி வருகின்றனர். அது வரவரப் பெருக்கமும் ஆகின்றது. முழுதுறு ஆண்மையோ, முழுதுறு பெண்மையோ அமையாதவர் அவர். ஓர் எருமையின் கொம்பைப், “பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப” என உவமை காட்டுகின்றது கலித்தொகை. போர்க்களம் புக விலக்கப்பட்டவராக இருந்தனர் அவர். ஆனால் களியாட்டத்தில் பங்கு கொண்டனர். பதினோராடல்களுள் ஒன்று பேடு. ஆண்மை இயல்பு மாறியவரையும் பெண்மை இயல்பு மாறியவரை யும் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். “ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி” என்கிறார். ஆண் தன்மை மாறிப் பெண் தன்மை மிக்கார் பேடியர் என்றும், பெண் தன்மை மாறி ஆண் தன்மை மிக்கார் அலியர் என்றும் கூறப் படுகின்றனர். இலக்கணம் கூறவந்த ஆசிரியர் பால்திரி தன்மையரை எப்பால் வகுப்பில் சேர்த்தல் வேண்டும் என்னும் ஐயம் பயில்வார்க்கு எழாவாறு, “இப்பால் படுத்திக் கூறுக” என இலக்கணம் வகுத்தார் என்க. செப்பும் வினாவும் “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்” என்பதொரு கிளவியாக்க நூற்பா (496). ‘வினா விடை’ மலிந்த காலம் இது. வினாவுதலும் விடை தருதலும் வழக்கு. ஆனால், ஆசிரியர் தொல்காப்பியர் பார்வை ஆழமானது. வினாவு தற்கு உரிய பொருள் ஒன்று இல்லாமல் வினாவுதல் என்பது இல்லையே என எண்ணியவராய் விடை என்பதனைக் குறிக்கும் ‘செப்பு’ என்னும் சொல்லை முன்வைத்துச் “செப்பும் வினாவும்” என்றார். செப்பல் ஓசையமைந்த வெண்பா, வினாவுக்கும் விடைக்கும் பொருந்தி வரக் கண்ட புலமையர், அதனைப் போற்றி வளர்த்த இலக்கியப் பரப்பு பேரளவினதாம். வினா விடை வெண்பா, சேதுவேந்தர் அவையில் சிறக்க வளர்ந்தது. இரட்டையர், காளமேகர் முதலியோர் பாடியவை தனிப்பாடல் திரட்டில் இடம் பெற்றன. வினாவேவிடை “படிப்பாயா” என வினாவுகிறார் ஒருவர். வினாவப் பட்டவர், “படியேனோ? (படிக்க மாட்டேனோ?)” என அவரும் வினாத் தொடுக் கிறார். இவ்வினாவும் விடையே என்பதை மக்கள் வாழ்வியல் வழக்குக் கண்டு உரைத்துள்ளார் தொல்காப்பியர் அது, “வினாவும் செப்பே வினாஎதிர் வரினே” என்பது (497). தகுதி சட்ட மன்றத்திலோ, நாடாளுமன்றிலோ பயன்படுத்தக்கூடாத சொல் என்று அவைக் குறிப்பில் இருந்து விலக்கக் கூறுதல் மக்களாட்சி நடைமுறை. இம்முறை பெரியவர் முன்பிலும், பெரு மக்கள் அவை முன்பிலும் பண்டே பயன்படுத்தப்பட்ட செம்முறை ஆகும். மாண்டார், இறந்தார், துஞ்சினார், செத்தார் என்பனவெல்லாம் ஒரு பொருள் தருவனவே எனினும், ‘செத்தார்’ என்பது மதிப்புக் குறைவாகக் கருதப்படுகின்றது. விடுக்கப்படுவது, ‘ஓலை’ என்றாலும் அது ‘திருமுகம்’ எனப் பட்டது. ‘விளக்கை அணை’ என்னாமல், ‘விளக்கை அமர்த்து’, ‘குளிரவை’ என்பவை மின் காலத்திலும் பின்பற்றல் உண்டு. இவற்றை அவையல்கிளவி, (இடக்கரடக்கு) என்றும், மங்கல வழக்கு என்றும் கூறப்பட்டன. “இதனை இவ்வாறு கூறுதலே தகுதி” எனச் சான்றோரால் வகுக்கப்பட்டது ’தகுதி வழக்கு’ என்பதாம் இதனைத், “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும் பகுதிக் கிளவி வரைநிலை இலவே” என்கிறார் (500). இனச் சுட்டு ஞாயிறு என்பதற்கும் செஞ்ஞாயிறு என்பதற்கும்வேறுபாடு உண்டா? உண்டு. ஞாயிறு என்பதைப் பொது வழக்கிலும் செய்யுள் வழக்கி லும் கொள்ளலாம். ஆனால், செஞ்ஞாயிறு என்பது பொது வழக்குச் சொல் அன்று; அது, செய்யுள் வழக்குச் சொல். ஏனெனில், இனச்சுட்டு இல்லாச் சொல் செஞ்ஞாயிறு என்பது கரு ஞாயிறு என ஒன்று இல்லையே; அதனால் ‘செந்தாமரை’ என்பது பொது வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் உண்டே எனின், அது இனச் சுட்டுடைய பண்பினது. வெண்டாமரை உள்ளதே! “இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே” என்பது நூற்பா (501). இயற்கை செயற்கை இயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் செயற்கைப் பொருளை இவ்வாறு கூறவேண்டும் என்னும் நெறிமுறைகள் உண்டு. ‘மண்திணிந்த நிலம்’ என அதன்செறிவு கூறப்படும். மக்கள் வழக்கிலும் நிலம் வலிது; நீர் தண்ணிது எனப்படும். ஆனால் செயற்கைப் பொருளுக்குக் கூறும் முறை வேறானது. ‘பயிர் செழுமையானது’ எனஆக்கச் சொல் தந்து கூறுதல் வேண்டும். ஆக்கச் சொல்லொடு காரணம் கூறலும் வழக்கு. “நீர் விட்டு களைவெட்டி உரமிட்டு வளர்த்ததால் பயிர் செழுமையானது” என ஆக்கம் காரணம் பெற்று வருதல் உண்டு. ஆக்கம் காரணம் அறிவிக்காமல் அறியத்தக்கது எனின், காரணம் இல்லாமலும் ஆக்கம் வரும். உழவர் முதலோர் வழக்குகளில் ஊன்றிய ஊன்றுதலே இவ்விலக்கண ஆட்சி முறையாம் (502 - 505). ஒருவர் அவர், பலர்பால் சொல், ஆனால் ஒருவரை அவர் எனச் சிறப்பு வகையால் கூறல் உண்டு. அம்முறை இலக்கண முறை ஆகாது; மக்கள் வழக்கு முறையாகும். வேந்தனே எனினும் அவனைப் பாடிய புலவரை அவன் என்னாது அவர் எனல் உரையாசிரியர் மரபு. அதனால் ‘அவனை அவர் பாடியது’ என்றே நெறியாக வழங்கினர். “கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது” என்று சிறப்பு வகையாலே பாடல் தொகுத்தவர்கள் போற்றி உரைத்தனர். ஆர் இறுதி வரும் பெயரோடு சாதிப் பெயர் ஒட்டுதல் இல்லை என்பதை உணர்வார் அதனைப் போற்றத் தவறார். ஆனால் செய்யுளில் ஒரு புலவரை ஒரு புலவர் “பரணன் பாடினன்”, “கபிலன் பாடிய மையணி நெடுவரை” என ஒருமைப் பெயராகவே குறித்தனர். இவை எண்ணிப் போற்றத்தக்கவையாம். தாய்ப்பசு வரும் என்பதை, “இன்னே வருகுவர் தாயர்” என்கிறது முல்லைப் பாட்டு. இஃது அஃறிணையை உயர்திணை ஆக்கிக் கூறியது ஆகும். இவ் விலக்கணத்தைத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார் (510). யாது எவன் யாது என்றோ எவன் என்றோ வினாவின் வினாவப் பட்ட பொருள் முன்னர் அறியப்படாத பொருளாக இருத்தல் வேண்டும் என்பது மரபு. வரையறை இடக்கண் வலிக்கிறது; வலக்கண் வலிக்கிறது எனத் தனித் தனியே கூறல் உண்டு. ஒரு கண் வலிக்கிறது எனலும் வழக்கே. இரண்டு கண்களும் வலித்தால், இரண்டு கண்கள் வலிக்கின்றன எனல் மரபு ஆகாது. இரண்டு கண்களும் வலிக்கின்றன” என்பதே மரபு. ஏனெனின், கண்கள் இரண்டே ஆதலால் உம்மை இட்டுச் சொல்லல் வேண்டும். இவ்வளவே என வரம்புடையவற்றை உம்மையிட்டுக் கூறாமை பிழையாகும். ‘முத்தமிழ் வல்லார்’ என்னாமல் ‘முத்தமிழும் வல்லார்’ எனலே முறை. ஏனெனின் தமிழ் மூன்றே ஆகலின். இதனை, “இனைத்தென அறிந்த சினைமுதல் கிளவிக்கு வினைப்படு தொகையின் உம்மைவேண்டும்” என்கிறார் (516). எங்குமே இல்லாத பொருளைச் சொன்னாலும் அவ்வாறு உம்மை தந்தே சொல்ல வேண்டும் (517). எ-டு: “எந்த முயலுக்கும் கொம்பு இல்லை” அல்லது இல்லது துவரம் பயறு உள்ளதா என்று ஒரு வணிகரிடம் வினாவினால் உள்ளது எனின் உள்ளது என்பார். இல்லை எனின் இல்லை என்று கூறார். ஆனால், துவரம் பயறு போன்ற ஒரு பயறு வகையைச் சுட்டிக் கூறுவார். பாசிப்பயறு உள்ளது; மொச்சைப் பயறு உள்ளது என்பார். ‘இல்லை’ என்று சொல்லுதல் தம் வணிக மரபுக்கு ஆகாது என அவர் கொண்டுரைக்கும் உரை வழக்கு இன்றும் நடைமுறையில் காண்பதேயாம். இதனை, “எப்பொருள் ஆயினும் அல்லது இல்எனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல்” என்கிறார் தொல்காப்பியர் (618). இன்னும், ‘இருந்ததுதான்;’ ‘நாளை வரும்’ என்பதும் இவ்வழிப்பட் டதே. இல்லை என்பது இல்லை என்னும் மக்கள் வழக்கைச் சுட்டுவது இது. பெயர்; சுட்டு ஔவையார் வந்தார்; அவர், அரண்மனையை அடைந்தார். இதில் ஔவையார் என்பது இயற் பெயர். அவர், சுட்டுப்பெயர். இயற்பெயரைச் சொல்லிய பின்னரே சுட்டுப் பெயரைச் சொல்லுதல் வழக்கம். ஆனால், செய்யுளில் சுட்டுப் பெயரை முதற்கண் சொல்லிப் பிற்பட இயற்பெயர் கூறலும் உண்டு. பெயர்களுள் சிறப்புப் பெயர், இயற்பெயர் என இரண்டும் வருவதாயின் சிறப்புப் பெயரை முற்படக் கூறி, இயற்பெயரைப் பிற்படக் கூறவேண்டும் என்பதும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையாகும். எ-டு: ‘தெய்வப் புலவர் திருவள்ளுவர்’ சிறப்புப் பெயரைப் பின்னே வைத்து, இயற்பெயரை முற்பட வைத்தல் ஆகாது என்பதை வலியுறுத்தவே இதனைக் கூறினாராம் (524). ஒரு சொல் பலபொருள் கால் என்பது பல பொருள் ஒரு சொல். உறுப்பு, சக்கரம், காற்று, கால்பங்கு, கால்வாய் முதலாய பலபொருள்களை யுடையது. இவ்வொரு சொல், இப் பல பொருளுக்கு இடமாகி வருதலை அறிய வகை என்ன? கால், கை, தலை என்னும் இடத்து உறுப்பு என்றும், ‘கால் பார் கோத்து’ என்னும் இடத்துச் சக்கரம் என்றும், புனல் அனல் கால் என எண்ணுமிடத்துக் காற்று என்றும், ஒன்றே கால் என்றும் இடத்துக் கால் பங்கு என்றும், கண்வாய் கால்வாய் என்னும் போது நீர் வருகால் என்றும் அறிய முடிகின்றது. இவ்வாறு அறியும் முறையை ஆசிரியர் கிளவியாக்கத் தில் சுட்டுகிறார். பொருள் மயக்கம் உண்டாகா வகையில் பொருள் காண வழிகாட்டுகிறார். “அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் நேரத் தோன்றும் பொருள்தெரி நிலையே” என்பது அது (535). வேற்றுமை தொல்காப்பியர்க்கு முன்னர் வேற்றுமை ஏழாக எண்ணப் பட்டுள்ளது. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமை விளியாகும் நிலையையும் முதல் வேற்றுமையின் திரிபாகவே கொண்டு அதனைத் தனித்து எண்ணாமல் இருந்துளர். ஆனால் தொல்காப்பியர், “வேற்றுமை தாமே ஏழென மொழிப” என்று கூறி, “விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே” எனத் தனித்து எண்ணியுள்ளார் என்பது அவர்தம் நூற்பாக்களின் அமைதியால் விளக்கம் ஆகின்றது. வேற்றுமை எட்டு என எண்ணப்பட்ட வகை அது. பெயர், விளி வேற்றுமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என எண்ணாமல், “அவைதாம், பெயர் ஐ ஒடு கு இல் அது கண் விளி என்னும் ஈற்ற” என எண்ணியுள்ளார். ஐ என்றால் இரண்டாம் வேற்றுமை என்றும்... கு என்றால் நான்காம் வேற்றுமை என்றும்... கண் என்றால் ஏழாம் வேற்றுமை என்றும்... அறியச் செய்துள்ளார். ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் பெயர், ஐ, ஒடு என உருபுகளைக் கொண்டு எண்ணும் வகையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொருள் வேறுபடுத்தும் சொல்லே பெயராகி விடுகின்றதே. ஆதலால் இந்நெறி மேற்கொண்டனர் நம்முன்னோர். ஐ என்னும் உருபு வெளிப்பட்டோ மறைந்தோ வரக் கண்டதும் அதன் பொருள் புலப்பட்டு விடும். ஆதலால் உருபையும் அவ்வுருபு வழியாக ஏற்படும் பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேற்றுமை உருபு-பொருள்களைப் படைத்துளர். முருகன் என்னும் பெயர் எழுவாய் நிலையில் நின்று உருபுகளை ஒட்டும்போது முருகனை, முருகனால், முருகனுக்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா என வேறுபடுகின்றது. உருபு மாற மாறப் பொருளும் மாறுபடுதலால் வேற்றுமை என்றனர். “முருகன் வாழ்த்தினான்” “முருகனை வாழ்த்தினான்” என்பவற்றில் வாழ்த்தியவனும் வாழ்த்துப் பெற்றவனும் வேற்றுமையாகிவிட வில்லையா! இவ் வேறுபாட்டை உருபு ஆக்குதலால் வேற்றுமை உருபு எனப்பட்டது. உருபு என்பது வடிவம் அடையாளம். அரசுத்தாள் என்பதன் அடையாளம் உருபா. வினை, பண்பு, உவமை, உம்மை இன்னவற்றின் அடையாளச் சொற்களையும் உருபு என்றது இதனால்தான். மரம் நட்டினான்; மரத்தை நட்டினான் மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான் ஊரை அடைந்தான். ஊரை நீங்கினான் ‘காளையைப் போன்றான்’ இப்படியெல்லாம் வருவனகொண்டு இன்ன உருபு இன்ன பொருளில் வரும் எனக் கண்டு அம்மரபு போற்றுமாறு காத்தனர். ஆயினும் சில உருபு மயக்கங்களும் உண்டாயின. சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை மறுக்கவும் ஆயின. என் வீடு என்பது, எனதுவீடு என ஆறாம் வேற்றுமையாகும். என் மகள் என்று வரும்போது எனது மகன் எனக் கூடாது. ஏன்? வீடு உடைமைப் பொருள். மகள் உடைமைப் பொருள் அன்று. உறவுப் பெயர்; உரிமைப்பெயர். எனக்கு மகள் என உறவுரிமை தருதலே முறையாகும் (578). இந்நாளில் அடிக்கப்படும் திருமண அழைப்பிதழ் களில் பல இவ்வேறுபாடு அறியாமல் அடிக்கப்படுவதைக் காணலாம். எவ்வளவோ நுண்ணிய அறிவால் கண்டு வைத்த கட்டுக் கோப்பான நம் மொழி அக்கறை இல்லாத மக்களால் அழிக்கப்படு வதற்கு இஃதொரு சான்றாம். உருவாக்கிக் காத்த உயர்ந்த அறிவாளர் வைத்துள்ள மொழிச் சுரங்கம் இலக்கணம் என்னும் உணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் இத்தகு குறைகள் ஏற்படா. வேற்றுமை வரிசை சொற்கள் பெயர் வினை இடை உரி என நான்காக எண்ணப்படினும் பெயர், வினை என்னும் இரண்டனுள் அடங்கும். அப்பெயரே முதல் வேற்றுமை; அப்பெயராகிய எழுவாய் வினைபுரிதல் விளக்கமே வாழ்வியலாகும். அவற்றை முறையே வைப்பு முறையால் வைத்த அருமையது இரண்டாம் வேற்றுமை முதலியனவாம். இவ்வருமையை முதற்கண் கண்டுரைத்தவர் உரையாசிரியர் தெய்வச்சிலையார். அவர் கூறுமாறு: “யாதானும் ஒருதொழிலும், செய்வான் உள்வழி யல்லது நிகழா மையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இதுவெனக் குறிக்க வேண்டுதலின் செயப்படு பொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்கு ஆம் கருவி தேடுதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு செய்து முடித்த பொருளைத்தான் பயன்கோடலே அன்றிப் பிறர்க்கும் கொடுக்கும்ஆதலின் அதனை ஏற்றுநிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவதுஆயிற்று. அவ்வாறு நீங்கிய பொருளைத் தனது என்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின.” மணிமாலை போல வேற்றுமையமைவு விளக்கம் சிறத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். நூலாசிரியர் கண் கொண்டு உரையாசிரியர் நோக்கி யுரைக்கும் இன்னவை நூற்பெருமையை மேலும் பெருமை செய்வதாம். ஒடு “ஊராட்சித்தலைவரொடு உறுப்பினர்கள் கூடினர்” இது செய்தித் தாளில் வரும் செய்தி. உறுப்பினர்கள் பலர்; தலைவரோ ஒருவர். ஆயினும் தலைவரோடு என அவர்க்கு முதன்மை கொடுப்பது ஏன்? “ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே” என்பது தொல்காப்பிய நாள் தொட்ட நடைமுறை வழக்கம் (575). விளி மரபு அம்மை அன்னை தந்தை தங்கை அக்கை தம்பி முதலான முறைப்பெயர்கள் விளிக்கப்படும் பெயர்களாக வழக்கில் மாறாமல் உள்ளன. விளித்தல் அழைத்தல், கூப்பிடுதல். அம்மா, அம்மே, அம்மோ என்றெல்லாம் வழங்குதல் பழமையும், ‘அம்ம’ என்று அண்மை விளியாம் பழமையும் இவ்வியலால் நன்கு அறியப்படும். “அண்மைச் சொல்லே இயற்கையாகும்” என்றும் விளியேலாமை குறிப்பார் (612). இம் மரபு தமக்கு முற்றொட்டே வரும் வகையை உணர்த்துமாறே ‘விளிமரபு’ என்று பெயரிட்டு வழங்கினார் என்பதும் அறியத்தக்கது. கோமான், பெருமாள் என்பன ஈற்றயல் நெடிலாகியவை. இவை விளியாம்போது இயற்கையாய் அமையும் என்கிறார். பெருமானே, பெருமாளே, கோமானே எனவருதல் இருவகை வழக்கிலும் உண்டு. “உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் அளபிறந் தனவே விளிக்கும் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான” என விளியை விரிவாக்கிப் போற்றுகிறார் (637). குழந்தை தொட்டுப் பெருமுதுமை வரை மக்கள் வாழ்வில் மட்டுமா? இறையடியாரும் “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே” என்று விளிக்கும் விளிமரபு மாறாமரபு அல்லவா! சொல்லும் பொருளும். பெயர் வினை இடை உரி என முறையே சொற்களை எண்ணும் ஆசிரியர் அவற்றின் இலக்கண அடிமூலம் கூறுவாராய், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார். தமிழ்ச் சொற்களில் இடுகுறி என்பதொரு சொல் இல்லை என்பதைச் சொல்லி எல்லாச் சொற்களும் பொருள்புணர்ந்தனவே என உறுதி மொழிகிறார் (640). பெயர், வினை சொற்கள் இரண்டே என்பாராய், “சொல்எனப் படுப பெயரே வினைஎன்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே” என்பது (643) குடிக்கணக்கு எடுப்பார் தலைக் கட்டு எண்ணுவது போன்ற தாம். தலைக்கட்டு வரி ஊர்ப்பொதுப் பணிக்கு ஊரவர் மதிப்பிட்டுப் பெறும் தொகையாகும். ஆள் எண்ணிக்கையில் இருந்து வரிதண்டலுக்கு விலக்கப்பட்ட முறை போல்வது அது. பொருளை உணர்த்துவது பெயர். பொருளின் பெயர்ச்சி (புடை பெயர்தல்) வினை. என இரண்டன் பொருந்துதலும் நோக்கத் தக்கது. இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சொல்லென ஆகாவோ எனின், “இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப” என்பார் (644). பெண்மகன் ஆண், பெண், பிள்ளை எனவும்; ஆண்பிள்ளை, பெண்பிள்ளை எனவும்; வழங்கல் உண்டு. ஆண்மகன்; பெண்மகள் என்பனவும் வழங்கு வனவே. பெருமகள் பெருமாள் ஆகும்; பெருமகன் பெருமான் ஆவது போல. ‘பெண் பெருமாள்’ என்பார் வரலாற்றில் இடம் பெற்றுளார். தொல்காப்பியர், “பெண்மை அடுத்த மகன் என் கிளவி” என்பதைக் குறிக்கிறார். அதனால், ‘பெண்மகன்’ என வழங்கப் பெற்றமை அறியவரும். உரையாசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப” என்கிறார். கல்வி அறிவாற்றலால் தக்கோர் அவையில் முந்தியிருக்கச் செய்யும் கடமை யமைந்த பெற்றோரை நோக்க, மகற் காற்றல் என்பது இருபாலையும் தழுவியபேறும் உண்டெனக் கொள்ளத் தகும். இனி இந்நாளிலும் பெண்மகவை ‘வாடா’ ‘போடா’ என்பதும், ஆண்பெயராக்கி அழைப்பதுடன் ஆணுடையுடுத்து மகிழ்தலும் காணக் கூடியனவேயாம். குறிப்பாகப் பெண்பிள்ளை இல்லார் அவ்வாறு செல்வமாகப் போற்றி மகிழ்தல் அறியலாம். தொல்காப்பியர் நாளை எச்சமாக அதனை எண்ணலாம். பெயர்வகை உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் என விரிவாகப் பட்டிய லிட்டுக் காட்டும் ஆசிரியர் நூற்பாக்களொடு சங்கத்தார் பெயர்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் மொழித் தூய்மை பேணும்வழி தானே புலப்படும். நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின்பெயர், வினைப் பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயர், முறைநிலைப் பெயர், சினை நிலைப் பெயர், திணை நிலைப் பெயர், ஆடியற்பெயர், எண்ணியற் பெயர் என்னும் இவை இடைக்கால பிற்கால வேந்தர் முதலோரால் கொண்டு போற்றப்படாமையால் இந்நாளில் முறை நிலைப் பெயர் (அம்மா, அப்பா, அண்ணா, அக்கை) தாமும் ஒழிந்துபடும் நிலைமை எண்ணத் தகும். சிறுநுண் நச்சுயிரியினால் பேருயிரியாம் மாந்தர் அழிந்துபடுதல் ஆகாது என அறிவியலாளரும் அரசியலாளரும் எடுக்கும் நலத்துறை அக்கறையில் ஒரு சிறிதளவு தானும் மொழித்துறை, பண்பாட்டுத் துறையில் கருத்துச் செலுத்தவில்லையே என்னும் ஏக்கம் உண்டாக்கு வது தொல்காப்பியர் சுட்டிக் காட்டும் பெயர் வகைகள் ஆகும் (647-650). அவர்கள் அவன் அவள் அவர் அது அவை என்பன ஐம்பாற் பெயர்கள். இந்நாளில் ‘அவர்கள்’ எனப் பலர்பால் வழங்கப்படுகிறது. ‘ஆசிரியர் அவர்கள்’ எனச் சிறப்பொருமைப் பெயராகவும் வழங்கப்படுகிறது. ‘கள்’ என்பது அஃறிணைப் பன்மைப் பெயர் ஈறு. அது மக்கட் பெயரொடு ஆண்கள் பெண்கள் அவர்கள் என வருதல் ஆகாது. ஆடுகள் மாடுகள் மலைகள் எனவரும் என்பது பழைய மரபு. “கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி யுடைய பல அறி சொற்கே” என்பது தொல்காப்பியம் (654). பலவின் பாலுக்குரிய ‘கள்’ பலர்பாலுக்கும் வருதல் சங்கத்தார் காலத்திலேயே தோற்றமுற்று வரவரப் பெருக்கமாகிவிட்டது. அவர்கள் எனக் கள்ளீறு இல்லாமல் ஒருவரைச் சொன்னால் அவர் பார்வையே வேறாகிப் ‘பண்போடு பேசத் தெரியவில்லை’ எனப் பழிப்புக்கும் ஆளாகிவிடுதல் இந்நாளில் கண்கூடு. தாம், தான் தாம் என்பது பன்மைக்குரிய சொல் (669). எ-டு: அவர்தாம் கூறினார்; அவர் தம்முடைய பணிக்குச் சென்றார். தான் என்பது ஒருமைக்குரிய சொல் (670). எ-டு: அவன்தான் கூறினான்; அவன் தன்னுடைய பணிக்குச் சென்றான். எல்லாம் என்பது பன்மைச் சொல் (671). எ-டு: அவர் எல்லாம்; அவை எல்லாம். இப்படித் தெளிவாகத் தொல்காப்பியம் கூறியும் இந்நாளை இதழாசிரியர் நூலாசிரியர் தாமும் கண்டு கொள்வதில்லை. அவர் தன்னுடைய வேலையுண்டு தானுண்டு என்றிருப்பார் - என அச்சிட்ட செய்தி படிப்பார் அப்பிழையைக் கற்றுக்கொண்டு பரப்பாள ரும் ஆகிவிடுகிறாரே! வினை வினை என்பதன் இலக்கணம் ‘காலத்தொடு தோன்றும்’ என்பது. அது ‘வேற்றுமை கொள்ளாது’ என்பதும் அதன் இலக்கணமே. இதனைச் சொல்லியே வினையியலைத் தொடங்குகிறார். மெய்யியல் வல்லாராகிய அவர், செயல் வழியாம் வினையைச் சொல்வதை அன்றித் ‘தலைவிதி’ என்னும் பொருளில் ஆளவில்லை. 49 நூற்பாக்கள் அதற்கென வகுத்தும் அவ்வாறு ஆளாமை தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளமைதியை விடுத்து வேறு வகையில் செல்லார் என்பது நாட்டும். ‘செய்வினை’ செய்தல்; அதனை நீக்க ‘வினைக் கழிவு’ செய்தல் அறிவியல் பெருகிவருவது போலப் பெருகி வருதலை நினைக்க ஏதோ மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் போலத் தோன்றுதல்தானே உண்மை. விரைவு வாரான் ஒருவனும் வருவான் ஒருவனும் விரைவுக் குறிப்பில் வந்தேன் வந்தேன் எனல் உண்டே! உண்ணப் போவான் ஒருவன் உண்டேன் எனலும் உண்டே! இது குற்ற மல்லவோ எனின், “வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள என்பனார் புலவர்” என அமைதி காட்டுகிறார் ஆசிரியர் (726). நிகழ் காலம் மலை நிற்கும் எனவும், கதிர் இயங்கும் எனவும் வழங்குகிறோம். மலை நின்றதும், நிற்கின்றதும், நிற்பதும் ஆகிய முக்காலத்திற்கும் உரியதாக இருந்தும் நிகழும் காலத்துச் சொல்லுதல் வழு இல்லையா? கதிர் இயங்கியது; இயங்குகிறது; இயங்கும்; இவ்வாறு இருந்தும், நிகழ்காலத்தில் சொல்லுதல் வழுத்தானே! ஆசிரியர் தெளிவிக்கிறார்: “முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்” என்பது அவர்காட்டும் அமைதி (725). முக்காலத்திற்கும் ஒத்தியலும் அவற்றைச் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டால் சொல்ல வேண்டும் என வழிகாட்டுகிறார். தெளிவு இச் சுழலுள் போவான் செத்தான் எனின் வழுவாகும் அல்லவோ! அப்படிச் சொல்லுதல் வழக்கில் உண்டே எனின், நிகழப் போவதை உறுதி யாகக் கொண்டு நிகழ்ந்ததாகக் கூறியது அது என்கிறார். “வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை” என்பது நூற்பா (730). இடைச் சொல் ‘நான்’ என்பது தன்மைப் பெயர். ‘நீ’ என்பது முன்னிலைப் பெயர். ‘நான் நீ’ என்று நின்றால் பொருள் விளக்கம் பெறுவது இல்லை. “நானும் நீயும்” என்னும் போது பொருள் விளக்கம் பெற வாய்க்கின்றது; ‘செல்வோம்’ எனச் சேர்த்தால் பொருள் முடிபு கிட்டுகின்றது. சொற்கள் பெயர், வினை எனப் பகுக்கப் பட்டாலும், இத்தகு (உம்) இணைப்புகளும் வேண்டியுள. இவ்விணைப்புச் சொற்களே இடைச் சொற்கள் எனப்படுகின்றன. இடைச் சொல் என்பதால் சொல்லுக்கு இடையே மட்டும் வரும் சொல் என்பதாகாது. சொல்லுக்கு முன்னும் பின்னும் இடையும் வேண்டும் இடத்தால் வருவது இடைச் சொல் எனப்பட்டது என்க. “இடைச் சொல் தான் சார்ந்த பெயரின் பொருளையும் வினையின் பொருளையும் தழுவி நிற்றல் அன்றித் தனித்து நடக்கும் தன்மையது அன்று” என்று ஆசிரியர் கூறுகிறார் (734). எலும்புகளை இணைக்கவும் இயங்க வைக்கவும் இணைப்பு மூட்டுகள் உடலில் இடம் பெற்றிருப்பன போலச் சொற்பொருள் விளக்கத் திற்கு இடைச்சொற்கள் உதவுகின்றன எனல் தகும். “யான் அரசன்; யான் கள்வன்” இடைச் சொல் பெறா நிலையில் இத் தொடர்கள் தரும் பொருளுக்கும், “யானோ அரசன்; யானே கள்வன்” என இடைச் சொல் இணைதலால் வரும் தொடர்கள் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிட்டுத் தோன்றவில்லையா? இடைச் சொற்கள் சொல்லுறுப்புகளே எனினும் சொல்லுக்கும் பொருளுக்கும்; தொடர்புப் பாலமாக இருப்பவை அவையே. இனி, இடைச் சொல் தானும் பொருளின்றி வாரா என்பதன் விளக்கமே, “கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே” என வருவது முதலான நூற்பாக்கள். உரிச்சொல் இயற்றப்படும் செய்யுள் சுவையும் தெளிவும் உறுதியும் அழகும் கொண்டு விளங்குமாறு இதற்கு இதுவே உரிய சொல் எனத் தேர்ந்து வைக்கப்படும் சொல் உரிச் சொல்லாகும். பெயர் வினை இடை என்னும் முச் சொற்களைக் கொண்டே எடுத்த பொருளைக் கூறிவிட முடியும். ஆனால் உரிச் சொல் தரும் சுவை முதலிய நலங்கள் ஏற்பட்டு ஆழ்ந்து எண்ணவும் மீள மீளக் கற்கவும் வாய்க்காமல் அமையும். அவையறிந்து பேசுவார் தம்மைச், சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர், சொல்லின் நடையறிந்த நன்மையவர், சொல்லின் வகை யறிவார் (711 - 713) என்று வள்ளுவர் தொகுத்துக் கூறும் இலக்கணம் அமைந்த சொல் உரிச் சொல் ஆகும். உரிச் சொல் உணர்வில் நின்று சுவை யாக்குதல், உரிப்பொருள் ஒப்பது எனப் பெயரீடு கொண்டு உணரலாம். நிகண்டு படைப்பாளி கொண்ட பொருள் நயம் படிப்பாளியும் கொள்ளல் வேண்டும் எனின் புரிதல் வேண்டும். காட்சிப் பொருள் போலக் குருத்துப் பொருளை அறிதலின் அருமை நோக்கியே உரிச்சொல் விளக்கமாக நிகண்டு நூல்கள் தோற்றமுற்றன. அந்நிகண்டு நூல்களில் ஒன்றன் பெயர் உரிச்சொல் நிகண்டு என்பது. வழக்காற்றில் நிகழ்கின்றவற்றைக் கொண்டு திரட்டி வைக்கப்பட்ட சொல்லடைவே நிகண்டு என்னும் பொருட் (காரணப்) பெயராகும். உரிச்சொல் இயல் இத்தகு செய்யுட் சொல்லைப் பொருள் உணர்ந்து ஓதிச் சுவைக்கும் வகையில் வழிகாட்டியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த உரிச் சொல் இயல் அதன் விளக்கமாகும். வேண்டும் வேண்டும் சொல்களை உருவாக்கிக் கொள்ள அடிச் சொல்லாகத் திகழும் அருமை உரிச் சொல்லுக்கு உண்டு. தொல்காப்பியர், ‘உறு தவ நனி’ என்னும் உரிச் சொற்களைக் கூறி, மூன்று என்னும் எண் தந்து, மிகுதி என்னும் பொருள் தருவன அவை என்கிறார். “சால உறு தவ நனி கூர் கழிமிகல்” (நன். 455) என ஆறு எண்ணுகிறார் நன்னூலார். உரிச் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்து ஓத வேண்டுவது இல்லை; அவற்றுள் பொருள் வெளிப்பாடு உடைய சொல் பொருள் வெளிப் பாடு அரிய சொல் என்பவற்றுள் பின்னதையே கூறினேம் என்கிறார். அவ்வாறானால் வெளிப்பட வாராச் சொல்லென அவர் எண்ணுவன வற்றையே கூறுகிறார் என்பது தெளிவாகும். மிகுதி மிகுதிப் பொருள் தரும் உறு என்னும் உரிச்சொல் ‘உறுபசி’ என வள்ளுவத்தில் ஆளப்படுகிறது; ‘உறுதுயர்’ என்பதும் அது. உறு என்பது உறுதல், உறுதி, உற்றார், உறவு, உறக்கம், உறிஞ்சுதல் உறுவலி முதலிய சொல்லாக்க அடிச் சொல்லாக அமைந்திருத்தலும் நெருக்கம் கட்டொழுங்கு மிகுதி என்னும் பொருள்களைச் சார்ந்தே நடை யிடுதலும் அறியத் தக்கதாம். மிகுதிப் பொருள் தரும் ‘தவ’ என்பது, தவப்பிஞ்சு தவச் சிறிது என மக்கள் வழக்கிலும் இடம் பெற்றுள்ளது. இது, தவம், தவசம், தவசி, தவசு எனச் சொல்லாக்கம் பெற்று வழங்குதலும் காணலாம். நல், நன், நன்று, நனவு, நனி, நனை என்பன வாழ்வியல் வளச் சொற்களேயாம். மழ, குழ மழலை, மதலை, குழந்தை, குதலை என்னும் சொற்களை எண்ணிய அளவில் இளமை மின்னலிடல் எவர்க்கும் இயற்கை. தொல்காப்பியர், “மழவும் குழவும் இளமைப் பொருள” என்கிறார். உள்ளங்கள் ஒன்றிப் போகிய வகையால் உண்டாகிய பொருள் அல்லவோ இது. அலமரல் அலமரல் என்பது தொல்காப்பியர் நாளில் வெளிப்படப் பொருள் வாராச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் ‘அல மருதல்’ மக்கள் வழக்குச் சொல்லாகி விட்டது. அலமருதல் சுழற்சிப் பொருளிலேயே வழங்குகின்றது. தெருமரல் என்பதும் அப்பொருளதே. சீர்த்தி சீர் சீர்மை சீர்த்தி சீரை என்பன வெல்லாம் இலக்கிய வழக்கில் உள்ளவை. முன்னிரண்டு சொற்களும் மக்கள் வழக்கிலும் உள்ளவை. சீர்த்தி என்ன ஆயது? ‘கீர்த்தி’ ஆகிவிட்டது. வேற்றுச் சொல் எனவும் கொள்ளப் பட்டது. சீரை ‘சீலை’யாகிவிட்டது. சீரை என்னும் துலைக் கோல் பொருள் இலக்கிய அளவில் நின்று விட்டது. குரு ‘குரு’ என்பது ஒளி என்னும் பொருள் தரும் உரிச்சொல். உள்ளொளி பெருக்குவான் ‘குரு’. குருந்து, குருந்தம், குருமணி, குருதி என்பன ஒளிப்பொருள் - நிறப் பொருள் - தருவன. குருத்து என்பது மக்கள் வழக்குச் சொல். ஒளியுடன் வெளிப்படுவது அது. குருத்தோலையும் குருத்திலையும் மிக வெளிறித் தோன்றுதல் ‘குரு’ வின் பொருள் காட்டுவன. குருந்தத்துக் குருமணி நினைவில் எழலாமே! அதிர்வு “அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும்” என்பது அப்படியே நடையில் வழங்கும் உரிச்சொற்களாக உள்ளனவே. “அதிர்ந்து போனார்” “விதிர் விதிர்த்துப் போனேன்” வழக்கிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் சொற்கள் தாமே இவை. தொல்காப்பியர் நாளில் அருஞ் சொற்களாக இருந்ததால்தானே விளக்கம் தந்தார். கம்பலை கண்ணீரும் கம்பலையும் என்பதோர் இணைமொழி. கண்ணீர் விட்டு அழுவதே அது. அழுகையால் உண்டாகும் ஒலி கம்பலை. “கம்பலை சும்மை கலியே அழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள” என்கிறார் தொல்காப்பியர். அரவம் - ஒலி; நீ இருக்கும் அரவமே இல்லையே என்பது வழக்கில் உள்ளது. பாம்புக்கு அரவம் எனப் பெயர் வந்தமை இதனால் அறியலாம். ‘கமலை’ கம்பலை என்பதன் தொகுப்பே. அழுங்கல் அழுகையால் அறியலாம். கலித்தல் துள்ளல்; அலை ஒலியால் கலித்தல் விளங்கும். ‘சும்’ என்பது மூச்சின் ஒலிக்குறிப்பு. புலம்பு ஆற்றுவார் இல்லாமல் புலம்புதல் உண்டு. தானே பேசுதலை ‘ஏன் புலம்புகிறாய்?’ என்பதும் வழக்கே. “புலம்பே தனிமை” என்பது தொல் காப்பியம். புலம்பல் உரிப்பொருளுக்கு உரிய நெய்தல் நிலப் பெயர் ‘புலம்பு’ எனப்படும். அதன் தலைவன் புலம்பன்! வெம்மை கோடைக் காலத்தில் தமிழகத்து வாழும் வளமைமிக்கார் கோடைக் கானைலை நாடி உறைவர். கோடைமலை சங்கச் சொன்றோர் பாடு புகழ் பெற்றது. கோடைக்கு அதனை நாடும் இக் காலநிலைபோல், தொல் காப்பியர் காலத்தே வெப்பத்தைத் தேடி உறையும் குளுமை மிக்க நிலையும் இருந்திருக்கும் போலும் அதனால், “வெம்மை வேண்டல்” என ஓர் உரிச் சொல்லையும் பொருளையும் சுட்டுகிறார். நாம் நம் அன்பர்களைக் குளுமையாக வரவேற்க; குளிர்நாட்டார் ‘வெம்மையாக வரவேற்றல்’ காண்கிறோமே! பேம், நாம் குழந்தைகள் அழுமானால் அச்சம் காட்டி அடக்குதல் இன்றும் சிற்றூர் வழக்கம். அவ்வச்சக் குறிப்பு ‘பே பே’ என ஒலி எழுப்புதலும் தொண்டையைத் தட்டுதலும் ஆகும். ‘பே’ (பேம்) என்னும் குறிப்பு அச்சப் பொருள் தருதல் தொல் காப்பியர் நாளிலேயும் இருந்தது. ‘பேய்’ என்பதன் மூலம் இப் பேம் ஆகும். ‘ஓர் ஆளும் கருப்புடையும் பேய்’ என்பார் பாவேந்தர். ‘நா’ (நாம்) என்பதும் அச்சப் பொருள் தருதல் ‘நாமநீர்’ என்னும் கடலலைப்பால் புலப்படும். நாயும் அச்சப் பொருளாதல் அறிந்தது. உரும் உரும் அச்சமாதல் விலங்குகள் உருமுதலால் விளங்கும். உரும் இடியும் ஆகும். உரும் வழியே உண்டாகிய ‘உருமி’க் கொட்டு, கேட்ட அளவால் அசைப்பது தெளிவு. இவற்றைத் தொகுத்து “பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றார். ‘உரு’ என்பதை மட்டும் தனியே எடுத்து “உரு உட்கு (அச்சம்) ஆகும்” என்றும் கூறினார். கண்டறியாத் தோற்றங்களும் விலங்குகளும் பாம்பு முதலியனவும் அஞ்சச் செய்தலை எண்ணி ‘உரு’ எனத் தனித்துக் கூறினார். அவர்தம் விழிப்புணர்வு வெளிப்பாடு இன்னவையாம். ஆய்தல் ‘ஆய்தம்’ என்னும் எழுத்து முப்பாற்புள்ளி வடிவினது; ஆய்தப் புள்ளி என்பதும் அது; அஃகேனம் என்பதும் அதற்கொரு பெயர்; என்பவற்றைக் கூறும் ஆசிரியர், ஆய்தம் என்பதன் பொருள் ‘நுணுக்கம்’ என்கிறார். “ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது அது. ‘ஆய்வுப் பட்டறை’ எனப் பெயரிட்டு ஆய்வாளர் பலர் கூடித் திட்ட மிட்டுச் செய்து வரும் தொடர் நிகழ்வாகிய அதன் பெயர் தானும் பிழையாயது என்பது அறியாமலே ஆய்வுகள் நிகழ்கின்றன. ‘பட்டடை’ என்னும் சொல் தொழிலகப் பெயர். ‘பட்டடை’ என்பது “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு” என வள்ளுவரால் ஆளப்பட்ட சொல் (821) ஆய்தல் என்பது நாட்டுப்புறப் பெருவழக்குச் சொல். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்று கூறுதல் இந்நாள் வரை மாறியதில்லை. முற்றல் அழுகல் பூச்சி முதலியவை போக்கித் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளுதலே ஆய்தல் பொருளாக அமைகின்றது. ஆய்தலினும் நுணுக்க ஆய்வு ‘ஆராய்தல்’ (ஆர் ஆய்தல்). ஆய்வும், ஆராய்வும் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் நுண்ணிய நோக்குடைய சொற்கள். ஒன்றின் ஒன்று நுணுகியவையாக, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்பவற்றைச் சுட்டும் இவ்வுரிச் சொல் விளக்கம் அரிய வாழ்வியல் விளக்கமாம். ஓயா உழைப்பாளி, ஓயாப் போராளி, ஓயாச் சிந்தனையாளர், ஓயாப் பொருளீட்டாளர் ஓய்வு கொள்ளும் நிலை என்பது யாது? தம் ஓயாப் பாட்டின் பயன்பாட்டை மீள் பார்வை பார்க்க வேண்டும் அல்லவா! அவ்வாய்வு தானே ஓய்வின்பயன்! ஓய்வு என்பது சிந்தித்தலும் அற்றுப் போன நிலை அன்றே! அச் சும்மா இருக்கும் நிலை கோடியர்க்கு ஒருவர் இருவர் அல்லரோ தேடிக் கண்டு கொள்வது! அச் ‘சும்மா’ அரும் பொருளுள் அரும் பொருள். ஓய்வு கொள்வார்க் கெல்லாம் பொதுப் பொருளாகக் கைவர வல்லது ஆய்தலேயாம். ஆதலால் ஓய்தலில் நுண்ணியது ஆய்தல். ஆய்ந்து கண்ட பொருளை அடக்கிவைத்துக் கொள்வதால் ஆய்ந்து கண்ட பயன் தான் என்ன? அதனால் ஆய்ந்து கண்ட பயன் கருத்துகளைப் பலருக்கும் பல விடத்தும் சென்று கூறுதல் நிழத்தல் ஆகும். குடை நிழற்றல் என்பது நாடு தழுவுதல் போல் இந்நிழத்தல் ஆய்தலினும் நுண்மை யுடையதாம். இருந்தும் நடந்தும் நுவலும் நிலையும் இயலாமையாயின் அந்நிலை யிலும் தாம் கண்ட அரும்பயன் பொருள் - நுவன்று நுவன்று வந்த பொருள் - பின் வருவோர்க்குக் கிட்டும் வகையால் நுவன்றதை நூலாக்கி (நுவல் > நூல்) வைத்தல் வேண்டும். அக்கொடை உயர்கொடை என்பதை ஔவையார் “தாதா கோடிக்கு ஒருவர்” என்று பாராட்டுகிறார். ஓய்தல் முதல் சாய்த்தல் (வடித்தல்) வரைப்பட்டவை ஒன்றில் ஒன்று நுண்ணியவை ஆதலின் “உள்ளதன் நுணுக்கம்” என்றார். எவ்வொரு கடப்பாட்டில் ஊன்றியவரும் தம் ஊன்றுதல் கடனாக உயர்கொடை புரியலாம் என்னும் அரிய வழிகாட்டுதல், உரிச்சொல் வழியாகத் தரப்பெற்றதாம். வை வையே கூர்மை என்பதோர் உரிச்சொல் விளக்கம் (870). வை என்பதற்குக் கூர்மைப் பொருள் எப்படி வாய்த்தது? ‘வை’ என்னும் நெல்லைப் பார்த்தால் - நெல் நுனியாம் மூக்கைப் பார்த்தால் கூர்மை நன்கு புலப்படும். மழிதகடு போலும் கூர்மையுடையது நெல் மூக்காகும். வெகுளி “கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள” (855) என்பது வண்ணத்தை விலக்கி எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிச் சொல் விளக்கம். சினங் கொண்டார் கண்நிறம் என்ன? அவர் முகத்தின் நிறம் என்ன? - இவற்றை நோக்கின் வெகுண்டாரின் முகமும் கண்ணும் காட்டிவிடும். “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும்” என்பது குறள். கறுப்பும் சிவப்பும் நிறம் குறித்து வாராவோ எனின், “நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப” என்று கூறுவார் (856). எறுழ் காளையை அடக்க விரும்புவார் அதன் கொம்பை வளைத்துத் திமிலைப் பற்றித் தாவி ஏறி அடக்குதல் வழக்கம். திமிலுக்கு ‘எறுழ்’ என்பது பெயர். எறுழ் என்பதன் பொருள் வலிமை என்பதாம். எறுழ் என்னும் உரியொடு எறும்பு, எறும்பி (யானை) என்பவற்றை எண்ணினால் வலிமை விளக்கமாம். “எறுழ் வலியாகும்” என்பது நூற்பா (871). கலியாணர் உண்ணாட்டு வாணிகரன்றி அயல் நாட்டு வாணிகராகப் பெரும் பொருள் ஈண்டியவர் கலியாணர் எனப்பட்டனர். கலி=மிகுதி; யாணர் = வருவாயினர். யாணர் என்பதன் பொருள் புதிதுபடல் (புதிய வளம் பெறுதல்) என்பார் தொல்காப்பியர் (862) யாணர் என்பதை யன்றி ‘யாண்’ என்னும் உரிச் சொல்லைக் காட்டி, “யாணுக் கவினாம்” என்றும் கூறுவார் (864). புதுவருவாயும் கவினும் பெருக்குவதாய திருமணம் ‘கலியாணம்’ எனவும் வழங்கப்படுதல் விளக்கமாக வில்லையா? வேற்றுச் சொல்லென மயங்காதீர் என்கிறது உரிச் சொற் பொருள். உணர்தல் உள்ளது உள்ளவாறு உணரும் உணர்ச்சி எவர்க்கு உண்டு என்று வினாவின், “உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே” என்கிறார் (876). சொல்லும் பொருளும் சொல்வோன் குறிப்பும் வெளிப்படப் புலப்பட்டு விடுமா? என வினாவின், உணர்வோர்க்கும் உடனே வெளிப் படப் புலப்படுதல் அரிது. ஆனால் அவரே ஆழ்ந்து நோக்கின் பொருள் புலப்படுதல் இல்லாமல் போகாது என்பதை, “மொழிப்பொருட் காரணம் விழிப்பத்தோன்றா” என்பதனால் தெளிவுபடுத்துகிறார் (877). இது முன்னரும் சுட்டப்பட்டது. எச்சம் ஒரு தொகையை ஒருவரிடம் தந்து செலவு கணக்குக் கேட்பார் எச்சம் எவ்வளவு என வினாவுவார். எச்சமாவது எஞ்சியிருப்பது. ஒருவர் தம் வாழ்வின்பின் வைப்பாக வைத்துச் செல்லுவன வெல்லாம் எச்சம் என்பதால், “தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தால் காணப் படும்” என்றார் பொய்யாமொழியார். எச்சம் என்பதற்கு மக்கள் எனச் சொல்லை மாற்றினாரும் பொருள் கண்டாரும் உண்டு. ஆனால் தொல்காப்பிய எச்ச இயல் எஞ்சியது என்னும் தெளிபொருள் தந்து விளக்குகிறது. இவ்வதிகாரத்தில் சொல்லியவைபோகச் சொல்ல வேண்டி நிற்கும் எச்சத்தைச் சொல்வதால் எச்சவியல் எனப்பட்டது. எச்சம் மக்கள் வாழ்வில் மாறாது வழங்கும் விளக்க மிக்க சொல்லாம். நால்வகைச் சொற்கள் தமிழ்கூறும் நல்லுலகச் செய்யுள் வழக்கிலே பயிலும் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என நான்காக எண்ணி இயலைத் தொடங்குகிறார். தமிழுலகத்து வழங்கும் வழுவிலாச் சொல் இயற்சொல் என்றும், ஒரு பொருள் குறித்த பல சொல்லும் பலபொருள் குறித்த ஒரு சொல்லுமாகிய தமிழ்ச் சொல் திரிசொல் என்றும், தமிழ் வழங்கும் நிலப் பரப்பின் அப்பாலாய் வழங்கிய சொல் திசைச் சொல் என்றும், வடக்கிருந்து வந்து வழங்கிய வேற்றுச் சொல் வடசொல் என்றும் இலக்கணம் கூறினார். தொல்காப்பியர் காலத்திற்கு முற்படவே தமிழர் கடல் வணிகம் செய்தமையும் அயல் வணிகர் இவண் வந்து சென்றமையும் உண்டாகிச் சொற்கலப்பு நேர வாய்ப்பிருந்தும் அச் சொற்களைச் செய்யுட் சொல்லாக ஏற்றார் அல்லர். வட சொல்லையும் தமிழியல்புக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு தமிழ்நெறிச் சொல்லாக வருவதையே வற்புறுத்தி ஏற்றுக் கொண்டார். திசைச் சொல்லும் திரிசொல்லும் தமிழியற் சொல் போலவே தமிழ் எழுத்து வடிவு கொண்டிருந்தமையால் அவ்வெழுத்தை விலக்கிச் சொல்லாட்சி செய்யுமாறு சொல்ல அவர்க்கு நேரவில்லை. ஆதலால் வடசொல் ஒன்று மட்டுமே தமிழுக்கு வேற்றுச் சொல்லாகவும் வேற்றெழுத்துச் சொல்லாகவும் தொல்காப்பியர் நாளில் இருந்தமை விளங்கும். அச்சொல்லை அப்படியே கொள்ளாமல் தமிழ் மரபுக்குத் தகுமாறு கொள்ளவேண்டும் என்னும் உறுதியால், “வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே” (884) என நெறிகாட்டினார். இவ்வாணை எந்த அயல் மொழிக்கும் உரிய பொது ஆணையெனப் போற்றுதல் மொழிக்காப்பாளர் கட்டாயக் கடமையாம். ஓர் அயற்சொல்லைக் கொள்ள வேண்டும் நிலை எப்படி உண்டாகும்? ஓர் அயற் சொல்லுக்கு ஒத்த அல்லது ஏற்ற சொல், அதனைக் கொள்ள விரும்புவார் மொழியில் இல்லாமல் இருக்க வேண்டும். சொல் இல்லை எனினும், ஏற்ற சொல்லை ஆக்கிக் கொள்ள முடியாத அரிய சொல்லாக அஃது இருத்தல் வேண்டும். அச்சொல்லை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், அப்பொருளை விளக்கிக் கூற முடியாத இடர் எடுத்துக் கொள்வார் மொழியில் இருத்தல் வேண்டும். இத்தகு நிலைகளிலேயே அயற் செல்லைத் தம் மொழியியற் கேற்பக் கொள்ள வேண்டும் என்பனவே இந் நூற்பாவின் கருத்துகளாம். வளமான செல்வமும் வாய்ப்பான வாழ்வும் உடையான் கடன் கொண்டு வாழ விரும்பான். கடன் கொள்ளல் இழிவெனவும் கொள்வான். அந் நிலையில், கடனாளன் என்னும் பெயர் கொள்வதற்காகக் கடன் கொள்ளுதலை அருவறுப்பாகவும் கொள்வான். அப் பொருட்கடன் போன்றதே வேண்டாச் சொற்கடனுமாம். பொருட்கடன் வேண்டாது பெற்றுக் கொண்டே போனால், உள்ளவை உரியவை அனைத்தும் அக் கடனாலேயே இழந்து எல்லாமும் இல்லாமல் ஒழிந்து போவான். இந்நிலையை எண்ணுவார் வேண்டாச் சொற்கடனைக் கொள்ளார். ஒரு சொல்லைக் கட்டாயம் எடுத்தாகவேண்டும் நிலை இருந் தாலும், மகப்பேறு வாயாதவர் ஒரு குழந்தையை மகவாகக் கொள்ளும் போது தம் குடும்பத்துக் குழந்தை என்பதை முற்றிலும் காக்கும் வகையால், அக் குழந்தையின் முன்னைத் தொடர்பை விலக்கித் தம் குடும்பத்திற்குத் தகுபெயர் சூட்டித் தம் குடிமை உறுப்பாகவே வளர்த்து வருதல் போல் அயற் சொல்லைத் தம்மொழிக்குத்தகக் கொண்டு ஆளவேண்டும் இதனைக் கூறுவதே, “எழுத்து ஒரீஇ, எழுத் தொடு புணர்ந்த சொல்லாகும்மே” என்னும் ஆணையாம். இவ்வாணையை மொழிக் காவலர் காலம் காலமாகப் போற்றி னர். ஆனால் நாட்டுக் காவலர் போற்றத் தவறினர். அயன்மொழியார் வழியில் சாய்ந்தனர். மொழிக் காவலும் நாட்டுக் காவலும் ஒப்பப் போற்றிய மன்னர் காலத்தில் அயலெழுத்துப் புகவில்லை. அவர்கள் நம்பிக்கைக்கு இடமான வட மொழியார், படிப்படியே ஊர்கள் பெயர்கள் முதலியவற்றை மாற்றி வழங்க இடந்தந்தனர். மெய்க் கீர்த்தியில் மிக இடந் தந்தனர். அயன் மொழி வழிபாடு சடங்கு என்பவற்றை ஏற்றனர். அதனால் பொது மக்கள் வாழ்விலும் இந் நிலை புகுந்தது. கட்டிக் காத்த மொழிக் காவலர்களும், அயற் சொற்களேயன்றி அயலெழுத்துகளும் கொள்ளத் தலைப்பட்டனர். பின்னே வந்த அயன் மொழியாகிய ஆங்கிலம் பிரெஞ்சு போர்த்துக் கேசியம் உருது இந்தி ஆகிய மொழிச் சொற்களும் புகுந்து மொழியழிப்புப் பணியை முழு வீச்சாக செய்தன. தமிழால் வாழ்வாரும் இதற்குப் பங்காளர் ஆயினர். “தொல்காப்பிய ஆணை மீறிய இக்குற்றம் காட்டுத்தீயாகப் பரவி இந்நாளில் மொழியை அழிக்கின்றது” என்பதை இன்று உணர்ந்தாலும் பயனுண்டு. இல்லையேல் அயலார் கணக்குப்படி தமிழும் விரைவில் ‘இருந்த மொழி’ என்னும் நிலையை அடைதல் ஆகவும் கூடும். “தொல்காப்பியப் புலவோர் தோன்ற விரித்துரைத்தார்” எனச் சான்றோர் ஒருவர் பெருமிதம் கொண்டார்! தோன்ற விரித்துரைத்தாலும் போற்றிக் கொள்வார் இல்லாக்கால் என்ன பயனாம்? உரைநடைக்கு இல்லாத சில இடர்கள் செய்யுள் நடைக்கு உண்டு. அதற்கென அமையும் கட்டொழுங்குகள் சில; சுவை, நயம், ஒலி, பொருள் என்பவை கருதி வழங்கு சொற்கள் சற்றே மாற்றமாய் அமைத்துப் போற்றுதற்கு இடனாகும். அதனால் சில சொற்களில் மெல்லெழுத்து வல்லெழுத்தாகவும், வல்லெழுத்து மெல்லெழுத்தாகவும், சில எழுத்து களை விரிக்கவும், சில எழுத்துகளைத் தொகுக்கவும், சில எழுத்துகளை நீட்டவும், சில எழுத்துகளைக் குறுக்கவும் ஆகும். ஆனால் இம்மாற்றங் களால் சொல்லின் பொருள் மாற்றமாவது இல்லை என்றும் செய்யுள் நயம் மிகும் என்றும் அறிய வேண்டும் என்று இலக்கியக் கல்விக்கு நெறிகாட்டு கிறார் (886). பாடலுக்குப் பொருள்கண்டு சுவைக்கத் தக்க வகையைப் ‘பொருள்கோள்’ எனக் கூறி அவ் விளக்கமும் தருகிறார் (887). இவை பயில்வார்க்குப் பயின்று சிறந்தார் காட்டும் வழியாகத் திகழ்கின்றன. ஆக்கிவைத்த உணவை உண்ண அறிந்தான் ஆக்கும் வகையையும் அறிந்துகொள்ளல் இரட்டை நலமாதல் போல் நலம் செய்வன இத்தகு துய்ப்பு நெறி காட்டலாகும். ஈ, தா, கொடு ‘ஈ’ என்றோ ‘தா’ என்றோ ‘கொடு’ என்றோ கூறுவதில் பொதுவாக நோக்குவார்க்கு வேறுபாடு இல்லை. ஆனால் நுணுகி நோக்கின் வேறுபாடு உண்டு. இதனை விளக்குகிறார் தொல்காப்பியர். கொடுப்பவனினும் அவனிடம் ஒன்றைப் பெற வருவோன் தாழ்வுடையன் எனின், ‘ஈ’ என்று கூறுவான். இருவரும் ஒப்புடையவர் எனின் பெறுவோன் ‘தா’ என்று கூறுவான். கொடுப்போனினும் பெறுவோன் உயர்ந்தவன் எனின் ‘கொடு’ என்று கூறுவான் என்று அக்கால மக்கள் வழக்கினை உரைக்கிறார். இரப்பவர் அனைவரும் இழிந்தாரும் அல்லர் கொடுப்பவர் அனைவரும் உயர்ந்தாரும் அல்லர். இரு நிலைகளிலும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் உண்டு. உயர்வு தாழ்வு என்பவை வயது அறிவு பண்பு உதவி நன்றிக் கடன் தொண்டு ஆளுரிமை என்பவற்றால் ஆவனவேயாம். பிறவிக் குல வேற்றுமை இல்லாததும் கருதப்படாததுமாம் காலநிலை தொல் காப்பியர் கால நிலையாம். வாராதனவும் பேசாதனவும் இந்தச் சாலை சென்னையில் இருந்து வருகிறது. கன்னி வரை செல்கிறது. என்று கூறுதல் உண்டு. இச் சாலை எங்கே போகிறது என வினாவுதலும் உண்டு. எறும்பு அணில் மலை முதலியவை பேசுவதாகக் கதைகள் உண்டு. இம்முறை உலகளாவியதாகவும் பெருவரவினதாகவும் உள. குழந்தையர் கல்விக்கு ஏற்றது இம் முறை எனப் போற்றவும் படுகிறது இதனைத் தொல்காப்பியர், “வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னும் குறிப்புரை யாகும்” (905) என்கிறார் (என்னா = என்று சொல்லாத). அடுக்கு அடுக்கு என்றாலே ஒன்றற்கு மேற்பட்டது என்பது பொருள். அடுக்குச் சட்டி, அடுக்குப் பானை என்பவை அன்றி அடுக்கு மல்லி அடுக்குப் பாறை என இயற்கை அடுக்கும் உண்டு. பாடலில் இசை கருதி அடுக்கு வரும் எனின், நான்கு முறை அடுக்கலாம் என்றும், விரைவு கருதிய அடுக்கு மும்முறை வரலாம் என்றும் ஓர் எல்லை வகுத்துக் காட்டுகிறார் (906, 907). எந்த ஒன்றிலும் அளவீடு இருத்தல் வேண்டும் என்னும் ஆசிரியர் மொழிக் காவல் நெறி இஃதாம். ஒரு பொருள் இருசொல் உயர்தலும் ஓங்குதலும் ஒன்று தானே! மீயும் மிசையும் ஒன்று தானே! ஒருபொருள் தரும் இரு சொற்களை இணைத்தல் ஆகுமா எனின் ஆகுமென மக்கள் வழக்குக் கொண்டு தொல்காப்பியர் சொல்கிறார். அது, “ஒரு பொருள் இரு சொல் பிரிவில வரையார்” என்பது. வரையார் = நீக்கார், விலக்கார். புதுவரவு பழைய சொற்கள் காலவெள்ளத்தில் அழிந்துபடுவது போலப் புதுப்புதுச் சொற்கள் தோற்றமும் ஆகின்றனவே எனின் வாழும் மொழி என்பதன் அடையாளம் அதுவே என்பர் மொழியறிஞர். இதனைக் “கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (935) என்கிறார். கடிசொல் லாவது விலக்கும் சொல் நாட்காட்டி, எழுதுகோல், செய்தித்தாள் என்பன வெல்லாம் காலம் தந்த புதுவரவுகள் அல்லவா! மொழிவளம் செய்யும் சொற்களின் பெருக்கமும் தொடர் வரவுமே மொழிவளம் ஆதலால், அவற்றைப் போற்றிக் காக்க ஏவினார். - இரா. இளங்குமரன் தெய்வச்சிலையார் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டாருள் ஒருவர் தெய்வச்சிலையார். அவருரை சொல்லதிகாரம் முழுமைக்கும் கிடைத்துள்ளது. பெயர் ‘தெய்வச்சிலையான்’, ‘தெய்வச்சிலைப் பெருமான்’ என்பன கல்வெட்டுகளில் வரும் பெயர்கள். “அரையன் தெய்வச்சிலையான் எடுத்தகையழகியான்”, “இளையாழ்வார் தெய்வச்சிலைப் பெருமாள் ஆன விக்கிரம பாண்டிய காலிங்கராயர்” என்பன அவை. அவற்றால் ‘தெய்வச் சிலையார்’ எனப்படும் பெயருடையார் பிறரும் இருந்தமை புலப்படும். கல்வெட்டு கூறும் தெய்வச்சிலையார் என்னும் பெயருடையாருள் முன்னவர், பாண்டி மண்டலத்துக் காகூர்க் கூற்றத்து வளமர் ஆன வேம்ப நல்லூரினர். பின்னைக் கல்வெட்டு நெல்லை மாவட்டத்து மன்னார் கோயிலில் உள்ளது . ஆதலால் இப்பெயருடைய இவ்வுரையாசிரியரும் பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் எனக் கொள்ள இடமுள்ளது. காலம் இவர் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், ஆகியோரைப் பெயர் சுட்டாமல் மறுத்தெழுதிச் செல்கிறார். நச்சினார்க் கினியர் சேனாவரையர் ஆகியோர்க்கு இவர் முற்பட்டவர் எனின் இவர் பெயரை அவர்கள் சுட்டியிருப்பர். அதனால், அவர்களுக்கு இவர் பிற்பட்டவர் என்பது தெளிவாகின்றது. மேலும் “பெண்மையடுத்த மகனென் கிளவி” (சொல். 160) என்பதற்குப் பெண்மகன் என்று மாறோகத் தார் இக்காலத்தும் கூறுப என்று நிகழ்காலத்தால் சேனாவரையரும் கல்லாடனாரும் கூறினர். ஆனால் இவரோ “விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு” என இறந்த காலத்து நிகழ்வாகக் கூறினார். அதனாலும் சேனாவரையர்க்கும் கல்லாட னார்க்கும் பின்னவர் என்பது விளங்கும். இவற்றாலும் முற்காட்டப்பட்ட கல்வெட்டுகள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியும் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகிய காலத்தன எனப்படுதலாலும் கல்லாடனார் காலம் நச்சினார்க்கினியர்க்கும் பிற்பட்டது ஆகலானும் இவர் 16 ஆம் நூற்றாண்டினர் ஆகலாம். சமயம் “மன்னாப் பொருளும் அன்ன இயற்றே” என்னும் நூற்பா விளக்கத்தில் (32) “வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும் உயிரும் பரமும் அனாதி; பதியும் பாசமும் அனாதி எனவரும். உலகும் உயிரும் பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும் பாசமும் பதியும் இவற்றோடு பொருந்தாத பொருள் ஆனவாறும் காண்க” என்பதும், “மந்திரப் பொருள் வயின் ஆஅகுநவும்” என்பதற்கு (439), “மண்ணைச் சுமந்தவன் தானும் வரதராசன் மகன்றானும் எண்ணிய வரகாலி மூன்றும் இரண்டு மரமும் ஓர்யாறும் திண்ணமறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே” என்பதை எடுத்துக்காட்டி “இதனுள் மண்ணைச் சுமந்தவன் - ந, வரதராசன் மகன் - ம, வரகாலி மூன்று - சி, இரண்டு மரம் - வா, ஓர்யாறு - ய, எனக்கூற ‘நமச்சிவாய’ எனப் பொருளாயிற்று என்று குறிப்பதும் கொண்டு இவர் வைதிகம் சார்ந்த சைவ சமயத்தர் எனக் கருதலாம். உரைநிலை இவர், ‘கடாவிடை யுள்ளுறுத்து’ முதல் நூற்பாவுக்கு உரை விரிக்கிறார். அதன் நிறைவில் “இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடையுள்ளுறுத்து உரைப்பிற் பெருகும்” என அமைகிறார். எனினும் இவருரை காண்டிகை யுரையினும் விரிவுரையாகவே செல்கின்றது. தமிழ் வழக்காற்றை இவர் ‘தமிழ்நடை’ என்கிறார் (2, 243); காலம் உலகம் எனவரும் நூற்பாவில் வரும் (56) “சொல்” என்பதற்கு வேதம் எனப் பொருள் செய்கிறார். “சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது. அச்சொல்லினான் இயன்ற மந்திரம், விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. இந்நூல் செய்தான் வைதிக முனிவர் ஆதலின் சொல்லென்பது ‘வேதம்’ என்று கொள்ளப்படும்” என்கிறார். இவர் தொல் காப்பியரை வைதிக முனிவர் என்று கொண்டதால் அக்கொள்கைக்கு ஏற்ப உரை செய்யத் துணிகிறார். வடசொல் “எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும் வடநாட்டிற் பயில வழங்கு தலின் வடசொல் ஆயிற்று. வடசொல் என்றதனால் தேயவழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவும் கொள்க. வடமொழியாவன: வாரி, மணி, குங்குமம் என்னும் தொடக்கத்தன. வட்டம் நட்டம் பட்டினம் என்பன பாகதம்” என்கிறார் (397). ஒருவினை ஒடுச்சொல் என்னும் நூற்பா உரையில் (88), பிற உரையாசிரியர்களின் கருத்துக்கு மாறுபடும் இவர் “இப்பொருள் பாணினி யார்க்கும் ஒக்கும்” எனத் தமக்குச் சார்பு காட்டுகிறார். ஒரு சார் ஆசிரியர் வேற்றுமை ஏழெனக் கொண்டதையும் குறிக்கிறார் (150). ஆசிரியர் சிறப்பு “ ‘ஆஅய்’ என யகர ஈறு விளி ஏற்றதால் எனின் அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சியின்மையின் எடுத்தோதிற்றிலர்” என்று அமைதி காட்டும் இவர் அதிகாரப் புறநடையால் கொள்ள ஏவுகிறார் (150). இடைச்சொல் உரிச்சொல் ஆகியவை பொருண்மை நிலையில் வரும் வகையை ஆசிரியர் விரித்துரையாமையை எண்ணும் இவர், “பொருண்மை நிலை வழக்கினும் சான்றோர் செய்யுளகத்தும் பயின்று வருதலானும் இவ்வழக்குத் தமிழ்நாட்டுப் பிறந்து தமிழறிவாரை நோக்குதலினாலும் இலக்கணம் இன்றியும் பாகம் உணர்வார் ஆகலானும் எடுத்து ஓதாராயினர். அஃது அற்றாதல், ‘வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொன் மேன’ என ஓதிய அதனானும் கொள்க. சொன்மை நிலை இலக்கணம் இல்வழி உணர்வரிது ஆதலான் எடுத்து ஓதப்பட்டது” (155) என்கிறார். இத்தகையவை ஆசிரியர் சிறப்பியல் காட்டுவனவாம். உவமை “வலனாக என்னும் எச்சத்துக்கண் ஆக என்பது செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றது. தொக்கு நின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலைமை என்று கொள்க. என்போலவோ எனின், வாலும் செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலி என்றே வழங்கினாற் போல” எனச் சுவைமிக்க வகையில் உவமைப் படுத்துகின்றார் (408). பூத்தொடை யொடு சொற்றொடையையும் விரிய விளக்குகின்றார் (408). “எழுத்துப் பிரிந்திசைத்தல் இவணியல் பின்றே” என்பதன் உரையில் ‘இத்தமிழகத்தில் இல்லை” என்கிறார் (391). தமிழ்நாடு செந்தமிழ் நாட்டு எல்லை குறித்து இவர் கூறும் கருத்து பிறரினும் தெளிவும் திருத்தமும் உடையதாம். பிறருரைகள் சோழ நாடே செந்தமிழ் நாடு என்பது சொல்ல இவர், “செந்தமிழ் நாடாவது வையையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணம் காணாமையானும் வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும் கருவூரின் மேற்காகிய கொடுங் கோளூரும் மருதயாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ் திரி நிலமாதல் வேண்டுமாதலானும் அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு என்று வரைந்து வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறு நல்லுலகமே செந்தமிழ் நிலம்” என்கிறார் (394). பழங்கொல்லம் கடல் கொள்ளப் பட்டபின், இப்பொழுதுள்ள கொல்லத்தை “அப்பெயரானே கொல்லமெனக் குடியேறினார் போலும்” என்கிறார் (396). உரைநலம் சில இடங்களில் இவர் தரும் விளக்கமும் எடுத்துக் காட்டும் நினைதோறும் இன்பம் பயப்பனவாம். முன்னவர் உரைகளைத் தழுவியும் சார்ந்தும் பின்னவர் உரைகாண்பதும் காட்டுவதும் வழக்கெனினும், அப்பின்னவர் உரைகளால் முன்னவர் விளக்காத பகுதிகள் விளக்கம் பெறுவதும், சிக்கல்கள் அவிழ்க்கப்படுவதும் பட்டறிவால் ஏற்படுவன. அவ்வகையில் தெய்வச்சிலையார் தனிச்சிறப்புக்குரியவராகச் சொல்லத் தக்கவர். ‘உண்டு’ என்பதைப் பொதுவினை என்றும், சிறப்பு வினை என்றும் இருவேறு வகையாகக் கொள்வர் உரையாசிரியர்கள். இவர் தக்க எடுத்துக் காட்டுகளின் வழியே பொதுவினை என்பதை நிலைப்படுத்துகிறார். அது முன்னை உரையாசிரியர்களின் தோள்மேல் அமர்ந்து பார்க்கும் பார்வை யின் விளைவாம். “ஊன் துவை, கறிசோ றுண்டு வருந்து தொழில் அல்லது, பிறிது தொழில் அறியா வாகலின் (புறநா. 14) என்ற வழி உண்டு என ஒரு வினை யான் வந்ததால் எனின், அது பொதுவினை என்று கொள்க. என்னை? ‘உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு’ (கலி. குறி. 15) எனவும், ‘பாலும் உண்ணாள் பழங்கண்கொண்டு’ (அகம். 48) எனவும், ‘கலைப்புற வல்குல் கழுகு குடைந்துண்டு’ (மணிமே. 6:112) எனவும், ‘கள்ளுண்ணாப் போழ்து’ (திருக். 930) எனவும், ‘உண்ணாமை வேண்டும் புலாஅல்’ (திருக். 257) எனவும் வருதலின்” என்று எடுத்துக்காட்டி ‘உண்டு’ என்பது உண்ணல், கறித்தல், குடித்தல், சுவைத்தல் முதலிய பலவற்றுக்கும் வரும் பொது வினையாதலை விளக்குகின்றார் (45). ‘குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி’ என்பதற்குச் ‘சேவலை’ எடுத்துக்காட்டுகிறார் (54). அதில், “நிவந்தோங் குயர்கொடிச் சேவலோய்’ (பரிபா. 3:18) என்ற வழிச் சொல்லுவான் குறிப்பு மாயவனை நோக்கலிற் கருடனாயிற்று. ‘சேவலங் கொடியோன் காப்ப’ (குறுந். 1) என்ற வழிச் சொல்லுவான் குறிப்பு முருகவேளை நோக்குதலிற் கோழியாயிற்று” என்கிறார். இத்தகும் இணைப்புச் சான்றுகள் தெய்வச்சிலையார் கொண்டிருந்த இலக்கியப் பயிற்சியின் பரப்பை வெளிப்படக் காட்டுவன. வேற்றுமைகள் அனைத்தும் முறையே வருமாறு இவர் காட்டும், “காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி மாதரிக்குக் காட்டி மனையின் அகன்றுபோய்க் கோதில் இறைவனது கூடற்கண் கோவலன்சென் றேத முறுதல் வினை” என்னும் இன்னிசை வெண்பா எடுத்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாவ துடன் சிலப்பதிகாரச் செய்திச் சுருக்கமாகவும் அமைந்து சுவை பயக் கின்றது. பாடம் “விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்” என இளம்பூரணரும், “விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்” எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பாடம் கொண்டனர். அதனை இவர், “விழுமம், சீர்மையும் சிறப்பும் இடும்பையும் சிறப்பும்” எனப் பாடங்கொள்கிறார். இப்பாடம், இரு சார் கருத்தையும் ஏற்றுக் கொண்டு இவரே அமைத்துக் கொண்டதாகலாம் (349). அத்தகு கருத்துடையர் இவர் என்பது வினைமுற்றைப் பற்றி இவர் கொண்ட கருத்தினால் வலியுறும். “வினைச்சொற்கள் முற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத் தன்மையன என்று எடுத்தோதி முற்றுச் சொல்லாவது இத்தன்மையது என்று ஓதிற்றிலர். அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்ற தென்னை எனின், அஃது எனக்குப் புலனாயிற்றன்று. இஃதேல் வினையிலக்கணம் அறிந்தேன் ஆகுங்கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே. அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின் உரைக்குமாறு” என்று கூறி வினைமுற்றுப் பற்றிய மூன்று நூற்பாக்களையும் காட்டி உரை வரை கின்றார். இவ்வகையால் இடப்பெயர்ச்சி செய்தாருள் முதல்வரெனத் தெய்வச்சிலையார் அமைந்து விடுகின்றார். இவ்விடப் பெயர்ச்சியிலும் பெயர்ச்சி வேண்டினார் விளக்கவுரை கண்ட கு. சுந்தரமூர்த்தியார்: “இங்ஙனம் ஆய்ந்து வைத்த அருமை பாராட்டுக்குரியதாம். பிறவுரையாசிரியர்கள் அனைவரும் இது பற்றிச் சிறிதும் நினைந்திலர். இவ்வகையில் இவ்வுரையாசிரியர் பாராட்டிற்குரியரேனும் இம்மூன்று நூற்பாக்களையும் வினையியலின் முதற்கண் வைத்திருப்பின் இன்னும் நலமாக இருக்கும் என்பது கருத்து ஆகும். முற்றின் இலக்கணத்தைக் கூறாது முற்றுக்களுக்குரிய ஈறுகளை வினையியலின் முதற்கண் கூறுதல் பொருந்தாது ஆதலான் இவை ஆண்டிருப்பதே இன்னும் பொருத்த முடையதாகும்”. விளக்கம் உரிச்சொல் திரிசொல் இடைச்சொல் என்பவற்றின் அடை யாளத்தை எளிமையாய் அதே பொழுதில் அருமையாய் விளக்குகிறார் தெய்வச்சிலையார். “உரிச்சொல்லோடு இதனிடை (திரிசொல்லிடை) வேறுபாடு என்னை எனின், உரிச்சொல் குறைச்சொல்லாகி வரும்; திரிசொல் முழுச்சொல்லாகி வரும்” என்கிறார் (395). எல் என்பதை உரிச்சொல்லெனக் கொண்டார் சேனாவரையர். எனினும் உரியியலுக்கு மாற்றாமல், உரிச்சொல்லாகக் கொண்டே ஆசிரியர் வைப்புப் போல இடையியலில் வைத்துத் தம் கருத்தை எழுதியமை அவர் உரையுள் அறியப்பட்டது . அச்சொல் இடைச்சொல்லே உரிச்சொல் அன்று என்று தெளிவிக்கிறார் தெய்வச்சிலையார். “இது (எல்) உரிச்சொல் அன்றோ எனின், அது குறைச் சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச்சொல் ஆயிற்று” என்கிறார். எவரையும் பெயர் சுட்டிக் கூறாமல் எழுதுதல் தெய்வச்சிலையார் வழக்கு. அவ்வழக்குப்படியே சேனாவரையரை இவண் குறியாதே உரை வரைந்தார். முறைவைப்புக் கூறுதலில் மிக நுணுக்கம் காட்டுகிறார் தெய்வச் சிலையார்: “பெயரை முதல் வேற்றுமை என்னாது எட்டு வேற்றுமையுள்ளும் யாதானும் ஒன்றை முதல் வேற்றுமை எனினும் அமையும் எனின், ஒருவன் ஒன்றை ஒன்றானே இயற்றி ஒருவற்குக் கொடுப்ப அவன் அதனை அவனினின்றும் தனது ஆக்கி ஓரிடத்து வைத்தான் கொற்றா என்றவழி, செய்கின்றான் முதல் வேற்றுமையாகி இம்முறையே கிடத்தலின் அமையாது என்க” என்று இலக்கண மரபினைப் போற்றுகிறார். இவர் காட்டும் வேற்றுமை எட்டன் வைப்புமுறைச் சிறப்பை வாழ்வியல் விளக்கத்துள் காண்க. ‘எல்லாம்’ என்பது உயர்திணைப் படர்க்கையிலும் முன்னிலை யிலும் வருவனவற்றை எடுத்துக்காட்டி “அவை இலக்கண வழக்கல்ல” (182) என்று மறுப்பு வகையாலும் மரபினைக் காக்கிறார். அஃறிணைக்கண் தன்மைக்கூற்று நிகழாது என்பதை, “கிளியும் பூவையும் ஆகிய சாதி எல்லாம் உரையாடும் என்னும் வழக்கின்மையானும், அவை உரைக்குங்கால் ஒருவர் உரைத்ததைக் கொண்டு உரைக்கும் ஆதலானும், ஒருவன் பாடின பாட்டை நரம்புக் கருவியின்கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக் கருவியும் உரையாடிற்றாதல் வேண்டு மாகலானும் அவ்வாறு வருவன மக்கள் வினையாதலால் தன்மை வினை அன்றென்க” என உவமை நயத்துடன் விளக்கி மரபு காக்கிறார் (210). இத்தகையவர், ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே’ என்னும் நூற்பாவின் விளக்கத்தில் ஓருரை உரைத்துப் பின்னர், இன்னும் “எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும் என்றவாறு, எனவே, இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் உரிமை இல என்றவாறாம். என்னை உரிமை இலவாகியவாறு எனின், உலகத்துப் பொருள் எல்லா வற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை உணர்த்தும் என எல்லாப்பாடைக்கும் ஒப்ப முடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க. எனவே பொருள் பற்றி வரும் பெயரெல்லாம் இடுகுறி என்பது பெறப்பட்டது” (151), என்பது வியப்பாக உள்ளது. இது நூலாசிரியர் கருத் தொடு மட்டுமன்றி, தாம் உரைத்த உரைக்கும் முரணாக உள்ளமை புலப்படுகின்றது! சில வழக்குகள் தைந்நீராடல், ஈழத்திற்கு ஏற்றின பண்டம், சுக்ரீவன் துணையாக இலங்கை கொண்டான் என அக்கால வழக்குகள், தொன்மக் குறிப்புகள் ஆகியவற்றை ஆங்காங்குக் காட்டுகிறார். ‘கூப்பிடு தொலைவு’ என நீட்டல் அளவும், ‘அந்தணி’ என அந்தணனுக்குப் பெண்பாலும், நெயவு தொடர்பான பல செய்திகளும், நாண்மீன் கோண்மீன் குறிப்பும் இன்னபிறவும் இவர் உரைக்கண் காண வாய்க்கின்றன. அரசன் வலத்திருந்தான் அமைச்சன்; அரசன் இடத்திருந் தான் சேனாபதி என அரசிருக்கை காட்டுகிறார்; இந்நாளில் வேளாங்கன்னி என்றும், வேளாங்கண்ணி என்றும் வழங்கப்படுவது வேளாண்காணி அல்லது வேளார் காணி என்பதோ என்று நினைக்க வைக்கிறார்: “வேளார்காணி என்பது வேளார் காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரால் வழங்குதலின் ஆகுபெயராயிற்று” என்பது அது (111). அடுத்த நூற்பாவுரையிலும் வேளார் காணியைக் குறிக்கிறார் (112). செப்பு வகை நான்கனுள் வாய்வாளா திருத்தலையும் (மறுமொழி கூறாதிருத்தலையும்) ஒன்றாகக் கூறுகிறார். ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை என்கிறார் (13). தொல்காப்பியம் என்பதற்கும் இவர் இலக்கணம் கூறுகிறார்: “தொல்காப்பியம் என்பதோ எனின் அஃது ஈறு திரிந்து நின்று, அவனால் செய்யப்பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகுபெயராகாது; காரணப் பெயராம்” என்பது அது (111). அரிய செய்திகளையும் எடுத்துக்காட்டு நயங்களையும் உடையது தெய்வச்சிலையார் உரை. - இரா. இளங்குமரன் சொல்லதிகாரம் தெய்வச்சிலையம் 1 கிளவியாக்கம் திணை இரண்டு 1. உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே அஃறிணை யென்மனார் அவரல பிறவே ஆயிரு திணையி னிசைக்குமன சொல்லே. என்பது சூத்திரம். இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின், மேற்சொல்லப்பட்ட எழுத்தினா னியன்று பொருளறிவிக்குஞ் சொற்களைப் பாகுபடுத்துதலாற், சொல்லதிகாரம் என்னும் பெயர்த்து. அஃதியாங்கனம் உணர்த்தினா ரெனின், சொற்களைப் பொருணிலைமை நோக்கித் தொடர்மொழி, தனிமொழி யென இருவகைப்படுத்து, அத்தொடர்மொழியை அல்வழித் தொடர், வேற்றுமைத்தொடரென இருவகைப்படுத்து, அவ்விருவகைத் தொடரும் செப்பும் வினாவுமாக நிகழ்தலான், அவற்றை வழுவாமற் கூறுதற்காக முற்படச் சொன்னிலைமையாற் பொருளை உயர்திணை யஃறிணையென இருவகைப்படுத்து, அவ்வுயர்திணை யுணர்த்துஞ் சொற்களை ஒருவனை யறியுஞ் சொல், ஒருத்தியை யறியுஞ் சொல், பலரை யறியுஞ் சொல்லென மூவகைப்படுத்து, அஃறிணை யுணர்த்துஞ் சொற்களை ஒன்றனையறியுஞ் சொல் பலவற்றை யறியுஞ் சொல்லென இருவகைப்படுத்த.... எவ்வகைப்பட்ட சொல்லும் (பெயர்ச்சொல்லும்) பெயர்ச் சொற்கண்ணும் வினைச் சொற்கண்ணும் வருதலிற் (பெயராற் பாலறியப்படுஞ் சொல்லினாலும்?) அமைக்க வேண்டும் சொற்களை எடுத் தோதி, அதன்பின் வேற்றுமைத் தொடர் கூறுவார் மயங்கா மரபினவாகி வருவன எழுவகை வேற்றுமை யுணர்த்தி, அதன்பின் அவ் வேற்றுமைக்கண் மயங்குமாறு உணர்த்தி, அதன்பின் எட்டாவதாகிய விளிவேற்றுமை யுணர்த்தி, அதன்பின் தனிமொழிப் பகுதியாகிய பெயர்ச்சொற் பாகுபாடும், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொற் பாகுபாடும் உணர்த்தி, அதன்பின் சொற்கள் விகாரப்படுமாறும், ஒட்டுமாறும், எஞ்சுமாறும், பிறவும் உணர்த்தினாரென்க. அவற்றுள், அல்வழித்தொடர் கிளவியாக்கத் துள்ளும், வேற்றுமைத் தொடர் வேற்றுமையோத்துள்ளும், வேற்றுமை மயங்கியல், விளிமரபென்பனவற்றுள்ளும், தனிமொழிப் பகுதியாகிய பெய ரிலக்கணம் பெயரியலுள்ளும், வினையிலக்கணம் வினையியலுள்ளும், இடைச்சொல் லிலக்கணம் இடைச் சொல்லோத்தினுள்ளும், உரிச் சொல்லிலக்கணம் உரிச்சொல் லோத்தினுள்ளும், எஞ்சியவெல்லாம் எச்சவியலுள்ளும் உணர்த்தினா ரென்று கொள்க. இவ்வகையினா னோத்து ஒன்பதாயிற்று. பொருளுணர்த்துவன தனிமொழியாதலான், தொடர்மொழி யென வகுத்ததனாற் பயனென்னை யெனின், பொருளுணர்த்துதற்குச் சிறப்புடை யன தொடர்மொழியென்று கொள்க. என்னை சிறந்தவாறெனின், சாத்தனென்றவழிப் பொருண்மை மாத்திர முணர்த்துதலல்லது கேட்டார்க் கொரு பயன்பட நில்லாமையின், சாத்தனுண்டானெனப் பயன்பட வரூஉந் தொடர்மொழியே பொருள் இனிது விளக்குவதென்க. சொல்லிலக்கணம் அறிந்ததனாற் பயன், தொடர்மொழியாகிய வாக்கியத்தினைப் பிரித்துப் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்லெனக் குறியிட வேண்டுதலின் அதன்பிற் கூறப்பட்டது. இனி, எழுவாய் வேற்றுமையையும் விளி வேற்றுமையையும் எழுத்ததிகாரத்துள் அல்வழிக்கண்ணே முடித்தா ராதலான் அவற்றை வேற்றுமைத் தொடரென்ற லமையாதெனின் :- அவை வேற்றுமை யென்று குறிபெறுதலானும், எழுவாய் வேற்றுமை கிளவியாக்கத்தொடு மணந்து கிடப்ப வைத்தலானும், விளிவேற்றுமை எழுவாயது திரிபாதலானு மமையு மென்க. இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட வொன்ப தோத்தினுள்ளும் முதற் கண்ணது கிளவியாக்கம். அது கிளவிய தாக்கமென விரியும். அதற்குப் பொருள், சொல்லினது தொடர்ச்சி யென்றவாறு. சொற்கள் ஒன்றோ டொன்று தொடர்ந்து பொருண்மேலாகு நிலைமையைக் கிளவியாக்க மென்றார். அது வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகி, அதனையுடைய வோத்திற்குப் பெயராயிற்று. இவ்வோத்தினுள் இச் சூத்திரமென்னுதலிற்றோ வெனின், சொல் லிலக்கண முணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள். உயர்தலென்பது மிகுதல். திணை யென்பது பொருள். என்மனாரென்பது என்று சொல்லுவார், என்றவாறு. மக்க ளென்பது மக்களென்னும் பொதுப் பொருண்மை. சுட்டென்பது குறிப்பு. இனச்சுட்டில்லா (18) வெனவும், தெய்வஞ்சுட்டிய(14) வெனவும் ஓதினாராகலின், அது சுட்டப்படும் பொருண்மேல் ஆகுபெயராய் நின்றது. ஏயென்ப தீற்றசை; அல் என்பது அல்லாமை. திணையென்பதற்கும் என்மனா ரென்பதற்கும் மேலுரைத்தவாறே கொள்க. அவரலவென்பது மக்களல்லாத பொருள்; பிற என்பது பிற பொருள்; மக்களல்லாதவும் பிறவும் என்னும் உம்மை எஞ்சி நின்றது. ஆயென்பது அவ்வென்னுஞ் சுட்டு நீண்டிசைத்தது. இருதிணை யென்பது இரண்டு திணையின் கண்ணும், என்றவாறு; கண்ணென்னும் உருபும் உம்மும் தொக்கு நின்றன. இசைக்குமன சொல் லென்பது ஒலிப்பன சொல்லாவன, என்றவாறு. உலகத்துப் பொருளெல்லாவற்றினும் மக்களென்று சுட்டப்படும். பொருளை உயர்திணையென்று சொல்லுவர்; அவரல்லாத பொருளையும் பிறபொருளையும் அஃறிணையென்று சொல்லுவர் ஆசிரியர். அவ்விரு திணையின் கண்ணு மொலிப்பன சொல்லாவன என்றவாறு. எனவே, உயர்திணைச் சொல், அஃறிணைச் சொல் எனச் சொல் இருவகையாமென்பது பெறுதும். அஃதேல், திணையிடமாக, அத் திணைக்கட் பிறவற்றை யிசைத்தல் வேண்டுமெனின், ஒக்கும். அவ்விரு திணைக் கண்ணுமுளவாகிய பாலினையே சொற்களிசைப்பன வென்க. மேல் எழுத்ததிகாரங் கூறி, இனிச் சொல்லதிகாரங் கூறுவார், சொல்லாவ தித்தன்மையதென அதனிலக்கணங் கூற வேண்டுதலின், இச்சூத்திரம் முற் கூறப்பட்டது. அஃதற்றாக, தேவரை யறியுஞ்சொல் அஃறிணை யாகுமோ வெனின், அஃதாகாவாறு முன்னர்க் கூறப்படும். உயர் என நிற்பத் திணையென வந்தசொல் எவ்வாறு வந்ததெனின், ஒரு சொன்முன் ஒரு சொல் வருங்கால், தொகைநிலை வகையான் வருதலும், தொகாநிலை வகையான் வருதலுமென இரண்டல்ல தில்லை. அவற்றுள் தொகைநிலை வகையான் வந்தன; யானைக்கோடு, பொன் மேனி, கொல்யானை, கருங்குதிரை, உவாப்பதினான்கு, பொற்றொடி என்பன தொகாநிலை வகையான் வந்தன; சாத்தன் உண்டான், சாத்தனை வெட்டினான், உண்டான் சாத்தன், உண்டு வந்தான், நிலம் நீர் தீ வளி யாகாயம் என்பன. அவற்றுள் இது தொகைநிலை வகையான் வந்தது. தொகைதாம் பல : அவற்றுள் இஃதெத் தொகையான் வந்ததெனின் பண்புத் தொகையான் வந்த தென்க, மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர் பொருளென விசேடித்து நின்றமையின். உயர்வான மென்றாற்போல வினைத்தொகை யாகாதோவெனின், ‘வினையின் றொகுதி காலத்தியலும்’ (எச்.18) என்றாராதலின் ஈண்டுக் காலம் தோன்றாமையின் ஆகாதென்க. எற்றுக்கு? உயர்ந்த மக்கள், உயராநின்ற மக்கள், உயருமக்களென நல்வினை யேதுவாக மூன்று காலமும் கொண்டாலாகுமே யெனின், அவ்வாறு கருதுவார்க்கு வினைத்தொகையுமாம். உயர் பொருள் என்னாது திணையென்றது என்னை யெனின், அவ்வாறு ஆகல் வேண்டி ஆசிரியன் இட்டதொரு குறி யென்று கொள்க. என்மனார் என என்ப வென்னும் முற்றுச்சொல் திரிந்து நின்றது. குறைக்கும்வழிக் குறைத்தல் என்பதனான் பகாரம் குறைத்து, விரிக்கும் வழி விரித்தல் என்பதனான் மன்னும் ஆருமென இரண்டிடைச் சொற்பெய்து என்மனார் என்றாயிற்று எனப் பொருளுரைப்பவாலெனின், பகரங்குறைக் கின்றது செய்யுளின்பம் வேண்டியன்றே; ஆண்டுக் குறைத்த வழிப் பின்னும் இரண்டெழுத்து விரிக்கல் வேண்டுமாயிற் குறைத்ததனாற் பயனின்மையின் இவ்வாறு எழுதும் உரை குற்றமென்க. இஃது எதிர்காலச் சொல்லாயினும் இறந்தகாலம் குறித்து நின்றது; இறப்பும் எதிர்வும் மயங்கப் பெறுமாகலின். அஃது ஆசிரியரென்னும் பெயர்கொண்டு முடியும். ஈண்டு அப்பெயர் எஞ்சி நின்றது. மக்களென்னாது சுட்டென்ற தென்னையெனின், மக்களாவார் ஒரு நீர்மைய ரன்றி, ஆணும் பெண்ணும் அலியுமாகிய வடிவு வேற்றுமை யுடையாராகலின், அவரெல்லார் மாட்டும் பொதுவாகக் கிடக்கும் மக்கட்டன்மையைக் குறித்து மக்களிவ ரென்னும் பொதுப்பொருண்மை உயர்திணையாவதென்பதறிவித்தற்குச் சுட்டென்றார். அவரல்லாத அஃறிணை யென்னாது, பிறவென்ற தென்னையெனின், மக்களல்லாதவென்ற வழி, உயிருடையனவற்றையே சுட்டுமென் றையுற்று உயிரில் பொருளும் அஃறிணை என்பதறிவித்தற்குப் பிறவென்றார். இசைக்குமன வென்பது செய்ம்மனவென்னும் தொழிற்பெயர். அது செய்யுமனவென விரிந்து நின்றது. அது சொல்லென்னும் பெயர்ப் பயனிலை கொண்டு முடிந்தது. இனி இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றானும் கடாவிடை யுள்ளுறுத் துரைப்பிற் பெருகும். (1) உயர்திணையின் மூன்று பால் 2. ஆடூஉ வறிசொல் மகடூஉ வறிசொல் பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி அம்முப் பாற்சொல் உயர்திணை யவ்வே. நிறுத்த முறையானே உயர்திணைச் சொற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘ஆடூஉ வறிசொல் ’ லென்பது ஆண்மகனை யறியுஞ் சொல், எ-று. அறிவார்க்குக் கருவியாகிய சொல் அறி சொல் லாயிற்று. ‘மகடூஉ வறிசொல் ’ லென்பது பெண்டாட்டியை அறியுஞ்சொல், எ-று. ‘பல்லோ ரறியுஞ் சொல்லொடு சிவணி’ என்பது பலரை யறியுஞ் சொல்லொடு கூடி, எ-று. ‘அம்முப்பாற் சொல் உயர்திணையவ்வே’ என்பது அம்மூன்று கூற்றுச் சொல் உயர்திணையிடத்த, எ-று. உயர்திணைப் பொருள்பற்றி வரும் பெயர்ச்சொல்லும் வினைச் சொல்லும் மூன்று பகுதிய என்றவாறாயிற்று. எற்றுக்கு? ஆண், பெண், அலி; ஆண்பன்மை, பெண்பன்மை, அலிப்பன்மை; இவரெல்லாரும் தொக்க பன்மையெனப் பலவகைப் படுமாலெனின், பொருள் நோக்கிக் கூறினா ரல்லர்; சொல்முடிபு மூவகையென்று கூறினாரென்க. என்னை? அலிப் பன்மை மகடூஉவறி சொல்லானும் கூறப்படுமாதலானும், ஆண் பன்மையும் (பெண்பன்மையும்) எல்லாரும் தொக்க பன்மையும் வந்தா ரெனவே முடிதலானும், மூவகையாகி யடங்கிற்றென்க. பல்லோரறியுஞ் சொல் லென்னாது சிவணியென்றதனாற் பெற்ற தென்னையெனின், ஒன்று, இரண்டு, பலவென வடமொழிப் புலவர் கூறியவாறு போலப் பாகுபடும் வழக்கின்மையின், ஒன்று பலவெனத் தமிழ்நடை இரண்டு பாலாம். அவற்றுள், உயர்திணை ஒருமை யாடூஉ வறிசொல், மகடூஉ வறிசொல் லென விருமுடிபுடைத்தாகலின், அச்சொற்கள் பலரறி சொல்லொடு கூடி மூன்று பாலாயின அல்லது, பாலுள்ளன இரண்டென்பது அறிவித்தற் கெனக் கொள்க. சிவணி என்பது வினையெச்சமன்று; ஒடுவின் பொருண்மை தோன்ற வந்தது; தாயொடுகூடி மூவர் என்றாற் போல. அம்முப்பாற் சொல்லும் என உம்மை கொடாதது என்னையெனின், பால் ஐந்துளவாதலிற் கொடாமையும் அமையும் என்க. (2) அஃறிணையின் இரண்டு பால் 3. ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று ஆயிரு பாற்சொல் லஃறிணை யவ்வே. அஃறிணைச் சொற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒன்றனையறியுஞ் சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல்லு மென அவ்விருகூற்றுச் சொல், அஃறிணையிடத்த, எ-று. அஃறிணைப் பொருண்மை, உயிர்ப்பொருள் உயிரில் பொரு ளெனவும்; உயிர்ப்பொருட்கண், ஆண், பெண் எனவும்; அவையெல்லாம் பொருள் தொறும் ஒருமையும் பன்மையுமாகியும் பலவகைப்படுமா லெனின், அவை யெல்லாம் ஒருமையாயின், வந்தது எனவும், பன்மை யாயின், வந்தன எனவும் வழங்கப்படுதலிற் சொன்முடிபு நோக்கிக் கூறினாரென்க. அஃறிணைப் பொருள்பற்றிவரும் பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லும் இருபகுதியவாமென்றே கொள்ளப்படும். (3) பேடியும் தெய்வமும் உயர்திணையில் அடங்குதல் 4. பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென வறியு மந்தந்தமக் கிலவே உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும். எஞ்சியது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் என்பது; பெண்மையைக் குறித்த உயர்திணைப் பெண் பிறப்பினுள், எ-று. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும் என்பது, ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெயர்க்கண் நிற்குஞ் சொல்லும். எ-று. தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் என்பது; தெய்வப் பொருண்மையைச் சுட்டிய பெயர்க்கண் நிற்குஞ் சொல்லும், எ-று. இவ்வென அறியும் அந்தம் தமக்கிலவே என்பது; இவையென அறிய நிற்கும் ஈற்றெழுத்தினைத் தமக்கென இல, எ-று. உயர்திணை மருங்கிற் பால் பிரிந் திசைக்கும் என்பது; உயர்திணை மருங்கிற் பாலாகிப் பிரிந்திசைக்கும், எ-று. ஆண்மை திரிந்த பெயராவது பேடி; அச்சத்தினாண்மையிற் றிரிந்தாரைப் பேடியென்ப வாகலான். ஈண்டு அப்பெயர் பெற்றது அலி யென்று கொள்க. அலி மூவகைப்படும்; ஆணுறுப்பிற் குறைவின்றி ஆண்டன்மை யிழந்ததூஉம், பெண்ணுறுப்பிற் குறைவின்றிப் பெண்டன்மை யிழந்ததூஉம், பெண்பிறப்பிற் றோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடி தோற்றி ஆண்போலத் திரிவதூஉமென. அவற்றுட் பிற் கூறியது ஈண்டுப் பேடி யெனப்பட்டது. அதன்கண் நிற்குஞ் சொல்லாவது வினைச் சொல். இப் பேடி யென்னுஞ் சொல்லொடு தொடரும் வினைச்சொல்லும், தெய்வப் பொருண்மை குறித்த பெயரொடு தொடரும் வினைச் சொல்லும், உயர்திணை யாண்பாலறி சொல்லானும், பலரறி சொல்லானும் ஒலிக்கும் என்றவாறாயிற்று. உதாரணம் முன்னர்க் காட்டுதும். தேவரும் மக்களும் விலங்குமாகிய கதிப் பொருண்மை கூறி நரககதிப் பொருண்மை கூறாததென்னை யெனின், அக்கதிமேனிகழ்வ தொரு வழக்கின்மையிற் கூறாராயினர். நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் என வழங்குபவாலெனின், அக்கதியுட் டோன்றுவார் ஆணும் பெண்ணுமாகிப் போகம் நுகர்வரென்னும் இலக்கணமின்மையான், மக்களிற் றூய்மை யில்லாதாரை யுலகத்தார் வழங்குமாறவையென்க. நரகர் துயருழப்பர் என அக்கதிமேற் றோன்றுவார்மேலும் வருமாலெனின், அவ்வாறு வருவன பால் கூறப்படுதலின்றி ஆணும் பெண்ணும் வரை யறுக்கப்படாத பொருளை உயிர்த் தன்மையைக் குறித்து உயர்திணைப் பன்மையான் வழங்கினாரென்க. (4) ஆண்பால் ஈறு 5. னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல். நிறுத்த முறையானே ஆடூஉ வறிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) னகாரமாகிய ஒற்றை அந்தமாகவுடைய சொல் ஆண்பா லுணர வருஞ்சொல், எ-று. ஏகாரம் ஈற்றசை. அந்தம் என்பது மேலைச் சூத்திரத்தினின்றுந் தந்துரைக்கப்பட்டது. இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். (எ-டு.) உண்டான், உண்ணாநின்றான், உண்பான் இவை வினைச் சொல். கரியன், நெடியன் இவை வினைக்குறிப்பு. பாண்டியன், மாயவன் இவை பெயர். அஃதேல் வினையியலுள்ளும், “அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் - ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே” (வினை சூ.8) என ஓதுகின்றா ராகலின், ஈண்டுக் கூறுதற்குக் காரணம் என்னை யெனின், “வினையிற் றோன்றும் பாலறி கிளவியும், பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும், மயங்கல் கூடா” (சூ. 11) என வழூஉக் காக்கின்றாராகலின், அவை வழுவாமற் கூறுங்கால், அச்சொற்களின் இயல்பு அறிய வேண்டுமன்றே; அதற்காக ஈண்டுத் தோற்றுவாய் செய்தாரென்க. ஆண்மைப் பொருண் மைக்கண் வரும் பெயர்ச்சொற்கும் வினைச்சொற்கும் ஈற்றெழுத்துப் பலவுளவாயினும் அவையெல்லாம் கூறாது, னகரவொற் றொன்றனையுங் கூறினமையானும் தோற்றுவாய் செய்தவாறுணர்க. இவ்வுரை முன்வரு கின்றவற்றிற்கும் ஒக்கும். (5) பெண்பால் ஈறு 6. ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல். மகடூஉ வறிசொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ளகாரமாகிய ஒற்றை அந்தமாகவுடைய சொல் பெண் பால் உணரவருஞ் சொல், எ-று. ஏகாரம் ஈற்றசை. (எ-டு) உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள்; இவை வினை. கரியள், குறியள் இவை வினைக்குறிப்பு. அவள், திருவினாள்; இவை பெயர். (6) பலர்பால் ஈறு 7. ரஃகான் ஒற்றும் பகர இறுதியும் மாரைக் கிளவி யுளப்பட மூன்றும் நேரத் தோன்றும் பலரறி சொல்லே. பலரறி சொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ரகாரம் ஆகிய ஒற்றும், பகாரம் ஆகிய உயிர்மெய் யிறுதியும், மார் என்னுஞ் சொல் உளப்பட இம்மூன்றும் பொருந்தப் பலரறிசொல் தோன்றும், எ-று. மூன்றும் பொருந்த என்றாராயினும் பால் காட்டுவது தனித்தனி யென்று கொள்க. பகரம் என்னாது இறுதி யென்றது, பகரம் ஒற்றாகவரின் மொழிக்கு ஈறாகாமையின் உயிரீறு என்பது தோற்றுதற்கு. ‘கானந் தகைப்ப செலவு’ (கலி 3 - 22) எனப் பகரம் அஃறிணைக்கும் உரித்தாகலின் உயர்திணைக்கே யுரித்தா மாறு என்னை யெனின், அஃறிணைக்கண் ஓதுகின்ற அகரம் எல்லாப் புள்ளியினும் ஏறி முடிதலின் ஆண்டு அகர ஈறாகி வந்தது. ஈண்டுப் பகர ஒற்றின் மேல் அல்லது வாராமையிற் பகரம் என வேறுபட்டு நின்றது. மார் என்பது ரகரத்துள் அடங்காதோ வெனின், வினைக்கண் ஏனைய போல முற்றிநில்லாது எச்சம் போல வருதலானும், பெயர்க்கண் ஆர் ஈறாகி வருமிடத்துப் பன்மை யுணர்த்தாத சொற்கள் மார் ஈறாகி வர வேண்டுதலானும் வேறுபடுத்தோதப் பட்டதென்க. (எ-டு.) உண்டனர், உண்ணாநின்றனர், உண்பர், உண்ப, ஆ கொண்மார் வந்தார்; இவை வினை. கரியர், நெடியர்; இவை வினைக்குறிப்பு. அவர், இவர், நம்பியர், நங்கையர், தாய்மார், தந்தைமார்; இவை பெயர். பகர இறுதி அஃறிணைப் பெயராயல்லது வாராது. (7) ஒன்றன் பால் ஈறு 8. ஒன்றறி கிளவி தறட ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். அஃறிணை யொருமை யுணரவருஞ் சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) த, ற, டக்களை யூர்ந்த குற்றுகரத்தினை ஈறாகவுடையன ஒன்றனை அறியுஞ் சொற்களாம். எ-று. (எ-டு.) உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கூயிற்று (உண்டு); இவை வினை. கரிது,கோடின்று, குண்டுகட்டு; இவை வினைக்குறிப்பு. அது, ஒன்று, இரண்டு; இவை பெயர். (8) பலவின்பால் ஈறு 9. அஆ வஎன வரூஉம் இறுதி அப்பான் மூன்றே பலவறி சொல்லே. பலவறிசொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பலவற்றை யுணரவருஞ் சொல் அ,ஆ என்னும் உயிரெழுத் தினையும், வ என்னும் உயிர்மெய்யெழுத்தினையும் ஈறாக வுடைய அக்கூற்று மூன்று, எ-று. (எ-டு.) உண்டன, உண்ணாநின்றன, உண்பன, உண்ணா, உண்குவ; இவை வினை. கரிய, நெடிய; இவை வினைக்குறிப்பு. பல, சில, யா, வருவ; இவை பெயர். வ என்பது அகரத்துள் அடங்காதோ எனின், அடங்காது. என்னை? உண் என்னும் தொழிற்சொல் இறந்தகாலங் குறித்துழி உண்டு எனவும், நிகழ்காலங் குறித்துழி உண்கின்று எனவும், எதிர்காலங் குறித்துழி உண்பு எனவும் நின்று, அன், அள், அர், அது, அ என்னும் பால் உணர்த்தும் எழுத்தொடு கூடிப் புணருழி, அன் சாரியை மிக்கும், இயல்பாகியும் இறந்த காலத்துக்கண் உண்டனன், உண்டனள், உண்டனர், உண்டது, உண்டன, உண்ட எனவும்; நிகழ்காலத்துக்கண் உண்கின்றனன், உண்கின்றனள், உண்கின்றனர், உண்கின்றது, உண்கின்றன எனவும்; எதிர்காலத்துக்கண் உண்பன், உண்பள், உண்பர், உண்பது, உண்பன எனவும் வரும். உண்கு என நின்ற எதிர்காலச் சொல் பன்மை யுணர்த்தும் அகரம் ஏறியவழி உண்க என வியங்கோட்பொருண்மைப் படும் ஆகலின், ஆங்கு உண்குவ என வகர வுயிர்மெய் கொடுக்க வேண்டுதலின் வகரமென வோதல் வேண்டுமென்க. (9) இப்பதினோர் ஈறுகளும் வினைக்கண் வரும்பொழுது பால் விளக்கும் எனல் 10. இருதிணை மருங்கின் ஐம்பா லறிய ஈற்றுநின் றிசைக்கும் பதினோ ரெழுத்தும் தோற்றந் தாமே வினையொடு வருமே. மேல், பாலுணர்த்தப்பட்ட எழுத்திற்கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டு திணைக்கண்ணும் ஐந்து பாலும் விளங்க இறுதிக்கண் நின்று ஒலிக்கும் பதினோரெழுத்தும் தாந்தோற்றமாக வினையொடு வரும், எ-று. தோற்றமாக என்பது பெரியதாக என்பது குறித்து நின்றது. எனவே, பெயரொடு வருகை சிறுவரவிற்று என்று கொள்ளப்படும்; ஆடூ, மகடூ, மக்கள், மரம், அவை எனப் பெயர்க்கட் பிறவாற்றானும் வரும் ஆதலின். உதாரணம் மேற்காட்டப்பட்டன. (10) பாலறி சொற்கள் தம்முள் மயங்காவெனல் 11. வினையிற் றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே. வழுப்படாமற் கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இவ்வோத்தினுட் செப்பும் வினாவும் வழுவாமற் கூறுதல் பய னாதலின், அவை வழுவாமற் கூறுங்கால் வினையிற்றோன்றும் பாலறி சொல்லும், பெயரிற் றோன்றும் பாலறி சொல்லும் தம்முள் மயங்குதல் பொருந்தா; தத்தம் மரபினையுடைய வாதலான், எ-று. ஆதலான் என்பது எஞ்சிநின்றது. பெயர் என்றதனான் தன் பொருண்மையாகிய திணை பெறுதும். பாலறிசொல் என்றதனாற் பால் பெறுதும். வினையென்றதனான் அதற்கு இன்றியமையாத காலமும் இடனும் பெறுதும். தம்மரபின என்றதனான் மரபு பெறுதும். மயங்கல் கூடா என்றதனான் வழூஉப்படுதல் குற்றமென்பது பெறுதும். திரிபின்றிப் பால் உணர்த்துவது வினையாதலிற் சிறப்பு நோக்கி முற் கூறினார். அன்றியும் மேனின்ற சூத்திரம் வினையதிகாரப்பட்டு வருதலின் அதனொடு சேரவைத்தார் எனினும் அமையும். (எ-டு.) அவன் நெருநல் உண்டான் என்பது. இதனுள் அவன் என்னும் உயர்திணைப் பெயர் உயர்திணைவினை கொண்டு முடிதலின், திணை வழுவா தாயிற்று. ஆடூஉப் பெயர் ஆடூஉவினை கொண்டு முடிதலிற் பால் வழுவா தாயிற்று. படர்க்கைப் பெயரொடு படர்க்கைவினை முடிதலின் இடம் வழுவா தாயிற்று. நெருநலென்னும் இறந்தகாலப் பெயரோடு இறந்தகால வினை முடிதலின் காலம் வழுவாதாயிற்று. உண்டற்றொழிற்கு உரியானை உண்டான் என்றமையான் மரபு வழுவாதாயிற்று. பிறவு மன்ன. இனி, வழுவாமாறு :- உயர்திணை மூன்று பாலும் அஃறிணை யிரண்டு பாலொடு மயங்குதல் திணை வழுவாம். அவை தம்முள்தாம் மயங்குதல் பால் வழுவாம். தன்மை, முன்னிலை, படர்க்கையென்னும் மூன்றிடமும் ஒன்றோ டொன்று மயங்குதல் இட வழுவாம். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலமும் தம்முள்மயங்குதல் கால வழுவாம். எல்லாப் பொருளையும் பயின்ற மரபினாற் கூறாதது மரபு வழுவாம். (எ-டு.) அவன் உண்டது : திணை வழூஉ. அவன் உண்டனள் : பால் வழூஉ. நீ யுண்டனன் : இட வழூஉ. நாளை உண்டேன் : கால வழூஉ. அவன் மேய்ந்தான் : மரபு வழூஉ. பிறவுமன்ன. திணை வழூஉப் பன்னிரண்டு. பால் வழூஉ எட்டு. இடவழூஉ ஆறு. காலவழூஉ ஆறு. மரபுவழூஉ வரம்பில. (11) பேடி என்பது பெண்பாலா யிசைக்கும் 12. ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி ஆண்மை யறிசொற் காகிட னின்றே. ஐயம் அறுத்தலை நுதலிற்று. (இ-ள்.) மேல், உயர்திணை மருங்கிற் பால்பிரிந் திசைக்கும் (சூ.4) என்று ஓதப்பட்ட பேடி யென்னும் பெயர்க்கண் நிற்கும் சொல் ஆண்மை யறிசொற்கு ஆகும் இடன் இலது, எ-று. எனவே பெண்மையறிசொற்கு ஆகும் என்றவாறாம். (எ-டு.) ‘பெண்ணவா யாணிழந்த பேடி யணியாளோ- கண்ணவாத் தக்க கலம்’ (நாலடி. 251) என வரும். ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவி பெண்மை யறிசொற்கு ஆகும் என்னாது, ஆண்மை யறிசொற்கு ஆகுமிடமின்று என எதிர்மறை வாய்பாட்டாற் கூறினமையாற் சிறுபான்மை ஆடூஉ வறிசொல்லான் வருவன உளவேற் கொள்க. இச்சூத்திரம் ‘பெண்மை சுட்டிய’ என்னுஞ் சூத்திரத்தின் (சூ.4) பின் வையாது ஈண்டுக் கூறியது என்னை யெனின், பெயரும் வினையும் மயங்காமற் கூறுக என்றாராகலிற் பேடி யென்பது இவ்வாறு சொல்லத் தகும் என இறந்தது காத்து ஈண்டு ஓதப்பட்டது. (12) வினாவிலும் விடையிறுப்பதிலும் வழுவற்க எனல் 13. செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் இதுவும் வழுப்படாமற் கூறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செப்பினையும் வினாவினையும் வழுவாமற் கூறுக, எ-று. உலகத்துப் பொருளுணர்த்துஞ் சொல்லெல்லாம் வினாவுஞ் செப்பும் ஆகிய பொருண்மேல் நிகழ்தலின், அவை வழுவாமற் கூறல் வேண்டும் என்றவாறாயிற்று. எனவே வழு எழுவகையாம் என்பது பெற்றாம். செப்பு வருமாறு :- அச்செப்பு நான்கு வகைப்படும்: துணிந்து கூறல், கூறிட்டு மொழிதல், வினாவி விடுத்தல், வாய்வாளாதிருத்தல் என. துணிந்து கூறலாவது, தோன்றியது கெடுமோ என்றவழி, கெடும் என்றல். கூறிட்டு மொழித லாவது:- செத்தவன் பிறப்பானோ என்றவழி, பற்றறத் துறந்தானோ, பிறனோ என்றல். வினாவி விடுத்தல் என்பது - முட்டை மூத்ததோ பனை மூத்ததோ என்ற வழி, எம் முட்டைக்கு எப்பனை என்றல். வாய்வாளாமை யாவது:- ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை. (மணி. 30 : 235-249) இனி, அவற்றுள் வினா வழுவாவது வினாவிய சொல்லாற் பயனின்றி நிற்பது. அஃது ஒருவிரல் காட்டி நெடிதோ குறிதோ என்றலும், ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றலும். செப்பு வழுவாவது:- துணிந்து கூறும்வழித் தோன்றியது கெடுமோ என்றார்க்குக் கெடாதென்றலும், ஒலி செவிக்குப் புலனன்று என்றலும், என் தாய் மலடி என்றலும், பிறவும் இந்நிகரனவும். இனிக் கூறிட்டு மொழிய வேண்டும் வழியும், வினாவி விடுக்க வேண்டும் வழியும், வாளாதிருக்க வேண்டும் வழியும் துணிந்து கூறின் வழுவாம். (வினாவின்றியும் வருதலிற் செப்பு முற்கூறப்பட்டது. அது யான் குமரியாடிப் போந்தேன், ஒரு பிடி சோறு தம்மின் எனவரும்). (13) வினாச் செப்பாகவும் வருதல் 14. வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே. செப்பின்கட் கிடந்ததொரு வழுவமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) வினாவும் செப்பாம் நிலையைப் பெறும், வினாவப்பட்ட சொற் றன்னானே யெதிர்த்து வருமாயின், எ-று. (எ-டு.) சாத்தா உண்ணாயோ என வினாயவழி, உண்ணேனோ என்பது உண்ணேன், உண்பல் எனச் செப்பாது உண்பென் என்னும் பொருள்படச் செப்பினமையான் வழுவமைதி யாயிற்று. (14) செப்பு வழுவமைதி 15. செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே அப்பொருள் புணர்ந்த கிளவி யான. இதுவுமது. (இ-ள்.) செப்பு வழீஇயினும் நீக்கப்படாது, அச் செப்புதற் பொருண்மையைப் பொருந்திய சொல்லின்கண். எ-று. ஏகாரம் சிறப்புப் பற்றி வந்தது, அதிகாரப் புறநடையாற் கொள்ளப் படும். (எ-டு.) உண்ணாயோ சாத்தா என்றவழி, நீ யுண் எனவும், வயிறு குத்திற்று எனவும், வயிறு குத்தும் எனவும் இவ்வாறு வருவன. இவையும் உண்ணேன், உண்பல் என வாராமல் உண்ணேனென்னும் பொருள்பட வருதலின் வழுவமைதி யாயின. (15) செப்பு, வினாவிற்குரிய மரபு 16. செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்கு அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே. செப்பின்கண்ணும் வினாவின் கண்ணும் உறழ்பொருட்கண் வரும் வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) சினையு முதலுமாகிய பொருளுணர்த்துஞ் சொற்குச் செப்பின் கண்ணும் வினாவின் கண்ணும் உறழப்படும் பொருள் அப்பொருளாகும். எ-று. துணை யென்பது இணை. முதலென்றதனாற் பண்புந் தொழிலுங் காலமு மிடனும் பொருளுங் கொள்க. சினைபற்றி யுறழ்தல் பெரும் பான்மையாகலான் முற்கூறப்பட்டது. அப்பொருளென்றது அவ்வப் பொருட்கு அவ்வப்பொருளே யுறழப்படுவது, எ-று. அவை யொருபொருட்கண்ணும் பிறபொருட்கண்ணும் ஒத்தன கொள்ளப்படும். அவை வினாவின்கண் வருமாறு:- வலமுலையோ இடமுலையோ பெரிதெனத் தன்பொருட்கண் வந்தது. இவள் முலையோ அவள் முலையோ பெரிதெனப் பிறபொருட்கண் வந்தது. இவை சினை. இந்நிறமோ அந்நிறமோ நல்லது: இது பண்பு. இந்நடையோ அந்நடையோ நல்லது: இது தொழில். இன்றோ நாளையோ வாழ்வு : இது காலம். இந் நிலமோ அந்நிலமோ விளைவது : இஃது இடம். இவளோ அவளோ கற்புடையாள்: இது பொருள். இனிச் செப்பு வருமாறு :- இம்முலையின் அம்முலை பெரிதென் றானும், ஒக்கு மென்றானும் வரும். பிறவு மன்ன. இனி அப் பொருளல்லாப் பிறிது பொருளோடு உறழ்தல் வருகின்ற சூத்திரத்தான் அமைக்கப்படும். (16) செப்பின் உறழ் பொருட்கண் வரும் வழுவமைதி 17. தகுதியும் வழக்கும் தழீஇயின வொழுகும் பகுதிக் கிளவி வரைநிலை யிலவே. மேற்சொல்லப்பட்ட உறழ்பொருட்கண் வரும் வழுவமைத்தல் நுதலிற்று. (இ-ள்) சினை முதலாகிய பொருட்களை அவ்வப்பொருளோடு உறழ்தலேயன்றித் தகுதியையும் வழக்கினையுந் தழுவினவாய் நடக்கும் ஒரு கூற்றுச் சொல் விலக்கும் நிலைமையில, எ-று. சினைமுதற்கிளவியும், உறழ்பொருளும் அதிகாரத்தான் வந்தன. தகுதியாவது இதற்கிது தகுமோவெனப் பண்பினானாதல் தொழிலி னானாதல் உறழநிற்பது. வழக்காவது ஒப்புமையின்றி உலகத்தாற் பயில வழங்கப்படுவது. அவற்றுள் தகுதிபற்றி வந்த வினா :- இந்நங்கை கண் நல்லவோ இக்கயல் நல்லவோ என வருவது : இது பண்பு. இம்முகிலோ இவன் கையோ கொடுக்க வல்லது : இது தொழில். செப்பு வருமாறு :- கயலிற் கண் நல்ல என்றானும், ஒக்கும் என்றானும் உரைப்பது. இனி, வழக்குப்பற்றி வினா வருமாறு :- கரிதோ வெளிதோ : இருப் பேனோ போவேனோ : ஊரோ காடோ : பகலோ இரவோ : எனவும், ‘தேவராய் வாழ்தல் நன்றோ, நரகத்துள் உறைதல் நன்றோ’ (சீவக. 1235) எனவும், பிறவும் இவ்வாறு ஒன்றினொன்று பொருத்தமின்றி உலக வழக்கின்கண் வருவன கொள்க. செப்பு வருமாறு :- கரிதன்று வெளிதென்றானும் வெளிதன்று கரிதென்றானும் இவ்வாறே பிறவாற்றானும் உரைப்பன. இவை மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தின் வழுவுதலின் அமைதி யாயிற்று. (17) செப்பின் இனச்சுட்டில்லாப் பொருள் மேல் வரும் வழுவமைதி 18. இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. உலகத்துப் பொருளெல்லாம் இனச்சுட்டுடையவும், இனச்சுட் டில்லவுமென இருவகைப்படும். அவற்றுள் இனச்சுட்டுடையன உறழ்ச்சி வகையுள் அடங்குதலின், இனச்சுட்டில்லாத பொருண்மேற் செப்பு வழீஇ யமையுமா றுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு பொருட்கு இனச்சுட்டில்லாத பண்புகொள் பெயரைக் கொடுத்தல் வழக்குநெறியல்ல : செய்யுள் நெறி, எ-று. ‘பொருட்கு’ என்னும் வேற்றுமையேற்ற பெயர் எஞ்சி நின்றது. அல்ல வென்பது வழக்குப்பன்மை குறித்து வந்தது. செய்யுணெறி யென அமையும்; வழக்குநெறி யல்ல வெனல் வேண்டாவெனின், நன்கு மறுத்தற்குக் கூறினா ரென்க. இனச்சுட்டில்லாத பொருளாவன.-ஞாயிறு, திங்கள், தீ யென்பன. அவை ‘மாக்கடனிவந்தரும் செஞ்ஞாயிற்றுக் கவினை’ (புறம். 4) எனவும், ‘நெடுவெண்டிங்களு மூர்கொண் டன்றே’ (அகம்.2) எனவும், ‘வெவ்வெரி கொளீஇ’ எனவும் வரும். இவை வழக்கின்கண் வரின் கருஞாயிறும், கருந்திங்களும், தண்ணெரியும் உளபோலத் தோன்றும்; ஆயினும் செய்யுட்கண் அமையும் என்றவாறு. செம்போத்து என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், அப்பொருட்கு அது பெயரென்க. பெருவண்ணான், பெருங்கொல்லன் என வழக்கின் கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், பண்பாவது தமக்குள்ள தோரியல்பு: ஈண்டப் பெருமை யியல்பின்மையான், அஃது உயர்த்துச் சொல்லுதற்கண் வந்ததென்க. பண்புகொள் பெயர் என்று விசேடித்தமையான், ஏனைப் பெயர்கள் இருவகை வழக்கினும் இனஞ்சுட்டாது வரப்பெறுமெனக் கொள்க. (18) இயற்கைப் பொருள்மேல் செப்பு நிகழுமாறு 19. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல். உலகத்துப் பொருளெல்லாம் இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என அடங்குதலின், அவற்றுள் இயற்கைப் பொருண்மேற் செப்பு நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்கைப் பொருளென்பது காரணப் பொருள், அதனை இத்தன்மைத்து எனச் சொல்லுக. எ-று. அவை நிலம் நீர் தீ வளி ஆகாயம் உயிர் என்பன. அவற்றை நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளியுளரும், ஆகாயம் நிற்கும், உயிர் உணரும் எனக் கூறுக. நிலம் வலியதாயிற்று எனக் கூறலாகாது; என்னை? ஆக்கங் கொடுப்பின் அதற்கு இயல்பு பிறிதாவான் செல்லு மாகலின் வழுவாம். (19) செயற்கைப் பொருள்மேல் செப்புநிகழுமாறு 20. செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல். செயற்கைப் பொருண்மேற் செப்பு நிகழுமாறுணர்த்துதல் நுதலிற்று (இ-ள்.) செயற்கைப் பொருளாவது காரியப் பொருள் : அதனை ஆக்கச் சொல்லொடு படுத்துக் கூறுக, எ-று. செயற்கையாய்த் தம்மியல்பின் வேறுபடுவன வெல்லாம் செயற்கைப் பொருளென்று கொள்க. (எ-டு.) மண் குடமாயிற்று, நூல் ஆடையாயிற்று, மரங் கதவாயிற்று எனவும்; பைங்கூழ் நல்லவாயின. மயிர் நல்லவாயின எனவும் வரும். அஃதேல், பைங்கூழ் நல்ல, மயிர் நல்ல என ஆக்கமின்றியும் வருமால் எனின், அவை யக்காலத்தியற்கை பற்றிக் கூறப்பட்டன; முன்பு நின்ற நிலைகண்டு கூறப்பட்டன அல்லவென்க. அதனானேயன்றே வருகின்ற சூத்திரங் கூறவேண்டியது. (20) மேலதற்கொரு புறநடை 21. ஆக்கந் தானே காரண முதற்றே. மேலதற்கொரு புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட ஆக்கக் கிளவி காரணத்தை முதலாக வுடைத்து, எ-று. செயற்கைப் பொருளெல்லாம் ஆக்கங்கொடுத்துக் கூறப்படா : காரணமுள் வழியே ஆக்கங் கொடுப்ப தென்றவாறாயிற்று. (21) இதுவுமது 22. ஆக்கக் கிளவி காரணம் இன்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே. மேலதற்கொரு புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆக்கச் சொல் காரணமின்றியும் வரும் வழக்கினுள், எ-று. எனவே, செய்யுளகத்து வரப்பெறா என்றவாறாம். போக்கின் றென்பது போகுதலின்று என்றவாறு. எனவே வரும் என்று பொருளாயிற்று. உம்மை இறந்தது தழீஇயிற்று. ஆடை நன்றாயிருந்தது, மணி நன்றாயிருந்தது என நன்றாதற்குக் காரணங் குறியாது வந்தன. பைங்கூழ் நல்லவாயினவென இடமுங் காலமும் இனமுஞ் சுட்டாது கண்டகாலத் தியற்கைபற்றி வரும் வழக்குங் கொள்க. (22) பால் ஐயம் 23. பான்மயக் குற்ற ஐயக் கிளவி தானறி பொருள்வயிற் பன்மை கூறல். மேற் சொல்லப்பட்ட இருவகைப் பொருட்கண்ணும் ஐயக்கிளவி உணர்த்துகின்றாராகலின், இச்சூத்திரம் அதன் பகுதியாகிய பால் ஐயம், திணை ஐயம் என்னும் இரண்டனுள்ளும் பால் ஐயம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தானறிந்த பொருட்கட் பான்மயக்குற்ற ஐயப் பொருண் மையைப் பன்மையாற் கூறுக. எ-று. தானறிபொருள் என்றமையான் திணையறிந்து பால் அறியாதவழி என்பது பெறப்பட்டது. பால் ஐயம் பெருவழக்கிற்று ஆதலின் முற்கூறப் பட்டது. சேய்மைக்கட் டோன்றுவதொரு மக்கட்பிழம்பு கண்டு, ஒருவன் கொல்லோ ஒருத்தி கொல்லோ என ஐயுற்றான் அதனைத் தோன்றுவான் எனவும் ஆகாது, தோன்றுவாள் எனவும் ஆகாது, ஆயிடைத் தோன்றுவார் என்க. பைங்கூழ் அழிவு கண்டான் ஒன்றுகொல்லோ பல கொல்லோ செய்புக்கன என்க. (23) திணை ஐயம் 24. உருபென மொழியினும் அஃறிணைப் பிரிப்பினும் இருவீற்றும் உரித்தே சுட்டுங் காலை. திணை ஐயத்தின்கண் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணை அஃறிணை யென்னும் இரண்டு வேறு பாட் டினையுஞ் சுட்டி ஐயப்படுங் காலத்து, உருபெனச் சொல்லினு முரித்து, அஃறிணை ஒருமையாற் கூறலு முரித்து அப்பொருள், எ-று. மேல் தானறி பொருள் என்றமையானும், ஈண்டு இருவீற்று மென்ற மையானும் திணை ஐயம் என்பது பெற்றாம். ஐயம் என்பது அதிகாரத்தான் வந்தது. இருவீற்று முரித்து என்பதனை உரித்திரு வீற்றும் என்று மொழி மாற்றுக. அஃறிணைப் பிரிப்பென்றதனான் பொதுமையிற் பிரிவது ஒருமை யாதலின் ஒருமைச் சொல்லாற் சொல்லினும் என்றாராகக் கொள்க. குற்றியோ மகனோ என ஐயுற்றுழி, குற்றியோ மகனோ தோன்று கின்ற உருபு, தோன்றுகின்ற அது என்க. உருபு என்றதனான், அப்பொருள் பயக்கும் பிழம்பு, வடிவு, பிண்டம் என்பனவும் கொள்க. (24) ஐயுற்றதனைத் துணிந்துழிச் சொல்லும் மரபு 25. தன்மை சுட்டலும் உரித்தென மொழிப அன்மைக் கிளவி வேறிடத் தான. மேல் ஐயப்பட்ட பொருள் துணியப்பட்டவழிச் சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) துணியப்பட்ட பொருளின் வேறாகிய பொருட்கண் வரும் அன்மைக் கிளவி, துணியப்பட்ட பொருளைச் சுட்டலும் உரித்தென்று சொல்லுவர் புலவர், எ-று. தன்மை என்பதனான் அப்பொருட்கு இயல்பு என்பது பெற்றாம். பெறவே துணியப்பட்ட பொருளாயிற்று. வேறிடத்து அன்மைக் கிளவி தன்மை சுட்டலும் உரித்தெனக் கூட்டுக. உம்மை எதிர்மறை யாதலான் சுட்டாமை பெரும்பான்மை. (எ-டு.) குற்றியல்லன் மகன்; மகன் அன்று குற்றி; பெண்டாட்டி அல்லன் ஆண்மகன்; ஆண்மகன் அல்லள் பெண்டாட்டி; ஒன்றல்ல பல; பலவன்று ஒன்று; இவை துணியப்பட்ட பொருளைச் சுட்டி வந்தன. குற்றியன்று மகன், மகன் அல்லன் குற்றி; பெண்டாட்டி யல்லள் ஆண் மகன்; ஆண் மகன் அல்லன் பெண்டாட்டி; ஒன்றன்று பல; பலவல்ல ஒன்று இவை துணியப்படாத பொருளைச் சுட்டி வந்தன. குற்றியல்லன் மகனே எனத் தேற்றேகாரங் கொடுத்துழி அன்மை துணியப்பட்ட பொருளைச் சுட்டின், குற்றி நின்று வற்றும் ஆதலான் அன்மைக்கிளவி அல்லாத பொருளைச் சுட்டுதல் ஆசிரியர் மதமென்று கொள்க. (25) வண்ணச்சினைச் சொல் பற்றிய மரபு 26. அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல். ஒருசார்பு மரபு வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) வண்ணம் பெற்ற சினையையுடைய பெயர்ச்சொல் முற்பட அடையும், அதன்பின் சினையும் அதன்பின் முதலுமாகி அம்முறை மயங்காமை வழக்குப் பெற்றியலும், எ-று. வண்ணச் சினைச் சொல் மயங்காமை நடைபெற்றியலும் எனவே, வண்ண முதற்சொல் மயங்கியல்லது நடவா தென்றவாறாம். இதனாற் பெற்ற பொருள் என்னையெனின், பொருட்கு உளதாகிய பண்பும், சினையும், பொருளோடு அடுத்துக் கூறக் கருதுவானாயின், பொருண் மேற் செல்லாது சினைமேற் செல்லும் என்பது அறிவித்தற் கென்க. (எ-டு.) ‘செங்கால்நாரை’ : வண்ணம் சினைமேலேறி முதலொடு முடிந்தது. கருங்கோட்டியானை எனப் பண்பினை முதலோடு அடுத்துக் கூறக் கருதுவானாயின், கருமை யானையின் மேற்செல்லாது கோட்டின் மேற் செல்லுதலின் இம்முறை நடைபெறாததாயிற்று. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், வடிவு முதலாய பண்புங் கொள்ளப்படும். (எ-டு.) ‘சிறுகண்யானை’ (சிறுபாண். 142) பிறவும் அன்ன. அடையென்று பொதுப்படக் கூறியவதனான் ஒரு பொருண்மே லடையிரண்டு வருதலுங் கொள்க. ‘கருநெடுங் கூந்தற் காரிகை’ என வரும். முறை மயங்காமை என்றதனான், மயங்குமாயின், குறித்த பொருண் மேற் செல்லா தென்க. (எ-டு.) ‘பெருந்தலைப் புல்லார் நல்லா(ர்)’ என்றவழி, பெருந்தலை யென்பது புல்லொடு சார்ந்து வருதலிற் சொல்லுவான் குறிப்பு வேறாயினும் அதன்மேற் செல்லாதாயிற்று. ‘ கவிசெந் தாழிக் குவிபுறத்திருந்த - செவிசெஞ் சேவலும்’ (புறம்.238) என முறை மயங்கி வந்ததால் எனின், ஆண்டுச் செஞ்செவி என்பது மொழி மாறி நின்ற தென்க. (26) பால் வழுவமைதி 27. ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல. ஒருசார் பால்வழுவும் திணைவழுவும் அமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒருவரைச் சொல்லும் பன்மைச் சொல்லும் ஒன்றனைச் சொல்லும் பன்மைச் சொல்லும் இலக்கண மருங்கிற் சொல் நெறியல்ல, வழக்கின் ஆகிய உயர்சொற் கிளவி, எ-று. உயர் சொற் கிளவி - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. (எ-டு.) அவர் வந்தார் என வரும். ஒருவனையும் ஒருத்தியையும் ஒன் றனையும் இவ்வாறு கூறுதல் வழுவாயினும், உயர்வுகுறித்துச் சொன்னமை யான் அமைதியாயிற்று. ‘ இயற் பெயர்முன்ன ராரைக் கிளவி - பலர்க்குரி யெழுத்தின் வினை யொடு முடிமே’ (இடையியல் 22) என்புழி யடங்காதோ எனின், ஆண்டு, நம்பி, நங்கை, சாத்தன் என்னும் பெயர் தானே பால் காட்டுதலான் அதன் மேல் ஓர் இடைச்சொல் லாயிற்று, ஈண்டுப் பன்மைச் சொற்றானே ஒருமைக்கு வருதலின் அடங்காதாயிற் றென்க. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், ஒரு பசுவை எம் அன்னை வந்தாள் எனவும், பெருங்கொல்லன், பெருவண்ணான் எனவும் வருவனவுங் கொள்க. (27) வினைச்சொற்கண் இடம்பற்றி வரும் மரபு 28 செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூ விடத்தும் உரிய வென்ப அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த ஏனை யிரண்டும் ஏனை யிடத்த. ஒருசார் வினைச்சொற்கண் இடவழுக் காத்தலை நுதலிற்று. (இ-ள்.) செலவு, வரவு, தரவு, கொடை யென்னும் தொழிற்கண் நிலைபெறத் தோன்றும் அந்நாற் சொல்லும் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் அம்மூன்றிடத்தும் உரியவென்ப ஒருசாரார். அவற்றுள், தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை யென்னும் இரண்டிடத்தினும் வரும்; ஏனையிரண்டும் படர்க்கைக்கண் வரும், எ-று. (எ-டு.) எனக்குத் தந்தது; எனக்கு வந்தது; நினக்குத் தந்தது; நினக்கு வந்தது; அவர்க்குச் சென்றது; அவர்க்குக் கொடுத்தது என வரும். இந்நான்கு சொல்லும் மூன்றிடத்தும் வரும் என்பார். உதாரணங் காட்டுமாறு:- எனக்குச் சென்றது; எனக்குக் கொடுத்தது; நினக்குச் சென்றது; நினக்குக் கொடுத்தது; அவர்க்குத் தந்தது; அவர்க்கு வந்தது எனக் காட்டுவர். இவற்றுள் கொடுவென்பதனை ‘கொடுவென் கிளவி படர்க்கை யாயினும்-தன்னைப் பிறன்போற் கூறுங்குறிப்பின்-தன்னிடத்தியலும் என்மனார் புலவர்’ (எச்.49) என எடுத்து வழுவமைக்கின்றார் ஆகலானும், பிறவும் இத்துணைச் சிறப்பில வாதலானும் இலக்கண வழக்கு மேற்காட்டப் பட்ட ஆறு உதாரணமுமே. ஏனைய ஆறும் ஒருமுகத்தான் வழுவமைத்த வாறாகக் கொள்க. (28) யாது, எவன் என்னும் சொற்கள் 29. யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும் அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும். வினா வழுக் காத்தலை நுதலிற்று. (இ-ள்.) யாது எவன் என்று சொல்லப்பட்ட இரண்டு சொல்லும் அறியாத பொருட்கட் பொருந்தத் தோன்றும், எ-று. நின்னாடு யாது? இப்பண்புள்ளது எவன்? என வரும். ஏனைப்பால் உணர்த்தும் வினாச் சொற்களெல்லாம் கூறாது இவ் விரண்டனையும் வகுத்துக் கூறியது என்னை யெனின், ஆண்டு உளதொரு வழுவமைத்தற்பொருட்டென்க. (29) எய்தியதன்மேற் சிறப்பு விதி 30. அவற்றுள், யாதென வருஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாகலும் உரித்தே. வினாவழு அமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் யாது என்று சொல்லப்பட்ட அறியாத பொருண்மைக்கண் நிகழும் சொல், அறிந்த பொருட்கண் ஐயந்தீர்தற் பொருட்டு ஆராய்ந்த சொல்லாகலும் உரித்து, எ-று. உம்மை எச்சவும்மை ஆகலான், ஐயம் அறுத்தலே யன்றி அறி வொப்புக் காண்டற் பொருட்டும் வினாவப்படும் என்றுங் கொள்க. ஐயம் அறுத்தலாவது, இச்சொற்குப் பொருள் இஃது என உணர்ந்தான் ஒருதலையாகத் துணிதலாற்றாது, அஃதறிவான் ஒருவனை வினாதல். அறிவு ஒப்புக்காண்டலாவது, சொல் இலக்கணம் அறிவான் ஒருவன் அஃது அறிவான் ஒருவனை இதற்குப் பொருள் யாது என வினாதல். பிறவும் அன்ன. இவ்வாறு அறிந்த பொருளை வினாதல் வழுவாயினும் அமைக என்றவாறு. (30) சினைமுதற் சொல் முற்றும்மை பெறுதல் 31. இனைத்தென வறிந்த சினைமுதற் கிளவி வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். ஒருசார் செப்பு வழுக் காத்தலை நுதலிற்று. (இ-ள்.) இத்துணை யென வரையறுக்கப்பட்ட சினைக் கிளவியும், முதற் கிளவியும் தொழிற்படு தொகுதிக்கண் உம்மை பெறல் வேண்டும், எ-று. எனவே, தொழிற்படாத் தொகை இயல்பாகி வரப்பெறும் என்பது பெறுதும். (எ-டு.) தேவர் முப்பத்து மூவரும் வந்தார், நங்கை முலையிரண்டும் நல்ல: இவை தொழிற்பட்ட தொகை. தேவர் முப்பத்து மூவர், ஆவிற்கு முலை நான்கு : இவை தொழிற்படாத் தொகை. “ கடுவன் முதுமகன் கல்லா மூலற்கு-வதுவை அயர்ந்த வன்பறழ்க் குமரி-இருதோள் தோழர் பற்ற” என்புழி உம்மை வந்ததன்றால் எனின் ஆண்டு எஞ்சிநின்றது என்க. (31) பொருந்தும் பொருளையும் பொருந்தாப் பொருளையும் சொல்லும் மரபு 32. மன்னாப் பொருளும் அன்ன வியற்றே. இது மரபுவழுக் காக்கின்றது. (இ-ள்.) பொருந்தும் பொருளும் பொருந்தாப் பொருளும் உறழ வேண்டும் இடத்தும், பொருந்தும் பொருள் கூறுமிடத்தும் உம்மை கொடுத்துச் சொல்லவேண்டும், எ-று. வேதாகமத் துணிவு ஒருவர்க்கு உணர்த்துமிடத்து, உலகும், உயிரும், பரமும் அனாதி; பதியும், பசுவும், பாசமும் அனாதி என வரும். உலகும் உயிரும், பரமும் பசுவும் பொருந்தும் பொருள் ஆனவாறும்; பாசமும் பதியும் பொருந்தாத பொருள் ஆனவாறுங் காண்க. ‘உடம்பும் உயிரும் வாடியக் கண்ணும்’ (தொல். பொ. 203) எனவும், ‘நோயும் இன்பமும்’ (தொல். பொ. 196) எனவும் கூறியவாறுங் காண்க. மன்னிக் கழிகின்றேன் என்றான்:- மன்னுதல் பொருத்தமும் மன்னாமை பொருந்தாமையுமான வாறுங் காண்க. இரண்டாவது ஏட்டிற்காணும் உரை. இதுவுமது. (இ-ள்.) நிலையாத பொருள் உம்மை பெறல்வேண்டும், எ-று. அவையாவன இளமை, செல்வம், யாக்கை யென்பன. (எ-டு.) சக்கரவர்த்தி இளமையும் நிலையாது. சக்கரவர்த்தி செல்வமும் நிலையாது. சக்கரவர்த்தி யாக்கையும் நிலையாது. “ஏமமாக இந்நில மாண்டோர் சிலரே,” “பெருங்கே ளினினாளும்-பலரே யத்தைஅஃ தறியா தோரே-அன்னோர் செல்வமும் மன்னி நில்லா” என வரும். இல்லாப்பொருளென உரைப்பவாலெனின் இல்பொருள் வழக்கின் றென மறுக்க. உம்மை கொடாக்கால் வருங் குற்றம் என்னை யெனின், பிற ரிளமையும் செல்வமும் யாக்கையும் நிற்குமெனப் பொருள்படு மாதலான் கொடுக்கவேண்டு மென்க. (32) செப்பு வழுவமைதி 33. எப்பொரு ளாயினும் அல்ல தில்லெனின் அப்பொருள் அல்லாப் பிறிதுபொருள் கூறல். செப்பு வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யாதானும் ஒருபொருளாயினும் அல்லது என்னும் சொல் லொடு கூட்டி இல்லை எனக் குறித்தான் ஆயின், அவன் வினாவிய பொருள் அல்லாத பிறிதாய பொருளைச் சொல்லுக, எ-று. எனவே, அதனொடு கூட்டிச் சொல்லுக என்றவாறாம். ‘அப்பொருள் அல்லாப் பிறிது’ என்றமையான் அதற்கு இனமாகிய பொருளே சொல்லப் படும். பயறு உளவோ வணிகீரே என்றார்க்கு உழுந்தல்லது இல்லை என்க. கொல்லவன் பட்டு உளவோ என்றால் கோசிகம் அல்லது இல்லை என்க. எனவே, அவன் கருத்திற்கேற்று வினாவிய பொருளை இல்லை என்னாது, பிறிது ஒன்று கூறுதல் வழுவாயினும், அப்பொருள் பயத்தலின் அமைதியாயிற்று. (33) செப்பின் வழா நிலை 34. அப்பொருள் கூறின் சுட்டிக் கூறல். செப்பின்கண் வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) வினாவிய பொருளையே சொல்லி அல்லதில்லையெனின், சுட்டிக் கூறுக, எ-று. இப்பயறு அல்லதில்லை; இப்பட்டு அல்லதில்லை என்க. எனவே அவன் கருத்திற்கேற்ற பயறும் பட்டும் இல என்றவாறாம். (34) செப்பு வழுவமைதி 35. பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும் பொருள்வேறு படாஅ தொன்றா கும்மே. செப்பு வழுவமைத்தலை நுதலிற்று; மேலதற்கொரு புறநடை எனினும் அமையும். (இ-ள்.) வினாவப்பட்ட பொருளொடு புணராச் சுட்டுப் பெயரைச் சொல்லினும், பொருள் வேறுபடாது ஒன்றாம். எ-று. இப்பயறல்லது இப்பட்டல்லது இல்லை என்னாது இவையல்லது இல்லை எனினும் பொருள் வேறுபடாவாறு கண்டு கொள்க. (35) ஒரு பொருள்மேல் பலபெயர் வரின் அவற்றைச் சொல்லும் முறைமை 36. இயற்பெயர்க் கிளவியுஞ் சுட்டுப்பெயர்க் கிளவியும் வினைக்கொருங் கியலுங் காலந் தோன்றின் சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவார் இயற்பெயர் வழிய என்மனார் புலவர். ஒரு பொருண் மேற் பலபெயர் வருவழிச் செப்புவழுக் காத்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒரு பொருள்மேல் வரும் இயற்பெயர்ச் சொல்லும், சுட்டுப் பெயர்ச் சொல்லும் வினைகோடற்கு ஒருங்கு இயலுங்காலம் தோன்றின், சுட்டுப் பெயர்ச்சொல்லை முற்படச் சொல்லார்; இயற் பெயர் வழியவாகக் கூறப்படும் என்று சொல்லுவர் புலவர், எ-று. வழிய எனப் பன்மை கூறியது சுட்டுப்பெயர் பல ஆகலான். இயற் பெயராவன:- சாத்தன், கொற்றன், சாத்தி, கொற்றி என்பன. சுட்டுப் பெயராவன:- அவன், இவன், அவள், இவள் என்பன. இயற்பெயர் என்றாரா யினும் வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் ஒரு பொருட்குப் பெயராகிவரும் நிலப்பெயர் முதலாயினவுங் கொள்க. ஒருங்கு இயலுங் காலம் தோன்றின் என்றதனான், ஒருபெயர் ஒருவினையொடு முற்றி நில்லாது பல சொல்லொடு தொடருங் காலத்து இவ்வாறு வருவ தென்று கொள்க. சாத்தன்வந்தான் அவற்குச் சோறு கொடுக்க. சாத்திவந்தாள் அவட்குப் பூக்கொடுக்க என வரும். பிறவும் அன்ன. சுட்டுப் பெயர் முற்கூறின் ஒரு பொருளாதல் தோன்றாதாம். (36) எய்தியது விலக்கல் 37. முற்படக் கிளத்தல் செய்யுளுள் உரித்தே. எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தலை நுதலிற்று. (இ-ள்.) மேலைச் சூத்திரத்துப் பிற்படக் கூறப்படும் என்று சொல்லப் பட்ட சுட்டுப் பெயரை முற்படக் கூறுதல் செய்யுட்கண் ஆம், எ-று. ‘ அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய் வேலன் விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந் தன்னை யலர்கடப்பந் தாரணியின் என்னைகொல் பின்னை யதன்கண் விழைவு.’ இதனுள் சேந்தன் என்பதூஉம், அவன் என்பதூஉம் ஒரு பொருள் ஆகியவாறும், சுட்டு முன் வந்துழியும் பொருள் வேறுபடாமையுங் கண்டு கொள்க. அஃது அற்றாக, சுட்டுப் பல ஆகலின் உரிய எனப் பன்மையிற் கூறாதது என்னை யெனின், ஈண்டு அகரச் சுட்டே வருதலின் ஒருமையாகக் கூறப்பட்டது. அதனைப் பல் பொருட் கேற்பின் நல்லது கோடல் என்பதனாற் கொள்க. ‘நாயுடைமுதுநீர்க் கலித்த’ என்னும் அகப்பாட்டினுள் (அகம்.16) கூர் எயிற்றரிவை குறுகினள், செத்தனள், கொண்டனள், நாணி நின்றோள், அணங்கருங் கடவுள் அன்னோள் என ஒரு பொருண்மேற் பல பெயர் சுட்டிக் காலங் காட்டியவாறு காண்க. (37) சுட்டு முதலாகிய காரணக் கிளவியை வழங்குமாறு 38. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும் சுட்டுப்பெய ரியற்கையிற் செறியத் தோன்றும். செப்பு வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) சுட்டெழுத்து முதலாகிய காரணச் சொல்லும், சுட்டுப்பெயர் இயற்கை போலப் பொருந்தத் தோன்றும், எ-று. என்றது பிற்படக் கூறப்படும், எ-று. (எ-டு.) மழை பெய்தது, அதனான் யாறு பெருகும். பிறவும் அன்ன. இது, சுட்டுப் பெயருள் அடங்காதோ எனின், பொருளைச் சுட்டாது தொழிலைச் சுட்டுதலானும், காரணக் கிளவி கருவியாதலானும் வேறு ஓதப்பட்டது. (38) சிறப்பினாகிய பெயர்நிலைக் கிளவியை வழங்குமாறு 39. சிறப்பின் ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். இதுவுமது. (இ-ள்.) மன்னர் முதலாயினாராற் பெற்ற சிறப்பினான் ஆகிய பெயர்ச் சொற்கும், உம்மையான் நிலப்பெயர் முதலாகிய பெயர்க்கும் இயற்பெயர்ச் சொல்லை முற்படக் கூறார் ஆசிரியர், எ-று. சிறப்பினான் வந்தன :-ஏனாதி, வாயிலான், படைத்தலைவன். அவை ஏனாதி நல்லுதடன், வாயிலான் சாத்தன், படைத்தலைவன் கீரன் என்பன. இக்காலத்து, உடையார், தேவர் என்பனவும் சிறப்பினான் ஆகிய பெயர். அருவாளன் சாத்தன், பாண்டியன் மாறன், முனிவன் அகத்தியன், ஆசிரியன் சாத்தன். பிறவும் அன்ன. (39) ஒருபொருள்குறித்த வேறுபெயர்க் கிளவி முடியுமாறு 40. ஒருபொருள் குறித்த வேறுபெயர்க் கிளவி தொழில்வேறு கிளப்பின் ஒன்றிடன் இலவே. இதுவுமது. (இ-ள்.) ஒரு பொருள் குறித்த வேறு வேறாகிய பெயர்ச்சொல் தொழிலைப் பெயர்தோறுங் கிளப்பின் ஒரு பொருளாகி ஒன்றும் இடன் இல, எ-று. எனவே, பல பெயர் அடுக்கி வரின் ஒரு வினையான் முடித்தல் வேண்டும் என்றவாறாம். ஆசிரியன் பேரூர்கிழான் செயிற்றியன் இளங் கண்ணன் சாத்தன் வந்தான் என வரும். ஆசிரியன் வந்தான், பேரூர்கிழான் வந்தான், செயிற்றியன், இளங்கண்ணன், சாத்தன் வந்தான் எனின் ஒரு பொருள் ஆதல் தோன்றாதாம். ‘ விழைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி, கடற்கடம் பெறிந்த காவலன் வாழி, விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி, பூந்தண் பொருநைப் பொறையன் வாழி, மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழி. ’ (சிலம்பு. 23) என்றவழி, ஒருபொருள்குறித்த பெயர்தோறும் வினை வந்ததால் எனின், இச் சூத்திரத்தில் தொழில் வேறுகிளப்பின் என்பதற்கு மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல்* என்பதனான் வேறுவேறு வினை கிளப்பின் ஒன்றிடன் இல வெனப் பொருளுரைக்கப் பெயர்தோறும் ஒரு வினைவரின் ஒன்றும் என்பது பெற்றாம். அதனானே இவ்வாறு வருவன அமைத்துக் கொள்க. ‘விழைந்து முதிர்கொற்றத்து விறலோன் வாழ்க. கடற்கடம் பெறிந்த காவலன் கெடுக’ எனின் வழுவாம் (40) * (பாடம்) ஒப்பக் கூறல் திணை வழுவமைதி 41. தன்மைச் சொல்லே அஃறிணைக் கிளவியென்று எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார். திணை வழு வமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) தன்மைப் பெயர்ச்சொல்லும் அஃறிணைப் பெயர்ச் சொல்லும் எண்ணுமிடத்தில் விரவுதல் நீக்கார், எ-று. (எ-டு.) ‘யானுமென் னெஃகமும் சாறும் அவனுடைய-யானைக்கும் சேனைக்கும் போர்’ என வரும். நீயும் நின்படைக் கலமுஞ் சாறீர். அவனும் அவன் படைக்கலமும் சாலும் என ஏனையிடத்தும் வருமால் எனின், முன்னிலைவினை இருதிணைக்கும் பொதுவாகலினானும், படர்க்கை வினைக்கட் `செய்யும்’ என்னும் முற்றுச்சொல் இருதிணைக்கும் பொதுவாய் வருதலானும் அவை ஆண்டு அடங்குமென்க. (41) ஒருவன் ஒருத்தி பற்றிய மரபு 42. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல் ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது. உயர்திணைப் பொருண்மேல் எண்ணுமுறை நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருமை யெண்ணின் பொதுமையாகிய ஒருவர் என்னும் சொல்லினின்றும் பிரிந்த ஒருவன், ஒருத்தியென்னுஞ் சொல் அவ் வொருமைக் கல்லது எண்ணு முறைக்கண் ணோடாது, எ-று. எனவே, எண்ணுமுறைக்கண் ஆண்பாலாயினும் பெண்பாலாயினும் ஒருவர், இருவர், மூவர் என எண்ணினல்லது பால்தோன்ற எண்ணப்படாது என்றவாறாம். (42) வியங்கோள் எண்ணுப்பெயர் 43. வியங்கோள் எண்ணுப்பெயர் திணைவிரவு வரையார். ஐயமறுத்தலை நுதலிற்று. என்னை? வினையியலுள் வியங்கோள் இருதிணைக்கும் பொது என்றா ராயினும், எண்ணுங்கால் தனித்தனி எண்ணல் வேண்டுமோ, விரவி எண்ணல் வேண்டுமோ என்ன நின்ற ஐயம் நீக்குதலின். இது திணைவழு வமைதியுமாம். (இ-ள்.) வியங்கொள்ளும் எண்ணுப் பெயர் திணை விரவுதல் நீக்கார், எ-று. (43) (எ-டு.) ஆவும் ஆயனுஞ் செல்க என வரும். வேறு வினைப்பொதுச்சொல் முடியுமாறு 44. வேறுவினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார். மரபு வழுக்காத்தலை நுதலிற்று. (இ-ள்.) பல வினையை யுடைய பொதுப் பெயரை ஒரு வினையாற் கூறார் அறிவோர், எ-று. எனவே, பொதுவினையாற் கிளத்தல் வேண்டும், எ-று. அது, இயம் என்பது கொட்டுவனவும் எறிவனவும் ஊதுவனவும் ஆம். அதனை இயம் கொட்டினார், ஊதினார், எறிந்தார் என்னற்க; பொதுவினையான் இயம்பினார் என்க. பிறவும் அன்ன. (44) பொதுவினை வருமாறு 45 *எண்ணுங் காலை யதுவதன் மரபே. மேலதற்கு எய்துவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேறு வேறு வினையையுடைய பொருளைப் பொதுப் பெயராற் கூறுதலன்றி எண்ணுமிடத்தும் அதன் மரபு பொது வினையாற் கிளத்தல், எ-று. (எ-டு.) அம்பும், வேலும், தண்டும், வாளும் வழங்கினார் என்க. எறிந்தார் எய்தார் என ஒரு வினையாற் கிளவற்க. ‘ஊன்றுவை - கறிசோ றுண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழி லறியா வாகலின்’ (புறம். 14) என்றவழி உண்டு என ஒரு வினையான் வந்ததால் எனின், அது பொது வினை என்று கொள்க. என்னை? ‘உண்ணுநீர் வேட்டேன் என வந்தாற்கு’ (கலி. குறி. 15) எனவும், ‘பாலுமுண்ணாள் பழங்கண் கொண்டு’ (அகம். 48) எனவும், ‘கலைப்புற வல்குல் கழுகுகுடைந்துண்டு’ (மணி. 6, சக். 112) எனவும், ‘கள்ளுண்ணாப் போழ்தில்’ (குறள். 930) எனவும், ‘உண்ணாமை வேண்டும் புலாஅல்’ (குறள். 257) எனவும் வருதலின். (45) * (பாடம்) எண்ணுங்காலும் அதுவதன் மரபே என்பது. இரட்டைக் கிளவி 46. இரட்டைக் கிளவி *இரட்டிற் பிரிந்திசையா. இது செப்பு வழுக்காத்தலை நுதலிற்று (இ-ள்.) இரட்டித்துச் சொல்லப்படும் சொற்கள் அவ்விரட்டித்தலிற் பிரிந்து ஒலியா, எ-று. (எ-டு.) ஒன்றொன்றாக வந்தன. இரண்டிரண்டாக நீக்குக என வரும். இவை ஒன்றாக வந்தன, இரண்டாக நீக்குக என்ற வழிப் பொருண்மைப் படாமையான் பிரிந்தொலியா வாயின. (46) * (பாடம்) இரட்டுப் பிரிந்திசையா என்பது. ஒரு பெயர்ப் பொதுச் சொல்லைச் சொல்லுதல் முறைமை 47 ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும். மரபு வழுவமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒரு பெயராகிப் பல பொருட்கும் உரித்தாகிய பொதுச் சொல்லை வகுத்துக் கூறுதல் தலைமையானும் பன்மையானும், எ-று. எனவே, தலைமையும் பன்மையும் இல்வழி, பொதுச்சொல்லாற் கிளக்க என்றவாறாம். (எ-டு.) பார்ப்பார் வேதம் என்பது அரசர்க்கும் வணிகர்க்கும் பொதுவாயினும், பார்ப்பார் வேதம் எனத் தலைமைபற்றி வந்தது. எயினர் நாடு என்பது பிறவுங் குடி உளவாயினும் பன்மை பற்றி வந்தது. மேய்ப்பான் என்பதும் அது. இளமரக்கா என்பது தலைமையும் பன்மையும் இல்வழிப் பொதுவாய் வந்தது. பிறவும் அன்ன. (47) எண்ணின்கண் கிடந்ததொரு மரபு 48. உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் பெயரினும் தொழிலினும் பிரிபவை யெல்லாம் மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன. எண்ணின்கட் கிடந்ததொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று; வழுக் காத்ததுமாம். (இ-ள்.) உயர்திணைக் கண்ணும் அஃறிணைக் கண்ணும் பெயரானும் தொழிலானும் பொதுமையிற் பிரியும் பொருளெல்லாம் எண்ணுங்கால், தம்முள் மயங்குதல் கூடாத வழக்கு வழிப்பட்டன, எ-று. மரபல என்றவாறு; எனவே, இனஞ்சேர எண்ணல் வேண்டும் என்ற வாறாயிற்று. எண்ணுங்கால் என்பது தந்துகொணர்ந் துரைத்தல் என்னும் தந்திர உத்தியான், வருகின்ற சூத்திரத்தினின்றுங் கொணர்ந் துரைக்கப் பட்டது. (எ-டு.) முனிவரும் அந்தணரும் சான்றோரும் எனவும், பாணருங் கூத்தரும் விறலியரும் எனவும், முத்தும் மணியும் பவளமும் பொன்னும் எனவும், மாவும் மருதும் புன்னையும் ஞாழலும் எனவும் எண்ணுக. இவை பெயர். எறிவாரும் எய்வாரும் வெட்டுவாரும் குத்துவாரும் எனவும், ஆடுவாரும் பாடுவாரும் நகுவாரும் எனவும், உண்பனவும் தின்பனவும் பருகுவனவும் நக்குவனவும் எனவும் எண்ணுக. இவை வினை. அஃதேல், ‘ ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்’ (புறம். 9) எனக் காட்டின் இதனுள் அடங்காதால் எனின், அவையும் உய்யத்தகுவார் இவரென்னும் இனங்குறித்து நின்றனவென்று கொள்க. பிறவும் அன்ன. (48) திணைவிரவிய பெயர்கள் முடியுமாறு 49. பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர் அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே. திணை வழுவமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) எண்ணின்கண், திணை விரவிவரும் பெயர், பெரும்பான்மை யும் அஃறிணை முடிபின செய்யுளுள், எ-று. எனவே, சிறுபான்மை உயர்திணையான் முடியவும் பெறுமென்று கொள்க. (எ-டு.) ‘ கோலஞ்சி வாழுங் குடியுங் குடிதழீஇ ஆலம்வீழ் போலும் அமைச்சனும் - வேலின் கடைமணிபோற் றிண்ணியான் காப்புமிம் மூன்றும் படைவேந்தன் பற்று விடல்.’ (திரி. 33) இது விரவி எண்ணி அஃறிணையான் முடிந்தது. ‘ அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந் திங்களுஞ் சான்றோரும் ஒப்பர் ’ (நாலடி. 151) எனவும், ‘ பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தார் இளையார் பசுப்பெண்டிர் என்றிவர்கட்கு ஆற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைக்கட் போற்றி எனப்படு வார்.’ (ஆசாரக். 64) எனவும், இவை உயர்திணையான் முடிந்தன. யானையுங் குதிரையும் வீரரும் போர்க்களத்துப்பட்டன; அரசனும் படையும் பட்டன எனவும் வழக்கின்கண்ணும் வருமால் எனின், மொழிந்த பொருளோ டொன்றவைத்தல் என்னும் தந்திர உத்தியான்* இச் சூத்திரத் திற்குப் பலவயினானும் அஃறிணை முடிபின செய்யுளுள் என்றமையான், சிலவயினான வழக்கினுள்ளும் விரவி வந்து தலைமையும் பன்மையும் பற்றி வந்த அஃறிணையான் முடியவும் பெறுமென்று கொள்க. (49) * (பாடம்) ஒப்பக்கூறல் என்னும் தந்திர உத்தியால் என்பது. பல பொருள் ஒரு சொல் இருவகைப்படும் எனல் 50. வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல் வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொலென்று ஆயிரு வகைய பலபொருள் ஒருசொல். பல பொரு ளொருசொற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பலபொளுணரவருஞ் சொல்லாவன பலபொருட்கும் தனித்தனிப் பெயராகி வருவதூஉம் பலபொருளொருசொல்லாம். பல பொருட்கும் பொதுப் பெயராகி வருவதூஉம் பலபொருளொரு சொல்லாம். அவற்றுள் வினைவேறுபடூஉம் பலபொருளொரு சொல் லாவன; மா, வேங்கை எனவும், மக்கள், பெற்றம் எனவும் வருவன. வினை வேறுபடாஅப் பலபொருளொரு சொல்லாவன: சேவல், பெடை யென்பன. அவற்றுக்கு உதாரணம் வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும். (50) வினை வேறு படூஉம் பலபொருள் ஒரு சொல் 51. அவற்றுள், வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல் வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினும் தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே. வினைவேறுபடும் பலபொருளொரு சொல் பொருளுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்கூறப்பட்டவற்றுள் வினைவேறுபடும் பல பொரு ளொரு சொல் பொருள் தெரியுங்காலத்து வேறுபட்ட வினையினானும், இனத்தி னானும், சார்பினானும் தெளியத் தோன்றும், எ-று. (எ-டு.) மா காய்த்தது; வேங்கை பூத்தது என்றவழி மரம் என்பது அறியப்பட்டது. மா ஓடிற்று; வேங்கை பாய்ந்தது என்றவழி விலங்கு என்பது அறியப்பட்டது. இவை தனித்தனிப் பொருள் உணர்த்தின. இவ்வூர் மக்களெல்லாம் போர்க்குப் போயினார் என்றவழி ஆண்பால் உணரப்பட்டது. இவ்வூர் மக்களெல்லாம் தைந்நீராடினார் என்றவழிப் பெண்பால் உணரப்பட்டது. இவ்வூர்ப் பெற்றமெல்லாம் அறம் கறக்கும் என்றவழிப் பெண்பால் உணரப்பட்டது. இவ்வூர்ப் பெற்ற மெல்லாம் உழவு ஒழிந்தன என்றவழி ஆண்பால் உணரப்பட்டது. இவை பொதுப் பொருள் உணர்த்தின. இவை வினையினாற் பொருள் விளக்கின. மாவும் மருதும் அவை என்றவழி மாமரமென்பது அறியப்பட்டது. மாவும் புள்ளும் என்றவழி விலங்கென்பது அறியப்பட்டது. இவை இனம். இப்பொழிலகத்து நூறு மாவுள என்றவழி மரம் என்பது அறியப் பட்டது. இப்போர்க்களத்து நூறு மாவுள என்றவழி விலங் கென்பது அறியப்பட்டது. இவை சார்பு. பொதுமை யுணர்த்தும் பலபொரு ளொருசொல் இனமும் சார்பும் பற்றி வருவன வந்தவழிக் கண்டு கொள்க. (51) மேலதற்கோர் புற நடை 52. ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும். மேலதற்கொரு புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினைவேறுபடும் பல பொருள் ஒரு சொல், வேற்று வினை கொண்டு முடிதலேயன்றி இருபொருட்கும் பொருந்தின ஒருவினை கொண்டு முடியின், பிறிதொரு சொல்லோடு ஒன்றிப் பொருள் தோன்றும், எ-று. பிறிதொரு சொல்லென்பது எஞ்சி நின்றது. (எ-டு.) மாவீழ்ந்தது என்றவழி இன்ன மாவென்பது அறியாலாகாமை யின், யானை முறித்தலான் வீழ்ந்தது என்றவழி மரம் என்பதூஉம், அம்பு படுதலான் வீழ்ந்தது என்றவழி விலங்கு என்பதூஉம் உணர்த்தியவாறு கண்டுகொள்க. (52) வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல் 53. வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். இது வினைவேறுபடாப் பலபொருள் ஒருசொல் பொருள் உணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினை வேறுபடாத பல பொருள் ஒரு சொல் பொருள் உணருங்கால் எடுத்துக் கூறல் வேண்டும், எ-று. (எ-டு.) சேவல், பெடை என்பன வினையான் வேறுபடாமையான் அன்னச் சேவல், குயிற் சேவல், அன்னப் பெடை, குயிற் பெடை என எடுத்துக் கூறப் பொருள் விளங்கினவாறு கண்டு கொள்க. (53) மேலதற்கொரு புறநடை 54. குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி. மேலதற்கொரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்.) தெரிந்து வேறுபடுக்கவருஞ் சொல் கிளந்துரைத்தலே யன்றி, குறித்தோன் கூற்றமும் ஆம், எ-று. உம்மும் ஆமும் எஞ்சி நின்றன. (எ-டு.) ‘நிவந்தோங் குயர்கொடிச் சேவலோய்’ (பரி. 3:18) என்றவழிச் சொல்லுவான் குறிப்பு மாயவனை நோக்கலிற் கருடனாயிற்று. ‘சேவலங் கொடியோன் காப்ப’ (குறுந். 1) என்றவழிச் சொல்லுவான் குறிப்பு முருக வேளை நோக்குதலிற் கோழியாயிற்று. பிறவும் அன்ன. (54) சில உயர்திணைப் பெயர் அஃறிணை முடிபு கோடல் 55. குடிமை யாண்மை இளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை யரசே மகவே குழவி தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற்றொடு சிவணி முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கின் நிலையின வாயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும். திணை வழுவமைதி யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குடிமை முதலாக எண்ணப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் அவற்றொடு பொருந்திக் குறிப்பினான் உணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கின் நின்றன வாயினும் அஃறிணையிடத்துச் சொல்லான் வழங்கப்படும், எ-று. ‘ உயர்திணை மருங்கின் நிலையினவாயினும்’ என்ற உம்மையான் இவையெல்லாம் பண்பு குறித்தவழி அஃறிணையாம் என்பதூஉம், பொருள் குறித்தவழி உயர்திணையாம் என்பதூஉம் கூறியவாறாயிற்று. குடிமையாவது குடியாகிய தன்மை. அது அக்குடியிற் பிறந்தாரைக் குறித்து நின்றது. இக்குடி வாழ்ந்தது, இக்குடி கெட்டது என்ப. குடிமை என்பது குடி என வருமோ எனின் “மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க்(கு)-அடிமை புகுத்தி விடும்” (குறள். 608) என்றவழிக் குடி எனப் பொருளாகியவாறு கண்டுகொள்க. ஆண்மை யென்பது ஆணாகிய தன்மை : அத்தன்மையைக் குறித்து ஓர் ஆண் வந்தது என்ப. இளமை யென்பது இளையாரைக் குறித்து நிற்கும். இவ்வவை இளமையின்று என இளையாரை இலது என்னும் பொருள்பட வந்தது. மூப்பு என்பது முதியாரைக் குறித்து நிற்கும். இவ்வவை மூப்பு இன்று என முதியாரை இலது என்னும் பொருள்பட வந்தது. அடிமை என்பது அடிமைத் தொழில் செய்வார் மேற்று. அவனதடிமை வந்தது என அப்பொருள் குறித்து நின்றது. வன்மை யென்பது வலியாகிய தன்மை. அவனது வலி போயிற்றென அவற்குத் துணையாயினாரைக் குறித்து நின்றது. விருந்து என்பது புதுமை. விருந்து வந்ததென, புதியார் வந்தார் என்பது குறித்து நின்றது. குழூஉ என்பது திரள். குழூஉப் பிரிந்தது, அவை எழுந்தது, படை திரண்டது என்ப குழுவிய மாந்தரைக் குறித்து. பெண்மை என்பது பெண்ணாகிய தன்மை. ஒரு பெண் வந்தது என்ப. அரசு என்பது அரசத் தன்மை. அரசிருந்தது என்ப அரசன் என்பதைக் குறித்து. மக என்பது மகன், மகள் என்னும் முறைப்பெயர் இரண்டற்கும் பொதுவாக நிற்பது. மகக் கிடந்தது என்ப. குழவி என்பது அப்பொருளின் இளமை குறித்து நிற்கும். குழவி அழுதது என்ப. தன்மை திரிபெயர் என்பது தன் இயல்பிற் றிரிந்த பொருட்பெயர்; அது மருள் என்பது. அதனை மருள் வந்தது என்ப. உறுப்பின் கிளவி என்பது உறுப்பினாற் கூறப்படும் சொல். அஃதாவது குருடு முடம் என்பன. குருடு வந்தது, முடம் வந்தது என்ப. காதல் என்பது காதல்பற்றி நிகழுஞ் சொல். காதற்சொல் சிறப்புச் சொல் என ஒரு சொல் வருவிக்க. என் பாவை வந்தது, என் யானை வந்தது என்ப. தன் மகளை ‘ஈங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வமகள்’ (கலி.56) என்றவழி இது என்பது காதல்பற்றி வந்தது. சிறப்பு என்பது சிறப்பைப்பற்றி வருஞ்சொல். கண்போலச் சிறந்தனை என்கண் வந்தது என்ப. செறற் சொல் என்பது செறலினாற் கூறுஞ் சொல். என்பகை வந்தது, திருவிலி வந்தது என்ப. ‘ஏஎ இஃதொத்தன்’ (கலி.62) என்றவழி இஃதென்ப தும் அது. விறற் சொல் என்பது வீரியத்தாற் கூறுஞ்சொல். விறல் வந்தது, சிங்கம் வந்தது, புலி வந்தது என்ப, அவ்வீரியங் குறித்து. அன்ன பிறவும் என்றதனான், குடும்பம் வாழ்ந்தது, வேந்து சென்றது, ஆள் வந்தது, அமைச்சு வந்தது, தூது வந்தது, ஒற்று வந்தது, நட்பு நன்று என்பன கொள்க. அவற்றொடு சிவணி முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம் என்றதனான், உலகு வாழ்ந்தது, நாடு வந்தது, ஊர் வந்தது என்பது அவ் விடத்திலுள்ள மாந்தரைக் குறித்தது. பிறவும் அந்நிகரனவெல்லாம் கொள்க. இவை யெல்லாம் ஆகுபெயர் அன்றோ எனின் ஆகுபெயராயின் தன் பொருட்கு உரிய பாலான் முடியும், இவை அன்னவன்றி வேறுபட்டு முடிதலிற் குறிப்புமொழியாயின. (55) காலம் முதலிய சொற்கள் பால் பிரிந்திசையா எனல் 56. காலம் உலகம் உயிரே யுடம்பே பால்வரை தெய்வம் வினையே பூதம் ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம் ஆயீ ரைந்தொடு பிறவு மன்ன ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம் பால்பிரிந் திசையா உயர்திணை மேன. உயர்திணைப் பொருட்கண் எஞ்சியது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காலம் முதலாகச் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவுமாகிய பொருட்கண் வரும் சொல்லெல்லாம் உயர்திணை யிடத்தன. ஆண்டுப் பால் பிரிந்திசையா, எ-று. காலம் என்பது முன்னும் பின்னும் நடுவும் ஆகி என்றும் உள்ள தொரு பொருள். உலகம் என்பது மேலும் கீழும் நடுவும் ஆகி எல்லாவுயிரும் தோற்றுதற்கு இடமாகிய பொருள். உயிர் என்பது சீவன். உடம்பு என்பது மனம் புத்தி ஆங்காரமும் பூத தன்மாத்திரையுமாகி வினையினாற் கட்டுப்பட்டு எல்லாப் பிறப்பிற்கும் உள்ளாகி நிற்பதொரு நுண்ணிய உடம்பு. இதனை மூலப்பகுதி எனினும் ஆம். பால்வரை தெய்வம் என்பது ஆணும் பெண்ணும் அலியும் ஆகிய நிலைமையை வரைந்து நிற்கும் பரம்பொருள். வினை என்பது ஊழ். பூதம் என்பது நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். ஞாயிறு என்பது தீத்திரளாய் உலகு விளக்குவது. திங்களென்பது நீர்த்திரளாய் உலகிற்கு அருள் செய்வது. சொல் என்பது எழுத்தினான் இயன்று பொருள் உணர்வது. அச் சொல்லினான் இயன்ற மந்திரம், விடம் முதலாயின தீர்த்தலின் தெய்வம் ஆயிற்று. இந்நூல் செய்தான் வைதிக முனிவன் ஆதலின் சொல்லென்பது வேதம் என்று கொள்ளப்படும். பிறவும் என்றதனான், வியாழம், வெள்ளி முதலாயின கோண்மீனும், பரணி, கார்த்திகை முதலாயின நாண்மீனும், தாரகையும், பூதம், பேய் எனப் பாலுணர நில்லாத தெய்வப் பொருண்மையும் கொள்ளப்படும். உதாரணம் முன்னர்க் காட்டுதும். (56) மேலதற்கொரு புறநடை 57. நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே. மேலதற்கொரு புறநடையுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் உயர்திணைக்கட் பால் பிரிந்திசையா என்று ஓதப் பட்டன வெல்லாம் அத்திணை யுணர நின்றனவேனும், அவ்வாறு உயர் திணை யுணர நின்று ஒலித்தல் இவ்விடத்து வழக்கின்று, எ-று. இவ்விடம் என்றது உயர் திணையை. (57) இதுவுமது 58. இசைத்தலும் உரிய வேறிடத் தான. மேற்கூறப்பட்ட சொற்கள் பாலுணர வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழுவமைதியும் ஆம். வேறிடம் என்பது அஃறிணையை. (இ-ள்.) மேல் பால் பிரிந்திசையா என ஓதப்பட்ட சொற்கள் அஃறிணையாய் இசைத்தலும் உரிய, எ-று. உம்மை எச்சவும்மை ஆகலான் அஃறிணைக்குரிய சொல்லான் அன்றி இருதிணைக்கும் பொதுவாகிய சொல்லானும் இசைத்தலும் உரிய, எ-று. (எ-டு.) காலம் வந்தது, வரும். உலகு கிடந்தது. உயிர் போயிற்று. உடம்பு விட்டது. தெய்வம் தந்தது. வினை விளைந்தது. பூதம் செறிந்தது. ஞாயிறு எழுந்தது. திங்கள் எழுந்தது. சொல் பயன் தந்தது. வியாழம் எழுந்தது. வெள்ளி பட்டது. பரணி தோன்றிற்று. பூதம் புடைத்தது. பேய் பிடித்தது. பிறவும் அன்ன. (58) அடைமொழி இனம்செப்பல் 59. எடுத்த மொழிஇனஞ் செப்பலும் உரித்தே. இது செப்பின்கட் கிடந்ததொரு குறிப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எடுத்துச் சொல்லப்பட்ட சொல் தனக்கு இனமாகிய பொருளைச் சொல்லுதலும் உரித்து, எ-று. உம்மையாற் சொல்லாமையும் உரித்து, எ-று. தென்சேரிக் கோழி வென்றது என்றவழி, வடசேரிக் கோழி தோற்றது என்னும் பொருளும் காட்டி நின்றது. இஃது இனம் செப்பியது. அந்தணர் வாழ்க என்றவழி, அரசரும் வணிகரும் கெடுக என்றவா றின்றி, அந்தணரையே குறித்து நின்றது. இஃது இனம் செப்பாது வந்தது. இன்னும் இச்சூத்திரத்தின்கண் இனம் செப்பலும் உரித்து என்றத னானே இனமல்லாதன செப்பலும் உரித்து என்று கொள்ளப்படும், அவ்வாறு வருவன ஏற்புழிக் கொள்க. சுமந்தான் வீழ்ந்தான் என்றவழி, சுமவாதவன் வீழ்ந்திலன் என்னும் பொருள்படுதலே யன்றிச் சுமக்கப்பட்ட தும் வீழ்ந்ததெனச் செப்பியவாறுங் கண்டு கொள்க. பிறவும் அன்ன. (59) பன்மைச் சொற்கள் ஒருமையொடு முடிதல் 60. கண்ணுந் தோளும் முலையும் பிறவும் பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி பன்மை கூறுங் கடப்பா டிலவே தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே. ஒருசார் பாலறிசொற்கட் கிடந்ததொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கண்ணும், தோளும், முலையும், அத்தன்மைய பிறவும் ஆகிய பன்மை சுட்டிய சினை உணர வருஞ்சொல், தம் வினைக்கேற்ற எழுத்தான் முற்றுப் பெறாதவழிப் பன்மை யுணர்த்தும் மரபில, எ-று. எனவே, பன்மை ஈற்றான் வாராக்கால் ஒருமை ஈற்றான் வரப்பெறும் என்பதூஉம், அவ்வழி அவ்விரு பொருட்கண்ணும் கிடப்பதொரு பொதுமையைக் குறிக்கும் என்பதூஉங் கொள்ளப்படும். கண் நொந்தது, முலை எழுந்தது, தோள் தசைத்தது என்றவழி, பன்மை யுணர்த்திற்றில வாயினும் அச்சாதியொருமையை உணர்த்தியவாறு கண்டு கொள்க. பிற வும் என்றதனான், கை, கால் என்பனவுங் கொள்க. ‘இருநோக் கிவளுண்கண் உள்ளது’ (குறள். 1091) என்றவழி நோக்காகிய ஒருமை குறித்து வந்தது. ஒப்பக்கூறல் என்னும் தந்திர உத்தியான், சினைப் பொருளேயன்றி முதற் பொருளும் சாதியொருமை பற்றி வருவனவும் அமைத்துக் கொள்க. ‘உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தான் உள்ளான் வெகுளி யெனின்’ (குறள்.309) இதனுள் உள்ளியவெல்லாம் எனற்பாலது நினைக்கப்படுதல் ஆகிய ஒருமை குறித்து வந்தது. அஃதேல் கண்ணல்லன் என்பது எவ்வாறு வந்ததெனின், கண்ணது நன்மையுடையன் என்னும் பொருள்பட வந்தது. கண் நொந்தான் என்பது எவ்வாறு வந்ததெனின், கண் நோவப்பட்டா னெனச் செயப்படுபொருள் குறித்து நின்றது. இவை வினையியலுட் காணப்படும். (60) முதலாவது கிளவியாக்கம் முற்றிற்று இவ்வியல் சூத்திரமும் உரையும் கிரந்த (எண்) வகையான் 540 2 வேற்றுமையியல் வேற்றுமையின் தொகை 61. வேற்றுமை தாமே ஏழென மொழிப விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. இஃது என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமை யியல் என்னும் பெயர்த்து: பொருள்களை வேறுபடுத்தினமையாற் பெற்ற பெயர். என்னை வேறுபடுத்தியவாறு எனின், ஒரு பொருளை யொருகால் வினைமுதலாக்கி யும், ஒருகாற் செயப்படு பொருளாக்கியும், ஒருகாற் கருவியாக்கியும், ஒருகால் ஏற்பது ஆக்கியும், ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும், ஒருகால் உடையது ஆக்கியும், ஒருகால் இடம் ஆக்கியும் இவ்வாறு வேறு படுத்தது என்க. மேல் அல்வழித் தொடர் கூறி இனி வேற்றுமைத் தொடர் கூறுகின் றார் ஆதலின் அதன்பின் கூறப்பட்டது. இவ்வோத்தினுள், தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், வேற்றுமை இனைத்தென வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை என்பனதாம் ஏழென்று சொல்லுப ஒரு சாரார்; விளி கொள்வதன்கண் நிகழும் விளியோடு எட்டாம், எ-று. ஏகாரம் தேற்றம். விளி கொள்வது என்றது பெயரை. ஏழென்று சொல்லுவார் விளி வேற்றுமையை எழுவாயுள் அடக்குவார். (1) வேற்றுமைகளின் பெயரும் முறையும் 62. அவைதாம், பெயர்ஐ ஒடுகு இன்அது கண்விளி யென்னும் ஈற்ற. வேற்றுமைச் சொற்கு ஈற்றெழுத்து வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட வேற்றுமைகள் தாம் பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி யென்று சொல்லப்பட்ட ஈறுகளையுடைய, எ-று. விளி யீறாவது விளிக்கண் வரும் எழுத்துக்கள். பிறவும் வேற்றுமை ஈறு உளவாயினும் சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனான் இவை எடுத்து ஓதப்பட்டன. எடுத்தோதாதன, மூன்றா வதன்கண் ஆன் ஆல் ஓடு; ஆறாவதன்கண் அ; ஏழாவதன்கண் இடப் பொருண்மை உணர்த்துஞ் சொற்கள். (எ-டு.) சாத்தன், சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண், சாத்தா என வரும். ஐ முதலாயின மற்றொரு பெயர்க்கு ஈறாகி வருதலின், பெயரீறு என்பது விளங்கும். அங்ஙனமே பெயரும் மற்றொரு பெயர்க்கு ஈறாகி வரல் வேண்டும் எனின் அஃதன்று கருத்து. பெயர் தானே ஈறாகியும், பிற எழுத் தொடு கூடி ஈறாகியும் வருமென்று கொள்ளப்படும். இவ் வேற்றுமைகளை இவ் வீற்று வேறுபாட்டானே, பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ் வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை, கண் வேற்றுமை, விளி வேற்றுமை எனவும் குறியிட்டு வழங்குப. அஃது யாண்டுப் பெறுதும் எனின், ஐ யெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (சொல். 69) ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (சொல். 71) என்புழியும் பிறாண்டும் பெறுதும். (2) எழுவாய் வேற்றுமை 63. அவற்றுள், எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. மேல், வேற்றுமை எட்டு என்பதும், அவற்றுக்கண் வரும் ஈறும் கூறினார் அல்லது, அவற்றிற்குப் பெயரும் முறையும் கூறிற்றிலர் அன்றே; அவை கூறுவார், முற்பட, முதல் வேற்றுமையாவது இஃது என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் முதல் வேற்றுமையாவது பெயர் தோன்றும் நிலை, எ-று. அஃதேல், பெயர் என அமையும்; தோன்றும் நிலை என்றதனாற் பயன் என்னை யெனின், பெயர் கண்டுழியெல்லாம் வேற்றுமை யென்று கொள்ளற்க என்பது அறிவித்தற்கெனக் கொள்க. அஃது யாதோ எனின், ஆயன் சாத்தன் வந்தான் என்றவழி ஆயன் என்பது சாத்தற்கு அடையாகி நிற்றலானும், வருதற்றொழில் சாத்தனொடு முடிதலானும், இருபெயரும் ஒரு பொருட்கண் வருதலின் இரண்டனையும் வேற்றுமை எனப்படாது ஆகலானும் இறுதி நின்றதே வேற்றுமை எனப்படுவது என்று கொள்க. இதனை எழுவாய் வேற்றுமை யடுக்கென்றார் உளரால் எனின், ஆயன் சாத்தனை வெட்டினான் என்ற வழி, இறுதி நின்ற பெயர் உருபேற்று இரண்டாம் வேற்றுமையாயிற்று. ஆண்டு உருபு ஏலாத ஆயன் முதல் வேற்றுமை யாதல் வேண்டும். அவ்வாறாக, வெட்டினான் என்பது ஒற்றுமைப்பட்டு முடியாதாகலான் அது பொருளன்று என்க. அஃதற்றாக, பெயரை முதல் வேற்றுமை என்னாது, எட்டு வேற்றுமையுள்ளும் யாதானும் ஒன்றை முதல் வேற்றுமை எனினும் அமையும் எனின், ஒருவன் ஒன்றை ஒன்றானே யியற்றி ஒருவற்குக் கொடுப்ப, அவன் அதனை அவனினின்றும் தனது ஆக்கி ஓரிடத்து வைத்தான் கொற்றா என்ற வழி, செய்கின்றான் முதல் வேற்றுமையாகி இம்முறையே கிடத்தலின் அமையாது என்க. அஃதேல், யாற்றினது கரைக்கண் நின்ற மரத்தை அறச்சாலை யியற்றுதற்கு ஊரினின்றும் வந்து மழுவினானே வெட்டினான் சாத்தன் என்றவழி, எழுவாயாகிய பெயர் ஏழாவதுமாய் நின்றதால் எனின், சொல்லுவான் குறிப்பினான் முதல் வேற்றுமையாயிற்று என்பது கருத்து. யாதானும் ஒரு தொழிலும் செய்வான் உள்வழி அல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத்தகுவது இஃது எனக் குறிக்க வேண்டுதலின் செயப்படுபொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்காங் கருவி தேடுமாதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு, செய்து முடித்த பொருளைத் தான் பயன்கோடலேயன்றிப் பிறர்க்குங் கொடுக்கும் ஆதலின் அதனை ஏற்று நிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவது ஆயிற்று, அவ்வாறு நீங்கின பொருளைத் தனதென்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின், அவை ஏழாவது ஆயின. இவையிற்றோடு ஒத்த இயல்பிற்று அன்றி எதிர்முகம் ஆக்குதற்பொருட்டு ஆகலின், விளி என்பது எல்லாவற்றினும் பிற் கூறப்பட்டது. அஃதேல் ஆறாவதாகிய கிழமை, கொண்டான் கண்ணாதலே யன்றிச் செய்தான்கண் இயையாதோவெனின் தோற்றுவித்தாற்குக் கிழமை சொல்லாமலும் பெறும், அதனைக் கொண்டாற்கே கிழமை கூறல் வேண்டுவது என்க. (3) எழுவாய் பயனிலை ஏற்குமாறு 64. பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே. எழுவாய் வேற்றுமைக்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘பொருண்மை சுட்டல்’ என்பது, முடிக்குஞ்சொல் எழுவாயாகி நின்ற பொருடன்னையே சுட்டி, அதன் தொழில் முதலாயின சுட்டாது நிற்கும் நிலைமை, எ-று. (எ-டு.) சாத்தன் உளன் என வரும். ‘வியங்கொள வருதலாவது’ , தொழிலைப் பெயர்ப்பொருண்மை கொள்ளுமாறு வரும் ஏவற் சொல். (எ-டு.) சாத்தன் செல்க. ‘வினைநிலை யுரைத்தலாவது’ , அப் பொருளின் தொழிலின் நிலைமையை உணர்த்த வருஞ் சொல். (எ-டு.) சாத்தன் சென்றான். ‘வினாவிற் கேற்றலாவது’ , அப்பெயர்ப் பொருண்மையை வினாவு தற்கு ஏற்புடைய சொல். (எ-டு.) சாத்தன் யாவன்? சாத்தன் யாண்டையன்? சாத்தன் எத் தன்மையன்? என்பன. ‘பண்புகொள வருதலாவது’ , அப்பெயர்ப் பொருண்மை பண்பு கொள்ளுமாறு வருஞ் சொல். (எ-டு.) சாத்தன் கரியன், நெடியன் என்பன. ‘பெயர்கொள வருதலாவது’ , அப்பெயர்ப் பொருண்மை யுணரப் பிறிதொரு காரணத்தான் வந்து முற்பெயரோடு ஒட்டுப்படாது நிற்பது. (எ-டு.) சாத்தன் வணிகன், முடவன் என்பன. ‘ என்று அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே’ என்பது, என்று சொல்லப்பட்ட அவ்வனைத்தும் பெயர்க்குப் பயனிலையாம், எ-று. பயனிலை என்பது :- பெயர் வாளாது நிற்குமாயின், செப்பின்கட் பயனின்றாம் ஆதலான், அதனை முடிக்கும் சொல் பயனிலை என்றாயிற்று. அஃதேல், இவை யெல்லாம் பெயர்ப் பொருண்மையைச் சுட்டி நிற்றலின், பொருண்மை சுட்டல் என அடங்கும் எனின், அடங்குமாயினும் பொருண்மை சுட்டல் பொருண்மை மாத்திரத்தைக் குறித்தலானும், வியங்கொள வருதல் அப்பொருண்மை புடைபெயர்தற்கு நிமித்தம் ஆகி வருதலானும், வினைநிலையுரைத்தல் அப்பொருளின் புடைபெயர்ச்சி யாகலானும், வினாவிற்கேற்றல் அவ்வாறன்றி வினாவப்படும் நிலைமைய தாகி நிற்றலானும், பண்புகொள வருதல் அப்பொருட்கண் உள்ளதொரு குணத்தைக் குறித்து நிற்றலானும், பெயர்கொள வருதல் அப்பொருண்மை முழுதும் உணரப் பிறிதொரு வாய்பாடாக வருதலானும், வகுத்துக் கூறினார் என்க. சாத்தன் தலைவன் ஆயினான், இரும்பு பொன் ஆயிற்று என்பன எவ்வாறு வந்தன எனின், அவையும் பொருளின் புடைபெயர்ச்சி யாகலானும், ஒன்று ஒன்றாகித் திரிதலாகிய வினையான் வருதலானும், வினைநிலையுரைத்தலுள் அடங்கும். அஃதேல்; தலைவன் பொன் என்னும் பெயரை எழுவாய் என்றுமோ பயனிலை என்றுமோ எனின் இரண்டும் அல்ல : தலைவன் ஆதல், பொன் ஆதல் எனத் திரிபு குறித்து நின்றன, பெயர் குறித்து நின்றன எனப்படா வென்க. அன்றி யனைத்தும் பெயர் முடிபு என்னாது பயனிலை என்றதனான் பயனிலை பெயர்க்கு முன்னிற்றலே யன்றிப் பின்னிற்றலும் ஆம் என்று கொள்க, (எ-டு.) உளன் சாத்தன்; செல்க சாத்தன்; வந்தான் சாத்தன்; யாண்டையான் சாத்தன்; கரியன் சாத்தன்; வணிகன் சாத்தன் என வரும். ஈண்டுக் காட்டப்பட்ட உதாரணத்துள் வினைபற்றி வருவன வெல்லாம் முற்றுச்சொல் பெயர் கொண்டு முடிந்தவாம், பயனிலை மாறி நின்றன ஆகா வெனின்; முற்றுச்சொல் எனவே முடிந்த சொல் என்பது பெறுதும்; அது பின்னும் மற்றொரு சொல்லை அவாவி நிற்கும் என்றல் பொருந்தாமையானும், ‘ மற்றுச்சொ னோக்கா மரபின அனைத்தும் முற்றி நிற்பது முற்றியன் மொழியே ’ என அகத்தியனார் ஓதுதலானும், மொழிமாறுதல் இலக்கணமாக எச்சவியலுள் ஓதுகின்றமையானும் அது சொல்லறியாதார் உரையென்க. (4) தொகைப் பெயரும் பயனிலை கொள்ளல் 65. பெயரி னாகிய தொகையுமா ருளவே அவ்வு முரிய அப்பா லான. எய்தியதன் மேற் சிறப்புவிதி வகுத்தலை நுதலிற்று. (இ-ள்.) பெயரான் ஆகிய தொகைச் சொல்லும் உள; அவையும் எழுவாயாகிப் பயனிலை கோடற்கு உரிய, எ-று. பல் பொருட் கேற்பின் நல்லது கோடல் என்பதனான் பல பொருள் குறித்த பெயரே கொள்ளப்படும். உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. (எ-டு.) யானை குதிரை உள; செல்க; வந்தன; கரிய; யாண்டைய; பல-என வரும். அஃதேல், பலபொருள் குறித்து வருதல் வேண்டுமென்ற தென்னை? ஒரு பொருட்கண் வரும் பெயரும் தொகையாகாதோ எனின், தொகையாம் ஆயினும், இறுதிக்கண் நின்ற பெயர் பயனிலைகொண்டும் ஏனைய பெயர் பயனிலை ஏலாதும் நிற்கும். இவை இரண்டு பெயர் மேலும் பயனிலை ஒத்து வருதலின் வேறோதப்பட்டன. (5) எழுவாய் புலப்பட்டும் புலப்படாதும் நிற்றல் 66. எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்விய னிலையல் செவ்வி தென்ப. இது எழுவாய் வேற்றுமைக்கு உரியதொரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றிடத்துப் பெயரும் வெளிப்படத் தோன்றி, பயனிலை யொடு நிற்றல் செவ்விது, எ-று. எனவே, வெளிப்படத் தோன்றாது பயனிலை கோடல் செவ்விது அன்று என்றவாறாம். அவையாவன:- (1) ‘சோறு உண்ணாயோ சாத்தா’ என்ற வழி ‘உண்பல்’ என்பது. இச் செப்பின்கண் ‘யான் உண்பல்’ என எழுவாயும் பயனிலையுமாக நிற்கற்பாலது ‘உண்பல்’ என்னும் பயனிலை வெளிப்பட்டு ‘யான்’ என்னும் பெயர் தோன்றாது நிற்பினும், அப்பொருள்பட நிற்றலின் அத்தொடர் வழு எனப் படாமையான் செவ்விதன்று ஆயிற்று. இஃது இத் தொடர்ச்சிக்கண் வழுவமைத்தவாறு. இது தன்மை. (2) ‘யான் யாது செய்வல்’ என்றானை ‘இது செய்’ என்பது. இதன் கண் ‘நீ’ என்னும் பெயர் வெளிப்படாது நின்றது. இது முன்னிலை. (3) ‘அவன் யார்’ என்றார்க்குப் ‘படைக்கை மறவன்’1 என்றவழி ‘அவன்’ என்னும் பெயர் தோன்றாது நின்றது. இது படர்க்கை. அஃதேல், இவை, பெயரெச்சம் என்று எச்சவியலுள் (34) கூறுகின்ற தனுள் அடங்காவோ வெனின், அடங்குமாயினும், எழுவாயும் பயனிலை யும் ஆகி நிற்குங்கால், பெயர் தோன்றாது நிற்பின் வழுவாம் என்பதனான் ஈண்டுக் கூறல் வேண்டும் என்க. இன்னும் இச் சூத்திரத்திற்குப் பொருள் வெளிப்படத் தோன்றிப் பயனிலை கோடல் செவ்விது எனவே, வெளிப்படத் தோன்றாத பெயர் திரிபு உடைய என்றவாறாம். அவையாவன:- இரும்பு பொன் ஆயிற்று : குயவன் குடத்தை வனைந்தான் என்றவழி, எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடைக்கிடந்த பொன், குடம் என்பன ஆயிற்று என்பதனோடும் வேற்றுமை யுருபி னோடும் திரிந்தவாறு கண்டுகொள்க. அஃதற்றாக, வனைந்தான்2 என்பது குயவனொடு முடிய இடைக் கிடந்த குடத்தை யென்பதற்கு முடிபு யாதோ எனின், அது ‘குடத்தை வனைந் தான்’ என ஒரு சொல் நீர்மைப் பட்டுக் ‘குயவன்’ என்பதற்குப் பயனிலையாகி நிற்பின் அல்லது வேறு முடிபு உரைக்கப்படா தென்க. ஆயின், எழுவாயும் பயனிலையும் என எல்லாச் சொல்லும் அடங்கும், வேற்றுமை எட்டு எனல் வேண்டா எனின், குயவன் வனைந்தான் என்ற வழி, வனையப்பட்டதும், அதற்காம் கருவியும் அதனாற் பயனும், பிறவும் தோன்று மாதலின், அப்பொருள்களே வேற்றுமையாகி இடைக் கிடக்கின்றன வென்க. இவையெல்லாம் இடைக்கிடப்பன ஆகலின், செய்கின்றானை முன் வைக்கப்பட்டது. (6) 1 (பாடம்) படைத்தலைவன் என்று. 2 (பாடம்) ‘வனைந்தான் என்பதற்குக் குயவனொடு முடிக்க’ என்பது. உருபு நிற்கும் இடம் 67. கூறிய முறையின் உருபுநிலை திரியாது ஈறுபெயர்க் காகும் இயற்கைய வென்ப. பெயர்ச் சொற்கண் உருபுநிற்கும் நிலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லப்பட்ட உருபு முறையானே நின்ற நிலையைத் திரியாது பெயர்க்கு ஈறாகும் இயல்பினையுடைய, எ-று. முறையானே என்றது அடைவே ஒன்றொன்றாக என்றவாறு. நிலையைத் திரியாது என்றது உருபேற்று நிற்கும் பெயரைத் திரியாது அதன்கண் இயல்பாகி நிற்கும் என்றவாறு. இச் சூத்திரங் கூற வேண்டா; மேலைச் சூத்திரத்துப் பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னும் ஈற்ற என்பதனாற் பெறுதும் எனில், அது கருதியன்று கூறியது : வடமொழிக்கண் எழுவாயாகிய பெயர் ஈறுகெட்டு உருபேற்கும். அவ்வாறன்றித் தமிழ்மொழிக்கண் ஈறுதிரியாது எழுவா யாகிய பெயரின் மேலே உருபு நிற்கும் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. உதாரணம் மேற்காட்டப்பட்டன. வருகின்ற சூத்திரத்தின் கண்ணும் விளங்கும். (7) பெயர்க்குரிய இலக்கணம் 68. பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே. மேற்பல சூத்திரத்தானும் பெயர் என்று எடுத்தோதிப்போந்தார் அஃது இத்தன்மையதென அதன் இலக்கணங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) பெயர் நிலைமையுடைய சொல் காலம் தோன்றா; தொழில் நிலையோடு ஒட்டி நிற்கும் பெயரும் ஒருவகையல்லன காலம் தோன்றா, எ-று. காலம் தோன்றா என்றது மத்திம தீபமாகி நின்றது. உம்மை இறந்தது தழீஇயிற்று. பெயர்க்கு இலக்கணம் பயனிலை கோடலும், உருபு ஏற்றலும், காலந் தோன்றாமையும் ஆம். அவற்றுள், பயனிலை கோடலும், உரு பேற்றலும் முற்பட்ட சூத்திரத்தாற் கூறலின் இதனான் காலந்தோன் றாமை கூறப்பட்டது. பெயராவன-தனிப்பெயர், ஒட்டுப்பெயரென இருவகைப்படும். அவற்றுள் தனிப்பெயர் - பொருள்மேல் வருவனவும், தொழில் மேல் வருவனவும் என இருவகைப்படும். ஒட்டுப்பெயர் தெரிநிலைவினை யொட்டுப்பெயரும், குறிப்புவினை யொட்டுப் பெயரும் என இருவகைப் படும். அவற்றுள் பொருள் மேல் வரும் தனிப்பெயர் - சாத்தன், கொற்றன், யானை, குதிரை, மா, தெங்கு என்பன. தொழில் மேல் வரும் தனிப்பெயர் - உண்டல், தின்றல், கொடுத்தல், எடுத்தல் என்பன. தெரிநிலை வினை யொட்டுப் பெயராவன - தொழிற்பெயரோடு ஒட்டி ஒருபொருட்குப் பெயராகி வருவன. அவை - உண்டான், தின்றான், கொடுத்தான், எடுத்தான் என்பன. இவை வினைக்கருத்துள்வழி வினைச் சொல்லாம், பெயர்க் கருத்துள்வழிப் பெயராம். குறிப்புவினை யொட்டுப் பெயராவன - மற்றொரு பெயரோடு ஒட்டி யொரு பொருட்குப் பெயராகி வருவன. அவை குழலன், கோட்டன், கச்சினன், கழலினன் என்பன. இவையும் வினைக்கருத்துள்வழி வினைக் குறிப்பாம், பெயர்க்கருத்துள்வழி பெயராம். இவற்றுள் தெரிநிலை வினை ஒட்டுப் பெயரல்லாதன காலந் தோன்றா. இப் பெயர்கள் - சாத்தனை, உண்டலை, உண்டானை, குழலனை என உருபேற்கும். (8) இரண்டாம் வேற்றுமையின் பொருள் 69. இரண்டா குவதே, ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்பு அவ்விரு முதலிற் றோன்று மதுவே. நிறுத்த முறையானே இரண்டாம் வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டாம் வேற்றுமை யாவது ஐ எனக் குறித்த வேற்றுமைச் சொல், அஃதியாதானும் ஒரு பெயர்க்கண் வரினும் வினையும் வினைக் குறிப்புமாகிய அவ்விரண்டு முதற்கண்ணும் தோன்றும், எ-று. ஐகார வேற்றுமை இரண்டாவதென்னும் குறியும்பெற்றது. வினை யென்பது செயல். வினைக்குறிப்பென்பது அவ்வினையினாற் குறிக்கப் பட்ட பொருள். அஃதாவது செயப்படுபொருள். முதல் என்பதனை வடநூலாசிரியர் காரகம் என்ப. அஃதாவது தொழிலை யுண்டாக்குவது. அது பல்வகைத்து; செய்வானும், செயலும், செயப்படுபொருளும், கருவியும், கொள்வானும், பயனும், காலமும், இடமும் என. “வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா இன்னதற் கிதுபய னாக வென்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழின்முத னிலையே’’ (109) என முதனிலை எட்டென்றாராதலின், அவற்றுள் இது செயப்படு பொருள் மேலும் செயல்மேலும் வரும். குடத்தை வனைந்தான் என்பது செயப்படு பொருள்மேல் வந்தது. வனைதலைச் செய்தான் என்பது செயன்மேல் வந்தது. தொழின் முதனிலை யெட்டென்றமையான் காரகப் பொருண்மேல் வரும் வேற்றுமையெல்லாம் வினையான் முடியும் என்று கொள்க. (9) இரண்டாவதன் பொருள் பற்றிய வாய்பாடுகள் 70. காப்பி னொப்பி னூர்தியி னிழையின் ஓப்பிற் புகழிற் *பழியி னென்றா பெறலி னிழவிற் காதலின் வெகுளியிற் செறலி னுவத்தலிற் கற்பி னென்றா அறுத்தலிற் குறைத்தலிற் றொகுத்தலிற் பிரித்தலின் நிறுத்தலி னளவி னெண்ணி னென்றா ஆக்கலிற் சார்தலிற் செலவிற் கன்றலின் நோக்கலி னஞ்சலிற் சிதைப்பி னென்றா அன்ன பிறவு மம்முதற் பொருள என்ன கிளவியு மதன்பால வென்மனார். இதுவும் இரண்டாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காப்பு முதலாகச் சிதைப்பீறாக ஓதப்பட்டனவற்றினும், அத்தன்மைய பிறவற்றினும் வருஞ் சொல்லும், செயப்படு பொருளவாகி வரும் எல்லாச் சொல்லும் இரண்டாம் வேற்றுமைப் பாலன, எ-று. காப்பு என்பது காவற்றொழிலையும், காக்கப்படும் பொருளையும் உணர்த்தும். ஏனையவும் தொழிலும் பொருளும் உணர்த்துமாறு அறிந்து கொள்க. ‘அன்ன பிறவினும்’ என ‘இன்’ செய்யுள் விகாரத்தான் தொக்கது. இவை யெல்லாம் வகுத்துக் கூறல்வேண்டா : வினைக்குறிப்பென அடங்கும் எனின், அடங்கும் எனினும், செயப்படுபொருள் காரணகாரியம் தோன்ற நிற்பனவும் தோன்றாது நிற்பனவும் என இருவகைப்படும் எனற்கு வேறு ஓதினார் என்க. ஆடையை நெய்தான், குடத்தை வனைந்தான். இவை காரண காரியம் தோன்ற நின்றன. ஊரைக் காத்தான் என்பது தோன்றாது நின்றது. ஈண்டு ஓதப்பட்டனவெல்லாம் தொழிற்சொல் ஆதலின், இவற்றை முடிக்குஞ் சொல்லும் இவையடியாகப் பிறந்த சொல்லென்க. ஊரைக் காக்கும் என்பது காக்கப்படும் பொருள்மேல் வந்தது. காவலைக் காக்கும் என்பது காவற் றொழில்மேல் வந்தது. தந்தையை ஒக்கும். தேரை ஊரும். இழை என்பது அணிகலன். ஆடகத்தைப் பூணும். நூலையிழைக்கும் எனவும் ஆம். கிளியை ஓப்பும். கொடுப்பாரைப் புகழும். கொடாதாரைப் பழிக்கும். புதல்வனைப் பெறும். பொருளை இழக்கும். அகத்தைக் காதலிக்கும். பகைவரை வெகுளும். செற்றாரைச் செறும். நட்டாரை உவக்கும். நூலைக் கற்கும். வினையை அறுக்கும். ஆசையைக் குறைக்கும். பலவற்றைத் தொகுக்கும். சிலவற்றைப் பிரிக்கும். பொன்னை நிறுக்கும். அரிசியை அளக்கும். அடைக்காயை எண்ணும். அறத்தை யாக்கும். தூணைச் சாரும். நெறியைச் செல்லும். சூதினைக் கன்றும். கணையை நோக்கும். கள்வரை யஞ்சும். அறிவைச் சிதைக்கும். அன்ன பிறவும் என்றதனான், இசையைப் பாடும், பகைவரைப் பணிக்கும் எனவும், குழையையுடையன், வலியையுடையன், கல்வியை யுடையன், காவலையுடையன் என ஆறாம் வேற்றுமைப் பொருள் மொழிமாற்றாகி வருவனவும் கொள்க. பிறவும் அன்ன. ‘அம்முதற் பொருள என்ன கிளவியும் என்றதனான், செயப்படு பொருளே யன்றி அதற்குக் காரணமாகிய பொருள் மேலும் பொருளினது உறுப்பின்மேலும் பொருள் நிகழும் இடத்தின் மேலும் வருவனவும் கொள்க. மண்ணை வனைந்தான், நூலை நெய்தான். இவை காரணம். விளிம்பை நெய்தான்-உறுப்பு. சுவரை யெழுதினான்-இடம். பிறவும் அன்ன. (10) * (பாடம்) பழிப்பின் என்பது. மூன்றாம் வேற்றுமை 71. மூன்றா குவதே, ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைமுதற் கருவி யனைமுதற் றதுவே. மூன்றாம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றாம் வேற்றுமையாவது ஒடுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல். அது வினைமுதலுங் கருவியுமாகிய அவ்விரண்டு காரகத்தையும் உடைத்து, எ-று. ஈண்டு, முதல் என்பது காரகம். அது கருத்தாவின் கண்ணும், கருவியின் கண்ணும் வரும், எ-று. கொடியொடு தொடக்குண்டான். இது வினை முதல். “ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்”-இது கருவி. (11) மூன்றாவதன் பொருள் பற்றிய பாகுபாடுகள் 72. அதனி னியறல் அதற்றகு கிளவி அதன்வினைப் படுதல் அதனி னாதல் அதனிற் கோடல் அதனொடு மயங்கல் அதனோ டியைந்த ஒருவினைக் கிளவி அதனோ டியைந்த வேறுவினைக் கிளவி அதனோ டியைந்த வொப்பல் ஒப்புரை இன்னா னேது ஈங்கென வரூஉம் அன்ன பிறவும் அதன்பால என்மனார். இதுவும் மூன்றாம் வேற்றுமைக்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அதனினியறன் முதலாக ஒப்பல் ஒப்புரை ஈறாக எடுத் தோதப்பட்ட சொல்லினான் வரும் பொருண்மையும், இன், ஆன், ஏது என இவ்விடத்து வரும் அத்தன்மைய பிற சொற்களும் மூன்றாம் வேற்றுமைப் பாலன, எ-று. ‘அதனின் இயறலாவது’:- இயலப்படுவதற்குக் காரணமாகிய பொருண்மேல் உதாரணவாய்பாட்டான் வந்தது. மண்ணினானியன்ற குடம், அரிசியானாகிய சோறு. ‘அதற்றகு கிளவியாவது’:- அதனாற் றகுதியை யுடைத்தாயிற்றென் னும் பொருண்மை தோன்ற வருவது. கண்ணான் நல்லன், குணத்தான் நல்லன், நிறத்தான் நல்லன் என உறுப்பும், பண்பும்பற்றி வருவன. ‘அதன்வினைப் படுதலாவது’:- ஒன்றன் றொழின்மேல் வருதல். புலி பாய்தலாற்பட்டான், ஓட்டாற்கடிது குதிரை என்பன. ‘அதனினாதலாவது’:- ஆக்கத்திற்கு ஏதுவாகி வருவது. வாணிகத்தா னாயினான், எருப்பெய்து இளங்களை கட்டமையாற் பைங்கூழ் நல்லவாயின. ‘அதனிற் கோடலாவது’:- ஒன்றனானே ஒன்றைக்கோடல். காணத் தாற் கொண்ட வரிசி. ‘அதனொடு மயங்கலாவது’:- ஒன்றோடொன்று விரவிவருதல். பாலொடு கலந்த நீர். ‘அதனோடு இயைந்த ஒருவினைக் கிளவியாவது’:- ஒருவினையான் இரு பொருள் முடிவது. படையொடு வந்தான் அரசன். ‘அதனோடு இயைந்த வேறு வினைக்கிளவியாவது’:- வேறுவினை யுடையன இரண்டு சொல் ஒரு வினையொடு தொடர்வது. காவோ டறக் குளந்தொட்டான். ‘அதனோடு இயைந்த ஒப்பலொப்புரையாவது’:- உவமை யின்றி யிதுவும் அதுவும் ஒக்குமென அளவினாலும் நிறையினாலும் எண்ணி னாலும் வருவன. இதனோடு ஒக்கும் இது, இக்கூற்றோடொக்கும் இக்கூறு. ‘இன்னென்பது’ இன் என்னும் சொல். ‘ஆனென்பது’ ஆன் என்னும் சொல். ‘ஏது வென்பது’ ஏது என்னும் சொல். ‘அன்ன பிறவாவன’ :- காரணம், நிமித்தம், துணை, மாறு என்பன. இவையும் மூன்றாம் வேற்றுமைப் பொருளுணர்த்து முருபுகளும் பொரு ளுணர்த்தும் சொற்களுமாம், எ-று. புகையுண்மையின் நெருப்புண்மை யறிக, புகையுண்மையான் நெருப்புண்மையறிக, புகை யேதுவாக நெருப் புண்மையறிக, புகை காரணமாக நெருப்புண்மையறிக, புகை நிமித்தமாக நெருப்புண்மையறிக, சுக்கிரீபன் துணையாக இலங்கை கொண்டான். ``அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லாம் நின்னஞ் சும்மே.’’ (புறம் 20) இன்னும், ‘அன்ன பிறவு’ மென்றதனான், ஓடு ஆல் என வரும் உருபுங் கொள்க. “என்னோ டிருப்பினும் இருக்க இளங்கொடி தன்னோ டெடுப்பினும் தகைக்குந ரில்லென்று’’ (மணி - சிறைவிடுகாதை. 35-6) “கணிகொண் டலர்ந்த நறவேங்கையோடுங் கமழ்கின்ற காந்தளிதழா லணிகொண்ட’’ (சூளா. அரசியல். 197) என்புழி ஓடு வந்தது. ஆன் வந்தவழி யெல்லாம் ஆல் வருதல் வழக்கினிற் கண்டு கொள்க. (12) நான்காம் வேற்றுமை 73. நான்கா குவதே, குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி எப்பொரு ளாயினுங் கொள்ளு மதுவே. நான்காம் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்காம் வேற்றுமையாவது கு எனப் பெயர்பெற்ற வேற்றுமைச் சொல். அஃது யாதானுமொரு பொருளாயினும் ஏற்று நிற்கும் நிலைமைத்து. எனவே, ஏற்கும் பொருண்மைக்கண் வரும், எ-று. அந்தணர்க்குக் கொடுத்தான் என வரும். (13) நான்காவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு 74. அதற்குவினை யுடைமையின் அதற்குடம் படுதலின் அதற்குப் படுபொருளின் அதுவாகு கிளவியின் அதற்கியாப் புடைமையின் அதற்பொருட் டாகலின் நட்பின் பகையின் காதலின் சிறப்பினென்று அப்பொருட் கிளவியும் அதன்பால வென்மனார். இதுவும் நான்காம் வேற்றுமைக்கண் வரும் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று (இ-ள்.) அதற்கு வினையுடைமை முதலாகச் சிறப்பீறாகச் சொல்லப் பட்ட வற்றின்கண் அப்பொருள்பட வருஞ் சொல்லும், உம்மையான் அந்நிகரன பிற பொருட்கண் வருஞ் சொல்லும் நான்காம் வேற்றுமைப் பாலன, எ-று. உம்மை எச்சவும்மை. ‘அதற்கு வினையுடைமையின்’ என்பது மேற்சொல்லப்பட்ட கொடைப் பொருண்மையே யன்றி உருபேற்கும் பொருட்கு வினையாத லுடைமை கூறும் வழியும் நான்காம் வேற்றுமைப் பாலனவாம், எ-று. (எ-டு.) அவர்க்குப் போக்குண்டு, அவர்க்கு வரவுண்டு, இவை வினை. கரும்பிற்குழுதான் என்பதுமது. ‘அதற்கு உடம்படுதலென்பது’ உடம்பாடு கூறும் வழியும் நான்காவ தாம், எ-று. (எ-டு.) கொலைக்குடம்பட்டான். ‘அதற்குப் படுபொருளாவது’ - உருபேற்கும் பொருட்கு இயல்பு கூறும் வழியும் நான்காவதாம், எ-று. (எ-டு.) இதற்கு நிறங்கருமை; இதற்கு வடிவு வட்டம்; இதற்கு அளவு நெடுமை; இதற்குச் சுவை கார்ப்பு; இச் சொற்குப் பொருள் இது; இவ் வாடைக்கு விலை இது எனவும், இவ்வாறு வருவனவும் கொள்க. இன்னும் அதற்குப் படுபொருள் என்றதனான், உடைப்பொருளும் அவ்விடத்திற்கு ஆம்பொருளும், காலத்திற்கு ஆம்பொருளுமாகி வருவனவும் கொள்க. அவற்குச் சோறுண்டு, ஈழத்திற் கேற்றின பண்டம், காலத்திற்கு வைத்த விதை என வரும். ‘அதுவாகுகிளவி’ - ஒன்றொன்றாகத் திரிந்துவரும் பொருட்கு வருவது. கடிசூத்திரத்துக்குப் பொன், கும்மாயத்திற்குப் பயறு. ‘அதற்கியாப்புடைமை’யாவது - உருபேற்கும் பொருட்கு வலியாத லுடைமை. ‘யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கை’ (நாலடி. 28) என்றவழி வலியெனப் பொருளாயிற்று. (எ-டு.) போர்க்கு வலி குதிரை; நினக்கு வலி வாள் என வரும். ‘அதற்பொருட்டாகலின்’ என்பது-ஒரு பொருட்காக வென்பது படவருதல். (எ-டு.) கூழிற்குக் குற்றேவல் செய்யும், கூலிக்கொலிக்கும். ‘நட்பு’ - அவற்குத் துணை, அவற்கு நட்பு எனவரும். ‘பகை’ - அவற்குப் பகை. ‘காதல்’ - மகற்குக் காதலன். ‘சிறப்பென்பது’ - இன்றி யமையாமை பற்றிவரும். (எ-டு.) யாமுமக்குச் சிறந்தன மாத லறிந்தனி ராயின் (கலி. 5) எனவும், “நிலத்திற் கணியென்ப நெல்லுங் கரும்பும்” (நான்மணிக். 9) எனவும் வரும். உம்மையாற் கொள்ளப்படுவன - இவ்வூர்க் கவ்வூர்க் காதம், நாளைக்கு வரும், இவர்க்குத் தகும் இது, இவர்க்கு நன்மை பயக்கும், அவற்குப் பிறந்த மகன். பிறவும் இந்நிகரன வெல்லாம் கொள்க. (14) ஐந்தாம் வேற்றுமை 75. ஐந்தா குவதே, இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி இதனின் இற்றிது என்னு மதுவே. ஐந்தாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஐந்தாம் வேற்றுமையாவது இன் என்று பெயர் கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச்சொல். அஃது இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் என உணர்த்தும். எனவே இவ்வாய்பாட்டான் வரும் பொருண்மை யெல்லாம் ஐந்தாவதாம், எ-று. அவையாவன:- நீங்க நிற்பதூஉம், பொருவும், ஏதுவும் என்பன. அவற்றுள் நீங்க நிற்பது பொருள் நீங்கி நிற்பதூஉம், இடம் நீங்கி நிற்பதூஉம் என இருவகைப்படும். பொருவும் மிகுதலும், குறைதலும், ஒத்தலும் என மூன்று வகைப்படும். அவற்றுள் பொருவும், ஏதுவும் வருகின்ற சூத்திரத்தாற் கூறுதலானும், பல்பொருட் கேற்பின் நல்லது கோடல் என்பதனானும் இச்சூத்திரம் நீங்க நிற்பது குறித்ததென்பது கொள்ளப்படும். (எ-டு.) வரையினின்றும் வீழாநின்றது அருவி. (15) ஐந்தாவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு 76. வண்ணம் வடிவே அளவே சுவையே தண்மை வெம்மை அச்சம் என்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை இளமை சிறத்தல் இழித்தல் புதுமை பழமை ஆக்கம் என்றா இன்மை யுடைமை நாற்றம் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென்று அன்ன பிறவும் அதன்பால என்மனார். இதுவும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணம் முதலாகப் பற்றுவிடுதல் ஈறாக ஓதப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் ஐந்தாம் வேற்றுமைப் பாலன, எ-று. யாதானும் ஒன்றைப் பொருவிக் கூறும்வழி, பண்பினானாதல், தொழிலினானாதல், பொருளினானாதல் கூறல் வேண்டுதலின், அவை யெல்லாம் எடுத்தோதப்பட்டன. (எ-டு.) இதனிற்கரிது, இதனின் வட்டம், இதனின் நெடிது, இதனிற் கைக்கும், இதனிற் றண்ணிது, இதனின் வெய்து, இதனின் அஞ்சும், இதனின் நன்று, இதனிற்றீது, இதனிற் சிறிது, இதனிற் பெரிது, இதனின் வலிது, இதனின் மெலிது, இதனிற் கடிது, இதனின் முதிது, இதனின் இளைது, இதனிற் சிறந்தது, இதனின் இழிந்தது, இதனிற் புதிது, இதனிற் பழைது, இதனின் ஆக்கம், இவனின் இலன், இவனின் உடையன், இதனின் நாறும், இதனிற்றீரும், இவரிற் பலர் இவர், இவற்றிற் சில ஏறும், இதனிற் பற்றுவிடும். இது என்பதனை ஏற்றவற்றொடு கூட்டிக் கொள்க. அன்ன பிறவும் என்றதனான், இவனிற் காக்கும், இவனிற் பண்ணும், இவனிற் பாடும் என வருவன கொள்க. இவற்றுட் பெரிதென்பது மிகுதி குறித்து நின்றது. சிறிதென்பது குறைவு குறித்து நின்றது. ஏனையவும் இவ்வாறு நோக்கிக் கொள்க. இவையெல்லாம் ஒப்புக்குறித்துழி உவமையாம். ஏதுக்குறித்துழிக் கரிதாயிற்று, வட்டமாயிற்று என உதாரணங் காட்ட உருபேற்ற பொருளெல்லாம் ஏதுவாம். (16) ஆறாம் வேற்றுமை 77 ஆறா குவதே, அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி தன்னினும் பிறிதினும் இதன திதுவெனும் அன்ன கிளவிக் கிழமைத் ததுவே. ஆறாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறாம் வேற்றுமையாவது அதுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல். அது தன்னினானும் பிறிதினானும் இதனது இஃது என வரும் பெற்றிப்பட்ட பொருட் கிழமையை யுடைத்து, எ-று. தன் என்றது உடையானை. பிறிதென்றது உடைப்பொருளை. ஈண்டுக் கிளவி என்பது பொருள். கிளக்கப்படுவது கிளவியாயிற்று. கிழமை என்பது உரிமை. தன்னொடும் பொருளோடும் உள்ள உரிமையுணர வரும் ஆறாவதென்றவாறு. அதுவென்பது ஒருமையுணர்த்தும் சொல்லாகலின், வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், பன்மையுணர்த்தும் அகர உருபுங் கொள்க. (எ-டு.) சாத்தனது குழை, சாத்தனகுழைகள். உலகத்துக்குழை யுடையாரும் பலர். குழையும் பல. ஆயினும், இக்குழை இவனதென்னும் உரிமை தோன்ற வந்தவாறு கண்டுகொள்க. (17) ஆறாவதன் பொருள் பற்றிய வேறுபாடு 78. இயற்கையி னுடைமையின் முறைமையின் கிழமையின் செயற்கையின் முதுமையின் வினையின் என்றா கருவியின் றுணையின் கலத்தின் முதலின் ஒருவழி யுறுப்பின் குழுவின் என்றா தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் திரிந்துவேறு படூஉம் பிறவு மன்ன கூறிய மருங்கின் தோன்றுங் கிளவி ஆறன் பால என்மனார் புலவர். இஃது ஆறாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்கை முதலாக வாழ்ச்சி யீறாக எண்ணப்பட்ட கிழமையி னும், திரிந்து வேறுபடூஉம் பிறவற்றினும், அத்தன்மையவாகி மேற் சொல்லப்பட்ட இதனது இஃது எனும் பொருள் தோன்றும் சொல் லெல்லாம் ஆறாம் வேற்றுமைப் பாலன, எ-று. மேலைச்சூத்திரத்தான், உடையானும் உடைப்பொருளுமாகிய கிழமை எடுத்தோதினார்; இச்சூத்திரத்தான் அதனின் வேறுபட்டு வருவன எடுத்தோதினார் என்று கொள்க. ‘இயற்கை’ என்பது இயல்பாகிய கிழமை. அஃதாவது பொருட்கு இயல்பாகிய பண்பு. நிலத்தது வலி. நீரது தண்மை. தீயது வெம்மை என வரும். ‘உடைமை’ என்பது உடைப்பொருளின் பாகுபாடு உணர நில்லாது பொதுமை உணர நிற்பது. அப்பொது கிழமையினும் வரும் என்றவாறு. சாத்தனது உடைமை என வரும். சாத்தனது குழை என்றதனோடு இதனிடை வேற்றுமை என்னை யெனின், சாத்தனதுடைமை குழை எனவும் வந்து, குறிப்பு வினைப் பொருளொடு முடிதலின் வேறோதப்பட்டது. வினைக்குறிப்பு ஓதுகின்ற வழி, அதுச் சொல் வேற்றுமை யுடைமை யானும் என்று ஓதினார் ஆகலின், ஈண்டுக் குழை என நிற்றலேயன்றிக் குழையை யுடையன் எனவும் வருதலின் ஈண்டு வேறுபடுத்து ஓதல்வேண்டு மென்று உணர்க. ‘முறைமை’ என்பது உடையானும் உடைப்பொருளுமன்றி, முறைமை யாகிய கிழமையான் வருவது. ஆவினது கன்று, மறியது தாய். ‘கிழமை’ என்பது உரிமை. அஃதாவது இவற்கு இவள் உரியள் என்னும் பொருள்பட வருவது. முறைமையைச் சாரவைத்ததனான் கிழத்தியரென்று கொள்ளப்படும். அரசனது உரிமை. ‘செயற்கை’யாவது, செயற்கையான் வருவது. சாத்தனது கல்வி, சாத்தனது கோலம். ‘முதுமை’ என்பது பரிணாமம் குறித்து நிற்கும். சாத்தனது முதுமை. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், இளமையுங் கொள்க. சாத்தனது இளமை. ‘வினை’யென்பது தொழில் உணர வருவது. சாத்தனது வரவு. ‘கருவி’ என்பது உடைமை குறியாது இதற்கிது கருவி யென்னும் பொருள்பட வருவது. யானையது தோட்டி, வனைகலத்தது திகிரி. ‘துணை’ யென்பது நட்பின் மேல்வரும். சாத்தனது துணை இது. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் பகையும் கொள்க. சாத்தனது பகை. மாறுபாடும் இனம் ஆகுமோ எனின், மாறுபாடும் அப்பொருள் குறித்தலின் இனமாம். ‘கலம்’ என்பது பாலது கலம், நிலத்தது விலைக்கலம். ‘முதலென்பது’ சினையோடு அடுத்து முதலுணர வருவது. கொடியது முதல். ‘ஒருவழியுறுப்பு’ என்பது முதலொடு சினையடுத்து வருவது. சண்பகத்தது கோடு. ‘குழு என்பது’ பலபொருட்டொகுதி. படையது குழாம், நெல்லது குப்பை. ‘தெரிந்து மொழிச்செய்தி’யாவது தெரிந்த மொழியினது செயல் கூறல். பாட்டது கருத்து, பாட்டது பொருள். ‘நிலை’ என்பது அவரவர் நின்ற நிலைமை குறித்து வருவது. சாத்தனது இல்வாழ்க்கை, சாத்தனது தவம். ‘வாழ்ச்சி’ என்பது இடம் பற்றிவரும். யானையது காடு, காட்டது யானை. ‘திரிந்து வேறு படுவன’, எண்ணது சாந்து, கோட்டது நூறு. ‘கூறிய மருங்கிற்றோன்றுவன’, சாத்தனது தோப்பு, பொருளது கேடு, ஆவினது பால், கரும்பினது சாறு என இந்நிகரன வெல்லாம் கொள்க. இன்னுங் ‘கூறிய மருங்கிற்றோன்றுங் கிளவி’ என்பதனான், உருபின் பொருள்படவரும் உடைய வென்னுஞ் சொல்லுங் கொள்க. (18) ஏழாம் வேற்றுமை 79. ஏழா குவதே, கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி வினைசெய் யிடத்தின் நிலத்தின் காலத்தின் அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே. ஏழாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஏழாம் வேற்றுமையாவது கண் எனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல். அது வினை நிகழுமிடத்து நிலத்தினும், காலத்தினும், அவ்விருவகைக் குறிப்பினும் தோன்றும், எ-று. எனவே, தொழில் நிகழாதவழி, நிலமும், காலமும் ஏழாம் வேற்றுமை யாகா என்றவாறாம். (எ-டு.) அரங்கின்கண் வனைந்தான். மாடத்தின்கண் இருந்தான், இவை நிலம். காலைக்கண் வனைந்தான், மாலைக்கண் வனைந்தான், இவை காலம். போரின்கண் வந்தான் என்றவழி இடங் குறித்தான் ஆயின், போர் நின்றவிடத்து வந்தான் எனவும், காலங் குறித்தானாயின் போர் நின்ற காலத்து வந்தான் எனவும், நிலமும் காலமும் குறித்துக் கொள்ளக் கிடந்தது. ஆலின் கண்கிடந்தது ஆ, ஆலின்கண் இருந்தது குரங்கு என்றவழி கீழ்க் கிடந்தது ஆ ; மேலிருந்தது குரங்கு என இவ்வாறு வரும் இடவேறு பாடுங் குறித்துக் கொள்ளப்படும். பிறவும் அன்ன. இனி அப் பொருண்மைக்கண் உருபு புலப்படாமல் இட வேறுபாடு காட்டுவன சில கண்டு அவற்றை எடுத்தோதுகின்றார் வருகின்ற சூத்திரத்தான். (19) ஏழாவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு 80. கண்கால் புறம்அகம் உள்உழை கீழ்மேல் பின்சார் அயல்புடை தேவகை எனாஅ முன்இடை கடைதலை வலம்இடம் எனாஅ அன்ன பிறவும் அதன்பால என்மனார். இது ஏழாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கண்முதலாக இடம் ஈறாக ஓதப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் ஏழாம் வேற்றுமைப் பாலன, எ-று. இவையெல்லாம் பெயரைச் சார்ந்து தனித்தனி வரின் பெயராகி உருபேற்கும்; பெயரைச் சாராது இடமும் காலமும் ஆகிய பொதுமை உணரவரின், உருபு மாத்திரமாகி நிற்கும்; இடம் வேறுபாடு உணரவரின் உருபு புலப்படாது பொருள் உணரவரும். அகத்தை, அகத்தொடு, புறத்தை, புறத்தொடு என்பன தனித்து உருபேற்றன. அரங்கினுள் அகழ்ந்தான். மாடத்துழை இருந்தான் என்பன உருபாகி நின்றன. இனி இடம் வேறுபாடு காட்டுமாறு :- கண் என்பது இடம். அரசர் கட் சென்றான் என்பது நெறிக்கட் சென்றான் என்றாற்போலச் சேறற் றொழிற்கு அரசன் ஆதாரம் ஆதலின்றி அவனிடத்துச் சென்றான் என உருபு புலப்படாமல் இடம் என்பதொரு பொருள் உணர்த்தியவாறு கண்டு கொள்க. கால் - ‘ஊர்க்கானிவந்த பொதும்பர்’ (கலி. 56). ஊரையடுத்தல் ஆகிய பொருள் மேல் வந்தது. புறம் - சுவர்ப்புறத்துப் பாவை. பாவைக்கு ஆதாரமாகி நின்றது சுவராயினும் அச்சுவரகத்துப் பாவையின்மையின் புறமென ஒரு பொருள் தோன்ற நின்றது. அகம் - எயிலகத்துப் புக்கான். எயிற் புறம் உண்டாகலின் அகம் என ஒருபொருள் தோன்றி நின்றது. உள் -சிலையுட் பொருள். சிலைப்புறத்துப் பொருள் இன்மையின் உள் என ஒரு பொருள் தோன்றி நின்றது. உழை அரசனுழை இருந்தான். அரசன் அருகென ஒரு பொருள் தோன்றி நின்றது. கீழ் - மாடத்தின் கீழ் இருந்தான் : மேல் அன்மை காட்டிற்று. மேல் - மாடத்தின் மேலிருந்தான் : கீழ் அன்மை காட்டிற்று. பின் - அரசன் பின் இருந்தான் : முன் அன்மை காட்டிற்று. சார்-காட்டுச்சார் ஓடும் குறுமுயல் : காட்டைச் சார்ந்த இடம் என்பது தோன்றிற்று. அயல்-மனை அயல் இருந்தான் : மனை அல்லாத பிறஇடம் தோன்ற வந்தது. புடை என்பது பக்கம். எயிற்புடை நின்றான். எயிலின் கண் ஒருபக்கம் என்பது தோன்றிற்று. தேவகை என்பது திசைக்கூறு. அரங்கின் வடக்கிருந்தான், தெற்கிருந்தான் என்றவழி, வடக்கு தெற்கென ஒரு பொருள் தோன்றி நின்றது. முன்-அரசன் முன் இருந்தான் : பின் அன்மை காட்டிற்று. இடை, கடை, தலை என்பன கலத்தின் இடை நின்றான்; கலத்தின் கடை நின்றான்; கலத்தின் தலைநின்றான் என மரக்கலத்தின் இட வேறுபாடு காட்டின. வலம், இடம் என்பன அரசன் வலத்திருந்தான் அமைச்சன், அரசன் இடத்திருந்தான் சேனாபதி என வலம் இடம் எனச் சில பொருள் தோன்றி நிற்றன. அன்ன பிறவும் என்றதனால், இல், வயின், வழி, மாட்டு, தேம், மருங்கு, பால், வாய், முதல் என வருவன வெல்லாம் கூறிய நெறியினான் வேறுபாடு உணர்த்துவனவும், உருபுமாத்திரமாகி நிற்பனவும், பெயராகி நிற்பனவும் அறிந்துகொள்க. (20) வேற்றுமைக்குப் புறநடை 81. வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றினின் றியலும் தொகைவயிற் பிரிந்து பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்ப. அறுவகை வேற்றுமைக்கும் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைக்கு உரிய பொருளை விரியக் கூறுங்கால், முதற்பெயர் இறுதிக்கண் இயலும் தொகைச் சொல்லின் கண், தொகையாம் தன்மையிற் பிரிந்து, பலநெறியாகப் பொருளைப் புணர்ந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. தொகுத்தல் என்பது செறிதல். முதற் பெயரொடு செறிவது தொகை என்று பெயர் ஆயிற்று. அவையாவன :- படைக்கை, குழைக்காது, தாய்மூவர், குதிரைத்தேர், கருப்புவேலி, வரையருவி, பாண்டியநாடு, குன்றக்கூகை என்பன. இவற்றுள் இறுதிப் பெயர் முதற்பெயரோடு ஒட்டி நிற்றலின் தொகை என்றார். இவை விரிய நின்ற காலத்து, இவற்றைப் புணர்ந்து ஒலிக்கும் சொல்லாவன :- படைக்கை என்றவழி படையைப் பிடித்தகை, எடுத்த கை, ஏந்திய கை எனவும்; குழைக்காது என்றவழி குழையையுடைய காது, செறித்த காது, இட்ட காது, அணிந்த காது எனவும்; தாய் மூவர் என்ற வழித் தாயோடு கூட மூவர், கூடிய மூவர் எனவும்; குதிரைத்தேர் என்றவழிக் குதிரையாற் பூட்டப்பட்ட தேர், பூணப்பட்ட தேர், ஓட்டப்பட்ட தேர் எனவும்; கரும்புவேலி என்றவழி கரும்பிற்கு ஏமமாகிய வேலி, வலியாகிய வேலி எனவும்; வரையருவி என்றவழி வரையினின்றும் வீழா நின்ற அருவி, ஒழுகா நின்ற அருவி எனவும்; பாண்டிய நாடு என்றவழிப் பாண்டியனது நாடு, உடைய நாடு, எறிந்த நாடு, கொண்ட நாடு எனவும்; குன்றக் கூகை என்றவழி, குன்றத்துக்கண் வாழாநின்ற கூகை, இராநின்ற கூகை எனவும் இவ்வாறு வருவன. இவையெல்லாம் எடுத்தோதின் வரம்பில ஆதலின், எல்லாச் சொல்லும் உரிய எனப் புறநடை ஓதல் வேண்டிற்று. இவற்றுள் ஆறாம் வேற்றுமை உருபு புலப்பட்டவழிப் பெயரொடு முடிந்தும், புலப்படாத வழிச் சிறுபான்மை வினைக்குறிப்பொடும், வினையொடும் முடிந்தும், ஏனை வேற்றுமைகள் எல்லாம் வினையொடும், வினைக் குறிப்பொடும் முடிந்தும் வருதலான் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும் வேற்றுமைக்கு முடிபாம் என்று கொள்க. அவ்வழி, வினையும் வினைக்குறிப்பும் ஆகிய சொற்கள் இறுதி நின்ற பெயரொடும் முடிபுழிப் பெயரெச்சமாகியும், தனிவரின் முற்றாகியும் வரும் என்று கொள்க. இச்சூத்திரத்தானே வேற்றுமைக்கு முடிபு கூறினாரும் ஆம். (21) வேற்றுமையியல் முற்றிற்று இவ்வியல் சூத்திரமும் உரையும் கிரந்த (எண்) வகையான் 330 3 வேற்றுமை மயங்கியல் இரண்டாம் வேற்றுமை ஏழாவதனொடு மயங்கல் 82. கருமம் அல்லாச் சார்பென் கிளவிக்கு உரிமையும் உடைத்தே கண்ணென் வேற்றுமை. இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமை மயங்கியல் என்னும் பெயர்த்து : ஒன்றற்கு உரிய உருபு ஒன்றனொடு மயங்குதலும், ஒன்றற்கு உரிய பொருள் ஒன்றனொடு மயங்குதலும் கூறினமையாற் பெற்ற பெயர். இதனுள் இச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், இரண்டாவது ஏழாவதனொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. கருமம் என்பது வடமொழிச் சிதைவு. செயப்படு பொருளை அவர் கருமம் என்று வழங்குப. (இ-ள்.) செயப்படு பொருள் அல்லாத சார்பு என்னுஞ் சொற்கு ஏழாம்வேற்றுமை உரிமையாதலும் உரித்து, எ-று. உம்மை எதிர்மறையாதலான் இரண்டாம் வேற்றுமை உரித்தாதல் பெரும்பான்மை. (எ-டு.) மனையைச் சார்ந்தான்-மனைக்கட் சார்ந்தான் எனவரும். தூணைச் சார்ந்தான் என்றாற்போலச் சாரப்பட்ட பொருள் தோன்றாது இடம் தோன்றுவதற்கும் பொருள் தோன்றுவதற்கும் உரித்தாவதாயிற்று. ஒரு பொருள் இரண்டு உருபிற்கும் உரித்தாகி வருதலின் உருபு மயக்கம் ஆயிற்று. (1) சினைக்கண் ஐயும் கண்ணும் வருதல் 83. சினைநிலைக் கிளவிக்கு ஐயும் கண்ணும் வினைநிலை ஒக்கும் என்மனார் புலவர். இதுவுமது. (இ-ள்.) சினைப் பொருண்மைக்கண் நிற்கும் பெயர்க்கு இரண்டாவ தும் ஏழாவதும் வினைநிலைக்கண் ஒத்த இயல்பின, எ-று. (எ-டு.) கண்ணைக் குத்தினான், கண்ணுட் குத்தினான் எனவரும். கண் என்பது குத்தப்படும் பொருளுமாகிக் குத்துதற்கு இடமும் ஆகி வருதலின், இரண்டற்கும் ஒத்த இயல்பினதாயிற்று. இடம் ஆயினவாறு என்னை யெனின், கண்ணின் கண்ணும் குத்தப்படும். குத்தப்படுவது ஓரிடம் ஆகலின் என்க. வினைநிலை ஒக்கும் என்றார் ஆயினும் ஏற்கும் வினையே கொள்ளப் படும். (2) கன்றல், செலவு - மயங்குதல் 84. கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. இதுவுமது. (இ-ள்.) கன்றலும் செலவும் ஆகிய வினைப் பொருண்மை, மேற் சொல்லப்பட்ட இரண்டாவதனோடும், ஏழாவதனோடும் ஒன்றித் தோன்றும், எ-று. இரண்டும் ஏழும் என்பது மேலைச்சூத்திரத்தினின்றும் தந்துரைக் கப்பட்டது. (எ-டு.) சூதினைக் கன்றினான்; சூதின்கண் கன்றினான். நெறியைச் சென்றான்; நெறிக்கண் சென்றான். அவை பொருளுமாகி இடமுமாகி நிற்றலின் இரண்டற்கும் உரிய வாயின. (3) இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வுழி வரும் வேறுபாடு 85 முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை சினைமுன் வருதல் தெள்ளி தென்ப. இதுவும் இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வ தொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதலும் சினையும் சேரவருஞ் சொற்கு, முதற்கண் அது வரின் சினைக்கு ஐ வரும், முதற் கண் ஐ வரின் சினைக் கண், கண் வருதல் தெளியப் பட்டது என்று சொல்லுவர் புலவர், எ-று. மயக்கம் அன்று என்றவாறாம். (எ-டு.) யானையது கோட்டைக் குறைத்தான்; யானையைக் கோட்டின்கண் குறைத்தான் என வரும். ‘கண் என் வேற்றுமை சினை முன்வருதல் தெள்ளிது’ எனவே தெள்ளிதன்றிச் சிறுபான்மை ஐ வருதலும் கொள்ளப்படும். (எ-டு.) யானையைக் கோட்டைக் குறைத்தான். (4) முதலும் சினையும் சொல்லுவான் குறிப்பினவாதல் 86. முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. முதல் சினைக் கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதல் சினை என்பன பொருளான் நியமம் இல. அவற்றைச் சொல்லுமிடத்துச் சொற்குறிப்பினான் அறியப்படும், எ-று. என்றது :- ஒரு காற் சினையாகி வந்தது தானே ஒரு கால் முதலும் ஆகிவரும் என்றவாறு. (எ-டு.) கோட்டது நுனியைக் குறைத்தான். கோட்டை நுனிக்கட் குறைத்தான். கோட்டை நுனியைக் குறைத்தான் எனவரும். (5) பிண்டப்பெயரும் அவ்வியல்பினவாதல் 87. பிண்டப் பெயரும் ஆயியல் திரியா பண்டியல் மருங்கின் மரீஇய மரபே. பிண்டப்பெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பிண்டப் பெயராவது திரட்சியானாகிய பெயர். அதுவும்-திரட்சியும் திரண்ட பொருளும் பொருளான் வேறுபடா, அவையிற்றைச் சொல்லுந் திறம் பண்டு வழங்கின பக்கத்து மருவிய மரபினவாம், எ-று. எனவே, மேற் சொல்லியவாறு போலச் சொல்லுவான் குறித்த வழியோடு ஆம் என்றவாறாம், எ-று. (எ-டு.) படையது குழாத்தைக் கெடுத்தான். நெல்லது குப்பையைச் சிதறினான். குப்பையைத் தலைக்கட் சிதறினான். குப்பையைத் தலையைச் சிதறினான். குப்பையது தலையைச் சிதறினான் என வரும். குழாத்தைத் தலைக்கட் கெடுத்தான் எனவும், படையைக் குழாத்தின் கட் கெடுத்தான் எனவும், நெல்லைக் குப்பையின்கட் சிதறினான் எனவும் வரின், பொருள் ஒற்றுமைப்பட்டுத் தோன்றாமையின் மரீஇய மரபு அன்றாயிற்று. பிறவும் அன்ன. (6) ஒடுச்சொல் வினைக்கண் சிறப்புடைய பொருள்வழி வரும் எனல் 88. ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே. மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிக்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருபொருட்கண் ஒருவினை பற்றிவரும் ஒடுச்சொல் அவ்விரு பொருளினும் உயர்ந்த பொருளின் வழியை உடைத்து, எ-று. ‘வழி’ என்றது அப்பொருளின் வழியாகிய பொருள் என்று கொள்க. உயர்வு என்பதைச் சிறப்பென்று கொள்க. கொள்ளவே, அத்தொழிற்குச் சிறவாத பொருட்கண் வரும் என்றவாறாம். (எ-டு.) அமைச்சரோடு இருந்தான் அரசன். இருந்தான் என்னும் தொழிற்குச் சிறந்தான் அரசன் ஆதலின், சிறவாத அமைச்சர் மேல் ஒடு வந்தது. அரசனோடு இருந்தார் அமைச்சர் என்றவழி இருந்தார் என்னும் தொழிற்குச் சிறந்தார் அமைச்சர் ஆதலின் ஒடு அரசன்மேல் வந்தது. இஃது உடனிகழ்ச்சி ஆகலான் அத்தொழிற்கு இருவரும் சிறந்தார் எனிற் குற்றம் என்னையெனின், அரசனோடு இருந்தார் அமைச்சர், அவரை மந்திரம் இருமின் என்றான் என்றவழி, அச்சுட்டு ஈரிடத்தும் செல்லாமையாலும், தொழில் முடியும் பெயரே சிறப்புடையதெனவுங் கொள்க. இனிச் சிறப் புடைய பொருண்மேல் ஒடு வருமெனப் பொருள் உரைத்தார் உளர் ஆயினும், இப்பொருள் பாணினியார்க்கும் ஒக்கும். (7) ஆக்கமொடு புணர்ந்த ஏது மூன்றன்கண்ணும் ஐந்தன்கண்ணும் வரும் எனல் 89. மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி நோக்கோ ரனைய என்மனார் புலவர். மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மூன்றாவதன்கண்ணும் ஐந்தாவதன்கண்ணும் விளங்க எடுத்தோதப்பட்ட ஆக்கம் என்னும் சொல்லொடு தொடர்புபட்ட ஏதுக் கிளவி, இருவகை வேற்றுமைக்கும் நோக்கு ஒரு தன்மைய, எ-று. (எ-டு.) வாணிகத்தான் ஆயினான்; வாணிகத்தின் ஆயினான் என இருவாற்றானும் வரும். ஆக்கமொடு புணர்ந்த ஏது என விதந்தோதிய அதனான், ஏனை ஏதுக்கள் நோக்கு ஒவ்வாத நிலைமைய என்பது பெறுதும். “அமைத்தனாற் றக்கான் அரசன்” என்னும் பொருட்கண், “அமைத்தனிற் றக்கான் அரசன்” என்றவழித் திரிபின்றி ஏதுப் பொருள்படுதலின்றி, அமைத்தனைப்போல வென்றாதல், அமைத்தனிற் காட்டில் என்றாதல் பொருள் உரைக்கவும் படுமாகலான், ஆக்கமொடு புணர்ந்த ஏதுவே ஒப்ப முடிவது. ஏனைய ஏதுக்கள் திரிபுடைய என்பது அறிவித்தற்கு இச்சூத்திரங் கூறப்பட்டது. (8) நோக்கல் நோக்கப் பொருளில் இரண்டாவதனொடு மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்கல் 90. இரண்டன் மருங்கின் நோக்கல் நோக்கமவ் இரண்டன் மருங்கின் ஏதுவு மாகும். இரண்டாவதனொடு மூன்றாவதும் ஐந்தாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டாம் வேற்றுமைக்கண் ஓதப்பட்ட நோக்கப் பொருண்மையின்கண் நோக்குதல் அல்லாத நோக்கம், மூன்றாவதினும் ஐந்தாவதினும் ஓதப்பட்ட ஏதுவினும் ஆம், எ-று. ‘அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை’ (குறள். 189) என்றவழி அறத்தை நோக்கியென விரித்தலேயன்றி, அறத்தான் நோக்கி யாற்றுங்கொல், அறத்தின் நோக்கி யாற்றுங் கொல் என விரிப்பினும் ஆம் என்றவாறு. புன்சொல் உரைப்பானை நிலம் பொறுக்கின் பொறை யாகிய தருமத்தைக் குறித்தோ; அத்தருமம் தனக்கியல்பாதலின் அஃதேதுவாகவோ என இருவாற்றானும் விரிப்பினும் அமைந்தவாறு கண்டுகொள்க. (9) தடுமாறு தொழிலின்கண் இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கல் 91 தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டும் மூன்றுங் கடிநிலை இலவே பொருள்வயி னான. இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டு பொருட்கண் தடுமாறி வரும் தொழிலையுடைய பெயர்க்கு இரண்டாவதும், மூன்றாவதும் வருதல் நீக்கப்படாது பொருள் கொள்ளுமிடத்து, எ-று. அஃதாவது ‘புலிகொல் யானை’ என்பது. இதற்குப் பொருள் உரைக்குங்கால், புலியைக் கொன்ற யானை எனவும், புலியாற் கொல்லப் பட்ட யானை எனவும் இவ்வாறு இருவகை வேற்றுமைக்கும் உரித்தா கலின் மயக்கம் ஆயிற்று. பொருள் துணியுமாறு வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. (10) மேலதற்கொரு புறநடை 92. ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின் வேற்றுமை தெரிப உணரு மோரே. மேலதற்கொரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறுதிக்கண் நின்ற பெயர் முன்னர்ப் பொருள் அறியவரும் உரையினான், வேறுபாடறிப, அதன் இயல்பு உணர வேண்டுவார், எ-று. (எ-டு.) புலி கொல் யானை ஓடுகின்றது; புலி கொல் யானைக் கோடு வந்தது என்றவழி, கொலையுண்ட பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. (11) ஓம்படைப் பொருளின்கண் இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கல் 93. ஓம்படைக் கிளவிக் கையு மானுந் தாம்பிரி விலவே தொகைவரு காலை. இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓம்படுத்துச் சொல்லுதற்கண் வருஞ் சொற்கண், உருபு தொகையாகி வருங்காலத்து, இரண்டாவதும், மூன்றாவதும் நீங்குதல் இல. எனவே இரண்டாவதன் பொருளும் மூன்றாவதன் பொருளும் படும், எ-று. (எ-டு.) ‘அறம் போற்றி வாழ்மின்’ என்றவழி, அறத்தைப் போற்றி வாழ்மின் எனப் போற்றப்படுவது அறம் என்னும் பொருளும் பட்டது : அறத்தாற் போற்றி வாழ்மின் எனப் போற்றப்படுவார் தாம் என்னும் பொருளும் பட்டது. (12) கொடைப்பொருளின்கண் நான்காவதும் ஆறாவதும் மயங்கல் 94 குத்தொக வரூஉங் கொடையெதிர் கிளவி அப்பொரு ளாறற் குரித்து மாகும். நான்காவதோடு ஆறாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்காம் உருபு தொக எதிர்காலம் பற்றிவரும் கொடைப் பொருண்மை ஆறாவது விரித்தற்கு உரித்தும் ஆகும், எ-று. (எ-டு.) ‘தேவர் பலி’ என்பது தேவர்க்கு நோக்கின பலி என விரிதலே யன்றித் தேவரது பலி எனவும் விரியும். (13) அச்சப்பொருளின்கண் ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்கல் 95. அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும் எச்ச மிலவே பொருள்வயி னான. ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அச்சம் என்னும் பொருண்மைக்கு ஐந்தாவதும் இரண்டா வதும் பொருட் பக்கத்தான் ஒழிபில, எ-று. எனவே சொற் பக்கத்தான் ஏனை வேற்றுமையும் ஒழிபில எ-று. (எ-டு.) கள்ளரை அஞ்சும் என்பது செயப்படுபொருள் குறித்து நின்றது. கள்ளரின் அஞ்சும் என்பது பொரூஉப்பொருளும், ஏதுவும் குறித்து நின்றது. இனிக் கள்ளரான் அஞ்சும், கள்ளர்க் கஞ்சும், கள்ளர் மாட்டு அஞ்சும் எனவரினும், அவை ஏதுக் குறித்து நிற்றலின் பொருள் வகையான் ஏதுவாகி யடங்கின. (14) ஆறாவதன் பொருளின்கண் வரும் உயர்திணைத் தொகையில் நான்கனுருபு விரிதல் 96. அதுவென் வேற்றுமை உயர்திணைத் தொகைவயின் அதுவென் னுருபுகெடக் குகரம் வருமே. ஆறாவது நான்காவதனொடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணைத் தொகைப்பொருண்மேல் வரும் அது வென் வேற்றுமை அது என்னும் உருபுகெடக் குகரம் வரும், எ-று. (எ-டு.) நம்பி மகன் என்பதனைக் கிழமைப் பொருள்பட விரிப்புழி, நம்பிக்கு மகன் என விரியும். நம்பியது மகன் எனின் வழுவாம். (15) வாழ்ச்சிக் கிழமையின்கண் ஆறாவதும் ஏழாவதும் மயங்கல் 97. ஆறன் மருங்கின் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழு மாகும் உறைநிலத் தான. ஆறாவதனோடு ஏழாவது மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறாம் வேற்றுமைக்கண் வாழ்ச்சிக் கிழமைக்கு ஏழாவதும் ஆம் பொருள் உறையும் நிலத்துக்கண், எ-று. எனவே உறையும் பொருட் கண் வாராது என்றவாறாம். உறை பொருட்கண் வந்தது - யானையது காடு. உறையும் நிலத்துக் கண் வந்தது-காட்டது யானை. அது காட்டுள் யானை எனவும் வரும். (16) வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை 98. அன்ன பிறவும் தொன்னெறி பிழையாது உருபினும் பொருளினும் மெய்தடு மாறி இருவயி னிலையும் வேற்றுமை யெல்லாம் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டன போல்வன பிறவும் ஆகித் தொன்னெறியிற் றப்பாது, உருபானும் பொருளானும் இயல்பு தடுமாறி, இரண்டிடத்தும் நிலைபெறும் வேற்றுமைச் சொல்லெல்லாம் ஆராய்ந்து உணர்வார்க்குப் பொருள் திரியும் இடன் இல, எ-று. என்றது-பரந்துபட்ட சொல்லெல்லாம் எடுத்து ஓதல் அரிதாகலான் ஈண்டு எடுத்து ஓதப்பட்ட நிகரனவாகி உயர்ந்தோர் வழக்கினும், சான்றோர் செய்யுளினும் வரூஉம் வேற்றுமை மயக்கம் எல்லாம் இதுவே ஓத்தாகப் பொருள் உரைத்துக் கொள்க என்றவாறாயிற்று. (எ-டு.) ‘நோயின் நீங்கினான்’ என்பது ‘நோயை நீங்கினான்’ எனவும், ‘சாத்தனை வெகுண்டான்’ என்பது ‘சாத்தனொடு வெகுண்டான்’ எனவும் ஆம். இத்துணையும் ஒரு வேற்றுமைக்குரிய பொருளே ஏனை வேற்றுமைக் கண்ணும் மயங்குமாறு கூறப்பட்டது. (17) உருபு தொடர்ந்து அடுக்கியவழிப் படுவதோர் இலக்கணம் 99. உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி ஒருசொன் னடைய பொருள்சென் மருங்கே. ஓர் உருபு தொடர்ந்தடுக்கியவழி வரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று, ஒரு சொல் அடுக்கி வரும் வழி-பெயரடுக்கு, வேற்றுமையடுக்கு, முற்றுச்சொல்லடுக்கு, பெயரெச்சவடுக்கு, வினையெச்சவடுக்கு, இடைச் சொல்லடுக்கு, உரிச்சொல்லடுக்கு எனப் பல வகைப்படும். அவற்றுள், வேற்றுமை யடுக்காவது-ஓருருபு அடுக்கி வருதலும், பல உருபு அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவற்றுள் ஓருருபு அடுக்கி வருதல்-ஒரு பொருண்மேல் அடுக்கி வருதலும், பல பொருண்மேல் அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவ்விருவகையும் இச்சூத்திரத்தாற் கூறப்படும். (இ-ள்.) உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைச் சொல் ஒரு சொல் நடையவாம், முடிக்கும் பொருண்மை செல்வுழி, எ-று. ஓர் உருபு ஒரு வினையான் முடியாது, பல உருபு ஒரு வினையான் முடியும் என்றதனான் வழுவமைதி கூறியவாறாம். “தேம்பைந்தார் மாறனைத் தென்னர் பெருமானை வேந்தனை வேந்தர்மண் கொண்டானை - யாஞ்சிறிதும் அங்கோல் வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ! செங்கோல் சிறுமை யுற.’’ இதனுள் ஐகார உருபு அடுக்கி, ஒரு பொருட்கண் வந்து, வளை கவர்ந் தான் என்னலும் ஆகுமோ என்பதனொடு முடிந்தவாறு கண்டுகொள்க. “கொல்லிப் பொருப்பனாற் கொங்கர் பெருமானான் வில்லிற் பகைகடிந்த வேந்தனான் - அல்லியந்தார்க் கோதையான் வையங் குளிர்தூங்க என்கொலோ! பேதையார் எய்துவது பேது.’’ இது மூன்றாவது அடுக்கி வந்து குளிர் தூங்க என்பதனொடு முடிந்தது. “வாராய்நீ புறமாறி வருந்திய மேனியாட்கு ஆரிருட் டுணையாகி யசைவளி யலைக்குமே கமழ்தண்டா துதிர்ந்துக வூழுற்ற கோடல்வீ யிதழ்சோருங் குலைபோல விறைநீவு வளையாட்கு’’ (கலி.121.) இது நான்காவது அடுக்கிவந்து அலைக்கும் என்பதனொடு முடிந்தது. “வீரப் புலியனின் வெல்போர் வளவனிற் கோரப் பரியுறந்தைக் கோமானின்-ஆரலங்கல் மற்படுதோட் செம்பியனின் மல்லன் மணிநேரி வெற்பனிற் றீர்ந்துளவோ வேந்து.’’ இதனுள் ஐந்தாவது அடுக்கிவந்து தீர்ந்து என்பதனொடு முடிந்தது. “பெற்றி திரிந்து பெருவறங் கூறினும் மற்றுயிர்கள் நோயான் வருந்தினுங்-கொற்றக் குடையான்கண் நீதிபுரி கோலான்கண் ஆழிப் படையான்கண் நிற்கும் பழி.’’ இதனுள் ஏழாவது அடுக்கிவந்து நிற்கும் என்பதனொடு முடிந்தது. இவை ஒரு பொருண்மேல் ஓருருபு அடுக்கி வந்தன. உழவை, வாணிகத்தைச் செய்யும் எனவும்; சோற்றான், தண்ணீரான் வயிறு நிறைக்கும் எனவும்; அந்தணர்க்குச் சான்றோர்க்குக் கொடுக்கும் எனவும்; நிலத்தினும், வானினும் பெரிது எனவும்; நல்லாற்றது, தீயாற்றது என்னாது கொள்ளும் எனவும்; அரங்கிலே, அறையிலே நடிக்கும் எனவும் இவ்வாறு வருவன பல பெயர்க்கண் ஓருருபு வந்து ஒரு சொல்லான் முற்றுப்பெற்றன. “துணிநீராற் றூய்மதி நாளா னணிபெற ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடும் ஆன்றவ ரடக்கம்போல் அலர்செல்லாச் சினையொடும் வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் புதலொடும் நல்லவர் நுடக்கம்போல் நயம்வந்த கொம்பொடும் உணர்ந்தவர் ஈகைபோல் இணரூழ்த்த மரத்தொடும் புணர்ந்தவர் முயக்கம்போற் புரிவுற்ற கொடியொடும் நயந்தார்க்கோ நல்லைமன் இளவேனில்’’ (கலி. பாலை. 32) என்பதனுள் ஆலும், ஒடுவும் பல அடுக்கிவந்து நல்லை என்பதனொடு முடிந்தன. (18) இதுவுமது 100. இறுதியு மிடையும் எல்லா வுருபும் நெறிபடு பொருள்வயின் நிலவுதல் வரையார். பல உருபு தொடர்ந்து அடுக்கி வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முதற்கண் நின்ற வேற்றுமை உருபே பொருளொடு முடித லன்றி, இறுதிக்கண்ணும் இடையின்கண்ணும் எல்லா உருபும் விரவிவந்து முடிக்கும் பொருண்மைக்கண்ணே நிலைபெறுதல் நீக்கார், எ-று. நெறிபடுபொருள் என்பது முதலும் இடையும் இறுதியும் நின்ற பலவகை உருபிற்கும் ஏற்புடைப் பொருளை. (எ-டு.) குயவன் குடத்தைத் திகிரியான் அரங்கின்கண் வனைந்தான் எனவும், சாத்தன் ஆடையை வலியினாற் காட்டின்கண் பறித்தான் எனவும் இறுதியும் இடையும் முதலும் நின்ற உருபெல்லாம் ஒரு வினையான் முடிந்தவாறு கண்டு கொள்க. (19) இதுவுமது 101. பிறிதுபிறி தேற்றலும் உருபுதொக வருதலும் நெறிபட வழங்கிய வழிமருங் கென்ப. இது பல உருபுந் தொடர்ந் தடுக்கியவழி வரும் வேறுபாடும், உருபு தொகுமாறும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறுதியும் இடையும் நின்ற எல்லா உருபும் முடிக்கும் வினை ஒன்றனொடு முடிதலே யன்றி, வேறு வேறு வினையேற்று ஒரு வினையொடு முடிதலும், அவ்வுருபுகள் தொக்குநின்று முடிக்குஞ் சொல்லொடு முடிதலும் நெறிபட வழங்கிய நெறிப் பக்கத்தன என்று சொல்லுவர், எ-று. இறுதியும் இடையும் என்பது மேலைச் சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப்பட்டது. நெறிபட வழங்கிய பக்கம் என்றமையான் ஏற்கும் வினையே கொள்ளப்படும். ‘பிறிது பிறிதேற்றல்’ கூறல் வேண்டா; வேற்றுமை உருபு வினை யொடு முடியும் என்பதனாற் பெறுதுமெனின், மேல் நின்ற அதிகாரம் பல உருபடுக்கியவழி ஒருவினையான் முடியும் என்றமையான், தனித்தனி வினைகொண்டு முடியவும் பெறுமோ என நின்ற ஐயம் தீர்த்தற்குக் கூறல் வேண்டுமென்க. ஈண்டு உருபு, தொகுதல் கூறிய தென்னை? வேற்றுமைத் தொகை என எச்சவியலுட் கூறுகின்றாராதலின் எனின், தொகைச் சொல்லாவது இறுதிப் பெயரொடு தொக்கு ஒரு சொன்னீர்மைப் பட்டு நிற்பது; இஃதன்ன தன்றித் தொகாநிலைத் தொடர்ச்சிக்கண் உருபு மாத்திரம் தொக்கு நிற்கும் என்று கொள்க. (எ-டு.) ‘காதலியைக் கொண்டு கவுந்தியொடு கூடி மாதரிக்குக் காட்டி மனையி னகன்றுபோய்க் கோதி லிறைவனது கூடற்கட் கோவலன்சென் றேத முறுதல் வினை’. இதனுள், பல உருபு பலவினையான் வந்தன, ஒருவினையான் முற்றுப் பெற்றன. உருபு தொக வருமாறு:- நிலத்தைக் கடந்தான்; வாளால் வெட்டி னான்; கொலைக்கு உடம்பட்டான்; வரையினின்றும் பாய்ந்தான்; சாத்தனது பொத்தகம்; மாடத்துக்கண் இருந்தான் என்பன, நிலம் கடந்தான்; வாள் வெட்டினான்; கொலை யுடம்பட்டான்; வரைபாய்ந்தான்; சாத்தன் பொத்தகம்; மாடத்திருந்தான் என உருபு தொக்கவழியும் ஒட்டுப்படாது நின்று, தொகாநிலைத் தொடர்ச்சியாகிப் பொருள் பட்டவாறு கண்டு கொள்க. தொகைச் சொல்லும், உருபு தொகைச் சொல்லும் வேறுபாடில வாயினு மோசை வேற்றுமையான் வேறுபாடறிந்துகொள்க. ‘பிறிது பிறிதேற்றல்’ என்பதனை ஆறனுருபு ஏனையுருபேற்கும் எனப் பொருளுரைத்துச் சாத்தனதனை, சாத்தனதனொடு என உதாரணங் காட்டுபவா லெனின், அவ்வாறு வரும் அது என்பது உருபுநிலை யொழிந்து பொருளாய் நிற்றலானும், சாத்தனதனைக் கொணர்ந்தான் என்றவழி இடைநின்ற அது என்பது உருபாயிற் சாத்தனைக் கொணர்ந் தான் என்னும் பொருள் படல்வேண்டும்; அவ்வாறு பொருள் படாது உடைப் பொருளையே காட்டுதலானும்; அஃறிணை யொருமை அது என்னும் பெயர்த்தாதலானும், சாத்தன் பொத்தகத்தைக் கொணர்ந் தான் என்றாற் போல்வதல்லது, உருபு பெற்றதென்றல் அமையா தென்க. (20) உருபு தொகும்வழிப் படுவதோர் இலக்கணம் 102. ஐயுங் கண்ணு மல்லாப் பொருள்வயின் மெய்யுருபு தொகா விறுதி யான. மேலதற்கொரு புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டாவதும் ஏழாவதும் அல்லாத பொருட்கண் வரும் உருபு தொடர்மொழி யீற்றின்கண் தொகா, எ-று. ‘உய்த்துக் கொண்டுணர்தல்’ என்னும் தந்திர உத்தியான் உருபேற்ற சொல்லும் முடிக்குஞ் சொல்லும் மாறி நிற்கவும் பெறும் என்பது பெற்றாம் : என்னை? அவை இறுதியிற்றொகா என்றமையின். அவை மொழிமாறி நிற்குமாறு;- கடந்தான் நிலத்தை; வெட்டினான் வாளான்; கொடுத்தான் சாத்தற்கு; நீங்கினான் ஊரின், ஆடை சாத்தனது; இருந்தான் குன்றத்துக்கண் என்பன; இவற்றுள் உருபுதொக வந்தன :- கடந்தான் நிலம், இருந்தான் குன்றத்து என்பன; என்னை? இவை உருபு தொக்கவழியுந் தம் பொருண்மை விளக்கின. ஏனையவும் இவ்வாறு வருமெனக் கருதின் அவை தம் பொருள் படாமையிற் றொகா என்றார். வெட்டினான் வாள்; கொடுத்தான் சாத்தன்; நீங்கினான் ஊர்; ஆடை சாத்தன் என்றவழித் தம்பொருள் படாமை கண்டுகொள்க. (21) வேற்றுமை யுருபே யன்றிப் பிறவும் மயங்கு மெனல் 103. யாத னுருபிற் கூறிற் றாயினும் பொருள்செல் மருங்கின் வேற்றுமை சாரும். வேற்றுமை உருபு தம்முள் மயங்குதலின்றிப் பிற உருபொடு மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யாதொன்றன் உருபிற் கூறினும் பொருள் செல்லும் வழி வேற்றுமையும் செல்லும், எ-று. யாதனுருபு என்பது வேற்றுமை யல்லாத உருபு. உருபு எனினும் வடிவு எனினும் ஒக்கும். ‘அம்மூ வுருபின தோன்றலாறே’ (156) என வடிவிற்குப் பெயராகிப் பிறாண்டும் வந்தது. ‘வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்த மென்றுணரற் பாற்று’ (குறள். 11.) எனவும், மருந்துண்டு நோய்தீர்ந்தது எனவும் வருவுழி, உலகம் வழங்கி வருதற்கு மழை ஏதுவாகலானும், நோய் தீர்தற்கு மருந்து ஏதுவாகலானும் இவற்றிற்குப் பொருளுரைக்குங்கால் மழை நிலைநிற்றலான் உலக நடை தப்பாது எனவும், மருந்துண்டலான் நோய் தீர்ந்தது எனவும் உரைக்க வேண்டுதலின், இவை வேற்றுமை உருபான் வந்திலவாயினும், பொருண்மை முகத்தான் வேற்றுமை யாதலின், இவை இவ்வாறும் வரப் பெறும் என்று வழுவமைத்த வாறாம். (22) எதிர்மறைக் கண்ணும் வேற்றுமைப் பொருள் திரியாமை 104. எதிர்மறுத்து மொழியினுந் தத்த மரபின் பொருணிலை திரியா வேற்றுமைச் சொல்லே. எல்லா வேற்றுமைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைச் சொற்கள் தத்த மரபிற் பொருணிலையை எதிர்மறுத்து மொழியினும் திரியா, எ-று. (எ-டு.) குடத்தை வனையான், சாத்தனொடு கூடான், அந்தணர்க்குக் கொடான், ஊரின் நீங்கான், சாத்தனதன்று ஆடை, குன்றத்துக்கண் இரான் என வரும். குடத்தை வனையான் என்றவழிச் செயப்படுபொருள் தோன்றிற்றன் றாயினும், இவ்வாறு சொல்லப்பெறும் என வழுவமைத்தவாறு. (23) உருபுகளுட் சில திரியுமெனல் 105. குஐ ஆன்என வரூஉம் இறுதி அவ்வொடுஞ் சிவணுஞ் செய்யு ளுள்ளே. வேற்றுமை யுருபினுள் சிலவற்றிற்கு உரியதொரு திரிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கு, ஐ, ஆன் என்று சொல்லப்பட்ட தொடர்மொழி இறுதிக்கண் வரும் உருபு, அவ்வொடும் சிவணும் செய்யுளகத்து, எ-று. உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். (24) எய்தியது விலக்கல் 106. அ எனப் பிறத்தல் அஃறிணை மருங்கின் குவ்வும் ஐயும் இல்லென மொழிப. எய்தியது ஒருமருங்கு விலக்குதல் நுதலிற்று (இ-ள்.) அஃறிணைப் பொருட்கண் குவ்வும், ஐயும் அகரத்தொடு சிவணா, எ-று. எனவே, உயர்திணைக்கண் மூன்றுருபும் சிவணும் என்பதூஉம், அஃறிணைக்கண் ஓருருபு சிவணும் என்பதூஉம் கூறியவாறாம். (எ-டு.) ‘கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க’ (தொல். புள்ளி. 94); ‘புள்ளினான’; ‘புலவரினான’ என வந்தன. ஐகாரம் அகரத்தொடு சிவணு மாறு வந்தவழிக் கண்டு கொள்க. பரிபாடலகத்து - ‘நின்னொக்கும் புகழ் நிழலவை, நீழ னேமியவை’ (பாடல் 1) என்பன அகரத்தொடு சிவணி வந்தன எனினும் அமையும். இவை அஃறிணைப் பொருள் அன்றோ எனின்; தெய்வப் பொருண்மையான் உயர்திணையாம். (25) ஏனையுருபுகள் நான்கனுருபிற் சென்று மயங்கல் 107. இதன திதுவிற் றென்னுங் கிளவியும் அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும் அதனாற் செயப்படற் கொத்த கிளவியும் முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும் பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும் காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும் பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும் அன்ன பிறவும் நான்க னுருபின் தொன்னெறி மரபின தோன்ற லாறே. ஓருருபு பலபொருட்கண் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இதனது இது இற்று என்பது முதலாகச் சொல்லப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் நான்காம் உருபின் பண்டையோர் வழக்காகிய மரபின வாகித் தோன்றுதல் நெறி, எ-று. ‘இதனது இது இற்று’ என்பது ‘யானையது கோடு வெள்ளிது’ என்பது ‘யானைக்குக் கோடு வெள்ளிது’ என வரும். ‘அதனைக் கொள்ளும் பொருள் வயினானும்’ என்பது ஒன்றைக் கொள்ளும் பொருட்கண்ணும் வரும், எ-று. ஆன் இடைச்சொல். ‘காணத்தாற் கொண்ட அரிசி’ யென்பது ‘காணத்திற்குக் கொண்ட அரிசி’ என வரும். ‘அதனாற் செயப்படற் கொத்த கிளவி’ என்பது அவனாற் செயப் படும் என்னும் பொருண்மைக்குப் பொருந்திய சொல், எ-று. ‘அவனான் முடியும்’ என்பது ‘அவற்கு முடியும்’ என வரும். ‘முறைக்கொண்டெழுந்த பெயர்ச்சொற் கிளவி’ என்பது முறையைக் கொண்டெழுந்த பெயர்ச்சொற் பொருண்மை, எ-று. ‘ஆவினது கன்று’ என்பது ‘ஆவிற்குக் கன்று’ என வரும். ‘பால்வரை கிளவி’ என்பது இடம் வரைந்த சொல் என்றவாறு. ‘கருவூரின் கிழக்கு’ என்பது ‘கருவூர்க்குக் கிழக்கு’ என வரும். ‘பண்பின் ஆக்கம்’ என்பது பண்பினான் ஆகுஞ் சொல் என்றவாறு. ‘இதனின் நெடிது’ என்பது ‘இதற்கு நெடிது’ என வரும். ‘காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவி’ என்பது காலத்தான் உணருஞ் சொல் என்றவாறு. ‘காலைக்கண் வரும்’ என்பது ‘காலைக்கு வரும்’ என வரும். ‘பற்றுவிடு கிளவி’ என்பது ‘இதனிற் பற்றுவிடும்’ என்னும் ஏதுப் பொருண்மைக்கண் ‘இதற்குப் பற்றுவிடும்’ என வரும். ‘தீர்ந்து மொழி கிளவி’ என்பது ‘மருந்தின் தீர்ந்தது’ என்பது ‘மருந்திற்குத் தீர்ந்தது’ என வரும். ‘அன்ன பிறவும்’ என்றதனான் ‘கிளையரில் நாணற் கிழங்கு மணற் கீன்ற’ (அகம். 221) என ஏழாவதன் இடப்பொருண்மைக்கண் நான்காவது வந்தது. பிறவும் இந்நிகரனவெல்லாம் வந்தவழி அனுமித்துக்கொள்க. (26) நான்காவது ஒழிந்த ஏனைய உருபுகளும் பிறபொருளின்கண் மயங்கல் 108. ஏனை யுருபும் அன்ன மரபின மான மிலவே சொன்முறை யான. நான்காவது ஒழிந்த உருபுகள் ஏனை உருபிற்கு உரிய பொருளொடு மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நான்காவது ஒழிந்த உருபுகளும் ஏனைப் பொருளொடு மயங்கும் மரபினை யுடைய; அவை சொல்லிலக்கணத்தாற் குற்றமில, எ-று. (எ-டு.) “கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று’’ (குறள். 1313) இதனுள் ஒருத்திக்கு எனற்பாலது ஒருத்தியை யென இரண்டாவத னோடும் மயங்கி வந்தது. “அறல்சாஅய் பொழுதோடெம் அணிநுதல் வேறாகி” (கலி. பாலை. 26) என்றவழிப் பொழுதின்கண் எனற்பாலது பொழு தோடென மூன்றாவது ஏழாவதனொடு மயங்கிற்று. பிறவும் அன்ன. (27) எழுவகை வேற்றுமையும் தொழில் முதனிலை எனல் 109. வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா இன்னதற் கிதுபயன் ஆக வென்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழின்முதல் நிலையே. எழுவகை வேற்றுமையினும் காரக வேற்றுமை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையும், கருத்தாவும், செயப்படுபொருளும், இடமும், காலமும், கருவியும் என்று சொல்லப்பட்டவற்றொடு கொள்வதூஉம், பயனும் ஆகிய அவ் விரண்டொடும் தொகைஇ, அவ் வெட்டென்று சொல்லுவர் தொழிற் காரகம், எ-று. நெய்தான் என்றவழி, நெய்யப்பட்ட பொருளும், நெய்தலாகிய தொழிலும், நெய்தற்குக் கருவியும், நெய்தற்குக் காலமும், நெய்தற்கு இடமும், நெய்யுங் கருத்தாவும், அதனைக் கொள்வானும், அதனாற் பயனும் உள்ள வழி யல்லது நெய்தற் றொழிலாற் செய்யப்பட்ட பொருள் உளதாகாமை யின், அவற்றை முதனிலை யென்றார். அவற்றுள், பயனும் கொள்வதும் ஏனையவற்றொடு ஒத்த சிறப்பின்மையின், இரண்டென, வகுத்துக் கூறினார். இவற்றுள், தொழிலும், செயப்படு பொருளும் இரண்டாவதாயின : ஆடையை நெய்தான், நெய்தலைச் செய்தான். கருவியும், கருத்தாவும் மூன்றாவதாயின : சாலியனான் நெய்யப்பட்டது, நெம்பினான் நெய்யப் பட்டது. கொள்வதும் பயனும் நான்காவது ஆயின: அந்தணர்க்கு நெய்தான், கூலிக்கு நெய்தான். இடமும் காலமும் ஏழாவது ஆயின: கூடத்துக்கண் நெய்தான், காலைக்கண் நெய்தான். இவற்றுள் கருத்தா முதல் வேற்றுமையும் ஆம். சாலியன் நெய்தான். அஃதேல், ஐந்தாவதாகிய நீங்க நிற்றல் காரகம் அன்றோ எனின், காரகம் என்பது தொழில் முதனிலையாகலிற் காரகம் அன்றென்பது போலும் கருத்து. நீங்க நிற்றல் முதனிலையாகாவாறு என்னை யெனின், ஆடையை நெய்து முடித்தான் படமரத்தினின்றும் வாங்குதல் நீக்கம் ஆகலின், அஃது அத்தொழில் முடிந்தபின் நிகழின் அல்லது தொழிற்கு உறுப்பு அன்மையான் காரணம் அன்றாயிற்று. ஆறாவது அவ்வாடையைக் கிழமை செய்வான் மாட்டே நிகழ்தலின், அதுவும் காரகம் அன்றாயிற்று. முதற்காரணம் கருவியின் அடங்கும் : நூலால் நெய்தான். (28) மேலதற்கொரு புறநடை 110. அவைதாம், வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும். மேலதற்கு ஒரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட எண்வகைப் பொருளினும் வழங்கிய நெறிக்கண் குறைவன குறையும், எ-று. தொழில் கண்டுழி யெல்லாம் இவை எட்டும் வருதல் நியமமின்று, எ-று. (எ-டு.) ஆடையை நெய்தான் றனக்கு என்றவழிக் கொள்வான் பிறன் ஒருவன் இன்மையின், அப் பொருண்மை குறைந்து நின்றது. உலகினைப் படைத்தான் என்றவழிக் கொள்வானும், பயனும் இன்றி வந்தது. கொடி ஆடிற்று என்றவழிச் செயப்படுபொருளும், கொள்வானும் பயனும் இன்றி வந்தது. பிறவும் அன்ன. (29) ஆகுபெயரிலக்கணம் 111. முதலிற் கூறும் சினையறி கிளவியும் சினையிற் கூறும் முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறலும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெய ரொட்டும் வினைமுத லுரைக்குங் கிளவியொடு தொகைஇ அனைய மரபினவே ஆகுபெயர்க் கிளவி. ஆகுபெயர்க்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. வேற்றுமைப் பொருள் மயக்கம் உணர்த்திற்று எனினும்அமையும். ஆகுபெயர் என்பது யாதோ எனின், யாதானும் ஒரு பொருத்தத்தி னான் ஒன்றன் பெயர் ஒன்றதாகி வருவது. (இ-ள்.) முதலிற் கூறும் சினையறி கிளவி முதலாக எண்ணப்பட்ட னவும், வினைமுதல் உரைக்குங் கிளவியொடு கூட அத்தன்மையவாகிய மரபினையுடையவும் ஆகுபெயர்ச் சொல்லாம், எ-று. மரபினவும் என்னும் உம்மை எஞ்சி நிற்க ஏகாரம் எண்ணுக் குறித்து நின்றது. ஆம் என்பது எஞ்சி நின்றது. (எ-டு.) ‘முதலிற் கூறும் சினையறி கிளவி’ என்பது சினைப் பொருளை முதலாற் கூறும் பெயர்ச் சொல்; கடு என்பது, கடுவினது காயைக் கடு என வழங்குதலின் ஆகுபெயராயிற்று. ‘சினையிற் கூறும் முதலறி கிளவியாவது’ முதற்பொருளைச் சினையாற் கூறும் பெயர்ச்சொல்; பூ நட்டார் என்பது, நடப்படுவது பூவினது முதலாதலின், அம்முதலைப் பூ என்று வழங்குதலின் ஆகுபெய ராயிற்று. ‘நகையச் சாக நல்லமிர்து கலந்த-நடுநிலை திறம்பிய நயமி லொருகை’ (பரி. 3 - 33, 34) ‘ஏந்திள வனமுலை இறைநெறித்ததூஉம்’ (மணி. 18 - 69) என்பனவும் அவை. “பிறந்த வழிக் கூறலென்பது” இடத்து நிகழ் பொருளை இடத்தாற் கூறுதல்; வேளார்காணி என்பது, வேளார்காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரான் வழங்குதலின் ஆகுபெயராயிற்று. யாழ்கேட்டான் என்பதும் அது : யாழிற் பிறந்த இசையையும் யாழ் என்றமையான். “பண்பு கொள் பெயராவது” பண்பின் பெயரான் பண்புடைய தனைக் கூறல்; நீலம் என்றவழி அந்நிறத்தை உடைய மணியை நீலம் என்பதாக வழங்குதலின் ஆகுபெயராயிற்று. “இயன்றது மொழிதலாவது” இயன்றதனான் மொழிதல் என விரியும். அது காரியப் பொருளைக் காரணத்தான் மொழிதல். பொன் பூண்டான் என்றவழிப் பொன்னினான் ஆகிய அணிகலத்தைப் பொன் என்று வழங்கு தலின் ஆகுபெயராயிற்று. தன் மெய் காட்டி இஃதோர் அம்பு, இஃதொரு வேல் என்றவழி அவை பட்ட வடுவை அவற்றிற்குக் காரண மாகிய கருவிப் பெயரான் வழங்குவனவும் அமையும். இன்னும் ‘இயன்றது மொழிதல்’ என்பதன்கண் இரண்டாவதை விரித்து இயன்றதனை மொழிதல் எனவாம்; அது காரணப்பொருளைக் காரியத்தாற் கூறுதல். நெல்லாதல், காணமாதல் ஒருவன் கொடுப்பக் கொண்டவன், இற்றைக்குச் சோறு பெற்றேன் என்னும். அவ்வழிச் சோற்றுக்குக் காரணமாகிய நெல்லுங் காணமும் சோறு என ஆகுபெயராயின. “இருபெயரொட்டு” என்பது இரண்டு பெயர் தொக்கு ஒரு சொன்னீர்மைப் பட்டு மற்றொரு பொருட்குப் பெயராகி வருவது. அது துடியிடை என்பது, துடிபோன்ற இடையினை உடையாளைத் துடியிடை என்பவாகலின் ஆகுபெயராயிற்று. இஃது உவமத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யன்றோ எனின், ஆகுபெயராவது ஒட்டுப்பட்ட பொருளோடு ஒற்றுமைப்பட்டு வரும். அன்மொழித் தொகையாவது அப்பொருளின் வேறுபட்டு வரும். அன்னதாதல் அன்மொழி என்றத னானும் விளங்கும். அதனானேயன்றே ‘பண்பு தொகவரூஉங் கிளவியானும்-உம்மை தொக்க பெயர் வயினானும் வேற்றுமை தொக்க பெயர்வயினானும் ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே’ (எச்சவியல் 21) என ஓதுவாராயிற்று. “வினைமுத லுரைக்குங் கிளவி” என்பது - வினையும் முதலும் உரைக்குங் கிளவி என உம்மைத் தொகையாகக் கொள்ளப்படும். கொள்ளவே, வினையான் உரைக்குங் கிளவியும், வினைமுதலான் உரைக்குங் கிளவியும் ஆகுபெயராம் என்றவாறாம். வினையான் உரைக்கப்பட்டன:- எழுத்து, சொல் என்பன எழுதப்பட்டதனையும், சொல்லப்பட்டதனையும் அப் பெயரான் வழங்குதலின், ஆகுபெயராயின. என் காவலிலே கட்டான் என்பதும் அது. வினைமுதலான் உரைக்கப் பட்டன செய்தானாற் செயப்படு பொருட்குப் பெயராகி வருவன: சாலியனால் நெய்யப்பட்ட ஆடையைச் சாலியன் என்பது. தொல்காப்பி யம் என்பதோ எனின், அஃது ஈறு திரிந்து நின்று, அவனான் செய்யப் பட்டது என்னும் பொருளை விளக்குதலின் ஆகுபெயராகாது : காரணப் பெயராம். ‘அனையமரபின’ என்றதனான் ஈண்டு ஓதப்பட்டனவற்றுள் அடை யடுத்து வருவனவும் கொள்க. தாழ்குழல் என்றவழி அதனையுடையாட்குப் பெயராகி வருதலின் ஆகுபெயராயிற்று. இது வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்றோ வெனின், ஆண்டு எடுத்து ஓதாமையினானும், பொருள் ஒற்றுமைப்படுதலானும் ஆகாது என்க. (30) * (பாடம்) ‘அனைமரபினவே’ என்பது. இதுவுமது 112. அவைதாம், தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும் ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டலும் அப்பண் பினவே நுவலுங் காலை வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். இதுவும் ஒருவாற்றான் ஆகுபெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. விரிந்தது தொகுத்தலை நுதலிற்று எனினும் அமையும். (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஆகுபெயர்தாம், தத்தம் பொருள்வயிற் சிவணலும், தம்மொடு சிவணலும், பொருத்தமில்லாத நெறிக்கண் சுட்டலும், பிறிதின்கிழமைப் பொருளைச் சுட்டலும் ஆகிய அவ்வியல் பினையுடைய; அவ்வாறு சொல்லுங்காலத்து வேற்றுமைப் பொருட்கண் பாதுகாத்தல் வேண்டும், எ-று. ‘சிவணல்’ என்பதனை இரண்டிடத்துங் கூட்டுக. ‘சுட்டல்’ என்பதனையும் இரண்டிடத்துங் கூட்டுக. ‘தத்தம் பொருள் வயிற் சிவணல்’ என்பது முதற்பொருள் சினைப்பொருளைச் சிவணுதல். அவை கடு, பொன் என்பன. ‘தம்மொடு சிவணல்’ ஆவது சினைப்பொருள் முதற்பொருளைச் சிவணுதல். அவை பூ, நீலம், சோறு, துடியிடை, தாழ்குழல் என்பன. ஒப்பில் வழிக்கண் சுட்டியது வேளார்காணி. ‘பிறிது பொருள் சுட்டியது’ சாலியன். ‘வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும்’ என்பது-ஆகு பெயர் என்பது வேண்டியவாறு சொல்லப்படாது: வேற்றுமைப் பொருட் கண்ணே வரப்பெறுவது என்றவாறு. அவை அப்பொருட்கண் வந்தவாறு-முதலிற் கூறும் சினையறி கிளவியும், சினையிற் கூறும் முதலறி கிளவியும், பண்புகொள் பெயரும், இருபெயர் ஒட்டும் ஆறாம்வேற்றுமைப் பொருண் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். இயன்றது மொழிதலும், வினைமுதல் உரைக்கும் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். (31) இதுவுமது 113. அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி உளவென மொழிப உணர்ந்திசி னோரே. இதுவும் ஆகுபெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளவுப்பெயரும் நிறைப்பெயரும் மேற்சொல்லப்பட்ட ஆகுபெயரொடு கொள்ளுமிடமும் உளவென்று சொல்லுவர் உணர்ந்தோர், எ-று. கொள்வழி உள என்றதனான், தம்பெயர் விளங்கும் எண்ணுக் குறிப்பன்றி அளக்கப்பட்ட பொருள் மேலும், நிறுக்கப்பட்ட பொருள் மேலும், கருவி மேலும் வரின் அவையும் வேற்றுமைப் பொருளான் ஆகு பெயராம் என்று கொள்க. எண்ணுமுறையான் உழக்கு, நாழி என்னும் அளவினைக் கொள்ளும் பாண்டத்தினையும், அளக்கப்படும் பொருளினையும் உழக்கு, நாழி என்ப. கால், கழஞ்சு என்னும் நிறையினது அளவாகிய கல்லையும், பொன்னையும் கால், கழஞ்சு என்ப. இந் நிலம், ஒருமா, இம்மனை முக்கால் என்பனவும் அளவுப் பகுதிய. அஃதேல், இவ்வெருது ஒன்று என எண்ணப்பட்ட பொருள்மேல் எண்ணுப் பெயர் வருவது ஆகுபெயர் ஆகாதோ எனின், அளவும் நிறையும் போலாது எண்ணப்பட்ட பொருளை எண்ணுப் பிரிந்து நில்லாமையான், அதுவும் அப்பொருட்கு ஒரு காரணத்தாற் பெற்ற பெயர் எனின் அல்லது ஆகுபெயர் எனப்படாதென்று கொள்க. அளவும், நிறையும் பிரிந்து நின்றவாறு என்னை யெனின், இப்பொன் கால், இப்பொன் கழஞ்சு என்ற வழி, அவை ஓர் உருவாகியும், பல உருவாகியும் வரின் அல்லது; கால், கழஞ்சு என்னும் நிறைப்பொருண்மை புலப்படாது நிற்றலிற் பிரிந்து நின்றன. (32) ஆகுபெயர்க்குப் புறநடை 114. கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. ஆகுபெயர்க்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எடுத்து ஓதப்பட்ட வாய்பாட்டான் அன்றி வேறு வருவனவும் எடுத்தோதிய நெறியினான் ஆகுபெயர் ஆமாறு அறிந்துகொள்க, எ-று. அவையாவன :- பாவை, திரு என்பன வடிவுபற்றியும்; பசு, கழுதை என்பன குணம் பற்றியும்; புலி, சிங்கம் என்பன தொழில் பற்றியும் ஒன்றன் பெயர் ஒன்றற்கு ஆகி வருவனவும் ஆகுபெயர் என்றே கொள்ளப்படும். ‘எயின் முகம் சிதையத் தோட்டி ஏவலில்-தோட்டி தந்த தொடிமருப் பியானை’ (பதிற்றுப். 38) என்ற வழித் தோட்டியை யுடையானைத் தோட்டி என ஆகு பெயர் ஆயிற்று. இவை ஆகுபெயர் ஆகுங்கால் பாவை வந்தாள், சிங்கம் வந்தான் எனத் தத்தம் பொருண்மை வாய்பாட்டான் முடியும். ‘கவழக் களிப்பியன்மால் யானைசிற் றாளி தவழத்தா னில்லா ததுபோற்-பவழக் கடிகை யிடைமுத்தங் காண்டொறும் நில்லா தொடிகை யிடைமுத்தந் தொக்கு’ (திணைமாலை. 42) என்றவழித் தொடியென்பது ஆகுபெயராயிற்று. (33) வேற்றுமை மயங்கியல் முற்றிற்று இவ்வியல் சூத்திரமும் உரையும் கிரந்த (எண்) வகையான் 300 4 விளிமரபு விளியின் இலக்கணம் 115. விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்று மியற்கைய வென்ப. இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், விளிமரபு என்னும் பெயர்த்து. நிறுத்த முறையானே எழுவகை வேற்றுமையும், அவற்றது மயக்கமும் உணர்த்தியதன்பின், எட்டாவதாகிய விளி இலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். இதன் முதற் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், விளி இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) விளி என்று சொல்லப்படுவன தம்மை ஏற்கும் பெயரொடு விளங்கத் தோன்றும் இயற்கையினை யுடைய என்று சொல்லுவார், எ-று. ஏனை வேற்றுமை போல உருபு பிரிந்து வாராது பெரும்பான்மையும் பெயரோடு ஒற்றுமைப்பட்டு வருமென்பதூஉம், ‘கொள்ளும் பெயரொடு’ என்றமையாற் கொள்ளாப் பெயரும் உளவென்பதூஉம் பெறுதும். விளி என்றதனான் இவ்வேற்றுமை விளித்தற் பொருண்மைக்கண் வரும் என்று கொள்க (1) அதனை இவ்வியலில் உணர்த்துவாம் எனல் 116. அவ்வே, இவ்வென அறிதற்கு மெய்பெறக் கிளப்ப. எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட விளி வேற்றுமைதாம் இவையென அறிதற்கு உருபு பெறவும் கிளப்ப ஆசிரியர், எ-று. உம்மை எஞ்சி நின்றது. இவ்விரண்டு சூத்திரத்தானும் சொல்லியது விளி வேற்றுமை வருவழி, அதனை ஏற்கும் பெயர் இயல்பாகியும் திரிந்தும் குறைந்தும் மிக்கும் வரும் என்றவாறு. (2) உயர்திணையில் விளியேற்கும் ஈற்றுப் பெயர்கள் 117. அவற்றுள், இஉ ஐஓ வென்னும் இறுதி யப்பால் நான்கே உயர்திணை மருங்கின் மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே. உயர்திணைப் பெயருள் உயிரீறாகி விளியேற்கும் பெயரை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணை இடத்துள்ள பொருளைச் சுட்டிய விளியேற்கும் பெயர் இ, உ, ஐ, ஓ என்னும் ஈற்றினை யுடைய அக்கூற்று நான்கு, எ-று. உயர்திணை மருங்கினுள்ள பொருள் சுட்டிய என்றமையான் உயர்திணைப் பெயரென வகுத்தோதப் படுவனவும், விரவுப் பெயருள் உயர்திணை குறித்தனவும் கொள்ளப்படும். (3) இகர ஐகார ஈற்றுப் பெயர்கள் விளியேற்குமாறு 118. அவற்றுள், இஈ யாகும் ஐஆ யாகும். இகர ஐகார ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இகரம் ஈகாரமாய்த் திரிந்தும், ஐகாரம் ஆய் எனத் திரிந்தும் விளி ஏற்கும், எ-று. (எ-டு.) நம்பி, சாத்தி என்பன நம்பீ, சாத்தீ என விளி யேற்கும். நங்கை நங்காய் எனவும், தந்தை தந்தாய் எனவும் வரும். (4) ஓகார உகர ஈற்றுப் பெயர்கள் விளியேற்குமாறு 119. ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் உகரந் தானே குற்றிய லுகரம். உகர ஓகார ஈற்றுப் பெயர் விளி யேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஓகாரமும், உகரமும் ஏகாரம் பெற்று விளியேற்கும்; ஆண்டுக் குற்றிய லுகரமே ஈறாகுவது, எ-று. (எ-டு.) கோ, கோவே; வேந்து, வேந்தே என வரும். பிறவு மன்ன. (5) ஏனை உயிரீற்றுப் பெயர்கள் உயர்திணையில் விளியேலாமை 120. ஏனை உயிரே உயர்திணை மருங்கின் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர். ஐயந்தீர்த்தல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட உயிரல்லாத உயிர்கள் உயர்திணை யிடத்து வரின் விளி ஏலா, எ-று. (எ-டு.) அவையாவன:-ஆடூ, மகடூ, நீ என்பன. (6) இகர ஈற்று அளபெடைப் பெயர் விளியேற்குமாறு 121. அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப. இகர ஈற்றுக்கண் வருவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அளபெடை மிக்க இகர ஈற்றுப் பெயர் இயற்கையவாகிய செய்தியை யுடைய, எ-று. (எ-டு.) தோழீஇ என்பது விளிக்கண்ணும் அவ்வாறே வரும். செயற்கை என்றதனான் விளிக்கண் வரும் ஓசை வேறுபாடு அறிந்து கொள்க. (7) முறைப் பெயரில் ‘ஐ’ ஈறு விளியேற்குமாறு 122. முறைப்பெயர் மருங்கின் ஐயெ னிறுதி ஆவொடு வருதற் குரியவும் உளவே. ஐகார வீற்று முறைப் பெயர்க்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முறைப் பெயர்க்கண் வரும் ஐகார ஈறு, ஆய் ஆகி வருதலன்றி, ஆ வொடு வருவதற்கு உரிய பெயரும் உள, எ-று. (எ-டு.) அன்னை என்பது அன்னாய் என வருதலேயன்றி, அன்னா எனவும் வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று. (8) அண்மை விளி இயல்பாதல் 123. அண்மைச் சொல்லே யியற்கை யாகும். இருதிணைக்கண்ணும் வரும் எல்லாவீற்றுப் பெயரும் அண்மைக்கண் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. இச்சூத்திரம் முன்னும் பின்னும் நோக்கி நிற்றலிற் சிங்க நோக்காகிக் கிடந்ததென்று கொள்க. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட உயிரீற்றுப் பெயரும், இனியோது கின்ற புள்ளியீற்றுப் பெயரும் அஃறிணைப் பெயரும் அண்மைக்கண் இயல்பாகி விளியேற்கும். னகர ஈறு சிறப்பு விதி பெறுதலின், அஃதொழிந்த ஏனைய கொள்ளப்படும், எ-று. (எ-டு.) நம்பிவாழி; நங்கைவாழி; வேந்துவாழி; கோவாழி; மாதர் கூறு; அண்ணல் கூறு; கடவுள்வாழி; தும்பி கூறு; அன்னங் கூறு; கானல் கூறு எனவரும். பிறவும் அன்ன. ‘ஆவுமானியற் பார்ப்பனமாக்களும்’ (புறம். 9) என்பதும் அண்மை விளி. பிறவும் அன்ன. (9) உயர்திணையில் விளியேற்கும் புள்ளியீற்றுப் பெயர்கள் 124. னரலள வென்னு மந்நான் கென்ப புள்ளி இறுதி விளிகொள் பெயரே. உயர்திணைப் பெயருள் புள்ளியீறாகி விளிகொள்ளும் பெயர் வகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணை மருங்கிற், புள்ளியீறாகி விளிகொள்ளும் பெயர் ன, ர, ல, ள என்னும் ஈற்றினை யுடைய அந்நான்கென்று சொல்லுவார் ஆசிரியர், எ-று. உயர்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. ன, ர, ல, ள என்பன ஆகுபெயராய் அவ் வீற்றினை யுடைய பெயர்க்குப் பெயராயின. உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (10) ஏனைப் புள்ளியீற்றுப் பெயர்கள் உயர்திணையில் விளி ஏலா எனல் 125. ஏனைப் புள்ளி யீறுவிளி கொள்ளா. ஐயமறுத்தலை நுதலிற்று. (இ-ள்.) உயர்திணைப் பொருட்கண் மேற் சொல்லப்பட்ட நான் கீற்றுப் பெயரும் ஒழிய, ஏனையீற்றுப் பெயர்கள் விளியேலா, எ-று. (எ-டு.) அவை: யாம், நாம், எல்லாரும், எல்லீரும், எல்லாம், தாம் என்பன. (11) அன் ஈற்றுப் பெயர் விளியேற்குமாறு 126. அவற்றுள், அன்னெ னிறுதி ஆவா கும்மே. நிறுத்த முறையானே னகர ஈறு விளியேற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், அன் என்னு மீற்றினையுடைய பெயர் ஆ என விளி ஏற்கும், எ-று. ஈறென்பது ஈற்றினையுடைய பெயரை. (எ-டு.) சோழன், சோழா; வெற்பன், வெற்பா; சாத்தன், சாத்தா எனவரும். (12) அன் ஈற்றுப் பெயர் அண்மை விளியில் அகரமாதல் 127. அண்மைச் சொல்லிற் ககர மாகும். எய்தியது விலக்கி மேலதற்கொரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அன் என்னுமீறு அண்மைக்கண் அகரமாகி விளியேற்கும், எ-று. அன் என்பது அதிகாரத்தான் வந்தது. (எ-டு.) சோழ, சாத்த, வெற்ப என வரும். (13) ஆன் ஈற்றுப் பெயர் இயல்பாதல் 128. ஆனெ னிறுதி யியற்கை யாகும். இதுவும் னகர வீற்றுக்கண் வருவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணைப் பொருள் உணர்த்தும் னகார வீற்றுப் பெயருள் ஆன் என்னும் ஈற்றுப் பெயர் இயல்பாகி விளியேற்கும், எ-று. (எ-டு.) சேரமான், மலையமான் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (14) ஆன் ஈற்று வினையாலணையும் பெயர் விளி ஏற்குமாறு 129. தொழிலிற் கூறும் ஆனென் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. ஆனீற்றுப் பெயர்க்கண் வருவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொழிலாற் கூறப்படும் ஆன் ஈற்றுப் பெயர் ஆய் என வரும் விளித்தற்கண், எ-று. (எ-டு.) உண்டான், வந்தான் என்னுந் தொழிற்பெயர் உண்டாய், வந்தாய் என விளியேற்கும். தொழில் என்றதனாற் குறிப்பு வினைப் பெயருங் கொள்க. உடையான், கழலான் என்பன உடையாய், கழலாய் என வரும். ஈண்டு விளிவயினான என விதந்தோதினமையான், தொழிலான் வருஞ் சொல் முன்னிலை வினையாகிய வழியும் உண்டாய் எனவரும் : அஃதன்று இது என்பதூஉம், அதனோடு இதனிடை ஓசை வேறுபாடு உளது என்பதூஉம் அறிவித்தற்கு எனக் கொள்க. (15) ஆன் ஈற்றுப் பண்புப் பெயர் விளி ஏற்குமாறு 130. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. ஆனீற்றுப் பெயருள் பண்புப் பெயர்க்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பண்பினான் பெற்ற ஆன் ஈற்றுப் பெயரும் ஆய் என விளி ஏற்கும், எ-று. (எ-டு.) கரியான், கொடியான் என்பன கரியாய், கொடியாய் என வரும். கரியான் எனவும், விளியேற்குமாலெனின், அவ்வாறு வருவது பண்பு குறியாது அப்பொருட்கு இடுகுறியாகி வந்தது என்க. (16) னகர ஈற்று அளபெடைப்பெயர் விளி ஏற்குமாறு 131. அளபெடைப் பெயரே அளபெடை யியல. னகர ஈற்று அளபெடைப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) னகார இறுதி அளபெடைப் பெயராயின் மேற் சொல்லப் பட்ட அளபெடைப் பெயர் போல இயல்பாகி விளி ஏற்கும், எ-று. (எ-டு.) கிழாஅன், கோஒன் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (17) னகர ஈற்று முறைப்பெயர் விளி ஏற்குமாறு 132. முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே. னகார ஈற்றுள் முறைப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) னகார ஈற்றுள் முறைமை குறித்த பெயர் ஏகாரத்தொடு விளி ஏற்கும், எ-று. (எ-டு.) மகன் என்பது மகனே என வரும். ஒப்பின் முடித்தல் என்பதனான் முறைமை சுட்டாத மகன் என்னும் பெயரும் ஏவொடு சிவணும் என்று கொள்க. “பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே” (குறுந். 156) என வரும். ‘சான்றாள ரீன்ற தகாஅத் தகாஅ மகாஅ-ஈன்றாட் கொருபெண் இவள்’ என (பரி. 8) ஆகாரமாகியும் வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் பிற பெயர்க்கண்ணும் ஏவொடு வருதல் கொள்ளப்படும். ‘கூந்தன்மா வூர்ந்து குடமாடிக் கோவலனாய்ப் பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால்-யாங்கொளித்தாய் தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார் மன்னவனே மார்பின் மறு.’ (முத்தொள்ளாயிரம்) எனவும், கோன் என்பது கோனே எனவும் வரும். இவை ‘செய்யுள் மருங்கினும்’ (453) என்னும் அதிகாரப் புறநடை யாற்கொள்ளினும் அமையும். (18) னகர ஈற்றுப்பெயருள் விளி ஏலாதன 133. தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும் யானென் பெயரும் வினாவின் பெயரும் அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே. னகார ஈற்றுப் பெயருள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தான்; அவன், இவன், உவன்; அத்தன்மையன் அத்தன்மை யான்; அன்னான், அனையான்; யான், யாவன் என வருவன விளி ஏலா; எ-று. (19) ரகர ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு 134. ஆரும் அருவும் ஈரொடு சிவணும். நிறுத்த முறையானே உயர்திணைக்கண் ரகரவீற்றுப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆர், அர் என்னும் ஈற்றுப் பெயர்கள் ஈர் என்பதனொடு சிவணும், எ-று. (எ-டு.) பார்ப்பார், கூத்தர், உடையர் என்பன பார்ப்பீர், கூத்தீர், உடையீர் என வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் பெண்டிர், பெண்டீர் எனவும் வரும். (20) ரகர ஈற்று வினையாலணையும் பெயர் விளி ஏற்குமாறு 135. தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும் வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஈறுகள் தொழிற் பெயராயின் ஏகாரம் வருதலும் குற்றமில்லை என்பார் அறிந்தோர். எ-று. உம்மை இறந்தது தழீஇயிற்று. (எ-டு.) வந்தார், வந்தவர் என்பன வந்தீர் என வருதலேயன்றி, வந்தாரே, வந்தவரே எனவும் வரும். ஈரொடு சிவணும் என்றோதி, ஏகாரம் வருதலுங் குற்றமில்லை என்றதனான் அதனோடு அடுத்து வருதலும் கொள்க. வந்தீரே எனவும் வரும். (21) ரகர ஈற்றுப் பண்பு கொள் பெயர் விளி ஏற்குமாறு 136. பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே. ரகார ஈற்றுப் பண்புகொள் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ரகார ஈற்றுப் பண்பினான் வரும் பெயரும் தொழிற் பெயர் போல விளி ஏற்கும், எ-று. (எ-டு.) கரியார், கரியவர் என்பன கரியீர் என வருதலேயன்றிக் கரியாரே, கரியவரே, கரியீரே எனவும் வரும். (22) ரகர ஈற்று அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு 137. அளபெடைப் பெயரே அளபெடை யியல. ரகார ஈற்று அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ரகார ஈற்று அளபெடைப் பெயர் மேற்சொல்லப்பட்ட அளபெடைப் பெயரே போல இயல்பாகி விளி யேற்கும், எ-று. (எ-டு.) மகாஅர், சிறாஅர் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (23) ரகர ஈற்றுப் பெயருள் விளி ஏலாதன 138. சுட்டுமுதற் பெயரே முற்கிளந் தன்ன. ரகார ஈற்றுள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டு முதலாகிய ரகரவீற்றுப் பெயர் மேற் சொல்லப்பட்ட சுட்டு முதற் பெயர் போல விளி ஏலா, எ-று. (எ-டு.) அவர், இவர், உவர், அத்தன்மையர், அத்தன்மையார் என்பன விளி ஏலா. (24) இதுவுமது 139. நும்மின் திரிபெயர் வினாவின் பெயரென்று அம்முறை இரண்டும் அவற்றியல் பினவே. இதுவுமது. (இ-ள்.) நும்மின் திரிபெயராவது நீயிர். வினாவின் பெயராவது வினாவானாகிய பெயர். அது யாவர் என்பது. அம்முறையாகிய இரண்டு பெயரும் விளியேலா எ-று. இவ் வீற்றினுள் முறைப் பெயர் கூறாதது என்னையெனின், அது பொது விதியான் அடங்குதலின் என்க. (25) லகர, ளகர ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்குமாறு 140. எஞ்சிய இரண்டன் இறுதிப் பெயரே நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும். லகார ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) லகார, ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்புழி ஈற்றயல் நீட்டம் கொடுத்தல் வேண்டும், எ-று. (எ-டு.) குருசில், தோன்றல், மக்கள் என்பன குருசீல், தோன்றால், மக்காள் என வரும். (26) இதுவுமது 141. அயல்நெடி தாயின் இயற்கை யாகும். (இ-ள்.) லகார, ளகார ஈற்றுப் பெயர் விளி ஏற்புழி ஈற்றயல் நெடிதாயின் இயல்பாகி விளி ஏற்கும், எ-று. (எ-டு.) பெண்பால், கோமாள் என்பன விளிக்கண்ணும் அவ்வாறே வரும். (27) ளகார ஈற்றுத் தொழிற் பெயரும் பண்பு கொள் பெயரும் ‘ஆய்’ ஆதல் 142. வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆளென் இறுதி ஆயா கும்மே விளிவயி னான. ளகார ஈற்றுள் ஒருசாரன விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொழிற்பெயர்க்கண்ணும் பண்புப் பெயர்க் கண்ணும் வரும் ஆள் என் இறுதி ஆய் ஆகும் விளித்தற்கண், எ-று. பெயரென்பது அதிகாரத்தான் வந்தது. ஈண்டு ‘விளி வயினான’ என்பதற்கு மேல் உரைத்தவாறே (சூ. 129) உரைக்க. (எ-டு.) உண்டாள், கரியாள் என்பன உண்டாய், கரியாய் எனவரும். (28) ளகார ஈற்று முறைப் பெயர் விளி ஏற்குமாறு 143. முறைப்பெயர்க் கிளவி முறைப்பெய ரியல. ளகார வீற்றுள் முறைப்பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ளகார ஈற்று முறைப் பெயர்ச்சொல் னகார ஈற்று முறைப் பெயர் போல விளி ஏற்கும், எ-று. (எ-டு.) மகள், மகளே என வரும். ஒப்பின் முடித்தல் என்பதனான் முறைமை சுட்டாத மகள் என்பதும் ஏகாரம் பெற்று விளி ஏற்கும். ‘அகவன் மகளே அகவன் மகளே’ (குறு. 23) என வரும். (29) ளகார ஈற்றுப் பெயருள் விளி ஏலாதன 144. சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர். ளகர வீற்றுப் பெயருள் விளி ஏலாதன உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சுட்டெழுத்தை முதலாக உடைய பெயரும், வினாவானாகிய பெயரும் மேற்சொல்லியவாறு போல் விளி ஏலா, எ-று. (எ-டு.) அவள், இவள், உவள், அத்தன்மையள், அத்தன்மையாள்; யாவள் என்பன விளி ஏலா என்றவாறு. (30) லகார, ளகார ஈற்று அளபெடைப் பெயர் விளி ஏற்குமாறு 145. அளபெடைப் பெயரே அளபெடை யியல. லகார ளகார ஈறுகள் அளபெடைக்கண் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) லகார, ளகார ஈற்று அளபெடைப் பெயர் மேற் சொல்லப் பட்ட அளபெடைப் பெயர் போல இயல்பாகும். எ-று. (எ-டு.) ‘வலம்புரித் தடக்கை மாஅல்’; ‘மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள்’ என வரும். (31) அஃறிணை விரவுப் பெயர் விளி ஏற்குமாறு 146. கிளந்த இறுதி அஃறிணை விரவுப்பெயர் விளம்பிய நெறிய விளிக்குங் காலை. அஃறிணைப் பொருள் உணரவரும் விரவுப் பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட ஈற்றினை யுடையவாகிய அஃறிணைப் பொருண்மேல் வரும் விரவுப் பெயர் சொல்லப்பட்ட நெறியவாம் விளிக்குங் காலத்து, எ-று. (எ-டு.) சாத்தன், சாத்தா; சாத்தி, சாத்தீ; குருடன், குருடா; குருடி, குருடீ என வரும். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (32) அஃறிணைப் பெயர் விளி ஏற்குமாறு 147. புள்ளியும் உயிரும் இறுதி யாகிய அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும் விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின் தெளிநிலை யுடைய ஏகாரம் வரலே. அஃறிணைக்கு உரிய பெயர் விளி ஏற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) புள்ளியும் உயிருமாகிய எழுத்தினை ஈறாக வுடைய அஃறிணைப் பெயராகி வருவனவெல்லாம் விளி ஏற்கும் காலந் தோன்றின், ஏகாரம் வருதல் தெளிநிலை யுடைய, எ-று. எனவே, பிறவாற்றான் வருவன இத்துணை விளக்கம் இல என்றவாறாம். என்பது என் சொன்னவாறோ எனின், அஃறிணைப் பெயர் ஏகாரம் பெற்று விளி ஏற்றல் பெரும்பான்மை : உயர்திணைக்கு ஓதிய வாய்பாட்டான் வருதல் சிறுபான்மை என்றவாறு. காலந் தோன்றின் என்றது அஃறிணைப் பெயர் உயர்திணை போல விளி ஏற்பன சில என்பதூஉம், ஏலாதனவும் ஒருகாலம் பற்றி விளிக்கப்படும் என்பதூஉம் அறிவித்தற்கு எனக் கொள்க. (எ-டு.) புலியே, வண்டே, மரையே, மானே, மாவே, குயிலே, மரமே என வரும். தும்பி, தும்பீ எனவும்; யானை, யானாய் எனவும்; வேங்கை, வேங்காய் எனவும்; தென்றல், தென்றால் எனவும்; அரிமான், அரிமானே எனவும் உயர்திணை வகையான் வருவன சிறுபான்மை. (33) விளி ஏற்கும் பெயர்கள் சேய்மையில் அளபிறந்தொலித்தல் 148. உளவெனப் பட்ட எல்லாப் பெயரும் *அளவிறந் தனவே விளிக்குங் காலைச் சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான. இருதிணைக்கண்ணும் வரும் விளிவேற்றுமைக் கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருதிணைக்கண்ணும் விளி ஏற்றற்கு உள எனப்பட்ட எல்லாப் பெயரும் ஓதிய அளவினானன்றி மாத்திரை நீண்டு ஒலிக்கும்: சேய்மைக்கண் நின்ற பொருளை விளிக்கும் வழக்கின்கண், எ-று. எனவே, மேற் சொல்லப்பட்டவற்றுள் நெட்டெழுத்துப் பெற்றன விளிநிலைப் பொருட்கண் என்று கொள்ளப்படும். அளவிறந்தன என்றமையான் மூன்று மாத்திரையின் நீண்டு ஒலித்தலும் கொள்க. (எ-டு.) சாத்தாஅ, கொற்றாஅ எனவும்; சாத்தாஅஅ, கொற்றாஅஅ எனவும் வரும். (34) * (பாடம்) அளபிறந்தனவே என்பது பிற வுரையாசிரியர்கள் கொண்டது. அம்ம என்னும் சொல் விளிப் பொருண்மையில் வரும் எனல் 149. அம்ம வென்னும் அசைச்சொன் னீட்டம் அம்முறைப் பெயரொடு சிவணா தாயினும் விளியொடு கொள்ப தெளியு மோரே. இடைச் சொற்கண் விளிப் பொருண்மை உணர வருவன உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அம்ம என்னும் அசைச்சொல் நீட்டமாகிய அம்மா என்னும் சொல் அம்முறைப் பெயரொடும் பொருந்தா தாயினும், அதனை விளிப் பொருண்மை உணர்த்துஞ் சொல்லொடு கூட்டிக் கொள்ப அறிவோர், எ-று. (எ-டு.) அம்மா கொற்றா என வரும். ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ என்பதனான், ஏட, ஏடா; ஏடி, ஏடீ என வருவனவுங் கொள்க. (35) உயர்திணைப் பெயருள் விளி ஏலாதன 150. த ந நு எ என அவைமுத லாகித் தன்மை குறித்த னரளவென் இறுதியும் அன்ன பிறவும் பெயர்நிலை வரினே இன்மைவேண் டும்விளி* வேற்றுமை கொளலே. எஞ்சிய உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) த, ந, நு, எ-என்பன முதலாகிப் பொருண்மை குறித்த, ன, ர, ள என்னும் ஈற்றினையுடைய சொற்களும், அத்தன்மைய பிறவும் வினைக் குறிப்பு நீர்மை யின்றிப் பெயராகி வரின் விளியேற்றலின்மை வேண்டும் ஆசிரியர், எ-று. அவையாவன :- தமன், தமள், தமர்; நமன், நமள், நமர்; நுமன், நுமள், நுமர்; எமன், எமள், எமர். அன்ன பிறவும் என்றதனான் பிறன், பிறள், பிறர் என வரும். இவை விளி ஏலா. ‘விளங்கு மணிக்கொடும் பூணாஅய் நின்னாட் டிளம்பிடி யொருசூல் பத்தீ னும்மோ’ (புறம். 130) என்புழி, யகர வீறு விளி யேற்றதாலெனின், அவ்வாறு வருவன வழக்குப் பயிற்சி யின்மையின், எடுத்தோதிற்றிலர். ஆயினும் செய்யுண் மருங்கின் (453) என்னும் அதிகாரப் புறநடையான், இந்நிகரன வெல்லாம் அமைத்துக் கொள்க. இவ்விளி வேற்றுமையை முடிக்குஞ் சொல் யாதோ எனின், இஃது எழுவாய் வேற்றுமையது திரிபாகலான், அதற்குப் பயனிலையாகி வருவன வற்றுள் இதற்கு ஏற்புடையன முடிக்குஞ் சொல்லாம் எனக் கொள்க. இவ்வாறு ஒற்றுமை யுடைத்தாகலானே ஒருசார் ஆசிரியர் வேற்றுமை யேழெனக் கொண்டதென உணர்க. (36) *(பாடம்) விளியொடு கொளலே. விளி மரபு முற்றிற்று இவ்வியல் சூத்திரமும் உரையும் கிரந்த (எண்) வகையான் 130 5 பெயரியல் நால் வகைச் சொற்கும் பொது விலக்கணம் 151. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், பெயரியல் என்னும் பெயர்த்து. இது பெயரியல்பு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். கிளவியாக்க முதலாக விளிமரபு ஈறாகத் தொடர் மொழி இலக் கணங் கூறி, இனி, அத்தொடர் மொழிக்கு உறுப்பாகிய தனிமொழி இலக் கணம் கூறுகின்றார். அத் தனிமொழி நான்கனுள் பெயர்ச்சொல் சிறந்த தாகலின், இவ்வோத்து முற்கூறப்பட்டது. மேலதனோடு இயைபுமிது. இதனுள் இம் முதற்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், எல்லாச் சொற்கும் உரியதொரு பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உலகத்தாரான் வழங்கப்பட்ட எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன, எ-று. எனவே, பொருளின்றி வழங்குஞ் சொல் இல என்றவாறாம். என்னை, முயற்கோடு எனச் சொல் நிகழுமன்றே, அதனாற் குறிக்கப்பட்ட பொருள் யாங்கது? எனின், அறியாது கடாவினாய், முயல் என்பதற்குப் பொருண்மை காண்டி, கோடு என்பதற்கும் பொருண்மை காண்டி, இவை இரண்டு பொருளும் தனித்தனி உளவாதலின், இவை தனி மொழிக்கண் பொருள் குறித்து நின்றன; தொடர் மொழியாயுழி, உள்ள பொருளோடு அதன்கண் இல்லாத பொருளை அடுத்தமையான் ஆண்டு இன்றாயிற்று அல்லது, இல்பொருள்மேல் வழக்கின்று என்று கொள்க. அஃதேல், எல்லாச் சொல்லும் பொருள் குறித்து வருமாயின், அசை நிலை, இசைநிறை, ஒரு சொல்லடுக்கு என்பன பொருள் குறித்திலவா லெனின், பொருள் உணர்த்தும் என்னாது குறித்தன என்றமையான், அவையும் சார்ந்த பொருளைக் குறித்தன என்று கொள்க. அன்றியும் எடுத்தோத்துப் பெரும்பான்மை பற்றி என்றும் கொள்க. ‘இவ்வூரார் எல்லாம் கல்வி உடையர்’ என்றவழிக், கல்லாதாரும் சிலர் உளராயினும் கற்றார் பலர் என்பது குறித்து நின்றாற் போலக் கொள்க. இன்னும், “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன” என்பதற்குப் பொருள், எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும் எ-று. எனவே, இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் உரிமை இல என்றவாறாம். என்னை உரிமை இலவாகியவாறு எனின், உலகத்துப் பொருள் எல்லாவற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது, இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை உணர்த்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்பமுடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க. எனவே, பொருள்பற்றிவரும் பெயரெல்லா மிடு குறி யென்பது பெறப்பட்டது. இவ் விடுகுறியான் அடிப்பட்ட சொல்லோடு ஒட்டி மற்றொரு பொருட்குப் பெயராகி வருவது காரணக் குறியாம். (1) சொல் தன்னையும் பொருளையும் உணர்த்தல் 152. பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லி னாகும் என்மனார் புலவர். இதுவும் சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லினாற் குறிக்கப்பட்ட பொருளின் தன்மை ஆராய்த லும், சொல்லின் தன்மை ஆராய்தலும் சொல் தன்னானே ஆகும், எ-று. (எ-டு.) நிலம் என்பது பொருளின் தன்மை ஆராய்வார்க்கு மண்ணி னான் இயன்றதொரு பூதம் என்றாயிற்று. சொல்லின் தன்மை ஆராய் வார்க்குப் பெயர்ச்சொல் என்றாயிற்று. அதனான் இரு பகுதிய சொல் நிலைமை என்றவாறு. (2) பொருள் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் உணர்த்தப்படும் எனல் 153. தெரிபுவேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. மேற்சொல்லப்பட்ட இரு பகுதியினுட் பொருண்மை நிலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பொருண்மை நிலையானது இச் சொற்குப் பொருள் இதுவென உணரப் பலபொருளினும் தெரிந்து வேறாகி நிற்றலும், சொற்படு பொருளன்றிச் சொல்லுவான் குறிப்பினாற் பிறிது பொருள்பட நிற்றலும் என இரு பகுதியை உடைத்து என்று சொல்லுவர், எ-று. வெளிப்படுநிலை, குறிப்புநிலை எனச் சொற்பொருள் உணர்த்து மாறு இருவகை என்றமையான், இதுவும் சொல் ஆராய்ச்சியாம். அஃது எற்றாற் பெறுதும் எனின், யாதானும் ஒரு சொல்லையும் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் எனக் குறியிடுங்கால், அதன் பொருண்மை உணர்த்த வேண்டுதலின் பொருண்மை நிலையும் சொல் இலக்கணம் என்பது உய்த்துணர வைத்தார். ‘தெரிபு வேறு நின்றன’ நிலம், நீர், தீ, வளி எனப் பொருள் உணர்த்துவனவும்; உண்டான், தின்றான் எனத் தொழில் உணர்த்துவனவும். ‘குறிப்பிற் றோன்றின’-இவன் நெருப்பு, இவன் பசு எனக் குணம் பற்றியும், தீமை செய்தாரை நன்மை செய்தீர் எனவும்; கொடுமை செய்தாரை வாழ்வீ ராக எனவும் அப்பொருள் பயவாது பிற பொருள் பயப்ப வருவன. (3) சொற்கள் இத்துணைய என்றல் 154. *சொல்லெனப் படுவ பெயரே வினையென்று ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே. சொன்மை நிலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல் என்று சொல்லப்படுவன பெயர்ச் சொல், வினைச் சொல் என அவ் விருவகைய என்ப ஆசிரியர், எ-று. (4) * (பாடம்) ‘சொல்லெனப் படுப’ என்பது. இதுவுமது 155. இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும் அவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப. இதுவுமது. (இ-ள்.) இடைச் சொல்லாகக் கிளக்கப்படுவனவும், உரிச் சொல்லாகக் கிளக்கப்படுவனவும் பெயர் வினைகளைச் சார்ந்த இடத்திற் றோன்றும், எ-று. எனவே, பெயரையும் வினையையும் சாராதவழிக் கூற்று நிகழாது என்றவாறாம். இத்துணையும் சொல்லப்பட்டது சொல்லாயிற் பொருள் குறித்து வரும் எனவும்; அது பொருண்மைநிலை, சொன்மைநிலை என இருவகைப்படும் எனவும்; அவற்றுள் பொருண்மைநிலை வெளிப்படு நிலை, குறிப்புநிலை என இருவகைப்படும் எனவும்; சொன்மைநிலை பெயர், வினை எனச் சிறப்புடைச் சொல் இரண்டும், இடை, உரி எனச் சிறப்பில் சொல் இரண்டும் என நால்வகைப்படும் எனவும்; தனி மொழிக்குப் பொது இலக்கணம் கூறியவாறாம். இவற்றுள், பொருண்மைநிலை வழக்கினும், சான்றோர் செய்யு ளகத்தும் பயின்று வருதலானும், இவ்வழக்குத் தமிழ்நாட்டுப் பிறந்து தமிழறிவாரை நோக்குதலினானும், இலக்கணம் இன்றியும் பாகம் உணர்வார் ஆகலானும் எடுத்து ஓதாராயினார். அஃது அற்றாதல் வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொன் மேன (உரி. 2) என ஓதிய அதனானுங் கொள்க. சொன்மை நிலை இலக்கணமில்வழி உணர்வரிது ஆதலான் எடுத்து ஓதப்பட்டது. (5) பெயர்ச் சொல் பாகுபாடு 156. அவற்றுள், பெயரெனப் படுபவை தெரியுங் காலை உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கு மோரன்ன வுரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. நிறுத்த முறையானே பெயர்ச்சொற் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட நான்கு சொல்லுள்ளும் பெயர் என்று சொல்லப் படுபவை ஆராயுங் காலத்து உயர்திணைப் பொருட்கே உரிமைய வாகியும், அஃறிணைப் பொருட்கே உரிமையவாகியும், அவ் விரு திணைக் கும் ஒத்த உரிமையவாகியும் அம் மூன்று வடிவினையுடைய, தோன்று தற்கண், எ-று. எனவே, பெயர்ச் சொல் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர் என மூவகைப்படும் என்பதூஉம், அஃது அவ்விருதிணைப் பொருள்களையும் உணர்த்தும் என்பதூஉம் பெறுதும். உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (6) பெயர்ச் சொற்கள் பாலுணர்த்துமாறு 157. இருதிணைப் பிரிந்த வைம்பாற் கிளவிக்கும் உரியவை யுரிய பெயர்வயி னான. இதுவும் பெயர்ச்சொற்கெல்லாம் பொது இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருதிணையினின்றும் பிரிந்த ஐம்பாற் சொற்கும் பெயர்வயின் உரியவை உரியவாம், எ-று. இதனாற் சொல்லியது முன் எடுத்து ஓதப்படுகின்ற பெயர்களைப் பால் விரித்து ஓதுகின்றிலம் : பெயர்களுள் அவ்வப்பாற்குரிய பெயரைப் பாலறி கிளவியாகக் கொள்க என்றவாறு. இதனானே பெயர்ச்சொற்கு ஈறு வரையறுக்கப்படாது என்பதூஉம் கூறினாராம். (7) உயர்திணைப் பெயர்கள் 158. அவ்வழி, அவன் இவன் உவனென வரூஉம் பெயரும் அவள் இவள் உவளென வரூஉம் பெயரும் அவர் இவர் உவரென வரூஉம் பெயரும் யான் யாம் நாமென வரூஉம் பெயரும் யாவன் யாவள் யாவ ரென்னும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த உயர்திணைப் பெயரே. நிறுத்த முறையானே உயர்திணைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட பெயரிடத்து அவன் முதலாகிய சுட்டுப்பெயர் ஒன்பதும், யான் முதலாகிய தன்மைப் பெயர் மூன்றும், யாவன் முதலாகிய வினாவின் பெயர் மூன்றும், ஆய அப் பதினைந்து பெயரும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ-று. யான் என்பது ஒருமை உணர நின்றது. (8) இதுவுமது 159. ஆண்மை யடுத்த மகனென் கிளவியும் பெண்மை யடுத்த மகளென் கிளவியும் பெண்மை யடுத்த இகர இறுதியும் நம்மூர்ந்து வரூஉம் இகரவை காரமும் முறைமை சுட்டா மகனும் மகளும் மாந்தர் மக்கள் என்னும் பெயரும் ஆடூ மகடூ ஆயிரு பெயரும் சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும் அவைமுத லாகிய பெண்டென் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பதி னைந்தும் அவற்றோ ரன்ன. இதுவுமது. (இ-ள்.) ஆண்மை அடுத்த மகன் என்பது முதலாக ஓதப்பட்ட பதினைந்து பெயரும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ-று. ‘ஆண்மை அடுத்த மகன்’ என்பது ஆண்மகன். ‘பெண்மை அடுத்த மகள்’ என்பது பெண்மகள். ‘பெண்மை அடுத்த இகர இறுதி’ பெண்டாட்டி. இகர இறுதியை யுடையது இறுதி என்றாயிற்று. இவ்வுரை நம்பி, நங்கை என்பனவற்றிற்கும் ஓக்கும். ‘நம் ஊர்ந்து வரூஉம் இகர ஐகாரம்’ என்பது நம்பி, நங்கை என்பன. ‘முறைமை சுட்டா மகனும் மகளும்’ என்பது முறைப் பெயரைக் குறியாது உயர்திணைப் பொருட்குப் பெயராகி மகன் மகள் என வரும். ‘மாந்தர், மக்கள் என்னும் பெயராவன’ மாந்தர் மக்கள் எனப் பொருட் பன்மை உணர வருவன. ‘ஆடூஉ, மகடூஉ வாயிரு பெயரும்’ என்பது-‘ஆடூஉ, மகடூஉ என்பன. ‘சுட்டு முதலாகிய அன்னும் ஆனும் ஆவன’ சுட்டெழுத்தை முதலாகவுடைய அன் ஆன் என்னும் சொல்லீறாகி வருவன. (அது சினையிற் கூறும் முதலறி கிளவியாகிய பெயர்க்குப் பெயராயிற்று.) அத்தன்மையன் அத்தன்மையான், அன்னான், அனையான் என வருவன. ஏனைச் சுட்டோடும் ஒட்டிக்கொள்க. இவை உவமை குறியாது முன்னம் சில குணத்தையடுத்து அத்தன்மையான் எனப் பண்பு குறித்து வரும். ‘அவை முதலாகிய பெண்டென் கிளவி’ என்பது சுட்டெழுத்தை முதலாக உடையவாகிப் பெண்மை உணரவரும் சொல். அத்தன்மையள், அத்தன்மையாள், அன்னாள், அனையாள் என்பன. ‘ஒப்பொடு வரூஉங் கிளவி’ உவமிக்கப்படும் பொருளோடு அடுத்துவரும் பெயர். கண்ணன் னான், கண்போல்வான், பொன்னனையான். குரங்கன், பேயன், குரங்கி என்பனவும் அவை. அஃதேல், அன்னார், அனையார் எனச் சுட்டு முதலாகிய பன்மை உணரவரும் பெயர் கூறாதது என்னையெனின், அவை பெரு வழக்கின அன்மையான் ஈண்டு ஓதிற்றிலராயினும், அன்ன பிறவும் என்பதனாற் கொள்க. (9) இதுவுமது 160. எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும் பெண்மை யடுத்த மகனென் கிளவியும் அன்ன வியல என்மனார் புலவர். இதுவுமது. (இ-ள்.) எல்லாரும் என்னும் பெயரும், எல்லீரும் என்னும் பெயரும், பெண் மகன் என்னும் பெயரும் பால் விளங்கவந்த உயர் திணைப் பெயராம், எ-று. விளையாடும் பருவத்துப் பெண்மகளைப் பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு. (10) இதுவுமது 161. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே இன்றிவ ரென்னு மெண்ணியற் பெயரோடு அன்றி யனைத்தும் அவற்றியல் பினவே. இதுவுமது. (இ-ள்.) நிலப் பெயர் முதலாக ஓதப்பட்ட அனைத்தும் பால் விளங்க வந்த உயர்திணைப் பெயராம், எ-று. (எ-டு.) ‘நிலப் பெயராவது’ இடத்தினாற் பெற்ற பெயர். அவை சோணாட்டான், சோணாட்டாள், சோணாட்டார் எனவும்; மதுரையான், மதுரையாள், மதுரையார் எனவும் வரும். ‘குடிப்பெயராவது’ குடியினானாய பெயர். அவையாவன : சேரலன் சோழன், பாண்டியன் என்பன. இன்னும் “வந்ததுகொண்டு வாராதது முடித்தல்” என்பதனான் குலத்தினானாகிய பெயருங் கொள்க. அவை யாவன: அந்தணன், அந்தணி, அந்தணர் என்பன. அஃதேல் பாம்பு, நாய், மணி என்பனவும்; அந்தணர், அரசர் என வருமால் எனின் அவ்வாறு வருவன அந்நூலகத்து ஆளுதல் வேண்டி ஆசிரியன் இட்டதொரு குறி என்று கொள்ளினல்லது பாம்பைப் பிடித்தான் என்னும் பொருட்கண் அந்தணனைப் பிடித்தான் என்றவழி அப்பொருள் புலப்படாமையின், அது வழக்கன்றென மறுக்க. ‘குழுவின் பெயராவது’ பலர் கூடின கூட்டத்தாற் பெற்ற பெயர். அவை பலர், அவையத்தார் என்பன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. ‘வினைப் பெயராவது’ உண்டவன், உண்டவள், உண்டவர் என வரும். ‘உடைப் பெயராவது’ உடைமையாற் பெற்ற பெயர். அவை நிலமும் பொருளும் கருவியும் பற்றிவரும். குட்டுவன், பூழியன் என்பன குட்ட நாட்டையும், பூழி நாட்டையும் உடையான் என்னும் பொருள்பட வந்தன. முடியான், குழையான், குழையாள், குழையார் என்பன பொருள் பற்றி வந்தன. வேலான், வில்லி என்பன கருவி பற்றி வந்தன. ‘பண்புகொள் பெயராவது’ பண்பினாற் பெற்ற பெயர். அவை கரியான், நெடியான், நல்லான், தீயான், நல்லாள், நல்லார் என வரும். ‘பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயராவன, தாயர், தாய்மார், தந்தையர், தந்தைமார் என்பன. இது முதலாகிய நான்கு பெயரும் இருதிணைக்கும் பொதுவாகி வருதலின் பல்லோர்க் குறித்த என்றார். அஃதேல்; அஃறிணைக்கண்ணும் “கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்ப்ப, இன்னே வருகுவர் தாயர்” (முல்லை. 15, 16) என வந்ததாலெனின், ஆண்டு உயர்த்துச் சொல்லுதற்கண் வந்தது. அதற்கு இலக்கணம் “செய்யுண் மருங்கினும்” (453) என்னும் புறநடைச் சூத்திரத்தாற் கொள்ளப்படும். ‘பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயராவது’ சினையினாற் பன்மை குறித்து வரும் பெயர். அவை கூனர். குருடர். முடவர் என்பன. ‘பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயராவது’ திணைபற்றிவரும் பன்மைப் பெயர். ‘குறிஞ்சிக் கண்ணியர் குவளை பூண்டு-வெற்பராடும் வெற்புச்சே ரிருக்கை’ என்றவழி உயர்திணைப் பெயராகிப் பன்மைகுறித்து வந்தது. வெற்பன், மலையன், நாடன் என ஒருமை குறித்து வருவன உளவா லெனின், அவை அந்நிலத்துத் தலைமகனைக் குறிக்கின் உடைப் பெயராம். அந்நிலத்துள்ள மாந்தரைக் குறிக்கின் இருதிணைக்கும் பொதுவாம். வெட்சியார், கரந்தையார் என்பனவும் அவை. வெட்சியான், கரந்தையான் என வாராதோ எனின்; அவ்வாறு வழக்குவரின், அத்திரளின் உள்ளான் என்னும் பொருள்பட வரினல்லது நிரைகோடல், நிரை மீட்டல், எடுத்து விடுத்தல் என்பன ஒருவனாற் செய்யப்படாமையானும், வெட்சியாள், கரந்தையாள் எனப் பெண்பால் உணரவரும் வழக்கின்மையானும் திணை யாற் பெறும் பெயர் பன்மைகுறித்து வருதல் பெரும்பான்மை என்று கொள்க. சிறுபான்மை ஒருமை குறித்துவரின், அன்னபிறவாற் கொள்ளப் படும். ‘கூடிவரு வழக்கி னாடியற் பெயராவது’ கூடியியலும் வழக்கின் வழங்கும் இயற்பெயர் என்றவாறு. இயற் பெயராவது ஒரு பொருட்கு இடு குறியாகிய பெயர். அஃது இருதிணைக்கும் உரித்தாதலின் விரவுப் பெய ரென வேறெடுத்து ஓதினார். ஈண்டு அப் பெயருடையார் பலரை ஒரு வினையாற் சொல்லுங் காலத்துச் சொல் தொகுத்துக் கூற வேண்டுதலின் ஈண்டு ஓதப்பட்டது. சாத்தன் என்னும் பெயருடையார் இருவர் மூவர் சேரவந்தவழிச் சாத்தன் வந்தான் சாத்தன் வந்தான் எனத் தனித் தனி கூறின் பொருள் வேற்றுமை உணர்த்தாது. ஒரு பொருளை இருகாற் சொன்னாற் போலப்படும். ஆண்டுச் சாத்தன்மார் வந்தார், சாத்திமார் வந்தார் எனக் கூறுதல் வேண்டுதலானும், அப்பொருள் உயர்திணை ஆதலானும் ஈண்டு ஓதப்பட்டது. ‘இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயராவது’ இத்துணைவர் என எண்ணினான் இயன்ற பெயர். ஒருத்தி, ஒருவன், இருவர், மூவர் என்பன. (11) உயர்திணைப் பெயர்கட்குப் புறநடை 162. அன்ன பிறவும் உயர்திணை மருங்கின் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. உயர்திணைப் பெயர் புறநடைவகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் எடுத்து ஓதப்பட்டன போல்வன பிறவும், உயர்திணைப் பொருளிடத்து ஒருமை பன்மை எனப் பால்விளங்க வரும் எல்லாப் பெயரும் உயர்திணையிடத்த, எ-று. (எ-டு.) பெண்டிர், பெண்டுகள் என்பனவும், அத்தன்மையர், அத் தன்மையார் எனவும், ஏனாதி, அமைச்சன், படைத்தலைவன் எனச் சிறப்புப் பற்றி வரும் பெயரும், நாயன், நாச்சி எனத் தலைமைபற்றி வரும் பெயரும், அடியான், அடியாள் என இழிபுபற்றி வரும் பெயரும், ஆசிரியன், புலவன் எனக் கல்விபற்றி வரும் பெயரும், குழலள், குழலாள், இடையாள், தோளாள் என உறுப்புப்பற்றி வரும் பெயரும், ஆதிரையான், ஓணத்தான். வேனிலான் எனக் காலம்பற்றி வரும் பெயரும், பிறன், பிறள், பிறர், நுமன், நுமள், நுமர், தமன், தமள், தமர் என்பனவும் பிறவும் உயர்திணைப் பொருட்கே உரியவாகி வரும் பெயரெல்லாம் இதுவே ஓத்தாகக் கொள்க. (12) அஃறிணைப் பெயர்கள் 163. அதுஇது உதுவென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய ஆய்தப் பெயரும் அவைஇவை உவையென வரூஉம் பெயரும் அவைமுத லாகிய வகரப் பெயரும் யாதுயா யாவை என்னும் பெயரும் ஆவயின் மூன்றோ டப்பதி னைந்தும் பாலறி வந்த அஃறிணைப் பெயரே. நிறுத்த முறையானே அஃறிணைப் பெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அது முதலாக ஓதப்பட்ட பதினைந்து பெயரும் பாலறிய வந்த அஃறிணைப் பெயராம், எ-று. (எ-டு.) அது, இது, உது; அஃது, இஃது, உஃது; அவை, இவை, உவை; அவ், இவ், உவ்; யாது, யா, யாவை என வரும். (13) இதுவுமது 164. பல்ல பலசில என்னும் பெயரும் உள்ள இல்ல என்னும் பெயரும் வினைப்பெயர்க் கிளவியும் பண்புகொள் பெயரும் இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப் பெயரோடு ஒப்பி னாகிய பெயர்நிலை உளப்பட அப்பால் ஒன்பதும் அவற்றோ ரன்ன. இதுவுமது. ‘பல்ல, பல, சில என்னும் பெயராவன’ பல்ல, பல, சில என்பன. ‘உள்ள, இல்ல என்னும் பெயராவன’ உள்ள, இல்ல என்பன. ‘வினைப் பெயர்க் கிளவியாவது’ வினையானாகும் பெயர். வந்தது, உழுதது என்பன வினையினாற் பொருட்குப் பெயராகி வந்தன. ‘பண்பு கொள் பெயராவது’ பண்பினைக் கொண்ட பெயர். கரியது, காரி, வெள்ளை எனப் பண்பினைக் கொண்ட பொருட்குப் பெயராயின. ‘இனைத்து எனக் கிளக்கும் எண்ணுக் குறிப் பெயராவது’ இத்துணை என வரையறுத்து உணர்த்தும் எண்ணுக் குறிப்பெயராம். அவை எண்ணப் படும் பொருண்மேல் வருவனவும், எண்ணுப் பெயராம்; எண்ணின் பெயரும் எண்ணுப் பெயராம். நீ தந்த காணம் ஆயிரம் என்றவழி, எண்ணப் பட்ட பொருண்மேல் வந்தது. நாலிரண் டெட்டு என்றவழி எண்ணின்மேல் வந்தது. ‘ஒப்பினாகிய பெயர்நிலை என்பது’ ஒப்புப் பற்றி வருவது. பொன் போல்வது, பொன்னனையது, யானைப்போலி என்பன. ‘அப்பால் ஒன்பதும் அவற்றோரன்ன என்பது’ அக்கூற்று ஒன்பது பெயரும் அஃறிணைப் பாலறி சொல்லாம் என்றவாறு. (14) இதுவுமது 165. கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே கொள்வழி உடைய பலவறி சொற்கே. இதுவுமது. (இ-ள்.) கள் என்னுஞ் சொல்லொடு சிவணிய அவ் வஃறிணைப் பொருண்மேல் வரும் இயற்பெயர் பலவறி சொற்குக் கொள்ளும் இடனுடைய, எ-று. என்றமையாற் சிவணாத இயற்பெயர் பால் விளங்காது என்ற வாறாம். ஆக்கள், தெங்குகள் என வரும். (15) அஃறிணைப் பெயர்கட்குப் புறநடை 166. அன்ன பிறவும் அஃறிணை மருங்கின் பன்மையும் ஒருமையும் பாலறி வந்த என்ன பெயரும் அத்திணை யவ்வே. அஃறிணைப் பெயர்க்கெல்லாம் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டன போல்வன பிறவுமாகி அஃறிணைப் பொருட்கண் பன்மையும் ஒருமையுமாகிப் பால் விளங்க வந்த எல்லாப் பெயரும் அஃறிணை யிடத்த, எ-று. (எ-டு.) உள்ளது, இல்லது, பிறிது, பிற, அத்தன்மையது, அத்தன்மைய. இவையும் இவை போல்வனவும். (16) அஃறிணை இயற்பெயர் பாலுணருமாறு 167. தெரிநிலை யுடைய அஃறிணை இயற்பெயர் ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே. மேற் பால் விளங்குவன கூறினார். இனிப் பால் விளங்காத அஃறிணை இயற்பெயர் பாலுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அஃறிணைப் பொருண்மேல் வரும் இயற்பெயர் ஒருமை யும், பன்மையும் தெரிநிலை யுடையவாம் வினையொடு வரின்; அல்லது பால் விளங்கா என்றவாறு. உயர்திணைப் பொருண்மேல் விரவி வரும் இயற் பெயர் ஒருமையும் பன்மையும் தோன்ற நிற்றலின் வேறோதப்பட்டது. இவை பொருளும், உறுப்பும், பண்பும், தொழிலும், இடமும், காலமும் பற்றி வரும். (எ-டு.) ஆ, தெங்கு என்பன பொருள். இலை, பூ, என்பன உறுப்பு. கருமை, வட்டம் என்பன பண்பு. உண்டல், ஓடல் என்பன தொழில். அகம், புறம் என்பன இடம். யாண்டு, திங்கள் என்பன காலம். ஆ வந்தது என்றவழி ஒன்று என்பதூஉம், வந்தன என்றவழிப் பல என்பதூஉம் உணர்த்திய வாறும், இவ்விரு வீற்றுக்கும் பொதுவாகி நின்றவாறும் கண்டு கொள்க. பிறவும் அன்ன. (17) விரவுப் பெயர் பாலுணருமாறு 168. இருதிணைச் சொற்கு மோரன்ன உரிமையின் திரிபுவேறு படூஉம் எல்லாப் பெயரும் நினையுங் காலைத் தத்தம் மரபின் வினையோ டல்லது பால்தெரி பிலவே. நிறுத்த முறையானே இருதிணைக்கும் உரிய பெயர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உயர்திணைப் பெயர்ச் சொல், அஃறிணைப் பெயர்ச் சொல் என இருதிணைச் சொற்கும் ஒத்த உரிமையினின்றும் திரிந்து பொருள் வேறுபடூஉம் எல்லாப் பெயரும் ஆராயுங் காலத்துத் தத்தமக் கேற்ற வினையோடே கூடி யல்லது பால் விளங்குதல் இல, எ-று. (எ-டு.) பால் எனவே திணையும் அடங்கும். அவையாவன இயற் பெயர் முதலாக முன் எடுத்து ஓதுகின்ற பெயர். அவற்றுள், சாத்தன் என்னும் பெயர் உயர்திணை ஆண்பாற்கும் அஃறிணை ஆண்பாற்கும் இடுகுறியாகி வழங்கு மாதலின், அது வந்தான் என்பதனொடு தொடர்பு பட்டுழி உயர்திணை எனவும், வந்தது என்பதனொடு தொடர்பு பட்டுழி அஃறிணை எனவும் நின்றவாறு கண்டு கொள்க. பிறவுமன்ன. இச்சூத்திரம் எதிரது நோக்கிற்று. (18) மேலதற் கொரு புறநடை 169. நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின் உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்தே அன்ன மரபின் வினைவயி னான. மேலதற்கு ஒரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தத்தம் மரபினாற் பால் உணர வரூஉம் வினைச் சொல்லா னன்றி நிகழ்காலத்தை உணர நின்ற பலரை வரைந்த, செய்யும் என்னும் முற்றுச் சொல்லானும் உயர்திணை ஒருமை தோன்றலும் உரித்து : அப்பால் தெரிய வரும் தொழிலின் கண் எ-று. நிகழூஉ நின்ற என்பதனைப் பெயரெச்சமாகவும், பலர் வரை கிளவி என்பதனை வினைத்தொகை யாகவுங் கொள்க. உம்மை எச்சவும்மை யாகலான், அஃறிணை யொருமை தோன்றலும் உரித்தென்று கொள்க. (எ-டு.) சாத்தன் யாழெழூஉம், சாத்தி சாந்தரைக்கும் என்றவழி உயர்திணை என்பது பெறப்பட்டது. சாத்தன் புல்மேயும், சாத்தி புல்மேயும் என்றவழி அஃறிணை என்பது பெறப்பட்டது. (19) விரவுப் பெயர்ப் பாகுபாடு 170. இயற்பெயர் சினைப்பெயர் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி தாமே தானே எல்லாம் நீயிர் நீயெனக் கிளந்து சொல்லிய அன்ன பிறவு மாஅங்கு அன்னவை தோன்றி னவற்றொடுங் கொளலே. மேற்சொல்லப்பட்ட இருதிணைக்கு முரிய சொல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற் பெயர் முதலாக எடுத்து ஓதப்பட்டனவும் எடுத்து ஓதப் படாத அத்தன்மைய பிறவும் இருதிணைப் பொருண்மையும் உணரத் தோன்றின், அவ்விருதிணையொடுங் கொள்க; ஒரு திணைமேற் கொள்ளற்க என்றவாறாயிற்று. ‘இயற் பெயராவது’ ஒரு பொருட்கு இடுகுறியாகி வழங்கும் பெயர். மேற் சினைப் பெயர் கூறுகின்றா ராதலின் இதனை முதற் பெயர் என்று. கொள்க. ‘சினைப் பெயராவது’ உறுப்பின் பெயர். ‘சினைமுதற் பெயராவது’ சினையையும் முதலையும் உணர்த்தும் பெயர். ‘முறைப் பெயராவது’ பிறப்பு முறை பற்றி வரும் பெயர். தாம், எல்லாம், நீயிர் என்பன பன்மை உணர்த்தும் பெயர். தான், நீ என்பன ஒருமை யுணர்த்தும் பெயர். ‘அன்ன பிறவும்’ ஆவன பிராயம் பற்றி வரும் பெயரும், இடம் பற்றி வரும் பெயரும், தொழில் பற்றி வரும் பெயரும் பிறவும். (20) விரவுப் பெயரின் பாகுபாட்டு விரி 171. அவற்றுள், நான்கே இயற்பெயர் நான்கே சினைப்பெயர் நான்கென மொழிமனார் சினைமுதற் பெயரே முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே ஏனைப் பெயரே தத்தம் மரபின. மேற் சொல்லப்பட்ட பெயர் விரிவகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் இயற் பெயர் நான்கு வகைப்படும், சினைப் பெயர் நான்கு வகைப்படும், சினை முதற் பெயர் நான்கு வகைப்படும், முறைப் பெயர் இரண்டு வகைப்படும், ஏனைப் பெயர் ஓதிய வாய்பாட்டன, எ-று. (21) இயற் பெயர் நான்கு 172. அவைதாம், பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர் பன்மை இயற்பெயர் ஒருமைஇயற் பெயரென்று அந்நான் கென்ப இயற்பெயர் நிலையே நிறுத்த முறையானே இயற்பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட இயற் பெயரது நிலைமையாவது இருதிணைக்கண்ணும் பெண்மைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும், ஆண்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயரும், பன்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயரும், ஒருமைப் பொருண்மையைக் குறித்த இயற் பெயரும் என அந் நான்கும், எ-று. பன்மை இயற் பெயர் என்றாராயினும் உயர்திணைப் பன்மை இயற்பெயர் பால் தோன்றலின், அஃதொழித்து ஏனையது கொள்ளப்படும். அவ்வாறாதல் வருகின்ற சூத்திரங்களானும் விளங்கும். இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். (எ-டு.) பெண்மை குறித்த பெயர் சாத்தி. ஆண்மை குறித்த பெயர் சாத்தன். ஒருமை குறித்த பெயர் கோதை. பன்மை குறித்த பெயர் யானை. பிறவும் அன்ன. (22) சினைப் பெயர் நான்கு 173. பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயரென்று அந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே. சினைப் பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட சினைப் பெயரது நிலைமையாவது பெண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், பன்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப் பெயர், ஒருமைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் என அந்நான்கும், எ-று. (எ-டு.) முலை என்பது பெண்மை குறித்து நின்றது. மோவாய் என்பது ஆண்மை குறித்து நின்றது. கை என்பது ஒருமை குறித்து நின்றது. தலை என்பது பன்மை குறித்து நின்றது. (23) சினை முதற் பெயர் நான்கு 174. பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென்று அந்நான் கென்ப சினைமுதற் பெயரே. சினைமுதற் பெயர் நான்கும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மை சுட்டிய சினை முதற் பெயர் முதலாகிய நான்கும் சினை முதற் பெயராவன, எ-று. ஈண்டுச் சினை முதற் பெயர் என்றமையான் முதலைக் குறித்த பெயரும் சினையைக் குறித்த பெயரும் அன்றி, முதலையும் சினையையும் குறித்த பெயர் என்று கொள்ளப்படும். (எ-டு.) முடத்தி என்பது பெண்மையைக் குறித்தது. முடவன் என்பது ஆண்மையைக் குறித்தது. செவியிலி என்பது ஒருமையைக் குறித்தது. தூங்கல் என்பது பன்மை குறித்தது. (24) முறைப் பெயர் இரண்டு 175. பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயரென் றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. முறைப் பெயர் இரண்டும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும், ஆண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயரும் என முறைப் பெயர் இரண்டாவன, எ-று. (எ-டு.) தாய் என்பது பெண்மை குறித்தது. தந்தை என்பது ஆண்மை குறித்தது. பிறவுமன்ன. (25) பெண்மை சுட்டிய பெயர் 176. பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. பெண்மைப் பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெண்மை குறித்த எல்லாப் பெயரும், அஃறிணைப் பெண்பா லாகிய ஒன்றற்கும், உயர்திணைப் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ-று. மேல், நினையுங் காலைத் தத்தம் மரபின்-வினையோ டல்லது பால்தெரி பிலவே (168) என்றமையான், இவையும் உயர்திணை வினை கொண்டவழி உயர்திணை எனவும், அஃறிணை வினை கொண்டவழி அஃறிணை எனவும் கொள்க. இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். (எ-டு.) சாத்தி வந்தது, முலை எழுந்தது, முடத்தி வந்தது, தாய் வந்தது என்றவழி அஃறிணைப் பொருண்மை உணர்த்தின. சாத்தி வந்தாள், முலை யெழுந்தாள், முடத்தி வந்தாள், தாய் வந்தாள் என்றவழி உயர்திணைப் பொருள் உணர்த்தின. அஃதேல், முலை எழுந்தது எனத் தன்வினையான் வரின் அஃறிணைப் பொருளேயாம் பிற எனின், முலை என்பது இரு திணைப் பொருட்கும் உள்ளதோர் உறுப்பாகலின், ஆண்டுத் திணை தெரியாமற் பொதுப்பட நிற்கும், அது முதல் வினையோடு முடியினல்லது திணை விளங்காது என்க. (26) ஆண்மை சுட்டிய பெயர் 177. ஆண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவற்கும் ஒன்றிய நிலையே. ஆண்மைப் பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆண்மை குறித்த பெயரெல்லாம் அஃறிணை ஆண் பாலா கிய ஒன்றற்கும், உயர்திணை ஆண்பாலிற்கும் ஒத்த நிலைமைய, எ-று. (எ-டு.) சாத்தன் வந்தான், மோவாய் எழுந்தான், முடவன் வந்தான், தந்தை வந்தான் என்றவழி உயர்திணை ஆயின. சாத்தன் வந்தது, முடவன் வந்தது, தந்தை வந்தது எனவும்; குன்றியன்ன கண்ண குரூஉமயிர் புன்றாள் வெள்ளெலி மோவா யேற்றை (அகம். 133) எனவும்; முடங்குபுற விறவின் மோவா யேற்றை (நற். 211) எனவும் அஃறிணைப் பொருண்மை உணர்த்தின. (27) பன்மை சுட்டிய பெயர் 178. பன்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றே பலவே ஒருவ ரென்னும் என்றிப் பாற்கும் ஓரன் னவ்வே. பன்மை குறித்த பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பன்மை குறித்த பெயர் எல்லாம் அஃறிணை ஒருமை, பன்மைக்கும், உயர்திணை ஆண்பால் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ-று. (எ-டு.) யானை வந்தது, தலை முடித்தது, தூங்கல் வந்தது என அஃறிணை ஒருமை ஆயின. யானை வந்தன, தலை முடித்தன, தூங்கல் வந்தன; இவை அஃறிணைப் பன்மை உணர்த்தின. யானை வந்தான், தலை முடித்தான், தூங்கல் வந்தான் என உயர்திணை ஆண்பாலாயின. யானை வந்தாள், தலை முடித்தாள், தூங்கல் வந்தாள் என உயர்திணைப் பெண்பால் ஆயின. (28) ஒருமை சுட்டிய பெயர் 179. ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே. ஒருமை குறித்த பெயர் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருமையைக் குறித்த எல்லாப் பெயரும் அஃறிணை ஒருமைக் கும், உயர்திணை ஆண்பாற்கும் பெண்பாற்கும் ஒத்த நிலைமைய, எ-று. (எ-டு.) கோதை வந்தது, கையிழந்தது, செவியிலி வந்தது என அஃறிணை ஒருமை உணர்த்தின. கோதை வந்தாள், கையிழந்தாள், செவியிலி வந்தாள் என உயர்திணைப் பெண்பாலாயின. கோதை வந்தான். கையிழந்தான், செவியிலி வந்தான் என உயர்திணை ஆண்பால் உணர்த்தின. கையிழந்தன என அஃறிணைப் பன்மையும் உணர்த்துமாலெனின், அவ்வாறு வருவன சினை வினையுங் காட்டும். திரிபின்றி வரும் உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. (29) தாம் என்னும் விரவுப் பெயர் 180. தாமென் கிளவி பன்மைக் குரித்தே. தாம் என்னும் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தாம் என்பது இருதிணைப் பன்மைக்கும் உரித்து, எ-று. (எ-டு.) தாம் வந்தார் என உயர்திணை ஆயிற்று. தாம் வந்தன என அஃறிணை ஆயிற்று. (30) தான் என்னும் விரவுப் பெயர் 181. தான்என் கிளவி ஒருமைக் குரித்தே. தான் என்னுஞ் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தான் என்னும் சொல் இருதிணைக்கண்ணும் ஒருமைக்கு உரித்து, எ-று. (எ-டு.) தான் வந்தான், தான் வந்தாள் என உயர்திணை ஒருமை உணர்த்திற்று. தான் வந்தது என அஃறிணை ஒருமை உணர்த்திற்று. (31) எல்லாம் என்னும் விரவுப் பெயர் 182. எல்லா மென்னும் பெயர்நிலைக் கிளவி பல்வழி நுதலிய நிலைத்தா கும்மே தன்னு ளுறுத்த பன்மைக் கல்லது உயர்திணை மருங்கின் ஆக்க மில்லை. எல்லாம் என்னும் சொல் திணை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எல்லாம் என்னும் பெயர் இருதிணைக்கண்ணும் பன்மை குறித்த நிலைமைத்து. அஃது உயர்திணைக்கண் உளப்பாட்டுத் தன்மைக்கண் அல்லது, முன்னிலை, படர்க்கையின் ஆகுதலில்லை, எ-று. (எ-டு.) எல்லாம் வந்தன, எல்லாம் வந்தீர் என்றவழி அஃறிணைப் படர்க்கையினும், முன்னிலையினும் வந்தது. எல்லாம் வந்தேம் என்ற வழி, உயர்திணை ஆயிற்று. அஃதேல் ‘நெறிதாழ் இருங்கூந்தல் நின்பெண்டிர் எல்லாம்’ (கலி. 97) என உயர்திணைப் படர்க்கையினும், ‘நீயிர் எல்லாம் விளையாடப் போதுமின்’ என முன்னிலையிலும் வருமால் எனின், அவை இலக்கண வழக்கல்ல. நின்பெண்டிர் எல்லாரும் என்னும் சொல் எல்லாம் எனவும், நீங்கள் எல்லீரும் என்பது எல்லாம் எனவும் மரூஉ வழக்காகி வந்தன. மரூஉ வழக்கு நீக்கப்படாது என்பது எழுத்ததிகாரத்து மொழிப்புணர்ச்சி கூறுகின்றுழி, மரூஉமுடிபென (111) எடுத்தோதினமையாற் கொள்ளப் படும். இலக்கண வழக்காயின் வரும் குற்றம் என்னை யெனின், ஈண்டு விலக்கினமையானும், உயர்திணைக்கண் எல்லாரும், எல்லீரும் என எடுத்தோதி ஆண்டுத் தன்மைப் பெயர் ஓதாமையானும், எழுத்ததிகாரத் துள் எல்லாம் என்னும் பெயர்க்கு வற்றுச் சாரியை விதித்து ‘உயர்திணை யாயின் நம்மிடை வரும்’ (எழு. 190) என ஆண்டும் உளப்பாட்டுத் தன்மைக் கேற்ற சாரியை வரும் என விதித்தமையானும். இப்பெயர் உயர்திணைக்கண் உளப்பாட்டுத் தன்மைக்கே உரித்து என்பது இவ்வாசிரியர் கருத்தென்று கொள்க. இதனைச் ‘செய்யுள் மருங்கினும்’ (453) என்னும் அதிகாரப் புறநடையாற் பிறநூல் முடிபு எனத் தழீஇக் கோடலுமாம். (32) நீயிர் நீ என்னும் விரவுப் பெயர் 183. நீயிர் நீயென வரூஉங் கிளவி பால்தெரி பிலவே உடன்மொழிப் பொருள. நீயிர், நீ என்னும் பெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நீயிர், நீ என்னும் பெயர் திணையும் பாலும் விளங்க நில்லா; இருதிணையையும் உடன் உணர்த்தும் பொருண்மை யுடைய, எ-று. திணை உணர்த்துவதொரு சொல்லின்மையிற் பால் எனவே திணையும் அடங்கும். (33) இதுவுமது 184. அவற்றுள் நீ என் கிளவி ஒருமைக் குரித்தே ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே. மேலதற்கொரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நீ என்னும் பெயர் இருதிணைக் கண்ணும் ஒருமை விளக்கு தற்கு உரித்து. நீயிர் என்னும் பெயர் பன்மை விளக்குதற்கு உரித்து, எ-று. (எ-டு.) நீ வந்தாய், நீயிர் வந்தீர் என்றவழிப், பால் விளங்காது ஒருமை பன்மை விளங்கியவாறு கண்டுகொள்க. அன்ன பிறவாற் கொள்ளப்படு வன: முதியான் என்பது பிராயம் பற்றி வரும். அது முதியான் வந்தது, முதியான் வந்தான் என வரும். சுமையான் என்பது தொழில்பற்றி வந்தது. சுமையான் வந்தது, சுமையான் வந்தான் என வரும். பிறவுமன்ன. (34) ஒருவர் என்பது உயர்திணை இருபாற்கும் பொது 185. ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கு முரித்தே தெரியுங் காலை. உயர்திணைப் பொருட்கண் விரவுப் பெயரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவர் என்று சொல்லப்படுகின்ற பெயர்ச்சொல் உயர் திணைக்கண் ஆண்பாற்கும், பெண்பாற்கும் உரித்து ஆராயுங்காலத்து, எ-று. (35) ஒருவர் என்பது பன்மை வினைகொள்ளல் 186. தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும். மேலதற்கொரு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருவர் என்னும் பெயரின் தன்மையைக் கருதின், பன்மை வினை கோடற்குப் பொருந்தும், எ-று. (எ-டு.) ஒருவர் வந்தார். (36) நீயிர், நீ, ஒருவர் என்பவற்றின் பால் தெரியுமாறு 187. இன்ன பெயரே இவையெனல் வேண்டின் முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல். பெயரானும் வினையானும் பால் அறியப்படாத சொற்கள் பால் விளங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நீயிர், நீ, ஒருவர் என்று சொல்லப்பட்ட பெயர்கள் இன்ன பாற்குரிய என்று அறியவேண்டின் சொல்லுவான் குறிப்பினொடு சேர்த்தி அவற்றின் பின்வரும் சொல்லான் உணர்க, எ-று. ‘முன்னம் சேர்த்தி முறையின் உணர்க’ என்றமையான், குறிப்பி னானும், முறையினானும் உணர்க என்றவாறாகக் கொள்க. (எ-டு.) ‘நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதர விட்ட நுமரும் தவறிலர்’ (கலி. 56) என்றவழி, நீ என்பது பெண்பால் உணர நின்றது. ‘நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை’ (புறம். 57) என்றவழி, ஆண்பால் உணரப் பட்டது. ‘எம்போல் இன்றுணைப் பிரிந்தாரை உடையையோ நீ’ (நெய்தற் கலி. 12) என்றவழி, அஃறிணை என்பது உணரப்பட்டது. இவை குறிப்பி னான் உணர நின்றன. நீ அரசன், நீ குயத்தி, நீ கடல், நீ வான் என்பன முறைவந்த சொல்லினான், பால் விளங்கின. நீயிர் என்பதற்கும் இவ்வாறே உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. ‘ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல் ஆற்றி வழிபடுதல் வல்லுதல் அல்லால்’ (நாலடி. 309) என்றவழி, ஆண்பால் உணர நின்றது. ‘வண்டு சுழல வருவா ரொருவரைக் - கண்டு கலங்கிற் றுயிர்’ என்பது பெண்பால் உணர நின்றது. இவை குறிப்பினான் உணர நின்றன. ஆயிழை யார் ஒருவர், அயில் வேலார் ஒருவர் என்பவை சார்ந்த சொல்லாற் பாலுணரப்பட்டன. பிறவுமன்ன. (37) பெண்மகன் என்னும் பெயரது இயல்பு 188. மகடூஉ மருங்கிற் பால்திரி கிளவி மகடூஉ இயற்கைத் தொழில்வயி னான. உயர்திணைப் பெண்பாற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மகடூஉ மருங்கின் பால்திரிந்த பெண்மகன் என்னும் சொல் தொழிற் படுங்கால் மகடூஉ இயற்கையாம், எ-று. (எ-டு.) பெண்மகன் வந்தாள் என வரும். (38) பெயர்களுள் சில ஆகார ஈறு ஓகாரமாதல் 189. ஆவோ வாகும் பெயருமா ருளவே *ஆயிட னறிதல் செய்யு ளுள்ளே. இஃது ஒருசார் பெயர்க்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆகாரம் ஓகாரமாகத் திரியும் பெயரும் உள : அவ்வாறு வரும் இடம் செய்யுளகத்து அறிந்து கொள்க, எ-று. (எ-டு.) ‘வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்கொல் அளியர் தாமே’ (குறு. 7) என்ற வழி, வில்லான், தொடியாள், நல்லார் என்பன ஓகாரம் பெற்று வந்தன. உம்மை எச்ச உம்மை யாகலான் அகரம் ஓகாரமாகத் திரியும் பெயரும் உள என்றவாறு. கிழவன் கிழவள் என்பன ‘நாடு கிழவோன்’ (பொருந. 248), ‘கிழவோடேத்து’ (இறை.கள. 8) எனவும் வரும். அஃறிணைப் பொருட்கண்ணும் இவ்வாறு வருவன அறிந்துகொள்க. (39) * (பாடம்) ‘ஆயிடனாதல்’ எனவும். விரவுப் பெயர் செய்யுளுள் வரும் முறைமை 190. இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும் இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா நிலத்துவழி மருங்கின் தோன்ற லான. ஒருசார் இயற் பெயர்க்கு உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. எய்தியது விலக்கியதுமாம். (இ-ள்.) ‘இறைச்சிப் பொருள்’ என்பது செய்யுளுள் உரைக்கப்படு கின்ற பொருட்புறத்ததாகிய கருப்பொருள். அஃதாவது மாவும், புள்ளும் மரமும் முதலாயின. அவற்றின்மேல் இடுகுறியாகி செய்யுளுள் கிளக்கும் இயற்பெயர்ச் சொல், உயர்திணைப் பொருண்மையைச் சுட்டா : நிலத்து வழித் தோன்றலான், எ-று. வழியும், மருங்கும் ஒரு பொருட்கண் இருசொல் பிரிவின்றி வந்தன. என்பது என் சொன்னவாறெனின், இயற்பெயர் என்பதனை இரு திணைக்கும் பொதுவென ஓதினாராயினும், செய்யுளகத்துக் கருப்பொருள் ஆகி, நிலத்துவழித் தோன்றும் மாவும் புள்ளும், மரமும் முதலாயின வற்றின்மேல் இடுகுறியாகி வரும் இயற்பெயர், அஃறிணைப் பொருண்மை யைச் சுட்டுமதல்லது உயர்திணைப் பொருண்மையைச் சுட்டா என எய்தியது விலக்கியவாறாயிற்று. செய்யுளகத்து இறைச்சிப் பொருட்கண் தோன்றும் இயற்பெய ரென ஓதல் வேண்டியது, அஃறிணைப் பொருட்கண் சாத்தன் கொற்றன் என வரும் இயற்பெயர் வழக்கின்கண் என்பதூஉம், செய்யுட்கண் பொருட் பெயராகிய நிலத்து வழித்தோன்றும் பெயரே கூறுதல் வேண்டும் என்பதூஉம் அறிவித்தற் கெனக் கொள்க. அவையாவன: மான், மரை, முயல், நாரை, அன்றில், புன்னை, ஞாழல் என்பன. (40) இதுவுமது 191. திணையொடு பழகிய பெயரலங் கடையே. எய்தியது ஒருமருங்கு விலக்குதல் நுதலிற்று (இ-ள்.) மேல் உயர்திணையைச் சுட்டா என ஓதப்பட்டன அவ்வாறு வருதல், உயர்திணையொடு பழகிப் போந்த பெயர் அல்லாத இடத்து, எ-று. எனவே பழகிப்போந்த பெயர் இருதிணைக்கும் பொதுவாகி நிற்கும் என்று கொள்க. அவையாவன : யானை, சிங்கம், அன்னம், மயில், மான் என இவ்வாறு வருவன. (41) பெயரியல் முற்றிற்று இவ்வியல் சூத்திரமும் உரையும் கிரந்த (எண்) வகையான் 310 6 வினையியல் வினைச் சொற்குப் பொதுவிலக்கணம் 192. வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும். என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், வினையியல் என்னும் பெயர்த்து : வினைச் சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். நிறுத்த முறையானே பெயர் இலக்கணங் கூறி, அதன்பின் வினையிலக்கணங் கூறவேண்டுதலின், அதன்பிற் கூறப்பட்டது. இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ எனின், வினைச்சொல் இலக்கணம் பொது வகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினை என்று சொல்லப்படுவது வேற்றுமை உருபு ஏலாது; காலத்தொடு தோன்றும்; ஆராயும் காலத்து, எ-று. வினை என்பது தொழில் உணர்த்தும் சொல்லாதலின் அது வேற்றுமை கொண்டு நிற்பதும் ஒருநிலை உண்டு. அந்நிலை ஒழியக், காலத்தொடு பொருந்தி நிற்குமது, நம்மான் வினைச்சொல்லென வேண்டப் பட்டது, எ-று. (எ-டு.) அஃதாவது உண்டலைச் செய்தான் என்பது ஈண்டு உண்டான் எனக் காலத்தோடு ஒட்டி நிற்பது. (1) காலம் மூன்று 193. காலந் தாமே மூன்றென மொழிப. காலத்துக்குத் தொகை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட காலந்தாம் மூன்று என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. அதன் வகை வரும் சூத்திரத்துக் கூறுப. (2) காலத்தின் வகை 194. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா அம்முக் காலமும் குறிப்பொடுங் கொள்ளும் மெய்ந்நிலை உடைய தோன்ற லாறே. காலத்திற்கு வகையும் அதற்கு உரியதோர் இலக்கணமும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட காலத்தின் பாகுபாடாகிய இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அம்முக்காலமும் குறிப்பொடும் கொள்ளும் பொருள் நிலைமையை உடைய, தோன்று நெறிக்கண், எ-று. உம்மை எச்சவும்மை. எனவே, காலந்தோற்ற நில்லாது குறித்துக் கொள்ளப்படும் வினைச்சொல்லும் உள என்றவாறாம். (எ-டு.) உடையன் என்பது முன்பு உடையன், இப்போது உடையன், பின்பு உடையன் என மூன்று காலத்திற்கும் வடிவு வேற்றுமைப்பட நில்லாமையின், காலம் குறித்துக் கொள்ளப்பட்டது. (3) வினைச் சொற்களின் பாகுபாடு 195. குறிப்பினும் வினையினும் நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொல் எல்லாம் உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்கும் ஓரன்ன உரிமையும் அம்மூ வுருபின தோன்ற லாறே. மேற்கூறப்பட்ட வினையும் வினைக் குறிப்பும் தொகைநிலை வகையாற் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) காலங் குறிக்கப்படும் பொருண்மையினும், தொழிற் பொருண்மையினும் நெறிப்படத் தோன்றிக் காலத்தொடு வரூஉம் வினைச் சொல் எல்லாம் உயர்திணைப் பொருட்கு உரிமையவாகியும், அஃறிணைப் பொருட்கு உரிமையவாகியும், அவ்விரு திணைப் பொருட்கும் ஒத்த உரிமையவாகியும் மூன்று வேறுபாட்டான் வரும், புலப்படும் இடத்து, எ-று. அவற்றுள் உயர்திணைவினை - தெரிநிலைவினை, குறிப்புவினை என இருவகைப்படும். அவற்றுள் தெரிநிலைவினை - தன்மைவினை, முன்னிலை வினை, படர்க்கைவினை என மூன்றுவகைப்படும். அவற்றுள் தன்மைவினை உளப்பாட்டுத்தன்மை, தனித்தன்மை என இருவகைப்படும். முன்னிலை வினை ஒருமைவினை, பன்மைவினை என இருவகைப்படும். படர்க்கை வினை ஆடூஉ வினை, மகடூஉ வினை, பன்மைவினை என உயர் திணையில் மூவகைப்படும். குறிப்பு வினையும் அவ்வாறே வரும். அவற்றுள் முன்னிலைவினை இரு திணைக்கும் பொதுவாகலின், அது விரவு வினைக்கண் கூறப்படும். ஏனைய ஈண்டுக் கூறப்படுகின்றன. அஃதேல், இடம் மூன்று என்பது எற்றாற் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். (243) (4) உயர்திணைத் தன்மைப் பன்மை வினைமுற்று 196. அம்ஆம் எம்ஏம் என்னுங் கிளவியும் உம்மொடு வரூஉம் கடதற என்னும் அந்நாற் கிளவியோ டாயெண் கிளவியும் பன்மை உரைக்கும் தன்மைச் சொல்லே. நிறுத்தமுறையானே உயர்திணைவினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள், உளப்பாட்டுத் தன்மைவினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘அம்’ முதலாக ஓதப்பட்ட எட்டீற்றினையு முடைய சொல் உயர்திணைப் பொருட்கண் தன்னொடு கூடிய பன்மைவினை உரைக்கும் சொல்லாம். எ-று. உயர்திணை என்பது ‘முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே’ (சூ. 202) என்பதனின்றும் தந்துரைக்கப்பட்டது. வினை என்பது மேலைச் சூத்திரத்தி னின்றும் தந்துரைக்கப்பட்டது. மேற் காலமொடு வரூஉம் வினைச் சொல் என்று ஓதி, ஈண்டுப் பாலுணர்த்தும் சொற்களை ஓதினமையான், வினைச் சொல் நிலைமை மூவகையாம் என்று கொள்ளப்படும் : தொழில் உணர்த்து தலும், காலங்காட்டலும், பால்காட்டலும் என. (எ-டு.) உண்டனம், உண்கின்றனம், உண்பம் என்றவழி, உண் என்பது தொழில் உணர்த்திற்று, டு, கின்று, பு என்பன காலங் காட்டின. அன் சாரியை ஆகிநின்றது. அம் பாலுணர்த்திற்று. பிறவும் இவ்வாறாம் என்பது அறிந்து கொள்க. உண்டனம், உண்டாம், உண்டனெம், உண்டேம் இவை இறந்த காலம் பற்றி வந்தன. உண்கின்றனம், உண்கின்றாம், உண்கின்றனெம், உண்கின்றேம் இவை நிகழ்காலம் பற்றி வந்தன. உண்பம், உண்பாம், உண்பெம், உண்பேம் இவை எதிர்காலம் பற்றிவந்தன. உண்கும், உண்டும், வருதும். சேறும் என்பன எதிர்காலங் குறித்துழி, எதிர்காலத்திற்கு ஏற்கும். நிகழ்காலம் குறித்துழி நிகழ்காலத்திற்கு ஏற்கும். அம் ஆம் என்பன ஈற்றெழுத்து ஓதினமையான் உடம்பாட்டின் வருதலேயன்றி, மறையினும் வரப்பெறும் என்று கொள்க. உண்ணலம், உண்ணாம், உண்ணலெம், உண்ணேம் என வரும். இவ்வுரை மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும். (5) உயர்திணைத் தன்மை ஒருமை வினைமுற்று 197. கடதற என்னும் அந்நான் கூர்ந்த குன்றிய லுகரமோடு என் ஏன் அல் என வரூஉம் ஏழும் தன்வினை உரைக்கும் தன்மைச் சொல்லே. தனித் தன்மை வினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) க, ட, த, ற என்னும் அந் நான்கு எழுத்தினையும் ஊர்ந்த குற்றியலுகரத்தோடேகூட என் ஏன் அல் என வரூஉம் ஏழு ஈறும் தன்வினைஉரைக்கும் தன்மைச் சொல்லாம், எ-று. தன்வினை உரைக்கும் சொல் என்னாது தன்மைச் சொல் என்றது தன்வினையைத் தானே உரைக்கும் சொல் என்று கொள்க. (எ-டு.) உண்கு, உண்டு, வந்து, சென்று எனவும்; உண்டனென், உண்ணாநின்றனென், உண்குவென்; உண்டேன், உண்கின்றேன், உண்பேன்; உண்பல் எனவும்; உண்ணலென், உண்ணேன் எனவும் வரும். (6) செய்கு என்னும் சொல் வினையொடு முடியும் எனல் 198. அவற்றுள் செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்வியல் திரியா தென்மனார் புலவர். மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்பதற்கு ஒரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் செய்கு என்னும் சொல் வினை யொடு முடிந்துழியும், பாலுணர்த்தும் இயற்கையின் திரியாது, எ-று. (எ-டு.) காண்கு வந்தேன் என வரும். காண்கு யான் எனப் பெயரொடும் முடிதல் இலக்கணம் என்று கொள்க. அஃதேல், முற்றுச் சொல் பெயர் கொண்டு முடிதல் யாண்டுப் பெற்றாம் எனின், முன் முற்றுச் சொல்லிலக்கணம் கூறுகின்றுழி, அவைதாம், “தத்தம் கிளவி யடுக்குந வரினும்-எத்திறத் தானும் பெயர்முடி பினவே” (சூ.245) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். ஈண்டு முடியினும் என்றதற்குப் பொருள் தொடர்புபடினும் என்றவாறாகக் கொள்க. (7) உயர்திணைப் படர்க்கை ஒருமை வினைமுற்று 199. அன்ஆன் அள்ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. உயர்திணைப் படர்க்கை வினையுள் ஒருமை வினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அன் முதலாக ஓதப்பட்ட நான்கும் உயர்திணை ஒருமை உணரவரும் படர்க்கைச் சொல்லாம், எ-று. (எ-டு.) உண்டனன், உண்கின்றனன், உண்பன்; உண்டான், உண்ணா நின்றான், உண்பான்; உண்ணான் இவை ஆண்பால் உணர வந்தன. உண்டனள், உண்கின்றனள், உண்பள்; உண்டாள், உண்கின்றாள், உண்பாள்; உண்ணாள் இவை பெண்பால் உணரவந்தன. பிறவும் அன்ன. (8) உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று 200. *அர்ஆர் பஎன வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. உயர்திணைப் படர்க்கைப் பன்மை வினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அர், ஆர், ப என வரும் மூன்று சொல்லும் உயர்திணைப் படர்க்கைப் பன்மைவினை உணர வரும் சொல்லாம், எ-று. *அரு என்புழி வந்த உகரம் செய்யுள் விகாரம் என்பதும் ஒன்று. ஒற்றீறாகி வரும் சொற்கள் உகரம் பெற்று வழங்கப் பெறும் என்பது அறிவித்தற்கு, உடம்பொடு புணர்த்துக் கூறினார் என்பதும் ஒன்று. (எ-டு.) உண்டனர், உண்ணாநின்றனர், உண்பர்; உண்டார், உண்ணா நின்றார், உண்பார்; உண்ணார்; உண்ப என வரும். (9) * (பாடம்) அரு என்பது. இதுவுமது 201. மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப. மேலதற்கு ஒரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மார் ஈற்று வினைச்சொல்லும் பல்லோரை உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். அது பெயரொடு முடிதலேயன்றி, வினையொடும் முடியும் என்று சொல்லுவார், எ-று. (எ-டு.) ஆ கொண்மார் வந்தார். இது வினையொடு முடிந்தது. ‘பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே’ (புறம். 375) இது பெயரொடு முடிந்தது. இதனையும், செய்கு என்பதனையும் வினையெச்சம் என்றதனாற் குற்றம் என்னை எனின். வினை எச்சம் பால் தோன்றாது : இவை பால் தோன்றலின், முற்று எனல் வேண்டும். (10) உயர்திணை வினைமுற்றின் தொகை 202. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே. விரிந்தது தொகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. மேல், உயர் திணை என்று ஓதாமையான், எஞ்சியது உணர்த்திற்று என்றுமாம். (இ-ள்.) பன்மையும் ஒருமையுமாகிப் பாலுணர வரும் மூன்று தலை யிட்ட இருபதும் முந்துற எடுத்து ஓதப்பட்ட உயர்திணை இடத்த, எ-று. பெயரெச்சம் மொழி மாறிநின்றது. இவ்வாறு மாறிவருவன உடம்பொடு புணர்த்ததனானும் கொள்க. மேல் ஓதப்பட்ட ஈறுகள் உயர்திணை என்பது இச் சூத்திரத்தாற் பெறப்பட்டது. அவை இருபத்து மூன்றுமாவன :- அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், றும். கு, டு, து, று, என், ஏன், அல், அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார் என்பன. (11) தன்மைப் பன்மையின்கண் வரும் திரிபு 203. அவற்றுள், பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி எண்ணியல் மருங்கின் திரிபவை உளவே. உளப்பாட்டுத் தன்மைக்கண் வருவதொரு திரிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், உளப்பாட்டுப் பன்மைச் சொல் எண் இயலும்வழித் திரிபவை உண்டு, எ-று. (எ-டு.) எண் என்பது இரண்டு மூன்று என்பன. யாம் இருவேம் எனற்பாலது, யாம் இருவர் எனவும் வரும். இன்னும் ‘எண்ணியன் மருங்கின்’ என்பதற்கு, எண்ணப்பட்டியன்ற மருங்கின் எனப் பொருள் உரைக்க உளப்பாட்டுத் தன்மைக்கு ஓதிய எட்டீற்றினும், திரிபவை உள என்றுமாம். வருவோம், உண்போம் என ஓகாரம் பெற்று வருவன ஏகாரத் திரிபு என்று கொள்க. (12) யார் என்னும் வினைமுற்று 204. யாஅ ரென்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. இது ரகரவீற்றுக்கண் வழுவமைத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யார் என்னும் வினாப் பொருண்மை உணர்த்துஞ் சொல் அவ் வுயர்திணைக்கண் முப்பாற்கும் உரித்து, எ-று. யார் என்பது காலங் காட்டாமையின், வினைச் சொல் ஆகாது எனின். வேற்றுமை ஏலாமையான் வினை எனப்படும். அதனானேயன்றே, வினை எனப்படுவது காலமொடு தோன்றும் என்னாது, வேற்றுமை கொள்ளாது எனவும் ஓதல் வேண்டிற்று என்க. (எ-டு.) அவன் யார், அவள் யார், அவர் யார் என வரும். (13) ன, ள, ர என்பவற்றின் ஈற்று ‘ஆ’ ‘ஓ’ ஆதல் 205. பாலறி மரபின் அம்மூ வீற்றும் ஆஓ ஆகும் செய்யு ளுள்ளே. இது படர்க்கை வினைக்கண் வரும் திரிபு உணர்த்துதல் நுதலிற்று, (இ-ள்.) பால் விளங்குதலை மரபாக உடைய னகாரம், ளகாரம், ரகாரம் ஆகிய மூவீற்றும் ஆகாரம் ஓகாரமாகித் திரியும் செய்யுளகத்து, எ-று. (எ-டு.) ‘வினவி நிற்றந் தோனே’. (அகம். 48) ‘நல்லை மன்னென நகூஉப் பெயர்ந் தோளே’. (அகம். 248) *‘சான்றோ ரல்லர் தோழி’ எனவரும். செய்யுள் ஆகாரமாகி வரப் பெறாதோ எனின், வழக்கிற்கு உரியன செய்யுட்காம் என்பது சொல்லாமற் பெறுதும் என்று கொள்க. (14) * (பாடம்) ‘சென்றோரன்பிலர் தோழி’. ஆய் என்பதும் அங்ஙனமாதல் 206. ஆயென் கிளவியும் அவற்றொடு கொள்ளும். இது முன்னிலை வினைச்சொற்கு உரியதொரு திரிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆய் என்னும் முன்னிலை வினைச்சொல்லும் ஓகாரமாகத் திரியும், எ-று. முன்னிலை வினை ஈண்டுக் கூறிற்றிலராயினும், திரிபு ஒப்புமை நோக்கிப், பருந்துவிழுக்காடு என்னும் சூத்திரக் கிடக்கையான், ஈண்டு ஓதப்பட்டது. (எ-டு.) ‘வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப’ (அகம். 80) என வரும்.(15) உயர்திணைக் குறிப்பு வினைமுற்று 207. அதுச்சொல் வேற்றுமை உடைமை யானும் கண்என் வேற்றுமை நிலத்தி னானும் ஒப்பி னானும் பண்பி னானுமென்று அப்பாற் காலங் குறிப்பொடு தோன்றும். உயர்திணை வினைக்குறிப்பு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆறாம் வேற்றுமைக்கண் ஓதிய உடைமை என்னும் பொருண்மை யானும், ஏழாம் வேற்றுமைக்கண் ஓதிய நிலப் பொருண்மை யானும், ஒன்றோடொன்று உவமையாகி வரும் பொருண்மையானும், ஒன்றன் குணமாகிய பண்பினானும் மேற்பகுக்கப்பட்ட காலம் குறிப்பொடு தோன்றும், எ-று. என்று என்பது எண்ணுக் குறித்து நின்றது. இதனாற் சொல்லியது இப்பொருண்மை காரணமாக வினைக்குறிப்புத் தோன்றும் என்றவாறு. ‘உடைமையாவது’ உடையானும், உடைப்பொருளும் தோன்ற வரும். சாத்தனதுடைமை குழை என்பது. இதனுள் உடைப்பொருளை முந்துறக் கிளக்குங்கால், குழையை உடையன் சாத்தன் என வரும். ஆண்டு உடையன் என்பது பெயருமன்றி வினையுமன்றி நின்றதாயினும், உருபேலாது வினைச்சொற்போல நிற்றலின் வினைக்குறிப்பெனக் குறிபெற்றது. ‘நிலத்தினான் வந்தது’:- சாத்தன் மாடத்துக்கண்ணிருந்தான் என்னும் பொருட்கண் சாத்தன் மாடத்தன் என வருவது. மாடத்தன் என்றவழி இடமும், உருபும், வினையும் ஒற்றுமைப்பட்டுச் சாத்தன் என்பதற்குப் பயனிலையாகி வினைச்சொல் நீர்மைப்பட்டு வருதலின், அதுவும் வினைக் குறிப்பாயிற்று. ‘ஒப்பு என்பது’-இதனை ஒக்கும் இது என்புழி, ஒத்தல் பெயருமன்றி வினையுமன்றி நின்றதாயினும், தந்தையை ஒப்பன் என வினைச்சொற் போல நிற்றலின், அதுவும் வினைக்குறிப்பாயிற்று. ‘பண்பாவது’-இவற்கு நிறம் கரிது என்புழி, கருமை என்பது அப்பொருட்குப் பண்பாதலின், அப்பண்பினை உடையானைக் கரியன் என்ப ஆகலான், அது பெயருமன்றி வினையுமன்றி வரினும் வினைச் சொற்போல நிற்றலின், அதுவும் வினைக்குறிப்பாயிற்று. இவை எல்லாம் அவ்வப்பொருள் காரணமாக வந்த சொல்லாயினவாறு கண்டுகொள்க. இவற்றுள், ‘காலம் குறிப்பொடு தோன்றலாவது’-இவன் திருவுடை யன் என்றவழிச் சொல்வான் குறிப்புத் தொன்று தொட்டுத் திருவுடையன் என்பதாயின், இறந்தகாலம் காட்டும்; இப்பொழுது என்பதாயின், நிகழ்காலம் காட்டும்; இனி என்பதாயின் எதிர்காலம் காட்டும். பிறவும் இவ்வாறு அறிந்துகொள்க. (16) இதுவுமது 208. அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின் அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் என்ன கிளவியும் குறிப்பே காலம். இதுவுமது. (இ-ள்.) இப்பொருள் அன்று என்னும் பொருண்மையானும், இப்பொருள் இல்லை என்னும் பொருண்மையானும், இப்பொருள் உண்டு என்னும் பொருண்மையானும், இது செய்யவல்லன் என்னும் பொருண்மை யானும் வரும் சொல்லும், அத்தன்மைய பிறவுமாகி வரும் சொல்லும், குறிப்பாற் கொள்ளப்படும் எல்லாச் சொல்லும் காலம் குறிப்பான் உணரப் படும், எ-று. இதனாற் சொல்லியது இவை காரணமாகப் பிறந்த சொல்லும் குறிப்பு வினையாம், எ-று. (எ-டு.) அல்லன், இலன், உளன், வல்லன் என வரும். அன்ன பிறவாற் கொள்ளப்படுவன இவற்றின் எதிர்மறை வாய்பாட்டான் வரும் அவன், வல்லான் எனக் கொள்க. பிறவும் அன்ன. “குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியும்” என்று ஓதியவதனாற் காலங் குறித்தலே யன்றி, ஈண்டு ஓதப்பட்ட பொருண்மை புலப்பட நில்லாது குறித்துக் கொள்ள நிற்கும் சொல்லும் வினைக் குறிப்பாம் என்றவாறு. சாத்தன் குழையை உடையன் எனக் கூறற்பாலது சாத்தன் குழையன் என்ற வழிக், குழையாகிய பொருளும், உருபும், உடைமை என்னும் சொல்லும் ஒற்றுமைப்பட்டுக் குழையன் என ஒரு சொல்லாகி வருதலின், அதுவும் வினைக்குறிப்பாம் என்று கொள்க. குழலன் கோட்டன் (முருகு. 209) என்பனவும் அவை. அஃதேல், இவை வேற்றுமைத்தொகை யாகாவோ எனின், அது உருபு தொக வருதலும், பொருள் தொக வருதலும் என இருவகைத்து. அவற்றுள் உருபு தொக வரின் குழை உடையன் எனல் வேண்டும். பொருள் தொகவரின் குழைச்சாத்தன் எனல் வேண்டும். அவ்விருவாற்றானும் அன்றிக், குழையன் என வினைச்சொல் நீர்மைப்பட்டு வருதலின், வினைக் குறிப்பாயிற்று. இன்னும் ‘குறிப்பொடு கொள்ளு மென்ன கிளவியும்’ என்றதனாற் பைங்கண்ணன் புன்மயிரன் (இறை. அக. 1 உரை) எனப் பண்பினாகிய சினை முதற் கிளவியாகி இருதிணைக்கும் பொதுவாகி வரும் வினைக்குறிப்பும் கொள்ளப்படும். (17) உயர்திணைக் குறிப்பு வினைமுற்றின் ஈறு 209. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம் காலக் கிளவி உயர்திணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. குறிப்பு வினைச்சொற்கு ஈறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பன்மையும் ஒருமையும் ஆகிப் பால் விளங்க வந்தன வாகிய மேற்சொல்லப்பட்ட மரபினவாகிக் குறிப்பொடு வரூஉங் காலத்தை யுடைய சொல் உயர்திணை மருங்கின் மேற் சொல்லப்பட்ட சொல்லொடு வேறுபாடில, எ-று. இவ்வாறு மாட்டெறிந்ததனான் ஆண்டு ஓதிய ஈறே வினைக் குறிப்பிற்கும் ஈறு என்றவாறாம். ஏற்புழிக் கோடல் என்பதனான் ஈண்டு ஏற்பன கொள்ளப்படும். (எ-டு.) உடையம், உடையாம், உடையெம், உடையேம் இவை உளப்பாட்டுத் தன்மை. உடையென், உடையேன் இவை தனித்தன்மை. உடையன், உடையான், உடையள், உடையாள், உடையர், உடையார், உடையோன், உடையோள், உடையோர் இவை படர்க்கை. ஏனையவற் றோடும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. பிறவீற்றினும் ஏற்பன வந்தவழிக் கண்டுகொள்க. (18) அஃறிணைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்று 210. அஆ வஎன வரூஉம் இறுதி அப்பான் மூன்றே பலவற்றுப் படர்க்கை. நிறுத்த முறையானே அஃறிணை வினை உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள், தன்மைக்கண் கூற்று நிகழாமையானும், முன்னிலை விரவு வினையாதலானும், அஃறிணைக்கே யுரித்தாகி வருவது படர்க்கை ஆதலான், அது தெரிநிலை வினை, குறிப்பு வினை என இரு வகைப்படுதலின், அவற்றுள், தெரிநிலை வினை உணர்த்துவார் முதற்பட அதற்கண் பல வறிசொல் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. அஃதற்றாக, கிளியும், பூவையும் தன்வினை உரைக்குமாதலின், அஃறிணைக்கண் தன்மைவினை இன்றென்றது என்னையெனின், கிளியும், பூவையும் ஆகிய சாதி எல்லாம் உரையாடும் என்னும் வழக்கின்மையானும், அவை உரைக்குங்கால் ஒருவர் உரைத்ததைக் கொண்டு உரைக்கும் ஆதலா னும், ஒருவன் பாடின பாட்டை நரம்புக் கருவியின்கண் ஓசையும் பொரு ளும்பட இயக்கியவழிக், கருவியும் உரையாடிற்றாதல் வேண்டுமாக லானும், அவ்வாறு வருவன மக்கள் வினையாதலான் தன்மைவினை யன்றென்க. யான் என்னும் பெயரை விரவுப் பெயர்க்கண் ஓதாது உயர்திணைக்கண் ஓதினமையானும் அஃறிணைக்கண் தன்மைவினை இன்றென்க. (இ-ள்.) அ ஆ வ என்னும் ஈற்றினை உடைய அக்கூற்று மூன்று சொல்லும் அஃறிணைப் படர்க்கைக்கண் பன்மை உணர்த்தும் சொல்லாம், எ-று. அஃறிணை என்பது வருகின்ற சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப் பட்டது. (எ-டு.) உண்டன, உண்கின்றன, உண்பன; உண்ணல; உண்ணா; உண்குவ என வரும். பிறவுமன்ன. (19) அஃறிணை ஒருமைத் தெரிநிலை வினை முற்று 211. ஒன்றன் படர்க்கை தறட ஊர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும். அஃறிணைப் படர்க்கைக்கண் ஒருமை உணரவரும் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அஃறிணை யொன்றனை அறியவரும் படர்க்கை வினைச் சொல் த, ற, ட க்களை ஊர்ந்த குற்றியலுகரத்தினை ஈறாக உடைய, எ-று. (எ-டு.) உண்டது, உண்ணாநின்றது, உண்பது, உண்ணாது; கூயிற்று; உண்டு என வரும். உண்டு என்பது உண்டு அது என்னும் பொருட்டு. பிறவுமன்ன. (20) அஃறிணை வினைமுற்றின் தொகை 212. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே. விரிந்தது தொகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல், பன்மையும் ஒருமையுமாகிப் பால் உணர எடுத்து ஓதப்பட்ட ஆறு ஈற்று வினைச் சொல்லும் அஃறிணையிடத்த, எ-று. அவையாவன அ, ஆ, வ, து, று, டு என்பன. (21) எவன் என்னும் வினைமுற்று 213. அத்திணை மருங்கின் இருபாற் கிளவிக்கும் ஒக்கும் என்ப எவன்என் வினாவே. அஃறிணைக்கு உரியதொரு வினாச்சொல் பாலுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அஃறிணை இடத்து இருபாற் கிளவிக்கும் எவன் என் வினா ஒக்கும் என்று சொல்லுவர், எ-று. (எ-டு.) இப் பண்டியுள்ளது எவன், இப் பண்டியுள்ளன எவன் என வரும். (22) அஃறிணைக் குறிப்பு வினைமுற்று 214. இன்றில வுடைய என்னுங் கிளவியும் அன்றுடைத் தல்ல என்னுங் கிளவியும் பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும் பண்பி னாகிய சினைமுதற் கிளவியும் ஒப்பொடு வரூஉங் கிளவியொடு தொகைஇ அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும். அஃறிணை வினைக்குறிப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இன்றென்பது முதலாகச் சொல்லப்பட்ட பத்தும் காலம் குறிப்பொடு கொண்டு நிற்கும், எ-று. (எ-டு.) ‘இன்று, இல’ என்பன ஒரு பொருளின் இன்மை உணர வருவன. கோடின்று கோடில என வரும். ‘உடைய, உடைத்து’ என்பன ஒரு பொருட்கு ஒரு பொருள் உண்டென்னும் பொருண்மேல் வரும். கோடுடைத்து, கோடுடைய என வரும். ‘அன்று, அல்ல’ என்பன தாம் குறித்த பொருளை விளக்க வரும். அதுவன்று, அவை யல்ல என வரும். ‘பண்புகொள் கிளவி’யாவது பண்பினைக் கொண்டு நிற்குஞ் சொல். இது கரிது, இது நெடிது என வருவன. ‘உளவென் கிளவி’யாவது ஒரு பொருளின் உண்மை உணரநிற்பது. அவை உள என வரும். இதன் ஒருமையாகிய உண்டு என்னும் சொல் இருதிணைக்கும் உரித்தாகலின் ஈண்டு ஓதாராயினர். ‘பண்பினாகிய சினைமுதற் கிளவி’யாவது பண்பும் சினையும் அடுத்து முதலொடு முடிவது. குறுந்தாட்டு, குறுந்தாள என வரும். ‘ஒப்பொடு வரூஉங் கிளவி’யாவது ஒன்றனோடு ஒன்று ஒக்கும் என்னும் பொருண்மை குறித்து வருவது. அன்னது, அனையது, அன்ன, அனைய என வரும். (23) அஃறிணைக் குறிப்புவினை முற்றின் ஈறு 215. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி அஃறிணை மருங்கின் மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. அஃறிணை வினைக்குறிப்பிற்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேல் ஓதிய வாய்பாட்டான், பால் விளங்க வந்தனவாய்ச் சொல்லப்பட்ட மரபினாற், குறிப்பொடு வரூஉம் வினைச்சொல் அஃறிணைத் தெரிநிலை வினையொடு வேறுபாடில, எ-று. அதற்கு ஓதிய ஈறே இதற்கும் ஈறென்பது பெற்றாம். (எ-டு.) உடைத்து, இன்று, குண்டுகட்டு, குறுந்தாள, பொல்லா என வரும். ‘அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்’ என்றதனான், உருபும், பொருளும், வினையும் ஒற்றுமைப்பட்டு வருவனவும், உயர்திணை வினைக்கண் ஓதிய இடமும், வன்மையும் பற்றி வருவனவுங் கொள்க. முதற்று, முதல என்பன உருபும், பொருளும், வினையும் ஒற்றுமைப் பட்டன. மேற்று, மேல; மாடத்தது, மாடத்த என்பன இடம் பற்றி வந்தன. ஓடவற்று, ஓடவல்ல; ஓடவல்லாது, ஓடவல்லா என்பன வன்மைபற்றி வந்தன. பிறவுமன்ன. (24) விரவு வினையின் பெயரும் முறையும் தொகையும் 216. முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி இன்மை செப்பல் வேறென் கிளவி செய்ம்மன செய்யும் செய்த என்னும் அம்முறை நின்ற ஆயெண் கிளவியும் பிரிபுவேறு படூஉம் செய்திய வாகி இருதிணைச் சொற்குமோ ரன்ன உரிமைய. நிறுத்த முறையானே இரு திணைக்கும் உரிய வினை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், முன்னிலை வினை முதலாக எடுத்து ஓதப்பட்ட எண்வகைச் சொல்லும், பிரிந்து பொருள் வேறுபடூஉம் செய்கையவாகி, இருதிணைச் சொற்கும் ஒத்த உரிமையை உடைய என்ற வாறு. உதாரணம் முன்னர்க் காட்டுதும். (25) முன்னிலை ஒருமை வினைமுற்று 217. அவற்றுள், முன்னிலைக் கிளவி இ ஐ ஆயென வரூஉம் மூன்றும் ஒப்பத் தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும். முன்னிலை வினைச்சொல்லுள் ஒருமை உணர்த்தும் ஈறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் முன்னிலைக் கிளவிக்கண் இ, ஐ, ஆய் என்று வரும் ஈற்றினை யுடைய மூன்று சொல்லும் உயர்திணை ஆண்பாற்கும், பெண்பாற்கும், அஃறிணை ஒன்றன்பாற்கும் ஒத்த இயல்பின வாகித் தோன்றும், எ-று. முன்னிலை வினையென்னாது முன்னிலையெனப் பொதுப்பட ஓதினவதனான், அச்சொல் இருவகைப்படும் : முன் நின்றான் தொழில் உணர்த்து வனவும், அவனைத் தொழிற்படுத்தற்கு ஏவல் குறித்து வருவனவு மென. (எ-டு.) உண்டி, உண்கிற்றி; உண்டனை, உண்ணாநின்றனை, உண்குவை, உண்பை; உண்டாய்; உண்ணாநின்றாய், உண்பாய், உண்ணாய்; கருத்தி, கரியை, கரியாய் என்பன முன்னின்றான் தொழில் உணர்த்தின. இவற்றுள் ஆய் என்பது மறையினும். ஏவலினும், தொழிலினும் வரும். உண்டி என்பது தொழிலினும் ஏவலினும் வரும். பிறவுமன்ன. அஃதேல், நட, வா, அறி, ஈ, கொடு, தூ, ஏ, வை, போ, கௌ எனவும்; செல், கொள், உண், தின், கூட்டு எனவும் உயிரீறும் ஒற்றீறுமாகிப் பலவகையான் வருவன எல்லாம் ஓதாது முன்னிலைச்சொல் மூன்றென்றது என்னை யெனின், அவை எல்லாம் ஆய் என்னும் சொல் குறைந்து நின்றன. அன்னவாதல், ‘செய்யா யென்னும் முன்னிலை வினைச் சொல்; செய்யென் கிளவி யாகிட னுடைத்தே’ (எச்சவியல் 51) என்பதனுட் கண்டுகொள்க.(26) முன்னிலைப் பன்மை வினைமுற்று 218. இர் ஈர் மின்என வரூஉம் மூன்றும் பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் சொல்லோ ரனைய என்மனார் புலவர். முன்னிலை வினைச்சொல்லுள் பன்மை உணர்த்தும் ஈறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இர், ஈர், மின் என்று சொல்லப்பட்ட மூன்றீற்று வினைச் சொல்லும் உயர்திணைப் பன்மைக் கண்ணும், அஃறிணைப் பன்மைக் கண்ணும் சொல் நோக்கொக்கும், எ-று. (எ-டு.) உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்பிர்; உண்டீர், உண்ணா நின்றீர், உண்பீர்; உண்மின், உண்ணலிர், உண்ணீர், உண்ணன்மின் என வரும். இவை உணர்த்துமாறு என்னை எனின், இவ்வினைக்குப் பெயராகிய நீ, நீயிர் என்பனவற்றிற்கு, ‘இன்ன பெயரே இவையெனல் வேண்டின் முன்னஞ் சேர்த்தி முறையி னுணர்தல்’ (பெயரியல் 37), என விதித்தாராக லான் ஆண்டை விதியே ஈண்டுங் கொண்டு சொல்லுவான் குறிப்பினானும் தொடர்வுபட்ட பெயரினானும் உணர்ந்து கொள்க. உண்டாயோ மகனே உண்டாயோ மகளே என்றவழி உயர்திணை உணரப்பட்டது. உண்டாயோ குயிலே என்றவழி அஃறிணை யுணரப்பட்டது. உண்டீரோ மக்காள் என்ற வழி உயர்திணை உணரப்பட்டது. உண்டீரோ கிளிகாள் என்றவழி அஃறிணை உணரப்பட்டது. உண்டீரோ மக்காள் என்றவழி ஆண் பன்மை பெண் பன்மை விளங்கல் வேண்டின் அதனொடு தொடர்ந்த சொல்லான் உணர்க. (27) முன்னிலை ஒழிந்த வினைகள் 219. எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே. முன்னிலை யொழிந்த சொற்கள், பால் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட முன்னிலை ஒழிந்த சொற்கள் (வினை. சூ. 25) மூன்றிடத் தொடும் கூடி ஐந்து பாற்குமுரிய, தோன்று நெறிக்கண் எ-று. அவற்றுள், சிறப்பு விதியுடைய வியங்கோட்கும், வினையெச்சத்திற் கும், செய்யும், செய்த என்னும் சொற்கும் உதாரணம் தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். ஏனைய ஈண்டுக் காட்டப்படும். (எ-டு.) இன்மை செப்பல் என்பது இல்லை என்னுஞ் சொல். அது யானில்லை, யாமில்லை; நீயில்லை, நீயிரில்லை; அவனில்லை, அவளில்லை, அவரில்லை, அதுவில்லை, அவையில்லை என வரும். வேறென் கிளவியாவது வேறென்னும் சொல். அது, யான் வேறு, யாம் வேறு; நீ வேறு, நீயிர் வேறு; அவன் வேறு, அவள் வேறு,அவர் வேறு, அது வேறு, அவை வேறு என வரும். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், கூட்டு என்பதூஉம், ஆம் என்பதூஉம் கொள்க. யான் கூட்டு, யான் ஆம், நீ கூட்டு; நீயாம், அவர் கூட்டு, அவர் ஆம் என மூன்றிடத்துக்கண்ணும் ஒட்டுக. செய்ம்மன என்பது, யான் செய்ம்மன, நீ செய்ம்மன, அவன் செய்ம்மன என எல்லாப் பாலோடும் ஒட்டுக. இஃது இக்காலத்துச், செய்வது, செய்வன, செய்பவை, செய்யுமவை என வழங்கும்போலும். (28) வியங்கோள் வினைமுற்றுத் தன்மை முன்னிலைகளில் வாராது என்பது 220. அவற்றுள், முன்னிலை தன்மை ஆயீ ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி. எய்தியது ஒருமருங்கு விலக்குதலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லபட்டவற்றுள் வியங்கோள் சொல் முன்னிலை யும் தன்மையுமாகிய இடத்து நிலைபெறா, எ-று. எனவே, படர்க்கை ஐந்து பாற்கண்ணும் வரும் என்றவாறாம். வியங்கோள் என்பது யாதோ எனின், செய்க என்னும் பொருட்கண்ணும், தவிர்க என்னும் பொருட்கண்ணும், வேண்டிக் கோடற் பொருட்கண்ணும் வருவது. அஃதாவது வாழ், உண், தவிர் என்னும் ஏவல் குறித்த சொற்கள், தன்மைப் பெயர்க்கண்ணும், படர்க்கைப் பெயர்க்கண்ணும் ஏலாது முன்னிலை ஒருமைப் பெயர்க்கண், நீ வாழ், நீ யுண், நீ தவிர் என ஏற்றலின், ஆண்டுப் பாலுணர்த்துஞ் சொல்லோடு ஒரு நிகரனவாகி முன்னிலை வினையுள் அடங்கின. அப்பொருட்கண், தன்மை கூறும் வழி, யான் வாழ்வல், உண்பல், தவிர்வல் எனக் கூறவேண்டலின் அவை தன்மை வினையுள் அடங்கின. இனிப் படர்க்கைக்கண் வருங்கால், அவன் வாழ்க, உண்க, தவிர்க எனக் ககரம் கடையாத்துக் கூறவேண்டுதலின், அவ்வாறு வருஞ்சொல், பாலுணர்த்தாமையின் வியங்கோள் என வேறு குறி பெற்றது. அவன் வாழ்க, அவள் வாழ்க. அவர் வாழ்க, அது வாழ்க, அவை வாழ்க என ஐந்து பாற்கும் உரித்தாகி வந்தவாறு கண்டு கொள்க. நீ வாழ்க, உண்க எனவும் வருமாலெனின், அவை அக்ககரம் பெறாக்காலும் பொருள் இனிது விளங்குதலின் அவ்வாறு வருவன மரூஉ வழக்கென்று கொள்க. ‘கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர்’ எனச் செய்யுளகத்தும் வந்ததாலெனின், நீ கடாவுக என வாராது, பாக கடாவுக என வருதலின், அது படர்க்கைப் பெயர் விளியேற்றவழி வந்த தென்க. ‘என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுள்’ (சிலப். வழக். 77) எனத் தன்மைக்கண் வந்ததா லெனின், ஆண்டுக் கெடுக எனப்பட்டது ஆயுளா தலின் அதன் மேல் வந்த தென்க. இனி, அவ்வியங்கோட் கிளவி ஈறு திரிந்து வந்து அப்பொருள் படுதலுங் கொள்க. ‘வாழிய வென்னுஞ் சேய என் கிளவி-யிறுதி யகரங் கெடுதலு முரித்தே’ (எழுத். உயிர்மய. 9) என்றமையான் வாழ்க என்பது வாழி, வாழிய, வாழியர் எனவும்; ‘செப்பும் வினாவும் வழாஅலோம்பல்’ (கிளவி. 13), என்றமையான் ஓம்புக என்பது அல் ஈறாகி வருதலுங் கொள்க. ‘மகனெனல் மக்கட் பதடியெனல்’ (குறள். 996) என்றமை யான் உடம்பாட்டினும், மறையினும் அல்லீறு வருதலுங் கொள்க. ‘ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை - ஆஅது மென்னு மவர்’ (குறள். 653) என்பது பல்லோர் படர்க்கை யாதலின், வேண்டும் என்னும் முற்றுச் சொற் கொண்டு முடியாமையின், ஆக்கங் கருதுவார் இவ்வாறு செய்தல் வேண்டுமென வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் வந்தது. “திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் இசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்” (கலி. பாலை. 26) என்றவழி, ஏதினாட்டுறைபவர் அருளுவாராக என வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் ஈறு திரிந்தது. பிறவுமன்ன. (29) செய்யும் என்னும் முற்றுப் பொருந்தாத இடம் 221. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றும் நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா. இதுவும் எய்தியது ஒருமருங்கு மறுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பலரை உணர்த்தும் படர்க்கையும், முன்னிலையும், தன்மையு மாகிய மூன்றிடமும் நிகழ்காலங் குறித்த செய்யும் என்னுங் கிளவியொடு பொருந்தா, எ-று. ஈண்டு இவ்வாறோதி; முன் ‘அவ்வறு பொருட்கும் ஓரன்ன உரிமைய-செய்யும் செய்த என்னுஞ் சொல்லே’ (வினை. 37) என ஓதினமையாற் செய்யும் என்பது முற்றும் பெயரெச்சமும் என இருவகைப் படுமென்று கொள்க. அது முற்றாயுழித் தன்மையினும், முன்னிலையினும் உயர்திணைப் படர்க்கைப் பன்மையினும் வாராது, ஏனைப் பாலின் கண்ணே வரும் என்றவாறாம். அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும் என வரும். ஈண்டு நிகழ்காலங் குறித்த தென்னை; எதிர்காலங் குறித்து வாராதோ எனின், எதிர்காலத்துக்கண் வருவது காலமயக்கமாகக் கொள்க. முற்றுச் சொல் சேரக் கூறுகின்றா ராகலின் இச்சூத்திரம் ஈண்டோதப்பட்டது. (30) வினையெச்ச வாய்பாடுகள் 222. செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி. வினையெச்சம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்து என்பது முதலாகச் செயற்கு என்பதீறாக ஓதப்பட்ட ஒன்பது வாய்பாடும் வினையெச்சச் சொல்லாம், எ-று. வினையெச்சமாவது மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப் பெறாது நிற்கும். இவ் வினைச்சொல்லாவது பாலுணர்த்தாது காலங் காட்டி நிற்கும். செய்து என்பது இறந்த காலங் காட்டும். செய்யூ என்பது இறந்த கால அணிமையும் நிகழ்காலமும் காட்டும். ‘செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்’ (உயிர் மயங். 20) என எழுத்ததிகாரத் தோதுதலின், அவ்வாய் பாடும் இப் பொருட்டாகி வருதலின் அதுவுங் கொள்க. செய்பு என்பது மூன்று காலமுங் காட்டும். செய்தென என்பது இறந்த காலப் பொருட் டாயினும் விரைவு குறித்தலானும், திரிந்து முடிதலானும் பொருள் வேறுபாடு உடைத்தாதலான் வேறோதப்பட்டது. செய்யியர் என்பது எதிர்காலங் காட்டும். செய்யிய என்பது வாய்பாடுவேற்றுமை யுடைத்தாத லான் பொருள் நோக்காது சொல் நோக்கிக் கூறப்பட்டது. செயின் என்பது எதிர்காலம் பற்றி வரினும் பொருள் வேறுபாடுடைத்தாதலான் வேறோதப் பட்டது. செய என்பது மூன்று காலத்திற்கும் பொதுவாகிப் பொருள் வேறுபாடு உடைத்து. செயற்கு என்பது எதிர்கால வாய்பாட்டு வேற்றுமை குறித்து ஓதப்பட்டது. உதாரணம் வருகின்ற சூத்திரங்களுட் காட்டுதும். (31) வினையெச்ச ஈறுகள் 223. பின்முன் கால்கடை வழியிடத் தென்னும் அன்ன மரபிற் காலங் கண்ணிய என்ன கிளவியும் அவற்றியல் பினவே. இதுவும் வினையெச்ச வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பின் முதலாக ஓதப்பட்டனவும், அத்தன்மையவாகிய மரபினாற் காலங் குறித்து வரும் எல்லாச் சொல்லும் வினையெச்ச இயல்பின, எ-று. எனவே, மேற் சொல்லப்பட்டவற்றோடு ஒரு நீர்மைய அல்ல என்பது பெறப்பட்டது. அன்ன மரபினாற் கொள்ளப்படுவன உம், மற், மை, கிற், இன்றி, அன்று, இனிக் கொண்டான், நனி வந்தான் என வருவனவும், பிறவும். இவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். (32) செய்து, செய்யூ, செய்பு என்பவற்றிற்கு முடிபு 224. அவற்றுள், முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின. நிறுத்த முறையானே முந்துற்ற மூன்றற்கும் முடிபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் முந்துற்ற மூன்று சொல்லும் அவ்வினைக்குக் கருத்தாவாகிய பொருளின் வினையை முடிபாக உடைய, எ-று. (எ-டு.) உண்டு வந்தான்-இது செய்தென் எச்சம். ‘படுமகன் கிடக்கை காணூஉ-வீன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே’ (புறம். 278). இஃது இறந்த காலங் குறித்த செய்யூ என்னும் வினையெச்சம். ‘நிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சரம்’-இது நிகழ்காலம் குறித்த செய்யூ என்னும் வினை யெச்சம். ‘வானிடு வில்லின் வரவறியா வாய்மையான்’ (நாலடி. கடவுள் வாழ்த்து)-இது செய்யா என்னும் வினையெச்சம். ‘புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த’ (புறம். 33) என்பது இறந்தகாலம் குறித்த செய்பு என்னும் வினை யெச்சம். ‘வாடுபு வனப்போடி வணங்கிறை வளையூர’ (கலி. 16) என்பது நிகழ்காலங் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். உண்பு வந்தான்-இஃது எதிர்காலங் குறித்த செய்பு என்னும் வினையெச்சம். மூன்றிடத்தும் ஐந்து பாலோடும் ஒட்டிக்கொள்க. (33) எய்தியதன்மேற் சிறப்பு விதி 225. அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிச் சினையொடு முடியா முதலொடு முடியினும் வினையோ ரனைய என்மனார் புலவர். எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. வழுவமைதியுமாம். (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட மூன்று சொல்லும் சினை வினையாகித் தோன்றி, அச் சினைவினையொடு முடியாது, முதல் வினையொடு முடியினும், அச்சினைவினையான் முடிந்ததனோடு ஒக்கும், எ-று. (எ-டு.) கையிற்று வீழ்ந்தது, கையிறூஉ வீழ்ந்தது, கையிறுபு வீழ்ந்தது எனற்பாலன கையிற்று வீழ்ந்தான், கையிறூஉ வீழ்ந்தான், கையிறுபு வீழ்ந்தான் என வீழப்பட்டது கையாயினும், அதனொடு முடியாது அதன் முதல் வினையொடு முடியினும் குற்றமில என்றவாறு. உய்த்துணர வைத்தல் என்னும் தந்திர உத்தியான் வினை யெச்சத் திற்கு முடிபாகி வரும் சினைவினை முதலொடு முடிதலேயன்றித் தனிவருஞ் சினை வினையும் முதலொடும் முடியுமென்று கொள்க. கையிற்றான், கண் கெட்டான் என வரும். (34) ஏனையெச்சங்கள் இருவகை வினையும் கொண்டு முடியும் என்பது 226. ஏனை யெச்சம் வினைமுத லானும் ஆன்வந் தியையும் வினைநிலை யானும் தாமியல் மருங்கின் முடியும் என்ப. ஏனை எச்சங்கட்கு முடிபுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையெச்சங்களுள் முந்துற்ற மூன்று மல்லாதன வினை முதல் வினையானும், அவ்விடத்துப் பொருந்தும் பிறவினையானும் தாம் நடக்கும் மருங்கினான் முடியும், எ-று. (எ-டு.) மழை பெய்தெனப் புகழ் பெற்றது, மழை பெய்யியர் எழுந்தது, மழை பெய்யிய எழுந்தது. மழை பெய்யிற் புகழ் பெறும், மழை பெய்யப் புகழ் பெற்றது-இவை இறந்தகாலம். ‘வாழச் செய்த நல்வினை யல்லா, தாழுங் காலைப் புணை பிறிதில்லை’ (புறம். 367) இது வாழாநிற்க வென நிகழ்காலங் குறித்தது. மழை பெய்ய எழுந்தது-இது எதிர் காலம். மழை பெயற் கெழுந்தது. இவை வினைமுதல் வினையான் முடிந்தன. மழை பெய்தென மரங் குழைத்தது. மழை பெய்யியர் மாதவர் அருளினர். மழை பெய்யிய மாதவரருளினர். மழை பெய்யிற் குளம் நிறையும். மழை பெய்யக் குளம் நிறைந்தது-இவை இறந்தகாலம். மழை பெய்ய வந்தான், இது நிகழுங் காலம். மழை பெய்யப் பலி கொடுத்தும், இஃது எதிர்காலம். மழை பெயற்கு அறஞ்செய்தும், இவை பிற வினையான் முடிந்தன. தானுண்டபின் வந்தான், தானுண்ணாமுன் வந்தான். தானுண்டக் கால் வரும்-தானுண்டக்கடை வரும்-இஃது இறுதி என்னும் காலங் குறித்து நின்றது. தானுண்டவழி வரும், இதுவுமது. தானுண்டவிடத்து வரும், இஃது உண்டக்கால் என்பது குறித்தது. இவை தன்வினை. பிறன் உண்டபின் வரும். பிறனுண்ணாமுன் வரும். பிறனுண்டக்கால் வரும். பிறனுண்டக் கடை வரும். பிறனுண்டவழி வரும். பிறனுண்டவிடத்துவரும். இவை பிறவினை. இவை பெயராதற்கும் ஏற்று நிற்றலின், அந்நிலையின்றித் தொழில் நிகழுங் காலத்தைக் குறித்து வரின் வினையெச்சமாம் என்பதனாற் காலங் கண்ணிய என்று ஓதினார். அன்னமரபினாற் கொள்ளப்படுவன:- ‘அற்றா லளவறிந் துண்க’ (குறள். 943). ‘அலைப்பான் பிறிதுயிரை யாக்கலும் குற்றம்’. (நான்மணி. 26) ‘நனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே’. (கலி. குறி. 3). ‘கூறாமற் குறித்ததன் மேற் செல்லும்’ (கலி. 1). ‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ (குறள். 701). ‘செவ்வன் தெரிகிற் பான்’. ‘விருந்தின்றி உண்ட பகலும்’ (திரிகடுகம். 44). ‘நாளன்று போகிப் புள்ளிடை தட்ப’ (புறம். 124). இனிக்கொண்டான். அணி வந்தான். நனி வந்தான். பிறவும் இவ்வாறு வருவன கொள்க. (35) வினையெச்சங்கள் அடுக்கியவழிப் படுவதோர் இலக்கணம் 227. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி சொன்முறை முடியாது அடுக்குந வரினும் முன்னது முடிய முடியுமன் பொருளே. வினையெச்சம் அடுக்கி வருவழி வருவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினை யெச்சச் சொற்றாம் சொற்கடோறும் முற்றுப் பெறாது பலவாற்றானும் அடுக்கி வரினும், இறுதி நின்றது முடிய ஏனையவும் பொருண்முடிவு பெற்றனவாம், எ-று. (எ-டு.) உண்டு தின்று ஓடிப்பாடி வந்தான். உண்டு பருகிக் கூத்திற் புக்கு வந்தான் என வரும். பிறவுமன்ன. (36) பெயரெச்சம் 228. நிலனும் பொருளும் காலமுங் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ்வறு பொருட்கும் ஓரன்ன வுரிமைய செய்யுஞ் செய்த வென்னுஞ் சொல்லே. செய்யும், செய்த என்னும் சொற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நிலப் பெயரும், பொருட் பெயரும், காலப் பெயரும், கருவிப் பெயரும், வினைமுதற் பெயரும், வினைப் பெயருமாகிய அவ்வாறு பெயர்க்கும் ஒத்த உரிமைய, செய்யும், செய்த என்னும் சொற்கள், எ-று. இவற்றொடு முடியும் எனவே, இவை பெயரை எச்சமாக உடைய வாதலாற் பெயரெச்சமெனக் குறியும் பெறும். இவையும் பால்காட்டா என்றுணர்க. இவை ‘எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி’ (சொல். 219) என்பதன்கண் அடங்காவோ எனின், ஆண்டு வினைமுதல் தானே மூன்றிடத்து ஐந்து பாலுமாகி வரும். இவை அவ்வாறு அன்றிச் செயப்படு பொருளொடும், செயலொடும், கருவியொடும், இடத்தொடும், காலத் தொடும், வினைமுதலொடும் ஒத்த இயைபினவாகி முற்றுப்பெறுதலின் அடங்காவென்க. உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். (37) செய்யும் என் எச்சம் யாண்டும் வருதல் 229. அவற்றொடு வருவழிச் செய்யும் கிளவி முதற்கண் வரைந்த மூவீற்றும் உரித்தே. எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யும் என்னும் சொல் நிலம் முதலாகிய பொருளொடு வருவழி, முற்பட வரையப்பட்ட பல்லோர் படர்க்கையும் முன்னிலையும், தன்மையும் ஆகிய மூன்று வேறுபாட்டினும் உரித்து, எ-று. (எ-டு.) நிலம்-உண்ணுமில், உண்ட இல். பொருள்-உண்ணுஞ் சோறு, உண்ட சோறு. காலம்-உண்ணும் காலம், உண்ட காலம். கருவி-உண்ணுங் கலம், உண்ட கலம். வினை-உண்ணும் ஊண், உண்ட ஊண். வினை முதல் மூன்றிடத்து ஐந்து பாலுமாகி ஒன்பது வகைப்படும். உண்ணும் யான், யாம்; நீ, நீயிர்; அவன், அவள், அவர், அது, அவை என வரும். செய்த என்பதும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. கருவி என்பதனான் மூன்றாவதற்கு ஓதிய காரணமும், ஏதுவும் கொள்க. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், ‘நிலம் பூத்த மரமிசை நிமிர்பாலும்’ (கலி. 27 - 9) என்றவழி நிலம் பொலிவு பெற்ற மரம் என்று பொலிதற்கு ஏதுவின்கண் வந்தது. யான்ஆ கொடுக்கும் பார்ப்பான் எனவும், ஒலித்த கூலி எனவும் நான்காவதற்கு ஓதிய கொள்வதனோடும், பயனோடும் வருமாலெனின், கொடுக்கும் பார்ப்பான் என்றவழிக் கொடைத் தொழில் பார்ப்பான் மேலேறுதலின், யான்ஆ கொடுப்பக் கொள்ளும் பார்ப்பான் எனப் பொருள் உரைக்க வேண்டுதலின், அது வினைமுதலாம். ஒலித்த கூலி என்றவழி, கூலியாவது பயனாதலின் அதற்குப் பொருள் உரைக்குங்காலை, ஒலித்ததற்குக் கூலி என உரைக்க வேண்டுதலின், ஆண்டு அதற்கென்பது புலப்படாது நின்றதல்லது கூலி யென்பதனொடு பொருத்த மின்றென்க. இவையிற்றை மரூஉ வென்று கொள்ளப்படும். அஃதற்றாக, வினையெச்சம் பெயரெச்சம் என்பன தனிமொழி ஆதலின்றி, வினையொடும் பெயரொடும் முடிதலான், அவற்றைத் தொடர் மொழி கூறுகின்றவழிக் கூறல் வேண்டும் எனின், ஈண்டுச் செய்து, செய்யூ எனவும், செய்யும், செய்த எனவும் தனிமொழி இலக்கணமே கூறிற்றென்க. அன்றியும் முடிக்குஞ் சொல்லும் ஈண்டு ஓதப்பட்டதாயினும், உண்டு வந்தான் என்றவழிச் சாத்தன் என்று ஒரு பெயரோடல்லது முற்றுப் பெறாமையானும், உண்ட சாத்தன் என்றவழி, வந்தான் என ஒரு வினையோ டல்லது முற்றுப் பெறாமையானும், இவையும் தனி மொழிப் பகுதி யெனி னல்லது வாக்கியமாகி முற்றி நிற்குந் தொடர் மொழியாகா வென்க. (38) இருவகை எச்சமும் எதிர்மறை வினையையும் கொண்டு முடியும் 230. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா. இருவகை யெச்சத்திற்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயரெச்ச வினைச்சொல்லும், வினையெச்ச வினைச் சொல்லும் எதிர் மறுத்து மொழியினும் தத்தம் பொருணிலைமையிற் றிரியா, எ-று. (எ-டு.) உண்ணாச் சாத்தன், உண்ணாத சாத்தன், எறியா வேல் என்பன செய்யும், செய்த என்னும் இரண்டனும் வரும் மறை. பிறவுமன்ன. உண்ணாது வந்தான், மழை பெய்யாமையின் மரம் வறந்தன. இவை வினையெச்சமறை. பிறவுமன்ன. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் எதிர்மறுத்து வரும் என்றோதி, முற்றுச் சொல் எதிர்மறுத்து வரும் என ஓதாதது என்னை எனின், பெயரெச்சமும் வினையெச்சமும் ஓதுகின்றுழி உடன்பட்ட சொல்லான் ஓதுதலின், எதிர்மறை ஓதல் வேண்டிற்று. முற்றுச் சொற் கீற்றெழுத்தோதினமையான் அவைதாமே மறுத்த வாய்பாட்டிற்கும் ஈறாதலின் ஓதல் வேண்டாவாயின. அஃதற்றாதல் அ, ஆ, வ என்னும் (சூ.19) சூத்திரத்தானும் அறிக. (39) இடைப்பிற வரல் 231. தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின் எச்சொல் லாயினும் இடைநிலை வரையார். இதுவும் இருவகை எச்சத்திற்கும் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயரெச்சமும், வினையெச்சமும் தம்மை முடிக்கும் சொல்லொடு சிவணும் குறிப்பினை யுடைய யாதானும் ஒரு சொல்லாயி னும் இடை நிற்றலை நீக்கார் ஆசிரியர், எ-று. (எ-டு.) கொல்லுங் காட்டுள் யானை, கொன்ற காட்டுள் யானை - இவை பெயரெச்ச இடைக் கிடப்பு. இவற்றுள் இடைக் கிடந்த சொல் யானை என்பதனொடு சிவணுதலின் அமைக்கப்பட்டது. பிறவுமன்ன. உழுது ஏரொடு வந்தான், உழ ஏரொடு வந்தான்-இவை வினையெச்ச இடைக் கிடப்பு. இவற்றுள் இடைக்கிடந்த சொல் முடிக்குஞ் சொல்லொடு சிவணுதல் அமைதியாயிற்று. பிறவுமன்ன. இனிச் சிவணாதன :- உண்ட சாத்தன் தந்தை என்பது உண்ட என்பதற்குச் சாத்தன் தந்தையை முடிபாகக் குறித்தானாயிற் சிவணா தாயிற்று. வினையெச்சத்துட் சிவணாதன வந்தவழிக் கண்டு கொள்க. (40) செய்யும் என்னும் சொல்லின் திரிபு 232. அவற்றுள், செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு மெய்யொடுங் கெடுமே ஈற்றுமிசை யுகரம் அவ்விடம் அறிதல் என்மனார் புலவர். செய்யும் என்னுஞ் சொல் திரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கும், உம்மையாற் செய்யும் என்னும் முற்றுச் சொற்கும் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெடும். அது கெடுமிடம் அறிந்து கொள்க, எ-று. ‘வாம் புரவி வழுதி’ என வரும். இது பெயரெச்சம். ‘அம்பலூரு மவனொடு மொழிமே’ (குறுந். 51). இது முற்றுச்சொல். ‘மெய்யொடுங் கெடும்’ என்ற உம்மையான் மெய்யொழியவுங் கெடும் என்று கொள்க. ‘சாரனாட வென் றோழியுங் கலுழ்மே’ என வரும். பிறவுமன்ன. (41) வினைச் சொற்கண் வரும் கால மரபு 233. செய்தெ னெச்சத் திறந்த காலம் எய்திடன் உடைத்தே வாராக் காலம். ஒருசார் வினையெச்சத்திற்கு வருங் கால மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்தென் எச்சத்துக்கண் வரும் இறந்தகாலம் எதிர் காலத்தைப் பொருந்து மிடனுடைத்து, எ-று. என்றது, இறந்த காலத்தாற் கூறப்படும் வினை அது நிகழ்ந்துழிக் கூறுதலன்றி, நிகழாத முன்னும் அவ்வாய்பாட்டான் வரப்பெறும் என்றவாறாம். நாளை உழுது வருவன்; இனித் தவம் செய்து சுவர்க்கம் புகும் என வரும். (42) இதுவுமது 234. முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை எம்முறைச் சொல்லும் நிகழுங் காலத்து மெய்ந்நிலைப் பொதுச்சொற் கிளத்தல் வேண்டும். இதுவுமது. (இ-ள்.) யாதானும் ஒருமுறைமையினையுடைய வினைச்சொல்லும் மூன்று காலமுந் தோன்றும் இயற்கைக்கண், நிகழுங் காலத்துப் பொது நிலைப் பொதுச் சொல்லாற் கிளத்தல் வேண்டும், எ-று. வினைச் சொல் எல்லாங் காலங் காட்டுதலின், காலங் காட்டாத பொதுப்பட்ட வினையை நிகழ்காலத்துக்கண் எல்லாப் பாற்கும் பொது வாகி வரும் செய்யும் என்னும் சொல்லாற் சொல்லுக என்றவா றாயிற்று. ஒருவன் உண்பானாக அகம்புக்கான், அவனது வாயிற்கண் நின்றானை யாது செய்கிறான் என வினாயவழி, அவன் செய்கின்ற உண்டற் காலம் உணரா மையின் உண்டான் எனவுமாகாது, உண்பான் எனவு மாகாது, ஆயிடை உண்ணும் என்க. (43) இதுவுமது 235. வாராக் காலத்தும் நிகழுங் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு தோன்றல் விரைந்த பொருள என்மனார் புலவர். இதுவுமது. (இ-ள்.) வருங் காலத்தும் நிகழ் காலத்தும் வரும் வினைச் சொல்லாகிய சொல், இறந்தகாலத்துக் குறிப்பொடு தோன்றல் விரைந்த பொருள என்மனார் புலவர், எ-று. ஒருவனை உண்டாயோ, போதாயோ என்றவழி, உண்ணாதவனும் உண்டேன், போந்தேன் என்னும்; உண்கின்றானும் அவ்வாறு சொல்லும். இவ்வாறு விரைவு குறித்து நின்றவாறு கண்டு கொள்க. ஓரும், ஆங்கும் அசைகள். (44) ஒருசார் வினைச்சொற்கள் தொழிற்கும் பண்பிற்கும் பொதுவாகி வரும் எனல் 236. மிக்கதன் மருங்கின் வினைச்சொற் சுட்டி அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவி செய்வது இல்வழி நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட்டா கும்மே. ஒருசார் வினைச்சொற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘மிக்கது’ என்பது ஒன்றி னொன்று மிக்கது என்னும் பொருண்மை. ‘அதன் மருங்கின் வினைச்சொல் சுட்டலாவது’ அது பெய ராகி நிற்கும் நிலைமையைச் சுட்டாது வினையாகி நிற்கும் நிலைமையைச் சுட்டி நிற்றல். ‘அப்பண்பு குறித்த வினைமுதற் கிளவியாவது’ அப் பொருட்கண் மிகுதலாகிய தொழிலைக் குறியாது அதன் இயல்பாகிய மிகுதியைக் குறித்த பாலுணர வருஞ்சொல். ‘செய்வதில்வழி என்பது’ அப்பாலுணர வருஞ் சொல்லின்கண் கருத்தாவை உணர்த்தும் ஈற்றெழுத்து இல்வழி, என்றவாறு. ‘நிகழுங் காலத்து மெய்பெறத் தோன்றும் பொருட் டாகும் என்பது’ நிகழுங் காலத்து உருபு பெறப் புலப்படும் பொருளை உடைத்து, எ-று. ஒரு பொருளின் ஒரு பொருள் மிக்கது என்னும் பொருட்கண், மிக்கது என்னும் வினைச்சொல்லைக் குறித்து மிகுந்த பண்புணர வரும் பாலுணர்த்தாத சொல் செய்யும் என்னும் சொல்லினான் வரின், அஃது அப்பொருளை இனிது விளக்கும், எ-று. மிக்கது என்பது ஒருகாலங் குறித்து வரின் தொழில் குறித்ததாம். இயல்பு குறித்ததாயின் பண்பு குறித்ததாம். ஆற்றில் நீர் மிக்கதென்ற வழி, மிகுதல் இயல்பன்மையின் தொழில் குறித்ததாம். சுவர்க்கம் மிக்கது என்றவழி எக்காலத்தும் ஒக்குமாத லின் பண்பு குறித்ததாம். பூமியிற் சுவர்க்கம் மிகும் எனவும் ஆம். யாற்றுநீர் மிக்கது என்னும் பொருட்கண் மிகும் என்றதனாற் குற்றம் என்னையெனின், அவ்வாறு கூறின் இறந்த காலம் தோன்றாதாம். வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் உயர்வு, தாழ்வு, குறைவு என்பனவும் இந்நிலைமைய என்று கொள்க. இச்சூத்திரத்தாற் பயன் ஒருசார் வினைச்சொற்கள் தொழிலுக்கும், பண்பிற்கும் பொதுவாகி நிற்கும் என்பதறிவித்தல். (45) ஒருவினை இருபொருள் படுமாறு 237. இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி இருவயின் நிலையும் பொருட்டா கும்மே தன்பா லானும் பிறன்பா லானும். இஃது ஒருவினை இருபொருட் படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இதனைச் செயல்வேண்டும் என்னும் வினைச் சொல் இரண் டிடத்தும் நிலைபெற்ற பொருளை யுடைத்து, சொல்லுவான் கண்ணும் பிறன்கண்ணும், எ-று. (எ-டு.) நீ உண்ணல் வேண்டும் என்றவழி, நீ உண்பாயாகல் வேண்டும் எனத் தான் வேண்டிக் கோடற் பொருண்மை சொல்லுவான்கண் நிலை பெற்றது. சாத்தன் உண்ணல் வேண்டும் என்றவழி, உண்டலைப் பிறன் விரும்பும் எனப் பிறன்கண் நிலைபெற்றது. (46) இதுவுமது 238. வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத் துணர்த்துதற்கு உரிமையும் உடைத்தே. இதுவுமது. (இ-ள்.) வற்புறுத்தற் பொருண்மைக்கண் வரூஉம் வினாவுடை வினைச்சொல் எதிர்மறுத்துப் பொருள் உணர்த்துதற்கு உரிமையாகலு முடைத்து, எ-று. (எ-டு.) யான் வைதேனா, யான் வைதேனோ என்பன வினாப் பொருண்மைப் படுதலன்றி வைதிலேன் என எதிர்மறைப் பொருளும் பட்டவாறு கண்டுகொள்க. (47) வினைச்சொற்கண் வரும் காலவழுவமைதி 239. வாராக் காலத்து வினைச்சொற் கிளவி இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை. கால வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எதிர் காலத்து நிகழும் வினைச் சொல் இறந்தகாலத்தானும் நிகழ் காலத்தானும் பொருள் விளங்கத் தோன்றும்; ஓர் இயற்கையையும், ஒரு பொருளினது தெளிவையும் கிளக்குங் காலத்து, எ-று. (எ-டு.) ஆறலை கள்வர் இயங்குவதொரு காட்டிடைப் போக லுற்றானை, அவ்விடத்துப் போகுவையாயின் கூறை கோட்படுவை எனற்பாலான்வாய், பட்டாய் எனவும், படாநின்றாய் எனவுங் கூறும். இஃது இயற்கை. ‘சென்றது சென்றது வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று’. (நாலடி.4). வாழ்நாள் செல்லாநின்றது எனற்பாலது சென்றது எனவும். கூற்று வரும் எனற்பாலது வந்தது எனவும் நிகழ்காலமும் எதிர்கால மும் இறந்தகாலத்தான் வந்தன. வாழ்நாள் செல்லுதலும் கூற்று வருதலும் ஒருதலை யாகலின், இவை தெளிவுபற்றி வந்தன. நிகழ்காலத்தான் வருவன வந்தவழிக் கண்டுகொள்க. (48) செயப்படு பொருளைச் செய்ததுபோலக் கூறல் 240. செயப்படு பொருளைச் செய்தது போலத் *தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே. இது வினைச் சொற்கள் தம்முள் மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செயப்படு பொருளைச் செய்யப்பட்டதெனக் கூறாது கருத்தாவைக் கூறுமாறு போலத் தொழிற்படச் சொல்லுதலும் வழக்கியல் மரபு, அது. மரூஉ வழக்கு, எ-று. (எ-டு.) சோறடப்பட்டது, திண்ணை மெழுகப்பட்டது எனற்பாலன சோறட்டது, திண்ணை மெழுகிற்று என வரும். உம்மையாற் கருவியைக் கருத்தாவாகக் கூறலும் கொள்க. வாள் வெட்டிற்று, சுரிகை குத்திற்று என வரும். (49) * (பாடம்) தொழிற் படுத்தடக்கலும் என்பது. வினைச் சொற்கண் வரும் காலவழுவமைதி 241. இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி. காலமயக்கம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மயங்குதற்குரிய மொழிக்கண் இறந்தகாலமும் எதிர்காலமும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு காலமும் ஒப்பத் தோன்றும், எ-று. (எ-டு.) ‘உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே’ (சொல். 1) என்ற வழி, என்றார் எனற்பாலது என்மனார் என வந்தது. பிறவுமன்ன. (50) இதுவுமது 242. ஏனைக் காலமும் மயங்குதல் வரையார். இதுவுமது. (இ-ள்.) இறப்பும் எதிர்வும் தம்முள் மயங்குதலன்றி அவற்றொடு நிகழ்காலமும் மயங்கப்பெறும், எ-று. (எ-டு.) யாம் விளையாடுங் கா என்றவழி முன்பு விளையாடுங் கா, இன்று விளையாடுங் கா, நாளை விளையாடுங் கா என மூன்று காலத்துக் கண்ணும் வந்தவாறு கண்டுகொள்க. (51) அஃதேல், வினைச்சொற்கள்-முற்றும், பெயரெச்சமும், வினை யெச்சமும் என மூவகைப்படும். அவற்றுட் பெயரெச்சம் வினையெச்சம் என்பன இத்தன்மைய என்று எடுத்தோதி, முற்றுச்சொல்லாவது இத் தன்மையது என்று ஓதிற்றிலர், அதற்கு இலக்கணம் யாங்குப் பெறுதும் எனின், எச்சவியலுட் பெறுதும். வினைக்கு இன்றியமையாத முற்றினை ஒழிபியல் கூறுகின்றுழிக் கூறிய அதனாற் பெற்றதென்னை எனின், அஃது எமக்குப் புலனாயிற் றன்று. அஃதேல், வினையிலக்கணம் அறிந்தே னாகுங் கால் முற்றிலக்கணமும் அறிதல் வேண்டும் அன்றே. அதனை ஆண்டுக் கூறியவாறு ஈண்டுரைத்தல் வேண்டும் எனின், உரைக்குமாறு:- (51) முற்றுச் சொற்கு இலக்கணம் 243. இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றச் சிறப்புடை மரபின் அம்முக் காலமும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் *மூவிடத் தான வினையினுங் குறிப்பினும் மெய்ம்மை யானும் ஈரிரண் டாகும் அவ்வா றென்ப முற்றியல் மொழியே. முற்றுச் சொற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என வினைச் சொற்குச் சிறப்புடைத்தாகிய மூன்று காலத்தானும், தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தானும், தொழிலானும் குறிப்பானும் பொரு ளானும் முற்று இயலும் மொழிவகை நிலைமையான் இருபத்து நான்கு, எ-று. காலம் என்பதன்கண் உருபு தொக்கு நின்றது. இடம் என்பதன்கண் உம் எஞ்சி நின்றது. அவையாவன :- தன்மைக்கண் எட்டும், முன்னிலைக் கண் எட்டும், படர்க்கைக்கண் எட்டும் ஆம். ஒருமையும் பன்மையும் எனத் தமிழ் நடை இருவகைப் படுதலின் தன்மைக்கண் வரும் எட்டும் ஒருமை உணர்த்துவன நான்கும், பன்மை உணர்த்துவன நான்கும் என இரு வகைப்படும். (எ-டு.) உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன், கரியேன் இவை மூன்று காலமும், வினைக் குறிப்பும்பற்றி ஒருமைக்கண் வந்தன. உண்டனம், உண்ணாநின்றனம், உண்குவம், கரியம் என்பன அவ்வாறு பன்மைப் பொருண்மைக்கண் வந்தன. முன்னிலைக்கண் எட்டும் இருவகைப்படும். உண்டனை, உண்ணா நின்றனை, உண்குவை, கரியை இவை ஒருமைபற்றி வந்தன. உண்டனிர், உண்ணாநின்றனிர், உண்குவீர், கரியீர் இவை நான்கும் பன்மைபற்றி வந்தன. படர்க்கைக்கண் எட்டும் இருவகைப்படும். அவற்றுள் ஒருவனை உணர்த்துவதும், ஒருத்தியை உணர்த்துவதும், ஒன்றனை உணர்த்துவதும், ஒருமையென அடங்கும். பலரை உணர்த்துவதும், பலவற்றை உணர்த்து வதும் பன்மையென அடங்கும். உண்டனன், உண்ணாநின்றனன், உண்பன், கரியன் எனவும்; உண்டனள், உண்ணாநின்றனள், உண்பள், கரியள் எனவும்; உண்டது, உண்ணாநின்றது, உண்பது, கரியது எனவும் இவை பொருண் முகத்தான் ஒருமை யாதலின், மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி நான்காய் அடங்கின. உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர், கரியர் எனவும்; உண்டன, உண்ணாநின்றன, உண்குவ, கரிய எனவும் இவை பொருள் முகத்தாற் பன்மையாதலின், மூன்று காலமும் வினைக் குறிப்பு மாகி நான்காய் அடங்கின. வினையெச்சமும், பெயரெச்சமும், தொழிலும் காலமும் உணர்த்தி னல்லது இடமும் பாலும் உணர்த்தா என்பதூஉம், முற்றுச் சொல் தொழி லும் காலமும் இடமும் பாலும் உணர்த்தும் என்பதூஉம் கண்டு கொள்க. (52) * (பாடம்) அம்மூவிடத்தான். மேலதற்கு ஒரு புறநடை 244. எவ்வயின் வினையும் அவ்வயின் நிலையும். மேலதற்கு ஒரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) தொழிலும் காலமும் இடமும் பாலும் உணரவரும் வினைச் சொலன்றி, மூன்றிடத்திற்கும் பொதுவாகி வரும் வினைச் சொல்லும் முற்றாம் நிலைமையைப் பெறும், எ-று. அவையாவன :- வியங்கோள், இன்மை செப்பல், வேறென் கிளவி, செய்ம்மன, பெயரெச்சமல்லாத செய்யும் என்னுஞ் சொல். (53) முற்றுச் சொல் பெயரொடு முடியும் எனல் 245. அவைதாம், தத்தங் கிளவி யடுக்குந வரினும் எத்திறத் தானும் பெயர்முடி பினவே. முற்றுச்சொல் தொடர்ந்தியலுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட முற்றுச் சொற்களுள் தத்தமக்கு ஏற்ற வினைச்சொல் அடுக்கி வரினும், உம்மையான், அடுக்காது வரினும் எவ்வழியானும் பெயர் முடிபினையுடைய, எ-று. என்பது முற்றுச் சொல் பெயரோடல்லது தொடரவும் படாது என்றவாறாயிற்று. (எ-டு.) உண்டான் சாத்தன், நல்லன் அரசன் இவை தனி வந்தன. உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் சாத்தன்; நல்லன், அறி வுடையன், செவ்வியன் சான்றோர் மகன்; இவை வினையும் வினைக் குறிப்பும் அடுக்கிவந்தன. ‘தத்தங் கிளவி என்றதனான்’ ஒருகாலத்திற்கேற்ற வினையே அடுக்குவது என்று கொள்க. ‘எத்திறத்தானும்’ என்றமையான் சாத்தன் உண்டான்; அரசன் நல்லன் எனவும்; சாத்தன் உண்டான், தின்றான், ஓடினான்; அரசன் வென்றி உடையன், செவ்வியன் எனவும் வரும். இவை எழுவாயும் பயனிலையும் ஆகாவோ எனின், எழுவாய்த் தொடரொடு முற்றுத் தொடரிடை வேறுபாடின்மை வேற்றுமை யோத்தினுட் கூறப்பட்டது. அன்றியும், பெயர் முந்துற்றதனை எழுவாய்த் தொடர் என்றும், வினைமுந்துற்றதனை முற்றுத்தொடர் என்றும் வழங்கினும் அமையும். இவை மூன்று சூத்திரமும் ஈண்டைத் தொடர்புபட்டுக் கிடந்த இதனை, உரை யெழுதுவோர், ‘பிரிநிலை வினை’ (சூ. 423) யென்னுஞ் சூத்திரத்துட் சொல்லப்பட்ட பெயரெச்ச வினையெச்சம், என்பவற்றை ஈண்டு ஓதப் பட்ட பெயரெச்ச வினையெச்சமாகக் கருதி, ஆண்டுச் சேரவைத்தார் என்பாரும் உளர். அஃது அற்றாக, வினைச்சொல்-பெயரெச்சம், வினையெச்சம், முற்றென மூவகைப்பட்டதாயின், வினையெச்சமும், முற்றும் அடுக்கி வருமாறு கூறிப் பெயரெச்சம் அடுக்கி வருமாறு கூறாதது என்னை யெனின், பெயரெச்ச வடுக்கு வினையெச்ச வடுக்குப் போல் முன்னது முடிய முடியாமையின் கூறாராயினார். சிறுபான்மை வருவன ‘செய்யுண் மருங்கினும்’ (453) என்னும் அதிகாரப் புறநடையாற் கொள்ளப்படும். (54) வினையியல் முற்றிற்று இவ்வியல் சூத்திரமும் உரையும் கிரந்த (எண்) வகையான் 460 7 இடையியல் இடைச் சொல் இலக்கணம் 246. இடையெனப் படுவ பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலும் தமக்கியல் பிலவே. இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், இடைச்சொல் ஓத்து என்னும் பெயர்த்து : இடைச்சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். இது பெயரையும் வினையையும் சார்ந்து தோன்றுதலின் அவற்றின் பின் கூறப்பட்டது. “இடையெனப் படுவ........தமக்கியல் பிலவே” என்பது இடைச்சொல் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இடையென்று சொல்லப்படுவன பெயரொடு கூடியும் வினை யொடு கூடியும் வழக்குப் பெற்றியலுமல்லது தமக்கென வழக்கில, எ-று. என்றது, மேல் அதிகரிக்கப்பட்ட சொல் நான்கனுள் இடைச்சொல் லாவது பெயரும், வினையும் போலத் தனித்தனி பொருள் உணர உச்சரிக்கப் படாது; பெயர் வினைகளைச் சார்ந்து புலப்படும். எ-று. பெயரும் வினையும் இடமாக நின்று பொருள் உணர்த்துதலின் இடைச்சொல்லாயிற்று. மேற் பெயரியலுள்ளும் ‘அவற்றுவழி மருங்கிற் றோன்றும்’ (சூ. 155) என ஓதி, ஈண்டும் இவ்வாறு கூறுதல், கூறியது கூறலாம் பிற எனின், ஆண்டுத் தோற்றுவாய் செய்தார்; ஈண்டிலக்கணங் கூறினார் என்க. ‘பெயரொடும் வினையொடும் நடைபெற் றியலும்’ என்றதனான், பொருள் உணர்த்தும்வழிப், பெயர்ப் பொருண்மை உணர்த்தியும், வினைப் பொருண்மை உணர்த்தியும் வருமதல்லது வேறு பொருள் இலதென்றுமாம். (1) இடைச் சொல்லின் பாகுபாடு 247. அவைதாம், புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும் வினைசெயல் மருங்கிற் காலமொடு வருநவும் வேற்றுமைப் பொருள்வயின் உருபா குநவும் அசைநிலைக் கிளவி யாகி வருநவும் இசைநிறைக் கிளவி யாகி வருநவும் தத்தங் குறிப்பிற் பொருள்செய் குநவும் ஒப்பில் வழியாற் பொருள்செய் குநவுமென்று அப்பண் பினவே நுவலுங் காலை. இடைச்சொல் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) “அவைதாம் புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக் குதநவும்” என்பது மேற் சொல்லப்பட்ட இடைச்சொற்கடாம் ஒரு சொல் லொடு ஒருசொல் புணர்ந்தியலும்வழி, அப்பொருள் நிலைக்குதவி யாகி வருவனவும் என்றவாறு. பொருள்நிலைக்கு உதவலாவது அல்வழிப் பொருட்கு உரியன இவை, வேற்றுமைப் பொருட்கு உரியன இவையென வருதல். அவையாவன ‘இன்னே, வற்றே’ என்பன முதலாயின. அவை சாரியை யன்றோ எனின், அவை இடைச்சொல் எனவும் ஒரு குறி பெறும் என்றவாறு. ‘வினை செயல் மருங்கிற் காலமொடு வருநவும்’ என்றது வினைச் சொல் முடிவுபெறுமிடத்துக் காலங் காட்டுஞ் சொல்லொடு பால் காட்டும் சொல்லும் என்றவாறு. அவையாவன உண்டனம், உண்டாம், உண்ணாநின்றனம், உண்கின்றனம், உண்பம், உண்குவம் என்புழி, இறந்தகாலங் குறித்த டகரமும், நிகழ்காலங் குறித்த நின்று, கின்று என்பனவும், எதிர்காலங் குறித்த பு, கு என்பனவும், அம் ஆம் எனப் பால்காட்டுவனவும், இவ்வாறு வருவன பிறவும் ஆம். ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுநவும்’ என்பது அவ் வேற்றுமைப் பொருளிடத்து உருபாகி நிற்குஞ் சொற்களும் என்றவாறு. அவையாவன ஐ, ஒடு, கு முதலிய. இவையும் இடைச்சொல் எனக் குறிபெற்றன. ‘அசைநிலைக் கிளவியாகி வருநவும்’ என்பது பொருள்பட நில்லாது அசைநிலையாகி நிற்பனவும், எ-று. ‘இசைநிறைக்கிளவி யாகிவருநவும்’ என்பது அசைநிலைக் கிளவி போலப் பிரிந்து நில்லாது, ஒரு சொல்லோடு ஒற்றுமைப்பட்டு இசை நிறைத்தற் பொருட்டாகி நிற்பனவும், எ-று. ‘தத்தங் குறிப்பிற் பொருள்செய்குநவும்’ என்பது தத்தங் குறிப்பினாற் பொருள் உணர்த்துவனவும் என்றவாறு, ‘ஒப்பில் வழியாற் பொருள்செய்குநவும்’ என்பது குறிப்பினான் வருதலின்றிப் பொருத்தம் இல்லாத விடத்துப் பொருள் உணர்த்துவனவும் என்றவாறு. ‘அப்பண்பினவே நுவலுங்காலை’ என்பது அவ்வியல்பினை யுடைய, சொல்லுங் காலத்து, எ-று. தத்தங் குறிப்பின் என்பதற்குச் சார்ந்த சொல்லின் குறிப்பினான் எனவும், ஒப்பில்வழி என்பதனை ஒரு சொல்லொடு பொருத்த மின்றித் தனி வந்துழி எனவும் பொருள் உரைப்பினும் அமையும். அஃது அற்றாக, ஒப்பில்வழி என்பதற்கு ஒக்கும் என்னுஞ் சொல் வாராத உவம உருபெனப் பொருள் உரைப்பவாலெனின், ‘ஒப்பினானும் பண்பி னானுமென்-றப்பாற் காலங் குறிப்பொடு கொள்ளும்’ (வினை. சூ. 16), என்றமை யானும் போல, அன்ன, ஏய்ப்ப, உறழ என்பன சாத்தன் புலி போலும் எனவும், புலிபோலப் பாய்ந்தான் எனவும், புலி போன்ற சாத்தன், புலிபோலுஞ் சாத்தன் எனவும், இவ்வாறு பிறவும், முற்றும் வினை யெச்சமும், பெயரெச்சமுமாகி வருதலினாலும் அவை யெல்லாம் வினைக்குறிப்பென்று கொள்க. அவற்றுள், ‘புணரியல் நிலையிடைப் பொருள் நிலைக்குதவுந’ எழுத்ததிகாரத்துக் கூறப்பட்டன. ‘வினைசெயல் மருங்கிற் காலமொடு வருந’ வினையியலுட் கூறப்பட்டன. ‘வேற்றுமைப் பொருள்வயின் உருபாகுந’ வேற்றுமை யோத்தினுட் கூறப்பட்டன. ஏனை நான்கும் ஈண்டு ஓதப்படுகின்றன. (2) இடைச்சொற்கு உரியதொரு மரபு 248. அவைதாம் முன்னும் பின்னும் மொழியடுத்து வருதலும் தம்மீறு திரிதலும் பிறிதவண் நிலையலும் அன்னவை எல்லாம் உரிய வென்ப. இதுவும் இடைச் சொற்கு உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட இடைச்சொற்றாம் மொழியை முன்னும் பின்னும் அடுத்து வருதலும், தத்தம் ஈறு திரிந்து வருதலும், பிறிதோர் இடைச்சொல் ஆண்டு அடுத்து வருதலும் ஆகிய அத்தன்மைய எல்லாம் உரிய, எ-று. (எ-டு.) அதுமன், கேண்மியா என்பன மொழி முன் வந்தன. ‘கொன்னூர்’ (குறுந். 138), ‘ஓ ஓ கொடியை’ என்பன மொழிப் பின் வந்தன. ‘மன்னைச் சொல்’ (சூ.249) என்றவழி ஈறு திரிந்தது. ‘வருகதில் லம்ம’ (அகம்.276) என்பது பிறிது அவண் நின்றது. பிறவுமன்ன. (3) மன் என்னும் இடைச்சொல்லின் பொருள் 249. கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. ஈண்டு உரைக்கப்படுகின்ற இடைச்சொல் நான்கும் பொருள் புணர் இடைச்சொல்லும், பொருள் புணரா இடைச்சொல்லும் என இருவகைப் படும். அவற்றுள், பொருள் புணர் இடைச்சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கழிந்தது என்னும் பொருண்மையும், ஆம் என்னும் பொருண்மையும், எஞ்சிய இசையான் உணரும் பொருண்மையும் உணரவரும்; மன் என்னுஞ் சொல், எ-று. மன் மன்னை என நின்றது. (எ-டு.) ‘சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே’ (புறம். 235) என்புழி, மன் கழிந்தது என்னும் பொருள்பட நின்றது. ‘புதுமலர் கஞல, இன்று பெயரின் அதுமன், எம்பரிசில் ஆவியர் கோவே’ (புறம். 147) இதனுள் மன் என்பது ஆம் என்பது குறித்து நின்றது. ‘கூரியதொரு வாண் மன்’ என்ற வழித், திடமின்று என்றானும், வெட்ட வல்லார் உளராயின் என்றானும் ஒழிந்த சொல்லினான் உணரும் பொருள்பட்டது. (4) தில் என்னும் இடைச்சொல்லின் பொருள் 250. விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்று அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. இதுவுமது. (இ-ள்.) விழைவுப் பொருளையும், காலப்பொருளையும், ஒழியிசைப் பொருளையும் உணரவரும் : தில் என்னுஞ் சொல், எ-று. (எ-டு.) “அரிவையைப் பெறுகதில் லம்ம யானே” (குறுந். 14) இது விழைவு பற்றி வந்தது. “பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம், நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம், பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற, வள்ளித ழவிழ்ந்த தாமரை, நள்ளிரும் பொய்கையும் தீயுமோ ரற்றே” (புறம். 246) இதனுள் ஈமம் புகுதல் நுமக்கு அரிதாகுக. எமக்கு இக்காலத்துப் பொய்கையோடு ஒக்கும் என்றமையாற் காலங் குறித்தது, “வருகதில் லம்மவெஞ் சேரிசேர” (அகம். 276) வந்தாலிவ்வாறு செய்வல் என்னும் ஒழியிசை குறித்து நின்றது. (5) கொன் என்னும் இடைச்சொல்லின் பொருள் 251. அச்சம் பயமிலி காலம் பெருமையென்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே. இதுவுமது. (இ-ள்.) அச்சப் பொருண்மையும், பயனின் றென்னும் பொருண்மை யும், காலப் பொருண்மையும், பெரிதென்னும் பொருண்மையும் பற்றி வரும், கொன் என்னுஞ் சொல், எ-று. (எ-டு.) ‘கொன் முனை யிரவூர் போல’ (குறுந். 91) என்பது அச்ச முணர நின்றது. ‘கொன்னே கழிந்தன் றிளமையும்’ (நாலடி. 55) என்புழிப் பயனின்மை யுணர நின்றது. ‘கொன் வரல் வாடை’ என்ற வழிப் பிரிந்த, காலத்து வருகின்ற வாடை எனக் கால முணர நின்றது. ‘கொன்னூர் துஞ்சினும்’ (குறுந்.138) என்றவழிப், பெருமையுணர நின்றது. இம்மூன்று சொல்லும் பெயர் வினையை யொட்டி வாராது தனி வந்து குறிப்பில் வழியாற் பொருளுணர்த்தினமையான், ஒப்பில் வழியாற் பொருள் செய்தன. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க. (6) உம் என்னும் இடைச்சொல்லின் பொருள் 252. எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று அப்பால் எட்டே உம்மைச் சொல்லே. இதுவுமது. (இ-ள்.) எச்சம் முதலாகச் சொல்லப்பட்ட எண்வகைப் பொருளும் உணர வரும்: உம்மைச் சொல், எ-று. (எ-டு.) எச்சம் இறந்தது தழீஇயதும், எதிரது தழீஇயதும் என இருவகைப்படும். சாத்தனும் வந்தான் என்றவழி, முன்னொருவன் வரவு குறித்தானாயின் இறந்தது தழீஇயதாம். பின்னொருவன் வரவு குறித்தா னாயின் எதிரது தழீஇயதாம். ஏனையொழிந்த பொருளைக் குறித்தமையின் எச்சமாயின. சிறப்பு என்பது மிகுதி. அஃது உயர்பான் மிகுதலும், இழிபான் மிகுதலும் என இருவகைப்படும். ‘அக்காரம், யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமே, தேவரே தின்னினும் வேம்பு’ (நாலடி. 112) என்றவழி, யாவர் என்றது இழிபு குறித்து நின்றது. தேவர் என்பது உயர்வுகுறித்து நின்றது. ஐயம் என்பது ஐயப்பட்ட பொருண்மை குறித்து வருவது. ‘ஏனல் காவ லிவளு மல்லள், மான்வழி வருகுந னிவனு மல்லன், நரந்தங் கண்ணி யிவனோ டிவளிடை, கரந்த வுள்ளமொடு’ என்றவழிக், காரணம் பிறிதாகல் வேண்டும் என்னும் ஐயங் குறித்து நின்றது. எதிர்மறையாவது யாதானும் ஒரு தொழிலை எதிர்மறுத்த தொழிற் கண்வரும். சாத்தன் வருதற்கு முரியன் என்றவழி, வாராமைக்கும் உரியன் என வரும். முற்றென்பது மற்றொரு பொருளை நோக்காது நிற்கும். தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார் என வரும். முழுதும் உணர்ந்தார் என்பதும் அது. எண் என்பது பலபொருளை எண்ணுதல் குறித்து வரும். ‘மண்டி ணிந்த நிலனும், நிலனேந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும்’ (புறம். 2) என வரும். தெரிநிலை என்பது ஒரு பொருளை ஐயப்படுதலும் துணிதலும் இன்றி, ஆராயும் நிலைமைக்கண் வரும். ‘ஐதேய்ந் தன்று பிறையுமன்று, மைதீர்ந் தன்று மதியு மன்று’ (கலி. 55) என வரும். ஆக்கம் உம்மையடுத்த சொற்பொருண்மேல் ஆகும் நிலைமையைக் குறித்து வரும். வாழும் வாழ்வு, உண்ணுமூண் எனத் தொழிலினது ஆக்கங் குறித்து நின்றவாறு கண்டுகொள்க. இது பெயரெச்ச வினைச் சொலன்றோ எனின், ஆம். அதன்கண் உம் இடைச்சொல் என்க. அதனானே யன்றே ‘உம் முந்தாகு மிடனுமா ருண்டே’ என்னும் இலக்கணத்தான் (இடை. சூ. 43), ‘நெல் லரியுமிருந் தொழுவர்’ (புறம். 24) என்னும் பாட்டினுள், ‘செஞ் ஞாயிற்று வெயின் முனையிற், றெண்கடற் றிரைமிசைப் பாயும்’ எனற் பாலது பாயுந்து என வந்தது. இவ்விலக்கணம் வினையியலுள் ஓதாமையான் பெயரெச்ச உம் இடைச் சொல் என்று கொள்ளப்படும். பாயும் புனல் என்பது பாய்புனல் எனத் தொக்குழி, வேற்றுமைப் பொருட்கண் உருபு பெயர் நிற்பத் தொக்கவாறு போல, வினை நிற்ப உருபு தொகுதலானும், செய்யும் என்பது வினையும் உருபுமாகிய இரு நிலைமைத்து என்று கொள்க. செய்யும் என்னும் முற்றுச் சொல்லின்கண் உம் எவ்வாறு வந்த தெனின், அது மற்றொரு பொருளைக் குறித்து நில்லாமையின் ஈண்டு இடமின்றென்க. முற்றி நிற்றலின் முற்றும்மை எனினும் இழுக்காது. ஆக்கவும்மை என்பதற்கு நெடியனும் வலியனும் ஆயினான் என உதாரணங் காட்டுபவாலெனின், அஃது எண்ணும்மை என்க. தனிவரின் எச்சவும்மையாம். (7) ‘ஓ’ என்னும் இடைச்சொல்லின் பொருள் 253. பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ இருமூன் றென்ப ஓகா ரம்மே. இதுவுமது. (இ-ள்.) பிரிநிலை முதலாக ஓதப்பட்ட ஆறிடமும் என்று சொல்லு வார்; ஓகாரமாகிய இடைச்சொல் பொருள் உணர்த்துமிடம், எ-று. (எ-டு.) பிரிநிலையாவது பிறபொருளினின்றும் பிரித்தமை தோன்ற வருவது. ‘கானங் காரெனக் கூறினும், யானோ தேறேனவர் பொய் வழங் கலரே’ (குறுந். 29), ‘அவரோ வாரார்’ (குறுந். 221) என வரும். எல்லாரும் தேறினும் யான் தேறேன், எல்லாரும் வரினும் அவர் வாரார் எனப் பிரிநிலைப் பொருண்மை தோன்றியவாறு கண்டுகொள்க. வினா என்பது வினாவுதற் பொருண்மேல் வரும். அதுவோ? உண்டாயோ? என வரும். எதிர்மறையாவது தன்னாற் சொல்லப்பட்ட பொருளின் மாறுபட்டு வந்தது. உண்ணேனோ, வாரேனோ என்றவழி உண்பல், வருவல் என்னும் பொருள்பட்டது. ஒழியிசையாவது தன்னாற்சொல்லப்பட்ட பொருளன்றி மற்றொரு பொருளுங் கொள்ள நிற்பது. செய்கையோ செய்தான் என்ற வழிப், பின்பும் இவ்வாறு செய்திலன் என்னும் பொருளுங் குறித்து நின்றவாறு கண்டு கொள்க. தெரிநிலை என்பது ஒருபொருளை ஆராயும் நிலைமைக்கண் வருவது. ‘திருமகளோ அல்லள், நாமகளோ அல்லள், இவள் யாராகும்’ என வரும். சிறப்பென்பது பொருளின் உயர்வு குறித்து நிற்கும், ‘கானகநாடனை நீயோஒ பெரும’ (புறம். 5) என வரும். அஃதேல் எழுத்ததிகாரத்து ஓகார வீற்றுள் ஐயமென்னும் ஓர் ஓகாரம் ஓதினாராலெனின் (சூ. 290), அது தெரிநிலைக்கண் அடங்கும் என்பதூஉமொன்று. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், ஆண்டு ‘மாறுகோள் எச்சமும், வினாவும், ஐயமும்’ (எழுத். 290) என ஓதப்பட்ட வற்றுள் ஈண்டு வாராத ஐயமும் கொள்ளப்படும். ஒருவனோ, ஒருத்தியோ தோன்றுகின்றார் என வரும். (8) ஏ என்னும் இடைச்சொல்லின் பொருள் 254. தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந்து ஏகா ரம்மே. இதுவுமது. (இ-ள்.) தேற்றம் முதலாக ஐந்து பகுதிய ஏகார இடைச்சொல், எ-று. (எ-டு.) அவனேஎ செய்தான் என்பது துணிவுகுறித்தவழித், தேற்றேகார மாம். ஈண்டு அளபெடைவரும். அவனே செய்தான் என்பது வினாக்குறித்தவழி, வினா வேகாரமாம். யானே வந்தேன் என்றவழிப், பிறர் கூடலின்றியே எனப் பொருள் படுதலிற் பிரிநிலையேகாரமாம். எண்ணுக் குறித்து வருவது ‘சொல்லே குறிப்பே ஆயிரண்டெச்சம்’ என்பது. ஈற்றசை என்பது சொல்லின் இறுதிக்கண் அசைநிலையாகி நிற்பது. ‘கடல்போற் றோன்றல காடிறந்தோரே’ (அகம். 1) என வரும். அஃதேல், எழுத்ததிகாரத்துள் ‘மாறுகோள் எச்சமும் வினாவும் எண்ணும்’ (சூ. 275) என ஏகார ஈறு ஓதினார், அவற்றுள் மாறுகோள் எச்சம் ஈண்டு ஓதாதது என்னை யெனின், ‘வன்புற வரூஉம் வினாவுடை வினைச் சொல், எதிர்மறுத்து உணர்த்துதற் குரிமையுமுடைத்தே’ (238) என்றாராக லின் அது வினாவினுள் அடங்கும்; அன்றியும் வந்தது கெண்டு வாராதது முடித்தல் என்பதனானுங் கொள்க. யான் வைதேனே என்றவழி வைதி லேன் என்னும் எதிர்மறைப்பொருள் பட்டது. இவை மூன்று சொல்லும் பெயரோடு ஒட்டுப்பட்டு நின்று தத்தங் குறிப்பினாற் பொருள் உணர்த்தின. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து கொள்க. (9) எனவென்னும் இடைச்சொல்லின் பொருள் 255. வினையே குறிப்பே இசையே பண்பே எண்ணே பெயரோ டவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே எனவென் கிளவி. இதுவுமது. (இ-ள்.) வினை முதலாகப் பெயரீறாகச் சொல்லப்பட்ட ஆறு சொல்லினையும் குறித்த நிலைமைத்து, என என்னுஞ் சொல், எ-று. (எ-டு.) கொள்ளெனக் கொடுத்தான் என்பது வினைகுறித்து நின்றது. ‘பொள்ளென வாங்கே புறம் வேரார்’ (குறள். 487) என்பது விரைவு என்னுங் குறிப்பு உணர நின்றது. ‘கல்லெனக் கவின்பெற்ற விழவாற்றுப் படுத்தபின்’ (கலி. 5) என்பது இசைப்பொருண்மை குறித்து நின்றது. ‘கன் முகை யருவி தண்ணெனப் பருகி’ (புறம். 150) என்பது பண்புகுறித்து நின்றது. ‘பாழெனக், காலெனப், பாகென, ஒன்றென, இரண்டென’ (பரிபாடல் 3) என்பது எண்ணுக்குறித்து நின்றது. ‘நாளென ஒன்றுபோற் காட்டி’ என்றவழிப், (குறள். 334) பெயர் குறித்து நின்றது. எழுத்ததிகாரத்துள் (சூ. 204) என என்னெச்சமென ஓதுதலான் இவையெல்லாம் வினையெச்சப் பொருண்மை யுணரவும், பெயரெச்சப் பொருண்மை யுணரவும் வரும் என்று கொள்க. ‘ஊரெனப் படுவது உறையூர்’ எனச் சிறப்புப் பற்றியும் வருமாலெனின், அது பெயர்ப் பொருளின் பாகுபாடாதலிற் பெயரென அடங்கும். (10) என்று என்னும் இடைச்சொல்லின் பொருள் 256. என்றென் கிளவியும் அதனோ ரற்றே. இதுவுமது. (இ-ள்.) என்று என்னுமிடைச் சொல்லும் மேற் சொல்லப்பட்ட அறுவகைப் பொருண்மையுங் குறித்து நிற்கும், எ-று. (எ-டு.) கொள்ளென்று கொடுத்தான். துண்ணென்று துடித்தது. ஒல்லென்று ஒலித்தது. பச்சென்று கிடந்தது. நிலனென்று நீரென்று. ‘சினத்தைப் பொருளென்று கொண்டவன்’ (குறள். 307) என வரும். இது மாட்டேற்று வகையான் எச்ச வாய்பாட்டதென்று கொள்க. இச் சொற்களானும் செய்யும் என்பதன்கண் உம் இடைச் சொல்லாயின வாறு கண்டுகொள்க. (11) தில் என்பதற்குப் புறநடை 257. விழைவின் தில்லை தன்னிடத் தியலும். இத்துணையும் பலபொருள் குறித்த இடைச்சொல் ஓதி, இனி ஒரு பொருள் குறித்த இடைச்சொல் ஓதுகின்றா ராகலின், மேற்சொல்லப் பட்டவற்றுள் ஒரு சொற்குப் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) விழைவுப் பொருட்கண் வரும் தில்லைச்சொல் சொல்லு வான்மாட்டே நிகழும், எ-று. உதாரணம் மேற்காட்டப்பட்டது. (12) ஏ, ஓ என்பவற்றிற்குப் புறநடை 258. தெளிவின் ஏவும் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய என்ப. இதுவுமது. (இ-ள்.) தேற்றேகாரமும், சிறப்பின் வரும் ஓகாரமும் அளபெடை பெற்று வரும் என்று சொல்லுவர், எ-று. உதாரணம் மேற்காட்டப்பட்டது. (13) மற்று என்னும் இடைச்சொல்லின் பொருள் 259. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை அப்பால் இரண்டென மொழிமனார் புலவர். ஒரு பொருள் குறித்த இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மற்று என்னுமிடைச்சொல் ஒரு வினையை மாற்றுதற் பொருட்கண்ணும், அசைநிலையாகியும் வரும், எ-று. (எ-டு.) ‘மற்றறிவா நல்வினை யாமிளையம்’ (நாலடி. 19) என்றவழி மற்று என்பது பின்பு அறிவாம் என அக்காலத்துச் செய்கின்ற வினையை மாற்றி நின்றது. ‘மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ்’ (சீவக. 1873) என்றவழி அசைநிலை யாயிற்று. (14) எற்று என்னும் இடைச்சொல்லின் பொருள் 260. எற்றென் கிளவி இறந்த பொருட்டே. இதுவுமது. (இ-ள்.) எற்று என்னும் சொல் கழிந்தது என்னும் பொருண்மை யுடைத்து, எ-று. (எ-டு.) எற்றெ னுடம்பி னெழினலம் என வரும். (15) மற்றையது என்னும் இடைச் சொல்லின் பொருள் 261. மற்றையது என்னும் கிளவி தானே சுட்டுநிலை ஒழிய இனங்குறித் தன்றே. இதுவுமது. (இ-ள்.) மற்றையது என்னுஞ் சொல் சுட்டி நின்ற பொருள் ஒழிய அதற்கினமாகிய பொருளைக் குறித்து நிற்கும், எ-று. அது என்பது எவ்வாறு வந்தது எனின், மேல் வினைமாற்று என்றார், இது பொருள் மாற்று என்பதனை விளக்குதற்கு அது என்பதனைக் கூட்டி யுரைத்தார், அது என்பது பெயராதலின் ‘ஒருபாற்கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகைதாமே வழக்கென மொழிப’ (பொருளியல். 28), என்பத னான் ஐந்து பாற்கண்ணும் கொள்க. அவ்வாறு கொள்ளவே, மற்றை என்பது இடைச்சொல்லாகி நின்று பிறபொருளுணர்த்தியவாறு கண்டுகொள்க. இனங்குறித்து என்றமையாற், சுட்டப்பட்ட பொருட்கு இனமாகிய பொருளையே குறிக்கும். ஆடை கொணர்ந்தவழி, மற்றையதோ எனிற், கொணர்ந்ததொழியப் பிறிதுமோராடையைச் சுட்டியவாறு கண்டு கொள்க. ஒரு வினைசெய்வார் இருவருள்வழி, ஒருவனைக் கண்டவன் மற்றையவனோ என்றவழி, அதுவும் இனங்குறித்தது. பிறவுமன்ன. (16) மன்ற என்னும் இடைச் சொல்லின் பொருள் 262. மன்றவென் கிளவி தேற்றம் செய்யும். இதுவுமது. (இ-ள்.) மன்ற என்னுஞ் சொல் தேற்றப் பொருண்மையை உணர்த்தும், எ-று. (எ-டு.) ‘கடவு ளாயினு மாக-மடவை மன்ற வாழிய முருகே’ (நற். 34) என்ற வழிக், கடவுளாயினும் மடவை எனத் தேற்றப் பொருண்மை காட்டிற்று. (17) தஞ்சம் என்னும் இடைச்சொல்லின் பொருள் 263. தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே. இதுவுமது. (இ-ள்.) தஞ்சம் என்பது எளிமை என்னும் பொருண்மையை உடைத்து, எ-று. (எ-டு.) ‘முரசுகெழு தாயத் தரசோ தஞ்சம்’ (புறம். 73) என்பது எளிதென்பது குறித்து நின்றது. (18) அந்தில் என்னும் இடைச்சொல்லின் பொருள் 264. அந்தில் ஆங்கு அசைநிலைக் கிளவியென்று ஆயிரண் டாகும் இயற்கைத் தென்ப. இதுவுமது. (இ-ள்.) அந்தில் என்பது ஆங்கு என்னும் பொருண்மை பெற்றும், அசைநிலையாகியும் வரும், எ-று. (எ-டு.) ‘வருமே சேயிழை யந்திற்-கொழுநற் காணிய’ (குறுந். 293) என்பது ஆங்கென்னும் பொருளுணர்த்திற்று. ‘அந்திற் கச்சினன் கழலினன்’ (அகம்.76) என்புழி, அசைநிலை யாயிற்று. (19) கொல் என்னும் இடைச்சொல்லின் பொருள் 265. கொல்லே ஐயம். இதுவுமது. (இ-ள்.) கொல் என்பது ஐயங் குறித்து வரும், எ-று. (எ-டு.) ‘அதுகொல் தோழி காம நோயே’ (குறுந். 5), என்றவழி ஐயங் காட்டிற்று. (20) எல் என்னும் இடைச்சொல்லின் பொருள் 266. எல்லே இலக்கம். இதுவுமது. (இ-ள்.) எல் என்பது இலங்குதல் குறித்து வரும், எ-று. (எ-டு.) ‘எல்வளை’ (புறம்.24) - இலங்குவளை. இது உரிச்சொல்லன்றோ எனின், அது குறைச்சொல்லாகி நிற்கும். இது குறையின்றி நிற்றலின் இடைச்சொல்லாயிற்று. (21) இயற்பெயர் முன்வரும் ‘ஆர்’ என்பது அசை நிலையாதல் 267. இயற்பெயர் முன்னர் ஆரைக் கிளவி பலர்க்குரி எழுத்தின் வினையொடு முடிமே அசைநிலைக் கிளவி ஆகுவழி யறிதல். அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்பெயர் முன்னர் வரும் ஆர் என்னும் இடைச்சொல் ஒருமைப் பொருண்மேல் வரினும், பலர்க்குரித்தாகிய எழுத்தினையுடைய வினையொடு முற்றுப் பெறும் : அஃது அசை நிலைக்கிளவி ஆகுமிட னறிந்து கொள்க, எ-று. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் பிறபெயர்க் கண்ணும் ஏற்பன கொள்க. “பலர்க்குரி யெழுத்தின் வினையொடு முடிமே” என்ற உம்மை எச்சமாகலான், ஒருமையான் வரவும் பெறும் என்றவாறு. இதனானே, இடைச்சொற்பற்றிவரும் பால் வழுவும், திணை வழுவும் அமைத்தவாறாயிற்று. (எ-டு.) சாத்தனார், சாத்தியார், நம்பியார், நங்கையார், முடவனார், முடத்தியார், தாயார், தந்தையார், கிளியார், மயிலார் என்பன ஒருமை யுணர நின்றனவாயினும், வினையொடு வருங்கால் வந்தார் என வரும். நம்பியார் வந்தான், நங்கையார் வந்தாள் என இவ்வாறு வருதற்கேற்பனவுங் கொள்க. “ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்” (கிளவி. 27) என்பதனுள் அடங்காதோ எனின், ஆண்டு உரைத்த விடையே ஈண்டும் உரைக்க. ஆர் என்பது இடைச்சொல்லாயின், இப்பெயருடையார் பலர் வந்துழிக் கூறுமாறு என்னை யெனின், அதனானே யன்றே மார் என்பது வேறு எடுத்தோதல் வேண்டிற்று. “எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே” (மொழிமரபு 28) என்புழி, ஆர் அசைநிலையாயிற்று. (22) ஏ, குரை என்னும் இடைச் சொற்கள் 268. ஏவுங் குரையும் இசைநிறை அசைநிலை ஆயிரண் டாகும் இயற்கைய வென்ப. அசைநிலையும் இசை நிறையும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஏ என்னும் சொல்லும், குரை என்னும் சொல்லும் இசை நிறைத்தலாகியும், அசை நிலையாகியும் வரும் அவ்விரண்டு நிலைமையும் உடைய, எ-று. ஈண்டு ஏ என்றமையான் ஓரெழுத்தொரு மொழியாகிய உயிரெழுத்தே கொள்ளப்படும். முன் கூறப்பட்ட ஏகாரம் மொழிக்கு ஈறாகி வருதலின், உயிர்மெய்யென்று கொள்ளப்படும். இசை நிறையாவது இசை நிறைத்தற்பொருட்டு ஒருசொல்லோடு ஒட்டிவரும். அசை நிலையாவது தனி வரும். ‘ஏ ஏ இவளொருத்தி பேடியோ வென்றார்’ (சீவக. 652) என்றவழி, ஏ என்பது இசை நிறையாயிற்று. ஏ தெளிந்தேம்யாம் என்பது அசைநிலை யாயிற்று. ‘அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே’ (புறம். 5), ‘சேர்ந்த சினையிளங் குரைய வாயினும்’ என்பன இசைநிறை. ‘நல்குர வென்னு மிடும்பையுட் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்’ (குறள். 1045). இஃது அசை நிலை. (23) மா என்னும் இடைச் சொல் 269. மாவென் கிளவி வியங்கோள் அசைச்சொல். அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மா என்னுஞ் சொல் வியங்கோட்கண் அசைநிலையாகி வரும், எ-று. (எ-டு.) ‘உப்பின்று - புற்கை யுண்கமா கொற்கை யோனே’, ‘ஓர்கமா தோழியவர் தேர்மணிக் குரலே’ என வரும். (24) முன்னிலை அசைச் சொற்கள் 270. மியாயிக மோமதி இகுஞ்சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல். இதுவுமது. (இ-ள்.) இவை ஆறு சொல்லும் முன்னிலை வினைச்சொற்கண் அசைநிலையாகி வரும், எ-று. (எ-டு.) கேண்மியா. ‘தண்டுறை யூரயாம் கண்டிக’. ‘காமஞ் செப்பாது கண்டது மொழிமோ’ (குறுந். 2). ‘சென்மதி பெரும’. ‘மெல்லம் புலம்ப கண்டிகும்’. ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்’ (அகம்.7) என வரும். இவை கேள், காண், மொழி, செல், காண், பூண் என்னும் பொருட்கண் ஆய் என்பது திரிந்து வந்தன. (25) இகும், சின் என்பவற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி 271. அவற்றுள், இகுமுஞ் சின்னும் ஏனை யிடத்தொடு தகுநிலை யுடைய என்மனார் புலவர். எய்தியதன்மேற் சிறப்பு விதி வகுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள் இகுமும், சின்னும் தன்மை யினும், படர்க்கையினும் வருதல் தகுநிலை யுடையவென்று சொல்லுவர், எ-று. (எ-டு.) “கண்டிகு மல்லமோயாமே.” (ஐங்குறு.121) “கண்ணும் படுமோ வென்றிசின் யானே” (நற்.61) இவை கண்டேம், என்றேன் என்னும் பொருட்கண் வந்தன. “புகழ்ந்திகு மல்லரோ பெரிதே; “பாடல் சான்ற விறல்வேந் தனும்மே, வெப்புடைய வரண் கடந்து துப்புறுவர் புறம் பெற்றிசினே.” (புறம். 11) இவை புகழ்ந்தார், பெற்றான் என்னும் பொருட்கண் வந்தன. “யாரஃ தறிந்திசி னோரே.” (குறுந்.18) எனப் பால் காட்டும் எழுத்தோடு அடுத்து வருதலுங் கொள்க. (26) அம்ம என்பது அசைநிலையாதலேயன்றிப் பொருள் படுவதும் உண்டு எனல் 272. அம்மகேட் பிக்கும், இதுவும் அசைநிலைச்சொல் பொருள் படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அம்ம என்னும் சொல் அசைநிலை யாகலேயன்றிக் கேள் என்னும் பொருளும் படும், எ-று. (எ-டு.) ‘அம்ம வாழி தோழி’ (ஐங். 31) என்றவழிக் கேள் என்னும் பொருள் குறித்து நின்றது. ‘உண்டா லம்மவிவ் வுலகம்’ (புறம்.182) என்பது அசைநிலையாகி வந்தது. அசைநிலை என்பது எற்றாற் பெறுது மெனின், மேல் “அம்ம என்னும் அசைச்சொல் நீட்டம்” (விளிமரபு. 35) என்பதனாற் பெறுதும். (27) ஆங்க என்பது உரையசையாதல் 273. ஆங்க உரையசை. அசை நிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஆங்க என்னுஞ்சொல் உரையிடத்து அசைநிலையாம், எ-று. (எ-டு.) “ஆங்கக் குயிலு மயிலுங் காட்டி” என வரும். (28) ஒப்பில் போலியும் உரையசையாதல் 274. ஒப்பில் போலியும் அப்பொருட் டாகும். இதுவுமது. (இ-ள்.) ஒப்புக் குறியாத போல் என்னும் சொல்லும் உரையசையாம், எ-று. (எ-டு.) அவர் வந்தார் போலும். இதனுள் வந்தார் எனத் துணிந்த வழி வருதலின், அசைநிலையாயிற்று. (29) அசை நிலைச் சொற்கள் 275. யாகா, பிறபிறக் கரோபோ மாதென வரூஉம் *ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி. இதுவுமது. (இ-ள்.) யா முதலாகச் சொல்லப்பட்ட ஏழு சொல்லும் அசைநிலைக் கிளவியாம், எ-று. (எ-டு.) யா-“தோழியா சுவாகதம் போதுக ஈங்கென” (சீவக. 1021) கா-“புற நிழற் பட்டாளோ இவளிவட் காண்டிகா” (கலி. 99) பிற-“தான் பிற-வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி” (புறம். 140) பிறக்கு -“நசைபிறக் கொழிய” (புறம். 15) அரோ -“நோதக, விருங்குயி லாலுமரோ” (கலி. 33) போ -“பிரியின் வாழா தென்போ தெய்ய” மாது -“விளிந்தன்று மாதவர்த் தெளிந்தவென் னெஞ்சே” (நற். 178) என வரும். (30) * (பாடம்) ஆவேழ் சொல்லும் என்பது. பிரிவில் அசைநிலைகள் 276. ஆக ஆகல் என்பது என்னும் ஆவயின் மூன்றும் பிரிவில் அசைநிலை. இதுவுமது. (இ-ள்.) இவை மூன்று சொல்லும் பிரிவின்றி இரட்டித்தவிடத்து அசைநிலையாம் என்றவாறு. (எ-டு.) ஆக ஆக, ஆகல் ஆகல், என்பதென்பது எனவரும். (31) ஔகாரம் அல்லாத பிற உயிரெழுத்துகள் பொருள்படுமாறு 277. ஈரள பிசைக்கும் இறுதியில் உயிரே ஆயியல் நிலையுங் காலத் தானும் அளபெடை நிலையும் காலத் தானும் அளபெடை யின்றித் *தனிவருங் காலையும் உளவென மொழிப பொருள்வேறு படுதல் குறிப்பின் இசையான் நெறிப்படத் தோன்றும். ஒருசார் இடைச்சொற் பொருள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இரண்டு மாத்திரையாகி யொலிக்கும் உயிர்களுள் இறுதி யாகிய ஔகாரம் அல்லாத உயிர்கள் மேற்கூறியவாறு போல இரட்டித்து வருங் காலத்தினும், அளபெடை பெற்று வருங் காலத்தினும், தனிவருங் காலத்தினும் பொருள் வேறுபடுதல் உள என்று சொல்லுவர் ஆசிரியர். அவை ஒரு பொருள் உணர்த்தும் வழி, ஓசையானும், குறிப்பானும் பொருள் உணர்த்தும், எ-று. (எ-டு.) அவையாவன:-ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, என்பன. ஒருவன் தகுதி யல்லாத செய்த வழியும், அரியன செய்த வழியும், ஆ, ஆ என்ப. வியப்புள வழியும், துன்பமுள வழியும் ஆ ஆ என்ப. தமக்கு இசைவில்லாதது ஒன்றை ஒருவன் சொன்னவழி, அதனை மறுப்பார் ஆ என்ப. ஈ என்றவழி அருவருத்தலை உணர்த்தும். ஊ உ இசைவை உணர்த்தும். “ஏ ஏ இஃதொத்தன்” (கலி.62) என்றவழி, இகழ்ச்சியை யுணர்த்தும். “ஏ ஏ என இறைஞ்சி யோளே” என்ற வழி, நாணங்குறித்து நின்றது. ஐ ஐ என்ற வழி, இசைவை உணர்த்தும். “ஓ ஓ உவமன் உறழ் வின்றி ஒத்ததே” (களவழி. 36) என்றவழி, மிகுதியை உணர்த்தும். ஓ என்றவழி இசைவையும், இரக்கத்தை யும் உணர்த்தும். ஓ ஒ என்பது விலக்குதலை உணர்த்தும். பிறவும் இவ்வாறு இரட்டித்தும், அளபெடுத்தும், தனி வந்தும் பொருள் வேறுபடுவன வந்தவழிக் கண்டு கொள்க. அஃதேல், ‘ஏவுங் குரையும்’ (268) என மேல் ஓதவேண்டியதென்னை? அதுவும் இதனுள் அடங்குமாலெனின், ஆண்டுப் பொருளுணர்த்தா நிலையைக் கூறினார், ஈண்டுப் பொருளுணர்த்தும் நிலைமை கூறினார் என்க. (32) * (பாடம்) ‘தான்வரும்’ என்பது. ஏகார ஓகாரங்கட்கு எய்தியதொரு வேறுபாடு 278. நன்றீற்று ஏவும் அன்றீற்று ஏவும் அந்தீற்று ஓவும் அன்னீற்று ஓவும் அன்ன பிறவும் குறிப்பொடுங் கொள்ளும். ஏகார ஓகாரங்கட்கு வருவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நன்று, அன்று என்பவற்றின்கண் வரும் ஏகாரமும், அந்து, அன் என்பவற்றின்கண் வரும் ஓகாரமும், அத்தன்மைய பிறவும் மேற்கூறிய வாற்றானன்றிக் குறிப்புப் பொருளோடும் ஏற்கும். உம்மை இறந்தது தழீஇயிற்று, எ-று. (எ-டு.) ‘சென்றே யெறிப வொருகால் சிறுவரை நின்றே யெறிப பறையினை-நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து’. (நாலடி. 24) இதனுள் நன்றே காண் என்பது தீதே காண் என்னுங் குறிப்புணர்த் திற்று. “நின்னையன்றே திருமுக்குடையாய்” என்றவழி அன்றே என்பது அல்லாமையைக் குறியாது முக்குடையானையே சுட்டி நின்று அவன் கேட்பது பயனாக வந்தது. “பொன்னே கொடுத்தும் புணர்தற் கரியாரைக் கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும்-அன்னோ பயமில் பொழுதாக் கழிப்பரே நல்ல நயமி லறிவி னவர்’’ (நாலடி.162) என்பதனுள், அன்னோ என்பது அருள் குறித்து நின்றது. “வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப-அந்தோ வளியென் வந்தனென் என்ற” (புறம். 238) என்றவழி, அந்தோ என்பது கேடு குறித்து நின்றது. அன்ன பிறவுமாவன வந்தவழிக் கண்டுகொள்க. (33) உம்மைக்குரியதொரு புறநடை 279. எச்ச உம்மையும் எதிர்மறை உம்மையும் தத்தமுள் மயங்கும் உடனிலை இலவே. உம்மைக்குரியதொரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எச்ச உம்மையும், எதிர்மறை உம்மையும் தத்தமுள் மயங்கும் உடனிலை இல, எ-று. (எ-டு.) சாத்தனும் வந்தான் என்றவழிக் கொற்றனும் வரும் என்றாதல், வந்தான் என்றாதல் கூறுதலன்றி, வாரான் என்னற்க. ஒரு தொழிலே கூறல் வேண்டும் என்றவாறு. (34) இதுவுமது 280. எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயிற் பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல். எச்ச உம்மைக்கண் வழூஉக் காத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எஞ்சு பொருட்கிளவி, உம்மையில் சொல்லாயின், அவ் வும்மையை வருகின்ற சொல்லொடு கிளக்க, எ-று. (எ-டு.) சாத்தனும் வந்தான், கொற்றனும் வரும் என்றற்பாலதன்கண் ஓர் உம்மை வரின், சாத்தன் வந்தான், கொற்றனும் வரும் என்க, சாத்தனும் வந்தான், கொற்றன் வரும் என்னற்க. (35) முற்றும்மை ஒரோவழி எச்சமும் ஆதல் 281. முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் எச்சக் கிளவி உரித்தும் ஆகும். இதுவும் உம்மைக்கண் வருவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முற்றும்மைத் தொகைச்சொற் பொருண்மைக்கண் எச்சப் பொருண்மையும் உரித்து, எ-று. ஈண்டுத் தொகை என்றது எண்ணின் தொகை. (எ-டு.) நின் கையிற் காணம் பத்துங் கொடால் - என்றவழிச் சில கொடுக்க என்றவாறாம். இது மறுத்த வாய்பாட்டானல்லது வாராது. (36) ஈற்றசை ஏகாரத்திற்கு உரிய அளவு 282. ஈற்றுநின் றிசைக்கும் ஏயென் இறுதி கூற்றுவயின் ஓரளபு ஆகலும் உரித்தே. ஏகாரத்திற்கு உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யுள் இறுதிக்கண் நின்று ஒலிக்கும் ஏகாரம் சொல்லு மிடத்து ஒருமாத்திரையாகி நிற்கவும் பெறும், எ-று. (எ-டு.) ‘கடல்போற் றோன்றல காடிறந் தோரே’. (அகம். 1.) இது ஒரு மாத்திரையாகி நிற்கும். (37) உம், என என்பவற்றுக்குரிய முடிபு 283. உம்மை எண்ணும் எனவென் எண்ணும் தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே. எண்ணின்கட் படுவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மையான் எண்ணப்பட்ட எண்ணும், எனவான் எண்ணப் பட்ட எண்ணும் தம்மிடத்துத் தொகை பெறுதல் நியமம் இல, எ-று. (எ-டு.) முத்தும் பவழமும் கொணர்ந்தான். நன்றெனத் தீதென நின்றது. முத்தும், பவழமும், பொன்னும் மூன்றுங் கொணர்ந்தான். நன்றெனத் தீதென இரண்டுமாகி நின்றது என இருபாற்றானும் வரும். (38) எண்ணேகாரம் இடையிட்டும் வரும் 284. எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர். இதுவுமது; ஏகாரத்திற்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எண்ணுக்குறித்த ஏகாரம் சொற்றொறுங் கொள்ளாது ஒருவழிக் கொளினும் எண்ணுக் குறித்து நடக்கும், எ-று. (எ-டு.) ‘தோற்றம் இசையே நாற்றஞ் சுவையே, உறலோடாங்கைம் புலனென மொழிப’ என்புழி, இடையிட்டு வந்தும் எண்ணுக் குறித்தது.(39) எனா, என்றா ஆகிய இரண்டும் எண்ணில் வருதல் 285. உம்மை தொக்க எனாவென் கிளவியும் ஆஈ றாகிய என்றென் கிளவியும் ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன. எண்ணின்கண் வருவன சில இடைச்சொல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மை தொக்க எனவின் திரிபாகிய எனா என்னுஞ் சொல்லும், ஆவீறாகிய என்று என்னும் சொல்லும் எண்ணின்கட் பட்டன. எனவும் என்பது எனா எனவும், என்று என்பது என்றா எனவும் வரும், எ-று. (எ-டு.) வளிநடந் தன்ன வாஅய்ச்செல லிவுளியொடு-கொடி நுடங்கு மிசைய தேரின ரெனாஅக்-கடல்கண் டன்ன வொண்படைத்தானை யொடு-மலைமாறு மலைக்கும் களிற்றின ரெனாஅ (புறம்.197) என்பதனுள் எனவும் என்பது எனா என்றுவந்து எண்ணுக் குறித்தவாறு கண்டுகொள்க. ‘ஒப்பு முருபும் வெறுப்பு மென்றா, கற்பு மேரு மெழிலு மென்றா’ (பொரு ளியல். 53). என்பதனுள் என்று என்பது ஆவொடு கூடி எண்ணுக் குறித்தவாறு கண்டுகொள்க. (40) எண்ணிடைச் சொற்களுக்கு முடிபு வேற்றுமை 286. அவற்றின் வரூஉம் எண்ணின் இறுதியும் பெயர்க்குரி மரபிற் செவ்வெண் இறுதியும் ஏயி னாகிய எண்ணின் இறுதியும் யாவயின் வரினும் தொகையின் றியலா. எண்ணுதற் குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட எனா என்றா என்பனவற்றான் வரும் எண்ணிறுதியும், பெயர்க்குரி மரபினானெண்ணப்படும் செவ்வெண் இறுதியும், ஏகாரத்தான் எண்ணப்பட்ட எண்ணின் முடிவும் யாதானும் ஒரு நெறியான் வரினும் தொகையின்றி வழங்கா, எ-று. (எ-டு.) மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ யாத்த சீரே அடியாப் பெனாஅ மரபே தூக்கே தொடைவகை யெனாஅ நோக்கே பாவே அளவிய லெனாஅ திணையே கைகோள் கூற்றுவகை யெனாஅ கேட்போர் களனே காலவகை யெனாஅப் பயனே மெய்ப்பா டெச்சவகை யெனாஅ முன்னம் பொருளே துறைவகை யெனாஅ மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின் ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும். (தொல். பொருள்.) எனவும், “அவைதாம், பெயர்ச்சொல் லென்றா வினைச்சொல் லென்றா, இரண்டன் பாலா வியங்குமன் பயின்றே” எனவும்; “படைகுடி கூழமைச்சு நட்பரணாறும், உடையான் அரசருள் ஏறு” (குறள். 381) எனவும், “தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே, ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே”(சூ. 254) எனவும் எண் தொகைபெற்றவாறு கண்டுகொள்க. ‘கண்கால் புறமகம்’ என்னும் சூத்திரத்துள் (வேற்றுமையியல். 20) எனாவும், “ஒப்பு முருவும்” (பொருளியல். 53) என்னுஞ் சூத்திரத்துள் என்றாவும்; “நிலப்பெயர் குடிப்பெயர்” (பெயரியல் 11) என்னுஞ் சூத்திரத்துள் ஏகாரமும் தொகை பெற்றிலவாலெனில், அவை, ‘அன்ன பிறவும்’ எனவும், ‘கிளவி யெல்லாம்’ எனவும், ‘அனைத்தும்’ எனவும் தொகைப் பொருண்மை தோன்ற வந்தன. ‘செல்ல லின்ன லின்னா மையே’ (உரியியல்) என்பதன்கண் தொகை பெற்றின்றாலெனின், யாவயின் வரினும் என்றமையான், தொகையின்றி வரினும், அப்பொருளுரைக்குங்கால், தொகையின்றி இயலா எனக்கொள்க. உடம்பொடு புணர்த்தல் என்பதனான் எண்ணேகாரம் இடையிட்டு வருதலேயன்றி, எனாவும், என்றாவும் இடையிட்டு வருதலுங் கொள்க. (41) எண்ணும்மை தொக்கு வருதல் 287. உம்மை எண்ணின் உருபுதொகல் வரையார். எண்ணும்மைக்கு உரியதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மையான் எண்ணப்பட்ட பொருளின்கண் வரும் உருபாகிய உம்மை ஒரோவிடத்துத் தொகுதலும் நீக்கார், எ-று. எனவே, சொற்றொறும் உம்மை கொடாக்காலும் உம்மை எண்ணாகும் என்றவாறாம். (எ-டு.) “இயங்குபடை யரவ மெதிர்பரந் தெடுத்தல், வயங்கலெய்திய பெருமை யானும், கொடுத்த லெய்திய கொடைமை யானும்” (புறத். 8) என உம்மை ஒரோவழித் தொக்கு நின்றது. இவ்விலக்கணம் எண்ணும்மைக்கே யுரித்து. (42) உம் என்பது உந்து எனத் திரிதல் 288. உம்உந் தாகும் இடனுமா ருண்டே. இதுவுமது. (இ-ள்.) உம் என்பது உந்து எனத் திரிந்து நிற்கவும் பெறும் இடமும் உண்டு, எ-று. (எ-டு.) “நெல்லரியு மிருந்தொழுவர் செஞ்ஞாயிற்று வெயின்முனையிற் றெண்கடற்றிரை மிசைப்பாயுந்து திண்டிமில் வன்பரதவர் வெப்புடைய மட்டுண்டு தண்குரவைச் சீர்தூங்குந்து தூவற் கலித்த தேம்பாய் புன்னை மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானன் முண்டகக் கோதை யொண்டொடி மகளிர் இரும்பனையின் குரும்பைநீரும் பூங்கரும்பின் றீஞ்சாறும் ஓங்குமணற் குவவுத்தாழைத் தீநீரோ டுடன் விராய் முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயுந் தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய.’’ (புறம். 24) என்றவழி உம் உந்தாயிற்று. எண்ணும்மை அதிகாரப்பட்டு வருதலான், இவ்வாறு வருவது ஒரு பொருண்மேல் உம்மை அடுக்கியவழி என்று கொள்க. ஈண்டு எண் ணும்மை யாங்கதெனின், ஒரு பொருண்மேல் பல வினைச்சொல் வருதலின், அவை ஒரு முகத்தான் எண்ணப்பட்டவாம். (43) எண்ணிடைச் சொற்கள் வினையொடும் வருதல் 289. வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே. இதுவுமது. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட எண்ணின் வேறுபாடெல்லாம் வினை யொடு நிற்பினும் எண்ணுநிலை திரியா; ஆண்டு அவற்றவற்றியல்பு ஆராய்தல் வேண்டும், எ-று. எனவே ஒரு முடிபுடையவல்ல : தொகை பெற்றும் பெறாதும் வரும் என்றவாறாம். (எ-டு.) ‘‘வளிநடந் தன்ன வாஅய்ச்செலல் இவுளியொடு கொடிநுடங்கு மிசைய தேரின ரெனாஅக் கடல்கண் டன்ன வொண்படைத் தானையொடு மலைமாறு மலைக்குங் களிற்றின ரெனாஅ உருமுரன் றன்ன வுட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றிய ரெனாஅ மண்கெழு தானை யொண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே.’’ (புறம். 197) என்புழி, வினைக்குறிப் பெண்ணிவந்து தொகைபெறாது நின்றது. “நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும், பேணாமை பேதை தொழில்.” (குறள். 833) இதுவும் தொகை பெறாது வந்தது. தொகை பெற்று வந்தன வந்தவழிக் கண்டுகொள்க. (44) எண்ணிடைச் சொற்கள் பிரிந்து சென்று ஒன்றுதல் 290. என்றும் எனவும் ஒடுவும் தோன்றி ஒன்றுவழி யுடைய எண்ணினுள் பிரிந்தே. இதுவும் எண்ணின்கண் வருவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) என்றும், எனவும், ஒடுவும் எண்ணினுட் பிரிந்து ஒருவழித் தோன்றி எல்லாப் பெயரோடும் ஒன்றும் நெறியுடைய, எ-று. இதனானே ஒடு என ஓரிடைச்சொல் கூறியவாறு மாயிற்று. (எ-டு.) “இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென், றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே” (எச்சவியல் 1) எனவும், “யாகா, பிறபிறக் கரோபோ மாதென வரூஉம், ஆயேழ் சொல்லும்” (சூ. 275) எனவும், “பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும், இருடீர வெண்ணிச் செயல்” (குறள். 675) எனவும் இவை ஒரோவழிப் பிரிந்து நின்று எல்லாப் பெயரோடும் ஒன்றிமுடிந்தவாறு கண்டுகொள்க. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான் ‘என்னும்’ என்னுஞ் சொல்லும் இவ்வாறு வருமெனக் கொள்க, “மியாயிக மோமதி யிகுஞ்சின் என்னும், ஆவயி னாறும் முன்னிலை யசைச்சொல்” (சூ. 270) என்றவழி ‘என்னும்’ எனவும் வந்தது. எண்ணினுட் பிரிந்தெனப் பொதுப்படக் கூறினமையான் எல்லா எண்ணொடும் வரப்பெறும் என்று கொள்க. “சொல்லெனப் படுப பெயரே வினையென், றாயிரண் டென்ப வறிந்திசி னோரே” (பெயரியல் 4) என்றவழி ஏகாரம் எண்ணின்கண் வந்தது. பிறவும் பிற எண்ணோடு வருமாறு வந்தவழிக் கண்டுகொள்க. (45) இடைச்சொற்குப் பொருள் புறநடை 291. அவ்வச் சொல்லிற்கு அவையவை பொருளென மெய்பெறக் கிளந்த இயல வாயினும் வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித் திரிந்துவேறு படினும் தெரிந்தனர் கொளலே. எடுத்தோதப்பட்ட இடைச்சொற் கெல்லாம் புறநடை உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட இடைச் சொற்களெல்லாம் தனித் தனியே இதற்கு இது பொருளென எடுத்து உணர்த்தப்பட்டனவாயினும், வினையொடும், பெயரொடும் குறிக்கப் புலப்பட்டு மற்றொரு வேறுபாட் டனவாகி வரினும், அவ் வேறுபாடு ஆராய்ந்து அதுவும் அதற்கு இலக்கண மாகக் கொள்க, எ-று. (எ-டு.) “ஒத்த மொழியாற் புணர்த்தன ருணர்த்தல், தத்த மரபிற் றோன்றுமன் பொருளே,” என்றவழி, மன் அசைநிலையாயிற்று. “உறக்குந் துணையதோ ராலம்வித் தீண்டி யிறப்ப நிழற்பயந் தாஅங்-கறப்பயனுந் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்’’ (நாலடி. 38) என்பதனுள், உம் இசைநிறை யாயிற்று. “கான்கெழு நாடற் படர்ந்தோற்குக் கண்ணும் படுமோ என்றிசின் யானே” (நற். 61) என்றவழி, உம்மை அசைநிலை யாயிற்று. “தேவரே தின்னினும் வேம்பு” (நாலடி. 112) என்றவழி, ஏகாரம் சிறப்புக் குறித்து நின்றது. மழைக்குறி கண்டு மழை பெய்யும் போலும் என்றவழிப், போலும் என்றது ஐயங் குறித்து நின்றது. “தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே.” (சிந்தா. 1) என்றவழி அன்றே என்பது முழுவதும் அசைநிலையாயிற்று. “சென்றீ பெருமநிற்றகைக்குநர் யாரே.” (அகம். 46) என்றவழி, ஏகாரம் ஈற்றசையாயிற்று. “குரை கழல்” என்றவழிக், குரை என்பது ஒலிப் பொருண்மை உணர்த்திற்று. பிறவும் இவ்வாறு வருவன வெல்லாம் இதுவே ஓத்தாகக்கொள்க. (46) இடைச் சொற்குச் சொற்புறநடை 292. கிளந்த வல்ல அன்ன பிறவும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. இஃது இடைச் சொற்குச் சொற் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எடுத்தோதப்பட்ட இடைச்சொலன்றி அத்தன்மைய பிறவுமாகி வருவனவும் இசைநிறை யசைநிலையாகி வருவனவும் பொருள்படுமாறு அறிந்துகொள்க, எ-று. (எ-டு.) அவற்றுட் சில வருமாறு ‘குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே.’ (முருகு. 217) என்றவழிக், குன்றுதொறு என்பது குன்று பல என்னும் பொருண்மை உணர நின்றது. ‘சிறிது தவிர்ந் தீக மாளநின் பரிசிலர்.’ (மயிலை.ப-ம். 99) என்ற வழி, மாள என்பது அசைநிலையாயிற்று. ‘பிரியின் வாழா தென்போ தெய்ய’ என்றவழி, தெய்ய என்பது அசைநிலை யாயிற்று. ‘எனவாங் கொள்ளழற் புரிந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே’ (புறம். 11) என்றவழி, எனவும், ஆங்கும் அசைநிலையாயின. “அஞ்சுவ தோரு மறனே ஒருவனை, வஞ்சிப்பதோரு மவா’ (குறள். 366) என்றவழி, ஓரும் என்பன அசைநிலை யாயின. ‘செலிய ரத்தை நின்வெகுளி’ (புறம். 6) என்றவழி, அத்தை அசைநிலை யாயிற்று. “அரும்பெற லுலக நிறைய-விருந்து பெற்றனராற் பொலிக நும் புகழே.” (புறம். 62) என்றவழி, ஆல் அசைநிலை யாயிற்று. ‘தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டு மூன்றுங், கடிநிலை யிலவே பொருள் வயினான’ (வேற்றுமை மயங்கியல் 10) என்றவழி, ஆன அசைநிலையாயிற்று. ‘செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின்-கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே’ (கலி. 7) என்றவழி, யாழ அசைநிலை யாயிற்று. பிறவும் அன்ன. (47) இடையியல் முற்றிற்று இவ்வியல் சூத்திரமும் உரையும் கிரந்த (எண்) வகையான் 340 8 உரியியல் உரிச்சொல்லின் பொதுவிலக்கணம் 293. உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் பெயரினும் வினையினும் மெய்தடு மாறி ஒருசொற் பலபொருட்கு உரிமை தோன்றினும் பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும் பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், உரிச்சொல் ஓத்து என்னும் பெயர்த்து : உரிச்சொல் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். உரிச்சொல் என்பது யாதோ எனின், ஒரு வாய்பாட்டாற் சொல்லப்படும் பொருட்குத் தானும் உரித்தாகி வருவது. அதனானேயன்றே, ஒரு சொற் பலபொருட் குரிமை தோன்றினும், பலசொல் ஒரு பொருட் குரிமை தோன்றினும் என ஓதுவாராயினர். எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச்சொற் கிளவி (சூ. 482) என்று ஓதினமையான், வடநூலாசிரியர் தாது என்று குறியிட்ட சொற்களே இவையென்று கொள்ளப்படும் : அவையும் குறைச்சொல்லாதலான். அஃதேல், தொழிற் பொருண்மை உணர்த்துவன எல்லாம் இதனுள் ஓதினாரோ எனின், வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன (உரி.2) என்றா ராகலின், வழக்கின்கட் பயிற்சி இல்லாத சொற்களே ஈண்டு எடுத்து ஓதப்படுகின்றன என்க. தொழிலாவது வினையும் வினைக் குறிப்பு மாதலின், அவ்விருவகைச் சொற்கும் அங்கமாகி வெளிப்படாதன ஈண்டுக் கூறப்படுகின்றன. இதன் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், உரிச்சொற் கெல்லாம் உரிய தொரு பொது இலக்கணமும், அவற்றிற்குப் பொருளுணர்த்துந் திறனும் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை’ என்பது உரிச்சொல் ஆகிய சொல்லை விரித்து உரைக்குங் காலத்து, எ-று. “இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி” என்பது சொல் லானும், குறிப்பானும், பண்பானும் புலப்பட்டு, எ-று. சொல்லாற் புலப்பட்டது உறு என்பது, இதனின் அஃதுறும் என்ற வழி, மிகும் என்னும் பொருள் புலப்பட்டது. குறிப்பாற் புலப்பட்டது - கறுத்தான் என்பது, ஒருவன்மாட்டுக் கருமையாகிய நிறத்தைக் குறியாது, அவனது வெகுட்சியைக் குறித்தலிற் குறிப்பாயிற்று. பண்பாற் புலப்பட்டது - வெகுட்சிக்குக் கண்சிவக்கும் என்பது, கண்ணின் சிவப்பு அது சிவத்தற்குக் காரணமாகிய வெகுட்சியின்மேல் வந்தது. இவையிற்றை வடநூலாசிரியர் முக்கியம், இலக்கணை, கௌணம் என்ப. சொற்பொருள்படும்வழிச் சொல்லானும், குறிப்பானும், குணத் தானும் பொருள்படும் என்பதூஉம், ஈண்டுக் கூறப்படுகின்ற உரிச்சொல் இம் மூவகையானும் பொருள் வேறுபடும் என்பதூஉம் கூறியவாறாம். ‘பெயரினும் வினையினும் மெய்தடு மாறி’ என்பது உரிச்சொல் லாகிய உருபு பெயரின்கண்ணும் வினையின்கண்ணும் தடுமாறி, எ-று. அவை தடுமாறுங்கால் பெயர் வினைகளைச் சார்ந்தும், அவற்றிற்கு அங்கமாகியும் வரும். ‘உறுவளி’ என்பது பெயரைச் சார்ந்து வந்தது. ‘உறக்கொண்டான்’ என்பது வினையைச் சார்ந்து வந்தது. ‘உறுவன்’ என்ற வழிப் பெயர்க்கு அங்கமாயிற்று. ‘உற்றான்’ என்றவழி வினைக்கு அங்க மாயிற்று. ‘ஒருசொற் பலபொருட் குரிமை தோன்றினும், பலசொல் ஒரு பொருட் குரிமை தோன்றினும்’ என்பது ஒரு சொல் பல பொருட்கு உரித் தாகித் தோன்றினும், பல சொல் ஒரு பொருட்கு உரியவாகித் தோன்றினும், எ-று. ஒருசொல் ஒருபொருட் குரித்தாகி வருதல் சொல்லாமல் முடிந்ததாம். ‘பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்-தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின்’ என்பது உரிச்சொற்கள் தத்தம் மரபினாற் சென்று நிற்குமிடத்து, வழக்கின்கட் பயின்று நடவாத சொற்களைப் பயின்ற சொற்களொடு சேர்த்தி, எ-று. பயிலாத சொல்லாவன :-உறு, தவ, நனி; பயின்ற சொல்லாவன மிகுதல், உட்கு, உயர்வு என்பன. சார்த்துதலாவது இச்சொற்கள் இச் சொல்லின் பொருள்படும் எனக் கூட்டுதல். ‘எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்’ என்பது யாதானும் ஒரு சொல்லாயினும் பொருள் வேறுபடுத்திக் காட்டுக, எ-று. தோன்றித் தடுமாறி என்னும் செய்தென் எச்சம், உரிமை தோன்றினும் என்னும் செயின் எச்சத்தினோடு ஒன்றிக், கிளக்க என்னும் வியங்கோ ளொடு முடிந்தது. உரிச்சொற் கிளவியை விரித்துரைக்குங் காலத்துச், சொல்லானும் குறிப்பானும், பண்பானும் பொருள் புலப்பட்டுப், பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் உருபு தடுமாறி, ஒருசொற் பலபொருட்கு உரிமையாகித் தோன்றினும், பலசொல் லொருபொருட்கு உரிமையாகித் தோன்றினும், தத்தம் மரபிற் சென்று நிற்குமிடத்துப், பயிலாத சொற்களைப் பயின்ற சொற்களொடு சேர்த்தி, யாதானுமொரு சொல்லாயினும் பொருள் வேறு படுத்து உரைக்க; அறிவோர் என்றவாறு. (1) வெளிப்படையல்லா உரிச்சொற்களே இவ்வியலில் கூறப்படும் என்றல் 294. வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா வெளிப்பட வாரா உரிச்சொல் மேன. ஈண்டு ஓதுகின்ற உரிச்சொல் இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வழக்கின்கண் எல்லாரானும் அறியப்பட்ட சொல் ஈண்டு எடுத்து ஓதல்வேண்டா; அறியப்படாத உரிச்சொன்மேலன, வருகின்ற சூத்திரங்கள், எ-று. (எ-டு.) வெளிப்படு சொல்லாவன உண்டல் என்பதற்கு அயிறல், மிசைதல் எனவும்; உறங்குதல் என்பதற்குத் துஞ்சல் எனவும்; இணை விழைச்சு என்பதற்குப் புணர்தல், கலத்தல், கூடல் எனவும்; அச்சம் என்பதற்கு வெரூஉதல் எனவும் இவ்வாறு வருவன. இனி வெளிப்பட வழங்காதன கூறப்படுகின்றன. (2) உறு, தவ, நனி என்பனவற்றின் பொருள் 295. *உறுதவ நனியென வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப. இஃது உரிச்சொற்களிற் சில சொற்பொருள் உணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. இக்கருத்து வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும். (இ-ள்.) உறு, தவ, நனி என்று சொல்லப்பட்ட மூன்று சொல்லும் மிகுதி என்னும் சொல்லான் அறியப்படும் பொருளை உணர்த்தும், எ-று. (எ-டு.) ‘உறுபுனல் தந்துல கூட்டி’ (நாலடி. 185): ‘ஈயாது வீயும் உயிர்தவப் பலவே’ (புறம். 235); ‘வந்துநனி வருந்தினை வாழிய நெஞ்சே’ (அகம். 19); இவை மிகுதி உணர்த்தியவாறு கண்டுகொள்க. (3) * (பாடம்) அவைதாம் - என்ற தனிச் சொல்லுடன் ஏனையுரை களில் இந்நூற்பா காணப்படுகிறது. உரு என்பதன் பொருள் 296. உருவுட் காகும். (இ-ள்.) உரு என்னும் சொல் உட்கு என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘உருகெழு கடவுள்’ (பதிற். 21) உட்குமிக்க கடவுள் எ-று. (4) புரை என்பதன் பொருள் 297. புரைஉயர் பாகும். (இ-ள்.) புரை என்பது உயர்வு என்னும் பொருள்படும் எ-று. (எ-டு.) ‘புரைய மன்ற புரையோர் கேண்மை.’ (நற். 1.) (5) குரு, கெழு என்பனவற்றின் பொருள் 298. குருவும் கெழுவும் நிறனா கும்மே. (இ-ள்.) குரு என்பதூஉம், கெழு என்பதூஉம் நிறம் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘குருமணித் தாலி,’ ‘செங்கேழ் மென்கொடி,’ (அகம். 80) கெழு என்பது கேழ் எனவும் வரும். (6) செல்லல், இன்னல் என்பனவற்றின் பொருள் 299. செல்லல் இன்னல் இன்னா மையே. (இ-ள்.) செல்லல் என்னும் சொல்லும், இன்னல் என்னும் சொல்லும் இன்னாமைப் பொருளில் வரும், எ-று. (எ-டு.) ‘மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்’ (பதிற். 21), ‘வெயில் புறந் தரூஉம் இன்ன லியக்கத்து’ (மலைபடு. 374). (7) மல்லல் என்பதன் பொருள் 300. மல்லல் வளனே. (இ-ள்.) மல்லல் என்னும் சொல் வளப்பம் என்னும் பொருள் தரும், எ-று. (எ-டு.) ‘மல்லல் மால்வரை’. (அகம். 52) (8) ஏ என்பதன் பொருள் 301. ஏபெற் றாகும். (இ-ள்.) ஏ என்னும் சொல் பெற்றுதல் என்னும் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘ஏக லடுக்கம்’, (நற். 116) பெற்றுதல் என்பது இக்காலம் பற்றுதல் என வரும். (9) உகப்பு என்பதன் பொருள் 302 உகப்பே உயர்தல். (இ-ள்.) உகப்பு என்னும் சொல் உயர்தல் என்னும் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘விசும்புகந் தாடாது’. (10) உவப்பு என்பதன் பொருள் 303. உவப்பே உவகை. (இ-ள்.) உவப்பு என்னும் சொல் உவகை என்னும் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘உவந்துவந் தார்வ நெஞ்சமோடு.’ (அகம். 35) (11) பயப்பு என்பதன் பொருள் 304. பயப்பே பயனாம். (இ-ள்.) பயப்பு என்னும் சொல் பயன் என்னும் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘பயவாக், களரனையர் கல்லா தவர்.’ (குறள். 406) (12) பசப்பு என்பதன் பொருள் 305. பசப்பு நிறனாகும். (இ-ள்.) பசப்பு என்னும் சொல் நிறத்தை உணர்த்தும், எ-று. (எ-டு.) ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’. (கலி. 7) (13) இயைபு என்பதன் பொருள் 306. இயைபே புணர்ச்சி. (இ-ள்.) இயைபு என்னும் சொல் புணர்தல் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘இயைந் தொழுகும்.’ (14) இசைப்பு என்பதன் பொருள் 307. இசைப்பிசை யாகும். (இ-ள்.) இசைப்பு என்னும் சொல் இசைத்தல் என்பதன் பொருள் படும், எ-று. (எ-டு.) ‘யாழிசையூப் புக்கு,’ ‘இசைத்தலு முரிய,’ (தொல். சொல். 58) ‘வாயிலிசை’ என ஒலிப்பொருட்கண் வந்தன. (15) அலமரல், தெருமரல் என்பனவற்றின் பொருள் 308. அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி. (இ-ள்.) அலமரல் என்னும் சொல்லும், தெருமரல் என்னும் சொல்லும் சுழலல் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘அலமர லாயம்’ (ஐங்.64); ‘தெருமர லுள்ளமோ டன்னை துஞ்சாள்.’ (16) மழ, குழ என்பனவற்றின் பொருள் 309. மழவும் குழவும் இளமைப் பொருள. (இ-ள்.) மழ என்னும் சொல்லும், குழ என்னும் சொல்லும் இளமை என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘மழகளிறு’ (புறம்.38); ‘குழக்கன்று’ (நாலடி.101) (17) சீர்த்தி என்பதன் பொருள் 310 சீர்த்தி மிகுபுகழ். (இ-ள்.) சீர்த்தி என்னும் சொல் மிகுபுகழ் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘வயக்கஞ் சால் சீர்த்தி.’ (18) மாலை என்பதன் பொருள் 311. மாலை இயல்பே. (இ-ள்.) மாலை என்னும் சொல் இயல்பு என்னும் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்’ (கலி. 9) (19) கூர்ப்பு, கழிவு என்பவற்றின் பொருள் 312. கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும். (இ-ள்.) கூர்ப்பு என்பதூஉம், கழிவு என்பதூஉம் முன்பு உள்ளதன்கண் மிகுதியைக் குறித்து வரும், எ-று. (எ-டு.) ‘துனிகூ ரெவ்வமொடு’ (சிறுபாண். 39); ‘கழிகண்ணோட் டம்’ (பதிற்.22) (20) கதழ்வு, துனைவு என்பவற்றின் பொருள் 313. கதழ்வும் துனைவும் விரைவின் பொருளே. (இ-ள்.) கதழ்வு என்னும் சொல்லும், துனைவு என்னும் சொல்லும் விரைவு என்பதன் பொருள்படும், எ-று. கதழ், துனை என்னும் சொற்களை இனிது விளக்குதற்குப் பெயராக்கி ஓதினார். மேற் சொல்லப்பட்டவற்றினும், இனி வருவனவற்றி னும் குறைச் சொல்லாகி இவ்வாறு வருவன அறிந்துகொள்க. (எ-டு.) ‘கதழ்பரி நெடுந்தேர்’ (நற். 203); ‘துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்.’ (அகம். 9) (21) அதிர்வு, விதிர்ப்பு என்பவற்றின் பொருள் 314. அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும். (இ-ள்.) அதிர்வு என்பதூஉம், விதிர்ப்பு என்பதூஉம் நடுக்கம் என்பதன் பொருள் உணர்த்தும், எ-று. (எ-டு.) ‘எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை, அதிர வருவதோர் நோய்’ (குறள். 429); ‘விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை’ (புறம். 20) (22) வார்தல், போகல், ஒழுகல் என்பவற்றின் பொருள் 315. வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள. (இ-ள்.) வார்தல் என்னும் சொல்லும், போகல் என்னும் சொல்லும், ஒழுகல் என்னும் சொல்லும் நேர்பு என்பதன் பொருண்மையும், நெடுமை என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. (எ-டு.) ‘வார்ந்திலங்கு வையெயிற்று’ (குறுந். 14); ‘போகுகொடி மருங்குல்’ ஒழுகுகொடி மருங்குல் இவை நேர்மை. ‘வார்கயிற்றொழுகை’ (அகம். 173); ‘வெள்வேல் விடத்தேரொடு காருடைபோகி,’ (பதிற். 13) ‘மால்வரை யொழுகிய வாழை’ (சிறுபாண். 21). இவை நெடுமை. (23) தீர்தல், தீர்த்தல் என்பவற்றின் பொருள் 316. தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும். (இ-ள்.) தீர்தல் என்னும் சொல்லும், தீர்த்தல் என்னும் சொல்லும் விடுதல் என்னும் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘துணையிற் றீர்ந்த கடுங்கண் யானை’ (நற். 108) இது தன்வினை. நோய் தீர்த்தான் என்பது பிறவினை-விடுத்தான் எனப்படும். இவ்வேறுபாட்டான் இரண்டாக ஓதினார். (24) கெடவரல், பண்ணை என்பவற்றின் பொருள் 317. கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. (இ-ள்.) கெடவரல் என்னும் சொல்லும், பண்ணை என்னும் சொல்லும் விளையாட்டு என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘கெடவர லாயம்’. ‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்’ (மெய்ப்பாட்டியல் 1). (25) தட, கய, நளி என்பவற்றின் பொருள் 318. தடவும் கயவும் நளியும் பெருமை. (இ-ள்.) தட என்னும் சொல்லும், கய என்னும் சொல்லும், நளி என்னும் சொல்லும் பெருமை என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘தடக்கை’ (புறம். 394). ‘கயவாய்.’ (அகம். 118) ‘நளிமலை’ (புறம். 150). (26) 319. அவற்றுள், தடவென் கிளவி கோட்டமும் செய்யும் கயவென் கிளவி மென்மையும் செய்யும் நளியென் கிளவி செறிவும் ஆகும். (இ-ள்.) மேற் சொன்னவற்றுள், தட என்னும் சொல் கோடுதல் என்பதன் பொருண்மையும், கய என்னுஞ் சொல் மென்மை என்பதன் பொருண்மையும், நளிதல் என்னும் சொல் செறிதல் என்பதன் பொருண்மையும் படும், எ-று. (எ-டு.) ‘தடமருப்பெருமை’ (நற்.120); ‘கயந்தலைக்குழவி’; ‘நளியிருள்’. (27) பழுது என்பதன் பொருள் 320. பழுது பயனின்றே. (இ-ள்.) பழுது என்னும் சொல் பயனின்மை உணர்த்தும், எ-று. (எ-டு.) “பழுது கழிவாழ் நாள்”. (28) சாயல் என்பதன் பொருள் 321. சாயல் மென்மை. (இ-ள்.) சாயல் என்னும் சொல் மென்மை என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘சாயன் மார்பு’. (பதிற். 16) (29) முழுது என்பதன் பொருள் 322. முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே. (இ-ள்.) முழுது என்னும் சொல் ஒழியாமையை உணர்த்தும், எ-று. (எ-டு.) ‘உலகமுழு தாண்ட’. (சிலப். அந்தி. 1) (30) வம்பு என்பதன் பொருள் 323. வம்புநிலை யின்மை. (இ-ள்.) வம்பு என்னும் சொல் நிலையின்மையை உணர்த்தும், எ-று. (எ-டு.) ‘வம்ப மாரி’ (குறுந். 66). (31) மாதர் என்பதன் பொருள் 324. மாதர் காதல். (இ-ள்.) மாதர் என்னும் சொல் காதல் என்னும் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘மாதர் நோக்கு.’ (32) நம்பு, மேவு என்பவற்றின் பொருள் 325. நம்பும் மேவும் நசையா கும்மே. (இ-ள்.) நம்பு என்னும் சொல்லும், மேவு என்னும் சொல்லும் நசை என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம். 198) ‘பேரிசை நவிர மேஎ யுறையும்.’ (மலைபடு. 82) (33) ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய்தல் என்பவற்றின் பொருள் 326. ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். (இ-ள்.) ஓய்தல் என்னும் சொல்லும், ஆய்தல் என்னும் சொல்லும், நிழத்தல் என்னும் சொல்லும், சாஅய் என்னும் சொல்லும் ஆகிய அந்நான்கு சொல்லும் ஒரு பொருட்குள்ள அளவின் நுணுக்கத்தைக் காட்டும், எ-று. (எ-டு.) ‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி. 7); ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி. 66); ‘நிழத்த யானை மேய் புலம்படர’ (மது. 303); ‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல். 18).(34) புலம்பு என்பதன் பொருள் 327. புலம்பே தனிமை. (இ-ள்.) புலம்பு என்னும் சொல் தனிமை என்னும் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி’ (அகம். 7). (35) துவன்று என்பதன் பொருள் 328. துவன்று நிறைவாகும். (இ-ள்.) துவன்று என்பது நிறைவு என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) “ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்” (நற். 170). (36) முரஞ்சல் என்பதன் பொருள் 329. முரஞ்சல் முதிர்வே. (இ-ள்.) முரஞ்சல் என்னுஞ் சொல் முதிர்வு என்னும் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘கோடுபல முரஞ்சிய கோளி யாலம்’ (மலைபடு. 268). (37) வெம்மை என்பதன் பொருள் 330. வெம்மை வேண்டல். (இ-ள்.) வெம்மை என்னும் சொல் வேண்டல் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘நீ வெய்யோளோடு’ (அகம். 6) (38) பொற்பு என்பதன் பொருள் 331. பொற்பே பொலிவு. (இ-ள்.) பொற்பு என்னும் சொல் பொலிவு என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘பெருவரை யடுக்கம் பொற்ப’ (நற். 34) (39) வறிது என்பதன் பொருள் 332. வறிது சிறிதாகும். (இ-ள்.) வறிது என்னும் சொல் சிறிது என்பதன் பொருளாகும், எ-று. (எ-டு.) ‘வறிதுநெறி யொரீஇ.’ (40) எற்றம் என்பதன் பொருள் 333. எற்றம் நினைவும் துணிவும் ஆகும். (இ-ள்.) எற்றமென்னும் சொல் நினைவு, துணிவு என்பவற்றின் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி’ (குறுந். 145) இது நினைவு. ‘எற்றென் றிரங்குவ செய்யற்க’ (குறள். 655) இது துணிவு. (41) பிணை, பேண் என்பவற்றின் பொருள் 334. பிணையும் பேணும் பெட்பின் பொருள. (இ-ள்.) பிணை என்னுஞ் சொல்லும், பேண் என்னும் சொல்லும் பெட்பு என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘அரும்பிணை யகற்றி வேட்ட ஞாட்பினும்’; ‘அமரர்ப் பேணியு மாவுதி யருத்தியும்’ (புறம். 99). (42) பணை என்பதன் பொருள் 335. பணையே பிழைத்தல் பெருப்பு மாகும். (இ-ள்.) பணை என்னும் சொல் பிழைத்தல் என்பதன் பொருளும், பெருமை என்பதன் பொருளும் படும், எ-று. (எ-டு.) ‘பணைத்துவீழ் பகழி.’ இது பிழைப்பு. ‘பணைத்தோள்’ (அகம். 1) இது பெருமை. (43) படர் என்பதன் பொருள் 336. படரே உள்ளல் செலவும் ஆகும். (இ-ள்.) படர் என்பது நினைத்தல் என்பதன் பொருளும், செலவு என்பதன் பொருளும் படும், எ-று. (எ-டு.) ‘வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி.’ (புறம். 47) இது நினைவு. ‘கறவை கன்றுவயிற் படர’ (குறுந். 108) இது செலவு. (44) பையுள், சிறுமை என்பவற்றின் பொருள் 337. பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள. (இ-ள்.) பையுள் என்னும் சொல்லும், சிறுமை என்னும் சொல்லும் நோய் என்பதன் பொருள்படும். எ-று. (எ-டு.) ‘பையுண் மாலை.’ (குறுந். 195); ‘சிறுமை யுறுபவோ செய்பறி யலரே.’ (நற். 1) (45) எய்யாமை என்பதன் பொருள் 338. எய்யா மையே யறியா மையே. (இ-ள்.) எய்யாமை என்னும் சொல் அறியாமை என்னும் பொருள் படும், எ-று. (எ-டு.) ‘எய்யா மையலை நீயும் வருந்துதி’. (குறிஞ்சிப். 8) (46) நன்று என்பதன் பொருள் 339. நன்று பெரிதாகும். (இ-ள்.) நன்று என்பது பெரிது என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘நன்று மரிதுற்றனையாற் பெரும.’ (அகம். 10) (47) தாவு என்பதன் பொருள் 340. தாவே வலியும் வருத்தமு மாகும். (இ-ள்.) தாவு என்னும் சொல் வலி என்பதன் பொருண்மையும், வருத்தம் என்பதன் பொருண்மையும் படும், எ-று. (எ-டு.) ‘தாவி னன்பொன் றைஇய பாவை.’ (அகம். 212) இது வலி. ‘கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென’, (குறுந். 69) இது வருத்தம்.(48) தெவு என்பதன் பொருள் 341. தெவுக்கொளற் பொருட்டே. (இ-ள்.) தெவு என்னும் சொல் கொள்ளுதல் என்பதன் பொருள் படும், எ-று. (எ-டு.) ‘நீர்த்தெவ்வு நிரைத்தொழுவர்.’ (மதுரைக். 89) (49) தெவ்வு என்பதன் பொருள் 342. தெவ்வுப் பகையாகும். (இ-ள்.) தெவ்வு என்னும் சொல் பகை என்னும் பொருள் படும், எ-று. (எ-டு.) “தெவ்வுப் புலம்.” (50) விறப்பு, உறப்பு, வெறுப்பு என்பவற்றின் பொருள் 343. விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே. (இ-ள்.) விறப்பு என்னும் சொல்லும், உறப்பு என்னும் சொல்லும், வெறுப்பு என்னும் சொல்லும் செறிவு என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) “விறந்த காப்போ டுண்ணின்று வலியுறுத்தும்”. ‘உறந்த விஞ்சி.’ ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’. (புறம். 53) (51) விறப்பு என்பதற்கு மேலும் ஒரு பொருள் 344. அவற்றுள், விறப்பே வெரூஉப் பொருட்டும் ஆகும். (இ-ள்.) அவற்றுள் விறப்பு என்னும் சொல் வெரூஉதல் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) “அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல” (பெரும் பாண். 226) (52) கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் என்பவற்றின் பொருள் 345. கம்பலை சும்மை கலியே யழுங்கல் என்றிவை நான்கும் அரவப் பொருள. (இ-ள்.) கம்பலை என்னும் சொல்லும், சும்மை என்னும் சொல்லும், கலி என்னும் சொல்லும், அழுங்கல் என்னும் சொல்லும் இவை நான்கு சொல்லும் அரவம் என்னும் பொருளையுடைய, எ-று. (எ-டு.) “கம்பலை மூதூர்” (புறம். 54); ‘ஒலிபெருஞ் சும்மையொடு’; ‘கலிகொளாயம்’ (அகம். 11); ‘உயவுப்புணர்ந் தன்றிவ் வழுங்கலூரே’ (நற். 203). (53) அழுங்கல் என்பதற்கு மேலும் இருபொருள் 346. அவற்றுள், அழுங்கல் இரக்கமும் கேடும் ஆகும். (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், அழுங்கல் என்னும் சொல் இரக்கம் என்பதன் பொருண்மையும், கேடு என்பதன் பொருண்மையும் படும், எ-று. (எ-டு.) ‘மகவிழந் தழுங்கிய’-இஃது இரக்கம். ‘குணனழுங்கக் குற்ற முழைநின்று கூறும்’ (நாலடி. 353)-இது கேடு. (54) கழும் என்பதன் பொருள் 347. கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். (இ-ள்.) கழும் என்பது மயக்கம் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘கழுமிய ஞாட்பின்’ (களவழி. 11). (55) செழுமை என்பதன் பொருள் 348. செழுமை வளனும் கொழுப்பும் ஆகும். (இ-ள்.) செழுமை என்பது வளன் என்பதன் பொருளும் கொழுப்பு என்பதன் பொருளும்படும், எ-று. (எ-டு.) ‘செழும்பல் குன்றம்’ - இது வளம். ‘செழுந்தடி தின்ற செந்நாய்’ - இது கொழுப்பு. (56) விழுமம் என்பதன் பொருள் 349. விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் செய்யும். (இ-ள்.) விழுமம் என்பது சீர்மை என்பதன் பொருளும், சிறப்பு என்பதன் பொருளும், இடும்பை என்பதன் பொருளும் படும், எ-று. (எ-டு.) ‘விழுமியோர்-காண்டொறுஞ் செய்வர் சிறப்பு.’ (நாலடி. 159)-இது சீர்மை. ‘வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து-(புறம். 27)-இது சிறப்பு. ‘நின்னுறு விழுமங் களைந்தோள்’ (அகம். 170) இது இடும்பை. (57) கருவி என்பதன் பொருள் 350. கருவி தொகுதி. (இ-ள்.) கருவி என்னுஞ் சொல் தொகுதி என்னும் பொருள் படும், எ-று. (எ-டு.) ‘கருவி வானம்’ (புறம்.159). (58) கமம் என்பதன் பொருள் 351. கமம்நிறைந் தியலும். (இ-ள்.) கமம் என்னுஞ் சொல் நிறைந்து என்பதனோடு இயலும், எ-று. (எ-டு.) ‘கமஞ்சூல் மாமழை’ (அகம். 43) (குறுந். 158) (முருகு. 7) (59) அரி என்பதன் பொருள் 352. அரியே ஐம்மை. (இ-ள்.) அரி யென்னுஞ் சொல் ஐது என்னும் பொருள் படும், எ-று. (எ-டு.) ‘அரிமயிர்த் திரண்முன்கை’ (புறம். 11). (60) கவவு என்பதன் பொருள் 353. கவவகத் திடுமே. (இ-ள்.) கவவு என்னுஞ் சொல் அகத்திடுதல் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘கழூஉவிளங் காரம் கவைஇய மார்பே’ (புறம். 19) (61) துவைத்தல், சிலைத்தல், இரங்கல், இயம்பல் என்பவற்றின் பொருள் 354. துவைத்தலும் சிலைத்தலும் இரங்கலும் இயம்பலும் இசைப்பொருட் கிளவி யென்மனார் புலவர். (இ-ள்.) துவைத்தல் என்னுஞ் சொல்லும், சிலைத்தல் என்னுஞ் சொல்லும், இரங்கல் என்னுஞ் சொல்லும், இயம்பல் என்னுஞ் சொல்லும் ஓசைப் பொருண்மையுடைய சொல், எ-று. (எ-டு.) ‘வரிவளை துவைப்ப’ ‘ஆமா நல்லேறு சிலைப்ப’ (முருகு. 315). ‘ஏறிரங் கிருளிடை’ (கலி. 46) ‘கடிமரந் தடியு மோசை தன்னூர் - நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப’ (புறம். 36) (62) இரங்கல் என்பதற்கு மேலும் ஒரு பொருள் 355. அவற்றுள், இரங்கல் கழிந்த பொருட்டு மாகும். (இ-ள்.) மேற்சொல்லப்பட்டவற்றுள் இரங்கல் என்பது கழிந்தது என்னும் பொருளையும் உடைத்தாகும், எ-று. (எ-டு.) ‘செய்திரங் காவினை’ (புறம். 10) (63) இலம்பாடு, ஒற்கம் என்பவற்றின் பொருள் 356. இலம்பா டொற்கம் ஆயிரண்டும் வறுமை. (இ-ள்.) இலம்பாடு என்னுஞ் சொல்லும், ஒற்கம் என்னுஞ் சொல்லும் வறுமை யென்னுஞ் சொல்லின் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய’ (மலைபடு. 577). ‘ஒக்க லொற்கஞ் சொலிய’ (புறம். 327). (64) ஞெமிர்தல், பாய்தல் என்பவற்றின் பொருள் 357. ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள. (இ-ள்.) ஞெமிர்தல் என்னுஞ் சொல்லும், பாய்தல் என்னுஞ் சொல்லும் பரத்தல் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து’ (நெடுநல். 90). பாய்புனல். (65) கவர்பு என்பதன் பொருள் 358. கவர்புவிருப் பாகும். (இ-ள்.) கவர்பு என்னுஞ் சொல் விருப்பு என்பதன் பொருள் படும், எ-று. (எ-டு.) ‘கவர் நடைப்புரவி’ (அகம்.130). (66) சேர் என்பதன் பொருள் 359. சேரே திரட்சி. (இ-ள்.) சேர் என்னுஞ் சொல் திரட்சி யென்பதன் பொருள் படும், எ-று. (எ-டு.) ‘சேர்ந்துசெறி குறங்கு’ (நற்.170). (67) வியல் என்பதன் பொருள் 360. வியலென் கிளவி யகலப் பொருட்டே. (இ-ள்.) வியல் என்னுஞ் சொல் அகலம் என்பதன் பொருள் படும், எ-று. (எ-டு.) வியலுலகம். (68) பே, நாம், உரும் என்பவற்றின் பொருள் 361. பேஎ நாம் உருமென வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள. (இ-ள்.) பேஎ என்னுஞ் சொல்லும், நாம் என்னுஞ் சொல்லும், உரும் என்னுஞ் சொல்லுமாகிய அம்முறைமையையுடைய மூன்று சொல்லும் அச்சப் பொருண்மையை உடைய, எ-று. (எ-டு.) ‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்’ (குறுந்.87). ‘நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த’ (அகம். 72). ‘உருமில் சுற்றமோ டிருந்தோற் குறுகி’ (பெரும்.447). (69) வய என்பதன் பொருள் 362. வயவலி யாகும். (இ-ள்.) வயவென்னுஞ் சொல் வலியென்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘வயக்களிறு’ (மது.15). (70) வாள் என்பதன் பொருள் 363. வாள்ஒளி யாகும். (இ-ள்.) வாள் என்னுஞ் சொல் ஒளியென்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘வாணுதல்’ (முருகு. 6). (71) துயவு என்பதன் பொருள் 364. துயவென் கிளவி அறிவின் றிரிபே. (இ-ள்.) துயவு என்னுஞ் சொல் அறிவின் திரிபாகிய பொருள்படும், எ-று. (எ-டு.) ‘துயவுற்றேம் யாமாக’. (72) உயா என்பதன் பொருள் 365. உயாவே யுயங்கல். (இ-ள்.) உயா என்னுஞ்சொல் உயங்கல் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘பருந்திருந் துயாவிளி பயிற்றும்’ (அகம். 16). (73) உசா என்பதன் பொருள் 366. உசாவே சூழ்ச்சி. (இ-ள்.) உசா என்பது சூழ்ச்சி என்பதன் பொருபடும், எ-று. (எ-டு.) ‘யானொன் றுசாவுகோ வைய சிறிது’ (கலி. 7). (74) வயா என்பதன் பொருள் 367. வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம். (இ-ள்.) வயா என்னுஞ் சொல் வேட்கைப் பெருக்கத்தினை யுணர்த்தும், எ-று. (எ-டு.) ‘தொடீஇய செல்வார்த் துமித்தெதிர் மண்டுங் கடுவய நாகு போல் நோக்கி’ (முல்லைக். 16) வயா என்றது கன்றின்மேற் காதல் குறித்து நின்றது. (75) கறுப்பு, சிவப்பு என்பவற்றின் பொருள் 368. கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள. (இ-ள்.) கறுப்பு என்பதும் சிவப்பு என்பதும் வெகுளி என்பதன் பொருளையுடைய, எ-று. (எ-டு.) ‘நிற்கறுத் தோரருங்கடி அரணம் போல்’. ‘நீசிவந் திறுத்த நீரழி பாக்கம்’ (பதிற். 13) (76) அவற்றிற்கு மேலும் ஒருபொருள் 369. நிறத்துரு வுணர்த்தற்கும் உரிய வென்ப. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருட்கண் வருதலன்றி, நிறத்துரு உணர்த்தற்கும் உரிய, எ-று. (எ-டு.) ‘கறுத்த காயா’. ‘சிவந்த காந்தள்’ (பதிற்.15). (77) நொசிவு, நுழைவு, நுணங்கு என்பவற்றின் பொருள் 370. நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை. (இ-ள்.) நொசிவு என்பதூஉம், நுழைவு என்பதூஉம், நுணங்கு என்பதூஉம், நுண்மை என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘நொசி மருங்குல்’ (குறஞ்சிக் கலி. 24). ‘நுழைநூற் கலிங்கம்’ (மலைபடு.561) ‘நுணங்கிய கேள்வியர்’ (குறள்.419). (78) புனிறு என்பதன் பொருள் 371. புனிறென் கிளவியீன் றணிமைப் பொருட்டே. (இ-ள்.) புனிறு என்பது ஈன்றணித்தென்னும் பொருள்பட்டு நிற்கும், எ-று. (எ-டு.) புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி (அகம்.56) (79) நனவு என்பதன் பொருள் 372. நனவே களனும் அகலமுஞ் செய்யும். (இ-ள்.) நனவென்பது களன் என்பதன் பொருண்மையும், அகலம் என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. (எ-டு.) ‘நனவுப்புகு விறலியிற் றோன்றும் நாடன்’ (அகம்.82). இது களம். ‘நனந்தலை யுலகம்’ (பதிற்.63). இஃது அகலம். (80) மத என்பதன் பொருள் 373. மதவே மடனும் வலியும் ஆகும். (இ-ள்.) மத என்னுஞ் சொல் மடம் என்பதன் பொருண்மையும், வலியென்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று. (எ-டு.) ‘பதவுமேய்ந்த மதவுநடை நல்லான்’ (அகம். 14). இது மடம். ‘கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு’ (அகம். 36). இது வலி. (81) அதற்கு மேலும் இருபொருள் 374. மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட மத என்னும் சொல் மிகுதி என்பதன் பொருளும், வனப்பு என்பதன் பொருளும் படும், எ-று. (எ-டு.) ‘பொருநா கிளம்பாண்டி - றேரூரச் செம்மாந்ததுபோன் மதைஇனள்’ (முல்லைக். 9). இது மிகுதி. ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’ (அகம். 130). இது வனப்பு.‘ (82) யாணர் என்பதன் பொருள் 375. புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி. (இ-ள்.) யாணர் என்னும் சொல் புதியது படுதல் என்னும் பொருண்மையை உடைத்து, எ-று. (எ-டு.) ‘வித்தொடு சென்ற வட்டி பற்பல, மீனொடு பெயரும் யாண ரூர’ (நற். 210). நாடொறும் புதியது படுகின்றவூர். (83) அமர்தல் என்பதன் பொருள் 376. அமர்தல் மேவல். (இ-ள்.) அமர்தல் என்பது மேவல் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘அகனமர்ந்து செய்யாளுறையும்’ (குறள். 84). (84) யாணு என்பதன் பொருள் 377. யாணுக் கவினாம். (இ-ள்.) யாணு என்னுஞ் சொல் கவின் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘யாணு விசும்பி னமர ருளப்படப் - பேணிப் பேணிப் பெரிதெனைப் பெட்டபின்’ - அழகிய விசும்பு எ-று. (85) பரவு, பழிச்சு என்பவற்றின் பொருள் 378. பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள. (இ-ள்.) பரவலும், பழிச்சலும் வாழ்த்தலின் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘கடவுட் பரவிக் கைதொழூஉப் பழிச்சி’ (மலை. 538). (86) கடி என்பதன் பொருள் 379. கடியென் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்றேற் றாயீ ரைந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. (இ-ள்.) கடி என்னும் சொல் வரைவு முதலாக முன்றேற்றீறாக ஓதப்பட்ட பத்துச் சொல்லினும் தெளியத் தோன்றும் பொருளை யுடைத்து, எ-று. (எ-டு.) ‘கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம், முடிந்தாலும் பீழை தரும்’ (குறள். 658). இது வரைவு. ‘கடுநுனைப் பகழி’; இது கூர்மை. கடி என்னும் சொற்றானே கடு எனத் திரிந்து வந்தது. ‘கடியில் புகூஉம் கள்வன்போல்’; இது காவல். ‘கடியுண் கடவுட்கிட்ட சிறுகுரல்-அறியா துண்ட மஞ்ஞை’. (குறுந். 105). இது புதிதுண் கடவுள். ‘கடுந்தேர் குழித்த ஞெள்ளலாங்கண்’ (புறம். 15) இது விரைவு. ‘கடும் பகல்’ (அகம். 148). இது விளக்கம். ‘கடுங்கா லொற்றலின்’. (பதிற். 25). இது மிகுதி. ‘கடிகாவிற் பூச்சூடினன்’ (புறம். 239). இது சிறப்பு. ‘கடும் பாம்பு வழங்குந் தெரு’ (குறுந். 354) இஃது அச்சம். ‘கடுஞ்சூ டருகுவ னினக்கே’ (அகம். 110)-நீ தெளியுமாறு சூளுறுகின்றேன். இது முன்றேற்று. (87) அதற்கு மேலும் இருபொருள் 380. ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட கடி என்னுஞ் சொல் ஐயப் பொருண்மையும், கரித்தற் பொருண்மையும் ஆகலும் ஆம், எ-று. (எ-டு.) ‘போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின், தேற்றுதல் யார்க்கும் அரிது’ (குறள். 693). இது ஐயம். ‘கடிமிளகு தின்ற கல்லா மந்தி’. இது கரிப்பு. (88) ஐ என்பதன் பொருள் 381. ஐவியப் பாகும். (இ-ள்.) ஐ என்பது வியப்பு என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘ஐயென விம்மி யவற்கது கூறிய, பொய்யில் புகழோன் புகழடி கைகூப்பி’ - வியப்பென்றது விம்மி யென்றவாறு. (89) முனைவு என்பதன் பொருள் 382. முனைவுமுனி வாகும். (இ-ள்.) முனைவு என்பது முனிதல் என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) ‘சேற்றுநில முனைஇய செங்கட் காரான்’ (அகம். 46). (90) வை என்பதன் பொருள் 383. வையே கூர்மை. (இ-ள்.) வை என்னும் சொல் கூர்மை யென்பதன் பொருள் படும், எ-று. (எ-டு.) ‘வைந்நுனைப் பகழி’ (முல்லை. 73). (91) எறுழ் என்பதன் பொருள் 384. எறுழ்வலி யாகும். (இ-ள்.) எறுழ் என்பது வலி என்பதன் பொருள்படும், எ-று. (எ-டு.) *‘போரெறுழ்த் திணிதோள்’ (பெரும்பாண். 63). (92) * (பாடம்) பரேரெறுழ்த் திணிதோள் என்பது. உரிச்சொற்களுக்குப் புறநடை 385. மெய்பெறக் கிளந்த உரிச்சொல் எல்லாம் முன்னும் பின்னும் வருபவை நாடி ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல் தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே. எடுத்து ஓதப்பட்ட உரிச்சொல் எல்லாவற்றிற்கும் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பொருள்பெறச் சொல்லப்பட்ட உரிச்சொல் எல்லாவற் றினையும் முன்னும் பின்னும் வருமொழிகளின் பொருண்மையை யாராய்ந்து, அவற்றிற் கியைந்த மொழியாற் புணர்த்துரைக்கவே தத்தம் மரபினாற் பொருள் தோன்றும், எ-று. எனவே பல பொருளொருசொல் வந்துழி, முன்னும் பின்னும் வந்த மொழியறிந்து, அதற்கொப்பப் பொருளுரைக்க என்றவாறாம். உதாரணம் மேற் காட்டப்பட்டன. (93) உரிச்சொல் பொருட் புறநடை 386. கூறிய கிளவிப் பொருணிலை யல்லது வேறுபிற தோன்றினும் அவற்றொடுங் கொளலே. இதுவுமது. (இ-ள்.) மேல் ஓதப்பட்ட உரிச்சொற்கு ஓதப்பட்ட பொருணிலை யல்லது, பிறபொருள் தோன்றினும், சொல்லப்பட்டனவற்றோடு ஒரு நிகரனவாகக் கொள்க, எ-று. (எ-டு.) ‘பேஎநாறுந் தாழ்நீர்ப் பனிச்சுனை’ (இறைய. உரை. சூ. 7) என்றவழிப் பேஎ என்பது மிகுதி குறித்து நின்றது. ‘பொய்கை துவன்ற புனிறுதீர் பனுவல்’ என்றவழிப், புனிறு என்பது புதுமையின்கண் வந்தது. ‘கடிமலர்’ என்றவழி மணத்தின்கண் வந்தது. ‘மேன்முறைக் கண்ணே கடியென்றார் கற்றறிந்தார்’ (நாலடி. 56) என்றவழிக் கடியென்பது வதுவையின்கண் வந்தது. ‘தூவற் கலித்த தேம்பாய் புன்னை’ (புறம். 24) என்றவழிக், கலித்தல் தழைப்பின்கண் வந்தது. ‘அடர்பொ னவிரேய்க்கு மவ்வரி வாட’ (பாலைக்கலி. 22) என்றவழி, அரி என்பது நிறத்தின்கண் வந்தது. பிறவும் இவ்வாறு வருவன அறிந்துகொள்க. (94) பொருட்குப் பொருள் தெரியற்க என்பது 387. பொருட்குப்பொருள் தெரியின் அதுவரம் பின்றே. உரிச்சொற்கு உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பொருட்குப் பொருள்தெரியின் எல்லையின்று, எ-று. அஃதாவது உறு என்பதற்குப் பொருள் மிகுதி யென்றால், மிகுதி யென்பதற்குப் பொருள் யாதெனில், அதற்கும் ஒரு வாய்பாட்டாற் பொருளுரைப்பின், அதற்குப் பொருள் யாதெனப் பின்னும் வினாவும்; அவ்வாறு வினாவ, அவ்வாராய்ச்சி முற்றுப் பெறாதாம். அதனான், வினாவுவானும் அவ்வாறு வினாவற்க : செப்புவானும் அவ்வாறு செப்பற்க என்றவாறு. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், இவ் வாராய்ச்சி பெயர்ச்சொற்கும் ஒக்குமென்று கொள்க. அஃதேல், அப் பொருண்மை யுணராதான் அதனை யுணருமாறு என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும் என்க. (95) உணர்த்துமாறு உணர்த்தின் பொருட்குத் திரிபின்று எனல் 388. பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின். இஃது ஆசிரியன்கட் கிடந்ததோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று (இ-ள்.) பொருட்குப் பொருள் வினவிய மாணாக்கன் அவ்வாறு வினவானாம், அவன் கொள்ளுமாறு ஆசிரியன் அஃதுணர்த்த வல்லனா யின், எ-று. என்றது, ஈண்டுப் பயின்றனவாக எடுத்தோதப்பட்ட சொற்களைப் பயிலாதாற்கு அவன் பயின்ற வாய்பாட்டான் உணர்த்துக, உணர்த்தவே, பொருட்குப் பொருள் ஆராய்தலில்லை என்றவாறு. அஃதேல், ‘உறுதவ நனிஎன வரூஉம் மூன்றும்-மிகுதி செய்யும் பொருள என்ப’ (உரி. சூ. 3) என்பதனாற் பயனின்றாம்: அஃதறியாதாற்குப் பிறவாய் பாட்டாற் பொருளுணர்த்த வேண்டுதலி னெனின், அதற்கு விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (96) அப்பொருளுணர்ச்சியும் உணர்வார்க்கே இயலும் எனல் 389. உணர்ச்சி வாயி லுணர்வோர் வலித்தே. மாணாக்கர்க்கு உரியதோ ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உணர்ச்சி என்பது உணர்வு. வாயில் என்பது புலன். அஃதாவது உணரப்படுவது. உணர்வோர் வலித்து என்பது உணர்வோரது வலிமை யுடைத்து, எ-று. என்றது, பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி உணர்த்துகின்றவழி, பயின்றவாக ஓதப்பட்டன யாதும் அறியாதாரை நோக்கின அல்ல; உணர்வினான் உணரப்படுவனவற்றை யுணர்வாரை நோக்கிக் கூறப்பட்ட என்றவாறு. எனவே மேற்கூறிய கடா விடை பெற்றதாம். (97) சொற்களுக்குப் பொருட் காரணம் உரைப்பரிது 390. மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. உரிச்சொற்கு உரியதோரிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனாற் பெயர்ச் சொற்கு உரிய இலக்கணமும் உணர்த்திற்றென்று கொள்ளப்படும். (இ-ள்.) இச் சொற்குப் பொருள் இதுவென நியமித்தற்குக் காரணம் விளங்கத் தோன்றா, எ-று. எனவே, காரணமுளதென்பதூஉம், அது புலனாகாதென்பதூஉம் கூறியவாறாம்; என்னை புலனாகாமை எனின், மிகுதல் என்பதற்குப் பொருளாவது முன்பு நின்ற நிலையிற் பெரிதாதல்; அப்பொருண்மை அச்சொற் காட்டுதற்குக் காரணம் உரைப்பரிதாதலான். அஃதேல், காரணமுள போலக் கூறியவதனாற் பயனென்னையெனின், பொருண்மேற் சொன்னிகழ்தல் தொன்றுதொட்டு வருகின்றதாதலின், உலகினுள் மிக்கா ரெல்லாரும் காரணமின்றி வழங்குபவோ என்னும் ஐயங் குறித்துக் கூறினார். அஃதேல், இன்னவெழுத்து இப்பொருள்படும் எனவும், இத் தன்மைத்து எனவும், இப்பயன்தரும் எனவும் மற்றை நூலகத்தும் பிறாண்டும் உரைக்கப்படு மாகலான், காரணம் உரைப்பரிது என்பது குற்ற மெனின், அதற்கு விடை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (98) எழுத்துப் பிரிந்திசைத்தலில்லை 391. எழுத்துப்பிரிந் திசைத்தல் இவணியல் பின்றே. எல்லாச் சொற்கும் உரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒரு சொற்கு அங்கமாகிய எழுத்துப் பிரிந்து நின்று பொருள் பட ஒலித்தல் இத்தமிழகத்தில் இல்லை, எ-று. எனவே, மேல் எழுந்த கடா விடை பெற்றதாம். பொருட்குப் பொருள் தெரியின் என்பது முதலாக இத்துணையும் கூறப்பட்டது உரிச்சொற்குப் பொருளுணர்த்து மாறாம். (99) உரியியலுக்குப் புறநடை 392. அன்ன பிறவும் கிளந்த வல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித்து ஓம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர். இஃது உரிச்சொற் கெல்லாம் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘அன்னபிறவும்...........எல்லாம்’ என்பது ஈண்டு எடுத்து ஓதப்பட்டனவல்லாத அத்தன்மைய பிறவுமாகிப் பல்லாற்றானும் பரந்துவரும் உரிச்சொல் எல்லாம், எ-று. ‘பொருட்குறை..........இன்மையின்’ என்பது பொருட் குறை படாமற் கூட்ட வழக்கியன்ற மருங்கின் இத்துணையென வரையறுக்கு நிலைமை தமக்கு இல்லையாகலான், எ-று. இதனானே எடுத்தோதல் அரிதாயிற்று. ‘வழிநனி கடைப்பிடித்து’ என்பது சான்றோர் செய்யுட்கண் வந்த நெறியை மிகவுங் கடைப்பிடித்து, எ-று. ‘ஓம்படை ஆணையின்’ என்பது-ஓம்படை என்பது பாதுகாவல். ஆணை என்பது விதி; பாதுகாத்தலாக எடுத்தோதப்பட்ட புறநடைச் சூத்திரவிதியினான். அஃதாவது ‘முன்னும் பின்னும் வருபவை நாடி, ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்’ (சூ. 385) என மேற் கூறப்பட்டது. ‘கிளந்தவற்றியலான்’ என்பது பொருளுணர்த்துதற்குக் கருவியாகக் கூறப்பட்ட சொல்லானும், குறிப்பானும், பண்பானும், எ-று. ‘பாங்குற உணர்தல் என்மனார் புலவர்’ என்பது பாங்குபட அறிக என்று சொல்லுவர் புலவர், எ-று. இதன்பொழிப்பு:-எடுத்தோதப்படாத உரிச்சொல்லெல்லாம் ஈண்டுப் பொருட்குறைபடாமல் எடுத்தோதக் கருதின், அவை எல்லை யிலவாதலான், அவை செய்யுளகத்து வழங்கிய நெறியைக் கடைப்பிடித்து, நாம் அதிகாரப் புறநடையாகச் சொன்ன ‘முன்னும் பின்னும் வருபவை நாடி, ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்’ என்னும் விதியினாலும் குறிப்பானும் பண்பானும் பொருள்படுமாறு அறிந்துகொள்க, எ-று. “கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை” (சூளாமணி. 433) என்றவழிக், கஞலென்பது நெருக்கம் குறித்து நின்றது. ‘ஒல்லும் வகையான் அறவினை யோவாதே’ (குறள். 33) என்றவழி, ஒல்லென்பது செய்யப்படும் என்பது குறித்து நின்றது. ‘மன்னாவுலகத்து மன்னுதல் குறித்தோர்’ (புறம். 165)’ என்றவழி, மன்னென்பது நிலைபெறுதல் குறித்து நின்றது. “இரும் பிடித் தொகுதியொடு பெரும் கயம்படியா” (புறம். 44) என்றவழி, இருமை யென்பது பெருமை குறித்து நின்றது. ‘அஞ்செங் குவளைக் கண்போலா யிதழ்’ (அகம். 48) என்றவழி அம் என்பது அழகு குறித்து நின்றது. “வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த உருப்பவி ரங்காட்டு,” (அகம். 11) என்றவழி, வயங்கென்பதூஉம், அவிரென்பதூஉம் விளக்கங் குறித்தன. அம்மென்பது நுணுக்கங் குறித்தது. உருப் பென்பது வெம்மை குறித்தது. ‘ஊரவர் கவ்வை எருவாக’ (குறள். 1147) என்றவழி, கவ்வை யென்பது அலர் குறித்து நின்றது. ‘பொருளானா மெல்லாமென் றீயா திவறும்’ (குறள். 1002) என்றவழி, இவறென்பது லோபம் குறித்தது. “பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போல்” (கலி. 34) என்ற வழிப்‘ பீடென்றது பெருமை குறித்து நின்றது. ‘நொறிலியற் புரவி யதியர் கோமான்’ என்றவழி. நொறில் என்பது நுடக்கத்தின்கண் வந்தது. ‘நொறி லியற் புரவி கழற்கா லிளையோன்’ என்றவழி’ நொறிலென்பது விரை வின்கண் வந்தது. ‘கவரி மான்கணம் கல்லறை தெவிட்ட’ என்ற வழித், தெவிட்ட என்பது அசையிடவென்பது குறித்து நின்றது. ‘களிறு வழங்கதர் கானத் தல்கி’ (பொரு. 49) என்றவழி, அல்குதல் தங்குதற்கண் வந்தது. ‘நெடும் பெருங் குன்றத் தமன்ற காந்தள்’ (அகம். 4) என்றவழி, அமல்தல் நெருங்குதற் கண் வந்தது, ‘மலைநாறிய வியன்ஞாலத்து’ (மதுரைக். 4) என்றவழி, நாற்றம் என்பது தோற்றங் குறித்து நின்றது. ‘நாற்ற நாட்டத் தறுகாற் பறவை’ (புறம். 70 ) என்றவழி, நாடுதல் ஆராய்தற்கண் வந்தது. ‘தணக்குங்காற் கலுழ்பானாக் கண்ணெனவும் உளவன்றோ’ (கலி. 25) என்றவழித், தணத்தல் நீக்கங் குறித்து நின்றது. ‘குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின், அரலை திரிவுரீஇ’ (மலைபடு. 23, 24) என்றவழி; அரலை குற்றங் குறித்தது. ‘மாக்கடல் நிவந் தெழு செஞ்ஞாயிற்றுக் கவினை’ (புறம். 4) என்றவழி நிவப்பென்பது ஓக்கங்குறித்தது. ‘மாகந் திவளடி இவருநீள் கொடிமாட வீதி’ என்றவழி, திவள்தலென்பது தீண்டுதல் குறித்தது. இவர்தலென்பது பரத்தல் குறித்தது, ‘வாயாச்செத் தொய்என வாங்கே யெடுத்தனன்’ (கலி. 37) என்றவழிச் செத்தென்பது குறிப்புணர்த்திற்று. பிறவுமன்ன. (100) உரியியல் முற்றிற்று இவ்வியல் சூத்திரமும் உரையும் கிரந்த (எண்) வகையான் 280 9 எச்சவியல் செய்யுள் செய்தற்கு உரிய சொற்கள் 393. இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், எச்சவியல் என்னும் பெயர்த்து; கிளவியாக்கம் முதலாக உரிச்சொல்லோத்து ஈறாகக் கிடந்த எட்டோத்தினுள்ளும் உணர்த்தாத பொருளை ஈண்டுணர்த்துதலாற் பெற்ற பெயர். இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஒருவகையாற் செய்யுட்குரிய சொல்லின் பாகுபாடுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்சொல்லும், திரிசொல்லும், திசைச் சொல்லும், வட சொல்லும் என வரும் நால்வகைத்து, செய்யுளாக்குதற்குரிய சொல், எ-று. அவையாமாறு தத்தம் சிறப்புச் சூத்திரத்தான் உணரப்படும். (1) இயற் சொல்லிற்கு இலக்கணம் 394. அவற்றுள், இயற்சொல் தாமே, செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்கும் சொல்லே. நிறுத்த முறையானே இயற்சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இயற்சொல்லாவனதாம், செந்தமிழ் நாட்டு வழக்கொடு பொருந்தித் தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொற்கள், எ-று. செந்தமிழ் நாடாவது:-வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்ப. இவ்வாறு உரைத்தற்கு ஓர் இலக்கணங் காணாமையானும், வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங்கோளூரும். மருத யாற்றின் வடக்காகிய காஞ்சியும் தமிழ்திரிநிலமாதல் வேண்டுமாதலானும், அஃது உரையன்று என்பார் உரைக்குமாறு:- ‘வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத், தமிழ்கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளு நாடி.’ (தொல். எழுத்து, பாயிரம்.) என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகமென விசேடித்தமை யானும், கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து வேங்கடமலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப. அந்நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொல்லாவன:-சோறு, கூழ், மலை, மரம், உண்டான், தின்றான், ஓடினான், பாடினான் என்னுந் தொடக்கத்தன. இவை அந்நிலத்துப்பட்ட எல்லா நாட்டினும் ஒத்து இயறலின் இயற் சொல்லாயின. இவற்றைச் செஞ்சொல் எனினும் அமையும். (2) திரிசொல்லின் பாகுபாடு 395. ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி. திரிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருபொருள் குறித்த வேறு வேறு சொல்லாகியும், வேறு வேறு பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் அவ்விரு பகுதியதென்ப திரிசொல், எ-று. எனவே, இயற்சொல்லா னுணர்த்தப்படும் பொருண்மேல் வேறுபட்ட வாய்பாட்டான் வருவன திரிசொல்லாகும் என்றவாறாம். அஃதேல், உரிச்சொல்லோ டிதனிடை வேறுபாடு என்னை யெனின், உரிச்சொல் குறைச் சொல்லாகி வரும்; திரிசொல் முழுச் சொல்லாகி வரும் என்க. இதனை, இயற்சொல்லைச் சாரவைத்ததனாற் செந்தமிழ் நாட்டுட் பட்ட தேயந்தோறும் தாம் அறிகுறியிட்டாண்ட சொல்லென்று கொள்க. அவையாவன : மலை யென்பதற்குக் குன்று, வரை யெனவும், குளம் என்பதற்கு மூழி, பாழி எனவும், வயல் என்பதற்குச் செய், செறு எனவும் வருவன. இவை ஒரு பொருள் குறித்தன. அரங்கம் என்பது யாற்றிடைக் குறையையும், ஆடுமிடத்தையும், இல்லின்கண் ஒரு பக்கத்தினையும் உணர்த்தும். துருத்தி என்பது யாற்றிடைக் குறையையும், தோற் கருவியையும் உணர்த்தும். ஆழி யென்பது கடலையும், நேமியையும், வட்டத்தையும் உணர்த்தும். இவை வேறு வேறு பொருள் குறித்தன. இவ்வாறு திரிந்து வருதலிற் றிரிசொல்லாயிற்று. (3) திசைச் சொல்லிற்கு இலக்கணம் 396. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. திசைச்சொல் லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செந்தமிழ் நாட்டைச் சேர்ந்த பன்னிரு நிலத்து முள்ளார் தத்தங் குறிப்பினையுடையது திசைச் சொல்லாகிய சொல், எ-று. பன்னிரு நிலமாவன:-வையையாற்றின் தென்கிழக்காகிய பொதுங்கர் நாடு, ஒளி நாடு, தென் பாண்டிநாடு, கருங்குட்டநாடு, குட நாடு, பன்றி நாடு, கற்காநாடு, சீதை நாடு, பூழி நாடு, மலாடு, அருவா நாடு, அருவா வடதலை நாடு என்பன. இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் சேர்ந்த நாடென்றமையான், பிறநாடாகல் வேண்டு மென்பார் உதாரணங் காட்டுமாறு:-“கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம், கொல்லங் கூபகஞ் சிங்கள மென்னும், எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம், கலிங்கம் தெலிங்கம் கொங்கணம், துளுவம், குடகம், குன்றகம்” என்பது. “குடபா லிருபுறச் சையத் துடனுறைபுகூருந் தமிழ்திரி நிலங்களும், முடியுடை மூவ ரிருநில வாட்சியின், அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள், பதின்மரும் உடனிருப் பிருவரும் படைத்த, பன்னிரு திசையில் சொன்னய முடையவும்” என்பது அகத்தியச் சூத்திரம். இதனுள் ‘எல்லையின் புறத்தவும், தமிழ்திரி நிலங்களுமாகிய பன்னிரு அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையனவும்’ என்றமையானும் “தமிழ் கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” என நிறுத்துப் பின்னுஞ் “செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு” என ஓதிய வதனான், சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன :-குமரியாற்றின் தென்கரைப் பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கண முந் துளுவமுங் குடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும். இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல்கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரைக்கண் அப்பெயரானே கொல்லமெனக் குடியேறி னார் போலும். பஞ்சத்திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்ப வாகலான் அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமையுணர்க. அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா, எ-று. குடாவடியுளியம் (முருகு. 313) என்றவழிக், குடா என்பது குடகத்தார் பிள்ளைகட்கு இட்ட பெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற் கிட்ட பெயர். யான் தற்கரைய வந்து (அகம். 16) என்றவழிக், கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற் கும் பெயராக வழங்குவது; கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டு கொள்க. (4) வட சொல்லிற்குரிய இலக்கணம் 397. வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே. வடசொற்கிளவி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வடசொல்லாகிய சொல்லாவது வடமொழிக்கே யுரியவாகிய எழுத்தை நீக்கித் தமிழ் மொழிக்குரிய எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும், எ-று. எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்கு தலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனான் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. வடமொழியாவன:- வாரி, மணி, குங்குமம் என்னுந் தொடக்கத்தன. வட்டம், நட்டம், பட்டினம் என்பன பாகதம், பிறவும் அன்ன. (5) மேலதற்குப் புறநடை 398. சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். மேலதற்கொரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எழுத்தொடு பொருந்திய சொல்லே யன்றிச் சிதைந்த சொற்கள் வரினும், தமிழ்வழக்கிற்குப் பொருந்தினவை நீக்கப்படா, எ-று. அவையாவன :-கந்தம், தசநான்கு (நெடுநல். 115), சாகரம், சத்திரம், முத்து, பவளம் என வரும். பாகதச் சிதைவாகி வருவனவுங் கொள்க. இவை நான்கு சொல்லினும், இயற்சொல் பெயர்ச் சொல்லும், வினைச் சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லுமாகி வரும். திரிசொல்லுந், திசைச் சொல்லும் பெரும்பான்மை பெயரும், சிறு பான்மை வினையுமாகி வரும். வடசொல் பெயரா யல்லது வாராது. (6) செய்யுள் விகாரம் 399. அந்நாற் சொல்லும் தொடுக்குங் காலை வலிக்கும்வழி வலித்தலும் மெலிக்கும்வழி மெலித்தலும் விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும்வழித் தொகுத்தலும் நீட்டும்வழி நீட்டலுங் குறுக்கும்வழிக் குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர். மேற்சொல்லப்பட்ட நால்வகைச் சொல்லும் செய்யுளகத்து விகாரப்படுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ‘அந்நாற்சொல்லும்’ ஆவன :-இயற்சொல்லும், திரி சொல்லும், திசைச்சொல்லும், வடசொல்லும், எ-று. ‘தொடுக்குங் காலை’ யென்பது ஒன்றோடொன்று தொடர்புபடச் செய்யுளாக்குங் காலத்து, எ-று. ‘வலிக்கும்வழி வலித்த’ லென்பது மெல்லெழுத்தினை வல்லெழுத்தாகத் தொடுக்கவேண்டும்வழி வல்லெழுத்தாகத் தொடுத்தல்; ‘மெலிக்கும்வழி மெலித்தல்’ என்பது வல்லெழுத்தினை மெல்லெழுத்தாகத் தொடுக்க வேண்டும்வழி மெல்லெழுத்தாகத் தொடுத்தல். ‘விரிக்கும்வழி விரித்தல்’ என்பது பொருளுணர்த்துஞ் சொல்லின்மேல் ஒன்றும் இரண்டும் எழுத்து விரிக்கவேண்டும் வழி விரித்துத் தொடுத்தல். ‘தொகுக்கும் வழித் தொகுத் தல்’ என்பது பொருளுணர்த்துஞ் சொல்லின்கண் ஒன்றும் இரண்டும் எழுத்துத் தொகுத்துத் தொடுக்கவேண்டும் வழித் தொகுத்துத் தொடுத்தல். ‘நீட்டும் வழி நீட்ட’லென்பது குற்றெழுத்தாகி நின்று பொருள்படுஞ் சொல்லை நெட்டெழுத்தாகத் தொடுக்கவேண்டும்வழி நெட்டெழுத்தாகத் தொடுத்தல், ‘குறுக்கும் வழிக் குறுக்க’லாவது நெட்டெழுத்தாகி நின்று பொருள்படுஞ் சொற்களைக் குற்றெழுத்தாகத் தொடுக்கவேண்டும் வழிக் குற்றெழுத்தாகத் தொடுத்தல். ‘நாட்டல் வலிய என்மனார் புலவர்’ என்பது இவ்வாறாகச் செய்யுட் கண் வைத்தல் வலியுடைய வென்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. குற்றமில, எ-று. விகாரப்படாமற் றொடுத்தல் சொல்லாமல் முடிந்ததாம். (எ-டு.) “தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலந் தோன்றின் ஒத்த தென்ப ஏயென் சாரியை’’ (எழுத்.164) என்றவழி, முந்தை என்பது முத்தையென வல்லெழுத்தாயிற்று. “தண்டை யினினக்கிளி கடிவோள்” என்பதனுள் தட்டை எனற்பாலது தண்டையென மெல்லெழுத்தாயிற்று. “தண்ணந்துறைவர் தகவிலர்” என்றவழித், தண் என்பது தண்ணம் என விரிந்து நின்றது. “வேண்டார் வணக்கி விறல்மதிறான் கோடல்” என்றவழி, வேண்டாதாரை யென்பது வேண்டார் எனத் தொக்கு நின்றது. தொகுத்தலென்பது சுருக்குதல். அஃதேல், அத் ‘தா’ என்பது இவ்விலக்கணத்தான் தொகுக. ஐ என்பது “உருபு தொக வருதல்” (101) என்புழி அடங்காதோ எனின், ஐகாரம் “உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்” (எழுத். 157) என ஓதப்படுதலின், அஃது உயர்திணைக்கண் தொகாது நிற்க வேண்டும். ஆயினும், செய்யுளின்பம் வேண்டித் தொகப் பெறு மென்பது இவ்விலக்கணத்தாற் கொள்ளப்படும். “பாசிழை யாகம் பசப்பித்தான்” என்றவழி, பச்சிழை எனற்பாலது பாசிழை என நீண்டு நின்றது. “திருத்தார் நன்றென்றேன் தியேன்” இதனுள், தீயேன் என்பது தியேன் எனக் குறுகி நின்றது. அந்நாற் சொல்லும் இவ்வாறு விகாரப்படும் என்றமையான், ஒரு மொழிக்கண்ணே இவை வருவன உணர்க. (7) பொருள் புணர் இயல்பு நான்கு 400. நிரனிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று எனநான் கென்ப பொருள்புண ரியல்பே. செய்யுளகத்துப் பொருளுணரச் சொற்றொடுக்குமாறு உணர்த் துதல் நுதலிற்று. (இ-ள்.) நிரனிறையும், சுண்ணமும், அடிமறியும், மொழி மாற்றும் என நான்கென்று சொல்லுப : பொருள் மேல் மொழி புணர்க்கும் இயல்பு, எ-று. செய்யுளகத்துத் திரிந்து பொருள்படுஞ்சொல் எடுத்தோதினார்; வழக்கின்கண் இயல்பாகிச் செய்யுட்கண்ணும் இயல்பாகி நடக்கும் பொருள்கள் ஓதவேண்டாமையின் அவையாமாறு தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (8) நிரனிறைப் பொருள்கோள் 401. அவற்றுள், நிரனிறை தானே வினையினும் பெயரினும் நினையத் தோன்றிச் சொல்வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல். நிரனிறை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்டவற்றுள், நிரனிறையாவது வினை யானும், பெயரானும் ஆராயப் புலப்படுஞ் சொற்களைச் சேர நிறுத்தி, அவற்றிற்கு முடிபாக வருஞ் சொற்களைச் சேர நிறுத்துதல், எ-று. “அடல்வே லமர்நோக்கி நின்முகங் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் தடமதியம் ஆமென்று தாம்.’’ என்பதனுள் உடலும், ஓடும், ஊழ்மலரும், பார்க்கும் என்னும் வினை - கடல், இருள், ஆம்பல், பாம்பு என்பனவற்றொடு கடல் உடலும், இருளோ டும், ஆம்பல் மலரும், பாம்பு பார்க்கும் என அடைவே முடிந்தவாறு கண்டுகொள்க. “கொடிகுவளை கொட்டை நுசுப்புண்கண் மேனி” என்றவழி, கொடி, குவளை, கொட்டை என்னும் பெயர் நுசுப்பு, உண்கண், மேனி என்னும் பெயரொடு கொடி நுசுப்பு, குவளைக்கண், கொட்டைமேனி என அடைவே முடிந்தவாறு காண்க. வினையும் வினையுமாக வருவன உளவேல், வந்தவழிக் கண்டு கொள்க. நினையத்தோன்றி என்றமையான் பொருள் விளங்க நில்லாது. நினைத்தாற் றோன்றுமாறாக மயங்கி வருவனவுங் கொள்க. ‘களிறுங் கந்தும்போல நளிகடற், கூம்புங் கலனுந் தோன்றும்’ (மயிலை-பக்கம்.282) என்றவழி, களிற்றிற்குக் கூம்பும், கந்திற்குக் கலனும் உவமை யன்மையின், களிறு போலுங் கலம், கந்து போலுங் கூம்பு என மயங்கி வந்தவாறு கண்டு கொள்க. (9) சுண்ணப் பொருள்கோள் 402. சுண்ணந் தானே பட்டாங் கமைந்த ஈரடி யெண்சீர் ஒட்டுவழி யறிந்து துணித்தன ரியற்றல். சுண்ணமாகிய பொருள்கோள் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சுண்ணமாவதுதான் அளவடியான் அமைந்த ஈரடிக்கண் எண் சீரும் ஒரோவொரு சீராகத் துணித்துப் பொருந்து வழி யறிந்து கூட்டிப் பொருளுரைக்க, எ-று. பட்டாங் கென்பது இயல்பு. அது மிகுதலுங் குறைதலுமில்லாத அளவென்று பொருளாயிற்று. “சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை.’’ இதனுட் சுரை மிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனத் துணித்து ஒட்டப், பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. இது நாற்சீர்க்கண்ணே துணித்து ஒட்டியது. “தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை *தணிவேமே வங்கத்துச் சென்றார் வரின். இதன்பொருள்:-அஞ்சனத்தன்ன பைங்கூந்தல்! மாமை பொருந்தின மேனிமேல் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழிமுட்டை யுடைத்தா லொத்த பசலை, வங்கத்துச் சென்றார் வரில், தணிவேம், எ-று. இதனுள் எண் சீருள் ஒட்டிவந்தது. எண்சீரென வரையறுத்தமையால் அதன்மேற் சென்று ஒட்டாதென்க. (10) * (பாடம்) தணிவாமே என்பது. அடிமறிப் பொருள்கோள் 403. அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. அடிமறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அடிமறியென்பதன் செய்தி சீர்நிலை திரியாது அடி நிலைமை திரிந்து தடுமாறும், எ-று. “சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வார லெனினே யானஞ் சுவலே சார னாட நீவர லாறே.’’ இது, சாரல்நாட! நீ வருகின்ற நெறி சூரற்பம்பிய சிறுகான்யாறு, சூரர மகளிர் வருத்தஞ் செய்வார், வாராதொழி யென யான் அஞ்சா நின்றேன் என அடி மாறிப் பொருளுணர்த்தியவாறு கண்டுகொள்க. அஃதேல், இதனை யாப்பிலக்கணத்துள் ஆராய்தல் வேண்டும், சொல்நிலை திரியாமையா லெனின், இது தொடர்மொழித் திரிபாகலான் ஈண்டுக் கூறப்பட்டதென்க. (11) மேலதற்குப் புறநடை 404. *பொருடெரி மருங்கின் ஈற்றடி யிறுசீர் எருத்துவயிற் றிரியுந் தோற்றமும் வரையார் அடிமறி யான. மேலதற்கொரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பொருள் ஆராயும் வழி ஈற்றடிக்கண் வரும் இறுதிச் சீர் ஈற்றயலடிக்கண் திரிந்து பொருள்படும் நிலைமையும் நீக்கார், எ-று. இவ்வாறு வருவதும் அடிமறி என்றவாறாம். உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. (12) * (பாடம்) பொருடெரி மருங்கின் ஈற்றடி யிறுசீர் எருத்துவயிற் றிரிபுந் தோற்றமும் வரையார் என்பது. மொழிமாற்றுப் பொருள்கோள் 405. மொழிமாற் றியற்கை சொன்னிலை மாற்றிப் பொருளெதி ரியைய முன்னும் பின்னும் கொள்வழிக் கொளாஅல். மொழிமாற்று உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மொழி மாற்றினது இயல்பு சொல் நின்ற நிலையை மாற்றி, முன்னும் பின்னும் பொருள் இயைய ஏற்கும்வழிக் கொளுவுதல், எ-று. மேல், அடிமறி மொழிமாற்றென ஓதினமையானும், சுண்ண மொழி மாற்று ஈரடி எண்சீரென ஓதுதலானும், ஈண்டுச் சொன்னிலை மாற்றி யெனப் பொதுப்பட வோதினமையானும் ஓரடிக்கண் நின்ற சொல்லை அவ் வடிக்கண்ணும் பிறவடிக்கண்ணும் முன்பாயினும் பின்பாயினும் ஏற்கும் வழிக் கொளுவப்பெறும், எ-று. “பன்மையும் ஒருமையும் பாலறி வந்த அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த உயர்திணை யவ்வே.’’ (சொல். 202) என்றவழி, மூன்று தலையிட்ட அந்நாலைந்தென ஓரடிக்கண் மொழி மாறி நின்றது. “ஆலத்து மேல குவளை குளத்துள வாலி னெடிய குரங்கு” என்றவழி, குரங்கு ஆலத்துமேல எனப் பிற அடிக்கண் மொழிமாறி நின்றது. பிறவும் அன்ன. அஃதேல் பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள் கோள், தாப்பிசைப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் எனவும் ஒரு சாராசிரியர் உரைப்பவால் எனின், அவற்றுள் யாற்றொழுக்கும், அளைமறி பாப்புப் பொருள்கோளும் திரிவின்றிப் பொருள்படுதலின் இயல்பாம். கொண்டுகூட்டு, சுண்ண மொழி மாற்றுள் அடங்கும். பூட்டுவிற் பொருள்கோள் மொழிமாற்றுள் அடங்கும். தாப்பிசைப் பொருள்கோட்கண் முன்னொரு சொல் வருவிக்க வேண்டுதலின். இது ‘பிரிநிலைவினை’ (சூ. 423) என்னுஞ் சூத்திரத்துள் அடங்கும். (13) கிளை நுதற் பெயர்கள் பிரிப்பப் பிரியா எனல் 406. தந நுஎ எனும் அவைமுத லாகிய கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. ஒட்டுப் பெயர்க்கு உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) த, ந, நு, எ என்னும் அவை முதலாகியவும், கிளைமை நுதலிய பெயரும் பொருள் நிலையாற் பிரிக்க நினைக்கின் பிரிந்து பொருள்படா. ஒட்டி நின்றே பொருள்படும், எ-று. ஆகியவும் என்னும் உம்மை தொக்கு நின்றது. த, ந, நு, எ என்னும் அவை முதலாகியவாவன :-தான், தாம்; நாம், யாம், யான், நீ, நீர், நீயிர் என மூன்றிடத்துப் பெயர்களும் ஆறாம் வேற்றுமைக் கிழமைப் பொருள் குறித்து, முன்னிலை குறுகியும் திரிந்தும் வந்து, கிழமைப் பொருளுணர்த்துஞ் சொல்லின் ஈற்றெழுத்தோடு ஒட்டி நின்று தமன், தமள், தமர், தமது, தம எனப் படர்க்கையினும்; நுமன், நுமள். நுமர், நுமது, நும என முன்னிலையினும்; நமன், நமள், நமர், நமது, நம, எமன், எமள், எமர், எமது, எம எனத் தன்மையினும் வரும். கிளை நுதற் பெயராவன:-இம்மூன்றிடத்தும் ஒட்டுப்பட்ட பெயர்கள், ஆறாம் வேற்றுமை முறைமையைக் குறித்து மேற்சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும்; தாய், ஞாய், யாய் எனவும்; தம்முன், நும்முன்; எம்முன் எனவும்; தம்பி, நும்பி, எம்பி எனவும்; முதல்வனையும், ஈன்றாளை யும், முன் பிறந்தானையும், பின்பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்களெல்லாம் பொருள்முகத்தாற் றம்மையும் பிறரையும் உணர்த்து வன. இச் சொற்களெல்லாம் ஏனையபோலப் பிரிக்கப்படா : ஒட்டி நின்றே பொருள்படும், எ-று. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பத னான், காரணப் பெயராகிவரும் தொழிற் பெயரும், உடைய பெயரும், பண்புப் பெயர் முதலாயினவும் பிரிப்பப் பிரியாவென்று கொள்க. பிறன், பிறள், பிறர் என்பவோவெனின், அவை ஒட்டுப் பெயரல்ல என்க. (14) தொகைச் சொற்களின் வகை 407. வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே வினையின் தொகையே பண்பின் தொகையே உம்மைத் தொகையே யன்மொழித் தொகையென்று அவ்வா றென்ப தொகைமொழி நிலையே. தொகைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமைப் பொருள் குறித்த தொகையும், உவமப் பொருள் குறித்த தொகையும், வினைத்தொழில் குறித்த தொகையும், பண்பு குறித்த தொகையும், உம்மைத் தொகை செய்யுந் தொகையும், அல்பொருள் குறித்த தொகையும் என அறுவகைப்படும் தொகைச்சொல்லது நிலைமை, எ-று. தொகைச் சொல்லாவது:-பொருளுணர்த்துஞ் சொல்லாயினும், தொழி லுணர்த்துஞ் சொல்லாயினும் இரண்டு சொல் விட்டிசைத்து நில்லாது ஒட்டி நிற்பது. இஃது ஒட்டுப் பெயர் என்னுங் குறியும் பெறும். உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும். (15) வேற்றுமைத் தொகை 408. அவற்றுள், வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல. வேற்றுமைத் தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வேற்றுமை யியல்புடையன வேற்றுமைத் தொகை எ-று. வேற்றுமையியல என்றதனான், வேற்றுமைகட்கு ஓதிய செயப்படு பொருள் முதலாக இடம் ஈறாக வரும் பொருண்மைக்கண் தொகுஞ்சொல் வேற்றுமைத் தொகையாம் என்று கொள்க. முதல் வேற்றுமை பெயர்ப் பயனிலை கொள்வழியும் விட்டிசைத்தே நிற்றலானும், எட்டாவது விரிந்து நிற்றலானும் இவையிற்றை யொழித்து ஏனைய தொகுமென்று கொள்க. ஏகாரம் தேற்றேகாரம். அவை தொகுமாறு:- படையைப் பிடித்த கை, குழையையுடைய காது, குதிரையாற் பூட்டப்பட்ட தேர்; தாயொடு கூடி மூவர்; கடிசூத்திரத் திற்கு வைத்த பொன்; வரையினின்றும் வீழாநின்ற அருவி; யானையது கோடு, குன்றத்துக்கண் வாழா நின்ற கூகை என்பன-படைக்கை, குழைக்காது, குதிரைத்தேர், தாய்மூவர், கடிசூத்திரப்பொன், வரையருவி, யானைக்கோடு, குன்றக்கூகை எனத் தொகும். நிலத்தைக் கடந்தான், வாளால் வெட்டினான், கொலைக்கு உடம்பட்டான், வரையினின்றும் பாய்ந்தான், குன்றத்துக்கண் இருந்தான் என்றவழி, இறுதி நின்ற சொல் தொழிலுணர்த்தாது அது செய்தார்க்குப் பெயராகி வந்துழி, நிலங் கடந்தான், வாள் வெட்டினான், கொலையுடம்பட்டான், வரைபாய்ந்தான். குன்றத்திருந்தான் என இரண்டு பெயரும் ஒட்டி ஒரு சொல்லாகிவரும். கள்ளையுண்டல், வாளால் வெட்டல், கொலைக்குடம்படுதல், வரையி னின்றும் பாய்தல், மாடத்துக் கண்ணிருத்தல் என்பன கள்ளுண்டல், வாள்வெட்டல், கொலையுடம்படுதல், வரைபாய்தல், மாடத்திருத்தல் எனத் தொகும். அஃதேல், இவ்வாறு வருவன உருபு தொகை என அடங்காவோ வெனின், ஆண்டு அவ்வேற்றுமைகட்கு ஓதிய வாய்பாட்டான், தொழி லொடும், பெயரொடும் முடிவுழி, உருபு மாத்திரம் தொக்கு இரண்டு சொல்லாகி நிற்கும்; ஈண்டு ஒரு சொல்லாகிவரும். ஆறாவதன்கண் வரும் தொகை உருபு தொகையும், பொருட்டொகையும் என வேறுபாடின்றால் எனின், ஆண்டும் வேறுபாடு உள. மரக்கோடு என்றவழி ஒட்டுப்பட்டுப் பொருட்டொகையாகி நின்றது. மரத்தின் கோடு என்றவழி, உருபு தொகையாகி இரண்டு சொல்லாகி நின்றது. இவை சொல்நோக்கான் உணர்க. “வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல” என்றதனான் அவ் வேற்றுமை மொழிமாறி நிற்குமாகலின், அத்தொகைச்சொல் மொழி மாறி நின்று ஒட்டுப்படுதலுங் கொள்க. மலையதிடை, மலையதகம் என்பன இடைமலை; அகமலை எனவும் வரும். பிறவும் அன்ன. அஃது அற்றாக; உலக முவப்ப...........வாணுதல் கணவன் (முருகு. 1-6) என்பது பல சொல்லாகி வந்து கணவன் என்பதனொடு முடிந்து கிடத்தலான், இரண்டு சொல் ஒரு தொகையாம் என்றல் பொருந்தாதால் எனின், எவ்வாறு வரினும் இரண்டு சொல்லாகி வந்தல்லது ஒட்டுப்படா தென்று கொள்க. அஃதாயவாறு என்னையெனின், பூத்தொடை போலக் கொள்க. அஃது இரண்டாயவாறு என்னையெனின், முற்பட இரண்டு பூவை எடுத்து ஒன்றாகக் கட்டும். அதன்பின் அவ்விரண்டும் ஒன்றாகி நின்ற தொடை யோடேகூடப் பின்னும் ஒரு பூவை யெடுத்துக் கட்டும். அதன்பின் அம்மூன்று பூவும் ஒன்றாகக் கட்டப்பட்ட தொடையோடே பின்னும் ஒரு பூவை எடுத்துக் கட்டும். அவ்வாறு கட்டப்பட்ட தொடைகளைப் பின்னும் இரண்டு பின்னாகச் சேர்த்தது ஒன்றாக்கும். இவ்வாறே எல்லாப் பூவும் இரண்டொன்றாக இணைத்ததாம். சொற்றொடையும் ஒட்டுப் படுங்கால் அவ்வாறு வருமென்று கொள்க. ‘உலக முவப்ப...வாணுதல் கணவன்’ என்பது இரண்டொன்றாக ஒட்டியவாறு என்னையெனின் உலகமென்பது உலகத்துள்ளார்க்குப் பெயராகி உவப்ப என்னும் செயவென்னெச்சத்தொடு முடிந்தது. வலனாக என்னும் எச்சத்துக்கண் ஆகவென்பது செய்யுள் விகாரத்தான் தொக்கு நின்றது. தொக்குநின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலைமை யென்று கொள்க. என்போலவெனின், வாலுஞ்செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலியென்றே வழங்கினாற்போல. உவப்ப வலனாக என்னும் செயவென்னெச்சமும், ஏர்பு என நிகழ்காலங் குறித்த செயவென் னெச்சமும் திரிதரு வென்னும் பெயரெச்சத்தொடு முடிந்தன. பலரா னென்னும் மூன்றாம் வேற்றுமை ஏற்ற பெயர் ‘உருபு தொக வருதல்’ (சொல். 101) என்னும் இலக்கணத்தான் தொக்குப் பலரென நின்றது. அது புகழப்பட்ட என்பதற்கு அடையாகி நின்றது. அடையெனினும் விசேடணம் எனினும் ஒக்கும். புகழப்பட்ட வென்னும் பெயரெச்சம், உண்சோறென்றாற்போலப் பொருண்மேல் வந்து வினைத்தொகையாகிப், புகழ்ஞாயிறென ஒட்டி ஒரு சொல்லாகி நின்றது. அது திரிதருவென்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. ஞாயிறு என்பதற்கு முன்னுள்ள சொல் லெல்லாம் தொகுத்து நோக்க ஞாயிற்றிற்கு அடையாகி நின்றன. ஞாயிற்றை யென்னும் உருபு தொக்கு நின்றது. கடலின்கண்ணென்னும் உருபு தொக்கு நின்றது. கண்டாங்கு என்பது கண்டாற்போலும் என்னும் உவமப் பொருள் உணர நின்றது. இத்துணையும் உணர்த்தப்பட்டது உதய ஞாயிறுபோல என்னும் பொருண்மை. ஓவற என்பது-ஓவு ஒழிவு, அற என்பது இல்லையாக என்னுஞ் செயவெனெச்ச வாய்பாடு. அதற்கு ஓவு என்பது அடையாகி நின்றது. அறவென்பது இமைக்கும் என்னும் பெயரெச்சத்தொடு முடிந்தது. சேணின்கண் என்பது சேண் என உருபு தொக்கு நின்றது. அது விளங்கும் என்பதற்கு அடையாகிநின்றது. அவிர் என்பது விளக்கத்தின் மிகுதியைக் குறித்து வந்து ஒளியென்னும் பெயரொடு வினைத்தொகையாகி, அவிரொளி யென ஒரு சொல்லாயிற்று. அது விளங்கு என்பதனோடு ஒட்டி வினைத் தொகையாகி, விளங்கவிரொளி யென ஒரு சொல்நீர்மைப்பட்டது. அஃது இமைக்கும் என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. உலகம் என்பது முதலாக இத்துணையுங் கூறப்பட்டது ஞாயிறு போல் விளங்கும் ஒளியென ஒளிக்கு அடை கூறுதலான், அவ்வொளியோடே எல்லாச் சொல்லும் முற்றி நின்றன. உறுநரை என்பது உறுநர் என உருபு தொக்கு நின்றது. தாங்கிய என்பது பெயரெச்சம். அதற்கு உறுநர் என்பது அடையாகி நின்றது. மதன் என்பது வலி. அது மத என்னும் உரிச்சொல் ஈறுதிரிந்து நின்றது. மதனை என்னும் ஐகாரம் தொக்கு நின்றது. நோன்மை-பொறை. திருவடியடைவார் பலராதலின், அவரெல்லாரையும் பொறுக்க வல்ல தாளென்னும் பொருண்மைத்தாகி, நோன்றாளென வேற்றுமைத்தொகை யாகி ஒரு சொன்னீர்மைப்பட்டது. அது மதனுடை நோன்றாள் என அடை யடுத்து உறுநர்த் தாங்கிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. செறுநரை என்பது செறுநர் என உருபு தொக்கு நின்றது. தேய்த்த என்பது பெயரெச்சம். அதற்குச் செறுநர் என்பது அடையாகி நின்றது. செல் என்பது மழை. உறழ்தல் என்பது ஒத்தல். அது தடக்கை என்பதற்கு உவம நிலையின் அடையாகி நின்று, செல்லுறழ் தடக்கையென்று ஒரு சொன் னீர்மைப் பட்டது. அது தேய்த்த என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. மறு என்பது குற்றம். இல் என்பது இல்லாமை. குற்றமில் கற்பெனக் கற்பிற்கு அடையாயிற்று. வாள் என்பது ஒளி. அஃது ஒளிநுதல் என அடையடுத்து நின்று ‘சினையிற்கூறு முதலறி கிளவி’யாகி (சொல். 111) அதனை யுடை யாட்குப் பெயராகி நின்றது. அது மறுவில் கற்பின் வாணுதல் எனப் பண்புத் தொகையாகி ஒரு சொன்னடையாயிற்று. அது கணவன் என்னும் பெயரொடு கிழமைப் பொருட்டாகிய ஆறாம் வேற்றுமைத் தொகையாகி, மறுவில் கற்பின் வாணுதல் கணவன் என இரண்டாம் வேற்றுமைத் தொகையாகிய ஒரு பெயராயிற்று. அது செல்லுறழ் தடக்கைக் கணவ னென இரண்டாம் வேற்றுமைத் தொகையாகி ஒருசொன்னீர்மைப்பட் டது. அது மதனுடை நோன்றாள் என்பதனோடும் அவ்வாறே ஒட்டி நோன்றாட்டடக்கைக் கணவன் என ஒருசொன்னடை யாயிற்று. அது சேண்விளங் கவிரொளி என்பதனோடும் அவ்வாறே யொட்டிச் சேண் விளங் கவிரொளி நோன்றாட்டடக்கைக் கணவன் என ஒருசொன் னடையா யிற்று. இவ்வாறே சொன்னிலையுணர இரண்டு சொல்லே தொகையாகிய வாறு கண்டுகொள்க. ‘எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய’, (தொல். எச். சூத். 23) என்றோதினமையானும் ஆசிரியன் கருத்திதுவென்று கொள்க. (16) உவமத்தொகை 409. உவமத் தொகையே உவம வியல. உவமைத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உவம இயல்புடையன உவமத் தொகையாம், எ-று. உவமையாவது தொழிலான் ஆதல், பயனான் ஆதல், வடிவினான் ஆதல், வண்ணத்தினான் ஆதல் இதுபோலும் இது என ஒன்றோடொன்று உவமை கூற வருவது. அவ்வுவமையும், உவமிக்கப்படும் பொருளும் விட்டிசைத்து நில்லாது செறிய நிற்பது உவமைத் தொகையாம், எ-று. புலியன்ன பாய்த்துள், மழையன்ன வண்கை, துடியன்ன இடை, பொன்னன்ன மேனி என்பன புலிப்பாய்த்துள், மழை வண்கை, துடியிடை, பொன்மேனி என வரும். பிறவும் அன்ன. இவை விரியுங்காலத்து, புலியை யொக்கும் பாய்த்துள், மழையை யொக்கும் வண்கை எனவும் விரிதலானும், ‘காப்பினொப்பின்’ (சொல். 70) என இரண்டாவதன்கண் ஒப்பாதலானும் உவமைத்தொகை யென்பதொன் றில்லை, இவையும் வேற்றுமைத் தொகையாம் எனின், ஒக்கும். மழையன்ன வண்கை யென்றவழி, இரண்டாமுருபு விரியாமலும் தானின்று உவமிக்கப் படும் பொருளைக் காட்டுதலின், இவ்வாறு வருஞ் சொற்களை நோக்கி உவமத் தொகை யென்றார். அதனானேயன்றே, உவம இயல் புடையன உவமத் தொகையென ஓதுவாராயினர். இன்னும், ‘உவம வியல உவமத் தொகை’ யென்றதனான் உவமையும், உவமிக்கப்படும் பொருளும் மாறி நிற்றலும் கொள்க. முகத்தாமரை, கைம் மாரி என வரும். இவை உருவகம் அன்றோ வெனின், உருவகத்தொகையென் றோதாமையானும், பண்புத்தொகையுள் அடங்காமையானும் உவமையுள் அடங்கும். இத்தொகையை வேற்றுமைத் தொகையொடு சேர ஓதியவதனான், அதனோடு இதற்கு ஒற்றுமை யுண்டென்று கொள்க. (17) வினைத்தொகை 410. வினையின் றொகுதி காலத் தியலும். வினைத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையின் தொகுதி காலச் சொல்லோடே நடக்கும், எ-று. வினைச்சொல்லாவது தொழிலுங், காலமும், பாலும் உணர்த்தலின், பாலுணர்த்துஞ் சொல் முற்றுச் சொல்லாகி நின்று தொகைநிலை யாகாமையானும், பால் காட்டாத வினையெச்சம், பெயரெச்சம் என்னும் இரண்டனுள்ளும், வினையெச்சம் முற்று வினைச்சொல்லோ டல்லது முடியாமையானும், ஈண்டுத் தொகுவதும் விரிவதும் பெயரெச்சம் என்று கொள்க. அது தொகுங்காலத்துக் காலப்பொருளையுணர்த்துஞ் சொல்லே தொகுவதும் விரிவதும் என்று கொள்க, தொழிலும், பொருளும் விட் டிசைத்து நில்லாது ஒற்றுமைப்பட்டதனை வினைத்தொகை யென்றார். (எ-டு.) கொல்லும் யானை, கொன்ற யானை; உண்ணும் நீர்; உண்ட நீர்; அரியும் வாள், அரிந்த வாள்; செல்லும் இடம், சென்ற விடம், உண்ணும்பொழுது, உண்டபொழுது; கொல்லுங் கொலை, கொன்ற கொலை என்பன கொல்யானை, உண்ணீர், அரிவாள், செல்லிடம், உண்பொழுது, கொல்கொலை எனத் தொகும். பிறவும் அன்ன. (18) பண்புத்தொகை 411. வண்ணத்தின் வடிவின் அளவிற் சுவையின் அன்ன பிறவும் அதன்குணம் நுதலி இன்ன திதுவென வரூஉ மியற்கை என்ன கிளவியும் பண்பின் றொகையே. பண்புத்தொகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வண்ணம், வடிவு, அளவு, சுவை யென்பனவற்றினும், அத் தன்மைய பிறவினுமாகிய, ஒரு பொருளினது குணத்தைக் கருதி இன்னது இது என ஒன்றையொன்று விசேடித்து வரும் இயல்பினையுடைய எல்லாச் சொல்லும் பண்புத் தொகையாம், எ-று. கரியது குதிரை, வட்டப்பலகை, நெடியது கோல், திவ்விது கரும்பு என்பன கருங்குதிரை, வட்டப்பலகை, நெடுங்கோல், தீங்கரும்பு எனத் தொகும். அன்ன பிறவும் என்றதனான், தண்ணீர், வெந்நீர் என்பன முதலாயின கொள்க. அஃதேல் இவை, கரிய குதிரை, நெடிய கோல் எனப் பெயரெச்ச வாய்பாட்டானும், பண்பு பற்றி வருஞ் சொல் வினைக்குறிப்பாகி முடிதலானும் வினைத் தொகையுள் அடங்கு மெனின், பண்புத் தொகை யொருவாய்பாட்டான் விரிக்கப்படாதென்பது எழுத்ததிகாரத்துட் (எழுத். 482) கூறுதலிற் பெயரெச்ச வாய்பாடும் வரும் வினைக்குறிப்பாதலானே யன்றே, வினைத்தொகையொடு சேர ஓதுவாராயிற்று என உணர்க கருமையை யுடைய குதிரையென வேற்றுமைத் தொகையாயும் அடங்குமால் எனின், இன்னதிதுவென ஒன்றையொன்று விசேடித்து வருதல் வேண்டும். அவ்வாறு வருங்கால் வேற்றுமைத் தொகையாகாதென்க. வேற்றுமைத்தொகை, உவமைத்தொகை, வினைத்தொகை, பண்புத் தொகை என்பன தம்முள் ஒரு புடை ஒப்புமையுடையவாதலிற், பாணினி யார் தற்புருட சமாசம் என்று குறியிட்டார். இனி, “இன்ன திதுவென வரூஉ மியற்கை என்ன கிளவியும்” என்றதனாற், பண்புபற்றி வருதலேயன்றிப், பெயரினான் ஒன்றையொன்று விசேடித்துவந்து ஒட்டுப்படினும், பண்புத்தொகையாம் என்று கொள்க. வாணிகச்சாத்தன், சாரைப் பாம்பு என வரும். ஆயன் சாத்தன், ஆசிரியன் நல்லந்துவன் என எழுவாயும், பயனிலையுமாகி வருதலின்றி, ஒட்டுப்படாத நிலைமையவாயினும், முதற் பெயர் விசேடண மாகிவரின், அதுவும் பண்புத் தொகையாமென்று கொள்க. (19) உம்மைத்தொகை 412. இருபெயர் பலபெயர் அளவின் பெயரே எண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி எண்ணின் பெயரோ டவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே உம்மைத் தொகையே. உம்மைத்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இருபெயர் முதலாகச் சொல்லப்பட்ட அறுவகையும் உம்மைத் தொகை, எ-று. (எ-டு.) ‘இருபெயராவது’ பொருட்பெயரும், தொழிற்பெயரும். அவையாவன: கபிலன், பரணன்; ஆடல், பாடல். ‘பல பெயராவது’ பன்மை குறித்த பெயர். அவை பார்ப்பார், சான்றோர் என்பன. மேற்சொல்லப்பட்டன ஒருமை குறித்தலின், இது வேறோதப் பட்டது. ‘அளவின் பெயராவது’ அளக்கப்பட்ட பொருளைக் குறியாது அளவு தன்னைக் குறித்து நிற்பது. அவை உழக்கு, நாழி, குறுணி, பதக்கு, தூணி, கலம் என்பன. கூப்பிடு காதம் என்பனவும் அதுவே. ‘எண்ணியற் பெயராவது’ எண்ணினாற் பொருள் குறித்தியலும் பெயர். அவையாவன பதின்மர், ஐவர் என்பன. ‘நிறைப்பெயர்க் கிளவி’ என்பது நிறுக்கப்பட்ட பொருளைக் குறியாது நிறையின் பெயராகி வருவது. அவை குன்றி, மஞ்சாடி, கால், அரை, கழஞ்சு என்பன. ‘எண்ணின் பெயராவது’ எண்ணப்பட்ட பொருளைக் குறியாது, எண் தன்னைக் குறித்து நிற்பது. அவை ஒன்று, இரண்டு, பத்து, நூறு என்பன. அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே என்பது அறுவகைப்பட்ட பெயரையுங் குறித்த நிலைமைத்து உம்மைத் தொகை, என்றவாறு. வரையறுத்து ஓதாமையான், இரண்டும், பலவும் வரப்பெறும் என்று கொள்க. கபிலனும், பரணனும் வந்தார் எனற்பாலது கபில பரணர் வந்தார் என வரும். ஆடலும், பாடலும் தவிர்ந்தார் என்பது ஆடல் பாடல் தவிர்ந்தார் என வரும். பார்ப்பாரும், சான்றாரும் வந்தார் எனற்பாலது பார்ப்பார் சான்றார் வந்தார் என வரும். தூணியும், பதக்கும் குறையும் எனற்பாலது தூணிப்பதக்குக் குறையும் என வரும். பதின்மரும், ஐவரும் போயினார் எனற்பாலது பதினைவர் போயினார் என வரும். கழஞ்சும், அரையுங் குறையும் எனற்பாலது கழஞ்சரைக் குறையும் என வரும். பத்தும் இரண்டுங் குறையும் எனற்பாலது பன்னிரண்டு குறையும் என வரும். இனி, புலிவிற்கெண்டை, அந்தணரரசர்வணிகர், தூணிப்பதக்கு முந்நாழி, நூற்றிருபத்தைவர், மாகாணியரைக்காணி, நூற்று முப்பத்து மூன்று எனவும் வரும். பிறவும் அன்ன. ஏற்புழிக் கோடல் என்பதனான் எண்ணும்மையே ஈண்டுத் தொகுவதென்று கொள்க. இடைச்சொல் ஓத்தினுள்ளும் உம்மை தொகும் என்றாராலெனின், ஆண்டு விரிந்துநின்ற சொல்லின்கண் உம்மை தொகவும் பெறுமென்றார். ஈண்டு ஒட்டிநிற்கும் சொல்லினது இலக்கணங் கூறினாரென்க. (20) அன்மொழித் தொகை 413. பண்பு தொகவரூஉங் கிளவி யானும் உம்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் ஈற்றுநின் றியலும் அன்மொழித் தொகையே. அன்மொழித்தொகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பண்பு தொகவரும் பெயர்க்கண்ணும், உம்மை தொக்க பெயர்க்கண்ணும், வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிக் கண்ணின் றியலும் அன்மொழித் தொகை, எ-று. அல்லாத மொழி தொகுதலின், அன்மொழித் தொகையாயிற்று. இம்மூவகைத் தொகையினும் ஈற்று நின்றியலும் என்றதனான், முன்னும் பின்னும் நின்ற இரண்டு சொல்லானும் உணரப்படு பொருண்மை யுடைத்து அன்மொழித் தொகை என்று கொள்க. (எ-டு.) “கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல, தில்லை நிலக்குப் பொறை” (குறள். 570) என்றவழிக், கடுங்கோல் என்பது அஃதுடைய அரசர்க்குப் பெயராகி வருதலின், அன்மொழித் தொகையாயிற்று. கோலிற்கு அடையாகிநின்ற கடுமையும் அரசன்மேல் ஏறியவாறு கண்டு கொள்க. இது பண்பு பற்றி வந்தது. தகர ஞாழல் என்பது உம்மைத் தொகை. இவையிற்றை யுறுப்பாக அமைக்கப்பட்ட சாந்தினையும் தகர ஞாழல் என்பவாகலின், அன்மொழித் தொகையாயிற்று. தூணிப்பதக்கு என்றவழி அளவிற்குப் பெயராதலன்றி, அளக்கப்படும் பொருளுக்கும் பெயராகியவழி, அன்மொழித் தொகையாம். இவை யிரண்டு சொல்லும் அன்மொழித் தொகைமேல் ஏறியவாறு கண்டு கொள்க. இஃது உம்மை பற்றி வந்தது. பொற்றொடி என்பது வேற்றுமைத் தொகை. அதனையுடையாட்குப் பெயராகியவழி அன்மொழித் தொகை யாம். ஈண்டுத் தொடிக்கு அடையாகி நின்ற பொன், தொடியை யுடை யாளது செல்வத்தைக் காட்டுதலின், இவ்விரண்டு சொல்லும் அதனை யுடையாளைக் குறித்தவாறும் அறிந்துகொள்க. துடியிடை எனவும், தாழ்குழலெனவும் உவமைத் தொகைப் புறத்தும், வினைத்தொகைப் புறத்தும் அன்மொழித் தொகை வருமா லெனின், துடி என்பதூஉம், தாழ் என்பதூஉம் இடை, குழல் என்பவற்றிற்கு அடையாகி வரினல்லது, அவற்றையுடையாட்குப் பெயராகுங்கால், இறுதி நின்ற பெயர்ப் பொருண்மை வந்து ஏனைய வாராமையின், ஆகுபெயரெனி னல்லது அன்மொழித்தொகை யாகாதெனக் கொள்க. அதனானே யன்றே இருபெயரொட்டும் என ஆகுபெயர்க்கண் எடுத்தோதுவாராயிற்று என உணர்க. (21) தொகைச் சொற்களில் பொருள் சிறக்கும் இடம் 414. அவைதாம், முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையலும் அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும் எனநான் கென்ப பொருணிலை மரபே. மேற் சொல்லப்பட்ட தொகைக்கட் பொருள் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட தொகைச் சொற்கள் தாம் முன் மொழிக்கண் பொருள் நிற்றலும், பின்மொழிக்கண் பொருள் நிற்றலும், இருமொழிமேலும் பொருள் நிற்றலும், அத்தொகைமேற் பொருள் நில்லாது பிறமொழிக்கண் பொருள் நிற்றலும் என நால்வகைப்படும் என்ப; பொருள் நிற்கும் மரபு, எ-று. அவைதாம் என எல்லாத் தொகையுஞ் சுட்டுதலான், அவற்றுள் இவ்விலக்கணம் அவ்வத் தொகைக் கேற்றவழிக் கொள்ளப்படும். (எ-டு.) மாம்பழந் தின்றான் என்றவழித், தின்னப்பட்டது பழமா தலின், அத்தொகைச்சொன் முன்மொழிக்கண் பொருள்நின்றது. “இடைமுலைக் கிடந்தும் நடுங்க லானிர்” (குறுந். 178) என்றவழிக் கிடக்கப்பட்டது முலையிடை யாதலின், பின்மொழிக்கண் பொருள் நின்றது. குதிரைத் தேரோடிற்று என்றவழி, குதிரை யோடத் தேரு மோடுத லின், இருமொழிமேலும் பொருள் நின்றது. பொற்றொடி வந்தாள் என்ற வழிப், பொற்றொடியை அணிந்தாள்மேற் பொருள் நிற்றலின், அம் மொழி யல்லாத மொழிமேற் பொருள் நின்றது. இவை நான்கும் வேற்றுமைத் தொகை. ஏனைத் தொகைக்கண்ணும் பொருள் நிற்குமாறு ஏற்பனவற்றுட் கண்டுகொள்க. (22) தொகைச் சொற்கள் ஒருசொல் தன்மைய 415. எல்லாத் தொகையும் ஒருசொன் னடைய. தொகைச் சொற்கெல்லாம் உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அறுவகைத் தொகைச்சொல்லும் ஒரு சொல் நடைய, எ-று. என்பது என்சொன்னவாறோவெனின், இரண்டு சொல்லாகி ஒட்டுப்பட்ட பெயர் பிரிந்து நில்லாது ஒரு பெயர் மாத்திரமாகி நிற்கும் என்றவாறு. (எ-டு.) யானைக்கோடு கிடந்தது, துடியிடை நன்று, கொல்யானை யோடிற்று, கருங்குதிரை வந்தது, கழஞ்சரை குறைந்தது, பொற்றொடி வந்தாள் என எழுவாயும், பயனிலையுமாகியும்; யானைக்கோட்டை, துடியிடையை, கொல்யானையை, கருங்குதிரையை (உவாப்பதினான்கை), கழஞ்சரையை, பொற்றொடியை என உருபேற்றும் ஒரு சொன்னடைய வாகி வந்தவாறு கண்டு கொள்க. (23) உயர்திணை உம்மைத் தொகை முடிபு 416. உயர்திணை மருங்கின் உம்மைத் தொகையே பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர். எய்திய தொருமருங்கு மறுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மைத் தொகையுள், உயர்திணைப் பொருண்மேல் வரும் உம்மைத்தொகை பலர் சொன்னடைத்தாகித் தொடரவும் பெறும், எ-று. (எ-டு.) கபில பரணர் வந்தார். அஃதேல், ஒட்டுப்பெயர் ஒரு சொன்னடைத்து என்றல் அமையாது, பலர் சொன்னடைத்தாகியுஞ் சில சொல் வருதலின் எனின், ஆண்டும் ஒரு சொன்னடைத்தென்பதே கருத்து. ஒருவர் என்பது பன்மை வினை கொண்டு முடிந்தாற் போல, உயர்திணை ஒட்டுப்பெயர் பன்மை வினை கொண்டு முடியுமெனச் சொன் முடிவு நோக்கிக் கூறினாரென்க. (24) குறிப்பு மொழி எனப் பெயர்பெறுவன 417. வாரா மரபின வரக்கூ றுதலும் என்னா மரபின எனக்கூ றுதலும் அன்னவை எல்லாம் அவற்றவற் றியல்பான் இன்ன என்னுங் குறிப்புரை யாகும். ஒருசார் சொற்களுக்குக் குறியிடுதல் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வாராமரபினவற்றை வருவனவாகக் கூறுதலும், என்னா மரபினவற்றை என்றனவாகக் கூறுதலும், அத்தன்மைய பிறவுமெல்லாம் அவற்றவற்றியல்பினான், இத்தன்மைய என்னுங் குறிப்புரையாகும். எ-று. வாரா மரபின என்றதனாற் செலவு, வரவு என்பன கொள்ளப்படும். என்னா மரபின என்றதனான் நினைத்தலும், சொல்லுதலும் செய்தலும் கொள்ளப்படும். அன்னவை எல்லாம் என்றதனாற் காணாமரபின, கேளா மரபின என்பன கொள்ளப்படும். இவ்வாறு சொல்லுதல் குற்றமாயினும், சொல்லுவான் குறிப்பு வேறாதலிற் குறிப்புமொழியாயிற்று. இதனானே சில சொற்களுக்குக் குறிப்பு மொழியெனவும் குறியிட்டாராம். (எ-டு.) அம்மலை வந்து இதனொடு பொருந்திற்று. மலைவருதலின் மையின், அதுவும் இதுவும் ஒன்றிக்கிடந்தன என்னும் பொருண்மை குறித்து இவ்வாறு சொல்லப்பட்டது. “சென்றதுகொல் போந்தது கொல் செவ்வி பெறுந்துணையும், நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி - முன்றில், முழங்கும் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு, உழந்துபின் சென்றவெ னெஞ்சு.” இதனுள் வந்தன எல்லாங் குறிப்பு மொழியென்று கொள்க. ‘அன்னச்சேவ லன்னச்சேவல்’ (புறம். 67) என்னும் புறப்பாட்டினுள் ‘இரும்பிசிராந்தை யடியுறையெனின்’ என்பது அன்னச்சேவலைக் குறித்துக் கூறுதலிற், சொல்லா மரபின சொல்லுமாகவந்த குறிப்பு மொழி. ‘நீலமுண்டதுகில்’ நீலம்பற்றினதுகில் என்னும் பொருண்மை குறித்து உண்டதாகக் கூறப்பட்டது. பிறவுமன்ன. (25) ஒரு சொல்லடுக்கு 418. இசைநிறை யசைநிலை பொருளொடு புணர்தலென் றவைமூன் றென்ப ஒருசொல் லடுக்கே. ஒரு பொருண்மேல் ஒரு சொல்லடுக்கி வருவழி வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருசொல் மேலடுக்கி வருஞ் சொல் இசை நிறையாகி யடுக்குதல், அசைநிலையாகி யடுக்குதல், பொருளொடு புணர்ந்து வருதல் என மூவகையென்ப ஆசிரியர், எ-று. ஒரு சொல்லடுக்கு எனப் பொதுவாக ஓதினமையாற் பெயர் முதலாகிய நான்கு சொல்லும் அடுக்கப் பெறும் என்று கொள்க. (எ-டு.) “துறக்குவ னல்லன் துறக்குவ னல்லன் தொடர் வரை வெற்பன் துறக்குவ னல்லன் தொடர்பு ளினையவை தோன்றின் விசும்பிற் சுடருள் இருடோன்றி யற்று’’ (கலி.41) இதனுள் முந்துற்ற சொல்பொருள் உணர்த்திற்று. ஏனைய இசை நிறைக்கண் வந்தன. இசைநிறையாவது பாட்டுக்குறித்து வரும். அசைநிலை செய்யு ளின்பங் குறித்து வரும். “குறங்கென, மால்வரை யொழுகிய வாழை வாழைப், பூவெனப் பொலிந்த வோதி” (சிறுபாண். 20) என்றவழி, வாழை என்னுஞ் சொல்லிரண்டனுள் ஒன்று அசைநிலையாயிற்று. ‘நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந் தொன்றின வொன்றின வல்லே செயிற் செய்க” (நாலடி.4) என்றவழி, நின்றன பலவாதலின் அடுக்கிவந்த சொல்லும் பொருள் குறித்து நின்றது. பிறவு மன்ன. (26) இசைநிறை அடுக்கிற்கு வரையறை 419. இசைப்படு பொருளே நான்குவரம் பாகும். இசைநிறையடுக்கி நிற்கும் வரையறை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இசைப் பொருட்கண் அடுக்கிவருஞ் சொல்லிற்கு எல்லை நான்கு, எ-று. (எ-டு.) ‘ஒக்குமே யொக்குமே யொக்குமே யொக்கும், விளக்கினிற் சீறெரி யொக்குமே யொக்கும், குளக்கொட்டிப் பூவினிறம்.’ இதனுள் ஒக்கும் என்னும் சொல் இசை நிறைக்கண் நான்கு வரம்பாகி வந்தவாறு கண்டு கொள்க. (27) விரைசொல் அடுக்கிற்கு வரையறை 420. விரைசொல் அடுக்கே மூன்றுவரம் பாகும். குறிப்புப் பொருள் உணர்த்தும் ஒருசொல்லடுக்கிற்கு வரையறை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) விரைவுப் பொருண்மை குறித்த ஒருசொல்லடுக்கிற்கு எல்லை மூன்றாகும், எ-று. (எ-டு.) பாம்பு பாம்பு பாம்பு, தீ தீ தீ இவற்றுள் முந்துற்றன பொருள் உணர்த்தின. ஏனைய பொருளிலவாயினும், விரைதல் என்பது குறித்தலிற், பொருளொடு புணர்ந்த அடுக்காயின. இசை நிறைக்கும், பொருளொடு புணர்தற்கும் எல்லை கூறி, அசை நிலை யடுக்கிற்கு எல்லை கூறாமையின், அஃது இரண்டல்லது வரப்பெறா தென்று கொள்க. (28) அசைநிலையடுக்கு 421. கண்டீர் என்றா கேட்டீர் என்றா சென்ற தென்றா போயிற் றென்றா அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி நின்றவழி யிசைக்குங் கிளவி என்ப. இதுவும் ஒருசார் அசைநிலை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) கண்டீர் என்பது முதலாக ஓதப்பட்ட சொற்கள் வினாப் பொருள் உணர்த்துஞ் சொல்லொடு கூடி நின்றவழி, அப்பொருணிலை யிசைக்கும் சொல்லாம், எ-று. எனவே அச்சொற்களொடு கூடாதவழி அசைநிலையா மென்றவாறாம். (எ-டு.) வினாவொடு கூடுதலாவது;-கண்டீரோ கண்டீரோ என ...............கண்டீரென்ப............... இனி, அவை அசைநிலையாகி வருமாறு:- “படைவிடுவான் மற் கண்டீர், காமன் படையடும் பாலொடு கோட்டம் புகின்” (முல்லைக்கலி. 9) என்பதனுள், கண்டீர் என்பது அசைநிலை யாயிற்று. ஏனையவற்றிற்கு உதாரணம் வந்துழிக் கண்டு கொள்க. (29) இதுவுமது 422. கேட்டை என்றா நின்றை என்றா காத்தை என்றா கண்டை என்றா அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே. இதுவுமது. (இ-ள்.) இந்நான்கு சொல்லும் முன்னிலை வினைச்சொல் அல் வழி, அசை நிலையாகும், எ-று. (எ-டு.) “மோரொடுவந்தா டகைகண்டை யாரொடுஞ் சொல்லி யாளன்றே வனப்பு” (முல்லைக்கலி. 9) என்றவழிக் கண்டை என்பது அசைநிலை யாயிற்று. ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. (30) பத்துவகை எச்சங்கள் 423. பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்மறை உம்மை எனவே சொல்லே குறிப்பே இசையே ஆயீ ரைந்தும் நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருட் கிளவி. எச்சக் கிளவியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) நெறிப்படத் தோன்றும் எஞ்சுபொருள் உணர்த்துங் கிளவி, பிரிநிலை முதலாக இசையீறாக ஓதப்பட்ட பத்தும், எ-று. ‘எஞ்சுபொருட் கிளவி’யாவது சொல்லாதொழிந்த பொருளை இனிது விளக்குஞ் சொல். ‘நெறிப்படத் தோன்றுத’லாவது வாக்கியமாகிய தொடர் மொழிக்கண் முன்னும் பின்னும் நின்ற சொல்லை நெறிப்படுத்தற்கு ஆண்டுத் தோன்றுதல். அது புலப்பட நில்லாமையின் எச்சமாயிற்று. ‘பிரிநிலை எச்சமாவது’ பல பொருளில் ஒன்று பிரிந்தவழிப் பிரிக்கப் பட்ட பொருண்மையுந் தோன்ற நிற்பது. ‘வினையெச்சமாவது’ ஒரு வினைச்சொல் எஞ்சி நிற்பது. பெயரெச்சமாவது ஒரு பெயர்ச்சொல் எஞ்சி நிற்பது. அஃதேல், வினையெச்சம் பெயரெச்சம் என்பன வினையியலுள் ஓதப்பட்டனவலவோ எனின், ஆண்டு ஓதப்பட்டன பெயரையும், வினையையும் ஒட்டி நின்றியலும். ஈண்டையன அன்னவல்லவாமாறு உதாரணத்தான் விளங்கும். ‘ஒழியிசை யெச்சமாவது’ சொல்லப்பட்ட பொருளை யொழியச், சொல்லாதொழிந்து நின்ற பொருளுந் தோன்ற நிற்பது. ‘எதிர்மறை யெச்சமாவது’ ஒரு பொருளைக் கூறியவழி, அதனின் மாறுபட்ட பொருண்மையும் அதனானே உணர நிற்பது. ‘உம்மையெச்சமாவது’ உம்மை கொடுக்கவேண்டும் வழி, அஃது எஞ்சி நிற்றல். ‘என என்னெச்சமாவது’ எனவென்று சொல்ல வேண்டும்வழி, அச்சொல்லெஞ்சி நிற்பது. ‘சொல்லெச்சமாவது’ ஒருசொல்லினான் ஒரு பொருளை விதந் தோதியவழி, அவ்விதப்பினானே பிறிதுமொரு பொருளைக் கொள்ளு மாறு நிற்பது. ‘குறிப்பெச்சமாவது’ சொற்படு பொருளன்றிச், சொல்லுவான் குறித்த பொருள் எஞ்சி நிற்பது. ‘இசையெச்சமாவது’ ஒரு சொற் றனக்குரிய பொருளன்றிப் பிறிது மொரு பொருளை இசைக்குமாறு வருவது. இவையெல்லாம் வழக்கினும், செய்யுளினும் வந்து பொருளை விளக்குதலின் எடுத்தோதினார். உதாரணம் தத்தம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (31) பிரிநிலை யெச்சத்திற்கு முடிபு 424. அவற்றுள், பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின. பிரிநிலை யெச்சம் முற்றுப்பெறுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், பிரிநிலையாகிய எச்சம் அதன்கணின்றும் பிரிக்கப்பட்ட பொருளொடு தொடர்ந்து முடிவு பெறும், எ-று. (எ-டு.) இவன் கல்வியுடையன் என்றவழிச், சொல்லுவான் இவ் வவையத் தாருள் எனக் கருதினானாயின், இவ் வவையத்தாருள் என்பது எஞ்சி நின்று பிரிநிலை யெச்சமாயிற்று. இவட்குக் கண்ணழகிது என்றவழி, மற்றுள்ள உறுப்புகளின் என்பது எஞ்சிநின்றது. இவை, பிரிக்கப்பட்ட பொருளொடு தொடர்பு பட்டு முற்றுப்பெற்றவெனக் கொள்க. (32) வினையெச்சத்திற்கு முடிபு 425. வினையெஞ்சு கிளவிக்கு வினையும் குறிப்பும் நினையத் தோன்று முடிபா கும்மே ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே. வினையெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையெச்சமாகவுடைய சொல்லிற்கு வினையும், வினைக் குறிப்பும் நினையத் தோன்றிய முடிபாகும். ஆண்டு, வினைக் குறிப்பு ஆக்கச் சொல்லோடு அடுத்துவரும், எ-று. ‘நினையத் தோன்றும்’ என்றதனான், ஆராயத் தோன்றுமென்று கொள்க. எனவே, வினையியலுட் கூறிய வினையெச்சம் ஆராய்தல் வேண்டாமையின், அஃதன்றென்று கொள்ளப்படும். (எ-டு.) “அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார், வழுக்கியுங் கேடீன் பது” (குறள். 165) என்பதனுள், கேடுபயத்தற்கு அழுக்காறு தானே யமையும், பகைவர் கேடுதருதல் தப்பியும் வரும் எனப் பொருளுரைக்க வேண்டுதலின், வரும் என்பது எஞ்சி நின்றது. “அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன், பெற்றான் பொருள்வைப் புழி” (குறள். 226) என்பதற்குப் பொருள் அற்றாரது குணங்களை அழிக்கும் பசியைப் போக்குவது செய்ய ஒருவன் தான் தேடின பொருள் வைத்தற்கு இடம் பெற்றான் ஆம் என உரைக்க வேண்டுதலின், ஆமென்னும் வினைக்குறிப்பு எஞ்சி நின்றது. (33) பெயரெச்சத்திற்கு முடிபு 426. பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே. பெயரெச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயரெச்சமாகவுடைய சொல் பெயரொடு முடிவு பெறும், எ-று. (எ-டு.) “துறக்குவ னல்லன் றுறக்குவ னல்லன். தொடர்வரை வெற்பன் றுறக்குவனல்லன், றொடர்பு ளினையவை தோன்றின்” (கலி. 41) என்ற வழி, அவன் தொடர்பு என வேண்டுதலின், அவன் என்னும் பெயர் எஞ்சி நின்றது. “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே” (கிளவி. சூ. 1) என்பதனுள், என்மனார் ஆசிரியர் என வேண்டுதலின், ஆசிரியர் என்னும் பெயர் எஞ்சி நின்றது. “மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே, அரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப், பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற், கல்கெழு கானவர் நல்குறு மகளே.” (குறுந்.71) இதனுள் எனக்கென வேண்டுதலின், வேற்றுமை ஏற்ற பெயர் எஞ்சி நின்றது. (34) ஒழியிசை எச்சத்திற்கு முடிபு 427. ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. ஒழியிசை எச்சத்திற்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒழிந்த சொல்லை எச்சமாக உடையது அவ்வொழிந்த சொல்லினாற் பொருள் முடிவுபெறும், எ-று. (எ-டு.) இவர் கல்வியாற் குறைவிலர் என்றவழி, ஒழுக்கத்தாற் குறையுடையர் என்றாதல், பொருளாற் குறையுடையர் என்றாதல், ஒரு பொருள் குறித்த வழி, பொருள்பட்டவாறும், அதனானே, அச்சொல் முற்றுப்பெற்றவாறுங் கண்டுகொள்க. (35) எதிர்மறை எச்சத்திற்கு முடிபு 428. எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின. எதிர்மறையெச்சம் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எதிர்மறைப் பொருண்மையை எச்சமாகவுடையது அவ்வெதிர்மறை யாற் பொருண்முடிவு பெறும், எ-று. (எ-டு.) “இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்-கண்ணிறை நீர்கொண் டனள்.” (குறள்.1315) என்பதனுள், மறுபிறப்புப் பிரிவேம் என நினைத்துக் கண்ணிறை நீர்கொண்டனள் எனப் பொருளுரைக்க வேண்டுத லின், எதிர்மறை, எஞ்சி நின்றதன் எதிர்மறைப் பொருளொடு முடிந்தவாறு கண்டுகொள்க. (36) உம்மை எச்சத்திற்கு முடிபு 429. உம்மை எச்சம் இருவீற் றானும் தன்வினை ஒன்றிய முடிபா கும்மே. உம்மையெச்சம் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மையாகிய எச்சம் இரண்டு வேறுபாட்டின் கண்ணும் தன்வினையொடு பொருந்திய முடிபாகும், எ-று. ‘இருவீறாவன’ :-முன்னின்ற சொல்லும், பின்னின்ற சொல்லும் தன் வினையாவன; இரண்டு சொல்லின்கண்ணும் உடன்பாடாகியும், மறையாகி யும் வரும் தொழிலுங் காலமும் ஒத்த வினைச்சொல். அது உம்மைக் கேற்ற வினையாதலின் ‘தன்வினை’ யென்றார். ‘ஒன்றிய முடிபாவது’ அவ்வினை யொடு பொருந்திய முடிபாகும் என்றவாறு. ஏனையெச்சம் போலத் தான் வந்து முடிதலேயன்றித். தான் வந்தாலும் சார்ந்த வினையொடு கூடியல்லது பொருட்கு முடிபாகாது என்றவாறு. (எ-டு.) சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான் எனற்பாலன-சாத்தன் வந்தான், கொற்றன் வந்தான் என வரின், ஆண்டு, உம்மை எஞ்சி நின்றதென்க. இருவீற்றானும் என்ற உம்மையாற் றனிவரினும் என்றுகொள்க. “வதுவை அயர்ந்த வன்பறழ்க்குமரி யிருதோ டோழர்பற்ற” என்றவழி, இருதோளும் என்னும் உம்மை எஞ்சிநின்றது. இடைச்சொல் லோத்தினுள் “உம்மை எண்ணி னுருபுதொகல் வரையார்” (287) எனவும், இவ்வோத்தினுள் “உம்மைத் தொகை” (412) எனவும் ஈண்டு உம்மை யெச்சம் எனவுங் கூறினாராதலின், அவற்றின் வேறுபாடு புலப்பட்டின்றாலெனின், பல பொருளை யெண்ணி ஒரு வினையான் முடிக்கும் வழிச், சொற்றொறும் உம்மை கொடுத்து, இடை நின்ற ஒன்றானும் இரண்டானும் சொல்லின்கண் உம்மை கொடாதவழி, உம்மை யெண்ணாகுமோ ஆகாதோ வென நின்ற ஐயங்கொளற் குரித்து; ஆண்டு “உம்மை யெண்ணின் உருபு தொகல் வரையார்” (287) என்று ஓதுத லின், உம்மை ஆண்டுத் தொக்கதென்க. இரண்டானும், பலவானும் பெயரை யடுக்கி, ஒரு சொற் போல ஒருவினையான் முடிக்கும் வழி, உம்மைத்தொகை யென்க. ஈண்டுத் தனித்தனி வினைகொண்டு உம்மை பிரிந்து நின்றே பொருள்படும் சொற்கள் செய்யுளகத்து எஞ்சி நின்றதனை எஞ்சிற்றென்க. அஃதற்றாகக், காலமும் வினையும் ஒத்தல்வேண்டும் என்ற தென்னை? சாத்தன் வந்தான், கொற்றன் வரும் எனவும், சாத்தன் வந்தான், கொற்றன் போம் எனவும், காலமும் வினையும் ஒவ்வாமையும் வருமா லெனின், அவை உம்மை யெஞ்சிய சொல்லன்மை வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (37) எச்ச உம்மைகளில் வரும் கால மயக்கம் 430. தன்மேற் செஞ்சொல் வரூஉங் காலை நிகழுங் காலமொடு வாராக் காலமும் இறந்த காலமொடு வாராக் காலமும் மயங்குதல் வரையார் முறைநிலை யான. மேற் சொல்லப்பட்ட உம்மைப் பொருட்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உம்மைப் பொருட்கண் உம்மை கொடாது செஞ் சொல்லாகிவரின், அவற்றுள் நிகழ்காலத்தோடு எதிர்காலமும், இறந்த காலத்தோடு எதிர்காலமும் மயங்குதல் நீக்கார், முறை பிறழாமல் நிற்கும் வழி, எ-று. (எ-டு.) சாத்தன் வாராநின்றான், கொற்றன் வருவன், போம்; சாத்தன் வந்தான், கொற்றன் வருவன், போம் என இவை உம்மை கொடாமற் பொருள்பட்டவாறும், காலமுந் தொழிலும் மயங்கியவாறும் கண்டு கொள்க. அஃதேல், சாத்தனும் வாரா நின்றான், கொற்றனும் வருவன் என உம்மை கொடுத்தும் வழக்கு நிகழுமாலெனின், உம்மை கொடுக்கின்றது பொருள் வேற்றுமை உணர்தற்கன்றே; அது கொடாக்காலும் பொருள் இனிது விளங்குமாயின், கொடுத்ததனாற் பயனின்றென்க. இவ்வாறு செய்யுளகத்துவரின், இசைநிறைத்தற் பொருட்டு வந்ததென்க. (38) எனவெனெச்சத்தின் முடிபு 431. எனவென் னெச்சம் வினையொடும் முடிமே. எனவென் எச்சமுடிபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) எனவென்று சொல்லப்பட்ட எச்சம் வினையொடும் முடியும், எ-று. உம்மையாற் பெயரொடும் முடியுமென்று கொள்க. முடிதலாவது அவற்றைச் சார்ந்து நின்று பொருளை உணர்த்துதல். முடிதல் எனினும், தொடர்த லெனினும் ஒக்கும். (எ-டு.) “வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற, வாடன் முதியாள் வயிற்றிடங்-கூடார், பெரும்படை வெள்ளம் நெரிதரவும் பேரா, இரும்புலி சேந்த விடம்” (புறப்பொ. வஞ்சிப்.19) என்பதனுள் இரும்புலி சேந்த விடமென வியப்பாமா லெனப் பொருளுரைக்க வேண்டுதலின், என என்பது எஞ்சி நின்று வியப்பென்பதனொடு தொடர்ந்தது. இது வினை. ‘பிரிநிலை வினையே’ (423) என்னுஞ் சூத்திரத்துள், ‘குறிப்பே யிசையே யாயீரைந்தும்’ என்றவழிக், குறிப்பே, இசையே யென அவ் வீரைந்துமெனப் பொருளுரைக்க வேண்டுதலின், என என்பது எஞ்சி நின்றது, ஈரைந் தென்னும் பெயரொடு முடிந்தது. (39) ஏனை எச்சங்கட்கு முடிபு 432. எஞ்சிய மூன்றும் மேல்வந்து முடிக்கும் எஞ்சுபொருட் கிளவி இலவென மொழிப. சொல்லெச்சத்திற்கும், குறிப்பெச்சத்திற்கும், இசை யெச்சத்திற்கும் உரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேலதிகரிக்கப்பட்ட பத்தனுள்ளும் முடிவு சொல்லாது ஒழிந்த மூன்று சொல்லும் வந்து முடிக்கும் சொற்களை எஞ்சிநிற்றலில, எ-று. எனவே, முந்துற்ற ஏழு சொல்லும் வந்து முடிக்கும் சொற்களை யுடைய என்பதூஉம், இவை நின்றவாற்றாற் பொருள் வேறுபடூஉம் என்பதூஉங் கூறியவாறாம் என்றவாறு. இதன் பொருள் வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (40) இதுவுமது 433. அவைதாம், தத்தங் குறிப்பின் எச்சம் செப்பும். இதுவுமது. (இ-ள்.) மேற் சொல்லப்பட்ட மூன்று சொல்லும் வந்த சொல்லை யுடைய வல்லவாயினும், தத்தங் குறிப்பினான் எஞ்சிய பொருண்மையை உணர்த்தும், எ-று. உதாரணம் சிறப்புச் சூத்திரத்துட் காட்டுதும். (41) சொல்லெச்சம் 434. சொல்லென் எச்சம் முன்னும் பின்னும் சொல்லள வல்ல தெஞ்சுதல் இன்றே. சொல்லெச்சம் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல் என்னும் எச்சம் அச்சொல்லாவதற்கு முன்னும் பின்னும் மற்றொரு சொல் எஞ்சிநிற்ற லிலது, எ-று. எனவே, அச்சொல்லினானே உய்த்துணர்ந்து கொள்ளப் பிறிதொரு பொருள் வரும் என்றவாறாம். (எ-டு.) ‘நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி, னீங்கி னதனைப் பிற’ (குறள். 495) “காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா, வேலாண் முகத்த களிறு” (குறள். 500) என்றவழித், தமது நிலத்தில் எளியாரும் வலியராவர்; பிறர் நிலத்தில் வலியாரும் எளியராவர் என்னும் பொருண்மை இச்சொற்றானே யுணர்த்தலிற் சொல்லெச்சமாயிற்று. (42) குறிப்பெச்சம் 435. அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். இனிக் குறிப்பெச்சம் உணர்த்தற்பாலது. அது ‘தெரிபு வேறு நிலையலும் குறிப்பிற் றோன்றலும், இருபாற்றென்ப பொருண்மை நிலையே’ எனப் பெயரியலுள் (சூ. 13) ஓதுதலான், அதன்கண் சில சொற் களை மரபு வழுவமைக்க வேண்டுதலின், அவையமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவைக்களத்து வழக்கமல்லாத சொல்லை மறைத்துப் பிறவாய்பாட்டான் மொழிக, எ-று. (எ-டு.) மறைத்துச் சொல்லுதல் இருவகைப்படும்; மங்கல மரபினாற் கூறுதலும், இடக்கரடக்கிக் கூறுதலுமென. மங்கல மரபினாற் கூறுவது:- செத்தாரைத் துஞ்சினாரென்றும், ஓலையைத் திருமுகம் என்றுங் கூறுதல். இவை அவைக்களத்துப் பட்டாங்குக் கூறிற் குற்றம்பயக்குமாதலின், அவ்வாறு கூறினார் என்க. இடக்கரடக்கிக் கூறுதல் கண்கழீஇ வருதும், கால்மேல் நீர் பெய்தும் எனப் பிறவாய்பாட்டான், கூற வரும் பொருண் மையை மறைத்துச் சொல்லுதல். இவை வேறொன்றைக் குறித்துக் கூறுதலிற், குறிப்பெச்சமாயின. (43) மேலதற்கொரு புறநடை 436. மறைக்குங் காலை மரீஇய தொராஅல். மேலதற்கு ஒரு புறநடை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அவைக்களத்து அல்லாத சொற்களை மறைத்துச் சொல்லுங் கால், அவ் வக்காலத்து மருவிப் போந்த சொல்லை மறையா தொழிக, எ-று. (எ-டு.) மருவிப் போந்தன :-ஆப்பி, கோமூத்திரம் என்றாற் போல்வன. (44) ஒருசார் குறிப்பெச்சம் 437 ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி ஆகிடன் உடைய அவற்றுள், ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே தாவென் கிளவி ஒப்போன் கூற்றே கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே. இதுவும் ஒருசார் குறிப்பெச்சம் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஈ, தா, கொடு என்னுஞ் சொற்கள் ஒரு பறவையின் பெயரும், தொழிற் பொருண்மையும், கொடுமையும் ஆதலன்றி, இரப்போன் கூற்றாதலும் உரிய. அவற்றுள், ஈ என்பது இழிந்தோன் கூற்று என்பதூஉம், தா என்பது ஒப்போன் கூற்று என்பதூஉம், கொடு என்பது உயர்ந்தோன் கூற்று என்பதூஉம் உணர்த்தும், எ-று. இச் சொற்கள்தம்மானே இழிந்தான், ஒப்பான், மிக்கான் என்னும் பொருண்மை, எஞ்சிநிற்றலிற் குறிப்பெச்சமாயிற்று. (45) மேலதற்கொரு வழுவமைதி 438. கொடுவென் கிளவி படர்க்கை யாயினும் தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பின் தன்னிடத் தியலும் என்மனார் புலவர். மேலதற்கொரு வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற் சொல்லப்பட்டவற்றுள், கொடு என்னுஞ் சொல் படர்க்கையாயினும், தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பினாற் றன்னிடத் தியலும் என்று சொல்லுவர் புலவர், எ-று. தன்னைப் பிறன்போற் கூறுதலின் குறிப்பெச்சமாயிற்று. இச் சூத்திரத்தானும் குறிப்பெச்சம் அதிகாரப்பட்டவாறு கண்டுகொள்க. (46) இசையெச்சம் 439 பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும் திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும் தொன்னெறி மொழிவயின் ஆஅ குநவும் மெய்ந்நிலை மயக்கின் ஆஅ குநவும் மந்திரப் பொருள்வயின் ஆஅ குநவும் அன்றி அனைத்தும் கடப்பா டிலவே. அதிகார முறையான் இசையெச்சமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) பெயர்நிலைக் கிளவிகளினாகுஞ் சொல்லும், திசை நிலைக் கிளவிகளி னாகுஞ் சொல்லும், பழமைத்தாகி நெறிப்பட வருஞ் சொல்லினாகுஞ் சொல்லும், பொருணிலை மயக்கினாகுஞ் சொல்லும், மந்திரப் பொருள்வயினாகுஞ் சொல்லும் அவ்வனைத்தும் இச் சொற்குப் பொருள் இது வென்னும் நியமம் இல, எ-று. எனவே, தன்பொருள் ஒழியப் பிறிது பொருளும்படும் என்றவாறாம். ஒருசொல் இரண்டுபொருள்பட நின்றவழி, ஒரு பொருளை யுணர்த்தும் இசை எஞ்சி நிற்குமன்றே. அஃது இசை யெச்சமாவது என்று கொள்க. ஆகுஞ்சொல் என்றமையான், ஏற்பன கொள்ளப்படும். இசையெச்சம் ஐந்து வகையென்பது போந்தது. அவற்றுள், ‘பெயர் நிலைக் கிளவியினாகுவன’ வேங்கை என்பது ஒருமரத்திற்குப் பெயராயி னும், புலிக்கும் பெயராயிற்று. அதுவுமன்றிக் கைவேம் என்னும் பொருளும் பட்டது. இவ்வாறு ஒரு சொல்லினானே பிறிதுபொருள் உணரின், அதை யுணர்த்தும் ஓசை எஞ்சிநின்ற தெனக்கொள்க. இது பலபொருளொருசொல் அன்றோ எனின், ஆம்; பல பொருட்கண் ஒருசொல் வருதற்கு இலக்கணம் ஈண்டு உணர்த்துகின்றது. என்னை உணர்த்தியவாறு எனின், வேங்கை என்னுஞ் சொல், புலிப் பொருண்மை யுணர்த்திற்றாயின், மரப் பொருண்மை யுணர்த்தும் சொல் யாது என ஒருகடா வரும். அக்கடா வேங்கை என்னும் சொல்லின்கண்ணே மரப் பொருண்மையை உணர்த்துவதோர் ஓசை எஞ்சிநின்ற தெனினல்லது விடைபெறாதாம். அதனானே இலக்கண முணர்த்தியவாறு அறிந்து கொள்க. ‘திசைநிலைக் கிளவியி னாகுநவும்’ என்பது செந்தமிழ் நாட்டு வழங்குஞ் சொல் திசைச் சொல்லாகியவழிப் பொருள் வேறுபடுதல். கரை என்பது வரம்பிற்குப் பெயராயினும், கருநாடர் விளித்தற்கண் வழங்குப. ‘தொன்னெறிமொழி’ யென்றதனான் முந்துற்ற வழக்காகித் தொடர்வு பட்டுச் செய்யுளகத்தினும், பரவை வழக்கினும் வருந் தொடர்மொழி என்று கொள்ளப்படும். ‘குன்றேறாமா’ என்றவழி, குன்று, ஏறு, ஆ, மா எனவும் படும்; குன்றின் கண் ஏறாநின்ற ஆமா எனவும் படும்; குன்றின் கண் ஏறா மா எனவும் படும். இவ்வாறு வரும் பொருட்கெல்லாம் இத்தொடர்மொழி தானே சொல்லாகி இதன்கண் இசை வேறுபட்டுப் பொருள் வேறுணர்த்த லின், அப்பொருண்மைகளை யுணர்த்தும் இசை எஞ்சிநின்றது. “காதற் கொழுநனைப் பிரிந்தல ரெய்தா-மாதர்க் கொடுங் குழை மாதவி தன்னொடும்” (சிலப். 5-189) என்றவழி, இச் சொல்லெல்லாம் குருக்கத்திக்கும் அடையாகி மாதவி என்னும் ஒரு பெண்பாற்கும் அடை யாகிப் பொருள் வேறுபடுதலின், இசை யெச்சமாயிற்று. இது தனிமொழி யாகிய பெயர்நிலைக் கிளவியின் அடங்காமையின், தொடர்மொழி யென்று வேறோதினார். ‘மெய்ந்நிலை மயக்கமாவது’ பொருணிலைமை மயக்கங் கூறுதல். “குருகுகரு வுயிர்ப்ப, ஒருதனி யோங்கிய திருமணிக் காஞ்சி” (மணி. காதை.1) என்றவழிக் குருகு என்பது மாதவியென்னுங் கொடிக்கும் பெயராதலின், அப் பெயருடையதனைக் குருகு என்றார். காஞ்சி என்பது மேகலைக்குப் பெயராதலின், அது மணிக்காஞ்சி என்றொட்டி மணிமேகலை யென்பாள் மேல் வந்தது. இவ்வாறு பொருணிலை மயங்க வருவனவும் இசையெச்ச மாம் என்றவாறு. ‘மந்திரம் என்பது’ பிறரறியாமல் தம்முள்ளார் அறிய மறைத்துக் கூறுஞ் சொல். அதன்கண் ஆகுவன, உலகினுள் வழங்குகின்ற பொருட்குத் தாம் அறிகுறியிட்டு ஆண்டுவருங் குழுவின்வந்த குறிநிலை வழக்கு. அது வெளிப்பட்ட சொல்லான் உணரும் பொருட்கு மறைத்துப் பெயரிடுதலும், எழுத்திற்குப் பிறபெயரிட்டு வழங்குதலும் என இருவகைப் படும். இவையும் பொருள் வேறுபடுத்தி வழங்குதலின் இசையெச்சமாயின. அவற்றுள், பொருட்கு வேறு பெயரிட்டன :- வண்ணக்கர் காணத்தை நீலம் என்றலும், யானைப்பாகர் ஆடையைக் காரை என்றலும் முதலாயின. எழுத்திற்கு வேறு பெயரிட்டு வழங்குமாறு:- “மண்ணைச் சுமந்தவன்றானும் வரதராசன் மகன்றானும், எண்ணிய வரகாலிமூன்று மிரண்டு மரமும் ஓர்யாறும், திண்ண மறிய வல்லார்க்குச் சிவகதியைப் பெறலாமே.” இதனுள் மண்ணைச் சுமந்தவன்-ந, வரதராசன் மகன்-ம, வரகாலி மூன்று-சி, இரண்டு மரம்-வா, ஓர்யாறு-ய எனக்கூற, நமச்சிவாய எனப் பொருளாயிற்று. பிறவும் அன்ன. (47) இதுவுமது 440. செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் செய்யென் கிளவி ஆகிடன் உடைத்தே. இது வினைச்சொற்கு உரியதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யாய் என்னும் ஆய் ஈற்று முன்னிலை வினைச்சொல், செய் என்னும் ஏவல் குறித்த வினைச்சொல்லுமாகி வரும், எ-று. (எ-டு.) நீ எம் இல்லத்து உண்ணாய் என்றவழி, உண்ணாமையைக் குறித்தலே யன்றி உண்க என்பதும் குறித்தவாறு கண்டுகொள்க. இவ்வாறு வருவதும் இசையெச்சம். இன்னும் இச்சூத்திரத்திற்குப் பொருள் செய்யாய் என்னும் வினைச்சொல் செய் எனக் குறைந்து நிற்கவும் பெறும் என்றவாறு. உண்ணாய் என்பது உண் எனவரும். (48) முன்னிலை வினைச்சொற்குரிய மரபு 441. முன்னிலை முன்னர் ஈயு மேயும் முன்னிலை மரபின் மெய்யூர்ந்து வருமே. இதுவும் முன்னிலை வினைச்சொற்கண் வருவதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முன்னிலை வினைச்சொற்கண் ஈகாரமும்-மகரமூர்ந்த ஏகாரமும் முன்னிலை மரபினையுடைய மெய்யை ஊர்ந்துவரும், எ-று. முன்னிலை மரபின் மெய்யாவன உண், தின் என்னுஞ் சொற்கண் ஈற்றெழுத்தொடு பால்காட்டும் எழுத்தினைப் புணர்க்க இடையே வரும் மெய்யெழுத்து. (எ-டு.) “சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ” (அகம். 46) “அட்டி லோலை தொட்டனை நின்மே” (நற். 300) “இன்னாதுறைவி யரும்படர் களைமே” (புறம். 145) எனவரும். மேல் ஓதப்பட்ட இ, ஐ, ஆய் அன்றி இவையுஞ் சிறுபான்மை வருமெனக் கொள்க. (49) வினைச்சொற்களுக்குரிய வழுவமைதி 442. கடிசொல் லில்லைக் காலத்துப் படினே. இது வினைச்சொற்கண் வருவதொரு வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தான் வந்தில எனக் கடியப்படா; அவ் வினைச்சொற்கள் காலத்தொடு பொருந்தின், எ-று. காலமாவது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம். காலப் பொருண்மை மயங்காமல் வரின், ஈறு திரியினும் அமைக என்றவாறு. (எ-டு.) “மறம்பாடிய பாடினியும்மே, பேருடைய விழுக்கழஞ்சிற், சீருடைய விழைபெற் றிசினே, இழைபெற்ற பாடினிக்குக், குரல்புணர்சீர் கொளைவல் பாண்மக னும்மே, எனவாங்கு, ஒள்ளழற் புரிந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே.” (புறம். 11) என்பதனுட் படர்க்கை வினைச் சொல் ஈறுதிரிந்து நின்றது, காலப்பொருண்மை வழுவாமையின், குற்றமின்றாயிற்று. “ஆரம ரலறத் தாக்கித் தேரோ, டவர்ப்புறங் காணேனாயிற் சிறந்த, பேரம ருண்க ணிவளினும் பிரிக” (புறம். 71) எனவும், “முறை திரிந்து, மெலிகோல் செய்தே னாகுக” (புறம். 71) எனவும் தன்மைக்கண் எதிர்காலங் குறித்த வஞ்சினம் வியங்கோள் வாய்பாட்டான் வந்தன. “பகலே பலருங் காண நாண்விட், டகல்வயற் படப்பை யவரூர் வினவிச், சென்மோ வாழி தோழி பன்னாட், கருவிவானம் பெய்யாதாயி னும், அருவி யார்க்கும் கழைபயி னனந்தலை, வான்றோய் மாமலைக் கிழவனைச், சான்றோ யல்லை யென்றனம் வரற்கே” (நற். 365) என்றவழிச் செல்வேமோ எனற்பாலது சென்மோ என வந்தது. பிறவுமன்ன. இச்சூத்திரத்திற்குப் பிறவாற்றாற் பொருளுரைப்பவாலெனின், வினைச் சொற்றிரிபு அதிகாரப்பட்டு வருதலானும், ‘காலத்துப்படினே’ என்றமையானும் பிறவாற்றானுரைப்பது பொருளன்றென்க. (50) குறைச்சொல் 443. குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி அறிதல். குறைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) யாதானுமொரு சொல்லைக் குறைக்க வேண்டுவழிக் குறைக்க வேண்டுமிடமறிந்து குறைக்க, எ-று. அது தலைக்குறைத்தலும், இடைக்குறைத்தலும் கடைக்குறைத்த லும் என மூவகைப்படும். (எ-டு.) ‘மரையிதழ் புரையு மஞ்செஞ் சீறடி’ என்றவழித், தாமரை யென்பது தலைக்குறைந்து நின்றது. ‘அகலிரு விசும்பி னாஅல்’ (மலைபடு. 100) என்றவழி ஆரல் என்பது இடைக் குறைந்து நின்றது. ‘நீலுண்டுகிலிகை’ என்றவழி) நீலம் என்பது கடைக் குறைந்து நின்றது. தொகுக்கும்வழித் தொகுத்தல் என்பதனோடு இதனிடை வேறுபா டென்னை யெனின், ஆண்டுவிரிந்து நின்ற சொற்றொகுக்க வேண்டுவழித் தொகுக்குமாறு கூறினார். ஈண்டு, இயற்கையிற் குறைதலிற் குறைச்சொல் லென்றார். (51) மேலதற் கொரு புறநடை 444. குறைந்தன வாயினும் நிறைப்பெய ரியல. மேலதற்கொரு புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) குறைச்சொற்கிளவி குறைந்து நின்றனவாயினும், பொருள் வேறுபடா நிறைந்த பெயரியல, எ-று. உதாரணம் மேற்காட்டப்பட்டன. இவ்விதி மேல் விகாரப்பட்ட சொற்கும் ஒக்கும் என்று கொள்க. (52) இடைச்சொற்கள் பொருள் வேறுபடுப்பன 445. இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லே. இடைச்சொற்கண் எஞ்சி நின்றதொரு பொருள் நிகழ்ச்சி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) இடைச் சொற்கள் எல்லாம் வேற்றுமைச் சொல்லாம், எ-று. என்பது என் சொன்னவாறோவெனின், பெயரும், வினையும் போலப் பொருளை நேர்காட்டாது, ஐ, ஒடு, கு, இன், அது, கண் என்னும் வேற்றுமை யுருபுபோல, வேறுபட்ட பொருளைக் குறித்து நிற்றலின், இடைச்சொல்லும் பொருள் வேறுபடுக்குஞ் சொல் எனப்படும்; பொருளுணர்த்துஞ் சொல்லெனப் படா. மன் என்பது கழிவினும், ஆக்கத்தினும், ஒழியிசை யினும் வந்தவழித், தானிடைப்பெற்று நிலைமொழியின் வேறுபட்ட பொருளைக் குறித்து நின்றதல்லது, அப்பொருட்கு வாசகமன்றி நின்றமை கண்டு கொள்க. பிறவுமன்ன. (53) உரிச்சொற்களும் பொருள் வேறுபடுப்பன 446. உரிச்சொன் மருங்கினும் உரியவை உரிய. உரிச்சொல் மருங்கினும் இடைநின்று பொருளுணர்த்துஞ் சொல்லுள என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) உரிச்சொல்லிடத்தும் வேற்றுமை யுருபுபோல அப்பொருள் வேறுபடுத்தற்குரியவை உரியவாம், எ-று. அது, நனி என்பது உறுவும், தவவும்போல மிகுதி குறித்து வரினும், உறுவன, தவவன, எனப்பொருளுணர வாராது, இடைச் சொற் போலக் குறிப்பினான் மிகுதி யுணர்த்துதலின், இதுவும் பொருள் வேறுபடுக்குஞ் சொல்லாயினல்லது, பொருளுணர வாராமை கண்டுகொள்க. பிறவும் அன்ன. (54) வினையெச்சத்திற்குரிய வேறுபாடு 447. வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய. வினையெச்சத்திற்குரியதொரு வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) வினையெச்சச்சொல்லும் வேறுவேறாகிய பல இலக்கணத்தை யுடைய, எ-று. வேறுகுறிய என்னாது பல்குறிய என்றது சொல்லானும், பொருளா னும் வேறுபடும் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. சொல்லான் வேறுபடுதலாவது பொதுவகையான் எடுத்து ஓதிய செய்து, செய்யூ என்பன, உகர ஊகார ஈறாகி வருதலேயன்றிப், பிறவீற்றானும் வருதலும், எச்சச் சொல்லாகி வரற்பாலது முற்றுச் சொல்லாகி வருதலும். பொருளான் வேறுபடுதலாவது ஒருவாய்பாட்டான் உணரும் பொருளை மற்றொரு வாய்பாட்டாற் கூறுதலும், எல்லா வினையெச்சமும் பிரித்து நோக்கு வார்க்குப் பெரும்பான்மையும் வேற்றுமைப் பொருளாகித் தோற்றுதலும். அவையாமாறு:- செய்தெனெச்சத்துக்கண் ஓடி, போய் எனவும், செய்யூ என்பதன்கட் செய்யா எனவும் வருவன ஈறுவேறுபட்டு வந்தன. ‘மோயினள் உயிர்த்தகாலை’ (அகம். 5) எனவும், “ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி” (அகம். 48) எனவும், கண்ணியன் வில்லன் (கலி. 37) வருமெனவும் வரும். இவை வினையெச்சமுற்றாகி வந்தன. இவற்றுள், மோந்து என்பது மோயினளெனவும், கொய்ய வென்பது கொய் குவமெனவும், கண்ணியணிந்து வில்லையேந்தி யென்பன கண்ணியன் வில்லன் எனவும் முற்றுவாய்பாட்டான் வரினு மெச்சப் பொருண்மைய வாகலின் வினையெச்சமெனப்பட்டன. அஃதேல், முற்றென்பதொன்றில்லையால், முற்றும் எச்சப்பொருண் மைத்தாக வருதலின்? எனின், அஃதாமிடனுமாகாதவிடனும் அறிதல் வேண்டுமென்பது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். “உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய - யாஅ வரிநிழல் றுஞ்சும்” (குறுந். 232) என்றவழி உண்டென்பது வினைமுதல் வினையொடு முடியாமையின், உண்ண வெனத் திரித்தல் வேண்டிற்று. இந்நிகரன ஈறுதிரிந்தன. மருந்துண்டு நோய் தீர்ந்தான், மழை பெய்ய மரங்குழைத்தது என்பனவற்றைப் பிரித்துநோக்க, மருந்துண்டலான், மழைபெய்தலான் என வேற்றுமைப்பொருள்பட்டன. அஃதேல், இவை வேற்றுமை மயங்கியலுட் கூறப்பட்டன வன்றோ வெனின், ஆண்டு வேற்றுமைப்பொருள் வினைச்சொல்லானும் விளங்கு மென அதன் இலக்கணங்கூறினார். ஈண்டு வினையெச்சம் வேற்றுமைப் பொருள் படுமென்று இதன் இலக்கணங் கூறினாரென்க. வினையெஞ்சு கிளவியுமென்ற உம்மை இறந்தது தழீஇயிற்று. (55) மேலதற்கொரு புறநடை 448. உரையிடத் தியலும் உடனிலை யறிதல். மேலதற்கொரு புறநடை யுணர்த்துத னுதலிற்று (இ-ள்.) உரையென்பது தொடர்மொழி. முற்றுச்சொல் எச்சமாகி வருதலும், வினையெச்சமீறுதிரிதலும், தொடர்மொழிக்கண் முடிக்கும் சொல்லொடு கூடிநின்ற நிலைமையை யறிந்து கொள்க, எ-று. “மோயின ளுயிர்த்தகாலை” (அகம். 5) என்றவழி, உயிர்த்தலென்னும் வினை யொடு நிற்றலின் மோயினளென்ப தெச்சமாயிற்று. அல்லாதவழி முற்றாயே நிற்கும். ஞாயிறு பட்டு வந்தான் என்றவழி, வந்தான் என்பதற்குப் பட்டென்ப தியையாமையிற் பட எனத் திரித்தல் வேண்டிற்று. பிறவுமன்ன. (56) குறிப்பின் பொருள்தருவன 449. முன்னத்தி னுணருங் கிளவியு முளவே இன்ன வென்னுஞ் சொன்முறை யான. மனக்கருத்தினாற் பொருளுணருமிட முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) சொல்லினானன்றி இத்தன்மையவென்னுஞ் சொல்லினது தொடர்ச்சிக்கண் மனக்குறிப்பினாற் பொருளுணரப்படும் சொல்லும் உள, எ-று. உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. “தொடி நோக்கி மென் றோளு நோக்கி அடிநோக்கி, யஃதாண் டவள்செய் தது” (குறள். 1279) என்றவழி, இருப்போமாயின், வளை கழன்று தோள்மெலியுமெனக் கருதி, நடக்க வல்லீராகல் வேண்டுமென அடியை நோக்கினாளாதலான், உடன்போதற்குக் கருதினாளென இப்பொருளெல்லாம் அவள் குறிப்பினா னுணர நின்றவாறு கண்டுகொள்க. இது சொல்லினானுணராமையான் எடுத்தோதல் வேண்டிற்று. பிறவும் இந்நிகரன அறிந்துகொள்க. (57) ஒருபொருள் இருசொல் வழுவல 450. ஒருபொரு ளிருசொற் பிரிவில வரையார் செப்புவழு வமைத்தலை நுதலிற்று. (இ-ள்.) ஒருபொருள்மேல் இரண்டுசொற் பிரிவின்றி வரின் நீக்கப்படா, எ-று. “உயர்ந்தோங்கு பெருமலை” (மணி. 22-11), “உச்சி மீமிசை”, “நிலத்து வழி மருங்கிற் றோன்றலான” (பெய. 40) என்பன. “பிரிவில” என்றதனான் ஒட்டிநிற்றல் வேண்டும். (58) ஒருமைசுட்டிய பெயர் பன்மைப் பொருள்படல் 451. ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி பன்மைக் காகு மிடனு மாருண்டே. ஒருமைப்பெயர் பன்மைப்பொருளுணர்த்துமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) ஒருமைகுறித்த பெயர்ச்சொல் பன்மைக்காகும் இடனுமுண்டு, எ-று. “புலைய னெறிந்த பூசற் றண்ணுமை-ஏவ லிளையர் தாய் வயிறு கரிப்ப” (அகம்.59) என்றவழித் தாயரெனல் வேண்டுமாயினும், தாய் என்பது பன்மை குறித்து நின்றது. (59) முன்னிலைக்கண் வரும் ஒருமை பன்மைப்பொருள்படல் 452. முன்னிலைச் சுட்டிய ஒருமைக் கிளவி பன்மையொடு முடியினும் வரைநிலை யின்றே ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும். இஃது ஒருமை பன்மை மயக்க முணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) முன்னிலையைக் குறித்த ஒருமைச்சொல் பன்மையொடு முடியினும் நீக்கப்படாது அதனை ஆற்றுப்படுக்கும்வழி பாதுகாத்துக் கூறுக, எ-று. ஆற்றுப்படைமருங்கிற் போற்றல்வேண்டும் எனவே, அஃதல்லாத வழிப் போற்றாமையுங் கூறப்படுமாயிற்று. ஆற்றுப்படை மருங்கிற் போற்றலாவது:- பெரும்பாணாற்றுள், “புல்லென்யாக்கைப் புலவுவாய்ப் பாண” (22), என அண்மை விளியேற்று முன்னிலைகுறித்து நின்ற ஒருமைப் பெயர் “நீயிரும், பல்வேற் றிரையற் படர்குவி ராயின்” (28, 37) எனப் பன்மையொடு முடிந்தது. கூத்தராற்றுப்படையுள், “கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ” (மலைபடு. 50) என அண்மைவிளியேற்று முன்னிலை குறித்து நின்ற ஒருமைப்பெயர் “நீயிரும் நன்னற் படர்ந்த கொள்கையொடு, உள்ளினிர் சேறிராயின்” (மலைபடு. 64, 65) எனப் பன்மையொடு முடிந்தது. இவ்வாறு வருங்காற் கூத்தரும் பாணரும் விறலியருமாகி யாண்டுச் செல்வார் பலரா யுழியே வரப்பெறுவதென்றும்; தனியொருவனாயின் மயங்கப்பெறாதென் றுங் கொள்க. இனி, ஆற்றுப்படை யல்லாதவழிப் பலர் இல் வழியும் மயங்கப் பெறும். “குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை என்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனும் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அன்னா ரிருவரைக் காணிரோ பெரும!’’ (கலித்.9) எனவும், “மறப்பரு காத லிவளீண் டொழிய இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்றைய’’ (கலித்.2) எனவும், “என்னீர் அறியாதீர் போல இவைகூறல் நின்னீர வல்ல நெடுந்தகாய்’’ (கலித்.6) எனவும் வரும். (60) பிறவுமன்ன. அதிகாரப் புறநடை 453. செய்யுண் மருங்கினும் வழக்கியன் மருங்கினும் மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம் பல்வேறு செய்தியி னூனெறி பிழையாது சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல். இவ்வதிகாரத்துளோதப்பட்ட எல்லாச் சொற்கும் புறநடை யுணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் பொருளுணரச் சொல்லப் பட்ட சொற்களெல்லாம் ஈண்டு ஓதிய இலக்கணத்தான் முற்றுப்பெற்றில வாயினும், பலவகைப்பட்ட ஆசிரியமத விகற்பத்தான் வருமிலக்கணத்திற் பிழையாமல் யாதானுமொரு சொல்லாயினும் பாகுபடுத்துணருமாறு வகுத்துக்காட்டி யுணர்த்துக, நூலுணர்ந்தோர், எ-று. பிறநூன் முடிபினான் முடியினும் இலக்கணப் பிழைப்பின்றாம். எ-று. “கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தர’ இன்னே வருகுவர் தாயர்’’ (முல்லைப். 15,16) என்றவழி ஒன்றனைக் கூறும் பன்மைக்கிளவியி னடங்காமையின் இதற்கிலக்கணம் வேறு வேண்டிற்று. “நளி இரு முந்நீர் ஏணி யாக வளியிடை வழங்கா வானஞ் சூடிய மண்டிணி கிடக்கை’’ (புறம். 35) என்றவழியும், நெடிய வலிய நீரெனப் பெயரெச்சம் அடுக்கி வந்தது. “நெல்லரியு மிருந்தொழுவர்” (புறம். 24) என்னும் புறப்பாட்டு முற்றுப்பெற் றடுக்கிவந்தது. “ஒன்னாதார்க் கடந்தடூஉம் உரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின்மேல்’’ (கலி. 27) என்ற வழியும் அடுக்கிவந்தது. வினைத்தொகைப்புறத்தும் உவமத்தொகைப்புறத்தும் பொரு ளொற்றுமைப்படாது அன்மொழித்தொகையாகிச் சான்றோர் செய்யு ளகத்துவரின் இச்சூத்திரமிடமாக அமைத்துக்கொள்க. “நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே” (புறம். 45) என்பது நின்னுடைய வென்னும் பொருண்மைக்கண் ஒட்டி, அவ்வாய்பாடு குறித்து நின்றது. பிறவும் எடுத்தோதிய இலக்கணத்து மாறுபட்டு வருவனவுளவேல் இச்சூத்திரத்தா னமைத்துக்கொள்க. (61) ஒன்பதாவது எச்சவியல் முற்றும் இவ்வியல் சூத்திரமும் உரையும் கிரந்த (எண்) வகையான் 620 தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - தெய்வச்சிலையாருரை முற்றிற்று நூற்பா நிரல் (எண் : நூற்பா எண்) அ ஆ வ என-சொல்லே 9 அ ஆ வ என-படர்க்கை 210 அ எனப் பிறத்தல் 106 அச்சக் கிளவிக்கு 95 அச்சம் பயமிலி 251 அடிமறிச் செய்தி 403 அடைசினை முதலென 26 அண்மைச் சொல்லிற்கு 127 அண்மைச் சொல்லே 123 அத்திணை மருங்கின் 213 அதற்குவினை யுடைமையின் 74 அதனி னியறல் 72 அதிர்வும் விதிர்ப்பும் 314 அதுஇது உதுவென 163 அதுச்சொல் வேற்றுமை 207 அதுவென் வேற்றுமை 96 அந்தில் ஆங்கு 264 அந்நாற் சொல்லும் 399 அப்பொருள் கூறின் 34 அம் ஆம் எம் ஏம் 196 அம்மகேட் பிக்கும் 272 அம்ம வென்னும் 149 அம்முக் கிளவியும் 225 அமர்தல் மேவல் 376 அயல்நெடி தாயின் 141 அர் ஆர் ப என 200 அரியே ஐம்மை 352 அலமரல் தெருமரல் 308 அவ்வச் சொல்லிற்கு 291 அவ்வழி, அவன்இவன் 158 அவ்வே, இவ்வென 116 அவற்றின் வரூஉம் 286 அவற்றுள், அழுங்கல் 346 அவற்றுள், அன்னெ னிறுதி 126 அவற்றுள், இ ஈ யாகும் 118 அவற்றுள், இ உ ஐ ஓ 117 அவற்றுள், இகுமுஞ் 271 அவற்றுள், இயற்சொல் 394 அவற்றுள், இரங்கல் 355 அவற்றுள், எழுவாய் 63 அவற்றுள், செய்கென் 198 அவற்றுள், செய்யும் 232 அவற்றுள், தடவென் 319 அவற்றுள், நான்கே 171 அவற்றுள், நிரனிறை தானே 401 அவற்றுள், நீஎன் கிளவி 184 அவற்றுள், பன்மை 203 அவற்றுள், பிரிநிலை எச்சம் 424 அவற்றுள், பெயரெனப் 156 அவற்றுள், முதனிலை 224 அவற்றுள், முன்னிலைக் கிளவி 217 அவற்றுள், முன்னிலை தன்மை 220 அவற்றுள், யாதென வருஉம் 30 அவற்றுள், விறப்பே 344 அவற்றுள், வினைவேறு 51 அவற்றுள், வேற்றுமைத் 408 அவற்றொடு வருவழி 229 அவைதாம், தத்தங் கிளவி 245 அவைதாம், தத்தங் குறிப்பின் 433 அவைதாம், தத்தம் பொருள் 112 அவைதாம், புணரியல் 247 அவைதாம், பெண்மை 172 அவைதாம், பெயர் ஐ 62 அவைதாம், முன்மொழி 414 அவைதாம், முன்னும் 248 அவைதாம், வழங்கியன் 110 அவையல் கிளவி 435 அளபெடைப் பெயரே 131, 137, 145 அளபெடை மிகூஉம் 121 அளவும் நிறையும் 113 அன் ஆன் அள் ஆள் 199 அன்மையின் இன்மையின் 208 அன்ன பிறவும் அஃறிணை 166 அன்ன பிறவும் உயர்திணை 162 அன்ன பிறவும்-கிளந்த 392 அன்ன பிறவும் தொன்னெறி 98 ஆஓ ஆகும் 189 ஆக்கக் கிளவி 22 ஆக்கந் தானே 21 ஆக ஆகல் 276 ஆங்க உரையசை 273 ஆடூஉ வறிசொல் 2 ஆண்மை சுட்டிய 177 ஆண்மை திரிந்த 12 ஆண்மை யடுத்த 159 ஆயென் கிளவியும் 206 ஆரும் அருவும் 134 ஆவோ வாகும் 189 ஆறன் மருங்கின் 97 ஆறா குவதே 77 ஆனெ னிறுதி 128 இசைத்தலும் உரிய 58 இசைநிறை யசைநிலை 418 இசைப்படு பொருளே 419 இசைப்பிசை யாகும் 307 இடைச்சொல் லெல்லாம் 445 இடைச்சொற் கிளவியும் 155 இடையெனப் படுவ 246 இதன திதுவிற்று 107 இதுசெயல் வேண்டும் 237 இயற்கைப் பொருளை 19 இயற்கையி னுடைமையின் 78 இயற்சொல் திரிசொல் 393 இயற்பெயர்க் கிளவியுஞ் 36 இயற் பெயர் சினைப்பெயர் 170 இயற்பெயர் முன்னர் 267 இயைபே புணர்ச்சி 306 இர் ஈர் மின் என 218 இரட்டைக் கிளவி 46 இரண்டன் மருங்கின் 90 இரண்டா குவதே 69 இருதிணைச் சொற்கும் 168 இருதிணைப் பிரிந்த 157 இருதிணை மருங்கின் 10 இருபெயர் பலபெயர் 412 இலம்பா டொற்கம் 356 இறப்பின்-நிகழ்வின் எதிர்வின் என்றச் 243 இறப்பின்-நிகழ்வின் எதிர்வின் என்றா 194 இறப்பே யெதிர்வே 241 இறுதியு மிடையும் 100 இறைச்சிப் பொருள்வயின் 190 இன்றில வுடைய 214 இன்ன பெயரே 187 இனச்சுட் டில்லா 18 இனைத்தென வறிந்த 31 ஈதா கொடுவென 437 ஈரள பிசைக்கும் 277 ஈற்றுநின் றிசைக்கும் 282 ஈற்றுப்பெயர் முன்னர் 92 உகப்பே உயர்தல் 302 உசாவே சூழ்ச்சி 366 உணர்ச்சி வாயி 389 உம்உந் தாகும் 288 உம்மை எச்சம் 429 உம்மை எண்ணின் 287 உம்மை எண்ணும் 283 உம்மை தொக்க 285 உயர்திணை மருங்கின் 416 உயர்திணை மருங்கினும் 48 உயர்திணை யென்மனார் 1 உயாவே யுயங்கல் 365 உரிச்சொற் கிளவி 293 உரிச்சொல் மருங்கினும் 446 உருபு தொடர்ந்தடுக்கிய 99 உருபென மொழியினும் 24 உருவுட் காகும் 296 உரையிடத் தியலும் 448 உவப்பே உவகை 303 உவமத் தொகையே 409 உளவெனப் பட்ட 148 உறுதவ நனியென 295 எச்ச உம்மையும் 279 எச்சம் சிறப்பே 252 எஞ்சிய இரண்டன் 140 எஞ்சிய கிளவி 219 எஞ்சிய மூன்றும் 432 எஞ்சு பொருட்கிளவி 280 எடுத்த மொழிஇனஞ் 59 எண்ணுங் காலை 45 எண்ணே காரம் 284 எதிர்மறுத்து மொழியினுந் 104 எதிர்மறை எச்சம் 428 எப்பொரு ளாயினும் 33 எய்யா மையே 338 எல்லாச் சொல்லும் 151 எல்லாத் தொகையும் 415 எல்லா மென்னும் 182 எல்லாரும் என்னும் 160 எல்லே இலக்கம் 266 எவ்வயிற் பெயரும் 66 எவ்வயின் வினையும் 244 எழுத்துப்பிரிந் திசைத்தல் 391 எற்றம் நினைவும் 333 எற்றென் கிளவி 260 எறுழ்வலி யாகும் 384 என்றும் எனவும் 290 என்றென் கிளவியும் 256 எனவென் னெச்சம் 431 ஏபெற் றாகும் 301 ஏவுங் குரையும் 268 ஏழா குவதே 79 ஏனை உயிரே 120 ஏனைக் காலமும் 242 ஏனைப் புள்ளி 125 ஏனை யுருபும் அன்ன 108 ஏனை யெச்சம் 226 ஐந்தா குவதே 75 ஐயமும் கரிப்பும் 380 ஐயுங் கண்ணும் 102 ஐவியப் பாகும் 381 ஒப்பில் போலியும் 274 ஒருபெயர்ப் பொதுச்சொல் 47 ஒருபொருள் - இலவே 40 ஒருபொருள் - கிளவி 395 ஒருபொரு ளிருசொல் 450 ஒருமை சுட்டிய எல்லாப் 179 ஒருமை சுட்டிய பெயர்நிலை 451 ஒருமை யெண்ணின் 42 ஒருவர் என்னும் 185 ஒருவரைக் கூறும் 27 ஒருவினை ஒடுச்சொல் 88 ஒழியிசை எச்சம் 427 ஒன்றறி கிளவி 8 ஒன்றறி சொல்லே 3 ஒன்றன் படர்க்கை 211 ஒன்றுவினை மருங்கின் 52 ஓம்படைக் கிளவிக்கு 93 ஓய்தல் ஆய்தல் 326 ஓவும் உவ்வும் 119 கடதற என்னும் 197 கடிசொல் லில்லை 442 கடியென் கிளவி 379 கண்கால் புறம்அகம் 80 கண்டீர் என்றா 421 கண்ணுந் தோளும் 60 கதழ்வும் துனைவும் 313 கம்பலை சும்மை 345 கமம்நிறைந் தியலும் 351 கரும மல்லாச் 82 கருவி தொகுதி 350 கவர்புவிருப் பாகும் 358 கவவகத் திடுமே 353 கழிவே ஆக்கம் 249 கழுமென் கிளவி 347 கள்ளொடு சிவணும் 165 கறுப்புஞ் சிவப்பும் 368 கன்றலும் செலவும் 84 காப்பி னொப்பின் 70 காலந் தாமே 193 காலம் உலகம் 56 கிளந்த இறுதி 146 கிளந்த வல்ல அன்ன பிறவும் 292 கிளந்தவல்ல வேறுபிற 114 குஐ ஆன்என 105 குடிமை யாண்மை 55 குத்தொக வரூஉங் 94 குருவும் கெழுவும் 298 குறித்தோன் கூற்றம் 54 குறிப்பினும் வினையினும் 195 குறைச்சொற் கிளவி 443 குறைந்தன வாயினும் 444 கூர்ப்பும் கழிவும் 312 கூறிய கிளவி 386 கூறிய முறையின் 67 கெடவரல் பண்ணை 317 கேட்டை என்றா 422 கொடுவென் கிளவி 438 கொல்லே ஐயம் 265 சாயல் மென்மை 321 சிதைந்தன வரினும் 398 சிறப்பின் ஆகிய 39 சினைநிலைக் கிளவிக்கு 83 சீர்த்தி மிகுபுகழ் 310 சுட்டுமுத லாகிய 38 சுட்டுமுதற் பெயரும் 144 சுட்டுமுதற் பெயரே 138 சுண்ணந் தானே 402 செந்தமிழ் சேர்ந்த 396 செப்பினும் வினாவினுஞ் 16 செப்பும் வினாவும் 13 செப்பே வழீஇயினும் 15 செய்து செய்யூ 222 செய்தெ னெச்சத்து 233 செய்யாய் என்னும் 440 செய்யுண் மருங்கினும் 453 செயப்படு பொருளைச் 240 செயற்கைப் பொருளை 20 செல்லல் இன்னல் 299 செலவினும் வரவினும் 28 செழுமை வளனும் 348 சேரே திரட்சி 359 சொல்லென் எச்சம் 434 சொல்லெனப் படுப 154 ஞெமிர்தலும் பாய்தலும் 357 தகுதியும் வழக்கும் 17 தஞ்சக் கிளவி 263 தடவும் கயவும் 318 தடுமாறு தொழிற்பெயர்க்கு 91 தத்தம் எச்சமொடு 231 தநநு எஎன 150 தநநு எஎனும் 406 தன்மேற் செஞ்சொல் 430 தன்மைச் சொல்லே 41 தன்மை சுட்டலும் 25 தன்மை சுட்டின் 186 தாமென்கிளவி 180 தாவே வலியும் 340 தான்என் கிளவி 181 தானென் பெயரும் 133 திணையொடு பழகிய 191 தீர்தலும் தீர்த்தலும் 316 துயவென் கிளவி 364 துவன்று நிறைவாகும் 328 துவைத்தலும் சிலைத்தலும் 354 தெரிநிலை யுடைய 167 தெரிபுவேறு நிலையலும் 153 தெவ்வுப்பகை யாகும் 342 தெவுக்கொளற் பொருட்டே 341 தெளிவின் ஏவும் 258 தேற்றம் வினாவே 254 தொழிலிற் கூறும் 129 தொழிற்பெய ராயின் 135 நம்பும் மேவும் 325 நன்றீற்று ஏவும் 278 நன்றுபெரி தாகும் 339 நனவே களனும் 372 நான்கா குவதே 73 நிகழூஉ நின்ற 169 நிரனிறை சுண்ணம் 400 நிலப்பெயர் குடிப்பெயர் 161 நிலனும் பொருளும் 228 நிறத்துரு வுணர்த்தற்கும் 369 நின்றாங் கிசைத்தல் 57 நீயிர் நீயென 183 நும்மின் திரிபெயர் 139 நொசிவும் நுழைவும் 370 பசப்புநிற னாகும் 305 படரே உள்ளல் 336 பண்புகொள் பெயரும் 130, 136 பண்புதொக வரூஉம் 413 பணையே பிழைத்தல் 335 பயப்பே பயனாம் 304 பரவும் பழிச்சும் 378 பல்ல பலசில 164 பல்லோர் படர்க்கை 221 பலவயி னானும் 49 பழுது பயனின்றே 320 பன்முறை யானும் 227 பன்மை சுட்டிய 178 பன்மையும்-டிலவே 209, 215 பன்மையும்-யவ்வே 202, 212 பாலறி மரபின் 205 பான்மயக் குற்ற 23 பிண்டப் பெயரும் 87 பிணையும் பேணும் 334 பிரிநிலை வினாவே 253 பிரிநிலை வினையே 423 பிறிதுபிறி தேற்றலும் 101 பின்முன் கால்கடை 223 புதிதுபடற் பொருட்டே 375 புரைஉயர் பாகும் 297 புலம்பே தனிமை 327 புள்ளியும் உயிரும் 147 புனிறென் கிளவி 371 பெண்மைச் சினைப்பெயர் 173 பெண்மை சுட்டிய எல்லா 176 பெண்மை சுட்டிய சினை 174 பெண்மை சுட்டிய வுயர் 4 பெண்மை முறைப்பெயர் 175 பெயர்நிலைக் கிளவி 68 பெயர்நிலைக் கிளவியின் 439 பெயரி னாகிய 65 பெயரெஞ்சு கிளவி 426 பெயரெஞ்சு கிளவியும் 230 பேஎநாம் உருமென 361 பையுளுஞ் சிறுமையும் 337 பொருட்குத் திரிபில்லை 388 பொருட்குப்பொருள் 387 பொருடெரி மருங்கின் 404 பொருண்மை சுட்டல் 64 பொருண்மை தெரிதலும் 152 பொருளொடு புணரா 35 பொற்பே பொலிவு 331 மகடூஉ மருங்கிற் 188 மதவே மடனும் 373 மல்லல் வளனே 300 மழவும் குழவும் 309 மற்றென் கிளவி 259 மற்றைய தென்னும் 261 மறைக்குங் காலை 436 மன்றவென் கிளவி 262 மன்னாப் பொருளும் 32 மாதர் காதல் 324 மாரைக் கிளவியும் 201 மாலை இயல்பே 311 மாவென் கிளவி 269 மிக்கதன் மருங்கின் 236 மிகுதியும் வனப்பும் 374 மியாயிக மோமதி 270 முதலிற் கூறும் 111 முதலும் சினையும் 86 முதற்சினைக் கிளவிக்கு 85 முந்நிலைக் காலமும் 234 முரஞ்சல் முதிர்வே 329 முழுதென் கிளவி 322 முற்படக் கிளத்தல் 37 முற்றிய உம்மை 281 முறைப்பெயர்க்-ஏயொடு 132 முறைப்பெயர்க்-முறைப் 143 முறைப்பெயர்-மருங்கின் 122 முன்னத்தி னுணரும் 449 முன்னிலைச் சுட்டிய 452 முன்னிலை முன்னர் 441 முன்னிலை வியங்கோள் 216 முனைவு முனிவாகும் 382 மூன்றனும் ஐந்தனும் 89 மூன்றா குவதே 71 மெய்பெறக் கிளந்த 385 மொழிப்பொருட் காரணம் 390 மொழிமாற் றியற்கை 405 யாஅ ரென்னும் 204 யாகா பிறபிறக்கு 275 யாணுக் கவினாம் 377 யாத னுருபிற் 103 யாதெவன் என்னும் 29 ரஃகான் ஒற்றும் 7 வடசொற் கிளவி 397 வண்ணத்தின் வடிவின் 411 வண்ணம் வடிவே 76 வம்புநிலை யின்மை 323 வயவலி யாகும் 362 வயாவென் கிளவி 367 வறிதுசிறி தாகும் 332 வன்புற வரூஉம் 238 வார்தல் போகல் 315 வாராக் காலத்தும் 235 வாராக் காலத்து வினைச் 239 வாரா மரபின 417 வாளொளி யாகும் 363 வியங்கோள் எண்ணுப்பெயர் 43 வியலென் கிளவி 360 விரைசொல் அடுக்கே 420 விழுமம் சீர்மையும் 349 விழைவின் தில்லை 257 விழைவே காலம் 250 விளியெனப் படுப 115 விறப்பும் உறப்பும் 343 வினாவுஞ் செப்பே 14 வினையிற் றோன்றும் 11 வினையின் றொகுதி 410 வினையினும் பண்பினும் 142 வினையெஞ்சு கிளவிக்கு 425 வினையெஞ்சு கிளவியும் 447 வினையெனப் படுவது 192 வினையே குறிப்பே 255 வினையே செய்வது 109 வினையொடு நிலையினும் 289 வினைவேறு படாஅ 53 வினைவேறு படூஉம் 50 வெம்மை வேண்டல் 330 வெளிப்படு சொல்லே 294 வேற்றுமைத் தொகையே 407 வேற்றுமை தாமே 61 வேற்றுமைப் பொருளை 81 வேறுவினைப் பொதுச்சொல் 44 வையே கூர்மை 383 ளஃகான் ஒற்றே 6 னஃகான் ஒற்றே 5 னரலள வென்னு 124 சொல் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) அ அஃது 163 அகம் 167 அத்தன்மைய 163 அத்தன்மையது 163 அத்தன்மையர் 138 அத்தன்மையள் 159 அத்தன்மையன் 133 அத்தன்மையார் 138 அத்தன்மையாள் 159 அத்தன்மையான் 133 அது 8, 163 அதுமன் 248 அந்தணர் 161 அந்தணன் 161 அந்தணி 161 அமைச்சன் 161 அரிமானே 147 அரிவாள் 410 அரை 412 அல்லன் 208 அலி 4 அவ் 163 அவர் 7,138 அவள் 6 அவை 163 அறி 217 அன்றில் 190 அன்ன 214 அன்னது 214 அன்னா 122 அன்னாய் 122 அன்னார் 159 அன்னாள் 159 அன்னான் 159 அனைய 214 அனையது 214 அனையார் 159 அனையாள் 159 அனையான் 133,159 ஆ ஆ 167 ஆக்கள் 165 ஆசிரியன் 162 ஆடல்பாடல் 412 ஆடூ 10, 159 ஆண்மகன் 159 ஆதிரையான் 162 ஆவன் 208 ஆழி 395 இ இஃது 163 இடையாள் 162 இது 163 இரண்டு 8,412 இருவர் 42 இல்ல 164 இல்லது 166 இலன் 208 இலை 167 இவ் 163 இவர் 7,138,158 இவள் 158 இவன் 133,158 இவை 163 இன்று 215 ஈ ஈ 217 உ உஃது 163 உண் 217 உண்கின்றனம் 196 உண்கின்றனர் 199 உண்கின்றனள் 199 உண்கின்றனன் 199 உண்கின்றாம் 196 உண்கின்றார் 196 உண்கின்றாள் 199 உண்கின்றனெம் 196 உண்கின்றனன் 197 உண்கின்றேம் 196 உண்கின்றேன் 197 உண்கும் 196 உண்குவ 210,243 உண்குவம் 247 உண்குவென் 197 உண்டது 8,211,243 உண்டல் 167 உண்டவர் 161 உண்டவள் 161 உண்டவன் 161 உண்டன 9,210,243 உண்டனர் 200 உண்டனள் 199 உண்டனன் 199 உண்டனெம் 196 உண்டனென் 197 உண்டனை 217 உண்டாம் 196 உண்டாய் 129,142,217 உண்டாயோ 253 உண்டார் 200 உண்டாள் 6,199 உண்டான் 5,153,199 உண்டும் 196 உண்டேம் 196 உண்டேன் 197 உண்ணலிர் 218 உண்ணலெம் 196 உண்ணலென் 197 உண்ணன்மின் 218 உண்ணா 9,210 உண்ணா நின்றது 8,211,243 உண்ணா நின்றன 9,210,243 உண்ணா நின்றார் 7,200 உண்ணா நின்றாள் 6 உண்ணா நின்றான் 199 உண்ணார் 200 உண்ணாள் 199 உண்ணான் 199 உண்ணேன் 197 உண்ணேனோ 253 உண்ப 7,200 உண்பது 8,211,243 உண்பம் 196 உண்பர் 200 உண்பல் 197 உண்பள் 199 உண்பன் 199 உண்பன 9,210 உண்பாள் 6,199 உண்பான் 5,199 உண்பெம் 196 உண்பேம் 196 உண்பேன் 197 உண்மின் 218 உது 163 உவ் 163 உவர் 138 உவள் 144 உவன் 133 உவை 163 உழுதது 164 உள்ள 164 உளன் 208 எ எம 406 எமது 406 எமர் 150,406 எமள் 150,406 எமன் 150,406 எல்லாம் 125 எல்லாரும் 125 எல்லீரும் 125 ஏ ஏ 217 ஏட 149 ஏடா 149 ஏடி 149 ஏடீ 149 ஏனாதி 162 ஐ ஐவர் 412 ஐயோ 396 ஒ ஒருத்தி 42 ஒருவர் 42 ஒருவன் 42 ஒன்று 8,412 ஓ ஓடல் 167 ஓடவல்ல 215 ஓடவல்லாது 215 ஓடவல்லா 215 ஓடவற்று 215 ஓடி 447 ஓணத்தான் 162 க கண்ணன்னான் 159 கண்போல்வான் 159 கந்தம் 398 கபிலபரணர் 412 கரிய 9,243 கரியது 243 கரியம் 243 கரியர் 7 கரியவரே 136 கரியள் 6 கரியன் 5,243 கரியாய் 130,142,217 கரியான் 161 கரியீர் 136 கரியீரே 136 கரியேன் 243 கரியை 217,243 கருத்தி 217 கருமை 167 கரைய 396 கலம் 412 கழஞ்சு 412 கழலாய் 129 கழுதை 114 காரி 164 கால் 412 கிழவோன் 189 கிழாஅன் 131 கிளியார் 267 குங்குமம் 397 குட்டுவன் 161 குண்டுகட்டு 8,215 குதிரை 68 குயிலே 147 குரங்கன் 159 குரங்கி 159 குருசில் 140 குருசீல் 140 குருடா 146 குருடீ 146 குருணி 412 குழலள் 162 குழலாள் 162 குழையார் 161 குழையாள் 161 குழையான் 161 குளம் 395 குறுந்தாட்டு 214 குறுந்தாள 214,215 குன்றி 412 கூட்டு 217 கூயிற்று 211 கேண்மியா 248 கை 173 கொக்கு 396 கொய்குவம் 447 கொய்ய 447 கொல்கொலை 410 கொல்யானை 410 கொள் 217 கொற்றா 148 கோஒன் 131 கோதை 172 கோமாள் 141 கோவே 119 கௌ 217 ச சாகரம் 398 சாத்த 127 சாத்தற்கு 62 சாத்தன் 62,172 சாத்தன்கண் 62 சாத்தனது 62 சாத்தனின் 62 சாத்தனை 62 சாத்தனொடு 62 சாத்தா 146 சாத்தாஅஅ 148 சாத்தி 172 சாத்தியார் 267 சான்றோர் 412 சிங்கம் 114,191 சில 9,164 சிறாஅர் 137 செப்பு 396 செம்போத்து 18 செய்பவை 219 செய்யா 447 செய்யுமவை 219 செய்யூ 447 செய்வது 219 செய்வன 219 செல் 217 செல்லிடம் 410 செவியிலி 174 சென்று 197 சேரமான் 128 சேரலன் 161 சேவல் 53 சோணாட்டார் 161 சோணாட்டாள் 161 சோணாட்டான் 161 சோழன் 161 ஞ ஞாய் 406 ஞாழல் 190 த தந்தாய் 118 தந்தை 118,406 தந்தைமார் 7,161 தந்தையர் 161 தம்பி 406 தம்முன் 406 தம 406 தமது 406 தமர் 150,162,406 தமள் 150,162,406 தமன் 150,162,406 தாம் 125 தாய் 175,406 தாய்மார் 7,161 தாயர் 161 தான் 133 திங்கள் 167 திரு 114 திருவினாள் 6 தின் 217 தின்றான் 153 தீ 153 தீயான் 161 தும்பி 147 தூங்கல் 174 தூணி 412 தெங்கு 68,167 தெங்குகள் 165 தென்றால் 147 தொடியாள் 189 தொழீஇ 121 தோன்றால் 140 தோளாள் 162 ந நங்காய் 118 நங்கை 159 நங்கையார் 267 நட்டம் 397 நட 217 நம்பியார் 7, 267 நம்பீ 118 நமர் 150 நமள் 150 நமன் 150 நல்லார் 161 நல்லாள் 161 நல்லான் 161 நாச்சி 162 நாம் 125 நாயன் 162 நாரை 190 நிலம் 153 நீ 120 நீயிர் 139 நீர் 153 நீலம் 111 நுந்தை 406 நும்பி 406 நும்முன் 406 நும 406 நுமது 406 நூறு 412 நெடிய 9 நெடியர் 7 நெடியன் 5 நெடியான் 161 ப பட்டினம் 397 படைத்தலைவன் 162 பத்து 412 பதக்கு 412 பதினைவர் 412 பதின்மர் 412 பல்ல 164 பல 9,164 பலர் 161 பவளம் 398 பாண்டியன் 5,161 பாண்டில் 396 பார்ப்பார் 412 பார்ப்பீர் 134 பிற 166 பிறர் 162 பிறள் 162 பிறன் 162 பிறிது 166 புலவன் 162 புலியே 147 புறம் 167 புன்னை 190 பூ 167 பூழியன் 161 பெடை 50 பெண்டாட்டி 159 பெண்டிர் 162 பெண்டீர் 134 பெண்டுகள் 162 பெண்பால் 141 பெண்மகள் 159 பெண்மகன் 160 பெற்றம் 50 பேடி 4 பொல்லா 215 பொன்போல்வது 164 பொன்னனையது 164 போ 217 போய் 447 ம மக்கள் 10,50,159 மக்காள் 140 மகடூ 10,120,159 மகள் 159 மகளே 143 மகன் 159 மகனே 132 மகாஅர் 137 மஞ்சாடி 412 மணி 397 மதுரையார் 161 மதுரையாள் 161 மதுரையான் 161 மயில் 191 மயிலார் 267 மரம் 10 மரமே 147 மரை 190 மரையே 147 மலை 395 மலையமான் 128 மா 50,68 மாடத்த 215 மாத்தது 215 மாந்தர் 159 மாயவன் 5 மாவே 147 மான் 190 மானே 147 முடத்தி 174 முடத்தியார் 267 முடவன் 174 முடவனார் 267 முத்து 398 முதல 215 முதற்று 215 முயல் 190 முலை 173 மூவர் 42 மேல 215 மேற்று 215 மோவாய் 173 ய யா 9,163 யாண்டு 161 யாது 163 யாம் 125 யாவர் 139 யாவள் 144 யாவன் 133 யாவை 163 யான் 133, 158 யானாய் 147 யானை 68, 172, 191 வ வட்டம் 167, 397 வண்டே 147 வந்தது 164 வந்தவரே 135 வந்தாய் 129 வந்தாரே 135 வந்து 197 வருவ 9 வருவோம் 203 வல்லன் 208 வல்லான் 208 வளி 153 வா 217 வாரேனோ 253 வில்லான் 189 வில்லி 161 வெள்ளை 164 வெற்ப 127 வெற்பா 126 வேங்காய் 147 வேங்கை 50 வேந்தே 119 வேலான் 161 வேனிலான் 162 வை 217 சொற்றொடர் நிரல் (மேற்கோள்) (எண் : நூற்பா எண்) அ அடைக்காயை எண்ணும் 70 அண்ணல் கூறு 123 அணி வந்தான் 226 அது அன்று 214 அது இல்லை 219 அது வேறு 219 அந்தணர்க்குக் கொடான் 104 அந்தணர்க்குக் கொடுத்தான் 73 அமைச்சு வந்தது 55 அரங்கின்கண் வனைந்தான் 79 அரங்கின் தெற்கு இருந்தான் 80 அரங்கின் வடக்கு இருந்தான் 80 அரசன் உழை இருந்தான் 80 அரசன் கண் சென்றான் 80 அரசன் முன் இருந்தான் 80 அரசு இருந்தது 55 அரிசியை அளக்கும் 70 அவர் ஆம் 219 அவர் இல்லை 219 அவர் கூட்டு 219 அவர் யார் 204 அவர் வேறு 219 அவள் இல்லை 219 அவள் யார் 204 அவள் வேறு 219 அவர்குக் கொடுத்தது 28 அவர்குச் சென்றது 28 அவர்குத் தந்தது 28 அவர்குப் போக்கு 28 அவர்கு வந்தது 28 அவர்கு வரவு 28 அவனில்லை 219 அவன் உண்டது 11 அவன் செய்ம்மன 219 அவன் மேய்ந்தான் 11 அவன் யார் 204 அவன் வேறு 219 அவனே செய்தான் 254 அவை அல்ல 214 அவை இல்லை 219 அவை எழுந்தது 55 அவை வேறு 219 அறத்தை ஆக்கும் 70 அறத்தைக் காதலிக்கும் 70 அன்னம் கூறு 123 ஆ ஆகாயம் நிற்கும் 19 ஆகொண்மார் வந்தார் 201 ஆசிரியன் வந்தான் 40 ஆசையைக் குறைக்கும் 70 ஆடகத்தைப் பூணும் 70 ஆடை சாத்தனது 102 ஆடை நன்றாயிருந்தது 22 ஆடையை நெய்தான் 110 ஆண் வந்தது 55 ஆ வந்தது 167 ஆ வந்தன 167 ஆவிற்கு முலை நான்கு 31 ஆவினது கன்று 78 ஆவினது பால் 78 இ இஃதொரு வேல் 111 இஃதோரம்பு 111 இசையைப் பாடும் 70 இதனின் அஞ்சும் 76 இதனின் ஆக்கும் 76 இதனின் இழிந்தது 76 இதனின் இளைது 76 இதனின் கடிது 76 இதனிற் கரிது 76 இதனிற் கைக்கும் 76 இதனிற் சிறந்தது 76 இதனிற் சிறிது 76 இதனிற் தண்ணிது 76 இதனிறீது 76 இதனிறீரும் 76 இதனின் நன்று 76 இதனின் நாறும் 76 இதனின் நெடிது 76 இதனிற் பழைது 76 இதனிற் பற்றுவிடும் 76 இதனிற் புதிது 76 இதனிற் பெரிது 76 இதனின் முதிது 76 இதனின் மெலிது 76 இதனின் வட்டம் 76 இதனின் வலிது 76 இதனின் வெய்து 76 இது கரிது 214 இது நெடிது 214 இந் நிலம், ஒருமா 113 இப்பொன் கழஞ்சு 113 இப்பொன் கால் 113 இம்மனை முக்கால் 113 இருந்தான் குன்றத்துக்கண் 102 இருப்பேனோ பேவேனோ 17 இரும்பு பொன்னாயிற்று 64 இவரிற் பலர் 76 இவற்றிற் சில 76 இவற்றிற் காக்கும் 76 இவன் திருவுடையன் 207 இவன் நெருப்பு 153 இவன் பசு 153 இவனிற் பண்ணும் 76 இவனிற் பாடும் 76 இவனின் இலன் 76 இவனின் உடையன் 76 இனிக் கொண்டான் 226 உ உடம்பு விட்டது 58 உண்ட இல் 229 உண்ட ஊண் 229 உண்ட கலம் 229 உண்ட காலம் 229 உண்ட சோறு 229 உண்டாயோ மகளே 218 உண்டாயோ மகனே 218 உண்டாயோ குயிலே 218 உண்டான் சாத்தன் 245 உண்டீரோ கிளிகாள் 218 உண்டீரோ மக்காள் 218 உண்ணாச் சாத்தன் 230 உண்ணாத சாத்தன் 230 உண்ணாது வந்தான் 230 உண்ணும் இல் 229 உண்ணும் ஊண் 229, 252 உண்ணுங் கலம் 229 உண்ணும் காலம் 229 உண்ணுஞ் சோறு 229 உண்பு வந்தான் 224 உயிர் உணரும் 19 உயிர் போயிற்று 58 உலகு கிடந்தது 58 உலகு வாழ்ந்தது 55 உளன் சாத்தன் 64 ஊ ஊரின் நீங்கான் 104 ஊர் வந்தது 55 ஊரைக் காக்கும் 70 ஊரோ காடோ 17 எ எண்ணது சாந்து 78 எயிலகத்துப் புக்கான் 80 எல்லாம் வந்தன 182 எல்லாம் வந்தீர் 182 எல்லாம் வந்தேம் 182 என்கண் வந்தது 55 என் பாவை வந்தது 55 என் யானை வந்தது 55 எனக்குக் கொடுத்தது 28 எனக்குச் சென்றது 28 எனக்குத் தந்தது 28 எனக்கு வந்தது 28 ஒ ஒரு பெண் வந்தது 55 ஒருவர் வந்தார் 186 ஒல்லென்று ஒலித்தது 256 ஒற்று வந்தது 55 ஓ ஓஒ கொடியை 248 க கடந்தான் நிலத்தை 102 கடவுள் வாழி 123 கடிசூத்திரத்துக்குப் பொன் 74 கடுவினது காய் 111 கண்ணான் நல்லன் 72 கண் நல்லன் 60 கண் நொந்தது 60 கண் நொந்தான் 60 கணையை நோக்கும் 70 கபிலபரணர் வந்தார் 416 கரிதன்று வெளிது 17 கரிதோ வெளிதோ 17 கரியன் சாத்தன் 64 கருங்குதிரை வந்தது 415 கரும்பிற்கு உழுதான் 74 கரும்பினது சாறு 78 கல்வியை உடையன் 70 கலத்தின் இடைநின்றான் 80 கலத்தின் கடை நின்றான் 80 கலத்தின் தலை நின்றான் 80 கழஞ்சரை குறைந்தது 415 கள்வரை அஞ்சும் 70 காட்டது யானை 78,97 காட்டுள் யானை 98 காண்கு வந்தேன் 198 காலத்திற்கு வைத்த விதை 74 காலம் வந்தது 58 காலைக்கண் வனைந்தான் 79 காவலை உடையவன் 70 காவலைக் காக்கும் 70 கானல் கூறு 123 கிளியை ஒப்பும் 70 குடத்தை வனைந்தான் 69 குடத்தை வனையான் 104 குடும்பம் வாழ்ந்தது 55 கும்மாயத்திற்குப் பயிறு 74 குழவி அழுதது 55 குழுஉப் பிரிந்தது 55 குழையை உடையன் 70 குன்றத்துக்கண் இரான் 104 குன்றேறாமா 439 கூரியதொருவாண்மன் 249 கூலிக்கு ஒலிக்கும் 74 கை இழந்தன 179 கை இழந்தாள் 179 கை இழந்தான் 179 கை இற்றான் 225 கை இற்று 225 கை இறுபு 225 கை இறூஉ 225 கொடாதாரைப்பழிக்கும் 70 கொடியது முதல் 78 கொடியாடிற்று 110 கொடுத்தான் சாத்தற்கு 102 கொடுப்பாரைப் புகழும் 70 கொல்யானை ஓடிற்று 415 கொலைக் குடம்பட்டாள் 74 கொள்ளென்று கொடுத்தான் 256 கோட்டது நூறு 78 கோடு இல 214 கோடு இன்று 214 கோடு உடைத்து 214 கோதை வந்தது 179 கோதை வந்தாள் 179 கோதை வந்தான் 179 கோ வாழி 123 ச சண்பகத்தது கோடு 78 சாத்தன் உண்டான் 245 சாத்தன் உளன் 64 சாத்தன் கரியன் 64, 207 சாத்தன் குழையன் 207, 208 சாத்தன் சென்றான் 64 சாத்தன் தலைவனாயினான் 64 சாத்தன் நெடியன் 64 சாத்தன் புலிபோலும் 247 சாத்தன் மாடத்தன் 207 சாத்தன் முடவன் 64 சாத்தன் யாண்டையான் 64 சாத்தன் யாவன் 64 சாத்தன் வணிகன் 64 சாத்தன் வந்தது 168,177 சாத்தன் வந்தான் 168,177 சாத்தன் செல்க 64 சாத்தன குழைகள் 77 சாத்தன தன்று ஆடை 104 சாத்தனது இல்வாழ்க்கை 78 சாத்தனது உடைமை 78 சாத்தனது ஒப்பு 78 சாத்தனது கல்வி 78 சாத்தனது குழை 77, 78 சாத்தனது கோலம் 78 சாத்தனது தவம் 78 சாத்தனது துணை 78 சாத்தனது பகை 78 சாத்தனது முதுமை 78 சாத்தனொடு கூடான் 104 சாத்தி வந்தது 176 சாத்தி வந்தாள் 176 சிங்கம் வந்தது 55 சிங்கம் வந்தான் 114 சிலற்றைப் பிரிக்கும் 70 சிலையுட் பொருள் 80 சுமையான் வந்தது 184 சுமையான் வந்தாள் 184 சுவர்ப் புறத்துப் பாவை 80 சுவரை எழுதினான் 70 சூதின்கண் கன்றினான் 84 சூதினைக் கன்றினான் 84 சூதினைக் கன்றும் 70 செல்க சாத்தன் 64 செவியிலி வந்தது 179 செவியிலி வந்தாள் 179 செவியிலி வந்தான் 179 செற்றாரைச் செறும் 70 சொல் பயன் தந்தது 58 சோறு அட்டது 240 ஞ ஞாயிறு எழுந்தது 58 த தந்தையை ஒக்கும் 70 தந்தையை ஒப்பன் 207 தந்தை வந்தது 177 தந்தை வந்தான் 177 தலை முடிந்தது 178 தலை முடிந்தன 178 தலை முடிந்தாள் 178 தலை முடிந்தான் 178 தாய் வந்தது 176 தாய் வந்தாள் 176 திங்கள் எழுந்தது 58 திண்ணை மெழுகிற்று 240 தீ வெய்து 19 துண்ணென்று துடித்தது 256 தும்பி கூறு 123 தூங்கல் வந்தது 178 தூங்கல் வந்தன 178 தூங்கல் வந்தாள் 178 தூங்கல் வந்தான் 178 தூணைச் சாரும் 70 தூது வந்தது 55 தெய்வம் தந்தது 58 தேரை ஊரும் 70 ந நங்கை வாழி 123 நட்பு நன்று 55 நம்பி வாழி 123 நல்லன் அரசன் 245 நனி வந்தான் 226 நாடு வந்தது 55 நாளை உண்டேன் 11 நாளைக்கு வரும் 74 நிலத்தது விலைக்கலம் 78 நிலம் வலிது 19 நிலனென்று நீரென்று 256 நிறத்தான் நல்லன் 72 நினக்குக் கொடுத்தது 28 நினக்குச் சென்றது 28 நினக்குத் தந்தது 28 நினக்கு வந்தது 28 நீ அரசன் 187 நீ ஆம் 219 நீஇர் இல்லை 219 நீ இர் வந்தீர் 184 நீஇர் வேறு 219 நீ இல்லை 219 நீ உண் 15 நீ உண்டனள் 11 நீ கடல் 187 நீ குயத்தி 187 நீ கூட்டு 219 நீ செய்ம்மன 219 நீ வந்தாய் 184 நீ வேறு 219 நீங்கினான் ஊரின் 102 நீர் தண்ணிது 19 நீலம் உண்ட துகில் 417 நீலம் பற்றின துகில் 417 நூல் ஆடையாயிற்று 20 நூலை இழைக்கும் 70 நூலைக் கற்கும் 70 நூலை நெய்தான் 70 நெல்லது குப்பை 78 நெறியைச் செல்லும் 70 ப பகலோ இரவோ 17 பகைவரை வெகுளும் 70 பச்சென்று கிடந்தது 256 படைதிரண்டது 55 படையது குழாம் 78 பரணி தோன்றிற்று 58 பலவற்றைத் தொகுக்கும் 70 பாட்டது கருத்து 78 பாலது கலம் 78 பாவை வந்தாள் 114 புதல்வரைப் பெறும் 70 புலி போலப் பாய்ந்தான் 247 புலி போலும் சாந்தன் 247 புலி போன்ற சாத்தன் 247 புலி வந்தது 55 பூதம் செறிந்தது 58 பூதம் புடைந்தது 58 பூ நட்டார் 111 பெண்மகன் வந்தாள் 188 பேய்பிடித்தது 58 பேரூர்கிழான் வந்தான் 40 பைங்கூழ் நல்ல 20 பொருளது கேடு 78 பொருளை இழக்கும் 70 பொன் பூண்டான் 111 பொன்னை நிறுக்கும் 70 போரின்கண் வந்தான் 79 ம மகக் கிடந்தது 55 மகற்குக் காதலன் 74 மண்ணை வனைந்தான் 70 மணி நன்றாயிருந்தது 22 மயிர்நல்ல 20 மனைஅயல் இருந்தான் 80 மா ஓடிற்று 51 மா காய்த்தது 51 மாடத்தின்கண் இருந்தான் 79 மாடத்தின்கீழ் இருந்தான் 80 மாடத்தின்மேல் இருந்தான் 80 மாதர் கூறு 123 மாலைக்கண் வனைந்தான் 79 மாவும் மருதும் 51 முடத்தி வந்தது 176 முடத்தி வந்தான் 176 முடம் வந்தது 55 முடவன் வந்தது 177 முலை எழுந்தது 176 முலை எழுந்தான் 176 முதியான் வந்தது 184 முதியான் வந்தான் 184 மேவாய் எழுந்தான் 176 ய யாண்டையான் சாத்தன் 64 யானையது தோட்டி 78 யானைக்கோடு கிடந்தது 415 யானையது காடு 78 யானை வந்தது 178 யானை வந்தன 178 யானை வந்தாள் 178 யானை வந்தான் 178 யாம் இருவர் 203 யாம் இருவேம் 203 யாம் இல்லை 219 யாம் வேறு 219 யான் ஆம் 219 யான் இல்லை 219 யான் கூட்டு 219 யான் செய்ம்மன 219 யான் வேறு 219 யான் வைதேன் 254 யான் வைதேனா 238 யான் வைதேனே 254 யான் வைதேனோ 238 வ வணிகன் சாத்தன் 64 வந்தான் சாத்தன் 64 வயிறு குத்திற்று 15 வயிறு குத்தும் 15 வலியை உடையன் 70 வளி உளரும் 19 வனைகலத்தது திகிரி 78 வாணிகத்தின் ஆயினான் 72 வாழும் வாழ்வு 252 வியாழம் எழுந்தது 58 விளிம்பை நெய்தான் 70 விறல் வந்தது 55 வினை விளைந்தது 58 வெட்டினான் வாளான் 102 வெள்ளி பட்டது 58 வெளிதன்று கரிது 17 வேங்கை பாய்ந்தது 51 வேந்து சென்றது 55 வேந்து வாழி 123 செய்யுள் நிரல் (மேற்கோள்) (எண்: நூற்பா எண்) அ அக்காரம் யாவரே..... வேம்பு- நாலடி. 112 252 அகலிரு விசும்பின் ஆஅல் - மலைபடு. 100 443 அகவன்மகளே, அகவன் மகளே - குறுந். 23 143 அகனமர்ந்து செய்யாள் உறையும் - குறள். 84 376 அங்கண் விசும்பின் - நாலடி. 151 49 அஞ்சுவது ஓரும்...... அவா - குறள். 366 292 அஞ்செங்கழுநீர்க் கண்போல் ஆயிதழ் - அகம். 48 392 அட்டில் ஓலை தொட்டனை நின்மே - நற். 300 441 அடர்பொன் அவிர்ஏய்க்கும் அவ்வரி வாட- பாலைக்கலி. 22 386 அடல்வேல் அமர்நோக்கி ..... ஆமென்று தாம் 401 அதுகொல் தோழி காம நோயே - குறுந். 5 265 அந்திற் கச்சினான் - அகம். 76 264 அம்பல் ஊரும் அவனொடு மொழிமே - குறுந். 51 232 அம்ம வாழி தோழி - ஐங்குறு. 31 272 அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் - புறம். 99 334 அரிமயிர் திரள்முன்கை - புறம். 11 352 அரிவையைப் பெறுகதில் அம்ம யானே - குறுந். 14 250 அரும்பிணை அகற்றி வேட்ட ஞாட்பினும் - புறம். 99 334 அரும்பெறல் உலகம் நிறைய.... புகழே - புறம். 62 292 அலமரல் ஆயம் - ஐங்குறு. 64 308 அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம் - நான்மணி. 26 226 அவரோ வாரார் முல்லையும் பூத்தன - குறுந்.221 253 அவல்எறி உலக்கைப் பாடு விறந்து - பெரும்பாண். 226 344 அவன் அணங்கு நோய்...... விழைவு 37 அழுக்காறு உடையார்க்கு....... கேடீன்பது - குறள். 165 425 அளிதோ தானேஅது பெறலருங் குரைத்தே - புறம். 5 268 அற்றார் அழிபசி தீர்த்தல்....... புழி - குறள். 226 425 அற்றால் அளவறிந்து உண்க - குறள். 943 226 அறல்சாய் பொழுதோடெம் அணி நுதல் வேறாகி - கலி. பாலை. 26 108 அறனோக்கி யாற்றுங் கொல் - குறள். 189 90 அன்னச்சேவல் அன்னச்சேவல் - புறம். 67 417 அனையை யாகன்.... நின்னஞ்சும்மே - புறம். 20 72 ஆ ஆங்கக் குயிலும் மயிலும் காட்டி..... போகியோனே 273 ஆமான் நல்லேறு சிலைப்ப - முருகு. 315 354 ஆரமர் அலறத்தாக்கி.....பிரிக - புறம். 71 442 ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர் - நற். 170 328 ஆலத்து மேல குவளை...... குரங்கு 405 ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்..... சேர்மின் - புறம். 9 48, 123 இ இஃதொத்தன் - கலி. 62 277 இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் - குறுந். 178 414 இம்மைப் பிறப்பில்........கொண்டனள் - குறள். 1315 428 இயங்குபடை அரவம் எரிபரந் தெடுத்தல் - புறத். 8 287 இயைந்து ஒழுகும் 306 இருநோக்கு இவளுண்கண் உள்ளது - குறள்.1091 60 இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா - புறம்.44 392 இலம்படு புலவர் ஏற்றகை நிறைய - மலைபடு. 577 356 இறப்பத் துணிந்தனிர் கேண்மின் மற்றைய - கலி. 2 452 இன்னாதுறைவி யரும்படர் - புறம். 145 441 ஈ ஈங்கிதோர் நல்கூர்ந்தார் - கலி. 56 55 ஈயாது வீயும் உயிர்தவப் பலவே - புறம். 235 295 உ உச்சி மீமிசை 450 உண்டா லம்ம இவ்வுலகம் - புறம் . 182 272 உண்ணாமை வேண்டும் புலாஅல் - குறள். 257 45 உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே 269 உயர்ந்தோங்கு சமந்தத்து உச்சி மீமிசை - மணிமே. 22-11 450 உயவுப்புணர்ந் தன்றுஇவ்வழுங்க லூரே - நற். 203 345 உரற்கால் யானை - குறுந். 232 447 உருகெழு கடவுள் - பதிற். 21 296 உருமில் சுற்றமோடு இருந்தோற் குறுகி - பெரும்பாண். 447 361 உலகம் உவப்ப - கணவன் - முருகு.1-6 408 உலகமுழு தாண்ட - சிலப். அந்தி. 1 322 உவந்து உவந்து ஆர்வநெஞ்ச மோடு - அகம். 35 303 உள்ளிய தெல்லாம் உடனெய்தும் ..... எனின் - குறள். 309 60 உளரென்னும் மாத்திரையர் - குறள். 406 304 உறக்குந் துணையதோர் ..... விடும் - நாலடி. 38 291 உறந்த விஞ்சி 343 உறுபுனல் தந்து உலகூட்டி - நாலடி. 185 295 ஊ ஊரவர் கவ்வை - குறள். 1147 392 ஊன்றுவை - கறிசோறுண்டு - புறநா. 14 45 எ எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு....... நோய். - குறள். 429 314 எய்யா மையலை நீயும் வருந்துதி - குறிஞ்சிப் . 8 338 எயின்முகம் சிதையத்.... யானை - பதிற். 38 114 எல்வளை மகளிர் - புறம். 24 266 எற்றென் உடம்பின் எழில்நலம் 260 எற்றென்று இரங்குவ செய்யற்க - குறள். 655 333 எம்போல் இன்றுணைப் பிரிந்தாரை உடையையோ நீ - கலி. 12 187 என்முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் - சிலப். 77 220 என்முதற் பிழைத்தது - சிலப். வழக். 77 220 என்னீர் அறியாதீர் - கலித். 6 452 என்னோ டிருப்பினும் இருக்க..... - மணி. சிறைவிடு. 35-6 72 எனவாங்கு ஒள்ளழல்...... பூப்பெற் றிசினே - புறம்.11 292 ஏ ஏஎ இஃதொத்தன் - கலி. 62 277 ஏஏ இவளொருத்தி பேடியோ என்றார் - சீவக. 652 268 ஏகல் அடுக்கம் - நற்.116 301 ஏந்திள வனமுலை - மணி. 18-69 111 ஏம மாக இந்நிலம் ஆண்டோர்........மன்னிநில்லா 32 ஏறிரங்கு இருளிடை - கலி. 46 354 ஐ ஐதென விம்மி அவர்க்கது கூறிய... கைகூப்பி 381 ஐ தேய்ந்தன்று பிறையுமன்று.... மதியுமன்று - கலி. 55 252 ஒ ஒக்கல் ஒற்கம் சொலிய - புறம். 327 356 ஒக்குமே ஒக்குமே .... நிறம் 419 ஒருபெருஞ் சும்மையொடு - அகம். 11 345 ஒருவர் ஒருவரைச் சார்ந்தொழுகல்.... அல்லால் - நாலடி. 309 187 ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி - அகம். 48 447 ஒல்லும் வகையான் அறவினை யோவாதே - குறள். 33 392 ஒன்னாதார்க் கடந்தடூஉம்..... மேல் - கலி. 27 453 ஓ ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும்.... மவர்- குறள். 653 220 ஓஓ உவமன் - களவழி. 36 277 ஓர்கமா தோழிஅவர் தேர்மணிக் குரலே 269 க கடல்போல் தோன்றல காடிறந் தோரே - அகம். 1 254, 282 கடவுட் பரவிக் கைதொழூஉப் பழிச்சி - மலைபடு. 538 378 கடவுள் ஆயினும் ஆக, மடவை மன்ற வாழிய முருகே - நற். 34 262 கடாவுக பாகநின் கால்வல் நெடுந்தேர் 220 கடிகாவின் பூச்சூடினன் - புறம். 239 379 கடிந்த கடிந்து ஒரார்..... தரும் - குறள். 658 379 கடிமரம் தடியும் ஓசை.... இயம்ப - புறம். 36 354 கடிமிளகு தின்ற கல்லா மந்தி 380 கடியின் புகூஉம் கள்வன்போல 379 கடியுண் கடவுட்கு இட்ட..... மஞ்ஞை - குறுந். 105 379 கடுங்கால் ஒற்றலின் - பதிற்றுப். 25 379 கடுஞ்சூள் தருகுவன் நினக்கே - அகம். 110 379 கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண் - புறம். 15 379 கடு நுனைப் பகழி 379 கடும்பகல் - அகம். 148 379 கடும்பாம்பு வழங்கும் தெருவின்...... எம்மே - குறுந். 354 379 கடுவய நாகுபோல் நோக்கி - முல்லைக்கலி. 116 367 கடுவன் முதுமகன் கல்லா..... தோழர் பற்ற 31 கண்டிகும் அல்லமோ - ஐங்குறு. 121 271 கண்ணும் படுமோ என்றிசின் யானே - நற். 61 271 கணிகொண்டு அலர்ந்த நறவேங்கை....... கொண்ட - சூளா. அரசி. 197 72 கதழ்பரி நெடுந்தேர் - நற். 203 313 கம்பலை மூதூர் - புறம். 54 345 கமஞ்சூல் மாமழை - முருகு.7, அகம். 43, குறுந். 158 351 கயந்தலைக் குழவி 319 கயலறல் எதிரக் கடும்புனல் சாஅய் - நெடுநல். 18 326 கயவாய் - அகம். 118 318 கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு - அகம். 36 373 கடுங்கோட்டி யானை 26 கருங்கட் டாக்கலை - குறுந். 69 340 கருவி வானம் - புறம். 159 350 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்...... பொறை. - குறள். 570 413 கல்லெனக் கவின்பெற்ற விழாஆற்றுப் படுத்தபின் - கலி.5 255 கலம்பெறு கண்ணுளர் ஒக்கல்.... பெறுகுவிர் - மலைபடு. 50 452 கலிகொள் ஆயம் - அகம். 11 345 கலைப்புற வல்குல் கழுகு குடைந்துண்டு - மணி. 6-112 45 கவரி மான்கணம் கல்லறை தெவிட்ட 392 கவர்நடைப் புரவி - அகம். 130 358 கவழக்களிப்பியன் மால்யானை சிற்றாளி......தொக்கு - திணைமாலை. 42 114 கவிசெந் தாழிக் - புறம். 238 26 கழிகண் ணோட்டம் - பதிற்றுப். 22 312 கழுதுருவின கஞலிலையன கழிமடலின கைதை - சூளா, தூதுவிடு. 2 392 கழுமிய ஞாட்பின் - களவழி. 11 347 கழூஉவிளங்கு ஆரம் கனவஇய மார்பே - புறம். 19 353 கள்உண்ணாப் போழ்து - குறள். 930 45 களிறும் கந்தும் போல நளிகடல்..... நாட்டே. - மயிலை ப-ம். 282 401 களிறு வழங்கு அதர் கானத்து அல்கி - பொருந. 49 392 கறவை கன்றுவயின் படர - குறுந்.108 336 கறுத்த காயா - பதிற். 15 369 கன்முகை யருவி தண்ணெனப் பருகி - புறம்.150 255 கன்னித்தென்கரை கடற் பழந்தீபம் - குன்றகம் 396 காட்டுச்சார் ஓடும்குறு முயல் 80 காதலியைக் கொண்டு கவுந்தியொடுகூடி......வினை 101 காதற் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா.. மாதவி - சிலப். 5.189-190 439 காப்பும் பூண்டிசிற் கடையும் போகல் - அகம்.7 270 காமஞ் செப்பாது - குறு. 2 270 காலாழ் களரின் நரியடும்....களிறு - குறள். 500 434 கான்கெழு நாடற் படர்ந்தோர்க்கு..... யானே - நற். 61 291 கானக நாடனை நீயோஒ பெரும - புறம். 5 253 கானம் காரெனக் கூறினும்..... வழங்கலரே - குறுந். 29 253 கானம் தகைப்ப செலவு - கலி. 3-22 7 கானலஞ் சேர்ப்பன் கொடுமை எற்றி - குறுந். 145 333 கிளைஅரில் நாணற்கிழங்கு மணற்கு ஈன்ற முளை - அகம். 212 107 குடாவடியுளியம் - முருகாற். 313 396 குணன் அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும். - நாலடி. 353 346 குரல்ஓர்த் துத்தொடுத்த..... -திரிவுறீஇய - மலைபடு. 23-24 392 குருகுகரு உயிர்ப்ப ஒருதனி ஓங்கிய திருமணிக்காஞ்சி - மணி. காதை. 1 439 குருமணித்தாலி 298 குரைகழல் 291 குழக்கன்று - நாலடி.101 309 குழலன் கோட்டன் - முருகு. 209 208 குறங்கென மால்வரை - சிறுபாண். 20 418 குறிஞ்சிக் கண்ணியர் குவளை பூண்டு.... இருக்கை 161 குறிப்பேவல் செயன்மாலைக் கொளை நடை அந்தணீர் - கலி. 9 311, 452 குன்றுதொ றாடலும் நின்றதன் பண்பே - முருகு. 217 292 கூந்தன்மா ஊர்ந்து.....மறு. - முத்தொள். 132 கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் - கலி. 1 226 கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் - குறள். 701 226 கெடவரல் 317 கொடி குவளை கொட்டை......மேனி 401 கொடிஇய செல்வார்த் - முல்லைக்கலி. 16 367 கொடுங்கோல் கோவலர்.....தாயர் - முல்லைப். 15,16 161, 453 கொல்லிப் பொருப்பனாற்.... பேது 99 கொன்முனை இரவூர் போல - குறுந். 91 251 கொன்வரல் வாடை 251 கொன்னூர் துஞ்சினும் - குறுந். 138 248,251 கொன்னே கழிந்தன்று இளமையும் - நாலடி. 55 251 கோடுபல முரஞ்சிய கோளி யாலம் - மலைபடு. 268 329 கோட்டுப்பூச் சூடினும் காயும்...... என்று - குறள். 1313 108 கோலஞ்சி வாழுங் - திரி. 33 49 ச சாயல்மார்பு நனி அலைத் தன்றே - பதிற். 16 321 சாரல் நாடஎன் தோழியும் கலுழ்மே 232 சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகா... இவள் - பரி. 8 132 சான்றோர் அல்லர் தோழி 205 சிவந்த காந்தள் - பதிற். 15 369 சிறிதுதவிர்ந் தீக மாளநின் பரிசிலர் உய்ம்மார் - மயிலை ப-ம். 99 292 சிறிய கட்பெறினே எமக்கீயும் மன்னே - புறம். 235 249 சிறுகண் யானை. - சிறுபாண். 142 26 சிறுமை உறுபவோ செய்பு அறியலரே - நற். 1 337 சினத்தைப் பொருள் என்று கொண்டவன் - குறள். 307 256 சுரை ஆழ அம்மி மிதப்ப.... சுனை 402 சூரல் பம்பிய சிறுகான் யாறே..... வரலாறே 403 செங்கால்நாரை 26 செங்கேழ் மென்கொடி - அகம். 80 298 செய்திரங் காவினை - புறம். 10 355 செய்வினை மருங்கின் செலவயர்ந்து.... உளர்தீயே - கலி. 7 292 செலீஇயர் அத்தை நின்வெகுளி - புறம். 6 292 செழுந்தடி தின்ற செந்நாய் ஏற்றை 348 செழும்பல் குன்றம் 348 சென்றது சென்றது வாழ்நாள்..... கூற்று - நாலடி. 4 239 சென்றீபெரும நிற்றகைக்குநர் யாரோ - அகம். 46 291,441 சென்றே எறிப ஒருகால் சிறுவரை ..... சுமந்து - நாலடி. 24 278 சேர்ந்த சினை இளங்குரைய வாயினும் 268 சேர்ந்துசெறி குறங்கு - நற். 170 359 சேவலங் கொடியோன் காப்ப - குறு-கட-வாழ்த்து 54 சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் - அகம். 46 382 த தடக்கை - புறம். 394 318 தடமருப்பெ ருமை - நற். 120 319 தண்டையின் இனக்கிளி கடிவோள் 399 தண்ணந் துறைவர் தகவிலர் 399 தணக்குங்கால் கலுழ்பானாக் கண் எனவும் உளஅன்றோ - கலி.25 392 தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றத்து - நெடுநல். 90 357 தாவில் நன்பொன் தைஇய பாவை - அகம். 212 340 தான்பிற வரிசை அறிதலின் தன்னும் தூக்கி - புறம். 140 275 திசைதிசை தேனார்க்கும் திருமருத முன்றுறை.... உறைபவர் - கலி. பாலை. 26 220 திருத்தார்நன் றென்றேன் தியேன் 399 துணிந்து சொல்லல், கூறிட்டு மொழிதல்..... - மணி. 30 - 235-249 13 துணிநீரால் தூய்மதி நாளால் அணிபெற..... இளவேனில் - கலி.32 99 துணையின் தீர்ந்த கருங்கண் யானை - நற். 108 316 துயவுற்றேம் யாமாக 364 துறக்குவ னல்லன் துறக்குவ னல்லன்.... தோன்றியற்று - கலி.41 418, 426 துனிகூர் எவ்வமொடு - சிறுபாண். 39 312 துனைபரி துரக்கும் துஞ்சாச் செலவின்..... அகம். 9 313 தூவல் கலித்த தேம்பாய் புன்னை - புறம். 24 386 தெங்கங்காய் போலத் திரண்டு..... வரின் 402 தெருமரல் உள்ளமோடு அன்னை துஞ்சாள் 308 தெவ்வுப்புலம் 343 தேம்பைந்தார் மாறனைத் தென்னர் பெருமானை.... உற 99 தேவரே தின்னினும் வேம்பு - நாலடி. 112 291 தேவாதி தேவன்அவன் சேவடி சேர்தும் அன்றே - சீவக. 1 291 தொடிநோக்கி மென்தோளும்..... செய்தது - குறள். 1279 449 தோழியா சுவாகதம் வருக ஈங்கென - சீவக. 1021 275 தோற்றம் இசையே நாற்றம் சுவையே.... மொழிப. 284 ந நகை அச்சாக நல்லமிர்து கடைந்த..... ஒருகை - பரிபாடல்-3-33,34 111 நசை பிறக்கு ஒழிய - புறம். 15 275 நயந்து நாம்விட்ட நன்மொழி நம்பி - அகம். 198 325 நரகத்துள் உறைதல் நன்றோ ஊன்தினாது... நன்றோ - சீவக. 1235 17 நல்குரவு என்றும் இடும்பையுள்.... படும் - குறள். 1045 268 நல்லவர் நுடக்கம்போல் - கலி. பாலை. 32 99 நல்லை மன்என நகூஉப் பெயர்ந்தோளே - அகம். 248 205 நளி இருள் 319 நளிமலை நாடன் நள்ளி - புறம். 150 318 நன்றும் அரி துற்றனையால் பெரும - அகம். 10 339 நனந்தலை உலகம் - பதிற். 63 372 நனவிற் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே..... அன்றே - கலி. குறி. 3 226 நனவுப்புகு விறலியின் தோன்றும் நாடன் - அகம். 82 372 நாடு கிழவோன் - பொருந. 248 189 நாணாமை நாடாமை நாரின்மை..... தொழில் - குறள். 833 289 நாம நல்லராக் - அகம். 72 361 நாயுடைமுதுநீர் கலித்த தாமரை - அகம். 16 37 நாளன்று போகிப் புள்ளி தப்ப - புறம். 124 226 நாளென ஒன்று போல் காட்டி - குறள். 334 255 நாற்ற நாட்டத்த அறுகாற் பறவை - புறம். 70 392 நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும் - நான்மணி. 9 74 நிலப்பெயர் குடிப்பெயர் - தொ.பெய. 11 286 நிலம்புடையூ எழுதரும் வலம்படு குஞ்சரம் நிலம் பூத்த மரமிசை - நாலடி.க.வ. 224 நிவந்தோங்கு உயர் கொடிச் சேவலோய் - பரிபாடல். 3-18 54 நிழத்த யானை மேய்புலம் படர - மதுரைக். 303 326 நிற்கறுத் தோரருங்கடி - பதிற். 13 368 நின்றன நின்றன நில்லா.... செய்க - நாலடி. 4 418 நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே - புறம். 45 453 நின்னீர அல்ல நெடுந்தகாய் - கலி. 6 452 நின்னுறு விழுமம் களைந்தோன் - அகம். 170 349 நின்னை யன்றே திருமுக் குடையாய் 278 நீசிவந்து இறுத்த நீரழி பாக்கம் - பதிற். 13 368 நீயும் தவறிலை நின்னைப் புறங்கடை..... தவறிலர் - கலி. 56 187 நீயே பிறர்நாடு கொள்ளுங்காலை - புறம். 57 187 நீர்த் தெவ்வு நிரைத்தொழுவர் - மதுரைக். 89 341 நீ வெய்யோளொடு - அகம். 6 330 நுணங்கிய கேள்வியர் - குறள். 419 370 நுழைநூல் கலிங்கம் - மலைபடு. 561 370 நெடும்புனலுள் வெல்லும் முதலை.... பிற - குறள். 495 434 நெடும்பெருங் குன்றத்து அமன்ற காந்தள் - அகம். 4 392 நெடுவெண் திங்களும் ஊர்கொண் டன்றே - அகம். 2 18 நெல்லரியு மிருந்தொழுவர் - புறம். 24 252, 288 நெல்லரியும் இருந்தொழுவர்...... பாயுந்து - புறம். 24 453 நெறிதாழ் இருங்கூந்தல் நின்பெண்டிர் எல்லாம் - கலி. 97 182 நொசி மருங்குல் - குறிஞ்சிக்கலி. 24 370 நொறில் இயற்புரவி அதியர்கோமான் 392 நொறில் இயற்புரவி கழற்கால் இளையோன் 392 நோதக விருங்குயி - கலி. 33 275 ப பகலே பலரும் காண நாண் விட்டு.... வரற்கே - நற். 365 442 படுமகன் கிடக்கை காணூஉ - புறம். 278 224 படை குடி கூழ்அமைச்சு...... ஏறு - குறள். 381 286 படையிடுவான் மன்கண்டீர் காமன் .... புகின் - முல்லைக்கலி. 9 421 பணைத்து வீழ் பகழி 335 பணைத்தோள் - அகம். 1 335 பதவு மேய்ந்த மதவு நடை நல்லான் - அகம். 14 373 பயவாக் களர் அனையர் கல்லாதவர் - குறள். 406 304 பருந்திருந்து உயாவிளி பயிற்றும் யா - அகம். 16 365 பழுதுகழி வாழ் நாள் 320 பாசிழை ஆகம் பசப்பித்தான் 399 பாடல் சான்ற விறல் வேந்த னும்மே.... பெற்றிசினே - புறம். 11 271 பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே - புறம். 375 201 பாய்ந்தாய்ந்த தானை பரிந்தானா மைந்தினை - கலி. 96 326 பாய்புனல் 157 பார்ப்பன மகனே பார்ப்பன மகனே - குறுந். 156 132 பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்......வார் - ஆசார. 64 49 பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு - அகம். 48 42 பிரியின் வாழாது என்போ தெய்ய 275, 292 பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடை யாளர்போல் - கலி. 34 392 புகழ்ந்திகும் அல்லரோ பெரிதே 271 புதுமலர் கஞல - புறம். 147 249 புரைய மன்ற புரையோர் கேண்மை - நற். 1 297 புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த - புறம். 33 224 புல்லென் யாக்கை புலவுவாய்ப் பாண - பெரும்பாண். 22 452 புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி - அகம். 7 327 புலையன் எறிந்த பூசல் தண்ணுமை....கரிப்ப - அகம். 59 451 புறநிழல் பட்டாளோ இவள்இவட் காண்டிகா - கலி. 99 275 புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி - அகம். 56 371 பெண்ணவாய் ஆணிழந்த பேடி.... கலம் - நாலடி. 251 12 பெருங்காட்டுப் பண்ணிய பருங்கோட்டு ஈமம்....அற்றே - புறம். 246 250 பெருந்தலைப் புல்லார் நல்லார் 26 பெருவரை அடுக்கம் பொற்ப - நற். 34 331 பெற்றி திரிந்து பெருவறங் கூரினும்.... பழி 99 பேஎம் நாறும் தாழ் நீர்ப் பனிச்சுனை. இறைய - உரை சூ7. உரை 386 பேரிசை நவிரம் மேஎ உறையும் - மலைபடு. 82 325 பையுண்மாலை - குறுந். 195 337 பொய்கை துவன்ற புனிறுதீர் பனுவல் 386 பொருநா கிளம்பாண்டில் தேரூர... மதையினள் - முல்லைக்கலி. 9 374 பொருளானாம் எல்லாம் என்று ஈயாது இவறும் - குறள். 1002 392 பொருள்கருவி காலம் வினை..... செயல் - குறள். 675 290 பொள்ளென ஆங்கே புறம்வேரார்..... யவர் - குறள். 487 255 பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை.... னவர். - நாலடி.162 278 போகுகொடி மருங்குல் 315 போரெறுழ்த் திணிதோள் - பெரும்பாண். 63 384 போற்றின் அரியவை போற்றல்.... அரிது - குறள். 693 380 ம மகவிழந்து அழுங்கிய 346 மகனெனல் மக்கட் பதடி எனல் - குறள். 196 220 மடிமை குடிமைக்கண் தங்கிற்றன்.... விடும் - குறள். 608 55 மண்ணைச்சுமந்தவன் தானும்.... பெறலாமே 439 மண்திணிந்த நிலனும்.....நீரும் - புறம். 2 252 மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல் - பதிற். 21 299 மருந்தெனின் மருந்தே....மகளே - குறுந். 71 426 மலைநாறிய வியன்ஞாலத்து - மதுரைக். 4 392 மல்லல் மால்வரை - அகம். 52 300 மழகளிறு - புறம். 38 309 மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ் - சீவக. 1873 259 மற்றறிவாம் நல்வினை யாம் இளையம் - நாலடி. 19 259 மறப்பரு காத - கலித். 2 452 மறம்பாடிய பாடினியும்மே.... பெற்றிசினே - புறம். 11 442 மன்ற மராஅத்த பேமுதிர் கடவுள் - குறுந். 87 361 மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் - புறம். 165 392 மாக்கடல் நிவந்தெழுதரும் செஞ் ஞாயிற்றுக் கவினை - புறம். 4 18, 392 மாதர் நோக்கு 324 மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே - அகம். 130 374 மியாஇக மோமதி இகுஞ்சின்..... அசைச்சொல் 270 முறைதிரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக - புறம். 71 442 மேவார்த் தொலைத்த விறன்மிகு வேஎள் 145 மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே - கலி. 7 305 மோயினள் உயிர்த்தகாலை - அகம். 5 447 மோரொடு வந்தாள் தகைகண்டை.... வனப்பு - முல்லைக்கலி. 9 422 ய யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் - நாலடி. 28 74 யாணு விசும்பின் அமரர் உட்பட..... பெட்டபின் 377 யாமுமக்குச் சிறந்தன மாதல் அறிந்தனி ராயின் - கலி. 5 74 யாரஃது அறிந்திசினோரே - குறுந். 18 271 யாழிசையூப் புக்கு 307 யானும் என் எஃகமும் சாறும்....போர் 41 யானொன்று உசாவுகோ ஐய சிறிது - கலி. 7 366 வ வண்டுசுழல வருவார் ஒருவரைக்.... உயிர் 187 வந்துநனி வருந்தினை வாழிஎன் நெஞ்சே - அகம். 19 295 வந்தோய் மன்ற தண்கடற் சேர்ப்ப - அகம். 80 206 வம்ப மாரி - குறுந். 66 323 வயக்கஞ்சால் சீர்த்தி 310 வயக்களிறு - மது. 15 362 வரிவளை துவைப்ப. - முருகு. 315 354 வருகதில்அம்ம - அகம். 276 248, 250 வருமே சேயிழை அந்தில் கொழுநர்க் காணிய - குறுந். 293 264 வலம்புரித் தடக்கை மாஅல் 145 வளிநடந்தன்ன.... எனாஅ - புறம். 197 285, 289 வளியிடை வழங்கா வானம் சூடிய..... கிடக்கை - புறம். 35 453 வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி - புறம். 47 336 வறிது நெறி ஒரீஇ 332 வாடுபு வனப்போடி வணங்கிறை வளைஊர - கலி. 16 224 வாணுதல் - முருகு. 6 363 வாயாச்செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் - கலி. 37 392 வாயில் இசை 307 வார் கயிற்று ஒழுகை - அகம். 173 315 வார்ந்திலங்கு வையெயிற்றுச் .....யானே - குறுந். 14 315 வாராய்நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு - கலி. 121 99 வாழச்செய்த நல்வினை அல்லது..... இல்லை - புறம். 367-10, 11 226 வானம் ஊர்ந்த வயங் கொளி மண்டிலம்.... காட்டு - அகம். 11 392 வானிடு வில்லின் வரவறியா வாய்மை யால் - நாலடி. கட. வாழ் 224 வானின்று உலகம் வழங்கி.... பாற்று - குறள். 11 103 விசும்பு உகந்து ஆடாது 302 வித்தொடு சென்ற வட்டி....ஊர - நற் .210 375 விதிர்ப்புற அறியா ஏமக்காப்பினை - புறம். 20 314 வியலுலகம் 360 விருந்தின்றி உண்ட பகலும் - திரிகடு. 44 226 வில்லோன் காலன கழலே....தாமே - குறுந். 7 189 விழுமியோர்க் காண்டொறும் செய்வர் சிறப்பு - நாலடி. 159 349 விழைந்து முதிர்கொற்றத்து விறலோய்.... வாழி - சிலம்பு 23: 80-84 40 விளங்குமணிக் கொடும்பூ ணாஅய்நின் நாட்டு - புறம். 130 150 விளிந்தன்று மாதுஅவர்த் தெளிந்தஎன் நெஞ்சே - நற். 178 275 விறந்த காப்போடு உள்நின்று வலியுறுத்தும் 343 வினவி நிற்றந் தோனே - அகம். 48 205 வீடுஉணர்ந் தோர்க்கும் வியப்பாமால்..... இடம் - பு.வெ.மா.வஞ்சி. 19 431 வீரப்புலியனின் வெல்போர் வளவனின்.... வேந்து 99 வெந்திறல் கூற்றம் பெரும்பே துறுப்ப.... என்ற - புறம். 238 278 வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்து - மலைபடு. 374 299 வெவ்வெரி கொளீஇ 18 வெள்வேல் விடத்தரொடு காருடை போகி - பதிற். 13 315 வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன் - புறம். 53 343 வேண்டார் வணக்கி விறல் மதில் தான் கோடல். - மயிலை நா. ப-ம். 79 399 வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து - புறம். 27 349 வேனில் உழந்த வறிது உயங்கு ஓய்களிறு - கலி. 7 326 வைந்நுனைப்பகழி - முல்லை. 73 383 கலைச்சொல் நிரல் (நூற்பாவழி) (எண்: நூற்பா எண்) அ அஃறிணை 1, 3 அஃறிணை இயற்பெயர் 167 அஃறிணைக் கிளவி 41 அஃறிணைக்குரிமை 195 அஃறிணை விரவுப்பெயர் 146 அச்சக் கிளவி 95 அசைச்சொல் நீட்டம் 149 அசைநிலைக் கிளவி 247, 264, 267, 275 அடிமறிச் செய்தி 403 அடிமறி மொழிமாற்று 400 அண்மைச் சொல் 123, 127 அதுச்சொல் வேற்றுமை 207 அதுவென் வேற்றுமை 85, 96 அதுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 77 அவையல் கிளவி 435 அளபெடைப் பெயர் 131, 137, 145 அளவின் பெயர் 412 அறியாப் பொருள் 29 அன்மைக் கிளவி 25 அன்மொழித் தொகை 407, 413 ஆ ஆக்கக் கிளவி 22 ஆக்கமொடு கூறல் 20 ஆகுபெயர்க் கிளவி 111 ஆடியற் பெயர் 161 ஆடூஉ அறிசொல் 2, 5 ஆண்மை அறிசொல் 12 ஆண்மை இயற்பெயர் 172 ஆண்மைச் சினைப்பெயர் 173 ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 174 ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவி 4, 12 ஆண்மை முறைப்பெயர் 175 ஆய்தப் பெயர் 163 ஆயென் கிளவி 206 ஆரைக் கிளவி 267 ஆற்றுப்படை 452 இ இகர இறுபெயர் 121 இசைக்குங் கிளவி 421 இசைநிறைக் கிளவி 247 இசைப்படு பொருள் 419 இடைச்சொற் கிளவி 155 இடைநிலை 231 இதுசெயல் வேண்டும் என்னுங் கிளவி 237 இயற்கைப் பொருள் 19 இயற்சொல் 393, 394 இயற்பெயர் 170, 171 இயற்பெயர்க் கிளவி 36, 39, 190 இரட்டைக் கிளவி 46 இரவின் கிளவி 437 இருதிணை 10 இருதிணைக்கும் ஓரன்ன உரிமை 195 இருதிணைச் சொல் 168, 216 இருதிணைப் பிரிந்தவைம்பாற்கிளவி 157 இருபாற் கிளவி 213 இருபாற்சொல் 3 இருபெயர் 412 இருபெயரொட்டு 111 இருமொழி மேலும் ஒருங்குடன் நிலையல் 414 இருவயின் நிலையும் வேற்றுமை 98 இற்றெனக் கிளத்தல் 19 இறைச்சிப் பொருள் 190 இன்னெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 75 இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர் 18 ஈ ஈயென் கிளவி 437 உ உடன்மொழிப் பொருள் 183 உடனிலை அறிதல் 448 உடைப் பெயர் 161 உம்மை எச்சம் 429 உம்மைச் சொல் 252 உம்மைத் தொகை 407, 412, 416 உம்மை தொக்க எனாவென் கிளவி 285 உம்மை தொக்க பெயர் 413 உயர்திணை 1, 2, 4 உயர்திணைக்கு உரிமை 195 உரிச்சொற் கிளவி 155, 293 உருபு தொக வருதல் 101 உருபு தொடர்ந்தடுக்கிய வேற்றுமைக் கிளவி 99 உருபுநிலை 67 உவமத் தொகை 407, 409 உள்ளதன் நுணுக்கம் 326 உளவென் கிளவி 214 உறழ்துணைப் பொருள் 16 உறுப்பின் கிளவி 55 எ எச்சக் கிளவி 281 எஞ்சுபொருட் கிளவி 280, 423, 432 எடுத்த மொழி 59 எண்ணியற் பெயர் 161, 412 எண்ணின் பெயர் 412 எண்ணுக்குறிப் பெயர் 164 எண்ணுத்திணை 49 எதிர்மறை எச்சம் 428 எழுவாய் வேற்றுமை 63 எழுத்துப் பிரிந்திசைத்தல் 391 எற்றென் கிளவி 256, 260 என்னா மரபு 417 எனவென் எச்சம் 431 எனவென் கிளவி 255 ஏ ஏதுக் கிளவி 89 ஐ ஐம்பால் 10 ஐயெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 69 ஒ ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 71 ஒப்பல் ஒப்புரை 72 ஒப்பில் போலி 274 ஒப்பினாகிய பெயர்நிலை 164 ஒப்பொடு வரூஉங் கிளவி 159, 214 ஒருசொல் அடுக்கு 418 ஒருசொல் பலபொருள் 293 ஒருபெயர்ப் பொதுச்சொல் 47 ஒருபொருள் இருசொல் 450 ஒருபொருள் குறித்த வேறுசொல் 395 ஒருமை இயற்பெயர் 172 ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி 451 ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒருவழியுறுப்பு 78 ஒருவினை ஒடுச்சொல் 88 ஒருவினைக் கிளவி 72 ஒருமைச் சினைப்பெயர் 173 ஒருமை சுட்டிய சினைமுதற் பெயர் 174 ஒழியிசை எச்சம் 427 ஒன்றறிசொல் 3 ஒன்றறி கிளவி 8 ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவி 27 ஒன்றுமார் வினை 84 ஓ ஓம்படை ஆணை 392 ஓம்படைக் கிளவி 93 க கடிசொல் 442 கடியென் கிளவி 379 கண்ணென் வேற்றுமை 82, 85, 207 கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி 79 கயவென் கிளவி 319 கழுமென் கிளவி 347 காரணக் கிளவி 38 காலக் கிளவி 201, 215 காலங் கண்ணிய என்ன கிளவி 223 காலமொடு வரூஉம் வினைச்சொல் 195 கிளைநுதற் பெயர் 406 குடிப்பெயர் 161 குரை 268 குழுவின் பெயர் 161 குற்றியலுகரம் 119 குறிப்பொடு வரூஉங் காலக் கிளவி 209 குறுக்கும்வழிக் குறுக்கல் 399 குறைச்சொற் கிளவி 443 குன்றியலுகரம் 8, 197, 211 கொடுவென் கிளவி 437, 438 கொடையெதிர் கிளவி 94 கொன்னைச் சொல் 251 ச சார்பென் கிளவி 82 சினைநிலைக் கிளவி 83 சினைநிலைப் பெயர் 161 சினைப்பெயர் 170, 171 சினைமுதற் கிளவி 16, 31 சினைமுதற்பெயர் 170, 171 சினையறி கிளவி 111 சுட்டிக் கூறல் 34 சுட்டுப்பெயர் 38 சுட்டுப்பெயர்க் கிளவி 36 சுட்டுமுதற் பெயர் 133, 138, 144 சுண்ணம் 400, 402 செஞ்சொல் 280, 430 செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம் 396 செந்தமிழ் நிலம் 394 செய்கென் கிளவி 198 செய்தென் எச்சம் 233 செய்யும் என்னும் கிளவி 221 செய்யும் கிளவி 229 செய்யுள் ஈட்டச் சொல் 393 செய்யுள் மருங்கு 453 செய்யென் கிளவி 440 செயப்படற்கு ஒத்த கிளவி 107 செயப்படுபொருள் 240 செயற்கைப் பொருள் 20 செறற்சொல் 55 சேய்மையின் இசைக்கும் வழக்கம் 148 சொல்லென் எச்சம் 434 சொல் வேறு நிலைஇப் பொருள்வேறு நிலையல் 401 சொற்குறிப்பு 86 சொன்மை தெரிதல் 152 த தகுதி 17 தஞ்சக் கிளவி 263 தடவென் கிளவி 319 தடுமாறு தொழிற்பெயர் 91 தருசொல் 28 தன்மைச் சொல் 41, 196 தன்மை சுட்டல் 25 தன்மை திரிபெயர் 55 தன்வினை உரைக்கும் தன்மைச் சொல் 197 தன்னுள் உறுத்த பன்மை 182 தாமென் கிளவி 180 தாவென் கிளவி 437 தானென் கிளவி 181 தானென் பெயர் 133 திசைச் சொல் 393 திசைச்சொற் கிளவி 396 திசைநிலைக் கிளவி 439 திணைநிலைப் பெயர் 161 திரிசொல் 393 திரிசொற்கிளவி 395 தில்லைச் சொல் 250 தீர்ந்துமொழிக் கிளவி 107 துயவென் கிளவி 364 தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி 4 தெரிந்துமொழி கிளவி 54 தெரிபுவேறு நிலையல் 153 தொகுக்கும்வழித் தொகுத்தல் 399 தொகைமொழி நிலை 407 தொழிற்படக் கிளத்தல் 240 தொழிற்பெயர் 135 தொழின்முதல் நிலை 109 தொன்னெறி மரபு 107 தொன்னெறி மொழி 439 ந நளியென் கிளவி 319 நிரனிறை 400, 401 நிலப்பெயர் 161 நிறைப் பெயர் 444 நிறைப்பெயர்க் கிளவி 412 நின்றாங்கு இசைத்தல் 57 நீட்டும்வழி நீட்டல் 399 நும்மின் திரிபெயர் 139 நோக்கல் நோக்கம் 90 ப பகுதிக்கிளவி 17 பண்பின் தொகை 407, 411 பண்பினாகிய சினைமுதற் கிளவி 214 பண்புகொள் கிளவி 214 பண்புகொள் பெயர் 111, 130, 136, 161, 164 பண்பு தொகவரூஉங் கிளவி 413 பதினோரெழுத்து 10 பல்லோர் அறியும் சொல் 2 பல்லோர் படர்க்கை 221 பலசொல் ஒருபொருள் 293 பலபெயர் 412 பலர்சொல் நடை 416 பலர்வரை கிளவி 169 பலரறி சொல் 7 பலவற்றுப் படர்க்கை 210 பலவறி சொல் 3, 9, 165 பற்றுவிடு கிளவி 107 பன்மை இயற்பெயர் 172 பன்மை உரைக்கும் தன்மைக் கிளவி 203 பன்மைச் சினைப்பெயர் 173 பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 60 பன்மை சுட்டிய சினைமுதற் பெயர் 174 பால்திரி கிளவி 188 பால்பிரிந் திசையா உயர்திணை 56 பால் மயக்குற்ற ஐயக் கிளவி 23 பால்வரை கிளவி 107 பால்வரை தெய்வம் 56 பாலறி மரபு 205 பாலறி வந்த அஃறிணைப் பெயர் 163 பாலறி வந்த உயர்திணைப் பெயர் 158 பாலறி வந்த என்ன பெயர் 162, 166 பிண்டப் பெயர் 87 பிரிநிலை எச்சம் 424 பிரிவில் அசைநிலை 276 பிறிது பிறிதேற்றல் 101 பிறிதுபொருள் கூறல் 33 பிறிதுபொருள் சுட்டல் 112 பின்மொழி நிலையல் 414 புணரியல் நிலை 247 புனிறென் கிளவி 371 பெண்டென் கிளவி 159 பெண்மை இயற்பெயர் 172 பெண்மைச் சினைப்பெயர் 173 பெண்மை சுட்டிய உயர்திணை 4 பெண்மை சுட்டிய சினைமுதற் பெயர் 174 பெண்மை முறைப்பெயர் 175 பெண்மை யடுத்த மகனென் கிளவி 160 பெயர்க்குரி மரபு 286 பெயர்ச்சொற் கிளவி 107 பெயர்தோன்று நிலை 63 பெயர்நிலைக் கிளவி 39, 68, 160, 182, 185, 439 பெயர்ப்பயனிலை 64 பெயரிற் றோன்றும் பாலறி கிளவி 11 பெயரினாகிய தொகை 65 பெயரெஞ்சு கிளவி 230, 232, 426 பொதுப்பிரி பாற்சொல் 42 பொருட்கிளவி 74 பொருண்மை தெரிதல் 152 பொருண்மை நிலை 153 பொருள்செல் மருங்கு 103 பொருள் தெரிநிலை 51 பொருள்நிலை மரபு 414 பொருள் புணர்ந்த கிளவி 15 பொருளொடு புணராச் சுட்டுப்பெயர் 35 ம மக்கட் சுட்டு 1 மகடூஉ அறிசொல் 2, 6 மகளென் கிளவி 159 மகனென் கிளவி 159 மந்திரப் பொருள் 439 மயங்குமொழிக் கிளவி 241 மற்றென் கிளவி 259 மற்றையது என்னும் கிளவி 261 மன்றவென் கிளவி 262 மன்னாப் பொருள் 32 மன்னைச் சொல் 249 மாரைக் கிளவி 7, 201 மாவென் கிளவி 269 மிகுதி செய்யும் பொருள் 295 முதலறி கிளவி 111 முதற்சினைக் கிளவி 85 முந்நிலைக் காலம் 234 முப்பால் 204 முப்பாற் சொல் 2 முழுதென் கிளவி 322 முற்படக் கிளத்தல் 37 முற்றிய உம்மைத்தொகை 281 முறைநிலைப் பெயர் 161 முறைப் பெயர் 122, 149, 170, 171, 175 முறைப்பெயர்க் கிளவி 132, 143 முன்மொழி நிலையல் 414 முன்னத்தினுணருங் கிளவி 55, 449 முன்னிலை அசைச்சொல் 270 முன்னிலைக் கிளவி 217 முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி 452 முன்னிலை வினைச்சொல் 440 மூவிடம் 28 மெய்ந்நிலைப் பொதுச்சொல் 234 மெய்ந்நிலை மயக்கு 439 மெய்பெறக் கிளந்த உரிச்சொல் 385 மெய்பெறக் கிளந்த கிளவி 453 மெய்ப்பொருள் 117 மெய்யறி பனுவல் 92 மெலிக்கும் வழி மெலித்தல் 399 மேலைக் கிளவி 209 மொழிப்பொருட் காரணம் 390 மொழிமாற் றியற்கை 405 மொழிமாற்று 400 ய யாணர்க் கிளவி 375 யானென் பெயர் 133 வ வடசொல் 393 வடசொற் கிளவி 397 வடவெழுத்து 397 வண்ணச் சினைச் சொல் 26 வயாவென் கிளவி 367 வருசொல் 28 வலிக்கும் வழி வலித்தல் 399 வழக்கியன் மருங்கு 453 வழக்கினாகிய வுயர்சொற் கிளவி 27 வழக்கு 17 வழக்குவழி 48 வழாஅல் ஓம்பல் 13 வாராக் காலம் 233, 235, 239 வாரா மரபு 417 வாழ்ச்சிக் கிழமை 97 வியங்கோட் கிளவி 220 வியங்கோள் 216 வியங்கோள் எண்ணுப் பெயர் 43 விரிக்கும்வழி விரித்தல் 399 விரைசொல் அடுக்கு 420 விரைந்த பொருள் 235 விளிகொள் பெயர் 124 விறற்சொல் 55 வினாவின் கிளவி 30, 204 வினாவின் பெயர் 133, 139,144 வினாவுடை வினைச்சொல் 238 வினைக் குறிப்பு 69 வினைச்சொற் கிளவி 235, 239 வினைசெய் இடம் 79 வினைசெயல் மருங்கு 247 வினைப்படு தொகுதி 31 வினைப்பெயர் 161 வினைப்பெயர்க் கிளவி 164 வினைமாற்று 259 வினைமுதல் உரைக்கும் கிளவி 111 வினைமுதல் கருவி 71 வினைமுதற் கிளவி 228, 236 வினையிற் றோன்றும் பாலறி கிளவி 11 வினையின் தொகுதி 410 வினையின் தொகை 407 வினையெஞ்சு கிளவி 216, 222, 230, 425, 447 வினை வேறுபடாஅப் பலபொருள் ஒருசொல் 50, 53 வினை வேறுபடூஉம் பலபொருள் ஒருசொல் 50, 51 வெளிப்பட வாரா உரிச்சொல் 294 வெளிப்படு சொல் 294 வேட்கைப் பெருக்கம் 367 வேற்றுமைக் கிளவி 107 வேற்றுமைத் தொகை 407, 408 வேற்றுமை தொக்க பெயர் 413 வேற்றுமைப் பொருள் 81 வேறுபெயர்க் கிளவி 40 வேறுபொருள் குறித்த ஒருசொல் 395 வேறுவினைக் கிளவி 72 வேறுவினைப் பொதுச்சொல் 44 வேறென் கிளவி 216 கலைச்சொல் நிரல் (உரைவழி) (எண் : நூற்பா எண்) அ அஃறிணைக்கு உரிய தொருவினாச் சொல் 213 அஃறிணைக்கு உரிய பெயர் 147 அஃறிணைப் பாலறிசொல் 164 அஃறிணைப் பெயர் 123 அஃறிணைப் பெயர்ச்சொல் 41 அஃறிணைப் பொருட்கே உரிமை 156 அஃறிணைப் பொருண்மேல் வரும் இயற்பெயர் 167 அஃறிணைப் பொருண்மேல் வரும் விரவுப்பெயர் 146 அஃறிணைப் பொருண்மை 3 அஃறிணைப் பொருள்பற்றிவரும் பெயர்ச்சொல் 3 அஃறிணை யுணர்த்துஞ்சொல் 1 அஃறிணை வினைக்குறிப்பு 214 அசைநிலை 292 அத்தை அசைநிலை 292 அதிகாரப் புறனடை 150, 182, 245 அதுச் சொல்வேற்றுமை 78 அதுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல் 77 அரசத் தன்மை 55 அளைமறி பாப்புப் பொருள்கோள் 405 அறம் 51 அறியாத பொருண்மைக்கண் நிகழும் சொல் 30 ஆ ஆக்கச் சொல் 22 ஆசிரியமத விகற்பம் 453 ஆடூஉவினை 195 ஆண்பாலுணர வருஞ்சொல் 5 ஆண்மை குறித்த பெயர் 172 ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பெயர் 4 ஆண்மைப் பெயர் திணை 177 ஆண்மைப் பொருண்மை 5 ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் 173 ஆண்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயர் 172 ஆண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயர் 175 ஆர் என்னும் இடைச்சொல் 267 ஆன அசைநிலை 292 இ இசை நிறையாகியடுக்கு 418 இசைப் பொருட்கண் அடுக்கி வருஞ்சொல் 419 இடக்கரடக்கி 435 இடத்தினாற் பெற்ற பெயர் 161 இடத்து நிகழ் பொருளை இடத்தாற்கூறுதல் 111 இடப்பொருண்மை உணர்த்துஞ் சொற்கள் 62 இடம் பற்றி வரும் பெயர் 170 இடம் வரைந்த சொல் 107 இடவழு 11 இடவழுக் காத்தல் 28 இடைக் கிடந்த சொல் 231 இடைக்குறை 443 இடைச்சொல் இலக்கணம் 246 இடைச்சொல்லடுக்கு 99 இடைச் சொற்கண் விளிப் பொருண்மை 149 இடைச்சொற்குச் சொற்புறநடை 292 இயம் 44 இயல்பாகிய கிழமை 78 இயற்பெயர்ச் சொல் 36 இரட்டித்துச் சொல்லப்படும் சொற்கள் 46 இரப்போன் கூற்று 437 இருதிணைக்கும் உரிய பெயர் இலக்கணம் 168 இருதிணைக்கும் உரிய வினை 216 இருதிணைக்கும் பொதுவாகிய சொல் 58 இருதிணைப் பொருண்மை 170 இருவகை எச்சம் 230, 231 இலக்கண வழக்கு 28, 182 இலக்கணை 293 இழிபுபற்றி வரும் பெயர் 162 இனச்சுட்டில்லாத பொருள் 18 இனமாகிய பொருள் 33 இனிது விளக்குஞ் சொல் 423 உ உகர ஓகார ஈற்றுப் பெயர் 119 உடம்பொடு புணர்த்தல் 286 உடைப் பெயர் 161 உடைப் பொருள் 101 உடைமையாற் பெற்ற பெயர் 161 உடையபெயர் 406 உண்டற் காலம் 234 உம்மையெஞ்சிய சொல் 429 உம்மை பிரிந்து நின்றே பொருள்படும் சொல் 429 உருபு தொகைச் சொல் 101 உய்த்துக் கொண்டுணர்தல் 102 உய்த்துணர வைத்தல் 225 உயர்திணை ஒட்டுப்பெயர் 416 உயர்திணை ஒருமை உணரவரும் படர்க்கைச் சொல் 199 உயர்திணைப் படர்க்கைப் பன்மைவினை 200 உயர்திணைப் படர்க்கை வினை 199 உயர்திணைப் பன்மை இயற்பெயர் 172 உயர்திணைப் பெயர் 124, 156 உயர்திணைப் பொருட்கே உரியவாகிவரும் பெயர் 162 உயர்திணைப் பொருண்மேல் எண்ணுமுறை 42 உயர்திணை யாண்பாலறி சொல் 4 உயர்திணைப் பொருண்மேல் விரவி வரும் இயற்பெயர் 167 உயர்திணை யுணர்த்துஞ்சொல் 1 உயர்ந்தோர் வழக்கு 98 உயர்பொருள் 1 உயிர்ப் பொருள் 3 உயிரில்பொருள் 3 உயிரீற்றுப் பெயர் 123 உரிச்சொல்லடுக்கு 99 உரிச்சொற்கெல்லாம் புறநடை 392 உருபு தொகை 408 உருபு மயக்கம் 82 உவம நிலை 408 உரையசை 274 உவமிக்கப்படும் பொருள் 409 உளப்பாட்டுத் தன்மைக்கண் வருவதொரு திரிபு 203 உளப்பாட்டுத் தன்மைக்கேற்ற சாரியை 182 உளப்பாட்டுத் தன்மைவினை 196 உறுப்பின் பெயர் 170 உறுப்பினாற் கூறப்படும் சொல் 55 உறுப்புப்பற்றி வரும் பெயர் 162 எ எச்சக் கிளவி 423 எச்ச வாய்பாடு 256 எண்ணின்கட் கிடந்ததொரு மரபு 48 எண்ணினாற் பொருள் குறித்தியலும் பெயர் 412 எண்ணுதற் குரியதொரு மரபு 286 எண்ணுப் பெயர் 164 எண்ணும்மை அதிகாரப்பட்டு வருதல் 288 எதிர்காலச் சொல் 1, 9 எதிர்காலம் பற்றிவரும் கொடைப் பொருண்மை 94 எதிர்கால வாய்பாட்டு வேற்றுமை 222 எதிர்மறை வாய்பாடு 208 எய்தியதன் மேற் சிறப்புவிதி 65 எய்தியதன்மேல் சிறப்புவிதி வகுத்தல் 116 எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தலை உணர்த்துதல் 225 எய்தியது ஒருமருங்கு விலக்குதல் 106, 191 எய்தியது ஒருமருங்கு விலகுதல் 220 எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் 37 எல்லாச் சொற்கும் உரியதோர் இலக்கணம் 391 எழுவாய்த் தொடர் 245 எழுவாய் வேற்றுமைக்கு உரியதொரு புறநடை 66 ஏ ஏகாரத் திரிபு 203 ஏதுப்பொருண்மை 107 ஏழாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடு 80 ஏற்புழிக் கோடல் 209, 412 ஐ ஐ எனக்குறித்த வேற்றுமைச் சொல் 69 ஐகார ஈற்றுப் பெயர் 118 ஐயந்தீர்தற் பொருட்டு ஆராய்ந்த சொல் 30 ஐயம் அறுத்தல் 30 ஐயமறுத்தல் 125 ஒ ஒட்டுப்பட்ட பெயர் 415 ஒட்டுப்பட்ட பெயர்கள் 406 ஒட்டுப் பெயர் 68, 406, 407 ஒடுவெனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல் 71 ஒப்பக்கூறல் 60 ஒப்பின் முடித்தல் 132, 143 ஒருசார் வினைச்சொற்கள் 236 ஒரு பெயராகிப் பல பொருட்கும் உரித்தாகிய பொதுச் சொல் 47 ஒருபொருட்கு இடுகுறியாகிய பெயர் 161 ஒருபொருட்கு இடுகுறியாகி வழங்கும் பெயர் 170 ஒரு பொருண்மேல் அடுக்கிவருதல் 99 ஒருபொருண் மேற் பலபெயர் 36, 37 ஒரு பொருள் குறித்த இடைச்சொல் 257, 259 ஒருபொருள் குறித்த வேறு வேறாகிய பெயர்ச் சொல் 40 ஒருமை குறித்த பெயர் 172, 179 ஒருமைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் 173 ஒருமைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயர் 172 ஒருமையுணர்த்தும் பெயர் 170 ஒரு வினையான் முடித்தல் 40 ஒலிப் பொருண்மை 291 ஒலிப்பொருள் 307 ஒன்றனையறியுஞ் சொல் 1, 3, 8 ஓ ஓசைப் பொருண்மை 354 ஓதப்பட்ட நோக்கப் பொருண்மை 90 க கடாவிடை 1, 391, 389 கடிசூத்திரம் 74 கடைக்குறை 443 கண் எனப் பெயர் பெற்ற வேற்றுமைச் சொல் 79 சுண்ணமாகிய பொருள்கோள் 402 கல்விபற்றி வரும் பெயர் 162 காரகம் 71 காரக வேற்றுமை 109 காரணக்குறி 151 காரணப் பெயராகிவரும் தொழிற் பெயர் 406 காரணப் பொருள் 19 காரியப் பொருள் 20 காலங் காட்டாத பொதுப்பட்ட வினை 234 காரியப் பொருளைக் காரணத்தான் மொழிதல் 111 காலச் சொல் 410 காலத்தான் உணருஞ் சொல் 107 காலப்பொருள் 410 காலப் பொருண்மை 442 காலம்பற்றி வரும் பெயர் 162 கால மரபு 233 காலமயக்கம் 221, 241 காலவழூஉ 11 கிளவிய தாக்கம் 1 குடியினானாய பெயர் 161 குறிப்பினான் மிகுதியுணர்த்துதல் 446 குறிப்புநிலை 153, 155 குறிப்புமொழி 55, 417 குறிப்புவினை யொட்டுப் பெயர் 68 குறிப்பெயர் 164 குறைக்கும் வழிக் குறைத்தல் 1 குறைச் சொல் 266, 313 குறைச்சொற் கிளவி 293 கூத்தராற்றுப்படை 452 கூறிட்டு மொழிதல் 13 கொண்டு கூட்டு 405 கொண்டு கூட்டுப் பொருள்கோள் 405 கொண்டு வாராதது முடித்தல் 132 ச சாதியொருமை 60 சான்றோர் செய்யுள் 98, 396 சிங்க நோக்கு 123 சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் 62 சிறப்புப் பற்றிவரும் பெயர் 162 சினைக் கிளவி 31 சினைப்பொருள் முதற்பொருளைச் சிவணுதல் 112 சினைப் பொருளை முதலாற் கூறும் பெயர்ச் சொல் 111 சினைபற்றி யுறழ்தல் 16 சினையினாற் பன்மை குறித்து வரும் பெயர் 161 சினையையும் முதலையும் உணர்த்தும் பெயர் 170 சினை வினை 179 சுட்டுப் பெயரை முற்படக் கூறுதல் 37 சுட்டுப் பெயர்ச் சொல் 36 சுண்ணமொழிமாற்று 405 செஞ்சொல் 394, 394 செந்தமிழ் நாட்டுட்பட்டதேயம் 395 செப்பின்கட் கிடந்ததொரு குறிப்பு 59 செப்பின்கட் கிடந்ததொரு வழு 14 செப்பின்கண் வழுக்காத்தல் 34 செப்புதற் பொருண்மை 15 செப்புவழுக் காத்தல் 31, 36, 46 செப்பு வழுவமைத்தல் 31, 35, 46 செப்பு வழுவமைதி 33 செய்யுட்குரிய சொல் 393 செய்யுனெறி 18 செய்யுளகத்துத் திரிந்து பொருள் படுஞ்சொல் 400 செய்யுளாக்குதற்குரிய சொல் 393 செய்யுளின்பம் 1 சொல்நிலை திரியாமை 403 சொல்லாதொழிந்த பொருள் 423 சொல்லான் வேறுபடுதல் 447 சொல்லிலக்கணம் 108 சொல்லினது தொடர்ச்சி 1 சொல்லுவான் குறிப்பு 417 சொற்கு முடிபு உணர்த்துதல் 228 சொற்றொடை 408 சொன்மைநிலை 154, 155 சொன்மை நிலை இலக்கணம் 155 சொன்மைநிலைபெயர் 155 சொன்னிலைமை 1 த தந்திர உத்தி 40, 48, 49, 102, 225 தந்துகொணர்ந் துரைத்தல் 48 தமிழ்திரி நிலங்கள் 396 தமிழ்திரி நிலமாதல் 394 தமிழ் நடை 2, 243 தமிழ்நாட்டு மூவேந்தர் 252 தலைக்குறை 443 தற்புருட சமாசம் 411 தன் இயல்பிற் றிரிந்த பொருட்பெயர் 55 தன்மைப் பெயர்ச்சொல் 41 தனித் தன்மை வினை 197 தனிப்பெயர் 68 தனிமொழி 1 தனிமொழி இலக்கணம் 151, 229 தனிமொழிப் பகுதி 229 தாப்பிசைப் பொருள்கோள் 405 திசை நிலைக்கிளவிகளி னாகுஞ் சொல் 439 திணைக்கட் பிறவற்றை யிசைத்தல் 1 திணைபற்றிவரும் பன்மைப் பெயர் 161 திணை வழு 11 திணைவழுவமைத்தல் 41 திணைவழுவமைதி 43, 55 திணை வழூஉ 11 திணை விரவிவரும் பெயர் 49 துணிந்து கூறல் 13 துளுவம் 396 தெய்வப் பொருண்மை 106 தெய்வப் பொருண்மையைச் சுட்டிய பெயர் 4 தெரிநிலைவினையொட்டுப் பெயர் 68 தெலிங்கம் 396 தேய வழக்கு 397 தேற்றப் பொருண்மை 262 தொகாநிலைத் தொடர்ச்சிக்கண் உருபு 101 தொகாநிலை வகையான் வருதல் 1 தொகுக்குவழித் தொகுத்தல் 443 தொகைச் சொல் 101, 407 தொகைப் பொருண்மை 286 தொடர்மொழி 1 தொடர்மொழியாகிய வாக்கியம் 1 தொழில் பற்றி வரும் பெயர் 170 தொழில் மேல் வருவன 68 தொழிலின் நிலைமை 64 தொழிலுணர்த்துஞ் சொல் 407 தொழிற் காரகம் 109 தொழிற்பட்ட தொகை 31 தொழிற்படாத் தொகை 31 ந நரக்திப்பொருண்மை 4 நல்வினையேது 1 நிலப்பெயர் 36 நிலையாத பொருள் 32 ப பஞ்சத்திராவிடம் 396 படர்க்கை வினை 41 படர்க்கை வினைக்கண் வரும் திரிபு 205 பண்டையோர் வழக்கு 107 பண்பின் பெயரான் பண்புடையதனைக் கூறல் 111 பண்பினான் ஆகுஞ் சொல் 107 பண்பினாற் பெற்ற பெயர் 161 பண்பினைக் கொண்ட பெயர் 164 பண்பினைக் கொண்டு நிற்குஞ் சொல் 214 பண்புப் பெயர் 406 பயன்படவரூஉந் தொடர்மொழி 1 பருந்துவிழுக்காடு 206 பல பொருட்கும் பொதுப் பெயர் 50 பலபொருண்மேல் அடுக்கி வருதல் 99 பலபொருள்குறித்த இடைச்சொல் 257 பலபொருளுணரவருஞ் சொல் 50 பலபொருளொருசொல் 385 பலரை உணர்த்தும் படர்க்கை 221 பலரை யறியுஞ் சொல் 2 பலவற்றை யறியுஞ் சொல் 3 பலவற்றை யுணரவருஞ் சொல் 9 பலவினையையுடைய பொதுப்பெயர் 44 பழகிப்போந்த பெயர் 191 பழமைத்தாகி நெறிப்பட வருஞ்சொல் 439 பன்மை உணர்த்தும் பெயர் 170 பன்மைகுறித்த பெயர் 172, 412 பன்மை குறித்த பெயர்திணை 178 பன்மைப் பொருண்மைக்கண் வரும்சினைப் பெயர் 173 பன்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயர் 172 பன்மை வினை கோடல் 186 பார்ப்பார் வேதம் 47 பால் அறியப் படாத சொல் 187 பால் ஐயம் 23 பால் வழு 11 பால் வழூஉ 11 பால் விளங்காத அஃறிணை இயற்பெயர் 167 பாலறிசொற்கட் கிடந்ததொருமரபு 60 பாலுணர நில்லாத தெய்வப் பொருண்மை 56 பாலுணர வருஞ்சொல் 236 பிராயம் பற்றி வரும் பெயர் 170 பிறநூல் முடிபு 182 பிறப்பு முறை பற்றி வரும் பெயர் 170 பிறிதொரு வாய்பாடாக வருதல் 64 புணல்யாற்றுப் பொருள் கோள் 405 புள்ளியீற்றுப் பெயர் 123 புறநடை ஓதல் 81 புறநடைச் சூத்திரம் 161 பூட்டுவிற் பொருள்கோள் 405 பெண்டாட்டியை அறியுஞ்சொல் 2 பெண்ணாகிய தன்மை 55 பெண்பால் உணரவருஞ் சொல் 6 பெண்மை குறித்த பெயர் 172 பெண்மைப் பெயர் 176 பெண்மைப் பொருண்மைக்கண் வரும் சினைப்பெயர் 173 பெண்மைப் பொருண்மையைக் குறித்த இயற்பெயர் 172 பெண்மைப் பொருண்மையைச் சுட்டிய முறைப் பெயர் 175 பெயர்ச்சொற் பாகுபாடு 1, 156 பெயர்நிலைக் கிளவிகளினாகுஞ் சொல் 439 பெயர்ப்பொருண்மை 64, 246 பெயரடுக்கு 99 பெயரியல்பு 151 பெயரீறு 62 பெயரெச்ச அடுக்கு 99 பெயரெச்ச இடைக் கிடப்பு 231 பெயரெச்ச உம் இடைச் சொல் 252 பெயரெச்சப் பொருண்மை 255 பெயரெச்சமல்லாத செய்யும் என்னுஞ் சொல் 244 பெயரெச்ச வினைச்சொல் 230 பேடியென்னும் பெயர் 12 பொதுச் சொல் 47 பொதுப் பெயராற் கூறுதல் 45 பொதுப்பொருண்மை 1 பொதுமையிற் பிரியும் பொருள் 48 பொதுமையுணர்த்தும் பலபொரு ளொருசொல் 51 பொதுவினை 44 பொது வினையாற் கிளத்தல் 45 பொருட்கு இயல்பாகிய பண்பு 78 பொருட்குள்ள அளவின் நுணுக்கம் 326 பொருட் டொகை 408 பொருட் புறத்ததாகிய கருப்பொருள் 190 பொருண்மேலடை யிரண்டு வருதல் 26 பொருண்மேலாகு நிலைமை 1 பொருண்மேற் சொன்னிகழ்தல் 390 பொருண்மை நிலை 153 பொருண்மைநிலை வழக்கு 155 பொருண்மைப் படாமை 46 பொருண்மை வாய்பாடு 114 பொருணிலை மயக்கினாகுஞ் சொல் 439 பொருணிலைமை 1 பொருணிலைமை மயக்கங் கூறுதல் 439 பொருள் புணர் இடைச்சொல் 249 பொருள் புணரா இடைச்சொல் 249 பொருள் வேறுபடா நிறைந்தபெயர் 444 பொருளல்லாப் பிறிது பொருளோடு உறழ்தல் 16 பொருளான்வேறுபடுதல் 447 பொருளுர்த்தா நிலை 277 பொருளுணர்த்துஞ் சொல் 407 பொருளுணர்த்தும் நிலைமை 277 பொருளுணர வாராமை 446 பொருளொடு புணர்ந்து வருதல் 418 பொரூஉப்பொருள் 95 ம மக்கள் வினை 210 மகடூஉ வினை 195 மகள் என்னும் முறைப்பெயர் 55 மங்கல மரபு 435 மரபு வழு 32 மரபு வழுக்காத்தல் 26, 44 மரபு வழுவமைத்தல் 47 மரபு வழூஉ 11 மரீஇய மரபு 87 மருவிப் போந்த சொல் 436 மரூஉ 229 மரூஉ வழக்கு 220 மாட்டேற்று வகை 256 மாணாக்கர்க்கு உரிதோ ரியல்பு 389 மார் ஈற்று வினைச் சொல் 201 மிகுதலுங் குறைதலுமில்லாத அளவென் 402 முதல் வேற்றுமை 63 முதற்கிளவி 31 முற்றிலக்கணம் 242 முற்றுச்சொல் 64 முற்றுச் சொல்லடுக்கு 99 முற்றுத் தொடர் 245 முறைப் பெயர்ச் சொல் 143 முன்னிலை வினை 41 முன்னிலை வினைச்சொல் 217, 218 மொழிந்த பொருளோடு ஒன்றவைத்தல் 40 மொழிமாற்று 405 ய யாப்பிலக்கணம் 403 யாற்றொழுக்கு 405 வ வடசொல் 397 வடநாட்டார் 396 வடநூலாசிரியர் 293 வடமொழி 67, 397 வடமொழிச் சிதைவு 82 வடமொழிப் புலவர் 2 வடுகம் 396 வண்ண முதற்சொல் 26 வழங்குஞ் சொல் 439 வழுக்காத்தல் 16 வழூஉக் காத்தல் 280 வழூஉப்படுதல் 11 வினைப் பொருண்மை 84 வாய்பாடு வேற்றுமை 222 வாய்வாளாதிருத்தல் 13 விசேடணம் 408 வியங்கொள்ளும் எண்ணுப்பெயர் 43 வியங்கோட் பொருண்மை 9 வியங்கோள் வாய்பாடு 442 விரவுப் பெயர் 156 விரவுப் பெயரிலக்கணம் 185 விரிக்கும்வழி விரித்தல் 1 விரிந்தது தொகுத்தல் 112, 212 விளி இலக்கணம் 115 விளிகொள்ளும் பெயர் 124 விளித்தற் பொருண்மை 115 விளியீறு 62 வினாச் சொற்கள் 29 வினாவழு அமைத்தல் 30 வினா வழுக்காத்தல் 29 வினா விடுத்தல் 13 வினைக்குறிப்பு 7, 9, 195 வினைச் சொற்றிரிபு 442 வினைப் பொருண்மை 246 வினாப் பொருண்மை 238 வினைமுதல் 229 வினை முதல் வினை 226 வினையானாகும் பெயர் 164 வினையிலக்கணம் 242 வினையெச்ச அடுக்கு 99 வினையெச்ச இடைக் கிடப்பு 231 வினையெச்சப் பொருண்மை 255 வினையெச்ச மறை 230 வினையெச்ச வினைச்சொல் 230 வீரியத்தாற் கூறுஞ்சொல் 55 வெளிப்பட வாரா உரிச்சொல் 155 வெளிப்படுநிலை 153, 155 வேதாகமத் துணிவு 32 வேற்றுமை ஈறு 62 வேற்றுமை ஏற்ற பெயர் 426 வேற்றுமைப் பொருள் மயக்கம் 111 வேற்றுமையடுக்கு 99 வேற்றுமை யல்லாத உருபு 103 ன னகர ஈற்று அளபெடைப் பெயர் 131 தொல்காப்பியப் பதிப்புகள் - கால வரிசை நிரல் வ. காலம் நூல் பகுதி, உரை பதிப்பாசிரியர் எண் 1. 1847 ஆக. எழுத்து. நச்சர் மழவை. மகாலிங்கையர் (பிலவங்க, ஆவணி) 2. 1858 தொல். நன். மூலம் சாமுவேல் பிள்ளை 3. 1868 செப். சொல். சேனா. சி.வை. தாமோதரம் பிள்ளை (விபவ. புரட்டாசி) 4. 1868 நவ. ” இராசகோபால பிள்ளை (விபவ, கார்த்திகை) 5. 1868 நவ. எழுத்து. இளம். சுப்பராய செட்டியார் 6. 1868 சூத்திர விருத்தி - சிவஞானமுனிவர் ஆறுமுக நாவலர் 7. 1885 பொருள். நச்சர். பேரா. சி.வை.தா. 8. 1891 சூன் எழுத்து. நச்சர்* ” (கர, வைகாசி) 9. 1892 சொல். நச்சர் ” 10. 1905 பாயிரம். சண்முக விருத்தி அரசன் சண்முகனார் 11. 1916 பொருள் (1, 2) நச்சர் பவானந்தம் பிள்ளை 12. 1916 பொருள் (3, 4, 5), நச்சர் ” 13. 1917 பொருள். பேரா. ” 14. 1917 பொருள் (8) நச்சர் ரா. ராகவையங்கார் 15. 1920 பொருள் (1, 2), இளம். கா. நமச்சிவாய முதலியார் 16. 1921 ” வ.உ. சிதம்பரம் பிள்ளை 17. 1922 மார்ச் எழுத்து. சொல் (மூலம்) கா. நமச்சிவாய முதலியார் 18. 1922 மே தொல். மூலம் புன்னைவனநாத முதலியார் 19. 1922 பாயிரங்கள்* கா. நமச்சிவாய முதலியார் 20. 1923 பொதுப்பாயிரம்* சதாசிவ பண்டாரத்தார் 21. 1923 எழுத்து. நச்சர் கனகசுந்தரம் பிள்ளை 22. 1923 மார்ச் சொல். சேனா. கந்தசாமியார் 23. 1924 பொருள். மூலம் கா. நமச்சிவாய முதலியார் 24. 1927 சொல். இளம். ” 25. 1928 எழுத்து. இளம். வ.உ.சி. 26. 1929 சொல். தெய்வ. ரா. வேங்கடாசலம் பிள்ளை 27. 1930 சொல். குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 28. 1930 எழுத்து (மொழி) ” 29. 1933 பொருள் (3, 4, 5) இளம். வ. உ. சி. 30. 1934 சொல். சேனா. ஆறுமுக நாவலர் 31. 1934 பொருள். நச்சர் எ. கனகசபாபதிப்பிள்ளை 32. 1935 பொருள். பேரா. ” 33. 1935 பொருள்-மேற்கோள் விளக்க அகராதி ம. ஆ. நாகமணி 34. 1935 பொருள் (6-9) இளம் வ.உ.சி., எ. வை. பிள்ளை 35. 1935 பொருள். இளம்* வ.உ.சி., எ.வை. பிள்ளை 36. 1937 எழுத்து. நச்சர் யாழ்ப்பாணம் கணேசையர் 37. 1937 எழுத்து. குறிப்புரை பி.சா.சு. சாதிரியார் 38. 1937 சொல் (1, 2, 3) (மொழி) ” 39. 1938 சொல். சேனா. கணேசையர் 40. 1938 ஏப்ரல் பொருள் (1) விளக்கம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 41. 1941 சொல். நச்சர் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை 42. 1942 பொருள் (1) சோமசுந்தர பாரதியார் 43. 1942 பொருள் (2) ” 44. 1942 பொருள் (6) ” 45. 1943 மார்ச் தொல் - மூலம் தி.சு. பாலசுந்தரம் பிள்ளை 46. 1943 பொருள். பேரா. கணேசையர் 47. 1944 அக். எழுத்து. ஆராய்ச்சி வேங்கடராஜூலு ரெட்டியார் 48. 1944 எழுத்து. நச்சர் தேவநேயப் பாவாணர் 49. 1945 சொல் (மொழி) பி.சா.சு. சாதிரியார் 50. 1946 சொல். சேனா. தேவநேயப் பாவாணர் 51. 1947 பொருள் (1, 2 நச்சர்) கழகம் 52. 1948 பொருள். நச்சர் கணேசையர் 53. 1948 பொருள் (1, 3) (மொழி) ஈ.எ. வரதராஜ ஐயர் 54. 1948 பொருள் (4, 5) (மொழி) ” 55. 1949 பொருள் (1, 2) (மொழி) பி.சா.சு. சாதிரியார் 56. 1950 பொருள் (3-5) நச்சர் கழகம் 57. 1951 பொருள். பேரா. ” 58. 1952 சொல். நச்சர்* தி.த. கனகசுந்தரம் பிள்ளை 59. 1952 பொருள் (1, 2) இளம். கழகம் 60. 1952 பொருள் (3, 4, 5) மொழி பி.சா.சு. சாதிரியார் 61. 1953 பொருள். இளம். கழகம் 62. 1954 சொல். சேனா. ஆ. பூவராகம் பிள்ளை 63. 1955 எழுத்து. இளம். சுந்தரமூர்த்தி 64. 1956 பொருள் (6-9) மொழி பி.சா.சு. சாதிரியார் 65. 1960 தொல். மூலம் பதிப்பாசிரியர் குழு (மர்ரே ராஜம்) 66. 1961 தொல். முழுவதும் புலியூர் கேசிகன் 67. 1962 சொல். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 68. 1962 சொல். நச்சர் இராம. கோவிந்தசாமி 69. 1962 தொல். நன். எழுத்து வெள்ளைவாரணனார் 70. 1963 சொல். இளம். கு. சுந்தரமூர்த்தி 71. 1963 சொல். தெய்வ. ” 72. 1963 சொல். வி.ஐ. சுப்பிரமணியன் 73. 1963 தொல் (மொழி)* இலக்குவனார் 74. 1964 சொல். கல். பழைய கு. சுந்தரமூர்த்தி 75. 1965 எழுத்து - நச்சர்* ” 76. 1965 தொல். பொருள் (8) நச்சர் ” 77. 1966 சொல். சேனா. ” 78. 1967 எழுத்து. நச்சர் இராம. கோவிந்தசாமி 79. 1967 இ. தொகை (எழுத்து) ச.வே. சுப்பிரமணியன் 80. 1968 தொல். பொருள் புலவர் குழந்தை 81. 1968 சூத்திரவிருத்தி தண்டபாணி தேசிகர் 82. 1968 பொருள் (8) ஆபிரகாம் அருளப்பன் 83. 1969 தொல். (வளம்) வடலூரனார் 84. 1969 எழுத்து. இளம். அடிகளாசிரியர் 85. 1970 சொல். சேனா. கு.மா. திருநாவுக்கரசு 86. 1971 செப். தொல். நன். சொல். வெள்ளைவாரணனார் 87. 1971 சொல். கல். பழைய தெ. பொ. மீ. 88. 1971 இ. தொகை (சொல்) ச.வே.சு. 89. 1972 தொல். நன். ரா. சீனிவாசன் 90. 1974 பொருள் (8)* வடலூரனார் 91. 1975 தொல். பொருள் (1) உ. வ. மு. அருணாசலம் பிள்ளை 92. 1975 தொல். களஞ்சியம் அறவாணன், தாயம்மாள் அறவாணன் 93. 1975 தொல். ஒப்பியல் அறவாணன் 94. 1977 தொல். சொல் அ.கு. ஆதித்தர் 95. 1978 இ. தொகை (யாப்பு, பாட்டியல்) ச. வே. சு. 96. 1979 எழுத்து. இளம். கு. சுந்தரமூர்த்தி உரைவளம் 97. 1980 செப். சிறப்புப் பாயிரம் ஆ. சிவலிங்கனார் 98. 1980 டிச. நூன்மரபு ” 99. 1981 சூன் மொழி மரபு ” 100. 1981 மரபியல் கு. பகவதி 101. 1981 டிச. பிறப்பியல் ஆ. சிவலிங்கனார் 102. 1982 மார்ச் புணரியல் ” 103. 1982 மே தொகைமரபு ” 104. 1982 சூலை கிளவியாக்கம் ” 105. 1982 நவ. உருபியல் ” 106. 1982 டிச. உயிர் மயங்கியல் ” 107. 1983 ஏப். புள்ளி மயங்கியல் ” 108. 1983 செப். குற்றியலுகரப் புணரியல் ” 109. 1983 அக். வேற்றுமையியல் ” 110. 1983 புறம் வெள்ளைவாரணனார் 111. 1983 களவு ” 112. 1983 கற்பு ” 113. 1983 பொருள் ” 114. 1984 மே வேற்றுமை மயங்கியல் ஆ. சிவலிங்கனார் 115. 1984 மே விளிமரபு ” 116. 1984 சூலை பெயரியல் ” 117. 1984 செப். வினையியல் ” 118. 1972 முதல் 1985 எழுத்து. சொல் (மொழி) கமில்சுவலபில் 119. 1985 எழுத்து. சொல் (மொழி) டி. ஆல்பர்ட் 120. 1985 பொருள். பேரா. கு. சுந்தரமூர்த்தி 121. 1985 செய்யுளியல். இளம். அடிகளாசிரியர் 122. 1985 உவமவியல் வெள்ளைவாரணனார் 123. 1986 மெய்ப்பாடு ” 124. 1986 சூலை இடையியல் ஆ. சிவலிங்கனார் 125. 1986 பொருள். நச்சர் கு. சுந்தரமூர்த்தி 126. 1987 அக். உரியியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 127. 1988 செப். சொல். இளம். அடிகளாசிரியர் 128. 1988 செப். எழுத்து பாலசுந்தரம் 129. 1988 அக். சொல் ” 130. 1988 டிச. எச்சவியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார் 131. 1989 சொல். ஆத்திரேயர் உரை வ. வேணுகோபாலன் 132. 1989 செய்யுளியல் (உ.வ.) க. வெள்ளைவாரணனார் 133. 1989 சொல். சேனா. கு. சுந்தரமூர்த்தி 134. 1989 அக். பொருள் (3-7) பாலசுந்தரம் 135. 1989 நவ. பொருள் (1, 2) ” 136. 1989 எழுத்து (பேருரை) இராம. சுப்பிரமணியன் 137. 1989 அகம் (மொழி) நிர்மல் செல்வமணி 138. 1991 மார்ச் அகத்திணையியல் (உ.வ.) ஆ. சிவலிங்கனார்  Foot Notes 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார்