திரு.வி.க. தமிழ்க்கொடை 10 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 10 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 8+328=336 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 170/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் பெரியபுராணம் (குறிப்புரையும் வசனமும்) - 4 33. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் (தொடர்ச்சி) எண்சீர் விருத்தம் 2389. மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங்காட்டங் குடியின் மன்னிப் பெருகு கணபதி யீச்ச ரத்தார் பீடு உடைக் கோலமே ஆகித் தோன்ற உருகிய காதலும் மீதுபொங்க உலகர்முன் கொள்ளும்உணர்வு நீட அருவிகண் வார்வுறப் பாட லுற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து. மல்கு - திருவருட் செல்வம் நிறைந்த. பீடு - பெருமை. உலகர் முன் கொள்ளும் - உலகத்தார் முன்னரே அங்கீகரிக்கும் - பழைய குறிப்புரை, உலகின்கண் ணுள்ளாரிடத்துக்க கொண்ட காருண்ய. . . . . . - ஆறுமுகத்தம்பிரனார். 486 2390. கண்டுஎதிர் போற்றி வினவிப் பாடிக் கணபதி யீச்ச ரம்காத லித்த அண்டர் பிரானை வணங்கி வைகும் அப்பதி யில்சில நாள்கள் போற்றித் தொண்ட ருடன்அருள் பெற்று மற்றத் தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப் புண்டரி கத்தடம் சூழ்பழனப் பூம்புக லூர்தொழப் போது கின்றார். 487 2391. சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத்தொண்டர் நண்புடன் செல்ல நல்ல வேரி நறும்தொங் கல்மற் றவரும் விடைஅரு ளப்பெற்று மீண்டபின்பு நீரின் மலிந்த சடையார் மேவி நிகழும் பதிகள் பல பணிந்து பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில்புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார். வேரி நறுந்தொங்கல் - தேன் பொருந்தி மணங் கமழும் மணி மாலையை யணிந்த. அவரும் - அச் சிறுத்தொண்ட நாயனாரும். 488 2392. திருப்புக லூர்த்திருத் தொண்ட ரோடும் செம்மை முருகனார் மெய்ம் மகிழ்ந்த விருப்பொடு சென்றுஎதிர் கொள்ள வந்து வேத முதல்வர் தம் கோயில் எய்திப் பொருப்புஉறழ் கோபுரத்து உள்புகுந்து பூமலி முன்றில் புடைவலம் கொண்டு ஒருப்படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார். முருகனார் - முருக நாயனார். பொருப்பு உறழ் - மலை போன்ற. 489 2393. புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம்புகலூர் மன்னு புண்ணியரை நெக்கு உருகும் சிந்தைஅன்பு பொங்க நிறை மலர்க்கண்ணீர் அருவி செய்ய மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழிசை பாடிப் போந்து திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார். 490 2394. ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அப்பதி தன்னில் அமரும் நாளில் வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்தமானீச் சரம்தான் வணங்கி ஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் பங்குடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்திருந்தார். 491 2395. மற்று அத் திருப்பதி வைகும் நாளில் வாக்கின் பெருவிறல் மன்னனார் தாம் புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப் பொன் மதில் ஆருர் புகழ்ந்து போற்றிச் சிற்றிடைப் பொற்றொடிப் பங்கர் தங்கும் திருப்புகலூர் தொழச் சிந்தை செய்து கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அவ் ஊர் குறுக வந்தார் 492 2396. நாவுக்கரசர் எழுந்தருளும் நல்ல திருவார்த்தை கேட்டபோதே சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு மேவுற்றகாதல் மிகப் பெருக விரைந்துஎதிர் கொள்ள மெய் அன்பரோடும் பூவின் பொலி பொய்கை சூழ்புகலூர்ப் புறம் பணைஎல்லை கடந்து போந்தார். 493 2397. அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும் எதிர்வந்து அணைய வாசப் பொங்கு புனல்தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தித் தங்களின் அன்பின் முறைமை யாலே தாழ்ந்து வணங்கித் தனித்தனியே மங்கலம் ஆகிய நல்வரவின் வாய்மை வினவி மகிழும் போது. 494 2398. மெய்த்திரு ஞானசம் பந்தர் வாக்கின் வேந்தரை நோக்கி விருப்பி னாலே, அப்பரை இங்கு அணையப் பெறும்பேர் அருள்உடை யோம்யாம் அந்தண் ஆரூர், எப்பரி சால்தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறுஇல் பெருந்த வத்தோர் செப்பிய வண்தமிழ் மாலை யாலே திருவா திரைநிகழ் செல்வம் சொன்னார். அப்பரை - முன்னிலைப் படர்க்கை. அழகிய தண்மை வாய்ந்த திருவாரூரை எத் தன்மையால் தொழுது உய்ந்தது என்று சம்பந்தர் அப்பரைக் கேட்க. பெருந் தவத்தோர் - அப்பர். வண்டமிழ் மாலை என்றது முத்து விதானம் என்னும் பதிகத்தை. 495 2399. அரசு அருளிச் செய்த வாய்மை கேட்ட அப்பொழு தேஅருள் ஞானம் உண்ட சிரபுர வேந்தரும் சிந்தை யின்கண் தென்திரு ஆரூர் வணங்குதற்கு விரவிய காதலின் சென்று போற்றி மீண்டும் வந்துஉம்முடன் மேவுவன் என்று உரவு கடல்கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்துஉடன் பாடுகொண்டு ஒல்லைபோந்தார். விரவிய - கலந்த. உரவு கடல் - பரந்தகடலின். ஒல்லை - உடனே. 496 2440. சொல்பெரு வேந்தரும் தோணி மூதூர்த் தோன்றல்பின் காதல் தொடரத் தாமும் பொன்புக லூர்தொழச் சென்றுஅணைந்தார் புகலிப் பிரானும் புரிந்தசிந்தை விற்குடி வீரட்டம் சென்றுமேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப் பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான்மறை பாடிப் போந்தார். திருவிற்குடி - அட்ட வீரட்டத்துள் ஒன்று; சலந்தரன்றன் தலை கொய்த தலம். 497 2401. துணர்இணர்ச் சோலையும் சாலி வேலித் துறைநீர்ப் பழனமும் சூழ்க ரும்பின் மணம்மலி கானமும் ஞானம்உண்டார் மருங்கு உற நோக்கிமகிழ்ந் தருளி அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்துஅன்பு பொங்கப் புணர்இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன்மதில் ஆரூர் புறத்து அணைந்தார். துணர் இணர் - கொத்துகளையுடைய பூக்கள் நிறைந்த சாலி. . . . . .பழனமும் - செந்நெல் வேலி சூழ்ந்த நீர்த்துறைகளையுடைய வயல்களும் - அள்ளல் - சேறு. 498 2402. வான்உயர் செங்கதிர் மண்டி லத்து மருங்கு அணையும்கொடி மன்னும் ஆரூர் தான்ஒரு பொன் உலகு என்னத் தோன்றும் தயங்குஒளி முன்கண்டு சண்பை வந்த பால் நிற நீற்றர் பருக்கை யானைப் பதிகத் தமிழ்இசை பாடி ஆடித் தேனொடு வண்டு முரலும் சோலைத் திருப்பதி மற்றுஅதன் எல்லை சேர்ந்தார். பால்நிற நீற்றர் - திருஞானசம்பந்தர். தேனொடு வண்டு முரலும் - பெண்வண்டுகளுடன் ஆண் வண்டுகள் பாடும். தேனும் வண்டும் - இசைபுலம்ப; வண்டொடு தேனினம் யாழ்செய்யும்; தேனினம் இரங்கு வண்டொடுசென்றன - சிந்தாமணி: 349, 1196, 3034. 499 2403. பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேல் பொலிவது என்ன எங்கும் குளிர்ஒளி வீசும் முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளிச் செங்கை நிறைமலர் கொண்டு தூவித் திருஇருக் குக்குறள் பாடி ஏத்தித் தங்கள் பிரான் அரசாளும் ஆரூர் தனைப்பணி வுற்றார் தமிழ் விரகர். 500 கலித்துறை 2404. படியில் ஞானம்உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்கு அடியர் சென்றுஎதிர் கொள எழுந்தருளும் அஞ்ஞான்று வடிகொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க் கடிகொள் பேர்அணிப் பொலிவையார் முடிவுஉறக் காண்பார். படியில் - ஒப்பில்லாத; பூமியிலே எனினுமாம். கடி - ஒளி. அணி - அலங்காரம். 501 2405. நான மான்மத நளிர்பெரும் சேற்றிடை நறும்பொன் தூநறும் துகள் சொரிதலின் சுடர்ஒளிப் படலை ஆன வீதிகள் அடிவலித்து அவைகரைந்து அலைய வான மாரியின் பொழிந்தது மலர்மது மாரி. நான மான்மத நளிர் - கதூரி புழுகுகளாலாகிய குளிர்ச்சி பொருந்திய. நறும்பொன் தூநறும் துகள் - நல்ல பொன்மயமான சுத்த வாசனையுடைய சுண்ணப் பொடிகளை. படலை - பச்சிலை மாலைகளால்; வரிசை, பரப்புமாம். 502 2406. ஆடல் நீடுவ துகில்கொடி அணிகுழல் கொடிகள் தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு காடு கொண்டன கதலி தோரண நிரைக் கமுகு மாட மாளிகை மண்டபங் களின் மருங்கு எல்லாம். துகில் (துணிக்) கொடிகளும், அணிகுழல் கொடிகளும் (அழ கிய கூந்தலையுடைய பெண்கொடிகளும்) ஆடல் நீடுவ. பெண் கொடிகள் ஆடுதலாவது நாட்டியஞ் செய்வது. சுரும்பொடு தமனியத் தசும்பு தோடு சூழ்வன - வண்டுகளுடன் பொற்குடங்கள் மலரிதழ் களைச் சூழ்வன. கதலி தோரண நிரை கமுகு காடு கொண்டன - வாழைகளும் மகரதோரண வரிசைகளும் பாக்கு மரங்களும் காடுபோலக் காட்சியளித்தன. 503 2407. மாலை சூழ் புறங் கடைகளின் மணிநிரை விளக்கின் கோல நீள்சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் நீல மாமணி நிழல் பொர நிறம் புகர் படுக்கும் பால வாயின பவள வே திகை மலர்ப் பந்தர். பவள வேதிகளிலுள்ள (மேடைகளிலுள்ள) பூம்பந்தர்கள். புறங்கடைகளில் - புறவிடங்களிலுள்ள; புறவாயில்களிலுள்ள. மணி நிரை விளக்கின் - மாணிக்கங்களால் ஒழுங்குபடச் செய்த விளக்கின்; அழகிய வரிசையான விளக்கின் என்னலுமாம். இடைதூக்கும் - இடையிடையே தொங்கவிட்டுள்ள. நிழல் - ஒளி. பொர - அளப்பாக; பத்தி பாய. புகர்நிறம் உண்டாகும் பான்மையனவாயின. புறங்கடைகளினும்,. . . . . .விளக்கினும், கோல. . . . .நிழல் பொர எனக் கொள்வோரும் உளர். 504 2408. தழைமலர்த் தடம் சாலைகள் தெற்றிகள் சதுக்கம் குழைமு கத்தவர் ஆடு அரங்கு இமையவர் குழாமும் விழைசி றப்பின் வியல்இடம் யாவையும் மிடைந்து மழைமு ழக்குஎன இயம்பின மங்கல இயங்கள். தடம் - தடாகங்கள். தடஞ்சாலைகள் எனக்கொண்டு அகன்ற சாலைகள் என்று கூறலுமொன்று. தெற்றிகள் - திண்ணைகள். சதுக்கம் - நாற்சந்திகள். குழை முகத்தவர் ஆடு - அரங்கு குண்டலம் அணிந்த பெண்மணிகள் நடிக்கும் சாலைகள்; (காதில் அணிந்துள்ள குழை, முகத்தை அழகு செய்தலின் குழை முகத்தவர் என்றார்). இமையவர் குழாமும் விழைசிறப்பின் - தேவர் கூட்டமும் விருப்புஞ் சிறப்பினையுடையன. வியலிடம் யாவையும் மிடைந்து - விசாலித்த இடங்களிலெல்லாம் நெருங்கி. மங்கல இயங்கள் - மங்கல வாத்தி யங்கள். இமையவர் குழாம் விழையுஞ் சிறப்பனவாகிய தழை மலர் . . . . . அரங்கு (முதலிய) வியலிடம். . . . . . . எனக் கொள்ளலுமாம். 505 2409. விரவு பேர்அணி வேறு வேறு இன்னன விளங்கும் பிரச மென்மலர்ச் சோலைசூழ் பெருந் திருஆருர் அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் புரிச னங்களும் புறத்து அணைந்து எதிர்கொளும் பொழுது. விரவு பேரணி - கலந்த பெரிய அலங்காரங்கள். திருவாரூர் அரசளிப்பவர் - சிவபெருமான். புரி - நகரிலுள்ள. 506 2410. வந்த இறைஞ்சுமெய்த் தொண்டர்தம் குழாத்து எதிர் வணங்கிச் சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர் அந்தம் ஆய்உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே எந்தை தான்எனை ஏன்று கொளும் கொல் என்று இசைத்தார். எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் - சுந்தரர். 507 2411. ஆன அத்திருப் பதிகம்முன் பாடிவந்து அணையும் ஞான வித்தகர் மெய்த்தவர் சூழஅந் நகரார் தூ நறும் சுண்ணம் மலர்பொரி தூஉய்த்தொழுது ஏத்த வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார். 508 2412. மன்னு தோரண வாயில்முன் வணங்கி உள்புகுவார் தன்உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்துஆம் பல்நெடும்சுடர் படலையின் பரப்பினைப் பார்த்துச் சென்னி தாழ்ந்துதே வாசிரியன் தொழுது எழுந்தார். படலையின் - வரிசையின். தேவதாசிரிய மண்டபத்தை. 509 2413. மாடு சூழ்திரு மாளிகை வலம்கொண்டு வணங்கிக் கூடு காதலின் கோபுரம் பணிந்துகை குவித்துத் தேடும் மால்அயற்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில் நீடு வார்முன்பு நிலம்உறப் பலமுறை பணிந்தார். மாடு - பக்கத்தில். நீடுவார் - எழுந்தருளியிலுள்ளவராகிய தியாகேசப் பெருமான். 510 2414. பணிந்து வீழ்ந்தனர்; பதைத்தனர்; பரவிய புளகம் அணிந்த மேனியோடு ஆடினார்; பாடினர் அறிவில் துணிந்த மெய்ப்பொருள் ஆனவர் தமைக்கண்டு துதிப்பார்; தணிந்த சிந்தையின் விரைந்துஎழு வேட்கையில் தாழ்ந்தார். புளகம்அணிந்த - மயிர் சிலிர்த்த. 511 2415. செஞ்சொல் வண்தமிழ்த் திருப்பதி கத்துஇசை எடுத்து நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி மஞ்சு சூழ்திரு மாளிகை வாயிலின் புறம்போந்து அஞ்செழுத்தின் மெய்உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார். போனகம் - உணவு. உணர்ந்தவராகிய பிள்ளையார். 512 2416. அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரனெறி அமர்ந்த செங்கண் ஏற்றவர் சேவடி வணங்கிமுன் திளைத்துப் பொங்கு பேர்ஒளிப் புற்றிடம் கொண்டவர் புனிதப் பங்க யப்பதம் தொழுகா லம்தொறும் பணிந்தார். அரனெறி என்னுங் கோயில். 513 2417. புற்றிடம்கொளும் புனிதரைப் போற்று இசை பெருகப் பற்றும் அன்பொடு பணிந்துஇசைப் பதிகங்கள் பாடி நல் தவத் திருத் தொண்டர்களொடு நலம் சிறப்ப மற்றுஅ வண்பதி தன்னிடை வைகும் அந்நாளில். 514 2418. மல்லல் நீடிய வலிவலம் கோளிலி முதலாத் தொல்லை நான்மறை முதல்வர்தம் பதிபல தொழுதே எல்லை இல் திருப்பதி கங்களால் பணிந்து ஏத்தி அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர்தொழ அணைந்தார். மல்லல் நீடிய - வளம் பெருகிய. 515 2419. ஊறு காதலில் ஒளிவளர் புற்றிடம் கொண்ட ஆறுஉலாவிய சடைமுடி ஐயரைப் பணிந்து நீறு வாழ்வுஎன நிகழ்திருத் தொண்டர்க ளோடும் ஈறுஇலாத் திருஞான சம்பந்தர் அங்குஇருந்தார். ஊறு - சுரந்து பெருகும். 516 2420. அங்கு நன்மையில் வைகும்அந் நாள்சில அகல நங்கள் தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து பொங்கு சீர்ப்புக லூர்தொழ அருளினால் போவார் தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்து அருள் செய்வார். புறம்பணை - நகர்ப்புறத்துள்ள மருத நிலத்தை. 517 அறுசீர் விருத்தம் 2421. புவன ஆரூரினில் புறம்பு போந்து அதனையே நோக்கி நின்றே அவம் இலா நெஞ்சமே அஞ்சல் உய்யுமாறு அறிதி அன்றே சிவனது ஆரூர் தொழாய் நீ மற வாது என்று செங்கை கூப்பிப் பவனமாய்ச் சோடையாய் எனும் திருப் பதிகம் முன் பாடினாரே. புவனம் ஆரூரினில் - பூமியிற் சிறந்த திருவாரூரில்; நீர் வளஞ் சூழ்ந்த திருவாரூரில் எனினுமாம். அவமிலா - பயனுள்ள; சிவனடி யையே சிந்தை செய்தலின், அவமிலா நெஞ்சமே என்றார். 518 2422. காழியார் வாழவந்து அருள் செயும் கவுணியப் பிள்ளை யார்தாம் ஆழியான் அறிஒணா அண்ணல் ஆரூர் பணிந்துஅரிது செல்வார் பாழிமால் யானையின் உரி புனைந் தார் பனையூர் பணிந்து வாழிமா மறைஇசைப் பதிகமும் பாடி அப்பதியில் வைகி. ஆழியான் - திருமால். பாழிமால் - வலிமையும் மயக்கமு முடைய. 519 2423. அங்குநின்று அரிதுஎழுந்து அருளுவார் அகில காரணமும் ஆனார் தங்கும்நல் பதிகளும் பிறபணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர்கொளத் தொழுது எழுந்தருளி வந்தார் பொங்குதண் பாசடைப் பங்கயப் புனல்வயல் புகலூர் சார. பாசடைப் பங்கயப் புனல் - பசிய இலைகளையுடைய தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த. 520 2424. நாவினுக்கு அரசரும் நம்பிசீர் முருகரும் மற்றும் நாமச் சேஉகைத்தவர் திருத்தொண்டர் ஆனவர்கள் முன்சென்று சீதப் பூவினில் பொலிபுனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே மேவமற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார். நாமச் சேவுகைத்தவர் - அச்சமூட்டும் இடபத்தை வாகன மாக உடைய சிவபெருமானின். பூவால் பொலி, போதகத்து - யானைக் கன்றாம் பிள்ளையாரை. 521 எழுசீர் விருத்தம் 2425. தேவர்தம் தலைவனார் கோயில்புக்கு அனைவரும் சீர் நிலத்து உற வணங்கிப் பாவரும் தமிழிசைப் பதிகமும் பாடிமுன் பரவுவார் புறம்பு அணைந்தே தாவில்சீர் முருகனார் திருமனைக்கு எய்தி அத் தனிமுதல் தொண்டர் தாமே யாவையும் குறைவு அறுத்திட அமர்ந்தருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில். தாவில் - கெடுதலில்லாத. குறைவு அறுத்துஇட. 522 2426. நீலநக் கடிகளும் நிகழ் சிறுத்தொண்டரும் உடன் அணைந்து எய்து நீர்மைச் சீலமெய்த் தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை சாலமிக்கு உயர் திருத்தொண்டின் உண்மைத்திறம் தன்னையே தெளிய நாடிக் காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக் கலந்து அருளினார் காழி நாடார். காலம்உய்த்து - பொழுதுபோக்கி. 523 2427. கும்பிடும் கொள்கையின் குறி கலந்து இசை எனும் பதிகம்முன் ஆன பாடல் தம் பெரும் தலைமையால் நிலைமை சால்பதிஅதன் பெருமை சால்பு உற விளம்பி உம்பரும் பரவுதற்கு உரியசொல் பிள்ளையார் உள்ள மெய்க் காதல் கூர நம்பர்தம் பதிகள் ஆயின எனைப் பலவும்முன் நண்ணியே தொழ நயந்தார். நிலைமைசால் - நன்னிலைமை யமைந்த. சால்புற - சிறப்புற. 524 அறுசீர் விருத்தம் 2428. புள்அ லம்புதண் புனல்புகலூர் உறை புனிதனார் அருள்பெற்றுப் பிள்ளை யாருடன் நாவினுக் கரசரும் பிறபதி தொழச்செல்வார் வள்ள லார்சிறுத் தொண்டரும் நீலநக் கரும் வளம் பதிக்கு ஏக உள்ளம் அன்புறும் முருகர்அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார். 525 2429. கண்அ கன்புக லூரினைத் தொழுதுபோம் பொழுதினில் கடல்காழி அண்ண லார்திரு நாவினுக் கரசர்தம் அருகுவிட்டு அகலாதே வண்ணம் நித்திலச் சிவிகையும் பின்வர வழிக்கொள உறும்காலை எண்இல் சீர்த்திரு நாவினுக் கரசரும் மற்றவர்க்கு இசைக்கின்றார். கண்அகல் - இடம் அகன்ற. 526 2430. நாய னார்உமக்கு அளித்துஅருள் செய்தஇந் நலம்கிளர் ஒளிமுத்தின் தூய யானத்தின் மிசைஎழுந் தருளுவீர் என்றலும் சுடர்த்திங்கள் மேய வேணியார் அருளும்இவ் வாறுஎனில் விரும்பு தொண்டர்களோடும் போயது எங்குநீர் அங்குயான் பின்வரப் போவது என்று அருள் செய்தார். நாயனார் - சிவபெருமான். நலங்கிளர் - அழகு பொலியும்; இன்பம் எழும் என்னலுமாம். 527 2431. என்று பிள்ளையார் மொழிந்துஅருள் செய்திட இருந்தவத்து இறையோரும் நன்று நீர் அருள் செய்ததே செய்வன் என்று அருள் செய்து நயப்புற்ற அன்றை நாள்முதல் உடன்செலும் நாள் எலாம் அவ்இயல்பினில் செல்வார் சென்று முன்உறத் திருஅம்பர் அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும். இருந்தவத்து இறையோரும் - திருநாவுக்கரசரும். 528 2432. சண்பை மன்னரும் தம்பிரான் அருள்வழி நிற்பது தலைச் செல்வார் பண்பு மேம்படு பனிக்கதிர் நித்திலச் சிவிகையில் பணிந்துஏறி வண்பெ ரும்புக லூரினைக் கடந்துபோய் வரும்பரி சனத்தோடும் திண்பெ ருந்தவர் அணைந்தது எங்குஎன்று போய்த் திரு அம்பர் நகர் புக்கார். தலைச்செல்வார் - மேற்கொள்வாராய். திண் பெருந்தவர் திரு நாவுக்கரசர். 529 2433. அம்பர் மாநகர் அணைந்து மாகாளத்தில் அண்ணலார் அமர்கின்ற செம்பொன் மாமதில் கோயிலை வலம்கொண்டு திருமுன்பு பணிந்து ஏத்தி வம்புஉ லாம்மலர் தூவிமுன் பரவியே வண்தமிழ் இசைமாலை உம்பர் வாழநஞ் சுஉண்டவர் தமைப்பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார். மாகாளம் - கோயில்பெயர். வண்தமிழ் இசைமாலையால். 530 2434. தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில்முன் புறம் எய்திச் சூழ்ந்த தொண்டரோடு அப்பதி அமர்பவர் சுரநதி முடிமீது வீழ்ந்த வேணியர் தமைப்பெருங் காலங்கள் விருப்பினால் கும்பிட்டு வாழ்ந்திருந்தனர் காழியார் வாழவந்து அருளிய மறைவேந்தர். சுரநதி - கங்கை. 531 2435. பொருஇ லாதசொல் புல்குபொன் நிறம் முதல் பதிகங் களால் போற்றித் திருவின் ஆர்ந்தகோச் செங்கணான் அந்நகர்ச் செய்தகோ யிலைச்சேர்ந்து மருவு வாய்மைவண் தமிழ்மலர் மாலைஅவ் வளவனைச் சிறப்பித்துப் பெருகு காதலில் பணிந்துமுன் பரவினார் பேணிய உணர்வோடும். பொருவிலாத சொல் - ஒப்பில்லாத அருட்சொற்கள் நிரம்பிய. அவ்வளவனை - அக்கோச்செங்கட்சோழனை. 532 2436. இன்ன வாறுசொல் மாலைகளால் துதித்து இறைஞ்சிஅங்கு அமர்நாளில் கன்னி மாமதில் திருக்கட வூர்தொழக் காதல்செய்து அருளிப் போய் மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின்மன் னவரோடும் அந்நெடும்பதி அணைவுறக் கலயரோடு அடியவர் எதிர்கொண்டார். கலயரோடு - குங்கிலியக்கலய நாயனாருடன். கடவூர் - அட்ட வீரட்டத்துள் ஒன்று; யமனை உதைத்த தலம். 533 2437. மற்று அவண்பதி அணைந்துவீரட்டத்து மழவிடை யார்கோயில் சுற்று மாளிகை வலம்கொண்டு காலனை உதைத்து உருட்டிச் செய்ய பொன்சி லம்புஅணி தாமரை வணங்கிமுன் போற்றிஉய்ந்து எதிர்நின்று பற்று அறுப்பவர் சடையுடை யான் எனும் பதிகஇன் இசைபாடி. 534 2438. பரவி ஏத்திஅங்கு அரிதினில் போந்துபார் பரவுசீர் அரசோடு விரவு நண்புஉடைக் குங்கிலியப் பெரும் கலயர்தம் மனைமேவிக் கரைஇல் காதல்மற் றுஅவர் அமைத்துஅருளிய விருந்துஇனிது அமர்ந்து அங்குச் சிரபு ரத்தவர் திருமயா னமும்பணிந்து இருந்தனர் சிறப்புஎய்தி. அரிதினில் போந்து - அரிதிற் பிரிந்துசென்று. அரசோடு திரு நாவுக்கரசோடு. 535 2439. சிறப்பு டைத்திருப் பதிஅத னிடைச்சில நாள்அமர்ந்து அருளொடும் விறல்பெருங்கரி உரித்தவர் கோயில்கள் விருப்பொடும் தொழச்செல்வார் மறைப்பெ ருந்திருக் கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் அறப்பெ ரும்பயன் அனையஅத் தொண்டரோடு அணைந்தனர் திருஆக்கூர். விறல் பெருங்கரி - வலிமையுடைய பெரிய யானையை. மறைப் பெருந் திருக்கலயரும் - வேதத்தில் வல்ல பெருமை பொருந்திய குங்கிலியக் கலய நாயனாரும். 536 2440. தக்க அந்தணர் மேவும்அப் பதியினில் தான்தோன்றி மாடத்துச் செக்கர் வார்சடை அண்ணலைப் பணிந்துஇசைச் செந்தமிழ்த் தொடைபாடி மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுதுபோய் மீயச்சூர் பணிந்துஏத்திப் பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புர நகர்சேர்ந்தார். பாரிடம் - பூதங்கள். 537 2441. பாம்பு ரத்துஉறை பரமரைப் பணிந்துநல் பதிகஇன் இசைபாடி வாம்பு னல்சடை முடியினார் மகிழ்வு இடம் மற்றும் உள்ளனபோற்றிக் காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கித் தேம்பொ ழில்திரு வீழிநன் மிழலையின் மருங்குஉறச் செல்கின்றார். காம்பினில் - மூங்கில்போல். பணை - மருத நிலத்தை. 538 கலி விருத்தம் 2442. அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர்கொண்ட மெய்ப்பெருமை அந்தணர்கள் வெங்குருவாழ் வேந்தனார் பின்படவந்து எய்தும் பெரும்பேறு கேட்டுஉவப்பார் எப்பரிசி னால்வந்து அணைந்துஅங்கு எதிர்கொண்டார். வெங்குருவாழ் வேந்தனார் - திருஞானசம்பந்தர். எப்படி. . . . . . எதிர் கொண்டாரெனில். 539 2443. நிறைகுடம்தூ பம்தீபம் நீடநிரைத்து ஏந்தி நறை மலர்ப் பொன் சுண்ணம் நறும்பொரியும் தூவி மறைஒலி போய் வான்அளப்ப மாமுரசும் ஆர்ப்ப இறைவர்திரு மைந்தர்தமை எதிர்கொள் வரவேற்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் 250, 251 குறிப்புப் பார்க்க. 540 2444. வந்துதிரு வீழிமிழலை மறைவல்ல அந்தணர்கள் போற்றிசைப்பத் தாமும் மணிமுத்தின் சந்த மணிச்சிவிகை நின்றுஇழிந்து தாழ்ந்தருளி உய்ந்த மறையோ ருடன்அணைந்து அங்கு உள்புகுவார். பிள்ளையாரைக் காணப்பெற்றமையால் உய்ந்த. 541 2445. அப்போது அரைஆர் விரி கோவண ஆடை ஒப்புஓது அரும்பதிகத்து ஓங்கும் இசைபாடி மெய்ப்போதப் போதுஅமர்ந்தார் தம்கோயில் மேவினார் கைப்போது சென்னியின்மேல் கொண்டு கவுணியனார். கைப்போது - கையாகிய தாமரைமலரை. கவுணியனார் அப் போது. மெய்ப்போதப் போது அமர்ந்தார்தம் - அடியார்களின் உண்மை ஞானமென்னும் திருவருள் பொலியுந் தாமரையில் விரும்பி வீற்றிருந் தருளுஞ் சிவவெருமானது. மலர்மிசை ஏகினான் குறள்: 3. 542 2446. நாவின் தனிமன்னர் தாமும் உடன்நண்ண மேவிய விண்ணிழிந்த கோயில் வலம்கொள்வார் பூஇயலும் உந்தியான் போற்றப் புவிக்கு இழிந்த தேஇயலும் மெய்கண்டு சிந்தைவியப்பு எய்தினார். திருநாவுக்கரசு சுவாமிகள் 251 குறிப்புப் பார்க்க. பூ இயலும் உந்தியான் - திருமால். புவிக்கு இழிந்த - பூமியில் இறங்கிய. தேஇயலும் மெய் - தெய்வத்தன்மை வாய்ந்த திருமேனியை. 543 2447. வலம்கொண்டு புக்குஎதிரே வந்து வரநதியின் சலம்கொண்ட வேணித் தனிமுதலைத் தாழ்ந்து நிலம்கொண்ட மேனியராய் நீடுபெருங் காதல் புலம்கொண்ட சிந்தையினால் பொங்கிஇசை மீப்பொழிந்தார். புலம்கொண்ட - மெய்யுணர்வு கொண்ட. 544 2448. போற்றிச் சடையார் புனலுடையான் என்று எடுத்துச் சாற்றிப் பதிகத் தமிழ்மாலை சந்தஇசை ஆற்ற மிகப்பாடி ஆனந்த வெள்ளத்தில் நீற்றுஅழகர் சேவடிக்கீழ் நின்றுஅலைந்து நீடினார். 545 2449. நீடியபேர் அன்புஉருகி உள்அலைப்ப நேர்நின்று பாடிஎதிர் ஆடிப் பரவிப் பணிந்துஎழுந்தே ஆடிய சேவடிகள் ஆர்வம்உற உள்கொண்டு மாடுஉயர் கோயில் புறத்துஅரிது வந்துஅணைந்தார். 546 2450. வந்துஅணைந்து வாழ்ந்து மதில் புறத்துஓர் மாமடத்துச் செந்தமிழ்ச்சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்தருளச் சந்தமணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பை அந்தணர்சூ ளாமணியார் அங்குஓர் மடத்துஅமர்ந்தார். வாழ்ந்து - மகிழ்ந்து. 547 2451. அங்கண் அமர்வார் அரனார் அடியிணைக்கீழ்த் தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே பொங்குபுகழ் வாகீச ரும்கூடப் போற்றிசைத்தே எங்கும் இடர்தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார். 548 2452. ஓங்குபுனல் பேணு பெருந்துறையும் உள்இட்ட பாங்குஆர் திலதைப் பதிமுற்ற மும்பணிந்து வீங்குஒலிநீர் வீழி மிழலையினில் மீண்டுஅணைந்து ஆங்குஇனிது கும்பிட்டு அமர்ந்துஒழுகும் அந்நாளில். ஓங்குபுனற் பேணும் - மிகு நீர்வளங் காரணமாகப் பலரும் பேணும். வீங்கு - மிக்க. 549 எண்சீர் விருத்தம் 2453. சேண்உயர் மாடப் புகலி உள்ளார் திருஞானசம்பந்தப் பிள்ளை யாரைக் காணும் விருப்பின் பெருகும் ஆசை கைம்மிகு காதல் கரைஇகப்பப் பூணும் மனத்தொடு தோணிமேவும் பொருவிடை யார்மலர்ப் பாதம்போற்றி வேணுபுரத்தை அகன்று போந்து வீழி மிழலையில் வந்த அணைந்தார். கைமிகு - அதிகப்பட (மெய்ப்பாடு). கரை இகப்ப - கரை கடந்து செல்ல. 550 2454. ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர்பதியில் வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்குஅணைந்தார்கள் என்ன வீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா ஏழ்இசை சூழ்மறை எய்தஓதி எதிர்கொள் முறைமையில் கொண்டுபுக்கார். மெய்ஞ்ஞானம் உண்டாரை முன்னா - திருஞானசம்பந்தரை முதலாகக் கொண்டு. 551 2455. சண்பைத் திரு மறையோர்கள் எல்லாம் தம்பிரா னாரைப் பணிந்து போந்து நண்பின் பெருகிய காதல் கூர்ந்து ஞானசம்பந்தர் மடத்தில் எய்திப் பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே எண்பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்தருளப்பெற வேண்டும் என்றார். கழுமலத்தார் - சீகாழிவாசிகள். 552 2456. என்றுஅவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறுஇல் சிவஞானப் பிள்ளையாரும் நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல்இணை நாம் இறைஞ்ச இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்றுப் போவது என்றே அன்றுபுகலி அருமறை யோர்க்கு அருள் செய்து அவர்க்கு முகம் அளித்தார். முகம்அளித்தார் - முகமன் கூறினார். 553 2457. மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்பப் பால்பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம்பொருள் ஆனார் தமைப் பரவும் சீர்பட்ட எல்லை இனிது செல்லத் திருத்தோணி மேவிய செல்வர் தாமே கார்ப்பட்ட வண்கைக் கவுணியர்க்குக் கனவிடை முன்நின்று அருள் செய்கின்றார். மேற்பட்ட அந்தணர் - திருவீழிமிழலையிலுள்ள மறைய வர்கள். பாற்பட்ட - பிள்ளையார் அருள் வழிநின்ற. கார் பட்ட வண் கை - மேகம் போன்ற கொடையுடைய திருக்கையைப் பெற்ற. 554 2458. தோணியில் நாம்அங்கு இருந்த வண்ணம் தூமறைவீழி மிழலை தன் உள் சேண்உயர் விண் நின்று இழிந்த இந்தச் சீர்கொள் விமானத்துக் காட்டுகின்றோம் பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்து அருள் செய்யப் பெருந் தவங்கள் வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத்தொடும் உணர்ந்தார். வேணு புரத்தவர் (சீர்காழிவாசிகள்) பெருந் தவங்கள் செய்யத் தோன்றியவராகிய திருஞான சம்பந்தர். விரவும் புளகத்தொடு - உடல் முழுவதும் பரந்த மயிர் சிலிர்ப்பொடு. 555 2459. அறிவுற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்துஉச்சி மேல் அங்கை கூப்பி வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலின் சென்று புக்கு மறி உற்ற கையரைத் தோணி மேல் முன் வணங்கும்படி அங்குக் கண்டுவாழ்ந்து குறியின் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையின் பாடுகின்றார். 556 2460. மைம்மரு பூங்குழல் என்று எடுத்து மாறுஇல் பெருந்திருத் தோணி தன் மேல் கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னில் செம்மை தரும்விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இதுஎன் கொல் என்று மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேத வாயர். 557 2461. செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து மஞ்சு இவர் சோலைப் புகலி மேவும் மாமறையோர் தமை நோக்கி வாய்மை நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மைத் திறத்தை அருள் செய்கின்றார். 558 2462. பிரமபுரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டி யோடும் விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்துபோற்றி வருவது மேற்கொண்ட காதல் கண்டுஅங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று தெரிய உரைத்த அருள்செய்து நீங்கள் சிரபுரமாநகர் செல்லும் என்றார். 559 2463. என்று கவுணியப் பிள்ளையார்தாம் இயம்பப் பணிந்து அருள் ஏற்றுக் கொண்டே ஒன்றிய காதலில் உள்ளம் அங்கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து மன்றுள் நடம்புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கிச் சென்று நின்ற புகழ்த்தோணி நீடு வாரைப் பணியும் நியதியர் ஆய்உறைந்தார். 560 2464. சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத் திருவீழி மேவிய செல்வர் பாதம் பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழாத்திருத் தொண்டர் சூழ உரவுத் தமிழ்த்தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கரச ரோடும் விரவிப் பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில். உரவு - உணர்வூட்டும். 561 வேறு 2465. மண்ணின்மிசை வான்பொய்த்து நதிகள் தப்பி மன்உயிர்கள் கண்சாம்பி உணவு மாறி விண்ணவர்க்கும் சிறப்பில்வரும் பூசை ஆற்றா மிக்கபெரும் பசிஉலகில் விரவக் கண்டு பண்அமரும் மொழிஉமையாள் முலையின் ஞானப் பாலறா வாயருடன் அரசும் பார்மேல் கண்ணுதலான் திருநீற்றுச் சார்வினோர்க்கும் கவலைவரு மோ என்று கருத்தில் கொண்டார். சாம்பி - பஞ்சடைந்து; குவிந்து; வாடி. விரவ - பரவ. 562 2466. வான் ஆகி நிலன் ஆகி அனலும் ஆகி மாருதம் ஆய் இரு சுடர் ஆய் நீரும் ஆகி ஊன் ஆகி உயிர் ஆகி உணர்வும் ஆகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் ஆனாத வடிவு ஆகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது கான் நாடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில்அணைந்து அருளிச் செய்வார். மாருதமாய் - தென்றல் காற்றாகி. இரு சுடராய் - சூரிய சந்திரர்களாகி. உலகங்கள் - தத்துவ புவனங்கள். உலகுக்கு அப்பால் ஆனாத வடிவாகி - தத்துவ புவனங்களெல்லாங் கடந்து, தத்துவங் களால் அமையாத அருள் வடிவாகி. கான் ஆடு கங்களார் - சுடுகாட்டில் ஆடும் சிவபெருமான்; (கங்காளர் - என்பு பணிந்தவர்). இப் பாட்டில் ஆண்டவன் அட்ட மூர்த்தமும், மேலுங் கடந்த நிலையும் சொல்லப்பட்டிருக்கின்றன. நிலன், நீர், அனல் மாருதம், வான், இருசுடர், உயிர் - அட்ட மூர்த்தம். ஊன், நிலன்நீர் முதலிய பூதவகையிலும், உணர்வு, உயிரின்பாலும் அடங்கும். இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானாய் எறியுங் காற்றுமாகி, அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி - அப்பர்; நிலநீர் நெருப்புயிர் நீள் விசும்பு நிலாப்பகலோன் - புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான், உலகே ழெனத் திசை பத்தெனத்தான் ஒருவனுமே - பலவாகி நின்றவா தோணாக்க மாடாமோ மாணிக்கவாசகர். 563 2467. உலகு இயல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறுபசி நோய் உமைஅடையாது எனினும் உம்பால் நிலவுசிவ நெறிசார்ந்தோர் தம்மை வாட்டம் நீக்குதற்கு நித்தம்ஒர்ஓர் காசு நீடும் இலகுமணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும் யாம்அளித்தோம் உமக்குஇந்தக் காலம் தீர்ந்தால் அலகுஇல் புகழீர்! தவிர்வதாகும் என்றே அருள் புரிந்தார் திருவீழிமிழலை ஐயர். குணக்கு மேற்கும் - கிழக்கிலும் மேற்கிலும். இந்தக் காலம் இவ்வறுமைக் காலம். தவிர்வதாகும் - காசு அருளல் நிறுத்தப்படும். 564 2468. தம்பிரான் அருள்புரிந்து கனவின் நீங்கச் சண்பையார் இள ஏறு தாம் உணர்ந்து நம்பிரான் அருள்இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி வம்புஉலாம் மலர்இதழி வீழிநாதர் மணிக்கோயில் வலம்செய்யப் புகுந்தவேலை அம்பிகாபதி அருளால் பிள்ளையார்தாம் அபிமுகத்துப் பீடிகைமேல் காசு கண்டார். வம்பு உலா மலர் இதழி - மணங்கமழும் கொன்றை மலர ணிந்த. அபிமுகத்துப் பீடிகைமேல் - நேர்முக (கிழக்கு)ப் பீடத்தில். திருநாவுக்கரசர் காசு பெற்றதை அவர்தம் புராணத்திற் காண்க. அப் புராணம்: 258. குறிப்பைப் பார்க்க. 565 2469. காதலொடு தொழுதுஎடுத்துக் கொண்டு நின்று கைகுவித்துப் பெருமகிழ்ச்சி கலந்து பொங்க நாதர்விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல்விருந்தாய் உண்பதற்கு வருக என்று தீதுஇல்பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர் திருஅமுது கறிநெய்பால் தயிர் என்று இன்ன ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இருதிறத்துப் பெருந்தவரும் இருந்த நாளில். ஏதம் உறாது - குறைவுபடாது. 566 2470. நாவினுக்கு வேந்தர் திருமடத்தில் தொண்டர் நாள்கூறு திருவமுது செய்யக் கண்டு சேஉகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித் தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர்! திருஅமுது காலத்தில் ஆக்கி இங்கு மேவும் மிக்க அடியவர்க்கு அளியாவண்ணம் விளைந்தவாறு என்கொலோ விளம்பும் என்றார். நாட்கூறு - பகலில். சேவுகைத்தார் - இடப வாகனராகிய சிவபெருமான். தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் - தீய காரியச் சேர்க்கைக்கு எப்பொழுதும் இடந்தாராத நீங்கள். . .; இடந்தாரா தவர்களே என்னலுமாம். 567 2471. திருமறையோர் தலைவர்தாம் அருளிச் செய்யத் திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர்பால் பெறும்படிக்காசு ஒன்றும் கொண்டு கருதியஎல் லாம் கொள்ள வேண்டிச் சென்றால் காசுதனை வாசிபட வேண்டும் என்பார் பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார். திருமறையோர் தலைவர் - திருஞானசம்பந்தர். உம்மை உடை யவர்பால் - சிவபிரானிடம். படிக்காசு - படியில் வைக்கப்படுங் காசு; படியாகப் பெறுங் காசு. வாசிபட - வட்டந்தர. பிற்பாட்டுக்குக் காரணம் இதுவே என்றார். 568 2472. திருஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச் சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத்தந்த ஒரு காசு வாசி பட மற்று அக் காசு நன்றுஆகி வாசி படாது ஒழிவான் அந்தப் பெருவாய்மைத் திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை வருநாள்கள் தரும்காசு வாசி தீரப் பாடுவன் என்று எண்ணிஅது மனத்துள் கொண்டார். 569 2473. மற்றைநாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்தருளும் எனப் பதிகம் பாடி பெற்றபடி நல்காசு கொண்டுமாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட நல்தவத்தீர்! இக்காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம்! என்று நல்க அற்றைநாள் தொடங்கிநாள் கூறு தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார். ஆவண வீதியினில் - கடைத் தெருவில். 570 2474. அருவிலையில் பெறும்காசும் அவையே ஆகி அமுது செய்யத் தொண்டர் அளவு இறந்து பொங்கி வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆக திருமுடிமேல் திங்களொடு கங்கை சூடும் சிவபெருமான் அருள்செய்யச் சிறப்பின் மிக்க பெருமைதரு சண்பைநகர் வேந்தர் நாவுக் கரசர்இவர் பெரும்சோற்றுப் பிறங்கல் ஈந்தார். சோற்றுப் பிறங்கல் - அன்னமலை. 571 2475. அவனிமிசை மழைபொழிய உணவுமல்கி அனைத்து உயிரும் துயர்நீங்கி அருளினாலே புவனம்எலாம் பொலிவுஎய்தும் காலம்எய்தப் புரிசடையார் கழல்பலநாள் போற்றி வைகித் தவமுனிவர் சொல்வேந்தரோடும் கூடத் தம்பிரான் அருள்பெற்றுத் தலத்தின் மீது சிவன்மகிழும் தானங்கள் வணங்கப் போவார் தென்திருவாஞ் சியமூதூர் சென்று சேர்ந்தார். 572 2476. நீடுதிரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீலமிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப் பாடு ஒலி நீர்த்தலை யாலங்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி நாடு புகழ்த் தனிச் சாத்தங்குடியில் நண்ணி நம்பர் திருக்கரவீரம் நயந்து பாடித் தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித் திரு ஆரூர் தொழநினைந்து சென்று புக்கார். 573 2477. நம்பர்மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து நலம்கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்திப் பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப் பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் ஓங்கு புகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச் செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித் திருமலி வெண்துறை தொழுவான் சென்று சேர்ந்தார். திருக்கைச் சினம் - ஒரு திருப்பதி. 574 2478. மற்று அவ்ஊர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவு திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக் கற்றவர் வாழ் தண்டலை நீள்நெறி உள்ளிட்ட கனகமதில் திருக்களரும் கருதார் வேள்வி செற்றவர் சேர்பதி பிறவும் சென்று போற்றித் திருமறைக் காட்டுஅதன் மருங்கு சேர்ந்தார் அன்றே. திருத்தண்டலைப் பதி. கருதார் வேள்வி செற்றவர் - தக்கன் வேள்வி தகர்ந்த சிவபிரான். 575 2479. கார்அமண்வெம் சுரம்அருளால் கடந்தார் தாமும் கடல்காழிக் கவுணியர்தம் தலைவர் தாமும் சேரஎழுந் தருளியஅப் பேறு கேட்டுத் திருமறைக்காட்டு அகன்பதியோர் சிறப்பின் பொங்கி ஊர் அடைய அலங்கரித்த விழவும் கொள்ள உயர் கமுகு கதலி நிறைகுடம் தீபங்கள் வார் முரச மங்கல நாதங்கள் மல்க எதிர் கொள்ள அடியருடன் மகிழ்ந்து வந்தார். கார். . . . . தாமும் - திருநாவுக்கரசரும். வெஞ்சுரம் - பாலை நிலம் . . . . வெஞ்சுரத்தைக் கடந்த ஒருவரும். அதைக் கடக்கப்போகும் மற்றொருவரும் என்பது குறிப்பு. சமணர் கொடுமை அகற்ற அழைப்பு வந்த இடம் திருமறைக்காடாதலால், சமணர் கொடுமை இங்கே குறிக்கப்பட்டதுபோலும். 576 2480. முன் அணைந்த திருநாவுக்கரசர் தம்மை முறைமையால் எதிர்கொண்டு களிப்பின் மூழ்கிப் பின் அணைய எழுந்தருளும் பிள்ளையார்தம் பெருகியபொன் காளத்தின் ஓசை கேட்டுச் சென்னிமிசைக் கரம்குவித்து முன்பு சென்று சேண்நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று வந்துஇழிந்து வணங்கிஉடன் மகிழ்ந்துபோந்தார். 577 2481. சொல்லரசருடன் கூடப் பிள்ளை யாரும் தூமணிநீர் மறைக்காட்டுத் தொல்லை மூதூர் மல்குதிரு மறுகின்கண் புகுந்த போது மாதவர்கள் மறையவர்கள் மற்று முள்ளோர் எல்லை யில்லாவகை அரஎன்று எடுத்த ஓசை இருவிசும்பும் திசைஎட்டும் நிறைந்து பொங்கி ஒல்லொலி நீர்வேலை ஒலி அடக்கி விண்மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே. திருமறுகின்கண் - திருவீதியில். அரகர என்று முழங்கிய ஓசை ஒல்லெனும் ஓசைபட. 578 2482. அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் ஊடு எய்தி அருகு சூழ்ந்த கொடிநுடங்கு செழுந்திரு மாளிகையின் முன்னர்க் கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக் குறுகிப் புக்கு முடிவுஇல் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலங்கொண்டு நேர்சென்று முன்நாள் படியின்மறை அருச்சித்துக் காப்புச் செய்த பைம்பொன் மணித்திருவாயில் பாங்கு வந்தார். நுடங்கும் - ஆடும். திருமாளிகையின் - திருக்கோயிலின். படியில் மறை - ஒப்பில்லாத வேதம். காப்புச் செய்த - பூட்டிய. 579 2483. அரு மறைகள் திருக்காப்புச் செய்து வைத்த அக் கதவைத் திறந்திட அம் மறைகள் ஓதும் பெருகிய அன்புடை அடியார் அணைந்து நீக்கப் பெருமையினால் அன்று முதலாகப் பின்னை ஒருபுடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டருளி உயர்ந்த சண்பைத் திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திரநாவுக் கரசருக்குச் செப்புகின்றார் 580 2484. அப்பரே! வேதவனத்து ஐயர் தம்மை அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இவ் வாயில் திருக் காப்பு நீங்குமாறு மெய்ப்பொருள்வண் தமிழ்பாடி அருளும் என்ன விளங்குமொழி வேந்தர்அது மேற்கொண்டு என்னை இப் பரிசு நீர் அருளிச் செய்தீராகில் இது செய்வேன் எனப்பதிகம் எடுத்துப் பாட. வேதவனத்து ஐயர் தம்மை - திருமறைக்காட்டுப் பெருமானை. அபிமுகத்து - நேர் முகமாக உள்ள திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 297, 298 பார்க்க. 581 2485. பாடியஅப் பதிகப்பாட் டானபத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம்பொன் வாயில் சேடுஉயர் பொன் கதவு திருக்காப்பு நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து நீடுதிருக் கடைக்காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட ஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்து அகில அண்டம் அனைத்தும் மூழ்க. 582 அறுசீர் விருத்தம் 2486. மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப் பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி அற்புத நிலையி னார்க்ள் அணிதிரு மறைக்காடு ஆளும் கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார். 583 2487. கோயிலுள் புகுவார் உச்சி குவித்த செங்கை களோடும் தாயினும் இனிய தங்கள் தம்பி ரானாரைக் கண்டார் பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின்மீது மேயின மெய்யர் ஆகி விதிர்ப்புற்று விரைவின் வீழ்ந்தார். தாயினும் நல்ல சங்கரன் அப்பர்: தூங்கிட - ததும்பிப் பொழிய. 584 2488. அன்பினுக்கு அளவு காணார், ஆனந்தம் வெள்ளம் மூழ்கி என்பு நெக்குருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி, மின் புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார். மின்புரை - மின்னலைப் போன்ற. 585 2489. புறம்வந்து அணைந்தபோது புகலி காவலரை நோக்கி நிறம்கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத் திறந்தவாறு அடைக்கப் பாடி அருளும் நீர் என்றார் தீய மறம்புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார். நிறம். . . . .நீர் - ஒளி வீசும் மணிக்கதவம் திறக்கவும் அடைக்கவும் (வழக்கம் பெற்று) நிலவ, (அக்கதவை அடியேன்) திறந்தபடி (தாங்கள்) அடைக்கப் பாடியருளுங்கள். 586 2490. அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும் வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும் இன்தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும் நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே. 587 2491. அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகை யாரும் அம் சொல் தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத்தொண்டர் ஆர்த்தார் புடைப் பொழிந்து இழிந்தது எங்கும் பூமழை புகலி வேந்தர் நடைத்தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி. புடை - பக்கங்களில். 588 2492. அத்திரு வாயில் தன்னில் அற்றைநாள் தொடங்கி நேரே மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற வைத்துஎதிர் வழக்கம் செய்த வரம்புஇலாப் பெருமையோரைக் கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல்சூழ் வையம். வேதங்கள் நேர்முகத்தில் நின்று ஆண்டவனைப் பூசித்துத் திருக்கதவை அடைத்தன. இப்பொழுது அவ்வடைப்பு நீங்கின மையால், அவ் வேதங்களைப்போல உலகோரும் நேர்நின்று ஆண்ட வனைப் போற்றவைத்த பெருமையுடையார் என்க. 589 2493. அருமறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்துப் பெருமையின் முழங்க பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்க இரு பெரும் தகையோர் தாமும் எதிர்எதிர் இறைஞ்சிப்போந்து திரு மடங்களின் முன் புக்கார் செழும் பதி விழவு கொள்ள. தேவ துந்துபி ஐந்தும் மிக்கு முழங்க. 590 2494. வேதங்கள் எண்இல் கோடி மிடைந்து செய்பணியை மிக்க ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் நாதங்கள் வடிவாய் நின்ற நதிபொதி சடையார் செய்ய பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார். வேதங்கள் எண்ணில்கோடி நெருங்கி அரிதில் செய்யவல்ல பணியை இவ்விருவரும் எளிதில் செய்தார் என்றபடி. நம்பால் ஏதங்கள் நீப்பார் - நம்மிடத்துள்ள (உயிர்களிடத்துள்ள) குறைபாடு களை நீக்கவல்லவர்கள் (பிள்ளையாரும் அரசும்). ஓசை ஒலி யெலாம் ஆனாய் நீயே - அப்பர். 591 2495. திருமறை நம்பர் தாம்முன்பு அருள்செய்த அதனைச் செப்பும் ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால்ஒக்க வரும் அருள் செய்கைதாமே வகுத்திட வல்லோர் என்றால் பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிதுஆம் அன்றே. ஆண்டவன் அருளிய வேதத்துக்கும் இத்தொண்டர் அருளிய வேதத்துக்கும் வேற்றுமையின்மை குறிக்கப்பட்டது. இவ் வொற்றுமையால் ஆண்டவன்றன் அருட்செயல்களை இத் தொண்டரும் ஆற்றவல்லார் என்பது அறிவிக்கப்பட்டது. என துரை. தன துரையாக நீறிணிந் தேறுகந் தேறிய நிமலன் - சம்பந்தர்: இலம்பை யங் கோட்டூர். 1. ஆண்டவன் அருளிய வேதத்தையே அருளும் மெய்த்தொண்டராகிய பிள்ளையார்க்கும் எனக்கும் இடையீடு வேற்றுமை பெரிதாம் என்று அப்பர் கருதினாரென்க. காரணம் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 275. பார்க்க. 592 2496. இவ்வகை திரு மறைக்காட்டு இறையவர் அருளை உன்னி மெய்வகை தெரிந்த வாக்கின் வேந்தர்தாம் துயிலும் போதில் மைவளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் அவ்விடை இருத்தும் அங்கே வாஎன்று அங்கு அருளிப் போக. 593 2497. கண்ட அப்போதே கைகள் குவித்துடன் கடிது செல்வார் மண்டிய காத லோடும் மருவுவார் போன்றும் காணார் எண்திசை நோக்கு வாருக்கு எய்துவார் போல எய்தா அண்டர்தம் பிரானார் தம்பின் போயினார் ஆர்வத் தோடும். மண்டிய - நிறைந்து உந்திய. மருவுவார் - சமீபத்திலே விளங் குவார். எட்டுத் திக்கையும் சுழன்று சுழன்று நோக்கும் அப்பரெம் பெரு மானார்க்கு. கிட்டே தோன்றுவார்போலத் தோன்றிக் கிட்டா தவ ராகிய தெய்வநாயகராகிய சிவபிரான் பின் அப்பர் தொடர்ந்து. 584 2498. அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகை யாரும் அப்பர் எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய் மூரில் பொங்கிய காதலால் என்று உரைத்திடப் போன தன்மை சங்கையுற்று என்கொல் என்று தாமும் அங்கு அணையப் போந்தார். 595 2499. அந்நிலை அணைந்த போதில் அம்பிகை யுடனே கூட மன்னிய ஆடல் காட்டத் தளரிள வளரும் பாடிச் சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு இன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார். திருஞான சம்பந்தர் சிவபிரானைக் காட்டத் திருநாவுக்கரசர் கண்டது முதலியவற்றைத் திருநாவுக்கரசு சுவாமிகள் புராணத்திற் காண்க. 596 2500. நீடு சீர்த் திருவாய்மூரில் நிலவிய சிவனார் தம்மைப் பாடு சொல் பதிகம் தன்னால் பரவி அப் பதியில் வைகிக் கூடுமெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு தேடு மா மறைகள் கண்டார் திருமறைக் காடு சேர்ந்தார். தேடுமாமறைகள் கண்டார் திருமறைக்காடு - சிவபிரான் எழுந்தருளியிலுள்ள திருமறைக்காடு. 597 2501. சண்பை நாடுடைய பிள்ளை தமிழ்மொழித் தலைவரோடு மண்பயில் சீர்த்திச் செல்வ மாமறைக் காட்டு வைகிக் கண்பயில் நெற்றியார் தம் கழலினை பணிந்து போற்றிப் பண்பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே. 598 2502. இவ்வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் செய்வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டு மெய்வகை நெறியில் நில்லா வினைஅமண் சமயம் மிக்குக் கைவகை முறைமைத் தன்மை கழியமுன் கலங்கும் காலை. தென்னவன் (பாண்டியன்) பரம்பரையாகச் சைவ ஒழுக்கத்தில் நின்றவன். அவன் இடையே சமண ஒழுக்கத்தில் தலைப்படலானான். இதனால் செய்வகை இடையே தப்புந் தென்னவன் என்றார். தீவினை மிக்க அமண் சமயம் பரவி. கை. . . . . . .கழிய - ஒழுக்க முறைமையின் நல்லியல்பு எங்கும் ஒழிய. பாண்டி நாடு கலங்குங் காலை. 599 2503. தென்னவன் தானும் முன்செய் தீவினைப் பயத்தி னாலே அந்நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் நல்நெறி திரிந்து மாறி நவைநெறி நடந்தது அன்றே. நவை நெறி - குற்றம்பொருந்திய மார்க்கம். 600 2504. பூழியர் தமிழ்நாட்டு உள்ள பொருஇல் சீர்ப்பதிகள் எல்லாம் பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச் சூழ்இருள் குழுக்கள் போலத் தொடைமயில் பீலி யோடு மூழிநீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப. பூழியர் - பாண்டியர்தம். பாண்டி நாட்டைத் தமிழ்நாடென்று இவ்வாசிரியர் பலவிடங்களில் கூறியுள்ளார். அருகர் - சமணர். பாழி - சமணர்கள் குகை. பள்ளி - சமணர்கள் கோயில். தொடை - கட்டிய. மூழி - கமண்டலம். அமணர் - சமணர். 601 2505. பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் செறியும் முக்குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி அறியும் அச்சமய நூலின் அளவினில் அடக்கிச் சைவ நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை. மயிர் பறித்த தலையும். மேனி செறியும் - உடம்பில் கூடிய. இக் கோலங்கள் சமணமுனிவருடையன. இவைகளைத் திருஞான சம்பந்தர் பலவிடங்களில் பத்தாம் பாடலில் அமைத்துப் பாடுவது வழக்கம். 602 2506. வரிசிலைத் தென்ன வன்தான் உய்தற்கு வளவர் கோமான் திருஉயிர்த் தருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும் குரை கழல் அமைச்சனார் ஆம் குலச்சிறை யாரும் என்னும் இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாது ஆக. வரிசிலை - வளைந்த வில்லையுடைய. தென்னவன் (பாண்டியன்) உய்தற்காகச் சோழ மன்னன் திருவென ஈன்ற செல்வப் பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும். 603 2507. ஆங்கு அவர் தாங்கள் அங்கண் அரும்பெறல் தமிழ்நாடு உற்ற தீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டே ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை பூங்கழல் செழியன் முன்பு புலப்படா வகைகொண்டு உய்த்தார். தேற்றா சிந்தையில் பரிவு - தெளியாத மனதில் துன்பம். பூங் கழல் செழியன் - பொலிவு பொருந்திய கழலையணிந்த பாண்டியன். 604 2508. இந்நெறி ஒழுகு கின்றார் ஏழு உலகு உய்ய வந்த மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச் செந்நெறி விளக்கு கின்றார் திருமறைக் காடு சேர்ந்த நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார். கன்னி நாட்டு - பாண்டி நாட்டின். 605 2509. கேட்டஅப் பொழுதே சிந்தை கிளர்ந்துஎழும் மகிழ்ச்சி பொங்க நாள்பொழுது அலர்ந்த செந்தா மரைநகை முகத்தர் ஆகி வாள்படை அமைச்ச னாரும் மங்கையர்க் கரசி யாரும் சேண்படு புலத்தா ரேனும் சென்றுஅடி பணிந்தார் ஒத்தார். சேட்படு புலத்தாரேனும் - தூரத்தே யுள்ளவராயினும் மானதக் காட்சியில் சமிபத்திலுற்றவராய் ஞானசம்பந்தரின் சேவடியைப் பணிந்தார் என்றபடி. 606 2510. காதலால் மிக்கோர் தாங்கள் கைதொழும் கருத்தினாலே போது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்ய பாதங்கள் பணிமின் என்று பரிசின மாக்கள் தம்மை மாதவம் சுருதி செய்ய மாமறைக் காட்டில் விட்டார். காதலால் மிக்கோர் - பிள்ளையார்பால் அன்பால் மேம்பட்ட மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும். போது அவிழ் - பூக்கள் மலர்ந்த. பரிசினமாக்கள் தம்மை - ஏவலாளர்களை. சுருதி (வேதங்கள்) மாதவஞ் செய்த. 607 2511. ஆங்கு அவர் விடமுன் போந்த அறிவுடை மாந்தர் அங்கண் நீங்கிவண் தமிழ் நாட்டு எல்லை பின்பட நெறியின் ஏகி ஞாங்கர் நீர்நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து தேன் கமழ் கைதை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார் ஞாங்கர் - அவ்விடத்தினின்றும். தேங்கமழ் கைதை நெய்தல் மணம் வீசும் தாழை சூழ்ந்த நெய்தல் நிலத்திலுள்ள. 608 2512. திருமறைக் காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்த அருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்து இனிதருளும் செல்வப் பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் வருமுறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார். 609 2513. மற்றுஅவர் சென்று புக்கு வளவர் கோன்மகளார் தென்னவர் கொற்றவன் தேவி யாரும் குலச்சிறை யாரும் ஏவப் பொன்கழல் பணிய வந்தோம் எனச் சிலர் புறத்து வந்து சொற்றனர் என்று போற்றித் தொழுது விண்ணப்பம் செய்தார். அவர் - வாயில் காப்போர். 610 2514. புகலி காவலர் தாம் கேட்டுப் பொருஇலா அருள் முன் கூர அகமலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்று அருளிச் செய்ய நகைமுகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத் தகவுடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார். பொருவிலா - ஒப்பில்லாத. செவ்வி - அழகை; முகமலர்ந்த நிலையைப் பார்த்து என்றபடி. கூவ - கூப்பிட. 611 2515. நின்றவர் தம்மை நோக்கி நிகர்இல் சீர்ச் சண்பை மன்னர் மன்றல்அம் குழலி யாராம் மானியார் தமக்கும் மானக் குன்றுஎன நின்ற மெய்ம்மைக் குலச்சிறையார் தமக்கும் நன்றுதான் வினவக் கூறி நல்பதம் போற்று வார்கள். மன்றல் - வாசனை பொருந்திய. மானியார் - மங்கையர்க் கரசியார். மானக்குன்றென - சிவநேய உறுதியில் மலையென, சண்பை மன்னர், இருவர்தம் நலத்தை வினவ ஆண்டுப் போந்தவர் அவர்தம் நலத்தைக் கூறி. 612 2516. கன்னி நாடு அமணர் தம்மால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மாதேவி யாரும் கொன்நவில் அயில்வேல் வென்றிக் குலச்சிறை யாரும் கூடி இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சிவிட்டார். கொன்னவில் அயில்வேல் - அச்சமூட்டும் கூரிய வேலேந்தி இறைஞ்சி - (திசைநோக்கி) வணங்கி. 613 எண்சீர் விருத்தம் 2517. என்றுஅவர்கள் விண்ணப்பம் செய்தபின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர் எல்லாம் நன்றுநமை ஆளுடைய நாதன் பாதம் நண்ணாத எண்இல் அமண் குண்டர் தம்மை வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்தருள வேண்டும் என நின்று போற்ற. தொண்டரெலாம் பிள்ளையாரைப் போற்ற. 614 2518. மற்று அவர்கட்கு அருள்புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூடச் சென்று பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரியதிருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு உற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை சொல் தனி மன்னவருக்குப் புகலி மன்னர் சொல்லி எழுந்தருளுதற்குத் துணிந்த போது. பெற்றம் உயர்த்தவர் - இடபக் கொடியுடைய சிவபெருமான். சொல்தனி மன்னவருக்கு - திருநாவுக்கரசருக்கு. 615 2519. அரசுஅருளிச் செய்கின்றார் பிள்ளாய்! அந்த அமண்கையர் வஞ்சனைக்குஓர் அவதிஇல்லை உரைசெய்வது உளது உறுகோள் தானும்தீய எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்னப் பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுதுஅணையாது எனப்பகர்ந்து பரமர்செய்ய விரை செய் மலர்த்தாள் போற்றிப் புகலி வேந்தர் வேயுறு தோளியை எடுத்து விளம்பினாரே. அவதி - எல்லை. உரைசெய்வதுளது - சொல்வது உண்டு; யாம் சொல்லவேண்டுவதுண்டு. உறுகோள்தானுந் தீய - பொருந்திய கிரகநிலைகளும் தீயனவாயுள்ளன. பரசுவது - போற்றுவது. 616 2520. சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகம் கேட்டுஅதன் பின் திருந்துநாவுக் கரசும் அதற்கு உடன்பாடு செய்துதாமும் அவர்முன்னே எழுந்தருள அமைந்தபோது புரம்எரித்தார் திருமகனார் அப்பர்! இந்தப் புனல் நாட்டில் எழுந்தருளி இருப்பீர் என்று கரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதுஆம் கருத்தில் நேர்ந்தார். புரமெரித்தார் திருமகனார் - பிள்ளையார். அப்பர் - அப்பரே. புனல் நாட்டில் - சோழ நாட்டில். அரிதாங் கருத்தில் நேர்ந்தார் - கஷ்ட உள்ளத்துடன் இசைந்தார். திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 286, 287, 288 பார்க்க. 617 2521. வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப் பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப் பரசி அருள்பெற்று விடைகொண்டு போந்து மாதவத்து வாகீசர் மறாத வண்ணம் வணங்கி அருள்செய்து விடைகொடுத்து மன்னும் காதலினால் அருமை உறக் கலந்து நீங்கிக் கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழிநாதர். 618 2522. திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞான சம்பந்தர் செழு நீர் முத்தின் பெரு நாமச் சிவிகையின் மீது ஏறிப் பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் வரு நாமத்து அன்பு உருகும் கடல் ஆம் என்ன மாதவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே. பெருநாமம் - பெரும்புகழையுடைய. பெற்றம். . . . . .உள்ளத்து - இடபக் கொடியுடைய சிவபிரான் திருவடிகளைச் சிரசின்மீது விரும்பிக் கொள்ளும் உள்ளத்தில். உள்ளத்தால் பேணும் என்றபடி. ஒரு - ஒப்பற்ற. நெஞ்சில் வரு நாமத்து - நெஞ்சில் தோன்றும் சிவ நாமத்தினிடத்து. 619 கொச்சகக் கலி 2523. பொங்கிஎழும் திருத்தொண்டர் போற்றுஎடுப்பார் நால் திசையும் மங்கலதூரி யம்தழங்க மறைமுழங்க மழைமுழங்கும் சங்கபட கம்பேரி தாரைகா ளம்தாளம் எங்கும்எழுந்து எதிர்இயம்ப இருவிசும்பு கொடிதூர்ப்ப. மங்கல தூரியம் தழங்க - மங்கல வாத்தியங்கள் கோஷிக்க. மழை முழங்கும் சங்கம் - மேகம்போல் முழங்கும் சங்கும். படகம் - ஒருவகைத் தோற்கருவி. 620 2524. மலர்மாரி பொழிந்துஇழிய, மங்கலவாழ்த்து இனிதுஇசைப்ப, அலர்வாசப் புனல்குடங்கள் அணிவிளக்குத் தூபமுடன் நிலைநீடு தோரணங்கள் நிரைத்துஅடியார் எதிர்கொள்ளக் கலைமாலை மதிச்சடையார் இடம்பலவும் கைதொழுவார். கலை மாலை மதி - கலைகளையுடையதாய் மாலைக்காலத்தில் உதிக்கும் சந்திரனை யணிந்த. 621 2525. தெண்திரைசூழ் கடல்கானல் திருஅகத்தியான் பள்ளி அண்டர்பிரான் கழல்வணங்கி, அரும் தமிழ் மாமறை பாடிக் கொண்டல்பயில் மணல்கோடு சூழ்கோடிக் குழகர்தமைத் தொண்டருடன் தொழுது, அணைந்தார் தோணிபுரத் தோன்றலார். கடற்கானல் - கடற்கரையிலுள்ள. கொண்டல் பயில் மணற் கோடு - மேகம் தவழும் மணற்குன்று. திருக்கோடிக் குழகரை. 622 2526. கண்ஆர்ந்த திருநுதலார் மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி எண்ஆர்ந்த திருஇடும்பா வனம்ஏத்தி எழுந்தருளி மண்ஆர்ந்த பதிபிறவும் மகிழ்தரும்அன் பால்வணங்கிப் பண்ஆர்ந்த தமிழ்பாடிப் பரவியே செல்கின்றார். திருக்கடிக்குளம் என்னும் திருப்பதியை. எண் ஆர்ந்த - அன்பர் கள் எண்ணம் நிறைந்த. 623 2527. திருஉசாத் தானத்துத் தேவர்பிரான் கழல்பணிந்து மருவியசெந் தமிழ்ப்பதிக மலர்போற்றும் படிபாடி இருவினையும் பற்றுஅறுப்பார் எண்இறந்த தொண்டருடன் பெருகுவிருப் பினர்ஆகிப் பிறபதியும் பணிந்துஅருள்வார். 624 2528. கருங் கழிவேலைப் பாலைக்கழி நெய்தல் கடந்தருளித் திருந்தியசீர்ப் புனல் நாட்டுத் தென்மேல் பால் திசைநோக்கி மருங்குமிடை தடம்சாலி மாடுசெறி குலைத்தெங்கு நெருங்கிவளர் கமுகுஉடுத்த நிறைமருத வழிச்சென்றார். கரும். . . . .நெய்தல் - கரிய கழியையுடைய கடல் சார்ந்த நெய்தல் நிலத்தை. மருங்கு. . . . . கமுகு - பக்கங்களில் நெருங்கிய பெரிய செந் நெற் பயிர்களையும். அவைகளின் பக்கங்களில் நிறைந்த குலைகளை யுடைய தென்னைகளையும், அவைகளைத் தொடர்ந்து நெருங்கி வளரும் பாக்கு மரங்களையும். 625 2529. சங்கங்கள் வயல்எங்கும் சாலிகழைக் கரும்புஎங்கும் கொங்குஎங்கும் நிறைகமலக் குளிர்வாசத் தடம்எங்கும் அங்கங்கே உழவர்குழாம் ஆர்க்கின்ற ஒலிஎங்கும்; எங்கெங்கும் மலர்ப்படுகர்; இவைகழிய எழுந்தருளி. கொங்கு - தேன்; மகரந்தம். மலர்ப்படுகர் - மலர்கள் நிறைந்த பள்ளங்கள்; நீர் நிலைகளுமாம். 626 2530. தடம்எங்கும் புனல்குடையும் தையலார் தொய்யில் நிறம்; இடம்எங்கும் அந்தணர்கள் ஓதுகிடை; ஆகநிலை மடம்எங்கும் தொண்டர்குழாம்; மனைஎங்கும் புனைவதுவை நடம்எங்கும்; ஒலிஓவா நல்பதிகள் அவைகடந்து. தடம். . . . . . . .நிறம் - தடாகங்கள் எங்கும் நீராடும் பெண்களின் தொய்யிற் குழம்பு நிறம். தொய்யில் என்பது ஒருவித நீர்க்கொடி; இக்கொடிபோன்ற கோலத்துக்குத் தொய்யில் என்பது வழங்கப் பட்டது; பின்னே தொய்யில் என்பது கோலப்பொதுவுக்கு வழங்கப் படலாயிற்று. நெய்தல் உறழக் காமர் - துணிநீர் மெல்லவற் றொய்யி லொடு மலர; தொய்யில் பொறித்த கணங்கெதிர் இளமுலை - மதுரைக் காஞ்சி: 282 - 83; 415. கரும்பையும் வல்லியையும் தோளிலே எழுதி, எனவே தொய்யிலொன்றையும் முலைமேல் எழுதி என்ப தாயிற்று தொய்யில் முதலிய பத்திக்கீற்று (சிலப்பதிகாரம்: 2. மனையறம். 29; 5. இந்திர. 126, அடியார்க்குநல்லார் உரை). தொய்யில், சந்தனம் அகில் தேவதாரம் குங்குமம் முதலியவற்றின் குழம்பால் எழுதப் படுவது. ஓதுகிடை - வேதம் ஓதும் இடங்கள். யாகநிலை - யாகஞ் செய்யும் இடங்கள். வதுவை - கல்யாணம். ஓவா - நீங்காத. 627 2531. நீர்நாடு கடந்தருளி நெடும்புறவில் குறும்புதல்கள் கார்நாடு முகைமுல்லைக் கடிநாறு நிலம்கடந்து போர்நாடும் சிலைமறவர் புன்புலவைப்பு இடைபோகிச் சீர்நாடும் தென்பாண்டி நல்நாடு சென்றுஅணைவார். நீர்நாடு - சோழ நாட்டை. நெடும் புறவில் - நெடிய முல்லை நிலத்து. குறும். . . . .கடந்து - சிறிய தூறுகளில் கார்காலத்தை நாடும் முல்லை அரும்புகளின் மணங்கமழும் (அம்முல்லை) நிலங் கடந்து. குறும்புதல்களையும் கார்நாடும முகை முல்லைகளையுமுடைய மணங் கமழும் நிலங்கடந்து என்னலுமாம். போர். . . . . போகி - குறிஞ்சி நிலத்திடைச் சென்று. 628 2532. மன்றல்மலர்ப் பிறங்கல்மருங்கு எறிந்துவரு நதிகள்பல சென்றுஅணைந்து கடந்துஏறித் திரிமருப்பின் கலைபுணர்மான் கன்றுதெறித் தனஉகைக்கும் கானஅதர் கடந்துஅணைந்தார் கொன்றைநறும் சடைமுடியார் மகிழ்ந்ததிருக் கொடுங்குன்றம். மன்றல். . . . . .எறிந்து - மணங்கமழும் மலர் மாலைகளை இரு பக்கமும் எறிந்து. திரி. . .அதர் - முறுக்கு வாய்ந்த கொம்பையுடைய ஆண் மான்களுடன் சேரும் பெண் மான்கள் ஈன்ற கன்றுகள் துள்ளிப் பாயுங் காட்டுவழியை. 629 2533. கொடுங்குன்றத்து இனிது அமர்ந்த கொழுபவளச் செழுங்குன்றை அடுங்குன்றம் உரித்தானை வணங்கிஅருந் தமிழ்பாடி நெடுங்குன்றும் படர்கானும் நிறைநாடும் கடந்துமதி தொடுங்குன்ற மதில்மதுரைத் தொல்நகர்வந்து அணைகின்றார். அடுங்குன்றம் - யானையை. மதுரை - திருவாலவாயுடையார் திருவிறையாடற் புராணம்: 36. மதுரையான திருவிளையாடல் பார்க்க. 630 அறுசீர் விருத்தம் 2534. இந்நிலை இவர்வந்து எய்த எண்பெரும் குன்றம் மேவும் அந்நிலை அமணர் தங்கட்கு அழிவுமுன் சாற்றல் உற்றுப் பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத் தீக்கனாக்க ளோடும் துன்நிமித் தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம். எண் பெருங்குன்றம்: அஞ்சனம் கொளஞ்சம் கோவத்தனம் திரிகூடம் காஞ்சி - குஞ்சர சையம் ஏம கூடமே விந்தம் என்னும் - மஞ்சிவர் வரைகள் எட்டும் வைகுறும் அமணர் - பரஞ்சோதியார் திருவிளையாடற்புராணம்: 22. யானை. . . . 7. பரங்குன் றொருவகம்பப் பாரம் பள்ளி - அருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம், என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச் சென்றெட்டு மோபிறவித் தீங்கு; எண்பெருங் குன்றாவன, யானைமலையும் நாகமலையும் நீலமலையும் சுணங்கமலையும் செப்புமலையும். . . . . . . .வெள்ளிமலையுமென மதுரையைச் சூழ்ந்திருப்பன - தக்காயகப்பரணி: 218 உரை. ஆனைமாமலை ஆதியாய இடங்களில். . . . . - திருஞான சம்பந்தர்: (மானினேர்). இப்புராணம் பாட்டு: 855 பார்க்க. வெருக்கொண்டு தடுத்தாட்கொண்ட புராணம் பாட்டு: 114. குறிப்புப் பார்க்க. 631 2535. பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழிமேலும் ஒள் இதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் கொள்ளும் மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய புள்இனம் ஆன தம்மின் பூசலிட்டு அழிவு சாற்றும். பள்ளிகள் - கோயில்கள். மாடு பயில் அமண்பாழி - பக்கத்தி லுள்ள சமணர்களின் குகைகள். அசோகு - அருகர்க்குரிய மரம். கூகை - கோட்டான். தீய புள்ளினம் - தீய பறவைக் கூட்டங்கள். பூசலிட்டு - கூச்சலிட்டு. 632 2536. பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக் கால்களும் தடுமா றாடிக் கண்களும் இடமே ஆடி மேல்வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் மால்உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம். வானவன். . . . . .கண்ணிடன் ஆடலும் - சிந்தாமணி 1156. கண் இடப் பக்கந் துடித்தல் தீமைக்கு அறிகுறி; மகளிர்க்காயின் நலமாம். மால் உழந்து - மயக்கத்தில் அழுந்தி. 633 2537. கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள வந்தவாறு அமணர் தம்மில் மாறுகொண்டு ஊறு செய்ய முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச் சிந்தையில் செற்றம் முன் ஆம் தீக்குணத் தலை நின்றார்கள். கந்தியர் - ஆரியாங்கனைகள்; தவமகளிர்கள்; கணவனுள்ள போதே துறப்போர். கனன்று எழு கலாங்கள் - கொதித்து எழும் கலகங்கள். வந்தவாறு - நேர்ந்தபடியே. அந்தவாறு எனக் கொண்டு அப்படியே எனக் கொள்வோருமுளர். முந்தைய உரையில் - தங்கள் பழைய நூல்களில். பொறை முதலிய உறுதிப் பொருள்களைக் கைவிட்டு. பொறை முதலியன சமண சமய நூல்களில் மிகச் சிறப்பாக அறிவுறுத்தப்படுவன. செற்றம் முன்னாம் - கோபம் முதலிய. பொறை முதலிய நற்குணங்களை விடுத்துச் செற்றம் முதலிய தீக் குணங்களைக் கொள்வது. ஆதிநாதர் கண்ட சமண சமயத்துக்கு மாறுபட்டு ஒழுகுவதாகும். 634 2538. இப்படி அமணர் வைகும் எப்பெயர்ப் பதியும் எய்தும் ஒப்புஇல் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி மெய்ப்படு தீக் கனாவும் வேறு வேறு ஆகக் கண்டு செப்புவான் புறத்துளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார். உற்பாதம் - தீக்குறிகள். செப்புவான் - சொல்லும் பொருட்டு. 635 2539. அந்நகர் தன்னில் வாழ்வார் புறம்பு நின்று அணைவார் கூடி மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித் துன்னிய அழுக்கு மெய்யில் தூசுஇலார் பலரும் ஈண்டி இன்னன கனவு கண்டேம் என எடுத்து இயம்பலுற்றார். அம் மதுராபுரியில் வாழ்வோரும் அதற்குப் புறத்தினின்றும் வந்தோரும் கூடி. அழுக்கடைந்த உடலில் ஆடையில்லாதவர்; இவர் திகம்பரர் எனப்படுவர். இவரல்லாத சமணர் சுவேதாம்பரர் எனப்படுவர். திகம்பரர் சுவேதாம்பரர் எனப்படுவர். திகம்பரம் சுவேதாம்பரம் என்பன ஜைனத்தில் இடைக்காலத்தில் தோன்றிய பிரிவுகள். தென்னாட்டிற் பரவியது திகம்பர ஜைனமென்க. இது பற்றி வந்துழி வந்துழிக் கூறுவன். ஈண்டி - ஒன்றுசேர்ந்து. 636 2540. சீர்மலி அசோகு தன்கீழ் இருந்த நம் தேவர் மேலே வேரோடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன்பின் ஆக ஏர்கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போக ஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார். நந்தேவர் - அருகர்; ஆதிநாதர். ஏர்கொள் - அழகிய. கைநாற்றி - கைகைளத் தொங்கவிட்டு; வீசி. அருகர் முக்குடையுடன் தாமும் எழுந்துபோக. 637 2541. குண்டிகை தகர்த்துப் பாயும் பீறி ஓர் குரத்தி ஓடப் பண்டிதர் பாழி நின்றும் கழுதைமேல் படர்வார்தம் பின் ஒண்தொடி இயக்கி யாரும் உளையிட்டுப் புலம்பி ஓடக் கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார். குண்டிகை. . . . . ஓட - கமண்டலத்தை உடைத்துப் பாயையுங் கிழித்து ஒரு பெண் குரு (குரு பத்தினி) ஓட. இயக்கியாரும் தவப் பெண்களும்; யக்ஷி தேவதைகளுமாம். உளை - ஊளை. கையறு கவலை - மீளாக்கவலை; செயலற்றுக்கவலை. 638 2542. கானிடை, நட்டம் ஆடும் கண்ணுதல் தொண்டர் எல்லாம் மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோம் என்பார் கோன் அவன் தானும் வெய்ய கொழும் தழல் முழுகக் கண்டோம் ஆன பின் எழவும் கண்டோம் அதிசயம் இது ஆம் என்பார். கானிடை - சுடுகாட்டில். மீனவன் - பாண்டியன். விரவிடவந்து சேர. 639 2543. மழவிடை இளங்கன்று ஒன்று வந்து நம் கழகம் தன்னை உழறிடச் சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி விழஒரு புகலும் இன்றி மேதினி தன்னை விட்டு நிழல்இலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம் என்பார். மிகவும் இளமை வாய்ந்த இடபக் கன்று ஒன்று. கழகந் தன்னை - கல்விச்சாலையை. உழறிட - சுழன்று சுழன்று மிதிப்ப. விழ ஒரு புகலும் இன்றி - அடைதற்கு ஒரு புகலிடமுமின்றி. 640 2544. ஆவது என் பாவிகாள்! இக் கனாத்திறம் அடிகள்மார்க்கு மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே என்று நோவுறு மனத்தர் ஆகி நுகர்பெரும் பதமும் கொள்ளார் யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அழுங்கினார்கள். பாவிகள் ஆவதென்? அடிகள்மார்க்கு - சமண முனிவர்கட்கு. பதமும் - உணவும். சமணர்கள் அழுங்கினார்கள். 641 2545. அவ்வகை அவர்கள் எல்லாம் அந் நிலைமையர்கள் ஆகச் சைவநன் மரபில் வந்த தடமயில் மட மென் சாயல் பைவளர் அரவு ஏர் அல்குல் பாண்டிமா தேவி யார்க்கும் மெய்வகை அமைச்ச னார்க்கும் விளங்கும் நல்நிமித்தம் மேன்மேல். பை - பாம்பின்படம். பாண்டிமா தேவியாரைச் சிறப்பிக்குஞ் சொற்கள் மகிழ்ச்சியையுங் கிளர்ச்சியையுங் குறிப்பன. 642 2546. அளவுஇலா மகிழ்ச்சி காட்டும் அரும்பெரும் நிமித்தம் எய்த உளம்மகிழ்வு உணரும் காலை உலகு எலாம் உய்ய வந்த வளர்ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை கிளர்வுறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார். கிளர்வுறும் ஓகை கூறி - எழுச்சி தரும் உவகைச் செய்தியைக் கூறிக்கொண்டு. 643 2547. அம்மொழி விளம்பி னோர்க்கு வேண்டுவ அடைய நல்கி மெய்ம்மையால் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கத் தம்மையும் அறியா வண்ணம் கைமிக்குத் தழைத்துப் பொங்கி விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார். அடையநல்கி - நிரம்பக் கொடுத்து. கைமிக்கு - வரம்பு கடந்து. 644 2548. மங்கையர்க் கரசியார்பால் வந்து அடி வணங்கி நின்ற கொங்கு அலர் தெரியலாராம் குலச்சிறை யாரை நோக்கி நங்கள் தம்பிரானார் ஆய ஞான போனகர் முன்பு எய்தி இங்கு எழுந்தருள உய்ந்தோம் என எதிர்கொள்ளும் என்றார். கொங்கு அலர் தெரியலாராம் - மணங்கமழும் மாலையணிந் தவராகிய. 645 2549. மன்றல் அம் குழலினாரை வணங்கிப் போந்து அமைச்சனாரும் வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து பொன்திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி இன்தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும் காலை. மன்றலங் குழலினா ரென்பது அரசனுக்கு உறுதிப் பயனைத் தருவதை உணர்த்துவது. 646 2550. அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக் கும்பிடவேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறித் தம்பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்று நம்பரை வணங்கித் தாமும் நல்வர வேற்று நின்றார். அம்புய மலராள் போல்வார் - தாமரைமலரிலுள்ள திரு மகளைப் போன்றவராகிய மங்கையர்க்கரசியார். தனித்தடையோடும் - தனியான காவலுடன். நம்பரை - ஞானசம்பந்தரை. 647 கொச்சகக் கலிப்பா 2551. திருநிலவும் மணிமுத்தின் சிவிகையின்மேல் சேவித்து வருநிலவு தருமதிபோல் வளர்ஒளி வெண் குடைநிழற்றப் பெருகு ஒளிய திருநீற்றுத் தொண்டர் குழாம் பெருகி வர அருள்பெருக வருஞானத்து அமுதுஉண்டார் அணைகின்றார். திருநிலவு - அருட்செல்வம் பொலியும்; அழகு விளங்கும் எனினுமாம். நிலவு தரு மதிபோல் - நிலவு பொழியும் சந்திரனைப் போல. நிழற்ற - நிழலைச் செய்ய. 648 2552. துந்துபிகள் முதல்ஆய தூரியங்கள் கிளராமே அந்தணர்ஆம் மாதவர்கள் ஆயிரம் மாமறை எடுப்ப வந்துஎழும் மங்கலநாதம் மாதிரம்உள் படமுழங்கச் செந்தமிழ்மா ருதம்எதிர்கொண்டு எம்மருங்கும் சேவிப்ப. துந்துபி முதலிய வாத்திய ஒலிகள் எழாவண்ணம் மாதிரம் - திக்குகள். செந்தமிழ் மாருதம் - செவ்விய இனிய தென்றல்; செந்தமிழ் அனைய தென்றல், செந்தமிழாகிய தென்றல் என்னலுமாம்; செந் தமிழ் நாட்டின் காற்றும் செந்தமிழ் மயம் போலும். 649 2553. பண்ணியவஞ் சனைத்தவத்தால் பஞ்சவன் நாட்டிடைப் பரந்த எண்இல் அமண் எனும்பாவ இருஞ்சேனை இரிந்துஓட மண்உலக மேஅன்றி வான்உலகும் செய்தபெரும் புண்ணியத்தின் படையெழுச்சி போல்எய்தும் பொலிவுஎய்த. பஞ்சவன் நாட்டிடை - பாண்டிநாட்டில். இரிந்து - கெட்டு. 650 2554. துன்னும்முழு உடல்துகளால் சூழும்உணர் வினில்துகளால் அல்நெறியில் செறிந்துஅடைந்த அமண்மாசு கழுவுதற்கு மன்னிஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர்தம் கன்னிநாட் டிடைக்கங்கை அணைந்ததுஎனும் கவின்காட்ட. உடலினும் அழுக்கு உணர்விலும் அழுக்கு என்றபடி. வருதுயர் தம் - பாண்டியருடைய. 651 2555. பானல்வயல் தமிழ்நாடும் பழி நாடும்படி பரந்த மானம்இலா அமண்என்னும் வல்இருள்போய் மாய்வதனுக்கு ஆனபெருகு ஒளிப்பரப்பால் அண்டம்எலாம் கொண்டதுஒரு ஞானமணி விளக்குஎழுந்து வருவதுஎன நலம்படைப்ப. பானல் - கருங்குவளை மலர்களையுடைய. 652 2556. புரசைவயக் கடக்களிற்றுப் பூழியர்வண் தமிழ்நாட்டுத் தரைசெய்தவப் பயன்விளங்கச் சைவநெறி தழைத்துஓங்க உரைசெய் திருப்பேர் பலவும் ஊதும் மணிச் சின்னம் எலாம் பரசமயக் கோளரி வந்தான் என்று பணிமாற. புரசை. . . .பூழியர் - கழுத்திற் கயிற்றையும் வெற்றியையும் மதத் தையுங் கொண்ட யானைகளையுடைய பாண்டியரின். பணிமாற - ஊத. 653 எழுசீர் விருத்தம் 2557. இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்தருளும் பொழுது இசைக்கும் ஒப்புஇல் நித்திலப் பொன்தனில் பெருங் காளம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை செப்புஅரும் பெருமைக் குலச்சிறை யார்தம் செவி நிறை அமுது எனத் தேக்க அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு அரும் களிப்பினர் ஆனார். 654 2558. அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் அணைந்திடக் கடிதுசென்று அணைவார் நஞ்சுஅணி கண்டர் தம்திருமகனார் உடன்வரு நல்தவக் கடலை நெஞ்சினில் நிறைந்த ஆர்வம்முன் செல்லக் கண்டுநீள் நிலத்திடைத் தாழ்ந்து பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்குஉற அணைந்துமுன் பணிந்தார். நற்றவக் கடலை - அடியார் கூட்டத்தை. 655 2559. நிலமிசைப் பணிந்த குலச்சிறையாரை நீடிய பெருந்தவத் தொண்டர் பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்தாம் படியின் நின்று எழா வகை கண்டு மலர் மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிகச் சேகரர் பாதம் குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற. படியினின்று - பூமியினின்றும். மலர். . . .சேகரர் - பிரமன் வழி பட்ட சீகாழியில் தோன்றிய பிள்ளையாரின். குலவி - சூழ்ந்து. 656 2560. சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து விரைந்து சென்று அவர் தமை அணைந்து கரகமலங்கள் பற்றியே எடுப்பக் கைதொழுது அவரும் முன்நிற்ப வரம்மிகு தவத்தார் அவரையே நோக்கி வள்ளலார் மதுரவாக்கு அளிப்பார். 657 2561. செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர்! உமக்கும் நம்பெருமான் தன் திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே என்ன வம்பு அலர் அலங்கல் மந்திரியாரும் மண்மிசைத் தாழ்ந்துஅடி வணங்கித் தம் பெருந் தவத்தின் பயன் அனையார்க்குத் தன்மையாம் நிலை உரைக்கின்றார். சிவ பத்தியிற் சிறந்த இருவருள் பெண்ணுக்கு முதன்மை தந்து விசாரிப்பதை யோர்க. வாலிதே - நன்றுளதோ. வம்பு அலர் அலங்கல் - மணங்கமழும் மலர்மாலை யணிந்த. தங்கள் தவப்பயன் திருஞான சம்பந்தர் என்றபடி. 658 2562. சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும் இனிஎதிர் காலத்தின் சிறப்பும் இன்று எழுந்தருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திருவருள் உடையேம் நன்றி இல் நெறியில் அழுந்திய நாடும் நல்தமிழ் வேந்தனும் உய்ந்து வென்றி கொள் திருநீற்று ஒளியினில் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார். சென்ற கால நிலையையும் வருங்கால நிலையையும் சிறப்புறக் குறித்து நிகழ் காலநிலையைக் குறியாமையான், நிகழ்கால நிலை சீர்குலைந் துள்ளமையை ஊகித்துணர்தல்வேண்டும். பெரியோர்கள் தீமையைக் குறியாது விடுப்பது வழக்கம். பெருமான் எழுந்தருளிய படியால் நிகழ்கால நிலையும் சீர்ப்பட்டது என்பது எற்றைக்கும் என்பதால் விளங்குகிறது. நன்றியில் நெறி - சமண மார்க்கம். 659 2563. இங்குஎழுந் தருளும் பெருமை கேட்டருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி மங்கையர்க் கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்தருளியது என்றே அங்கு நீர் எதிர் சென்று அடிபணி வீர் என்று அருள் செய்தார் எனத் தொழுது ஆர்வம் பொங்கிய களிப்பால் மிளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர். மங்கையர்க்கரசியார் பணித்ததைச் சிறப்பாகக் குறிப்பிட்டு மீண்டுங் குலச்சிறையார் பிள்ளையாரைப் பணிந்தாரென்க. புரவலன் - பாண்டி மன்னர். 660 2564. ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவு இலா அருள் புரி கருணை தாங்கிய மொழியால் தகுவன விளம்பித் தலையளித்து அருளும் அப்பொழுதில் ஓங்கு எயில் புடை சூழ் மதுரை தோன்றுதலும் உயர் தவத் தொண்டரை நோக்கி ஈங்கு நம் பெருமான் திருவாலவாய் மற்று எம் மருங்கினது என வினவ. ஆங்ஙனம் - அத்தன்மையாக. அடிபணிந்தவர்மேல் - தமது அடிபணிந்த குலச்சிறையார் மீது. தலை அளித்து - முதற்கை கொடுத்து; தலையளி செய்து என்னலுமாம். எயில் - மதில். திருவாலவாய் - மதுரையில் சோமசுந்தரக் கடவுள் எழுந்தருளியுள்ள திருக்கோயிலின் பெயர். ஆலவாய் என்றும், வாலவாய் என்றும் வழங்குதலுண்டு; வாயை முன்னிட்டது ஆலவாய்; வாலை முன்னிட்டது வாலவாய். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்: 47. திருவாலவாயான் திருவிளையாடல் பார்க்க. 661 2565. அன்பராய் அவர்முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடியிணை வணங்கி முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து மின்பொலி விசும்பை அளக்கும் நீள் கொடிசூழ் வியன்நெடுங் கோபுரம் தோன்றும் என்பு அணி அணிவார் இனிது அமர்ந்தருளும் திருவாலவாய் இது என்றார். 662 2566. தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணை மலர்க் கரம் குவித்தருளி மண்டு பேர் அன்பால் மண்மிசைப் பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே எண் திசை பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர்தம் பணியும் கொண்டமை சிறப்பித்து அருளிநல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற. 663 2567. பாடிய பதிகம் பரவியே வந்து பண்புடை அடியவ ரோடும் தேடும் மால் அயனுக்கும் அரியவர் மகிழ்ந்த திருவாலவாய் மருங்கு அணைந்து நீடுஉயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி நிறைபெரு விருப்புடன் புக்கு மாடுசூழ் வலம்கொண்டு உடையவர்கோயில் மந்திரி யாருடன் புகுந்தார். மாடுசூழ் வலம் கொண்டு - பக்கமாக வலம் வந்து. உடையவர் - சோமசுந்தரக் கடவுள். 664 கலித்துறை 2568. ஆடும் அங்கணர் ஆலவாய் அமர்ந்துஇனிது இருந்த காள கண்டரைக் கண்களின் பயன்பெறக் கண்டு நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் மீளவும் பல முறை நிலம் உறவிழுந்து எழுவார். 665 2569. அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப் பொங்கு காதலின் மெய்ம் மயிர்ப் புளகமும் பொழியும் செங்கண் நீர்தரும் அருவியும் திகழ்திரு மேனி எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர். அட்டாங்க பஞ்சாங்க நமகாரஞ் செய்து, பக்கம்: 121. பார்க்க உள்ளந்தான் நின்று உச்சி அளவு நெஞ்சாய் உருகாதால் உடம் பெல்லாங் கண்ணாய் அண்ணா, வெள்ளந்தான் பாயாதால் - திரு வாசகம்; திருச்சதகம். சுட்டறுத்தல்: 1. 666 2570. நீல மாமிடற்று ஆலவா யான் என நிலவு மூலம் ஆகிய திரு இருக் குக்குறள் மொழிந்து சீல மாதவத் திருத்தொண்டர் தம்மொடும் திளைத்தார் சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன். திளைத்தார் - அன்பில் ஈடுபட்டு மூழ்கினார். தலைச்சங்கப் புல வனார் - திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளாகிய சொக்கநாதர். 667 2571. சேர்த்தும் இன்இசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச் சாத்தி நல்இசைத் தண்தமிழ்ச் சொல்மலர் மாலை பேர்த்தும் இன்புறப் பாடிவெண் பிறைஅணி சென்னி மூர்த்தி யார்கழல் பரவியே திருமுன்றில் அணைய. பேர்த்தும் - பெயர்த்தும்; மீண்டும். 668 2572. பிள்ளை யார்எழுந் தருளிமுன் புகுதும்அப் பொழுது வெள்ள நீர்பொதி வேணியார் தமைத் தொழும்விருப்பால் உள்அ ணைந்திட எதிர்செலாது ஒரு மருங்கு ஒதுங்கும் தெள்ளு நீர்விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த. தெரிவையார் - மங்கையர்க்கரசியார். 669 2573. மருங்கில் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக் கருங்குழல் கற்றை மேல்குவி கைத்தளிர் உடையார் பருங்கை யானைவாழ் வளவர்கோன் பாவையார் என்னப் பெருங்க ளிப்புடன் விரைந்துஎதிர் பிள்ளையார் அணைந்தார். பாண்டியன் மனைவியார் எனக் கூறாது, சோழன் மகள் என்று கூறியது கருதற்பாலது. 670 2574. தென்ன வன்பெருந் தேவியார் சிவக்கன்றின் செய்ய பொன்அ டிக்கம லங்களில் பொருந்தமுன் விழுந்தார் மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ்சிறந்து அளிக்கும் இன்அ ருள்பெரும் சிறப்பொடும் திருக்கையால் எடுத்தார். சிவக்கன்று என்பது, ஞானசம்பந்தப் பெருமானை மங்கை யர்க்கரசியார் கண்டதும், அம்மையார் மாட்டுத் தாய்மை மீக்கூர்ந்து விளங்கியதைக் குறிப்பாக உணர்த்துவது. இலைபடர்ந்த பொய்கை இடத்தழுதல் கண்டு - முலைசுரந்த அன்னையோ முன்னின் - நிலை விளம்பக் - கொங்கை சுரந்த அருட் கோமகளோ சம்பந்தா - இங்கு யர்ந்தா ளார்சொல் எனக்கு - சிவப்பிரகாசர். 671 2575. ஞான போனகர் எதிர்தொழுது எழுந்தநல் தவத்து மானி யார்மனக் கருத்துமுற் றியதுஎன மதித்தே பானல் அம்கண்கள் நீர்மல்கப் பவளவாய் குழறி யானும் என்பதியும் செய்ததவம் என்கொல் என்றார். 672 2576. யாழின் மென்மொழியார் மொழிந்து எதிர்கழல் வணங்கக் காழி வாழவந்து அருளிய கவுணியா பிரானும் சூழும் ஆகிய பரசமயத் திடைத் தொண்டு வாழும் நீர்மையீர்! உமைக்காண வந்தனம் என்றார். 673 2577. இன்னவாறு அருள் செய்திடத் தொழுதுஅடி வீழ்ந்தார் மன்னும் மந்திரியார்வரு திறம் எலாம் மொழிய அன்ன மெல்நடையார் தமக்கு அருள்செய்து போக்கித் துன்னும் மெய்த்தொண்டர் சூழவந்து அருளும் அப்பொழுது. வருதிறமெல்லாம் - சமணர்களால் நேர்ந்த வகைகளை யெல்லாம். 674 2578. செல்வம் மல்கிய திருவால வாயினில் பணிசெய்து அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி மல்கு கார் அமண் இருள்கெட ஈங்கு வந்தருள எல்லைஇல்தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார். அல்கு - வசிக்கும். 675 2579. அத்திருத்தொண்டர் தங்களுக்கு அருள்முகம் அளித்து மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச் சித்தம் இன்புறும் அமைச்சனார் திருமடம் காட்டப் பத்தர் போற்றிடப் பரிசனத் தொடும்இனிது அமர்ந்தார். மடத்தின் பெயர் வாகீச சுவாமி மடம் என்று பெரும்பற்றப் புலியூர் நம்பியாரும், பரஞ்சோதியாரும் தாம் தாம் பாடிய திருவிளை யாடற் புராணங்களிற் குறிப்பிட்டுள்ளனார். 676 2580. பரவு காதலின் பாண்டிமாதேவியார் அருளால் விரவுநண்பொடு குலச்சிறையார் விருந்து அளிப்பச் சிரபு ரத்துவந்து அருளிய செல்வர் அங்கிருந்தார் இரவிமேல்கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய இரவி - சூரியன். எல்லி - இரவு. 677 2581. வழுதி மாநகர் அதனிடை மாமறைத் தலைவர் பழுது இல் சீர் அடியாருடன் பகல்வரக் கண்ட கழுது போல்வரும் கார்அமண் குண்டர்கள் கலங்கி இழுகும் மெய்இருட்கு இருள் என ஈண்டினர் ஒருபால். கழுது - பேய். மெய் இருட்கு இருள் இழுகும் என ஒருபால் ஈண்டினர் - உடல்இருளுக்குப் பூத இருளும் பின் வாங்குமாறு ஓரிடத்திற் சேர்ந்தனர்; இழுது மையிருட்டு என்னும் பாடத்துக்கு குழம்பாகிய மையிருட்கு எனக் கொள்க. 678 2582. அங்கண் மேவிய சமணர்கள் பிவள்ளையார் அமர்ந்த துங்க மாமடம் தன்னிடைத் தொண்டர்தம் குழாங்கள் எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த பொங்கு பேர்ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய். 679 2583. மற்றுஇவ் வான்பழி மன்னவன் மாறனை எய்திச் சொற்றும் என்றுதம் சூழ்ச்சியும் ஒருபடி துணிவார் கொற்ற வன்கடைக் காவலர் முன்சென்று குறுகி வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார். வான்பழி - பெரும்பழியை. மாறனை - பாண்டியனை. சொற்றும் - சொல்லுதும். 680 2585. வாயில் காவலர் மன்னவன் தனைஎதிர் வணங்கி ஆயம் ஆகிவந்து அடிகள்மார் அணைந்தனர் என்ன ஏயி னான்அணை வார்என அவருடம் சென்று இசைத்தார் பாயி னால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார். ஆயமாகி - கூட்டமாகி. அடிகள்மார் - சமண முனிவரர்கள். VÆdh‹ mizth® vd - (bfhŸifÆš mt®fSl‹) x¤jtdh»a k‹d‹ (mt®fŸ) mizth®fshf v‹W brhšy; (‘mofŸkh®fsh! என்று) விரைந்தவனாகிய மன்னன். . . . . ; (அவர்கள்) விரைவால். . . . . ; அவரும் (அடிகள்மார்களிடம்) சென்று மன்னவன் சொற்றதை) இசைத்தார். 681 2585. புக்கபோது அவர் அழிவுறு மனத்திடைப் புலர்ச்சி மிக்க தன்மையை வேந்தனும் கண்டுஎதிர் வினவி ‘x¡fÚ®âu©L miztj‰F c‰wJ v‹? என்னத் தக்கதுஅல்லதீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார். புலர்ச்சி - வாட்டம். தகுதியல்லாததாகிய தீங்கு நேர்ந்தது. 682 2586. ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண்கையர் மாவலாய்! உன்தன் மதுரையில் சைவவே தியர்தாம் மேவலால் இன்று கண்டுமுட்டு யாம் என்று விளம்ப. மாவலாய் - யானையேறி நடாத்துவதில் வல்ல பாண்டியனே; மா குதிரையுமாம். கண்டுமுட்டு - ஜைனபரிஷை; கண்டதால் விளையும் முட்டு; காலையில் வைதிக சைவர்களைக் காண நேரின், சமணர்கள் அக்காட்சியை ஒருவிதத் தீட்டாகக் கருதுவது வழக்கம். இதன் பொருட்டு அவர்கள் நோன்பிருந்து கழுவாய் தேடுதலுமுண்டு. 683 2587. என்று கூறலும் கேட்டு முட்டு யானும் என்று இயம்பி நன்று நல்அறம் புரிந்தவா நான் என்று நகுவான் கன்றும் உள்ளத்தன் ஆகி அக் கண்ணுதல் அடியார் இன்றுஇம் மாநகர் அணைந்தது என்? அவர்கள் யார்? என்றான். கேட்டு முட்டு - இதுவும் ஜைனபரிபாஷை; கேட்டதால் விளையும் முட்டு. கண்டுமுட்டு, கேட்டு முட்டு முதலியன இடைக்கால ஜைனர்கள் கொண்டவை. இவை எவ்வுயிரையுந் தன்னுயிர்போல் கருதும் பேரறத்தைக் கொண்ட ஆதிஜைனத்தின் கொள்கையல்ல. கன்றும் - கறுவும்; கோபிக்கும்; பகைக்கும். 684 2588. மாலை வெண்குடை வளவர்சோ ணாட்டு வண்புகலிச் சூல பாணிபால் ஞானம்பெற் றான்என்று சுருதிப் பாலன் அன்பர்தம் குழாத்தொடும் பனிமுத்தின் சிவிகை மேல்அ ணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல சுருதிப்பாலன் - வேதியச் சிறுவன் ஒருவன். 685 2589. என்று கூறுவார் இத்திறம் முன்புதாம் அறிந்தது ஒன்றுஅங்கு ஒழி யாவகை உரைத்தலும் தென்னன் மன்றல் அம்பொழில் சண்பையார் வள்ளலார் நாமம் சென்று தன்செவி நிறைத்தலும் செயிர்த்துமுன் சொல்வான். செயிர்த்து - வெகுண்டு. 686 2590. மற்ற மாமறை மைந்தன்இம் மருங்குஅணைந் தானேல் உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்பச் செற்றம் மீக்கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் கொற்ற மன்னவன் மொழிக்குஎதிர் குறித்துஉரைசெய்வார். 687 2591. வந்த அந்தணன் தன்னைநாம் வலிசெய்து போக்கும் சிந்தை அன்றிஅச் சிறுமறை யோன்உறை மடத்தில் வெம்த ழல்பட விஞ்சைமந்திரத் தொழில்வி ளைத்தால் இந்த நல்நகர் இடத்துஇரான் ஏகும் என்று இசைந்தார். வீடுசேர்ந்தாரை வலிந்து துரத்தத் தமிழ் மனனன் ஒருப்படா னாதலின், வலி செய்து போக்குஞ் சிந்தையன்றி என்றார். தீயி டற்கும் மன்னன் ஒருப்படானாதலின், வெந்தழற்பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால். . . . . என்றார். 688 அறுசீர் விருத்தம் 2592. ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப் போவது என்று அவரைப் போக்கிப் பொய்ம்மையைப் பொருளாக் கொண்டான் யாவதும் உரையா டாதே எண்ணத்தில் கவலை யோடும் பூஅணை அமளி புக்கான் பொங்குஎழில் தேவி சேர்ந்தாள். மந்திரத் தீ சுடாதென மன்னன் கருதினான் போலும். 689 2593. மன்னவன் உரைப்பது இன்றி இருப்பா மாதேவியார் தாம் என் உயிர்க்கு உயிராய் உள்ள இறைவ! நீ உற்றது என்னோ முன்உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்திருந்தாய் இன்று பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள்செய் என்றார். பன்னிய - பல பொருளை ஆராய்ந்த. பருவரல் - வருத்தம். 690 2594. தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறு கின்றான் காவிநீள் கண்ணினாய்! கேள் காவிரி நாட்டில் மன்னும் தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள்பெற்று இங்கு மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்று. 691 2595. வெண்பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டு யானும் காதல் வண்டு உணத் துதைந்த கோதை மானியே! இங்கு வந்த பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறுஇல்லை என்றான். துதைந்த கோதை மானியே - நெருங்கியே பூமாலை யணிந்த மங்கையர்க்கரசியே. 692 2596. மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க் கரசியார் தாம் நின்நிலை இதுவே ஆகில் நீடிய தெய்வத் தன்மை அன்னவர் விடாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து துன்னுவது உறுதி ஆகும் சுழிவுறேல் மன்ன என்றார். 693 2597. சிந்தையில் களிப்பு மிக்குத் திருக்கழு மலத்தார் வேந்தன் வந்தவாறு எம்மை ஆள எனவரு மகிழ்ச்சி யோடும் கொந்துஅலர் குழலால் போதக் குலச்சிறையார் அங்கு எய்த இந்தநன் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர். கொத்து மலரணிந்த கூந்தலையுடைய மங்கையர்க்கரசியார் செல்ல. மாற்றம் - வார்த்தைகள். 694 2598. கொற்றவன் அமைச்ச னாரும் கைதலை குவித்து நின்று பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு என்பார் இற்றைநாள் ஈசன் அன்பர் தம்மைநாம் இறைஞ்சப் பெற்றோம் மற்றுஇனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார். 695 2599. மானியார் தாமும் அஞ்சி வஞ்சகப் புலையர் தாங்கள் ஈனமே புரிய வல்லார் செய்வது என்நாம்? என்று எண்ணி ஞான சம்பந்தர் தம்பால் நன்மை அல்லாது செய்யும் ஊனம் வந்து அடையில் நாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார். அக்காலத்துச் சமணர் தமது அறத்தை விடுத்துப் பொறாமை மேலீட்டான் இழி துறைகளிலும் இறங்கி இடர் செய்வோரா யிருந்தமையான் புலையர் என்றும், ஈனமே புரியவல்லார் என்றுங் கூறினார். 696 2600. இவர்நிலை இதுவே ஆக இலங்கு வேல் தென்னன் ஆன அவன் நிலை அது ஆம் அந்நாள் அருகர்தம் நிலையது எண்ணில் தவம்மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீ சிவநெறி வளர்க்க வந்தார் திருமடம் சேரச் செய்தார். தென்னவன் நிலையாவது, கேட்டுமுட்டால் வாட்டமுற்றி ருந்ததென்க. அல்ல - அறமல்லாதன; பாவச்செயல்கள். 697 கலித்துறை 2601. ஆதி மந்திரம் அஞ்செழுத்து ஓதுவார் நோக்கம் மாதி ரத்தினும் மற்றைமந் திரவிதிவருமே பூதி சாதனர் மடத்தில்தாம் புனைந்த சாதனைகள் சாதி யாவகை கண்டுஅமண் குண்டர்கள் தளர்ந்தார். மாதிரத்தினும் - திக்கினும். மந்திரவிதி வருமோ. எல்லா வற்றிற்கும் ஆதியாகிய பஞ்சாக்கர மந்திரத்தை ஓதுவோர் நோக்கும் திக்கையும், மற்றை விதி மந்திரங்கள் எட்டிப்பாரா என்றபடி. 698 2602. தளர்ந்து மற்றவர் தாம்செய்த தித்தொழில் சரியக் கிளர்ந்த அச்சம்முன் கெழுமிய கீழ்மையோர் கூடி விளங்கு நீள்முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை உளம் கொளான்நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார். சரிய - விழ; பயன்படாததாக. கிளர்ந்த - எழுந்த. கெழுமிய பொருந்திய. விருத்தியும் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 82. குறிப்புப் பார்க்க. 699 2603. மந்தி ரச்செயல் வாய்த்தில மற்றுஇனிச் செய்யும் புந்தி ஆவதுஇங்கு இது எனப் பொதிதழல் கொடுபுக்கு அம்தண் மாதவர் திருமடப் புறத்து அயல் இருள்போல் வந்து, தம்தொழில் புரிந்தனர்; வஞ்சனை மனத்தோர். புந்தியாவது - சூழ்ச்சியாவது; கீழ்மைப் புத்தியால் செய்யத் துணிவது. அந்தண் - அழகிய தண்மை வாய்ந்த. திருமடத்தின் புறப் பக்கத்தில். சிவனடியாருள்ள மடத்தில் தீவைத்தனர் என்று சொல் லவும் ஆசிரியர்க்கு மனம் எழாமையான் வந்துதந் தொழில் புரிந்தனர் என்றார். மெய்ப்பொருள் நாயனார் புராணம்: 15; ஏனாதி நாயனார் புராணம்: 40; திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் : 124 பார்க்க. 700 2604. திருமடப்புறச் சுற்றினில் தீயபா தகத்தோர் மருவு வித்தஅத் தொழில்வெளிப் படுதலும் மறுகிப் பரிச னத்தவர் பதைப்பொடும் சிதைத்தது நீக்கி அருகர் இத்திறம் புரித்தமை தெளிந்து சென்று அணைவார். மருவுவித்த அத்தொழிலாவது மடத்தைச் சுற்றித் தீவைத்தது. பரிசனத்தவர் மறுகி அடியார்கள்அங்குமிங்கும்ஓடி;(மறுகுதல்-பலமுறைதிரிதல்;சுழலுதல்.).701 2605. கழும லப்பதிக் கவுணியர் கற்பகக் கன்றை தொழுது நின்றுஅமண் குண்டர்செய் தீங்கினைச்சொன்ன பொழுது மாதவர் துயிலும்இத் திருமடப்புறம்பு பழுது செய்வதோ! பாவிகாள்! எனப் பரிந்தருளி. 702 2606. என்பொ ருட்டுஅவர் செய்ததீங்கு ஆயினும்இறையோன் அன்ப ருக்குஎய்து மோஎன்று பின்னையும் அச்சம் முன்பு உறப்பின்பு முனிவுற முத்தமிழ் விரகர் மன்பு ரக்கும்மெய் மறைவழு எனமனம் கொண்டார். முனிவுற - (சமணர்கள் செய்கையில்) வெறுப்புண்டாக. மன். . . . என - மன்னவன் ஆட்சி முறைமையின் தவறுதலென்று. 703 வெய்யதீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் செய்யனே திரு ஆல வாய் எனும் திருப்பதிகம் சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்டதீத் தழல் போய்ப் பைய வேசென்று பாண்டியற்கு ஆக எனப் பணிந்தார். பையவே - மெல்லவே. 704 எண்சீர் விருத்தம் 2608. பாண்டிமா தேவியார் தமது பொற்பில் பயிலும்நெடு மங்கலநாண் பாதுகாத்தும் அண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்பால் அபராதம் உறுதலாலும் மீண்டுசிவ நெறி அடையும் விதியினாலும் வெண்ணீறு வெப்புஅகலப் புகலி வேந்தர் தீண்டிஇடப் பேறுஉடையன் ஆதலாலும் தீப்பிணியைப் பையவே செல்க என்றார். பையவே என்றதற்குக் காரணம் இப்பாட்டில் சொல்லப்பட்டி ருத்தல் காண்க. பொற்பில் பயிலும் - அழகுடன் பொலியும். 705 கலித்துறை 2609. திருந்து இசைப்ப திகத்தொடை திருஆல வாயின் மருத்தி னைச்சண்பை மன்னவர் புனைந்திட அருளால் விரிந்த வெந்தழல் வெம்மைபோய்த் தென்னனை மேவிப் பெருந்த ழல்பொதி வெதுப்புஎனப் பெயர்பெற்றது அன்றே. பதிகம். . . . . .புனைந்திட - பதிகமாகிய மாலையைச் சோம சுந்தரக் கடவுள் மீது அணிய. அருளால் - அக்கடவுளின் அருளால். வெதுப்பு - வெப்ப நோய்; சுரநோய். 706 2610. செய்ய மேனியர் திருமகனார் உறை மடத்தில் நையும் உள்ளத்தராய் அமண் கையர்தாம் நணுகிக் கையி னால்எரி இடஉடன் படும்எல்லி கரப்ப வெய்ய வன்குணக் கடலிடை எழுந்தனன் மீது. எரியிடுதற்கு உடன்பட்டிருந்த இரவு ஒழியச் சூரியன் கீழ்க் கடலில் எழுந்தான். 707 2611. இரவு பாதகர் செய்த தீங்கு இரவிதன் மரபில் குரவ ஓதியார் குலச்சிறை யார்உடன் கேட்டுச் சிரபு ரப்பிள்ளை யாரைஇத் தீயவர் நாட்டு வரவ ழைத்தநாம் மாய்வதே எனமனம் மயங்கி. இரவிதன் மரபில் குரவ ஓதியார் - சூரியன் மரபில் (சோழ மரபில்) தோன்றிய குரவம்பூவணிந்த கூந்தலையுடைய மங்கையர்க் கரசியார். 708 2612. பெருகும் அச்சமோடு ஆர்உயிர் பதைப்பவர் பின்பு திரும டப்புறம் மருங்குதீது இன்மையின் தெளிந்து கருமு ருட்டுஅமண் கையர்செய் தீங்குஇது கடைக்கால் வருவ துஎப்படி ஆம்என மனம்கொளும் பொழுது திருமடப் புறத்தயல் என்றார் முன்னும். கையர் - கீழ்மக்கள் கடைக்கால் வருவது - இதன் முடிவில் விளைவது; (கடைக்கால் முடிந்த வேளையில்). 709 2613. அரச னுக்குவெப்பு அடுத்தது என்றுஅருகுகஞ் சுகிகள் உரைசெ யப்பதைத்து ஒருதனித் தேவியார் புகுத விரைவும் அச்சமும் மேற்கொளக் குலச்சிறை யாரும் விரைசெய் பொன்புய மன்னவன் மருங்கு வந்துஅணைந்தார். அருகு கஞ்சுகிகள் - வெம்மையால் அருகிய அல்லது அருகி லிருந்த சட்டையிட்ட காவற்காரர்கள்; தூதர்கள். 710 2614. வேந்த னுக்குமெய் விதிர்ப்புற வெதுப்புறு வெம்மை காந்து வெந்தழல் கதுமென மெய்எலாம் கவர்ந்து போந்து மாளிகைப் புறத்து நின்றார்களும் புலர்ந்து தீந்து போம்படி எழுந்தது விழுந்து உடல் திரங்க. மெய் விதிர்ப்புற - உடல்நடுங்க. வெதுப்புறு வெம்மை வெதுப் புஷ்ணம்; வெஞ்சுரம். காந்து - எரியும். கதுமென - கடுக. திரங்க - உலர. 711 2615. உணர்வும் ஆவியும் ஒழிவதற்கு ஒருபுடை ஒதுங்க அணையலுற்றவர் அருகு தூரத்திடை அகலப் புணர்இளங்கத லிக்குருத் தொடுதளிர் புடையே கொணரி னும்சுருக் கொண்டுஅவை நுண்துகள் ஆக. ஒரு புடை - ஒரு பக்கம். அருகு அணையலுற்றவர். இளம் வாழைக் குருத்தும். நீர்க்குளிரி முதலிய பசுந்தளிரும் வெந்து சாம்பராகும்படி என்றபடி. வரிசை நீடுய ராடக மாளிகைப் புறத்து - விரைகொள் சோலையும் வெஞ்சுருட் கொண்டது வெப்பால் - கருதி மெல்லணைப் படுத்ததண் கதலியங் குருத்தம் சருகெ ழுந்தது புலர்ந்தன சந்தனம் பனிநீர் - திருவாலவாயுடையார் திருவிளை யாடற் புராணம்: 37. வெப்புத் தீர்த்த திருவிளையாடல் 41. 712 2616. மருந்து நூலவர் தங்கள்பல் கலைகளில் வகுத்த திருத்த குந்தொழில் யாவையும் செய்யவும் மேல்மேல் உருத்துஎ ழுந்தவெப்பு உயிரையும் உருக்குவது ஆகக் கருத்துஒ ழிந்துஉரை மறந்தனன் கௌரியர் தலைவன். கௌரியர் தலைவன் - பாண்டியன். 713 2617. ஆன வன்பிணி நிகழ்வுழி அமணர்கள் எல்லாம் மீன வன்செயல் கேட்டலும் வெய்துஉயிர்த்து அழிந்து போன கங்குலின் புகுந்ததின் விளைவு கொல் என்பார் மானம் முன்தெரி யாவகை மன்னன் மாட்டு அணைந்தார். மீனவன் - பாண்டியன். வெய்துயிர்த்து - பெருமூச்சு விட்டு. போன . . . . என்பார் - சென்ற இரவு நாம் நிகழ்த்திய தீமையால் விளைந்தது இதுவோ என்று சொல்வோராய். 714 எண்சீர் விருத்தம் 2618. மால்பெருக்கும் சமண்கையர் மருங்கு சூழ்ந்து வழுதி நிலை கண்டுஅழிந்து வந்த நோயின் மூலநெறி அறியாதே தங்கள் தெய்வ மொழிநவில் மந்திரம்கொண்டு முன்னும் பின்னும் பீலிகொடு தைவருதற்கு எடுத்த போது பிடித்த பீலிகள் பிரம்பினோடும் தீந்து மேல்எரியும் பொரி சிதறி வீழக் கண்டு வெப்பின் அதிசயம் நோக்கி வெருவல் மிக்கார். வழுதி - பாண்டியனது. வெருவல் - அச்சம். 715 2619. கருகிய மாசுடை யாக்கைத் தீயோர் தங்கள் கைத்தூங்கு குண்டிகைநீர் தெளித்துக் காவாய் அருகனே! mUfnd!என்று என்றுஓதி அடல்வழுதி மேல்தெளிக்க அந்நீர் பொங்கிப் பெருகும் எரிதழல் சொரிந்த நெய்போல் ஆகிப் பேர்த்தும் ஒருதழல் அதன்மேல் பெய்தால் போல ஒருவரும் இங்கு இருமருங்கும் இராது போம் என்று அமணரைப் பார்த்து உரைத்து அரசன் உணர்வு சோர்ந்தான். அடல்வழுதி - வெற்றியுடைய பாண்டியன். 716 அறுசீர் விருத்தம் 2620. பாண்டிமா தேவியாரும் பயம் எய்தி அமைச்சர் பாரம் பூண்டவர் தம்மை நோக்கிப் புகலியில் வந்து நம்மை ஆண்டு கொண்டவர்பால் கங்குல் அமணர்தாம் செய்த தீங்கு மூண்டவாறு இனையது ஆகி முடிந்ததோ என்று கூற. 2621. கொற்றவன் அமைச்சனாராம் குலச்சிறையாரும் தாழ்ந்து மற்றுஇதன் கொடுமை இந்த வஞ்சகர் மதில்கள் மூன்றும் செற்றவர் அன்பர் தம்பால் செய்த தீங்கு அரசன் பாங்கு முற்றியது இவர்கள் தீர்க்கின் முதிர்வதே ஆவது என்பார். 2622. இருதிறத் தவரும் மன்னன் எதிர்பணிந்து இந்த வெப்பு வருதிறம் புகலி வந்த வள்ளலார் மதுரை நண்ண அருகர்கள் செய்த தீய அனுசிதம் அதனால் வந்து பெருகியது இதற்குத் தீர்வு பிள்ளையார் அருளே என்று அனுசிதம் - தகுதியில்லாதது; உசிதமல்லாதது. 719 2623. காயமும் மனமும் மாசு கழுவுதல் செய்யார் செய்யும் மாயமும் இந்த நோயை வளர்ப்பதே வளர்வெண் திங்கள் மேயவேணி யர்பால் ஞானம் பெற்றவர் விரும்பி நோக்கி தீயஇப் பிணியே அன்றிப் பிறவியும் தீரும் என்றார். 720 2624. மீனவன் செவியின் ஊடு மெய்யுணர்வு அளிப்போர் கூற ஞானசம் பந்தன் என்னும் நாம மந்திரமும் செல்ல ஆனபோது அயர்வு தன்னை அகன்றிட அமணர் ஆகும் மானம்இல் லவரைப் பார்த்து மாற்றம் ஒன்று உரைக்கலுற்றான். அயர்வு (சோர்வு, வருத்தம்) சிறிது தன்னை விடுத்து அகன்றிட. 721 2625. மன்னவன் அவரை நோக்கி மற்றுஇவர் செய்கை எல்லாம் இன்னவாறு எய்தும் நோய்க்கே ஏது ஆயின என்று எண்ணி மன்னிய சைவ நீதி மாமறைச் சிறுவர் வந்தால் அன்னவர் அருளால் இந்நோய் அகலுமேல் அறிவேன் என்றான். நோய் அகலுமாயின் (அவர் - பிள்ளையார் - பெருமையை) அறிவேன். 2626. என்றுமுன் கூறிப் பின்னும் யான் உற்ற பிணியைத் தீர்த்து வென்றவர் பக்கம் சேர்வன் விரகு உண்டேல் அழையும் என்ன அன்று அவர் உவகை பொங்கி ஆர்வத்தால் அணையை நூக்கிச் சென்றநிர் வெள்ளம் போலும் காதல் வெள்ளத்தில் செல்வார். என்று சமணர்கள் முன் கூறிப் பின்னும் (மங்கையர்க்கரசி யாரையும் குலச்சிறையாரையும் நோக்கி). விரகு உண்டேல் (பிள்ளை யாரை அழைத்தற்கு) உபாயம் உண்டானால். நூக்கி - அலைத்து; உடைத்து. 723 2627. பாய்உடைப் பாதகத்தோர் திருமடப் பாங்கு செய்த தீவினைத் தொழிலை நோக்கி உள்அழி திருவு ள்ளத்தால் மேயஅத் துயரம் நீங்க விருப்புறு விரைவி னோடு நாயகப் பிள்ளை யார்தம் நல்பதம் பணிவார் ஆகி. 724 2628. மன்னவன் இடும்பை தீர மற்றுஅவன் பணிமேற் கொண்டே அன்னமெல் நடையி னாரும் அணிமணிச் சிவிகை ஏறி மின்இடை மடவார் சூழ வேல்படை, அமைச்ச னாரும் முன்அணைந்து ஏகச் சைவ முதல்வனார் மடத்தைச் சார்ந்தார். 725 2629. திருமடம் சாரச் சென்று சேய்அரிக் கண்ணி னார்முன் வருபரி இழிந்து நின்ற அமைச்சனார் வந்த பான்மை சிரபுரப் பிள்ளை யார்க்கு விண்ணப்பம் செய்வீர் என்னப் பரிசனத் தவரும் புக்குப் பதம் அறிந்து உணர்த்துகின்றார். சேய்அரி - செவ்வரி படர்ந்த. பரி இழிந்து - குதிரையினின்றும் இறங்கி. பதம் - சமயம். 726 2630. பாண்டிமா தேவி யாரும் பரிவுடை அமைச்சனாரும் ஈண்டுவந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்யச் சண்பை ஆண்டகை யாரும் ஈண்ட அழையும் என்று அருளிச்செய்ய மீண்டுபோந்து அழைக்கப் புக்கார் விரைவுஉறும் விருப்பின் மிக்கார். 727 கொச்சகக் கலி 2631. ஞானத்தின் திருவுருவை நான் மறையின் தனித்துணையை வானத்தின் மிசைஅன்றி மண்ணில்வளர் மதிக்கொழுந்தைக் தேன்நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள். தேனக்க - தேன் விளங்குகின்ற. கானத்தின் எழுபிறப்பை - ஏழி சையின் பிறப்பிடத்தை. திருஞானசம்பந்தர் மீது கொண்ட ஆர்வமும். நேர்ந்த விரைவும். சமயமும். பிறவும் இருவர்தங் கண் களுக்கும் இவ்வாறு தோன்றின. அகத்தோற்றத்தின் பரிணாமமே புறத்தோற்றமென்க. ஞானசம்பந்தப் பெருமான். கருமத்தின் கார ணமாக மாயா உடல் தாங்காத தவ முதல்வராதலான் ஞானத்தின் திருவுருவை என்றார்; நான்மறைக்கு இழுக்கு நேரும்போதெல்லாம், அவ்விழுக்கைப் போக்கி, அதன் ஆக்கத்துக்குத் துணை புரியும் மெய்க்குரவராதலின், நான்மறையின் தனித்துணையை என்றார்; வானுள்ளோர்க்கும் மண்ணுள்ளோர்க்கும் மதிஅமுதம் பொழிபவராதலின், வான . . . . . கொழுந்தை என்றார்; மலர்க்கொன்றை. பிரணவத்தைக் குறிப்பது. அப்பிரணவத்தை முதலாக் கொண்டு மறையை இசைத் தமிழ் வழி வளர்ப்பவர் ஞானசம்பந்தப் பெருமான் என்க. ஞானசம்பந்தர் தேவாரம் தோ (த் + ஓ) என்று தொடங்கப்பெறுதலை யோர்க. இன்னோரன்ன காரணங்களான். தேனக்க . . . .பிறப்பை என்றார். கணிகளிப்ப என்பது கருத்துக் களிப்பினின்றும் எழுந்தது. 728 2632. கண்டபொழுது அமண்கொடியார் செய்தகடுந் தொழில்நினைந்தே மண்டியகண் அருவிநீர் பாயமலர்க் கைகுவித்துப் புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்த நிலம் உறவிழுந்தார் கொண்ட குறிப்போடுநெடிது உயிர்த்துஅழிந்த கொள்கையராய். 729 2633. உரைகுழறி மெய்ந்நடுங்கி ஒன்றும் அறிந்திலர் ஆகித் தரையின்மிசைப் புரண்டுஅயர்ந்து சரண கமலம் பற்றிக் கரைஇல்கவ லைக்கடற்குஓர் கரைபற்றினார் போன்று விரைவு உறுமெய் அன்பினால் விடாதுஒழிவார் தமைக்கண்டு. 730 2634. அருமறைவாழ் பூம்புகலி அண்ணலார் அடிபூண்ட இருவரையும் திருக்கையால் எடுத்தருளித் தேற்றிடவும் தெருமந்து தெளியாதார் தமைநோக்கிச் சிறப்பு அருளித் திருவுடையீர்! c§fŸghš Ô§Fcsnjh? எனவினவ. தெருமந்து - மனஞ்சுழன்று. 731 2635. வெம்சமணர் முன்செய்த வஞ்சனைக்கு மிகஅழிந்தே அஞ்சினோம் திருமேனிக்கு அடாதுஎன்றே அதுதீர்ந் தோம் வஞ்சகர்மற்று அவர்செய்ததீத் தொழில்போய் மன்னவன் பால் எஞ்சல்இலாக் கொடுவெதுப்பாய் எழாநின்றது எனத் தொழுது. அடாது - பொருந்தாது. தீத்தொழில் - தீய தொழில்; நெருப்பு வினை எனினுமாம். எஞ்சலிலா - ஒழியாத. 732 2636. வெய்யதொழில் அமண்குண்டர் விளைக்கவரும் வெதுப்பு அவர்தாம் செய்யும்அதி மாயைகளால் தீராமைத் தீப்பிணியால் மையல்உறு மன்னவன்முன் மற்றுஅவரை வென்றுஅருளில் உய்யும் எமது உயிரும்அவன் உயிரும்என உரைத்தார்கள். அதிமாயைகளால் - மிகுந்த மாயச் செயல்களாலும். அவரை சமணர்களை. அவன் - பாண்டியன். 733 அறுசீர் விருத்தம் 2637. என்றுஅவர் உரைத்த போதில் எழில் கொள்பூம் புகலி வேந்தர் ஒன்றும்நீர் அஞ்ச வேண்டா உணர்வுஇலா அமணர் தம்மை இன்றுநீர் உவகை எய்த யாவரும் காண வாதில் வென்று மீனவனை வெண்ணீறு அணிவிப்பன் விதியால் என்றார். 734 கொச்சகக் கலி 2638. மொழிந்தருள அதுகேட்டு முன்இறைஞ்சி முகம்மலர்வார் அழுந்தும்இடர்க் கடலிடைநின்று அடியோமை எடுத்தருளச் செழுந்தரளச் சிவிகையின்மேல் தென்னாடு செய்தவத்தால் எழுந்தருளப் பேறுஉடையோம் என்பெறோம் எனத்தொழலும். 735 அறுசீர் விருத்தம் 2639. ஆவதும் அழிவதும் எல்லாம் அவர் செயல் அமணர் ஆகும் பாவ காரிகளை நோக்கும் பழுதுஉடன் நீங்க வெல்லச் சேஉயர் கொடியினார் தம் திருஉள்ளம் அறிவேன் என்று பூஅலர் பொழில்சூழ் சண்பைப் புரவலர் போது கின்றார். அவர் - சிவபெருமான். பாவகாரிகளை - பாவகாரர்களை; பாவஞ் செய்தவர்களை . . . . பாவகாரிகள் பார்ப்பரி தென்பரால். . . . . - அப்பர்: ஆதி புராணத் திருக்குறுந்தொகை 5; முதல்வனைச் சிந்தியாதஅப் - பாவகாரிகள் - பெரியாழ்வார்: 4, 4: 1 நோய்செய்த பாவகாரியிற் பிறந்த பாவியேன் கம்பன்: கிளைகண்டு. 99. நீங்கவும் வெல்லவும். திருஞானசம்பந்தர் சிவபெருமான் திருவுள்ளம் அறிவேன் என்று திருக்கோயில் போந்தமை அவர் தம் முனைப் பின்மையைப் புலப்படுத்துவதென்க. 736 2640. வையகம் உய்ய வந்த வள்ளலார் மடத்தின் நின்று மெய்அணி நீற்றுத் தொண்டர் வெள்ளமும் தாமும் போந்து கைஇணை தலையின் மீது குவியக்கண் மலர்ச்சி காட்டச் செய்யவார் சடையார் மன்னும் திருவாலவாய் உள் புக்கார். 737 2641. நோக்கிட விதியி லாரை நோக்கி நான் வாது செய்யத் தீக்கனல் மேனி யானே திருவுளமே என்று எண்ணில் பாக்கியப் பயனாய் உள்ள பாலறா வாயர் மெய்ம்மை நோக்கி வண்தமிழ்செய் மாலைப் பதிகம்தான் நுவலல் உற்றார். திருவுள்ளமோ என்று வினவி. எண்ணில்லாத பாக்கியப் பயனாய். 738 2642. கானிடை ஆடு வாரைக் காட்டுமா உரி முன்பாடித் தேன்அலர் கொன்றை யார்தம் திருஉளம் நோக்கிப் பின்னும் ஊனம்இல் வேத வேள்வி என்று எடுத்து உரையின் மாலை மானம்இல் அமணர் தம்மை வாதில் வென்று அழிக்கப்பாடி. 739 2643. ஆலமே அமுதம் ஆக உண்டு வானவர்க்கு அளித்துக் காலனை மார்க்கண் டர்க்காக் காய்ந்தனை அடியேற்கு இன்று ஞாலம்நின் புகழே ஆக வேண்டும்நான் மறைகள் ஏத்தும் சீலமே ஆல வாயில் சிவபெரு மானே என்றார். அளித்து - அருள் செய்து. சமணர்களின் கொடுஞ் செயலாம் நஞ்சை உண்டு அடியார்க்கு அருளமுதம் ஊட்டவேண்டு மென்பதும், சமணர்களின் அடுஞ்செயலாங் காலனைச் சாய்த்து அடியவருக்கு அருள் செயல் வேண்டுமென்பதுங் குறிப்பு. மார்க் கண்டரும் இளைஞர்; திருஞான சம்பந்தரும் இளைஞர். ஞாலநின் புகழே மிக வேண்டும் என்பது, சம்பந்தர் தம்புகழ் கருதிச் சமணரின் தீமையைக் களையப் போந்தாரில்லை என்பதை உணர்த்துவது. சிவம் எல்லார்க்குந் தெய்வம். அவ்வொன்றையே ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக வழிபடுகிறார். சமணர் சீலத்தைப் பொருளாக் கொண்டு வழிபாடு செய்வோர். அத்தகைச் சமணர் சீலத்தினின்றும் வழுவி அடாத செயல் புரிந்து வருவாராயினார். அவர்தஞ் சீலமாகவும் விளங்கும் பொருள் சிவம் என்பது சீலமே. . . . . என்றதனால் விளங்குகிறது. சீலம் மிகுசித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை; இன்னவுரு இன்ன நிறம் என்றறிவதேல் அரிது நீதி பலவும். தன்னவுருவாமென மிகுத்ததவன் நீதியொடுந் தானமர் விடம் - திருஞான சம்பந்தர்; திருஇடும்பாவனம். 3: திருவைகாவூர் 4. சீலந் தான் பெரிதும் உடையானை - சுந்தரர்: திருவேகம்பம். 1. 740 2644. நாதர்தம் அருள்முன் பெற்று நாடிய மகிழ்ச்சி பொங்கப் போதுவார் பணிந்து போற்றி, விடைகொண்டு, புனித நீற்று மேதகு கோலத் தோடும் விருப்புறு தொண்டர் சூழ மூதுஎயில் கபாடம் நீடு முதல்திரு வாயில் சார்ந்தார். மூதெயில் . . . . . . . வாயில் - பழைய மதில் சூழ்ந்த கதவுகள் நீண்ட முதல் திருவாயிலில். 741 2645. அம்மலர்க் குழலி னார்க்கும் அமைச்சர்க்கும் அருள வேண்டிச் செம்மணிப் பலகை முத்தின் சிவிகை மேற்கொண்ட போதில் எம்மருங்கினிலும் தொண்டர் எடுத்த ஆர்ப்பு எல்லை இன்றி மும்மை நீடு உலகம் எல்லாம் முழுதுடன் நிறைந்தது அன்றே. மும்மை நீடுலகம் - சுவர்க்க மத்திய பாதலம். 742 2646. பல்லிய நாதம் பொங்கப் படர்திரு நீற்றின் சோதி நல்ஒளி வட்டம் ஆகி நண்ணி மேல் வருவது என்ன வில்வளர் தரளக் கோவை வெண்குடை நிழற்ற வெவ்வேறு எல்லைஇல் முத்தின் காளம் தாரை சங்கு எங்கும் ஓத. பல்லிய நாதம் - பலவகை வாத்திய ஓசை. வில்வளர் தரளக் கோவை - ஒளிவளரும் முத்தக் கோவைகளாலாகிய. 743 2647. கண்ணினுக்கு அணியாய் உள்ளார் எழுச்சியின் காட்சி பெற்றார் நண்ணிய சமயம் வேறு நம்பினர் எனினும் முன்பு பண்ணிய தவங்கள் என்கொல் பஞ்சவன் தஞ்சம் மேவிப் புண்ணிய மூர்த்தி வந்து மதுரையில் புகுத என்றார். கண்ணுக்கு அழகாயுள்ளவராகிய பிள்ளையாரது. பஞ்சவன் தஞ்ச மேவி - பாண்டியனுக்கு எளிமையாகி (எளியதாய்). 744 2648. தென்னவன் தேவி யாரும் திருமணிச் சிவிகை மீது பின்வர அமைச்சர் முன்பு பெருந்தொண்டர் குழாத்துச் செல்லப் பொன்அணி மாட வீதி ஊடு எழுந்தருளிப் புக்கார் கன்னி நாடு உடையான் கோயில் காழி நாடு உடைய பிள்ளை. 745 2649. கொற்றவன் தன்பால் முன்பு குலச்சிறையார் வந்து எய்திப் பொன்தடமதில் சூழ் சண்பைப் புரவலர் வரவு கூற முன்துயர் சிறிது நீங்கி முழுமணி அணிப்பொன் பீடம் மற்றுஅவன் முடியின் பக்கத்து இடுகஎன வல்லன் ஆனான். முன்துயர் சிறிது நீங்கி. . . . இடுக என்று கூறவல்லவனாயினான். 746 2650. மந்திரியாரைப் பின்னும் எதிர்செல மன்னன் ஏவச் சிந்தைஉள் மகிழ்ந்து போந்தார் செயலையான் சமயத்துள்ளோர் பைந்துணர் அலங்கல் மன்னன் பரிசு கண்டு இதுவோ பண்பால் நம்தனிச் சமயம் தன்னை நாட்டும் ஆறு என்று பின்னும். செயலையான் சமயத்துள்ளோர் - அசோகின் கீழுள்ள அருகன் சமயத்திலுள்ளவர் என்று சொல்லப்படும் சமணர்கள். பைந். . . . . பரிசு - பசிய பூங்கொத்தாலாகிய மாலையை யணிந்த பாண்டியன் இயல்பை. 747 2651. நின்அற நெறியைநீயே காத்துஅருள செய்தி ஆகில் அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை அவரும் யாமும் முன்உற ஒக்கத் தீர்க்க மொழிந்து மற்று அவரால் தீர்ந்தது என்னினும் யாமும் தீர்த்தோம் ஆகவும் இசைவாய் என்றார். பாண்டியனே! உனது அறநெறியை நீயே காத்தருளல் வேண்டும். ஆனால் அவரை இங்கே அழைத்தாய். அவரும் யாமும் உனது முன்னே நின்று நோயை ஒருங்கு தீர்க்கும்படி மொழிந்து, நோய் அவரால் தீர்ந்தாலும், எம்மாலும் அது தீர்ந்ததென்று இசைவாய் என்றனர். (அன்னவர் தம்மை இங்கே அழைத்தனை; நின் அறநெறியைக் காத்தருள் செய்யவேண்டுமானால். . . . ) இக் கூற்றால் அக்காலச் சமணர், உண்மைச் சமணத்தின் செந்நெறி யினின்றும் வழுக்கி வீழ்ந்தவர் என்பது வெள்ளிடை மலையென விளங்குதல் காண்க. 748 2652. பொய்தவம் ஆகக் கொண்ட புன்தலைச் சமணர் கூறுச் செய்தவப் பயன்வந்து எய்தும் செவ்விமுன் உறுத லாலே எய்திய தெய்வச் சார்வால் இருதிறத் தீரும் தீரும் கைதவம் பேச மாட்டேன் என்று கைதவனும் சொன்னான். செவ்வி - காலம். கைதவம் - வஞ்சனை; (நடுநிலை பிறழ்ந்த வஞ்சனையில் தலைப்படேன் என்றபடி) கைதவனும் - ஒழுக்கத்திற் குன்றியுள்ள பாண்டியனும். 749 2653. என்றுஅவன் உரைப்பக் குண்டர் எண்ணம் கெட்டிருந்த எல்லைத் தென்தமிழ் நாடு செய்த செய்தவக் கொழுந்து போல்வார் வன்தனிப் பவனம் முன்னர் வாயிலுள் அணைந்து மாடு பொன்திகழ் தரளப் பத்திச் சிவிகை நின்று இழிந்து புக்கார். பவனம் - அரண்மனை. பக்கங்களில் பொன்விளங்கும் முத்துப் பத்திகளையுடைய. 750 2654. குலச்சிறையார் முன்பு எய்தக் கொற்றவன் தேவி யாரும் தலத்திடை இழிந்து சென்றார் தண்தமிழ் நாட்டு மன்னன் நிலத்திடை வானின் நின்று நீள்இருள் நீங்க வந்த கலைச்செழுந் திங்கள் போலும் கவுணியர் தம்மைக் கண்டான். 751 2655. கண்டஅப்பொழுதே வேந்தன் கையெடுத்து எய்த நோக்கித் தண்துணர் முடியின் பாங்கர்த் தமனியப் பீடம் காட்ட வண்தமிழ் விரகர் மேவி அதன்மிசை இருந்தார் மாயை கொண்டவல் அமணர் எல்லாம் குறிப்பின் உள்அச்சம் கொண்டார். எய்த நோக்கி - பொருந்தப் பார்த்து. தண் . . . . . . . காட்ட குளிர்ந்த பூங்கொத்துகள் பொலியும் முடியின் பக்கத்தில் பொன் பீடத்தைக் காட்ட. 752 2656. செழியனும் பிள்ளையார் தம் திருமேனி காணப் பெற்று விழிஉற நோக்க லாலே வெம்மைநோய் சிறிது நீங்கி அழிவுஉறு மனன்நேர் நிற்க அந்தணர் வாழ்வை நோக்கி கெழுவு உறுபதி யாது என்று விருப்புடன் கேட்ட போது. அழிஉறும் மனமானது நேர்நிற்க. கெழுவுறுபதி - பொருந்தி வாழும் பதி. 753 கொச்சகக் கலிப்பா 2657. பொன்னிவளம் திருநாட்டுப் புனல்பழனப் புறம்பணைசூழ் கன்னிமதில் கழுமலம்நாம் கருதும்ஊர் எனச் சிறந்த பன்னிரண்டு பெயர்பற்றும் பரவியசொல் திருப்பதிகம் தென்னவன் முன்பு அருள்செய்தார் திருஞான சம்பந்தர். பொன்னி - காவிரி. புனற்பழனப் புறம்பணைசூழ் - நீர் நிறைந்த வயல்களையுடைய மருதநிலஞ் சூழ்ந்த. கன்னி - அழியாத; புதிய. 754 2658. பிள்ளையார் செம்பொன்மணிப் பீடத்தில் இருந்தபோது உள்ளநிறை பொறாமையினால் உழைஇருந்த கார்அமணர் கொள்ளும் மனத்திடை அச்சம் மறைத்துமுகம் கோபத்தீ துள்ளிஎழும் எனக்கண்கள் சிவந்துபல சொல்லுவார். உழையிருந்த - பக்கத்திருந்த. 755 2659. காலைஎழும் கதிரவனைப் புடைசூழும் கருமுகில்போல் பீலிசேர் சமண்கையர் பிள்ளையார் தமைச்சூழ்வார் ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித்தாம் கோலும்நூல் எடுத்துஓதித் தலைதிமிர்ப்பக் குரைத்தார்கள் ஏலவே - பொருந்தவே. கோலும் - ஆக்கிய; ஓதிய. திமிர்ப்ப - விரைப்ப; சொல்லின் வேகத்தால் நடுக்குற்று வருந்த. 756 2660. பிள்ளையார் அதுகேளாப் பேசுகநும் பொருள் எல்லை உள்ளவாறு என்றுஅருள ஊத்தைவாய்ப் பறிதலையர் துள்ளிஎழுந்து அனேகராய்ச் சூழ்ந்துபத றிக்கதற ஒள் இழையார் அதுகண்டு பொறார்ஆகி உள் நடுங்கி. ஒள்ளிழையார் - மங்கையர்க்கரசியார். 757 அறுசீர் விருத்தம் 2661. தென்னவன் தன்னை நோக்கி திருமேனி எளியர் போலும் இன்அருள் பிள்ளையார் மற்று இவர் உவர் எண்ணிலார்கள் k‹d!நின் மயக்கம் எங்கள் வள்ளலார் தீர நல்கும் பின்னைஇவ் அமணர் மூள்வார் வல்லரேல் பேச என்றார். இவர் இன்னருட் பிள்ளையார் (பாலகர்) திருமேனி எளியர் போலும். உவர் - இச்சமணர்கள் எண்ணில்லாதவர்களாய்த் திண்ணர்களாயுள்ளார்கள் என்றபடி. உனது வெப்பு நோய் மயக்கத்தை. எங்கள் காழிவள்ளலார் தீர்த்தருள்வார். 758 2662. மாறனும் அவரை நோக்கி வருந்தல் நீ என்று மற்று வேறு வாது என்கொல் என் மேல் வெப்பு ஒழித்து அருகர் நீரும் ஆறுஅணி சடையி னாருக்கு அன்பராம் இவரும் நீங்கள் தேறிய தெய்வத் தன்மை என்னிடைத் தெரிப்பீர் என்றான். பாண்டியனும் தேவியாரைப் பார்த்து நீ வருந்தாதே என்று. அருகர்களாகிய நீரும் . . . . இவருமாக நீங்கள். 759 2663. ஞான ஆர் அமுதம் உண்டார் நல்தவத் திருவை நோக்கி மானின் நேர்விழியினாய்! கேள் மற்று எனைப் பாலன் என்று நீநனி அஞ்ச வேண்டா நிலை இலா அமணர்க்கு என்றும் யான் எளியேன் அலேன் என்று எழும் திருப்பதிகம் பாடி. நனி - மிகவும். 760 2664. பெற்றியால் அருளிச் செய்த பிள்ளையார் தமக்கும் முன்னம் சுற்று நின்று அழைத்தல் ஓவா அருகர்க்கும் தென்னர் கோமான் இற்றைநாள் என்னை உற்ற பிணியை நீர் இகலித் தீரும் தெற்றெனத் தீர்த்தார் வாதில் வென்றவர் என்று செப்ப. பெற்றியால் - ஆண்டவன் அருட்டிறத்தால். அழைத்தல் ஓவா - குரைத்தல் (கூக்குரலிடுதல்) நீங்காத. இகலி - மாறுபட்டு; வேறு பட்டு. தெற்றென - விரைவாக; முற்றுந்தீர எனினுமாம். (தெளிய). 761 2665. மன்னவன் மாற்றம் கேட்டு வடிவுபோல் மனத்து மாசு துன்னிய அமணர் தென்னர் தோன்றலை நோக்கி நாங்கள் உன் உடம்பு அதனில் வெப்பை ஒருபுடை வாம பாகம் முன்னம் மந்திரித்துத் தெய்வ முயற்சியால் தீர்த்தும் என்றார். ஒரு பக்கமாகிய இடப் பாகத்தை. 762 2666. யாதும் ஒன்று அறிவிலாதார் இருள் எனஅணையச் சென்று வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார் மீதுதம் பீலி கொண்டு தடவிட மேன்மேல் வெப்புத் தீதுஉறப் பெறாது தென்னன் சிரபுரத் தவரைப் பார்த்தான். 763 2667. தென்னவன் நோக்கம் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர் அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே மன்னும் மந்திரமும் ஆகி மருந்தும் ஆய்த்தீர்ப்பது என்று பன்னிய மறைகள் ஏத்திப் பகர்திருப் பதிகம் பாடி. 764 2668. திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன் பொருஅரு வெப்பு நீங்கப் பொய்கையின் குளிர்ந்தது அப்பால் மருவிய இடப்பால் மிக்க அழல்எழ மண்டு தீப்போல் இருபுடை வெப்பும் கூடி இடம் கொளாது என்னப் பொங்க. பொருவரும் - ஒப்பற்ற; தீர்க்க முடியாத. பொய்கை போல் குளிர்ந்தது. 765 2669. உறியுடைக் கையர் பாயின் உடுக்கையர் நடுக்கம் எய்திச் செறிமயல் பீலி தீயத் தென்னன் வெப்புஉறு தீத் தம்மை எறிய மாசு உடலும் கன்றி அருகுவிட்டு ஏற நிற்பார் அறிவுடை யாரை ஓத்தார் அறிவிலா நெறியில் நின்றார். தீயானது தம்மீதும் வீச; சட. அருகுவிட்டுத் தூரத்தே ஒதுங்கி நிற்பவராய். அறிவுடையாரைப் போன்றவர். 766 2670. பலர்தொழும் புகலிமன்னர் ஒருபுடை வெப்பைப் பாற்ற மலர்தலை உலகின் மிக்கார் வந்து அதிசயித்து சூழ இலகுவேல் தென்னன் மேனி வலம்இடம் எய்தி நீடும் உலகினில் தண்மை வெம்மை ஒதுங்கினால் ஒத்தது அன்றே. பாற்ற - அழிக்க. வலப்பக்கம் தண்மையும் இடப் பக்கம் வெம்மையும் பொருந்தின வென்க. 767 2671. மன்னவன் மொழிவான் என்னே! மதித்த இக்காலம் ஒன்றில் வெந்நரகு ஒருபால் ஆகும்; வீட்டு இன்பம் ஒருபால் ஆகும்; துன்னும் நஞ்சு ஒருபால் ஆகும்; சுவை அமுது ஒருபால் ஆகும்; என் வடிவு ஒன்றில் உற்றேன் இரு திறத்து இயல்பும் என்பான். 768 2672. வெம்தொழில் அருகர் தோற்றீர் என்னைவிட்டு அகல நீங்கும் வந்து எனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ள லாரே! இந்த வெப்பு அடைய நீங்க எனக்கு அருள் புரிவீர் என்று சிந்தையால் தொழுது சொன்னான் செல்கதிக்கு அணியின் ஆனான். செல்கதிக்கு அணியனானான் - வீடு பேற்றிற்குச் சமீபத்தவ னாகிய பாண்டியன். 769 2673. திருமுகம் கருணை காட்டத் திருக்கையால் நீறு காட்டி பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும் ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்தது வெப்பு அகன்று பாகம் மருவுதீப் பிணியும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான். 770 2674. கொற்றவன் தேவி யாரும் குலச்சி றையாரும் தீங்கு செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப் பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை உற்றனன் மன்னன் என்றே உளம்களித்து உவகை மிக்கார். தீங்கு செற்றவர் - பாண்டியனுக்குற்ற தீங்கினை (பாண்டி நாடுற்ற தீங்கினை; செந்நெறிக்குற்ற தீங்கினை)ப் போக்கிய பிள்ளை யாரது. பிறந்தனமாகிய நாங்கள் பிறப்பாலாகிய பெருமையை இன்று பெற்றனம்; மன்னன் இனிப் பிறவா மேன்மையை உற்றனன். 771 2674. மீனவன் தன்மேல் உள்ள வெப்பு எலாம் உடனே மாற ஆனபேர் இன்பம் எய்தி உச்சிமேல் அங்கை கூப்பி மானம் ஒன்று இல்லார் முன்பு வன்பிணி நீக்கி வந்த ஞான சம்பந்தர் பாதம் நண்ணிநான் உய்ந்தேன் என்றான். 772 எழுசீர் விருத்தம் 2676. கந்து சீறு மாலி யானை மீனவன்கருத் துநேர் வந்து வாய்மை கூற மற்று மாசுமேனி நீசர்தாம் முந்தை மந்தி ரத்து விஞ்சை முற்றும் எஞ்ச அஞ்சியே சிந்தை செய்து கைவரும் திறம் தெரிந்து தேடுவார். கந்து சீறு மால் - கம்பத்தைக் கோபித்து மோதும் மதம் பொருந்திய யானைகளையுடைய. கந்துமுனிந் துயிர்க்கும் யானையொடு - புறநானூறு: 178. கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் - மதுரைக் காஞ்சி: 383. முந்தை . . . . .எஞ்ச - பழைய மந்திர வித்தைகளின் ஆற்றல் முழுவதுங் குறைவுபட. சமணர்கள் நெறியல்லா நெறியிற் சென்றமையால் மந்திர வித்தைகள் பயன்படா தொழிந்தன என்க. கைவருந் திறம் - கைகூடவல்ல வேறு வகைகளை. 773 2677. சைவ மைந்தார் சொல்லின் வென்றி சந்தஇன்சொல் மாலையால் கைத வன்தன் வெப்பு ஒழிந்த தன்மை கண்டு அறிந்தனம் மெய்தெ ரிந்த தர்க்க வாதம் வெல்லல் ஆவது அன்று வேறு எய்து தீயின் நீரின் வெல்வது என்று தம்மில் எண்ணினார். இனித் தர்க்கவாதத்தால் வெல்லமுடியாது என்றபடி. 774 2678. பிள்ளை யாரும் உங்கள் வாய்மை பேசுமின்கள் என்றலும் தள்ளும் நீர்மை யார்கள் வேறு தர்க்க வாதின் உத்தரம் கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான் உள்ள வாறு கண்பு லத்தில் உய்ப்பது என்ன ஒட்டினார். சமணர்கள் எண்ணத்தை உணர்ந்த பிள்ளையாரும். தள்ளு நீர்மையார்கள் - தள்ளப்படுங் குணங்களையுடையவர்கள்; தள்ளப்படுங் குணங்களாவன; கொலை பொய் வஞ்சனை முதலியன. வேறு கடாவிடைகளான் பெறும் வெற்றி யல்லாமல், குறித்த கொள்கைக்குரிய உண்மையை உள்ளவாறு பிரத்தியட்சமாக நிறுவிக்காட்டல் வேண்டுமென்று உறுதி கொண்டு இசைந்தன ரென்க. 775 2679. என்று வாது கூறலும் இருந்த தென்னர் மன்னனும் கன்றி என்உடம்பு ஒடுங்க வெப்பு நோய் கவர்ந்த போது ஒன்றும் அங்கு ஒழித்தி லீர்கள் என்ன வாது உமக்கு எனச் சென்று பின்னும் முன்னும் நின்று சில்லி வாயர் சொல்லுவார். 776 2680. என்ன வாது செய்வது என்று உரைத்ததே வினா எனாச் சொன்ன வாசகம் தொடங்கி ஏடு கொண்டு சூழ்ச்சியால் மன்னுதம் பொருள் கருத்தின் வாய்மை தீட்டி மாட்டினால் வெந்நெ ருப்பின்வேவு உறாமை வெற்றி ஆவது என்றனர். 777 2681. என்றபோது மன்னன் ஒன்று இயம்பும் முன்பு பிள்ளையார் நன்று நீர் உரைத்த வாறு நாடு தீயில் ஏடு தான் வென்றிடில் பொருள் கருத்து மெய்ம்மை ஆவது என்றிரேல் வன்த னிக்கை யானை மன்னன் முன்பு வம்மின் என்றனர். 778 கலித்துறை 2682. அப்படிக்கு எதிர் அமணரும் அணைந்து உறும் அளவில் ஒப்புஇல் வண்புகழ்ச் சண்பையர் காவலர் உரையால் செப்பு அரும்திறல் மன்னனும் திருந்து அவை முன்னர் வெப்பு உறும் தழல் அமைக்க என வினைஞரை விடுத்தான். 779 2683. ஏய மாந்தரும் இந்தனம் குறைத்து உடன் அடுக்கித் தீஅ மைத்தலும் சிகைவிடு புகைஒழிந்து எழுந்து காயும் வெவ் அழல் கடவுளும் படர்ஒளி காட்ட ஆயும் முத்தமிழ் விரகரும் அணைய வந்தருளி. 780 2684. செங்கண் ஏற்றவ ரேபொருள் என்று தாம் தெரித்த பொங்கு இசைத் திருப்பதிக நன் முறையினைப் போற்றி எங்கள் நாதனே பரம்பொருள் எனத் தொழுது எடுத்தே அங்கை யால்முடி மிசைக் கொண்டு காப்பு நாண் அவிழ்த்தார். 781 2685. சாற்று மெய்ப்பொருள் தரும்திரு முறையினைத் தாமே நீற்று வண்மையால் மறித்தலும் வந்து நேர்ந்துளதால் நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு போற்றும் அப்பதிகம் போகம் ஆர்த்தபூண் முலையாள் மறித்தலும் - திருப்புதலும். நால் தடம்புயத்து அண்ணலார் சிவபெருமான். 782 2686. அத்தி ருப்பதி கத்தினை அமர்ந்து கொண்டு அருளி மைத்த வெங்கடு மிடற்று நள்ளாறரை வணங்கி மெய்த்த நல்திரு ஏட்டினைக் கழற்றி மெய்ம் மகிழ்ந்து கைத்தலத்திடைக் கொண்டனர் கவுணியர் தலைவர். அமர்ந்து - விரும்பி. திருநீலகண்டத்தையுடைய திருநள் ளாற்றுப் பெருமானை. 783 2687. நன்மை உய்க்கும் மெய்ப்பதிகத்தின் நாதன் என்று எடுத்தும் என்னை ஆளுடை ஈசன் தன் நாமமே என்றும் மன்னும் மெய்ப்பொருள் ஆம் எனக் காட்டிட வன்னி தன்னில் ஆக எனத் தளிர்இள வளர்ஒளி - பாடி. உலகுக்கு நன்மை உய்க்கும். வன்னி தன்னில் ஆக - நெருப் பிடை உண்மை நிலைபெறுக. 784 2688. செய்ய தாமரை அகவித ழினும்மிகச் சிவந்த கையில் ஏட்டினைக் கைதவன் பேரவை காண வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்துமுன் இட்டார். 785 2689. இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம் மட்டு உலாம் குழல் வனமுலை மலைமகள் பாகத்து அட்ட மூர்த்தியைப் பொருள்என உடைமையால் அமர்ந்து பட்ட தீயிடைப் பச்சையாய் விளங்கியது அன்றே. மட்டு . . . . . அட்டமூர்த்தியை - மணங்கமழும் கூந்தலையுடைய அழகிய (பரஞானம் அபரஞானம் என்னும் இரு) முலைகளை யுடைய உமையம்மையாரை இடப்பாகங் கொண்ட அட்ட மூர்த்தியை. நிலன் நீர் தீ காற்று வான் ஞாயிறு திங்கள் உயிர் ஆகிய எட்டையும் ஆண்டவன் வடிவாகக் கொண்ட நிலைக்கு அட்ட மூர்த்தமென்று பெயர். விளக்கம் இப்புராணம் 563-ம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. பட்ட - வளர்க்கப்பட்ட திருஞானசம்பந்தர் தவத்தால் பிள்ளைமைப் பேறெய்திவர். அவர் என்றுந் திருஞானசம்பந்தராகவே இருப்பவர். உயிர்களைத் திருஞானத்துடன் சம்பந்தப்படுத்துவோர் என்ப. அப்பெயரின் பொருள். இப்புராணம்; 69-ம் பாட்டையும், அப்பாட்டுக் குறிப்பை யும் பார்க்க. உயிர்களைத் திருஞானத்துடன் சம்பந்தப்படுத்தும் ஒருவர் குரு எனப்படுவர். திருஞானசம்பந்தர் உலகுக்கு ஒரு பெருங் குருவாக வீற்றிருப்பவர். அவருக்குப் பல மொழியில் பல பெயர்களுண்டு. மொழி அளவில் நிற்போர் அவரை வெவ்வேறு புருடராக உணர் கிறார். உண்மை ஞானங் கைவரப் பெற்றோர்க்கு அவர் ஒருவரே என்பது நனிவிளங்கும். திருஞானசம்பந்தரைச் சூழ்ந்து, அவர்தம் ஏவல்வழி நிற்கும் குருமார் பலர் வீற்றிருக்கிறார். உலகில் எங்கெங்கே திருவருள் நெறிமீது மாசு படிகிறதோ அங்கங்கே அம்மாசினைப் போக்கித் திருவருள் நெறியை விளங்கச் செய்யத் திருஞானசம்பந்தர் போதருவர்; இல்லையேல் தம்மைச் சூழ்ந்துள்ள குருமாருள் ஒருவரை அனுப்புவர். திருஞானசம்பந்தர் சமண சமயத்தை அழித்துச் சைவ சமயத் துக்கு ஆக்கந் தேடத் தமிழ்நாட்டிற்றோன்றினார் என்று சிலர் கூறுப. அது குறித்து ஈண்டுச் சில சுருங்கக் கூற விரும்புகிறேன். ஆண்டவன் ஒருவன்; அவன் அருள்நெறியும் ஒன்றே. அவ் வொன்று ஒவ்வொருபோது, ஒவ்வொரு விதப் பெயர் பெறுவ தாகிறது. அப்பெயர்கள், பல சமயங்களாக, ஆராய்ச்சி இல்லாத வர்களால் கொள்ளப்படுகின்றன. பலபட்டப் பெயர்களை நீக்கிப் பொருளைப் பார்த்தால், ஒருமை புலப்படுமேயன்றிப் பன்மை புலப்படாது. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 79. குறிப்புப் பார்க்க. திருஞானசம்பந்தர் வருகைக்குக் காரணமாயிருந்தது. அந் நாளில் சமணமென்று பெயர் பெற்றிருந்த திருவருள் நெறியில் நேர்ந்த மாறுபாடேயாகும். ஆதி நாதராகிய விருஷப தேவர் கண்ட அருள்நெறி தோன்றியவாறே இயங்கி இருப்பின், திருஞான சம்பந்தரின் வருகைக்கு இடம் நேர்ந்திராது. முந்தைய உரையிற் கொண்ட பொறைமுதல் வைப்பும் விட்டு. . . . . இப்புராணம்: 134. விருஷப தேவர் கண்ட அருள்நெறியிடை அதாவது ஆதி ஜைனத்திடைச் சில பிரிவுகள் தோன்றலாயின. அவைகளுள் சிறப் பாக இரண்டைக் குறிக்கலாம். ஒன்று திகம்பர ஜைனம்; மற்றொன்று சுவேதாம்பர ஜைனம். திகம்பரம் இயற்கையை வெறுப்பது; பெண்ணை இழிவாகக் கருதுவது; பெண் பிறவிக்கு வீடுபேறு இல்லை என்பது; பெண்ணானவள், ஆண் பிறவி தாங்கிய பின்னரே வீடுபேறு எய்தல் வேண்டு மென்னுங் கொள்கையுடையது. இன்னோரன்ன கொள்கைகள் ஆதி ஜைனத்துடன் மாறுபட்டவை. இம்மாறுபாட்டுக்கு உடன்படாதவர் தங்களைச் சுவேதாம்பரர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். சுவேதாம்பரர் இயற்கையை வெறுப்பதில்லை; பெண்ணை இழிவாகக் கருதுவதில்லை; பெண் பிறவிக்கும் வீடுபேறு உண்டு என்னுங் கொள்கை உடையது. திகம்பரம் தென்னாட்டிலும், சுவேதாம்பரம் வட நாட்டிலும் பரவலாயின. தென்னாட்டில் திகம்பரம் பரவினமையால், மக்கள் இயற்கை நெறியினின்றும் விலகி நின்றார்கள்; பெண்ணை இழிவாகக் கருதினார்கள்; பெண்ணை வெறுத்தலே பெருந்துறவு என்று கொண்டார்கள். திகம்பரத்தால் இயற்கை நெறிக்கும், பெண்ணுலகுக்கும் பெருந்துன்பம் நேர்ந்தது என்று பொதுப்படக் கூறலாம். நாளைய திகம்பர ஜைனத்தின் நிலைகளைப் பெரிதும் திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களிலுள்ள பத்தாம் பாட்டிற் பார்க்கலாம். அப்பாக்களைத் தேடிப் பார்த்தால், அந்நாளைய ஜைனர்கள் எந்நெறி பற்றி ஒழுகினார்கள் என்பது நன்கு புலனாகும். இயற்கை நெறிக்கும் பெண்ணுலகுக்கும் கேடு நேர்வது இறை நெறிக்கு மாறு நேர்வதாகும். இயற்கை, இறையின் போர்வை; அதாவது உடல். அவ்வாழ்க்கையை வெறுத்துத் துறப்பது இறையை வெறுத்துத் துறப்பதாகும். அதில் இயற்கையை யொழிந்திட்டற்ற வர்க்கற்ற சிவன் உறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே திருஞான சம்பந்தர். இயற்கையை உற்று நோக்கினால் அது பெண் ஆண் மயமா யிருத்தல் நனிவிளங்கும். இயற்கைக் காரியங்கள் யாவும் பெண் ஆண் மயமாயிருப்பின், அவ்வியற்கைக்குக் காரணமாயுள்ள இறையும் பெண் ஆண் கூறுடையதாயிருத்தல் வேண்டும். இது பற்றிப் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன்; விளக்கம் ஆண்டுக்காண்க; திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: பாட்டு - 374. குறிப்பையும் பார்க்க. இயற்கை நெறிக்கும் பெண்ணுலகுக்கும் இழுக்கு நேரும் இடங்களில் உலக நெறி செவ்விய முறையில் இயங்காது. தென்னாட்டில் திகம்பரம் பரவியதால் இயற்கை நெறிக்கும் பெண்ணுலகுக்கும் இழிவு நேர்ந்தது. அதனால் அருள் நெறி நன்முறையில் இயங்காது. அவ்விழிவு போக்கவே திருஞானசம்பந்தர் தோன்றினாரென்க. அவர், அருள்நெறியாகிய ஆதி ஜைனத்தை அழிக்கப் போந்தாரென்பது ஆராய்ச்சி இல்லாதார் கூற்று. திருஞானசம்பந்தர் திருஇரும்பூளைத் திருப்பதிகத்தில் பத்தாம் பாட்டின் இறுதியில் சமண் சாக்கிய மாக்கியவாறே என்று அருளியுள்ளது ஈண்டு உன்னற்பாலது. இத்திருமொழியால் சமண் சாக்கியம் ஆக்கியவன் சிவனே என்பது விளங்குகிறது. சமண் சாக்கியம் என்பன அருள்நெறிக்கு வழங்கப்படும் பல பெயர்களுள் சேர்ந்தவை. ஆகவே சிவனால் ஆக்கப்பட்ட சமண் சாக்கியம் ஒழிந்துபடத் திருஞான சம்பந்தர் முயல்வரோ என்பது சிந்திக்கத் தக்கது. சிவநாமம் சமணத்துக்கும் சைவத்துக்கும் பொதுவானது. சமணமும் சிவநெறி; சைவமும் சிவநெறி. சிவநெறி என்னும் அருள் நெறி ஒவ்வொருபோது ஒவ்வொரு பெயர் பெறுவது வழக்கம். பீ ஊண ணாணஸலிலம்ணிம்மல ஹதி ஸடாக ஸெஸ உம்முக்கா உந்தி சிவாலய வாஸி திகுவண சூடாமணி ஸித்த * * * சிவா ஹொந்தி * * * * ஞாநீ சிவ பரமேஷ்டி * * * சச்வத் சிவ ஆசாதர ஹ* * * குந்தகுந்தோச்சாரியார் (அஷ்டபாகுடம்); சிவ சுகம ஜரஸ்ரீ * * * * பூபால தோத்திரம்: இன்பமற்றென்னும் பேரானெழுந்த புற் கற்றை தீற்றித் - துன்பத்தைச் சுரக்கு நான்கு கதியெனுந் தொழுவிற் சேர்ந்து - நின்றபற்றார்வ நீக்கி நிருமலன் பாதஞ்சேரின் - அன்பு விற்றுண்டு போகிச் சிவகதி அடையலாமே - சிந்தாமணி: 3105; சினவரன் தேவன் சிவகதி நாயகன் சிலப்பதிகாரம். 10. நாடுகாண். 180: மணி மலிந்த ஒளியெனவும் மலர்நிறைந்த விரையெனவும் மல்கு சந்திரன் - துணியுமிழ்ந்த தண்மையினுந் தோன்றிய அப்பேரின் பத்துள்ளே தோன்றி - இணை பிறிதும் இலராகி இமையவரும் மாதவரும் இறைஞ்சிஏத்தப் பணிவரிய சிவகதியின் அமர்ந்திருந்தார் அறஅமிர்தம் உண்டாரன்றே - மேருமந்திர புராணம்; 1400; * * * * மாக்கயிலை மிசைநாப்பண் * * * * மூவிலையொரு நெடுவேலின் - மேவாத வினையவுணர், குன்று பட நூழிலாட்டி - வென்றட்ட விறல் வெகுளியை, மூவெயிலின் முரண்முருக்கி - மூவர் சரணடைய நின்றனை, கருப்பு நாண்வில்லிபட - நெருப்புமிழ் நெடுநோக்கினை. கோள்வலிய கொடுங்கூற்றைத் தாள் வலியின் விழவுதைத்தனை, பரிவில்கே வலக்கிழத்தி - பிரிவில்லா ஒரு பாகனை, ஆன்றமெய் அறம் வளர்க்கும் - மூன்றுகண் முனித்தலைவனை, ஆலநெடுநிழல் அமர்ந்தனை - கால மூன்றுமுடன் அளந்தனை, தாழ்சடை முடிச் சென்னிக்காசறு பொன்னெயிற் கடவுளை, மன்னியபேருல கனைத்தும் - நின்னுள்ளே நீயொடுக்கினை, நின்னின்று நீ விரித்தனை - நின்னருளின் நீகாத்தனை, எனவாங், காதிபகவனை அருகனை. மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே திருக்கலம்பகம்: 109. இடைநாளில் இயற்கை நெறிக்கும், பெண்ணுலகுக்கும் நேர்ந்த இழிவைப் போக்கித் திருவருள் நெறியை விளக்கத் திருஞான சம்பந்தர் போந்தனர். இவ்வுண்மை திருஞானசம்பந்தர் திருமொழி யாலேயே இனிது விளங்கும். இயற்கையானது ஆண்டவன் உடல் என்பதும், ஆண்டவன் பொண்ணோடு கூடியுள்ள பெருந்தகை என்பதும் பொதுளவே திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள் பாடியருளினார். அவர்தம் பாக்களில் எங்கணும் இயற்கை அன்னையின் திருக்கோலமும், உமைபங்கன் அருளொளியும் காட்சி யளித்தல் வெள்ளிடைமலை. இவ்விருகூறும் சிறப்பாகத் திருஞான சம்பந்தர் தேவாரத்தில் பெரிதுஞ் செறிந்து கிடத்தற்குரிய காரணத்தை ஆராய்வோர்க்கு அவர்தம் வருகை நுட்பம் நன்கு புலனாகும். திருஞானசம்பந்தப் பெருமான் வாது குறித்து ஆண்டவனிடம் விடைபெற வேண்டியபோது ஓதிய திருப்பதிகத்திலும், எரியிலிடக் கொண்ட திருநள்ளாற்றுத் திருப்பதிகத்திலும், அதைத் தொடர்ந்து பாடிய திருப்பதிகத்திலும் ஆண்டவன் பெண்மைக் கூறு சிறந்து விளங்குதலை யோர்க. உலகில் பெண் ஆண்ட கூட்டுறவு என்னும் பேரறம், இயற்கை - இறையின் வழியது என்பது திருஞானசம்பந்தர் உள்ளக் கிடக்கை. கேவல மடந்தையென்னுங் கேழ்கிளர் நெடிய வாட்கட் - பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னொரு பாகமாகக் காவலன் தானொர் கூறாக் கண்ணிமையாது புல்லி மூவுல குச்சி யின்பக் கடலினுள் மூழ்கினானே. - சீவக சிந்தாமணி: 3117. அறிவன் காதற் பெருங்கிழத்தி அகிலம் ஈன்ற தாயென்றும் அழியாக் கன்னி அறம்வளர்த்த அன்னை ஆறு சமயத்தின் - பிரிவு தன்பால் தோன்றி யவள் பிறங்கும் புவனத் தனிவிளக்குப் பிறழா முத்தி நாயகி நம் பிறவிப் பகைத்தி உயிர்க்கெல்லாஞ் - செறியுங் கருணை சுரந்தளிக்குந் தெய்வச் செவிலி கற்புடைய செஞ்சொற் பாவை ஆனந்த வல்லி ஞானச் செழுங்கொழுந்து - பொறிஐம் புலத்தின் வேட்கை நோய் தீர்க்கும் மருந்தென்றருந்தவர்கள் போற்றும் பதத்தான் செய்யபதம் போற்றார் உணர்வு பொங்காதே திருக்கலம்பகம்: 101. திருஞானசம்பந்தர் உள்ளக் கிடக்கையை இந்நூலாசிரியர் நன்கு உணர்ந்தவராதலின், இட்ட ஏட்டினில் எழுதிய செந்தமிழ்ப் பதிகம் - மட்டுலாங் குழல் வனமுலை மலைமகள்பாகத் - தட்ட மூர்த்தியைப் பொருளென உடைமையால் என்று விளங்கச் செய்தார். இன்னும் விரிக்கிற் பெருகும். எரி அட்டமூர்த்தத்துள் ஒன்று. அவ்வெரி ஆண்டவன் உருவம். இவ்உண்மையை அநுபூதியில் உணர்ந்து திருவருள் ஞானம் பெற்ற பெரியாரின் திருவாக்கைக் கொண்ட திருப்பதிகம் எரியில் எங்ஙனம் அழிந்துபடும்? எரிபெருக்குவர் அவ்வெரியீசன - துருவ ருக்கம தாவ துணர்கிலார் - அரியயற்கரி யானை யயர்த்துப்போய் - நரிவி ருத்தமதாகுவர் நாடரே - அப்பர். . . . .போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன் தேற்றித் தென்னன்உடலுற்ற தீப்பிணி யாயின தீரச் - சாற்றிய பாடல்கள் பத்தும் . . . . . . திருஞானசம்பந்தர்; திருநீற்றுப்பதிகம் 11. . . . . . . . கொற்றவன் எதிரிடை ணியினில் இடஇவை திருஞானசம்பந்தர்: திருநள்ளாறு. 11. 786 2690. மையல் நெஞ்சுடை அமணரும் தம் பொருள் வரைந்த கையில் ஏட்டினைக் கதுவு செந்தீயினில் இடுவார் உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார். கதுவும் - அதிகமாகப் பற்றி எரியும். 787 2691. அஞ்சும் உள்ளத்த ராகியும் அறிவிலா அமணர் வெஞ்சு டர்ப்பெருந் தீயினில் விழுத்திய ஏடு பஞ்சு தீயிடைப் பட்டது படக்கண்டு பயத்தால் நெஞ்சு சோரவும் பீலிகை சோர்ந்திலர் நின்றார். தீயினில் பஞ்சுபட்டது போல். 788 2692. மான மன்னவன் அவையின்முன் வளர்த்தசெந் தீயின் ஞானம் உண்டவர் இட்டஏ டிசைத்தநா ழிகையில் ஈசனம் இன்மைகண் டியாவரும் வியப்புற எடுத்தார் பான்மை முன்னையிற் பசுமையும் புதுமையும் பயப்ப. குறிப்பிட்ட நாழிகையில். 789 2693. எடுத்த ஏட்டினை அவையின்முன் காட்டிஅம் முறையில் ஆத்த வண்ணமே கோத்தலும் அதிசயித்து அரசன் தொடுத்த பீலிமுன் தூக்கிய கையரை நோக்கிக் கடுத்து நீர் இட்ட ஏட்டினைக் காட்டுமின் என்றான். கடுத்து - கோபித்து; ஐயுற்றுமாம். 790 அறுசீர் விருத்தம் 2694. அருகர்தாம் இட்ட ஏடு வாங்கச்சென்று அணையும் போதில் பெருகுதீக் கதுவ வெந்து பேர்ந்தமை கண்ட மன்னன் தருபுனல் கொண்டு செந்தீத் தணிப்பித்தான் சமணர் அங்குக் கருகிய சாம்ப ரோடும் கரிஅலால் மற்றுஎன் காண்பார் கதுவ - பற்றிச் சுட. 791 2695. செய்வதுஒன்று அறிகி லாதார் திகைப்பினால் திரண்ட சாம்பல் கையினால் பிசைந்து தூற்றிப் பார்ப்பது கண்ட மன்னன் எய்திய நகையி னோடும் ஏடு இன்னும் அரித்துக் காணும் பொய்யினால் மெய்யை ஆக்கப் புகுந்த நீர் போமின் என்றான். இன்னும் அரித்துப் பாருங்கள். 792 2696. வெப்பு எனும் தீயில் யான் முன் வீடு பெற்று உய்ய நீங்கள் அப்பொழுது அழிந்து தோற்றீர் ஆதலால் அது ஆறு ஆக இப்பொழுது எரியில் இட்ட ஏடு உய்ந்ததில்லை என்றால் துப்புர வுடையீர்! நீங்கள் தோற்றிலீர் போலும் என்றான். வீடுபெற்று - விடுதலையடைந்து. அது ஆறாக - அவ்வழியாக துப்புரவு உடையீர். ஐம்புல நுகர்ச்சி உடையவர்களே! அறிவில்லாத வர்களே என்றபடி. 793 2697. தென்னவன் நகைஉள் கொண்டு செப்பிய மாற்றம் தேரார் சொன்னஅது பயனாக் கொண்டு சொல்லுவார் தொடர்ந்த வாது முன்உற இருகால் செய்தோம் முக்காலில் ஒருகால் வெற்றி என்னினும் உடையோம் மெய்ம்மை இனிஒன்று காண்பது என்றார். மாற்றந் தேரார் - சொல்லின் நுட்பம் தெளியாதவராய். ஒரு கால் - ஒரு தரமாயினும். 794 2698. தோற்கவும் ஆசை நீங்காத் துணிவுஇலார் சொல்லக் கேட்டு இம் மாற்றம் என்ஆவது என்று மன்னவன் மறுத்த பின்னும் நீற்று அணி விளங்கு மேனி நிறைபுகழ்ச் சண்பை மன்னர் வேற்றுவாது இனி என்செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார். வேறுவாது. மேற்கோள் ஏற்பார் - வாதத்தில் தலைப்படு வாரானார். 795 2699. நீடுமெய்ப் பொருளின் உண்மை நிலைபெறும் தன்மை எல்லாம் ஏடு உற எழுதி மற்று அவ் ஏட்டினை யாமும் நீரும் ஓடுநீர் ஆற்றில் இட்டால் ஒழுகுதல் செய்யாது அங்கு நாடிமுன் தங்கும் ஏடுநல்பொருள் பரிப்பது என்றார். ஒழுகுதல் செய்யாது - ஆற்று நீருடன் செல்லாது. பரிப்பது - தாங்குவது. 796 2700. என்று அமண் கையர் கூற ஏறுசீர்ப் புகலி வேந்தர் நன்றுஅது செய்வோம் என்று அங்கு அருள் செய நணுக வந்து வென்றி வேல் அமைச்சனார் தாம் வேறு இனிச் செய்யும் இவ்வாது ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது என்றார். 797 2701. அங்கு அது கேட்டுநின்ற அமணரும் அவர்மேல் சென்று பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமே ஆகத் தங்கள் வாய் சோர்ந்து தாமே தனிவாதில் அழிந்தோம் ஆகில் வெங்கழு ஏற்றுவான் இவ் வேந்தனே என்று சொன்னார். 798 2702. மற்றுஅவர் சொன்ன வார்த்தை கேட்டலும் மலய மன்னன் செற்றத்தால் உரைத்தீர் உங்கள் செய்கையும் மறந்தீர் என்று பற்றிய பொருளின் ஏடு படர்புனல் வைகை ஆற்றில் பொற்பு உறவிடு வதற்குப் போதுவது என்று கூற. மலய மன்னன் - பொதிகை மலையையுடைய பாண்டியன். 799 2703. பிள்ளையார் முன்னம் பைம்பொன் பீடத்தின் இழிந்து போந்து தெள்ளுநீர்த் தரளப் பத்திச் சிவிகைமேல் ஏறிச் சென்றார் வள்ளலார் அவர்தம் பின்பு மன்னன் மாஏறிச் சென்றான் உள்ளவாறு அறிகி லாதார் உணர்வு மால்ஏறிச் சென்றார். நீர்த்தரளப் பத்தி - நீர்முத்து வரிசைகளையுடைய. மா - குதிரை. மால் - மயக்கம். 800 2704. தென்னவன் வெப்புத் தீர்ந்து செழுமணிக் கோயில் நீங்கிப் பின்உற அணைந்த போது பிள்ளையார் பெருகும் செல்வம் மன்னிய மதுரை மூதூர் மறுகில் வந்து அருளக் கண்டு துன்னிய மாத மைந்தர் தொழுது வேறு இனைய சென்னார். மறுகில் - தெருவில். 801 2705. மீனவன் கொண்ட வெப்பை நீக்கி நம் விழுமம் தீர்த்த ஞான சம்பந்தர் இந்த நாயனார் காணும் என்பார்; பால்நறும் குதலைச் செய்ய பவள வாய்ப் பிள்ளையார் தாம் மானசீர்த் தென்னன் நாடு வாழவந்து அணைந்தார் என்பார். விழுமம் - வருத்தம். பால் மணங் கமழும் நறுங்குதலை மொழி பேசும். 802 2706. எரியிடை வாதில் தோற்றது இவர்க்கு நம் அருகர் என்பார்; புரிசடை அண்ணல் நீறே பொருள் எனக் கண்டோம் என்பார் பெருகுஒளி முத்தின் பைம்பொன் சிவிகை மேல்பிள்ளை யார்தாம் வரும் அழகு என்னே என்பார்; வாழ்ந்தன கண்கள் என்பார். 803 2707. ஏதமே விளைந்தது இந்த அடிகள்மார் இயல்பால் என்பார் நாதனும் ஆல வாயில் நம்பனே காணும் என்பார்; போதம் ஆவதுவும் முக்கண் புராணனை அறிவது என்பார், வேதமும் நீறும் ஆகி விரவிடும் எங்கும் என்பார். போதமாவது - மெய்ஞ்ஞானமாவது. வேதமும் நீறுமே எங்கும் பரவி விடும் என்பார். 804 2708. அடிகள்மார் முகங்கள் எல்லாம் அழிந்தன பாரீர் என்பார்; பொடிய வஞ்சனைகள் எல்லாம் குலைந்தன போலும் என்பார்; வடிகொள்வேல் மாறன் காதல் மாறின வண்ணம் என்பார்; விடிவதாய் முடிந்தது இந்த வெஞ்சமண் இருளும் என்பார். மாறன் (பாண்டின் அடிகள்மார் மீது கொண்ட) காதல் மாறின வண்ணம் என்ன என்பார். 805 2709. நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வாரோ என்பார்; இருப்பு நெஞ்சுடைய ரேனும் பிள்ளையார்க்கு எதிரோ என்பார் பருப்பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன பாரீர் என்பார்; மருப்புஉடைக் கழுக்கோல் செய்தார் மந்திரி யார்தாம் என்பார். பருப்பொருளுணர்ந்தார் என்பது நுண்பொருள் உணரா மையைக் குறிப்பது. நுண்பொருளாவது இயற்கையினூடு இரண்டறக் கலந்துள்ள இறையின் உண்மையை என்க. 806 2710. ஏடுகள் வைகை தன்னில் இடுவதற்கு அணைந்தார் என்பார்; ஓடுநீர் உடன் செலாது நிற்குமோ ஓலை என்பார்; நீடிய ஞானம் பெற்றார் நிறுத்தவும் வல்லர் என்பார்; நாடு எல்லாம் காண இங்கு நண்ணுமா காணீர் என்பார். 807 2711. தோற்றவர் கழுவில் ஏறத் துணிவதே அருகர் என்பார்; ஆற்றிய அருளின் மேன்மைப் பிள்ளையார்க்கு அழகு இது என்பார்; நீற்றினால் தென்னன் தீங்கு நீங்கிய வண்ணம் கண்டார்; போற்றுவார் எல்லாம் சைவ நெறியினைப் போற்றும் என்பார். 808 2712. இன்னன இரண்டு பாலும் ஈண்டினர் எடுத்துச் சொல்ல மின்ஒளி மணிப்பொன் காம்பின் வெண்குடை மீது போதப் பன்மணிச் சிவிகை தன்மேல் பஞ்சவன் நாட்டு ளோர்க்கு நல்நெறி காட்ட வந்தார்; நான்மறை வாழ வந்தார். 809 2713. தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான்; மன்றுளார் அளித்த ஞான வட்டில் வண்கையன் வந்தான்; வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான்; என்றுபன் மணிச் சின்னங்கள் எண்திசை நெருங்கி ஏங்க. வட்டிலை ஏந்திய. நெருங்கி முழங்க. 810 2714. பல்மணி முரசம் சூழ்ந்த பல்இயம் இயம்பப் பின்னே தென்னனும் தேவி யாரும் உடன்செலத் திரண்டு செல்லும் புல்நெறி அமணர் வேறுஓர் புடைவரப் புகலி வேந்தர் மன்னிய வைகை ஆற்றின் கரைமிசை மருவ வந்தார். பலஅழகிய முரசங்களுடன் சூழ்ந்த பலவகை வாத்தியங்கள் முழங்க. 811 2715. கார்கெழு பருவம் வாய்ப்பக் காமுறு மகளிர் உள்ளம் சீர்கெழு கணவன் தன்பால் விரைவு உறச்செல்லு மாபோல் நீர்கெழு பௌவம் நோக்கி நிரைதிரை இரைத்துச் செல்லும் பார்கெழு புகழின் மிக்க பண்புடை வைகை ஆறு. கார்காலம். பௌவம் - கடலை. கெழு - பொருந்திய. 812 2716. ஆற்றில் நீர்கடுக ஓடும் மருங்குஉற அரசன் நோக்கி நீற்றுஅணி திகழ்ந்த மேனி நிறைமதிப் பிள்ளை யாரும் வேற்றுஉரு அருகர் நீரும் விதித்தஏடு இடுக என்றான் தோற்றவர் தோலார் என்று முன்உறத் துணிந்திட் டார்கள். குரூபிகளாகிய அருகரே என்பது பழைய குறிப்புரை. 813 2717. படுபொருள் இன்றி நெல்லில் பதடிபோல் உள் இலார் மெய் அடுபவர் பொருளை அத்தி நாத்தி என்று எழுதி ஆற்றில் கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடு விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே. படுபொருள் - உண்மை விளங்கும் பொருள். நெல்லினுள் பதர் போல மெய்ம்மையில் உள்ளீடில்லாதவர். அத்தி நாத்தி - உண்டு இல்லை என்னும் வாதம்; அத்தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு. . . திருஞானசம்பந்தர்; திருவாலவாய் 3. கடுகிய புனலை - விரைந்து ஓடிய நீரை. வேலை - கடல். 814 2718. ஆறு கொண்டு ஓடும் ஏட்டைத் தொடர்ந்து எதிர் அணைப்பார் போலத் தேறும்மெய் உணர்வு இலாதார் கரைமிசை ஓடிச் சென்றார் பாறும் அப்பொருள் மேற்கொண்ட பட்டிகை எட்டாது அங்கு நூறுவில் கிடைக்கு முன்னே போனது நோக்கிக் காணார். பாறும். . . . . . . . பட்டிகை - அழியும் பொய்ப் பொருளைக் கொண்ட ஏடு. (பட்டிகை - தோணி; இங்கே ஏட்டைக் குறிப்பது). 815 2719. காணவும் எய்தா வண்ணம் கடலின்மேல் செல்லும் ஏடு நாண் இலா அமணர் தம்மை நட்டாற்றில் விட்டுப் போகச் சேண் இடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன் ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார். 816 2720. வேறு ஒரு செயல் இலாதார் வெறுஉற்று நடுங்கித் தம் பால் ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி ஊறுடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று மாறு கொண்டீரும் இட்டால் வந்தது காண்டும் என்றார். 817 2712. மாசு சேர் அமணர் எல்லாம் மதியினில் மயங்கிக் கூற ஆசு இலா நெறியில் சேர்ந்த அரசனும் அவரை விட்டுத் தேசுடைப் பிள்ளையார் தம் திருக்குறிப்பு அதனை நோக்கப் பாசுரம் பாடலுற்றார் பர சமயங்கள் பாற. ஆசிலா - குற்றமில்லாத. 818 2722. தென்னவன் மாறன் தானும் சிரபுரத் தலைவர் தீண்டிப் பொன்நவில் கொன்றை யார்தம் திருநீறு பூசப் பெற்று முன்னை வல்வினையும் நீங்கி முதல்வனை அறியும் தன்மை துன்னினான் வினைகள் ஒத்துத் துலைஎன நிற்ற லாலே. 819 கலி விருத்தம் 2723. உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் நிலவுமெய்ந்நெறி சிவநெறியது என்பதும் கலதிவாய் அமணர் காண்கிலார்கள் ஆயினும் பலர் புகழ் தென்னவன் அறியும் பான்மையால். கலதி - மூதேவி பொருந்திய. 820 2724. அந்தணர் தேவர்ஆன் இனங்கள் வாழ்க என்று இந்த மெய்ம் மொழிப் பயன் உலகம் இன்புறச் சந்த வேள்விகள் முதல் சங்கரர்க்கு முன் வந்த அர்ச்சனை வழிபாடு மன்னவாம். அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந் தண்மை பூண்டொழுக லான் - குறள்: 30. தேவர் - உலகுக்கு நலன் நாடுவோர்; ஆன் இனங்கள் - பசுக் கூட்டங்கள்; இவை சாந்தத்துக்கு அறிகுறியாக விளங்குவன. வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம் என்று அருளிய இந்த மொழிப் பயனாவது; உலகம் இன்புறச் சங்கரர்க்கு அழகிய யாகங்கள் முதலாக அர்ச்சனையும் வழிபாடும் நிலைபெறவாம். ஈண்டு வேள்வி என்றது ஊன் வேள்வியை அன்று; ஊனமில் வேள்வியை என்க. இவ்வேள்வி சமணர்க்கு முடையதாம். 821 2725. வேள்வி நல்பயன் வீழ் புனல் ஆவது நாளும் அர்ச்சனை நல்உறுப்பு ஆதலால் ஆளும் மன்னனை வாழ்த்தியது அர்ச்சனை மூளும் மற்றுஇவை காக்கும் முறைமையால். வீழ்புனல் - மழை வேள்வியால் மழை வருதலால் அதை வேள்வி நற்பயன் என்றார். வீழ்க தண்புனல் என்று அருளியது. அது நாடோறும் அர்ச்சனைக்கு நல்ல உறுப்பாதலால் என்க. மன்னனை வாழ்த்தியது, வேந்தனும் ஓங்குக என்றது. வேள்வி அர்ச்சனை முதலியவற்றைக் காக்கும் முறைமை யுடைமையால் மன்னனும் வாழ்த்தப் பட்டான் என்க. 822 2726. ஆழ்க தீயது என்று ஓதிற்று அயல்நெறி வீழ்க என்றது வேறு எல்லாம் அரன் பெயர் சூழ்க என்றது தொல்உயிர் யாவையும் வாழி அஞ்செழுத்து ஓதி வளர்கவே. ஆழ்க தீயது என்று ஓதியது. அயல்நெறி வீழ்க என்றதாம். உயிர்கள் எல்லாம் அஞ்செழுத்தை ஓதி வளர்தற்காம். 823 2727. சொன்ன வையகமும் துயர் தீர்கவே என்னும் நீர்மை இகபரத் தில்துயர் மன்னி வாழ் உலகத்தவர் மாற்றிட முன்னர் ஞான சம்பந்தர் மொழிந்தனர். இம்மை மறுமைத் துயரை உலகத்தவர் மாற்றும் பொருட்டு. 824 2728. அரியகாட்சியர் என்பது அவ் ஆதியைத் தெரியலாம் நிலையால் தெரியார் என உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் பெரிய நல்அடையா ளங்கள் பேசினார். அரிய காட்சியர் என்றது. அன்பு நெறி நில்லாது தம்மைத் தேடுவோர்க்கு ஆதியாகிய சிவபெருமான் அரியர் என்பதை அறி வுறுத்துவது; தம்மை அன்பினில் காண்போர்க்கு அங்கை எரி, ஏறு. கரிய கண்டம், காடுறை வாழ்வு முதலிய அடையாளங்களைக் கொண்டவராய் அவர் காட்சியளிப்பர் என்றபடி. 825 2729. ஆயினும் பெரியர் ஆவர் என்பது மேயஇவ் இயல்பே அன்றி விண்முதல் பாய பூதங்கள் பல்உயிர் அண்டங்கள் ஏயும் யாவும் இவர்வடிவு என்றதாம். சிவபெருமான் எரி, ஏறு, கரியகண்டம், காடுறை வாழ்வு முதலிய அடையாளங்களை உடையவராயினும். அவர் பெரியவ ராவர். எப்படி? விண்முதல் . . . . யாவும் அவர் வடிவாகலின் என்க. அரிய காட்சியர் என்னும் பாட்டின் விளக்கம் இப் புராணத்தின் முதற் பாட்டாகிய உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் என்பதில் ஒளிர்தல் காண்க. 826 2730. பின்பும் ஆர் அறிவார் அவர் பெற்றியே என்பதுயார் உணர்வானும் சென்று எட்டஒணா மன்பெருந் தன்மை யார்என வாழ்த்தினார் அன்புசூழ் சண்பை ஆண்டகையார் அவர். 827 2731. வெந்த சாம்பல் விரை என்பது தமது அந்தம்இல்ஒளி அல்லா ஒளிஎலாம் வந்து வெந்து அறமற்றுஅப் பொடி அணி சந்தமாக் கொண்ட வண்ணமும் சாற்றினார். விரை - கலவைச் சாந்து. சிவவொளி யொன்றே அழிவில் லாதது. மற்றவையெல்லாம் அழிவுடையன. அழிந்து நீறாகும் அவை எங்கே அடங்கும்? அழிவிலா ஒன்றனிடத்தில் அடங்கும். அடங்கிய இடத்தினின்றும் அவை பிறத்தலும் இயல்பு. அண்டாண்டங்க ளெல்லாம் நாம ரூபமடைய காரிய வடிவமாகத் திகழும்போதும், அந் நாமரூப காரியத் தோத. 828 2732. தமக்குத் தந்தையர் தாய் இலர் என்பதும் அமைத்துஇங்கு யாவையும் ஆங்குஅவை வீந்த போது இமைத்த சோதி அடக்கிப்பின் ஈதலால் எமக்கு நாதர் பிறப்பிலர் என்றதரம். காரிய உலகங்களெல்லாம் ஒடுங்குதற்குத் தான் நிலைக்கள னாக நிற்றலாலும், தான் பிறிதொன்றில் ஒடுங்காத தன்மையாலும் சிவத்துக்குப் பிறப் பிறப்பில்லை யென்க. பிறப்பிறப்பில்லா ஒன்றற்குத் தாயேது? தந்தையேது? தாயுமிலி தந்தையிலி - திரு வாசகம்: திருச்சாழல். 829 2733. தம்மையே சிந்தியா எனும் தன்மை தான் மெய்ம்மை ஆகி விளக்கு ஒளி தாம்என இம்மை யேநினை வார்தம் வினைப் பொய்ம்மை வல்இருள் போக்குவர் என்றதாம். இருவினை - புண்ணிய பாவம். வல்லிருள் - ஆணவத்தை. இரு வினைக்குங் காரணம் வல்லிரு ளென்க. இரு வினைக்கட்டால் நேரும் பிறப்பிறப்பை ஒழிப்பதெப்படி? பிறப்பிறப்பில்லாச் சிவத்தைச் சிந்தித்தல் வேண்டும். இவ்வுண்மை இங்கே விளக்கப் பட்டள்ளது. 830 2734. எந்தையார் அவர்எவ் வகையார் கொல் என்று இந்த வாய்மை மற்று எப்பொருள் கூற்றினும் முந்தை யோரை எக்கூற்றின் மொழிவது என்று அம்தண் பூந்தராய் வேந்தர் அருளினார். எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ என்னும் வாய்மை (மெய்ம் மொழி). மிக நுண்ணியதைக் கூறிடினும் மிகப் பெரியதைக் கூறிடினும், அதாவது காரிய காரணங்களை எவ்வளவு நுணுகி நுணுகிக் கூறுடினும் அவ்வக் கூற்றில் அவ்வக் கூறாகச் சிவம் விளங்கலின், அச் சிவமே எல்லாவற்றிற்கும் முதன்மை என்றபடி. அவ்வாறிருத்தல் வியப்பாதலின் எவ்வகையார் கொலோ என்றார். 831 2735. ஆதி ஆள்பால் அவர்க்கு அருளும் திறம் நாதன் மாட்சிமை கேட்க நவிலுங்கால் ஓதும் எல்லை உலப்புஇல ஆதலின் யாதும் ஆராய்ச்சி இல்லையாம் என்றதாம். ஆதி - சிவபெருமான். உலப்பில ஆதலின் - அளவில்லை ஆதலான். மனஉணர்வு கொண்டு செய்யப்படும் ஆராய்ச்சி எல்லைக்கு உட்பட்டது. சிவம் எல்லைக்கு உட்படாதது. அதை எங்ஙனம் எல்லைக்கு உட்படுத்தி ஆராய்ச்சி செய்வது என்றபடி. ஆராய்ச்சியில் நுழையாது என் செய்தல் வேண்டும் என்பது கீழ் உணர்த்தப்படுகிறது. 832 2736. அன்ன ஆதலில் ஆதியார் தாள் அடைந்து இன்ன கேட்கவே ஏற்ற கோள்பாலவும் முன்னை வல்வினையும் முடிவு எய்தும் அத் தன்மையார்க்கு என்றனர் சண்பை காவலர். இன்ன என்பது கோளாலும் வினையாலும் நேரும் தீமைகளைக் குறிப்பது. கோட்பாலவும் - கிரகங்களின் பாற்பட்டு விளையும் தோஷங்களும். ஆண்டவன் தாள் அடைந்து, கோளாலும் வினையாலும் விளையும் கெடுதல்கள் குறுகி இடர்ப்படுத்தாதவாறு முறையிட வேண்டுவது உயிர்களின் கடமை என்றபடி. கர்மங்களை அழிக்க வல்லது ஆண்டவன் திருவடிகளை நோக்கிச் செய்யும் உண்மை முறைப்பாடேயாகும். 833 2737. மன்னும் ஏதுக்களால் எனும் வாய்மைதான் தன்னது ஒப்பு வேறுஇன்மையில் சங்கரன் இன்ன தன்மையை ஏதுஎடுத்துக் காட்டு அன்ன வற்றால் அளப்பிலன் என்றதாம். வாத தர்க்க திருஷ்டாந்தங்களாலும், பிரமாண முதலிய வற்றாலும் ஆண்டவனைச் சோதிக்கவேண்டா என்றபடி. காரணம் சிவம் எல்லையற்ற ஒன்று என்பது மேலே காட்டப்பட்டது. 834 2738. தோன்று காட்சி சுடர்விட்டுளன் என்பது ஆன்ற அங்கிப் புறத்து ஒளியாய் அன்பில் ஊன்ற உள்எழும் சோதியாய் நின்றனன் ஏன்று காண்பார்க்கு இதுபொருள் என்றதாம். ஆன்ற அங்கி - அமைந்த அக்கினி. புறத்தே அக்கினி வடி வாகவும், அகத்தே அருட்சோதியாகவும் சிவம் விளங்குவது என்க. வீண் வாத தர்க்கங்களில் நுழையாது, சிவத்தை அன்பினில் ஊன்றி உன்னுவார்க்கு அச்சிவம் அகச் சோதியாய் விளங்கி வினையை அழிக்கும் என்றபடி. 835 கலித்துறை 2739. மாதுக்கம் நீங்கல் உறுவீர் மனம்பற்றும் என்பது ஆதிச் சுடர்ச்சோதியை அன்பின் அகத்துள் ஆக்கிப் போதித்த நோக்கு உற்று ஒழியாமல் பொருந்தி வாழ்ந்து போதித்த பந்தப் பிறப்பின் நெறி பேர்மின் என்றாம். போதித்த - குருநாதன் போதித்தபடி. மாதுக்க நீங்கலாவது பிறவியை யறுப்பது. பிறப்பின் நெறி பெயர்மின் என்றதாம். 836 கலி விருத்தம் 2740. ஈண்டு சாதுக்கள் என்று எடுத்து ஓதிற்று வேண்டும் வேட்கைய எல்லாம் விமலர்தாள் பூண்ட அன்பினில் போற்றுவீர் சார்மின் என்று ஆண்ட சண்பை அரசர் அருளினார். சாதுக்கள் - வேண்டுதல் யாவும் ஆண்டவன் திருவடி நேயம் என்று வாழ்வோர்; போகம் முதலிய யாவற்றையும் இறைவழி நின்று நுகர்வோர் சாதுக்களாவர்; வேடத்தால் சாதுக்களில்லை என்றபடி. 837 2741. ஆடும் என ஆம் திருப்பாட்டின் அமைத்த மூன்றும் நீடும் புகழோ பிறர் துன்பம் நீத்தற்கோ என்று தேடும் உணர்வீர் உலகுக்கு இவை செய்தது ஈசர் கூடும் கருணைத் திறம் என்றனர் கொள்கை மேலோர். ஆடுவது, கூற்றை உதைத்தது, வேதம் பாடுவது ஆக மூன்று. இம் மூன்றும் எந்நோக்குடன் நிகழ்த்தப்படுகின்றன? புகழுக்கா பிறர் துன்பம் நீக்குதற்கா? பிறர் துன்பம் நீக்குதற்கு அருளால் இம் மூன்றையும் ஆண்டவன் நிகழ்த்துகின்றானென்க. ஆடுவது திதி யையும், கூற்றை உதைத்தது சம்மாரத்தையும். வேதம் பாடுவது சிருஷ்டியையும் உணர்த்துவன. 838 2742. கருதும் கடிசேர்ந்த எனும் திருப்பாட்டில் ஈசர் மருவும் பெரும் பூசை மறுத்தவர்க் கோறல் முத்தி தருதன்மையது ஆதல் சண்டீசர் தம்செய்கை தக்கோர் பெரிதும் சொலக் கேட்டனம் என்றனர் பிள்ளையார் தாம். கருதத்தக்க கடிசேர்ந்த என்னும் பாட்டு. கடி - அச்சம்; வடு. மறுத்தவரைக் கொல்லுதல் முத்தி. . . . . . 839 2743. வேத முதல்வன் எனும் மெய்த் திருப்பாட் டினில்நேர் ஆதி உலகோர் இடர் நீங்கிட ஏத்த ஆடும் பாத முதல் ஆம் பதினெண் புராணங்கள் என்றே ஓது என்று உரை செய்தனர் யாவும் ஓதாது உணர்ந்தார். முதல்வனாவான் உலகுய்ய ஆடும் பாதமுடையவன் என்றபடி. இவனே வேதத்தின் பொருளாயுள்ளவன். ஈண்டு வேதம் என்றது வேதாந்தத்தை. வேதாந்தம் சிவத்தின் இயல்பை நுண்மை வழியில் அறிவுறுத்தும். அதைப்பருமை நெறியில் அறிவுறுத்துவன சூத முனிவர் வழிப் பிறந்த பதினெண் புராணங்களாகும். பதினெண் புராணங்கள் கூறுங் கதைகளை உள்ளவாறே கொள்ளாது வேதாந்த முறைப்படி கொள்ளல் வேண்டும் என்றபடி. 840 2744. பாஉற்ற பார் ஆழி வட்டத் திருப்பாட்டின் உண்மை காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல் பெற்றது யாவர்க்கும் மேல் ஆயஈசன் அருள் ஆழி பெற்று மேவுற்றசீர் உற்றது என்றனர் வேத வாயர். பாராழி வட்டம் - கடல் சூழ்ந்த உலகம். உலகம் பாட்டு மயமாயிருத்தலான் பாவுற்ற என்றார். ஈசன் அருள் ஆழி - ஈசன் அருளிய சக்கரம். 841 2745. மால் ஆயவன் என்ன வரும் திருப்பாட்டில் மாலும் தோலாமறை நான் முகனும் தொடர்வாம் அமரர் ஏலாவகை சுட்ட நஞ்சு உண்டு இறவாமை காத்த மேலாம் கருணைத் திறம் வெங்குரு வேந்தர் வைத்தார். தோலா - அளவில்லாத; ஈடழியாத. தொடர்வாம் அமரர் - முதலாய தேவர்கள். ஏலாவகை - ஏற்றுக்கொள்ள முடியாதபடி. 842 அறுசீர் விருத்தம் 2746. ஆன அற்று அன்றி என்ற அத்திருப் பாட்டில் கூடல் மா நகரத்துச் சங்கம் வைத்தவன் தேற்றத் தேறா ஈனர்கள் எல்லைக்கு இட்ட ஏடுநீர் எதிர்ந்து செல்லில் ஞானம் ஈசன் பால் அன்பே என்றனர் ஞானம் உண்டார். கூடல். . . . .வைத்தவன் - மதுரையில் சங்கம் வைத்த பாண்டியன். தேற்றத்தேறா ஈனர்கள் - தெளியத் தெளியாத சமணர்கள். எல்லைக்கு - முடிவுக்கு. 843 கலித்துறை 2747. வெறியார் பொழில் சண்பையர் வேந்தர் மெய்ப் பாசுரத்தைக் குறி ஏறியஎல்லை அறிந்து கும்பிட்டேன் அல்லேன் சிறியேன் அறிவுக்கு அவர்தம் திருப்பாதம் தந்த நெறியே சிறிதுயான் அறிநீர்மை கும்பிட்டேன் அன்பால். குறி ஏறிய எல்லை - பொருள்குறிச் செறிவின் அளவை. 844 2748. அலரும் விரைசூழ் பொழில்காழி உள்ஆதி ஞானம் மலரும் திருவாக்குடை வள்ள லார்உள்ள வண்ணம் பலரும் உணர்ந்து உய்யப் பகர்ந்து வரைந்து யாற்றில் நிலவும் திருஏடு திருக்கையால் நீட்டி இட்டார். 845 அறுசீர் விருத்தம் 2749. திருவுடைப் பிள்ளையார் தம் திருக்கையால் இட்டஏடு மருவுறும் பிறவி ஆற்றில் மாதவர் மனம் சென்றால்போல் பொருபுனல் வைகை ஆற்றில் எதிர்ந்து நீர் கிழித்துப் போகும் இருநிலத்தோர் கட்கு எல்லாம் இது பொருள் என்று காட்டி. 846 2750. எம்பிரான் சிவனே எல்லாப் பொருளும் என்றுஎழுதும் ஏட்டில் தம்பிரான் அருளால் வேந்தன் தன்னைமுன் ஓங்கப் பாட அம்புய மலராள் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச் செம்பியன் செங்கோல் என்னத் தென்னன் கூன்நிமிர்ந்தது அன்றே. வேந்தனும் ஓங்குக என்று பாட. அம்புய மலராள் - இலக்குமி. இலக்குமி வாழும் மார்பினரென்று மன்னர்களைக் கூறுதல் மரபு. மன்னர்கள் திருமால் கூற்றினர் என்பதும் மரபு. திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும் - ஆழ்வார். கூன்பாண்டியன் என்ற பெயர் பின்னே நின்றசீர் நெடுமாறன் என்று மாறலாயிற்று. 847 2751. ஏடு நீர் எதிர்ந்து செல்லும் பொழுது இமையோர்கள் எல்லாம் நீடிய வாழ்த்தின் போற்றி நிமிர்ந்த பூமாரி தூர்த்தார் ஆடுஇயல் யானை மன்னன் அற்புதம் எய்தி நின்றான் பாடுசேர் அமணர் அஞ்சிப் பதைப்புடன் பணிந்து நின்றார். பாடுசேர் - தோல்வி அடைந்த. பணிந்து - தலைகுனிந்து. 848 2752. ஆற்றின்மேல் செல்லும் ஏடு தொடர்ந்து எடுப்பதற்கு வேண்டிக் காற்றுஎன விசையின் செல்லும் கடும்பரி ஏறிக் கொண்டு கோல் தொழில் திருத்தவல்ல குலச்சிறையார் பின் சென்றார் ஏற்று உயர் கொடியினாரைப் பாடினார் ஏடு தங்க. குலச்சிறையார் அமைச்சராதலின் கோல் தொழில் திருத்த வல்ல என்னப்பட்டார். திருஞானசம்பந்தர் சிவபெருமானைப் பாடினார். 849 2753. ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக் கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக் காடுஇடம் ஆக ஆடும் கண்ணுதல் கோயில் மாடு நீடுநீர் நடுவுள் புக்கு நின்ற ஏடுஎடுத்துக் கொண்டார். ஏடகம் - திருவேடகத் திருப்பதி. பருமதில் மதுரைமன் அவையெதிரே பதிகம தெழுதிலை அவையெதிரே - வருநதி யிடை மிசை வருகரனே - திருஞானசம்பந்தர்: திருக்கழுமலம். 11. 850 2754. தலைமிசை வைத்துக் கொண்டு தாங்கஅரும் மகிழ்ச்சி பொங்க அலைபுனல் கரையில் ஏறி அங்கு இனிது அமர்ந்த மேருச் சிலையுடை யவர்தாள் போற்றி மீண்டு சென்று அணைவார் தெய்வ மலைமகள் குழைத்த ஞானம் உண்டவர் தம்பால் வந்தார். 851 2755. மற்றவர் பிள்ளை யார்தம் மலர்அடி வணங்கிப் போற்றிக் கொற்றவன் முதலாய் உள்ளோர் காணமுன் கொணர்ந்த ஏடு பற்றிய கையில் ஏந்திப் பண்பினால் யார்க்கும் காட்ட அற்றுஅருள் பெற்ற தொண்டர் அரஒலி எழுந்தது அன்றே. அற்று - ஐயம் திரிபு மயக்கம் முதலியவற்றை அற்று. 852 2756. மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித் துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளையார் பால் அநுசிதம் முற்றச் செய்தார் கொல்நுனைக் கழுவில் ஏற முறைசெய்க என்று கூற. 853 2757. புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும் இகல்இலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு தகவு இலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே மிகைஇலா வேந்தன் செய்கை விலக்கிடாது இருந்த வேலை. இகல் - பகை; வன்மம். மிகையிலா - குற்றமில்லாத; வரம்புகடந்த செய்கையில் தலைப்படாத; நியாய வரம்புக்கு உட்பட்ட என்றபடி. மடத்தில் தீ வைத்தது நியாய வரம்புக்கு மீறியது. அச் செயலுக்கு அரச நீதிப்படி தண்டனை விதிக்கவேண்டுவது நியாயம் என்றபடி திருஞானசம்பந்தர் தேவாரத்தில் சமணர்கள் கழுவேறிய குறிப்பு அகச் சான்றாக ஒன்றுமில்லை. சமணர்கள் நூல்களிலும் அது பற்றிய சான்றில்லை. சீன யாத்திரைக்காரர்கள் எழுதியுள்ள தமிழ்நாட்டுக் குறிப்புகளிலும் சமணர்கள் கழு வேறியதைக் காணோம். சமணர்கள் கழுவேறிய செய்தியை முதல் முதல் குறிப்பிட்டவர் நம்பியாண்டார் நம்பியாவர். விரிவு அவர்தம் நூற்களிற் காண்க. அவர் உரையைக் கடைப்பிடித்துச் சேக்கிழார் கழுச் செய்தியை அருளினார் போலும். சேக்கிழார் கூற்று, அரச நீதியை ஒட்டிப் பிறந்திருத்தல் வெள்ளிடைமலை. பின்னே தோன்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் முதலிய புராணங்கள் சமணர்கள் கழுவேறியதைப் பலவாறு கூறலாயின. கதைப் போக்குகளில் முரண்பாடுகள் நிரம்பிக் கிடக்கின்றன. சமணர்கள் தாங்களே கழுவேறினார்கள் என்றும், அவர்கள் கழுவேற்றப் பட்டார்கள் என்றும் புராணங்களில் மாறுபடச் சொல்லப் பட்டிருத்தல் கவனிக்கத்தக்கது. சமணர்களைக் கழுவேறாதவாறு திருஞானசம்பந்தர் தடுத்தாரென்று திருவாலவாயுடையார் திரு விளையாடல் கூறுகிறது. சமணர்கள் கழுவேறிய பதி திருப் பூவணமென்றும், அவ்விடம் பின்னே கழுவர் படைவீடு என்று வழங்கப்பட்டதென்றும் அப்புராணம் சொல்கிறது. தலபுராணக் கூற்றுக்களின் முரண்பாடுகளை ஈண்டு விரிக்கிற் பெருகும். திருஞான சம்பந்தர் திருநாள், திருவருட் செயல்கள் முதலியன தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுகின்றன. சமணர்கள் கழுவேறிய விழா, பாண்டி நாட்டில் மட்டும் நடைபெற்று வருகிறது. திருப் பாசுரம் என்று வழங்கப்படும் வாழ்க அந்தணர் என்னும் பதிகத்திறுதியில் எல்லார்களும் ஏத்தும் ஈசனை என்று ஞான சம்பந்தப் பெருமான் குறிப்பிட்டது ஈண்டுச் சிறப்பாகக் கருதற் பாலது. உரைசேரும் எண்பத்துநான்கு நூறாயிரமாம் யோனி பேதம் - நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில் . . . . . . . . . . மிழலையாமே என்பதும் திருஞானசம்பந்தர் திருவாக்கே. இப்புராணம்: பாட்டு. 786 குறிப்புப் பார்க்க. 854 2758. பண்புடை அமைச்ச னாரும் பாருளோர் அறியும் ஆற்றால் கண்பு டைபட்டு நீண்ட கழுத்தறி நிரையில் ஏற்ற நண்புடை ஞானம் உண்டார் மடத்துத் தீ நாடி இட்ட எண்பெரும் குன்றத்து எண்ணா யிரவரும் ஏறி னார்கள். கண்புடைபட்டு - கணுக்கள் பக்கத்தே தறிக்கப்பட்டு. கழுத்தறிகளை வரிசையாக நாட்ட. 855 2759. தோற்றவர் கழுவில் ஏறித் தோற்றிடத் தோற்றும் தம்பம்; ஆற்றிடை அமணர் ஓலை அழிவினால் ஆர்ந்த தம்பம்; வேற்று ஒரு தெய்வம் இன்மை விளக்கிய பதாகைத் தம்பம்; போற்று சீர்ப் பிள்ளையார் தம் புகழ்ச் சயத்தம்பம் ஆகும். ஆர்ந்த - நின்ற; பொருத்திய. பதாகை - வெற்றிப் பெருங்கொடி. 856 2760. தென்னவன் தனக்கு நீறு சிரபுரச் செல்வர் ஈந்தார் முன்அவன் பணிந்து கொண்டு முழுவதும் அணிந்து நின்றான். மன்னன் நீறு அணிந்தான் என்று மற்று அவன் மதுரை வாழ்வார் துன்னி நின்றார்கள் எல்லாம் தூய நீறு அணிந்து கொண்டார். 857 2761. பூதி மெய்க்கு அணிந்து வேந்தன் புனிதனாய் உய்ந்த போது நீதியும் வேத நீதி ஆகியே நிகழ்ந்தது எங்கும்; மேதினி புனிதம் ஆக வெண்ணீற்றின் விரிந்த சோதி மாதிரம் தூய்மை செய்ய அமண் இருள் மாய்ந்தது அன்றே. மாதிரம் - திக்குகளெல்லாம். 858 2762. மீனவற்கு உயிரை நல்கி மெய்ந்நெறி காட்டி மிக்க ஊனம் ஆம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட ஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத் தேன் அலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே. 859 2763. மறையவர் வேள்வி செய்ய, வானவர் மாரி நல்க, இறைவன் நல்நெறியின் ஓங்க, இகத்தினில் அவனி இன்பம் குறைவிலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி நிறைகடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே. இகத்தினில் - இம்மையில். 860 2764. அங்கயற் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் பங்கயச் செய்ய பாதம் பணிவன் என்று எழுந்து சென்று பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார்; மங்கையர்க் கரசி யாரும் மன்னனும் போற்றி வந்தார். பிள்ளையார் ஆண்டவன் ஆணை பெற்றே வாதத்திலி றங்கினர்; வாதம் முடிந்ததும் ஆண்டவன் கோயில் புகத் திருவுளங் கொண்டனர். இஃது அவர் திருவருள் வழி நிற்பவர் என்பதை வலியுறுத்துவது. 861 2765. எண்ணரும் பெருமைத் தொண்டர் யாவரும் மகிழ்ச்சி எய்திப் புண்ணியப் பிள்ளை யாரைப் புகழ்ந்து அடிபோற்றிப் போத, மண்எலாம் உய்ய வந்த வள்ளலார் தம்மைக் கண்டு கண்ணினால் பயன் கொண்டார்கள் கன்னி நாட்டவர்கள் எல்லாம். 862 2766. ஆலவாய் அண்ணல் கோயில் அங்கண்முன் தோன்றக் கண்டு பாலறாவாயர் மிக்க பண்பினால் தொழுது சென்று மாலும் நான்முகனும் போற்ற மன்னினார் கோயில் வாயில் சீலமா தவத்தோர் முன்பு சிவிகை நின்று இழிந்து புக்கார். 863 2767. தென்னவன் தானும் எங்கள் செம்பியன் மகளார் தாமும் நல்நெறி அமைச்ச னாரும் ஞான சம்பந்தர் செய்ய பொன்அடிக் கமலம் போற்றி உடன்புகப் புனிதர் கோயில் தன்னைமுன் வலம் கொண்டு உள்ளால் சண்பையர் தலைவர் புக்கார். 864 2768. கைகளும் தலைமீது ஏறக் கண்ணில் ஆனந்த வெள்ளம் மெய்எலாம் பொழிய வேத முதல்வரைப் பணிந்து போற்றி ஐயனே! அடிய னேனை அஞ்சல் என்று அருளவல்ல மெய்யனே என்று வீட லாலவாய் விளம்பல் உற்றார். 865 2769. ஒன்றுவேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம் மன்றில் நான்மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும் என்றுபூம் புகலி மன்னர் இன்தமிழ்ப் பதிகம் பாட. 866 2770. தென்னவன் பணிந்து நின்று திருவால வாயில் மேவும் மன்னனே! அமணர் தங்கள் மாய்கையால் மயங்கி யானும் உன்னையான் அறிந்தி லேனை உறுபிணி தீர்த்து ஆட்கொள்ள இன்அருள் பிள்ளை யாரைத் jªjid; ïiwt! என்றான். 867 2771. சீருடைப் பிள்ளை யாரும் சிறப்புடை அடியா ரோடும் காரினில் பொலிந்த கண்டத்து இறைவர்தாள் வணங்கிக் காதல் ஆர்அருள் பெற்றுப் போற்றி,. அங்கு நின்று அரிது நீங்கி ஏர் இயல் மடத்தின் உள்ளால் இனிது எழுந்தருளிப் புக்கார். ஏரியல் - கிளரும் அன்பு வாய்ந்த. 868 2772. நீடுசீர்த் தென்னர் கோனும் நேரியன் பாவை யாரும் மாடு சென்று இறைஞ்சி நோக்கி மாளிகை தன்னில் போகக் கூடிய மகிழ்ச்சி பொங்கக் கும்பிடும் விருப்பி னாலே நாடி அங்கு இருந்து தங்கள் நாதரைப் பாட லுற்றார். நேரியன் - சோழன். 869 2773. திருவிய மகத்தின் உள்ளும் திருநீல கண்டப் பாணர்க்கு அருளிய திறமும் போற்றி அவரொடும் அளவ ளாவித் தெருள்உடைத் தொண்டர் சூழத் திருத்தொண்டின் உண்மை நோக்கி இருள்கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே. திருஇயமகத்திலுள்ளும். 870 2774. பூழியன் மதுரை உள்ளார் புறத்துளார் அமணர் சேரும் பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆன எல்லாம் கீழ்உறப் பறித்துப் போக்கிக் கிளர்ஒளித் தூய்மை செய்தே வாழிஅப் பதிகள் எல்லாம் மங்கலம் பொலியச் செய்தார். மங்கலம் - சிவம்; சைவம் 871 2775. மீனவன் தேவி யாரும் குலச்சிறை யாரும் மிக்க ஞானசம் பந்தர் பாதம் நாள்தொறும் பணிந்து போற்ற ஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம்களித்து உறையும் நாளில். 872 கொச்சகக் கலி 2776. செய்தவத்தால் சிவபாத இருதயர்தாம் பெற்றுஎடுத்த வைதிகசூ ளாமணியை மாதவத்தோர் பெருவாழ்வை மைதிகழும் திருமிடற்றார் அருள்பெற்ற வான்பொருளை எய்தியபூம் புகலியிலே இருந்தநாள் மிக நினைந்தார். 873 2777. ஆனபுகழ்த் திருநாவுக் கரசர்பால் அவம்செய்த மானம்இலா அமணருடன் வாதுசெய்து வெல்வதற்கும் மீனவன் தன் நாடுஉய்ய வெண்ணீறு பெருக்குதற்கும் போனவர்பால் புகுந்தபடி அறிவன் எனப் புறப்படுவார். 874 2778. துடிஇடையாள் தன்னோடும் தோணியில் வீற்றிருந்த பிரான் அடிவணங்கி அலர்சண்பை அதன் நின்றும் வழிக்கொண்டு படியின்மிசை மிக்குஉளஆம் பரன்கோயில் பணிந்து ஏத்தி வடிநெடுவேல் மீனவன்தன் வளநாடு வந்து அணைந்தார். 875 2779. மாமறையோர் வளம் பதிகளிடைத் தங்கி வழிச் செல்வார் தேம்மருவு நறும்பைந்தார்த் தென்னவன் தன் திருமதுரை தாம்அணைந்து திருவாலவாய் அமர்ந்த தனிநாதன் பூ மருவும் சேவடிக் கீழ்ப்புக்கு ஆர்வத்தொடும் பணிந்தார். தே. . . . . . தார் - தேன்நிறைந்து நறுமணங் கமழும் பசிய மாலையை அணிந்த. 876 2780. அங்கணரைப் பணிந்துபோந்து அருகுஅணைந்தார் தமைவினவ இங்கு எம்மைக் கண்விடுத்த காழியார் இளஏறு தங்கும் இடம் திருநீற்றுத் தொண்டர்குழாம் சாரும் இடம் செங்கமலத் திருமடம் மற்று இது என்றே தெரிந்து உரைத்தார். கண்விடுத்த - கண்ணருளிய முன்னே அறியாமையால் குருட ராயிருந்தனர் என்பது. திருமகள் வாழும் மடம். 877 2781. செப்புதலும் அதுகேட்டுத் திருமடத்தைச் சென்றுஎய்த அப்பர் எழுந்தருளினார் எனக் கண்டோர் அடி வணங்கி ஒப்புஇல் புகழ்ப் பிள்ளையார் தமக்கு ஓகை உரைசெய்ய எப்பொழுது வந்தருளிற்று என்றுஎதிரே எழுந்தருள. உவகைச் செய்தி சொல்ல. 878 2782. சிவபாத இருதயர்தாம் முன்தொழுது சென்று அணையத் தவம்ஆன நெறிஅணையும் தாதையார் எதிர்தொழுதார் அவர்சார்வு கண்டருளித் திருத்தோணி அமர்ந்தருளிப் பவபாசம் அறுத்தவர்தம் பாதங்கள் நினைவுற்றார். சார்வு - வரவை. பவ பாசம் - பிறவித் தொடக்கை ஞான சம்பந்தரின் இயற்கைத் தந்தையார் சிவபெருமான் என்றபடி. 879 2783. இருந்தவத்தோர் அவர்முன்னே இணைமலர்க்கை குவித்தருளி அரும்தவத்தீர் எனைஅறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட பெருந்தகை எம்பெருமாட்டியுடன் இருந்ததே என்று பொருந்துபுகழ்ப் புகலியின்மேல் திருப்பதிகம் போற்றிசைத்தார் பிள்ளையார் இணை மலர்க்கை. . . . . 880 2784. மண்ணின் நல்ல என்று எடுத்து மனத்து எழுந்த பெருமகிழ்ச்சி உள்நிறைந்த காதலினால் கண்அருவி பாய்ந்துஒழுக அண்ணலார் தமைவினவித் திருப்பதிகம் அருள் செய்தார் தண்நறும் பூஞ்செங்கமலத் தாள் அணிந்த தமிழ்விரகர். 881 2785. திருப்பதிகம் திருக்கடைக்காப்புச் சாத்திச் சிறப்பின் மிகு விருப்பினால் அவர்தமக்கு விருந்துஅளித்து மேவும் நாள் அருப்பு உறுமெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும் பொருப்பு உறுகைச் சிலையார்சேர் பதிபிறவும் தொழப்போவார். அருப்புறும் - கிளைத்துப் பெருகும்; புளகாங்கிதங் கொள் ளும். பொருப்புறுகைச் சிலையார் - சிவபெருமான். 882 2786. ஆலின்கீழ் நால்வார்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானைக் காலம்பெற்று இனிதுஇறைஞ்சிக் கைதொழுது புறம் போந்தார் சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன்போத. கல்லாலின் கீழ்ச் சனகாதி நால்வருக்கும்; (சனகாதி நால்வர்; சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்). அகப் பொருளை அருளிப் புலவர்க்களித்தவனை; வேதத்தில் அறம் முதலிய பொருளை யருளி நூலாராய்ச்சியுடையார்க் களித்தவனை என்னலுமாம். 883 எண்சீர் விருத்தம் 2787. தேன் நிலவு பொழில் மதுரைப் புறத்துப் போந்த தென்னவனார் தேவியார் அமைச்சர் சிந்தை ஊன்நெகி ழும்படி அழிந்து அங்கு ஒழுகு கண்ணீர் பாய்ந்து இழிய உணர்வு இன்றி வீழக் கண்டே யான் உம்மைப் பிரியாத வண்ணம் இந்நாட்டு இறைவர் பதி எனைப் பலவும் பணிவீர் என்று ஞானம் உணர்வார் அருள அவரும் போத நம்பர் திருப் பரங்குன்றை நண்ணி னாரே. 884 2788. ஆறுஅணிந்தார் தமை வணங்கி அங்குப் போற்றி அணி ஆப்பனூர் அணைந்து பணிந்து பாடி நீறுஅணிந்த செல்வர்பதி பிறவும் சேர்ந்து நிலவுதிருப் பதிகங்கள் நிகழப் பாடி சேறு அணிந்த வயல் பழனக் கழனி சூழ்ந்த சிரபுரத்து வந்தருளும் செல்வர் செங்கண் ஏறு அணிந்த வெல்கொடியார் திருப்புத்தூரை எய்திறைஞ்சிச் சிலநாள் இருந்தார் அன்றே. 885 2789. பற்றார்தம் புரங்கள் மலைச் சிலையால் செற்ற பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து புற்று ஆரும் பணி பூண்ட புனிதனார் தம் பூவணத்தைப் புக்கு இறைஞ்சிப் புகழ்ந்து பாடிக் கற்றார்கள் தொழுது ஏத்தும் கானப் பேரும் கைதொழுது தமிழ் பாடிச் சுழியல் போற்றிக் குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டு ஏத்திக் கூற்று உதைத்தார் நெல்வேலி குறுகினாரே புற்றாரும் பணி - புற்றிலுள்ள பாம்பை ஆபரணமாக. 886 2790. புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப் புரிசடையார் திருப்பதிகள் பிறவும் சென்று நண்ணி இனிது அமர்ந்து அங்கு நயந்து பாடி நல்தொண்டருடன் நாளும் போற்றிச் செல்வார் விண்ணவரைச் செற்று உகந்தான் இலங்கை செற்ற மிக்க பெரும் பாதகத்தை நீக்க வேண்டித் திண்ணியபொன் சிலைத் தடக்கை இராமன் செய்த திரு இராமேச்சரத்தைச் சென்று சேர்ந்தார். தேவர்களை நெடுங்காலம் பகைத்த இராவணனையும் அவனது இலங்கையையும் அழித்த. . . . . 887 2791. செங்கண் மால் வழிபட்ட கோயில் நண்ணித் திருமுன்பு தாழ்ந்து எழுந்து தென்னனோடும் மங்கையர்க்கு நாயகியார் தாமும் மெய்ம்மை மந்திரியாரும் சூழ மணி நீள் வாயில் பொங்கி எழும் விருப்பினால் உடனே புக்குப் புடைவலம் கொண்டு உள் அணைவார் போற்றி செய்து பங்கயச் செங்கை குவித்துப் பணிந்து நின்று பாடினார் மன்னவனும் பரவி ஏத்த. 888 2792. சேதுவின் கண் செங்கண் மால் பூசை செய்த சிவபெருமான் தனைப் பாடிப் பணிந்துபோந்து காதலுடன் அந்நகரில் இனிது மேவிக் கண்ணுதலான் திருத்தொண்டர் ஆனார்க்குஎல்லாம் கோதுஇல் புகழ்ப் பாண்டிமா தேவியார் மெய்க் குலச்சிறையார் குறைவு அறுத்துப் போற்றிச் செல்ல நாதர்தமை நாள்தோறும் வணங்கி ஏத்தி நளிர்வேலைக் கரையில் நயந்து இருந்தார் அன்றே. நளிர் . . . . நயந்து - குளிர்ந்த கடற்கரையில் விரும்பி. 889 2793. அந்நகரில் அமர்ந்து அங்கண் இனிது மேவி ஆழி புடைசூழ்ந்து ஒலிக்கும் ஈழம் தன்னில் மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செங்கண் மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச் சென்னி மதிபுனை மாட மாதோட்டத்தில் திருக்கே தீச்சரத்து அண்ணல் செய்ய பாதம் உன்னி மிகப் பணிந்து எத்தி அன்பரோடும் உலவாத கிழி பெற்றார் உவகை உற்றார். ஆழி - கடல். ஈழம் தன்னில் - ஈழ நாட்டில்; இலங்கையில். உலவாத கிழிபெற்றார் - திருவாவடுதுறையில் வற்றாத பொன் முடிப்புப் பெற்றவராகிய திருஞானசம்பந்தர். 890 2794. அப்பதியைத் தொழுது வடதிசை மேல் செல்வார் அங்கை அனல் தரித்த பிரான் அமரும் கோயில் புக்கு இறைஞ்சிப் பலபதியும் தொழுது போற்றிப் புணரிபொருது அலைகரைவாய் ஒழியப் போந்தே செப்பு அரிய புகழ்த் திருவாடானை சேர்ந்து செந்தமிழ் மாலைகள் சாத்திச் சிவனார் மன்னும் ஒப்பு அரிய புனவாயில் போற்றி செய்து வணங்கினார் உலகுஉய்ய ஞானம் உண்டார். புணரிபொருது அலைகரைவாய் - கடலிலெழுந்து மோதும் அலைகளையுடைய கரையிடத்தை. 891 2795. பதிநிலவு பாண்டி நாடு அதனில் முக்கண் பரமனார் மகிழ்வு இடங்கள் பலவும் போற்றி விதிநிலவு வேதநூல் நெறியே ஆக்கி வெண்ணீற்றின் சார்வினால் மிக்குஉயர்ந்த கதிஅருளிக் காழிநகர் வாழவந்தார் கண்ணுதலான் திருத்தொண்டர் பலரும்சூழ மதிநிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார் பதிமணமேற் குடியில் வந்தார். 892 2796. அந்நகரில் இனிதுஅமர்வார் அருகு சூழ்ந்த பதிகளில் நீடு அங்கணர்தம் கோயில் தாழ்ந்து மன்னுதிருத் தொண்டருடன் மீண்டு சேர்ந்து மன்னவனும் மங்கையருக் கரசியாரும் கொன்நவில்வேல் குலச்சிறையார் தாமும் கூடிக் குரைகழல்கள் பணிந்துகுறை கொண்டு போற்றிச் சென்னிவளர் மதிஅணிந்தார் பாதம் போற்றிச் சிரபுரத்துச் செல்வர்இனிது இருந்த நாளில். அமர்வார் - பிள்ளையார். நீடு - எழுந்தருளியுள்ள. குரை கழல்கள் - ஒலிக்கின்ற வீரக் கழல்களை யணிந்த திருவடியை. குறை கொண்டு - குறைககளை முறையிட்டு. 893 2797. பொங்குபுனல் காவிரிநாடு அதனில் மீண்டு போதுதற்குத் திருவுள்ளம் ஆகப் போற்றும் மங்கையருக் கரசியார் தாமும் தென்னர் மன்னவனும் மந்திரியார் தாமும் கூட அங்கு அவர்தம் திருப்பாதம் பிரியல் ஆற்றாது உடன்போக ஒருப்படும் அவ்வளவு நோக்கி இங்கு நான் மொழிந்ததனுக்கு இசைந்தீர் ஆகில் ஈசர் சிவநெறி போற்றி இருப்பீர் என்று. உடன்படும் நிலையை நோக்கி. இருப்பீராக. 894 2798. சாலமிகத் தளர்வாரைத் தளரா வண்ணம் தகுவன மற்று அவர்க்கு அருளிச் செய்த பின்பு மேல்அவர்தம் பணி மறுக்க அவரும் அஞ்சி மீள்வதனுக்கு இசைந்து திருவடியின் வீழ்ந்து ஞாலம் உய்ய வந்தருளும் பிள்ளையாரைப் பிரியாத நண்பினொடும் தொழுது நின்றார் ஆலவிடம் உண்டவரை அடிகள் போற்ற அந்நாட்டை அகன்றுமீண்டு அணையச் செல்வார். 895 2799. பொன்னி வளம்தரு நாடு புகுந்து மிக்க பொருஇல்சீர்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும் பன்னகப் பூண்அணிந்தார் தம்கோயில் தோறும் பத்தருடன் பதியுள்ளோர் போற்றச் சென்று கன்னி மதில் திருக்களரும் போற்றிக் கண்டம் கறை அணிந்தார் பாதா ளீச்சரமும் பாடி முன்அணைந்த பதிபிறவும் பணிந்து போற்றி முள்ளி வாய்க்கரை அணைந்தார் முந்நூல் மார்பர். காவிரி வளந் தருஞ் சோழநாட்டில். பாம்பாபரணத்தைப் பூண்ட சிவபெருமான். கன்னி - அழியாத. கண்டத்தில் நீலமணிந்த பெருமான். 896 2800. மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி, மலர்ப்பிறங்கல் வண்டு இசைப்பச் சுமந்து பொங்கி, அலைபெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆறு பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம் நிலைபுரியும் ஓடக்கோல் நிலையாமை நீர்வாழ்நர் கரையின் கண்நிறுத்திப் போகக் கலைபயிலும் கவுணியர் கோன் அதனைக் கண்டுஅக் கரையின்கண் எழுந்தருளி நின்ற காலை. மலையில் வளரும் சந்தனத்தையும். . . . தள்ளிக் கொண்டு மலர்களாகிய மலைகளில். . . . . . ஆள்கள் போக்குவரவு செய்யா வண்ணம். . . . . நில்லாமையால் ஓடக்காரர்கள் ஓடங்களைக் கரைக்கண். . . . . . கலைசெறிந்த. . . . . . 897 2801. தேவர்பிரான் அமர்ந்த திருக்கொள்ளம் பூதூர் எதிர் தோன்றத் திருவுள்ளம் பணியச் செய்து மேவுதலால் ஓடங்கள் விடுவார் இன்றி ஒழிந்திடவும் மிக்க ஓர்விரைவால் சண்பைக் காவலனார் ஓடத்தின் கட்டு அவிழ்த்துக் கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி நாவலமே கோலாக அதன் மேல் நின்று நம்பர் தமைக் கொட்டம் என நவின்று பாட. 898 2802. உம்பர் உய்ய நஞ்சு உண்டார் அருளால் ஓடம் செலச்செல்ல உந்துதலால் ஊடு சென்று செம்பொன் நேர் சடையார்தம் கொள்ளம் பூதூர் தனைச்சேர அக்கரையில் சேர்ந்த பின்பு நம்பர் அவர் தமைவணங்க ஞானம் உண்ட பிள்ளையார் நல்தொண்டர் உடன் இழிந்து வம்பு அலரும் நறும் கொன்றை நயந்தார் கோயில் வாயிலின் முன் மகிழ்ச்சியொடு வந்து சார்ந்தார். 899 2803. நீள்நிலைக் கோபுரம் அதனை இறைஞ்சிப் புக்கு நிகர் இலாத் தொண்டருடன் நெருங்கச் சென்று வாள் நிலவு கோயிலினை வலம் கொண்டு எய்தி, மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று, தாணுவே! ஆற்றின் கண் ஓடம் உய்க்கும் தன்மையால் அருள்தந்த தலைவா! நாகப் பூணினாய்! களிற்றுரிவை போர்த்த முக்கண் புனிதனே! எனப் பணிந்து போற்றி செய்தார். 900 2804. போற்றி இசைத்துப் புறம் போந்து அங்கு உறையும் நாளில் பூழியின் முன் புன் சமயத்து அமணர் தம்மோடு ஏற்ற பெரு வாதின்கண் எரியின் வேவாப் பதிகம் உடை இறையவரை இறைஞ்ச வேண்டி ஆற்றவும் அங்கு அருள் பெற்றுப் போந்து முன்னம் அணைந்த பதிகளும் இறைஞ்சி அன்பர் சூழ நால் திசையும் பரவு திருநள்ளாறு எய்தி நாடுடை நாயகர் கோயில் நண்ணினாரே. 901 2805. நீடு திருத்தொண்டர் புடைசூழ அங்கண் நித்தில யானத்திடைநின்று இழிந்து சென்று பீடுடைய திருவாயில் பணிந்து புக்குப் பிறைஅணிந்த சென்னியார் மன்னும் கோயில் மாடுவலம் கொண்டு உள்ளால் மகிழ்ந்து புக்கு மலர்க் கரங்கள் குவித்து இறைஞ்சி வள்ளலாரைப் பாடக மெல் அடி எடுத்துப் பாடி நின்று பரவினார் கண் அருவி பரந்து பாய. சிவிகையினின்றும் இறங்கிச் சென்று, பீடு -பெருமை பாடக மெல்லடி - 786. குறிப்புப் பார்க்க. 902 2806. தென்னவர்கோன் முன் அமணர் செய்த வாதில் தீயின்கண் இடும்ஏடு பச்சை யாக்கி என் உள்ளத்துணை ஆகி ஆலவாயில் அமர்ந்திருந்தவாறு என்கொல் எந்தாய் என்று பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவிப் போந்து பண்பு இனிய தொண்டருடன் அங்கு வைகி மன்னுபுகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்பை வள்ளலார் நள்ளாறு வணங்கிச் செல்வார். 903 2807. சீர்நிலவு திருத் தெளிச் சேரியினைச் சேர்ந்து சிவபெருமான் தனைப் பரவிச் செல்லும்போது சார்வு அறியாச் சாக்கியர்தம் போதிமங்கை சார்தலும் மற்றுஅது அறிந்த சைவர் எல்லாம் ஆர்கலியின் கிளர்ச்சி எனச் சங்கு தாரை அளவு இறந்த பல் இயங்கள் முழக்கி ஆர்த்துப் பார் குலவு தனிக் காளம் சின்னம் எல்லாம் பரசமய கோளரி வந்தான் என்று ஊத. சாக்கியர் தம் - பௌத்தர்களுடைய. 904 2808. புல்லறிவின் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப் புகலியர் தம் புரவலனார் புகுந்து தங்கள் எல்லையினில் எழுந்தருளும் பொழுது தொண்டர் எடுத்த ஆர்ப்பு ஒலியாலும் எதிர்முன் சென்று மல்கி எழும் திருச் சின்ன ஒலிகளாலும் மனம்கொண்ட பொறாமையினால் மருண்டுதங்கள் கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி முதலான தேரர்க்கும் கனன்று சொன்னார். தேரர்க்கும் - பௌத்தர்கட்கும். 905 2809. மற்று அவர்கள் வெவ்வுரையும் பிள்ளையார்முன் வருசின்னப் பெருகு ஒலியும் மன்னும் தொண்டர் பொற்புடைய ஆர்ப்பு ஒலியும் செவியின் ஊடு புடைத்த நாராசம் எனப் புக்க போது செற்றம் மிகும் உள்ளத்துப் புத்தநந்தி செயிர்த்து எழுந்து தேரர்குழாம் சூழச்சென்று வெற்றி புனை சின்னங்கள் வாதில் எம்மை வென்று அன்றோ பிடிப்பது என வெகுண்டு சொன்னான். புடைத்த நாராசம் என - காய்ச்சி அடித்த இருப்புச் சலாகை போல. 906 2810. புத்தர் இனம் புடைசூழப் புத்தநந்தி பொரு இல் ஞானப் புனிதர் திருமுன்பு ஊதும் மெய்த்த விறல் சின்னங்கள் விலக்கும் காலை வெகுண்டு எழுந்த திருத்தொண்டர் வெறுத்து நோக்கி, இத்தகைய செயற்கு இவரைத் தடிதல் செய்யாது இது பொறுக்கில் தங்கள் நிலை ஏற்பர் என்று முத்துநிரைச் சிவிகையின் மேல் மணியை வந்து முறைபணிந்து புகுந்தபடி மொழிந்து நின்றார். மெய்த்த விறல் - உண்மையான வெற்றியையுடைய; போலிச் சின்னங்களல்ல என்றபடி. தடிதல் செய்யாது - இரு கூறுபடுத்தாது. தங்கள் நிலை ஏற்பர் - தங்கள் நிலை மேற்கொள்வர். 907 2811. வரும் இடத்தில் அழகு இது ஆம் நமக்கு வாதில் மற்று இவர் தம் பொருள் நிலைமை மறாதவண்ணம் பொரும் இடத்தில் அறிகின்றோம் புத்தநந்தி பொய்ம் மேற்கொள் எனப் புகலி வேந்தர் கூற, அருமுறை சொல் திருப்பதிகம் எழுதும் அன்பர் ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலே உரும் இடித்து விழப்புத் தன் உத்தமாங்கம் உருண்டு வீழ்க எனப் பொறா உரைமுன் விட்டார். மறாத வண்ணம் - மாறாதபடி பொரும் இடத்தில் வாதிக்கு மிடத்தில். அருமுறை எனச் சிலரும் வருமுறை எனச் சிலருங் கொள்வர். அரிய முறையில் பிள்ளையார் சொல்லும் என்றும், திருவருள் வழிவரும் முறையில் பிள்ளையார் சொல்லும் என்றும் முறையே பொருள் விரிக்க. பிள்ளையார் அருளிய திருப்பதி கங்களை எழுதிவந்த அன்பர் சம்பந்தசரணாலயர் என்றும், இவர் பிள்ளையாரின் நல்லம்மான் என்றும் சொல்லப்படுகிறார். உரும் இடித்து - இடி இடித்து. உத்தமாங்கம் - தலை. 908 2812. ஏறுஉயர்த்தார் சைவநெறி ஆணை உய்க்க எதிர்விலக்கும் இடையூற்றை எறிந்து நீக்கும் மாறுஇல் வலி மந்திரம் ஆம் அசனி போல வாய்மை உரைத் திருத்தொண்டர் வாக்கினாலே வேறு மொழிப் போர் ஏற்பான் வந்த புத்தன் மேனியையும் தலையினையும் வெவ்வேறு ஆகக் கூறுபட நூறி இடப்புத்தர் கூட்டம் குலைந்து ஓடி விழுந்து வெருக் கொண்டது அன்றே. சிவபெருமானது சைவநெறி ஆணையைச் செலுத்துதற்குத் தடை செய்யக் குறுக்கிட்ட இடையூற்றை அறவே களைந்து ஒழிக்கும் மாறில்லாத வலிமை பொருந்திய. அசனிபோல - இடி போல. வாய்மைஉரை, அத்திரவாக்கு; அடுத்த பாட்டிற் பார்க்க. திருத்தொண்டர் - சம்பந்த சரணாலயர். வேறு மொழி மாறுபட்ட மொழியால். நூறியிட - சிதைக்க. வெருக்கொண்டது - திடுக்கிட்டு நடுக்குற்றது. 909 2813. மற்று அவர்கள் நிலைமையையும் புத்தநந்தி வாக்கின் போர் ஏற்றவன்தன் தலையும் மெய்யும் அற்று விழ அத்திர வாக்கு அதனால் அன்பர் அறுத்ததுவும் கண்ட அரன் அடியார் எல்லாம் வெற்றி தரும் பிள்ளையார் தமக்குச் சென்று விண்ணப்பம் செய எதிர்ந்த விலக்கு நீங்க உற்றவிதி அதுவே ஆம் அரஎன்று எல்லாம் ஓதுக என அவ்ஒலி வான் உற்றது அன்றே. அத்திர வாக்கதனால் - அத்திரமாவன அஞ்செழுத்துமே என்னுந் திருவாக்கால். எதிர்ந்த விலக்கு - எதிர்த்து வந்த தடை. புத்தநந்தியைத் தலையறுத்த செயல் பிள்ளையார்க்குத் தெரியாமலே நிகழ்ந்தது. அஃது எதிர்பாராதவாறு நிகழ்ந்தமையான், உற்றவிதி அதுவேயாம் அர என்று எல்லாம் ஓதுக என்றார்; திருவருட் செயல் என்று அரகர என்று ஓதுமாறு கூறினாரென்க. 910 2814. அஞ்சி அகன்று ஓடிய அப்புத்தர் எல்லாம் அதிசயித்து மீண்டு உடன் அணைந்து கூடி வஞ்சனையோ இது தான் மற்று அவர்தம் சைவ வாய்மையோ என மருண்டு மனத்தில் கொள்வார் எஞ்சல் இல் மந்திர வாதம் அன்றி எம்மோடு எதிர்ந்து பொருள் பேசுவதற்கு இசைவது என்று தம் செயலில் மிக்குள்ள சாரிபுத் தன் தன்னையே முன் கொண்டு பின்னும் சார்ந்தார். எஞ்சலில் - குறைவில்லாத பொருளுண்மை பேசிவாதம் புரிதற்கு. 911 2815. அத்தன்மை கேட்டுஅருளிச் சண்பை வந்த அடலேறு திருவுள்ளத்து அழகு இது என்று, மெத்த மகிழ்ச்சியினோடும் விரைந்து சென்று வெண்தரளச் சிவிகையின் நின்று இழிந்து, வேறுஓர் சத்திர மண்டபத்தின் மிசை ஏறி, நீடு சைவருடன் எழுந்தருளி இருந்து, சாரும் புத்தர்களை அழைக்க எனத் திருமுன் நின்றார்; புகலி காவலர் ஏவல் போற்றிச் சென்றார். அடல் ஏறு - திருவருட்டுணையால் எதிர்த்தவர்களைச் சாய்க்குஞ் சிங்கமாகிய திருஞான சம்பந்தர் சத்திரத்திலுள்ள மண்ட பத்திலே. 912 2816. சென்றவர்கள் தேரர்குழாம் அணைந்து நீங்கள் செப்பி வரும் பொருள் நிலைமை தெரிக்க எங்கள் வென்றி மழ இளங்களிறு சண்பை யாளி வேதபாரகன் மும்மைத் தமிழின் வேந்தன் நன்று மகிழ்ந்து அழைக்கின்றான் ஈண்ட நீரும் நண்ணும் எனக் கூறுதலும் நன்மை சாராத் தன்தகைமைப் புத்தருடன் சாரிபுத்தன் சத்திர மண்டப முன்பு சார வந்தான். தேரர் குழாம் அணைந்து - புத்தர் கூட்டத்தை அடைந்து. 913 2817. அங்கு அணைந்து மண்டபத்துப் புத்தரோடும் பிள்ளையார் அருகு அணைய நின்ற போதில் எங்கும் நிகழ் திருச்சின்னம் தடுத்த புத்தன் இரும் சிரத்தைப் பொடி ஆக்கும் எதிர்இல் அன்பர் பொங்கு புகழ்ப் புகலி காவல்தம் பாதம் போற்றி அருளால் சாரி புத்தன் தன்னை உங்கள் தலைவனும் பொருளும் உரைக்க என்ன உற்ற வாதினை மேற்கொண்டு உரைசெய்கின்றான். எதிரில்லாத அன்பராகிய சம்பந்த சரணாலயர். பிள்ளையார் அருளால். 914 2818. கற்பங்கள் அனைத்தினிலும் பிறந்து வீந்து கதிமாறும் கணபங்க இயல்பு தன்னில் பொற்புடைய தானமே தவமே தன்மை புரிந்த நிலை யோகமே பொருந்தச் செய்ய உற்பவிக்கும் ஒழிவு இன்றி உரைத்த ஞானத்து ஒழியாத பேர் இன்ப முத்தி பெற்றான் பற்பலரும் பிழைத்து உய்ய அறம் முன் சொன்ன பான்மையான் யாங்கள் தொழும் பரமன் என்றான். கற்ப காலங்களிலெல்லாம். கற்பம் - காலத்தின் பேரெல்லை; 432 கோடி வருஷம். வீந்து - இறந்து. கதி - பதவி; பிறப்பு வகையுமாம். கணபங்கம் - கணத்துக்கு கணம் கெடல். கணம் நூறு தாமரை இதழை அடுக்கி ஊசியினால் குத்தினால் எட்டு இதழ் அறும் எல்லை; உயிர்கள் உய்தற் பொருட்டுக் கற்ப காலங்களிலெல்லாம் பிறந்து இறந்து கதிமாறும் கணபங்க நியாயங் கூறும் பௌத்தத்தில் என்றபடி. யோகம் எல்லாத் தொடர்புகளினின்றும் நீங்கித் தனித்து ஒன்றுவதாகலின் தன்மை புரிந்த யோகமே என்றார். தானமே தவமே யோகமே முதலாகச் சொல்லப்பட்ட பத்து நற்குணங்களில் ஈடுபட அதனால் உற்பவிக்கும் (தோன்றும்). 915 2819. என்றுஉரைத்த சாரிபுத்தன் எதிர்வந்து ஏற்ற இருந்தவத்துப் பெருந்தன்மை அன்பர் தாமும் நன்று உமது தலைவன்தான் பெற்றான் என்று நாட்டுகின்ற முத்திதான் யாவது என்றார் நின்ற உருவேதனையே குறிப்புச் செய்கை நேர்கின்ற ஞானம் என நிகழ்ந்த ஐந்தும் ஒன்றிய கந்தத்து அவிவே முத்தி என்ன உரை செய்தான் பிடகத்தின் உணர்வு மிக்கான். ஏற்ற - எதிர்த்த. உமது தலைவன் பெற்றதாகச் சொல்லப்படும் முத்தி எது என்று கேட்டனர். . . . . . . . ஐந்துஞ் சேர்ந்த கந்தத்தின் அழிவே முத்தி என்று கூறினான். உரு, வேதனை (நுகர்ச்சி), குறிப்பு, செய்கை (பாவனை), ஞானம் ஆகிய இவை ஐந்தும் பஞ்ச கந்த மெனப்படும். உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை உள்ள அறிவிவை ஐங்கந்தமாவன - மணிமேகலை: 30. பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை 189, 190. ஓங்கிய உருவ மோடும் வேதனைக் குறிப்பினோடும் - தாங்கு பாவனைவிஞ் ஞானந்தாமிவை ஐந்துங்கூடி. . . . . என வரூஉம் சிவஞானசித்தியார் பரபக்கம், சௌந்திராந்திகன் மதம் - 30-ம் பாட்டையும். அதன் உரையையும் பார்க்க. அவ்வுரைக் குறிப்புக் கணுள்ள பஞ்சகந்த விளக்கம் வருமாறு: இனி, உருவ மாவதெட்டு. அவை பூதவுரு நாலு; உபாதானவுரு நாலு. mit tUkhW - ãUâÉ., அப்பு, தேயு, வாயு வெனும் நாலும் பூதவுரு; வலி, கந்தம், இரதம், வன்னமெனும் நாலும் உபாதான வுரு; ஆக 8. வேதனையாவது மூன்று. அவை வருமாறு - குசலா வேதனை (சுக அறிவு), அகுசலா வேதனை (துக்க அறிவு), குசலா குசலா வேதனை (சுக துக்க அறிவு) ஆக 3. குறிப்பாவது ஆறு - சோத்திரம், துவக்கு, சக்ஷு, சிங்குவை, ஆக்கிராணம் (மெய், வாய், கண், மூக்கு, செவி), மனம் ஆக 6. பாவனை இருபது - தீக்குணம் 10; நற்குணம் 10. தீக் குணங்களாவன - பொய் சொல்லல், கோட்சொல்லல், கோபித்துச் சொல்லல், பயனில சொல்லல் என வாக்கின் குணம் 4. களவிற்குப் போகுதல், வறிதே தொழில்செய்தல், கொலை செய்தல் எனக் காயத்தின் குணம் 3; கொலை நினைக்கை. காமப் பற்று, ஆசை என மனத்தின் குணம் 3; ஆக - 10 நற்குணங்களாவன - மெய்யுரை, நல்வார்த்தை, இனியன கூறல், பயன்படுசொல் என வாக்கின் குணம் 4; பள்ளி வலம்வரல், தவம்புரிதல், தானஞ் செய்தல் எனக் காயத்தின் குணம் 3; அருள் நினைவு, ஆசையறுத்தல், தவப்பற்று என மனத்தின் குணம் 3; ஆக 10. ஆகப் பாவனை - 20. இவை, மானச வாசிக காயங்களான் வருவனவாம். விஞ்ஞானம் ஆறு. அவையாவன - சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம், சித்தம், ஆக - 6. ஆகப் பஞ்சகந்த பேதம் 43, இதற்கு அவன் வசனம் - எட்டிவை யுருவ மூன்று வேதனை யாறு ஞானம் - ஒட்டிய குறிப்போ ராறு செய்கையும் இருபதாகக் கட்டிய பஞ்ச கந்தங் கணத்தினிற் பங்க மாகுந் - தொட்ட நாற்பத்து மூன்றுஞ் சுகதநூற்றுணிவு தானே என்பதாம். பிடகம் - பௌத்தாகமம்; இது புத்த தர்ம சங்கம் என்னும் முத்திற மணியை (புத்தம் சரணங் கச்சாமி, தருமம் சரணங் கச்சாமி, சங்கம் சரணங் கச்சாமி - மும்மணி)க் கூடைபோன்று தாங்குவதால் பிடகம் எனப்பட்டது; (பிடகம் - கூடை); பிடகம் மூவகைப்படும்; அவை வினயபிடகம், சூத்திரபிடகம், அபிதர்மபிடகம் என்பன. இவை திரிபிடகம் என்றும் பிடகத் திரயம் என்றும் வழங்கப்படும். 916 2820. ஆங்கு அவன்தான் உரைத்தமொழி கேட்ட அன்பர் அதனை அனுவாதம் செய்து அவனை நோக்கித் தாங்கிய ஞானத்துடன் ஆம் கந்தம் ஐந்தும் தாம் வீந்து கெட்டனவேல் தலைவன் தானும் ஈங்கு உளன் என்று அவனுக்குவிடயம் ஆக யாவையும் முன் இயற்றுதற்கு விகாரமே செய்து ஓங்கு வடிவு அமைத்து விழவு எடுக்கும் பூசை கொள்வார் ஆர்? உரைக்க என உரைக்கல் உற்றான். அனுவாதம் - முன் குறித்தபொருளை வேறொன்று கூறுதற் காகத் திருப்பிச் சொல்வது; எதிரியைப் பார்த்து இவ்விவ்வாறு கூறினை என்று அவன் கூற்றைத் திருப்பிச் சொல்லி மேலே வாதிப்பது. பஞ்சகந்தத்தின் கூட்டத்தினின்றும் விளையும் ஒன்றே உள்ளமென்றும் உணர்வென்றும் உயிரென்றும் பௌத்தம் கூறுகிறது. பஞ்சகந்த அழிவே முத்தி என்றும் அச்சமயம் சொல்கிறது. அங்ஙனமாயின் முத்தி இன்பத்தை அனுபவிப்பது எது என்னுங் கேள்வி எழுவதாகிறது. இதையொட்டியே சம்பந்த சரணாலயர் சாரிபுத்தனை நோக்கி, பஞ்சகந்தத்தின் அழிவே முத்தியாயின், உங்கள் தலைவனுக்கு இருப்பு எங்கே? பஞ்சகந்தக் கூட்டம் குலைந்ததும், உங்கள் தலைவனுக்குப் பொருள்கள் எங்ஙனம் விஷயமாகும்? முன்போல அவனுக்கு உடல் முதலிய அமைத்து விழா பூசை முதலியன செய்வதென்னை? இச்செயல் விகாரமன்றோ என்று கேட்டாரென்க. 917 2821. கந்தம் ஆம் வினை உடம்பு நீங்கி எம் கோன் கலந்துளன் முத்தியில் என்றான் என்னக் காணும் இந்திரியங் கண் முதல் ஆம் கரணம் தானும் இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை என்றார். முந்தை அறிவு இலன் ஆகி உறங்கினானை நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு வந்த வினைப் பயன் போல வழிபட்டார்க்கும் வரும் அன்றோ நன்மை என மறுத்துச் சொன்னான். என்றான் - சாரிபுத்தன் கூறினான். என்ன - அவன் அவ்வாறு சொல்ல. காணும் இந்திரியங்களாகிய கண் முதலான கரணங்கள் இல்லை என்றால் உணர்ச்சி யேது என்றபடி. முந்தையறிவு - பழைய உணர்வு. உறங்குவோனுக்கு முன்னை உணர்வு இல்லாதிருத்தல் இயல்பு. முந்தையறிவின்றி உறங்குவோனை நிந்தித்து . . . . போல. . . . . .எந்தலைவனை வழிபட்டார்க்கும் நன்மை வருமன்றோ. . . . . 918 2822. சொன்ன உரை கேட்டருளி அன்பர் தாமும் தொடர்ந்த வழிபாடு பல கொள்கின்றானுக்கு அன்னவற்றின் உடன்பாடும் எதிர்வும் இல்லை ஆனபோது அவன் பெறுதல் இல்லை என்றார். முன் அவற்றில் உடன்பாடும் எதிர்வும் இன்றி முறுகு துயில் உற்றானை முனிந்து கொன்றால் இன் உயிர் போய்க் கொலை ஆகி முடிந்தது அன்றோ இப்படியால் எம் இறைவற்கு எய்தும் என்றான். உடன்பாடும் எதிர்வும் - விருப்பும் வெறுப்பும் பூசிப்போன் அல்லது பூசிக்கப்படுவோன் ஒன்றையும் பெறுதல் இல்லை என்றார். முறுகு துயில் - மிக்க துயில். முன்னுணர்வின்றி விருப்பு வெறுப்பின்றி உறங்குவோனை (ஒருவன்) கோபித்துக் கொன்றால், அது கொலையாகு மன்றோ? அதேபோல எம்மிறைவர்க்குச் செய்யப்படும் வழிபாட்டின் பயனுமாகும் என்றான். கொன்றவனுக்குக் கொலைப் பாவம் சூழ்வதுபோல வழிபடுவோன் செயலைப் பொறுத்தே பயன் விளையும் என்றபடி. 919 2823. இப்படியால் எய்தும் என இசைத்து நீ இங்கு எடுத்துக் காட்டிய துயிலும் இயல்பினான் போல் மெய்ப்படிய கரணங்கள் உயிர்தாம் இங்கு வேண்டுதியால் நும்இறைவற்கு ஆன போது செப்பிய அக்கந்தத்தின் விளைவு இன்று ஆகித் திரிவு இல்லா முத்தியில்சென்று இலனும் ஆனான் அப்படிஅக் கந்தத்துள் அறிவும் கெட்டால் அம்முத்தியுடன் இன்பம் அணையாது என்றார். பஞ்சகந்த கூட்டத்தால் உணர்வு உண்டாகிறதென்பதும், அவைகளின் அழிவு முத்தி என்பதும் பௌத்தர் கொள்கை. இதை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ந்த வாதத்தில், பஞ்சகந்த அழிவே முத்தியெனில், விழா பூசை கொள்வோன் யாவன் என்னுங் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உறங்குவோன் இயல்பு எடுத்துக் காட்டப் பட்டது. இதற்குச் சம்பந்த சரணாலயர் உறங்கும் இயல்பினான் போல் எனில், உடம்பிலுள்ள கரணங்களையும் உயிரையும் இங்கே விரும்புகின்றாய். உம் இறைவனுக்கு அக்கரணமும் உயிரும் ஆகிய போது. சொல்லப்பட்ட பஞ்சகந்தத்தின் விளைவு ஏது? அஃது இல்லாததாய் முடிகிறது; முத்தியும் உம் இறைவன் அடைந்தில னாகிறான். உமது கூற்றுப்படி பஞ்சகந்தத்தின் குலைவால் உணர்வும் அழிந்தால் உம் இறைவன் முத்தி இன்பத்தை அடையாதவ னாகிறான் என்றார். 2824. அவ்உரை கேட்டு எதிர்மாற்றம் அறைவது இன்றி அணைந்துளன் அம்முத்தி எனும் அதுவும் பாழாம் கவ்வையில் நின்றவனை எதிர்நோக்கி ஞானக் கடல் அமுதம் அனையவர் தம் காதல் அன்பர் பொய் வகையே முத்தியினில் போனான் முன்பே பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய்; எவ்வகையால் அவன் எல்லாம் உணர்ந்தது ஈதும் இல்லது உரைப்பாய் எனினும் ஏற்போம் என்றார். அணைந்துளன் அம். . . . . . . . பாழாம் - நம் இறைவன் முத்தி யடைந்துள்ளான் என்பதும் பாழாயிற்று என்று. கவ்வையில் நின்றவனை - வருத்தத்தோடு நின்ற சாரிபுத்தனை. ஞான . . . . . அன்பர் - ஞானசம்பந்தரின் அடியவராகிய சம்பந்த சரணாலயர். முன்பே - முத்திக்கு முன்னரே. ஈதும் இல்லது - இதுவும் ஒப்பக் கூடாதது. உரைப்பாய் எனினும் - அதைத் தக்க ஏதுக்களால் நிறுவிக் கூறுவாயானாலும். 921 2825. உணர்வு பொதுச் சிறப்பு என்ன இரண்டின் முன்னது உள ஆன மரப்பொதுமை உணர்த்தல் ஏனைப் புணர் சிறப்பு மரங்களில் வைத்து இன்னது என்றல் இப்படியால் வரம்பு இல்லாப் பொருள்கள் எல்லாம் கொணரும் விறகினைக் குவை செய்திடினும் வேறு குறைத்தவற்றைத் தனித்தனியே இடினும் வெந்தீத் துணர் கதுவிச் சுடவல்லவாறு போலத் தொகுத்தும் விரித்தும் தெரிக்கும் தொல்லோன் என்றான். உணர்வு பொது என்றும் சிறப்பென்றும் இரண்டுவகை. வனத்தைப் பொதுவாக உணர்வது பொது உணர்வின் பாற்பட்டது. அவ்வனத்துள்ள மரங்களை இன்ன இன்ன என்று உணர்வது சிறப் புணர்வின் பாற்பட்டது. விறகைக் குவியலாக வைப்பினும் தனியாக வைப்பினும் வெந்தீக் கொழுந்து பற்றிச் சுடவல்லவாறுபோல. 922 2826. எடுத்து உரைத்த புத்தன் எதிர் இயம்பும் அன்பர் எரி உணர்வுக்கு எடுத்துக் காட்டு ஆகச் சொன்னாய் அடுத்த உணர்வு உருவுடையது அன்று சொன்ன அனல் வடிவிற்று ஆம் அதுவும் அறிதி நும்கோன் தொடுத்த நிகழ் காலமே அன்றி ஏனைத் தொடர்ந்த இரு காலமும் தொக்கு அறியும் ஆகில் கடுத்த எரி நிகழ்காலத்து இட்டது அல்லால் காணாத காலத்துக் கதுவாது என்றார். எரியை உணர்வுக்குத் திருஷ்டாந்தமாகச் சொன்னாய். உணர்வு உருவுடையதன்று; அனல் உருவுடையது. தொக்கு - கலந்து. கடுத்த - உவமையாகக் காட்டப்பட்ட; வெம்மையுடைய எனினுமாம். காணாத காலம் - இறந்த காலம், எதிர் காலம். கதுவாது - பற்றிச் சுடாது. 923 2827. ஆதலினால் உன் இறைவன் பொருள்கள் எல்லாம் அறிந்தது நும் முத்தி போல் ஆயிற்று அன்றே ஏதம் ஆம் இவ் அறிவால் உரைத்த நூலும் என்று அவனுக்கு ஏற்குமாறு அருளிச் செய்ய வாதம் மாறு ஒன்று இன்றித் தோற்றான் புத்தன் மற்று அவனை வென்று அருளிப் புகலி மன்னர் பாத தாமரை பணிந்தார் அன்பர் தங்கள் பான்மை அழி புத்தர்களும் பணிந்து வீழ்ந்தார். முத்திபோல் பாழயிற்று என்றபடி இவ்வறிவால் உரைத்த நூலும் (பிடகமும்) ஏதமாம் (குற்றமாம்). 924 2828. புந்தியினால் அவர் உரைத்த பொருளின் தன்மை பொருள் அன்று ஆம்படி அன்பர் பொருந்தக்கூற மந்த உணர்வு உடையவரை நோக்கிச் சைவம் அல்லாது மற்றொன்றும் இல்லை என்றே அந்தம் இல் சீர் மறைகள் ஆகமங்கள் ஏனை அகில கலைப் பொருள் உணர்ந்தார் அருளிச் செய்யச் சிந்தையினில் அதுதெளிந்து புத்தர் சண்பைத் திருமறையோர் சேவடிக்கீழ்ச் சென்று தாழ்ந்தார். புத்தியினால் புத்தர்கள் உரைத்த. 925 2829. அன்று அவர்க்குக் கவுணியர்கோன் கருணை நோக்கம் அணைதலினால் அறிவு இன்மை அகன்று நீங்கி முன்தொழுது விழுந்துஎழுந்து சைவர் ஆனார் முகைமலர் மாரியின் வெள்ளம் பொழிந்தது எங்கும் நின்றனவும் சரிப்பனவும் சைவமே ஆம் நிலைமை அவர்க்கு அருள் செய்து சண்பை வேந்தர் சென்று சிவனார் பதிகள் பணிய வேண்டித் திருக்கடவூர் அதன்மருங்கு சேர வந்தார். நின்றனவும் - அசரமும். சரிப்பனவும் - சரமும்; தாவில் சரா சரங்களெலாஞ் சிவம்பெருக்கும் பிள்ளையார். . . . . . இப்புராணம்: 26. 926 கொச்சகக் கலி 2830. அந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப் புக்கருளிக் கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரைகழல்கள் பணிந்து ஏத்தி மன்னி அமர்ந்து உறையும் நாள் வாகீச மாமுனிவர் எந்நகரில் எழுந்தருளிற்று என்று அடியார் தமை வினவ. 927 2831. அங்கு அவரும் அடிபோற்றி ஆண்ட அரசு எழுந்தருளிப் பொங்குபுனல் பூந்துருத்தி நகரின்கண் போற்றி இசைத்துத் தங்குதிருத் தொண்டுசெயும் மகிழ்ச்சியினால் சார்ந்தருளி எங்கும் நிகழ்ந்திடஇருந்த படிஎல்லாம் இயம்பினார். எங்கும் தொண்டின் பெருமை நிகழ்ந்திட. 928 2832. அப்பரிசு அங்குஅவர் மொழிய ஆண்ட அரசினைக் காணும் ஒப்புஅரிய பெருவிருப்பு மிக்கு ஓங்க ஒளி பெருகு மைப்பொருவு கறைக்கண்டர் கழல் வணங்கி அருள்பெற்றுச் செப்பு அரிய புகழ்ப்புகலிப் பிள்ளையார் செல்கின்றார். மையொத்த நீலகண்டராகிய சிவபெருமான். 929 2833. பூவிரியும் தடம்சோலை புடை பரப்பப்புனல் பரக்கும் காவிரியின் தென்கரைபோய்க் கண்ணுதலார் மகிழ்ந்தஇடம் மேவிஇனிது அமர்ந்துஇறைஞ்சி விருப்புறுமெய்த் தொண்டரொடு நாவரசர் உழைச்சண்பை நகர் அரசர் நண்ணுவார். நாவரசர் உழை - திருநாவுக்கரசரிடத்து 930 2834. அந்தணர்சூ ளாமணியார் பூந்துருத்திக்கு அணித்து ஆக வந்தருளும் பெருவார்த்தை வாகீசர் கேட்டருளி நம்தமை ஆளுடையவரை நாம்எதிர் சென்று இறைஞ்சுவது முந்தைவினைப் பயன் என்று முகம் மலர அகம் மலர்வார். 931 2835. எதிர்சென்று பணிவன் என எழுகின்ற பெருவிருப்பால் நதி தங்கு சடைமுடியார் நல்பதங்கள் தொழுது அந்தப் பதிநின்றும் புறப்பட்டுப் பரசமயம் சிதைத்தவர்பால் முதிர்கின்ற பெருந்தவத்தோர் முன்எய்தவந்து அணைந்தார். 932 2836. திருச்சின்னம் பணிமாறக் கேட்டநால் திசைஉள்ளோர் பெருக்கின்ற ஆர்வத்தால் பிள்ளையார் தமைச்சூழ்ந்த நெருக்கின்இடை அவர்காணா வகைநிலத்துப் பணிந்துஉள்ளம் உருக்கிஎழும் மனம்பொங்கத் தொண்டர்குழாத் துடன்அணைந்தார். 933 2837. வந்துஅணைந்த வாகீசர் வண்புகலி வாழ்வேந்தர் சந்தமணிச் சிவிகையினைத் தாங்குவார் உடன்தாங்கிச் சிந்தைகளிப் புறவந்தார் திருஞானசம்பந்தர் புந்தியினில் வேறுஒன்று நிகழ்ந்திடமுன் புகல்கின்றார். 934 2838. அப்பர் தாம் எங்குற்றார் இப்பொழுது என்று அருள்செய்யச் செப்புஅரிய புகழ்த்திரு நாவுக்கரசர் செப்புவார் ஒப்பு அரிய தவம்செய்தேன் ஆதலினால் உம்அடிகள் இப்பொழுது தாங்கிவரப் பெற்று உய்ந்தேன் யான் என்றார். 935 2839. அவ்வார்த்தை கேட்டு அஞ்சி அவனியின்மேல் இழிந்து அருளி இவ்வாறு செய்தருளிற்று என்ஆம் என்று இறைஞ்சுதலும் செவ்வாறு மொழி நாவர் திருஞான சம்பந்தர்க்கு எவ்வாறு செயத்தகுவது என்று எதிரே இறைஞ்சினார். செவ்வாறு மொழிநாவர் - செம்மை நெறியை உலகுக்கு அறிவுறுத்தும் நாவுக்கரசர். திருஞானசம்பந்தர் மாட்டுள்ள அன்பை எவ்வழியில் காட்டுவது என்றபடி; சிவிகை தாங்கும் வழி அப்பர் தமது அன்பைப் புலப்படுத்தினாரென்க. 936 2840. சூழ்ந்துமிடைந்து ஆருகுஅணையும் தொண்டர்எல்லாம் அதுகண்டு தாழ்ந்துநிலம் உறவணங்கி எழுந்துதலை கைகுவித்து வாழ்ந்துமனக் களிப்பினராய் மற்றுஇவரை வணங்கப்பெற்று ஆழ்ந்தபிறப்பு உய்ந்தோம் என்று அண்டம்எலாம் உற ஆர்த்தார் 937 2841. திருஞான சம்பந்தர் திருநாவுக் கரசர்தமைப் பெருகு ஆர்வத் தொடும் அணைந்து தழீஇக்கொள்ளப் பிள்ளையார் மருஆரும் மலர்அடிகள் வணங்கிஉடன் வந்துஅணைந்தார் பொருஆரும் புனல் சடையார் மகிழ்ந்ததிருப் பூந்துருத்தி. மருஆரும் - மணம் நிறைந்த. பொருஆரும் புனல் - அலை மோதுதலையுடைய கங்கையணிந்த. 938 2842. அன்பர்குழாத் தொடும்செல்வார் ஆன்ஏற்றார் மகிழ்கோயில் முன்பு அணித்தா கச்சென்று கோபுரத்தை முன்இறைஞ்சித் துன்பம் இலாத் திருத்தொண்டர் உடன்தொழுது புக்கருளி என்புஉருக வலம் கொண்டு பணிந்துஏத்தி இறைஞ்சினார். ஆன்ஏற்றார் - இடபாரூடராகிய சிவபெருமான். 939 2843. பொய்இலா ரைப்பணிந்து போற்றியே புறத்து அணைவார் செய்யசடையார் கோயில் திருவாயில் முன்ஆக மைஅறுசீர்த் தொண்டர்குழாம் வந்துபுடை சூழஉலகு உய்யவரு வார்தங்கள் உடன்மகிழ்ந்து அங்குஇனிது இருந்தார். பொய்யிலியாரை - சிவபெருமானை. மை - மலத்தை; அழுக்கை. 940 கலிவிருத்தம் 2844. வாக்கின் தனிமன்னர் வண்புகலி வேந்தர்தமைப் போக்கும்வரவும் வினவப் புகுந்ததுஎல்லாம் தூக்கின் தமிழ்விரகர் சொல்இறந்த ஞானமறை தேக்கும் திருவாயால் செப்பி அருள்செய்தார். தூக்கின் - இசையினையுடைய (செந்தூக்கு முதலியன) 941 2845. காழியினில் வந்த கவுணியர்தம் போர்ஏற்றை ஆழிமிசைக் கல்மிதப்பில் வந்தார் அடிவணங்கி வாழி திருத்தொண்டு என்னும் வான்பயிர்தான் ஓங்குதற்குச் சூழும் பெருவேலி ஆனீர் எனத் தொழுதார். 942 2846. பிள்ளையார் தாமும் அவர் முன்தொழுது பேர்அன்பின் வெள்ளம் அனையபுகழ் மானியார் மேன்மையையும் கொள்ளும் பெருமைக் குலச்சிறையார் தொண்டினையும் உள்ள பரிசுஎல்லாம் மொழிந்துஅங்கு வந்திருந்தார். 943 2847. தென்னற்கு உயிரோடு நீறுஅளித்து செங்கமலத்து அன்னம் அனையார்க்கும் அமைச்சருக்கும் அன்பு அருளி துன்னும் நெறி வைதிகத்தின் தூநெறியே ஆக்குதலால் மன்னுபுகழ் வாகீசர் கேட்டு மனம் மகிழ்ந்தார். 944 2848. சொல்லின் பெருவேந்தர் தொண்டைவள நாடு எய்தி மல்கு புகழ்க்காஞ்சி ஏகாம்பரம் மன்னும் செல்வர் கழல்பணிந்து சென்றதுஎல்லாம் செப்புதலும் புல்குநூல் மார்பரும்போய்ப் போற்ற மனம் புரிந்தார். 945 2849. அங்கணரைப் போற்றி எழுந்து ஆண்ட அரசுஅமர்ந்த பொங்கு திருமடத்தில் புக்கு அங்குஇனிது அமர்ந்து திங்கள் பகவு அணியும் சென்னியார் சேவடிக் கீழ்த் தங்கு மனத்தோடு தாம் பரவிச் செல்லும் நாள். திங்கட்பகவு - பிறை. 946 2850. வாகீச மாமுனிவர் மன்னுதிரு ஆலவாய் நாகம் அரைக்கு அசைத்த நம்பர்கழல் வணங்கப் போகும் பெருவிருப்புப் பொங்கப் புகலியின் மேல் ஏகும் பெருங்காதல் பிள்ளையார் ஏற்று எழுவார். பிள்ளையார் சீர்காழியினிடம் உதிக்கும் பெருங்காதல் மேற் கொண்டு எழுவாரானார். 947 2851. பூந்துருத்தி மேவும் புனிதர்தமைப் புக்குஇறைஞ்சிப் போந்து திருவாயில் புறத்து அணைந்து நாவினுக்கு வேந்தர் திருவுள்ளம் மேவவிடை கொண்டருளி ஏந்தலார் எண்இறந்த தொண்டருடன் ஏகினார். ஏந்தலார் - பிள்ளையார். 948 2852. மாடு புனல் பொன்னி இழிந்து வடகரையில் நீடு திரு நெய்த்தானம் ஐயாறு சேர்ந்து இறைஞ்சிப் பாடு தமிழ் மாலைகளும் சாத்திப் பரவிப் போய் ஆடல் புரிந்தார் திருப்பழனம் சென்று அணைந்தார். 949 2853. செங்கண் விடையார் திருப்பழனம் சேர்ந்துஇறைஞ்சிப் பொங்கிய காதலின்முன் போற்றும் பதிபிறவும் தங்கிப் போய்ச் சண்பைநகர் சார்ந்தார் தனிப்பொருப்பில் மங்கை திருமுலைப்பால் உண்டருளும் வள்ளலார். பொருப்பின் மங்கை - உமையம்மையாரின். 950 2854. தென்னாட்டு அமண்மாசு அறுத்துத் திருநீறே அந்நாடு போற்றுவித்தார் வந்துஅணையும் வார்த்தைகேட்டு எந்நாள் பணிவது என ஏற்று எழுந்த மாமறையோர் முன் ஆக வேதம் முழங்க எதிர் கொண்டார். 951 அறுசீர் விருத்தம் 2855. போதம் நீடுமா மறையவர் எதிர்கொளப் புகலி காவலரும் தம் சீதமுத்து அணிச் சிவிகைநின்று இழிந்துஎதிர் செல்பவர் திருத்தோணி நாதர்கோயில் முன் தோன்றிட நகைமலர்க்கரம் குவித்து இறைஞ்சிப்போய் ஓத நீரின்மேல் ஓங்கு கோ யிலின்மணிக் கோபுரம் சென்று உற்றார். போதம் நீடும் - ஞானம்மிக்க. நகை - ஒளிபொருந்திய. ஓத நீரின் மேல் ஓங்கு கோயிலின் - (பிரளயத்திலும்) கடல்நீர் மீது மிதக்கும் தோணியாகிய கோயிலின். 952 2856. அங்குஅம் மாநிலத்து எட்டுஉற வணங்கிப் புக்கு அஞ்சலி முடிஏறப் பொங்கு காதலின் புடைவலம் கொண்டுமுன் பணிந்துபோற்று எடுத்து ஓதித் துங்கநீள் பெருந்தோணி ஆம் கோயிலை அருளினால் தொழுது ஏறி மங்கையோடு உடன் வீற்றிருந்து அருளினார் மலர்க்கழல் பணிவுற்றார். அஷ்டாங்க நமகாரஞ் செய்து. 953 2857. முற்றும் மெய்எலாம் புளகங்கள் முகிழ்த்துஎழ முகந்துகண் களிகூரப் பற்றும் உள்ளம் உள் அலைத்து எழும் ஆனந்தம் பொழிதரப் பணிந்து ஏத்தி உற்றுமை சேர்வது எனும் திரு வியமகம் உவகையில் எடுத்து ஓதி வெற்றியாக மீனவன் அவை எதிர்நதி மிசைவரு கரன் என்பார். உடலெலாம் மயிர்ச் செறிய; கண்கள் திருவருட் கோலத்தை முகந்து களிகூர, கரன் - அபயாத்தத்தை யுடையவனே. 954 2858. சீரின் மல்கிய திருப்பதி கத்தினில் திருக்கடைக் காப்பு ஏற்றி வாரின் மல்கிய வனமுலை யாளுடன் மன்னினார் தமைப் போற்றி ஆரும்இன் அருள் பெற்று மீண்டு அணைபவர் அங்கையால் தொழுது ஏத்தி ஏரின் மல்கிய கோயில் முன் பணிந்து போந்து இறைஞ்சினர் மணிவாயில். 955 2859. தாதையாரும் அங்கு உடன்பணிந்து அணைந்திடச் சண்பையார் தனி ஏறு மூதுஎயில் திருவாயிலைத் தொழுது போய் முனை மலர்க் குழலார்கள் ஆதரித்து வாழ்த்து உரை இரு மருங்கு எழ அணி மறுகு இடைச் சென்று காதலித்து அவர்க்கு அருள் செய்து தம் திருமாளிகைக் கடை சார்ந்தார். பெண்மணிகள் விரும்பி வாழ்த்தும் சொல்லொலி இரு பக்கமும் எழ அழகிய வீதியினிடத்துச் சென்று. . . 956 2860. நறவம் ஆர்பொழில் புகலியில் நண்ணிய திருஞான சம்பந்தர் விறலி யாருடன் நீலகண்டப் பெரும்பாணர்க்கு மிக நல்கி உறையுள் ஆம்அவர் மாளிகை செலவிடுத்து உள்அணை தரும்போதில் அறலின் நேர்குழலார் மணி விளக்கு எடுத்து எதிர்கொள அணைவுற்றார் மிகவும் அருள்புரிந்து அவர்தம் இருக்கையாகிய மாளி கைக்குச் செல்ல விடையளித்து - அறலின்நேர்குழலார் கருமணலை யொத்த கூந்தலையுடையார். 957 2861. அங்கு அணைந்து அரு மறைக்குலத் தாயர் வந்து அடி வணங்கிடத் தாமும் துங்கநீள் பெருந் தோணியில் தாயர்தாள் மனம்கொளத் தொழுவாராய்த் தங்கு காதலின் அங்கு அமர்ந்து அருளும் நாள் தம்பிரான் கழல் போற்றிப் பொங்கும் இன்இசைத் திருப்பதி கம்பல பாடினார் புகழ்ந்து ஏத்தி. 958 2862. நீல மாவிடம் திருமிடற்று அடக்கிய நிமலரை நேர் எய்தும் காலம் ஆனவை அனைத்தினும் பணிந்துஉடன் கலந்த அன்பர்க ளோடும் சால நாள்கள் அங்கு உறைபவர் தையலாள் தழுவிடக் குழைகம்பர் கோலம் ஆர்தரக் கும்பிடும் ஆசை கொண்டு எழும் குறிப்பினர் ஆனார். கோல் ஆர்தர - திருக்கோலத்தை (க் கண்ணும் கருத்தும்) நுகர. 959 2863. தண்டகத் திருநாட்டினைச் சார்ந்து வந்து எம்பிரான் மகிழ் கோயில் கண்டு போற்றி நாம் பணிவது என்று அன்பருக்கு அருள் செய்வார் காலம் பெற்று அண்டருக்கு அறிவரும் பெருந் தோணியில் இருந்தவர் அருள்பெற்றுத் தொண்டர் சூழ்ந்துடன் புறப்படத் தொடர்ந்து எழும் தாதையர்க்கு உரை செய்வார். தண்டகத் திருநாடு - தொண்டை நாடு; அண்டரும் புகழ் துண்டீரன் ஆண்டு துண் டீர நாடாய்த் - தண்டகன் பின்னர் ஆண்டு தண்டக நாடாய்ப் பின்னர்த் - தொண்டை மானாண்டு தொண்டை நாடெனத் துலங்கிற்றென்ப - பண்டையன் படைப்புத் தொட்டுப் பயிலும் இத் தொண்டை நாடு - விநாயக புராணம், தொண்டை நாட்டுத் திருக்கோயில்களை நாம் வணங்கப் போவோம் என்று பிள்ளையார் தம்மைச் சூழ்ந்துள்ள அன்பர்க் கருள் செய்து. . . . . 960 2864. அப்பர் நீர் இனி இங்கு ஒழிந்து அருமறை அங்கி வேட்டு அன்போடும் துப்பு நேர் சடையார் தமைப் பரவியே தொழுதிடும் எனச் சொல்லி மெய்ப் பெருந் தொண்டர் மீள்பவர் தமக்கு எலாம் விடைகொடுத்து அருளிப்போய் ஒப்பிலாதவர் தமைவழி யிடைப் பணிந்து உருகும் அன்பொடு செல்வார். அப்பர் - தந்தையாரே. அங்கி வேட்டு - அக்கினி காரியஞ் செய்து; வேள்வி செய்து. துப்பு நேர்ப - பவளம் போன்ற. தொண்டர் களில் தம்முடன் தொடராது மீள்பவர்க்கெல்லாம். ஒப்பில்லாதவர் - சிவபெருமான். தனக்குவமையில்லாதான் திருக்குறள்: 4. 961 2865. செல்வம் மல்கிய தில்லைமூ தூரினில் திருநடம் பணிந்து ஏத்திப் பல்பெருந் தொண்டர் எதிர்கொளப் பரமர்தம் திருத்தினை நகர்பாடி அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணி குழியினை அணைந்து ஏத்தி மல்குவார் சடையார் திருப் பாதிரிப் புலியூரை வந்துற்றார். அல்கு - தம்மொடு தங்கும். 962 2866. கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு முன்னம் மாமுடக்கால் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி மன்னு வார்பொழில் திருவடு கூரினை வந்து எய்தி வணங்கிப்போய்ப் பின்னுவார் சடையார்திரு வக்கரை பிள்ளையார் அணைவுற்றார் கன்னிமாவனமே (திருப்பாதிரிப்புலியூர்) தமக்குரிய இடமாக இருந்த சிவபிரான். 963 2867. வக்கரைப் பெருமான் தனை வணங்கிஅங்கு அமரும் நாள் அருளாலே செக்கர் வேணியார் இடும்பை மா காளமும் சென்று தாழ்ந்து உடன் மீண்டு மிக்க சீர்வளர் அதிகைவீ ரட்டமும் மேவுவார் தம்முன்பு தொக்க மெயத் திருத்தொண்டர் வந்து எதிர்கொளத் தொழுது ஏழுந்து அணைவுற்றார். 964 2868. ஆதி தேவர் அங்கு அமர்ந்த வீ ரட்டானம் சென்று அணைபவர் முன்னே பூதம் பாடநின்று ஆடுவார் திருநடம் புலப்படும் படிகாட்ட வேத பாலகர் பணிந்துமெய் உணர்வுடன் உருகிய விருப்போடும் கோது இலா இசை குலவு குண் டைக் குறள் பூதம் என்று எடுத்து ஏத்தி. வேத பாலகர் - ஞானசம்பந்தர். 965 2869. பரவி ஏத்திய திருப்பதிகத்து இசை பாடினார் பணிந்து அங்கு விரவும் அன்பொடு மகிழ்ந்து இனிது உறைபவர் விமலரை வணங்கிப் போய் அரவ நீர்ச்சடை அம்கணர்தாம் மகிழ்ந்து உறைதிரு ஆமாத்தூர் சிரபுரத்து வந்தருளிய திருமறைச் சிறுவர் சென்று அணைவுற்றார். 966 2870. சென்று அணைந்து சிந்தையின் மகிழ்விருப்பொடு திகழ்திரு ஆமாத்தூர்ப் பொன் தயங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடிபோற்றிக் குன்றவார் சிலை எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி நன்றும் இன்பு உறப் பணிந்து செல்வார் திருக் கோவலூர் நகர் சேர்ந்தார். 967 2871. கோவல் நீடிய வீரட்டம் அமர்ந்தவர் குரைகழல் பணிந்து ஏத்தி ஆவின் ஐந்து உகந்து ஆடுவார் அறையணி நல்லூரை அணைந்து ஏத்திப் பாஅலர்ந்த செந்தமிழ் கொடு பரவுவார் பரவுசீர் அடியார்கள் மேவும் அன்புறு மேன்மை ஆம் தன்மையை விளங்கிட அருள் செய்தார். ஆவின் ஐந்து - பஞ்ச கவ்வியத்தை. 968 2872. சீரின் மன்னிய பதிகம்முன் பாடி அத் திரு அறையணி நல்லூர் வாரின் மல்கிய கொங்கையாள் பங்கர்தம் மலைமிசை வலம் கொள்வார் பாரின் மல்கிய தொண்டர்கள் இமையவர் நாள்தொறும் பணிந்து ஏத்தும் காரின் மல்கிய சோலை அண்ணாமலை அன்பர் காட்டிடக் கண்டார். காரின் மல்கிய - மேகம்போல் நிறைந்த. 969 2873. அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும் கண்ணால் பருகிக் கைதொழுது கலந்து போற்றும் காதலினால் உண்ணா முலையாள் எனும் பதிகம் பாடித் தொண்டர் உடன்போந்து தெண்நீர் முடிஆர் திருவண்ணா மலையைச் சென்று சேர்வுற்றார். சிவலிங்க வடிவுபோல. 970 2874. அங்கண் அணைவார் பணிந்து எழுந்து போற்றி செய்து அம்மலை மீது தங்கும் விருப்பில் வீற்றி ருந்தார் தாள்தாமரைகள் தம்முடி மேல் பொங்கும் ஆர்வத்தொடும் புனைந்து புளகம் மலர்ந்த திருமேனி எங்கும் ஆகிக் கண் பொழியும் இன்ப அருவி பெருக்கினார். 971 2875. ஆதிமூர்த்தி கழல் வணங்கி அங்கண் இனிதின் அமரும் நாள் பூத நாதர் அவர் தம்மைப் பூவார் மலரால் போற்றி இசைத்துக் காதலால் அத்திரு மலையில் சிலநாள் வைகிக் கமழ் கொன்றை வேத கீதர் திருப்பதிகள் பிறவும் பணியும் விருப்புறுவார். 972 2876. மங்கை பாகர் திருஅருளால் வணங்கிப் போந்து வடதிசையில் செங்கண் விடையார் பதிபலவும் பணிந்து புகலிச் செம்மலார் துங்க வரைகள்கான் பலவும் கடந்து தொண்டைத் திருநாட்டில் திங்கள் முடியார் இனிது அமரும் திருவோத் தூரைச் சேர்வுற்றார். உயர்ந்த மலைகளையுங் காடுகளையுங் கடந்து. 973 2877. தேவர் முனிவர்க்கு ஓத்து அளித்தார் திருவோத் தூரில் திருத்தொண்டர் தாவில் சண்பைத் தமிழ் விரகர் தாம்அங்கு அணைக் களி சிறந்து மேவும் கதலி தோரணங்கள் விளக்கு நிரைத்து நிறை குடமும் பூவும் பொரியும் சுண்ணமும்முன் கொண்டு போற்றி எதிர்கொண்டார். ஓத்து - வேதம். தாவில் - வருத்தமில்லாத. 974 2878. சண்பை வேந்தர் தண்தரளச் சிவிகை நின்றும் இழிந்தருளி நண்பின் மிக்க சீர் அடியார் சூழ நம்பர் கோபுரம் சூழ் விண்பின் ஆகமுன் ஓங்கும் வியன்பொன் புரிசைவலம் கொண்டு பண்பு நீடிப் பணிந்து எழுந்து பரமர் கோயில்உள் அடைந்தார் வியன் பொன் புரிசை - அகற்சியுடைய அழகிய மதிலை. 975 2879. வாரணத்தின்உரி போர்த்த மைந்தர் உமையாள் மணவாளர் ஆரணத்தின் உள்பொருள் ஆய் நின்றார்தம் முன்அணைந்து இறைஞ்சி நார ணற்கும் பிரமற்கும் நண்ணற்கு அரிய கழல் போற்றும் காரணத்தின் வரும் இன்பக் கண்ணீர் பொழியக் கை தொழுதார். வாரணத்தின். . . . . . . மைந்தர் - யானையுரி போர்த்த சிவ பெருமான். ஆரணத்தின் - வேதத்தின். காரணத்தால் வரும் இன்ப. 976 2880. தொழுது விழுந்து பணிந்து எழுந்து சொல் மாலைகளால் துதிசெய்து முழுதும் ஆனார் அருள் பெற்றுப் போந்து வைகி முதல்வர்தமைப் பொழுது தோறும் புக்கு இறைஞ்சிப் போற்றி செய்து அங்கு அமர்வார் முன் அழுது வணங்கி ஒரு தொண்டர் அமணர் திறத்து ஒன்று அறிவிப்பார். 977 2881. அங்கை அனல் ஏற்றவர்க்கு அடியேன் ஆக்கும் பனைகள் ஆன எல்லாம் மங்குல் உற நீண்டு ஆண் பனையாய்க் காயாது ஆகக் கண்டு அமணர் இங்கு நீர் இட்டு ஆக்குவன காய்த்தற்கு அடைவு உண்டோ என்று பொங்கு நகை செய்து இழித்து உரைத்தார் அருள வேண்டும் எனப் புகல. சிவபெருமானுக்கு அடியேன். அடைவு - தகுதி. அவ்விழிவைப் போக்கியருளல் வேண்டும். . . . . 978 2882. பரமனார் தம்திருத் தொண்டர் பண்பு நோக்கிப் பரிவு எய்தி விரவு காதலொடும் விரைந்து விமலர் கோயில் புக்கருளி அரவும் மதியும் பகைதீர அணிந்தார் தம்மை அடி வணங்கி இரவு போற்றித் திருப்பதிகம் இசையில் பெருக எடுத்தருளி. பண்பு - நற்குணத்தை; தன்மையை. இரவு முழுதும் போற்றி. 979 2883. விருப்பு மேன்மைத் திருக்கடைக் காப்பு அதனில் விமலர் அருளாலே குரும்பை ஆண்பனை ஈனும் என்னும் வாய்மை குலவுதலால் நெருங்கும் ஏற்றுப் பனை எல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை அரும்பு பெண்ணை ஆகி இடக் கண்டோர் எல்லாம் அதிசயித்தார். குலவுதலால் - விளங்குதலால். ஏற்றுப் பனை யெல்லாம் - ஆண் பனைகளெல்லாம். 980 2884. சீரின் மன்னும் திருக்கடைக் காப்பு ஏற்றிச் சிவனார் அருள் பெற்றுப் பாரில் நீடும் ஆண்பனை முன் காய்த்துப் பழுக்கும் பண்பினால் நேரும் அன்பர் தம்கருத்து நேரே முடித்துக் கொடுத்தருளி ஆரும் உவகைத் திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிது அமர்ந்தார். நேரும் அன்பர்தம் - தம்மையடைந்த அன்பருடைய. 981 2885. தென்னாட்டு அமண் மாசு அறுத்தார்தம் செய்கை கண்டு திகைத்து அமணர் அந்நாட்டு அதனை விட்டு அகல்வார் சிலர்தம் கையில் குண்டிகைகள் என் ஆவன மற்று இவை என்று, தகர்ப்பார் இறைவன் ஏறு உயர்த்த பொன்ஆர் மேனிப் புரிசடையான் அன்றே என்று போற்றினார். பாண்டி நாட்டில் சமண்மாசு களைந்த சம்பந்தரது. தொண்டை நாட்டை அல்லது அத்திருவோத்தூரை விட்டு அகல்வாரானார். தமது கையிலுள்ள குண்டிகைகள் (கமண்டலங்கள்) என்ன பயனைத் தரப் போகின்றன என்று. . . . 982 2886. பிள்ளையார் தம் திருவாக்கில் பிறத்தலால் அத் தாலமும் முன்பு உள்ள பாசம் விட்டு அகல ஒழியப் பிறவிதனை ஒழித்துக் கொள்ளும் நீர்மைக் காலங்கள் கழித்துச் சிவமே கூடினவால் வள்ளலார் மற்று அவர் அருளின் வாய்மை கூறின் வரம்பு என்ஆம் அத்தாலமும் - அப்பனைகளும். கொள்ளும். . . . . . . . . கழித்து தாம் உலகில் பயன்படும்வரை நின்று காலங்கழித்து. 983 2887. அங்கண் அமரர் பெருமானைப் பணிந்து போந்து ஆடு அரவினுடன் பொங்கு கங்கை முடிக்கு அணிந்தார் மகிழும் பதிகள் பலபோற்றி, மங்கை பாகர் அமர்ந்தருளும் வயல் மாகறலை வழுத்திப் போய் கொங்கு மலர் நீர்க்குரங்கு அணில்முட் டத்தைச் சென்று குறுகினார். பூகம் - கமுகம். காமர் - விரும்பத்தக்க. கோலினார் - அலங்கரித்தார். 984 2888. ஆதி முதல்வர் குரங்கு அணில் முட்டத்தை அணைந்து பணிந்து ஏத்தி நீதி வாழும் திருத் தொண்டர் போற்ற நிகர்இல் சண்பை யினில் வேதமோடு சைவ நெறி விளங்க வந்த கவுணியனார் மாதொர் பாகர்தாம் மன்னும் மதில்சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார். 985 சந்தக் கலிவிருத்தம் 2889. நீடுகாஞ்சி வாணரும் நிலவுமெய்ம்மை அன்பரும் மாடுசண்பை வள்ளலார் வந்துஅணைந்த ஓகையால் கூடுகின்ற இன்பம்நேர் குலாவுவீதி கோலினார் காடுகொண்டபூகம்வாழை காமர்தோரணங்களால் 986 2890. கொடிநிரைத்த வீதியில் கோலவேதிகைப் புறம் கடிகொள்மாலை மொய்த்த பந்தர் கந்தநீர்த் தசும்புடன் மடிவுஇல் பொன்விளக்கு எடுத்து மாதர்மைந்தர் மல்குவார் படிவிளக்கும் அன்பரும் பரந்த பண்பில் ஈண்டுவார். கோல வேதிகைப் புறம் - அழகிய திண்ணையின் பக்கத்தே. கடி - மணம். கந்தநீர் தசும்புடன் - வாசனை நீர் கொண்ட குடங் களுடன். மடிவில் - கெடுதலில்லாத படி - பூமியில். 987 2891. கோதைமாதர் ஆடலும் குலாவுதொண்டர் பாடலும் வேதகீத நாதமும் மிக்குஎழுந்து விம்மவே காதல்நீடு காஞ்சிவாணர் கம்பலைத்து எழுந்துபோய் மூதுஎயில் புறம்புசென்று அணைந்துமுன் வணங்கினார். கம்பலைத்து - ஒலித்து. மூதெயில் - பழைய மதில். 988 2892. சண்பை ஆளும் மன்னர்முன்பு தொண்டர்வந்து சார்தலும் பண்புநீடு யானம்முன்பு இழிந்து இறைஞ்சு பான்மைகண்டு எண்பெருக்கும் மிக்கதொண்டர் அஞ்சலித்து எடுத்தசொல் மண்பரக்க வீழ்ந்து எழுந்து வானம் முட்ட ஆர்த்தனர். 989 2893. சேண்உயர்ந்த வாயில் நீடுசீர் கொள்சண்பை மன்னனார் வாள்நிலாவு நீற்றுஅணி விளங்கிட மனத்தினில் பூணும் அன்பர் தம்முடன் புகுந்திடப் புறத்துளோர் காணும் ஆசையின் குவித்த கைந்நிரை எடுத்தனர். வாள் நிலாவு - ஒளி விளங்கும். கைந்நிரை எடுத்தனர் - கைகளை வரிசையாகத் தலைமேல் ஏற்றினார்கள். 990 2894. வியல்நெடுந் தெருவின் ஊடுமிக்க தொண்டர் ஆர்ப்பு எழக் கயல்நெடுங்கண் மாதரும் காதல்நீடு மாந்தரும் புயல்பொழிந்தது ஆம்எனப் பூவினோடு பொன்சுணம் இயலும் ஆறு வாழ்த்தெடுத்து இருமருங்கும் வீசினார். 991 2895. இன்னவண்ணம் யாவரும் இன்பம்எய்த எய்துவார் பின்னுவார் சடைமுடிப் பிரான்மகிழ்ந்த கோயில்கள் முன்உறப் பணிந்துபோய் மொய்வரைத் திருமகள் மன்னு பூசனை மகிழ்ந்த மன்னர் கோயில் முன்னினார் மொய்வரை . . . . . . . . கோயில் - மலையரையன் திருமகளாகிய உமா தேவியார் பூசனையை மகிழ்ந்தேற்ற திருவேகம்பர் திருக் கோயிலை. 992 2896. கம்பவாணர் கோயில்வாயில் கண்டுகை குவித்து எடுத்து உம்பர்ஓங்கு கோபுரத்தின் முன்இறைஞ்சி உள்அணைந்து அம்பொன் மாளிகைப் புறத்தில் அன்பரோடு சூழ வந்து இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார். கம்பவாணர் - திருவேகம்பர். உம்பரோங்கு - வானளாவிய. இம்பர் ஞாலம் - இவ்வுலகம். 993 கொச்சகக் கலி 2897. செம்பொன் மலைக்கொடி தழுவக் குழைந்தருளும் திருமேனிக் கம்பரைவந்து எதிர்வணங்கும் கவுணியர்தம் காவலனார் பம்புதுளிக் கண்அருவி பாய்ந்துமயிர்ப் புளகம்வரத் தம்பெருகு மனக்காதல் தள்ளநிலம் மிசைத்தாழ்ந்தார். பம்பு - ததும்பம். 994 2898. பலமுறையும் பணிந்துஎழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப மலரும்முகம் அளித்ததிரு மணிவாயால் மறையான் என்று உலகுஉய்ய எடுத்தருளி உருகியஅன்பு என்பு உருக்க நிலவும் இசை முதல்தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ. சிவந்த கரங்கள் விரிய. 995 2899. பாடினார் பணிவுற்றார் பரிவுஉறும் ஆனந்தக் கூத்து ஆடினார் அகம்குழைந்தார் அஞ்சலிதம் சென்னியின்மேல் சூடினார் மெய்ம்முகிழ்த்தார் சூகரமும் அன்னமும் ஆய்த் தேடினார் இருவருக்கும் தெரிவுஅரியார் திருமகனார். மெய்ம்முகிழ்த்தார் - புளகங் கொண்டார். சூகரமும் - பன்றியும். 996 2900. மருவிய ஏழ்இசை பொழிய மனம் பொழியும் பேர்அன்பால் பெருகிய கண்மழை பொழியப் பெரும்புகலிப் பெருந்தகையார் உருகியஅன்பு உள்அலைப்ப உமைதழுவக் குழைந்தவரைப் பருகியமெய் உணர்வினொடும் பரவியே புறத்து அணைந்தார். 997 2901. புறத்துஅணைந்த தொண்டருடன் போந்துஅமைந்த திருமடத்தில் பெறற்கு அரும்பேறு உலகுஉய்யப் பெற்றருளும் பிள்ளையார் மறப்புஅரிய காதலுடன் வந்துஎய்தி மகிழ்ந்துஉறைவார்; அறப்பெருஞ் செல்வக் காமக்கோட்டம் அணைந்து இறைஞ்சினார். 998 2902. திருஏகம்பத்து அமர்ந்த செழுஞ்சுடைரைச் சேவடியில் ஒருபோதும் தப்பாதே உள்உருகிப் பணிகின்றார்; மருவுதிரு இயமகமும் வளர்இருக்குக் குறள்மற்றும் பெருகும்இசைத் திருப்பதிகத் தொடைபுனைந்தார் பிள்ளையார். 999 2903. நீடு திருப்பொழில் காஞ்சிநெறிக் காரைக்காடு இறைஞ்சிச் சூடு மதிக்கண்ணியார் துணைமலர்ச் சேவடி பாடி ஆடும் அவர்இனிது அமரும் அனேகதங் காவதம் பரவி மாடு திருத்தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள். மதிக் கண்ணியார் - சந்திரனைக் கொண்டை மாலையாக அணிந்த சிவபெருமான். மாடு திருத்தானங்கள் - பக்கத்துள்ள திருப் பதிகளையும். 1000 2904. எண்திசையும் போற்றிசைக்கும் திருப்பதி மற்று அதன்புறத்துத் தொண்டருடன் இனிது ஏகித் தொல்லைவிடம் உண்டு இருண்ட கண்டர் மகிழ் மேல்தளியும் முதல் ஆன கலந்து ஏத்தி மண்டு பெருங்காதலினால் வணங்கி மீண்டு இனிது இருந்தார். 1001 2905. அப்பதியில் விருப்பினொடும் அம்கணரைப் பணிந்து அமர்வார் செப்பு அரிய புகழ்பாலித் திருநதியின் தென்கரைபோய் மைப்பொலியும் கண்டர் திருமாற் பேறு மகிழ்ந்து இறைஞ்சி முப்புரம் செற்றவர் தம்மை மொழிமாலை சாத்தினார். 1002 2906. திருமாற் பேறு உடையவர் தம்திருவருள் பெற்று எழுந்தருளிக் கருமாலும் கருமாவாய்க் காண்பு அரிய கழல்தாங்கி மருஆற்றல் மழ விடையார் திருவல்லம் வணங்கித் தம் பெருமாற்குத் திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார். கருமாவாய் - பன்றியாய். திருப்பதிகமாகிய பூமாலையை. 1003 2907. அங்கு உள்ள பிறபதியில் அரிக்கு அரியார் கழல் வணங்கிப் பொங்குபுனல் பால்யாற்றின் புடையில் வடபால் இறைவர் எங்கும்உறைபதிபணிவார் இலம்பையங்கோட்டூர் இறைஞ்சிச் செங்கண்விடை உகைத்தவரைத் திருப்பதிகம் பாடினார். 1004 2908. திருத்தொண்டர் பலர்சூழ்த் திருவிற்கோலமும் பணிந்து பொருள்பதிகத் தொடைமாலை புரம்எரித்த படிபாடி அருள்புகலி ஆண்டகையார் தக்கோலம் அணைந்தருளி விருப்பினொடும் திருவூறல் மேவினார் தமைப் பணிந்தார் திருவிற்கோலம் கூவம் என்று வழங்கப்படுகிறது. தக்கோலத் துள்ள திருவூறல். 1005 2909. தொழுது பலமுறை போற்றிச் சுரர்குருவுக்கு இளைய முனி வழு இல்தவம் புரிந்து ஏத்த மன்னினார் தமை மலர்ந்த பழுதுஇல்செழும் தமிழ்மாலைப் பதிகம் இசை புனைந்து அருளி முழுதும் அளித்தவர் அருளால் போந்தனர் முத்தமிழ் விரகர். சுரர் குருவுக்கு இளைய முனி - தேவகுருவாகிய வியாழனுக்குத் தம்பியாகிய சம்வர்த்த முனி. மன்னினார் தமை - சிவபெருமானை. முழுதும் அளித்தவர் - எல்லாவற்றையும் படைத்த சிவபெருமான். 1006 2910. குன்றநெடுஞ் சிலையாளர் குலவியபல் பதிபிறவும் நின்றவிருப்புடன் இறைஞ்சி நீடுதிருத்தொண்டருடன் பொன்தயங்கு மணி மாடப் பூந்தாராய்ப் புரவலனார் சென்று அணைந்தார் பழையனூர்த் திருவாலங்காட்டு அருகு. 1007 எண்சீர் விருத்தம் 2911. இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண ஏழ்உலகும் போற்றிசைப்ப எம்மை ஆளும் அம்மைதிருத் தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் திருவாலங்காடு ஆம் என்று தம்மை உடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சி சண்பைவரும் சிகாமணியார் சாரச் சென்று செம்மைநெறி வழுவாத பதியின் மாடுஓர் செழும்பதியில் அன்று இரவு பள்ளி சேர்ந்தார். அம்மை - காரைக்காலம்மையார். தம்மையுடையவர் - சிவ பெருமானது. 1008 2912. மாலையிடை யாமத்துப் பள்ளி கொள்ளும் மறையவனார் தம்முன்பு கனவிலே வந்து ஆலவனத்து அமர்ந்தருளும் அப்பர் நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு என்று அருளிச் செய்ய ஞாலம்இருள் நீங்கவரும் புகலி வேந்தர் நடுஇடை யாமத்தின் இடைத் தொழுது உணர்ந்து வேலைவிடம் உண்டவர்தம் கருணை போற்றி மெய்உருகித் திருப்பதிகம் விளம்பலுற்றார். இரவிலே நடுயாமத்திலே. அயர்த்தனையோ - மறந்தனையோ. 1009 2913. துஞ்சவருவார் என்றே எடுத்த ஓசைச் சுருதிமுறை வழுவாமல் தொடுத்த பாடல் எஞ்சல் இலாவகை முறையே பழையனூரார் இயம்புமொழி காத்தகதை சிறப்பித்து ஏத்தி அஞ்சனமா கரிஉரித்தார் அருள்ஆம் என்றே அருளும்வகை திருக்கடைக்காப்பு அமையச் சாத்திப் பஞ்சரமாம் பழையதிறம் கிழமை கொள்ளப் பாடினார் பார்எல்லாம் உய்ய வந்தார். எஞ்சலிலா வகை - குறைலில்லாத வகையில். பழையனூரார் சிறப்பு மொழி காத்த கதையைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணம்: பாட்டு 3 குறிப்பில் காண்க. அஞ்சன மாகரி - கருமை நிறமுடைய பெரிய யானையை. பஞ்சுரமாம். . . . . .கொள்ள - பஞ்சுரமென்னும் பழைய பண் திறத்தின் உரிமை கொள்ள; பஞ்சுரம் ஒருவகைப் பண். திறம் - ஆனாய நாயனார் புராணம்: 21, குறிப்புப் பார்க்க. 1010 2914. நீடும்இசைத் திருப்பதிகம் பாடிப் போற்றி நெடும்கங்குல் இருள்நீங்கி நிகழ்ந்த காலை மாடுதிருத் தொண்டர்குழாம் அணைந்த போது மாலையினில் திருஆலவனத்து மன்னி ஆடும்அவர் அருள்செய்த படியை எல்லாம் அருளிச் செய்து அகம்மலரப் பாடி ஏத்திச் சேடர்பயில் திருப்பதியைத் தொழுது போந்து திருப்பாசூர் அதன்மருங்கு செல்லல் உற்றார். நிகழ்ந்த காலை - விளங்கிய காலை நேரலத்தில். மாலையினில். . . . . . . . . . ஆடுமவர்- திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: பாட்டு 199. குறிப்புப் பார்க்க. நடராசப் பெருமான் மாலையில் திருவாலங் காட்டிலும் (திருச்சிற்றம்பலத்திலும்) பகலில் திருப்பாசூரிலும் ஆடுகிறார் என்னுமொரு சம்பிரதாயமுண்டு. பகற் பொழு தெல்லாம் பாசூர்த் தங்கி - அப்பர்: கோயில்புக்க திருத்தாண்டகம். 2. சேடர் பயில் - பெரியோர்கள் வாழும். 1011 2915. திருப்பாசூர் அணைந்தருளி அங்கு மற்று அச் செழும்பதியோர் எதிர்கொள்ளச் சென்று புக்குப் பொருப்பரையன்மடப்பாவை இடப்பாகத்துப் புராதனர்வேய் இடம்கொண்ட புனிதர் கோயில் விருப்பினுடன் வலம்கொண்டு புக்குத் தாழ்ந்து வீழ்ந்துஎழுந்து மேனிஎலாம் முகிழ்ப்ப நின்றே அருள்கருணைத் திருவாளன் நாமம் சிந்தை இடையார் என்று இசைப்பதிகம் அருளிச் செய்தார். புராதனரும் மூங்கிலின் கீழ் எழுந்தருளியுள்ள புனிதருமாகிய சிவபெருமான் கோயிலை. 1012 2916. மன்னு திருப்பதிகஇசை பாடிப் போற்றி வணங்கிப்போந்து அப்பதியில் வைகி மாடு பிஞ்ஞகர்தம் வெண்பாக்கம் முதலாய் உள்ள பிறபதிகள் பணிந்துஅணைவார் பெருகும் அன்பால் முன்நிறைந்த திருவாய் மஞ்சன நீராட்டும் முதல்வேடர் கண்ணப்ப நாயனாரை உன்னி ஒளிர் காளத்திமலை வணங்க உற்றபெரு வேட்கையுடன் உவந்து சென்றார். 1013 2917. மிக்கபெரும் காதலுடன் தொண்டர் சூழ மென்புனல் நாட்டினை அகன்று வெற்பும் கானும் தொக்கபெரு வன்புலக்கான் அடைந்து போகிச் சூல கபாலக் கரத்துச் சுடரும்மேனி முக்கண்முதல் தலைவன் இடம்ஆகி உள்ள முகில்நெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று புக்குஇறைஞ்சிப் போற்றி இசைத்து அப்பதியில் வைகிப் பூதியரோடு உடன்மகிழ்ந்தார் புகலி வேந்தர். மென்புனல் நாட்டின் கன்று - மெல்லிய காவிரி நாட்டு இரக்கமுடைய கன்றாகிய பிள்ளையார்; காவிரி நாட்டின் கன்றாகிய பிள்ளையார் என்னலுமாம்; மெல்லிய புனல்நாட்டின் இனிய கன்று மலையுங் காடுங் கடந்து செல்கிறது என்று இரங்கிக் கூறியபடி. வெற்பும் . . . . . . . . . . அடைந்து - மலையையுங் காட்டையுங் கொண்ட வன்புலமாகிய குறிஞ்சிக் காட்டை அடைந்து. விபூதி யணிந்த திரு வருட் செல்வரோடு, கன்றாகிய புகலிவேந்தர் எனக் கூட்டுக. 1014 2918. இறைவர்திருக் காரிகரை இறைஞ்சி அப்பால் எண்இல்பெரு வரைகள்இரு மருங்கும் எங்கும் நிறைஅருவி நிரைபலவாய் மணியும் பொன்னும் நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப ஆகி அறைகழல் வானவர்க்கு இறைவன் குலிச ஏற்றால் அற்றசிறை பெற்று அவன்மேல் எழுவதற்குச் சிறகுஅடித்துப் பறக்கமுயன்று உயர்ந்த போலும் சிலைநிலத்தில் எழுந்தருளிச் செல்லா நின்றார். பெரிய மலை வழிகளின் இருபக்கங்களிலும், மற்றெவ் விடங்களிலும் நிறைந்த அருவிகளின் வரிசைகள் பலவாய். . . . . . தூவலைப் பக்கங்களில் சிதறி. இந்திரன் வச்சிராயுதத்தால் வெட்டப் பெற்ற சிறகுகளை மீண்டு பெற்று, அவ்விந்திரன் மீது பாய்வதற்குச் சிறகடித்துப் பறக்க முயன்று உயர்ந்தாற்போல உள்ள குறிஞ்சி நிலத்தில். 1015 2919. மாதவர்கள் நெருங்குகுழாம் பரந்து செல்ல மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்புஇன்று ஆகப் பூதிநிறை கடல்அணைவது என்னச் சண்பைப் புரவலனார் எழுந்தருளும் பொழுது சின்னத் தீதுஇல்ஒலி பலமுறையும் பொங்கி எங்கும் திருஞான சம்பந்தன் வந்தான் என்னும் நாதம்நிறை செவியினவாய் மாக்கள் எல்லாம் நலம்மருவு நினைவுஒன்றாய் மருங்கு நண்ண. மாக்கள் - விலங்குகள். தீதில் ஒலியாதலின் மாக்கள் நெருங்கின என்க. எவ்வுயிரிலுமுள்ள ஈசனைக் கண்ட பெரியாரிடம் விலங்குகள் நெருங்குதல் இயல்பு. 1016 2920. கானவர்தம் குலம்உலகு போற்ற வந்த கண்ணப்பர் திருப்பாதச் செருப்புத் தோய மானவரிச் சிலைவேட்டை ஆடும் கானும் வானம்மறை நிலைபெரிய மரமும் தூறும் ஏனைஇமையோர்தாமும் இறைஞ்சிஏத்தி எய்தவரும் பெருமையவாம் எண் இலாத தானமும்மற்று அவைகடந்து திருக்காளத்தி சாரஎழுந்தருளினார் சண்பைவேந்தர். மானவரிச் சிலை - வலிமையோடு வரிந்து கட்டிய வில். தூறும் செடிகளும்; புதர்களும். 1017 2921. அம்பொன்மலைக் கொடிமுலைப்பால் குழைத்த ஞானத்து அமுதுஉண்ட பிள்ளையார் அணைந்தார் என்று செம்பொன்மலை வில்லியார் திருக்காளத்திச் சேர்ந்த திருத்தொண்டர் குழாம் அடைய ஈண்டிப் பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர் பலவேடச் சைவர்குல வேடர் மற்றும் உம்பர்தவம் புரிவார்அப் பதியில் உள்ளோர் உடன்விரும்பி எதிர்கொள்ள உழைச்சென்று உற்றார். பம்பு - நெருங்கிய. உழை - அருகே. 1018 2922. திசை அனைத்தும் நீற்றின்ஒளி தழைப்ப மண்மேல் சிவலோகம் அணைந்தது எனச் சென்றபோது மிசைவிளங்கும் மணிமுத்தின் சிவிகை நின்றும் வேதபாலகர் இழிந்து வணங்கி மிக்க அசைவுஇல்பெருந் தொண்டர்குழாம் தொழுது போற்றி அர எனும் ஓசையின் அண்டம் நிறைப்ப அன்பால் இசைவிளங்கும் தமிழ்விரகர் திருக்காளத்தித் திருமலை இம் மலைகளில்யாது என்று கேட்டார். 1019 2923. வந்துஅணைந்த மாதவத்தோர் வணங்கித் தாழ்ந்து மறைவாழ்வே! சைவ சிகாமணியே! தோன்றும் இந்தமலை காளனோடு அத்தி தம்மில் இகலி வழிபாடுசெய இறைவர் மேவும் அந்தம்இல் சீர்க்காளத்தி மலைஆம் என்ன அவனிமேல் பணிந்துஎழுந்து அஞ்சலிமேற் கொண்டு சிந்தை களிமகிழ்ச்சி வரத்திரு விராகம் வானவர்கள் தானவர் என்று எடுத்துச் செல்வார். பாம்பும் யானையும் தம்முள் மாறு கொண்டு பூசித்தமை யான், காளத்தி என்னும் பெயரை அம்மலை பெற்றதென்க. அந்த மில் - அழிவில்லாத. 1020 2924. திருந்திய இன்இசை வகுப்புத் திருக்கண்ணப்பர் திருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப் பொருந்து பெருந்தவர் கூட்டம் போற்ற வந்து பொன்முகலிக் கரைஅணைந்து தொழுது போகி அருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல ஆளுடைய பிள்ளையார் அயன்மால் தேடும் மருந்து வெளியே இருந்த திருக்காளத்தி மலைஅடிவாரம் சார வந்து தாழ்ந்தார். இசை வகுப்பால் (இசைப் பாட்டால்). 1021 2925. தாழ்ந்து எழுந்து திருமலையைத் தொழுது கொண்டே தடம்சிலாதல சோபானத்தால் ஏறி வாழ்ந்து இமையோர் குழாம் நெருங்குமணி நீள்வாயில் மருங்குஇறைஞ்சி உள்புகுந்து வளர்பொன் கோயில் சூழ்ந்துவலம் கொண்டுஇறைவர் திருமுன்பு எய்தித் தொழுதுதலை மேல்கொண்ட செங்கை போற்றி வீழ்ந்துஎழுவார் கும்பிட்ட பயன் காண்பார்போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார். தடம். . . . .ஏறி - பெரிய கற்பாறைகளாகிய படிகளிலேறி. 1022 2926. உள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அவ்அன்பின் உள்ளே மன்னும் வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண் விமலரையும் உடன்கண்ட விருப்புப் பொங்கிப் பள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப் பைம்பொன்மலை வல்லிபரிந்து அளித்த செம்பொன் வள்ளத்தில் ஞானஆர் அமுதம் உண்டார் மகிழ்ந்து எழுந்து பலமுறையும் வணங்குகின்றார். 1023 2927. பங்கயக்கண் அருவிநீர் பாய நின்று பரவும்இசைத் திருப்பதிகம் பாடி ஆடித் தங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத் தம்பெருமான் கழல்போற்றும் தன்மை நீட அங்குஅரிதின் புறம்போந்து அங்கு அயன்மால் போற்ற அரியார்தம் திருமலைக்கீழ் அணைந்து இறைஞ்சிப் பொங்குதிருத் தொண்டர்மடம் காட்ட அங்குப் புக்கருளி இனிதுஅமர்ந்தார் புகலி வேந்தர். களிப்பும் காதலும் வலிந்து தடுக்க. 1024 2928. யாவர்களும் அறிவரிய இறைவன் தன்னை ஏழுலகும் உடையானை எண் இலாத தேவர்கள்தம் பெருமானைத் திருக்காளத்தி மலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப் பூஅலரும் பொழில்புடைசூழ் சண்பை ஆளும் புரவலனார் காலங்கள் தோறும் புக்குப் பாமலர்கொண்டு அடிப்போற்றிப் பருகி ஆர்ந்து பண்புஇனிய திருப்பதியில் பயிலும் நாளில். திருவடித் தேனை. . . . . . . . . . . . . பருகி நிறைத்து. 1025 2929. அங்கண்வட திசைமேலும் குடக்கின் மேலும் அருந்தமிழின் வழக்குஅங்கு நிகழாது ஆகத் திங்கள்புனை முடியார்தம் தானம் தோறும் சென்றுதமிழ் இசைபாடும் செய்கை போல மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி. குடக்கின் - மேற்கின். 1026 2930. கூற்றுஉதைத்தார் மகிழ்ந்த கோகரணம் பாடிக் குலவு திருப்பருப்பதத்தின் கொள்கை பாடி ஏற்றின்மிசை வருவார் இந்திரன் தன்நீல பருப்பதமும் பாடி மற்றுஇறைவர் தானம் போற்றியசொல் மலர்மாலை பிறவும் பாடிப் புகலியர்தம் பெருந்தகையார் புனிதம் ஆகும் நீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ நெடிதுமகிந்து அப்பதியில் நிலவுகின்றார். பருப்பதத்தின் கொள்கை - ஸ்ரீ சைலத்தின் இயல்பையும்; திருநாவுக்கரசு சுவாமிகள்: 349. பார்க்க. 1027 2931. தென்திசையில் கயிலையெனும் திருக்காளத்தி போற்றிஇனிது அமர்க்கின்றார் திரைசூழ் வேலை ஒன்றுதிரு ஒற்றியூர் உறைவார் தம்மை இறைஞ்சுவது திருவுள்ளத்து உன்னி அங்கண் இன்தமிழின் விரகர்அருள் பெற்று மீள்வார் எந்தையார் இணையடிஎன் மனத்த என்று பொன்தரளம் கொழித்து இழிபொன் முகலி கூடப் புனைந்ததிருப் பதிக இசை போற்றிப் போந்தார். கடற்கரையிலுள்ள திருவொற்றியூர். 1028 2932. மன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும் மறைவாழ வந்தவர்தாம் மலையும் கானும் முன்அணைந்த பதிபிறவும் கடந்து போந்து முதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப் பன்மணிகள் பொன்வரன்றி அகிலும் சந்தும் பொருதுஅலைக்கும் பாலி வடகரையில் நீடு சென்னிமதி அணிந்தவர் தம்திருவேற்காடு சென்றுஅணைந்தார் திருஞானம் உண்ட செல்வர். வரன்றி - கொழித்து; அரித்துமாம். பொருது - மோதி. ஈண்டுப் பாலி என்றது பழம் பாலாற்றை. பின்னே பாலி வேறு வழியாக ஓடலாயிற்று. பழம் பாலாற்றுச் சிதைவுகளை இன்றும் பார்க்கலாம். 1029 2933. திருவேற்காடு அமர்ந்தசெழுஞ் சுடர்பொன் கோயில் சென்றுஅணைந்து பணிந்துதிருப் பதிகம் பாடி வருவேற்று மனத்துஅவுணர் புரங்கள் செற்றார் வலிதாயம் வந்துஎய்தி வணங்கிப் போற்றி உருஏற்றார் அமர்ந்துறையும் ஓத வேலை ஒற்றியூர் கைதொழச்சென்று உற்ற போது பெருவேட்கை தருவாழ்வும் பெற்ற தொண்டர் பெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார். வேறுபட்ட மனத்தவுணர். வலிதாயம் இப்பொழுது பாடி என்று வழங்கப்படுகிறது. அடியார்கள் பொருட்டு உருவேற்ற பெருமான். ஓத வேலை - வாய் வெள்ளமுடைய கடல் சூழ்ந்த; (ஓதம் - வாய் வெள்ளம்). 1030 2934. மிக்கதிருத் தொண்டர்தொழுது அணையத் தாமும் தொழுதுஇழிந்து விடையவன் என்று எடுத்துப்பாடி மைக்குலவு கண்டத்தார் மகிழும் கோயில் மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து தக்கதிருக் கடைக்காப்புச் சாற்றித் தேவர் தம்பெருமான் திருவாயில் ஊடு சென்று புக்கருளி வலம்கொண்டு புனிதர் முன்பு போற்றெடுத்துப் படியின் மேல் பொருந்த வீழ்ந்தார். 1031 2935. பொன் திரள்கள் போல்புரிந்த சடையார் தம்பால் பொங்கிஎழும் காதல்மிகப் பொழிந்து விம்மிப் பற்றிஎழும் மயிர்ப்புளகம் எங்கும் ஆகிப் பரந்துஇழியும் கண்அருவி பாய நின்று சொல் திகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுதுபுறத்து அணைந்தருளித் தொண்டரோடும் ஒற்றிநகர் காதலித்து அங்கு இனிது உறைந்தார் உலகுஉய்ய உலவாத ஞானம் உண்டார். உலவாத - குறையாத. 1032 கலி நிலைத்துறை 2936. இன்ன தன்மையில் பிள்ளையார் இருந்தனர் இப்பால் பன்னு தொல் புகழ்த் திருமயிலாபுரிப் பதியில் மன்னு சீர்ப்பெரு வணிகர்தம் தோன்றலார் திறத்து முன்னம் எய்தியது ஒன்றினை நிகழ்ந்தவா மொழிவாம். தோன்றலாரிடத்து. 1033 2937. அருநிதித்திறம் பெருக்குதற்கு அரும்கலம் பலவும் பொருகடல் செலப் போக்கிஅப் பொருள்குவை நிரம்ப வருமரக்கலம் மனைப்படப் பணைக்கரை நிரைக்கும் இருநிதிப்பெருஞ் செல்வத்தின் எல்லைஇல் வளத்தார். அருநிதி வகைகளை. கலம் - கப்பல். அலைமோதுங் கடலில். மனைப்பட - வீட்டிற் சேர. பணைக்கரை நிரைக்கும் - பெரிய கடற் கரையில் வரிசையாக வைக்கப்படும். 1034 2938. அம்மை உள்ளவாறு அறிந்தபின் சங்கரற்கு அடிமை மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கதுஓர் அன்பால் பொய்ம்மை நீக்கியபொருள் இது எனக்கொளும் உள்ளச் செம்மையேபுரி மனத்தினார் சிவநேசர் என்பார். 1035 2939. கற்றை வார்சடை முடியினார் அடியவர் கலப்பில் உற்ற செய்கையால் ஒழிவு இன்றி உருகிய மனமும் பற்றுஇலா நெறிப் பரசம யங்களைப் பாற்றும் செற்றம் மேவிய சீலமும் உடையராய்த் திகழ்வார். ஆண்டவனிடத்தில் பற்றில்லாத நெறிகளாகிய பர சமயங் களைச் சிதற ஓட்டும் கோபம் பொருந்திய சீலமும். இக் கோபம் நல்லதாதலின், அதைச் சீலம் என்றார். 1036 2940. ஆன நாள்செல அருமறைக் கவுணியர் பெருமான் ஞான போனகம் நுகர்ந்ததும் நானிலம் உய்ய ஏனை வெம்சமண் சாக்கியம் இழித்துஅழித்ததுவும் ஊனம் இல்புகழ் அடியர்பால் கேட்டு வந்துளராய். ஞான அமுதை உண்டதும். கேட்டுஉவந்து உளராய். 1037 2941. செல்வம் மல்கிய சிரபுரத் தலைவர் சேவடிக் கீழ் எல்லை இல்லதுஓர் காதலின் இடையறா உணர்வால் அல்லும் நண்பகலும் புரிந்து அவர்அருள் திறமே சொல்லவும் செயல் கேட்கவும் தொழிலினர்ஆனார். புரிந்து (விரும்பி) அவர் அருள் திறமே. 1038 2942. நிகழும் ஆங்குஅவர் நிதிப்பெருங் கிழவனின் மேலாய்த் திகழும் நீடிய திருவினில் சிறந்துளர் ஆகிப் புகழும் மேன்மையில் உலகினில் பொலிந்துளார் எனினும் மகவுஇலாமையின் மகிழ்மனை வாழ்க்கையின் மருண்டு. நிதிப்பெருங் கிழவனில் - குபேரனைப் பார்க்கிலும். 1039 2943. அரிய நீர்மையில் அருந்தவம் புரிந்துஅரன் அடியார்க்கு உரிய அர்ச்சனை உலப்புஇல செய்தஅந் நலத்தால் கரிய ஆம்குழல் மனைவியார் வயிறுஎனும் கமலத்து உரிய பூமகள் எனஒரு பெண்கொடி உதித்தாள். உலப்பில் - அளவில்லாதன. 1040 2944. நல்ல நாள்பெற ஓரையின் நலம்மிக உதிப்பப் பல்பெருங் கிளையுடன் பெருவணிகர்பார் முழுதும் எல்லை இல்தனம் முகந்துகொண்டு யாவரும் உவப்ப மல்லல் ஆவணம் மறுகிடைப் பொழிந்துஉளம் மகிழ்ந்தார். ஓரையின் - மூகூர்த்தத்தின். தனம் முகந்து - பொருளை வாரி. மல்லல் ஆவணமறுகிடை - வளப்பம் பொருந்திய கடைவீதியில். 1041 2945. ஆறுசூடிய முடியினார் அடியவர்க்கு அன்பால் ஈறுஇலாத பூசனைகள் யாவையும் மிகச்செய்து மாறுஇலா மறையவர்க்கு வேண்டின எலாம் அளித்துப் பேறு மற்றுஇது எனும்படி பெரும்களி சிறந்தார். 1042 2946. சூத நல்வினை மங்கலத் தொழில் முறை தொடங்கி வேத நீதியின் விதியுளி வழாவகை விரித்த சாதகத்தொடு சடங்குகள் தசதினம் செல்லக் காதல் மேவிய சிறப்பினில் கடிவிழா அயர்ந்தார். சூதம் நல்வினை - பிரசவ காலத்தில் செய்யப்படும் நற் கருமங்கள். விதியுளி - முறைமை. கடிவிழா அயர்ந்தார் மங்கல விழா நிகழ்த்தினர். 1043 2947. யாவரும்பெரு மகிழ்ச்சியால் இன்புறப் பயந்த பாவைநல் உறுப்பு அணிகிளர் பண்புஎலாம் நோக்கிப் பூவினாள்என வருதலின் பூம்பாவை என்றே மேவும் நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க. பாவை நல்லுறுப்பு அணிகிளர் பண்பெலாம் - பெண்ணின் நல்ல அவயங்களில் அழகு எழும் இயல்புகளெல்லாம். பூவினாள் பூமகள்; இலக்குமி. 1044 2948. திங்கள் தோறும்முன் செய்யும்அத் திருவளர்சிறப்பின் மங்கலம்புரி நல்வினை மாட்சியில் பெருக அங்கண் மாநகர் அமைத்திட ஆண்டுஎதிர் அணைந்து தங்கு பேரொளிச் சீறடி தளர்நடைபயில. அங்கண். . . .அணைந்து - அழகிய இடமகன்ற மயிலாப்பூரிலே சிவநேசர் செய்திட ஓராண்டு அணைதலால். சீறடி - சிறியஅடி. 1045 2949. தளரும் மின்னின் அங்குரம்எனத் தமனியக் கொடியின் வளர்இளந் தளிர்க் கிளைஎன மணிகிளர் ஒளியின் அளவுஇல் அம்சுடர்க் கொழுந்துஎன அணைவுறும் பருவத்து இளவனப் பிணை அனையவர்க்கு ஏழுயாண்டு எய்த. அங்குரம் என -முளை போலவும், தமனியக் கொடியின் பொற்கொடியின். மணி கிளர் - மாணிக்கத்தினின்றெழும். வனப்பிணை அனையவர்க்கு - வனத்திலுள்ள பெண்மானைப்போன்ற பூம்பாவை யார்க்கு. 1046 2950. அழகின் முன்இளம் பதம்என அணிவிளக்கு என்ன விழவு கொண்டுஎழும் பேதையருடன் விளையாட்டில் கழலொடு அம்மனை கந்துகம் என்றுமற்று இனைய மழலை மென்கிளிக் குலம்என மனைஇடை ஆடி. அழகின் முதல் இளம் பதமென. விழாக்கொண்டெழும் சிறுமியருடன். கழலொடு - கழற்சிக்காயுடன். கந்துகம் - பந்து. 1047 2951. பொற்றொடிச்சிறு மகளிர் ஆயத்தொடும் புணர்ந்து சிற்றில் முற்றவும் இழைத்துடன் அடுதொழில் சிறுசோறு உற்ற உண்டிகள் பயின்றுஒளி மணிஊசல் ஆடி மற்றும் இன்புறு வண்டலாட்டு அயர்வுடன் வளர. சிறுமியர் கூட்டத்தொடுஞ் சேர்ந்து. அடுந்தொழில் - சமைக்குந் தொழிலாகிய. வண்டலாட்டு - மகளிர் விளையாட்டுள் ஒன்று. 1048 2952. தந்தையாரும் அத்தளிர் இளங்கொம்புஅனாள் தகைமை இந்த வையகத்து இன்மையால் இன்புறுகளிப்பு வந்தசிந்தையின் மகிழ்ந்துமற்றுஇவள் மணம் பெறுவான் அந்தம்இல் எனது அருநிதிக் குரியன் என்று அறைந்தார். 1049 2953. ஆய நாள்களில் அமண் பயில் பாண்டிநாடு அதனைத் தூய ஞானம் உண்டருளிய தோன்றலார் அணைந்து மாய வல்அமண் கையரை வாதில் வென்றதுவும் மேயவெப்பு இடர் மீனவன் மேல் ஒழித்ததுவும். 1050 2954. நெருப்பில் அஞ்சினார் தங்களை நீரில் ஒட்டியபின் மருப்பு நீள் கழுக்கோலில் மற்று அவர்களே ஏறியதும் விருப்பின் ஆல் திருநீறு மீனவற்கு அளித்தருளிப் பொருப்பு வில்லியார் சாதனம் போற்று வித்ததுவும். அனல் வாதத்தில் தோற்றவர்கள் தங்களைப் புனல் வாதத்துக்கும் உட்படுத்திக் கொண்ட பின்னர். மருப்பு - கொம்பால். பொருப்பு வில்லியார் சாதனம் - சிவசாதனங்களாகிய விபூதி ருத்திராட்சங்களை. 1051 2955. இன்னவாறுஎலாம் அறிந்துளார் எய்தி அங்கு இசைப்பச் சொன்னவர்க்குஎலாம் இருநிதி தூசுடன் அளித்து மன்னு பூந்தராய் வள்ளலார் தமைத்திசை நோக்கிச் சென்னி மேல்கரம் குவித்துவீழ்ந்து எழுந்து செம் நின்று. தூசுடன் - பட்டாடையுடன். செந்நின்று - செவ்விய நெறியில் நின்று; நேர்நின்று. 1052 2956. சுற்றம் நீடிய கிளைஎலாம் சூழ்ந்து உடன்கேட்பக் கற்ற மாந்தர்வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன் பெற்று எடுத்த பூம்பாவையும் பிறங்கிய நிதியும் முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார். 1053 2957. எல்லை இல் பெரும் களிப்பினால் இப்பரிசு இயம்பி முல்லை வெண்ணகை முகிழ்முலையாருடன் முடியா மல்கு செல்வத்தின் வளமையும் மறைவளர் புகலிச் செல்வரே உடையார் எனும் சிந்தையால் மகிழ்ந்தார். முல்லை வெண்ணகை - முல்லைபோன்ற வெள்ளிய பற்களையும். முகிழ் - அரும்பும். முடியா. . . . . . .வளமையும் - முடி வில்லாது நிறைந்து கிடக்கும் செல்வத்தின் வளப்பத்தையும். 1054 2958. ஆற்று நாள்களில் அணங்கனார்கன்னி மாடத்தின் பால் தடம்பொழில் மருங்கினில் பனிமலர் கொய்வான் போற்றுவார் குழல் சேடியருடன் புறம் போந்து கோல் தொடித் தளிர்க் கையினால் முகை மலர் கொய்ய. இவ்வா றொழுகிவரு நாளில் பூம்பாவையார் கன்னி மாடத்தின் பாலுள்ள. கோற்றொடி. கோற்றொழிலையுடைய வளை யணிந்த, நேரிய வளை யணிந்த. 1055 2959. அன்பர் இன்புறும் ஆர்வத்தின் அளித்த பாங்கு அல்லால் பொன் பிறங்கு நீர்ப் புகலி காவலர்க்கு இது புணராது என்பது உள்கொண்ட பான்மை ஓர் எயிற்று இளம் பணியாய் முன்பு அணைந்தது போல் ஓர் முள் எயிற்று அரவம். அன்பர் - சிவநேசச் செட்டியார். பாங்கு - உரிமை பொன். . . . புணராது காவிரி சூழ்ந்த சீர்காழித் தலைவராகிய பிள்ளையார்க்கு இது பொருந்தாது. பான்மை. . . . . . . . .பணியாய் பான்மையானது பற்களையுடைய ஓர் இளம் பாம்பாகி. 1056 2960. மௌவல் மாதவிப் பந்தரில் மறைந்துவந்து எய்திச் செவ்வி நாள்முகை கவர்பொழுதினில் மலர்ச்செங்கை நவ்வி வாள்விழி நறுநுதல் செறிநெறி கூந்தல் கொவ்வை வாயவள் முகிழ்விரல் கவர்ந்தது குறித்து. மௌவல் மாதவி - மல்லிகை முல்லை. செவ்வி. . . . . .கவர் பொழு தினில் - அழகிய அன்றலர்ந்த மலரைக் கொய்யும்போது. மலர்ச். . . . . கவர்ந்தது - மலர்போன்ற சிவந்த கையையும், மான் போன்ற ஒள்ளிய கண்களையும், நறிய நெற்றியையும், செறிந்து நெறிந்த கூந்தலையும். கொவ்வைக் கனியொத்த வாயினையுமுடைய பூம்பாவையாரின் அரும்புபோன்ற விரலைக் குறித்துக் கடித்தது. 1057 2961. நாலு தந்தமும் என்புஉறக் கவர்ந்துநஞ்சு உகுத்து மேல்எழும் பணம் விரித்துநின்று ஆடி வேறுஅடங்க நீல வல்விடம் தொடர்ந்துஎழ நேரிழை மென்பூ மாலை தீயிடைப் பட்டது போன்றுஉளம் மயங்கி. நாலு தந்தமும் - நான்கு பற்களும். என்பு உற - பூம்பாவை யாரின் என்பில் பாய. கவர்ந்து - கடித்து. நஞ்சு உகுத்து - விஷத்தைக் கக்கி. பணம் - படத்தை. வேறு அடங்க - வேறிடத்தில் மறைந் தொடுங்க. நேரிழை - பூம்பாவையார். 1058 2962. தரையில் வீழ்தரச் சேடியர் வெருக்கொடு தாங்கி வரைசெய் மாடத்தின் உள்கொடு புகுந்திட வணிகர் உரையும் உள்ளமும் நிலைஅழிந்து உறுதுயர் பெருகக் கரைஇல் சுற்றமும் தாமும்முன் கலங்கினார் கலுழ்ந்தார். வெருக்கொடு - திடுக்கிட்டு அஞ்சி. வரைசெய் - மலைபோன்று செய்யப்பட்ட. வணிகர் - சிவநேசச் செட்டியார். கலுழ்ந்தார் - அழுதார். 1059 2963. விடம் தொலைத்திடும் விஞ்சையில் பெரியராம் மேலோர் அடர்ந்த தீவிடம் அகற்றுதற்கு அணைந்துளார் அனேகர் திடம்கொள் மந்திரம் தியானம் பாவகம் நிலைமுட்டி தொடர்ந்த செய்வினைத் தனித்தனித் தொழிலராய்ச் சூழ்வார். கருடதியான பாவகம் முதலியன. 1060 2964. மருந்தும் எண்இல மாறுஇல செய்யவும் வலிந்து பொருந்து வல்லிடம் ஏழுவே கமும் முறை பொங்கிப் பெரும் தடங்கண் மென்கொடி அனாள்தலைமிசைப் பிறங்கித் திருந்து செய்வினை யாவையும் கடந்து தீர்ந்திலதால். (மந்திரங்களன்றி) மருந்துகளும் எண்ணிலவாய் உவமை யில் லனவாய். . . . . . . அப்பூதியடிகள் புராணம்: 27. பார்க்க. பிறங்கி - பெருகி. 1061 2965. ஆவி தங்கு பல் குறிகளும் அடைவு இலஆக மேவு காருட விஞ்சை வித்தகர் இதுவிதி என்று ஓவும் வேலையில் உறு பெரும் சுற்றமும் அலறிப் பாவை மேல் விழுந்து அழுதனர் படர்ஒலிக் கடல்போல். உயிர் தங்குதற்குரிய பல குறிகள் பொருந்தாதொழிய; உயிர் போங்குறிகள் தோன்ற என்றபடி. கருட பாவனை முதலிய வித்தை களில் வல்லரவர்கள் இது விதி என்று நீங்கும் வேளையில். 1062 2966. சிந்தை வெம்துயர் உறுசிவநேசரும் தெளிந்து வந்த செய்வினை இன்மையில் வையகத் துள்ளோர் இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு ஈகுவன் கண்ட அந்தம் இல் நிதிக்குவை எனப் பறை அறைவித்தார். செயத்தக்க செயல் வேறின்மையால். கண்ட - யான் ஈட்டிய. 1063 2967. முரசு இயம்பிய மூன்று நாள் அகவையின் முற்ற அரசர் பாங்குளோர் உட்பட அவனிமேல் உள்ள கரைஇல் கல்வியோர் யாவரும் அணைந்து தம் காட்சிப் புரைஇல் செய்கையில் தீர்ந்திடாது ஒழிந்திடப் போனார். பறைசாற்றிய மூன்று நாள் எல்லையில் ஒருசேர அரசர் பக்கதி லுள்ள மருத்துவர் (இராஜ வைத்தியர்) உள்பட. . . . .தங் காட்சி என்னும் (கருட பாவணை முதலிய) குற்மற்ற செயல்களாலும். 1064 2968. சீரின் மன்னிய சிவநேசர் கண்டுஉளம் மயங்கிக் காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர் சாரும் அவ் அளவும் உடல் தழலிடை அடக்கிச் சேர என்பொடு சாம்பல் சேமிப்பது தெளிவார். காரின் மல்கிய - மேகங்களால் நிறைந்த; மேகம்போல் நிறைந்த எனினுமாம். கழுமலத் தலைவர் - திருஞான சம்பந்தர். தழலிடை அடக்கி - நெருப்பிலிட்டு; தகனஞ் செய்து. 1065 2969. உடைய பிள்ளையார்க்கு என இவள்தனை உரைத்ததனால் அடைவு துன்புறுவதற்கு இலை ஆம் நமக்கு என்றே இடர் ஒழிந்தபின் அடக்கிய என்பொடு சாம்பல் புடைபெருத்த கும்பத்தினில் புகப்பெய்து வைப்பார். துன்புறுவதற்கு அடைவு (முறை) இல்லை. புடை பெருத்த - பக்கம் பெருத்த. 1066 2970. கன்னிமாடத்தில் முன்புபோல் காப்புஉற அமைத்துப் பொன்னும் முத்தும் மேல் அணிகலன் பூந்துகில் சூழ்ந்து பன்னு தூவியின் பஞ்சணை விரைப்பள்ளி அதன்மேல் மன்னு பொன்அரி மாலைகள் அணிந்துவைத்தனரால். தூவியின் - அன்னத் தூவிபோன்ற (தூவி - மயிர்); அன் னத்தின் தூவி மெல்லணை அசைஇ. . . . . . . - கலித்தொகை: 72. 2. விரைப்பள்ளி - வாசனைப் பொருள்கள் அமைந்த படுக்கை. பொன்னரி மாலைகள் - வாடா மாலைகள்; கற்பக மாலைகள். 1067 2971. மாலை சாந்தொடும் மஞ்சனம் நாள்தொறும் வழாமைப் பாலின் நேர்தரும் போனகம் பகல் விளக்கு இனைய சாலும் நன்மையில் தகுவன நாள்தொறும் சமைத்தே ஏலுமா செய யாவரும் வியப்பு எய்து நாளில். மாலை சந்தனத்தொடு திருமஞ்சனம் முதலியவற்றை. பாலி னேர்தரு போனகம் - பால்சோறு. 1068 2972. சண்பை மன்னவர் திருவொற்றியூர் நகர் சார்ந்து பண்பு பெற்ற நல் தொண்டர்களுடன் பணிந்திருந்த நண்பு மிக்க நல்வார்த்தை அந்நல் பதி உள்ளோர் வண்புகழ்ப் பெருவணிகர்க்கு வந்து உரை செய்தார். 1069 2973. சொன்னவர்க்கு எலாம் தூசொடு காசு பொன் அளித்தே இன்ன தன்மையர் எனஒணா மகிழ் சிறந்துஎய்தச் சென்னி வாழ் மதியார் திருவொற்றியூர் அளவும் துன்னு நீள் நடைக் காவணம் துகில் விதானித்து. தூசொடு - வத்திரத்துடன். நெருங்கிய நீண்ட நடைப் பந்தரிட்டு; துணியால் மேற்கட்டி அமைத்து. 1070 2974. மகர தோரணம் வண்குலைக் கமுகொடு கதலி நிகர் இல் பல் கொடித் தாமங்கள் அணிபெற நிரைத்து நகர நீள் மறுகு யாவையும் நலம்புனை அணியால் புகர்இல் பொன்உலகு இழிந்ததாம் எனப் பொலி வித்தார். தாமங்கள் - மாலைகள். மறுகு - தெருக்கள். புகரில் - குற்ற மில்லாத. 1071 2975. இன்னவாறு அணிசெய்து பல்குறைவு அறுப்பு ஏவி முன்னம் ஒற்றியூர் நகரிடை முத்தமிழ் விரகர் பொன் அடித்தலம் தலைமிசை புனைவன் என்று எழுவார் அந்நகர்ப் பெருந் தொண்டரும் உடன்செல அணைந்தார். குறைவு அறுப்பு ஏவி - குறைகளை நீக்குதற்பொருட்டு (குறை களைப் பூர்த்தி செய்யும்படி) ஆட்களை ஏவி. 1072 2976. ஆயவேலையில் அருமறைப் புகலியர் பிரானும் மேய ஒற்றியூர் பணிபவர் வியன்நகர் அகன்று காயல் சூழ்கரைக் கடல் மயிலாபுரி நோக்கித் தூய தொண்டர்தம் குழாத்தொடும் எதிர்ந்துவந்து தோன்ற. திருவொற்றியூரைப் பணிபவராய் அவ்வகன்ற நகரை அகன்று. காயல் - சுழி; உப்பளமுமாம். 1073 2977. மாறுஇல் வண்பெரு வணிகரும் தொண்டரும் மலர்ந்த நீறு சேர்தவக் குழாத்தினை நீள் இடைக்கண்டே ஆறுசூடினார் திருமகனார் அணைந்தார் என்று ஈறு இலாதது ஓர் மகிழ்ச்சியினால் விழுந்து இறைஞ்ச. 1074 2978. காழிநாடரும் கதிர்மணிச் சிவிகை நின்று இழிந்து சூழ் இரும்பெருந் தொண்டர் முன் தொழுது எழுந்தருளி வாழி மாதவர் வணிகர் செய்திறம் சொலக் கேட்டே ஆழி சூழ் மயிலாபுரித் திருநகர் அணைந்தார். 1075 2979. அத்திறத்து முன் நிகழ்ந்தது திருஉள்ளத்து அமைத்துச் சித்தம் இன்புஉறு சிவநேசர் தம்செயல் வாய்ப்பப் பொய்த் தவச்சமண் சாக்கியர் புறத்தறை அழிய வைத்த அப்பெரும் கருணை நோக்கால் மகிழ்ந்தருளி. செயல் - கூடவும். 1076 2980. கங்கை வார் சடையார் கபாலீச் சரத்து அணைந்து துங்கநீள் சுடர்க் கோபுரம் தொழுது புக்குஅருளி மங்கை பங்கர்தம் கோயிலை வலம்கொண்டு வணங்கிச் செங்கை சென்னிமேல் குவிந்திடத் திருமுன்பு சேர்ந்தார். 1077 2981. தேவர் தேவனைத் திருக் கபாலீச்சரத்து அமுதைப் பாவை பாகனைப் பரிவுறு பண்பினால் பரவி மேவு காதலின் விரும்பிய விரைவினால் விழுந்து நாவின் வாய்மையில் போற்றினார் ஞான சம்பந்தர். அமுதம் - இறவாமையைக் குறிப்பது; பூம்பாவையாரின் இறப்பை நீக்கக்கொண்ட கருத்தை நிறைவேற்ற வல்ல தெய்வம் அமுதம் போன்றது என்பது நுட்பம். 1078 2982. போற்றிமெய் அருள் திறம் பெறு பரிவுடன் வணங்கி நீற்றின் மேனியில் நிறைமயிர்ப் புளகங்கள் நெருங்கக் கூற்று அடர்ந்தவர் கோயிலின் புறம்பு போந்துஅருளி ஆற்றும்இன் அருள் வணிகர் மேல்செல அருள் செய்வார். கூற்றடர்த்தவர் - யமனைக் காய்ந்தவராகிய சிவபெருமான்; இங்கே பூம்பாவையாரின் மரணத்தைத் தவிர்க்க வல்லவர் என்பது குறிப்பு. இனி நிகழ்த்தப் போவதற்கு ஏதுவாயுள்ள இனிய அருளை வணிகர் மீது செல்ல. . . . . . 1079 2983. ஒருமை உய்த்த நல்உணர்வினீர்! உலகவர் அறிய அருமையால் பெறுமகள் என்புநிறைந்த அக்குடத்தைப் பெரும யானத்து நடம்புரிவார் பெருங்கோயில் திருமதில் புறவாய்தலில் கொணர்க என்று செப்ப. மயானம் எல்லா உயிர்களும் ஒடுங்குமிடம். அவ்விடத்தில் நடம்புரிவோன் அவ்வுயிர்களைப்போல் ஒடுங்குதல் இல்லாதவன். அவனே இறைவன். மீண்டும் அவ்வொடுங்கிய உயிர்களைத் தோற்றுவிப்போனும் அவ்விறைவனேயாவன். இன்னோரன்ன கார ணங்களால் ஆண்டவன் கோயில் சுடுகாடே யாதல் காண்க. இது முன்னருஞ் சிலவிடங்களில் விளக்கப்பட்டது. ஈண்டு மயானத்தில் நடம்புரிவது என்பது ஒடுங்கிய உயிரை எழுப்புவதை உணர்த்துவது. மயானம் ஒடுக்கத்தையும் நடம் தோற்றத்தையும் குறிப்பன. 1080 2984. அந்தம் இல்பெரு மகிழ்ச்சியால் அவனிமேல் பணிந்து வந்து தம்திரு மனையினில் மேவிஅம் மருங்கு கந்த வார்பொழில் கன்னிமாடத்தினில் புக்கு வெந்த சாம்பலொடு என்புசேர் குடத்தை வேறு எடுத்து. 1081 2985. மூடுபல் மணிச் சிவிகையுள் பெய்துமுன் போத மாடு சேடியர் இனம் புடைசூழ்ந்து வந்து அணைய ஆடல் மேவினார் திருக்கபா லீச்சுரம் அணைந்து நீடு கோபுரத்து எதிர்மணிச் சிவிகையை நீக்கி. 1082 2986. அங்கணாள்தம் அபிமுகத்தினில் அடிஉறைப்பால் மங்கை என்பு சேர்குடத்தினை வைத்து முன்வணங்கப் பொங்கு நீள்புனல் புகலிகாவலர் புவனத்துத் தங்கி வாழ்பவர்க்கு உறுதியாம் நிலைமை சாதிப்பார். அங்கணாளர். . . . . . . .உறைப்பால் - கபாலீச்சுரப் பெருமானது சந்நிதி எதிரில் பாதகாணிக்கை போல; அடி உறைப்பால் - அடிப் பாகம் நன்றாகப் பதியுமாறு என்னலுமாம். 1083 2987. மாடம் ஓங்கிய மயிலை மாநகருளார் மற்றும் நாடு வாழ்பவர் நன்றியில் சமயத்தின் உள்ளோர் மாடு சூழ்ந்து காண்பதற்கு உவந்துஎய்தியே மலிய நீடுதேவர்கள் ஏனையோர் விசும்பிடை நெருங்க. இருட்டில் கிடந்த உயிர்களுக்குத் தனுகரண புவன போகங் களைத் தந்து சிறிது அறிவு விளக்கஞ் செய்பவன் ஆண்டவன். அவன் செய்த நன்றியைப் பாராட்டி அவன் வழி நிற்பது கடவுள் நெறி எனும் சமய வழி நிற்பதாகும். அந் நன்றி மறந்து வாழ்வது சமய வழி நிற்பதாகாது. சமய வழியை மறந்து வாழ்வோர் ஈண்டு நன்றியில் சமயத்தினுள்ளோர் என்னப்பட்டார்; அவர் கடவுள் நெறியில்லாத வேறு நெறி நிற்பவர் என்பது கருத்து. 1084 2988. தொண்டர்தம் பெருங் குழாம் புடைசூழ்தரத் தொல்லை அண்டர் நாயகர் கோபுரவாயில் நேர் அணைந்து வண்டுவார் குழலாள் என்புநிறைந்த மண்குடத்தைக் கண்டு தம் பிரான் கருணையின் பெருமையே கருதி. 1085 2989. இந்த மாநிலத்து இறந்துளோர் என்பினைப் பின்னும் நந்து நன்னெறிப் படுத்திட நன்மையாம் தன்மை அந்த என்பொடு தொடர்ச்சி ஆம்என அருள்நோக்கால் சிந்தும் அங்கம் அங்குடைய பூம்பாவைபேர் செப்பி. நந்தும் - தழைக்கும். அந் நன்மையாந் தன்மை அந்த எலும் பொடு தொடச்சியாம் என்று. சிந்திய அங்கம் அங்கு உடைய; பரு வுடலிழந்த நிலையுடைய என்றபடி. இறப்பாவது பருவுடல் அழிவு. பருவுடல் அழிந்ததும் எஞ்சி நிற்கும் நுண்ணுடல் ஊனக் கண் ணினர்க்குப் புலனாவதில்லை. நுண்ணுடல் ஞானக் கண்ணினர்க்குப் புலனாவது. இங்கே ஞானசம்பந்தப் பெருமானுக்குப் பூம் பாவையின் நுண்ணுடல் புலனாகிறது. அந் நுண்ணுடலுக்கு இப் பொழுது அவர் பருவுடல் வழங்கப்போகிறார். பருவுடலானது என்போடு கூடியது. என்போடு கூடாது நிலவுவது நுண்ணுடல். பருவுடல் மறையப் பெற்றோர் மீண்டும் அவ்வுடல் தாங்குவது, முன்னை யூழை யொழிக்கத் திருவருள் வழி என்னும் நன்னெறியில் நின்று ஒழுகுதற் பொருட்டே யாகும். அந்நன்மை நெறியில் நிற்க என்போடு தொடர்பு கொள்ளுதலாகிய பருவுடல் தாங்குதல் வேண்டும். இந் நுட்பம் இந்தமா. . . . . . . தொடர்ச்சியாம் என்று குறிக்கப்பட்டிருத்தல் காண்க. பருவுடல் இழந்த பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பிக்க அதாவது மீண்டும் என்புடல் கொண் டெழுப்ப ஞானசம்பந்தர் அருணோக்கங் கொண்டார் என்க. அருணோக்கமாவது நுண்ணுடலைக் காண வல்ல நோக்கம்; அவ் வுயிர் மீண்டும் சிவத்தொண்டு செய்து அதாவது நன்னெறி நின்று பேறுபெற நோக்கும் நோக்கம். இன்னொருவர் வயிற்றில் பிறந்து என்புடல் தாங்கப்போகும் பூம்பாவையாரை, அவ்வாறு பிறக்கச் செய்யாது, திருவருளால் அவர்க்கு ஒருவித உடல் நல்கப் போகிறார் ஞானசம்பந்தப் பெருமான். சில உயிர்களின் நுண்ணுடல் என்பைப் பற்றியும் சில நாள் நிலவுவதுண்டு. நுண்ணுடலின் உண்மையைப் பற்றி ஸர் ஒலியர் லாட்ஜ் முதலிய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வெளியிடும் நுட் பங்களைக் கொண்ட நூல்கள் பல இந்நாளில் உலகெங்கும் உலவு கின்றன. 1086 2990. மண்ணினில் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல் உண்மை ஆம் எனில் உலகர் முன் வருக என உரைப்பார். ஆர்தல் - இன்ப நுகர்தல். 1087 2991. மன்னுவார் சடையாரை முன் தொழுது மட்டிட்ட என்னும் நல் பதிகத்தினில் போதியோ என்னும் அன்ன மெய்த் திருவாக்கு எனும் அமுதம் அவ்அங்கம் துன்ன வந்துவந்து உருவமாய்த் தொக்கது அக்குடத்துள். வாக்கெனுஞ் சாவாமருந்து பொருந்தி நிறைய அவ்வங்க மானது. தொக்கது - திரண்டது; உருக்கொண்டது. 1088 2992. ஆன தன்மையின் அத்திருப்பாட்டினில் அடைவே போன வாயுவும் வடிவமும் பொலிவொடு நிரம்பி ஏனை அக்குடத்து அடங்கிமுன் இருந்து எழுவதன்முன் ஞான போனகர்பின் சமண்பாட்டினை நவில்வார். வாயுவும் - பிராணனும். அத்திருப்பாட்டினின் அடைவே - அத் திருப்பாட்டைப் போல் மற்றத் திருப்பாட்டுக்களிலும் முறையே. ஏனை - ஒழிந்த. சமண்பாட்டு - பத்தாம்பாட்டு. 1089 2993. தேற்றம் இல் சமண் சாக்கியத் திண்ணர் இச் செய்கை ஏற்றது அன்றுஎன எடுத்துரைப்பார் என்றபோது கோல் தொடிச்செங்கை தோற்றிடக் குடம்உடைந்து எழுவாள் போற்றுதாமரைப் போது அவிழ்ந்து எழுந்தனள் போன்றாள். தெளிவில்லாத சமணரும் சாக்கிய குண்டர்களும். இலக்கு மியைப் போன்றாள். 1090 2994. எடுத்த பாட்டினில் வடிவு பெற்று இரு நான்கு திருப்பாட்டு அடுத்த அம்முறைப் பன்னிரண்டு ஆண்டு அளவு அணைந்து தொடுத்த வெம்சமண் பாட்டினில் தோன்றிடக் கண்டு விடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு மேல்விரித்தார். மட்டிட்ட என்றெடுத்த முதற்பாட்டில் வடிவு பெற்று, மற்ற எட்டுப்பாட்டுகளில் முறைமுறையே பன்னிரண்டு வயதேறப் பெற்றுச் சமண்பாட்டாகிய பத்தாம் பாட்டில் வெளித்தோன்ற. . . . . 1091 அறுசீர் விருத்தம் 2995. ஆங்ஙனம் எழுந்து நின்ற அணங்கினை நோக்குவார்கள் ஈங்குஇது காணீர் என்னா அற்புதம் எய்தும் வேலைப் பாங்குசூழ் தொண்டர் ஆனோர் அரகர என்னப்பார் மேல் ஓங்கியஓசை உம்பர் நாட்டினை உற்றது அன்றே. உலகில் பிறந்த ஓங்கிய ஓசை தேவர் நாட்டினை உற்றது. 1092 2996. தேவரும் முனிவர் தாமும் திருவருள் சிறப்பு நோக்கிப் பூவரு விரைகொள் மாரி பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர் யாவரும் இருந்தவண்ணம் எம்பிரான் கருணை என்றே மேவிய கைகள் உச்சிமேல் குவித்து இறைஞ்சி வீழ்ந்தார். விரை - வாசனை. 1093 2997. அங்கு அவள் உருவம் காண்பார் அதிசயம் மிகவும் எய்திப் பங்கம் உற்றாரே போன்றார் பரசமயத்தின் உள்ளோர் எங்குஉள செய்கைதான் மற்றுஎன் செய்தவாறு இது என்று சங்கையாம் உணர்வு கொள்ளும் சமணர் தள்ளாடி வீழ்ந்தார். இஃது எங்குள்ள செய்கை? எப்படிச் செய்யப்பட்டது? என்று ஐய உணர்வு கொண்ட சமணர்கள்; சங்கை - அச்சமுமாம். 1094 2998. கன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக்காணார் முன்உறக் கண்டார்க்குஎல்லாம் மொய்க்கருங் குழலின் பாரம் மன்னிய வதனம் செந்தாமரையினில் கரியவண்டு துன்னிய ஒழுங்கு துற்றசூழல் போல் இருண்டு தோன்ற. கன்னியின் அழகை. கூந்தற் பாரமானது, நிலையான முக மென்னுஞ் செந்தாமரையில் கரிய வண்டு படிந்த ஒழுங்கு நெருங்கின சூழல்போல். 1095 2999. பாங்குஅணி சுரும்பு மொய்த்த பனிமலர் அளகப் பந்தி தேம்கமழ் ஆரம்சேரும் திருநுதல் விளக்கம் நோக்கில் பூங்கொடிக்கு அழகின் மாரிபொழிந்திடப் புயல்கீழ் இட்ட வாங்கிய வானவில்லின் வளர்ஒளி வனப்பு வாய்ப்ப. பாங்கு. . . . . . . . . . . . . .விளக்கம் - பக்கத்தே அழகிய வண்டுகள் மொய்த்த குளிர்ந்த மலர் முடித்த முன்னுச்சி மயிரின் ஒழுங்கையும், மணங்கமழும் மாலைசேரும் அழகிய நெற்றியின் விளக்கத்தையும். பூங்கொடிக்கு - பூங்கொடி போன்ற பூம்பாவைக்கு. வாங்கிய - வளைந்த. அளக பந்தியையும் திருநுதல் விளக்கத்தையும் நோக் கினால், . . . . . . . .மாரி பொழியுமாறு, முகில் கீழிட்டவானவில்லானது . . . . ; அளகபந்தி - மாரி பொழிந்திடும் புயல்; திருநுதல் விளக்கம் - வானவில்லின் வளரொளி. 1096 3000. புருவமென் கொடிகள் பண்டுபுரம் எரித்தவர் தம்நெற்றி ஒருவிழி எரியின் நீறாய் அருள்பெற உளன்ஆம் காமன் செருஎழும் தனுவது ஒன்றும் சேமவில் ஒன்றும் ஆக இருபெருஞ் சிலைகள் முன்கொண்டு எழுந்தன போல ஏற்ப. சிவபெருமான் நெற்றிவிழி நெருப்பால் நீறாகி மீண்டும் அப் பெருமான் அருள்பெற வாழ்வுபெற் றெழுந்த மன்மதனது. செரு வெழுந்தனு - போர் வில். சேமவில் - பாதுகாப்பிலுள்ளவில். 1097 3001. மண்ணிய மணியின் செய்யவளர் ஒளி மேனியாள் தன் கண் இணைவனப்புக் காணில் காமரு வதனத் திங்கள் தண் அளி விரிந்தசோதி வெள்ளத்தில் தகைவு இல் நீள ஒண்நிறக் கரிய செய்யகயல் இரண்டு ஒத்து உலாவ. மண்ணிய - கடைந்த. காமரு - அழகிய. வதனத் திங்கள் - முக மாகிய சந்திரனது. தகைவில் - தடுத்தலில்லாத. கரிய செய்ய - கருமையும் செம்மையுமுடைய. இரண்டு கண்களின் அழகைக் காணில், அவை முகமாகிய சந்திரனது ஒளி வெள்ளத்தில் இரண்டு கயல் மீன்களை ஒத்து உலாவ. 1098 3002. பணிவளர் அல்குல் பாவை நாசியும் பவளவாயும் நணியபேர் ஒளியில் தோன்றும் நலத்தினை நாடுவார்க்கு மணிநிறக் கோபம் கண்டுமற்று அதுவவ்வத் தாமும் அணிநிறக் காமரூபி அணைவது ஆம்அழகு காட்ட. பணி - பாம்பின் படம்போல. நணிய - நண்ணிய; பொருந்திய. நலத்தினை - அழகினை. மணிநிறக் கோபம் - மாணிக்க நிறமுடைய இந்திர கோபம் (தம்பலப் பூச்சி). அணி நிறம் - அழகிய நிறம் வாய்ந்த. காமரூபி - பச்சோந்தி (விரும்பிய. உருவங் கொள்வது). 1099 3003. இளமயில் அனையசாயல் ஏந்திழை குழைகொள் காது வளம்மிகு வனப்பினாலும் வடிந்த தாளுடைமையாலும் கிளர் ஒளி மகர வேறு கெழுமிய தன்மையாலும் அளவுஇல் சீர் அனங்கன் வென்றிக் கொடி இரண்டு அனையஆக. பூம்பாவையாரின் குண்டலமணிந்த காதுகள். கிளர். . . . . . . கெழுமிய. விளங்கும் ஒளியையுடைய மகரவேறு பொருந்திய. அனங்கள் - அங்கமில்லாதவன்; மன்மதன். பூம்பாவையாரின் காதுகள், அனங்கள் வெற்றிக்கொடி இரண்டை ஒத்தனவாக. வனப்பு (அழகு) காதுக்கும் கொடிக்கும் பொது. வடிந்த தாள் - (காதுக்காம்போது) வடிந்த காதுத் தண்டு (குண்டல மணிதற்குப் பண்படுத்திய காதினடி); (கொடிக்காம்போது) வடிந்த அடி. மகர ஏறு - (காதுக்காம்போது) மகரகுண்டலம்; (கொடிக்காம்போது) சுறாவேறு. 1100 3004. வில்பொலி தரளக்கோவை விளங்கிய கழுத்துமீது பொற்புஅமை வதனம் ஆகும் பதுமநன் நிதியம் பூத்த நல்பெரும் பணிலம் என்னும் நல்நிதி போன்றுதோன்றி அல்பொலி கண்டர்தந்த அருட்கு அடையாளம் காட்ட. வில். . . . . . . .ஆகும் - ஒளி பொலியும் முத்துக்கோவை விளங்கிய கழுத்துமீது அழகமைந்த முகமாகிய. பணிலம் என்னும் நன்னிதி - சங்கநிதி. அல்பொலி கண்டர் - திருநீலகண்டராகிய சிவபெருமான். கழுத்து - சங்கநிதி; முகம் - பதுமநிதி. கழுத்துக்காட்ட. . . . . . . . 1101 3005. எரி அவிழ் காந்தள் மென் பூத்தலை தொடுத்து இசையவைத்துத் திரள்பெறச் சுருக்கம் செச்சைமாலையோ தெரியின் வேறு கருநெடுங் கயல்கண் மங்கை கைகளால் காந்தி வெள்ளம் அருகு இழிந்தனவோ என்னும் அதிசயம் வடிவில் தோன்ற. எரிஅவிழ் - எரிபோன்று விரியும். செச்சை - வெட்சி. வேறு தெரியின் - வேறு வழியில் ஆராய்ந்தால்; வேறு உவமை கொள்ளின். . . . . . . . . . மங்கை - பூம்பாவையின். வடிவிற்றோன்ற - வடிவை யுடையனவாய்த் (கைகள்) தோன்ற; வடிவிலே தோன்ற என்னலு மொன்று. கையின் ஒளி வெள்ளம் இழிதருவது எரியவிழ். . . . மாலை போன்றிருத்தலை யுணர்த்தியவாறு. 1102 3006. ஏர்கெழு மார்பில் பொங்கும் ஏந்துஇளம் கொங்கை நாகக் கார்கெழு விடத்தை நீக்கும் கவுணியர் தலைவர் நோக்கால் ஆர்திரு அருளில் பூரித்து அடங்கிய அமுத கும்பச் சீர்கெழு முகிழைக்காட்டும் செவ்வியின் திகழ்ந்து தோன்ற. ஏர்கெழு - அழகு பொருந்திய. நாகக்கார் கெழுவிடத்தை - பாம்பின் கருமை பொருந்திய நஞ்சை. நிறைந்த திருவருளால் பூரித்து உள்ளடங்கிய. முகிழை - முகையை; அரும்பை. செவ்வியிற் றிகழ்ந்து - அழகொடு விளங்கி. 1103 3007. காமவேள் என்னும் வேடன் உந்தியில் கரந்து கொங்கை நேமி அம்புட்கள் தம்மை அகப்பட நேரிது ஆய தாமநீள் கண்ணிசேர்த்த சலாகை தூக்கியதேபோலும் வாம மேகலை சூழ் வல்லி மருங்கின் மேல் உரோமவல்லி. வாம. . . . .வல்லி - அழகிய மேகலையணிந்த கொடிபோன்ற பூம்பாவையாரின் இடைமீதுள்ள ரோம ரேகையானது. உந்தியில். . . . . .தம்மை - உந்தியில் மறைந்து கொங்கைகளாகிய சக்கரவாகப் பறவைகளை. தாமம் - கயிற்றாலாகிய; வரிசையான எனினும் அமையும். கண்ணி - புட்கள் படுவது. சலாகை - அம்பு. 1104 3008. பிணிஅவிழ் மலர்மென் கூந்தல் பெண்அமுது அனையாள் செம்பொன் அணிவளர் அல்குல் தங்கள் அரவு செய்பிழையால் அஞ்சி மணிகிளர் காஞ்சி சூழ்ந்து வனப்புடை அல்குல் ஆகிப் பணிஉலகு அளும் சேடன் பணம் விரித்து அடைதல் காட்ட. முறுக்கு அவிழ்ந்த. . . . .செம்பொன்னாபரணம் வளரும் அல் குலானது. அரவுசெய் பிழையாவது பூம்பாவையாரைத் தீண்டியது. மணிகிளர் காஞ்சி - தடுத்தாட்கொண்ட புராணம்: 138 குறிப்புப் பார்க்க. பணி. . பணம் நாகலோகத்தை ஆளும் ஆதிசேடன் படத்தை. சேடன் தங்கள் இனமாகிய அரவுசெய் . . . அல்குலாகி . . . பணம் விரித்து. . . . . 1105 3009. வரிமயில் அனைய சாயல் மங்கை பொன் குறங்கின் மாமை கரி இளம் பிடிக் கைவென்று கதலி மென் தண்டு காட்டத் தெரிவுஉறும் அவர்க்கு மென்மைச் செழுமுழந்தாளின் செவ்வி புரிவுஉறு பொன்பந்துஎன்னப் பொலிந்து ஒளிவிளங்கப் பொங்க. பொன் குறங்கின். . . . .காட்ட - பொன்போன்ற தொடைகளின் அழகானது, இளம் பெண் யானையின் துதிக்கை வென்று வாழை யின் மெல்லிய தண்டைக் காட்ட. தெரிவுறும் அவர்க்கு - பார்ப்ப வர்க்கு. செவ்வி - அழகானது. புரிவுறு - செய்யப்பட்ட; விருப்புறும். 1106 3010. பூஅலர் நறுமென் கூந்தல் பொன்கொடி கணைக்கால் காமன் ஆவ நாழிகையே போலும் அழகினில் மேன்மை எய்த மேவிய செம்பொன் தட்டின் வனப்பினை மீதிட்டு என்றும் ஓவியர்க்கு எழுத ஒண்ணாப் பரட்டு ஒளி ஒளிர்வுற்று ஓங்க. கணைக்கால். . . . .போலும் - கணைக்காலானது, மன்மதனது அம்பறாத் தூணியே போலும். செம்பொன் தராசுத் தட்டினது அழகை வென்று. ஓவியர்க்கு - சித்திரக்காரர்க்கு. 1107 3011. கற்பகம் ஈன்ற செவ்விக் காமரு பவளச் சோதிப் பொன்திரள் வயிரப் பத்திப் பூந்துணர் மலர்ந்த போலும் நல்பதம் பொலிவு காட்ட ஞாலமும் விசும்பும் எல்லாம் அற்புதம் எய்தத் தோன்றி அழகினுக்கு அணியாய் நின்றார். கற்பகம். . . . . . .நற்பதம் - கற்பகத்தரு ஈன்ற அழகிய விரும்பத் தக்க பவளச் சோதி பொருந்திய பொன் திரளுடன் வயிர ஒழுங்குகளை யுடைய பூங்கொத்துக்கள் மலர்ந்தனபோலும் நல்ல பாதங்கள். பவளச்சோதி. . .பூந்துணர்: இவைகளைக் கால்விரல் நகம் ஆகியவற்றிற்குக் கொள்க. 1108 3012. எண்ணில் ஆண்டு எய்தும் வேதாப் படைத்தவள் எழிலின் வெள்ளம் நண்ணும் நான்முகத்தால் கண்டான்; அவளினும் நல்லாள் தன்பால் புண்ணியப் பதினாறு ஆண்டு பேர்பெறும் புகலிவேந்தர் கண்ணுதல் கருணை வெள்ளம் ஆயிரம் முகத்தால் கண்டார். வேதா. . . . . . . .வெள்ளம் - பிரமன் தான் படைத்த திலோத் தமையின் அழகு வெள்ளத்தை. அவளினும் நல்லாள் தன்பால் - அத்திலோத்தமையினும் நல்லாளாகிய பூம்பாவையினிடத்து. பிரமன் பன்னெடுங்காலங் கொண்ட கிழவனாதலின் எண்ணி லாண்டெய்தும் வேதா என்றனர். கிழவனாகிய பிரமன் தான் படைத்த திலோத்தமையின் அழகுவெள்ளத்தில் மூழ்கிக் காமுற்று நான்குமுகங் கொண்டு அவளை நோக்கினான். இங்கே திருஞான சம்பந்தர் பதினாறு வயதுள்ளவர். அவரால் உயிர்ப்பிக்கப்பெற்ற பூம் பாவையால் திலோத்தமையினும் அழகுடையார். அவரைச் சம்பந்தர் எக்கருத்தடன் நோக்கினார், பிரமனைப் போலவா நோக்கினார்? சீ! சீ! புகலிவேந்தர் சிவம் பழுத்த பெருமான் ஆதலால், அவர் கண்ணுக்குப் பூம்பாவையார் கண்ணுதல் கருணைவெள்ளம்போலத் தோன்றினாரென்க. அங்கே நான்கு முகம்; இங்கே ஆயிரமுகம். அகநோக்குடையார், எல்லாம் உணர்வோராதலின், அவர் முகத்துக்கு (நோக்குக்கு) அளவில்லை என்க. பதினாறாண்டு திருவருள் வழி மலர்ந்தமையான் புண்ணிய என்றார். 1109 கலி விருத்தம் 3013. இன் னணம் விளங்கிய ஏர்கொள் சாயலாள் தன்னைமுன் கண்ணுறக் கண்ட தாதையார் பொன்அணி மாளிகைப் புகலி வேந்தர்தாள் சென்னியில் பொருந்தமுன் சென்று வீழ்ந்தனர். 1110 3014. அணங்கினும் மேம்படும் அன்னம் அன்னவள் பணம்புரி அரவு அரைப் பரமர் முன்பணிந்து இணங்கிய முகில் மதில் சண்பை ஏந்தலை வணங்கியே நின்றனள் மண்ணுளோர் தொழ. அணங்கினும் - இலக்குமியினும். பணம். . .பரமர் - படம் பொருந்திய பாம்பை அரையில் அணிந்த சிவபெருமான். 1111 3015. சீர்கெழு சிவநேசர் தம்மை முன்னமே கார்கெழு சோலை சூழ் காழி மன்னவர் ஏர்கெழு சிறப்பில்நும் மகளைக் கொண்டு இனிப் பார்கெழு மனையினில் படர்மின் என்றலும். கெழு - பொருந்திய. 1112 3016. பெருகிய அருள்பெறும் வணிகர் பிள்ளையார் மருவுதாமரை அடிவணங்கிப் போற்றி நின்று அருமையால் அடியனேன் பெற்ற பாவையைத் திருமணம் புணர்ந்து அருள் செய்யும் என்றலும். 1113 3017. மற்று, அவர் தமக்கு வண் புகலி வாணர் நீர் பெற்ற பெண் விடத்தினால் வீந்த பின்னை யான் கற்றை வார் சடையவர் கருணை காண்வர உற்பவிப்பித்தலால் உரை தகாது என. வீந்த - இறந்த. 1114 3018. வணிகரும் சுற்றமும் மயங்கிப் பிள்ளையார் அணி மலர் அடியில் வீழ்ந்து அரற்ற ஆங்கு அவர் தணிவு இல் நீள் பெருந் துயர் தணிய வேதநூல் துணிவினை அருள் செய்தார் தூய வாய்மையார். அரற்ற - பலவுஞ் சொல்லிக் குறை கூறி அழ. 1115 3019. தெள்ளு நீதியின் மறை கேட்ட சீர்க் கிளை வெள்ளமும் வணிகரும் வேட்கை நீத்திடப் பள்ளம் நீர்ச் செலவு எனப் பரமர் கோயிலின் உள் எழுந்தருளினார் உடைய பிள்ளையார். சீர்கிளை வெள்ளமும் - சிறந்த சுற்றமாகிய பெருங் கூட்டமும். வேட்கை - பூம்பாவையாரைப் பிள்ளையார்க்குத் திருமணஞ் செய்விக்க வேண்டுமென்று கொண்ட விருப்பை. பள்ளத்தில் நீர் செல்வதுபோல. 1116 3020. பான்மையால் வணிகரும் பாவை தன்மணம் ஏனையோர்க்கு இசைகிலேன் என்று கொண்டுபோய் வான்உயர் கன்னி மாடத்து வைத்தனர் தேன்அமர் கோதையும் சிவத்தை மேவினாள். 1117 கொச்சகக் கலி 3021. தேவர்பிரான் அமர்ந்தருளும் திருக்கபாலீச் சரத்து மேவிய ஞானத் தலைவர் விரிஞ்சன் முதல் எவ் உயிர்க்கும் காவலனார் பெருங் கருணை கைதந்த படி போற்றி பாஅலர் செந்தமிழ் பாடிப் பல் முறையும் பணிந்து எழுவார். விரிஞ்சன் - பிரமன். 1118 3022. தொழுது புறம் போந்து அருளித் தொண்டர் குழாம் புடைசூழப் பழுதுஇல் புகழ்த் திருமயிலைப் பதியில் அமர்ந்தருளும் நாள் முழுதுஉலகும் தரும்இறைவர் முதல்தானம் பலஇறைஞ்ச அழுது உலகை வாழ்வித்தார் அப்பதியின் மருங்கு அகல்வார். முதல் தானம் - முதன்மையுடைய திருப்பதிகளை. அழுதுலகை வாழ்வித்தார் - திருஞானசம்பந்தர். 1119 3023. திருத்தொண்டர் அங்குஉள்ளார் விடைகொள்ளச் சிவநேசர் வருத்தம் அகன்றிட மதுரமொழி அருளி விடைகொடுத்து நிருத்தர்உறை பிறபதிகள் வணங்கிப்போய் நிறைகாதல் அருத்தியொடு திருவான்மியூர் பணிய அணைவுற்றார். அருத்தியொடும் - அன்புடன். 1120 3024. திருவான்மியூர் மன்னும் திருத்தொண்டர் சிறப்பு எதிர வருவார் மங்கல அணிகள் மறுகு நிரைத்து எதிர்கொள்ள அருகு ஆக இழிந்தருளி அவர் வணங்கத் தொழுது அன்பு தருவார்தம் கோயில் மணித்தடநெடும் கோபுரம் சார்ந்தார். சிறப்பொடு எதிர்கொள்ள வருவாராய். மங்கலம் பொருந்திய அலங்கார வகைகளைத் தெருக்களில் ஒழுங்குபடுத்தி. 1121 3025. மிக்கு உயர்ந்த கோபுரத்தை வணங்கி வியன் திருமுன்றில் புக்கருளிக் கோயிலினைப் புடைவலம் கொண்டு உள் அணைந்து கொக்கு இறகும் மதிக்கொழுந்தும் குளிர்புனலும் ஒளிர்கின்ற செக்கர்நிகர் சடைமுடியார் சேவடியின் கீழ்த்தாழ்ந்தார். 1122 3026. தாழ்ந்து பலமுறை பணிந்து தம்பிரான் முன்நின்று வாழ்ந்து களிவரப் பிறவி மருந்து ஆன பெருந்தகையைச் சூழ்ந்த இசைத் திருப்பதிகச் சொல்மாலை வினாவுரையால் வீழ்ந்த பெரும் காதலுடன் சாத்திமிக இன்புற்றார். திருவான்மியூர்ப் பெருமான் திருநாமம் மருந்தீசர் என்பது. 1123 3027. பரவி வரும் ஆனந்தம் நிறைந்த துளிகண் பனிப்ப விரவு மயிர்ப் புளகங்கள் மிசை விளங்கப் புறத்து அணைவுற்று அரவ நெடுந்திரை வேலை அணிவான் மியூர் அதனுள் சிரபுரத்துப் புரவலனார் சிலநாள் அங்கு இனிதுஅமர்ந்தார். 1124 3028. அங்கண் அமர்வார் உலகு ஆளுடையாரை அரும் தமிழின் பொங்கும் இசைப் பதிகங்கள் பலபோற்றிப் போந்தருளிக் கங்கைஅணி மணிமுடியார் பதிபலவும் கலந்து இறைஞ்சிச் செங்கண்விடைக் கொடியார்தம் இடைச்சுரத்தைச் சேர்வுஉற்றார். 1125 3029. சென்னி இளமதி அணிந்தார் மருவு திரு இடைச்சுரத்து மன்னுதிருத் தொண்டர்குழாம் எதிர்கொள்ள வந்தருளி நல்நெடுங் கோபுரம் இறைஞ்சி உள்புகுந்து நல்கோயில் தன்னை வலம்கொண்டு அணைந்தார் தம்பிரான் திருமுன்பு. 1126 3030. கண்ட பொழுதே கலந்த காதலால் கைதலைமேல் கொண்டு தலம் உறவிழுந்து குலவு பெருமகிழ்ச்சியுடன் மண்டியபேர் அன்பு உருகி மயிர் முகிழ்ப்ப வணங்கி எழுந்து அண்டர்பிரான் திருமேனி வண்ணம் கண்டு அதிசயித்தார். 1127 3031. இருந்த இடைச்சுரம் மேவும் இவர்வண்ணம் என்னே என்று அருந்தமிழின் திருப்பதிகத்து அலர்மாலை கொடுபரவித் திருந்துமனம் கரைந்துஉருகத் திருக்கடைக்காப்புச் சாத்திப் பெருந்தனி வாழ்வினைப் பெற்றார் பேருலகின் பேறு ஆனார். 1128 3032. நிறைந்து ஆரா வேட்கையினால் நின்று இறைஞ்சிப் புறம் போந்துஅங்கு உறைந்தருளிப் பணிகின்றார் உமைபாகர் அருள் பெற்றுச் சிறந்த திருத்தொண்டருடன் எழுந்தருளிச் செந்துருத்தி அறைந்து அளிகள் பயில் சாரல் திருக் கழுக்குன்றினை அணைந்தார். செந்துருத்திப் பண்ணைப் பாடி வண்டுகள் வாழும் சாரலை யுடைய. 1129 3033. சென்று அணையும் பொழுதின்கண் திருத்தொண்டர் எதிர்கொள்ளப் பொன்திகழும் மணிச்சிவிகை இழிந்தருளி உடன்போந்து மன்றல்விரி நறுஞ்சோலைத் திருமலையை வலம் கொண்டு மின்தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார். 1130 3034. திருக்கழுக்குன்றத்து அமர்ந்த செங்கனகத் தனிக்குன்றைப் பெருக்கவளர் காதலினால் பணிந்துஎழுந்து பேராத கருத்தினுடன் காதல் செயும் கோயில் கழுக்குன்று என்று திருப்பதிகம் புனைந்தருளிச் சிந்தை நிறை மகிழ்வுற்றார். 1131 3035. இன்புற்று அங்கு அமர்ந்தருளி ஈறுஇல் பெருந் தொண்டருடன் மின்பெற்ற வேணியினார் அருள்பெற்றுப் போந்தருளி என்புஉற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சிபுரிந்து அன்புற்று மகிழ்ந்ததிரு அச்சிறு பாக்கத்து அணைந்தார். 1132 3036. ஆதி முதல்வரை வணங்கி ஆட்சி கொண்டார் எனமொழியும் கோதுஇல் திருப்பதிக இசை குலாவிய பாடலின் போற்றி மாதவத்து முனிவருடன் வணங்கி மகிழ்ந்து இன்புற்றுத் தீது அகற்றும் செய்கையினார் சில் நாள் அங்கு அமர்ந்தருளி. 1133 3037. ஏறுஅணிந்த வெல்கொடியார் இனிது அமர்ந்த பதிபிறவும் நீறுஅணிந்த திருத்தொண்டர் எதிர்கொள்ள நேர்ந்துஇறைஞ்சி வேறுபல நதிகானம் கடந்தருளி விரிசடையில் ஆறு அணிந்தார் மகிழ்ந்ததிரு அரசிலியை வந்துஅடைந்தார். 1134 3038. அரசிலியை அமர்ந்த ருளும் அங்கண் அரசைப் பணிந்து பரசி எழுதிருப் புறவார் பனங்காட்டூர் முதல் ஆய விரை செய்மலர்க் கொன்றையினார் மேவு பதிபல வணங்கித் திரைசெய் நெடுங்கடல் உடுத்த திருத்தில்லை நகர் அணைந்தார். பரசிஎழு - அடியார்கள் வாழ்த்தி எழும். 1135 3039. எல்லைஇல் ஞானத் தலைவர் எழுந்தருள எதிர்கொள்வார் தில்லையில் வாழ்அந்தணர் மெய்த் திருத்தொண்டர் சிறப்பினொடு மல்கிஎதிர் பணிந்து இறைஞ்ச மணிமுத்தின் சிவிகை இழிந்து அல்குபெரும் காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின்றார். அல்கு - தங்கும். 1136 3040. திருஎல்லையினைப் பணிந்து சென்று அணைவார் சேண்விசும்பை மருவி விளங்கு ஒளிதழைக்கும் வடதிசை வாயிலை வணங்கி உருகுபெருங் காதலுடன் உள்புகுந்து மறையின் ஒலி பெருகிவளர் மணிமாடப் பெருந்திரு வீதியை அணைந்தார். 1137 3041. நலம்மலியும் திருவீதி பணிந்துஎழுந்து நல்தவர் தம் குலம் நிறைந்த திருவாயில் குவித்தமலர்ச் செங்கையொடு தலம் உறமுன் தாழ்ந்துஎய்தித் தமனிய மாளிகை மருங்கு வலம் உறவந்து ஓங்கிய பேர் அம்பலத்தை வணங்கினார். தமனிய மாளிகை மருங்கு - பொற்கோயில் பக்கத்தே. 1138 3042. வணங்கி மிக மனம் மகிழ்ந்து மால்அயனும் தொழும்பூத கணங்கள் மிடை திருவாயில் பணிந்துஎழுந்து கண்களிப்ப அணங்குதனிக் கண்டருள அம்பலத்தே ஆடுகின்ற குணம் கடந்த தனிக் கூத்தர் பெருங்கூத்துக் கும்பிடுவார். மிடை - நெருங்கிய. அணங்கு - சிவகாமியார். தத்துவக் குணங்களைக் கடந்த. 1139 3043. தொண்டர் மனம்பிரியாத திருப்படியைத் தொழுது இறைஞ்சி மண்டுபெருங் காதலினால் நோக்கிமுகம் மலர்ந்துஎழுவார் அண்டம்எலாம் நிறைந்து எழுந்த ஆனந்தத்துள் அலைந்து கண்டபேர் இன்பத்தின் கரை இல்லா நிலை அணைந்தார். இறைவன் ஆனந்த வடிவினன். அவன் எங்குமிருத்தலால், ஆனந்தமும் எங்குமிருப்பதாகிறது. தத்துவங் கடந்த உணர்வினர் அவ் வானந்தத்தில் தோய்வார். 1140 3044. அந்நிலைமை அடைந்து திளைத்து ஆங்கு எய்தாக் காலத்தில் மன்னு திரு அம்பலத்தை வலம்கொண்டு போந்தருளிப் பொன் அணி மாளிகை வீதிப் புறத்து அணைந்து போதுதொறும் இன்இசை வண்தமிழ் பாடிக் கும்பிட்டு அங்கு இனிது இருந்தார். திளைத்து - ஆனந்தத்தில் இடையீடின்றி மூழ்கி. ஆங்கு காலத்தில் எய்தாத - அவ்விடத்தில் கால எல்லையில் அடங்காத. 1141 3045. திருந்திய சீர்த்தாதையார் சிவபாத இருதயரும் பொருந்து திருவளர் புகலிப் பூசுரரும் மாதவரும் பெருந் திரு மால் அயன் போற்றும் பெரும் பற்றப் புலியூரில் இருந்தமிழாகரர் அணைந்தார் எனக்கேட்டு வந்து அணைந்தார். 1142 3046. ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்தருளி அவரோடும் தாங்கு அரிய காதலினால் தம்பெருமான் கழல் வணங்க ஓங்குதிருத் தில்லைவாழ் அந்தணரும் உடன் ஆகத் தேம்கமழ் கொன்றைச் சடையார் திருச்சிற்றம் பலம் பணிந்தார். 1143 3047. தென்புகலி அந்தணரும் தில்லைவாழ் அந்தணர் முன் அன்பு நெறி பெருக்குவித்த ஆண்டகையார் அடிபோற்றிப் பொன்புரி செஞ்சடைக் கூத்தர் அருள்பெற்றுப் போந்தருளி இன்புறு தோணியில் அமர்ந்தார்தமை வணங்க எழுந்தருள. 1144 3048. நல்தவர்தம் குழாத்தோடு நம்பர் திருநடம் செய்யும் பொன் பதியின் திருஎல்லை பணிந்தருளிப் புறம்போந்து பெற்றம் உயர்த்தவர் அமர்ந்த பிறபதியும் புக்கு இறைஞ்சிக் கற்றவர்கள் பரவுதிருக் கழுமலமே சென்று அடைவார். பெற்றம் உயர்ந்தவர் - இடபக் கொடியுடைய சிவபெருமான். 1145 3049. பல்பதிகள் கடந்து அருளிப் பன்னிரண்டு பேர் படைத்த தொல்லை வளப் பூந்தராய் தூரத்தே தோன்றுதலும் மல்கு திரு மணி முத்தின் சிவிகை இழிந்து எதிர்வணங்கிச் செல்வம் மிகுபதி அதன்மேல் திருப்பதிகம் அருள் செய்வார். 1146 3050. மன்னும் இசைமொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து மின்னுசுடர் மாளிகை விண்தாங்குவபோல் வேணுபுரம் என்னும் இசைச்சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்தருளிப் புன்னைமணம் கமழ்புறவப் புறம்பணையில் வந்து அணைந்தார். புறவப் புறம்பணை - சிறுகாடு சூழ்ந்த மருத நிலப்பக்கம். 1147 3051. வாழிவளர் புறம்பணையின் மருங்குஅணைந்து வரிவண்டு சூழும்மலர் நறும் தீபதூ பங்களுடன் தொழுது காழிநகர் சேர்மின்எனக் கடைமுடிந்த திருப்பதிகம் ஏழிசையினுடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார். 1148 3052. சேண்உயர்ந்த திருத்தோணி வீற்றிருந்த சிவபெருமான் தாள் நினைந்த ஆதரவின் தலைப்பாடு தனை உன்னி நீள் நிலைக் கோபுரம் அணைந்து நேர் இறைஞ்சிப் புக்குஅருளி வாள் நிலவு பெரும் கோயில் வலம்கொண்டு முன் பணிந்தார். ஆதரவின் தலைப்பாடுதனை உன்னி - விருப்பின் நேர்படுதலை நினைந்து. வாள் நிலவு - ஒளி விளங்குகின்ற. 1149 3053. முன் இறைஞ்சித் திருவருளின் முழுநோக்கம் பெற்று ஏறிப் பொன் இமயப் பாவையுடன் புணர்ந்து இருந்த புராதனரைச் சென்னி மிசைக் குவித்த கரம் கொடுவிழுந்து திளைத்துஎழுந்து மன்னு பெருவாழ்வு எய்தி மனம் களிப்ப வணங்குவார். 1150 3054. பரவு திருப்பதிகங்கள் பலவும் இசையினில் பாடி விரவிய கண்அருவி நீர் வெள்ளத்தில் குளித்தருளி அரவு அணிந்தார் அருள்பெருகப் புறம்எய்தி அன்பருடன் சிரபுரத்துப் பெருந்தகையார்தம் திருமாளிகை சேர்ந்தார். 1151 3055. மாளிகையின் உள்அணைந்து மறையவர்கட்கு அருள்புரிந்து தாள்பணியும் பெரும் கிளைக்குத் தகுதியினால் தலைஅளி செய்து ஆளுடைய தம்பெருமான் அடியவர்களுடன் அமர்ந்து நீளவரும் பேரின்பம் மிகப்பெருக நிகழும் நாள். 1152 3056. காழிநாடு உடையபிரான் கழல்வணங்கி மகிழ்வுஎய்த ஆழியினும் மிகப்பெருகும் ஆசையுடன் திரு முருகர் வாழிதிரு நீலநக்கர் முதல் தொண்டர்மற்று எனையோர் சூழு நெடுஞ்சுற்றமுடன் தோணிபுரம் தொழுது அணைந்தார். கடலினும் மிகப்பெருகும் ஆசையுடன். 1153 3057. வந்தவரை எதிர்கொண்டு மனம்மகிழ்ந்து சண்பையர்கோன் அந்தம்இல் சீர்அடியார்கள் அவரோடும் இனிது அமர்ந்து சுந்தரஆர் அணங்கினுடன் தோணியில் வீற்றுருந்தாரைச் செந்தமிழின் பந்தத்தால் திருப்பதிகம் பலபாடி. செந்தமிழ்த் தொடையால். 1154 3058. பெருமகிழ்ச்சியுடன் செல்லப் பெருந்தவத்தால் பெற்றவரும் மருவுபெருங் கிளைஆன மறையவரும் உடன்கூடித் திருவளர் ஞானத் தலைவர் திருமணம்செய்து அருளுதற்குப் பருவம் இது என்று எண்ணி அறிவிக்கப் பாங்கு அணைந்தார். 1155 3059. நாட்டுமறை முறையொழுக்கம் ஞானபோன கருக்கும் கூட்டுவது மனம் கொள்வார் கோதுஇல் மறைநெறிச் சடங்கு காட்டவரும் வேள்விபல புரிவதற்கு ஓர்கன்னிதனை வேட்டருள வேண்டும் என விண்ணப்பம் செய்தார்கள். நாட்டும் - நாட்டப்படும். வேட்டருள - மணஞ் செய்ய. யாகங்கள் செய்வதற்கு மனைவி வேண்டற்பாலள் என்பது அறிவிக்கப் பட்டது. 1156 3060. மற்றுஅவர்தம் மொழிகேட்டு மாதவத்தின் கொழுந்து அனையார் சுற்றம்உறு பெரும் பாசத் தொடர்ச்சிவிடு நிலைமையராய்ப் பெற்றம் உயர்த்தவர் அருள்முன் பெற்றதனால் இசையாது முற்றியது ஆயினும் கூடாது என்று அவர்முன் மொழிந்தருள. திருவருள் ஆணைப்படி திருஞானசம்பந்தர் உலகுய்யப் போந்தவர். அவர் எதன் பொருட்டுப் போந்தாரோ, அது முற்றுப் பெற்றது. இனி அவர் முன்னை நிலைக்கு எழுதல் வேண்டும். அது பற்றியே சுற்றமுறு. . . . .நிலைமையராய். . . . . இசையாது. . . . .கூடாது என்றார் போலும். 1157 3061. அருமறையோர் அவர்பின்னும் கைதொழுது அங்கு அறிவிப்பார் இருநிலத்து மறைவழக்கம் எடுத்தீர்நீர் ஆதலினால் வருமுறையால் அறுதொழிலின் வைதிக மாநெறி ஒழுகும் திருமணம் செய்தருளுதற்குத் திருவுள்ளம் செய்யும் என. அறு தொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். வைதிகம் - வேத சம்பந்தம். 1158 3062. மறைவாழ அந்தணர்தம் வாய்மை ஒழுக்கம் பெருகும் துறைவாழச் சுற்றத்தார் தமக்கருளி உடன்படலும் பிறைவாழும் திருமுடியின் பெரும்புனலோடு அரவு அணிந்த கறைவாழும் கண்டத்தார்தமைத் தொழுது மனம் களித்தார். மறையொழுக்கம் பற்றி அந்தணர்கள் செய்த வேண்டுதலை முன்னிட்டும், இயற்கை வாழ்வு வளம்பெறத் தாம் போந்தமையை உன்னியும், அவ்வியற்கை வாழ்வினைச் செயலிற் காட்டுதல் வேண்டியும் பிள்ளையார் மணவினைக்கு உடன்பட்டாரென்க. 1159 3063. திருஞான சம்பந்தர் திருவுள்ளம் செய்ததற்குத் தருவாய்மை மறையவரும் தாதையரும் தாங்குஅரிய பெருவாழ்வு பெற்றாராய்ப் பிஞ்ஞகனார் அருள் என்றே உருகாநின்று இன்பம் உறும்உள மகிழ்ச்சி எய்துவார். 1160 3064. ஏதம் இல்சீர் மறையவரின் ஏற்றகுலத்தோடு இசைவால் நாதர் திருப்பெரு மணத்து நம்பாண்டர் நம்பி பெறும் காதலியைக் காழிநாடு உடையபிரான் கைப்பிடிக்கப் போதும் அவர் பெருந்தன்மை எனப்பொருந்த எண்ணினார். நாதர் திருப்பெருமணத்து - சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருநல்லூர்த் திருப்பெருமணத்திலே. போதும் - இயையும். 1161 3065. திருஞான சம்பந்தர் சீர்பெருக மணம்புணரும் பெருவாழ்வு திருத்தொண்டர் மறையவர்கள் மிகப்பேண வருவாரும் பெருஞ்சுற்றும் மகிழ்சிறப்ப மகள் பேசத் தருவார் தண்பணைநல்லூர் சார்கின்றார் தாதையார். தருஆர்தண்பணை - மரங்கள் நிறைந்த குளிர்ந்த வயல் சூழ்ந்த; தருஆர் தண்பணை என்பது பெண்மையின் தண்மையைக் குறிப்பது. 1162 3066. மிக்க திருத்தொண்டர்களும் வேதியரும் உடன்ஏகத் திக்குநிகழ் திருநல்லூர்ப் பெருமணத்தைச் சென்று எய்தத் தக்கபுகழ் நம்பாண்டார் நம்பிதாம் அது கேட்டுச் செக்கர் முடிச் சடையார்தம் திருப்பாதம் தொழுது எழுவார். 1163 3067. ஒப்பு அரிய பேர் உவகை ஓங்கி எழும் உள்ளத்தால் அப்பு நிறைகுடம் விளக்கும் மறுகுஎல்லாம் அணிபெருக்கிச் செப்பு அரிய ஆர்வம்மிகு பெருஞ் சுற்றத்தொடும் சென்றே எப்பொருளும் எய்தினேன் எனத்தொழுதுஅங்கு எதிர் கொண்டார். நீர் நிறைந்த குடங்களாலும் விளக்குகளாலும் வீதிகளை யெல்லாம் அலங்காரஞ் செய்து. 1164 3068. எதிர்கொண்டு மணி மாடத் தினில் எய்தி இன்பம்உறு மதுரமொழி பலமொழிந்து வரன்முறையால் சிறப்பு அளிப்பச் சதுர்முகனின் மேலாய சண்பை வருமறை யவரும் முதிர் உணர்வின் மாதவரும் அணைந்த திறம்மொழி கின்றார். 1165 3069. ஞானபோன கருக்கு நல்தவத்தின் ஒழுக்கத்தால் ஊனம்இல் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என ஆனபேறு அந்தணர் பால் அருள் உடைமையாம் என்று வான் அளவு நிறைந்த பெருமனமகிழ்ச்சியொடு மொழிவார். இவ்வாறாகிய பேறு இவ்வந்தணர்பால். . . . . 1166 3070. உம்முடைய பெருந்தவத்தால் உலகு அனைத்தும் ஈன்று அளித்த அம்மை திருமுலைப்பாலில் குழைந்த ஆர் அமுது உண்டார்க்கு எம்முடைய குலக்கொழுந்தை யாம் உய்யத் தருகின்றோம் வம்மின் என உரைசெய்து மனம் மகிழ்ந்து செல விடுத்தார். 1167 3071. பேர் உவகையால் இசைவு பெற்றவர் தாம் மீண்டு அணைந்து கார் உலவு மலர்ச்சோலைக் கழுமலத்தை வந்து எய்திச் சீர்உடைய பிள்ளையார்க்கு அவர் நேர்ந்தபடி செப்பிப் பார்குலவும் திருமணத்தின் பான்மையினைத் தொடங்குவார். 1168 3072. திருமணம் செய்கலியாணத் திருநாளும் திகழ்சிறப்பின் மருவிய ஓரையும் கணித மங்கல நூலவர் வகுப்பப் பெருகுமண நாளோலை பெருஞ் சிறப்பினுடன் போக்கி அருள்புரிந்த நல் நாளில் அணிமுளைப்பா லிகைவிதைத்தார். ஓரை - முகூர்த்தம்; இலக்கினம். 1169 3073. செல்வம்மலி திருப்புகலிச் செழுந்திரு வீதிகள் எல்லாம் மல்குநிறை குடம் விளக்கு மகர தோரணம் நிரைத்தே எல்லை இலா ஒளி முத்துமாலைகள் எங்கணும் நாற்றி அல்குபெருந் திருஓங்க அணிசிறக்க அலங்கரித்தார். அல்கு - தங்கும். 1170 3074. அருந்தவத்தோர் அந்தணர்கள் அயல் உள்ளோர் தாம் உய்யப் பொருந்து திருநாள் ஓலை பொரு இறந்தார் கொண்டு அணையத் திருந்து புகழ் நம்பாண்டார் நம்பி சிறப்பு எதிர்கொண்டு வரும்தவத்தால் மகள் கொடுப்பார் வதுவை வினை தொடங்குவார். பொருவிறந்தார் - ஒப்பில்லாதவர் குற்றமில்லாதவருமாம். 1171 3075. மன்னு பெருஞ் சுற்றத்தார் எல்லாரும் வந்துஈண்டி நல்நிலைமைத் திருநாளுக்கு எழுநாள் ஆம் நல் நாளில் பல்மணி மங்கல முரசம் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்பப் பொன்மணிப் பாலிகை மீது புனிதமுளை பூரித்தார். 1172 3076. சேண் உயரும் மாடங்கள் திருப்பெருகு மண்டபங்கள் நீள் நிலைய மாளிகைகள் நிகர்இல் அணிபெற விளக்கிக் காணவரும் கைவண்ணம் கவின் ஓங்கும் படி எழுதி வாள் நிலவு மணிக்கடைக்கண் மங்கலக் கோலம் புனைந்து. காண. . .எழுதி - கண்டு மகிழத்தக்க கைத்தொழிலாகிய உரு வங்களை அழகுபெற வரைந்து. வாள். . .கடைக்கண் - ஒளி விளங்கும் மணிகளையுடைய வாயிற்படியில். 1173 3077. நீடுநிலைத் தோர ணங்கள் நீள்மறுகு தொறும் நிரைத்து மாடு உயரும் தொடி மாலை மணிமாலை இடைப்போக்கிச் சேடுஉயரும் வேதிகைகள் செழுஞ்சாந்து கொடு நீவிப் பீடுகெழு மணிமுத்தின் பெரும்பந்தர் பலபுனைந்தார். மாடு - பக்கங்களில். சேடு. . .நீவி - திரண்டு உயர்ந்த திண்ணை களில் செழுஞ்சாந்துபூசி. பீடுகெழு - பெருமை பொருந்திய. 1174 3078. மன்றல் வினைத்திரு முளைநாள் தொடங்கி வருநாள் எல்லாம் முன்றில் தொறும் வீதிதொறும் முகநெடு வாயில்கள் தொறும் நின்று ஒளிரும் மணிவிளக்கு நிறைவாசப் பொன்குடங்கள் துன்றி சுடர்த்தாமங்கள் தூபங்கள் துதைவித்தார். மன்றில் வினை - திருமண வினைக்கு. முன்றில்தொறும் - முற்றங்கள் தோறும். துன்று சுடர்த் தாமங்கள் - நெருங்கி ஒளி காலும் கற்பக மாலைகள். துதைவித்தார் - நெருங்கவைத்தார்கள். 1175 3079. எங்கணும் மெய்த்திருத் தொண்டர் மறையவர்கள் ஏனையோர் மங்கலநீள் மணவினை நாள் கேட்டு மிகமகிழ்வு எய்திப் பொங்குதிருப் புகலிதனில் நாடோறும் புகுந்து ஈண்ட அங்கண் அணைந்தவர்க்கு எல்லாம் பெரும்சிறப்பு மிக அளித்தார். 1176 3080. மங்கல தூரிய நாதம் மறுகுதொறும் நின்று இயம்பப் பொங்கிய நான்மறை ஓசை கடல்ஓசை மிசைப் பொலியத் தங்குநறும் குறை அகிலின் தழைத்த செழும் புகையினுடன் செங்கனல் ஆகுதிப் புகையும் தெய்வவிரை மணம் பெருக. மங்கல. . .இயம்ப - மங்கல வாத்தியங்கள் தெருவுதோறும் நிலையாக முழங்க. 1177 3081. எண் திசையின் உள்ளோரும் ஈண்டு வளத்தொடு நெருங்கப் பண்டம் நிறைசாலைகளும் பலவேறு விதம் பயில மண்டு பெருநிதிக் குவைகள் மலைப்பிறங்கல் என மலிய உண்டிவினைப் பெருந்துழனி ஓவாத ஒலி ஓங்க. ஈண்டு - திரண்ட. பயில - நெருங்க. மண்டு - மிகுந்த. மலைப் பிறங்கல் என - மலைப் பெருக்குப்போல. துழனி - ஓசை. ஓவாத - நீங்காத. 1178 3082. மாமறை நூல்விதிச் சடங்கில் வகுத்த முறைநெறி மரபின் தூமண நல்உப கரணம் சமைப்பவர் தம்தொழில் துவன்றத் தாமரையோன் அனையபெருந் தவமறையோர் தாம் எடுத்த பூமருவு பொன் கலசப் புண்ணிய நீர் பொலிவு எய்த. தூய மணத்துக்குரிய நல்ல உபகரணங்கள். துவன்ற - நிறைய. தாமரையோன் அனைய - பிரமனைப் போன்ற. 1179 3083. குங்குமத்தின் செழுஞ்சேற்றின் கூட்டமைப்போர் இனம் குழுமப் பொங்குவிரைப் புதுக்கலவைப் புகைஎடுப்போர் தொகைவிரவத் துங்கநறும் கர்ப்பூரச் சுண்ணம் இடிப்போர் நெருங்க எங்கும் மலர்ப்பிணை புனைவோர் ஈட்டங்கள் மிகப்பெருக. கலவைப் பொருள் பலவற்றாலாகிய புகை. மலரால் பிணையல் மாலை கட்டுவாரது கூட்டங்கள். 1180 3084. இனைய பலவேறு தொழில் எம்மருங்கும் நிரைத்து இயற்றும் மனைவளரும் மறுகு எல்லாம் மணஅணி செய்மறை மூதூர் நினைவு அரிய பெருவளங்கள் நெருங்குதலால் நிதிக்கோமன் தனை இறைவர்தாம் ஏவச் சமைத்ததுபோல் அமைந்துளதால். மனைகள் ஓங்கும் தெருக்களிலெல்லாம். குபேரனை இறைவர் அனுப்ப அவன் சமைத்ததுபோல். 1181 கலிநிலைத்துறை 3085. மாறு இலாநிறை வளம்தரு புகலியின் மணம்மீக் கூறும் நாளின் முன் நாளினில் வேதியர் குழாமும் நீறுசேர் திருத்தொண்டரும் நிகர் இலாதவருக்கு ஆறு சூடினார் அருள் திருக்காப்பு நாண் அணிவார். நிகரிலாதவருக்கு - திருஞான சம்பந்தருக்கு. அருளுக்கு அறி குறியான திருக்காப்பு; திருக்காப்பு, சக்திக்கு அறிகுறியாதலின் அருட்டிருக்காப்பு என்றார். 1182 3086. வேத வாய்மையின் விதியுளி வினையினால் விளங்க ஓத நீர் உலகியன் முறைஒழுக்கமும் பெருகக் காதல் நீள் திருத் தொண்டர்கள் மறையவர் கவின் ஆர் மாதர் மைந்தர் பொன் காப்பு நாண் நகர்வலம் செய்தார். விதியுளி வினையினால் விளங்க - விதிகள் (முறைமைகள்) செயலால் விளங்க. கவினார் மாதர் - அழகு நிறைந்தமாதர்கள். 1183 3087. நகர்வலம் செய்து புகுந்தபின் நவமணி அணிந்த புகர்இல் சித்திரவிதான மண்டபத்தினில் பொலியப் பகரும் வைதிகவிதிச் சமாவர்த்தனப் பான்மை திகழ முற்றிய செம்மலார் திருமுன்பு சேர்ந்தார். புகரில் சித்திர விதானம் - குற்றமற்ற சித்திரம் அமைந்த மேற் கட்டியுடைய. சமாவர்த்தனம் - சம்சாரத்திற்குட்படுதற்குரிய நிலையை; பிரமசரியத்தை ஒழுங்குபெற முடித்த நிலையை. செம்மலார் (பிள்ளையாரது) திருமுன்பு (மறையோர்கள்) சேர்ந்தார்கள். 1184 3088. செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல்வெண் பரப்பின் வம்பு அணிந்த நீள் மாலைசூழ் மருங்கு உற அமைத்த அம்பொன் வாச நீர்ப் பொன்குடம் அரசிலை தருப்பை பம்புநீள்சுடர் மணிவிளக்கு ஒளிர்தரும் பரப்பில். செம்பொற் பாத்திரத்தில். . . . .வாசனையுடைய நீண்ட மாலைகள். பம்பு - பரவிய. 1185 3089. நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர் வேத கீதமும் விம்மிட விரைகமழ் வாசப் போது சாந்துஅணி பூந்துகில் புனைந்த புண்ணியம் போல் மீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி. வாசமலர், சந்தனம், ஆபரணம், பூந்துகில் ஆகியவற்றை அணிந்த. 1186 3090. ஆர்வம் மிக்குஎழும் அன்பினால் மலர்அயன் அனைய சீர்மறைத் தொழில் சடங்கு செய் திருந்து நூல் முனிவர் பார் வழிப்பட வரும் இரு வினைகளின் பந்தச் சார்பு ஒழிப்பவர் திருக்கையில் காப்பு நாண் சாத்த. 1187 3091. கண்ட மாந்தர்கள் கடிமணம் காண வந்து அணைவார் கொண்ட வல்வினை யாப்பு அவிழ் கொள்கைய ஆன தொண்டர் சிந்தையும் வதனமும் மலர்ந்தன சுருதி மண்டு மாமறைக் குலம்எழுந்து ஆர்த்தன மகிழ்ந்தே. கொண்ட வல்வினை யாப்பு - பற்றிய வலிய வினைக் கட்டு. வதனமும் - முகமும். சுருதிமண்டும் - வேதம் நிறைந்த. 1188 3092. நிரந்த கங்குலின் நிதிமழை விதிமுறை எவர்க்கும் புரந்த ஞானசம்பந்தர் தாம் புல்நெறிச் சமய அரந்தைவல் இருள் அகல வந்து அவதரித்தால் போல் பரந்த பேர்இருள் துரந்துவந்து எழுந்தனன் பகலோன். நிரந்த. . . . .புரந்த - பரந்த இருளனைய கடலினின்றும் எழுந்து பெய்யும் மழைபோல விதிமுறையை எவர்க்கும் ஈந்த. அரந்தை - துன்பமாகிய. துரந்து - நீக்கி. பகலோன் - சூரியன். 1189 3093. அஞ்சிறைச் சுரும்பு அறைபொழில் சண்பை ஆண்டகையார் தம்சிவத் திருமணம் செயத் தவம் செய்நாள் என்று மஞ்சனத் தொழில் புரிந்துஎன மாசு இருள் கழுவிச் செஞ்சுடர்க் கதிர்ப்பேர் அணி அணிந்தன திசைகள். சுரும்பு - வண்டுகள். திருமஞ்சனத் தொழில். 1190 3094. பரம்புதம் வயின் எங்கணும் உள்ள பல்வளங்கள் நிரம்பமுன் கொணர்ந்து எண் திசையவர் நெருங்குதலால் தரம்கடந்தவர் தம்திருக் கல்லியாணத்தின் வரம்புஇல் தன்பயன் காட்டுவத ஒத்தது வையம். பரம்பு தம்வயின் - பெருகிய தம்மிடத்து. 1191 3095. நங்கள் வாழ்வுஎன வரும் திருஞானசம்பந்தர் மங்கலத் திருமண எழுச்சியின் முழக்கு என்னத் துங்கவெண் திரைச் சுரிவளை ஆர்ப்பொடு சூழ்ந்து பொங்கு பேரொளி முழக்குடன் எழுந்தது புணரி. புணரி - சமுத்திரம். சுரிவளை ஆர்ப்பொடு - சுரிசங்கொலி யுடன். 1192 3096. அளக்கர் ஏழும் ஒன்று ஆம் எனும் பெருமை எவ் உலகும் விளக்கும் மாமண விழாவுடன் விரைந்து செல்வன போல் துளக்கு இல் வேதியர் ஆகுதி தொடங்கிடா முன்னம் வளர்க்கும் வேதியில் வலம் சுழித்து எழுந்தது வன்னி. அளக்கர் - கடல் துளக்கில் - கலக்கமில்லாத. வேதியில் - யாக குண்டத்தில். வன்னி - நெருப்பு. 1193 3097. சந்தமென் மலர்த்தாது அணி நீறுமெய் தரித்துக் கந்தம் மேவு வண்டு ஒழுங்குஎனும் கண்டிகை பூண்டு சிந்தைதூய அன்பர்களுடன் திருமணம் போத மந்தசாரியின் மணம் கொணர்ந்து எழுந்தது மருத்து. மருத்து - காற்று. மந்தசாரியின் - மந்தகதியில். சந்த. . .தரித்து - அழகிய மெல்லிய மலர்த்துகளாகிய நீற்றை உடலிற் பூசி. கந்த. . . . . எனும் - திரளாக மேவுகின்ற வண்டுகளின் வரிசை என்னும். திருக் கூட்டச் சிறப்பு: 6. பார்க்க. 1194 3098. எண்திசைத் திறத்து யாவரும் புகலி வந்து எய்தி மண்டும் அத்திருமண எழுச்சியின் அணி வாய்ப்பக் கொண்ட வெண்ணிறக் குரூஉச்சுடர்க் கொண்டல்கள் என்ன வெண்துகில் கொடி நிரைத்தது போன்றது விசும்பு. குரூஉ - கனம்; நிறம்; குரா நிறம். பசுமட் குரூஉத் திரள் போல - புறநானூறு: 32. குரூஉக்கட் பொலை ஏறு - கலித்தொகை: 104, 23; 72. கொண்டல்கள் - மேகங்கள். 1195 3099. ஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான் மூலம் ஆகிய தோணிமேல் முதல்வரை வணங்கிச் சீலம் ஆர்திரு அருளினால் மணத்தின்மேல் செல்வார். ஏல - பொருந்த. 1196 3100. காழி மாநகர் வேதியர் குழாத்தொடும் கலந்து சூழும் அன்பர்கள் ஏனையோர் துதைந்து முன் செல்ல வாழி மாமறை முழங்கிட வளம்பதி வணங்கி நீழல் வெண்சுடர் நிலத்திலச் சிவிகை மேற்கொண்டார். 1197 3101. ஆன வாகனம் ஏறுவார் யாரும் மேற்கொள்ளக் கானம் ஆகிய தொங்கல் பிச்சம் குடை கவரி மேல் நெருங்கிட விசும்பினும் நிலத்தினும் எழுந்த வான துந்தபி முழக்குடன் மங்கல இயங்கள். ஆன - அவரவர்க்கான. யான என்னும் பாடத்துக்குச் சிவிகை என்று பொருள் கொள்க. கானம். . . . .கவரி - கருமையாகிய பீலிக் குஞ்சக்குடையும் சாமரமும். இயங்கம் - வாத்தியங்கள். 1198 அறுசீர் விருத்தம் 3102. சங்கொடு தாரை சின்னம் தனிப்பெரும் காளம் தாளம் வங்கியம் ஏனை மற்றும் மலர்துளைக் கருவி எல்லாம் பொங்கிய ஒலியின் ஓங்கிப் பூசுரர் வேத கீதம் எங்கணும் எழுந்து மல்கத் திருமணம் எழுந்தது அன்றே. வங்கியம் - குழல். 1199 3103. கோதையர் குழல்சூழ் வண்டின் குழாத்தொலி ஒருபால்; கோல வேதியர் வேத வாய்மைமிகும் ஒலி ஒருபால்; மிக்க ஏதல்இல் விபஞ்சி வீணை யாழ்ஒலி ஒருபால்; ஏத்தும் நாத மங்கலங்கள் கீத நயப்புஒலி ஒருபால்; ஆக. ஏதமில் விபஞ்சி வீணை - குற்றமில்லாத விபஞ்சியாகிய வீணை. வீணை வேறு யாழ் வேறு. - திருநாளைப்போவார் புராணம்: 14. குறிப்புப் பார்க்க. 1200 3104. விண்ணினை விழுங்கமிக்க வெண்துகில் பதாகை வெள்ளம்; கண்வெறி படைப்ப மிக்ககதிர் விரிகவரிக் கானம்; மண்ணிய மணிப்பூண் நீடும் அரிசனம் மலிந்த பொற்பின் எண்இலா வண்ணத் தூசின் பொதிப்பரப்பு எங்கும் நண்ண. பதாகை வெள்ளம் - கொடிப் பெருக்கு. வெண் துகிற் பதாகை வெள்ளம் விண்ணினை விழுங்க. கவரிக் கானம் - சாமரக் கூட்டம். கண்வெறி கொள்ளும்படி. மண்ணிய - அலங்கரித்த. அரிசனம். . . . . . தூசின் - மஞ்சள் நிறைந்த அழகுடைய எண்ணில்லாத நிறங்கள் வாய்ந்த பட்டாடைகளின். 1201 3105. சிகையொடு மான்தோல் தாங்கும் கிடையும் ஆசானும் செல்வார்; புகைவிடும் வேள்விச் செந்தீ இல்லுடன் கொண்டு போவார்; தகைவு இலா விருப்பின்மிக்க பதிகங்கள் விளம்பிச் சார்வார்; வகையறு பகையும் செற்ற மாதவர் இயல்பின் மல்க. கிடையும் - வேதம் ஓதும் மாணாக்கர்களும். இல்லுடன் - மனையாளுடன். தகைவு இலா - தடுக்க முடியாத.அறுவகைப்பகையையும்ஒழித்தமாதவர்கள்(பகைஆறு:காமம்,குரோதம்,உலோபம்,மோகம்,மதம்,மார்ச்சரியம்.)1202 3106. அறுவகை விளங்கும் சைவத்து அளவு இலா விரதம்சாரும் நெறிவழி நின்ற வேடம் நீடிய தவத்தி னுள்ளோர் மறுஅறு மனத்தில் அன்பின் வழியினால் வந்த யோகக் குறிநிலை பெற்ற தொண்டர் குழாம் குழாம் ஆகிஏக. அறு வகையாக விளங்குஞ் சைவத்தில்: (அகச் சமயம் ஆறு: சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம்). 1203 3107. விஞ்சையர் இயக்கர் சித்தர் கின்னரர் மிடைந்த தேவர் அஞ்சன நாட்ட ஈட்டத்து அரம்பையர் உடனாய் உள்ளோர் தம் சுடர்விமானம் ஏறித் தழைத்த ஆதரவி னோடு மஞ்சுஉறை விசும்பின்மீது மணஅணி காணச் சென்றார். அஞ்சன. . . . . . . அரம்பையர் - fருமைக்fண்களையுடையTட்டமானnதவப்bபண்கள்.1204 3108. மற்றுஇவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி முற்றஇத் தலத்தி னுள்ளோர் மொய்த்துடன் படரும் போதில் அற்புத நிகழ்ச்சி எய்த அணைதலால் மணமேல் செல்லும் பொற்பமை மணத்தின் சாயை போன்று முன்பொலியச் செல்ல. மற்றிவர் - விஞ்சையர் முதலிய தேவர்கள். மிடைந்து - நெருங்கி. வனப்பின் - அழகின். 1205 3109. தவஅரசு ஆள உய்க்கும் தனிக்குடை நிழற்றச் சாரும் பவம் அறுத்து ஆளவல்லார் பாதம் உள்ளத்துக் கொண்டு புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து சிவனமர்ந் துறையும் நல்லூர்த் திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார். சாரும். . . . . . . பாதம் - சிவனடி; (பவம் - பிறப்பு) 1206 3110. பெருமணக் கோயில் உள்ளார் மங்கலம் பெருகும் ஆற்றால் வருமணத் திறத்தின் முன்னர் வழிஎதிர் கொள்ளச் சென்று திருமணம் புணர எய்தும் சிரபுரச் செம்மலார் தாம் இருள்மணந்து இலங்கு கண்டத்து இறைவர்தம் கோயில் புக்கார். 1207 3111. நாதரைப் பணிந்து போற்றி, நல்பொருள் பதிகம் பாடிக் காதல் மெய்அருள் முன்பெற்றுக் கவுணியர் தலைவர் போந்து வேதியர் வதுவைக் கோலம் புனைந்திட வேண்டும் என்னப் பூதநாயகர் தம்கோயில் புறத்துஒரு மடத்தில் புக்கார். 1208 3112. பொன்குடம் நிறைந்த வாசப் புனித மஞ்சனம் நீராட்டி, வில்பொலி வெண்பட் டாடை மேதக விளங்கச் சாத்தி, நல்திரு உத்தரீய நறும்துகில் சாத்தி, நானப் பல்பல கலவைச் சாந்தம் பான்மையின் அணிந்த பின்னர். வில்பொலி - ஒளி விளங்கும். நானம் - வாசனை. 1209 3113. திருவடி மலர் மேல் பூத்த செழுநகைச் சோதி என்ன மருவிய தரளக் கோவை மணிச்சரி அணையச் சாத்தி விரிசுடர்ப் பரட்டின் மீது விளங்குபொன் சரட்டில் கோத்த பருகுஒளி முத்தின் தாமம் பிறங்கிய தொங்கல் சாத்தி. நகை - விளக்கமுடைய. மருவிய. . . . .சரி - பொருந்திய முத்துக் கோவைகளையுடைய இரத்தின வளையை. முத்தின். . .சாத்தி - முத்தின் வடத்தில் விளங்கிய குஞ்சும் சாத்தி. 1210 3114. தண்சுடர்ப் பரிய முத்துத் தமனிய நாணில் கோத்த கண்கவர் கோவைப் பத்திக் கதிர்க் கடிசூத் திரத்தை வெண்சுடர்த் தரள மாலை விரிசுடர்க் கொடுக்கின்மீது வண் திரு அரையின் நீடுவனப்புஒளி வளரச் சாத்தி. பரிய முத்து - பரு முத்துகளை. தமனிய நாணில் - பொன் நாணில். கடி சூத்திரத்தை - அரைஞாணை. கொடுக்கின் - பின் கச் சத்தின் - வதிரக் கரையில் முத்துக் குறிகள் வரிசையாகப் பொறிக்கப் படுவதுண்டு. அக்கரை, கச்சமாக அமையுமாறு வதிரங் கட்டுவது வழக்கம். அம் முத்துக் குறிகள்மீது கடிசூத்திரத்தைச் சாத்தினரென்க. 1211 3115. ஒளிகதிர்த் தரளக் கோவை உதர பந்தனத்தின் மீது தளிர் ஒளிதுளும்பு முத்தின் சன்ன வீரத்தைச் சாத்தி, குளிர் நிலவு எறிக்கும் முத்தின் பூணநூல் கோவை சாத்தி, நளிர்கதிர் முத்து மாலை நகு சுடர் ஆரம்சாத்தி. உதர பந்தனத்தின் - அரைப்பட்டிகையின். சன்ன வீரத்தை - சன்ன வீரமென்னும் அணியை; சன்ன வீரம் - கழுத்திலிருந்து உந்தி வரை தொங்கும் ஒருவித அணி; இது பதக்கம், வாகுவலயம், வீர சங்கிலி என்றும் வழங்கப்படும். சன்ன வீரத்த கோவை - கம்பன்: கண்ணப்ப நாயனார் புராணம்: 59 பார்க்க. 1212 3116. வாள்விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித் தாள்உறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி, நீள்ஒளி முழங்கைப் பொட்டு நிரைசுடர் வடமும் சாத்தி, தோள்வளைத் தரளப் பைம்பூண் சுந்தரத் தோள்மேல் சாத்தி. வாள் - ஒளி. ஆழி - ஒருவகை மோதிரம். முழந்தாள்வரை நீண்ட தடக்கையில். சரியும் -வளையும். முழங்கைப் பொட்டு - முழங் கையில் அணியும் ஒருவித ஆபரணம். முழங்கைப் பொட்டுடன் வரிசையான மணிவடங்களையும். தோள். . . . .பூண் - தோள் வளையாகிய முத்தா பரணத்தை. 1213 3117. திருக்கழுத்து ஆரம் தெய்வக் கண்டிகை மாலை சேரப் பருத்த முத்து ஒழுங்கு கோத்த படர்ஒளி வடமும் சாத்திப் பெருக்கிய வனப்பின் செல்வி பிறங்கிய திருஆர் காதில் வருக்க வெண்தரளக் கொத்தின் வடிக்குழை விளங்கச் சாத்தி. திருக்கழுத்தில் ஆரமும். . . . .கண்டிகை மாலையுஞ் சேர. . . . . . . .முத்து வடத்தையுஞ் சாத்தி. வனப்பின். . . . . . . . .காதில் - அழகின் அழகு பெருத்த பேரழகு நிறைந்த காதில். வருக்க. . . . .குழை - ஒரு வகை வெண்முத்துக் கொத்துகளையுடைய வடித்த குண்டலத்தை. 1214 3118. நீற்றுஒளி தழைத்துப் பொங்கி நிறைதிரு நெற்றி மீது மேல்பட விரிந்த சோதி வெண்சுடர் எழுந்தது என்னப் பால்படு முத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி, ஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில்வளர் மகுடம் சேர்த்தார். நெற்றிமீது . . . நல்ல முத்தின். . . திரளைச் சாத்தி. 1215 3119. இவ்வகை நம்மை ஆளும் ஏர்வளர் தெய்வக் கோலம் கைவ்வினை மறையோர் செய்யக் கடிகொள் செங்க மலத்தாதின் செவ்விநீள் தாம மார்பர் திருஅடையாள மாலை எவ்உலகோரும் ஏத்தத் தொழுதுதாம் எடுத்துப் பூண்டார். கடி. . . .மார்பர் - வாசனைகொண்ட செந்தாமரைத் தாதுக் களின் அழகுபெருகும் மாலையை அணிந்த மார்பராகிய பிள்ளையார். திரு அடையாள மாலை - உருத்திராக்க மாலை. இம் மாலையை மட்டும் பிள்ளையார் தாமே எடுத்தணிந்துகொண்டது கவனிக்கத்தக்கது. 1216 3120. அழகினுக்கு அணியாம் வெண்ணீறு அஞ்செழுத்து ஓதிச் சாத்திப் பழகிய அன்பர் சூழப் படர்ஒளி மறுகில் எய்தி மழவிடை மேலோர் தம்மை மனம்கொள வணங்கி வந்து முழவு ஒலி எடுப்ப முத்தின் சிவிகை மேற்கொண்ட போது. மறுகில் - தெருவில். 1217 3121. எழுந்தன சங்க நாதம்; இயம்பின் இயங்கள் எங்கும்; பொழிந்தன விசும்பில் விண்ணோர் கற்பகப் புதுப்பூ மாரி; தொழுந்தகை முனிவர் தொண்டர் சுருதியின் வாழ்த்துப் பொங்கி வழிந்தன திசைகள் மீது; மலர்ந்தன உலகம் எல்லாம். இயங்கள் - (மங்கல) வாத்தியங்கள். சுருதியின் - மறை மொழியின். 1218 3122. படர்பெருந் தொங்கல் பிச்சம் பைங்கதிர்ப் பீலிப் பந்தர் அடர்புனை செம்பொன் பாண்டில் அணிதுகில் சதுக்கம் மல்கக் கடலின் மீது எழுந்து நிற்கும் கதிர் நிறை மதியம் போல வடநிரை அணிந்த முத்தின் மணிக்குடை நிழற்ற வந்தார். தொங்கல் - குஞ்சம்; குடையுமாம். பிச்சம் - மடற்பனைக் குழாம் போன்றது; பீலியாற் கட்டப்படுவது. பந்தர் - நீழல். பாண்டில். . . . . . . . . . .மல்க - வட்டமாக அணியப்பெற்ற வதிர விதானங்கள் நெருங்க. 1219 3123. சீர் அணிதெருவின் ஊடு திருமணம் செல்ல முத்தின் ஏர்அணி காளம் சின்னம் இலங்குஒளித் தாரை எல்லாம் பேர் ஒலி பெருக முன்னே பிடித்தன மறைகளோடு தாரணி உய்ய ஞான சம்பந்தன் வந்தான் என்று. 1220 3124. மண்ணினுக்கு இடுக்கண் தீர வந்தவர் திருநாமங்கள் எண்இல பலவும் ஏத்திச் சின்னங்கள் எழுந்தபோது அவ் அண்ணலார் வதுவை செய்ய அலங்கரித்து அணையப் பெற்ற புண்ணிய மறையோர் மாட மங்கலம் பொழிந்து பொங்க. திருநாமங்கள் - பாலறாவாயன், பரசமய கோளரி, முத்தமிழ் விரகன் முதலியன. புண்ணிய மறையோர் மாடம் - நம்பியாண்டார் நம்பியின் மாளிகை. 1221 3125. முற்றும் மெய்ஞ்ஞானம் பெற்ற மூர்த்தியார் செங்கை பற்ற நற்பெருந் தவத்தின் நீர்மை நலம் படைத்து எழுந்த தெய்வக் கற்பகப் பூங்ககொம்பு அன்னார் தம்மையும் காப்புச் சேர்த்துப் பொற்புஉறு சடங்கு முன்னர்ப் புரிவுடன் செய்த வேலை. புரிவுடன் - விருப்பத்துடன். 1222 3126. செம்பொன் செய்வாசிச் சூட்டுத் திருமணிப் புனைபூண் செல்வப் பைம்பொனின் மாலை வேய்ந்த பவளமென் கொடி ஒப்பாரை நம்பன்தன் அருளே வாழ்த்தி நல்எழில் விளங்கச் சூட்டி அம்பொன் செய்தீபம் என்ன அழகு அலங்கரித்து வைத்தார். செம். . . . .சூட்டு - செம்பொன்னாலாகிய நுதலணி மாலை யையும். வேய்ந்த - சூடிய. 1223 3127. மாமறை மைந்தர் எல்லாம் மணத்து எதிர்சென்று மன்னும் தூமலர்ச் செம்பொன் சுண்ணம் தொகு நவமணியும் வீசத் தாமரை மலரோன் போல்வார் அரசிலை தருப்பை தோய்ந்த காமர்பொன் கலசநல் நீர் இருக்குடன் கலந்து வீச. தாமரை மலரோன் போல்வார் - பிரமனையொத்த வேதியர்கள் இருக்குடன் - வேதமந்திர முழக்குடன். 1224 3128. விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளிதழைப்ப வீச மண்ணகம் நிறைந்த கந்த மந்த மாருதமும் வீசக் கண்ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்கள் ஊடு புண்ணிய விளைவு போல்வார் பூம்பந்தர் முன்பு சார்ந்தார். கந்த மந்த மாருதம் - மணங் கமழும் தென்றற் காற்று. ஆர் காமர் - நிறைந்த ஆழகிய. 1225 3129. பொன்அணி சங்கின் வெள்ளம் பொலிவுடன் முழங்கி ஆர்ப்ப மன்னிய தரளப்பத்தி வளர் மணிச் சிவிகை நின்றும் பன்மலர் நறும் பொன் சுண்ணம் பரந்த பாவாடை மீது முன் இழிந்தருளி வந்தார் மூஉலகு உய்ய வந்தார். 1226 3130. மறைக்குலமனையின் வாழ்க்கை மங்கல மகளிர் எல்லாம் நிறைத்த நீர்ப்பொற் குடங்கள் நிரைமணி விளக்குத் தூபம் நறைக்குல மலர்சூழ் மாலை நறுஞ்சுடர் முளைப்பொன் பாண்டில் உறைப்பொலி கலவை ஏந்தி உடன் எதிர்ஏற்று நின்றார். நறைக் குலமலர் - தேன் பொருந்திய உயர்ந்த மலர்கள். பாண்டில் - தட்டுகளையும். உறைப்பொலி கலவை - குழம்பாகப் பொலிவு பெற்றுள்ள பலவுங் கலந்த சாந்தை. 1227 3131. ஆங்குமுன் இட்ட செம்பொன் அணிமணிப் பீடம்தன்னில் ஓங்கிய ஞான வெள்ளம் உள்நிறைந்து எழுவது என்னத் தாங்கிய முத்தின் பைம்பூண் தண்நிலா எறிப்ப ஏறிப் பாங்கு ஒளி பரப்பி நின்றார் பரசமயங்கள் விழ்ந்தார். 1228 3132. எதிர் வரவேற்ற சாயல் இளமயில் அனைய மாதர் மதுரமங்கலம் முன்ஆன வாழ்த்துஒலி எடுப்ப வந்து கதிர்மணிக் கரக வாசக் கமழ்புனல் ஒழுக்கிக் காதல் விதிமுறை வலம்கொண்டு எய்திமேவு நல்வினைகள் செய்தார். கதிர். . . . . .புனல் - ஒளிபொருந்திய அழகிய கமண்டலத்துள்ள வாசனை கமழும் நீரை. 1229 3133. மங்கலம் பொலிய ஏந்தி மாதரார் முன்பு செல்லக் கங்கையின் கொழுந்து செம்பொன் இமவரை கலந்தது என்ன அங்கு அவர் செம்பொன் மாடத்து ஆதி பூமியின் உள்புக்கார் எங்களை வாழ முன்னாள் ஏடு வைகையினுள் இட்டார். ஆதி பூமியினுள் - சிவ பூமியில்; மண இடத்தில். 1230 3134. அகில் நறும் தூபம் விம்ம அணிகிளர் மணியால் வேய்ந்த துகில்புனை விதான நீழல் தூமலர்த் தவிசின் மீது நகில் அணி முத்தமாலை நகைமுக மடவார் வாழ்த்த இகல்இல் சீர் மறையோர் சூழ இனிதின் அங்கு இருந்த வேலை. விம்மகிற் புகையின் மேவி - சிந்தாமணி: 2667. அணி. . . . .மீது அழகு விளங்கும் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட வதிரம் புனைந்த மேற்கட்டியின் நிழலில் தூய மலராசனத்தின்மீது. நகில் - கொங்கையில். இகலில் - மாறுபாடில்லாத; வன்மமில்லாத. 1231 3135. திருமகள் கொடுக்கப் பெற்ற செழுமறை முனிவர் தாமும் அருமையான் முன்செய் மெய்ம்மை அருந்தவ மனைவி யாரும் பெருமகிழ்ச் சியினால் பாதம் விளக்குவார் பிள்ளை யார்முன் உரிமையால் வெண்பால் தூநீர் உடன்எடுத்து ஏந்தி வந்தார். திருப்புதல்வியைப் பிள்ளையாருக்குக் கொடுக்குமாறு பேறு பெற்றார் நம்பியாண்டார் நம்பி. 1232 3136. வந்துமுன் எய்தித் தாம் முன் செய்த மாதவத்தின் நன்மை நந்து நம்பாண்டார் நம்பி ஞானபோன கர்பொன் பாதம் கந்தவார் குழலினார் பொன் கரகநீர் எடுத்து வார்ப்பப் புந்தியால் நினை தியானம் புரிசடையான் என்று உன்னி. நந்து - பெருகும். ஞானசம்பந்தரைச் சிவபிரான் என்று நினைந்து. 1233 3137. விருப்பினால் விளக்கி மிக்க புனித நீர்தலை மேல்கொண்டு பொருப்புஉறு மாடத்து உள்ளும் புறத்துஉளும் தெளித்த பின்னர் உருப்பொலி உதரத்து உள்ளும் பூரித்தார் உவகை பொங்கி அருப்புஉறு கிளைஞர் மேலும் தெளித்தனர் ஆர்வத் தோடும். பொருப்புறு - மலையென உயர்ந்த. உருப்பொலி உதரத் துள்ளும் பூரித்தார் - அழகு பொலியும் வயிற்றினுள்ளும் நிரப்பினார். அரும்புறு. 1234 3138. பெருகுஒளி ஞானம் உண்ட பிள்ளையார் மலர்க்கை தன்னில் மருவுமங்கல நீர்வாசக் கரகம்முன் ஏந்தி வார்ப்பார் தருமுறை கோத்தி ரத்தின் தம்குலம் செப்பி என்றன் அருநிதிப் பாவை யாரைப் பிள்ளையார்க்கு அளித்தேன் என்றார். 1235 3139. நல்தவக் கன்னியார் கை ஞான சம்பந்தர் செங்கை பற்றுதற்கு உரிய பண்பின் பழுதுஇல் நல்பொழுது நண்ணப் பெற்றவர் உடன்பிறந்தார் பெருமணப் பிணை அன்னாரைச் சுற்றம் முன் சூழ்ந்து போற்றக் கொண்டு முன்துன்னினார்கள். பிணையன்னாரை - பெண்மான் போன்றாரை. 1236 3140. ஏகம் ஆம்சிவ மெய்ஞ்ஞானம் இசைந்தவர் வலப்பால் எய்தி நாகம் ஆர் பணப்பேர் அல்குல் நல்தவக் கொழுந்து அன்னாரை மாகம் ஆர் சோதி மல்க மன்னி வீற்றிருந்த வெள்ளை மேகமோடு இசையும் மின்னுக் கொடி என விளங்க வைத்தார். நாகமார் பணம் - பாம்பின் படம் போன்ற. மாகமார் சோதி மல்க - வானத்துள்ள ஒளி நிறைய. 1237 3141. புனித மெய்க்கோலம் நீடு புகலி ஆர்வேந்தர் தம்மைக் குனிசிலைப் புருவ மென்பூங் கொம்பு அனாருடனே கூட நனிமிகக் கண்ட போதில் நல்ல மங்கலங்கள் கூறி மனிதரும் தேவர் ஆனார் கண் இமையாது வாழ்த்தி. 1238 3142. பத்தியின் குயிற்றும் பைம்பொன் பவளக்கால் பந்தர் நாப்பண் சித்திர விதானத்தின் கீழ்ச் செழுந்திரு நீல நக்கர் முத்தமிழ் விரகர் முன்பு முதன்மறை முறையி னோடு மெய்த்தநம் பெருமான் பாதம் மேவும் உள்ளத்தால் செய்ய. பத்தியில் குயிற்றும் - வரிசையாகச் செய்த. நாப்பண் - நடுவில். மறைச் சடங்குகளை. . . . .உள்ளத்தால் செய்ய. 1239 3143. மறைஒலி பொங்கி ஓங்க மங்கல வாழ்த்து மல்க நிறைவளைச் செங்கை பற்ற நேரிழையவர் முன் அந்தப் பொறை அணி முந்நூல் மார்பர் புகர்இல் வெண்பொரிகை அட்டி இறைவரை ஏத்தும் வேலை எரிவலம் கொள்ள வேண்டி. புகரில். . . . . அட்டி - குற்றமில்லாத வெள்ளிய பொரிகளை நெருப்பில் கையால் பெய்து. 1240 3144. அருப்புமென் முலையி னார்தம் அணி மலர்க்கைப் பிடித்து அங்கு ஒருப்படும் உடைய பிள்ளை யார் திருஉள்ளம் தன்னில் விருப்புறும் அங்கி யாவார் விடை உயர்த்தவரே என்று திருப்பெரு மணத்தை மேவும் சிந்தையில் தெளிந்து செல்வார். திருஞான சம்பந்தர் எல்லாவற்றையுஞ் சிவமாகப் பார்ப்பவர். அக்கினி சிவபெருமானுக்குரிய சிறப்பு வடிவம்.அக்கினியை வலம் வர எழும்போது, திருஞான சம்பந்தர், அக்கினியாவார் சிவபெரு மானே என்று எண்ணலானார். அவ்வெண்ணந் தோன்றியதும் பெருமான் திருநல்லூர்ப் பெருமணத் திருக்கோயிலுக்குச் செல்லுதல் வேண்டுமென்று புறப்படுகிறார். திருமண வேளையில் திருஞான சம்பந்தருக்கு இத்தகைய எண்ணம் தோன்றுவானேன்? திருஞான சம்பந்தர் எது குறித்துப் போந்தனரோ அது முற்றுப் பெற்றது. இனி அவரை அழைத்துக்கொள்ளல் வேண்டும் என்று ஆண்டவன் திருவுள்ளம் பற்றினான். அது திருஞான சம்பந்தர் சிந்தையில் விளங்கலாயிற்றென்க. பாயிரம் முதற் பாட்டு: அலகில் சோதியன் என்பதன் விரிவுரை பார்க்க. 1241 3145. மந்திர முறையால் உய்த்த எரிவலம் ஆக மாதர் தம்திருக் கையைப் பற்றும் தாமரைச் செங்கை யாளர் இந்த இல் ஒழுக்கம் வந்து சூழ்ந்ததே! இவள் தன்னோடும் அந்தம் இல் சிவன்தாள் சேர்வன் என்னும் ஆதரவு பொங்க. நாம் இனி இவ்வுலகத்திலிருத்தல் கூடாது என்னுந் திருவருள் குறிப்பு சிந்தையில் விளங்குகிறது. இச்சமயத்தில் இங்கே இந்த இல்லொழுக்கம் வந்து சூழ்ந்தது. என் செய்வது என்று எண்ணிப் பின்னைத் திருவருள்வழிச் செல்வதே முறை. இவளையும் உடன ழைத்துச் சிவன்தாள்சேர்வன் என்று ஞான சம்பந்தர் உறுதி கொள்ளலானார், பெண் பிறவிக்கு வீடு பேறில்லை என்னுந் திகம்பர ஜைனக் கொள்கையால், உலகுக்கு நேர்ந்த துன்பத்தை யொழிக்கப் போந்த ஞானசம்பந்த வள்ளலார், பெண்ணை வெறுத்துத் தள்ளித் தாம்மட்டும் சிவன்தாள் சேர ஒருப்படுவரோ? பெண்ணி னல்லாளோடு மிருக்கும் பெருமான் நெறியைப் பேணவந்த பெரியார் பெண்ணை வெறுப்பரோ? ஆகவே, இவள் தன்னோடும் அந்தமில் சிவன்தாள் சேர்வன் என்று உறுதிகொண்டாரென்க. ஆதரவு - வேட்கை. 1242 3146. மலர் பெருங்கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ அலகில் மெய்ஞ் ஞானத்து ஒல்லை அடைவுறுங் குறிப்பால் அங்கண் உலகின் எம்மருங்கும் நீங்க உடன் அணைந்தருள வேண்டிக் குலமணம் புரிவித்தார் தம் கோயிலை நோக்கி வந்தார். அலகில் - அளவைக் கெட்டாத. அங்கண் உலகின் எம் மருங்கும் நீங்க என்றது தத்துவக் காரியங்கள் தாமே அவரை விட்டு விலகின என்பதைக் குறிப்பது. திருஞானசம்பந்தர் கர்மத்தைக் கழிக்க உடல் தாங்கினவரல்லர். அவர் உலகின் பொருட்டு உடல் தாங்கினவர். ஆகவே. அவர் கொண்ட மாயா உடல் கர்ம காரியத் தால் உருக்கொண்டதன்று. உலகோர்க்கு உடலாகக் காட்டிய மாயாத் தோற்றம், இப்பொழுது, தானே நீங்குகிறதென்க. சிவத் துடன் அணைந்தருளவேண்டி. . .”; குலமணம் என்றது சாதி மணத்தை. அம்மணம் மேற்கொள்ளவும் திருவருள் ஆணை பெற்ற மையால் புரிவித்தார் (விரும்ப வைத்தவர்) என்றார். குல மணம் என்றமையால் குலத்தை இழித்துக் கூறியவாறாம். 1243 3147. சிவன் அமர்ந்தருளும் செல்வத் திருப்பெருமணத்துள் எய்தித் தவநெறி வளர்க்க வந்தார் தலைப்படும் சார்பு நோக்கிப் பவம் அற என்னை முன்நாள் ஆண்ட அப்பண்பு கூட நவமலர்ப் பாதம் கூட்டும் என்னும் நல்உணர்வு நல்க. தலைப்படுஞ் சார்பு - கூடுந் திருவருள் சார்பை. பவம் அற - பிறவி நீங்க. அப் பண்பு இப்பொழுது கூட. நவமலர் - புதிதாக மலர்ந்த தாமரைப் பூப் போன்ற. நல்க - கூட; அருள எனினுமாம். 1244 3148. காதல் மெய்ப்பதிகம் நல்லூர்ப் பெருமணம் எடுத்துக் கண்டோர் தீதுறு பிறவிப் பாசம் தீர்த்தல் செம்பொருளாக் கொண்டு நாதனே! நல்லூர் மேவும் பெருமண நம்பனே! உன் பாத மெய்ந்நீழல் சேரும் பருவம் ஈது என்று பாட. பருவம் ஈது என்பது வந்த வேலை முடிவையும், இனி உலகிலிருப்பதற்குத் திருவருள் ஆணை இன்மையும் உணர்த்துவது. கல்லூரிப் பெருமணம். . . என்னும் பதிகத்தில், உலகுக்குரிய பெண் ஆண் கூட்டுறவின் இன்றியமையாமையை. இரண்டாம் பாட்டில் . . . . . பாவை நல்லார்கள் - வரு மணங்கூட்டி மணஞ் செய்யும் நல்லூர். . . என்றும், ஏழாம் பாட்டில் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல போதகத்தான் யோகத்தையே புரிந்தானே என்றும் குறிப்பால் உணர்த்தியதை யோர்க. 1245 3149. தேவர்கள் தேவர் தாமும் திருவருள் புரிந்து நீயும் பூவை அன்னாளும் இங்கு உன் புண்ணிய மணத்தின் வந்தார் யாவரும் எம்பால் சோதி இதன் உள் வந்துஎய்தும் என்று மூவுலகு ஒளியால் விம்ம முழுச்சுடர்த் தாணு ஆகி. பருவம் ஈது என்று திருவருள் உணர்த்திய தென்பது ஈண்டு உறுதிப் படுதல் காண்க. திருமணப் பெருநல்லூர்த் திருக்கோயில் முழுவதும் சிவசோதி மயமாக விளங்கியது, திருஞானசம்பந்தரைச் சிவம் அழைப்பதை யுணர்த்துவ தென்க. நீயும் பூவை யன்னாளும் என்னுந் திருவாக்குப் பெண் பிறவிக்கு வீடு பேறில்லை என்னுங் கூற்றை மறுப்பதென்பது வெள்ளிடை மலை. விம்ம - பெருக; நிறைய. சுடர்த்தாணு -சோதிமயமான லிங்கம். 1246 3150. கோயில் உள்பட மேல் ஓங்கும் கொள்கையார் பெருகும் சோதி வாயிலை வகுத்துக் காட்ட மன்னு சீர்ப்புகலி மன்னர் பாயின ஒளியால் நீடு பரஞ்சுடர்த் தொழுது போற்றி மா இருள் ஞாலம் உய்ய வழியினை அருளிச் செய்வார். பாயின - பரவிய. பரஞ்சுடரைத் தொழுது. . . . . 1247 3151. ஞான மெய்ந்நெறி தான் யார்க்கும் நமச்சிவாயச் சொல் ஆம் என்று ஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண் வானமும் நிலனும் கேட்க அருள் செய்து இம்மணத்தில் வந்தோர் ஈனம் ஆம் பிறவி தீர யாவரும் புகுக என்ன. பிள்ளையார் ஐந்தெழுத்தை எல்லார்க்கும் பயன்பட அறி வுறுத்தியது அவரது ஜீவகாருண்யத்தைக் காட்டுவதாகும். 1248 3152. வருமுறைப் பிறவி வெள்ளம் வரம்பு காணாது அழுந்தி உருஎனும் துயரக் கூட்டில் உணர்வு இன்றி மயங்குவார்கள் திருமணத்துடன் சேவித்து முன்செலும் சிறப்பி னாலே மருவிய பிறவிநீங்க மன்னு சோதியின் உள் புக்கார். 1249 கொச்சகக் கலி 3153. சீர் பெருகு நீலநக்கர் திருமுருகர் முதல் தொண்டர் ஏர் கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் சீர் ஆர்திருமெய்ப் பெரும்பாணர் மற்றெனையோர் அணைந்துளோர் பார்நிலவு கிளைசூழப் பன்னிகளோடு உடன்புக்கார். சீர் ஆர் - சீர் நிறைந்த. ஏர்கெழுவு - அழகு அல்லது எழுச்சி பொருந்திய. அவரவரும் தத்தம் பன்னிகளுடன் (பத்தினிகளுடன்) புக்கது சிறப்பாகக் குறிக்கப் பெற்றிருத்தல் கவனிக்கத்தக்கது. 1250 3154. அணிமுத்தின் சிவிகைமுதல் அணிதாங்கிச் சென்றோர்கள் மணிமுத்த மாலை புனைமடவார் மங்கலம் பெருகும் பணிமுற்றும் எடுத்தார்கள் பரிசனங்கள் வினைப்பாசம் துணிவித்த உணர்வினராய்த் தொழுது உடன்புக்கு ஒடுங்கினார். அணி - சின்னங்கள். 1251 3155. ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும் அடியவரும் கூறுமறை முனிவர்களும் கும்பிடவந்து அணைந்தாரும் வேறுதிரு அருளினால் வீடுபெற வந்தாரும் ஈறுஇல்பெரும் சோதியின்உள் எல்லாரும் புக்கதன்பின். 1252 3156. காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் கொண்டு அருளித் தீது அகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர் நாதன் எழில் வளர்சோதி நண்ணி அதன் உள்புகுவார் போதநிலை முடிந்தவழிப் புக்கு ஒன்றி உடன் ஆனார். புகுவார் - புகுவாராய். திருஞான சம்பந்தர் திருவருள் ஆணை வழிநின்று இவ்வுலகை விடுத்து நீங்கினாரே யன்றிப், பெண்ணுடன் வாழ்தலை வெறுத்து நீங்கினாரில்லை. இது காதலியைக் கைப்பற்றிக்கொண்டு. . . . . . . . . . .புக்கொன்றி உடன் ஆனார் என்பதால் வலியுறுத்தப்படுதல் காண்க. போத நிலை - சீவபோத நிலை. ஒன்றியுடனாதல் அத்துவிதப் பேறெய்தலை உணர்த்துவது ஞானசம்பந்தர் மனைவியார் பெயர் சொக்கியார் என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கூறுவர். 1253 3157. பிள்ளையார் எழுந்தருளிப் புக்கதன் பின் பெரும்கூத்தர் கொள்ள நீடிய சோதிக் குறிநிலை அவ்வழி கரப்ப வள்ளலார் தம் பழைய மணக் கோயில் தோன்றுதலும் தெள்ளுநீர் உலகத்தப் பேறு இல்லார் தெருமந்தார். கரப்ப - மறைக்க. சோதியில் புகும் பேற்றை இழந்தவர்கள் மனஞ் சுழன்று வருந்தினார்களென்க. 1254 3158. கண்ணுதலார் திருமேனி உடன்கூடக் கவுணியனார் நண்ணியது தூரத்தே கண்டு நணுகப் பெறா விண்ணவரும் முனிவர்களும் விரிஞ்சனே முதலோரும் எண்இலவர் ஏசறவு தீர எடுத்து ஏத்தினார். விரிஞ்சன் - பிரமன். ஏசறவு - துக்கம். 1255 3159. அருந்தமி ழாகரர் சரிதை அடியேனுக்கு அவர்பாதம் தரும்பரிசால் அறிந்தபடி துதிசெய்தேன் தாரணிமேல் பெருங்கொடையும் திண்ணனவும் பேர்உணர்வும் திருத்தொண்டால் வருந்தகைமைக் கலிக்காமனார் செய்கை வழுத்துவேன். திண்ணனவும் - உறுதிப்பாடும். திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டிலே வளஞ்சிறந்து விளங்கும் பதிகளுள் ஒன்று சீர்காழி. அதற்குப் பன்னிரண்டடு திருப்பெயர்கள் உண்டு. அது கடையுகத்திலும் தோணிபோல் மிதக்கும் பெருமையுடையது. அத்திருப்பதியில் சிவபாத விருதயர் என்றொரு வேதியர் இருந்தார். அவர், பகவதியார் என்ற பெண்மணியைத் திருமணஞ் செய்து இல்லறம் நடாத்திவந்தார். இருவரும் சிவபெருமானி டத்திலும், சிவனடியாரிடத்திலும், திருநீற்றினிடத்திலும் பேரன்பு வாய்ந்தவர். அந்நாளில் தமிழ்நாட்டில் பௌத்தம், சமணம் என்னும் இரு சமயமும் ஆக்கம் பெற்றிருந்தன. மறை நெறியும் திருநீற்று நெறியும் அருகியிருந்தன. அந்நிலை, சிவபாதவிருதயருக்குத் துன்ப மூட்டிற்று. அதனால் அவர் செந்நெறியை ஓம்பவல்ல ஒரு புதல்வரைப் பெற விரும்பினார். அவ்விருப்ப மேலீட்டான், அவர் சிவபெருமானை நோக்கித் தவங்கிடந்தார். அத்தவத்தின் பயனாகப் பகவதியார் கருவுற்றார். கோள்கள் நன்னிலையில் நிற்கும் வேளையில், திருவாதிரைத் திருநாளில், செந்நெறி தழைத்தோங்கவும், தென்னாடு சிறக்கவும், தமிழ் ஆக்கமுறவும், எதிர்காலம் நலம் பெறவும், சராசரங்க ளெல்லாம் சிவம் பெருக்கவல்ல பிள்ளையார் பிறந்தார். பிள்ளைப் பேறு குறித்துச் சிவபாத விருதயர் செய்யத்தக்க கடமைகளைச் செவ்வனே செய்தார். பிள்ளையார் பிறையென வளர்ந்து செங்கீரை யாடினார்; சப்பாணி கொட்டினார்; பிற ஆடல்களையும் புரிந்தார். அவருக்கு மூன்றாம் ஆண்டு உற்றது. அந்நிலையில் அவருக்குப் பண்டை உணர்வு ஒவ்வொரு போது தோன்றுவதாயிற்று. தாம் சிவ பெருமானை விட்டுப் பிரிந்த உணர்வு, தமக்குள் எழும்போதெல்லாம், அவர் வெருக்கொள்வது வழக்கம். சிவபாதவிருதயர் ஒரு நாள் வழக்கம்போல் நீராடப் போனார். பிள்ளையார் அழுதுகொண்டே அவரைத் தொடர்ந்து சென்றார். சிவபாதவிருதயர் திரும்பிப் பார்த்து, முனிவார்போலப் பிள்ளை யாரை விலக்கினார். பிள்ளையார் வீட்டிற்குத் திரும்பினாரில்லை. அவர் கால்கொட்டித் தொடர்ந்தே சென்றார். சிவபாதவிருதயர் அவரை அழைத்துக் கொண்டு போய்ப் பிரம தீர்த்தக் கரையை அடைந்தார். சிவபாதவிருதயர், பிள்ளையாரைக் கரையிலேயே நிறுத்தித் தாம் மட்டும் தீர்த்தத்திலே மூழ்கினார்; மூழ்கி அகம ருஷணம் முதலியன செய்தார். கரையிலிருந்த பிள்ளையார், தந்தையாரைக் காணாது நொடிப் போதுந் தரியாதவரானார். அச்சமயத்தில், சிவபெருமானை வழிபட்ட முன்னுணர்ச்சி அவர்பால் மூண்டெழுந்தது. பிள்ளையார் அழத் தொடங்கினார். கண்மலர்களில் நீர் ததும்புகிறது; கைம் மலர்கள் கண்களைப் பிசைகின்றன; மணியதரம் துடிக்கிறது; பிள்ளையார் அழுகிறார்; முன்னைத் தொடர்புணர்ந்தோ, பிள்ளை மையாலோ அழுகிறார்; திருத்தோணிச் சிகரம் பார்த்துப் பார்த்து அம்மே அப்பா என்று அழுகிறார். தடங்கருணைப் பெருங்கடலாகிய சிவபெருமான், பிள்ளை யாரது பழந்தொண்டைக் கருதி, அவருக்குத் திருவருள் புரியத் திருவுளங்கொண்டார்; கொண்டு, உமையம்மையாருடன் மழ விடைமேல் இவர்ந்து, பொய்கைக் கரை நண்ணினார். சிவ பெருமான், உமையம்மையாரைத் திருநோக்கஞ் செய்து, உன் முலைப்பாலைப் பொற்கிண்ணத்திற் கறந்து இவனுக்கு ஊட்டு என்று கூறியருளினார். உமையம்மையார் அப்படியே சிவஞானப் பாலமுதை ஊட்டிப் பிள்ளையாரின் அழுகையைத் தீர்த்தார். பிள்ளையார், தாய் தந்தையர்களாகிய பராசத்தியாலும் பரம சிவனாலும் ஆளப்பட்டமையால், அவர் ஆளுடைய பிள்ளையார் ஆயினார்; சிவஞானப்பால் உண்டமையால், சிவஞான சம்பந்தர் ஆயினார். சிவபாதவிருதயர் சிறிது பொழுதிலே கடமைகளை முடித்துக் கரை ஏறினார்; பேருணர்ச்சியிற் பொலிகின்ற பிள்ளையாரைப் பார்த்தார்; நீ எவர் பாலை உண்டாய்? என்று வெகுண்டார்; எச்சில் மயங்க உனக்கு இப்பாலைக் கொடுத்தவர் யார்? காட்டு என்று ஒரு சிறிய கோல்கொண்டு ஓச்சினார். ஞானசம்பந்த வள்ளலார் கண்களினின்றும் ஆனந்த அருவி பெருகத் திருக்கை விரலினாலே சுட்டித், தம்முன் காட்சியருளும் அம்மை யப்பனைத் தோடுடைய செவியன் என்று காட்டினார்; அத்திருப்பதிகத்தில், பிழை செய்தவர்களும் தம்மைச் சரணடையின், சிவபெருமான் அவர்களுக்குக் கருணை செய்யும் நீரார் என்னும் உண்மை விளங்க இராவணன் செயலையும், முனைப்பின்றித் தம்மை வழிபடுவோர்க்கு அப்பெருமான் அருளுந் தன்மையர் என்பது விளங்கத் திருமாலும் பிரமனும் அடிமுடி தேடியதையும், அக்காலப் பௌத்த சமண நிலைகளையும் முறையே எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது பாடல்களில் அமைத்து ஓதியருளினார். சிவபெருமான், உமையம்மையாரோடு திருத்தோணிக்கு எழுந் தருளனார். அன்பே உருவாக விளங்கும் ஆளுடைய பிள்ளையார் சிவபெருமானைத் தொடர்ந்து திருக்கோயிலுள்ளே புகுந்தார். சிவபாதவிருதயர் வியப்புற்றார்; பிள்ளையார் அருளிய திருநெறித் தமிழின் பொருளைச் சிந்தித்தார். திருஞானசம்பந்தர் கண்ட காட்சியைச் சிவபாதவிருதயர் எளிதில் காண்டல் இயலுமோ? அஃது அவருக்கு அரிதன்றோ? ஆயினும், அங்கே நிகழ்ந்ததைக் கண்டு, இது தோணியப்பர் திருவருள் என்று அவர் தெளிந்தார்; தெளிந்து பிள்ளையாரைத் தொடர்ந்தார். இந்நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற அடியவர்கள், இத்தகைய அற்புதம் எங்கே நடந்தது! எப்பொழுது நடந்தது!! என்று வியந்து வியந்து, திருக்கோயிலினுள்ளே கூட்டங் கூட்டமாகக் கூடினார்கள். திருஞானசம்பந்தர் ஆண்டவனைத் தொழுது, பதிகம் பாடித் திருக்கோயிலினின்றும் புறப்பட்டார். சிவபாதவிருதயர், பிள்ளை யாரை எடுத்துத் தோள்மீது வைத்துக்கொண்டார். அடியவர்கள் ஆர்க்கிறார்கள். மறைகள் முழங்குகின்றன. பெண்மணிகள் வாழ்த்து கிறார்கள். சிவபாதவிருதயர் திருவீதிவலம் வந்து தமது இல்லம் சேர்ந்தார். திருஞானசம்பந்தர் அன்றிரவு தோணியப்பர் நினைவுடனே துயின்றார்; காலையில் எழுந்து திருக்கோயிலுக்குச் சென்றார்; அம்மையப்பரைத் தொழுதார். அங்கிருந்து அவர் திருக்கோலக்கா நோக்கினார்; திருக்கோலக்காவை அடைந்து, ஆண்டவனைத் தொழுது, திருமுன்னே நின்று, திருக்கையிலே தாள ஒத்தறுத்து, மடையில் வாளை என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அப்பொழுது திருவருளால் ஐந்தெழுத்துப் பொறிக்கப்பெற்ற திருத் தாளம், பிள்ளையார் திருக்கையிலே வந்திறங்கியது. பிள்ளையார்க்கு மகிழ்ச்சி பொங்கித் ததும்பி வழிந்தது. பிள்ளையார் தாளத்தைத் திருமுடியில் வைத்து வழுத்தினார். ஏழிசையுந் தழைத்தோங்கப் பதிகம் பாடினார்; பின்னே சீர்காழி நோக்கி நடக்கலானார். அவர்தந் திருப்பாதம் நோவ நடத்தலைக் கண்ட சிவபாதவிருதயர், அவரைத் தோளின் மேல் ஏற்றிக்கொண்டார். பிள்ளையார் திருத்தோணியை அடைந்து, பூவார் கொன்றை என்னும் திருப்பதிகத்தைப் பாடி, வீடு சேர்ந்தார். m§nf mt® Ó®fhÊ tháfS¡F¤ jkJ ïsik¡ fh£áia tH§» ï‹ó£o tªjh®., பகவதியாரை ஈன்ற திருப்பதியாகிய திருநனிபள்ளியிலும், மற்றப் பதிகளிலும் உள்ள அன்பர்கள், பிள்ளையார் பெருமையைக் கேள்வியுற்றுக் கூட்டம் கூட்டமாகச் சீர்காழியைச் சேர்ந்து, பிள்ளையாரைப் பணிந்து வந்தார்கள். சீர்காழி சிவலோகம் போல் விளங்கலாயிற்று. திருநனிபள்ளி அன்பர்களது வேண்டுகோளுக் கிணங்கிப் பிள்ளையார், அத்திருப்பதிக்கே உளங்கொண்டு, தோணியப்பரைத் தொழுது விடைபெற்றுப் புறப்பட்டார். பிள்ளையாரின் சீறடிகள் தரைமீது நடப்பதைச் சிவபாதவிருதயர் கண்டார். அத்திருவடி களைப் பிறர் தாங்கவும் அவர் மணங்கொள்ளவில்லை. அவரே பிள்ளையாரை எடுத்துத் தோள்மீது வைத்து நடந்தார். திருநனி பள்ளி சமீபித்தது. ஞானசம்பந்தப் பெருமான், அதோ மலர்ச் சோலை தோன்றுகிறது. அப்பதி யாது? என்று கேட்டார். தாதையார் திருநனிப்பள்ளி என்றார். உடனே பெருமான் காரைகள் கூகை என்னுந் திருப்பதிகத்தைப் பாடிக் கொண்டே திருக்கோயிலை அடைந்தார்; திருக்கடைக்காப்பில் நனிபள்ளி உள்க வினைகெடுதல் ஆணை நமதே என்று அருளிச்செய்தார். பிள்ளையார் அத்திருப்பதியிலே சில நாள் தங்கியிருந்தார். அவ்வேளையில் திருத்தலைச்சங்காட்டு அன்பர்கள், தங்கள் பதிக்கு எழுந்தருளுமாறு பிள்ளையாரை வேண்டினார்கள். அவர்கள் வேண்டு கோளுக்கிணங்கிப் பிள்ளையார் அத்திருப்பதிக்கு ஏகினார்; அங்கு ஆண்டவனைத் தொழுது பதிகம் பாடினார்; அங்கிருந்து பல்லவனீச்சரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, தென்திருமுல்லைவாயில் முதலிய திருப்பதிகளுக்குச் சென்று, ஆங்காங்கே தேவாரம் ஓதிச் சீர்காழியை அடைந்தார். மீண்டும் பிள்ளையார் திருமயேந்திரப்பள்ளி, திருக்குருகாவூர் முதலிய திருப்பதிகளுக்குப் போய், ஆண்டவனை வணங்கித் தமிழ்வேதம் அருளித் திரும்பினார். அந்நாளில், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், பிள்ளையார் பெருமையைக் கேட்டு, அவரைக் காணச் சீர்காழி நோக்கினார். அவருடன் அவர்தம் அருமை மனைவியாராகிய மதங்க சூளாமணி யாரும் போந்தார். அவர்கள் வருதலைக் கேள்வியுற்ற திருஞான சம்பந்தர், அவர்களை எதிர்கொண்டார். யாழ்ப்பாணரும், அவர் தம் அருமை மனைவியாரும் காழி வள்ளலார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். காழிப்பெருமான் அவர்களைத் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் புற முன்றில் நின்று, இறைவனைத் தொழுதார்கள். ஞானசம்பந்தர், யாழ்ப்பாணரை நோக்கி, நீர் உங்கள் இறைவற்கு யாழ் வாசியும் என்றார். பாணனார் யாழ் வாசித்தார். பிள்ளையார் மகிழ்வெய்தினார். மற்றவர்கள் அதிசயித் தார்கள். பின்னர்ப் பிள்ளையார், திருநீலகண்ட யாழ்ப்பாணரை அழைத்துச் சென்று, தங்க இடந்தந்து விருந்தளித்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய பாக்களைக் கேட்டு வரம்பிலா இன்பமெய்தினார்; அத் திருப்பாக்களின் இசையை யாழிலே இட்டு வாசித்து மகிழ் வெய்தினார். அவர் பிள்ளையாரைப் பணிந்து, ஐயரே! எனக்கு ஒரு வரந் தருதல் வேண்டும். அடிகளைப் பிரியாது, அடிகள் அருளும் பதிகங்களின் இசையை யாழில் இட்டு வாசித்துக் கொண்டிருத்தல் வேண்டும். இப்பெரு வாழ்வை அடியேற்கு அளித்தருளுக என்று வேண்டினார். அதற்கு ஞானசம்பந்தப் பெருமான் இசைந்தார். அன்று முதல் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் திருஞான சம்பந்தரைப் பிரியாது தமது தொண்டை ஆற்றிவரலானார். ஆளுடையபிள்ளையார்க்குத் திருத்தில்லைமீது சிந்தை நடந்தது. நடக்கவே, அவர், தந்தையாரோடும், திருநீலகண்டயாழ்ப் பாணரோடும் திருத்தொண்டர்கள் புடைசூழப் புறப்பட்டார்; புறப் பட்டுத் தில்லையம்பதியைச் சேர்ந்தார். பிள்ளையார் தில்லைத் திரு வெல்லையைத் தொழுது, திருவீதியை வணங்கித் திருக்கோபுரத்தைக் கும்பிட்டுத் திருமாளிகையை வலம் வந்து, பேரம்பலத்தைப் போற்றிச் சிற்சபையை அடைந்தார்; தில்லைக் கூத்தனைக் கண்டார்; அனலிடைப்பட்ட மெழுகென உருகினார், கற்றாங்கொரியோம்பி என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினர். பின்னர் ஞானசம்பந்த வள்ளலார், படிப்படியாக வெளியே வந்து, தில்லையில் தங்குதற்கு அஞ்சித் திருவேட்களத்துக்குச் சென்றார்; அங்கே சிவபெருமானை வழிபட்டுப் பதிகம் பாடி எழுந்தருளியிருந்தார். அங்கிருந்து கொண்டே அவர் தில்லை போந்து, அம்பலக் கூத்தனைக் கும்பிட்டு வருவார்; இடையே திருக்கழிப்பாலை சென்று திரும்பினார். ஒருநாள், பிள்ளையார், திருவேட்களத்தினின்றும் வழக்கம்போலச் சிற்றம் பலம் நோக்கியபோது, தில்லை மூவாயிரவரும் சிவகண நாதராய் விளங்கியதைக் கண்டார். அக்காட்சியை அவர் யாழ்ப்பாணருக்குங் காட்டினார். அந்தணர்கள் தம்மை வணங்குவதற்கு முன்னமே பிள்ளையார் அவர்களை வணங்கினார். பிறகு பிள்ளையார் திருக் கோயிலுட் புகுந்து, ஆடினாய் நறு நெய்யொடு என்னுந் திருப் பதிகத்தை ஓதி, அதன்கண் தாம் அந்தணர்களைக் கண்டவாறு அமைத்துப் பாடினார். பிள்ளையார், தில்லைக் கூத்தனைத் தொழுது வெளியே வந்தார். அவ்வேளையில், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பிள்ளை யாரை வணங்கி, அடிகளே! அடியேன் பிறந்த பதியாகிய திரு வெருக்கத்தம் புலியூரையும், நிவாநதிக் கரையிலுள்ள பல திருப்பதி களையும் காணத் திருவுளம் பற்றல்வேண்டும் என்று வேண்டினார். ஆளுடைய பிள்ளையார், அவ்வேண்டுதலுக்கு இசைந்து, தந்தை யாரோடும், அடியவர்களோடும் திருவெருக்கத்தம் புலியூரை அடைந்து, ஆண்டவனைத் தொழுதார்; பின்னே, திருமுதுகுன்றஞ் சென்று, திருப்பெண்ணாகடம் போந்தார்; திருத்தூங்கானைமாடக் கோயிலை வணங்கினார்; வணங்கித் திருநெல்வாயில் அரத்துறை காண விரும்பினார்; விரும்பிச் சிவபாதவிருதயர் தோளின்மே லிருத்தலைத் தவிர்த்தார்; சிறிய திருவடிகள் நோவப் பையப்பைய நடந்தார்; ஐந்தெழுத்தை ஓதிக் கொண்டு, மாறன் பாடி என்னும் பதியை அணைந்தார். அப்பொழுது சூரியன் மறைந்தான். அன்றிரவு பிள்ளையார் அப்பதிலேயே தங்கினார். திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளியுள்ள சிவ பெருமான், பிள்ளையார் காலால் நடந்துவந்த வருத்தத்தைத் திருவுள்ளத்திற் கொண்டார். சிவபெருமான், ஒவ்வோர் அந்தணர் கனவிலுந் தோன்றி, ஞானசம்பந்தன் நம்பால் அணைகிறான்; முத்துச் சிவிகையும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும் எடுத்துச் சென்று அவனுக்குக் கொடுங்கள் என்று அருளினார். வேதியர்கள் எல்லாரும் விழித்தெழுந்தனர்; எழுந்து, ஒருங்கே ஆலயத்தில் திரண்டனர். ஆலயத்திலுள்ள அனைவரும் அக்கனவு கண்டு எழுந்தனர். இவரும் அவரும் ஒருங்கே சேர்ந்து ஆச்சரியமுற்றனர். திருப்பள்ளி எழுச்சிக் காலம் வந்தது. அன்பர்கள் திருக்காப்பு நீக்கினார்கள். முத்துச் சிவிகையும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும் காணப்பட்டன. எல்லாரும் அளவிலா ஆனந்த மெய்தினர். வேதியர்கள் வேதகோஷஞ் செய்து கொண்டு, முத்துச் சிவிகை முதலியவற்றைத் தாங்கி, மாறன்பாடிக்குப் புறப்பட்டார்கள். அன்றிரவு சிவபெருமான் ஆளுடைய பிள்ளையார் கனவிலுந் தோன்றி, நம்மாணைப்படி முத்துச்சிவிகை முதலியன உனக்கு வரும்; அவைகளை ஏற்றுக்கொள் என்று அருளிச்செய்தார். திருஞானசம்பந்தப் பெருமான் தாங்கண்ட கனவைத் தந்தை யார்க்கும் மற்றவர்க்குந்தெரிவித்தார்; தெரிவித்து, வெண்ணீறணிந்து அஞ்செழுத்தோதியிருந்தார். சூரியன் உதயமானான். சிவநாம கோஷத்துடன் அரத்துறை அந்தணர்கள் முத்துச் சிவிகை முதலியவற்றைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் பிள்ளை யாரைக் கண்டு வணங்கி, இவை ஆண்டவன் திருவருள்; ஏற்றருள்க என்று முறையிட்டார்கள். திருஞானசம்பந்தப் பெருமான், எந்தை ஈசன் என்னுந் திருப்பதிகத்தைப் பாடித் திருவருளை வியந்தார்; அருள் வடிவாகிய முத்துச் சிவிகையை வலம் வந்தார்; அதை வணங்கினர்; அதிலே ஏறியருளினார். முத்துக்குடை நிழற்றியது; முத்துச் சின்னங்கள், தொடர திருஞானசம்பந்தர் வந்தார்; உல குய்யத் தோன்றிய ஒருவர் வந்தார்; பாலறாவாயர் வந்தார்; ஓதாது ணர்ந்தவர் வந்தார்; பரசமய கோளரி வந்தார் என்று முழங்கினர். பிள்ளையார் திருத்தொண்டர்களுடன் திருஅரத்துறையை அடைந்தார்; முத்துச்சிவிகையை விட்டிறங்கினார்; திருக்கோயிலுள்ளே நுழைந்தார்; ஆண்டவனைத் தொழுதார்; பதிகம் பாடினார்; அப்பதியில் தங்கியிருந்தார்; இடையில் திருநெல் வெண்ணெய் முதலிய திருப்பதிகட்குச் சென்று திரும்பினார். அவருக்குத் திருத்தோணியப்பர் நினைவு தோன்றிற்று. அதனால், அவர் அரத்துறையடிகளை வணங்கி,. விடைபெற்றுப் புறப் பட்டார்; வழியில் திருப்பழுவூர், திருவிசயமங்கை, திருவைகா, திருப்புறம்பயம் முதலிய திருப்பதிகளுக்குப் போய், ஆண்டவனை வழிபட்டுத் திருச்சேய்ஞலூருக்குச் சென்றார். திருச்சேய்ஞலூர் அடியவர்கள் பிள்ளையாரை எதிர் கொண்டார்கள். திருச்சேய்ஞலூர், சண்டேசுர நாயனார் பிறந்த திருப்பதி என்று, பிள்ளையார் முத்துச் சிவிகையினின்றும் இறங்கினார்; அவர் தம்மை எதிர் கொண்ட அடியவர்களுடன் கலந்து நடந்தார்; நடந்து, திருக்கோயிலுட்புகுந்து, சிவ பெருமானைக் கண்டு தொழுதார்; திருப்பதிகத்தில், சண்டேசுர நாயனார் திருத்தொண்டை அமைத்துப் பாடினார். பிள்ளையார், அத் திருப்பதியை விடுத்துத் திருப்பனந்தாள், திருப்பந்தணநல்லூர், திருவோமாம் புலியூர், திருவாழ்கொளிபுத்தூர், திருக்கடம்பூர், திருநாரையூர், திருக்கருப்பறியலூர் முதலிய திருப்பதிகளைக் கண்டு, பதிகம் பாடிச் சீர்காழியை அடைந்தார். பிள்ளையார், முத்துச்சிவிகையின்மேல் எழுந்தருளி வந்த அற்புதத் திருக்காட்சியைச் சீர்காழிவாசிகள் கண்டார்கள்; ஆனந்த பரவசரானார்கள். பிள்ளையார் திருக்கோயிலுட் சென்று தோணி யப்பரைத் தொழுது வீடு சேர்ந்தார்; திருநீலகண்ட யாழ்ப்பாணரை அவர்தம் இருக்கைக்குப் போம்படி விடைகொடுத்து அனுப்பினார். பகவதியார் திருநீற்றுக்காப்புச் சாத்திப் பிள்ளையாரை வணங் கினார். அவருக்கு அருள்புரிந்து பிள்ளையார் இருந்தனர். திருஞானசம்பந்தருக்கு உபநயனப் பருவம் வந்தது. வரவே, பிராமணர்கள் சடங்குகளைச் செய்ய முற்பட்டார்கள். காழிப் பெருமான் வைதிகந்தழைக்க நூலணிந்தார். பிராமணர்கள், நான் மறையோதும் உரிமையைத் தந்தோம் என்று மந்திரங்கள் முழங்கி னார்கள். மறைகளையெல்லாம் ஓதாதுணர்ந்த பெருமான். அப் பிராமணர்களுக்கு எல்லாவித மறைகளையும், அவைகளின் அங்க மாகிய பல கலைகளின் பொருளையும் அறிவுறுத்தினர். பிராம ணர்கள், ஆளுடைய பிள்ளையாரைத் திருவருட்செல்வரென வியந்து, அவரைச் சிவமே என்று கருதி, அவர் திருவடியில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள், தாங்கள் முன் கற்ற வேதங்களையும் பிள்ளையார்பால் கேட்டு ஐயந்தீரப்பெற்றார்கள். பிள்ளையார் அவர்களுக்கு மந்திரங்களையும் உபதேசித்தார்; முடிவில் எல்லா மந்திரங்களுக்குந் தாயகமானது பஞ்சாட்சரம் என்பதை அவர்கள் உணருமாறு துஞ்சலுந்துஞ்சல் என்னுந் திருப்பதிகத்தைப் பாடி அதிலே, வேதியர்க்கந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே என்று அருளிச் செய்தார். பிராமணர்கள் மகிழ்வெய்திப் பிள்ளை யாரை வணங்கிச் சென்றார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞானசம்பந்த சுவாமிகளின் பெருமையைக் கேள்வியுற்றார். கேள்வியுற்றதும், சுவாமிகளைக் காணுதல் வேண்டுமென்னும் பேரவா அவர்தம் உள்ளத்தில் பொங்கி எழுந்தது. அவர் சீர்காழிக்கு எழுந்தருளினார். அவர்தம் வருகையை உணர்ந்த ஆளுடைய பிள்ளையார், அடியவர்களுடன் அவரை எதிர்கொண்டார். இவரை அவர் வணங்கினார்; அவரை இவர் வணங்கினார். இருவரும் திருக்கோயிலுக்குச் சென்றனர்; சென்று ஆண்டவனை வழிபட்டனர். பிள்ளையார், அப்பரைத் தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று அவருக்கு விருந்து செய்தார். அப்பர் சுவாமிகள் சீர்காழியிலே சில நாள் தங்கியிருந்தார். பின்னர், அவர் பிற திருப்பதிகளை வணங்கப் புறப்பட்டார். திருஞான சம்பந்தர் அவருடன் சிறிது தூரம் போய் விடைபெற்றுத் திரும்பினார். பிள்ளையார் சீர்காழியிலே இருந்துகொண்டு, திருமொழி மாற்று, திருமாலைமாற்று, திருவழிமொழி, திருவியமகம், திருவேக பாதம், திருவிருக்குக் குறள், திருவெழு கூற்றிருக்கை, ஈரடிமேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிராகம், திருச்சக்கரமாற்று முதலிய பாமாலைகளைத் தோணியப்பருக்கு அணிந்து வரலானார். இவ்வாறு சில நாள்கள் கழிந்தன. திருஞானசம்பந்த சுவாமிகளுக்குத் தமிழ்நாட்டிலுள்ள பல திருப்பதிகளைக் கண்டு தொழுதல் வேண்டும் என்னும் வேட்கை எழுந்தது. அவ்வேட்கையைத் தந்தையார்க்கும் மற்றவர்க்கும் அவர் தெரிவித்தார். தந்தையாராகிய சிவபாதவிருதயர் பிள்ளையாரைப் பார்த்து, யான் உன்னை அருமையாகப் பெற்றேன்; உன்னைப் பிரிந்திருக்க இசையேன்; இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயக்கவல்ல வேள்வியையும் யான் செய்தல் வேண்டும். ஆதலால் இன்னுஞ் சின்னாள் உன்னைத் தொடர்ந்தே வருவேன் என்றார். அதற்கு ஆளுடையபிள்ளையார் உடன்பட்டார். பிள்ளையார் தோணியப்பரைத் தொழுது, விடைபெற்று, முத்துச் சிவிகையில் ஏறினார். முத்துக்குடை நிழற்றியது; திருச் சின்னங்கள் முழங்கின. தந்தையாரும், திருநீலகண்ட யாழ்ப்பாணரும் உடன் புறப்பட்டார். இச்சிறப்புடன் பிள்ளையார் திருக்கண்ணார் கோயிலுக்குப் போனார். அங்கிருந்து, காவிரியின் வடபாலிலே மேற்குத் திசை நோக்கினார்; நோக்கிச் சென்று, திருப்புள்ளிருக்கு வேளூர், திருநின்றியூர், திருநீடூர், திருப்புன்கூர், திருமண்ணிப்படிக் கரை, திருக்குறுக்கை, திருவன்னியூர், திருப்பந்தண நல்லூர், திருமணஞ்சேரி, திருவெதிர் கொள்பாடி திருவேள்விக்குடி, திருத்துருத்தி, திருக்கோடிகா, திருக்கஞ்சனூர், திருமாந்துறை, திருமங்கலக்குடி, திருவியலூர், திருந்துதேவன்குடி, திருஇன்னம்பர், வடகுரங்காடு துறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், திருமழபாடி, திருக்கானூர், திருஅன்பிலாலந்துறை, வடகரைமாந்து முதலிய திருப்பதிகளுக்குப் போய், அங்கங்கே தேவாரம் பாடினார்; பின்னர் மழநாட்டிற் புகுந்தார். திருஞானசம்பந்தர், காவிரியின் வடகரையே போய், திருப்பாச் சிலாச்சிரமத்தை நோக்கினார். அங்கே கொல்லி மழவன் என்னும் ஓர் அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு புதல்வி உண்டு. அவள் முயலகன் என்னும் நோயால் பீடிக்கப்பட்டாள். அதனால் அரசனுக்குக் கவலையுண்டாயிற்று. மணிமந்திர ஔடத முயற்சிகள் செய்யப் பட்டன. பயன் விளையவில்லை கொல்லிமழவன் சைவ வழி வந்தவனாகையால் அவன் சிவசந்நிதி முன்னே தனது அருமைப் புதல்வியைக் கிடத்தினான். அவ்வேளையில், அவன் திருஞான சம்பந்தர் வருகையைக் கேள்வியுற்றான், நகரை அன்புடன் அலங் கரித்தான்; பிள்ளையாரை எதிர்கொண்டான்; முத்துச்சிவிகை முன்னே விழுந்து வணங்கினான். பிள்ளையார் அவனுக்கு அருள் செய்தார். அவனுடன் பிள்ளையார் திருக்கோயிலுட் சென்றார்; அங்கே உணர்வழிந்து கிடந்த பெண்ணைப் பார்த்தார்; என்ன இது? என்று கேட்டார். கொல்லி மழவன், வள்ளலாரை வணங்கி, இவள் அடியேன் புதல்வி; இவளை முயலகன் என்னும் வெந்நோய் பீடித்திருக்கிறது; அந்நோய் மணிமந்திர ஔடதங்களால் தீர வில்லை; அதனால் இவளைச் சிவசந்நிதி முன்னே கிடத்தியுள்ளேன் என்றான். ஆளுடையபிள்ளையார் சிவபெருமானைச் சிந்தித்து, துணிவளர் திங்கள் என்றெடுத்து, மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே என்று பாடி யருளினார். உடனே அக்கன்னியின் பிணி நீங்கிற்று. கொல்லிமழவன் பெருமகிழ் வெய்திப் புதல்வியோடும் பிள்ளையாரை வணங்கினான். பிள்ளையார் அவர்களுக்கு அருள்செய்து, அங்கே சிலநாள் தங்கி யிருந்தார். பின்னர் அங்கிருந்து திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலிய திருப்பதிகளுக்குச் சென்று, கொங்குநாட்டின் மேற்பால் நோக்கிக் காவிரியின் தென்கரையே சென்று, திருக்கொடிமாடச் செங்குன்றூரைச் சேர்ந்தார்; அங்கிருந்துகொண்டே திருநணா போய்த் திரும்பினார். அந்நாளில் மாரிக் காலம் போய்ப் பனிக்காலம் வந்தது; குளிர் மிகுந்தது. குளிர்சுரத்தின் கொடுமையை அடியவர்கள் பிள்ளை யாருக்குத் தெரிவித்தார்கள். பிள்ளையார், இஃது இந்நிலத்தின் இயல்பு. அது நம்மை ஒன்றுஞ் செய்யாது என்று, அவ்வினைக் கிவ்வினை என்னும் திருநீலகண்டத் திருப்பதிகத்தைப் பாடி யருளினார். அந்நளிர்சுரம், அந்நகரில் மட்டுமன்றி, அந்நாட்டையே விட்டகன்றது. திருஞானசம்பந்தர் சின்னாள் அப்பதியில் தங்கினார்; பின்னர் அங்கிருந்து திருப்பாண்டிக் கொடுமுடி, திருவெஞ்சமாக் கூடல், திருக்கருவூர் முதலிய திருப்பதிகளுக்குப் போய், இறைவனைப் பாடி வழிபட்டார். பின்பு பிள்ளையார், கொங்கு நாட்டை விடுத்தார்; மாணிக்க வெற்பு முதலிய தலங்களைத் தொழுதார். அவர், காவிரியின் தென் கரையை நோக்கிச் சென்று, திருப்பராய்த்துறை, திருவாலந்துறை, திருச்செந்துறை, திருக்கற்குடிமாமலை, திருமூக்கீச்சரம், திருச்சிராப் பள்ளி, திருவானைக்கா, திருத்தவத்துறை, திருப்பாற்றுறை, திருவெறும்பியூர், திருநெடுங்களம், திருக்காட்டுப்பள்ளி, திருவாலம் பொழில், திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருவெண்ணி, திருச்சக்கரப்பள்ளி, திருப்புள்ள மங்கை, திருச்சேலூர், திருப்பாலைத்துறை, திருநல்லூர், திருக்கரு காவூர், திருவளிவணல்லூர், திருப்பரிதி, நன்னியமம், திருப்பூவனூர், திருவாவூர் முதலிய திருப்பதிகளைக் கண்டு, ஆங்காங்கே திருப் பதிகம் பாடினார்; மீண்டும் பிள்ளையார் திருநல்லூருக்குப் போய்த் திருவலஞ்சுழியைச் சேர்ந்தார். அப்போது வேனிற்காலம் வந்தது. பிள்ளையார் திருவலஞ்சுழியை விடுத்துத் திருப்பழையாறை நோக்கினார்; திருவாறை மேற்றாளி, திருச்சத்தி முற்றம் என்னுந் தலங்களுக்குச் சென்று, திருப்பட்டீச்சுரத்துக்குப் புறப்பட்டார். அப்பொழுது வெப்பம் அதிகமாயிருந்தது. அதைத் தணிக்க ஒரு சிவ பூதம், பிள்ளையார் திருமுடிமீது முத்துப்பந்தரைப் பிடித்தது; பிடித்து, இது பட்டீசர் திருவருள் என்று இயம்பிற்று. அவ் வுரையும் முத்துப்பந்தரும் வானத்திலே தோன்றின. ஞானப் பிள்ளையார் புளகாங்கிதங் கொண்டார்; திருவருளை வியந்தார்; பூமியிலே விழுந்து வணங்கினார்; அடியவர்கள் பந்தரின் காம்பைத் தாங்கினார்கள். காழிப்பெருமான் திருப்பட்டீச்சுரத்தை அடைந்து, சிவபெருமானைத் தொழுது தேவாரம் பாடினார். பிறகு பிள்ளையார் அப்பதியை விடுத்துப் புறப்பட்டு, திருவாறைவடதளி, திருவிரும் பூளை, திருவரதைப் பெரும்பாழி, திருச்சேறை, திருநாலூர்மயானம், திருக்குடவாயில், திருநறையூர், தென் திருப்புத்தூர், திருச்சிவபுரம், திருக்குடமூக்கு, திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம், திருக்குடந்தைக் காரோணம், திருநாகேச்சரம், திருவிடைமருதூர், திருக்குரங் காடு துறை முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு, திருவாவடு துறையை அடைந்து அங்கே தங்கலானார். ஒருநாள் சிவபாதவிருதயர் பிள்ளையாரை நோக்கி, வேள்வி செய்யும் காலம் நெருங்கலாயிற்று. அதற்குப் பொருள் தேவை என்றார். திருஞானசம்பந்தர், திருக்கோயிலுட் சென்று, இறைவனுக்குத் தமிழ் மாலை சாத்தினார்; சாத்தினதும், சிவபிரான் திருவருளால் ஒரு பூதம் விரைந்து வந்தது; வந்து பலிபீடத்தின் உச்சியில் ஆயிரம் பொன் கொண்ட ஒரு கிழியை வைத்தது; வைத்துப் பிள்ளையார் திரு முன்னே நின்று,இது பொற்கிழி; இஃது உமக்குச் சிவபிரானால் அருளப்பட்டது என்று சொல்லிற்று. உடனே பிள்ளையார் திரு வருளை வியந்து, பூமியில் விழுந்து வணங்கினார். அப்பொற் கிழியைப் பிள்ளையார் எடுத்துத் தந்தையார்க்குத் தந்து, அவரைச் சீர்காழிக்கு அனுப்பினார். பிள்ளையார் திருவாவடுதுறையை விடுத்துத் திருக்கோழம்பம், திருவைகன்மாடக்கோயில், திருநல்லம், திருவழுந்தூர், திருத்துருத்தி, மூவலூர், திருமயிலாடுதுறை, திருச்செம்பொன்பள்ளி, திருவிளநகர், திருப்பறியலூர், திருவேட்டக் குடி முதலிய திருப்பதிகளுக்குப் போய், ஆங்காங்கே தமிழ்மறை ஓதித் தருமபுரத்தை அணைந்தார். தருமபுரம், திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அன்னையார் பிறந்த திருப்பதி. அத்திருப்பதியிலுள்ள அடியவர்கள் பிள்ளையாரை எதிர்கொண்டார்கள். யாழ்ப் பெரும்பாணர் தஞ் சுற்றத்தவர்களைப் பார்த்து, இப்பெருமான் அருளிச்செய்த திருப்பாக்களின் இசையை யான் யாழிலிட்டு வாசிக்கும் பெரும் பேறுடையேன் என்று கூறினார். அதற்குச் சுற்றத்தவர், நீங்கள் இப்பேற்றை உடைமையால், உலகமெல்லாம் இசை ஓங்குக என்றனர். அவர்தம் உரை, திருநீல கண்டப் பெரும்பாணரை நடுக்குறச் செய்தது. பாணர், ஞான சம்பந்தப் பெருமான் திருவடிகளிலே விழுந்து வணங்கி, பெருமானே! இவர்கள் நல்லறிவு பெறுதல் வேண்டும்; உலகமும் உண்மை யுணர்தல் வேண்டும்; இசை அளவுபடா முறையில் ஒரு திருப்பதிகம் அருளுதல் வேண்டும்; அதை யான் யாழிலிட்டு வாசித்து இசை அடங்காமையைக் காட்டும் பேறு பெறுதல் வேண்டும் என்று வேண்டினார். அவ்வாறே பிள்ளையார், மாதர் மடப்பிடி என்னுந் திருப்பதிகத்தை அருளிச்செய்தார். அதை வழக்கம்போல் யாழ்ப் பெரும் பாணர் தமது யாழிலே அமைத்து வாசிக்கப்புகுந்தார். அஃது அடங்கவில்லை. யாழ்ப்பெரும்பாணர் பிள்ளையாரைப் பணிந்து எழுந்து, இப்பெரியவர் அருளிச் செய்த இவ்யாழன்றோ? இதை யான் தீண்டுதலுங் கூடாது என்று அதை உடைக்க ஓங்கினார். உடனே காழி வள்ளலார், அவரைத் தடுத்து, யாழை வாங்கிக் கொண்டார். நீர் எதற்காக இதை உடைக்க முயன்றீர்? உமாதேவி யாரோடு சிவபிரான் அளித்த திருவருளின் பெருமை இவ்யாழில் அடங்குமோ? சிந்தையிலும் அளவுபடாத ஒன்று செய்கையில் அளவு படுதல் உண்டோ? இக்கருவியைக் கொண்டே இயன்ற அளவு வாசியும் என்று யாழைக் கொடுத்தார். திருநீலகண்டர் பிள்ளை யாரைத் தொழுது யாழை வாங்கிக் கொண்டார். திருஞானசம்பந்தர் தருமபுரத்தை விடுத்துத் திருநள்ளாற்றுக்கு ஏகினார்; அங்கே, போகமார்த்த பூண் முலையாள் என்னுந் திருப் பதிகத்தைப் பாடித் திருச்சாத்தமங்கைக்கு எழுந்தருளினார். அத்திருப்பயிலுள்ள திருநீலநக்க நாயனார், நம் பெருவாழ்வை எதிர் கொண்டார். பிள்ளையார், நாயனாரோடு அயவந்தி என்னுந் திருக்கோவிலுக்குப் போய்க் கடவுளைத் தொழுதார்; நாயனார் அழைப்புக் கிணங்கி அவர்தம் இல்லம் போந்து அமுதுண்டார்; அன்றிரவு அங்கே தங்க, அடுத்த நாள் மீண்டுந் திருக்கோயிலுக்குச் சென்று, திருமலர்க் கொன்றை என்னுந் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அதன்கண் நாயனாரைச் சிறப்பித்துக் கூறினார். பின்னர் அவ்விடத்தினின்றும் பிள்ளையார், திருநாகைக்காரோணம், திருக்கீழ்வேளூர் முதலிய திருப்பதிகளை அடைந்து, பதிகம் பாடி, மற்றும் பல திருப்பதிகளைக்காண எழுந்தருளினார். அவ் வேளையில் சிறுத்தொண்ட நாயனார் பிள்ளையாரை எதிர் கொண்டார். அந்நாயனார் வேண்டுகோளுக்கிணங்கி, ஞான சம்பந்தப் பெருமான், திருச்செங்காட்டங்குடிக்குப் போனார்; அங்குள்ள கணபதீச்சுரம் என்னுந் திருக்கோயிலினுள் நுழைந்து, பைங்கோட்டு மலர்ப்புன்னை என்னுந் திருப்பதிகத்தை ஓதி, அதிலே நாயனாரைச் சிறப்பித்தார். அத்திருப்பதியில் சில நாள் தங்கி நாயனாரின் விருந்தினராயிருந்தார்; அங்கிருந்து புறப்பட்டுத் திருமருகல் என்னுந் திருப்பதியை அடைந்து, இறைவனை வழிபட்டு வந்தார். திருமருகல் திருக்கோயிற்புறத்தே ஒரு மடம் உண்டு. அம் மடத்திலே ஒருநாள் ஒரு வணிகன் ஒரு கன்னியோடு போந்தான். அன்றிரவு அவன் அங்கே துயின்றான். அச்சமயத்தில் ஒரு பாம்பு அவனைத் தீண்டிற்று. அவன் இறந்தான். அருகிருந்த கன்னி, அவனைத் தீண்டாமலே கதறலானாள். அவள் கதறுதலைக் கேட்டு, மாந்திரிகர்களிற் சிலர் மனம் பொறாது ஓடிவந்தனர். அவர்கள் மணி மந்திர ஔஷதங்களைப் பிரயோகித்துப் பார்த்தார்கள். விடம் இறங்கவில்லை. கன்னியானவள், வணிகர் குலமணியே! அன்னையையும் அத்தனையும் பிரிந்தேன்; உன்னையே அடைவாகக் கொண்டேன்; உடன் போந்தேன்; நீயோ அரவால் மாண்டாய். யான் என் செய்கேன்! இவ்விடுக்கண் தீர்ப்பார் யாவர்? யான் எப்படி உயிரோடு வாழ்வேன்! என்று புலம்பினாள். அதற்குமேல் அவள் என் செய்வாள்! திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை, அவள் திருக் கோயிலை நோக்கி, ஆண்டவனே! இவ்வேழையைக் காவாயோ? பாற்கடலில் எழுந்த நஞ்சை உண்டாய்; தேவர்களைக் காத்தாய்; அரி அயனுக்கு அறியொணா மறைப்பொருளே! மன்மதனை நீறாக் கினாய்; அவன் மனைவி வேண்டஅவனுக்கு உயிரை நல்கினாய்; காலனை உதைத்தாய்; மார்க்கண்டருக் கருள் செய்தாய்; ஏழைக் கருள் செய்யாயோ? என்னாருயிரே! அமுதே! கருணைக்கடலே! மருகற் பெருமானே! என்று வேண்டிப் புலம்பினாள். அப்புலம்பல் ஓசை, திருஞானசம்பந்த சுவாமிகளுக்குக் கேட்டது. கருணைக்கடலாகிய காழி வள்ளலார், அக்கன்னியின் துயர் தீர்க்க எழுந்தருளி வந்தார். அவர் அவளைப் பார்த்து, நீ சிறிதும் அஞ்சாதே. நிகழ்ந்ததென்ன? என்று கேட்டார். அவள், பிள்ளையாரை வணங்கி, அடிகளே! என் தகப்பன் வைப்பூருக்குத் தலைவன்; அவன் தாமன் என்னும் பெயருடையவன்; அவனுக்குப் புத்திரிகள் எழுவர்; இவன் அவன்தன் மருகன்; மூத்த புத்திரியை இவனுக்குத் திருமணஞ் செய்விக்க என் தந்தை உறுதிமொழி கூறினான்; பின்னே வேறொருவனிடம் பெரும்பொருள் பெற்று அவளை அவனுக்குக் கொடுத்தான்; இரண்டாம் புத்திரியை இவனுக்குக் கொடுப்பதாகச் சொன்னான்; அவளையும் அயலானுக்கே கொடுத்தான். இவ்வாறு ஏமாற்றி ஏமாற்றி மற்ற நான்கு புத்திரி களையும் அயலாருக்கே மணஞ்செய்வித்தான். இவன் நிலைகண்ட யான், இவனோடு போந்தேன். இது தாய் தந்தையர்களுக்குத் தெரியாது. இவனோ இங்கே பாம்பின் வாய்ப்பட்டு மாண்டான். நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்துவிட்டது! என்னிலை இதுவாகும். சுற்றம்போல எழுந்தருளி வந்தீர்; அருள்செய்தீர். என்று கூறினாள். திருஞானசம்பந்தர். திருமருகற் பெருமானைச் சிந்தித்து, சடையாய் எனுமால் என்னுந் திருப்பதிகத்தை அருளிச் செய்தார். உடனே வணிகன் உயிர்பெற்றெழுந்தான். எழுந்து பிள்ளையாரை வணங்கி நின்றான். அன்பர்கள் ஆரவாரித்தார்கள். இளம்பெண் எல்லை யில்லா ஆனந்தம் எய்தினாள்; பிள்ளையாரைத் தொழுதாள். ஞானசம்பந்தப் பெருமான், அவ்விருவர்க்கும் மணஞ்செய்வித்தார். பின்னே பிள்ளையார் அவர்களுக்கு விடைகொடுத்து, அத் திருப்பதியில் எழுந்தருளியிருந்தார். சிறுத்தொண்ட நாயனார், திருஞானசம்பந்தர்பால் அணைந்து, மீண்டுந் தம்பதிக்கு எழுந்தருளுமாறு வேண்டினார். பிள்ளையாரும் உடன்பட்டுத் திருச்செங்காட்டங்குடிக்குச் சென்றார். அங்கே சிவபெருமான், தமது திருமருகல் திருக்கோலத்தைக் கணபதீச் சுரத்தில் காட்டியருளினார். காழிப்பெருமான் அங்கமும் வேதமும் என்னும் அருமைத் திருப்பதிகத்தை ஓதி, அங்கே தங்கியிருந்தார். சிலநாள் சென்ற பின்னர், ஆளுடைய பிள்ளையார் அத்திருப்பதி யினின்றும் புறப்பட்டார். சிறுத்தொண்ட நாயனார் அவரைத் தொடர்ந்தே சென்றார். காழிப்பெருமான் அவருக்கு விடையளித்துப் பல திருப்பதிகளைக் கண்டு தொழுது, திருப்புகலூரை அடைந்தார். திருப்புகலூரில் புஷ்பத் திருத்தொண்டு செய்து, அன்புநெறி ஓம்பிவரும் முருகநாயனார், பிள்ளையாரை எதிர்கொண்டார். பிள்ளையார், அவருடன் திருக்கோயிலுக்குச் சென்று, கடவுளைத் தொழுது, திருமடத்திற்கு எழுந்தருளினார்; அங்கே முருகநாயனார் விருந்தினராய் அமர்ந்திருந்தார். ஒருநாள் வழக்கம் போலத் திருக்கோயிலுக்குப் போய், முருகநாயனார் திருத்தொண்டைச் சிறப்பித்து, ஈசன் ஏறமர் கடவுள் என்னுந் திருப்பதிகத்தைப் பாடி யருளினார். அவ்வேளையில், திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாரூரி னின்றும் புறப்பட்டுத் திருப்புகலூரை நோக்கிவந்தார். அவர்தம் வருகையைக் கேள்வியுற்ற ஆளுடைய பிள்ளையார் அவரை எதிர் கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி, நலம் வினவிக் கொண்டனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரை நோக்கி, நீர் திரு வாரூரை எவ்வகையில் தொழுது உய்ந்தீர்? என்று கேட்டார். திருநாவுக்கரசர், தாங்கண்ட திருவாதிரைத் திருநாட் சிறப்பைத் திருப்பதிகம் வாயிலாக விளக்கிக் காட்டினார். திருஞான சம்பந்த ருக்குத் திருவாரூர் வேட்கை எழுந்தது. அவர், அப்பர் சுவாமிகளைப் பார்த்து, திருவாரூருக்குச் சென்று, மீண்டும் உம்பால் அடைவேன் என்று விடைபெற்றுச் சென்றார். திருநாவுக்கரசர் திருப்புகலூரருக்கு எழுந்தருளினார். திருஞானசம்பந்தப் பெருமான், திருவிற்குடிக்குச் சென்று, இறைவனைத் தொழுதார்; அங்கிருந்து, பாடலன் நான்மறையன் என்னுந் திருப்பதிகத்தை எடுத்து, ஆதிரையன் ஆரூர் அமர்ந் தானே என்று பாடிக்கொண்டே போனார்; திருவாரூர் சமீபித்ததும் ஆரூர் அடைவோமே என்று பாடிக்கொண்டு. திருவாரூர் எல்லையைச் சேர்ந்தார். அடியார்கள் பிள்ளையாரை எதிர் கொண்டார்கள். பிள்ளையார் அவர்களுடன் திருவாரூருக்கு எழுந் தருளினார். அவர் நாடோறுந் தியாகேசப் பெருமானைத் தொழுது பதிகங்கள் பாடி வந்தார்; ஆரூர் அறநெறியையுந் தரிசித்து வந்தார்; இடையில் திருவலிவலம், திருக்கோளிலி முதலிய திருப்பதிகளுக்குச் சென்று, மீண்டும் திருவாரூரை அடைந்தார். பிள்ளையாருக்கு அப்பர் சுவாமிகளின் நினைவு தோன்றிற்று; தோன்றவே, அவர், பவனமாய்ச் சோடையாய் என்னுந் திருப்பதிகத்தைப் பாடித் திருவாரூரை விடுத்தார். திருப்பனையூரைத் தொழுது திருப்புகலூரைச் சேர்ந்தார். திருநாவுக்கரசு சுவாமிகளும், முருக நாயனாரும் பிள்ளை யாரை எதிர்கொண்டார்கள். காழிப் பெருமான், அவர்களோடு கலந்து, திருக்கோயிலுக்குச் சென்றார்; ஆண்டவனைத் தொழுதார்; முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்தார். அச்சமயத்தில் திரு நீலநக்க நாயனாரும். சிறுத்தொண்ட நாயனாரும் திருப்புகலூருக்குப் போய்ப் புண்ணிய மூர்த்திகளோடு கலந்து கொண்டனர். திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் மற்றும் பல திருப்பதிகளைக் காண விரும்பினார்கள். அவர்தம் ஆணைப்படி முருக நாயனார் திருப்புகலூரிலேயே இருக்க இசைந்தனர்; திருநீலநக்க நாயனாரும் சிறுத்தொண்ட நாயனாரும் தத்தம் பதிக்கு ஏக உடன்பட்டனர். பிள்ளையாரும் அப்பரும் புறப்பட்டனர். பிள்ளையார் முத்துச் சிவிகை பின்னே வர, அப்பர் சுவாமிகளுடன் நடந்தார்; அப்பர் சுவாமிகள், ஆளுடைய பிள்ளையாரை நோக்கிச் சிவபெருமான் உமக்கு முத்துச் சிவிகையை அருளியுள்ளார்; அதன்மீது எழுந்தருள்க என்றார் ஆளுடைய பிள்ளையார், இது, திருவருள் குறிப்புப் போலும் என்று எண்ணி, அப்பரைப் பார்த்து, எத்தலத்திற்கும் எனக்கு முன்னே போங்கள்,; யான் பின்னே வந்து சேர்வேன் என்றார். அப்பர் சுவாமிகள் அதற் கிசைந்து அன்று முதல் அங்ஙனே செல்வாரானார். அப்பர் சுவாமிகள் அடியார்களுடன் நடந்து திருவம்பரை அடைந்தார். திருஞானசம்பந்தர் முத்துச்சிவிகையிலேறிப் போந்தார். பிள்ளையார், அப்பர் எங்கே எங்கே என்று வினவிக்கொண்டே திருவம்பரைச் சேர்ந்தார். இருவரும் திருக்கோயிலுக்குச் சென்றனர். அங்கே பிள்ளையார் எரிதர வனக்கை என்னுந் திருப்பதிகத்தைப் பாடி, அதில் கோச்செங்கட் சோழ நாயனாரைச் சிறப்பித்தார். பின்னர் இருவரும் திருக்கடவூருக்குச் சென்றனர்; அங்கே குங்குலியக் கலய நாயனார் விருந்தினராயிருந்து, சிவபெருமானை வழிபட்டி ருந்தனர்; அங்கிருந்து புறப்பட்டுத் திருவாக்கூர், திருமீயச்சூர், திருப் பாம்புரம் முதலிய திருப்பதிகளைக் கண்டு, இறைவனை வழிபட்டுத் திருவீழிமிழலை யடைந்தனர். இவரும் திருக்கோயிலுக்குச் சென்று பதிகம் பாடினர். திருநாவுக்கரசு சுவாமிகள் ஒரு திருமடத்தில் தங்கினார். திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் வேறொரு திரு மடத்தில் தங்கினார். அங்கிருந்து கொண்டே இருவரும் பேணு பெருந்துறை, திலதைப் பதி முதலிய திருப்பதிகட்குப் போய் வந்தனர். சீர்காழிப் பிராமணர்கள், திருஞானசம்பந்த சுவாமிகளைக் காண விரும்பித் திருவீழிமிழலையை நோக்கினார்கள். அவர்கள் போந்து, பிள்ளையாரைப் பணிந்து, திருத்தோணிக்கு எழுந்தருளல் வேண்டும் என்று வேண்டினார்கள். அதற்குப் பிள்ளையார், இன்று கழித்துத் திருவீழிமிழலை ஈசனார் அருள்பெற்று, நாளை போவோம் என்றார். திருத்தோணிப் பெருமான், அன்றிரவு ஆளுடைய பிள்ளையார் கனவிலே தோன்றி, நமது திருத்தோணிக் கோலத்தை இங்கே காட்டுவோம் என்று திருவாய் மலர்ந்து மறைந் தருளினார். திருஞானசம்பந்தர் விழித்தெழுந்து திருக்கோயிலுக்குப் போனார். அங்கே விண்ணிழிந்த விமானத்திலே சிவபெருமான் திருத்தோணித் திருக்கோலத்தைக் காட்டினார். பிள்ளையார், மைம் மருபூங் குழற்கற்றை என்னுந் திருப்பதிகத்தை வினாவுரையாகப் பாடித் தொழுதார். பிள்ளையார், பின்னே திருமடஞ் சேர்ந்து, தம்மை அழைக்க வந்த பிராமணர்களை நோக்கித் தோணியப்பர் தமது அருமைத் திருக்கோலத்தை இங்கே காட்டியருளினார். நீங்கள் போங்கள் என்று விடைகொடுத்தார். அவர்கள் சீர்காழிக்குத் திரும்பினார்கள். அந்நாளில் வான் பொய்த்தது. காவிரியின் வளங் குறைந்தது. எங்கும் பஞ்சம் பரவலாயிற்று. ஜீவகோடிகள் வருந்தலாயின. அப் பஞ்சம் அடியவர்களையுந் தீண்டிற்று. அதை யுணர்ந்த பிள்ளை யாரும் அப்பரும்,. அடியார்களுக்குங் கவலை நேருமோ என்று கருதி, எள்ளுக்குள் எண்ணெயைப் போல் எங்கும் நிறைந்துள்ள ஈசனை நினைந்து கொண்டே ஆனந்த நித்திரை செய்தனர். அம்பிகை பாகர், அவர்கட்குக் கனவிலே தோன்றி, இது காலபேதம். பசிநோய் உங்களைச் சிறிதும் பாதியாது. உங்களைச் சூழ்ந்துள்ள அடியவர் கட்கு மனவாட்டம் உண்டாகும். அதையொழித்தல் வேண்டும். நாடோறும் ஆலயத்தின் கீழ்ப் பீடத்திலும், மேற்பீடத்திலும் ஒவ்வொரு பொற்காசு உங்களுக்கு வழங்குவோம். பஞ்சம் ஒழிந்தால் அவ் வழங்கலும் ஒழியும் என்று திருவாய்மலர்ந்தருளினார். இருவரும் விழித்தெழுந்தனர்; திருக்கோயிலை அடைந்தனர்; அங்கே ஆண்டவன் அருளியவாறு கீழ்மேல் பீடங்களில் பொற்காசு இருத்தலைக் கண்டனர்; திருவருளை வியந்தனர்; அக்காசினைக் கொண்டு பறை யறைவித்துச் சிவனடியார்களுக்கு அமுதூட்டி வந்தனர். தாண்டக வேந்தர் திருமடத்தில் அடியவர்கள் காலம்பெற அமுதுண்டு வந்தார்கள். பிள்ளையார் திருமடத்தில் அவ்வாறு நடப்பதில்லை. அதைக்கண்ட பிள்ளையார், சமையற்காரர்களை அழைத்து, அம்மடத்தில் அடியவர்கள் காலத்தில் அமுதுண் கிறார்கள். இம்மடத்தில் அடியவர்கள் காலத்தில் அமுதுண் ணாமைக்குக் காரணம் என்ன? என்று கேட்டார். சமையற்காரர்கள், பிள்ளையாரை வணங்கி, அடிகளே! நீங்கள் தரும் காசுக்கு வணிகர்கள் வட்டங் கேட்கிறார்கள்; அப்பர் சுவாமிகள் தருங் காசுக்கு அவர்கள் வட்டங் கேட்பதில்லை. காலந் தாழ்ப்பதற்குக் காரணம் இதுவே என்று கூறினார்கள். அவ்வுரை கேட்ட பிள்ளையார், அப்பர் கைத்தொண்டு செய்கிறார்; அதனால் அவர் வாசியில்லாக் காசு பெறுகிறார் என்று நினைந்து, வாசி தீரவே காசு நல்குவீர் என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார்; நல்ல காசு பெற்றார். சமையல் வெய்வோர் அக்காசினைக் கடைக்குக் கொண்டு போனார். வணிகர்கள் அதைப் பார்த்து, இது நல்ல காசு என்று சொல்லிப் பொருள்களை விரைந்து கொடுத்தார்கள். அன்று முதல் அடிய வர்கள் காலத்திலே அமுது செய்விக்கப்பட்டார்கள். இவ்வாறு நிகழ்ந்துவருங் காலத்தில் மழை பெய்தது. பஞ்சம் ஒழிந்தது. இருவரும் சிலநாள் திருவீழிமிழலையில் தங்கியிருந்து, பின்னர் அத்திருப்பதியை விடுத்துத் திருவாஞ்சியம், திருத்தலை யாலங்காடு, திருப்பெருவேளூர், திருச்சாத்தங்குடி, திருக்கரவீரம், திருவிளமர், திருவாரூர், திருக்காறாயில், திருத்தேவூர், திருநெல்லிக்கா, திருக்கைச்சினம், திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருக் கோட்டூர், திருவெண்டுறை, திருத்தண்டலை நீணெறி, திருக்களர் முதலிய திருப்பதிகளுக்குப் போய், இறைவனைத் தொழுது, திரு மறைக்காட்டை நோக்கினார். வழக்கப்படி - திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் முன்னும் பின்னுமாகத் திருமறைக்காடு சேர்ந்தனர். அங்குள்ள அடியார்கள் இருவரையும் எதிர்கொண்டு வரவேற்றார்கள். இரு வரும் அன்பர்களுடன் திருக்கோயிலுக்குச் சென்றனர்; அங்கே திருக் கதவு மூடப்பட்டிருந்ததைக் கண்டனர்; இஃதென்ன? என்று அன்பர்களைக் கேட்டனர். இத்திருக்கதவை வேதங்கள் பூசித்துத் திருக்காப்பிட்டன; அன்றுதொட்டு இது மூடப்பட்டே இருக்கிறது. அவ்வேதம் ஓதித் திறப்பார் ஒருவரும் இங்கே வரவில்லை. தொழுகைக்குச் செல்வோர் வேறுஒரு வாயில் கோலி, அதன் வழியாகச் செல்கிறார்; என்று அன்பர்கள் சொன்னார்கள். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசு சுவாமிகளை நோக்கி, அப்பரே! இந்நேர் வழியாகவே நாம் போய் இறைவனைத் தொழுதல் வேண்டும். ஆதலால் இக்கதவு திறக்க நீரே பாடும் என்றார். திருநாவுக்கரசர் திருப்பதிகம் பாடத் தொடங்கினார். திருக்கதவு திறந்துகொள்ள வில்லை; திருக்கடைக் காப்புச் சாத்தியதும் திருக்கதவு திறந்து கொண்டது. இருவரும் உள்ளே போய், இறைவனைத் தொழுது, பாடியாடி வெளியே வந்தனர். திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞான சம்பந்தரைப் பார்த்து, இத்திருக்கதவு நாள்தோறும் திறக்கவும் அடையவும் வழக்கத்தில் வருதல் நலம். ஆகவே, இத்திருக்கதவை அடைக்க நீர் பாடும் என்றனர். திருஞானசம்பந்தர், சதுரம் மறை என்று பதிகத்தைத் தொடங்கினார். உடனே திருக்கதவு அடைந்தது. ஆளுடையபிள்ளையார் திருப்பதிகத்தைப் பாடி முடித்தார். எல்லாரும் வியப்பும் ஆனந்தமும் எய்தினார். அன்றுமுதல் அத்திருக் கதவு, திறக்கப்பட்டும் அடைக்கப்பட்டும் வருகிறது. இருமுது குவரர்களும் திருமடத்தை அடைந்தார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள் நெஞ்சில், திருக்கதவு அரிதில் திறந்து கொண்டதையும், எளிதில் அடைந்துகொண்டதையும் ஒட்டி, ஒருவித சுழற்சி ஏற்பட்டது. நான்மறைகளும் சிவ பெருமானால் அருளிச் செய்யப்பட்டன. அவைகளை வெளியிடும் உரிமைப்பாடு திருஞானசம்பந்த சுவாமிகளுக்கே உண்டு. என் போன்றவர்க்கும் அவர்க்கும் உள்ள இடையீடு பெரிது என்று எண்ணி, அப்பர் துயிலலானார். அப்பொழுது சிவபெருமான், அப்பர் சுவாமிகள் முன்னே தோன்றி, நாம் வாய்மூரில் இருப்போம்; அங்கே வா என்று அருளிச்சென்றார். தாண்டக வேந்தர் எழுந்து, சிவபெருமானைத் தொடர்ந்து விரைந்து நடந்தார். சிவபெருமான் அணித்தே காட்சி வழங்குவார் போலக் காட்டிக் காட்டிப் போனார். காழிப்பெருமான் விழித்து, அப்பர் எங்குற்றார்? என்று கேட்டார். அடியார்கள், அவர் திருவாய்மூருக்குப் போனார் என்று சொன் னார்கள். பிள்ளையார் திருவாய்மூருக்கு எழுந்தருளினார். அப் பொழுது சிவபெருமான் உமா தேவியாரோடு ஆடல் காட்டினார். பிள்ளையார், தளரிள வளரென என்னுந் திருப்பதிகத்தைப் பாடிப் பெருமானைத் தொழுது இன்புற்றார். இருவரும் திருவாய்மூரில் சின்னாளிருந்து, மீண்டுந் திருமறைக்காட்டிற்குத் திரும்பினர். அந்நாளில் பாண்டி நாட்டில் சமணம் பெருகிச் சைவம் அருகிற்று. பாண்டியனும் சமணனாயினான். குடிகளிற் பலரும் அவன்வழி நிற்பாராயினர். பாண்டிநாடு புரிந்த பெருந்தவத்தால், பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் பெரு மானாகிய குலச்சிறையாரும் சைவச் செந்நெறி நின்று ஒழுகி வந்தனர். அவ்விருவரும் பாண்டிநாட்டுக்குற்ற இடுக்கணை நினைந்து நினைந்து வருந்துவதுண்டு. அவர்கட்குத் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளின் பேரும் புகழும் எட்டின. திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டில் எழுந்தருளியிருத்தலும் அவர்கட்குத் தெரியவந்தது. அவர்கள் அளவிலா ஆனந்தமெய்தி, ஒற்றர்களைத் திருமறைக் காட்டிற்கு அனுப்பினார்கள். ஒற்றர்கள் திருமறைக்காட்டைச் சேர்ந்து, பிள்ளையார் திரு மடத்தைக் கண்டார்கள். அவர்கள் வாயில் காப்போரைப் பார்த்து, நாங்கள் மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் ஏவற்படி வந் துள்ளோம். பிள்ளையாரைப் பார்த்தல் வேண்டும் என்றார்கள். வாயில் காப்போர், உள்ளே போய்ப் பிள்ளையாருக்கு ஒற்றர்கள் கருத்தைத் தெரிவித்தார்கள். பிள்ளையார் கருணைகூர்ந்து, அவர் களை அழைத்துவருமாறு கட்டளையிட்டார். அவ்வாறே வாயில் காப்போர், ஒற்றர்களை அழைத்துச் சென்றனர். அவர்கள், ஆளுடையபிள்ளையாரைக் கண்டு தொழுது எழுந்து நின்றார்கள். கருணைக் கடலாகிய காழிப்பெருமான், அவர்களைத் திருநோக்கஞ் செய்தார்; செய்து, மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் நலமா? என்று கேட்டார். அவர்கள் அவ்விருவரும் நலமே என்றார்கள்; பின்னே. பாண்டி நாட்டின் நிலைமையைச் செவ்வனே விளக்கிக் கூறினார்கள். அவ்வேளையில் அங்கே சூழ்ந்திருந்த அடியார்கள். திருஞானசம்பந்தரைத் தொழுது, அடிகள் பாண்டி நாட்டிற்கு இப்பொழுதே எழுந்தருளல் வேண்டும்; சமணர்களை வென்று சைவத்தின் உண்மையை நிலைநாட்டல் வேண்டும்; அரசனையுந் திருநீற்று நெறியில் நிறுத்தி ஆளுதல் வேண்டும் என்று வேண்டினார்கள். அவ்வேண்டுதலுக்கு ஆளுடைய பிள்ளையார் உடன்பட்டார். பின்னர்த் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரோடு திருக் கோயிலுக்குச் சென்றார். அங்கே மங்கையர்க்கரசியாரும் குலச்சிறை யாரும் ஒற்றர்கள் வாயிலாகத் தெரிவித்ததைப் பிள்ளையார் அப்பருக்குச் சொல்லினார். சொல்லிப் பிள்ளையார் பாண்டிநாடு நோக்க உறுதிகொண்டார். அது கண்ட அப்பரெம்பெருமான், பிள்ளையாரே! பொறும். சமணர்கள் பொல்லாதவர்கள்; அவர்கள் வஞ்சனைகளை எல்லையின்றிச் செய்ய வல்லவர்கள்; கோள் நிலையும் நன்றாயில்லை. ஆதலால் இப்பொழுது பாண்டி நாட்டிற்குப் போதல் தகாது என்று தடுத்தார். அதற்குப் பிள்ளையார், நாம் போற்றுவது சிவபிரான் திருவடி நாள்கோள் நம்மை என் செய்யும்? என்று, வேயுறு தோளிபங்கன் என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். அதற்கு மேல் அப்பர் சுவாமிகள் தடைகூறாது உடன்பட்டு, அவருக்கு முன்னே தாம் புறப்படத் துணிந்தார். திருஞானசம்பந்தப் பெருமான், அப்பரைத் தடுத்து, நீர் சோழநாட்டிலே ஆண்டவனைத் தொழுது கொண்டிரும் என்று கை கூப்பி வணங்கினார். திருநாவுக்கரசரும் ஒருவாறு சம்மதித்தார். ஆளுடையபிள்ளையார் திருக்கோயிலுள் நுழைந்து மறைக் காட்டு மணாளனை வணங்கி அருள்பெற்றார்; திருநாவுக்கரசு சுவாமிகளைத் தொழுது அவருக்கு விடை கொடுத்தார்; பின்னர் முத்துச்சிவிகையில் ஏறி, அஞ்செழுத்தை ஓதி, ஆண்டவன் திருநீற்றுத் திருமேனியை நினைந்து கொண்டே, பாண்டி நாட்டை நோக்கினார்; வழியில் திருஅகத்தியான்பள்ளி, திருக்கோடிக் குழகர் கோயில், திருக்கடிக்குளம், திருஇடும் பாவனம், திருஉசாத்தானம் முதலிய திருப்பதிகளுக்குப் போய், இறைவனுக்குத் தமிழ் மாலை சூட்டிப் பாண்டிநாடு புகுந்து, திருநெடுங்குன்றைத் தொழுது, மதுரைக்கு அணித்தே சென்றார். அதுகாலை எண்பெருங் குன்றங்களில் வாழும் சமணர்கள் தீக் கனாக்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் மதுரையம் பதியிலே ஒருங்கு திரண்டனர்; தாம் தாம் கண்ட தீக்கனவைப் பற்றி ஒருவரோ டொருவர் பேசிக் கொண்டனர். அவர்களுக்குக் கவலை மேலிட்டது. அவர்கள் தங்கள் நிலையை அரசனுக்குந் தெரிவித்தார்கள். அவர்கள் தங்கட்குத் தீமை விளைவது நிச்சயமெனக் கருதி உணவுங் கொள் ளாமல் துயரக் கடலில் அழுந்தினார்கள். பாண்டிமா தேவியாரும் குலச்சிறை நாயனாரும் நற்குறிகள் கண்டார்கள்; ஆனந்தக் கடலில் அழுந்தினார்கள். அப்பொழுது சிலர் ஓடிவந்து, பிள்ளையார் வருகையை அவர்கட்குத் தெரிவித்தனர். அந்நற்செய்தி கூறியவர் களுக்குச் சன்மானஞ் செய்யப்பட்டது. மங்கையர்க்கரசியார், மந்திரியாரை நோக்கி, நமது ஆருயிர் அமுதம் வருகிறது; எதிர் கொள்க என்று கட்டளை இட்டார். அவர், அம்மையாரை வணங்கி, அரசனுக்கும் உறுதியே என்று கூறி, விரைந்து சென்றார்; மதுரைக்குப் புறத்தே அணைந்தார். பாண்டிமாதேவியார், கோயிலுக்குப் போய் வருகிறேன் என்று பாண்டியனிடஞ் சொல்லி, அவ்வாறே கோயிலுக்குப் போய், ஆண்டவனை வழி பட்டுப் பிள்ளையாரின் வருகையை எதிர்நோக்கி நின்றார். முத்துச் சின்னங்கள், பாலறாவாயர் வந்தார்; பரசமய கோளரியார் வந்தார் என்று முழங்கின. ஞானசம்பந்தர் முத்துச் சிவிகையில் முத்துக் குடைநிழற்ற எழுந்தருளி வந்தார். அப்பெருங் காட்சி கண்டு, குலச்சிறையார் ஆனந்தப் பரவசராய் விழுந்து செயலற்றுக் கிடந்தார். அடியார்கள், திருஞானசம்பந்தப் பெருமானை நோக்கி, அடிகளே! பாண்டியன் அமைச்சர் குலச் சிறையார், அடியற்ற பனைபோல் விழுந்து கிடக்கிறார் என்று சொன்னார்கள். பிள்ளையார் முத்துச் சிவிகை விட்டிழிந்து, தமது அருமைத் திருகையால் அவரை எடுத்தார். அமைச்சர் தெளிந் தெழுந்து கைகூப்பி வணங்கித் திருமுன்னே நின்றார். முத்தமிழ்விரகர் அவரை நோக்கி, மங்கையர்க்கரசியாரும், நீரும் எம்பெருமான் திருவருளால் நலமோ? என்று கேட்டார். மந்திரியார், ஞான சம்பந்தப் பெருமான் மலரடிகளில் விழுந்து வணங்கி, சென்ற காலத்தில் பழுதிலாத் திறம் பெற்றிருந்தோம். இனிவருஞ் சிறப்பும் உடையேம். அடிகள் எழுந்தருளியிருக்கிறீர்கள். நாங்கள் என்றுந் திருவருளுடையேம். இந்நாடும் பாண்டியனும் திருநீற்றொளியால் விளங்கும் மேன்மையையும் அடைந்தோம். அடிகளின் வருகையைக் கேட்ட பாண்டி மாதேவியார், நமது ஆருயிர் அமுதம் வருகிறது; அடிபணிந்து அவ்வமுதை எதிர்கொள்க என்று அடியேனை ஏவினார் என்று கூறினார்; கூறி உள்ளத் தெழும் பேரன்பால் மீண்டும் பணிந்தெழுந்தார். மதுரையம்பதி தோன்றலாயிற்று. பிள்ளையார், அடியார் களை நோக்கி, திருவாலவாய் எங்கே? என்று கேட்டார். அடியார்கள், இதோ கோபுரந் தெரிகிறது. இதுவே திருவாலவாய் என்றார்கள். உடனே ஞானசம்பந்த வள்ளலார் பூமியில் விழுந்தார்; இறைவனை வணங்கினார்; மங்கையர்க்கரசி என்னும் திருப் பதிகத்தைப் பாடினார்; அதிலே மங்கையர்க்கரசியார் குலச் சிறையார் திருத்தொண்டுகளைச் சிறப்பித்தார்; ஆலவாயாவதும் இதுவே என்று அருளிக்கொண்டே திருக்கோயிலுட் புகுந்தார். மங்கையர்க்கரசியார் ஒருபுறம் ஒதுங்கி நின்றார். பிள்ளையார், நீலமாமிடற்றாலவாயிலாய் என்னுந் திருப்பதிகத்தைப் பாடித் திருமுன்றிலை அடைந்தார். அப்பொழுது, தலையில் கூப்பிய கையினராய், அன்புருவினராய் மங்கையர்க்கரசியார், பிள்ளையார் திருமுன்னே வந்தார். குலச்சிறையார், பிள்ளையாரைப் பணிந்து, இவரே பாண்டிமாதேவியார் என்றார். என்றதும் பிள்ளையார் அம்மையாருக்கெதிரே சென்றார். பாண்டி மாதேவியார், அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினார். பிள்ளையார் அவரைத் தம்மருமைத் திருக்கரத்தால் எடுத்தருளினார். அம்மையார், நமது கருத்து முற்றுப்பெற்றது என்று நினைந்து, யானும் என் பதியும் செய்த தவம் என்னே! என்று சொல்லி, மீண்டும் வணங்கினார். கருணைப் பிரகாசராகிய கவுணியர் பெருமான், புறச்சமயத்தார் இடையிலே சைவத் திருத்தொண்டைவழாது செய்து வாழ்வீர்! உம்மைக் காண வந்தனம் என்றனர். அவ்வருட்சொற்களைக் கேட்ட அம்மையார் மீண்டும் பாலறாவாயர் பாதங்களில் விழுந்து வணங்கினார். பிள்ளையார் பாண்டிமா தேவியார்க்கு விடைகொடுத் தருளினார். அவ்வேளையில் ஆலவாய்த் தொண்டர்களும் போந்து பிள்ளையாரை வணங்கினார்கள். அவர்கட்கும் பிள்ளையார் அருள் செய்தார்; செய்து, புறத்தே சென்றார். பிள்ளையார், குலச்சிறையார் காட்டிய திருமடத்திலே எழுந்தருளி இருந்தார். ஞானசம்பந்தர் வருகையும், அடியார்கள் முழக்கமும் சமணர்களுக்குப் பொறாமை யூட்டின. அவர்கள் ஓரிடத்தில் திரண்டு கூடினார்கள்; பின்னே அரசன் அரண்மனையேச் சேர்ந் தார்கள். மன்னன், அவர்கள் மன வாட்டத்தைக் குறிப்பால் உணர்ந்தான்; என்ன செய்தி? என்று கேட்டான். சமணர்கள், சொல்லத்தகாத செய்தி என்றார்கள். அஃதென்ன சொல்லுங்கள் என்று மீண்டும் மன்னன் கேட்டான். சமணர்கள், உமது மதுரா புரியிலே இன்று சைவ வேதியர்கள் மேவினார்கள். நாங்கள் கண்டு முட்டு என்றார்கள். மன்னனும் யான் கேட்டு முட்டு என்றான். பின்னே, மன்னன் வெகுண்டு, அவர்கள் நம் பதிக்கு இன்று ஏன் வந்தார்கள்? அவர்கள் யார்? என்று வினவினான். சமணர்கள், ஒரு வேதியச் சிறுவன்; சோழநாட்டிலே சீர்காழிப் பதியிலே பிறந்த வனாம்; சூலபாணியினிடம் ஞானம் பெற்றவனாம். அவன் முத்துச் சிவிகையிலேறிக் கூட்டத்தோடு வந்திருக்கிறான். எங்களை வாதில் வெல்லப் போகிறானாம் என்று சொன்னார்கள். அது கேட்ட அரசன், இதற்கு என் செய்வது? என்று கேட்டான். பாதகர்கள், அச்சிறுவனை வலிந்து துரத்தல் கூடாது. அவன் உள்ள மடத்தில் மந்திரத்தால் தீயிட்டால், அவன் தானே ஓடிவிடுவான் என்றார்கள். அரசன் அதற்கு உடன்பட்டான். சமணர்கள் மன்னனிடம் விடை பெற்றுச் சென்றார்கள். மன்னன் கவலையோடு அந்தப்புரத்திற்குப் போனான். பாண்டி மாதேவியாரும் அங்கே போந்தார். மன்னன் ஒன்றும் பேசாது வாளாகிடந்தான். அதைக் கண்ட அம்மையார், என்னாருயிரே! என்ன முக வாட்டம்? என்று கேட்டார். அதற்கு மன்னன், சமணர்கள் கூறியதைக் கூறி, யான் கேட்டு முட்டானேன் என்றான். அம்மையார், இருபாலாரும் வாது செய்தால் வெற்றி அடைபவர் பக்கஞ் சார்வதே ஒழுங்கு என்று தேறுதல் கூறி, மகிழ்ச்சியோடு தமது மாளிகை நோக்கினார். குலச்சிறைநாயனார், அரசமாளிகைக்குச் சென்றார். அம்மை யார் நிகழ்ந்ததை அவருக்குக் கூறினார். அமைச்சர், கை கூப்பி, இன்று பிள்ளையார் வரப்பெற்றோம்; அவரையும் அடியார் களையும் காணவும் பெற்றோம்; இனிச் சமணர்கள் என் செய்வார் களோ அறியோம் என்றார். அம்மையார், அமைச்சரைப் பார்த்து, சமணர்கள் நீசர்கள்; வஞ்சனையே செய்ய வல்லவர்கள். அவர்கள் வஞ்சனையால் பிள்ளையாருக்கு யாதாயினுந் தீமை நேரின், நாமும் உயிர் துறப்போம் என்று சொன்னார். அரசனிடம் விடைபெற்றுச் சென்ற சமணர்கள், பிள்ளையார் எழுந்தருளியிருந்த திருமடத்தை அணுகினார்கள்; மந்திரஞ் செபித்தார்கள். மந்திரத்தால் தீப்பற்றவில்லை. அவர்கள் ஒன்று கூடி, மன்னன் இதை அறிந்தால் நம்மை மதியான்; நமது விருத்தியையுங் கெடுப்பான் என்று நடுக்குற்றுக் கையிலே தீக்கோல் கொண்டு சென்று மடத்தில் தீயிட்டார்கள். தீப்பற்றியது. தீயைக் கண்ட அடியவர்கள் அதைத் தணித்தார்கள். இது சமணர்களால் செய்யப் பட்டது என்று அவர்கள் தெளிந்து, ஆளுடைய பிள்ளையாரிடம் அதைத் தெரிவித்தார்கள். பிள்ளையார், அன்பர்கள் துயிலுந் திரு மடத்திற்கா பழுது செய்வது? என்று இரங்கி, அப்பாவிகள் என் பொருட்டுச் செய்த தீங்காயினும், அது சிவனடியார்களை எய்துமோ? என்று வருந்தி, அரசாட்சியின் வழுவினால் இது நேர்ந்தது என்று கருதலானார்; உடனே செய்யனே திருவாலவாய் என்னுந் திருப் பதிகத்தை எடுத்து, அமணர் கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே என்று திருவாய் மலர்ந்தருளினார். மங்கையர்க்கரசியாரது மங்கலநாணைப் பாதுகாக்கவும், குலச்சிறை நாயனாரது அன்பை முன்னிட்டும், மன்னவன்பால் உற்ற பிழை கருதியும், அவன் மீண்டுஞ் சிவநெறி அடையப்போதலை நினைந்தும், பையவே சென்று என்று பிள்ளையார் பதிகத்தில் அமைத்தார். திருப்பதிகம் முற்றுப்பெற்றது. தீயானது, வெப்ப நோயாகிப் பாண்டியனைப் பற்றியது. பொழுது புலர்ந்தது. திருமடத்தில் நிகழ்ந்த தீச்செய்தி பாண்டி மா தேவியார்க்கும், குலச்சிறையார்க்கும் எட்டிற்று. நாம் உயிர் துறத்தல் வேண்டும் என்று இருவரும் உறுதிகொண்டனர்; அந் நிலையில், தீயால் திருமடத்திற்குப் பழுது நேரவில்லை என்ற நற் செய்தி கேட்டனர். சமணர்கள் செயலால் இனி என்ன விளையுமோ? என்று அவ்விருவரும் கலங்கிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மெய்காப்பாளர்கள் ஓடிவந்து, மன்னர் வெஞ் சுரத்தால் பீடிக்கப்பட்டார் என்று சொன்னார்கள். உடனே அம்மையாரும், அமைச்சரும் விரைந்து ஓடினர்; பாண்டியனை அடைந்தனர். மணிமந்திர ஔடத முறைகள் முறைமுறையே செய்யப்பட்டன. நோய் நீங்க வில்லை. நோய் முன்னிலும் அதிகமாக முறுகி எழுந்தது. இதைக் கேள்வியுற்ற சமணர்கள் பாண்டியனை அணைந் தார்கள்; தங்கள் கையிலுள்ள மயிற்பீலிகளால் அவன் உடலைத் தடவினார்கள். பீலிகளெல்லாம் எரிந்து கரிந்தன. பிறகு அவர்கள், கமண்டல நீரை எடுத்து மன்னன் மீது தெளித்தார்கள். அந்நீர் நெருப்பிற் சொரிந்த நெய் போலாயிற்று. வெம்மை அதிகரித்து விட்டது. பாண்டியன் சமணர்களைப் பார்த்து, நீங்கள் ஒருவரும் இங்கே நிற்றல் வேண்டா; போங்கள் என்று கூறிச் சோர்ந்தான். பாண்டிமாதேவியார், அமைச்சரை நோக்கி, நம்மை ஆட் கொள்ள எழுந்தருளிய திருஞானசம்பந்த சுவாமிகளுக்குச் சமணர்கள் இரவு செய்த தீங்கு இப்படி முடிந்ததோ என்று கேட்டார். அதற்கு அமைச்சர் ஆம்; அத்தீங்கே இப்படி முடிந்தது. அப்பா விகள் நோயைத் தீர்க்கப் புகுந்தால், அது முதிர்ந்தோங்காது என் செய்யும்? என்றார். உடனே பாண்டிமா தேவியாரும், குலச் சிறையாரும் மன்னனை வணங்கி, திருஞானசம்பந்தர் எழுந்தருளி யுள்ள திருமடத்தில் இச்சமணர்கள் தீயிட்டார்கள். அத்தீயே வெப்பமாகி உம்மைப் பற்றி வருத்துகிறது. இவர்கள் மந்திரங்களும், பிறவும் நோயைப் போக்குதல் அரிது. திருஞானசம்பந்தப் பெருமான். இங்கே எழுந்தருளித் திருநோக்கஞ் செய்தால். இத்தீப்பிணியும் போம்; பிறவிப் பிணியும் போம் என்று சொன்னார்கள். திருஞானசம்பந்தர் என்னும் நாம மந்திரம் பாண்டியன் செவியில் நுழைந்ததும், அவன் சிறிது அயர்வு நீங்கப் பெற்றான். அவன், சமணர்களின் தீச்செயலே நோய்க்கு மூலம் போலும் என்று எண்ணலானான்; எண்ணித் தன் பக்கத்தே நிற்கும் அம்மை யாரையும் அமைச்சரையும் நோக்கி, நீங்கள் விரும்பின், திருஞான சம்பந்த சுவாமிகளை அழைத்து வாருங்கள்; என் நோய் தீர்ப்பார் யாரோ, அவர் பக்கம் யான் சேர்வேன் என்றான். மங்கையர்க்கரசி யாரும் குலச்சிறையாரும் ஆனந்தமெய்தி, ஆளுடைய பிள்ளையார் எழுந்தருளியுள்ள திருமடத்தை அடைந்தனர்; அடைந்து, அவ ருடைய பாத தாமரைகளில் விழுந்து, அடைக்கலம்; அடைக்கலம் என்று திருவடியைப் பற்றிக் கொண்டனர். திருஞானசம்பந்தர், ஏதாயினுந் தீங்குண்டோ? என்று கேட்டார். அவர்கள் பாண்டி யனுக்கு நிகழ்ந்ததை விளக்கிக் கூறி, அடிகள் எழுந்தருளிச் சமணர்களை வென்றருளினால், மன்னன் உயிரும் உய்யும்; எங்கள் உயிரும் உய்யும் என்று சொன்னார்கள். பிள்ளையார் அவர்களை நோக்கி, நீங்கள் அஞ்சவேண்டா; சமணர்களை வென்று, பாண்டியனைத் திருநீறிடச் செய்வோம் என்று அருள்செய்தார். திருஞானசம்பந்தர், சிவபெருமான் திருவுள்ளக் குறிப்பை அறிதல் வேண்டும் என்று உடனே திருக்கோயிலுக்குச் சென்றார்; அங்கே சமணர்களுடன் வாது செய்யத் திருவுள்ளமோ என்று, காட்டுமாவ துரித்துரி என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார்; தொடர்ந்து, வேத வேள்வியை என்னுந் திருப்பதிகத்தை ஓதினார்; ஆண்டவன் திருஉள்ளக் குறிப்பை உணர்ந்து மகிழ்வெய்தினார். பின்னே, பிள்ளையார், பாண்டியன் அரண்மனை நோக்கினார். குலச்சிறையார் முன்னே சென்றார்; மங்கையர்க்கரசியார் பின்னே வந்தார். குலச்சிறையார் விரைந்து சென்று, பிள்ளையார் வரவைப் பாண்டியனுக்குத் தெரிவித்தார். அவன் சிறிது துயர் நீங்கப்பெற்றான். அவன், தன் முடியின் பக்கத்திலே ஒரு பொன் பீடத்தை இடுமாறு சொல்லவும் வல்லவனானான். பாண்டியன் கட்டளைப்படி, குலச் சிறையார் சுவாமிகளை மீண்டும் எதிர்கொண்டார். சமணர்கள், இந்நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றுக் கொண்டி ருந்தார்கள். அவர்கள், மன்னன் நமது சமயத்தை நிலைநிறுத்தும் முறை நன்று! நன்று!! என்று மன்னனை நோக்கி, உமது அறநெறியை நீரே காத்தருளல் வேண்டும். சிறுவரை இங்கே வர வழைத்தீர். நோயைத் தீர்க்கும் பொறுப்பை இருவருக்கும் வழங்குக. நோயை முற்றிலும் அவர் தீர்த்தாலும், நாங்கள் தீர்த்ததாகச் சொல் லுதல் வேண்டும் என்று முறையிட்டார்கள். அதற்கு மன்னன், நான் வஞ்சகம் பேச மாட்டேன்; நீங்கள் இருவரும் உங்கள் தெய்வ வலிமை யால் எனது நோயைத் தீரும் என்றான். சமணர்கள் மனம் சோர் வுற்றது. சமண இருளழிக்க எழுந்த சிவபானு - ஞானவள்ளல் முத்துச் சிவிகையில் எழுந்தருளி வந்தார். அவர், முத்துச்சிவிகை விட்டிறங்கி, அரண்மனைக்குள் நுழைந்தார். பாண்டியன், அவரைப் பார்த்துக் கைகூப்பித் தன் முடியின் பக்கத்திலுள்ள பொன்பீடத்தைக் காட்டி னான். வள்ளலார் அதிலே அமர்ந்தார். சமணர்கள் திகிலடைந் தார்கள். பாண்டியன் பாலறாவாயரைக் கண்டதும், நோய் சிறிது நீங்கப் பெற்றான். அவன் பிள்ளையாரை நோக்கி, உமது பதி யாது? என்று வினவினான். சுவாமிகள், பிரமனூர் வேணுபுரம் என்னுந் திருப் பதிகத்தைப் பாடிக் கழுமலம் நாம் பரவும் ஊரே என்று அருளினார். சூழ்ந்து நின்ற சமணர்கள், மனம் பொறாது, பொங்கி எழுந்து, தங்கள் நூல்களில் உள்ளனவற்றை எடுத்துச் சொல்லி வீறிட்டனர். பிள்ளையார், அமைதியாக அவர்களைப் பார்த்து, பொருள் நிலையை முறைப்படி பேசுங்கள் என்றார். சமணர்கள், வடவை போல் சீறி, வாயில் வந்ததைப் பிதற்றிப் பிள்ளையாரை நெருங்கினார்கள். அக்காட்சி, மங்கையர்க்கரசியாரைத் திடுக்கிடச் செய்தது. அம்மையார் நடுக்குற்றுப் பாண்டியனைப் பார்த்து, ஞானசம்பந்தப் பிள்ளையார், இளந்திருமேனி உடையவர். இவர்களோ பலர்; திண்ணர்கள். உமது தீப்பிணியைத் தீர்க்கப் பிள்ளையாரை விடும். பின்பு சமணர்கள் வல்லவர்களாயின், வாதஞ் செய்வார்களாக என்று விண்ணப்பித்தார். அதற்கு மன்னன், அம்மையாரை நோக்கி, நீ வருந்தாதே; இனி என்ன வாது இருக்கிறது! என்று சொல்லிச் சமணர்களைப் பார்த்து, நீங்களும் இவரும் எனது நோயைத் தீர்த்து, உங்கள் தெய்வத் தன்மையை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னான். அப்பொழுது, ஞானசம்பந்த வள்ளலார், அம்மையார் நிலையை உணர்ந்து, மானினேர் விழிமாதராய் என்னுந் திருப் பதிகத்தை எடுத்து, இந்த ஈனர்கட் கெளியேன் அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே என்று அருளினார். பாண்டியன், சமணர்களை நோக்கி, எனக்குற்ற வெப்பத்தை நீங்கள் இகலித் தீருங்கள்; நோய் தீர்த்தவர் வென்றவராவர் என்று சொன்னான். உடனே சமணர்கள், எங்கள் தெய்வ வல்லமையால் நாங்கள் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்போம் என்று பாண்டியனை அணுகி னார்கள். அவர்கள், அருகநாமத்தை முழக்கிப் பீலியினால் இடப் பாகத்தைத் தடவினார்கள். வெப்பம் முன்னிலும் அதிகமாகக் கொதித்தெழுந்து வருத்தலாயிற்று. பாண்டியன், ஆற்ற முடியாத வனாய், ஞானசம்பந்தரைப் பார்த்தான். பெருமான், ஆலவாய்ச் சொக்கனை நினைந்து, மந்திரமாவது நீறு என்னும் திருப்பதிகத்தை யோதித், திருநீறு கொண்டு, அரசன் வலப்பக்கத்தில் தடவி அருளினார்; தடவியதும், வலப்பக்கம் நோய் நீங்கிப் பொய்கைபோலக் குளிர்ந்தது. ஆனால் அவ்வலப்பக்க நோய், இடப்பக்கத்தில் புகுந்து பெருகலாயிற்று. சமணர்கள் பீலிகள் எரிந்து கரிந்தன. வெப்பு அலைபோல் வீசிற்று. அனல் சமணர் களையுந் தாக்கிற்று. அவர்கள் தாங்க முடியாது ஒதுங்கினார்கள். பாண்டியன், இஃதென்ன! நரகத் துன்பம் ஒரு பக்கம்; வீட்டின்பம் மற்றொரு பக்கம் என்று நொந்தான். அவன், சமணர்களைப் பார்த்து, நீங்கள் தோற்றீர்கள்; போங்கள் என்று கடிந்தான். பின்னே, அவன், திருஞானசம்பந்தரை நோக்கி, அடிகளே! இடப் பக்கத்துக்கும் அருள் செய்யும் என்று வேண்டினான். கவுணியர் பெருமான், திருநீறு கொண்டு, அப்பக்கத்தையுந் தடவினார். அதுவும் குளிர்ந்தது. பாண்டியன் உய்ந்தான். மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் உற்ற மகிழ்ச்சிக்கோர் அளவில்லை. அவ்விருவரும், கருணைவள்ளலார் திருவடிகளில் விழுந்து விழுந்து வணங்கி, நாங்கள் பெருமையடைந்தோம்; பெறுதற்கரிய பிறவியை இன்றே பெற்றோம்; எங்கள் வேந்தரும் பிறவா மேன்மையைப் பெற்றார் என்று கூறி, இன்பக்கடலில் தோய்ந்தனர். பாண்டியனும் எழுந்து, நான் உய்ந்தேன் என்று பரசமயக் கோளரியாரைப் பணிந்தான். சமணர்கள், பிள்ளையார் திறத்தைக் கண்டார்கள்; விழித் தார்கள்; இனித் தர்க்கவாதத்தை விடுத்தல் வேண்டும்; அதனால் இப்பிள்ளையை வெல்லுதல் முடியாது; அனல் புனல் வாதங்களால் வெல்ல முயலுதலே தகுதி என்று சிந்திக்கலானார்கள். பிள்ளையார், சமணர்களை நோக்கி, என்ன சிந்தனை? உங்கள் தத்துவத்தைப் பேசுங்கள் என்றார். சமணர்கள், இனித் தர்க்கவாதம் வேண்டுவ தில்லை; நமது சமய உண்மைகளைச் செயலில் நிறுத்திக் காட்டுவதே சிறப்பு என்றார்கள். அப்பொழுது மன்னன், சமணர்களைப் பார்த்து, எனக்குற்ற நோயை நீக்க நீங்கள் முயன்றீர்கள்; வெற்றி பெற்றீர் களில்லை; இனி உங்களுக்கு என்ன வாது! என்று கேட்டான். என்ன வாது? என்பதைச் சமணர்கள் வேறு வழியாகக் கொண் டார்கள். அவர்கள் அதை இழிவுரையாகக் கொள்ளாது, நேராகக் கொண்டார்கள்; கொண்டு, நாங்கள் இருவேமும் எங்கள் சமய உண்மைகளை ஏட்டிலெழுதி நெருப்பிலிடுவோம். எந்த ஏடு, வேகமாலிருக்கிறதோ, அந்த ஏட்டினுக்குரியவர் வெற்றி பெற்றவ ராவர் என்று சொன்னார்கள். அதற்குப் பாண்டியன் பதில் சொல்லு வதற்குள், பாலறாவாயர், வேந்தன் முன்னிலையில் நீங்கள் சொல்லி யவாறே செய்வோம் என்று சமணர்களைப் பார்த்துக் கூறினார். பாண்டியன் ஆணைப்படி அவன் முன்னிலையில் எரி வளர்க்கப்பட்டது. திருஞானசம்பந்தர் தாம் பாடிய திருமுறைகளை எடுத்தார்; கயிற்றை அவிழ்த்தார்; ஏடுகளை மறித்தார்; போக மார்த்த பூண்முலையாள் என்னும் திருநள்ளாற்றுப் பதிகம் கிடைத்தது. பெருமான், அத்திருப்பதிகத்தைத் திருக்கரத்திலே வாங்கினார்; அதற்கு ஆக்கந் தேடத் தளரிளவளரொளி என்னுந் திருப்பதிகத்தை எடுத்தார். நள்ளாறர் தம் நாமமே மிளிரிள வளரெரி இடில் இவை பழுதிலை மெய்ம்மையே என்று ஓதி, அதை நெருப்பிலிட்டார். அஃது அழியாது பச்சைப்பசேலென விளங்கிற்று. சமணர்களும் தங்கள் சமய உண்மையை ஏட்டில் எழுதினார்கள்; கவலையுடன் அதை நெருப்பிலிட்டார்கள்; இட்டதும், அவ்வேடு எரிந்து சாம்பலாயிற்று. திருஞானசம்பந்தர், குறித்த நாழிகையில், ஏடு பழுதுபடாமை கண்டு, அதை எடுத்தார். அதன்பால் பசுமையும் புதுமையும் அதிகமாக விளங்கின. திருஞானசம்பந்தப் பெருமான், அவ்வேட்டினை எல்லாருக்குங் காட்டினார்; காட்டிப் பழையபடி அதைத் திருமுறையில் கோத்தருளினார். அது கண்ட மன்னன் வியப்படைந்தான். அவன் சமணர்களை நோக்கி, உங்கள் ஏட்டை எடுங்கள் என்றான். அவர்கள் ஏட்டை எடுக்க நெருங்கினார்கள். நெருப்பு, கொழுந்து விட்டெரிந்தது. மன்னன், தண்ணீர் கொண்டு எரியைத் தணிவித்தான். சமணர்கள் ஏட்டைத் தடவித் தடவிப் பார்த்தார்கள். அவர்கள் என்ன கண்டார்கள்? சாம்பலையும் கரியையுமே கண்டார்கள். அவர்கள் வேறென்ன காணவல்லார்கள்? அவர்கள் மனம் வருந்தித் திகைத் தார்கள்; சாம்பலைப் பிசைந்து பிசைந்து பார்த்தார்கள்; தூற்றித் தூற்றிப் பார்த்தார்கள். அரசனுக்குச் சிரிப்பு வந்தது. அவன் சிரித்துச் சமணர்களைப் பார்த்து, இன்னும் நன்றாக அரித்து அரித்துப் பாருங்கள்; பொய்யை மெய்யாக்கப் புகுந்தவர்களே! போங்கள்; போங்கள்; முன்னுந் தோற்றீர்கள். இப்பொழுதும் தோற்றீர்கள். இன்னுமா தோற்கவில்லை? என்றான். சமணர்கள், மன்னனைப் பார்த்து, முன்னே, இருமுறை முயன்றோம்; இன்னும் ஒருமுறை முயல்வோம்; ஒருமுறையாவது வெற்றி பெறுவோம் என்றார்கள். அதற்கு மன்னன், இஃதென்ன மாற்றம் என்று மறுத்தான். ஆயினும், திருஞானசம்பந்தர், சமணர்களைப் பார்த்து, இனி என்ன வாது செய்ய நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். சமணர்கள், இனிப் புனல்வாதஞ் செய்வோம்; நமது சமய உண்மைகளை ஏட்டில் எழுதி, அவ்வேட்டை வைகையில் விடுவோம் எதிர் நோக்கி வரும் ஏடே பெருமையுடையது என்றார்கள். கவுணியர் பெருமான் அதற்கும் உடன்பட்டார். அப்பொழுது குலச்சிறையார், இவ்வாதில் தோற்றவர்களை என் செய்வது? அதை முடிவு செய்து கொண்டே வாதில் இறங்கல் வேண்டும் என்றார். குலச்சிறையார் மீது சமணர்களுக்குக் கோபமும் பொறாமையும் பொங்கி வழிந்தன. அவர்கள் வாய் தவறி, நாங்கள் தோற்றோமாயின், எங்களை இம்மன்னன் கழுவில் ஏற்றுவானாக என்று கூக்குரலிட்டார்கள். மன்னன் சமணர்களைப் பார்த்து, கோபமும் பொறாமையும் உங்களை இவ்வாறு கூறச் செய்தன என்று சொன்னான். அதற்கு மேல், மன்னன் எல்லாரையும் வைகைக்குப் போகு மாறு கட்டளையிட்டுத் தானும் புறப்பட்டான். எல்லாரும் வைகைக் கரையை அடைந்தனர். மன்னன் இருசாராரையும் பார்த்து, உங்கள் ஏடுகளை வைகையில் விடுங்கள் என்றான். சமணர்கள், தோற்றவர் தோலார் என்னும் உறுதியில் நின்றார்கள். அவ்வுறுதியின்றும் அவர்கட்கு அவா எழுந்தது. அவர்கள், அத்தி நாத்தி என்று எழுதி, ஏட்டை வைகையிலே விட்டார்கள். அவ்வேடு, கடல் நோக்கி ஓடிற்று. சமணர்கள், திருஞானசம்பந்த சுவாமிகளைப் பார்த்து, உம்முடைய ஏட்டை விடும்; விளைவதைப் பார்ப்போம் என்றார்கள். திருஞானசம்பந்தர், வாழ்க அந்தணர் என்னுந் திருப் பாசுரத்தை ஏட்டிலே வரைந்து, அதை வைகையிலே விட்டனர். அவ் வேடு எதிர்நோக்கி, நீரைக் கிழித்துக் கொண்டு வந்தது. அத்திருப் பாசுரத்தில் பிள்ளையார், வேந்தனும் ஓங்குக என்று அருளினமை யால், மன்னன் கூன் நிமிரப் பெற்றான். ஏட்டை எடுப்பதற்குக் குலச் சிறையார் குதிரைமீது இவர்ந்து சென்றார். ஏட்டை நிறுத்தப் பிள்ளையார், வன்னியும் மத்தமும் என்னுந் திருப்பதிகத்தைப் பாடியருளினார். ஏடு, திருவேடகத் திருக்கோயிலுக்குப் பக்கத்திலே, நீர் நடுவிலே, தேங்கி நின்றது. குலச்சிறையார், நீரிலே இறங்கி, ஏட்டை எடுத்துக் கரை ஏறினார். அவர், சிவபெருமானைத் தொழுது, ஞானசம்பந்தப் பிள்ளையாரிடம் வந்து, அவரைப் பணிந்தார். குலச்சிறையார் தாம் எடுத்துவந்த ஏட்டை எல்லார்க்குங் காட்டினார். மன்னன் அமைச்சரை நோக்கி, இச்சமணர்கள் முன்னே பிள்ளையார்க்குக் கேடு சூழ்ந்தார்கள்; மும்முறை தோற்றார்கள். இவர்கள் சொற்படி இவர்களைக் கழுவேறச் செய்க என்றான். குலச்சிறையார் கழுமரங்களை நாட்டினார். சமணர்கள் எண்ணா யிரவரும் அம்மரங்களில் ஏறினார்கள். திருஞானசம்பந்தர் பாண்டியனுக்குத் திருநீறு கொடுத்தார். அவன் அதை அன்போடு ஏற்றுப் பூசிக்கொண்டான். பாண்டிநாடு முழுவதும் திருநீறு மயமாயிற்று. திருஞானசம்பந்தர் திருக்கோயிலுக்குப் போனார். பாண்டியன், பாண்டிமா தேவியார், குலச்சிறையார் உள்ளிட்ட அடியவர்கள் எல்லாரும் அவருடன் போந்தனர். பிள்ளையார் திருக்கோயிலுள் நுழைந்து, வீடலால வாயிலாய் என்னனுந் திருப்பதிகம் பாடி யருளினார். பாண்டியன், ஆலவாய் அரசே! சமண வலையிற் சிக்குண்டு கிடந்தேன். என் பிணி அறுக்கப் பிள்ளையாரைத் தந்தனை. உன் அருள் திறத்தை என்னென்று போற்றுவேன் என்று வணங்கி நின்றான். பிள்ளையார் திருக்கோயிலின்றும் திரு மடத்துக்கு எழுந்தருளினார். மற்றவர் பிள்ளையார்பால் விடை பெற்றுத் தத்தம் இருக்கைக் கேகினர். திருஞானசம்பந்தர், ஆல நீழல் உகந்த என்னுந் திருப் பதிகத்தைப் பாடியருளினார். அதிலே சிவபெருமான் திருநீல கண்டப் பெரும்பாணர்க்கு அருளிய திறத்தை அமைத்துச் சிறப் பித்தார். பாண்டியனும், பாண்டிமா தேவியாரும், குலச்சிறையாரும், மற்ற அடியவரும் நாடோறும் பிள்ளையாரிடம் போந்து, அவரைப் பணிந்து வரலாயினர். சிவபாத விருதயர், மதுரையில் நிகழ்ந்ததை அறிய வேண்டிச் சீர்காழியினின்றும் புறப்பட்டார். அவர், பாண்டி நாடடைந்து, மதுரை சேர்ந்து, சொக்கநாதரைத் தொழுது, பிள்ளையாரது திருமடத்துக்குச் சென்.றார். அவரைக் கண்டதும் பிள்ளையாருக்குத் தோணியப்பர் நினைவு தோன்றிற்று. பிள்ளையார், மண்ணி னல்ல வண்ணம் என்னுந் திருப்பதி கத்தைப்பாடி மகிழ்ந்தார். வேறு பல பதிகளையுங் கண்டு தொழல்வேண்டும் என்னும் வேட்கை திருஞானசம்பந்தருக்கு எழுந்தது. எழவே, அவர் மதுரையை விடுத்துப் புறப்படலானார். மதுரை நேயர்கள் மூவரும், பிள்ளையாரை வணங்கிக் கண்ணீருங் கம்பலையுமானார்கள். காழிவள்ளலார், அவர்களை நோக்கி, வருந்தல் வேண்டா; இந் நாட்டிலுள்ள திருப்பதிகளைத் தொழ என்னுடன் வாருங்கள் என்று அருளிச்செய்தார். அவர்களும், மற்ற அடியவர்களும் புடை சூழப் பிள்ளையார், திருப்பரங்குன்றம், திருவாப்பனூர், திருப்புத்தூர், திருப்பூவணம், திருக்கானப்பேர், திருச்சுழியல், திருக் குற்றாலம், திருக்குறும்பலா, திருநெல்வேலி முதலிய திருப்பதிகளைக் கண்டு, பதிகம் பாடி, இராமேச்சரத்தை அடைந்தார்; அங்கே சிலநாள் தங்கினார். அங்கிருந்து கொண்டே ஈழநாட்டுத் திருப்பதி களாகிய திருக்கோணமலையையும் திருக்கேதீச்சரத்தையும் திக்கு நோக்கி வணங்கித் தமிழ்மாலை சாத்தினார். பின்னர்ப் பிள்ளையார் இராமேச்சரத்தை விடுத்தார்; விடுத்துத் திருவாடானை, திருப்புன வாயில் முதலிய திருப்பதிகளுக்குப் போய், மணமேற்குடி நண்ணி னார். அது குலச்சிறை நாயனார் பிறந்த இடமாதலால், பிள்ளையார் அங்கே தங்கலானார்; அங்கிருந்து கொண்டே அவர், சில திருப்பதி களுக்குச் சென்று திரும்பினார். திருஞானசம்பந்தர், பாண்டி நாட்டை விடுத்துச் சோழ நாட்டிற் கெழுந்தருள விரும்பினார். அஃதுணர்ந்த பாண்டியனும், அம்மையாரும், அமைச்சரும் பிள்ளையாரைப் பிரிந்து வாழ மன மில்லாதவராய், அவருடன் செல்லவே உளங்கொண்டனர். அவர்கள் நிலையை உணர்ந்த பிள்ளையார், அவர்களைப் பார்த்து, என்னு ரைக்குச் செவி சாயுங்கள்; இந் நாட்டிலிருந்து கொண்டே சைவப் பயிரை ஓம்பி வாழுங்கள் என்று அருள் சுரந்தார். அம் மூவரும் பிள்ளையார் ஆணையை மறுத்தற் கஞ்சி, அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கி, அத் திருவடிகளை ஆனந்தக் கண்ணீரால் நனைத்து, எழுந்து நின்றார். பிள்ளையார், அவர்களுக்கு விடை நல்கிப், பாண்டி நாட்டை விட்டகன்றார்; சோழநாட்டிற் புகுந்தார்; பல திருப்பதிகளைக் கண்டு தொழுது கொண்டே சென்றார்; திருக்களர், திருப்பாதாளீச்சரம் முதலிய திருப்பதிகளை அடைந்து, ஆண்டவனை வழிபட்டார்; பின்னர் முள்ளிவாய்க்கரையைச் சேர்ந்தார். அவ் வேளையில் அங்கே ஆற்றுப்பெருக்கு அதிகமாயிருந்தது. அதனால் ஓடக்காரர்கள் ஓடங்களைக் கரையிலே நிறுத்திப் போய் விட்டார்கள். பிள்ளையார்க்குத் திருக்கொள்ளம்பூதூர் எதிரே தோன்றிற்று. அத் திருப்பதியைக் கண்டு தொழுதல்வேண்டும் என்னும் அவா அவர்க்கு எழுந்தது. எழவே, தமிழ் விரகர் ஓர் ஓடத்தின் கட்டை அவிழ்த்தார்; திருத்தொண்டர்களை அவ் வோடத்தில் ஏற்றினார்; அதன்மேல் நின்று, கொட்டமே கமழும் என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். ஓடம் ஓடி, ஆண்டவ னருளால் அக் கரையைச் சேர்ந்தது. பாலறாவாயர் இறங்கினார்; அடியவர்களும் இறங்கினார்கள். எல்லாருஞ் சேர்ந்து திருக் கோயிலுக்குச் சென்றனர்; அங்கே ஆண்டவனை வழிபட்டுத் திரு நள்ளாறு போந்தனர். பிள்ளையார் பாடக மெல்லடி என்னுந் திருப்பதிகத்தை அருளிச் செய்து, அத் திருப்பதியிலே சிலநாள் தங்கியிருந்தார்; பின்னே அங்கிருந்து புறப்பட்டுத் திருத்தெளிச்சேரி சேர்ந்து, போதி மங்கையை நெருங்கினார். போதிமங்கை பௌத்தர்கள் மலிந்த பதி. அடியவர்கள் ஆர வாரமும், திருச்சின்ன ஓசையும், சிவநாம முழக்கமும் பௌத்தர் களுக்கு நாராசம் போலிருந்தன. அவர்கள் எல்லாரும் ஒருங்கு திரண்டு, புத்தநந்தியைத் தலைவனாகக் கொண்டு, திருக்கூட்டத்தை மறித்தனர். அவர்கள், வெற்றிச் சின்னங்கள் எற்றுக்கு? எங்களை வாதில் வென்றீர்களா? வாதில் வென்றன்றோ அவைகளை முழக்கல் வேண்டும்? என்று வெகுண்டு விலக்கினார்கள். அவர்கள் செயலைக் கண்ட அடியார்கள், இத் தலைவனை மாய்த்தல் வேண்டும். இல்லை யேல் இவன் தீங்கு விளைப்பான் என்று கருதி, நிலைமையைப் பிள்ளையார்க்குத் தெரிவித்தார்கள். பிள்ளையார் இஃதென்ன நன்றாயிருக்கிறது! புத்தநந்தியின் திறத்தை வாதத்தில் பார்ப்போம் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதற்குள் நெருக்கு அதிகமாகத் தேவாரத் திருமுறைகளை எழுதிவரும் அன்பர் புத்தர் சமண் கழுக்கையர் என்னுந் திருப்பாட்டை ஓதி. அத்திர மாவன அஞ்செழுத்துமே என்று முடித்தார். முடித்ததும், புத்தநந்தி மீது இடிவிழுந்தது. பௌத்தர்கள் நிலைகலங்கி ஓடினார்கள். அந் நிகழ்ச்சியை அடியார்கள் பிள்ளையார்க்கு அறிவித்தார்கள். பிள்ளையார் அவர்களை நோக்கி, இது விதியால் நேர்ந்தது; சிவ நாம சங்கீர்த்தனஞ் செய்யுங்கள் என்றார். அடியார்கள் அப்படியே செய்தார்கள். மருண்டு ஓடிய பௌத்தர்கள், சாரிபுத்தனைத் தலைவனாகக் கொண்டு, மீண்டும் வந்தார்கள் வந்து, மந்திர வாதம் வேண்டாம்; தருக்க வாதஞ் செய்யுங்கள் பார்ப்போம்! என்று அடர்த்தார்கள். பிள்ளையார், சிவிகையினின்றும் இறங்கி, ஒரு மண்டபத்திற்கு எழுந்தருளினார். புத்தர்களை அழைத்து வருமாறு பிள்ளையார் அடியார்களுக்குக் கட்டளையிட்டார். அடியார்கள், புத்தர்களை அழைத்து வந்தார்கள். சாரிபுத்தன், பிள்ளையார் அருகே நின்றான். புத்தநந்தியை இரு கூறுபடுத்திய அன்பர், பிள்ளையார் முன் னிலையில் வாதம் தொடங்கினார். சாரிபுத்தனும் வாதத்தில் ஈடு பட்டான். முடிவில் சாரிபுத்தன் தோல்வியடைந்தான். அவன், திரு ஞானசம்பந்த சுவாமிகளை வணங்கினான். மற்றப் பௌத்தர்களும் பெருமானைப் பணிந்தார்கள். பிள்ளையார் எல்லாருக்குந் திருநீறளித்து அருள் செய்தார். பின்னர்த் திருஞானசம்பந்தர் திருக்கடவூரை அடைந்து, அங்கே சில நாள் தங்கியிருந்தார். அவ் வேளையில், திருஞான சம்பந்தருக்குத் திருநாவுக்கரசர் நினைவு தோன்றிற்று. தோன்றவே, அவர் அடியார்களை நோக்கித், திருநாவுக்கரசு சுவாமிகள் எங்குள்ளார்? என்று கேட்டார். அவர்கள், திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கிறார் என்று சொன்னார்கள். உடனே அப்பரைக் காணப் பிள்ளையார் புறப் பட்டார். பிள்ளையார் வருகையைக் கேட்ட அப்பர், அவரை எதிர் கொள்ள எழுந்து சென்றார். அப்பர், திருக்கூட்டத்திலே நுழைந்து, முத்துச் சிவிகையைத் தாங்கி வருபவர்களோடு கலந்து, சிவிகையைத் தாங்கி வந்தார். பிள்ளையாருக்குத் திருப்பூந்துருத்தி தோன்ற லாயிற்று; தோன்றவே, அவர் அப்பர் எங்குற்றார்? என்று கேட்டார். அப்பர், நானேயோ தவஞ்செய்தேன்; திருவடிகளைத் தாங்கி வரும் பெருவாழ்வைப் பெற்றிருக்கிறேன் என்றார்; என்றதும், ஞானசம்பந்தப் பெருமான், பதைபதைத்துச் சிவிகை விட்டிறங்கி, இப்படியுஞ் செய்யலாமோ! என்று அப்பர்சுவாமிகளை வணங் கினார். இதைவிட வேறு என் செய்ய வல்லேன்! என்று அப்பர் சுவாமிகள் திருஞான சம்பந்தரை வணங்கினார். அடியவர்கள் ஆரவாரித்தார்கள். இருவரும் திருப்பூந்துருத்தியை அடைந்து, திருக் கோயிலுக்குச் சென்று, ஆண்டவனை வழிப்பட்டுக் கொண்டி ருந்தனர் அப்பொழுது திருஞானசம்பந்தர், பாண்டி நாட்டில் நிகழ்ந்தன வற்றை யெல்லாம் அப்பர் சுவாமிகளுக்குச் சொன்னார். அப்பர் சுவாமிகள் தமது தொண்டை நாட்டு யாத்திரையைப் பிள்ளை யாருக்கு விளக்கிக் கூறினார். திருநாவுக்கரசர், பிள்ளையாரிடம் விடைபெற்றுப் பாண்டிநாடு - நோக்கினார். பிள்ளையார், திரு நெய்த்தானம், திருவையாறு, திருப்பழனம் முதலிய திருப்பதிகளை வணங்கி வழிபட்டுச் சீர்காழியைச் சேர்ந்தார்; உற்றுமை சேர்வது மெய்யினையே என்னுந் திருப்பதிகம் பாடினார்; பின்னே தந்தை யாருடன் இல்லம் போந்து இனிதிருந்தார். பிள்ளையாருக்குத் தொண்டை மண்டலத்தின்மீது கருத்துச் சென்றது. அவர் யாத்திரைக்குச் சித்தமானார். சிவபாதவிருதயரும் உடன்தொடர்ந்தார். பிள்ளையார் அவரைத் தடுத்து, நீர் இங்கிருந்து கொண்டே தோணியப்பரை வழிபட்டுக்கொண்டிரும் என்று சொன்னார். சிவபாதவிருதயர் அதற்கு உடன்பட்டனர். பிள்ளையார், சிதம்பரம், திருத்தினை நகர், திருமாணிகுழி, திருப்பாதிரிப்புலியூர், திருவடுகூர், திருவக்கரை, திருவிரும்பை மாகாளம், திருவதிகை, திருவாமாத்தூர், திருக்கோவலூர், திருவறையணி நல்லூர், திரு வண்ணாமலை முதலிய திருப்பதிகளுக்குப்போய், இறைவனைத் தொழுது, தமிழ் பாடித் திருவோத்தூரை அடைந்தார். திருவோத்தூரில் ஓர் அன்பர் இருந்தார். அவர் சிவ பெருமானுக்கெனப் பனைகள் அமைத்து வளர்த்தார். அப் பனைகள் ஆண்களாகிக் காயாதிருந்தன. அதைக் கண்ட சமணர்கள், ஓ சிவபத்தரே! உமது ஆண் பனைகள் காய்க்குமா? சிவனருளால் காய்க்கச் செய்ய முடியுமா? என்று எள்ளுவது வழக்கம். அதனால் அன்பர் மனக் கவலை உறுதல் உண்டு. அவ்வன்பர் அதனைத் திரு ஞான சம்பந்தரிடம் முறையிட்டார். அவ்வுரை கேட்ட பிள்ளையார், திருக்கோயிலினுள்ளே நுழைந்தார்; ஆண்டவனை நினைந்து நினைந்து உருகினார்; பூத்தேர்ந் தாயன என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார்; திருக்கடைக்காப்பிலே குறும்பை ஆண் பனை ஈன் குலை ஓத்தூர் என்று அருளிச்செய்தார். ஆண் பனைகளெல்லாம் பெண் பனைகளாயின; ஒவ்வொன்றிலும் குலைகள் தொங்கின; காய்கள் பழுத்தன. இவ்வாறு, ஆளுடைய பிள்ளையார் அன்பருக்கு அருள் செய்தார். சமணர்களிற் பலர் ஊரைவிட்டு ஓடினர்; சிலர் வெண்ணீறணிந்து சிவநெறி நின்றனர். பனைகள் பிள்ளையார் அருள்பெற்ற காரணத்தால், தங்கள் காலங் கழித்து, முடிவில் சிவமாயின. திருஞானசம்பந்தர், திருவோத்தூரை விடுத்துத், திருமாகறல், திருக்குரங்கணின் முட்டம், திருவேகம்பம், திருக்கச்சிநெறிக் காரைக் காடு, திருவனேகதங்காவதம், திருக்கச்சிமேற்றளி, திருமாற்பேறு, திருவல்லம், திருவிலம்பயங்கோட்டூர், திருவிற்கோலம், திருஊறல் முதலிய திருப்பதிகளை வணங்கிக்கொண்டு, திருவாலங்காட்டை அணுகினார்; இத் திருப்பதி காரைக்கால் அம்மையார் தலையாலே நடந்து பேறு பெற்றது என்று நினைந்து, அஞ்சி, உள் நுழையாது, அருகே உள்ள ஓர் ஊரிலே அன்றிரவு தங்கினார். ஆலங்காட்டுப் பெருமான், பிள்ளையார் கனவில் தோன்றி, நம்மைப் பாட மறந் தனையோ? என்று திருவாய்மலர்ந்தருளினார். உடனே பிள்ளையார் விழித்து எழுந்தார்; துஞ்ச வருவாரும் என்னுந் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்; அதிலே பழையனூரார் உறுதிமொழி காத்ததைச் சிறப்பித்தார். பொழுது விடிந்தது. அடியார் பலர் பிள்ளையாரைக் காண வந்தனர். அவர்கட்குப் பிள்ளையார் இரவு நிகழ்ச்சியைக் கூறி, அவர்களோடு அளவளாவியிருந்தார்; பின்னர் அங்கிருந்து புறப் பட்டுத் திருப்பாசூர், திருவெண்பாக்கம், திருக்காரிக்கரை முதலிய திருப்பதிகளுக்குப் போய்த் திருக்காளத்தி நோக்கினார். திருக்காளத்தி சமீபித்தது. காளத்தி அன்பர்கள், பிள்ளை யாரை எதிர்கொண்டார்கள். பிள்ளையார், அவர்களை நோக்கி, இம் மலைகளில் காளத்தி மலை எது? என்று கேட்டார். இது காளத்தி மலை என்று அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். பிள்ளையார், வானவர்கள் தானவர்கள் என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார்; அதிலே கண்ணப்பர் திருத்தொண்டைச் சிறப்பித்தார்; பொன்முகலி கடந்து மலையடியில் வந்தார்; ஆண்டவனை வணங்கினார்; மலை மேல் ஏறினார்; அங்கே இறைவனைக் கண்டு தொழுதார்; அவ் விடத்தில் விழுந்து வணங்கினார்; ஆனந்த பரவசராயனார்; பின்னே மலையை விட்டு நீங்கி, ஒரு திருமடத்திலே தங்கியிருந்தார்; அங்கிருந்து கொண்டே வட கயிலாயம், திருக்கேதாரம், திருக்கோ கரணம், திருப்பருப்பதம், இந்திரநீல பருப்பதம் முதலிய க்ஷேத்தி ரங்களின் திக்கு நோக்கித் தமிழ் பாடினார். பிள்ளையார், திருக் காளத்தியை விடுத்துத் திருவேற்காடு, திருவலிதாயம் முதலிய திருப்பதிகளைக் கண்டு தொழுது, திருவொற்றியூரை அடைந்து, இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்தார். திருமயிலாப்பூரிலே சிவநேசர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் வணிகர்; சிவனடியார்; செல்வத்திற் சிறந்தவர். அவர் திருஞான சம்பந்தப்பெருமான் சிறப்புகளைக் கேள்வியுற்று, அவர்பால் பேரன்புடையவராய் வாழ்ந்து வந்தார். சிவநேசருக்குப் புத்திரப் பேறு இல்லாமலிருந்தது. அது குறித்து, அவர் தவங்கிடந்தார். அவருக்கு ஒரு பெண் குழவி பிறந்தது. அக் குழவிக்குப் பூம்பாவை என்னும் பெயர் சூட்டப்பட்டது. பூம் பாவையார், பிறை என வளர்ந்து வந்தார். சிவநேசர், என் புதல்விக்குக் கணவனாக வாய்க்கிறவன் எவனோ, அவனே என் அருநிதிக்கு உரியவனாவான் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந் நாளில் சிவநேசரிடம் சிலர் போந்து, திருஞான சம்பந்தர் பாண்டிநாட்டில் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறினார். சிவநேசர், அவர்களுக்குப் பொன்னகையும் மணியையும் துகிலையும் வாரி வாரிக் கொடுத்தார். மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், என் புதல்வி, என் நிதி, எனக்குள்ள மற்ற எல்லாவற்றையும், என்னையும் பிள்ளையாருக்குக் கொடுத்தேன் என்று சொல்லி இன்பக் கடலில் திளைத்தார். ஒரு நாள், பூம்பாவையார் நந்தவனத்துள் சென்றார்; பூக்கொய்யப் புகுந்தார். அப்பொழுது, ஒரு பாம்பு மல்லிகைப் பந்தரிலே மறைந்து வந்து அம்மையாரைத் தீண்டிற்று; அம்மையார் சாய்ந்தார். சேடியர்கள், அவரைத் தாங்கிக் கன்னிமாடத்துக்குக் கொண்டு போனார்கள். மணி மந்திர ஔஷத முயற்சிகள் செய்யப் பட்டன. பயன் விளையவில்லை. பூம்பாவையாரிடம் உயிர் நீங்கிய குறிகள் தோன்றின. சிவநேசரும், மற்ற உறவினரும் துயரக் கடலில் அழுந்தினர். சிவநேசர் ஒருவாறு தெளிவுற்று, இந் நஞ்சை இறக்கு வோர்க்கு, நிதி, குவையல் குவையலாக வழங்கப்படும் என்று பறை சாற்றுவித்தார். இராஜ வயித்தியர்களும் மந்திரவாதிகளும் போந்து, தங்களால் இயன்றவரை மூன்று நாள் முயன்றார்கள்; பயன் விளையாமை கண்டு, அவர்கள் திரும்பினார்கள். அது கண்ட சிவ நேசர், இப் பூம்பாவை திருஞான சம்பந்தருக்கு உரியவள் அல்லளோ? யான் ஏன் வருந்தல் வேண்டும்? இவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் அவர் வரும்வரை சேமித்து வைத்தலே நலம் என்று எண்ணினார்; எண்ணியவாறே செய்தார்; எலும்பையும் சாம்ப லையும் குடத்திலேயிட்டு, அக் குடத்தைப் பொன், மணி, முத்து, துகில் முதலியவற்றால் அலங்கரித்துக் கன்னிமாடத்திலே வைத்தார்; நாள்தோறும் மாலை, சந்தனம், அன்னம், விளக்கு முதலியன அங்கே அமைத்துவந்தார். அவ்வேளையில், ஆளுடைய பிள்ளையார் திருவொற்றியூரில் எழுந்தருளி இருப்பதைச் சிவநேசர் கேள்வியுற்றார். அவர் திருஞான சம்பந்தரை அழைத்துவரக் கருதினார்; கருதித் திருமயிலாப்பூரி லிருந்து திருவொற்றியூர்வரை நடைபந்தர் முதலியன அமைத்தார்; அமைத்து, அடியவர்களுடன் புறப்பட்டார். திருஞானசம்பந்தரும் திருவொற்றியூரை விடுத்துத் திருமயிலை நோக்கி வரலானார். சிவ நேசரும், அவர் கூட்டத்தாரும். பிள்ளையாரைக் கண்டு வணங்கினர். பிள்ளையாரும் எதிர்தொழுது அவர்களோடு கலந்து கொண்டார். அப்பொழுது அடியவர்கள் சிவநேசச் செட்டியார்க்கு உற்றதைப் பிள்ளையாருக்குச் சொன்னார்கள். பிள்ளையார் திருமயிலாப்பூரைச் சேர்ந்தார்; கபாலீச்சுரம் என்னுந் திருக்கோயிலுட் புகுந்தார்; ஆண்டவனைத் தொழுது புறத்தே வந்தார். பிள்ளையார், தம்முடனிருந்த சிவநேசரை நோக்கி, என்புக் குடத்தைக் கொண்டு வாரும் என்றார். சிவநேசர் என்புக் குடத்தைச் சிறப்பொடு கொண்டு வந்து, கோபுரத்திற்கு எதிரே. திருமுன்னர் வைத்தார். அவ்வூரிலுள்ளாரும், பிற ஊராரும், சமணர்களும், மற்றவரும் அங்கே போந்து சூழ்ந்து நின்றார்கள். பிள்ளையார் திரு வருளைச் சிந்தித்து, மட்டிட்ட என்னுந் திருப்பதிகத்தை எடுத்து, போதியோ பூம்பாவாய் என்று பாடலானார். பூம்பாவையார் குடத்தில் உருப்பெற்றார். உரிஞ்சாய வாழ்க்கை என்னுந் திருப் பாட்டைப் பிள்ளையார் பாடினதும் குடம் உடைந்தது. பூம்பாவையார் பன்னிரண்டு வயதுடையவராய் வெளித் தோன்றினார். பிள்ளையார் திருக்கடைக் காப்புச் சாத்தினார். அடியவர் சிவநாம கோக்ஷஞ் செய்தார்கள். ஆனந்தக் கூத்தாடினார்கள். அமரர்கள் மலர்மாரி சொரிந்தார்கள். சமணர்கள் தள்ளாடினார்கள். சிவநேசர் பிள்ளை யாரைப் பணிந்தார். பூம்பாவையார் பிள்ளையாரைத் தொழுது வணங்கி நின்றார். பிள்ளையார் சிவநேசரைப் பார்த்து, உமது அருமை மகளை அழைத்து வீட்டிற்குச் செல்க என்றார். சிவநேசர், பிள்ளையாரைத் தொழுது, இவளை அடிகள் திருமணஞ் செய் தருளல் வேண்டும் என்று வேண்டினார். திருஞானசம்பந்தப் பெருமான், சிவநேசரை நோக்கி, நீர் பெற்ற பெண், விடத்தால் மாண்டாள்; பின்னர்ச் சிவனருளால் அவளை நாம் தோற்று வித்தோம். ஆகவே, உமது உரை தகாது என்று மறுத்தார். சிவ நேசரும், அவர்தம் உறவினரும் மயங்கி நின்றனர். பிள்ளையார் அவர்கட்குத் தேறுதல் கூறித் திருக்கோயிலுள் புகுந்தார். சிவநேசர், பூம்பாவையாரை வேறு ஒருவருக்கும் மணஞ்செய்து கொடுக்க விரும்பினாரில்லை. அவர் அம்மையாரைக் கன்னிமாடத் திலேயே இருக்கச் செய்தார். அம்மையார் அங்கிருந்து தவங்கிடந்து சிவனடி சேர்ந்தார். பிள்ளையார் திருமயிலாப்பூரிலே சிலநாள் தங்கியிருந்தார். அவர், சிவநேசர் முதலிய அடியவர்களுக்கு விடைகொடுத்துத் திருவான்மியூர், திருவிடைச்சுரம், திருக்கழுக்குன்றம், திருஅச்சிறு பாக்கம், திருவரசிலி, திருப்புறவார், பனங்காட்டூர் முதலிய திருப் பதிகளைத் தொழுது, பதிகம் பாடிக்கொண்டே தில்லையைச் சேர்ந்தார். சிவபாத விருதயமும் மற்றவரும், பிள்ளையார் தில்லையில் இருத்தலைக் கேள்வியுற்றனர். அவர்கள் சீர்காழியினின்றும் புறப் பட்டுத் தில்லையடைந்தார்கள். அவர்களுடன் பிள்ளையாருங் கலந்து, பல திருப்பதிகளைக் கண்டு தொழுது கொண்டே சென்றார். சீர்காழி தூரத்திலே காட்சி தந்தது. உடனே பிள்ளையார் சிவிகை விட்டிறங்கினார்; வண்டார் குழலரிவை என்னுந் திருப் பதிகத்தைப் பாடினார். அவர் சீர்காழியைச் சமீபித்ததும் நம் பொருள் நம் மக்கள் என்றெடுத்து, நலங்கொள் காழி சேர்மினே என்று அருளிக்கொண்டே திருக்கோயிலை அடைந்தார்; அங்கே ஆண்டவனை வழிபட்டுத் தமது திருமாளிகை சேர்ந்தார். அப் பொழுது முருக நாயனார், திருநீலநக்க நாயனார் முதலிய திருத் தொண்டர்கள் தங்கள் தங்கள் சுற்றத்தவர்களோடு சிர்காழிக்கு வந்தார்கள். திருஞான சம்பந்தப் பெருமான், அவர்களுடன் தோணி யப்பரை வழிப்பட்டுக் கொண்டிருந்தார். அச் சமயத்தில், பிள்ளையாருக்குத் திருமணஞ் செய்வித்தல் வேண்டும் என்ற விருப்பம், சிவபாத விருதயர்க்கு உண்டாயிற்று. அவர் தம் சுற்றத்தாருடன் கலந்து ஆலோசித்தார். எல்லோரும் ஒருங்கு கூடித் தங்கருத்தைப் பிள்ளையாருக்குத் தெரிவித்தனர். அதற்குப் பிள்ளையார் இணங்கினாரில்லை. அவர்கள் பிள்ளையாரைத் தொழுது, உலகுய்யத் தோன்றிய பெருமானே! உலகுய்ய மணஞ் செய்து காட்டுதல் வேண்டும் என்று வேண்டினார்கள். பிள்ளையார் திருவருளை நினைந்து, அவர்கள் வேண்டுதலுக்கு இணங்கினார். சிவபாத விருதயரும், மற்றவரும் மகிழ்வெய்தினர். அவர்கள் எல்லாரும் ஒருங்குசேர்ந்து, சிந்தித்துத் திருநல்லூரிலுள்ள நம் பாண்டார் நம்பியின் மகளே பிள்ளையார்க்கு உரியவள் என்னும் முடிவிற்கு வந்தனர். அவர்கள் திருநல்லூர்க்குப் போய்த் தங்கள் கருத்தை நம்பாண்டார் நம்பிக்குத் தெரிவித்தார்கள். நம்பாண்டார் நம்பி, நான் உய்ந்தேன்; என்குலமும் உய்ந்தது. பிள்ளையாருக்கு என் பெண்ணைக் கொடுக்க என்ன தவஞ்செய்தேன்! என்று கூத்தா டினார்; ஆனந்த முற்றார்; உடன்பட்டார். சிவபாதவிருதயரும், மற்றவரும் நம்பாண்டார் நம்பிபால் விடைபெற்றுச் சீர்காழிக்குத் திரும்பினர்; ஞானசம்பந்தப் பெருமானுக்கு நம்பாண்டார் நம்பியின் விருப்பத்தைத் தெரிவித்தனர். திருமணத் திருநாள் குறிக்கப்பட்டது. திருமண ஓலை எங்கணும் அனுப்பப்பட்டது. நம்பாண்டார் நம்பியும் திருமண முயற்சியில் தலைப்பட்டார். திருஞானசம்பந்தப் பெருமான், தோணியப்பரை வணங்கி, விடைபெற்றார். சிவபாதவிருதயர், உறவினர், அடியவர் எல்லாரும் திருநல் லூரை நோக்கினர். பிள்ளையார் திருநல்லூரை அடைந்து, பெருமணம் என்னுங் கோயிலுட் புகுந்தார். அவர் ஆண்டவனை வழிபட்டு அருள் பெற்றார். மற்றவர்கள், தங்கள் தங்கட்கெனக் குறிக்கப்பெற்றிருந்த விடுதிகளுக்குச் சென்றார்கள். அப்பொழுது அந்தணர்களிற் சிலர் போந்து பிள்ளையாரைப் பார்த்து, ஐயனே! திருமணக்கோலம் புரிந்தருளல் வேண்டும் என்றனர். அது கேட்ட பிள்ளையார், ஒரு திருமடத்திற்குச் சென்றார். அந்தணர்கள் பிள்ளை யாரை நீராட்டி, ஆடை புனைந்து, பொன் மணி முத்து முதலிய அணிகளால் அலங்கரித்தார்கள். பிள்ளையார், அந்தணர்கள் புனைவன எல்லாம் புனைக என்றிருந்து, முடிவில் உருத்திராக்க மாலையைத் தாமே எடுத்து அணிந்துகொண்டார்; ஐந்தெழுத் தோதித் திருவெண்ணீறு அணிந்தார்; அணிந்து, முத்துச் சிவிகையில் ஏறினார். வாத்தியங்கள் கோக்ஷித்தன; அந்தணர்கள் மறை முழங்கி னார்கள்; அடியவர்கள் ஆரவாரஞ் செய்தார்கள்; சின்னங்கள் முழங்கின. இச் சிறப்புடன் பெருமான், திருமணப்பந்தரை அடைந்தார்; ஒரு பொன் பீடத்தில் அமர்ந்தார். அப்பொழுது மாதர்கள் மணப் பெண்ணையும் அணி செய்தார்கள். நம்பாண்டார் நம்பி, தம் மனைவியாருடன் பாலும் நீருங் கொண்டுவந்தார். அவர், பிள்ளையாரைச் சிவமாகக் கருதி, அவ ருடைய திருவடிகளை விளக்கினார்; அந் நீரைத் தாமும் தெளித்துக் கொண்டார்; மற்றவர் மீதும் தெளித்தார். நம்பாண்டார் நம்பி, பிள்ளையார் திருக்கரத்திலே நீரைச் சொரிந்து, என் புதல்வியை உமக்கு அளித்தேன் என்று சொன்னார். பெண்மணிகள் மணப்பெண்ணை அழைத்து வந்து பிள்ளையார் வலப் பக்கத்திலே அமர்த்தினார்கள். திருநீலநக்க நாயனார் சடங்குகளைச் செய்தார். எரியிலே பொரி இடப்பட்டது. எரியை வலம் வரவேண்டித் திருஞானசம்பந்தர், அம்மையார் திருக் கரத்தைப் பற்றலானார். அவ்வேளையில். பிள்ளையார், எரி சிவமன்றோ! என்று நினைந்தார்; திருக்கோயிலுக்கேக வேண்டும் என்று எண்ணினார்; இவ் வில்லொழுக்கம் வந்து சேர்ந்ததே; இவளோடு நான் இறைவனடி சேர்வேன் என்று உறுதிகொண்டார்; கொண்டவாறே, திருக்கோயிலுக்குப் போனார். உறவினரும், அடியவரும், மற்றவரும் அவரைத் தொடர்ந்தே சென்றனர். பிள்ளையார், ஆண்டவன் திரு முன்னே நின்று, நல்லூர்ப் பெரு மணம் என்னும் பதிகத்தைப் பாடினார்; பாடி, அம்மை அப்பனே! உன் திருவடி நீழலை அடையும் சமயம் இதுவே என்று வேண்டினார். சிவபெருமான், ஞானசம்பந்தனே! நீயும், உன் மனைவியும், திருமணங் காண வந்த மக்களும் இச் சோதியினுள்ளே வந்து சேருங்கள் என்று திருவாய் மலர்ந்து, திருக்கோயில் முழுவதும் சோதிமயமாக்கி, அதன்கண் ஒரு திருவாயிலையும் வகுத்துக் காட்டினார். அது கண்ட பிள்ளையார், காதலாகிக் கசிந்து என்னும் பஞ்சாக்கரத் திருப்பதிகத்தை ஓதினார். அத் திருப்பதிகம் எல்லார் செவியிலும் நுழைந்தது. பிள்ளையார், திருமணத் திருக் கூட்டத்தாரை நோக்கி, எல்லீரும் இச் சோதியுள் புகும் என்று அருளினார். அவ்வாறே சோதியில் எல்லாரும் புகுந்தனர்; திருநீலநக்க நாயனார், முருகநாயனார், சிவபாத விருதயர், நம்பாண்டார் நம்பி, திருநீலகண்ட யாழ்ப்பான நாயனார் முதலிய திருத்தொண்டர்கள் தங்கள் தங்கள் மனைவிமார்களுடன் சுற்றத்தவர்களுடனும் புகுந்தார்கள்; முத்துச் சிவிகை முதலியவற்றைத் தாங்கி வந்த வர்களும், மற்ற அடியவர்களும், அறுவகைச் சமயத்தவர்களும், முனிவர்களும் புகுந்தார்கள். திருஞானசம்பந்தப் பெருமான் தங் காதலியைக் கைப்பற்றிச் சிவசோதியை வலம் வந்து, அதனுள் நுழைந்து, இரண்டறக் கலந்தார். சோதி மறைந்தது. திருக்கோயில் பழையபடி நீங்கலாயிற்று. சோதியுள் நுழைவும் பேறு பெறாதவர்கள் கலங்கி நின்றார்கள். பெரும் பெரும் தேவர்கள் போற்றி நின்றார்கள் 34. ஏயர்கோன்கலிக்காம நாயனார் கலிநிலைத்துறை 3160. நீடு வண்புகழ்ச் சோழர் நீர் நாட்டிடை நிலவும் மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால் ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி நகர்தான் பீடு தங்கிய திருப்பெருமங்கலப் பெயர்த்தால். சோழ நாட்டிலே விளங்குகின்ற பக்கத்தே பொன்னைப் பொழியும் பெருமை தங்கிய திருப்பெருமங்கல மென்னும் பெயரையுடையது. 1 3161. இஞ்சி சூழ்வன எந்திரப்பந்தி சூழ் ஞாயில்; மஞ்சு சூழ்வன வரைஎன உயர்மணி மாடம்; நஞ்சு சூழ்வன நயனியர் நளினமெல் அடிச்செம் பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு. எந்திரப் பந்திசூழ் சூழ்ந்திருக்கின்றன. மஞ்சு - மேகம். நஞ்சு. . . அடி - விடம் சூழ்ந்தாலெனக் கண்களையுடைய பெண்மணிகளின் தாமரை போன்ற மெல்லிய பாதங்களிலுள்ள. குஞ்சியின் - குடுமியின். ஊடலின்போது பெண்களின் பாதங்களை ஆண்கள் வணங்குவது வழக்கம்; அப்பொழுது அவர்கள் இவர்களை உதைப்பார்கள். உதையால் பெண்களின் பாதங்களில் பூசப்பட்டுள்ள செம்பஞ்சுக் குழம்பு, ஆண்களின் குடுமியின் பரப்பில் படியும். இஃது இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. 2 3162. விழவு அறாதன விளங்கு ஒளி மணி நெடுவீதி; முழவு அறாதன மொய் குழலியர் நடஅரங்கம்; மழவு அறாதன மங்கலம் பொலி மணிமுன்றில்; உழவு அறாத நல் வளத்தன ஓங்கு இருங்குடிகள். நட அரங்கம் - நடன சபைகள். முழவு - மத்தளவோசை. முன்றில் மழவு அறாதன - முற்றங்களில் குழந்தைகள் நீங்காதன. 3 3163. நீரினில் பொலி சடைமுடி நெற்றி நாட்டத்துக் காரினில் திகழ் கண்டர்தம் காதலோர் குழுமிப் பாரின் மிக்கதுஓர் பெருமையால் பரமர்தாள் பரவும் சீரின் மிக்கது சிவபுரி எனத்தகும் சிறப்பால். 4 3164. இன்ன வாழ்பதி அதினிடை ஏயர்கோக் குடிதான் மன்னி நீடியவளவர் சேனாபதிக் குடியாம் தொன்மை மேவிய தொடர்ச்சியால் நிகழ்வது தூய பொன்னி நாட்டு வேளாண்மையில் உயர்ந்த பொற்பினதால். இன்னவாழ் பதி அதனிடை - இவ்வாழ்வுடைய பெருமங் கலத்தில். ஏயர் கோன்குடி. வளவர் - சோழரின். பொன்னி நாட்டு - சோழ நாட்டு. 5 3165. அங்கண் மிக்க அக்குடியினில் அவதரித் துள்ளார் கங்கைவாழ் முடியார் தொண்டர் கலிக்காமர் என்பார் தங்கள் நாயகர் அடிபணிவார் அடிச்சார்ந்து பொங்கு காதலின் அவர்பணி போற்றுதல் புரிந்தார். 6 3166. புதிய நாள்மதிச் சடைமுடியார் திருப்புன் கூர்க்கு அதிகம் ஆயின திருப்பணி அனேகமும் செய்து நிதியம் ஆவன நீறு உகந்தார் கழல் என்று துதியினால் பரவித் தொழுது இன்புறுகின்றார். 7 3167. நாவலூர் மன்னர் நாதனைத் தூது விட்டு அதனுக்கு யாவர் இச்செயல் புரிந்தனர் என்றுஅவர் இழிப்பத் தேவர் தம்பிரான் அவர்திறம் திருத்திய அதற்கு மேவ வந்த அச்செயலினை விளம்புவான் உற்றேன். நாவலூர் மன்னர் - சுந்தர மூர்த்தி சுவாமிகள். கலிக்காமர் சுந்தரர் செயலை இழித்துக் கூற. சிவபிரான் கலிக்காமர் கொள் கையைத் திருத்தும்படி நிகழ்ந்தேறிய. . . . 8 கொச்சகக் கலி 3168. திருத்தொண்டத் தொகைஅருளித் திருநாவலூ ராளி கருத்துஒன்று காதலினால் கனகமதில் திருவாரூர் ஒருத்தர்கழல் முப்பொழுதும் உருகிய அன்பொடு பணிந்து பெருத்துஎழுமெய் அன்பினால் பிரியாது அங்குஉறையும் நாள். (தடுத்தாட்கொண்ட புராணத் தொடர்ச்சி) 9 3169. தாளாண்மை உழவுதொழில் தன்மைவளம் தலைசிறந்த வேளாளர் குண்டையூர்க் கிழவரெனும் மேதக்கோர் வாள்ஆர் வெண்மதி அணிந்தார் மறையவராய் வழக்கினில் வென்று ஆள்ஆகக் கொண்டவர் தாள் அடைந்து அன்பால் ஒழுகுவார். தாளாண்டை - முயற்சியுடைய. வாள்ஆர் - ஒளிபொருந்திய. 10 3170. செந்நெல்லும் பொன் அன்ன செழும்பருப்பும் தீம் கரும்பின் இன் நல்ல அமுதுமுதல் எண்இல்பெரும் பலவளங்கள் மன்னிய சீர் வன்தொண்டர்க்கு அமுது ஆக வழுவாமல் பல்நெடுநாள் பரவையார் மாளிகைக்குப் படிசமைத்தார். இனிய கரும்பைப் பார்க்கிலும் இனிக்கும் நல்ல அமுதும் முதலிய படி - படித்தரம்; கட்டளை. 11 3171. ஆனசெயல் அன்பின்வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து ஆற்ற வானமுறை வழங்காமல் மாநிலத்து வளம் சுருங்கப் போனக நெல்படி நிரம்ப எடுப்பதற்குப் போதாமை மானம் அழி கொள்கையினால் மனம் மயங்கி வருந்துவார். போனகம் - அமுதுக்குரிய. 12 3172. வன்தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க இன்று குறை ஆகின்றது என்செய்கேன் என நினைந்து துன்று பெரும் கவலையினால் துயர் எய்தி உண்ணாதே அன்று இரவு துயில் கொள்ள அங்கணர் வந்து அருள்புரிவார். துன்று - சேர்ந்த. அங்கணர் - சிவபிரான். 13 3173. ஆரூரன் தனக்குஉன்பால் நெல்தந்தோம் என்றுஅருளி நீர் ஊரும் சடைமுடியார் நிதிக்கோமான் தனை ஏவப் பேர்ஊர்மற்று அதன்எல்லை அடங்கவும் நெல்மலைப் பிறங்கல் கார்ஊரும் நெடுவிசும்பும் கரக்க நிறைந்து ஓங்கியதால். நிதிக்கோமன் - குபேரனை. மலைப்பிறங்கல் - மலைப்பெருக்கு. விசும்பும் கரக்க - விண்ணும் மறையும்படி. 14 3174. அவ் இரவு புலர் காலை உணர்ந்து எழுவார் அதுகண்டே எவ் உலகின் நெல்மலைதான் இது என்றே அதிசயித்துச் செவ்விய பொன்மலை வளைத்தார் திருவருளின் செயல் போற்றிக் கொவ்வைவாய்ப் பரவையார் கொழுநரையே தொழுது எழுவார். மலை வளைத்தார் - சிவபெருமானது. பரவையார் கொழு நரையே - சுந்தரமூர்த்தி சுவாமிகளையே. 15 அறுசீர் விருத்தம் 3175. நாவலூர் மன்ன னார்க்கு நாயனார் அளித்த நெல்இங்கு யாவரால் எடுக்கல் ஆகும் இச்செயல் அவர்க்குச் சொல்லப் போவன் யான் என்று போந்தார்; புகுந்தவாறு அருளிச் செய்து தேவர்தம் பெருமான் ஏவ நம்பியும் எதிரே சென்றார். நாயனார் - சிவபெருமான். புகுந்தவாறு அருளிச்செய்து - குண்டையூர்க் கிழார்க்குத் தாம் நெல் வழங்கியதைச் சிவபிரான் சுந்தரர்க்கு அருளிச் செய்து. 16 3176. குண்டையூர்க் கிழவர் தாமும் எதிர்கொண்டு கோதுஇல் வாய்மைத் தொண்டனார் பாதம் தன்னில் தொழுது வீழ்ந்து எழுந்து நின்று பண்டு எலாம் அடியேன் செய்த பணி எனக்கு இன்றுமுட்ட அண்டர்தம் பிரானார் தாமே நெல்மலை அளித்தார் என்று. முன் நாளெல்லாம் அடியேன் செய்துவந்த பணி எனக்கு இன்று தடைபட; (பணி - நெல்முதலியன வழங்கி வந்தமை). 17 3177. மனிதரால் எடுக்கும் எல்லைத்து அன்று நெல்மலையின் ஆக்கம் இனி எனால் செய்யல் ஆகும் பணி அன்றுஇது என்னக் கேட்டுப் பனி மதி முடியார் அன்றே பரிந்துஉமக்கு அளித்தார் நெல் என்றுஇனியன மொழிந்து தாமும் குண்டையூர் எய்த வந்தார். பணி அன்று இது. 18 3178. விண்ணினை அளக்கும் நெல்லின் வெற்பினை நம்பி நோக்கி அண்ணலைத் தொழுது போற்றி அதிசயம் மிகவும் எய்தி எண்இல் சீர்ப் பரவை இல்லத்து இந்நெல்லை எடுக்க ஆளும் தண்நிலவு அணிந்தார் தாமே தரில் அன்றிஒண்ணாது என்று. 19 கொச்சகக் கலி 3179. ஆள்இட வேண்டிக் கொள்வார் அருகு திருப்பதிஆன கோளிலியில் தம்பெருமான் கோயிலினை வந்துஎய்தி வாள் அன கண்மடவாள் வருந்தாமே எனும் பதிகம் மூள வரும் காதலுடன் முன் தொழுது பாடுதலும். 20 3180. பகல்பொழுது கழிந்து அதன்பின் பரவைமனை அளவு அன்றி மிகப்பெருகு நெல் உலகில் விளங்கிய ஆரூர் நிறையப் புகப்பெய்து தருவன நம்பூதங்கள் என விசும்பில் நிகர்ப்பு அரிய ஒருவாக்கு நிகழ்ந்தது நின்மலன் அருளால். 21 3181. தம்பிரான் அருள் போற்றித் தரையின் மிசை விழுந்துஎழுந்தே உம்பரால் உணர்வு அரிய திருப்பாதம் தொழுதுஏத்திச் செம்பொன்நேர் சடையாரைப் பிறபதியும் தொழுதுபோய் நம்பர் ஆரூர் அணைந்தார் நாவலூர் நாவலனார். 22 3182. பூங்கோயில் மகிழ்ந்தருளும் புராதனரைப் புக்கு இறைஞ்சி நீங்காத பெரு மகிழ்ச்சியுடன் ஏத்திப் புறம் போந்து பாங்கு ஆனார் புடைசூழ்ந்து போற்றிஇசைக்கப் பரவையார் ஓங்குதிரு மாளிகையின் உள் அணைந்தார் ஆரூரர். பூங்கோயில் - திருவாரூர்க் கோயில் 23 3183. கோவை வாய்ப் பரவையார் தாம் மகிழும் படிகூறி மேவி அவர் தம்மோடு மிக இன்புற்று இருந்து அதன்பின் சேவின்மேல் உமையோடும் வருவார்தம் திருவருளின் ஏவலினால் அவ் இரவு பூதங்கள் மிக்கு எழுந்து. சேவின்மேல் - எருதின்மேல். 24 3184. குண்டையூர் நெல் மலையை குறள்பூதப் படைகவர்ந்து வண்டுஉலாம் குழல் பரவை மாளிகையை நிறைவித்தே அண்டர் பிரான் திருவாரூர் அடங்கவும் நெல்மலை ஆக்கிக் கண்டவர் அற்புதம் எய்தும் காட்சிபெற அமைத்தனவால். 25 3185. அவ் இரவு புலர் காலை ஆரூரில் வாழ்வார் கண்டு எவ் உலகில் விளைந்தன நெல்மலை இவை என்று அதிசயித்து நவ்வி மதர்த் திருநோக்கின் நங்கைபுகழ்ப் பரவையார்க்கு இவ் உலகு வாழவரும் நம்பி அளித்தன என்பார். நவ்விமதர் - மான் கண்ணைப் போன்ற பெருமை வாய்ந்த. 26 3186. நீக்கு அரிய நெல் குன்றுதனை நோக்கி நெறி பலவும் போக்கு அரிது ஆயிடக் கண்டு மீண்டும் தம்இல் புகுவார் பாக்கியத்தின் திருவடிவு ஆம் பரவையார்க்கு இந்நெல்லும் போக்கும் இடம் அரிது ஆகும் எனப்பலவும் புகல்கின்றார். நெறி. . . கண்டு - பல வழிகளிலும் போக்குவரவு அரிதா யிருத்தல் கண்டு. 27 3187. வன்தொண்டர் தமக்கு அளித்த நெல்கண்டு மகிழ் சிறப்பார் இன்று உங்கள் மனை எல்லைக்கு உள்படு நெல்குன்று எல்லாம் பொன்தங்கு மாளிகையில் புகப்பெய்து கொள்க என்று வென்றி முரசு அறைவித்தார் மிக்க புகழ்ப் பரவையார். 28 3188. அணிஆரூர் மறுகு அதனில் ஆள் இயங்கப்பறை அறைந்த பணியாலே மனைநிறைத்துப் பாங்கு எங்கும் நெற்கூடு கணியாமல் கட்டி நகர்களி கூரப் பரவையார் மணி ஆரம்புனை மார்பின் வன்தொண்டர் தமைப்பணிந்தார். மறுகதனில் ஆள் இயங்க - தெருவில் மக்கள் போக வர; சஞ்சரிக்க. பரவையார் பறை யறைவித்த கட்டளையால், மக்கள் தங்கள் தங்கள் மனைகளில் நெல்லை நிறைத்து, அவைகள் போதாமல் மனைப்புறங்களிலெல்லாம் நெற்கூடுகளை அளவின்றிக் கட்டி, நெல்லை நிரப்பிக் களிகூர்ந்தார்கள் என்க. 29 3189. நம்பியாரூரர் திருவாரூரில் நயந்து உறைநாள் செம்பொன்புற்று இடம்கொண்டு வீற்றிருந்த செழுந்தேனைத் தம்பெரிய விருப்பினொடும் தாழ்ந்து உணர்வினால் பருகி இம்பருடன் உம்பர்களும் அதிசயிப்ப ஏத்தினார். மண்ணவரும் விண்ணவரும் அதிசயிப்ப. 30 3190. குலவு புகழ்க்கோட் புலியார் குறைஇரந்து தம்பதிக்கண் அலகுஇல் புகழ் ஆரூரர் எழுந்தருள அடிவணங்கி நிலவிய வன்தொண்டரது இசைந்த தன்பின் நேர்இறைஞ்சிப் பலர்புகழும் பண்பினார் மீண்டும் தம்பதி அணைந்தார். எழுந்தருள வேண்டுமென்று அடிவணங்கி. 31 எழுசீர் விருத்தம் 3191. தேவர் ஒதுங்கத் திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர் காவல் கொண்டு தனி ஆளும் கடவுள் பெருமான் கழல் வணங்கி நாவலூரர் அருள்பெற்று நம்பர் பதிகள் பிற நண்ணிப் பாவை பாகர் தமைப்பணிந்து பாடும் விருப்பின் சென்று அணைவார் மிடையும் - நெருங்கும். தேவர்களினும் அடியார்கள் சிறந்த வர்கள் என்பது கருத்து. 32 3192. மாலும் அயனும் உணர்வரியார் மகிழும் பதிகள் பல வணங்கி ஞாலம் நிகழ்கோட் புலியார்தம் நாட்டியத்தான் குடிநண்ண ஏலும் வகையால் அலங்கரித்துஅங்கு அவரும் எதிர்கொண்டு இனிதிறைஞ்சிக் கோலமணி மாளிகையின் கண் ஆர்வம் பெருகக் கொடுபுக்கார். பொன்பீடத்தில். செந்தாமரை மலரைப் போலச் சிவந்த திருவடிகளை. 33 3193. தூய மணிப்பொன் தவிசில் எழுந்தருளி இருக்கத் தூநீரால் மேய மலர்ச் சேவடி விளக்கித்தெளித்துக் கொண்டச் செழும் புனலால் சேய சுடர் மாளிகை எங்கும் விளங்க வீசி உளம் களிப்ப ஏய சிறப்பில் அர்ச்சனைகள் எல்லாம் இயல்பின் முறை புரிவார். 31 3194. பூந்தண் பனிநீர் கொடுசமைத்த பொருஇல் விரைச் சந்தனக் கலவை வாய்ந்த அகிலின் நறும் சாந்து வாசம் நிறை மான்மதச் சேறு தோய்ந்தபுகை நாவியின் நறுநெய்தூய பசுங்கர்ப் பூரமுடன் ஏய்ந்த அடைக்காய் அமுது இனைய எண்இல் மணிப்பாசனத் தேந்தி பொருவில் விரை - ஒப்பற்ற வாசனை கமழும். மான்மதச் சேறு - கதூரிக்குழம்பு. நாவியின் நறுசெய் - நாவிக்குழம்பு; புழுகு. அடைக்காய் அமுது - தாம்பூலம். பாசனத்து - தட்டுகளில். 35 3195. வேறுவேறு திருப்பள்ளித் தாமப் பணிகள் மிக எடுத்து மாறு இலாத மணித்திரு ஆபரண வருக்கம் பல தாங்கி ஈறுஇல் விதத்துப் பரிவட்டம் ஊழின் நிரைத்தே எதிர் இறைஞ்சி ஆறு புனைந்தார் அடித்தொண்டர் அளவில் பூசைகொள அளித்தார். பள்ளித் தாமத்துக்குரிய பணிகள். பள்ளித்தாமம் - எறிபத்த நாயனார் புராணம் 9 -ஆம் பாட்டுக் குறிப்புப் பார்க்க. ஊழின் நிரைத்தே - முறைப்படி வரிசையாக வைத்து. 36 3196. செங்கோல் அரசன் அருளுரிமைச் சேனாபதியாம் கோட்புலியார் நம் கோமானை நாவலூர் நகர்ஆர் வேந்தை நண்பினால் தம் கோமனையில் திரு அமுது செய்வித்து இறைஞ்சித் தலைசிறந்த பொங்கு ஓதம் போல் பெருங்காதல் புரிந்தார் பின்னும் போற்றுவார். பொங்கு கடல்வாய் வெள்ளம்போல். 37 3197. ஆனா விருப்பின் மற்று அவர்தாம் அருமையால் முன்பெற்று எடுத்த தேன்ஆர் கோதைச் சிங்கடியார் தமையும் அவர்பின் திருவுயிர்த்த மான்ஆர் நோக்கின் வனப்பகையார் தமையும் கொணர்ந்து வன்தொண்டர் தூநாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமும் தொழுது சொல்லுவார். குறையாத விருப்பின். அவர் பின் பெற்றெடுத்த. கோதை - மாலையணிந்த. 38 3198. அடியேன் பெற்றமக்கள் இவர் அடிமை ஆகக் கொண்டருளிக் கடிசேர் மலர்த்தாள் தொழுது உய்யக் கருணை அளிக்கவேண்டும் எனத் தொடி சேர்தளிர்க்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக்கொண்டப் படியே மகண்மையாக் கொண்டார் பரவையார்தம் கொழுநனார். மணங்கமழும் மலர்த்தாள். நம்பியாரூரர் சிங்கடியையும் வனப்பகையையும் புதல்வியாராகக் கொண்டார் என்பதற்கு அகச் சான்றுகள் வருமாறு: சேடார் பூங்குழல் சிங்கடியப்பன் திருவாரூரன், நாணியூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன், ஆரூரன் வனப்பகை யவளப்பன், சிங்கடியப்பன் மெய்ப்பத்த னூரன், செறிந்த. . .நள்ளாற்றெஞ் சிவனை நாவலூர்ச் சிங்கடி தந்தை. . . . .வனப்பகையப்பனூரன் வன்தொண்டன் - சுந்தரர்: திருக்கடைக் காப்புகள். 39 3199. கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்துக் கொண்டிருந்து காதல் நிறைந்த புதல்வியாராம் கருத்து உள்கசிவால் அணைத்து உச்சி மீது கண்ணீர்விழ மோந்து வேண்டு வனவும் கொடுத்தருளி நாதர்கோயில் சென்று அடைந்தார் நம்பி தம்பிரான் தோழர். குறங்கில் - தொடையில். 40 3200. வென்றி வெள்ளேறு உயர்த்தருளும் விமலர் திருக்கோபுரம் இறைஞ்சி ஒன்றும் உள்ளத்தொடும் அன்பால் உச்சிகுவித்த கரத்தோடும் சென்று புக்குப் பணிந்து திருப்பதிகம் பூணான் என்று எடுத்துக் கொன்றைமுடியார் அருள் உரிமை சிறப்பித்தார் கோட்புலி யாரை. 41 3201. சிறப்பித்து அருளும் திருக்கடைக்காப்பு அதனின் இடைச் சிங்கடியாரைப் பிறப்பித்து எடுத்த பிதா ஆகத்தம்மை நினைந்த பெற்றியினால் மறப்பு இல்வகைச் சிங்கடியப்பன் என்றே தம்மை வைத்தருளி நிறப்பொற்புடைய இசைபாடி நிறைந்த அருள்பெற்று இறைஞ்சுவார். 42 3202. அங்கு நின்றும் எழுந்தருளி அளவுஇல் அன்பின் உள்மகிழச் செங்கண் நுதலார் மேவி திருவலிவலத்தைச் சேர்ந்து இறைஞ்சி மங்கைபாகர் தமைப் பதிகம் வலிவலத்துக் கண்டேன் என்று எங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார். 43 3203. நன்று மகிழும் சம்பந்தர் நாவுக்கரசர் பாட்டு உகந்தீர் என்று சிறப்பித்து இறைஞ்சி மகிழ்ந்து ஏத்தி அருள்பெற்று எழுந்தருளி மன்றினிடையே நடம் புரிவார் மருவு பெருமைத் திருவாரூர் சென்று குறுகிப்பூங் கோயில் பெருமான் செம்பொன் கழல் பணிந்து. 44 3204. இறைஞ்சிப் போந்து பரவையார் திருமாளிகையில் எழுந்தருளி நிறைந்த விருப்பின் மேவுநாள் நீடு செல்வத் திருவாரூர்ப் புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றிப் புற்றிடமாய் உறைந்த பெருமான்கழல் பிரியாது ஓவாஇன்பம் உற்று இருந்தார் நணிய - அருகேயுள்ள; சூழ்ந்துள்ள. ஓவா மாறாத. 45 3205. செறிபுன் சடையார் திருவாரூர்த் திருப்பங்குனி உத்தரத் திருநாள் குறுக வரலும் பரவையார் கொடைக்கு விழாவில் குறைவுஅறுக்க நிறையும் பொன்கொண்டு அணைவதற்கு நினைந்துநம்பி திருப்புகலூர் இறைவர் பாதம் பணிய எழுந் தருளிச்சென்று அங்குஎய்தினார். 46 3206. சென்று விரும்பித் திருப்புகலூர்த் தேவர் பெருமான் கோயில்மணி முன்றில் பணிந்து வலம்கொண்டு முதல்வர் முன்பு வீழ்ந்து இறைஞ்சித் தொன்று மரபின் அடித்தொண்டு தோய்ந்த அன்பில் துதித்து எழுந்து நின்று பதிக இசைபாடி நினைந்த கருத்து நிகழ்விப்பார். தொன்று தொட்டுவரும் மரபின்; வாழையடி வாழையென வரும் மரபின். 47 3207. சிறிது பொழுது கும்பிட்டுச் சிந்தை முன்னம் அங்குஒழிய வறிது புறம் போந்து அருளி அயல் மடத்தில் அணையார் வன்தொண்டர் அறிவு கூர்ந்த அன்பருடன் அணிமுன்றிலின் ஓர்அருகு இருப்ப மறிவண்கையார் அருளேயோ மலர்க்கண் துயில்வந்து எய்தியதால். மறி - மான் கன்று. சிவபெருமான் அருளாலோ என்படி. 48 3208. துயில் வந்து எய்தத் தம்பிரான் தோழர் அங்குத் திருப்பணிக்குப் பயிலும் சுடுமண் பலகைபல கொணர்வித்து உயரம் பண்ணித்தேன் அயிலும் சுரும்பு ஆர் மலர்ச்சிகழி முடிமேல் அணியா உத்தரிய வெயில் உந்திய வெண்பட்டு அதன்மேல் விரித்துப் பள்ளி மேவினார். தேனை யுண்ணும் வண்டுகள் நிறைந்தமலர் முடித்த குடுமி. . . . . . . . . . .; வெயில் உந்திய - ஒளிவீசும். 49 3209. சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணைமலர்க்கண் பற்றும் துயில் நீங்கிடப் பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார் வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச் செம் பொன்திண் கல் ஆயின கண்டு புகலூர் இறைவர் அருள்போற்றி பள்ளி உணர்ந்தார் - துயில் எழுந்தார். பொன்னும் மெய்ப் பொருளுந் தருவாணை - சுந்தரர் - திருவாரூர். 50 3210. தொண்டர் உணர மகிழ்ந்து எழுந்து துணைக்கைக் கமல முகை தலைமேல் கொண்டு கோயில் உள் புக்குக் குறிப்பில் அடங்காப் பேர் அன்பு மண்டு காதல் உற வணங்கி வாய்த்த மதுர மொழிமாலை பண்தங்கு இசையில் தம்மையே புகழ்ந்து என்று எடுத்துப் பாடினார். 51 3211. பதிகம் பாடித் திருக்கடைக் காப்பு அணிந்து பரவிப் புறம்போந்தே எதிர்இல் துன்பம் இம்மையே தருவார் அருள்பெற்று எழுந்தருளி நிதியின் குவையும் உடன்கொண்டு நிறையும் நதியும் குறைமதியும் பொதியும் சடையார் திருப்பனையூர் புகுவார் புரிநூல் மணி மார்பர். 52 3212. செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக்கூத்தொடும் காட்சி எய்த அருளஎதிர்சென்று அங்கு எழுந்த விருப்பால் விழுந்து இறைஞ்சி ஐயர் தம்மை அரங்கு ஆட வல்லார் அவரே அழகியர் என்று உய்ய உலகு பெறும் பதிகம் பாடி அருள்பெற்று உடன் போந்தார். 53 3213. வளம் மல்கிய சீர்த்திருப் பனையூர் வாழ்வார் ஏத்த எழுந்தருளி அளவு இல் செம்பொன் இட்டிகைகள் ஆள் மேல் நெருங்கி அணி ஆரூர்த் தளவமுறுவல் பரவையார் தம்மாளிகையில் புகத்தாமும் உளம் மன்னிய தம்பெருமானார் தம்மை வணங்கி உவந்து அணைந்தார். செம்பொன் இட்டிகைகள் - செம்பொன் கற்கள். தளவ முறுவல் - முல்லையரும்பொத்த பற்களையுடைய. 54 3214. வந்து பரவைப்பிராட்டியார் மகிழ வைகி மருவும் நாள் அம்தண் ஆரூர் மருங்கு அணிய கோயில் பலவும் அணைந்து இறைஞ்சிச் சிந்தை மகிழ விருப்பினொடும் தெய்வப் பெருமாள் திருவாரூர் முந்தி வணங்கி இனிது இருந்தார் முனைப் பாடியர்தம் காவலனார். 55 3215. பலநாள் அமர்வார் பரமர்திரு அருளால் அங்கு நின்றும்போய் சிலைமா மேரு வீரனார் திருநன்னிலத்துச் சென்று எய்தி வலமா வந்து கோயிலினுள் வணங்கி மகிழ்ந்து பாடினார் தலம் ஆர்கின்ற தண்இயல் வெம் மையினான் என்னும் தமிழ்மாலை. 56 3216. பாடி அங்கு வைகியபின் பரமர் வீழிமிழலை யினில் நீடு மறையால் மேம்பட்ட அந்தணாளர் நிறைந்து ஈண்டி நாடு மகிழ அவ்வளவு நடைக்காவணம் பாவு ஆடையுடன் மாடுகதலி பூகம் நிரை மல்கமணித் தோரணம் நிரைத்து. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 254. குறிப்புப் பார்க்க. நடைக்காவணம் - நடைப்பந்தர். பூகம் - கமுகு. நிரைத்து -வரிசையாக எடுத்து. 57 3217. வந்து நம்பி தம்மை எதிர் கொண்டு புக்கார் மற்றவரும் சிந்தை மலர்ந்து திருவீழி மிழலை இறைஞ்சிச் சேண் விசும்பின் முந்தை இழிந்த மொய் ஒளி சேர் கோயில் தன்னை முன்வணங்கிப் பந்தம் அறுக்கும் தம்பெருமான் பாதம் பரவிப் பணிகின்றார். திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: பாட்டு 251. குறிப்புப் பார்க்க. 58 3218. படம்கொள் அரவில் துயில்வோனும் பதுமத்தோனும் பரவு அரிய விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளகமுடன் பரவி அடங்கல் வீழிகொண் டிருந்தீர் அடியேனுக்கும் அருளும் எனத் தடம்கொள் செஞ்சொல் தமிழ்மாலை சாத்தி அங்குச்சாரும் நாள். விடங்கன் - உளிபடாத கடவுள்(டங்கம் - உளி; வி - இன்மை) 59 3219. வாசி அறிந்து காசு அளிக்க வல்ல மிழலை வாணர் பால் தேசு மிக்க திருவருள் முன் பெற்றுத் திருவாஞ்சியத்து அடிகள் பாசம் அறுத்து ஆட்கொள்ளும் தாள் பணிந்து பொருவனார் என்னும் மாசில்பதிகம் பாடி அமர்ந்து அரிசில்கரைப் புத்தூர் அணைந்தார். திருவீழிமிழலைப் பெருமான் திருநாவுக்கரசருக்கு வாசியின் றியும், திருஞான சம்பந்தருக்கு வாசியுடனும் காசு அளித்தது இங்கே குறிக்கப்பட்டுள்ளது. விரிவு அவரவர் புராணத்திற் பார்க்க. 60 3220. செழுநீர் நறையூர் நிலவு திருச் சித்தீச்சரமும் பணிந்து ஏத்தி விழுநீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பினோடும் எதிர்கொள்ள மழுவோடு இளமான் கரதலத்தில் உடையார் திருப்புத்தூர் வணங்கித் தொழுநீர்மையினில் துதித்து ஏத்தித் தொண்டர் சூழ உறையும் நாள். விழுநீர்மையினில் - வணங்கிய ஒப்புரவு வாய்ந்த. தொழுநீர்மை யினில் - தொழும் இயல்பில். 61 3221. புனிதனார் முன்புகழ்த் துணையார்க்கு அருளும் திறமும் போற்றி இசைத்து முனிவர் போற்ற எழுந்தருளி மூரி வெள்ளக் கங்கையினில் பனிவெண் திங்கள் அணிசடையார் பதிகள் பலவும் பணிந்துபோந்து இனிய நினைவில் எய்தினார் இறைவர் திருவாவடு துறையில். மிக்க வெள்ளமுடைய கங்கையுடன். 62 3222. விளங்கும் திருவாவடு துறையில் மேயார் கோயில் புடைவலம் கொண்டு உளம்கொண்டு உருகும் அன்பினுடன் உள்புக்கு இறைஞ்சி ஏத்துவார் வளம்கொள் பதிகம் மறையவன் என்று எடுத்து வளவன் செங்கணான் தளம்கொள் பிறப்பும் சிறப்பித்துத் தமிழ்ச்சொல் மாலை சாத்தினார். வளவன் செங்கணான் தளங்கொள் - கோச்செங்கட்சோழ நாயனாருடைய மேன்மை பொருந்திய. 63 3223. சாத்தி அங்கு வைகுநாள் தயங்கும் அன்ப ருடன்கூடப் பேர்த்தும் இறைஞ்சி அருள்பெற்றுப் பெண்ஓர் பாகத்து அண்ணலார் தீர்த்தப் பொன்னித் தென்கரைமேல் திகழும் பதிகள் பலபணிந்து மூர்த்தியார்தம் இடைமருதை அடைந்தார் முனைப்பாடித் தலைவர். 64 3224. மன்னும் மருதின் அமர்ந்தவரை வணங்கி மதுரச்சொல் மலர்கள் பன்னிப் புனைந்து பணிந்தேத்திப் பரவிப் போந்து தொண்டருடன் அந்நல் பதியில் இருந்து அகல்வார் அரனார் திருநாகேச்சுரத்தை முன்னிப் புக்குவலம் கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார். 65 3225. பெருகும் பதிகம் பிறையணிவாள் நுதலாள் பாடிப் பெயர்ந்து நிறை திருவின் மலியும் சிவபுரத்துத் தேவர்பெருமான் கழல் வணங்கி உருகும் சிந்தையுடன் போந்தே உமையோர் பாகர்தாம் மகிழ்ந்து மருவும் பதிகள் பிற பணிந்து கலயநல்லூர் மருங்கு அணைந்தார். 65 3226. செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ் மும்மை வணக்கம் பெற இறைஞ்சி முன்பு பரவித் தொழுது எழுவார் கொம்மை மருவு குரும்பை முலை உமையாள் என்னும் திருப்பதிகம் மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து இசையின் விளம்பினார். மும்மை - மனம் வாக்கு காயம். திருக்கலைய நல்லூர்த் திருப் பதிகத்தில் புராணக் கதைகள் பல செறிந்து கிடத்தல் காண்க. 67 3227. அங்குநின்று திருக்குட மூக்கு அணைந்து பணிந்து பாடிப்போய் மங்கைபாகர் வலஞ்சுழியை மருவிப் பெருகும் அன்பு உருகத் தங்கு காதலுடன் வணங்கித் தமிழால் பரசி அரசினுக்குத் திங்கள் முடியார் அடி அளித்த திருநல்லூரைச் சென்று அணைந்தார். குடமூக்கு - கும்பகோணம். நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் - திருநாவுக்கரசர். 68 3228. நல்லூர் இறைவர் கழல் போற்றி நவின்று நடுவு நம்பர் பதி எல்லாம் இறைஞ்சி ஏத்திப் போந்து இசையால் பரவும் தம்முடைய சொல் ஊதியமா அணிந்தவர்தம் சோற்றுத்துறையின் மருங்கு எய்தி அல்ஊர் கண்டர் கோயிலின் உள் அடைந்து வலம்கொண்டு அடிபணிவார். நவின்று - வாழ்த்தி. நடுவு - மத்தியிலுள்ள. ஊதியமா - இலாப மாக. அல்லூர்கண்டர் - நீலகண்டராகிய சிவபிரான் எழுந்தருளி யுள்ள. 69 3229. அழல் நீர் ஒழுகி அனையஎனும் அஞ்சொல் பதிகம் எடுத்தருளிக் கழல் நீடிய அன்பிற் போற்றும் காதல் கூரப் பரவியபின் கெழுநீர்மையினில் அருள்பெற்றுப் போந்து பரவையார் கேள்வர் முழுநீறு அணிவார் அமர்ந்த பதி பலவும் பணிந்து முன்னுவார். கெழுநீர்மையினில் - பொருந்திய தன்மையால். 70 3230. தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திருவையாறு அதனை மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதம் தொழுது இறைஞ்சிச் சேவில் வருவார் திருவாலம் பொழிலில் சேர்ந்து தாழ்ந்து இரவு பாவு சயனத்து அமர்ந்தருளிப் பள்ளிகொள்ளக் கனவின்கண். சேவில் - இடபத்தில். பாவு - விரிந்த. 71 3231. மழபாடியினில் வருவதற்கு Ãid¡f kwªjhnah? என்று குழகு ஆகியதம் கோலம் எதிர்காட்டி அருளக்குறித்து உணர்ந்து நிழல் ஆர் சோலைக்கரைப் பொன்னி வடபால் ஏறி நெடுமாடம் அழகுஆர் வீதி மழ பாடி அணைந்தார் நம்பி ஆரூரர். குழகு - இளமை. 72 3232. அணைந்து திருக்கோபுரம் இறைஞ்சி அன்பர் சூழ உடன் புகுந்து பணம் கொள் அரவம் அணிந்தார் முன் பணிந்து வீழ்ந்து பரம் கருணைக் குணம் கொள் அருளின் திறம் போற்றிக் கொண்ட புளகத்துடன் உருகிப் புணர்ந்த இசையால் திருப்பதிகம் பொன்னார் மேனி என்று எடுத்து. பணம் - படம். 73 3233. அன்னே உன்னை அல்லால் யான் ஆரை நினைக்கேன் என ஏத்தித் தன் நேர் இல்லாப் பதிகமலர் சாத்தித் தொழுது புறம்பு அணைந்து மன்னும் பதியில் சில நாள்கள் வைகித் தொண்டர்உடன் மகிழ்ந்து பொன்னிக் கரையின் இருமருங்கும் பணிந்து மேல்பால் போதுவார். 74 3234. செய்ய சடையார் திருவானைக் காவல் அணைந்து திருத்தொண்டர் எய்த முன் வந்து எதிர்கொள்ள இறைஞ்சிக் கோயில் உள் புகுந்தே ஐயர் கமலச் சேவடிக்கீழ் ஆர்வம் பெருக விழுந்து எழுந்து மெய்யும் முகிழ்ப்பக் கண் பொழி நீர் வெள்ளம் பரப்ப விம்முவார். 75 3235. மறைகள் ஆய நான்கும் என மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப் பதிகம் நிறையும் காதலுடன் எடுத்து நிலவும் அன்பர் தமை நோக்கி இறையும் பணிவார் எம்மையும் ஆள் உடையார் என்று என்று ஏத்துவார் உறையூர்ச் சோழன் மணியாரம் சாத்தும் திறத்தை உணர்ந்தருளி. இறையும் - க்ஷண நேரமாவது. 76 3236. வளவர் பெருமான் மணிஆரம் சாத்திக்கொண்டு வரும்பொன்னிக் கிளரும் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதம் உற அளவு இல் திருமஞ்சனக் குடத்துள் அதுபுக்கு ஆட்ட அணிந்தருளித் தளரும் அவனுக்கு அருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார். பொன்னிக் கிளருந் திரைநீர் - காவிரியினின்றெழும் அலை நீரில். கேதம் - வருத்தம். ஆரம் திருமஞ்சனக் குடத்தில் புகுந்து கொண்டது. இறைவனுக்கு நீராட்டியபோது ஆரத்தை இறைவன் அணிதல் நேர்ந்ததென்க. 77 3237. சாற்றி அங்குத் தங்கும் நாள் தயங்கும் பவளத் திருமேனி நீற்றர் கோயில் எம்மருங்கும் சென்று தாழ்ந்து நிறைவிருப்பால் போற்றி அங்கு நின்றும் போய்ப் பொருஇல் அன்பர் மருவிய தொண்டு ஆற்றும் பெருமைத் திருப்பாச் சிலாச்சிராமம் சென்று அடைந்தார். 78 3238. சென்று திருக்கோபுரம் இறைஞ்சித் தேவர் மலிந்த திருந்து மணி முன்றில் வலம்கொண்டு உள் அணைந்து முதல்வர் முன்னம் வீழ்ந்து இறைஞ்சி நன்று பெருகும் பொருட்காதல் நயப்புப் பெருக நாதர் எதிர் நின்று பரவி நினைந்தபொருள் அருளாது ஒழிய நேர்நின்று. நன்று பெருக - பெரிதும் வளரும் பொருள் வேட்கை அதிகம் எழ. 79 3239. அன்பு நீங்கா அச்சமுடன் அடுத்த திருத்தோழமைப் பணியால் பொன்பெறாத திருவுள்ளம் புழுங்க அழுங்கிப் புறம்பு ஒருபால் முன்பு நின்ற திருத்தொண்டர் முகப்பே முறைப்பாடு உடையார்போல் என்புகரைந்து பிரானார் மற்று இலையோ என்ன எடுக்கின்றார். தோழமை - தடுத்தாட்கொண்ட புராணம் பாட்டு - 127 குறிப்புப் பார்க்க. முகப்பே - முன்னே. 80 எழுசீர் விருத்தம் 3240. நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி நிலத்திடைப் புலம்கெழும் பிறப்பால் உய்த்த காரணத்தை உணர்ந்து நொந்துஅடிமை ஒருமையாம் எழுமையும் உணர்த்தி எத்தனை அருளாது ஒழியினும் பிரானார் இவர் அலாது இல்லையோ என்பார் வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் என வழுத்தினர் வழித் தொண்டர். வன்தொண்டர் தமது பழைய நிலையை உணர்ந்து வருந்து கிறார். நித்தமும் நீங்கா நிலைமையின்றும் நீங்கி. . . . . . புலன்கள் பொருந்திய மானுடப் பிறப்பில் விடுத்த . . . . . ஏழு பிறவியிலும் உணர்த்திச் சிறிதும் அருளா தொழியினும். . . . . 81 3241. இவ்வகை பரவித் திருக் கடைக்காப்பும் ஏசின அல்ல என்று இசைப்ப மெய்வகை விரும்பு தம்பெருமானார் விழுநிதிக் குவை அளித்தருள மைவளர் கண்டர் கருணையே பரவி வணங்கி அப்பதியிடை வைகி எவ்வகை மருங்கும் இறைவர்தம் பதிகள் இறைஞ்சி அங்கு இருந்தனர் சிலநாள். சீரிய நிதிக்குவை. 82 3242. அப்பதி நீங்கி அருளினால் போகி ஆவின் அஞ்சு ஆடுவார் நீடும் எப்பெயர்ப் பதியும் இருமருங்கு இறைஞ்சி இறைவர் பைஞ்ஞீலியை எய்திப் பைப்பணி அணிவார் கோபுரம் இறைஞ்சிப் பாங்கு அமர்புடை வலம்கொண்டு துப்பு உறழ் வேணியார் கழல் தொழுவார் தோன்றும் கங்காளரைக் கண்டார். பைப்பணி - படமுடைய பாம்பினை. துப்பு உறழ் வேணியார் - பவளம் போலும் சடையையுடைய சிவபெருமானது. கங்காளரை - என்பணிந்த மூர்த்தியை. 83 3243. கண்டவர் கண்கள் காதல்நீர் வெள்ளம் பொழிதரக் கைகுவித்து இறைஞ்சி வண்டு அறை குழலார் மனம் கவர் பலிக்கு வரும் திரு வடிவு கண்டவர்கள் கொண்டது ஓர் மயலால் வினவு கூற்று ஆகக் குலவு சொல் கார் உலாவிய என்று அண்டர் நாயகரைப் பரவி ஆரணிய விடங்கராம் அரும் தமிழ் புனைந்தார். கண்டவர் - சுந்தரமூர்த்திகளின். குழலார் - தாருகாவனத்துப் பெண்கள். பலிக்கு - பிச்சைக்கு வினாவுரையாக. 84 3244. பரவி அப்பதிகத் திருக்கடைக் காப்புச் சாத்திமுன் பணிந்து அருள்பெற்றுக் கரவுஇல் அன்பர்கள் தம் கூட்டமும் தொழுது கலந்து இனிது இருந்து போந்தருளி விரவிய ஈங்கோய் மலைமுதல் ஆக விமலர்தம் பதிபல வணங்கிக் குரவு அலர் சோலை அணி திருப்பாண்டிக் கொடுமுடி அணைந்தனர் கொங்கில். குரவு அலர் - குரா மலர். கொங்கில் - கொங்கு நாட்டிலுள்ள. 85 3245. கொங்கினில் பொன்னித் தென்கரைக் கறையூர்க் கொடுமுடிக் கோயில் முன்குறுகிச் சங்க வெண்குழையர் உழைவலம் செய்து சார்ந்து அடி அன்பினில் தாழ்ந்து பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது புனிதர் பொன்மேனியை நோக்கி இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது என்று எழுந்த மெய்க்குறிப்பினில் எடுப்ப. சங்கவெண் குழையர் உழை - சிவபிரான் இடத்தை (திருக் கோயிலை). 86 3246. அண்ணலார் அடிகள் மறக்கினும் நாம அஞ்செழுத்து அறிய எப்பொழுதும் எண்ணிய நாவே இன் சுவைபெருக இடையறாது இயம்பும் என்று இதனைத் திண்ணிய உணர்வில் கொள்பவர் மற்றுப் பற்றிலேன் எனச் செழுந்தமிழால் நண்ணிய அன்பில் பிணிப்புற நவின்றார் நமச்சிவாயத் திருப்பதிகம். 87 3247. உலகு எலாம் உய்ய உறுதி ஆம் பதிகம் உரைத்து மெய் உணர்வு அறா ஒருமை நிலவிய சிந்தையுடன் திரு அருளால் நீங்குவார் பாங்கு நல் பதிகள் பலவும் முன் பணிந்து பரமர்தாள் போற்றிப் போந்து தண் பனிமலர்ப் படப்பைக் குலவும் அக்கொங்கின் காஞ்சிவாய்ப் பேரூர் குறுகினார் முறுகும் ஆதரவால். படப்பை குலவும் - சோலைகள் சூழ்ந்த. காஞ்சி வாய் - காஞ்சி நதிக் கரையிலுள்ள. பேரூர் - மேலைச் சிதம்பரம். முறுகும் ஆதரவால் - முறுகி எழும் வேட்கையால். 88 3248. அத்திருப்பதியை அணைந்து முன்தம்மை ஆண்டவர் கோயில் உள் புகுந்து மெய்த்தவர் சூழ வலம் கொண்டு முன்பு மேவுவார் தம்எதிர் விளங்க நித்தனார் தில்லை மன்றுள் நின்று ஆடல் நீடிய கோலம் நேர்காட்டக் கைத்தலம் குவித்துக் கண்கள் ஆனந்தக் கலுழி நீர் பொழிதரக் கண்டார். கலுழி - வெள்ளம்; பெருக்கு. 89 3249. காண்டலும் தொழுது வீழ்ந்து உடன் எழுந்து கரைஇல் அன்பு என்பினை உருக்கப் பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம் புணர்ந்து மெய் உணர்வினில் பொங்கத் தாண்டவம் புரியும் தம்பிரானாரைத் தலைப்படக் கிடைத்தபின் சைவ ஆண்டகையாருக்கு அடுத்த அந்நிலைமை விளைவையார் அளவு அறிந்து உரைப்பார். புலன் கடந்த இன்பம் மெய்யின்ப மென்பது. தலைப்பட கூட; சேர. தடுத்தாட்கொண்ட புராணம்; 104, 107 பார்க்க. 90 3250. அந்நிலை நிகழ்ந்த ஆர்அருள் பெற்ற அன்பனார் இன்ப வெள்ளத்து மன்னிய பாடல் மகிழ்ந்து உடன் பரவி வளம்பதி அதனிடை மருவிப் பொன்மணி மன்றுள் எடுத்த சேவடியார் புரிநடம் கும்பிடப் பெற்றால் என் இனிப் புறம்போய் எய்துவது என்று மீண்டு எழுந்து அருளுதற்கு எழுவார். 91 3251. ஆயிடை நீங்கி அருளினால் செல்வார் அருவரைச் சுரங்களும் பிறவும் பாயும் நீர் நதியும் பலபல கடந்து பரமர் தம்பதி பலபணிந்து மேயவண் தமிழால் விருப்பொடும் பரவி வெஞ்சமாக் கூடலும் பணிந்து சேயிடை கழியப் போந்து வந்து அடைந்தார் தென்திசைக் கற்குடி மலையில். ஆயிடை - அத்திருப் பதியின்றும். வரைச் சுரங்களும் - மலை வழிகளையும். சேயிடை கழிய - நெடுந்தூரங் கடந்து. 92 அறுசீர் விருத்தம் 3252. வீடுதரும் இக் கற்குடியில் விழுமியாரைப் பணிந்து இறைஞ்சி நீடு விருப்பில் திருப்பதிகம் நிறைந்த சிந்தையுடன் பாடிப் பாடும் விருப்பில் தொண்டருடன் பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சித் தேடும் இருவர் காண்பு அரியார் திருஆறை மேல்தளி சென்றார். விழுமியாரை - சிவபெருமானை. 93 3253. செம்பொன் மேருச்சிலை வளைத்த சிவனார் ஆறைமேல் தளியில் நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி நாளும் மகிழ்வார்க்கு அருள்கூட உம்பர் போற்றும் தானங்கள் பலவும் பணிந்து போந்து அணைவார் இம்பர் வாழ இன்னம்பர் நகரைச் சேர எய்தினார். இம்பர் - இவ்வுலகோர். 94 3254. ஏரின் மருவும் இன்னம்பர் மகிழ்ந்த ஈசர் கழல் வணங்கி ஆரும் அன்பில் பணிந்து ஏத்தி ஆரா அருளால் அங்கு அமர்வார் போரின் மலியும்கரி உரித்தார் மருவும் புறம்பயம் போற்றச் சேரும் உள்ளம் மிக்கு எழமெய்ப் பதிகம் பாடிச் செல்கின்றார். ஏரின் மருவும் - அழகாற் பொலியும். ஆரும் - நிறைந்த. ஆரா - தெவிட்டாத. 95 எழுசீர் விருத்தம் 3255. அங்கம் ஓதி ஓர்ஆறை மேல்தளி என்று எடுத்து அமர் காதலில் பொங்கு செந்தமிழால் விரும்பு புறம்பயம் தொழப் போதும் என்று எங்கும் மன்னிய இன்இசைப் பதிகம் புனைந்து உடன் எய்தினார் திங்கள் சூடிய செல்வர் மேவு திருப்புறம் பயம் சேரவே. 96 3256. அப்பதிக்கண் அமர்ந்த தொண்டரும் அன்று வெண்ணெய் நல்லூரினில் ஒப்பு அரும் தனி வேதியின் பழ ஓலைகாட்டி நின்று ஆண்டவர் இப் பதிக்கண் வந்து எய்த என்ன தவங்கள் என்றுஎதிர் கொள்ளவே முப்புரங்கள் எரித்த சேவகர் கோயில் வாயிலின் முன்னினார். ஆண்டவர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள். 97 3257. நிடு கோபுரம் முன்பு இறைஞ்சி நிலாவு தொண்டரோடு உள் அணைந்து ஆடல் மேவிய அண்ணலார் அடி போற்றி அஞ்சலி கோலிநின்று ஏடு உலாம்மலர் தூவி எட்டினொடு ஐந்தும் ஆகும் உறுப்பினால் பீடு நீடு நிலத்தின் மேல் பெருகப் பணிந்து வணங்கினார். அஷ்டாங்க பஞ்சாங்க நமகாரஞ் செய்து. 98 3258. அங்கு நீடு அருள்பெற்று உள் ஆர்வம் மிகப் பொழிந்து எழும் அன்பினால் பொங்கு நாள் மலர்ப்பாதம் முன் பணிந்து ஏத்தி மீண்டு புறத்து அணைந்து எங்கும் ஆகி நிறைந்து நின்றவர் தாம் மகிழ்ந்த இடங்களில் தங்கு கோலம் இறைஞ்சுவார் அருள் தாவு இல் அன்பரோடு எய்தினார். தாவில் - அழியாத. 99 அறுசீர் விருத்தம் 3259. வம்புநீடு அலங்கல் மார்பின் வன்தொண்டர் வன்னி கொன்றை தும்பை வெள் அடம்பு திங்கள் தூயநீர் அணிந்த சென்னித் தம்பிரான் அமர்ந்த தானம் பலபல சார்ந்து தாழ்ந்து கொம்பு அனார் ஆடல் நீடு கூடலை யாற்றூர் சார. மணங் கமழும் மாலை யணிந்த மார்பினையுடைய. 100 3260. செப்பஅரும் பதியில் சேரார் திருமுது குன்றை நோக்கி ஒப்பு அரும் புகழார் செல்லும் ஒருவழி உமையா ளோடு மெய்ப்பரம் பொருளாய் உள்ளார் வேதியர் ஆகி நின்றார் முப்புரி நூலும் தாங்கி நம்பியாரூரர் முன்பு. 101 3261. நின்றவர் தம்மை நோக்கி நெகிழ்ந்த சிந்தையராய்த் தாழ்வார் இன்று யாம் முதுகுன்று எய்த வழி எமக்கு இயம்பும் என்னக் குன்ற வில்லாளி யாரும் கூடலை யாற்றூர் ஏறச் சென்றது இவ்வழிதான் என்று செல்வழித் துணையாய்ச் செல்ல. 102 3262. கண்டு அவர் கைகள் கூப்பித் தொழுது பின் தொடர்வார்க் காணார் வண்டு அலர் கொன்றையாரை வடிவுடை மழு என்று ஏத்தி அண்டர் தம்பெருமான் போந்த அதிசயம் அறியேன் என்று கொண்டு எழும் விருப்பினோடும் கூடலை யாற்றூர் புக்கார். கண்டவர் - வன்தொண்டர். தொடர்வாரைக் காணாதவராய். 103 3263. கூடலை யாற்றூர் மேவும் கொன்றைவார் சடையினார் தம் பீடுஉயர் கோயில் புக்குப் பெருகிய ஆர்வம் பொங்க ஆடகப் பொதுவில் ஆடும் அறைகழல் வணங்கிப் போற்றி நீடு அருள்பெற்றுப் போந்து திருமுது குன்றில் நேர்ந்தார். ஆடகப் பொதுவில் - பொன்னம்பலத்தில். 104 3264. தடநிலைக் கோபுரத்தைத் தாழ்ந்து முன் இறைஞ்சிக் கோயில் புடைவலம் கொண்டு புக்குப் போற்றினர் தொழுது வீழ்ந்து நடம் நவில்வாரை நஞ்சி யிடை எனும் செஞ்சொல் மாலைத் தொடைநிகழ் பதிகம் பாடித் தொழுகை சுமந்து நின்று. தடம் நிலை - பெரிய நிலைகளையுடைய. 105 3265. நாதர்பால் பொருள்தாம் வேண்டி நண்ணிய வண்ணம் எல்லாம் கோது அறு மனத்துள் கொண்ட குறிப்பொடும் பரவும் போது தாதுஅவிழ் கொன்றை வேய்ந்தார் தரஅருள் பெறுவார் சைவ வேதியர் தலைவர் மீண்டும் மெய்யில் வெண்பொடி யும்பாட. 106 3266. பனிமதிச் சடையார் தாமும் பன்னிரண்டு ஆயிரம் பொன் நனி அருள் கொடுக்கும் ஆற்றால் நல்கிட உடைய நம்பி தனிவரும் மகிழ்ச்சி பொங்கத் தாழ்ந்து எழுந்து அருகு சென்று கனிவிட மிடற்றினார்முன் பின்ஒன்று கழறல் உற்றார். நனி. . .நல்கிட - மிகவும் அருள் செய்யும் வழியால் கொடுக்க. தனி வரும் - ஒப்பற்று எழும். கனி விட மிடற்றினார் - கொடுமை முதிர்ந்த விடந் தங்கிய கண்டத்தை யுடைய சிவபெருமான்; கனி விடம் - களங் கனிபோன்ற கரிய விடம் என்னலுமாம். 107 3267. அருளும் இக்கனகம் எல்லாம் அடியனேற்கு ஆரூர் உள்ளோர் மருள் உறவியப்ப அங்கே வரபெற வேண்டும் என்னத் தெருள் உற எழுந்த வாக்கால் செழுமணி முத்தாற்று இட்டுஇப் பொருளினை முழுதும் ஆரூர்க் குளத்திற் போய்க் கொள்க என்றார். அடிகள் அருளிய இப் பொன்னெல்லாம். . . . .மயங்கி வியக்க. . . . . (சிவபெருமான்) தெளிவுற எழுந்த தமது அருள்வாக்கால். . . . . மணி முத்தா நதியில் இட்டு. . . . .என்றார். 108 3268. என்று தம்பிரானார் நல்கும் இன்னருள் பெற்ற பின்னர் வன் தொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு மணிமுத்தாற்றில் பொன்திரள் எடுத்து நீர் உள் புகவிட்டுப் போதுகின்றார் அன்று எனைவலிந்து ஆட்கொண்ட அருள் இதில் அறிவேன் என்று. மச்சம் - மாற்று நிலை அறிய வெட்டி எடுத்து வைத்திருக்கும் மிச்சப் பொன். 109 3269. மேவிய காதல் கொண்டு விரவு மெய் விருத்தி பெற்றார் ஆவியின் விருத்தி ஆன அந்தணர் புலியூர் மன்றில் காவி அம் கண்டர் கூத்துக் கண்டு கும்பிடுவது என்று வாவிசூழ் தில்லை மூதூர் வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார். பொருந்திய காதல் தொண்டு கலந்த மெய் விருத்தி பெற்றவ ராகிய நம்பியாரூரர்; மெய்விருத்தியை - மெய்ம்மையான சித்தி விருத்தி என்பர் ஆறுமுகத் தம்பிரானார்; உடம்பு விருத்தி என்பர் பழைய குறிப்புரையாசிரியர். (உடம்பு விருத்திக்காகப் பொன்னையும் பெற்ற வன்தொண்டரானவர் ஆன்ம விருத்தியான தில்லைவாழ் அந்தணர்களிருக்கின்ற சிதம்பரத்துள்ள கனக சபையில் - பழைய குறிப்புரை). காவியங் கண்டர் - நீல மலர் போன்ற கண்டத்தை யுடைய சிவபெருமானது. 110 3270. மாடுஉள பதிகள் சென்று வணங்கிப் போய் மங்கை பாகர் நீடிய கடம்பூர் போற்றி நிறைந்த ஆனந்தக் கூத்தர் ஆடிய தில்லை மூதூர் அணைந்து அணிவாயில் புக்குச் சேடு உயர் மாடம் மன்னும் செழுந் திருவீதி சார்ந்தார். 111 3271. பொன் திருவீதி தாழ்ந்து புண்ணிய விளைவாய் ஓங்கும் நல் திருவாயில் நண்ணி நறைமலி அலங்கல் மார்பர் மற்று அதன் முன்பு மண்மேல் வணங்கி உள் புகுந்து பைம்பொன் சுற்று மாளிகை சூழ்வந்து தொழுது கைதலை மேல் கொள்வார். மணம் நிறைந்த மாலை யணிந்த மார்பர். 112 3272. ஆடிய திருமுன்பு ஆன அம் பொனின் கோபுரத்தின் ஊடு புக்கு இறைஞ்சி ஓங்கும் ஒளிவளர் கனக மன்றில் நாடகச் செய்ய தாளை நண்ணுற உள்நிறைந்து நீடும் ஆனந்த வெள்ளக் கண்கள் நீர்நிரந்து பாய. நிரந்து - பரவி. 113 3273. பரவு வாய்குளறிக் காதல் படி திருப்படியைத் தாழ்ந்து விரவு மெய் அங்கம் ஐந்தும் எட்டினும் வணங்கி வேட்கை உரன்உறு திருக்கூத்து உள்ளம் ஆர்தரப் பெருகி நெஞ்சில் கரவு இலாதவரைக் கண்ட நிறைவுதம் கருத்தில் கொள்ள. காதல் படிந்த. ஞான மயமான திருக்கூத்தானது உள்ளம் நிறைய. 114 வேறு 3274. மடித்தாடும் அடிமைக்கண் என்று எடுத்துமன் உயிர்கட்கு அருளும் ஆற்றால் அடுத்துஆற்றும் நல்நெறிக்கண் நின்றார்கள் வழுவிநரகு அணையா வண்ணம் தடுப்பானைப் பேரூரில் கண்டநிலை சிறப்பித்துத் தனிக்கூத்து என்றும் நடிப்பானை நாம்மனமே பெற்றவாறு எனும்களிப்பால் நயந்து பாடி. . . . . . . .நின்றார்கள் ஒரு வேளை வழுவினாலும் அவர்கள் நரகு அணையா வண்ணம். 115 3275. மீளாத அருள்பெற்றுப் புறம்போந்து திருவீதி மேவித் தாழ்ந்தே ஆளான வன்தொண்டர் அந்தணர்கள் தாம்போற்ற அமர்ந்து வைகி மாளாத பேர்அன்பால் பொன்பதியை வணங்கிப்போய் மறலி வீழத் தாளாண்மை கொண்டவர்தம் கருப்பறிய லூர் வணங்கிச் சென்று சார்ந்தார். மறலி - யமன். தாள் ஆண்மை - தாளால் ஆண் தகைமை. 116 எண்சீர் விருத்தம் 3276. கூற்று உதைத்தார் திருக்கொகுடிக் கோயில் நண்ணிக் கோபுரத்தைத் தொழுதுபுகுந்து அன்பர் சூழ ஏற்றபெருங் காதலினால் இறைஞ்சி ஏத்தி எல்லைஇலாப் பெருமகிழ்ச்சி மனத்தில் எய்தப் போற்றிசைத்துப் புறத்து அணைந்து அப்பதியில் வைகிப் புனிதர் அவர்தமை நினையும் இன்பம் கூறிச் சாற்றிய மெய்த்திருப்பதிகம் சிம்மாந்து என்னும் தமிழ்மாலை புனைந்து அங்குச் சாரும் நாளில். 117 3277. கண்ணுதலார் விரும்பு கருப்பறிய லூரைக் கைதொழுது நீங்கிப் போய்க்கயல்கள் பாயும் மண்ணிவளம் படிக்கரையை நண்ணி அங்கு மாதொரு பாகத்தவர் தாள் வணங்கிப் போற்றி எண்ணில் புகழ்ப்பதிகமும் முன்னவன் என்று ஏத்தி ஏகுவார் வாழ் கொளிபுத்தூர் எய்தாது புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு புகுகின்றார் தலைக்கலன் என்று எடுத்துப் போற்றி. 118 3278. திருப்பதிகம் பாடியே சென்று அங்கு எய்தித் தேவர் பெருமானார் தம் கோயில் வாயில் உருப்பொலியும் மயிர்ப் புளகம் விரவத் தாழ்ந்தே உள் அணைந்து பணிந்து ஏத்தி உருகும் அன்பால் பொருப்பரையன் மடப்பாவை இடப்பாலானைப் போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப் பூமென் கருப்பு வயல் வாழ்கொளி புத்தூரை நீங்கிக் கானாட்டு முள்ளூரில் கலந்த போது. 119 3279. கானாட்டு முள்ளூரைச் சாரும் போது கண்நுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு தூ நாண் மென் மலர்க் கொன்றைச் சடையார் செய்ய துணைப்பாத மலர்கொண்டு தொழுதேன் என்று வான் ஆளும் திருப்பதிகம் வள்வாய் என்னும் வண்தமிழின் தொடைமாலை மலரச் சாத்தித் தேன் ஆரும் மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த திரு எதிர் கொள் பாடியினை எய்தச் செல்வார் தூய அன்றலர்ந்த மென்மலர்க் கொன்றை . . . . . 120 3280. எத்திசையும் தொழுது ஏத்த மத்த யானை எடுத்து எதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும் சித்தநிலைத்திருப்பதிகம் பாடிவந்து செல்வமிகு செழுங் கோயில் இறைஞ்சி நண்ணி அத்தர் தமை அடி வணங்கி அங்கு வைகி அருள்பெற்றுத் திருவேள்விக் குடியில் எய்தி முத்தி தரும் பெருமானைத் துருத்தி கூட முப்பது இலை எனும் பதிகம் மொழிந்து வாழ்ந்தார். 121 அறுசீர் விருத்தம் 3281 காட்டுநல் வேள்விக் கோலம் கருத்துற வணங்கிக் காதல் நாட்டிய உள்ளத் தோடு நம்பி ஆரூரர் போற்றி ஈட்டிய தவத்தோர் சூழ அங்குநின்று ஏகி அன்பு பூட்டி ஆட்கொண்டார் மன்னும் தானங்கள் இறைஞ்சிப் போந்து. 122 தரவுக் கொச்சகக் கலிப்பா 3282. எஞ்சாத பேர்அன்பில் திருத்தொண்டருடன் எய்தி நஞ்சுஆரும் கறைமிடற்றார் இடம்பலவும் நயந்து ஏத்தி மஞ்சு ஆரும் பொழில் உடுத்த மலர்த்தடங்கள் புடை சூழும் செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் சென்று அடைந்தார். எஞ்சாத - குறையாத. மஞ்சு . . . .சூழும் - மேகந் தவழும் சோலை களையுடைய பூந்தடாகங்கள் பக்கத்தே சூழ்ந்த. 123 3283. செல்வமலி திருவாரூர் தேவரொடு முனிவர்களும் மல்குதிருக் கோபுரத்து வந்துஇறைஞ்சி உள்புக்கு அங்கு எல்லைஇலாக் காதல்மிக எடுத்த மலர்க்கை குவித்துப் பல்குதிருத் தொண்டருடன் பரமர் திருமுன் அணைந்தார். 124 3284. மூவாத முதல்ஆகி நடுஆகி முடியாத சேஆரும் கொடியாரைத் திருமூலட் டானத்துஉள் ஓவாத பெருங் காதலுடன் இறைஞ்சிப் புறம் போந்து தாவாத புகழ்ப் பரவையார் திருமாளிகை சார்ந்தார். மூவாத - அழியாத. சேஆரும் - இடபம் பொருந்திய. திருமூலட்டானத்து - திருமூலதானத்திலே. ஓவாத - நீங்காத. தாவாதபுகழ் - கெடாத புகழையுடைய. 125 3285. பொங்குபெரு விருப்பினொடு புரிகுழலார் பலர் போற்றப் பங்கயக்கண் செங்கனிவாய்ப் பரவையார் அடி வணங்கி எங்களையும் நினைந்தருளிற்று என இயம்ப இனிது அளித்து மங்கை நல்லார் அவரோடும் மகிழ்ந்து உறைந்து வைகும் நாள். தாமரை மலர் போன்ற கண்ணும் கொவ்வைக் கனிபோன்ற வாயும் உடைய பரவையார் ஆரூரது அடிவணங்கி. இனிது அருள்செய்து; நலம் வினவி. 126 3286. நாயனார் முதுகுன்றர் நமக்கு அளித்த நல்நிதியம் தூய மணிமுத்தாற்றில் புகவிட்டேம் துணைவர் அவர் கோயிலின் மாளிகைமேல்பால் குளத்தில் அவர் அருளாலே போய் எடுத்துக் கொடுபோதப் போதுவாய் எனப் புகல. நாயனார் - தலைவராகிய. துணைவரவர் என்றது திருவாரூர்ப் பெருமாளைக் குறிப்பது. முதுகுன்றப் பெருமானும் திருவாரூர்ப் பெருமானும் ஒருவரே யாதலின் துணைவரவர் என்றார். போதுவாய் - வருவாய். 127 3287. என்ன அதிசயம் இதுதான் என் சொன்னவாறு என்று மின் இடையார் சிறு முறுவலுடன் விளம்ப மெய் உணர்ந்தார் நன்னுதலாய்! என்னுடைய நாதன் அருளால் குளத்தில் பொன் அடைய எடுத்து உனக்குத் தருவது பொய்யாது என்று. 128 3288. ஆங்கு அவரும் உடன்போத அளவு இறந்த விருப்பினுடன் பூங்கோயில் உள் மகிழ்ந்த புராதனரைப் புக்கு இறைஞ்சி ஓங்குதிரு மாளிகையை வலம்வந்து அங்கு உடன் மேலைப் பாங்கு திருக்குளத்து அணைந்தார் பரவையார் தனித் துணைவர். 129 3289. மற்று அதனில் வடகீழ்பால் கரை மீது வந்தருளி முற்றிழையார் தமை நிறுத்தி முனைப்பாடித் திருநாடர் கற்றைவார் சடையாரைக் கைதொழுது குளத்தில் இழிந்து அவற்றைநாள் இட்டுஎடுப்பார் போல்அங்குத் தடவுதலும். முற்றிழையார் தமை - பரவையாரை. அன்று இட்டு இன்று எடுப்பார் போல். 130 3290. நீற்று அழகர் பாட்டு உவந்து திருவிளையாட்டினில் நின்று மாற்று உறு செம்பொன் குளத்து வருவியாது ஒழிந்தருள ஆற்றினில் இட்டுக் குளத்தில் தேடுவீர்! அருள் இதுவோ சாற்றும் எனக் கோல் தொடியார் மொழிந்தருளத் தனித்தொண்டர். நீற்றழகராகிய சிவபெருமான் நம்பியாரூரர் பாட்டை விரும்பி. ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடுவோரே! சிவபிரான் திருவருள் இதுவோ சாற்றும் என்று பரவையார் மொழிந்தருள. 131 3291. முன் செய்த அருள் வழியே முருகு அலர் பூங்குழல் பரவை தன் செய்யவாயில் நகை தாராமேதாரும் என மின் செய்த நூல் மார்பின் வேதியர் தாம் முதுகுன்றில் பொன் செய்த மேனியினீர் எனப்பதிகம் போற்றி இசைத்து. முன் செய்த அருளாவது மணிமுத்தா நதியிலிட்டுத் திருவாரூர்த் திருக்குளத்தில் பொன்னை எடுத்துக் கொள்க என்றது. மணங் கமழும் மலரை யணிந்த கூந்தலுடைய பரவையார் தமது அழகிய வாயால் நகை செய்யாதவாறு பொன்னைத் தாரும். வேதியர் தாம் - வன்தொண்டர். முதுகுன்றில் என்றது, திருமுதுகுன்றில் வீற்றிருந்தருளும் பெருமானை. 132 3292. முட்ட இமையோர் அறிய முதுகுன்றில் தந்த பொருள் சட்டநான் பெறாது ஒழிந்த தளர்வினால் கையறவு ஆம் இட்டளத்தை இவள் எதிரே கெடுத்தருளும் எனும் திருப்பாட்டு எட்டு அளவும் பொன் காட்டாது ஒழிந்தருள ஏத்துவார். இமையோர் முட்ட அறிய - தேவர்களெல்லாரும் அறிய; (முட்ட முழுவதும்). சட்ட - கடுக; திசைச்சொல். தளர்வினால் கையற வாம் இட்டளத்தை - தளர்வினால் நேர்ந்த செயலற்ற தன்மையதாகிய துன்பத்தை. 133 3293. ஏத்தாதே இருந்தறியேன் எனும் திருப்பாட்டு எவ் உலகும் காத்து ஆடும் அம்பலத்துக்கண் உளன் ஆம் கண்ணுதலைக் கூத்தா! தந்தருளாய் இக்கோமளத்தின் முன் என்று நீத்தாரும் தொடர்வு அரியநெறி நின்றார் புரவுதலும். 134 3294. கொந்து அவிழ்பூங் கொன்றைமுடிக் கூத்தனார் திருஅருளால் வந்து எழுபொன் திரள்எடுத்து வரல்முறையால் கரை ஏற்ற அந்தரத்து மலர்மாரி பொழிந்து இழிந்தது அவனி உளோர். இந்த அதிசயம் என்னே! யார் பெறுவார், எனத் தொழுதார். கொந்து - கொத்து. 135 3295. ஞாலம் வியப்பு எய்தவரும் நல்கனகமிடை எடுத்து மூலம் எனக்கொடு போந்த ஆணியின்முன் உரைப்பிக்க நீல மிடற்றவர் அருளால் உரைதாழப் பின்னும் நெடு மால்அயனுக்கு அரிய கழல் வழுத்தினார் வன்தொண்டர். கனகமிடை - பொற்குவையை. முன்னே தாம் வெட்டி யெடுத்து வைத்துள்ள மச்சத்துடன் மாற்றுரைத்துப் பார்க்க என்றபடி. 136 3296. மீட்டும் அவர் பரவுதலும் மெய் அன்பர் அன்பில்வரும் பாட்டு உவந்து கூத்து உவந்தார் படுவாசி முடிவு எய்தும் ஓட்டு அறு செம்பொன் ஒக்க ஒரு மாவும் குறையாமல் காட்டுதலும் மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார். பாட்டு உவந்து கூத்து உவந்தார் - பாட்டை விரும்பிச் சிவ பெருமான். படுவாசி - நேர்ந்த வேறுபாடு. ஒருமாவும் - ஓரளவும். 137 3297. கரை ஏறிப் பரவையாருடன் கனகம் ஆனது எலாம் நிரையே ஆளில் சுமத்தி நெடுநிலை மாளிகை போக்கித் திரை ஏறும் புனல் சடிலத் திருமூலட்டானத்தார் விரை ஏறும் மலர்ப்பாதம் தொழுது அணைந்தார் வீதியினில். நிரையே - வரிசையாக. திரை எறும் புனல் சடிலம் - அலை கொழிக்கும் கங்கை தங்கும் சடையையுடைய. 138 3298. வந்து திருமாளிகையின் உள்புகுந்து மங்கல வாழ்த்து அந்தம் இலா வகை ஏத்தும் அளவு இறந்தார் ஒலி சிறப்பச் சிந்தை நிறை மகிழ்ச்சியுடன் சேயிழையாருடன் அமர்ந்தார் கந்தம் மலி மலர்ச் சோலை நாவலர்தம் காவலனார். 139 3299. அணி ஆரூர் மணிப்புற்றின் அமர்ந்தருளும் பரம் பொருளைப் பணிவார் அங்கு ஒருநாளில் பாராட்டும் திருப்பதிகம் தணியாத ஆனந்தம் தலைசிறப்பத் தொண்டருடன் துணிவு ஆயபொருள் வினவித் தொழுது ஆடிப் பாடுவார். 140 3300. பண் நிறையும் வகை பாறு தாங்கி என எடுத்தருளி உள் நிறையும் மனக்களிப்பால் உறுபுளகம் மயிர் முகிழ்ப்பக் கண் நிறையும் புனல் பொழியக் கரை இகந்த ஆனந்தம் எண் நிறைந்தபடி தோன்ற ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார். 141 3301. இன்புற்று அங்கு அமர் நாளில் ஈறுஇல் அருமறை பரவும் வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் அருள் பெற்றே அன்புற்ற காதலுடன் அளவு இறந்த பிறபதியும் பொன் புற்கு ஏன்றிட ஒளிரும் சடையாரைத் தொழப்போவார் பொன் புற்கு என்ன - பொன்னும் குறையையுடையதே என்று சொல்லும்படி; பொன்னும் புகையுடையதென்று சொல்லுமாறு; பொன்னினும் ஒளியுடைய சடை என்றபடி. 142 3302. பரிசனமும் உடன்போதப் பாங்குஅமைந்த பதிகள்தொறும் கரிஉரிவை புனைந்தார்தம் கழல் தொழுது மகிழ்ந்து ஏத்தித் துரிசு அறு நல்பெருந் தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப் புரிவுறு மெய்த்திருத் தொண்டர் எதிர்கொள்ளப் புக்குஅணைந்தார் துரிசு - குற்றம். புரிவுறும் - விருப்பமுறும். 143 3303. விண்தடவு கோபுரத்தைப் பணிந்து கரம் மேற்குவித்துக் கொண்டுபுகுந்து அண்ணலார் கோயிலினை வலம் செய்து மண்டியபேர் அன்பினொடு மன்னு திருநள்ளாறர் புண்டரிகச் சேவடிக்கீழ்ப் பொருந்தி நிலமிசைப் பணிந்தார். 144 3304. அம்கணரைப் பணிந்தேத்தி அருளினால் தொழுது போய் மங்குல் அணி மணி மாடத் திருக்கடவூர் வந்து எய்தித் திங்கள் வளர் முடியார்தம் திருமயானமும் பணிந்து பொங்கும் இசைப் பதிகம் மருஆர் கொன்றை எனப் போற்றி. 145 3305. திருவீரட்டானத்துத் தேவர் பிரான் சினக்கூற்றின் பொருவீரம் தொலைத்த கழல் பணிந்து பொடி ஆர்மேனி - மரு ஈரத்தமிழ் மாலை புனைந்து ஏத்தி மலைவளைத்த பெருவீரர் வலம் புரத்துப் பெருகு ஆர்வத்தொடும் சென்றார். திக்கடவூர். வீரட்டங்களுள் ஒன்று; யமனை உதைத்த இடம் சினக் கூற்றின் - கோபமுடைய யமனது. ஈரம்மரு - குளிர்ச்சி பொருந்திய. 146 3306. வரையோடு நிகர் புரிசை வலம் புரத்தார் கழல் வணங்கி உரையோசைப் பதிகம் எனக்கு இனி ஓதிப் போய்ச் சங்கம் நிரை ஓடு துமித்தூபம் மணித்தீபம் நித்திலப் பூந் திரை ஓதம் கொண்டு இறைஞ்சும் திருச்சாய்க்காடு எய்தினார். வரையோடு நிகர் புரிசை - மலைபோலும் மதில் சூழ்ந்த. சங்க. . . . . இறைஞ்சும் - சங்கு வரிசைகளுடன் பவளத்தூபத்தையும் (பவளக் கொடியையும்) மணித்தீபத்தையும் (மணிக்குவையையும்) முத்தையும் பொலிவுடைய கடல் வாய் அலைகள் கொண்டு வந்து வணங்கும். 147 3307. தேவர்பெருமான் தன்னைத் திருச்சாய்க் காட்டினில் பணிந்து பாவலர் செந்தமிழ் மாலைத் திருப்பதிகம் பாடிப் போய் மேவலர்தம் புரம் எரித்தார் வெண்காடு பணிந்து ஏத்தி நாவலர் காவலர் அடைந்தார் நனிபள்ளித் திருநகரில். 148 3308. நனிபள்ளி அமர்ந்த பிரான் கழல் வணங்கி நல்தமிழின் புனிதநறும் தொடைபுனைந்து திருச்செம்பொன் பள்ளிமுதல் பனிமதி சேர் சடையார்தம் பதிபலவும் பணிந்து போய்த் தனிவிடைமேல் வருவார்தம் திருநின்றியூர் சார்ந்தார். நற்றமிழின் தூய நறிய பாமாலையைச் சாத்தி. 149 3309. நின்றியூர் மேயாரை நேயத்தால் புக்கு இறைஞ்சி ஒன்றிய அன்பு உள் உருகப் பாடுவார் உடைய அரசு என்றும் உலகு இடர் நீங்கப் பாடிய ஏழ் எழுநூறும் அன்று சிறப்பித்து அம்சொல் திருப்பதிகம் அருள்செய்தார். திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய பதிகத் தொகை ஏழ் எழு நூறு - நாலாயிரத்துத் தொள்ளாயிரம். இப்பதிகத் தொகைக்குரிய பாட்டுத் தொகை நாற்பத்தொன்பதினாயிரம். பதிகம் ஏழ் எழுநூறு பகருமா கவியோகி- திருநாவுக்கரசர் திரு ஏகாதசமாலை: 7. கொடுங்கூற்றாயின என்ன எடுத்துக் கோதில் - ஒருமானைத் தரிக்குமொரு வரையுங் காறும் ஒரு நாற்பத் தொன்பதினாயிரமதாக . . . . திருமுறைகண்டபுராணம்: 15. 150 3310. அப்பதியில் அன்பருடன் அமர்ந்து அகல்வார் அகலிடத்தில் செப்பு அரிய புகழ் நீடூர் பணியாது செல்பொழுதில் ஒப்பு அரிய உணர்வினால் நினைந்தருளித் தொழலுறுவார் மெய்ப்பொருள் வண்தமிழ் மாலை விளம்பியே மீண்டு அணைந்தார். அகலிடத்தில் - பூமியில். 151 3311. மடல்ஆரும் புனல்நீடூர் மருவினர்தாள் வணங்காது விடலாமே எனும் காதல் விருப்புறும் அத்திருப்பதிகம் அடல் ஆர் சூலப்படையார் தமைப்பாடி அடிவணங்கி உடல் ஆரும் மயிர்ப்புளகம் மிகப் பணிந்து அங்கு உறைகின்றார். மடல் ஆரும் புனல் - பூக்கள் நிறைந்த நீர்வளம் பொருந்திய. அடல் - வலிமை. 152 3312. அங்கண் இனிது அமர்ந்து அருளால் திருப்புன்கூர் அணைந்துஇறைஞ்சிக் கொங்கு அலரும் மலர்ச் சோலைத் திருக்கோலக்கா அணையக் கங்கை சடைக் கரந்தவர் தாம் எதிர்காட்சி கொடுத்தருளப் பொங்குவிருப்பால் தொழுது திருப்பதிகம் போற்றி இசைப்பார். கொங்கு அலரும் - மணம் கமழும். 153 3313. திருஞான சம்பந்தர் திருக்கைகளால் ஒற்றிப் பெருகு ஆர்வத்துடன் பாடப் பிஞ்ஞகனார் கண்டு இரங்கி அருளாலே திருத்தாளம் அளித்தபடி சிறப்பித்துப் பொருள்மாலைத் திருப்பதிகம் பாடியே போற்ற இசை த்தார். 151 3314. மூவாத முழுமுதலார் முதல் கோலக்கா அகன்று தாவாத புகழ்ச் சண்பை வலம்கொண்டு தாழ்ந்து இறைஞ்சி நாஆர் முத்தமிழ் விரகர் நல்பதங்கள் பரவிப் போய் மேவார்தம் புரம் செற்றார் குருகாவூர் மேவுவார். சண்பை - சீர்காழியை. முத்தமிழ்விரகர் - திருஞானசம்பந்தர். மேவார்தம் புரஞ் செற்றார் - பகைவர்களின் முப்புரமெரித்த சிவ பிரான் எழுந்தருளியுள்ள. 155 3315. உண்நீரின் வேட்கையுடன் உறுபசியால் மிக வருந்திப் பண்நீர்மை மொழிப்பரவையார் கொழுநர் வரும் பாங்கர்க் கண்நீடு திருநுதலார் காதல்வரக் கருத்து அறிந்து தண்ணீரும் பொதிசோறும் கொண்டு வழிச் சார்கின்றார். உண்ணும் - நீரின். 156 3316. வேனில் உறுவெயில் வெம்மை தணிப்பதற்கு விரைக்குளிர்மென் பானல் மலர்த்தடம்போலும் பந்தர் ஒருபால் அமைத்தே ஆன மறை வேதியராய் அருள்வேடம் கொண்டிருந்தார் மான் அமரும் திருக்கரத்தார் வன்தொண்டர் தமைப் பார்த்து. வாசனை வீசும் குளிர்ந்த மெல்லிய செங்கழுநீர் மலர்கள் நிறைந்த தடாகம்போலும். 157 3317. குருகாவூர் அமர்ந்தருளும் குழகர் வழி பார்த்திருப்பத் திருவாரூர்த் தம்பிரான் தோழர் திருத்தொண்டருடன் வருவார் அப்பந்தரிடைப் புகுந்து திருமறையவர்பால் பெருகு ஆர்வம் செல இருந்தார் சிவாய நம எனப் பேசி. சிவாயநம என்று கூறி. 158 3318. ஆல நிழல் கீழ் இருந்தார் அவர் தம்மை எதிர்நோக்கிச் சாலமிகப் பசித்தீர் இப்பொதி சோறு தருகின்றேன் காலம் இனித்தாழா மேகைக் கொண்டு இங்கு இனிது அருந்தி ஏல நறும் குளிர் தண்ணீர் குடித்து இளைப்புத் தீரும் என. 159 3319. வன்தொண்டர் அது கேட்டு மறை முனிவர் தரும் பொதி சோறு இன்று நமக்கு எதிர் விலக்கல் ஆகாது என்று இசைந்தருளிப் பொன் தயங்கு நூல் மார்பர் தரும் பொதி சோறு அதுவாங்கிச் சென்றுதிருத்தொண்டருடன் திருஅமுது செய்தருளி. 160 3320. எண்இறந்த பரிசனங்கள் எல்லாரும் இனிது அருந்தப் பண்ணிய பின் அம்மருங்கு பசித்து அணைந்தார்களும் அருந்த உள்நிறைந்த ஆர் அமுதாய் ஒரு காலும் உலவாதே புண்ணியனார் தாம் அளித்தபொதி சோறு பொலிந்ததால். உலவாதே - குறையாமல். 161 3321. சங்கரனார் திருவருள்போல் தண்ணீரின் சுவை ஆர்ந்து பொங்கிவரும் ஆதரவால் அவர்நாமம் புகழ்ந்து ஏத்தி அங்கு அயர்வால்பள்ளி அமர்ந்து அருகு அணைந்தார்களும் துயிலக் கங்கை சடைக் கரந்தார் அப்பந்தரொடும் தாம் கரந்தார். ஆர்ந்து - பருகி. ஆதரவால் - விருப்பால். 162 3322. சித்தநிலை திரியாத திருநாவலூர் மன்னர் அத்தகுதியினில் பள்ளி உணர்ந்துஅவரைக் காணாமை இத்தனை ஆம்மாற்றம் அறிந்திலேன் என எடுத்து மெய்த்தகைய திருப்பதிகம் விளம்பியே சென்று அடைந்தார். 163 3323. குருகாவூர் அமர்ந்தருளும் குழகனார் கோயிலினுக்கு அருகுஆர் பொன்கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள்புக்கு வருகாதல் கூர வலம்கொண்டு திருமுன் வணங்கி பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகினார். வாயாற் பருக இயலாத இன்னமுதத்தை. 164 3324. கண்ஆர்ந்த இன்அமுதைக் கைஆரத் தொழுது இறைஞ்சிப் பண் ஆர்ந்த திருப்பதிகம் பாடியே பணிந்து ஏத்தி உள்நாடும் பெருங்காதல் உடையவர்தாம் புறத்து எய்தி நண் ஆர்வத் தொண்டருடன் அங்கு இனிது நயந்திருந்தார். 165 3325. அந்நாளில் தம்பெருமான் அருள்கூடப் பணிந்து அகன்று மின் ஆர் செஞ்சடை முடியார் விரும்பும் இடம்பல வணங்கிக் கல் நாடும் எயில் புடைசூழ் கழிப்பாலை தொழுது ஏத்தி தென் நாவலூர் மன்னர் திருத்தில்லை வந்து அடைந்தார். கல்லால் கட்டப் பட்ட மதில் பக்கத்தே சூழ்ந்த கழிப்பாலை. 166 3326. சீர்வளரும் திருத்தில்லைத் திருவீதி பணிந்து புகுந்து ஏர்வளர் பொன் திருமன்றுள் எடுத்த சேவடி இறைஞ்சிப் பார்வளர மறைவளர்க்கும் பதி அதனில் பணிந்து உறைவார் போர்வளர் மேருச்சிலையார் திருத்தினை மாநகர் புகுந்தார். 167 3327. திருத்தினை மாநகர் மேவும் சிவக்கொழுந்தைப் பணிந்துபோய் நிருத்தனார் அமர்ந்தருளும் நிறைபதிகள் பல வணங்கிப் பொருத்தமிகும் திருத்தொண்டர் போற்று திருநாவலூர் கருத்தில் வரும் ஆதரவால் கைதொழச்சென்று எய்தினார். 168 3328. திருநாவலூர் மன்னர் சேர்கின்றார் எனக் கேட்டுப் பெருநாமப் பதியோரும் தொண்டர்களும் பெருவாழ்வு வருநாள் என்று அலங்கரித்து வந்து எதிர்கொண்டு உள்அணையச் செருநாகத்து உரிபுனைந்தார் செழுங்கோயில் உள்அணைந்தார். செருநாகத்துரி - போர் யானையின் தோல். 169 3329. மேவிய அத்தொண்டர் குழாம் மிடைந்து அர என்று எழும்ஓசை மூவுலகும் போய் ஒலிப்ப முதல்வனார் முன்பு எய்தி ஆவியினும் அடைவுடையார் அடிக்கமலத்து அருள் போற்றிக் கோவலன் நான்முகன் எடுத்துப் பாடியே கும்பிட்டார். ஆவியினும் அடைவுடையார் - உயிரினும் சிறப்புடையார். ஒருவனுக்கரியது அவனது உயிர்; அவ்வுயிரினுஞ் சிறந்தது சிவம்; என்னில் யாரும் எனக்கினி யாரில்லை - என்னிலும் இனி யான் ஒருவன் உளன் - என்னுளே உயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் - கென்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே -அப்பர். 170 3330. நலம் பெருகும் அப்பதியில் நாடிய அன்பொடு நயந்து குலம் பெருகும் திருத்தொண்டர் குழாத்தோடும் இனிது அமர்ந்து சலம்பெருகும் சடைமுடியார் தாள்வணங்கி அருள்பெற்று பொலம்புரி நூல் மணிமார்பர் பிறபதியும் தொழப்போவார். பொலம் - பொன். 171 3331. தண்டகம்ஆம் திருநாட்டுத் தனிவிடையார் மகிழ்வு இடங்கள் தொண்டர் எதிர் கொண்டு அணையத் தொழுது போய்த் தூயநதி வண்டு அறை பூம்புறவு மலை வளமருதம்பல கடந்தே எண் திசையோர் பரவு திருக்கழுக்குன்றை எய்தினார். தண்டகமாந் திருநாட்டு - திருஞானசம்பந்தர் புராணம்: பாட்டு 960 குறிப்புப் பார்க்க. விடையார் - இடபாரூடராகிய சிவ பெருமான். புறவும் - முல்லை நிலங்களையும். மலை - குறிஞ்சி நிலங் களையும். 172 3332. தேன்ஆர்ந்த மலர்ச்சோலைத் திருக்கழுக்குன்றத்து அடியார் ஆனாத விருப்பினொடும் எதிர்கொள்ள அடைந்தருளித் தூநாள்வெண் மதிஅணிந்த சுடர்க்கொழுந்தைத் தொழுதுஇறைஞ்சிப் பாநாடும் இன்இசையின் திருப்பதிகம் பாடினார். 173 3333. பாடிய அப்பதியின் கண்இனிது அமர்ந்து பணிந்துபோய் நாடிய நல் உணர்வினொடும் திருக்கச்சூர்தனை நண்ணி ஆடக மாமதில் புடைசூழ் ஆலக் கோயில் இன் அமுதைக் கூடிய மெய் அன்பு உருகக் கும்பிட்டுப் புறத்து அணைந்தார். ஆடகம் - பொன். ஆலக்கோயில் - திருக்கச்சூர்க் கோயில் பெயர். 174 3334. அணைந்தருளும் அவ்வேலை அமுது செயும் பொழுது ஆகக் கொணர்ந்து அமது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமைத் தணந்த பசிவருத்தத்தால் தம்பிரான் திருவாயில் புணர்ந்த மதில் புறத்து இருந்தார் முனைப்பாடிப் புரவலனார். திருவமுது கொண்டுவந்து கொடுக்கும் அடியவர்கள் வாராமையால் மிகுந்த பசி. . . . . . 175 3335. வன்தொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார் மின்தங்கு வெண்தலை ஓடு ஒழிந்து ஒருவெற்று ஓடுஏந்தி அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய்ப் புறப்பட்டுச் சென்று அன்பர் முகம் நோக்கி அருள்கூரச் செப்புவார். மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேனடியேன் வயல் சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே - சுந்தரர்: 5. 176 3336. மெய்ப்பசியால் மிக வருந்தி இளைத்திருந்தீர் வேட்கைவிட இப்பொழுதே சோறு இரந்து இங்குயான் உமக்குக் கொணர்கின்றேன் அப்புறம் நீர் அகலாதே சிறிது பொழுது அமரும் எனச் செப்பி அவர்திருக்கச்சூர் மனைதோறும் சென்று இரப்பார். 177 3337. வெண்திரு நீற்று அணி திகழ விளங்கு நூல் ஒளிதுளங்கக் கண்டவர்கள் மனம் உருகக் கடும் பகல்போது இடும் பலிக்குப் புண்டரிகக்கழல் புவிமேல் பொருந்த மனைதொறும் புக்குக் கொண்டு தாம் விரும்பி ஆட்கொண்டவர் முன் கொடுவந்தார். பலிக்கு - பிச்சைக்கு. 178 3338. இரந்து தாம் கொடுவந்த இன் அடிசிலும் கறியும் அரந்தை தரும் பசிதீர அருந்துவீர் என அளிப்பப் பெருந்தகையார் மறையவர்தம் பேர் அருளின் திறம்பேணி நிரந்த பெருங் காதலினால் நேர்தொழுது வாங்கினார். இன்அடிசில் - இனிய சோறும். அரந்தை - துன்பம். 179 3339. வாங்கிய அத்திரு அமுது வன்தொண்டர் மருங்கு அணைந்த ஓங்குதவத் தொண்டருடன் உண்டருளி உவந்திருப்ப ஆங்கு அருகு நின்றார் போல் அவர் தம்மை அறியாமே நீங்கினார் எப்பொருளும் நீங்காத நிலைமையினார். 180 3340. திருநாவ லூராளி சிவயோகியார் நீங்க வருநாம மறையவனார் இறையவனார் என மதித்தே பெருநாதச் சிலம்பு அணி சேவடி வருந்தப் பெரும்பகல்கண் உருநாடி எழுந்தருளிற்று என் பொருட்டு ஆம் என உருகி. 181 அறுசீர் விருத்தம் 3341. முதுவாய் ஓரி என்று எடுத்து முதல்வனார்தம் பெருங் கருணை அதுஆம் இது என்று அதிசயம் வந்து எய்தக் கண்ணீர் மழை அருவிப் புதுவார் புனலின் மயிர்ப் புளகம் புதையப் பதிகம் போற்றிசைத்து மது ஆர் இதழி முடியாரைப் பாடி மகிழ்ந்து வணங்கினார். மதுஆர் இதழி - தேன் நிறைந்த கொன்றை. 182 3342. வந்தித்து இறைவர் அருளால் போய் மங்கைபாகர் மகிழ்ந்த இடம் முந்தித் தொண்டர் எதிர் கொள்ளப் புக்கு முக்கண் பெருமானைச் சிந்தித்திட வந்து அருள்செய் கழல் பணிந்து செஞ்சொல் தொடை புனைந்தே அந்திச் செக்கர் பெருகு ஒளியார் அமரும் காஞ்சி மருங்கு அணைந்தார். அந்திவேளைச் சிவப்பனைய நிறம் பெருகு ஒளியராகிய சிவபெருமான். 183 3343. அன்று வெண்ணெய் நல்லூரில் அரியும் அயனும் தொடர்வு அரிய வென்றி மழவெள் விடை உயர்த்தார் வேத முதல்வராய் வந்து நின்று சபைமுன் வழக்கு உரைத்து நேரே தொடர்ந்து ஆட்கொண்டவர்தாம் இன்று இங்கு எய்தப் பெற்றோம் என்று எயில் சூழ் காஞ்சி நகர் வாழ்வார். 184 3344. மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக மறுகுமணித் தோரணம் நாட்டி அல்கு தீபம் நிறை குடங்கள் அகிலின்தூபம் கொடி எடுத்துச் செல்வ மனைகள் அலங்கரித்துத் தெற்றி ஆடல்முழவு அதிரப் பல்கு தொண்டருடன் கூடிப் பதியின் புறம்போய் எதிர்கொண்டார். மறுகு - வீதியில். அல்கு - நிலையாக உள்ள. தெற்றி ஆடல் முழவு அதிர - சித்திர கூடங்களில் நடன முழவு ஒலிக்க. பல்கு பரவிய. 185 3345. ஆண்ட நம்பி எதிர்கொண்ட அடியார் வணங்க எதிர்வணங்கி நீண்ட மதிள் கோபுரம் கடந்து நிரை மாளிகை வீதியில் போந்து பூண்ட காதல் வாழ்த்தினுடன் புனைமங்கல தூரியம் ஒலிப்ப ஈண்டு தொண்டர் பெருகுதிரு ஏகாம்பரம் சென்று எய்தினார். தூரியம் - வாத்தியம். ஈண்டு - நெருங்கிய. 186 3346. ஆழி நெடுமால் அயன் முதல் ஆம் அமரர் நெருங்கு கோபுரம் முன் பூழிஉற மண்மிசை மேனி பொருந்த வணங்கிப் புகுந்து அருளிச் சூழும் மணி மாளிகை பலவும் தொழுது வணங்கி வலம் கொண்டு வாழி மணிப்பொன் கோயிலின்உள் வந்தார் அணுக்க வன்தொண்டர் பூழி - புழுதி. சூழும் - ஆலயத்துள் சூழ்ந்துள்ள. 187 3347. கைகள் கூப்பி முன் அணைவார் கம்பை ஆறு பெருகிவர ஐயர் தமக்கு மிக அஞ்சி ஆரத் தழுவிக் கொண்டு இருந்த மை உலாவும் கரு நெடுங்கண் மலையாள் என்றும் வழிபடுபூஞ் செய்ய கமலச் சேவடிக்கீழ்த் திருந்து காதலுடன் வீழ்ந்தார். மலையாள் - உமையம்மையார். 188 3348. வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து மெய் அன்பால் வாழ்ந்த சிந்தையுடன் பாடி மாறா விருப்பின் புறம் போந்து சூழ்ந்த தொண்டருடன் மருவும் நாளில் தொல்லை கச்சிநகர்த் தாழ்ந்த சடையார் ஆலயங்கள் பலவும் சார்ந்து வணங்குவார். 189 3349. சீர்ஆர் காஞ்சி மன்னுதிருக் காமக்கோட்டம் சென்று இறைஞ்சி நீர்ஆர் சடையார் அமர்ந்தருளும் நீடு திருமேல்தளி மேவி ஆரா அன்பில் பணிந்து ஏத்தும் அளவில் நுந்தா ஒண் சுடராம் பார்ஆர் பெருமைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார். 190 3350. ஓணகாந்தன் தளி மேவும் ஒருவர் தம்மை உரிமையுடன் பேணி அமைந்த தோழமையால் பெருகும் அடிமைத்திறம் பேசிக் காணமோடு பொன்வேண்டி நெய்யும் பாலும் கலை விளங்கும் யாணர்ப்பதிகம் எடுத்து ஏத்தி எண்இல் நிதிபெற்று இனிது இருந்தார். காணம் - காசு; நலங்கிளர் காணமும் மணியும் நன்பொனும். . . . . . - சிந்தாமணி 2410. நெய்யும் பாலும் என்னும் அருட்கலை விளங்கும் நல்ல பதிகத்தை. 191 3351. அங்கண் அமர்வார் அநேகதங்கா பதத்தை எய்தி உள் அணைந்து செங்கண் விடையார் தமைப் பணிந்து தேன் நெய் புரிந்து என்று எடுத்ததமிழ் தங்கும் இடம் ஆம் எனப் பாடித் தாழ்ந்து பிறவும் தானங்கள் பொங்கு காதலுடன் போற்றிப் புரிந்து அப்பதியில் பொருந்து நாள். 192 3352. பாடல் இசையும் பணியினால் பாவை தழுவக் குழைகம்பர் ஆடல் மருவும் சேவடிகள் பரவிப் பிரியாது அமர்கின்றார் நீட மூதூர்ப் புறத்து இறைவர் நிலவும் பதிகள் தொழ விருப்பால் மாடம் நெருங்கு வன்பார்த்தான் பனங்காட்டூரில் வந்து அடைந்தார். 193 3353. செல்வம் மல்கு திருப்பனங்காட் டூரில் செம்பொன் செழுஞ்சுடரை அல்லல் அறுக்கும் அருமருந்தை வணங்கி அன்பு பொழிகண்ணீர் மல்க நின்று விடையின் மேல் வருவான் எனும் வண்தமிழ்ப் பதிகம் நல்ல இசையினுடன் பாடிப் போந்து புறம்பு நண்ணுவார். 197 3354. மன்னு திருமாற்பேறு அணைந்து வணங்கிப் பரவித் திருவல்லம் தன்னுள் எய்தி இறைஞ்சிப் போய்ச் சாரும் மேல்பால் சடைக் கற்றைப் பின்னல் முடியார் இடம் பலவும் பேணி வணங்கிப் பெருந்தொண்டர் சென்னி முகில் தோய் தடம் குவட்டுத் திருக்காளத்தி மலை சேர்ந்தார். குவட்டு - முடியையுடைய. 195 3355. தடுக்கல் ஆகாப் பெருங்காதல் தலை நின்றருளும் கண்ணப்பர் இடுக்கண் களைந்து ஆட்கொண்டருளும் இறைவர் மகிழ்ந்த காளத்தி அடுக்கல் சேர அணைந்து பணிந்து அருளால் ஏறி அன்பு ஆறு மடுப்பத் திருமுன் சென்று எய்தி மலைமேல் மருந்தை வணங்கினார். காளத்தி அடுக்கல் - காளத்தி மலை. அன்பாகிய ஆறு புரள. 196 3356. வணங்கி உள்ளம் களிகூர மகிழ்ந்து போற்றி மதுரஇசை அணங்கு செண்டு ஆடு எனும் பதிகம் பாடி அன்பால் கண்ணப்பர் மணம் கொள் மலர்ச் சேவடி பணிந்து வாழ்ந்து போந்து மன்னுபதி இணங்கு தொண்டருடன் கெழுமி இன்புற்று இருக்கும் அந்நாளில். அணங்கு - விரும்பும்; கலந்த எனினுமாம். தொண்டருடன் கலந்து. 197 3357. வடமா திரத்துப் பருப்பதமும் திருக்கேதார மலையும் முதல் இடமா அரனார் தாம் உவந்த எல்லாம் இங்கே இருந்து இறைஞ்சி நடம் ஆடிய சேவடியாரை நண்ணினார் போல் உள்நிறைந்து திடம்ஆம் கருத்தில் திருப்பதிகம் பாடிக் காதல் சிறந்திருந்தார். வடமாதிரத்து - வடதிசையிலுள்ள. 198 3358. அங்குச் சிலநாள் வைகியபின் அருளால் போந்து பொருவிடையார் தங்கும் இடங்கள் எனைப் பலவும் சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப் பொங்கு புணரிக்கரை மருங்கு புவியுள் சிவலோகம் போலத் திங்கள் முடியார் அமர்ந்ததிரு ஒற்றியூரைச் சென்று அடைந்தார். புணரிக்கரை - கடற்கரை. 199 3359. அண்ணல் தொடர்ந்து ஆவணம் காட்டி ஆண்ட நம்பி எழுந்தருள எண் இல் பெருமை ஆதிபுரி இறைவர் அடியார் எதிர்கொள்வார் வண்ண வீதி வாயில் தொறும் வாழை கமுகு தோரணங்கள் சுண்ணம் நிறை பொன் குடம் தூபம் தீ பம் எடுத்துத் தொழ எழுங்கால். ஆதிபுரி - திருவொற்றியூர். 200 3360. வரமங்கல நல் இயம் முழங்க வாசமாலை அணி அரங்கில் புரமங்கை யர்கள் நடம்ஆடப் பொழியும் வெள்ளப் பூமாரி அரமங்கையரும் அமரர்களும் வீச அன்பருடன் புகுந்தார் பிரமன் தலையில் பலிஉவந்த பிரானார் விரும்புபெரும் தொண்டர். மேன்மையான நல்ல மங்கல வாத்தியங்கள் முழங்க. புரம் - அவ்வூரிலுள்ள. அரமங்கையர் - தேவமகளிர்கள். 201 3361. ஒற்றியூரின் உமையோடும் கூட நின்றார் உயர் தவத்தின் பற்று மிக்க திருத்தொண்டர் பரந்த கடல் போல் வந்து ஈண்டிச் சுற்றும் அணைந்து துதிசெய்யத் தொழுது தம்பிரான் அன்பர் கொற்ற மழஏறு உடையவர்தம் கோயில் வாயில் எய்தினார். 202 3362. வானை அளக்கும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து புகுந்துவளர் கூனல் இள வெண்பிறைச் சடையார் கோயில் வலம் கொண்டு எதிர்குறுகி ஊனும் உயிரும் கரைந்து உருக உச்சி குவித்த கையினுடன் ஆன காதலுடன் வீழ்ந்தார் ஆரா அன்பின் ஆரூரர். 203 3363. ஏட்டு வரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்து அறியும் நாட்டம் மலரும் திருநுதலார் நறும் பொன்கமலச் சேவடியில் கூட்டும் உணர்வு கொண்டு எழுந்து கோது இல் அமுத இசைகூடப் பாட்டும் பாடிப் பரவி எனும் பதிகம் எடுத்துப் பாடினார். வரிக்கணக்கில் திருவொற்றியூர் நீங்கலாக என்று எழுத அறியும். திருவொற்றியூர்ப் பெருமானுக்கு எழுத்தறியும் பெருமான் என்றொரு பெயருண்டு. 204 3364. பாடி அறிவு பரவசம் ஆம் பரிவுபற்றப் புறம் போந்து நீடு விருப்பின் பெருங்காதல் நிறைந்த அன்பர் பலர்போற்றத் தேடும் அயனும் திருமாலும் அறிதற்கு அரிய திருப்பாதம் கூடும் காலங்களில் அணைந்து பரவிக்கும் பிட்டு இனிது இருந்தார். 205 3365. இந்த நிலைமையார் இவர் இங்கு இருந்தார் முன்பே இவர்க்கு ஆக அம்தண் கயிலைமலை நீங்கி அருளால் போந்த அநிந்திதையார் வந்து புவிமேல் அவதரித்து வளர்ந்து பின்பு வன்தொண்டர் சந்தவிரைசூழ் புயம் சேர்ந்த பரிசு தெரியச் சாற்றுவாம். திருவருள் ஆணைப்படி போந்த. சந்தனமணங் கமழும் புயம். 206 3366. நால் ஆம் குலத்தில் பெருகுநலம் உடையார் வாழும் ஞாயிற்றின் மேல் ஆம் கொள்கை வேளாண்மை மிக்க திரு ஞாயிறு கிழவர் பால் ஆதரவு தருமகளார் ஆகிப் பார்மேல் அவதரித்தார் ஆலாலம் சேர் கறைமிடற்றார் அருளால் முன்னை அநிந்திதையார். ஞாயிறு. . . ஆகி - ஞாயிறு கிழவரிடத்தே விருப்பந் தரும் மகளாராகி. திருமலைச் சிறப்பு: பாட்டு 21 முதல் 29 வரை பார்க்க. தடுத்தாட்கொண்ட புராணம்: பாட்டு 131 பார்க்க. 207 3367. மலையான் மடந்தை மலர்ப்பாதம் மறவா அன்பால் வந்த நெறி தலைஆம் உணர்வு வந்து அணையத் தாமே அறிந்த சங்கிலியார் அலைஆர்வேல் கண்சிறு மகளிர் ஆயத் தோடும் விளையாட்டு நிலை ஆயின அப்பருவங்கள் தோறும் நிகழ நிரம்புவார். அநிந்திதையார் சங்கலியாராகப் பிறந்தாரென்க. இவ் வம்மையார் திருக்கயிலையில் உமையம்மையாரை வழிபட்டு வந்தவர். அப்பண்டையுணர்வு இப்பொழுது இயல்பாகவே சங்கிலி யார் மாட்டு அரும்பலாயிற்று. அலையார் - கொலைத் தொழில் பொருந்திய. ஆயத்தோடும் - கூட்டத்தோடும். 208 3368. சீர்கொள் மரபில் வரும் செயலே அன்றித் தெய்வநிகழ் தன்மை பாரில் எவரும் அதிசயிக்கும் பண்பில் வளரும்பைந் தொடியார் வாரும் அணிய அணிய ஆம்வளர் மென்முலைகள் இடைவருத்தச் சாரும் பதத்தில் தந்தையார் தங்கள் மனைவி யார்க்கு உரைப்பார். வாருமணிய அணியவாய் - கச்சும் அழகிய ஆபரணங்களும் அவாவும் - பழைய குறிப்புரை; கச்சுமணியும்படி சமீபித்த பருவ முடையவராய் - இராமலிங்கத் தம்பிரானார். 209 3369. வடிவும் குணமும் நம்முடைய மகட்கு மண் உளோர்க்கு இசையும் படிவம் அன்றி மேற்பட்ட பரிசுஆம் பான்மை அறிகிலோம் கடிசேர் மணமும் இனி நிகழும் காலம் என்னக் கற்புவளர் கொடியே அனைய மனைவியார் ஏற்கும் ஆற்றால் கொடும் என்றார். படிவம் - முறைமை; தன்மை. 210 3370. தாயரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார் ஏயும் மாற்றம் அன்று இது எம் பெருமான் ஈசன் திருஅருளே மேய ஒருவருக்கு உரியது யான் வேறு என் விளையும் என வெருவுற்று ஆய உணர்வு மயங்கிமிக அயர்ந்தே அவனிமேல் விழுந்தார். இஃது ஒப்பத் தகும் உரை அன்று. இறைவன் திருவருள் பொருந்திய ஒருவர்க்கு யான் உரியவள். தாய் தந்தையர் முயற்சியால் வேறு என்ன விளையுமோ என்று அஞ்சி. அயர்ந்து - தம்மை மறந்து; மூர்ச்சித்து. 211 3371. பாங்கு நின்ற தந்தையார் தாயார் பதைத்துப் பரிந்து எடுத்தே ஏங்கும் உள்ளத்தினர் ஆகி இவளுக்கு என்னோ உற்றது எனத் தாங்கிச்சீத விரைப் பனிநீர் தெளித்துத் தைவந்து அது நீங்க வாங்குசிலை நன்னுதலாரை வந்தது உனக்கு இங்கு என் என்றார். மயங்கி மூர்ச்சித்து விழுவோரைத் தெளிவு செய்வதற்குக் குளிர்ந்த நீர் தெளிப்பது வழக்கம். தைவந்து - தடவி. வளைந்த வில்லைப் போன்ற நெற்றியையுடைய சங்கிலியாரை நோக்கி. 212 3372. என்று தம்மை ஈன்றெடுத்தார் வினவ மறைவிட்டு இயம்புவார் இன்று என் திறத்து நீர் மொழிந்த இது என்பரிசுக்கு இசை யாது வென்றி விடையார் அருள் செய்தார் ஒருவருக்கு உரியேன் யான் இனிமேல் சென்று திரு ஒற்றியூர் அணைந்து சிவனார் அருளில் செல்வன் என. மறைவிட்டு இயம்புவார் - தங் கருத்தை மறையாது சொல்வார். என்திறத்து - என்னைப்பற்றி. பரிசுக்கு - தன்மைக்கு. சிவனார் அருள்வழி. 213 3373. அந்த மாற்றம் கேட்டு அவர்தாம் அயர்வும் பயமும் அதிசயமும் வந்த உள்ளத்தினர் ஆகி மற்று அம்மாற்றம் மறைத்து ஒழுகப் பந்தம் நீடும் இவர் குலத்து நிகர் ஆம் ஒருவன் பரிசு அறியான் சிந்தை விரும்பி மகள் பேச விடுத்தான் சிலரும் சென்று இசைத்தார். பந்தம் நீடு - (பல வழியிலும்) தொடர்பு மிகுந்த. பரிசறியான் - நிலைமையை அறியாதவனாய். மகட்பேசச் சிலரை விடுத்தான்; அவனால் விடுக்கப்பட்ட அச்சிலரும். விடுத்தார் என்னும் பாடத்துக்கு விடுக்கப்பட்டவராகிய சிலரும் என்று கொள்க. 214 3374. தாதையாரும் அது கேட்டுத் தன்மை விளம்பத் தகாமையினால் ஏதம் எய்தா வகை மொழிந்து போக்க அவர் ஆங்கு எய்தா முன் தீது அங்கு இழைத்தே இறந்தான் போல் செல்ல விடுத்தார் உடன் சென்றான் மாதராரைப் பெற்றார் மற்று அதனைக் கேட்டு மனம் மருண்டார். ஏதம் - குறைவு. எய்தாமுன் - சேர்வதற்கு முன்னே; தீது . . . . . . சென்றான் - ஏதோ தீமை செய்து இறந்தவனைப் போல (மகட்பேச) விடுக்கப் பட்டவருடன் இறந்தான். விடுக்கப்பட்டவரும் இறந்தார் என்றபடி தீது . . . . . . . சென்றார் என்னும் பாடத்துக்கு. ஏதோ தீமை செய்து இறந்தவனைப் போல (சிலரை விட்ட அவன்) இறக்க, (மகட் பேச) விடுக்கப்பட்டவரும் உடனே இறந்தார் என்று கொள்க. 215 3375. தையலார் சங்கிலியார் தம் திறத்துப் பேசத் தகாவார்த்தை உய்ய வேண்டும் நினைவுடையார் உரையார் என்று அங்கு உலகுஅறியச் செய்த விதி போல் இது நிகழுச் சிறந்தார்க்கு உள்ள படி செப்பி நையும் உள்ளத்துடன் அஞ்சி நங்கை செயலே உடன்படுவார். உய்ய வேண்டும் - (உலகில் உயிர் பெற்றுப்) பிழைத்திருக்க வேண்டும். தாய் தந்தையர் உலகத்துக்கு அஞ்சிச் சங்கிலியார் கருத்தை வெளியிடாது மறைத்து வைத்திருந்தனர். அதனை உலகறியச் செய்யவே. இந்நிகழ்ச்சி நிகழ்ந்து விட்டது. இவ்வாறு விதி நேர்ந்தது போலும்! பின்னே பெற்றோர், தங்குலத்தில் சிறந்தவர்கட்குச் சங்கிலியார் நிலையைத் தெரிவித்தனரென்க. 216 3376. அணங்கே ஆகும் இவள் செய்கை அறிந்தோர் பேச அஞ்சுவரால் வணங்கும் ஈசர்திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்றொன்றும் குணங்கள் இவை யாம் இனி இவள்தான் குறித்த படியே ஒற்றிநகர்ப் பணம் கொள் அரவச் சடையார்தம் பால் கொண்டு அணைவோம் எனப் பகர்வார். அணங்கே - தெய்வமே. வார்த்தை மற்றொன்றும் அறியாள் - இவள் குணங்கள் இவையாம். பணம் . . . . . . . பால் - படங்கொண்ட பாம்பையணிந்த சடையையுடைய சிவபெருமானிடம். 217 3377. பண்ஆர் மொழிச் சங்கிலியாரை நோக்கிப் பயந்தாரொடும் கிளைஞர் தெண் நீர் முடியார் திருஒற்றி யூரில் சேர்ந்து செல் கதியும் கண் ஆர் நுதலார் திருவருளால் ஆகக் கன்னி மாடத்துத் தண் ஆர் தடம்சூழ் அந்நகரில் தங்கிப் புரிவீர் தவம் என்று. பயந்தாரொடுங் கிளைஞர் - பெற்றவருடன் சுற்றத்தவரும். 218 3378. பெற்ற தாதை சுற்றத்தார் பிறைசேர் முடியார் விதியாலே மற்றுச் செயல் ஒன்று அறியாது மங்கையார் சங்கிலியார் தாம் சொற்ற வண்ணம் செயத்துணிந்து துதைந்த செல்வத்தொடும் புரங்கள் செற்ற சிலையார் திருவொற்றி யூரில் கொண்டு சென்று அணைந்தார். திரண்ட செல்வத்தோடும். 219 3379. சென்னி வளர் வெண் பிறை அணிந்த சிவனார் கோயிலுள் புகுந்து துன்னும் சுற்றத்தொடும் பணிந்து தொல்லைப் பதியோர் இசைவினால் கன்னிமாடம் மருங்கு அமைத்துக் கடிசேர் முறைமைக் காப்பு இயற்றி மன்னும் செல்வம் தகவகுத்துத் தந்தையார் வந்து அடி வணங்கி. கடி . . . . . .இயற்றி - காவலுக்குரிய முறைமைப்படி மதில்காப்பு முதலியன அமைத்து. சங்கிலியாரைச் சிவனடியாரெனத் தந்தையார் வணங்கினா ரென்க. 220 3380. யாங்கள் உமக்குப் பணிசெய்ய ஈசற்கு ஏற்ற பணி விரும்பி ஒங்கு கன்னி மாடத்தில் உறைகின்றீர் என்று உரைக்கின்றார்; தாங்கற்கு அரிய கண்கள் நீர்த் தாரை ஒழுகத் தரியாதே ஏங்கு சுற்றத்தொடும் இறைஞ்சிப் போனார் எயில்சூழ் தம்பதியில். உறைவீராக என்று உரைக்கின்றவராய். 221 3381. காதல் புரிந்து தவம் புரியும் கன்னியார் அங்கு அமர்கின்றார் பூதநாதர் கோயிலினில் காலம் தோறும் புக்கு இறைஞ்சி நீதி முறைமை வழுவாது தமக்கு நேர்ந்த பணி செய்யச் சீத மலர்ப்பூ மண்டபத்துத் திரைசூழ் ஒருபால் சென்றிருந்து. 222 3382. பண்டு கயிலைத் திருமலையில் செய்யும் பணியின் பான்மைமனம் கொண்ட உணர்வு தலைநிற்பக் குலவு மலர்மென் கொடிஅனையார் வண்டு மருவும் திருமலர்மென் மாலை காலங்களுக்கு ஏற்ப அண்டர் பெருமான் முடிச்சாத்த அமைத்து வணங்கி அமரும் நாள். 223 3383. அந்தி வண்ணத்து ஒருவர் திரு அருளால் வந்த ஆரூரர் கந்த மாலைச் சங்கிலியார் தம்மைக் காதல் மணம் புணர வந்த பருவம் ஆதலால் வகுத்த தன்மை வழுவாத முந்தை விதியால் வந்து ஒருநாள் முதல்வர் கோயில் உள்புகுந்தார். 224 3384. அண்டர் பெருமான் அந்தணராய் ஆண்ட நம்பி அம்கணரைப் பண்டை முறைமையால் பணிந்து பாடிப் பரவிப் புறம் போந்து தொண்டு செய்வார் திருத்தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார் புண்டரீகத் தடம் நிகர்பூந் திருமண்டபத்தின் உள் புகுந்தார். பூவின் பெருக்கால் மண்டபம் தாமரைத் தடாகத்தைப் போன்றிருந்ததென்க. 225 3385. அன்பு நாரா அஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க அலர்தொடுத்தே என்பு உள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறு இடத்து முன்பு போலத் திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணிகொடுத்து மின்போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியால் கண்ணுற்றார். அன்பை நாராகக் கொண்டு. முதல்வர் சாத்தும் மலர் மாலையைக் கொடுத்து. 226 3386. கோவா முத்தும் சுரும்பு ஏறாக் கொழுமென் முகையும் அனையாரைச் சேஆர் கொடியார் திருத்தொண்டர் கண்டபோது சிந்தைநிறை காவாது அவர்பால் போய் வீழத் தம்பால் காமனார் துரந்த பூவாளிகள் வந்து உற வீழத் தரியார் புறமே போந்து உரைப்பார். கோவா . . . . . போது - துளையாத முத்தையும். வண்டு விழாத செழிய மெல்லிய அரும்பையும் ஒத்த சங்கிலியாரைச் சிவனடி யாராகிய வன்தொண்டர் கண்டபோது. (அம்மையாரின் தூய்மை குறித்தவாறாம்.) அவர்பால் - அச்சங்கிலியாரிடத்து. 227 3387. இன்னபரிசு என்ற அரிவரிதல் ஈங்கு ஓர் மருங்கு திரைக்கு உள்ளால் பொன்னும் மணியும் மலர்ந்த ஒளி அமுதில் அளாவிப் புதிய மதி தன் உள் நீர்மையால் குழைத்துச் சமைத்த மின்னுக் கொடி போல்வாள் என்னை உள்ளம் திரிவித்தாள் ah® bfhš? என்று அங்கு இயம்புதலும். அளாவி - கலந்து. நீர்மையால் - ஒளியால். பொன்னும் மணியும் காலும் ஒளியை அமுதத் தண்ணொளியிற் கலந்து, அக்கலந்த ஒளியைச் சந்திரன் தண்ணொளியில் குழைத்து ஆக்கிய மின்கொடி போன்ற சங்கிலியார். சங்கிலியார் திருமேனியின் ஒளி கூறியவாறாம். 228 3388. அருகு நின்றார் விளம்புவார் அவர் தாம் நங்கை சங்கிலியார் பெருகும் தவத்தால் ஈசர் பணி பேணும் கன்னியார் என்ன இருவரால் இப்பிறவியை எம் பெருமான் அருளால் எய்துவித்தார் மருவும் பரவை ஒருத்தி இவள் மற்றையவள் ஆம் என மருண்டார். 229 3389. மின்ஆர் சடையார் தமக்குஆள்ஆம் விதியால் வாழும் எனைவருத்தித் தன் ஆர் அருளால் வரும் பேறு தவத்தால் அணையா வகை தடுத்தே என் ஆர் உயிரும் எழில் மலரும் கூடப் பிணைக்கும் இவள் தன்னைப் பொன் ஆர் இதழி முடியார் பால் பெறுவேன் என்று போய்ப் புக்கார். தன்னார் அருளால் - சிவபிரான் அருளால். பொன் . . . . . பால் பொன்னிறம் பொருந்திய கொன்றை முடியாராகிய சிவ பெருமானிடம் வன்தொண்டர் உடல் பொருள் ஆவி மூன்றையும் சிவனடிக்கு அர்ப்பணஞ் செய்தவர். அவர், எதை வேண்டினும் அதைத் தமது முனைப்பு முயற்சியால் பெறாது சிவன் அருள் வழிநின்று பெற்று வருவோர். முன்னே பரவையாரையும், பொன் பொருள் முதலியவற்றையும் வன்தொண்டப் பெருமான் சிவன் அருள்வழி நின்று பெற்றமை ஈண்டு உன்னற்பாலது. 230 3390. மலர்மேல் அயனும் நெடுமாலும் வானும் நிலனும் கிளைத்தறியா நிலவு மலரும் திருமுடியும் நீடும் கழலும் உடையாரை உலகம் எல்லாம் தாம்உடையார் ஆயும் ஒற்றியூர் அமர்ந்த இலகு சோதிப் பரம்பொருளை இறைஞ்சி முன்நின்று ஏத்துவார். கிளைத்து - அகழ்ந்து; தோண்டி. ஊர்தா னாவ துலகேழும் உடையார்க் கொற்றியூர் . . . . . . சுந்தரர்; திருக்கடவூர் மயானம் 7. 231 3391. மங்கை ஒருபால் மகிழ்ந்ததுவும் அன்றி மணிநீள் முடியின்கண் கங்கை தன்னைக் கரந்து அருளும் காதல் உடையீர் அடியேனுக்கு இங்கு நுமக்குத் திருமாலை தொடுத்து என் உள்ளத்தொடை அவிழ்த்த திங்கள்வதனச் சங்கிலியைத் தந்து என் வருத்தம் தீரும் என. தொடை - கட்டை. 232 3392. அண்ணலார் முன்பலவும் அவர் அறிய உணர்த்திப் புறத்து அணைந்தே எண்ணம் எல்லாம் உமக்கு அடிமை ஆம் ஆறு எண்ணும் என் நெஞ்சில் திண்ணம் எல்லாம் உடைவித்தார் செய்வது ஒன்றும் அறியேன்யான் தண்நிலா மின் ஒளிர் பவளச் சடையீர்! அருளும் எனத் தளர்வார். திண்ணம் - உறுதிப்பாட்டை. 233 3393. மதிவான் முடியார் மகிழ் கோயில் புறத்து ஓர் மருங்கு வந்து இருப்பக் கதிரோன் மேலைக் கடல் காண மாலைக் கடலைக் கண்டு அயர்வார் முதிரா முலையார் தம்மைமணம் புணர்க்க வேண்டி முளரிவளை நிதியான் நண்பர் தமக்கு அருளும் நண்பால் நினைந்து நினைந்து அழிய. மதிவாழ் முடியார். முளரி வளை நிதியான் நண்பர் - பதுமம். சங்கம் என்னும் இருநிதியையுடைய குபேரன் நண்பராகிய சிவ பெருமான். 234 3394. உம்பர் உய்ய உலகு உய்ய ஒலவேலை விடம் உண்ட தம்பிரானார் வன்தொண்டர் தம்பால் எய்திச் சங்கிலியை இம்பர் உலகில் யாவருக்கும் எய்த ஒண்ணா இரும்தவத்துக் கொம்பை உனக்குத் தருகின்றோம் கொண்ட கவலை ஒழிக என்ன. ஓலவேலை - ஒலி கடலினின்றும் எழுந்த. 235 3395. அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய ஆண்டு கொண்டருளி ஒன்றும் அறியா நாயேனுக்கு உறுதி அளித்தீர் உயிர் காக்க இன்றும் இவளை மணம் புணர்க்க ஏன்று நின்றீர் எனப் போற்றி மன்றல் மலர்ச் சேவடி இணைக்கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன்தொண்டர். ஏன்று நீன்றீர் - (உரிய அரிய அன்புக் கடனாக) ஏற்று நின்றீர்; இசைந்து நின்றீர். மன்றல் - மணங் கமழும். 236 3396. ஆண்டு கொண்ட அந்தணனார் அவருக் கருளிக் கருணையினால் நீண்ட கங்குல் யாமத்து நீங்கி வானில் நிறைமதியம் தீண்டு கன்னி மாடத்துச் சென்று திகழ் சங்கிலி யாராம் தூண்டு சோதி விளக்கனையார் தம்பாற் கனவில் தோன்றினார். நடுயாமத்தில். 237 3397. தோற்றும் பொழுதில் சங்கிலியார் தொழுது விழுந்து பரவசமாய் ஆற்ற அன்பு பொங்கி எழுந்து அடியேன் உய்ய எழுந்தருளும் பேற்றுக்கு என்யான் செய்வது எனப் பெரிய கருணை பொழிந்தனைய நீற்றுக் கோல வதியாரும் நேர்நின்று அருளிச் செய்கின்றார். ஆற்ற - மிகவும் கருணை பொழிந்து, அப்பொழிவு போன்ற நீற்றுக் கோல. . . . . . . 238 3398. சாரும் தவத்துச் சங்கிலிகேள் சால என்பால் அன்புடையான்; மேரு வரையின் மேம்பட்ட தவத்தான்; வெண்ணெய் நல்லூரில் யாரும் அறியயான் ஆள உரியான்; உன்னை எனை இரந்தான் வார்கொள் முலையாய்! நீ அவனை மணத்தால் அணைவாய் மகிழ்ந்து என்றார். 239 3399. ஆதிதேவர் முன்நின்று அங்கு அருளிச் செய்த பொழுதின்கண் மாதரார் சங்கிலி யாரும் மாலும் அயனும் அறிவு அரிய சீதமலர்த் தாமரை அடிக்கீழ்ச் சேர்ந்து வீழ்ந்து செந்நின்று வேத முதல்வர்முன் நடுக்கம் எய்தித் தொழுது விளம்புவார். செந்நின்று - செம்மையில் நின்று; நேர்நின்று. 240 3400. எம்பிரானே! நீர் அருளிச் செய்தார்க்கு உரியேன் யான்; இமையோர் தம்பிரானே! அருள் தலைமேல் கொண்டேன்; தக்கவிதி மணத்தால் நம்பியாரூரருக்கு என்னை நல்கி அருளும் பொழுது இமயக் கொம்பின் ஆகம் கொண்டீர்க்குக் கூறும் திறம் ஒன்று உளது என்பார். பார்வதியைத் திருமேனியினிடத்தே கொண்ட உமக்கு. 241 3401. பின்னும் பின்னல் முடியார் முன் பெருக நாணித் தொழுது உரைப்பார் மன்னும் திருவாரூரின் கண் அவர்தாம் மிகவும் மகிழ்ந்து உறைவது என்னும் தன்மை அறிந்தருளும் எம்பிராட்டி திருமுலை தோய் மின்னும் புரிநூல் அணி மார்பீர்! என்றார் குன்றா விளக்கு அனையார். பின்னல் முடியார் முன் - சடைமுடியையுடைய சிவபிரான் திருமுன். மகிழ்ந்து உறைவது - பரவையுடன் வாழ்வது; இது, நயம்படக் குறிக்கப்படுதல் காண்க. 242 கொச்சகக் கலி 3402. மற்று அவர்தம் உரை கொண்டு வன்தொண்டர் நிலைமையினை ஒற்றிநகர் அமர்ந்தபிரான் உணர்ந்தருளி உரை செய்வார் பொன்தொடியாய்! உனை இகந்து போகாமைக்கு ஒரு சபதம் அற்றம் உறு நிலைமையினால் அவன் செய்வான் என அருளி. இகந்து - கைவிட்டு. அற்றமுறு நிலைமையினால் - (உன் பொருட்டு அவன்) துன்பமுறும் நிலைமையினால்; இரந்தோர் அற்றந் தீர்க்கென புறநானூறு: 158. 243 3403. வேய்அனைய தோளியார் பால் நின்று மீண்டு அருளித் தூயமனம் மகிழ்ந்திருந்த தோழனார்பால் அணைந்து நீ அவளை மணம்புணரும் நிலைஉரைத்தோம் அதற்கு அவள்பால் ஆயது ஒருகுறை உன்னால் அமைப்பது உளது என்று அருளி. மூங்கில் போன்ற தோளையுடைய சங்கிலியாரிடமிருந்து. 244 3404. வன்தொண்டர் மனம்களித்து வணங்கி அடியேன் செய்ய நின்ற குறை யாது என்ன நீ அவளை மணம் புணர்தற்கு ஒன்றி உடனே நிகழ்வது ஒருசபதம் அவள் முன்பு சென்று கிடைத்து இவ் இரவே செய்க என அருள் செய்தார். ஒன்றியுடனே நிகழ்வது - ஒன்றி அவளுடன் வாழ்வதாகிய; (ஒன்றியுடன் நிகழ - ஒன்றி அவளுடன் வாழ); அவளைப் பிரியா திருக்க என்றபடி கிடைத்து - அணுகி. 245 3405. என் செய்தால் இதுமுடியும் அது செய்வன் யான் அதற்கு மின் செய்த புரிசடையீர்! அருள்பெறுதல் வேண்டும் என முன் செய்த முறுவலுடன் முதல்வர்தாம் முகம் நோக்கி உன்செய்கை தனக்கு இனி என் வேண்டுவது என்று உரைத்தருள. “v‹d brŒjhš kzKoínkh mij¢ brŒnt‹.....”; சபதஞ் செய்தலாகிய உனது செயலுக்கு இனி வேண்டுவது என்ன. . . . . 246 3406. வம்புஅணி மென்முலையவர்க்கு மனம் கொடுத்தவன் தொண்டர் நம்பர் இவர் பிறபதியும் நயந்த கோலம் சென்று கும்பிடவே கடவேனுக்கு இது விலக்கு ஆம் எனும் குறிப்பால் தம்பெருமான் திருமுன்பு தாம்வேண்டும் குறைஇரப்பார். வம்பு - கச்சு. சபதத்தால், பிற திருப்பதிகளைக் கண்டு தொழத் தடைநேருமென்று நினைந்தனரென்க. 247 3407. சங்கரர்தாள் பணிந்திருந்து தமிழ் வேந்தர் மொழிகின்றார் மங்கை அவள்தனைப் பிரியா வகை சபதம் செய்வதனுக்கு அங்கு அவளோடு யான் வந்தால் அப்பொழுதே கோயில் விடத் தங்கும்இடம் திருமகிழ்க்கீழ்க் கொளவேண்டும் எனத்தாழ்ந்தார். கோயில்விட - கோயில் விட்டு. 248 3408. தம்பிரான் தோழர் அவர்தாம் வேண்டிக் கொண்டு அருள உம்பர் நாயகரும் அதற்கு உடன்பாடு செய்வாராய் நம்பி! நீ சொன்னபடி நாம் செய்தும் என்று அருள எம்பிரானே! mÇaJ ïÅ vd¡F v‹? என ஏத்தி. 249 3409. அஞ்சலி சென்னியில் மன்ன அருள்பெற்றுப் புறம்போதச் செஞ்சடையார் அவர் மாட்டுத் திருவிளையாட்டினை மகிழ்ந்தோ வஞ்சி இடைச் சங்கிலியார் வழி அடிமைப் பெருமையோ துஞ்சு இருள் மீளவும் அணைந்தார் அவர்க்கு உறுதி சொல்லுவார். வஞ்சிக்கொடி போன்ற இடையையுடைய. . . . . பெருமையை நினைந்தோ நள்ளிருளில். 250 3410. சங்கிலியார் தம் மருங்கு முன் போலச் சார்ந்தருளி நங்கை உனக்கு ஆரூரன் நயந்து சூள் உறக் கடவன் அங்கு நமக்கு எதிர் செய்யும் அதற்கு நீ இசையாதே கொங்கு அலர் பூ மகிழின் கீழ்க் கொள்க எனக் குறித்தருள. நயந்து சூள் உறக்கடவன் - விரும்பிச் சபதஞ்செய்து கொடுக்கக் கடமைப்படுவன். அதற்கு - அச்சபதத்துக்கு கொங்கு அலர் பூமகிழின் - மணங் கமழும் பூக்களையுடைய மகிழ மரத்தின். 251 3411. மற்றுஅவரும் கைகுவித்து மால் அயனுக்கு அறிவு அரியீர் அற்றம்எனக்கு அருள்புரிந்த அதனில் அடியேன் ஆகப் பெற்றது யான் எனக் கண்கள் பெரும் தாரை பொழிந்துஇழிய வெற்றி மழவிடையார் தம் சேவடிக்கீழ் வீழ்ந்து எழுந்தார். அற்றம் - உண்மையை; இரகசியத்தை எனினுமாம். அருள் புரிந்த அதனால், யான் வழி வழி அடியேனாகப் பெற்றேன் என்றா ரென்க. 252 3412. தையலார் தமக்குஅருளிச் சடாமகுடர் எழுந்தருள எய்தியபோது அதிசயத்தால் உணர்ந்து எழுந்து அவ் இரவின்கண் செய்ய சடையார் அருளின் திறம் நினைந்தேகண் துயிலார் ஐயமுடன் அருகுதுயில் சேடியரை அணைந்து எழுப்பி. 253 3413. நீங்குதுயில் பாங்கியர்க்கு நீங்கல் எழுத்தறியும் அவர் தாம்கனவில் எழுந்தருளித் தமக்கு அருளிச் செய்தது எலாம் பாங்கு அறிய மொழிய அவர் பயத்தினுடன் அதிசயமும் தாங்கு மகிழ்ச்சியும் எய்தச் சங்கிலியார் தமைப் பணிந்தார். திருவொற்றியூர் நீங்கலாக என்ற எழுத்தை அறியும் பெரு மான். பாங்கு அறிய - முறைமையால் அறியுமாறு. 254 3414. சேயிழையார் திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் தூய பணிப் பொழுது ஆகத் தொழில் புரிவாருடன் போதக் கோயிலின் முன்காலம் அது ஆகவே குறித்து அணைந்தார் ஆய சபதம் செய்ய வரவு பார்த்து ஆரூரர். 255 3415. நின்றவர் அங்கு எதிர்வந்து நேர்இழையார் தம் மருங்கு சென்று அணைந்துதம் பெருமான் திருஅருளின் திறம்கூற மின் தயங்கு நுண்இடையார் விதி உடன்பட்டு எதிர்விளம்பார் ஒன்றிய நாணொடும் மடவாருடன் ஒதுங்கி உள்புகுந்தார் மின்னும் - மயங்கும். 256 3416. அங்கு அவர் தம்பின் சென்ற ஆரூரர் ஆயிழையீர்! இங்கு நான் பிரியாமை உமக்கு இசையும்படி இயம்பத் திங்கள் முடியார் திருமன் போதுவீர் எனச் செப்பச் சங்கிலியார் கனவு உரைப்பக் கேட்ட தாதியார் மொழிவார். 257 3417. எம்பெருமான்! இதற்காக எழுந்தருளி இமையவர்கள் தம்பெருமான் திருமுன்பு சாற்றுவது தகாது என்ன நம்பெருமான் வன்தொண்டர் நாதர்செயல் அறியாதே கொம்பு அனையீர்! யான் செய்வது எங்கு என்று கூறுதலும் எம்பெருமானே (வன்தொண்டரே). 258 3418. மாதர் அவர் மகிழ்க்கீழே அமையும் என மனம் மருள்வார் ஈது அலர் ஆகிலும் ஆகும் இவர் சொன்னபடி மறுக்கில் ஆதலினால் உடன்படவே அமையும் எனத்துணிந்து ஆகில் போதுவீர் என மகிழ்க்கீழ் அவர் போதப் போய் அணைந்தார். இவர் சொன்னபடி மறுக்கில் ஈது அலர் ஆகிலும் ஆகும். அலர் - பழிமொழி; (அலர் தூற்றல்) ஆகில் - இஃது உமக்குச் சம்மத மாகில். 259 3419. தாவாத பெருந்தவத்துச் சங்கிலியாரும் காண மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து மேவாது இங்கு யான் அகலேன் நின்று விளம்பினார் பூ ஆர்தண் புனல்பொய் கைமுனைப்பாடிப் புரவலனார். தாவாத - கெடாத. மூவாத - முதிராத; அழியாத என்னலுமாம். மேவாது. . . . அகலேன் - இங்கு இராது நான் நீங்கமாட்டேன். பொன்னவிலுங் கொன்றையினாய் போய்மகிழ்க்கீ ழிருவென்று - சொன்ன எனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே - என்னவல்ல பெருமானே - சுந்தரர்: திருவெண்பாக்கம். 9. 260 3420. மேவிய சீர் ஆரூரர் மெய்ச்சபத வினைமுடிப்பக் காவியின் நேர்கண்ணாரும் கண்டுமிக மனம் கலங்கிப் பாவியேன் இதுகண்டேன் தம்பிரான் பணியால் என்று ஆவிசோர்ந்து அழிவார் அங்குஒரு மருங்கு மறைந்து அயர்ந்தார். 261 3421. திருநாவலூராளி தம்முடைய செயல் முற்றிப் பொருநாகத்து உரி புனைந்தார் கோயிலின் உள்பகுந்து இறைஞ்சி அருள் நாளும் தர இருந்தீர் செய்தவாறு அழகு இது எனப் பெரு நாமம் எடுத்து ஏத்திப் பெருமகிழ்ச்சியுடன் போந்தார். போர்யானை யுரிபுனைந்தார். 262 3422. வார்புனையும் வனமுலையார் வன்தொண்டர் போனதன்பின் தார்புனையும் மண்டபத்துத் தம்முடைய பணி செய்து கார்புனையும் மணிகண்டர் செயல் கருத்தில் கொண்டு இறைஞ்சி ஏர்புனையும் கன்னிமாடம் புகுந்தார் இருள் புலர. வார் . . . . . முலையார் - கச்சணிந்த அழகிய முலையையுடைய சங்கலியார். தார் - மாலை. ஏர் - அழகு. 263 3423. அன்று இரவே ஆதிபுரி ஒற்றிகொண்டார் ஆட்கொண்ட பொன்திகழ்பூண் வன்தொண்டர் புரிந்தவினை முடித்துஅருள நின்றபுகழ்த் திருஒற்றியூர் நிலவு தொண்டர்க்கு மன்றல்வினை செய்வதற்கு மனம்கொள்ள உணர்த்துவார். ஆதி புரியாகிய ஒற்றியூரை. புரிந்த வினை - விரும்பிய மணவினை. மன்றல்வினை - மணவினை. 264 3424. நம்பி ஆரூரனுக்கு நங்கை சங்கிலிதன்னை இம்பர் ஞாலத்திடை நம் ஏவலினால் மணவினை செய்து உம்பர்வாழ் உலகு அறிய அளிப்பீர் என்று உணர்த்துதலும் தம்பிரான் திருத்தொண்டர் அருள் தலைமேல் கொண்டு எழுவார். 265 3425. மண்நிறைந்த பெரும் செல்வத் திருஒற்றியூர் மன்னும் எண்நிறைந்த திருத்தொண்டர் எழில் பதியோருடன் ஈண்டி உள்நிறைந்த மகிழ்ச்சியுடன் உம்பர் பூமழை பொழிய கண்நிறைந்த பெரும் சிறப்பின் கலியாணம் செய்து அளித்தார். திருத்தொண்டர், அழகிய அப்பதியோருடன் கலந்து. நம்பி - ஆண்பால்; நங்கை பெண்பால், திருவொற்றி யூர்புக்குச் - சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்தோள், சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை, மான் திகழுஞ் சங்கிலியைத் தந்து, பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே - சுந்தரர்: திருவாமாத்தூர். 4. திருவாரூர். 11. திருவெண்பாக்கம். 10. திருநாகைக் காரோணம். 11. 266 3426. பண்டு நிகழ் பான்மையினால் பசுபதிதன் அருளாலே வண்டுஅமர்பூங் குழலாரை மணம் புணர்ந்த வன்தொண்டர் புண்டரிகத்து அவள் வனப்பைப் புறம்கண்ட தூநலத்தைக் கண்டுகேட்டு உண்டு உயிர்த்துஉற்று அமர்ந்திருந்தார் - காதலினால். புண்டரிக. . . . .நலத்தை - திருமகளின் அழகைப் பின்னிடச் செய்த தூய அழகை. சங்கிலியார் அழகை ஐம்புலன்களால் நம்பி யாரூரர் இனிது நுகர்ந்தாரென்க. கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் - ஒண்தொடி கண்ணே உள - திருக்குறள்: 1101. 267 3427. யாழின்மொழி எழில்முறுவல் இருகுழை மேல் கடைபிறழும் மாழைவிழி வனமுலையார் மணிஅல்குல் துறைபடிந்து வீழும் அவர்க்கு இடை தோன்றி மிகும் புலவி புணர்ச்சிக்கண் ஊழி ஆம் ஒரு கணம் தான் அவ்ஊழி ஒரு கணம் ஆம். எழில் முறுவல் - அழகிய எயிறு (பற்கள்). இரு. . . . . . பிறழும் - இரு காதின்மேல் கடைப்பார்வை பிறழும். மாழை - மாவடுபோன்ற; அழகிய; திரண்ட என்னலுமாம். புலவியிலும் புணர்ச்சியிலும் முறையே ஊழி. . . . . . . . . ; புலவியில் ஒரு கணம் ஊழியாம்; புணர்ச்சியில் அவ்வூழி ஒரு கணமாம். 268 3428. இந் நிலையில் பேரின்பம் இனிது அமர்வார் இறை உறையும் மன்னு புகழ் ஒற்றியூ ரதனில் மகிழ் சிறப்பினால் சென்னி மதி புனைவார்தம் திருப்பாதம் தொழுது இருந்தார் முன்னிய காலங்கள் பல முறைமையினால் வந்து அகல. அமர்வார் - விரும்புவார்; நுகர்வார். 269 3429. பொங்குதமிழ்ப் பொதிய மலைப் பிறந்து பூஞ்சந்தனத்தின் கொங்கு அணைந்துகுளிர்சாரல் இடைவளர்ந்த கொழுந்தென்றல் அங்கு அணையத் திருஆரூர் அணிவீதி அழகர்அவர் மங்கல நாள் வசந்தம் எதிர்கொண்டருளும் வகை நினைந்தார். . . . . . . . பொலிவாகிய சந்தன மணத்தில் கலந்து . . . . . ; மங்கல நாள் வசந்தம் - திருவிழாவில் வசந்த உற்சவத்தை. 270 3430. வெண்மதியின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப் பெருமான் ஒள் நுதலார் புடை பரந்த ஒலக்கம் அதன் இடையே பண் அமரும் மொழிப் பரவையார் பாடல் ஆடல் தனைக் கண்ணுறமுன் கண்டு கேட்டார் போலக் கருதினார். ஒண். . . . . .இடையே - அழகிய நெற்றியையுடைய பெண் மணிகள் பக்கத்தே சூழக் கொலுமண்டபத்தில். (வீதிவிடங்கப் பெருமானது கொலுமண்டபத்தில்). 271 3431. பூங்கோயில் அமர்ந்தாரைப் புற்று இடம்கொண்டு இருந்தாரை நீங்காத காதலினால் நினைந்தாரை நினைவாரைப் பாங்கு ஆகத் தாம் முன்பு பணிய வரும் பயன் உணர்வார் ஈங்கு நான் மறந்தேன் என்று ஏசறவால் மிக அழிவார். பூங்கோயில் - கமலாலயத்தில். ஏசறவால் - வருத்தத்தால். 272 3432. மின் ஒளிர் செஞ் சடையானை வேத முதல் ஆனானை மன்னுபுகழ்த் திருஆரூர் மகிழ்ந்தானை மிக நினைந்து பன்னியசொல் பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் என்னும் இசைத் திருப்பதிகம் எடுத்து இயம்பி இரங்கினார். பன்னிய சொல் - பலவகைச் சொல்லமைந்த. 273 3433. பின் ஒரு நாள் திருஆரூர்தனைப் பெருக நினைந்தருளி உன்ன இனியார் கோயில் புகுந்து இறைஞ்சி ஒற்றிநகர் தன்னை அகலப் புக்கார் தாம் செய்த சபதத்தால் முன் அடிகள் தோன்றாது கண் மறைய மூர்ச்சித்தார். முன்னே கால் செல்லும் வழியானது தோன்றாது. 274 3434. செய்வதனை அறியாது திகைத்தருளி நெடிது உயிர்ப்பார் மை விரவு கண்ணார்பால் சூளுறவு மறுத்ததனால் இவ்வினைவந்து எய்தியது ஆம் என நினைந்து எம்பெருமானை எய்திய இத்துயர் நீங்கப் பாடுவேன் என நினைந்து. சூளுறவு - சபதத்தை; சத்தியத்தை. நெடிதுயிர்ப்பார் - பெரு மூச்சு விடுபவராகிய வன்தொண்டர். வன்தொண்டப் பெருமான் தம்பிரான் தோழர் என்னும் பெருமையுடையார். அவர், பொன் பெண் முதலியவற்றையும் ஆண்டவன் வழிப்பெறும் பெருந் தகைமை வாய்ந்தவர். ஆண்டவனை அவர்தம் அன்புக்கு எளிவரும் வேலையாள் என்றுங் கூறலாம். இத்துணைச் சிறப்பு வாய்ந்த ஒருவர், ஒரு சபதத்தை வழுவிய காரணத்தால், கண்ணிழக்க லானார். இதனால், ஆண்டவன், அன்பர்தம் அன்புக்கு எளிவருவோனா யினும், தவறுதல் கண்டவிடத்து எவராயினும், அவரை ஒறுக்கும் நீதிச்செல்வன் என்பது நனிவிளங்குதல் காண்க. வன்தொண்டர் சத்திநிபாதச் செல்வராதலின், உடனே மைவிரவு. . . . இவ் வினைவந்தெய்தியது என்று உண்மையை உணர்ந்து கொண்டார். உணர்ந்து, அவர் ஆண்டவனைக் கடியாது, தமது குற்றத்தையே கருதியது ஈண்டு நோக்கற்பாலது. ஆண்டவன், அருளாளனாதலால், மக்கள் தாங்கள் செய்த குற்றத்தை யுணர்ந்து, கழிவிரக்கங்கொண்டு, உண்மையாகக் கசிந்து கசிந்து, உருகி உருகி, அவனை நோக்கி முறையிடுவரேல், அவன் இரங்கி அவர்தந் துயர் தீர்த்தல் ஒருதலை. வன்தொண்டர் பாட்டால் உருகி உருகி அழுதலை இனி அவர் பாடி வரும் தேவாரங்களால் அறியலாம். 275 எண்சீர் விருத்தம் 3435. அழுக்கு மெய் கொடு என்று எடுத்த சொல் பதிகம் ஆதி நீள் புரி அண்ணலை ஓதி வழுத்தும் நெஞ்சொடு தாழ்ந்து நின்று உரைப்பார் மாது ஓர் பாகனார் மலர்ப்பதம் உன்னி, இழுக்கு நீக்கிட வேண்டும் என்று இரந்தே எய்து வெம் துயர்க் கையற வினுக்கும் பழிக்கும் வெள்கி நல்இசைகொடு பரவிப் பணிந்து சாலவும் பலபல நினைவார். கையறவினுக்கும் - செயலற்ற தன்மைக்கும். 276 3436. அங்கு நாதர் செய் அருள் அது ஆக, அங்கை கூப்பி ஆரூர் தொழ நினைந்தே பொங்கு காதல் மீளா நிலைமையினால் போதுவார் வழி காட்ட முன் போந்து, திங்கள் வேணியார் திருமுல்லை வாயில் சென்று இறைஞ்சி நீடிய திருப்பதிகம் சங்கிலிக்காக என்கணை மறைத்தீர் என்று சாற்றிய தன்மையில் பாடி. அருள் தண்டனையேயாக. 277 3437. தொண்டைமானுக்கு அன்று அருள் கொடுத்தருளும் தொல்லை வண் புகழ் முல்லை நாயகரைக் கொண்ட வெந்துயர் களைக எனப் பரவிக் குறித்த காதலின் நெறிக்கொள வருவார் வண்டு உலாமலர்ச் சோலைகள் சூழ்ந்து மாட மாளிகை நீடு வெண்பாக்கம் கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கிக் காயும் நாகத்தர் கோயிலை அடைந்தார். காயும் நாகத்தர் - கோபிக்கும் பாம்பணிந்த பரமனாரது. 278 3438. அணைந்த தொண்டர்களுடன் வலம் ஆக அம்கண் நாயகர் கோயில்முன் எய்திக் குணங்கள் ஏத்தியே பரவி அஞ்சலியால் குவித்த கை தலைமேல் கொண்டு நின்று tz§» ‘Ú® k»œ nfhÆYçnu! என்ற வன்தொண்டர்க்கு ஊன்றுகோல் அருளி இணங்கு இலா மொழியால் உளோம் போகீர் என்று இயம்பினர் ஏதிலார் போல. இணக்கமில்லாத மொழியால். ஏதிலார் - அந்நியர். 279 கொச்சகக் கலி 3439. பிழை உளன பொறுத்திடுவர் என்றுஎடுத்துப் பெண் பாகம் விழை வடிவின் பெருமானை வெண்பாக்கம் மகிழ்ந்தானை இழை என மாசுணம் அணிந்த இறையானைப் பாடினார் மழைதவழும் நெடும் புரிசை நாவலூர் மன்னவனார். இழை என மாசுணம் - ஆபரணமாகப் பாம்பினை. புரிசை - மதில். 280 3440. முன்நின்று முறைப்பாடு போல் மொழிந்த மொழிமாலைப் பன்னும் இசைத் திருப்பதிகம் பாடியபின் பற்று ஆய என்னுடைய பிரான் அருள்இங்கு இத்தனை கொலாம் என்று மன்னு பெரும் தொண்டருடன் வணங்கியே வழிக்கொள்வார். 281 3441. அம் கணர்தம் பதிஅதனை அகன்றுபோய் அன்பருடன் பங்கயப்பூந் தடம்பணைசூழ் பழையனூர் உழை எய்தித் தங்குவார் அம்மைதிருத் தலையாலே வலம் கொள்ளும் திங்கள் முடியார் ஆடும் திரு ஆலங்காட்டின் அயல். தாமரை நிறைந்த பெரிய வயல்கள் சூழ்ந்த பழையனூரிலே. 282 3442. முன் நின்று தொழுதுஏத்தி முத்தா என்று எடுத்தருளிப் பன்னும் இசைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து ஏத்துவார் அந்நின்று வணங்கிப் போய்த் திரு ஊறல் அமர்ந்து இறைஞ்சிக் கன்னி மதில் மணிமாடக் காஞ்சிமா நகர் அணைந்தார். 283 3443. தேன்நிலவு பொழில் கச்சித் திருக்காமக் கோட்டத்தில் ஊனில் வளர் உயிர்க்கு எல்லாம் ஒழியாத கருணையினால் ஆன திரு அறம் புரக்கும் அம்மை திருக் கோயிலின்முன் வானில் வளர் திருவாயில் வணங்கினார் வன்தொண்டர். 284 3444. தொழுது விழுந்து எழுந்து அருளால் துதித்துப் போய்த் தொல் உலகம் முழுதும் அளித்து அழித்து ஆக்கும் முதல்வர் திரு ஏகம்பம் பழுதுஇல் அடியார் முன்பு புகப்புக்குப் பணிகின்றார் இழுதையேன் திருமுன்பே என் மொழிவேன் என்று இறைஞ்சி. இழுதையேன் - பேயேன். 285 3445. விண் ஆள்வார் அமுதுஉண்ண மிக்க பெருவிடம் உண்ட கண்ணாளா! கச்சி ஏகம் பனே! கடை ஆனேன் எண்ணாத பிழை பொறுத்து இங்கு யான் காண எழில் பவள வண்ண! கண் அளித்து அருளாய் என வீழ்ந்து வணங்கினார். 286 3446. பங்கயச் செங்கைத் தளிரால் பனிமலர் கொண்டு அருச்சித்துச் செங் கயல்கண் மலைவல்லி பணிந்த சேவடி நினைந்து, பொங்கிய அன்பொடு பரவிப் போற்றிய ஆரூரருக்கு மங்கை தழுவக் குழைந்தார் மறைந்த இடக் கண்கொடுத்தார். 287 3447. ஞாலம்தான் இடந்தவனும் நளிர் விசும்பு கடந்தவனும் மூலம்தான் அறிவு அறியார் கண்அளித்து முலைச் சுவட்டுக் கோலம்தான் காட்டுதலும் குறுகிவிழுந்து எழுந்துகளித்து ஆலம்தான் உகந்தவன் என்று எடுத்து ஆடிப் பாடினார். ஞால . . . . . . அரியார் - திருமாலும் பிரமனும் தேடியறியாத சிவபெருமான். 288 3448. பாடிமிகப் பரவசம் ஆய்ப் பணிவார்க்குப் பாவையுடன் நீடிய கோலம் காட்ட நிறைந்த விருப்புடன் இறைஞ்சிச் சூடிய அஞ்சலி யினராய்த் தொழுது புறம்போந்து அன்பு கூடிய மெய்த் தொண்டருடன் கும்பிட்டு அங்கு இனிது அமர்வார். 289 3449. மாமலையாள் முலைச் சுவடும் வளைத்தழும்பும் அணிந்தமதிப் பூமலி வார் சடையாரைப் போற்றி அருள் அது ஆகத் தேமலர் வார் பொழில் காஞ்சித் திருநகரம் கடந்து அகல்வார் பாமலர் மாலைப் பதிகம் திருஆரூர் மேல் பரவி. பார்வதியார் தழுவியபோது உற்ற அவர் தம் முலைச் சுவட்டையும் வளைத் தழும்பையும். . . . . . 290 3450. அந்தியும் நண்பகலும் என எடுத்து ஆர்வத்துடன் நசைவால் எந்தை பிரான் திருஆரூர் என்றுகொல் எய்துவது என்று, சந்தஇசை பாடிப்போய்த் தாங்கரிய ஆதரவு வந்து அணைய அன்பருடன் மகிழ்ந்து வழிக் கொள்கின்றார். ஆதரவு வந்தணைய - ஆர்வம் பொங்க. 291 3451. மன்னு திருப்பதிகள் தொறும் வன்னியொடு கூவிளமும் சென்னிமிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்றிறைஞ்சிப் பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவியே போந்து அணைந்தார் அன்னம் மலி வயல் தடங்கள் சூழ்ந்த திருஆமாத்தூர். கூவிளமும் - வில்வத்தையும். 292 3452. அம் கணரை ஆமாத்தூர் அழகர்தமை அடிவணங்கித் தங்கும் இசைத் திருப்பதிகம் பாடிப் போய்த் தாரணிக்கு மங்கலம் ஆம் பெருந் தொண்டை வளநாடு கடந்து அணைந்தார் செங்கண் வளவன் பிறந்த சீர்நாடு நீர்நாடு. கோச்செங்கட் சோழநாயனார் பிறந்த. . . . . 293 3453. அந் நாட்டின் மருங்கு திரு அரத்துறையைச் சென்றெய்தி மின்ஆரும் படைமழுவார் விரைமலர்த்தாள் பணிந்து எழுந்து சொல்மாலை மலர்க் கல் வாய் அகில் என்னும் தொடை சாத்தி மன் ஆர்வத் திருத்தொண்ட ருடன் மகிழ்ந்து வைகினார். 294 3454. பரமர்திரு அரத்துறையைப் பணிந்துபோய்ப் பல பதிகள் விரவி மழவிடை உயர்த்தார் விரை மலர்த்தாள் தொழுது ஏத்தி, உரவி நீர்த் தடம்பொன்னி அடைந்து அன்பருடன் ஆடி, அரவு அணிந்தார் அமர்ந்த திரு ஆவடுதண் துறை அணைந்தார். உரவு நீர் தடம் பொன்னி - பரந்த நீரையுடைய பெரிய காவிரியை. 295 3455. அங்கு அணைவார்தமை அடியார் எதிர்கொள்ளப் புக்கருளிப் பொங்கு திருக் கோயிலினைப் புடைவலம் கொண்டு உள்அணைந்து கங்கை வாழ் சடையாய்! ஓர் கண் இலேன் எனக் கவல்வார் இங்கு எனக்கு ஆர் உறவு என்னும் திருப்பதிகம் எடுத்து இசைத்தார். 296 3456. திருப்பதிகம் கொடு பரவிப் பணிந்து திரு அருளால் போய் விருப்பினொடும் திருத்துருத்தி தனை மேவி விமலர்கழல் அருத்தியினால் புக்கு இறைஞ்சி அடியேன்மேல் உற்ற பிணி வருத்தம் எனை ஒழித்தருள வேண்டும் என வணங்குவார். அருத்தியினால் - ஆர்வத்தால். 297 3457. பரவியே பணிந்தவர்க்குப் பரமர் திருவருள் புரிவார் விரவிய இப்பிணி அடையத் தவிர்ப்பதற்கு வேறாக வரமலர் வண்டு அறைதீர்த்த வடகுளத்துக் குளி என்னக் கரவுஇல் திருத் தொண்டர்தாம் கைதொழுது புறப்பட்டார். பிணிமுழுவதும் வேறுபடத் தவிர்ப்பதற்கு வரமலர் - தாமரை மலரில். 298 3458. மிக்கபுனல் தீர்த்தத்தின் முன் அணைந்து, வேதம்எலாம் தொக்க வடிவாய் இருந்த துருத்தியார் தமைத்தொழுது, புக்கு அதனில் முழுகுதலும் புதிய பிணி அது நீங்கி, அக் கணமே மணி ஒளிசேர் திருமேனி ஆயினார். இடையில் நேர்ந்த பிணியாதலின் புதிய பிணி என்றார். 299 3459. கண்டவர்கள் அதிசயிப்பக் கரைஏறி உடைபுனைந்து, மண்டுபெரும் காதலினால் கோயிலினை வந்து அடைந்து, தொண்டர் எதிர் மின்னு மா மேகம் எனும் சொல் பதிகம் எண் திசையும் அறிந்து உய்ய ஏழ் இசையால் எடுத்து இசைத்தார். 300 3460. பண் நிறைந்த தமிழ்பாடிப் பரமர் திரு அருள்மறவாது எண் நிறைந்த தொண்டருடன் பணிந்து அங்கண் உறைந்து ஏகி, உள் நிறைந்த பதிபிறவும் உடையவர்தாள் வணங்கிப் போய்க் கண் நிறைந்த திருஆரூர் முன்தோன்றக் காண்கின்றார். 301 3461. அன்று திருநோக்கு ஒன்றால் ஆரக்கண்டு இன்புறார் நின்று நில மிசைவீழ்ந்து நெடிது உயிர்த்து நேர் இறைஞ்சி வன்தொண்டர் திருஆரூர் மயங்கு மாலையில் புகுந்து துன்று சடைத் தூவாயர்தமை முன்னம் தொழ அணைந்தார். இரவு பகல் மயங்கிய அந்தி வேளையில். தூவாயர்தமை சிவபெருமானை. 302 3462. பொங்கு திருத்தொண்டருடன் உள்அணைந்து புக்கு இறைஞ்சித் துங்க இசைத் திருப்பதிகம் தூவாயா என்று எடுத்தே இங்கு எமது துயர் களைந்து கண்காணக் காட்டாய் என்று அம்கணர்தம் முன்நின்று பாடி அருந்தமிழ் புனைந்தார். 303 3463. ஆறு அணியும் சடையாரைத் தொழுது புறம் போந்து அங்கண் வேறு இருந்து திருத்தொண்டர் விரவுவார் உடன்கூடி ஏறுஉயர்த்தார் திருமூலட் டானத்துள் இடைதெரிந்து மாறுஇல் திரு அத்தயாமத்து இறைஞ்ச வந்து அணைந்தார். இடை - சமயம். அர்த்த சாமத்தில். 304 3464. ஆதி திரு அன்பர் எதிர் அணைய அவர் முகம் நோக்கிக் கோது இல் இசையால் குருகு பாய எனக் கோத்து எடுத்தே, ஏதிலார் போல் வினவி ஏசறவால் திருப்பதிகம் காதல்புரி கைக்கிளையால் பாடியே கலந்து அணைவார். ஆதி. . . . . . . அணைய - சிவனடியார்கள் எதிரே வர. ஏதிலார் - அந்நியர். ஏசறவால் - வருத்தத்தால். கைக்கிளையால் - ஒருதலைக் காமத்தால். 305 3465. சீர்பெருகும் திருத்தேவா சிரியன்முன் சென்று இறைஞ்சிக் கார்விரவு கோபுரத்தைக் கைதொழுதே உள்புகுந்து, தார் பெருகு பூங்கோயில் தனை வணங்கிச் சார்ந்து அணைவார் ஆர்வம்மிகு பெருங் காதலால் அவனிமேல் வீழ்ந்தார். 306 3466. வீழ்ந்து எழுந்து கைதொழுது முன்நின்று விம்மியே வாழ்ந்த மலர்க் கண் ஒன்றால் ஆராமல்மனம் அழிவார் ஆழ்ந்த துயர்க் கடலிடைநின்று அடியேனை எடுத்தருளித் தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண்தாரும் எனத் தாழ்ந்தார். ஒரு கண் இன்மையால் தாழ்ந்த கருத்தினை நிரப்பி என்றார். 307 3467. திரு நாவலூர் மன்னர் திருஆரூர்வீ ற்றிருந்த பெருமானைத் திரு மூலட் டானம் சேர் பிஞ்ஞகனைப் பருகா இன் அமுதத்தைக் கண்களால் பருகுதற்கு மருவு ஆர்வத்துடன் மற்றைக் கண்தாரீர் என வணங்கி. பிஞ்ஞகனை - தலைக்கோலமுடைய சிவபெருமானை. 308 அறுசீர் விருத்தம் 3468. மீளா அடிமை எனஎடுத்து மிக்க தேவர் குலம் எல்லாம் மாளாமே நஞ்சு உண்டருளி மன்னி இருந்த பெருமானைத் தாள் ஆதரிக்கும் மெய்அடியார் தமக்கு ஆம் இடர்நீர் தரியீர் என்று ஆள்ஆம் திருத் தோழமைத் திறத்தால் அம்சொல் பதிகம் பாடினார் தாள் ஆதரிக்கும் - திருவடிகளை விரும்பிப் போற்றும். அடிமையும் திருத்தோழமையும் ஆகும் திறத்தால். 309 3469. பூத முதல்வர் புற்று இடம்கொண்டு இருந்த புனிதர் வன்தொண்டர் காதல் புரி வேதனைக்கு இரங்கிக் கருணைத் திருநோக்கு அளித்தருளிச் சீத மலர்க்கண் கொடுத்தருளச் செவ்வே விழித்து முகம் மலர்ந்து பாத மலர்கள் மேல்பணிந்து வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய். பூத முதல்வர் - உயிர்கட்குத் தலைவர்; பசுபதி, வலக் கண்ணைக் கொடுத்தருள. 310 3470. விழுந்தும் எழுந்தும் பலமுறையால் மேவிப் பணிந்து மிகப் பரவி எழுந்த களிப்பினால் ஆடிப் பாடி இன்ப வெள்ளத்தில் அழுந்தி இரண்டு கண்ணாலும் அம்பொன் புற்றின் இடை எழுந்த செழும்தண் பவளச் சிவக்கொழுந்தின் அருளைப் பருகித் திளைக்கின்றார். திளைக்கின்றார் - இடையீடின்றி இன்பம் நுகர்கிறார். 311 3471. காலம் நிரம்பத் தொழுது ஏத்திக் கனக மணிமாளிகைக் கோயில் ஞாலம் உய்ய வரும் நம்பி நலம்கொள் விருப்பால் வலம்கொண்டு மாலும் அயனும் முறை இருக்கும் வாயில் கழியப் புறம்போந்து சீலம் உடைய அன்பருடன் தேவதாசிரியன் மருங்கு அணைந்தார். முறையிருக்கும் - தங்கள் குறைகளை முறையிட முறை முறையே காத்திருக்கும். 312 3472. நங்கை பரவை யார்தம்மை நம்பி பிரிந்து போனதன்பின் தங்கு மணிமாளிகை யின்கண் தனிமை கூரத் தளர்வார்க்குக் கங்குல் பகலாய்ப் பகல்கங்குல் ஆகிக் கழிய நாள்எல்லாம் பொங்கு காதல் மீதூரப் புகல்வார் சிலநாள் போனதன்பின். இரவுக் குரியன பகலிலும், பகலுக் குரியன இரவிலும் நிகழலால் கங்குல் . . . . . கழியா என்றார். நாளெல்லாம் . . . . . . கழியா. 313 3473. செம்மை நெறிசேர் திருநாவ லூரர் ஒற்றியூர் சேர்ந்து கொம்மை முலையார் சங்கிலியார் தம்மைக் குலவு மணம் புணர்ந்த மெய்ம்மை வார்த்தைதாம் அவர்பால் விட்டார் வந்து கட்டுரைப்பத் தம்மை அறியா வெகுளியினால் தரியா நெஞ்சினொடும் தளர்வார். 314 3474. மென் பூஞ் சயனத்திடைத் துயிலும் மேவார்; விழித்தும் இனிது அமரார்; பொன் பூந்தவிசின் மிசையின்இரார்; நில்லார்; செல்லார்; புறம் பொழியார்; மன் பூ வாளி மழைகழியார்; மறவார்; நினையார்; வாய் விள்ளார்; என்பு ஊடு உருக்கும் புலவியோ பிரிவோ இரண்டின் இடைப்பட்டார். தவிசின்மீது இரார் - ஆசனத்தின் மீது இரார். மன் . . . . . கழியார் - மன்மதனது புஷ்ப பாணமாகிய மழையைக் கழியார். 315 3475. ஆன கவலைக் கையறவால் அழியும் நாளில் ஆரூரர் கூனல் இள வெண் பிறைக் கண்ணி முடியார் கோயில் முன் குறுகப் பானல் விழியார் மாளிகையில் பண்டு செல்லும் பரிசினால் போன பெருமைப் பரிசனங்கள் புகுதப் பெறாது புறம் நின்றார். கையறவால் - செயலற்ற தன்மையால்; வருத்தத்தால். பிறை கண்ணி - பிறையாகிய கொண்டை மாலையை யணிந்த. பானல் விழியார் - குவளைபோலுங் கண்களையுடைய பரவையார். பண்டு செல்லும் பரிசினால் போன - பழையபடி போவதுபோலப் போன. 316 3476. நின்ற நிலைமை அவர்கள் சிலர் நிலவு திருஆரூரர் எதிர் சென்று மொழிவார் திரு ஒற்றி யூரில் நிகழ்ந்த செய்கை எலாம் ஒன்றும் ஒழியா வகை அறிந்து அங்கு உள்ளார் தள்ள மாளிகையில் இன்று புறமும் சென்று எய்தப் பெற்றிலோம் என்று இறைஞ்சினார். அங்குள்ளார் - தோழிகள். 317 3477. மற்று அம் மாற்றம் கேட்டு அழிந்த மனத்தர் ஆகி வன்தொண்டர் உற்ற இதனுக்கு இனி என்னோ? செயல் என்று உணர்வார்க்கு உலகு இயல்பு கற்ற மாந்தர் சிலர்தம்மைக் காதல் பரவையார் கொண்ட செற்ற நிலைமை அறிந்து அவர்க்குத் தீர்வு சொல்லச் செலவிட்டார். செற்றம் - கோபம். 318 3478. நம்பி அருளால் சென்றவரும் நங்கை பரவையார் தமது பைம்பொன் மணிமாளிகை அணைந்து பண்பு புரியும் பாங்கினால் வெம்பு புலவிக் கடல் அழுந்தும் மின்நேர் இடையார்முன் எய்தி, எம்பிராட்டிக்கு இது தகுமோ என்று பலவும் எடுத்து உரைப்பார். பண்பு புரியும் பாங்கினால் - ஒழுக்கத்தை நாடி அதைக் கடைப்பிடித்த தன்மையால். 319 3479. பேத நிலைமை நீதியினால் பின்னும் பலவும் சொன்னவர்முன் மாதர் அவரும் மறுத்து மனம் கொண்ட செற்றம் மாற்றாராய் ஏதம் மருவும் அவர்திறத்தில் இந்த மாற்றம் இயம்பில் உயிர் போதல் ஒழியாது என உரைத்தார் அவரும் அஞ்சிப் புறம் போந்தார். பேத நிலைமை நீதியினால் - ஊடலுக்குரிய ஒழுக்க நீதியால் பழைய குறிப்புரை: வெவ்வேறு வகைப்படும் நியாயங்களினால் - இராமலிங்க சுவாமிகள். ஏதம் . . . . . . . . . ஒழியாது. குற்றம் பொருந்திய நம்பியாரூரர் சார்பாக இம்மொழியை வலியுறுத்திப் பேசுவீராயின் என்னுயிர் நீங்குதல் தவறாது. 320 3480. போந்து புகுந்தபடி எல்லாம் பூந்தண் பழன முனைப்பாடி வேந்தர் தமக்கு விளம்புதலும் வெரு உற்று அயர்வார் துயர்வேலை நீந்தும் புணைஆம் துணைகாணார் நிகழ்ந்த சிந்தாகுலம் நெஞ்சில் காந்த அழிந்து தோய்ந்தெழார் கங்குல் இடையாமக் கடலுள். பழனம் - வயல்கள் சூழ்ந்த. வெருவுற்று அயர்வார் - நடுக் குற்றுச் சோர்வார். துயர் வேலை - துன்பக் கடலை. காந்த - முதிர்ந்து வேக. கங்குல். . . . . . . கடலுள் - இரவில். அர்த்த சாமமென்னுங் கடலுள். 321 3481. அருகு சூழ்ந்தார் துயின்று திரு அத்தயாமம் பணி மடங்கிப் பெருகு புவனம் சலிப்பின்றிப் பேயும் உறங்கு பிறங்கு இருள்வாய் முருகு விரியும் மலர்க் கொன்றை முடிமேல் அரவும் இளமதியும் செருகும் ஒருவர் தோழர் தனி வருந்தி இருந்து சிந்திப்பார். திரு அர்த்தசாமப் பூசையும் முடிந்து பிறங்கு இருள்வாய் - செறிந்த இருளிலே; அர்த்த ராத்திரியிலே. முருகு - வாசனை. 322 3482. முன்னை வினையால் இவ்வினைக்கு மூலம் ஆனாள்பால் அணைய என்னை உடையாய்! நினைந்தருளாய் இந்த யாமத்து எழுந்தருளி, அன்னம் அனையாள் புலவியினை அகற்றில் உய்யல் ஆம் அன்றிப் பின்னை இல்லைச் செயல் என்று பெருமான் அடிகள் தமை நினைந்தார். 323 3482. அடியார் இடுக்கண் தரியாதார் ஆண்டு கொண்ட தோழர் குறை முடியாது இருக்க வல்லரே? முற்றும் அளித்தாள் பொன்தளிர்க்கைத் தொடிஆர் தழும்பும் முலைச்சுவடும் உடையார் தொண்டர்தாம் காணும் படியால் அணைந்தார் நெடியோனும் காணா அடிகள் படி தோய. வல்லரே - வல்லரோ? முற்றும் அளித்தாள் - உமை யம்மையார் தொடியார் தழும்பும் - வளைத் தழும்பும். 324 3484. தம்பிரானார் எழுந்தருளத் தாங்கற்கு அரிய மகிழ்ச்சியினால் கம்பியா நின்று அவயவங்கள் கலந்த புளகம் மயிர்முகிழ்ப்ப நம்பி ஆரூரரும் எதிரே நளின மலர்க்கை தலைக்குவிய அம்பிகா வல்லவர் செய்ய அடித் தாமரையின் கீழ் விழுந்தார். அவயவங்கள் கம்பியா (நடுங்கி) நின்று. நளின மலர் - தாமரை மலர் போலும். அம்பிகாவல்லவர் - அம்பிகை நாயகர்; சிவ பெருமான்; வல்லவர் என்பதை, வலவர் என்பதன் விரித்தல் விகாரமாக்கொண்டு அம்பிகையை இடப்பாகங் கொண்டவர் என்று கூறுதலுமொன்று. 325 3485. விழுந்து பரவி மிக்க பெரு விருப்பினோடும் எதிர் போற்றி எழுந்த நண்பர் தமை நோக்கி என நீ உற்றது என்றருளத் தொழும்தம் குறையை விளம்புவார் யானே தொடங்கும் துரிசிடைப்பட்டு அழுந்தும் என்னை இன்னம் எடுத்து ஆளவேண்டும் உமக்கு என்று. தொடங்கும் துரிசிடைப்பட்டு - மேற்கொண்ட குற்றத்துள் அகப்பட்டு; உமக்குக் கடமை என்று. 326 3486. அடியேன் அங்கு அத்திருஒற்றி யூரில் நீரே அருள் செய்ய வடிவேல் ஒண்கண் சங்கிலியை மணம் செய்து அணைந்த திறம்எல்லாம் கொடிஏர் இடையாள் பரவைதான் அறிந்து தன்பால் யான் குறுகில் முடிவேன் என்று துணிந்திருந்தாள் என் நான் செய்வது? என மொழிந்து. கொடிபோன்ற (ஏர் - உவம உருபு). 327 3487. நாயன் நீரே நான்உமக்கு இங்கு அடியேன் ஆகிர் நீர் எனக்குத் தாயின் நல்ல தோழரும் தம்பிரானாரே ஆகில் ஆய அறிவும் இழந்து அழிவேன் அயர்வு நோக்கி, அவ் அளவும் போய் இவ் இரவே பரவை உறு புலவி தீர்த்துத் தாரும் என. நாயகராகிய நீரே. பொருந்திய அறிவும். . . . . . 328 3488. அன்பு வேண்டும் தம்பெருமான் அடியார் வேண்டிற்றே வேண்டி முன்பு நின்று விண்ணப்பம் செய்த நம்பி முகம் நோக்கித் துன்பம் ஒழிநீ யாம் உனக்குஓர் தூதன் ஆகி இப்பொழுதே பொன்செய் மணிப்பூண் பரவைபால் போகின்றோம் என்று அருள் செய்தார். 329 3489. எல்லை இல்லாக் களிப்பினராய் இறைவர் தாளில் வீழ்ந்து எழுந்து வல்ல பரிசு எல்லாம் துதித்து வாழ்ந்து நின்ற வன்தொண்டர் முல்லைமுகை வெண்நகைப் பரவை முகில்சேர் மாடத்திடைச் செல்ல நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும் புலவி எனத் தொழுதார். வல்ல பரிசெல்லாம் துதித்து - தாம் உணரவல்ல இயல்பு களையெல்லாம் துதித்து; கூடிய வகைகளிலெல்லாம் துதித்து. வாழ்ந்து - மகிழ்ந்து. ஈண்ட - விரைய. 330 3490. அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அமுது ஆக உண்ட நீலக் கோல மிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவு அரியார் வண்டு வாழும் மலர்க் கூந்தல் பரவையார் மாளிகை நோக்கித் தொண்டனார்தம் துயர் நீக்கத் தூதனாராய் எழுந்தருள. 331 3491. தேவதாசிரியன் முறை இருக்கும் தேவர் எல்லாம் சேவித்துப் போவார் தம்மில் வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்து ஒழிய ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் பூதகண நாதர் மூவா முனிவர் யோகிகளின் முதலா னார்கள் முன்போத. தேவதாசிரிய மண்டபத்தில் முறையே இருக்கும் . . . . உடன் போக மற்றவர் புறத்தொழிய நீங்காத அணுக்கச் சேவகர்களாகிய நந்தி முதலியோர். 332 3492. அருகு பெரிய தேவருடன் அணைந்து வரும் அவ் இருடிகளும் மருவு நண்பு நிதிக்கோனும் முதலாய் உள்ளோர் மகிழ்ந்து ஏத்தத் தெருவும் விசும்பும் நிறைந்து விரைச் செழும் பூமாரி பொழிந்து அலையப் பொருஇல் அன்பர் விடும்தூதர் புனித வீதியினில் போத. பொருவில் அன்பர் - ஒப்பற்ற அன்பராகிய வன்தொண்டர். 333 3493. மாலும் அயனும் காணாதார் மலர்த்தாள் பூண்டு வந்து இறைஞ்சும் காலம் இது என்று அங்கு அவரை அழைத்தால் என்னக் கடல் விளைத்த ஆலம் இருண்ட கண்டத்தான் அடித் தாமரைமேல் சிலம்பு ஒலிப்ப நீல மலர்க்கண் பரவையார் திருமா ளிகையை நேர் நோக்கி. அவரை - அவ்விருவரையும். 334 3494. இறைவர் விரைவின் எழுந்தருள எய்தும் அவர்கள் பின்தொடர அறைகொள் திரைநீர் தொடர் சடையில் அரவு தொடர அரியஇளம் பிறைகொள் அருகு நறை இதழிப் பிணையல் சுரும்பு தொடர உடன் மறைகள் தொடர வன்தொண்டர் மனமும் தொடர வரும்பொழுது. உடன் சென்றவர்கள் பின்தொடர. அறை . . . . . . . தொடர் ஒலித் தலைக்கொண்ட அலைகளையுடைய கங்கை நீர் தொடரும். நறை. . . . . சுரும்பு - தேன் சிந்தும் கொன்றை மாலையில் வண்டுகள். 335 3495. பெரு வீரையினும் மிக முழங்கிப் பிறங்கு மத குஞ்சரம் உரித்து மரு ஈர் உரிவை புனைந்தவர்தம் மருங்கு சூழ்வார் நெருங்குதலால் திருவீதியினில் அழகர்அவர் மகிழும் செல்வத் திருஆரூர் ஒரு வீதியிலே சிவலோகம் முழுதும் காண உளது ஆமால். பெரு. . . . . மருங்கு - பெரிய கடலைப் பார்ப்பினும் மிக முழங்கி விளங்கும் மத யானையை உரித்துக் குளிர்ச்சி பொருந்திய தோலைப் போர்த்தவராகிய சிவபிரான் பக்கத்தே. 336 3496. ஞாலம் உய்ய எழுந்தருளும் நம்பி தூதர் பரவையார் கோல மணி மாளிகை வாயில் குறுகுவார் முன் கூடத்தம் - பால் அங்கு அணைந்தார் புறம்நிற்பப் பண்டே தம்மை அர்ச்சிக்கும் சீலம் உடைய மறைமுனிவர் ஆகித் தனியே சென்று அணைந்தார். தூதர் . . . . . குறுகுவாராய். 337 3497. சென்று மணி வாயில் கதவம் செறிய அடைத்த அதன்முன்பு நின்று பாவாய்! திறவாய் என்று அழைப்ப நெறிமென் குழலாரும் ஒன்றும் துயிலாது உணர்ந்து அயர்வார் உடைய பெருமான் பூ சனைசெய் துன்றும் புரிநூல் மணிமார்பர் போலும் அழைத்தார் எனத் துணிந்து. செறிய அடைத்த - நன்றாக (நெருங்க) அடைத்த. நெறித்த மெல்லிய கூந்தலையுடைய பரவையாரும். ஒன்றும் . . . . . . . அயர்வார் - சிறிதும் துயிலாது கண் விழித்து (பலவாறு எண்ணி எண்ணி) வருந்துபவராய். உடைய பெருமான் - எல்லாரையும் ஆளாக உடைய சிவபெருமானை. ஒன்றும் . . . . . அயர்வாராகிய வன்தொண்டரை ஆளாவுடைய பெருமான் என்று கொள்ளலுமாம். 338 3498. பாதி மதிவாழ் சடையாரைப் பயில் பூசனையின் பணிபுரிவார் பாதி இரவில் இங்கு அணைந்தது v‹ndh? என்று பயம் எய்திப் பாதி உமையாள் திருவடிவில் பரமர் ஆவது அறியாதே பாதி மதி வாள் நுதலாரும் பதைத்து வந்து கடை திறந்தார். 339 3499. மன்னும் உரிமை வன்தொண்டர் வாயில் தூதா வாயிலிடை முன்நின்றாரைக் கண்டி றைஞ்சி முழுதும் உறங்கும் பொழுதின்கண் என்னை ஆளும் பெருமான் இங்கு எய்தி அருளினார் என்ன மின்னும் மணிநூல் அணி மார்பீர்! vŒj nt©o‰W v‹? என்றார். வன்தொண்டர் காரணமாகத் தூதாகி. அருளினார் போல. 340 3500. கங்கைநீர் கரந்த வேணி கரந்தவர் அருளிச் செய்வார் நங்கை! நீ மறாது செய்யின் நான் வந்தது உரைப்பது என்ன, அம் கயல் விழியினாரும் அதனை நீர் அருளிச் செய்தால் இங்கு எனக்கு இசையுமாகில் இசையலாம் என்று சொல்லி. கங்கைநீர் மறைந்த சடையை மறைத்து வந்தவராகிய இறைவன். 341 3501. என் நினைந்து அணைந்தது என்பால் இன்னது என்று அருளிச் செய்தால் பின்னையது இயலும் ஆகில் ஆம் எனப் பிரானார் தாமும் மின் இடை மடவாய் நம்பி வர இங்கு வேண்டும் என்ன நல் நுதலாரும் சால நன்று! நம் பெருமை என்பார். 342 3502. பங்குனித் திருநாளுக்குப் பண்டுபோல் வருவார் ஆகி, இங்கு எனைப் பிரிந்து போகி ஒற்றிஊர் எய்தி அங்கே சங்கிலித் தொடக்குண்டாருக்கு இங்கு ஒரு சார்வுண்டோ? நீர் கங்குலின் வந்து சொன்ன fhÇa« mH»J! என்றார். பங்குனித் திருநாளுக்குப் பொன் முதலியன கொண்டு முன்போல வருவாராகி. 343 3503. நாதரும் அதனைக் கேட்டு நங்கை நீ நம்பி செய்த ஏதங்கள் மனத்துக் கொள்ளாது எய்திய வெகுளி நீங்கி நோதக(வு) ஒழித்தற்கு அன்றோ நுன்னையான் வேண்டிக் கொண்டது ஆதலின் மறுத்தல் செய்ய அடாது என அருளிச் செய்தார். நோதக ஒழித்தற் கன்றோ - துன்பமுறுதலை நீக்குதற்கன்றோ; காதலர் பிரிந்த மாதர் நோதக - சிலப்பதிகாரம்; 4. அந்திமாலை. 58 (நோவுதக - அடியார்க்கு நல்லார்). 344 3504. அருமறை முனிவர் ஆன ஐயரைத் தையலார்தாம் கருமம் ஈது ஆக நீர்இக் கடைத்தலை வருகை மற்றுஉம் பெருமைக்குத் தகுவது அன்றால்; ஒற்றிஊர் உறுதி பெற்றார் வருவதற்கு இசையேன்; நீரும் போம் என மறுத்துச் சொன்னார் 345 .3505. நம்பர்தாம் அதனைக் கேட்டு நகையும் உள்கொண்டு மெய்ம்மைத் தம்பரிசு அறியக் காட்டார் தனிப்பெரும் தோழனார்தம் வெம்பு உறு வேட்கை காணுறும் திருவிளையாட்டின் மேவி வம்பு அலர் குழலினார்தாம் மறுத்ததே கொண்டு மீண்டார். திருவிளையாட்டில் விருப்புற்று. 346 3506. தூதரைப் போக விட்டு வரவு பார்த்து இருந்த தொண்டர் நாதரை அறிவிலாதே நன்னுதல் புலவி நீக்கிப் போதரத் தொழுதேன் என்று புலம்புவார் பரவையாரைக் காதலில் இசைவு கொண்டு வருவதே கருத்துள் கொள்வார். நன்னுதல் - நல்ல நெற்றியையுடைய பரவையார். 347 3507. போய் அவள் மனையில் நண்ணும் புண்ணியர் என் செய்தாரோ? நாயனார் தம்மைக் கண்டால் நன்னுதல் மறுக்கு மோதான்; ஆய என் அயர்வுதன்னை அறிந்து எழுந்தருளி னார்தாம் சேயிழை துனி தீர்த்தன்றி மீள்வது செய்யார் என்று. சேயிழை - செவ்விய ஆபரணங்களை யணிந்த. பரவையாரது - துனி - கையிகந்த ஊடலை; புலவி நீட்டத்தை; வெறுப்பை. 348 3508. வழி எதிர்கொள்ளச் செல்வர்; வரவு காணாது மீள்வர்; அழிவு உற மயங்கி நிற்பர்; அசைவுடன் இருப்பர்; நெற்றி விழியவர் தாழ்த்தார் என்று மீளவும் எழுவர்; மாரன் பொழி மலர் மாரி வீழ ஒதுங்குவர்; புன்கண் உற்றார். புன்கண் - துன்பம். 349 3509. பரவையார் தம்பால் நம்பி தூதர் ஆம் பாங்கில் போன அரவு அணி சடையார் மீண்டே அறியுமாறு அணையும் போதில் இரவுதான் பகலாய்த் தோன்ற எதிர் எழுந்து அணையை விட்ட உரவு நீர் வெள்ளம் போல ஓங்கிய களிப்பின் சென்றார். பாங்கில் - தன்மையில்; முறைமையில். மீண்டே அறியுமாறு - திரும்பித் தம்மை அறியுமாறு. உரவு - பரந்த அணைகடந்த வெள்ளம் போல. 350 3510. சென்று தம்பிரானைத் தாழ்ந்து திருமுகம் முறுவல் செய்ய ஒன்றிய விளையாட்டு ஓரார் உறுதி, செய்து அணைந்தார் என்றே அன்றுநீர் ஆண்டு கொண்ட அதனுக்குத் தகவே செய்தீர் இன்று இவள் வெகுளி எல்லாம் தீர்த்து எழுந்தருளி என்றார் ஒன்றிய - பொருந்திய. ஓரார் - உணராதவராய். 351 3511. அம்மொழி விளம்பும் நம்பிக்கு ஐயர்தாம் அருளிச் செய்வார் நம்மை நீ சொல்ல நாம்போய்ப் பரவைதன் இல்லம் நண்ணிக் கொம்மை வெம்முலை யினாட்குஉன் திறம்எலாம் கூறக் கொள்ளாள் வெம்மைதான் சொல்லி நாமே வேண்டவும் மறுத்தாள் என்றார். 352 3512. அண்ணலார் அருளிச் செய்யக் கேட்ட ஆரூரர் தாமும் துண் என நடுக்கம் உற்றே தொழுது நீர் அருளிச்செய்த வண்ணமும் அடியாள் ஆன பரவையோ மறுப்பாள்? நாங்கள் எண்ண ஆர் அடிமைக்கு என்பது இன்று அறிவித்தீர் என்று. நீர் கட்டளையிட்ட தன்மையையும் பரவையா மறுப்பாள்? நாங்கள் அடிமைக்கு எண்ண ஆர் என்பதை இன்று அறிவித்தீர் (நாங்கள் அடிமைக்கு உரியவர்களாக எண்ணுதற்கு என்ன இயல்பு எங்களிடமிருக்கிறது என்றபடி); எண்ணலார் என்னும் பாடத்துக்கு நாங்கள் அடிமைக்கு எண்ணப் படாதவர்கள்......... என்று கொள்க. 353 3513. வானவர் உய்ய வேண்டி மறிகடல் நஞ்சை உண்டீர்; தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்து ஆட்கொண்டீர்; நான்மறைச் சிறுவர்க் காகக் காலனைக் காய்ந்து நட்டீர்; யான்மிகை உமக்கு இன்று ஆனால் என்செய்வீர்? போதாது என்றார். ஈண்டுப் போந்துள்ள கதைகளின் தத்துவங்கள் முன்னர்ப் பலவிடங்களில் விளக்கப்பட்டுள்ளன. அசுரர்கள் முப்புரங்கள். மூவர் - பரமவிரதன், பரமயோகன், பரமகுணன்; மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில். . . . . . . திருப்புன்கூருளானே - சுந்தரர். நட்டீர் - அன்புக் குரிமையாக்கினீர்; நிலை பெறுத்தினீர். இங்கே குறிப்பிட்ட நஞ்சை உண்டது முதலிய யாவும் இறைவனை அடைக்கலம் புகுந்தவரைக் காத்தமையைக் குறிப்பன. இவ்வளவு செய்த பெருமானை வன்தொண்டர் பார்த்து யான். . . . . உமக்கு மிகை இன்றைக்கானால். . . . . என்றார். போதாது - திரும்பி வாராது. 354 3514. ஆவதே செய்தீர் இன்றுஎன் அடிமை நீர் வேண்டா விட்டால் பாவியேன் தன்னை அன்று வலிய ஆட்கொண்ட பற்று என்? நோவும் என் அழிவும் கண்டீர் நுடங்கு இடை அவள்பால் இன்று மேவுதல் செய்யீர் ஆகில் விடும் உயிர் என்று வீழ்ந்தார். எனக்கு ஆவதே செய்தீர்! (வருத்தத்தால் உடன்பாடு போன்று எதிர்மறையாக வரும் இகழ்ச்சிக் குறிப்பு. இது தொடர்ந்துவரும் வன்தொண்டர் மொழிகளால் இனிது விளங்கும்). பற்று எற்றுக்கு என்றபடி. 355 3515. தம்பிரான் அதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த நம்பியை அருளால் நோக்கி நாம் இன்னம் அவள்பால் போய்அக் கொம்பினை இப்போதே நீ குறுகுமா கூறுகின்றோம் வெம்புஉறு துயர்நீங்கு என்றார் வினைஎலாம் விளைக்க வல்லார். 356 3516. மயங்கிய நண்பர் உய்ய வாக்கு எனும் மதுர வாய்மை நயம் கிளர் அமுதம் நல்க நாவலூர் மன்னர் தாமும் முயங்கிய கலக்கம் நீக்கி உம் அடித் தொழும்பனேனைப் பயம் கெடுத்து இவ்வாறு அன்றோ பணி கொள்வது என்று போற்ற. வாய்மை - தப்பாத மொழி; உண்மை; முன்னே கூறியது திரு விளையாட்டின் பொருட்டாதலான். இங்கே இம்முறை வாய்மை என்றார். நயம்கிளர் - விருப்பம் எழும். அமுதம் உயிரைக் கொடுக்க வல்லது இங்கே இறைவனது வாய்மை, நண்பராகிய வன்தொண் டருக்கு அமுதாயிற்றென்க. முயங்கிய - மனத்திற்கொண்ட . தொழும் பனேனை - தொண்டனேனை. 357 3517. அன்பர் மேல் கருணை கூர ஆண்டவர் மீண்டும் செல்லப் பின்பு சென்று இறைஞ்சி நம்பி பேதுறவோடு மீண்டார் முன்பு உடன் போதா தாரும் முறைமையின் சேவித்து ஏகப் பொன் புரிசடையார் மாதர் புனித மாளிகையின் சென்றார். பேதுறவோடும் - மயக்கத்தோடும். 358 3518. மதி நுதல் பரவையார் தாம் மறையவர் போன பின்பு முதுமறை முனியாய் வந்தார் அருளுடை முதல்வர் ஆகும் அதிசயம் பலவும் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன் எதிர்மொழி எம்பிரான்முன் என்செய மறுத்தேன் என்பார். 359 3519. கண் துயில் எய்தார்; வெய்ய கையறவு எய்தி ஈங்கு இன்று அண்டர் தம்பிரானார் தோழர்க்கு ஆக அர்ச்சிப்பார் கோலம் கொண்டணைந்தவரை யான் உட் கொண்டிலேன் பாவியேன் என்று ஒண்சுடர் வாயிலே பார்த்து உழையரோடு அழியும் போதில். கையறவு - செயலற்ற வருத்தம். உழையரோடு - பாங்கிமா ரோடு. 360 3520. வெறி உறுகொன்றை வேணி விமலரும் தாம் ஆம் தன்மை அறிவுறு கோலத் தோடும் அளவுஇல் பல் பூத நாதர் செறிவு உறு தேவர் யோகர் முனிவர்கள் சூழ்ந்து செல்ல மறுஇல் சீர்ப் பரவையார்தம் மாளிகை புகுந்தார் வந்து. 361 3521. பாரிடத் தலைவர் முன்ஆம் பல்கண நாதர் தேவர் நேர்வுஉறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறைதலாலே பேர் அருளாளர் எய்தப் பெற்ற மாளிகைதான் தென்பால் சீர்வளர் கயிலை வெள்ளித் திமலை போன்றது அன்றே. பாரிடத்தலைவர் - பூதத்தலைவர். 362 3522. ஐயர் அங்கு அணைந்த போதில் அகில லோகத்து உள்ளாரும் எய்தியே செறிந்து சூழ எதிர்கொண்ட பரவையார்தாம் மெய்உறு நடுக்கத் தோடு மிக்கு எழும் மகிழ்ச்சி பொங்கச் செய்யதாள் இணைமுன் சேர விரைவினால் சென்று வீழ்ந்தார். 363 3523. அரி அயற்கு அரியார் தாமும் ஆயிழை யாரை நோக்கி உரிமையால் ஊரன் ஏவ மீளவும் உன்பால் வந்தோம் முருகு அலர் குழலாய் இன்னம் முன்புபோல் மறாதே நின்பால் பிரிவு உற வருந்துகின்றான் வரப்பெற வேண்டும் என்றார். 364 3524. பெருந்தடங் கண்ணி னாரும் பிரான் முன்பு மிகவும் அஞ்சி வருந்திய உள்ளத்தோடும் மலர்க்கரம் குழல்மேல் கொண்டே அருந்திரு மறையோர் ஆகி அணைந்தீர்முன் அடியேன் செய்த இருந்தவப் பயன் ஆம் என்ன vŒâa Únuh! என்பார். 365 3525. துளி வளர் கண்ணீர் வாரத் தொழுது விண்ணப்பம் செய்வார் ஒளிவளர் செய்ய பாதம் வருந்த ஓர் இரவு மாறாது அளிவரும் அன்பர்க்கு ஆக அங்கொடு இங்கு உழல்வீர் ஆகி எளிவரு வீரும் ஆனால் என்செய்கேன் இசையாது என்றார். அளிவரும் - அருளொழுகும். இரங்கி எளிதில் வருவீரானால். 366 3526. நங்கை நின் தன்மைக்கு ஏற்கும் நன்மையே மொழிந்தாய் என்று, மங்கை ஓர் பாகம் வைத்த வள்ளலார் விரைந்து போகத் திங்கள் வாள் நுதலினாரும் சென்று பின் இறைஞ்சி மீண்டார் எங்களை ஆளும் நம்பி தூதர் மீண்டு ஏகுகின்றார். நம்பிதூதர் - சிவபெருமான். அடியேற்கு எளிவந்த - தூதனைத் தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் - நாதனை நள்ளாறனை தூதனை என்தனை ஆள் தோழனை. கானப் பேருறை காளையையே - சுந்தரர். 367 சந்தக் கலித்துறை 3527. ஆதியும் மேலும் மால்அயன் நாடற்கு அருளாதார் தூதினில் ஏகித் தொண்டரை ஆளும் தொழில்கண்டே வீதியில் ஆடிப் பாடி மகிழ்ந்தே மிடைகின்றார் பூதியில் நீடும் பல்கண நாதப் புகழ்வீரர். ஆதியும் மேலும் - அடியையும் முடியையும். மிடைகின்றார் - நெருங்கித் திரள்கிறார். விபூதியில். 368 3528. அன்னவர் முன்னும் பின்னும் மருங்கும் அணைவு எய்த மின் இடையார்பால் அன்பரை உய்க்கும் விரைவோடும் சென்னியில் நீடும் கங்கை ததும்பத் திருஆரூர் மன்னவனார் ஆம் மறையவனார்பால் வந்துற்றார். மருங்கும் - இரு பக்கமும், அன்பரை உய்க்கும் - வன்தொண் டரைச் செலுத்தப் போகும். திருவாரூர் மன்னவனார் - தியாகேசப் பெருமான். அம் மறையவனார்பால் - வன்தொண்டரிடத்து. 369 3529. அன்பரும் என்பால் ஆவி அளிக்கும்படி போனார் v‹brŒJ ÛŸth® ï‹dK«? என்றே இடர்கூரப் பொன்புரி முந்நூல் மார்பினர் செல்லப் பொலி வீதி முன்புஉற நேரும் கண்இணை தானும் முகிழாரால். . . . . . . . . . . . மார்பினார் - தியாகேசப் பெருமான். கண் இணையை மூடாதவரானார். 370 3530. அந்நிலைமைக்கண் மன்மதன் வாளிக்கு அழிவார்தம் மன்உயிர்நல்கும் தம் பெருமானார் வந்து எய்த முன் எதிர்சென்றே மூஉலகும் சென்று அடையும் தாள் சென்னியில் வைத்து என் சொல்லுவர் என்றே தெளியாதார். 371 3531. எம்பெருமான் நீர் என் உயிர் காவாது இடர்செய்யும் கொம்பு அனையாள்பால் என் கொடு வந்தீர் குறை என்னத் தம் பெருமானும் தாழ்குழல் செற்றம் தணிவித்தோம் நம்பி இனிப்போய் மற்றவள் தன்பால் நணுகு என்ன. என்கொடு வந்தீர் என்குறை என்னவாயிற்று என்று கேட்க. தாழ்குழல் செற்றம் - பரவையார் கோபத்தை. 372 3532. நந்தி பிரானார் வந்து அருள் செய்ய நலம்எய்தும் சிந்தையுள் ஆர்வம் கூர் களி எய்தித் திகழ்கின்றார் பந்தமும் வீடும் நீர் அருள்செய்யும்படி செய்தீர் vªij ãuhnd v‹ ïÅ v‹ghš ïl®? என்றார். நந்திபிரானார் - சிவபெருமான். பந்தம் மோட்சம் என்னும் இரண்டையும் மறக் கருணையானும் அறக் கருணையானும் உயிர் களுக்குக் கொடுப்பவன் இறைவன். அவ்விரண்டையும் தமக்கு இறைவன் அளித்தான் என்று நம்பியாரூரர் சொல்கிறார். கண் போனதும், பரவையார் ஊடியதும். இவைகளால் நேர்ந்த துன்பமும் பந்தத்தின் பாற்பட்டன. பரவையின் ஊடல் தீர்த்தது வீட்டின் பாற்பட்டது. 373 3533. என்றுஅடி வீழும் நண்பர்தம் அன்புக்கு எளிவந்தார் சென்றுஅணை நீஅச் சேயிழை பால் என்று அருள்செய்து வென்றுஉயர் சேமேல் வீதி விடங்கப் பெருமாள்தம் பொன்திகழ் வாயில் கோயில் புகுந்தார் புவி வாழ. வென்றுயர் சேமேல் - வெற்றியால் மேம்படும் இடபத்தின் மீது. 374 அறுசீர் விருத்தம் 3534. தம்பிரானார் பின் சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்வார் எம்பிரான் வல்லவாறு என்று எய்திய மகிழ்ச்சி யோடும் வம்பு அலர் குழலார் செம்பொன் மாளிகை வாயில் நோக்கி நம்பி ஆரூரர் காதல் நயந்து எழுந்தருளும் போது. மீள்வாராகிய நம்பியாரூரர். எம்பிரான் அருளால் முடிவ தாயிற்று என்று. 375 3535. முன் துயில் உணர்ந்து சூழ்ந்த பரிசனம் மருங்கு மொய்ப்ப மின்திகழ் பொலம்பூ மாரி விண்ணவர் பொழிந்து வாழ்த்த மன்றல் செய் மதுர சீத சீகரம் கொண்டு மந்தத் தென்றலும் எதிர்கொண்டு எய்தும் சேவகம் முன்பு காட்ட. துயிலுணர்ந்து - விழித்தெழுந்து. பொலம்பூ - பொன்மலர்; கற்பக மலர். மன்றல் - வாசனை. சீகரம் - நீர்த்தூவல். மந்தத்தென்றலும் மந்த மாருதமும். 376 3536. மாலை தண் கலவைச் சேறு மான்மதச் சாந்து பொங்கும் கோல நல் பசும் கர்ப்பூரம் குங்குமம் முதலாய் உள்ள சாலும் மெய்க் கலன்கள் கூடச் சாத்தும் பூண் ஆடைவர்க்கம் பால் அன பிறவும் ஏந்தும் பரிசனம் முன்பு செல்ல. கலவைச் சேறு - எல்லா வாசனைகளுங்கலந்த குழம்பு. மான் மதச் சாந்து - கதூரி கலந்த சந்தனம். மெய்க்கலன்கள் - உடல் அணிகள். பாலன - இவைகளின் பாற்பட்டனவாகிய. 377 3537. இவ்வகை இவர் வந்து எய்த எய்திய விருப்பினோடும் மை வளர் நெடுங் கண்ணாரும் மாளிகை அடைய மன்னும் செய்வினை அலங்காரத்துச் சிறப்பு அணி பலவும் செய்து நெய் வளர் விளக்குத் தூபம் நிறைகுடம் நிரைத்துப் பின்னும். அடைய - முழுவதும். 378 3538. பூமலி நறும் பொன் தாமம் புனைமணிக் கோவை நாற்றிக் காமர்பொன் சுண்ணம் வீசிக் கமழ் நறும் சாந்து நீவித் தூமலர் வீதி சூழ்ந்த தோகையர் வாழ்த்தத் தாமும் மாமணி வாயில் முன்பு வந்து எதிர் ஏற்று நின்றார். பூமலி . . . . . . நாற்றி - பூக்கள் நிறைந்த மணம் வீசும் அழகிய மாலைகளையும், புனைந்த மணிமாலைகளையும் தூக்கி. காமர் - விரும்பத்தக்க சாந்துநீவி - சந்தனத்தால் மெழுகி. 379 3539. வண்டு உலாம் குழலார் முன்பு வன்தொண்டர் வந்து கூடக் கண்டபோது உள்ளக் காதல் வெள்ளத்தின் கரை காணாது கொண்ட நாண் அச்சம் கூர வணங்க அக் குரிசிலாரும் தண் தளிர்ச் செங்கை பற்றிக் கொண்டு மாளிகையுள் சார்ந்தார். 380 3540. இருவரும் தம்பிரானார் தாம் இடை ஆடிச் செய்த திருவருள் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றிச் சிந்தை மருவிய இன்ப வெள்ளத்து அழுந்திய புணர்ச்சி வாய்ப்ப ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்று ஆனார். 381 3541. ஆரணக் கமலக் கோயில் மேவிப் புற்றுஇடம் கொண்டு ஆண்ட நீர்அணி வேணியாரை நிரந்தரம் பணிந்து போற்றிப் பார்அணி விளக்கும் செஞ்சொல் பதிக மாலைகளும் சாத்தித் தார்அணி மணிப்பூண் மார்பர் தாம் மகிழ்ந்து இருந்த நாளில். ஆரணக் கமலக்கோயில் - வேதம் புகழும் கமலாலயத்தில். நிரந்தரம் - எப்பொழுதும். 382 3542. நம்பி ஆரூரர் நெஞ்சில் நடுக்கம் ஒன்று இன்றி நின்று தம்பிரானாரைத் தூது தையல்பால் விட்டார் என்னும் இம்பரின் மிக்க வாத்தை ஏயர்கோனார்தாம் கேட்டு வெம்பினார்; அதிசயித்தார்; வெருவினார் விளம்பல் உற்றார். இவ்வுலகில் பரவிய வார்த்தையை. வெருவினார் - நடுக் குற்றார். 383 3543. நாயனை அடியான் ஏவும் காரியம் நன்று! சால ஏயும் என்று இதனைச் செய்வான் தொண்டனாம்! என்னே! பாவம்; பேயனேன் பொறுக்க ஒண்ணாப் பிழையினைச் செவியால் கேட்பது ஆயின பின்னும் மாயாது இருந்தது ஏன் ஆவி என்பார். நாயனை - தலைவனை. சாலநன்று! 384 3544. காரிகை தன்பால் செல்லும் காதலால் ஒருவன் ஏவப் பாரிடை நடந்து செய்ய பாத தாமரைகள் நோவத் தேர்அணி வீதி ஊடு செல்வது வருவது ஆகி, ஓர்இரவு எல்லாம் தூதுக்கு உழல் வராம் ஒருவர் என்று. 385 3545. நம்பர்தாம் அடிமை ஆற்றார் ஆகியே நண்ணினாரேல் உம்பரார் கோனும் மாலும் அயனும் நேர் உணர ஒண்ணா எம்பிரான் இசைந்தால் ஏவப் பெறுவதே? இதனுக்கு உள்ளம் கம்பியாதவனை யான் முன் fhQ« ehŸ vªehŸ? என்று. சிவபெருமான் அன்பு காரணமாக அடியவர் வழி நிற்பாராகி . . . . . . . உம்பர்கோனும் இந்திரனும். ஏவப் பெறுவதோ? கம்பியாதவனை - நடுக்குறாதவனை; வன்தொண்டனை. 386 3546. அரிவை காரணத்தி னாலே ஆளுடைப் பரமர் தம்மை இரவினில் தூது போக ஏவி அங்கு இருந்தான் தன்னை வர எதிர் காண்பேன் ஆகில் tUtJ v‹dh« bfhš? என்று விரவிய செற்றம் பற்றி விள்ளும் உள்ளத்தர் ஆகி. வருவது என்னாங்கொல் - என்ன விளைந்துவிடுமோ? விரவிய . . . . ஆகி - நெருங்கித் தாக்கிய வன்மம் கொண்டு விம்மும் உள்ளத்தவராகி. 387 3547. ஈறுஇலாப் புகழின் ஓங்கும் ஏயர்கோனார்தாம் எண்ணப் பேறுஇது பெற்றார் கேட்டுப் பிழை உடன்படுவார் ஆகி வேறுஇனி இதற்குத் தீர்வு வேண்டுவார் விரிபூங் கொன்றை ஆறு இடு சடையனாருக்கு அதனை விண்ணப்பம் செய்து. எண்ணமென்னும் பேறாகிய இதனைப் பெற்றவராகிய வன்தொண்டர். 388 3548. நாள்தொறும் பணிந்து போற்ற நாதரும் அதனை நோக்கி நீடிய தொண்டர் தம்முள் இருவரும் மேவும் நீர்மை கூடுதல் புரிவார் ஏயர் குரிசிலார் தம்பால் மேனி வாடுஉறு சூலை தன்னை அருளினார் வருந்தும் ஆற்றால். 389 3549. ஏதம்இல் பெருமைச் செய்கை ஏயர்தம் பெருமான் பக்கல் ஆதியார் ஏவும் சூலை அனல்செய் வேல் குடைவது என்ன வேதனை மேல்மேல் செய்ய மிக அதற்கு உடைந்து வீழ்ந்து பூத நாயகர்தம் பொன்தாள் பற்றியே போற்றுகின்றார். ஏதமில் - குற்றமில்லாத. 390 3550. சிந்தையால் வாக்கால் அன்பர் திருந்துஅடி போற்றி செய்ய எம்தமை ஆளும் ஏயர் காவலர் தம்பால் ஈசர் வந்து உனை வருத்தும் சூலை வன்தொண்டன் தீர்க்கில் அன்றி முந்துற ஒழியாது என்று மொழிந்தருள் செய்யக் கேட்டு. 391 3551. எம்பிரான் எந்தை தந்தை தந்தை எம் கூட்டம் எல்லாம் தம்பிரான் நீரே என்று வழிவழிச் சார்ந்து வாழும் இம்பரின் மிக்க வாழ்க்கை என்னை நின்று ஈரும் சூலை வம்பு என ஆண்டு கொண்டான் xUtnd Ô®¥gh‹ tªJ? எம்பிரானே!. இம்பரின் . . . . . . . என்னை - இவ்வுலகில் வாழ்க்கையுடைய என்னை. ஈரும் - வருத்தும். வம்பென - புதிதாக. ஒருவனோ வந்து தீர்ப்பான். 392 3552. மற்று அவன் தீர்க்கில் தீராது ஒழிந்து எனை வருத்தல் நன்றால் பெற்றம் மேல் உயர்த்தீர்! செய்யும் பெருமையை அறிந்தார் யாரே? உற்ற வன்தொண்டர்க்கே ஆம் உறுதியே செய்தீர் என்னக் கற்றை வார்சடையார் தாமும் அவர் முன்பு கரந்தார் அன்றே. தீர்க்கில் - தீர்ப்பதினும். தீராது ஒழிந்து - தீராது நின்று. பெற்றம்மேல் உயர்த்தீர் - இடபக் கொடியுடைய பெருமானே! செய்யும் - ஒருவர் பொருட்டு நீர் செய்யும். உற்ற - புதிதாக அடைந்த. ஆம் உறுதி - உரிய உயர்வை. 393 3553. வன்தொண்டர் தம்பால் சென்று வள்ளலார் அருளிச்செய்வார் இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலை சென்று நீ தீர்ப்பாயாக என்று அருள் செயச் சிந்தையோடு நன்று மெய்ம் மகிழ்ந்து போற்றி வணங்கினார் நாவலூரர். தீர்ப்பாயாக என்று. 394 3554. அண்ணலார் அருளிச் செய்து நீங்க ஆரூரர் தாமும் விண்ணவர் தம்பிரானார் ஏவலால் விரைந்து செல்வார் கண்ணிய மனத்தின் மேவும் காதலால் கலிக்காமர்க்குத் திண்ணிய சூலை தீர்க்க வருதிறம் செப்பிவிட்டார். கண்ணிய - (ஏயர்கோனைக்) கருதிய. 395 3555. நாதர்தம் அருளால் நண்ணும் சூலையும்அவர்பால் கேட்ட கேதமும் வருத்த மீண்டும் வன்தொண்டர் வரவும் கேட்டுத் தூதனாய் எம்பிரானை ஏவினான் சூலை தீர்க்கும் ஏதம் இங்கு எய்த எய்தில் ah‹ brŒtJ v‹dh«? என்பார். அவர்பால் கேட்ட கேதமும் - அந்நாதர்பால் கேட்ட துன்ப மொழியும்; (வன்தொண்டனாலன்றி இந்நோய் நீங்காது என்ற மொழியும்). ஏதம் இங்கு எய்த எய்தி - குற்றமும் இங்கு வந்து சேர்ந்தால். 396 3556. மற்றுஅவன் இங்கு வந்து தீர்ப்பதன் முன் நான் மாயப் பற்றி நின்று என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை உற்ற இவ் வயிற்றினோடும் கிழிப்பன் என்று உடைவாள் தன்னால் செற்றிட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது அன்றே. மாயப்பற்றினின்றும் நீங்குதலாவது - உயிர்விடுதல். செற்றிட - கிழிக்க. 397 3557. கருதரும் பெருமை நீர்மைக் கலிக்காமர் தேவியாரும் பொரு அரும் கணவ ரோடு போவது புரியுங்காலை மருவி இங்கு அணைந்தார் நம்பி என்று முன் வந்தார் கூற, ஒருவரும் அழுதல் செய்யாது ஒழிக என்று உரைத்துப் பின்னும். பொருவரும். . . . . . காலை - ஒப்பற்ற கணவருடன் உயிர் துறத்தலை விரும்பும்பொழுது. 398 3558. கணவர்தம் செய்கைதன்னைக் கரந்து காவலரை நம்பி அணைவுறும் பொழுது சால அலங்கரித்து எதிர்போம் என்னப் புணர்நிலை வாயில் தீபம் பூரண கும்பம் வைத்துத் துணர் மலர் மாலை தூக்கித் தொழுது எதிர் கொள்ளச் சென்றார். கரந்து - மறைத்து. காவலரை - ஏவலாளரை. துணர் - கொத்து. 399 3559. செம்மைசேர் சிந்தை மாந்தர் சென்று எதிர்கொண்டு போற்ற நம்மை ஆளுடைய நம்பி நகைமுகம் அவர்க்கு நல்கி, மெய்ம்மையாம் விருப்பினோடும் மேவி உள் புகுந்து, மிக்க மொய்ம் மலர்த் தவிசின் மீது முகம் மலர்ந்து இருந்த போது. 400 3560. பான்மை அர்ச்சனைகள் எல்லாம் பண்பினில் வழாமை ஏய்ந்த நான் மறை தொடர்ந்த வாய்மை நம்பி ஆரூரர் கொண்டு இங்கு யான் மிக வருந்துகின்றேன் ஏயர்கோனார் தாம் உற்ற ஊன வெம் சூலை நீக்கி உடன் இருப்பதனுக்கு என்றார். 401 3561. மாதர் தம் ஏவலாலே மனைத் தொழில் மாக்கள் மற்று இங்கு ஏதம் ஒன்று இல்லை; உள்ளே பள்ளி கொள்கின்றார் என்னத் தீது அணைவு இல்லையேனும் என்மனம் தெருளாது இன்னம் ஆதலால் அவரைக் காண வேண்டும் என்று அருளிச் செய்தார். மாதர் தம் - கலிக்காமர் மனைவியாரின். இன்னம் தெருளாது - இன்னும் தெளியவில்லை. 402 3562. வன்தொண்டர் பின்னும் கூற மற்று அவர் தம்மைக் காட்டத் துன்றிய குருதி சோரத் தொடர்குடர் சொரிந்துஉள் ஆவி பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் புகுந்தவாறு நன்று என மொழிந்து நானும் நண்ணுவேன் இவர் முன்பு என்பார். ஆவி நீங்கியே கிடந்தார் . . . .நிகழ்ந்தவாறு நன்று! இவர் முன் யானும் உயிர் நீத்துச் செல்வேன். . . . 403 3563. கோள் உறும் மனத்தர் ஆகித் குற்று உடைவாளைப் பற்ற ஆளுடைத் தம்பிரானார் அருளினால் அவரும் உய்ந்து கேளிரே ஆகிக் கெட்டேன் என விரைந்து கையில் வாளினைப் பிடித்துக் கொள்ள வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார் கோளுறும் - கொலையுற்ற. கேளிரே - நட்புடையவரே. 404 3564. மற்று அவர் வணங்கி வீழ வாளினை மாற்றி ஏயர் கொற்றவனாரும் நம்பி குரைகழல் பணிந்து வீழ்ந்தார்; அற்றை நாள் நிகழ்ந்த இந்த அதிசயம் கண்டு வானோர் பொன்தட மலரின் மாரி பொழிந்தனர்; - புவனம் போற்ற. 405 3565. இருவரும் எழுந்து புல்லி இடைவிடா நண்பினாலே பொரு அரும் மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர் பாதம் மருவினர் போற்றி நின்று, வன்தொண்டர் தம் பிரானார் அருளினை நினைந்தே அந்த ணாளன் என்று எடுத்துப் பாடி. 406 3566. சிலபகல் கழிந்த பின்பு திருமுனைப் பாடி நாடர் மலர் புகழ்த் திரு ஆரூரில் மகிழ்ந்து உடன் வந்த ஏயர் குல முதல் தலைவனாரும் கூடவே குளிர் பூங்கோயில் நிலவினார் தம்மைக் கும்பிட்டு உறைந்தனர்; - நிறைந்த அன்பால். 407 3567. அங்கு இனிது அமர்ந்து நம்பி அருளினால் மீண்டும் போந்து பொங்கிய திருவின் மிக்க தம் பதி புகுந்து பொற்பில் தங்கும் நாள் ஏயர் கோனார் தமக்கு ஏற்ற தொண்டு செய்தே செங்கண் மால் விடையார் பாதம் சேர்ந்தனர் சிறப்பி னோடும். 408 3568. நள் இருள் நாயனாரைத் தூது விட்டவர்க்கே நண்பு ஆம் வள்ளலார் ஏயர்கோனார் மலர்அடி வணங்கிப் புக்கேன்; - உள் உணர்வு ஆன ஞானம் முதலிய ஒரு நான்கு உண்மை தெள்ளுதீம் தமிழால் கூறும் திருமூலர் பெருமை செப்ப. ஞானம் முதலிய ஒரு நான்கு - ஞானம் யோகம் கிரியை சரியை. 409 ஏயர்கோன்கலிக்காம நாயனார் சோழநாட்டில் திருப்பெருமங்கலம் என்றொரு பதியுண்டு. அப்பதியில் வேளாண் மரபில் ஏயர்குடியில் தோன்றியவர் கலிக்காமர். கலிக்காமர் சோழ மன்னனிடத்தில் சேனைத் தலைவராய் அமர்ந்திருந்தார். அஃது அவர்தம் பரம்பரைத் தொழிலாகும். திருப்புன்கூர் என்னும் பதிக்கும் கலிக்காமருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. அத்திருப்பதியில் அவரால் பல திருப்பணிகள் செய்யப்பட்டன. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தியாகேசப் பெருமானைப் பரவை பால் தூது விட்ட செய்தி, கலிகாமருக்கு எட்டிற்று. எட்டவே, அவர் வெம்பி வெம்பி வீழ்ந்தார்; துன்பத்தில் ஆழ்ந்தார்; ஆண்டவனை அடியான் தூது விடுவதோ? நன்று! நன்று! என்பார்; இச் செயலுக்குத் துணிந்தவனும் ஒரு தொண்டனா? இக் கொடுமை கேட்டும் என் ஆவி சோரவில்லையே! என்பார். ஒரு பெண்ணின் பொருட்டா ஆண்டவனைத் தூது விடுவது? ஆண்டவன் இசைந் தாலும் அவனைத் தூதுக்கு ஏவலாமோ? ஓர் இரவு முழுவதும் ஐயன் தூதனாக உழன்றானாம்! என்ன கொடுமை! என்பார். இக் கொடுமைக்கு மனங் கம்பியாத ஒருவனைக் காணும் நாள் எந் நாளோ? அவனைக் காண நேர்ந்தால் என்ன விளையுமோ? என்பார். இவ்வாறு கலிக்காமர் மனம் நொந்துகிடந்தார். கலிக்காமர் நிலை, வன்தொண்டருக்குத் தெரியவந்தது. இதனை வன்தொண்டர், ஆண்டவன் முன்னிலையில் முறையிட்டக் கொண்டிருந்தார். சிவபெருமான் இருவரையும் ஒருமைப்படுத்தத் திருவுளங் கொண்டார்; கொண்டு, கலிக்ககமர்பால் சூலைநோயை ஏவினார். அந் நோய் நாயனாரைப் பற்றி முடுக்கிக் குடைந்தது. நாயனார், சிவபெருமானை நினைந்து நினைந்து உருகினார்; போற்றினார். சிவபெருமான் கலிக்காமர் முன்னே தோன்றி, அன்பனே! இந் நோய் எவராலுந் தீராது. இதைத் தீர்க்க வல்லான் ஒருவனே. அவன் வன்தொண்டன் என்றார்; என்றதும், நாயனார், சிவபெருமானைப் பார்த்து, எம்பிரானே! அடிகளுக்கு வழிவழித் தொண்டு செய்யும் மரபில் தோன்றியவன் யான்; வன்தொண்டனோ புதிதாக அடிமைப்பட்டவன். அவனா என் நோயைத் தீர்க்க வல்லான்! நோயால் வருந்துவதே எனக்கு மகிழ்ச்சி என்றார். உடனே சிவபெருமான், வன்தொண்டர்பால் ஏகி, தோழனே! கலிக்காமன் சூலை நோயால் பீடிக்கப்பட்டு வருந்துகிறான். அது நமது ஏவலால் நேர்ந்தது. நீ அவனிடஞ் சென்று அந் நோயைத் தீர்ப்பாயாக என்றருளினார். வன்தொண்டர்க்கு மகிழ்ச்சி பொங்கித் ததும்பி வழிந்தது. அவர், தாம் சூலை நோயைத் தீர்க்க வருவதைக் கலிக்காமருக்குத் தெரிவித்துப் புறப்பட்டார். கலிக்காமர், பெண்பொருட்டு ஆண்டவனைத் தூதுவிட்ட ஒருவனா இங்கு வருகிறான்? அவன் வந்து நோயைத் தீர்த்தற்கு முன்னர், என் வயிற்றைக் கிழித்துக்கொள்கிறேன் என்று உடை வாளை எடுத்தார்; எண்ணியவாறே செய்துகொண்டார். இக் காட்சி கண்ட நாயனார் மனைவியார், தாமும் உயிர் துறக்கத் துணிந்தார். அவ் வேளையில், சிலர் போந்து, வன் தொண்டர் வருகிறார் என்று சொன்னார். அம்மையார் திடுக் கிட்டார்; அங்கே அழுது கொண்டிருந்தவர்களைப் பார்த்து, அழா தேயுங்கள் என்று கட்டளையிட்டார்; சுவாமிகளை எதிர் கொள்ளுமாறு அங்கிருந்தவர்களை ஏவினார். அவர்கள் அவ்வாறே சென்று சுவாமிகளை எதிர்கொண்டார்கள். சுவாமிகள் கலிக்காமர் இல்லம் போந்தார்; அங்கே இடப்பட்டிருந்த பீடத்தில் அமர்ந்தார். அவருக்கு அர்ச்சனை முதலியன செய்யப்பட்டன. அவைகளைத் தம்பிரான் தோழர் ஏற்று, கலிக்காமர் எங்கே? அவர்க்கு உற்ற நோயைத் தீர்த்து அவரோடு யான் இருத்தல் வேண்டும் என்று கேட்டார். அம்மையார் ஏவலாளர்களை அழைத்து, நாயனார்க்குக் கெடுதி ஒன்றும் இல்லை; அவர் உள்ளே உறங்குகிறார் என்று வன்தொண்டருக்குச் சொல்லுங்கள் என்றார். ஏவலாளர்கள், அவ்வாறே வன்தொண்டருக்கு அறிவித்தார்கள். அதற்கு வன் தொண்டப் பெருமான், நாயனார்க்குத் தீங்கு இல்லையாயினும், என் மனத்திற்குத் தெளிவு ஏற்படல் வேண்டும் என்றார்; மேலும் மேலும் பெருமான் தங் கருத்தை வலியுறுத்தினார். ஏவலாளர்களுக்கு ஒன்றுந் தோன்றவில்லை. அவர்கள் வன்தொண்டருக்குக் கலிக் காமரைக் காட்டினார்கள். வன்தொண்டப் பெருமான் நாயனாரைப் பார்த்தார்; அவர்தம் நிலையை உணர்ந்தார். உணர்ந்ததும், யானும் உயிர்துறப்பேன் என்று உடை வாளை எடுத்தார்; அன்னே ஆண்டவனருளால் கலிக் காம நாயனார் உயிர் பெற்றெழுந்தார்; எழுந்ததும் அந்தோ! கெட்டேன் என்று விரைந்து போய்ச் சுவாமிகள் கையிலிருந்த வாளைப் பற்றினார். வன்தொண்டப் பெருமான், நாயனார் திரு வடிகளில் வீழ்ந்து வணங்கினார். நாயனாரும் சுவாமிகளை வணங் கினார். அன்று தொட்டு இருவரும் கெழுதகை நண்பராயினர். இருவரும் திருப்புன்கூருக்குப் போய்த் திருவாரூரை அடைந்து, ஆண்டவனை வழிபட்டுக்கொண்டிருந்தனர். சிலநாள் கடந்த பின்னை, கலிக்காம நாயனார் வன்தொண்டர்பால் விடை பெற்றுத் தம் பதி சேர்ந்தார். நாயனார் ஆங்கே திருத்தொண்டுகள் பல செய்து ஆண்டவன் திருவடி நீழலையடைந்தார்.  காலவரிசைப்படி பொருள்வழிப் பிரிக்கப்பட்ட திரு.வி.க.வின் தமிழ்க்கொடை I. வாழ்க்கை வரலாறுகள் 1. நா. கதிரைவேற் பிள்ளை சரித்திரம் 1908 2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1921 3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை 1927 4. நாயன்மார் வரலாறு 1937 5. முடியா? காதலா? சீர்திருத்தமா? 1938 6. உள்ளொளி 1942 7. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 1 1944 8. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 2 II. உரை நூல்கள் 9. பெரிய புராணம் - குறிப்புரையும் வசனமும் 1907-10 10. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் 1923 11. காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை 1932 12. திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) 1939 13. திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941 III. அரசியல் நூல்கள் 14. தேசபக்தாமிர்தம் 1919 15. என் கடன் பணிசெய்து கிடப்பதே 1921 16. தமிழ்நாட்டுச் செல்வம் 1924 17. இன்பவாழ்வு 1925 18. தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு 1928 19. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து 1930 20. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு 1 1935 21. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு 2 1935 22. இந்தியாவும் விடுதலையும் 1940 23. தமிழ்க்கலை 1953 IV. சமய நூல்கள் 24. சைவ சமய சாரம் 1921 25. நாயன்மார் திறம் 1922 26. தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 1923 27. சைவத்தின் சமரசம் 1925 28. முருகன் அல்லது அழகு 1925 29. கடவுட் காட்சியும் தாயுமானாரும் 1928 30. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் 1929 31. தமிழ்நூல்களில் பௌத்தம் 1929 32. சைவத் திறவு 1929 33. நினைப்பவர் மனம் 1930 34. இமயமலை அல்லது தியானம் 1931 35. சன்மார்க்க போதமும் திறவும் 1933 36. சமரச தீபம் 1934 37. சித்த மார்க்கம் 1935 38. ஆலமும் அமுதமும் 1944 39. பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி 1949 V. பாடல்கள் 40. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் 1931 41. முருகன் அருள் வேட்டல் 1932 42. திருமால் அருள் வேட்டல் 1938 43. பொதுமை வேட்டல் 1942 44. கிறிதுவின் அருள் வேட்டல் 1945 45. புதுமை வேட்டல் 1945 46. சிவனருள் வேட்டல் 1947 47. கிறிது மொழிக்குறள் 1948 48. இருளில் ஒளி 1950 49. இருமையும் ஒருமையும் 1950 50. அருகன் அருகே அல்லது விடுதலை வழி 1951 51. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் 1951 52. சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் 1951 53. முதுமை உளறல் 1951 54. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் 1953 ______