சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 11 மாதர் சுதந்திரம் (அ) பெண்மக்கள் பெருமை காரல் ஹென்றி மார்க்சு ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் முன்சீப் வேதநாயகம் பிள்ளை ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 11 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 304 = 312 படிகள் : 1000 விலை : உரு. 195/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. மாதர் சுதந்திரம் (அ) பெண்மக்கள் பெருமை (1929) முகவுரை மாதர் சுதந்தரம் அல்லது பெண்மக்கள் பெருமை என்னும் இந்நூல் பெண்மக்களின் முன்னேற்றங் கருதி எழுதப்பட்ட தாகும். இது ஆண்மக்களுக்கும் பெண்மக்களுக்கும் பயன்படக் கூடியதொன்று. பெண்மக்களும் தங்கள் அடிமை நிலையை உணர்ந்து விடுதலைபெற விருப்பங்கொண்டு உழைக்க முன்வர வேண்டும்; ஆண்மக்களும் தமது நலத்தை மட்டிலும் கருதாது தியாக புத்தியுடன் பெண்மக்கள் விடுதலைக்கு உதவி புரிய உவப்புடன் முன் வர வேண்டும். அப்பொழுது தான் விரைவில் மாதர்கள் விடுதலை பெறுவார்கள். இக்கருத்துக்களைத் தெளிவுறுத்தும் பொருட்டே இப்புத்தகமும் எழுதப்பட்டது. இதில் பெண்மக்கள் எந்தெந்த வகைகளில் அடிமையாக்கப் பட்டிருக்கின்றனர்; அவ்வாறு அடிமையாக்கப்படுவதற்கு காரணங்கள் எவை? எவ்வாறு அவர்கள் அடிமைத் தன்மையை நீக்கிக் கொள்ளுதல் கூடும்? என்ற செய்திகளையும்; ஆண் மக்களுக்கும் பெண்மக்களுக்கும் உயர்வு தாழ்வு ஒரு சிறிதுமில்லை யென்பதையும் பல கட்டுரைகளின் மூலம் விளக்கப்பட்டிருக் கின்றன. இதிற் கூறப்படும் பொருள்கள் மதப்பற்றுடை யவர்களுக்கும், வைதீகர்களுக்கும் ஒரு சிறிதும் உடன்பாடுடையனவல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால் பகுத்தறிவுடையோர் எவரும் இந்நூல் கொள்கைகளை ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதில் ஐயமில்லை அதுவே எமக்குப் போதுமானதாகும். இந்நூலில் முதலில் உள்ள சில கட்டுரைகள் குடியரசுப் பத்திரிகையில் தனித்தனி வியாசங்களாக வெளிவந்தவை. தொடக்கத்தில் இதை ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும் என்ற எண்ணத்துடனேயே கட்டுரைகளாகப் பத்திரிகையில் எழுதினேன். நாலைந்து கட்டுரைகள் எழுதிய பின் வேறுபல வேலைகளின் நெருக்கடியால் எழுதாமல் நிறுத்தும்படி நேரிட்டு விட்டது. பிறகு பல மாதங்கள் கழிந்த பின் பல நண்பர்களின் தூண்டுதலால் மற்றவற்றை எழுதி முடித்தேன். இந்நூலில் உள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் பத்திரிகைக்கு வியாசம் எழுதும் முறையில் எழுதபட்டவை; ஆதலால் ஒரு கட்டுரையில் கூறப்பட்டப் பொருள் மற்றொரு கட்டுரையிலும் கொஞ்சங் கொஞ்சம் விரவியிருத்தல் கூடும். இந்நூலை இன்னும் விரிவாகவும், இன்னும் பல செய்திகள் சேர்த்தும் எழுத வேண்டும் என்னும் ஆவல் இருந்தும், போதிய ஓய்வு காலங் கிட்டாத காரணத்தால் சுருக்கமாக முடிக்க நேர்ந்தது. கூடுமானால் இவ்வெண்ணத்தை அடுத்த பதிப்பில் நிறைவேற்ற முயலுகின்றேன். இப்புத்தகத்தை அச்சிடும் போது கவனித்து (Proof) பார்க்காத காரணத்தால் ஆங்காங்கே எழுத்துப் பிழைகளும் சில சொற்பிழைகளும் தங்குவதற்கு இடமாகி விட்டது. வாசிப்போர் அவற்றைத் திருத்திக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன். ஒரு நூலை எழுதுவது எளிது, ஆனால் அதனை வெளியிடுவது இக் காலத்தில் அரிது; ஆயினும் இந்நூல் விஷயத்தில் இத்தகைய கஷ்டம் நேராதபடி, இதனை எனது துணைவியார் சிவகாமி அவர்கள் வெளியிட்டு உதவியதற்காக அவர்களுக்கு எனது நன்றி என்றும் உரியதாகுக. இந்நூலைச் சீர்திருத்த நோக்கமுடைய ஆண்மக்களும் பெண்மக்களும் எவ்வளவு தூரம் வரவேற்கின்றார்களோ அவ் வளவு தூரம் எனக்கும் இதுபோன்ற இன்னும் பல நூல்களை எழுதுவதில் ஊக்கமுண்டாகும் என்பதையும் தெரி வித்துக் கொள்கின்றேன். திருவாரூர், சாமி.சிதம்பரனார், 5-8-1931 நூலாசிரியன். தோற்றுவாய் அறிவுள்ள ஒவ்வொருவரும் உரிமையுடனும் இன்பமுடனும் வாழவேண்டுமென்று நினைப்பது இயல்பு. அதற்கான வகையில் முயல்வதும் இயற்கை. இவ்வாறான செய்தி மக்களுக்குத்தான் முதன்மையாக உரியது என்று கூற முடியாது. பறவைக் கூட்டங் களும், விலங்கினங்களும் உரிமையுடன் வாழவே விரும்புகின்றன. நாம் நமது வீடுகளில் நமது நன்மைக்காகக் கட்டி வைத்து வளர்த்து வருகின்ற ஆடு, மாடு, முதலியவைகள், கட்டுத் தறியினின்றும் விடுபட்டவுடன் அவைகள் அடைகின்ற மகிழ்ச்சியை ஆரே அளந்து கூறவல்லார்? அவைகள் எப்பொழுது தம்மைப் பிணிப்பினின்றும் அவிழ்த்து விடுவார்களென எதிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன அன்றோ? அங்ஙனமே நம்மால் வளர்க்கப் படுகின்ற கோழி, புறா முதலிய பறைவையினங்களும் கூட்டினின்று வெளிப்பட்டு உலவுதற்கே ஆசைப்படுகின்றன அன்றோ? மேற் கூறிய விலங்கினங் களையும், பறவைக் கூட்டங்களையும் நமது நன்மைக்காக நாமே அடக்கிவைத்து ஆளுகின்றோமே அன்றி அவைகளாக நம்மிடம் கட்டுப்பட்டிருக்க விரும்பியிருக்கின்றனவோ? பகுத்தறிவு என்னும் சிறப்பறிவு இல்லாதன என்று சொல்லப்படும் விலங்கினங்களும், பறவைக் கூட்டங்களும், விடுதலை வாழ்வையே விரும்பும்போது பெருமை வாய்ந்த பகுத்தறிவைப்பெற்ற மக்கள் விடுதலை வாழ்வுக்கு ஆசைப் படாமல் இருப்பார்களா? விடுதலை வாழ்வைப்பெற விரும்பாத மக்கள் அறிவுடைய மக்களா யிருக்கமுடியுமா? பல்லாயிரம் ஆண்டுகளாக உரிமைஇன்றி இருந்தவர்கள்-உயர்ந்த சமூகத்தார் என்பவருக்கு அடிமையாய் இருந்தவர்கள்-வாழ்நாள் முழுவதும் இன்பம் இன்றித் துன்பத்திலேயே ஆழ்ந்து கிடந்தவர்கள் - மக்கட்பிறப்பின் மாண்பை அறியாமல் இருந்தவர்கள் அனைவரும் இப்பொழுது விடுதலை பெற்று உரிமையுடன் வாழவேண்டுமென முயற்சி செய்கின்றனர். இவ் வுலகில் எந்த மூலையை நோக்கினாலும், அங்கே இடியோசை போல விடுதலை முழக்கமே கேட்கின்றது. அதுவே இப்பொழுது உலகிற் காணும் காட்சிகளில் முதன்மையானதாக இருக்கின்றது. இதுவரையிலும் விடுதலைப்போரில் முனைந்துநின்று உழைத் தவர்கள் தங்கள் முயற்சிக்கேற்ற வெற்றியை அடைந்திருக் கின்றார்கள், உழைக்கின்றவர்கள் விடுதலை பெறுகின்றார்கள் என்பதும் திண்ணம். கூடிய விரைவில் இவ்வுலக மக்கள் அனைவரும் முற்றும் விடுதலை பெறுவார்கள் என்பதில் ஐயம் இல்லை. இதனை உலக நிகழ்ச்சியை உற்று நோக்குவார் அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளலாம். இவ்வாறு விடுதலை பெறுவதற்கு முனைந்து வேலை செய்யும் கூட்டத்தாரில் பெண் மக்களும் ஒரு பகுதியினராவர். ஒரு பகுதியினர் ஆவர் என்று கூறுவதைவிட அவர்களே முதன் மையானவர்கள் என்று கூறலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக உரிமை சிறிதுமின்றிப் பிறர்க்கு அடிமையாகக் கிடந்தவர்களில் பெண்மக்களுக்கு ஈடாக எவரையும் கூறமுடியாது. அவர் களுடைய அடிமைத்தன்மை மிகப்பழங்காலத்திலிருந்து நிகழ்ந்து வருகின்றது. நம் இந்திய நாட்டில் பெண்மக்கள் முன்னேற்றத் திற்குத் தடையாக இருப்பனவே மிகுந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக மக்களை ஒருவரோடு ஒருவர் சேரஒட்டாமற் பிரித்து நூல்களும் வைத்திருப்பதும், பகுத்தறிவை அடக்கி ஆளுவதும், மக்களுடைய உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாய்யிருப்பதும் ஆகிய மதங்களும், சுயநலம் பிடித்த ஆண் மக்களால் எழுதப்பட்ட பெண்மக்கள் விடுதலைக்குத்தடை செய்வனவற்றுள் முதன்மையானவைகளாகும். இவைகளுடைய ஆட்சி அடங்கினால் அன்றி பெண்மக்கள் உரிமையைப் பெறமுடியாது என்பது உறுதி. மதங்களையும், நூல்களையும், மக்களுடைய நன்மை களுக்காக முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குகளென்று கொள்ளவேண்டுமேயன்றி, அவைகளைத் தெய்வீகத்தன்மை உடையனவென்று கொள்ளுவதில் ஒரு பொருளுமில்லை. ஆகவே அவற்றை காலநிலைக்கேற்றவாறு அமைத்துக் கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. ஆதலால் பழயனவாகிய அவற்றை, இக்காலபோக்கிற்கு ஒத்துவராத அக்குப்பைகளை மக்களுடைய அறிவாகிய ஒளியின்மீது துருவேறி மழுங்கச் செய்யும் அவ் அழுக்குகளை அடியோடு களைந்தெறிந்து புதியனவற்றைப் புகுத்த வேண்டும். பெண்மக்கள் முன்னேற்றம் அடையாமல் ஆண்மக்கள் எவ்வளவுதான் உரிமைபெற்றாலும்; இன்பமுற்றாலும், கல்வி கற்றாலும், அறிவு பெற்றாலும், திறமை மிகுந்தாலும், நாடு முன்னேற்றம் அடைந்ததாக கருத முடியாது. ஒருநாட்டில் உள்ள மக்கள் அனைவரும், அந்நாட்டின் உறுப்பினராவர். நாடு ஒரு உடல், அதில் வாழும் மக்கள் அனைவரும் அதனுடைய உயர்ந்த உறுப்புகள், ஒரு உடலில் உள்ள உறுப்புகள் யாவும் ஊனமின்றிச் செம்மையாக இருந்தால் அன்றோ அவ்வுடல் குற்றம் அற்ற உடலாகும்? அழகிய உடலாகக் காணப்படும்? ஆற்றல் நிறைந்ததாகத் தோன்றும்? அதுபோல நாட்டின் உறுப்பினராய மக்கள் யாவரும் உயர்வு தாழ்வின்றி ஒரு தன்மையான இன்ப முடனும் உரிமையுடனும் வாழ்ந்தால் அன்றோ அந்நாடும் நாடாகத் தோன்றி நிற்கும்? இவ்வுண்மையை ஒரு சிறிதும் மனத்திற்கொள்ளாமல், நாட்டில் பாதிக்குமேற்பட்ட உறுப்பின ராயிருக்கின்ற-நம்மைப் பெற்றுவளர்த்து ஆளாக்கிவிட்ட-அன்பின் உருவாகிய பெண்மக்கள் ஒருவகையிலும் உரிமை யின்றி வருந்திக் கிடக்கும்போது அவர்களுடைய நிலைமையை ஒரு சிறிதும் நினைக்காமல் ஆண்மக்கள் தங்கள் நலத்தை மட்டிலும் எண்ணி முன்னேற்றம், முன்னேற்றம் என்று அரற்றிக்கொண்டிருப்பதில் எந்த பொருள் இருக்கின்றது. முன்னேற்றம் அடைந்ததென்று பெயர்பெற்றிருக்கும் எந்த எந்த நாடுகளிலும் பெண்மக்களும், தங்கள் முன்னேற்றத்திற்குத் தடைசெய்வனவற்றை ஒழித்து உரிமை பெற்று வருகின்றனர். அடிமைப்பட்டுக் கிடக்கும் நமது நாட்டில் மட்டும் இன்னும் பெண்மக்கள் விடுதலை பெறாமல் வாடிக்கிடக்கின்றனர். பிறநாட்டினர் இகழ்ந்து பேசக்கூடிய தாழ்வானநிலையில் நமது தாய்மார்கள் இருப்பது நமதுநாட்டிற்கு பெரிய மானக் கேடன்றோ? அமெரிக்க மாதாகிய கன்னிமேயோ அவர்கள் நமது நாட்டைப்பற்றி எழுதிய இந்தியத் தாய் என்னும் புத்தகத்தில் பெரும்பகுதி, நம்நாட்டுப் பெண்மக்களின் தாழ்ந்த நிலையைக் குறித்தே கூறப்படுகின்றது என்பதை அதனைப் படித்தார் யாவரும் அறிவார்கள். அவ்வாறு எழுதத்தக்க நிலையில் நமது பெண்மக்கள் இருக்கின்றார்கள் என்பதை முற்றும் இல்லை என ஒரேயடியாக மறுப்பது முடியாத செயலென்பதே நமது கருத்து. இதுவரையிலும் யாராவது மேயோ கூறியது முழுதும் பொய் என்று கூற முன் வந்திருக் கிறார்களா? பிற நாட்டினர் இந்தியர்களின் கொள்கைகளைப் பழிக்கத்தக்கவாறு மேயோ போன்றவர்கள் புத்தகங்கள் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் நாம் தாம் என்பதில் ஐயம் என்ன? இனியேனும் பிறர் நம்மைக் கண்டு நகைக்கா திருக்குமாறு நமது நாட்டைச் சீர்திருத்த முற்படுவது நமது கடமை யென்பதை உணரவேண்டுமன்றோ? ஆனால் இப்பொழுது பெண்மக்களே தங்கள் முன்னேற் றத்தின் பொருட்டுக் கவலை கொண்டு வேலை செய்யத் தொடங்கி இருக்கின்றனர். அவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்கான வேலைகளை ஊக்கத்தோடும் விரைவோடும் செய்து வருவதைக் கண்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன் அவர்களுக்கு உதவியும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். தன்கையே தனக்குதவி யென்பது நீண்ட நாளையப் பழமொழி. பிறர் உதவியைக்கொண்டுதான் மேன்மையடைய மாட்டார்கள் யென்பதே நமது கருத்து. முயற்சியால் அடையக்கூடாத பொருள் என்ன இருக்கின்றது? முயற்சி திருவினை ஆக்கும் என்பது முன்னோர்களால் மொழியப்பட்டதேயாகும். உரிமைபெற முனைந்து நிற்கும் பெண்மக்களுக்கு நாம் செய்யவேண்டிய உதவி மனித சமூகத்தில் அவர்கள் அடையவேண்டிய உரிமைகள் முழுவதையும் அடைவதற்கு இடம்கொடுப்பதேயாகும். இங்ஙனம் செய்ய முன்வருவதே அறிவுடைய ஆண்மக்களின் முதற் கடமையாகும். அவ்வாறின்றிப், பகுத்தறிவற்று பிறர் நலம் கருதாத வைதீகக் கூட்டத்தாரைப் போல நாமும் அவர்கள் தமது உரிமையைப் பெறுவதற்கு ஒரு வகையிலும் தடையாயிருத்தல் கூடாது. பெண்மக்கள் உரிமை பெறுவதற்குத் தடைகல்லாயிருப் பவர்கள் கூறும் காரணங்களில் முதன்மையானது ஒன்றேயாகும். பெண்மக்கள் கல்வி கற்று அறிவுடையவர்களாக ஆகிவிட்டால் - உலகப் பொதுச் செய்திகளில் கலந்துகொள்ளும் உரிமையைப் பெற்றுவிட்டால் - நம்மைப்போலவே ஆளும் பதவியை அடைந்து விட்டால் அவர்கள் பிறகு ஆண்மக்களுக்கு அடங்கி நடக்க மாட்டார்கள் என்று தந்நலங்கொண்டவர்கள் கூறுகின்றனர். இக்கூற்று தந்நலத்தின் பேராசையால் உண்டாகும் கூற்றேயாகும்; பெண்மக்கள் இயற்கையிலேயே ஆண்மக்களை விடத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தால் உண்டாகியதாகும். பெண்மக்கள் ஆண்மக்களுக்கான ஊழியஞ்செய்து அவர்களுக்கு இன்பம் அளிப்பதற்காகவே தோன்றியிருக் கின்றார்கள் என்ற நினைப்பின் பயனாகும். ஆண்மக்கள்பாலுள்ள இத்தகைய கண்மூடி எண்ணம் மண்மூடிப் போக வேண்டும். அப்பொழுது தான் ஆண்மக்கள் பெற்றிருக்கும் உரிமைகள் முழுவதையும் பெண்மக்களும் பெறுவதற்கு உதவி செய்ய வேண்டுமென்னும் எண்ணம் உண்டாகும்.. அல்லது அவர்களுடைய முன்னேற்றத் திற்கும், உரிமைக்கும், முயற்சிகளுக்கும் தடையாக இருத்தல் கூடாது என்னும் எண்ணமாவது உண்டாகும். அறிவுடையவர்களென்று சொல்லப்படுகின்றவர்களிடம் உள்ள சுயநலந்தான் மற்றைய மக்களின் அடிமைக்கும், துன்பத்திற்கும் காரணமாகும். சுயநலம் உடையவர்கள் மற்றவர் களைத் தமக்குக் கீழ்ப்படுத்தி வைத்துகொண்டு அவர்கள்மீது ஆட்சி செலுத்தவே நினைப்பார்கள். இப்பொழுது பெண் மக்களையும், மற்றும் பல சமூகங்களையும் முன்னேற ஒட்டாமல் தடைசெய்துகொண்டிருக்கின்ற பாழான மதக்கொள்கைகளும், கொடுமையான நூல்களும் அத்தகைய தந்நலம் உடையவர்களால் காணப்பட்டனவேயாகும். நமது சமூகத்தில் நெடுநாளாகப் பொருளில்லாமல் வழங்கிவரும் பல வழக்கங்களும் இருக்கின்றன. இத்தகைய பழக்க வழக்கங்களும் பெண்மக்கள் முன்னேற்றத்திற்கு தடைபுரிந்து நிற்கின்றன. இனி மேலே கூறப்போகும் பகுதிகளில் பெண்மக்களின் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் தடையாயிருப்பன எவை எவை என்று கூறிமுடிப்போம். அவற்றில் பெண்மக்களைப்பற்றி வைதீகர்கள் கொண்டிருந்த கொள்கைகளைப்பற்றியும், அவர் களின் மாண்பைப்பற்றியும், நமது தமிழ்நாட்டுப் பண்டைப் பெண்களைப்பற்றியும், அவர்கள் தாழ்வுக்குக் காரணமாய் இருப்பனவற்றைப் பற்றியும் உயர்வடைவதற்கான முறைகளைப் பற்றியும் பல பிரிவுகளாக பிரித்துக் கூறிமுடிப்போம். மேலே கூறப்போகும் பகுதிகளில், சிறுபான்மை, நூல்களின் ஆதாரங்களைக் கொண்டும், பெரும்பான்மை, உலக நிகழ்ச்சியின் துணைகொண்டும் அறிவுக்குப் பொருத்தமான செய்திகளையே கூறுவோம். ஆகையால் அவற்றுள் பல முக்கிய செய்திகள், மதப்பற்றுடையவர்களுக்கும், தந்நலம் உடையவர்களுக்கும், குருட்டு நம்பிக்கை உடையவர்களுக்கும் பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் நம்மீதும், நம்போன்றவர்கள் மீதும், பெண்மக்கள்மீதும் ஆத்திரம் அடையலாம். ஆனால் இவ்வாறு சுயநலங்காரணமாக ஆத்திரமடையும் ஆராய்ச்சியும், இரக்கமும் இல்லாதவர்களைப்பற்றி நாம் ஒரு சிறிதும் பொருட் படுத்தவில்லை; உண்மை யில் ஆண்மக்களைப்போலவே பெண் மக்களும் சமஉரிமைபெற்று இன்புற வேண்டுமென்பதே நமது நோக்கமாகும். எந்தவகையிலும் ஒருவர்க்கொருவர் உயர்வு தாழ்வு பாராட்டுதல் கூடாதென்பதே நமது எண்ணமாகும். இரு கூட்டத்தாரும் ஒத்த இன்பம்பெற்ற உலகவாழ்க்கையை இனிது கழிக் கவேண்டுமென்பதே நமது கொள்கையாகும். ஆகவே இத்தகைய நல் லெண்ணத்துடனேயே பெண்மக்கள் பெருமை என்பது பற்றி எழுதத் தொடங்குகின்றோம். பெண்மக்களும் வைதீகரும் I இனி உத்தமமான நமது தாய்மார்களைப்பற்றி இதற்கு முன்னிருந்த வைதீகர்கள் கொண்டிருந்த கொள்கைகளையும், அவர்கள் பொருட்டு ஏற்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளையும் கூறுகின்றோம். கீழ்கூறும் செய்திகள், மிருதிகளிலும், தமிழ் நூல்களிலும் கூறப்படுவனவேயன்றி நம்மாற் புதிதாகப் புனைந்து கூறப்படுவன அல்ல. அவைகளிற்பல தற்கால வழக்கத்திலும் இருந்து வருகின்றன. பெண்மக்களைப்பற்றிப் பேசாத கலைகள் இல்லை; அவர் களைப்பற்றிக் கூறாத பாடல்களும் இல்லை; அவர்களை வெறுக்காத வைதீகரும் இல்லை. பெண்மக்களுக்குப் பெருமை யுண்டாகும்படி உயர்த்திக்கூறும் கூற்றுகளும் உண்டு. அவற்றைப் பின்னர்க் கூறுகின்றோம். அவர்களை இழித்துக்கூறும் செய்திகளே எண்ணிறந்தன. அறிஞர்கள், ஞானிகள், அவதாரபுருஷர்கள் என்று மதிக்கபடுகின்ற அனைவரும் அவர்களை இகழ்ந்தே கூறியிருக்கின்றனர். பெண்மக்களாலேயே ஆண்மக்கள் கெட்டுப் போனதாக கதைகளும் பல எழுதி வைத்திருக்கின்றனர் . பெண்மக்களின் பிறப்பையே பாவமான பிறப்பென்று கூறியுள்ளனர். உலகத்தில் மிகுதியான பாவத்தைச் செய்தவர்கள் தான் பெண்ணாகப் பிறப்பார்களாம். இவ்வாறு கூறியதன் நோக்கம் இவர்களை அடிமைப் படுத்துவதற்கே யன்றி வேறு எதற்காக? எண்ணறக்கற்று எழுத்தறவாசிப்பினும் பெண்புத்தி பின்புத்தி என்பது வைதீகர்கள் கூறும் பழமொழி. பேதமை என்பது மாதர்க்கு அணிகலம் என்று ஒருவர் சொல்லிவிட்டார், பெண்மக்களை மிகவும் கடிந்துரைப்பவர்கள் மதவாதிகளும், முத்தி என்பதைப் பெறமுயல்பவர்களும், ஜீவகாருணியத்தைப் பற்றிப் பேசுகின்றவர்களும் ஆகிய அறிஞர்கள்தான். அவர்கள், உலகிற் பாவம் உண்டாவதற்குக் காரணம் பெண்மக்கள் என்றும்; பெண்மக்களின் கூட்டுறவினாலேயே ஆண்மக்கள் கெட்டுப்போ கின்றார்கள் என்றும்; பெண்மக்கள்பால் சிறிதும் அன்பு காட்டுதல் கூடாதென்றும்; அவர்கள் முகத்தில்கூட விழிக்காமல் வெறுத் தால்தான் நல்ல கதியைப்பெறலாம் என்றும் கூறுகின்றனர். இதனை தூமகேது புவிக்கெனத் தோன்றிய வாமமேகலை யுடை மங்கை யரால் வரும் காமம் இல்லை எனில் கடுங்கேடெனும் நாமம் இல்லை, நரகமும் இல்லையே என்று கவிச்சக்ரவர்த்தி என்னும் சிறப்புப்பெற்ற கம்பர் கூறியிருப்பதையும் உணரலாம். கூட்டில் அடைக்கப்படும் பறவைகளைப்போலப் பெண் மக்களை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கவேண்டும் என்றும் அவர்கள் வெளியில் தனித்துச் செல்லுதல் கூடாதென்றும் கூறியிருக்கின்றனர். இதனாலேயே இல்லறத்தில் உள்ள பெண் மக்களுக்கு, இல்லாள் மனைவி முதலிய பெயர்கள் வழங்குகின்றன. பெண்மக்கள் பிறந்ததுமுதல் இறக்கும்வரையில் அடிமை யாகவே வாழ்ந்து மடியவேண்டுமென்பதே வைதீகர்கள் கொள்கை. அவர்கள் இளம்பருவத்தில் தாய் தந்தையர்களுக்குக் கட்டுப்பட்டு நடத்தல்வேண்டும். தாய் தந்தையர்கள் தங்கள் விருப்பப்படி யாருக்கேனும் மணஞ்செய்து கொடுத்த பின் கணவனுக்கு அடிமையாக இருந்து உயிர் வாழ வேண்டும். தன் மனத்திற்கு இசைந்த மணவாளனைத் தெரிந்து கொள்ளும் உரிமை பெண்களுக்கு இல்லை. தாய் தந்தையர்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட கணவன் கல்லாயினும் புல்லாயினும் கழுதை யாயினும் அவனைத் தெய்வமாகக் கொண்டு வழிபடுவதே பெண்களின் கடமையாகும். அவர்கள் வேறு தெய்வம் என்பதைக் கூட வணங்க உரிமை அற்றவர்களாம். மணஞ் செய்யப்பட்ட பெண்கள் தங்கள் கணவனையும், தாய் தந்தையர்களையும், மற்றைய பெண்மக்களையும், தவிர வேறு எந்த ஆண்மக்களையும் பார்க்கக்கூடாதாம். அவர் தம்முடன் பிறந்த சகோதரர்களைக் கூடப் பார்க்கக்கூடாதாம். கணவன் இறந்தால் மனைவியும் உடனே இறந்துவிட வேண்டும், இக் கொள்கைபற்றியே முன்னர் உடன் கட்டை ஏறுதல் என்னும் கொடுமையான செய்கை நமது நாட்டில் நடந்து கொண்டிருந்தது. அவ்வாறின்றி விதவைகளாக உயிர்வாழ விரும்புகின்ற பெண்மக்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்ள வேண்டும். பொதுவாகப் பெண்மக்கள் வயிறு நிறைய உணவு கொள்ளு தற்குக் கூட உரிமை அற்றவர்கள். இதனை உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு என்பதினால் உணரலாம். அதிலும், கைம் பெண்களா யிருப்பவர்கள் மிகச் சிறிய உணவை யுடையவர் களாய்க் கைம்மை நோன்பு என்பதை நோற்று உயிர் வாழ வேண்டுமாம். பெண்களை வேலைசெய்யும் கருவிகளாகவும், பிள்ளை பெறும் இயந்திரங்களாகவுமே வைதீக ஆண்மக்கள் கருதியிருக் கின்றனர். பெண்கள் பெறும் குழந்தைகள் பெண்களாக இருந்தால் அவர்களை அவ்வளவு சிறப்பாக பாராட்டப்படுவதில்லை. ஒவ்வொரு பெண்மகளும், ஓவ்வொரு ஆண்மகனையாவது பெற்றாக வேண்டுமாம். ஆண்மக்களை பெறாத பெண்மக்கள் பாவிகளாம். அவர்கள் முகத்தைப்பார்த்தால்கூடப் பார்த்தவர் களுக்குப் பாவம் வந்துவிடுமாம். ஆதலால் கணவன்மூலம் பிள்ளை பிறக்காவிட்டால் கணவனுடைய அண்ணன் தம்பிமார் களைக் கூடியோ அல்லது குருவைச் சேர்ந்தோ அல்லது வேறு எவ்வகையிலோ பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம் எனக் கூறியிருக்கின்றனர். இங்ஙனமே நடந்ததாக பல கதைகளிற் கேட்கின்றோம். அவைகள் நீதிகளாகவும் வடமொழி நூல்களிற் கூறப்படுகின்றன. பிள்ளை பெறுவதற்கு முன் கணவன் இறந்துவிட்டால், கைபெண்ணாயிருப்பினும், மேற்கூறிய வழி களில் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமாம். அப்பொழுது தான் குல முன்னோர்களாகிய பிதுர் தேவதைகள் என்று சொல்லபடுகின்றவர்கள் நற்கெதி பெறுவார்களாம். இனி வைதீகர்களால் புகழ்ந்து பேசப்படுகின்ற மநு தரும சாத்திரம் என்னும் மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாகக் கூறியுள்ளவற்றிற் சிலவற்றை எடுத்துக் காட்டுகின்றோம். பெண்கள் விபசாரித்தனமும், நிலையற்ற மனமும், நட்பில்லாமையும் ஆகிய குணங்களை இயற்கையாக உடை யவர்கள் பெண்களுக்கு மேற்கண்ட குணங்கள் பிரமன் சிருட்டித்த போதே உண்டானவை என்பதை உணர்ந்து அப்பெண்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டியது ஆண் மக்களுடைய கடமை என்று கூறப்படும் இச் சொற்றொடர்கள் பெண்களை எவ்வளவுதூரம் அவமானப் படுத்துகின்றன என்பதை சிறிது ஆராய்ந்து பாருங்கள்! இவ்வாக்கியங்கள் பெண்கள் மீதுள்ள அருவருப்பினாலும் அவர்களை அடிமையாக்கி நடத்தவேண்டுமென்னும் எண்ணத் தினாலும் உண்டானவை என்பதில் சிறிதும் ஐயமுண்டோ? படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றைப் பெண்களுக்குக்காகவே மநுவானவர் கற்பித்தார் என்பதும் மநுதரும சாதிரத்தின் கூற்றாகும். இதனால் பெண்களை காமம் உடையவர்களென்றும், கோபம் உடையவர்களென்றும், பொய்யர்களென்றும், துரோக சிந்தை உடையவர்களென்றும், இழித்துக் கூறப் பட்டிருக்கின்றதைப் பெண்மக்கள் ஒப்புக்கொள்ள முடியுமா? இத்தகைய குணங்கள் ஆண்மக்களிடம் மிகுதியாக இருக்கின்றனவா? பெண்மக்களிடம் மிகுதியாக இருக்கின்றனவா? என்பதை உலக நிகழ்ச்சிகளை உற்று நோக்குவார் எவரும் எளிதில் அறிந்து கொள்ளலாம். மாதர்கள் விபசார தோஷம் உடையவர்களென்று அநேக சுருதிகளும் சாத்திரங்களும் கூறுகின்றன. இது நாம் கூறும் சொற்றொடர் அன்று. வைதீகர்களால் போற்றப்படும் மநு தரும சாத்திரத்தின் உயர்ந்த வாக்கியமாகும். இதனால் மநுதரும சாத்திரமேயன்றி வேறுபல சாத்திரங்களினாலும் பெண்களைப் பற்றி இழிவாகவே கூறப்பட்டிருக்கின்றன என்பதையும் உணரலாம். இங்ஙனமே எல்லா நூல்களிலும் பெண்மக்களைப்பற்றி மிகவும் இழிவாகவே கூறப்பட்டிருக்கின்றன. ஐந்தாம்வேதம் என்று ஆரியர்களால் புகழப்படும் வடமொழி நூலாகிய பாரதம், சைவ சமயத்தவர்களால் தெய்வத்தன்மை பொருந்திய தென்றும், அருள் நூல் என்றும் போற்றப்படுகின்ற பெரிய புராணம், ஆகிய நூல்களில் பெண்களைப்பற்றி கூறப்படும் கதைகள் மிகப்பலவாகும். தெய்வத்தன்மையுள்ள பாடல்கள் என்று கொண்டாடப்படும் திருப்புகழ் என்னும் நூலைப்போலப் பெண்மக்களைக் குறைகூறும் நூல் வேறொன்றும் இல்லை. இத்தகைய நூல்களைப் போற்றுகின்ற வரையிலும் பெண் மக்கள் விடுதலை பெறுவது ஏது? ஆண்மக்களாலேயே பெண்மக்கள் துன்புறுவதும் இன்பம் இழப்பதும் கண்கூடாயிருக்கப் பெண்மக்களால் தான் ஆண்மக்கள் கெடுகின்றார்கள் என்று கூறுவது எவ்வளவு அறிவற்ற உரையாகும்? யாருக்கும் தன்னைத் தான் அடக்கி யாளும் ஆற்றல் வேண்டும். அவ்வாற்றல் இல்லாதவர்கள் என்பதினால் உணரலாம். அதிலும், கைம் பெண்களாயிருப்பவர்கள் மிகச் சிறிய உணவை யுடையவர்களாய்க் கைம்மை நோன்பு என்பதை நோற்று உயிர் வாழ வேண்டுமாம். அறிவுடையவர்களென்றோ ஆண்மை யுடையவர் களென்றோ கூறமுடியாது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று கூறும் அறிஞர் மொழி உற்று நோக்குதற்குரியதாகும். தன்னைத் தான் அடக்கியாளுந் திறமையற்றவர்களைக் கோழைகளென்றோ கூற வேண்டும். பெண்மக்கள் எப்பொழுதும் தம்மைத்தாமே அடக்கியாளுந் திறமையுடையவர்கள். ஆகவே இவ்வகையில் நோக்கும் போது பெண்மக்கள் கோழைகளா? ஆண்மக்கள் கோழைகளா? என்பதை அறிந்துகொள்ளலாம். தமது மனத்தில் எழும் காதலை-ஆசையை-கெடுநினைப்பை அடக்கி ஆள முடியாதவர்கள், ஞானி என்றும், யோகி என்றும், தவசியென்றும், சாமியென்றும் பெயர் வைத்துக்கொண்டு பெண்மக்கள் மீது பழி சுமத்தியிருகின்றனர். சிலர், பெண்மக்கள் தமக்குச் செய்த நன்றியைச் சிறிதும் சிந்தியாமல், அவர்களை கூற்றுவனுக்கு ஒப்பிட்டுக் கூறும் மொழிகளும் நூல்களிற் காணப்படுகின்றன. ஆகவே இவ்வாறு அவர்களைப் பலவகையில் இழித்துக் கூறுவதெல்லாம், ஆண் மக்கள் தங்கள் சுயநலத்திற்காகவே என்பதை ஒருவராலும் மறுக்க முடியாதென்பது உண்மை. இதுகாறும் பெண்மக்களைப் பற்றி வைதீகர்கள் இழிவுபடுத்தி கூறியுள்ளனவற்றிற் பலவற்றைக் கூறினோம். இனி அவர்களுக்கு உயர்வுகொடுத்திருக்கும் சில செய்திகளைக் கூறுகின்றோம். பெண்மக்களும் வைதீகரும் II வைதீகர்கள் பெண்மக்களைத் தங்கள் சுயநலத்தின் பொருட்டு எவ்வளவுதான் தாழ்மையாகக் கூறியிருப்பினும் அவர்களுடைய உயர்வையும், சிறிது உணர்ந்திருக்கிறார்கள் என்று கூறவும் வேண்டியிருக்கின்றது. அவர்கள் இல்லாவிட்டால் உலகத்தில் தாங்கள் வாழமுடியாது என்பதை நன்றாக உணர்ந் திருக்கின்றார்கள். ஆகையால் அவர்களுக்கும் ஆங்காங்கே உயர்வு கொடுக்கும்படி நேரிட்டுவிட்டது. அவர்கள் பெண் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உயர்வைக் கொண்டே பெண் மக்களுடைய பெருமையை நன்றாக உணர்ந்துகொள்ளலாம். முற்கால வைதீகர்கள் பெண்மக்களுக்குக் கொடுத்திருக்கும் உயர்வை நன்றாகச் சிந்தித்துப் பார்க்கும் எந்த வைதீகனும் தற்காலத்தில் பெண்மக்களுரிமைக்கு எதிராக இருக்கமாட்டான்; என்பது திண்ணம். பெண்மக்களுக்கு உரிமை வேண்டுமென்று கூறுகின்ற பெண்மக்களும், எம்போன்ற சுயமரியாதைக்காரர்களும் சொல்லுவது முழுவதும் நல்ல விஷயங்களென்று வைதீகர்களில் நடுவுநிலைமையான அறிவுடையவர்கள் ஒப்புக் கொள்ளகூடும் என்பது திண்ணம். ஆதலால் பெண் மக்களுக்கு எந்தெந்த வகையில் உயர்வு கொடுத்திருக்கின்றார்கள் என்பதை சுருங்கக் கூறி முடிக்கின்றோம். ஒரு மனிதன் உலக வாழ்க்கையில் முழு இன்பத்தையும் அடையவேண்டுமானால், பெண்ணுடனும் கூடிவாழ வேண்டும், பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்வதே இயற்கை ஆகும். பெண்ணும் ஆணும் சேர்ந்து வாழ்தல் இல்லாவிட்டால் உலக வளர்ச்சியே இல்லை. மரஞ்செடி கொடிகளிலும் பெண் ஆண் முதலிய வேறுபாடுள்ளவைகள் ஒன்று கூடுவதன் மூலமாகவே அவைகள் இனவிருத்தி செய்கின்றன என்னும் உண்மையைத் தாவரநூல் ஆராய்ச்சியாளர் கண்டறிந்திருக்கின்றனர். அதைப் போலவே, பட்சியினங்களும், மிருகக் கூட்டங்களும், ஆணும் பெண்ணும், ஒன்றோடு ஒன்று அன்புபாராட்டித் துணையாக இருந்தே இன்பமாகப் பொழுது போக்கும்போது மக்கள் வாழ்கையில் ஆண் பெண் கூட்டுறவு இயற்கை என்பதை யார் தான் அறியமாட்டார்? இக்காரணங்களைக் கொண்டுதான் தமிழ் மக்கள் இல்லற வாழ்க்கையையே சிறப்பித்துக் கூறினர். உலக இன்பத்தை அறியாத ஆரியமாக்கள்தான், இல்லறத்தைவிடத் துறவறத்தை உயர்வுபடுத்தி உரைத்திருக்கின்றனர். இதனை இயற்கையினால் இல் வாழ்கையில் வாழ்கின்றவன் என்பவன், உலக இன்பத்தை அடைய முயல்கின்றவர் எல்லாருள்ளும் சிறந்தவனாவான் என்னும் கருத்துள்ள இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல் வாருள் எல்லாம் தலை. என்னும் குறளால் அறியலாம். இத்தகைய இன்பம் அளிக்கத்தக்க இல்வாழ்க்கையைப் பெண்களையின்றி எவ்வாறு நடத்த முடியும்? காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்னும் மற்றொரு வாக்கியமும், ஆண் பெண் ஒற்றுமையின்றேல் உலக இன்பம் இல்லையென்பதை உணர்த்தி நிற்கின்றது. இது மட்டுமோ? பெண்மக்களை மிகவும், இழித்துக் கூறும் மநுதரும சாத்திரத்தில் கூட மனையாள், பிள்ளை, கணவன் இம்மூவரும் சேர்ந்துதான் புருஷன் ஆகிறான் என்று வேதத்திற் சொல்லியிருக்கிறது. (அதாவது மனையாள் பாதி சரீரம் என்றும், புத்திரன் ஆத்ம சுவரூபமென்றும் கருத்து) பின்னும் வேதம் அறிந்தவர்களும், கணவனுக்கும் மனையாளுக்கும் பேதம் இல்லையென்று இருவருக்கும் ஐக்கியஞ் சொல்லு கிறார்கள். என்று கூறப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடில்லையென்பதை ஒருவகையில் ஒப்புக்கொண்டவர்களாகின்றார்களன்றோ? அன்றியும் இல்லறத்திருக்கின்றவர்கள் எந்தச் செயல் களையும் ஆணும் பெண்ணும் சேர்ந்தே செய்யவேண்டுமென இல்லறத்தருமங்களில் சொல்லியிருக்கின்றனர். வைதீகர்கள், குருக்கள்மார்களின் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்படுத்தப்பட்ட சிரார்த்தம் என்பதை மிகவும் புண்ணிய காரியமாகக் கருதி யிருக்கின்றனர். இத்தகைய திதியை மனையாளோடு கூடியிருக் கின்ற ஒருவன் செய்ய வேண்டுமாயின், தன் மனைவியையும் துணையாகக்கொண்டு தான் செய்யவேண்டுமென்று நூல்களில் விதித்திருகின்றனர். அன்றியும், தல யாத்திரையிலும், தீர்த்தயாத்திரையிலும், மோட்சமும், பாப விமோசனமும் இருப்பதாகக் கூறி அதன் மூலம் மக்களுடைய பொருளுக்கும், உடலுக்கும், முயற்சிக்கும் தீமை செய்திருக்கும், புனிதமான செயல்களையும், மனைவி யோடுதான் செய்யவேண்டுமென்று விதிக்கின்றனர். இன்றும் புனிதமான நதிகளிலும், தீர்த்தங்களிலும் முழுகுகின்ற ஆடவர்களும், பெண்டிர்களும் ஒருவர் முன்தானையோடு, ஒருவர் முன்தானையை, முடிந்து கொண்டேனும் அல்லது கைகோர்த்துக் கொண்டேனும் முழுகுவதைக் காண்கின்றோம். இவ்வாறு செய்யாவிட்டால், கோயில் குளங்களுக்குப் போவ தனாலும், நீராடுவதனாலும் பலன் இல்லையென்று வைதீகர் சாத்திரங்களில் சொல்லப்படுகின்றது. இன்னும் இல்வாழ்க்கையில் உள்ளவர்கள் எந்தத் தான தருமங்களைச் செய்தாலும், புருஷனும் மனைவியும் ஒத்துச் செய்வதுதான் உயர்வானதென்றும், அதனால்தான் பலன் அடையலாமென்றும் கூறியிருக்கின்றனர். ஆகவே இல்லற வாழ்கையின் இலக்கணங்களை ஆராய்ந்து பார்க்குங்கால், ஆரியமுறையிலும் பெண்மக்களுக்குப் பலவகையான உயர்வை முன்னோர்கள் கொடுத்திருக்கின்றார்கள் என்பதைத் தெளிவாக உணரலாம். மேற்கூறிய செய்திகளிருந்து பெண்மக்களும், ஆண்மக்களும் ஒருதன்மையானவர்கள் என்பதை அறியலாம். இனி ஆண்மக்களைக்காட்டிலும் பெண்மக்கள் உயர்ந்தவர்க ளென்று வைதீகர்கள் ஒப்புக்கொண்டிருக்கும் சில விஷயங்களை கூறுகின்றோம். நாம் எப்பொழுதும் இயற்கைப் பொருள்களில் எல்லாம் தெய்வீகத்தைக் கற்பிப்பதை உண்மையென்று கொள்ள மாட்டோம். ஆதலால் கீழ்க் கூறுவனவற்றைக் கொண்டு அவற்றை நாம் நம்புவதாகவோ, பிறரை நம்பும்படி கூறுவதாகவோ ஒருவரும் நினைத்தல் கூடாது. ஆனால் அப்பொய்க் கூற்றுகள், பெண்மக்களின் உயர்வைக் காட்டுவதற்கு எடுத்துக்காட்டா யிருப்பதனால் அவைகளைக் கூறுகின்றோம். நாம் இவ்வுலகில் உணவுப் பொருளின்றி உயிர்வாழ முடியாது என்பது எல்லோராலும் அறியப்பட்டதாகும். இத்தகைய உணவுப் பொருளுக்குரிய தானியங்களையெல்லாம், இலட்சுமி என்று வைதீகர்கள் கூறுகின்றனர். இலட்சுமியென்பது திருமாலென்னும் தெய்வத்தின் மனைவியாகிய பெண்தெய் வத்தின் பெயர். பொன் மணி முதலியவைகளும் மக்களுடைய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படக்கூடியவைகள். அவைகளையும் இலக்குமி என்று கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு மனிதனுக்கும் தைரியம் மிகவும் அவசியமான தாகும். தைரியமில்லாத மனிதனால் உலகத்தில் ஒரு காரியத்தை யும் செய்வதற்கு இயலாது. உலகத்தில் துன்பவாழ்க்கையில் இருக்கின்றவர்கள் அனைவரும் தைரியமற்றவர்களாகவே இருக்கின்றனர். எத்துணை இடையூறு வந்தாலும், உண்மையான - நன்மைதரத் தகுந்த காரியங்களைச் செய்வதற்கு அஞ்சா மலிருப்பவனே சரியான மனிதனென்று கூறப்படுவான். ஆகையால் இத்தகைய தைரியத்தையும் இலக்குமியாகவே வைதீகர்கள் கூறி இருக்கின்றனர். எல்லா மனிதர்க்கும் தோற்றம் மிகவும் அவசியமான தாகும். தோற்றம் என்பது பிறர்பார்த்து அன்பும், அச்சமும், அடையத்தகுந்த உருவம். அஃது அழகாகும். இத்தகைய உருவை ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசிய மாகும். இயற்கையில் அழகிய உருவம் இல்லாவிடினும், ஆடையாபரணங்களைக் கொண்ட செயற்கை அழகையேனும் ஒவ்வொருவரும் செய்து கொள்ளவேண்டும். ஆகையால் இந்த அழகையும் வைதீகர்கள் லட்சுமியெனக் கூறியிருக்கின்றனர். கல்வி எல்லோர்க்கும் அவசியமென்பது யாவரும் அறிந்த செய்தி. ஆரிய நூல்களில், பெரும்பாலும் பெண்மக்கள் கல்வி அவசியம் என்று கூறப்படாவிடினும், அக்கல்வியை ஒரு பெண்ணாகவே உருவகஞ் செய்திருக்கின்றனர். கல்வியென்பதற்கு அதிதேவதையாக பிரமன் என்னும் தெய்வத்தின் மனைவியாகிய சரவதியை வைத்திருக்கின்றனர். இதுவும் அன்றிக் கல்வியை ஒரு லட்சுமியாகவும் கூறியிருக்கின்றனர். கீர்த்தி என்பதும் மக்களாய்ப் பிறந்தவர்க்கு வேண்டிய தாகும். கீர்த்தி என்பது பலரும் தன்னைப்பற்றிப் புகழ்ந்து பேசுமாறு நடந்துகொள்ளுவதும், தன் பெயர் எங்கும் பரவுவதும் ஆகும். அவ்வாறு கீர்த்தி உண்டாவதற்கு நல்ல நடத்தை, நல்ல செய்கை, நல்ல குணம் முதலியவைகள் காரணமாகும். பலரும் தம்மைக் கெட்டவர் என்று இகழ்ந்து கூறும்படி நடந்து கொள்வது எல்லோர்க்கும் எளிதான செயல். நல்லவர் என்று பெயர் வாங்குவது சிறிது கஷ்டமான செய்கையாகும். ஆகவே இத்தகைய கீர்த்தியையும் இலட்சுமி என்னும் தெய்வமாகக் கூறியிருக்கின்றனர். வெற்றியென்பதே எவருக்கும் அவசியம். தான் எடுத்தகாரி யத்தில் வெற்றிபெற வேண்டும். அதற்கு அறிவு திறமை முதலியன மிகவும் முக்கியமாக வேண்டுவனவாகும். வெற்றியில்லாவிட்டால் உலகில் ஒருவரால் ஒரு காரியத்தையும் நிறைவேற்ற முடியாது. ஆகையால் வெற்றியையும் லட்சுமி என்னும் தெய்வப்பெயராற் குறிப்பிட்டிருகின்றனர். அடுத்தபடியாக இராச்சியம் என்பது அரசனுக்கு மிகவும் முக்கியமானதாகும். நல்ல இராச்சியம் இல்லாத அரசன் அரசனாகமாட்டான். அத்தகைய ராச்சியத்தையும் லட்சுமி என்னும் தெய்வமாக உருவகஞ் செய்திருக்கின்றனர். இவ்வாறே உலக வாழ்க்கையில் நன்மை தரத்தக்க எல்லாப் பொருள்களையும் பெண் தெய்வத்தின்பேரால் குறிப்பிட்டி ருக்கும் பழைய வைதீகரின் மனப்பான்மையை ஆராய்ந்தறிய வேண்டும். மேற்கூறியவைகளைத்தான் அஷ்ட லட்சுமியென்று கூறுவார்கள். அவை:- தானிய லட்சுமி, தன லட்சுமி, தைரிய லட்சுமி, சௌரிய லட்சுமி, வித்தியா லட்சுமி, கீர்த்தி லட்சுமி, விசய லட்சுமி, இராச்சிய லட்சுமி ஆகியவைகளாகும். இவ்வாறு எல்லாப் பொருள்களையும், பெண் தெய்வமாகக் கூறியிருக்கும்போது பெண்மக்களை அவமதிப்பதும், அடிமையாக நினைப்பதும் முறையாகுமோ? இன்னும் வைதீகர்களால் புனைந்து கூறப்படும் தெய்வங் களில் பெண்ணோடு கூடியில்லாத தெய்வங்கள் எவை? அப் பெண் தெய்வங்களை உலகமாதா என்றும், ஆண் தெய்வங்களை உலக தந்தையென்றும் கூறியிருக்கின்றார்களன்றோ? இத்தகைய, பார்வதி, இலட்சுமி, சரவதி முதலிய பலவகையான பெண் தெய்வங்களை நினைத்து நினைத்து உருகும் வைதீகர்கள், கண்கண்ட தெய்வங்களாக நின்று நமக்குப் பல வகையிலும் உதவி செய்கின்ற பெண்மக்களை அடிமையாக வைத்திருப்பது உண்மையான வைதீகமாகுமா? ஆகையால் பழைய வைதீகக் கொள்கைப்படியும் ஆண்மக்களைக்காட்டிலும் பெண்மக்கள் உயர்ந்தவர்களென்பதை உணர்ந்துகொள்ளலாம். பெண்மக்களும் பிறவிக்குணங்களும் இவ்வுலகில் வாழும் உயிர்களிற் சில உயர்வான முறையில் வாழ்வதையும், பல தாழ்வான முறையில் வாழ்வதையும் காணு கின்றோம். சிலவுயிர்களின் வாழ்க்கையைக் கண்டு இவற்றின் வாழ்க்கை மிகவும் இன்பமான வாழ்க்கை என்று நினைக் கின்றோம். பல உயிர்களின் வாழ்க்கையைக் கண்டு இவற்றின் வாழ்க்கை மிகவும் துன்பமான வாழ்க்கையென்று கருதுகின்றோம். உயர்வான முறையில் வாழ்வதென்பது இன்பமான வாழ்க்கையும், தாழ்வானமுறையில் வாழ்வதென்பது துன்பமான வாழ்க்கையும் ஆகும். ஆனால் நாம் நினைப்பதுபோல சில உயிர்கள் இன்பமான வாழ்க்கையில் வாழ்வதென்பதும், பல உயிர்கள் துன்பமான வாழ்க்கையில் வாழ்வதென்பதும் உண்மையாக இருக்க இடமில்லை. ஒவ்வொரு உயிர்வகைகளும் அவ்வவற்றின் இயற்கைக்கு ஏற்பவே வாழுமாயின், இன்ப துன்பங்களும், அவைகளிடம் ஒரு தன்மையாகவே இருக்கவேண்டும். அதாவது:- எல்லாவுயிர்களிடத்தும் அவற்றின் வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் ஒரு தன்மையாகவே நிகழும் என்பது தான் உண்மை யாக இருக்கமுடியும். உதாரணமாக விலங்கினங்களின் தன்மையைச் சிறிது கவனியுங்கள். அதாவது:- அவற்றின் வாழ்க்கை முறையை உற்று நோக்குங்கள். அவைகளுக்குரிய இயற்கை வாழ்க்கையில் அவைகள் வாழ்ந்து கொண்டிருக்குமாயின், பார்வைக்கு நமக்குத் தோன்றுவது போல அவைகளுக்குத் துன்பம் மிகுதியாக இருக்கும் என்று கூற முடியாது. அவைகள் இளமைப் பருவத்தில் தாய் விலங்குகளின் உதவியைச் சிறிது காலம் பெறுவதாகிய அவ்வளவேயன்றிப், பிற்காலத்தில் வேறொன்றின் உதவியையும் எதிர்பாராமலே தமது வாழ்க்கையை நடத்தக் கூடியனவாயிருக்கின்றன. அவைகள் ஒருவருக்குக் கட்டுப்படும் அடிமைத் தன்மையின்றித் தமது விருப்பப்படி சுற்றித் திரிகின்றன. இயற்கையான உணவுகளைப் பக்குவப்படுத்தாமல் இயற்கையாகவே உண்டு உயிர் வாழ்கின்றன. தாவரவர்க்கங்களை உண்ணும் விலங்கினங்கள் இயற்கையான புல், பூண்டு, செடி, கொடி, தழைகளை உண்டு உயிர்வாழ்கின்றன. மாமிச பட்சணிகளாகிய விலங்கினங்கள் தமக்குக் கீழ்ப்பட்ட விலங்கினங்களைக் கொன்று தின்று உயிர் வாழ்கின்றன. பெரும் பாலும் விலங்கினங்கள் தாம் வசிப்பதற்குத் தாமே இடம் அமைத்துக் கொள்ளும் ஆற்றல் இன்றி, இயற்கையான மலைப்பாறைகளிலும், மலைக் குகைகளிலும், மரநிழல்களிலும், புதர்களிலும் வாழ்ந்து காலங்கழிக்கின்றன. இவ்வாறு வாழ்வது மிருகங்களின் இயற்கைத் தன்மையாகும். இவையே அவற்றின் பிறப்புரிமை. இவற்றைப் பிறவிக்குணம் என்றும் கூறலாம். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகக் காணப்படு கின்ற பறவையினங்களும் பிறந்த சில நாட்கள் வரையிலும் தாய்ப்பறவைகளின் உதவியைப் பெற்றுக்கொண்டு, பறக்கக் கற்றுக் கொண்டபின்னர், தாமே தமது வாழ்க்கையை நடத்து கின்றன தமது விருப்பப்படி பறந்து திரிகின்றன. இயற்கையான உணவுகளைத் தேடி உண்டு வாழ்கின்றன. அவைகளிற் சில, அழகான கூடுகளைக் கட்டிக்கொண்டு வாழும் ஆற்றல் உடை யனவாகவும் சில, மரங்களில் பொந்து செய்து கொண்டு வாழும் வலிமையுள்ளனவாகவும், சில, தாமே உறையிடம் செய்து கொள்ளும் திறமையின்றி மரக்கிளைகளிலும், இடங்கிடைத்த சந்து பொந்துகளிலும் வாழும் இயல்புடையனவாகவும் இருக்கின்றன. சில பறவைகள், மாந்தர் மகிழ்ச்சி அடையும்படி அழகாக இனியகுரலுடன் பாட்டுப்பாடுந் தன்மையுடை யனவாகவும் சில அழகாகக் கூவுந்தன்மையுடையனவாகவும் இருக்கின்றன. இவைகள் பறவைகளின் இயற்கைத் தன்மைகள் என்றும், பிறப்புரிமை என்றும் கூறலாம். இவ்வாறே ஊர்வன, நீர்வாழ்வன முதலாகிய பல வகையான உயிர்ப்பிராணிகளும், தத்தம் பிறவிக்குணங்களுக்கு இயைந்தவாறு வேறு வேறு வகையாக தமது வாழ்க்கையை நடத்துகின்றன. இவ்வாறு ஒவ்வொரு இனத்திற்கும் உள்ள பொதுத் தன்மையைத் தான் பிறவிக்குணம் என்று கூறலாம். இவ்வாறின்றி ஒவ்வொரு உயிர்ப்பொருளின் தனிச்செய்கையை எடுத்துக்கொண்டு அதனைப் பிறவிக்குணம் என்று கூறுதல் பொருந்தாது. உதாரணமாக ஒரு பச்சைக்கிளியை எடுத்துக் கொள்வோம். பேசுந்தன்மை அமைந்திருப்பது அதன் பிறவிக்குண மாகும். இக்குணம் அதற்கு அமைந்திருப்பதால் தான் அதற்குப் பேசக்கற்றுக் கொடுத்தால் பேசுகின்றது. பேசுதற்கு அறியாது காட்டில் பறந்துதிரிகின்ற கிளிகளுக்குப் பேசுந்தன்மை பிறவியில் அமையவில்லை என்று கூற முடியாது. கற்றுக்கொடுத்தாலும், நாம் பேசுவதுபோலப் பேசுவதற்கு முடியாத மாடு, ஆடு, கழுதை போன்ற விலங்கினங்களும், காக்கை, கழுகு முதலிய பறவையனங்களுமே பிறப்பில் பேசுந்தன்மை அமையாதனவாகும். இவைபோலவே மக்களின் பிறவிக்குணங்கள் என்பனவும், ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள ஒரு வேறுபாட்டைத்தவிர பெரும்பாலும் ஒரேவகையாகவே அமைந்திருக்கின்றன. அந்த ஒரு வேறுபாடும் பிள்ளை கொடுப்பது, பிள்ளை பெறுவதுந்தான். தம்பகுத்தறிவின் வலிமையால் தமக்குத் தேவையான பொருள் களை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வலிமைபெற்றிருப்பது மக்களின் உயரிய பிறப்புரிமையாகும். உலகத்தில் இயற்கையாகத் தோன்றியுள்ள பெரும்பாலான பொருள்களைத் தமது ஆட்சிக்குள் அடக்கியாளவும் மக்கள் திறமைபெற்றிருக்கின்றனர். உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தமது வயிற்றுப்பாட்டின் பொருட்டே உழைத்து உண்டு,உடுத்து, மனைவி மக்களுடன் உறைந்து மாள்வதைக்கொண்டு, சில மக்களிடந்தான் மேற்கூறிய தன்மைகள் உண்டு, பலமக்களிடம் அத்தகைய தன்மைகள் இல்லை என்று கூறமுடியாது. எல்லோரிடத்திலும் அமைந்துள்ள அத்தன்மையைச் சிலர் அறிந்து பெருக்கிக் கொண்டனர், பலர் அறியாமலும் பெருக்கிக்கொள்ளாமலும் இருக்கின்றனர் என்று தான் கூறவேண்டும். மாந்தர்கள், ஒவ்வொருவரும், குணத்திலும், செய்கையிலும், திறமையிலும், அறிவிலும் வேறுபட்டுக் காணப்படுவதற்குக் காரணம், அவரவர்களின் இளமைப் பழக்கமேயாகும். தொட்டிற் பழக்கம் சுடுகாடுமட்டும் என்பது போல் இளமையிற் பழகிய பழக்கம் எப்பொழுதும் நீங்குவதில்லை. ஒவ்வொரு நாட்டி லிருந்தும், ஒவ்வொரு ஜாதியிலிருந்தும் ஆண் பெண் முதலிய பல குழந்தைகளை பால்மணமாறாப் பச்சிளம்பருவத்திலேயே பொறுக்கி எடுத்து, ஒரே இடத்தில் வைத்து, ஒரே விதமான, உணவு, உடை, விளையாட்டு, படிப்பு, பேச்சு, பழக்கம் முதலி யவைகளைக் கொடுத்துவருவோமானால், அக்குழந்தைகள் அனைவரும் பிற்காலத்தில் பொதுவாக ஒரு தன்மையான, அறிவு, குணம், செய்கை, மனம், உடையவர்களாயிருப்பதைக் காணலாம். ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதக்குழந்தைகள் பல ஓநாய்களின் குணங்களை யுடையனவா யிருக்கின்றன வென்பதைப் பலர் கண்கூடாகக் கண்டறிந் திருக்கின்றனர். இதனாலும் மக்களின் தன்மை பழக்கத்தினால் வேறுபடும் என்பதை உணரலாம். மக்களியல்பு இங்ஙனமிருக்க, நமது முன்னோர்களாகிய சுயநலம் பிடித்த வைதீகர்கள், பெண்மக்களுக்குப் பிறவியிலேயே சில குணங்கள் இருப்பனவாகக்கூறி, அவற்றின் மூலம் அவர் களைத் தாழ்மைப்படுத்தி யிருக்கின்றனர். அக்குணங்களாவன:- அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பனவாகும். இக்குணங்கள் நமது இந்திய நாட்டில் நாகரீகம் அடையாத பெண்கள்பால் காணப்படுவதற்குக் காரணம் பழக்கமேயன்றிப் பிறவியில் உண்டாகவில்லை. பெண் குழந்தைகளை எவ்வாறு பழக்கு கின்றோமோ அவ்வாறே ஆண்குழந்தைகளையும் பழக்கி வருவோமாயின் அவர்களிடத்திலும் மேற்கூறிய-பெண்களுக்கு உரியனவாகக் கூறப்படும் - நான்கு வகையான குணங்களும் இருக்கக் காணலாம். இனி, அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கு வகையான தன்மைகளும், எத்தகைய பழக்கங்களால் உண்டா கின்றன வென்பதைப்பற்றித் தனித்தனியே கூறி முடிக்கின்றோம். அச்சம்:- இளங்கன்று பயம் அறியாது என்னும் சாதாரண பழமொழியை உணர்ந்தவர்கள், இக்குணம் பிறப்பில் உண்டாவதன்று என்பதை அறிவார்கள். இளமை முதல், ஆண் குழந்தைகளாயினுஞ் சரி, பெண்குழந்தைகளாயினுஞ் சரி, அவர்களை, அவர்கள் விருப்பம்போலச் சுற்றித் திரியும்படி பழக்கினால் அவர்கள் எப்பொழுதும் அச்சம் என்பதைச் சிறிதும் அறியமாட்டார்கள். இவ்வாறின்றி, நாம் சிறு குழந்தை களிடம், பூச்சியென்றும், பூச்சாண்டியென்றும், திருடனென்றும், பேயென்றும், பூதமென்றும், சாமி என்றும், பலவாறு கூறிப் பயமுறுத்துகின்றோம். இதனால் ஆண் பெண் இருபாலார்க்கும் இளம் பருவத்திலேயே பலவகையான மூடநம்பிக்கைகளும் அச்சமும் உண்டாகி விடுகின்றன. ஆண்பிள்ளைகள் சிறிது வயது வந்த பின்பு, வெளியில் பல விடங்களிலும் ஓடியாடி வருவதனால் தைரியசாலிகள் போலக் காணப்படுகின்றனர். ஆனால் பெண்மக்களை என்றாலோ, சிறிய வயது முதலே வெளியிடங்களுக்குத் தனியாகச் செல்ல விடாமல் வீட்டிற் குள்ளேயே அடைத்து வைத்து விடுகின்றோம். அன்றியும் அவர்களிடம், சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை என்பனபோன்ற விஷயங்களைக் கூறி, அவர்களே, தம்மைவிட, ஆண்பிள்ளைகள் தைரியசாலிகள் என்று நினைக்கும்படி செய்கின்றோம். பெண்களைப்பற்றியும் பலவாறு இழித்துக் கூறி, அவர்கள் எதற்கும் ஆண்கள் கையை எதிர்பார்த்துத் தான் வாழவேண்டும் என்று எண்ணும்படி செய்துவிடுகின்றோம். இத்தகைய பல காரணங்களாலேயே பெண்மக்கள்பால் அச்சம் உண்டாகின்றது. மடம்:- மடம் என்பதற்கு அறியாமை என்பது பொருள். அறியாமை என்பது பெண்களுக்குப் பிறப்புரிமை என்று கூறும் பெரியார்களின் அறிவு மிகவும் வியப்பதற்குரியதாகும். கல்வி கற்காமலும், அறிவுடையவர்களுடன் பழகாமலும், பல விஷயங் களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளாமலும், பல விஷயங்களை நேரேகண்டு உணர்ந்துகொள்ளாமலும், சுற்றுப்பிரயாணஞ் செய்யாமலும் இருகின்றவர்கள். ஆண்களாயினும், பெண் களாயினும் அவர்களிடம் அறியாமை காணப்படுவது இயற்கையே. பெண்களுக்கு ஒருவித உரிமையும் கொடாமல், ஆடுமாடுகளைப்போல வீட்டில் அடைத்து வைத்திருந்தால் ஏன் அவர்களிடம் மடம் காணப்படாது. நாணம்:- நாணம் என்பது பிறரைக் காணவும், அவருடன் பேசவும், பழகவும் வெட்கமடைதல். இதுவும் பழக்கத்தால் ஏற்படும் குணமேயாகும். சிறுவயதிலேயே பெண்மக்களுக்கு, ஆண்பிள்ளைகள்முன் போகக்கூடாது என்றும், ஆண்பிள்ளை களோடு பேசக்கூடாது என்றும், அவர்களுக்குத் தன் முகத்தைக்கூடக் காட்டக்கூடாது என்றும் ஆண்கள்தான் விருப்பப்படி வெளியில் உலவத்தக்கவர்கள் என்றும், பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவேண்டும் என்றும் பலவாறு கூறி அவர்கள் மனத்தில் ஒருவகையான உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றோம். ஆகையால்தான் நாணம் என்னும் தன்மை உண்டாகின்றதேயன்றிப் பிறவியில் உண்டாயிருக்கவில்லை. பயிர்ப்பு:- பயிர்ப்பு என்பது பழகாத பொருளைக்கண்டால் அருவருத்தல். மேற்கூறிய நாணம் காரணமாகவே இக்குணம் உண்டாகின்றது. ஆகவே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நான்கு குணங்களும் ஒன்றற்கொன்று தொடர்புடை யனவாகவே இருக்கின்றன. அச்சத்தினால் அறியாமையும், அறியாமையினால் நாணமும், நாணத்தினால் பயிர்ப்பும் உண்டாகின்றன. மேற்கூறிய நான்குவகையான குணங்களும், சுதந்தரம் பெற்ற மேனாட்டுப் பெண்களிடத்திலும், நமது நாட்டிலும், காடுகளிலும், மலைகளிலும், நாடோடியாக வாழ்கின்ற பெண் மக்களிடத்திலும் காணப்படவில்லை. கல்விகற்று முன்னேற்ற மடைந்த பெண்களிடத்திலும் இந்தப் பிறவி குணங்கள் தலைகாட்டுவதில்லை. பிறவிக்குணம் என்றால் எல்லாப் பெண்களிடத்திலுமன்றோ இருக்க வேண்டும்? அவ்வாறு இல்லையே. ஆகவே குணத்திலும் ஆண்களுக்கென்று சிறப்பான குணங்களும், பெண்களுக்கெனச் சிறப்பான குணங்களும், பெண்களுக்கெனத் தனியாக குணங்களும் இல்லையென்றும், ஆண்மக்கள் பெண்மக்களை அடக்கி ஆளும் பொருட்டே மேற்கூறிய குணங்களையெல்லாம் பெண்மக்கள்மேல் சுமத்தி வைத்திருக்கின்றார்கள் என்றும் இதுவரையிலும் கூறியவற்றால் உணரலாம். பெண்மக்களும் கற்பும் பெண்மக்களுக்கு அமைந்திருக்க வேண்டிய குணங்களில் கற்பு என்னும் குணத்தையே மிகவும் முக்கியமானதாகக் கூறுகின்றனர். ஆனால் கற்பு என்பது என்ன என்பதைப் பற்றிப் பலரும் பலவாறு கூறுவர். அவற்றைப் பின்னர் ஆராய்வோம். முதலில் கற்பு என்னும் சொல்லிற்குப் பொருள் என்ன என்பதை ஆராய்ந்தால் கற்பு என்னுஞ் சொல், கற்றல் என்னும் பொருளில் அமைந்த தொழிற் பெயராகும். கல் என்பது பகுதியும், பு தொழிற்பெயர் விகுதியுமாகும். கற்றல் என்றால் எதைக் கற்றல் என்பதுதான் நமது கேள்வி. இக் கேள்விக்கு, உலக வாழ்க்கைகுரிய எல்லாச் செயல்களையும் கற்றல் என்றுதான் நாம் பொருள் கூறுவோம். ஆகவே கற்பு என்னும் இச்சொல் பெண்களும் ஆண்களைப் போலவே வாழும் உரிமையுடையவர்கள் என்பதைக் காட்டி நிற்கும் சொல்லாகும். திருக்குறளில் வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரத்தில் இல்லறத்தில் இருக்கின்ற பெண்களுக்கு அமைத் திருக்க வேண்டிய குணங்களைப்பற்றிக் கூறப்படுகின்றது. அதில், இல்லறத்திற்குத் தகுந்த நற்குண நற்செயல்களை யுடைய வளாகித் தன்னைக் கொண்ட கணவனுடைய வருவாய்க்குத் தகுந்தவாறு செலவுசெய்யக் கூடியவள் இல்வாழ்க்கைக்குத் துணையாவாள் என்றும், இல்வாழ்க்கைக்குத் தகுந்த குணங்கள் மனைவியினிடத்தில் இல்லாவிட்டால் அவ்வில்வாழ்க்கை வேறு எவ்வளவு செல்வங் களைப் படைத்திருந்தாலும் பெருமையுடையதன்று என்றும், மனையாள் நற்குண நற்செய்கைகளை உடையவளாயிருந் தால் அவ்வில்லறத்தில் இல்லாதது என்ன? அவள் நற்குண நற்செய்கையில்லாதவளாயிருந்தால் அவ்வில்லறத்தில் உள்ளது எது? என்றும் ஒருவனுக்கு நன்மை என்பது அவனுடைய மனையாளின் நற்குண நற்செயல்கள் என்றும், அவற்றின் ஆபரணம் என்பது அவள் நல்ல மக்களைப் பெறுதல் என்றும் கூறுவர் என்றும் இவ்வாறு நான்கு பாடல்களால் பெண்மக்களுக்கு இருக்க வேண்டிய பொதுவான தன்மையைக் கூறிவிட்டு மீதம் ஆறு குறள்களினாலும் கற்பைப் பற்றிக் கூறுகின்றார். அதில், கற்புதான் பெண்களுக்கு வலிமை என்றும், தெய்வத்தை வணங்காமல் தன் கணவனையே தொழவேண்டும் என்றும், தன் கணவன் சுகமடையும்படி அவனுக்கு ஊழியஞ் செய்ய வேண்டும் என்றும், தன் கணவனால் காக்கப்படாமல் தானே தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், மேற் கூறிய கற்புடைய பெண்களே சுவர்க்கத்தைப் பெறுவார்கள் என்றும், கற்புடைய மனைவியைப்பெறாத ஆடவர்க்குப் பெருமை இல்லை என்றும், கற்பைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து திருவள்ளுவரும், கற்பு என்பது ஒரு பெண் ஒரு ஆடவனுக்கு அடிமைப்பட்டு அவனுக்கு வேண்டிய ஊழியங்களைச் செய்து கொண்டு, தான் தன் விருப்பப்படி ஒருவித இன்பத்தையும் அனுபவிப்பதற்குச் சுதந்தரமின்றி வாழ்வது என்பதே கருத்தென்பதை அறியலாம். ஆனால் திருவள்ளுவர் நூல் செய்தகாலத்தில், அவர் கொண்ட கொள்கைதான் பெண்களுக்குச் சிறப்பாக அமைந் திருக்க வேண்டியதாக அறிஞர் கருதினர் என்று எண்ணுதற்கு இடமில்லை. ஏனெனில் திருவள்ளுவர் நினைக்கும் கற்புதான் பெண்களுக்கு இருக்கவேண்டும் என்பது உண்மையாயின், அவரே கற்பு என்பதைப் பற்றித் தனியாக ஒரு அதிகாரம் அமைத்திருக்கலாம். அவ்வாறு அமைக்காமல் வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரத்தில் கற்பு என்பதைப் புகுத்திக் கூறியது ஆராயத்தக்கதாகும். வாழ்க்கைத் துணை நலம் என்பதற்கு இல்வாழ்க்கைத் துணைவியின் நன்மை என்பதே பொருளாகும்; துணைவர் என்றாலே இருவரும் ஒத்த தன்மை யுடையவர் என்று பொருள்படுவதாகும். ஆகவே வாழ்க்கைத் துணை என்னும் பெயர்ப்பொருளையும், திருவள்ளுவர் கூறும் கற்பு என்னும் பொருளையும் ஒப்பிட்டுப் பார்க்குங்கால் இரண்டிற்கும் தொடர் பின்றி இருத்தலை அறிஞர் காணலாம். ஆகையால் திருவள்ளுவர் அக்காலத்தில் இருந்த வைதீகர் களைத் திருப்திசெய்யும் பொருட்டே இவ்வாறு பெண்களை அடிமைகளாக்கும் கற்பு என்பதை வாழ்க்கைத் துணை நலம் என்னும் அதிகாரத்தில் புகுத்தி வைத்தார் என்று அறியலாம். ஆனால் திருவள்ளுவர் ஆண்களையும் சும்மா விட்டு விடவில்லை. பெண்களுக்கு எவ்வளவு நற்குண நற்செயல்கள் வேண்டுமென்று சொல்லியிருக்கின்றாரோ அவ்வளவு நற்குண நற் செயல்கள் ஆண்களுக்கும் வேண்டும் என்பதை அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, வேண்டிய குணங்களை யெல்லாம் வற்புறுத்திக் காட்டியிருக்கின்றார். இவற்றுள் பிறனில் விழையாமை என்னும் அதிகாரம் மிகவும் குறிப்பிடத்தக்க தாகும். கணவனையன்றிப் பிற ஆடவனை விரும்பும் பெண் எவ்வாறு கற்பில்லாதவள் என்று இகழப்படுவாளோ, அவ்வாறே தன் மனைவியை அன்றிப் பிறன் மனைவியை விழையும் ஆடவனும், இகழப்படுவான் என்பதை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்றனர். (1) அறிவுடையவர்களிடத்தில் பிறன் மனையை விரும்பும் குணம் இல்லை என்றும், (2) பிறன் மனைவியை விரும்பு கின்றவரைப் போன்ற அறிவில்லாதவர் வேறொருவர் இல்லை என்றும், (3) பிறன் மனையை விரும்புகின்றவர் இறந்தவருக்குச் சமத்துவமாவார் என்றும், (4)பிறன் மனையை விரும்புகின்ற வருக்குப் பெருமை இல்லை என்றும், (5) பிறன் மனையை விரும்புகின்றவர் அழியாத பழியைப் பெறுவார் என்றும், (6) பிறன் மனையை விரும்புகின்றவருக்குப் பகை, பாவம், அச்சம், பழியென்ற நான்கும் உண்டாகும் என்றும், (7) பிறன் மனைவியை விரும்பாதவன் தான் ஒழுங்காக இல்லறத்தில் வாழ்கின்றவன் ஆவான் என்றும், (8) பிறர் மனையை விரும்பா திருத்தலே அறிவுடையவர்க்கு ஒழுக்கமாகும் என்றும், (9) பிறன் மனைவியை விரும்பாதவர்களே நன்மை அடைவதற்கு உரியவர்கள் என்றும், (10) பிறன் மனையை விரும்பாதிருத்தலே அறமாகும் என்றும் பிறனில் விழையாமை என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரியதல்ல என்றும், ஆண் மக்களுக்கும் உரியதென்றும் அறிந்து கொள்ளு கின்றோம். இங்ஙனம் திருவள்ளுவர் கூறியவைகளே இருவருக்கும் ஒருவகையான ஒழுக்கத்தையே வலியுறுத்துகின்றபோது, அவரே, பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்கவேண்டும் மென்னும் ஒரு விஷயத்தை மிகைப்படுத்திக் கூறியிருப்பது பொருத்தமற்றதாகும், என்பதே நமது கருத்து. பிற்காலத்தில் கற்பு என்பது பெண்களுக்கே உரிய குணம் என்று கருதப்பட்டு அதைக்கொண்டு அவர்களை ஆண்மக்கள் அடிமைகளாகும்படி செய்துவிட்டனர். அன்றியும் கற்பு என்பதற்குரிய மற்ற உரிமைகளும் பெண்மக்களுக்குக் கொடுக்கப் படாமல், பெண்கள் ஆண்மக்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும் என்ற பொருளில் மாத்திரம் அவ்வார்த்தையை அவர்கள் தலைமீது சுமத்தி வைத்தனர். கற்பெனப்படுவது சொல்திறம்பாமை என்றும், பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாதிருத்தல் என்றும் கூறிய மொழிகளே பிற்காலத்தினரால் கற்பின் இலக்கணமாகக் கொள்ளப்பட்டு விட்டன. கற்பு என்னும் இவ்விஷயத்தில் ஆரியர்களைக் காட்டிலும் தமிழர்கள் மிகவும் கண்டிப்புள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். ஆரியர்களின் கொள்கைப்படி ஒரு பெண் தன் கணவனை அல்லாத வேற்றானுடன் சம்பந்தப்பட்டால்தான் அவள் கற்பழிந்தவளாவாள். இந்த ஒரு காரியம் மட்டிலும் இல்லாமல், ஒருவர்மேல் ஒருவர் ஆசைப்படலாம். ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் தொட்டுப் பழகலாம். இவற்றால் கற்புக்கு அழிவு வந்து விடுதல் இல்லை. இதற்கு உதாரணமாகச் சீதையை இராவணன் தொட்டுத் தூக்கிச் சென்றதையும், துரோபதை கர்ணன்மீது ஆசைவைத்துக் கொண்டிருந்ததையும் கூறலாம். ஆனால் தமிழர்களோ ஒரு பெண்ணை அவள் கணவன் அல்லாத வேறொரு ஆடவன் பார்த்து ஆசைப்பட்டாலே அவளுடைய கற்பு குறைந்து விடும் என்று கூறி வைத்திருக் கின்றனர். இதிலிருந்தும், மற்றும் பெண்களுக்கு இருக்கவேண்டிய கல்வி, அறிவு, ஒழுக்கங்களை வலியுறுத்தியிருப்பதிலிருந்தும், பெண்கள், சிறந்த வீரமுடையவராகவும், ஒரு ஆடவன் தன்னைப் பார்த்து ஆசைப்படக்கூடிய அவ்வளவு கோழை யாகவும் இருக்கக்கூடாது என்று யூகிக்கக் கூடியதாயிருப்பினும், இதனால் பெண்களுக்கு பிற்காலத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் எண்ணற்றனவாகும். இத்தகைய கொள்கையிலிருந்துதான், பெண்கள், வீட்டிற்குள்ளேயே இருக்கத் தக்கவர்களென்பதும், கல்வி கற்பதற்கு உரிமை அற்றவர்கள் என்பதும், உலக விஷயத்தை அறிவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்பதும் தன் கணவனை யன்றி வேறு தெய்வத்தை வணங்குவதற்கு உரிமை பெறாதவர்கள் என்பதும் ஆகிய மூடத்தனமான வழக்கங்கள் கற்பிக்கப்பட்டு விட்டன என்பதை உணரலாம். இது நிற்க பிறர் பார்த்துக் கெட்ட எண்ணத்துடன் ஆசைப்படாத தன்மையைப் பெண்மக்கள் பெற்றிருக்க வேண்டும் என்னும் பண்டைத் தமிழர் கொள்கையே நன்றாக ஆராய்ந்து பார்த்தால் கீழ்க்கண்ட முடிவிற்கு வருதல்கூடும். இம்முடிவே பழந்தமிழ்ச் சான்றோர்களின் கருத்தாக இருத்தல் வேண்டும். அம்முடிவாவது:- ஒவ்வொரு பெண்மக்களும், உடற்பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் செய்து கொண்டு வீரப் பெண்மணிகளாக விளங்க வேண்டும். இவ்வாறிருந்தால்தான் அவர்களால் விரும்பப்படாத வேறொரு ஆடவன் அவர்கள்மீது கெட்ட எண்ணங்கொண்டு பார்க்கமாட்டான் என்பதேயாகும். இக்கருத்தை சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை என்றும், கற்பென்னும் திண்மை என்றும் திருவள்ளுவர் கூறுவதனாலும் உணரலாம். ஆகவே இதுவரையிலும் கூறியவைகளால் கற்பு என்பது தற்காலத்தில் ஆண்மக்கள் கருதுவது போலப் பெண்மக்களுக்கு மட்டும் உரியதன்று என்றும், ஆண், பெண் ஆகிய இருபாலர்க்கும் உரியதே என்றும், கற்பு என்பதன் பொருள் உலக வாழ்க்கையில் இன்புற்று வாழ்வதற்குரிய எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதே என்றும், ஆகையால், பெண்மக்கள் ஆண் மக்களைப்போலவே எல்லாச் சுதந்தரங்களையும் அடைவதற்கு உரிமையுடையவர்கள் என்றும், ஆகையால் ஒவ்வொரு பெண் மக்களும், தம்மைத் தாமே அடக்கி ஆளும் ஆண்மையற்ற கோழைகளான, ஆண்மக்களால் துன்புறுத்தப்படாமல் இருக்கும் பொருட்டுத் தேகப்பயிற்சி ஆயுதப்பயிற்சி இவைகளைச் செய்து வீரப்பெண்மணிகளாக விளங்கவேண்டும் என்றும் அறியலாம். இத்தகைய தன்மைகளைப் பெறுதலே பெண்மக்களுக்குக் கற்பாகும். மேற்கூறிய உண்மையான கற்பு பெண்களுக்கு வேண்டு மென்று கூறுவதை நாம் மறுக்கவில்லை. எங்கள் சுயமரியாதை இயக்கமும் மறுக்கவில்லை. பண்டைத் தமிழர்களும் மறுக்க வில்லை. ஆனால் நாங்கள் எப்படியிருந்தாலும் குற்றமில்லை. நாங்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் கல்யாணம் செய்துகொள்ளலாம். கல்யாணம் செய்து கொண்ட பெண்களைத் தவிர இன்னும் எத்தனை பெண்களிடம் வேண்டுமானாலும் நேசம் வைத்துக் கொள்ளலாம். பெண்கள் மாத்திரம் அம்மாதிரி இருத்தல் கூடாது. அவர்கள் அடிமையாகவே எங்கள் சொற்படி தான் நடக்க வேண்டும் என்று கூறுகின்ற அறிவற்ற சுயநலம்பிடித்த மொழிகளைத்தான் அக்கிரமம் என்று கூறி மறுக்கின்றோம். பெண்களுக்கு எவ்விதமான ஒழுங்கு வேண்டுமென்று நீங்கள் கூறுகின்றீர்களோ அவ்வாறே நீங்களும் நடந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்லுகின்றோம். ஆண்மக்களாகிய நீங்கள் மட்டும் ஒழுங்காக நடக்காமல் பெண்மக்களை மட்டிலும் ஒழுங்கென்றும், கற்பென்றும் கூறி அடிமைப்படுத்துவீர்களானால், அதை ஒழிக்கத்தான் பெண் மக்கள் பாடுபடுவார்கள். உங்களைப்போலவே பெண் மக்களும் நடப்பதாக கூறினால்தான், நடக்கத் துணிந்தால்தான், நடந்தால் தான், நீங்கள் வெட்கமடைந்து யோக்கியர்கள் ஆவீர்கள் என்று தான் நாம் கூறுகின்றோம். பெண் மக்களும் இவ்வாறே கருது கின்றனர். ஆகையினால் உண்மையுணர்ந்து மனந்திரும்புங்கள். பெண்மக்களும் வலிமையும் I ஆண்மக்களைக் காட்டிலும் பெண்மக்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்கு வலிமையை ஒரு காரணமாகக் கூறுவர். ஆம் ஒருவருடைய உயர்வு தாழ்வுக்கு வலிமையும் காரணம்தான். ஆகையால் இப்பகுதியில் ஆண்மக்களின் வலிமையைப் பற்றியும், பெண்மக்களின் வலிமையைப்பற்றியும் ஆராய்வோம். வலிமை எல்லோருக்கும் இன்றியமையாமல் அமைந்திருக்க வேண்டிய உரிமைப்பொருளாகும். வலிமை இல்லாமல் எவராலும் எந்தச் செயலையும் செய்துமுடிக்க இயலாது. இவ்வுலக வாழ்க்கை ஒரு பெரிய போர்க்களம். இப்போர்க் களத்தில் வெற்றிபெற வேண்டுமாயின் வலிமை வேண்டும். வலிமையால் வாழ்க்கைப்போரில் வெற்றிபெறுகின்றவர்கள்தான் இவ்வுலகில் இன்பம் அனுபவிப்பர். வலிமையற்றவர்கள், தொடங்கிய செயல்கள் எவற்றினும் தோல்வியையே பெறுவர். அவருக்கு இவ்வுலக வாழ்வில் எள்ளளவும் இன்பமில்லை. வாணாள் முழுதும் துன்பத்திலேயே தொலையும். இச்செய்தி மக்களைமட்டிலும் பொறுத்ததன்று. மக்களை விடப் பலவகையிலும் தாழ்ந்தனவென்று கருதப்படுகின்ற பறவைத் தொகுதிகளுக்கும், விலங்கின் கூட்டங்களுக்கும் பொருந்துவதாகும். வலிமையுள்ள பறவைகளும், வலிமையுள்ள விலங்குகளுந்தான் மற்ற, பறவை, விலங்குகளைக் காட்டினும், சுதந்தரமாகவும், அச்சமின்றியும் வாழ்கின்றன. அவைகள் மற்றவைகளைக் காட்டினும் மிகுந்த இன்பத்தை அடைகின்றன. ஆகவே மக்களுக்கு வலிமை இன்றியமையாதது என்பதை நாம் விரித்துக் காட்டவேண்டியதில்லை. சாதாரணமாக உடல் வலிமை ஒன்றையே அனைவரும் வலிமையென்று நினைக்ககூடும். ஆனால் உண்மையில் நோக்கும் போது உடல் வலிமை மட்டிலும் வலிமையன்று. உடல் வலிமை மட்டிலும் அமைந்தவர்களை மிருக பலம் உடையவர்கள் என்றுதான் கூறவேண்டும். ஆகையால் உண்மையான வலிமை இருபிரிவாகும். அவை:- மனவலிமை, உடல் வலிமை என்பன. வலிமைக்குப் பயன் ஒரு செயலை வெற்றியுடன் செய்து முடிப்பது. தான் தொடங்கிய செயலுக்கு எவ்வளவு இடையூறுகள் உண்டானாலும், அதன் காரணமாகத் தனக்கு எவ்வளவு துன்பம் உண்டானாலும் அவற்றை ஒரு சிறிதும் பொருட்படுத்தல் கூடாது. ஒரு காரியத்தைத் தொடங்கும் போது, இது நம்மால் ஆகுமா? ஆகாதா? என்பதை நன்றாக எண்ணித் தொடங்க வேண்டும். தொடங்கியபின் மெய்வருத்தத்தைச் சிறிதும் பாராட்டக்கூடாது, பசியின் கொடுமையைப் பொருட்படுத்தக் கூடாது. காரியம் முடிகின்றவரையிலும் கண் துஞ்சுதல் கூடாது. பிறர் நமது காரியத்துக்குச் செய்யும் இடையூற்றை நினைத்து வருந்தியிருத்தலும் கூடாது. காலத்தின் குறைவை எண்ணி வருந்துதலும் கூடாது. அக்காரியத்தை நிறைவேற்றுவதில் அவமானம் வருவதாயிருந்தால் அதையும் பொருட்படுத்தக் கூடாது. இத்தகைய தன்மைகள் வலிமையின் படைகளாகும். காரியஞ்செய்வதில் இப்படைகளைக் கையாளுகின்றவர்கள் தான் வலிமையுடையவர்களாவார்கள். அவர்களால் தான் வெற்றியடைய முடியும். தான், ஆராயாமல் ஒரு செயலைத் தொடங்குதலும், பின்னர் அச்செய்கையால் உண்டாகும் கஷ்டத்தைக் கருதி அதை அறை குறையாக விட்டு விடுதலும் ஆண்மையற்ற செயலாகும். அதாவது கோழைத்தனமாகும். ஆகவே வல்லவர் என்று சொல்லப்படுகின்றவர்களுக்கு, உடல் வலிமை, மனவலிமை ஆகிய இருவித வலிமைகளும் அமைந்திருக்க வேண்டும். உடல்வலிமையாகிய மிருகபலம் மாத்திரம் இருந்தால் போதாது. மிருகபலம் இல்லாமல் மனோபலம் மாத்திரம் உடையவன், மிருகபலம் உடையவர் களையெல்லாம் தன் கீழ் அடக்கியாளும் போற்றல் உடை யவனாயிருப்பான். மனோபலத்துடன் அறிவு வன்மையும் அமைந்திருத்தல் வேண்டும். படிப்பும், அறிவும், தைரியமும் அற்ற ஏழைமக்கள் அல்லும் பகலும் உழைத்து வயிறு வளர்ப்பதிலேயே வாழ்நாளைக் கழிப்பதைக் காணுகின்றோம். அவர்களுக்கு உடல் வலிமை இல்லையா? உடலை வருத்தி வேலை செய்கின்ற காரணத்தால் மற்ற அறிவுடையவர்களைவிட உடல் வலிமை உடையவர் களாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் உலகவாழ்வில் உயர்வடைவதில்லை. இன்பம் பெறுவதில்லை. மனோவலிமை யுடையவர்கள்; எவ்வளவுதான் குறைந்த உடல் வலிமையுடையவர் களாயிருந்தாலும், அதனால் சிறிதும் துன்பம் அடையாமல் பெரும் பெரும் காரியங்களைச் செய்து முடிக்கின்றனர். இதற்கு உதாரணமாக ஆப்கன் நாட்டு மன்னராகிய அமனுல்லாவையும், நாதர்ஷாவையும் எடுத்துக்கொள்ளலாம். அமனுல்லா மிகவும் உடல் வலிமையுடையவர்தான். முதலில் பல சீர்திருத்தங்களைத் தைரியமாகத்தான் நாட்டிற் செய்ய முன்வந்தார். ஆனால் இறுதியில் தனக்கும் பாட்சாசாக்கோவிற்கும் போர் மூண்டவுடன் நாட்டை விட்டு அகன்றார். இது மனோ தைரியமற்ற செயல் என்று தான் நாம் கூறுவோம். இங்கு உடல் வலிமை என்ன பலனைக் கொடுத்தது? பின்பு பட்சாசாக்கோவைத் தொலைத்து அரசாட்சியைக் கைபற்றிய நாதர்ஷா மெலிந்த உடலுடையவர். நோயாளி. ஆயினும் அஞ்சாத ஆண்மையுடையவர். மனோ வலிமை படைத்தவர். ஆகையால்தான் அவரால் ஆப்கன் அரசாட்சியைக் கைப்பற்ற முடிந்தது. உடல் வலிமை யிருந்தும் மனவலிமை யின்றேல் பயனில்லை என்பதற்கும், உடல்வலிமை குறைவாய் இருந்தாலும் மனவலிமை மிகுந்திருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கும், யானையையும், சிங்கத்தையும் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். யானை உடல் வலிமையற்ற மிருகமா? பருத்த உடலுடையது. சிங்கத்தின்மீது யானை படுக்குமாயின் சிங்கம் நசுங்கிப்போகும். இப்படியிருந்தும் சிங்கத்தைக்கண்டால் யானை நடுநடுங்குகின்றது. யானையைக் காட்டினும் குறைந்த பலமும், உடலும் உடைய சிங்கம் அதைக் கொன்றுவிடுகின்றது. இதற்குக் காரணம் மன வலிமையன்றோ? சிங்கம் மனவலிமையுடையது. யானை மனவலிமையற்றது. கோழைத் தன்மையுடையது. ஊக்கம், உணர்ச்சி முதலியவைகளும் மன வலிமையின் குணங்கள், ஊக்கம், உணர்ச்சி முதலியவைகளும் உடல் வலிமைக்குத் துணை செய்யும் என்பதை ஆவேசங் கொண்டு ஆடுகிறவன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆவேசம் என்பது பாமரமக்கள் நினைப்பதுபோல ஒரு ஆவியால் பிடித்து ஆட்டப் படுவது அல்ல. மனத்தில் உண்டாகும் ஒரு உணர்ச்சி தான் ஆவேசமாகும். கோவம் வந்தவன் எப்படி ஆடுகிறானோ அப்படித்தான் ஆவேசக்காரனும் ஆடுகின்றான். கோபத்தைப் போன்ற உணர்ச்சிதான் ஆவேசம். பாட்டுக்களைப் பாடியோ, வாத்தியங்களை முழக்கியோ ஆவேசங்களை வரவழைக்கின்றனர். ஆவேசக்காரன் தான் வைத்திருக்கும் ஒருவித நம்பிக்கையினால், அப்பாட்டுக்களிலும், வாத்திய கோஷங்களிலும் மனத்தைச் செலுத்தி ஒரு வித உணர்ச்சியை மேற்கொள்ளுகின்றான். அதனால் அவன் மூளை குழப்பம் அடைகின்றது. உடனே தன் உணர்ச்சியை இழக்கின்றான். பைத்தியம் பிடித்தவனைப்போலச் சிறிது நேரம் குதிக்கின்றான். இதுதான் ஆவேசம் என்று சொல்லப்படுவது. இம்மாதிரி ஆவேசங்கொண்டு ஆடுகின்றவர்களில் சிலர் மிக மெலிந்த உடல் உடையவர்களாயிருப்பினும், அவர்கள் ஆவேசம் என்று சொல்லப்படும் உணர்ச்சியை அடைந்த காலத்தில், அளவுக்கு மீறிய ஆற்றல் உடையவர்களாயிருப்பதை அறியலாம். மெலிந்துள்ள அவர்களை ஆவேசம் வந்தவுடன் நான்குபேர் பிடித்தாலும் அவ்வளவு பேரையும் உதறித்தள்ளி விடும் ஆற்றல் உடையவராக இருக்கின்றனர். கோபக்காரர்களும் இவ்வாறுதான் இருக்கின்றனர். இத்தகைய அளவுக்குமீறிய வலிமை அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? மனத்தில் உண்டான உணர்ச்சியினாலன்றோ? ஆகவே, உடல் வலிமைக்கும், வெற்றிக்கும் காரணமாகிய மனவலிமை ஆண்களுக்கு மிகுதியாக இருக்கின்றதா? பெண் களுக்கு மிகுதியாக இருக்கின்றதா? என்பதை ஆராய்ந்தால் பெண்களுக்குத்தான் மிகுதியாக இருக்கின்றது என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும். சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது என்பது அறிஞர் வாக்கு. இத்தகைய அரிய சக்தி பெண்களுக்கு உண்டு. அவர்கள் தங்கள் மனத்தில் எழும் உணர்ச்சியை எவ்வகையிலும் வெளிக்காட்டாமல் மறைத்து வைக்கும் ஆற்றல் உடையவர்கள். இத்தகைய ஆற்றல் ஆண் மக்களுக்கு இல்லை. தம்மனத்தில் எண்ணிய செய்கையை நிறைவேற்றுங் குணம் ஆண்மக்களிடம் இல்லை. முதலில் தைரியத்துடனும் ஆர்பாட்டத்துடனும் தொடங்குவார்கள். பிறகு அதனால் தமக்குவரும் கஷ்ட நஷ்டங்களைப் பொறுக்க முடியாமல் விட்டுவிடுவர். இவ்வாறு இருப்பதற்குக் காரணம் மனவலிமை இன்மைதான். மனவலிமை இன்மையால் உறுதியும், பிடிவாத குணமும் அவர்களிடம் இல்லை. எண்ணிய செயலை இனிது முடிப்பதற்கு உறுதியும் பிடிவாதமும் அவசியமாகும். ஆனால் பெண்மக்கள் மனவலிமை உடையவர்களாயிருப்பதனால், உறுதியும், பிடிவாத குணமும் உடையவர்களாயிருக்கின்றனர். உறுதியினாலும், பிடிவாதத்தினாலும் தங்கள் மனத்தில் நினைப் பவற்றை எப்பாடுபட்டேனும் முற்றுப்பெற முடிப்பதற்கே முயன்று வெற்றி பெறுகின்றனர். இவ்வாறு காரியத்தை நிறைவேற்றும் வகையில் அவர்கள் தங்கள் உயிரையும் பொருட் படுத்துவதில்லை. உதாரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் ஒரு கொடிய வழக்கத்தைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். தற்கொலை செய்துகொள்ளுகின்றவர்கள் கோழைகளென்றும், திறமையற்றவர்களென்றும் சொல்லபடுகின்றனர். இதை ஒரு ஒருவகையில் ஒப்புக்கொள்ள முடியுமே தவிர முழுதும் ஒப்புக் கொள்ள முடியாது. ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்குத் தனது பலம் முழுவதையும் செலவிட்டும் அது நிறைவேறாவிட்டால் அதற்காக வேண்டித் தற்கொலை செய்து கொள்ளுகின்றவர்கள் உண்மையில் மானமுடைய வீரர்களாவார்கள். ஒருவருக்கு உயிரைக் காட்டினும் சிறந்த பொருள் வேறே ஏது? அவ்வுயிரை ஒரு காரணத்தை முன்னிட்டு நீக்குதற்கு முன்வருதல் பெருந்தியாகம் அன்றோ? இத்தியாகம் சிறந்த வீரமன்றோ? இது மனவலிமையன்றோ? ஆண்மக்களுக்குள் தற்கொலை மிகுதியாக நடைபெறு கின்றதா? பெண்மக்களுக்குள் தற்கொலை மிகுதியாக நடை பெறுகின்றதா என்று பார்த்தால் பெண்மக்களுக்குள் தான் தற்கொலை மிகுதியாக நடைபெறுகின்றது. ஆண்மக்கள் தற்கொலை பெரும்பாலும் கோழைத்தன்மையால் ஏற்படக் கூடியது. ஏனெனில் அவர்களுக்கு எல்லாச் சுதந்தரங்களும் இருக்கின்றன. எந்தக் காரியங்களை வேண்டுமானாலும் செய்யலாம். கட்டுப்பாட்டிற்கு அடங்கினவர்களாக இல்லை. இந்தச் சாதனங்களைக் கொண்டுஎவ்வித நஷ்டம் உண்டானாலும், முடியாமல் உயிரை நீக்கிக் கொள்ளுவது கோழைத்தன்மைதான். பெண்களுக்கோ, சுதந்தரமில்லை. பல நிபந்தனைகளுக்குக் கட்டுபட்டு வாழவேண்டியவர்களாயிருக்கின்றனர். வழக்கத்திற்கு மாறான செய்கை எதையாவது செய்வார்களாயின் பழிச் சொல்லுக்கு ஆளாவார்கள். இந்த நிலையில் அவர்கள் தாம் எண்ணிய செயலை நிறைவேற்றுவது கஷ்டம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? ஆகவே அவர்கள் காரியம் நிறைவேறாதபோது மானம் பொறுக்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளுவது வீரத்தன்மையன்றோ? தற்கொலை செய்து கொள்ளும் ஆண்மக்கள் பெரும் பாலும், தங்கள் வாழ்க்கை நிலையில் - அதாவது குடும்ப நிலையில் உண்டாகும் கஷ்ட நஷ்டங்களைத் தாங்கும் ஆற்றல் இல்லாமல், மனோவலிமை இல்லாமல்-தற்கொலை செய்து கொள்ளுவதற்கும் துணியாமல் பிச்சைக்காரர்களாக வெளியிற் புறப்பட்டு விடுகின்றனர். சாமியார் வேடம் போட்டுக் கொண்டுப் புறப்படுகின்றனர் சிலர். இத்தகைய மானங்கெட்ட தன்மை ஆண்மக்களிடம் மிகுதியாக இருக்கின்றதேயன்றிப் பெண்மக்களிடம் மிகுதியாக இல்லை. பெண்மக்கள் தங்கள் குடும்பத்தின் சுகதுக்கங்களைப் பொறுக்க முடியாதபோது-அதனால் தமக்கு உண்டாகும் கஷ்ட நஷ்டங்களையும், மான அவமானங்களையும் நீக்கிக்கொள்ளுவதற்கு வேறு வழியில்லாத போது தற்கொலை செய்து கொள்ளுகின்றனர். இத்தகையவர் களை வீரப்பெண்களென்று தான் நாம் கூறுகின்றோம்.. ஆனால் தற்காலத்தில் பெண்களில் பெரும்பாலார் பயந்த சுபாவம் உடையவர்களாகக் காணப்படுவதற்குக் காரணம், ஆண்மக்களால் ஏற்படுத்தி வைத்திருக்கும் நிபந்தனைகளும் கொடுமைகளுமேயாகும். குணத்தில் எவ்வகையிலும், ஆண் மக்களுக்கும் பெண்மக்களுக்கும் வித்தியாசம் இல்லையென்பதை பெண்களும் பிறவிக்குணமும் என்ற பகுதியில் விளக்கிக் காட்டியிருக்கின்றோம். இனி உடல் வலிமையிலும் பெண்மக்கள் ஆண்மக்களைக் காட்டிலும் குறைந்தவர்கள் அல்லர். சில பெண்கள் உடல் வலிமை யற்றவர்களாயிருப்பதற்குக் காரணம், அவர்கள் ஆண்மக்களைப்போல காற்று, வெளிச்சம் முதலிய இயற்கை இன்பங்களை நுகர முடியாமல் வீட்டுக்குள் அடைப்பட்டு கிடப்பதனால்தான், சாதாரணமாக ஆண்மக்களைப் போல வீட்டை விட்டு வெளியில் வந்து வயல்களிலும், தோட்டங் களிலும், தொழிற்சாலைகளிலும் வேலைசெய்கின்ற பெண் மக்களைப் பாருங்கள். அவர்களை ஆண்மக்களைவிடக் குறைந்த பலம் உடையவர்கள் என்று கூறமுடியாது. ஆண்மக்கள் செய் கின்ற எத்தகைய கடினமான வேலைகளையும் பெண்மக்களும் செய்கின்றனர். ஆகையால் இருவருக்கும் உடல் வலிமையில் சிறிதும் வேறுபாடில்லை. சிலர், பெண்மக்கள் புத்திர உற்பத்திக்கு இடமாயிருப்பதால் குறைந்தபலம் உடையவர்கள் என்று கூறுகின்றனர். புத்திர உற்பத்திக்கு இடமாயிருக்கின்ற ஒரு காரணத்தினாலேயே பெண்மக்கள் இயற்கைவேறு; ஆண்மக்கள் இயற்கைவேறு; இருவரையும் ஒன்றென்று கொள்ளுதல் கூடாது என்று கூறுகின்றனர். இவ்வாதத்தை நான் ஒப்புக்கொள்ள முடியாது. இது ஊற்றுக்கு நிற்காத வைதீகப் போலி வாதமேயகும் வெளியில் தாராளமாக உலவி வரும் பெண்மக்கள்-நன்றாக வேலைசெய்கின்ற பெண்மக்கள் - உடல்வலிமையுடைய பெண் மக்கள் ஒருவித கஷ்டமும் இல்லாமல் பிள்ளை பெறுவதையும், பெற்ற பின்பும், பலக்குறைவோ - நோயோ அடையாமல் சில தினங்களில் எப்பொழுதும்போல் திடகாத்திரம் உடையவர்களாய் விளங்குவதையும் காணலாம். ஆகையால் பெண்கள் உடல்பலம் இல்லதவர் என்பதைக் காட்டுவதற்குப் பிள்ளைபெறுவது ஒரு காரணமாகாது. அன்றியும் நல்ல உடற்கட்டுள்ள ஆண்மக்களும் பிணிவாய்ப் படுவார்களாயின் பலங்குன்றியவராகின்றனர். பிணி நீங்கிய பின்னும்-பிணிவருவதற்கு முன்னர் உடம்பிலிருந்த அளவு இரத்தப்பசை உண்டாகின்றவரையிலும் பலமற்றவர் களாயிருப்பதைப் பார்க்கின்றோம். இதைப்போலத்தான் பெண் மக்களும் கருவடைந்திருக்கின்ற காலத்திலும், கருவுயிர்த்த சில நாட்கள் வரையிலும் சிறிது பலங்குறைந்தவர்களாயிருக்கின்றனர். பின்னர் எப்பொழுதும்போல ஆகிவிடுகின்றனர். ஆகவே இதுகாறுங் கூறியவற்றால் பெண்மக்கள், எந்த வகையினாலும் ஆண்மக்களைக் காட்டிலும், மன வலிமையிலும், உடல் வலிமையிலும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை எடுத்துக் காட்டினோம். இனி அடுத்த பகுதியில் மனவலிமையிலும், உடல் வலிமையிலும் சில பெண்மக்களின் வரலாற்று நிகழ்ச்சிகளையும் எடுத்துக் காட்டுகின்றோம். பெண்மக்களும் வலிமையும் II இனிப் பெண்மக்கள் எவ்வளவு வலிமையுடையவர்களா கவும், மனோதைரியம் உடையவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் காட்டுகின்றோம். பண்டைத் தமிழ்நாட்டுப் பெண்மணிகளின் வீரத்தையறிவதனாலும், சரித்திர சம்பந்தமான வீரப் பெண்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுவதனாலும், தற்காலத்தில் உள்ள அறிவும் திறமையும் வாய்ந்த பெண்களைப்பற்றி நினைவு கூர்வதனாலும் பெண் மக்களின் வலிமையைக் கண்டுணரலாம். ஆதலால் முதலில் நம் தமிழ்நாட்டு வீரமகளிரின் வலிமையைச் சிறிது அறிந்து கொள்ளுவோம். புறநானூறு என்னும் பழந்தமிழ் நூலினால் சிலபெண் மக்களின் வீரத்தன்மையைக் காணலாம். இந்நூல் பெரும்பாலும் பண்டைத் தமிழ்மக்களின், ஒழுக்கங்களைப் பற்றியே கூறிச்செல்கின்றது. இது தமிழ்மக்களுக்குள் சாதி, சமயப் பேய்கள் நுழையாத காலத்தில் பல புலவர்களால் பாடப்பெற்ற தனித்தனிப் பாடல்களை ஒன்று சேர்த்துத் தொகுக்கப்பட்டது. இது அரசியல் முதலிய புறப்பொருட் செய்திகளையே கூறும் நானூறு பாடல்கள் அமைந்த நூலாதலால் இதற்குப் புற நானூறு என்னும் பெயர் வந்தது. இதிற் காணப் பெறும் வரலாறுகள் பெரும் பாலும் உண்மை நிகழ்ச்சிகள் என்றே கொள்ளலாம். பண்டைக் காலத்தில் பொன்முடியார் என்னும் பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவள் சிறந்த கல்விப்புலமை உள்ளவள்; நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய கடமை இன்னதென்பதை நன்கு அறிந்தவள்; தன் கடமையைச் செய்வதில் சிறிதும் தவறாத தன்மையமைந்தவள். அவள் ஒரு பாடலில் பிள்ளையைப் பெற்று வளர்த்து விடுதல் எனது முதன்மையான கடமையாகும்; அப்பிள்ளையை யாவரும் அறிவுடையவன் என்று கொண்டாடும்படி அவனுக்கு வேண்டிய கல்வியறிவை உண்டாக்கி வைப்பது தந்தையின் கடமையாகும்; அவனுக்கு வேல் என்னும் போர்க்கருவியைக் கூர்மையாகச் செய்து கொடுப்பது கொல்லனுடைய கடமையாகும்; அவன் கெட்ட ஒழுக்கமுடையவன் ஆகாமல் நல்வழியில் நடப்பதற்கான வகையில் நாட்டின் சட்டங்களை அமைத்து அரசாளுவது அரசனுடைய கடமையாகும்; ஒளி பொருந்திய வாட்படையைக், கையில் ஏந்திக்கொண்டு, போர்க்களம் புகுந்து, பகைவருடைய யானை படையைக் கொன்று வெற்றியுடன் மீளுதல் மைந்தன் கடமையாகும் என்று கூறியிருக்கின்றாள்; இதனை ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே: நல்நடை நல்கல் வேந்தற்குக் கடனே; ஒளிருவாள் அரும்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. என்ற பாடலால் உணரலாம். மற்றொரு வீரப்பெண்மணியின் செயலைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்ற ஒரு பெண் புலவர் கீழ்க் கண்டவாறு கூறியிருக்கின்றார். ஒரு பெண்மணி தனது நாட்டில் உண்டாகிய போருக்குத் தன்மகனை அனுப்பியிருந்தாள் அவன் போர்க்களஞ் சென்று எதிரிகளுடன் போர் புரிந்து இறந்து விட்டான். ஆனால் யாரோ சிலர் அவன் தாயிடம் வந்து உன் மகன் போர்க்களத்தில் பகைவருடன் போர் புரியும்போது தன் கையில் உள்ள படைக் கலங்களை இழந்து பகைவர்களுக்கு முதுகுகாட்டி ஓடினான் என்று கூறினர். அது கேட்ட அவ்வீர மகள் என் மகன் பகைவர்களுக்கஞ்சிப் படைக்கலங்களை யிழந்து சண்டைக்குத் தோற்று ஓடினான் என்பது உண்மையாயின் அவன் பால் குடித்த எனது மார்புகளை வாளால் அறுத்து விடுவேன் என்று சபதங் கூறிக்கொண்டு போர்களத்தை அடைந்தாள். அங்கு இறந்துகிடந்த வீரர்களின் உடம்புகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். அவ்விடத்தில் தன் மகனும் பல துண்டங்களாக வெட்டுண்டு கிடந்ததைக் கண்டாள். கண்டதும் அவனைப் பெற்றெடுத்த காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சி யடைந்தாளோ அதைவிடப் பெரிதும் மகிழ்ந்தாள் இதனை நரம்பெழுந்து உலறிய நிரம்பா மெல்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்று பலர்கூற மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின்; உண்ட என் முலைஅறுத் திடுவேன் யான் எனச் சினைஇக் கொண்ட வாளோடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோன் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான் றினும் பெருதுஉவந் தனளே என்ற பாடலால் அறியலாம். மற்றொரு பெண்மணியின் வரலாற்றை ஒக்கூர் மாசாத்தி யார் என்னும் பெண்புலவர் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கின்றார். முன்னொருநாள் நடைபெற்ற சண்டையில் இவளுடைய தந்தை சென்று அங்குள்ள யானைகளைக் கொன்று தானும் போர்க்களத்திலேயே இறந்தான். நேற்று நடந்த சண்டையில் இவள் கணவன் சென்று பகைவர்கள் கைபற்றிய பசுமந்தையை மறித்து அவர்களுடன் சண்டை செய்து அங்கேயே மடிந்தான். இன்றும் பகைவர்கள் செருச்செய்வதற்கு அடையாளமாகத் தங்கள் போர்ப்பறைகளை அடிக்கவும், அதைக் கேட்டு அவள் போரின்மீது விருப்புற்றுத் தன் தந்தையையும் கொழுநனையும் நினைத்துச் சிறிது மயங்கித் தனது ஒரே மகவாகிய மைந்தனை அழைத்தாள். வேற்படையை அவன் கையிற் கொடுத்தாள். வெண்மையான தூய ஆடையை விரித்து உடுத்தினாள். பரந்து கிடந்த தலைமயிர்க்கு எண்ணெய் தடவிச் சீவினாள். பிறகு நீ போர்க்களஞ்சென்று பகைவர்களுடன் செருமலைந்து வெற்றி கொண்டு வருக என்று சொல்லிப் போகவிட்டாள் இதனை கெடுக! சிந்தை! கடிது! இவள் துணிவே! மூதின் மகளிர் ஆதல் தகுமே; மேல்நாள் உற்றசெருவிற்கு இவள்தன்ஐ யானை எறிந்து களத்து ஒழிந்தனனே; நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் பெருநிலை விலங்கி ஆண்டுப் பட்டனனே; இன்றும் செருப்பரை கேட்டு, விருப்புற்று, மயங்கி, வேல்கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி, ஒரு மகன் அல்லது இல்லோன் செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே என்னும் பாடலால் அறியலாம். இனி மற்றொரு பெண்மணியின் வீரத்தைக் காணுவோம். ஔவையார் என்னும் பெயரை அறியாத தமிழர்கள் இல்லை. கற்றவர்களும், கல்லாதவர்களும் ஔவையாரென்னும் பெயரை அறிவார்கள். இவர் ஒரு சிறந்த புலவர் என்பதையும் உணர்வார்கள். இவருடைய வீரத்தின் பெருமையைச் சிறிது பார்ப்போம். ஔவையார் என்ற பெயருடன் மூன்றுபேர் இருந்திருக்கின்றார்கள் என்று தமிழ்நூல் ஆராய்ச்சியாளர் கூறுவர். மூவரும் வேறு வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களைப்பற்றி வழங்கும் புனைந்துரைக் கதைகள் எண்ணற்றன. இங்கே கூறப்படும் ஔவையார் ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்தவர். இவரே முதல் ஔவையார் எனப்படுவார். மற்ற ஔவையார்கள் இவருக்குப் பின்னிருந்தவரே யாவார்கள். இந்த ஔவையார் நாட்டின் நன்மையைக்கருதி உழைத்தவர். அரசியலில் ஈடுபட்டுத் தொண்டாற்றியவர். இவர், அதிகமான் நெடுமான் அஞ்சி, என்னும் அரசனுக்கு ஆசிரியர்; முதல் அமைச்சர்; அரசியல் தூதராகவும் இருந்திருக்கின்றார். ஒரு காலத்தில் தொண்டை நாட்டு அரசனாகிய தொண்ட மான் என்பவன் அதிகமான் நெடுமான் அஞ்சியின் புகழைக் கேட்டு அவன் மீது பொறாமை கொண்டான். ஆகையால் தொண்டமான், அஞ்சியின் மீது படையெடுக்கக் கருதியிருந்தான். இச்செய்தி நெடுமான் அஞ்சிக்குத் தெரிந்தது. உடனே அவன் தனது வலிமையைத் தூதின் வழியாகத் தொண்டமானுக்கு அறிவித்துச் சண்டை உண்டாகாமற் செய்ய நினைத்தான். இவ்வாறு செய்வதற்கு தகுந்த தூதர் யார் என்று ஆராய்ந்து பார்த்தான். ஔவையாரைத் தவிர வேறு யாரும் இல்லையென்று அறிந்தான். அப்பொழுதே அவரை அழைத்துக் தொண்ட மானிடம் தூதுபோய் வருமாறு வேண்டிக்கொண்டான். ஔவையாரும் அதற்கு ஒப்புக்கொண்டு தொண்டமானிடம், நெடுமான் அஞ்சியின் தூதராகச் சென்றார். ஔவையார் தொண்டமான் உறைவிடத்தை அடைந்து அவனைக் கண்டார். அவன் புலவர் திலகமாகிய ஔவையாரைக் கண்டவுடன் அன்போடு வரவேற்று உபசரித்தான்.. அவர், தன்னிடத்திற்கு வந்த வேலை இன்னதென்பதைத் தெரிந்து கொண்டான். பிறகு தொண்டமான், அவரிடம் தனது படை களின் பெருமையைக் காட்டுவதற்கும், நெடுமான் அஞ்சியைப் போரில் தோற்கச்செய்யும் வல்லமை தனக்கு இருக்கிறதென்பதை அறிவிப்பதற்கும் எண்ணினான். உடனே அவரைத் தனது ஆயுதச்சாலைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஆயுதங்களை யெல்லாம் காட்டினான். ஔவையார் அவ்வாயுதங்களெல்லாம் புதிதாகச் செய்துவைக்கப் பட்டிருப்பதைக் கண்டார். உடனே ஔவையார் அவனுடைய கர்வத்தை அடக்க நினைத்துக் கீழ்வருமாறு கூறினார். ஓ! அரசனே! உன்னுடைய படைக்கலங்கள் இதுவரை யிலும் சண்டையில் உபயோகப்படுத்தப் படாமையால், மயிற் பீலி அணியப்பெற்றும், மாலை சூட்டப்பெற்றும், திரட்சியான வலிமை மிக்க பிடிகளால் ஆக்கப்பெற்றும், துருப் பிடியாமல் நெய் தடவப் பெற்றும் காவல் நிறைந்த அரண்மனைக்குள் பயனின்றி வீணாக வைக்கப்பட்டிருகின்றன. ஆனால், தான் பெற்றிருக்கும் செல்வத்தை வறியவர்களுக்குப் பகுத்துக் கொடுத்து இல்லத்தின்கண் விருந்தினரோடும் சுற்றத்தினரோடும் உடனிருந்து உண்பவனும், வறியவர்களாகிய சுற்றத்தார்க்குத் தலைவனும், பெருமையில் சிறந்தவனும் ஆகிய எனது அரசனது வேற்படைகள் பல தடவை போர்க்களத்தில் பகைவர்களைக் குத்தினமையால் கங்கும் நுனியும் முறிந்து போயின; ஆகையால் அவற்றைக் கூர்மையாக்கிச் செப்பனிடும் பொருட்டுக் கொல்லனுடைய உலைக்களத்திற் கொண்டு போய்ப் போடப் பட்டிருக்கின்றன. என்று கூறினார். இதனை இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து கடிஉடை வியன் நகர் அவ்வே; அவ்வே பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து கொல்துறைக்கு உற்றுஇலம் மாதோ! என்றும் உண்டாயில் பதங்கொடுத்து இல்லாயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான் வைந்நதி வேலே என்ற பாடலால் அறியலாம். இவ்வாறு ஔவையார் கூறியதைக்கேட்ட தொண்டமான் அதிகமான் அஞ்சியுடன் போர்செய்ய நினைத்திருந்த கருத்தைக் கைவிட்டான். இதனால் இரு அரசர்களுக்குள் நடைபெற வேண்டிய ஒரு சண்டை நடைபெறாமல் நின்றது. இரு அரசர்கள் போர் புரிவார்களானால் அதனால் யாருக்குத் துன்பம்? இரு அரசர்களின் நாடுகளில் உள்ள குடிமக்கள் அல்லவா துன்புற வேண்டும்? இவ்வாறு அரசர்களுக்கும், குடிமக்களுக்கும் துன்பம் உண்டாகாமற் காப்பாற்றியது ஔவையாரின் அறிவு வல்லமையும் அஞ்சாத தன்மையும் அன்றோ? மேற்கூறியவைகளால் பண்டைத் தமிழ் நாட்டுப் பெண் மணிகள் பலவகையில் சுதந்தரமற்றவர்களாயிருந்தும், சந்தர்ப்பம் வாய்த்தபோது அவர்கள் வீரத்தன்மையைக் காட்டியிருப்பதை அறியலாம். இன்னும் இவை போன்ற வரலாறுகள் எண்ணற்றன உள்ளன. அவைகளையெல்லாம் விரிக்கிற் பெருகு மெனவிடுத்து வேறுசில செய்திகளை அறிவோம். இனி நமது இந்திய நாட்டில் புகழ்பெற்ற பெண்மணி களாக இருந்த சிலரைப் பற்றி அறிவோம். இந்திய சரித்திரங் கற்றவர்கள் அனைவருக்கும் இவர்களைப் பற்றித் தெரியும். ராணி சம்யுக்தையைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். இவள் மிகவும் மனோ தைரியம் உள்ளவள். இவளுடைய புகழ் இன்றும் நம் நாட்டில் நிலைபெற்று விளங்குகின்றது. இவள் கன்னோசி நாட்டு மன்னவனாகிய ஜெயசந்திரனுடைய மகள். இவள் இளமை முதல் பிருதிவி மன்னவனுடைய அழகையும், அறிவையும், ஆற்றலையும் அறிந்து அவனைக் காதலித்தாள்; எப்படியாயினும் அவனையே மணம்புரிந்து கொள்ள வேண்டு மென்று உறுதி கொண்டிருந்தாள். ஆனால் ஜயசந்திரனுக்கும் பிருதிவிராஜனுக்கும் நட்பில்லை; இருவரும் விரோதிகளா யிருந்தனர். இந்த நிலையில் ஜெயசந்திரன் சம்யுக்தையின் மணத்தின் பொருட்டுச் சுயம்வரம் ஏற்படுத்தினான். அச்சுயம் வரத்திற்கு எல்லா அரசர்களுக்கும் அழைப்பு அனுப்பினான்; பிருதிவிராஜனுக்கு மட்டிலும் அனுப்பவில்லை. அன்றியும் பிருதிவிராஜனை அவமானப்படுத்தும் பொருட்டு அவனைப் போல ஒரு பதுமைசெய்து அதனை வாசற்காவல்காரனாக வைக்கப்பட்டிருந்தது. பிறகு சம்யுக்தை அரச சபைக்கு வந்தபோது மற்ற அரசர்களையெல்லாம் பொருட்படுத்தாமல் பிருதிவியின் பதுமைக்கே மாலை சூட்டினாள். தன் தந்தை பிருதிவியின்பால் எவ்வளவு பகைமை பாராட்டுகிறான் என்பதை அவள் அறிவாள். ஆயினும் தான் கொண்ட மனஉறுதியின்படி தந்தையின் எண்ணத்தையும் பொருட்படுத்தாமல் இவ்வாறு செய்தாள். உடனே பக்கத்தில் மறைந்திருந்த பிருதிவி முன்வந்து அவளைத் தூக்கித் தன் குதிரையின்மீது வைத்துக்கொண்டு தனது நாட்டிற்குச் சென்று விட்டான். இதன்பிறகு நடந்த செய்திகள் பல. அவை நமக்கு ஈண்டுத் தேவையில்லை. இதுவரையிலும் அறிந்த வரலாற்றால், ராணி சம்யுக்தையின் வீரத்தன்மை விளங்குகின்றதன்றோ? பத்மினி என்னும் மற்றொரு வீரப்பெண்மணியின் செய்கையும் மிகவும் கொண்டாடக் கூடியதாகும் அன்றோ? இவள் புகழ்பெற்ற பீம்சிங் என்னும் மன்னவன் மனைவி. அழகிற் சிறந்தவள்; அறிவில் உயர்ந்தவள்; ஆற்றல் நிறைந்த மனமுடை யவள். இவளைக் கைப்பற்றும் தீய நினைப்புடன் அலாஉத்தீன் என்னும் அரசன் சித்தூர்க் கோட்டைமீது படையெடுத்து வந்து, தந்திரமாகப் பீம்சிங்கையும் சிறைபடுத்தினான். பிறகு பத்மினி தந்திரமாக பீம்சிங்கை மீட்பதற்கு எண்ணினாள். அதனால் அலாஉத்தீன் எண்ணத்தை நிறைவேற்றுவதாக அவனுக்குக்கூறி, பீம்சிங்கைப் பார்க்க வேண்டுமென்று அனுமதிபெற்று, பீம்சிங்கு இருக்கும் இடத்தை யடைந்து அவனைச் சிறை மீட்டுக் கொண்டு வந்துவிட்டாள். ஆகவே இம்முறை அலாஉத்தீன் எண்ணம் நிறைவேறாமல் திரும்பிவிட்டான், மற்றொருமுறை இதே நினைப்புடன் சித்தூர்க்கோட்டைமீது படையெடுத்து வந்து பீம்சிங்கையும் அவனது படைவீரர்களையும் கொன்று விட்டு கோட்டைக்குள் புகத் தொடங்கினான்.. இச்செய்தியை அறிந்த பத்மினியும், மற்றைய பெண்களும் தீயில் மூழ்கி இறந்தனர். பிறகு அலாஉத்தீன் எண்ணம் நிறைவேறாமல் திரும்பினான். அதிகாரிகளின் கையில் அகப்பட்டு மானமிழவாமல், தன்னைக் காப்பாற்றிகொண்ட பத்மினியின் வீரத்தன்மையை என்னென்று கூறுவது? டில்லியிருந்து அரசாண்ட ஜிஹாங்கிர் என்னும் அரசன் மனைவியாகிய நூர்ஜஹான் என்னும் பெண்மணியைப் பற்றி அறியாதவர் யார்? ஜிஹாங்கீர் என்பவன் குடிவெறியினால் களித்துப் பொழுது போக்குவதையே இன்பமாகக் கொண்டிருந் தான். அவன் தன் அரசாட்சியிற் சிறிதும் கருத்தைச் செலுத்துவதே யில்லை. இந்நிலையைக் கண்ட நூர்ஜஹான் தானே முன்னின்று அரசியற் காரியங்களைச் செம்மையாக நடத்தினான். மற்ற ஆண்மக்களுடைய அரசாட்சியைக்காட்டிலும் இவளுடைய அரசாட்சி ஒரு வகையிலும் தாழ்ந்ததென்று கூறமுடியாது; எவ்வளவோ வகையில் சிறந்ததாகவே யிருந்தது. இந்நிகழ்ச்சியும் பெண்களின் ஆற்றலுக்கு ஏற்ற சான்றாகும் அன்றோ? மற்றும் இந்தூர் நாட்டு இராணியாகிய அகல்யா பாய் என்னும் வீரப்பெண்மணியைப்பற்றிய சிறப்பையும், ஆற்றலையும் இந்துதேச சரித்திரம் படித்தவர் யாவரும் அறிவார். இவள் தனது நாட்டைச் செம்மையாக ஆட்சி புரிந்தாள்; பகைவருடன் போர் புரிவதற்குத் தானே தலைமைபூண்டு சேனைகளை நடத்திச் சென்றாள். இத்தகைய வீரம் பாராட்டகூடியதன்றோ. இவை போன்ற பல வரலாறுகளைப் பெண்மக்களின் வலிமைக்கு உதாரணமாகச் சரித்திரங்களிலிருந்து எடுத்துக் காட்டலாம். இவையெல்லாம் பழங்கதைகள் என்று தள்ளினாலும் தள்ளலாம். ஆனால் இப்பொழுதும் நம் கண்முன்னே பெண் களின் வீரத்தன்மையைக் காணுகின்றோம். நாட்டுக்கு அரசியல் விடுதலை வேண்டுமென்று செய்யப்படும் பொறுமைப் போரிலும் சமூகக்கட்டுகள் ஒழிந்து, மக்கள் சமத்துவம் அடைய வேண்டு மென்று செய்யப்படும் சமதர்மப் போரிலும் பெண்களே முதன்மையாக நின்று வேலை செய்கின்றனர். நமது நாட்டுப் பெரியாராகிய காந்தியடிகளால் சென்ற 1930-ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற உப்புப் போரிலும், வேற்று நாட்டு பொருள்விலக்குப் போரிலும், மதுவிலக்குப் போரிலும் ஆண்மையோடு பெண்மக்கள் போர்செய்ததை உலகம் மறக்கமுடியுமா? உலகமெல்லாங் கொண்டாடக் கூடிய பெயர் பெற்ற கவியரசிகள் முன்னின்று உழைத்தார்கள்; பெண்கள் சமூக முன்னேற்றத்திற்குப் பாடுபடும் சமூகத்தலைவிகளெல்லாம் போர்புரிந்தார்கள்; இல்லறத்தில் வாழ்ந்த பெண்மணிகளும், தங்கள் சுகத்தைத் துறந்து வெளி வந்து உழைத்தார்கள்; படிப்பு வாசனையறியாத கிராமாந்தரப் பெண்மணிகளும் தேசவிடு தலைக்குப் போர் புரிந்தனர்: சுதந்தர உணர்ச்சியுடைய கலாசாலை மாணவிகளும் முன்வந்து உழைத்தனர். இத்தகைய பெண்களில் சிலருடைய பெயரையும் செய்கையையும் கீழே குறிப்பிடுகின்றோம். உலகமறியும் கவியரசியும், காங்கிர மகாசபையின் தலைவராயிருந்த வருமான சீமதி, சரோஜினி தேவி அவர்கள் தர்சனாவில் உள்ள உப்பளத்தை முற்றுகையிடுவதற்குத் தலைமை வகித்துச் சென்று சிறைத்தண்டனை பெற்றார். பம்பாய் இளைஞர் சங்கத்துத் தலைவராகிய திருமதி. கமலாதேவி அவர்கள் பம்பாயில் அரசாங்க உத்தரவை மீறிப் பல ஊர்வலங்களை வெற்றியுடன் நடத்தியும், உப்புச்சத்தியாக்கிரகஞ் செய்தும் சிறைத்தண்டனை யடைந்தார். பம்பாய் யுத்தசபை தலைவரா யிருந்த திருமதி. ஹன்சா மேத்தா அவர்கள் வேற்றுநாட்டுத் துணிகளை ஒழிக்கும் இயக்கத்தை முன்னின்று நடத்திச் சிறைத் தண்டனை யடைந்தார். இந்தியப் பெருங் கிழவர் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற தாதாபாய் நெளரோஜியின் பௌத்திரியும், காந்தியடிகளின் முதன்மையான தளகர்த்தரும், பம்பாய் யுத்த சபைக்குத் தலைவராயிருந்தவரும், சேவிகாசங்கத்தில் முக்கியமா யிருந்தவருமாகிய திருமதி பெரின் காப்டன் அவர்களும் தேசீய போர்புரிந்து சிறைத் தண்டனை பெற்றார். சர்தார் பட்டேலின் புத்திரியும் தர்சனாவில் ஆம்புலன்படைக்குத் தலைவராயிருந்த வருமாகிய திருமதி, மணிபாய் படேலும் தேசவிடுதலைக்குச் சிறைபுகுந்தார். மற்றும், சென்னை மாகாணத்தில் கிராமங்கள் தோறும் புகுந்து பிரசாரஞ் செய்து, மக்களைத் தேச விடுதலைப் போருக்குத்தட்டி யெழுப்பிய திருமதி. ருக்குமணி லெட்சுமிபதி; அலகாபாத்தில் சட்டமறுப்புப் போரை முன்னின்று நடத்திய நேருகுடும்பப் பெண்மணிகள்; கல்கத்தா கலாசாலையில் சுவரேறி தேசீயக்கொடியை நாட்டிய திருமதி. ஊர்மிளாதேவி; இந்திய சட்ட சபையில் மறியல் செய்த திருமதி. ஜுத்ஷா தேவி; சட்டமறுப்புச் செய்து சிறைபுகுந்த 65 வயதுடைய திருமதி. ருக்மணிதேவி; பம்பாயில் யுத்தசபை உதவித்தலைவராயிருந்த வரும், சட்டமறுப்புச் செய்தவருமாகிய திருமதி முன்ஷி; காந்தியடி களின் மனைவியும், வேற்றுநாட்டுப் பொருள் விற்பனைகளை மறியல் செய்வதில் தலைமை வகித்தவரும் ஆகிய திருமதி கதூரிபாய் காந்தி முதலியவர்கள் தேச விடுதலைக்காகச் செய்த வீரத்தன்மையான செயல்களையும், அதனால் அடைந்த துன்பங்களைப் பொறுத்துக் கொண்ட மனோதைரியத்தையும் உலகம் மறக்க முடியுமா? இவ்வாறே பலதிறப்பட்ட பெண்மக்கள் தேசவிடுதலைப் போரில் அஞ்சாமல் தலையிட்டு, அரசாங்கச் சேவகர்களால் தடியடியும், அரசாங்கத்தாரால் சிறைத்தண்டனையும் பெற்றிருக் கின்றனர். ஆகையால் பெண்மக்கள் எந்தவகையிலும் ஆண் மக்களைவிடக் குறைந்த வலிமையுடையவர்கள் அல்லர் என்பதையும், அவர்கள் ஆபத்துக்கு இடமான செயல்களிலும் வீர உணர்ச்சியோடு புகுந்து உழைக்கும் தன்மையுடையவர்கள் என்பதையும் அறியலாம். பெண்மக்களும் கல்வியும் I கல்வி என்பதற்குக் கற்றல் என்பது பொருள்; அதாவது உலகில் இன்பமுடன் வாழுவதற்கு வேண்டியவைகளைக் கற்றுக்கொள்ளுதல் என்பதுதான் உண்மைப் பொருள். ஆனால் இக்காலத்தில் கல்வி என்றால் பொத்தகப் படிப்பை மட்டிலுந் தான் கல்வியென்று கொள்ளுகிறார்கள். பொத்தகங்களைப் படித்து உருப்போட்டிருப்பதுமட்டிலும் கல்வியாகாது. பொத்தகப் படிப்பையும் துணையாக வைத்துக்கொண்டு உலக இயல்புகளையும் உணர்ந்திருப்பது தான் கல்வியாகும். கல்வி வேறு, அறிவு வேறு; கல்வியினால்தான் அறிவு உண்டு என்று கூறுவது தவறு. கல்வி அறிவை வளர்வதற்குத் துணை செய்யக் கூடியதேயென்றிக் கல்வியே அறிவாகாது. ஆகையால் கல்லாதார் பாலும் அறிவுண்டு. அவர்கள் அவ்வறிவைக் கொண்டு உலகச் செய்திகளை உற்றுணர்ந்தவர்களா யிருப்பார்களாயின் அவர்களும் கற்றவர்கள்தான். எவ்வளவோ பேர் பொத்தகப்படிப்பின்றிப் பலவகையான தொழில்களில் தேர்ந்திருக்கின்றனர். இவ்வாறு தொழில்களில் தேர்ந்திருக்கின்றவர்களும் கல்விமான்கள் தான். ஆயினும் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டிருப்பவர்களும், அவ்வத் தொழில் சம்பந்தமான பொத்தகப்படிப்பும் உள்ளவர்களா யிருப்பின் மிகவும் சிறந்ததாகும். உதாரணமாக நம் நாட்டில் உள்ள தொழிலாளர்களையும் வேற்று நாடுகளில் உள்ள தொழிலாளர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்; நம் நாட்டில் உள்ள விவசாயிகள், மரவேலை செய்வோர், இரும்பு வேலை செய்வோர், கொத்துவேலை செய்வோர், சித்திர வேலை செய்வோர் முதலிய பழந்தொழிளாளர்கள் கல்வி யில்லாமல் பரம்பரையாகச் செய்துவந்த முறைப்படியே தங்கள் தொழிலைச் செய்து வந்தனர்; இப்பொழுதுங்கூடச் செய்து வருகின்றனர். இக்காரணத்தால் இத்தொழில்கள் வளர்ச்சியடையாமல், பண்டைக்காலத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறே இருந்தன, இன்றும் இருக்கின்றன. ஆனால் அயல் நாட்டினரோ கல்வியறிவோடிருந்து இத்தொழில்களைச் செய்கின்றனர். ஆகையால் அவர்கள் நாட்டில் தொழில்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைகின்றன. ஆகையால் எந்தத் தொழில் உடையவர் களுக்கும், பொதுவாக எல்லா மக்களுக்கும் கல்வி இன்றியமை யாதது என்று அறியலாம். இந்த நிலையில் பெண்மக்களுக்குக் கல்வி வேண்டுவது அவசியம் என்பதை யார்தான் மறுக்க முடியும்? உலக வாழ்க்கையைச் சிறப்புடன் நடத்துவதற்குப் பலவகையிலும் பொறுப்புடையவர்கள் பெண்மக்களே யாவார்கள். இதற்காகவே பெண்மக்களுக்குக் கற்பு முதன்மையானது என்று கூறப்படு கின்றது. கற்பு என்பது கற்றல் என்னும் பொருளுடையது என்பதைப் பெண்களும் கற்பும் என்னும் பகுதியில் எடுத்துக் காட்டினோம். ஆனால் நமது நாட்டில் பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டியதில்லை என்னும் கொள்கை, ஆரியர்களுடைய மதமும், மநுதரும நூலின் ஆதிக்கமும் பரவிய காலத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் மநுதரும நூலில் தான் பெண்மக்களைப்பற்றி மிகவும் இழிவாக, விபசாரிகளென்றும், சுதந்தரம் அற்றவர்களென்றும், அடிமையாகவே வாழவேண்டியவர் களென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இக்கூற்றை உண்மையென ஒப்புக்கொண்டவர்களே பெண்களின் கல்வியைப் பாழ்படுத்தினர். அன்றியும் வைதீகர்கள் பெண்கல்வி கூடாது என்பதற்குக் கூறும் காரணம் இரண்டேயாகும். ஒன்று அவர்கள் கல்விகற்று அறிவு வளர்ச்சியுடையவர்களாகிவிட்டால் ஆண்மக்களுக்கு அடிமையாயிராமல் சமத்துவத்திற்குப் போராடுவார்கள் என்பது; மற்றொன்று கல்விகற்றவர்கள் அபிப்பிராயங் கொள்ளும் வைதீகர்களின் அறிவை எவ்வாறு புகழ்வதென்பது எமக்கு விளங்கவில்லை. முதலில் பெண்மக்கள் கல்வி கற்று விட்டால் பிறகு ஆண்களுக்கு அடிமையாயிராமல் சமத்துவ உரிமைக்குப் போராடுவார்கள் என்னும் கருத்தைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். இவ்வபிப்பிராயம் உண்மைதான். ஆனால் இதில் குற்றம் என்ன இருக்கிறது என்பதுதான் நமது கேள்வி. பெண்மக்கள் ஏன் ஆண் மக்களுக்கு அடிமையாய் இருக்கவேண்டும்? ஒரு பிரிவினருடைய நன்மைக்காக மட்டிலும் மற்றொரு பிரிவினர், தலைமுறை தலைமுறையாக முட்டாளாகவும் அடிமையாகவும் இருக்கவேண்டுமா? இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களின் மனப்பான்மை எப்படிப்பட்டது? இப்படிக் கூறுகின்றவர்களிடத்தில் சிறிதேனும் ஜீவகாருணியம் இருக்க முடியுமா? ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினருக்கு அடிமையா யிருப்பது அவர்கள் தலைவிதி யென்றும், கடவுள் என்பவரே அவர்களை அடிமையாகப் படைத்தார்களென்றும் கூறுவார் களானால் இது நொண்டிச் சமாதானமே யன்றிச் சரியான விடையாகுமா? இவ்வாறு கூறுகின்றவர்களை சுயநலமுடை யவர்கள், முட்டாள்கள் என்று கூறுவதைத் தவிர பிறர் நலங் கருதுபவர், அறிவுடையவர் என்று சொல்லமுடியுமா? ஆண் மக்களுக்கிருக்கும் அறிவும் ஆற்றலும் பெண்மக்களிடமும் அமைந்திருக்கக் காண்கிறோம். ஆகவே அவர்களை எப்படி, பிறப்பிலேயே ஆண்மக்களைக் காட்டிலும் தாழ்ந்தவர்கள் என்று கூறமுடியும்? அன்றியும் வைதீகர்கள் கடவுளை நடு நிலைமை உள்ளவர் என்றும் பாரபட்சம் இல்லாதவர் என்றும் கூறுகின்றனர். இவர்களே, கடவுள் ஒரு கூட்டத்தை எல்லா உரிமையோடும் இருந்து இன்பமடையவும், மற்றொரு கூட்டத்தை அடிமையாக வாழ்ந்து துன்பமடையவும் படைத்தார் என்றால் கடவுளுக்கு இவர்கள் கூறும் இலக்கணம் எப்படிப் பொருந்தும். இவ்வாறு ஒரு கடவுள் இருக்க முடியுமா? ஆகையால் முன்னுக்குப் பின் முரண்படுகின்ற இத்தகைய வைதீகர்களுடைய கொள்கை முற்றும் வெறுத்து ஒதுக்கத் தகுந்ததேயாகும். இரண்டாவது பெண்கள் கல்வி கற்றால் விபசாரிகளாகி விடுவார்கள் என்று கூறும் கூற்றைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். முதலில், விபசாரம் பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என்ற தவறான கொள்கை இப்பொழுது இருந்து வருகின்றது. ஆகையால் பெண்களுக்கு மட்டிலும் விபசாரம் கூடாது என்பதும், பெண்கள் மேல் மட்டிலும் அப்பழியைச் சுமத்துவதும் ஆண்களின் அகங்காரத் தன்மையும் அடாத செய்கையுமாகும். ஆடவன் மாத்திரம் பலபெண்களைக் காதலிக்கலாமாம். பல பெண்களோடு சேர்ந்து இன்பம் அடை யலாமாம்! இவ்வாறு செய்வதனால் குற்றமில்லையாம்! ஆனால் ஒரு பெண் பல ஆண்களைக் காதலிப்பதும், அவர்களோடு சேர்ந்து இன்பமடைவதும் மாத்திரம் பெருங்குற்றமாகி விடுமாம்! என்னே ஆண்களின் நீதி! அறிஞர்களின் போக்கு! வைதீகர்களின் வாதம்! இதனால் விபசாரம் குற்றமற்றது என்று கூறி அதை ஆதரிக்கின்றோமென்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். பொதுவாக நமது நாட்டில் பல ஆண்களிடத்திலும், பல பெண்களிடத்திலும் மோகவியாதி பரவியிருப்பதற்குக் காரணம் விபசாரம் என்றும், விபசாரத்தினால் இன்னும் பல கொடிய நோய்கள் நமது நாட்டில் பரவியிருக்கின்றனவென்றும் பெயர் பெற்ற மருத்துவர்கள் (Doctors) கூறுகின்றனர். அமெரிக்க மாதாகிய கன்னிமேயோவும், இந்திய மாதா என்னும் தனது புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டிருக்கிறாள். ஆகையால் விபசாரம் அடியோடு ஒழியவேண்டும்; ஒழிந்தால் நாட்டில் உள்ள கொடும்பிணிகள் குறையும். விபசாரம் ஒழியவேண்டுமென்றால் பெண்மக்களுடைய விபசாரம் மாத்திரமல்ல: ஆண்மக்களுடைய விபசாரமும் அடியோடு மறைய வேண்டும். ஆண்மக்களிடம் விபசாரம் இருக்கும் வரையிலும் பெண்மக்களுடைய விபசாரமும் நிலை பெற்றுத்தானிருக்கும். விபசாரஞ்செய்கின்ற ஆண்மக்கள் இருப்பதனால் தான் விபசாரஞ்செய்கின்ற பெண்மக்களும் இருக்கின்றார்கள்; என்பது உண்மையன்றோ? கற்ற பெண்கள் விபசாரிகளாகிவிடுவார்களென்றால் முற்காலத்தில் நமது நாட்டில் கல்வி கற்ற புலவர்களாக இருந்த அவ்வையார், காக்கை பாடினியார், மதனலீலையார், காரைக் கால் அம்மையார், ஆண்டாள் போன்ற பெண்களெல்லாம் விபசாரிகளாகத்தான் இருந்தார்களா? இவர்கள் எல்லோரும் விபசாரிகளாகத்தான் இருந்தார்கள் என்று வைதீகர்கள் ஒப்புக் கொள்ளுவார்களானால், பெண்கள் கல்வி கற்றால் விபசாரி களாகி விடுவார்கள் என்பதை நாமும் ஒப்புக்கொள்ளுகின்றோம். அன்றியும் இக்காலத்தில் மேல்நாட்டில் உள்ள படித்த பெண்களும், நமது நாட்டில் படித்தவர்களாயிருக்கிற எல்லாப் பெண்களும் விபசாரிகளாகத்தான் இருக்கிறார்களா? என்று கேட்கின்றோம். ஆகவே பெண்மக்களுடைய விபசாரத்திற்கு ஆண்மக்களுடைய விபசாரமே காரணம் என்னும் உண்மையை மறைத்து விட்டுக் கல்வி கற்பதனால் பெண்கள் விபசாரிகள் ஆகிவிடுவார்கள் என்பது எவ்வளவு பொருத்தமற்றதும், அற்பத்தனமானதும் ஆகும் என்பதை இன்னும் விரிவாக எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. இதுகாறுங் கூறியவற்றால் பெண்கல்வி கூடாதென்று கூறிக்கொண்டிருக்கும் வைத்தீகர் களின் வாதம் அடிபட்டுப் போனதை அறியலாம். இனித் தமிழர்களைப் பொறுத்தவரையிலும் பெண் கல்வி எவ்வாறு இருந்தது என்பதைப்பற்றி ஆராய்வோம். தமிழ் மக்கள் பெண்கல்வி கூடாது என்னும் கொள்கையுடையவர்கள் அல்லர். தமிழ்நூல்களில் பெண்கல்வி கூடாதென யாண்டும் கூறப்பட வில்லை. கல்வியைப்பற்றிக் கூறியவர்கள் அனைவரும், கல்வி, ஆண் பெண் இரு பாலார்க்கும் இன்றியமையாது வேண்டிய தென்றே கூறியிருக்கின்றனர். இதனை, எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. கண்உடையவர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு புண்உடையர் கல்லா தவர். தொட்டஅனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்கு கற்றஅனைத்து ஊறும் அறிவு. என்று கூறப்படும் குறளால் கல்வி, ஆண், பெண் இரு பாலார்க்கும் அவசியம் என்பது பெறப்படுகின்றதன்றோ? கல்வியின் ஊங்கில்லைச் சிற்றுயிர்க்கு உற்றத்துணை என்பதும் இருபாலார்க்கும் கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்துவதே. குஞ்சி அழகும் கொடுந்தானைப் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு என்னும் நாலடியார் பாட்டில் கொடுந்தானைக் கோட்டழகும் என்பதும் மஞ்சள் அழகும் என்பதும் பெண்களுக்குரியவை யன்றோ? இவைகள் அழகைத்தருவனவாகா; கல்வியே அழகைத் தருவதாகும் என்று கூறியிருப்பதும் பெண்கல்வியை வலியுறுத்து கின்றனவன்றோ? பெரும்தடம்கண் பிறைநுதலார்க் கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே என்னும் கம்பர் செய்யுளும் பெண்களின் கல்வியின் பெருமையை விளக்கி நிற்கின்றது. கல்வி கற்பதனால் பெண்களுக்குண்டாகும் நல்ல செயலையும் குணத்தையும் கண்ணாடிபோல் விளக்கிக் காட்டுகின்றது. பண்டைக்காலத்தில் தமிழ்ப்புலவர் ஒருவர் இருந்தார். அவரை ஒருவன் கண்டு ஆச்சரியமடைந்து ஐயா! உங்களைப் பற்றிப் பல ஆண்டுகளாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன்; ஆனால் இன்னும் உங்களுக்கு நரை உண்டாகவில்லையே; காரணம் என்ன? என்று கேட்டான். உடனே அவர் தமக்கு நரையில்லா மலிருப்பதற்குக் காரணம் கூறும்போது, முதற்காரணமாகத் தமது மனைவி மக்கள் கல்வி கற்று நல்லறிவுடையவராகவும், சிறந்த குணமுடையவராகவும் இருப்பதை எடுத்துக் கூறினார். இக்கூற்றை யாண்டு பலவாக நரையில் ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின் மாண்டஎன் மனையொடு மக்களும் நிரம்பினர் என்றுவரும் புறநானூற்றுப் பாடலால் அறியலாம். இது பெண் கல்வியின் சிறப்பை மிகவும் எடுத்துக் காட்டுகின்றதன்றோ? இன்னும் நீதிநூல்களில் கூறப்படும் பாடல்களில் பைந்தொடீஇ, ஒண்டொடீஇ, பூங்குழலாய், பூங்கோதாய், ஆயிழாய், கயற்கணாய், கயல் விழியாய், என்பன போன்ற-பெண்களை முன்னிலைப்படுத்திக் கூறும் மொழிகளை யமைத்துப்பாடியிருக்கின்றனர். இவைகளை, மூதுரை, நல்வழி, நன்னெறி, வாக்குண்டாம், நீதிநெறி விளக்கம் முதலிய நூல்களில் காணலாம். இவ்வாறு பெண்களை முன்னிலையாக்கிக் கூறுவதனால் பெண்களும், ஆண்களைப் போலவே கல்வி கற்பதற்கு உரியவர்கள் என்பது விளங்குகின்றதன்றோ? இதுவரையிலும் கூறியவற்றால் தமிழ் நூல்களும், தமிழர் நாகரிகமும், பெண்கல்விக்குத் தடை செய்யவில்லை யென்பதையும், ஆரியர்களுடைய நூல்களும், அவர்களுடைய மதக்கொள்கைகளும் நமது நாட்டிற் பரவிய பின்னர் தான் பெண்கல்விக்குத் தடையேற்பட்டது என்பதையும் அறியலாம். இனி பெண்களுக்கு எத்தகைய கல்வி வேண்டும் என்பதைப் பற்றி ஆராய்வோம். பெண்மக்களும் கல்வியும் II பண்டைக்காலத்தில் - தமிழ் நாட்டில் பெண்களுக்குக் கல்விகற்க உரிமை இருந்த காலத்தில் பெண்களும் ஆண்களும் ஒரேவகையான கல்வியையே கற்றுவந்தனர். ஏனெனில் பண்டைக்காலக்கல்வி, மக்கள் இவ்வுலகில் பொருள் சேர்த்து இன்பமுடன் வாழ்வதற்குரிய செய்திகளைப் போதிப்பதில்லை. பொதுவாக மக்களுடைய ஒழுக்கத்தைச் சீர்திருத்துவதும், அறிவுவளர்ச்சிக்குத் துணை செய்வதுமே பண்டைக்கல்வியின் பயனாக இருந்தது. ஆகையால் பெண்கள் கற்கவேண்டிய கல்வியென்றும், ஆண்கள் கற்கவேண்டிய கல்வியென்றும் பிரிவின்றி ஒன்றாகவே யிருந்தது. ஆனால் இக்காலத்துக் கல்வியில் ஒழுக்கம், அறிவு, தொழில் முதலிய எல்லா விஷயங்களும் அடங்கியிருப்பதால் பெண்களுக்கு முக்கியமாக எத்தகைய கல்வி வேண்டும் என்பதைப்பற்றிச் சிறிது கூறவேண்டியதிருக்கிறது. பெண்கல்வியைப் பற்றிப் பலர் பலவாறு அபிப்பிராயங் கூறுவார்கள். சிலர் பெண்களுக்குத் தாய்மொழிப் பயிற்சி மட்டிலும் போதுமென்பார்கள்; சிலர் அரசாங்க மொழிப் பயிற்சியும் அவசியம் வேண்டும் என்பார்கள்; சிலர் அவர்களுக்கு மதக்கல்விதான் அவசியம் என்பார்கள்; சிலர் அவர்களுக்குச் சுகாதாரக் கல்வியும், மருத்துவக் கல்வியும் தான் வேண்டும் என்று கூறுவார்கள். சிலர் பெண்மக்கள் ஒழுக்கத்தோடும், சுகாதாரத்தோடும், திறமையோடும் குடும்பத்தை நடத்துவதற்கு வேண்டிய கல்வி மாத்திரம் இருந்தால் போதுமென்பார்கள்; சிலர் அவர்களும் ஆண்களைப் போலவே தமக்கு விருப்பமான எல்லாக் கல்விகளையும் கற்றுத் தமக்கு விருப்பமான எல்லாச் செயல்களையும் செய்வதற்கு உரிமையுடையவர்களாயிருக்க வேண்டுமென்பார்கள். ஆகையால் பிறருடைய எண்ணங்கள் எப்படியிருந்தாலும் இருக்கட்டும். பொதுவாக இக்காலத்தில் பெண்களுக்கு வேண்டிய அவசியமான கல்வி என்ன என்பதை நாம் கவனிப்போம். பெண்கள் எந்த மொழியைப் பயிலவேண்டும், எந்த மொழியைப் பயிலக்கூடாது என்பதைப் பற்றிய கவலை நமக்கு வேண்டாம். உலகில் உள்ள எல்லா மொழிகளும் மக்களுடைய அறிவை வளர்ப்பதற்காகத் தோன்றியவைகளே. ஆகையால் எந்த மொழியைப் படித்தாலும் அறிவு வளர்ச்சி யுண்டாகு மென்பதில் ஐயமில்லை. ஆனால் யாரும் முதலில் தாய் மொழியையே கற்கவேண்டும் என்பதை அறிவாளிகள் மறுக்க மாட்டார்கள். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய் மொழியே - அதாவது பேசும் மொழியே விரைவில் கற்பதற்கு எளிதாக இருக்கும். அதனுடன் இன்னும் எத்தனை மொழிகளைக் கற்றாலும் அத்தனைக்கும் அறிவின் வளர்ச்சி மிகுதிப்படும். அன்றியும் தாய்மொழிப் பயிற்சியுடன் அரசாங்க மொழிப்பயிற்சி எல்லோருக்கும் இன்றியமையாததாகும். பெண்களுக்குப் பொதுவாக எல்லாக்கல்வியும் இருப்பதுடன், சிறப்பாக சுகாதார சம்பந்தமான கல்வியும், உடற் கூறு சம்பந்தமான கல்வியும், வைத்திய சம்பந்தமான கல்வியும் இருக்கவேண்டும். ஏனெனில் உலக மக்களின் ஆரோக்கிய வாழ்வு பெண்மக்கள் கையிலேயே அடங்கிக் கிடக்கின்றது. பெண்மக்கள் வயிற்றிலிருந்துதான் மக்கள் பிறக்கவேண்டும் என்னும் வழக்கம் இருக்கின்றவரையிலும், மக்களுடைய நோயற்ற வாழ்வுக்கு அவர்கள்தான் பொறுப்புடையவர்கள். சில குழந்தைகள் நோயோடு கூடியே பிறக்கின்றன. பின்பு அக்குழந்தைகள் பெரியவர்களான பிறகும் நோயினால் துன்புறுகின்றார்கள். இவ்வாறு மக்களுக்குப் பிறப்பிலேயே நோயுண்டாவதற்குக் காரணம் தாய்மார்களின் சுகாதாரக் குறைவேயாகும். அவர்கள் எப்பொழுதும் சுகாதாரமுறையறிந்து ஒழுகித் தங்கள் உடம்பை நோயற்றதாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் கருவடைந்திருக்கும் காலங்களில் இன்னும் கவனத்துடன் உடம்பைப் பாதுகாத்து, உடல் நலத்திற்கேற்ற நல்ல உணவுகளை உண்டுவரவேண்டும். இவ்வாறு இருந்தால் தான் நோயற்ற நல்ல குழந்தைகளைப் பெறமுடியும். இங்கிலாந்தில் இந்திய மந்திரியாயிருந்த, காலஞ் சென்ற லார்டு, பர்க்கன் ஹெட் அவர்கள் 2029-ஆம் ஆண்டிற்குமேல் நடக்கப்போகும் அதிசயங்களைப்பற்றி எழுதிவைத்திருக்கும் குறிப்பில் தாயின் உடம்பிலிருந்து குழந்தை பிறப்பதற்குவேண்டிய சத்தையும், தந்தையின் உடம்பிலிருந்து அத்தகைய சத்தையும் எடுத்துக் கண்ணாடி பாத்திரத்தில் இட்டுச் செய்ய வேண்டிய முறைகளைச் செய்து குழந்தைகளை உண்டாக்கும் விதத்தைத் தத்துவ சாதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று எண்ணவும் இடமிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இவ்வாறு மக்களைச் சிருஷ்டி செய்கின்ற வல்லமை நமக்கு உண்டாகின்றவரையிலும் பெண்மக்கள் குழந்தைகளுக்குத் தாயாக இருந்து அவர்கள் நோயற்ற வாழ்வுடையவர்களாக காப்பாற்றி வரவேண்டும். ஆகையால் பெண்கள், சுகாதாரக் கல்வி, உடற்கூற்றுக்கல்வி, மருத்துவக்கல்வி முதலியவைகளை பயின்று மருத்துவர்களாக (Doctors) முன் வர வேண்டும். அன்றியும் பெண்மக்கள் கல்வி போதிக்கும் ஆசிரியர்களாக வேண்டும். இத்தொழிலுக்கான படிப்பு முழுவதும் அவர்களுக்கு வேண்டும். குழந்தைகளை அன்போடு ஆதரித்து அவர்கள் மனப்பாங்கை அறிந்து கல்வி போதிக்கும் வன்மை பெண்மக்களுக்கே உண்டு. மற்ற நாடுகளில் கல்வி வளர்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் பெண்மக்கள் ஆசிரியர்களாயிருப்பதேயாகும். பெரும்பாலும் ஆரம்பக்கல்வி யைப் பெண்மக்களே மற்ற நாடுகளில் போதித்து வருகின்றனர். இன்னும் இந்த நிலை நமது நாட்டில் ஏற்படவில்லை. ஆகையால் ஆசிரியத் தொழிலுக்குரிய கல்வி பெண்மக்களுக்கு மிகவும் அவசியமாகும். பொதுவாக, மருத்துவர்களாகவும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களாகவும் பெண்மக்கள் முன்வந்தால் நமது நாட்டில் சுகாதாரமும், கல்வியும் நிறைந்த வளர்ச்சியடையும்; நமது நாடும்முன்னேற்றமடையும்; பெண்கள் உலகமும் சீர்திருந்தும். மற்றபடி, பெண்கள், தங்கள் கல்விக்கும், அறிவிற்கும், திறமைக்கும், உடல் வன்மைக்கும் தக்கபடி-தங்களுக்கு விருப்பமான எந்தத் தொழிலையும் செய்வதற்கு உரிமையுடையவர்களாயிருக்க வேண்டும்; இதற்கு யாதொரு தடையும் இருத்தல் கூடாது. இவ்வாறான நிலை வருகின்ற காலத்தில்தான் பெண்மக்களின் அடிமைத்தன்மை ஒழியும். மேற்கூறியவற்றுக்கு எதிராகக் கூறும் அபிப்பிராயங்கள் சிறந்தனவல்ல; விரிவான எண்ணமுடன் கூறும் அபிப்பிராயங்கள் ஆகமாட்டா; குறுகிய நோக்கமுடன் கூறும் கூற்றுக்களாகவே கருதவேண்டும். அதிலும் பெண்களுக்கு மதக்கல்வி கட்டாயம் போதிக்கபடவேண்டும் என்று கூறும் அபிப்பிராயம் மிகவும் மோசமானதாகும். இது இன்னும் அவர்களை அடிமையாகவே வைத்திருக்கவேண்டும் என்பதற்காகக் கூறப்படும் தந்திரமொழி யாகும். ஆண்பெண் இருபாலார்க்குமே இளமைப்பருவத்தில் மதக்கல்வி போதிப்பதை அடியோடு நிறுத்தவேண்டும் என்பது நமது கொள்கை. மூடநம்பிக்கைகளை உண்டாக்குவதே மதக் கல்வியாக இருக்கின்றது. ஆகையால் இளமையிலேயே நமது மக்களுக்கு மூடநம்பிக்கைகளை உண்டாக்கிவிட்டாற் பிறகு அவர்கள் பகுத்தறிவு உலகத்தாரோடு உறவாடுந்தன்மையை எளிதிற் பெற முடியாதவர்களாவார்கள். இன்றும் மதபோதனையே மக்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்கின்றது. இன்றும் மதவாதிகள் தான் சீர்திருத்தத்திற்குத் தடைசெய்கின்றவர்களா யிருக்கின்றனர்; இப்பொழுதும் பால்ய விவாகத்தைத் தடுப்பது தவறு என்று கூறுகின்றவர்களும், விதவா விவாகம் செய்வது குற்றம் என்று சொல்லுகின்றவர்களும் விவாக விடுதலை கூடாது என்று கூக்குரலிடுபவர்களும் மதநூல்களைப் படித்த வைதீகர்களாகவே யிருக்கின்றார்கள்; ஆகையால் மதக்கல்வி அறவேகூடாதென்று கூறுகின்றோம். பெரும்பாலும் பெண்களே பிடிவாத குணம் உள்ளவர்கள். பழகிய பழக்கங்களையும், கொண்ட கொள்கைகளையும் எளிதில் மாற்றிக்கொள்ள மனந்துணியாதவர்கள். கல்வி கற்காதபெண் களிடமுள்ள பொருளற்ற பழக்க வழக்கங்களை மாற்றுவதே மிகவும் துன்பமாக இருக்கிறது. இந்த நிலையில் அவர்களுக்கு இளம்பருவத்திலேயே மதக்கல்வியையும் போதித்து மூடநம்பிக்கை யுடைவர்களாக்கிவிட்டால் பிறகு எவ்வாறு அவர்கள் சுதந்தர அறிவுடையவர்களாகமுடியும்? சுதந்தரச் செய்கையுடையவர் களாக முடியும்? ஆகையால், மக்களுக்குள் உயர்வு தாழ்வையும், சாதிபேதத்தையும், அடிமைப்புத்தியையும் போதிக்கும் மதபோதனை பெண்களுக்கு வேண்டவே வேண்டாம்; கூடா ஒழுக்கங்களைபோதிக்கும் புராணபோதனையும் வேண்டாம். சிலர் மதக்கல்வியினால் தான் ஒழுக்கத்தை உண்டாக்க வேண்டும். மதக்கல்வி யில்லாவிட்டால் மக்களுடைய ஒழுக்கம் கெட்டுவிடும். ஆகையால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மதக்கல்வி அவசியமானதாகும்; அன்றியும் பெண்களுக்கு மிகவும் அவசியம் என்று கூறுகின்றனர். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாது. கல்வியோ அல்லது மதக்கல்வியோ ஒழுக்கத்திற்குக் காரணம் அல்ல. ஆனால் நல்லொழுக்கத்திற்குக் காரணம் இளமை முதல் பழகும் பழக்கமும் கூட்டுறவுமேயாகும். கற்றவர்களாலும், மதக் கல்வி பயின்றவர்களாலும், மதப்பற்றுடை யவர்களாலுமே இவ்வுலக மக்களின் ஒழுக்கம் கெட்டது என்பது நமது கொள்கை. படித்தவர்கள் எந்த அக்கிரமத்தையும் துணிந்து செய்து விட்டுப் பிறகு தமது திறமையால் தப்பித்துக் கொள்ளு கின்றார்கள். மதவாதிகள் எந்த அக்கிரமத்தைச் செய்தாலும், கடவுளை வணங்கியோ அல்லது அவர்க்கென்று பல சடங்குகளைச் செய்தோ மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை யுடையவர்கள். நாம் கூறுவது பொய்யென்றால் உலக சரித்திரத்தைப் பாருங்கள்! பிறகு உண்மை விளங்கும். இது வரையிலும் உலகில் நடைபெற்ற கலகங்களும், அக்கிரமங்களும், படித்தவர்களாலும், மதவாதிகளாலுமே என்பதைச் சரித்திரம் கூறுகின்றதன்றோ? ஆகையால் மதக்கல்வியினால் நல்லொழுக் கத்திற்குப் பதிலாகத் தீயொழுக்கமே உண்டாகும் என்பது நமது நம்பிக்கை. ஆகவேபெண்களுடைய விடுதலைக்கும், சீர்திருத்தத் திற்கும் கல்விப்பயிற்சி முதன்மையானதாகும் என்பதைப்பற்றி இது வரையிலும் கூறினோம். இன்றும் சமூகச் சீர்திருத்தப் போரிலும், அரசியல் விடுதலைப் போரிலும், படித்த பெண்களே ஈடுபட்டுத் தொண்டு புரிவதைப் பார்க்கின்றோம். படிப்பில்லாத பெண்களுக்கு இத்தகைய உணர்ச்சி இல்லாமலிருப்பதையும் காணுகின்றோம். ஆதலால், பெண்களுடைய முன்னேற்றத்தைக் கருதினாலும், ஆண்களுடைய நன்மையைக் கருதினாலும் சமூகச் சீர்திருத்தத்தைக் கருதினாலும், அரசியல் முன்னேற்றத்தைக் கருதினாலும் வேறு எந்தப் பொதுநலத்தைக் கருதினாலும் பெண்கள் கல்விகற்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவர்களும் ஆண்மக்களைப் போல எத்தகைய கல்வியையும் கற்க உரிமையுடையவர்களாயிருக்க வேண்டும் என்பதும் அவசியமாகும். பெண்மக்களும் மணமும் யாவரும் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ளத் திறமை யுடையவர்களாயிருக்க வேண்டும். பிறருடைய உதவியைப் பெற்றுதான் வாழவேண்டும் என்று இருக்கின்றவர்களும், பிறருடைய உதவியில் தான் வாழ்ந்திருக்க வேண்டுமென்று இளமை முதல் பழக்கப்படுகின்றவர்களும், உலகத்தில் தங்கள் வாழ்க்கை யின்பத்தை முற்றும் அடைய முடியாதவர்களாகவே யிருப்பர். இந்த முறையில் பார்க்கும்போது பெண்மக்கள் எப்பொழுதும் தனித்து வாழமுடியாமல் பிறருடைய பாதுகாப்புக்கு உட்பட்டு வாழும்படியான முறையிலேயே பழக்கப்படுகின்றார்கள். இவ்வாறு இளமைமுதல் பழக்கப்படு வதனால், அவர்கள் வயதேறியபிறகும் தம்மைத்தாமே காப்பாற்றிக் கொண்டு வாழத் தகுதியற்றவர்களாகின்றனர். பழக்கத்தினால் தான் பெண்கள் இவ்வாறு ஆண்களைக்காட்டிலும் மாறுபட்ட குணமுள்ளவர்களாகின்றார்கள் என்பதைப் பெண்களும் பிறவிக்குணமும் என்னும் பகுதியில் விளக்கிக் கூறப்பட்டிருக் கின்றது. இவ்வாறின்றிப் பெண்களுக்கும் ஆண்களை போலவே கல்விப் பயிற்சியளித்து சுதந்தரமுடையவர்களாக இருக்கும்படி இளமை முதலே பழக்கிவருவோமாயின் அவர்களும் ஆண்களைப் போன்ற மனோதைரியமும், தமது விருப்பபடி நடக்கும் குணமும் உடையவர்களாவார்கள். பெற்றோர்கள் தங்கள் பெண்களுக்கு மணஞ்செய்து வைப்பதை ஒரு பெரும் பாரமாகக் கருதுகின்றார்கள் அதற்காகத் தங்கள் விருப்பப்படி மாப்பிள்ளை தேடி மணஞ்செய்து வைக்கின்றனர். இவ்விஷயத்தில் பெண்களுடைய விருப்பமும், எண்ணமும் மதிக்கபடுவதேயில்லை. இது மிகவும் தவறான தாகும். பெண்களை அடிமையாக மதிப்பதனால் வருந்தீங்காகும். மணம் என்பது தெய்வீகம் பொருந்தியதாக மதவாதி களால் கருதப்படுகின்றது. தெய்வமே மணமக்களைச் சேர்த்து வைப்பதாக எண்ணப்படுகின்றது. ஆனால் மணம் என்பதில் ஏதும் தெய்வத்தன்மை இருப்பதாக நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். இருவர் ஒன்று சேர்ந்து வாழ்வதாகச் செய்து கொள்ளும் ஒரு உடன்படிக்கைதான் மணம் என்பது. இவ்வாறு உடன்படிக்கை செய்துகொள்ளும் இருவர்க்கும் பூரணசம்மதம் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவ்வுடன்படிக்கையின் படி இருவரும் நடக்க இயலும். இவ்வாறின்றி இருவருக்கும் உடன்படிக்கை ஏற்பட்டு விட்டதாகப் பிறர் வற்புறுத்தி ஒரு உடன்படிக்கையை முடித்துவைத்தால் அதனால் என்ன பயன்? ஆகையால் மண விஷயத்தில் பூரணசுதந்தரம் ஆண் மக்களுக்கு இருப்பது போலவே பெண்மக்களுக்கும் அளிக்க வேண்டும். முதலில் பெண்களைக் குழந்தைப் பருவத்தில் மணஞ்செய்து கொடுக்கும் ஒரு வழக்கத்தை யெடுத்துக் கொள்ளுவோம். இளமையில் மணஞ்செய்துகொடுக்கும் வழக்கம் தமிழர்களுக்குள் இருந்ததில்லை. ஆரியர்களுக்குள்ளும் பண்டைக்காலத்தில் இருந்ததில்லை. ஒரு காலத்தில் நமது அரசாட்சி சரியாக நடைபெறாத காரணத்தால், துஷ்டர்கள் மணமாகாத பெண் மக்களைத் தூக்கிச் சென்று துன்பம் விளைத்தனர். அதனால் பெண்களை இளம்பருவத்திலேயே மணஞ்செய்து கொடுக்கத் தொடங்கினார்கள். இவ்வழக்கமே பிற்காலத்தில், சாதிரமா கவும் மதமாகவும் வழங்கிவிட்டது. நாம் வயதைப் பொறுத்துப் பெண்களின் இளமைப் பருவத்தைக் குறிப்பிடவில்லை. நன்மை தீமைகளை பகுத்தறியும் அறிவுவராதவரையிலும் இளமைப்பருவமாகும்; மணவாழ்க் கையின் தன்மையை யறிந்து அதை விரும்பவோ அல்லது வெறுக் கவோ அறிவுபெறுகின்ற வரையிலும் இளமைப்பருவமாகும். இவ்வாறு மணம் என்பது இன்னதென்றே யறியாத பருவத்தில் பெண்களை மணஞ்செய்து கொடுப்பதனால் பிற்காலத்தில் அவர்களுடைய வாழ்க்கை எப்படியாகும் என்பதைப் பற்றியாரே அறிவார்? சிலபெண்கள் வயதேறிய பிறகும் மணவாழ்க்கையை உணர்ந்தபிறகு தமக்கு மணஞ்செய்துவைக்கப்பட்ட ஆடவர் களுடன் ஒற்றுமையாகவும் அன்பாகவும் வாழ்ந்து இருவரும் இன்புறவும் கூடும். சில பெண்கள் வயதேறியவுடன், தமது குணத்திற்கும், தமது கணவன்மார்களின் குணத்திற்கும், ஒத்துவரா மையால் இருவரும் ஒருவர்மீது ஒருவர் அன்புகொள்ளாமல் போவதும் உண்டு. இவ்வாறு கணவன் மனைவிகளுக்குள் அன்பும் ஒற்றுமையும் உண்டாகாவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் துன்பத்தைத் தவிர இன்பம் ஏது; இந்த நிலையில் தங்கள் மணஒப்பந்தத்தை நீக்கிக்கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்களாயின், இருவரும் துன்மார்க்க நெறியில் ஒழுகு வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இவ்வுண்மை இப்பொழுது தேச மக்களால் உணரப்பட்டு இளமை மணமும் வெறுக்கப்படுகின்றது. இதன் பலனால் பதினான்கு வயதிற்கு உட்பட்ட பெண்களை மணஞ்செய்து கொடுக்கக்கூடாது என்று சட்டமும் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஆகையால் இன்னுங்கொஞ்ச நாட்களில் இவ்வழக்கம் அடியோடு ஒழிந்து போய்விடும் என்பது திண்ணம். இக்காலத்தில் வயதுவந்த அறிவுடைய பெண்களுக்குச் செய்யப்படும் மணங்களும் பெரும்பாலும் பெண்களின் விருப்பத்தை யறியாமலே நடைபெறுகின்றன. பெற்றோர் களுடைய சம்மதத் தினாலும், புரோகிதருடைய அபிப்பிராயத் தினாலும் நடை பெற்றுவிடுகின்றன. ஒரு மாப்பிள்ளையின் பெற்றோர்களுடைய விருப்பத்திற்குப் பெண்ணின் பெற்றோர்கள் இணங்கியபிறகு அந்த மணத்தை நிச்சயஞ்செய்கின்றவன் புரோகிதனே. பெண்ணினுடைய சாதகத்தையும், மாப்பிள்ளை யினுடைய சாதகத்தையும் பார்த்து இருவருக்கும் எல்லாப் பொருத்தங்களும் இருக்கின்றன என்று கூறினால்தான் மணம் நிச்சயப்படும்; இரு சாதகங்களுக்கும் பொருத்தமில்லை யென்று கூறிவிட்டால் மணம் நடைபெறாது. இவ்வாறு சாதகம் பார்த்துச் சகுனம் பார்த்து செய்யப்படும் எல்லா மணமக்களும் புரோகிதன் கூறியபடியே பிற்காலத்தில் இன்பமாக வாழ்கின்றார்களா என்றால் அதுதான் இல்லை. இத்தகைய மணமக்களில் தங்கள் வாழ்நாள் முழுதும் கணவன் மனைவிகளுக்குள் ஒற்றுமையும் அன்புமின்றி சண்டையிலும் சச்சரவிலும் காலங்கழிப்பவர் பலர்; கணவனை இழந்து விதவையாகத் துன்புறும் பெண்கள் பலர்; மனைவியை இழந்து மறுமணம் செய்து கொள்ளும் ஆண்கள் பலர்; ஒருவரை யொருவர் விட்டுப்பிரிந்து தங்கள் விருப்பப்படி வேற்றாருடன் கூடி வாழும் கணவன் மனைவிகள் பலர்; பிள்ளையில்லை யென்ற காரணங்கூறி வேறு மணம் புரிந்து கொள்ளுகின்ற ஆண்மக்கள் பலர்; ஆயுள் முழுதும் பிணியினால் துன்புறும் கணவன் மனைவிகள் பலர். இவற்றை யெல்லாம் நேரே காணு கின்றோம். ஆகையால் புரோகிதர் கூறும் பொருத்தம் புரட்டு என்பதும் புரோகிதர் அபிப்பிராயத்தை மதித்து நடப்பது தவறு என்பது விளங்கும்; பெற்றோர்கள் தான் தங்கள் பெண்மக்கள் பிற்காலத்திலும் துயரமின்றி வாழும்படி செய்வதற்குப் பொறுப்புள்ளவர்கள். ஆகையால் அவர்கள், பெண்கள் மணவிஷயத்தில் தலையிடாமல் அவர்கள் இச்சைப்படி விட்டு விடுதல் தவறாகும். இவ்வாறு விடுவதனால் பெண்கள் கெடுதியடைவார்கள். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் பின்வரும் செய்தியைத் தெரிந்துகொள்ளும் அறிவற்றவர்கள். பிறருடைய அன்பிலும், அழகிலும், ஆடம் பரத்திலும் எளிதில் ஈடுபட்டுவிடக்கூடியவர்கள். ஆண்மக்களின் வஞ்சகத்தை உணராமல் அவருடைய பசப்பு வார்த்தைகளில் மயங்கிவிடக்கூடியவர்கள். ஆகையால் காமங்கொண்ட ஆண்மக்கள் அவர்களை எளிதில் ஏமாற்றித் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொண்டபின் கைவிட்டு விடுவார்கள். பிறகு அவர்கள் ஆதரவின்றி அலையநேரும். ஆகையால் பெற்றோர் களே நல்ல மணமகனைத் தேடி வைக்கக் கடமைப்பட்டவர்கள், என்று சிலர் கூறுவார்கள். இக்கூற்றை நாம் பொய்யென்று கூறவில்லை. இதில் உண்மையிருக்கிறதென்று ஒப்புக்கொள்ளு கிறோம். ஆனால் எந்த நிலையில் இக்கூற்று உண்மையாகு மென்றால், உலகப்போக்கை அறிந்து கொள்ளவிடாமலும் இளமைமுதல் வீட்டிற்குள் அடைத்து வைத்திருக்கும் நிலையில் தான் உண்மையாகும். கல்வியும், அறிவும், உலகப்போக்கு உணர்ச்சியும், நாகரீகமும் உள்ள பெண்களிடத்தில் இக்கூற்றுச் சிறிதும் பொருந்தாது. ஆகையால் பெற்றோர்கள் பெண்மக்கள் விருப்படியே மணஞ்செய்து கொள்ளுவதற்கு அவர்களுக்குத் துணை செய்யவேண்டும். பேதைப் பெண்களாயிருந்தாலும் அவர்கள் இச்சிக்காத ஆடவரை மணஞ்செய்து வைத்தல் கூடாது. பெண்களுடைய உரிமையையும் விருப்பத்தையும் சிறிதும் பொருட்படுத்தாமல், ஆடுமாடுகளை விலைக்கு விற்பதுபோல் அவர்களை வற்புறுத்தி மணஞ்செய்து கொடுக்கும் வழக்கம் இந்துக்களில்தான் மிகுதியாக உண்டு. கிறிதவர்களிலும், முலிம்களிலும் இத்தகைய வழக்கம் இல்லை. கிறிதவர்களில் மணமகன் மணமகள் இருவருடைய மனச்சம்மதம் தெரிந்தபின் தான் மணஞ் செய்வதாகத் தீர்மானஞ் செய்கின்றனர். மணம் நடைபெறும்போதும் இருவருடைய சம்மதத்தையும் கேட்டு மணஞ் செய்கின்றனர். இவ்வாறே முலிம்களுக்குள்ளும் மணம் நடைபெறும்போது பெண்ணின் சம்மதத்தைக் கேட்ட பின்பே விவாகம் நடக்கின்றது. இந்துக்களைப் போல் பெண்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக மணஞ்செய்து வைக்குந்தன்மை நாகரீகம் பெற்ற வேறு எந்த நாடுகளிலும் இல்லை. இந்துமதத்திலும், பண்டைக் காலத்தில், இவ்வாறு பெண் மக்களை அவர்கள் சம்மதமின்றி மணஞ்செய்து கொடுக்கும் வழக்கம் இருந்ததில்லை. இதனைப்பல சரித்திரங்களாலும், அரசர்களுக்குள் நடைபெற்ற சுயம்வரம் என்னும் வழக்கத் தினாலும் அறியலாம். தமிழ் நாட்டின் வழக்கத்தைத் தமிழ் இலக்கணங்களுள் ஒன்றாகிய அகப்பொருள் இலக்கணத் தால் அறியலாம். ஆண்மகனும், பெண்மகளும், தங்கள் மனமொத்தபின் பெற்றோர்களின் சம்மதத்தை எதிர்பாராமலே கணவன் மனைவியாகக்கூடி வாழ்வதே மணவாழ்க்கை என்பது அகப்பொருள் இலக்கணக் கருத்தாகும். இது பண்டைத் தமிழர் வழக்கமாக இருந்தது. இவ்வாறு ஆண் பெண் இருவர் சம்மதத்தின் பேரிலும் நடைபெற்று வந்த மணம் மாறி தற்போதுள்ள நிலைக்கு வந்ததற்குக் காரணம் விவாகத்தைத் தெய்வத்தன்மையுடை யதாகச் செய்ததேயாகும்; தெய்வத் தன்மையுள்ளதாகச் செய்த மையால் அதற்கெனப் பல சடங்குகளும் ஏற்பட்டுவிட்டன. இதன் பின்னர் இளமை மணமும் ஏற்பட்டுவிட்டது. இளம் வயதில்-அதாவது அறிவுண்டாகாத பருவத்தில் பெண்களுக்கும் ஆண் களுக்கும் மணஞ்செய்து வைக்கத் தொடங்கிய காலமுதல் விவாக உரிமை பெற்றோர்களைச் சார்ந்துவிட்டது. இனி, அறிவும் நாகரிகமும் பரவி வருகின்ற இக்காலத்தில் இவ்வழக்கம் நிலைபெற முடியாது. ஆண்களும் பெண்களும் தங்கள் எண்ணப்படி நடக்கத் துணிவதை அறிஞர்கள் ஆட்சேபிக்கவும் முடியாது. இப்பொழுது படித்த வாலிபர்கள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ளத்தான் துணிகின்றனர். தங்கள் எண்ணத்திற்கு மாறாகப் பெற்றோர்கள் செய்து வைக்கத் துணியும் விவாகங் களை அடியோடு வெறுக்கின்றனர். இது போன்ற துணிவு பெண்மக்களுக்கும் ஏற்படவேண்டும். பெண்மக்களும் தங்கள் என்ணப்படி நடக்க முற்பட்டால்தான் நாட்டில் ஒற்றுமை ஏற்படமுடியும்; சமதர்மம் தழைக்க முடியும். இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தைப் பார்ப்போம். நம் நாடு மற்ற நாடுகளைப் போல உயர்ந்த நிலையை அடையவேண்டுமானால், நமது மக்களுக்குள் ஒற்றுமை உண்டாக வேண்டும். நமது மக்களுக்குள் ஒற்றுமையில்லா மலிருப்பதற்குக் காரணம், சாதி வேற்றுமைகளும், சமயப் போராட்டங்களுமாகும். ஆகையால் இவை ஒழிந்தால்தான் நாம் ஒன்றுபட்டு வாழ முடியும். சாதி, மதப்பிணக்குகள் ஒழிய வேண்டுமானால், சமபந்தி போஜனமும், கலப்பு விவாகங்களும் நடைபெற வேண்டும். இதைச் சீர்த்திருத்தக்காரர்கள் ஒப்புக் கொண்டு இதற்காகப் பல தாபனங்கள் ஏற்படுத்திக்கொண்டு அவற்றின் மூலம் உழைக்கின்றனர். இதன் பலனாகச் செய்கையிலும் சிறிதளவாவது சீர்திருத்தவாதிகளின் நோக்கம் நிறைவேறிக் கொண்டு வருகின்றது. சமபந்தி போஜனம் இப்பொழுது எங்கும் நடைபெறும் இயல்பாகிவிட்டது. ஆனால் கலப்பு விவாகங்கள் மட்டிலும் இன்னும் மிகுதியாக நடைபெறத் தொடங்கவில்லை. இதற்குக் காரணம் என்னவென்பதைச் சிறிது ஆராய்ந்து பாருங்கள்! பழைய சாதி சமயப் பிணியால் நலிந்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் மக்களைக் கலப்பு மணஞ் செய்து கொள்ளுவதற்கு விட மாட்டார்கள். ஆனாலும் இன்று தினத்தில், தங்கள் இனத்தில் மணம்புரிந்து கொள்ளுவதை வெறுத்து உறவின் முறையல்லாத வேறு இனத்தில் கலப்பு மணம் செய்து கொள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முன்வரத் தயாராயிருக்கின்றனர். இவ்வாறு செய்வதனால் தங்கள் பெற்றோர்களுடைய சொத்துக்கள் தங்களுக்குக் கிடைக்காமற் போவதாயிருப்பினும் தியாகஞ் செய்யத் தயாராயிருக்கின்றனர். இன்னும் இதனால், தங்களுக்கு எவ்வளவு கஷ்டநஷ்டங்கள் வருவதாயிருப்பினும் சிறிதும் பின்வாங்கமாட்டார்கள். ஆண்களுக்கு இத்தகைய மனப்பான்மை இருப்பதற்குக் காரணம், அவர்களுக்குச் சுதந்தரப் பயிற்சியும், ஆண்களுக்கு இத்தகைய மனப்பான்மை இருப்பதற்குக் காரணம், அவர்களுக்குச் சுதந்தரப் பயிற்சியும், மனோதைரியமும் இருப்பதேயாகும்; தற்கால உலகப் போக்கில் ஈடுபட்டிருப்பதுமாகும். ஆனால் இம்மாதிரி தங்கள் பெற்றோர்களின் விருப்பத் தைப் பொருட் படுத்தாமல் கலப்புமணம் செய்து கொள்ள முன்வரு வதற்கு; படித்த-உலக நாகரிகந் தெரிந்த-சுதந்தர உணர்ச்சியுடைய சில பெண்கள்தான் சித்தமாயி ருப்பார்கள். மற்ற பெண்கள், கலப்புமணம் புரிந்து கொள்ள விரும்பினாலும், பெற்றோர்களால் தேடி வைக்கப்படும் கணவனை மணந்து கொள்ள விருப்ப மில்லாவிட்டாலும், பெற்றோர்கள் வார்த்தையை மீறித் தங்கள் எண்ணப்படி நடக்கத் தைரியமற்றவர்களாயிருக் கின்றனர். இதற்குக் காரணம், அவர்களை இளம் பருவமுதலே, சுதந்தர எண்ணம் உண்டாவதற்கு வழியில்லாமலும், மனோ தைரியம் தோன்றுவதற்கு வகையில்லாமலும் அடிமையாகப் பழக்கியிருப்பதேயாகும். ஆகையால் பெண்களை இளம்பரு வத்திலிருந்தே சுதந்தரமுடையவர்களாக நடத்தி வரவேண்டும். ஆண்மக்களைப்போலவே அவர்களையும் வளர்க்கவேண்டும். இவ்வாறு இருந்தால் எண்ணற்ற கலப்பு மணங்கள் தாராளமாக நடைபெறுமென்பது திண்ணம். விதவையான பெண்கள் தாராளமாகத் தங்கள் விருப்பப்படி மணஞ்செய்து கொள்ள வேண்டும். விதவா விவாகம் நமது நாட்டிற்குப் புதிதன்று. இன்றும் நமது நாட்டில் பல ஜாதிகளுக்குள் விதவா விவாகம் நடைபெறுகின்றது. ஆயினும் பார்ப்பனர்களில் விதவா விவாகம் இல்லாமையால், மற்ற சாதியினரும் விதவா விவாகத்தைத் தாழ்வாகக் கருதி அதை விட்டுவிட்டனர். இது சாதி உயர்வால் வந்த தீமையாகும். ஆனால் இப்பொழுது எல்லாச் சாதியிலும் கற்றவர்கள் விதவா விவாகம் வேண்டுமெனக் கிளர்ச்சி செய்கின்றனர். இக்கிளர்ச்சி யின் பயனால் சிறிது சிறிது நடந்தும் வருகின்றது. விதவா விவாகம் மதவிரோதமல்ல; சாதிர விரோதம் அல்ல என்று பல பண்டிதர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது. அப்படியிருந்தும் விதவா விவாகத்தை ஆதரிக்காத வைதீகர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு உலக அறிவும், ஜீவகாருணியமும் இருக்குமாயின் விதவா விவாகத்தை வெறுக்க மாட்டார்கள். நமது நாட்டில் இளம்பருவத்தில் விதவையாகி உலக சுகமிழந்து துன்புறுவோர் எவ்வளவுபேர்? அவர்களுடைய துன்பத்தைக் கண்டு மனம் பொறாமல் கண்ணீர்விடும் தாய் தந்தையர் எவ்வளவு பேர்? இத்தகைய பெண்களை மணஞ் செய்து கொடுப்பதற்குப் பாழும் வைதீகமன்றோ தடையாக நிற்கின்றது? தமது ஆவலை அடக்க முடியாதவிதவைப் பெண்களால் அவர்கள் குடும்பத்திற்கு உண்டாகும் அவதூறு எவ்வளவு? மனைவியை யிழந்த ஆண்மகன் மட்டிலும் மறுமணம் செய்துகொள்ளும்போது, கணவனையிழந்த பெண்மட்டிலும் ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது? ஆகையால் விதவா விவாகம் செய்துகொள்ள ஆண்மக்களும் விதவையான பெண் மக்களும் தயாராக முன் வருதல் வேண்டும். அடுத்தபடியாக, ஆண்மக்கள் தங்கள் மனைவியை நீக்கி விட்டு வேறு பெண்ணை மணந்து கொள்கின்றனர். ஆனால் இவ்வுரிமை பெண்மக்களுக்கு இல்லை. தன் கணவனால் நீக்கப்பட்ட பெண்கூட வேறு ஒருவனை மணந்துகொள்ள உரிமையில்லை. இது எவ்வளவு அநியாயம்! மனைவி தன் கணவனிடமிருந்து வாழச் சம்மதமில்லாவிட்டாலும், கணவன் தன் மனைவியிடமிருந்து வாழ மனமில்லாவிட்டாலும், இருவரும் தங்கள் விவாகத்தை விடுதலை செய்து கொண்டு தாராளமாக வேறு மணஞ்செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து கொள்ளுவதனால் ஒவ்வொரு குடும்பங்களிலும் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் காணலாம். இவ்வழக்கத்தை மேற்கொண்டி ருக்கின்ற முலிம் சமூகத்தைப் பாருங்கள்! இந்துக்கள் சமூகக் குடும்பங்களைக் காட்டிலும் அவர்கள் சமூகக் குடும்பங்களே மிகவும் மகிழ்ச்சியோடும், ஒற்றுமையோடும் வாழ்கின்றன. ஆகையால் விவாக விடுதலை தவறானதல்ல. விவாக விடுதலை யிருந்தால்தான் பெண்மக்களுடைய அடிமைத்தன்மை அகலும். இதுவரையிலும் கூறியவற்றால் மணம் சம்பந்தமாகப் பெண்களுக்கு எத்தகைய உரிமைகள் இருக்க வேண்டும் எனக் கூறினோம். இவ்வுரிமைகள் முழுவதையும் வைதீகர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். வைதீகர்மனத்தில் உள்ள குருட்டு நம்பிக்கைகள் அவர்கள் சிந்தையில் ஜீவ காருணியத்தைத் தோன்ற விடமாட்டா. ஆகையால் அரசாங்கத்தின் மூலமாகவே இத்தகைய உரிமைகளைப் பெண்மக்களுக்கு வழங்க வேண்டும்; இவற்றிற்கான சட்டங்களைச் செய்ய வேண்டும். பெண்மக்களும் சொத்துரிமையும் நமது இந்துப் பெண்கள் அடிமைத் தன்மை யுடையவர் களாயிருப்பதற்கும், சுதந்தர எண்ணம் குறைந்தவர்களாயிருப் பதற்கும் முதன்மையான காரணம் அவர்களுக்குச் சொத்துரிமை இல்லாமையே யாகும். இந்து சமூகத்தில் பெண்களுக்குச் செய்திருக்கும் கொடுமைகளில் இதுவே முதன்மையாகும். அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும். எரிவதை இழுத்து விட்டால் கொதிப்பது நின்றுவிடும் ஆகையால் உயிர் வாழ் வதற்கு வழியில்லாமல் வைத்துவிட்டால் அவர்கள் பிறருக்கு அடங்கி தானே நடக்கவேண்டும். ஆகையால் பெண்களை அடிமையாக வைத்திருக்கவேண்டும் என்னும் எண்ணத்தினா லேயே அவர்களுக்குச் சொத்துரிமையில்லாமல் ஆக்கிவிட்டார்கள். பெற்றோர்கள் தங்கள் மக்கள் எத்தனைபேர் இருந்தாலும் அவர்கள் ஆண்களாக இருந்தாலும், அல்லது பெண்களாக இருந்தாலும், அல்லது ஆண்களாகவும் பெண்களாகவுமிருந் தாலும் அவர்கள் எல்லோரிடத்திலும் ஒரே வகையான காதலையே பாராட்டுகின்றனர். இதனால் ஆண்மகனைக் காதலன் என்றும், பெண்மகளைக் காதலி என்றும் அழைக்கின்றனர். அன்போடு கூடி வாழும் கணவன் மனைவிகளுக்கும் காதலன், காதலி என்று பெயர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயதேறியபின் செய்யும் காரியங்களிலிருந்தும், அவர்கள் தங்கள்பால் நடந்துகொள்ளும் முறையிலிருந்தும், அவர்களிடத்தில் ஏற்றத்தாழ்வான அன்பு பாராட்டலாம். இதுவேயன்றி ஆண் குழந்தைகளின்மேல் அன்பு செலுத்துவதும், பெண்குழந்தை களின்மேல் செலுத்தாமலிருப்பதும் ஆகிய குணம் பெற்றோர் களிடம் இல்லை. ஆண் பெண் இருபாலரும் பெற்றோர்களுடைய இரத்தத்திலிருந்து பிறந்தவர்கள்தானே. இவ்வாறிருக்க ஆண் மக்களுக்கு மாத்திரம் பிறந்த குடும்பத்தின் சொத்து உரிமை யாகவும், பெண்களுக்கு உரிமையில்லாமலிருப்பதும் முறையாகுமா? பெற்றோர்கள் இக்கொடுமையை நினைத்துப் பார்த்தால், ஆண் களுக்குத் தான் சொத்துரிமையிருக்க வேண்டும், பெண்களுக்குச் சொத்துரிமை கூடாது என்று கூற மனந்துணிவார்களோ? ஒருக்காலும் தடைகூற மாட்டார்கள் என்பது திண்ணம். ஆனால் இவ்வாறு பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமற் போனதற்கும், ஆண்களுக்கு மாத்திரந்தான், குடும்ப சொச்து உரிமையானதாகும் என்று ஏற்பட்டதற்கும், பெற்றோர் களும் இவ்வழக்கை ஒப்புக்கொண்டு இதையே சட்டமாக வைத்துக்கொண்டதற்கும் மதமே காரணமாகும். மதம் என்ற பெயரினாலும், அதனால் வந்த வழக்கத்தினாலும் பெற்றோர்கள் இக்கொடுமையை எண்ணாமல் இருந்து விட்டனர். ஆனால் பகுத்தறிவின் ஒளி சுடர் விட்டுப் பிரகாசிக்கின்ற இக்காலத்தில் உண்மை உணர்ந்து நியாயம் வழங்கவேண்டும் என ஒவ்வொரு வரும் முயற்சி செய்கின்றனர். இம்முயற்சியின் பயனால் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற கிளர்ச்சியும் எங்கும் தோன்றிவிட்டது. இனி, மதத்தினால் எவ்வாறு பெண்களுக்குச் சொத்துரிமை போயிற்று என்பதையும், ஆண்களுக்குச் சொத்துரிமை ஏற்பட்டது என்பதையும் பார்ப்போம். தந்தை பிறந்துவிட்டால் அவனுக்குச் செய்யவேண்டிய கடன்களாகிய, கொள்ளிவைத்தல், குடம் உடைத்தல், காடணைத்தல், கருமம் செய்தல், பிறகு மாதங்கள் தோறும் மாசியஞ்செய்தல், ஆண்டுகள் தோறும் திதி செய்தல் என்னும் சடங்குகள் இந்து மதத்தில் புரோகிதர்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன! திதி கொடுத்தலைப் பிதிர்க்கடன் என்று கூறுவார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் பிதிர்க்கடன் தவறாமல் நடைபெற வேண்டும். பிதிர்க்கடன் நடைபெறாவிட்டால் குலத்திலிருந்த முன்னோர்கள் துன்பம் அடைவார்களாம். இவ்வாறு பிதிர்க்கடன் செய்யவேண்டி யவர்கள் ஆண்பிள்ளைகள். ஆகையால் ஒவ்வொரு குலத்திலும் தவறாமல் ஆண் பிள்ளைகள் இருக்கவேண்டும். ஆகையால் ஒவ்வொரு தந்தையும் ஒவ்வொரு ஆண்மகனைப் பெற்றாக வேண்டும். இதனால் பிள்ளை யில்லாதார்க்குப் புண்ணிய லோகமில்லை என்ற பழமொழியும் வழங்குகின்றது. தன்னுடைய பிள்ளையினால் செய்யவேண்டிய வைதீக கருமங்கள் செய்யப் படாவிட்டால் இறந்தவனுடைய உயிர் பிதுர்லோகத்தை யடைந்து இன்புறாமல் துன்பப்படும் என்பது இந்து மதக்கொள்கை. பிதிர்க்கடன் செய்யும் உரிமை பெண்களுக்கு இல்லை. ஆகையால் சொத்துரிமை பெண்களுக்கு இல்லாமற் போயிற்று. பிதுர்க்கடன் செய்வதற்கு உரிமைபெற்ற ஆண்பிள்ளைகளுக்கே பிதுர்க்களின் சொத்தும் உரிமையென்று ஏற்பட்டுவிட்டது. ஆகையால் பெண்களுடைய சொத்துரிமைக்குத் தடைசெய்தது மதம் என்பதை அறியலாம். இவ்வாறு மதத்தின் பெயராலும், மதச்சடங்குகளின் பெயராலும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தைக்குக் குடும்பச் சொத்து முழுவதையும் கொடுத்துச் சுகவாழ்வில் வைப்பதும், மற்றொரு குழந்தைக்குச் சொத்துரிமை யில்லாமற் செய்து துன்புற வைப்பதும் நீதியாகுமா? இது மட்டுமோ! சொத்துரிமையற்ற பெண்மக்களை அடிமையாகவே வளர்த்து; இன்னொரு ஆண்மகன் கையில் அடிமையாகவே ஒப்படைத்து; அவர்கள் வாழ்நாள் முழுதும் பிறர்கையை எதிர்பார்த்து அடிமையாகவே வாழும்படி செய்தல் மனித இயற்கைக்கு அழகாகுமோ? இதை நன்றாய் ஆலோசித்துப் பாருங்கள்! முன்னோர்களின் வழக்கம் என்பதையும் மதம் என்பதையும், மதச் சடங்குகள் என்பதையும், மறந்துவிட்டு இரக்க சிந்தையுடன் நினைத்துப் பாருங்கள். அப்பொழுதுதான் இந்து மதம் பெண்களுக்குச் செய்திருக்கும் கொடுமை நன்கு விளங்கும். இவ்வாறு மதத்தின் பெயரால் பெண்களுக்குச் சொத்துரிமை யில்லாமற் போய்விட்டாலும், அவர்கள் பால் இரக்கங்கொண்ட பெரியோர்கள் சீதனம் என்னும் ஒரு பாதுகாப்பு நிதியை அவர்களுக்கு அளித்து வந்தனர். சீதனம் என்பது பெண்ணை மணஞ்செய்து கொடுத்தபின், அப் பெண்ணின் பாதுகாப்புக்காகத் தந்தையால் கொடுக்கப்படும் செல்வமாகும். ஆனால் ஒரு பெண்ணுக்கும் இவ்வளவு பொருள் சீதனம் கொடுக்கவேண்டும் என்ற வரையரையில்லாமல், பெற்றோர்கள் தங்களுக்கு விருப்பமானவற்றைக் கொடுத்து வருகின்றனர். பண்டைக்காலத்தில், கொடுக்கப்பட்ட சீதனம் அப்பெண் தன் கணவனுடன் கூடித் தனித்திருந்து குடித்தனம் செய்வதற்கு வேண்டிய எல்லாப் பொருள்களுமாகும்; வீடு, விளைநிலம், மாடுகள், ஏவலாளர்கள், ஆடை, அணிகள், வீட்டிற்கு வேண்டிய பாண்டங்கள் முதலிய எல்லாப் பொருள் களையும் சீதனமாகக் கொடுத்து வந்தனர். இந்தச் சீதனப் பொருள்கள் பெண்ணுக்கே உரிமையானது. அவள் விருப்பப்படி அப்பொருள்களைச் செய்யலாம். ஆனால் இக்காலத்தில் பெண்களுக்குப் பெரிய குடும்பங் களில் கூடப்போதுமான அளவு சீதனம் கொடுக்கப்படுவதில்லை. சீதனம் என்ற பேரோடு சிலவரிசைகள் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு கொடுக்கப்படும் சீதனப்பொருளும், கணவனுடைய ஆட்சிக்குள் அடங்கி விடுகின்றது. தனக்கென்று தந்தையால் கொடுக்கப்பட்ட சீதனப் பொருள்கள் கூட, பெண்களுக்கு உரிமையில்லாமலிருக்குமானால் இக்காலத்தின் கொடுமையை என்னென்று கூறுவது? பெண்களுக்குச் சொத்துரிமையில்லாமையினால் அவர் களுக்கு நேருந்துன்பங்களை, இப்பொழுது இரக்கமுடைய அறிஞர்கள் உணருகின்றனர்; ஆகையால் அவர்களுக்குச் சொத்துரிமை மிகவும் அவசியம் என்பதையும் அறிகின்றனர். இதற்கான சட்டஞ்செய்யவேண்டும் என்ற கிளர்ச்சியும் நடை பெறுகின்றது. சென்ற 1929 ஆம் ஆண்டில் மைசூர் சமதானத்தில், அரசாங்கத்தாரால், பெண்களுக்குச் சொத்துரிமை ஏற்படுத்தும் விஷயத்தைப்பற்றி முடிவு செய்ய ஒரு கமிட்டி ஏற்படுத்தப் பட்டது. அக்கமிட்டியினர், தாங்கள் வெளியிட்ட அறிக்கையில், முதலில் பெண்களுக்குச் சொத்துரிமையின் அவசியத்தைப்பற்றிக் கீழ்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றனர். பெண்கள் சொத்துரிமைக்குத் தகுதியடையவர்கள் அல்லர் என்பது கொள்கையில் தவறானதும், வழக்கத்தில் கொடுமை யானதும், அநீதியானதுமாகும். பெண்கள் நன்கொடை மூலம் கிடைக்கும் பொருளை வைத்துக்கொள்ள உரிமையுடையவர் களாயிருக்கின்றனர். ஆனால் பாத்தியமுள்ள சொத்துக்களை அடைவதற்கு மட்டிலும் உரிமை யில்லாதவர்கள் என்று தக்க காரணமின்றிக் கூறப்படுகின்றது. இது ஒரு காலத்தில் நன்மை யானதாக இருந்திருக்கலாம். ஆனால் தற்காலத்தில் குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்திற்கும், பொதுவாக இந்து சமூக முன்னேற்றத்திற்கும் தடையாக இருந்து வருகின்றது. உண்மையில் இக் கொள்கை மேற்கு இந்தியாவில் ஒருபோதும் கையாளப் படவில்லை. அங்கும் மற்றவிடங்களிலும் ஜட்ஜ்கள் பரந்த நோக்கத்துடனும் தைரியத்துடனும் பெண்களுக்குள்ள இக்கொடுமையை ஒழிக்க வேலை செய்திருக்கின்றனர். அவர்கள் சட்டத்தின் கருத்துகளில் தங்களுக்குச் சாதகமாயுள்ளவைகளைத் துணையாகக் கொண்டும் தீர்ப்புக்கூறியிருக்கின்றனர். மைசூரில் பெண்களிடையே தாய், மகள், மருமகள், சகோதரி ஆகியோர்களின் உரிமைகள் நீதிதல தீர்ப்புக்களின் மூலம் ஆதரிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் அதற்கான சட்டஞ் செய்ய வேண்டியதும் சொத்துரிமை களை அனுபவிப்பதில் பெண்களுக்குள்ள தடையை நீக்கி அவர்களுக்கு உரிமை ஏற்படுத்த வேண்டுவதுமான காலம் வந்துவிட்டது. இதிலிருந்து பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டு மென்பது எவ்வளவு அவசியமானதென்பதையும் நியாயமான தென்பதையும் அறியலாம். பெண்களுக்குச் சொத்துரிமை ஏற்படுவதனால் குடும்பச் சொத்து, பிரிவினைப்பட்டு, இந்து சமூகத்தின் பொருளாதார நிலை சீர்குலையும் என்று ஒரு சார்பினர் கூறுவர். இது ஆராய்ச்சி யற்றவர் கூற்றேயாகும். இது பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுவதில்லை என்பதற்காகக் கூறப்படும் ஒரு போலிச் சமாதானமாகும். இப்பொழுதும் பெண்களுக்குச் சொத்துரிமை யில்லாமலிருப்பதால் குடும்பச் சொத்து பிரிவினையாகாமல் இருக்கிறதா? ஒரு குடும்பத்தில் ஐந்தாறு ஆண்பிள்ளைகள் பிறந்து விட்டால் அக்குடும்பச் சொத்தும் ஐந்தாறு பாகங்களாகப் பிரிந்து விடுகின்றன அல்லவா? இது பிரிவினையாகாதோ? உண்மையில் இந்துக் குடும்பங்களின் சொத்துக்கள் பிரிவினை யாகாமல் இருக்கவேண்டும் என்றால், ஒரு குடும்பத்தின் மூத்த பிள்ளைக்கு மட்டிலும் சொத்துரிமை யிருக்கவேண்டும். இப்படி யிருந்தால்தான் குடும்பச்சொத்துப் பிரிவினையாகாது. இவ்வாறு செய்வதற்கு ஆண்மக்கள் சம்மதிப்பார்களா? ஒருக்கால் இப்படிச் செய்தாலும் நாடு ஒற்றுமையடைந்து வாழமுடியுமா? சிலர் மட்டிலும் பணக்காரர்களாகவும், பலர் சொத்தின்றி ஏழை மக்களாகவும் வாழ வேண்டுமன்றோ? அதிலும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த பல சகோதரர்களில் ஒருவன் சொத்துரிமை பெற்றுச் சுகமாகவும், மற்றவர்கள் சொத்துரிமையின்றி வறிஞர் களாகவும் வாழ்வதற்குச் சம்மதிப்பார்களோ? ஆகையால் ஆண், பெண் இரு பாலார்க்கும் குடும்பத்தின் சொத்தில் உரிமையிருக்க வேண்டுமென்பதை நடுநிலைமையுடையவர்கள் யாரும் தவறு என்று கூற முன்வரமாட்டார்கள். இந்து மதத்தில் பெண்களுக்குச் செய்யப்படும் கொடுமை மற்ற மதத்தில் பெண்களுக்குச் செய்யப்படுவதில்லை. உதாரண மாக முலிம் மார்க்கத்தையும், கிறிது மதத்தையும் பாருங்கள். அம்மதப் பெண்களுக்குத் தந்தையினுடைய சொத்தில் உரிமை யுண்டு இவ்வாறு குடும்பச் சொத்தில் பெண்களுக்கு உரிமை யிருப்பதால், அவர்களுடைய சமூகத்தில் பொருளாதார நிலை குறைந்து போகவில்லை. இந்துமதப் பெண்களைவிட அவர்கள் எவ்வளவோ உரிமையுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வருகின்றனர். அன்றியும் தந்தையினுடைய சொத்தில் பெண்களுக்கு உரிமையிருக்கவேண்டும் என்பது போலவே கணவனுடைய சொத்திலும் பெண்களுக்கு உரிமை யிருக்க வேண்டும். இவ் வுரிமையில்லாததால், மறுமணம் புரிந்துகொள்ளாத விதவைப் பெண்கள் அடையும் துயரம் அளவற்றதாகும். இப்பொழுதுள்ள படி ஒரு பெண் விதவையாகிவிட்டால், அவள் எவ்வளவு செல்வவானுடைய மனைவியாயிருந்தாலும் தரித்ரநிலையிலேயே வாழும்படி நேருகின்றது. பலருக்குக் கீழ்ப்பட்டு அடிமையாக வாழவேண்டியிருக்கிறது. தனித்துவாழ விரும்பினால், கணவனுடைய சொத்திலிருந்து ஜீவனாம்சம் என்பதாக ஒரு சிறுபொருளே கிடைக்கிறது. ஆகையால் கணவனுடைய சொத்திலும் பெண்களுக்கு உரிமை வேண்டுவது அவசியமாகும். பிள்ளை யில்லாத விதவைகள் மறுமணம்புரிந்து கொண்டாலும், அவர்கள் தமது முதற்கணவனுடைய சொத்தி லிருந்து கிடைக்கும் பாகத்தை தமது விருப்பப்படியே ஆள உரிமை பெற வேண்டும். இவ்வாறு இருந்தால் தான் விதவை களின் துன்பம் நீங்கும்; அவர்கள் எளிதாக மறுமணம் புரிந்து கொள்ளவும் முடியும். குழந்தைகளையுடைய பெண்கள் விதவைகளாகிவிட்டால், அவர்களுக்குக் கணவனுடைய சொத்தில் உள்ள பாக உரிமை, பிள்ளைகளைச் சேர்ந்ததாயிருக்க வேண்டும். அவர்கள் மறுமணஞ் செய்துகொள்ளாவிட்டால் கணவனுடைய பாகத்திற்கும், தம்முடைய பாகத்திற்கும் தாமே பொறுப்பாளியாக இருந்து நடத்தும் உரிமையுடையவர்களாயிருக்க வேண்டும். குழந்தை களையுடைய விதவைகள் மறுமணம் புரிந்து கொள்ளுவார் களாயின், முதற்கணவனுடைய செல்வத்திற்குப் பொறுப்பாளி யாயிருக்கும் உரிமையும் அவர்களுக்கில்லை. இரண்டாவது கணவனுடைய சொத்தில் அவர்கள் உரிமையுடையவர்களாகி விடுவதால், முதற்கணவனுடைய சொத்திலுள்ள தமது பாக உரிமை, முதற்கணவனுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கே உரிமையாகி விடவேண்டும். ஆனால் தம் பெற்றோர் சொத்திலிருந்தும் கிடைத்த பாகத்தைத் தம் விருப்பப்படியே அனுபவிக்கும் உரிமையிருக்க வேண்டும். கணவனாகத் தனது மனைவியை வேண்டாமென்றுகூறி விவாகவிடுதலை செய்துவிட்டால் அவளுக்குத் தனது சொத்தில் சரிபாகத்தைக் கொடுத்து விடவேண்டும். பிள்ளைகளிருந்தால் அவர்களுக்கும் சேர்த்துச் சரிபாகமாகப் பிரித்த ஒரு பாகமே விவாக விடுதலை செய்யப்படும் மனைவிக்குக் கொடுக்கபட வேண்டும். அவள் மறுமணம் புரிந்துகொண்டாலும் அவளுடைய சொத்துக்களை அவள் விருப்பப்படியே அனுபவிக்கும் உரிமை யுடையவளா யிருக்க வேண்டும். ஒரு பெண் தானாகவே தன் கணவனை விட்டுப் பிரிந்து வேறு ஒருவனை மணஞ்செய்து கொள்ளுவாளாயின் அப்பொழுது தனது முதற் கணவனுடைய சொத்தில் அவளுக்குப் பாகமில்லை யென்பதே முறையாகும். இவ்வாறான முறைகளில் பெண்களுக்குச் சொத்துரிமை ஏற்படவேண்டியது அவசியமாகும். பிறந்த குடும்பத்தில் சொத்துரிமையும்; புகுந்த குடும்பத்தில் சொத்துரிமையும் பெண்களுக்கு இருக்க வேண்டியது அவர்களுடைய நிலையை உயர்த்துவதற்குச் சரியான வழியாகும்; இவ்வாறு இருப்பதே அவர்களுக்குத்தக்க பாதுகாப்பாகும். இவ்வாறு சொத்துரிமை இருந்தால் விவாக விடுதலை செய்து கொண்ட பெண்மக்களும், விதவையான பெண்மக்களும் மறுமணம் புரிந்துகொள்ள விரும்பாவிட்டாலும், கௌரவத்தோடும், சுயேச்சையாகவும், நல்லொழுக்கமாகவும் வாழ முடியும்; மறுமணம் புரிந்துகொள்ள விரும்பினாலும் எளிதாகச் செய்துக்கொண்டு இன்பமுடன் வாழலாம். இந்து சமூகத்தில் விபசாரம் இருப்பதற்குக் காரணம் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமையேயாகும். கணவனால் விரட்டப்பட்ட பெண்மக்களும், ஆதரவின்றி விதவையான பெண்மக்களும் வயிற்றுப் பிழைப்பிற்கு வேறு வழியில்லாமல் பலர் விபசாரத்தை மேற்கொள்ளுகின்றனர். பெண்களுக்குச் சொத்துரிமையிருந்துவிட்டால் பெரும்பாலும் இந்து சமூகத்தில் உள்ள விபசாரக் கொடுமை ஒழியும். இந்து சமூகத்தில் உள்ள அவ்வளவு விபசாரக் கொடுமை மற்ற, முலிம், கிறிதுவ சமூகத்தில் இல்லை. இதற்குக் காரணம் அவர்களுக்குச் சொத்துரிமையும் சுயேச்சையும் இருப்பதேயாகும். இனியும் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லையென்று கூறி ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. தேசத்திலேயே, எல்லா மக்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்னும் கொள்கை பரவி வருகின்ற இக்காலத்தில் பெண்கள் சமூகத்தை மட்டிலும் அடக்கி வைத்திருக்க முடியாது. இதை யுணர்ந்து பெண்மக்களும் தங்களுடைய சொத்துரிமைக்குப் போராட முன்வந்துவிட்டனர். ஆகையால் சமூகச் சீர்திருத்த வாதிகளும், அரசியல் வாதிகளும் முதலில் பெண்மக்களுக்குச் சொத்துரிமையைச் சட்டமூலம் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்து அதை நிறைவேற்றுவதே சிறந்த வேலையாகும். பெண்மக்களும் சீர்திருத்தமும் பெண்கள் தம்மைத் தாமே சீர்திருத்தஞ் செய்து கொள்ள வேண்டி யவர்களாகவும் இருக்கின்றார்கள். பெண்கள் மூட நம்பிக்கையுடையவர்கள்; அவர்கள் எளிதில் சீர்திருந்த மாட்டார்கள்; என்று அவர்களைப் பற்றிச் சிலர் கூறும் பழிச் சொற்கள் நீங்க வேண்டும். சீர்திருத்தவாதிகளாக மேடையேறிப் பிரசங்கம் செய்யும் ஆண்மக்களிற் பலர் பேச்சு வீரர்களாக மட்டும் விளங்குகின்றார்கள். செய்கையில் காட்டமுடியாதவர்களாகச் சிறுமை யடைகின்றனர். மேடையில் நின்று பேசும் போது, சாதி வேற்றுமை கூடாதென்றும்; அது ஒழிந்தால் தான் நமது நாடு முன்னேற்றம் அடைய முடியும் என்றும், மற்றைய நாட்டினரைப் போல நாமும் ஒற்றுமை யடைய வேண்டும் என்றும் பிரசங்கஞ் செய்வார்கள். ஆனால் தமது வீட்டிற்குத் தாழ்ந்த சாதியான் என்று கருதப்படுகின்ற ஒருவன் வந்து விட்டால் அவனை உடன் வைத்து உண்ணத் துணியமாட்டார்கள். தனியாக வைத்துத் தான் உணவளிப்பார்கள். இன்னுஞ் சிலர் மதசம்பந்தமான பொருளற்ற வழக்கங்களை ஒழிக்க வேண்டு மென்றும், சடங்குகளினால் பொருட் செலவேயன்றி வேறு பயனில்லை யென்றும், மூடப்பழக்க வழக்கங்களினாலும் சடங்கு களினாலுந்தான் இந்து சமூகம் செல்வமின்றி ஏழ்மையாகிக் கொண்டிருக் கிறதென்றும், ஆகையால் அவைகளை அடியோடு ஒழிக்கவேண்டுமென்றும் ஆரவாரமாகப் பேசுகின்றனர்; ஊராருக்கு நன்றாய் உபதேசஞ் செய்கின்றனர். ஆனால் தங்கள் வீட்டில் மட்டிலும், எல்லா விதமான சடங்குகளையும் மறை முகமாவாவது செய்து விடுகின்றனர். இத்தகையவர்களைப் பார்த்து ஏனையா! நீங்கள் ஊருக்கெல்லாம் உபதேசஞ் செய்கின்றீர்களே! ஆனால் நீங்கள் மட்டிலும் சொல்வதன்படி நடக்கவில்லையே! காரணம் என்ன என்று கேட்டால், அவர்கள், என்னைப் பொறுத்த வரையிலும் ஒன்றுமில்லை. ஆனால் வீட்டில் உள்ள பெண்மக்கள், எல்லாம் செய்ய வேண்டும் என்று பிடிவாதஞ் செய்கின்றனர். அதற்காகச் செய்து தொலைக்க வேண்டியிருக்கிறது என்று பெண்கள்மீது குற்றஞ்சாற்றி விடுகின்றனர். இவ்வாறு ஆண்மக்கள் கூறுவது முற்றும் தவறு என்று கூறமுடியாது. இதிலும் சிறிதளவு உண்மையில்லாமற் போகவில்லை. பெண்மக்களே உண்மையென்று ஒப்புக் கொள்ளக்கூடும். ஆண்மக்களைக் காட்டிலும் பெண்மக்கள் பிடிவாத குணம் உள்ளவர்கள். தமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளு வதற்கு எளிதில் துணியமாட்டார்கள். சரியோ, தப்போ, முன்னோர் கொள்கையை, அதாவது-தாய், தந்தை, மாமனார், மாமியார் இவர்கள் பின்பற்றீய முறையையே தாமும் பின்பற்றி யொழுகவேண்டும் என்னும் எண்ணம் உள்ளவர்கள். குருட்டு நம்பிக்கைகள் அவர்களிடம் நிலைத்திருக்கும். புதிய மாறுதலைக் கண்டால் மிகவும் அஞ்சுவார்கள். இக்காலத்தில் படித்த பெண்கள் சீர்திருத்தத்துறையில் முனைந்து நிற்கின்றார்கள் என்றாலும், அவர்களிடமும் மதசம்பந்தமான குருட்டு நம்பிக்கைகள் அடியோடு அகன்று விடவில்லை. படித்த பெண்களே இவ்வாறு மூட நம்பிக்கையுடையவர்களாயிருந்தால் படியாத பெண்களைப் பற்றிக் கூறவேண்டியதே யில்லை. படியாத பெண்கள் மூடப் பழக்க வழக்கங்களை விட்டொழிக்கச் சிறிதும் சம்மதிக்க மாட்டார்கள்தான். ஆகையால் படித்த பெண்கள் பகுத்தறிவுக்குப் பொருத்தமற்ற செயல்களையெல்லாம் விட்டொழிக்க வேண்டும்; அவ்வாறே படியாத பெண்களையும் நடக்கத் தூண்ட வேண்டும். இதுதான் படித்த பெண்கள் செய்ய வேண்டிய முதன்மையான சீர்திருத்த வேலையாகும். நமது நாட்டுப் பெண்களின் மனப்பாங்கே அடிமை மனப்பாங்காயிருக்கிறது. தலைமுறை தலைமுறையாக அடிமை யாக இருந்து வந்தவர்களிடம் அடிமை மனப்பாங்கு இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. ஆனால் முதலில் இத்தகைய மனப்பாங்கு மாறுதலடையவேண்டும். மனம் போலவாழ்வு சிந்தை போலச் செய்கை என்பனப் போல மனப்பாங்கு மாற்ற மடைந்தால்தான் நடத்தைகளும், செயல்களும் மாறுதல் அடையமுடியும். மனப்பாங்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் எந்தக்காரியங் களையும் மாற்றிக் கொள்ள முடியாது. ஆகையால் நமது நாட்டுப் பெண்களின் எத்தகைய மனப்பாங்குகள் மாறுதலடைய வேண்டும் என்பதைப் பற்றிச் சிறிது கூறுவோம். பெண்களுக்குச் சம உரிமையுள்ள நாட்டில் வாழும் பெண் களும், பெண்கள் தமது சம உரிமைக்குப் பாடுபடுகின்ற நாட்டில் உள்ள பெண்களும் அச்சமின்றித் தனித்து வாழவே விரும்பு கின்றனர்; அடிமையின்றி உரிமையுடன் வாழவே ஆவல் கொள்ளுகின்றனர். அமெரிக்காவில் உள்ள பெண் மக்களில் பலர் மணவாழ்க்கையை விரும்புவதில்லை. மணஞ் செய்து கொண்டால் ஒருவருக்குக் கட்டுப்படும்படி ஏற்பட்டு விடுகிறதாம். ஆகையால் தனித்துவாழவே ஆசைப்பட்டு எவ்வளவோபேர் அவ்வாறு வாழ்கின்றனர். இவ்வாறு தனித்து வாழும் பெண்மக் களிற் பலர், நூலாசிரியர்களாகவும், பத்திராசிரியர்களாகவும், பெருஞ் சீமாட்டிகளாகவும் விளங்குகிறார்கள். சுவீடன் நாட்டில் உள்ள பெண்மக்கள் மணம் புரிந்து கொள்ளாமல் வாழவே விரும்புகின்றனர். மணம் புரிந்து கொண்டால் தங்கள் சுதந்தரம் போய்விடுமென்று கருதுகின்றனர். இன்னும் நாகரிகம் பெற்ற மேல்நாட்டுக் கல்வியறிவுடைய பெண்களெல்லாம் இவ்வாறே நினைக்கின்றனர். நமது நாட்டுப் பெண்கள்பால் பெரும்பாலும் உரிமை யெண்ணம் உண்டாவதே யில்லை. ஒவ்வொரு பெண்களும் மணவாழ்க்கையையே பெரிதாகக் கருதுகின்றனர். மணஞ் செய்து கொண்டு வாழ்வதுதான் பெண்பிறவி எடுத்ததின் பயன் என்று எண்ணுகின்றனர். மணஞ்செய்து கொள்ளாமலிருப்பது மகாபாபம் என்று நினைக்கின்றனர். இவ்வாறு நமது நாட்டுப் பெண்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே மணம்புரிந்து கொள்ளும் ஆசையூட்டப்படுகின்றது. சிறு பிள்ளைகளும் பெண்களும் சேர்ந்து விளையாடுங்காலத்தில் பெண், மாப்பிள்ளை என்று வைத்து கல்யாணம் செய்வதாகவும், குடும்பம் நடத்து வதாகவும் விளையாடும் வழக்கமும் குழந்தைகளிடம் படிந்து விட்டது. ஆகையால் இவர்கள் பருவம் வந்தவுடன் மணஞ்செய்து கொள்ளவே விரும்புகின்றனர். இதனாலேயே நமது நாட்டுப் பெண்களின் அடிமைமனப்பாங்கை நன்குணரலாம். அடுத்தபடியாக மேல்நாட்டில் உள்ள நாகரீகம் பெற்ற பெண்மணிகளில் பலர், உலக இன்பம் கருதி மணம்புரிந்து கொண்டாலும், பிள்ளைப் பேற்றை விரும்புவதில்லை. பிள்ளை பெறுவதைத் துன்பமாகவும், பிள்ளை பெற்றபின் தமது வாழ்க்கையில் துயரங்கள் மிகுதிப்படுவதாகவும் எண்ணுகின்றனர். ஆனால் நமது நாட்டுப் பெண்களோ மணம் புரிந்து கொண்டபின் அவசரமாகக் குழந்தை பெறுவதற்கு ஆவலடைகின்றனர். குழந்தையைப் பெறாத பெண்கள் தம்மைப் பாவிகளாக எண்ணிக் கொள்ளுகின்றனர். குழந்தை பெறுவதுதான் மணத்தின் பயன் எனக் கருதுகின்றனர். முதலில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்று விடவேண்டுமென்று நினைக்கின்றனர். இதற்காக அல்லும் பகலும் ஆண்டவனை வேண்டுகின்றனர். இது நமது நாட்டுப் பெண்கள்பால் உள்ள பழைய மனோபாவமும் குருட்டு நம்பிக்கையுமாகும். பிள்ளைப் பேற்றின் பொருட்டு தான் மணவாழ்க்கை வேண்டும் என்பது இந்து மதக் கொள்கை. இக்கொள்கையினாலே பெண்களுக்கு இத்தகைய மனப்பான்மை அமைந்து விட்டது. இன்னும் நடையுடை பாவனைகளிலும் நமது நாட்டுப் பெண்கள் சிறிதும் சீர்திருத்தம் அடையாதவர்களாயிருக் கின்றனர். இவ்வகையில் படித்த பெண்களும் ஒன்றுதான்; படிக்காத பெண்களும் ஒன்றுதான். இரு பாலாரும் பழைய முறைப்படியே ஆடை யணிகளைப் பூண ஆசைப்படுகின்றனர். இவ்வகையில் மலையாள நாட்டுப் பெண்களை நாகரீகம் உடையவர்களாகக் கூறலாம். அவர்களுடைய ஆடை அணிகள் இயல்பிலேயே சிக்கனமுடையனவாகவும் நாகரீகம் பொருந்தியன வாகவும் இருக்கின்றன. மற்றை இந்தியப் பெண்கள் அனைவரும் பழைய நாகரிகமற்ற ஆடையணிகளையே பூணுகின்றனர். இவ்வகையில் இந்தியக் கிறிதவப் பெண்கள்கூடச் சரியான நாகரிகம் பெறவில்லை. முதலில் ஆடை அணிவதை எடுத்துக்கொள்ளுவோம். நாகரிகம்பெற்ற மலையாள நாட்டுப் பெண்கள், இடையில் ஒரு நான்கு முழத் துண்டும், மேலே ஒரு மூன்றுமுழத் துண்டும், ஒரு சட்டையும் அணிந்துகொள்ளுகின்றனர். இது ஒரு பெண்ணுக்குப் போதிய ஆடையாக இருக்கிறது. இவ்வாறு ஆடையணிவதால் அவர்களுடைய இயற்கையழகு குறைந்துவிடுவதில்லை. மேல் நாட்டுப் பெண்கள் உடம்புக்கும் அரைக்கும் பிடித்தமான சட்டையும், மேலே தளர்ந்து முழந்தாள்வரையிலும் தொங்கும் ஒரு அங்கியும் அணிகின்றனர். இதுவும் சிக்கனமாகவும், அழகாகவும் காணப்படுகின்றது. சீனப் பெண்கள், ஆண்களைப் போல், கால்சராவும், மேலங்கியும் அணிகின்றனர். இது நடப் பதற்கும் வேலை செய்வதற்கும் மிகவும் வசதியாக இருக்கின்றது. உடையிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடு தோன்றவில்லை. ஆகவே இது மிகவும் நாகரிகமான உடையாகும். முலிம் பெண்கள் பெரும்பாலும் இடையில் ஒரு துண்டும் மேலே தாவணியுமே அணிகின்றனர். பர்மியப் பெண் கள் இடையில் துண்டும் மேலே சட்டையும் அணிகின்றனர். இவ்வாறு முலிம் பெண்கள் அணியும் உடையிலும், பர்மியப் பெண்கள் தரிக்கும் ஆடையிலும் சிக்கனமும், நாகரிகமும் கலந்திருக்கின்றனவென்பதை அறியலாம். ஆனால் நமது நாட்டுப் பெண்மக்களுக்குப் பெரும்பாலும் பதினாறு முழம் பதினெட்டு முழமுள்ள புடவைகள் வேண்டியிருக்கின்றன. நாகரிகமாக ஆடையணியும் பெண்களுடைய புடவைகள் பன்னிரண்டு முழமாகக் குறைந்திருக்கின்றன. அதிலும் சாதாரண மான புடவைகளை உடுத்துவதற்கு விரும்புவதில்லை. பலவகை யான நிறங்கள் அமைந்ததும், பட்டு நூலால் நெய்யப்பட்டதும் சரிகை வேலைப்பாடுகள் அமைந்ததும், விலையேறப்பட்டதும் ஆகிய புடவைகளையே விரும்புகின்றனர். இத்தகைய புடவை களை யணிவதுதான், அழகு என்றும், மதிப்பு என்றும், நாகரிகம் என்றும் நினைக்கின்றனர். நீண்ட புடவையை இடையைச் சுற்றி கட்டுவதனால் உள்ள துன்பத்தை அவர்கள் பொருட் படுத்துவதே இல்லை. உடம்பில் காற்றுப்படாமல் புழுங்கிக் கிடப்பதையும், நடக்க முடியாமல் தடுப்பதையும், தப்பித்தவறி புடவையில் தீப்பிடித்துக்கொண்டால் விரைவில் களைந்தெறிய முடியாமல் ஆபத்திற்குள்ளாவதையும் சிறிதும் சிந்திப்பதே யில்லை. ஆகை யால் ஆடையணியும் வகையில் நமது பெண்கள் சிக்கனத்தையும், நாகரிகத்தையும் கைக்கொள்ளவேண்டியது முதன்மையாகும். அடுத்தபடியாக நகையணியும் ஒரு வழக்கத்தையெடுத்துக் கொள்ளுவோம். இதில் நமது நாட்டுப் பெண்களுக்குள்ள பைத்தியமும், மூட நம்பிக்கையும் வேறு எந்த நாட்டுப் பெண் களிடமும் இல்லை. நமது பெண்கள், பொன்னாலாகிய அணி கலன்களையும், கல்லிழைத்த நகைகளையும் அணிவதுதான், பெருமை யென்றும், அழகென்றும் கருதுகின்றனர். உணவுக்கு வழியற்ற ஏழைப் பெண்களும் பித்தளை வெள்ளியில் ஆகிய நகைகளையாவது அணிந்து திருப்தியடைகின்றனர். பணக்காரர் வீட்டுப் பெண்களோ லெட்சக்கணக்கான ரூபாய் பொருமான முள்ள வயிர நகைகளாகவே பூட்டிக்கொள்ளுகின்றனர்; படித்த பெண்களுங்கூட, நகையணியாமலிருந்தால் அழகில்லை யென்றும்; மதிப்பில்லையென்றும் நினைக்கின்றனர். நகை யணியும் பழக்கம் குழந்தைப்பருவமுதலே பெண்மக்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றது. சிறு பருவத்திலேயே நகையணி வதற்கு வேண்டி, காதில் பல விடங்களிலும், மூக்கில் பலவிடங் களிலும் துளைபோட்டுவிடுகின்றனர். இதனால் இயற்கையில் அழகாயுள்ள அங்கங்களைக் கெடுத்து விடுகின்றனர். நமது நாட்டில் நகையணியும் வழக்கம் இருப்பதால் உண்டாகும் நஷ்டத்தைச் சிறிதும் சிந்திப்பதில்லை, நமது நாடுமுழுதும், ஏழைகள் குடிசை யிலும், பணக்காரர்கள் மாளிகையிலும், நகைகள் அடங்கிக்கிடக்கின்றன. இவ் வாறு ஒரு பயனுமின்றிக் கிடக்கும் நகைகளினால் யாருக்கு என்ன பயன்? பெண்கள் தனித்து உலவமுடியாமலிருப்பதற்கும், அச்சமுடை யவர்களாயி ருப்பதற்கும் நகையணிவதற்கும், ஒரு காரணமாகும். மடியில் கனமிருந்தால் வழியில் பயமுண்டாகும் என்பது உண்மையல்லவா? நகையணிந்த பெண்கள் தனிவழிச் செல்வதினால் கள்ளர்களாலும், பேராசைக்காரர்களாலும், அவர்களுக்குத் துன்பம் உண்டாகின்றது. அவர்களிடமுள்ள நகைகளைக் கவர்ந்து கொள்ளுவதற்காக வளைத்துக்கொண்டு துன்புறுத்துகின்றனர்; சில சமயங்களில் கற்புக்கும் இடையூறுண்டா கின்றது; சில சமயங்களில் உயிருக்கும் ஆபத் துண்டாகின்றது. இவ்வாறு நகையணிவதால் உண்டாகும் துன்பங்களைப் படித்த பெண்மக்கள்கூடச் சிறிதும் எண்ணிப் பார்ப்பதேயில்லை. ஆகையால் பெண்மக்கள் இனியும் பழைய பழக்க வழக்கங்களை விடாப்பிடியாகப் பிடித்திராமல், பழமையில் உள தீமைகளை அடியோடு ஒழிக்கவேண்டும். புதுமையில் உள நன்மைகளைச் சிறிதும் அஞ்சாமல் பின்பற்றவேண்டும். இவ்வாறு பெண்மக்கள் முதலில் சீர்திருத்தம்பெறாவிட்டால் ஆண் மக்களுடைய சீர்திருத்தமும் நிலைத்திராது. ஆதலால் பெண்கள் தமது பகுத்தறிவைப் பயன்படுத்தி அதன்படி உரிமையான எண்ணமும், உரிமையான செயலும் உடையவர்களாக வேண்டும். பெண்மக்களும் அன்பும் ஆத்திரமின்றி அறிவுடன் பொறுத்திருக்கும் குணம் எல்லோருக்கும் இன்றியமையாததாகும். இக்குணத்தைப் பொறுமை யென்றும், அடக்கமென்றும், சகிப்புத்தன்மை யென்றும் கூறலாம்; இக்குணம் இல்லாவிட்டால் மக்கள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழமாட்டார்கள். நட்பினரா யிருக்கும் இருவர்களுக்குள் ஒருவரிடமாக இக்குணம் இருத்தல் வேண்டும். ஒருவரிடத்திலாவது பொறுமைக் குணம் இல்லாமல் இருவரும் ஆராய்ந்து பார்க்குந்தன்மையற்ற ஆத்திரக்காரர் களாய் யிருந்தால் இருவர் நட்பும் நீடித்தநாள் நிலைத்திராது இது கருதியே ஒருவர் பொரை இருவர் நட்பு என முன்னோர் மொழிந்தனர். இத்தகைய பொறுமைத்தன்மை, இளகிய மனதும், அன்பு பாராட்டும் இயல்பும் உடையவர்களிடத்தில்தான் இருக்கக் கூடும். எல்லா ஆண்மக்களிடமும் பொறுமைத் தன்மையைக் காணமுடியாது. பெரும்பாலும் ஆண்மக்களிடம், படபடத்த தன்மையும், கோபக்குணமுமே காணப்படும். ஆகையால் அவர்கள் தம்மனத்திற்குப் பிடிக்காத சிறு செயலை எவர் செய்தாலும், திடீரெனச் சினங்கொள்ளுவார்கள். ஆனால் பெண்மக்களிடம் ஆண்மக்களைப் போன்ற பட படத்த தன்மையும் கோபக்குணமும் மிகுதியாக இல்லை; பட படத்த தன்மையும், கோபக்குணமும் உண்டானாலும் அவற்றை வெளியிற் காட்டாமல் அடக்கிக் கொள்ளும் ஆற்றல் உண்டு. ஆகையால் பெண்மக்களைப் பொறுமையுடையவர்கள் என்று கூறலாம். பெண்மக்கள் அன்புருவானவர்கள். பிறர் அடையுந் துன்பத்தைக்காண அவர்கள் மனந்தாளாது; மனம் வருந்திக் கண்ணீர் சிந்துவர். அவர்களைப்போல உயிர்ப் பிராணிகளின் மேல் அன்பு செலுத்துந் தன்மை ஆண்மக்களுக்கில்லை.. இப்பொழுதும், நாய், கிளி, பூனை, கீரி முதலிய பிராணிகளை வளர்ப்பதற்கு ஆவல் கொள்ளுகின்றவர்கள் பெரும்பாலும் பெண்மக்களே யாவார்கள். பழகியவரை விட்டுப் பிரிவதற்கு மனந்துணிய மாட்டார்கள்; பிரிந்தால் மிகவும் மனங்கலங் குவார்கள். செய்ந்நன்றியறிவுடையவர்கள்; அதாவது பிறர் தமக்குச் செய்த நன்றியை என்றும் மறவாதவர்கள். முதலில் தமக்கு ஒரு நன்றி செய்தவர்கள், பிறகு தமக்குக் கேடுசெய்தாலும் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள்; அவர்களுக்கு ஒரு துன்பம் உண்டானால் அப்பொழுது மனம் வருந்துவர். இன்றும் இறந்தவர் பொருட்டு வருந்துந்தன்மை ஆண்மக்களிடம் மிகுதி யாக இல்லை; இருந்தாலும் சில தினங்களில் மறந்து விடுவர், ஆனால் பெண்மக்களிடம் இறந்தவரை எண்ணி எண்ணி இரங்குந்தன்மை மிகுதியாக உண்டு. பல நாட்களானாலும் மறவாமல் நினைந்து நினைந்து நெஞ்சம் நைவார்கள். இது அவர்களுடைய அன்பின் நிலையை விளக்குவதாகும்; அவர்மீது கொண்டிருந்த உண்மைப்பற்றைக் காட்டுவதாகும். ஒத்த அன்புடைய காதலன் காதலிகள் இருவர் இருக் கின்றனர்; அவர்களில் காதலன் தன் வேலையைச் செய்யும் பொருட்டு வெளியிற் பிரிந்து செல்லுகின்றான்; அப்பொழுது அவன் மனம் வேலையின்மீது செல்லுமேயன்றிப் பிரிவை யெண்ணி மிகுதியாக வருந்துவதில்லை. ஆனால் காதலியோ அவன் தன்னைவிட்டிப் பிரிவதைச் சிறிதும் விரும்பமாட்டாள்; அவன் பிரிவுக்காக மிகவும் நெஞ்சம் நைவாள். அவன் தன்னோடு இல்லாமலிருக்கின்ற ஒவ்வொரு நாழிகையும் ஒவ்வொரு யுகமாகவே கழியும். காதலனோ வெளியிற் சென்று வேறு மனத்திற்கு மகிழ்ச்சியளிக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் பொழுது தன் காதலியையும் மறந்திருப்பான். இத்தகையகுணம் பெண் மக்களிடத்தில்லை. இதற்கு உதாரணமாக சொல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை என்னுந் திருக்குறள் செய்யுளைப் பாருங்கள், இதிற் சொல்லப்படும் செய்தியாவது. ஒரு காதலன் தன் மனைவியிடம் சென்று; தான் வேலையின் பொருட்டு வெளியூருக்குச் சென்று விரைவில் வருவதாகக் கூற எண்ணினான். உடனே அவள் பிரிந்து செல்லாமல் இருப்பதாயிருந்தால் என்னிடம் சொல். அவ்வாறின்றிப் பிரிந்து சென்று விரைவில் வருவேன் என்பதை நீ வரும் வரையிலும் உயிர் வாழ்ந்திருக்கும் மற்றவர்களிடம் சொல் என்றாள். இதனால் நீ பிரிந்து சென்றால் திரும்பும் வரையிலும் நான் உயிர் வாழ்ந்திருக்கமாட்டேன். இறந்து படுவேன் என்பது திண்ணம் என்பதை உணர்த்தினாள். ஆகையால் இதைக்கொண்டு பெண்களின் அன்பின் சிறப்பை உய்த்துணரலாம். பொதுவாகப் பார்த்தால் விலங்கு, பறவை முதலிய உயிர்பிராணிகளிலும், பெண்பாலிடந்தான் அன்புத் தன்மை யுண்டு என்பதை உணரலாம். உதாரணமாகப் பசுவை எடுத்துக் கொள்ளுங்கள். பசு, தன் கன்றினிடம் எவ்வளவு அன்பு பாராட்டுகின்றது; எவ்வளவு அருமையாகத் தன் கன்றுக்குப் பாலூட்டுகின்றது? அதைப்போலக் காளைகள் தம் கன்றினிடம் அன்பு காட்டுகின்றனவா? மற்றும், எருமை, ஆடு, நாய் முதலிய வைகளும், தமது குழந்தைகளை வளரும்வரையிலும் அன்போடு பாலூட்டிக் காப்பாற்றுகின்றன அன்றோ? இவ்வாறே ஒவ்வொரு பறவையினங்களும், முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரித்து, அக்குஞ்சுகளுக்குச் சிறை முளைத்துப் பறந்து தாமே இரைதேடிக்கொள்ளும் வரையிலும் அவற்றைக் காப்பாற்று கின்றன. இவை இயற்கையாகவே நடைபெறுகின்றன. இவை யெல்லாம் நாம் கண்கூடாகக் காணும் காட்சியாகும். இதைப்போலவே மக்களிலும் ஆண்மக்களைவிடப் பெண் மக்களே தம் மக்களிடம் மிகுந்த அன்பு செலுத்துகின்றனர். பெற்ற பிள்ளையின் பொருட்டுத் தமது நலங்களையெல்லாம் இழக்கின்றனர்; அவர்களுடைய வளர்ச்சியிலேயே கண்ணும் கருத்துமாயிருக்கின்றனர். தாம் எப்பாடு பட்டாலும் தம்மக்கள் நோயின்றி நீண்டநாள் நலமுடன் வாழவேண்டுமெனக் கருது கின்றனர். தம்மக்கள் மனம் நோகுமாறு கடிந்து கூறும் குணம் பெண்களிடமில்லை. மக்கள் இளம்பருவத்தில் எந்தசெயல்களைச் செய்தாலும் தாய்மார்கள் அதைக்கண்டு மகிழ்கின்றனர். அவர்கள் செய்யும் குற்றங்களையும் பொறுத்துக்கொள்ளு கின்றனர். தம்மக்கள் புரியும், சிறுவிளையாடல்களையும், சிறு குறும்புச் செயல்களையும் கண்டு தாய்மார்கள் எவ்வளவு மகிழ்ச்சியும், பொறுமையும் காட்டுகின்றார்களோ அவ்வளவு மகிழ்ச்சியும், பொறுமையும் தந்தைமார்களிடம் காணப்படமாட்டா. பெண்களைப் போலத் தமக்கு அன்புடையவர்களின் நலத்தைக் கவனிக்குந் தன்மை ஆண்மக்களிடமில்லை பெண் மக்கள் தம் கணவர் செய்யும் தவறுகளை விரைவில் மறந்து விடுவர்; சில சமயங்களில் பெண்கள் கணவர்களின் வெறுக்கத் தகுந்த நடத்தையினால் மனத்தில் கோபங் கொண்டிருந்தாலும், அவர்கள் தம்மையணுகி மகிழ்ந்த முகத்துடன் இனிய வார்த்தைக் கூறினால் உடனே சினந் தணிந்து மகிழ்ச்சியடைவார்கள். பெண்களைப் பிணங்கச் செய்தலும் மகிழச் செய்தலும் வெகு எளிது. அவர்கள் அன்புக்கு அடிமைபட்டவர்கள். அன்பினால், அடக்கியாளலாம். அவர்கள் தம் அன்பருடைய உடல் நலத்தில் கண்ணுங் கருத்துமாக இருப்பார்கள். தம் அன்பர் முகம் வாடினால் தாமும் முகம் வாடுவர்; தம் அன்பர் முகம் மலர்ந்தால், தாமும் முகம் மலர்வர். தம் அன்பர்களின் இன்ப துன்பங்களையே தம்முடைய இன்ப துன்பமாகக் கொள்ளுபவர்கள். ஆண்மக்களிடம் இத்தகைய குணம் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அவர்கள் பெண்கள் பால் - உண்மை யிலேயே அவர்கள் நல்லொழுக்க முடையவர்களாயிருப்பினும் அடிக்கடி சந்தேகப்படும் இயல்பினர்கள்; அவர்கள் மேல் சிறிது சந்தேகப்பட்டுவிட்டால் போதும், உண்மையைத் தெரிந்து கொள்ளுவதற்கும் பொறுமையிருப்பதில்லை; உடனே அவர்களை வெறுக்கத் தொடங்குகின்றனர்; பலவகையிலும் துன்புறுத்தத் தொடங்குகின்றனர்; கோபம், பாபம், சண்டாளம் என்கின்றபடி இறுதியில் கொலை செய்யவுந் துணிந்து விடுகின்றனர். பெண்கள் மேல் குற்றமிருப்பதாக ஐயுற்ற நிலையிலேயே இவ்வாறு நடக்கத் துணிவார்களாயின், உண்மையிலேயே குற்றங்கண்டுவிட்டால் என்னதான் செய்யத் துணியமாட்டார்கள்? பெண்கள் சிறு குற்றத்தைச் செய்தாலும் ஆண்மக்களுக்கு மூக்கு முனையிற் கோபம் பொங்கிவிடும். அவர்கள் புரிந்துள்ள எண்ணற்ற நன்றிகளை யெல்லாம் இமை நேரத்தில் மறந்துவிடுவர். இதனால் ஆண்களின் இரக்கமற்ற தன்மையையும், பெண்கள்பால் அவர்கள் காட்டும் கொடூரத் தன்மையையும் நன்குணரலாம். ஆண்மக்களிற் பலர், இன்பம் ஒன்றைக்கருதி வேறுபல பெண்களைக் காதலித்துக் கெட்டலைகின்றனர். அதனால் வேசிகள் வீட்டிலும், தாசிகள் வீட்டிலும் வீழ்ந்து கிடக்கின்றனர். தமது செல்வங்களையும் வீணில் இழக்கின்றனர், கொடிய பிணிகளால் பீடிக்கப்பட்டு வருந்துகின்றனர். இவையன்றித் தமது மனைவிமார்களையும் பலவகையில் துன்புறுத்துகின்றனர். இத்தகைய அறிவற்ற ஆடவர்களைக் கணவர்களாகப் பெற்ற பெண்கள் படுந்துன்பத்தை யாரால் அளவிட்டுக் கூறமுடியும்? தமது கணவர்களின் செய்கையை நினைந்து இரக்கமும் வருத்தமும் அடைகின்றனர். அவர்களுக்கு எவ்வளவு அறிவு புகட்டியும் கேட்காவிட்டாலும், அவர்கள் உடல் நலத்திற்கான பணிவிடைகளைப் புரிகின்றனர். அவர்களுக்கு நற்புத்தி வரவேண்டுமெனவும், உடல் நலத்தோடு வாழவேண்டுமெனவும் அல்லும் பகலும் இடைவிடாமல் சிந்திக்கின்றனர். அவர்களுடைய கட்டளைக்கும் அன்போடு கீழ்ப்படிந்து நடக்கின்றனர். இவை நம் நாட்டில் கண்கூடாகக் காணும் காட்சியாகும். பெண்மக்களுடைய அன்பும் தயவும் இன்றேல் ஆண் மக்கள் இவ்வுலகில் இன்பமுடன் வாழமுடியாது; உடல் நலமுடன் வசிக்க முடியாது. பண்டைப் பெரியோர்களும் இதை நன்கு அறிந்தே, சில விஷயங்களில் மட்டும் பெண்களுக்கு உயர்வு கொடுத்திருக்கின்றனர். உதாரணமாக, தாயோடு அறுசுவைபோம் தந்தையோடு கல்விபோம் சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - மாயவாழ்வு உற்றார் உடன்போம் உடன்பிறப்பால் தோள்வலிப்போம் பொற்றாலி யோடெவையும் போம் என்னும் பாடலால் உணரலாம். இதில் தாயோடு அறுசுவை போம் என்று கூறியிருப்பதனால் ஆண்மக்கள் உயிர் பிழைத்து வளர்ந்து நலமுடன் வாழ்வதற்குத் தாய்மார்களே காரண மாவார்கள் என்று அறியலாம். பொற்றாலியோடு எவையும் போம் என்றதனால் மனத்திற்கிசைந்த மனைவியில்லாவிடில் ஆண்மக்களுக்கு எத்தகைய இன்பமும் இல்லை யென்பதை அறியலாம். இதனால் பெண்மக்களுடைய அன்பையும், அவர்களால் ஆண்மக்கள் பெறும் பேரின்பத்தையும் உணரலாம். இத்தகைய பெண்மக்களைப் பற்றி அன்பின்றி இழித்துக் கூறியிருக்கின்றவர்கள் பலருளர். வடமொழியில் உள்ள மநுதரும நூல் முதலியவைகள் பெண்களை எவ்வளவு தூரம் இழிவு படுத்திக் கூறவேண்டுமோ அவ்வளவு தூரம் இழிவு படுத்திக் கூறியிருக்கின்றன வென்பதையும், அதைப் பின்பற்றிய தமிழ் நூல்களும், தமிழ்ப் புலவர்களும் இழிவுபடுத்திக் கூறியிருக் கின்றார்கள் என்பதையும் இந்நூலின் தொடக்கத்திலேயே கூறியிருக்கின்றோம். ஆயினும் இங்கும் ஒரு விஷயத்தைக் கூறுகின்றோம். பெண்களின் குணத்தைப்பற்றி ஒரு புலவர் ஆலகால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம் கோலமாமத யானையை நம்பலாம் கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம் காலனார்விடு தூதரை நம்பலாம் கள்ளர் வேடர் மறவரை நம்பலாம் சேலைகட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே என்று கூறியிருக்கின்றார். இப் பாடலை வைத்துக்கொண்டு பெண்மக்களை இழித்துக்கூறும் அறிவிலிகள் இன்றும் சிலர் உளர். ஆனால் உண்மையில் இப்பாடல் பெண்மக்களையே இழித்துக் கூறுவதாக எழுந்ததன்று விலைமாதர்களை நாடி விபசாரிகளாகத் திரியும் ஆண்மக்களுக்குப் புத்தி கற்பிப் பதற்காக எழுந்த பாடலாகும். ஆதலால் இப்பாடலை எல்லாப் பெண்களுக்கும் இணைத்தல் பொருந்தாது. இப்பாடலைக் கூறியவரின் கருத்து எப்படியிருந்தாலும், பொதுவாக இதன் போக்கு, பெண்களை மிகவும் கொடியவர்கள் என்று கூறப்படுவதாகவே காணப்படுகின்றது. ஆல கால விஷம், வெள்ளம் பெருகியோடும் ஆறு, சுற்றிச் சுற்றி விரைந்து வீசும் காற்று, மதங்கொண்ட யானை, கொல்லுந் தன்மையுடைய வேங்கைப்புலி, உயிரைக் கவர்ந்து செல்லவரும் எமதூதர்கள், அடித்து பொருள் பறிக்குந்திருடர்கள், இரக்க மின்றி உயிர்களைக் கொல்லும் வேடர்கள் அச்சமின்றிக் கொலை செய்வார் ஆகிய இவர்களைக் காட்டிலும் பெண்கள் கொடியவர்கள், மோசம் செய்யக் கூடியவர்கள் என்னுங் கொள்கையை இப்பாடல் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. இக்கொள்கை உண்மையில் தவறானதாகும். விபசாரிகளால் ஆண்மக்கள் மோசம் செய்யப்படுகிறார்கள் என்பது உண்மையாயிருந்தாலும் அதற்கு காரணம் ஆண் மக்களுடைய அறிவின்மையன்றோ? அறிவற்ற ஆண்மக்கள் மோசம் போவார்களாயின் அதற்குப் பெண்கள் எவ்வாறு பொறுப்புடையவர்களாவார்கள்? ஏமாறுபவர்கள் இல்லா விட்டால் ஏமாற்றுகின்றவர்கள் இருக்க மாட்டார்களல்லவா. ஆகையால் பெண்களை இழித்துக் கூறும் இது போன்ற செய்தி களைச் சிறிதும் நம்புதல் கூடாது. பெண்களின் அவயவங்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறும் போதும் புலவர்கள் முகத்தைத் தாமரை மலராகவும், கண்களை நீலோற்பல மலராகவும், பற்களை முல்லையரும்புகளாகவும், வாயைக் குமுதமலராகவும், நாசியைக் குமிழ மலராகவும், கைகளைக் காந்தள் மலராகவும், உருவகஞ் செய்திருக்கின்றனர் அவயவங்களை மலர்களாக உருவகஞ் செய்திருப்பதிலிருந்தே பெண்களின் இனிய தன்மையை அறியலாம். மலர்களை விரும்பாதவர்கள் யார்? மலர்கள் எல்லோர் மனத்திற்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதன்றோ? இதுவரையிலும் கூறியவற்றால் பெண்களின் உயரிய குணங்களைப் பற்றி நன்கு உணரலாம். இத்தகைய குணங்களைப் பற்றி இழித்துக் கூறுவோரே, கொடியவர்கள் - இரக்க மற்றவர்கள் - வஞ்சகர்கள் - செய்நன்றி யறிவில்லா தவர்கள் என்று துணியலாம். பெண்மக்களும் முன்னேற்றமும் முன்பகுதிகளிற் கூறியபடி பெண்கள் தங்களுக்குள்ள தடைகளை யெல்லாம் விலக்கிக்கொண்டு சுதந்தரம் பெற வேண்டுமானால் இடைவிடாது உழைக்க முன்வரவேண்டும். அதனால் தமக்கு நேரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும், மேல் நாட்டுப் பெண்கள் சுதந்தரம் பெறுவதற்காக எவ்வளவோ பாடுபட்டிருக்கின்றனர். இங்கிலாந்தில் உள்ள பெண்மக்கள் முதலில் வாக்குரிமை பெறுவதற்காகச் செய்த முயற்சிகள் பல. பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கவேண்டும் என்னும் தீர்மானம் பாராளுமன்றத்தில் வந்தபோது, சில உறுப்பினர்கள் அத்தீர்மானத்திற்கு விரோதமாயிருந்தனர். கடைசியில் அவ்வுறுப்பினர்கள் பெண்களின் முயற்சியையும் ஆர்பாட்டத்தையும் கண்டு அஞ்சிவிட்டனர். கடைசியில், பெண்களுடைய சுதந்தரக் கிளர்ச்சியைக் கண்டு அஞ்சியே அவர்களுக்கு வாக்குரிமை யளித்தனர். இந்து மதப் பெண்களைப் போலவே கிறிதவப் பெண் களும் பண்டை நாளில் அடிமையாக இருந்தனர். இந்துமதம் எவ்வாறு பெண்களை இழிவாக கூறுகின்றதோ அவ்வாறே கிறிதுவ மதமும் பெண்களை இழிவாகக் கூறுகின்றது. பெண்கள் பாவமான பிறவியினர் என்பது தான் அம்மதத்தின் கொள்கையும் இவ்வுலகில் நடைபெறும் பாவங்களுக்கெல்லாம் பெண்கள்தான் காரணம் என்பது கிறிது மதக் கொள்கை. பெண்களால் ஏற்பட்ட பாவங்களின் குற்றத்தைத் தொலைப் பதற்காகவே ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்று கிறிதுவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அம்மதக் கொள்கை யிருந்தாலும், அம்மதத்தில் உள்ள மேல்நாட்டுப் பெண்கள் அனைவரும் சுதந்தரம் பெற்று வாழ்கின்றனர். இதற்கு அவர்களுடைய முயற்சியே காரணமாகும். நமது நாட்டுப் பெண்களும் முயற்சிசெய்தால் எளிதில் உரிமை பெறலாம். இதுவரையிலும் கற்ற பெண்கள் முயன்றதன் பயனாக எல்லா மாகாணங்களிலும் அவர்களுக்கு வாக்குரிமை ஏற்பட்டுவிட்டது. தலதாபனங்களிலும் சட்ட நிரூபண சபைகளிலும் உறுப்பினராக இருக்கும் உரிமை கிடைத்து விட்டது. இவ்வுரிமையைக்கொண்டே மற்றும் தங்களுக்கு வேண்டும் எல்லா உரிமைகளையும் பெற்றுக்கொள்ளலாம். தலதாபனங்களிலும், சட்ட நிரூபண சபைகளிலும் பெண்கள் அங்கம் பெற்று அவற்றின்மூலம் தங்கள் சமூக முன்னேற்றத்திற்குத் தகுந்த செயல்களைச் செய்யவேண்டும். நமது நாட்டில் இதுவரையிலும் நடைபெற்ற பெண்கள் மகாநாடுகள் எல்லாம் மிகவும் சீர்திருத்த உணர்ச்சியுடனேயே நடைபெற்றிருக்கின்றன. அம்மகாநாடுகள் பலவற்றிலும், தங்கள் சமூக உயர்வுக்கான தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கின்றனர். இளமை மணத்தைக் கண்டித்தல் சாதிக்கலப்பு மணத்தையும், மதக்கலப்பு மணத்தையும் ஏற்றுக்கொள்ளுதல், விதவா விவாகத்தை ஏற்றுக்கொள்ளுதல்; விதவா விடுதலை செய்து கொள்வதை ஒப்புக்கொள்ளுதல், பெண்களுக்குச் சொத்துரிமை ஏற்படச் செய்தல் முதலிய தீர்மானங்களை நிறைவேற்றியிருக் கின்றனர், இவைகள் பெண்களின் விடுதலைக்கு முதன்மையான அடிப்படையாகும். படித்த பெண்மக்கள் அனைவரும்-விடுதலைத் தாகமுடைய பெண்கள் அனைவரும் இத்தகைய முடிவுகளை ஆதரிக்கின்றனர். மேற்கூறியவைகளில் இந்துக்களுக்குள், மதக்கலப்பு மணம், விவாக விடுதலை, சொத்துரிமை, இம்மூன்றைத் தவிர மற்றவைகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. இத்தகைய சீர்திருத்தச் செயல் களை ஆதரிக்கவும் எண்ணற்ற இளைஞர்கள் புறப்பட்டு விட்டனர். இன்னும் சில ஆண்டுகளுக்குள் இவை இயல்பாக நடைபெறும் செயல்களாகப் போய் விடும் என்பது திண்ணம். மதக்கலப்புமணம், விவாகவிடுதலை, சொத்துரிமை இவை சம்மந்தமாகச் சட்டங்கள் செய்யப்பட வேண்டும். இளமை மணத்தைத் தடை செய்வதற்குக் கடுமையான சட்டம் ஏற்பட வேண்டும் இப்பொழுது இருக்கும் சட்டப்படி இளமைமணம் செய்துகொண்டால், அபராதமும், சிலமாதங்கள் சிறைதண்டனை யுந்தான் கிடைக்கக் கூடும். அபராதத் தொகையைக் கொடுத்துச் சிறைத்தண்டனையும் அனுபவித்தபின், மணஞ்செய்து கொண்ட இளம் பெண்ணை மனைவியாகக் கொண்டு வாழலாம் ஆகையால் இச்சட்டம் பயனற்றதே மதநம்பிக்கையை விடாப்பிடியாகக் கொண்டவர்கள், அபராதத் தொகைக்கும், சிறைதண்டனைக்கும் அஞ்சாமல் மணம்புரிந்து கொள்ளலாம். ஆகையால் இளம் பெண்களை மணம்புரிந்து கொண்டால் அது சட்டப்படி சொல்லாத மணமாக வேண்டும். அதனோடு அபராதம் சிறைத் தண்டனை முதலியவைகளையும் ஏற்படுத்த வேண்டும். இளமை மணத்தை அறவே தடுக்க முடியும். ஆகையால் பெண்மக்கள் தான் முயன்று இத்தகைய சட்டங்களை நிறைவேற்ற வேண்டும். பிறரை நம்பி வாழ்கின்றவர்கள் எப்பொழுதும் பிறருக்குக் கீழ்படிந்துதான் இருக்கவேண்டும். அவர்கள் பிறரை நம்பாமல் தாமே முயலத் தொடங்கும் வரையிலும் முன்னேற்றம் அடைய மாட்டார்கள்; விடுதலை பெறமாட்டார்கள். ஆகையால் ஒவ்வொரு சமூகமும் தாமே முயன்று உழைத்தால் தான் முன்னுக்கு வரமுடியும், எப்பொழுதும் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் உதவி கொண்டு முன்னேற்றமடைவது என்பது முடியாத செயலாகும். ஒவ்வொரு சமூகத்தினரும் தாமே உயர்ந்த நிலையில்-உரிமையோடு வாழ வேண்டுமென்று எண்ணுவர். அதன் பொருட்டே உழைப்பார்கள். ஒரு மனிதன் துன்புற்றால் தான் மற்றொரு மனிதன் இன்பமடைய முடியும்; அதுபோல ஒரு சமூகம் அடிமையாக சுதந்தரமின்றியும், துன்பப்பட்டுக்கொண்டும் வாழ்ந்தால் தான் மற்றொரு சமூகம், அடிமையின்றியும், உரிமையோடும், இன்பத்தோடும் வாழமுடியும். ஆகையால் ஒரு சமூகத்தார், மற்றொரு சமூகத்தைத் தாழ்த்திவைத்திருக்கவே கருதுவார்கள்; இது இவ்வுலகில் இதுகாறும் நடைபெற்றுவரும் இயற்கை நிகழ்ச்சியாகும். இதற்கு உதாரணமாக இந்து மதத்தில் உள்ள வருணாச்சிரமதரும அமைப்பைப் பாருங்கள்! பார்ப்பனர்கள், தங்கள் சமூகம் துன்பமின்றி உயிர் வாழ வேண்டித் தங்களைப் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவர் களாகக் கூறிகொண்டனர். அதனால் தங்களைச் சமூகத்தில் உயர்ந்தவராகக் கொண்டனர். தங்களுக்குக் கீழே க்ஷத்திரியர் என்று ஒரு சமூகத்தைப் பிர்ம்மாவின் தோள்களிலிருந்து உண்டானதாக ஏற்படுத்தி வைத்தனர். அவர்கள் மகிழும்படி, அவர்களுக்குக் கீழே வைசியர் என்ற ஒரு சமூகத்தைப் பிர்ம்மாவின் துடையிலிருந்து பிறந்ததாக ஏற்படுத்தினர். அவர்கள் மகிழும் படி, அவர்களுக்கு அடுத்தபடியாகச் சூத்திரர்கள் ஒரு சமூகத்தை பிர்ம்மாவின் பாதத்திலிருந்து பிறந்ததாக ஏற்படுத்தி வைத்தனர். பார்ப்பனர்களுடைய ஆலோசனையின்படி க்ஷத்திரியர்கள் அரசாள வேண்டுமென்றும், க்ஷத்திரியர்களுடைய அரசாட்சிக்கு வைசியர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டு மென்றும், சூத்திரர்கள் மேல்வருணத்தாராய மூவருக்கும் ஏவல் தொழில் புரிய வேண்டும் என்றும் வைத்தனர். இவ்வேற்பாட்டினால் பார்ப்பன சமூகம் ஒன்றே உயர்நிலையில் இருக்கும்படி செய்திருப்பதை அறியலாம். பிற்காலத்தில், நான்கு வருண ஏற்பாடுகள் குலைந்த பின் பஞ்சமர் என்ற ஒரு சமூகத்தை உண்டாக்கி விட்டனர். இச்சமூகத்தின் உழைப்பினாலும், துன்பத்தினாலும், மற்றைய சமூகத்தினர் இன்புற்று வாழுகின்றனர் இவ்வாறு தொண்டு தொட்டு நடந்து வருகின்றது. இவ்வாறே ஆண்மக்கள் சமூகம், ஒன்றுகூடித் தாங்கள் இன்பமுடன் வாழவேண்டிப் பெண்மக்கள் சமூகத்தைப் பண்டைக்காலமுதல் தாழ்த்தி வைத்து விட்டது. ஆகையால் ஆண்களுடைய உதவியைக் கொண்டு பெண்மக்கள் சமூகம் விடுதலையடையலாம் என்று நினைப்பது கூடாது. அத்தகைய நினைப்பிருந்தால் அதை அடியோடு மறந்துவிட வேண்டும். பெண்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் விரோதமாயிருக்கும் ஆண்மக்கள் நமது நாட்டில் பலர் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வைதீகக்கூட்டத்தார் ஆவார்கள், அவர்கள் பகுத்தறிவு வளர்ச்சியே இல்லாதவர்கள், சாத்திரங்களையும், மதக்கோட்பாடுகளையுமே எக்காலத்திலும் உண்மையென்று நம்பியிருப்பவர்கள். இவர்கள் இளமைமணம் புரிவதுதான் வேத சம்மந்தமென்பார்கள், மதக்கோட்பாடு என்பார்கள் விதவாவிவாகம் செய்தல் சாத்திரவிரோதம் என்பார்கள்; கலப்பு மணம்புரிதல் கடவுளுக்கு விரோதம் என்பார்கள்; விவாக விடுதலை ஏற்பட்டால் பெண்களின் கற்பும் கட்டுப்பாடும் குலைந்து விடும் என்பார்கள். சொத்துரிமை ஏற்பட்டால் பெண்மக்கள் ஆண்மக்களை மதிக்கமாட்டார்கள் என்பார்கள்; இவ்வாறு செய்துவிட்டால் சாதியொழுக்கம், சாத்திரக்கொள்கை, மதம் இவையெல்லாம் கெட்டுவிடும் என்று கூறுவார்கள். இவ்வாறே கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆகையால் பெண்மக்கள் வைதீகர்களின் கூச்சலைச் சிறிதும் பொருட்படுத்தக்கூடாது. தாங்கள் விரும்பும் சீர்திருத்தங்களைத் தாங்களே அடைய உரிமையுடையவர்கள். அவர்களுடைய உரிமையில் தலையிடுவதற்கு ஆண்மக்களுக்கு அதிகாரமில்லை; அறிவுடைய ஆண்களுக்குப் பெண்கள் உரிமையில் தலையிடுதலும் அழகாகாது. பெண்கள் தங்களுடைய இன்பதுன்பங்களைத் தாமே நன்கறிவர். ஆகையால் அவர்களைச் சீர்திருத்திக் கொள்ளும் உரிமை அவர்களுக்கே உண்டு. பெண்மக்களுடைய சுதந்திரத்திற்குத் தடைகூறும் வைதீகர்களுக்கு ஒரு யோசனை கூறுகின்றோம். ஆண்மக்களும் மனைவியை இழந்துவிட்டால் மொட்டையடித்து கொண்டு வீட்டிற்குள்ளேயே வாழவேண்டும்; வேறுமணம் புரிந்துக் கொள்ளக்கூடாது; தங்கள் மனைவிமார்கள் பிடிக்காவிட்டாலும் அவர்களுடன் சேர்ந்துதான் வாழவேண்டும்; வேறு பெண்ணை மணந்து கொள்ளக் கூடாது; தந்தையினுடைய சொத்தில் உரிமையில்லை; தாம் மணம் புரிந்துகொண்ட பெண்ணின் ஆதரவில் அவளுக்கு அடிமையாக இருந்து தான் வாழவேண்டும்; மனைவி யிறந்து விட்டால் அவளுடைய சொத்திலிருந்து ஜீவனாம்ஸத்திற்கு மட்டிலுந்தான் சிறிது பொருள் பெறலாம் என்பனபோன்ற சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் ஆண் மக்களுக்கும் ஏற்படுத்தினால் சம்மதிப்பார்களா? தங்கள் உரிமை பறிக்கப்பட்டுவிட்டதாக பெருங்கூச்சலிடமாட்டார்களா? இச்சட்டங்களை யெல்லாம் ஒழித்துச் சுதந்தரம் பெற முயல மாட்டார்களா? ஆகையால் இந்த நிலையில் பெண்மக்களிடத்திலும் வைத்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம். இப்பொழுதுள்ள சில வைதீகர்களைத் தவிர, இனி எதிர் காலத்தில் ஆண்மக்கள் எவரும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் உரிமைக்கும் தடையாக நிற்க மாட்டார்கள் என்பது உறுதி ஏனெனில் எதிர்கால மக்கள் அனைவரும், இளைஞர்கள்; மதக்கொடுமைகளில் மூளையைச் செலுத்தாத பகுத்தறிவுடை யவர்கள்; சுதந்தர இரத்தம் உள்ளவர்கள்; சுதந்தர நாட்டில் வாழக்கூடியவர்கள்; சுதந்தர எண்ணமுடன் வாழக்கூடியவர்கள். ஆதலால் இப்பொழுதுள்ள கிழ வைதீகர்களின் கூக்குரலைக் கண்டு பெண்மக்கள் சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை; ஆகையால் இனி நமது பெண்மக்கள் சிறிதும் அஞ்சாமல் தமது சுதந்திரத்திற்காகப் போர்புரிய வேண்டும். இதற்காக எத்துணை தியாகங்களையும் செய்ய தயாராக இருக்கவேண்டும். ஆண்மக்கள் எதிர்ப்பைக்கண்டு பின் வாங்கக் கூடாது; ஆண் மக்களோடு ஒத்துழைக்க மறுக்க வேண்டும் ஆண்மக்கள் செய்யும் அடாத செயல்களை அச்சமின்றிக்கண்டிக்க வேண்டும் ஆண்மக்கள் நல்லொழுக்கமுடன் வாழவேண்டுமானால் அது பெண்மக்களாலேயே முடியும்; அதற்கேற்ற அஞ்சாமையும், அறிவும், ஊக்கமும் பெண்மக்களுக்கு வேண்டும்; வருங்கால சந்ததிகளெல்லாம், உரிமை எண்ணமும், அஞ்சாமையும்; உடல் வன்மையும் அமைந்தவைகளாக இருக்க வேன்டும். இவ்வாறு இருந்தால்தான் உலக முன்னேற்றப் பந்தயத்தில் நமது நாடும் சேர்ந்திர்க்க முடியும். இதற்கு பெண்மக்கள், முன்னேற்றமடைதலும், விடுதலை பெறுதலும் இன்றியமையாததாகும்,. ஆகையால் இடைவிடாது உழைத்து உயர்வு பெறுக. காரல் ஹென்றி மார்க்சு (1937) அணிந்துரை தமிழ் அறிஞர் சாமி. சிதம்பரனார் இலக்கியப் புலமையும், பழகு தமிழ்நடையும் உள்ளவர். முற்போக்குக் கருத்துள்ள பண்பட்ட மரபுக்கவிஞர். பகுத்தறிவுவாதி. சமுதாய நோக்கமும், சுதந்திரதாகமும் உள்ளவர். உழைக்கும் வர்க்கத்தின்மீது அன்பும் ஆதரவும் காட்டக் கூடிய இடதுசாரி அரசியல் நிலைபாடு உள்ளவர். சமுதாய மாற்றத்திற்கான துடிதுடிப்பு உள்ள மனிதநேயம் இருப்பதால் எவ்வாறு தமிழ்நாட்டில் மக்களின் நிலைமையைப் பார்க்கிறார் என்று சாமி சிதம்பரனாரின் கவிதைகளே கூறுகின்றன. சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்துபோனேன் போன இடங்களில் எல்லாம் ஏழையர்கள் துன்பத்தால் புலம்புதலே என் காதைத் தொளைக்கக் கேட்டேன் நான் அவர்கள் படுகின்ற வேதனையைப் பார்த்து மனம் நைத்து வெயில் புழுப்போலத் துடித்து விட்டேன்............ இந்நிலையில் மனிதநேயம் படைத்த தமிழறிஞர் ஒரு முடிவு எடுக்கிறார். அதையும் கவிதைகளே கூறுகின்றன. புதியதொரு விதி செய்வோம், பழமை சாய்ப்போம் பூவுலகில் அதைக் காப்போம், பசிப்பேயை மாள வைப்போம் அதிகார வெறிமுளைக்கும் குழி தூர்ப்போம் அக்கிரமக்காரர்களின் திட்டமெலாம் தீயில்வைப்போம் இதனைச் செய்து முடிப்பது எவ்வாறு? மேலும் கவிதைகள் கூறுகின்றன. உலகத்தில் சமம் எனும் பயிரைச் செய்வோம். கொள்ளையிடும் வஞ்சகரை முறியடிப்போம். கூறினேன் திடமிருந்தால் வெற்றி கொள்வாய். வெற்றிகொள்வது எவ்வாறு ஐயா? கவிதைகள் கூறுகின்றன. இல்லார்கள், உடையார்கள், இரண்டு மற்றோர் எனும் பேதம் இல்லாத நிலையை ஆக்கி கலையாமல் மனிதர்குலம் ஒன்றாய் வாழும் கண் கொள்ளாப் பெருங்காட்சி அதுதான் ஐயா! உலகத்தில் மனிதகுலம் சமம். உலக சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக வளரவும், அவ்வாறு வளருவதன் மூலமாகவே அனைத்து மக்களும் சுதந்திரமாக வளரக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. அதுபோன்ற சமுதாய அமைப்புத்தான் கம்யூனிஸ சமுதாயம். இத்தகைய சமுதாய அமைப்பின் திசை வழியில் இன்று சோவியத் மக்கள் வீர நடைபோட்டு வருகிறார்கள். இந்த சமுதாய அமைப்புக்குக் காரணமானவர் காரல் மார்க்சு. காரல் மார்க்சும், ஏங்கல்ஸும் உலகில் 1848இல் பிரகடனப் படுத்திய கம்யூனிட் அறிக்கை இதை விளக்குகிறது. தவிர உழைக்கும் வர்க்கம் சமுதாயம் முழுவதுமே விடுதலை செய்வதன் மூலமாகத்தான் எந்த அமைப்பின் கீழ் ஒடுக்குமுறை, நசுக்குமுறை, சுரண்டுமுறை ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகிறதோ அதிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியும் என்று காரல் மார்க்சும், ஏங்கல்ஸும் கம்யூனிட் அறிக்கையில் பிரகடனப்படுத்தினார்கள். எனவே சமுதாயப் புரட்சி எனும் கண் கொள்ளாப் பெருங்காட்சி அது தான் ஐயா என்று 1937ஆம் ஆண்டு அறிவுக் கொடி என்ற மாதப் பத்திரிகையின் மூலமாக உலகில் சமுதாய விஞ்ஞான மேதைகளான காரல் மார்க்சு, பிரடெரிக் ஏங்கல் - இவ்விருவரும் இணைந்துள்ள வாழ்க்கை வரலாற்றினை மக்கள் முன் நிறுத்தினார் தமிழ் அறிஞர் சாமி சிதம்பரனார். நாடு சுதந்திரம் அடைந்து முப்பத்திமூன்று ஆண்டுகள் முடிந்தபோதிலும் காலமான மூதறிஞர் சாமி சிதம்பரனார் அன்று சந்து பொந்துகளில் புகுந்து நேரில் கண்ட மனிதர்களின் அவல நிலை மேலும் அதிகமாகியிருக்கிறதே தவிர மாற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாகத்தான் என்று நான் நினைக்கிறேன். இன்று அன்னாரின் வாழ்க்கைத் துணைவியர் திருமதி சிவகாமி சிதம்பரனார் மீண்டும் காரல் ஹென்றி மார்க்சு வாழ்க்கைச் சுருக்கம் என்ற தலைப்பில் சாமி. சிதம்பரனாரின் கட்டுரைகளைத் தொகுத்து நூல் வடிவத்தில் மக்கள் முன்பு காரல் மார்க்சு -ஏங்கல் இருவரையும் நிறுத்துவதற்கு துணிவுடன் முன் வந்திருக்கிறார். திடம் இருக்கிறது. சாதகமான சூழ்நிலை இருக்கிறது. உலகத்தில் சமம் எனும் பயிர் செய்வோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைப் பிரதி பலிக்கிறார். பழகு தமிழ் நடையில் எழுதியிருப்பதால் இன்றைய எதிர் காலப் பயிர்போன்ற பள்ளி மாணவனும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ள முடியும். மார்க்சின் தத்துவம் பற்றி இந்நூலில் விளக்கப்படுகிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் மார்க்சு தன் தத்துவப் தெளிவைச் சிறுவயது முதல் வளர்த்து வருவதை அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறார். விஞ்ஞானம் எங்கிருந்து தோன்றினாலும் சமுதாயம் முழுவதிலும் பொருத்தமானதேயாகும். அதே போன்று மார்க்சிய தத்துவம் உலகம் தழுவிய சமுதாய விஞ்ஞானம். ஆசிரியர் இதை எளிய நடையில் விளக்குவதைக் காணலாம். பிரான்ஸில் தோன்றியது பொருள் முதல் தத்துவம். ஜெர்மனியில் தோன்றியது. கருத்து அல்லது சிந்தனை இயக்க இயல் தத்துவம். பிரிட்டனில் தோன்றியது அரசியல் பொருளாதாரம் பற்றிய தத்துவம். இம்மூன்று தத்துவ உண்மைகளை இணைத்து வளர்ப்ப தாக மார்க்சின் தத்துவம் இருந்து வந்தது. - அதாவது இயக்க இயல் பொருள் முதல்வாதம், வரலாற்று இயல் பொருள் முதல்வாதம் இணைந்த தத்துவம். - விஞ்ஞான அரசியல் பொருளாதாரம். - விஞ்ஞான சோஷலிஸம். தொழிலாளி வர்க்கத்தின் வரலாறு பூர்வமான புரட்சிகர பாத்திரம், வர்க்கத்தின் அரசு. மேற்கூறிய மார்க்சிய தத்துவத்தின் சாரத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளுவதற்கு ஏற்ற நடையில் ஆசிரியர் விளக்கம் தருகிறார். அதே போன்று சமதர்ம அறிக்கை என்ற தலைப்பில் கம்யூனிட் அறிக்கையின் சாரத்தை விளக்கியுள்ளார். காரல் மார்க்சு, ஏங்கல் இவ்விருவரின் வாழ்க்கை சமுதாய வளர்ச்சி யைப் பிரதிபலிக்கும் சிந்தனையைச் செயல்படுத்துவதாகவே இருந்தது. நூல் ஆசிரியர் இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்திருக்கிறார் என்பதற்கு காரல் மார்க்சு வாழ்க்கைச் சுருக்கத்தில் கொண்டு வந்திருக்கும் கோர்வை போன்ற அம்சங்களே சான்றாகும். மார்க்சிய தத்துவத்தை மறுப்பவர்கள், மார்க்சியம் காலம் கடந்துவிட்டது என்று கதைப்பவர்கள் இவர்களுக்கு சாட்டை கொடுப்பது போன்ற சரித்திரச் சுருக்கத்தைத் தொகுத்திருக்கிறார். விஞ்ஞான வளர்ச்சி காலத்தையும், இடைவெளியையும் வெல்லுமே தவிர காலம் கடந்ததாகிவிட்டது. அதே போன்று மார்க்சின் சமுதாய விஞ்ஞானம் இன்று சமுதாயத்தில் நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்திருப்பதைத்தான் காணமுடிகிறது. இதை வாசகர்கள் உணரும் அளவு அவருக்குரிய நடையில் விவரிக்கிறார். ஆசிரியர் குறிப்பிடுவது போல் 1848ஆம் ஆண்டு காரல் மார்க்சு, ஏங்கல் பிரகடனப்படுத்திய சமதர்ம அறிக்கையின் திட்டம், 1871ஆம் ஆண்டு பாரி கம்யூன் எனும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியையும், தொழிலாளி வர்க்கத்தின் 72நாட்கள் நடத்திய தன்னாட்சியையும் தோற்றுவித்தது. உலகில் புதிய சமுதாய தோற்றத்திற்கான முன் அறிவிப்பாக, மின் வெட்டாக இருந்தது. 1971 நவம்பர் 7இல் ரஷ்யாவில் போல்ஷுவிக் நடத்திய சமுதாய புரட்சி முழுமையாக வெற்றிபெற்றது. மார்க்ஸிஸம் லெனினிஸம் என்ற சமுதாய தத்துவமாய் வளர்ந்து விட்டது. உலகில் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், சுபீட்சும் வளர அடிகோலுகிறது. சர்வ வல்லமையுள்ள சமுதாய சக்தியாக வளர்ந்து வருகிறது. உலகில் மனித நேயத்தை வளர்ப்பது என்பதே கடமையாகிறது. இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு 1937இல் அறிவுக் கொடியில் கட்டுரையாக வெளிவந்தவை இன்று காரல் ஹென்றி மார்க்சு வாழ்க்கை சரித்திரச் சுருக்கம் என்ற நூலாக வெளிவருகிறது. சென்னை வணக்கம் 23.11.80 மெ.வி.சுந்தரம் காரல் ஹென்றி மார்க்சு முன்னுரை உலகத்தில் சமதர்ம விதை போட்டவர்; புதிய சமுதாய அமைப்புக்கு அடிகோலியவர்; தொழிலாளர் நலம் கருதிப் பாடு பட்டவர்; சிறந்த பொருளாதார நிபுணர் என்று போற்றப் படுபவர் இந்த மார்க்சு. இது அவருடைய சரித்திரச் சுருக்கம். சமதர்மப் பெரியார்கள் மனிதர்கள் மனிதர்களை அடக்கி ஆளும் கொடுமை இவ்வுலகில் பல்லாயிரம் ஆண்டுகளாகவே குடிகொண்டிருக்கிறது. இக்கொடுமையின் பயனாகவே இவ்வுலகில் சிலர் எல்லாச் செல்வங்களும் பெற்று இன்பமாக வாழுகின்றனர். அண்டை அயலார்களைப் பற்றிச் சிறிதும் சிந்தனையில்லாமல் ஆடம் பரமாக வாழ்ந்து அளவற்ற போகந்துய்க்கின்றனர். அல்லும் பகலும் பேயாய்ப் பறந்து, நாயாய்த் திரிந்து உழைக்கும் பலருக்கு இவ்வுலகில் வயிறார உண்ண உணவில்லை; உடம்பை மறைத்துக் கொள்ளப் போதிய உடையில்லை; வெயிலுக்கோ, மழைக்கோ ஒண்டக் குடிசையில்லை. இவர்கள் பார்க்கவும், கேட்கவும் சகிக்க முடியாத வறுமையில் நோய்களால் அவதிப் படுகின்றனர். இத்தகைய ஏழை மக்களின் நிலையை மாற்ற வேண்டும் என்று கருதிய பெரியோர் பலர்; இதன் பொருட்டுத் தற்கால மனித சமூக அமைப்பு முறையையே மாற்றிப் புதிய சமூக அமைப்பை உண்டாக்க வேண்டும் என்று பல பெரியோர்கள் முயற்சி செய்தனர். இவ்வாறு மனித சமூக வாழ்க்கை முறையையே அடியோடு மாற்றிப் புதிதாக அமைக்க வேண்டும் என்று கூறியவர்களில் முதன்மையானவர், கிரேக்க (Greece) நாட்டுப் பெரியாரான பிளோட்டோ என்பவர். இவரே இவ்அபிப்பிராயத்தை முதல் முதல் வெளியிட்டவர் என்று கூறுகின்றனர். கிறிது பிறப்பதற்கு முன், சீன தேசத்தில், சமத்துவமுள்ள புதிய அமைப்போடு கூடிய ஜன சமூகத்தை உண்டாக்க முயற்சி செய்யப்பட்டது. கிறிதுவுக்குப் பின் பாரசீக தேசத்திலும் இது போன்ற முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இரு நாடுகளிலும் அப்பொழுதே இம்முயற்சி பயன் படாமல் வீணாகி விட்டது என்று தெரிகிறது. ஐரோப்பா தேசத்தில் எல்லோரும் இன்பத்தோடிருக்கும் படியான புதிய மனித சமூக வாழ்க்கையமைப்பை ஏற்படுத்தப் பலவகையிலும் முயற்சி செய்யப்பட்டது; இம்முயற்சி 1800 ஆம் ஆண்டு வரையிலும் நடைபெற்று வந்தது. சர்தாமமூர் என்பவரும் இன்னும் பல பெரியோரும் இந்த எண்ணத்தோடு வாழ்ந்திருக்கிறார். இவர்கள் உயர்வு தாழ்வு பாராட்டிக் கொண்டு, துன்ப மடைந்து வரும் ஜன சமூக அமைப்பை அடியோடு மாற்ற வேண்டும்; உயர்வு தாழ்வில்லாத - சமத்துவமான ஒரு புதிய சமூகத்தை அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓவன் என்னும் பெயருடைய ஒரு பெரியார் இருந்தார். அவர் ஏழைகளின் பொருளைச் சுரண்டுவது நீதியல்ல; அவர்களுடைய உழைப்புக் காக அவர்களுக்குப் போதுமான உணவு கொடுக்கலாம்; வாழ்வதற்கு வசதியான இடம் கொடுக்கலாம்; இவ்வாறு செய்வதனால் முதலாளிக்குச் சிறிதும் நஷ்டம் வந்து விடாது நல்ல லாபமே கிடைக்கும் என்பதைத் தனது நடத்தையில் காட்டினார். 19ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் உலகத்தில் இரண்டு பெரிய அறிவாளிகள் தோன்றினார்கள். இவர்கள் காரல் மார்க்சு, பிரடரிக் ஏஞ்சல் என்பவர்கள். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட சமூகச் சமத்துவத் திட்டத்திற்கு விஞ்ஞான சமதர்ம முறை என்று பெயர். இவர்களுடைய திட்டங்களில் சில, சமதர்மக்காரர் களாலேயே நடத்திக் காட்டுவது முடியாத காரியம் என்று கைவிடப்பட்டு விட்டன. ஆயினும் பெரும்பாலான திட்டங்கள் ஒப்புக் கொள்ளப் பட்டு வருகின்றன. புதிய சமூக அமைப்பை விரும்பாமல் பழைய சமூக அமைப்பிலேயே திருத்தங்கள் செய்தால் போதும் என்ற சீர்த்திருத்தவாதிகள் இவர்கள் கொள்கைகளை ஒப்புக் கொள்வதில்லை.பழமை விரும்பிகளோ இவர்கள் பெயரைக் கேட்டாலே எரிந்து விழுவார்கள். ஆனால் இப்பொழுது பொருளாதார சமத்துவம் என்ற பேச்சு உண்டானதற்கு இவர்களுடைய திட்டங்களே அடிகோலின என்பதில் ஐயமில்லை. இவர்களில் காரல் மார்க்சு என்பவர் தனது வாழ்நாள் முடிவு வரையிலும் தனது சமதர்மக் கொள்கையை விடாப் பிடியாகக் கொண்டு நின்றார். இவ்வாறு தன் கொள்கையில் உறுதியுடைய வராக நின்றதன் மூலம் அவருக்குண்டான துன்பங்கள் அளவற்றவை. காரல் மார்க்சு சிறந்த பொருளாதார நிபுணர்; ஏழை மக்களின் எதிர்கால இன்ப வாழ்க்கைக்கு வழிகோலியவர்; அரசியல் தீர்க்க தரிசி என்று கூடக் கூறலாம். இக்காலத்துப் பொருளாதார நிபுணர்களும் மார்க்சின் பொருளாதாரக் கொள்கையை விட்டு விட்டு வேறு முறையில் உலகப் பொருளா தாரப் போராட்டத்தை ஒழிக்க வழி கண்டுபிடிக்க முடியா மலிருக்கின்றனர். சுற்றிச் சுற்றியும் மார்க்சு கொள்கையை அடிப் படையாகக் கொண்டு தான் பொருளாதாரப் போராட்டத்தை நீக்க முடியும் என்று கருது கின்றனர். இத்தகைய பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம். மார்க்சு பிறப்பு ஜெர்மனி தேசத்தைச் சேர்ந்த நகரங்களில் டிரிவெ என்பது ஒன்று. அந்நகரம் 19ஆம் நூற்றாண்டில் ஒரு சிறிய நகரமாகவே யிருந்தது. ஆயினும் அந்நகர மக்களுக்குள் ஒற்றுமை யில்லாதிருந்தது; ஒருவரோடு ஒருவர் பகை கொண்டு கலகஞ் செய்து கொள்ளுவர்; சமூக வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகள் தலை விரித்தாடிக் கொண்டிருந்தன. அக்காலத்தில் ஜெர்மனி நாட்டு நகரங்கள் இப்பொழுதிருப்பது போலச் சுத்தமாக இருக்கவில்லை. பெரும் பாலும் அசுத்தமாகவேயிருந்தன. மற்ற நகரங்களைப் போலவே டிரிவெ நகரமும் சுகாதாரமற்றதா கவேயிருந்தது. ஆனால் அந்நகர மக்கள் ஆடம்பர வாழ்க்கையில் விருப்பமுடையவரா யிருந்தனர்; மூடப் பழக்க வழக்கங்கள் அவர்களிடம் தாராளமாகக் குடிகொண்டிருந்தன; வீண் சடங்குகள் பலவற்றையும் அவர்கள் குறைவில்லாமல் செய்து வந்தார்கள். இந்த நிலையுள்ள டிரிவெ நகரத்தில்தான் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ந் தேதி மார்க்சு என்னும் பெரியார் பிறந்தார். இவருடைய முழுப் பெயர் காரல் ஹென்றி மார்க்சு என்பதாகும். மார்க்சு பிறந்த குடும்பம் ஒரு யூத குடும்பம். அவருடைய முன்னோர்கள் மத குருமார்களாகவும், மத நூல் ஆராய்ச்சியில் தேர்ந்தவர்களாகவும் இருந்தனர். மார்க்சு குடும்பம் கிறிதவ மதத்தில் சேர்ந்தது மார்க்சின் தகப்பனார் வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தார். மார்க்சுக்கு வயது ஆறு ஆயிற்று; குழந்தைப் பருவம்; இவருடைய தந்தையும் தாயும் யூத மதத்தை விட்டு மாறினார்கள்; புரட்டடாண்ட் கிறிது மதத்தில் சேர்ந்து கொண்டார்கள். இந்த மத மாற்றத்துக்குக் காரணம், யூத மதத்தின் மீது வெறுப்போ, அல்லது கிறிதுவ மதத்தின் மீது அன்போ அல்ல. ஆறு வயதுக் குழந்தையாகவிருந்த காரல் மார்க்சின் எதிர்கால வாழ்வைக் கருதியேயாகும். காரல் ஐரோப்பிய நாகரிகத்தை மேற்கொள்ள வேண்டும்; அதன் மூலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்; என்னும் இந்த எண்ணத்துடன் தான் மதம் மாறியதாகக் கூறுகின்றனர். இந்த மத மாற்றமும் வீண் போக வில்லை. மார்க்சின் கல்வி வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தது. மார்க்சின் பெற்றோர்கள் இவ்வாறு யூத மதத்தை விட்டுக் கிறிதுவ மதத்தை மேற்கொண்டதனால், அவ்வூரில் உள்ள மற்ற யூதர்கள் இவர்களைக் கொஞ்சம் அலட்சியமாகவே கருதினார்கள். ஆயினும் இவர்கள் பரம்பரையாகவே பெருமை யுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களானதால் வெளிப்படையாக இவர்களிடம் யாரும் தங்கள் அலட்சியத்தைக் காட்டிக்கொள்ளு வதில்லை. வெளியில் எப்பொழுதும் போல் பெருமையாகவே மதிக்கப்பட்டு வந்தார்கள். மார்க்சின் கல்விப் பயிற்சி அக்காலத்தில் பொது மக்களால் மிகவும் பெருமையாகக் கொண்டாடப்பட்டு வந்தவர்களில் வான் வெட் போலன் என்பவர் ஒருவர். இவர் பிரிவி கவுன்சிலராகவும், ஒரு பிரஷ்ய உத்தியோகதராகவும் இருந்தார். இவர் ஆங்கிலக் கல்வியில் சிறந்தவர்; ஷேக்பியர், ஹோமர் முதலிய பெரும் புலவர்களின் சிறந்த காவியங்களையெல்லாம் கற்றிருந்தார். இன்னும் அக்காலத்தில் ஜெர்மானிய உத்தியோகதர்கள் கற்றிருக்க வேண்டிய கலைகள் யாவையோ அவைகளில் எல்லாம் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருடைய கல்வி மார்க்சுக்கு மிகவும் பயனளிப்பதாக இருந்தது. இவர் தான் கற்றறிந்த சிறந்த பல விஷயங்களையும், தமது நண்பருடைய குமாரரான மார்க்சுக்கு இளமைப் பருவத்திலேயே கற்பித்து வந்தார். மார்க்சின் தந்தையும் நல்ல படிப்பாளி; தந்தையின் நண்பரான வான் வெட் போலனும் நல்ல படிப்பாளி. ஆகை யால் இவர்கள் இருவருடைய உதவியும் மார்க்சின் இளம் பருவப் படிப்புக்குப் பெருந்துணை செய்தது. இதனால் மார்க்சுக்குப் பள்ளிக் கூடப் படிப்பு மிகவும் எளிதாக இருந்தது; பள்ளிக் கூடத்திலும் நுட்ப புத்தியுள்ள மாணவராக விளங்கினார். காரல் மார்க் தனது 18வது வயதில் பெர்லின் நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். இவர் கல்லூரியில் சேர்ந்த வருஷம் 1836, கல்லூரியில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் தனது பாடங்களையெல்லாம் மிகவும் கருத்துடன் கற்று வந்தார். சரித்திரம், நில நூல், இலக்கியம், கவிதை, தத்தவ சாத்திரம், சட்டநூல் முதலியவைகளை மிகவும் விருப்பத்துடன் படித்தறிந்தார். மற்ற மாணவர்களைப் போல், படித்தவைகளை அப்படியே நம்பும் குணம் மார்க்சினிடம் இல்லை. இவர் கூர்மையான அறிவும், ஆராய்ந்து பார்க்கும் வல்லமையும் உடையவராயிருந்த தால் தான் படித்தவைகளைத் தன் சொந்த அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பார். இதனால் இவருக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் ஒவ்வொரு பாடங்களிலும் சந்தேகங்களும், கருத்து வேற்றுமைகளும் வளர்ந்து கொண்டே வந்தன. அப்பொழுது கல்லூரியிற் போதிக்கும் போதனைகள் எல்லாம் மோசடியான வைகள்; உண்மைக்கு மாறானவைகள் என்றும் கருதினார். இக்காரணத்தால் இவருக்குக் கல்லூரிப் படிப்பில் அவ்வளவு ஊக்கமும், ஆசையும் இல்லாமற் போயிற்று. அக்காலத்தில், பெர்லின் நகரத்தில், ஆடல், பாடல் முதலிய நாகரிகங்கள் மிகுந்திருந்தன. ஆடல் பாடல்களில் ஈடுபடுவது அந்நகர மக்களால் நாகரிகமானதாக எண்ணப்பட்டு வந்தது. இத்தகைய நாகரிகப் போக்கில் நமது மார்க்சும் கலாசாலைப் படிப்புக் காலத்திலேயே கலந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக மார்க்சினிடம் உண்டான ஒரு மாறுதல் குறிப்பிடத் தக்கதாகும். வான் வெட் போலனுக்கு ஒரு பெண் இருந்தாள்; அவள் பெயர் ஜென்னி; மிகுந்த அழகிய தோற்றத்தையுடை யவள்; காரலும் நல்ல தோற்றமுடைய வாலிபர்; இவ்விருவரும் இளம் பருவ முதல் நட்பினர்கள். இவர்களுடைய நட்பு, காதலாக முதிர்ந்து வளர்ந்து கொண்டே சென்றது. இவர் பெர்லின் நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே புதிய கருத்துக்கள் அமைந்த கவிதைகள் எழுதத் தொடங்கினர்; அவர் கருதும் எண்ணங்களை வைத்துச் சிறு கதைகள் எழுதினார். சட்டக் கலையின் தத்துவத்தை 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக எழுதி முடித்தார். இவருடைய கவிதைகளையும், கதைகளையும், நூல்களையும் பார்த்த அவருடைய மிக நெருங்கிய நண்பர்களும் அவைகளை வெறுத்தனர். அவைகளில் அமைந்திருந்த கருத்துக்கள் அவர் களுக்குப் பிடிக்கவில்லை. அக்கருத்துக்கள் மிகவும் தீமையை உண்டாக்கக் கூடியவைகள் என்று வெறுத்தனர்; அளவு கடந்த மமதை கொண்டவர் கூறும் கருத்துக்கள் என்று கடிந்தனர். மார்க்சும் அக்காலத்தில் தான் எழுதியவைகள் சிறிதும் உபயோக மற்றவை என்றே நினைத்தார். ஆதலால் அவைகளையெல்லாம் தூள் தூளாகக் கிழித்து நெருப்பிட்டுக் கொளுத்தினார். இது நடந்த ஓராண்டுக்குப் பிறகு மார்க்சு தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் அழகாகவும், இவருடைய இளமையின் முறுக்கைக் காட்டுவதாகவும் இருந்தது. அக் கடிதத்தில் ஹெக்கல் என்பவரின் தத்துவ சாதிரத்தைப் பற்றியும், அது பற்றித் தனது எண்ணத்தையும் தெளிவாக எழுதியிருந்தார். மார்க்சின் தந்தையார் அக்கடிதத்தைக் கொண்டே மார்க்சின் செய்கையைத் தெரிந்து கொண்டார். அவர் மார்க்சுக்கு எழுதிய பதிலில் இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டு எழுத வேண்டாம்; இதன் மூலம் உடம்பை வீணாகக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு வருந்தி எழுதி எழுதி, எழுதியவைகளையும் கிழித்துக் கொண்டிருப்பதனால் என்ன பயன்? இந்த வீண் வேலை செய்து கொண்டிருப்பதைவிட உடம்பை நன்றாகக் கவனித்துக் கொண்டு குடும்பத்துடன் ஒத்து வாழ்வதே சிறந்ததாகும் என்ற கருத்துக்களை விளக்கமாக எழுதியிருந்தார். ஆனால் மார்க்சு தந்தையின் இந்தப் புத்திமதியை ஒப்புக் கொள்ளவேயில்லை. அவர் ஒருபொழுதும் தனது உடல் நலத்தைக் கவனித்தவரேயல்லர். எப்பொழுதும் ஓயாமல் உழைத்துக் கொண்டேயிருந்தார். அஞ்சத்தக்க வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் மனத் துயரம் அடையக் கூடாது. மனங் குழம்பக் கூடாது. முயற்சியோடும், மிகுந்த ஊக்கத்தோடும் வாழ்க்கைப் போரில் புகுவோம் என்பது இக்காலத்தில் அவர் எழுதிய ஒரு பாடலின் பொருளாகும். இதிலிருந்து அவருடைய மனப்பான்மை எப்படிப்பட்டதென்று தெரிந்து கொள்ளலாம். மார்க்சின் தத்துவ சாதிரப் பயிற்சி இதன்பின் மார்க்சின் தந்தை அதிக காலம் உயிர் வாழ வில்லை. 1838ஆம் ஆண்டில் இறந்து விட்டார். தந்தை இறந்த போது மார்க்சுக்கு வயது இருபதுதான். அவர் ஒரு வக்கீலாக இருந்தும் குடும்பத்திற்கென்று அதிகப் பணம் சேர்த்து வைக்க வில்லை; மார்க்சுக்குப் பெரிய கல்வியறிவையும் புகட்டவில்லை; ஒரு கௌரவமான உத்தியோகப் பதவி பெறுவதற்குப் போது மான கல்வியை மாத்திரமே கற்பித்திருந்தார். காரலும் பொருள் சம்பாதிப்பதற்கு அக்காலத்தில் சாதனமாயிருந்த சட்டக் கல்வியைப் புறக்கணித்தார்; அதில் கவலை காட்டுவதில்லை. ஆனால் அதைத் தவிர மற்ற கல்விகளில் ஊக்கங் கொண்டு கற்று வந்தார். அதிலும் தந்தை இறந்தபின் சட்டப் பயிற்சியில் உள்ள எண்ணத்தையே அடியோடு விட்டு விட்டார். தத்துவ சாதிரங் களைக் கற்பதிலேயே காலத்தைக் கழித்தார். அதுவே அவருக்கு விருப்பமான கல்வியாக இருந்தது. இந்தக் காலத்தில் காரல் மார்க்சுக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்தார்; அவர் பெயர் புருணாபார் என்பது. அவர் தத்துவ சாதிர போதகாசிரியர்; ஆதலால் காரலுக்கும் தத்துவ சாதிரப் பயிற்சியில் மிகுத்த ஊக்கத்தை ஊட்டி ஒத்தாசை பண்ணி தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அதற்கு வேண்டிய கலைகளை யெல்லாம் மிகுந்த முயற்சியுடன் கற்று வந்தார்கள். ஆனால் இவர்களுடைய முயற்சி பலிக்கவில்லை; வீணாயிற்று. மார்க்சு தத்துவ சாதிரத்தை விடாமற் பயின்ற காரணத்தால் 1841 ஆம் வருஷத்தில் டாக்டர் (Ph.D) அதாவது தத்துவ சாதிர நிபுணர் என்ற பட்டம் பெற்றார். இக்காலத்தில் இருந்த பிரஷ்யன் சர்வகலா சாலைகளின் நிலைமை மார்க்சின் கல்விக்கு ஏற்றதாக இல்லை. ஏனெனில் அவர் எதையும் ஆராய்ந்த பின்னரே அதை ஒப்புக் கொள்ளும் குணமுடையவர்; பேசுவதிலும், எழுதுவதிலும் திட்டமான கருத்தை விளக்கும் கடினமான நடையை உபயோகிப்பவர். இத்தகையவர்களுக்கும் அந்தச் சர்வகலா சாலைகளினால் பயனில்லாமலிருந்தது. காரல்மார்க்சு ஹெகல் என்பவரின் தத்துவ சாதிரத்தின் நுட்பமறிந்த நிபுணராயிருந்தார் மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் போதுமான தெளிந்த அறிவுடையவரானார். இன்னும் தனது வாழ்நாளில் கண்டறிந்த பல அனுபவ ஞானங்களையும் உடையவராயிருந்தார். ஹெகல் சாதிரப் பயிற்சியுடையவர் களுக்குள் இவரே சிறந்தவராக விளங்கினார். பத்திரிகைத் தொழிலில் புகுந்தது ஆரம்பத்தில், காரலுக்குச் சர்வகலாசாலை ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் கடைசியில் அது நிறைவேற வில்லை. இதற்குக் காரணம் பிரஷ்யசர்க்காரின் பிற்போக்கான கொள்கையினால் அந்நாட்டுச் சர்வகலாசாலைகள் மார்க் போன்ற அதி தீவிரவாதிகளுக்குப் பயன்படாமலிருந்து வந்ததே யாகும். இதனால் அவர் உயிர் வாழ்க்கையின் பொருட்டுப் பத்திரிக்கைத் தொழிலில் ஈடுபட்டார். அக்காலத்தில் ரைன் மாகாணத்தைச் சேர்ந்த தாராளக் கட்சியினரால் (லிபரல்) ரெனிக் ஜீட்டங் (Rheinische Jeitung) என்ற பத்திரிகை நடத்தப் பட்டு வந்தது. முதலில் காரல் மார்க்சு அப்பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதி யனுப்பிக் கொண்டிருந்தார். பின்னர் 1842ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியில் அமர்ந்தார். இவர் பத்திரிகாசிரியரான பிறகு ஜீட்டங் பத்திரிகைக்கு அதிக செலவாணி ஏற்பட்டுவிட்டது. பலரும் அதை விரும்பிப் படிக்கலானார்கள். பத்திரிகாசிரியர் ஆன பிறகு தேசத்தின் பொருளாதார நிலை, அரசியல் நிலை முதலிய பல விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொண்டார்; பத்திரிக்கைத் தொழிலுக்குப் பள்ளிப் படிப்பு மட்டிலும் போதாதென்றும் அனுபவஞானமும், அவசியமென்றும் உணர்ந்தார். விவசாயிகள் சம்பந்தமாகவும், தொழிலாளர் சம்பந்தமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் இவர் அவ்வப்போது எழுதிய தலையங்கங்கள் மிகவும் சிறந்தன வாயிருந்தன; அவைகள் உயர்ந்த பொருளாதார நுட்பத்தோடும், திறமையான வாதத்தோடும் விளங்கிய சர்க்கார் பத்திரிகையை வெளியிட முடியாதபடி தடுத்து விட்டார்கள். பத்திரிகை நிறுத்தப்பட்டவுடன் காரலும் பத்திரிகை நிலையத்தை விட்டு வெளியேறினார் பிறகு தான் இளம் பருவ முதல் காதலித்து வந்த ஜென்னியை 1843ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மணம் புரிந்து கொண்டார் அப்பொழுது அவருக்கு வயது 25 தான். மார்க்சும் ஏஞ்சல்சும் பிறகு அவர் பாரி நகரஞ் சென்றார். அர்னால்ட்ருஜ் என்ற நண்பருடன் சேர்ந்து, தொடர்ந்து வெளிவரத் தகுந்த மாதிரியில் ஒரு பெரிய பிரசுரம் ஒன்றைப் பதிப்பித்து வெளியிடும் முயற்சியில் தலையிட்டார். அவ்வெளியீட்டின் பெயர் பிரான்சு ஜெர்மன் வருஷ அனுபந்தம் என்பதாகும். இப்பிரசுரம் ஒரே பிரதி தான் வெளியிடப் பட்டது. இதற்குள் பதிப்பாசிரியர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அம்முயற்சி கலைந்து போயிற்று. பிரான்சு ஜெர்மன் வருஷ அனுபந்தம் என்ற பிரசுரத்தில் காரல் மார்க்சின் கட்டுரைகளே ஏராளமாக இருந்தன. மற்றவர் களின் கட்டுரைகளில் பிரடரிக் ஏஞ்சல்சால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை விளங்கிற்று. ஏஞ்சல் ஒரு ஜெர்மன் வாலிபர்; அவர் அப்பொழுது மாஞ்செடரில் வசித்துக் கொண்டிருந்தார். மார்க்சு ஜீடங் பத்திரிகை காரியாலயத்தில் இருக்கும் போது ஒருமுறை ஏஞ்சல்சைச் சந்தித்திருக்கிறார். அப்பொழுது அவரைப் பற்றி மார்க்சுக்கு நல்லெண்ணமில்லை. அவரை ஒரு மனோராஜ்யக் காரராகவே நினைத்திருந்தார். ஆனால் இப்பொழுது அவருடைய கட்டுரையைப் படித்த பின் அவரிடத்தில் அன்பும் நன் மதிப்பும் கொண்டார். 1843 ஆம் ஆண்டிலேயே இரண்டாம் முறை மார்க்சும் ஏஞ்சலும் பாரிசில் சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பு அவர்களை இணைபிரியாத தோழர்களாக்கி விட்டது; ஒருவரை யொருவர் நன்றாகத் தெரிந்து கொண்டார்கள்; பூவும் மணமும் போல் கூட்டாளியானார்கள். ஏஞ்சல் மார்க்சை போல் அவ்வளவு படிப்புடையவர் அல்லர்; ஆயினும் தெளிந்த அனுபவ அறிவுடையவர்; குற்றமற்ற மனமுடையவர்; அவர் கூறும் அபிப்பிராயங்கள் தெளிவாக இருக்கும்; நன்றாகப் பரிசீலனை செய்து முடிவுகட்டப் பட்டதாக இருக்கும்.செயலில் நடத்திக் காட்டக் கூடியதாக இருக்கும். இத்தகைய சிறந்த நட்பாளர் கிடைத்திருக்காவிட்டால் மார்க்சு சிறந்த நூல்களை வெளியிட்டிருக்க முடியாது. இருவரும் சேர்ந்து அப்பொழுது பல பத்திரிகைகளுக்கும் சிறந்த கட்டுரைகள் எழுதி வந்தார்கள். மார்க்சு ஏஞ்சல் ஆகிய இருவரும், சமதர்மத்திற்கு விரோத மாயிருப்பவர்களைக் கண்டித்துக் கொண்டு வந்தனர். இவர்களுடைய கண்டனத்தில் சரியான வாதங்கள் அடங் கியிருந்தன. இவர்களுடைய பழைய நண்பர்கள் பலர் இவர் களுடைய கொள்கைகளை எதிர்ப் பவர்களாயிருந்தனர். அந்த நண்பர்களுடைய கொள்கைகளையும் தயவு தாட்சண்யமின்றிக் கண்டித்துப் புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதி வந்தனர். ஏஞ்சல் தொழிலாளர் இயக்கத்தில் சேருதல் ஏஞ்சல்சின் தந்தையார் எர்மன் அண்டு ஏஞ்சல் என்னும் ஒரு தொழிற்சாலையை வைத்து நடத்தி வந்தார். இத்தொழிற்சாலை மாஞ்செடரில் நடைபெற்று வந்தது. அதில் ஏஞ்சல் ஏஜெண்டாக இருந்தார். இதனால் முதலாளி, தொழிலாளி ஆகிய இரு திறந்தாரின் இயல்புகளைப் பற்றியும் நன்றாய் அனுபவத்தில் அறியக் கூடிய வசதி ஏஞ்சல்சுக்கு இருந்தது. இங்கிலாந்தில் தொழிலாள வகுப்பாரின் நிலைமை என்ற நூலை மார்க்சு எழுதுவதற்கு ஏஞ்சல்சின் அனுபவ அறிவே மிக்க உதவி செய்தது. ஏஞ்சல் தொழிலாளர் இயக்கத்தில் அளவுகடந்த அனுதாப முடையவராயிருந்தார். அவர் பார்மென் நகரில் உள்ள தன் தந்தையிடஞ் சென்று, தான் இனி தொழிற்சாலையைக் கவனிக்க முடியாதென்று கூறி வீட்டை விட்டு வெளியேறி பிரான் நகருக்கு வந்து சேர்ந்தார். இதற்குள் ஜெர்மன் அரசாங்கத்தாரின் வேண்டுகோளால், பிரான்சு அரசாங்கத்தார் மார்க்சையும் அவருடைய கூட்டுத் தோழர்களையும் வெளியேற்றி விட்டார்கள். மார்க்சும், ஏஞ்சல்சும் தொழிலாளர் சங்கத்தில் சேர்தல் 1845 ஆம் வருஷத்தில் பிரான்சு அரசாங்கத்தார் தம்மை நாட்டை விட்டு வெளியேற்றிய காரணத்தால் மார்க்சு பிரசல் நகரத்திற்கு வந்து சேர்ந்தார். ஏஞ்சல்சும் அவருடன் கூடவே வந்து சேர்ந்தார். இங்கு இவர்கள் சும்மா விருக்கவில்லை. தொழிலாளர் நன்மைக்காக மிகவும் மும்முரமாகப் பாடுபடத் தொடங்கினார்கள்; அவர்களுடன் நெருங்கிய சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசெல்சி லேயே ஒரு ஜெர்மன் தொழிலாளர் நிலையத்தை நிறுவினார்கள். அந்த நிலையத்தின் மூலம் ஒரு சிறு பத்திரிகையையும் தொடங்கி நடத்தினார்கள். இவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்திருந்தார்கள். அப்பொழுது ஒரு மறைமுகமான சமதர்மச் சங்கம் இருந்தது. அதன் கிளைச் சங்கங்கள் பல ஐரோப்பிய நகரங்களிலும் மறைமுகமாக நிறுவப் பட்டு மறைமுகமாகவே வேலைசெய்து கொண்டு வந்தன. இந்த இரகசியச் சங்கத்திலும் மார்க்சும், ஏஞ்சல்சும் உறுப்பினர்களாகி வேலை செய்து கொண்டு வந்தனர். புர்தான் என்பவரின் கர்வத்தை அடக்குதல் அக்காலத்தில் புர்தான் என்னும் பெயருடைய ஒரு தொழிலாளர் இருந்தார். இவர் தாமே கல்வி கற்றவர்; மிகுந்த திறமைசாலி; சர்வாதிகாரித்துவமற்ற ஒரு கூட்டுறவு அரசாங்கம் இருக்க வேண்டும் என்னும் திட்டத்தை ஒப்புக்கொள்ளுபவர். இவர் சொத்து என்பது என்ன? - சொத்து என்பது கொள்ளை என்ற பெயருடன் முதல் முதலாக ஒரு புத்தகம் எழுதினார். இந்நூல் மிகவும் சிறந்ததென்று பலராலும் கொண்டாடப் பட்டது; இதனால் புர்தானையும் பலர் புகழ்வாராயினர். இப்புகழ்ச்சியால் தனக்கு யாரும் நிகரில்லை. தானே சிறந்த அறிவாளி என்று புர்தான் கர்வங் கொண்டிருந்தார். இவ்விஷயம் மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. இதன் பின்னர் வறுமையின் தத்துவம் என்னும் பெயருடைய மற்றொரு நூலைப் புர்தான் எழுதி முடித்தார். இந்நூலை மிகவும் மரியாதையுடன் மார்க்சுக்கு அனுப்பினார்; அதை ஆராய்ந்து அபிப்பிராயம் கூறும்படியும் கேட்டிருந்தார். இது போன்ற ஒரு சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மார்க்சுக்கு இது மிகுந்த ஊக்கத்தையளித்தது. உடனே மார்க்சு புர்தானுடைய வாதங் களை மறுத்து எழுதினார்; புர்தான் எழுதியவை முழுவதும் பொருத்தமற்றவை; உண்மை யற்றவை; குற்றமுள்ளவை; தெளிவற்றவை என்று அக்காலத்தில் உள்ளவர் நம்பும்படி அவ்வளவு திறமையாக மறுத்துரைத்தார். இதனால் புர்தான் மிக்க வெட்கமடைந்தார். இப்பொழுதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளி வந்த பையன் என்னைத் தோல்வி யடையச் செய்து விட்டான் என்பதை அவர் இறக்கும் வரையிலும் மறக்கவேயில்லை. சமதர்ம அறிக்கை இதன்பின் மார்க்சும் ஏஞ்சல்சும் சேர்ந்து சமதர்ம அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அவ்வறிக்கையில் சமதர்மம் தோன்றிய வரலாற்றைப் பற்றியும், முதலாளி, தொழிலாளர் போராட்டத்தைப் பற்றியும், இனி சமதர்மக்காரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கமாக வெளியிட்டிருந் தார்கள். அந்தச் சமதர்ம அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொருள் இதுவாகும்; மனிதர்களின் சரித்திரம் எப்பொழுதும் வகுப்புப் போராட்டத்தின் சரித்திரமாகவேயிருக்கிறது. முன்பு அரசனை நீக்கிப் பிரபுக்கள் அரசாட்சி செய்தார்கள். இப்பொழுது பிரபுக் களை நீக்கி முதலாளிகள் அரசாளுகிறார்கள். முற்காலங்களில் சிறிய பிரபுக்கள் பெரிய பிரபுக்களோடு போராடியிருக்கலாம். ஆனால் இப்பொழுது தொழிலாளிகள் முதலாளிகளோடு சண்டை பிடிக்கிறார்கள். ஜன சமூகத்தை இரண்டு திட்டமான பிரிவாகப் பிரித்து விடலாம். ஒன்று முதலாளிகள் கூட்டம்; மற்றொன்று தொழிலாளர்கள் கூட்டம். முதலாளிகள் பல தேசங்களில் உள்ள செல்வங்களையும் கைப்பற்றி உயர்ந்த நிலையை அடைந்துவிட்டார்கள். ஏழைகள் ஒரு புறம் மேலோங்கி வருகிறார்கள். இதனால் இருவருக்கும் தெளிவான வித்தியாசம் உண்டாகி விட்டது. முதலாளிகள் தொழிற்சாலைகளை உண்டாக்கிய காரணத்தால் ஒரு புதிய கூட்டம் கிளம்பிற்று; இதற்குத்தான் தொழிலாளர் கூட்டம் என்று பெயர். இக்கூட்டம் உண்டாகும் என்பது முதலாளிகள் எதிர்பாராத விஷயமாகும். இக்கூட்டத்திற்கு முதலாளிகள் பயப்படுகிறார்கள். இத்தொழிலாளர் கூட்டத்தால் தான் சமதர்மம் உண்டாகும். பணக்காரர்களுக்குப் பணம் அதிகரித்து அவர்கள் மேலும் பெரிய பணக்காரர்களாக ஆகும்போது சின்ன முதலாளிகள் எல்லாம் தொழிலாளர்களாகி விடுவார்கள். இவ்வாறு தேசத்தின் முழுச் செல்வமும் சிலர் கையில் போய்ச் சேர்ந்துவிடும். இதனால் தொழிலாளர் கூட்டம் பெருகிக் கொண்டே வருகின்றது. ஆகையால் சிறிய கூட்டத்தாரான பெரிய பணக்காரர்கள் ஒரு புறமும், பெரிய கூட்டத்தாரான ஏழை மக்கள் ஒருபுறமும் நின்று தங்கள் நன்மைக்கு வாதாடக் கூடியவர்களாகி விட்டார்கள். தொழிலாளர்கள் செய்யும் போராட்டம் படிப்படியாக வளர்ந்து வருகிறது. முதலில் ஒவ்வொரு தொழிலாளியும் தன்தன் குறைகளை முதலாளிகளுக்கு எடுத்துக்காட்டி அவை களை நீக்குமாறு வாதாடுகிறான். இதில் வெற்றி கிடைக்காத போது ஒரு தொழிற்சாலையில் உள்ள எல்லாத் தொழிலாளர் களும் ஒன்று சேர்ந்து போர் செய்கிறார்கள். இதன் பின் எல்லாத் தொழிலாளர் களும் ஒன்று கூடி அரசாங்கத்தையே தங்களுடைய அரசாங்கமாக்க முன் வருகிறார்கள். இதற்கு விவசாயிகளின் உதவியும் தொழிலாளர்களுக்கு அவசியமானதாகும். தொழிலாளர் அரசாங்கம் வந்த பிறகு எல்லோருக்கும் சம சுதந்திரம் கொடுத்து விடுவார்கள். தொழிலாளர்கள் மற்ற எல்லோரையும்விட ஏழைகளாயிருப்பதால் மற்றவர்களுடைய சொத்துக்களைத் தாங்கள் கொள்ளையடித்துக் கொண்டு விட வேண்டும் என்று எண்ணமாட்டார்கள். ஆகையால் தொழி லாளர்கள் வெற்றி பெற்றால் தான் சமதர்மம் ஏற்படமுடியும். இந்த அறிக்கை அவ்வளவு உற்சாகமாகப் பொதுமக்களால் வரவேற்கப்படவில்லை; ஆயினும் நாளடைவில் மக்கள் மனத்தில் இதன் உண்மை படிந்து ஓங்கி வளர்ந்து வந்தது. இக்காலத்தில் ஐரோப்பாவில் பலவித மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே வந்தன. பிற்போக்கான நிலையிலிருந்த சிறுசிறு கிராமங்களில் கூட மாறுதல் ஏற்பட்டன. நெசவுத் தொழிற் சாலைகள், சுரங்கத் தொழிற்சாலைகள், கைத்தொழிற் சாலைகள் முதலியன வளர்ச்சியடைந்தன. இத்தொழிற்சாலைகள் ஏராளமான தொழிலாளர்களைப் பெருக்கின. இத்தொழிலாளர் கள் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் - பொருளின்றி வறுமையால் வாடி வதங்கினர். ஆனால் இத்தொழிற்சாலை முதலாளிகளிடம் ஏராளமான செல்வங்கள் குவிந்து கிடந்தன. இச்செல்வங்களால் ஜன சமுதாயத்திற்கு எள்ளளவும் பயன் உண்டாகவில்லை. ஏழை மக்களும், தொழிலாளர்களும், முதலாளிகளிடமும், அதிகாரிகளிடமும் சுரர்களிடமும் அகப் பட்டு நசுக்குண்டு கிடந்தனர். பிரான்சில் புரட்சி இந்த நிலையில் 1848ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாரிசில் (பிரஞ்சு தேசத் தலைநகரம்) ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டது. அப்பொழுது இருந்த அரசர் லூயி பிலிப் என்பவர். இக்காலத்தில் அடிக்கடி பொருளாதார நெருக்கடியில் மக்கள் துன்பமடைந்தனர். தொழிலாளர்களும், கூலி வேலைக்காரர் களும் வறுமையால் வருந்திக் கிடந்தனர். தங்கள் கஷ்டத்தைத் தீர்க்க அரசாங்கம் முன் வராமையால் ஆத்திரங் கொண்டிருந்தனர். இந்த வேளையில் அரசியல் சம்மந்தமான விருந்தொன்றை நடக்க வொட்டாமல் அரசன் தடுத்து விட்டான். இந்தச் சந்தர்ப்பத்தை ஆத்திரங் கொண்டிருந்த மக்கள் நழுவவிடாமல் போர் தொடுத்து விட்டார்கள்; ஜனங்களுக்கும், அரசாங்கச் சிப்பாய்களுக்கும் நேரடியாகப் போர் நடந்தது. கடைசியில் ஒரே நாளில் அரசனும் அவனைச் சேர்ந்தவர்களும் நாட்டைவிட்டு விரட்டப் பட்டார்கள். இதனால் பொது ஜனங்களுக்கு உண்டான மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் அளவில்லை. கடைசியாகப் பல திறப்பட்ட கொள்கையினரும் அடங்கிய ஒரு கூட்டுறவு அரசு நிறுவப்பட்டது. இந்த விஷயம் ஐரோப்பா முழுவதும் பரவியதும் ஒவ்வொரு நாடுகளிலும் புரட்சிகள் உண்டாயின. அரசாங்க அமைப்புகளில் மாறுதல் ஏற்பட்டன. சர்வாதிகார ஆட்சிமுறை குறைந்தது. ஜன நாயக ஆட்சிமுறைக்கு அடிகோலப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் மார்க்சு கூட்டத்தாருக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்தன. மார்க்சு இங்கிலாந்தையடைதல் இக்காலத்தில் மார்க்சு சும்மா இருக்கவில்லை. மார்க்சும் ஏஞ்சல்சும் ஐரோப்பா முழுவதும் சுற்றித் திரிந்து கொள்கை களைப் பரவச்செய்து வந்தார்கள். பிறகு மார்க்சு கலோன் நகரத்திற்குப் போய் ஒருபத்திரிகை நடத்தத் தொடங்கினார். இவரால் நடத்தப்பட்ட தினசரிப் பத்திரிகை மிகவும் பிரசித்தி பெற்றதாகிவிட்டது. அக்காலத்தி லிருந்த எல்லாப் பத்திரிகைகளையும் விட இது ஒவ்வொரு விஷயத்திலும் காரியத்தில் செய்து முடிக்கக் கூடிய சிறந்த யோசனைகளைத் தெளிவாக எழுதி வந்தது. இதனாலேயே பத்திரிகைக்கு அதிக மதிப்பிருந்தது. இச்சமயத்தில் பிரஷ்ய அரசாங்கத்திலிருந்த தேசீய சபை கலைக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக மார்க்சு வரிகொடா இயக்கம் ஒன்றைக் கிளப்பினார்; ஆயுத பலங்கொண்டு அரசாங்கத்தை எதிர்க்கும் படியும் பத்திரிகை மூலம் எழுதினார். இதனால் 1849 ஆம் ஆண்டில் இவர் மீது வழக்கு ஏற்பட்டது. இவ்வழக்கு ஒரு தனி நீதி மன்றத்தார் மூலம் விசாரிக்கப்பட்டுக் குற்றவாளி அல்லர் என்று விடுதலை பெற்றார். ஜுரிகள் இவர் குற்றவாளி அல்லர் என்று அபிப்ராயப்பட்டதே விடுதலைக்குக் காரணமாகும். ஆயினும் இவர் பிரஷ்யாவை விட்டு வெளியேற்றப்பட்டார்; அங்கிருந்து பிரான் தேசத்திற்குச் சென்றார். அங்கிருந்தும் விரட்டப்பட்டார்; பிறகு அக்காலத்தில் புரட்சிக்காரர்களுக்கும், ராஜத்துவேஷிகளுக்கும் புகலிடமாக இருந்த இங்கிலாந்து தேசத்தை அடைந்தார். மார்க்சின் வறுமை இக்காலத்தில் மார்க்சு மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தார். இங்கிலாந்தில் ஒரு சிறிய வீட்டில் தானும் மனைவியும் குடியிருந்தார்கள். கையில் வைத்திருந்த பொருள் முழுவதும் செலவாகிவிட்டது. வேறு வருவாய்க்கும் வழிஇல்லை. கடைசியாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டிரிபியூன் என்ற பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இதன் மூலம் கிடைத்த குறைந்த வருவாயைக் கொண்டு குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார். இவருக்கு ஆங்கிலம் அதிகமாகத் தெரியாது. ஆயினும் சில மாதங்களில் நன்றாக ஆங்கிலம் எழுதக் கற்றுக் கொண்டார். இவருடைய ஆறு குழந்தைகளில் வறுமையின் காரணமாக மூன்று குழந்தைகளே உயிரோடிருந்தன. மனைவி உடல் நலமின்றி வருந்திக் கொண்டிருந்தாள். இந்நிலையிலும் இவரை முதலாளிகள் சும்மாவிடவில்லை. அவர் ஒரு அறிக்கையை எழுதுவதற்குக் காகிதமில்லாததால் தனது ஒரே ஒரு ஓவர் கோட்டை அடகு வைக்கும்படி நேர்ந்தது. அவருடைய ஒரு குழந்தை இறந்த போது அதை அடக்கஞ் செய்ய இரண்டு பவுன் கடன் வாங்கும்படி நேர்ந்தது. இந்தக் கஷ்டங்களையெல்லாம் பார்த்து அவருடைய மனைவி நானும் என்னுடைய குழந்தைகளும் இறந்து விட்டால் உங்களுக்கு கஷ்டம் இருக்காது என்று கூறுவாராம். ஏஞ்சல்சின் உதவி வறுமை காரணமாக மார்க்சு ஏஞ்சல்சின் உதவியை நாட வேண்டியிருந்தது. ஏஞ்சல்சும் தன்னால் இயன்ற வரையிலும் உதவி செய்து வந்தார்; மார்க்சுக்காகக் கட்டுரைகளும் எழுதிக் கொடுத்து வந்தார். ஆயினும் ஏஞ்சல்சுக்கும் சரியான வருமான மில்லை. தந்தையார் ஒரு முதலாளியாக இருந்தமையால் இவருடைய செய்கையை வெறுத்தார்; பணவுதவி செய்யவும் மறுத்தார். ஏஞ்சல் தனது புரட்சிக் கொள்கைகளைவிட்டு விட்டுத் தந்தையின் எண்ணப்படி வியாபாரத்தையும் கவனித்தால் தான் தந்தையின் செல்வத்திற்கு உரியவராக முடியும். இதனால் ஏஞ்சல்சும் தன்னுடைய நிலைமையையும் தன்னுடைய நண்பர் களின் நிலைமையையும் நன்றாக ஆலோசித்துப் பார்த்தார். தந்தைக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு வழியில்லையென்று கண்டார். ஆகவே தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைப்படி மான்செடார் நகருக்குச் சென்று அவரது தொழில் நிலைய வேலையை ஒப்புக்கொண்டார். இவ்வாறு புரட்சிக்காரராயிருந்த ஏஞ்சல் வறுமையைக் கருதி முதலாளியாகி விட்டார். இருபது ஆண்டுகள் வரையிலும் மார்க்சு ஏஞ்சல்சும் ஒருவரோடு ஒருவர் சேரவேயில்லை. ஆயினும் இருவருக்கும் கடிதப் போக்குவரத்து மாத்திரம் தவறாமல் நடை பெற்று வந்தது. ஆயினும் மார்க்சின் வறுமை முற்றும் ஒழிந்த பாடில்லை. ஏஞ்சல்சின் தந்தையார் 1860இல் இறந்து விட்டார். இதன் பின் அவர் மார்க்சுக்குத் தாராளமாகப் பணவுதவி செய்து வந்தார். பின்னர் ஏஞ்சல் தனது வியாபாரப் பங்கை விலைக்கு விற்று விட்டார். இதனால் ஏராளமான பணம் கிடைத்தது. இப்பணத்தைக் கொண்டு ஏஞ்சல் புரட்சிக் கொள்கைகளுக்கு உதவி வந்தார். மார்க்சுக்கும் வருஷம் 350 பவுன் வீதம் உதவி செய்து வந்தார். லண்டனில் மார்க்சு வறுமையோடு வாழ்ந்தாலுங் கூட அவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியேயில்லையென்று சொல்லி விட முடியாது. அவருடைய மனைவியும் குழந்தைகளும் அவரிடம் அளவு கடந்த அன்புடன் நடந்து கொண்டனர். தொழிலாளர்களும் இவருடைய சிறந்த அறிவுரைகளைக் கேட்டு அவைகளுக்கு மதிப்புக் கொடுத்து வந்தார்கள்; அவரிடம் அன்பும் பாராட்டி வந்தார்கள். நாளடைவில் இவருடைய புகழ் எங்கும் பரவவே வெளி நாடுகளிலிருந்தும் பலர் வந்து அவரைக் கண்டு உரையாடிச் சென்று கொண்டிருந்தார்கள். இவைகளால் மார்க்சும் மனமகிழ்ச்சியடைந் திருந்தார். இவர் இங்கிலாந்திலிருந்த காலத்தில் எழுதிய விஷயங்கள் இக்காலத்தில் உற்சா க மூட்டத்தக்கவையல்ல வாயினும் அக்கால அரசியல் நிலைமையில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு வந்தன. இவர் எழுதி வந்த கட்டுரைகள், பத்திரிகா சிரியர்களாலும் அரசியல் வாதிகளாலும் நன்கு கவனிக்கக் கூடியனவாயிருந்து வந்தன. 1859இல் மார்க்சு ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இதில் முதலாளித்துவத்திற்கு எதிரான பொருளாதார உண்மை களைப் பற்றி எழுதியிருந்தார். இக்காலத்தில் டார்வின் அவர்களால் எழுதப்பட்ட உயிர் வகைகளின் ஆரம்பம் (Origin of species) என்ற புத்தகம் வெளி வந்தது. இந்த இரண்டு புத்தகங்களும் அக்காலத்திருந்த அறிவாளி களின் கவனத்தை இழுத்தன. ஆயினும் மார்க்சால் எழுதப்பட்ட புத்தகம் அதிகமாகப் பரவவில்லை. பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து இப்புத்தகம் மூலதனம் (Capital) என்ற புத்தகத்தின் முதற்பாகமாக வெளிவந்தது. மூலதனத்தின் மற்ற இரண்டு பாகங்களும் மார்க்சு இறந்த பின், 1867ஆம் ஆண்டில் ஏஞ்சல் சால் வெளியிடப்பட்டன. மார்க்சால் எழுதப்பட்ட மூலதனம் என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் வருமாறு:- முற்காலத்தில் குடியானவர்களை அடிமைகளாக வைத்திருந்தது போல் இக்காலத்தில் தொழிலாளிகளை அடிமைப் படுத்தி வைத்திருக்க முடியாது. தொழிலாளிக்குச் சுதந்திரம் உண்டு; ஆனால் அவன் தன்னுடைய சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை; அனுபவிக்க முயன்றால் பட்டினி கிடக்க வேண்டியது தான். ஆதலால் அவன்தன் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியாமல் குறைந்த கூலியை ஒப்புக் கொள்ள வேண்டியவனா யிருக்கிறான். இவ்வாறு தன் சுதந்திரத்தை விற்று விட்ட பிறகு அவன் முதலாளியின் அடிமையாகி விடுகிறான். அவன் மனிதனாகக் கருதப்படாமல் ஆடுமாடுகளைப் போலவே கருதப்படுகிறான். ஒரு மனிதனைத் தனது கூலியாளாக நியமித்துக் கொண்ட பின் அவனை அந்த முதலாளி மனிதனாகவே கருதுவதில்லை. ஆனால் அந்தக் கூலியாள் தன் உடம்பைக் கசக்கிப் பிழிந்து செய்யும் வேலையால் தான் முதலாளியின் காரியங்கள் நடக்க வேண்டியிருக்கின்றன; இருந்தும் அவனுடைய உணர்ச்சிகளைப் பற்றியோ, உரிமையைப் பற்றியோ முதலாளி கவனிப்பதே யில்லை. சொத்துள்ளவன் கூலியாட்களை ஏற்படுத்திக் கொள்ளு கிறான்; அவர்களைக் கொண்டு தன்னுடைய சொத்துக்களைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்கிறான். இதன் பொருட்டுத் தொழிலாளர்களை அதிக வேலை செய்யும்படி கட்டாயப் படுத்துகிறான். 8 அணா சம்பாதிக்க ஒரு தொழிலாளி 2 மணி நேரம் வேலை செய்வதாக வைத்துக் கொண்டால், முதலாளி அவனிடம் 8 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டு 8 அணா கொடுக்கிறான். இவ்வாறு தொழிலாளி 8 மணி நேரம் வேலை செய்வது 9 அணா கூலிக்காக அல்ல; முதலாளியின் சொத்தைப் பெருக்குவதற்கே யாகும். இந்த விஷயம் தொழிலாளர்களுக்குத் தெரியாததல்ல. அவர்களுக்குத் தெரிந்தது தான். ஆனால் அவர்கள் பிழைப் பதற்கு வேறு வழியில்லை. ஒரு முதலாளியை விட்டு மற்றொரு முதலாளியிடம் வேலைக்குப் போனால் அவனும் குறைந்த கூலிக்குத் தான் வேலை செய்யச் சொல்லுகிறான். ஆகையால் தொழிலாளியோ, அல்லது விவசாயியோ உணவின்றிப் பட்டினி கிடந்து இறப்பதற்குப் பதிலாகக் குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். உலகில் உள்ள தொழிற்சாலைகள் எல்லாம் பணக்காரர் களுக்கு மேலும் மேலும் பணத்தைப் பெருக்கிக் கொடுக்கவே ஏற்பட்டுள்ளன; ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கிப் பணக்காரர்களைப் பெருக்க வைக்கின்றன. அவைகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ, தேடிக் கொடுக்கவோ ஏற்பட்ட வையல்ல. ஏழைத் தொழிலாளியின் நிலைமையை விட முதலாளி யின் நிலைமை உறுதியாகவும் அசைக்க முடியாததாகவும் இருக்கின்றது. இதனாலேயே தொழிலாளி பயமுடையவனாய் குறைந்த கூலி பெற்று வருந்தியுழைக்கின்றான். இந்நிலைமை தனிப்பட்ட ஒரு முதலாளியின் ஆசையாலோ அல்லது மோசத்தினாலே உண்டானதல்ல. உண்மையில் யாரேனும் ஒரு முதலாளி சரியான கூலி கொடுக்க முயன்றாலும் முடிவதில்லை. இந்தக் குறையும் எந்தத் தனிப்பட்ட மனிதரின் குறையும் அல்ல. இவையெல்லாம் பொது வாக முதலாளித்துவ சமூகத்தினால் ஏற்பட்ட குறையேயாகும். முடியுமானால் 24 மணி நேரமும் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று முதலாளிகள் கூறுவார்கள். ஆனால் இவ்வாறு செய்தால் தொழிலாளர்கள் எல்லாம் இறந்து போய் விட்டால் மேலும் மேலும் பணம் திரட்ட முடியாது; இதனால் தங்களுக்கே நஷ்டம் உண்டாகும் என்பதை முதலாளிகள் அறிந்திருக்கிறார்கள். ஆகையால் இரவில் வேலை வாங்காமல் விட்டு விடுகிறார்கள். தொழிலாளிகளின் உழைப்பால் மட்டிலும் கிடைக்கும் பணம் போதாதென்று இயந்திரங்களையும் கையாளுகிறார்கள்; இதனால் முதலாளிகளின் வருமானம் மிகப் பெருகிக் கொண்டு வருகிறது. இவ்வாறு முதலாளிகளிடம் பணம் பெருகப் பெருக ஏழைகளின் கூட்டமும் பெருகிக் கொண்டே போகிறது. பணத்தைப் பெருக்குவதற்கும் ஓர் அளவு வேண்டும். முதலாளிகள் ஏழைகளின் பொருள்களைச் சுரண்டிக் கொண்டு தங்கள் செல்வத்தை மாத்திரம் பெருக்கிக் கொண்டே போவார்களானால் இறுதியில் தங்களுக்கே ஆபத்தாக முடியும். ஏழைகள் பொருள்களை வாங்கக் கூடிய சக்தியில்லா திருப்பார்களானால் முதலாளிகளுக்கு லாபம் இல்லை. அவர்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்கு அதிக லாபங் கிடைக்காது. ஆகையால் முதலாளிகளுக்குச் செல்வம் பெருகப் பெருக லாபம் குறைகிறது. பெரிய தொழிற்சாலைகள் உண்டாவதனால் பல தொழி லாளிகள் ஓரிடத்தில் கூடுகிறார்கள். ஒற்றுமை உண்டாகிறது. இவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வதனால் ஒன்று கூடி முதலாளிகளுடன் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம் அதிகரிக்க முதலாளி தொழிலாளி வகுப்புப் போராட்டம் தோன்றி விடுகிறது. இவைகள் தான் மூலதனம் என்னும் புத்தகத்தில் உள்ள முக்கிய கருத்துக்கள். 1864-ஆம் ஆண்டில் லண்டன் மாநகரத்தில் ஒரு தொழி லாளர் மகாநாடு நடைபெற்றது. அதற்குப் பாரி நகரத்துத் தொழிலாளர்களும், இத்தாலி தேசத்துத் தொழிலாளர்களும், ஜெர்மனி தேசத்துத் தொழிலாளர்களும் வந்திருந்தார்கள். இக்கூட்டத்திற்கு மார்க்சும் போயிருந்தார். இக்கூட்டத்தில் அகில உலகத் தொழிலாளர் சங்கம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தின் வேலைகளை நடத்த ஒரு சிறிய சபையும் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சபையில் மார்க்சும் உறுப்பினராக இருந்தார். இந்தச் சங்கத்தின் சட்ட திட்டங்களை யெல்லாம் மார்க்சே எழுதி முடித்தார். அந்த மகாநாட்டில் மார்க்சு பேசிய பேச்சு மிகவும் சிறந்தது. அப்பேச்சில் அக்காலத்தில் இருந்த தொழிலாளர்களின் துன்பங் களையும், குறைகளையும் தெளிவாக விளக்கிக் கூறியிருக் கின்றார். இவர் விஷயங்களை எடுத்து விளக்கிய திறமையைக் கண்டு இவரையே அகில உலகத் தொழிலாளர் சங்கத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். இவருடைய முயற்சியினால் பல தொழிலாளர், சங்கங்கள் இந்த உலகத் தொழிலாளர் சங்கத்தோடு இணைக்கப் பட்டன. ஆயினும் தொழிலாளர் தலைவர்களுக்குள் பொறாமையும் விரோதமும் வளர்ந்து கொண்டே வந்தன. 1866ஆம் ஆண்டில் ஜினிவாவில் ஒரு மகாநாடு கூடிற்று. தொழிலாளர்களுக்குள் சச்சரவு நேரும் என்றும், அதனால் தொழிலாளர் கூட்டத்திற்கு அவமானம் உண்டாகும் என்றும் பயந்துகொண்டு மார்க்சு அந்த மகாநாட்டுக்குச் செல்லவில்லை. ஆனால் அந்த மகாநாட்டில் அப்படி யொன்றும் நடக்கவிலை. மிகவும் அமைதியாக மகாநாடு நடந்தது; தொழிலாளர் நன்மைக்கான பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதன் பிறகு அகில உலகத் தொழிலாளர் சங்கம் பலமடைந்தது; புகழும்பெற்றது. உலகத்தில் உள்ள பெரியவர்கள் எல்லாம் அச்சங்கத்தின் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங் கினார்கள்; அது சம்பந்தமாக வெளிவரும் செய்திகளையும் விடாமற் படிக்க ஆரம்பித்தார்கள். இக்காலத்தில் தான் ஜெர்மனி தேசத்துக்கும் பிரான்சு தேசத் துக்கும் போர் நடந்தது. இந்தப் போர் முடிந்த பிறகு பாரி நகரத் தொழிலாளர்கள் பாரி கம்யுன், ஏற்படுத்தினார்கள். தொழிலாளர் களின் அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும்; தொழிலாளர்கள் அரசாங்கம் ஏற்பட்டால் தான் ஏழைகளின் துன்பம் நீங்கும்; என்று பாரி கம்யுன் ஏற்பட்ட பிறகு மார்க்சு தெரிந்து கொண்டார். அதனால் சில முக்கிய தொழிலாளர் தலைவர்களை மார்க்சு லண்டனுக்கு வரவழைத்தார். அவர்களுடன் இது பற்றி ஆலோசனை செய்தார். இவ்வாலோசனையின் பயனாக, தொழிலாளர்கள் அரசியல் துறையில் இறங்கி வேலை செய்ய வேண்டும்; அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இந்தத் தீர்மானத்தைத் தொழிலாளர் தலைவர்கள் பலர் எதிர்த்தனர். இச்சமயத்தில் 1872ஆம் ஆண்டில் ஹேக் நகரத்தில் ஒரு தொழிலாளர் மகாநாடு கூடிற்று. அந்த மகாநாட்டில் மார்க்சின் கொள்கை வெற்றி பெற்றது. ஆயினும் தொழிலாளர்களுக்குள்ளிருந்த பகைமை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வந்தது. முதன் முதலில் தொழிலாளர் அரசாங்கத்தை ஏற்படுத்த முயன்றவர்கள் பிரான்சு தேசத் தொழிலாளர்களேயாவார்கள். பாரி நகரில் உள்ள தொழிலாளர்கள், 1871 ஆம் வருஷத்தில் தங்கள் அரசாங்கத்தின் கொடுமை தாங்க முடியாமலும் முதலாளிகளின் கொடுமையைப் பொறுக்க முடியாமலும் போர் செய்து பாரிசைக் கைப்பற்றி விட்டார்கள். அவர்கள் அரசாங்கத் தைக் கைப்பற்றியவுடன் கீழ்கண்ட சட்டங்களைச் செய்தார்கள். 1. மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள். 2. மதத்துக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை. 3. மததாபனங்களுக்கு அரசாங்கத்திலிருந்து கொடுக்கப் பட்டு வந்த பணவுதவி நிறுத்தப்படும். 4. எல்லாப் பிள்ளைகளுக்கும் இலவசமாகக் கல்வி கற்பிக்கப் படும். 5. தொழிலாளர்களைத் துன்புறுத்தி இரவில் வேலை வாங்கக் கூடாது. 6. தொழிலாளர்களுக்குத் தண்டனையளிக்கக் கூடாது. 7. இயந்திர சாலைகள் தொழிற்சாலைகள் எல்லாம் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவைகள். 8. எந்த அரசாங்க உத்தியோகதருக்கும் 200 ரூபாய்க்கு மேல் சம்பளம் இல்லை. 9. வயது வந்த ஆண் பெண் அனைவருக்கும் வாக்குரிமை யுண்டு. 10. அரசாங்க உத்தியோகதர்கள் எல்லோரும் ஜனங்களின் விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டும். 11. பொது மக்கள் சர்க்காருக்குக் கொடுக்க வேண்டிய கடன்களும், மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்களும் நீக்கப்பட்டுவிட்டன. 12. இரண்டு ஆண்டுகளுக்கு வரிப்பணம் தள்ளிக் கொடுக்கப் பட்டுவிட்டது. 13. அடமானம் வைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டன. 14. அயல் நாட்டினருக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டது. 15. பள்ளிக் கூடங்களில் மத சம்பந்தமான பாடங்களைப் போதிக்கக் கூடாது. 16. ஏழைத் தொழிலாளர்களைக் கொண்டு மற்றவர்கள் பணம் சம்பாதிக்கக் கூடாது. 17. ஏழைத் தொழிலாளர்களுக்குத் தொழில் செய்வதற்கு வேண்டிய கருவிகள் இனாமாகக் கொடுக்கப்படும். தொழிலாளர்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றியிருந்தது 72 தினங்களேயாகும். இந்த எழுபத்திரண்டு தினங்களில் இவ்வளவு சட்டங்கள் செய்யப்பட்டு அமுலுக்கும் கொண்டு வரப்பட்டன. பிறகு அரசாங்கத்திலிருந்த சில தந்திரசாலிகளாலும், தொழிலாளர் சங்கங்களின் பலக் குறைவினாலும் தொழிலாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். மீண்டும் அரசாங்கம் முதலாளிகளின் ஆதிக்கத்திற்குட்பட்டது. தொழிலாளர்கள் தோற்கடிக்கப் பட்டவுடன் நடந்த கலகத்தில் ஒரே வாரத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். லட்சத்திற்கு மேற் பட்ட தொழிலாளர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். இவ்வாறு 1871 ஆம் ஆண்டில் பாரிசில் கம்யுன் தோல்வி யடைந்த பிறகு எல்லா நாடுகளிலும் தொழிலாளர்களுக்குக் கஷ்டம் உண்டாயிற்று. பிறகு 1876 ஆம் ஆண்டில் உலகத் தொழிலாளர் சங்கமும் கலைந்து விட்டது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மார்க்சுக்கு மிகவும் மனத்து யரை உண்டாக்கிற்று. அவர் தமது வாழ்நாள் முழுவதும் செலவு செய்து எழுதிய மூலதனம் என்னும் புத்தகம் வெளிவந்தவுடன் அவர் எதிர்பார்த்த அளவு அப்புத்தகம் பாராட்டப்படவில்லை. இதனாலும் மனமுடைந்தார். 1878 ஆண்டுக்குப் பிறகு அவரும் அவருடைய மனைவியும் நோயுற்றிருந்தமையால் ஒரு வேலையும் செய்ய முடிய வில்லை. கடைசியாக அவர் மனைவி 1881 டிசம்பரில் இறந்தார். மார்க்சுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்தன. அவர்களின் இரண்டு பெண்களைத் தொழிலாளர் தலைவர்கள் இருவருக்கே மணஞ்செய்து கொடுத்திருந்தார். அவர்கள் தன் விருப்பப்படி நடப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர்கள் மார்க்சின் விருப்பப்படி நடக்காமல் தங்கள் விருப்பப்படியே நடந்து கொண்டார்கள். இவ்வாறு குடும்ப சம்பந்தமாகவும் அவருக்கு மனக்கவலை ஏற்பட்டது. கடைசியாக மார்க்சு 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14ஆம் தேதி இறந்தார். கார்க்கியும் இந்தியாவும் ஏ. மிர்னோவா என் உலகக் கண்ணோட்டத்தை, புத்தகங்கள் மேன் மேலும் விரிவடையச் செய்கின்றன. மிகச்சிறந்த பணிகளை ஆற்றுவதில் ஈடுபட்டுள்ள மனிதன் எவ்வளவு பெரியவன் மற்றும் அற்புதமானவன் என்பதையும், இவ்வுலகில் அவன் எவ்வளவு சாதனைகள் புரிந்துள்ளான் என்பதையும், அந்தச் சாதனைகளை அடைவதற்கு அவன் எத்தனை துன்பங்களை அநுபவித்துள்ளான் என்பதையும், புத்தகங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளன என்று மார்க்சிம் கார்க்கி எழுதுகிறார். அவர் நூல்களைப் படித்துக் கொண்டேயிருந்தார்; இதன் விளைவாக எல்லாவற்றையும் தமது சொந்தக் கண்களால் காணவேண்டும் என்ற ஆவல் அவரிடம் அதிகரித்தது. அவர் ரஷ்யாவின் ஐரோப்பியப் பகுதி முழுவதும் கால் நடையாகவே சுற்றிப்பார்த்தார்; பல ஐரோப்பிய, அமெரிக்க நகரங்களையும் பார்வையிட்டார். தாவர இயலாளர் கிரேனோவ் குழுவுடன் இலங்கை, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைக் காண விரும்பு கிறேன் என்று சென்ற நூற்றாண்டின் இறுதியில் கார்க்கி கூறினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை. எனினும் கீழை நாடுகளின் வாழ்க்கை, கலாசாரம், தத்துவம் பற்றிய நூல்களைப் படிப்பதன் மூலம் அவரது ஆவலைத் தணித்துக் கொண்டார். மாகோவில் கார்க்கி வாழ்ந்த இல்லம் ஒரு பொருட் காட்சிக் கூடமாக விளங்குகிறது; அங்கே 10,000 மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட கார்க்கியின் நூலகம் உள்ளது. உலகெங்கிலும் சுதந்திரத்திற்காகப் போராடும் வீரர் களுடன் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்பது கார்க்கியின் குறிக்கோள்களில் ஒன்றாகும். எனவே, ரஷ்யத்தொழிலாளர்களின் போராட்டத்தை அவர் உலகத் தொழிலாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். தாய் என்ற அவரது நாவலில் இதை அற்புதமாகச் சித்தரித்து உள்ளார். சமகாலம் சோவ்ரெமென்னிக் (சமகாலம்) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக கார்க்கி இருந்தார். அப்பொழுது அயல்நாட்டுச் செய்தி தொகுப்பு என்ற பகுதியை அவர் எழுதி வந்தார். அப்பகுதியில் தான் மட்டும் எழுதாமல், சர்வதேச புரட்சிகர இயக்கம் மற்றும் விடுதலை இயக்கத்தின் பிரபல தலைவர்களை யும் அதில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்திய முற்போக்கு இயக்கத்தின் பிரதிநிதிகளான கிருஷ்ணவர்மா, பி.ஆர். காமா முதலியோருடன் 1912இல் இவர் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். அப்பொழுது கார்க்கி எழுதினார்... ஆங்கில ஆட்சிக்கு எதிரான இந்தியர்களின் சுதந்திரப் போராட்ட இயக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. கங்கைக் கரையில் ஆங்கில ஆட்சி காலாவதியாகி விட்டது என்றும், இந்தியாவின் அரசியல், சமுதாய நிர்வாகத்தை இந்தியர்களே மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என்றும், இந்தியாவில் மேன் மேலும் பல குரல்கள் உறுதியுடன் ஒலித்து வருகின்றன. காந்தியைப்பற்றி கட்டுரை ஒன்றை எழுதுமாறு 1923இல் பிரெஞ்சு எழுத்தாளர் ரோமன் ரோலந்தியிடம் கார்க்கி கேட்டுக் கொண்டார். 1923இல் வெளிவந்த பெசோதா என்ற சஞ்சிகை யின் முதலாவது, இரண்டாவது இதழ்களில் ரோலந்தின் கட்டுரையைக் கார்க்கி வெளியிட்டார். 1918 ஆகடில் கார்க்கி தலைமையில் உலக இலக்கியப் பதிப்பகம் நிறுவப்பெற்றது. அற்புதமான கீழ்த்திசை இலக்கியங் களை ரஷ்ய வாசகருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கங்களில் ஒன்றாகும். இந்திய மக்கள் பகுதியில், இந்தியாவின் 25 பேரிலக்கியங்களையும், நவீன இலக்கியங் களையும் இப்பதிப்பகம் வெளியிட்டது. 1919-1924 ஆம் ஆண்டு களின் போது, பல தொகுப்புக்களாக இந்நூல்கள் வெளிவந்த துள்ளன. மனித உரிமைகளின் காவலன் மனித உரிமைகளின் காவலன் மார்க்சிம் கார்க்கி என்று 1905இல் மகாத்மா காந்தி குறிப்பிட்டார், ரஷ்யப் புரட்சி எழுத்தாள ரான கார்க்கியைப் பற்றி இந்திய மக்களுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்களில் அவரும் ஒருவர். தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆங்கிலத்திலும் குஜராத்தி மொழியிலும் வெளியிடப்பெற்ற இந்தியன் ஒப்பீனீயன் என்ற பத்திரிக்கையில் காந்தி எழுதினார்; அநீதியையும் அடக்கு முறையையும் எதிர்க்கும் வீர மக்கள் ரஷ்யாவில் உள்ளனர். சில காலத்திற்கு முன்பு அங்கே வெகுஜன எழுச்சி ஒன்று நடை பெற்றது. அதில் முக்கிய பங்கெடுத்தவர்களில் கார்க்கியைப் போல் ஐரோப்பாவில் இன்று எவருமே போராடவில்லை என்று கூறப்படுகிறது. 1917ஆம் ஆண்டுக்கு முன்பே கார்க்கி நூல்களில் ஆங்கில மொழி பெயர்ப்புக்கள் சிலவற்றை இந்திய மக்கள் அறிந்திருந்தனர். ஆனால், 1920-1930 ஆம் ஆண்டுகளின் போது கார்க்கியின் நூல்கள் இந்தியாவில் பிரபலமாயின. 1925இல் தாய் என்னும் கார்க்கியின் நாவல் சுருக்கம், வங்காளி மொழியில் வெளிவந்தது. 1930ஆம் ஆண்டுகளில் தொடக்கத்தில், சந்திரபால் ஜவ் ஹாரி இந்நாவலை இந்தியில் மொழி பெயர்த்தார். 1930 ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஷாவினாத் பாண்டே என்பவர், அதை மீண்டும் இந்தியில் மொழி பெயர்த்தனர். 1934இல் லிங்கராஜீ என்பவர், அதைத் தெலுங்கு மொழியில் வெளியிட்டார். 1940 ஆம் ஆண்டுகளின் போது, அன்னை என்ற பெயரில் ப. ராமசாமியும், தாய் என்ற பெயரில் ரகுநாதனும் அதைத் தமிழில் மொழி பெயர்த்தனர். பிரபாகர் மாச்வே மராத்தி யிலும், நிரேந்திர சிங்சோச்சா பஞ்சாபியிலும் மொழி பெயர்த்தனர். பின்னர் குர்பக்ஷ்சிங் அதை மீண்டும் பஞ்சாபில் மொழி பெயர்த்தார். 1946 இல் மக்மூர் ஜலந்தரி என்பவர் அதை உருதுவில் மொழி பெயர்த்தார். 1950 ஆம் ஆண்டு முதல் 11 இந்திய மொழிகளில் கார்க்கியின் படைப்புக்கள் சுமார் 100 தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன; இவை மாகோவிலுள்ள கார்க்கி பொருட்காட்சி யில் இடம் பெற்றுள்ளன. சென்ற பத்தாண்டுகளின் போது, கார்க்கியின் நாடகங்கள் மொழிபெயர்ப்பு வடிவில், இந்தியாவின் பல பாகங்களில் நடிக்கப் பெற்றுள்ளன. இந்திய நாடக மன்றங்களும் கலைஞர்களும் கார்க்கியின் நாடகங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். இந்தக்கட்டுரை : - சோவியத் சிறப்புக்கட்டுரை, ஜூலை 1975 திரு. ஏ. மிர்னோவா எழுதியது. அவர்களுக்கு என் நன்றி. அணிந்துரை தமிழ் அறிஞர் சாமி. சிதம்பரனார் இலக்கியப் புலமையும், பழகு தமிழ்நடையும் உள்ளவர். முற்போக்குக் கருத்துள்ள பண்பட்ட மரபுக்கவிஞர். பகுத்தறிவுவாதி. சமுதாய நோக்கமும், சுதந்திரதாகமும் உள்ளவர். உழைக்கும் வர்க்கத்தின்மீது அன்பும் ஆதரவும் காட்டக் கூடிய இடதுசாரி அரசியல் நிலைபாடு உள்ளவர். சமுதாய மாற்றத்திற்கான துடிதுடிப்பு உள்ள மனிதநேயம் இருப்பதால் எவ்வாறு தமிழ்நாட்டில் மக்களின் நிலைமையைப் பார்க்கிறார் என்று சாமி சிதம்பரனாரின் கவிதைகளே கூறுகின்றன. சந்து பொந்துகளில் எல்லாம் புகுந்துபோனேன் போன இடங்களில் எல்லாம் ஏழையர்கள் துன்பத்தால் புலம்புதலே என் காதைத் தொளைக்கக் கேட்டேன் நான் அவர்கள் படுகின்ற வேதனையைப் பார்த்து மனம் நைத்து வெயில் புழுப்போலத் துடித்து விட்டேன்............ இந்நிலையில் மனிதநேயம் படைத்த தமிழறிஞர் ஒரு முடிவு எடுக்கிறார். அதையும் கவிதைகளே கூறுகின்றன. புதியதொரு விதி செய்வோம், பழமை சாய்ப்போம் பூவுலகில் அதைக் காப்போம், பசிப்பேயை மாள வைப்போம் அதிகார வெறிமுளைக்கும் குழி தூர்ப்போம் அக்கிரமக்காரர்களின் திட்டமெலாம் தீயில்வைப்போம் இதனைச் செய்து முடிப்பது எவ்வாறு? மேலும் கவிதைகள் கூறுகின்றன. உலகத்தில் சமம் எனும் பயிரைச் செய்வோம். கொள்ளையிடும் வஞ்சகரை முறியடிப்போம். கூறினேன் திடமிருந்தால் வெற்றி கொள்வாய். வெற்றிகொள்வது எவ்வாறு ஐயா? கவிதைகள் கூறுகின்றன. இல்லார்கள், உடையார்கள், இரண்டு மற்றோர் எனும் பேதம் இல்லாத நிலையை ஆக்கி கலையாமல் மனிதர்குலம் ஒன்றாய் வாழும் கண் கொள்ளாப் பெருங்காட்சி அதுதான் ஐயா! உலகத்தில் மனிதகுலம் சமம். உலக சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாக வளரவும், அவ்வாறு வளருவதன் மூலமாகவே அனைத்து மக்களும் சுதந்திரமாக வளரக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. அதுபோன்ற சமுதாய அமைப்புத்தான் கம்யூனிஸ சமுதாயம். இத்தகைய சமுதாய அமைப்பின் திசை வழியில் இன்று சோவியத் மக்கள் வீர நடைபோட்டு வருகிறார்கள். இந்த சமுதாய அமைப்புக்குக் காரணமானவர் காரல் மார்க்சு. காரல் மார்க்சும், ஏங்கல்ஸும் உலகில் 1848இல் பிரகடனப் படுத்திய கம்யூனிட் அறிக்கை இதை விளக்குகிறது. தவிர உழைக்கும் வர்க்கம் சமுதாயம் முழுவதுமே விடுதலை செய்வதன் மூலமாகத்தான் எந்த அமைப்பின் கீழ் ஒடுக்குமுறை, நசுக்குமுறை, சுரண்டுமுறை ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகிறதோ அதிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியும் என்று காரல் மார்க்சும், ஏங்கல்ஸும் கம்யூனிட் அறிக்கையில் பிரகடனப்படுத்தினார்கள். எனவே சமுதாயப் புரட்சி எனும் கண் கொள்ளாப் பெருங்காட்சி அது தான் ஐயா என்று 1937ஆம் ஆண்டு அறிவுக் கொடி என்ற மாதப் பத்திரிகையின் மூலமாக உலகில் சமுதாய விஞ்ஞான மேதைகளான காரல் மார்க்சு, பிரடெரிக் ஏங்கல் - இவ்விருவரும் இணைந்துள்ள வாழ்க்கை வரலாற்றினை மக்கள் முன் நிறுத்தினார் தமிழ் அறிஞர் சாமி சிதம்பரனார். நாடு சுதந்திரம் அடைந்து முப்பத்திமூன்று ஆண்டுகள் முடிந்தபோதிலும் காலமான மூதறிஞர் சாமி சிதம்பரனார் அன்று சந்து பொந்துகளில் புகுந்து நேரில் கண்ட மனிதர்களின் அவல நிலை மேலும் அதிகமாகியிருக்கிறதே தவிர மாற்றம் ஏற்படவில்லை. இதன் காரணமாகத்தான் என்று நான் நினைக்கிறேன். இன்று அன்னாரின் வாழ்க்கைத் துணைவியர் திருமதி சிவகாமி சிதம்பரனார் மீண்டும் காரல் ஹென்றி மார்க்சு வாழ்க்கைச் சுருக்கம் என்ற தலைப்பில் சாமி. சிதம்பரனாரின் கட்டுரைகளைத் தொகுத்து நூல் வடிவத்தில் மக்கள் முன்பு காரல் மார்க்சு -ஏங்கல் இருவரையும் நிறுத்துவதற்கு துணிவுடன் முன் வந்திருக்கிறார். திடம் இருக்கிறது. சாதகமான சூழ்நிலை இருக்கிறது. உலகத்தில் சமம் எனும் பயிர் செய்வோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையைப் பிரதி பலிக்கிறார். பழகு தமிழ் நடையில் எழுதியிருப்பதால் இன்றைய எதிர் காலப் பயிர்போன்ற பள்ளி மாணவனும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ள முடியும். மார்க்சின் தத்துவம் பற்றி இந்நூலில் விளக்கப்படுகிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் மார்க்சு தன் தத்துவப் தெளிவைச் சிறுவயது முதல் வளர்த்து வருவதை அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறார். விஞ்ஞானம் எங்கிருந்து தோன்றினாலும் சமுதாயம் முழுவதிலும் பொருத்தமானதேயாகும். அதே போன்று மார்க்சிய தத்துவம் உலகம் தழுவிய சமுதாய விஞ்ஞானம். ஆசிரியர் இதை எளிய நடையில் விளக்குவதைக் காணலாம். பிரான்ஸில் தோன்றியது பொருள் முதல் தத்துவம். ஜெர்மனியில் தோன்றியது. கருத்து அல்லது சிந்தனை இயக்க இயல் தத்துவம். பிரிட்டனில் தோன்றியது அரசியல் பொருளாதாரம் பற்றிய தத்துவம். இம்மூன்று தத்துவ உண்மைகளை இணைத்து வளர்ப்ப தாக மார்க்சின் தத்துவம் இருந்து வந்தது. - அதாவது இயக்க இயல் பொருள் முதல்வாதம், வரலாற்று இயல் பொருள் முதல்வாதம் இணைந்த தத்துவம். - விஞ்ஞான அரசியல் பொருளாதாரம். - விஞ்ஞான சோஷலிஸம். தொழிலாளி வர்க்கத்தின் வரலாறு பூர்வமான புரட்சிகர பாத்திரம், வர்க்கத்தின் அரசு. மேற்கூறிய மார்க்சிய தத்துவத்தின் சாரத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளுவதற்கு ஏற்ற நடையில் ஆசிரியர் விளக்கம் தருகிறார். அதே போன்று சமதர்ம அறிக்கை என்ற தலைப்பில் கம்யூனிட் அறிக்கையின் சாரத்தை விளக்கியுள்ளார். காரல் மார்க்சு, ஏங்கல் இவ்விருவரின் வாழ்க்கை சமுதாய வளர்ச்சி யைப் பிரதிபலிக்கும் சிந்தனையைச் செயல்படுத்துவதாகவே இருந்தது. நூல் ஆசிரியர் இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்திருக்கிறார் என்பதற்கு காரல் மார்க்சு வாழ்க்கைச் சுருக்கத்தில் கொண்டு வந்திருக்கும் கோர்வை போன்ற அம்சங்களே சான்றாகும். மார்க்சிய தத்துவத்தை மறுப்பவர்கள், மார்க்சியம் காலம் கடந்துவிட்டது என்று கதைப்பவர்கள் இவர்களுக்கு சாட்டை கொடுப்பது போன்ற சரித்திரச் சுருக்கத்தைத் தொகுத்திருக்கிறார். விஞ்ஞான வளர்ச்சி காலத்தையும், இடைவெளியையும் வெல்லுமே தவிர காலம் கடந்ததாகிவிட்டது. அதே போன்று மார்க்சின் சமுதாய விஞ்ஞானம் இன்று சமுதாயத்தில் நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்திருப்பதைத்தான் காணமுடிகிறது. இதை வாசகர்கள் உணரும் அளவு அவருக்குரிய நடையில் விவரிக்கிறார். ஆசிரியர் குறிப்பிடுவது போல் 1848ஆம் ஆண்டு காரல் மார்க்சு, ஏங்கல் பிரகடனப்படுத்திய சமதர்ம அறிக்கையின் திட்டம், 1871ஆம் ஆண்டு பாரி கம்யூன் எனும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியையும், தொழிலாளி வர்க்கத்தின் 72நாட்கள் நடத்திய தன்னாட்சியையும் தோற்றுவித்தது. உலகில் புதிய சமுதாய தோற்றத்திற்கான முன் அறிவிப்பாக, மின் வெட்டாக இருந்தது. 1971 நவம்பர் 7இல் ரஷ்யாவில் போல்ஷுவிக் நடத்திய சமுதாய புரட்சி முழுமையாக வெற்றிபெற்றது. மார்க்ஸிஸம் லெனினிஸம் என்ற சமுதாய தத்துவமாய் வளர்ந்து விட்டது. உலகில் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், சுபீட்சும் வளர அடிகோலுகிறது. சர்வ வல்லமையுள்ள சமுதாய சக்தியாக வளர்ந்து வருகிறது. உலகில் மனித நேயத்தை வளர்ப்பது என்பதே கடமையாகிறது. இந்த உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு 1937இல் அறிவுக்கொடியில் கட்டுரையாக வெளிவந்தவை இன்று காரல் ஹென்றி மார்க்சு வாழ்க்கை சரித்திரச் சுருக்கம் என்ற நூலாக வெளிவருகிறது. சென்னை வணக்கம் 23.11.80 மெ.வி.சுந்தரம் காரல் ஹென்றி மார்க்சு முன்னுரை உலகத்தில் சமதர்ம விதை போட்டவர்; புதிய சமுதாய அமைப்புக்கு அடிகோலியவர்; தொழிலாளர் நலம் கருதிப் பாடு பட்டவர்; சிறந்த பொருளாதார நிபுணர் என்று போற்றப் படுபவர் இந்த மார்க்சு. இது அவருடைய சரித்திரச் சுருக்கம். சமதர்மப் பெரியார்கள் மனிதர்கள் மனிதர்களை அடக்கி ஆளும் கொடுமை இவ்வுலகில் பல்லாயிரம் ஆண்டுகளாகவே குடிகொண்டிருக்கிறது. இக்கொடுமையின் பயனாகவே இவ்வுலகில் சிலர் எல்லாச் செல்வங்களும் பெற்று இன்பமாக வாழுகின்றனர். அண்டை அயலார்களைப் பற்றிச் சிறிதும் சிந்தனையில்லாமல் ஆடம் பரமாக வாழ்ந்து அளவற்ற போகந்துய்க்கின்றனர். அல்லும் பகலும் பேயாய்ப் பறந்து, நாயாய்த் திரிந்து உழைக்கும் பலருக்கு இவ்வுலகில் வயிறார உண்ண உணவில்லை; உடம்பை மறைத்துக் கொள்ளப் போதிய உடையில்லை; வெயிலுக்கோ, மழைக்கோ ஒண்டக் குடிசையில்லை. இவர்கள் பார்க்கவும், கேட்கவும் சகிக்க முடியாத வறுமையில் நோய்களால் அவதிப் படுகின்றனர். இத்தகைய ஏழை மக்களின் நிலையை மாற்ற வேண்டும் என்று கருதிய பெரியோர் பலர்; இதன் பொருட்டுத் தற்கால மனித சமூக அமைப்பு முறையையே மாற்றிப் புதிய சமூக அமைப்பை உண்டாக்க வேண்டும் என்று பல பெரியோர்கள் முயற்சி செய்தனர். இவ்வாறு மனித சமூக வாழ்க்கை முறையையே அடியோடு மாற்றிப் புதிதாக அமைக்க வேண்டும் என்று கூறியவர்களில் முதன்மையானவர், கிரேக்க (Greece) நாட்டுப் பெரியாரான பிளோட்டோ என்பவர். இவரே இவ்அபிப்பிராயத்தை முதல் முதல் வெளியிட்டவர் என்று கூறுகின்றனர். கிறிது பிறப்பதற்கு முன், சீன தேசத்தில், சமத்துவமுள்ள புதிய அமைப்போடு கூடிய ஜன சமூகத்தை உண்டாக்க முயற்சி செய்யப்பட்டது. கிறிதுவுக்குப் பின் பாரசீக தேசத்திலும் இது போன்ற முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இரு நாடுகளிலும் அப்பொழுதே இம்முயற்சி பயன் படாமல் வீணாகி விட்டது என்று தெரிகிறது. ஐரோப்பா தேசத்தில் எல்லோரும் இன்பத்தோடிருக்கும் படியான புதிய மனித சமூக வாழ்க்கையமைப்பை ஏற்படுத்தப் பலவகையிலும் முயற்சி செய்யப்பட்டது; இம்முயற்சி 1800 ஆம் ஆண்டு வரையிலும் நடைபெற்று வந்தது. சர்தாமமூர் என்பவரும் இன்னும் பல பெரியோரும் இந்த எண்ணத்தோடு வாழ்ந்திருக்கிறார். இவர்கள் உயர்வு தாழ்வு பாராட்டிக் கொண்டு, துன்ப மடைந்து வரும் ஜன சமூக அமைப்பை அடியோடு மாற்ற வேண்டும்; உயர்வு தாழ்வில்லாத - சமத்துவமான ஒரு புதிய சமூகத்தை அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஓவன் என்னும் பெயருடைய ஒரு பெரியார் இருந்தார். அவர் ஏழைகளின் பொருளைச் சுரண்டுவது நீதியல்ல; அவர்களுடைய உழைப்புக் காக அவர்களுக்குப் போதுமான உணவு கொடுக்கலாம்; வாழ்வதற்கு வசதியான இடம் கொடுக்கலாம்; இவ்வாறு செய்வதனால் முதலாளிக்குச் சிறிதும் நஷ்டம் வந்து விடாது நல்ல லாபமே கிடைக்கும் என்பதைத் தனது நடத்தையில் காட்டினார். 19ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் உலகத்தில் இரண்டு பெரிய அறிவாளிகள் தோன்றினார்கள். இவர்கள் காரல் மார்க்சு, பிரடரிக் ஏஞ்சல் என்பவர்கள். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட சமூகச் சமத்துவத் திட்டத்திற்கு விஞ்ஞான சமதர்ம முறை என்று பெயர். இவர்களுடைய திட்டங்களில் சில, சமதர்மக்காரர் களாலேயே நடத்திக் காட்டுவது முடியாத காரியம் என்று கைவிடப்பட்டு விட்டன. ஆயினும் பெரும்பாலான திட்டங்கள் ஒப்புக் கொள்ளப் பட்டு வருகின்றன. புதிய சமூக அமைப்பை விரும்பாமல் பழைய சமூக அமைப்பிலேயே திருத்தங்கள் செய்தால் போதும் என்ற சீர்த்திருத்தவாதிகள் இவர்கள் கொள்கைகளை ஒப்புக் கொள்வதில்லை.பழமை விரும்பிகளோ இவர்கள் பெயரைக் கேட்டாலே எரிந்து விழுவார்கள். ஆனால் இப்பொழுது பொருளாதார சமத்துவம் என்ற பேச்சு உண்டானதற்கு இவர்களுடைய திட்டங்களே அடிகோலின என்பதில் ஐயமில்லை. இவர்களில் காரல் மார்க்சு என்பவர் தனது வாழ்நாள் முடிவு வரையிலும் தனது சமதர்மக் கொள்கையை விடாப் பிடியாகக் கொண்டு நின்றார். இவ்வாறு தன் கொள்கையில் உறுதியுடைய வராக நின்றதன் மூலம் அவருக்குண்டான துன்பங்கள் அளவற்றவை. காரல் மார்க்சு சிறந்த பொருளாதார நிபுணர்; ஏழை மக்களின் எதிர்கால இன்ப வாழ்க்கைக்கு வழிகோலியவர்; அரசியல் தீர்க்க தரிசி என்று கூடக் கூறலாம். இக்காலத்துப் பொருளாதார நிபுணர்களும் மார்க்சின் பொருளாதாரக் கொள்கையை விட்டு விட்டு வேறு முறையில் உலகப் பொருளா தாரப் போராட்டத்தை ஒழிக்க வழி கண்டுபிடிக்க முடியா மலிருக்கின்றனர். சுற்றிச் சுற்றியும் மார்க்சு கொள்கையை அடிப் படையாகக் கொண்டு தான் பொருளாதாரப் போராட்டத்தை நீக்க முடியும் என்று கருது கின்றனர். இத்தகைய பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வோம். மார்க்சு பிறப்பு ஜெர்மனி தேசத்தைச் சேர்ந்த நகரங்களில் டிரிவெ என்பது ஒன்று. அந்நகரம் 19ஆம் நூற்றாண்டில் ஒரு சிறிய நகரமாகவே யிருந்தது. ஆயினும் அந்நகர மக்களுக்குள் ஒற்றுமை யில்லாதிருந்தது; ஒருவரோடு ஒருவர் பகை கொண்டு கலகஞ் செய்து கொள்ளுவர்; சமூக வாழ்க்கையில் உயர்வு தாழ்வுகள் தலை விரித்தாடிக் கொண்டிருந்தன. அக்காலத்தில் ஜெர்மனி நாட்டு நகரங்கள் இப்பொழுதிருப்பது போலச் சுத்தமாக இருக்கவில்லை. பெரும் பாலும் அசுத்தமாகவேயிருந்தன. மற்ற நகரங்களைப் போலவே டிரிவெ நகரமும் சுகாதாரமற்றதா கவேயிருந்தது. ஆனால் அந்நகர மக்கள் ஆடம்பர வாழ்க்கையில் விருப்பமுடையவரா யிருந்தனர்; மூடப் பழக்க வழக்கங்கள் அவர்களிடம் தாராளமாகக் குடிகொண்டிருந்தன; வீண் சடங்குகள் பலவற்றையும் அவர்கள் குறைவில்லாமல் செய்து வந்தார்கள். இந்த நிலையுள்ள டிரிவெ நகரத்தில்தான் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ந் தேதி மார்க்சு என்னும் பெரியார் பிறந்தார். இவருடைய முழுப் பெயர் காரல் ஹென்றி மார்க்சு என்பதாகும். மார்க்சு பிறந்த குடும்பம் ஒரு யூத குடும்பம். அவருடைய முன்னோர்கள் மத குருமார்களாகவும், மத நூல் ஆராய்ச்சியில் தேர்ந்தவர்களாகவும் இருந்தனர். மார்க்சு குடும்பம் கிறிதவ மதத்தில் சேர்ந்தது மார்க்சின் தகப்பனார் வக்கீல் தொழில் செய்து கொண்டிருந்தார். மார்க்சுக்கு வயது ஆறு ஆயிற்று; குழந்தைப் பருவம்; இவருடைய தந்தையும் தாயும் யூத மதத்தை விட்டு மாறினார்கள்; புரட்டடாண்ட் கிறிது மதத்தில் சேர்ந்து கொண்டார்கள். இந்த மத மாற்றத்துக்குக் காரணம், யூத மதத்தின் மீது வெறுப்போ, அல்லது கிறிதுவ மதத்தின் மீது அன்போ அல்ல. ஆறு வயதுக் குழந்தையாகவிருந்த காரல் மார்க்சின் எதிர்கால வாழ்வைக் கருதியேயாகும். காரல் ஐரோப்பிய நாகரிகத்தை மேற்கொள்ள வேண்டும்; அதன் மூலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்; என்னும் இந்த எண்ணத்துடன் தான் மதம் மாறியதாகக் கூறுகின்றனர். இந்த மத மாற்றமும் வீண் போக வில்லை. மார்க்சின் கல்வி வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தது. மார்க்சின் பெற்றோர்கள் இவ்வாறு யூத மதத்தை விட்டுக் கிறிதுவ மதத்தை மேற்கொண்டதனால், அவ்வூரில் உள்ள மற்ற யூதர்கள் இவர்களைக் கொஞ்சம் அலட்சியமாகவே கருதினார்கள். ஆயினும் இவர்கள் பரம்பரையாகவே பெருமை யுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவர்களானதால் வெளிப்படையாக இவர்களிடம் யாரும் தங்கள் அலட்சியத்தைக் காட்டிக்கொள்ளு வதில்லை. வெளியில் எப்பொழுதும் போல் பெருமையாகவே மதிக்கப்பட்டு வந்தார்கள். மார்க்சின் கல்விப் பயிற்சி அக்காலத்தில் பொது மக்களால் மிகவும் பெருமையாகக் கொண்டாடப்பட்டு வந்தவர்களில் வான் வெட் போலன் என்பவர் ஒருவர். இவர் பிரிவி கவுன்சிலராகவும், ஒரு பிரஷ்ய உத்தியோகதராகவும் இருந்தார். இவர் ஆங்கிலக் கல்வியில் சிறந்தவர்; ஷேக்பியர், ஹோமர் முதலிய பெரும் புலவர்களின் சிறந்த காவியங்களையெல்லாம் கற்றிருந்தார். இன்னும் அக்காலத்தில் ஜெர்மானிய உத்தியோகதர்கள் கற்றிருக்க வேண்டிய கலைகள் யாவையோ அவைகளில் எல்லாம் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருடைய கல்வி மார்க்சுக்கு மிகவும் பயனளிப்பதாக இருந்தது. இவர் தான் கற்றறிந்த சிறந்த பல விஷயங்களையும், தமது நண்பருடைய குமாரரான மார்க்சுக்கு இளமைப் பருவத்திலேயே கற்பித்து வந்தார். மார்க்சின் தந்தையும் நல்ல படிப்பாளி; தந்தையின் நண்பரான வான் வெட் போலனும் நல்ல படிப்பாளி. ஆகை யால் இவர்கள் இருவருடைய உதவியும் மார்க்சின் இளம் பருவப் படிப்புக்குப் பெருந்துணை செய்தது. இதனால் மார்க்சுக்குப் பள்ளிக் கூடப் படிப்பு மிகவும் எளிதாக இருந்தது; பள்ளிக் கூடத்திலும் நுட்ப புத்தியுள்ள மாணவராக விளங்கினார். காரல் மார்க் தனது 18வது வயதில் பெர்லின் நகரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். இவர் கல்லூரியில் சேர்ந்த வருஷம் 1836, கல்லூரியில் சேர்ந்த ஆரம்ப காலத்தில் தனது பாடங்களையெல்லாம் மிகவும் கருத்துடன் கற்று வந்தார். சரித்திரம், நில நூல், இலக்கியம், கவிதை, தத்தவ சாத்திரம், சட்டநூல் முதலியவைகளை மிகவும் விருப்பத்துடன் படித்தறிந்தார். மற்ற மாணவர்களைப் போல், படித்தவைகளை அப்படியே நம்பும் குணம் மார்க்சினிடம் இல்லை. இவர் கூர்மையான அறிவும், ஆராய்ந்து பார்க்கும் வல்லமையும் உடையவராயிருந்த தால் தான் படித்தவைகளைத் தன் சொந்த அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்ப்பார். இதனால் இவருக்கு ஆசிரியர்கள் கற்பிக்கும் ஒவ்வொரு பாடங்களிலும் சந்தேகங்களும், கருத்து வேற்றுமைகளும் வளர்ந்து கொண்டே வந்தன. அப்பொழுது கல்லூரியிற் போதிக்கும் போதனைகள் எல்லாம் மோசடியான வைகள்; உண்மைக்கு மாறானவைகள் என்றும் கருதினார். இக்காரணத்தால் இவருக்குக் கல்லூரிப் படிப்பில் அவ்வளவு ஊக்கமும், ஆசையும் இல்லாமற் போயிற்று. அக்காலத்தில், பெர்லின் நகரத்தில், ஆடல், பாடல் முதலிய நாகரிகங்கள் மிகுந்திருந்தன. ஆடல் பாடல்களில் ஈடுபடுவது அந்நகர மக்களால் நாகரிகமானதாக எண்ணப்பட்டு வந்தது. இத்தகைய நாகரிகப் போக்கில் நமது மார்க்சும் கலாசாலைப் படிப்புக் காலத்திலேயே கலந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக மார்க்சினிடம் உண்டான ஒரு மாறுதல் குறிப்பிடத் தக்கதாகும். வான் வெட் போலனுக்கு ஒரு பெண் இருந்தாள்; அவள் பெயர் ஜென்னி; மிகுந்த அழகிய தோற்றத்தையுடை யவள்; காரலும் நல்ல தோற்றமுடைய வாலிபர்; இவ்விருவரும் இளம் பருவ முதல் நட்பினர்கள். இவர்களுடைய நட்பு, காதலாக முதிர்ந்து வளர்ந்து கொண்டே சென்றது. இவர் பெர்லின் நகரத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலத்திலேயே புதிய கருத்துக்கள் அமைந்த கவிதைகள் எழுதத் தொடங்கினர்; அவர் கருதும் எண்ணங்களை வைத்துச் சிறு கதைகள் எழுதினார். சட்டக் கலையின் தத்துவத்தை 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக எழுதி முடித்தார். இவருடைய கவிதைகளையும், கதைகளையும், நூல்களையும் பார்த்த அவருடைய மிக நெருங்கிய நண்பர்களும் அவைகளை வெறுத்தனர். அவைகளில் அமைந்திருந்த கருத்துக்கள் அவர் களுக்குப் பிடிக்கவில்லை. அக்கருத்துக்கள் மிகவும் தீமையை உண்டாக்கக் கூடியவைகள் என்று வெறுத்தனர்; அளவு கடந்த மமதை கொண்டவர் கூறும் கருத்துக்கள் என்று கடிந்தனர். மார்க்சும் அக்காலத்தில் தான் எழுதியவைகள் சிறிதும் உபயோக மற்றவை என்றே நினைத்தார். ஆதலால் அவைகளையெல்லாம் தூள் தூளாகக் கிழித்து நெருப்பிட்டுக் கொளுத்தினார். இது நடந்த ஓராண்டுக்குப் பிறகு மார்க்சு தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதம் அழகாகவும், இவருடைய இளமையின் முறுக்கைக் காட்டுவதாகவும் இருந்தது. அக் கடிதத்தில் ஹெக்கல் என்பவரின் தத்துவ சாதிரத்தைப் பற்றியும், அது பற்றித் தனது எண்ணத்தையும் தெளிவாக எழுதியிருந்தார். மார்க்சின் தந்தையார் அக்கடிதத்தைக் கொண்டே மார்க்சின் செய்கையைத் தெரிந்து கொண்டார். அவர் மார்க்சுக்கு எழுதிய பதிலில் இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டு எழுத வேண்டாம்; இதன் மூலம் உடம்பை வீணாகக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். இவ்வாறு வருந்தி எழுதி எழுதி, எழுதியவைகளையும் கிழித்துக் கொண்டிருப்பதனால் என்ன பயன்? இந்த வீண் வேலை செய்து கொண்டிருப்பதைவிட உடம்பை நன்றாகக் கவனித்துக் கொண்டு குடும்பத்துடன் ஒத்து வாழ்வதே சிறந்ததாகும் என்ற கருத்துக்களை விளக்கமாக எழுதியிருந்தார். ஆனால் மார்க்சு தந்தையின் இந்தப் புத்திமதியை ஒப்புக் கொள்ளவேயில்லை. அவர் ஒருபொழுதும் தனது உடல் நலத்தைக் கவனித்தவரேயல்லர். எப்பொழுதும் ஓயாமல் உழைத்துக் கொண்டேயிருந்தார். அஞ்சத்தக்க வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் மனத் துயரம் அடையக் கூடாது. மனங் குழம்பக் கூடாது. முயற்சியோடும், மிகுந்த ஊக்கத்தோடும் வாழ்க்கைப் போரில் புகுவோம் என்பது இக்காலத்தில் அவர் எழுதிய ஒரு பாடலின் பொருளாகும். இதிலிருந்து அவருடைய மனப்பான்மை எப்படிப்பட்டதென்று தெரிந்து கொள்ளலாம். மார்க்சின் தத்துவ சாதிரப் பயிற்சி இதன்பின் மார்க்சின் தந்தை அதிக காலம் உயிர் வாழ வில்லை. 1838ஆம் ஆண்டில் இறந்து விட்டார். தந்தை இறந்த போது மார்க்சுக்கு வயது இருபதுதான். அவர் ஒரு வக்கீலாக இருந்தும் குடும்பத்திற்கென்று அதிகப் பணம் சேர்த்து வைக்க வில்லை; மார்க்சுக்குப் பெரிய கல்வியறிவையும் புகட்டவில்லை; ஒரு கௌரவமான உத்தியோகப் பதவி பெறுவதற்குப் போது மான கல்வியை மாத்திரமே கற்பித்திருந்தார். காரலும் பொருள் சம்பாதிப்பதற்கு அக்காலத்தில் சாதனமாயிருந்த சட்டக் கல்வியைப் புறக்கணித்தார்; அதில் கவலை காட்டுவதில்லை. ஆனால் அதைத் தவிர மற்ற கல்விகளில் ஊக்கங் கொண்டு கற்று வந்தார். அதிலும் தந்தை இறந்தபின் சட்டப் பயிற்சியில் உள்ள எண்ணத்தையே அடியோடு விட்டு விட்டார். தத்துவ சாதிரங் களைக் கற்பதிலேயே காலத்தைக் கழித்தார். அதுவே அவருக்கு விருப்பமான கல்வியாக இருந்தது. இந்தக் காலத்தில் காரல் மார்க்சுக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்தார்; அவர் பெயர் புருணாபார் என்பது. அவர் தத்துவ சாதிர போதகாசிரியர்; ஆதலால் காரலுக்கும் தத்துவ சாதிரப் பயிற்சியில் மிகுத்த ஊக்கத்தை ஊட்டி ஒத்தாசை பண்ணி தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் அதற்கு வேண்டிய கலைகளை யெல்லாம் மிகுந்த முயற்சியுடன் கற்று வந்தார்கள். ஆனால் இவர்களுடைய முயற்சி பலிக்கவில்லை; வீணாயிற்று. மார்க்சு தத்துவ சாதிரத்தை விடாமற் பயின்ற காரணத்தால் 1841 ஆம் வருஷத்தில் டாக்டர் (Ph.D) அதாவது தத்துவ சாதிர நிபுணர் என்ற பட்டம் பெற்றார். இக்காலத்தில் இருந்த பிரஷ்யன் சர்வகலா சாலைகளின் நிலைமை மார்க்சின் கல்விக்கு ஏற்றதாக இல்லை. ஏனெனில் அவர் எதையும் ஆராய்ந்த பின்னரே அதை ஒப்புக் கொள்ளும் குணமுடையவர்; பேசுவதிலும், எழுதுவதிலும் திட்டமான கருத்தை விளக்கும் கடினமான நடையை உபயோகிப்பவர். இத்தகையவர்களுக்கும் அந்தச் சர்வகலா சாலைகளினால் பயனில்லாமலிருந்தது. காரல்மார்க்சு ஹெகல் என்பவரின் தத்துவ சாதிரத்தின் நுட்பமறிந்த நிபுணராயிருந்தார் மற்றும் பல விஷயங்களைப் பற்றியும் போதுமான தெளிந்த அறிவுடையவரானார். இன்னும் தனது வாழ்நாளில் கண்டறிந்த பல அனுபவ ஞானங்களையும் உடையவராயிருந்தார். ஹெகல் சாதிரப் பயிற்சியுடையவர் களுக்குள் இவரே சிறந்தவராக விளங்கினார். பத்திரிகைத் தொழிலில் புகுந்தது ஆரம்பத்தில், காரலுக்குச் சர்வகலாசாலை ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் கடைசியில் அது நிறைவேற வில்லை. இதற்குக் காரணம் பிரஷ்யசர்க்காரின் பிற்போக்கான கொள்கையினால் அந்நாட்டுச் சர்வகலாசாலைகள் மார்க் போன்ற அதி தீவிரவாதிகளுக்குப் பயன்படாமலிருந்து வந்ததே யாகும். இதனால் அவர் உயிர் வாழ்க்கையின் பொருட்டுப் பத்திரிக்கைத் தொழிலில் ஈடுபட்டார். அக்காலத்தில் ரைன் மாகாணத்தைச் சேர்ந்த தாராளக் கட்சியினரால் (லிபரல்) ரெனிக் ஜீட்டங் (Rheinische Jeitung) என்ற பத்திரிகை நடத்தப் பட்டு வந்தது. முதலில் காரல் மார்க்சு அப்பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுதி யனுப்பிக் கொண்டிருந்தார். பின்னர் 1842ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியில் அமர்ந்தார். இவர் பத்திரிகாசிரியரான பிறகு ஜீட்டங் பத்திரிகைக்கு அதிக செலவாணி ஏற்பட்டுவிட்டது. பலரும் அதை விரும்பிப் படிக்கலானார்கள். பத்திரிகாசிரியர் ஆன பிறகு தேசத்தின் பொருளாதார நிலை, அரசியல் நிலை முதலிய பல விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொண்டார்; பத்திரிக்கைத் தொழிலுக்குப் பள்ளிப் படிப்பு மட்டிலும் போதாதென்றும் அனுபவஞானமும், அவசியமென்றும் உணர்ந்தார். விவசாயிகள் சம்பந்தமாகவும், தொழிலாளர் சம்பந்தமாகவும், அரசியல் சம்பந்தமாகவும் இவர் அவ்வப்போது எழுதிய தலையங்கங்கள் மிகவும் சிறந்தன வாயிருந்தன; அவைகள் உயர்ந்த பொருளாதார நுட்பத்தோடும், திறமையான வாதத்தோடும் விளங்கிய சர்க்கார் பத்திரிகையை வெளியிட முடியாதபடி தடுத்து விட்டார்கள். பத்திரிகை நிறுத்தப்பட்டவுடன் காரலும் பத்திரிகை நிலையத்தை விட்டு வெளியேறினார் பிறகு தான் இளம் பருவ முதல் காதலித்து வந்த ஜென்னியை 1843ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மணம் புரிந்து கொண்டார் அப்பொழுது அவருக்கு வயது 25 தான். மார்க்சும் ஏஞ்சல்சும் பிறகு அவர் பாரி நகரஞ் சென்றார். அர்னால்ட்ருஜ் என்ற நண்பருடன் சேர்ந்து, தொடர்ந்து வெளிவரத் தகுந்த மாதிரியில் ஒரு பெரிய பிரசுரம் ஒன்றைப் பதிப்பித்து வெளியிடும் முயற்சியில் தலையிட்டார். அவ்வெளியீட்டின் பெயர் பிரான்சு ஜெர்மன் வருஷ அனுபந்தம் என்பதாகும். இப்பிரசுரம் ஒரே பிரதி தான் வெளியிடப் பட்டது. இதற்குள் பதிப்பாசிரியர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால் அம்முயற்சி கலைந்து போயிற்று. பிரான்சு ஜெர்மன் வருஷ அனுபந்தம் என்ற பிரசுரத்தில் காரல் மார்க்சின் கட்டுரைகளே ஏராளமாக இருந்தன. மற்றவர் களின் கட்டுரைகளில் பிரடரிக் ஏஞ்சல்சால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை விளங்கிற்று. ஏஞ்சல் ஒரு ஜெர்மன் வாலிபர்; அவர் அப்பொழுது மாஞ்செடரில் வசித்துக் கொண்டிருந்தார். மார்க்சு ஜீடங் பத்திரிகை காரியாலயத்தில் இருக்கும் போது ஒருமுறை ஏஞ்சல்சைச் சந்தித்திருக்கிறார். அப்பொழுது அவரைப் பற்றி மார்க்சுக்கு நல்லெண்ணமில்லை. அவரை ஒரு மனோராஜ்யக் காரராகவே நினைத்திருந்தார். ஆனால் இப்பொழுது அவருடைய கட்டுரையைப் படித்த பின் அவரிடத்தில் அன்பும் நன் மதிப்பும் கொண்டார். 1843 ஆம் ஆண்டிலேயே இரண்டாம் முறை மார்க்சும் ஏஞ்சலும் பாரிசில் சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பு அவர்களை இணைபிரியாத தோழர்களாக்கி விட்டது; ஒருவரை யொருவர் நன்றாகத் தெரிந்து கொண்டார்கள்; பூவும் மணமும் போல் கூட்டாளியானார்கள். ஏஞ்சல் மார்க்சை போல் அவ்வளவு படிப்புடையவர் அல்லர்; ஆயினும் தெளிந்த அனுபவ அறிவுடையவர்; குற்றமற்ற மனமுடையவர்; அவர் கூறும் அபிப்பிராயங்கள் தெளிவாக இருக்கும்; நன்றாகப் பரிசீலனை செய்து முடிவுகட்டப் பட்டதாக இருக்கும்.செயலில் நடத்திக் காட்டக் கூடியதாக இருக்கும். இத்தகைய சிறந்த நட்பாளர் கிடைத்திருக்காவிட்டால் மார்க்சு சிறந்த நூல்களை வெளியிட்டிருக்க முடியாது. இருவரும் சேர்ந்து அப்பொழுது பல பத்திரிகைகளுக்கும் சிறந்த கட்டுரைகள் எழுதி வந்தார்கள். மார்க்சு ஏஞ்சல் ஆகிய இருவரும், சமதர்மத்திற்கு விரோத மாயிருப்பவர்களைக் கண்டித்துக் கொண்டு வந்தனர். இவர்களுடைய கண்டனத்தில் சரியான வாதங்கள் அடங் கியிருந்தன. இவர்களுடைய பழைய நண்பர்கள் பலர் இவர் களுடைய கொள்கைகளை எதிர்ப் பவர்களாயிருந்தனர். அந்த நண்பர்களுடைய கொள்கைகளையும் தயவு தாட்சண்யமின்றிக் கண்டித்துப் புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதி வந்தனர். ஏஞ்சல் தொழிலாளர் இயக்கத்தில் சேருதல் ஏஞ்சல்சின் தந்தையார் எர்மன் அண்டு ஏஞ்சல் என்னும் ஒரு தொழிற்சாலையை வைத்து நடத்தி வந்தார். இத்தொழிற்சாலை மாஞ்செடரில் நடைபெற்று வந்தது. அதில் ஏஞ்சல் ஏஜெண்டாக இருந்தார். இதனால் முதலாளி, தொழிலாளி ஆகிய இரு திறந்தாரின் இயல்புகளைப் பற்றியும் நன்றாய் அனுபவத்தில் அறியக் கூடிய வசதி ஏஞ்சல்சுக்கு இருந்தது. இங்கிலாந்தில் தொழிலாள வகுப்பாரின் நிலைமை என்ற நூலை மார்க்சு எழுதுவதற்கு ஏஞ்சல்சின் அனுபவ அறிவே மிக்க உதவி செய்தது. ஏஞ்சல் தொழிலாளர் இயக்கத்தில் அளவுகடந்த அனுதாப முடையவராயிருந்தார். அவர் பார்மென் நகரில் உள்ள தன் தந்தையிடஞ் சென்று, தான் இனி தொழிற்சாலையைக் கவனிக்க முடியாதென்று கூறி வீட்டை விட்டு வெளியேறி பிரான் நகருக்கு வந்து சேர்ந்தார். இதற்குள் ஜெர்மன் அரசாங்கத்தாரின் வேண்டுகோளால், பிரான்சு அரசாங்கத்தார் மார்க்சையும் அவருடைய கூட்டுத் தோழர்களையும் வெளியேற்றி விட்டார்கள். மார்க்சும், ஏஞ்சல்சும் தொழிலாளர் சங்கத்தில் சேர்தல் 1845 ஆம் வருஷத்தில் பிரான்சு அரசாங்கத்தார் தம்மை நாட்டை விட்டு வெளியேற்றிய காரணத்தால் மார்க்சு பிரசல் நகரத்திற்கு வந்து சேர்ந்தார். ஏஞ்சல்சும் அவருடன் கூடவே வந்து சேர்ந்தார். இங்கு இவர்கள் சும்மா விருக்கவில்லை. தொழிலாளர் நன்மைக்காக மிகவும் மும்முரமாகப் பாடுபடத் தொடங்கினார்கள்; அவர்களுடன் நெருங்கிய சம்பந்தம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசெல்சி லேயே ஒரு ஜெர்மன் தொழிலாளர் நிலையத்தை நிறுவினார்கள். அந்த நிலையத்தின் மூலம் ஒரு சிறு பத்திரிகையையும் தொடங்கி நடத்தினார்கள். இவர்கள் தொழிலாளர்கள் சங்கத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்திருந்தார்கள். அப்பொழுது ஒரு மறைமுகமான சமதர்மச் சங்கம் இருந்தது. அதன் கிளைச் சங்கங்கள் பல ஐரோப்பிய நகரங்களிலும் மறைமுகமாக நிறுவப் பட்டு மறைமுகமாகவே வேலைசெய்து கொண்டு வந்தன. இந்த இரகசியச் சங்கத்திலும் மார்க்சும், ஏஞ்சல்சும் உறுப்பினர்களாகி வேலை செய்து கொண்டு வந்தனர். புர்தான் என்பவரின் கர்வத்தை அடக்குதல் அக்காலத்தில் புர்தான் என்னும் பெயருடைய ஒரு தொழிலாளர் இருந்தார். இவர் தாமே கல்வி கற்றவர்; மிகுந்த திறமைசாலி; சர்வாதிகாரித்துவமற்ற ஒரு கூட்டுறவு அரசாங்கம் இருக்க வேண்டும் என்னும் திட்டத்தை ஒப்புக்கொள்ளுபவர். இவர் சொத்து என்பது என்ன? - சொத்து என்பது கொள்ளை என்ற பெயருடன் முதல் முதலாக ஒரு புத்தகம் எழுதினார். இந்நூல் மிகவும் சிறந்ததென்று பலராலும் கொண்டாடப் பட்டது; இதனால் புர்தானையும் பலர் புகழ்வாராயினர். இப்புகழ்ச்சியால் தனக்கு யாரும் நிகரில்லை. தானே சிறந்த அறிவாளி என்று புர்தான் கர்வங் கொண்டிருந்தார். இவ்விஷயம் மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. இதன் பின்னர் வறுமையின் தத்துவம் என்னும் பெயருடைய மற்றொரு நூலைப் புர்தான் எழுதி முடித்தார். இந்நூலை மிகவும் மரியாதையுடன் மார்க்சுக்கு அனுப்பினார்; அதை ஆராய்ந்து அபிப்பிராயம் கூறும்படியும் கேட்டிருந்தார். இது போன்ற ஒரு சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த மார்க்சுக்கு இது மிகுந்த ஊக்கத்தையளித்தது. உடனே மார்க்சு புர்தானுடைய வாதங் களை மறுத்து எழுதினார்; புர்தான் எழுதியவை முழுவதும் பொருத்தமற்றவை; உண்மை யற்றவை; குற்றமுள்ளவை; தெளிவற்றவை என்று அக்காலத்தில் உள்ளவர் நம்பும்படி அவ்வளவு திறமையாக மறுத்துரைத்தார். இதனால் புர்தான் மிக்க வெட்கமடைந்தார். இப்பொழுதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளி வந்த பையன் என்னைத் தோல்வி யடையச் செய்து விட்டான் என்பதை அவர் இறக்கும் வரையிலும் மறக்கவேயில்லை. சமதர்ம அறிக்கை இதன்பின் மார்க்சும் ஏஞ்சல்சும் சேர்ந்து சமதர்ம அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அவ்வறிக்கையில் சமதர்மம் தோன்றிய வரலாற்றைப் பற்றியும், முதலாளி, தொழிலாளர் போராட்டத்தைப் பற்றியும், இனி சமதர்மக்காரர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விளக்கமாக வெளியிட்டிருந் தார்கள். அந்தச் சமதர்ம அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொருள் இதுவாகும்; மனிதர்களின் சரித்திரம் எப்பொழுதும் வகுப்புப் போராட்டத்தின் சரித்திரமாகவேயிருக்கிறது. முன்பு அரசனை நீக்கிப் பிரபுக்கள் அரசாட்சி செய்தார்கள். இப்பொழுது பிரபுக் களை நீக்கி முதலாளிகள் அரசாளுகிறார்கள். முற்காலங்களில் சிறிய பிரபுக்கள் பெரிய பிரபுக்களோடு போராடியிருக்கலாம். ஆனால் இப்பொழுது தொழிலாளிகள் முதலாளிகளோடு சண்டை பிடிக்கிறார்கள். ஜன சமூகத்தை இரண்டு திட்டமான பிரிவாகப் பிரித்து விடலாம். ஒன்று முதலாளிகள் கூட்டம்; மற்றொன்று தொழிலாளர்கள் கூட்டம். முதலாளிகள் பல தேசங்களில் உள்ள செல்வங்களையும் கைப்பற்றி உயர்ந்த நிலையை அடைந்துவிட்டார்கள். ஏழைகள் ஒரு புறம் மேலோங்கி வருகிறார்கள். இதனால் இருவருக்கும் தெளிவான வித்தியாசம் உண்டாகி விட்டது. முதலாளிகள் தொழிற்சாலைகளை உண்டாக்கிய காரணத்தால் ஒரு புதிய கூட்டம் கிளம்பிற்று; இதற்குத்தான் தொழிலாளர் கூட்டம் என்று பெயர். இக்கூட்டம் உண்டாகும் என்பது முதலாளிகள் எதிர்பாராத விஷயமாகும். இக்கூட்டத்திற்கு முதலாளிகள் பயப்படுகிறார்கள். இத்தொழிலாளர் கூட்டத்தால் தான் சமதர்மம் உண்டாகும். பணக்காரர்களுக்குப் பணம் அதிகரித்து அவர்கள் மேலும் பெரிய பணக்காரர்களாக ஆகும்போது சின்ன முதலாளிகள் எல்லாம் தொழிலாளர்களாகி விடுவார்கள். இவ்வாறு தேசத்தின் முழுச் செல்வமும் சிலர் கையில் போய்ச் சேர்ந்துவிடும். இதனால் தொழிலாளர் கூட்டம் பெருகிக் கொண்டே வருகின்றது. ஆகையால் சிறிய கூட்டத்தாரான பெரிய பணக்காரர்கள் ஒரு புறமும், பெரிய கூட்டத்தாரான ஏழை மக்கள் ஒருபுறமும் நின்று தங்கள் நன்மைக்கு வாதாடக் கூடியவர்களாகி விட்டார்கள். தொழிலாளர்கள் செய்யும் போராட்டம் படிப்படியாக வளர்ந்து வருகிறது. முதலில் ஒவ்வொரு தொழிலாளியும் தன்தன் குறைகளை முதலாளிகளுக்கு எடுத்துக்காட்டி அவை களை நீக்குமாறு வாதாடுகிறான். இதில் வெற்றி கிடைக்காத போது ஒரு தொழிற்சாலையில் உள்ள எல்லாத் தொழிலாளர் களும் ஒன்று சேர்ந்து போர் செய்கிறார்கள். இதன் பின் எல்லாத் தொழிலாளர் களும் ஒன்று கூடி அரசாங்கத்தையே தங்களுடைய அரசாங்கமாக்க முன் வருகிறார்கள். இதற்கு விவசாயிகளின் உதவியும் தொழிலாளர்களுக்கு அவசியமானதாகும். தொழிலாளர் அரசாங்கம் வந்த பிறகு எல்லோருக்கும் சம சுதந்திரம் கொடுத்து விடுவார்கள். தொழிலாளர்கள் மற்ற எல்லோரையும்விட ஏழைகளாயிருப்பதால் மற்றவர்களுடைய சொத்துக்களைத் தாங்கள் கொள்ளையடித்துக் கொண்டு விட வேண்டும் என்று எண்ணமாட்டார்கள். ஆகையால் தொழி லாளர்கள் வெற்றி பெற்றால் தான் சமதர்மம் ஏற்படமுடியும். இந்த அறிக்கை அவ்வளவு உற்சாகமாகப் பொதுமக்களால் வரவேற்கப்படவில்லை; ஆயினும் நாளடைவில் மக்கள் மனத்தில் இதன் உண்மை படிந்து ஓங்கி வளர்ந்து வந்தது. இக்காலத்தில் ஐரோப்பாவில் பலவித மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே வந்தன. பிற்போக்கான நிலையிலிருந்த சிறுசிறு கிராமங்களில் கூட மாறுதல் ஏற்பட்டன. நெசவுத் தொழிற் சாலைகள், சுரங்கத் தொழிற்சாலைகள், கைத்தொழிற் சாலைகள் முதலியன வளர்ச்சியடைந்தன. இத்தொழிற்சாலைகள் ஏராளமான தொழிலாளர்களைப் பெருக்கின. இத்தொழிலாளர் கள் பொருள்களை உற்பத்தி செய்பவர்கள் - பொருளின்றி வறுமையால் வாடி வதங்கினர். ஆனால் இத்தொழிற்சாலை முதலாளிகளிடம் ஏராளமான செல்வங்கள் குவிந்து கிடந்தன. இச்செல்வங்களால் ஜன சமுதாயத்திற்கு எள்ளளவும் பயன் உண்டாகவில்லை. ஏழை மக்களும், தொழிலாளர்களும், முதலாளிகளிடமும், அதிகாரிகளிடமும் சுரர்களிடமும் அகப் பட்டு நசுக்குண்டு கிடந்தனர். பிரான்சில் புரட்சி இந்த நிலையில் 1848ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாரிசில் (பிரஞ்சு தேசத் தலைநகரம்) ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டது. அப்பொழுது இருந்த அரசர் லூயி பிலிப் என்பவர். இக்காலத்தில் அடிக்கடி பொருளாதார நெருக்கடியில் மக்கள் துன்பமடைந்தனர். தொழிலாளர்களும், கூலி வேலைக்காரர் களும் வறுமையால் வருந்திக் கிடந்தனர். தங்கள் கஷ்டத்தைத் தீர்க்க அரசாங்கம் முன் வராமையால் ஆத்திரங் கொண்டிருந்தனர். இந்த வேளையில் அரசியல் சம்மந்தமான விருந்தொன்றை நடக்க வொட்டாமல் அரசன் தடுத்து விட்டான். இந்தச் சந்தர்ப்பத்தை ஆத்திரங் கொண்டிருந்த மக்கள் நழுவவிடாமல் போர் தொடுத்து விட்டார்கள்; ஜனங்களுக்கும், அரசாங்கச் சிப்பாய்களுக்கும் நேரடியாகப் போர் நடந்தது. கடைசியில் ஒரே நாளில் அரசனும் அவனைச் சேர்ந்தவர்களும் நாட்டைவிட்டு விரட்டப் பட்டார்கள். இதனால் பொது ஜனங்களுக்கு உண்டான மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் அளவில்லை. கடைசியாகப் பல திறப்பட்ட கொள்கையினரும் அடங்கிய ஒரு கூட்டுறவு அரசு நிறுவப்பட்டது. இந்த விஷயம் ஐரோப்பா முழுவதும் பரவியதும் ஒவ்வொரு நாடுகளிலும் புரட்சிகள் உண்டாயின. அரசாங்க அமைப்புகளில் மாறுதல் ஏற்பட்டன. சர்வாதிகார ஆட்சிமுறை குறைந்தது. ஜன நாயக ஆட்சிமுறைக்கு அடிகோலப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் மார்க்சு கூட்டத்தாருக்கு அளவு கடந்த மகிழ்ச்சியை அளித்தன. மார்க்சு இங்கிலாந்தையடைதல் இக்காலத்தில் மார்க்சு சும்மா இருக்கவில்லை. மார்க்சும் ஏஞ்சல்சும் ஐரோப்பா முழுவதும் சுற்றித் திரிந்து கொள்கை களைப் பரவச்செய்து வந்தார்கள். பிறகு மார்க்சு கலோன் நகரத்திற்குப் போய் ஒருபத்திரிகை நடத்தத் தொடங்கினார். இவரால் நடத்தப்பட்ட தினசரிப் பத்திரிகை மிகவும் பிரசித்தி பெற்றதாகிவிட்டது. அக்காலத்தி லிருந்த எல்லாப் பத்திரிகைகளையும் விட இது ஒவ்வொரு விஷயத்திலும் காரியத்தில் செய்து முடிக்கக் கூடிய சிறந்த யோசனைகளைத் தெளிவாக எழுதி வந்தது. இதனாலேயே பத்திரிகைக்கு அதிக மதிப்பிருந்தது. இச்சமயத்தில் பிரஷ்ய அரசாங்கத்திலிருந்த தேசீய சபை கலைக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக மார்க்சு வரிகொடா இயக்கம் ஒன்றைக் கிளப்பினார்; ஆயுத பலங்கொண்டு அரசாங்கத்தை எதிர்க்கும் படியும் பத்திரிகை மூலம் எழுதினார். இதனால் 1849 ஆம் ஆண்டில் இவர் மீது வழக்கு ஏற்பட்டது. இவ்வழக்கு ஒரு தனி நீதி மன்றத்தார் மூலம் விசாரிக்கப்பட்டுக் குற்றவாளி அல்லர் என்று விடுதலை பெற்றார். ஜுரிகள் இவர் குற்றவாளி அல்லர் என்று அபிப்ராயப்பட்டதே விடுதலைக்குக் காரணமாகும். ஆயினும் இவர் பிரஷ்யாவை விட்டு வெளியேற்றப்பட்டார்; அங்கிருந்து பிரான் தேசத்திற்குச் சென்றார். அங்கிருந்தும் விரட்டப்பட்டார்; பிறகு அக்காலத்தில் புரட்சிக்காரர்களுக்கும், ராஜத்துவேஷிகளுக்கும் புகலிடமாக இருந்த இங்கிலாந்து தேசத்தை அடைந்தார். மார்க்சின் வறுமை இக்காலத்தில் மார்க்சு மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தார். இங்கிலாந்தில் ஒரு சிறிய வீட்டில் தானும் மனைவியும் குடியிருந்தார்கள். கையில் வைத்திருந்த பொருள் முழுவதும் செலவாகிவிட்டது. வேறு வருவாய்க்கும் வழிஇல்லை. கடைசியாக அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டிரிபியூன் என்ற பத்திரிகைக்குக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். இதன் மூலம் கிடைத்த குறைந்த வருவாயைக் கொண்டு குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தார். இவருக்கு ஆங்கிலம் அதிகமாகத் தெரியாது. ஆயினும் சில மாதங்களில் நன்றாக ஆங்கிலம் எழுதக் கற்றுக் கொண்டார். இவருடைய ஆறு குழந்தைகளில் வறுமையின் காரணமாக மூன்று குழந்தைகளே உயிரோடிருந்தன. மனைவி உடல் நலமின்றி வருந்திக் கொண்டிருந்தாள். இந்நிலையிலும் இவரை முதலாளிகள் சும்மாவிடவில்லை. அவர் ஒரு அறிக்கையை எழுதுவதற்குக் காகிதமில்லாததால் தனது ஒரே ஒரு ஓவர் கோட்டை அடகு வைக்கும்படி நேர்ந்தது. அவருடைய ஒரு குழந்தை இறந்த போது அதை அடக்கஞ் செய்ய இரண்டு பவுன் கடன் வாங்கும்படி நேர்ந்தது. இந்தக் கஷ்டங்களையெல்லாம் பார்த்து அவருடைய மனைவி நானும் என்னுடைய குழந்தைகளும் இறந்து விட்டால் உங்களுக்கு கஷ்டம் இருக்காது என்று கூறுவாராம். ஏஞ்சல்சின் உதவி வறுமை காரணமாக மார்க்சு ஏஞ்சல்சின் உதவியை நாட வேண்டியிருந்தது. ஏஞ்சல்சும் தன்னால் இயன்ற வரையிலும் உதவி செய்து வந்தார்; மார்க்சுக்காகக் கட்டுரைகளும் எழுதிக் கொடுத்து வந்தார். ஆயினும் ஏஞ்சல்சுக்கும் சரியான வருமான மில்லை. தந்தையார் ஒரு முதலாளியாக இருந்தமையால் இவருடைய செய்கையை வெறுத்தார்; பணவுதவி செய்யவும் மறுத்தார். ஏஞ்சல் தனது புரட்சிக் கொள்கைகளைவிட்டு விட்டுத் தந்தையின் எண்ணப்படி வியாபாரத்தையும் கவனித்தால் தான் தந்தையின் செல்வத்திற்கு உரியவராக முடியும். இதனால் ஏஞ்சல்சும் தன்னுடைய நிலைமையையும் தன்னுடைய நண்பர் களின் நிலைமையையும் நன்றாக ஆலோசித்துப் பார்த்தார். தந்தைக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு வழியில்லையென்று கண்டார். ஆகவே தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைப்படி மான்செடார் நகருக்குச் சென்று அவரது தொழில் நிலைய வேலையை ஒப்புக்கொண்டார். இவ்வாறு புரட்சிக்காரராயிருந்த ஏஞ்சல் வறுமையைக் கருதி முதலாளியாகி விட்டார். இருபது ஆண்டுகள் வரையிலும் மார்க்சு ஏஞ்சல்சும் ஒருவரோடு ஒருவர் சேரவேயில்லை. ஆயினும் இருவருக்கும் கடிதப் போக்குவரத்து மாத்திரம் தவறாமல் நடை பெற்று வந்தது. ஆயினும் மார்க்சின் வறுமை முற்றும் ஒழிந்த பாடில்லை. ஏஞ்சல்சின் தந்தையார் 1860இல் இறந்து விட்டார். இதன் பின் அவர் மார்க்சுக்குத் தாராளமாகப் பணவுதவி செய்து வந்தார். பின்னர் ஏஞ்சல் தனது வியாபாரப் பங்கை விலைக்கு விற்று விட்டார். இதனால் ஏராளமான பணம் கிடைத்தது. இப்பணத்தைக் கொண்டு ஏஞ்சல் புரட்சிக் கொள்கைகளுக்கு உதவி வந்தார். மார்க்சுக்கும் வருஷம் 350 பவுன் வீதம் உதவி செய்து வந்தார். லண்டனில் மார்க்சு வறுமையோடு வாழ்ந்தாலுங் கூட அவருடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியேயில்லையென்று சொல்லி விட முடியாது. அவருடைய மனைவியும் குழந்தைகளும் அவரிடம் அளவு கடந்த அன்புடன் நடந்து கொண்டனர். தொழிலாளர்களும் இவருடைய சிறந்த அறிவுரைகளைக் கேட்டு அவைகளுக்கு மதிப்புக் கொடுத்து வந்தார்கள்; அவரிடம் அன்பும் பாராட்டி வந்தார்கள். நாளடைவில் இவருடைய புகழ் எங்கும் பரவவே வெளி நாடுகளிலிருந்தும் பலர் வந்து அவரைக் கண்டு உரையாடிச் சென்று கொண்டிருந்தார்கள். இவைகளால் மார்க்சும் மனமகிழ்ச்சியடைந் திருந்தார். இவர் இங்கிலாந்திலிருந்த காலத்தில் எழுதிய விஷயங்கள் இக்காலத்தில் உற்சா க மூட்டத்தக்கவையல்ல வாயினும் அக்கால அரசியல் நிலைமையில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கிக் கொண்டு வந்தன. இவர் எழுதி வந்த கட்டுரைகள், பத்திரிகா சிரியர்களாலும் அரசியல் வாதிகளாலும் நன்கு கவனிக்கக் கூடியனவாயிருந்து வந்தன. 1859இல் மார்க்சு ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இதில் முதலாளித்துவத்திற்கு எதிரான பொருளாதார உண்மை களைப் பற்றி எழுதியிருந்தார். இக்காலத்தில் டார்வின் அவர்களால் எழுதப்பட்ட உயிர் வகைகளின் ஆரம்பம் (Origin of species) என்ற புத்தகம் வெளி வந்தது. இந்த இரண்டு புத்தகங்களும் அக்காலத்திருந்த அறிவாளி களின் கவனத்தை இழுத்தன. ஆயினும் மார்க்சால் எழுதப்பட்ட புத்தகம் அதிகமாகப் பரவவில்லை. பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து இப்புத்தகம் மூலதனம் (Capital) என்ற புத்தகத்தின் முதற்பாகமாக வெளிவந்தது. மூலதனத்தின் மற்ற இரண்டு பாகங்களும் மார்க்சு இறந்த பின், 1867ஆம் ஆண்டில் ஏஞ்சல் சால் வெளியிடப்பட்டன. மார்க்சால் எழுதப்பட்ட மூலதனம் என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்கள் வருமாறு:- முற்காலத்தில் குடியானவர்களை அடிமைகளாக வைத்திருந்தது போல் இக்காலத்தில் தொழிலாளிகளை அடிமைப் படுத்தி வைத்திருக்க முடியாது. தொழிலாளிக்குச் சுதந்திரம் உண்டு; ஆனால் அவன் தன்னுடைய சுதந்திரத்தை அனுபவிக்க முடியவில்லை; அனுபவிக்க முயன்றால் பட்டினி கிடக்க வேண்டியது தான். ஆதலால் அவன்தன் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியாமல் குறைந்த கூலியை ஒப்புக் கொள்ள வேண்டியவனா யிருக்கிறான். இவ்வாறு தன் சுதந்திரத்தை விற்று விட்ட பிறகு அவன் முதலாளியின் அடிமையாகி விடுகிறான். அவன் மனிதனாகக் கருதப்படாமல் ஆடுமாடுகளைப் போலவே கருதப்படுகிறான். ஒரு மனிதனைத் தனது கூலியாளாக நியமித்துக் கொண்ட பின் அவனை அந்த முதலாளி மனிதனாகவே கருதுவதில்லை. ஆனால் அந்தக் கூலியாள் தன் உடம்பைக் கசக்கிப் பிழிந்து செய்யும் வேலையால் தான் முதலாளியின் காரியங்கள் நடக்க வேண்டியிருக்கின்றன; இருந்தும் அவனுடைய உணர்ச்சிகளைப் பற்றியோ, உரிமையைப் பற்றியோ முதலாளி கவனிப்பதே யில்லை. சொத்துள்ளவன் கூலியாட்களை ஏற்படுத்திக் கொள்ளு கிறான்; அவர்களைக் கொண்டு தன்னுடைய சொத்துக்களைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்கிறான். இதன் பொருட்டுத் தொழிலாளர்களை அதிக வேலை செய்யும்படி கட்டாயப் படுத்துகிறான். 8 அணா சம்பாதிக்க ஒரு தொழிலாளி 2 மணி நேரம் வேலை செய்வதாக வைத்துக் கொண்டால், முதலாளி அவனிடம் 8 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டு 8 அணா கொடுக்கிறான். இவ்வாறு தொழிலாளி 8 மணி நேரம் வேலை செய்வது 9 அணா கூலிக்காக அல்ல; முதலாளியின் சொத்தைப் பெருக்குவதற்கே யாகும். இந்த விஷயம் தொழிலாளர்களுக்குத் தெரியாததல்ல. அவர்களுக்குத் தெரிந்தது தான். ஆனால் அவர்கள் பிழைப் பதற்கு வேறு வழியில்லை. ஒரு முதலாளியை விட்டு மற்றொரு முதலாளியிடம் வேலைக்குப் போனால் அவனும் குறைந்த கூலிக்குத் தான் வேலை செய்யச் சொல்லுகிறான். ஆகையால் தொழிலாளியோ, அல்லது விவசாயியோ உணவின்றிப் பட்டினி கிடந்து இறப்பதற்குப் பதிலாகக் குறைந்த கூலிக்கு வேலை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். உலகில் உள்ள தொழிற்சாலைகள் எல்லாம் பணக்காரர் களுக்கு மேலும் மேலும் பணத்தைப் பெருக்கிக் கொடுக்கவே ஏற்பட்டுள்ளன; ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாக்கிப் பணக்காரர்களைப் பெருக்க வைக்கின்றன. அவைகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றவோ, தேடிக் கொடுக்கவோ ஏற்பட்ட வையல்ல. ஏழைத் தொழிலாளியின் நிலைமையை விட முதலாளி யின் நிலைமை உறுதியாகவும் அசைக்க முடியாததாகவும் இருக்கின்றது. இதனாலேயே தொழிலாளி பயமுடையவனாய் குறைந்த கூலி பெற்று வருந்தியுழைக்கின்றான். இந்நிலைமை தனிப்பட்ட ஒரு முதலாளியின் ஆசையாலோ அல்லது மோசத்தினாலே உண்டானதல்ல. உண்மையில் யாரேனும் ஒரு முதலாளி சரியான கூலி கொடுக்க முயன்றாலும் முடிவதில்லை. இந்தக் குறையும் எந்தத் தனிப்பட்ட மனிதரின் குறையும் அல்ல. இவையெல்லாம் பொது வாக முதலாளித்துவ சமூகத்தினால் ஏற்பட்ட குறையேயாகும். முடியுமானால் 24 மணி நேரமும் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று முதலாளிகள் கூறுவார்கள். ஆனால் இவ்வாறு செய்தால் தொழிலாளர்கள் எல்லாம் இறந்து போய் விட்டால் மேலும் மேலும் பணம் திரட்ட முடியாது; இதனால் தங்களுக்கே நஷ்டம் உண்டாகும் என்பதை முதலாளிகள் அறிந்திருக்கிறார்கள். ஆகையால் இரவில் வேலை வாங்காமல் விட்டு விடுகிறார்கள். தொழிலாளிகளின் உழைப்பால் மட்டிலும் கிடைக்கும் பணம் போதாதென்று இயந்திரங்களையும் கையாளுகிறார்கள்; இதனால் முதலாளிகளின் வருமானம் மிகப் பெருகிக் கொண்டு வருகிறது. இவ்வாறு முதலாளிகளிடம் பணம் பெருகப் பெருக ஏழைகளின் கூட்டமும் பெருகிக் கொண்டே போகிறது. பணத்தைப் பெருக்குவதற்கும் ஓர் அளவு வேண்டும். முதலாளிகள் ஏழைகளின் பொருள்களைச் சுரண்டிக் கொண்டு தங்கள் செல்வத்தை மாத்திரம் பெருக்கிக் கொண்டே போவார்களானால் இறுதியில் தங்களுக்கே ஆபத்தாக முடியும். ஏழைகள் பொருள்களை வாங்கக் கூடிய சக்தியில்லா திருப்பார்களானால் முதலாளிகளுக்கு லாபம் இல்லை. அவர்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்கு அதிக லாபங் கிடைக்காது. ஆகையால் முதலாளிகளுக்குச் செல்வம் பெருகப் பெருக லாபம் குறைகிறது. பெரிய தொழிற்சாலைகள் உண்டாவதனால் பல தொழி லாளிகள் ஓரிடத்தில் கூடுகிறார்கள். ஒற்றுமை உண்டாகிறது. இவர்கள் உண்மையை உணர்ந்து கொள்வதனால் ஒன்று கூடி முதலாளிகளுடன் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம் அதிகரிக்க முதலாளி தொழிலாளி வகுப்புப் போராட்டம் தோன்றி விடுகிறது. இவைகள் தான் மூலதனம் என்னும் புத்தகத்தில் உள்ள முக்கிய கருத்துக்கள். 1864-ஆம் ஆண்டில் லண்டன் மாநகரத்தில் ஒரு தொழி லாளர் மகாநாடு நடைபெற்றது. அதற்குப் பாரி நகரத்துத் தொழிலாளர்களும், இத்தாலி தேசத்துத் தொழிலாளர்களும், ஜெர்மனி தேசத்துத் தொழிலாளர்களும் வந்திருந்தார்கள். இக்கூட்டத்திற்கு மார்க்சும் போயிருந்தார். இக்கூட்டத்தில் அகில உலகத் தொழிலாளர் சங்கம் ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சங்கத்தின் வேலைகளை நடத்த ஒரு சிறிய சபையும் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சபையில் மார்க்சும் உறுப்பினராக இருந்தார். இந்தச் சங்கத்தின் சட்ட திட்டங்களை யெல்லாம் மார்க்சே எழுதி முடித்தார். அந்த மகாநாட்டில் மார்க்சு பேசிய பேச்சு மிகவும் சிறந்தது. அப்பேச்சில் அக்காலத்தில் இருந்த தொழிலாளர்களின் துன்பங் களையும், குறைகளையும் தெளிவாக விளக்கிக் கூறியிருக் கின்றார். இவர் விஷயங்களை எடுத்து விளக்கிய திறமையைக் கண்டு இவரையே அகில உலகத் தொழிலாளர் சங்கத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். இவருடைய முயற்சியினால் பல தொழிலாளர், சங்கங்கள் இந்த உலகத் தொழிலாளர் சங்கத்தோடு இணைக்கப் பட்டன. ஆயினும் தொழிலாளர் தலைவர்களுக்குள் பொறாமையும் விரோதமும் வளர்ந்து கொண்டே வந்தன. 1866ஆம் ஆண்டில் ஜினிவாவில் ஒரு மகாநாடு கூடிற்று. தொழிலாளர்களுக்குள் சச்சரவு நேரும் என்றும், அதனால் தொழிலாளர் கூட்டத்திற்கு அவமானம் உண்டாகும் என்றும் பயந்துகொண்டு மார்க்சு அந்த மகாநாட்டுக்குச் செல்லவில்லை. ஆனால் அந்த மகாநாட்டில் அப்படி யொன்றும் நடக்கவிலை. மிகவும் அமைதியாக மகாநாடு நடந்தது; தொழிலாளர் நன்மைக்கான பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதன் பிறகு அகில உலகத் தொழிலாளர் சங்கம் பலமடைந்தது; புகழும்பெற்றது. உலகத்தில் உள்ள பெரியவர்கள் எல்லாம் அச்சங்கத்தின் நடவடிக்கைகளைக் கவனிக்கத் தொடங் கினார்கள்; அது சம்பந்தமாக வெளிவரும் செய்திகளையும் விடாமற் படிக்க ஆரம்பித்தார்கள். இக்காலத்தில் தான் ஜெர்மனி தேசத்துக்கும் பிரான்சு தேசத் துக்கும் போர் நடந்தது. இந்தப் போர் முடிந்த பிறகு பாரி நகரத் தொழிலாளர்கள் பாரி கம்யுன், ஏற்படுத்தினார்கள். தொழிலாளர் களின் அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும்; தொழிலாளர்கள் அரசாங்கம் ஏற்பட்டால் தான் ஏழைகளின் துன்பம் நீங்கும்; என்று பாரி கம்யுன் ஏற்பட்ட பிறகு மார்க்சு தெரிந்து கொண்டார். அதனால் சில முக்கிய தொழிலாளர் தலைவர்களை மார்க்சு லண்டனுக்கு வரவழைத்தார். அவர்களுடன் இது பற்றி ஆலோசனை செய்தார். இவ்வாலோ சனையின் பயனாக, தொழிலாளர்கள் அரசியல் துறையில் இறங்கி வேலை செய்ய வேண்டும்; அரசாங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள். இந்தத் தீர்மானத்தைத் தொழிலாளர் தலைவர்கள் பலர் எதிர்த்தனர். இச்சமயத்தில் 1872ஆம் ஆண்டில் ஹேக் நகரத்தில் ஒரு தொழிலாளர் மகாநாடு கூடிற்று. அந்த மகாநாட்டில் மார்க்சின் கொள்கை வெற்றி பெற்றது. ஆயினும் தொழிலாளர்களுக்குள்ளிருந்த பகைமை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வந்தது. முதன் முதலில் தொழிலாளர் அரசாங்கத்தை ஏற்படுத்த முயன்றவர்கள் பிரான்சு தேசத் தொழிலாளர்களேயாவார்கள். பாரி நகரில் உள்ள தொழிலாளர்கள், 1871 ஆம் வருஷத்தில் தங்கள் அரசாங்கத்தின் கொடுமை தாங்க முடியாமலும் முதலாளிகளின் கொடுமையைப் பொறுக்க முடியாமலும் போர் செய்து பாரிசைக் கைப்பற்றி விட்டார்கள். அவர்கள் அரசாங்கத் தைக் கைப்பற்றியவுடன் கீழ்கண்ட சட்டங்களைச் செய்தார்கள். 1. மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள். 2. மதத்துக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை. 3. மததாபனங்களுக்கு அரசாங்கத்திலிருந்து கொடுக்கப் பட்டு வந்த பணவுதவி நிறுத்தப்படும். 4. எல்லாப் பிள்ளைகளுக்கும் இலவசமாகக் கல்வி கற்பிக்கப் படும். 5. தொழிலாளர்களைத் துன்புறுத்தி இரவில் வேலை வாங்கக் கூடாது. 6. தொழிலாளர்களுக்குத் தண்டனையளிக்கக் கூடாது. 7. இயந்திர சாலைகள் தொழிற்சாலைகள் எல்லாம் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவைகள். 8. எந்த அரசாங்க உத்தியோகதருக்கும் 200 ரூபாய்க்கு மேல் சம்பளம் இல்லை. 9. வயது வந்த ஆண் பெண் அனைவருக்கும் வாக்குரிமை யுண்டு. 10. அரசாங்க உத்தியோகதர்கள் எல்லோரும் ஜனங்களின் விருப்பப்படி நடந்துகொள்ள வேண்டும். 11. பொது மக்கள் சர்க்காருக்குக் கொடுக்க வேண்டிய கடன்களும், மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கடன்களும் நீக்கப்பட்டுவிட்டன. 12. இரண்டு ஆண்டுகளுக்கு வரிப்பணம் தள்ளிக் கொடுக்கப் பட்டுவிட்டது. 13. அடமானம் வைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டன. 14. அயல் நாட்டினருக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டது. 15. பள்ளிக் கூடங்களில் மத சம்பந்தமான பாடங்களைப் போதிக்கக் கூடாது. 16. ஏழைத் தொழிலாளர்களைக் கொண்டு மற்றவர்கள் பணம் சம்பாதிக்கக் கூடாது. 17. ஏழைத் தொழிலாளர்களுக்குத் தொழில் செய்வதற்கு வேண்டிய கருவிகள் இனாமாகக் கொடுக்கப்படும். தொழிலாளர்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றியிருந்தது 72 தினங்களேயாகும். இந்த எழுபத்திரண்டு தினங்களில் இவ்வளவு சட்டங்கள் செய்யப்பட்டு அமுலுக்கும் கொண்டு வரப்பட்டன. பிறகு அரசாங்கத்திலிருந்த சில தந்திரசாலிகளாலும், தொழிலாளர் சங்கங்களின் பலக் குறைவினாலும் தொழிலாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். மீண்டும் அரசாங்கம் முதலாளிகளின் ஆதிக்கத்திற்குட்பட்டது. தொழிலாளர்கள் தோற்கடிக்கப் பட்டவுடன் நடந்த கலகத்தில் ஒரே வாரத்தில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். லட்சத்திற்கு மேற் பட்ட தொழிலாளர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். இவ்வாறு 1871 ஆம் ஆண்டில் பாரிசில் கம்யுன் தோல்வி யடைந்த பிறகு எல்லா நாடுகளிலும் தொழிலாளர்களுக்குக் கஷ்டம் உண்டாயிற்று. பிறகு 1876 ஆம் ஆண்டில் உலகத் தொழிலாளர் சங்கமும் கலைந்து விட்டது. இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மார்க்சுக்கு மிகவும் மனத்து யரை உண்டாக்கிற்று. அவர் தமது வாழ்நாள் முழுவதும் செலவு செய்து எழுதிய மூலதனம் என்னும் புத்தகம் வெளிவந்தவுடன் அவர் எதிர்பார்த்த அளவு அப்புத்தகம் பாராட்டப்படவில்லை. இதனாலும் மனமுடைந்தார். 1878 ஆண்டுக்குப் பிறகு அவரும் அவருடைய மனைவியும் நோயுற்றிருந்தமையால் ஒரு வேலையும் செய்ய முடிய வில்லை. கடைசியாக அவர் மனைவி 1881 டிசம்பரில் இறந்தார். மார்க்சுக்கு 3 பெண் குழந்தைகள் இருந்தன. அவர்களின் இரண்டு பெண்களைத் தொழிலாளர் தலைவர்கள் இருவருக்கே மணஞ்செய்து கொடுத்திருந்தார். அவர்கள் தன் விருப்பப்படி நடப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர்கள் மார்க்சின் விருப்பப்படி நடக்காமல் தங்கள் விருப்பப்படியே நடந்து கொண்டார்கள். இவ்வாறு குடும்ப சம்பந்தமாகவும் அவருக்கு மனக்கவலை ஏற்பட்டது. கடைசியாக மார்க்சு 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14ஆம் தேதி இறந்தார். கார்க்கியும் இந்தியாவும் ஏ. மிர்னோவா என் உலகக் கண்ணோட்டத்தை, புத்தகங்கள் மேன் மேலும் விரிவடையச் செய்கின்றன. மிகச்சிறந்த பணிகளை ஆற்றுவதில் ஈடுபட்டுள்ள மனிதன் எவ்வளவு பெரியவன் மற்றும் அற்புதமானவன் என்பதையும், இவ்வுலகில் அவன் எவ்வளவு சாதனைகள் புரிந்துள்ளான் என்பதையும், அந்தச் சாதனைகளை அடைவதற்கு அவன் எத்தனை துன்பங்களை அநுபவித்துள்ளான் என்பதையும், புத்தகங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளன என்று மார்க்சிம் கார்க்கி எழுதுகிறார். அவர் நூல்களைப் படித்துக் கொண்டேயிருந்தார்; இதன் விளைவாக எல்லாவற்றையும் தமது சொந்தக் கண்களால் காணவேண்டும் என்ற ஆவல் அவரிடம் அதிகரித்தது. அவர் ரஷ்யாவின் ஐரோப்பியப் பகுதி முழுவதும் கால் நடையாகவே சுற்றிப்பார்த்தார்; பல ஐரோப்பிய, அமெரிக்க நகரங்களையும் பார்வையிட்டார். தாவர இயலாளர் கிரேனோவ் குழுவுடன் இலங்கை, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளைக் காண விரும்பு கிறேன் என்று சென்ற நூற்றாண்டின் இறுதியில் கார்க்கி கூறினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை. எனினும் கீழை நாடுகளின் வாழ்க்கை, கலாசாரம், தத்துவம் பற்றிய நூல்களைப் படிப்பதன் மூலம் அவரது ஆவலைத் தணித்துக் கொண்டார். மாகோவில் கார்க்கி வாழ்ந்த இல்லம் ஒரு பொருட் காட்சிக் கூடமாக விளங்குகிறது; அங்கே 10,000 மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட கார்க்கியின் நூலகம் உள்ளது. உலகெங்கிலும் சுதந்திரத்திற்காகப் போராடும் வீரர் களுடன் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்பது கார்க்கியின் குறிக்கோள்களில் ஒன்றாகும். எனவே, ரஷ்யத்தொழிலாளர்களின் போராட்டத்தை அவர் உலகத் தொழிலாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். தாய் என்ற அவரது நாவலில் இதை அற்புதமாகச் சித்தரித்து உள்ளார். சமகாலம் சோவ்ரெமென்னிக் (சமகாலம்) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக கார்க்கி இருந்தார். அப்பொழுது அயல்நாட்டுச் செய்தி தொகுப்பு என்ற பகுதியை அவர் எழுதி வந்தார். அப்பகுதியில் தான் மட்டும் எழுதாமல், சர்வதேச புரட்சிகர இயக்கம் மற்றும் விடுதலை இயக்கத்தின் பிரபல தலைவர்களை யும் அதில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்திய முற்போக்கு இயக்கத்தின் பிரதிநிதிகளான கிருஷ்ணவர்மா, பி.ஆர். காமா முதலியோருடன் 1912இல் இவர் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். அப்பொழுது கார்க்கி எழுதினார்... ஆங்கில ஆட்சிக்கு எதிரான இந்தியர்களின் சுதந்திரப் போராட்ட இயக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. கங்கைக் கரையில் ஆங்கில ஆட்சி காலாவதியாகி விட்டது என்றும், இந்தியாவின் அரசியல், சமுதாய நிர்வாகத்தை இந்தியர்களே மேற்கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது என்றும், இந்தியாவில் மேன் மேலும் பல குரல்கள் உறுதியுடன் ஒலித்து வருகின்றன. காந்தியைப்பற்றி கட்டுரை ஒன்றை எழுதுமாறு 1923இல் பிரெஞ்சு எழுத்தாளர் ரோமன் ரோலந்தியிடம் கார்க்கி கேட்டுக் கொண்டார். 1923இல் வெளிவந்த பெசோதா என்ற சஞ்சிகை யின் முதலாவது, இரண்டாவது இதழ்களில் ரோலந்தின் கட்டுரையைக் கார்க்கி வெளியிட்டார். 1918 ஆகடில் கார்க்கி தலைமையில் உலக இலக்கியப் பதிப்பகம் நிறுவப்பெற்றது. அற்புதமான கீழ்த்திசை இலக்கியங் களை ரஷ்ய வாசகருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது இதன் நோக்கங்களில் ஒன்றாகும். இந்திய மக்கள் பகுதியில், இந்தியாவின் 25 பேரிலக்கியங்களையும், நவீன இலக்கியங் களையும் இப்பதிப்பகம் வெளியிட்டது. 1919-1924 ஆம் ஆண்டு களின் போது, பல தொகுப்புக்களாக இந்நூல்கள் வெளிவந்த துள்ளன. மனித உரிமைகளின் காவலன் மனித உரிமைகளின் காவலன் மார்க்சிம் கார்க்கி என்று 1905இல் மகாத்மா காந்தி குறிப்பிட்டார், ரஷ்யப் புரட்சி எழுத்தாள ரான கார்க்கியைப் பற்றி இந்திய மக்களுக்கு முதன் முதலில் அறிமுகம் செய்தவர்களில் அவரும் ஒருவர். தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆங்கிலத்திலும் குஜராத்தி மொழியிலும் வெளியிடப்பெற்ற இந்தியன் ஒப்பீனீயன் என்ற பத்திரிக்கையில் காந்தி எழுதினார்; அநீதியையும் அடக்கு முறையையும் எதிர்க்கும் வீர மக்கள் ரஷ்யாவில் உள்ளனர். சில காலத்திற்கு முன்பு அங்கே வெகுஜன எழுச்சி ஒன்று நடை பெற்றது. அதில் முக்கிய பங்கெடுத்தவர்களில் கார்க்கியைப் போல் ஐரோப்பாவில் இன்று எவருமே போராடவில்லை என்று கூறப்படுகிறது. 1917ஆம் ஆண்டுக்கு முன்பே கார்க்கி நூல்களில் ஆங்கில மொழி பெயர்ப்புக்கள் சிலவற்றை இந்திய மக்கள் அறிந்திருந்தனர். ஆனால், 1920-1930 ஆம் ஆண்டுகளின் போது கார்க்கியின் நூல்கள் இந்தியாவில் பிரபலமாயின. 1925இல் தாய் என்னும் கார்க்கியின் நாவல் சுருக்கம், வங்காளி மொழியில் வெளிவந்தது. 1930ஆம் ஆண்டுகளில் தொடக்கத்தில், சந்திரபால் ஜவ் ஹாரி இந்நாவலை இந்தியில் மொழி பெயர்த்தார். 1930 ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஷாவினாத் பாண்டே என்பவர், அதை மீண்டும் இந்தியில் மொழி பெயர்த்தனர். 1934இல் லிங்கராஜீ என்பவர், அதைத் தெலுங்கு மொழியில் வெளியிட்டார். 1940 ஆம் ஆண்டுகளின் போது, அன்னை என்ற பெயரில் ப. ராமசாமியும், தாய் என்ற பெயரில் ரகுநாதனும் அதைத் தமிழில் மொழி பெயர்த்தனர். பிரபாகர் மாச்வே மராத்தி யிலும், நிரேந்திர சிங்சோச்சா பஞ்சாபியிலும் மொழி பெயர்த்தனர். பின்னர் குர்பக்ஷ்சிங் அதை மீண்டும் பஞ்சாபில் மொழி பெயர்த்தார். 1946 இல் மக்மூர் ஜலந்தரி என்பவர் அதை உருதுவில் மொழி பெயர்த்தார். 1950 ஆம் ஆண்டு முதல் 11 இந்திய மொழிகளில் கார்க்கியின் படைப்புக்கள் சுமார் 100 தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன; இவை மாகோவிலுள்ள கார்க்கி பொருட்காட்சி யில் இடம் பெற்றுள்ளன. சென்ற பத்தாண்டுகளின் போது, கார்க்கியின் நாடகங்கள் மொழிபெயர்ப்பு வடிவில், இந்தியாவின் பல பாகங்களில் நடிக்கப் பெற்றுள்ளன. இந்திய நாடக மன்றங்களும் கலைஞர்களும் கார்க்கியின் நாடகங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். இந்தக்கட்டுரை : - சோவியத் சிறப்புக்கட்டுரை, ஜூலை 1975 திரு. ஏ. மிர்னோவா எழுதியது. அவர்களுக்கு என் நன்றி. ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் (1940) அணிந்துரை தமிழ்ப் பேரறிஞர் சாமி சிதம்பரனாரின் ஆபுத்திரன் பகுத்தறிவு நெறியைப் பாரில் நிலைபெறச் செய்யும் நல்லதொரு நாடகம். சமூகத் தொண்டு சாதியின் பேராலும், சமயத்தின் பேராலும், சமயம் கற்பித்த கடவுளாரின் பேராலும் நடை பெறுதல் என்பது இயலாது. சாதி மதச் சழக்குகளை விட்டு அருள் வழி நிற்பவரே அதனை இனிய வகையில் நிறைவேற்ற முடியும். இவ்வுண்மையை வற்புறுத்தவே ஆபுத்திரன் பாத்திரத்தைச் சாத்தனார் தம் மணிமேகலைக் காப்பியத்தில் இடம் பெறச் செய்துள்ளார். முதல் நூலின் கருத்திற்கு மாறாக எதுவும் புகுத்த விரும்பாத ஆசிரியர் இந்நாடகத்தில் செழுங் கலை நியமத்துச் சிந்தாதேவியையும், வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது தான் தொலைவில்லாத் தகைமையதான. அமுதசுரபியையும், அறிவின் துணையால் அதிசயத் செயல்பல புரி விஞ்ஞானிகள் பொருந்துவதற் கிடமிலாத், தேவருலகத்து இந்திரனையும் இடம்பெறச் செய்துள்ளார்; இருந்தாலும், கலையுரைத்த கற்பனையைப் படிப்போர் நிலையெனக் கொண்டு மயங்காத வகையில் அச் செயலைத் திறம்படச் செய்துள்ளார். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ இம் மாநிலத்தே என்ற ஆழ்கடல் சோதனைப் புகழ் அருந்தமிழ் மூதாட்டி ஔவையின் கேள்விக்கு ஆவியுலகத் தொடர்பாளர் எவரும் அறிவியல் வழிநின்று இன்று வரை விடை சொன்னதில்லை! இந்த உண்மையை நன்குணர்ந்த ஆசிரியர் கங்கைக் கரைச் சமயங்கள் பேசும் மறுபிறப்புக் கதையைக் காவிரிக் கரையில் கட்டவிழ்த்துவிட மனமில்லாதவராக, ஆபுத்திரன் அடுத்த பிறப்பில் ஆவின் வயிற்றில் பிறந்த வரலாற்றைக் கூறாது விடுத்துவிட்டார்! ஆசிரியர் பகுத்தறிவுச் செம்மல் தந்தை பெரியாரின் வழி நிற்பவர் அல்லரோ? ஆம் அழுத்தந் திருத்தமாக, பெண்ணே உன்மொழி பேதமை! தவறாம் மண்ணில் விலங்குகள் மனிதக் குழந்தைகள் பெறுதல் இயல்பல பேசுவர் பல கதை! எனக் குழந்தை ஆபுத்திரன் முன்னர் அந்தணன் பூதியைப் பேசச் செய்கிறவர் எங்ஙனம் ஆபுத்திரனை உண்மையிலேயே பசு வயிற்று மகனாகப் பிறக்கச் செய்வார்? இன்றைய தமிழன் நிலை மிகவும் இரக்கத்திற்குரிய ஒன்றாகும். இங்குக் காவிரி நீருண்டு வளர்ந்த தமிழ்க் குழந்தை களைப் பரப்பு நீர்க் காவிரிப் பாவை தன் புதல்வர் எனக் குறிப்பிடும் இளங்கோக்களைக் கூடக் காவிரி நீர் கங்கை நீர் ஆதலால் கங்கையின் புதல்வரைக் காவிரியின் புதல்வர் என்றார் என மூளைச் சலவை செய்யப் பெற்றுக் குழம்பும் அடியார்க்கு நல்லார்கள் வழிநின்றே காணவேண்டியிருக்கிறது. இந்நிலையில் தமிழ் மக்கள் தமிழ்மொழியின் சிறப்புப் பற்றியும், தமிழ்ப் பண்பாட்டின் மேன்மை பற்றியும் உணர்ந்து மகிழ அறிஞர் சிதம்பரனாரின் ஆபுத்திரன் பெரிதும் துணை செய்வான் என்பது உறுதி. கொண்டல் சு. மகாதேவன்,பி.எ.சி. தமிழ்வளர்ச்சி இயக்குநர், சென்னை-1. பாராட்டுரை தமிழறிஞர் சாமி சிதம்பரனார் அவர்கள் சிறந்த கவிஞரா கவும் திகழ்ந்திருக்கிறார் என்பது பலருக்கு வியப்பை ஊட்டும். தமது இலக்கியக் கட்டுரைகளால், தமிழ் மொழிக்கு வளஞ் சேர்த்த இந் நூலாசிரியர், தமது கவிதைகளாலும் தமிழன்னைக்கு அணி பூட்டியிருக்கிறார். தொடக்கத்தில் இவர் பல ஏடுகளில் தம் கவிதைகளை எழுதி வெளியிட்டிருக்கிறார். சில காவியங்களை எழுதி வைத்திருந்தும் பதிப்பாளர்கள் ஆர்வம் காட்டாததால், அவை வெளிவராமற் போயின. அறிஞர் சாமி சிதம்பரனாரின் கட்டுரை நூல்கள் விற்ற அளவு கவிதை நூல்கள் விற்பனையாகா என்று கருதியதால், அவற்றைப் பதிப்பாளர்கள் வெளியிட முன்வர வில்லை. ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் என்ற இந்நூல், மணிமேகலையில் வரும் ஒரு கிளைக் கதையை நாடகக் காப்பியமாக விரித்து எழுதப் பெற்றதாகும். தமிழில் நாடகக் காப்பியங்கள் குறைவு. மனோன்மணீயத்திற்குப் பிறகு இத்துறையில் வந்த நூல்கள் மிகக் குறைவு; வந்தவற்றில் எவையும் சிறந்து விளங்கவுமில்லை, இக் குறையை யுணர்ந்தே அறிஞர் சாமி சிதம்பரனார் அவர்கள் இத்துறையில் தம் சிந்தனையைச் செலுத்தியிருக்கிறார். ஆனால் புத்தகம் வெளியிடுபவர்கள் ஊக்கப்படுத்தாதன் காரணமாக அவர் இரண்டொரு காப்பியங்களுக்குமேல் எழுதவில்லை என்று எண்ண வேண்டியிருக்கிறது. எழுதிய நூல்களும் வெளிவராதிருந்த நிலையில், அவர் மேலும் எழுத முயலா திருந்ததில் வியப்பில்லை. இச் சிறந்த நூல்களை அவர் தம் காலத்திலேயே அச்சேற்றிப் பார்க்க முடியாது போயிற்று. இப்போது அவர் தம் அருமைத் துணைவியார் சிவகாமி சிதம்பரனார் அவர்கள், தம் கணவரின் நூல்கள் எல்லாவற்றையும் தாமே பதித்து வெளியிடுவதென்ற உறுதி யேற்றிருக்கின்றார்கள். அறிஞரின் கையெழுத்துப் படிகளையெல்லாம் பொன்னே போல் போற்றிப் பாதுகாத்து வந்துள்ள அம்மையார் அவர்கள் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடுவதென்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அம்மையாரின் இத்துணிவுக்குத் தொடர்ந்து ஆதரவு காட்டுவதன் மூலம், தமிழ் மக்கள் அறிஞர் சாமி சிதம்பரனாரின் சிறந்த கருத்துச் செல்வங்களை முழுதும் அடைந்து பயனுற முடியும். ஆபுத்திரன் என்ற இக்கதை நம்புதற்கியலாத சில கற்பனை வரலாறுகளைத் தன்னகத்தே கொண்டது. இக்கதையையே அறிஞர் சாமி சிதம்பரனார் சிறந்த அறிவுக் கருத்துக்களைப் பரப்புவதற்குத் துணையாகக் கொண்டிருக் கிறார்கள். தம்முடைய கவிதை வரிகளிலே ஆங்காங்கே அவர்கள் அறிவு மழையைப் பொழிந்திருக்கிறார்கள். ஆபுத்திரனைச் சிறு குழந்தையாய்க் கண்ட கோமதி என்ற பெண், அது பசுப் பெற்ற குழந்தை என்று கருதுகிறாள். அதற்கு அவள் கணவன் பூதியென்பான், அதை மறுத்து அறிவுரையாற்றுகின்றான். மனைவியின் மூடக் கருத்தினை மறுத்து அவன் பசுவின் மகன் அல்லன் என்று எடுத்துக் காட்டுகிறான். யாரோ பெற்றுப் போட்டுவிட்டுச் சென்ற பிள்ளையை ஒரு பசு தன் நாவால் நக்கிக் கொடுத்து, அழுகைத் துன்பம் ஒழித்து ஏழு நாள் வரை பால் கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறது. இது நிகழக் கூடியதே. வடலூர் வள்ளலார் கூறும் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்ற தத்துவத்தின் கருத்தை அப்பசு செயற்படுத்தி யிருக்கிறது. ஆறறிவில்லாத பசுவாயினும் ஆன்ம உணர்வின் காரணமாக, கைவிடப்பட்ட குழந்தையின்பால் நேயம் கொண்டு, அதைக் காப்பாற்றியிருக்கிறது, இந்த உள்ளுணர்வு, சில மனிதர்களிடம் காணப்படாவிட்டாலும், விலங்குகளிடம் காணப்படுகின்றது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. தன் கன்றுக்கு மட்டுமல்லாது மக்களுக்கும் பால் கொடுத்துக் காப்பாற்றும் அன்னை அனைய பசுவினை நன்றி பாராட்டாது வேள்வியில் கொன்றுண்ணப் புகுந்த வேதியர் களின் செயலைக் கண்டு மனம் புழுங்கிய ஆபுத்திரன், வேள்விக் காகக் காட்டப் பெற்றிருந்த பசுவினை ஓட்டிக் கொண்டு போய் விடுகின்றான். வேதியர்கள் அவனைப் பிடித்து விடுகின்றனர். அவன் செயலைப் பழிக்கின்றனர். உலகில் மழை பொழிவதற்காகவே தாங்கள் வேள்வி நடத்துவதாகக் கூறுகின்றனர், பசுவைக் கொன்று வேள்வி செய்வது உயிர்க் கொலையல்ல; உயிர்க் கருணை என்று வாதிடு கின்றனர். கொல்லப்படும் அப்பசுவும் சுவர்க்கம் அடையும் என்கின்றனர். அப்போது ஆபுத்திரன் அறிவு சான்ற ஒரு கேள்வி கேட்கின்றான், உண்மையில் வேள்வியில் நீங்கள் கொல்லும் பசு சுவர்க்கம் அடைவதாயின், நீங்கள் மந்திரம் சொன்னவுடனே அது உயிர் பிரிந்திடல் வேண்டும். ஆனால், நீங்கள் அல்லவா வாளால் வெட்டிக் கொல்கிறீர்கள். இதுவரை நடந்த வேள்விகளி லெல்லாம் என்றாவது, வாளால் வெட்டாமல் உயிர் பிரிந்தது உண்டா? உங்கள் கூற்றை எப்படி நம்புவது? என்று கேட் கின்றான். இந்த அறிவுரைக்கு மறுவுரை கொடுக்க இயலாத வேதியர்கள் அவனைப் பலவாறு பழித்துரலக்கின்றனர். தன் குலத்தவரை எதிர்த்துக் கொண்ட ஆபுத்திரனை அவனை வளர்த்த வேதியனும் வீட்டை விட்டு விரட்டி விடுகின்றான். ஆதரவு அற்றுப் பிச்சையெடுக்கப் புகுந்த ஆபுத்திரனின் பிச்சை யோட்டில், கல்லைப்போடும் வேதியர்களைக் காணும் போது, இப்படிப் பட்ட அறக் கொடியர்களும் நம் நாட்டில் வாழ்ந்திருக்கிறார்களே என்று நெஞ்சு கொதிக்கின்றது. தன்னை நாடி வந்தோர்க்கு உதவ முடியவில்லையே என்று வருந்தும் ஆபுத்திரன் முன் சிந்தாதேவி என்ற தெய்வம் தோன்றி அமுதசுரபியைக் கொடுக்கின்றது. நல்லெண்ணம் கொண் டார்க்குத் தெய்வம் உதவி செய்யும் என்ற இந்தக் கற்பனையை அறிஞர் சாமி சிதம்பரனார், அப்படியே தம் நூலிலும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். பகுத்தறிவுவாதியாகிய சாமி சிதம்ப ரனார் இக்கூற்றை எப்படி ஏற்றுக் கொண்டார். பசுவின் வயிற்றில் மனிதக் குழந்தை என்ற கற்பனையை ஏற்றுக் கொள்ள முடியாத அறிஞர் அமுத சுரபியை ஏற்றுக் கொண்டுவிட்டார். இது எதைக் காட்டுகிறது. நல்லெண்ணங் கொண்டார்க்குத் தெய்வம் அருள் புரியும் என்ற கருத்தில் தீதில்லை என்று அறிஞர் கருதுகின்றார் என்பதையே இது காட்டுகின்றது. கற்பனைகளே யாயினும் நல்லனவற்றை அறிஞர்கள் மறுப்பதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இந்திரன் சுவர்க்கத்துக்கு ஆபுத்திரனை அழைக்கும் போது, அவன் மறுத்துவிடுகின்றான். தன்னல வாதிகள் நிறைந்த உன்னுலகம் எனக்கு வேண்டாம்; பிற உயிர் காக்கும் பணி செய்து கொண்டு இங்கேயே இருப்பேன் என்று கூறுகின்றான். ஆபுத்திரனின் நல்ல உள்ளத்தை இங்கே நாம் தெளிவாக உணருகின்றோம். தன் அழைப்பை மறுத்த ஆபுத்திரனுக்குத் துன்பங் கொடுக்கும் எண்ணத்தோடு இந்திரன் மழை பொழியச் செய்து நாட்டை வளமாக்குகின்றான். நல்லவர்கள் பால் ஏற்படும் சினமும் நன்மையையே விளைக்கும் என்பதற்கல்லவா இந்தக் கற்பனை சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. இவ்வாறு சிறந்த கற்பனைகளை ஏற்றுக் கொள்ளும் ஆசிரியர், தீய கற்பனைகளைச் சாடப் பின் வாங்கவில்லை. கடலில் நீராடினால் உடற்பிணி நீங்குதல் உண்டு; ஊர்ப்பழி எவ்வாறு நீங்கும் என்று கேட்கிறார். கற்பையிழந்தவள் அப்பழி நீங்கக் கன்னியாகுமரி ஆட வருகிறாள். அவளைப் பார்த்துக் கருப்பனும் சிவப்பனும், ஆட்டம் காட்டும் ஆழ்கடற் குமரியில் படிவோர் உடற் பிணி நீங்கி நற்பண்பை அடைதல் கூடும்; அழுக்கும் நீங்கும்; ஊரினர், நாட்டினர், உறவினர், அறிஞர், ஆரும் சிரிக்கும் அரும்பழி எங்ஙனம் ஒழியும்? வியப்பே! உரலை விழுங்கினோன், அழிதரச் சுக்குநீர் அருந்தல் போன்றதே! என்று கேட்டு எள்ளி நகையாடுகின்றனர். இவ்வாறு ஆங்காங்கே அறிவுக் கருத்துக்களைப் பொழிந்து இதனைப் பெரும் பயனுடைய நூலாக்கியிருக்கின்றார் அறிஞர். சாமி. சிதம்பரனார். இந்நூலின் மூலம், தமிழ்ப்பற்று, தமிழ் நாட்டுப் பற்று, தமிழர் பண்பாட்டுப் பற்று ஆகியவை வளரும் என்பது உறுதி. பள்ளிகளிலும், பொருட் காட்சிகளிலும் இக்கவிதை நாடகத்தை நடித்தால், சிறந்த கருத்துக்களை நாட்டில் பரப்ப முடியும். - நாரா நாச்சியப்பன் காணிக்கை அறியாமை இருளில் மூழ்கிக்கிடந்த தமிழர்களின் அறிவுக்கண் திறந்த தன்மான இயக்கத் தந்தை பெரியார்-நாகம்மையார் ஆகியோருக்கும் சீர்திருத்த உள்ளங்களாம் என் அன்பார்ந்த தந்தையார் குப்புசாமிபிள்ளை தாயார் நாகம்மாள் ஆகியோருக்கும் படையல். ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் நாடகமாந்தர் அறிமுகம் அபஞ்சிகன் : காசியில் வாழும் அந்தணன் சாலி : அபஞ்சிகன் மனைவி மாதவன் : வேலை ஆள் ஆபுத்திரன் : கொற்கையை அடுத்த இடையர் சேரியில் பிறந்த குழந்தை. கருப்பன், சிவப்பன், வேதியன் பொன்னன் முத்தன் மற்றும் பாண்டிய நாட்டு மக்கள் பூதி : வயனங்கோட்டு அந்தணன் கோமதி : பூதியின் மனைவி. அனந்த சாத்திரி குப்பு சாத்திரி கோபு சாத்திரி வயனங்கோட்டில் வாழும் சுப்பு சாத்திரி வேத பிராமணர்கள் கிட்டு மற்றும் இந்திரன், சாவகத்தீவின் ஒரு வணிகன் முன்னுரை ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் என்னும் இந் நாடக நூல் 11 காட்சிகளையுடையது. முழுவதும் அகவற் பாவால் ஆகியது. இக் கதை, ஐம்பெரும் காவியங்களுள் ஒன்றாகிய மணிமேகலையில் வந்துள்ள ஒரு கிளைக்கதை. மணிமே கலையில், ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை, பாத்திர மரபு கூறிய காதை என்னும் பகுதிகளில் இக்கதை உள்ளது. இக்கதையையே, நாடகத்திற்கேற்பச் சிறிது விரித்து எழுதப் பட்டது இந்நூல். இதில் பல புதிய கருத்துக்கள் ஆங்காங்கே புகுத்தப்பட்டுள்ளன. சீர்திருத்த நோக்கமே இதற்குக் காரணம். முதனூல் கருத்துக்கு மாறாக எதுவும் புகுத்தப்படவில்லை. முதனூல் கருத்தை விரிப்பதே இதில் உள்ள புதிய கருத்துக்களின் நோக்கம். முதனூற் கதையைச் சுருக்கிக் கதைச் சுருக்கம் என்னும் பெயரால், தனியாக எழுதியிருக்கின்றேன். அதைப் படித்தால் கதையையும், கருத்தையும் தெளிவாய்த் தெரிந்து கொள்ளலாம். இந் நாடகத்தின் ஒவ்வொரு காட்சியின் கதைச் சுருக்கத் தையும் தனித்தனியே காட்சிகள் என்னும் தலைப்பின் கீழ் எழுதியுள்ளேன். அதனை ஒருமுறை படித்துவிட்டு, இந் நூலைப் படிப்பது படிப்போர்க்குக் கதை இனிது விளங்குதற்குத் துணை செய்யும். இயன்றவரையிலும் செம்பாகமான நடையிலேயே, இதன் ஆசிரியப் பாக்களை எழுதியுள்ளேள். இப் பாக்களில் மணிமேகலையின் அடிகள் சிலவும் ஆங்காங்கே கலந்துள்ளன. அவை தடித்த எழுத்தில் உள்ளவை. இதன் வழியாகத் தமிழ்மொழியின் சிறப்பு, தமிழர் நாகரிக மேன்மை, தமிழர் அறம் ஆகியவைகளிற் சிலவற்றையேனும் தமிழர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்து. என் எண்ணம் சிறிதளவாவது நிறைவேறும் என்ற முடிவுடன் இந்நூலைத் தமிழ் அன்பர்களுக்கு உரிமையாக்குகின்றேன். 05.10.40 அன்பன் கும்பகோணம் சாமி சிதம்பரன் கதைச் சுருக்கம் வாரணாசி யென்னும் ஊரில் அபஞ்சிகன் என்னும் ஓரந்தணன் இருந்தான். அவன் மனைவி சாலி. அவள் கற்பிழந்து கருப்பெற்றாள். அப்பழி தீரக் கன்னியாகுமரிக்கு நீராடச் சென்றாள். சென்றவள், பாண்டிய நாட்டில், கொற்கை நகருக்கு அப்பால் காதவழி தூரத்தில், ஓர் இடையர் சேரியில் ஓர் ஆண்மகனைப் பெற்றாள்; அதனை ஒரு தோட்டத்தில் விட்டுச் சென்றாள். அக்குழந்தையை ஏழுநாள் வரையும், ஒரு பசு, நாவால் நக்கிப் பாலூட்டிக் காத்துவந்தது. பூதியென்பவன் ஓரந்தணன். அவனூர் வயனங்கோடு. அவனும் அவன் மனைவியும் அக் குழந்தையைக் கண்டு எடுத்துச் சென்றனர். பூதி அவனைத் தன் மகனாகவே கொண்டு தன் குலத்துக்குரிய கலைகளையெல்லாம் கற்பித்து வளர்த்து வந்தான். அவனே ஆபுத்திரன். ஓர்நாள் ஆபுத்திரன் அவ்வூரில் ஓரந்தணன் வீட்டுள் நுழைந்தான். அங்கு வேள்விக்காகக் கட்டப்பட்டிருந்த ஆவின் துயரைக் கண்டான். இதன் உயிரைக் காப்பேன் என்றெண்ணி ஒருபுறம் ஒதுங்கியிருந்தான். இரவில் அவன் ஒருவரும் காணாதவாறு அப்பசுவை ஓட்டிக்கொண்டு போய் விட்டான். அப்பசுவைத் தேடிச் சென்ற அந்தணர்கள் அவனைப் பிடித்துக் கொண்டனர். அந்தணர் உவாத்தி அவனை அடித்துத் துன்புறுத் தினான். அது கண்டு பசு சினமுற்றது; அவ்வந்தணருவாத்தியின் வயிற்றைக் கொம்பால் குத்திக் குடலைச் சரித்துவிட்டுக் காட்டிற் கோடிவிட்டது. ஆபுத்திரனை அவர்கள் தூற்றி, ஆமகன் என்று எள்ளினர் அவனும் அதற்குத் தக்க விடையிறுத்தான். அப்போது, சாலியின் வழியாக, அவள் பிறப்பை அறிந்த ஒரு வேதியன், அவன் வரலாற்றைக் கூறினான். அவனை நீசன் என்ற இகழ்ந்தனர். ஆபுத்திரனும் பல முனிவர்களின் பிறப்பைக் கூறிப் பிறப்பினால் உயர்வு தாழ்வில்லை யென்றனன், இதனால் அவனை வளர்த்த பூதியும் அவனை வெறுத்து ஒதுக்கிவிட்டான். பின்னர், ஆபுத்திரன் அவ்வந்தணர்களின் கிராமங்களில் பிச்சையெடுத்து உண்டு வந்தான். அவனை ஆகவர்கள்வன் என்றிகழ்ந்து-அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் கல்லிடத் தொடங்கினர். ஆதலால், அவன் மனமுடைந்து மதுரையை யடைந்து, கலைநியமத்தின் அம்பலப் பீடிகையில் தங்கினான். ஆபுத்திரன், மதுரையில் வீடுதோறுஞ் சென்று பிச்சை யேற்றான்; அவ்வுணவை வறியோருக்கிட்டான்; தானும் உண்டான். இரவில் அப்பிச்சைப் பாத்திரத்தையே தலையணை யாகக் கொண்டு உறங்கினான். ஒருநாள் இரவிற் சிலர் அவனிடம் வந்து, பசியால் வருந்து கின்றோம் என்றனர்; அவர்களுடைய பசியை நீக்க வழியறியாது வருந்தினன். உடனே சிந்தாதேவி தோன்றி அமுதசுரபி என்னும் ஒரு பிச்சைக் கலனைக் கொடுத்தாள். இது என்றும் வற்றாத உணவளிக்கும் என்றுரைத்து மறைந்தாள். அவன் அது கொண்டு அவர்கள் பசிமாற்றி மகிழ்ந்தான். அன்றுமுதல் எல்லாவுயிர்களுக்கும் உணவளித்து வந்தான். ஆபுத்திரனுடைய அறத்தின் பெருமையை இந்திரன் தனது வெள்ளைக்கம்பள நடுக்கத்தால் அறிந்தான். அவனிடம் வந்து, உன் அறத்தின் பயனைப் பெறுக என்றான். ஆபுத்திரன் எனக்கு இக் கலனே போதும் என்றான். இந்திரன் சினந்து, உலகிற் பசியில்லாது செய்வேன் என்று சொல்லிச் சென்றான். அதன்பின் நாடு செழித்தது. ஆபுத்திரனிடம் உணவு பெறுவோர் ஒருவரும் இலர். அதனால் அவன் வருந்தி ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தான். அச்சமயம், சாவக நாட்டிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள், அங்குப் பஞ்சத்தால் உயிர்கள் மடிகின்றன என்றனர். உடனே அந்நாடு செல்ல அவன் கப்பலேறினான். அந்நாடு நோக்கிச் சென்ற கப்பல் ஒருநாள் மணிபல்லவத் தீவில் தங்கிற்று. எல்லோரும் இறங்கினர். மீண்டும் கப்பல் புறப்படும்போது இருட்டு ஆதலால் ஆபுத்திரனை மறந்து விட்டுக் கப்பலை ஓட்டிச் சென்றனர். ஆபுத்திரன் தனித்ததனால் வருந்தினான். அங்குள்ள கோமுகி யென்னும் பொய்கையைக் கண்டான். தன் கையிலிருந்த அமுதசுரபியை நோக்கி நீ ஆண்டிற்கொருமுறை புத்தர் பிறந்த நாளில் மிதப்பாயாக. அறஞ்செய்வோர் இங்கு வரின் அவர் கையிற் புகுவாயாக! என்று கூறி அதில் போட்டான். பின்பு பட்டினி கிடந்து அத் தீவிலேயே உயிர் நீத்தான். காட்சிகள் 1 அபஞ்சிகன் காலையில் நீராடிவிட்டு வருகிறான். அவன் மனைவி சாலி தூங்குகிறாள்; வேலைக்காரனாகிய மாதவனை அழைத்து அவனை எழுப்பச் சொல்லுகிறான்; அவனும் எழுப்பு கிறான். சாலி எழுந்து வருகிறாள். அபஞ்சிகன் அவள் முகக் குறியைக் கண்டு கருவுற்றாள் என்று அறிகிறான். அவளை வெறுத்து வெளியே போகச் சொல்லுகிறான். அவளும் தன் குற்றத்தை மறைக்க வழி தேடுகிறாள்; இறுதியில் தன் பிழையை ஒப்புக்கொண்டு, தனக்குக் கழுவாய் கூறவேண்டுகிறாள். அபஞ்சிகன் மனமிரங்கி அவளைக் குமரி நீராடி வரச் சொல்லு கிறான். அவளும் குமரியாடப் போகிறாள். 2 சாலி குமரியாடச் செல்லுகிறாள். தமிழ் நாட்டையடைந் தவுடன் ஓர் இடையர் சேரிக்கருகில் குழந்தை பெறுகின்றாள். அக்குழந்தையை ஒரு தோப்பில் கொண்டு போய் வைத்து விட்டுக் குமரிக்கரையை அடைகிறாள். அங்கு கறுப்பன், சிவப்பன் என்ற இருவர் இவளைப் பார்க்கின்றனர். இவள் வரலாற்றைக் கேட்கின்றனர். இவளும் கூறுகின்றாள். அவர்கள் இவள் செய்கையை எள்ளுகின்றனர். சாலி நீராடிவிட்டுக் காசி நோக்கிச்செல்லுகிறாள். வழியில் ஓரந்தணனைச் சந்திக்கிறாள். அவன் இவளை நீ யார் என்று வினவ, இவள் தன் வரலாற்றைக் கூறி வருந்துகின்றாள். 3 வயனங்கோட்டு அந்தணனாகிய பூதி, தன் மனைவியுடன், தன் தங்கை மகனுடைய காதணி மங்கலத்திற்குச் சென்று வருகின்றான், அவனும், அவன் மனைவி கோமதியும், தங்களுக்குப் பிள்ளையில்லாமையைப்பற்றிப் பேசிக்கொண்டு வரும் போது, தோட்டத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்கின்றனர். அங்குச் சென்று பார்க்கின்றனர். பசுவால் பாதுகாக்கப்பட்டு வரும் குழந்தையைக் காண்கின்றனர். அதை எடுத்துச் சென்று ஆபுத்திரன் என்று பெயரிட்டு வளர்க் கின்றனர். அவனும் வளர்ந்து கல்விகற்று அறிவுடையவனாக விளங்குகின்றான். 4 வயனங்கோட்டில், அனந்த சாத்திரியின் வீட்டில், அப்பு சாத்திரி, குப்பு சாத்திரி, சுப்பு சாத்திரி, கோபுசாத்திரி ஆகிய வர்கள் கூடிப் பேசுகின்றனர். பணம் சம்பாதிக்கும் பொருட்டுக் கோமேதக வேள்வி செய்வதாக முடிவு செய்கின்றார்கள். பொருள் திரட்ட, எல்லோரும் புறப்படுகின்றனர். இதை மறைவி லிருந்து கேட்ட ஆபுத்திரன் இவர்கள் செய்கையை வெறுக் கிறான். யாகப் பசுவின் உயிரை எவ்வாறேனும் காப்பாற்றுவேன் என்று உறுதிசெய்து கொள்ளுகிறான். 5 வயனங்கோட்டில், ஒரு வீட்டில், இரவில் வேள்வி நடை பெறுகின்றது. ஆபுத்திரன் அங்கு மறைந்திருக்கிறான். நள்ளி ரவில் கிட்டு என்பவனை வேள்வித் தீக்குக் காவல் வைத்து விட்டு, எல்லோரும் சாப்பிடப் போய்விடுகின்றனர். கிட்டு பசியினால் வருந்தி, அங்குள்ள தின்பண்டங்களை யெல்லாம் தின்று சோமபானத்தையும் அருந்திவிட்டு உறங்குகின்றான். ஆபுத்திரன் பசுவை அவிழ்த்துக்கொண்டு போய்விடுகின்றான். சாப்பிடப் போனவர்கள் வந்து விடுகின்றனர். கிட்டுவின் நிலையைப் பார்க்கின்றனர். பசுவைக் காணாமையால் எல்லோரும் தேடிக் கொண்டு புறப்படுகின்றனர். 6 பசுவைத் தேடி வந்த பார்ப்பனர்கள், பசுவையும், ஆபுத்தி ரனையும் பிடித்துக் கொள்ளுகின்றனர். அனந்த சாத்திரி ஆபுத்திரனை அடிக்கிறான். அவனைப் பசு முட்டி அவன் குடலைச் சரித்துவிட்டு ஓடிவிடுகிறது. ஆபுத்திரனுக்கும் பிரா மணர்களுக்கும் வேதம், வேள்வி, சாதி உயர்வு ஆகியவை களைப்பற்றி விவாதம், ஆபுத்திரன் பிறப்பை அறிதல், பூதி அவனைத் தன் வீட்டைவிட்டு விலக்குதல், ஆபுத்திரன் தன் வளர்ப்புத் தந்தைக்கு நன்றி தெரிவித்தல். 7 மதுரையில் ஆபுத்திரன் பிச்சையெடுத்து, ஏழைகளுக்கு உணவளித்து வாழ்தல். பிச்சைக்காரர்கள், ஆபுத்திரன் செய்யும் அறத்தைப்பற்றியும், ஆரியர்களின் செய்கையைப் பற்றியும் பேசிக்கொள்ளுதல். ஆரியர்கள், ஆரியரல்லாதவர்களுக்கு உதவி செய்யாத காரணம் யாதென ஆபுத்திரனைக் கேட்டல். ஆபுத்திரன் ஐயம் தெளிவித்தல். 8 ஆபுத்திரன், மதுரையில் அம்பலப்பீடிகையில் உறங்குதல். நள்ளிரவில் பொன்னன் முத்தன் என்ற இருவர் வந்து, உணவு கேட்டல், ஆபுத்திரன் வருந்துதல், சிந்தாதேவி தோன்றி, அமுத சுரபியென்னும் பிச்சைப் பாத்திரத்தைக் கொடுத்து, அதன் பெருமை கூறி மறைதல். ஆபுத்திரன் உணவிட்டு மகிழ்தல். 9 இந்திரன், ஆபுத்திரன் செய்யும் அறத்தின் பெருமையை அறிந்து அவனிடம் வருகிறான். அவனை, வேண்டிய வரங்கேள் என்று கூறித் தனது உலகுக்கு அழைக்கிறான். ஆபுத்திரன், தேவலோக இன்பத்தைக் காட்டிலும் மண்ணுலக இன்பமே சிறந்ததென்றும் ஏழைகளுக்கு உணவிடுதலே தனக்கு இன்ப மான தென்றும் கூறுகிறான். இந்திரன், உனது இன்பத்தைக் கெடுக்கிறேன் என்று சினந்து, சென்று நாட்டைச் செழிப் படையச் செய்துவிடுகிறான். 10 நாடு செழிப்படைந்ததனால், ஆபுத்திரனிடம் ஒருவரும் உணவுபெற வருவதில்லை. ஆதலால் ஆபுத்திரன் வருந்து கின்றான். சாவகத்தீவிலிருந்து வந்த ஒரு வணிகன் அங்குப் பஞ்சம் என்று ஆபுத்திரனிடம் கூறுகிறான். உடனே ஆபுத்திரன், சாவகஞ் செல்லுவதற்குக் கப்பலேறிப் புறப்படுகின்றான். 11 மணிபல்லவத்தீவில் இறங்கிய கப்பல், இரவில் ஆபுத்தி ரனை விட்டுச் சென்றதனால், அவன் தனித்திருக்கிறான். பிறருக்கு உதவி செய்யாமல் தான் மட்டிலும் தனித்திருந்து அமுத சுரபி யால் உயிர் வாழ்வதை வெறுக்கிறான். அங்கிருந்த கோமுகிப் பொய்கையையடைந்து, அமுதசுரபியை அப்பொய்கையில் விட்டுவிட்டுத் தான் பட்டினி கிடந்து உயிர் துறக்கிறான். காட்சி - 1 இடம் : காசியில் அபஞ்சிகன் வீடு. காலம் : காலை. நடிகர் : அபஞ்சிகன், சாலி, மாதவன், (சாலி வீட்டில் தூங்குகிறாள். மாதவன் வீட்டிற்குள் இருக்கிறான். அபஞ்சிகன் நீராடி விட்டு வாயிற் படியில் வந்து நின்று கொண்டு சொல்லுகிறான்.) அபஞ்: மாதவா! மாதவா! மடையா! தடியா! மாதவா! எங்கே மறைந்தனை? பேசாய்! உண்பொருள் உன்றன் வாய்புதைத் தனவோ! கண்கள் மூடிக் கட்டையா யினையோ! எங்கே தொலைந்தாய்? ஈனப் பயலே! (மாதவன் ஓடிவருகிறான்) மாதவ: இங்குதான் உள்ளேன்! இதோ வந்தேன்; புறங்கடைப் பக்கம் போனேன்; சிறிது உறங்கினேன்; வேறே ஒன்றும் இல்லை. அபஞ்: அம்மாள் எங்கே! அவள் என் செய்கிறாள்? எம்மான் தன்னை இறைஞ்சும் பூசனைக்கு ஆயின கருவிகள் அனைத்தும் கொணர்க! போ இன்னும் தாழ்த்தல் வேண்டாம்! புகல்க! மாதவ: இன்னும் அம்மாள் எழுந்திட வில்லை; என்ன செய்வது? எழுப்ப லாமா? அபஞ்: பொற்கதிர் இந்தப் புவியெலாம் பரவ அற்புத வானில் ஆதவன் எழுந்தான்; பறவைகள் விழித்தன; பாடின; பகலவன் வரவை வாழ்த்தின; மகிழ்ந்தன; கூவின; குடித்தனம் செய்யும் கோதையர் எல்லாம மடித்தனம் இன்றி மனைவினை ஆற்றினர்; மக்களும் கணவரும் மகிழ்வுடன் நலம்பெற மிக்கபல் சுவைசேர் உணவினை ஆக்கிட அட்டிலிற் புகுந்தனர்; அமிழ்தம் சமைத்தனர் பட்டியர் அன்றோ படுக்கைவிட் டெழாதார்? என்னடா சாலி எழுந்திலள்! பீடை! இன்னுமா தூக்கம்? இழவு! சனியன்! விரைவில் எழுப்பு விவேகமில் லாளை; அறைக பூசனைக் காயின கொணர்கென! மாதவ: இரவெல்லாம் அம்மாள் என்னசெய் தனளோ? குறைவிலா வேலை போலும்; கோபமேன்? ஆதலால் உறங்கினள் அயர்வாய் இன்றே. அபஞ்: ஏதடா கர்மம்! எழுப்பு விரைவில். (மாதவன் சாலி படுத்திருக்கும் இடம் சென்று அவளை நோக்கிக் கூறுகிறான்.) மாதவ: அம்மா! அம்மா! அழைக்கிறார் அய்யரே! எம்மா நேரம்! இன்னும் உறக்கமா? (சாலி படுக்கையை விட்டு எழுகிறாள். எழுந்து வரும் போது இதைச் சொல்லிக் கொண்டு வருகிறாள்.) சாலி: இந்த வீட்டில் என்றும் துன்பம்! எந்த நாளும் இந்தத் தொல்லைதான்! பாழும் கிழவன் படுத்தும் பாடுபோல் ஆழும் நரகிலும் அடைவ தில்லை; கையா லாகான் கடுமொழி அறிவான் மையல் அறியான் மாதரை இகழ்வான் என்றும் உழைக்கும் இயந்திர மெனநமைக் கொன்று பிடுங்கும் கொள்கை யுடையவன் என்று தொலைவனோ இக்கிழப் பாவி! நன்று நாமும் வாழ்ந்திடு வோமோ! (அபஞ்சிகன் தனக்குள் சொல்லிக் கொள்ளுகிறான்.) அபஞ்: மங்கையாம் இவளை மணந்தத னாலே இங்கு துயர்க்கடல் மூழ்குவேன் என்றும்; ஒத்த அன்பும், ஒத்த பண்பும், ஒத்த வயதும், ஒத்த அறிவும் உடையவர் மணப்பின் ஒன்றுபட் டென்றும் அடைவர் இன்பம்; அய்யுற விதிலென்? பேயாம் இவளைப் பெண்ணெனக் கொண்டேன் நாய்படும் பாடு நான்படு கின்றேன். (சாலியைப் பார்த்து) அடியே சாலி! அருந்ததிக் கெதிரி! குடித்தனக் காரியா? கூறுமூ தேவி! பகலவன் எழுமுன் படுக்கைவிட் டெழுந்தே அகவினை புரியும் அவளே மனையாள்; சின்னத் தனங்கள் செய்யும் கழுதை! (அவள் முகத்தை உற்றுநோக்கி) என்னடி உன்முகம் இவ்வா றுள்ளதே! அருகில் வருக! அறிவேன் உண்மை! கருவுற் றதுபோல் காணும் முகக்குறி! (அவள் வயிற்றை நோக்கி) ஓகோ! வயிறும் உப்பியுள் ளதுவே! ஆகா! கர்ப்பமே! அறிந்தேன் கள்ளி. சாலி: ஆமாம் நாதா! அடைந்தேன் கருவே! சேமமே! மக்கட் செல்வம் பெறுவோம்! நாதா! நீங்கள் நாளும் புரியும் தீதிலா வேள்வியும், தீர்த்த மாடலும் என்வயிற் றுள்ளே எழுந்தது கருவாய்! நன்மகன் பிறப்பான்; நரகம் நமக்கிலை. குறுகுறு நடந்து, சிறுகைந் நீட்டி, இட்டுந் தொட்டும் கவ்வியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பெற விதிர்த்தும், மயக்குறு மக்களை யில்லா தவர்க்குப் பயக்குறை யில்லைதாம் வாழும் நாளென முன்னோர் மொழிந்த மொழிப்பொருள் தெரிவீர்! இன்னே நம்குறை ஒழிந்தது; மகிழ்வீர்! (அபஞ்சிகன் கோபத்துடன்) அபஞ்: உணர்ந்தேன் உன்செயல்; ஓஓ பாவி! கணமும் நில்லேல் கண்முன்: ஓடுக! ஒளியிலா மதியே! உப்பிலாப் பண்டமே! தளிரிலா மரமே! தயவிலா மனமே! பொற்பும் மணமும் பொருந்தாப் பூவே! கற்பினை யிழந்த கணிகையே! பிணமே! சிச்சீ! பேயே! சிறிதும் தங்கேல்! எச்சிற் பண்டமே! இன்னே தொலைக. (சாலி வணக்கத்துடன் கூறுவது) சாலி: நாதா! என்னை நலிவதில் என்பயன்? காதலர் உம்மால் காணேன் ஒருசுகம்! தீதிலை என்மேல்; தெய்வச் செயலிது! வேதனை இனியேன்? வேண்டும் புத்திரன். தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கப் பொன்போற் புதல்வனை விரும்பினிர் அன்றே! உங்கடன் செய்வான்; உறுதுணை யாவான்; இங்கேன் வெறுப்பு? இயம்புவீர் நாதா! அபஞ்: பேசினை புன்மொழி; பெருங்கற் பழிந்த வேசியுன் மகனால் வேண்டேன் மறுமை! ஈட்டிபோல் உன்சொல் என்மனம் பிளக்கும்; வீட்டை விட்டோடு! இன்னுமா நின்றாய்! சாலி: நாதா! சிலசொல் நவில்வேன் பொறுப்பீர்! தீதிலா இச்சொல் தெளித்தவர் என்னைப் பெற்ற தந்தையார், பெரியார், கலைஞர், முற்றும் அறிவீர்! மொழிவேன் அவர்சொல்! புதல்வர் இல்லோர்க்குப் புண்ணிய லோகப் பதவி இல்லை; பாரில் எவரும் ஆண்மகப் பேற்றை அடைதல் வேண்டும்; மாண்புறு குருவால், சோதர மக்களால், பிள்ளையைப் பெறலாம்; இன்றேல் தத்தாய்க் கொள்ளுதல் வேண்டும்; கோதில் சாத்திர முறையிது வாகும்; முற்றும் மெய்யென அறைந்தனன் எந்தை; அந்நாள் கேட்டேன். ஆரியர் நீதி முறையிது வாகவும் சீறுதல் ஏனோ? சிந்தனை செய்வீர்! உழைப்பிலா வழியில் உறுவதோர் நிதியினைக் கழிப்பவர் உளரோ? கண்களி கூரப் புத்திரற் பெறுவேன்; பிறன்மகன் ஆயினென்? தத்தெனக் கொள்வீர்! தவறதில் என்ன? அதன்பின் என்னை அனுப்புக வெளியில்; இதம்உமக் குரைத்தேன் என்மொழி தவறோ! அபஞ்: அடியே நீலி! உரைத்தனை அபத்தம்! குடிப்பழி தேடினை! குற்றம் உணர்ந்திலை; ஆர்மகன் என்றே அறியா ஒருவனை ஏற்பவர் தத்தாய் இங்கார் உள்ளார்? பலபல வகுப்பாய் பண்டைநாள் திரிந்தோர் நிலையாய்க் குடிபுக நிலங்கொளும் நாளில் ஒருவரோ குடிபுக நிலங்கொளும் நாளில் ஒருவரோ டொருவர் பொருதனர் அடிக்கடி; குறைவிலா ஆண்கள் கூட்டம் இதற்கே வேண்டிய தாதலின் விதித்தனர் எவரும் ஈண்டாண் மகவை ஈன்றல் கடனென. ஆதலால் இதனை மதக்கடன் ஆக்கிப் போதனை செய்தனர்; பொருந்துமோ இந்நாள்? வல்லிழி வழக்குச் சொல்லினை பேதாய்! இல்லைவிட் டொழிக! என்முன் நில்லேல்! (சாலி, அவன் கால்களில் விழுந்து வணங்கி) சாலி: நற்றவ மறையோய்! நாதா! என்பெரும் குற்றம் பொறுப்பீர்! குறிப்பீர் நல்வழி! ஆவல் வெட்கம் அறிதலும் உண்டோ! பாவியேன் பலப்பல பகர்ந்தேன் ஆகையால்; அந்தணன் ஆய அபஞ்சிகன் மனைவி சிந்தினள் மானம்; சிதைந்தனள் கற்பே! அடுக்குமோ இஃதென அறையும் உலகம்; விடுத்தனள் சாலி கற்புஎன விளம்பார்; இப்பழி நீங்கள் ஏற்றல் நன்றோ! செப்பினேன் உண்மை; சிந்தியும் மனத்தில். மாதவ: அம்மாள் மொழிவது உண்மை சாமி! இம்மா நிலத்தார் இயம்புவர் அதுபோல்; ஆடவர் மாதர் அனைவரும் இளமையில் நாடுதற் குரிய இன்பமாம் நறுந்தேன் பெறுதல் வேண்டிப் பெரும்பிழை செய்தல் அரிதல வென்பதை அறிந்திடு வீர்கொலோ, உலக வழக்கிலும் உதாரணம் பலஉள; பலகதை கேட்டனம்; பாவம் பொறுப்பீர்! உங்களை யல்லால் உறுதுணை ஏது? இங்கென் மனமும் இளகும்; அம்மாள் இழந்த மதியினை ஏற்றாள் மீண்டும்; குழந்தையாய் அழுதனள்! குற்றம் அறிந்தனள்! நன்னெறி யிலினி நடப்பாள்; தவறாள்; மன்னித் தருள்வீர்! மறையுணர் பெரியீர்! அபஞ்: ஏண்டா பயலே! எனக்கா சொல்லினை! வேண்டாம்! நிறுத்து! வீண்மொழி கூறேல்! (சாலியைப் பார்த்து) ஆதர வற்ற அறிவிலாப் பேதாய்! பாதகி! உன்னைப் பார்த்தால் நெஞ்சம் கொதிக்கும்; ஆயினும் கொள்வேன் இரக்கம்! மதிப்பவர் உளரோ மனையில் இனியும் உனைநான் வைத்திடில்? ஒன்றும் வழியிலை. இந்நிலப் பரப்பில் என்கண் காணாச் சேய்மை நாட்டிற் சென்றுநீ வாழ்க! வாய்மை என்னுரை! வருந்தி என்பயன்? சாலி: .!வென் நாதா! உயிருடன் வாழேன்! பாவியேன் முகத்தைப் பார்த்தருள் புரிவீர்! மாசு படிந்த மணியினை நொறுக்கலும் தூசென உடையைத் தூக்கி எறிதலும் உண்டோ? அவைகளை ஒளிபெறச் செய்து கொண்டு வாழ்வார்; குற்றம் இதில்என்? பழியைத் தகர்த்துப் பாவம் போக்கும் கழுவாய் உங்கள் கலைகளில் இல்லையோ! எனக்கோர் கழுவாய் இயம்பிடில் அதனைக் கணத்திற் செய்வேன்! கற்பினைப் பெறுவேன்! அபஞ்: புண்ணிய தீர்த்தம் படிந்தாற் போகும் பண்ணிய பாவம் அனைத்தும், பாவாய்! இன்றே இதுசெய்! கழுவாய் வேறிலை. சாலி: நன்றே உரைத்தீர்! நானிதோ போவேன்! ஏற்றமிக் குடைய தீர்த்தம் எதுவோ! போற்றினேன் உம்மடி! புகல்வீர் தயவாய்! அபஞ்: மாந்தர் முதலில் தோன்றிய மாநிலம் தீந்தமி ழகமே; அதன் வட திசையில், தென்னாட் டெல்லையாய் இன்று திகழ்வது கன்னியா குமரி என்னும் பசுங்கடல்; அப்பெரு நீரில் அமிழ்த்திடில் உடலை எப்பெரும் பாவமும் இல்லா தொழியும்; அங்குநீ செல்வாய்! அடைவாய் தூய்மை! சாலி: இங்குநீர் மொழிந்ததை என்றலைக் கொண்டேன்! நல்வகைக் குமரி மூழ்கிநான் வந்தபின் இல்வாழ் துணையாய் ஏற்பீர்! மீண்டும்; வணக்கம் நாதா! வணக்கம்! வணக்கம்! அபஞ்: சுணக்கம் வேண்டாம்! சொற்படி செய்போ! (அபஞ்சிகன் வீட்டுக்குள் போய் விடுகின்றான் சாலியும் மாதவனும் வெளியில் வந்து உரையாடுவது) மாதவ: வழித்துணை நானும் வருகிறேன்; மற்றோர் பழித்தால் என்ன? பாதகம் இல்லை; இருவரும் மகிழ்வாய்க் குமரிநீர் மூழ்கி வருவோம்; கிழவன் காணா வழியில். (கோபத்துடன்) சாலி: போதும்! போதும் புகன்றது போதும்! பாதகம் செய்த பாவிநீ! வேண்டாம்; இந்நாள் வரையிலும் எடுத்தபேர் போதும்! புண்ணிய தீர்த்தம் புகுந்த பின்னர் நற்பெயர் பெற்று நாயகற் கூடிக் கற்புடை யவளாய் வாழக் கருதினேன்! (மாதவன் கைபுடைத்துச் சிரித்துக் கூறுவது) மாத: உன்னுரை அழகிது! உத்தமி! பத்தினி! என்னுடை மனைவியாய் இருந்தால் இந்நாள் வெட்டித் துண்டாய் வீசுவேன் குழியில் மட்டிக் கிழவன் மறையோன் விடுத்தான்; என்ன சாத்திரம்! என்ன கழுவாய்! இந்நிலத் தெவர்தான் இச்செயல் போற்றுவார்? ஆரியர் சாத்திரப் போக்கிது வாயின் பாரில் அறிஞர் பழிப்பதில் தவறென்? போகிறாய் பாவம்! புனிதம் ஆகிநீ வருக! அடைவாய் நலமே! காட்சி - 2 காலம் : மாலை, காலை. இடம் : ஆயர்பாடி, சோலை, குமரிக்கடல். நடிகர் : சாலி, கறுப்பன், சிவப்பன், ஒரு வேதியன் (சாலி, பாண்டிநாட்டில் ஒரு சாலை வழியே நடந்து செல்லுகிறாள்) சாலி: உலக மொழிகளுக் கொருபெருந் தாயாய் நிலவும் செந்தமிழ் நீணிலம் வாழ்க! பாண்டிய மன்னர் பாராள நாளாய் ஆண்டவிந் நாட்டில் ஆர்ந்தன புதுவளம்! எங்கும் மரஞ்செறி சோலைகள் எழிலே! எங்கும் நீர்த்தடம்! ஏரிகள்! ஆறுகள்! பழமலைப் பொதியம்! செழுங்குளிர்த் தென்றல்! குயிலும் கிளியும் கூவலும் பேசலும் உயரிய செந்தமிழ் ஓசையை ஊட்டும். நாரியர் மயக்கே நரகம் காட்டும் காரியம் ஆமெனக் கருதி இவ்வுலக போகந் துறந்து புலன்களை யொடுக்கி யோகம் பயில்வோர் யாவரே யாயினும் மோகம் மனத்தில் மூளச் செய்யும் மாதரோ டிணங்கி மனமொரு மித்துக் காதல் செய்து காசினி வாழ்வோர் பேதம் இன்றிப் பேறெலாம் பெற்றே அன்புடன் வாழ உழைத்தலே அறமெனும் உண்மைப் பொருளை உளத்தினிற் புகுத்தும் கண்ணும் மனமும் கவர்ந்து தோன்றும் எண்ணிலா இயற்கை வளங்கள் துள்ளும் மழைவளஞ் சுரக்கும் மலைகளின் செறிவு இந்நா டுற்ற இயல்பால் யானும் நன்னிலை எய்துவேன்! நாயகற் சேர்வேன்! (இடையர் உறைவிடத்தை அடைந்தபோது வயிறு வலிக்கிறது. ஒரு வேலி மறைவில் கருவுயிர்க்கிறாள்) ஆவா! இதுவென்? ஆற்றற் கொண்ணா நோவென் வயிற்றுள் நுழைந்தது! பொறுக்கேன்! இடையர் வாழும் பாடிதான் இதுவே; படும்என் துயரைப் பாத்திலர் ஒருவரும்; இம்மறை விடத்தில் இருப்போம் சிறிது; எம்மெய்த் துயரம் அகன்றபின் ஏகுவோம். (குழந்தை பிறந்து விட்டது. அதைத் துணியால் மறைத்து எடுத்துக்கொண்டு ஒரு தோட்டத்தை அடைகிறாள்) அய்யோ புதல்வன் பிறந்தான் அழகாய்! பொய்யொழுக் கந்நாள் புலப்படல் இன்றேல், என்னருங் கணவன் இம்மகற் கண்டு, தன்னுடை மகன்போல் தகுந்தபல் சடங்குகள் செய்வான் அன்றோ! சிந்தித் தென்பயன்? மெய்வெளிப் பட்டதால் மிகத்துயர் உழந்தேன்! மாடுகள் நின்று மாவென் றழைக்க ஓடும் கன்றுகள் வாலினை உயர்த்தி எங்கும் ஆடுகள் இரையும் ஓசை அங்கே அவைகளை அதட்டுவோர் பெருங்குரல் மாதர்கள் மத்தைச் சுழற்றும் சத்தம் காதில் கேட்டேன் கல்லாச் சிறுவர் வாயால் குதலை கீதம் வழங்குவர் மதுத்துளி சிந்தி மலர்மணம் வீசும் இதுநற்பொழிலே; இன்னிழல் நிலைக்கும்; இம்மகன் தன்னை இங்கே வைப்பேன்! அம்மா வாகிக் காப்பவர் அணைக! திரியும் நெய்யும் திறமாய் உளவேல் எரியும் விளக்கிற் கிடையூ றுண்டோ? உடலும் உயிரும் உறுதிபெற் றிருப்பின் கெடுதல் இல்லை எங்கே கிடத்தினும்; தளரிளங் குழவி தான்பிழைத் திருந்து வளரும்; வாழும்; வருந்தி நிற்பதென்? பள்ளநீர்க் குமரியிற் படிந்திப் பழியையும் தள்ளுவேன்; செல்வேன்; தாழ்த்தல் செய்யேன். (தள்ளாடி வழிநடந்து குமரி நீர்க்கரையை அடைகிறாள்.) விருந்தினர் போற்றி வேண்டுவ கொடுக்கும் அருந்தமிழ் மக்கள், ஆண்மையைக் காட்டும்; தமிழக வரம்பைத் தன்வயிற் றுடையதால் அமிழ்தாய், அடைவோர் அருந்துயர் அகற்றும்; இக்கடற் குமரியை எய்தினென்; மகிழ்ந்தேன்; துக்கம் ஒழிந்தேன்; தூயவள் ஆனேன். (கறுப்பன் சாலி நிற்பதைச் சுட்டிக் காட்டிக் கூறுவது) கறுப்: அங்கோர் அம்மாள் அழுக்கடை பதுமைபோல் மங்கிய முகத்தில் மனத்துயர் தோற்றி நிற்பதென் காரணம்? சிவப்பா நீ சொல்! அற்புதம் என்னை? அல்லள் தமிழ்ப்பெண்! எந்நாட் டினளோ எம்மொழி யினளோ இந்நா டுற்றாள் இறங்கிநிற் கின்றாள்; பண்ணிய பாவம் கழுவுதற் கன்றோ கன்னியா குமரியின் கரையை அடைவர்? வேடன் வலையில் வீழ்ந்த மான்போல் தோடணி காதினள் துயர்வலை வீழ்ந்து விழிக்கிறாள்! பாவம்! வேறோர் துணையிலை. பழிப்பன புரிந்த பாவை; யார் அறிவோம்! அருகிற் செல்வோம்! ஆரெனக் கேட்போம்! வருவாய் கறுப்பா வழக்கம் போலே! (இருவரும் சாலியின் அருகிற் சென்றனர்) கறுப்: அரும்பெரும் செல்வம் இழந்தவர் தேடி வருந்துதல் போலே வாடினை நின்றாய் திசைமயக் குற்றுத் திரிந்தயர்ந் தவர்போல் அசைவற நின்றாய் அங்கும் இங்கும் நோக்கி விழித்தனை நொந்தனை சிறகைப் போக்கிய மயில்போல் பொலிவற நின்றாய் அம்மா நீயார்! அடைந்ததென் தனியே! சும்மா சொல்க! கரிகுழல் மடந்தாய்! செந்தமிழ் நாட்டைச் சேர்ந்தவள் அல்லன்; எந்த நாட்டுப் பெண்நீ இயம்புவாய்! அடுத்தது காட்டும் பளிங்கென நின்மனம் கடுத்ததை உன்முகம் காட்டுவ தறிந்தோம்; எங்களால் இயன்ற உதவிகள் எல்லாம் இங்குனக் காற்றுவோம்! இதைநீ நம்புக! சாலி: காசி யென்னும் கங்கைக் கரைநகர் வாசியோர் அந்தணன் மனைவியாய் வாழ்ந்தேன்! சாலியென் பெயரெனச் சாற்றினர்; ஆனால் வாலிதாம் கற்பின் வழிமறக் தொழுகினேன்! வஞ்சகக் கணிகையர் வாழ்வுமேற் கொண்டே எஞ்சாப் பழியை எய்தினேன்; கருவும் பெற்றேன்; இதனைக் கணவன் பெருந்தகை முற்றும் அறிந்தபின் முடுக்கினன் என்னை; தென்றிசைக் குமரித் தெளிநீர் படிந்தபின் என்றனை மனைவியாய் ஏற்பனென் றுரைத்தான். இழந்த கற்பினை எய்தும் பொருட்டே பழந்தமிழ் நாட்டை அடைந்தேன் பாவி! வரும்வழி யிடையில் வயிற்றுள் வளர்ந்த கருவை யீன்றேன்: கானிடை வைத்தேன்; இன்னீர் படிந்தபின் ஏகுவேன் காசி; எனன்ன உதவிதான் எனக்குநீர் செய்வீர்! (கை கொட்டிச் சிரிக்கிறார்கள் இருவரும்) சிவப்: அடடா! வியப்பே! அறைந்தனை கேலி, கடலிற் கரைத்த காயந் திரட்டினும், உடலின் உயிரைத் தனியே எடுப்பினும் முடியுமோ முன்னர் இழந்த கற்பை மீண்டும் பெறுதல்? மிகநகைப் பிதுவே! ஈண்டுமுன் இக்கதை கேட்டதே இல்லை! புத்திரற்பெற்றுப் போட்டனை காட்டில் உத்தமி உன்போல் உலகில் உண்டோ! பிறர்மனம் புகுதாப் பெண்டிரே எங்கள் அருந்தமிழ் நாட்டுக் கற்பினர் ஆவர்! காமக் குறிப்புடன் காணும் ஆடவர் தீமனம் சிதைக்கும் திறத்தையே பெண்கள் நிறையெனக் கொள்ளின் பிறர்மனம் புகுவரோ! அறிந்திலை போலும்! ஆஆ! பாவம்! தாயே! உன்செயல் தமிழர் அறியின் ஏ!ஏ! என்றே இகழுவர்; கூறேல்! சாலி: ஒவ்வோர் நாட்டில் ஒவ்வொரு வழக்கம் இவ்வுல கினிலே இருப்பதை அறியீர்! எங்கள் நாட்டின் இயல்பின் படிநான் இங்கே வந்தேன்; இதிலே தவறென்? பொன்கலத் திற்குத் தீட்டெனப் புகலார்; மண்கலம் தீட்டுப் படுமென மக்கள் கூறுவர்; இதுபோல் குலத்தில் உயர்ந்தோர் மாறுகொள் வினைகள் மனங்கொண் டாற்றிலும் அழிவார் அல்லர்; கழுவாய் உண்டே; இழிகுல மக்கள் இயற்றிடில் தீமை உடனே அழிவர்; உய்யும் வழியிலை, படியில் சாத்திரம் பகர்ந்தனர் இங்ஙனம்; இதனை அறியீர்! என்னை யிகழ்வீர்! உதவி போதும்! உம்மிடம் போமின்! (கறுப்பனும் சிவப்பனும் தாமே சொல்லிக் கொள்வது) இருவரும்: ஓகோ! இலங்கைக் காரி உணர்ந்தோம்! பாகெனும் மொழியாள் பழிசெய் திருப்பாள்! செல்வம் பறிக்க வருபவர்ச் சினந்தே ஒல்லெனக் கூவிக் கைகளை உயர்த்தி ஓட்டுதல் போல்அலை ஓங்கி எழுந்தே ஆட்டம் காட்டும் ஆழ்கடற் குமரியில், படிவோர் உடற்பிணி நீங்கிநற் பண்பை அடைதல் கூடும்; அழுக்கும் நீங்கும்; ஊரினர், நாட்டினர், உறவினர், அறிஞர், ஆரும் சிரிக்கும் அரும்பழி எங்ஙனம் ஒழியும்? வியப்பே! உரலை விழுங்கினோன் அழிதரச் சுக்குநீர் அருந்தல் போன்றதே. (சாலியை நோக்கிக் கூறுவது) புறத்தின் தூய்மை நீரான் அமையும்; அகத்தின் தூய்மை அமையுமோ நீரால்? ஆதியிற் சாத்திரம் வகுத்த அறிஞர்கள் நீதியில் வேற்றுமை நிலைக்கச் செய்தனர்; என்னே நீதி! இவையாம் நம்போம்! நின்மனம் போலே நிகழ்த்துக! செல்வோம். (இருவரும் போகின்றனர். சாலி கடலில் இறங்கி முழுகும்போது சொல்லுகிறாள்). சாலி: இக்கடல் யான்செய் இழிசெயல் அறிந்து, மிக்க சினத்துடன், மேவேல் போ! வென உரைப்பது போற்பல திரைக்கரங் கொண்டெனைத் தரைப்பால் தள்ளித் தகையும்; ஆயினும் அச்சம் இன்றி, அடிகளை யூன்றிப், பச்சைப் பசுங்கடல் படிவேன் வீழ்ந்தே. (கரையேறிய பின் சொல்லிக் கொண்டு போகிறாள்) கன்னியா குமரிக் கடலில் மூழ்கிப் பண்ணிய பாவம் பலவும் தீர்ந்தேன்! இனிநான் இங்கே இறையும் நில்லேன், நனிவிரைந் தடைவேன் நாயக னிடத்தே. (சாலி வழியோடு செல்லும்போது, ஒரு வைதிக வேதியன் சந்திக்கிறான்.) வேதி: ஆர்நீ அம்மா! அணைந்தனை தனியே! சோர்வுதான் என்ன! சொல்வையோ விடைதான்! சாலி: அய்யா! என்கதை அனைத்தும் துயரம்! மெய்யே மொழிவேன்! மிகமனம் நைந்தேன்! வார ணாசியோர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும்பெறல் மனைவியான்; பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுக்கி காப்புக் கடைகழிந்து கணவனை யிழந்தேன்; நெறிபயம் உடைமையின் இரியல் மாக்களொடு தெற்கட் குமரி ஆடிய வருவேன், பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து, கோவலர் இருக்கையின், ஈன்ற குழவிக் கிரங்கே னாகித் தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்; செல்கதி யுண்டோ! தீவினையேற்கே! அல்லற் பெருங்கடல் வீழ்ந்தேன் அடியேன்! தீந்தமிழ்க் குமரித் தெளிநீர் மூழ்கிப் போந்தேன் இவ்வழி; போவேன் காசி. உய்யும் வழியொன் றுரைத்தருள் செய்வீர்! அய்யரே உங்கள் அடியிணை பணிந்தேன். வேதி: மாதே! உனது கணவனோ மறைகள் ஓதி உணர்ந்தோன்! உரைத்தனன் வழியும். அறிந்தனை அவ்வழி; அம்முறை செய்தனை; பெரும்பொருள் இழந்ததைப் பெற்றது போலே உளங்களி கூர்ந்தனை; ஊர்செல நடந்தனை! விளங்குவ திலையிவ் விந்தை எனக்கே, உன்முகம் நோக்கிய பழியை என்செய் தொழிப்பேன் நீ போ! இனிதே! காட்சி - 3 இடம் : சோலை காலம் : நடுப்பகல் நடிகர் : பூதி, கோமதி (பூதி, கோமதி இருவரும் மணல் வழியில் நடந்து வருகின்றனர்) பூதி: கொஞ்சுங் கிளிமொழி கோமதி மானே! பஞ்சினும் மெல்லிய பாதம் வெகுதொலை அடர்ந்த காட்டினும், அருநெறி தன்னினும் நடந்து சிவந்து நலிவுற் றதுகொல்? மேனி மாந்தளிர் மெலிந்தது வெயிலால்; யானினித் தாளேன் என்வலி இழந்தேன் என்றுரைப்பது போல் இடையசைந்திடுமால் கன்றிய வெயில்சேர் கடிமலர் ஆயினை; சோர்வுறேல் நம்மூர் சிறிது தூரமே சேர்வோம் நொடியில், சேயிழாய் வருந்தேல்! கோம: அள்ளித் தெளித்த அனல்போல் மணலும் கள்ளெனக் காலைச் சுடுகின் றதுவே! எங்ஙனம் நடப்பேன்; இளைத்தேன்! நொந்தேன்! தங்குதற் கிங்கோர் தருநிழல் இலையோ! வறண்டது நாவும் வாய்நீர் இல்லை இரண்டடி வைக்கவும் இயலா தென்னால்; உணர்விலா ஏழையர் உழைப்பினைப் பறித்தே திணறும் படியவர் வாழ்வினைத் தேய்க்கும் ஈரமில் மனத்தோர் இருநிதி யோர்போல் சூரியன் கதிரால் சோர்ந்தேன் அந்தோ! பூதி: சிறிது வழியினும் நடந்துநாம் சென்றால், எரிகதி ரோனை எதிர்த்துமேல் எழுந்தே தண்ணென் தளிர்க்கரம் மதுமலர்த் தாங்கி உண்ணெனக் கொடுக்கும் உயர்மரம் செறிந்த காவினைக் காண்போம்! கவலை விடுப்போம்! பாவையே! விரைவாய்ப் பாதம் எடுத்துவை (இருவரும் சோலையை அடைந்தனர் ஒரு மாமர நிழலில் அமர்ந்தனர். பூதி கோமதியை நோக்கிக் கூறுகின்றான்.) பூதி: உன்போற் சாயலை உற்றிலம் என்றே துன்பால் மயிற்குலம், தோகை சுருக்கித் தாழ்மரக் கிளைகளில் தவம் செய்வன போல் வாழ்ந்தன; பார்நீ! வளர்கருங் குழலாய்! துள்ளும் சேல்போல் தோன்றுநின் கண்களைப் புள்ளிமான் கூட்டம் கண்டதும் பொருக்கென தாவும் ஓடும் தங்கும் பார்க்கும் மேவினள் நம்போல் மிரளும் கண்ணினன் ஆரோ வென்றே அவைமயக் குறுவன; வாராய் வழிநடை வருத்தம் தீர! தளிருன் மேனிபோல் தழைத்தே அழகாய் ஒளிரும் மாமர நிழலில் ஒதுங்குவோம்! (இருவரும் உட்கார்ந்தபின்) ஆவா! இம்மர நிழற்கீழ் அமர்ந்ததும் நோவெலாம் நீங்கி மேவினம் இன்பம்! கோதையென் தங்கை பெற்ற குழந்தையின் காதணி மங்கலம் காணிய சென்றோம்! ஆண்டுநம் உறவினர் அனைவரும் வந்தனர்; வேண்டிய உணவுகள் விதவிதம் துய்த்தோம்! என்னருந் தங்கை யீன்ற புதல்வன் பொன்னின் வார்ப்பெனத் திகழும் பொற்பினைக் கண்டனம் கண்ணால்; களித்தனம் மிகவே! உண்டோ அவன்போல் உலகில் ஒருவன்? கோம: ஆமாம்! அழகுதான்! அவனால் நமக்கென்? பூமியிற் செல்வப் பொருளெலாம் பெற்றனம்; நம்பெயர் பின்னால் நவிலுதற் கிங்கோர் பொன்போற் புதல்வனைப் பெறுந்தவம் புரியோம்! உணர்விலாப் படிப்பென உருசியில் கரும்பென மணமிலா மலரென மதியிலா வானென இகழ்வுடன் வாழ்வேம்; இன்பமில் லாமல்! மகிழுதற் குரியதோர் மகவினைப் பெற்றிலோம்! எத்தனை சாத்திரம் ஓதியும் என்பயன்? புத்திரற் பெறுதற் கொருவழி புகலீர்! பூதி: என்னுடற் குறையோ! உன்னுடற் பிணியோ! இன்மக வெய்திலம் இந்நாள் வரையிலும்! என்செயக் கடவேம் இதனை அறியார் முன்செய் வினையால் மூளுமீ தென்பார்; சட்டியி லிருந்தால் அகப்பையிற் கிடைக்கும்; வட்டிதான் ஏது, முதற்பொருள் இன்றேல்? ஒண்ணுதல் நீயுன் உள்ளம் குமுறேல்! எண்ணரும் பிள்ளைகள் என்குடி யுள்ளார்: அவர்களுள் ஒருவனை மகனாய் அடைந்தே உவகை யுறலாம்; ஒன்றும குறைவிலை. கோம: மகவினை விரும்பும் மாந்தர் எண்ணம் மகிழ்வுற விதித்தனர் மறைகளில் என்றே புத்திர காம வேள்விகள் புரிவீர்! அத்திறம் வேள்வி ஆற்றினால் நமக்கும் குழந்தை பிறக்கக் கூடும்; அதனால், அழுந்திய துயர்க்கடல் ஏறுவோம் அன்றோ. பூதி: ஓகோ! பேதாய் உணர்ந்திலை உண்மை! யாகம் புரிவதால் யாதும் பயனிலை; பாரில் செல்வர் பொருள்களைப் பறிக்கவோர் ஆரியர் வகுத்த காரியம் அதுவே! காரியத் திற்கே காட்டினர் சாத்திரம் உடலுழைப் பின்றி உயர்சுகம் எய்தி கடல்வரைப் பினிலே காலங் கழிக்க எண்ணிய மாந்தர் இயம்பினர்; அதனைப் புண்ணிய செய்கை என்றே புகழ்ந்தனர். அதனைநாம் செய்வதில் அணுவும் பயனிலை; இதனைநான் அறிவேன் என்னரும் கோமதி! மருத்துவர் பார்த்துநம் உடல்நிலை மாற்றினால் கருத்தினில் மகிழ்கொளக் காதலற் பெறுவோம்! நெஞ்சக் குளத்தில் மகிழ்ச்சிநீர் நிரம்பிக் கொஞ்சுதற் குரியபல் குழந்தைகள் பிறக்கும்; (எழுந்து நிற்கிறான். குழந்தையின் அழுகுரல் கேட்கிறது.) அழுகுரல் ஏதோ! அத்திசை! கேள்நீ! குழவியின் குரல்போல் தோன்றும்; கோதாய்! (கோமதி எழுந்து நிற்கின்றாள்.) கோம: ஆமாம்! குழந்தை அழுகுரல் அதுதான்! நாம்போய்ப் பார்ப்போம்; நடப்போம் அவ்வயின். (இருவரும் அழுகுரல் வரும் திசை நோக்கிச் செல்கின்றனர். குழந்தையையும், அதனிடம் நிற்கும் பசுவையும் பார்க்கின்றனர்.) பூதி: என்னே! வியப்பிது வென்ன வியப்பே! அன்னமே பாராய்! அதோஓர் குழந்தை! ஆவினை நோக்குக! அதன்புறம் நிற்கும்; நாவால் நக்கி நன்குபால் ஊட்டும்; ஈன்ற குழவிக் கிரங்கா ராகித் தேன் றரு சோலையில் திருட்டுத் தனமாய் வைத்தவர் யார்கொலோ! வன்மன மாக்கள்! இத்தரை விலங்குகள் பறவை இனங்களும் பெற்றதம் மகவைப் பெரிதும் பேணும்; முற்றும் மக்கள் இயல்பிலா மூர்க்கரே இங்ஙனம் செய்தவர்! ஏ!ஏ! கொடுமை! எங்ஙனம் ஆயினும் இதைநாம் காப்போம்! (இருவரும் குழந்தையின் அருகிற் செல்கின்றனர். கோமதி அக் குழந்தையைத் தூக்கிக் கொள்ளுகிறாள்.) கோம: நாதா! இவனை நன்றாய்க் காத்த ஆதான் ஈன்றதென் றடியாள் கருதுவல்! அன்றேல் இத்துணை அன்புதான் காட்டுமோ! நன்றுநீர் சிந்தியும், நான்சொல் மொழியினை! பூதி: பெண்ணே! உன்மொழி பேதைமை! தவறாம்! மண்ணில் விலங்குகள் மனிதக் குழந்தைகள் பெறுதல் இயல்பல; பேசுவர் பலகதை! அறிஞர் அவைகொளார்; ஆமகன் இவனலன்; உத்தம குணங்கள் உருக்கொண் டதுபோல் இத்தளிர்ச் சோலையில் இருந்த மகவினை நெடுநாள் மகவை விரும்பிநின் றாய்க்குக் கடவுள் அளித்தது! கருதுக நம்மகன்! கோம: என்னரும் கணவா! இதன்முகம் பாரும்! அன்பாற் சிரிக்கும், அழுகுரல் இல்லை; உம்மையும் பார்க்கும், உள்ளம் களிக்கும்; நம்மகம் விட்டுக் கிளம்பிய நாழிகை நற்பொழு தாதலின் நமக்கிவன் கிடைத்தான்; அற்புதம் இதுவே! ஆண்டவன் அருளே! பூதி: ஆமாம்! அய்யம் அதிலென் கண்ணே! நாமிவற் பெற்றேம் நற்றவப் பயனால், விளையும் பயிரிது; விளையா திதுவென முளையிலே தெரியும்; முற்றுமீ துண்மை! இன்னவன் அறிவும் கல்வியும் எய்திப் பின்னாள் பலர்புகழ் பெரியனாய் வாழ்வான்! இதற்காம் குறிகள் இவன்முகத் துள்ளன; புதுமைகள் புரிந்தே போற்றுவம் வாராய்! (இருவரும் வயனங்கோட்டில் உள்ள தங்கள் வீட்டை அடைகின்றனர். கோமதி குழந்தையை மார்போடணைத்துக் கொண்டு கூறுகிறாள்.) கோம: மகவினை அன்புடன் மார்பில் அணைத்ததும் மிகப்பால் சுரந்தது; மெய்யின் புற்றது; என்மகன் என்பதற் கேதினி அய்யம்? நன்மணி ஒன்றினை நாம்பெற் றனமே! இவற்கென் பெயர்தான் இடலாம்! நினைமின்! நவிற்றுக அப்பெயர் நற்பெய ராக! பூதி: ஏழுநாள் மகவாய் இருக்கலாம் இதுவும்; தாழா திதற்குத் தன்பால் ஊட்டி, நாவால் நக்கி, நன்குபுரந் திருந்த ஆவின் நன்றியை மறத்தல் அறமல; ஆமகன் என்னும் அழகிய பெயரால் நாமழைத் திடுவோம்; நானிலம் புகழவே! கோம: நாதா அதுவே நற்பெயர்! நற்பெயர்! காதற் பசுதான் காத்தல் இன்றேல் இம்மகன் உயிரோ டிருத்தல் அரிதே! பூதி: நம்மவர்க் குரிய நலமெலாம் செய்வோம்! வேதம் ஆகமம் நீதிநூல் பலவும் போதனை செய்து போற்றுவோம் மகனாய்! பலநாள் நாமெதிர் பார்த்த செல்வம் எளிதில் வந்தால் எனஇவள் கிடைத்தான்; எல்லாம் இறைவன் செயலே நல்லாய்! தொழுக! நாதன் கழலே. காட்சி - 4 இடம் : வயனங்கோட்டில் அனந்த சாத்திரியின் வீடு. நடிகர் : அனந்த சாத்திரி, குப்பு சாத்திரி, கோபு சாத்திரி, அப்பு சாத்திரி, சுப்பு சாத்திரி. (அனந்த சாத்திரி, தனியாக வீட்டில் உட்கார்ந்திருக்கின்றான். தானாகவே சொல்லிக் கொண்டிருக்கின்றான்.) அனந்: மணங்கொள் பருவம் மகளும் எய்தினள்; பணமோ இல்லை; பலரும் என்னை இன்னும் பெண்ணுக் கேன்மணம் செய்யான் என்னக் கூறி இகழ்கின் றனரே! உலைவாய் மூடினும் ஊர்வாய் மூடற்கு இலையொரு மூடி என்பது மெய்யே! ஆகலின் இதற்கோர் வழியை அறிந்தேன்; யாகம் ஒன்றை யான்செய் வதுவே அவ்வழி யாகும்; அதற்காம் பொருள்கள் இவ்வயின் இருக்கும் செல்வர் அரசர் அனைவர் பாலும் வேள்வியென் றறைந்து நனிபொருள் வாங்கி நடத்துவோம் அதனை ஊனும், உணவும், உருசிகொள் சோம பானமும் பெறலாம்; பலரும் மகிழ்வர்; மீதப் பொருளை மின்னிடை யென்மகள் சீதன மாக்கிச் செய்வோம் திருமணம். (எழுந்து வாசற்படியில் வந்து நின்று எட்டிப் பார்த்துக் கொண்டு சொல்வது.) குப்புசாத் திரியும் கோபுசாத் திரியும் அப்புசாத் திரியும் சுப்புசாத் திரியும் என்னகத் திற்கு வருவதாய் இயம்பினர் இன்னும் காணோம்! ஏனோ தாமதம்! (சாத்திரிகள் வருகின்றனர்.) குப்பு: கொக்கென நின்றீர்! குறுகுறு நினைந்தீர்! துக்கம் மனத்தில் தோன்றவே தனியாய் அனந்தரே என்ன ஆலோ சனையில் முனைந்துளீர்! என்னிடம் மொழியீர் கொல்லோ! அனந்: வாரும் சாத்திரி மார்களே வாரும்! நேரமேன் தாழ்த்தது? நேற்றுநாம் பேசிய காரியம் பற்றி உங்கள் கருத்தில் மாறுதல் உண்டோ மறைக்கா துரைப்பீர்! எண்ணும் செயல்கள் எவையே யாயினும் நுண்ணறி வாலவை நுட்பந் தேர்ந்து திண்ணிய ராகிப் பண்ணிட முந்தலே அறிவுடை யோர்க்குக் கடமை யாகும் பிறிதொரு நாளெனல் பேதைமைக் குணமே! கோபு: அருஞ்செயல் எங்கள் அகத்திலும் உளவால்; வரும்பொருள் இன்றி வாய்புதைத் திருந்தோம்; நீர்வளம் இன்றேல் நிலைகொளும் தாவரம் பாரில் வளர்ந்து பயன்தரல் உண்டோ? செல்வம் இன்றிச் செய்வ தெவ்வினை? நல்வழி யுதைத்தீர் நமக்கினி என்குறை? நேற்றுநாம் செய்த முடிவினை நிச்சயம் ஆற்றுதல் வேண்டும்; அதுவே பொருள்பெறத் தக்கதோர் வழியாம்! தாமதம் இனியேன்? இக்கணம் முயல்வோம்! எழுவீர்! எழுவீர்! அப்பு: ஆமாம்! ஆமாம்! அதுவே நல்வழி! கோமே தகமே செய்வதாய்க் கூறி அரசர் செல்வர் அனைவர் பாலும் பரிசாய்ப் பலபொருள் பறிப்போம்! கொடுப்பார்; இங்கவ் வேள்வியை இயற்றிய தாக்கித் தங்கும் பொருள்களைத் தலைக்கொரு பங்காய்க் கொள்வோம்; இதனின் குறுகிய வழிதான் செல்வம் பெறுவதற் கில்லை; சிந்தியும். சுப்பு: உத்தம வேளை இதுதான் உணர்வீர்! இத்தரை மீதில் மழையும் இல்லை; ஆதலின் பயிர்கள் அனைத்தும் வாடும்; மாதுயர் உறுவார் மக்களும் உயிரும்; இந்நாள் வேள்வியை இயற்றுவ தாலே நன்னீர் பெறுவோம்! நலிவெலாம் ஒழியும் என்பன கூறின் எவரும் பொருள்பல அன்பாய் வழங்குவர்; அய்யமும் சிறிதுறார்; பொந்தின் வழியே புகுந்துபல் கிளைகொள் எந்த மரத்தையும் இரையாய்க் கொள்ளும் கறையான் போலே, காசினி வாழ்வோர் அறிவிலாப் பொந்தால் அவர்பொருள் கொள்வோம்! அனந்: இந்த நேரத்தே இங்கே வாழும் அந்தணர் எல்லாம், அரும்பொருள் வேண்டிப் பல்லோ ரிடமும் படர்ந்திது பகர்வீர்! வல்லே பொருள்கள் வாங்கி வருவீர்! நம்முளக் கருத்தை நவிலீர் யார்க்கும்! இம்மா நிலத்தார் அறிந்தால் இகழ்வார்! மறையின் பெயரால் மக்களை வஞ்சித்து உறையும் நஞ்செயல் உலகம் உணர்ந்தால் நட்டம் நமக்கே! நமது சாத்திரக் கட்டெலாம் வெளிப்படும்; கருத்திற் பதிமின்! குப்பு: உள்ளது புகன்றீர்! உண்மை! யாங்கள் செல்லுதும் ஈதோ! செல்வம் கொணர்வோம்! யாகம் புரிவதற் காவன யாவும் சேகரம் செய்யும்! சிறந்ததோர் பசுவும் பலியிடற் காகப் பார்த்துநீர் வைப்பீர்! கலியெலாம் தவிர்வோம்! களிப்பினி நமக்கே! அனந்: ஆவன யாவும் அமைப்பேன் தேடி நீவிர் போய்ப்பொருள் தருவீர்! நில்லீர்! (எல்லோரும் போகின்றனர். ஆபுத்திரன் இவர் கள் பேச்சை ஒரு புறத்தில் மறைந்திருந்து கேட்டான். அவன் தனக்குட் சொல்லிக் கொள்கிறான்.) ஆபுத்: ஆவா! இவரார்! கொடியர்! கொடியர்! மூவா மறைகள் முழுதுணர்ந் தோராம்! பாவம்! பாவம்! பகுத்தறி வற்றார்! வதைசெய் வேள்வியால் துறக்கம் வருமெனும் கதையை நம்பிக் காரியம் செய்வார்! அன்னவர் தம்மை அறவுரை காட்டி நன்னெறி நடத்த நம்மா லியலும்! உண்மையில் உறங்குவோர் தம்மை உசுப்பலாம் கண்ணை மூடிக் காட்டுவோர் துயிலை மாற்றுதற் செய்த மாந்தரால் முடியும்? ஆற்றவும் இவர்கள் அத்திறத் தினரே. இவரோ பொருளில் இச்சையுற் றவராய் நவைசூழ் வேள்வி நடத்தத் துணிந்தனர்; தன்னுயிர் நீப்பினும் செய்யேல் பிறிதின் இன்னுயிர் நீக்கும் வினையெனும் மொழியும், அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணா திருத்தல் உயர்வெனும் சொல்லையும் உணரார்; சோம்பல் உடையார்! புல்லிய தொழிலே புரியமுன் வந்தனர்; செந்தமிழ் நாட்டில் சிறுசெயல் இதனை அந்தணர் இவர்கள் ஆற்றுதற் கெண்ணினர்; எப்படி யாயினும் இவர்தரும் பசுஉயிர் தப்பச் செய்வேன்! தடுப்பேன் கொலையை! அடியேன் வாழும் அந்தணர் சேரியில் கொடியர் பசுவைக் கொல்வதைப் பார்ப்போம்! மறவேன் என்கடன்! மண்ணில் அறமே துணையாய் ஆகுக வெனக்கே! காட்சி - 5 இடம் : வயனங் கோட்டில், வேள்விச்சாலை, காலம் : இரவு நடிகர் : கிட்டு, வேதப்பிராமணர்கள், முன்பு கூறிய சாத்திரிகள், பசு. அனந்: அனைவரும் வருவீர்! அருமுறை அந்தணீர்! புனித வேள்வியைப் புரிவோம் இன்றே! அவ்வா சனத்தில் அமர்வீர் நீரே! இவ்வா சனத்தில் இருப்பீர் நீங்கள்! அங்கே ஒருவர் அமர்தல் வேண்டும்! இங்கே ஒருவர் இருத்தல் நன்றே! செந்தீ யிதுதான் சுடருடன் சிறந்தே பந்துபோல் எழும்பிப் பரந்தது பாரீர்! வேதம் கற்றோர் விருப்பாய் அதனை ஓதுவீர்! தீமை ஒன்றும் நமக்கிலை! (வேதங்கள் ஓதுகின்றனர். வேள்வி நடக்கின்றது. நள்ளிரவு வந்துவிட்டது.) சுப்பு: முதலிற் செய்யும் சடங்குகள் முற்றும் இதமாய் நடந்தன எவரும் போற்ற; இறுதியிற் செய்வன இன்னும் சிலவுள; அருந்திய பின்னர் ஆற்றுவம் அவைகளை. குப்பு: உண்டுநாம் சிறிதே உறங்கி எழுந்தபின் அண்டர்க் களிக்கும் அவியினைப் புரிவோம்! விடியற் காலையில் வேள்வியை முடிப்போம்! கடிதில் எழுவீர், கலைஞர் அனைவரும்! அப்பு: வேதம் ஓதும் விப்பிரர் அனைவரும் போதுவீர்! உணவு புசிப்பதற் காக வாரும்! உணவு வகையெலாம் ஆயின; ஆறும் நாழிகைக் ஆனால் அவையெலாம். அனந்: சாப்பிட அனைவரும் சார்ந்தால் வேள்வியைக் காப்பவர் யார்கொல்! கண்விழித் திருந்தே? பொருளெலாம் எங்கும் போட்டவை கிடந்தன; எரியும் அணையா திருத்தல் வேண்டும்: அன்னிய மக்கள் அடைந்தால் இங்கே பண்ணிய வேள்விப் பயனெலாம் குன்றும்; ஆதலாற் காவல் வேண்டுவ தவசியம்! (அங்கிருந்த கிட்டுவைப் பார்த்துக் கூறுவது.) கோபு: நீதான் கிட்டா! நிற்பாய் இங்கே! உண்க, நாங்கள் உற்றபின்; வேள்வியைக் கண்கொட் டாமல் காப்பாய் நன்றாய்! கிட்டு: ஆகா! செல்வீர் அனைவரும்! காப்பேன்! (எல்லோரும் சாப்பிடப் போகின்றனர். கிட்டு தனியாக இருக்கிறான். அவன் தானே சொல்லிக் கொள்ளுகிறான்.) ஓகோ! இவர்கள் உளத்தில் என்னை மடைய னாக மதித்தனர் போலும்! அடைந்தனர் இவர்கள் உணவை அடைக்க மூக்கான் மூன்று பருக்கை விழும்வரை நாக்காற் சுவைத்து நல்லுண வருந்தித் திரும்பும் வரையிலும் தீப்பசி கொண்டு வருந்துதற் கென்னை வைத்தனர்; வஞ்சர்! வெண்ணெயை வைத்து நெய்க்கழும் மக்கள் மண்ணில் உளரோ, மதியுடை யவருள்! பாலும் பழமும், பருப்பும் நெய்யும் காலக் கிடந்தன; சாப்பிடு வேன்நான்; பத்திர மாகச் சோம பானமும் வைத்தனர்; அதனையும் வாய்வழி விடுவேன்! வேதியர் வருமுன் விரைந்திவை செய்வேன்! பாதகம் இல்லை பசித்துயர் பெரிதே! (கிட்டு எல்லாவற்றையும் சாப்பிட்டுப்படுத்து விட்டான். மறைந்திருந்த ஆபுத்திரன் முன் வருகின்றான்.) ஆபு: தக்க சமயம் இதுவே! தாழேன்! இக்கணம் நீங்கின் இனிக்கணம் இல்லை! (பசுவைப் பார்த்துக் கூறுகிறான்.) பெருமலர் மாலை கோட்டிற் பிணைத்தனர்; அருந்துயர் பொறாமல் அம்மா! வென்னும் கொலைபுரி வேட்டுவர் கொடுமரம் அஞ்சி வலையிடைப் பட்ட மானே போன்றது! அஞ்சிநின் றலறும் ஆத்துயர் காணின், நெஞ்சு நடுங்கும்! நெடுங்கணீர் சிந்தும்! கள்ள வினையிற் கடுந்துயர் பாழ்பட நள்ளிருட் கொண்டு நடக்குவென் நானே. (கட்டியிருந்த பசுவைக் கட்ட விழ்த்துக் கையிற் பிடித்துக்கொண்டு செல்லுகிறான்.) வஞ்சனை யறியா வாயிலாப் பிராணி தஞ்சிறு நன்றினைச் தன்னுயிர் போலே அன்புடன் பேணும் ஆவிதன் தீம்பால் மன்பதைக் கெல்லாம் மருந்தும் உணவுமாம்; இவ்வுயிர் காப்பதால் எனக்கிவ் வுலகில் எவ்வகைத் துன்பம் வரினும் ஏற்பேன்! காட்டில் கொலைஞர் காணா விடத்தே ஓட்டிச் செல்வேன்! உறுதி உறுதி! (சாப்பிடச் சென்றவர்கள் எல்லோரும் சாப்பிட்டு வேள்விச்சாலையை அடைகின்றனர். அங்குள்ள நிலையைக் காணுகின்றனர்.) அனந்: பாரும் இந்தப் பயல்கிட் டாவை! ஆரும் இல்லை; அயர்ந்து தூங்கினன்! கவலை அறியான்! கசடன் மடியன் இவனைக் காவல் இருவென் றனமே! அப்பு: எங்கே பழமும் பாலும் நெய்யும்? இங்கே சோம பானமும் இல்லை; எல்லாம் தின்றான்; இவனே குடித்தான்; பொல்லாப் பயலிவன்; புத்தி யில்லான்; ஆதலால் மயக்கம் அடைந்தான்; அய்யம் ஏதும் இல்லை; இனியென் செய்வோம்! குப்பு: பானையில் உள்ள பாலைக் காக்கப் பூனையைக் காவல் போட்டது போல, நீசனைக் காவலாய் நிறுத்தினம் இங்கே! மோசம் செய்தான்; மூடன்! வஞ்சன்! (பசுவைத் தேடுகின்றனர். அதையும் காணவில்லை.) சுப்பு: ஓகோ! பசுவையும் காணோம்; உணர்வீர்! யாகம் சிதைந்தது! யார்செய் சதியோ! கள்ளர் யாரோ உள்ளே வந்தனர்; கொள்ளை யடித்தனர்; கொண்டனர் பசுவையும்; என்ன தீமையோ! இனிநமக் கெல்லாம்; பின்னர் வருஞ்செயல் முன்னர்க் காட்டும் விளைவிது வாகும்; வெட்கம் நமக்கெலாம்; உளையும் என்மனம்; ஒன்றும் உணரேன்! கைக்கெட் டியபொருள் வாய்க்கெட் டாமல் உக்கது போலே உற்றனம் துயரே! கோபு: ஆமாம்! பலப்பல பேசி ஆவதென்? நாமே திசையெலாம் செல்வோம்! நாடுவோம்! விடியும் நேரம் ஆனது; விரைவில் தடிகைக் கொள்வீர்! தடம்பல செல்வீர்! அல்லிடை ஆவைப் பற்றி அகன்றோன் கல்லுறை வழிகள் கடந்து காட்டகம் நண்ணும் முன்னம் நாமவற் பிடிப்போம்! என்ன யோசனை இன்னும்! எழுவீர்! எல்லோ: அஞ்சோம்! எழுந்தோம் அனைவரும் வஞ்சனைப் பிடித்துயிர் வாங்குவோம் இன்றே! காட்சி - 6 இடம் : ஒரு பரந்தவெளி. காலம் : காலை நடிகர் : ஆபுத்திரன், யாக சாலையிலிருந்தவர்கள். (ஆபுத்திரன் பசுவைக் கையிற்பிடித்துக் கொண்டு நிற்கிறான். அந்தணர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்பு சாத்திரி அவனைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்.) அப்பு: ஆவுடன் கள்வன் அகப்பட் டனனே யாவரும் வருவீர்! யாவரும் வருவீர்! திருடும் தந்திரம் தெரியாப் பேயன் குருடன் யாக குண்டம் புகுந்தான் வறுமையே இவனது வாழ்வென முன்பே பிரமன் தலையில் புரண்டினன் போலும் உயரிய செல்வர் மனையின் உள்ளே அயர்ந்த சமயம் அறிந்து புகுந்து அரும்பொருள் கவரும் ஆற்றலும் அறிவும் ஒருசிறி தேனும் உடையான் அல்லன்; ஏழை - பார்ப்பார் எம்மிடம் நுழைந்து கோழைத் தனமாய்க் கொண்டனன் பசுவை! விட்டுவி டாதீர்! வீணனைக் காப்பீர்! கட்டுமின் கைகளைக் கள்வன் இவனை. அனந்: ஏதிது வியப்பே! இவனா கள்வன்? பூதியின் மகனிவன்! பூசுரர்க் குரிய பற்பல கலைகளும் பயின்றவன்! அறிஞன்! அற்பச் செயலிதை ஆற்றிய தென்னே! நல்லன் இவனென நாமெலாம் கருதினம். பொல்லன் இவனே! பூதியே வாரும்! உம்மகன் முகத்தை உற்றுநீர் பாரும்! நம்மவர்க் கெல்லாம் நமன்போல் வந்தான். வேதம் சாத்திர வித்தைகள் யாவும் ஓதவே செய்தீர் உம்முப தேசம் கள்ளத் தொழிலையே கற்பித் ததுவோ? பிள்ளை இவனோ? பெரும்பழி காரன்! குப்பு: ஆர் மகன் ஆயின்என்? அடியின்! உதைமின்! ஊர்மிகச் சிரிக்க ஒழித்தான் வேள்வியை! நம்மவர்க் கெல்லாம் நாசம் சூழ்ந்தான்; இம்மகன் தன்னைச் சும்மா விடுவதா? அனந்: ஆகவர்ந் திவ்வழி அடைந்ததென் காரணம்? நீமகன் அல்லாய்! நினைத்ததை உரையாய்! புலைச்சிறு மகனே! போக்குவன் உயிரை! மலைக்கேல்! மொழிவாய்! மறைத்தல் வேண்டாம்! (ஆபுத்திரனை ஒரு தடியால் அடிக்கிறான். பசு, அனந்தசாத்திரியின் வயிற்றில் முட்டிக் குடலை வெளிப்படுத்திவிட்டு ஓடிப்போகின்றது.) எல்லோ: ஆட்டிநின் றலைத்த அந்தணர் உவாத்தியைக் கோட்டினிற் குத்திக் குடர்வெளிப் படுத்திக் காட்டினிற் பசுவும் காற்றாய்ப் பறந்தது! நாட்டினில் முன்இது நடந்ததும் உண்டோ? தன்னுயிர் காத்த தனையற்கு யாம்செய் இன்னல் பொருமல் இழைத்ததிக் கொடுமை விலங்கே யாயினும் நலந்தனை யறிந்தது கலங்கா நெஞ்சொடு காரியம் செய்தது இப்பசு தன்னுடை இன்னுயிர் காக்கவும் எப்படிச் செய்தது? காணீர்! வியப்பே! (ஆபுத்திரன் எல்லோரையும் நோக்கிக் கூறுகிறான்.) ஆபுத் : கோவம் தணிமின்! கொஞ்சம் பொறுமின்! நோவன செய்யீர்! நுவல்வன கேண்மின்! விடுநில மருங்கிற் படுபுல் லார்ந்து நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சொடு அருள்சுரந் தூட்டும், இதனொடும் வந்த செற்றம் என்னை? முதுமறை அந்தணீர்! முன்னிய துரையோ! எல்லாத் தேவரும் இருப்பர் பசுவிடம் பொல்லாப் பாவம் மறையும் போற்றிடின் அருகம் புல்லதற் களித்தல் புண்யம் உரைஞ்சுகல் நடுதல் உயரிய தர்மம் இறைஞ்சுமின் பசுவை என்பீர் நீரே பஞ்ச கவ்வியம் என்றுரை பகர்ந்து கொஞ்சம் நெய்யில் தயிர்நீர் சாணம் அவையெலாம் ஒன்றாய் அருந்தியும் நிற்பீர் இவை தரும் பசுவைக் கொல்லுதற் கிசைந்தீர் அன்னையை இழந்த குழந்தைகள் ஆருயிர் தன்னுடைப் பாலால் காக்கும் தாயினைப் போற்றுதல் மாந்தர் பொறுப்பே யாகும் ஏற்றினும் தக்கதே இதுஉண ரீரோ. சுப்பு: இந்நிலம் பொருளெலாம் இயற்றிய நான்முகன் முன்னர் மொழிந்த முதுமறை வழியே நாங்கள் வேள்வியை நானிலம் பிழைக்க ஈங்கே புரிவோம்! இதனை அறிந்திலை! யாகம் தன்னில் பலியிடும் உயிரும் போகும் துறக்கம்; புகலும் மறைகள்; வேள்வி யின்றேல் வீழ்மழை யில்லை; ஆள்வோர் வருந்துவர்; அணுகும் பஞ்சம்! உயிர்க்கொலை யீதல; உண்மை உணர்ந்திலை! பயித்தியம் கொள்ளி! பாதகம் பண்ணினை! ஆபுத்: உங்கள் கருணை ஓஓ பெரிதே! இங்குவாழ் உயிரெலாம் துறக்கம் வேண்டின் நுங்கள் வேள்வியில் நுழைதல் வேண்டுமோ? அவ்வுயிர் சுவர்க்கம் அடைதல் உண்மையேல் செவ்விய கூர்வாள் கொண்டதைச் சிதைத்தல் எவ்விதத் தாலும் ஏலா தாகும்; கூறும் மந்திர மொழியால் அவையுயிர் வேறாய்ப் போயின் நம்புவேன் அதனை; இப்படி எந்நாள், எங்கே வேள்வியில் நடந்தது? இப்புவி தன்னில் நடந்ததே இலையே மறையெனும் திரைக்குள் மறைந்துநீர் வாழ்ந்தே குறைபிறர் காணாக் கொடுமைகள் செய்வீர்! உங்கள் மறைகள் உணர்வேன் நன்றாய்! இங்குளார் கற்பின் அவற்றின் இயல்பெலாம் அறிவர்; நீங்கள் ஆற்றும் வினைகளின் குறைகள் காணுவர்; குப்பையென் றகற்றுவர்; என்பதை அறிவீர்! இதனால் அன்றோ அன்புடன் ஒளிப்பீர்! அந்தணர் அன்றி மற்றவர் கற்பின் மாபழி என்றீர்! முற்றும் வேதம் மோசம்! மோசம்! அனந்: ஏதோ பிதற்றினை இகழ்ந்தனை எம்செயல் வேதம் புகன்ற விதிப்படி செய்யும் வேள்வியை நிந்தனை செய்யேல் வீணா மூளும் பாவம்! முழுநாள் வாழாய். கோபு: வேதம் பழித்தனை! வீணுரை கூறினை! ஓதுவம் உண்மை! உணர்வாய் இன்றே! பிரமன் முகத்திற் பிறந்தேம்! அவனால் உரைசெய் வேதம் ஓதுதற் குரியேம்! இத அறிந்திலை! இகழ்ந்தனை எம்மை! அதமா நரகை அடைவாய் நீயே! ஆபுத்: பலபல முனிவர், பண்டிதர், அந்நாள் புலம்பிய மொழிகள் போற்றிப் புனைந்தே வேதம் எனப்பெயர் அமைத்தனன் வியாசன்; போதம் தருமெனப் புகல்வீர் அவற்றை; தரைப்பால் வாழும் உயிர்கள் தமக்கெலாம் பிறப்பும் ஒன்றே! இறப்பும் ஒன்றே! உரைப்பீர் சிறிதும் ஒவ்வாப் பொய்யுரை! நான்முகன் தோள்துடை கால்முகங் களிலே, கான்முளை பிறந்தனர் எனக்கதை கட்டினீர்! உம்பொய்க் கூற்றை உலகினில் இனிமேல் நம்புவோர் இல்லை; நன்னெறி காண்பீர்! சொல்லும், செயலும், சிந்தையும், சுருதியும், எல்லாம் கடந்தது; ஈதல வென்பது கடவுளென் றுரைத்தும், கட்டினிர் அதன்மேல் அடங்காப் பலகதை; அறிவிலார் நம்பவே; எரிகதிர்ப் பகலவன் எழுந்தபின் உலகில் உறைபனி உருகி ஓடுதல் போலே, பகுத்தறி விந்நாள் பரவிய துலகில்; உகுத்தது நீங்கள் உரைத்த பொய் மூட்டையை! வீரியம் பேசுதல் வீணே; இங்கோர் காரியம் இல்லை; கட்டுவீர் கடையை! அப்பு: போதனை செய்தால் போமோ பிறந்த சாதிப் புத்தி! சாத்திரம் பொய்யோ! ஆமகன் ஆதற் கொத்தனை அறியாய்! நீ மகன் அல்லன்! நின்மேற் குறையிலை! ஆபுத்: நொள்ளைக் கண்ணனை நோக்கிநீ குருடனென்று உள்ளதைச் சொன்னால் உடனே சினப்பான்; துள்ளிக் குதிப்பான்; தூணை முட்டுவான்; எள்ளினிர் சினத்தால் என்னையான் மகனென; காண்பீர் உமது கால்வழி நினைந்தே! ஆன்மகன் அசலன், மான்மகன் சிருங்கி புலிமகன் விரிஞ்சி, புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன்? ஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று ஓங்குயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்! மக்களும் விலங்கும் கூடி மகப்பெறல் இக்கடல் வரைப்பில் எங்கும் கண்டிலேம்! ஆதலின் ஆவின் மகனலேன் யானும்; மாதின் மகனே! மயக்கம் தெளிவீர்! உங்கதை நம்பினும் ஓரிழி வெனக்கிலை. (முன்பு சாலியைச் சந்தித்த வைதிகவேதியன் முன்வந்து கூறுகிறான்.) வைதி: இங்கிவன் பிறப்பை யான்நன் கறிவேன்! நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள் வடமொழி யாட்டி மறைமுறை எய்திக் குமரி பாதம் கொள்கையின் வணங்கித் தமரில் தீர்ந்த சாலியென் போந்தனை, யாது நின்னூர்! ஈங்கென் வரவென மாதவள் இந்த மாற்றம் உரைத்தாள்: வாரணா சியோர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும்பெறல் மனைவியான்; பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுகிக், காப்புக் கடைகழிந்து, கணவனை யிழந்தேன், நெறிப்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு தெற்கட்குமரி ஆடிய வருவேன், பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் ஈன்ற குழவிக் கிரங்கேன் ஆகித் தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்; செல்கதி யுண்டோ! தீவினை யேற்கென்று அல்லலுற் றழுத அவள்மகன் ஈங்கிவன்; புல்லல் அகற்றுமின்! புலைமகன் இவனே! ஆபுத்: பிரமனைக் கூடிப் பெற்றாள் கூத்தி அரமகள் திலோத்தமை அகத்தியர் வசிட்டரை; சண்டா ளிதனைச் சார்ந்து வசிட்டர் உண்டாக் கினரே சத்திய முனிவரை; புலைச்சியின் தோளைப் புணர்ந்து சத்தியர் அலைகடல் உலகில் அளித்தார் பராசரை; பராசரர் வலைச்சியைப் பண்புடன் சேர்ந்தே உரைசெய் புகழ்சேர் வியாசரை உதவினர்; இவர்கள் பிறப்பினை எவரும் இதுவரை தவறெனக் கூறித் தாழ்த்தினர் அல்லர்; வேதம் ஓதி விண்ணவர் போற்ற மாதவர் ஆகி மாண்புகள் பெற்றார்; கல்வியும் அறிவும் கருணையும் பணிவும் நல்வினை புரியும் நலத்தகு தன்மையும் உள்ளவர் எக்குலத் துதித்தவர் ஆயினும் எல்லா மாந்தரும் ஏற்றுவர் புகழ்வர் அசையா முயற்சி அமைந்தோன் வாழும் திசையே நோக்கித் திரும்பும் செல்வம் பிறப்பால் செல்வமும் உளறல் அவர்மொழி என்பிறப் பினைநீர் இழிவெனக் கூறி வன்மொழி சொல்வதால் வரும்பயன் என்னை? (ஆபுத்திரனை வளர்த்த அந்தணன், அவனை நோக்கிக் கூறுகிறான்.) பூதி : உன்பிறப் பினைநான் உணரேன் இதுவரை; என்மகன் ஆக்கி வளர்த்தேன் இனிதே வேதியர்க் குரிய கலையெலாம் விடாமல் ஓதினை யென்பால்; உயர்குணம் பெற்றிலை; எம்பெரும் சுற்றம் என்னைத் தூற்ற வம்புகள் பேசினை! இதற்கோ வளர்த்தேன்! இனியென் வீட்டில் இருத்தல் தகாதே! புனிதன் அல்லன் போவெங் காயினும். ஆபுத்: தந்தையே வணக்கம்! தாழ்ந்தேன் அடியிணை! இந்நாள் வரையிலும் என்னைக் காத்தீர் சுற்றிய உறவினர் சொற்பழிக் கஞ்சினீர்! முற்றும் என்னை வெறுத்தீர்! மொழிந்தீர்! அம்மையும் நீங்களும் ஆற்றிய நன்மையை எம்மனம் பதிப்பேன்! மறவேன் என்றும்! (ஆபுத்திரன் போகின்றான்.) அப்பு: இப்படி வேள்வி முடிந்த திவனால் எப்படி யாயின் இனிநமக் கென்ன? உருசி மிக்க உணவுகள் உண்டோம்! பரிசெனப் பொருள்கள் பலரிடம் பெற்றோம்! எண்ணிய நினைவை எளிதில் முடித்தோம்! மண்ணில் இச்செயல் அறிந்தால், மாந்தர் ஏளனம் செய்வார்; ஆதலின் இன்றே மீளவும் வேள்வியைத் தொடங்கி மிகவும் விரைவாய்ச் செய்து விடுவோம் வருவீர் அனைவரும்! வருக ஒருங்கே! (எல்லோரும் செல்கின்றர்.) காட்சி - 7 இடம் : மதுரை. காலம் : பகல். நடிகர் : ஆபுத்திரன், பிச்சைக்காரர்கள். (ஆபுத்திரன் ஒரு தெருவழியே வருகிறான்.) ஆபுத்: மண்ணில் முளைத்த மல்லிகைக் கன்றுதான் தண்ணீர் இன்றித் தவிப்பது கண்டதும், அகழ்ந்துசென் றதனை அகத்தில் நாட்டி உகந்து வளர்த்ததை ஒப்பவே, என்னைக் காட்டிடைக் கண்டதும் காதலோ டேந்தி வீட்டிடை மகனாய் வேதியன் வளர்த்தனன். என்னறச் செய்கையை இகழ்ந்த பார்ப்பனர், அன்னவற் கிடையூ றாற்ற முனைந்தனர். கரியில் பிறந்த கதிரொளி வயிரம் பெரிதெனப் பேணுவர் பூணுவர் மெய்யினில் மண்ணிடைப் பிறந்த பொன்னை வெள்ளியை எண்ணி நாளெலாம் இடைவிடா துழைப்பர் பூச்சியின் எச்சிலாம் புல்லிய பட்டினை கூச்ச மின்றிக் கொள்ளுவர் தூய்தென இவரென் பிறப்பினை இகழ்ந்தனர், தூற்றினர் தவறொன் றறியாத் தந்தையை வெருட்டினர் ஆதலால் அவனெனை அகற்றினன்; யானும் வேதனைப் பசியால் வேகும் வறியரின் கொடுமை போக்கும் கொள்கைமேற் கொண்டேன், சுடுவெயிற் பொழுதிலும் சோம்பேன் ஆகிப் பிச்சைப் பாத்திரம் பெட்புடன் தாங்கி, அச்சிறு வூரினும், அதன்புறங் களிலும் ஏற்றூண் கொண்டேன்! ஏழையர்ப் புரந்தேன்! ஆற்றா மாக்கள் அந்தணச் சிறார்கள் கல்லும் மண்ணும் கலந்தனர் சோற்றில்; தொல்லை விளைத்தனர்; தூற்றினர் என்னை; பின்னரே இந்தப் பெரும்புகழ் வளரும் நன்னகர் மதுரையை நான்வந் தடைந்தேன்! உச்சியிற் கதிரோன் உற்றனன்; ஆதலின் பிச்சை யேற்கப் பெருநகர்ப் புகுவேன். (ஆபுத்திரன் தங்கும் கலைநியமத்து அம்பலப் பீடிகையின் முன் பிச்சைக்காரர்கள் வந்து கூடியிருக்கின்றனர்.) பிச்-1: எங்கே எம்முயிர்த் தலைவனைக் காணோம்! இங்கே நாமெலாம் இன்றுமுற் பொழுதிலே வந்துவிட் டோமோ வாடிய பசியால்? பிச்-2: எந்த வேலையும் இல்லா நாமெலாம் நேரமும் அறியோம்! நிலையிடம் இல்லோம்! சோற்றினை வேண்டிச் சோர்வுடன் வந்தோம்! என்றன் மனத்துள் இருக்குமோர் அய்யம் இன்றதைக் கூறுவேன்! எவரும் கேண்மின்! பிச்-3: என்ன தான் உன்மனத் திருக்கும் அய்யம்? அன்னதைக் கூறுவாய்! அவர்வர நேரம் ஆகும் போலும்; அதுவரை பொழுதும் போகவே தேனும் புகன்றினி திருப்போம்! பிச்-2: உச்சி யெட்டும் உயர்ந்த வீடுகள் வச்சு வாழ்வார், வளமெலாம் நிறைந்தார் வாகனம் ஊர்ந்து போகந் துய்ப்பார் சோகம் உணரார் சோர்முகம் நோக்கார் ஏகக் கூச்சல் இட்டுநாம் செல்லினும் இதுவரை அவர்கள் எவரும் பிச்சை உதவினர் அல்லர்; உண்மை உணரேன்; பலமுறை அவர்கள் சேரியிற் படர்ந்தோம்! அலைந்தனம் சோற்றுக் கவர்நமைத் துரத்தினர். இதுதான் என்னுளத் திருந்தசந் தேகம்! பிச்-4: புதுமை இதிலென்? புகல்வேன் கேட்பீர்! தன்னலம் ஒன்றையே தலையெனக் கொண்ட இன்னவர் ஏழையர் எவரையும் பேணார் தங்கள் உழைப்புத் தருபயன் அறியா திங்கே மாடுபோல் பணிசெய் திருக்கும் மக்களால் எல்லா நன்மையும் எய்தியும் தக்கவா றவர்க்கும் ஊதியம் தராமல் வஞ்சகம் செய்து வாழும் இவர்கள் நெஞ்சில் இரக்க நீர்ச்சுரப் பற்றவர், வேதம் வேள்வி எனப்பல விளம்பிச் சூதுகள் செய்து சுகமாய் வாழ்வார் ஓதும் சடங்குகள் ஊரார் மெச்ச பூதல மீதில் புரிவார் பொருளால் ஆரிய நாட்டினின் றவர்கள் பிழைக்கும் காரியம் கருதி வந்தனர் இங்கே: இரக்கும் தொழிலை இனிதெனக் கொண்டனர்; புரக்கும் தொழிலவர்க் கிலையெனப் புகன்றனர்; தனக்கு மிஞ்சியே தானமும், தருமமும், எனப்புகல் நீதி இவர்முறை யாகும். இன்னவர் அறங்கள் எங்ஙனம் செய்வார்! அன்னவர் கொள்கைதான் அதுவா யிடினே? பிச்-1 : ஆனால் அவர்தம் இனத்தினர் இரக்கப் போனால் அவர்க்குப் போடுவார் பிச்சை; வறுமை யறியா உளங்கள் உடையோர் தருமம் மதியா தண்டல் காரர் மக்கள் ஊழியர் நாமென மதியா மிக்க மமதைகொள் மேலதி காரிகள், கடவுள் தலைவிதி கர்மமே மக்கள் இடையே செல்வம் வறுமை இன்பம் வேறுவே றாக விளங்கச் செய்தன; மாறுபட் டுரைப்பார் மதத்து ரோகிகள் எனவுப தேசம் செய்திங் கேழையர் மனத்தின் அறிவை மழுங்கிடச் செய்யும் சமயத் தலைவர்கள், இன்னோர் சார்ந்திடின், தமது வளங்கள் தந்துப சரிப்பர்; இதுமட் டிலுமேன்? ஏழையர்ப் பேணார்; புதுமையாய் இங்ஙனம் புரிவர்; ஏனோ? சுவையிலா இடத்தே சுற்றுமோ எறும்புகள் இவையெலாம் அவர்கள் இலாபங் கருதியே செய்வர் சிறிதும் ஐயமே யில்லை. பிச்-4: கைதவத் தொழிலோர் தங்களுள் கலகம் பிறந்திடின், அவர்கள் பெரும்புரட் டெல்லாம் பறந்திடும்; வெளியிற் பலரும் அறிவர்; ஆதலால் அவர்கள் அடிக்கடி தம்முட் பேதம் தோன்றா திருக்கும் பொருட்டே உள் நாட்டினிலே ஒற்றுமை யின்றிப் பல்வித சாதி மதப்பெயர் கூறி அடிக்கடி சண்டை ஆற்றுவோர், வறுமை பிடித்திடச் செல்வம் பெறும்நோக் குடனே பிறநா டேகின், பேதம் மறப்பார்; ஒருவர்க் கொருவர் உதவியாய் வாழ்வார்; கருதுமின்! இச்செயல்! கண்காண் உண்மை! ஆதலின் செல்வர் அனைவரும் தம்முட் பேதம் இன்றிப் பிறங்குவர் இங்கே! பிச்-3: மறையின் கருத்தெனும் மிருதிகள் தம்முள் உறையுமோர் நீதி! உரைப்பேன் அதனை; பெரியோர் அடிகளிற் பெரிதும் வணங்கி அரும்பொருள் பலவும் அவர்க் களிப்பதுவே உயரிய தானமென் றுரைப்பது கொண்டனர்; அயர்வுறும் ஏழையர்க் காதர வளியார்; பூசுரர்க் களிப்பதே புண்ணியம் ஆமெனப் பேசிய மொழிகளால் தமிழரும் பிறழ்ந்தனர், ஆதலால் ஈகை அடியோ டழிந்தது! சூதர் கொழுத்தனர், சுகமிகப் பெற்றனர்! பிச்-1: அறிவார் சாத்திரம் ஆபுத் திரரும்; வறியோர் களுக்கே வழங்குவ தென்கொல்? (இச் சமயம் ஆபுத்திரன் வருகிறான். அவனைச் சுட்டிக்காட்டிக் கூறுவது.) பிச்-2: அவரதோ வந்தார்; அய்யமுந் தெளிவோம்! தவறவர் செய்யார்; தகுந்த காரணம் உரைக்கக் கூடும்! உயரிய சாத்திரக் கருத்தெலாம் கண்ட கலைஞர் அன்றோ! (ஆபுத்திரன் அருகில் வந்தவுடன் அவனை வணங்கிக் கூறுவது.) ஆற்றாப் பசியினர் அருந்துயர், உணவால் மாற்றி, அவர்மனம் மகிழ்கொளச் செய்வீர்! இச்செயல் அறமோ? எவரினும் உயர்வாய் உச்சியில் வாழ்வோம் யாம் என உரைப்போர், தானம் பெறற்குத் தகுந்தவர் ஆமென ஈனருக் குதவா திருத்தல் சிறப்போ? சிறந்த தெதுவெனச், சிந்தையில் அய்யம் பிறந்த தாதலின், பெரியரைக் கேட்டோம்! ஆபுத்: உங்கள் மனத்தில் உள்ளதோர் அய்யம் இங்கே பலர்உளத் தெழுதல் இயல்பே! இளைத்தவர் வலுவுற இனிய நல்லூண் அளித்தலே நீதி; அங்ஙனம் இன்றி, மிக்கபல் லுணவால் மேனி கொழுத்தே தக்கபசி யின்றித் தவிர்ப்பவர்க் களித்தல் பொருந்துமோ உரைமின்! புவியில் என்றும் வருந்துவோர்க் காத்தலே வாய்ந்தநல் லறமாம்! செழிப்பிலா நிலத்திற் செய்யும் பயிர்க்கே உழைப்போர் எவரும் உரம்பல போடுவார்; விளைவும் கொழிக்கும் விரும்பிய பலன்தரும்; வளமிகு நிலத்திற் கெருப்பல வழங்கின் பயிர்தழைத் தோங்கும்; கொழுக்கும் பலனிலை; உயர்ந்தவர்க் குதவும் தானமும் இதுவே! தந்நலம் கருதிய மாந்தரே தங்கள் பின்னவர் வாழப் பிதற்றினர் நூல்களில்; அவையெலாம் தமிழர் அறநூல் அல்ல; நவையறி வுடையரே நவிற்றுவர் அறமென, வறியருக் கீவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர் கொள்ளும் கொள்கையென்றுணர்வீர்! மெய்யறி வுடைய தெய்வப் புலவர் பொய்யா மொழியார் புகன்ற திதுவே. (எல்லோரும் கூறுவது) எல்: அறிந்தனம் உண்மை, அகன்றனம் அய்யம், சிறந்த நல்லறம் செய்யும் பெரியீர்! ஆபுத்: வருந்தும் பசிப்பிணி வழிக்கொள அருந்துவீர் உணவை! அனைவரும் இங்கே! (எல்லோர்க்கும் உணவிடுதல், அவர்கள் சாப்பிடுகின்றனர்.) காட்சி - 8 இடம் : கலைநியமத்து அம்பலப் பீடிகை. காலம் : நள்ளிருள். நடிகர் : ஆபுத்திரன், பொன்னன், முத்தன், சிந்தாதேவி. (ஆபுத்திரன் தனியாகச் சொல்லிக் கொள்வது.) ஆபுத் : வத்வர்க் கெல்லாம் வழங்கினம் உணவை; இந்தநே ரத்தில் எவரினி வருவார்! ஒருவரும் வந்திலர்; ஆதலின் உண்போம்! சிறிதுகண் படுப்போம்! செய்வது வேறிலை. (சாப்பிட்டுவிட்டுப் பிச்சைக்கலனைத் தலை யணையாக வைத்துக்கொண்டு படுத்துத் தூங்குகிறான். பொன்னன், முத்தன் இருவரும் பீடிகையின் முன்நின்று பேசுகின்றனர்.) பொன்: அண்ணா! சோற்றுக் கலைந்தனம் நகரெலாம், என்னநாம் செய்வது இருட்டிலும், மழையிலும்? பசித்துயர் நம்மைப் பதைப்புறச் செய்யும்; புசித்திடல் இன்றேல் பொன்றுவம் போலும்! எந்தப் பொழுதிலும் இங்கோர் இளைஞர் வந்தவர்க் கெல்லாம் வழங்குவர் உணவெனச் பலருங் கூறுவர்; பார்த்தவர்ச் சேர்வோம்! அலமரல் ஒழிவோம்! அவர்பெயர் என்னோ? முத்த: அவரா? ஓகோ! ஆபுத் திரரா! எவரும் அவர்போல் இல்லை உலகில்; பிறவுயிர் காத்துப் பேணுதல் ஒன்றே அறமெனக் கொண்டவர்; அவரிடம் சென்றால் வெம்பும் பசியற வேண்டுண விடுவார்; அம்பலப் பீடிகை இதுவே; அவரிடம் வாராய்! சென்றவ் வள்ளலைக் காண்போம். (இருவரும் கலைநியமத்தில் நின்று கூறுவது.) இரு: ஆரே இங்குளார்? அருந்துயர் களைவார், ஆபுத் திரராம் அறிஞரிங் கிலையோ? மாபசிக் கொலைஞன் மடிப்பான் எம்மை! கொழுகொம் பில்லாக் கொடியென, வெய்யிற் புழுவென வாடினம்! புரப்பவர் இலையோ! ஊரெலாம் சுற்றினோம் உணவே இல்லை; ஆரும் உதவிரேல் ஆவியைப் போக்குவோம். (ஆபுத்திரன் விழித்தெழிந்து, அவர்களைப் பார்த்துக் கூறுவது.) ஆபுத்: ஆர்கொல் நீங்கள்! அடைந்தீர் இருட்டில்? கூறினீர் பசியெனக், குந்துமின், இங்கே! இருவ: அயலூர் நாங்கள்! அலைந்தேம் பசியுடன்; முயன்றோம் உண்ணவே முன்னிர வெல்லாம்; ஒன்றும் பெற்றிலம் உண்ணுதற் காம்பொருள் கொன்றிடும் பசிப்பேய்! கொடுப்பீர் எம்முயிர்! (தனக்குள்) ஆபுத்: கடுவெயில் வீச்சாற் கருகும் மலரெனச் சுடுபசித் துயரால் சோர்ந்தனர் இவர்கள்; ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லேன். ஆற்றுவ தறியேன்! அந்தோ! அந்தோ! (சிந்தாதேவி அமுதசுரபியுடன் தோன்றிக்கூறுகிறாள்) சிந் : ஏடா அழியல்! எழுந்திது கொள்வாய்! நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது தான்றொலை வில்லாத் தகைமைய தாகும்; ஏந்துக நின்கை! இப்பெரும் பாத்திரம், மாந்தர் பசிப்பிணி மாற்றுக மகிழ்வாய்! (ஆபுத்திரன் வணங்கி அப்பாத்திரத்தை வாங்குகின்றான். அவர்களுக்குச் சோறிடுகின்றான். தேவியை மீண்டும் வணங்குகிறான்.) ஆபுத்: சிந்தா தேவி! செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே! நாமிசைப் பாவாய்! வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி! ஏனோர் உற்ற இடரெலாம் களைவாய்! படிமிசை வறியர் பசித்துய ருடனே அடியேன் துயரையும் அகற்றிய செல்வி! கற்றவர் போற்றும் கவிச்சுவைத் தேனே! உற்றவர் நெஞ்சில் உறையும் அறிவே! அணங்கே! அன்னாய்! அன்பே! வணங்கினேன் உன்னடி வாழ்த்தினென் மகிழ்ந்தே. காட்சி - 9 இடம் : மதுரையில் ஒரு தெரு. காலம் : பகல். நடிகர் : ஆபுத்திரன், இந்திரன், (இந்திரன் வேதியர் உருவுடன் வீதி வழியே வருகின்றான். ஆபுத்திரனைக் கண்டு சொல்லுகிறான்.) இந் : எத்துணை இரக்கம்! எத்துணை அன்பு! உத்தமன் இவன்போல் ஒருவனும் இல்லை! மக்கள் சூழ்ந்தனர் மாவும் புள்ளும் எக்கண முமிவனோ டிருந்தே வாழும்; இன்னவன் அறச்செயல் எனக்குணர்த் திடவே என்வெண் கம்பளம் நடுங்கிற் றென்றும் வெள்ளைக் கம்பளம் வீணாய் நடுங்குதல் இல்லை; உலகில் இனியநல் லறங்கள் செய்வார் வாழினும், சிறுமை அவர்களுக் கெய்தினும் அவற்றை எனக்கறி விக்கக் கம்பளம் நடுங்கும்; காட்டும் உண்மையை! உம்பரின் நீங்கியிவ் வுலகினை யடைந்தேன்; ஆபுத் திரனோ அறமே வடிவாய் மாபசி போக்கும் மாண்புளன்; அவன்முன் சேருவென்! உனது சிந்தையின் விருப்பம் கூறுக வென்பேன்! கொடுப்பேன் வரங்கள்! இந்நகர் நீங்கி இன்பம் குடிகொளும் பொன்னகர் போந்து பொருந்துக வென்பேன். (ஆபுத்திரனை அணுகி, அவனிடம் கூறுதல்) அந்தணன் யானென அகத்தினிற் கொள்ளேல்! இந்திரன் இங்கே வந்தனன் உன்பால்; ஆருயிர்த் துன்பம் மாரிபோல் ஓட்டுநின் சீரிய செய்கையைக் கம்பளம் காட்ட. ஓடினென் வந்தேன்! உனக்காம் வரங்கள் நாடினை கேள்வீர்! நான்தரு கின்றேன்! என்னுல கடைவாய்! இன்பந் துய்ப்பாய்! உன்னறப் பயனை நுகர்வாய்! உவப்பாய்! ஆபு: ஈண்டுநான் செய்த அறப்பயன் இன்பம் ஆண்டுடன் நுகர அழைக்கும் பெரியோய்! எனக்கென ஒன்றும் வேண்டேன்! என்றும் மனக்குறை யில்லேன்! மகிழ்ந்திங் குறைவேன்! உண்டி வேண்டேன்! உடுப்பன வேண்டேன்! பெண்டிர் வேண்டேன்! பேணுநர் வேண்டேன்! வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர் திருந்திய முகமுடன் திரிதரச் செய்யுமென் பிச்சைப் பாத்திரம் ஒன்றே பெருந்துணை! இச்சகத் தின்பம்! எனக்கென் றறிக! இந்: தேவர் தலைவன் மேவினேன் உன்பால்! வாவென அழைத்தேன்! வரங்கேள் என்றேன்! இகழ்ந்தனை என்னைப், புகழ்ந்தனை நின்செயல்! தகுந்தநல் வினைகள் தரையினிற் புரிவார் என்னுல கின்பம் எய்துதல் கருதியே! இன்னதை உணராய்! ஏனறி விழந்தனை! நாட்டினை வறுமையால் நலிதலும், வறுமையை ஓட்டலும் என்னால் ஒண்ணுமென் றுணர்வாய்! ஆபு: ஓவியங் களிலே உயிரினை அமைப்பவர்; காவியங் களிலே கற்பனை கூறுவோர்; புதுப்புதுப் பதுமைகள் உயிருடன் பொலியச் செதுக்கும் சிற்பர், செந்தமிழ்க் கவிஞர், அறிவின் துணையால் அதிசயச் செயல் பல புரிவிஞ் ஞானிகள் பொருந்துவர் இங்கே! இனையவர் போன்றார் எவருன் னுலகுளர்? மனமா சற்றே மாந்தர்க் கெல்லாம் செல்வமும், கல்வியும், சிறந்த உரிமையும் நல்கும் அரசன் நாட்டில் உண்டோ! மக்களின் வாக்குப் பெற்ற மாந்தரே ஆதலால் உன்னுல கடைதல் வேண்டேன்! போதல் செய்நீ புகன்றது போதும்! (இது கேட்டு இந்திரன் கோபத்துடன் கூறுகிறான்.) இந்: நன்று புதுமை! நவின்றனை அறிந்தேன்! ஒன்றிலும் கேட்பேன்! உரைசெய் விடைதான்! இந்திர வுலக இன்பம் வெறுத்தனை எந்த வின்பம் விரும்புவை நீதான்! ஆபு: மன்னுயிர் இன்பம் மனங்கொள லின்றித் தன்னுயி ரின்பமே தலையெனக் கொள்வோர் இருக்கும் உலகுக் கிறைவ! கேள்நீ! நெருக்கும் பசியால் நிலைகொளல் இன்றி மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரெனப் பண்டைப் பெரியோர் பகர்ந்தன ராதலின் கொண்டேன் இச்செயல்! கொடுப்பேன் உணவே! துன்புற் றுவந்தோர் துயரம் நீங்கி இன்புற் றேகலே எனக்கு மகிழ்வாம்! ஓடி நாளெலா உழைக்கும் மக்கள் ஆடையின்றி வாடையால் மெலிந்தவர் பெண்டிரும் மக்களும் பிணியால் வருந்தி உண்ணும் பொருள்கள் உடுக்கும் உடைகள் கண்ணகல் மனைகள் காடுகள் கழனிகள் எல்லைக் கதிகம் எடுத்தனர் பற்றி மெல்லிய சுவைப்பொருள் மிகவும் உண்டு சீரணம் இலையெனச் சிந்தையில் எண்ணிப் பூர ணாதி லேகியம் போன்ற மருந்துகள் மயக்கும் பான வகைகள் அருந்தி வாழும் அவர்களும், என்றும் இரப்போர் ஈவோர், ஈனர் பெரியர், புரப்போர் அகதிகள், புலவர் மூடர் வேற்றுமை யாவும் வீழ்ந்திடப் பெரும்பணி ஆற்றுதற் கெண்ணினேன் அஞ்சேன் எதற்கும் இதைவிட எனக்கிவ் வுலகில் இன்பம் புதிதொன் றில்லை; புகன்றேன் உண்மை! இந்: அங்ஙனம் ஆயினும் அமுத சுரபியில் பொங்கும் உணவைப் புசிப்பதற் கொருவரும் வருபவர் இன்றேல் வழங்குவ தெப்படி? பெருமழை பொழிந்திவ் வுலகப் பசிப்பிணி நீக்கியுன் இன்பம் நிலைக்கா வண்ணம் ஆக்குவென். நீதுயர் அடைவாய் சொன்னேன்! ஆபு: என்னநீர் செய்யினும் எனக்கென்? செய்க! இந்நா டின்றேல் எனக்கிட மிலையோ! யாதும் ஊரே! யாவரும் கேளிர்! சாதுயர்ப் பஞ்சம் சாரும் தேசம் எத்திசை யிருப்பினும் ஏகுவென் யானே அத்திசை மாந்தர் அடுபசி களைவேன்; மோதும் பசியாற் குவிந்த முகமலர் வேதனை யின்றி விளங்குதல் கண்டே இன்பம் துய்த்தினி திருப்பேன் என்பதை உணர்கநீ என்முடி விதுவே! காட்சி - 10 இடம் : மதுரையில் ஒரு தெரு. காலம் : பகல். நடிகர் : ஆபுத்திரன், ஒரு வணிகன். (ஆபுத்திரன், தானே இவ்வாறு சொல்லிக் கொண்டு வீதிவழியே போகிறான்.) ஆபுத்: என்னநான் செய்வேன்! எவரும் என்பால் அன்னம் வேண்டி அடைந்திலர் இங்கே; பன்னிரண் டாண்டு பஞ்சம் இருந்ததால் அந்நாள் நம்முண வயின்றனர் பலரும். காவெலாம் பற்பல கனிகள் நிரம்பின; பூவெலாம் மலர்ந்தன; பொலிவன; கமழ்வன; வயலெலாம் பயிர்கள் வளர்ந்தன; செழித்தன; பயன்தரு தானியம் பலவும் விளைந்தன; நீர்ப்பெருக் கெங்கும் நிறைந்திட வானம் ஆர்ப்பரித் ததிர்ந்து மின்னி அழகாய்ப் பொழிந்த மழையாற் புவியெலாம் குளிர்ந்தது; அழிபசி யுடையார் ஆரும் இலரே; வீடெலாம் களிப்பும் விருந்தும் நிகழ்வன; நாடெலாம் விழாக்கள் நடப்பன நாளும்; இந்திரற் கென்மேல் எழுந்த சினத்தால் இந்த நாட்டினை இங்ஙனம் செய்தனன்; எனக்கிது மகிழ்வே! இன்பமே பெரிதும்! மனக்குறை ஒன்றிலை; ஆயினும் மனிதன் சும்மா வுண்டு சோம்பியே வாழ இம்மா நிலத்திற் பிறந்தவ னல்லன்; குறிக்கோள் ஒன்றுளம் கொண்டவன் ஆகி நிறுத்தா துழைக்கும் நிலையுடன் பிறந்தோன். அடியேன் இந்நாள் ஆற்றுவ தறியேன்! குடியரும் சூதரும் குணமிலா மடியரும் எள்ளினர்; துள்ளினர்; என்னைச் சூழ்ந்தனர். இல்லம் புகுந்துநான் இடுவேன் சோறெனில் கொள்ளேம்! போவெனக் கோவித் துரைப்பார்; புள்ளினங் கூடப் போதரல் இல்லை. எப்படி வாழ்வேன்! ஏதும் அறியேன்! இப்புவி யில்நான் இருப்பதில் என்பயன்? (சாவகத்திலிருந்து வந்த வணிகன், ஆபுத்திரன் எதிரில் வருகிறான். அவன் ஆபுத்திரனைப் பார்த்துக் கூறுவது.) வணி: ஏதுநீர் தனியே இவ்வழி வந்தீர்! மாதுயர் கொண்ட மனத்தீர் போலும்! இடைவிடா தும்மை அடைதிரை போலே புடைசூழ், விலங்குகள் புள்ளினம் எங்கே! மாபெருந் திரள்சேர் மாந்தர்கள் எங்கே! ஆபுத் திரரே! அடியேற் குரைப்பீர்! ஆபு: நாடு செழித்தது! நலமெலாம் நிரம்பின! தேடுவார் இன்றித் திரிகின் றேன்நான்! சோற்றூண் பெறுவார் இலர்மனம் சோர்ந்தேன்! வேற்று நாடேக விரும்பினென் நின்றேன் எங்குற் றனைநீ இந்நாள் வரையிலும் இங்குரை செய்வாய் என்னரு நண்பா! வாணி: ஆபுத் திரரே! அடியேன் இதுவரை சாவகத் தீவம் சார்ந்தனன்; இருந்தேன்; அந்தத் தீவில் அருந்துயர்ப் பஞ்சம் வந்ததால் யானும் வாணிபம் நிறுத்தி இங்கே வந்தேன்; இப்பொழு தேநீர் அங்கே செல்மின்! அடைவீர் இன்பம்! கொடுங்கோல் அரசின் கீழ்வாழ் குடிபோல் அடுபசிக் கொலைஞனால் அவர்நிலை குலைவார்; அவ்வர சழித்தவர்க் குரிமை அளிக்கும் செவ்விய ஆட்சிபோல் செல்கநீர் அங்கே! யாவரும் உய்வார்! சாவது தவிர்வார்! போவது தவிரீர்! புண்ணியம் வேறிலை! ஆபுத்: அப்படி எனிலிதோ அடைவேன் சாவகம்! கப்பல் ஏறுவேன்? கடிதிற் செல்வேன்! படுவெயிற் பாலை வனந்தனில் ஒருவன் குடிநீர் இன்றிக் குமுறுங் காலை மண்ணின் குடத்தில் மனங்களி கூரத் தண்ணீர் ஒருவன் தந்தது போலவே, உன்னுரை யென்னை உவப்புறச் செய்ததால்; எந்நா டாயினென்? எக்குல மாயினென்? அன்னவர் பசித்துயர் ஆற்றலே என்னகத் தின்பம் எழுப்பும் செயலே. காட்சி - 11 இடம் : மணிபல்லவத் தீவு, கோமுகிப் பொய்கை. காலம் : காலை. நடிகர் : ஆபுத்திரன். (ஆபுத்திரன், கடற்கரை ஓரத்தில் படுத்திருந்தவன் எழுந்து சுற்றிலும் நோக்கிச் சொல்லுகிறான்.) கப்பல் எங்கே? காணேன்! சென்றதோ! எப்பொழு ததனை இங்கிருந் தோட்டினர்! பட்ட காலிலே பலமுறை படுவதும், கெட்ட குடியே அடிக்கடி கெடுவதும் என்வர லாறே இனி துணர்த் திடுமால்! வன்சுழல் காற்றால் வருந்திய கப்பல் ஈங்கே கொணர்ந்தனர்; இறக்கினர் மாந்தரை; தூங்கினர் இரவெலாம்; துன்பம் நீங்கினர்; விடியுமுன் வங்கம் விரைந்தவர் ஏறிக் கடல்மேற் சென்றனர்; களைப்பின் மிகுதியால் உறங்கினேன் ஆதலின் ஒருதனி யானேன்! இருந்தினிப் பயனென் இத்தீ வகத்தே! விலங்கும் புள்ளும் விரும்பிய வாறே உலகில் தனித்தனி உறைதல் கூடும்; ஒருவர்க் கொருவர் உதவி யின்றேல் அறிவுறு மக்கள் அனைவரும் உயர்வாய் உறைவதற் கில்லை; உலவுவர் விலங்கென; பரிவுடன் அறிஞர் பகர்ந்தபின் னூல்களில் ஆருயிர்க் கெல்லாம் அன்புசெய் வதுவே சீரிய தொண்டெனச் செப்பினர்; செய்தனர். உண்மைப் பணியினை உணரா மாக்கள் வன்மனம் உடையராய் வறியவர் உழைப்பைப் பறித்தவர் வாழ்விற் பாதகம் விளைத்தனர். பருத்துக் கொழுத்திப் பாரில் வாழ்வார்; கருமம் தலைவிதி கடவுள் பெயர்சொலித் தருமம் பேசுவர்; தவிப்பவர்க் குதவார்; ஊருணி நீர்நிறைந் ததுவே உலகவாம் பேரறி வாளன் திருவெனற் கிலக்காய் இப்புவி தனில்வாழ்ந் திருப்பவர் யாரே! எப்பெரும் செல்வரும் தப்பே புரிவார் எக்கதி இனியெனக் கெனநினை யாமல் இக்கதை பலப்பல எண்ணிப் பயனென்? (பிச்சைப் பாத்திரத்தை நோக்கி) தோண்டத் தோண்டத் தொலையா நீர்சுரந்து ஈண்டும் ஊற்றென இவ்வுல குயிர்க்கெலாம் அருந்தூண் எடுத்தெடுத் தளிக்க அளிக்கச் சுரந்தூண் கொடுத்துச் சுருங்கா வளந்தரும் இத்தகை யமுத சுரபியிங் கென்பயன்? எத்தனை நாள் தனித் திருந்துயிர் வாழ்வேன்! (கோமுகி என்னும் பொய்கைக் கரையை அடைந்து அதனை நோக்கிக் கூறுகின்றான்.) உயர்ந்த மரங்கள் உச்சியிற் செல்லும் புயல்கைப் பற்றிப் பொழியும் மழையால் செடிபல தோன்றிச் செழிப்புடன் வளரும்; கொடிபல படரும்; கொழுமலர் கணக்கில அணிநிற முடனே அலர்ந்து கமழும்; மணிபல் லவத்தின் மத்தியில் அமைந்தது, பளிங்கெனத் திகழ்வது; தெளிந்தநீர் உடையது. வளர்ந்து கரையில் வாழும், பொருளெலாம் என்வயிற் றுள்ளே இருப்பன பார்எனத் தன்வயிற் காட்டும் தாமரைத் தடமிது; வண்டுகள் பாடி வாட்டமொன் றின்றி உண்டுசெந் தேனை உலவுமிப் பொய்கையில்; பறவைகள் இதன்மேற் பறந்து பறந்துதம் சிறைகளை அடித்துச் சிந்தை களிப்பன; இந்தக் கோமுகி என்னும் பொய்கை அந்தமில் பொருள்களின் ஆருயிர் காக்கும்; ஆதலின் என்கைத் தீதிலாப் பாத்திரம் போதணி பொய்கையிற் போடுவேன்; இதுதான் மனத்தில் அருள்கொடு மன்னுயிர் புரந்த தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன், உண்மை யறம்பல உலகினர்க் குரைத்த வண்மை உருவோன்; வாய்மை யாளன், உத்தமன் புத்தன் உதித்தநன் னாளில் இத்தட நடுவில் எவருங் காண ஒவ்வோ ராண்டும் உயர்ந்துமே லெழுக! செவ்வையாய் அவனறம் சிந்தையிற் பதித்தே காணார், கேளார், கால்முடப் பட்டோர், பேணுநர் இல்லோர், பிணியிங் குற்றோர் அனைவரும் வருகவென் றழைத்தவர் பசிப்பிணி தணிவுறச் செய்யும் தன்மையுடையோர் எவரிங் குறினும் இப்பெருங் கலனே அவர்கைச் செல்க! அமுதூண் சுரக்க! (பாத்திரத்தை வணங்கிப் பொய்கையில் போடுகின்றான்.) இன்று முதல்நான் ஏதும் உண்ணேன்! நின்றுயிர் வழங்குவேன்! நீணில மெல்லாம் சாதி வேற்றுமை, சமய வேற்றுமை நீதி வேற்றுமை நிறத்தின் வேற்றுமை ஆவன யாவும் அடிசாய்ந் தொழிக! யாவரும் ஒரினம் ஆகி வாழ்க! பிறவி நான் மீண்டும் பெறுவே னாயின் அறவினை என்றும் ஆற்றுவேன் ஆகுக! இந்நில வுயிர்கள் எல்லாம் மன்னுக இன்பம்; மகிழுக சிறந்தே. முன்சீப் வேதநாயகம் பிள்ளை (1955) முன்னுரை அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள் நமக்குப் பல படிப் பினைகளை ஊட்டுவன. நாம் எப்படி நடந்துகொண்டால் தூய வாழ்க்கை வாழலாம் என்பதற்கு வழிகாட்டுவன. தமிழ் நாட்டிலே பிறந்த அறிஞர்களுக்கு அளவேயில்லை. அவர்களிலே முன்சீப் வேதநாயகம் பிள்ளைகள் ஒரு சிறந்த அறிஞர்; உத்தம குணம் உள்ளவர்; சிறந்த கல்விமான்; இரக்க சிந்தையுள்ளவர்; தமிழ் மொழியிலே அளவு கடந்த பற்றுள்ளவர்; தமிழும் தமிழ்நாடும் உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் என்னும் கருத்துள்ளவர். இத்தகைய அறிஞரின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள். இந்த நோக்கத்துடனேயே அவர் வாழ்க்கை வரலாற்றில் கண்ட உண்மைகள் பலவற்றை இப் புத்தகத்தில் திரட்டி எழுதப்பட் டிருக்கின்றது. மாணவர்கள் எளிதில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் கருத்துடன் எளிய நடையில் அமைத்துள்ளேன். இப்புத்தகத்தை ஆசிரியர்களும், கல்வி அதிகாரி களும், பாட சாலைத் தலைவர்களும் ஆதரித்து மாணவர்களுக்கு உதவிப் பாடமாக வைப்பார்களாயின் இதை எழுதியதன் நோக்கம் நிறைவேறக்கூடும். சென்னை அன்பன் 20-10-55 சாமி. சிதம்பரன் குழந்தை கவிஞர் உயர்திரு. அழ. வள்ளியப்பா அவர்களின் சிறப்புரை ஆழ்ந்த புலமையும் ஆராய்ச்சித் திறமையும் கொண்ட அறிஞர். சாமி. சிதம்பரனார் அவர்கள், தமிழாசிரியராகத் தமது வாழ்க்கையைத் துவக்கினார். பள்ளிப் பிள்ளைகளுடன் பதினாறு ஆண்டுகள் ஒன்றிப் பழகிய அவர், பாடநூல்கள் எழுதும் பணியிலே முதல் முதலாக ஈடுபட்டார்; அத்துறையிலே வெற்றியும் பெற்றார். பின்னர், பத்திரிகாசிரியராயிருந்து, பல பத்திரிகைகளைத் திறம்பட நடத்திய அவர், நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் எழுதி, எழுத்துலகிலே ஏற்றம் பெற்றார். அதன் பிறகு, பழந்தமிழ் நூல்கள் பலவற்றையும் அறிமுகப் படுத்தும் அரும்பணியை மேற்கொண்டார். தொல் காப்பியம் முதல் வள்ளலாரின் அருட்பா வரை ஏராளமான நூல்களை எளிய நடையில் அறிமுகப்படுத்தினார். பண்டைய இலக்கியங்களை முறையாகக் கற்ற அவர், பழமையை மட்டுமேபாராட்டிக் கொண்டிருக்கவில்லை. புதிய நூல்களை இயற்றிய தோடு, புதிய இலக்கிய முயற்சிகளையும் வரவேற்று ஊக்குவித்தார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் சில ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்து எழுத்தாளர் ஏற்றம் பெறவும், இலக்கியம் சிறப்புற்றோங்கவும் இயன்றதையெல்லாம் செய்து வந்தார். அவருடன் நெருங்கிப் பழகி, அவரது சிறப்பியல்புகளை நேரிலே அறியும் நல்வாய்ப்புப் பெற்ற பலருள் நானும் ஒருவன் எனக் கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். சிதம்பரனார் எழுதும் எதுவும் நடை நலமும் உணர்ச்சி வளமும் உடையதாகும் என நாவலர் சோமசுந்தர பாரதியாரால் பாராட்டப் பெற்ற சாமி. சிதம்பரனார் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முதல் முதலாக எழுதிப் புகழ் பெற்றவர். மாயூரம் வேதநாயகம் பிள்ளையவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இளைஞருலகும், மாணவருலகும் படித்துப் பயன்பெறும் வகை யிலே மிகச் சிறப்பாகத் தந்துள்ளார். வேதநாயகர் காலத்தில் வாழ்ந்த பல அறிஞர் பெரு மக்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்களில் பலருடன் வேதநாயகர் எவ்வாறு நெருங்கிய உறவு கொண்டிருந்தார் என்பதையும் சில நிகழ்ச்சிகள் வாயிலாக எடுத்துக் காட்டுகிறார். உண்மையான ஒழுக்கமும், சிறந்த அறிவும் நல்ல தமிழ்ப் பற்றும், தூய்மையான தேசப் பற்றும் உள்ளவர்கள் எக்குலத் தராயினும், எம்மதத்தராயினும் ஒன்றுபட்டு வாழலாம் என்ப தற்குவேதநாயகம் பிள்ளையவர்களின் வரலாறு ஓர் உதாரணம். என்று கூறும் சாமி. சிதம்பரனார், அந்த உதாரணத்தை அனைவரும் பின்பற்ற வேண்டுமென ஆசைப்படுகிறார். வேதநாயகர் ஆங்கிலத்திலும், அன்னை மொழியாகிய தமிழிலும் நல்ல புலமை பெற்றவர்; நூறு ஆண்டுகளுக்கு முன்பே சட்ட நுணுக் கங்களைத் தமிழிலே தந்தவர்; பெண் கல்வியின் பெருமையை வலி யுறுத்தி வந்தவர்; மேடையெங்கும் தமிழிசை முழங்க வேண்டுமென ஆசை கொண்டவர்; தமிழிலே உரைநடை நூல்கள் நிறைய வெளிவர வேண்டுமென விரும்பி யவர்; எந்த மதத்தினராயினும் சமரச மனப் பான்மையுடன் பழக வேண்டுமென எதிர் பார்த்தவர்; நகைச்சுவையின் அவசியத்தை நன்குணர்ந்தவர். இத்தகைய உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட வேத நாயகர், இவற்றையெல்லாம் உள்ளடக்கிப் பல உரைநடை நூல் களையும், கவிதை நூல்களையும் படைத்துத் தந்தார். படைத்துத் தந்ததோடு நிற்கவில்லை; வாழ்க்கையில் கடைப்பிடித்தும் ஒழுகினார் என்பதனைப் பல கோணங்களிலிருந்து படம் பிடித்துக் காட்டு கிறார் சாமி. சிதம்பரனார், இந்த நூலின் வாயிலாக, எண்ணம், சொல், செயல் யாவிலும் தூயவராக வாழ்ந்த தால்தான், வேதநாயகரை இன்று வரை நாடு போற்றுகிறது; இனியும் போற்றும். சிறந்த ஒரு தமிழறிஞரின் வரலாற்றைச் சிறந்த ஓர் எழுத்தாளர், சிறந்த முறையிலே வழங்கியுள்ளார். சாமி. சிதம்பரனார் விட்டுச் சென்ற பல கையெழுத்துப் பிரதிகளைக் கருத்துடன் தேடிப் பிடித்து அச்சு வாகனமேற்றி வரும் அவரது துணைவியார் திருமதி சிவகாமி சிதம்பரனார் அனைவரது பாராட்டுக் கும் உரியவர். கணவருக்குத் தமது கடமையைச் செய்வதோடு, தமிழன்னைக்கும் அவர் சார்பிலே அரிய பல மலர்களைச் சூட்டி வருகிறார். அவரது செந்தமிழ்த் தொண்டு சிறப்புற்றோங்குக! உமா இல்லம் அழ. வள்ளியப்பா மனை எண் 2884 தலைவர் அண்ணாநகர், சென்னை - 40 குழந்தை எழுத்தாளர் சங்கம் 23-11-76 ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலாளர் உயர்திரு.கெ.பக்தவத்சலம் அவர்களின் அணிந்துரை தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களை அவர் வாழ்வின் இறுதிக் காலத்தில் சந்தித்து, அவரோடு பழகிடும் நல் வாய்ப்பு, சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தின் வாயிலாக எனக்குக் கிடைத்தது. வாரத்தில் ஒரு நாள் நடைபெற்ற - பட்டிமன்றக் கூட்டங் களுக்குக் குறித்த நேரத்தில் வந்து கலந்து கொள்ளுவதை ஓர் இனிய பொழுது போக்காக அவர் கொண்டிருந்தார். முன் வரிசையில் முறுவல் தவழும் முகத்தோடு அமைதியாக அவர் அமர்ந்து பைந்தமிழ் விருந்தைப் பருகுவார். சொற்பொழிவாளர் பேசி முடித்ததும், அப்போதைய செயலாளர் திரு. அன்புப் பழம் நீ அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சில மணித் துளிகளில், அக்கூட்டத்தின் தலைப்பை ஒட்டித் தம் கருத்தையும் தெரிவித்து உதவுவார். இந்நிகழ்ச்சி இளைய தலைமுறையினரிடம் அவர் கொண்டிருந்த நன்மதிப்பையும் அன்பையும் புலப்படுத்து வதாக அமைந்து வந்தது. சங்க இலக்கியம் முதல் தனிப்பாடல் வரை அவருக்கிருந்த பரந்த அறிவு, ஆழ்ந்த புலமை, ஆராய்ச்சித் தெளிவு முதலி யவற்றை அவரது பேச்சுக்களே முதலில் எனக்கு அறிமுகம் செய்வித்தன. ஒருமுறை அவரை வரவேற்றுப் பேசும் போது, பொதுவுடைமைப் பூங்காவில் பூத்து, மணம் பரப்பும் இலக்கிய நறுமலர் என்று அவரைப் போற்றினேன். ஆனால் அதனை எளிதில் ஒப்புக் கொள்ளாத அவர், தாம் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் சொந்தமானவரல்ல என்பதை வற்புறுத்தினார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றி (1-12-1900) 61 ஆண்டுகள், தமிழ் நாட்டில் ஒரு பெருஞ் சீர்திருத்தச் செம்மலாக வாழ்ந்தார் திரு. சாமி. சிதம்பரனார். (17-1-1961). தாம் வாழ்ந்த ஆண்டொன்றிற்கு ஒரு நூல் வீதம் எழுதிய அறிஞராக, இன்று அவர் புகழுடம்பு எய்தியுள்ளார் இலக்கியப் பதிப்பு, செய்யுள், நாடகம், உரைநடை, மொழி பெயர்ப்பு எனப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உழைத்து, அரிய பல நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் சில பாடநூல்களாகவும், துணைப்பாட நூல்களாகவும் மாணவர் களால் விரும்பிப் பயிலப் பெற்றுள்ளன. அவ்வாறு அவர் எழுதி, 1955ஆம் ஆண்டில் முதற் பதிப்பாக வெளிவந்த நல்ல நூல்களுள் ஒன்று முன்சீப் வேதநாயகம் பிள்ளை. சாமி. சிதம்பரனார் மறைந்தாலும், அவர் எழுதிய நூல்கள் மறையா வண்ணம், ஒவ்வொன்றாகத் தொடர்ந்து மறுபதிப்புக் கொண்டு வருகிறார் திருமதி சிவகாமி சிதம்பரனார். ஓர் இலட்சிய மனைவி, கணவரின் மறைவுக்குப்பின் எவ்வாறு இலங்க வேண்டும் என்பதற்கு இவ்வம்மையார் ஓர் எடுத்துக் காட்டாவார். அவர்களின் விடா முயற்சியினால், இவ்வாண்டு இரண்டாம் பதிப்பாக, உலா வந்திருக் கும் உயரிய நூல், முன்சீப் வேதநாயகம் பிள்ளை. வேதநாயகம் பிள்ளை, சென்ற நூற்றாண்டில் (1826-1889) தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றிச் செஞ்சொற் கவிதையும், சீரிய உரைநடையும் படைத்த கொஞ்சு தமிழ்க் கோமான்: அப் பெரியாரின் 150 ஆம் ஆண்டுப் பிறந்த நாளை ஒட்டி (11-10-1826) தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்கப்படும் சாமி. சிதம்பரனாரின் பிறந்த நாள் பரிசே இந்நூல்! தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்து, பல காலம் அங்கேயே பணியாற்றிய சாமி. சிதம்பரனார், தஞ்சைத் தரணியில் நடையாடிய மற்றொரு முன் தோன்றலைப் பற்றி எழுதியுள்ளது ஓர் இனிய பொருத்தம் என்றே கூறலாம். இந்நூலில் இவர் வேதநாயகரது வாழ்க்கை வரலாற்றோடு அவர் எழுதியுள்ள பெரும்பாலான நூல்களையும் மதிப்பீடு செய்துள்ளார். வேதநாயகரின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல வெளி வந்துள்ளன என்றாலும், சாமி. சிதம்பரனாரின் எளிய, சுவை யான தமிழ் நடை இந்நூலுக்கு ஒரு தனிச் சிறப்பைத் தந்து கொண்டிருக்கிறது. உயர்ந்த அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதும் ஆசிரியரும் - அவரது வாழ்க்கை வரலாற்றைப் பிறிதொருவர் எழுதும் அளவுக்குத் தகுதி படைத்தவராயிருத்தல் அரிது. அத்தகைய தகுதி மிகுதியும் படைத்த வித்தகர் எழுதிய நூல் இது என்பது மற்றொரு சிறப்பாகும். நூலுடைத் தலைவருக்கும், நூலாசிரியருக்கும் ஒரு சேர அஞ்சலி செலுத்தும் வாய்ப்பை இந்நூல் வாயிலாக, இலக்கிய நிலையம் வழங்கி மகிழ்கின்றது. திருமதி சிவகாமி சிதம்பரனார் அவர்களின் சீரிய முயற்சியினால் மறுபிறவி எடுத்துள்ள இந்நூல், தமிழிலக்கிய ஆர்வலர்களால், பெரிதும் விரும்பி வரவேற்கப்படும் என்று நம்புகிறேன். சென்னை, 600001. கெ. பக்தவத்சலம். 24-11-76 செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம். தமிழின் வளர்ச்சி அறிஞர் வேதநாயகம்பிள்ளை அவர்கள் தமிழின் உயர்வுக் காக உழைத்தார். தமிழரின் நல்வாழ்வுக்காகப் பணியாற்றினார்; தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகத் தொண்டு புரிந்தார். இவர் ஒரு சிறந்த தமிழ்ப் புலவர்; ஆங்கில மொழியிலும் நல்ல தேர்ச்சி யுள்ளவர்; ஆண்டவன் மீது அளவு கடந்த அன்புள்ளவர்; கட்டுப் பாடும், நன்னடத்தையும் உள்ளவர்; எல்லோரிடத்திலும் அன்பாக நடந்து கொள்ளும் இயல்புள்ளவர்; ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்யும் உத்தம குணம் உள்ளவர். இத்தகைய சிறந்த பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் நமது அறிவு வளர்ச்சியடையும்; நாமும் நல்ல வழியிலே நடந்து உயர்வு பெறுவதற்கு அவருடைய வாழ்க்கை நமக்கு வழிகாட்டியாகும். வேத நாயகம் பிள்ளை அவர்கள் வாழ்ந்த காலத்திலே தமிழ்நாட்டிலே இன்னும் பல தலை சிறந்த புலவர்கள் வாழ்ந்தனர். மூவேந்தர் காலத்திற்குப் பின்னும் வேத நாயகம்பிள்ளை தோன்று வதற்கு முன்னும் உள்ள இடைக்காலத்திலே சில நூற்றாண்டுகள் தமிழ்மொழியின் வளர்ச்சி குன்றியிருந்தது. அந்த இடைக்காலத்திலே சிறந்த தமிழ் நூல்கள் வெளிவர வில்லை. தமிழ் கற்ற புலவர்கள் ஆதரிப்பாரின்றி வறுமையால் வருந்திக் கிடந்தனர். தமிழறிந்த புலவர்கள் உற்சாகத்துடன் உழைத்தால்தான் தமிழ் வளரும். இவ் வகையில் புலவர்கள் உழைப்பதற்கு வழியில்லை. அடகெடுவாய் பல தொழிலிலும் இருக்கக் கல்வி, அதிகம் என்றே கற்றுவிட்டோம் அறிவில்லாமல் என்று படித்த புலவர்கள் பலர் பாடி வருந்திக் கொண்டிருந்தார்கள். புலவர் வேத நாயகம் பிள்ளை அவர்கள் காலத்திலே தமிழ்ப் புலவர்களின் மதிப்பு உயர்ந்தது. தமிழ்மொழி பல துறைகளிலும் வளர்ச்சியடையத் தொடங்கியது தமிழ்த்தாய் தன் பண்டைப் பெருமையென்னும் அரியாசனத்தில் அமர அதன் படிகளிலே கால்வைத்து ஏறிக்கொண்டிருந்தாள். வேதநாயகம் பிள்ளையவர்கள் காலத்திலே தமிழ்ப் புலவர் களுக்கு உதவி செய்யும் தமிழன்பர்கள் பலர் தமிழகத்திலே தோன்றினர். தமிழகத்திலே சிறந்த நூல்கள் செய்யும் புலவர்கள் பலர் வாழ்ந்தனர். தமிழை விரும்புவோர்க்கெல்லாம் அன்புடன் போதிக் கும் ஆசிரியர்கள் பலர் வாழ்ந்தனர். இவர்களால் உறங்கிக் கிடந்த தமிழன்னை கெம்பீரமாகத் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கினாள். திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவர் உயர் திரு. சுப்பிர மணிய தேசிகர் அவர்கள் ஒரு பேரறிஞர். தமிழ் வளர்ச்சியிலே ஆர்வம் உள்ளவர். சைவ சமயத்தின் தத்துவமாகிய அன்பே உருவமாக அமைந்தவர். அவர் தமிழ் மொழிக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் ஆதரவளித்து வந்தார். வறுமையால் வருந்திய ஏழை மக்களுக்கும் உதவி செய்து வந்தார். இக் காலத்தில் தான் திருவாவடுதுறை ஆதீன வித்வான் உயர் திரு. மீனாட்சி சுந்தரம்பிள்ளை வாழ்ந்தார். இவர் மகா வித்வான் என்று அனைவராலும் கொண்டாடப்பட்டவர். டாக்டர். உ.வே. சாமிநாதய்யர் போன்றவர்கள் இவர்களிடம் தமிழ் கற்றவர்கள். பல தமிழ் நூல்களை முதலிலே அச்சுவாகனம் ஏற்றியவர் சி.வை. தாமோதரம் பிள்ளை என்பவர். சைவ நூல்கள் பலவற்றைத் திருத்தி வெளியிட்டவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர். தமிழில் முதலிலே உரைநடை நூல்கள் எழுதியவர்களிலே நாவலர் அவர்களும் ஒருவராவர். சன்மார்க்கப் பாடல்களையும், கல்லும் கரையும் பக்திப் சுவைப் பாடல்களையும் பாடி வெளி யிட்டவர், வடலூர் இராமலிங்க சுவாமிகள். ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் ஒன்றே என்னும் தத்துவத்தைப் போதிக்கும் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையை எழுதியவர் கோபால கிருஷ்ண பாரதியார். இவர்கள் எல்லோரும் வேத நாயகம் பிள்ளை வாழ்ந்த காலத்திலே இருந்த பெரும் புலவர்கள் இன்னும் பல புலவர்களும் வாழ்ந்தனர். வேத நாயகம் பிள்ளையின் காலத்தைத் தமிழ் அன்னை புத்துயிர் பெற்று வளரத் தொடங்கிய பொற்காலம் என்று சொல்லி விடலாம். திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்குப் போகும் புகை வண்டிப்பாதையிலே குளத்தூர் என்று ஓர் ஊர் உண்டு. அது மிகவும் பழமையான ஊர். அவ்வூரிலே வேளாளர் குடியிலே வாழ்ந்த சவரிமுத்துப் பிள்ளை - ஆரோக்கிய மரியம்மாள் என்னும் தம்பதி களுக்குப் புதல்வராகப் பிறந்தார் வேத நாயகம். இவர் பிறந்த ஆண்டு 1826. இக்குடும்பம் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு கத்தோலிக்க கிறித்துவ மதத்தைத் தழுவியது. வேத நாயகம் அவர்கள் கத்தோலிக்க கிறிதுவ மதத்திலே ஆழ்ந்த நம்பிக்கை யும் அன்பும் உள்ளவர். இறுதிவரையிலும் சிறந்த கத்தோலிக்க ராகவே வாழ்ந்தார். அவரு டைய வாழ்நாளிலே அவர் செய்த அரிய காரியங்கள் பல. அவைகள் நமக்குப் பல படிப்பினைகளை ஊட்டும். அவைகளை தெரிந்து கொள்ளுவோம். முன்னோர்கள் வேத நாயகம் அவர்களின் பிறப்பிடமான குளத்தூருக்குக் கோனாடு என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவ்வூரிலே நெடுங் காலமாகச் சைவ வேளாளர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தமிழ் மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் போது, தங்கள் கையினால் முடியை எடுத்துக் கொடுக்கும் உரிமையும், பெருமையும் உள்ளவர்கள். இந்த ஊர் வேளாளர்களுக்கே உரிமையானது. அவ்வுரி மையை தமிழ் மன்னர்களால் வழங்கப்பட்டது. இத்தகைய சிறப்பு பெற்ற வேளாளர் குடியிலே ஏறக்குறைய 200 ஆண்டு களுக்கு முன் மதுரநாயகம் பிள்ளை என்று ஒருவர் இருந்தார். இவர் வேத நாயகம் அவர்களின் மூன்றாவது பாட்டனார். ஊரிலே பெரிய மனிதர். நிலபுலன்கள் உள்ளவர். இவருடைய குடும்பத்திற்குக் கொங்கு ராயர் கோத்திரம் என்ற பட்டப் பெயர் உண்டு. வேளாண்மையே இவருடைய தொழில். சைவ ஒழுக்கத்திலே குறையாதவர். இவருக்குச் சூலை நோய் வந்துவிட்டது. சூலை நோய் என்பது கால் கைகளை முடக்கிவிடும் ஒரு வகை நோய். இந் நோயினால் மதுர நாயகம் பிள்ளை மிகவும் துன்புற்றார். அந் நோயின் கொடுமை யிலிருந்து தப்பித்துக் கொள்ள எவ்வளவோ முயன்றார். எத்தனையோ வைத்தியர்கள் பார்த்து மருந்து கொடுத்தும் நோய் தணியவில்லை. மதுர நாயகம் பிள்ளை சிறந்த தெய்வபக்தியுள்ளவர். தனது நோயை நீக்கும்படி பல தெய்வங்களை வேண்டிக்கொண்டார். அவர் வேண்டிக் கொள்ளாத தெய்வம் ஒன்றுமேயில்லை. அப்படி யும் நோய் நீங்கவில்லை. அதனால் அவர் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை. குளத்தூரிலே ஓர் ஐயனார் கோவில் உண்டு. அந்த ஐயனார்க்குக் கலிவராயன் என்று பெயர் அவ்வூர் மக்கள் அனைவரும் அதைக் கண்கண்ட தெய்வமாகக் கருதி வணங்கி வந்தனர். மதுரநாயகம் பிள்ளையும் அந்தக் கலிவராயனை வேண்டிக் கொண்டார். என்னுடைய நோய் தீர்ந்தால் தான் நான் எழுந்து போவேன்; இன்றேல் உன் சந்நிதியிலேயே உயிர் துறப்பேன் என்று அத் தெய்வத்தின் முன்னிலையிலே விழுந்து கிடந்தார். அன்ன ஆகார மின்றி எட்டு நாட்கள் இவ்வாறு விழுந்து கிடந்தார். அப்படியும் நோய் குணமாகவில்லை. இப்படியிருக்கும்போது ஆவூரிலே சிறந்த வைத்தியர்கள் வந்திருக்கின்றனர்; அவர்கள் தீராத நோய்களையெல்லாம் தீர்க்கும் திறமையுள்ளவர்கள். மதுரநாயகம் பிள்ளை இப்படி இங்கே வீழ்ந்து கிடப்பதைவிட அவர்களிடம் போனால் நோய் நீங்கிக் குணமடையலாம் என்று அவர் ஐயனார் சந்நிதியிலே விழுந்து கிடப்பதைக் கண்டு சிலர் சொல்லிக்கொண்டு போனார்கள். இவர்களுடைய சொற்கள் மதுரநாயகம் பிள்ளையின் காதிலே விழுந்தது. அச் சொற்களை ஐயனார் தந்த வரமாகவே அவர் நம்பினார். ஆவூருக் குப் போய் அந்த மருத்துவர்களிடம் மருந்துண்டு நோயைத் தீர்த்துக் கொள்ளுவது என்று உறுதி செய்து கொண்டார். ஆவூர் என்பது புதுக்கோட்டைச் சீமையின் ஆளுகைக்குள் இருந்தது. குளத்தூருக்கும், ஆவூருக்கும் ஏறக்குறைய ஆறு மைல்கள் தான். ஆவூருக்கு மதுர நாயகம் பிள்ளை போய் அங்கு வந்திருக்கும் மருத்துவர்களிடம் தன் குறையைக் கூறி ஆறுதல் பெற எண்ணி யிருக்கும் தனது எண்ணத்தைத் தம் உறவினரிடம் அறிவித்தார். அவர்கள் மதுர நாயகம் பிள்ளையை ஆவூருக்குப் போக வேண்டாம் என்று தடுத்தனர். ஆவூருக்கு வந்திருப்பவர்கள் கிறிதுவப் பாதிரிமார்கள். அவர்கள் இந்து மதத்தில் உள்ளவர் களைக் கிறிதுவ மதத்தில் சேர்க்கின்றனர் என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஆகை யால் அங்கே போனால் மதுர நாயகம் பிள்ளையும் கிறிதுவ ராகிவிடுவார் என்பதற்காகவே அவரை ஆவூருக்குப் போக வேண்டாம் என்று தடுத்தார்கள். உறவினர்கள் எவ்வளவு தடை செய்தும் மதுர நாயகம் பிள்ளை கேட்கவில்லை. ஆவூருக்குக் குடும்பத்துடன் புறப்பட்டுப் போனார். அங்குத் தங்கியிருந்த பாதிரிமார்களைக் கண்டார். தன் நோயின் துன்பத்தைக் கூறினார். அவர்கள் மதுர நாயகம் பிள்ளையை மனமுவந்து வரவேற்றனர். தக்க மருத்துவர்களைக் கொண்டு அவருடைய நோயைப் போக்கினார்கள். பாதிரிமார்கள் காட்டிய அன்பு; அவர்கள் ஏழை மக்களுக்குச் செய்யும் உதவி துன்பப்படுகின்றவர்களிடம் எல்லாம் அவர்கள் காட்டிய ஆதரவு; இவைகள் மதுர நாயகம் பிள்ளையின் மனத்தைக் கொள்ளை கொண்டன. ஆதலால் அவர் கிறிதுவ மதத்தில் சேர முடிவு செய்தார். அவருடைய கருத்தை அறிந்த பாதிரிமார் களும் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஞானநானம் கொடுத்துத் தம் மதத்திலே சேர்த்துக் கொண்டனர். அன்று முதல் மதுர நாயகம் பிள்ளையின் குடும்பம் கிறிதுவ மதத்தைப் பின்பற்றி வந்தது. ஆவூரிலே தங்கியிருந்த பாதிரிமார்கள், புதுக்கோட்டை மன்னர் அனுமதி பெற்று அங்கே மாதா கோவில் கட்டியிருந்தனர். சிறந்த மருத்துவசாலையும் வைத்திருந்தனர். அக்காலத்தில் நமது நாட்டிலே போதுமான வைத்தியசாலைகள் இல்லை; சிறந்த மருத்துவர்களும் இல்லை; தேவையான பள்ளிக்கூடங்களும் இல்லை. பணம் படைத்தவர்களே வைத்திய உதவி பெற முடிந்தது. ஏழை மக்கள் எந்த உதவியும் பெற முடியாமல் வாடி வதங்கினார்கள். இப்படிப்பட்ட ஏழை மக்களுக்கெல்லாம் பாதிரிமார்கள் உதவி செய்து வந்தமையால் அவர்களிலே பலர் கிறிதுவ மதத்தைத் தழுவி வந்தார்கள். மதுர நாயகம் பிள்ளை போன்ற போதுமான வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் களே பாதிரிமார்களின் பணியைக் கண்டு மனம் கசிந்து மதம் மாறினார்கள் என்றால் மற்ற ஏழை மக்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? மதுர நாயகம் பிள்ளை நோய் குணப்பட்டு, மதம் மாறிய பின், ஒரு வண்டியிலே தம்முடைய குடும்பத்துடன் புறப்பட்டுக் குளத்தூருக்கு வந்தார். அவருடைய உறவினர்களான சைவ வேளாளர்கள் அவரை ஆதரிக்கவில்லை. அவருடன் முகங் கொடுத்தும் பேசவில்லை. அவர் கிறிதுவராக மாறியது பற்றி வெறுப்புக் கொண்டனர். அவருக்குப் பல இடையூறுகளும் புரிந்து வந்தனர். பாதிரிமார்களின் செல்வாக்கினாலும், அன்பினாலும் மதுரயாயகம் பிள்ளை தமக்கு உண்டான இடையூறுகளையெல்லாம் எளிதிலே தவிர்த்துக் கொண்டார். சிறிதும் மனந் தளராமல் கிறிதுவ மதக் கொள்கைகளிலே உறுதியான நம்பிக்கையும் அன்பும் கொண்டார். பாதிரிமார்களும் மதுரநாயகம் பிள்ளை அவர்களின் உறுதியையும், அன்பையும் பாராட்டினார்கள். அவருக்குப் பலவகையிலும் உதவி புரிந்து வந்தார்கள். இவர் குடும்பத்திலே ஒரு பிள்ளைக்கு உயர்ந்த கல்விப் பயிற்சி அளித்தார்கள். ஆங்கிலம் பிரெஞ்சு முதலிய மொழிகளிலே தேர்ச்சியடையச் செய்தார்கள் அப்பிள்ளைக்கு உயர்ந்த உத்தியோகமும் தேடி வைத்தார்கள். இதனால் மதுர நாயகம் பிள்ளையின் குடும்பம் செல்வத்திலும், செல்வாக்கிலும் சிறந்து வளர்ந்தது. இக்குடும்பத்திலே மதுரநாயகம் பிள்ளையின் பேரனாகப் பிறந்தவர்தாம் வேதநாயகம் அவர்களின் தந்தையான சவுரிமுத்துப் பிள்ளை என்பவர். சவுரி முத்துப்பிள்ளையின் மனைவியார் பெயர் ஆரோக்கியமரியம்மாள். இவர்களுடைய செல்வப் புதல்வரே வேதநாயகம். ஆகவே, வேதநாயகம் என்பவர் தமிழ் நாட்டிலே தமிழ்ப் பழங்குடியிலே பிறந்த ஒரு பெருமகன் ஆவார். கல்விப் பயிற்சி விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பர். அதுபோல் வேத நாயகம் இளமையிலேயே மிகவும் சுறுசுறுப்புள்ளவரா யிருந்தார். பார்க்கும் எதையும் கற்றுக்கொண்டு செய்யவேண்டும் என்று ஆசைப்படுவார். எதைப் பார்த்தாலும் கூர்ந்து நோக்கி அதன் நுட்பத்தை உணரும் நுண்ணறிவு படைத்தவராயிருந்தார். இவர் தனது பதினோராவது வயது வரையிலும் குளத் தூரிலேயே கல்வி பயின்றார். அங்கே ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடம் இல்லை. தமிழ்க் கல்வியைத்தான் முதலில் கற்றுக் கொண்டார். வேத நாயகத்தின் தந்தையான சவரிமுத்துப்பிள்ளை நல்ல தமிழறிஞர். அவரிடமே வேத நாயகம் தமிழ்க் கல்வியைக் கற்றுக் கொண்டார். அவ்வூரிலிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் படித்தார். இவர் பதினோராவது வயதிலேயே தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். எந்தப் புத்தகத்தையும் பிழையின்றிப் பொருள் அறிந்து படிப்பார். படித்ததைப் பிறர்க்கு எடுத்துரைப்பார். படிப்பிலே மிகுந்த ஆவல் காட்டி வந்தார். தாமே பல தமிழ் நூல்களையும் படித்துத் தெரிந்து கொள்ளும் அளவுக்குத் திறமை படைத்திருந்தார். இவர் ஆங்கிலம் படிக்க ஆவல் கொண்டார். பெற்றோர் களும் இவரைப் படிக்க வைக்க விரும்பினர். அக் காலத்தில் ஆங்கிலம் படித்தவர்களும் குறைவு. ஆங்கிலப் பள்ளிக்கூடங் களும் போதுமான அளவு இல்லை. ஆதலால் ஆங்கிலம் படிப்பதற்காக இவர் திருச்சிராப்பள்ளியை அடைந்தார். அப்பொழுது திருச்சிராப்பள்ளியில் நீதி மன்றம் ஒன்றில் தியாகப் பிள்ளை என்பவர் ஒருவர் மொழிபெயர்ப்பாளர் அலுவலில் இருந்தார். அவர் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சியுள்ளவர். தமிழிலும் பயிற்சியுள்ளவர். ஊரிலும் செல்வாக்குள்ளவர். அவரிடம் வேத நாயகம் அவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். தியாகப்பிள்ளை அவர்களும் வேத நாயகத்தின் நுண்ணறிவைக் கண்டு வியந்தார். அவருக்கு மிகவும் அன்போடும், உற்சாகத் தோடும் ஆங்கிலம் கற்பித்தார். வேத நாயகம் அவர்கள் ஆங்கிலத்தை ஆவலுடன் பயின்றது போலவே தமிழையும் பயின்று வந்தார். தாமே பல தமிழ் நூல்களைப் படித்தார். அவைகளிலே ஐயம் நேர்ந்தபோது அறிஞர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். ஆங்கிலத்திலிருந்து நன்றாகத் தமிழில்மொழி பெயர்க்கவும், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் திறமையாக மொழி பெயர்க்கவும் அறிந்திருந்தார். ஆங்கில இலக்கியங்களையும் ஆவலுடன் படித்து வந்தார். அது போலத் தமிழ் இலக்கியங்களையும் படித்துக் கவி இயற்றும் திறமையும் அடைந்துவிட்டார். வேத நாயகம் திரிசிரபுரத்திலே படித்துக்கொண்டிருக்கும் போது ஒரு நாள் அடைக்கலம் பிள்ளை யென்பவர் இவரைக் காண வந்தார். அவர் இவருடைய பெரிய தாயாரின் மகன். சகோதரர் முறை. வேதநாயகம்பிள்ளை அவரை அண்ணா வென்று அழைப்பது வழக்கம். பல நாட்களுக்குப் பிறகு தன் அண்ணாவைச் சந்தித்ததிலே வேத நாயகத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சியின் மிகுதியால் அடைக்கலம் பிள்ளையை வரவேற்கும் முறையில் ஒரு செய்யுள் இயற்றினார். சீர்பெருகு குளத்தூர் வாழ் அடைக்கல அண்ணா! கருணைத் தியாகா! வா! வா! ஏர் பெருகும் நின் சுமுகம் கண்டு வந்தேன்; இன்பமிகும் நீயும் நானும் ஓர் உதரம் தனில் பிறவாத் தோடம் ஒன்றே; மாமணியும் ஒளியும் போல, நேர்படவே நிலை நிற்கும் எந் நாளும் நம்மிருவர் நேசந்தானே. இதுவே அவர் தன் சகோதரரை வரவேற்றுப் பாடிய பாட்டு. பெருமை வளர்கின்ற குளத்தூரிலே வாழ்கின்ற அண்ணாவே! கருணையும், தியாகமும் உள்ளவனே! வா! வா! அழகிய உன்னு டைய சுந்தரமான முகத்தை கண்டு மனம் மகிழ்ந்தேன். சுகமுள்ள நீயும் நானும் ஒரு வயிற்றிலே பிறக்காதது ஒன்றுதான் குற்றம். ஆயினும் சிறந்த இரத்தினமும், அதன் ஒளியும் என்றும் பிரியாமல் இருக்கும்; அதுபோல நம்மிரு வருடைய அன்பும் எந்நாளும் ஒன்றாக நிலைத்து நிற்கும். இதுவே அப் பாட்டின் பொருள். வேத நாயகம் அவர்கள் முதலில் பாடிய பாட்டு இதுவாக இருக்கலாம். இந்தப் பாட்டு எளிதாகவும், இனிமையாகவும் அமைந்திருக்கின்றது. வேதநாயகம் அவர்கள் இளம் பருவத்திலேயே இவ்வாறு சிறந்த புலமை பெற்றிருந்தார். ஆங்கிலம், தமிழ் இரு மொழி யிலும் அறிஞராகத் திகழ்ந்தார். இக்காலத்திலே அவருக்கு நண்பர்கள் பலர் இருந்தனர். அவர்களுடன் ஓய்வு நேரத்திலே, எப்பொழுதும் சிறந்த இலக்கியங்களைப் பற்றியே உரையாடிக் கொண்டிருப்பார். வேத நாயகம் அவர்களுக்குச் செய்யுள் இயற்றுவதிலே ஆவல் அதிகம். பல வகையான செய்யுட்களைப் பாடும் திறமையும் அவருக்கு இளம் பருவத்திலேயே ஏற்பட்டிருந்தது. கும்மிப் பாட்டு, நலுங்குப் பாட்டு. பொம்மைக் கல்யாணப் பாட்டுப் போன்ற எளிதான பாடல்களை இனிய தமிழிலே பாடுவார். அவைகளைக் கேட்டு அவருடைய நண்பர்கள் மகிழ்ச்சியும் வியப்பும் அடைவார்கள். வேடிக்கையான பாடல் களைப்பாடும் ஆற்றலையும் இவர் அடைந்திருந்தார். வேதநாயகம் அவர்கள் இவ்வாறு இருபத்தொரு வயது வரையிலும் ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளைக் கற்பதிலே காலம் கடத்தினார். அம்மொழிகளிலே வல்லுநர் என்ற பெயரும் பெற்றிருந்தார். உத்தியோகம் பெறல் வேத நாயகம் சும்மா இருக்க விரும்பவில்லை. ஏதேனும் அலுவல் பார்க்க ஆசைப்பட்டார். அப்பொழுது வயது இருபத் திரண்டு. அந்நாளில் கார்டன் என்னும் ஆங்கிலேயர் ஒருவர் திரிசிரபுரத்தில் ஒரு நீதி மன்றத்தின் தலைவராக இருந்தார். அவர் வேத நாயகத்தின் திறமையை உணர்ந்து அவரைத் தமது அலுவலகத்தில் ரிகார்டு கீப்பர் என்னும் வேலையில் அமர்த் தினார். வேத நாயகம் இரண்டு ஆண்டுகள் இவ்வேலையைப் பார்த்துவந்தார். 1850ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி ஜில்லா நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் உத்தியோகம் ஒன்று காலியாக இருந்தது. அந்த நீதி மன்றத்தின் தலைவர் பாய்லோ என்பவர். இவர் மற்றவரின் திறமையைக் கண்டுபிடிப்பதிலே வல்லவர். மொழிபெயர்ப்பாளர் வேலைக்காகப் பலர் விண்ணப்பம் போட்டிருந்தனர் அவர்களில் வேத நாயகமும் ஒருவர். பாய்லோ துரை, வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களை நேரில் அழைத்துப் பரிசோதனை நடத்தினார். முடிவில் வேதநாயகம் பிள்ளையே அந்த மொழிபெயர்ப்பு வேலைக்கு ஏற்ற திறமையுள்ளவர் என்பதைக் கண்டறிந்தார். அந்த வேலையை அவருக்கு அளித்தார். வேத நாயகமும் தான் ஏற்றுக்கொண்ட வேலையைத் திறமை யுடன் செய்து வந்தார். தாமதமில்லாமல் விரைவாகவும் செய்து வந்தார். இதனால் மேலதிகாரிகள் அவரிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் காட்டினர். அப்பொழுது வேலை அதிகமாக இருந்ததால் தானே சம்பளங் கொடுத்துத் தனக்கு உதவியாக ஒருவரை வைத்துக் கொண்டார். வேதநாயகம் பிள்ளை அவர்கள் வேலை பார்க்கும் போதும் தமிழை மறந்துவிடவில்லை. பகலிலே வழக்குமன்ற வேலைகளிலே ஈடுபட்டிருப்பார். இரவிலே இடைவிடாமல் படிப்பார். தம்மிடம் பாடங் கேட்க வருகின்றவர்களுக்கும் முகங்கோணாமல் பாடஞ் சொல்லுவார். இதனால் அவருக்கு அலுவலகத்திலும் செல்வாக்கிருந்தது. வெளியிலும் நன்மதிப் பிருந்தது. வேத நாயகம் வேலை பார்த்த நீதி மன்றத்தில் மேதர் டேவிட்சன் என்பவர் நீதிபதியாக இருந்தபோது இந்து முலிம் கலவர வழக்கு ஒன்று வந்தது. அவ்வழக்கு சம்பந்தமாகக் காசியா ருக்கும் நீதிபதிக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அச்சமயம் மேதர் டேவிட்சன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். அவர் போகும் போது அந்த வழக்கு சம்பந்தமான வாக்குமூலப் பத்திரங்களைத் தம்முடன் எடுத்துக்கொண்டு போனார். மாற்றப் பட்ட அவர் திடீர் என்று மாண்டு விட்டார், ஆதலால் அவர் கொண்டு போன வாக்குமூலப் பத்திரங்கள் யாரிடம் போய்ச் சேர வேண்டுமோ அவர்களிடம் போய்ச் சேரவில்லை. இதற்கிடையில் வேத நாயகத்திற்கு வேலை கொடுத்த பாய்லோ துரையும் திருச்சிராப்பள்ளியிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார். அவருடைய இடத்திற்கு மற்றொரு வெள்ளைக் காரர் மேதர் கிரீன்வே என்பவர் நீதி மன்றத் தலைவராக வந்திருந்தார். அவர் மிகவும் அவசரக்காரர்; முன்கோபமுள்ளவர். மாற்றப்பட்டுச் சென்று இறந்து போன நீதிபதி எடுத்துச்சென்ற வாக்குமூலப் பத்திரங்கள் சேர வேண்டிய இடத்திலே சேராமல் போனதற்குப் பொறுப்பாளி வேத நாயகம் பிள்ளைதான் என்று தீர்மானித்தார். ஆதலால் வேத நாயகத்தை வேலையிலிருந்து விலக்கிவிட்டார். வேதநாயகம்பிள்ளை தன் மீது குற்றம் இல்லையென் பதையும், தன்னை அலுவலைவிட்டு விலக்கியது அவசரமான முடிவு என்பதை யும் விளக்கி மேலதிகாரிக்கு எழுதினார். மீண்டும் தனக்கு வேலை தரும்படி வேண்டிக்கொண்டார். இப்படி அவர் வேலை இழந்திருக்கும் போது பல துன்பங் களுக்கு ஆளானார். இருமல் நோயால் பீடிக்கப்பட்டு வருந்தினார். ஒருநாள் அவருடைய படுக்கை அறையிலே பாம்பொன்று நுழைந்து அவரைக் கடித்துவிட்டது. அவருடைய வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போது குடை சாய்ந்து விட்டது. அவருடைய வண்டி மாடுகளில் ஒன்று திடீரென்று இறந்து விட்டது. உத்தியோகம் போன சமயத்தில் இத்தகைய துன்பங்கள் தொடர்ந்து வந்தால் யார் தான் மனங்கலங்க மாட்டார்கள்? ஆனால் வேத நாயகம் அவர்கள் தைரியத்தை விடவில்லை. எல்லாம் இறைவன் செயல் என்ற நம்பிக்கையுடன் நல்ல காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். வேதநாயகம் அவர்கள் தனது முயற்சியையும் கைவிட வில்லை. இரண்டாந் தடவையும் தனது குற்றமற்ற தன்மையை விளக்கித் தனக்கு வேலை கொடுக்கும்படி மேலிடத்திற்கு எழுதினார். இதற்குள் இறந்துபோன நீதிமன்றத் தலைவர் எடுத்துக்கொண்டு போயிருந்த வாக்குறுதிப்பத்திரங்கள் அவருடைய அலுவலகத்திலிருந்து அகப்பட்டுவிட்டன. ஆகவே வேத நாயகத்திற்கு மீண்டும் வேலை கொடுக்கும்படி திருச்சி ஜில்லா நீதி மன்றத்தலைவருக்கு அரசாங்கத்தார் உத்தரவு அனுப்பினர். அப்பொழுது அவ்வுத்தியோகத்தை வழங்கும் அதிகாரம், ஜில்லா நீதி மன்றத்தின், கீழ்க் கோர்ட்டு நீதிபதியாக இருந்த சுவிண்டன் துரையிடம் இருந்தது. அவர் அப்பொழுது மொழி பெயர்ப்பாளராக இருந்த ஒருவரை ஆதரித்து வந்தார். ஆதலால் வேத நாயகம் பிள்ளைக்கு மீண்டும் உத்தியோகம் கிடைக்காமல் செய்துவிட வேண்டும்; தனக்கு வேண்டியவராக இருப்பவரையே அவ்வுத்தியோகத்தில் நிலைக்கச் செய்ய வேண்டும்; என்று நினைத்தார். அவர் வேதநாயகம் பிள்ளை உத்தியோகத்திற்குத் தகுதியற்றவர் என்று மேலதிகாரிகளுக்கு எழுதினார். வேதநாயகம் பிள்ளை வேலை செய்வதற்கான உடல் வலுவற்றவர்; நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்; மொழி பெயர்ப்பு வேலையினும் திறமையுள்ளவர் அல்லர்; தாமாகவே மொழிபெயர்க்கும் சக்தியும் அவருக்கு இல்லை; அவர் வேலை பார்த்தபோது பிறர் உதவியைக்கொண்டு தான் அந்த வேலையைச் செய்து வந்தார். என்றெல்லாம் சுவிண்டன் துரை பிள்ளையின் மேல் இல்லாதபொல்லாத குற்றச்சாட்டுகள் பலவற்றைச் சுமத்தி மேலதிகாரிகளுக்கு எழுதினார். இதனை அறிந்த வேத நாயகம் மீண்டும் அரசாங்கத்திற்கு உண்மையை விளக்கி எழுதினார். சுவிண்டன் துரையின் குற்றச்சாட்டுக்கள் அவ்வளவும் பொய் என்பதைத் தெளிவாக விளக்கிக் காட்டினார். அரசாங்கம் வேதநாயகம் பிள்ளையின் விண்ணப்பத்தை ஒப்புக்கொண்டது. உடனே வேத நாயகம் பிள்ளைக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று உத்திரவு போட்டது. இதைக்கண்ட சுவிண்டன் துரை மீண்டும் அரசாங்கத்திற்கு எழுதினார். வேத நாயகம் பிள்ளை பெரிய நோயாளி அவரால் வேலை செய்ய முடியாது; அவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் நீதி மன்றத்தின் வேலை சரிவர நடைபெறாது; வேதநாயகம் பிள்ளையை மீண்டும் வேலையில் வந்து சேரும்படி உத்தரவு அனுப்பி, அதை அவர் பெற்றுக்கொண்டு வேலைக்குத் திரும்பவும் வரையிலும் உயிரோடிருப்பார் என்பதே சந்தேகம்; ஆதலால் அவருக்கு மீண்டும் வேலை கொடுப்பது தகாது என்று எழுதினார். இதைக் கண்டவுடன் மேலிடத்தாருக்கு உண்மை விளங்கி விட்டது. சுவிண்டன் துரை சொல்வது பொய்யென்றும் தெரிந்து கொண்டனர். ஆகையால், உடனே வேதநாயகம் பிள்ளைக்கு வேலை கொடுக்க வேண்டும். மீண்டும் மறுத்து எழுதிக்கொண்டு காலங் கடத்திக் கொண்டிருந்தால் அரசாங்கத்தாருக்கு உம்மீது நடவடிக்கை யெடுக்கும்படி அறிவிக்கப்படும் என்று கண்டிப் பாகத் தெரிவித்து விட்டனர். இதைக் கண்டவுடன் சுவிண்டன் துரைக்கு அவமானம் தாங்க முடியவில்லை. தன்னுடைய சூழ்ச்சி பலிக்காததைக்கண்டு வெட்க மடைந்தார். அவர் தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். போகும் வழியிலேயே இரத்த பேதியால் இறந்து போனார். இதன்பின் ஆரீ துரை என்பவர் சுவிண்டன் துரையின் இடத்திலே வேலைக்கு வந்தார். அவர் மேலதிகாரியின் உத்தரவைப் பின்பற்றி வேதநாயகம் பிள்ளைக்கு வேலை கொடுத்தார். அவர் வேதநாயகம் அவர்களின் வேலைத் திறமையையும், நேர்மையை யும் உணர்ந்து அவரிடம் அன்பாக நடந்து கொண்டார். வேதநாயகம் பிள்ளையை யாரும் ஏமாற்ற முடியாது லஞ்சம் வாங்கமாட்டார். எது ஒழுங்கோ நீதியோ அதைத்தான் செய்வார்; நேரந் தவறாமல் வேலைக்கு வருவார்; செய்ய வேண்டிய வேலையை நாளைக்கு என்று ஒதுக்கி வைக்க மாட்டார்; ஆதலால், நேர்மையற்ற அதிகாரிகள்தாம் அவரை வெறுத்து வந்தனர். உண்மை எப்பொழுதும் வெல்லும்; பொய் ஒருபொழுதும் வெற்றியடையாது; என்றைக்கிருந்தாலும் அது தோற்றுத்தான் போகும். இது வேதநாயகம் பிள்ளையைப் பொறுத்த வரையிலும் உண்மையாயிற்று. அவருடைய உத்தியோகத்திற்குத் தடையாக இருந்தவர்கள் எல்லாம் வெட்கித் தலை குனிந்தனர். அவருக்கு உதவி புரிந்தவர்கள் உள்ளம் களித்தனர். மகா வித்வான் நட்பு வேதநாயகம் அவர்கள் திருசிரபுரத்தில் இருந்தபோது மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களும் திருச்சிராப் பள்ளியில் புகழுடன் வாழ்ந்திருந்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தந்தையார் பெயர் சிதம்பரப்பிள்ளை. தாயார் பெயர் அன்னத்தாச்சி. சிதம்பரம் பிள்ளையும் தமிழ்ப் புலவர். அவர் மதுரையிலே பள்ளிக்கூடம் வைத்திருந்தார். பலருக்குத் தமிழ்ப் பாடம் சொல்லி வந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அவர் குடும்பத்துடன் மதுரையை விட்டுத் திருச்சிராப்பள்ளிக்குப் பக்கத்தில் உள்ள அதவத்தூருக்குக் குடிவந்து அவ்வூரிலும் பள்ளிக்கூடம் வைத்து நடத்திவந்தார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் தம் தந்தையாரிடமே தமிழ்க் கல்வி பயின்றார். அவர் சிறந்த புலமை பெற்றபின் திருச்சிராப் பள்ளிக்கே குடிவந்துவிட்டார். பலரும் அவரை மகாவித்வான் என்று கொண்டாடினர். வேதநாயகம் பிள்ளை அவர்கள் மகாவித் வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுடைய கல்வித் திறமை யையும், கவி பாடும் சக்தியையும் பல நண்பர்கள் வாயிலாக அறிந்தார். வேதநாயகம் அவர்களின் சிறந்த ஒழுக்கம், உத்தியோகத் துறையில் அவர் நடந்து கொள்ளும் நேர்மை, தமிழ் மொழியின் மேல் அவருக் கிருந்த ஆவல், எல்லோரிடத்திலும் இரக்கமுடன் நடந்து கொள்ளும் குணம் இவைகளைப்பற்றி மகாவித்வானும் அறிந்திருந்தார். வேதநாயகம் பிள்ளையவர்களைக் காண முதலில் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களே அவருடைய வீட்டுக்குச் சென்றார். வேதநாயகம் பிள்ளை மகாவித்வான் அவர்களைக் கண்டதும் அளவுகடந்த அன்புடன் எழுந்து வந்து வரவேற்றார். மகாவித் வானிடம் மிகவும் பணிவுடன் நடந்துகொண்டார். வேதநாயகம் அவர்கள் காட்டிய அன்பும், மரியாதையும் மகாவித்வான் அவர்களின் மனதைக் கவர்ந்துவிட்டன. கற்றாரைக் கற்றார் காமுறுதல் இயல்பன்றோ? அன்று முதல் இவ்விருவருக்கும் நட்பு ஏற்பட்டது; இவர் களுடைய நட்பு நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஒருநாள் பழகினும் பெரியோர்களின் நட்பு அசைக்க முடியாதபடி வேரோடி நிலைத்து விடும் அல்லவா? வேதநாயகம் அவர்கள் மகாவித்வான் அவர்களைத் தமது ஆசிரியராகவே கருதிவந்தார். அவரிடம் தமிழ் நூல்களின் நுணுக்கங்கள் பலவற்றையும் அறிந்தார். வேதநாயகம் அவர்களின் தமிழ்ப்புலமை மகாவித் வானுடன் கொண்ட தொடர்பால் மேலும் மேலும் வளர்ந்தது. திருசிரபுரத்திலே இவ்விருவரும் புகழ்பெற்று விளங்கினர். வேதநாயகம் பிள்ளை செல்வாக்குள்ள உத்தியோகத்தில் இருந்ததால் அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர். பிள்ளை யின் நண்பர்களெல்லாம் மகாவித்வானிடத்திலும் அன்பும் மதிப்பும் பாராட்டி வந்தனர். அவருக்கு வேண்டிய உதவிகளையும் புரிந்து வந்தனர். வேதநாயகம் பிள்ளையும் மகாவித்வான் அவர்களுக்கு அவ்வப்போது அவர் நிலைமையைத் தெரிந்து, அவர் கேட்காமலே உதவி செய்து வந்தார். வேதநாயகம் பிள்ளை உத்தமமான கத்தோலிக்கக் கிறிதுவர். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சைவ மதத்திலே ஆழ்ந்த பற்றுள்ள சைவர். மதத்தால் இருவரும் மாறுபட்டவர் களாயிருந்தாலும் குணத்தால் - கொள்கையால் - இருவரும் இணை பிரியாத நட்புள்ளவர்கள். இவர்களுடைய இணைபிரியாத நட்புக்குத் தமிழ் மொழியில் இருவருக்கும் இருந்த புலமையும் அன்புந்தான் அடிப்படைக் காரணமாகும். வேதநாயகம் பிள்ளையின் அன்பால் பிணிக்கப்பட்ட மகா வித்வான் அவர்கள் அவரைப் பாராட்டிப் பிணிக்கப்பட்ட பாடல்கள் பல. அவற்றுள் ஒன்றைப் படித்தாலே போதும். பிள்ளை அவர்களும் மகாவித்வானும் கொண்டிருந்த நட்பின் பெருமை விளங்கும். கனியிற் பொலி பொழில் சூழ் குளத்தூரன், கரிசறுத்து அவனியிற் பொலியும் புகழ் வேதநாயக வள்ளல் நட்பு, நுனியில் கரும்பு தினல் போல் இனிக்கும்; நுவலரிய பனியில் பொலி பிறை போல் வளரா நிற்கும்; பான்மதியே! பால்போல் நிலவெரிக்கும் சந்திரனே! கனிகள் பல தந்து விளங்கும் குளத்தூரிலே பிறந்து வளர்ந்தவன்; குற்றங்களை யெல்லாம் நீக்கி, இவ்வுலகிலே வாழ்கின்ற வேதநாயகன்; அவன் சிறந்த வள்ளல்; அவனுடைய நட்பு நுனியிலிருந்து கரும்பைத் தின்பது போல மேலும் மேலும் இனிமையளித்துக் கொண்டே யிருக்கின்றது; இத்தகைய இனிமை என்று சொல்லமுடியாத குளிர்ச்சி யுடன் விளங்கும் பிறைச் சந்திரனைப் போல ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. என்று பாராட்டிப் பாடியிருக்கின்றார். இது சந்திரனைப் பார்த்து வேதநாயகத்தின் நட்பின் பெருமையை கூறியதாகும். மகாவித்வான் அவர்கள் இவ்வாறு தனிப்பாடல்களின் மூலம் வேதநாயகம் பிள்ளையைப் பாராட்டியதோடு நிற்க வில்லை. குளத்தூர் வேதநாயகன் கோவை என்னும் நூலையும் இயற்றினார். இதற்குக் குளத்தூர்க் கோவையென்றும் பெயர். எறியும் கலிதன் தலைசாய்த்திடத் தமிழின் அருமை அறியும் புருட மணிவேத நாயக அண்ணல் வெற்பில் செறியும்படி நம் இரு பேரையும் இன்று சேர்த்த தெய்வம் முறியும்படி இடையே செய்யுமோ சற்றும் உன்னிலையே இது அக்குளத்தூர்க் கோவையில் உள்ள ஒருபாட்டு நண்பர் களைப் பிரித்துவிடும் கலியுகம் என்னும் துரோகி தலையைக் குனிந்துகொள்ளவேண்டியது தான்; தமிழின் அருமையை அறிந்தவன்; ஆண்களுக்குள்ளே இரத்தினம் போன்றவன்; வேதநாயகன் என்னும் சிறந்த பெருமையுள்ளவன். அவனுடைய மலையிலே நம் இரு வரையும் இன்று ஒன்று சேர்த்த தெய்வம் இடையிலே நமது நட்பு முறிந்துவிடும்படி செய்து விடுமோ? ஒருநாளும் அப்படிச் செய்து விடாது. இதை நீ உணரவில்லையோ? என்பதே இப்பாடலின் பொருள். இத்தகைய அருமையான பாடல்களைக்கொண்டது அந்தக் கோவை. வேதநாயகம் பிள்ளையவர்களும் மகாவித்வான் தன் மீது பாடிய கோவையைக் கேட்டு மகிழ்ந்து அவருக்குத் தகுந்த பரிசளித்தார். இவ்வாறு வேதநாயகம் பிள்ளையவர்களும், மகா வித்வான் அவர்களும் சிறந்த நட்புள்ளவர்களாக வாழ்ந்து வந்தனர். நேர்மைக்குச் சோதனை இக்காலத்தில் வேதநாயகம் பிள்ளையவர்களின் நேர்மைக்கு ஒரு சோதனை உண்டாயிற்று. திருச்சிராப்பள்ளி மலைக் கோட்டையில் உள்ள தாயுமானார் கோவில், தருமபுர ஆதீனத்தின் மேற்பார்வையில் உள்ளது. கோயில் அலுவல்களைக் கண்காணித்து வர தருமபுர ஆதீனத்தார் ஒரு கட்டளைத் தம்பிரானை ஏற்படுத்தியிருந்தனர். அத்தம்பிரான் ஆதீனத்தாரின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. தான் தோன்றித் தம்பிரானாக நடந்து வந்தார். ஆதலால் அவரைக் கட்டளைத் தம்பிரான் பதவியிலிருந்து ஆதீனத்தார் தள்ளிவிட்டனர். அப்பொழுது அத்தம்பிரானுக்கும் ஆதீனத்தாருக்கும் வழக்கு ஏற்பட்டது. தருமபுர மடத்தின் விரோதிகள் சிலர் கட்டளைத் தம்பிரானுக்கு உதவி செய்துவந்தனர். ஆகையால் நீதி மன்றத்தின் மூலமே அத்தம்பிரான்மீது குற்றம்சாட்டி அவரை நீக்கவேண்டிய நிலைமை உண்டாயிற்று. அந்தத் தம்பிரான் மீதுள்ள குற்றச்சாட்டுகளைத் தொகுத்து நீதிமன்றத்திற்கு அனுப்பத் தருமபுர ஆதீனத்தார் தீர்மானித்தனர். அதை ஆங்கிலத்திலே எழுதி நீதி மன்றத்திற்கு அனுப்ப வேண்டி யிருந்தது; தக்கவரைக் கொண்டு இதைச் செய்து முடிக்கும்படி மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை யவர்களுக்கு ஆதீனத்தார் அறிவித்திருந்தனர். மகாவித்வான் அவர்கள் இக் காரியத்தைத் திறமையுடன் செய்வதற்குத் தகுந்தவர் வேதநாயகம் பிள்ளை அவர்கள்தான் என்று முடிவு செய்தார். உடனே அவரைக் காண்பதற்காகப் புறப்பட்டுப் போனார். இவர் வேதநாயகம் பிள்ளையைப் பார்க்கப் போன சமயத்தில் கட்டளைத் தம்பிரானுடைய நண்பர்கள் வேதநாயகம் பிள்ளை அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு மகாவித்வான் திடுக்கிட்டார். ஆயினும் அவர் மனந்தளர வில்லை. வேதநாயகம் பிள்ளை அந்த வம்பர்களுக்கு உதவமாட்டார் என்ற நம்பிக்கை கொண்டார். ஆகையால் மகாவித்வான் அவர்கள் நேரே பிள்ளையிடம் போகாமல் வேறோர் இடத்திலே தங்கிவிட்டார். மகா வித்வான் அவர்கள் தான் வந்திருக்கும் செய்தியைக் குறித்து ஒரு பாடலிலே எழுதி வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார். நான் என் சொந்த வேலையாக வரவில்லை; பார்வதியைப் பாகத்திலே கொண்ட சிவபெருமானுடைய காரியமாக வந்திருக் கிறேன். நான் கூறுவது பொய்யன்று; உண்மையானது. மழை பொழியும் மேகத்திற்கு யாரேனும் எதிர் உதவி செய்வார் உண்டோ? பொறுமையும், உண்மையும் உருவாக விளங்கும் வேத நாயகனே! புகழ் பொருந்தியவனே! புலனாகிய எனக்குக் கையாக இருந்து உதவி செய்கின்றவனே! உன்னை எப்போதும் புகழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு வேறு புகலிடம் இல்லை. இதை நீ அறிந்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் அந்தப் பாடலில் அடங்கி யுள்ள பொருள். மையேறும் கண்ணி ஒரு பாகன் காரியம்; மற்று இதுதான் பொய்யே அல; முகிற்கு ஏது கைம்மாறு? பொறையினொடு மெய்யே உருக்கொள் புகழ் வேத நாயக! வித்தகன்தன் கையே! உனைப் புகழ்வேன்! புகல் வேறில்லை கண்டு கொள்ளே. என்பதுதான் அந்தப் பாட்டு. இந்தப் பாடலைக் கண்டவுடன் வேதநாயகம்பிள்ளை அவர்கள் உண்மையை உணர்ந்து கொண்டார். தம்மிடம் உரையாடிக் கொண்டிருந்த கட்டளைத் தம்பிரான் ஆட்கள் உரைத்தவற்றைக் கூர்ந்து கேட்டார்: அவர்கள் மடத்தின் எதிரிகள் என்பதையும் தெரிந்து கொண்டார். அவர்களுடைய பேச்சுக்களிலிருந்தே கட்டளைத் தம்பிரான் வழக்கிலே நியாயம் இல்லை; அது வீண் வம்பு; ஆதீனத்து எதிரிகளின் தூண்டு தலால்தான் கட்டளைத் தம்பிரான் பொய் வழக்காடுகின்றார் என்று உண்மையை உணர்ந்து கொண்டார். ஆதலால், கட்டளைத் தம்பிரானுக்கு உதவியாக எதுவும் எழுதிக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அவர்கள் நிறைய பணம் தருவதாக ஆசை காட்டினர். வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிக் கொடுப்பது சிறந்ததாக இருக்கும்; ஆணித்தரமாக எழுதுவதிலே அவருக்கு நிகர் ஆரும் இல்லை; என்பதை அறிந்தே அவர்கள் இவ்வாறு பலவிதமாக வேண்டிக் கொண்டனர். பணத்திற்கு ஆசைப்பட்டு நேர்மை தவறி நடப்பவன் நான் அல்லன். எத்தனை கோடி வருவதானாலும் சரி இந்தப் பொய் வழக்கிற்கு நான் விண்ணப்பம் எழுதிக் கொடுக்க முடியாது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் வேதநாயகம் இதனால் அவர்கள் ஏமாற்றமுடன் திரும்பிவிட்டனர். பின்னர் மகாவித்வான் அவர்கள் வேதநாயகம் பிள்ளை அவர்களைச் சந்தித்தார். கட்டளைத் தம்பிரான் மேல் உள்ள குற்றச்சாட்டுக்களை எடுத்துக்காட்டினார். தருமபுர ஆதீனத்தின் சார்பாக நீதிமன்றத்திற்கு அனுப்ப ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுக்கும்படி வேண்டினார். வேதநாயகம் பிள்ளை அவர்கள், மகா வித்வான் கூறியவை களைக் கொண்டும், ஆதீனத்தின் எதிரிகளிடம் பேசிக்கொண் டிருந்தவைகளைக் கொண்டும், ஆதீனத்தின் பக்கத்திலேதான் உண்மையிருக்கின்றது என்பதை அறிந்துகொண்டார். ஆதலால், ஆதீனத்தின் சார்பாக, நீதிமன்றத்தில் கொடுப்பதற்கான விண்ணப்பம் ஒன்றை ஆங்கிலத்திலே எழுதிக் கொடுத்தார். இவ்விண்ணப்பம் நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்டது. நீதி மன்றத்தார் அவ்விண்ணப்பத்தில் கண்டிருந்த உண்மைகளை ஒப்புக் கொண்டனர். அதில் எழுதியிருந்தவை அனைத்தும் உண்மை என்று அறிந்தனர். ஆதலால் நீதி மன்றத்தார் அதை ஏற்றுக்கொண்டு ஆதீனத்தார்க்குச் சாதகமாக முடிவு செய்தனர். தருமபுரம் மடத்திற்கும், திரிசிரபுரம் கட்டளைத் தம்பிரானுக்கும் நடந்த இந்த வழக்கிலே வேதநாயகம் பிள்ளை அவர்கள் செய்த உதவி பேருதவியாக மடத்தாரால் பாராட்டப் பட்டது. எதிரிகள் ஏராளமாகப் பணம் கொடுப்பதாகக் கூறியும் அவர்களுக்கு உதவிசெய்ய மறுத்துவிட்டுத் தன் வேண்டு கோளுக்கு இணங்கி உதவி செய்த வேதநாயகத்தின் பெருந் தன்மை மகாவித்வானுடைய உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. ஆதீனத்தார். வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு உதவிசெய்ய விரும்பினர். ஆனால் இதற்காக ஆதீனத் தாரிடமிருந்து எந்த உதவியையும் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் அவர். பிள்ளை அவர்களின் கைம்மாறு கருதா இவ்வுதவிக்குப் பாராட்டாகத் தான் குளத்தூர் வேதநாயகன் கோவை என்னும் நூலை மகா வித்வான் பாடினார் என்று கூறுவர். முன்சீப் உத்தியோகம் அக்காலத்திலே பொறுப்புள்ள உத்தியோகங்களுக்கு ஏற்றவர்களைத் தலைமையதிகாரிகள் நேரிடையே பரிசோதிப் பார்கள்; தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். முன்சீப் வேலைக்குத் தகுதியுள்ளவர்கள் ஜில்லா நீதி மன்றத்தலைவர் களால் பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அப்பொழுது ஒரு முறை கும்ப கோணத்திலிருந்த நீதி மன்றத் தலைவரால் முன்சீப் வேலைக்குத் தகுதியுள்ளவர்கள் தேர்ந் தெடுக்கப்பட்டனர். அறுபது எழுபது பேர் தம்மைத் தேர்ந் தெடுக்கும்படி விண்ணப்பித்திருந்தனர். அவர்ளை நேரிலே பரிசோதித்த நீதி மன்றத் தலைவர்கள் மூவரை மட்டும் முன்சீப் வேலைக்குத் தகுதியுள்ளவர்கள் என்று தேர்ந்தெடுத்தார். அவர்கள் வேதநாயகம் பிள்ளை, இரகுநாத ராவ், முத்துச்சாமி அய்யர் என்பவர்கள். இச்சமயத்திலே டேனிஷ்காரர் ஆளுகையிலேயிருந்த தரங்கம் பாடி ஆங்கிலேயரின் ஆட்சிக்கு வந்தது. அங்கே இருந்த நீதிமன்றத்தின் தலைவர் இறந்துபோய் விட்டார். தரங்கம்பாடி யிலிருந்த அந்த நீதி மன்றம் டேனிஷ்காரரால் ஏற்படுத்தப் பட்டது. குறைந்த வேலை; ஆதலால் அந்த நீதிபதிக்கு மாதச் சம்பளம் அறுபது ரூபாய்தான். அந்த நீதிமன்றத் தலைவரின் உத்தியோகப் பெயர் பிரின்சிபால் சதுரமீன் என்பது அவர் எதிர்பாராத வகையில் திடீரென்று இறந்து போனதால் அவ்வேலைக்கு வேறொருவரை நியமிக்க வேண்டி யிருந்தது. ஜில்லா நீதி மன்றத் தலைவர் அவ்வேலைக்கு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார். முன்சீப் வேலைக்குத் தகுந்தவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முத்துச்சாமி அய்யர், இரகு நாதராவ் வேதநாயகம் பிள்ளை மூவரையும் அவ்வேலையை ஒப்புக் கொள்ளச் சம்மதமா என்று கேட்டார். சம்பளம் குறைவென்று கருதி முத்துச் சாமி அய்யரும், இரகுநாத ராவும் அவ்வேலையை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். வேத நாயகம் பிள்ளை அவ்வேலையை ஒப்புக் கொண்டார். பின்னர் பிரின்சிபால் சதுரமீன் என்னும் பெயரை மாற்றி முன்சீப் என்னும் பெயர் கொடுத்தனர். அறுபது ரூபாய் சம்பளத்தையும் நூறு ரூபாயாக்கினர். வேதநாயகம்பிள்ளை இவ்வுத்தியோகத்தில் நல்ல பெயர் வாங்கினார். பொது மக்கள் அவரைச் சிறந்த நீதிமான் என்று போற்றிப் புகழ்ந்தனர். இதன் பிறகு வேதநாயகம்பிள்ளை அவர்கள் சீர்காழிக்கு முன்சீப்பாக மாற்றப்பட்டார். சீர்காழியிலிருந்த போது அவருடைய புகழ் இன்னும் பன்மடங்கு வளர்ந்து. பல நண்பர் களும் உண்டா னார்கள். பொது மக்களாலும் பாராட்டப் பட்டார். சாதி மத பேதம் பாராட்டாமல் எல்லோருடனும் சமமாகப் பழகிப் பலருடைய அன்பையும் பாராட்டுதலையும் பெற்றார். சீர்காழியிலிருந்தபோது அவர் செய்த தமிழ்த் தொண்டுகள் பல. அவற்றைப் பின்னே படிக்கலாம். பின்னர் சீர்காழியிலிருந்து 1860-ஆண்டிலே மயூரத்திற்கு முன்சீப்பாக மாற்றப்பட்டார். மயூரத்திற்கு வந்தபின் இவர் புகழ் இன்னும் பரந்து வளர்ந்தது. இவருக்குப் பல உத்தம நண்பர் களும் ஏற்பட்டார்கள். மயூரத்திலே 13-ஆண்டுகள் முன்சீப்பாக இருந்தார். வெளியூர் நீதி மன்றங்களிலே உள்ள வழக்குகள் பல வேதநாயகம் பிள்ளையவர்கள் நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். வேதநாயகத்தின் நடுநிலைமையிலே - நீதி வழங்கும் நேர்மையிலே, வாதி பிரதிவாதி இருவரும் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆதலால் வாதி பிரதிவாதி இருவரும் சேர்ந்தே தங்கள் வழக்கை மயூரம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று விண்ணப்பஞ் செய்து கொள்ளுவார்கள். இதனால் பிள்ளையவர்களுக்கு ஓய்வில்லாத வேலை இருந்தது. இவர் குளத்தூரிலே பிறந்தவராயினும், இவரை யாரும் குளத்தூர் வேதநாயகம் பிள்ளை என்று அழைப்பதில்லை. மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை என்றே அழைத்து வந்தனர். பிற்காலத்திலும், இன்று வரையிலும் இப்பெயரே நிலைத்து விட்டது. மயூரத்தையே இவர் தாயகமாக எண்ணிப் பல பொதுக் காரியங்களிலும் ஈடுபட்டு மக்களுக்கு நன்மை செய்த காரணத்தால் இப்பெயரைப் பெற்றார். மயூரத்திலே வேதநாயகம் பிள்ளை அவர்கள் முனிசீப் வேலை பார்த்து வரும்போது உத்தியோகத் துறையிலே அவருக்குச் சில விரோதிகளும் முளைத்தார்கள் அதற்குக் காரணம் பிள்ளை அவர்களிடமிருந்த நேர்மையும் கண்டிப்பும் உள்ள நடத்தைதான். குறித்த நேரத்திலே அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்; அன்றாட வேலையை மீதம் வைக்காமல் செய்து முடிக்க வேண்டும். வேலையிலே தாமதம் காட்டக் கூடாது. எந்த வேலையையும் சுறுசுறுப்புடன் செய்து முடிக்கவேண்டும். அதிகாரிகளின் உதவியைத் தேடிவருகின்ற பொது மக்களைக் காக்கவைக்க கூடாது; இன்றைக்கு வா நாளைக்கு வா என்று இழுத்தடிக்கக் கூடாது. லஞ்சம் வாங்கக் கூடாது. லஞ்சம் வாங்குகிறவர்கள் பொது மக்களின் பகைவர்கள். பொய் வழக்கிற்காக வாதிக்க வரும் வழக்கறிஞர்கள் நேர்மை யானவர்கள் அல்லர்; பொய்ச்சாட்சி கூறுகின்றவர்கள் சமுதாயத்தின் புல்லுருவிகள். இவை போன்ற சிறந்த கொள்கைகளை உடையவர் வேத நாயகம் பிள்ளை. ஆதலால் சோம்பேறி உத்யோகதர்களும், லஞ்சம் வாங்குகிறவர்களும் பிள்ளையை வெறுத்து வந்தனர். தங்களுடைய பிழைப்புக்கு அவர் ஓர் எமன் என்றே கருதினர். வேதநாயகம்பிள்ளை அவர்களின் சிறந்த நடத்தையால், நேர்மையற்ற மேலதிகாரிகள் கூடத் தங்கள் விருப்பப்படி நடக்க அஞ்சினர். வேதநாயகம் பிள்ளையின் விரோதிகள், அவரைப் பற்றி அடிக்கடி மேலதிகாரிகளிடம் கோள் சொல்லுவார்கள். வேத நாயகம் பிள்ளையவர்கள் உண்மையிலே நம்பிக்கை யுள்ளவர்கள்; கடவுளிடத்திலே பக்தியுள்ளவர். ஆதலால் மேலதிகாரிகளை மகிழ்விக்கும் முறையிலே தகாத செயல்களை அவர் செய்வதில்லை. இதனால் தற்புகழ்ச்சியும் தலைக்கனமும் கொண்ட மேலதிகாரிகள் சிலரும் வேதநாயகம் அவர்களிடம் வெறுப்புக் கொண்டிருந்தனர். வேதநாயகம் அவர்கள் மாயூரத்திலே முன்சீப்பாக இருக்கும் போது, தஞ்சையிலே நீதிமன்றத்தின் தலைவராக நெல்சன் துரை என்பவர் இருந்தார். அவர் உத்தியோகம் ஏற்றுக்கொண்டவுடன் வேதநாயகம் பிள்ளை அவரைப் போய்ப் பார்க்கவில்லை. அதிகார மமதையும் தற்புகழ்ச்சியும் உள்ள அவர் வேதநாயகத்தின் மேல் கோபம் கொண்டிருந்தார். வேதநாயகத்தின் கண்டிப்பான நடத்தையைக் கண்டு பொறாமை கொண்ட சிலருடைய கோள் மொழிகளையும் நம்பினார். ஆதலால் வேதநாயகம் பிள்ளையை வேலையிலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தார். ஒரு நாள் திடீரென்று அவர் வேதநாயகம்பிள்ளையின் நீதி மன்றத்தைச் சோதனையிட வந்தார். அன்று பிள்ளை அவர்கள் உடல் நோய் காரணமாக ஓய்வு பெற்றுக்கொண்டிருந்தார். கோர்ட்டுக்கு வரவில்லை. அதைக் காரணமாக வைத்துக்கொண்டு உத்தியோகத்திலிருந்து விலக்கிவிட வேண்டும் என்று மேலிடத் திற்குத் தெரிவித்தார். மேலிடத்தாரும் நெல்சன் துரையின் கருத்தை ஒப்புக் கொண்டு வேலையைவிட்டு நீக்க ஒப்புக் கொண்டனர். இச்செய்தியை அறிந்த வேதநாயகம் பிள்ளை அவர்கள் தன்னை வேலையைவிட்டு நீக்குவதற்கான காரணங்கள் ஒன்றும் இல்லை என்பதை மெய்ப்பித்து மேலிடத்தார்க்கு விளக்கி யெழுதினார். மேலிடத்தார் பிள்ளை அவர்களின் விளக்கத்தை ஒப்புக்கொண்டனர். அவர் குற்றமற்றவர் என்பதை மறுக்கமுடிய வில்லை. ஆதலால் அவரை வேலையைவிட்டு நீக்கிவிடுவதற்குப் பதிலாக உபகாரச் சம்பளம் கொடுத்து விலகச் செய்யலாம் என்று முடிவு செய்தனர். உபகாரச் சம்பளம் பெற்றுக்கொண்டு வேலையைவிட்டு விலகச் சம்மதமா என்று கேட்டனர். பிள்ளை அவர்களும் தன் உடல்நிலை குன்றியிருந்தாலும், வேலையிலிருந்த தொல்லை காரணமாகவும் விலகுவதற்கு ஒப்புக் கொண்டார். இவ்வாறு உபகாரச் சம்பளம் கொடுப்பதையும் நெல்சன் துரை மறுத்து எழுதினார். ஆனால் அரசாங்கம் நெல்சன் துரையின் கருத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அரசாங்கமும் மாதம் நூறு ரூபாய் உபகாரச் சம்பளம் அளிக்க ஒப்புக் கொண்டு வேலையி லிருந்து விலக்குவதற்கு உத்தரவு கொடுத்தது. 1872ஆம் ஆண்டில் வேதநாயகம் பிள்ளை அவர்கள் பூரண மனச் சம்மதத்தோடு முன்சீப் வேலையிலிருந்து விலகிக் கொண்டார். வேலையிலிருந்து விலகிய பிள்ளை அவர்கள் சும்மா இருக்க வில்லை. பல பொதுப் பணிகள் புரிந்து வந்தார் மாயூரம் நகரசபைத் தலைவராக இருந்தார். அவர் காலத்தில் நகரமும், நகர மக்களும் அடைந்த நன்மைகள் பல. அவருடைய பல அலுவல்களுக்கிடையே தமிழ்ப் பணி செய்வதையே பெரும் பணியாகக் கொண்டிருந்தார். சீர்காழியில் தமிழ்ப்பணி வேதநாயகம் பிள்ளை அவர்கள் சீர்காழியிலே முன்சீப் வேலை பார்த்தபோது இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன; ஒன்று நீதி நூல் வெளியீடு; இரண்டு சீர்காழிக் கோவை வெளியீடு. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் அடிக்கடி சீர்காழிக்கு வருவார்; வேதநாயகம் பிள்ளை அவர்களுடனும், அவருடைய நண்பர்களுடனும் அளவளாவி யிருந்து விட்டுப் போவார். வேதநாயகம் பிள்ளையவர்கள் தம் உள்ளத்திலே தோன்றிய பல நீதிகளை யெல்லாம் அவ்வப்பொழுது பாடல்களாக எழுதி வைத்திருந்தார். அவைகள் இனிமையான பாடல்கள். எளிதிலே பொருள் உணரத்தக்க பாடல்கள். அப்பாடல்களை யெல்லாம் மகாவித்வான் அவர்களிடம் காட்டினார். மகாவித்வான் அவர் களும் அப்பாடல்களைப் படித்துப் பாராட்டினார். அந்நூலுக்குச் சிறப்பும் பாயிரம் ஒன்றும் எழுதிக் கொடுத்தார். அந்நூலை நீதிநூல் என்ற பெயருடன் வெளியிடும்படி செய்தார். 1858ஆம் ஆண்டிலே இந்நூல் முதற் பதிப்பாக வெளிவந்தது. பின்னும் பல பாடல்கள் இந்நூலுடன் சேர்க்கப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பின்னர் 1975 இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது. இந்த நீதி நூலின் பெருமையை மகாவித்வான மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் வாக்கால் அறியலாம். ஓதி நூல் உணர்ந்த குளத்தூர் வேத நாயகமால் உவப்பிற்செய்த நீதிநூல், தேவியல், ஆசிரியன் இயல் உணர்த்துதலால், நிகரில் ஞானச் சோதிநூல் எனச் சொல்லலாம்; இந்நூல்முன் எந்நூலும் சொல்லிற், காநூல், பாதிநூல், முக்கால் நூல், உவட்டு நூல், சிலம்பி நூல், பருத்தி நூலே! நூல்களை யெல்லாம் கற்று உண்மைப் பொருள்களை யெல்லாம் அறிந்தவன்; வேதநாயகன் என்னும் சிறப்புள்ளவன்; அவன்தானே மனமுவந்து செய்த நீதி நூலிலே தெய்வத்தின், ஞானாசிரியர்களின் தன்மைகளையெல்லாம் பாடியிருக்கின்றான். ஆதலால் இந்நூலை ஒப்பற்ற ஞானச்சோதி நூல் என்றே சொல்லலாம். இந்த நூலுக்கு எந்த நூலை ஒப்பாகக் கூறினாலும் அது முழு நூலாகாது. கால் நூல், அரை நூல், முக்கால் நூல்கள், படித்தால் வெறுப்பளிக்கும் நூல், சிலம்பி நூல், பருத்தி நூல் என்றுதான் அவைகளைக் கூற முடியும். இது நூலைப்பற்றி மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை கூறிய சிறப்புரை, இத்தகைய சிறந்த நூலைச் செய்து வெளியிட்டுப் புகழ்பெற்றார் வேதநாயகம் பிள்ளை அவர்கள். இது அவர் சீர்காழி யிலிருக்கும்போது செய்த சிறந்த தமிழ்ப் பணிகளில் ஒன்றாகும். மற்றொரு சிறந்த வேலை சீர்காழிக் கோவையை வெளியிடும் படி செய்ததாகும். மகா வித்வான் அவர்களுக்கும், வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கும் இருந்த சிறந்த நட்பைச் சீர்காழியில் உள்ள பெரிய மனிதர்கள் எல்லாம் அறிந்திருந்தனர். அவர்கள் சீர்காழி யைப் பற்றி மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் ஒரு நூல் இயற்ற வேண்டும் என்று விரும்பினர். தங்கள் விருப்பத்தை வேதநாயகம் அவர்களிடம் தெரிவித்து எப்படியாவது இக்காரியத் தைச் செய்து முடிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். வேதநாயகம் அவர்களும் இதை விரும்பினார். மகாவித்வானிடம் வேதநாயகம் பிள்ளையவர்கள் பொது மக்கள் விருப்பத்தையும், தம் கருத்தையும் தெரிவித்துக் கொண் டார். மகா வித்வானும் இதற்கு ஒத்துக் கொண்டார். அவருக்கு இச்செயல் அரிதன்று. அவர் பிறருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே கவிபாடும் ஆற்றல் உள்ளவர். தங்கு தடையில்லாமல் பிறரை எழுதச் சொல்லிவிட்டுத் தான் கவி பாடிக் கொண்டே யிருப்பார். நண்பர்களுடன் பேசிக்கொண்டும் இருப்பார். இத்தகைய கவிஞர் சீர்காழிக்கோவை என்னும் ஒரு நூலைச் சில தினங்களில் பாடி முடித்துவிட்டார். சீர்காழிக்கோவை என்னும் இச்சிறந்த நூல், பல புலவர் களும், பிரமுகர்களும் கூடியிருந்த அரங்கிலே வேதநாயகம் பிள்ளை அவர்களின் தலைமையிலே அரங்கேற்றப்பட்டது. பலரும் மகா வித்வானுடைய அறிவையும், ஆற்றலையும் பாராட்டினர். வித்வான் அவர்களுக்குச் சிறந்த சன்மானங்களும், பொருளுதவியும் கிடைத்தன. சீர்காழிக் கோவை பாடியதற்காக மகாவித்வான் அவர்களையும், அதற்குக் காரணமாகவிருந்த வேதநாயகம் பிள்ளை அவர்களையும் அறிஞர்கள் அனைவரும் பாராட்டினர். வேதநாயகம்பிள்ளை அவர்கள் தமது ஆசிரியராகிய மகா வித்வான் அவர்களையும் சீர்காழிக் கோவையையும் பாராட்டி இருபது செய்யுட்களைக் கொண்ட சிறப்புப் பாயிரம் ஒன்றைப் பாடினார். பன்னூலும் ஆய்ந்து ஆய்ந்து ஓர் பயன்உறாது உளம் வருந்தும் பாவலனே நன்னூல் ஓர் மீனாட்சி சுந்தரமால் ஒரு கோவை நவின்றான் காழிக்கு; அந்நூலுள், ஒருபாவில், ஓர் அடியில், ஒரு சீரை ஆய்வீராயின், எந்நூலும் கற்றவராய், இகபரமும் பெற்றவராய் இலகுவீரே! என்பது அந்தப் பாடல்களிலே ஒன்று. பல நூல்களையும் படித்து ஆய்ந்து ஒரு பயனும் அடை யாமல் உள்ளம் வருந்துகின்ற கவிஞர்களே! நல்ல நூல்களை யெல்லாம் ஆராய்ந்தறிந்த மீனாட்சி சுந்தரன் என்னும் பெரியோன் சீர்காழிக் காக ஒரு நூலைப் பாடினான். அந்த நூலிலே ஒரு பாட்டிலே ஒரு அடியிலே ஒரு சொல்லை ஆராய்ந்து பார்ப்பீர்களானால் போதும். எல்லா நூல்களையும் கற்றவர் களாவீர்கள்! இம்மை மறுமைப் பயன்களையும் பெற்றவர்களாய்ச் சிறந்து விளங்குவீர்கள்! இது அப்பாடலின் சிறந்த பொருள். இந்த நூல் சீர்காழிக் கோயிலிலே வேதநாயகம் பிள்ளை அவர்கள் தலைமையிலே அரங்கேற்றம் செய்யப்பட்டது. அப்பொழுது பொறாமைகொண்ட புலவர்கள் சிலர் செய்த இடையூறுகள் எல்லாம் பறந்துவிட்டன. அவர்கள் இடை யிடையே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மகாவித்வான் தக்க விடையளித்து வந்தார். அப்புலவர்கள் வீணான கேள்விகளை யெல்லாம் சில சமயங்களில் கேட்டனர். அப்பொழுது வேதநாயகம் பிள்ளைகள் வாயை அடக்கி வந்தார். சிறப்பாக அரங்கேற்றம் நடைபெற்றுப் பிள்ளையும் மகா வித்வானும் புகழ் பெற்றனர். இச் செயல் வேதநாயகம் பிள்ளையவர்கள் சீர்காழி யிலிருக்கும்போது நடந்த இரண்டாவது சிறந்த நிகழ்ச்சி. மூன்றாவதாக நடந்த மற்றொரு நிகழ்ச்சியும் குறிப்பிடத் தக்கது. வேதநாயகம் பிள்ளையின் முன்பு நடைபெற்ற ஒரு வழக் கிலே வாதியாக இருந்தவன் தன் வழக்கிலே வெற்றிபெற நினைத்தான். தன் வழக்கு நியாயம் அற்றது என்பது அவருக்குத் தெரியும். ஆதலால் அவன் ஒரு நாள் இரவு வேதநாயகம் பிள்ளையின் வீட்டிற்குச் சென்றான். அவரும் அவனை மரியாதை யுடன் வர வேற்றார். அவன் ஒரு நூறு ரூபாயை அவரிடம் கொடுத்துத் தன் பங்கிலே தீர்ப்பளிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டான். பிள்ளையும் தலையசைத்து அவனை அனுப்பிவிட்டார். மறுநாள் பிள்ளையவர்கள் நீதி மன்றத்திற்கு வரும் போது அந்த நூறு ரூபாயையும் கையோடு கொண்டு வந்தார். வாதியின் செய்கையைக் கோர்ட்டிலே எடுத்துக் கூறினார். வாதியின் செய்கையே அவன் வழக்கு பொய்யானது என்று காட்டுகிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டி பிரதிவாதியின் பக்கம் தீர்ப்புக் கூறினார். அந்த நூறு ரூபாயை வீசியெறிந்தார். இது அவருடைய நேர்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். வேதநாயகமும், சங்கீதமும் வேதநாயகம் பிள்ளை மாயூரத்திற்கு வந்தபின் அந்நகர மக்களுள் ஒருவராகவே வாழ்ந்துவந்தார். அவர் மாயூரத்தில் செய்த அரும்பணிகள் பல. அவர் எப்பொழுதுமே ஏழை மக்களிடம் இரக்கங் காட்டும் இயல்புள்ளவர். அவர்களுக்குத் தன்னாலான உதவியைச் செய்ய ஒரு பொழுதும் மறக்கமாட்டார். அவருடைய இயற்கைக் குணத்திற்குத் தகுந்தவாறு மாயூரத்திலிருந்தபோது பல அறங்களைச் செய்து கொண்டு வந்தார். ஏழ்மையால் வருந்தும் பல குடும்பங்களுக்கு உதவி புரிந்தார். வறுமை காரணமாகக் கல்வி கற்க முடியாத ஏழைக் குழந்தைகள் பலர் கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்தார். கீழ் நிலையிலிருப்போர் கல்விப் பயிற்சியினாலேயே முன்னேற முடியும் என்பது அவரு டைய கொள்கை. ஏழைகளைப் படிக்கும் படி செய்வது அவர்களைக் கைதூக்கிவிடும் பேருதவியாகும் என்பது அவருடைய எண்ணம். ஆதலால் இக்காரியத்தை அவர் எப்பொழுதுமே செய்து கொண் டிருந்தார். ஏழைகள் அவரைத் தமது பாதுகாப்பாளர்கள் என்றே எண்ணிப் புகழ்ந்தனர். அப்பொழுது ஓராண்டு மழையில்லாமல் வறண்டது. அதனால் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. அதைத் தாது வருஷப் பஞ்சம் என்பார்கள். அப்பஞ்சத்தால் ஏழை மக்கள் பலர் உணவின்றிச் செத்து மடிந்தனர். அவர்கள் நிலையைக் கண்ட வேதநாயகம் பிள்ளை தமது வீட்டுக்கு அருகிலேயே கஞ்சித் தொட்டி ஒன்று ஏற்படுத்தி னார். அதன் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்துக் காப்பாற்றினார்; இதனால் அவருக்குப் பெயரும் புகழும் வளர்ந்தது. அவருடைய இந்த நல்லறத்திற்குப் பலர் உதவியும் புரிந்தனர். இக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உயர்திரு சுப்பிரமணிய தேசிகரும் பஞ்சத்தால் வாடும் மக்களுக்குப் பல உதவிகள் செய்தார். வேதநாயகம் பிள்ளை அவர்கள் மாயூரத்தில் இருக்கும் போதுதான் அவருக்கும், சிறந்த இசைப் புலவரான கோபால கிருஷ்ண பாரதியாருக்கும் நட்பு ஏற்பட்டது. கோபால கிருஷ்ண பாரதியார் சிறந்த சங்கீத விற்பன்னர். உறுதியான பக்தியும், ஒழுக்கமும் உள்ளவர். அவருடைய தந்தை, பாட்டனார் முதலியவர்கள் சிறந்த வீணை வித்வான்கள். இளமைப் பருவத்தில் அவர்களிடமே பாரதியார் சங்கீதம் பயின்றார். பின்னர் மாயூரத்தில் இருந்த கோவிந்தய்யர் சுவாமி என்பவரிடம் வட மொழியும், வேதாந்த சித்தாந்த நூல்களும் கற்றுத் தெளிந்தார். இவர் மாயூரத்திற்கு வரும்போது வயது முப்பது. அதற்கு முன் தமது பதினாறாவது வயது வரையிலும் அவர் பிறந்த ஊரிலேயே சங்கீதக் கலை பயின்று வந்தார். கோபாலகிருஷ்ண பாரதியார் பிறந்த ஊர் நரிமணம் என்பது. அவர் தனது பதினாறாவது வயதுக்குப் பின் அவ்வூரை விட்டுப் புறப்பட்டு, ஆனை தாண்டவபுரம், முடிகொண்டான் முதலிய ஊர்களிலே சில ஆண்டுகள் தங்கியிருந்தார். இவர் மாயூரம் கோவிந்தய்யர் சுவாமியிடம் அறிவு நூல் களைக் கற்றறிந்தபின் கடவுள் பக்தியிலே மிகவும் ஈடுபட்டார். குடும்ப வாழ்க்கையில் புகுவதில்லையென்று முடிவு செய்து கொண்டார். பிரம்மசாரியாகவே காலங் கடத்தினார். எப்பொழுதும் இறைவனைப் போற்றும் பாடல்களையே பாடிக் கொண்டு வீதி வீதியாகச் சுற்ற வருவார். பசித்தபோது உணவு கிடைக்குமிடத்தில் அதை ஏற்று உண்பார். இவருடைய இனிய சங்கீதத்தையும், பக்திரசமான பாடல்களையும் பொதுமக்கள் மிகவும் சுவைத்தனர். இவர் பாடுமிடங்களில் மக்கள் திரளாகக் கூடிக் கேட்டுக் கொண்டிருப் பார்கள். பகல் முழுவதும் இவ்வாறு பாடிக்கொண்டு காலம் போக்குவதும், இரவிலே எங்காவது திண்ணையிலே படுத்து உறங்குவதுந்தான் இவருடைய வேலை. இவர்தான் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையைப் பாடியவர். இன்றும் இந்நூல் சங்கீத வித்வான்களால் அருமை யாகப் போற்றப் படுகின்றது இக்கீர்த்தனையை வைத்துக் கொண்டே பலர் நந்தனார் சரித்திரத்தைக் காலட்சேபம் செய்துகொண்டு வருகின்றனர். இத்தகைய சிறந்த புலவரும், இசை வல்லுநரும், பக்த சிரோன்மணியுமான கோபால கிருஷ்ண பாரதியாரிடம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு மதிப்பும், அன்பும் உண்டாயிற்று. வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கும் இளமைப் பருவமுதலே சங்கீதத்திலே மிகுந்த ஆவல் உண்டு. கடவுள் பக்தியிலும் சிறந்தவர். கடவுள் ஒன்றே என்றே கொள்கையும் உள்ளவர். ஆதலால் அவர் கோபால கிருஷ்ண பாரதியாரிடம் மிகவும் அன்பு காட்டினார். பாரதியாரும், வேதநாயகம் அவர்களின் நடத்தையையும், பக்தி யையும், அன்பையும் கண்ட அவரிடம் அன்பு கொண்டார். வேதநாயகம் பிள்ளையைப் புகழ்ந்து ஒரு கீர்த்தனமும் பாடினார். வேத நாயகம் பிள்ளைக்குக் கோபால கிருஷ்ண பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு இசைக் கலையிலும் நல்ல ஞானம் உண்டாயிற்று. அக்காலத்திலே சங்கீத வித்வான்கள் பெரும்பாலும் தெலுங்குப் பாடல்களைத்தான் பாடி வந்தனர். தமிழ்ப் பாடல் களைப் பாடு வதில்லை. தேவாரம், பிரபந்தம் திருப்புகழ் முதலியவைகளைத் தவிர சிறந்த தமிழ்க் கீர்த்தனைகளும் இல்லை. இக்குறையைப் போக்கித் தமிழ் இசையை வளர்க்க வேண்டும் என்று கருதினார் பிள்ளை அவர்கள். இவருடைய எண்ணம் ஈடேறக் கோபால கிருஷ்ண பாரதியார் அவர்களிடம் நட்பு ஒப்பற்ற உதவி செய்தது. தமிழிலே சிறந்த கீர்த்தனைகளைப் பாடவேண்டும்; அவைகள் எல்லோராலும் பாடக்கூடிய பொதுவான கீர்த்தனை களாக இருக்க வேண்டும்; சங்கீதக் கலையின் மூலமும் நல்ல அறங்களையும், பக்தியையும் போதிக்க வேண்டும்; என்பது வேதநாயகம் பிள்ளையின் எண்ணம். இந்த எண்ணத்துடன் அவர் பல கீர்த்தனைகளை எழுதினார். இக்கீர்த்தனைகளை யெல்லாம் தொகுத்துச் சர்வசமய சமரசக் கீர்த்தனை என்னும் பெயருடன் 1878ஆம் ஆண்டிலே வெளியிட்டார். இக்கீர்த்தனை இன்றும் சங்கீத வித்வான்களால் பாராட்டிப் பாடப்பட்டு வருகின்றது. தமிழ் நாட்டிலே பாடும் இசைப் பாடல்களை யெல்லாம் தமிழிலே பாடவேண்டும். அப்பொழுதுதான் இசையின் முழுப் பயனையும் மக்கள் சுவைக்கமுடியும்; என்பது பல அறிஞர்கள் கருத்து. இக்கருத்தே பல்லாண்டுகளுக்கு முன்னிருந்த வேதநாயகம் பிள்ளையின் கருத்துமாகும். இதற்கு அவர் எழுதி யிருக்கும் கீர்த்தனை களே சான்றாகும். இதன்பின் சத்திய வேதக் கீர்த்தனை என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். இந்த நூல் 1889ஆம் ஆண்டிலே வெளி வந்தது; இது கிறிதவ வேதக் கருத்துக்களைக் கொண்ட கீர்த்தனை. இவ்வாறு தமிழிசைக்குப் பெருந்துணை புரியும் வகையிலே இரண்டு கீர்த்தனை நூல்களை வேதநாயகம் பிள்ளை அவர்கள் செய்ததற்குக் காரணம் கோபால கிருஷ்ண பாரதியார் அவர்களின் கூட்டுறவும், நட்புந் தான். வேதநாயகம் பிள்ளையின் இசை உணர்ச்சி வளர்ந்து சிறந்ததற்குக் கோபால கிருஷ்ண பாரதியார்தான் காரணம் என்றும், அவரே பிள்ளை அவர்களுக்கு முறையான சங்கீதக் கலையைக் கற்பித்த குருவென்றும் கூறுகின்றனர். சுப்பிரமணிய தேசிகரும் வேதநாயகமும் அக்காலத்திலே திருவாவடுதுறை ஆதீனத்தின் தலைவராக வீற்றிருந்தவர் உயர்திரு சுப்பிரமணிய தேசிகர் அவர்கள். தேசிகர் சிறந்த ஒழுக்கமும் பக்தியும் உள்ளவர். தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தவர். சைவ சித்தாந்தமும், தமிழும் பயில்வதற்குப் பலருக்கு உதவி செய்தவர். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைத் தமது ஆதீனப் புலவராக ஏற்றுக்கொண்டு அவரிடம் பலர் தமிழ்க் கலை பயிலும்படி ஏற்பாடு செய்தவர். சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மூலம் வேதநாயகம் பிள்ளையவர்களைப்பற்றி நன்றாக அறிந்திருந்தார். பிள்ளை அவர்களின் சிறந்த கல்வி, உயர்ந்த நடத்தை, சமரச நோக்கம், உறுதியான கடவுள் பக்தி, நீதி வழுவாத தன்மை இவைகளைப்பற்றியெல்லாம் சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் அறிந்து அவரிடம் மதிப்பு வைத்திருந்தார்: ஆதலால் பிள்ளை அவர்களைச் சந்திக்க வேண்டும் என்னும் ஆவல் தேசிகருக்கு உண்டாயிற்று அவரைத் திருவாவடுதுறைக்கு அழைத்துக் கொண்டு வந்து பாராட்ட வேண்டும் என்று விரும்பினர். மகாவித் வான் அவர்களிடம் தன் கருத்தை அறிவித்து வேதநாயகத்தை அழைத்துவர அனுப்பினார். மகாவித்வானும் தேசிகரின் விருப்பப்படி மாயூரத்திற்கு வந்தார். வேதநாயகம் பிள்ளை அவர்களிடம் ஆதீனத் தலைவரின் கட்டளையைத் தெரிவித்தார். திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் அவரைப் பார்த்துப் பேசி மகிழ்ந்து திரும்பும்படி கேட்டுக் கொண்டார். அப்பொழுது வேதநாயகம்பிள்ளை அவர்களுக்குப் பல வேலைத் தொந்தரவுகள் இருந்தன. ஆதலால் உடனே புறப்பட முடியவில்லை. உடனே சந்திக்க முடியாமைக்கு வருந்தினார். தன் வருத்தத்தைத் தெரிவித்தும், மற்றொரு முறை வந்து சந்திக்கிறேன் என்று சொல்லியும் அனுப்பினார். தன் கருத்தை ஒரு செய்யுள் வடிவிலே எழுதியனுப்பினார். எல்லாவற்றையும் நடத்துதற்கு இருந்த தலைவன் என்று சொல்லுவதற்குகந்த சுப்பிரமணிய தேசிகனே! உண்மையான அறிவு மலையே! போற்றும்படி இருக்கின்ற உன் ஆதீனப் புலவன் சொல்லியபடியே பல துறையிலும் சிறந்து விளங்கும் நீ என் அறிவிலே இருக்கின்றாய், என் அறிவை விட்டுப் பிரியவும் எண்ண மாட்டாய் என்று நம்பியிருந்தேன். இப்படி என் உள்ளத்திலேயே எப்பொழுதும் இருக்கின்ற உன்னை, சிறந்த முக்தி தரும் தலமாகிய திருவாவடுதுறையில் இருக்கின்றாய் என்று என்னிடம் வந்த பெரும் புலவன் பொய் சொல்லவும் கற்றுக்கொண்டான் என்பதுதான் அப்பாட்டில் அடங்கிய பொருள். வீதி யிருந்த பதியெனும் சுப்பிரமணிய தேசிக! மெஞ்ஞானக் குன்றே! துதியிருந்த நன்புலவன் சொல்வழியே பல்வழியும் தோன்றும் நீ, யென் மதியிருந்தாய்! பிரிந்திடவும் மனம் பொருந்தாய்! என விருந்தேன்; வான்கோ முத்திப் பதி யிருந்தாய் என, வந்த மாபுலவன் பொய் சொலவும் படித்தான் மாதோ. என்பதுதான் அப்பாடல். நீ எப்பொழுதும் என் உள்ளத்தி லேயே தங்கியிருக்கின்றாய் நீ திருவாவடுதுறையில் இருக்கிறாய் என்று புலவர் கூறுவது பொய் என்பது இப்பாடலின் கருத்து. இச் செய்யுளைக் கண்ட சுப்பிரமணிய தேசிகர் மிகவும் மகிழ்ச்சி யடைந்தார். பிள்ளை அவர்கள் தன்னிடம் வைத்திருக்கும் அன்பைக் கண்டு வியந்தார். அப்பொழுது புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாதம் பிறக்கும் சமயம். ஐப்பசி மாதம் முழுதும் மாயூரத்திலே காவிரியிலே துலாக்கட்டம் என்னும் இடத்திலே பலரும் சென்று நீராடுவார்கள். ஐப்பசி முதல் நாளிலும், இறுதி நாளிலும், அம்மாதத்தில் வரும் அமாவாசை நாளிலும் உள்ளூரி லிருந்தும், வெளியூரிலிருந்தும் ஏராளமான மக்கள் துலாக்கட்டத் திலே சென்று தலை முழுகுவார்கள். இந்த மாதத்திலே திருவாவடுதுறை ஆதீனத்தார் தருமபுர ஆதீனத்தார் முதலியவர்களும் மாயூரத்தில் வந்து தங்கியிருந்து காவிரியிலே குளிப்பார்கள். ஐப்பசி மாதத்தில் மாயூரத்தில், காவிரியில் குளிப்பதைத் துலா நானம் என்று கூறுவர். ஐப்பசி மாதத்திற்குத் துலாமாதம் என்று பெயர். துலா மாதத்தில் செய்யும் நானம் துலாநானம் என்று வழங்குகின்றது. சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் வேதநாயகம் பிள்ளை அவர் களின் செய்யுளுக்குப் பதில் கூறி அனுப்பினார். தான் துலா முழுக்குக்காக மாயூரம் வந்து தங்கப் போவதாகவும், அப்பொழுது தன்னைச் சந்திக்கும் படியும் சொல்லியனுப்பினார். அதனோடு மான் துறவியாக இருப்பதால், இல்லறத்தார் வீட்டுக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் கூறி அனுப்பினார். இதைக் கேட்ட வேதநாயகம் பிள்ளை அவர்கள் மீண்டும் சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்கு ஒரு பாடல் எழுதியனுப்பினார். சுப்பிரமணிய தேசிகர் என்னும் நல்ல தவசியே: இல்லற வாழ்க்கையை வெறுத்துத் துறவற வாழ்க்கையை மேற் கொண்ட நீ பிறர் வீட்டிற்குச் சென்று வாழ்வதைச் சிறிதும் விரும்ப மாட்டாய் என்று கூறுகின்றனர். இது உண்மையல்ல; வேடிக்கை யான பேச்சு. அற்ப வாழ்வையுடைய என்னுடைய வீடு முழுவதும் நீ பரிபூரண மாக நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்! என்ற பொருளமைந்த பாட்டு அது இல்வாழ்வை நீத்து அறமேற் கொண்ட நீ! பிறர் இல்லத்தில் செல்வாழ்வு சற்றும் விரும்பாய் என்பார்; இது சித்திரமே! புல் வாழ்வுடைய என் வீடெங்கும் நீ பரிபூரணனாய் நல் வாழ்வுற்றாய்! சுப்பிரமணி யானந்த நற்றவனே! என்பதே அப்பாடல். இப்பாடலை எழுதி அனுப்பிவிட்டுத் தேசிகரின் விருப்பத்தின்படி அவரை மாயூரத்தில் சந்திப்பதாகவும் சொல்லி அனுப்பினார். இதன் பிறகு சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் மாயூரம் வந்திருந்த போது குறித்த காலத்தில் வேத நாயகம் அவர்கள் தேசிகரைச் சந்தித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர். இருவரும் சந்திப்பதற்கு முன்பே அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் அளவற்ற அன்பு கொண்டிருந்தார்கள் என்றால் நேரில் சந்தித்த போது அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பற்றி ஆர்தான் அளவிட்டுச் சொல்ல முடியும்? இதன்பிறகு அடிக்கடி வேதநாயம் பிள்ளை திருவாவடு துறைக்குச் சென்று சுப்பிரமணிய தேசிகர் அவர்களைச் சந்தித்து வருவது வழக்கமாகிவிட்டது. இருவரிடமும் உள்ள உத்தமமான உயர்ந்த குணங்கள் அவர்களை ஒன்றாகப் பிணைத்து விட்டன. சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் சைவ மதத்தின் தலைவர்; சைவத்தை பரப்புவதையே கடமையாகக் கொண்டவர் வேதநாயகம் அவர்கள் கிறிதுவ மதத்தில் பற்றுள்ளவர்; சிறந்த கத்தோலிக்கர். இவ்வாறு இருவரும் மதத்தால் வேறுபட்டிருந்தும் அவர்கள் உத்தமர்களாக இருந்தமையால் ஒன்றுபட்ட அன்பின ராயினர். அவர்கள் உயர்ந்த நோக்கம், உள்ளவர்கள்; மத வெறுப்பற்றவர்கள்; மக்களுக்கு உதவி செய்வதே இறைவனுக்குச் செய்யும் பணி என்ற நம்பிக்கையுள்ளவர் கள். ஆகையால் தான் அவ்விருவரும் அன்பால் ஒன்றாகப் பிணிக்கப்பட்டிருந்தனர். ஒரு முறை வேதநாயகம் அவர்கள் திருவாவடுதுறைக்குப் போய்ச் சுப்பிரமணிய தேசிகரைச் சந்தித்துப் பேசியிருந்து விட்டுத் திரும்பிவிட்டார். திரும்பிய பின்னும்தேசிகருடைய பண்பும், அன்பும், அவருடைய இனிய சொற்களும், அவர் உருவமும் பிள்ளை அவர்களின் உள்ளத்தைவிட்டு அகலவில்லை. அவருடைய எண்ணம் முழுதும் திருவாவடுதுறையிலேயே, சுப்பிரமணிய தேசிகரிடமே இருந்தது. தன்னுடைய இந்த நிலையை விளக்கிச் சில பாடல்களை இயற்றினார். அவைகளைச் சுப்பிரமணிய தேசிகரிடம் அனுப்பி வைத்தார். சூரர்களும் வந்து வணங்குகின்ற பெருமையுள்ள சுப்பிரமணிய தெய்வமே! நேராக வந்து உன்னைக் கண்டேன்; நேற்று இரவே திரும்பி வந்துவிட்டேன்; ஊருக்கும் வந்து சேர்ந்துவிட்டேன்; என்னுடைய உடம்புதான் ஊருக்குவந்து சேர்ந்ததே தவிர என்னுடைய உள்ளம் வந்து சேரவில்லை; அது அங்கேயே உன்னிடமேதான் தங்கிவிட்டது. யார் என்னிடம், அது அங்கேயில்லையென்று சொன் னாலும் நான் கேட்கவே மாட்டேன். தயவுசெய்து அங்கே தங்கி யிருக்கும் என்னுடைய உள்ளத்தை அனுப்பிவைக்க வேண்டுகின்றேன். இது அப்பாடல்களிலே உள்ள ஒரு செய்யுளின். பொருள், சூர்வந்து வணங்கும் மேன்மைச் சுப்பிரமணிய தேவே! நேர்வந்து நின்னைக் கண்டு நேற்று ராத்திரியே மீண்டேன்; ஊர்வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்துசேரக் காணேன்; ஆர்வந்து சொல்லினும் கேளேன் அதனை யிங்கு அனுப்புவாயே. என்பதுதான் அப்பாடல். தேசிகருக்கும், பிள்ளைக்கும் இடையே எத்தகைய அன்பு குடிகொண்டிருந்தது என்பதை இப்பாடல் விளக்கி நிற்கின்றது. இதற்கு முன்னே, பஞ்சகாலத்தில் மாயூரத்திலே, வேதநாயகம் பிள்ளை அவர்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டிருந்த போது சுப்பிரமணிய தேசிகர் அவர்களும் பேருதவி செய்தார். ஏழைகளுக்கு உணவும், உடையும், பணமும் வழங்கினார். தேசிகரின் அந்த உதவியைப் பாராட்டிப் பல பாடல்களைப் பாடியிருக் கின்றார் வேதநாயகம். வேதநாயகத் திற்கும தேசிகருக்கும் சந்திப்பு ஏற்படுவதற்கு முன்னே பாடிய பாடல்கள் அவை. யாராயிருந் தாலும் மக்களுக்கு நன்மை செய்கின்றவர்களைப் பாராட்டிப் புகழும் குணமும், அவர்களை உயர்ந்த மனிதர்களாக மதிக்கும் தன்மையும் வேதநாயகம் பிள்ளையிடம் உண்டு என்பதற்கு அந்தப் பாடல்களே சான்றாகும். அப்பாடல்கள் சுப்பிரமணிய தேசிகரின் உயர்ந்த தன்மையை மனமாரப் பாராட்டிப் பாடியவைகள். அவைகளைக் கொண்டு தேசிகரின் பெருமையையும், வேதநாயகத்தின் உயர்ந்த பண்பையும் கவித்திறத்தையும் காணலாம். அவைகளிற் சில பாடல்களே கீழ்வருவன: நேர் என்றும் இல் சுப்பிர மணியாதிப! நின்னைப் பல்லோர் கார் என்று சொல்வர்; அக்காரும் வஞ்சித்த இக்காலத்திலே ஊர் என்றும் வாழ, அறுசுவை உண்டி உதவி, உன்றன் பேர் என்றும் நிற்கச் செய்தாய்! உனைக் கார் எனல் பேதைமையே என்றுமே உனக்கு நிகர் ஒருவரும் இல்லை என்று சொல்லக் கூடிய சுப்பிரமணிய தேசிகர் என்னும் தலைவனே! உன்னைப் பலர் மேகம் என்று கூறுவார்கள். அந்த மேகமும் மழை பெய்யாமல் வஞ்சனை செய்து விட்ட இப்பஞ்ச காலத்தில் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் என்றும் உயிரோடு வாழும்படி அவர்களுக்கு அறுசுவை உணவளித் தாய். இதனால் உன்னுடைய பேரையும் என்றும் அழியாமல் நிலைக்கச் செய்தாய். இத்தகைய உன்னை மழை பெய்யாமல் மோசம் பண்ணிய மேகம் என்று சொல்வது அறியாமையாகும். நிசியோடத் தோன்றும் தினகரன் போல; இந்நீள் நிலத்தோர் பசியோடப், பஞ்சம் பஞ்சாப் பறந்து ஓடப், பதார்த்தம் எல்லாம் ருசியோடு அளிக்க, அவதரித்தான் நல்துறைசை தன்னில், சசியோடு நேர்முகச் சுப்பிர மண்ய தயா நிதியே. இரவு ஓடி மறையும்படி உதிக்கின்ற சூரியனைப் போல, இப்பெரிய நிலத்தில் உள்ளவர்களின் பசி ஓடி மறையும்படியும் பஞ்சம் என்பது பஞ்சுபோலப் பறந்து ஓடும்படியும், உணவுப் பொருள்களை யெல்லாம் சுவையோடு அளிப்பதற்காக, நல்ல திருவாவடுதுறையிலே சந்திரனைப் போன்ற முகமுள்ள சுப்பிரமண்ய தேசிகன் என்னும் கருணைச் செல்வன் தோன்றினான். மாமேகம் நீர் ஒன்றையே தரும்; சுப்ரமணியப் பெயர் பூமேகம், அன்னமும், சொன்னமும், இன்னமும், பூண்துகிலும், மீமேகம் முட்டும் வளமாடம், பூமி, விடை, பசுவும், தோம் ஏக வேதமும், நீதமும், போதமும் தூவிடுமே வானத்திலே சஞ்சரிக்கும் பெரிய மேகம் தண்ணீர் ஒன்றை மட்டுமே கொடுக்கும். ஆனால், சுப்ரமண்யம் என்னும் பெயர் கொண்ட இந்தப் பூமியில் உள்ள மேகமோ, சாப்பாடு, பொன் இன்னும் உடுத்திக்கொள்ளத்தக்க உடை, உயர்ந்த மாளிகை, நிலம், எருது, பசு, உள்ளத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும்படி வேத உபதேசம், நல்ல நீதிகள், நல்ல அறிவுரை இவைகளையெல்லாம் எல்லோரும் பெற வாரிச் சிந்தும். இப்பாடல்களால் சுப்பிரமணிய தேசிகரின் சிறப்பையும், வேதநாயகம் பிள்ளையின் உயர்ந்த பண்பையும் காணலாம். சுப்பிரமணிய தேசிகருக்கும், வேதநாயகத்திற்கும் நேரே சந்திப்பும், நட்பும், ஏற்பட்டபின் அவர்களுடைய நட்பு மேலும், மேலும் வளர்ந்து வந்தது. அது எவ்வளவு உயர்ந்ததாக இருந்தது என்பதற்கு மற்றோர் நிகழ்ச்சியை உதாரணம் கூறலாம். மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் அடிக்கடி வறுமையால் வாடி வந்தார். அவருடைய துன்ப நிலையை உணர்ந்து பலர் உதவி செய்து வந்தனர்; அவ்வாறு உதவி செய்து வந்தவர்களில் வேதநாயகம் பிள்ளை தலை சிறந்தவர். தாம் உதவியோடு மற்றவர்களையும் உதவி புரியும்படி செய்வது அவருடைய வழக்கம். மகா வித்வான் இறந்தபின் அவர் மைந்தன் வறுமையால் வருந்துவதை அறிந்து, அவருக்குப் போதுமான உதவியளிக்கும்படி சுப்பிரமணிய தேசிகர் அவர் களுக்குப் பாடல்களின் மூலம் எழுதியனுப்பினார். இப்படி எழுதியனுப்பிய பாடல்களிலே ஒன்று கீழ்வருவது: கந்தனைநேர் சுப்பிரமணி ஐய! கவிஞர் எலாம் வந்தனை செய்தற் குரியன்; பெரியன்; மண்வாழ்வை விட்டுஎன் சிந்தனை வாழ்பவன்; மீனாட்சி சுந்தரச் செல்வன் என்பான் மைந்தனை, நிந்தனைப் பஞ்சம் உறாவண்ணம் வாழ்வருளே! முருகனைப்போல் உள்ள சுப்பிரமணிய தேசிகனே: கவிஞர்கள் எல்லாராலும் வணங்குவதற்குரியவன்; பெரியவன்; உலகில் வாழ்வதைவிட்டு என் உள்ளத்திலே வாழ்கின்றவன்; மீனாட்சி சுந்தரச் செல்வன் என்று சொல்லப்படுகின்றவன்; அவனுடைய புத்திரனைப் பழிக்கத் தகுந்த பஞ்சம் அணுகி வருத்தாமல் வேண்டிய செல்வத்தைக் கொடுத்தருளும்படி வேண்டிக் கொள்ளுகின்றேன். பிள்ளையவர்கள் தேசிகரிடம், கொண்டிருந்த அன்பு, தன் தமிழாசிரியராக எண்ணியிருந்த மகாவித்வானிடம் கொண்டிருந்த பக்தி இவைகளை இப்பாடலிலே காணலாம். கிறிதுவராகிய வேதநாயகம் அவர்களும், சைவ சமய குருவாகிய சுப்பிரமண்ய தேசிகர் அவர்களும் ஒன்றுபட்ட உள்ளத் துடன் வாழ்ந்தனர். அவர்கள் கொண்டிருந்த சிறந்த நட்பு நமக்கு ஓர் உண்மையை உணர்த்துகின்றது. மதத்தில் மாறுபட்டவர் களாயிருந்தாலும், ஒன்றுபட்டு வாழமுடியும்; சகோதரர்களைப் போலப் பழகமுடியும்; பொதுக் காரியங் களிலே ஒத்துழைக்க முடியும் என்பதுதான் அந்த உண்மை. நண்பர்களும் வேதநாயகம் பிள்ளையும் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் புதுக்கோட்டை யிலே தலைமை நீதிபதியாக இருந்தவர். அவர் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் புலவர். அச்சில் வராத பல நூல்களை அரும்பாடுபட்டு வெளி யிட்டார். தன்னுடைய உத்தியோக நேரம்போக மற்ற நேரத்தில் தமிழாராய்ச்சி செய்வதே அவருடைய வேலை. ஆங்கில அறிவோடு தமிழிலே பெரும் புலமை வாய்ந்தவர். தொல்காப்பியப் பொருளதிகாரம், இலக்கண விளக்கம், கலித்தொகை, சூளாமணி, தணிகைப் புராணம் போன்ற சிறந்த நூல்களையெல்லாம் முதலில் அச்சிட்டு வெளியிட்டவர் தாமோதரம் பிள்ளைதான். அவர் தமிழுக்குச் செய்திருக்கும் பணி அளவற்றது. அவர் வெளியிட்டிருக்கும் நூல்கள் ஒவ்வொன்றிலும் எழுதி யிருக்கும் முன்னுரைகளிலே தமிழின் சிறப்பையும், உயர்வையும் குறிப்பிட்டுள்ளார். அந்த முன்னுரை களே அவருக்கிருந்த தமிழ்ப் பற்றையும், தமிழ் ஆராய்ச்சியையும் விளக்கப் போதுமானவைகளாகும். தமிழின்மீது பற்றும், தமிழ் ஆராய்ச்சியும் நிறைந்த சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களுக்கும், வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கும் நெருங்கிய நட்பிருந்ததில் வியப்பில்லை. இருவரும் நெருங்கிய நட்பினர்களாயிருந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி கடிதப் போக்குவரத்துக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவர்கள் தங்கள் கடிதங்களைக் கவிகளாகவே எழுதிக்கொள்ளு வார்கள். வேதநாயகம் பிள்ளை அவர்கள் உத்தியோகத்திலிருந்து விலகியபோது அதற்காக மனம் வருந்தியவர்களில் தாமோதரம் பிள்ளையும் ஒருவர். வேதநாயகம் பிள்ளை அவர்களுக்கு ஒரு சமயம் மனத்தளர்ச்சி ஏற்பட்டபோது தாமோதரம் பிள்ளை யவர்கள் கவியிலே கடிதம் எழுதி ஆறுதல் கூறினார். தாமோதரம் பிள்ளை உரைநடை எழுதுவதோடு செய்யுள் எழுதுவதிலும் சிறந்தவர். அவருடைய செய்யுள் எழுதும் திறமை யையும் சிறந்த குணங்களையும் பாராட்டிப் பல பாடல்களை எழுதியிருக்கின்றார் வேதநாயகம்பிள்ளை. அதிகாரமும் பெரும் சீரும் அற்றோம் என்று அநுதினமும் மதியே மயங்கற்க; நீதமும், போதமும் வாய்மையும், வாழ் பதியேஎனும் கன தாமோதர வள்ளல், பட்சம் என்னும் நிதியே பெற்றோம்; இனியாரும் நமக்கு நிகர் அல்லவே. என்பது தாமோதரம் பிள்ளையைப்பற்றி வேதநாயகம் பிள்ளை பாடிய பாடல்களில் ஒன்று. அதிகாரத்தையும் பெரிய செல்வத்தையும் இழந்தோம் என்று அநுதினமும் நினைத்தும் நினைத்து அறிவு கலங்காதே. நீதியும், அறவுரைகளும், உண்மையும் வாழ்வதற்குரிய இடமாக இருப்பவன் பெருமை பொருந்திய தாமோதர வள்ளல் என்னும் பெயருள்ளவன்; அவனுடைய அன்பு என்னும் செல்வத்தைப் பெற்றோம்; இனி யாரும் நமக்கு நிகர் இல்லை இதுவே அப்பாடலின் பொருள். வேதநாயகம் பிள்ளை அவர்கள் உத்தியோகத்திலிருந்து நீங்கியிருந்த காலத்திலும் தாமோதரம் பிள்ளை அவர்கள் வேத நாயகம் பிள்ளையிடம் அன்பு பாராட்டி வந்தார். வேண்டிய போது உதவி புரிந்து வந்தார். இவ்வுண்மையை மேலே காட்டிய பாடலால் காணலாம். நள்ளுநர்க்கு இனிய தாமோதர நராதிபன் தான், நாளும் தெள்ளு தண்தமிழாற் செய்யும் தீங்கவி அமுதம் தன்னை, கொள்ளுவோர் செவி தித்திக்கும்; கூறுவோர் வாய் தித்திக்கும்; உள்ளுவோர் மனம் தித்திக்கும் என்னில்; யாம் உரைப்ப தென்னே. இது தாமோதரம் பிள்ளை அவர்களின் கவிபாடுந் திறத்தை வியந்து பாடியது. நண்பர்களுக்கெல்லாம் நன்மை செய்கின்ற தாமோதரன் என்னும் மக்கள் தலைவன் தெளிவான தமிழிலே இனிய கவியமு தத்தை இயற்றுவான்; அந்தக் கவியமுதத்தைக் காதிலே கொள்ளு வோர் காது தித்திக்கும்; அப்பாடலைச் சொல்லுவோர் வாய் இனிக்கும்; அக்கவியின் பொருளைச் சிந்திப்போர் உள்ளமும் தித்திக்கும்; அக்கவியின் இனிமை இத்தன்மையென்றால் யாம் அதைப்பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கின்றது? வேதநாயகம் அவர்கள் இப்பாடலினால் இனிய கவிகள் இயற்றுவதிலே வல்லவர் தாமோதரம் பிள்ளை என்பதை விளக்கி னார். மற்றொரு கவியிலே தாமோதரம் பிள்ளையின் பெருமையை நகைச்சுவையுடன் கூறியிருக்கின்றார். அக்கவி கீழ்வருவது. மருமலர்த்தார் புனை தாமோதர மகிபா! நான்முகன்தன் வஞ்சம் கேட்டி! அருநய வாக்கு உனக்களித்தான்; தன்மனையை உன்நாவில் அமர வைத்தான்; திருவையும் உன்னொடு சேர்த்தான்; உன் பகைவரொடு மூத்தாள் சேரச் செய்தான், தருமம்இலா இச்செயலால் கோவில் அற்றான்; பூசைஅற்றான்; தலை அற்றானே. மணம் பொருந்திய மலர் மாலையை அணிந்த தாமோதர மன்னவனே! நான்முகன் என்னும் பிரமதேவன் செய்த வஞ்சகத் தைக் கேள்! சிறந்த இனிமையான சொல்லாற்றல் உனக்குக் கொடுத்தான். தன் மனைவியாகிய கலை மகளை உனது நாவில் இருக்க வைத்தான். இலக்குமியாகிய செல்வத்தையும் உன்னோடு சேர்த்துவைத்தான். உன் பகைவர்களுடன் மூதேவியைச் சேர்த்து வைத்தான். அவனுடைய அறமற்ற இந்தச் செய்கையால் தான் இவ்வுலகிலே அவன் கோவில் இல்லாமற் போய் விட்டான். அவனைப் பூசை செய்கின்றவர்களும் இல்லாமற் போனான். அவனுக்கு இருந்த ஐந்து தலைகளிலே ஒரு தலையையும் இழந்து நான்முகன் என்னும் பெயரையும் பெற்றான். இவ்வாறு சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களைப் பாராட்டி எழுதியிருக்கும் பாடல் மிகுந்த சுவையுடன் காணப்படு கின்றன. அப்பாடல்கள் வேதநாயகம் பிள்ளைக்கும், தாமோதரம் பிள்ளைக்கும் இருந்த அன்பையும், நட்பையும் விளக்குகின்றன. வேதநாயகம் பிள்ளை அவர்கள் காலத்திலே பாளையங் கோட்டைக் கல்லூரியிலே கே.ஆ. கிருஷ்ண பிள்ளை என்பவர் தமிழ்ப் புலவராக இருந்தார். அவர் வைணவ வேளாள மரபைச் சேர்ந்தவர். கிறிதுவ மதத்திலே அன்பு கொண்டு அம்மதத்தைத் தழுவினார். கவிபாடுவதிலே சிறந்த திறமையுள்ளவர். இரட்சண்ய யாத்திரிகம், இரட்சண்ய மனோகரம் என்ற இரண்டு சிறந்த தமிழ் நூல்களை இயற்றியிருக்கின்றார். இவைகளிலே இரட்சண்ய யாத்திரிகம் என்பது 4,000 செய்யுட்களைக் கொண்ட சிறந்த நூல். கிருஷ்ண பிள்ளை அவர்களின் புலமையையும், பக்தியையும் கேள்விப்பட்ட வேதநாயகம் பிள்ளை அவர்கள் அவரைச் சந்திக்க ஆவல் கொண்டிருந்தார். ஒரு சமயம் கிருஷ்ண பிள்ளை அவர்கள் பாளையங்கோட்டையிலிருந்து சென்னைக்குச் செல்வதாக இருந்தார். அதை அறிந்த வேதநாயகம் பிள்ளை அவர்கள் மாயூரத்தில் இறங்கித் தன் இல்லத்தில் தங்கிச் செல்லும்படி கிருஷ்ணபிள்ளை அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அவரும் சென்னைக்குச் செல்லும் வழியில் மாயூரத்தில் இறங்கினார். வேதநாயகம் பிள்ளை அவர்கள் கிருஷ்ணபிள்ளையை அன்புடன் வரவேற்றார். தன்னுடைய நண்பர்கள் பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அவர் எழுதியிருந்த நூல்களின் பாடல்களை படிக்கச் செய்து அவைகளின் சிறப்பைப் பாராட்டினார். தமிழ்ப் புலவர்களிடம் வேதநாயகம் பிள்ளை அவர்களைப் பாராட்டிய அன்புக்கும், மரியாதைக்கும் இதுவும் ஓர் எடுத்துக் காட்டாகும். காரைக்காலிலே தனக்கோடி முதலியார் என்று ஒருவர் இருந்தார். அவர் நிலமும், தனமும் படைத்த பெரும் செல்வர். ஏழைகளிடம் இரக்கம் உள்ளவர். நண்பர்களுக்கு உதவி புரியும் நல்ல குணம் படைத்தவர். தெய்வபக்தி உள்ளவர். தமிழ்ப்புலவர் களை ஆதரிக்கும் தன்மையுள்ளவர். நல்ல தமிழ்ப்பற்றும், சிறந்த அறிவும், உத்தமமான ஒழுக்கமும் உள்ளவர். தனக்கோடி முதலியாரும், வேதநாயகமும் நண்பர்கள். ஒருசமயம் வேதநாயகம் அவர்கள் தனக்கோடி முதலியாரின் உதவியை வேண்டி அவருக்கொரு கடிதம் எழுதினார். அக்கடிதத் திற்குச் சாதகமாகத் தனக்கோடி முதலியாரும் பதில் நிருபம் எழுதினார். தான் விரும்பிய உதவியை மறுக்காமல் அதற்கு இசைந்த தனக்கோடி முதலியாரிடம் பெருமதிப்பும், அன்பும் வளர்ந்தன வேதநாயகம் பிள்ளைக்கு. அப்பொழுதே தனது நன்றியறிதலை வெளியிட்டு தனக்கோடி முதலியாருக்குக் கடிதம் ஒன்று எழுதினார். செய்யுளிலேயே அக்கடிதத்தை வரைந்தார். ஐந்து செய்யுட்களைக் கொண்டது அக்கடிதம். இந்த உலகம் போற்றும் தனக்கோடிச் செல்வனே! உன் கடிதத்தை என் கையிலே பெற்றவுடன் அதைக் கையில் ஏந்திக் கண்களிலே ஒத்திக்கொண்டேன்; சிறந்த தலையிலும் சூடிக் கொண்டேன்; என் உள்ளம் பூரித்தேன்; மூன்றுலகத்தையும் ஒரு குடையில் ஆளும் அரசுரிமை பெற்றவர்களைப்போலே இன்பக் கடலிலே மூழ்கினேன். என்று அக்கடிதத்தின் முதற்பாட்டிலே குறிப்பிட்டு எழுதினார். இத்தலம் போற்றும் தனக்கோடி பூப! நின் கடிதம் கைத்தலம் ஏந்தி, விழித்தலம் ஒத்திக், கனசிரமாம் அத்தலம் சூடி, அகத்தலம் பூரித்து, அரசுரிமை முத்தலம் பெற்றவர் போலே சுகக்கடல் மூழ்கினேனே, என்பதுதான் அரசு ஐந்து பாடற்களிலே முதற்பாட்டு. தனக்கோடி முதலியார் செய்த நன்றியை மற்றொரு செய்யு ளிலே, மிகவும் பாராட்டி எழுதியிருக்கின்றார். அப்பாடலிலே தனக்கோடி முதலியாரின் சிறந்தகுணம், அவர் செய்த உதவி இவைகளையெல்லாம் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். உள்ளத்திலே குற்றமற்ற நல்லோன்; சிறந்த கவிஞர்களுக் கெல்லாம் அன்பன்; சிறந்த மானமும், பிறர்க்குத் தானம் செய்யும் குணமும், பரந்த அறிவும் உள்ளவன்; உள்ளத்தில் பொய்யில்லாத புனிதமானவன் புண்ணியவான்; எல்லா வல்லமையும் வாய்ந்தவன் இவ்வுலகம் மகிழ்ந்து கொண்டாடும் தனக்கோடி யென்னும் சிறந்த செல்வன். அவன் அறம்புரியும் எண்ணத்துடனே எனக்குண்டான துன்பங்களைத் தீர்த்தான். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? திருக்குறளிலே செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்று வள்ளுவனார் கூறியிருக்கும் உயர்ந்த மொழியை, மனமே நாம் தினந்தோறும் நினைத்துக் கொண்டேயிருப்போம். என்று அப்பாடலிலே குறிப்பிட்டிருக்கின்றார். இதனால், தனக்கோடி முதலியார் வேதநாயகத்திற்கு ஒரு சமயத்தில் அவர் விரும்பிய உதவியைச் செய்தார் என்பதையும், வேதநாயகம் அதைச் சிறந்த நன்றியாக ஏற்றுக்கொண்டு அந் நன்றியை மறவாமல் வாழ்ந்தார் என்பதையும் அறியலாம். மைஅகமிலாத் தூயன், மாகவிஞர் நேயன், மானமும், தானமும், பெரிய ஞானமுமே யுடையோன்; பொய்அகமிலாப் புனிதன், புண்ணியன் திண்ணியவான் பூமகிழும் தனக்கோடி மாமகிபன், தானம் செய்அகம்உற்று, அடுத்த இடையூறுகளைத் தீர்த்தான் திருக்குறளிற் செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல்அரி தென்னும் வள்ளுவனார் மொழியை என்றும் உள்ளுவம் நாம் மனமே. தனக்கோடி முதலியாரைப்பற்றியும், தாமோதரம் பிள்ளை யைப் பற்றியும் வேதநாயகம் பிள்ளை பாடியிருக்கும் இவைபோன்ற பாடல்கள் அவருடைய உயர்ந்த குணத்தையும் பற்றி மறவாத தன்மையையும் விளக்குவனவாகும். உத்தியோகத்தை விட்டபின் கண்ட உண்மை வேதநாயகம் பிள்ளை அவர்கள் உத்தியோகத்தை விட்டதற் காகத் துக்கம் அடையவில்லை. மகிழ்ச்சியே அடைந்தார். உத்தி யோகத்தை விட்டதனால் சிறையிலிருந்து விடுபட்டேன். உத்தி யோகச் சிறையில் நான் அகப்பட்டுக்கொண்டு பட்ட துன்பத்திற்கு அளவில்லை. கெட்டவர்களின் இடையில் அகப்பட்டுக் கொண்டு துன்பப்படும் தொல்லையிலிருந்து விடுபட்டேன். துடுக்கர்களின் கூட்டமும் என்னைவிட்டுத் தொலைந்தது. துன்பம் என்னும் சுமையும் என்னைவிட்டு இறங்கிற்று. இனி என்னை யாரும் குற்றம் குறைகள் சொல்லமுடியாது. இத்தகைய மகிழ்ச்சி எனக்குக் கிடைத்தது என்று பாடி மகிழ்ந்தார். நீங்கள் இங்கே வரவேண்டாம் என்று தடியை எடுத்துக் கொண்டு விரட்டினாலும் போகமாட்டார்கள். உன்னைத் தரிசனம் செய்ய வந்தோம்; பார்த்துவிட்டுப் போய்விடுகின்றோம்; என்று சொல்லிக்கொண்டு என்னைப் பார்க்க வந்தவர்களிலே பலர் இன்று என்னிடம் வருவதே இல்லை. வெற்றிலைப்பாக்கு வைத்து அழைத்தாலும் அந்தத் தந்நலவாதிகள் என்னை அணுகுவதில்லை. ஏதேதோ சாக்குப் போக்குகளைச் சொல்லிக் கொண்டு என்னிடம் வராமல் தட்டிக்கழித்து விடுகின்றனர். இந்தச் சுயநலவாதிகளின் தொடர்பு ஒழிந்தது மிகவும் நல்லதா யிற்று. இனி நாம் காலத்தை வீண் போக்காமல் கடவுளுக்குத் தொண்டு செய்வதிலே போக்கலாம் என்று எண்ணி மகிழ்ச்சி யடைந்தார். வேதநாயகம் பிள்ளை தம் உத்தியோகத்தை விட்ட பின் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டார். நம்முடன் பழகு கின்றவர்கள் அனைவரும் உண்மை நண்பர்கள் அல்லர்; பலர் காரியவாதிகள்; தந்நலத்தையே குறியாகக் கொண்டவர்கள்; காரியம் உள்ள வரையிலும் காலைப் பிடிப்பார்கள்; காரியம் முடிந்துவிட்டால் சிண்டைப் பிடிப்பார்கள். அதிகாரமும், செல்வமும் உள்ளவர் களைச் சுற்றிக் கொண்டு திரிவதே இவர்கள் தொழில் ஒரு சிலர் தான் உண்மையான நண்பர்கள்; அந்த உண்மை நண்பர்கள் செல்வத்திலும், தாழ்விலும் இணைபிரியாமல் வாழ்வார்கள். இதுவே அவர் உணர்ந்து கொண்ட உண்மை, அவர் உணர்ந்த உண்மைகளைப் பல பாடல்களிலே பாடியிருக்கிறார். அழையாமல் முன்வருவோர் இப்பொழுது இங்கு அழைத்தும் வாரார்; கழையாமென இன்சொல் கூறியவர் வன்சொல் கற்றுக் கொண்டார்; பழையார் நமைஅறியார் ஆயினார்; இப்படியுற நம் பிழை யாதெனில், உத்தியோகத்தைக் கைவிட்ட பேரிழவே. உத்தியோகத்திலிருந்து நீங்கியபின் தான் பெற்ற அனுபவத்தை இவ்வாறு பாடிவைத்தார். நாம் அழையாமலே நம்மிடம் அடிக்கடி வந்து கொண்டிருந்தவர், இப்பொழுது நாம் அழைத்தாலும் வருவதில்லை. கரும்பைப் போல இனிமையாக நம்முடன் பேசிய வர்கள் இப்பொழுது நம்முடன் கடுமையாகப் பேசக் கற்றுக் கொண்டு விட்டார்கள். இதற்கு முன்னே நம்மை அறிந்த பழமை யானவர்களிலே பலர் இப்பொழுது நம்மைக் கண்டால் அறியாதவர் களைப் போல ஒதுங்கிச் செல்லுகின்றனர். இப்படி நிகழ்வதற்கு நாம் செய்த பிழை என்னவென்றால் உத்தியோகத்தைக் கைவிட்ட பேரிழவுதான் இப்பொருள மைந்ததே மேலே காட்டப்பட் டிருக்கும் பாடல். வேதநாயகம் பிள்ளை தமது உத்தியோகத்தை விட்டபின் பல புதிய நண்பர்களைப் பெற்றார். அவர் உத்தியோகத்திலிருந்த போது அவரைச் சுற்றிக்கொண்டு திரிந்த போலி நண்பர்கள் எல்லாம் போய் விட்டனர். அவருடைய தமிழ் ஆராய்ச்சியையும், நல்லொழுக் கத்தையும் சிறந்த குணத்தையும் போற்றும் உண்மை நண்பர்கள் பலர் புதிதாக ஏற்பட்டனர். பழைய நண்பர்களிலே இத்தகைய உத்தம குணம் படைத்த நண்பர்கள் தாம் என்றும் போல் அன்பர் களாக இருந்தனர். இந்த உண்மையையும் வேதநாயகம் ஒரு செய்யுளிலே எழுதியிருக்கின்றார். தாயைப்போல அன்புள்ள உன்னைத் தரிசிப்பது ஒன்றே போதும். நாங்கள் தரிசிப்பதற்கு வேறு கோயிலும் குளமும் எதற்காக என்று சொல்லிக் கொண்டு பல நண்பர்கள் இருந்தார்கள். அவர்களை இப்பொழுது நாமே கூப்பிட்டாலும் வருவதில்லை. இப்பொழுது தான் அவர்கள் யார்? எத்தன்மை யுள்ளவர்கள் என்று தெரிந்து கொண்டேன். இதற்கு முன்னே நமது வீட்டு வாசற்படியை மிதித்து அறியாத பல நல்லவர்கள் நம்மிடம் வந்து நட்பு பாராட்டத் தொடங்கு கின்றனர். இவர்களே உண்மையான உத்தம நண்பர்கள். இதை ஆராய்ந்து பார்த்தால் உத்தியோகத்தை விட்டதுதான் இதற்குக் காரணம் என்று தெரிகின்றது. இந்த உலகம் எப்படிப்பட்டது என்ற உண்மையையும் இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன் என்று பாடினார். தாயில் அன்புடைய நின்னைத் தரிசித்தல் சாலும்: வேறு கோயில் ஏன்? குளம் ஏன்? என்றோர் கூப்பிட்டும் வாரார்; முன்னம் வாயில் அறியா நல்லோர் வந்தின்னே நள்ளல் உற்றார்; ஆயில் உத்யோக நீப்பால் அறிந்தனம் உலகை அம்மா! இதுதான் அப்பாட்டு. தந்நலவாதிகள், அதிகாரமும், செல்வமும் உள்ளவர்களை எப்பொழுதும் புகழுவார்கள்; போற்றுவார்கள். அவர்களுடன் நட்பினர் போல நடிப்பார்கள். உத்தம குணமும், பரோபகார சிந்தையும் உள்ளவர்கள் நல்லறிஞர்களுடனும், கற்றவர்களுடனும் நட்புக் கொண்டு வாழ்வார்கள். இவ்வுண்மையை வேதநாயகம் பிள்ளையின் அனுபவம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அவரும் தான் கண்ட அனுபவத்தைப் பலரும் அறியும் படி பாடி வைத்துச் சென்றார். பெண் கல்வியும் வேதநாயகமும் அக்காலத்திலே பலர் பெண்களைப் படிக்க வைப்ப தில்லை. பெண்களுக்குப் படிப்பு வேண்டியதில்லை. அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பு எதற்காக? என்று பெண்களைப் பெற்றவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். பெண்களும் படிக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் அனைவரும் படித்திருந்தால் தான் நமது சமுதாயம் முன்னேறும். படித்த பெண்ணும் ஆணும் சேர்ந்து நடத்தும் குடும்பந்தான் சிறந்து விளங்கும். பெண்களும் ஆண்களைப்போல் படித்திருந் தால்தான் கட்டுச் செட்டாகக் குடும்பம் நடத்துவார்கள்; குழந்தைகளை நோயணுகாமல் பாதுகாத்து வளர்ப்பார்கள்; வீடு வாசல்களையும் சுத்தமாக வைத்திருப்பார்கள். ஆகையால் பெண்களையும் படிக்க வைக்க வேண்டும். என்று இப்படி யாராவது சொன்னால் பல பெற்றோர்கள் இதை ஒத்துக் கொள்வதில்லை. பெண்கள் கல்வி கற்றால் கெட்டுப்போய் விடுவார்கள்; கணவனுக்கு அடங்கி நடக்கமாட்டார்கள். ஆகையால் பெண்கள் படிக்க வேண்டியதில்லை என்று பல பெற்றோர்கள் சொல்லிக் கொண்டு வந்தனர். அவர்கள் பெண்களைக் கல்வியறிவற்றவர் களாகவே வைத்திருந்தனர். பல பெற்றோர்கள் இத்தகைய குருட்டு மனப்பான்மை படைத்திருந்தனர். இக்காலத்தில் தான் வேதநாயகம் அவர்கள் பெண் கல்வியைப் பற்றி மிகவும் வலியுறுத்தி வந்தார். நல்லற நெறியிலே நடப்பதற்கு வழி காட்டுவது கல்விதான்; கல்வி கற்காத ஆண்களும் நன்மை தீமைகளை அறிந்து நடக்க மாட்டார்கள். அதைப் போலவே பெண்களும் கல்வி கற்கா விட்டால் நல்லறந் தெரிந்து நடக்க முடியாது. உடம்பில் உள்ள நோயை நீக்குவது மருந்து; ஆண் களுக்கும் பெண்களுக்கும் நோயைத் தணிக்க மருந்து கொடுக் கின்றோம். உள்ளத்தில் உள்ள அறியாமை நோயை நீக்குவது கல்வி. இத்தகைய கல்வி ஆண் பெண் இருவர்க்கும் வேண்டும் கல்வி கற்ற பெண்தான் இல்லறம் நடத்துவதற்கு ஏற்றவள். கல்வி கற்காத பெண்ணை இல்லற வாழ்க்கையிலே ஈடுபடுத்தினால் அவளால் நன்றாகக் குடும்பத்தை நடத்த முடியாது. நீந்தத் தெரியாத ஒருவனை அலைவீசுகின்ற கடலிலே தள்ளிவிடுவது போலத்தான் ஆகும் அது. என்றெல்லாம் பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி எழுதியிருக்கின்றார். வேதநாயகம் அவர்களின் நீதி நூலிலே மாதரைப் படிப் பித்தல் என்ற தலைப்பிலே பதின்மூன்று பாடல்கள் பாடியிருக் கின்றார். நீதிநூல் மைந்தர்க்கு நிகழ்த்தி மென்மலர் ஓதியர்க்கு ஓதிடாது ஒழித்தல் மெய்யினில் பாதியையே அலங்கரித்துப் பாதி மெய் மீதினில் அணியின்றி விடுத்தல் ஒக்குமே. நீதி நூல்களை ஆண்களுக்கு மட்டும் கற்றுக் கொடுப்பது; மெல்லிய மலர்களையணிந்த கூந்தலையுடைய பெண்களுக்கு அவற்றைக் கற்பிக்காமல் விடுவது ஒழுங்காகாது. இப்படிச் செய்வது பாதி உடம்பை அலங்கரிக்காமல் அப்படியே விட்டு விடுவது போல ஆகும். இக்கினை நகுமொழி எழில் மின்னாரின், ஆண் மக்கள் மிக்கோர் எனல் மடமையாம்; இரண்டு அக்கமும் ஒக்குமே யன்றி நல்லகண் எக்கண்? மற்று எக்கணே இழிவுடைக் கண்ணே. சர்க்கரையையும் இனிமையிற் குறைந்ததென்று இகழ்கின்ற இனிய சொற்களையுடைய அழகிய பெண்களைவிட ஆண் மக்கள் உயர்ந்தவர்கள் என்று கூறுதல் அறியாமையாகும். நம்முடைய கண்கள் இரண்டும் சமமாகும். நம்முடைய கண் களில் நல்ல கண் எது? இழிவுள்ள கண் எது? இது போன்றவர்கள் தாம் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும். இவ்வாறு ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமாகக் கல்வி கற்பிக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதியிருக் கின்றார். வேதநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டிருக்கும் பிரதாப முதலியார் சரித்திரத்தைப் படித்தவர்கள் பெண் கல்வியின் பெருமையை அறிவார்கள். கல்வியறிவுள்ள பெண்களால் தான் எந்தக் குடும்பமும் சீரும் சிறப்பும் பெற்று முன்னேறும் என்ற கருத்தையே அக் கதைக்கு அடிப்படையாகக் கொண்டு எழுதியிருக்கின்றார். வேதநாயகம்பிள்ளை அவர்கள் தமது பிரதாப முதலியார் சரித்திரத்திலே, பிரதாப முதலியாரின் தாயைச் சிறந்த கல்வியும், ஒழுக்கமும் உள்ளவராகக் கற்பனை செய்திருக்கின்றார். தாயின் கண்டிப்பாலும் அறிவுரையாலுந்தான் பிரதாப முதலியார் கல்வி கற்றார் என்று கூறுகின்றார். பிரதாப முதலியாரின் மனைவியையும், கல்வியிலும் அறிவிலும் குணத்திலும் சிறந்த உறுப்பாகச் சித்திரித்திருக் கின்றார். பிரதாப முதலியாரின் தாயும், மனைவியும் கல்வி கற்றவர் களா யிருந்த காரணத்தால் அவர்கள் மாமியார் மருமகள் என்ற உயர்வு தாழ்வில்லாமல் பழகினார்கள்; தாயும் மகளும் போல அன்புடன் உள்ளம் ஒன்றுபட்டு வாழ்ந்தனர்; என்று கூறுகின்றார். கல்வி கற்காத பெண்களின் துர்க்குணங்களையும் அக்கதையிலே பலவிடங்களில் எடுத்துக் காட்டுகின்றார். கல்வி கற்ற பெண்களின் சிறப்பையும், கல்வி கற்காத பெண் களின் போக்கையும் விளக்கும் பல நிகழ்ச்சிகளைப் பிரதாப முதலியார் சரித்திரத்திலே காணலாம். வேதநாயகம் அவர்கள் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதிலே எவ்வளவு உறுதியும் ஊக்கமும் கொண்டிருந்தார் என்பதை அந்த நிகழ்ச்சிகளால் அறியலாம். பெண்மதி மாலை என்ற நூலிலே பெண்களுக்குப் பல புத்தி மதிகள் கூறியிருக்கின்றார். சர்வ சமய சமரசக் கீர்த்தனையிலும் இவர் பெண்களுக்குக் கூறியிருக்கும் நீதிகள் போற்றத்தக்கவை. தகப்பன் தன் மகளுக்குப் புத்தி சொல்வது போல ஒரு கீர்த்தனை பாடியிருக்கின்றார். அதிலே தந்தை தன் மகளை நோக்கிக் கீழ்வருமாறு கூறுகின்றான். அறிவை வளர்க்கும் புத்தகங்களை நீ நாள்தோறும் படி; நல்லவர்களுடன் சிநேகம் செய்து கொள்; உன் கணவனிடம் அன்பு கொண்டு வாழ்; அறிவீனர்களுக்கு நல்ல புத்திமதிகளைச் சொல்; என்றும் நல்ல குணமுடைய பெண்ணாக மகராசியாக வாழ். அதிக செல்வம் வந்தாலும் அதனால் நீ மதி மயங்கித் துள்ளாதே! மற்றவர்களின் தாழ்வைப் பற்றி உன் வாயினால் பேசாதே; வறுமை வந்தாலும் அதனால் நீ சோர்வடையாதே; எல்லாம் இறைவன் செயல் என்று நினை; அவைகளைத் தடுத்து வெறுக்காதே. மாமி நாத்திகளை வெறுக்காதே; அவர்களைச் சிறந்தவர் களாக எண்ணி உறவாடு; மகளும் தாயும் போல அவர்களோடு மகிழ்ச்சியோடு சேர்ந்து வாழ்; உன் தலைவனாகிய கணவனுடைய அன்பைத் தேடிக்கொள்! படுக்கையிலே அவனிடம் கோள் சொல்லிக் குடும்பக் கலகத்தை உண்டாக்காதே! விடியுமுன் எழுந்து உனது வீட்டு வேலைகளைச் செய்! வீட்டைக் கண்ணாடி போலச் சுத்தமாக வைத்துக் கொண்டிரு! உடம்பின் அழுக்குப் போகும்படியும் உடையின் அழுக்குப் போகும்படியும் நீராடு. உடம்பு பெருக்கும்படி பெரும் தீனி தின்பது கெடுதியாகும். இவைகள் பெண்களுக்குக் கூறியிருக்கும் அறிவுரைகள். பெண் கல்வி அவசியம் என்பதைப் பெண் பார்க்க தூதனுப்பு தல் என்ற மற்றொரு கீர்த்தனையிலும் வற்புறுத்தியிருக்கின்றார். எழுத்து வாசம் அறியாதவள் மட்டி ஏதும் அறியாள் அவள் சுரண்டுவாள் சட்டி கழுத்திலே அவளுக்குத் தாலியைக் கட்டிக் காரியமில்லை அது காசுக்கு நஷ்டி இது அக் கீர்த்தனையின் ஒரு பகுதி. இவைகளால் பெண் கல்வியைப் பற்றி வேதநாயகம் அவர்கள் கொண்டிருந்த உயர்ந்த கருத்தைக் காணலாம். தமிழ்ப் பற்று அரசாங்க நடவடிக்கைகள் எல்லாம் மக்களுக்குத் தெரிந்த மொழியிலேயே நடைபெற வேண்டும், எந்த வட்டாரத்தில் எந்த மொழி வழங்குகிறதோ, அந்த வட்டாரத்தில் அந்த மொழி யிலேயே அரசாங்க நடவடிக்கைகளை நடத்த வேண்டும், அப்பொழுது தான் பொது மக்கள் அரசாங்க நடவடிக்கைகளை யெல்லாம் அறிந்து கொள்ள முடியும். மக்கள் அரசாங்கம் இந்த முறையைத் தான் பின்பற்ற வேண்டும். இந்த உண்மையை இப்பொழுது எல்லோரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு ராஜ்யங் களும் இக்கருத்தை ஒப்புக் கொண்டு இதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகின்றன. வேதநாயகம்பிள்ளை அவர்கள் அக்காலத்தில் இக்கருத் தையே ஆதரித்து வந்தார். தமிழ் நாட்டில் அரசாங்க நடவடிக்கை களும், நீதிமன்ற நடவடிக்கைகளும் தமிழிலேயே நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். வேதநாயகம் பிள்ளையின் காலத்திலே இந்த நாடு முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சியிலேயே அடங்கியிருந்தது. அக்காலத்திலேயே அவர் இக்கருத்தை வெளி யிட்டு வந்தது வியப்புக்குரியது. ஆங்கிலேயர் தங்கள் அரசாங்க நடவடிக்கைகளையும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் அக்காலத்தில் தமிழில் தான் நடத்தி வந்தனர். ஒவ்வொரு வட்டாரத்திலும் நியமனம் செய்யப் படும் அதிகாரிகளும் அந்தந்த வட்டாரத்தில் வழங்கப்படும் மொழிகளிலே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதித்திருந்தனர். இவ்வாறு இந்நாட்டு மொழிகளில் தான் ஒவ்வொரு வட்டார ஆட்சியும் நடைபெற்று வந்தது நாளடைவில்தான் ஆங்கிலம் அரசாங்க மொழியாகி, ஆதிக்கம் பெற்றது. இவ்வாறு ஆங்கிலம் ஆதிக்கம் பெறுவதற்கு ஆதரவளித்து வந்தவர்கள் தாய்மொழியில் அன்பில்லாத நமது நாட்டு மக்களில் சிலர் தான். ஆங்கிலேயர் ஆளுவதால் அவர்களுடைய மொழியிலே பேசுவதுதான் மதிப்பு என்று எண்ணிய மொழிப் பற்றில்லா தவர்களால் தான் நமது நாட்டிலே ஆங்கிலம் ஆதிக்கம் பெற்றது. இங்கிலீஷ் அரசாட்சியில் தாபிக்கப்பட்டிருக்கிற தமிழ்க் கோர்ட்டுகளில் சில தமிழ் நியாயவாதிகள் தமிழில் வாதிக்காமல் இங்கிலீஷில் வாதிக்கிறார்கள் என்று கேள்விப் படுகிறோம். தேச பாஷையும் தமிழ்! கோர்ட்டில் வழங்கா நின்ற பாஷையும் தமிழ்! நியாயாதிபதியும் தமிழர்! வாதிக்கிற வக்கீலுந் தமிழர்! மற்ற வக்கீல்களும் கட்சிக்காரர் முதலியவர்களும் தமிழர்கள்! இப்படியாக யாருக்குப் பிரீதியார்த்தமாக இங்கிலீஷில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை. அப்படி வாதிக்கிறதினால் அவர்களுக்குத் தான் என்ன சிலாக்கியம்? மற்றவர்களுக்குத் தான் என்ன பாக்கியம்? நியாயாதிபதியாவது, அல்லது வக்கீலாவது, இங்கிலீஷ் காரரா யிருக்கிற பட்சத்தில், இங்கிலீஷில் வாதிப்பது நியாயமாயிருக்கலாம். தமிழ் நியாயாதிபதி முன்பாகத் தமிழ் வக்கீல் இங்கிலீஷில் வாதிப்பது ஆச்சரியம் அல்லவா? என்று எழுதியிருக்கிறார். வேதநாயகம்பிள்ளை அவர்கள் முனிசீப்பாயிருக்கும் போது தாம் கண்ட காட்சியை இவ்வாறு எழுதினார். அவரே நன்றாகத் தமிழ் அறிந்தவர். அவர் முன் வாதித்த நியாயவாதிகள் சிலர் கூட ஆங்கிலத்தில் வழக்கு நடத்தியிருக்கக் கூடும். அதைக் கண்டு பரிதாபப்பட்டுத் தான் இவ்வாறு எழுதினார். சட்டங்கள் எல்லாம் ஆங்கிலத்திலே இருக்கின்றன. ஆங்கிலச் சட்டத்தில் உள்ள சில சொற்களுக்குத் தமிழ்ச் சொல் இல்லை; ஆகையால் தான் ஆங்கிலத்திலேயே விவாதிக்க வேண்டியிருக்கிறது. என்று சில வக்கீல்கள் சொல்லி வந்தனர். வேதநாயகம் பிள்ளை அவர்கள் ஏன் தமிழில் வாதிக்கக்கூடாது? என்று தனிப் பட்ட முறையிலே வக்கீல்களுடன் பேசிக் கொண்டிருக்கும் கேட்டார். அப்பொழுது அவர்கள் மேலே கண்டவாறு பதில் சொல்லி வந்தனர். வக்கீல்கள் கூறும் இந்தப் பதில் சரியானதன்று என்பதே அவர் கொள்கை. இங்கிலீஷ் வார்த்தைகளுக்குச் சரியான பிரதிபதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள். சொல்வது அவர் களிடைய தெரியாமையேயல்லாமல் உண்மையல்ல. தமிழ் நூற்களைத் தக்கபடி அவர்கள் ஆராய்ந்தால் பிரதிபதங்கள் அகப்படுவது பிரயாசமா? அப்படித் தான் இரண்டொரு சங்கேத வார்த்தை களுக்குத் தமிழிலாவது சமகிருதத்திலாவது பிரதி பதங்கள் அகப்படாத பட்சத்தில் அந்த வார்த்தைகளை மட்டும் இங்கிலீஷில் பிரயோகித்தால் அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்? தமிழிலே வாதித்தால் இங்கிலீஷ் மறதியாய்ப் போகும் என்ற பயத்தினால் சிலர் இங்கிலீஷிலேயே வாதிக் கிறார்கள். அவ்வளவு சொற்பத்தில் மறந்து போகிற இங்கிலீஷ் இந்த வக்கீல்களுடன் எத்தனை நாள் கூடி வாழப் போகிறது? இவ்வாறு ஆங்கிலத்தில் வழக்குரைக்கும் வழக்கறிஞர் களின் போக்கைக் கண்டித்து எழுதியிருக்கின்றார் தமிழை அலட்சியம் செய்த நீதிபதிகளையும் அவர் சும்மாவிட்டு விடவில்லை. வக்கீல்கள் இங்கிலீஷில் விவாதிப்பது அக்கிரமம் என்று சில தமிழ் நியாயாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தும், அதைக் கண்டித்தால் தங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதென்று வக்கீல் களும் மற்றவர்களும் நினைப்பார்கள் என்று எண்ணி இங்கிலீஷ் வாதத்திற்கு இடங் கொடுத்து வருகிறார்கள். பின்னும் அந்த நியாயதிபதிகளும் கோர்ட்டுகளில் எப்போதும் இங்கிலீஷையே உபயோகப்படுத்தி அநேக நடவடிக்கைகளை இங்கிலீஷிலேயே நடத்துகிறார்கள். ஆங்கிலமே சிறந்தது என்று எண்ணித் தமிழை அவமதித்த நீதிபதிகளைப் பற்றி இவ்வாறு கண்டித்து எழுதியிருக்கின்றார். நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழிலே நடக்கவேண்டியது ஏன்? அதனால் உண்டாகும் பயன் என்ன? என்பவைகளையும் தெளிவாக விளக்கி எழுதியிருக்கின்றார். கோர்ட்டில் நடக்கிற விசாரணைகளும், தீர்மானங் களும், அபராதங்களும், ஆக்கினைகளும் சகல ஜனங் களுக்கும் பிரசித்த மாய்த் தெரிந்தால், அவர்கள் தங்கள் தங்களுடைய காரியங்களில் ஜாக்கிரதையாயிருக்கவும் எல்லாருக்கும் அநுபோகம் ஏற்படவும் வசதி உண்டாகும் அல்லவா? கோர்ட்டில் நடக்கிற விவகாரங்களைக் கேட்டு விவேகம் அடைவதற்காகவே ஜனங்கள் கூட்டங் கூட்டமாய்க் கோர்ட்டு களுக்குப் போய்க் காத்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்திலே கரியைத் தடவுவதுபோல அவர்களுக்குத் தெரியாத பாஷையில் விவகாரம் நடந்தால் அவர்களுக்கு என்ன ஞானம் உண்டாகக் கூடும்? குருடன் கூத்துப் பார்க்கப் போனது போலவும், செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போலவும் யாதொருபிரயோஜனமும் இல்லாமல் அவர்கள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழிலே நடப்பதனால் விளையும் பயனைப் பற்றி அவர் இவ்வாறு எழுதியிருக்கின்றார். இவ்வுண்மையைக் கூட இன்னும் பலர் அறியவில்லை. தமிழ் தெரிந்த நீதிபதி முன் தமிழ் தெரிந்த வழக்கறிஞர் ஆங்கிலத்தில் வழக்குரைப்பது தமிழையும், தமிழ் மக்களையும் அவமானப்படுத்துவதாகும் என்று கடுமையாகக் கண்டித்திருக் கின்றார். தமிழ் நியாயாதிபதி முன்பாக இங்கிலீஷில் வாதிக்கிற தமிழ்வக்கீல் இந்தத் தமிழ்நாட்டையும் தமிழ் பாஷையையும், மற்ற வக்கீல்களையும், கட்சிக்காரர்களையும், சகல ஜனங்களையும் மெய்யாகவே அவமானப்படுத்துகிறார். என்று எழுதியிருக்கிறார். இவைகளைக் கொண்டு வேதநாயகம் பிள்ளை அவர்களின் உயர்ந்த உள்ளத்தைக் காணலாம். அவருடைய தமிழ்ப் பற்றையும் அறியலாம். நீதி மன்றத்திலே நடைபெறும் வழக்குகள் மக்களுக்குத் தெரிந்த மொழியிலே நடக்க வேண்டும் என்பதற்கு அவர் கூறியிருக்கும் காரணங்கள் முழுவதும் சிறந்தவை. தமிழின் பெருமையைப் பற்றி வேதநாயகம்பிள்ளை அவர்கள் தமிழர் ஒவ்வொருவர் உள்ளத்தையும் கவரும் வகையிலே எழுதி யிருக்கிறார்கள். எண்ணிறந்த தேவாலயங்களும், பிர்மாலயங்களும், அன்ன சத்திரங்களும், நீர்வளமும், நில வளமும், நாகரிகமும், ஆசார நியமங்களும் நிறைந்த இந்தத் தமிழ்நாடு, மற்றைய நாடுகளிலும் விசேஷம் என்றும், அப்படியே தமிழ்ப் பாஷையும் சர்வோத் கிருஷ்டமான பாஷையென்றும் சகலரும் அங்கீகரிக் கிறார்கள். நம்மைப் பெற்றதும் தமிழ்! வளர்த்ததும் தமிழ்! நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ்! நம்முடைய மழலைச் சொல்லால் நமது தாய் தந்தையரைச் சந்தோஷிப்பித்ததும் தமிழ்! தாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்தபோது முந்தி உச்சரித்த தும் தமிழ்! நம்முடைய அன்னையும் தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டினதும் தமிழ்! தாய், தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு உபதேசித்ததும் தமிழ்! ஆதிகாலம் முதல் நம்முடைய முன்னோர்கள் எல்லோரும் பேசின பாஷையும், எழுதி வைத்த பாஷையும் தமிழ், இப்போது மாதா பிதாக்களும், பந்து ஜனங்களும்! இஷ்டமித்திரர்களும், இதரர்களும் பேசுகிற பாஷையும் தமிழ்! நம்முடைய வீட்டுப் பாஷையும் தமிழ்! நாட்டுப் பாஷையும் தமிழ்! இவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி எழுதியிருக் கின்றார். இதனால் வேதநாயகம் பிள்ளை அவர்களின் தாய் நாட்டுப் பற்றையும், தாய்மொழிப் பற்றையும் அறியலாம். இக்காலத்திலே எல்லோரும் தமிழைப் போற்றுகின்றனர். தமிழ் நூல்களை விரும்பிப் படிக்கின்றனர் தாய்மொழிப் பற்றும் வளர்ந்து வருகின்றது. தமிழைப் படிக்காதவர்கள், தமிழிலே பேசத் தெரியாதவர்கள் மக்களால் மதிக்கப்படுவதில்லை. இந்த நல்ல நிலை இப்பொழுது நமது நாட்டிலே வளர்ந்து வருகின்றது. இந்நிலைமை மேலோங்க மேலோங்கத் தமிழ் மொழியும் இன்னும் வளம் பெறும்; தமிழ் மக்களுக்கு உயர்வடைவார்கள்; என்பதில் ஐயம் இல்லை. சிறப்பாக நமது நாட்டு மாணவர்களுக்கு இன்று தாய் மொழியின் மேல் அன்பும், அதைப் படிப்பதிலே ஆர்வமும் வளர்ந்து வருகின்றன. நமது நாட்டின் வருங்காலம், மொழியின் வருங்காலம் மிகவும் சிறந்திருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறியாகும். ஆனால், வேதநாயகம் பிள்ளை அவர்கள் காலத்திலே கல்வி பயின்ற மாணவர்கள் தமிழை அலட்சியம் செய்து வந்தனர். ஆங்கிலேய ஆட்சியின் காரணமாக - உத்தியோக ஆசை காரண மாக ஆங்கிலத்தையே போற்றிப் படித்து வந்தனர்; தமிழிலே பேசுவது கூட அவமானம் என்று நினைத்து ஆங்கிலத்திலே பேசிக் கொண்டு வந்தனர். தமிழிலே பேசினவர்களுங்கூட முக்கால் பங்கு ஆங்கிலச் சொற்களும், காற்பங்கு கலப்புத் தமிழ்ச் சொற்களும் கலந்து பேசி வந்தனர். இவர்கள் தமிழ்ப் புலவர் களையும், தமிழ் நூல்களையும் மதிப்பதில்லை. மாணவர்களின் இந்தப் போக்கைக் கண்ட வேத நாயகம் பிள்ளை அவர்கள் மிகவும் மனம் வருந்தியிருக்கிறார். இவர்களைக் குறித்து அவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்: இங்கிலீஷ்காரர் முதலிய ஐரோப்பியர்கள் தங்கள், தங்கள் சொந்த பாஷைகளை எவ்வளவோ கௌரவமாகப் போற்றி வருகின்றார்கள் என்பதை இந்த வித்தியார்த்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டுந் தங்கள் ஜன்ம பாஷையாகிய தமிழையும், தமிழ் வித்வான்களையும் அவமதிக்கலாமா? தமிழ் நூல்களையே பாராத இவர்கள் அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக் கூடும்? திருவள்ளுவருடைய குறளை அவர்கள் ஜன்மாந்தரத்திலும் பார்த்திருப்பார்களா? கம்பனுடைய கற்பனையைக் கனவிலும் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களது காலடியாவது கண்டிருப்பார்களா? ஔவையாருடைய நீதி நூலைச் செவ்வை யாக அறிவார்களா? அதிவீர ராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? இன்னும் எண்ணிக்கையில்லாத தமிழ்ப் புலவர்களுடைய பிரபந்தங்களை இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள். தமிழை அலட்சியம் செய்த மாணவர்களுக்கு வேதநாயகம் பிள்ளை அவர்கள் கூறிய அறிவுரை இது. தமிழைப் படிக்காமல் வேற்றுமொழியை மட்டும் படிப்பவர் களால் இந்த நாட்டுக்கு எள்ளளவும் பயனில்லை. அவர்கள் இந்த நாட்டிலே வாழ்வதைவிட எந்த நாட்டு மொழியைப் படித்தார் களோ அந்த நாட்டுக்கே குடியேறிப் போய் விடுவது தான் நலம். ஒருவன் எந்த மொழியையும் படிக்கலாம். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம். அவைகளோடு தாய் மொழியை யும் படித்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவன் தான் பிறந்த நாட்டுக்குப் பயன்படுவான். இது வேதநாயகம் பிள்ளை அவர்களின் கருத்து. இக்கருத்தை எவ்வளவு உறுதியுடன் எடுத்துக் கூறுகிறார் என்பதைக் கீழ்வரும் வாக்கியங்களால் அறியலாம். தமிழ்படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க யோக்கி யர்கள் அல்ல. அவர்கள் எந்த ஊர்ப் பாஷைகளைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால், சுயபாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பிவிடுவோம்; பிரான்சு மட்டும் படிப்பவர் களைப் பாரீசுப் பட்டணத்துக்கு அனுப்புவோம் லத்தீனுக்கும் சமகிருதத்துக்கும் சொந்த ஊர் இல்லாத படியால் அந்தப் பாஷைகளைப் படிப்பவர்களை அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம். என்று எழுதியிருக்கிறார். தமிழைப் படிக்காமல் மற்ற மொழி களை மட்டும் படிப்பவர்களைக் குறித்து இவ்வாறு சொல்லியிருக் கின்றார் ஒவ்வொருவரும், தங்கள், தங்கள் தாய்மொழியை மறவாமல் படிக்கவேண்டும் என்பதற்கே இவ்வாறு கண்டிப்பாக எழுதியிருக் கின்றார். தமிழ் மொழியைப் பற்றி வேதநாயகம் பிள்ளை எழுதி யிருக்கும் இக்கருத்துக்கள் எல்லாம் அவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்தில் கண்டவை. நகைச்சுவை எழுத்தாளர் வேதநாயகம் பிள்ளை அவர்கள் நகைச்சுவை பொருந்த எழுதுவதிலே சிறந்தவர். படிப்பவர் விழுந்து விழுந்து சிரிக்கும் படி உரை நடைகளும், பாடல்களும் எழுதியிருக்கின்றார். அவருடைய புலமைத் திறமையைக் குறிப்பதற்கு அவைகள் சாட்சிகளாக விளங்குகின்றன. ஒரு நியாயாதிபதி ஒரு சாட்சிக்காரனைப் பார்த்து நீ திருடன் என்று கண்ணாடி போல உன் முகம் காட்டுகின்றது என்றான். உடனே சாட்சிக்காரன் அதைக் கேட்ட நியாயாதிபதி யைப் பார்த்து என்னுடைய முகம் கண்ணாடியானதால் இதில் உங்கள் முகத்தைக் காணுகிறீர்கள் என்றான் ஆகையால் நியாயாதி பதி திருடன் என்பதாயிற்று. ஒரு வழக்காளி நியாய சபையில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவனை அவனுடைய எதிரியின் வக்கீல் பார்த்து, நீ ஏன் நாய் போலக் குரைக்கிறாய்? என்றான். திருட்டுப் பயலைப் பார்த்தால் நாய் குரைக்காதா? என்று அந்த வழக்காளி மறுமொழி சொன்னான். இதனால் வக்கீலைத் திருடனாக்கி விட்டான். தரித்திரனான ஒரு வித்வான் ஒரு தனவான் வீட்டுக்குப் போய். அவனுக்கும் தனக்கும் ஒரு சாண் தூரம் இருக்கும் படியான சமீபத்தில் உட்கார்ந்தான். அந்தத் தனவான் கோபங் கொண்டு வித்துவானைப் பார்த்து கழுதைக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் என்றான். வித்வான் ஒரு சாண் தான் வித்தியாசம் என்று அளந்து காட்டினான். ஓர் அரசனும் அவனுடைய மகனும் ஒரு விகடகவியை அழைத்துக் கொண்டு வேட்டைக்குப் போனார்கள். வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் போது மழை பிடித்துக் கொண்டு ராஜாவும் அவர் மகனும் நினைந்து போய் விட்டார்கள். நனைந்து போன அவர்களுடைய உடுப்புக்களைக் கழற்றி, ஒரு மூட்டையாகக் கட்டி விகடகவி தலை மேலே வைத்தார்கள். அவன் தூக்கிக் கொண்டு போகும்போது ராஜாவும் அவர் மகனும் விகடகவி ஒரு கழுதைப் பாரம் சுமந்து கொண்டு போகிறான் என்று பரிகாசமாகப் பேசிக் கொண்டு போனார்கள். விகடகவி அவர்களைத் திரும்பிப் பார்த்து ஒரு கழுதைப் பாரந்தானா? இரண்டு கழுதைப் பாரம் சுமக்கின்றேன் என்று சொல்லி ராஜாவையும் அவர் மகனையும் கழுதைகள் ஆக்கி விட்டான். இவ்வாறு வேடிக்கையான பல செய்திகளை அவருடைய எழுத்துக்களிலே காணலாம் பிரதாபமுதலியார் சரித்திரத்தைப் படிப்போர் நகைச்சுவை தரும் பல செய்திகளைக் கண்டு மகிழலாம். இது போலவே வேடிக்கையான பாடல்களும் எழுதியிருக்கின்றார். ஒரு சமயம் வேதநாயகம் பிள்ளையின் வண்டி மாடுகளிலே ஒன்று இறந்து போயிற்று. அதற்குப் பதிலாக வேறொரு மாடு வாங்க வேண்டியிருந்தது. தனது நண்பராக இருந்த முதலியார் ஒருவரிடம் வண்டியிலே பூட்டி ஓட்டுவதற்கு ஏற்ற காளை மாடு ஒன்றை வாங்கி வரும் பொறுப்பை ஒப்புவித்தார். அந்த முதலியார் ஓர் அப்பாவி. அழகைப் பார்த்து ஏமாந்து போய் ஒரு காளை மாட்டை வாங்கிக் கொண்டு வந்தார். அந்த மாட்டின் குணம் என்னவென்று அவருக்குத் தெரியாது. அந்தக்காளை மாடு பார்வைக்கு மட்டும் நன்றாக இருந்தது. நன்றாக வைக்கோலும் தீனியும் தின்றது. ஆனால் வண்டியில் பூட்டுவதற்கு அதன் கிட்டேபோனால் முட்டும்; தொட்டவர்மேல் கழியும்; வண்டியில் பூட்டினால் படுத்துக் கொண்டு சண்டித்தனம் பண்ணும்; எவ்வளவு பேர் தூக்கினாலும் எழுந்திராது; அடித்தாலும் எழுந்திருக்காது. இது அந்த மாட்டின் குணம். இத்தகைய சண்டி மாட்டை வாங்கி வந்த நிகழ்ச்சியைப் பற்றி ஒரு பாட்டாகப் பாடியிருக்கின்றார். இட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளைதினம் இருபோர் தின்னும்; சட்டமுடன் கொள்ளுண்ணும்; புல்உண்ணும் அதை வண்டி தன்னிற் பூட்டக் கிட்டவரின் முட்டவரும்; தொட்டவர் மேலே கழியும்; கீழே வீழும்; எட்டாள்கள் தூக்கிடினும் தடிகொண்டு தாக்கிடினும் எழுந்தி ராதே. இப்பாடல் எளிதில் பொருள் விளங்குகின்ற இனிய பாட்டு. சண்டி மாட்டின் இயல்பை எடுத்துக் காட்டும் வேடிக்கையான பாட்டு. அக்காலத்திலே தமிழ்ப்புலவர்கள் சிலர் பணக்காரர்களின் மேல் பாடல் பாடிக் கொண்டு அவர்களிடம் போவார்கள். அவர்களுடைய பாடல்களிலே அந்தப் பணக்காரர்களை இந்திரன் என்றும், சந்திரன் என்றும் புகழ்ந்து எழுதியிருப்பார்கள். தங்களுக்குப் பொருள் கொடுக்கின்றவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடுவார்கள். தமிழ்க் கவிஞர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகத் தகுதியற்றவர்களையெல்லாம் புகழ்ந்து பாடுவதை வேதநாயகம் பிள்ளை ஆதரிக்கவில்லை. அன்றியும் ஒவ்வொருவரும் தங்கள் தகுதிக்கேற்ப ஏதேனும் தொழில் செய்து பிழைக்க வேண்டும். செல்வர்களிடம் போய் பல்லைக்காட்டி இரந்து பிழைப்பது மானக்கேடு; என்பது அவர் எண்ணம். இக்கருத்தை அவர் பல பாடல்களிலே நகைச்சு வையுடன் எழுதியிருக்கின்றார். கற்பகம், மேரு, சேடன், காமதேனுவும் நீ யென்னப் பற்பல சொல்லி நின்று பரிசு கேட்டவரே! என்னை வற்புறு மரம், கல் என்றீர்! மாடென்றீர்! பாம்பும் என்றீர்! பொற்பின் அம்மரத் தால் கல்லால் பூசையே பரிசு உமக்கே. கேட்டவற்றையெல்லாம் கொடுக்கும் கற்பகத் தருவும், எதற்கும் அசையாத மேருமலையும், அறிவிலே சிறந்த ஆதிசேஷ னும், வற்றாமல் வளம் சுரக்கும் பசுவடிவான காமதேனும் நீதான் என்று கூறுகின்றீர்கள்! நீங்கள் என்னை வலிமையான மரம், கல், மாடு என்று சொல்கின்றீர்கள். நானும் அந்த அழகான மரத்தாலும் கல்லாலுமே உங்களுக்குப் பூசை கொடுக்கின்றேன்; அது தான் நான் கொடுக்கும் பரிசு. என்னைப் பாடியதற்கு நான் கொடுக்கும் பரிசு தடியடியும் கல்லடியுந்தான் என்று இப்பாட்டிலே கூறினார். இம்மாதிரி இல்லாததும், பொல்லாததும் பாடிய புலவர்களைப் பார்த்து இன்னும் அவர் வேடிக்கையாகப் பாடியிருக்கின்றார். கன்னா! பொன்னா! எழிற் காமா! என்றே கவி கட்டி என்முன் உன்னாது இரக்கும் கவிப்புலவீர்! உமக்கு ஒன்றும் கொடேன்; முன்னாநும் பாடல் எனக்கல்ல; சன்னன் முதலியர்க்கே; அன்னாரிடம் சென்று அரங்கேற்றிக் கொண்மின் அருநிதியே! கொடையிலே கர்ணனே! செல்வத்திலே குபேரனே! அழகில் மன்மதனே! என்று என்னைப் புகழ்ந்து கவி புனைந்து என்முன் வந்து சிறிதும் யோசிக்காமல் இரக்கின்ற கவி பாடத் தெரிந்த அறிஞர் களே! உமக்கு ஒன்றும் கொடுக்க மாட்டேன் முதலில் உங்களுடைய பாடல் எனக்காகப் பாடியதில்லை: கன்னன் பொன்னன் காமன் முதலியவர்களுக்காகவே பாடப் பட்டது. ஆகையால் அவர்களிடம் போய் உங்கள் பாடல்களை அரங்கேற்றிச் சிறந்த செல்வத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! இப்பாடலில் உள்ள கருத்தும் வேடிக்கையானது. கன்னனும், பொன்னனும், காமனும் இவ்வுலகில் இல்லை. வேறு எங்கோ இருக்கின்றார்கள். ஆதலால் நீங்களும் அவர்கள் வாழும் உலகத் தைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே போய் அவர்களிடம் பாடிக் காட்டிப் பரிசு பெற்றுக் கொள்ளுங்கள் என்று புலவர்களைப் பார்த்துப் பாடியிருக்கின்றார். ஒரு காலத்தில் மழையில்லாமல் பஞ்சம் வந்தது; மக்கள் தண்ணீர் இல்லாமல் வருந்தினர், மழைபெய்வது போல வானத்திலே மேகங்கள் சூழும்; மழை மட்டும் பெய்வதில்லை. இந்த நிலைமை யைக் கண்ட வேதநாயகம் பிள்ளை அவர்கள் மழைபெய்யாமல் வீணாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக் கின்ற மேகத்தைப் பார்த்துச் சில பாடல்களைப் பாடினார். அப் பாடல்களும் படிப்பதற்கு இனிமையானவை. செல் என்று உன் நாமத்தைச் செப்பினதே அல்லாது செல் என்று உனை நாங்கள் செப்பினமா? - அல் என்று மெய்யா உவமிக்க விண்மீது தோன்றிய நீ பெய்யாமற் போனதென்னோ பேசு. மேகமே உன் பெயரைச் செல் என்று சொன்னோமே தவிர, போய் விடு என்று உன்னை நாங்கள் சொன்னோமா? மெய்யாக இருட்டு என்று உவமிக்கும் படி வானத்திலே தோன்றிய நீ மழை பெய்யாமல் போனது ஏன்? சொல்! மேகத்திற்குச் செல் என்று பெயர் அப்பெயரை வைத்துக் கொண்டு இவ்வாறு வேடிக்கையாகப் பாடினார். செய்வேன் எனச் சொல்லிச் செய்யா உலோபரைப்போல் பெய்வேன் எனக் காட்டிப் பேர்முகிலே! - மைவானில் ஓடுவாய், நிற்பாய், உருமுவாய், மின்னுவாய் நீடுவாய், பின்பெய்யாய் நீ உதவி செய்கிறேன் என்று சொல்லி விட்டுப் பிறகு உதவி செய்ய மறுக்கின்ற கருமிகளைப் போல, மழையைப் பெய்வேன் என்று காட்டிப் பிறகு மழையைப் பெய்யாமல் போய் விடுகின்ற மேகமே! நீலவானத்திலே ஓடுவாய்! ஓடாமல் நிற்பாய்! இடி யிடிப்பாய்! மின்னுவாய்! பிறகு மழை பெய்யாமலே போய் விடுவாய் நீ. இப்பாடலில் மழை பெய்யாத மேகத்தை உலோபருக்கு உவமானமாகக் கூறினார். இவ்வாறு மழை பெய்யாத மேகத்தின் இயல்பைப் பாடி விட்டுப் பிறகு மழை பெய்ய வேண்டும் என்று மேகத்திற்கு உத்தரவிடும் முறையிலே பாடினார். மையே! எமைமுன் வளர்த்த நீரை விட்டால், ஐயே! இனி எமையார் ஆதரிப்பார்? - பெய்யே! கடகட வென்றும், களகள வென்றும், சடசட வென்றுநீ தான் ஏ மேகமே! எங்களை முன்பு நீருட்டி வளர்த்த நீ இப்பொழுது கைவிடுவாயானால், ஐயோ, இனியார்தான் ஆதரிப்பார்கள்? கடகடவென்றும், களகளவென்றும், சடசடவென்றும் நீ மழையைப் பெய்வாயாக இவ்வாறு பாடிய பின் மழை பெய்ததாகக் கூறுவர். இத்தகைய வேடிக்கையான பாடல்களைப் பாடுவதிலே சிறந்து விளங்கினார் வேதநாயகம் பிள்ளை. வேதநாயகத்தின் மறைவு வேதநாயகம் பிள்ளை அவர்கள் சிறந்த கத்தோலிக்கக் கிறிதுவர். ஆயினும், அவர் வேறு எந்த மதத்தையும் வெறுத் தவர் அல்லர். கத்தோலிக்கக் கிறிதுவரான அவர் சைவ மத குருவான திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடம் இது போலவே சைவ மதப் பற்றுள்ள மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைத் தனது தமிழாசிரியராகப் போற்றி வந்தார். சிறந்த சிவ பக்தரான கோபால கிருஷ்ண பாரதியாரைத் தனது இசையாசிரியராக எண்ணிப் போற்றி வந்தார். யாழ்ப்பாணத்துச் சைவரான சி.வை. தாமோதரம் பிள்ளையிடம் நட்புக்கொண்டிருந் தார். இதனால் வேதநாயகம் பிள்ளையவர்களின் சமரச மனப்பான் மையை அறியலாம். ஒப்பற்ற நட்பின் தலைமையைக் காணலாம். வேதநாயகம் பிள்ளை அவர்களின் சமரச மனப்பான்மையை விளக்க அவர் பாடியிருக்கும் பாடல்களே போதும். சர்வசமய சமரசக் கீர்த்தனை என்பது எல்லா மதத்திற்கும் பொதுவான நீதிகளை உணர்த்துவது. அதில் அவர் கூறியிருக்கும் கருத்துக்கள் எல்லா மதத்தினர்க்கும் உடன்பாடானதாகும். அவர் இயற்றியிருக்கும் நீதி நூலும் எல்லோர்க்கும் பொது வான நீதிகளை உரைப்பதாகும். அவர் கிறிதுவராயிருந்தும், தன் நண்பர்களின் வேண்டுகோளின்படி பெரியபாளை யத்தம்மன் பதிகம் என்றொரு நூலையும் பாடியிருக்கின்றார் பெரிய பாளையம் என்பது சென்னைக்கு அருகில் உள்ள ஓர் ஊர். இவைகள் எல்லாம்; கடவுள் ஒருவரே; அவர்தான் பல உருவாய் மக்களுக்குக் காட்சியளிக்கிறார். ஆதலால் எக்கடவுளை யும் இகழ்தல் கூடாது என்ற அவருடைய உயர்ந்த உள்ளத்தைக் காட்டும். உண்மையான ஒழுக்கமும், சிறந்த அறிவும், நல்ல தமிழ்ப் பற்றும், தூய்மையான தேசப் பற்றும் உள்ளவர்கள் எக்குலத்தா ராயினும், எம்மதத்தாராயினும் ஒன்றுபட்டு வாழலாம். என்பதற்கு வேதநாயகம் பிள்ளையவர்களின் வரலாறு ஓர் உதாரணமாகும். வேதநாயகம் பிள்ளையவர்கள் மது அருந்துவதை வெறுத்தார். மது வருந்துவது தீய பழக்கம் என்று கண்டித்தார். மது அருந்து கின்றவர்களை உயிருடன் வாழும் மனிதராகவே அவர்மதிப்ப தில்லை. மதுவருந்துவோரைப் பற்றி நீதி நூலிலே அவர் பாடி யிருக்கும் ஒரு பாடல் குறிப்பிடத்தக்கது. மருந்தநேர் மதுவுண்போர் மாண்ட பான்மையால்; அருந்தவப் பாலருக்கு அப்பன் இல்லையால்; பொருந்திய மனையவள் பூண்டநாண் களத்து இருந்ததே என்னினும் இழந்தது ஒக்குமே. நஞ்சைப் போன்ற மதுவை அருந்துவோர் இறந்தவரை ஒப்பார்கள்; ஆதலால் அவர்கள் அருந்தவம் செய்து பெற்றெடுத்த பிள்ளைகள் தகப்பன் இல்லாமற்போவர். அவருக்கு வாழ்க்கைத் துணையாகிய மனையாள் பூண்டிருக்கின்ற தாலிக் கயிறு அவள் கழுத்திலே இருந்தாலுங்கூட அவள் தாலியை இழந்தவளைப் போலவே இருப்பாள்! மது வருந்துவோர் செத்துப் போனவர்க்குச் சமம். அவர்கள் பிள்ளைகள் அநாதைகளாவார்கள். அவர்களுடைய மனைவியரும் தாலியறுத்தவர்கள் போல் ஆவார்கள். என்ற கருத்தை இப்பாட லிலே காணலாம். மதுவருந்துவதை வெறுத்ததோடு மாமிசம் உண்பதையும் அவர் விரும்புவதில்லை. மதுவையும், மாமிசத்தையும் அவர் வெறுத்து எழுதியிருக்கின்றார். இவர் குடும்பப் பற்றுடன் மனைவி மக்களிடம் அன்பும் ஆதரவும் காட்டி வாழ்ந்தவர். மனைவி மக்களுடன் ஒருமனப் பட்டு வாழ்வதுதான் சிறந்த இல்லறம் என்பதைத் தனது வாழ்க்கையிலே நடத்திக் காட்டினார். வேதநாயகம் பிள்ளை அவர்கள் முறையே ஐந்து மனைவி களை மணந்தார். அவருடைய முதல் மனைவி காரைக்காலிலே பிறந்தவர். பாப்பம்மாள் என்று பெயர். இவர் இறந்த பின், இரண்டாவது மனைவியாக இலாசர் அம்மையார் என்பவரை மணந்தார். அவர், வேதநாயகம் பிள்ளையின் தமக்கையாரான ஞானப்பூங்கோதை அம்மையாரின் புதல்வியாவார். அவரும் இறந்தார். மூன்றாவதாகப் புதுச்சேரியிலே பிறந்த மாணிக்கத் தம்மையார் என்பவரை மணந்தார். அவரும் இறந்துவிட்டார். அதன்பின் நான்காவதாக அண்ணுக்கண் அம்மாள் என்பவரை மணந்து கொண்டார். அவரும் இறந்த பின் அம்மாள் அம்மாள் என்பவரை ஐந்தாவதாக மணந்தார். ஐந்தாவது மனைவியும் பிள்ளை அவர்கள் இறப்பதற்கு முன்பே இறந்துவிட்டார். இந்த நிகழ்ச்சிகளால் அவருடைய குடும்ப வாழ்விலே போதுமான மகிழ்ச்சியும் இன்பமும் அவருக்கு இருந்திருக்க முடியாது என்பதை அறியலாம். ஆயினும் அவர் எல்லாம் இறைவன் செயல் என்ற நம்பிக்கையுடன் துன்பத்தைப் பொருட் படுத்தாமல் அமைதியான வாழ்க்கையே நடத்தி வந்தார். வேதநாயகம் பிள்ளை தன் மனைவியாருள் ஒருவர் இறந்த பொழுது அவர் பிரிவை யாற்றாமல் வருந்திப் பாடினார். அப் பாடல்களிலே அவர் தன் மனைவியிடம் கொண்டிருந்த அன்பைக் காணலாம். கணவனும் மனைவியும் எவ்வளவு ஒற்றுமையுடன் இல்லறம் நடத்தினார்கள் என்பதையும் அறியலாம். என்னொடு வாழ்! சாகாதே! என்று பலமுறை நான் உன்னொடுதான் சொன்ன உரை கடந்து - மின்னொடுசேர் பொன்னே! யிறந்தாய்! புருடன்மொழியைக் கடந்தது என்னே பின்னே நீ இயல்பு? ஆண்ட பண்டமெல்லாம் அழியா திருக்க, நீ பூண்ட உடையிருக்கப் பூண்இருக்க, - மாண்டனையே! அன்னமே! உன்னை அடித்தேனோ? வைதேனோ? சொன்னமே! ஏன் போனாய் சொல்? என்று வருந்திப் பாடினார். இப்பாடல்களில் அவர் தன் மனைவி யிடங் கொண்டிருந்த சிறந்த பேரன்பைக் காணுகின்றோம். நீ எப்பொழுதும் என்னுடனேயே சேர்ந்துவாழ் சாகாதே! என்று பல தடவை உன்னிடம் நான் சொல்லியிருக்கின்றேன் .அந்தச் சொல்லைமீறி ஒளி பொருந்திய பொன் போன்றவளே இறந்து போனாய்! இப்படிக் கணவன் மொழியை மீறியது ஏன்? மின்னற் கொடி போன்றவளே சொல். நீ உபயோகித்த பண்டங்கள் எல்லாம் அழியாமல் அப்படியே இருக்கின்றன; நீ பூண்ட உடைகளும் அப்படியே இருக்கின்றன; நீ அணிந்திருந்த நகைகளும் அப்படியே இருக்கின்றன; ஆனால் நீ மட்டும் மாண்டு போனாய்! அன்னம் போன்றவளே உன்னை நான் எப்பொழுதாவது அடித்தேனா? அல்லது வைதேனா? அப்படி ஒன்றும் செய்யவில்லையே. தங்கம் பேன்றவளே! ஏன் என்னை விட்டுப் போனாய் சொல்? இதுவே மேலே கண்ட பாடல்களில் அமைந்துள்ள பொருள். வேதநாயகம் பிள்ளை அவர்கள் உத்தியோகத்தில் இருந்த போதும் பலராலும் போற்றப்பட்டார். உத்தியோகத்தை விட்ட பின்னும் பலர்க்கு உதவி செய்தார். நல்ல பெயரும் புகழும் பெற்றார். சிறந்த பல நூல்களையும் இயற்றினார். இறுதியாகச் சில நாட்கள் நோயுற்றிருந்து 1886ஆம் ஆண்ட ஜூலை மாதம் 21-ஆம் தேதி இரவு 11 மணிக்கு மன அமைதியோடு இம் மண்ணுலகம் விட்டு மறைந்தார். பாதிரிமார்கள் கிறிதுவ மத முறைப்படி அவருடைய ஈமச் சடங்குகளைச் செய்தார்கள். 1826-ஆம் ஆண்டிலே அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி பிறந்து, அறுபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து 1886-ஆம் ஆண்டிலே மறைந்தார் வேதநாயகம். இந்த அறுபது ஆண்டு களிலே அவர் இந்த நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் செய்திருககும் பணி சிறந்த பணியாகும். இவருடைய பிரிவுக்குப் பலரும் வருந்தினர். உறவினர்கள் உள்ளந் துடித்தார்கள். வறியவர்கள் வாட்ட முற்றார்கள்; நண்பர்கள் பலர் மனம் வருந்தினார்கள். புலவர்கள் பலர் இவர் இறந்தமை குறித்து இரங்கிப் பாடினார்கள். அறிவுக் கதிர் வேத நாயகம் இவ்வாறு பலர் வருந்த மறைந்தது. ஆயினும் அதன் ஒளிக்கதிர்கள் இன்னும் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன. வேதநாயகம் பிள்ளையின் நூல்கள் வேதநாயகம் பிள்ளை அவர்கள் செய்யுள் வடிவிலே எட்டு நூல்கள் இயற்றியிருக்கின்றார். மற்றும் பல தனிப்பாடல்களும் பாடியிருக் கின்றார். உரை நடையிலே நான்கு நூல்கள் இயற்றியிருக்கின்றார். தமிழ் மொழி வளர வேண்டுமானால் சிறந்த உரைநடை நூல்கள் தோன்ற வேண்டும்; தமிழ் மக்கள் உயர்ந்த பல செய்தி களை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் கற்றறிந்தவர்கள் தெளிவான உரைநடையிலே நூல்கள் எழுதி உதவி செய்ய வேண்டும். செய்யுள் நூல்களைவிட உரை நடை நூல்களே பொது மக்களுக்குப் பெரும் பயன் அளிக்கும் இது வேதநாயகம் பிள்ளை அவர்களின் கொள்கை. அவர் காலத்திலே தமிழிலே உரை நடை நூல்கள் இல்லை யென்றே சொல்லிவிடலாம். கதையிலே நீதிகளைப் புகுத்தி மக்களுக்கு அறிவூட்டுகின்ற புதுக்கதை ஒன்றேனும் தமிழிலே தோன்றவில்லை. இக்குறையை நீக்குவதற்கு முதல் முயற்சியெடுத் துக் கொண்டவர் வேதநாயகம் பிள்ளை என்றால் அதை மறுக்க முடியாது. உரைநடை நூல்கள் மிகுதியாகத் தோன்ற வேண்டும். என்பதைப் பற்றி அவரே கீழ்வருமாறு எழுதியிருக்கின்றார். வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமே யல்லாது செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமலிருக்கு மானால் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக் கூடுமா? அப்படியே நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங் கள் இல்லாமலிருக்கிற வரையில் இந்தத் தேசம் சரியான சீர்திருத்தம் அடையாது என்பது நிச்சயம். என்று உரைநடை நூல்களைப் பற்றி எழுதியிருக்கின்றார். அவர் எழுதியிருப்பதற்கிணங்க, அவர் பல உரை நடை நூல்களை எழுதி வெளியிட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும். வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதியிருக்கும் பன்னிரண்டு நூல்களில் நான்கு நூல்கள் உரைநடை நூல்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவை, சித்தாந்த சங்கிரகம், பெண்மதி மாலை, பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி சரித்திரம் என்பவைகள். சித்தாந்த சங்கிரகம் என்பது, சட்ட நூலாகும். வழக்கறிஞர் களும், நீதிபதிகளும், பொது மக்களும் சட்ட நுணுக்கங்களைத் தமிழிலேயே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற் காகவே இந்நூலை எழுதிவெளியிட்டார். இந்நூல் 1862-ஆம் ஆண்டிலே முதல் முதலாக வெளியிடப்பட்டது. பெண்மதி மாலை என்னும் நூல் 1869-ஆம் ஆண்டிலே வெளியிடப்பட்டதாகும். இந்நூலிலே பெண்களைப் பற்றியும், அவர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கின்றார். இந்நூலிலே தமிழ் மொழியைப் படிக்க வேண்டியதைப் பற்றியும், தமிழ் மொழியை அலட்சியம் செய் வதைக் கண்டித்தும் எழுதியிருக்கின்றார். மாமிச உணவு விலக்கு. ஜீவகாருண்யம் முதலியவைகளைப் பற்றியும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரமே அவருடைய உரைநடை நூல்களிலே சிறந்ததாகப் போற்றப்படு கின்றது. இது சிறந்த கற்பனையும், நீதிகளும் நிறைந்த நவீனக் கதை. இக்கதை 1876-ஆம் ஆண்டிலே வெளிவந்தது. இன்னும் இது போன்ற சிறந்த கதை வெளிவரவில்லை யென்றே கூறி விடலாம். வேதநாயகம் பிள்ளை அவர்களின் சிறந்த அறிவுக்கும், உயர்ந்த கொள்கைகளுக்கும் இக்கதை ஒன்றே போதுமான சான்றாக ஒளிவீசிக் கொண்டு நிற்கின்றது. சுகுண சுந்தரி சரித்திரம் என்பதும் நவீனக் கதையே. இதுவும் சிறந்த கதை. பிரதாப முதலியார் சரித்திரத்திலும், சுகுண சுந்தரி சரித்திரத்திலும் பல கிளைக் கதைகளைக் காணலாம். அவைகள் எல்லாம் சிறந்த நீதியைப் புகட்டுவன. தமிழிலே உரை நடை நூல்கள் பெருகுவதற்கு வேதநாயகம் பிள்ளை அவர்கள் காட்டியிருக்கும் வழிசிறந்த வழியாகும். வேதநாயகம் பிள்ளை அவர்கள் இயற்றியுள்ள செய்யுள் நூல்களிலே முதல் முதல் வெளி வந்தது நீதி நூல். இது 1858-ல், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் சிறப்புப் பாயிரத்துடன் வெளியிடப்பட்டது. இது அறிஞர்கள் பலராலும் பாராட்டப்படும் சிறந்த நூலாகத் திகழ்கின்றது. திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதா அந்தாதி ஆகிய மூன்று நூல்களும் 1873-ஆம் ஆண்டிலே வெளிவந்தவை. சத்திய வேத கீர்த்தனை, தேவ தோத்திரமாலை, இரண்டும் 1889-ம் ஆண்டில் வெளிவந்தவை. வேதநாயகம் பிள்ளை பூத உடம்பு மறைந்த பிறகு வெளிவந்த நூல்கள் இவ்விரண்டும். இந்த ஐந்து நூல்களும் கிறிதுவ மதத்திலே பிள்ளை அவர்கள் கொண்டிருந்த அன்பையும் பக்தியையும் விளக்குவன. சர்வசமய சமரசக் கீர்த்தனை 1878-ஆம் ஆண்டிலே வெளி வந்தது. இன்றும் எல்லா மதத்தினரும் இக் கீர்த்தனைகளைப் பாடுகின்றனர். சிறந்த இசைப் புலவர்கள் எல்லோரும் இக் கீர்த்தனை களைப் பாராட்டிப் பாடி வருகின்றனர். அவர் பாடிய பெரிய பாளையத்தம்மன் பதிகம் இப்பொழுது கிடைக்கவில்லை. இவ்வாறு உரைநடையிலே நான்கு நூல்களும், செய்யுளிலே எட்டு நூல்களும் இயற்றிய வேதநாயகம் பிள்ளை அவர்கள் பல தனிப் பாடல்களும் இயற்றியிருக்கின்றார். வேதநாயகம் பிள்ளை அவர்கள் அவ்வப்போது பாடிய தனிப் பாடல்களிலே 125 பாடல்கள்தான் இப்பொழுது கிடைத் திருக்கின்றன; இப்பாடல்களின் சிறப்பு முன்பும் எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றது. இந்தத் தனிப் பாடல்களிலே திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரைப்பற்றி 29 பாடல்கள் காணப் படுகின்றன. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் இயற்றிய சீர்காழிக் கோவையை புகழ்ந்து பாடிய பாடல்கள் 20. சி.வை. தாமோதரம் பிள்ளையர்களைப் பற்றிய 16 பாடல்கள் காணப்படுகின்றன. காரைக்கால் தனக்கோட்டி முதலியாரை பற்றி 5 பாடல்கள் காணப்படுகின்றன. தன் மனைவியிறந்தபோது வருந்திப் பாடிய பாடல்கள் 6 காணப்படுகின்றன. ஏனைய பாடல் கள் எல்லாம் வேடிக்கைகளும் அறிவுரைகளும் அமைந்த சிறந்த பாடல்கள், வேதநாயகம் பிள்ளை அவர்களின் தனிப் பாடல்களும்ஒரு சிறந்த நூலைப் போலவே படித்து மகிழத்தக்க வகையில் அமைந் திருக்கின்றன. இப்பாடல்களின் சிறப்பு முன்பு எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றது பிற்காலத்திலே தோன்றிய புலவர்களிலே வேதநாயகம் பிள்ளை அவர்கள் ஒரு சிறந்த பெரும் புலவர். அவர் எழுதிய நூல்கள் இன்றும், அனைவராலும் போற்றிப் படிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குப் புரியும் வகையிலே உரைநடை நூல்களும் செய்யுள் நூல்களும் இயற்ற வேண்டும் என்பதற்கு அவர் ஒரு வழிகாட்டியாக விளங்கினார். அறிவுள்ளவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் வாயாற் சொல்வதோடுமட்டும் நின்றுவிடவில்லை. எழுத்திலே எழுதியதோடு மட்டும் நின்றுவிடவில்லை; தன்னுடைய வாழ்க்கை யிலே நடந்து காட்டினார். இதுதான் ஞானிகள், உத்தம குணம் உடையவர்கள் என்பவர்களின் கடமையாகும். அவருடைய வாழ்க்கையிலே அவருக்கு ஏற்பட்ட துன்பங்கள் பல; மனக் கவலைகள் பல; குடும்பத்தொல்லைகள் பல; ஆயினும் அவற்றை யெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை. மன அமைதியோடு தன் கடமைகளைச் செய்து வந்தார்; சிறந்த பல நூல்களை எழுதி வந்தார். இதற்கான மனச் சாந்தியை அவருக்களித்தது செந்தமிழ் அன்னை தான் ஆதலால் நாமும் தமிழன்னையை மறவாமல் பணி புரிவோம். சாமி.சிதம்பரனார் படைப்புகள் தொகுதி - 1 1. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் முதற்பாகம் 1929 2. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் இரண்டாம் பாகம் 1929 3. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் மூன்றாம் பாகம் 1931 4. தமிழ்ப் பாடத் தொகை நான்காம் பாகம் 1938 தொகுதி - 2 1. தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு) 1939 தொகுதி - 3 1. அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) 1944 2. அணைந்த விளக்கு (அரசியல் சமூக சீர்திருத்த நாடகம்) 1948 தொகுதி - 4 1. திருக்குறள் பொருள் விளக்கம் 1959 தொகுதி - 5 1. நாலடியார் பாட்டும் உரையும் 1959 2. நான்மணிக்கடிகை (பாட்டும் உரையும்) 1960 தொகுதி - 6 1. பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் 1956 2. எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் 1957 தொகுதி - 7 1. கம்பன் கண்ட தமிழகம் 1955 2. பதிணென்கீழ்க் கணக்கும் தமிழர் வாழ்வும் 1957 தொகுதி - 8 1. சிலப்பதிகாரத் தமிழகம் 1958 2. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு 1960 தொகுதி - 9 1. இலக்கியச் சோலை (புறநானூறு) 1958 2. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1967 தொகுதி - 10 1. வள்ளுவர் காட்டிய வைதீகம் 1949 2. வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் 1956 தொகுதி - 11 1. பெண்மக்கள் பெருமை (அ) மாதர் சுதந்திரம் 1929 2. காரல் ஹென்றி மார்க் 1937 3. ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் 1940 4. முன்சீப் வேதநாயகம் பிள்ளை 1955 தொகுதி - 12 1. சிதம்பரனார் சீர்திருத்தப் பாடல்கள் 1929 2. இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு 1935 3. உமர்கய்யாம் 1946 4. சிந்தனைச் செய்யுள் 1956 5. சாமி சிதம்பரனார் புதுக்குறள் 1960 6. அறிவு (கவிதை) 1964 தொகுதி - 13 1. தேவாரத் திருமொழிகள் 1959 2. ஆழ்வார்கள் அருள்மொழி 1959 தொகுதி - 14 1. வடலூரார் வாய்மொழி 1959 2. சங்கப் புலவர் சன்மார்க்கம் 1960 3. பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை 1963 தொகுதி - 15 1. அருணகிரியார் குருபரர் அறிவுரைகள் 1960 2. மணிவாசகர் - மூலர் மணிமொழிகள் 1961 தொகுதி - 16 1. புதிய தமிழகம் 1952 2. வளரும் தமிழ் 1954 3. தொல்காப்பியத் தமிழர் 1956 தொகுதி - 17 1. பழந்தமிழர் அரசியல் 1959 2. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் 1960 3. தமிழர் வீரம் 1964 தொகுதி - 18 1. சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம் 1960 2. இலக்கியம் என்றால் என்ன? 1, 2 1963 3. சிறுகதைச் சோலை (தொகுப்பு) 1964 தொகுதி - 19 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 20 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 21 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955 தொகுதி - 22 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955 பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்தர் வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்தர் வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை மாதர் சுதந்திரம் (அ) பெண்மக்கள் பெருமை முகவுரை 3 1. தோற்றுவாய் 5 2. பெண்மக்களும் வைதீகரும் I 11 3. பெண்மக்களும் வைதீகரும் II 16 4. பெண்மக்களும் பிறவிக்குணங்களும் 21 5. பெண்மக்களும் கற்பும் 27 6. பெண்மக்களும் வலிமையும் I 33 7. பெண்மக்களும் வலிமையும் II 40 8. பெண்மக்களும் கல்வியும் I 50 9. பெண்மக்களும் கல்வியும் II 56 10. பெண்மக்களும் மணமும் 61 11. பெண்மக்களும் சொத்துரிமையும் 69 12. பெண்மக்களும் சீர்திருத்தமும் 77 13. பெண்மக்களும் அன்பும் 83 14. பெண்மக்களும் முன்னேற்றமும் 90 காரல் ஹென்றி மார்க்சு அணிந்துரை 99 காரல் ஹென்றி மார்க்சு 103 மார்க்சு இங்கிலாந்தையடைதல் 117 கார்க்கியும் இந்தியாவும் 126 ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் அணிந்துரை 134 பாராட்டுரை 136 காணிக்கை 141 ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் 142 முன்னுரை 143 கதைச் சுருக்கம் 144 காட்சிகள் 146 காட்சி - 1 149 முன்சீப் வேதநாயகம் பிள்ளை முன்னுரை 217 சிறப்புரை 218 அணிந்துரை 221 1. தமிழின் வளர்ச்சி 225 2. முன்னோர்கள் 228 3. கல்விப் பயிற்சி 232 4. உத்தியோகம் பெறல் 235 5. மகா வித்வான் நட்பு 239 6. நேர்மைக்குச் சோதனை 243 7. முன்சீப் உத்தியோகம் 247 8. சீர்காழியில் தமிழ்ப்பணி 251 9. வேதநாயகமும், சங்கீதமும் 255 10 சுப்பிரமணிய தேசிகரும் வேதநாயகமும் 259 11. நண்பர்களும் வேதநாயகம் பிள்ளையும் 267 12. உத்தியோகத்தி விட்டபின் கண்ட உண்மை 273 13. பெண் கல்வியும் வேதநாயகமும் 276 14. தமிழ்ப் பற்று 280 15. நகைச்சுவை எழுத்தாளர் 287 16. வேதநாயகத்தின் மறைவு 292 17. வேதநாயகம் பிள்ளையின் நூல்கள் 296